Archive for April, 2025

ஸ்ரீ தாளப்பாக்கம் அன்னமாசாரியர் ஸ்வாமிகள்-

April 27, 2025

தாளப்பாக்கம் அன்னமாசாரியர் (அன்னமய்யா) (மே 9, 1408 – பெப்ரவரி 23, 1503) தென்னிந்திய இசையில் பஜனை மரபினைத் தொகுத்து வழங்கினார். பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற வடிவத்தை உருவாக்கியவர் என்று கருதப்படுகிறார். திருமலை திருவேங்கடவன் மீது அவர் பாடிய பாடல்கள் சங்கீர்த்தனைகள் என்று புகழ்பெற்றன.

தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார் (1408-1503) ஆந்திராவில் உள்ள தாள்ளபாக்கம் கிராமத்தில் பிறந்த தெலுங்கு வைணவ ஆச்சாரியர் ஆவார். இவர் தெலுங்கு கீர்த்தனைகள் மற்றும் தெலுங்கு இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பைச் செய்தவர். 95 ஆண்டுகள் வாழ்ந்த இவர், பங்குனி மாதம் துவாதசி (பிப்ரவரி 23, 1503) அன்று பரமபதம் அடைந்தார். 

ஆந்திராவிலுள்ள கடப்பா மாவட்டத்தில் தாளபாக்கம் கிராமத்தில் ருக்வேத பாரத்வாஜ கோத்திரத்தில் நாராயணசூரிக்கும், லக்கமாம்பாவிற்கும் மே 9, 1408- அன்று அன்னமாசாரியர் மகனாகப் பிறந்தார். நந்தவாரிக எனும் தெலுங்கு அந்தண குடும்பத்தில் பிறந்த வைணவத் தொண்டர். இவர் தந்தை உழவுத்தொழில் செய்து வந்ததால் அன்னமையாவும் இளமையில் உழவுத்தொழில் செய்துவந்தார். “சுபத்ரா கல்யாணம்” என்ற நூலை இயற்றிய, தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான “திம்மக்கா” அன்னமாச்சாரியாரின் மனைவி. மகன் பெரிய திருமாலாச்சாரியார், பேரன் சின்னையர் ஆகியோரும் தென்னிந்திய இசை வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவர்கள்.

தாளப்பாக்கம் அன்னமாசாரியரின் தந்தை இவரை அடுத்த ஊருக்குச் சென்று அங்கிருந்து வைக்கோல் கட்டைத் தூக்கிவரும்படி ஏவினார். வைக்கோல் கட்டைத் தூக்க இயலாது இவர் திருமலை திருப்பதிக்கு ஓடிவிட்டார். அங்கு பசி மேலிட்டுத் துன்புற்றபோது, திருமாலின் சதியான அலர்மேல் மங்கைத்தாயார் இவருக்குப் பசி நீங்க அன்னமளித்து ஆட்கொண்டார். அன்னையின் அருளால் கவிஞரானார். அன்னை மீது ஒரு சதகம் பாடினார். பெற்றோர்கள் இவரைத் தேடி வந்து தம் கிராமத்துக்கு மீண்டும் அழைத்துச் சென்றனர். வீரசைவமரபில் பிறந்த இவர் திருப்பதிக்கு ஓடியது முதல் திருமாலடியவரானார். தினமொரு பாடலாக திருமால் மீது பாடினார். இவர் பாடல்களின் அருமையைக் கேள்வியுற்று, அப்பகுதியில் ஆட்சிபுரிந்த சாளுவ நரசிம்மராயர் இவரைப் பாடுமாறு வேண்டினார். மனிதரைப் பாட மறுத்தவரை சாளுவ மன்னர் விலங்கிட்டுச் சிறையிலிட்டார். விலங்குகள் தாமே தெறித்து விழுவதைக் கண்ட மன்னர் இவரது பெருமையை உணர்ந்து பணிந்ததாக நம்பப்படுகிறது.

தாளப்பாக்கம் அன்னமாசாரியர் சிருங்கார சங்கீர்த்தனம், அத்யாத்மிக சங்கீர்த்தனம், சங்கீர்த்தன லட்சணம் ஆகிய இசைநூல்களை எழுதினார். சதக நூல்கள், சிருங்கார மஞ்சரி, இரண்டடி இராமாயணம், வேங்கடாசல மாகாத்மியம் போன்ற பிற தெலுங்கு நூல்களையும் இயற்றினார். அன்னமாசாரியர் பாடிய இசைப்பாடல்கள் கீர்த்தனங்களல்ல, பல்லவி அனுபல்லவி சரணம் கொண்டவையல்ல. இவை திருவேங்கடநாதன் புகழையும், நாம சங்கீர்த்தனங்களையும் பாடியவை. அன்னமாசாரியரின் பாடல்கள் இருபதாம் நூற்றாண்டில் சங்கீத வடிவம் பெற்றன. அவர் பாடிய இசை தமிழிசை; மொழி தெலுங்கு மொழி. இவருடைய புதல்வரும் பின்வந்தோரும் இவருடைய பாடற்பரம்பரையை வளர்த்தனர்.

இவரது மகன் பெரிய திருமலாச்சாரியாரும்,பேரன் சின்ன திருமலாச்சார யாரும் பல சங்கீத நூல்களையும், பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு நூலையும் இயற்றினர். அன்னமாச்சாரியார் பெரிய, சிறிய, திருமலாச்சாரியார்கள் மூவரையும் சேர்த்து, ”தாளபாக மும்மூர்த்திகள்” என்று அழைக்கின்றனர்.

அன்னமாச்சாரியார் 32,000-க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை கர்நாடக இசை முறையில் இயற்றினார். இவரது பெரும்பாலான பாடல்கள் செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டு திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலிலுள்ள உண்டிக்கு எதிரில் சிறு அறையில் வைக்கப்பட்டன. மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் 1922-ல் இவை கண்டுபிடிக்கப்பட்டன. இவரது பாடல்களில் 12,000 மட்டுமே இப்போது கிடைக்கப்பெற்றுள்ளன. கீர்த்தனைகள் சிருங்கார ரசம், வைராக்கியம், பக்தி என வகைப்படுத்தப்பட்டன. வைணவ ஆச்சாரியர் ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வைணவத்தைத் தழுவிய இவரின் கீர்த்தனைகள் பலவும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பாடல்களைப் போன்ற கருத்துடையவை. ராமானுஜர் மீதும், ஆழ்வார்கள் மீதும் சில பாடல்களைப் பாடினார்.

அன்னமய மார்க்கம் : அன்னமாச்சாரியா தாள்ளப்பாக்க கிராமத்திலிருந்து திருமலைக்கு நடந்து வந்த பாதை சிறப்பாகக் கருதப்படுகிறது. அவர் மாமண்டூர் வழியாக உள்ள வனப்பகுதியில் திருமலைக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. அதனால், அவர் வந்து சென்ற பாதை அன்னமாச்சாரியா பாதை அன்னமய மார்க்கம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. சேஷாத்ரி மலையைக் கடக்கும்போது, “மோக்காலு_மிட்டா” என்னும் இடம் இருக்கிறது. இப்புனிதமலையின் மீது பாதம் பதித்து நடந்தால் பாவம் உண்டாகும் என்று எண்ணிய ராமானுஜர் முழங்கால் களாலேயே ஊர்ந்து மலையேறினார். அவ்வாறு ஏறும்போது ஓரிடத்தில் ராமானுஜரின் கால் எலும்பு முறிந்தது. அதனால் அந்த இடத்துக்கு “முழங்கால் முறிச்சான்” என்ற பெயர் ஏற்பட்டது. தெலுங்கில் இதை “மோகாலு மிட்டா” என்கிறார்கள். அவ்விடத்தில் ராமானுஜருக்கு கோயில் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அன்னமய்யா என்ற சிறுவன் ஏழுமலையானின் மீது ஈடுபாடு கொண்டு மலையேறி வந்த போது அவனுக்கு பசிதாகம் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். பத்மாவதி தாயார் அச்சிறுவன் முன்தோன்றி அமுதளித்தாள். அன்னையின் அருள்பெற்ற அன்னமாச்சார்யா நூறு பாடல்களைப் பாடி போற்றினார். பின்னாளில் பெருமாளின் மீது ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அன்னமய்யாவின் அருள்வாழ்க்கை இம்முழங்கால் முறிச்சானில் தான் ஆரம்பமானது. சிருங்கார ரசம், வைராக்கியம், பக்தி என இவரின் கீர்த்தனைகள் வகைப்படுத்தப்படுகின்றன. வைணவ ஆசாரியர் ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வைணவத்தை தழுவிய இவர் கீர்த்தனைகள் பலவும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பிரதிபலிப்பை சுட்டுகிறது. ஆசாரியர் ராமானுஜர் மீதும் (கதுலன்னி கிலமைனா, உன்னதோடுன்னடதடு உடையவரு..) ஆழ்வார்கள் மீதும் (வாடே வேங்கடேசுனனே வாடே வீரு…) சில பாடல்களை இயற்றியுள்ளார்.

சாதியக் கொள்கைகள் நிறைந்த அக்காலத்தில் “ப்ரஹ்மம் ஒக்கடே” என்ற புகழ்பெற்ற பாடல் மூலம் சாதிவேற்றுமைகளைக் கண்டித்தார். மொழியாக்கம் செய்யாமலே இவருடைய கீர்த்தனைகளைத் தொடர்ந்து கேட்பதினாலேயே பொருள் புரியும் வகையில் எளிமையாகவும், தெளிவாகவும், மிக நளினமான வார்த்தைகளைக் கொண்டும் கீர்த்தனைகளை இயற்றினார். ராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு. வடமொழியில் சங்கீர்த்த லட்சணம் என்ற நூலைப் படைத்துள்ளார். ஏழுமலையானைப் போற்றி வெங்கடாசலபதி மகிமை என்ற நூலை எழுதியுள்ளார். தெலுங்கு மொழியில் பன்னிரண்டு சதகங்கள் எழுதினார். இதில் வெங்கடேஸ்வரா சதகம் என்ற நூல் மட்டும் கிடைத்துள்ளது. இவர் எழுதிய திவிபர்த ராமாயணா(இரண்டடி ராமாயணம்), சிருங்கார மஞ்சரி ஆகிய இரண்டு நூல்களும் தெலுங்கு இலக்கியத்தில் முக்கியமானவை. இவருடைய காலம் வரை ’பாடம்’ என்பது பக்தி பாடல் என்ற பொருள் உ்டையதாக இருந்தது. இவருடைய காலத்தில் தான் கீர்த்தனம், க்ருதி, திவ்யநாமா, சங்கீர்த்தனம் போன்ற பெயர்களில் பக்திப் பாடல்கள் அமைந்தன.

அன்னமையா ஆச்சாரியராக மட்டும் இல்லாமல் அறிஞராகவும் விளங்கினார். தம் காலத்துக்கு முன்னால் இருந்த பாடல்களை ஆராய்ந்து, பாட உரைவரிசை செய்தார்.

அக்காலத்தில் தெலுங்கு கன்னடப் பிரதேசங்களில் முகம்மதியப் படைகள் கொலை கொள்ளை மதமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தன. இவற்றால் கோயில்களுக்கும், கோயில் வழிபாட்டுக்கும் அழிவு ஏற்பட்டிருந்தது. அன்னமாச்சாரியரின் பாடல்களினால் ஆந்திரநாட்டில் பக்தியுணர்வு கிளர்ந்தெழுந்தது. ஆழ்வார், நாயன்மார் பாசுரங்களினால் உந்தப்பட்டு அன்னமாச்சாரியர் பக்திப்பாடல்கள் பாடினார்.

அன்னமையா பாடியவை கர்நாடக சங்கீதத்தின் ஆதிக் கீர்த்தனங்கள் என்று பெயர் சூட்டுவது பிழை என்பது அறிஞர்கள் கருத்து. அவை கீர்த்தனங்கள் அல்ல என்று அறிந்தோர் எழுதினர்.

ராமானுஜர் சன்னதியின் மேற்குபகுதியில் “தலப்பாகமரா” எனப்படும் “சங்கீர்த்தன பண்டார” என்னும் அறை அமைந்துள்ளது. இது மிகச்சிறிய அறையாகும். “தலப்பாக” கவிஞர்கள் எனப்படும் அன்னமாச்சாரியார், அவரது மகன் பெட்டதிருமலாச்சாரியார், பேரன் சின்ன திருமலாச் சாரியார் ஆகியோர் ஏழுமலையானைப் பற்றி பாடிய பாடல் தொகுப்பு செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டு (சங்கீர்த்தனம்) இந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு “சங்கீர்த்தன பாதுகாப்பு அறை” என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. “ஸ்ரீநரசிம்ம அனுஷ்டுப் மஹா மந்திரத்தை” பின்பற்றி அதிலுள்ள முப்பத்திரண்டு எழுத்துக்களுக்கு ஏற்ப, முப்பத்திரண்டாயிரம் கீர்த்தனை ஏழுமலையான் மீது பாடியுள்ளார். 1922ம் ஆண்டில்தான் இவரது கவிதை மீண்டும் வெளிகொணரப்பட்டது. “சங்கீர்த்தன பண்டார” அறையில் இருந்த இவரது பாடல்களில் சுமார் 12,000 மட்டுமே இப்போது கிடைக்கப் பெற்றுள்ளன.

இவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு ’அன்னமய்யா’ என்ற தெலுங்குத் திரைப்படம் கே. ராகவேந்திர ராவின் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகள் பல இடம்பெற்றிருந்தன. இவர் எழுதிய பாடல்களை பாலகிருஷ்ண பிரசாத், சோபாராஜு, பாருபல்லி ரங்கநாத், கொண்டவீட்டி ஜோதிர்மயி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், எம். எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் பாடினர். இவரது பாடல்கள் பல தெலுங்கு திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தொண்ணூற்றி ஐந்து வருடங்கள் வாழ்ந்த அன்னமய்யா பிப்ரவரி 23, 1503-ல் காலமானார்.2019-ல் ஆந்திர மாநிலம், துவாரகையில் அன்னமாச்சாரியாருக்காக சிலை ஒன்று நிறுவப்பட்டது.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமாகியிருந்து பாடப்பட்ட பாடல்கள், ஏதோ காரணங்களுக்காக மறக்கப் பட்டன. பிறகு 19ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்ட பாடல்கள் அவற்றை உயிர்ப்பித்தன. அவை 1849ல் தாமிரப் பட்டயங்களில் காணப்படுகின்றன. அவை, கோவிலில் உண்டிக்கு எதிராக உள்ள ஒரு அறையில் கல்லாலான பெட்டி போன்றதில் மறைத்து வைக்கப் பட்டிருந்தன. 1.30 மணிக்கு சுவாமியை தூங்கச் செய்வதற்காக ஏகாந்த தரிசனம் என்னும் நிகழ்ச்சி நடத்துவார்கள். (கூட்டத்தைப் பொறுத்து நேரம் மாறுபடும்). சன்னதிக்குள் இருக்கும் போக ஸ்ரீநிவாச மூர்த்தியை வெள்ளி தொட்டிலில் இடுவார்கள். தொட்டிலுக்குள் வெல்வெட் மெத்தை இருக்கும். தூங்குவதற்கு முன்னால் சுவாமியின் உடலில் உள்ள பூக்களை களைந்துவிடுவார்கள். காய்ச்சிய பால், முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை நைவேத்யம் செய்வார்கள். பிறகு விளக்கு திரியை குறைத்து வைப்பார்கள். இதன்பிறகு அன்னமாச்சாரியார் பரம்பரையில் வந்தவர்கள் தம்புராவுடன் வந்து கீர்த்தனைகளை பாடுவார்கள். நைவேத்தியமாக வைத்த பாலை அவர்களுக்கு கொடுப்பார்கள். பின்னர் சன்னதிக்கு திரை போட்டு, தங்க வாசல் சாத்தப்படும். பின்னர் சுப்ரபாத தரிசனத்தின்போதுதான் நடை திறக்கப்படும் அன்னமாச்சாரி பட்டி – தொட்டிகள் வழியாக பாடிக் கொண்டு சென்றபோது, சூத்திரர் – சண்டாளர்களிடம் தான் உணவு உட்கொண்டு சென்றார்! அதாவது கிராமங்கள் வழியாக பயணித்தது தீண்டாமையை ஒழிக்கத்தான்! சாதிய கொள்கைகள் நிறைந்த அக்காலத்தில் ப்ரஹ்மம் ஒக்கடே என்ற புகழ்பெற்ற பாடல் மூலம் சாதிவேற்றுமைகளை கண்டித்தவர் இவர். மொழியாக்கம் செய்யாமலே இவருடைய கீர்த்தனைகளை தொடர்ந்து கேட்பதினாலேயே இதன் பொருள் புரியும் வகையில், மிக எளிமையான வார்த்தைகளைக் கொண்டே கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். ராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு.

வடமொழியில் சங்கீர்த்த லட்சணம் என்ற நூலைப் படைத்துள்ளார். ஏழுமலையானைப் போற்றி வெங்கடாசலபதி மகிமை என்ற நூலை எழுதியுள்ளார். தெலுங்கு மொழியில் பன்னிரண்டு சதகங்கள் [சதகம் என்பது நூறு பாடல்களால் உருவானது]. இதில் வெங்கடேஸ்வரா சதகம் என்ற நூல் மட்டும் கிடைத்துள்ளது. திவிபர்த ராமாயணா’ ‘சிருங்கார மஞ்சரி’ ஆகிய இரண்டும் தெலுங்கு இலக்கியத்தில் முக்கியமானவை. இவருடைய காலம்வரை ’பாடம்’ என்பது பக்தி பாடல் என்ற பொருள் உடையதாக இருந்தது. சங்கீதப் பணிகள் தவிர திருக்கோயில் பணிகளையும், தாளபாகமும் மூர்த்திகள் செய்தனர். தங்களுக்கு சன்மானமாக வழங்கப்பட்ட கிராமங்கள், பொன்,பொருள் அனைத்தையும் திருமலைக் கோயிலுக்கே நன்கொடையாக வழங்கினர். திருமலையில் நடைபெற்று வரும் சுப்ரபாத சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஏகாந்த சேவை ஆகியவற்றைத் துவக்கி வைத்த பெருமை அன்னமாச்சாரியரையே சேரும். 95 வருடங்கள் வாழ்ந்த அன்னமய்யா துந்துபி வருடம் பங்குனி மாதம் துவாதசி (பெளர்ணமியிலிருந்து பன்னிரெண்டாம் நாள்) (பிப்ரவரி 23, 1503) அன்று பரமபதம் அடைந்தார்.

இசைநூல்கள்

சங்கீர்த்தன லட்சணம்

தெலுங்கு நூல்கள்

வேங்கடாசல மாகாத்மியம்

12 சதக நூல்கள்

சிருங்கார மஞ்சரி

இரண்டடி இராமாயணம்

சிருங்கார சங்கீர்த்தனம்

அத்யாத்மிக சங்கீர்த்தனம்

—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தாளப்பாக்கம் அன்னமாசாரியர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகளின் ஸ்ரீ திவ்யார்த்த தீபிகையில் இருந்து சிறப்பு குறிப்புக்கள்-

April 27, 2025

அத்யாத்ம க்ரந்த நிர்மாணம், அந்யேஷாம் ச அவ போதநம் அர்ச்சாவதார – ஸேவாச…”என்ற ஸ்லோகத்தின் படி வாழ்ந்தவர்

நூலுக்கு வயது நூறு! காஞ்சிபுரத்தில் வாழ்ந்த ஸ்ரீ உ வே ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமிகள் எழுதிய முதல் நூலுக்கு 100 வயது ஆகிவிட்டது-அண்ணங்கராச்சாரியார் ’திவ்ய பிரபந்த வைபவம்’ என்ற நூலை எழுதியபோது அவருக்கு வயது பதினெட்டு. இதுவே இவர் எழுதிய முதல் நூல்.அவர் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை -மலைக்காதீர்கள் – 1200!-எத்தனை மொழிகளில் தெரியுமா? நான்கு மொழிகளில்!ஒரு மொழியில் எழுதிய புத்தகத்தை மற்றொரு மொழிக்கு மொழி பெயர்ப்புச் செய்யவில்லை.

குவலயங் கண்ணி கொல்லி யம் பாவை‘ (பெரி.திரு.2.7:1) என்ற திருவிட எந்தை பற்றிய திருமொழிப் பாசுர அடியிலுள்ள ‘கொல்லியம் பாவை- என்பதற்குத் தீபிகையிலுள்ள குறிப்பு வருமாறு: ‘வல்வில் ஓரி’ என்றசிற்றரசனுக்கு உரியதாய்க் ‘கொல்லி’ என்னும் பெயர் கொண்டான். மலையின் கண்ணுள்ள(இது சேலம் மாவட்டம் – திருச்சி மாவட்டங்களில் (சேந்த மங்கலம் துறையூர்) அருகில் பரவி யுள்ள ‘கொல்லிமலை’ என்று கருத இடம்
தருகின்றது.) ஒரு பெண்பாற் பிரதிமையே கொல்லியம் பாவை யாகும். இது தேவ சிற்பி போல் அமைக்கப் பெற்ற அழகிற் சிறந்த பதுமை யாகும்.அம்மலை யிலுள்ள தேவரையும் மனிதரையும் துன்புறுத்த வருகின்ற அசுரரும் அரக்கரும் அங்கு அணுகும் போது அவர்களது வாடை பட்டவுடனே அது தானே நகை புரியுமாறு பொறி வைக்கப் பெற்ற தென்பர் இப் பதுமையின் சிரிப்பைக்கண்டு மயங்கி உயிர் துறப்பார்களாம்(சித்திர மடல்). . இப் பாவை கண்டார் உள்ளமும் விழியும் கவரப்படுவதாய் பெருங் காம வேட்கை
உறுவித்து இறுதியில் கொல்லும் என்று கூறுவது. இது தெய்வ நிர்மாணம் என்பர். ஒரு காலத்தில் திருமகள் தம் முன் போர்க்கெழுந்த அவுணர் மோகித்து விழும்படி இக் கொல்லியம் பாவை உருக் கொண்டு ஆடினள் என்பதை,செருவெங் கோலம் அவுணர் நீங்கத் திருவின் செய்யோள் ஆடிய பாவையும் என்று சிலப்பதிகாரம் செப்பும். இக் கொல்லிப் பாவை கொல்லி மலையில் உள்ளது என்பதும், தெய்வத்தால் செய்யப்பட்டது என்பதும், காற்றினாலும் மழையினாலும் மற்றெல்லா வகை ஊறுகளாலும் தன் அழகிய நல் வடிவம் கெடாது என்பதும் நற்றிணையில் காணத் தகும்.இப் பாவையின் அழகைத் தலைவியின் நலத்திற்கு உவமை கூறுதல் அகநானூறு, புறநானூறு முதலிய நூல்களிலும் சிறப்பாக உண்டு. சீவக சிந்தாமணி, குறுந்தொகை என்ற நூல்களிலும் இப் பாவை பற்றிய குறிப்புகளைக் காணலாம்.ஆகவே தமிழ்க் கவிஞர்கள் கொல்லிப் பாவையை ஒப்புயர்வற்ற அழகிற் சிறந்த மாதர்க்கு உவமை கூறுதல் மரபு என்பது அறியப் படும்.இப் பாசுரத்தில் ‘கொல்லியம்பாவை போன்றவள்’ என்று கூறாமல் ‘கொல்லியம் பாவை’ என்றே சொல்லி வைத்தது முற்றுவமை(உருவகம்). ‘தாவி வையங் கொண்ட தடந் தாமரைக்கே’ என்றது போல-

‘துளையார் மென்குழல் ஆய்ச்சியர்‘ (பெரி.திரு. 3.8:8)என்ற தொடருக்கு எவ்வாறு பொருள் எழுதுவது?குழலாகிய கூந்தலுக்குத் துளை உண்டோ? துளை பொருந்துவது புல்லாங் குழலுக்கே யாகும். ‘துளை’ என்ற அடைமொழி கூந்தலுக்கு ஏற்காது. எனவே, “துளைகள் நிரம்பிய புல்லாங் குழலைச் சொல்லக் கடவதான ‘குழல்’என்ற சொல்லால் கூறப்படுகின்ற கூந்தலை யுடையவர்களான ஆய்ச்சிகள்” என்று பொழிப்புரை வரைய வேண்டும்.இங்கே ஆழ்வார் சங்கப் பாடல்களில் வரும் அரியதோர் தமிழ் மரியாதையைப் பின்பற்றி யுள்ளார். சங்க நூல்களிலிருந்து நம் சுவாமி எடுத்துக் காட்டுகளைத் தருகின்றார்.
(i) புல்லிலை வஞ்சிப் புரமதிலலைக்கும் பொருநை |(புறம்-387)
(ii) “நெட்டிலை வஞ்சிக்கோ” (பரிபா, 102 பரிமேலழகர் உரை மேற்கோள்)
இவ் விரண்டிகளிலும் வஞ்சி மா நகர் விவட்சிதமே யல்லாது வஞ்சி மரம் விவட்சிதம் அன்று. ஆயினும் விருட்ச விசேடப் பொருட்கு உரிய புல்லிலை, நெட்டிலை என்னும் அடைமொழிகளை அம் மரப் பெயர் அடைமொழிகளை அம்மரப் பெயர் கொண்ட வஞ்சி மா நகர்க்கு ஏற்றியுள்ளார்கள்.
( iii) ‘ஒளி திகழ் உத்தி உருக் கெழு நாகம்” (பரிபா.12)’நாகம்’ என்னும் சொல் புன்னை மரத்துக்கும் பாம்புக்கும் பெயர். பரி பாடலில் ‘நாகம்’ என்ற சொல்லை யிட்டுப் புன்னை மரத்தைப் பேசுங்கால் பாம்புக்குரிய அடைமொழியைப் புன்னைக்கு இட்டனர். இவ்வாறு தமிழில் ஒரு சொல்லுக்கு இரண்டு பொருள் இருந்தால் ஒரு பொருளுக்கு இசையும் அடைமொழியை மற்றொரு பொருளுக்கும் உபயோகிப்பதுண்டு. ‘இங்ஙனே தமிழ் நூல்களிலுள்ள சம்பிரதாயம் ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும் ஏறி யுள்ளதை உணர வேண்டும்’ என்பர் நம்சுவாமி.

நாச்சியார் திருமொழியில் (3:9) ‘கஞ்சன் வலை வைத்த வன்று காரிருள் எல்லில் பிழைத்து’ என்ற இடத்தில் எல்லில் இரவில் என்று சுவாமி பொருள் கூறியதை தமிழ்ப் புலவர் ஒருவர் மறுத்து எல்லி என்பது பகலையே குறிக்குமாதலால்,’அல்லில் பிழைத்து’ என்று பாடத்தையே திருத்த வேண்டும் என்றும் எழுதினார். ‘அல்லும் பகலும்’ என்ற உலக வழக்கை அவர் தம் கருத்துக்கு அரணாகக் காட்டினார். ஆனால் நம் சுவாமியோ ‘எல்லூர்ச் சேர் தரும் ஏறுடை யினத்து’ (குறுந்.275) என்ற குறுந்தொகைப் பாடலின் அடியையும் மலை படு கடாத்தில் (அடி 416)வரும் ‘எல்லினிப் புதினே’ என்ற தொடரையும் அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய ‘இராக் காலத்தை யுடைய யாயிராய்’என்ற பொருளையும் காட்டி நாச்சியார் திரு வாக்கின் தூய்மையை நிலை நாட்டினார்.

பரிவதில் ஈசனைப் பாடி
விரிவது மேவ லுறுவீர்
பிரிவகை யின்றி நன் னீர்தூய் –
புரிவது வும் புகை பூவே
(திருவாய் 1.6:1)
என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் ‘பரிவதில் ஈசன்’என்பதற்கு ‘ஹேய ப்ரத்ய நீகனான ஈஸ்வரனை’ என்று பிள்ளானும் பெரிய வாச்சான் பிள்ளையும் உரைப்பர். இதனை நம்பிள்ளை விவரித்து, கல்யாண குண யோகத்தையும் சேர்த்து உரைப்பர். எம்பெருமான் எப்படிப் பட்டவன் எனில்: ‘பரிவதில் ஈசன்’ என்கிறார். அதாவது துக்கம் இல்லாதவன்;எம்பெருமானுக்குத் துக்கம் இல்லை என்று சொல்லி விட முடியாது. பிராட்டியைப் பிரிந்து பட்ட துக்கம் அனைவரும் அறிந்ததே! ஆனால் பிறர் படும் துன்பத்தைக் கண்டு தானும் துக்கப்படுகை என்ற தயை குணம் எம்பெருமான் ஒருவனுக்கே உள்ள தென்றாகையால் இந்தத் துக்கம் குற்றமன்று என்று கூறுவர் நம் சுவாமிகள். இதனால் எம்பெருமானின் தயை என்னும் கல்யாண குணம் சொல்லப்பட்டது.-திரௌபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது கண்ண பிரானின் திருநாமமே யாயினும் தான் நேரில் சென்று உதவாத துக்கத்தைக் காட்ட,கண்ணன் திருவுள்ளம் புண்பட்டுக் கதறினது அனைவரும் அறிந்ததே. மேலும் எம்பெருமான் ஆனையின் துயரம் தீர அரை குலைய தலை குலைய மடுக் கரைக்கு ஓடி வந்து உதவினான். இது பிறர்க்காகப் படும் துக்கம் என்பதும் வெள்ளிடை மலை.

திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லிய செவ் விதழே (திருவாய் 8.9:6)’எம்பெருமான் திருவருளால் இத் திருப்பதியில் வளர்ந்த கமுகு ஈன்ற செவ்விய பழத்தின் நிறத்தை யொத்துள்ளது இவளுடைய உதடுகளின் நிறம்’ என்கின்றாள். ‘திருவருள் கமுகு’என்பதற்கு நம் சுவாமி இன்சுவைமிக்க ஈட்டின் ஸ்ரீ சூக்தியை எடுத்துக் காட்டுவார். அச் சூக்தி : “திருவருள் கமுகு என்று சில உண்டு; அதாவது நீரால் வளருகை யன்றிக்கே பெரிய பிராட்டியாரும் சர்வேஸ்வரனும் கடாட்சிக்க, அத்தால் வளருவன’ சில”. இதனை எண்ணி எண்ணி மகிழ வேண்டும். இப் பாசுரத்தால் “இந்த ஆன்மா பிற தெய்வங்கட்கு அடிமைப் பட்டது மன்று; தனக்குத் தானே உரியதுமன்று; பகவான் ஒருவனுக்கே உரியது” என்ற கருத்தாகிய ‘அநந்யார்ஹ சேக்ஷத்துவம்‘ தெளிவாக விளங்குகின்றது.

சேதந லாபம் தான் ஈஸ்வரனுக்குப் புருஷார்த்தம் என்பதே சித்தாந்தம். எம்பெருமான் சிருஷ்டி அவதாராதி முகத்தாலே கிருஷி பண்ணுவ தெல்லாம் ‘ஒரு சேதநன் நமக்குக் கிடைப்பனா’ என்கின்ற நப்பாசை யினாலன்றோ?கீதையிலே ‘ஸ மஹாத்மா துர்லப:‘ என்று கண்ணீர் பெருக நின்று சொல்லுகின்ற வார்த்தை யன்றோ? ‘வாஸு தேவஸ் ஸர்வம்’ என்றிருக்கின்ற மகாத்மா எனக்குக் கிடைக்க வில்லையே! என்றன்றோ சொல்லுகின்றான்? பாடுபட்டுத் தேடிப் பார்த்தும் கிடைக்காமையாலே வருந்திச் சொல்லுகிற வார்த்தை இது என்று நன்கு தெரிகின்ற தன்றோ?எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் – ஸ்ரீ பாஷ்யத்தின் முடிவில் –ஜநாநிநம் லப்தவா” என்கின்ற அற்புதமான ஸ்ரீஸுக்தியில் இப் பரமார்த்தம் தன்னை ஆழ்வார் சுவாநுபவ முகத்தாலே இப்பாசுரத்தில் வைத்தருள்கின்றார்-என்னில் முன்னம் பாரித்துத்தானென்னை முற்றப் பருகினான்” என்றது சத் சம்பிரதாய சுவைஞர்களின் நெஞ்சை யுருக்கும் வார்த்தை. ‘உன்னைக் காணில் வாரிக் கொண்டு விழுங்குவேன்’ என்று தாம் ஆசைப் பட்டிருந்ததாகவும், தமக்கு முன்னே நெடுநாளாக எம்பெருமான் தம் விஷயத்தில் இங்ஙனே பாரித்திருந்து தன்னுடைய மநோரதமே வலிதென்றும் அதுதான் முற்பட்டதாயிருந்து கார்ய கரமாகின்ற தென்றும் சொல்லிற்றாயிற்று.
என் உயிருண்ட மாயன்’ (7)என்றும் ‘என்னுயிர் தானுண்டான்’ (8) என்றும் எம்பெருமான் உண்ட படியைச் சொன்னார்; உண்டவனுக்குத் தண்ணீரும் அபேட்சிதமா யிருக்குமே; தண்ணீர் குடித்தபடி சொல்லிற்று இப் பாசுரத்தில் “தான் என்னை முற்றப் பருகினான்” என்று. இவருடைய ‘உண்ணுஞ்சோறு பருகுநீர்’ அவன்; அவனுடைய ‘உண்ணுஞ் சோறு பருகு நீர்’இவர். இங்கு தம்மை மறந்து இப் பாசுரத்தை நம் சுவாமிகள் அநுபவித்ததைக் காண முடிகிறது.

‘என் ஆனாய்'(பெரி.திரு. 1.9:2) என்பதற்கு ‘ஆனை’ விளியுருபு ஏற்றால் ‘ஆனாய்’ என்றாகும்; ஆனை போன்றவனே என்றபடி.”தென்னானாய், வடவானாய், குட பாலானாய், குண பால மதயானாய்” என்று திருநெடுந் தாண்டகத்திலும் (10)அருளிச் செய்வர். “என்னானை, என்னப்பன், எம்பெருமான்”என்றார் நம்மாழ்வாரும் திருவாய்மொழியில்.

‘என் தந்தை’ என்பது (பெரி.திரு. 1.1:6)’எந்தை’ என மருவிற்று. ‘வாழ்நாள்’ என்பது ‘வாணாள்’ என மருவிற்று. ‘கொள்ள’ என்பது ‘கொள’ எனத் தொக்கி நிற்கின்றது; வெருக்கொள – அச்சங் கொள்ள என்றாயிற்று.பாடா வருவேன் (பெரி.திரு. 4.7:5) உன்னுடன் பாடிக் கொண்டு வருகின்ற என்கை. ‘பாடா’ ‘செய்யா’ என்னும் வாய்பாட்டுடன் இறந்த கால வினையெச்சம்,

தொழுதாடித் தூ மணி, வண்ணனுக்கு ஆட் செய்த‘ (திருவாய். 4.6:11) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தின் அடியில் ‘ஆட் செய்த நோய் தீர்ந்து‘ என்று தொடர் அமைந்திருப்பினும் ‘உருபு பிரித்துக் கூட்டுதல்’என்ற முறைமையின் கீழ் நோய் தீர்ந்து ஆட் செய்த’ என்று பொருள் கொள்ளத் தகும். ‘ஆட் செய்த’ என்று உருபு பிரித்துக் கூட்டியதால் ‘சொல் திரிந்து பொருள் திரியா வினைக் குறை’ (நன்னூல்- 346) என்ற நன்னூல் நூற் பாவிற்கு ஏற்ப ‘செய்து’ என்பதை எச்சத் திரிபாகக் கொண்டு ‘செய்ய’ என்றும் பொருள் கொள்ளலாம் என்றும் கூறுவர். இவ்விடத்தில் சிறந்து விளங்கும் பொருளையும் வழங்குகிறார் சுவாமிகள். அஃதாவது, ஆழ்வாருக்கு இந்த நோய் தீருவதன்று. ஆன்மா உள்ள வரையில் தொடருமது.ஆகையால் ‘நோய் தீர்ந்த’ என்றது மோகம் தெளிந்து சற்று உணர்த்தி உண்டானமை பற்றியதாகும். இவ்வாறு இலக்கண வழி மூலமும் பொருட் சுவையை உணர்த்துகிறது என்று சுவாமிகள் தெளிவிப்பதால் சுவாமியின் தமிழ்ப் புலமை தெற்றென விளங்கும்.

திருவாய் மொழி (6.8)தலைமகள் பறவைகளைத் தூது விடும் பதிகமாகும். இதில் 8-ஆம் பாசுரத்தில் ‘அருள் செய்து ஒரு நாள்’ (2-ஆம்அடி) என்ற பாடமே நம்பிள்ளை முதலாக ஆசாரியர்களின் காலத்தில் வழங்கி வந்தது. இப்பாடத்தில் வினை முற்று(கிரியா பதம்) இல்லை யாகிறது. குருகிடம் ‘நீ போய்ச் சொல்ல வேணும்’ என்கின்ற வேண்டுகோள் இருக்க
வேணுமே; அ ஃது இங்கு இல்லை; ஆனாலும் வருவித்துக் கொள்ளலாம் என்பது நம்பிள்ளையின் திரு வுள்ளம்.பன்னீராயிரப்படி ஆசிரியர் வாதி கேசரி ஜீயர் ‘அருள் செய் ஒரு நாள்’ என்று பாடம் காட்டுகின்றார்;” ‘அருள் செய்து’என்று பாடமான போது ‘என்று சொல்’ என்று வாக்கிய சேஷமாகக் கூடாது” என்று எழுதி யுள்ளார். ‘அருள் செய்து‘என்று வினை எச்சமான பாடமே பிரசித்தம் என்று நம் சுவாமிகள் அதனையே கொள்வார். தொடர்ந்து ஈற்றடியின் முதலிலுள்ள ‘ஏசறு’ என்பதை வினைமுற்றாகக் கொள்ளுகிற வழியையும் நம்பிள்ளை காட்டி யருள்கின்றார் என்பதையும் சுட்டி யுரைத்து தம் கருத்துக்கு அரணாக்கிக் கொள்வர். ஏசறு துக்கப்படு. ‘நான் படுகிற துக்கத்தை உன் வடிவிலே ஏறிட்டுக் கொண்டு காட்டு’ என்பது தாற்பரியம். இவ்வாறு விளக்குவர் நம் சுவாமிகள்..

வியாக்கியானத்தில் ‘சக்ரவர்த்தித் திருமகன்’என்று வருகிறது. அது பிழை என்று காட்டி விளக்கமும் தருவார் நம் சுவாமி. “சக்கர வர்த்தி என்பது தசரதனைக் குறிக்கும். அவனுடைய மகன் என்ற பொருளில் ‘சக்ரவர்த்தி திருமகன்’ என்று ஒற்று மிகாது வர வேண்டும். வேற்றுமைத் தொகை யன்றோ?” என்பர். இங்ஙனமே “பிள்ளை திரு நறையூர் அரையர்” என்று ஒற்று மிகாது எழுத வேண்டும்” என்பர்.

‘ப்ரஹ்ம்’ என்று எழுதுவதே நேர்மை யானது;’ப்ரம்ஹ’ என்று எழுதுவோரைக் கண்டித்தார்- ஸ்ரீ’ என்ற சொல்லும் தமிழில் பயிலாது என்றும், அதனைத்’திரு’ என்று பெயர்த்தோ அல்லது ‘சீர்’ என்று திரித்துத் தற்பவமாகவோ தான் வழங்க வேண்டும் என்பது அவர் தம் கொள்கை. ‘சீர் வசன பூடணம்’ என்ற உபதேச ரத்னமாலைப் பிரயோகத்தைக் காட்டி ‘ஸ்ரீபாஷ்யம்’ என்பதுபோன்று செய்யுளில் வழங்குவதைக் கண்டித்துள்ளார்.

கற்றறிந்த பெரியார் ஒருவர் தம் கட்டுரை யொன்றில் “முயற்சிக்கத் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது”என்று எழுதி யிருந்தார். அதனைக் கண்ணுற்ற நம் சுவாமி”முயற்சி என்கின்ற சொல் உண்டே யல்லது அதன் மேல் ஒரு ப்ரத்யய மேற்றி ‘முயற்சிக்க’ என்பது பரிஹாஸ்யங்களிலும் கடையானது” என்று கண்டித்தார். மற்றொருவர்”முயற்சிக்கிறேன்” என்று எழுதிய போது ‘முயல்கின்றேன் உன்றன் மொய் கழற்கன்பையே‘ (கண்ணி நுண்.10) என்ற மதுர கவிகளின் திரு வாக்கினை நினைவுப் படுத்தித் திருத்தினார்-சொற்றொடர்களை மிகவும் பிரித்தெழுவது தமிழின் நரம்பறியாத செயல் என்பர் நம் சுவாமி. சொற்கள் புணர்ந்து தொடருவதில் ஓசை யின்பம் சிறக்கும் என்பது ஸ்வாமியின் கருத்து. இவ் வாய்வு வுரை, வீற்று இருக்கும்,நூற்று அந்தாதி, நூற்று எட்டுத் திருப்பதிகள் போன்ற தொடர்ப் பிரிவுகளைக் கண்டு ஸ்வாமியின் திரு வுள்ளம் புண்பட்டதுண்டு.

லட்சித லட்சணை’ என்பது ஒரு மரியாதையாகத் தமிழ் நூல்களில் வரும் மரபாகும். பரிபாடலில் (3-30)கேசியை வதம் செய்த கண்ண பிரானைக் குறிப்பாக ‘கூந்தல் எரி சினம் கொன்றோய்’ என்று வருகிறது. இங்குப் பரிமேலழகர் “கேசி – குதிரையாய் வந்து பொருதான் ஓர் அசுரன். இப் பெயர் கேசம் என்னும் வடமொழி முதல் நிலையாக முடிந்தமையின் அதன் பொருண்மை பற்றிக் கூந்தல் என்றார்” என்று விளக்குகின்றார்.-முதலாழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வாரும் ‘கூந்தல் வாய் கீண்டானை‘(இரண். திருவந். 93) என்று பிரயோகித்துள்ளார். தீபிகை யுரையில் ஸ்வாமியின் குறிப்பு : “தலை மயிர்க்கு வாசகமான கூந்தல் என்னும் சொல்லாட்சி லட்சணை என்னும் வழியில் கேசி என்பவனைக் குறிக்கும். எங்ஙனமே என்னில்; கூந்தல் என்பதற்கு வடமொழிப் பெயர் ‘கேசம்’ என்பதாகும்.அச் சொல் கேசியை நினைப்பூட்டும்” என்பதாகும்.
திருமங்கை மன்னனும், தம் திருமொழியில்,-புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள (10.9:1) என்று குறிப்பிடுகின்றார். நள்ளிருட் கண் வந்த பூதனை புள்ளுருவாகி வர வில்லை. அவள் பேய்ச்சியாக வந்தாள்-இங்கு ஸ்வாமி தம் தீபிகை உரையில் “மேலே சஞ்சரித்துக் குழந்தைகளை அனுங்கப் பண்ணும் சில பறவைகள் உண்டு; அப்படிப் பட்டவளாய் வந்தாள் என்று இவளது கொடுமையைக் குறிப்பிட்டவாறு” என்று வரைந்த உரை குறிப்பதாகும். பெரியவாச்சான் பிள்ளையும் இவ்வாறே உரைப்பார்.

புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை‘ என்ற தொடருக்கு லட்சித லட்சணை வழியில் அரிய விளக்கம் அளித்தார். ‘புள்’ என்பது அலகை (=கேடு)உடையது அன்றோ! ஆதலால் அலகை ( பேய் மகள் நள்ளிருள் வந்த பூதனை என்று தேறுகின்றது. வடமொழி தமிழ்மொழி இலக்கண மரியாதைகள் எல்லாம் ஸ்வாமிக்கு நன்கு வசப்பட்டிருந்தது

தமிழ் நெறியை அறியாதார் சிலர் “என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்’ (பெரியாழ். திரு . 4.9:3) என்ற விஷ்ணு சித்தன் திரு வாக்கில் உள்ள ‘போலும்’ என்பதை ஐயப் பொருளாக்கி அவப் பொருள் கண்டனர். ‘ஆங்கவுரையசை’ ‘ஒப்பில் போலியும் அப்பொருட்டாகும்’ (தொல்.சொல். 277, 278) என்ற நூற் பாக்களைக் கொண்டு’போலும்’ என்பதை அசை நிலையாகக் கொள்வதே தமிழ் மரியாதைக்குச் சேரும் என்பது ஸ்வாமியின் முடிபாகும்.

இருந் தமிழ் நூற் புலவன்‘(பெரி.திரு.1.8:10) என்று சிங்கவேள் குன்றத் திருமொழியில் குறிப்பிடுவர். இவர் தம் ஆறு பிரபந்தங்களும் மாறன் அருளிய மா மறைக்கு ஆறு அங்கங்கள் என்று வகுத்துக் கூறுங்கால் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ‘இருந்தமிழ் நூற் புலவர் பனுவல் ஆறும்‘ என்று குறிப்பிடுவர். அதனால் ‘இருந் தமிழ்’ என்று கலியனால் கருதப் பெற்றது நம்மாழ்வாருடைய நான்கு திவ்வியப் பிரபந்தங்களாகும் என்பது தெளிவு.

பங்கயக் கண்ணன் என்கோ?
பவளச் செவ் வாயன் என்கோ?
அங்கதிர் அடியன் என்கோ?
அஞ்சன வண்ணன் என்கோ?
செங் கதிர் முடியன் என்கோ?
திரு மறு மார்வன் எங்கோ?
சங்கு சக்கரத்தன் என்கோ?
சாதி மாணிக்கத்தையே!(
திருவாய். 3.3:3)
ஆழ்வார் பெருங்காற்றில் வீழ்ந்த பழங்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்ளக் கருதுபவர்கள்’அந்தப் பழத்தை எடுப்போமா? இந்தப் பழத்தை எடுப்போமா?”என்று அலமந்து கிடப்பது போல், அத்தைச் சொல்லுவேனா?இத்தைச் சொல்லுவேனா? என்று அலமந்து, எங்கும் எல்லா வகைப் பொருள்களுமாயும் தோன்றுகின்ற அப் பெருமானுக்கு வாசிகமாகக் கைங்கரியம் செய்ய நினைத்து ‘சகல கல்யாண குணங்களுக்கும் கடலான அவ்வெம் பெருமானுடைய தன்மையை யான் என்ன வென்று சொல்லுவேன்?’ என்று நிர்வேதத்துடனே அவனது சர்வாத்மத்தைப் பேசுகின்றார் இத் திருவாய் மொழியில். அதில் மூன்றாவது பாசுரம் இது : இதற்குச் சுவாமியின் அநுபவ உரை இது :“ஆழ்வார் தம்மைக் கடாட்சித்து தம்மோடு முதலுறவு)பண்ணின திருக் கண்களின் அழகில் ஈடுபட்டு முதலில்’பங்கயக் கண்ணன்’ என்றார். அந்தக் கண்ணோக்குக்குத் தப்பினாலும் தப்ப வொண்ணாத புன் முறுவலை யுடைய வாயழகில் ஈடுபட்டுப் ‘பவளச் செவ் வாயன்’ என்றார். அந்த நோக்கத்திலும் புன் சிரிப்பிலும் ஈடுபட்டுத் தோற்று விழும் நிலமாகிய திருவடிகளில் ஈடுபட்டு ‘அங் கதிர் அடியன்’என்றார். அத் திருவடிகளில் வீழ்ந்தவர் அநுபவிக்கின்ற வடிவழகில் ஈடுபட்டு ‘அஞ்சன வண்ணன்’ என்றார்.அவ்வாறு அநுபவிக்கும் வடிவழகை யுடையவன் ஈடும் எடுப்பும் இல்லாத ஈசன் என்பதை விளக்குகின்ற திருமுடியழகில் ஈடுபட்டுச் “செங்கதிர் முடியன்” என்றார்.திருமுடியினால் விளங்குகின்ற ஸ்வாமித்துவத்தைக் கண்டு’இப் பெரியோனை நாம் எவ்வாறு நெருங்குவது!’ என்று கருதி பின் வாங்காதபடி எப்போதும் அப் பெருமானின் திரு மார்பில் ‘அகலகில்லேன் இறையும்’ என்று இருந்து புருஷகாரம் செய்யும் தாயான பிராட்டியின் சம்பந்தத்தைக் கருதித் ‘திரு மறு மார்பன்’ என்றார் பெருமாளும் பிராட்டியுமான இச் சேர்த்திக்கு என்ன தீங்கு வருகின்றதோ என்று பொங்கும் பரிவினால் பாப சங்கை கொள்ளுகின்ற அடியார்களுடைய அச்சத்தைத் தவிர்ப்பனவான திவ்வியாயுதங்களைக் கருதி ‘சங்கு சக்கரன்’ என்றார்.” சாதி மாணிக்கத்தை) போலி யன்றிக்கே ஆதரத்திலே பிறந்து நன்றான மாணிக்கம் போலே நிர்த் தோஷமாய்(குற்றமில்லாததாய்) ஸ்வத சித்தமான வடிவழகுடையவனை”என்பது ஈடு முப்பத்தாறாயிரம். மறு – ஸ்ரீவத்ஸம் என்கின்ற மயிர்ச் சுழி.-உரையை ஊன்றிப் படிக்குங்கால் ஆழ்வார் பெற்ற அநுபவத்தை நம் ஸ்வாமி அநுபவித்ததை அறிகின்றோம்.உரை நம்மையும் மறந்து இறையபவத்தில் ஆழ்ந்து விடச் செய்கின்றது.

1- யானையை எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அரிய பொருளைப் பார்ப்பது போல் பரமானந்தத்தைத் தரும்; எம் பெருமானும் “அப் பொழுதைக் கப்பொழுது என் ஆரா அமுதமே” (திருவாய்2.5:4) என்று இனிப்பான்.
2-யானையின் மீது ஏற வேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏற வேண்டும்; எம்பெருமானிடம் சேர வேண்டியவர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேர வேண்டும்.
3-யானை தன்னைக் கட்டத் தானே கயிறு கொடுக்கும்; “எட்டினோ டிரண்டெனும் கயிற்றினால்”(திருச்சந்த. 83) என்ற படி எம்பெருமானைக் கட்டுப் படுத்தும் பக்தி யாகின்ற கயிற்றை அவன் தானே தந்தருள்வான். “மதி நலம் அருளினவன்” (திருவாய். 1.1:1)
4-யானையை நீராட்டினாலும் அடுத்த கணத்திலேயே அஃது அழுக்கோடு சேரும்; எம்பெருமான் சுத்த பவித்திரனாய் சுத்த சத்துவ மயனாய் இருக்கச் செய்தேயும்”பொய்ந் நின்ற ஞாலமும் பொல்லா அழுக்குடம்பும்”(திருவிருத்.1) உடைய நம் போலியருடன் சேரத் திருவுள்ளமா யிருப்பன், வாத்சல்யத்தாலே.
5-யானையைப் பிடிக்க வேண்டுமானால் பெண் யானையைக் கொண்டு பிடிக்க வேண்டும்; பிராட்டியின் புருஷகாரமின்றி எம்பெருமான் வசப்படான்.
6-யானை பாகனுடைய அநுமதி யின்றித் தன் பக்கம் வருகின்றவர்களைத் தள்ளி விடும்; எம்பெருமானும் “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து” (திருவாய். 4.6 8) என்றபடி பாகவதர்களை முன்னிட்டுப் புகாதாரை அங்கீ கரித்தருளான்.
7-யானையின் மொழியைப் பாகனே அறிவான்;எம்பெருமானின் மொழி திருக் கச்சி நம்பி போல்வாருக்கே தெரியும். பேரருளாளனோடே பேசுபவரன்றோ நம்பிகள்?
8-யானையினுடைய நிற்றல், இருத்தல், கிடத்தல்,திரிதல் முதலிய தொழில்கள் பாகனிட்ட வழக்கு;எம்பெருமானும், “கணி கண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி, மணி வண்ணா நீ கிடக்க வேண்டா…! உன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்’ என்றும், “கிடந்தவாறு எழுந்திருந்து பேசு” (திருச்சந்த. 61) என்றும் சொல்லுகின்ற திருமழிசைபிரான் போல்வாருக்கு எல்லா வகையிலும் அடியன்.
9-யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும்.எம்பெருமான் அமுது செய்து சேவித்த பிரசாதத்தாலே பல கோடி பக்த வர்க்கங்கள் உய்விக்கக் காண்கின்றோ மன்றோ?
10-யானைக்குக் கை நீளம்; எம்பெருமானும்”அலம் புரி நெடுந் நடக்கை ஆயன்” (பெரி. திரு. 1.6:2)அன்றோ? “நீண்டவத்தைக் கரு முகிலை” (பெரி.திரு. 2.5:2)
11-யானை இறந்த பின்பும் உதவும்; எம்பெருமானும் தீர்த்தம் சாதித்துத் தன் சோதிக்கு எழுந்தருளின பின்பும் இதிகாச புராணங்கள், அருளிச் செயல்கள் மூலமாகத் தனது சரிதங்களை உதவுகின்றானன்றோ?
12-யானைக்கு ஒரு கையே உள்ளது; எம்பெருமானுக்கும் கொடுக்கும் கை யொழியக் கொள்ளும் கை இல்லையன்றோ? “விரும்பப்பட்ட பொருள்களைக் கொடுப்பதில் உறுதியான எண்ண முடையவன்” (அர்த்தி தார்த்த பரிதாந தீட்சிதம்)
13-பாகனுக்கு வாழ்க்கைக்குரிய பொருள்களைச் சம்பாதித்துக் கொடுக்கும் யானை; எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகர்களுக்கு உதவுவான்.

1-நீர் பள்ளத்திலே பாயும்; மேட்டில் ஏறுவது அருமை. எம்பெருமானும் சாதி முதலிய வற்றால் குறைந்தவரிடத்தே எளிதாகச் செல்லுவன்; உயர்ந்தோர் என்று மார்பு நெறித்திருப்போரிடத்தே செல்ல விரும்பான். பாண்டவர்க்காகத் தூது எழுந்தருளும் போது ‘ஞானத்தால் சிறந்தோம்’என்றிருக்கும் வீடுமரையும் துரோணரையும், ‘செல்வத்தால்’சிறந்தோம் என்றிருக்கும் துரியோதனனையும் ஒரு பொருளாக மதியாமல் இவை யெல்லாவற்றிலும் தாழ்ந்தவராகத் தம்மைக் கருதி யிருந்த விதுரருடைய திருமாளிகையிலே தானாகவே சென்று அமுது செய்தருளினான் கண்ணபிரான். ஆகவே பள்ளத்தை யோடிப் பெருங்குழியே தங்கும் இயல்பு ஒக்கும்.
2-நீர் இல்லாமல் ஒரு காரியமும் ஆகாது; அப்படியே எம்பெருமானின்றி ஒரு காரியமும் ஆகாது. ஒருவன் விரும்பியதை வோறொருவன் விரும்பாதபடி உலகம் வெவ்வேறு விருப்பத்தை யுடையதாயினும் எல்லோரும் நீரை விரும்பியேயாக வேண்டும்; அது போலவே எம்பெருமானையும்..
3-நீருக்குக் குளிர்ச்சி இயற்கை; சூடு வந்தேறி. எம்பெருமானுக்கும் தண்ணளி இயற்கையாய்ச் சீற்றம் வந்தேறி யாயிருக்கும் “நீரிலே நெருப்புக் கிளறு மாப் போலே குளிர்ந்த திரு வுள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால்” என்ற முமுட்சுப்படி திவ்விய ஸூக்தி காண்க.
4-நீர் சுட்டாலும் அதை ஆற்றுவதற்கு நீரே வேண்டும். “தரு துயரம் தடாயேல் உன் சரணல்லால் சரண் இல்லை” என்றார் குலசேகரப் பெருமாள்.
5-நீர் நம் விருப்பப்படி தேக்கி வைக்கவும் ஓடவிடவும் உரித்தா யிருக்கும். எம்பெருமான் இயல்பும் அப்படியே;ஆண்டாள் தான் சூடிக் களைந்த மாலையிலே விலங்கிட்டு வைத்துப் புசிக்க நின்றான் எம்பெருமான். பாண்டவர்கட்காகக் கழுத்தாலே ஓலை கட்டித் தூது நடந்தான்.
6-நீரானது மற்ற பண்டங்களைச் சமைப்பதற்குக் கருவியாயு மிருக்கும்; தனிப்படத் தானே குடிக்கத் தக்கதுமா யிருக்கும். எம்பெருமானுக்கும் உபாயத்துவம்,உபேயத்துவம் என்ற இரு தன்மைகள் உண்டல்லவா?எம்பெருமானைக் கொண்டு வேறு பலன்களைப் பெற விரும்புவாரும் எம்பெருமான் தன்னையே புருஷார்த்தமாகக் கொள்வாரும் உள்ளமை காண்க.
7-அன்னம் முதலானவை தமக்குப் பிரதிநிதிகளைச் சகிக்கும்; அதாவது காய் கனி கிழங்கு வேர் பலா முதலியவற்றால் உடலைப் பாதுகாக்கலாம்; நீரானது அப்படிப் பிரதிநிதி யொன்றையும் சகிக்க மாட்டாது நீருக்கு நீரே வேண்டும். அப்படியே எம்பெருமானுக்கும் பிரதிநிதி கிடையாது; குணாநுசந்தத்தாலும் போது போக்குதல் அரிது.”ஒருநாள் காண வாராயே” “அடியேன் தொழ வந்தருளே”என்று பிரார்த்தித்துப் பெற்றே தீர வேண்டும்.
8-சோறு உண்ணும் போது நீர் இல்லாமல் முடியாது;அப்படி நீர் வேறொன்றை விரும்புவதன்று. எம்பெருமானும் அப்படியே; உபயாந்தரங்களுக்கு எம்பெருமான் வேண்டும்;எம்பெருமான் இவற்றை விரும்பாதவன், “உன்னல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்.”
9-கொள்ளும் பாத்திரங்களின் வேறுபாடின்றி நீர் தான் குறைய நில்லாது; எங்கும் நிரம்பி யிருக்கும் எம்பெருமானும் “கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும் கோதில் வள்ளல்” கொள்வார் குறையே யத்தனை ஐஸ்வரியமே போதும் என்பாரும் கைவல்யமே போதும் என்பாருமாகக் குறையக் கொள்வார் குற்றமே யாகும்.
10- நீர் ஐவகைப் பட்டிருப்பது போல எம் பெருமானும் ஐவகைப் பட்டிருப்பன். எங்ஙனே என்னில் (i) பூமிக்குள்ளே பொதிந்து கிடக்கும் நீர்; (ii) ஆவரண நீர்; (iii) பாற்கடல் நீர்;(iv) பெருக் காற்று நீர்; (v) தடாகங்களில் தேங்கும் நீர் என ஐவகைப் பட்டிருக்கும். பர, வியூக, விபவ, அந்தர்யாமி,அர்ச்சை என எம்பெருமானும் ஐவகைப் பட்டிருப்பான்.
11-நீரானது பரிசுத்தமாயினும் தான் இருக்கும்.இடத்துக்குத் தக்கதாய்க் கொள்ளத் தக்கதாயும் விடத் தக்கதாயும் இருக்கும். அப்படியே தேவதாந்தரங்களில் அந்தர்மியான எம்பெருமான் விடத் தக்கவனாகவும் கூராழி வெண்சங்கேந்தின எம்பெருமான் கொள்ளத் தக்கவனாகவும் விடத்தக்கவனாகவும் இருப்பது தெளிவாகும்.
12-நீர் தோண்டத் தோண்டச் சுரக்கும்;’கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதில் தந்திடும்”
13-நீர் தனக்கொரு பயனின்றியே பிறர்க்காகவே இருக்கும்; எம்பெருமானும் அவனைச் சேர்ந்தனவாயும் அவனை அடைத்தவர்க்காகவே இருக்கும்.
14-நீர் தானாகப் பெய்ய வேண்டுமே யன்றி ஒருவரால் வலிந்து பெய்விக்க முடியாது; எம்பெருமான் இயல்பும் அப்படியே.
15-நீர் கடலிலிருந்து காளமேகம் வழியாக வந்தாலன்றி உயிர் வாழப் பயன் படுவதாகாது; எம்பெருமானும் சாத்திரங்களிலிருந்து ஆசாரியர் முகமாக வந்தே அடையத் தக்கவனாகின்றான்.
16- வசிட்ட சண்டாள வேறு பாடின்றியே அனைவரும் ஒரு துறையிலே படிந்து குடைந்தாடலாம்படி இருக்கும் நீர்;எம்பெருமானும் ‘நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத் தானே” என்றும், “கானமும் வானரமும் வேடும் உண்ட வேங்கடம்” என்றும் சொல்லுகிறபடியே பெரியார் சிறியார் என்னும் வேற்றுமை யின்றி ஒக்க அடையலாம்படி இருப்பன்.
17- நீர் சிறிது துவாரம் இருப்பினும் உள் புகுந்து விடும்; எம்பெருமானுக்குச் சிறிது வியாஜமே போதும்.’திருமாலிருஞ்சோலை மலை யென்றேன்; என்னத் திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
18- தீர்த்தச் சிறப்புகளிலே நீருக்கு மகாத்மியம் அதிகம். எம்பெருமானுக்கும் கோயில், திருமலை, பெருமாள் கோயில் முதலான திருப்பதிகளிலே சிறப்பு பொலியும்.
19-தாபம் மிக்கவர்கள் நீரை முகத்தில் தெளித்துக் கொள்வது, முதுகில் கொட்டுவது, உள்ளில் இழிச்சுவது,படிந்து குடைந்தாடுவது போல் “வாக்கினால் கருமந் தன்னால்,மனத்தினால் சிரத்தை தன்னால், வேட்கை மீதூர வாங்கி”விழுங்குவார்கள் எம்பெருமானையும்.
20-நீரில் சிறிய கல்லும் அமிழும்; பெரிய தெப்பமும் மிதக்கும்; எம்பெருமான் பக்கலிலும் பிரமாவாய் இழந்து போதல், இடைச்சியாய்ப் பெற்று விடுதல் செய்யக் காணா நின்றோம். “நேரே, கடிக் கமலத்துள்ளிருந்தும் காணகிலான் கண்ணனடிக் கமலந் தன்னை அவன்” “மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர மணி வாயிடை முத்தும் தருதலும், உன்றன் தாதையைப் போலும் வடிவு கண்டு கொண்டுள்ளம் குளிர விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து வெகுளியாய் நின்றுரைக்கும் அவ் வுரையும்,
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன், தெய்வ நங்கை யசோதை பெற்றாளே” என்பன அடைவே பிரமாணம்.பகவத் குணங்களில் சிறு மா மனிசர் அமிழ்தலும், “ஊன் மல்கி மோடு பருப்பார் வாய்க்கமையில் நிற்றலும் கொள்க.
21-நீர் வேண்டியவன் துளி நாக்கு நனைக்கக் கிடைத்தல் போதும் என்பன்; “கூரார் ஆழி வெண் சங்கேந்திக் கொடியேன் பால், வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே”

1-பெய்ய வேண்டும் இடமளவும் சென்று பெய்யும் மேகம்; எம்பெருமான் “வந்தருளி யென்னெஞ்சிடங் கொண்ட வானவர் கொழுந்து என்று ஆங்காங்குச் சென்று அநுக்கிரகிப்பன்.
2-மின்னலுள்ள காலம் நீர் நிரம்பி யிருக்கும் மேகம்;எம்பெருமானுக்கும் பிராட்டியோடு கூடி யிருக்கும் காலத்தில்
கிருபா ரசம் மிஞ்சி யிருக்கும். “இவள் சந்நிதியாலே காகம் தலை பெற்றது; அஃது இல்லாமையால் இராவணன் முடிந்தான்” என்ற முமுட்சுப்படியின் திவ்விய ஸூக்தியும் காண்க.
(3) மொண்ட இடத்திலும் பெய்யும் மேகம்; தனக்கு உபதேசித்தவர்களுக்கும் உபதேசிக்குமவன் எம்பெருமான்.வசிட்டாதிகளுக்கும் ஞானப் பிரதானம் பண்ணினான் இராமபிரான். சித்திரகூடத்தில் வசிட்டன் பெருமாளிடம் சில தரும ஸூஷ்மங்கள் கேட்கப் பெற்றானாயிற்று.
(4) பெய்யப் பெறாத காலத்திலே வறக்கும் மேகம்;நெஞ்சுலர்ந்து பேசினான்றோ எம்பெருமானும், திரௌபதிக்கு ஆபத்திலே அருகே யிருந்து உதவப் பெறாத குறைக்காக-
5- இன்ன காலத்திலே மேகம் பெய்யு மென்று அறுதி யிட வல்லார் எவரும் இலர். பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யா தொழியவும், பெய்வதற்குச் சந்தர்ப்பம் இல்லாத காலத்தில் எண்ணாததாகவும் வந்து பெய்யவும் கடவது மேகம்; எம்பெருமான் படியும் அப்படியே; “வந்தாய் போல வாராதாய்! வாராதாய் போல் வருவானே”திரௌபதிக்கு ஆபத்திலே வந்து முகங் காட்டா தொழிந்தான்;விரும்புதலை எதிர்பாராமல் “தாவி யன்றுலகமெல்லாம் தலை விளாக் கொண்டான்”
6-‘வனத்திடரை ஏரியாக வெட்டியாயிற்று. நீ மழை பெய்தாக வேண்டும்” என்று வளைப்பிட வொண்ணாதது மேகம்; எம்பெருமான் படியும் இங்ஙனமாயிறே””பெண்ணுலாஞ் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா யூழி யூழித் தவஞ் செய்தார் வெள்கி நிற்ப, விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக் கன்றருள வந்தவனிறே”
7- ஜல ஸ்தல விபாக மின்றியே பெய்யும் மேகம்.வேடன், வேடுவச்சி, பட்சி, குரங்கு, சராசரம், இடைச்சி,இடையர், தயிர்த்தாழி, கூனி, மாலாகாரர், பிண விருந்து வேண்டடிசிலிட்டவர், அவர் மகன், அவன் தம்பி ஆனை அரவம், மறையாளன் பெற்ற மைந்தன்” ல் என்னும் படியிறே பகவத விஷயீகாரம் பெற்றவர்களிருப்பது.
வேடன் -குகன்;வேடுவிச்சி – சபரி; பட்சி சடாயு; குரங்கு – சுக்கிரீவன், சராசரம் அயோத்தியில் வாழும் சராசரம்; இடைச்சி சித்தயந்தி; இடையர் -ததிபாண்டன்; தயிர்த் தாழி – ததி பாண்டனுடைய தாழி; கூனி -கிருஷ்ணாவதாரத்தில் கண்ணனுக்குச் சந்தனம் தந்தவள்; மாலாகாரர்-கண்ணன் காலத்து, பக்தர்; பிணவிருந்து இதையிட்ட கண்டாகர்ணன்; வேண்டடிசில் இட்டவர் பக்த விலோசன ரிஷிபத்தினிகள்; அவன் மகன் – பிரகலாதன்; அவன் தம்பி -வீடணன்;ஆனை கஜேந்திராழ்வான்; அரவம் -சுமுகன்; மறையாளன்-
கோவிந்த சாமி; பெற்ற மைந்தன் -மார்க்கண்டேயன் ஆகிய பதினெண்மர்.
8-மேகம் சரத் காலத்தில் பெரு முழக்க மிட்டுப்போய் விடும், மழை பெய்யாது; பெய்யுங் காலத்தில்ஆடம்பரமின்றிப் பெய்யும். எம்பெருமான் குசேலனுக்கு அருள் செய்தபடி இங்ஙனேயிறே.
9-விராட பர்வ காலஷேபத்துக்கு வரும் மேகம்;பகவத் விஷய காலஷேபங்களிலே வந்து நிற்பான் எம்பெருமான். ஸ்ரீ சைலேஸ தயா பாத்ர (தனியன்) என்று வந்தானிறே அரங்கநாதன் பெரிய ஜீயர் கோஷ்டியிலே.
10-சுக்திகளிற் பெய்து முத்தாக்கும் மேகம்;அடியார்க்கு இன்ப மாரியாகிய (திருவாய் 4.5:10) கடாஷ தாரையும் ஆழ்வார்கள் ஆசாரியர்களிடத்தே பிரவகித்து மிக்க பயன் விளைக்குமிறே.
(11) “விண்ணீல மேலாப்பு விரித்தாற் போல் மேகங்கள்”’+ இத்யாதிப் படியே தூது விடப்படும் மேகம்;எம்பெருமான் றானும் “இன்னார் தூதன் என நின்றான்”(பெரி.திரு. 2.2:3); கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான். தூதனாய் மன்னவனால் சொல்லுண்டானிறே”(மேலது 11.5:7)
12-மழை பெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும்;எருக்கிலை போல்வன வீழ்ந்தொழியும்; ஆகவே மழை சிலர்க்குத் தீங்கு, சிலர்க்கு நன்மை. எம்பெருமான் படியும் அப்படியே. “கஞ்சன் நாள் கவர் கருமுகில்; எந்தாய்”
“தாயர் மகிழ ஒன்னார் தளர”# இத்யாதி.
13-“எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள், மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும்” என்கின்றபடியே பயிர்கள் வேறு புகலற்று எதிர்பார்க்கப் பெற்றிருக்கும் மேகம்; “களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்” என்று அநந்ய கதிகளால் எதிர்ப்பார்க்கப் படுகை ஒக்குமிறே.
(14) “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கும் துப்பாய தூஉம் மழை’ (குறள். 12) என்கின்றபடியேஅன்னத்தின் அபிவிருத்திக்கு ஹேதுவாகையாலே போக சாதனமாயும் விடாய் தீரப் பருகுகையாலே ஸ்வயம் போக்கியமாயுமிருக்கும் மேகம்; அடைவிப்பானாயும் அடையப் படுபவனாயுமிறே எம்பெருமான் இருப்பது.
15-எத்தனை கண்ண நீர் விழ விட்டாலும் விருப்பமில்லாதவன் என்று வாளா கிடக்கும் மேகம்; பரதாழ்வான் பலருடனே சித்திர கூடத்தருகே போந்து கண்ண நீரை விழ விட்டு வேண்டின விடத்தும் தம் மனோ ரதம் பெறாமலே மீண்டானிறே’

1-இரத்தினத்தைச் சொந்தமாகவும் அனுபவிக்கலாம்;விற்பனை செய்து வேறு பொருள்களையும் பெறலாம்.அப்படியே எம்பெருமானைப் புருஷார்த்தமாகவும் கொள்ளலாம்;அவனை உபாயமாக்கி ஐஸ்வர்ய கைவல்யாதிகளான வேறு புருஷார்த்தங்களையும் பெறலாம்.
2-இரத்தினத்தின் மதிப்பை அறியாதவன் அற்ப விலைக்கு விற்பன்; மதிப்பறிந்தவன் உள்ள விலைக்கு விற்பன்; உத்தம அதிகாரி அதனை விற்பனை செய்யாமல் மார்பிலணிந்து அநுபவித்து மகிழ்வான். இங்ஙனமே எம்பெருமானைக் கொண்டு ஐஸ்வரியம் போன்ற கீழான பலன்களைக் கொள்வாரும், அவனை மோஷ உபாயமாகக் கொண்டு மோஷ புருஷார்த்தத்தைக் கொள்வாரும், அவனை’எனக்குத் தேனே, பாலே, கன்னலே அமுதே’ என்று தாமே அநுபவிப்பவர்களுமாக இருப்பார்கள்.
3-இரத்தினத்தை இழந்தவன் கதறி யழுவான்.எம்பெருமானை இழந்தவனும் அப்படியே. இராம ரத்தினத்தை இழந்த பரதன் அவையில் கதறி யழுதானன்றோ? “பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன்”: ‘இன்பத்தை இழந்தபாவியேன் என தாவி நில்லாதே” “உன்னைக் காண்பான் நான் அலப்பு ஆய் ஆகாயத்தை நோக்கி யழுவன் தொழுவன் ‘ என்றிப்படி யெல்லாமாக கதறி யழுவார்கள்.
4-இரத்தின முடையவன் மார்பு நெறிப்பன்.எம்பெருமானைக் கைக் கொண்டவர்களும் “எனக்கு யாரும் நிகரில்லையே” “மாறுள்ளதோ இம் மண்ணின் மிசையே””எனக் கென்னினி வேண்டுவதே “இல்லை யெனக் கெதிரே” என்று செருக்கிப் பேசுவார்கள்.
5-இரத்தினம் பெற்றுள்ளவனை உலகமெல்லாம் தொடரும். எம்பெருமானைக் கைக் கொண்டவனையும் அப்படியே.
6-இடையில் ஒரு புருஷனைக் கொண்டே இரத்தினம் வாங்கப்படும்; புருஷகாரமின்றி எம்பெருமானைப் பெற முடியாது. “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து. “
7-இரத்தினத்திற்குச் சிலசில ஆதாரங்களில்(ஆஸ்ரயங்களில்) மதிப்பு அதிகப்படும். எம்பெருமானுக்கும் அப்படியே. ஆழ்வார்கள் திரு வாக்கில் புகுந்து புறப்பட்ட திருப்பதிகளில் அன்றோ எம்பெருமானுக்கு மதிப்பு அதிகம்.
8-இரத்தினம் ஒளியை விட்டு இராது; எம்பெருமானும் பிராட்டியை விட்டு இரான்.
9-இரத்தினத்திற்கு ஒளியால் மகிமை; எம்பெருமானுக்கும் பிராட்டியால் ஏற்றம்.
10-இரத்தினத்திற்கு ஒளியால் ஏற்றமென்றாலும்,இரத்தினத்தின் சுதந்திரப் பெருமைக்கு ஒரு குறை இல்லை; எம்பெருமானுக்கும் அப்படியே.
11-இரத்தினம் கடல், மலை முதலிய இடங்களில் உள்ளது. எம்பெருமானும் திருப்பாற்கடல், திருமலை முதலான இடங்களில் உள்ளான்.
12-இரத்தினம் எவ்வளவு உயர்ந்த தாயினும் தலைப்பில் முடிந்து ஆளலாம்படி இருக்கும். எம்பெருமானும் பரத்துவத்தை மறைத்து (அர்ச்சையில் சௌலப்பியத்தைக் காட்டுகின்றவனன்றோ?
13-இரத்தினம் பெற்றவர்கள் இரவும் பகலும் கண்ணுறங்கார்; எந்த
வேளையில் யார் கொள்ளை கொள்வாரோ என்று துஞ்சாதிருப்பார்கள். எம்பெருமானைப் பெற்றவர்களும் அப்படியே. “கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே என்கின்றபடியே காண்பதற்கு முன்பு உறக்கம் இல்லை;கண்ட பின்பும் இல்லை.

நிதியையும் வைத்த மாநிதியையும் ஒப்பு நோக்கி நம் ஸ்வாமிகள் அநுபவித்தவை: ஸ்வாமிகளின் சிந்தனை யோட்டம்.
1-புதைத்து வைக்கப் பெறும் பொருள் ‘நிதி’எனப்படும். தைத்ரீய உபநிடதத்தினால் எம்பெருமான் நிதியாக அறியப் பெறுபவன். நிலத்தினுள் புதைத்து வைத்து ஆள வேண்டியதாயிருக்கும் நாட்டிலுள்ள நிதி;எம்பெருமானாகிய நிதி வைத்த மா நிதி அங்ஙனமின்றி நெஞ்சிலே புதைத்து ஆளத் தக்கது என்ற வேற்றுமை கண்டு மகிழத்தக்கது.
(2) நிதியானது தன்னை யடைந்தவர்களை இரவும் பகலும் கண்ணுறங்க வொட்டாது; எந்த நேரத்தில் யார் கொள்ளை கொள்வாரோ என்ற அச்சத்தால் துஞ்சாதிருப்பர் நிதியுடையார். எம்பெருமானும் அப்படியே. “கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே” . காண்பதற்கு முன்பும் உறக்கம் இல்லை;கண்டாலும் காதல் மிகுதியால் உறங்குவதில்லை.நிதியானது ‘சித்தாஞ்சனம்’ அணிந்த சில பாக்கியவான்களுக்கே கிடைக்கும்; எம்பெருமானும் ‘பக்தி சித்தாஞ்சனம்’பெற்ற ஆழ்வார்கள் போன்ற சில பாக்கியசாலிகட்கே கிடைப்பன்-
3-நிதி யுடையவன் மார்பு நெறிப்பன்; எம்பெருமானைக் கைக் கொண்டவர்களும் ‘எனக்கு ஆரும் நிகரில்லையே ‘மாறுள்ளதோ இம் மண்ணின் மிசையே” ‘இல்லை யெனக்கெதிரில்லை யெனக், கெதிரில்லை யெனக் கெதிரே என்று செருக்கிப் பேசுவார்கள். நிதி படைத்துள்ளவனை உலகமெல்லாம் போற்றிப் புகழும். எம்பெருமானைக் கைக் கொண்டவர்களையும் அறிஞர் புகழ்வர்.
4-நிதியை இழந்தவன் கதறி யழுவன். எம்பெருமானை இழந்தவனும் அப்படியே. ஸ்ரீ ராமனாகிய வைத்தமா நிதியைஇழந்த பரதாழ்வான் சபையில் கதறி யழுதானன்றோ?“பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன்” “இன்பத்தை இழந்த பாவியேன் என தாவி நில்லாதே “எழில் கொள் நின் திருக் கண்ணின் நோக்கந் தன்னையும் இழந்தேன் இழந்தேனே” * “உன்னைக் காண்பான் நான் அலம்பு ஆய் ஆகாயத்தை நோக்கி யழுவன்”” “என சொல்லிப் புலம்புவனே”” என்று இப்படி யெல்லாம் கதறி யழுவார்கள் எம்பெருமானுடைய சிந்தனையை இழந்து ஒரு கணப் பொழுது கழியப் பெற்றாலும் கள்வர் எல்லா சொத்துகளையும் கொள்ளை கொண்டால் எப்படி கதறி யழக் கூடுமோ அப்படிக் கதறி யழ வேண்டும் என்பர்.

ஐதிகங்கள்
அம்மங்கி அம்மாள் என்ற ஓர் ஆசிரியர் நோயால் வருந்தி யிருக்க, நஞ்சீயரும்?நம்பிள்ளையும் அவரைக் கண்டு நலம் விசாரிக்கச் சென்றனர். அப்போது அவர் மிகவும் கிலேசப் படுவதைக் கண்டு நஞ்சியர் ‘ஸ்வாமின்! தேவரீர் சாமானிய மனிதரன்றே;எவ்வளவோ பகவத் பாகவத கைங்கரியங்கள் பண்ணி யிருக்கின்றீர்; குணாநுபவத் தாலல்லது போது போக்கி அறியீர்; இப்படி யிருக்க உம்மை மற்றவர்களைப் போல இப்படிக் கஷ்டப்படுத்துகிறானே (இறைவன்) என்றாராம்.அதற்கு அவர் “நீயாள, வளையாள மாட்டோமே” என்றானன்றறோ கலியன் பாசுரம். எம்பெருமானுக்கு வாழ்க்கைப்பட்டால்)கிலேசப்பட்டு தானே ஆக வேண்டும்” என்றாராம். பிறகு வெளியே எழுந்தருளிய பின் நஞ்சீயர் நம்பிள்ளையை நோக்கி ‘பார்த்தீரா இவருடைய எண்ணத்தை? என்ன பாசுரம் எடுத்துக் காட்டினார்!” என்று அருளிச் செய்து மகிழ்ந்தாராம். (பெரி. திரு. 3.6:9 உரை -புறப்பட்ட பின்பு நஞ்சீயர் பிள்ளையை பார்த்து முடிகிற இவ்வளவிலேயும் இவ் வார்த்தை சொல்லுகிறது விஸ்வாசத்தின் கனமான பாவ பந்தத்தில் ஊற்ற்ம் இறே என்று அருளிச் செய்தார்)

2- ‘குடதிசை முடியை வைத்து’ (திருமாலை19) என்ற பாசுர உரையில் காணப் பெறுவது. “மேலைத் திக்கு உபய விபூதிக்கும் தலைமை வகித்தலைத் தெரிவிக்குமாறு தான் சூடின திருவபிடேகத்தை யுடைய திருமுடியை வைப்பதானாலும், கீழைத் திக்கு – சகல லோகமும்,உய்விக்கும்படி சரணமடையக் கூடிய தன் திருவடிகளை நீட்டுவதனாலும், வடக்குத் திக்கு – முரட்டு சமஸ்கிருதம் நடையாடுவதாகி ஆழ்வார்களின் செவிக்கினிய ஈரச் சொல் நடையாடாத தேசமாகையாலே அத் திக்கிலுள்ளா ரெல்லாரும் ஈடேறுவதற்கு ஏற்பட வேண்டிய பின்னழகை யெல்லாம் காட்டுவதனாலும், தெற்குத் திக்கு – தனது அந்தரங்க பக்தனான விபீஷணாழ்வானுக்காகத் தனது இரு கண்களை வைத்து அன்போடு நோக்குவதனாலும் என இவ்வாறு நான்கு திக்குகளும் பயன்படும் என்க. விபீஷணாழ்வான் சிரஞ்சீவியாய் என்றும் இலங்கையில் வாழ்ந்து வருகின்றான் என்பது நூற் கொள்கை.

3- ‘அமலனாதி பிரான்’ (1) – இதன் உரையில் : பிள்ளை திருநறையூர் அரையரைச் சிலர்”பெரிய பெருமாளை அநுபவிக்க இருந்த இந்த ஆழ்வார்(திருப்பாணாழ்வார்) திருவேங்கடமுடையான் பக்கம் போவானேன்?” என்று கேட்க, “ஆற்றிலே அழுந்துகிறவன் ஒரு காலைத் தரையில் ஊன்றினால் பிழைக்கலாமோ என்று காலந் தாழ்க்குமாப் போலே, இவரும் பெரிய பெருமாள் அழகிலே அழுந்துகிறவராகையாலே திருமலையில் கால் தாழ்ந்தார்” என்றாராம். “ஒருவனைக் கவி பாடும்போது அவனுடைய வரலாறு சொல்லிக் கவி பாட வேணும்;பரம பதத்தில் நின்றும், வட மதுரையிலே தங்கித் திருவாய்ப்பாடிக்கு வந்தாப் போலே வைகுண்டத்தில் நின்றும் திருமலையிலே தங்கியாய்த்துக் கோயிலுக்கு வந்தது;அவ் வரலாற்றைப் பாடுகிறபடி” என்றும் ஒரு கால் அருளிச் செய்தாராம்.

4-‘கொண்டல் வண்ணனை‘ (அமலனாதி10) என்பதன் உரையில் வருவது. கூரத்தாழ்வான் தம் சுந்தர பாஹு ஸ்வத்தில் பண்டு யசோதைப் பிராட்டி முத்தங் கொடுத்த சுவடு இன்றும் அழகர் திவ்விய கன்னங்களில் திகழா நிற்கும் என்று அநுபவித்தாற் போல,இவரும் (திருப்பாணாழ்வார்) பண்டு வெண்ணெய் உண்ட முடை நாற்றம் இன்னும் பெரிய பெருமாள் திருப் பவளத்திலே கமழா நிற்பதாகக் கருதி அநுபவிக்கிறார் ‘வெண்ணெய் உண்ட வாயன்’ என்று தசரத சக்கரவர்த்தி தன்னுடைய அரசு ஐஸ்வர்யத்தைப் புசிக்கைக்கு ‘எனக்கு ஒரு பிள்ளை வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெருமாளைப் (இராமனைப்) பெற்றதைப் போல நந்தகோபரும் “கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய் பருக நந்தன் பெற்ற ஆனாயன்” என்றபடியே திருவாய்ப்பாடியில் பால் முதலானவற்றின் நிறைவு அடங்கலும் (கவ்ய ஸம்ருத்தி அடங்கலும்) பாழ் போக வொண்ணாதென்று இத்தை அமுது செய்கைக்காக நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளை யாய்த்து ஸ்ரீ கிருஷ்ணன். பெரிய பெருமாள் கொறுட்டை (உதட்டை) முகர்ந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்குமாம்.

5- ‘அருள் கொண்டாடும்‘ (கண்ணி நுண்-8) என்பதன் உரையில் வருவது. திருவாய் மொழியில்“எண்ணாதனகள் எண்ணும் நம் முனிவர் இன்பம் தலை சிறப்ப, பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி” (10.7:3) என்றவிடத்து அருள் செய்யும் பொருள் சிறப்பை ஈண்டு அநுசந்திக்க, எண்ண முடியாதவற்றை எண்ணுகின்றவர்களான நம் முனிவர்கள் பேரானந்தம் பெறும்படியாகத் திருவாய்மொழி அவதரித்ததாம்.எண்ணாத வற்றை எண்ணுகையாவது என்? எனில்:திருவாய்மொழி அவதரிப்பதற்கு முன்பு பல பெரியோர் அவை கூடி “எம்பெருமானுடைய ஸ்வரூப குண விக்கிரக விபூதிகளை யெலாம் முற்றும் நிறைவாகப் பேச வல்ல பிரபந்தம் ஒன்று கூட இல்லை; அப்படிப்பட்ட பிரபந்தம்ஒன்று அவதரிக்க வேணுமென்று நாம் எம்பெருமானை வேண்டிக் கொள்ள வேணும்” என்று பேசி எழுந்து போனார்களாம். அவர்களே திருவாய்மொழி அவதரித்த பின்பு மறுபடியும் ஒரு பேரவை கூட்டி ‘எம் பெருமானுக்கு இன்னமும் குண விக்கிரக விபூதிகள் உண்டாக வேணும்’என்றார்களாம். உள்ள குண விக்கிரக விபூதிகளை யெல்லாம் திருவாய்மொழியில் பேசி முடித்து விட்டார் ஆழ்வார் என்பது இதன் கருத்து.

5- ‘முற்ற முத்துக் கோல் துணையா’ (பெரி.திரு. 1.3:1) என்ற தொடரில் ‘கோல் துணையா என்ற விடத்து வியாக்கியானத்தில் இரு ஐதிகங்கள்-
நஞ்சீயர் சந்நியாச்ரமத்தை மேற் கொண்ட நிலையில் திரிதண்டம் (முக்கோல்) தரித்துக் கொள்ளும் போது ‘ஓ திரி தண்டமே! நீ எனக்குத் துணையாயிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற பொருளை யுடைய மந்திரத்தை (ஸகர மா கோபாய ) உச்சரிக்க வேண்டும்என்று கேட்டு “எல்லாவற்றையும் அறிய வல்லவரையும் முழு ஆற்றலை யுடையவரையும் உள்ள எம்பெருமானையே துணையாகப் பற்ற வேண்டி யிருக்க, அசேதநமான தண்டத்தை நோக்கி இங்ஙனம் சொல்லும்படியாக நேர்ந்ததே” என்று சாதித்தாராம். சாத்திர விதிப்படி கோலைத் துணை கொள்ள வேண்டியது அங்கு; கிழத் தனத்தில் கோலைத் துணை கொள்வது ஆற்றலற்றமையினாலேஇங்கு.
இன்னுமோர் ஐதிகம் : நஞ்சீயர் பட்டர் திருவடிகளுக்கு அந்தரங்கராய் இருக்கிற நாளிலே ஒரு கைசிக துவாதசி யன்று பட்டர் பிரம்ம ரதத்தில் எழுந்தருளித் திருவீதி அலங்கரிக்கப்பட்டவாறே நஞ்சீயரும் ஸ்ரீபாதம் தாங்கப் புக, ‘உத்தமாஸ்ரமியாய் திரி தண்ட தாரியான உமக்கு இக் காரியம் தகாது’ என்று பட்டர் முதலானோர் மறுத்துக் கூற, நஞ்சீயர் “எனக்குத் துணையாகி என்னை இரட்சிக்க வேண்டும்” என்ற மந்திரத்தைச் சொல்லி ஏற்றுக் கொண்டஇந்த முக் கோல் தானே இன்று எனக்கு விரோதி யாகின்றதோ?இக் கோல் எனக்குத் துணை யல்லவோ? ஸ்வரூப ரட்சணத்துக்கு இக் கோல் இடையூராயின் இஃது எனக்கு வேண்டா” என்று சொல்லித் திரி தண்டத்தை விட்டெறியப் போனாராம்.அப்போது அவருடைய ஆசாரிய பக்தியைக் கண்டு அனைவரும் வியந்தனராம்.

6- ‘ஓதலும் உன் பேரன்றி மற்றோ தாள்'(பெரி.திரு. 2.7:5) இந்தப் பாசுரத்தின் (இது தாய்ப் பாசுரம்)இக் காட்டிய அடிக்கு ஓர் ஐதிகம். திருவாய்ப்பாடியில் கண்ணன் பிறந்து வளரும் காலத்தில் ஓர் ஆய மங்கை இடைவிடாது கண்ண பிரானையே சிந்தித்துக் கொண்டு வியாமோகம் அடைந்திருந்தாள்; அது கண்ட அவன் மாமியானவள் அந்த சிந்தனையை மாற்றி விடக் கருதி, தயிர் பால் நெய் முதலியவற்றை அவளிடம் கொடுத்து ‘இவற்றை விற்று வா’ என்று சொல்லி யனுப்பினான். அம் மங்கை கண்ண பிரானை யன்றி வேறொன்றையும் அறியாதவளாகையாலே, மாமியின் நிர்ப்பந்தத்துக்காகக் கூடையைத் தலையிலே சுமந்து கொண்டு, தெரு வழியே நடந்து செல்லும்போது, ‘தயிர்! பால்! நெய்!’ என்று விற்பது தவிர்த்து “கோவிந்தன் வாங்கலையோ கோவிந்தன்! தாமோதரன் வாங்கலையோ தாமோதரன்! மாதவன் வாங்கலையோ மாதவன்!” என்று இங்ஙனே கண்ணனின் திருநாமங்களையே கூவிக் கொண்டு சென்றாளாம். அது போலவே இப் பரகால நாயகியும் ‘ஓதிலும் உன் பேரன்றி மற்றோதாள்’ என்றவளாக உள்ளாள்.

7-‘வாத மா மகன் ‘ (பெரி.திரு. 5.8:2) என்ற திருமொழிப் பாசுரத்தின் ‘கோதில் வாய்மையி னாயொடும்உடனே உண்பன் நான்’ என்ற அடிக்கு ஓர் ஐதிகம்.முன்பெல்லாம் வாழை இலையில் தாமரை இலையில் உள்ளது போலவே இடை நரம்பு இல்லாமல் இருந்ததென்றும், இப்பொழுது இராமன் அநுமனைத் தன் எதிரில் அமரச் செய்து தனது இலையில் ஒரு பாதியிலேயே அவன்உண்ணுமாறு அவ்விலை நடுவில் தனது கையால் ஒருவரையறை கீறினானாக, அது முதல் சங்கற்பத்தால் அவ்விலையில் இடை நரம்பு ஏற்பட்டதென்றும் கூறுவர்.இராமபிரான் ஒக்க உண்ட செய்தி வாஸிஷ்ட இராமாயணத்தில்உள்ளது என்பர்.

8- ‘பண்டை நாளாலே‘ (திருவாய். 9.2:1) என்ற திருவாய்மொழியின் உரையில் இரண்டு ஐதிகங்கள் -கோயில் சீய்த்து (இரண்டாம் அடியில் உள்ளஇதற்கு) ஐதிகம். திவ்விய தேசங்களில் பண்ணும் கைங்கரியங்களில் தலையாயது இது. “கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினைக் களையலாமே‘ (திருவாய்10.2:7) என்று மேலும் அருளிச் செய்வர். திருவலகிடுதல்,,மெழுகுதல், கோலமிடுதல் முதலியன செய்தலையே’கோயில் சீய்க்கை’ என வழங்குவர். இங்கே ஈட்டில் திருக் கண்ணமங்கை யாண்டானின் இதிகாசம் ஒன்றுஉள்ளது. அஃது இது : திருங்கண்ணமங்கை யாண்டான் திருக்கண்ணமங்கை என்னும் திவ்விய தேசத்திலே ஒருமகில மரத்தடியிலிருந்து சருகைத் திரு அலகிடா நிற்க, கூட வாசித்து நாத்திகராயிருப்பான் ஒருவன் ‘பகவான் உபாயம்,நாம் வேறு பயன் கருதாதவர்கள், இப்போது செய்யும் பணிக்குப் பயன் என்ன?’ என்றானாம். அப்போது திருக்கண்ண மங்கையாண்டான் திருஅலகு இட்ட இடத்தையும், திருஅலகு இடாத இடத்தையும் காட்டி,’இவ்விடமும் அவ்விடமும் இருந்தபடி கண்டாயே;இங்கொரு பலம் இல்லை என்று தோற்றி யிருந்ததோ? என்று பணித்தாராம். இங்கு அறியவேண்டுவதாவது; நேரில் காணும் பயன் என்றும் நேரில் காணாப் பயன் என்றும் இருவகைப்படும். சந்நிதி வாசலை அலகிடுதல் முதலிய திருப்பணிகளை ஒரு பயன் கருதாது செய்வதனால் ஒரு குறையும் இல்லை. இது பயனற்றது என்று கருதுதல் வேண்டா; திருவலகிடாத இடம் கண் கொண்டு காண வொண்ணாததாயும், திருவலகிட்ட இடம் கண்ணால் காண இனிதாயிருப்பதுவும் பயன் காட்டப் பெறுகின்றன.

9-மேற்கட்ட பாசுரத்தின் மூன்றாவதுஅடியில் ‘தாமரைக் கண்களால் நோக்காய்‘ என்ற அடியின் பகுதியின் உரையில் கண்ட ஐதிகம் வார்த்தையிலே தோற்றாத அன்பும் நோக்கிலே அநுபவிக்கும்படி குளிர நோக்கி அருள வேண்டும். கோயிலில் (திருவரங்கத்தில்) பிள்ளை தேவ பெருமாள் அரையர் இப் பாசுரத்தைச் சேவிக்கையில் ‘உன் தாமரைக் கண்களால் நோக்காய்’என்று ஒரு தடவை சொல்லி நிறுத்தாமல் ‘நோக்காய்,நோக்காய், நோக்காய்….’ என்று பலகாலும் சொல்லிக் கொண்டிருந்து மேலடியிலே போக மாட்டாதே நின்றாராம்.அப்போது கோஷ்டியிலே வீற்றிருந்த அவரது
திருத் தந்தையாரான ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் எழுந்திருந்து “பிள்ளாய் நீ எம்பெருமான் திருவுள்ளம் புண்படும்படி இங்ஙனம் பலகாலும் சொல்லி
நிர்ப்பந்திக்கலாமோ? அழகிய மிடற்றைத் தந்து, நல்ல பாசுரத்தைத் தந்து, பிள்ளைகளையும், செல்வத்தையும் தந்தருளி யிருக்க ஒன்றும் செய்யாதாராக நினைந்து இன்னமும், ‘நோக்காய் நோக்காய் … என்றால் ‘இஃது என்னே!மேலே பாடு’ என்றாராம்.

10- ‘கெடும் இடராய எல்லாம் கேசவா என்ன’ (திருவாய் 10.12:1) என்ற பாசுரத்தின் ‘கொடு வினை செய்யும் கூற்றின்’ என்ற அடியின் பொருளுரைக்கும் போது வருவது:யமனுடைய துன்பத்திற்கு அஞ்ச வேண்டா என்னுமதற்கு ஐதிகம் காட்டுகிறார் ஈட்டாசிரியர். ஒரு திரு வேட்டையிலே பட்டர் திரு வூற்றங்கரையிலே பேரோலக்கமாக இருக்க, ‘மாலைப் பொழுது ஆயிற்று’ என்று சிலர் விண்ணப்பம் செய்ய, “நாம் பெருமாள் அழகிலே துவக்குண்டு இன்று ஒரு நாளும் செய்ய வேண்டிய காரியத்திலே சிறிது தாழ்கின்றோம் என்றால் இது குற்றமாக எமன் கேட்கவோ? ஓர் அரசன் இருந்து நாட்டுக் கணக்கு கொடு வரா நின்றால் அரசனுக்கு அந்தரங்கனாய் இருப்பான்.ஒருவன் பெயரை வாசித்தால் ‘ஓம் காண்! அது கிடக்க;மேலே செல்’ என்றால், பின்னை ஒரு நாளும் அப் பெயரை எடுத்து வாசிக்கப் பெறான் காண்; இந்த விஷயத்திலே’உனக்காகிக் தொண்டு பட்ட, நல்லேனை வினைகள் நலியாமை நம்பு தம்பி” என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பாசுரம் அறியீர்களோ? அவனுக்குக்காகத் தொண்டுபட்டுப் போது போக்குபவர்களை வினைகள் நலியுமோ?’ என்று அருளிச் செய்தாராம்.

11-‘புண்ணியம் செய்து நல்ல‘ (திருவாய்10.2:5) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் ‘எந்தை நாமம்‘என்பதிலுள்ள ஐதிகம். இடறினவன் ‘அம்மே’ என்னுமாறு போல திருநாமம் சொல்லுவதற்கு ஒரு தகுதியைத் தேடிக்கொள்ள வேண்டா. நஞ்சீயர், “திருநாமம் சொல்லும் போது பக்தி யுடையவனாய்க் கொண்டு சொல்ல வேண்டுமோ?”என்று பட்டரைக் கேட்க, ‘கங்கையிலே முழுகப் போமவனுக்கு வேறு ஓர் உவர்க் குழியிலே முழுகிப் போக வேண்டுமோ? மேல் உண்டான நன்மையைத் தருகிற இது தகுதியையும் தர மாட்டாதோ?’ என்று அருளிச் செய்தாராம். திரு நாமம் சொல்லுகைக்கு ருசியே ஆயிற்று வேண்டுவது; அவர்களே அதிகாரிகள்.

12- ‘கடு வினை களையலாகும்‘ (திருவாய்.10.2:8). என்ற பாசுரத்தில் ‘படமுடை அரவில்… சொன்னோம்’(3-4 அடிகள்) என்ற அடிகளில் அநுசந்திக்கும் ஐதிகம்.ஆளவந்தார்க்கு எல்லாப் பொருளையும் உபதேசித்த மணக்கால் நம்பி ‘யோக ரகஸ்யம் மாத்திரம் குருகைக் காவலப்பனிடத்திலே பெறக் கடவீர்!’ என்று சாதித்திருந்த படியாலே, ஒருகால் அதனை நினைத்துக் குருகைக் காவலப்பனிடம் சென்று ‘அடியேனுக்கு யோக ரகஸ்யத்தை அருளிச் செய்ய வேண்டும்’ என்று வேண்டினார். அவரும் ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்த நாளில் வந்து உபதேசம் பெறுமாறு சொல்லிப் போக விட்டார். ஆளவந்தாரும் நம்பெருமாள் சந்நிதிக்கு எழுந்தருளினார். அந்தச் சமயம் திருவத்யயநோத்சவம் நடை பெற்றுக் கொண்டிருந்தது.அரையர் கோட்டியிலே சேர்ந்த அவர் சேவிக்கும் திருப்பாசுரங்களில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார். அரையர்’கடுவினை களையலாகும்’ என்கின்ற இந்தப் பாசுர
அளவிலே வரும் போது, எழிலணி அனந்தபுரம் படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர்! நாம் உமக் கறியச் சொன்னோம் என்ற அடிகளைச் சேவிக்கும் போது, ஆளவந்தார் திருமுகத்தைப் பார்த்து ஊன்றி உறுத்திச் சேவிக்க,,ஆளவந்தாரும் இதைக் கேட்டு ‘ஆழ்வாருடைய தமர்களிலே தாம் சேர வேண்டில் திருவனந்தபுரம் சென்று சேவித்து வரப் பிராப்தம்’ என்று சொல்லிக் கொண்டே அப்போதே ஸ்ரீபாதத்தை உடையாரைக் கொண்டு நம்பெருமாளிடம் விடைபெற்றுப் பயணமாகித் திருவனந்தபுரத்திற்கு எழுந்தருளி அனந்த பத்மநாபனை மங்களாசாசனம் செய்து வாழ்ந்து வந்தார்.° இந்த நிலையில் குருகைக் காவலப்பன் எழுதித்தந்த சிறு முறியைப் பார்க்க நேர்ந்த அந்நாளே அவர்குறிப்பிட்ட நாளாக இருந்தது. உடனே துணுக்குற்று அலைந்து ‘ஐயோ, நாம் நினைத்தவுடன் எங்கும் சென்று சேரும் ஆற்றலுடைய பெரிய திருவடியும் அல்லோம்; சிறிய திருவடியும் அல்லோம். அங்குச் சென்று சேர்வதற்கு ஒரு புட்க விமானம் பெற்றிலோமே’ என்று சோகித்து எழுந்தருளி யிருந்தார்.

இங்கே ஈட்டு ஸ்ரீசூக்தி : “திருவத்யயனம் பாடா நிற்க இதைக் கேட்டருளி ஆளவந்தார் ‘நமக்கு ஆழ்வாரோடே ஒரு சம்பந்தம் உண்டாக வேணும்’ என்று அப்போதே ஸ்ரீ பாதத்தை உடையாரைக் கூட்டிக் கொண்டு (அனந்தபுரத்துக்கு) எழுந்தருளினார்”

13- “வானேற வழி தந்த வாட்டற்றான் பணி வகையே” (திருவாய். 10.6:5) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தின் ‘நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகுநெஞ்சே (இறுதி அடி) என்பதற்கு ஐதிகம். பரமபதம் கிட்டிற்று என்னாக் கடுகக் கால் வாங்கிப் போகப் பாராதே காண்! பல நாட்கள் நம்மைக் குடிமக்கள் ஆக்கி எளி வரவு படுத்தின இவ்வுலக வாழ்க்கையைப் (சம்சாரத்தைப்) புரிந்து புரிந்து பார்த்துச் சிரி; ‘உன்னை அடி யறுத்தோமே'(உன்னை வென்றோமோ) என்று பார்த்துச் சிரி” என்கின்றார்.பின்பழகிய மணவாளப் பெருமாள் அரையர் ஒரு நோயால் வருந்தா நிற்க திருவரங்கநாதன் அவருக்குப் பரமபதம் கொடுக்கத் திருவுள்ளம் பற்றித் திருமாலை, திருப்பரிவட்டம் முதலான வரிசைகளைக் கைவிட்டருளின அளவிலே,’நானேறப் பெறுகின்றேன். நரகத்தை நகு நெஞ்சே’ என்று இப்பாசுரத்தைச் சொல்லிக் கிரந்தியை (கட்டியைப்) பார்த்துச் சிரித்தாராம்.‘நரகத்தை நகு’ என்ற இவ்விடத்திற்கு’நரக லோகத்தைப் பார்த்துச் சிரி’ என்று சிலர் பொருள் கூறுவர். அது வேண்டா; சம்சாரத்திற்கு ‘நரகம்’ என்ற பெயராதலால் ‘சம்சார பூமி’ என்ற பொருளே ஈண்டுக் கொள்ளத் தகும்.

இதிகாசங்கள்
‘தேனுகன் ஆவி போயுக
(பெரி.திரு. 9.8:7) என்ற திருமொழியில் உள்ளது. கம்சனது ஏவுதலால் கழுதை வடிவம் கொண்டு காட்டுக்குள்ளே கண்ண பிரானை நலிவதற்காக வந்தவன் தேனுகன் என்னும் அசுரன். கண்ணபிரான் பலராமனோடும் இடைச் சிறுவர்களோடும் மாடு மேய்த்துக் கொண்டு, பழங்கள் அழகாக மிகுதியாகப் பழுத்து மணம் வீசிக் கொண்டிருந்த ஒரு பனங்காட்டை அடைந்து அப் பழங்களை விரும்பி உதிர்த்துக் கொண்டு வருகையில் அவ் வனத்துக்குத் தலைவனும்.கம்சன் பரிவாரத்தில் ஒருவனுமான கழுதை வடிவங் கொண்ட தேனுகாசுரன் சினம் கொண்டு ஓடி வந்து எதிர்த்துப் போர் செய்ய உடனே கண்ணன் அதி லாவகமாக அதன் பின்னங்கால்கள் இரண்டையும் பற்றி அவ் வசுரக் கழுதையைச் சுழற்றி உயிரிழக்கும்படிப் பனை மரத்தின் மேலெறிந்து அழித்தனன் என்பது வரலாறு. இத்தகைய பல இதிகாசங்கள் தீபிகையை அழகு செய்கின்றன.

இதிகாசமும் ஐதிகமும் – ஓர் அற்புதக் கலப்பு : இந்த இரண்டும் கலந்த நிலையை ஸ்வாமியின் உரையில் கண்ணுறும் போது அது நமக்குத் ‘தேனும் பாலும் கன்னலும் அமுதும்’ கலந்து அநுபவிப்பது போன்ற நிலையைத் தருகின்றது.
“வேங்கடங்கள் மெய்ம்மேல்” (திருவாய் 3.3:6)என்ற அடிகட்கு ஸ்வாமி அருளும் உரை:
கடன்கள் சிலர்’கடன்கள் மேல் வினை முற்றவும் வேம் (இது)’ என்று அந்வயித்துப் பொருளுரைக்க. கடங்கள்-எம்பெருமான் நாம் செய்த பாவங்களை மன்னித் தருள்வது மாத்திரம் அன்றிக்கே பகைவர்கள் மேலும் போக்குவான்,,எத்தனையோ பிறப்புகளில் சஞ்சிதங்களாய் பழ வினைகள் மலை மலையாய்க் குவிந்து கிடக்கும் பாவங்கள் நம்முடைய சிறிய முயற்சியால் தொலைந்திடுமோ என்று ஐயுற்றார்களாம்; அவர்கட்குப் பட்டர் ரசோகதிகளுடன் ஓர் இதிகாசம் எடுத்துரைத்தாராம்; இராமபிரான் கடலரசனை நோக்கி மூன்று நாள் தரை கிடந்து தவம் செய்தார்;அவ்வளவில் கடலரசன் முகம் காட்டாதொழியவே சீறிச் சினந்து அக் கடல் மீது அம்பு தொடுத்து நின்றார். அது கண்டு கடலரசன் அஞ்சி நடுங்கி ஓடி வந்து, அவன் நாலடி வர நின்ற போது ‘உனக்காக அம்பு தொடுத்தேன்’என்றுரைக்க நாணப்பட்டு “உன் விரோதிகளைச் சொல்லுக,அவர்கள் மீது இவ் வம்பைச் செலுத்துகிறேன்” என்று சொல்ல, அப்படியே அவன் தன் விரோதிகள் இருக்குமிடம் குறிப்பிட அங்கே அம்பைச் செலுத்தி உபகாரம் செய்தாரென்து வான்மீகி இராமாயணத்தால் அறிகின்றோம். வணங்கிய மாத்திரத்தில் சேதநன் பண்ணின பாவங்களை யெல்லாம் மறப்பான் இறைவன் என்பதற்குஇந்த இதிகாசம் சான்று.
இவ் விடத்தில் இன்னுமோர் ஐதிகத்தையும் அருளிச் செய்வர் பட்டர். “பண்டு தலை மயிர் இல்லாத ஒருவன் நெல் அளந்து கொண்டு நின்றான்; அங்கே ஒருவன் சென்று ‘மயிரைப் பேணாமல் நீர் தனியே நின்று நெல் அளக்கிறீரே!’ என்ன, ‘வந்தது என்!’ என்ன, ‘ஒன்று மில்லை கண்டுபோக வந்தேன்’ என்ன, ஆகில் ‘ஒரு கோட்டையைக் கொண்டு போகலாகாதோ?’ என்று எடுத்து விட, அதனை அவன் கொடு வருகின்ற காலத்தில் எதிரே ஒருவன் வந்து,’இது பெற்றது எங்கே!’ என்ன, ‘உன்தனை மொட்டைத்தலையன் தந்தான்’ என்ன, அவன் சென்று அங்கே யுள்ள அவனைக் கண்டு ‘இன்னான் உம்மை வைது போகின்றானே!’ என்று அதனைக் கூற, ‘அடா! என் நெல்லையும் கொண்டு என்னையும் வைது போவதே!’என்று தொடர்ந்து வர, அவன் திரும்பிப் பார்த்து ‘ஏன் தான் குழல்கள் அலைய அலைய, ஓடி வாரா நின்றாய்!’ என்ன,,’ஒன்று மின்று; இன்னம் ஒரு கோட்டை கொண்டு போகச் சொல்ல வந்தேன்’ என்றானாம்; அப்படியே கடலை முகங்காட்டுவித்துக் கொள்ளுகைக்காகக் காலைப் பிடிப்பது,கோலைக் கோலைத் தொடுப்பதாக நிற்க, அவன் வந்து முகங்காட்டினவாறே ‘உமக்கு அம்பு தொடுத்தோம்’ என வெட்கி ‘உன் பகைஞரைச் சொல்லு, நாம் இதனை விட’என்றார் அன்றோ?

சம்வாதம் என்பது சம்பாஷணை; உரையாடல். எ.டு.’வீவின்றி நின்றவர்’ (திருவாய் 7.5:11) என்ற தொடரை விளக்குவதற்கு நம்பிள்ளை நஞ்சீயரிடையே நடைபெற்றதைப் போன்றது.அதாவது, “அர்ச்சுனன் தான் எம்பெருமானைப் பெற்றானோ? இல்லையோ?” என்று நம்பிள்ளை நஞ்சீயரைக் கேட்க அதற்கு அவர் அளித்த மறுமொழி: “அர்ச்சுனன் பெற்றானோ? இல்லையோ? என்ற விசாரம் உமக்கு எதற்காக? யார் யார் பெற்றார்கள்? என்று அவர்களை யெல்லாம் ஆய்ந்து பார்த்தா நாம் பற்ற வேண்டும்?எம்பெருமானுடைய அருளிச் செயல் என்று இவ்வளவே கொண்டு நாம் பற்ற வேண்டுமே யொழிய, பெற்றவர்களைப் பார்த்தன்று காணும். குளிர்ந்த தண்ணீர் கண்டால் அது குடித்து விடாய் தீர்க்கின்றோம்; இது குடித்து யார் யார் தாக விடாய் தீர்த்தார்கள்? என்று விசாரித்துப் பார்த்தா பருகுகின்றோம்? இல்லையே” என்று அருளிச் செய்தாராம்.

உடம்புருவில் மூன்றொன்றாய் மூர்த்தி வேறாய் உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனை கன்று மேய்த்துவிளையாட வல்லானை; வரைமீ கானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில் தவநெறிக்கோர் பெருநெறியை வையம் காக்கும்
கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தல சயனத்தே
-2-5-3-
வரைமீகானில் தடம் பருகு கருமுகிலை‘ என்பதற்கு நஞ்சீயர் பொருள் சொல்லும் போது வேறு விதமாகச் சொல்லா நிற்க, அதைக் கேட்டுக் கொண்டிருந்த பிள்ளை யழகிய மணவாளப் பெருமாளரையர் “இவ் விடத்திற்கு பட்டர் அருளிச் செய்யும் பொருள் இப்படி யன்றே” என்று சொல்லி பட்டர் அருளிச் செய்த விசேஷார்த்தத்தை ஸ்மரிப்பித்தாராம்;மலை மேல் காட்டில் உள்ள தடாகங்கங்களில் தண்ணீர் குடிக்கப் புகுங்கால் இளங்கன்றுகளாகையாலே நீரிலே முன்னே யிறங்கிக் குடிக்க அஞ்சுமாம்; அக்கன்றுகட்கு நீருண்ணும் விதத்தைப் பழக்குவிப்பதற்காகக் கண்ணபிரான் தான் தன் முதுகிலே கையைக் கட்டிக் கவிழ்ந்து நின்று தண்ணீர்முது செய்து காட்டுவன்;அதைச் சொல்லுகிறது ‘வரை மீ கானில் தடம் பருகு‘என்று,

திருவாய்மொழியில் 27 பதிகங்கள் பெண் பாவனையில் பேசியனவாக அமைந்துள்ளன. பெரிய திருமொழியில் உள்ள அகப் பொருள் துறைகளில் அமைந்த பதிகங்கள்23; திருநெடுந்தாண்டகத்தில் உள்ளவை 2 பதிகங்கள்;மடல் 2 ஆக மொத்தம் 27 பதிகங்கள். இங்ஙனம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து கொண்டு எம்பெருமானை அநுபவிக்கும் பொழுது அவர்கள் தோழி, தாய், மகள் என மூவருள் ஒருவரின் தன்மையைத் தாம் அடைந்து கூற்றுகள் நிகழ்த்துவர்.
சம்பந்த உபாய பயன்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிய பிரஞா வஸ்தைகளுக்குத் தோழி தாயார் மகள் என்று பேர்” (138)(பிரஜ்ஞாவஸ்தை – மூன்று காலங்களையும் அறியும்
அறிவின் நிலை)-என்று ஆசாரிய ஹிருதயம் கூறும்.

ஞானாவஸ்தைகள்‘ என்னாமல் ‘பிரஜ்ஞாவஸ்தைகள்’என்பதற்குக் காரணம் என்ன? இந் நிலைகள் அவர்கட்கு எல்லாக் காலங்களிலும் உண்டு என்னுமிடம் தோற்றுகைக்காக. திருவெட்டெழுத்தின் முப்பதப் பொருள்களைப் பற்றிய ஞானமும் இவர்கள் திருவுள்ளத்தில் எப்பொழுதும் நிலைத்தேயன்றோ இருப்பது?’ஓம் நமோ நாராயணாய’என்பது திருமந்திரம். இதிலுள்ள மூன்று பதங்களும் முறையே மூன்று பொருள்களைச் சொல்லுகின்றன. °அவை சேஷத்துவம், பாரதந்திரியம், கைங்கரியம் என்பன-அதாவது ‘பிரணவம்’ சேஷத்துவத்தையும் (பிறருக்கு அடிமையாய் இருத்தலையும்), ‘நமஸ்ஸு’ பாரதந்திரியத்தையும் (பரன் அல்லது பகவானுக்கு வசப்பட்டு இருத்தலையும்), ‘நாராயனாய’ சேதநன் ஈஸ்வரனுக்குப் புரிய வேண்டிய கைங்கரியத்தையும்’ தெரிவிக்கின்றன-அகாரம் பகவானையும், அதில் ஏறி மறைந்துள்ள (தொக்கி நிற்கும்)நான்காம் வேற்றுமை சேஷத்துவத்தையும் (அடிமைத் தன்மையையும்), உகாரம் அந்த அடிமைத் தன்மையின் அநந்யர்ஹ சேஷத்துவத்தையும் (மற்றவருக்கில்லாமல் ஈஸ்வரன் ஒருவனுக்கே உரித்தாய் இருத்தலையும்)மகாரம் ஞானவானான ஜீவான்மாவையும் தெரிவிக்கின்றன.திருவெட்டெழுத்தின் மூன்று பதங்களாலும் குறிப்பிடப் பெறும் ஞானம் ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் எப்பொழுதும் நிலைத்தே இருக்கும் என்பதை உணர்த்தவே தோழி தாய் மகள் என்ற மூன்று நிலைகளும் எல்லாக் காலங்களிலும் இருந்தன என்று சொல்லப் பெறுகின்றன.இதனை ஆசாரிய ஹிருதயம் அவஸ்தா திரயம் (திரயம் மூன்று; அவஸ்தை – நிலை) என்று பேசும்.

ஸ்ரீ வைணவத் திருத் தலங்களில் திருவரங்கம் ‘கோயில்‘ என்றும்,திருவேங்கடம் ‘திருமலை’ என்றும், சம்பிரதாயமாக வழங்கப் பெற்று வருகின்றன. நம்மாழ்வாரின் முதற் பிரபந்தமான திருவிருத்தத்தில் திருவரங்கம், திருவெஃகா, திருவேங்கடம் என்ற மூன்று திருப்பதிகளின் பெயர்கள் மட்டிலும் (28, 26,31) வருவதால் இச் சிறப்புப் பெயர்கள் பெற்றனவாகப் பெரியோர் பணிப்பர். திருவரங்கம் அழகிய மணவாளனின் திருவடி ‘திருப் பொலிந்த சேவடி’ (பெரியாழ். திரு. 5.4:7)என்றும் கச்சி நகரிலுள்ள தேவப் பெருமாளுடைய திருவடி’துயரறு சுடரடி’ (திருவாய் 1.1:1) என்றும், திருவேங்கடமுடையான் திருவடி ‘பூவார் கழல்கள்‘ (திருவாய் 6.10:4)என்றும் சம்பிரதாயத் திருநாமங்களாகப் பெரியோர் பணிப்பர்.

திருவரங்க விமானம் ஏழு சுற்றுகளுக்கும் நடுவில் உள்ளது. பிரணவ ஆதாரமாயுள்ளது. நான்கு திருமறைகளும் சாத்திரங்களும் தூபிகளாயுள்ளன. பர வாசுதேவன் இதிலிருந்து சேவை சாதிக்கின்றான். ‘ஓம்’ என்ற பிரணவம் விமானமாகவும் ‘நமோ நாராயணாய’ என்பதிலுள் ஏழு எழுத்துக்கள் ஏழு திரு மதில்களாகவும் அமைந்துள்ளன.எட்டெழுத்து மந்திரத்தை ஆராய்பவருக்கு இறைவனின் தன்மை புலப்படுவது போல திரு அரங்கத்திற்குச் செல்பவர்கட்கும் இறைவன் நேரே புலனாவான் என்பது கருத்து.
விமானத்தின் முன்பகுதியில் நிற்பது காயத்திரி மண்டபம்; விஷ்ணு காயத்திரியின் அறிகுறியாக தூண்களால் அமைக்கப் பெற்றது (24 தத்துவங்களின் அறிகுறியாக இருப்பனவாகவும் கருதலாம்)

காஞ்சி வரதராசரைச் (அத்திகிரி’ அருளாளனைச்)சேவிக்க 24 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். இவை 24 தத்துவங்களின் குறியீடுகள் : அதாவது தந் மாத்திரைகள் 5;ஞானேந்திரியங்கள் 5 ; கருமேந்திரங்கள் 5; பூதங்கள் 5;ஆக இவை 20. இவற்றுடன் பிரகிருதி 1, மகான் 1,அகங்காரம் 1. மனம் 1 ஆக நான்கும் சேர 24 தத்துவங்களாகின்றன. இவற்றுடன் புருடன் (ஆன்மா),மகா புருடன் (பரமான்மா) சேர்ந்து வைணவ தத்துவம் 26 ஆகின்றது.

திருக்கோட்டியூர் திருக்கோயிலின் விமானம்’அட்டாங்க விமானம்’ என்பது; 90 அடி உயரம் உள்ளது.இதன் நிழல் தரையில் விழுவதில்லை. தஞ்சைக் கோபுரத்தின் நிழல் போல ஒன்றன்மீது ஒன்றாக மூன்று தளங்களை யுடையது. மேல் தளத்தில் திசைக்கொன்றாக எட்டு விமானங்கள் உள்ளன. எட்டு விமானங்கள் திருமந்திரத்தின் எட்டெழுத்துகள் போலவும் விமானத்தின் மூன்று தளங்கள் திருமந்திரத்தின் மூன்று பதங்கள் (ஓம் நமோ + நாராயணாய) போலவும், மூன்றெழுத்துகளுடன் கூடிய (அ+உ+ம) பிரணவம் போலவும் அமைந்திருப்பதாக ஐதிகம்

நம்மாழ்வாரின் திருமேனி : ஆழ்வார்கள் பன்னிருவர்களுள் சடகோபர் ‘நம்மவர்’ என்று போற்றத் தக்கபெருமை வாய்ந்து ‘நம்மாழ்வார்’ என்ற சிறப்புத் திருநாமத்தால் வழங்கப் பெறுகின்றார். ஏனைய ஆழ்வார்களை நம்மாழ்வாரின் ஒவ்வோர் அவயவமாகவும் நம்மாழ்வாரை அவயவி யாகவும் வழங்குவது மரபு. ஆழ்வாரின் திருமுடி நம்மாழ்வார். பூதத்தாழ்வாரைத் தலையாகவும் பொய்கை பேயாழ்வார்களைத் திருக்கண்களாகவும், பெரியாழ்வாரைத் திருமுகமண்டலமாகவும், திருமழிசையாழ்வாரைக் கழுத்தாகவும்,
குலசேகராழ்வாரையும் திருப்பாணாழ்வாரையும் திருக் கைகளாகவும், தொண்டைரடிப்பொடியாழ்வாரைத் திரு மார்பாகவும்,திருமங்கையாழ்வாரைத் திரு நாபியாகவும் மதுரகவிகளையும்எம்பெருமானாரையும் (இராமாநுசர்) திருவடிகளாகவும்
பெரியோர் அருளிச் செய்வர்.

இராமாநுசரின் திருமேனி : நம்மாழ்வாரைத் தலையாகவும், நாதமுனிகளைத் திருமுகமாகவும்,உய்யக்கொண்டாரை (புண்டரீகாட்சரைக்) கண் ஆகவும் மணக்கால் நம்பியை (இராம மிஸ்ராவைக்) கன்னமாயும்,ஆளவந்தாரை (யாமுனாசாரியரை) மார்பிடமாகவும், பெரிய நம்பியைக் கழுத்தாகவும், திருக்கச்சி நம்பிகையைத் திருக்கையாகவும், திருக்கோட்டியூர் நம்பியை ஸ்தனமாயும்,திருவரங்கப் பெருமாளரையரை வயிறாகவும், திருமாலை யாண்டானை முதுகாகவும், கிடாம்பி யாச்சானை இடுப்பாகவும், எம்பாரை இடையாகவும்; பட்டரையும், நஞ்சீயரையும் புட்டகங்களாகவும், நம்பிள்ளையைத் துடையாகவும், வடக்குத் திருவீதிப் பிள்ளையைத் முழங்கால்களாகவும், பிள்ளைலோகாகாரியரைத் திருவடியாகவும், திருவாய்மொழிப் பிள்ளையை பாதரேகை யாகவும், மணவாள மாமுனிகளைத் பாதுகையாகவும், சேனாபதி ஜீயரை ஊர்த்துவ புண்ட்ரமாகவும்,(திருமண்காப்பு) கூரத்தாழ்வானைப் புரிநூலாகவும்,முதலியாண்டனைத் திரிதண்டமாகவும், கிடாம்பியாச்சானைக் கமண்டலமாகவும், வடுக நம்பியைக் கல்லாடையாகவும்,திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் தோமாலை யாகவும்,பிள்ளை யுறங்காவில்லி தாசரை நிழலாகவும் இங்ஙனம் இராமநுசரைச் சர்வாசார்ய ஸ்வரூபராகக் கொள்வது மரபு.

————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அத்புத சக்தி ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் அருளிச் செய்த கிரந்தம்-

April 24, 2025

ஸ்ரீ பரம புருஷனுடைய ப்ரதி வஸ்து பூர்ணத்வத்தைப் பற்றி ஸ்ரீ தேசிகன் முதலான பூருவாசாரியர்களின் திருவுள்ளத்தை விளக்கிக் காட்டவல்ல ஸ்ரீ அத்புத சக்தி ஸ்ரீ காஞ்சீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் அருளிச் செய்த கிரந்தம்

தேசிக வந்தந மாலா த்விதீய புஸ்தக விமர்ச ருபமிதம்,ஸகல விபுதாபிநந்த்யம் ஸததம் ஜேஜேது ஜகதி க்ருதி

ஸாஸ்த்ர ஜ்ஞாநம் பஹுக்லேசம் புத்தேச் சலந காரணம், உபதேசாத் ஹரிம் புத்த்வா என்று சாஸ்த்ரமே காட்டின கட்டளையிலே, தத்வ தர்சிகளான மஹா ப்ராஜ்ஞர்கள், வெண்ணெய். கடைந்து திரட்டி யெடுத்துக் கொடுக்குமா போலே லலிதமாக எடுத்துரைத்து வைக்க, அது கொண்டு உணரவே நாம் அதிகாரிகள்.

எம்பெருமான் எங்கும் நிறைந்த பரஞ்சோதி யென்று உலக மனைத்தும் உணரும். “கருதரிய உயிர்க் குயிராய்க் கரந்தெங்கும் பரந்துறையும் ஒரு தனி நாயக மென்றால் உன் பெருமைக்கு அளவாமோ? ” என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.அணுவான பதார்த்தங்களினுள்ளும் பகவான் நிறைந்துளன் என்பது வேதாந்திகளின் கொள்கை.
(1) உட்புறம் வெளிப்புறம் என்று இரண்டிடங்கள் பகுத்து வகுத்துக் காட்டக் கூடிய பொருள்களாயிருந்தால் அவற்றில் உள்ளேயும் புகுந்துளன் என்று ஒப்புக் கொள்ளலாம்; அணு பதார்த்தங்களுக்கு இங்ஙனே பகுத்துக் காட்டக் கூடிய நிலைமை இல்லாமையால் அப் பொருள்களில் பகவான் உள்ளே யுளன் என்று ஒப்புக் கொள்ள இயலாது – என்பது ஒரு ஆக்ஷேபம்.
(2) உள்ளே யுளன் என்று ஒப்புக் கொள்ளக் கூடிய விடத்திலும்,பகவான் தன்னுடைய ஸ்வரூபம் எவ்வளவுண்டோ அவ்வளவும் அடங்க வியாபித்துளன் என்று இசையத் தகாது ; ஏனென்றால் ஒரு வஸ்துவிலேயே பகவானது ஸ்வரூப மடங்கலும் அடங்கிப் போகுமானால் மற்றும் உலகிலுள்ள அபரிமிதங்களான வஸ்துக்களிலும் அந்த ஸ்வரூபம் வியாபித்திருக்க வேணு மல்லவா?அதற்கு அவகாச மில்லாமற் போகுமே. ஒரு உதாரன் தனக்குள்ள பொருள்களை யெல்லாம் ஒரு யாசகனுக்கே பூர்த்தியாகக் கொடுத்து விட்டால் எப்படி? மற்றுள்ள பல யாசகர்களுக்கும் கொடுக்கச் சரக்கு இருக்க வேணுமே;அது போல பகவானும் தன் ஸ்வரூபத்தை நிச் சேஷமாக ஒரு வஸ்துவிலேயே நிரப்புகிறானென்றால் இது எப்படி ஸம்பவிக்கும் ? மற்ற வஸ்துக்களுக்கு என்ன கதி? ஒவ்வொரு வஸ்துவிலும் நிச் சேஷமாக நிரம்பி யுள்ளானென்கை பொருந்த மாட்டாது. ஒன்றில் நிச் சேஷமாக நிரம்பி விட்டால் மற்றொன்றிலிருக்க ப்ரஸக்தி யேது? ஆகவே வஸ்து தோறும் பகவத் ஸ்வரூபம் நிச் சேஷமாக நிரம்பி யுள்ளதன்று கொள்ளத் தகாது என்பது மற்றொரு ஆஷேபம்.

பகவானுக்கு ஒப்புயர்வற்ற சக்தி விசேஷ முண்டென்பதைப் பொறுக்க கில்லாதவர்களே இந்தக் கக்ஷிகளைக் கிளப்ப வேண்டும். பகவான் அத்புத சக்தி யுக்தன் என்றும் அகடித கடநா ஸமர்த்தன் என்றும் பிரமாணங்கள் கூறுவதை அஞ்ஜலி பந்தத்துடன் ஏற்க வல்ல ப்ராமாணிக வேதாந்திகள் இப்படிப்பட்ட கக்ஷிகளைக் கிளப்ப ஒரு போதும் நினையார்கள்.

வஹஸி ணிமித் தத்தணம் வி அப்புய ஸத்தீ வஹஸி நிமித்தத்வமபி அத்புத சக்தி* என்றன்றோ அச்யுத சதக ஸ்லோகமுள்ளது-ஸகல வஸ்து விலக்ஷணஸ்ய சாஸ்த்ரைக ஸமதிகம்யஸ்ய அசிந்த்ய-அப்ரமேய-அத்புத சக்தி யுக்தஸ்ய பரஸ்ப ப்ரஹ்மண -என்று ஸ்ரீ பாஷ்யகாராதிகள் அடிக்கடி அருளிச் செய்யப்படுகிறது. மேற் குறித்த வாக்யங்கள் ஸ்ரீபாஷ்ய தீப ஸாராதிகளில் நூற்றுக்கணக்கான இடங்களில் காணலாகும்.-பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே * என்பது முதலான சுடர் மிகு சுருதி வாக்கியங்கள் பலபல இவற்றால் பகவானுடைய சக்தி அத்புதமானதென்று நிரூபிக்கப்படுகிறது.

நம்மாழ்வார் திருவாய்மொழியில் சேராதவற்றை யெல்லாம் சேர்த்துச் சொல்லி யேத்துகிறார்.
நரகும் சுவர்க்கமுமாய், வெல் பகையும் நட்பும் விடமுமமுதமுமாய் * கண்ட வின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய் * நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய் **புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்றிவையாய் என்றிப்படி வாய் வந்தபடி யெல்லாம் பேசி யுள்ளார். இப் பதிகத்திற்கு நம் தேசிகன் அத்புதமான ஸ்லோக மிட்டருளுகிறார் : * ஸம்பத் தாரித்ர்ய பாவாத்… அகடித கடநம் ப்ராஹ க்ருஷ்ணம் சடாரி: * என்றருளி யுள்ளார்.

இத் திருவாய் மொழியில்* வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய் என்பதும் (8) ஒரு பாசுரம். பகவான் தைவ ப்ரக்ருதிகளுக்கு சரண்யனாயும் ஆஸூர ப்ரருதிகளுக்கு மருத்யு வாயுமுளன் என்று இப் பாசுரத்தில் ஸ்பஷ்டமாகக் கூறப் பட்டிருக்கிறது. உலகில் ஒரு மனிதன் சிலர்க்கு நல்லனாயும் சிலர்க்குத் தீயனாயுமிருப்பதை எங்குங் காணா நின்றோம்.இப்படி யிருப்பதற்கு ஒரு அகடித கடநா சக்தி வேண்டிய அவசியமே யில்லை. இது போல பகவானும் நல்லார்க்கு நல்லனாய்த் தீயார்க்குத் தீயனா யிருக்கிறா னென்பதில் அகடிதத்வமென்பது சிறிதுமில்லை. சிலரிடத்திலே நல் குரவையும் சிலரிடத்திலே செல்வத்தையும் தருகிறான்;சிலர்க்கு நரக ப்ராப்தியையும் சிலர்க்கு ஸ்வர்க்க பிராப்தியையும் பண்ணி வைக்கிறான் என்றால் இதில் அஸம்பாவிதத்வ சங்கைக்கு உதயமே யில்லை யன்றே இத்திருவாய்மொழியை இப் புடையிலே நிர்வஹிப்பதில் என்ன அருமை . ஒன்றுமில்லை.எம்பெருமான் இப்படியாக வுள்ளானென்று சொல்லுவதனால் அவனுடைய அகடிதகடநா ஸாமர்த்தியம் விளங்குகைக்கு ப்ரஸக்தி யேது.சேராதவற்றைச் சேர்ப்பிக்கவல்ல சக்தி பகவானுக்குக் கிடையவே கிடையாதென்பவர்கள் இங்கே இரண்டு விஷயங்களுக்கு விடை கூறவேண்டும்- (1) * அகடிதகடநம் ப்ராஹ க்ருஷ்ணம் சடாரி: * என்று ஸ்வாமி தேசிகன் ஏன் அருளிச் செய்தார்?, (2) இந்தத் திருவாய் மொழியில் அகடித கடநா சக்தியைக் கொண்டு கூற வேண்டிய விஷயம் என்ன இருக்கிறது? வர்ஷ சதமானாலும் இவ் விரண்டு கேள்விகளுக்கும் ஆர்ஜவத்துடன் விடை யிறுக்க பகவச் சக்தி வித்வேஷிகள் அசக்தரே. இப் பதிகத்தினால் ஸர்வ நியந்த்ருத்வம் அநுபவிக்கப் பட்டதென்று அருளிய ஆறாயிரப்படி யாசிரியரான பிள்ளான் வழியிலே நின்று ஸ்லோகமிடாமல் நம் பிள்ளை திருவடிகளின் வியாக்கியானங்களை ஸேவித்து அந்த வாஸநையாலே* அகடித கடநம் ப்ராஹ * என்றருளிச் செய்த தேசிகனுடைய திரு வாக்கு இவ் விடத்தில் அநுபாதேயமே யென்று பலர் வாயில் கேட்டிருக்கிறோம்; அந்த விடையோ அதற்குப் பர்யாயமான விடையோ தவிர வேறு வெளிவர ப்ரஸக்தி யுண்டோ? உண்டெனில் அருளலாமே ; அப்போது சாஸ்த்ரார்த்த மருமங்களெல்லாம் தன்னடையே வெளி வந்து தீருமே . ப்ராஸங்கிகமான விது நிற்க.

இப்படி எம்பெருமான் திறத்துப் படுவோம் அல்லோம் -என்று இருந்த ஆழ்வார் தம்மோடு ஸம்ஸ்லேஷிக்கைக்காகத் திரு விண்ணகரிலே எழுந்து அருளின எம்பெருமானுடைய நிரவதிக ஸுந்தர்யத்தாலும் ஸ்வ சம்ச்லேஷ ரஸ ஜெனிதமான அவசாதத்தாலும் நிவ்ருத்த ப்ரணய கோபராய் அவனோடே ஸம்ஸ்லேஷித்து தத் சம்ச்லேஷ ஜெனித நிரவதிக ப்ரீதியாலே ச சம்ப்ரமமாக அந்தத் திரு விண்ணகரிலே தாம் அவனைக் கண்டு ஸம்ஸ்லேஷித்த படியையும் கீழ் ப்ரஸ்துதமான ஜகத் ஐஸ்வர்யத்தையும் அசேஷ தோஷ ப்ரத்ய நீகத்வ அசங்க்யேய கல்யாண குணங்களையும் பேசுகிறார் –ஆறாயிரப்படி —

திரு விண்ணகர் அப்பனுடைய விருத்த கடநா சாமர்த்தியம் இருந்த படி என் -என்று விஸ்மிதராக-இப் பிரசங்கத்தாலே -இன்னமும் பாரீர் -என்று -தன்னுடைய விபூதி கத்வத்தைக் காட்டி அருளக் கண்டு –ஒன்பதினாயிரப்படி —

இப்படி விமுகரான தம்மை அபி முகராம் படி பண்ணிக் கொண்ட விருத்த ஆகார பிரசாங்கத்தாலே பரஸ்பர விருத்தமான பதார்த்தங்களைத் தனக்கு விபூதியாக படிப்பித்துக் கொண்டு நிற்க வல்ல ஈஸ்வரனுடைய அகடி கடநா சக்தியை அப ரோஷித்துபன்னீராயிரப்படி —

தன் ஆற்றாமையையும் அழகையும் காட்டி சேர்த்துக் கொண்ட படியைக் கண்டு விஸ்மிதராக -நீர் இது ஓன்று கொண்டோ விஸ்மிதர் ஆகிறது –நாம் சேராத வற்றை எல்லாம்
சேர்த்து ஆள வல்லோம் காணும் -என்று தன் விருத்த விபூதி கத்வத்தைக் காட்டக் கண்டு
இருபத்து நாலாயிரப்படி –

இப்படித் தாழ நின்றவன் சர்வேஸ்வரன் என்கிறார் என்று பிள்ளான் பணிக்கும்’ என்று அருளிச் செய்வர். அதாகிறது, “யாவையும் யாவரும் பிழையாமல் பிணக்கி” என்று மேலே சொல்லிய சர்வேஸ்வரத்வத்தை அருளிச் செய்கிறார் என்றபடி.-‘இதிலே ஒரு வேறுபாடு தோன்ற பட்டர் அருளிச் செய்வர்’ என்று சீயர் அருளிச் செய்வர்.– பரத்வனே வ்ருத்த விபூதிகன் – அதாவது, “சேரோம்” என்ற எண்ணத்தைக் குலைத்துத் தம்மைச் சேர விட்டுக் கொண்ட ஆச்சரியத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்பதாம்.-ஈடு முப்பத்தாறாயிரப்படி

ஸ்வாமி தேசிகன் அருளிய அற்புதமான ஸ்லோகமொன்று * பக்தஸ்ய தாகவசிசோ : பரிபாலநாய * இத்யாதி. இதில் என்ன சொல்லப்படுகிற தென்னில் * எங்குமுளன் கண்ணனென்ற மகனைக் காய்ந்த இரணியன் தூணைப் புடைப்பதற்கு முன்னே எம்பெருமான் மூவுலகக்தினும் ஒவ்வொரு வஸ்துவிலும்-ஒவ்வோரிடத்திலும் நரஸிம்ஹ ரூபியாக ஆவேசித்து விட்டதாகவும், இரணியன் தட்டினது ஒரு தூணையே யாதலால்அந்த வொரு தூணில் நின்று மாத்திரம் ஒரு நர ஸிம்ஹம் மூர்த்தி மாத்திரமே வெளிவந்த படியால்
மற்ற ஸகல இதர தேசங்களினும் ஆவேசித்த பல கோடி நூறாயிரம் நரஸிம்ஹ மூர்த்திகள் இன்னமும் அப்படியே நித்ய வாஸஞ் செய்வதாகவும் ஸாதிக்கப் பட்டிருக்கிறது.இதை அதிவாத மென்று சொல்லி விட்டால் ஸ்வாமிக்கு அஸாதாரணமாக வுள்ள ஏற்றம் போய் விடும். ‘ ஆளவந்தார், பாஷ்யகாரர் முதலானாருங்கூட அதிவாதிகளே;நம் தேசிகனொருவரே அதிவாதி க ஏவ தேசிகர்” என்று சாற்றிய பறை இன்றாக அவத்ய மடையலாகாது. ஏற்கெனவே ஆவிர்ப்பவித்த நரஸிம்ஹ மூர்த்திக்கும், சதா ஸர்வ கர்ப்ப வாஸம் பண்ணுகிற நரஸிம்ஹ மூர்த்திகளுக்கும் வாசி யுண்டோ?

”வஸ்து தோறும் ஸ்வரூப ஸமாப்தி யென்று கொண்டால் மற்றோரிடத்தில் வியாபிப்பதற்கு வஸ்து வில்லையாகும் ” என்று தூஷணம் கொடுப்பதுண்டே. இது தான் வெகு ஆச்சரியம். “வ்யாப்தனுக்கு ப்ரதி வஸ்து பூர்ணத்வமாவது வஸ்து தோறும் ஸ்வரூப ஸமாப்தி தான்; அதாவது ஓரொரு உபாத்யவச்சிந ப்ரதேசமே ஸர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல சக்தி யுடைத்தாயிருக்கை”என்று எழுதி வைத்தால் எவ்வளவு அழகாயிருந் திருக்கும்.

த்ருஷ்டேபஹ் நுத்யபாவாதநுமிதி விஷயே லாகவஸ்யாநபாயாத்
சாஸ்த்ரே ணைவாவஸேயே விமதி விரஹிதத நாஸ்திகத்வ ப்ரஹாணாத்|
நாதோ பஜ்ஞம் ப்ரவ்ருத்தம் பஹுபி ருபசிதம் யாமுநேய ப்ரபந்தை : த்ராதம்
ஸம்யக் யதீந்த்ரை ரித மகிலதம: கர்சநம் தர்சநம் ந:||

நாதமுநிகள் காலத்திலேயே சிறந்து விளங்கியா ஸித்தாந்தம் ஆளவந்தாரின் அரிய க்ரந்தங்களால் அழகாக வளர்ந்தது.-அவருடைய ஸ்ரீஸூக்திகளுக்கு இணையாே ஸூக்திகளோ உலகில் இல்லை எனலாம். மதுர கம்பீரமான நடை மிக்க சாஸ்திர ஆராய்ச்சிகளைச் சொற்கள் தோறும் செவ்வனே காணலாம். சாஸ்த்ர வாக்யங்கள் எல்லாம் கத்ய பத்ய ரூபங்கள். அவர் கவிதார்க்கிக ஸார்வ பௌமபர் என்பதை அவருடைய ஒவ்வொரு க்ரந்தமும் உணர்த்தும். இவருடைய ஸ்ரீஸூக்திகளை ஆங்காங்கு ஸ்ரீபகவத் ராமானுஜமுநிகள் தமது க்ரந்தங்களிலே இடை யிடையே அழகாக இணைத்துத் தம் க்ரந்தத்திற்கு ஒரு பெருமையைக் கருதினார்.இவர் அருளிச் செய்த ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் என்ற சிறிய க்ரந்தம் ஓன்றைக் கண்டால்கூட இவருக்குள்ள நிஷ்கர்ஷ சக்தி நன்கு விளங்கும். ஸ்ரீபாஷ்யகாரருக்கு முன்னரே இந்த மதம் மேன்மை பெற்றிருந்தது என்பதும் எளிதில் அறியப்பெறும். பாஞ்சராத்ரம் ப்ரமாணம் என்பதை இவருடைய ஆகம ப்ராமாண்யம் என்ற க்ரந்தம் ஸ்தாபிக்கிறது. இவர் பிதாமஹரான ஸ்ரீமந் நாதமுநிகள் வெளி யிட்ட ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் இருந்து கூட பஞ்ச ஸம்ஸ்காரம், திருவஷ்டாஷர மேன்மை முதலிய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய விஷயங்கள் விசதமாக அறியப்படுகின்றன . அதற்கு முன்னமே அவை எல்லாம் அனுஷ்டானத்தில் இருந்தன என்பதும் அங்கே தெளியலாம்-. “தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச் சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஓற்றுண்டு நின்று குடி குடி யாட்செய்கின்றோம்”

ஆத்மநி திஷ்டன் -திண்ணையில் தீ இருக்கிறது என்றால் உழலும் வெளியும் இருப்பதைக் காட்டாதே -ஆகவே ஆத்மநி பரமாத்மந: ஸ்திதியோ வென்னில் உள்ளும் புறம்புமொக்க வாயிற்று; திலத்தில் தைலமிருப்பது போலவும் வ்யாப் தி; வேதியில் அக்நி யிருப்பது போலவும் வ்யாப்தி;இப்படிப் பட்ட விலக்ஷண வ்யாப்தியை விளங்கக் காட்டுவதற்கே ஸ்ருதி * ஆத்மநி திஷ்டந் , ஆத்மா: அந்தர :* என்று இரண்டு படியாகவும் ஓதிற்று- என்று ஸ்ருத ப்ரகாசிகையில் விவரணமுள்ளது.-அணு வஸ்துவில் அந்தர் வ்யாப்தி விஷயம் நிஷ் கல்மஷமாய்முடிவு பெற்றது.

ஜாதி வ்யக்தி தோறும் பரிமாப்ப வர்த்திக்குமா போலே எல்லாவற்றிலும் தனித்தனியே குறை வற வியாபித்து நிற்கும் என்றும், ஜாதி வ்யக்தி தோறும் பரி ஸமாப்ய வர்த்திக்கிற தென்றால் அசேதநத்துக்கு அது கூடுமென்றிருப்பர்கள் ; பரம சேதநனாய் ஸர்வ சக்தியானவன் இங்ஙனே வர்த்திக்கிறா னென்றால் இதில் விப்ரதிபத்தி பண்ணிப் போருவர்கள்”-ப்ரஹ்ம ஸ்வரூபம் ஒன்றில் பரிஸமாப்ய வர்த்தித்தால் மற்றொன்றில் அது காண முடியாதென்றே இன்னமுங் கூறுகிற இவர்களின் பிடிவாதம் ஊமனார் கண்ட கனவிலும் பழுதா யொழிந்ததென்று முடிய வில்லையா? பகவானை ஸ்பர்சியாத அவர்களின் பேச்சுஒரு புறமிருக்க, ப்ரஹ்ம வாதிகளில் தலைவரான ஸ்ருத ப்ரகாசிகாசார்யருடைய ஸ்ரீஸுக்தி யன்றே நமக்குத் தலை மேலது.-ஏகஸ்மிந்நேவ வஸ்துநி ஸ்வரூபஸ்ய பூர்ண வ்ருத்தி தயா ” என்ற வாக்யமானதுபர ப்ரஹ்ம ஸ்வரூபம் வஸ்து தோறும் பூர்ண விருத்தி யென்று திடப்படுத்திற்று. அடுத்ததான * அந்யத்ர வ்ருததி அயோக்யத்வ சங்கா வ்யுதாஸ என்றதானது பஹிர் வ்யாத்திக்கு விருத்தமா மென்று வாயெடுக்கவுமாகா தென்று கெட்டியான பூட்டு போட்டு விட்டது.

ஆர்ஷம் தர்மோபைதேசஞ் ச வேத சாஸ்த்ரா விரோதிநா, யஸ் தர்க்கேணாநு ஸந்தத்தே ஸ தர்மம் வேத நேதர: * என்பது ப்ரஸித்தமாதலால் சாஸ்தரங்களோடு முரண்படாத யுக்தி வாதங்களைக் கொண்டு சாஸ்த்ரார்த்தங்களை நிஷ்கர்ஷிப் பதென்பது நிரவத்யமானது. யுக்தி வாதங்களால் சாஸ்த்ரார்த்தங்களைத் தலை கீழாக்குவதென்பது கிடையாது. பிரக்ருத விஷயத்தில் தர்க்கத்தை உபஷ்டம்பகமாகக் கொள்ள வேணுமானால் “பகவான் பிரதி வஸ்து பூர்ணன்” என்பதற்கு ஸாதகமான வழியில் கொண்டு அதை ஸ்தாபிக்கலாமே யல்லது வேறு செய்யத் தகாது. பிறர் செய்வது என்ன வென்றால், பிரதிவஸ்து பூர்ணத்வத்தை அபலாபம் செய்வதற்கு யுக்தி வாதத்தை உபஷ்டம்பகமாகக் கொள்ளப் பார்க்கிறார்கள் -அநி ஷ்டித குதர்க்க வாதிகள் ஸ்ரீ பாஷ்யாதிகளால் நிரஸ்தரானவர்கள் மாத்திரமல்ல,ஸ்ரீ வசந பூஷணாதிகளால் நிரஸ்தரானவர்களும் கூட அந்த விருது சுமப்பவர்களே யென்று அறியத்தக்கது. நையாயிகர்கள் ஈஸ்வரனை அங்கீகரியா நின்றார்களெனினும் அவர்கள் அனுமானத்தைக் கொண்டு ஈஸ்வரனை ஸாதிக்கிறபடியால் அந்த ஆநுமாநிகேஸ்வரனும் பரம வைதிகர்களுக்கு ஹேயனாயினன்.-இங்கு சாஸ்த்ர பிரதர்சநம் தவிர யுக்தி ப்ரதர்சநமென்பது அணுவளவும் கிடையாது. சாஸ்த்ரத்தினால் திருப்தி யடையக் கூடிய அதிகாரியை நோக்கியே இந்த மீமாம்ஸா சாஸ்த்ரம் அவதரித்தது. ஸூத்ரகாரர் காட்டின சாஸ்த்ரத்தினால் சங்கா பரிஹாரம் ஆகவில்லை யென்றால் அதோகதி தவிர வேறில்லை கிடீர்.-பரம புருஷனுக்கு ஜ்ஞாநியானவன் அத்யர்த்த ப்ரியனென்பதும் இவனைப் பெற்றுக் களிப்பதற்கு அவன் நெடுங்காலம் தவம் புரிந்தனனென்பதும் -இப்படிப்பட்ட பிரியனை ஒருகாலும் ஸம்ஸார பந்தத்திற்குத் திருப்பி யனுப்ப மாட்டானென்பதும் சாஸ்தரங் கொண்டே யன்றோ பாஷ்யகாரரால் இங்கு நிரூபிக்கப்பட்டன – * ய ஏவமாஹ * என்று தொடங்கி ஸ்பஷ்டமாக சாஸ்ரத்தையே யன்றோ காட்டி யருளினர்.-முக்தைஸ்வர்ய மொன்று உண்டென்பதும் சாஸ்த்ர வேத்யம்.அது பரம புருஷாயத்தமென்பதும் சாஸ்த்ர வேத்யம்.அந்த பரம புருஷன் ஸ்வதந்திரன் ஸத்ய ஸங்கல்பன் என்பதும் சாஸ்த்ர வேத்யம் இப்படியான போது அவன் முக்தனைத் திருப்பி யனுப்ப மாட்டானென்பதும் சாஸ்த்ரைக வேத்யமாகக் கூடியதே-

ஸ்ரீபாஷ்யத்தில் நச பரம புருஷஸ் ஸத்ய ஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞாநிகம் லப்த்வா என்ற ஸ்ரீ ஸூக்தி அவதரித்தது எதற்காக வென்னில்,பரம புருஷனைப் பெறுவது சேதநனுக்கே புருஷார்த்த மென்றும், இவன் தானே உபாயா நுஷ்டானங்களைப் பண்ணி அவனைப் பெற வேணு மென்றும், இவனே போக்தா வென்றும்… இப்படி யெல்லாம் தலை கீழாகச் சொல்லி வருகிற ஏக தேசிகளின் வாதங்கள் ஆழ்வாரருளிச் செயலைப் பேணுங் குடியிலே தலை காட்டத் தகா என்பது நம் மிராமானுசனுடைய ஸ்வச்சமான திருவுள்ளம்
பகவானுடைய வ்யாப்தி யானது யறிக்கைக்காக – நியமநத்திற்காக. ஆகாசத்தின் வ்யாப்தி யானது அதற்காக வல்ல.ஆகவே ஆகாசம் வ்யாபிப்பது போலன்றிக்கே என்று சொல்லுவதும் வழுவற்றது.நியந்த்ருத்வா விசிஷ்ட வ்யாபகத்வம் பகவானுக்கு, தத் ரஹித வியாபகத்வம் ஆகாசாதிகளுக்கு என்று ஸாமான்யமாகச் சொல்லுகிற புடை இது.

ஸ்வாமி ந்யாய ஸித்தாஞ்சனத்தில் ஈஸ்வர பரிச்சேதத்தின் ஆரம்பத்தில் ஏழெட்டு விதமாக ஈஸ்வர லக்ஷணம் அருளிச் செய்கிறார். அங்கு ஸ்வ ஜ்ஞாந ஸ்வேதர ஸகல த்ரவ்ய சரீரகத்வம் என்பதும் ஒரு லக்ஷணமாக வுள்ளது. தன்னுடைய ஜ்ஞானமும் தானும் தவிர மற்ற ஸகல த்ரயங்களையும் சரீரமாகக் கொண்டிருக்கை லக்ஷண மென்கிறார். நரஸிம்ஹாவதாரத்தை பட்டர் அனுபவிக்குமிடத்து” விருத்தே வையக்ரீ ஸுகடித ஸமாநாதிகரணே ந்ருஸிம்ஹத்வே பிப்ரத் “‘ என்று நிஸ் ஸந்தேஹமாக அருளி யுள்ளார்.

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ சாரீரிக மீமாம்ஸையைப் பற்றின அறுபத்திரண்டு வார்த்தா மாலை.-(ஸ்ரீகாஞ்சி-அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் )

April 23, 2025

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

அர்வாஞ்சோ யத்பதஸர ஸிஜத்வந்த்வ மாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யான்வயமுபகதா தேசிகா முக்திமாபு :
ஸோயம் ராமாநுஜமுநிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத்ஸம்பந்தாத் அமநு தகதம் வர்ண்யதே கூரநாத : ||

1-இவ் விருள் தரு மா ஞாலத்திற் பிறப்பது வெறுக்கத் தக்கதாயினும் * இச் சுவை தவிர யான் போய் இந்திரலோகமாளு மச்சுவை பெறினும் வேண்டேன் * என்றும் * ஸம்ஸார ஏஷ பகவந் ! அபவர்க்க ஏவ * என்றும் * வைகுண்டவாஸேபி ந மேபிலாஷ –-என்றும் அநுஸந்திக்க நேரும் போது உள்ளத்திலுண்டாகின்ற உகப்பு நமக்கு எப்போதும் குன்றாது இருக்குமாகில் மீண்டுமீண்டும் இந் நிலத்தில் பிறக்க வேணுமென்கிற குதூஹலமே நமக்கு உற்றதாகும். ஆண்டாள்*ஏற்றைக்கு மேழேழ் பிறவிக்கும் * என்றருளிச் செய்கையாலே அவள் இந் நிலத்தில் பல பிறவிகளும் பிறந்து பேரின்ப மநுபவிக்கப் பாரித்தாளென்பது தெரிய வரும்.நாமும் அவ் வாண்டாளுடைய ஆசம்ஸையின் படியே ஏழேழ் பிறப்பும் பிறந்து பரஹ்மானந்த அநு பவம் பண்ணக் குதூஹலங் கொள்வோம்.
இருள் தரு மா ஞாலத்துளினிப் பிறவி யான் வேண்டேன் * என்றும் பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பமாதலால் பிறவி வேண்டேன் * என்றும் வெறுத்துப் பேசின பேச்சு நமக்கு வேண்டா. இப்போது நாம் பிறந்து எவ்விதமான ஆனந்தத்தை யனுபவித்து வருகிறோமோ, இவ் விதமான ஆனந்தத்திற்குச் சிறிதும் லோப மில்லாமல் மேன் மேலும் எத்தனை பிறவிகளை எம்பெருமான் தந்தருளினாலும் பெரு மகிழ்ச்சியுடன்
அவற்றை வரவேற்போமாக

2-நன்மைகளுக்குதவாத த்வீபாந்தரங்களிலே நாம் பிறந்திலோம் ; ஸகல ஸ்ரேயஸ்ஸுக்களுக்கும் ஆஸ்பதமான ‘ஐம்பூத்வீபே பாரத வர்ஷே பரத கண்டே ‘ ஜனிக்கப் பெற்றோமே ; இது தன்னிலும் கிரிமி கீட பசு பக்ஷிகளாகப் பிறவாமலும் * துர்லபோ மாநுஷோ தேஹ * என்றும் மானிடப் பிறவி யந்தோ மதிக்கிலர் *-என்றும் புகழ்ப் படுகிற மானிடப் பிறவி பெற்றோம். இது தன்னிலும் வேத வேதாந்த வேதாங்கங்களை நிஸ் ஸங்கோசமாக அதிகரிப் பதற்குப் பாங்கான ஜாதியிலே ஜனிக்கப் பெற்றோம் ; அது தன்னிலும் *ஆழ்வார்களையுமருளிச் செயல்களையும் தாழ்வா நினைத்து நரகில் வீழ்வார்களது வகுப்பிலன்றிக்கே * தேவு மற்றறியேன் குருகூர் நம்பி பாவினின்னிசை பாடித் திரிவனே என்னும் வகுப்பிலும், அமானவனும் நம்மைக் கரத்தாலே தீண்டல் கடனாம்படி மணவாள மாமுனிவன் பொன்னடியாஞ் செங்கமலப் போதுகளை யுன்னிச் சிரத்தாலே தீண்டுங் குடியிலும் பிறக்கப் பெற்றோம்.-அவாங் மநஸ கோசரமென்று ஓதப்படுகிற எம்பெருமானுடைய ஆனந்தமும் நம்முடைய ஆனந்தத்திற்கு நிகராகுமோ?யெனக்கெதிரில்லை யெனக் கெதிரில்லை யெனக் கெதிரே என்று வானம் பிளக்க உத்கோஷித்து ஸஸம்பரம ந்ருத்தம் செய்ய வன்றோ நாம் பிறந்திருக்கிறோம்.

3- இத்தகைய மஹா பாக்யம் பெற்ற நமக்கு “புநரபி ஜநநம் புநரபி மரணம் புநரபி ஜநநீ ஜடரே சயநம் ” என்னும் படியான ஸம்ஸாரம் மறுவலிடாதாயினும் நாம் புநஸ் புநஸ் ஜன்மத்தையே பகவத் ஸந்நிதியில் பிரார்த்திக்கக் குதுகலிக்கின்றோம்.-திருநாட்டிலே சென்று என்ன செய்யப் போகிறோம்.அங்கு ஸ்ரீ பாஷ்ய பகவத் விஷயாதிகள் ஸேவிக்க ப்ரஸக்தி யுண்டோ? ஸ்ரீவசந பூஷண ஆசார்ய ஹ்ருதயாதிகள் அநுஸந்திக்க அவகாசமுண்டோ? * ஏதத் ஸாம காயந் நாஸ்தே * என்று உபநிஷத்து ஓதின படி ஹாவு ஹாவு ஹாவு என்று கானம் பண்ணிக் கொண்டிருக்கலாமத்தனை. இந்த கானம் யாருக்கு வேணும்? இங்கு நாம் ஓதுகிற உபய வேதங்களையும் ஸ்தோத்ரங்களையும் ரஹஸ்யங்களையும் நித்ய ஸூரிகளும் முக்தாத்மாக்களும் கேட்டு அவர்களும் எம்பெருமானுடைய நியமனம் பெற்று இங்கே வந்து பிறக்க ஆசைப்படா நிற்க, நாம் அங்கே போக நினைப்பது தகுதியோ?

4-நமக்குண்டான ஸதாசார்ய ஸம்பந்த வைபவாதிகள் காரணமாக ஒரு கால் நம்மை எம்பெருமான் அங்கே கொண்டு போக நினைத்தாலும் கொண்டு போய் விட்டாலும் ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே” என்கிற உபநிஷத்தையும், * அநாவ்ருத்திச் சப்தாதநாருத்திச் சப்தாத் என்கிற ப்ரஹ்ம ஸூத்ரத்தையும், * த்யக்த்வா தேஹம் புநர் ஐந்ம நைதி * என்ற கீதையையும் கிழித்தெறிந்து நாம் மீண்டுமிங்கே ஓடிவந்து விட வேணுமே யொழிய அங்கே தங்கி யிருக்கத் தகாதென்பது அடியேனுடைய திண்ணிய அத்யவஸாயம். நம்முடைய யஜூர் வேதத்தில் ஆறாவது காண்டத்தின் ஆரம்பத்தில்“ கோ ஹி தத் வேத யத்யமுஷ்மிந் லோகே அஸ்திவா ந வேதி” என்று ஓதப் பட்டுள்ளது. இதன் பொருள் தெரியுமோ? மேலுலகத்தில் சேமமுண்டென்று யார் கண்டார்? உண்டோ இல்லையோ என்று ஸந்தேஹிக்கும் படியாகவே யுள்ளது? என்பது இந்த வாக்யத்தின் தாற்பரியம். இதற்கு முன் வாக்யத்தில் – நாஸ்மால் லோகாத் ஸ்வேதவ்யமி வேத்யாஹு என்பதில் ) இந்த வுலகத்தை விட்டுப் போக விரும்பலாகா தென்றும் சொல்லிற்று. * ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே * என்றருளிச் செய்த திருமங்கை யாழ்வார் திருவுள்ளமுமிதுவே.

5- இவ் விபூதியில் நாம் பலவகையான இவ்விபூதியில் நாம் பலவகையான ஆனந்தங்களை யநுபவிக்கிறோம். லௌகிகமான ஆனந்தங்களை நெஞ்சாலும் நினைக்க வேண்டா.ஸ்வரூப அநு ரூபமாக நாம் அநுபவிக்கும் ஆனந்தங்கள் அபரிமிதம். வாசா மகோசரம்.* சீரார் திருவேங்கடமே திருக் கோவலூரே மதிட் கச்சி யூரகமே பேரகமே வெள்ளறையே வெஃகாவே பேராலி தண் கால் நறையூர் திருப் புலியூர் ஆராமஞ் சூழ்ந்த வரங்கமென்று-பதியே பரவித் தொழுந் தொண்டர்களாய்க் கொண்டு அனுபவிக்குமானந்தம் ஒருபுறமிருக்க நம் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் அரு மருந்தாக அருளிச் செய்திருக்கின்ற திவ்ய ஸுக்திகளை அப்பொழுதைக் கப் பொழுதென்னாரா வமுதமே ‘ என்னும்படி நித்யாபூர்வமான அம்ருதமாகப்பருகி நாமநுபவிக்குமானந்தம் இணை யற்றது. இவ்வானந்தத்திற்கு எந்த ஆனந்தமும் ஈடாகாதென்பது அதிசயோக்தி யன்று. அதிலும், நம் பிள்ளை தொடங்கி மணவாள மா முனிகளீறாக வுள்ள ஆசார்ய ஸார்வ பௌமர்களின் அமுதிலுமாற்ற வினிய திவ்ய ஸ்ரீஸுக்திகளை யனுபவித்து எய்துமின்பம் * நெஞ்சால் நினைப்பரிதால் என்னத் தகுமத்தனை. இதற்கு நாம் இட்டுப் பிறந்திருப்பது விலக்ஷணமான தொரு பாக்ய விசேஷ மன்றோ. அநல்பமான தபஸ்ஸின் பலனன்றோ?

6-அந்த திவ்ய ஸுக்திகளில் ஆழவிழிந்து அபூர்வார்த்தங்களை ஸதாசார்ய ஸன்னிதானத்தில் கேட்டு அவற்றை நெஞ்சில் தேக்கி வைத்துக் கொள்வது தான் நமக்கு ஜன்ம ஸாபல்யமாகும். ஆசார்ய சுச்ரூஷைகளுக்கு அவகாசம் பெறாதவர்களும் அவ் வர்த்தங்களை இழக்க வொண்ணாதென்று கருதியே அடியேனிப்போது சில வார்த்தா மாலைகளினால் அந்த அர்த்த விசேஷங்களை யெல்லாம் ஆஸ்திகர்களுக்கு அறிவிக்க விரும்பி யிருக்கின்றேன். உபய வேதாந்தங்களிலும் ஸ்ரீவசந பூஷணாதி ரஹஸ்யங்களிலும் மற்றும் ஸ்ரீராமாயண பகவத் கீதாதிகளிலும் முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னுமாக விளங்குகின்ற அர்த்த விசேஷங்களை எளிய வார்த்தைகள் மூலமாகவே வெளியிடக் குதூஹலங் கொண்டிரா நின்றேன்.-அறுபத்திரண்டு வார்த்தைகள் கொண்ட அனேக வார்த்தா மாலைகளுக்குள் இந்த வார்த்தா மாலையில் ஸம்ஸ்க்ருத வேதாந்தமாகிய (ப்ரஹ்ம ஸுத்ர மென்கிற) சாரீரக மீமாம்ஸையின் அரிய பெரிய பொருள்களைப் பற்றி யெழுதுகின்றேன். மிகக் கடினமான விஷயங்களையும் கூடுமான வரையில் எளிய நடையில் எழுதுவேன். ஆனாலும் விஷயத்தின் காடியம் நம்மால் தவிர்க்க முடியாமல் நிற்குமிடங்களுமுண்டு. அப்படிப்பட்ட விடங்களில் நாம் எவ்வளவு எளிதாக எழுதினாலுங்கூட சிலர்க்குப் பயன் படாமற் போகக் கூடும். அப்படிப்பட்ட சில விடங்களைப் பெரியார்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

7-வேதம் கர்ம காண்டமென்றும் ப்ரஹ்ம காண்டமென்றும் இரு வகுப்பாக வுள்ளது. பூர்வ பாகம் கர்ம காண்டமென்றும் உத்தர பாகம் ப்ரஹ்ம காண்டமென்றும் வழங்கப்படும். உபநிஷத்துக்களையே ப்ரஹ்ம காண்டமென்பது. பகவானுக்கு ஆராதந ரூபங்களான யஜ்ஞம் முதலிய கர்ம விசேஷங்களை விரிவாகக் கூரும் வேத பாகம் கர்ம காண்டமென்றும், அந்த கருமங்களினால் ஆராதிக்கப்படுகின்ற பகவானுடைய ஸ்வரூப ரூப குணங்களை விரிவாகக் கூறும் வேத பாகம் ப்ரஹ்ம காண்டம் (அதாவது உபநிஷத்து) என்றும் சொல்லிற்றாயிற்று.

8-கர்ம காண்டத்தில் தோன்றும் சங்கைகளைப் பரிஹரிப்பதற்காக ஜைமிநி யென்னும் மஹர்ஷி யெழுந்து பதினாறு அத்யாயங்களோடு கூடிய ஒரு சாஸ்த்ரத்தை யியற்றினார். அதற்குப் பூர்வ மீமாம்ஸை யென்று பெயர். இதில் பன்னிரண்டு அத்யாயங்களே ஜைமினி மஹர்ஷியால் இயற்றப்பட்டவை யென்றும், மேல் நான்கு அத்தியாயங்கள் காசக்ருத்ஸ்நர் என்பவரால் இயற்றப் பட்டவை யென்றும் ஒரு பக்ஷமுண்டு. இதைப் பற்றி இங்கு விசாரம் அப்ரஸக்தம். “ஜைமிநீயம் ஷோடச லக்ஷணம் * என்பது பொதுவான வார்த்தை. விருத்தி க்ரந்தத்தில்,பதினாறு அத்யாயங்களும் ஜைமிநி ப்ரோக்தமென்று கூறப் பட்டுள்ளது. (லஷணமென்று அத்யாயத்திற்குப் பெயர்.)

9-ப்ரஹ்ம காண்டமென்னும் உபநிஷத் பாகத்தில் தோன்றும் சங்கைகளைப் பரிஹரிப்பதற்காக வியாஸ மஹர்ஷி யெழுந்து நான்கு அத்யாயங்கள் கொண்ட வொரு சாஸ்த்ரத்தை இயற்றினார். அதற்கே சாரீரக மீமாம்ஸை யென்று பெயர்.உத்தர மீமாம்ஸை யென்றும் வழங்குவர். ப்ரஹ்ம ஸூத்ரம் என்பது இதனையே ஒவ்வொரு அத்தியாயத்திலும் நான்கு பாதங்களுள்ளன ஆகவே பதினாறு பாதங்கள் கொண்டது சாரீரக மீமாம்ஸை யென்றதாயிற்று.

10-இதில் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி சர்ச்சை செய்து நிர்ணயிக்கும் பகுதிக்கு அதிகரண மென்று பெயரிடப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட அதிகரணங்கள் இந்த மீமாம்ஸையில் நூற்றைம்பத்தாறு உள்ளன. சில அதிகரணங்களில் ஒரே ஸுத்ரமிருக்கும். பல அதிகரணங்களில் பல ஸூத்ரங்களிருக்கும். மொத்தம் ஸூரங்களின் இலக்கம் ஐந்நூற்றுற்பத்தைந்து என்று கணக்கிடப் பட்டிருக்கின்றது.
ஆக, நான்கு அத்யாயங்களையும் பதினாறு பாதங்களையும் நூற்றைம்பத்தாறு அதி கரணங்களையும் ஐந்நூற்று நாற்பத்தைந்து ஸத்ரங்களையுங் கொண்டது ப்ரஹ்ம ஸூத்ர சாஸ்த்ர மென்றதாயிற்று

11-தத்வ ஹித புருஷார்த்தங்களை நாம் தெரிந்து கொள்வதற்கு உபநிஷத்துக்களே ஸாதனமாகும். அவ் வுபநிஷத்துக்களின் பொருள்களை ஸம்சயய விபர்யமற நிஷ்கர்ஷித்து விளக்கக் கூடியது ப்ரஹ்ம ஸூத்ர சாஸ்த்ரமே யாதலால் வேதாந்திகளுக்கு இதுவே புகலாயிற்று. ப்ரஹ்ஸுத்ரமென்கிற சாரீரக மீமாம்ஸையின் பொருளை நிஷ் கர்ஷமாகவும் நிஷ் கல்மஷமாகவும் தெரிந்து கொண்டவர்களே வேதாந்திகளென்றும் ப்ரஹ்ம ஜ்ஞானிகளென்றும் சொல்லத் தகுதி யுடையார்.

12-மஹர்ஷி ப்ரணீதங்களான ஸூத்ரங்களின் பொருளை நம் போல்வார் சிறிதும் அறிய கில்லார்களாதலால், நம் போன்ற அல்ப மதிகளிடத்தில் பரம கருணை கொண்ட பூருவர்கள் அந்த ஸுத்ரங்களின் அர்த்தத்தை விளக்கி பாஷ்யங்கள் இயற்றி யுள்ளார்கள். த்வைதம்,அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என மூன்று மதங்கள் உலக ப்ரஸித்தமாக வழங்குமவை. இம் மூன்று மதங்களிலும் பாஷயங்கள் அவதரித்துள்ளன.அத்வைத மதத்திற்காக சங்கராசாரிய ஸ்வாமிகள் பாஷ்யம் இயற்றினார். த்வைத மதத்திற்காக ஆனந்த தீர்த்த ஸ்வாமிகள் (மத்வாசார்யர்) பாஷ்யமியற்றினார். நமது விசிஷ்டாத்வைத மதத்திற்காக பகவத் ராமாநுஜாசாரய ரென்கிற ஸ்வாமி யெம் பெருமானார் ஸ்ரீ பாஷ்ய மருளிச் செய்தார். வட இந்தியாவில் அதிக ப்ரஸித்தி பெற்றுள்ள வல்லப மதம் நிம்பார்க்க மதம் முதலிய மதங்களுக்காகவும் பாஷ்யங்கள் தோன்றி யுள்ளன. சைவ மதத்திற்காக நீல கண்ட பாஷ்யம் தோன்றியுள்ளது. இப்படி மற்றும் பல பாஷ்யங்களிருந்தாலும் மத த்ரய பாஷ்யமென்று மூன்று பாஷ்யங்களே நமது நாட்டில் குலாவப் பட்டுலாவுவன.

13-விசிஷ்டாத்வைதிகளென்றும் ஸ்ரீ வைஷ்ணவர்களென்றும் பகவத் ராமாநுஜ தர்சநஸ்தர்களென்றும் வழங்கப் படுகின்ற நமக்கு ஸ்வாமியின் ஸ்ரீபாஷ்யமே ஜீவாது வென்பது சொல்லாமலே விளங்கும்.உபநிஷத்துக்களின் உண்மைப் பொருளை விளக்கி ஸூத்ரகாரருடைய உள்ளத்திற்கு அநு குணமாக நிஷ் பஷ பாதமாய் நிருமிக்கப்பட்டது ஸ்ரீராமாநுஜ பாஷ்யமே யென மேனாட்டுப் புலவர்களும் மெச்சி யுள்ளார்கள். அந்த ஸ்ரீபாஷ்யத்தின் உண்மைப் பொருளானது ஸ்ருத ப்ரகாசிகை முதலிய வியாக்கியான நூல்களின் உதவியினால் உணரப்பட வேண்டும். அதற்கு ஸாமன்ய சாஸ்த்ரங்களின் உதவி இன்றி யமையாதது. அப்படிப்பட்ட சாஸ்த்ரஜ்ஞர்கள் நெடு நாள் குருகுல வாஸம் செய்து ஸ்ரீபாஷ்யத்தை யதிகரித்து பாஷ்யாதிகாரிகளென்று பேர் பெற்றுச் சிறந்த வேதாந்திகளாகித் தத்வ ஹித புருஷார்த்தங்களைத் தெளிவாக உணர்ந்து நிரதிசய ஆனந்த சாலிகளாகின்றனர். அவ்வளவு அதிகாரம் வாய்க்கப் பெறாதவர்களையும் கைவிட மாட்டாத கருணை மிக்க நம் பூருவாசாரியர்கள் திவ்ய பிரபந்த தத் வியாக்யானங்களையும் ரஹஸ்ய தத் வியாக்யானங்களையும் மற்றும் பல திவ்ய கரந்தங்களையு மருளிச் செய்துள்ளார் களாதலால் ஸ்ரீ பாஷ்யத்தில் நேராக அவகாஹிக்க மாட்டாதவர்களும் இழவாமல் அதில் விவரிக்கப் பட்டுள்ள தத்வ ஹித புருஷார்த்தங்களை ஸதாசார்ய ஸகாசத்தில் உணரப் பெறுகின்றார்கள். அன்னவர்களது ஞானத்திலும் ஒரு குறை யில்லை குற்றமில்லை யென்பது மாத்திரமே யல்லாமல் ஸ்ரீ பாஷ்யாதிகாரிகளைக் காட்டிலும் மிக விசதமான ஞானத் தெளிவு பெற்றவர்களாகவும் விளங்குகிறார்கள்

14-ஆனாலும் ப்ரஹ்ம ஸத்திரத்தில் என்ன விஷயம் எந்த விதமாகச் சொல்லப் பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளப் பலர்க்கு அபிலாஷை யுண்டு. விஸ்தாரமாகத் தெரிந்து கொள்ளா விடினும் ஸார ஸங்க்ரஹமாக வாவது தெரிந்து கொள்ள வேணுமென்கிற விருப்ப முண்டாகி,அப்படித் தெரிவிப்பதொரு நூல் தமிழிலுண்டா வென்று பலரும் விசாரிப்பதுண்டு. ஸ்ரீபாஷ்ய மொழி பெயர்ப்பு, ஸ்ருத ப்ரகாசிகை மொழி பெயர்ப்பு என்றிப்படி சில நூல்கள் வெளி வந்தாலும் ப்ரஹ்ம ஸூத்ரத்தின் ப்ரமேயத்தை ஸாரமாகத் தெரிந்து கொள்வதற்கு உரிய நூல் ஒன்று இருக்க வேண்டியது அவசியமென்றே பல மஹான்கள் கருதுகின்றனர். அந்தக் கருத்தை நிறை வேற்றுவதற்காக மிகவும் ஊக்கங் கொண்டிருக்கிறேன்.தத் விஷாயகமான ஸுர்யோதயத்திற்கு இது அருணோதயமாக நினைக்கத் தகும்.

15-ப்ரஹ்ம ஸூத்ரத்தில் முதல் அதிகரணம் ஜிஜ்ஞாஸாதிகரணமெனப்படும்.
” அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா ” என்பது ஸுத்ரம். அத = கர்ம விசாரம் செய்து முடிந்த பிறகு, அத := கர்ம விசாரம் முடிந்த காரணத்தினாலேயே, ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா= இச்சைக்கு இலக்கான ப்ரஹ்ம் விசாரம் (செய்யத் தக்கது )என்று ஸுத்திரத்தின் மேல் பொருள் அறிக. கரம விசாரத்தைச் செய்து முடித்தவர்கள் அந்தக் கருமங்களினுடைய அற்பமும் அஸ்திரமுமான பலன்களில் நசை யொழிந்து மோக்ஷ புருஷார்த்தத்தை விரும்புவர்களாதலால் அப்படிப் பட்டவர்களுக்கு ப்ரஹ்ம விசாரம செய்யத் தக்கது என்றதாயிற்று. இதை இன்னமும் சிறிது விவரிப்போம். நன்றாக வேத மோதின் வொருவர் ஜைமினி மஹர்ஷியின் கர்ம மீமாம்ஸையில் சொல்லப் பட்ட நியாயங்களினால் ஜ்யோதிஷ்டோமம் முதலிய யஜ்ஞங்களின் (கருமங்களின்) தன்மை இன்னபடிப் பட்டது,அவற்றை யியற்ற வேண்டிய விதமின்னது, அவற்றின் பலனான ஸ்வர்க்கம் முதலியவற்றின் ஸ்வரூபம் இத்தகைத்து என்று இவ் வியைங்களை அறுதி யிடப் பெற்ற பின்பு ஸ்வர்க்கம் முதலிய அந்தப் பலன்கள் நஸ்வரங்கள் என்று தெரிந்து கொண்டதன் பலனாக அவற்றைப் பெற வேணு மென்கிற விருப்பம் தொலைந் தொழியப் பெறுகின்றார். பர ப்ரஹ்ம ப்ராப்தி யாகிற மோஷ புருஷார்த்தத்தில் மேலெழுந்த வொரு உணர்ச்சி யிருப்பதனால் இதனைப் பெற வேணு மென்கிற விருப்பமும் அவர்க்கு உண்டாகின்றது. இப்படி ப்ரஹ்ம் ப்ராப்தியில் விருப்ப முண்டானவாறே, அந்த ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் இப்படிப் பட்டது,அதனைப் பெறுதற்கு உபாய மின்னது,பெற்று அநுபவிக்கும் பலன் இன்னபடிப் பட்டது என்றித் தகைய விஷயங்களை நிர்ணயிக்க வேண்டுமாதலால் இந்த நிர்ணயம் ப்ரஹ்ம மீமாம்ஸையிற் சொல்லப் பட்டுள்ள நியாயங்களினாலேயே விளையக் கூடியது என்றதாகத் தேறி நின்றது.அதாதோ ப்ரஹ்மஜிஜ்ஞாஸ * என்கிற இந்த ஸுத்திரத்திற்கு இவ்வளவே விஷய மாயிருக்க, இங்கு ஸ்ரீ பாஷ்யம் மிக மிக வளர்ந்திருக்கின்றதே; அவ்வளவு விரிவுக்கு விஷயமென்ன? என்று பலர் அறிய விரும்பக் கூடும். கேண்மின், இந்த ஸூத்ரத்தில் மூன்றே பதங்கள் உள்ளன. (அத) என்கிற முதல் பதத்திற்கு அதற்குப் பிறகு’ என்று அர்த்தம். எதற்குப் பிறகு ? என்று கேள்வி உடனே உண்டாகின்றது. கர்ம விசாரம் செய்து முடிந்த பிறகு ‘ என்று நாம் அர்த்தம் சொன்னோம். பிறர் இங்ஙனே அர்த்தம் கொள்ளாமல் வேறு அர்த்தம் கொள்ளுகின்றனர். ஸாதந ஸம்பத்தியின் ஆநந்தாயமே அத சப்தார்த்த மென்று சங்கர பாஷ்யத்திலுள்ளது.அது பொருந்தா தென்று மறுக்க அவசியம் ஏற்பட்டது. ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தைப் பற்றிப் பிறர் கூறுவதும் அவஸ்யம் மறுக்க வேண்டியதாயிற்று. இவ் விரண்டு விஷயங்களில் ப்ரஸக்தா நுப்ரஸக்தமாகப் பல பல விஷயங்கள் பெருகின படியால் இவ்விடத்து ஸ்ரீபாஷ்யம் மிக வளர்ந்தது. அவ்விரிவு இங்கு வேண்டாவென்று விடுக்கப்பட்டது. ஸூத்ரத்தின் மேல் இங்குத் தோன்றி யுள்ள பூர்வ பக்ஷத்தையும ஸித்தாந்தத்தையும் ஸாரமாக வுணர்த்துகிறோம், உணர்க.

16- இவ் வதிகரணத்தின் பூர்வபக்ஷம் வருமாறு:-கர்ம மீமாம்ஸையில் அர்த்த வாதாதிகரணத்தில் “ஆம்நாயஸ்ய க்ரியார்த் தத்வாத் ஆநர்த்தக்யம் அததர்த்தநாம் தஸ்மாத நித்ய முச்யதே ” என்கிற வொரு ஸுத்திரத்தினால் ஒரு பூர்வ பக்ஷம் கிளப்பப் பட்டது; அதாவது- வேத ஸாமாந்யமும் ஏதேனுமொரு கார்யத்தைச் செய்ய வெண்டியதாக வுணர்த்தித் தீர வேண்டிய நிர்ப்பந்த முடையது; அதைச் செய் இதைச் செய் என்று கர்த்தவ் யார்த்தங்களை நியமே போதிப்பதே வேதங்களின் க்ருதயம். அர்த்தவாத ரூபங்களான வேறு வாக்யங்களானவை கர்த்தவ் யார்த்த மொன்றையும் போதிக்காமை யினாலே அப்படிப் பட்ட வாக்யங்களுக்கு பிராமாண்யம் ஸம்பவிக்க மாட்டாது. (இதைச் சிறிது விவரிப்போம்-) “வாயவ்யம் ச்வேத மால பேத பூதிகாம:” என்பது ஒரு வேத வாக்யம். இதில் ஒரு கருமம் கர்த்தவ்யமாக விதிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு அடுத்த வாக்யம் (வாயுர்வை க்ஷேபிஷ்டா தேவதா’ என்பது. முன் சொன்ன கருமத்தில் ஆராத்யமான வாயு தேவதையின் ஒரு பெருமையைப் புகழ்ந்து கூறுவது இந்த வாக்யும். வாயு மிகவும் சீக்கிரமாகப் பலனளிக்க வல்ல தேவதை” என்பது இந்த வாக்யத்தின் அர்த்தம். இப்படிப்பட்ட வாக்யங்களுக்கு அர்த்தவாத வாக்ய மென்று பெயர். இவற்றில் கர்ம விதி ஒன்று மில்லாமையால் இவை விதி வாக்யங்களல்ல. விதி வாக்யமாயிருந்து கொண்டே பிராமாண்யம் பெற மாட்டா- என்கிற பூர்வ பக்ஷம் –ஆம்நாயஸ்யேதி -ஸ்த்ரத்தினால் கிளப்பப்பட்டது. பிறகு “விதிநாது ஏக வாக்யத்வாத் ஸதுத்யர்த்தே விதீநாம் ஸ்யு:” என்கிற ஸூத்ரத்தினால் இதற்குப் பரிஹாரம் சொல்லப் பட்டது. எங்கன் யென்னில், அர்த்தவாத வாக்யங்கள் ஒரு காரியத்தைச் செய்யும்படி விதிக்காமற் போனாலும் ஸமீபத்திலுள்ள விதி வாக்யத்தில் விதிக்கப்பட்டதொரு க்ரியையில் அந்வயிக்கின்ற புகழ்ச்சியைத் தெரிவிப்பதனால் அந்த விதி வாக்யத்தோடு கூட ஏக வாக்யமாய்க் கொண்டு ப்ராமாண்யம் பெறத் தட்டில்லை யென்று ஸித்தாந்தம் செய்யப்பட் டது ஜைமினி மஹர்ஷியால். ஆக, விதி வாக்கியங்களுக்கோ அவற்றுக்கு சேஷ பூதங்களான வாக்யங்களுக்கோ ப்ராமாண்ய முண்டே யல்லது வேறு வகையான வாக்யங்களுக்கு ப்ராமாண்யம் கிடையாது. உலகத்திலும் முதன் முதலாகச் சிறுவர்களுக்கு வ்ருத்த வ்யவகாரத்தினாலேயே சக்தி க்ரஹண முண்டாகிறது. (சக்தி க்ரஹணமாவது -இன்ன பதத்திற்கு இன்னது அர்த்த மென்கிற வுணர்ச்சி.) வ்யுத்பந்நனான வொருவன் வேறொரு வ்யுத்பந்நனை நோக்கி ஆநய ‘ என்கிறான். அதைக் கேட்ட அவன் ஒரு கோவைக் கொண்டு போகிறான். மறுபடியும் அவன் “காம் நய, அச்வம் ஆநய ” என்கிறான். அதைக் கேட்ட அந்த வ்யுத்பந்நன் கோவைக் கொண்டு போய்க் கட்டி விட்டுக் குதிரையைக் கொண்டு வருகிறான். இவற்றைக் கண்டு கொண்டிருந்த வொரு சிறுவன் (காம்) என்றதற்கு இன்னது பொருள், (ஆநய ) என்றதற்கு இன்னது பொருள்,(நய ) என்றதற்கு இன்னது பொருள்; அச்வமென்றதற்கு இன்னது பொருளென்று அங்கு நடந்த காரியங்களினால் தெரிந்து கொள்ளுகிறான். ‘ கோ’ பதமானது கொண்டு வருதல் கொண்டு போதல் என்கிற இரண்டு க்ரியைகளில் அந்வயிக்கின்ற வஸ்துவை போதிப்பதனாலே பசுவைச் சொல்லுகின்றது, ஆநய என்கிற பதம் கொண்டு வருவதாகிற க்ரியையைச் சொல்லுமது என்றிப்படி அந்தந்த பதங்களுக்கு சக்தியை க்ரஹிக்கின்றான், எங்கும் இப்படிப்பட்ட வ்யவஹாரங்களினாலேயே அவ்வோ பதங்களுக்கு அவ்வோ அர்த்தங்களில் சக்தி க்ரஹண முண்டாகிறது. ஆகவே இப்படிப்பட்ட வ்யவஹாரங்களெல் லாம் ஏதேனுமொரு கார்யார்த்த பரங்களாகவே காணப் படுதலால் உலகில் எல்லாப் பதங்களும் யத் கிஞ்சித் கர்த்தவ் யார்த்த பரங்களே யென்று நிச்சயிக்கிறான். ஆக இப் படிப்பட்ட யுத்பத்திக்கு இணங்க எல்லாப் பதங்களும் கார்யார்த்த பரங்களே. இப்படி லௌகிக பதங்கள் கார்ய பரங்களென்று தேறினால் ய ஏவ லௌகிகா த ஏவ வைதிகா ? என்கிற ந்யாயத்தாலே வைதிக பதங்களும் கார்ய பரங்களேயாகும்.(கார்ய பரங்களான வாக்யங்களுக்கே ப்ராமாண்யமுண்டு என்றபடி.) ஏவஞ்ச,கார்ய ரூபமல்லாத பர ப்ரஹ்மத்தினிடத்தில் வேதாந்த வாக்யங்களுக்குத் தாத்பர்யமிருக்க முடியாமை யினாலே வேதாந்த விசார ரூபமான ப்ரஹ்ம விசார சாஸ்த்ரம் ஆரம்பிக்கத் தக்கதன்று- என்று பூர்வ பக்ஷம் ப்ராப்த மாயிற்று.

17-இதன் மேல் ஸித்தாந்தம் வருமாறு : சிறுவர்களுக்கு முதல் வ்யுத்பத்தி வ்ருத்த வ்யாவகாரத்தினாலேயே உண்டாகிறது என்பது பிசகு; இது எல்லாருடையவும் அநுபவத்திற்கு விருத்தமானது. உலகில் அவரவர்களுக்கு முதல் வ்யுத்பத்தி உண்டாகிற விதம் வேறு வகையாகவே அநுபவ ஸித்தமாக வுள்ளது. எங்கனே யென்னில், தந்தை தாய் முதலியவர்கள் தம் தம் சிறுவர்களுக்கு வ்யுத்பத்தியை யுண்டு பண்ண வேண்டி கண்ணிற் காணும் பல பல பொருள்களை விரலால் சுட்டிக் காட்டி இதோ சந்திரன், இதோ கிளி, இதோ குதிரை, இதோ மாமா’ என்றிப்படி பிரயோகித்து வருகிறார்கள். சிசுக்களும் பூர்வ ஜன்ம வாஸநையினால் கால க்ரமேண அவ்வோ பதங்களுக்கும் அவ்வோ அர்த்தங்களுக்குமுள்ள ஸம்பந்தத்தைத் திடமாக வுணர்ந்து வ்யுத்பத்தி பெறுகின்றன. ஒரு கார்யத்தில் அந்வயித்த வஸ்துவிலேயே முதன் முதலாக சக்தி க்ரஹண முண்டாகிற தென்றதற்கு முரணாக ஒரு கார்யத்திலும் அந்வயியாத வஸ்துவிலேயே முதன் முதலாகப் பதங்களுக்கு சக்தி க்ரஹண முண்டாகின்றதென்று மூதலிக்கப்பட்டது.

18–கார்ய பரமான வாக்கியத்திலிருந்தே சக்தி க்ரஹண முண்டாகிறதென்பதும் மிகவும் தவறு. தேவ தத்தா உனக்குப் பிள்ளை பிறந்தது. என்பதாக ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம். இது ஸித்தார்த்த பரமான வாக்கியமே யொழிய, காமாநய, காம் நய ‘ இத்யாதி வாக்யங்கள் போலே கார்ய பர வாக்கியமன்று. இந்த வாக்கியத்தினாலும் சிறுவர்களுக்கு வயுத்பத்தி விளையக் காணா நின்றோம். தேவ தத்தனுக்குப் பிள்ளை பிறந்தவுடனே வேறோரிடத்திலிருந்த அவனுக்கு இதைத் தெரிவிப்பதற்காக ஏவப்பட்ட வொருவன் தேவ த்த புத்ரஸ் தே ஜாத?’ என்கிறான்-அவ் யுத்தபந்நனான வொருவன், தேவ தத்தனுடைய க்ருஹத்தில் அவனுக்குப் பிள்ளை பிறந்ததையும் அதைத் தெரிவிப்பதற்காக வொருவன் ஏவப் பட்டதையும் அவன் கூறினதைக் கேட்டு தேவ தத்தனுக்கு முக விகாஸ முண்டானதையும் நோக்கி “புத்ரஸ்தே ஜாத ” என்ற வாக்கியத்திற்கு இன்னது பொருளென்று உணரப் பெறுகிறான். ஆகவே கார்ய பரமான வாக்கியத்திலிருந்தே சக்தி க்ரஹண மென்கிற நியதி இல்லை யென்றதாயிற்று. சில விடங்களில் ஸித்த பரமான வாக்யத்திலிருந்தும் கார்ய அநந்வித வஸ்துக்களில் சக்தி க்ரஹண முண்டாகிறது; சில விடங்களில் கார்ய பர வாக்கியத்திலிருந்தும் உண்டாகிறது என்று லோக அநு பவத்தினால் ஸித்திக்கிற படியால் ப்ராபாகரர்கள் ஸகல பதங்களும் கார்யார்த்த பரங்களென்று கூறுவது யுத்தி யற்ற தென்று தேறிற்று. ஆகவே வாக்கியங்களுக்கு ஸித்த ரூபமான ப்ரஹ்மத்தில் தாத்பர்யம் ஸம்பவிக்கலா மாகையாலே தத் விசார சாஸ்த்ரம் ஆரம்பிக்கத் தக்கதே யென்று ஸித்தாந்தமானதாக முடிந்தது.

19-இங்கு இப்படிப்பட்ட பூர்வ பக்ஷம் தோன்றி இதற்குப் பரிஹாரம் செய்வதாகிற விஷயம் அந்த ஸூத்ரத்தில் எங்ஙனம் கிடைக்கிறதென்று கேள்வி தோன்றும். கார்யத்தில் அந்வயியாத ப்ரஹ்மமாகிற ஸித்த வஸ்துவை ஜிஜ்ஞாஸ்யமாக இங்குக் கூறியிருப்பதனால் இதிலிருந்து இந்தப் பூர்வ பக்ஷ ஸித்தாந்தங்கள் நிர்ணயிக்கப் படக் குறை இல்லை – வேதாந்த வாக்கியங்களெல்லாம் கார்ய பரங்களாய்க் கொண்டு ப்ராமாண்யம் பெறுமே யல்லது ஸித்த பரங்களாய்க் கொண்டு ப்ராமாண்யம் பெற மாட்டா தென்கிற வாதம் ஸமஞ்ஜஸமா யிருந்தாலன்றோ வேதாந்த வாக்யங்களினால் ஸித்த ரூபமான ப்ரஹ்மத்தை விசாரிப்பது கூடாதென்று சொல்ல நேரும்.

20- முதலில் நாமெடுத்துக் காட்டிய பூர்வ மீமாம்ஸ ஸூத்ரங்களிரண்டினால் தேறின வர்த்தம் இப்போது விரோதிக்கிறதாக இனி நினைக்கக் கூடும். கார்ய பாரங்களல்லாத ஸித்த பர வாக்கியங்களுக்கு ஸ்வாதந்தர்யேண ப்ராமாண்யம் அஸம்பாவிதமென் றன்றோ அங்கு ஸித்தாந்தம் செய்யப் பட்டிருக்கிறது ; அதற்கு முரணாக இப்போது முடிந்ததே என்று சங்கிக்க நேரும்.இந்த சங்கை வேண்டா. எல்லா வேத வாக்கியங்களும் கார்ய பரங்களாய்க் கொண்டே பிராமாண்யம் பெறுமென்று பூர்வ பக்ஷி சொன்னதை அப்படியே ஒப்புக் கொண்டு அப்யுபகம்யவாத முறையில் பரிஹாரம் காட்டினார் ஜைமிநி மஹர்ஷி. அதுவே அவருடைய அபிப்ராயமென்பது கிடையாது. கார்ய பரமல்லாத அர்த்தவாத வாக்கியங்களும் விதி சேஷமாய்க் கொண்டு ப்ராமாண்யம் பெறுகின்றன வென்று சொன்ன வளவால் ஸித்த பர வாக்யங்களுக்கு ப்ராமாண்யமே கிடையாதென்று சொன்ன படியாகாது. ஆகவே இந்த ஸூத்ரத்தில் செய்யப் படுகிற ஸித்தாந்தமானது பூர்வ மீமாம்ஸா அர்த்தவாதாதிகரண ஸித்தாந்தத்திற்கு விருத்தமன்று என்றதாயிற்று.

21-இதில்-அத அத என்கிற இரண்டு பதங்களினால் கர்ம விசாரத்திற்குப் பிறகு கர்ம விசாரம் முடிந்த தென்கிற காரணத்தாலேயே, பர ப்ரஹ்ம விசாரம் செய்யத் தக்கதென்று கிடைப்பதனால் ப்ரஹ்ம விசாரத்தைக் குறித்துக் கர்ம விசாரம் நியமேந பூர்வ வ்ருத்தமென்று தேறுகின்றது. இதைப் பற்றியும் சிறிது விவரிக்கப்படுகிறது . வேத மோதின வொரு புருஷன் வேத வாக்யங்களில் கர்ம பலத்தைப் பற்றியும் பரஹ்ம ஞான பலத்தைப் பறறியும் ஸ்திரமென்று சில விடங்களிலும் அஸ்திரமென்று சிலவிடங் களிலும் மேலெழுந்த வாரியாக வுணர்ந்து இவற்றில் எது உண்மை யென்று நிர்ணயம் தெரிந்து கொள்ள விரும்புகிறான். அந்த விருப்பத்தினால் அதை நிர்ணயித்துத் தரக் கூடிய சாஸ்த்ரங்களில் ப்ரவர்த்திக்கிறான். கர்ம பலனைப் பற்றின வுண்மையை நிச்சயித்துத் தரவல்ல சாஸ்த்ரங்களில் முந்துற முன்னம் பிரவர்த்திக்கிறான். அநாதி வாஸநையினால் கருமங்களைச் செய்வது எளிதென்று பொதுவாகத் தோன்றி யிருக்கும். ப்ரஹ்ம ஜ்ஞானத்தில் அப்யாஸ மில்லாமையினாலே அது துஷ் கரமென்றும் தோன்றி யிருக்கும்.ஆகவே எளிதான உபாயத்தினால் அபி மதம் கை புகுவதா யிருக்க அரிதான உபாயத்தில் ப்ரவருத்தி ஸஸம்பவிக்க மாட்டா தாகையாலே ப்ரஹ்ம ஞானத்தின் பலனைப் பற்றி நிர்ணயிக்க வேணு மென்கிற விருப்பம் தடைபட்டு, கரும பலனைப் பற்றி நிர்ணயிக்க வேணு மென்கிற விருப்பமே தலை யெடுத்திருக்கும். இங்ஙனம் முன்னம் கரும விசாரம் செய்த வளவில் கரும பலன்கள் அஸ்திரம் என்கிற நிச்சய முண்டாகிறது. இப்படி நிச்சய முண்டான வளவில், கர்ம விசாரேச்சை தொலைந்ததாகிறது. இந்த கர்ம விசாரேச்சையே முன்பு ப்ரஹ்ம விசாரேச்சைக்கு இடையூறா யிருந்ததனால் இந்த ப்ரதிபந்தகம தொலையவே ப்ரஹ்ம விசாரத்தில் இச்சையும் அதில் ப்ரவ்ருத்தியும் அடுத்த படியாக உண்டாகிறது. எனவே, ப்ரஹ்ம விசாரத்தைக் குறித்து கர்ம விசாரம் நியமேந அபேக்ஷித மென்றதாகிறது. இதுவே பூர்வ வ்ருத்தமாக இருக்கத் தக்கதாதலால் (அது அத)என்ற பதங்களுக்குப் பதவுரையில் நாம் கூறிய பொருளே பொருத்த முடைத்தென்ற தாயிற்று. இஜ் ஜிஜ்ஞாஸாதிகரண அர்த்த ஸாரம் இவ்வளவு போதும்.

——

(இனி, இரண்டாவது-ஜந்மாத்யதிகரணம்.)
22-உலகில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேணுமானால் லக்ஷணத்தை முன்னிட்டே தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியே பர ப்ரஹ்மத்தைத் தெரிந்து கொள்ள வேணுமானாலும் ஒரு லக்ஷணத்தை முன்னிட்டே தெரிந்து கொள்ள வேண்டும்.நாம் கண்ணால் காணக் கூடிய பொருள்களுக்கே லஷணம் கூற முடியுமே யல்லது கண்ணுக்குப் புலப்படாத பொருளுக்கு லக்ஷணம் கூற முடியாது. பர ப்ரஹ்மமோ கண்ணுக்குப் புலப்படாததே யன்றிப் புலப்படுமதன்று. ஆகவே அதற்கு ஒரு லக்ஷணம் கூற இயலாத போது அது தெரிந்து கொள்ள முடியாதென்று தேறி விட்டபடியால் அந்த பர ப்ரஹ்மத்தைப் பற்றின விசாரம் எப்படி செய்ய பிராப்தமாகும்? என்று ஆக்ஷேபம் தோன்ற,அவ் வாக்ஷேபத்தைப் பரிஹரிக்க இந்த அதிகரணம் எழுகின்றது. இவ் வதிகரணத்தின் ஸூத்ரம் * ஜந்மாத்யஸ்ய யத : * என்பது. ஐந்மாதி,அஸ்ய,யத: என்று மூன்று பதமாகவுள்ளது இந்த ஸூத்ரம். அஸ்ய – கண்ணால் காணப்படுகிற இந்த சேதந மிச்ரமானபிரபஞ்சத்திற்கு, ஜன்மாதி – உற்பத்தி ஸ்திதி ப்ரளயங்கள், யத :– எந்த வஸ்துவினிடத்தினின்று ஆகின்றனவோ, (அது தான் பர ப்ரஹ்மம் ] என்பதாக ஸுத்திரத்தின் பொருள்.-தைத்திரயோபநிஷத்தில் ப்ருகு வல்லி யென்னும் ப்ரகரணத்திலுள்ளதான” யதோவா இமாதி பூதாநி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி, யத் ப்ரயந்த்யபி ஸம்விசந்தி, தத் விஜிஜ்ஞாஸஸ்வ, தத் ப்ரஹ்மேதி “ என்னும் வாக்கியமானது பர ப்ரஹ்மத்திற்கு ஜகஜ் ஜந்மாதி காரணத்வ ரூபமான லக்ஷணத்தைச் சொல்லி யிருக்கின்றது. உலகில் நாம் ஆடு மாடுகளுக்கு ஒவ்வொரு லக்ஷணத்தைக் கொண்டு இதர பேதத்தை எப்படி நிச்சயிக்கிறோமோ அப்படியே ப்ரஹ்மம் கண்ணுக்குப் புலப்படாததா யிருந்தாலுங் கூட ஜக ஐந்மாதி காரணத்வ ரூபமான லக்ஷணத்தைக் கொண்டு சேதநா சேதநங்களிற் காட்டில் வேறுபட்டதென்று நிச்சயிக்க முடியுமாதலால் அப்படிப்பட்ட ப்ரஹ்மத்தைப் பற்றின விசாரம் கூடும் என்றதாயிற்று.

23-இங்கே பூர்வ பக்ஷம்: -ப்ரஹ்மத்திற்கு ஐந்ம காரணத்வம் முதலானவை லஷணமாக ஸம்பவிக்க மாட்டாதென்று பூர்வ பக்ஷம் பிராப்தமாகிறது. “யத . இமாநி ஜாயந்தே” இத்தியாதியாக எடுத்துக் காட்டின உபநிஷத் வாக்யத்தில் அந்வய க்ரமம் எப்படி காண வேணும் என்றால் , “யத இமாநி பூதாநி ஜாயந்தே தத் ப்ரஹ்ம; யேந ஜாதாநி ஜீவந்தி தத் ப்ரஹ்ம; யத் ப்ரயந்தி அபிஸம்விசந்தி தத் ப்ரஹ்ம” என்று மூன்று வாக்யங்களாகப் பிரித்து அந்வயங் கொண்டு ஐந்ம காரணத்வம் ஒரு லக்ஷண மென்றும் ஸ்திதி காரணத்வம் மற்றொரு லஷண மென்றும் லய காரணத்வம் வேறொரு லக்ஷண மென்றும் ஆக வ்யாவர்த்தக லஷணங்கள் மூன்று அங்கீகரிக்க வேண்டியதாகின்றது. இப்படி யாகுமளவில், ஒரே ப்ரஹ்மம் என்றல்லாமல் பல ப்ரஹ்மங்கள் என்பதாகத் தேறும். வ்யாவர்த்தகங்கள் பலவானால் வயாவர்த்யமும் பலவாக வேண்டுகையாலே.

24- இப்படி யொரு நிர்ப்பந்த முண்டோ? தேவதத்தன் கறுத்தவனாயும் பருத்தவனாயும் யுவாவாயும் செந்தாமரைக் கண்ணனாயு மிரா நின்றான் என்று ஒருவர் சொன்னால் கறுப்பு முதலிய வியாவர்த்தகங்கள் பலவாயிருப்பது கொண்டு வயாவர்தயனான தேவதத்தனும் பல வியத்திகளாகத் தேறி விடுவனோ? பரத்யக்ஷமாக ஒரு தேவதத் தனையே நாம் காண்கிறோம். அவ்வொரு வியக்தியினிடத்தில் கருமை, பருமை முதலான பலவும் கூடியிருக்கக் காண்கிறோம். இது போல ஒரு ப்ரஹ்மத்தினிடத்திலே ஐந்ம காரணத்வம் முதலானவை பலவும் கூடி யிருக்கக் குறை யில்லையே. இவற்றால் ப்ரஹ்ம வ்யக்தியில் பஹுத்வத்தை எப்படி ஆபத்தி பண்ண முடியும்? என்று மத்யே சங்கை தோன்றும். இதற்கு ஸமாதானம். கருமை பருமை முதலிய பலவற்றால் தேவ தத்த வ்யக்தியில் பன்மை வந்துவிட மாட்டாதென்பது வாஸ்தவமே, தேவதத்தன் கண்ணுக்குப் புலப்படுமவனாதலால் அவ் விஷயம் வேறு, ப்ரஹ்மம் அப்படி பிரத்யஷமன்றே- அதுவோ அப்ரத்யஷாமாயிரா நின்றது. ஐந்ம காரணத்வமும் லய காரணத்வமும் ஒன்றிலேயே கூடுமென்று க்ரஹிப்பிக்க வல்ல பிரமாண மெதுவும் புலப்படவில்லை. லக்ஷணங்கள் எல்லாம் இதர பேதத்தை ஸாதித்துக் கொடுக்குமவை என்பது உத்ஸர்க்கத: பராப்தமாயிரா நின்றது -ஐந்ம காரணத்வம் ஸ்திதி காரணத்வம் லய காரணத்வ மென்னுமிந்த லஷணங்கள் இதர பேதத்தை வியாவ்ருத்தியை]ஸாதித்துக் கொடுக்குமளவில் இதற்குஅபவாதம் யாதொன்று மில்லாமையினாலே, ஐந்ம காரணத்வமாகிற லஷணமானது என்ன செய்யுமென்றால், தன்னைக் கொண்டு லக்ஷணீயமான ப்ரஹ்மத்திற்கு ஸ்திதி காரண பூதமான ப்ரஹ்மத்திற் காட்டிலும் லய காரண பூதமான ப்ரஹ்மத்திற் காட்டிலும் வேறுபாட்டைக் காட்டிக் கொடுத்தே தீரும். இப்படியே ஸ்திதி காரணத்வ ரூபமான லக்ஷணமும் ஸ்வ லக்ஷ்யமான ப்ரஹ்மத்திற்கு- ஐந்ம காரண பூதமான ப்ரஹ்மத்திற் காட்டிலும் லய காரண பூதமான பரஹ்மத்திற் காட்டிலும் வேறுபாட்டைக் காட்டிக் கொடுத்தே தீரும். இப்படியே லய காரணத்வ ரூபமான லக்ஷணமும் ஸ்வ லக்ஷ்யமான ப்ரஹ்மத்திற்கு ஜந்ம காரண பூதமான ப்ரஹ்மத்திற் காட்டிலும் ஸ்திதி காரண பூதமான ப்ரஹ்மத்திற் காட்டிலும் வேறுபாட்டைக் காட்டிக் கொடுத்தே தீரும். ஆக விப்படி லக்ஷண பேதங்களினால் ப்ரஹ்ம பஹுத்வம் தேறியே தீரும். இதற்காகப் பல லக்ஷணங்களைக் கொள்ளாமல் ( ஐந்ம காரணத்வே ஸதி ஸ்திதி காரணத்வே ஸதி லய காரணத்வம் ப்ரஹ்ம லக்ஷணம் “என்று கொள்ளுகிறோ மென்னில்; இவற்றுள் ஒவ் வொன்றே லக்ஷணமாகப் போருமாதலால் மற்ற விசேஷணங்கள் வ்யர்த்தமாக வேண்டி வரும். மேலும் ஐந்ம காரணத்வமும் லய காரணத்வமும். விருதங்களாகையாலே ஓரிடத்தில் இவை கூடி யிருக்கவும் மாட்டா

25-இதற்குமேல் ஒன்று சொல்லலாம். (அதோ பக்ஷி உட்கார்ந்து கொண் டிருக்கிறதே. இவ் விடந்தான் தேவ தத்தனுடைய கழனி] என்று ஒருவன் சொன்னால், தேவ தத்தனுடைய கழனிக்கு பக்ஷியின் ஸம்பந்தத்தை லக்ஷணமாகச் சொன்னதாக ஆகிறது. இப்படிப்பட்ட லக்ஷணத்தினால் பக்ஷி யுறையுமிடமான கழனியில் தேவதத்த ஸ்வாமிகத்வம் தெரிவிக்கப் படுகிறது.அது போலவே இங்கும் ஐந்ம காரணத்வம் ஸ்திதி காரணத்வம் லய காரணத்வம் ஆகிற மூன்றையும் ஜ்ஞாபக லக்ஷணங்களாகக் கொண்டு இவற்றால் ஒரே வஸ்து ப்ரஹ்ம் பதார்த்தமாக ஏற்படுகிறது- என்னலாம்.

26-இதுவும் பொருந்தாது -திருஷ்டாந்தத்தில், கழனி யென்கிற வொரு வஸ்து ஏற்கெனவே அறியப் பட்டிருந்தது. அப்படி அறியப் பட்டிருந்தவதில் பக்ஷி விசேஷத்தின் ஸம்பந்தத்தை யிட்டு தேவதத்த ஸ்வாமிகத்வம் தெரிவிக்கப் பட்டது. அது போலஇங்கு தெரிவிக்கப்பட வேண்டிய ப்ரஹ்மத்திற்கு ஏற்கெனவே அறிந்ததொரு தன்மை சொல்லித் தீர வேண்டும். அதுவோ ஓன்றும் சொல்ல முடியாததா யிருக்கின்றது.ஆகவே ஜந்ம காரணத்வம் முதலியவற்றுக்கு [பஷி விசேஷ ஸம்பந்தாதிவத்] ஜ்ஞாபகத்வமும் ஸம்பவிக்க மாட்டாது.ஏன்? ப்ரஹ்மத்திற்கு ஏற்கெனவே அறிந்ததொரு தன்மை சொல்லமுடியாதா என்ன ? நன்றாகச் சொல்லலாமே; ” ஸத்யம் ஜ்ஞாந மநந்தம் ப்ரஹ்ம -என்கிற வாக்யத்தில் சொல்லப்பட்ட ஸத்யத்வம் முதலானவையே முன்னமறிந்த தன்மைகள் என்னக் கூடாதோ வென்னில்; அங்கும் இத் தோஷம் ஸமானமே யாகும்.ஸத்யத்வாதிகள் ஜ்ஞபகமாகும் போது ஏற்கெனவே யறிந்த தன்மை யொன்று சொல்லியாக வேண்டும். ஐந்ம காரணத்வாதிகளைச் சொல்லுகிறோ மென்ன வேணும்; அதைத் தெரிந்து கொள்ளாமல் ப்ரஹ்ம பதார்த்தம் தெரிவிக்க முடியாதாதலால் அந்யோந்யாஸ்ரயம் அபரிஹார்யமாகும். ஆகவே ஜந்ம காரணத்வாதிகள் லக்ஷணமாகப் பொருந்த மாட்டா வென்று பூர்வபக்ஷம் ப்ராப்தமாகிறது.

27- பர ப்ரஹ்மம் பரத்யக்ஷத்திற்கு விஷயமல்லாமையாலே அதற்கு ஒரு லக்ஷணமும் சொல்ல முடியாதாதலாலும், லக்ஷணத்தைக் கொண்டே எந்த வஸ்துவையும் அறிய வேண்டுமாதலாலும், லக்ஷணத்தின் அஸம்பவத்தினால் அறிய முடியாத்தான இந்தப் பர ப்ரஹ்மத்தைப் பற்றி விசாரம் செய்வதெப்படி? என்கிற ஆக்ஷேபத்தைப் பரிஹரித்துக் கொண்டு ஐந்மாத்யஸ்ய யத :” என்கிற இரண்டாவது ஸூத்ரம் தோன்றி யுள்ளதென்று கூறி பூர்வ பக்ஷத்தையும் விவரித்தோம். இனி ஸித்தாந்தம் வருமாறு

28-ஒரு வஸ்துவுக்கு ஒரு லக்ஷணம் சொன்னோமானால் அந்த லக்ஷணமானது
மற்ற வஸ்துக்களிற் காட்டிலும் இந்த வஸ்து வேறுபட்டது ” என்பதை நன்கு காட்டிக் கொடுக்குமென்று சொன்னோம். அப்படி வேறுபாட்டைக் காட்டுவதென்றால் என்ன? என்பதைச் சிறிது தெளிவாகத் தெரிந்து கொள்ள வேணும். விசேஷணங்களைக் கொண்டு நாம் வேறுபாட்டை யறிய வேணும். விசேஷ்யத்தில் ஏதோ வொரு தர்மம் இருப்பதாக விசேஷணம் காட்டும் ; அந்த தர்மத்திற் காட்டிலும் வேறுபட்டதான எந்த தர்மமும் அதில் இருக்க மாட்டாதென்று அதனால் தெரிந்து கொள்ளுகிறோமா?அல்லது அந்த தர்மத்திற்கு விருத்தமான வேறெந்த தர்மமும் அதில் இருக்க மாட்டாதென்று தெரிந்து கொள்ளுகிறோமா? என்று பரிசீலிக்க வேணும்-விசேஷணத்தினாலேற்பட்ட தர்மம் தவிர வேறு எந்த தர்மமும் அதில் விசேஷயத்தில் இருக்க மாட்டாதென்று தெரிந்து கொள்ளுகிறோமென்று தேறுமாகில் முற் கூறிய பூர்வபக்ஷம் ஊர்ஜிதமாகும். உண்மையோ வென்னில் அப்படியில்லை. ஒரு விசேஷணத்தினால் விசேஷ்யத்தில் ஒரு தர்மம் காட்டப்பட்டதே யானால் அதற்கு எதிரிடையான வேறு தர்மம் அதில் இருக்க மாட்டாதென்று நாம் தெரிந்து கொள்ளலாமே யன்றி அவிருத்தமான வேறெந்த தர்மமும் அதிலிருக்கமாட்டாதென்று நாம் தெரிந்து கொள்ள இயலாது(உதாரணம்.) “நீலோ வ்ருஷப: ‘ [கறுத்த எருது என்கிறவொரு வாக்யத்தை யெடுத்துக் கொள்வோம். இதில் கருமை விசேஷணம். எருது விசேஷ்யம். நீலம் என்கிற விசேஷணமானது இதர வ்யாவ்ருத்தியை [வேறுபாட்டை]க் காட்டுவதற்காகவே பிரயோகிக்கப் பட்டது. கறுப்பு நிறத்திற்கு விருத்தமான வெளுப்பு சிவப்பு முதலிய நிறங்கள் அந்த எருதினிடத்தில் இல்லை யென்று இதனால் நாம் தெரிந்து கொள்ளலாமே யல்லது இதற்கு அவிருத்தமான த்ரவ்யத்வம் முதலிய தாமங்களும் கூட அதில் இல்லை யென்று நாம் தெரிந்து கொள்ள முடியாது. லோகாநுபவம் அப்படி யில்லை. ஒரு விசேஷ்யத்தில் பல பல தர்மங்கள் இருக்கலாம். விசேஷணத்தினால் அல்லது விசேஷணங்களினால் எந்தெந்த தய்மங்களின் ஸத் பாவம் ஏற்படுமோ அந்த தர்மங்கள் தவிர வேறு எந்த தர்மமும் அந்த விசேஷ்யத்தில் கிடையாதென்கிற பிரதிபத்தி ஒரு நாளும் ஒருவற்கும் உண்டாக மாட்டாது. அந்த தர்மங்களோடு முரண்படும் படியான தர்மம் இருக்க மாட்டா தென்கிற ப்ரதிபத்தியே விளையும். “யுவா நீலோ வாமந : பங்குச்ச தேவ தத்த:” என்றால் யுவாவாயும் கறுத்தவனாயும் குள்ளனாயும் நொண்டியாயும் தேவ தத்தனி ருக்கிறான் என்று பொருள் படுகிறது. இதில் யுவா என்கிற விசேஷணமானது யௌவன முடையவ னென்று காட்டி, ளெவன மென்கிற அந்த தர்மத்திற்கு விருத்தமான இளமையும் முதுமையு மில்லாதவன் என்று காட்டுமே யல்லது அதற்கு அவிருத்தமான நீலத்வம் வாமநத்வம் முதலிய தர்மங்களு மில்லாதவன் என்று காட்ட மாட்டா தன்றோ? இப்படி ஒவ்வொரு விசேஷணத்தையு மெடுத்துக் கொண்டு விமர்சித்தறிக.

29-விருத்தமான தர்மங்களும் ஏக காலத்தில் இருக்க முடியாதே யொழிய கால பேதத்தினால் அவையும் ஒரே வ்யக்தியினிடத்தில் இருக்கத் தடை யில்லை. “நீலவஸ்த்ர தாரீ தேவதத்த: ” என்றால் ஒரு காலத்தில் கறுப்புத் துணியை யணிந்தவனாயும் மற்றொரு காலத்தில் வெளுப்புத் துணியை யணிந்தவனாயு மிருப்பதில் விரோத மில்லாமையாலே நீல வஸ்த்ர தாரீ என்கிற இந்த விசேஷமானது காலாந்தரத்தில் (அடுத்த க்ஷணத்திலேயே] ஸம்பவிக்கக் கூடிய ஸ்வேத வஸ்த்ர தாரணத்தைத் தவிர்க்க மாட்டாதன்றே.–விசேஷணங்களைப் பற்றி இங்ஙனே தெரிந்து கொள்ளக் கூடிய விஷயங்கள் பலவுள-

30-பிரகிருதத்தில், ஜந்ம காரணத்வம் ஸ்திதி காரணத்வம் லய காரணத்வ மென் னுமிவை கால பேதத்தினால் ஒரு வியக்தியினிடத்திலேயே ஒன்று சேர்ந்திருக்கக் கூடியவை யாதலால் அவிருத்தங்களேயாகும். விலக்ஷண சக்தி யுக்தமான பர ப்ரஹ்மத்தினிடத்தில் ஏக காலத்திலேயும் இவை கூடும். ஆகவே ஜந்ம காரணத்வம் முதலிய லக்ஷணங்களினால் பர ப்ரஹ்மத்திற்கு பஹுத்வாபத்தி யென்பதில்லை. பர ப்ரஹமம் க்ஷேத்ரஜ்ஞர்களின் கருமங்களுக்குத் தக்கபடி ஸ்ருஷ்டிப்பதும் பிரளயம் செய்ய வேண்டிய காலத்தில் ஸம்ஹரிப்பதும் செய்கிறது. உலகில் உழவனானவன் விதை விதைக்க வேண்டிய காலத்தில் அதை விதைப்பதும் அறுக்க வேண்டிய காலத்தில் அறுப்பதும் செய்வது போல் இதனைக் கொள்க. அன்றியும், உத்தர நாராயணாதுவாகம் முதலானவற்றில் லக்ஷ்மீ பதித்வம் முதலிய அஸாதாரண சிஹ்னங்களினால் ப்ரதிபத்திக்கு விஷயமான வஸ்துவானது ஜன்ம காரணத்வம் முதலிய லக்ஷணங்களினால் ப்ரஹ்ம பதார்த்தமாக ஜ்ஞாபிக்கப் படுகிறதென்றும் கொள்ளக் குறை யில்லாமையாலே இரண்டாவது பக்ஷத்திலும் தோஷமில்லை. (முன்னே விவரிக்கப்பட்ட பூர்வ பக்ஷத்தை யீண்டு வாசிப்பது.)
ஏவஞ்ச, ஜகஜ் ஜந்மாதி காரணத்வமானது விசேஷணமாகவும் உப லக்ஷணமாகவும் ப்ரஹ்ம லக்ஷணமாவதற்கு யாதொரு தடையுமில்லை யென்று தேறிற்று. இன்னமும் இங்கு விரிவாகத் தெரிவிக்க வேண்டுமவை பலவுண்டு. அவை சாஸ்த்ர ஜ்ஞானிகளுக்கே க்ரஹிக்கவும் ரஸிக்கவுங் கூடியவையாதலால் இங்கு இவ்வளவோடு நிறுத்தப்படுகிறது.

31-இனி,மூன்றாவதான சாஸ்த்ர யோநித்வாதிகரணம் பற்றிப் பேசுவோம். ஐந்மாத்யதிகரண மென்கிற கீழதிகரணத்தில் பர ப்ரஹ்மத்திற்கு ஜகஜ் ஜன்மாதி காரணத்வம் லக்ஷணமென்று தேறிற்று. இப்படிப் பட்ட லக்ஷணத்தோடு கூடிய பர ப்ரஹ்மமா னது பரத்யக்ஷ பிரமாணத்தினால் தெரிந்து கொள்ளப் படாமற் போனாலும் அநுமாந பிரமாண ஸித்தமாகின்ற அந்த ப்ரஹ்மத்தை வேதாந்த வாக்யங்களினால் விசாரிக்க வேண்டிய அவஸ்யமில்லை என்றொரு ஆக்ஷேபந் தோன்ற, அதற்குப் பரிஹாரமாக இந்த அதிகரணம் அவதரிக்கின்றது. இவ் வதிகரணத்திற்கு ஸூத்ரம் சாஸ்த்ர யோநித்வாத் என்பது-சாஸ்த்ரத்தை யோநியாகக் கொண்டபடியாலே – என்பது ஸுத்ரத்தின் பொருள். யோநியாவது காரணம் ; அறிவதற்குக் காரணம் என்கிற விவஷையினால் இங்கு யோநி சப்தம் ப்ரயோகிக்கப் பட்டிருக்கின்றது. அதாவது – ப்ரமாணம் என்றபடி-சாஸ்த்ரத்தை ப்ரமாணமாகக் கொண்டபடியாலே என்றதாயிற்று-அப்பக்ஷோ வாயுபக்ஷ :* என்னுமிடங்களில் ‘தீர்த்தத்தைக் குடிப்பவன், வாயுவை பக்ஷிப்பவன் என்று சப்தார்த்தமானாலும் “அஸதி பாதகே ஸர்வம் வாக்யம் ஸாவ தாரணம்” என்கிற நியாயத்தினால் ” தீர்த்த மொன்றையே குடிப்பவன், வாயுவை மாத்திரமே பக்ஷிப்பவன் ” என்று பொருள் தேறுவது போல்,இங்கும் ” சாஸ்த்ர மொன்றையே ப்ரமாணமாகக் கொண்ட படியாலே ‘ என்றதாகப் பொருள் தேறும். ஆகவே சாஸ்த்ரமேவ யோநி: ( ப்ரமாணம்) யஸ்ய தத்-சாஸ்தர யோநி; தஸ்ய பாவ:- சாஸ்த்ர யோநித்வம் ; தஸ்மாத்- சாஸ்த்ர யோநித்வாத்”என்று ஸமாஸம் கொள்ளப் பட்டதாயிற்று. பர ப்ரஹ்ம மானது அநுமாநத்தைப் பிரமாணமாகக் கொண்டதாகாமல் சாஸ்த்ர மொன்றையே ப்ரமாணமாகக் கொண்டதாகையினால் அப்படிப்பட்ட (வேதாந்த ) சாஸ்த்ரத்தினால் பர ப்ரஹ்ம விசாரம் செய்ய வேண்டியது அவஸ்யமே என்பதாக ஸுத்ரத்தின் பொருள் முடிந்து நின்றது.

32- இங்குப் பூர்வ பக்ஷம்:-” அப்ராப்தே ஹி சாஸ்த்ரம் அர்த்தவத்” என்பர் சாஸ்த்ர வித்துக்கள். வேறு எந்த ப்ரமாணத்தினாலும் ஏற்படாத விஷயத்தில் தான் சாஸ்த்ரம் ப்ரவர்த்திக்குமென்றும், வேறு ஏதேனுமொரு ப்ரமாணத்தினால் ப்ரஹ்மம் ஸித்தித்து விட்டால் அதில் சாஸ்த்ரம் பிரவர்த்தியாது என்றும் தேறுகின்றது. பர ப்ரஹ்மமோ அநுமாந ப்ரமாணத்தினால் ஸித்திக்கக் கூடியதாக இருக்கின்றது .எங்ஙனே யென்னில்“ பூம் யங்குராதிகம் ஸ கர்த்ருகம்-கார்யத்வாத்; கடவத்” என்பது அநுமாந சரீரம். உலகத்தில் நாம் காண்கிற எல்லாப் பொருள்களும் ஒரு கர்த்தாவை யுடையன் : கர்த்தா வொருவனில்லாமல் எந்தப் பொருளும் உண்டாவதில்லை; வீடு பானை துணி முதலிய எல்லாப் பொருள்களும் ஒரு கர்த்தாவை முன்னிட்டே உண்டானவை யென்பதை அறிகிறோம்.இதனால், கர்த்தா வொருவனில்லாமல் எந்தப் பொருளு முண்டாகா தென்கிற உறுதி தோன்றுகின்றது. உடனே மற்றொன்றும் கவனிக்கிறோம் ; வீட்டைக் கட்டினவனாக ஒரு கர்த்தா நமக்குத் தெரிய வந்தாலும் அந்த வீடு எந்த நிலத்தில் கட்டப்பட்டதோ அந்த நிலத்திற்கு எவன் கர்த்தா என்பது நமக்குத் தெரியவில்லை. வீடு கட்டக் கருவியா யிருக்கின்ற மண் மணல் மரம் முதலிய பொருள்களுக்கும் கர்த்தா இன்னானென்று அறிகின்றிலோம். பானையைச் செய்பவன் குயவனென்று காண்கிறோமானாலும் அந்தப் பானைக்கு உபாதாந காரணமான மண்ணைப் படைத்தவன் இன்னானென்று அறிகின்றிலோம். துணிக்குக் கர்த்தா சேணியனென்று அறிகின்றோமானாலும் அதற்கு உபாதாந காரணமாகிய பஞ்சைப் படைத்தவன் இன்னானென்று அறிகின்றிலோம். ஆனால் கர்த்தா வொருவனில்லாமல் ஒரு காரியப் பொருளு முண்டாகாதாதலால் கீழ்ச் சொன்ன மண் மணல் மரம் முதலிய பொருள்களுக்கும் கர்த்தா வொருவன் இருந்தே தீர வேண்டும்.அவன் தான் ஈஸ்வரனென்பவன்- என்று இவ்விதமாக ஈஸ்வரனை யறிவதானது அநுமான ப்ரமாணத்தினா லறிவதாகும். ஆக, இப்படிப்பட்ட அதுமாந மென்னும் பிரமாணத்தினால் ஈஸ்வரன் ஹித்திக்கவே, இப்படி பிரமாணாந்தர பிராப்தமாய் விட்ட பர ப்ரஹ்மத்தின் விஷயத்தில் சாஸ்த்ர மென்னும் ப்ரமாணம் பரவர்த்திக்க மாட்டாதாதலால் அப்ராப்தேஹி சாஸ்த்ரம் அர்த்தவத்* என்றன்றோ நியமமுள்ளது- வேதாந்த சாஸ்த்ரமானது ஜகஜ் ஜந்மாதி காரண பூதமான ப்ரஹ்மத்தினிடத்திலே ப்ரமாணமாக முடியாதாதலால் அந்த வேதாந்த சாஸ்த்ர விசார ரூபமான ப்ரஹ்ம விசாரம் செய்யத் தக்கதன்று–என்பதாகப் பூர்வ பக்ஷம் பிராப்தமாயிற்று.

33-இதற்கு மேல் ஸித்தாந்தம் வருமாறு ; அநுமானத்தினால் ஒன்றை ஸாதிப்பதானால் அது செவ்வனே ஸித்திக்கக் கூடிய விஷயமன்று.-அநுமானத்தினால் ஈஸ்வரனே ஜகத் கர்த்தாவாக ஸித்திக்க வேணுமென்கிற நியதி யில்லை ; ஏனென்னில்: விஸ்வாமித்ர முனிவர் தவ வலிமையினால் மிகுந்த பெருமை பெற்று நூதந ஜகத் ஸ்ருஷ்டி பண்ணினா ரென்பதை நாம் ஸ்ரீ ராமாயணாதிகளில் வாசிக்கின்றோம். * அத்யமிந்த்ரம் கரிஷ்யாமி * இத்யாதி ஸ்லோகங்கள் பலர் அறிந்தனவே.அம் முனிவர் ஒரு ஜீவ வ்யக்தியே யல்லது ஈஸ்வரனல்லர். இதனால் ஜீவ கோடியிலேயே அதிசயித்த சக்தி படைத்த சிலர்க்கு விசித்ர ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ண ஆற்றலுண்டு என்பது தேறுகிற படியால், கீழே காட்டிய அநுமானத்தினால் ஈஸ்வரனே ஜகஜ் ஜந்மாதி காரண பூதனாக ஸித்திக்க வேணுமென்கிற நிர்ப்பந்த மில்லை. விலக்ஷண சக்தி யுக்தனான சேதநனே ஸ்ருஷ்டி கர்த்தாவாகத் தேறலாமாதலால் அநுமாநம் ஈஸ்வர ஸாதனத்தில் சக்தி யுடையதன்று ; ஆகவே சாஸ்த்ரமே பர ப்ரஹ்ம ஸித்தியில் பிரபல ப்ரமாணமாகக் கடவது. அப்படிப் பட்ட சாஸ்த்ரம் வேதாந்த சாஸ்த்ரமே. அதைக் கொண்டு ப்ரஹ்ம விசாரம் செய்வது நன்றாகப் பொருந்தும் என்றதாயிற்று.

34-இனி நான்காவதான ஸமந்வயாதி கரணம் பற்றிப் பேசுவோம். பர ப்ரஹ்மமானது சாஸ்த்ரம் தவிர வேறொரு பிரமாணத்தினால் பிராப்தமாகக் கூடியதன்று என்றே கொண்டாலும் அந்த ப்ரஹ்மமானது ப்ரவருத்தி நிவ்ருத்திகளுக்கு விஷய மல்லாமையினால் அப்படிப்பட்ட ப்ரஹ்மத்தை ப்ரதிபாதனம் செய்வதில் பலனொன்று மில்லாமையினால் அந்த பரஹ்மத்தினிடத்தில் சாஸ்தரத்திற்கு ப்ராமாண்யம் ஸம்பவிக்க மாட்டாதாதலால் அந்த ப்ரஹ்மம் சாஸ்த்ர ப்ரதிபாதய மாவதற்கு வழி யில்லை என்றொரு ஆக்ஷேபம் தோன்ற,அதற்குப் பரிஹாரமாக இந்த அதிகரணம் அவதரிக்கின்றது. இவ் வதிகரணத்திற்கு ஸூத்ரம் தத் து ஸமந்வயாத் என்பது. இந்த ஸுத்ரத்தில், பரஹ்மண; என்றொரு பதமும் சாஸ்த்ரேண’ என்றொரு பதமும் அத்யாஹாரம் செய்து கொள்ள வேண்டும். (அதாவது, வருவித்துக் கொள்ள வேண்டு மென்றபடி .) தத்- கீழ் ஸுத்ரத்தில் சொல்லப் பட்ட சாஸ்த்ர ப்ரமாணகத்வமானது என்றபடி.-ஸமந்வயாத்– நன்றாகப் புருஷார்த்தமாக அந்வயிக்கிறபடியினால் என்றபடி புருஷார்த் தத்வேந ஸம்பந்தமே ஸமந்வயமாவது. பர ப்ரஹ்மமானது சாஸ்தரத்தினால் புருஷார்த்தமாக பிரதி பாதிக்கப் படுகிறபடியினாலே அந்த ப்ரஹ்மத்திற்கு சாஸ்த்ர ப்ரமாணகத்வம் ஸம்பவிக்கக் குறை யில்லை என்றதாக ஸூத்ரத்தின் பொருள் தேறிற்று.

35-இங்குப் பூர்வபக்ஷம் :- பர ப்ரஹ்மத்தை சாஸ்த்ரம் ப்ரதிபாதிக்க வேண்டுமானால் அது வேறொரு ப்ரமாணத்தினால் அறியப் படாமலிருக்க வேணு மென்பது தவிர மற்றொரு தன்மையும் அதில் இருக்க வேணும். அது என்னென்னில்; தெரிந்து கொள்ள விரும்பக் கூடியதாயிருத்தல் என்கிற தன்மையாம். தெரிந்து கொள்ள வேணு மென்கிற விருப்பம் எந்த வஸ்துவில் உண்டாகின்ற தில்லையோ அந்த வஸ்துவைப் பற்றி சாஸ்த்ரம் ப்ரதி பாதநம் செய்ய மாட்டாதன்றோ. பர ப்ரஹ்மம் இதர ப்ரமாணத்தினால் தெரிந்து கொள்ள முடியாத தென்பதை ஒப்புக் கொள்வோம். தெரிந்து கொள்ள விரும்பக் கூடியதாயிருத்தல் என்கிற தன்மை ப்ரஹ்மத்தினிடத்தில் இருக்க முடியாதே, ஏனென்னில் : தெரிந்து கொள்ள வேணுமென்கிற விருப்பமானது உலகில் ப்ரயோஜநவத்தான விஷயத்தில் தான் உண்டாகும். இஷ்ட ப்ராப்தி அநிஷ்ட பரிஹாரம் என்கிற இரண்டோ இரண்டத்தி லொன்றே உலகில் ப்ரயோஜன மென்னத் தகுந்தது. இஷ்ட ப்ராப்தியானது ப்ர வ்ருத்தியினாலே விளையக் கூடியது. யாக மென்கிற காரியத்தில் ப்ரவ்ருத்தி யுண்டானால் ஸ்வர்க்க மென்கிற இஷ்டம் பிராப்மாகிறது-ப்ரவ்ருத்தியினால் இஷ்ட ப்ராபதியாவது போல், நிவ்ருத்தியினால் அநிஷ்ட பரிஹார முண்டாகிறது. மாம்ஸ பக்ஷண மென்கிற காரி யத்தில் நிவருத்தி யுண்டானால் அநிஷ்ட பரிஹரமுண்டாகிறது-ப்ரக்ருதத்தில், ப்ரஹ்மமானது ப்ரவ்ருத்திக்கோ நிவ்ருத்திக்கோ இலக்கன்றே-வஸ்துவே கண்ணுக்குத் தெரியாமையினால்-ஆகவே ப்ரயோஜநவத்த்வம் சொல்ல முடியாது. ஆதலால், தெரிந்து கொள்ள விரும்பக் கூடியதாயிருத்தல் என்கிற தன்மை பர ப்ரஹ்மத்திற்கு ஸம்பவிக்க முடியாதாகையாலே அந்த ப்ரஹ்மத்தை சாஸ்த்ரம் ப்ரதிபாதிக்க வல்லதல்ல ஆகவே சாஸ்த்ரத்தைக் கொண்டு ப்ரஹ்ம விசாரம் செய்யப் புகுவது ஒவ்வாது – என்று பூர்வ பக்ஷம் பிராப்தமாக –

36-இதன் மேல் சித்தாந்தம் வருமாறு: – பர ப்ரஹ்மத்திற்கு ப்ரயோஜநாந்தாவத்வம் ஸம்பவியாமற் போனாலும், பல பல வேதாந்த வாக்யங்களினால் அது தானே ஸ்வயம் ப்ரயோஜநம்- பரம புருஷார்த்தம் என்று அறிவிக்கப்படுகிறது. “ புத்ரஸ்தே.ஜாத: ( உனக்குப் பிள்ளை பிறந்தது) என்றும், “தவ க்ருஹே நிதிரஸ்தி” (உன் வீட்டில் நிதி யுள்ளது) என்றும் சொன்னால் இந்த வாக்யங்களானவை பரமானந்த ஹேதுவான புத்ர ஜன்மத்தையும் நிதி ஸத் பாவத்தையும் தெரிவிப்பதுபோல வேதாந்த வாக்யங்கள் பரமாநந்த ஹேது பூதமும் பரமாந்த ஸந்தோஹ ஸ்வரூபமுமான பர ப்ரஹ்மத்தை ப்ரதிபாதனம் பண்ணுவது ஸமஞ்ஜஸமே யாகும், அவை அபெளருஷேயங்களாகையாலே புருஷ புத்தி யடியாக வரக் கூடிய ப் ரமப்ரமாத விப்ர லிப்ஸைகள் அங்கு எண்ணத் தகாதவை. ஆகவே பொய் சொல்லி வஞ்சிக்கும் பேச்சுக்களல்ல வேதாந்த சாஸ்த்ரங்கள். அப்படிப் பட்டவற்றைக் கொண்டு ப்ரஹ்ம விசாரம் செய்வது பொருத்தமே யென்றதாயிற்று.இந்த அதிகரணத்தின் ப்ரமேயத்தை யுட்கொண்டு பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தர சதகத்தில்(21) * அத்ராஸ்தே நிதிரிதிவத்…ரங்கேச த்வயி ஸகலாஸ் ஸமந்வயந்தே: என்கிற ஸ்லோகத்தை யருளிச் செய்துள்ளார், அங்கு எம்முடைய வியாக்கியானம் நோக்கத் தக்கது.

அத்ர ஆஸ்தே நிதி இதி வத் புமர்த்த பூதே
சித்த அர்த்தா அபி குண ரூப வ்ருத்த வாதா
ரெங்கேச த்வயி சகலா சமன்வயந்தே ந
உபாஸா பல விதிபி விசேஷ ஏஷாம்–
22-

ஹே ரெங்கேச

சகலா-சமஸ்தமான

குண ரூப வ்ருத்த வாதா–தேவரீருடைய திருக் கல்யாண குணங்கள் -திவ்ய ஆத்ம ஸ்வரூபம் -திவ்ய சேஷ்டிதங்கள் ஆகிய இவற்றைச் சொல்லும் உபநிஷத் பாகங்கள்

சித்த அர்த்தா அபி -கார்ய பரங்கள் இன்றியே சித்த பரங்கள் ஆனாலும்

புமர்த்த பூதே த்வயி–புருஷார்த்த பூதராய் இருக்கிற தேவரீர் இடத்தில்

அத்ர ஆஸ்தே நிதி இதி வத்–இங்கே நிதி இருக்கிறது என்று சொல்லுகிற சித்த பர வாக்கியம் போலே

சமன்வயந்தே –நன்கு பொருந்துகின்றன

ஏஷாம்–கீழ்ச் சொன்ன குண ரூப வ்ருத்த வாதங்களுக்கு

உபாஸா பல விதிபி-உபாசனத்தையும் பலத்தையும் ப்ரதிபாதிக்கின்ற வாக்யங்களினால்

ந விசேஷ–ஒரு அதிசயமும் இல்லை –

பூர்வ மீமாம்சகர் தான் இவற்றை பிரமாணம் என்று கொள்ளாமல் கார்ய பர ஸ்ருதி வாக்யங்களே பிரமாணம் என்பர் –

இவையும் புருஷார்த்த போதகங்களாய்க் கொண்டு உபாசன விதி வாக்கியங்களைப் போலே ஸ்வத பிரமாணங்களே –

ஜிஜ்ஞாஸ அதிகரணம் சமன்வய அதிகரணம் இரண்டாலும் இவை ஸ்தாபிக்கப் படுகின்றன

உனது கல்யாண குணங்களை விவரிக்கும் வேதங்கள் -இங்கு பெரும் புதையல் உள்ளது போன்று–
சித்த வாக்யங்களாக பன்னி உரைக்கும்

இப்படி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரயோஜனங்களான விதி வாக்யங்களுக்கு கார்ய ப்ரதயா ப்ரமண்யம் உண்டானாலும்
சித்த வஸ்து போதகங்களான சித்த வாக்யங்களுக்கு –
நிரதிசய புருஷார்த்த பூதரான தேவரீருடைய
ஸ்வரூபம் ரூபம் குணம் சேஷ்டித வியாபாரங்கள் இவற்றை பிரதிபாதித்து சித்த பரங்களானாலும்
இங்கே நிதி உண்டு என்கிறது போலே
உபாசன தத் பல விதாய வாக்யங்களோடே துல்ய சீலங்களாய்
அதுகளுக்கு சேஷம் அன்றிக்கே பிரமாணம் ஆகிறதுகள் என்கிறார் –

————–

37-கீழ் விளக்கப்பட்ட நான்கு அதிகரணங்களும் நான்கு ஸூத்ரங்கள்.இவையே சதுஸ் ஸூத்ரி யென்று வழங்கப் பெறும்.இவை சாஸ்த்ராரம்பா ஸமர்த்தன பரங்களென்றும், இனி மேல் தான் சாஸ்த்ராரம்பமாகிற தென்றும் நம் ஆசாரியர்களின் கொள்கை. எம்பெருமானார் திருவடிகளிலேயே ஆஸ்ரயித்தவரான ஸோமாசி யாண்டானென்பவர் முதல் ஸுத்ரமொன்று மாத்திரமே சாஸ்த்ராரம்ப ஸமர்த்தந பரமென்றும்(ஐந்மாத்யஸ்ய யத என்கிற) இரண்டாவது ஸுத்ரம் முதற் கொண்டே சாஸ்த்ராரம்பமாய் விட்டதென்றும் அபிப்ராயப்படுகிறார். சதுஸ் ஸூத்ரியும் சாஸ்த்ராரம்ப ஸமர்த்தன பரமென்பதே ஸித்தாந்தமாகக் கொள்ளத் தக்கது. சாரீரக மீமாம்ஸை யென்கிற இந்த சாஸ்த்ரம் ஆரம்பிக்க அவசியமில்லை யென்று கிளர்ந்த சங்கைகள் கீழே நான்கு ஸூத்ரங்களினாலும் பரிஹரிக்கப்பட்டன வென்றதாயிற்று. இனி மேல் ஒவ்வோரதிகரணத்தின் ப்ரமேயத்தையும் நாம் விவரித்துக் கொண்டு போக இச் சிறு நூலில் அவகாசமில்லாமையால் முக்கியமான சில அதிகரணங்களின் ப்ரமேயத்தை மாத்திரம் மூதலித்துக் கொண்டு மண்டூகப் லுதியில் செல்லுவோம்.

38-ஆனந்த மயாதிகரணத்தைப் பற்றிப் பேசுகிறோம்.இவ் வதிகரணமானது முதலத்யாயத்தின் முதற் பாதத்தில் ஆறாவது அதிகரணமாக வுள்ளது. இதற்குக் கீழே ஈக்ஷத் யதிகரணமுள்ளது. அதில் ஐகத் காரண வஸ்துவுக்கு ஸங்கல்ப விசேஷம் ஓதப் பட்டிருத்தலால் அந்த ஸங்கல்பம் கெளண மன்றிக்கே முக்கியமாகவே நிர்வஹிக்கப் பட வேண்டுதலால் அப்படிப் பட்ட ஸங்கல்பத்திற்கு ஆஸ்ரய பூதமான ஐகத் காரண வஸ்து அசேதனமான ப்ரதாநமா யிருக்க முடியாதென்று நிரூபிக்கப் பட்டது. இனி, அசேதந வஸ்து ஜகத் காரணமாக வேண்டா; ஜீவனே ஜகத் காரணமா யிருக்கட்டுமே ; அவனுக்கு ஸங்கல்பமாகிற ஈக்ஷணம் முக்யமானதே ஸம்பவிக்கு மன்றோ வென்று சங்கை யுண்டாக ; அதற்குப் பரிஹாரமாய் இந்த அதிகரணம் அவதரிக்கின்றது. இதற்குத் தலையான ஸுத்ரம் – ஆநந்தமயோப்யாஸாத்” (1-1-13) என்பது.-ஆநந்த மய: அப்யாஸாத் என்று பத விபாகம். இதற்கு மேலுள்ளதான அந்தரதிகரணத்தின் இரண்டாவது ஸூத்ரமான * பேத வ்யபதேசாச் ச அந்யா என்கிற ஸூத்ரத்திலிருந்து அந்ய என்னும் பதமொன்று இங்கே வருவித்துக் கொள்ள வேண்டும். ஆகவே,ஆநந்த மய: அந்ய: அப்யாஸாத் என்றதாயிற்று.ஆநந்த மய :-ஆநந்த மய சப்தத்தினால் குறிக்கப்பட்ட புருஷன், (அந்ய )-ஜீவாதமாவிற் காட்டிலும் வேறு பட்ட பரமாத்மாவே யாகக் கடவன் ; ஏனென்னில் ; அப்யாஸாத்- அளவு கடந்ததாக வோதப் பட்ட ஆனந்த முடைமை யானது துக்க மிஸ்ரனான ஜீவாத்மாவுக்கு இணங்க மாட்டாமல் பரமாத்மாவுக்கே இணங்குமதாகையாலே . என்பது ஸூத்ரத்தின் பொருள் தைத்திரீயோபநிஷத்தில் ஆநந்த வல்லி யென்பது ஒரு பகுதி; அதில் ஆநந்த மய வித்யா ப்ரகரணத்தில் தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஜ்ஞாந மயாத், அந்யோத்தர ஆத்மா ஆநந்த மயா* என்கிற வாக்யத்தினால் ஆநந்த மயனான ஆத்மாவை ப்ரஸ்தாவித்து, அதற்கு மேல் –ஸைஷா ஆநந்தஸ்ய மீமாம்ஸா பவதி என்று தொடங்கி தே யே சதம் ப்ரஜாபதேராநந்த , ஸ ஏகோ ப்ரஹ்மண ஆநந்த, ஸ்ரோத்ரியஸ்ய சாகா மஹதஸ்ய * என்னுமளவாக ஆனந்த மயனான ஆத்மாவுக்குள்ள ஆனந்தத்திற்கு அளவு கூறுமடைவில் (நான்முகனுக்கு யாதொரு ஆனந்தமோ, அதிற் காட்டிலும் நூறு மடங்கு அதிகமான ஆனந்தம் பர ப்ரஹ்மத்திற்கு ஓர் ஆனந்தம்’ என்று சொல்லி *ஸ்ரோத்ரியஸ்யச அகாமஹதஸ்ய * என்கிற வாக்யத்தினால் முக்தனுக்கும் அப்படிப்பட்ட ஆனந்த முடைமை சொல்லிற்று; அகா மஹத னென்றது விஷய விரக்த னென்றபடி. ஸ்ரோத்ரிய னென்றது வேதாந்த ஸ்ரவணம் பண்ணினவனென்றபடி, வேதாந்த ஸ்ரவணம் செய்து ப்ரஹ்ம உபாஸனத்தினால் முக்தி பெற்றவனென்று தேர்ந்த பொருள் நூறு மடங்காகப் பெருக்கப்பட்ட சதுர்முகாநந்தமானது முக்தனுக்கு ஒரு ஆனந்தம் என்று சொல்லிற்றாயிற்று. இங்கு முக்தனுக்குச் சொல்லப்பட்ட ஆனந்தமானது பர ப்ரஹ்மத்தின் உபாஸனத்தினால் விளைவது என்று ஸ்ரோத்ரிய பதத்தினால் சொல்லப் பட்டுள்ளது. ஆகவே முக்த ஆநந்தமானது உபாஸந ப்ரீதனான பகவானுடைய ஸங்கல்பத்தினால் உண்டு பண்ணப்பட்ட தென்னுமிடம் தேறுகின்றது . [முக்தாநந்தம் நிருபாதிகமன்று, ஸோபாதிகம் என்றதாகத் தேறுகிறது.] ஸ ஏகோ ப்ரஹ்மண ஆநந்த என்கிற விடத்திலோ வென்னில், காரண மொன்றும் சொல்லப் பட்டிராமையினால் பர ப்ரஹ்மத்தினுடைய ஆனந்த மானது வேறொருவருடைய ஸங்கல்பாதீமன்றிக்கே இயற்கையான தென்னுமிடம் நன்கு தெரிய வருகிறது. நிருபாதிகமான ஆனந்த முடைமை பர ப்ரஹ்மத்திற்கே யொழிய வேறொருவற்கு மில்லை யென்று தேறுதலால் அப்படிப்பட்ட ஆனந்தமுடைய தாக ஆனந்த மய சப்தத்தினால் நிர்தேசிக்கப் பட்டவஸ்து ஜீவனிற் காட்டிலும் வேறான பர ப்ரஹமமே என்றபடி.

39- தைத்திரீயோபநிஷத்திலுள்ள ஆனந்த வல்லியை (ஆநந்த மய வித்யா’ என்று
வேதாந்திகள் வழங்குவர்.
அந்த வித்யையில் (கோஹ்யேவாந்யாத் க ப்ராண்யாத்,யதேஷ ஆகாச ஆநந்தோ ந ஸ்யாத். ஏஷஹ்யேவாநந்தயாதி என்று ஓதப் பட்டிருக்கின்றது. இதன் பொருளாவது- கீழே சொல்லப்பட்ட ஆகாச சப்த வாஸ்யமான வஸ்துவானது நிருபாதிகமாயும் அபரிச்சிநமா யுமிருக்கிற ஆநந்தத்தை உடைய தல்லாமல் இருக்குமானால்,பிரமன் முதற் கொண்டு எறும்பு வரையிலுள்ள ஐந்து ஸமூஹங்களில், கோ வா அந்யாத்= எந்த ஐந்து தான் ப்ராக்ருதமான ஆனந்தத்தை யடைய முடியும்? கோ வா ப்ராண்யாத்= எந்த ஐந்து தான் மோக்ஷானந்தத்தை யடைய முடியும்? ஏஷ ஏவ ஹி = இந்த ஆனந்த மயனான ஆத்மாவே யன்றோ, ஆநந்தயாதி- ப்ராக்ருதமாயும் அப்ராக்ருத
மாயுமுள்ள எல்லா விதமான ஆனந்தத்தையும் விளைவிக்கின்றது. [ஆநந்த யதி என்கிற சொல் வடிவத்தில் யகாரம் நீண்டிருப்பது சாந்தஸமென்றுணர்க] இங்கே இப்படிச்
சொல்லி யிருப்பதும் தவிர, உத்தர நாராயணாநுவாகத்திலும் —தமேவம் வித்வாந் அம்ருத இஹ பவதி, நாந்ய பந்தா வித்யதே அயநாய * என்பதனாலும் இவ் வர்த்தமே நிலைநாட்டப் பட்டிருக்கின்றது. ஏவம் தம் வித்வாந் – இவ் விதமாக அந்த மஹா புருஷனை உபாஸிப்பவன், அம்ருதோ பவதி- மோக்ஷாநந்தத்தைப் பெற்றவனாகிறான், அயநாய-அந்த மோக்ஷானந்த பராப்தியின் பொருட்டு, அந்யஜ் பந்தா வித்யதே– அந்த மஹா புருஷனைத் தவிர்த்து வேறு உபாய மில்லை. என்பது இந்த ஸ்ருதி வாக்யத்தின் பொருள். ஏஷஹ் யேவாநந்தயாநி என்ற ஸ்ருதி வாக்யத்தில் அந்வயமுகேந தெரிவிக்கப்பட்ட அர்த்தமே நாந்யாபந்தா வித்யதே அயநாய * என்கிற ஸ்ருதி வாக்யத்தில் வ்யதிரேக முகேந தெரிவிக்கப் பட்டிருக்கின்றது என்னுமித்தனையே வாசி-ஆக உபய ஸ்ருதிகளும் ஏகார்த்த மாயிருக்கையினாலே, உத்தர நாராயண அநுவாக வாக்யம் லக்ஷ்மீ பதியையே விஷயமாகக் கொண்டிருப்பது போலவே ஆநந்த மய வித்யையிலும் அப் பெருமானே விஷய பூதன் என்னுமிடம் அறிய வெளிது-இன்னமும், ஆநந்த மய வித்யையில் —ஸ யச்சாயம் புருஷே, யச்சாஸாவாதித்யே. ஸ ஏக ] என்கிற வாக்யத்தினால் ஆனந்த மயனையும் ஆதித்ய மண்டலத்தினுள்ளே யுள்ள புண்டரீகாக்ஷனையும் ஒன்றாகச் சொல்லி யிருப்பதனாலே அந்த புண்டரீகாக்ஷனே ஆநந்த மயன் என்று தேறி நிற்கிறது. ஆக இப்படிப் பட்ட அடையாளங்களினால் ஆநந்த மய வித்யா வேத்யனும் புண்டரீ காக்ஷனுமானவன் பரம புருஷனே யென்று தேறிற்றாகிறது.

40-பூர்வ பக்ஷம்:- ஆனந்த வல்லியில் * [ப்ரஹ்ம விதாப்நோதி பரம்] என்று ப்ரஹ்மத்தை ப்ரஸ்தாவித்து * ஸத்யம் ஜ்ஞாந மநந்தம் ப்ரஹ்ம* என்று அந்த ப்ரஹ்மத்தின லக்ஷணங் கூறி (தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாசஸ் ஸம்பூத.] இத்யாதி வாக்யத்தினால் அந்த ப்ரஹ்மம் ஆத்மா வென்னுமிடத்தையும் அதில் நின்றும் ஆகாசாதி பதார்த்தங்களின் உத்பத்தியையுஞ் சொல்லி, * (தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஜ்ஞாந மயாத். அத்யோந்தர ஆத்மா ஆநந்தமய?] என்ற வளவால் உபக்ராந்தமான ஆத்மோபதேச பரம்பரை யானது ஆனந்த மயனில் ஸமாப்தி செய்யப் பட்டிருக்கிறது. ஆகவே உபக்ரமிக்கப் பட்ட ப்ரஹ்மம் ஆநந்த மயனான ஆத்மாவே என்று நிச்சயிக்கப் படுகிறது. அந்த ஆனந்த மய ஆத்மாவுக்கு (தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா]என்ற உத்தர வாக்யத்தில் சரீர ஸம்பந்தித்வமாகிற சாரீரத்வம் சொல்லப் பட்டிருக்கின்றது . கர்ம பர வசனான ஜீவாத்மாவுக்கே கர்ம பலாநுபவார்த்தமாக சரீர ஸம்பந்தம் ஸம்பவிக்கும் : அகர்ம வச்யனான பரம புருஷனுக்கு அது ஸம்பவிக்க நியாயமில்லை.ஆகவே சரீர ஸம்பந்த முடையவனாக ஓதப்பட்ட இந்த ஆனந்த மயனான ஆத்மா ஜீவாத்மா வென்றே நிச்சயிக்கலாகிறது.

41-என்கிற பூர்வ பக்ஷத்தின் மேல் ஸித்தாந்தம். நிருபாதிகமான ஆனந்த
முடைமை முதலிய குணங்கள் ஜீவாத்மாவுக்கு ஸம்பவிக்க மாட்டாவாகையாலும், சகல சராசரங்களையும் சரீரமாகக் கொண்டவனாக வோதப்படுகின்ற பரமாத்மாவுக்கு அப்படிப்பட்ட ஸகல சரீரகத்வமாகிற சாரீரத்வம் நன்றாக ஸம்பவிக்கக் கூடியதாதலால் நிருபாதிக ஆனந்த சாலியாகக் கடவன். ஆதந்த மய: என்ற விடத்திலுள்ள மயட் ப்ரத்யயத்திற்கு விகாரம் அர்த்தமாகையாலே விகார மற்றவனான பரமாத்மாவுக்கு ஆநந்த விகாரத்வம் பொருந்த மாட்டாதென்கிற வாதமும் அநுபபநம் ; மயட்டுக்கு விகாரமே அர்த்தம் என்கிற நிர்ப்பந்தமில்லை : “அந்ந மயோ யஜ்ஞ ” என்று சொன்னால் அந்ந விகாரமென்று பொருளன்றே; இங்கு மயட்டுக்கு ப்ராசுர்யமன்றோ பொருள். (ப்ராசுயமாவது – மலிவு) அன்னம் மலிந்த வேள்வி என்பது தானே பொருளாகிறது. இப்படியே இங்கும் ஆனந்தம் மலிந்தவன் பரமாத்மா ‘ என்றே பொருள் படக் குறை யில்லாமையாலே விகார வாதம் அப்ரஸக்தம். அடுத்தபடியாக * யதோ வாசோ நிவர்த்தந்தே, அப்ராப்ய மநஸா ஸஹ, ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந், நபிபேதி குதச்சந*என்று வாக்குக்கும் நெஞ்சுக்கு மெட்டாதபடி அப்ரமேயமான ஆனந்த முடையனாக வோதப்பட்ட பரமாத்மாவினிடத்திலேயே யன்றோ மலிந்த ஆனந்தமுடைமை தேறக் கூடியது

42-இதற்கு மேல் ஒரு வாதம் தோன்றக் கூடும்; ஆநந்த பிராசுர்யமாவது ஆனந்தத்தினுடைய ஆதிக்யமே யாகும். ஆனந்தம் அதிகமென்று சொன்னால் ஆநந்த ப்ரதி கோடியான துக்கம் சிறிது உண்டென்று தோன்றியே தீருமல்லவா? (ஆதிக்யமென்பது ப்ரதி யோகியை -அபேக்ஷித்திருக்குமகையாலே எதைக் காட்டிலும் அதிகமென்று சொல்லியாக வேண்டுமாகையாலே ஆனந்த மயன் என்றும் கொள்ளப்பட்ட பரம புருஷனிடத்தில் துக்க ஸம்பந்தம் இசையப் பட்டதாகவே யாயிற்று- என்றபடி)ஏவஞ்ச,அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாக மென்னப்படுகிற பர ப்ரஹ்மத்தினிடத்தில் சிறிதளவு கூட ஹே ஸம்பந்தம் ஸம்பவிக்க மாட்டாதாகையாலே, பிரசுராநந்த சாலித்வமென்று பரிஷ்கரிக்கப்பட்ட ஆநந்த மயத்வமும் அங்குச் சொல்லுவதற்கில்லை என்பதாக.- இதுவும் பிசகு. அந்த ஆனந்த ப்ராசுர்யத்தை விவரிக்கப் புகுந்த * ஸைஷா ஆநந்தஸ்ய மீமாம்ஸா பவதி * இத்யாதியான ஆநந்த மீமாம்ஸையில் *தே யே சதம் ப்ரஜாபதே ராநந்தா * என்கிற வளவாக ப்ரஸ்தாவிக்கப்பட்ட சதுர்முக பர்யந்த ஸகல ஜீவர்களின் ஆனந்தத்திற் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாயிருக்கையாகிற ப்ராசுர்யமே ஆநந்தமய சப்தத்தினால் விவக்ஷிதமாக விவரித்திருக்கையாலே ப்ரஸ்துதனான ஆநந்த மய ஆத்மாவில் ஆநந்த மயனென்கிற சொல்லிலிருந்து துக்க ஸம்பந்தம் ப்ரஸங்கிக்க விரகில்லை.

43-இவ் விடத்தில் ப்ராஸங்கிகமாக வொரு விஷயம் எழுத வேண்டியதாகிறது. மேலே அநுவதிக்கப்பட்டதொரு ஆஷேபத்தைப் பரிஹரிக்கையில் பரம புருஷனுக்கு ஸ்வல்ப துக்க ஸம்பந்தமும் கிடையாதென்று இங்கே நிர்வஹித்து விட்டு, அந்தப் பரம் புருஷனுடைய தயை யென்னும் குணத்தை நிரூபணம் செய்யுமிடத்து எம்பெருமான் அடியார்களின் துக்கத்தை யநுஸந்தித்துத் தானும் துக்கிப்பது தான் தயாளுத்வமென்று ஸ்வாமி பாஷ்யகாரரே அருளிச் செய்ததாகக் காணப் படுகிறதே; இது எப்படி பொருந்தும்? எம்பெருமானிடத்தில் துக்கமுமுண்டு என்று இசைந்தால் ஆநந்த மயத்வம் கொள்வதற்கு இடமில்லாமலன்றோ இருக்கிறது – என்பதாக ஒரு சங்கை தோன்றக் கூடியதுண்டு. இதற்குப் பரிஹாரம் தெரிந்து கொள்ள வேண்டியது வேதாந்திகளுக்கு மிக அவசியமே. இப்படியொரு சங்கை தோன்று மென்று ஸ்வாமி பாஷ்யகாரர் தாம திருவுள்ளம் பற்றி இவ் வதிகரண ஸ்ரீபாஷ்யத்தில் சில பங்க்திகளை யருளிச் செய்திருக்கிறார்; அவற்றை அநுவதித்துக் காட்டிப் பொருளும் விவரித்துத் தெளிவு பிறப்பிக்கின்றோம். இவ் வதிகரணத்தில் இரண்டாவது ஸூத்ரம் விகார சப்தாந் நேதி சேந் ந ப்ராசுர்யாத்- என்பது. இந்த ஸுத்ரத்தின் ஸ்ரீ பாஷ்யத்தில் மேல் வரும் ஸ்ரீ ஸுக்திகளின் தாற்பரிய மென்ன வென்றால்; பர ப்ரஹ்மத்தினிடத்தில் ஆனந்தம் அதிகமாக இருக்கிறது என்று சொல்வதனால் சிறிது துக்க மிருப்பதாகச் சொன்னதாகிறது என்கிற வாதம் பிசகு. ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தம். அபரிமிதம் என்றால் இவனுடைய ஆனந்தம் பரிமிதம் என்று இவ்வளவு தான் ஏற்படுமே யொழிய ப்ரமத்தினிடத்தில் ஸ்வல்ப துக்க மிருக்கிறது என்றும் சொன்னதாகத் தேறுவதற்கு வழியே யில்லை. துக்கம் இருக்கிறதோ இல்லையோ அது வேறு பரமாணத்தினால் ஏற்பட வேண்டுமே யொழிய ஆநந்த ப்ராசுர்யத்தைத் தெரிவிக்கிற ஆநந்த மய பதத்தினால் அது ஏற்படாது. ஆனந்தத்திற்கு ப்ரதி கோடியான வஸ்து ப்ரஹ்மத்தினிடத்தில் இல்லை யென்பது * அபஹதபாப்மா * இத்யாதியான வேறு ஸ்ருதியினால் தெரிய வருகிறது. அதைப் பற்றி இங்கென்ன ? இங்குத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இவ்வளவே- பர ப்ரஹ்மத்தின் ஆனந்தம் அளவு கடந்ததென்றால் மற்றை யோருடைய ஆனந்தம் இப்படியல்லாமல் அற்பமானது என்பதே தேறி நிற்கும்; அது ஆனந்த வல்லியில் ஸ்பஷ்டமாகவே தெரிவிக்கப்படுகிறது.- என்பதாக-இங்கு ஸ்வாமி * அபஹதபாப்மா என்கிற ஸ்ருதி வாக்கியத்தை யெடுத்துக் காட்டி யுள்ளார். அதன் கருத்தை ஸ்ருத ப்ரசாசிகாசார்யர் நன்கு விவரித்துள்ளார். அதை உப நிஷத் பாஷ்யகாரரான ரங்கராமநுஜ ஸ்வாமி, சாந்தோக்ய உபநிஷத்தில் * அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோக : * என்னுமிடத்துத் தம்முடைய பாஷயத்தில் விளக்கி யுள்ளார்.-இவரது ஸ்ரீ ஸூக்திகளின் தாத்பர்ய ஸாரமாவது – பரமாத்மாவை அபஹத பாப்மா வென்று சொல்லுவதன் கருத்து பாபம் செய்யாதவனென்பதல்ல; பாபம் செய்தாலுங் கூட அதன் பலனாக ஹேய ஸ்பர்சமுண்டாகப் பெறாதவனென்றபடி, பாபத்தைச் சொன்னது புண்யத்தையும் சொன்னபடியே. பகவான் புண்ய பாபங்களைச் செய்தாலுங்கூட அவற்றின் பலன்கள் தன் மீது ஸம்பந்திக்கப் பெறாதவன் என்பதே இங்கு விவக்ஷிதம். பாபம் செய்தால் அதன் பலன் ஸம்பந்திக்காமல் எப்படி யிருக்குமென்று கேட்கலாகாது: அது தான் பகவானுடைய விலக்ஷணமான வொரு தன்மை என்பதாம். நம் போல்வார் பாபம் செய்தால் ஹேய ஸம்பந்தமுண்டாகியே தீருகிறது. பகவானுக்கோ அப்படியில்லை. நாம் செய்கிற கருமங்கள் போன்ற கருமங்களைப் பகவானும் செய்வதுண்டு ; செய்தாலும் அதனால் அவனுக்கு ஹேய ஸம்பந்த முண்டாவதில்லை. காரணமான கர்மமிருந்தால் கார்யமான ஹேய ஸம்பந்தமில்லாமற் போகுமோவென்று சங்கிக்கக் கூடாது; இதுதான் பகவானுடைய விலக்ஷணமான வைபவம் – என்று இவ்வளவும் உபநிஷத் பாஷ்யகாரருடைய நிரூபணங்கள். இவ் விஷயத்திற்கு அந்தரதிகரண ஸ்ருத ப்ரகாசிகையையும் ஸம்வாதமாக எடுத்துக் காட்டியுள்ளார். அபஹதபாப்மா என்பது எந்த வாக்யத்திலிருக்கிறதோ அதே வாக்கியத்தில் தான் விசோக : என்பதுமிருக்கிறது. அங்கும் இதே நியாயமாகத் தான் அர்த்தமாகும். சோக முண்டானாலும் இதனால் ஹேய ஸம்பந்த முண்டாகப் பெறாதவன் என்றபடி. ஹேயமான சோகமன்றிக்கே கல்யாண குணங்களிற் சிறந்ததான சோகத்தை யுடையவன் என்றதாகத் தேறும். எப்படியானாலென்ன? சோகமுள்ளதாக ஒப்புக் கொண்டு விட்டால் அது ஆநந்த மயத்வத்திற்குக் கொத்தை தானே என்கிற விந்த வாதத்தையே சிலர் செய்து கொண்டிருக்கலாம். அவர்கள், மேலே யெடுத்துக் காட்டிய உபநிஷத் பாஷ்ய பங்க்திகளில் “ஈஸ்வரேண க்ருதாநி புண்ய பாப ஸஜாதீயாதி கர்மாணி” “க்ருதேபிபாபே” என்றுள்ள ஸ்ரீ ஸக்திகளின் மேலும் ஓயாது சோத்யங்களைச் செய்து கொண்டிருக்கலாமத்தனை. இதைப் பற்றின விரிவு இங்கு இவ்வளவு போதும்.

44-இனி இரண்டாமத்யாயத்தின் தொடக்கத்திலுள்ள ஸ்ம்ருத் யதிகரணத்தின்-ஸ்ம்ருத்ய நவகாச தோஷ ப்ரஸங்க இதி சேத் (2-1-1.) என்பது ஸூத்ரம். கீழ் முதலத்யாயத்தில் வேதாந்த பிரதி பாதிதமான ஜகத் காரண வஸ்து சேதநாசேதந விலக்ஷணமான பர ப்ரஹ்மமென்று அறுதியிடப் பட்டது. பர ப்ரஹ்மம் ஜகத் காரணமென்கிற பக்ஷத்தில் எத்தனை வகையான தோஷ சங்கைகள் தோன்றக் கூடுமோ அவற்றை யெல்லாம் எடுத்துக் கழிப்பதற்காக இரண்டாமத்யாயம் ஆரம்பிக்கப்படுகிறது. உலகில் ஓரிடத்தில் பெரிய கம்பமொன்றை நடுகிற வர்கள் நட்டு விட்டு அதை ஆட்டிப் பார்ப்பது வழ்க்கம். எதற்காக வென்னில், அது அவிசால்யமாக வேணு மென்பதற்காகவே. அது போலவே இங்கும் கொள்க. முன்னத்யாயத்தில் பர ப்ரஹ்மத்திற்குச் சொன்ன ஜகத் காரணத்வம் இவ் வத்யாயத்தில் நன்கு த்ருடீகரிக்கப்படுகிற தென்ற தாயிற்று. இதில் முதற் பாதத்தில் ஸாங்க்யர் முதலானவர்களால் கிளப்பப்படும் தோஷங்கள் பரிஹரிக்கப் படுகின்றன. முன்னத்யாயத்தில் நிரீஸ்வர ஸாங்க்யர்களும் ஸேஸ்வர ஸாங்யர்களும் நிரஸிக்கப்பட்டனர். அதில் நிரீஸ்வர ஸாங்க்யன் கபில ஸ்மருதி விரோதத்தைக் காட்டி ப்ரஹ்மம் ஐகத் காரணமன்றென்று வாதிப்ப தொன்றுண்டு; அந்த வாதத்தை நிராகரிக்க இவ்வதிகரணம் எழுகின்றது. ஸ்ம்ருத்ய நவகாச தோஷ ப்ரஸங்க இதி சேத்-சேதநாசேதந விலண மான ப்ரஹ்மம் ஐகத் காரண மென்று கொண்டால், ப்ரதாநாம் காரணமென்று சொல்லுகிற கபில ஸ்ம்ருதி அப்ரமாணமாய் விடுமே யென்னில்; நீ – அப்படி சொல்லக் கூடாது: அந்ய ம்ருத்ய நவகாச தோஷ ப்ரஸங்காத்- ப்ரஹ்ம காரணத்வத்தைச் சொல்லுகிற மற்ற ஸ்ம்ருதிகள் அப்ரமாணமாய் விடுமாதலால்- என்பது ஸூத்ரத்தின் பொருள். தங்கள் யோக மஹிமையினால் பராவர தத்வங்களை உள்ளபடி ஸாக்ஷாத் கரித்தவர்களான மநு பராசராதி மஹர்ஷிகளின் ஸ்மருதிகளை யெல்லாம் அப்ரமாணமாக்குவதிற் காட்டிலும் கபில ஸ்மருதி யொன்றை அப்ரமாணமாக்குவது தான் யுக்தம் என்பது கருத்து.இங்கே பூர்வ பக்ஷம் வருமாறு *ஸதேவ ஸேம்ய இதமக்ர ஆஸீத் என்பது முதலான வேதாந்த வாக்யங்களுக்கு ஸ்வதந்தர ப்ரதாந் காரணத்வத்தில் தாத்பரியமா? அல்லது சேதநாசேதந விலக்ஷண் ப்ரஹ்ம் காரணத்வத்தில் தாத்பர்யமா? என்று ஸந்தேஹம் வந்தால், வேதாந்த வாக்ய தாத்பரியத்தை நிர்ணயிப்பதற் கென்றே தோன்றிய கபில ஸ்மிருதியை யநுஸரித்துத் தான் தாத்பர்ய நிர்ணயம் செய்ய வேண்டும் : இல்லையாகில் அந்த ஸ்ம்ருதிக்கு ஸர்வாத்மநா அப்ராமாண்யம் சொல்ல வேண்டி வரும். அப்படிச் சொல்லு வதற்கில்லை; வேதாந்தங்களில் ஆப்தராகச் சொல்லப் பட்டிருக்கின்ற கபில மஹர்ஷி அயதார்த்த வக்தாவாக இருக்க முடியாதாகையாலே அவரியற்றிய ஸ்மருதிக்கு அப்ராமாண்யம் சொல்லவே முடியாது.ஆனால் ப்ரஹ்ம காரணத்வத்தைச் சொல்லுகின்ற மநு ஸ்ம்ருதி முதலானவற்றுக்கு மாத்திரம் அப்ராமாணயம் சொல்லி விடலாமோ வென்று கேட்கக் கூடும். கர்ம காண்டத்தில் சொல்லப்பட்ட கருமங்களையும் மந்வாதி ஸ்ம்ருதிகள் விசதீகரிப்பன வாதலால் அந்த அம்சத்திலே அவற்றுக்கு ப்ராமாண்யம் கொள்ள இடமுள்ளது.ஆகவே அவற்றுக்கு ஸர்வாத்மநா அப்ராமாண்யமில்லை: கபில ஸ்மருதியோ வென்னில், கர்ம காண்டத்தில் அடியோடு ப்ரவேசியாமல் ஜ்ஞாந காண்டத்தில் சொல்லப்பட்ட தத்துவங்களை விசதீகரிப்பதற்கென்றே தோன்றின தாகையாலே அதற்கு விருத்தமான ப்ரஹ்ம காரணத்வத்தைக் கொள்ளுமளவில் ப்ரதாந காரணத்வத்தைக் கூறுகின்ற அந்த கபில ஸ்ம்ருதிக்கு வேறு விஷயமில்லாமையாலே ஸர்வாத்மநா அப்ராமாணயம் வந்து தீரும். ஆகையாலே அதற்கு ஒருவாறு ப்ராமாண்யம் கொள்ளுவதற்காகவும் நிரவகாசத்வ ஆபத்தியைப் பரிஹரிப்பதற்காகவும் அது சொன்ன பரதான காரணத்வத்தில் தான் வேதாந்தங்களுக்குத் தாத்பர்யம் கொள்ள வேணும்.

45-என்கிற இந்த பூர்வ பக்ஷத்தின் மேல் ஸித்தாந்தம் வருமாறு : கபில ஸ்ம்ருதி யானது வேதாந்த வாக்யங்களின் தாத்பர்ய நிர்ணயத்திற் கென்றே தோன்றினதாகையாலே அதை யநு வரித்தே வேதாந்த தாத்பர்ய மறுதியிட வேணுமென்பது யுக்த மென்றாலும், தங்களுடைய யோக மஹிமையினால் பராவர தத்வங்களை உள்ள படி ஸாக்ஷாத் கரித்தவர்களான மநு மஹர்ஷி, பராசர மஹர்ஷி முதலான பல மஹர்ஷிகளி இயற்றிய ஸ்மருதிகளை உபேக்ஷிப்பது தகாது. ஒரு கபில மகர்ஷியின் உக்தியைக் கொண்டு பல மஹா யோகிகளின் உக்திகளை உபமர்திப்பது யுக்தமாகாது. கபில ஸ்ம்ருதிக்கும் மந்வாதிகளின் ஸ்மருதிகளுக்கும் பரஸ்பர விரோதம் நேர்ந்தால் மந்வாதி ஸ்மருதிகள் பலிஷ்டங்களாகையாலே அவற்றோடு முரண் படுகின்ற கபில ஸ்மருதிக்கு ப்ராந்தி மூலகத்வ நிர்ணயம் பண்ணுவதே பொருத்த மானது. மந்வாதி ஸ்மருதிகளில் பர பிரஹ்மத்திற்குத் தான் ஜகத் காரணத்வம் ஸ்பஷ்டமாகச் சொல்லப் பட்டிருக்கிறது. ஆகவே கபில ஸ்மிருதியைத் தள்ளி மநு பராசராதி ஸுக்திகளின் படியே ப்ரஹ்மமே ஜகத் காரணமென்று கொள்வது தான் யுக்தம். *ருஷிம் ப்ரஸூதம் கபிலம் என்று கபிலரை ஆப்தராகச் சொல்லி யிருக்கையாலே அவருடைய உக்தியைத் தழுவியேயாக வேணுமென்றதும் அஸங்கதம். ஸ்ருதி ஸ்மிருதிகளில் ப்ருஹஸ்பதியையும் கொண்டாடி யிருப்பதைக் காண்கிறோம். அவ்வளவால் அவரியற்றிய லோகாயதத்தைக் கொண்டு ஸ்ருதியின் பொருளை நிர்ணயிப்பாருண்டோ? இல்லையே.

46-இனி, கருத்ஸ்ந ப்ரஸக்தி யதிகரணத்தின் ப்ரமேயம் விளக்கப் படுகிறது – ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத்* என்பது ஸித்தாந்த ஸூத்ரம். ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்னும் வாதத்தில் ப்ரஹ்மமே ஜகத்தாகப் பரிணமிப்பதாய்த் தேறுகிறது. ப்ரஹ்மமோ நிரவயவமானது ; அது ஜகத்தாகப் பரிணமிக்கும் போது ப்ரஹ்மம் முழுவதுமே காரியப் பொருளாகப் பரிணமிக்க வேண்டியதாகிறது. ஏக தேசேந பரிணமிக்கிற தென்னும் பக்ஷத்தில் ப்ரஹ்மம் நிரவயவமென்று சொல்லுகிற ஸ்ருதி விரோதிக்கும். ஆகையாலே ப்ரஹ்மம் ஜகத் காரணமாக வொண்ணாது- என்கிற பூர்வ பக்ஷமே முந்தின ஸுத்ரத்தின் பொருள். (இதைச் சிறிது விவரிப்போம்.) கீழே உப ஸம்ஹாராதிகரணத்தில் ஷீர த்ருஷ்டாந்தம் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஷீர த்ருஷ்டாந்தம் பொருந்தாது. ஷீரம் ஸாவயவமாகையாலே அது போல ப்ரஹ் மமும் ஸாவயவமென்ன வேணும். அப்படி கொண்டால் நிரவயவத்வ ஸ்ருதி கோபிக்கும்; நிரவயவமாகில் ப்ரஹ்மம் க்ருத்ஸ்ந பாகத்தாலும் பரிணாம மடைந்ததாக வேணும். ஆகட்டுமே யென்னில், க்ருத்ஸ்சமமும் ஒரு காரயப் பொருளாகப் பரிணமித்த போது மற்றொரு காரியப் பொருளாகப் பரிணமிக்க ப்ரஸக்தி யில்லை. ஆகையாலே ப்ரஹ்ம காரணத்வ வாதம் ஒவ்வாது -என்பதாகப் பூர்வ பக்ஷம்.

47-இதன் மேல் ஸித்தாந்த முணர்த்தும் ஸுத்ரம்-ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத்*என்பது. து சப்தம் பூர்வ பக்ஷத்தை வ்யாவர்த்திப்பிக்க வந்தது. ப்ரஹ்மம் நிரவயவமென்பதும், அது கார்யப் பொருளாகப் பரிணமிக்கிற தென்பதும் ஆகிய இரண்டும் ஸ்ருதி ஸித்தமான அர்த்தங்கள். ப்ரஹ்மமோ சப்த ப்ரமாண மொன்றினாலேயே அறியப் படுமது : ஆகையாலே கீழே தோன்றின பூர்வ பக்ஷம் யுக்தமன்று என்பதாக ஸுத்ரார்த்தம். இதைச் சிறிது விவரிப்போம். ஸா வயவமான வஸ்து தான் ஏக தேசத்தாலே பரிணமிக்க முடியு மென்றும்,நிரவயவமான வஸ்துவானது அப்படி ஏக தேசத்தாலே பரிணமிக்க மாட்டாமல் கருத்ஸ்நாம்சத்தாலும் பரிணமித்தாக வேணுமென்றும் ஒரு நியதி சொல்லுவதானது லௌகிக பதார்த்த திருஷ்டியினால் தானே. இப்படி யொரு வ்யாப்தி கல்பிக்க வேணுமானால் பர ப்ரஹ் ம்ம் தவிர மற்ற வஸ்துக்களில் மாத்திரமே கல்பிக்கலாம் . ப்ரஹ்மத்தினிடத்திலும் இந்த வ்யாபதி கொள்ள அவசிய மில்லை. ஏனென்னில், ப்ரஹ்மத்தை நாம் சாஸ்த்ரங் கொண்டே அறிகிறோம். அந்த சாஸ்த்ரமானது ப்ரஹ்மத்திற்கு நிரவயவத்வத்தையும் பஹு பவநத்தையும் (அதாவது, நாநா வஸ்துக்களாகப் பரிணமிப்பதையும்] ஓதி யிருக்கின்றது. அது பிரஹ்மத்தினுடைய அநிர்வசநீயமான சக்தி விசேஷத்தைப் பொறுத்தது. அத்புத சக்தி யுக்தமான ப்ரஹ்மத்தினிடத்திலே நாம் லௌகிக வஸ்து த்ருஷ்ட்யா சோத்யம் செய்வது தகாது. ஒன்று பாருங்கள். கண்ணுடையவன் தான் காணமுடியும், காதுடையவன் தான் கேட்கமுடி யும் ; கண்ணிலாதான் காண்கில்லான் ; செவியிலாதான் கேட்ககில்லான்- என்று ஒரு வ்யாப்தி சொல்ல நினைத்தால் பர ப்ரஹ்மந் தவிர மற்ற பேர்களிடத்தில் தானே இப்படிச் சொல்ல முடியும் பரம புருஷனிடத்திலே இந்த வயாப்தி பயன் பெறாதன்றோ. ஆகவே உலகில் காணும் நியாயத்தைக் கொண்டு ப்ரஹ்மத்தினிடத்தில் சோத்யம் செய்வது கூடாது.

48-வேதாந்திகள் இங்கு விசேஷித்துக் குறிக்கொள்ள வேண்டிய விஷயமுண்டு: ப்ர ப்ரஹ்மத்திற்கு ஜகதாத்மநா பரிணாமம் போலவே ப்ரதி வஸ்து பூர்ணத்வமும் ஸ்ருதி ஸித்தமா யிருக்கின்றது.நிரவயவமான ப்ரஹ்மம் வஸ்து தோறும் எங்ஙனே பரிஸமாய வர்த்திக்க முடியும்? என்று சிலர் சோத்யம் செய்வதுண்டு. அந்த சோத்யமும் ” ஸ்ருதேஸ்து சப்த மூலத்வாத்” என்கிற இந்த ஸூத்ரத்தினால் சிக்ஷிக்கப் பட்ட ந்யாயத்தினாலேயே மடிந்தொழிகின்றது. இவ் விஷயத்தை ஸ்ரீமத் வேதாந்த தேசிகன் ந்யாய ஸித்தாஞ்ஜநத்தில் வெகு சதுரமாக அருளிச் செய்து முடித்திருக்கிறார். அப்படி யிருந்தும் இதில் இன்னமும் சிலர் தெளிவு பெறாமல் கலங்கி யிருக்கிறார்கள். பகவான் ஒரு வஸ்துவிலே பரி ஸமாப்ய வர்த்தித்து விட்டால் அவ்வளவோடு பகவான் உப ஷீணனாய் விடுகிறபடியால் மற்றொரு பொருளில் வியாபிக்க எப்படி முடியுமென்று இந்த சோத்யத்தையே திருப்பித் திருப்பிச் செய்து கொண்டு காலங் கழிக்கிறார்கள். அந்தோ! அன்னவர்கள் * ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் * என்கிற ஸூத்ரம் என்ன சிக்ஷிக் கிறதென்பதையும் இந்த ஸூத்ரத்தின் ஸ்ரீபாஷ்யத்தில் ஸ்வாமி என்ன அருளிச் செய்கிற
ரென்பதையும் சிறிதும் நோக்க மாட்டிற்றிலர். – ஸ்ரீபாஷ்யஸுக்தியைப் பற்றின விரிவுகளை
நம்முடைய ப்ரஹ்ம வ்யாப்தி பரிஷ்க்ரியா, அத்புத சக்தி முதலான கிரந்தங்களிலே காண்க.

49-இனி, ப்ரயோஜநவத்த்வாதி கரணத்தின் ப்ரமேயம் பற்றிப் பேசுவோம். கீழே விவரித்த அதிகரணத்திற்கு அடுத்த அதிகரணமே இது. பரம புருஷன் ஸர்வ சக்தி யுக்தனாகையாலும் ஸத்ய ஸங்கல்பனாகையாலும் அவன் ஸங்கல்ப மாத்ரத்தாலே ஜகத்தை ஸ்ருஷ்டிப்பதாகச் சொல்லப்படுகிற விஷயம் ஸம்பாவிதமன்று; ஏனென்னில்; ப்ரஹ்மம் ஜகத்தை ஸ்ருஷ்டிக்கும் போது ஏதேனுமொரு ப்ரயோஜனம் இருந்து தீர வேண்டும். உலகில் ஒருவன் ஒரு காரியத்தைச் செய்யும் போது நிஷ் ப்ரயோஜ மாகச் செய்ய மாட்டான். பரயோஜன மென்பது தன்னையுஞ் சேரும், பிறரையும் சேரும். ப்ரக்ருதத்தில் அவாப்த ஸமஸ்த காமனான பகவானுக்கு ஸ்ருஷ்டியினால் ஒரு ப்ரயோஜநமும் உண்டாக விரகில்லை.உண்டாகுமாகில் அவனை அவாப்த ஸமஸ்த காமனென்னப் போகாது. ஸ்ருஷ்டியினால் பகவானுக்கு ப்ரயோஜனமில்லை யாகிலும் நம் போன்ற ஜீவர்களுக்கு ப்ரயோஜனமாகிற தென்னவும் இடமில்லை. ஆத்யாத்மிகாதி துக்கங்களுக்கே ஹேதுவாகின்ற ஸ்ருஷ்டியானது ஜீவர்களுக்கு ப்ரயோஜநப்பட விரகில்லை யன்றோ. பகவானுக்குப் பஷபாதித்வம் நிர்தயத்வமாகிற தோஷங்களை சங்கிக்கச் செய்வதாயு முள்ளது ஜகத் ஸருஷ்டி. ஆகவே பகவான் ஸ்ருஷ்டி கர்த்தாவாக இருக்க முடியாதென்று பூர்வ பக்ஷம் செய்வதாக வுள்ளது இவ் வதிகரணத்தில் முதல் ஸூத்ரம் ந ப்ரயோஜநவத்த்வாத்* என்பது :இங்கு ஸ்ருஷ்டே: என்றொரு பதம் வருவித்துக் கொள்ள வேணும். ஸ்ருஷ்டியானது ப்ரயோஜனத்தோடு கூடியிருக்க வேண்டியதாகையாலே ப்ரஹ்மம் ஸ்ருஷ்டி கர்த்தாவாக இருக்க முடியாதென்று ஸூத்ரத்திற்குப் பொருள். இதன் மேல் ஸித்தாந்த ஸூத்ரம் லோகவத் து லீலா கைவல்யம் * என்பது. உலகில் ஸார்வ பௌமனாயிருக்கு மோரரசன் பிரயோஜநாந்தர மொன்றையும் கணிசியாமலே ‘லீலை யாகவே பந்து விளையாடல் முதலியன செய்யக் காணா நின்றோம். அதனால் அவனுடைய அவாப்த ஸமஸ்த காமத்வத்திற்குக் கொத்தை யொன்றுமில்லை. அது போலவே பரம புருஷனும் லீலார்த்தமாகவே ஜகத் ஸ்ருஷ்டி பண்ணக் குறையில்லை யென்றபடி, மன் பல்லுயிர்களுமாகிப் பல பல மாய மயக்குக்களால், இன்புறுமிவ் விளையாட்டுடையான் * என்று நம்மாழ்வாரும், நாட்டைப் படை யென்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் * என்று ஆண்டாளு மருளிச் செய்தவை இங்கே அநுஸந்தேயம். விஷம ஸ்ருஷ்டி காண்பதனாலே பகவானுக்குப் பக்ஷ பாதித்வமும் நிர்தயத்வமும் சங்கிக்க நேர்கின்றதே யென்னில், அந்த சங்கை * வைஷம்ய நைர்க்குண்யே ந ஸாபேக்ஷத்வாத் ததா ஹி தர்சயதி என்கிற அடுத்த ஸூத்ரத்தினால் பரிஹரிக்கப் படுகிறது . அந்தந்த ஜீவர்கள் செய்த கருமங்களுக்குத் தக்கபடி நீசோச்ச ஸ்ருஷ்டிகள் ஏற்படுகிறபடியாலே பரம புருஷனுக்கு வைஷம்யமோ நைர்க்ருண்யமோ ப்ரஸங்கிக்க மாட்டாதென்றபடி. இதன் மேலும் தோன்றுகிற சங்கைக்கு அடுத்த ஸுத்ரம் பரிஹார முணர்த்துகின்றமை கண்டு கொள்வது.

50-இனி இரண்டாமத்யாயத்தின் இரண்டாவது பாதத்தில் ஸர்வதாநுபபத்தி யதிகரணத்தின் ப்ரமேயம் நிரூபிக்கப் படுகிறது . ஸர்வ சூந்ய வவாதிகளான பௌத்த ஏகதேசிகளின் பக்ஷம் இங்கு நிரஸிக்கப்படுகிறது. பர ப்ரஹ்மமே ஜகத் காரண மென்று நன்கு நிலை நாட்டத் தோன்றிய இந்த அத்யாயத்தில் ஸர்வ சூந்யத்வ வாதத்தை நிரஸிக்க என்ன ப்ரஸக்தி யென்று சிலர் நினைக்கக் கூடும் ஜகத் காரண வஸ்து ப்ரதாநமா? பரமாணுவா? பரப்ரஹ்மமா? என்கிற விசாரம் எப்போது பொருந்து மென்னில்: உண்மையில் ஜகதுத்பத்தி யென்பதொன்று நிரூபிக்க முடியுமானால் அப்போது பொருந்தும்.அடியோடு இல்லாதவொரு பிள்ளைக்கு மாதா பிதாக்களைப் பற்றி விசாரம் செய்வதுண்டோ? ஜகதுத்பத்தியே நிரூபிக்க முடியாததாயிருக்க, எதுக்கு காரணம்? என்கிற சர்ச்சை ஏதுக்கு ? உத்பத்தியானது (ஸத் )பாவத்திலிருந்து அங்கீகரிக்கப் படுகிறதா அபாவத்திலிருந்து அங்கீகரிக்கப் படுகிறதா வென்று கேட்கிறோம். பாவத்திலிருந்து என்பது சேராது; மண் பிண்டத்திலிருந்து பானை முதலியன உண்டாகின்றன வென்றால் மண் பிண்டத்தை உபமர்த்தித்துக் கொண்டு தானே யுண்டாகின்றன. எந்த காரியப் பொருளும் காரணப் பொருளை உபமர்த்தியாமல் உண்டாவதில்லை யென்பதைக் காணா நின்றோம். காரணாகாரத்தின் விநாசந் தானே உபமர்த்தமாவது ; அது தான் அபாவமே.ஆக பாவத்தில் நின்றும் உத்பத்தி யில்லை யென்று தேறிற்று. அபாவத்தில் நின்றுங் கூட உத்பத்தியில்லை யென்பது அநாயாஸமாகத் தெரிய வரும். அபாவத்திலிருந்து வோத்பத்தி ஸம்பவிக்க மாட்டாதன்றோ. ஆக உத்பத்தியே நிரூபிக்க முடியாதிருப்பதால் உத்பத்திக்குப் பிற்பட்ட வான விகாரங்கள் எதுவுமே கிடையா வென்பது ஸித்தம்.லோக வியவஹார மெல்லாம் ப்ரம மூலகமே. ஆக சூன்யமே தான் தத்துவம் என்பவர்கள் இங்கு நிரஸிக்கப்படுகிறார்கள்.[ஸர்வதா நுப பத்தேச் ச ] என்பது ஸூத்ரம். ப்ரமேயங்களோ பிரமாணங்களோ எதுவும் உண்டாகிலுமாம், இல்லை யாகிலுமாம் : பூர்வ பக்ஷிக்கு அபிமதமான சூன்யத்வம் தேறாதாகையாலே மாத்யமிக தர்சநம் அஸ்மஞ்ஜஸமென்றபடி. ஸர்வம் சூன்யம் ? என்று சொல்லுபவர்கள் தங்களுக்கு அபிமதமான் இவ் வர்த்தத்தை ஸாதித்துத் தரும்படியான பிரமாணமொன்று உண்டென்று இசையும் பக்ஷத்தில் பரமாண ஸ்த் பாவத்தை யிசைந்த போதே ஸர்வ சூந்ய வாதம் தொலைந்தது பிரமாணமில்லை யென்னும் பக்ஷத்தில், பிரமாண மில்லாமையினாலேயே தங்களுக்கு அபிமதமான அர்த்தம் அஸித்தமென்று முடிந்தது. மேலும்,ஸர்வம் சூந்யம் ‘ என்கிற விந்த வார்த்தையினால் நாஸ்தித்வந்தானே விவக்ஷிதமாக வேணும். ஒரு ரூபத்தை விட்டு மற்றொரு ரூபத்தைடைவதே நாஸ்தி பதார்த்தமாகையாலே ரூபாந்தரத்தாலே அஸ்தித்வமே சொல்லப்பட்டதாக முடிகிறது. மண்ணுண்டை யொன்று இருந்தது. அது நசித்த வளவிலே ம்ருத் பிண்டோ நாஸ்தி’ என்று சொல்லுகிறான். இந்த வ்யவஹாரத்தில் பானை யென்கிற அவஸ்தை தானே விஷயமாகிறது.

51- உலகில் அஸ்தி நாஸ்தித்வங்களை வழங்குகிறவர்கள் இப்போது மண்ணுண்டை யிருக்கிறது, இப்போது மண்ணுண்டை யில்லை: இங்கு மண்ணுண்டை யிருக்கிறது, இங்கு மண்ணுண்டை யில்லை? என்றிப்படி இடத்தையும் காலத்தையும் உட்படுத்தியே வியவஹரிக்கிறார்கள். தேச காலங்களைச் சேர்க்காமல் வெறுமனே மண்ணுண்டை யில்லை என்கிற ப்ரதீதியோ விவயவஹாரமோ எங்கும் காண்பதில்லை. ‘இப்போது மருத் பிண்டமிருக்கிறது’ என்றோ இங்கு மருத் பிண்டமிருக்கிறது’ என்றோ ஒருவன் விவயவஹரித்தால் மண் என்னும் திரவ்யத்திற்கு பிண்டத்வாவஸ்தை விஷயம்.இப்போது மருத் பிண்டமில்லை என்றோ “இங்கு மருத் பிண்டமில்லை என்றோ விவயவரித்தால் பிண்டத்வாவஸ்தையின் நாசமாகிய (கட ) த்வாவஸ்தை விஷயம். நாஸ்தித்வ விவ்யவகாரம் பண்ணினாலுங் கூட வேறொரு ஆகாரத்தாலே அஸ்தித்வமே தேறி நிற்கிற தென்பதை ஸர்வாநுபவ ஸாக்ஷிகமாகக் காணலாம். இன்ன வஸ்து இங்கில்லை என்றால் மற்றோரிடத்திலுள்ளதாகத் தேறியே தீரும். இப்போதில்லை யென்றாலும் மற்றொரு போதில் உண்டென்றதாகத் தேறியே விடும்.ஆகவே ஒருபடியாலும் ஸர்வ சூந்ய வாதம் ஸித்தியாது என்றதாயிற்று. ஸுத்ரத்தின் மேல் பொருள் காண்பது எங்ஙனே யென்னில் ; ஸர்வதா -ஸர்வ ப்ரகாரத்தாலும், அநுபபத்தே :-ஸ்வாபிமதமான ஸர்வ சூந்ய வாதம் உபபந்நமாகாமையினாலே என்றபடி. ஸர்வ ப்ரகாரத்தாலும்’ என்றதை ஸ்ரீ பாஷ்யாதிகளில் ஸ்வாமி விவரித்தருளும் போது இவ்வாறு அருளிச் செய்கிறார். சங்கரபாஷ்யத்தில் இவ்விதமாக அர்த்தம் செய்யப்பட வில்லை. லௌகிகத்தில் இதற்கு எவ்விதமாகப் பொருள் கொள்கிறோமோ அவ் விதமாகவே சங்கராசாரியர் பொருள் கொண்டார். நம் ஸ்வாமி கொண்ட பொருள் தான் உண்மையில் ஸமஞ்ஜஸமானது. ஸ்வாமிக்கு இப் பொருள் தோன்றினது எதனாலென்னில் ; திருவாய்மொழியில் (1-1-9) * உள்னெனிலுளன் அவனுருவ மிவ்வுருவுகள், உளனலனெனில் அவனருவ மிவ்வருவு கள், உள்னெனவில்னெனவிவைகுண முடைமையின், உளனிந்தகைமையோ டொழி விலன் பரந்தே என்ற பாசுரங் கொண்டே இந்த ஸூத்ரத்தின் பொருளை ஸ்வாமி அறுதி யிட்டருளினாரென்பது நிஸ் ஸந்தேஹம். அப்பாசுரத்தின் ஆறாயிரப்படியை ஸேவித்தால் இஃது எளிதிற் புலனாம். அப்பாட்டிற்குத் தமிழ் மொழியாலெழுதப் பட்டுள்ள பொருள் தான் ஸ்ரீபாஷ்யத்தில் வடமொழியாலெழுதப் பட்டுள்ளதென்க.

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே 
–1-1-9-

ஸூந்யவாதியான உன்னைக் கேட்ப்போம்-ஈஸ்வரனுடைய இல்லாமையை சாதிக்கிற நீ ஈஸ்வரன் உளன் என்றோ இலன் என்றோ ப்ரதிஞ்ஜை பண்ணுவது –
இவை இரண்டு பிரகாரத்தாலும் நீ நினைக்கிற இல்லாமை சம்பவியாது -எத்தாலே என்னில்-லோகத்தில் பாவ அபாவ சப்தங்களும் பாவ அபாவ ப்ரதீதிகளும்
வித்யமாந வஸ்துவினுடைய அவஸ்தா விசேஷ கோசாரமாகக் காண்கையாலே-ஆதலால்
ஈஸ்வரன் உளன் என்னில் அஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –
ஈஸ்வரன் உளன் அலன் என்னில் நாஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –

இப்படி ஈஸ்வர வ்யதிரிக்த பதார்த்தங்களையும் உளவென்னில் இவையும் அஸ்தித்வ தர்ம விசிஷ்டங்களாய்க் கொண்டு உளவென்று சொல்லிற்றாய் வரும்
தத் வ்யதிரிக்த பதார்த்தங்களை இல்லை என்னிலும் அவை நாஸ்தித்வ தர்ம விசிஷ்டங்கள் என்று சொல்லிற்றாய் வரும்
அந்த அஸ்தித்வ நாஸ்தித்வ ரூப பதார்த்தங்களும் அவனுக்கு ரூபமாய் இருக்கும் -கீழ்ச் சொன்ன பிரமாணங்களாலே –
இப்படி அஸ்தித்வ நாஸ்தித்வங்கள் ஆகிற குணங்களை யுடையவன் என்று சொல்லுகையாலே அஸ்தி என்னிலும் உளன் -நாஸ்தி என்னிலும் உளன்
உளனாம் இடத்து சர்வாந்தராத்மாவாய்க் கொண்டு உளன் என்கிறார் -இப்படி ஸூந் யவாதியை நிரசித்தது –

52- இனி மூன்றாமதியாயத்தில் சிறிது செல்வோம். கீழ்க் கழிந்த இரண்டு அத்யாயங்களுள் முதலத்யாயத்தினால்- ஜகஜ் ஜந்மாதி காரணமாய் ஸர்வ சேஷியான வஸ்து பர ப்ரஹ்மமே யென்றும், நான்முகன் சிவன் இந்திரன் முதலானவர்கள் அப் பரம புருஷனாலேயே தன்னுடைய லீலைக்காக ஸ்ருஷ்டிக்கப் பட்டு உபஸம்ஹரிக்கப் படுகிறார்களென்றும், அந்த பரம புருஷன் ப்ரக்ருதி மண்டலத்திற்குப் புறம்பாய் நித்ய ஸூரி ஸேவிதமான ஸ்தாந விசேஷத்திலே ஸ்வேச்சையினாலே சுடரொளி மயமான திவ்ய மங்கள் விக்ரஹத்தைப் பரிக்ரஹித்து அப்ரமேயமான ஆனந்தத்தை யுடையனாய் தன்னடி பணிந்தார்க்கும் அபரிமிதமான ஆனந்தத்தை யளிப்பவனாய் ஸம்ஸார பந்தத்தில் நின்றும் விடுபட்ட முக்த புருஷர்களினால் அநுபவிக்கப் பட்டுக் கொண்டிரா நின்றா னென்றும் தெரிவிக்கும் முகத்தினால்-ஸம்ஸாரிகளுக்கு பகவதநுபவ குதூகலத்தை யுண்டாக்குவதற்காக பரம் புருஷார்த்தமான பகவத ஸ்வரூப ஸ்வபாவாதிகள் நிரூபிக்கப்பட்டன. பிறகு இரண்டாமத்யாயம் செய்தென்னென்னில் ; முதலத்யாயத்தினால் நிரூபிக்கப்பட்ட அர்த்தம் ஸர்வாத்மநா அசைக்க முடியாததென்று பரபஷ ப்ரதிஷேப பூர்வகமாக ஸாதித்ததுடன் ஸ்ரீ பாஞ்சராத்ர மென்கிற பகவத் ப்ரணீத ஸாஸ்த்ர விசேஷத்தினால் தேறிய பொருளென்றும் நிரூபித்து ஸகல சேதநாசேதநப் பொருள்களும் பரம புருஷ கார்ய பூதங்களே யென்பதை நன்கு சோதிக்கும் முகத்தால் கார்ய ஸாமான்யமும் பர ப்ரஹ்ம் கார்யமே யென்பதும் ஸ்தாபிக்கப் பட்டது. ஆக இரண்டத்யாயங்களாலும் புருஷார்த்த ஸ்வரூபம் நிச்சயிக்கப் பட்டதாகத் தேறிற்று. இப்படி புருஷார்த்த ஸ்வரூபம் நிச்சயிக்கப்பட்டாலும், அநாதி வாஸநா பலத்தாலே ஷூத்ர புருஷார்த் தங்களையே நச்சிக் கிடக்கும் ஸம்ஸாரிகளுக்குப் பரம புருஷார்த்த ப்ராப்தியில் பதற்ற முண்டா காமைக்குக் காரணம்- தாங்கள் விரும்பிய புருஷார்த்தங்கள் அல்பாஸ்திரங்களென்பதை ஆராய்ந் துணராமையே யென்று கருதிய சாஸ்த்ர காரர், அந்த ஸம்ஸாரிகளுக்கு இதர புருஷார்த்தங்களில் வைராக்யத்தையும் பரம புருஷார்த்தத்தில் மிகுந்த ருசியையு முண்டாக்குவதற்காக கர்ம பலங்களெல்லாம் க்ஷயிஷ்ணுக் களென்றும் பரம புருஷ உபாஸந பலமான அபவர்க்க மொன்றே நித்ய புருஷார்த்த மென்றும் தெரிவித்து இவ் வழியாலே பரம புருஷார்த்த பிராப்தியில் வராதிசயத்தை யுண்டாக்கவே பின்னிரண்டு அத்யாயங்களை அவதரிப்பிக்கின்றார். ஏற்கெனவே கர்ம விசாரம் செய்து அதன் பலன்களை நஸ்வரங்களென்றறிந்து வைராக்யம் பெற்றவனுக்கே ப்ரஹ்ம மீமாம்ஸையில் அதிகாரமென்று ஜிஜ்ஞாஸா ஸூத்ரத்திலேயே நிரூபிக்கப் பட்டிருப்பதனால் மறுபடியும் வைராக்யத்தை யுண்டாக்குவதற்காக இந்த ப்ரயத்னம் வீணல்லவோ வென்று சிலர் சங்கிக்கவுங் கூடும்; ஆகிலும் கேண்மின்; பஞ்சாக்நி வித்யா நிரூபணத்தினால் விஷயங்களில் எப்படிப்பட்ட வைராக்யம் உண்டாகுமோ அது கர்ம விசாரத்தினால் உண்டாக மாட்டாதென்று கருதியே இங்கு புநாரயநம் கொள்ளப்படுகிறது. ஆகவே இது நிஷப் பலமன்று, ஸபலமே. இந்த மூன்றாமத்யாயத்தின் முதற்பாதத்தில் பஞ்சாக்நி வித்யா நிரூபணம் செய்து கர்ம பலன்களெல்லாமும் நஸ்வரங்களென்றும் நரக துல்யங்களென்றும் தெரிவிக்கப் படுகிறது. மூன்றாமத்யாயமானது பரம புருஷ ப்ராப்திக்கு உபாயத்தைத் தெரிவிப்பதென்றும், நான்காமத்யாயமானது உபாய பலமான உபேயத்தைத் தெரிவிப்பதென்றும் நெஞ்சிற்கொள்க.

53-உபய லிங்காதிகரணத்தின் ப்ரமேயம் நிரூபிக்கப் படுகிறது. இது மூன்றாமத்யாயத்தின் இரண்டாவது பாதத்திலுள்ளது. ஜீவாத்மாவானவன் ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷுப்தி மூர்ச்சாதி அவஸ்தைகளுக்கு ஹேதுவான நாநா சரீரங்களை ஏற்றுக் கொண்டு அவ்வவஸ்தைகளில் ஸுக துக்கங்களை யதுபவிக்கிறா னென்னுமிடம் கீழே நிரூபிக்கப் பட்டது. அப்படிப்பட்ட ஜீவனாலே அதிஷ்டிதமான சரீரத்தில் பரமாத்மாவும் ஸம்பந்தப்பட்டிருந்தாலும் தத் பிரயுக்தமான ஸுக துக்காதி அபுருஷார்த்த லேசமும் தன்னிடத்தில் ஒட்டப் பெறாமலிருக்கிறா னென்பதையும் கல்யாண குணக் கடலாயிருக்கிறா னென்பதையும் நிரூபிக்க இவ் வதிகரணம் தோன்றியது. ந ஸ்தாந தோபி பரஸ்யோபய லிங்கம் ஸர்வத்ர ஹி- என்பது இவ் வதிகரணத்திற்குத் தலையான ஸுத்ரம். பரஸ்ய – பரம புருஷனுக்கு, ஸ்தாநத: அபி- ஜீவாதிஷ்டித நாநா சரீரங்களில் இருப்பு இருந்தாலும், அபுருஷார்த்த ஸுக துக்க ஸம்பந்தம் கிடையாது. (இதற்கு ஹேது வென்னெனில்:) ஸர்வத்ர ஹி உபய லிங்கம்- பரம புருஷன் ஸர்வ ஸ்ருதி ஸ்மிருதிகளிலும் ஹேய ப்ரத்ய நீகத்வம் கல்யாணை கதாநத்வம் என்கிற இரண்டு அஸாதாரண தர்ம்ங்களோடு கூடியவனாக ப்ரதிபாதிக்கப் படுகையாலே – என்பது ஸுத்ரத்தின் பொருள் -இதைச் சிறிது விவரிப்போம்-ஸ்ம்ருதிகளிலும் பரம புருஷன் இயற்கையாகவே ஹேய ப்ரத்யநீகனாயும் கல்யாணக குணாகரனாயு மிருக்கிறானென்று சொல்லப் படுகையாலே ஹேய ப்ரதிபடனான அப் பரம புருஷனிடத்தில் சரீர ஸம்பந்தமானது அபுருஷார்த்த ஸுக து:க்காபத்திக்கு ஹேதுவாக மாட்டாது. அவன் அபஹதபாப்மா வெனப்படுகிறான். அபஹதபாப்மத்வமாவது இன்ன தென்பதைக் கீழே ஆனந்த மயாதிகரணத்தில் விவரித்திருக்கிறோம். புண்ய பாப ரூப கருமங்களின் பலன் ஸ்பர்சிக்கப் பெறாதிருத்தலே அபஹத பாப்மத்வமாம். அதாவது, புண்ய பாப ஸஜாதீயங்களான கருமங்களைத் தான் செய்தாலும் அவை பலன் கொடுக்கும்படியான சக்தியைப் பெறாதபடி அந்த சக்தியைத் தொலைத் திடுகையேயாம்-ஹேய ப்ரத்யநீகத்வமென்பதும் இதுவே. இப்படி விலக்ஷண சக்தி யுக்தனான பரம புருஷனிடத்தில் ஹேய தேஹ ஸம்பந்த முண்டானாலும் அது அபுருஷார்த்த ஸுக துக்க ஸமுத்பாதகமாக ஆக மாட்டாது. ஹேய தேஹ ஸம்பந்தமானது கர்மாதீநமன்றிக்கே ஸ்வேச்சா க்ருதமாகையாலே. இதற்கு மேல் ஒரு சங்கை தோன்றும் : பரம புருஷனுக்கு தேஹ ஸம்பந்தம் கர்ம ப்ரயுக்த மன்றிக்கே ஸ்வேச்சா க்ருதமாகவே யிருக்கட்டும்.ஹேய ஸம்பந்தமானது வஸ்து ஸ்வபாவத்தாலே அபுருஷார்த்தா பாதகமாகியே தீருமன்றோ -மாம்ஸா ஸ்ருக்பூய விண் மூத்ர வெள்ளத்தில் ஒருவன் ஸ்வேச்சையினாலே அமிழ்ந்தாலும் ஹேய சம்பந்த முண்டாகித் தானே தீரும்- என்று சங்கிக்கக் கூடும். இங்கு உணர வேண்டிய தத்துவமாவது – ஹேயத்வமென்பது கர்ம க்ருதமே யொழிய வஸ்து ஸ்வபாவ ப்ரயுக்தமன்று.ஸம்ஸாரதசையில் எந்தவஸ்துவும் அநுகூலமாகத் தோன்றுவதும் பிரதிகூலமாகத்தோன்றுவதும் வஸ்துஸ்வபாவத்தாலன்று. அப்படியாகில் எதுவும் எவனுக்கும் அனுகூலமாகவேயோ ப்ரதிகூலமாகவேயோ இருந்து தீரவேணும். இப்படி எங்கும் காணப்படவில்லை.இன்று அநுகூலமானதே நாளைக்கு ப்ரதிகூலமாகிறது. அதுதானே மற்றொருநாள் அநுகூலமாகிறது. ஆகவே எந்த வஸ்துவும் ஸம்ஸார தசையில் அநுகூலமா யிருப்பதும் பிரதிகூலமா யிருப்பதும் கர்ம க்ருதமே யாதலால் அகர்ம வஸ்யனான பரம புருஷனுக்கு ஸர்வ வஸ்துக்களும் தன் விபூதியாய்க் கொண்டு அநுகூலமாகவே யிருக்குமென்று கொள்ளக் கடவது.ஆகவே ஹேய பூத தேஹ ஸம்பந்தம் பரம புருஷனிடத்தில் அபுருஷார்த்தா பாதகமாக தென்க. இந்த சாரீரக மீமாம்ஸையிலேயே முதலத்யாயத்தின் இரண்டாவது பாதத்தில் பரமாத்மாவுக்கு ஜீவாதிஷ்டித சரீர ஸம்பந்த மிருந்தாலும் அகர்ம வஸ்யனாகையாலே ஸு-க து:க்காதி ரூப கர்ம பல ஸ்பர்சமில்லை யென்னுமிடம் நிரூபிக்கப்பட்டே இருப்பதால் இவ் வதிகரணம் அத்தோடு புநருக்தமாகிறதே யென்று சிலர் சங்கிக்கக் கூடும்.அவ் விடத்துப் பூர்வ பக்ஷ சரீரம் வேறு, இவ் விடத்துப் பூர்வபஷ சரீரம் வேறு என்பதை ஸுஷ்மேக்ஷிகையா லுணர வேணும். இங்கு விரிவுக்கு அஞ்சி நிற்கிறோம்.

54- இனி,மூன்றாமத்யாயத்தின் கடைசி பாதத்திலுள்ள ஸர்வாந்நாநுமத்யதி கரணம் பற்றிப் பேசுவோம். இதற்கு முந்தின அதிகரணத்தில் ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு சமம் ஆவஸ்யகமென்று சொல்லிற்று.போஜந நியமமாகிற சம விசேஷம் ப்ரஹ்ம வித்துக்கு உண்டா இல்லையா என்பதை விசாரித்து நிர்ணயிக்க இவ் வதிகரணம்
தோன்றியது-(ஸர்வாந் நாநுமதிச்ச ப்ராணாத்யயே தத் தர்சநாத் ] என்பது ஸூத்ரம். சப்தமானது அவதாரணப் பொருளது. ப்ராண வித்யா நிஷ்டன் எந்த அன்னத்தையும் புஜிக்கலாமென்று அனுமதிப்பது ப்ராணாபத் தசையைப் பற்றியதேயாம் ; ப்ரஸ்ம வித்தான அதிகாரியின் விஷயத்தில் ப்ராணாபத் விஷயமாகவே காண்கையாலே- என்று ஸுத்ரார்த்தம். இங்கு பூர்வ பக்ஷம்;சாந் தோக்யத்தில் ஐந்தாவது ப்ரபாடகத்தில் ப்ராண வித்யா பிரகரணத்தில் ஓதப் பட்டிருக்கிறது. ப்ராண வித்யா நிஷ்டனுக்கு அன்னமாகாதது எதுவுமில்லை யென்று இதற்குப் பொருள். ப்ராண வித்யா நிஷ்டனுக்கு நிஷித்தாந்ந போஜனமும் ஸர்வதா கூடுமென்றும், வித்யா மாஹாத்மியத்தினால் இதில்
தவறில்லை யென்றும் சொல்லுவதாகத் தெரிகிறது.அல்ப சக்திகனான ப்ராண வித்யா நிஷ்டனுக்கே நிஷித்தாந் போஜனம் அனுமதிக்கப் படுமானால் ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு அந்த அநுமதி கைமுதிக ந்யாய ஸித்தமே – என்று பூர்வ பக்ஷம். இதன் மேல் ஸித்தாந்தம் வருமாறு :- ப்ரஷ்ம வித்யா நிஷ்டனான உஷஸ்தன் பிராணாபத் தசையில் ஒரு யானைப் பாகன் உண்டு மிகுந்த காறா மணியை புஜித்து அதனால் உயிர் தரிக்கப்
பெற்றானென்றும், பிறகு அந்த ஆனைப் பாகன் கொடுத்த பானத்தை அவன்(உஷஸ்தன்] ஏற்றுக் கொள்ள வில்லை யென்றும் சாந்தோக்யத்தில் முதல் ப்ரபாடகத்தில் (கண்டம்-9)
உஷஸ்த வ்ருத்தாந்த ப்ரகரணத்தில் காண்கிறது. இதனால், மஹா மஹிம சாலியான ப்ரஹ்ம வித்துக்கும் நிஷித்தாந்ந பஷணம் ஆபத்விஷயமென்று தெரிவதனாலும், ஆஹார சுத்தி ஆவஸ்யகமென்று தெரிவதாலும் ப்ராஹ்மண ஸாமாந்யத்திற்கும் ஆபத் காலத்தில் ஸர்வாந்நமும் அநுமதிக்கப் படுவதாகக் காண்கையாலும் ப்ரஹ்ம வித்தான அதிகாரி விசேஷத்திற்கும் ஸர்வாந்நாநுமதியானது ஆபத் கால மாத்ர விஷயகமென்று ஸித்திக்கும் போது, அல்ப சக்தியான ப்ராணோபாஸகனுக்குக் காணும் ஸர்வாந்நாதுமதியும் ஆபத் விஷய கந்தானென்பது பற்றிச் சொல்ல வேணுமோ?

55-இனி நான்காவது அத்யாயத்திற்குச் செல்வோம். பெரும்பாலும் உபாஸந பரமாகச் சென்றது மூன்றாமத்யாயம். உபாஸநத்தின் பலனை நிரூபிக்க அவதரிக்கின்றது நாலாமத்யாயம். இதில் முதலதிகரணம் ஆவ்ருத்த்யதிகரணம்– மோக்ஷத்திற்கு உபாய பூதமான பகவதுபாஸநம் அஸக்ருதா வ்ருத்தி ரூபம் (அதாவது),தைலதாராவத் அவிச்சிந்ந ஸ்மருதி ஸந்தான ரூபம் ; ஏனென்னில் ஸ்ருதிகளில் விதிக்கப்பட்ட வேதநமானது அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்தாந ரூப த்யாநத்வா வஸ்தையை யுடைய தென்று சாஸ்த்ரம் சொல்லுகையாலே – என்னும் பொருளதான ஸூத்ரம்* (ஆவ்ருத்தி ரஸக்ருதுபதேசாத் ] என்பது முதல் ஸுத்ரம். இங்கு பூர்வபக்ஷம் : ஸ்ருதி யாதி களில் ஸ்வர்க்க ஸாதனமாக விதிக்கப்பட்ட யாகாதிகள் ஸக்ருத் கரணத்தாலேயே எப்படி ஸ்வர்க்காதி பல ஸாதகமாகிறதோ அப்படி இங்கும் ப்ரஹ்மவிதாப்நோதி பரம் இத்யாதிகளில் மோஷ ஸாதநமாக விதிக்கப்பட்ட பகவச் சிந்தந ரூபமான வேதனமும் ஸக்ருதநுஷ்டாநத்தாலேயே மோக்ஷ ஸாதகமாகக் கூருமாதலால் அது ஒருகாலே செய்யப்பட வேண்டுமென்று. இப் பூர்வ பக்ஷத்தின்மேல் ஸித்தாந்தம் வருமாறு : வேதாந்த சாஸ்த்ரங்களில் மோஷ ஸாதநமானதைச் சொல்லி வருமடைவுகளில் வேதனம், உபாஸநம், தியாநம், த்ருவாஸ்ம்ருதி,ஸாக்ஷாத்காரம், பக்தி என்கிற சப்தங்கள் காணப் படுகின்றன- இவை யெல்லாம் பர்யாய பதங்களென்று நிச்சயிக்கப்படுமிடத்து தைலதாராவத் அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்தாந ரூபமானதென்றே அறுதி இட வேண்டியதாகிறது. ஸ்ரீவிஷ்ணு புராணத்தில்(6-7-91) இத்யாதி ஸ்லோகங்களும் * பக்த்யா த்வந்யயா சக்ய: அஹமேவம் விதோர் இத்யாதி கீதா ஸ்லோகங்களும் இதையே வற்புறுத்துகின்றன.மேலே ஆறாவதாக ஆப்ரயாணதி கரணமுள்ளது. ஆப்ரயாணாத் தத்ராபி ஹி திருஷ்டம் * என்பது ஸூத்ரம்.மோக்ஷ ஸாதனமான ப்ரஹமோபாஸநமானது மரணாந்தமாக அநுஷ்டிக்கப்பட வேண்டு மென்று அதில் நிகமிக்கப் படுகின்றமை யறிக.

56- இனி, தததிகமாதிகரணத்தின் ப்ரமேயம் நிரூபிக்கப் படுகிறது. தததிகம் உத்தர பூர்வாக யோரச்லேஷ விநாசெள தத் வ்யபதேசாத்-என்பது ஸூத்ரம். ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு ஸாஷாத்காராவஸ்தையை யடைந்த ப்ரஹ்ம வித்யா நிஷ்பத்தி யுண்டாகுமளவில் ப்ரஹ்ம வித்யா மஹிமையினாலே பூர்வ பாபங்களுக்கு விநாசமும் உத்தர பாபங்களுக்கு அஸ்லேஷமுமாகும்; ஸ்ருதிகளில் அப்படி சொல்லி யிருப்பதனாலே- என்பது ஸூத்ரார்த்தம். ப்ரஹ்ம ஜ்ஞானத்திற்கு முன்பு செய்த பாபங்கள் நசித்துப் போய் விடும்: பிறகு அபுத்தி பூர்வகமாக நேரும் பாபங்கள் தாமரை யிலையில் தண்ணீர் போல் ஓட்டமாட்ட என்றபடி. சாந்தோக்ய ஸ்ருதியில் உபகோஸல வித்யா ப்ரகாரணத்திலும் அவ் விடத்திலேயே வைஸ்வாநர வித்யா பிரகரணத்திலும் ப்ரஹ்ம வித்யையின் பலன் சொல்லப் பட்டிருக்கின்றது. ஆகையாலே உத்தர பாபங்களுக்கு அஸ்லேஷமும் பூர்வ பாபங்களுக்கு விநாசமும் சொல்லப்படுகிற தென்கை.இங்குப் பூர்வ பக்ஷம் –நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -என்று பலனை யநு பவித்தே கருமங்களைத் தொலைக்க வேணு மென்று ப்ரஹ்ம வைவர்த்தத்தில் சொல்லி யிருக்கையாலே கர்ம பலன்களை அநுபவித்தே தீர வேண்டும் ; ப்ரஹ்ம வித்யையினாலேயே கருமங்கள் தீர்ந்து போவதாகச் சொல்லுவது ப்ரசம்ஸா பரமான வார்த்தை யாமத்தனை என்று. இதன் மேல் ஸித்தாந்தம் வருமாறு; பூர்வ பாபங்களுக்கு விநாசமும் உத்தர பாபங்களுக்கு அஸ்லேஷமும் ப்ரஹ்ம வித்யா ப்ரபாவத்தாலே நேருவதாகப் பல உபநிஷத்துக்கள் கூறியிருப்பது அபலபிக்க முடியாதது. *நாபுக்தம் ஷீயதே கர்ம என்ற வசனமும் யுக்தமானதே ; அது ப்ரஹ்ம வித்துக்களல்லாத ஸாமாந்யர் விஷயமாக ஓதுக்கத் தகும். ஆகவே இவை பரஸ்பரம் அவிருத்தங்களான வசனங்களே யாம். நெருப்பு வீட்டைக் கொளுத்தியே தீரும்’ என்று ஒருவன் சொல்லுகிறான்; ‘பற்றி யெரிகிற நெருப்பைத் தண்ணீர் அணைத்தே தீரும்’ என்று மற்றொருவன் சொல்லுகிறான்.இவற்றில் பரஸ்பர விரோதம் சிறிதேனுமுண்டோ? தண்ணீர் இல்லை யானால் படர்ந்தெரிகிற நெருப்பு வீட்டைக் கொளுத்தியே தீருமென்றும், தண்ணீரை யிட்டு அணைத்தால் நெருப்பு ஓய்ந்து விடுமென்றும் அர்த்தமாக வில்லையோ. அது போல, ப்ரஹ்ம வித்யை இல்லாத வளவில் கர்மங்கள் பலனைக் கொடுத்தே தீருமென்றும், ப்ரஹ்ம வித்யை யுண்டாகில் கருமங்களின் சக்தி ப்ரதிஹதமாய் விடுமென்றும் எளிதாக அர்த்தமாகுமன்றோ.

57-இனி நிசாதிகரணத்தைப் பற்றிப் பேசுவோம்- ஒரு ஸூத்ரமே கொண்டது இவ் வதிகரணம்-இரவில் இறந்தவற்கு ப்ரஹ்ம ப்ராப்தி உண்டா இல்லையா என்று விசாரிக்கப் படுகிறது. நிசி மரணத்தைப் பற்றி சாஸ்த்ரங்களில் இழிவாகச் சொல்லப் பட்டிருப்பதனால் பரம புருஷார்த்தமான மோக்ஷமானது ஸம்பவிக்க மாட்டாது–பகலில் மரணமே சாஸ்த்ரங்களில் ப்ரசஸ்தமாகக் காண்கிறது. நிசா மரணம் இதற்கு விபரீதமானது -ஸ்பஷ்டமாக சாஸ்த்ரமிருப்பதால் நிசி மரணம் அதமகதிக்கே ஹேது வாகுமாதலால் இரவில் இறப்பவற்கு ப்ரஹ்ம ப்ராப்தி ஸம்பவிக்க மாட்டாது என்று பூர்வ பக்ஷம்
ப்ராப்தமாக, இதன் மேல் ஸித்தாந்தம் வருமாறு:-ப்ரஹ்ம வித்துக்களுக்கு கர்ம ஸம்பந்தம் தேஹமுள்ள வரைக்குமே யாதலால் நிசி மரணம் ப்ரஹ்ம வித்துக்களுக்கு பாதகமாகாது. (இதைச் சிறிது விவரிப்போம்.) பாப கருமங்சள் ஆரப்த கார்யங்களென்றும் அநாரப்த கார்யங்களென்றும் இருவகைப் படும். இன்னமும் பூர்வ பாபங்களென்றும்
உத்தர பாபங்களென்றும் இருவகைப்படும். பலன் கொடுக்கத் தொடங்கிவிட்ட
கருமங்கள் ஆரப்த கார்யங்களெனப்படும். இவையே ப்ராரப்த கர்மமென்று வழங்கப்
பெறும். பலன் கொடுக்கத் தொடங்காத தீ வினைகள் அநாரப்த கார்யங்க ளெனப்படும்-ஸஞ்சித கர்மமென்பது இதுவே. ப்ரஹ்ம வித்யையை ஸம்பாதிப்பதற்கு முன்னே செய்யப்பட்ட பாபங்கள் பூர்வ பாபங்களெனப்படும்.அதற்குப் பிறகு புத்தி பூர்வமான பாபங்கள் நேருவதற்கு ப்ரஸக்தி யில்லாமையாலே அபுத்தி பூர்வமாகவும் அகதிகமாகவும் நேருமவை உத்தர பாப மெனப்படுமென்று இதை முன்னமே சொன்னோம். இவற்றுள் அநாரப்த கார்யங்களைான கருமங்கள் ப்ரஹ்ம வித்யா ஸம்பந்த முண்டானவன்றே
தொலைந்து போயின வாதலாலும், உத்தர பாபங்கள் ப்ரஹ்ம வித்துக்களிடத்தில் ஒட்ட
மாட்டாவென்று சொல்லப் படுகையாலும் ப்ராரப்த கர்மமொன்றே சேஷித்து நிற்கிறது -அக் கருமம் சரம தேஹத்தோடு கழியுமாதலால் பந்த ஹேதுவாக மாட்டாது. ஆகவே ப்ரஹ்ம வித்துக்களுக்கு நிசி மரணம் நேர்ந்தாலும் பரம புருஷார்த்தமான ப்ரஹ்ம பிராப்திக்குக் குறை யில்லை யென்றதாயிற்று. திவா ச சுக்ல பக்ஷச் ச என்று கீழே காட்டின
வசனம் பரஹ்ம வித்துக்களல்லாதார் விஷயமென்றும் முடிந்தது-

58-இதற்கு மேலுள்ள தக்ஷிணாயநாதி கரணத்தின் ப்ரமேயமும் விவரிக்கப் படுகிறது -ஒரு ஸுத்ரமே கொண்டது இவ் வதிகரணமும். நிசி மரணமடைந்தாலும் பிரஹ்ம ப்ராப்திக்குக் குறையில்லை யென்பதற்கு, முந்தின அதிகரணத்தில் எந்த ஹேது சொல்லப் பட்டதோ, அந்த ஹேதுவினாலேயே தக்ஷிணாயநத்தில் மரணமடைந்தவற்கும் ப்ரஹ்ம ப்ராப்தியில் குறையில்லை யென்பது ஸித்தமே. ஆனாலும் இவ் வதிகரணத்தில் அதிகப் படியான சங்கை என்னவென்றால்,, தக்ஷிணாயநத்தில் மரணமடைந்தவற்கு சந்திர ப்ராபதி சொல்லப்படுகிறது; சந்த்ர பிராப்தி பெற்றவர்களுக்குப் புநராவ்ருத்தியும் சொல்லப் படுகிறது.பீஷ்மர் முதலான சில ப்ரஹ்ம வித்துக்களும் உத்தராயண ப்ரதீக்ஷை பண்ணிதாகத் தெரிய வருகிறது. ஆக இக் காரணங்களினால் தக்ஷிணாயனத்தில் இறந்தவருக்கு ப்ரஹ்ம ப்ராப்தி ஸம்பவிக்க ஒளசித்யமில்லை- என்பதாம். இதற்குப் பரிஹாரமாவது, சந்த்ர ப்ராபதியினால் புநராவ்ருத்தி யென்பது ப்ரஹ்ம வித்துக்களல்லாதார்க்கே யொழிய ப்ரஹ்ம வித்துக்களுக் கன்று. ப்ரஹ்ம வித்துக்களுக்கும் சந்த்ர ப்ராப்தி யுண்டானாலும் இடையில் இளைப்பாறும் ஸ்தானமாகுமத்தனை. பந்த ஹேதுவான கருமம் தொலைந்து விட்டதென்கிற பூர்வோக்த ஹேதுவுக்குக் கண்ணழிவில்லாமையாலே ப்ரஹ்ம ப்ராப்தி யவர்ஜநீயமாகவே தேறும்-பீஷ்மர் உத்தராயண ப்ரதீக்ஷை பண்ணினாரென்ற விஷயத்தில் அறியத் தக்க தொன்றுண்டு.அவர் மது வித்யா நிஷ்டர். மதுவித்யா பிரபாவத்தினால் ஸ்வச்சந்த மரணத்வமுள்ளது. அதனாலும், உத்தராயணத்தின் மேன்மையைக் காட்ட வேண்டியும் மரணமடைந்தவர்களுக்கு அவர் உத்தராயண ப்ரதீக்ஷை பண்ணின வளவால் தஷிணாயனத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு , ப்ரஹ்ம ப்ராப்தியில் கண்ணழிவு சொல்ல முடியாது. ஆக இவ்வளவால் ப்ரஹ்ம வித்துக்களுக்கு நிசி மரணமோ க்ருஷண பக்ஷ மரணமோ தஷிணாயன மரணமோ நேர்ந்தாலும் கூட பரம புருஷ பிராப்தியில் குறையில்லை என்றதாயிற்று –

59-இனி,சாரீரக மீமாம்ஸையில் முடிவான அதிகரணமாகிய ஜகத் வியாபார வர்ஜாதி கரணத்தின் ப்ரமேயம் தெரிவிக்கப் படுகிறது. முக்த புருஷனுக்கு ஜகத் ஸ்ருஷ்டியில் அதிகாரமில்லை யென்பதும் பரம பதத்தினின்று மீட்சியில்லை யென்பதும் இவ் வதிகரணத்தில் தெரிவிக்கப் படுகின்றன. முதல் ஸூத்ரத்தின் அர்த்தமாவது, முக்தனுடைய ஐஸ்வர்யம் ஜகந் நியமனத்தைத் தவிர்த்தேயாம். ஏனென்னில் ; பர ப்ரஹ்மத்தைக் குறித்துச் சொல்லும் பிரகரணங்களிலேயே ஜகத் ஸ்ருஷ்டி முதலானவற்றைச் சொல்லி யிருக்கிற படியாலும்,அவற்றைச் சொல்லும் ப்ரகரணங்களில் ஜீவன் ப்ரஸ்துதனாக இல்லாமையாலும் – என்பதாம். இங்கு பூர்வ பக்ஷம் வருமாறு – முண்டகோபநிஷத்தில் * முக்தனுக்குப் பர ப்ரஹ்மத்தோடு ஸாம்யம் ஓதப்பட்டுள்ளது. இன்னமும் சாந்தோக்யோபநிஷத்தில் முக்த புருஷனுக்கு ஸத்ய ஸங்கல்பத்வமும் ஓதப்படுகிறது. இவ்விரண்டும் முக்தனுக்கு ஐகந் நியாமகத்வ ரூபமான ஜகதீஸ்வரத்வ மிருந்தாலொழியப் பொருந்த மாட்டாது -முக்தனுக்கு ஈஸ்வரத்வ மில்லையானால் ப்ரஹ்மத்தோடு பரம ஸாம்ய முண்டாவதாகச் சொல்வது சேராது- ஆகையாலே முக்தனுக்கும் பர ப்ரஹ்மத்திற்குப் போலவே ஈஸ்வரத்வத்தை அவசியம் இசைந்து தீர வேண்டும். ஆனது பற்றியே முக்தனைப் பற்றி ஓதுமிடங்களில்
ஸர்வ லோக ஸஞ்சாரமும் காமாந்நித்வமும் காமரூபித்வமும் பொருந்துகின்றன மென்பது . ஸர்வலோக சஞ்சாரம் என்பது ஸர்வ லோக நியமனத்திற்காகத் தானே; அது தவிர மற்றொரு பலனும் தேறுகின்ற தில்லை யாகையாலே ஜகந் நியமனம் முக்தனுக்கு ஸித்தித்தே தீரும்.காமாந்நித்வாதிகள் சொன்ன போதே லோகங்கள் அவனுக்கு அதீன மென்பது தேறி நிற்கும். ஆனால் இதற்கு மேல் ஒன்று சொல்லாம்: முக்தனுக்கு ஸர்வ லோக ஸஞ்சார மானது ஆங்காங்கு போக்ய பதார்த்தங்களை அநுபவிப்பதற்காகவே யொழிய உலகங்களை நியமிப்பதற்காக வன்று என்று சொல்லலாம்; இதுவும் சொல்ல முடியாது : விகாராஸ் பதங்களாகையாலே ஹேயங்களா யிருக்கின்ற லோகங்களையும் அவற்றிலுள்ள பொருள்களையும் போக்யமாகக் கொள்ள ப்ரஸக்தி யில்லை யன்றோ – அவை ஹேயங்களானாலும் ஸ்வாமியான பரமபுருஷனுடைய விபூதி யாகையாலே அவற்றில் போக்யதா புத்தி ஸம்பவிக்கலாமாகையாலே அவற்றைப் புஜிக்கைக்காகவே அவ்வோ லோகங்களில் ஸஞ்சாரம் ப்ராப்தமாகிறது என்கிற வாதமும் ஒவ்வாது. சாந்தோக்யத்தில் ஸ ஸ்வராட் பவதி * என்றும் ஸ்பஷ்டமாகச் சொல்லி யிருக்கையாலே முக்தனுக்கு வேறு யாரும் அதிபதி யல்லரென்று நன்கு அறியலாகிறது. முக்தி தசையில் முக்தனைக் குறித்து பர ப்ரஹ்மம் சேஷி யன்று என்று தேறுவதால் ஸ்வாமியின் விபூதிகளை யநுபவிப்பதற்காக ஸர்வ லோக சஞ்சாரம் என்பதும் பொருந்தாது -அது நியமன அர்த்தமாகத்தான் -ஆகவே முக்தனுக்கும் ஜகத் வியாபாரமுண்டு என்பதாகப் பூர்வ பக்ஷம் ப்ராப்தமாகிறது –

60-இதன் மேல் ஸித்தாந்தம் வருமாறு – *யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே இத்யாதி யுபநிஷத் வாக்யத்தில் ஜகத் ஸ்ருஷட்யாதி ரூபமான நியாமகத்வத்தைப் பரப்ரஹ்ம லஷணமாகச் சொல்லி யிருக்கையாலே அது பர ப்ரஹ்மத்திற்கு அஸாதாரண மானதென்று விளங்குகிறது. அஸாதாரண தர்மந் தானே லக்ஷணமா யிருக்க முடியும் ஆகவே பர பரஹ்மத்திற்கு அசாதாரண தர்மமாக ஓதப்பட்ட ஜகந் நியாமகத்வ ரூபமான ஜகதீஸ்வரத்வமானது முக்தனுக்கு ஸம்பவிக்க மாட்டாது. ஸம்பவிக்குமாகில் அது பர ப்ரஹ்மத்திற்கு அசாதாரண லக்ஷணமாக வழியில்லை -இத்யாதி ஸ்ருதிகளாலும் ஜகந் நியாமகத்வம் பர ப்ரஹ்மத்திற்கே அஸாதாரணமென்று காண்கிறது -பரமாத்மாவுக்குத் தவிர மற்றை யோர்க்கு நியாமகத்வ மில்லை யென்று ஸ்பஷ்டமாகவும் சொல்லப் படுகிறது. ஆகவே முக்தனுக்கு ஜகத் நியாமகத்வ ரூபமான ஜகதீஸ்வரத்வம் ஸம்பவிக்க மாட்டாது. * பரமம் ஸாம்ய முபைதி *என்று பரம புருஷனோடு முக்தனுக்கு வெறும் ஸாம்யம் சொல்லாதே பரம ஸாம்யாபத்தி சொல்லி யிருக்கையாலே அவனுக்குள்ள தெல்லாம் இவனுக்கும் பிராப்தமானாலொழிய பரம ஸாம்யம் நிர்வஹிக்க வழி யில்லையே என்றதற்குச் சொல்கிறோம் – யாரோட எந்த அம்சத்தில் ஸாம்யமென்று விசாரிக்குமளவில், “வித் வாந் புண்ய பாபே விதூய நிரஞ்ஜந பரமம் ஸாம்யமுபைதி” என்ற சொற் செறிவால் என்ன கிடைக்கிற தென்னில், வித்யா ஸாத்யமான யாதொரு புண்ய பாப விதூநந முண்டோ,அதனாலாகும் பலனில் ஸாம்யமென்று ஏற்படுகிறது -வித்யை யென்பது ப்ரஹ்ம ப்ராப்தி ப்ரதிபந்தகமான புண்ணிய பாப ரூப கருமத்திற்கு ப்ராயச் சித்தமானது ஏவஞ்ச, புண பாப ரூப கர்ம விதூநந ஸாத்யமான பலன் பரஹ்மாநுபவமே யென்று தேறிற்று. அதில் தான் ஸாம்யம் விவக்ஷிதமாகும். முன்னே பரம புருஷ ப்ரஸ்தாவமிருக்கையாலே அவனோடு தான் ஸாம்யமென்றும் நிச்சயிக்கப்படுகிறது. இந்த ஸாம்யத்தில் பாரம்யமாவது, ப்ரஹ்மாநுபவம் செய்யுமிடத்து தத் குணங்களிலும் தத் விபூதிகளிலும் ஏக தேசத்தையும் விடாமல் பூர்த்தியாக அநுபவிப்பதே யாம். ஆக ஸமஸ்த கல்யாண குண விபூதி விஸிஷ்ட ப்ரஹ்மாநுபவத்தில் ஸாம்யமென்று தேறிற்று -இந்த ஸாம்யம் தான் ஸ்ருதியிலும் சொல்லப்படுகிறது.ஆக முக்தனுக்கு பரிபூர்ண ப்ரஹ்மாநுபவம் ஸித்தித்த போது ஆநந்த ஸாம்யமும் இந்த ஸ்ருதியினாலேயே ஸித்தம்-ஸ ஸ்வராட் பவதி என்றதும் கர்ம வஸ்யத்வமில்லாமையைச் சொல்லுகிறத்தனை. * ஏஷ ஹ்யேவா நந்தயாதி * இத்யாதி ஸ்ருதிகளாலே முக்தனுடைய ஸத்தா ஸ்திதி ப்ரவ்ருதிகளெல்லாம் பரம புருஷாதீ மென்று தேறுகையாலும், முத்தனுக்கு ஸத்ய ஸங்கல்பத்வம் இயற்கையா யிருந்தாலும் கருமங்களினால் மறைந்திருந்த வது பரம புருஷனுடைய அநுக்ரஹத்தாலேயே ஆவிர்ப்பவிப்பதாக ஓதுகையாலும் முக்த்தைஸ்வர்யம் முழுவதும் பகவதிச்சாதீந மாய்றுகையாலே பரம புருஷனுடைய அஸாதாரண தர்மமான ஜகந் நியமந ரூப ஐஸ்வர்யம் முக்தனுக்கு இல்லை யென்று முடிந்தது.

61- இப்படி முக்தனுடைய ஐஸ்வர்யம் பரம புருஷாதீநமாகில் அந்த பரம புருஷன் தான் ஸ்வதந்த்ரனாகையாலே அவன் தனது ஸங்கல்பத்தாலே ஒரு ஸமயம் முக்தனைப் பரம பதத்தில் நின்றும் இந் நிலத்திற்குத் திருப்பி யனுப்பி விடவுங் கூடுமாகை யாலே மோஷ புருஷார்த்தமும் அநித்யமாக வேண்டி வருமே என்கிற சங்கை அடுத்தபடி யாக உண்டாகக் கூடியது. அந்த சங்கைக்குப் பரிஹாரமாக —அநா வ்ருத்திச் சப்தாத் அநாவ்ருத்திச் சப்தாத்-என்கிற சரம ஸூத்ரம் அவதரிக்கிறது. சங்கா பரிஹார ப்ரகாரம் யாதெனில்; அந்யதா ஸித்தமான ஸ்ருதி வாக்கியங்களைக் கொண்டே அறியக் கடவதான பொருளை சாஸ்த்ரம் சொன்னபடியே தான் அறிய வேண்டும். பரம புருஷனொருவனுள்னென்பதை நாம் எந்த சாஸ்தரங்கொண்டு அறிகிறோமோ அந்த சாஸ்தரமே முக்தர்களுக்கு மீட்சி யில்லை யென்பதை யுமறிவிக்கின்றது;

62- முக்தர்களுக்கு மீட்சி யில்லை யென்பதை ஸூத்ரகாரர் சாஸ்த்ரத்தைக் காட்டி ஸ்தாபித்தார். பகவானே கேட்பாரற்ற ஸ்வதந்திரன். சாஸ்த்ரத்தையும் மீறிச் செய்வதற்கு அவன் அசக்தனல்லன்-ஸ்வாதந்திரியத்தாலே ஈஸ்வரன் ஒன்று செய்யப் புகுந்தால் சாஸ்த்ரம் குறுக்கே நிற்குமோ?என்று சோத்யம் பண்ணினால் இதற்கு ஸூத்ரகாரர் சொன்ன ஸமாதானம் திருப்தியை விளைக்காது.-சங்கராசார்யரும் தம்முடைய பாஷ்யத்தில் சாஸ்த்ரத்தை யெடுத்துக் காட்டினவளவோடு நின்று விட்டார். ஸ்வாமி யெம்பெருமானார் ஆழ்வாரருளிச் செயற்கடலில் ஆழ்ந்து அரும் பெரும் பொருள்களை யறிந்தவராகையாலே அவ் வருளிச் செயல் பரிமளம் கமழ இங்கு அருளிச் செய்திருக்கும் அர்த்த விசேஷம் ஸ்ரீபாஷ்யத்திற்குச் சிகரமாக விளங்குகின்றது. அவ்வர்த்த விசேஷம் கேண்மின் ; ஈஸ்வரன் ஸ்வதந்திரனே யானாலும் உன்மத்தனல்லன், மூர்க்கனல்லன், அரஸிகனல்லன். ஸத்ய ஸங்கல்பனென்று பேர் பெற்றவன். தன்னுடைய மநோரதத்திற்கு மாறுபாடாக நடந்து கொள்பவனல்லன். ஒரு சேதநனைப் பெறுவதற்கு அப் பரம புருஷன் என்ன பாடுபடுகிறான்!எவ்வளவு க்ருஷி பண்ணுகிறான்! தெரியுமோ? அவன் ஸ்ருஷ்டி பண்ணுவதும் அவதாரங்கள் பண்ணுவதும் சேதநரை லபிக்கைக்காக வன்றோ. எவ்வளவோ தவப் பயனாக ஒரு சேதநன் வந்து சேர, அவனை லபித்த பின்பும் இழப்பனோ? என்னுமபிப்ராயத்தை இன் சுவையே வடிவெடுத்த திவ்ய ஸூக்தியாலே காட்டி யருளி சங்கா பரிஹாரத்தை மிக வழகாகத் தலைக் கட்டினார். இதில் பரம புருஷ ஜ்ஞாநிநம் லப்த்வா ” என்கிற ஸ்ரீ ஸூக்தி விந்யாஸ்மானது எம்பெருமானார் திருவுள்ளத்தில் திருவாய்மொழி யமுதக் கடல் அலை யெறிகிற படியை நன்கு காட்டுகின்றது.*யானொட்டி யென்னுள் இருத்துவ மென்றிலன்,தானோட்டி வந்தென் தனி நெஞ்சை வஞ்சித்து, ஊனொட்டி நின்று என்னுயிருள் கலந்து,இயல்வானொட்டுமோ இனி யென்னை நெகிழ்க்கவே (2747) * என்றும், வாரிக் கொண்டன்னை விழுங்குவன் காணிலென்று, ஆர்வுற்ற வென்னை யொழிய என்னில் முன்னம் பாரித்து,தானென்னை முற்றப் பருகினான்,காரொக்குங் காட்கரையப்பன் கடியனே (8621) *என்றுமுள்ள திருவாய்மொழிப் பாசுரங்களின் திவ்யார்த்த லௌரபத்தோடே ஸ்ரீபாஷ்யம் தலைக்கட்டப் பட்டிருக்கின்ற தென்பதை உபய வேதாந்த ரஸிகர்களே அறிய வல்லார்.

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விதுர நீதி-ஸ்ரீ மஹாபாரதம்-உத்யோக பர்வத்தில்–33-40 அத்தியாயங்கள்

April 21, 2025

இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸம் உப ப்ரும்ஹ்யேத்
பிபேதி அல்ப ஸ்ருதாத் வேத மாமயம் பிரதர்ஷயதி

மஹத்வம் பாரவத்யம் -மஹா பாரதம் –வேத வியாசர் உபநிஷத் கடலைக்கடைந்து அளித்த அம்ருதம்–ஸூர்ய பகவானின் புதல்வரான-யமதர்மராஜனே விதுரராக அவதாரம் -ராமோ விக்ரஹவான் தர்ம-கிருஷ்ணம் தர்மம் ஸநாதனம் -போல் தர்மமே மனிதனாகப் பிறந்தது-பரதாழ்வான் சத்ருக்ந ஆள்வான் ப்ரஹ்லாத ஆழ்வான் விபீஷண ஆழ்வான் போல் விதுர ஆழ்வான் -கண்ணனைக் கண்டவுடன் மனமுருகி -தன்னிலை மறந்து -மிக்க பரிவுடன் ஆஸனத்தில் அமர்த்திப் பழங்களைச் சமர்ப்பித்து அருளியதாலே ஆழ்வான் எனப்பட்டார் -மாண்டில்ய ரிஷியின் சாபத்தால் தர்ம ராஜாவே மனிதனாகப் பிறந்து தர்மத்தைப் போதித்ததே விதுர நீதி-

விதுர -அறிவுடையோர் -சான்றோர் என்றும் பொருள் -சந்தனு மஹாராஜருக்கும் கங்கா தேவிக்கும் பிறந்தார் பீஷ்மாச்சார்யார்-சந்தனுவுக்கும் மற்ற மனைவியான சத்யவதிக்கும் இரண்டு புதல்வர்கள் -விசித்திர வீர்யன் -சித்ராங்கதன் -இரண்டாமவன் இளைமையில் மாண்டான் – விசித்திரம் வீரனுக்கு அம்பிகா அம்பாலிகா -என்ற இரண்டு மனைவியர் -குழந்தைப்பேறு பெறுவதற்கு முன்பே விசித்திரம் வீர்யனும் மாண்டான் -நாட்டைக் காக்க புதல்வர்கள் வேண்டும் என்றும் வேத வ்யாஸாரை வேண்டிக் கொள்ள அம்பிகாவுக்கு கண் பார்வை அற்ற த்ருதராஷ்ட்ரனனும் அம்பாலிக்கு வெளுத்த பாண்டுவும் அம்பிகாவின் தாதிக்கு விதுரரும் பிறந்தார் -மூவரும் பீஷ்மாச்சார்யாரிடம் அனைத்து வித்யைகளும் கற்றனர் -பாண்டுவுக்கு குந்திதேவியும் த்ருதராஷ்ரனுக்கு காந்தாரியையும் விதுரருக்கு தேவக மன்னனின் மகளையும் மணம் முடித்து வைத்தார் பீஷ்மர் -பாண்டு அரசப் பொறுப்பேற்று மாண்டு போக த்ருதராஷ்ட்ரன் அரசாக விதுரர் மந்திரியானார் -காலத்தில் கோலத்தால் இவருடைய அறிவுத் திறனும் தர்ம சிந்தனையும் அரசனுக்குப் பிடிக்காமல் போனதே

அறிவொன்றும் இல்லாத – இப்போது இல்லை யாகில் விடுங்கோள்- விதுராதிகளைப் போலே ஜன்மாந்தர சூக்ருதத்தால் பிறந்த ஞானம் தான் உண்டோ -என்னில் அதுவும் இல்லை –

எதிரியின் உள்ளத்தை படிப்பவனே ஆபத்தைத் தாண்டுகிறான் கூர்மையான ஆயுதத்தை விட கொடியதை அறிந்தவனைக் கொல்ல முடியாது -நெருப்பு காட்டை அழிக்கும் ஆனால் வலையில் இருக்கும் எலியை எரிக்காது -முள்ளம் பன்றி சுரங்கத்தில் புகுந்து நெருப்பில் இருந்து தப்பிக்கும் நடந்து செல்பவன் நக்ஷத்ரங்களைப் பார்த்து வழி தெரிந்து கொள்கிறான் -புரிந்து நடந்து கொள் -மதி நுட்பத்தால் பாண்டவர்களைக் -வாரணாவதம் -இன்று பர்னாவா -அரக்கு மாளிகை நெருப்பில் இருந்து காத்த விதுரர் –

பக்திஸ் ச ஞான விசேஷ—ஸம் ஸ்ப்ருஸன் ஆஸனம் ஸுவ்ரே விதுர ஸ மஹா மதி –விதுர அன்னானி புபுஜே ஸூஸீநி குணவந்தி ச -தூய்மை சுவை என்றும் ஏற்றுக் கொண்டு அருளினவன் கண்ணன்

தன்னை விட பலசாலியுடன் பகை கொண்டவன் -தன் பொருள் அனைத்தையுமே திருட்டுக் கொடுத்தவன் -எதிலும் பேராசை கொண்டவன் -திருடன் -ஆகியோர் தூக்கம் வராமல் தவிப்பர் –

அப்ரியஸ்ய து பத்யஸ்ய வக்தா ஸ்ரோதா ச துர்லப-நமக்குக் கசப்பாய் இருப்பினும் நல்லதைச் சொல்பவர் கிடைப்பதும் கேட்பவர் கிடைப்பதும் அரிது -விதுரர் எந்தக் கவலையும் இல்லாமல் தர்ம ஸாஸ்த்ரம் போதிப்பதையே அறிவுரையாகக் கூறினான்

மன்னா தர்மபுத்திரர் தயை தர்ம சிந்தனை ஸத்யம் பராக்ரமம் ஆகியவை கொண்டவர் -பெரியவர்களை மதிப்பவர் -நீ அவரை காட்டுக்கு அனுப்பிவிட்டு மனநிம்மதி இல்லாமல் தவிக்கிறாய் -என்னை பண்டிதன் என்று புகழ்கிறாய் -யார் பண்டிதன் என்று கூறுகிறேன்

ஆத்ம ஞானம் -விடாமுயற்சி -துன்பம் சகிக்கும் சக்தி -தர்மத்தில் உறுதி -இவை இருப்பவனே பண்டிதன் -கோபம் மகிழ்ச்சி கர்வம் வெட்க்கம் பிடிவாதம் இவற்றால் பாதிக்கப்பட்டு தனது இலக்கிலிருந்து யார் மாறுவதில்லையோ அவனே பண்டிதன் -குளிர் வெட்பம் இன்பம் துன்பம் செல்வம் ஏழ்மை இவற்றால் எடுத்த காரியங்களில் தவறாமல் இருப்பவனே பண்டிதன் -அவன் கிடைக்க அரியதானவற்றை விரும்புவதில்லை -சிந்தித்து தீர்மானம் செய்த பின்பே கார்யங்களைத் தொடங்குவான் -தொடங்கிய பின்பும் இடையில் நிறுத்தாதவன் -நேரத்தை வீணாக்காதவன் -கார்யங்களை செய்யும் முறைகளை அறிந்து செய்பவன் -யாருடைய பேச்சை தடை இன்றி மதிக்கப்படுகிறதோ -நூல்களின் ஆரியத்தை சட்டென்று கூறுபவன் யாரோ -சான்றோர்களால் அறிவுரையை மீறாதவன் யாரோ -அவனே பண்டிதன் –

அறிவு ஓன்று
அத்தால் அறிய வேண்டியது செய்வன மற்றுமோர் தவிர்வன ஆகிய இரண்டு
அவற்றைத் செய்து பகைவர் நண்பர் அயலார் ஆகிய மூவரையும்
சாம தான பேத தண்டம் ஆகிய நான்கு உபாயங்களால் வெல்ல வேண்டும்
மேலும் அடக்கத்தால் உட்பகைவர்களான செவி வாய் கண் மூக்கு தோல் ஆகிய ஐவரை -சிற்றின்பத்தை -வெல்ல வேண்டும்
இணைத்தல் பிரித்தல் பெயர்ச்சி இருத்தல் இரு மனப் படுத்தல் சார்ந்து அடைதல் ஆகிய ஆறு செயல்முறைகளை அறிய வேண்டும்
பெண்ணாசை சூது கள் வேட்டை கடுஞ்சொல் கூறுதல் -கடும் தண்டனை அளித்தல் -தீய வழியில் பொருள் சேர்த்தத்தால் ஆகிய ஏழையும் தவிர்க்க வேண்டும் –
இதன்படி வாழ்பவன் மகிச்சியும் மனநிம்மதியும் அடைவானோ –

நல்லது ஒரு உணவை தனியே உண்ணலாகாது
எந்த ஒன்றையும் தனியாகத் தீர்மானிக்கலாகாது
தீர்த்த யாத்திரையில் தனியாகச் செல்லக் கூடாது
அனைவரும் தூங்கும் பொழுது ஒருவன் மட்டுமே முழித்து இருத்தல் கூடாது
மேல் உலகமடைய ஸத்யம் ஒன்றே போதும்
விஷம் பருகுமொருவனைக் கொல்லும்
அம்பு தைத்தால் ஒருவன் மடிவான்
அரசியல் புரட்சி ராஜ்யத்தை அழித்து பல்லாயிரம் மக்களைக் கொந்தளிக்கச் செய்யும் –
பொறுமை ஒன்றே அமைதிக்கு வழி
தர்மம் ஒன்றே அனைத்து நன்மைகளையும் அளிக்கும்
கல்வி ஒன்றே திருப்தி அளிக்கும்
அஹிம்சை ஒன்றே இன்பம் அளிக்கும்
திறமைசாலிகளுக்கு பொறுமை ஆபரணம் -பொறுமையாளிகளை கையாலாகாத்தவர் என்று உலகம் பழிக்கும் -பொறுமை ஒன்றே அனைத்தும் தரப்பினரையும் வசப்படுத்தும்
புல் இருக்கும் இடத்தில் நெருப்புப் பற்றி எரியும் -புல் இல்லாத இடத்தில் நெருப்புத் தானே அணைந்து விடும் -பொறுமை இல்லாதவன் பிறரையும் கெடுத்துத் தானம் கெடுகிறான் –

பூ மண்டலத்தில் தாழ்ந்தவர்கள் இருவர் -முயற்ச்சி இல்லாத இல்லறத்தாரும் மிகுதியாகச் செயல்படும் சன்யாசியும்
நான் யார் என்பதைத் பொறுத்துத் தான் செயல்பாடு இருக்காய் வேண்டும்
விரோதம் கொண்ட பகைவனிடமும் போர் புரியாத அரசனையும் விரோதம் கொண்டு தொண்டு செய்யாத அந்தணனையும் இவ்வுலகம் விழுங்கி விடும்
கடும் சொல் பேசாதவர் துஷ்டர்களை ஆதரிக்காதவர் இருவரையும் உலகம் கொண்டாடும்
தன்னிடம் பணமா இல்லாத போது விலை உயர்ந்த பொருளைக் ஆசை வைத்தால்-வலிமை அற்றவனாய் இருந்தும் கோபம் கொள்ளுதல் இரண்டுமே நம்மைக் குத்தும் முள்கள்
வலிமை மிக்கவனாய் இருப்பினும் பொறுமை காப்பார் -காசில்லாத வறியவனாய் இருப்பினும் இயன்ற தானம் கொடுப்பவன் -இவ்விருவரும் உலகில் புகழுடன் விளங்குவர்
நியாயமான வழியில் சம்பாதிப்பதை தகுந்தவர்களுக்குக் கொடுக்காமல் இருத்தல் -தவறானவர்களுக்குக் கொடுத்தல் -இவ்விரண்டும் அடாத செயல்களாகும் –
செல்வந்தனாக இருப்பினும் தானம் செய்யாதவர் -வறியவனாக இருப்பினும் கஷ்டங்களை பொறுத்துக் கொள்ளும் தவமில்லாதவர் ஒவ்வொருவருக்கும் தண்டனை நிச்சயம்
வறுமையினும் இயன்ற வரை உதவுபவன் வினை தொலைத்து மேலுலகை அடைகிறான் -விதை நெல் கொண்டு பாகவத விருந்தளித்த விருத்தாந்தம் –

நாம் விரும்பிய கார்யம் நிறைவேற மூன்று வழிகள் -உத்தமம் -மத்யமம் -அதமம் -இடம் நேரம் நம் ஆற்றல் இவற்றைப் பொறுத்து வழியைத் தேர்ந்து எடுக்க வேண்டும் -பிறர் சொத்தை அபஹரித்தல் -பிறர் மனைவியை விரும்புதல் -நன்மை விரும்பும் நண்பனை விடுதல் ஆகிய மூன்றும் மனிதனின் ஆயுள் அறம் புகழ் ஆகிய மூன்றையும் அழிக்கும் -காமம் கோபம் பேராசை ஆகிய மூன்றும் நரகத்திற்கு மூன்று வாசல்கள் -இவற்றில் ஓன்று இருந்தாலும் மற்ற இரண்டுமே தானே வந்து விடும் -வைராக்கியத்துடன் ஆசையைக் கட்டுப் படுத்தினால் தான் காமத்தையும் அதனால் ஏற்படும் கோபத்தையும் அடக்க முடியும் -யயாதி விருத்தாந்தம் அறிவோம் -தனது பக்தன் -தன்னிடம் வேலை செய்பவர் தன்னையே தஞ்சம் என்று சரணாகதி செய்தவர் இம் மூவரையும் கை விடவே கூடாது-

எவை உடனே பலன் தருபவை என்றும் இந்திரன் கேட்க -அதற்கு தேவகுரு பிரஹஸ்பதி -தேவைதைகளின் ஸங்கல்பம் -விருப்பம் -புத்திசாலியின் ஆற்றல் -பண்டிதரின் பணிவு -நாசம் தரும் திருட்டு ஆகிய நான்கு உடனே பலன் அளிக்கும் என்றார் -ஸ்ரத்தையுடன் கற்றல் ஆர்வத்துடன் அக்னி ஹோத்ராதிகளைச் செய்தல் -கவனத்துடன் பூஜை செய்வது-மதிப்புடன் மவ்ன விரதம் கடைப்பிடித்தல் ஆகிய நான்கும் முறையுடன் கடைப்பிடித்தால் இவ்வுலக இன்பத்தையும் பின்னர் முக்தியையும் அளிக்கும் -பசுமாட்டை அடிக்க வந்தவரிடம் முனிவர் -என் கண் பார்க்கும் ஆனால் பேசத் தெரியாது -வாய் பேசும் ஆனால் அது பார்க்காது -பார்த்தவன் பேசினால் தான் அது உண்மையாக இருக்கும் -அது முடியாதபடியா மவ்னம் காத்தேன் -என்றார் -துரத்தி வந்தவன் ஒன்றுமே புரியாமல் போக பசு காப்பாற்றப் பட்டதே -கோதாவரி ராவணனுக்கு அஞ்சி மவ்னம் காத்ததே -பேசியே கார்யத்தைக் கெடுக்கலாம் -மவ்னத்தால் எந்தக் காரியத்தையும் சாதிக்கலாம் –

அஞ்சலி அறிந்தால் அஞ்சாமல் இருக்கலாமே
அக்ரம் நயதி இதி அக்னி -ஆராதிப்பவனை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்பவர் அக்னி பகவான் -தாய் தந்தை குரு ஆத்மா அக்னி ஐவரையும் ஆராதித்தால் முன்னேறலாம் -தெவர்கள் பித்ருக்கள் மனிதர்கள் சந்யாசிகள் அதிதிகள் ஆகிய ஐவரையும் பூஜித்தால் உலகம் நிறைந்த புகழ் பெறலாம் -நாம் எங்கும் என்றாலும் நண்பர் பகைவர் உதாசீனர் -நம்மிடம் அடைக்கலம் பெறுபவர் -நமக்கு அடைக்கலம் தருபவள் ஆகிய ஐவரும் பின் தொடர்வர் -தண்ணீர் நிறைந்த பானையில் ஒரு சிறு ஓட்டை விழுந்தாலும் தண்ணீர் முழுவதும் வெளியேறுவது போல் கண் காது மூக்கு நாக்கு தோல் ஆகிய ஐந்து புலன்களில் ஓன்று பாதை மாறினாலும் மற்ற நான்கு அதைப் பின் தொடர்ந்து தவறான பாதையில் செல்லும் -விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை -ஸூ முகன் -பெரிய திருவடி -பசிக் கோபத்தால் பராமனையே எதிர்த்த வ்ருத்தாந்தம் -நாம் புலன்கள் எவ்வளவு கெடுக்கும் என்ற உணரவே நடத்திக் காட்டினார் –

ஆறு தெரிந்தால் ஆறி இருக்கலாம் –
உண்மை தானம் சோம்பலின்மை பொறாமையின்மை பொறுமை தைர்யம் -இவற்றை விடாதவன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான் -நோயற்று இருத்தல் -நல் வெளிப்படுத்தும் மனைவி -மனத்துக்குப் பிரியமான சொற்களைப் பேசும் மனைவி-சொன்னதைக் கேட்க்கும் மகன் – செல்வத்தைக் கொடுக்கும் கல்வி -ஆகிய ஆறும் கிடைப்பதற்கு அரியவை -ஸூ தர்சனர் -பார்க்க அழகாக இருப்பவர் நல்ல வழியைக் கொடுத்து அருள்பவர் -ஜ்வாலா நேமி அரம் கும்பம் என்னும் நடு அச்சாணி -மையத்தில் இருக்கும் பகவான் -ஆகிய ஐந்து பகுதிகள் கொண்டவை -பொறாமை -அளவுக்கு மிஞ்சிய இரக்கம் கொள்பவர் -எவ்வளவு பொருள் சேர்த்து மகிழ்ச்சி இல்லாதவன் சடடென்று கோபம் கொள்பவன் -எதிலும் ஸந்தேஹப் படுபவர்-பிறரை அண்டியே பிழைப்பவர் ஆகிய அறுவரும் துயரத்தையே அடைவர் -பசுக்கள் பிறரிடம் சேவை செய்பவன் உழவு மனைவி கல்வி தனக்கும் சமமில்லாதவரிடம் நட்பு -இவற்றை மதிப்புடன் பராமரிக்க வேண்டும் -இல்லாவிடில் அழிந்து விடுவர் –

ஸப்த ஸமுத்ரங்கள் -ஸப்த கன்னிகைகள் -ஸப்த லோகங்கள் -ஸப்த ரிஷிகள் -ஸப்த மராமரங்கள் -ஏழுக்கு தனிச்சிறப்பு -சூது -கள் பெண் கொடுமை பிராணி ஹிம்ஸை பேராசை பொய்ம்மை கோபம் ஆணவம் பகைமை காமம் -இவற்றைக் கைவிடாதவன் சக்தியுள்ள அரசனாக இருந்தாலும் அழிவைத் தேடிக் கொள்வான் –
பரீக்ஷித் பத்து இடங்களை கலிக்கு ஒதுக்கினான் -அவை -பெண்களை அவமதிக்கும் இடம் -பிராணி வதை நாடாகும் இடம் -கள் குறிக்கும் இடம் -சூதாடும் இடம் -தங்கத்தில் அதிக ஆசையுள்ள இடம் -காமம் கோபம் பகை பொய்மை ஆணவம் -இவற்றின் அருகில் நாம் செல்லா விட்டால் கலியுகத்தில் வாழ்ந்தாலும் அதன் பாதிப்பு இல்லாமல் இருக்கலாம் -நாம் எப்படிப் வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தே கலியுகமும் க்ருதயுகமாகலாம் -க்ருதயுகமும் கலியுகமாகலாம் –

திக்கு எட்டும் புகழோடு வாழ -நல்ல அறிவு -நற்குடியில் பிறப்பு -புலனடக்கம் -நூல்களில் கேள்வி அறிவு -உடல் வலிமை -அதிகம் பேசாது இருத்தல் -சக்திக்குத் தக்கபடி தர்மம் செய்தல் -செய்ந்நன்றி அறிதல் -ஆகியவை கிடைத்தற்கு அறிய பண்புகள் -திருவடியை ஆலிங்கனம் செய்து பெருமாள் ஆம் பரிசு வழங்கினார் அன்றோ –

நம் வாழ்க்கை முறை -நற்பண்புகள் -ஞானம் பக்தி ஆகியவை கிரஹங்களின் பாதிப்பை நன்கு கட்டுப் படுத்தும் -நமது உடல் இரண்டு கண்கள் இரண்டு காதுகள் மூக்கு த்வாரங்கள் இரண்டு வாய் ஓன்று மலம் காலம் கழிக்கும் இரண்டு த்வாரங்கள் -ஆகிய ஒன்பது வாசல்கள் கொண்ட சரீரம் -ஒன்பது வாசல்களும் திறந்தே இருக்கிற படியால் ஆத்மா எளியேறுவது எளிது -அதற்குள் ந்தப் வீட்டில் வாழ்ந்து சாதிக்க வேண்டியவற்றை முடிக்க வேண்டும் -i-இதில் ஆத்மா ஒலி தொடு உணர்ச்சி உருவம் சுவை மணம் ஆகிய ஐந்தும் சாஷிகளோடே வசிக்கிறார் -இதம் சரீரம் கௌந்தேய க்ஷேத்ரம் இத்யபீதியதே ஏதத் யோ வேத்தி தம் ப்ராஹூ ஷேத்ரஞ்ஞ இத் தத் வித-உடல் விளை நிலம் -ஆத்மா என்னும் உழவன் இதை உணர்வது நல்ல பயிர்களை -பண்புகளை -விளைக்க வேண்டும் -இப்படி பல உடல்களும் ஆத்மாக்களும் கொண்ட இந்த ஸம்ஸாரமே ஒரு தலைகீழான அஸ்வத்த மரம் -இதைப் படைக்கும் ப்ரஹ்மா மேலே இருக்கிறபடியால் இதம் வேர் மேலே இருக்கிறது -நாமும் நம் சந்ததிகளுமாகிற கிளைகள் கீழே உள்ளன -ஸத்வம் ரஜஸ் தமஸ் முக்குணங்கள் நீராகவும் எருவாகவும் கொண்டு வளர்க்கப் படுகிறது-கர்மங்களே விதைகள் -ஸப்தாதி -வளர்க்கும் முளைகள் -வைராக்யம் என்னும் கோடாரி கொண்டு வெட்டி முக்தி அடையாளம் –

விட வேண்டிய தீய பத்து பண்புகள் -குடியினால் மதி மயங்கினவன் -கவனம் இல்லாதவன் -பைத்தியம் களைப்படைந்தவன் -கோபக்காரன் -பசி மிக்கவன் -பரபரப்பவன் -பேராசை கொண்டவன் -அச்சமுற்றவன் -காமத்துக்கு வசப்பட்டவன் -இவர்களுடன் அறிவாளர்கள் பழக மாட்டார்கள் -இப்பத்தையும் விட்டு ஒழித்தால் தர்மத்தை அறியலாம் -தாரை லஷ்மண இடமும் கிம் கோப மூலமும் மனுஜேந்த்ர புத்ர-அரசனான உனது தந்தை சக்ரவர்த்தி பரபரப்போ கோபமோ ப்பட்டிருந்தால் 60000 ஆண்டு அரசாண்டு இருக்க முடியுமா -விச்வாமித்ரரும் காமத்துக்கும் கோபத்துக்கும் வசப்பட்டாரே -இரண்டு பகைவர்களையும் வெல்ல வேண்டுமே –

பெரிய நம்பியின் பெண்ணுக்கு சீதன வெள்ளாட்டியாக முதலியாண்டான் அனுப்பிய விருத்தாந்தம் -வேதாந்த விசாரம் வர சட்டென்று பதில் கூறி ஐயம் தீர்க்க -அங்கு கூடி இருந்தவர் இவரது விநயம் கண்டு வியந்தனர் –
வங்கி புரத்து நம்பிக்கை திருவாராதனம் செய்யும் முறையை உடனே உபதேசிக்காமல் கூரத்தாழ்வான் ஹனுமந்த தாஸர் இவர்களுக்கு உபதேசிக்க வாசலில் வந்த நம்பியைக் கண்ட ராமானுஜர் அச்சமும் வெட்கமும் அடைந்த -லோக நாயகனான திருமால் கண்ணனாக அவதரித்து வெண்ணெய் திருடி யசோதையிடம் பிடிபட்ட போது உண்மையில் அச்சமும் வெட்கமும் பட்டிருப்பாரோ என்ற ஐயம் வெகுநாட்களாக இருக்க இப்பொழுது உம்மைக் கண்டதும் நான் பட்டதால் புரிந்து கொண்டேன் என்றாராம் –

ராவணனை இன்று போய் நாளை வா -மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளித்தாலும் திருந்தவில்லை-சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன்-ஆழ்வார் -ஒரு செயலில் வஞ்சனையால் நிறைவேறும் என்றால் அத்தைச் செய்யக் கூடாது-செய்தாலும் அதன் பலன் நிலைக்காது -நேர்மையான வழியில் செய்தால் நிறைவேறாது என்றாலும் அத்தைச் செய்ய வேண்டும் -நாளடைவில் பயன் தரும் -அரசன் பதவி லாபம் நஷ்டம் கஜானா தேசம் தண்டனை இவற்றில் அளவை அறியவில்லையோ அவன் நிலைக்க மாட்டான் –

தேனீ தனக்கு வேண்டிய அளவு தேன் ஒரே பூவில் கிட்டும் என்றும் உறிஞ்சினால் தேனும் கிடைக்காத பூவும் பட்டுப் போகும்-பல பூக்களில் இருந்து துளித்துளியாக சேகரிக்க வேண்டும் -மாலை தொடுக்க பூக்களை மட்டும் பறிப்பான்-செடியை வெட்ட மாட்டான் -இலக்கு எதுவோ அதற்குத் தக்க செயலில் இறங்க வேண்டும் -ஒரு பொருளைக் உரியவர்க்கும் பகிராமல் நீயே கொள்ள நினைத்தால் அதை முழுவதுமாக இழப்பாய் -கிட்டாதாகில் வெட்டென மறக்க வேண்டும் -பேராசைப்பட்டு பெரு முயற்சி செய்தாலும் நிறைவேறாது -பாஞ்ச ஜன்யம் ஹ்ருஷீ கேச தேவதத்தம் தனஞ்சய ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -இலக்கு தார்மீக முறையில் இருக்க வேண்டும் -கருத்து இலக்கில் இருக்க வேண்டும் -இலக்கை என்றும் வரை பின்னால் மறைந்து இருக்கும் ஆபத்தையும் நோக்க வேண்டும் –

செல்வம் கல்வி குடிப்பிறப்பு ஆகியவை ஆணவத்துக்கு வழி கொடுக்கும் முக்குறும்புகள் -அவற்றை அறுத்து வென்றவர் ஸ்ரீ கூரத்தாழ்வான் -பொறாமை ஆணவம் இரண்டுமே ஒழுக்கத்தைக் கெடுக்கும் -ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்பட்டும் -அழகு புகழ் இவையும் குறும்புகள் -ராமானுஜரின் திருவடி இணைகளே -நமது ஆச்சார்யரே -விலை மதிப்பில்லாத தங்கம்

உடல் ஒரு தேர் -ஐம்புலன்கள் குதிரைகள் மனஸ் கடிவாளம் -ஜீவாத்மா தேரோட்டி -புலன் அடக்கம் இல்லாமையால் மற்ற சிறப்புக்களை மறைத்து விடும் -உனது புலன்களாலேயே நீ வீழ்ந்தாய் என்றாள் மண்டோதரி -மனம் தறி கெட்டு ஓடிஏ பகுத்தறிவு என்னும் அம்பு கொண்டு அடக்க வேண்டும் -புலன் அடக்கம் இல்லாதவர்களோடே சேர்ந்து மற்றையோரும் கெடுவர் -காய்ந்த விறகோடே சேர்ந்து இருக்கும் ஈர விறகும் எரியுமே -புலன்களைக் கொண்டே நல்ல கார்யங்களையுமே சாதிக்கலாம் -அடக்காமல் நாமும் வீழுவோம் –

மவ்னம் பேச்சை விட வலிவானது –லஷ்மீ வஸதி ஜிஹ்வாக்ரே -ஜிஹ்வாக்ரே மித்ர பாந்தவா -ஜிஹ்வாக்ரே பந்தனம் பிராப்தம் -ஜிஹ்வாக்ரே மரணம் த்ருவம் -நாக்கு நுனியில் லஷ்மீ தேவி வஸிக்கிறாள் -நாக்கு நுனியில் உறவினரும் நண்பர்களும் வாழ்கிறார்கள் -நாக்கு நுனியில் தான் கட்டுக்குள் சிக்குகிறோம் -நாக்கு நுனியில் மரணம் திண்ணம் -நன்மை தீமைகளை பலவும் நாக்கு நுனியில் தான் இருக்கின்றன -ராமர் தமது நன்மையைக் கருதியே வானர முதலிகள் பேசுகின்றார்கள் என்றும் உணர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்ட பின்பும் –மமாபி ச விவிஷாஸ்தி காகித பிரதி விபீஷணம் -வேண்டுகோள் விடுக்கும் த்வனியில் பேச -அனைவரும் உருகிப் போக -பேசுவதை விட மவ்னமே கார்யங்களைச் சாதித்துத் தரும் என்றும் காட்டி அருளினார் –

கங்கையில் நீராடும் புண்ணியத்தை விட தர்மத்தில் நம்பிக்கை நேர்மை ஆகியவை சிறந்த புண்ணியத்தைத் தரும் -நாடு நிலையில் இருந்து பிறழாமல் இருப்பதே நேர்மை -மனத்தால் நினைத்ததையே பேசி-பேசினத்தையே செயல்படுத்தலாகிய ஆர்ஜ்வமே நேர்மை-யமோ வைவஸ்வதோ ராஜா யஸ் தவைஷ ஹ்ருதி ஸ்திதஸ் தேந சேத விவாதஸ்தே மா கங்காம் மா குரூன் கம -மநு –தர்மத்தின் வழி நடப்பவரும் நம்பிக்கை இல்லாதவரும் -இருவருமே கங்கையை நீராட வேண்டாமே -கங்கையில் நீராடும் புண்ணியத்தை விட தர்மத்தில் நம்பிக்கை நேர்மை ஆகியவை சிறந்த புண்ணியத்தைத் தருமே –

கேஸிநீ என்னும் அரசகுமாரியின் ஸ்வயம்வரம் -ஸூதன்வா அந்தணப் பண்டிதனும் -பலசாலியான அசுரனான விரோசனனும் வர -யார் பெரியவன் போட்டி வர உயிரையே பயணம் வைக்க -ப்ரஹ்லாதனையே தீர்ப்பு சொல்லச் சொல்ல -தவறான தீர்ப்புச் சொன்னால் முதல் மனைவி இருக்கும் பொழுது -மற்ற ஒருத்தியை மணந்தால் அவளுக்கு வரும் துக்கம் போலவும் -சூதாட்டத்தில் அனைத்தும் செல்வங்களையும் இழந்தவன் துக்கம் போலவும் -துன்பம் பட வேண்டும் -ஆடு விஷயத்தில் பொய் சொன்னால் ஐந்து தலைமுறை முன்னோர்களையும் -பசு விஷயமாக பொய் சொன்னால் பத்து தலைமுறை முன்னோர்களையும் -குதிரை விஷயமாக பொய் சொன்னால் நூறு தலைமுறைகளுக்கும் -மனித விஷய பொய் சொன்னால் பின்வரும் அனைத்தும் தலைமுறைகளுக்கும் நரகத்தில் விழ வேண்டி வரும் -மகன் என்றும் பார்க்காமல் ஸூதன்வா -தான் சிறந்தவன் என்றும் தீர்ப்பு சொல்ல -அவரைப் பாராட்டி உனது மகனின் உயிர்க்கு ஒன்றுமே வாராது -அவரே கேசினியை மணந்து கொள்ளட்டும் என்றான் -அதே போல் த்ருதராஷ்ட்ரா-பிள்ளைக்காகப் பரிந்து பேசி நடுநிலை தவறினால் உங்கள் சொத்து அனைத்தையுமே இழப்பாய் -நேர்மை மாறாவிடில் எல்லாரும் வாழ்வார்கள்

அபர் யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபி ரக்க்ஷிதம் பர் யாப்தம் த்விதம் ஏதேஷாம் பலம் பீமாபி ரஷிதம் -அஞ்சி துரியோதனன் வார்த்தை -தஸ்ய ஸஞ்சயன் ஹர்ஷம் குரு வ்ருத்த பிதா மஹா -அச்சம் போக்க பீஷ்மர் சங்கு ஊதினார் -தைர்யத்துக்கு உடல் பலம் மட்டுமே போதாது -ஆத்ம பலமும் தர்ம சிந்தனையும் வேண்டும் –

மூப்பு அழகை அழிக்கும் -ஆசை தைரியத்தையும் -மரணம் உயிரையும் அழிக்கும் -பொறாமை தர்ம வழி நடப்பதையும் கோபம் செல்வத்தையும் தீயவனுக்குத் தொண்டு செய்தல் நல்ல பண்புகளையும் -காமம் வெட்கத்தையும் அழிக்கும் -ஆணவம் எல்லாவற்றையும் அழிக்கும் -மங்களமான செயல்களால் லஷ்மீ உத்பத்தி ஆகிறாள் -தைர்யம் மற்றும் நம்பிக்கையால் செல்வம் வளர்கிறது -சாதுர்யத்தால் செல்வம் நிலை பெறுகிறது -பணிவால் செல்வம் வேரூன்றுகிறது -ஆணவம் இல்லாமல் பக்தியுடன் இருப்பவர்களுக்கு பொருத்தமான ஒளியும் பொறுமையும் திறலும் புகழும் நல்ல ஞானமும் செல்வமும் பிறக்கும் -பின் வளரும் –
லஷ்மீ கடாஷித்தால் –ரதிர் மதி ஸரஸ்வதீ த்ருதீ ஸம்ருத்தி ஸித்தி ஸ்ரீய-
வக்த்ராப்ஜே பாக்ய லஷ்மீ
கரதல கமலே சர்வதா தான லஷ்மீ
தோர் தண்டே வீர லஷ்மீ ஹ்ருதய சரசிஜே பூத காருண்ய லஷ்மீ
கட்காக்ரே சௌர்ய லஷ்மீ நிகில குண கணாடம்பரே கீர்த்தி லஷ்மீ
சர்வாங்கே சௌம்ய லஷ்மீ மய து விஜயதாம் சர்வ சாம்ராஜ்ய லஷ்மீ

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே
வருஷார்த்தம் அஷ்டவ் ப்ரயதேத மாஸான நிஸார்த்தம் அர்த்தம் திவசம் யதேத வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந பரத்ர ஹேதோ இஹ ஜன்மநா ச
-பெரியாழ்வார் -வல்லபதேபன் பொற்கிழியை வென்ற வ்ருத்தாந்தம் -நித்தியமான ஆத்மாவின் ஆத்மாவின் இப்பொழுதே நற்செயல்களைச் செய்ய உறுதி வேண்டும் –

இனிய வாழ்க்கைக்கு இனிய பேச்சு வேணும் -அத்ரி முனிவர் அநஸூயா தேவிக்கு மகன் தத்தாத்ரேயர் -மஹா விஷ்ணுவின் கிருதயுக அவதாரம் -நம் குற்றங்களை பெருமாள் இடம் விண்ணப்பம் செய்ய நேரமில்லாததால் -நமக்குத் பதிலும் குற்றங்களைச் சொல்லுவர் மேல் க்ருதஜ்ஜை வேண்டுமே – உண்மையையே பேச வேண்டும் அதிலும் பிரியமானவற்றையே பேச வேண்டும் -அதிலும் தர்மங்களையே பேசுவது சாலச் சிறந்தது

ஆரோக்யமான மனம் ஆரோக்யமான உடலுக்குள் முக்கிய காரணம் -சிதா தஹதி நிர்ஜீவம் சிந்தா ஜீவந்த மப்யஹோ -நெருப்பு உயிர் அற்ற உடலைக் கொளுத்தும் -சிந்தை கவலை உயிருடன் இருப்பவனையே கொளுத்தும் -நல்லறிவு மட்டுமே கவலையைப் போக்கும் -பற்று குறைந்தால் கவலை நீங்கி உத்ஸாஹம் அடைவோம் -கல்வி தர்மம் யுத்தம் புண்ணியம் தவம் இவை பெரும் இன்பத்தைக் கொடுக்கும் –

தவம்- புலனடக்கம்- வேதங்களைப் பயின்று பகவானை அறிதல் -தேவபூஜை செய்தல் -சிறப்பான திருமணம் -தினம் தோறும் அன்ன தானம் -நல்ல ஒழுக்கம் -இவை எழும் இருந்தால் தான் உயர்ந்தவன் -அன்னதானம் செய்து பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டும் என்று விதித்து திருக்கல்யாண பண்ணிக் கொண்ட வ்ருத்தாந்தம் -இதுவே உயர் குலம்

அனைவரும் அவன் உறுப்புக்கள் ஆனபடியால் யாரும் பகைவர்கள் அல்லர் -அனைவரும் நண்பர்களே -கந்தாடை தோழப்பர் -நம்பூர் வரதாச்சார்யரான நம்பிள்ளை -இருவரும் ஒருவருக்கு ஒருவரே ஷாமணம் பண்ணிக் கொண்ட வ்ருத்தாந்தம் –
உள்ளத்தில் ஓன்று வைத்துக் புறம் வேறே ஒரு மாதிரி நடந்தால் நீயே உன்னை எதிர்க்கிறாய் -அது அச்சம் அளிக்கும் -அது கவலையாக மாறும் -மன அமைதி உண்டாக்க சிறந்த கல்வி தவம் புலனடக்கம் பேராசையை ஒழித்தல் இவை தவிர வேறே வழி இல்லை -பயன் கருதாது தொண்டு செய்து ஒரே நோக்கக்கூடு செயல்பட்ட திருவடிக்கு -நடுக்கடலும் ஆழ் மணலும் போல் அமைதியாக-விருப்பு வெறுப்புக்களை இல்லாமல் மன அமைதி எளிதிலே கிட்டிற்று அந்தோ

ஒற்றுமையே வலிமை -எரிகின்ற கட்டை தனித்தனியே இருந்தால் புகை வரும் -கூட்டமாக எறிந்தாள் பற்றிக்கொண்டு எரியும் -தனிமரம் தோப்பாகாது -ஸூலபா புருஷா ராஜன் ஸததம் ப்ரிய வாதிந அப்ரியஸ்ய து பத்யஸ்ய வக்தா ஸ்ரோதா ச துர்லப-விபீஷணன் ராவணனுக்கு உபதேசம் -தனித்து நின்ற மரங்கள் வெள்ளத்தில் விழ கூட்டமாக இருந்தவை தப்பிற்றன -பணிவும் வணக்கமும் வேண்டும் -தாமிரபரணி வெள்ளத்தில் நாணல் நீர் வஞ்சிக்கொடி சாயாமல் இருக்க பெரிய மரங்கள் வேரற்று விழுந்தனவே

ஆணவம் தராதரம் இல்லாமல் அதிகமாக பேசுதல் த்யாஜ்யம் இல்லாமல் இருத்தல் -கோபம் கொள்ளுதல் -சுய நலத்தால் தன்னையே பேணுதல் நண்பர்களை ஏமாற்றுதல் இந்த ஆறும் மனிதனை அழித்து விடும் என்றும் யமன் சொல்லுகிறார் என்றார் விதுரர் -தியாகம் உயர்த்தி விடும் என்பதை ஓர் ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா-உண்மையாகப் புகழ்ந்தான் குகன் -த்யாகேனைகே அம்ருதத்வ மாநசு -தியாகம் ஒன்றாலேயே முக்தி அடையாளம் -வேதங்கள் பறை சாற்றுகின்றன -மருந்தும் வைத்தியமும் பிடிக்காதாகிலும் நோட் தீரக் ஆசைப்படுவர் -உனது கவலை தீர உரிய மருந்தை நான் கூறினால் உன்னால் ஏற்க முடியவில்லை -சிந்தித்துப்பார் -என்றார் விதுரர் –

உனது புதல்வர்கள் காட்டுக்கு ஒப்பு -பாண்டவர்கள் புலிக்கு ஒப்பு -புலி இருந்தால் தானே காட்டுக்குப் பாதுகாப்பு -தர்மத்தில் இருந்து செல்வம் விலகாது -செல்வமும் தர்மமும் வெவ்வேறு பாதைகள் அல்ல -அறத்தைக் கடைப்பிடித்து செல்வத்தைச் சேர்க்கவும் காக்கவும் வேண்டும் -தர்மமே செல்வத்துக்குப் பாதுகாப்பு -புத்தி குடும்பம் செல்வம் நண்பர் தோள் ஆகிய ஐந்தும் பலன்கள் -தோள் வலிமையை மட்டுமே நம்பி உன் புதல்வர்கள் ஆணவம் கொள்கிறார்கள் -கற்றது கைமண் அளவும் கல்லாதது உலகளவு என்றும் புரியாமல் உன் மகன் செய்வதும் நன்மையில் முடியாத -அளவோடு உண்பவனுக்கு ஆரோக்யம் ஆயுள் பலம் ஸூகம் மக்கட்பேறு பெரும் தீநீ உண்பவன் என்ற அவப்பெயர் நீங்குதல் ஆகிய ஆறு நன்மைகளும் உண்டாகும் –

காஷாய உடை தரிப்பதால் ஸந்நியாஸி யாக மாட்டான் -கோபமற்று -கல்லையும் பொன்னையும் சமமாக மதித்து -துயரமற்று -நட்ப்போ பகையோ பாராமல் -புகழ்ந்தாலும் இகழ்தலும் கவலை அற்று -விருப்பு வெறுப்பு அற்று -பற்றற்று -இருப்பவன் இல்லறத்தில் இருந்தாலும் ஸந்நியாஸியே -நம்பத் தக்காதவனை நம்பாதே -நம்பத் தக்கவனையும் அதிகமளவு நம்பாதே -சான்றோர்களால் மதித்து நடக்க வேண்டும்

எவன் நண்பன் இல்லையோ – எவன் நண்பனாக இருப்பினும் பண்டிதன் இல்லையோ -பண்டிதனாக இருப்பினும் மனத்தை கட்டுப் படுத்தாதவனாக இருப்பாரிடம் ரஹஸ்யங்களைப் பேசாதே -அனுபவம் மிக்கவர்களிடமே ஆலோசனை செய்ய வேண்டும் -த்ருவன் மகன் வேணன் -தீய பண்புகளுடன் மக்களைத் துன்பறுத்த பூமித்தவி அனைத்தும் செல்வங்களையும் மறைக்க -நாடே அவதிப்பட -குல குருக்கள் அவனை அழித்து அவன் உடலில் இருந்து ப்ருது என்பவனை உருவாக்க -பூமி தேவி பசுவின் உருவில் நிற்க -ரிஷிகள் தேவர்கள் பித்ருக்கள் தொடக்கமான பலரும் வேதம் அன்னம் மூலிகைகள் முதலான பல பொருள்களையும் கறந்து பெற்றார் -கல்வியால் பண்புகளால் குடிப்பிறப்பால் வயதினால் யார் பெரியவர்களாக உள்ளாரோ அவற்றைத் முட்டாள்கள் மதிக்க மாட்டார்கள் -பயனுள்ள காரியங்களில் ஈடுபட்டு பயனற்ற செயல்களில் விலகி இருப்பவன் அறிவாளி

சிலர் தானத்தாலோ இனிய பேச்சாலோ மந்திரத்தாலோ மூலிகையினாலோ பிரியவராக இருப்பர் -நிர்ஹேதுக பிரியம் நிலைத்து இருக்கும் -ஸத்யேந லோகான் ஜயதி தீநாந் தாநேந ஜயதி குரூன் ஸுஸ்ஸுரூஷயா வீர தநுஷா யுதி ஸாத்ரவாந் -ஸர்வருக்கும் ஸர்வ காலமும் மனத்துக்கு இனியான் -எந்த வளர்ச்சி பிற்காலத்தில் தீமை தருமோ அது வளர்ச்சியே அல்ல -எந்தத் தேய்தல் பிற் காலத்தில் வளர்ச்சியில் முடியுமோ அதுவே உண்மையில் வளர்ச்சி -உனது பிள்ளைகளை உண்மையான வளர்ச்சியைத் தேடச்சொல் என்றார் விதுரர் –

நீ பாண்டவர்களை அரசில் அமர்த்தியானால் இப்போதே உன் பிரஜைகளும் தெய்வமும் உன்னை மன்னிப்பர் -வல்மீகி வழிப்பறி செய்பவராக இருந்தாலும் ராம நாம ஜபத்தால் திருந்தி உலகம் புகழும் ஸ்ரீ இராமாயணம் இயற்றி அருளினார் -கடலில் விழுந்த பொருள் இழந்ததே -திரும்பக் கிடைக்காதே – சான்றோர்களிடம் அடிபணிந்து உபதேசம் பெறாதவன் பேசுவது வீண் -புலனடக்கம் இல்லாதவனின் ஸாஸ்த்ர அறிவு வீண் -எரியாத நெருப்பில் -சாம்பலில் -பண்ணப்பட்ட ஹோமம் வீண் -உன் மகன் கூடா நட்பு கொண்டு வீணாகிறான் -யார் இவருடைய மனமும் அறிவும் ரஹஸ்யங்களும் தர்மத்துக்கு விரோதம் இல்லாமல் ஒத்துப் போகிறதோ அந்த நட்பே நிலைக்கும்

நடாதூர் ஆழ்வானின் திருக்குமாரர் வாத்ஸ்ய வரதர் -திருவெள்ளறை விஷ்ணு சித்தர் என்னும் எங்கள் ஆழ்வான் இடமும் ஸ்ரீ பாஷ்யம் உபதேசம் கேட்டு வர – நான் செத்து வாரும் -அடியேன் வந்திருக்கிறேன் -நான் அஹங்கார அடையாளம் -மாறி அடியேன் -என்றதும் ஆச்சார்யர் மகிழ்ந்து ஸ்ரீ பாஷ்யம் கற்பித்து அருளினார் -கற்றபின் நிற்க அதற்குத் தக-கற்றதைப் பணிவுடன் கடைப் பிடிக்க வேண்டும் –

இங்குள்ள பகவத் தொண்டர்கள் விண்ணுளாரிலும் சீரியர் எனப்படுவர் -யார் தர்மத்தை மீறாமல் -மனித நேய ஒழுக்கத்தைத் தாண்டாமல் -அப்படி தெரியாமல் தாண்டினால் வெட்கப்படுபவனாய் -மென்மையான உள்ளம் கொண்டவனாய் அஹிம்சையைக் கடைப்பிடிப்பவனாய் உள்ளானோ அவன் எங்குப் பிறந்தாலும் சிறந்தவர் களே -அவனைச் சான் றோரும் போற்றுவர் -குறும்பறுத்த நம்பி -தொண்டைமான் சக்ரவர்த்தி விருத்தாந்தம் அறிவோம் -ஒருவன் எப்படிப்பட்டவன் என்றும் முதலில் நம் புத்தியால் அறிய வேண்டும் -பின் அனுபவத்தால் பலமுறை ஆராய வேண்டும் சில நல்லவர்களிடத்திலும் அவரைப் பற்றி கேட்க வேண்டும் -இறுதியில் நம் கண்ணாலே பார்த்துக் முடிவும் செய்ய வேண்டும் -எங்கு பிறந்தார் என்றும் பாராமல் அவனுடைய பண்பு ஞானம் பக்தி இவற்றையே பார்க்க வேண்டும் –

பாண்டவர்கள் வஞ்சனையால் இழந்த ராஜ்யத்தை நியாயமான வழியில் போரிட்டு மீட்க்கப் பார்க்கிறார்கள் -வெற்றி உறுதி -உன் பிள்ளைகள் நியாயமற்ற வழியில் அடைந்த அரசைத் தக்க வைக்கப் பார்க்கிறார்கள் -தோல்வி உறுதி -இந்திரன் இழந்த செல்வதை த்ரிவிக்ரமனாய் தன்னதாக்கிக் கொண்டு மீண்டும் கொடுத்து அருளினான் -இன்றும் இழந்த சொத்தை மீட்கவோ தொலைத்த பொருளைக் கண்டு பிடிக்கவோ ஸூந்தர காண்டம் பாராயணம் செய்வதும் மரபில் உள்ளது -யார் ஒருவன் கடந்த காலத்துச் செயல்களில் மிச்சம் இருப்பதைக் நினைவில் கொள்கிறானோ -நிகழ் காலத்துச் செயல்களை முடிப்பதில் உறுதியுடன் இருக்கிறானோ -வரும் காலத்து ஆபத்துக்களைப் போக்க வழிகளை அறிந்து வைத்திருக்கிறானோ அவன் செல்வத்தை இழக்கவே மாட்டான் -நடந்து முடிந்தவைகளால் அனுபவமும் -நடப்பவைகளில் ஊக்கமும் -நடக்கப் போவதில் எச்சரிக்கையும் இருக்க வேண்டும் –மனத்தாலும் மொழியாலும் மெய்யாலும் எதில் ஒருவன் இடைவிடாமல் ஈடுபடுகிறானோ அந்தக் காரியமே அவனைத் தன பாக்களில் இழுத்து விடும் -ஆகவே ஒருவன் நல்ல செயல்களிலேயே முக்காலத்திலும் ஈடுபட வேண்டும் -சக்தி இல்லாதவன் அனைவரிடத்திலும் பொறுமையுடன் இருப்பான் -சக்தி இருப்பவன் தர்மத்துக்காகப் பொறுமையுடன் இருப்பான் -யார் பார்வையில் வேற்றுமை இல்லையோ அவரிடம் பொறுமை காப்பதே நமக்கு நல்லது –

ஊக்கமே தவம் -தர்மத்தின் வழியில் நடந்து விடாமுயற்சியுடன் ஒரு செயலில் ஈடுபட்டால் அதற்கு தெய்வம் துணை நிற்கும் –மனத் தளர்ச்சி இல்லாமல் ஊக்கத்துடன் உழைப்பதே செல்வம் லாபம் சுபம் ஆகியவற்றுக்கு மூலமாகும் -ஒன்றி ஓன்று உலகம் படைக்கிறான் அன்றோ -தவறான வழியில் சம்பாதித்த பொருள்களைக் கொண்டு செய்யும் யாகம் ஹோமமும் பலனைத் தர மாட்டாவே -யோகிகளுக்கு தவமே வலிமை -வேதம் கற்றோருக்கு வேதமே வலிமை -கொடியவர்களுக்கு ஹிம்ஸையே வலிமை -நல்ல குணசாலிகளுக்கு பொறுமையே வலிமை –

ஆச்சார்ய தேவோ பவ -பகவான் அருளும் குரு மூலமே கிட்டும் -அறிவிலி கூட குரு பக்தியால் ஞானம் ஆயுள் புகழ் வலிமை ஆகியவை பெற்று முக்தி யடைகிறான் -மன்னா நீயும் வேத வியாஸரிடம் பக்தியுடன் இரு -அவர் சொல்லை மீறாதே -விலங்கோ மனிதனோ பறவையோ அனைவருமே ஆச்சார்யன் கடாஷித்தால் நன்மை அடைகின்றனர்

நல்லவன் பின் நின்றாலே பெரு -விபீஷணனுடன் வந்த நால்வரும் விசாரணை இல்லாமல் ஏற்கப்பட்டனர் அன்றோ -காம சுகத்தை அனுபவித்து காரணத்தை வெல்ல முடியாத -விறகுகளை மேலே மேலே போட்டு நெருப்பை அணைக்க முடியாத -தர்ம புத்ரன் இப்போதும் உங்களுக்கு நன்மையையே நினைக்கிறான் -இது புரியாத உன் பிள்ளைகள் அவனுக்குக் கெடும் நினைத்துத் தங்களுக்கே தீமை தேடிக் கொள்ளுகிறார்கள் -பூமியின் செல்வம் எல்லாமே ஒருவனே அனுபவிப்பதற்கு இல்லை என்று புரிந்தவன் நிம்மதி அடைகிறான் -இவை எல்லாமே எனக்கே என்றும் நினைப்பவன் அழிந்தே போகிறான் -வெள்ளியுடன் சேர்ந்து தங்கத்துக்கு குறை -வெண்கலம் சேர்ந்தால் வெள்ளிக்கு குறை -ஈயம் சேர்ந்தால் வெண் கலத்துக்கு குறை -ஈயத்துக்கு தன்னிடம் சேர்ந்து அழுக்காலே குறை -தலை கீழாகப் பார்த்தால் வெண் கலத்துடன் சேர்ந்து ஈயத்துக்கும் வெள்ளியுடன் சேர்ந்து வண காலத்துக்கும் -தனித்தே சேர்ந்து வெள்ளிக்கும் மதிப்பு கூடுமோ -யாருடன் சேர்கிறோமோ அதன் பலன் கிட்டும் –

த்ருதராஷ்ட்ரா -நீ அழியக்கூடிய சொத்தைப் பற்றி நினைத்து கவலைப்படுகிறாய் -அழியாத ஆத்மாவுக்கு நல்லதை நினைத்தால் உயர் கதி அடையாளம் -எவ்வளவு விறகை இட்டாலும் நெருப்புக்கும் -எவ்வளவு தண்ணீர் வந்தடைந்தாலும் கடலுக்கும் எத்தனை உயிர்களைக் கவர்ந்தாலும் யமனுக்கும் திருப்தி பிறப்பதில்லையே -போதும் என்பதை நாம் அசையும் பொருளிலோ நம் முயற்சியிலோ இல்லை நம் மனத்தில் தான் உள்ளது -இந்த ஜீவாத்மா ஒரு வற்றாத நதி -இது ஸத்யம் பரமாத்மா என்னும் மலையிலிருந்து பிறக்கிறது -புண்ணியம் இதன் தண்ணீர் -தைர்யம் இதன் கரைகள் -இரக்கம் இதன் அலைகள் -புண்யாத்மாக்கள் இதில் நீராடி ஆசை யற்றவர்களாகி தூய்மை அடைகிறார்கள்-ஆத்மா இறுதியில் கலங்காத் தன்மையை -கடலை -அடைகிறான் – அழியாததையே நினை -அழிவதை மறந்து ஒழி –
இதுகாறும் கூறிய சத்தியத்தையும் தர்மத்தையும் நன்கு ஆராய்வாய் -சரி என்றும் மனதில் படுபவனாய் கவலையை ஒழித்துக் கடைப்பிடி -என்று கூறி உபதேசத்தை முடித்தார்
த்ருதராஷ்ட்ரன் -விதுரா நீ சொல்வது அனைத்தும் உண்மை என்றும் ஏற்கிறேன் -ஆனால் விதியை வெல்ல முடியாத -துரியோதனன் பேசும் போது இவை அனைத்தும் மறந்து விடுகின்றன -ஏன் நிலையை பகவான் தான் நேர் படுத்த வேண்டும் -என்று கூறி முடித்தார் –

தர்ம புத்ரன் தானும் விதுரரும் ஒரே யம தர்மனின் சக்தியால் பிறந்தவர்கள் என்று உணர்ந்தார் -அசரீரி -தர்மபுத்திரர் மஹாத்மா விதுரர் ஸாந்தானிக லோகத்தை அடைந்தார் -அவருடைய ஸந்நியாஸ நிலையை நினைத்து சடங்குகளைச் செய் -என்று உத்தரவு விட தர்மபுத்ரன் அப்படியே செய்தான் -பின்பு வேத வியாஸர் அங்கு வந்து விதுரர் தர்மத்தின் உருவம் அவரே சநாதன தர்ம தேவன்-அவருடைய தவமும் பக்தியும் எட்டுத் திக்கிலும் நிறைந்து இருக்கும் -அவர் பரம பொருளான கண்ணனின் திருவடிகளை அடைந்தார் -அவர் உபதேசித்ததே தர்மம் -என்று கூறி மறைந்தார் –
விதுரரின் நீதி நமது செயல்களிலே தெரியட்டும் –

————————————

உத்யோக பர்வத்தில்–33-40 அத்தியாயங்கள்-மொத்தம் 8 அத்தியாயங்களில் -604-ஸ்லோகங்கள் உள்ளன

முதல் அத்யாயத்தில் இருந்து சில
ஒரே மரத்தில் இருந்து வேள்விக்கான பாத்திரங்களும் கரண்டிகளும் உருவாகும் -அதிலிருந்தே நீர்த்தொட்டியும் உடலும் உலக்கையும் உருவாகும்-ஒன்றிலிருந்தே கெட்டதும் நல்லதும் தோன்றலாம் –ஒரே குலத்தில் கவ்ரவர்களும் பாண்டவர்களும் -அறிவிலியும் அறிவாளியும் தோன்றுவது இயல்வே

ஒன்றால் இரண்டை நிர்ணயித்துக் கொண்டு மூன்றால் நான்கை வசப்படுத்துவீர் -ஐந்தை வென்று ஆறை உணர்ந்து -ஏழைத் தவிர்த்து சுகம் பெறுவீர்-1-38-
ஒன்றால் -நல்லறிவால்
இரண்டையும் –நல்லதையும் கெட்டதையும்
மூன்றால் -நண்பன் எதிரி உதாசீனன்
நான்கை -சாம தான பேத தண்டம் -மென்மையுள்ள பேச்சு -பொருள் உதவி -மிரட்டிப் பணிவித்தல் -தண்டித்துப் பணிவித்தல்
ஐந்து-புலன் உணர்வுகளில் நாட்டம்
ஆறு -சமாதானம் போர் படையெடுப்பு நல்ல தருணம் பார்த்துக் எதிர்க்கும் வரை முற்றுகை -வஞ்சித்து மனம் மாறச் செய்தல்-சரண் அடைதல் ஆகியவை ஆறும்
ஏழு -ஆண் பெண்ணிடமும் பெண் ஆணிடமும் ஏமாறுதல் சூதாடுதல் வேட்டையாடுதல் மது அருந்துதல் தடித்துப் பேசுதல் கொடூரமான தண்டனை பொருளாதரத்துக்கு நாசம் விளைவித்தல் -ஆகியவற்றைத் தவிர்த்து சுகம் பெறுதல்

விஷ நீர் குடித்தவனை மட்டுமே அழிக்கும் -ஆயுதம் அவனாலே அடிபட்ட ஒருவனையே மட்டுமே அழிக்கும் -அரசவையில் செய்த மந்த்ர ஆலோசனையின் தவறு அரசனை நாட்டுடன் நாட்டு மக்களையும் அழிக்கும்

சாம தான பேத தண்டங்களில் -பேதம் தாழ்ந்தது -தானம் மத்தியது -சாமம் உயர்ந்தது -இம் மூன்று உபாயங்களும் பயம் அளிக்காத போது மட்டுமே தண்டம் உபயோகிக்கத் தக்கது

தேவர்கள் பித்ருக்கள் மனிதர்கள் துறவிகள் அதிதிகள் -ஐவரையும் வழிபடுபவன் பெரும் புகழ் அடைகிறான் -நமக்குள்ளே இந்திரியங்களை -வாக்கில் அக்னியாகவும் -கண்களில் ஸூர்யனாகவும் -மனத்தில் சந்த்ரனாகவும் நின்றும் இயக்கி -வெளியில் மழை வெப்பம் காற்று முதலியவற்றைத்தந்து உதவின வாழ வைக்கும் தேவதைகள் -நமக்கு உருவளித்து ஆயுஸ் அறிவு சக்தி பொருள் தந்து உதவி-மறைந்த பின்பும் நம் நலனைக் கோரி நிற்கும் பித்ருக்கள் -நண்பனாக உறவினனாக உணவு ஆசை குடியிருப்பு போன்ற வாழும் வசதிகளைத் தரும் மனித இனம் -பற்றற்றுத் திரிந்து நல்லதையும் நலம் தருபவையையும் நமக்காக சேமித்து வைத்து அளிக்கும் துறவி -நாடோடியாக இறைவனே வருகிறான் என்னும்படி வரும் அதிதிகள் -இந்த ஐவரையும் இறைவனின் பிரதிநிதிகள் என்று எண்ணி வாழ வேண்டும்-

ஒன்பது வாயில்கள் -காதுகள் கண்கள் மூக்குத் துவாரங்கள் -வாய் -மலவழி -சிறுநீர் வழி -கொண்ட இந்த உடல் என்னும் வீட்டில் -வாயு பித்தம் கபம் என்னும் மூன்று தூண்கள் -பஞ்சபூதமாகிய ஐந்து சாட்சிகள் -ஒரு ஸ்வாமிகள் உடையவன் ஆத்மா உண்டு என்று உணர்ந்தவனே அறிஞன்

———

மகாபாரத பாத்திரங்களில் அறிவுக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாகப் படைக்கப்பட்டவன் விதுரன். திருதராட்டிரன், பாண்டு ஆகியவர்களின் இளைய சகோதரன். பணிப்பெண்ணுக்குப் பிறந்தவன் என்பதனாலேயே அரச பதவிக்கு அருகதை அற்றவனாகி இருந்தாலும் அரச குடும்பத்தில் எல்லோருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவனாக இருந்தான். திருதராட்டிரன் தன்னுடைய குழப்பங்கள் எதுவாகினும் விதுரனைக் கலந்தாலோசிப்பது வழக்கம். (ஆனால் விதுரன் சொல்லும் நல்ல ஆலோசனைகள் எவற்றையும் திருதராட்டிரன் ஏற்று நடந்ததில்லை என்பதும் நிஜம்). அவ்வாறு ஓர் இரவு முழுவதும் திருதராட்டிரனுக்கு விதுரன் சொன்ன அறிவுரை நீதிகளின் தொகுப்பே விதுர நீதி எனப்படுவது.
மகாபாரதத்தில் பகவத் கீதை ஒருவகையான தத்துவ விளக்கம் என்றால் விதுரநீதி என்பது அரசியல் சமூக பொதுநீதி மொழி எனலாம்                                                                                                                  பாண்டவர்கள் வனவாசத்தையும் அஞ்ஞாத வாசத்தையும் முடித்த பிறகும் துரியோதனன் அவர்களுடைய நாட்டினைத் திருப்பித் தர மறுத்ததனால் பாரதப் போர் நிகழ்வதென்பது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிவிட்டது. இரண்டு தரப்பினரும் தத்தமது ஆதரவாளர்களுடன் படை திரட்ட ஆரம்பித்தனர்.
சஞ்சையன் தூது
ஆனாலும் இருதரப்பினருக்கும் பொதுவான சிலர் போரினைத் தவிர்க்க தூது முயற்சிகளிலும் ஈடுபட்டனர். திருதராடிரனே இந்தப் போரினைத் தவிர்க்க எண்ணி தர்மபுத்திரனிடம் பேசிப் பார்க்கும் படி தன்னுடைய நம்பிக்கைக்குரிய சஞ்சையனை அனுப்பி இருந்தான்.
சஞ்சையன் பாண்டவர்களிடம் பேசிப் பார்த்து அவர்கள் தரப்பிலேயே நியாயம் இருப்பதை உனர்ந்து கொண்டு, பாரதப் போர் தவிர்க்க இயலாத ஒன்று என்பதனை உணர்ந்து கொண்டு திருதராட்டிரனிடம் திரும்பினான். அப்போது இரவாகி விட்டதால் அவனிடம் தூது நிகழ்ச்சிகளைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் வெறுமனே அவனைக் கடிந்து கொண்டு, மறுநாள் அரசவையில் மற்ற விவரங்களைச் சொல்வதாகக் கூறி விட்டு ஓய்வெடுக்கச் சென்று விட்டான்.
திருதராட்டிரன் குழப்பம்
சஞ்சையனுடைய கடும் வார்த்தைகள் அவனுடைய தூதின் விளைவினைப் பட்டவர்த்தனமாகக் காட்டி விட்டதால் குழப்பத்தில் இருந்த திருதராட்டிரனுக்கு உறக்கம் வரவில்லை. எனவே விதுரனை அழைத்து வரச் சொல்லி அவனிடம் தன் உறக்கமின்மையைச் சொல்லிப் புலம்பினான்.
“அரசே! வலிமை குன்றியும் யுத்த தளவாடங்கள் சரியில்லாத நிலையிலும் இருக்கும் போது வலிமை மிகுந்த எதிரியை எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்தால் உறக்கம் வராது. பொருளைப் பறி கொடுத்தவன், காமத்தோடு இருப்பவன், பிறர் பொருளில் ஆசை வைத்தவன், திருடன் ஆகியோருக்கும் உறக்கம் சாத்தியமாவதில்லை. இதில் நீங்கள் எந்த வகையில் துன்பப்படுகிறீர்கள்?” என்று கேட்கும் ஆரம்பத்திலேயே விதுரனின் புத்திக் கூர்மை தெளிவாகத் தெரிகிறது.
விதுரநீதி
அவனுக்கு நேரடியாக விடை கூற முடியாத திருதராட்டிரன், “எதையாவது சொல். என் மன ஆறுதலுக்காகச் சொல். நீ நீதிவான். நீ சொல்லும் நியாய உரைகள் எப்போதுமே கேட்க நன்றாக இருக்கும்” என்று அவனை ஊக்கிப் பேச வைக்கிறான். அன்று இரவு முழுதும், விதுரன் அவனுக்குச் சொல்லும் நீதி உரைகளின் தொகுப்பே விதுர நீதியாகும் .
இது மகாபாரதத்தில் சஞ்சையன் தூதுக்கு அடுத்த பகுதியாக உள்ளது. இது ஒரு வாழ்வியல் பாடம். மனிதன் எப்படி இருக்க வேண்டும்; எப்படி இருக்கக் கூடாது; என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக் கூடாது என்பது போன்ற விளக்கங்கள் நிறைந்துள்ள நூல் இது.
எடுத்துக்காட்டு நீதி உரைகள்                                                                                                      இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.
1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது.
இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.
1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.
இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.
1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.
இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.
1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.
விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.
ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.
இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்…

1.பண்டிதன் என்பவன், தானாகப் போய் யாருக்கும் அறிவுரை சொல்ல மாட்டான்; பிறர் கேட்டல் மட்டுமே சொல்லுவான்.
2.பிறர் போற்றும் போது சந்தோஷமும் தூற்றும் போது துக்கமும் அடையாமல் இருப்பான்; தொலைந்து போனதை நினைத்து துக்கப்பட மாட்டான் பண்டிதன்.
3.அடங்கிப் போன பகையைத் தூண்டி வளர்க்கக் கூடாது.
4.வாக்கினை அடக்குவது மிகவும் கடினம். பொருட்செறிவுடனும் புதுமையாகவும் பேச வேண்டும். அதிகம் பேசுபவரால் இவ்வாறு பேச இயலாது;
6.பாணங்களால் ஏற்பட்ட புண் ஆறிவிடும் ஆனால் கொடிய வார்த்தைகள் கொண்டு சொல்லப்பட்ட நிந்தையாகிய புண் ஆறுவதே இல்லை.
7.இரவில் சுகமாகக் காலம் கழிக்க வேண்டும் என்றால் அதற்குத் தக்கவைகளைப் பகலிலேயே செய்து விட வேண்டும்; மழைக்காலத்தைச் சுகமாகக் கழிக்க வேண்டுமானால் மற்ற எட்டு மாதங்களில் உழைத்துச் சேகரித்து வைக்க வேண்டும்; 8.முதுமையில் சுகவாசம் செய்ய வேண்டுமென்றால் இளமையிலேயே அதற்குத் தக்கவைகளைச் செய்து கொள்ள வேண்டும்.
8.அதிக அகந்தை, அதிகப் பேச்சு, பெரிய குற்றம், அதிக கோபம், தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் ஆசை, நம்பிக்கைத் துரோகம் இழைப்பது ஆகிய ஆறும் மனிதனின் ஆயுளை வெட்டும் கூரிய கத்திகள்.ஆட்சியில் இருந்து கொண்டு வேண்டியவர்களுக்கு உதவி செய்யக் கூடாது. கோபம் கொள்ளக் கூடாது. எதற்கெடுத்தாலும் சந்தேகம் கூடாது. நல்லொழுக்கம் வேண்டும்.
 8.சுக வாழ்க்கையில் ஈடுபட்டவனுக்கு அறிவு வளர்ச்சி அடையாது.
 9.மனிதன் சத்தியம், தானம், சோம்பலின்மை, பொறுமையின்மை, தைரியம் ஆகிய ஐந்து குணங்களையும் ஒருபோது எந்த நிலையிலும் விட்டுவிடக் கூடாது                                                   10.விவேகி எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் என்பதால் அதை மாற்ற வழியில்லை.
11. வாழ்க்கையில் ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான காலம் உண்டு.
 12.தீய செயல்களைச் செய்வதைத் தவிர்த்தால் மட்டும் போதாது. நாம் நற்செயல்களையும் செய்தாக வேண்டும்.
 13.ஒருவன் நல்லவனாக இருக்கலாம். ஆனால், ஏமாளியாக இருக்கக் கூடாது.
 14.ஆகாரத்தில் விருப்பமுள்ள மீன், பூச்ச்சியால் மறைக்கப்பட்டிருக்கும் இரும்புத் தூண்டிலைக் கவனிப்பதில்லை. ஆசைப்பட்டு ஆகாரத்தைத் தின்னப் போய் அதில் மாட்டிக் கொள்கிறது. ஆசை வயப்பட்ட மனிதனின் நிலையும் இதுதான்.
 15.அளவுக்கு மிஞ்சிய தூக்கம், தேவையில்லாத பயம், ஆத்திரம், சோம்பல், மயக்கம், எதையும் தாமதமாகச் செய்தல் எனும் ஆறு குணங்கலும் முன்னேற்றப் பாதையின் முட்டுக்கட்டைகளாகும்.
 16.அறிவிலி எனப்படுபவன், மற்றவர்கள் பட்டினி இருந்தாலும் தான் மட்டும் வயிறு புடைக்க உண்டு களிப்பான்.
 17.அறிவிலி எனப்படுபவன், தனக்கு அறிவு இல்லை என்பதைப் பொருட்படுத்தாமல் கர்வமாக இருப்பான்.
18. தன்னை நாடி வரும் தீயவர்களையும் நல்லவன் கைவிடமாட்டான்.
 19.மற்றவர்கள் அவமதித்தாலும், தாக்கினாலும் பழிவாங்க விரும்பாமல் அமைதியாக இருப்பதுதான் பொறுமை.
 20.அறிவிலி எனப்படுபவன் தான் அழைக்கப்படாத இடங்களுக்கும் வேண்டுமென்று செல்வான்.
 21.தன்னடக்கமில்லாதவனுக்குச் சமுதாயத்தில் மதிப்பு கிடைக்காது.
22. தைரியம் என்பது உடல் வலிமையுடனும், மன உறுதியுடனும் தொடர்புடையது.
 23.முதல்தரமான மனிதன் இந்த வையகம் வாழ வேண்டும் என்கிற கொள்கையை உடையவனாக இருப்பான்.
24. தன்னை யாராவது பூஜித்தால் அதற்காக மகிழ்ச்சி கொள்வதில்லை. அவமதித்தாலும் தாபத்தை அடைவதில்லை. கங்கையின் மடுவைப் போல் எவன் கலக்கமடையாமல் இருக்கிறானோ அவனே அறிவாளி என்று சொல்லப்படுவான்.
 25.தீயோரின் சேர்க்கை அஞ்சத்தக்கது. அது எப்படிப்பட்ட நல்லவரையும் கெடுத்து விடும். காய்ந்த கட்டையுடன் சேர்ந்த ஈர மரமும் எரிந்துவிடும்.
 26.அகங்காரம் எதையும் பொருட்படுத்தாமல் அதிகமாகப் பேசுதல், அளவுக்கு மீறிக் குற்றம் புரிதல், கோபம் கொள்ளல், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று கருதுதல், நண்பர்களுக்குத் துரோகம் செய்தல் இந்த ஆறு தீய குணங்களும் கூர்மையான கத்தி போல ஆயுளை வெட்டுகின்றன. ஆதலால், இவையே மனிதர்களைக் கொல்லுகின்றனவல்லாமல் யமன் கொல்கிறான் என்பதில்லை.
 27.புண்ணில் வேல் பாய்ச்சுபவனாகவும், கொடுஞ்சொல் பேசுபவனாகவும் இருக்கக் கூடாது.
28. மனத்தின் ஈடுபாட்டிற்கு ஏற்ப முயற்சியில் வெற்றியின் அளவு அமைகிறது.
 29.நல்லவர் உள்ளம் நல்லவர் அறிவர்.
30. நல்லவர்களைத் திட்டுவதனால் ஒருவன் பாவம் செய்தவனாகிறான்.
31. மனிதனின் மனத்தில் தீய விசயங்கள் உள்ளன. அவற்றை வசப்படுத்தியவன் புலன்களை வென்றவன் ஆவான்.
 32.அறிவிலி எனப்படுபவன், பகைவனை நண்பன் என்று நம்பி ஏமாறுவான்.
 33.ஒன்றை விரும்பும் போது அது நம்மிடம் இருக்கிறதா, அது நமக்குத் தேவைதானா, அதைத் தவிர்க்க முடியுமா என்று சிந்திப்பது அவசியமாகும்.
 34.படிப்பு, பாவச் செயல் செய்பவனைக் காப்பாற்றாது. நற்பண்பு ஒன்றுதான் காப்பாற்றும்.

ஒருவன், ஒரு பெருங்காட்டுக்குள் நுழைந்தான். எவராலும் சுலபமாக நுழையமுடியாத காடு அது. அங்கு போன அந்த மனிதன், நன்றாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். சிங்கம், புலி, கரடி முதலான ஆபத்தான மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. 

ஒரே கூச்சல். அந்த மிருகங்களின் நடமாட்டத்தையும் கூச்சலையும் கண்டு, மனிதன் மிகவும் பயந்துபோய் அங்குமிங்குமாக ஓடித் தப்பிக்க முயற்சி செய்தான். அப்போது மிகவும் கோரமான அவலட்சணமான – யாவரும் வெறுக்கக்கூடிய பெண் ஒருத்தி ஓடி வந்து, தன் இரு கைகளாலும் அந்த மனிதனைக் கட்டிப் பிடித்தாள். அவளைப் பார்த்துப் பயந்துபோன அந்த மனிதன், திமிறிக்கொண்டு இன்னும் வேகமாக ஓடினான். அவ்வாறு ஓடும்போது, புற்களும் காட்டுக்கொடிகளும் மூடி மறைத்திருந்த பாழுங்கிணறு ஒன்றில் தொபுக்கடீரென விழுந்தான். நல்லவேளையாக, கிணற்றுக்குள் நெருங்கி வளர்ந்திருந்த கொடிகளைப் பிடித்து கிணற்றுக்கு மேலே ஏறி ஒருவழியாக தப்பித்தான்.

அவன் மனம், ’தடக், தடக்’ என்று பயங்கரமாக அடித்துக் கொண்டது. ’அப்பாடா! எப்படியோ தப்பிவிட்டோம்!’ என்ற எண்ணத்தில், கிணற்றில் தொங்கிய மனிதன் கீழே பார்த்தான். அங்கே… அவன் காலடியில் பெரிய பாம்பு தலையைத் தூக்கியபடி பார்த்துக்கொண்டிருந்தது. தொங்கிக்கொண்டிருந்த மனிதன், அந்தப் பாம்பைப் பார்த்ததும் மேலும் நடுங்கினான். எப்படியாவது மேலே போய்விடலாம் என்ற எண்ணத்தோடு தலை உயர்த்தி மேலே பார்த்தபோது, 

கிணற்றின் மேலே இன்னொரு ஆபத்து காத்துக்கொண்டிருந்தது. ஆறு முகங்களும் பன்னிரண்டு கால்களுமாக, பல வண்ணங்களுடன் காணப்பட்ட ஒரு பெரிய விசித்திர யானைதான் அது. அந்த மனிதன் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்க… கரக்… கரக்… என்று சத்தம் கேட்டது. பார்த்தால்… 

அவன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களைக் கறுப்பும் வெளுப்புமான எலிகள் கடித்து, அறுத்துக்கொண்டிருந்தன. இவ்வளவு சோதனைகளும் ஒருபுறம் இருக்க, அவன் சற்றும் எதிர்பார்க்காத இன்னொன்றும் நடந்தது. ஆம்… 

உச்சியில் இருந்த தேன்கூடு ஒன்று திடீரென்று சிதைந்து, அதில் இருந்து ஒரு சில தேன் துளிகள், ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு இருந்த அந்த மனிதனின் நாவில் விழுந்தன. அவ்வளவுதான்… அனைத்து துயரங்களையும் மறந்தவன், தேன் துளிகளைச் சுவைக்க ஆரம்பித்து விட்டான்.

என்னய்யா மனுஷன் அவன்! பைத்தியக்காரன்! தேனைச் சுவைக்கும் நேரமா இது! அந்த மனிதன் வேறு யாருமல்ல; நாம்தான்! கதையை மற்றொரு முறை நன்றாகப் படியுங்கள். அது சொல்லும் எச்சரிக்கை புரியும்.

கதையில் வரும் காடு என்பது சம்சாரக்காடு. பிறப்பும் இறப்பும் நிறைந்தது. காட்டில் உள்ள துஷ்ட மிருகங்கள் பலவிதமான நோய்களைக் குறிக்கும். அந்த நோய்களில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக நாம் படாத பாடுபடுகிறோம். அப்போது அனைவராலும் வெறுக்கப்படும், கோரமான பெண் ஒருத்தி கட்டிப் பிடிக்கிறாள் என்று கதையில் பார்த்தோம் அல்லவா? அது முதுமை, கிழத்தனம் என்பதன் குறியீடு. 

முதுமை வந்து நம்மைத் தழுவிக் கொள்கிறது. அதில் இருந்தும் தப்பிப் பிழைத்து ஓடலாம் என்று பார்க்கிறோம். ஆனால், உடம்பு நம்மை விடமாட்டேன் என்கிறது. கிணறு என்பது உடம்பைக் குறிக்கும். செயலற்றுப் போய் அதில் விழுந்து விட்டோம். கிணற்றில், கீழே இருக்கும் பெரும் பாம்பு எமன். அவன் எல்லாப் பிராணிகளின் உயிரையும் வாங்கும் அந்தகன். 

மனிதன் பிடித்துக்கொண்டு தொங்குவதாகச் சொன்ன வேர்கள்- நமக்கு உயிர் வாழ்வதில் இருக்கும் ஆசைகள். அதனால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

விதுர நீதியை பின்பற்ற நாம் சத்துவ குணம் உடையவராக இருக்க வேண்டும்.

தானம் எவற்றை கொடுக்க வேண்டும்

தானம் நாம் நேர்மையாக சம்பாதித்த பொருளையே கொடுக்க வேண்டும். நேர்மையற்ற வழியில் வந்ததை கொடுத்தால் அது தானம் ஆகாது.

அந்த காலத்தில் ராஜாக்கள் தானம் கொடுக்கும் போது தானமாக கொடுக்கம் படும் பொருள் நேர்மையாக சம்பாதித்தது  என்று பிரதிக்ஞை செய்தால் தான் ஞானிகள் பெற்றுக் கொள்வார்களாம். எனவே தானம் கொடுக்கும் பொருள் நேர்மையாக சம்பாதித்ததாக இருக்க வேண்டும்.

அடுத்து தானம் கொடுத்தபின் அந்த பொருள் நமது இல்லை என்ற எண்ணம் வந்து விட வேண்டும். அந்த பொருள் மீது நாம் உரிமை கூறக் கூடாது. கோவிலுக்கு ஒரு விளக்கை போட்டு விட்டு அதில் இன்னார் உபயம் என்று எழுதுவது விதுரர் நீதி படி தானம் ஆகாது.

நாம் எந்த நோக்கத்தில் ஒரு காரியம் செய்கிறோமோ அந்த நோக்கம்தான் நிறைவேறும்.  உதாரணத்திற்கு நாம் நமது பெருமைக்காக தானம் கொடுத்தால் பெருமை நிச்சயம் கிட்டும்.  ஆனால் தானம் செய்ததற்கான புண்ணியம் கிடைக்காது.  (தான் ஒருவனுக்கு ஒரு பொருளை கொடுத்து விட்டு அதை நான்தான் கொடுத்தேன் என்று சொல்லிக் கொள்பவனுக்கு நரகம் தான் கிட்டும் என்று ஏற்கனவே விதுரர் கூறி உள்ளார். )

உறவினர்கள் இங்கே காப்பாற்றுகிறார்கள், உறவினர்கள் மூழ்கிவிடுகிறார்கள்

நல்ல குணமுள்ளவர்கள் இங்கே காப்பாற்றப்படுகிறார்கள், கெட்ட குணமுள்ளவர்கள் மூழ்கடிக்கப்படுகிறார்கள் [5.39.23]

“இந்த உலகில், உறவினர்கள் காப்பாற்றுகிறார்கள், உறவினர்கள் ஒருவரை மூழ்கடிக்கிறார்கள். நல்ல நடத்தையைப் பின்பற்றுபவர்கள் காப்பாற்றுகிறார்கள். தீய நடத்தையைப் பின்பற்றுபவர்கள் ஒருவரை மூழ்கடிக்கிறார்கள்.”பணிவு மற்றும் நன்னடத்தை பற்றிய விதுரரின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் கூறத்தக்கவை:

பணிவு உள்ளுணர்வைக் கொல்லும், வீரம் தீமையைக் கொல்லும்.

மன்னிப்பு எப்போதும் கோபத்தைக் கொல்லும், நடத்தை எப்போதும் பண்புகளைக் கொல்லும்.

“பணிவு தீய நடத்தையை அழிக்கிறது. வீரம் பாதகமான சூழ்நிலைகளை அழிக்கிறது. மன்னிப்பு எப்போதும் கோபத்தை அழிக்கிறது. நல்ல நடத்தை தீய சகுனங்களை அழிக்கிறது.”பாண்டவர்கள் நாடுகடத்தப்பட்ட பிறகு, யுதிஷ்டிரன் திரௌபதியிடம் மன்னிப்பின் மகத்துவத்தை, ” 

மன்னிப்பு என்பது தர்மம். மன்னிப்பு என்பது தியாகம். மன்னிப்பு என்பது வேதங்கள். மன்னிப்பு என்பது புனித நூல்கள் ” என்று கூறியிருந்தார். இந்த ஸ்லோகங்கள் இவ்வாறு தொடங்குகின்றன: மன்னிப்பு என்பது மதம், மன்னிப்பு என்பது தியாகம், மன்னிப்பு என்பது வேதங்கள், மன்னிப்பு கேட்பது [3.3.36a]. இங்கே விதுரர் மன்னிப்பு என்ற கருத்துக்கு ஒரு நேர்த்தியான நுணுக்கத்தைச் சேர்க்கிறார்: 

மன்னிக்க முடியாதவனே நீதியின் பொருட்டு அனைத்திற்கும் வல்லவன் [5.39.46அ]

“ஒரு பலவீனமான நபர் எல்லாவற்றையும் மன்னிக்க வேண்டும். ஒரு வலிமையான நபர் தர்மத்திற்காக அதைச் செய்ய வேண்டும்.”நிச்சயமாக, யுதிஷ்டிரன் அந்த வார்த்தைகளைப் பேசியபோது நிலைமை வேறுபட்டது, நிர்ப்பந்தத்தாலும், அந்த நேரத்தில் பாண்டவர்கள் எதிர்கொண்ட இக்கட்டான நிலையை உணர்ந்தும் அதிகமாக உச்சரித்தார், எனவே அந்த வார்த்தைகளையும், மகாபாரதத்திலிருந்து வேறு எந்த வார்த்தைகளையும் அவற்றின் அர்த்தத்தை உண்மையான முறையில் புரிந்துகொள்ள அவற்றின் பொருத்தமான சூழலில் வைப்பது முக்கியம்.இந்த அத்தியாயம், ஒருவர் எதற்காக வருத்தப்பட வேண்டும், வயதாவதற்கு என்ன காரணம், குறைவதற்கான காரணம் என்ன, இன்னும் பலவற்றைப் பற்றி விதுரரின் ஆலோசனையுடன் முடிகிறது.

  • கோபமின்றி கோபத்தையும், நன்மையால் தீமையையும் வெல்ல வேண்டும்.
  • தர்மத்தால் தீமையை வெல்ல வேண்டும், உண்மையால் பொய்யை வெல்ல வேண்டும்.
  • ” கோபமின்மையால் கோபத்தை வெல்ல வேண்டும்.
  • தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்.
  • கஞ்சத்தனத்தை பெருந்தன்மையால் வெல்ல வேண்டும்.
  • பொய்யை உண்மையால் வெல்ல வேண்டும். “
  • ஒரு அறியாமையுள்ள மனிதன் பரிதாபப்பட வேண்டும், குழந்தைகள் இல்லாத ஒரு ஜோடி பரிதாபப்பட வேண்டும்.
  • பட்டினியால் வாடும் மக்கள் துக்கப்படுகிறார்கள், ராஜா இல்லாத தேசம் துக்ககரமானது.
  • ” கல்வி இல்லாத ஒரு மனிதனைப் பற்றி ஒருவர் துக்கப்பட வேண்டும். 
  • குழந்தை இல்லாத தம்பதியருக்காக ஒருவர் துக்கப்பட வேண்டும். 
  • பசியால் வாடும் குடிமக்களுக்காக ஒருவர் துக்கப்பட வேண்டும். 
  • ராஜா இல்லாத ஒரு ராஜ்யத்திற்காக ஒருவர் துக்கப்பட வேண்டும். “
  • மலைகளின் நீருக்குக் கீழே உடல்களுடன் கூடிய முதுமை
  • அஸம்போகோ ஜரா ஸ்த்ரீணம் வக்ஷாலயா மனசோ ஜரா [5.39.63]
  • ” உடல் உள்ளவர்கள் பயணங்களால் வயதாகிறார்கள். 
  • மழையால் மலைகள் வயதாகின்றன. 
  • உடலுறவு இல்லாதது பெண்களை வயதாக்குகிறது. 
  • கடுமையான வார்த்தைகள் மனதை வயதாக்குகின்றன. “
  • வேதங்கள் பெயரில்லாமல் தூய்மையற்றவை, பிராமணரின் சபதங்கள் தூய்மையற்றவை.
  • பெண்கள் ஆர்வத்தில் தூய்மையானவர்கள், புனிதமானவர்கள், நாடுகடத்தலில் தூய்மையானவர்கள்.
  • ” வேதங்கள் மீண்டும் சொல்லப்படாவிட்டால் அவை களங்கப்படுத்தப்படும்.” 
  • பிராமணர்கள் சபதம் இல்லாததால் களங்கப்படுகிறார்கள். 
  • கற்புள்ள பெண்களை ஆர்வம் கறைபடுத்துகிறது. 
  • வீட்டை விட்டு வெளியேற்றப்படுவது பெண்களை களங்கப்படுத்துகிறது. 
  • தங்கத்தின் அழுக்கு வெள்ளி, வெள்ளியின் அழுக்கு ட்ரபு.
  • டிராபுமலா ஈயம் என்று அழைக்கப்படும் ஈயத்தின் அழுக்கும் அழுக்குதான்.
  • வெள்ளி தங்கத்தை கறைபடுத்துகிறது. 
  • தகரம் வெள்ளியைக் கறைபடுத்துகிறது. 
  • ஈயம் தகரத்தை கறைபடுத்துகிறது. 
  • தூசி ஈயத்தைக் கறைபடுத்துகிறது. “
  • கனவுகளால் தூக்கத்தை வெல்லக்கூடாது, காமத்தால் பெண்ணை வெல்லக்கூடாது.
  • நெருப்பை விறகினால் வெல்லக்கூடாது, மதுவை பானத்தால் வெல்லக்கூடாது.
  • ” அதிக தூக்கத்தால் தூக்கத்தை வெல்லாதே. 
  • பெண்களை ஆசையால் வெல்லாதீர்கள். 
  • நெருப்பை மூட்டி அதை வெல்லாதீர்கள். 
  • மதுவின் மூலம் தாகத்தை வெல்லாதீர்கள். “

முடிவில், விதுரர் திருதராஷ்டிரனை ஆசையை கைவிடுமாறு அறிவுறுத்துகிறார், ஏனெனில் ” 

ஆயிரம் உள்ளவர்கள் வாழ்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளவர்களும் வாழ்கிறார்கள். ” ( 

சஹஸ்ரினோ’பி ஜீவந்தி ஜீவந்தி ஷதினஸ்ததா  – 5.39.68அ)அடுத்த அத்தியாயத்தில் விதுரர் தொடர்ந்து, ” 

நம்பிக்கை உறுதியை அழிக்கிறது. மரணம் செழிப்பை அழிக்கிறது. கோபம் செல்வத்தை அழிக்கிறது. கஞ்சத்தனம் புகழை அழிக்கிறது. பராமரிக்கத் தவறுவது விலங்குகளை அழிக்கிறது. ஓ ராஜா! கோபக்கார பிராமணர் ஒருவர் கூட ஒரு ராஜ்யத்தை அழிக்கிறார் ” என்று மன்னரிடம் கூறுகிறார்.( 

நம்பிக்கை பொறுமையைக் கொல்லும், செழிப்பை அழிக்கும்; கோபம் செல்வத்தைக் கொல்லும், புகழ் என்பது இழிவானது.)

மன்னா, அலட்சியம் கால்நடைகளைக் கொல்லும்; கோபக்கார பிராமணன் ஒருவன் தேசத்தைக் கொல்கிறான் – 5.40.7 )விதுரர், ராஜாவுக்கு அறிவுரை கூறியதன் நோக்கம், அவர் திருப்தி அடைந்து நிலையற்றதை விட்டுவிடுவதாகும் என்று கூறுகிறார். உடல் நிலையற்றது, ஒருவரின் செயல்கள் மட்டுமே அவரைப் பின்தொடர்ந்தன, இறந்தவரின் உடலை நெருப்பில் எறிந்துவிட்டு உறவினர்களும் நலம் விரும்பிகளும் திரும்புவது போல, இறந்தவரின் செயல்கள்தான் அவரைப் பின்தொடர்ந்தன. இங்கே, விதுரர் ஆன்மா, செயல்கள் மற்றும் பலவற்றின் ஒரு படத்தை முன்வைக்க துடிப்பான கற்பனையை அழைக்கிறார், மேலும் இது முழுமையாக மீண்டும் உருவாக்கத் தகுந்தது: 

ஆத்ம நதி பாரத புண்யதீர்த்தம்; சத்தியத்தின் நீர் பொறுமையின் மூலமாகவும், கட்டுப்பாட்டின் அலைகளாகவும் இருக்கிறது.

அதில் நீராடுபவன் பக்திமான்களைத் தூய்மைப்படுத்துகிறான்; புனித ஆன்மா எப்போதும் தண்ணீர்தான், தண்ணீர் தானே

ஆன்மா ஒரு நதி. தூய்மை அதன் தீர்த்தங்களைக் குறிக்கிறது. உண்மை அதன் நீர். உறுதியானது கரைகளை உருவாக்குகிறது. சுயக்கட்டுப்பாடு அலைகளைக் குறிக்கிறது. இவற்றில் குளிப்பதன் மூலம், தூய செயல்களைச் செய்பவர் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறார். ஆன்மா தூய்மையாகி, நித்திய நீரில் உள்ள தண்ணீரைப் போல இருக்கிறது. மற்றும் 

காமத்தையும் கோபத்தையும் பற்றிக்கொள்ளும் ஐந்து புலன்களின் நீரின் நதி.

பொறுமையின் படகை உருவாக்கி, பிறவியின் கோட்டைகளைக் கடக்கவும்.

ஒரு நதி இருக்கிறது, அதில் ஐந்து புலன்கள் தண்ணீராகவும், ஆசை மற்றும் கோபம் முதலைகளாகவும் இருக்கின்றன. உறுதியிலிருந்து ஒரு படகை உருவாக்கி, மீண்டும் மீண்டும் பிறக்கும் கடினமான சுழல்களைக் கடக்கவும்.விதியின் முதன்மையைப் பற்றிய புலம்பலுடன் ஏழாவது அத்தியாயத்தைத் தொடங்கிய திருதராஷ்டிரன், எட்டாவது அத்தியாயத்தை மற்றொரு புலம்பலுடன் முடிக்கிறார் – ” 

விதி என்பது செயல்படுபவன் என்று நான் நினைக்கிறேன், மனித முயற்சி பயனற்றது. ” விதுர நிதியின் கடைசி அத்தியாயத்தில், திருதராஷ்டிரன் விதுரரிடம், அவர் இதுவரை பேசாத ஏதாவது இருக்கிறதா என்று கேட்கிறார். விதுரர், சனத்சுஜாத முனிவர் தான் ராஜாவுடன் பேசக்கூடியவர் என்று பதிலளித்தார். முனிவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார், விதுரர் ராஜாவின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துமாறு முனிவரைக் கேட்டார்.இத்துடன் விதுர நிதியைக் கொண்ட பிரஜாகர பர்வம் முடிகிறது .

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ விதுரர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வியாஸர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை ஸ்வாபதேச வியாக்கியானங்கள்- சார அமுதம்

April 18, 2025

ஸ்ரீ திருப்பாவையால்–நாராயணன் -1-என்றும் –-பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் -2-என்றும்-ஓங்கி உலகளந்த உத்தமன் -3-என்றும்-ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஆஹ்யதோ மதுராம் புரீம் -என்கிறபடியே ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு அடியான அடிப்பாட்டை அடைவே சொல்லி–திருப்பாவை அடியிட்ட அஞ்சு பட்டாலும் –-பிரபன்ன நிஷ்டாக்ரமமும் – பிரபத்தவ்யன் அதி ஸூலபனாம் படிக்கு அடியான அவனுடைய அவதாரத்தின் அடிப்பாடும் சொல்லுகிறது

கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணன் -1-என்றும்-நாராயணன் மூர்த்தி -7-என்றும்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -3–என்றும் சொல்லுகையாலே நாராயண சப்தார்த்தமும்
உலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே -என்னக் கடவது இறே

முதல் பாட்டில்-பகவத் பரத்வத்தால் சொல்லிற்று ஆகிறது வேதார்த்தம் –
அதாவது-சர்வ ஸமாச்ரயணீய ஸ்தலம் -என்றும்
அவ தீர்ணனாவான் அழகே ருசி ஜனகன் -என்றும்
ருசி யுடையார் ப்ராப்ய த்வரையாலே அவன் தன்னையே மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ் விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் உத்தேச்யம் என்றும்
ப்ராப்யமாகிறது-அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமுமாய் -யாவதாத்மா பாவியான கைங்கர்யம் -என்றும்-தத் சாதனமும் அவன் திருவடிகளே என்னலாயிற்று-ப்ராப்ய ப்ராபக சங்க்ரஹம்-கண்ணே உன்னைக் காணக் கருதி எண்ணே கொண்ட சிந்தையினராய் அன்றோ ஆழ்வார்கள் இருப்பது -அவனே உபாயமும் ப்ராப்யமும் –

மார்கழித் திங்கள்–)சத்வோத்தரமான காலத்திலே–சதாசார்ய பிரசாதம் அடியாக -ஸ்வரூப யாதாத்ம்ய (மதி நிறைந்த )ஜ்ஞானம் பரி பூரணமாய்-இச் சேதனன் பகவத் விஷயீ கார பாத்ர பூதமான திவசத்திலே-தங்களுக்கு பகவத் கைங்கர்யத்தில் ருசி பிறந்த இன்று மங்கள கார்யம் செய்யுமவர்களுக்கு தேட்டமான காலம்
(நன்னாளால்)-தன்னடையே நேர்பட்ட படியைக் கண்டு ஆச்சர்யப் படுகிறார்கள் –-ப்ரக்ருத் யாத்ம விவேகம் பிறந்த நாள்(குடந்தைக் கிடந்தாய் அடியேன் ஒரு வாழ் நாள் சென்னாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே அன்று நான் பிறந்திலேன் )

நீராடப் போதுவீர் –பகவத் கைங்கர்யம் பண்ணப் போருகையிலே-ருசி உடையவர்களாய்-நீராட –என்றது மாறி மாறித் தங்கள் மெல்லிய தோளில் அவன் தோயவும் -இவர்கள் அவன் மார்பில் தோயவும் இறே(வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் ) அதாவது –அப்பன் திருவருள் மூழ்கினாள் -(8-9-5-)-இறே–நேரிழையீர் –இதுக்குத் தகுதியான-ஜ்ஞான பக்தி வைராக்யங்களை உடையராய் –ஆயர் சிறுமீர்காள்-ஜ்ஞான ஜன்மம் உடையவர்கள் போலே-பகவத் ஏக பரர்-ஸ்த்ரீத்வேன நிர்த்தேசம் – –உபாயாந்தர-உபேயாந்தர-தேவதாந்தர-பரர் போல் அன்றியே-அனன்யார்ஹத்வத் யோதனார்த்தம்-ருசி பிறந்த பின்பு அவ்வருகுள்ள ப்ராப்ய தேசமும் அர்ச்சிராதி கதி சிந்தையும் ததீயரையும் அவனையும் அனுபவிக்கையும் காலமும் அடைய ப்ராப்யத்திலே புகும் அத்தனை –

ஆய்ப்பாடி-பரம பதம் போலே தேஹாந்தர பரிக்ரகம் பண்ணிச் சென்று-அனுபவிக்க வேண்டாத ஊர்-ஆசார பிரதானரான வசிஷ்டாதிகள் வர்த்திக்கிற திரு அயோதியை போல் அன்றிக்கே இடக்கையும் வலக்கையும் அறியாத இடையர் வர்த்திக்கிற ஊர்-பெருமாள் குணம் கண்டு உகக்கும் ஊர் போல் அன்றியே-கிருஷ்ணன் தீம்பு கண்டு உகக்கும் ஊர்–அங்கு தான் கும்பீடு கொண்டு இருக்கும் -இங்கு தான் கும்பிடுகிற இடம் இறே –-தொழுகையும் இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே -என்னக் கடவது இறே

கூர் வேல் கொடும் தொழிலன் -இத்யாதி
கூரியதாய்-சர்வ அநிஷ்ட நிவர்தகமான மங்களா சாசனத்தை உடையவராய்- அல்ப அமங்களம் சம்பாவிக்கையிலும்-அதிசயித மங்களா சாசனை பரராய்–ஞானம் தாண்டி அவன் அழகு மார்த்வம் பொங்கும் பரிவால் ரக்ஷண ரக்ஷக பாவம் -தட்டு மாறிக் கிடக்குமே– பகவ லாபத்தாலே களித்து-(நந்த கோபன் -ஆனந்த மயமாய் -) பகவத் விஷயத்தை அசல் (கம்ஸாதிகள் )அறியாதபடி-ரஷித்துக் கொண்டு போருகிற ஆசார்ய விஷயத்தில்- தன்னுடைய நியாம்யத்தை தோற்றும்படி இருக்குமவனாய்-(இளம் குமரன் )-தமப்பனார் கையிலே வேல் ஒன்றும் கொண்டு நோக்கும்-அம்பன்ன கண்ணாள் யசோதை -(பெரிய திருமொழி -6-8-6)ஆகையால் இவள்-முகத்தில் அம்பு இரண்டும் கொண்டு நோக்கும்–அம்பரமே தண்ணீரே –என்ற பிராண தாரகங்களைக் கொடுக்குமவர்-நம் பேர் இழவுக்கு இரங்கி நம் பிராண தாரகத்தைத் தாராரோ

கண் என்று ஜ்ஞானமாய் –-அதுக்கு அழகாவது வஸ்துவை உள்ளபடி கிரஹிக்கை –
அத்தாலே பூரணமான ஞானத்துக்கு பிரகாசமாய்- தன்னை அனுசந்திப்பாருக்கு ஆபிஜ்யாதி (குலம் தரும் இத்யாதி)சகல அதிசய ப்ரதமான-திரு மந்த்ரத்திலே- தன்னுடைய சகல காரண்த்வாத்ய அதிசயங்கள் எல்லாம் பிரகாசிக்குமவனாய் – மந்த்ரோ மாதா -என்னக்   கடவது இறே-(வித்யை தாயாகப் பெற்று இத்யாதி -நாயனார்))-இம் மந்த்ரம் தானும் சமஸ்த கல்யாண குணாத்மகனான எம்பெருமானைத் தன்னுடைய கர்ப்பத்திலே வைத்துக் கொண்டு எல்லாரும் அறியலாம்படி பிரகாசிப்பிக்கையாலே இம் மந்த்ரத்தை மாதா என்னக் குறை இல்லை

மந்த்ரத்திலும் மந்த்ர பிரதனான ஆச்சார்யன் பக்கலியும் மந்திரத்தில் உள்ளீடான வஸ்துவிலும் ப்ரேமம் கனத்து இருக்க வேண்டுமேஆகவே யசோதை -நந்தகோபனைச் சொல்லி நாராயணனையும் சொல்கிறதுகார் மேனி என்கையாலே –சௌலப்ய சௌசீல்யங்களையும்-செங்கண் என்கையாலே –வாத்சல்ய ஸ்வாமித்வங்களும்-தோற்றுகையாலே- ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குண சதுஷ்ட்யமும் சொல்லிற்று ஆய்த்துகதிர் மதியம் இத்யாதி – சூர்ய கிரணங்களை உடைய மதியம் போலே இருக்கிற திருமுக மண்டலத்தை உடையவனாய்-அனுகூலர்க்கு அணுகலாம் படி இருக்கையும்-
பிரதி கூலர்க்கு அணுக ஒண்ணாமையும் தோற்றுகையாலே- அநபிபவநீயதவம் சக்தி கார்யம் ஆகையாலே- ஆஸ்ரித கார்ய ஆபாதக குண சதுஷ்டயமும் (ஞானம் சக்தி பிராப்தி பூர்த்தி )சொல்லிற்று ஆய்த்து

நீராட -என்று பிராப்யத்தை ஸங்க்ரஹித்தார்கள்-நீராடப் போதுவீர் என்று -இப் புருஷார்த்தத்துக்கு இதில் இச்சையை உடையவர்களே அதிகாரிகள் என்று  அதிகாரியை  ஸங்க்ரஹித்தார்கள்-நாராயணனே என்று  ப்ராபகத்தை  ஸங்க்ரஹித்தார்கள்-நமக்கே  என்று உபாய அதிகாரிகளை ஸங்க்ரஹித்தார்கள்-இத்தால்- உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக- அவனையே உபாயமாக பற்றுகை-அதிகாரம் என்றது-ஆய்த்து-ஸர்வ தர்மான் பரித்யஜ் ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி -கீதா ஸ்லோக அர்த்தமே கோதா உபநிஷத்தின் அர்த்தமும் என்றதாயிற்று-

ஸ்வாமி எம்பெருமானார் , கிருமிகண்ட சோழன் உபத்தரவம் பொறுக்க மாட்டாமல் மேல்நாட்டில் எழுந்தருளி இருந்த காலத்தில் பிட்டிதேவன் என்கிற விஷ்ணுவர்த்தனான ஹொய்சள மன்னரின் உதவியோடு 1-தலக்காடு கீர்த்தி நாராயணன்-2-தொண்டனூர் நம்பி நாராயணன்-3-மேலகோட்டை திரு நாராயணன்-4-பேலூர் கேசவ நாராயணன்–5-கடக வீர நாராயணன் என்பதான பஞ்ச நாராயண க்ஷேத்ரங்களை பிரதிஷ்டாபித்தார் என்பது வரலாறு.–கோயில் அண்ணரான இராமானுஜர் எவ்வழி அவ்வழியில் தங்கையான ஆண்டாளும் இந்த பாசுரத்தில் 1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் நாராயணன்-2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் நாராயணன்–3-கார்மேனி நாராயணன்–4-செங்கண் நாராயணன்–5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன்–ஆகிய பஞ்ச நாராயணர்களை பிரதிஷ்டாபனம் பண்ணுகிறாள்-

1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் நாராயணன்– திருமந்திரார்த்த பிரதனான ஆச்சாரியனைச் சொல்லும். எப்படி என்றால்-தனக்கு விதேயனாக இருக்கிற கண்ணனெம்பெருமானை ரக்ஷிக்க வேண்டி , கூரிய வேலை பிடித்தவன் நந்தகோபன். ஆசாரியனும், பகவத் ரக்ஷண தத்பரர் ஆகையால், பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையர். இவருடைய மங்களாஸாசன தத்பரத்தையே இவர் கைவேல்.
திருமந்திரம் இவருக்கு விதேயமாய் சிஷ்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் காரியம் செய்கையாலும், நந்தித்தவமும் கோப்திருத்வமும் இவருக்கும் உண்டு ஆகையால் நந்தகோபன் குமரன் நாராயணன் என்றபடி.

2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் நாராயணன் –-என்பது கண்ணியாக உள்ள துவய மந்திர பிரதிபாத்யன் நாராயணன் என்றபடி.-கண்ணனுடைய பிரதாபங்கள் எல்லாம் யசோதை இடத்திலாய், அவள் கண் வட்டத்துள் நின்று அகலாது முந்தாணையில் முடியாலாம்பட்டி இருக்கிற தன்மை கொண்டு – ஆசாரியன் கைபுகுந்தவாறே திருமந்திரம் கை புகுரும் என்ற கணக்கிலே மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவான நாராயணனைச் சொல்லுகிறது இத்தால்.

3-கார் மேனி நாராயணன் –-என்றது மேகத்தைப்போல் இன்னார் இனையார் என்று பார்க்காது , அவர்கள் இருக்கிற இடம் சென்று வர்ஷிக்கிற வர்ஷாகால மேகத்தைப் போலேயான ஒளதார்யமும், சௌலப்யமும் சொல்லிற்று. நீர் அந்த்ரேண சம்ஸ்லேய : என்று மழைநீர் அது விழுகிற இடத்தின் தன்மையை – செம்மண் பூமியானால் செந்நிறமும், பால்நிற பூமியானால் பால் நிறமும் பெறுவதுபோல – ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது உம்பி எம்பி என்று தோழமை கொண்டதும், மாடு கன்றுகளோடும், இடையர்களோடும் பொறையற கலக்கின்ற சௌசீல்ய குணத்தையும் சொல்லிற்று எனலாம்.

4-செங்கண் நாராயணன் – என்றது செவ்வரியோடிய நீண்டவப் பெரிய வாய கண்கள் என்று ஸ்வாமிதவ, ஸ்ரீமத்வ ஸூசகங்கள்.-மைய கண்ணாள் என்று பிராட்டியையும், செய்யக் கோல தடங்கண்ணன் என்று ஸ்ரீயப் பதித்தவமும், ஸ்ரீமத்வமும் இறே இவனுக்கு நிரூபணங்கள். இந்த ஸ்வாமித்வ, சௌலப்ய, சௌசீல்யாதிகள் அல்லவோ ஆஸ்ரித ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்-

5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன் –-என்றது தண்ணளியும், பிரகாசமும் ஒருங்கேயான ஸ்வாமிதவ, சக்தி சாமர்த்தியாதி களுக்கு உப லக்ஷணம்.
இவை ஆஸ்ரித காரிய ஆபாதக குணங்களாய் நாராயண ஸப்தார்த்த குண போக்யதைகளையும் சொல்லிற்று.

அப்படிப்பட்ட நாராயணனே-மந்திரத்திலும், மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும், மந்திர பிரதனான ஆசாரியன் பக்கலிலும் பிரேமம் கனக்க உண்டான நமக்கே ஸ்வரூபனுரூபமான கைங்கர்யமாகிற பறை தருவான் என்கிறது இப் பாசுரத்தில்.

———–

வாழ்வீர்காள் –
(இந் நிலத்திலே )-இந்தளத்திலே -தாமரை போலே –-கிருஷி பூமியிலே பலம் புஜிப்பதே–அவ் ஊரில் வர்த்தகம் என்றும் வாழ்ச்சி என்றும் இரண்டு இல்லை காண் –அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் வர்த்தகமே வாழ்ச்சியாய் இருக்கும் இறே –வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் -என்னக் கடவது இறே-இது கோயிலிலே வர்த்தகம் போலே காணும்-சொல்லுகிற தங்களுக்கும் வாழ்ச்சி ஒத்து இருக்க–வாழ்வீர்காள் என்று பிறரைச் சொல்லுகிறது என் என்னில் – தாங்கள் தனியே அனுபவிக்கும் அனுபவம் ரசானுபவமாய்-தோற்றாமையாலே அத்தை ரசமாக்கித் தருமவர்களைக் கொண்டாடுகிறார்கள்-வாழ்வீர்காள் –என்ற பன்மைக்குக் கருத்து – அதொரு விபூதியாக பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்குமா போலே இதுவும் ஒரூராக இதுவே யாத்திரையாக பெறுவதே –
ஓரூருக்கு ஒருவனை இறே பெற்றது –(நவ திருப்பதிக்கும் ஒரே நம்மாழ்வார் போல் )
விபீஷணஸ் து தர்மாத்மா -என்று வக்தாஸ்ரோதா ச துர்லப-என்று சொல்லுவான் ஓருவனேயாய்க் கேட்ப்பார் இல்லாத இலங்கை போல் அன்றிக்கே த்ரிபாத் விபூதி ஒரு நாடாகச் சமைந்தால் போலே இது ஒரு ஊராகச் சமையப் பெறுவதே-வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்-என்று கூட்டுத் தேடினார் தமப்பனார்-இவளுக்கு இங்கே வாழுகைக்கு குழாங்கள் உண்டான படி –

முதல் பாட்டிலே நாராயணத்வம் சொல்லி–இப் பாட்டில் அங்கு நின்றும் திரு அவதார அர்த்தமாக-திருப் பாற் கடலிலே சாய்ந்த படியைச் சொல்லுகிறது–அந்த நாராயண சப்த வாச்யனான ஸர்வேஸ்வரன் திருப் பாற் கடலிலே ப்ரஹ்மாதிகளுடைய கூக்குரல் கேட்க்கும் படி குடில் கட்டிப் பயிர் நோக்கும் கிருஷிகனைப் போலே தோள் தீண்டியாக வந்து கண் வளர்ந்து அருளுகிறான்-

நீராடி மூன்று அர்த்தம்–போகார்தம்–சாதனமாக–விரஹ தாபம் தீர–அவன் திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்து அருளினதை அசத் சமமாக ஆக்கக் கடவோம்- மகிஷியானவள் ஸ்வ ரஷணத்திலே பிரவர்த்திக்கும் படியாக-இருக்கைக்காக மேற்பட-புருஷனுக்கு அவத்யம் இல்லை இறே-அதாவது தங்கள் த்வரையாலே அத்தலையில் உபாய பாவத்தை அழிக்கிறார்கள்-ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஒளி மா மலர்ப் பாத-நாளும் பணிவோம் நமக்கே நலம் ஆதலில் -என்கிறார்கள்

நாட்காலே நீராடி-ப்ராதஸ் ஸ்நானத்தைப் பண்ணிஇத்தால் கர்ம யோகத்தை உப லஷிக்கிறது–மையிட்டு எழுதோம் –மை கண்ணுக்கு பிரகாசம் ஆகையால் ஆத்ம யாதாம்ய பிரகாசகமான ஞான யோகத்தில் அந்வயிக்கக் கடவோம் அல்லோம் -பக்தி சித்தாஞ்சனமே -கண்ணனையே பூசிக் கொண்டவர்கள் அன்றோ –அஞ்சன-மைப்படி மேனி -அந்தராத்மா -ஸ்வரூபத்தையே கைக் கொண்டவர்கள் அன்றோ –பூச்சூடுகை போக ரூபமாகையாலே –மலரிட்டு நாம் முடியோம் என்று பகவத் அனுபவ ரூபமான பக்தி யோகத்தில் அந்வயிக்கக் கடவோம் அல்லோம் -என்கிறது –நாம் முடியோம் – நாமாய் பகவத் பிராப்தி சாதனங்களாக ஞான யோக பக்தி யோகங்கள் இரண்டிலும் அந்வயியாது ஒழிகையே வேண்டுவது-அவன் தானே இவ்வாத்மா வஸ்துவை அனுபவிக்கும் போது ஞான பக்திகள் இரண்டையும் கொடுத்து – இவற்றை நீ தவிராது ஒழிய வேணும் என்று நிர்பந்திக்கும் போது நம்மால் செய்யலாவது ஓன்று இல்லை இறே-நாமாய் அனுஷ்டியாது ஒழிகையும் வேணும் – அவன் தர நாம் பரிக்ரஹிக்கையும் வேணும் –

உய்யுமாறு எண்ணி உகந்துஉத்தர வாக்கியம் -இது முன்னாக வைத்து-செய்யும் கிரிசைகள்பூர்வ வாக்கியம் -இது அன்றோ இவர்கள் நிஷ்டை-எம்பெருமானார் –உபேயத்திலே எப்பொழுதும் கண் வைத்து உபாயத்தில் ஸக்ருத் தானே – கரு முகை மாலையை சும்மாடு ஆக்குகிறோம் அன்றோ

வையத்து……. க்ருத்ய அக்ருத்ய விவேகம்-இவ்விஷயத்தில் இழிவார்களுடைய விரக்தியையும் சம்பாவித ஸ்வபாவத்தையும் சொல்லுகிறது-

————-

ஸ்ரீயபதியாய்-ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் –நித்ய முக்த அநு பாவ்யனாய்- சர்வ ஸ்மாத் பரனாய் இருந்துள்ள –சர்வேஸ்வரன் – நாராயணனே -என்று அவன் பெரும் புறக் கடலாய் இருக்கிறபடியும் –அநந்தரம் – பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்று பாற் கடல் போலேயான வ்யூஹத்தையும் –ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்று அது கால்களாய்ப் புறப்பட்டுப் பரந்து பற்ப நாபன் -என்று சுழித்து – தூய பெரு நீர் யமுனைத் துறைவன் -என்று பெருக்காறு போல விபவத்தையும் –

யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே – ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று-திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும் -நோய் பஞ்சம் திருடர் -மூன்றுமே இருக்காதே
ஓம் அர்த்தம் புரிந்தால் திருட்டு போகும் -அநந்யார்ஹ சேஷ பூதன் அறிந்தால் பிறர் நன் பொருளை அபகரிக்க மாட்டோம்-நமஸ் அர்த்தம் புரிந்தால் பஞ்சம் தொலையும் -அநந்ய சரண்யத்வம்-நாராயாணாயா அர்த்தம் புரிந்தால் வியாதி தொலையும் -அநந்ய போக்யத்வம்
மூன்று பத அர்த்தங்களை ஸூ சகம் -மூன்று அடிகள் -திரிவிக்ரமன் –

ஓங்கி –ஜகத் ரஷண அர்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின போது
ஆர்த்த ரஷணம் பண்ணப் பெறாமையாலே- பனிப்பட்டு சாய்ந்த மூங்கில் போலேயாய் அது ஆதித்ய கிரணம் பட்டு கிளம்புமா போலே- மகா பலியாலே நோவு பட்ட தேவர்கள் ஆர்த்த த்வனி கேட்ட பின்பு பேர்ந்து வளர்ந்தபடி –இவற்றுக்கு அபேஷிதம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்- உறங்குகிற பிரஜையை அணைத்துக் கொண்டு கிடக்கும் மாதாவைப் போலே
இவற்றோடு ஸ்பர்சம் தனக்குத் தான் உகக்கிறான் இறே

உத்தமன் பேர் என்கிறது திருமந்த்ரத்தை –-முதல் பாட்டில் நாராயணன் என்கையாலும் –சப்தம் சொல்லி–இரண்டாம் பாட்டில் பரமன் -என்று அந்த மந்த்ரார்தமான குண பூர்த்தியை சொல்லுகையாலும்–இதில் மந்த்ரோக்த வ்யாப்திக்கு ப்ரத்யா பிஜ்ஞ்ஞாகரமான-த்ரைவிக்ரம அபதானத்தை சொல்லுகையாலும் திருமந்த்ரத்தைச் சொல்லுகிறது –அவன் தனக்கும் அல்லாதாருக்கும் உண்டான வாசி போரும்- அவனுக்கும் திரு நாமத்துக்கும்-கர்ம யோகிக்கு விரோதி போகைக்கும் -கர்மம் செய்து தலைக் கட்டுகைக்கும்-ஞான யோகிக்கு ஞானம் விசதமாகைக்கும்-பக்தி யோகிக்கு பக்தி சித்திக்கைக்கும் விரோதி போகைக்கும்
பிரபன்னனுக்குச் சோறும் தண்ணீரும் போலே யாகைக்கும் திரு நாமம் போலே இல்லை-அத்தை ஸ்வயம் புருஷார்தமாகப் பாடி-இதுவே நமக்கு நீங்காத செல்பம் நிறைந்து இருக்குமே-நமக்கே முதலில் –நாமும் அடுத்த பாசுரத்தில் இங்கு நாங்கள் நம் பாவைக்கு -பாசுரம் தோறும் அதிகாரி ஸ்வரூபம்

இத்தால் அஹங்கார க்ரஸ்தர் ஆனவர்களை மகா பலி அபிமானத்தின் நின்றும் பூமியை மீட்டு தன் திருவடிகளாலே அளந்து தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டால் போலே இத்தால்
தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டமையை சொல்லுகிறது

திங்கள் மும்மாரி பெய்து- சத்வோத்தரமான காலத்திலே–அனன்யார்ஹ சேஷத்வ-
அநந்ய சரணத்வ அநந்ய போக்யத்வங்கள் ஆகிற-ஆகார த்ரய ஜ்ஞானம் உண்டாய்-
அத்தாலே அபிவிருதங்களாய்-(ஓங்கு பெரும் செந்நெல்)ஓர் ஊருக்கு ஒருவரே போரும்படியான சேதனர் உடைய நடுவிலே தத் சம்பந்திகளாய்த் ததேக தாரகரான (செந்நெலூடு கயலுகள)ஆத்ம வர்க்கங்கள்-களிப்பிலே துள்ளா நிற்க-ஜ்ஞாநிகளோடு ஒக்க வளர்ந்து அத்தாலே தர்ச நீயரான ஞானாதிகர்-இடங்களிலே-பரம ஏகாந்திகளான -ஓங்கு பெரும் செந்நெல்லையே பற்றி இருக்கும் ஞானிகள் பூங்குவளை – ஸ்வாமித்வ ஸூசகமான திரு அபிஷேகம் உடையனாய்- பரஞ் ஜோதிஸ்ஸான சர்வேஸ்வரன் லஷ்மி சனாதனாய்-
ஜ்ஞான லப்தனாய் வந்து அவர்கள் உடைய ஹிருதயங்களிலே-ஸூகஸ் ஸ்பர்சத்தாலே கண் வளர –பொறி வண்டு கண் படுப்ப-ஸர்வஞ்ஞன் அடியார் ஹ்ருதயத்தில் பெறாப் பேறு பெற்றானாய் இருப்பதால் ஞான லப்தனாய் என்கிறார்–பிரஜைக்கு முலை போலே சிஷ்யனுக்கு தாரகமான திருவடிகளைப் பற்றி பிரார்த்திக்க-உபதேச பாத்ர பூதரான சிஷ்யரை பரி பூர்ண ஜ்ஞானிகள் (இதம் பூர்ணம் -அவனைப்போல் )ஆக்குமவர்களாய் சிஷ்ய விதேயராய்-நிரந்தர பகவத் குணானுபவத்தாலே-பரிபுஷ்டரான ஆசார்யர்கள் உடைய- அவிச்சின்னமான சம்பத்து பரிபூர்ணம் ஆய்த்து –ந கச்சின் ந பராத்யதி -என்னும்
அவள் அடியாக வந்த சம்பத் ஆகையால் ஊற்று மாறாத சம்பத்து இறே 

பகவத் ஸமாச்ரயண பலமான கைங்கர்யம் ஒழியவே–ஆயுர் ஆசாஸ்தே -என்கிறபடியே
ஐஹிக பலன்களும் ஆநுஷங்கிக ஸித்தமாய்க் கொண்டு ஸித்திக்கும்-என்கிறது –

நாராயணனே நமக்கே பறை – தண்டுழாய் நமகன்றி நல்கான் – தனி நோக்கு – (விஷம) வியஷ்டி ஸ்ருஷ்டி-நாமும்-நாங்கள்-நாங்களும் மார்கழி நீராட – பொது நோக்கு – ஸமஷ்டி ஸ்ருஷ்டி.

———

ஆழி மழைக் கண்ணா —ஆழி–அபரிச்சேத்யமான ஜ்ஞான வைபவத்தை உடையையாய்-மழைக் கண்ணா – பகவத் காருண்ய வர்ஷ நிர்வாஹகனானவனே-என்னுதல்
பூமிப் பரப்பில் உள்ள சேதனர் அடைய பகவத் காருண்யத்துக்கு விஷயமாம்படி பண்ண வல்லவனே -என்னுதல்
பகவத் குணாம்ருத வர்ஷிகளான ஆசார்யர்களுக்கும் ஆசார்ய பதம் நிர்வஹிக்குமவன் -என்னுதல்(ஜகத் ஏக உத்தாரக ஆச்சார்யரான ராமாநுஜரைச் சொன்னவாறு )-நீ ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக அனைவரையும் பகவத் காருண்யத்துக்கு விஷயம் ஆக்கவல்ல நீ-
வர்ஷியா விட்டால் உடம்பு வெளுக்கும் நீ-கை கரவேல் –-பகவத் குண வர்ஷத்திலே சோராதே கொள்ளாய்-ஆழி –பகவத் குணாம்ருத சாகரத்திலே-உள் புக்கு
உள்ளே அவஹாகித்து-முகந்து கொடு – யாவத் குணங்களையும் புத்தி ஸ்தமாம் படி அகஞ்சுரிப்படுததிக் கொண்டு –-அதாவது-எப்பேர்பட்ட அபாரதிகள் ஆகிலும் தாம் அபிமானத்த வர்களில்-காருண்யத்தைப் பண்ணும்படி எம்பெருமான் விதேயமாம்படி-பண்ணிக் கொள்ளுகை

பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில் ஆழி போல் மின்னி –ஸூ தர்சனம் -மனஸ்ஸுக்கு அதிஷ்டான -வேகமாக சுற்றும் அன்றோ -யோகத்தால் உடையவரைத் தியானித்து
எதிராசர் வடிவு அழகு எனது இதயத்தில் இருப்பதால் இல்லை எனக்கு எதிர் என்று இருப்பார்கள் அன்றோ-அவன் கையில் வர்த்திக்கும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போல் இடைவிடாமல் த்வநித்து-அதாவது-பிரணவ அர்த்தத்தை அனைவரும் அறியும்படி திருவாய்மொழி முகத்தாலே வெளி இட்டு அருளிச் செய்கை –தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் –அவிச்சின்னமாக சார்ங்கம் வர்ஷித்த பாண வர்ஷம் போலே-
பிரணவத்தில் சேஷ சேஷி பாவ சம்பந்த பிரயுக்தமான- பகவத் காருண்ய வர்ஷத்தை-மகிழ்ந்து-மகிழக் கடவோம்-அதாவது- பகவத் அனுபவ சஹகாரிகள் இத்தனை பேர் உண்டாவதே என்று அவர்களோடு கலந்து-பகவத் அனுபவத்தைப் பண்ணி ஆனந்திக்கை

நாங்களும் கிருஷ்ணனும் சேரக் குளிக்கை உனக்கு கிடைப்பது ஒன்றோ –
நாங்கள் உன் வடிவைக் கண்டு த்வனியைக் கேட்டு எங்களுடைய தாபத்தை ஆற்றி
ப்ரீதிகளாய்க் கொண்டு மார்கழி நீராடுகிறோம் –சோஸ்னுதே சர்வான் காமம் ஸஹ ப்ரஹ்மணா -கூடியே அனுபவம் –-இவர்களை யுகப்பிக்கை இறே இவனுக்கு ஸ்வரூபம்-ப்ரகர்ஷ இஷ்யாமி யிலே இறே அந்வயம்-என்னுயிர்க்கு அது காலன்-என்ன வேண்டாவே கிருஷ்ணன் கூட நீராடுகையாலே –

அநந்ய பிரயோஜனனாய் பகவத் ஸமாச்ரயணம் பண்ணுமவனுக்கு-இந்த்ராதி தேவதைகள் நியாம்யராவார்கள் -என்று இவ் வதிகாரிகளுடைய உத்கர்ஷம் சொல்லுகிறது –

———-

வந்த நாம்- அவன் வர இருக்கக் கடவ நாம் வந்து–முறை கெட வருவான் என் என்னில்-
உபாயத்தில் துணிவு புறப்பட ஒட்டாதது போலே- உபேயத்தில் த்வரை முறை பார்த்து இருக்க ஒட்டாது இறே-அவன் திரு உள்ளத்தைப் புண் படுத்தக் கடவோம்–
தூ மலர்-யோக்யமோ அயோக்யமோ என்று தேடப் படாத மலர்களை(மடி தடவாத சோறு –சுண்ணாம்பு கலவாத சந்தனம் –சுருள் நாறாத பூ -தூய்மை )-ஆயர் குலம் என்றது- அநந்ய சாதனரான பாகவத குலம் -என்றபடி-

தாமோதரனை-நம்முடைய பந்தம் நம்மால் அறுக்க ஒண்ணாதாப் போலே – அவனுடைய பந்தமும் அவனாலே அறுக்கப் போகாது சேஷியினுடைய திரு இலச்சினை -என்று பட்டர் அருளிச் செய்வர் –

இப்படி பகவத் பஜன அனுபவம் பண்ணுமவனுக்கு-உத்தர பூர்வாகயோ ரஸ்லேஷ விநாசவ்-என்கிறபடியே பகவத் அனுபவ மஹாத்ம்யத்தாலே சகல துரிதங்களும் போம் என்று சொல்லுகிறது –

———-

மார்கழி -1-முதல் -மாயனை -5-என்னும் அளவும்-நாராயணனே -1-என்று தொடங்கி-
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -2-என்றும்-ஓங்கி உலகளந்த உத்தமன் -3-என்றும்
சார்ங்கம் உதைத்த சர மழை 4-என்றும்-மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -5-என்றும்
அடி பாட்டு சொல்கிறது

————

பிள்ளைப் பிள்ளை யாழ்வான்-பகவத் சமாஸ்ரயணத்துக்கு அனுகூலமான காலத்தை ஸூசிப்பிக்கிற பஷிகளின் நாதம் அல்லது-இவ்வாத்மாவுக்கு உத்தேச்யம் இல்லை என்று பணிக்கும்

அரி என்ற பேர் அரவம்-ஹரி ஹரி என்கை யாவது –-ரக்ஷது த்வாம் அசேஷாணாம்–( ஸ்ரீ விஷ்ணு புராணம் ) என்னும்படியே உன்னை நீயே காத்துத் தர வேணும் என்று திருப் பல்லாண்டு பாடுகை

பேய் இத்யாதி –பேய் உண்டு -பிரகிருதி-முலை உண்டு -அஹங்கார மமகாரங்கள்
நஞ்சு -அவைகள் ஆகிற விஷம்-உண்டு -அனுபவித்து –அதாவது-பிரகிருதி சம்பந்த நிபந்தமாய் சேதனருக்கு வரும் அஹங்கார மமகாரங்களைப் போக்கி -என்றபடி -(நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து)

கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி-காம குரோதங்களையும் நிவர்ப்பித்து-சகடம் ஏக வசனம் –காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ குண ஸமுத்பவ  –இரண்டும் ஒன்றே -காமத்தால் க்ரோதம் வரும்

புள் -6-பகவத் ஏக போகரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அநந்ய ப்ரயோஜனராய்
இவ்விஷயத்தில் தேசிகர் இன்றிக்கே இருப்பாரை அவர்கள் பக்கல் பரிவாலே தேசிகராக்குகை ஸ்வபாவம் என்னுமத்தைச் சொல்லுகிறது –பரிசுத்தரராய் வ்ருத்ய அப்யாஸத்தை யுடையவர்கள் உடைய சத்வ பிரமாணத்தை முன்னிட்டு –சத்வ குண நிஷ்டரை சாத்விக சமாசார நிதர்சன பூர்வக பகவன் நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதர் ஆக்கும் படி சொல்கிறது –பிள்ளாய் எழுந்திராய் -என்கையாலே
அபி நவமாக மூட்டும் அஸ்மத் குருப்யோ நம –என்னும் படி சொல்லுகிறது –

——————

காசும் பிறப்பும் கல கலப்ப கை பேர்த்து –
திருமந்த்ரமும்-த்வய சரம ஸ்லோகங்களும்-ஒன்றோடு ஓன்று சேர்ந்து த்வனிக்க
ஸ்வரூப(திருமந்த்ரம்)-உபாய(சரம ஸ்லோகம்)-புருஷார்த்த(த்வய) ஞானம் தலையெடுத்து –வாச நறும் குழல் இத்யாதி –
மிக்க பரிமளத்தை உடைய-பகவத் விஷய வ்யாமோகத்தை உடைய அனன்யார்ஹ சேஷபூதரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் சங்கல்ப்பத்தால் சிஷிதரான (மத்தினால் ஓசைப் படுத்த)சம்சாரி சேதனர் உடைய- திவ்ய பிரபந்த அனுசந்தான த்வனியை கேட்டிலையோ –

தேசமுடையாய் திற –பகவத் குண அனுபவத்தால் உண்டான மகா தேஜசை உடையவளே
இத் தேஜஸ் காட்டில் எறிந்த நிலா வாகாமே-நாங்கள் அனுபவிக்கலாம்படி
எங்கள் அஞ்ஞானத்தை நீக்காய்

கீசு -7-பகவத் விஷயமான அர்த்தம் ஒருவனுக்கு விஸ்ம்ருதமானால் தங்கள் பரிவால் –
போதயந்த பரஸ்பரம் -என்கிறபடியே அறிவிக்கையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –பகவத் அபிமத க்ரியா கலாபங்களாலே பகவத் போக்யமான வஸ்துவை
விவேகித்து தரிப்பார் படியைக் காட்டி சத்வ பிரதானரை விரோதி நிரசன சமர்த்தனுடைய
திரு நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதர் ஆக்கும் படி சொல்கிறது –நாயகப் பெண் பிள்ளாய் -என்கையாலே ஸ்வ ஆச்சார்யனுக்கும் கௌரவன் ஆகையால் அஸ்மத் பரம குருப்யோ -என்னும் படியைச் சொல்லுகிறது –

பகவத் விஷயமான அர்த்தம் ஒருவனுக்கு விஸ்ம்ருதமானால் தங்கள் பரிவால் –
போதயந்த பரஸ்பரம் -என்கிறபடியே அறிவிக்கையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –

———–

உங்களில் யாரேனும் அத் திக்கைப் பார்க்கையாலே-உங்கள் முகத்தில் ஒளி பிரதிபலிக்கையாலே கிழக்கு வெளுத்ததாய் இருக்கிறது- இவர்கள் தான் திங்கள் திரு முகத்து சேயிழையார் இறே- அது அந்யதா ஜ்ஞானம்-எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் -உங்கள் முகத்தில் ஒளியைக் கண்டு இருள் திரிந்து போகிறது இத்தனை--உங்களுடைய முக ஜ்யோதிஸ் யோஜனையாலே சிதறிப் போகிற இருள் அத்தனை இவை –
அல்லது எருமைகள் அன்று – இது உங்களுடைய விபரீத ஞானம் இருக்கிற படி -மரங்களும் இரங்கும் வகை –என்று-அசேதனத்துக்கும் சைதன்யம் உண்டாம் படி-சத்வோத்தரமான காலம் ஆயிற்று –

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய –தன்னை நாம் கிட்டு அனுபவிக்கைக்கு ஈடாக-
இடையிலே வன்னியம் அறுத்த ஆண் பிள்ளையைப் பாடக் கடவோம்-மாவாய் பிளந்தானை-
அஹங்கார நிராசகனைமல்லரை மாட்டிய-காம க்ரோத நிவர்தகனை

சங்கீர்த்தனத்துக்கு அடுத்த சத்வ உத்தர காலத்தை முன்னிட்டு சத்துக்களால் குதூஹலிக்கப்படும் விஷயரானவர்களை சகல விரோதி நிவாகரனுடைய சங்கீர்த்தனத்திலே சங்கதராக்கி ஸமாஹிதராக்கும் படியைச் சொல்லுகிறது-கிருஷ்ணனால் கொண்டாடப் படும் ஏற்றமுடையவளை எழுப்புகிறார்கள் –
இத்தால்-பகவத் அனுபவத்தில் பிரத்யா சன்னராய் இருப்பார் இடத்தில் சாபேஷாராய் இருக்கையும் –அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனைக் கிட்டுகையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் -என்கிறது

பகவத் அனுபவத்தில் ப்ரத்யா சன்னராய் இருப்பார் திறத்தில் சாபேஷாராய் இருக்கையும்
அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனைக் கிட்டுகையும்- ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –

———-

தூ மணி மாடத்து –துவளில் மா மணி மாடம் -என்று குற்றம் எடுத்துக் கழிக்க வேண்டாத- நன்மையை உடைய மணியாலே செய்த மாடம் – சம்சார கந்தம் உண்டாய் கழிந்த முக்தருக்கும்  அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்யருக்கும் உண்டான வாசி-போந்து இருக்கை —கீழில் பாட்டில் முக்தர் படி போலே இருப்பாள் ஒருத்தியை எழுப்பிற்று –
இப் பாட்டில் நித்ய முக்தர் படியே இருப்பார் ஒருத்தியை எழுப்புகிறது –-ஆழ்வான் -ஹிதாம்சத்துக்கு ஒரு வைஷ்ணவனுடைய க்ருஹ யாத்திரையை அனுசந்திக்க அமையும் -என்றால் போலே இவர்களும் இவளுடைய மாளிகையின் அழகை அனுபவிக்கிறார்கள்-மாமன் என்றும் அம்மான் என்றும் இரண்டும் பர்யாயம் ஆகையாலே-(அம்மான்)ஸ்வாமியான எம்பெருமானாலே புத்ரத்வேன அபிமதராய் அனந்யார்ஹரான பாகவதரே-

சுற்றும் விளக்கெரியத்-இது ஒரு சம்பத்தே -ஒரு கோடி விளக்கு இறே புறம்பே நின்று புகைகிறது –

மணி மாடத்தினுடைய மணிக் கதைவையும் மணித் தாள் திறவாய் – அதாவது த்வத் அனுபவ விரோதியான தேஹாத்மாக்கள் இரண்டிலும் உண்டான மமகாரத்தைப் தவிர்ப்பாய் -என்றபடி –அன்றிக்கே த்வத் அனுபவ விரோதியான பகவத் சௌந்தர்யத்திலும்
பகவத் பக்தியிலும் மம காரத்தைத் தவிர்ப்பியாய் என்கிறார்கள் —அநக -ராம பக்தியிலும் கால் தாழாமல் -உன் அடியார்க்கு என்னை ஆட்படுத்து என்று அவனையே கால்பிடித்து வேண்டிக்கொள்ளவேண்டுமே-இவ்வதிகாரிக்கு ஜனகையாய் இருக்கிற அநந்ய உபாயத்வ ஸ்வரூப ஞானம் ஆகிற -திருத் தாயார் – அவர்கள் இப்படி அழைக்க நீ பேசாதே கிடப்பதே -என்ன —ஸ்வாமிநீ யான நீர் உமது ஸ்வம்மான அவளை எழுப்பீரோ –ஞானமான நீ நம்பிக்கையை உணர்த்த வேண்டாமோ தன்னிடத்தில் அநந்ய உபாயத்வ ஞானம் பிறந்த பின்பு தானே அவனே உபாயம் என்ற திட அத்ய வசாயம் பிறக்கும்-ஏமப் பெரும் துயில் மந்தரப் பட்டாளோ- காவல் இடப் பட்டாளோ –நமஸ் தடுத்தோ -உபாய வைலஷண்யம் பிரவ்ருத்யந்தரத்தில் அந்வயியாதபடி மோஹிப்பித்ததோ-உபாய அத்யாவசாய நிஷ்டரை -எழுப்பீரோ –

தத் தஸ்ய சத்ருசம் பவத் -என்று பூர்வார்த்த நிஷ்டராய் இருப்பாரை பகவத் ப்ரேம அதிசயத்தாலே தத் ஏக போகராய் இருக்குமவர்கள் போகார்த்தமாக ப்ரேரிக்கை-
அவர்களுக்கு ஸ்வரூபம் -என்கிறது –

——-

ஸித்த ஸாதந ஸ்வீகாரம் பண்ணி, உபாயாத்யவஸாயத்தில் நிறைந்த ஊற்றமுடைய
மஹாநுபாவரை உணர்த்துதல், இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாம்.-கீழே அனந்தல் உடையவள் -இங்கு ஆற்ற அனந்தல் உடையவள்-வாழும் சோம்பராக இருக்க வேண்டுமே-இவ்விடத்தில் கும்பகர்ணன் -என்றது தமோ குணத்தை-தமோ குணம் தன்னை அன்றியில்-இவளுக்கு உண்டான நித்ரையைக் கண்டு இவளுடைய-நித்ரா ஜனகத்வ சக்திக்கு தான் தோற்று தன்னுடைய-நித்ரா ஜனகத்வ சக்தியையும் தந்தானோ-என்று ரகசியம்-சாத்விகனான இவ் வதிகாரிக்கு நித்தரை யாவது- ஸ்வ அனுபவ தசையிலே இதர விஷயங்கள் தோற்றாது இருக்கை –

ஞானீ த்வாத்மைவ மே மதம்-அஹம் ச ச மம ப்ரிய -என்று அவன் பக்ஷபாதத்தில் இருப்பார் திறத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் நித்ய சாபேஷாராய் இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –

————–

கற்றுக் கறவைக் –ஸ சந்தானரான சிஷ்யர்-சிஷ்யர் ஸமூஹமாய் சேர்ந்தே இருக்கும் ஆச்சார்யர் -சிஷ்யராக இருந்தே ஆச்சார்யர் போல் -சிறு மா மானிடராய் என்னை ஆண்டார்-கறந்து – அவர்களுடிய அபிநிவேச அனுகுணமாக-ஜ்ஞானப் பிரதானம் பண்ணி-புற்றரவல்குல் –ஸ்வ விஷயத்தில் படிந்த பரம பக்தியை சொல்கிறது-புன மயிலே –
அளகமென்று-ஸ்வா பதேசத்தில் வ்யாமோகத்தை சொல்லுகையாலே- வியாமோகம் தான் இதர விஷய வைராக்ய பூர்வகமாக- ஸ்வ விஷய விரக அசஹிஷ்ணுவான பிரேம ரூப ஞானம் ஆகையாலே- புன மயிலே என்று பரம பக்தியை -உடையவளே என்கிறது –

பகவத் சம்பந்தம் விச்சேதியாதே போந்த சந்தான ப்ரஸூதர் நமக்கு பூஜ்யர் என்றும்
அவர்கள் அடியாக பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகை ஸ்வரூபம் என்கிறது 

——-

கனைத்து –ஸ்வாசார்யன் தனக்கும்-ஸ்வ சந்தானத்துக்கும் பகவத் குணாநுபவம் பண்ணுவிக்கவில்லை என்று-வியசனப் பட்டு –(ஸ்வ ஆச்சார்யன் நித்ய வாசம் பண்ணும் இடத்தில் இல்லாமலும் -அவர் திரு நாட்டை அலங்கரிக்கப் பெறலாமே -இந்த வியஸனம்)

பகவத் விஷயம் ஸஹ்யமாம் படி அவகாஹித்தவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
உத்தேச்யராம் அளவன்றிக்கே தத் சம்பந்த சம்பந்திகள் உத்தேச்யர் என்று இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –முலை வழியே நின்று பால் சோர–பாவன பிரகர்ஷத்தாலே
ஸ்வா சாரய அபிமானம் ஈடாக பகவத் குணங்கள் சுரக்க –
பகவத் விஷயம் கேளாதே இருக்க தன் செல்லாமையாலே சொல்லுவாரைப் போலே – அர்ஜுனன் கேளாதே இருக்க –
பூய ஏவ மஹா பாஹோ ஸ்ருணுமே பரமம் வச-என்றவன் தன்னைப் போல
த்வயார்த்த உபதேசம் உனது ஸ்வரூப லாபத்துக்கும் தனது ஸ்வரூப லாபத்துக்கும் பிரதியுபகாரம் -உபய விபூதி கொடுத்தாலும் ஸத்ருசம் அல்லவே-பனித் தலை வீழ – பனியானது தலை மேல் சொரிய-
அதாவது- மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் உடைய ஸ்ரீ ஸூக்திகளாலே வரும் பகவத் குணாநுபவம்

நின் வாசற் கடை பற்றிச்- கீழ் ஆசார்ய உபதேசம் அடியாக வரும்- பகவத் குணானுபவ (ஞான பாவம் )பிரவாஹம் என்ன – மேலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் உடைய
அருளிச் செயலால் வரும் குணானுபவ (ப்ரேம பாவம் )பிரவாஹம் என்ன –
நடுவே பாகவத குணானுபவ (போதயந்த பரஸ்பரம் )பிரவாஹம் என்ன –இப்படி பிரவாஹ த்ரயத்தில் அகப்பட்டு அலைகிற நாம் உனக்கு பிரதிபாதகமான நமஸிலே த்வார வர்த்தியான நகாரமாகிற அவலம்பத்தைப் பற்றி கீழ் சொன்ன குண அனுபவங்களில் போக்ருத புத்தி வாராதபடி தடுக்கிற நகாரத்தைப் பற்றி என்றபடி –(அல்லேன் எனக்கு -முன் நகாரம் இருக்க வேண்டுமே -கண்டேன் ஸீதையை போல்)

பேருறக்கம்-காலம் உணர்த்த உணரும் சம்சாரிகள் நித்தரை போலும் அன்றிக்கே
ஆஸ்ரிதர்கள் ஆர்த்தி உணர உணரும் ஈஸ்வரன் உடைய உறக்கம் போல் அன்றிக்கே
உபய விலஷணமான இம் மகா நித்தரை ஏது –இரண்டிலும் வியாவிருத்தமாய்-
இது ஒரு பத்தொன்பதாம் பாஷையாய் இருந்ததீ- சம்சாரிகள் நித்தரை தமோபிபூதியால் உண்டானதாகையாலே சத்த்வதோரமான காலத்தில் தீருபடியாய் இருக்கும் – ஈஸ்வரன் உடைய நித்தரை ஜகத் ரஷணசிந்தா ரூபம் ஆகையாலே பரார்த்தி காண தீரும்
இவளுடைய நித்தரை சரம பர்வ நிஷ்டர் உடைய ஆற்றாமை காணத் தீரும்
ஆகையால் அதுக்கு அதிகாரி கிடையாமையாலே பேர் உறக்கமாய் இருக்கும்

ஆண்டாளுக்கும்-ஆழ்வாருக்கும்-தசாரதாதிகளுக்கும் – குகாதிகளுக்கும் சத்ருக்களுக்கும் மனத்துக்கு இனியான் 

பகவத் விஷயம் ஸஹ்யமாம் படி அவகாஹித்தவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
உத்தேச்யராம் அளவன்றிக்கே தத் சம்பந்த சம்பந்திகள் உத்தேச்யர் என்று இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –

————

புள்ளின் வாய் கீண்டானை – ஸ்வ ஆஸ்ரிதருக்கு ஸ்வ அனுபவ விரோதியான காமாதி தோஷ நிவர்தகனாய்-பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் –பொல்லாத அப்ராப்த விஷய ஸூசகமான அஹங்காரத்தை-அஹங்காரத்துக்கு நன்மை தீமைகள் ஆவன – அஹம் மம -என்றால் ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும் ஸ்வ அபிமான விஷயமாக தோன்றுகை–அஹங்காரத்துக்கு நன்மை யாவது – தேகமும் ஆத்மாவும் ஸ்வ தந்தரமாக தோன்றுகை -அஹங்காரத்துக்கு–தீமையாவது –பாவைக் களம் புக்கார்- அனந்யார்ஹரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் நிரூபகமான சங்கேத ஸ்தலத்தை பிரவேசித்தார்கள் – அதாவது காலஷேப கூடம்-வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று–பரிசுத்தமான ஞானம் அபிவ்ருத்தமாய் அஞ்ஞானம் தலை மடிந்தது –புள்ளும் சிலம்பின காண் – மற்றுள்ள பாகவதர்களும் த்வரித்துக் கொண்டு போந்தார்கள் –போதரிக் கண்ணினாய்– ஸ்வச்சமாய்
ஸ்லாக்கியமாய் சாராஹ்ராஹியான ஞானத்தை உடையவரே –

புள்ளு–13-பகவத் அனுபவ ரூபமான ஞான பக்திகளால் பூர்ணராய் இருப்பார் இடத்திலும்
தாதர்த்தமாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் சாபேஷாராய் இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –

———-

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்- ஆகார த்ரய விசிஷ்டரான உங்களுடைய விஹார ஸ்தானமான திருமந்த்ரத்தின் உடைய மத்யே வர்த்திக்கிற நமஸிலே பாரதந்த்ர்யம் பிரகாசமாய் ஸ்வ தந்த்ர்யம் தலை மடிந்தது காண் –செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்–ராக பிரயுக்தமான சேஷத்வ ஜ்ஞானம் உடைய
மந்த ஸ்மிதம் உடையரான பிரபன்ன அதிகாரிகள்(தவத்தவர்) தங்கள் தங்கள் எம்பெருமான் சந்நிதியிலே திருவாராதனம் பண்ணுகைக்குப் போந்தார்கள் –எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் எழுந்திராய் – எங்களை எல்லாம் நாங்கள் அபேஷிப்பதற்கு முன்னம் ஞானிகள் ஆக்கும்படி ஸ்ரீ ஸூக்திகளை அருளிச் செய்யும் பூர்த்தியை உடையவரே -எழுந்திராய் –

பகவத் விஷயத்தில் மூட்டுகையிலே அதிகரித்த நிர்வாஹகர் முன்பாக பகவத் அனுபவம் பண்ணுகை ஸ்வரூபம் -என்கிறது –

———————-

இல்லாத குற்றத்தை ஏறிட்டு சொன்னாலும் இல்லை செய்யாதே இசைந்து கொள்வதே தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணத்வம் -ஒருவனுக்கு வைஷ்ணத்வம் ஆவது ஸ்வ தோஷத்தை இல்லை செய்யாதே இல்லாததையும் சிலர் உண்டு என்றால் அத்தை இசைகையே ஸ்வரூபம் என்னும் வேதார்த்தம் சொல்லிற்று ஆகிறது- ஸ்ரீ வைஷ்ணவ சமாஜ தர்சனம் அபிமதமாய் இருக்குமவர்களைக் கண்டால் அந்த ஸமூஹமாக அவர்களை உகக்கை ஸ்வரூபம் -என்கிறது –

————

வேதம் வல்லார்கள் -என்ற இடத்தில் குரு பரம்பரையை நினைத்து கீழ்ப் பத்துப் பட்டாலும் அனுஷ்ட்டித்தார்கள் –விண்ணோர் பெருமானில்- விண்ணோர் ஆகிறவர்கள்-த்வார பாலகர் தொடக்கமாக திவ்ய மஹிஷிகள் ஈறாக உள்ளவர்கள் இறே

சேஷ வ்ருத்தி பிரயுக்தமான பேரே இவ் வாத்மாவுக்கு பேர் என்னும் இடம் தோற்றுகிறது-ஆச்சார்ய சம்பந்த கடகரை முன்னிட்டு-ஆச்சார்யனை தொழுகையும் பெரியோர் செயல் இறே-நந்த கோபனுடைய–பகவத் அனுபவ ஜனித ஆனந்த நிர்பரனாய்–சம்ஸ்ரத ரஷகனான ஆச்சார்யன் உடைய-நந்தி –ஆனந்தம்-கோபன் -சிஷ்யர்களை ரக்ஷிக்குமவன்-கோயில் காப்பானே – கோயில் உண்டு-அவனுக்கு பிரதிபாதகத்வேன இருப்பிடமான திருமந்தரம்-அத்தை அநாதாரிகள் செவிப் படுத்தாதபடி-ரஷிக்குமவனே –கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே –இவனுடைய ரஷகத்வம் விளங்கா நின்றுள்ள-
அகார நாம சப்தார்தங்களைக் காக்குமவனே-மணிக் கதவம் தாள் திறவாய்- ஞான ஆனந்த ஸ்வரூபன் ஆகையாலே-ஸ்லாக்கியமாய் இருந்துள்ள ஆத்ம ஸ்வரூப அனுபவத்தையும்-
அத்தால் வரும் ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பிரதி பத்தியையும்-தவிர்த்து அருளாய்-

நந்த கோபனுடைய கோயில்-கிருஷ்ணன் உகப்பது பாரதந்தர்யம் ஆகையால் –
ஸ்ரீ வைகுண்டத்தில் இழவு தீர -ஸ்ரீ நந்த கோபற்குப் பிள்ளையாய்-நந்தகோபன் மகன் -என்று அவரை இட்டுத் தன்னைச் சொல்லும் படி தான் பரதந்த்ரனாய் க்ருதார்த்தனான இடம் ஆகையால் அவர் அபிமானத்தில் இவன் ஒதுங்கினான் என்னும் இடம் தோற்ற கிருஷ்ணனுடைய கோயில் என்னாதே நந்த கோபனுடைய கோயில் என்கிறது

அறம் செய்யும் –பால அபிசந்தி ரஹிதமாக-ஆன்ரு சம்ச்யத்தாலே கொடுக்கை –இத்தால்-நாட்டுக்கு தாரகாதிகளைக் கொடுக்கிற நீ –எங்கள் தாரகத்தையும் தாராய் என்கை –உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லா பேறும் தானே யானவன் இறே கிருஷ்ணன் -ஆத்ம ஸ்வரூபமான ஈஸ்வர முக விகாசத்தையும்0–(அம்பரமே-போக்யம் )
தத் வர்த்தகமான போக்த்ருத்வ புத்தி நிவ்ருத்தியையும்–(தண்ணீரே-தாரகம்) தத் தேதுவான கைங்கர்யத்தையும் (சோறே- போஷகம்) ஓர் ஒன்றையோ இவன் கொடுப்பது என்னும்படி-தன்னுடைய ஆன்ரு சம்ச்யத்தாலே ஸுவயம் புருஷார்த்தமாக கொடா நின்றுள்ள (அறம் செய்யும்) நமக்கு வகுத்த சேஷியாய் (எம்பெருமான்)-ஆனந்த நிர்ப்பரனாய் (நந்த) ஆஸ்ரித ரஷகனான (கோபாலா) ஆசார்யனே -நீ உணர வேணும் -(எழுந்திராய்-)பகவத் மந்தரங்களுக்கு எல்லாம் ஸ்ரேஷ்டமாய் (கொழுந்தே) பிரபன்ன குலத்துக்கு பிரகாசகமாய் (குலவிளக்கே) எங்களுக்கு நிருபாதிக ஸ்வாமியாய் (எம்பெருமாட்டி) தன்னை அனுசந்திப்பார்க்கு ஆபிஜாத்யாதி சகல அதிசய பிரதமான திருமந்த்ரமே -அறிவுறாய் –
திருமந்தரம் அறிவுறுகையாவது – ஸ்வார்த்த பிரகாசகமாகை-செம்பொற் கழல் அடிச் செல்வா பல தேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்- சிவந்து ஸ்ப்ருஹணீயமான
ஸ்வர்ணத்தாலே செய்யப்  பட்ட வீரக் கழலை உடைய ஸ்வ சேஷத்வத்திலே பகவத் சேஷத்வம் அந்தர் கதமாம் படியாய் இருக்கையாலே திருவடிகள் விருது பூண்ட என்றுமாம்

குல விளக்கே-எங்களுக்கும் உன்னுடைய குலத்துக்கும் மங்கள தீபையாய்க் கொண்டு ப்ரகாசகை ஆனவளே–விளக்கு அந்நிய நிரபேஷமாக பதார்த்த தர்சனத்துக்கும் தன்னுடைய தர்சனத்துக்கும் ஹேது வாமா போலே –கொழுந்தே குல விளக்கே-ஆயர் கொழுந்தையும்
ஆய்ப்பாடிக்கு அணி விளக்கையும் – நீ கொழுந்தும் விளக்குமானால் அனுபவிக்கத் தர வேண்டாவோ –உம்பியும் நீயும் உறங்கேல்-படுக்கையில் சாய்ந்தார் உறங்கும் அத்தனை போக்கி படுக்கைக்கு உறக்கம் உண்டோ-அவன் படுக்கையான நீ உணர்ந்து எங்கள் படுக்கையையும் (அயனம் ஆஸ்ரயம் அன்றோ )உணர்த்தி எங்களுக்குத் தாராய்
பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார்(திருமாலை )

மந்திரத்திலும் -மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவிடமும் மந்த்ர பிரதானனான ஆச்சார்யர் பக்கல்லிலும் ப்ரேமம் கனத்து இருக்க வேண்டுமே

நாயகனில் -16–அம்பரமே –17 – இவை இரண்டாலும் பகவத் விஷயத்தை கிட்டுவார்
தத் ப்ரத்யா சன்னரைப் புருஷகாரமாகக் கொண்டு புகுருகை ஸ்வரூபம் -என்கிறது –

————

கீழே நாயகனாய் நேச நிலைக் கதவம் நீக்கு -ஆச்சார்யர் -அஞ்ஞானம் அஹந்காராதிகளைப் போக்கி மிதுனம் காட்டிக் கொடுப்பவர் இங்கு பிராட்டியை –வந்து திறவாய் மகிழ்ந்து என்று பிரார்த்தனை -பெருமாள் உடைய அஞ்ஞானம் போக்க-இருவருக்கும் உபதேசித்துப் பார்த்து -திருந்தாமல் இருந்தாலும் மீளாமல் நம்மை அருளால் திருத்தி அவனை அழகால் திருத்துபவள்-ஆஸ்ரிதர் தோஷ தரிசனத்தில் அஞ்ஞானம் கிட்டும் படி அருளுபவள்

கந்தம் கமழும் குழலி -வாஸனை-கோழி அழைத்தன -குயில் இனங்கள் கூவின-சீரார் வளை ஒலிப்ப-ஸப்த ஸமூஹங்கள்-பந்தார் விரலி-ஸ்பர்சம்-உன் மைத்துனன் பேர் பாட-ரஸம்
செந்தாமரைக் கை-ரூபம்-ஐவகை மதத்தில் ஈடுபட லௌகிக விஷயாந்தரங்களுக்குப் போக மாட்டோம்-மகிழ்ந்து  இப்படி சர்வ இந்திரியங்களுக்கும் விடாய் தீர்ந்தால் மாநஸமான உகப்பு உன்னதாக வேணும் –வந்து எங்கும் கோழி அழைத்தன காண் – சத்வோத்தரமான காலம் ஆனவாறே சர்வோதிக்கமாக பாகவதர் எழுந்து இருந்து பகவத் கைங்கர்யார்தமாக ஒருத்தரை ஒருவர் எழுப்பா நின்றார்கள் –மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்- வேதாந்தங்களிலே வேதாந்த அர்த்தங்களை அனுபவியா நிற்கும் நாத யாமுநர் போலும்-பரம பாகவத சமூஹங்கள்-சத்வம் தலை எடுத்த பின்பும் உன்னைக் காணாமையாலே நாக்கு ஒட்டினமை தோற்றப் பல காலும் கூவா நின்றன காண் –செந் தாமரைக் கையால் –சௌந்தர்ய சௌகுமார்ய சௌகந்த்யங்களாலே-தாமரை போன்ற திருக் கையாலே – இவ்விடத்தில் –கையாவது -ஜ்ஞானம்-ஜ்ஞானக் கை என்றார் இறே ஆழ்வார் –ஞானத்துக்கு சௌந்தர்ய சௌகுமார்ய சௌகந்த்யங்கள் ஆவன-இதர விஷய நிவ்ருத்தி -சௌந்தர்யம் ஸ்வ போக்த்ருத்வ நிவ்ருத்தி -சௌகுமார்யம்-நிரதிசய ப்ரேமாத்மகத்வம்-சௌகந்த்யம்-சீரார் வளை ஒலிப்ப–நிரந்தர பகவத் சம்பந்தத்தாலே பூர்ணங்களாய்- பகவத் சம்பந்த ஸூசகங்களான-ரகஸ்ய த்ரய அர்த்தங்கள் பிரகாசிக்க –

ஒரு கையாலே விபூதி – விபூதிமான் ஒரு கையிலே —நாரம் ஒரு கையிலே அயனம் ஒரு கையிலே – சேஷி ஒரு கையிலே- சேஷம் ஒரு கையிலே –-போக்யம் ஒரு கையிலே – போக ஸ்தானம் ஒரு கையிலே

——

கோட்டுக் கால் கட்டில் மேல்- சதுர தந்தியான குவலயா பீடத்தின் உடைய தந்தங்களாலே-செய்யப் பட்ட கால்களை உடைய கட்டில் மேல் இத்தால் – சதுர்வித கர்த்ருத்வ மூலமான
அஹங்கார கார்யமான சேஷத்வே கர்த்ருத்வம்-பர கத அதிசய ஆதேன இச்சையா- ஜ்ஞாத்ருத்வே கர்த்ருத்வம் கர்த்ருத்வே கர்த்ருத்வம் போக்த்ருத்வே கர்த்ருத்வம்-ஸூவ போக்த்ருத்வ புத்தி தவிர்த்தல் -தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே ஆகிற கால்களை உடைத்தாய்-அந்த கர்த்ருத்வ விஷயமான தர்ம அர்த்த காம மோஷங்கள் ஆகிற பட்டங்களை உடைத்தாய் தத் அனுஷ்டான அபிநிவேசம் ஆகிற கச்சையை உடைத்தாய் இருக்கிற கட்டில் மேல் என்கிறது –மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்– சேஷத்வாதி கர்த்ருத்வ ராஹித்யத்தாலே-மிருதுவான அர்த்த பஞ்சகம் ஆகிற படுக்கையின் மேலேறி –கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா – வர்க்கம் வர்க்கம் ஆகிற விகசித ஜ்ஞானரான ஆத்மாக்கள் ஆகிற புஷ்பங்களை உடைய பகவத் விஷய ஸ்வ வியாமோகம் ஆகிற-அளகபாரத்தை -(குழல் )உடைய நப்பின்னை பிராட்டி உடைய- போக உபகரணமான பக்தியை ஸ்வ விஷயத்தில் வைத்துக் கொண்டு அத்தால் விகஸித ஹ்ருதயன் ஆனவனே –

(உபாய யாதாம்ய ஞானமாவது -தந் நிஷ்டை -அதாவது –
சேஷத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் –
ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் -கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் –
போக்த்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் -பிறக்கை-

சேஷத்வத்தில் கர்த்ருத்வமாவது -ராஜ ஆஸ்ரயத்தை இட்டு ஜகத்தை பீடிக்கும் மந்த்ரிகளைப் போலே – பகவதாசத்தியை இட்டு சதாசாரத்தை நெகிழ்க்கை – அதாவது சப்தாதி விஷய ஸ்பர்சத்திலே அச்சமும் –
பகவத் பாகவத கைங்கர்ய விஸ்லேஷத்தில் ஆர்த்தியும் விளையாது ஒழிகை –

தந் நிவ்ருதியாவது –
ப்ராமாதிகமான விஷயத்திலே அச்சமும் –
ப்ராமாதிகமான கைங்கர்ய விஸ்லேஷத்தில் ஆர்த்தியும் விளைகை —

ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது –
நாம் ஞாதா வாகையால் அன்றோ நம்மை அவன் என்று தன் ஞானத்தை இட்டு இறுமாக்கை 
தந் நிவ்ருத்தி யாவது –
தேக ஆத்ம அபிமாநிகளிலும் கடையாய் –அசித் கல்பனாய் -முதல் (ஆத்ம சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூபத்தை)அழித்துக் கொண்டு அசத் கல்பனாய் கிடந்த என்னை-இரும்பை பொன்னாக்குவாரைப் போலே -கரும் தறையிலே புகுந்து ஆத்ம ஞானத்தை பிறப்பித்து அங்கீகரிப்பதே -என்று கிருதஞ்ஞனாய் போருகை –

கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது -நாம் நிஷித்தங்களை விட்டு -விஹிதங்களை பற்றுகையால் அன்றோ நம்மை அவன் அங்கீ கரித்தான்  என்று தன் பிரவ்ருத்தி நிவ்ருத்தியை இட்டு இறுமாக்கை –
தந் நிவ்ருத்தியாவது –
நம் வியாபாரங்கள் ஒன்றும் இல்லை -மரப்பாவையை ஆட்டுவாரைப் போலே தானே நிஷித்தங்களின் நின்றும் விடுவித்து விஹிதங்களை பற்றுவித்தான் என்று இருக்கை –

போக்த்ருவத்தில் கர்த்ருத்வமாவது –
நாம் அவனுக்கு அடிமை செய்கிறோம் என்று இருக்கை –
தந் நிவ்ருத்தியாவது –
தன் கையாலே தன் மயிரை வகுத்தால் அந்யோந்யம் உபகார ஸ்ம்ருதி பண்ணாதா போலே –
அவயவ பூதனான ஆத்மா அவயவியான எம்பெருமானுக்கு அடிமை செய்கிறான் என்று இருக்கை –

இவ் வர்த்தங்கள் ஓர் ஆச்சார்யன் அங்கீ கரித்த முமுஷுவுக்கு ஞாதவ்யம் -)

செப்பன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்– விஷய க்ராஹகமாய் விஷய விரஹ அசஹிஷ்ணு வாய் பகவத் விஷய பக்தியையும் (செப்பன்ன மென் முலை)அவனுக்கு மிகவும் போக்கியமான பரம பக்தியையும் –(செவ்வாய்)விஷயாந்தர வைராக்யத்தையும் (சிறு மருங்குல்) உடையையாய்- நப்பின்னை என்கிற திரு நாமத்தை உடையையாய்-பிராப்யத்வ புருஷகாரத்வோப யுக்த கல்யாண குண பூர்ணையான பெரிய பிராட்டியாரே நீ படுக்கையில் நின்றும் எழுந்திருக்க வேணும் –உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்-உக்கம் -ஆலவட்டம் தட்டொளி -கண்ணாடி-ஸ்வா பதேசத்தில் கைங்கர்யத்தில் அஹங்கார மமகார நிவ்ருத்தியும் யதாவஸ்தித ஸ்வரூப ஜ்ஞானமும் இவ் விரண்டையும் கொடுத்து – உனக்கு பவ்யனான ஈஸ்வரனை இந்த ஷணத்திலே பிற்றை ஷணத்துக்கு பிழையாத எங்களை ஸம்ஸ்லேஷிப்பி -என்கிறார்கள் –

அதிகாரி சித்திக்கும் -தடங்கல் போக்கி அருள -உந்து-உபாய ஸித்திக்கு குத்து விளக்கு
ப்ராப்ய ஸித்திக்கு முப்பத்து மூவர்-உக்கம் -அஹங்கார மமகாரங்கள் இல்லாத கைங்கர்யம்
பிராட்டி கைங்கர்ய வர்த்தகையாய் இருக்குமே –பகவத் விஷயீகாரம் பிராட்டி சாபேஷமாய் இருக்கிறது-பிராட்டியை புருஷகாரமாக வரித்தால்-அவனும் அவளும் இசலி இசலிப் பரியும் பரிவையும் சொல்லுகிறது –அடிமை செய்யும் இடத்திலும் இருவர்க்கும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்வதே முறையாகிறது –உந்து மத களிற்றின் தனித்து புருஷகாரமாகப் பற்றி குத்து விளக்கில் மிதுனத்தில் -இவளை முன்னிட்டு அவனை உபாயமாகப் பற்றி முப்பத்து மூவரில் மீண்டும் மிதுனத்தில் அவனை நீராட்டப் பிரார்த்திக்கிறார்கள்

—————

உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே – என்றும் ஓலைப் புறத்திலே கேட்டுப் போகை அன்றிக்கே எல்லாரும் காணலாம்படி- அஜஹத் ஸ்வபாவனாய்க் கொண்டு அவதரித்து –
சகல மநுஜ நயன விஷய தாங்கதன் ஆனவனே –சாணையில் இட்ட மாணிக்கம் போலே ஒளி விடா நிற்கை நிலை வரம்பிலே பல பிறப்பாய் ஒளி வரு முழு நலம் -என்றும் சொல்லக் கடவது இறே-சுடரே-ஆஸ்ரித பாரதந்தர்யத்தால் வந்த ஓவ்ஜ்ஜ்வல்யம்–இன்னார் தூதன் என நின்றான் -ஐவருக்கு அருள் செய்து நின்று பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடர் -மனுஷ்யத்தவே பரத்வம்–ஏற்ற கலங்கள் –உபதேச பாத்திர பூதரான சிஷ்யர்கள் –துயில் எழாய்- நீ படுக்கையில் நின்றும் எழுந்திருக்க வேணும் -ரஷணம் பிரசக்தமாய் இருக்க ரஷண சிந்தை பண்ணக் கடவதோ – என்று தாத்பர்யம் –அர்த்தித்தவமும்  ஸ்வரூபத்தில் புகும் அத்தனை –உபாயத்தில் புகாது-லுப்த சதுர்த்தி அர்த்தம் -அறிவித்தால் கார்யம் செய்யாத போது இழவும் அவத்யமும் அவனதாம் அத்தனை இறே-போற்றி –புகழ்ந்து –வந்தோம்-பெரியாழ்வாரைப் போலேயும் வந்தோம் – அல்லாதாரைப் போலேயும் வந்தோம் –நாங்கள் செய்வது எல்லாம் செய்தோம் நீ பெறிலும் பெறு-இழக்கிலும் இழ –

ஏற்ற கலம் -ப்ரபுத்தனாய் தங்கள் கார்யம் செய்கைக்கு –ஏத்த வேழுலகும் கொண்ட -என்கிறபடியே ஆஸ்ரிதரானவர்கள் நிர்மமராய்க் கொண்டு அவன் குண கீர்த்தனம் பண்ணுகை கர்த்தவ்யம் -என்கிறது –

—–

இஜ் ஜென்மத்துக்கு மூலம்-சார்ந்த இரு வல் வினை–இக் கடாஷத்துக்கு மூலம்
தொல் அருள் நல் வினை–அங்கண் -கீழில் பாட்டில் தங்கள் அபிமான ஸூந்யதையைச் சொல்லிற்றாய் –இப்பாட்டில் –அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லுகிறது-அவனுடைய விசேஷ கடாக்ஷத்துக்குத் தங்களுடைய அநந்யார்ஹ சேஷத்வம் அநுசந்தேயம் -என்கிறது –கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே– இழவு பேறுகள்-அத்தலையிலேயாய் இருக்கிற படி-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணி-பெண்கள் ஆற்றாமை அலரப் பண்ணுகிற படி-ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது –நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது –-இத் தலையில் அபராதம் மொட்டிக்கப் பண்ணும்
அவனுடைய அபராத சஹத்வம் அலரப் பண்ணும் –கர்ம பாரதந்தர்யம் மொட்டிக்க பண்ணும்
ஆஸ்ரித பாரதந்தர்யம் அலரப் பண்ணும்-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணா நின்றது -ஆர்த்த த்வனி விகசிக்கப் பண்ணா நின்றது -ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே இவர்கள் ஆற்றாமை கண்டால் அலருமவை யாயிற்று–-சிறுச் சிறிதே-ஒரு நீர்ச் சாவியிலே வெள்ளமாகாமை பொறுக்கப் பொறுக்க பிரதம பரிஷ்பந்தமே பிடித்துக் காண வேணும் என்கை-திங்களும் ஆதித்யனும்-1-விரஹ தாபம் போக்குகைக்கும்-2-கிடையாது ஒழி கிறதோ என்னும் பயத்தாலே வந்த அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்

எங்கள் மேல் சாபம்-பிறருடைய சாபம் உன் கடாக்ஷத்தாலே தீரும் – எங்களுடைய சாபம் நீ போக்குதல் அனுபவித்து விடுதல் செய்யும் அத்தனை -விஸ்லேஷ வியசனம் அனுபவித்தே விட வேண்டுகையாலே சாபம் என்கிறது –1-ப்ரஹ்ம சாபம் மார்பிலே வேர்ப்பாலே போக்கலாம் – 2-துர்வாசாவினுடைய சாபம் மார்பில் இருக்கிறவர்களுடைய கடாக்ஷத்தாலே போக்கலாம் 3-கௌதம சாபம் காலில் பொடியால் போக்கலாம் – 4-தக்ஷ சாபம் ஒரு தடாகத்தில் முழுக்கிட்டு போக்கலாம்-எங்கள் சாபம் போக்குகைக்கு இத்தனையும் வேணும் –1-வேர்த்து நின்று விளையாடக் காண வேணும்(நாச்சியார் )-2-எங்கள் மேல் நோக்க வேணும்-3-பொடி தான் கொணர்ந்து பூச வேணும் (நாச்சியார் 13)-4-இப்போதே எம்மை நீராட்ட வேணும்

1-தேகாத்ம அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
2-ஸ்வ ஸ்வா தந்த்ரிய அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
3-சேஷத்வத்தை அறிவித்து -அதுக்கு இசைந்தவாறே –
4-அந்ய சேஷத்வ நிவ்ருதியை உண்டாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே
5-ஜ்ஞாத்ருத்வ பிரயுக்தமான ஸ்வ ஸ்மிந் ஸ்வ சேஷத்வ நிவ்ருத்தியை உண்டாக்கி -அதுக்கு இசைந்தவாறே
6-ஸ்வ ரஷண ஸ்வாந் வயத்தை நிவர்த்திப்பித்து – அதுக்கு இசைந்தவாறே –
7-உபாயாந்தரங்களை விடுவித்து -அதுக்கு இசைந்தவாறே
8-தத் ஏக உபாயனாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே –
9-ஸ்வ வியாபாரத்தில் ஸ்வாதீன கர்த்ருத்வ நிவ்ருத்தியைப் பண்ணுவித்து -அதுக்கு இசைந்தவாறே
10-பாரதந்த்ரிய பிரதிபத்தியைப் பிறப்பித்து அதுக்கு இசைந்தவாறே
11-சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனான தன்னை அனுபவிப்பித்து –
12-அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யத்தை உண்டாக்கி
13-அக் கைங்கர்யத்தில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியை தவிர்ப்பிக்கை –

ப்ரமேய சேகரம்–பகவத் கடாஷம் அடியாக அஜ்ஞாத ஸூக்ருதம்  யுண்டாம் –
அதடியாக அத்வேஷம் யுண்டாம் –
அதடியாக பகவத் பாகவத விஷயங்களில் ஆபிமுக்யம் யுண்டாம் –
ஆபிமுக்யம் யுண்டானவாறே -த்யாஜ்ய உபாதேய விபாக ஜ்ஞானத்தில் கௌதுகம் யுண்டாம் –
அத்தாலே சாத்விக சம்பாஷணம் யுண்டாம் –
அத்தாலே சதாசார்ய சமாஸ்ரயணம் யுண்டாம் –
அது யுண்டானவாறே த்யாஜ்ய உபாதேய நிச்சயம் யுண்டாம் –
அது யுண்டானவாறே -ப்ராப்யாந்தரத்தில் வைராக்யமும் -பரம பிராப்யத்தில் அபி நிவேசமும் யுண்டாம் —
அநந்தரம்-ப்ராப்யாந்தர நிவ்ருத்திக்கும் -பரம ப்ராப்ய சித்திக்கும் அடியான சித்த உபாய ச்வீகாரம் யுண்டாம் –
அநந்தரம் -பகவத் ப்ராப்தியிலே த்வரை யுண்டாம்
அநந்தரம் -அஹம் ஸ்மராமி -என்கிறபடியே -ஈஸ்வர ஸ்ம்ருதிக்கு விஷய பூதானாம்
அநந்தரம் பூத ஸூ ஷ்ம சரீர பரிஷ்வங்கம் யுண்டாம் –
அநந்தரம் -பரமார்த்த சம்சர்க்கம் யுண்டாம்
பின்பு ஹாரத்த  மார்க்க விசேஷ பிரகாசம் யுண்டாம் –
பின்பு ஹ்ருதய குஹா நிர்க்கமனம் யுண்டாம் –
அநந்தரம் -மூர்த்தன்ய நாடீ நிஷ்க்ரமணம் யுண்டாம் –
அநந்தரம் -அர்ச்சிராதி மார்க்க கமனம் யுண்டாம் –
அநந்தரம் -ஆதிவாஹிக சத்காரம் யுண்டாம் –
அநந்தரம் -ஆவரணாதி க்ரமணம் யுண்டாம் –
அநந்தரம் -ப்ரக்ருத் யதி லங்கனம் யுண்டாம் –
அநந்தரம் விரஜா ஸ்நானம் யுண்டாம் –
அநந்தரம் -ஸூ ஷ்ம சரீர விச்லேஷம் யுண்டாம் —
அநந்தரம் -அபஹத பாப்மத்வாதி குணகண ப்ராதுர்பாவம் யுண்டாம் –
அநந்தரம் -அமா நவ கர ஸ்பர்சம் யுண்டாம் –
அநந்தரம் -பகவத் சங்கல்ப கல்பிதமான திவ்ய தேக ப்ராப்தி யுண்டாம் —
அநந்தரம் அகால கால்ய திவ்ய தேச ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் -அரம்ஹ்ரத தட ஸ்நானம் யுண்டாம் –
பின்பு திவ்ய அலங்காரம் யுண்டாம் –
பின்பு திவ்ய விமான ஆரோஹணம் யுண்டாம் –
பின்பு திவ்ய காந்தார பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் திவ்ய அப்சரஸ் சத்காரம் யுண்டாம்
அநந்தரம் -திவ்ய கந்த பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் ப்ரஹ்ம கந்த பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் அப்ராக்ருத கோபுர ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் திவ்ய நகர ப்ராப்தி யுண்டாம்
அநந்தரம் ஸூ ரி பரிஷத் பிரத்யுத் கமனம் யுண்டாம் —
அநந்தரம் -ராஜ மார்க்க கமனம் யுண்டாம் –
அநந்தரம் -ப்ரஹ்ம தேஜ பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் -திவ்ய கோபுர பிராப்தி யுண்டாம்
அநந்தரம் ப்ரஹ்ம வேச்மப்ரவேசம் யுண்டாம் –
அநந்தரம் -திவ்ய மண்டப ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் திவ்ய பரிஷித் ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் – ஸபத் நீக சர்வேஸ்வர தர்சனம் யுண்டாம் –
அநந்தரம் -ஸ்துதி ப்ரணாம அஞ்ஜலிபிரமுக சம்ப்ரம அனுவர்த்தனம் யுண்டாம்
அநந்தரம் பரமாத்மா சமீப ப்ராப்தி யுண்டாம்
அநந்தரம் பாத பீட பர்யங்கா ரோஹணம்  யுண்டாம்
அநந்தரம் -பகவத் உத்சங்களங்கம் யுண்டாம் –
அநந்தரம் -ஆலோக நாலா பாத்ய நுபவம் யுண்டாம் –
அநந்தரம் -ஆலிங்க நாத்ய அனுபவம் யுண்டாம் —
அநந்தரம் -ஸ்வ ரூப ரூப குண விக்ரஹாத்ய நுபவம் யுண்டாம் —
அநந்தரம் -அநுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷம் யுண்டாம்
அநந்தரம் -நாநாவித விக்ரஹ பரிக்ரஹம் யுண்டாம் –
அநந்தரம் -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசிதமான  சர்வ பிரகார கைங்கர்யம் யுண்டாம் —)

————-

மாரி-பிரிந்தார் கூடும் காலம் – கூடினார் போக ரசம் அனுபவிக்கும் காலம் – புஜிக்கிறவர்கள் கை நெகிழில் உடம்பு வெளுத்து அணையும் காலம்-பெண்களோடு மேகம் அறையிடும் காலம் – பிரிந்தார் கொடுமை குழறும் காலம் – கலந்தார் வர எதிர் கொள்ளும் காலம் -(திருவிருத்தம் ) பெண் நீர்மை ஈடு அழிக்கும் காலம் (நாச்சியார் -8- )-மலை முழஞ்சில்
ஸிம்ஹம் தான் மலைக்கு ஆபரணமாய் இறே இருப்பது – இவனும் நப்பின்னையினுடைய துங்க ஸ்தன கிரிதடியில் ஸ்தன ஆபரணம் போலே தங்குகிறான்-சீரிய சிங்கம்-நர ஸிம்ஹம் போலே கலந்து கட்டியாய் சீர்மை கெட்டு இராதே சிற்றாயர் சிங்கத்துக்கு(பெரியாழ்வார் – 3-3)-சீரிய சிங்கம்-சிற்றாயர் சிங்கம் -யாதவ ஸிம்ஹம் -ரெங்கேந்திர ஸிம்ஹம் -ராகவ சிம்மம் -ராஜ ஸிம்ஹம்-நீ பூவைப் பூ வண்ணா -உன்னை நீ அறிய வேண்டாவோ – எதிரிகளான சிசுபாலாதிகள் முன்னே நிற்கிலும் இவ் வழகு குலையாமே நிற்குமவன் அல்லையோ நீ-சிம்ஹத்தால் உன்னுடைய வடிவு அழகையும் குளிர்த்தியையும் ஸுகுமார்யத்தையும் ஏறிட்டுக் கொள்ளப் போமோ

————

அன்று –தன் விபூதியை மகாபலி அபஹரிக்க நோவு பட்டு இருக்கிற அன்று–தன்னைப் பிரிந்து நாங்கள் ஆர்த்தியால் நோவு பட்ட இன்று – ஜகத்தை மகா பலி யினுடைய அபிமானத்தின் நின்றும் மீட்ட அன்று– எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தின் நின்றும் மீட்ட இன்று – நாட்டுக்கு எல்லாம் தன் திருவடிகளை தூளிதானம் பண்ணின அன்று– அழகையும் சீலத்தையும் எங்களுக்கு தூளிதானம் பண்ணின இன்று– இது இறே ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் வாமனனுக்கும் சாம்யம்-அன்று எல்லை நடந்து மகாபலி பக்கல் நின்றும்-பூமியை மீட்டுக் கொண்டால் போலே நடை அழகைக் காட்டி விஸ்லேஷத்தின் நின்றும்-மீட்டுக் கொண்டான்-இசைவு பிறந்த இன்று -என்னுதல்- நீ உறங்க -நாங்கள் உறங்காத இன்று -என்னுதல்

இரங்கு – எல்லாம் பட்டாலும் அவன் இரங்கினால் அல்லது கார்ய கரம் ஆகாமை –
அத்தலைக்கு இரங்குகை ஸ்வரூபம் – அவனுக்கு என் வருகிறதோ என்று இருக்கை-இத்தலைக்கு ஸ்வரூபம்-தாங்கள் பண்ணின மங்களா சாசனம் சாதனம் அன்று -என்று இருக்கிறார்கள்-இரங்கு -என்று கிருபையே சாதனம் என்கையாலே-வந்தோம் -என்று
ருசி காரித்தைச் சொல்லுகிறது –

அஹங்கார க்ரஸ்தமான இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்டு தன் திருவடிகளாலே அளந்து தனக்காக்கிக் கொண்டவனே –இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்ட அளவு அன்றிக்கே அந்த அஹங்காரத்துக்கு பிறப்பிடமான இடத்தே சென்று – தர்ச நீயமான பிரகிருதி சம்பந்த நிர்வாஹகமான அஹங்காரத்தை அழித்தவனே-காம குரோதங்களை-ஸ்வரூபேண நசிக்கும்படி -உன் திருவடிகளாலே உதைத்தவனே –லோபத்தை எறிதடியாக எறிந்து மோஹத்தை நசிப்பித்தவனே –அஞ்ஞான கார்யமான அஹங்காரம் இவ் வதிகாரிக்கு விஷய ப்ராவண்யத்தை உண்டாக்குவதற்கு
பிரதி கிரியையாக வைதிகமாய் கைங்கர்ய ரூபமான விஷய ப்ராவண்யத்தை உண்டாக்கி
ஸ்வ பிரபன்ன ஜன ரஷகனாம்படியைச் சொல்லுகிறது –ஐம் புலன்களுக்கும் அவனையே விஷயமாக்கி -இது குன்று போல் -இது ஸ்திரம் அநந்தம் அவை கல் போல் அல்பம் அஸ்திரம்)-அஹங்காரத்தை ஜெயித்து தத் விஷய வைமுக்யத்தை மாற்றும் நின் திருக் கையில் திரு வாழி யாழ்வானுக்கு-பல்லாண்டு –

இருந்த இடத்தில் இருந்து அளந்த திருவடிக்கும்-எவ்வாறு நடந்தாய் எம் இராமாவோ -என்ற திருவடிக்கும்-குழந்தையாய் சகடம் உதைத்த திருவடிகளுக்கும்-கன்றை எறிந்த போது காட்டி அருளிய குஞ்சித பாதங்களுக்கும் இந்திரனை ரஷித்த குணத்துக்கும் இவை உன்னது செயல்கள் அல்ல உனது திருக்கையில் ஆயுதங்கள் செய்தன -அவற்றுக்குப் பல்லாண்டு என்று என்று பல தடவை பல்லாண்டு பாடுவதே பறை-அடி போற்றி –திறல் போற்றி -புகழ் போற்றி- கழல் போற்றி – குணம் போற்றி – வேல் போற்றி -என்று -இவர்கள் நாக்குக்கு இடும் ஷட்ரசம் இருக்கிறபடி –அர்த்திகளாய்ச் சென்றாலும் தந்தாமுடைய புருஷார்த்தத்தை விஸ்மரித்து மங்களாசாசனம் பண்ண வேண்டும்படியான விஷய வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது –

——————-

ஒருத்தி மகனாய் பிறந்து – அஷ்டாஷரீ பிரதிபாத்யனாய்க்- குண விக்ரஹ விபூதி விசிஷ்டனாய்அவதரித்து –ஓர் இரவில் ஒருத்தி மகனாய் – லௌகிகர் அறியாத அத்விதீய காலத்தில்-வாசுதேவ த்வாதச அஷரீ பிரதிபாத்யனாய் –ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் அனைத்தயும் வியக்தம் அஷ்டாக்ஷர மந்திரத்தில் மட்டும் தானே-ஸ்வரூபம் மட்டும் வியக்தம் துவாதச அக்ஷர மந்திரத்தில்-ஒளித்து வளரத்-குண விக்ரஹ விபூதி களாலே சங்குசித்து
ஸ்வரூப மாத்ரேண வளரா நிற்க –தரிக்கிலானாகித் –ஸ்வரூப மாத்ரேண-ஈஸ்வர சத்தையையும் பொறாதவனாய் –தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற நெடுமாலே –அநவரதம் மங்களா சாசனம் பண்ணக் கடவ விஷயத்திலே அவனால் ஒரு உபத்ரவம் உண்டாய் பொல்லாமையை நினைக்கை அன்றிக்கே – தானே த்வேஷத்தை நினைந்த அபிப்ராயத்தை வ்யர்த்தமாக்கி அஹங்காரத்தின் உடைய வயிற்றிலே நெருப்பைக் கொளுத்தினாப் போலே ஜ்வலித்து
அவன் அருகே நின்ற ஸ்வ சேஷ பூத சேதன விஷய வ்யாமோஹ அதிசயத்தை உடையவனே –திருத் தக்க செல்வமும் சேவகமும் –பெரிய பிராட்டியாருக்கு தகுதியான ஸ்வரூப ரூப குண விக்ரஹ விபூதி -விசிஷ்டனாய் இருக்கிற செல்வத்தையும் வீர சரிதையையும் –யாம் பாடி-
அதுவே தாரகமான நாம் பாடி –வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்- உன்னைப் பிரிந்து பட்ட வ்யசனம் எல்லாம் நிஸ் சேஷமாக தீர்ந்து ஆனந்திக்கக் கடவோம் –வருத்தம் தீருகைக்கு சேவகம் பாடினார்கள் – மகிழ்ச்சி பிறக்கைக்கு செல்வம் பாடினார்கள் –ஸுர்ய வீர்யாதிகள் கிலேச நிவ்ருத்திக்கு உடல் – ஐஸ்வர்யம் ஆனந்த ஹேது-விரோதி நிவ்ருத்தியும் யாய்த்து – அபிமத சித்தியும் யுண்டாய்த்து — பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து தருதியாகில் உன்னை அருத்தித்து வந்தோம் –ஸ்வரூப லாபத்தோ பாதி-துக்க நிவ்ருத்தியும் தத் ஆஸ்ரயணத்தாலே -என்கிறது –

சிந்தையினால் இகழ்ந்த -என்கிறபடி யுக்தி மாத்ரமான அளவில் நலியாதே நெஞ்சில் பொல்லாங்கு சோதித்தால் யாய்த்து கை விடுவது – கைக் கொள்ளும் இடத்தில் கழுத்துக்கு மேலும் அமையும் – கை விடும் இடத்தில் அகவாயில் உண்டு என்று அறிந்தால் அல்லது விடான்–

————

சரணாகத வத்சல -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடான பிரதான குணத்தை பிராட்டி நிலை இட்டாள் -மகா பாரதத்துக்கு உள்ளீடான வ்யாமோஹ குணத்தை – மாலே -என்கிற சம்போதனத்தாலே இவர்கள் நிலை இட்டார்கள் – இவர்கள் பேச்சை கேட்ட பின்பு முந்தியிலும் பெரும் பித்தனானபடி —பஞ்ச லஷம் குடியில் பெண்களும் முன்னே நிற்கையாலே இவர்கள் முலையிலும் இடையிலும் கண்ணிலும் முகத்திலும் துவக்குண்டு ஆனைக்குப்பு ஆடுவாரைப் போலே இருக்கையாலே தட்டி எழுப்புகிறார்கள் –ஜ்ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது – இவை இறே ஒரு அதிகாரிக்கு அழகு ஆகிறது –
காண்கைக்கு ஹேது வாகையாலே கண் -என்று ஜ்ஞானத்தைச் சொல்கிறது –
போக உபகரணம் ஆகையாலே முலை -என்று பக்தியைச் சொல்லுகிறது – கார்ச்யத்தாலே இடை என்று -விரக்தியைச் சொல்லிற்றாய் அத்தால் விஷயாந்தர ஸ்பர்ச ராஹித்யத்தை வைராக்யத்தைச் சொல்லுகிறது –மாலே மணி வண்ணா -என்கிற இத்தால் –மாம் -சௌலப்யத்தை சொல்லிற்று-ஆலினிலையாய் -அஹம் –என்கிற இடத்தில்–சஹாயாந்தர நிரபேஷமான உபாய வேஷத்தை சொல்லிற்று-பரத்வம் ஸுலப்யம் ஸுந்தர்யம் -மூன்றும் சேர்ந்த பசும்கூட்டம் மாலே மணி வண்ணா ஆலின் இலையாய்–

மணி வண்ணா -என்று மணியினுடைய ஸ்வபாவத்தைச் சொல்லுகிறது
அதாவது –
1-உண்டு -என்ன உயிர் நிற்கையும்
2-உடையவன் காலில் சர்வரும் விழும்படியாய் இருக்கையும் –
3-இழந்தார் பிழையாது ஒழிகையும்
4-கைப் பட்டார்க்கு பூணலாய் இருக்கையும்-
5-பூணாதார்க்கு அழித்து உண்ணலாய் இருக்கையும் –
6-கிழிச் சீரையிலே அடக்கலாய் இருக்கையும் –
7-பிறர்க்கே யாய் இருக்கையும்
8-அளவு படாமல் உபகரிக்கையும் –
9-கொடுத்தோம் என்று நினைத்திராது ஒழிகையும்
10-வேறு ஒன்றில் கண் வைக்க ஒட்டாது ஒழிகையும் தொடக்கமான ஸ்வபாவங்கள் –

சங்க த்வனி ஓங்காரம் என்று ஜகத்திலே பிரசித்தமாய் இருக்கையாலே ஓங்கார அர்த்தம் அனன்யார்ஹ சேஷத்வம் ஆகையாலே லஷண்யா சேஷத்வ ஞானத்தை சொல்லுகிறது   –மிகவும் த்வநிக்கிற மத்யத்திலே இருக்கிற பறை -என்கையாலே பகவத் அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான ஸ்வ ஸ்வா தந்த்ரியத்தையும் சேஷத்வ சிஹ்னமான கைங்கர்யத்தில் ஸ்வ அதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும் நிவர்ப்பிக்குமதாய் மத்யே இருக்கிற நமஸ் சப்த அர்த்தமான பாரதந்த்ர்ய ஞானமும் உண்டாக வேணும் என்னும் இடம் சொல்லுகிறது –ஓம் விட நமஸ் உயர்ந்தது-போய்ப் பாடுடையனவே -இடமுடைமை- பெருமை-சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல் அன்றே பாரதந்த்ய போக்யங்கள் -ஆகவே சாலப் பெரும் பாறை -பெரிய த்வனி இதுக்கு-சாலப் பெரும் பறையே –பறை -பெரும் பறை – சாலப் பெரும் பறைபல்லாண்டிசைப்பாரே-சத் சஹ வாசம் வேணும் –கோல விளக்கே – பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு அத்யந்தம் மனோஹரம் ஆக்குகிற பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –கொடியே – கீழ் சொன்ன சேஷத்வ லஷணமான கைங்கர்யமும் வேணும் –விதானமே- அக் கைங்கர்யத்தில் போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேணும்-ஆறு விஷயங்கள் -அபஹத -இத்யாதி ஆறும்

திருப் பல்லாண்டு பாடுகைக்கு- அடியோமோடும் நின்னோடும் என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வாரையும் பாகவத ஸம்ருத்திக்கு- பொலிக பொலிக -(5-2)என்னும் –நம்மாழ்வாரையும் கொடுத்தான்-மங்கள தீபத்துக்கு உபய (தன்னையும் அவனையும் )பிரகாசகையான நப்பின்னைப் பிராட்டியையும் கொடுத்தான் கொடிக்கு பெரிய திருவடியையும் விதானத்துக்குத் திரு அவதரித்த அன்று தன் பணத்தை இட்டுக் கவித்துக் கொண்டு போந்த திரு அநந்த ஆழ்வானையும் கொடுத்தான்-எல்லாம் கொடுத்தாலும் தன்னைக் கொடுத்தது ஆகாமையாலே அத்தவாளத்தையும் கொடுத்தான்
எல்லாத்தையும் கொடுத்தாலும் தன்னை ஒழிய ஓர் அடி இடாத பெண்கள் ஆகையாலே-எல்லா அடிமையும் செய்ய வல்ல ஒருவனையும் கொடுத்து விடாதே நித்ய விபூதியில் உள்ளார் அனைவரையும் கொடுக்கிறது என் என்னில் எல்லாரும் ஸ்வரூப லாபம் பெறுகைக்காக-

———

சீர் –எல்லாரையும் வெல்லுவது குணத்தாலே – வில் பிடித்த பிடியைக் காட்டி விரோதிகளைத் தோற்பிக்கும் – அனுகூலரை அழகாலும் சீலத்தாலும் -நீர்மையாலும் -தோற்பிக்கும் –
சர்வஞ்ஞரை -எத்திறம் -எண்ணப் பண்ணும் குணம் இறே- அம்புவாய் -மருந்தூட்ட தீர்க்கலாம் நீர் கொன்றாப் போலே இதுக்கு பரிகாரம் இல்லை –தன்னுடைய வடிவு அழகைக் காட்டி கோபிமார்களை ஜெயித்தான்(ஸாஷாத் மன்மதன் ) ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே சர்வ ஸ்மாத் பரனான தன்னுடைய வை லஷண்யத்தைக் காட்டி ஆழ்வார்களை ஜெயித்தான்-இவை ஒன்றிலும் ஈடுபடாத நம் போல்வாரை ஆழ்வார்
சம்பந்தத்தை வ்யாஜீ கரித்து ஜெயிக்கும் இத்தனை –

சூடகமே இத்யாதி-1-பிடித்த கைக்கும் –2-அணைத்த தோள்களுக்கும்-3-அணைத்த இடத்தே உறுத்துமதுக்கும்-4-ஸ்பர்சத்துக்கும்-5-தோற்று விழும் துறைக்கும்-பராபர குருக்கள் பூட்டும் ஆத்ம பூஷணங்கள் -ப்ரஹ்ம அலங்காரம் –-உன் தன்னைப் பாடி -கூடி –குளிர்ந்து-வாய் பாட-உடம்பு கூட-நெஞ்சு குளிர-கூடி –குளிர்ந்து-குள்ளக் குளிர நீரிலே தோயாதே நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் –நீரிலே தோயாதே உபாயாந்தரங்களிலே இழியாதே-நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் -ப்ராப்யத்திலேயே ஆழ்ந்து இருக்க வேண்டும்-தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -என்கிறபடியே கைங்கர்யமே ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் என்று அறுதியிட்டு பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் உத்தேசியமான புருஷார்த்த ஸித்திக்கும் அனுகுண அலங்காரம் அவனே பண்ண வேணும் என்கிறது –-அலங்காராசனத்துக்குப் பின் போஜ்யாசனம் தானே-அதன் பின்னே பாற்சோறு-மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்(ஓங்கு பெரும் செந்நெல் கீழ் ) பகவத் சம்பந்தம் உண்டான திருவாய்ப்பாடியிலே ஸம்ருத்திகள் எல்லாம் இவளுக்கு பிரியமாய் இருக்கிறபடி-
நம்பி திருவழுதி வளநாடு தாசர் -நெய் வாயில் படாதோ என்ன-ஓரவல் (ஓர் அவில் -ஒரே அரிசி மணியாவது )வாயில் தொங்கில் அன்றோ நெய் வாயில் படுவது -என்று பட்டர் அருளிச் செய்தார்-கிருஷ்ண சந்நிதியாலே த்ருபத்தைகளாய் இருக்கிறார்கள்
பால் தொங்கில் அன்றோ நெய் தொங்குவது-நெய் யுண்ணோம் பாலுண்ணோம் -2-கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்- தனியே புஜிக்கக் கடவது அன்று – உண்கை உத்தேச்யம் அன்று- பிரிந்து பட்ட கிலேசம் தீரத் தீர கூடித் தொட்டுக் கொண்டு இருக்கை பிரயோஜனம்-நம்பெருமாள் திரு நாள் என்று ஒரு பேரை இட்டு ஸ்ரீ வைஷ்ணவர்களை யடையத் திரட்டிக் காணுமா போலே-ஸோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்ஸிதா–அஹம் அன்னம் -இத்யாதிப் படியே ஒருவருக்கு ஒருவர் போக்யம் என்கை

சூடகமே –காப்பே–கைத்தலம் பற்றி உபக்ரமம் –திருவடியில் விழுந்தது பர்யந்தம்–தோள் வளையே –திரு இலச்சினையே-தோடு – திரு மந்த்ரமே-செவிப் பூவே-த்வயமே (அனுபவத்துக்கு )-பாடகமே-சரம ஸ்லோகமே -இவை ஸ்வரூபஞ்ஞனான முமுஷுவான அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதங்களாய் – பகவத் சம்பந்த த்யோதகங்களாய் -இருப்பன-இதில் தோடு –மண்டல ஆகாரமாய் -மந்திர சேஷ விவரிணியான பிரணவ ஆகாரத்துக்கு த்வதோகமாய் -இருக்கையாலே – திருமந்த்ரத்தை சொல்லுகிறது –செவிப்பூ-ஸுவயம் போக ரூபம் ஆகையாலே -போக பிரதானமான த்வயத்தை சொல்லுகிறது –பாடகம்
பத்த ரூபம் ஆகையாலே -உபாயாந்தர நிவ்ருத்தி பரமான சரம ஸ்லோகத்தை சொல்லுகிறது –இம் மூன்று ரகஸ்யங்களாலும் ஞான பக்தி வைராக்யங்களை சொல்லுகிறது – அது எங்கனே என்னில் –திருமந்தரம் -ஆத்ம ஸ்வரூப யாதாம்ய ஞான பரம் ஆகையாலும் த்வயம் -உத்தர கண்டத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான பக்தி பிரதானம் ஆகையாலும் சரம ஸ்லோஹம் த்யாஜ்ய அம்சத்தில் வைராக்யம் பிரதானம் ஆகையாலும் ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –ஞான பக்தி வைராக்யங்கள் மூன்றும் ஓர் ஒன்றே விஷய பேதத்தாலே -அநேகமாக இருக்கும் இறே- ஆகையால் -பல் கலனும் -என்கிறார்கள் –யாம் அணிவோம்-உன்னோடு கூடாத அன்று இவை ஒன்றும் வேண்டாத நாம் இன்று அணியக் கடவோம் -பகவத் சம்பந்தம் இன்றியிலே ஞான பக்தி வைராக்யங்கள் உண்டானாலும் அபாயம் இறே பலிப்பது – பௌத்தனுக்கும் ஞான பக்தி வைராக்யங்கள் உண்டு இறே –ஆடை உடுப்போம்-சேஷத்வ ஞானம் ஆகிற வஸ்த்ரத்தை உடுப்போம்-பால் சோறு-கைங்கர்யம் ஆனது-மூட நெய் பெய்து மறையும்படி பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு –கூடி இருந்து குளிர்ந்து – போக்தாவான உன்னோடு
போக்யரான நாம் சம்பந்தித்து இருந்து -விஸ்லேஷ வ்யசனம் எல்லாம் தீரப் பெற்றோம் –
இது வன்றோ நாம் உன் பக்கல் பெரும் சம்மானம்-

———-

முதல் பாட்டில் சங்க்ரஹேண சொன்ன பிராப்ய பிராபகங்கள் இரண்டையும் மேல் இரண்டு பாட்டாலும் விவரிப்பதாக இப் பாட்டில் பிராபக ஸ்வரூபத்தை விவரிக்கிறார்கள்–நாராயணனே பறை நாராயணனே தருவான்-என்பதின் விவரணம் இப் பாசுரமும் அடுத்த பாசுரமும் உன்னோடு உண்டான சம்பந்தம் –உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது –
உன்னோடு நமக்கு உண்டான உறவை ஆராய்ந்து பார்த்தால் சோபாதிகம் அன்றிக்கே
நம் இருவர் உடையவும் ஸ்வரூபமாய் இருக்கையாலே அது தானும் நித்யம் ஆகையாலே
சர்வ சக்தியான உன்னாலும் போக்க ஒண்ணாது – பிராக்ருதரான நம்மாலும் போக்க ஒண்ணாது –க்ருத சங்கே திகளான இருவராலும் போக்க ஒண்ணாது – இருள் தரும் மா ஞாலமான இத் தேசத்தாலும் போக்க ஒண்ணாது ––நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே -நீ என்னை அன்றி இலை –மந்த்ர ரஹஸ்யம் -விதி ரஹஸ்யம் -அனுஷ்டான ரஹஸ்யம் -ஷேம கரம் – பூர்வ வாக்கியம் உத்தர வாக்கியம் -நடுவில்-ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே ஓம் சாந்தி சாந்தி சாந்தி: –

கறவைகள் -இத்யாதி – ஜ்ஞான ஹீநரான சம்சாரிகளை அனுவர்த்தித்து சம்சாரத்தைப் பிராப்யமாகப் பற்றி – தேக போஷண ஏக பரராய் இருந்தோம் இது இறே உன்னை நாங்கள் பற்றுகைக்கு அனுஷ்டித்த கர்ம யோகம் –அறிவொன்றும் இல்லாத – ஞானமும் ஞான விசேஷமான -பக்தி யோகமும் -இல்லாத –ஆய்க் குலம் –உபயாந்தரங்கள் இல்லாமையாலே
தோஷமாகாத குலத்திலே பிறந்தவர்கள் நாங்கள் –இத்தால் – ஜன்ம வ்ருத்த ஞானங்களால் உண்டான நிகர்ஷம் சொல்லுகிறது –தங்கள் உடைய ஆகிஞ்சன்யத்தையும் அநந்ய கதித்வத்தையும் உபாயத்தின் உடைய நைரபேஷ்யத்தையும் சொன்னார்கள் ஆய்த்து –இறைவா- வானோர் இறையை நினைத்தன்று – ஆய்க் குலமாக வந்து தோன்றின நம் இறை –பேற்றுக்கு அத்வேஷம் இறே இத் தலைக்கு வேண்டுவது பேற்றின் கனத்துக்கு கீழே விளைந்தது எல்லாம் அத்வேஷ மாத்ரமாய் இருக்கும் இறே –1-தங்களுடைய ஆகிஞ்சன்யத்தையும்-2-அயோக்யதையையும் ஆவிஷ்கரித்து-3-உபாய பூர்த்தியையும்
4-தங்கள் ப்ராப்தியையும் முன்னிட்டு –-5-கீழ் சொன்னவற்று எல்லாம் அனுதபித்து க்ஷமை கொண்டு-6-எங்கள் ப்ராப்ய சித்திக்கு நீயே உபாயமாக வேணும் என்று அபேக்ஷிக்கிறார்கள் –ஆய்க் குலத்து உன் தன்னை-அநஸ்நன் -என்னும் படி ஓட்டறுத்து உண்ணாதே நிற்கும் உன்னை உண்போம் என்கிற எங்கள் குலத்திலே பெற்றோம் –திவ்ய ஞான உபபன்னருக்கு முகம் கொடுக்கிற உன்னை அறிவு ஒன்றும் இல்லாத குலத்திலே பெற்றோம்-இமையோர் தம் குல முதலான உன்னை(திருவாய் -1-5 ) ஆயர் தம் குல முதலாகப் பெற்றோம்-வெங்கதிரோன் குலத்தில் காட்டில் இக்குலத்துக்கு உண்டான வாசி பாராய் –நீ பகல் விளக்கான குலமும்-நீ அணி விளக்கான குலமும் ஒக்குமோ-நீ ஆவிர்ப்பவித்த யாதவ குலமோ இது – நந்தன் பெற்ற வானாயன்-என்னும் இடம் அன்றோ இது-

கீழ் அடங்க ஒரு அதிகாரிக்கு சம்பவிக்கும் ஸ்வ பாவங்களைச் சொல்லி ஆகிஞ்சன்யத்தையும் ப்ராப்தியையும் முன்னிட்டு அவனே உபாயமாக வேணும் என்று அபேக்ஷித்து ஷாமணம் பண்ணிக் கொண்டு தலைக் கட்டுகிறது –

——–

உன் தன்னோடு உற்றோமே ஆவோம் –நீ ஸ்வாமியாகவும்-நாங்கள் ஸ்வம் ஆகவும்-இஸ் சம்பந்தம் என்றும் சித்திக்கும் இத்தனையே எங்களுக்கு வேண்டுவது -என்கிறார்கள்-ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது-எல்லா உறவும் நீயே யாக வேணும் -என்கைக்காக-சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் – என்னக் கடவது இறே –உனக்கே –என்ற அவதாரணத்துக்கு கருத்து-நீ உகந்த அடிமை செய்வோம் –
உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து-தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே நீ உகந்த அடிமை யாக வேணும் – அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது –மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் –நாங்கள் எங்களுக்கு என்று இருக்கிற அதுவும்-நீயும் -இவர்களுக்கு என்று இருக்கும் அதுவும் இவை இரண்டும் விரோதி யாகையாலே அத்தைத் தவிர்த்து தர வேணும் -என்கிறார்கள் –பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் – என்றவர்கள் தாங்களே குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -என்று கைங்கர்யத்தைப் பிரார்திக்கையாலே கைங்கர்யம் தானும் மங்களா சாசனம் ரூபமான படியாலே மங்களா சாசனத்துக்கு பலமாக அவன் கொடுக்க வேண்டியதும் இவர்கள் கொள்ள வேண்டியதும்
மங்களா சாசனமே என்றது -ஆய்த்து –சிற்றம் சிறுகாலே –போற்றும் பொருள் கேளாய் -என்கையாலே ரஜஸ் -தமஸ் ஸூ க்களாலே கலங்கி தேக அனுபந்திகளான-த்ருஷ்ட பலங்களை-அடியோங்கள் அபேஷித்தாலும் ஹித பரனான நீ கேள்வி கொள்ளவும் கடவை அல்லை கொடுக்கக் கடவையும் அல்லை – என்றது ஆய்த்து –

சிற்றம் சிறு காலை யாவது – சம்சாரியான நிலை குலைந்து முக்தனாவதுக்கு முன்பு
முமுஷூத்வம் அங்குரித்த தசை இறே -முன்பு ஒரு போகியாக உறக்கம் –
பின்பு ஒரு போகியாக உணர்ச்சி – நடுவில் காலம் இறே சிற்றம் சிறு காலை யாவது–இருள் அகன்ற அளவாய்-வெளிச் செறிப்பு உள்ள அளவு எல்லாம் பிரகாசியாத அளவாய்த்து –இதர விஷய ப்ராவண்யத்தால் வரும் அறிவு கேடு இன்றிக்கே பகவத் விஷயத்தில் ஞானம் கொண்டு நேரான பரிமாற்றமும் இன்றிக்கே இருக்கிற அளவைப் பிடித்த படி –காலை நல் ஞானத் துறை படிந்தாடி (திரு விருத்தம் -93)-என்று ஞான தீர்த்த அவகாஹனத்துக்கு யோக்கியமான காலம் பெற்ற படி – தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்று ஸ்ரீ யபதியை விஷயீ கரிக்குமது இறே நல் ஞானமாவது –துறை படுகையாவது- சதாசார்ய உபதேச மூலமாக பிராட்டி புருஷகாரமாக – பாகவதர்கள் உஸாத் துணையாக எம்பெருமானைப் பற்றுமது-உன் மணாளனை எம்மை நீராட்டு (20) என்று துறை தப்பாமல் இழிந்தவர்கள் இறே இவர்கள்-வந்து-பிறந்த இடத்தில் நின்றும் ஆயர் குலத்திலே வந்து மழை கொலோ வருகிறது என்னும் படி வீதியோடே வந்து – நம் தெருவின் நடுவே வந்து – கதவின் புறமே வந்து – முற்றம் புகுந்து – நம் இல்லம் புகுந்து – நீ மலர் அணை மேல் வைகி – மாலை புகுர ப்ராப்தமாய்-படுக்கையை விட்டுப் படி கடந்து காவலும் கடந்து – உன் தோரண வாசலிலே வந்து – உட் கட்டிலிலே புகுந்து – பள்ளிக் கட்டில் கீழே – சிற்றம் சிறு காலே வந்த வருத்தம் அறிய வேண்டாவோ – இருக்க –உன் பொற்றாமரை அடியே போற்றும் -சூட்டக் கண்ட பூவை விலை மதித்து விற்பாரைப் போலே கண்டு அனுபவிக்கையே பிரயோஜனமாக இருக்கிற திருவடிகளைப் பெற்று வைத்து வேறொரு பிரயோஜனம் தோற்றும் படியான செயல் செய்த செல்லாமை பாராய்-உன் அடி போற்றும்-ஸ்வரூப குணாதிகள் போற்றுகிறோம் அல்லோம்-அடியே –போற்றும்-அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணி – தனக்கும் ரக்ஷை தேடிக் கொள்ளுகை அன்றிக்கே தன்னை அழிய மாறியும் அத் தலைக்கு நன்மைகளை ஆஸாஸிக்கை-அடியானுக்கு அடியிலே இறே பிராப்தி – அடிச்சியோம் என்கிறவர்கள் கூறாளும் துறப்புக் கூட்டில் போகார்கள் இறே-(திருமார்பை ஆசைப்படும் அத்திரு திருவடியை ஆசைப்படும் இத்திரு )பொற்றாமரை அடி அன்றோ –சாதனத்வமும் சாத்யத்வமும் பூர்ணமாய் இருக்கை –பாவனத்வமும் போக்யத்வமும்-ப்ராப்யமாயும் ப்ராபகமாயும்-பொன்னும் தாமரையும்-ஏவம் ஸ்வீ க்ருத சித்த உபாயனுக்கு
தத் க்ருத ஸ்வரூப அனுரூப பலமும் தத் விரோதி நிவ்ருத்தியும் யா காஸ்சந க்ருதய-இத்யாதிப் படியே சொல்லித் தலைக் கட்டுகிறது –

குற்றேவல்-அந்தரங்கமாக ஏவிக் கொள்ளுமது –-முகப்பே கூவிப் பணி கொள்ள வேணும் இறே -8-5-விடுத்த திசைக்கு கருமமும் இல்லை-கருதும் இடத்தில் வியாபாரமும் இல்லை –
அணுகின விருத்தியும் –-ஏவின விருத்தியாக வேணும்-திருத் திரைக்குள்ளில் விருத்தி –
உடை வாளும் அடுக்குருவும் எடுத்தல் – கலசப் பானை பிடித்தல் – படிக்கம் வைத்தல்
உமிழும் பொன் வட்டில் எடுத்தல் – திருவடிகளை விளக்குதல்- ஒலியன் (ஆலவட்டம் )பணி மாறுதல் – சாமரம் இரட்டுதல் – அடைக்காய் திருத்துதல் – அடி வருடுதல்-முலைகள் இடர் தீர அணைத்தல்-இவை தொடக்கமானவை கோவிந்தர்க்குப் பண்ணும் குற்றேவல் ஆகிறது -(நாச்சியார் )-மற்றை நம் காமங்கள் மாற்று -என்கிறதாலே பல விரோதியைக் கழிக்கிறது –கோவிந்தா உனக்கு என்று -அகாரார்த்தம்-தாதர்த்த சதுர்த்தி அர்த்தம் சொல்லிற்று
உனக்கே -என்று உகாரார்த்தம் சொல்லிற்று-நாம் என்று மகாரார்த்தம் சொல்லிற்று
உன்னோடே உற்றோமே யாவாம் -என்கிற இடத்தில் நாராயண பதத்தில் அர்த்தம் சொல்லிற்று-எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் என்கையாலே சதுர்த்யர்த்தம் சொல்லிற்று –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்று நமஸ்ஸில் அர்த்தம் சொல்லிற்று-நடுவே நமஸ்ஸூ கிடக்கிறது ஸ்வரூப உபாயங்கள் இரண்டிலும் கிடக்கிற விரோதி போக்குகைக்கு இறே

ப்ராப்ய ருசி கார்யமான த்வரையும்-அதின் பலமான கலக்கமும் – விளைந்த ஆர்த்தியும் –
இது எல்லாவற்றுக்கும் அடியான ப்ராப்யாந்த்ர சங்க நிவ்ருத்தியும் – பேற்றில் அளவிறந்த பாரிப்பும்-அதில் ஸ்வ பிரயோஜனத்வ நிவ்ருத்தியும் சொல்லா நின்று கொண்டு பிரபந்த தாத்பர்யத்தையும் நிகமிக்கிறார்கள் –

1-சத்வ உத்தர காலத்தில் உணருகையும் -(சிற்றம் சிறு காலே)
2-பகவத் சந்நிதி ஏற வருகையும் (வந்து)
3-சேவிக்கையும் ( உன்னைச் சேவித்து)
4-விக்ரஹ அனுபவம் பண்ணுகையும் -(உன் பொற்றாமரை அடியே )
5-தத் சம்ருதியை ஆசாசிக்கையும் -(போற்றும் பொருள் )
6-தன் பக்கலிலே ஆபி முக்யம் பண்ணுவித்துக் கொள்ளுகையும்(கேளாய் )
6-அவதார பிரயோஜனங்களை விண்ணப்பம் செய்கையும் -(பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ )
7-ஆர்த்தியை பிரகாசிப்பிக்கையும் (நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே)
8-திரு உள்ளம் அறிய பலாந்த்ர சங்க நிவ்ருத்தியைக் காட்டுகையும்(இற்றைப் பறை கொள்வான் அன்று)
9-ஸூரிகள் பரிமாற்றத்தை அபேக்ஷிக்கையும் (எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்)
10-ஸ்வரூப விரோதிகளை அறுத்துத் தர வேணும் என்று வேண்டிக் கொள்ளுகையும் (மற்றை நம் காமங்கள் மாற்றேலோ )
கைங்கர்ய ருசி யுடையாருக்கு ஸ்வரூபம் இறே –இவை எல்லாம் நிழல் எழும்படி
கிருஷ்ணன் திரு முகத்தைப் பார்த்து விண்ணப்பம் செய்கிறார்கள் –

———–

தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு பெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக கடல் கடைந்தபடி –ஊரார் கார்யத்தை ஒரு வ்யாஜ்யமாக்கி
பெண்களைப் பெறுகைக்காக நோன்பிலே அன்வயிப்பித்த கிருஷ்ணன் உடைய ஸ்வ பாவத்தோடு சத்ருசமாய் இருக்கையாலே சொல்லுகிறார்கள் ––மாதவனை – கடல் கடைந்து பிராட்டியை லபித்தவனை ஆஸ்ரயணீயமுமாய் -போக்யமுமாய் -இருக்கும் தத்வம் லஷ்மீ ஸநாதமாய் இருக்கும் -என்கை – ஆஸ்ரயித்தார் குற்றத்தை பொறுப்பித்து அபேஷிதங்களை செய்விப்பார் அருகே உண்டு -என்கை –கேசவனை – வாசம் செய் பூம் குழலாளான பெரிய பிராட்டியார் தான் ஆசைப் படும் படியான ப்ரஸஸ்தமான மயிர் முடி கட்டி நெகிழ்ந்து அலையா நின்றாய்த்து கடல் கடைந்தது–விரோதி நிரசன ஸ்வ பாவனை –ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும் அந்ய சேஷத்வத்தையும் போக்கினவனை —மாதவனை கேசவனை – தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் – என்று பட்டர் அருளிச் செய்வர் –

உக்தமான அனுஷ்டானம் இல்லாதவர்களுக்கு அவர்கள் பாசுரமே பேற்றைக் கொடுக்கும் என்று சொல்லி நிகமிக்கிறது –விடிவோரை எழுந்திருந்து முப்பது பாட்டையும் அனுசந்தித்தல்-மாட்டிற்று இலனாகில் -சிற்றம் சிறுகாலே -என்ற பாட்டை அனுசந்தித்தல் –
அதுவும் மாட்டிற்று இலனாகில் -நாம் இருந்த இருப்பை நினைப்பது – என்று பட்டர் அருளிச் செய்வர் –

சேதனர் பரிக்ரஹித்த சரீரத்துக்கு ஒரு வாட்டம் வாராமல் சம்சாரம் ஆகிற மகா சமுத்ரத்தை
தன் சங்கல்பம் ஆகிற மந்த்ரத்தை நாட்டி கிருபையாகிற கயிற்றாலே சுற்றி கடாஷம் ஆகிற கைகளால் கடைந்து பிராட்டியிலும் பிரேம விஷயமான ஆத்ம வஸ்துவை லபித்தவன்  கேசியை நிரசித்தாப் போலே ஆத்ம வஸ்துவை அனுபவிக்கும் போது அவ்வனுபவ விரோதியாய் இச் சேதனனுக்கு பிறக்கும் போக்ருத்வாதிகளுக்கு நிவர்தகனாவனை-சந்தரனைப் போலே ஆஹ்லாத கரமான திருமுக மண்டலம் உடையவர்களாய் தத் ஏக விஷயமான ஞான பக்தி வைராக்ய பூஷிதராய் அனந்யார்ஹரான பாகவதர்கள் ஆற்றாமை யாலே அவனிருந்த இடத்தே சென்று பூஜித்து–உபய விபூதி ஐஸ்வர்ய சம்பன்னனான
ஸ்ரீயபதியாலே-த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும் பிறந்த ஞானத்துக்கு விச்சேதம் வாராதபடி கிருபையை லபித்து ஆனந்த நிர்பரராய் இருப்பார்கள்-

த்வயத்தில் பூர்வ கண்டத்தில் படியே ஆஸ்ரயணீய வஸ்துவைச் சொல்கிறது –
1-மாதவனை-என்று ஸ்ரீ மத் சப்தார்த்தமும்-
2-கடல் கடைந்த என்கிறதாலே ப்ரயோஜனாந்த பரருடைய தோஷம் பாராமல் வியாபரித்த வாத்சல்யமும் –
3-அண்ணல் செய்து -என்று ஸ்திரமாம் படி பண்ணப் பட்ட ஸ்வாமித்வமும்
4-அசுரர்களும் தானுமாய்-என்னும் படி நின்ற ஸுசீல்யமும் –
5-பெண்ணாகி அமுதூட்டின ஸுலப்யமும்-
6-ஆழ் கடலைக் கடைந்த துப்பன்-என்னும் படி வேண்டும் உப கரணங்களைத் தேடி வியாபாரித்த ஞான சக்திகளும் தோற்றுகையாலே நாராயண சப்தார்த்தம் ஸூசிதம்

7-கேசவனை என்று பிரசஸ்த கேசவத்தாலே விக்ரஹ யோகத்தை நினைத்து –
சரண சப்தத்தின் அர்த்தம் சொல்லிற்று ஆகிறது

சரண க்ரஹணத்தோடு கேச க்ரஹணத்தோடு வாசி இல்லையே பிரணயிநி யாகையாலே –
கேசவனைக் கால் பிடிப்பாள் (பெரிய திருமொழி -2-6 )-என்று இறே நிரூபகம்-

பரமனைப் பாடி(2) என்று தொடங்கி கேசவனை என்று தலைக் கட்டுகையாலே
பாதாதி கேசாந்தமாக கிருஷ்ணனை அனுபவித்தாள் யாய்த்து –

இப் பாட்டில் உப க்ரமத்திலும் முடிவிலும் பிராட்டி சம்பந்தத்தைச் சொல்லுகையாலே
த்வயத்தில் சொல்லுகிற படியை இங்குச் சொல்லிற்று யாய்த்து –மாதவன் -பூர்வ வாக்ய ஸ்ரீமன்-செல்வத் திருமால் – உத்தர வாக்யம் ஸ்ரீ மதே-

1-பகவத் ஆபி முக்கியம் பிறக்கிற கால வைலக்ஷண்யம் அறியாது இருத்தல் –
2-தியாஜ்ய உபாதேயங்களில் நழுவ நிற்றல்
3-பர சம்ருத்ய ஏக பிரயோஜனம் இன்றியிலே ஒழிதல்
4-தேவதைகளையும் நியமிக்கும் படியான ஞானிகள் வைபவம் அறியாது ஒழிதல்
5-ஆஸ்ரயண காலத்திலே ஷீண பாபராம் ஏற்றம் அறிதல் செய்யாது ஒழிய ஒண்ணாது

6-பகவத் விஷயத்தில் முதலடி இட்டாரோடு
7-அவகாஹித்தே சிறிது குலைய நிற்பாரோடு
8-ஸ்லாகாப்ரதானராய் இருப்பாரோடு
9-த்யாஜ்யத்தில் அல்ப ஸ்பர்சம் நடையாடுவாரோடு
10-அனுபவமே நிரந்தரமாக நடப்பாரோடு

11-பாகவத குலத்திலே அந்வயித்தாரோடு
12-கைங்கர்ய நிஷ்டரோடே சம்பந்தம் உடையாரோடு
13-ஸ்வரூப ஞானம் யுடையரோடு
14-வை லக்ஷண்ய அனுசந்தானம் பண்ணி நிர்வ்யாபாரராய் இருப்பாரோடு
15-பக்தியால் கலங்கி நடப்பாரோடு
16-பாகவத பாரதந்தர்ய ஏக நிஷ்டரோடு

வாசி அற உத்தேச்யதா புத்தி குலையாமல் இருக்க வேணும் என்று அறிய வேணும் –

17-பகவத் சந்நிதியில் செல்லும் க்ரமங்கள் அறிய வேணும்
18-புருஷகாரத்தினுடைய ஸ்வரூப
19-ஸ்வபாவங்களும்
20-காரியமும் அறிய வேணும்
21-பகவத் குண வித்தராக வேணும்

22-கடாக்ஷ ஏக தாரகராம் படி பஃன அபிமானராக வேணும்
23-ஆபி முக்கிய பிரார்த்தனம் பண்ண வேணும்
24-மங்களா சாசன பரராக வேணும்
25-அர்த்தித்தவம் தோற்றப் பல் காட்ட வேணும்
26-முமுஷூ தசையில் அபேக்ஷிதம் –

27-முக்த தசையில் போகம் இவற்றில் வாஞ்சை நடக்க வேணும்
28-அதுக்குத் தாங்கள் உபாயாந்தர ஸூன்யத்தையை முன்னிட்டு வேணும்
29-நித்ய கைங்கர்யத்தில் நித்ய அபேக்ஷை நடக்க வேணும்
30-இத்தசை விளைந்தார் பாசுரமே போகமாக வேணும் –

ஆகையால் இம் முப்பத்து பாட்டிலும் நழுவ விடலாவது ஒரு பாட்டு இல்லை –எம்பாவாய்-இன்புறுவர் எங்கள் சந்தஸாலே இன்புறுவர் – நாங்கள் யாதொருபடி இன்புற்றோம் அப்படி இன்புறுவர்கள் –பெரிய பிராட்டியார் இன்புற்றால் போலே இன்புற்றார் ஆவார்கள் (பாவை பெரிய பிராட்டியார் ) ஸ்ரீ கோபிமார் பாவாய் இன்புற்றோம் நாங்கள் –(கோபி மார் பா சொல் )-எங்கள் சொல்லை யுரைப்பார் எங்கள் பாவாய் -இன்புறுவார்கள் (எங்கள் பா -திருப்பாவை )சமகாலத்தில் உள்ளாரை – எம் பாவாய் – நீராடப் போதுவீர் போதுமினோ -என்று கூட்டிக் கொண்டார்கள் –பிற்பாடார்க்கும் எம் பாவாய் பிரபந்த முகத்தால் எம் பாவாய் இன்புறுவர் என்று தலைக் கட்டுகிறார்கள் –

———————

ப்ரபத்திக்கும் பூர்வ பாவியான
வாக்ய குரு பரம்பரையினுடைய க்ரமம் சொல்லி
பகவத் விஷயத்தில் உத்யுக்தரானவர்களோடு போர அவகாஹித்தரோடு வாசி அற
உத்தேச்யர் என்னும் இடம் சொல்லுகிறது –

அது எங்கனே என்னில் –
பிள்ளாய் எழுந்திராய் -என்கையாலே
அபி நவமாக மூட்டும் அஸ்மத் குருப்யோ நம -என்னும் படி சொல்லுகிறது –

அனந்தரம் -நாயகப் பெண் பிள்ளாய் -என்கையாலே
ஸ்வ ஆச்சார்யனுக்கும் கௌரவன் ஆகையால் அஸ்மத் பரம குருப்யோ -என்னும் படியைச் சொல்லுகிறது –

கோதுகலமுடைய பாவாய் -என்று
சர்வராலும் கொண்டாடும்படியாய் இருக்கையாலே -அஸ்மத் சர்வ குருப்யோ என்கிற அர்த்தத்தைச் சொல்லுகிறது –

மாமான் மகளே-என்கையாலே
ஓளி புதுவை நகர் வாழும் பேர்கள் தாயான ஆண்டாளுக்கு அண்ணரான
ஸ்ரீ மத் ராமாநுஜாயா-என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
இதுவும் ஆழ்வான் அளவும் அனுசந்தேயம் –

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் என்கையாலே
சித்த உபாயத்தாலே ப்ராப்ய வைலஷ்ண்ய ஞானத்தை யுடையராய் –
அத்தாலே உடையவருக்கு கௌரவராய் இருக்கும் ஸ்ரீ பராங்குச தாசாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

கோவலர் தம் பொற் கொடி -என்கையாலே –
ஸ்ரீ கிருஷ்ண ப்ரீதி உக்தரான -ஸ்ரீ நாதமுனி வம்ச உக்தராய் –
ஸ்ரீ மத் யாமுன முனயே நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

நற் செல்வன் தங்காய்-என்கையாலே
திருக் குமாரத்தியார் திருவடிகளில் சேறு படாமல் சேற்றில் படியாய் கிடந்து அனுசரணம் பண்ணியும்
மனத்துக்கு இனியானைப் பாடவும் -என்கையாலும் -ஸ்ரீ ராம மிஸ்ராய நம என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

போதரிக் கண்ணினாய் -பங்கயக் கண்ணானைப் பாட -என்கையாலே –
ஸ்ரீ புண்டரீகாஷா நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

நா உடையாய் என்கையாலே
தமிழ் மறையை இயலிசை யாக்கின நா வீறு உடைமையாலே
ஸ்ரீ மன் நாத முனயே -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

எல்லே இளங்கிளியே -என்கையாலே –
சுக முகாத் அம்ருதத்ரவ ஸம்யுத்தம் -என்னும் படி
திருவருள் கமுகு ஒண் பழத்ததான ஆழ்வார் திருப்பவளத்தில்-
நின் கீர்த்திக் கனி என்னும் கவிகள் மொழி பாட்டோடும் கவி யமுதமாய் திருவாய் மொழி பிரவஹிக்க -அத்தாலே
அணி மழலைக் கிளி மொழியானை -அநு சரிக்கையாலே –
ஸ்ரீ மதே சடகோபாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

நாயகனாய் என்று தொடங்கி –
மேல் ஐந்து பாட்டாலே –
ஸ்ரீ மத் விஷ்வக் சேனாயா நம —
ஸ்ரீ யை நம —
ஸ்ரீ தராய நம -என்னும் அர்த்தங்களையும்
அச் சேர்த்தியிலே
இருவர் புருஷகார பூர்வகமாக ஆஸ்ரயிக்கச் செய்த பெருமை ஏற்றங்களை சொல்லுகிறது –

————–

எட்டு எழுத்தின் இணைப் பொருளும்இரண்டு தனில் பொருளும்இயல் வலித்தோர் அருச்சுனனுக்கு இறைவன் தம்மை தொட்டுரைத்த முறை யறுதிப் பொருளை
எல்லாம் தோன்றும் வகை –இத்யாதி படியே இப் பிரபந்தம் ரகஸ்யார்த்தத்தை ப்ரதிபாதிக்கக் கடவதாய் இருக்கும் –

இப் பிரபந்தத்திலே –ஊழி முதல்வன் -பற்ப நாபன் -என்று –சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷித்வத்தையும் –உனக்கே -என்கையாலே –உகாரத்தில் அநந்யார்ஹ சேஷத்வத்தையும் –நாம்-என்றும் –யாம் -என்றும் –மகார வாச்யனான ப்ரக்ருதே பரனாய் பகவத் சேஷ பூதனாய் இருக்கிற ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே ப்ரணவார்த்தம் சங்க்ரஹீதம் ஆயிற்று –

தூயோமாய் வந்து நாம் – தூயோமாய் வந்தோம் – அபிமான பங்கமாய் – மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே நமஸ்ஸில் அர்த்தமும் –கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணன் -என்றும் – நாராயணன் மூர்த்தி -என்றும் ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் -என்றும் -சொல்லுகையாலே நாராயண சப்தார்த்தமும்-உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கையாலே அதிலே சர்வ வித பந்துத்வமும்-எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்கையாலே
சதுர்த்யர்த்தமும் சங்க்ரஹீதம் ஆயிற்று –ஆக இது திருமந்திர விவரணம் என்றதாயிற்று –

தூயோமாய் வந்து நாம் –
தூயோமாய் வந்தோம் –
அபிமான பங்கமாய் –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே நமஸ்ஸில் அர்த்தமும் –

கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணன் -என்றும் –
நாராயணன் மூர்த்தி -என்றும்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் -என்றும் -சொல்லுகையாலே நாராயண சப்தார்த்தமும்-
உலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே(பெரிய திருமொழி 6-10-1)-என்னக் கடவது இறே

(ஸ்வரூபம் ரூபம் குணம் சேஷ்டிதம் -இவற்றுக்கு பிரமாணங்கள்)

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கையாலே
அதிலே சர்வ வித பந்துத்வமும்

எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்கையாலே
சதுர்த்யர்த்தமும் சங்க்ரஹீதம் ஆயிற்று –

(தாதர்த்த சதுர்த்திக்கும்-பிரார்த்தனா சதுர்த்திக்கும் இரண்டு பிரமாணங்கள்)

ஆக இது திருமந்திர விவரணம் என்றதாயிற்று –

———————

கறவைகள் பின் சென்று -இத்யாதிகளாலும் –
செய்யாதன செய்யோம் –
உன்னை அருத்தித்து வந்தோம் –
சிற்றம் சிறு காலை வந்து உன்னைச் சேவித்து -என்றும் –
நாராயணன் -என்றும் –(மாம் -நாற்றத்துழாய் முடி நாராயணன் )
புண்ணியம் நாமுடையோம் என்றும் –

(இது வரை ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் வ்ரஜ -அர்த்தம்
மேல் அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூச-அர்த்தம்)

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -என்று தொடங்கி -தீயினில் தூசாகும் என்றும்
எங்கள் மேல் சாபம் இழிந்து என்றும் –
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -என்றும் சொல்லுகையாலே
சரம ஸ்லோகார்த்தம் சங்க்ரஹீதம் ஆயிற்று –

(அவன் திரு உள்ளத்தில் கோபமும் ப்ரீதியும் தானே பாபமும் புண்யமும்
தூசாக்க வேண்டாம் -தூசாகும் -தன்னடையே போகுமே)

ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா (பெரிய திருமொழி–3-2-2)
திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்றீர் –
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா –(மூன்றாம் திருவந்தாதி )
நகரமருள் புரிந்து இத்யாதி-
பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உரு வெண்ணும் காந்தியால் ஆம் பயன் அங்கு என் -என்னச் சொல்லக் கடவது இறே –

திருப்பாவையால் –
நாராயணன் -என்றும் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றும் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹயாகதோ மதுராம் புரீம் -என்கிறபடியே
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு அடியான அடிப்பாட்டை அடைவே சொல்லி –

(பரத்வ வ்யூஹ முன் அவதாரங்களை சொல்லி மாம் என்று தொ ட்டுரைத்த சொல்)

ஏவம் விதமானவன்
மாயனை மன்னு இத்யாதிப்படியே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்து –
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளருகிற இடத்தே
பேய் முலை நஞ்சுண்டு -கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி -என்று பூதனை சகட நிராகரணம் சொல்லி –

அதுக்கு மேலே
தாமோதரன் -என்று வெண்ணெய் களவு காண்கையாலே கட்டவும் அடிக்கவும் எளியனாம் இருந்தபடி சொல்லி
மதுரையிலே மல்லரை மாட்டி வல்லானை கொன்றபடியைச் சொல்லி
அநந்தரம் தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்து
கஞ்சன் வயிற்றில் நெருப்பாய்-அவனைப் போக்கின அளவும் அருளிச் செய்தார் இறே –

இது சரம ஸ்லோக விவரணம் –

மாமின் அஹமின் அர்த்தங்கள் இவை தானே (திருப்பாவை ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே ஸ்ரீ மத் பாகவத சுருக்கம்)

———————————

திருப்பாவையில் -அத்யந்த பக்தி உக்தரானவர்கள் –
பகவத் விரஹ பரிதாப ஹரமாக ஸஹ காரிகளுடன் பகவத் விஷய அவகாஹனம் பண்ண ஒருப்பட்டு –
ஸ்வ அபேக்ஷிதங்களை அத்தலையால் பெற்று வாழும் படியையும் சொல்லுகிறது-

தாம் தாம் ப்ரீதி விஷயங்களைப் பிரிந்தார்களுக்கு எல்லாம் இப்படி இறே பிரேம ஸ்வபாவம் இருப்பது –

(நீராடப்போய் அப்பறை பெற்ற வாற்றை அன்றோ திருப்பாவை முழுவதும் சொல்லிற்று)

(பக்தனுக்கு கிருஷ்ண விரஹம் போல் சம்சாரிகளுக்கு அபிமத விஷய விஸ்லேஷம் போல் தானே
ஸர்வமும் பக்தனுக்கு அவனே -இவர்களும் எல்லாமாகக் கொண்ட பெண்டிர் அன்றோ)

ஸ்ரீ யபதியாய்-ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -சர்வ ஸ்மாத் பரனாய் -இருந்துள்ள சர்வேஸ்வரன் –
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக –
ஸ்வ விபூதியில் சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்துப் போந்து –
பிராட்டியைப் பிரிந்து-மெல்லியல் தோள் தோய்ந்து –

அநந்தரம் இப்படி அதி விலக்ஷணையாய்-
அத்யந்த அபிமதையான தத் விஷயத்தை லோக ரக்ஷண அர்த்தமாக விஸ்லேஷித்து-
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து (11-7)-என்னும்படி
பரி தப்த்தனாய-அந்த விரஹ தாபம் மாற்றலாமோ என்கிற அலமாப்பாலே
அரணவத்திலே அவகாஹிக்க நினைப்பது ஆனால் போலேயும் –

அவனைப் பின் தொடர்ந்து போந்த பரிவரான தம்பி பரதனும்
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தைப் பிரிந்து –
கூடேக்நி ரிவபாதபம் -என்னும் படி பரிதபித்து
சரயு ஆற்றிலே அவகாஹித்து ஒருப்பட்டு இருந்தால் போலேயும்

பின்னையும் மா மாயன் மாதவன் வைகுந்தன் வான் இளவரசு வைகுந்தக் குட்டன்
வாஸூ தேவன் மதுரை மன்னன் நந்த கோபன் இளவரசு
கோவலர் குட்டன் -சூட்டு நன் மாலை தொடக்கமான -அங்குத்தை போகத்தை அநாதரித்து
அடலாயர் தம் கொம்பினுக்காக இங்கே போந்தால் போலே –

ஆண்டாளும் அந்த வைகுண்ட  வான் போகம் தன்னை இகழ்ந்து இங்கே ஏற
வேயர் தங்கள் குலத்திலே விஷ்ணு சித்தன் வியன் கோதையாய் வந்து அவதரித்து –
ஆயர் சிறுமியர் படியை அடைந்து –
ஆயர் குலத்தில் தோன்றினவனை மனத்துக்கு இனிதாகப் பாடி கூடி இருந்த படியை
செய்ய வெண்ணப் போந்தவளாய் –
அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது தொடக்கமான விஷயங்களை பிரிந்த தளர்த்தியாலே
இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தாதே –(5-4)
அவனில் எண் மடங்கான காமத் தீ யுள் புகுந்து கதுவ-

அந்த விரஹ தாபம் ஆகிற பெரு நெருப்பை ஆற்றுகைக்கு ஆதரம் பெருத்து பெரும் புறக் கடல்(7-10)
இப் புறத்திலே திருப் பாற் கடலாய் பொங்கி எங்கும் பரந்து
வெள்ளக் கால்களாய் பரந்து சுழித்துப் பெரு நீராக மதுர ஆறாகப் பெருகுகிற அம்ருதத்திலே
குள்ளக் குளிர குடைந்து நீராட ஒருப்பட்டு
பெருக்காற்றிலே இழிவார் துறை தப்பாமே துறை அறிந்த நிலவரோடே கூட இறங்க நிலைக்குமா போலே
இறங்க நினைக்கதாய் இருக்கும் இங்கும் –
அது எங்கனே என்னில் –

ஸ்ரீயபதியாய்-ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -நித்ய முக்த அநு பாவ்யனாய்-
சர்வ ஸ்மாத் பரனாய் இருந்துள்ள -சர்வேஸ்வரன் –
நாராயணனே -என்று அவன் பெரும் புறக் கடலாய் இருக்கிறபடியும் –

அநந்தரம் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்று பாற் கடல் போலேயான வ்யூஹத்தையும் –

ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்று அது கால்களாய்ப் புறப்பட்டுப் பரந்து
பற்ப நாபன் -என்று சுழித்து –
தூய பெரு நீர் யமுனைத் துறைவன் -என்று பெருக்காறு போல விபவத்தையும் –

நாற்றத் துழாய் முடி நாராயணன் என்று
உள்ளே ஊற்று ஜலம் போலே அந்தர்யாமியாய் இருக்கும் படியையும்

புள்ளரையன் கோயில் -என்று நித்தியமான நீர்மையால் –
அதிலே தேங்கின மடுக்கள் -என்னலாம் படி ருசி ஜனக விபவ லாவண்யத்தோடே
எப்போதும் ஆஸ்ரயிக்கலாம் படி அர்ச்சாவதாரத்தையும் –

அத்யபி நிவேசத்தோடே இங்கே காண இப்பிறப்பே அநு பவிக்கக் கோலி-(8-5-11)
அது அப்போதே அனுபவிக்கப் பெறாமையாலே –
வைகுந்தன் என்பதோர் தோனி பெறாதே உழல்கின்றேன் -என்றும்

பொங்கிய பாற் கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என் கொங்கை கிளர்ந்து
குமைந்து குதூகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் -(5-7)என்றும்

விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி (5-11)-என்றும்

பாஞ்ச சன்னியத்தை பற்ப நாபனோடு வாய்ந்த பெரும் சுற்றமாக்கிய (7–10)-என்றும்

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப்பு போய்ச் செய்யும் தவம் தான் என் -என்றும்

(திருப்பாவையில் போல் நாச்சியார் திருமொழியில் இதே பரத்வாதி பஞ்சகத்துக்குப் பிரமாணங்கள்)

ஆவல் அன்புடையார் தம் மனத்து அன்றி மேவலன் -என்றும்

உலங்குண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை நலம் கொண்ட நாரணன் (4-8)-என்றும்

பெண் கொடியை வதம் செய்தான் (8-9)-என்றும் –

காமத் தீயுள் புகுந்து கதுவ -என்றும்

தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் ஆ முகத்தை நோக்காரேல்-என்றும் சொல்லுகிறபடியே

பரத்வாதி பஞ்ச அவஸ்தா வஸ்திதனாய்-
பஹு குணனாய் -தேச கால விப்ரகர்ஷ்யாதி உபாதியாலே
ஆஸ்ரயிப்பார்க்கு அசன்னிஹிதத் வாதிகளாலும்
ஆலோக ஆலபாத்ய அநனுபாவிகத்வத்தாலும்
எம்பெருமான் அரியனாய் இருக்கிற படியை தர்சித்து-

முற் காலத்தில் ஸ்ரீ கோபிமார் -கோபீ பரி வ்ருதோ ராத்ரிம் -என்று பூர்வ பக்ஷத்தில் பூர்வ ராத்திரியில் (வளர்பிறை பவ்ர்ணமியில்)
அணி யாய்ச்சியர் சிந்தையுள் குழகனான கிருஷ்ணனோடு கழகமாக கூடி இருந்து –
ஒரு கார்யப் பாட்டிலே பிரிந்து போந்து அவனை விட்டு அகன்று
உயிர் ஆற்ற கில்லாதாப் போலே

யமுனை ஆற்றிலே மார்கழி நீராட -என்ற ஒரு வியாஜத்தாலே
ஸ்ரீ கிருஷ்ண அனுபவ குதூஹலத்தை யுடையராய்
அபர ராத்திரியிலே உணர்ந்து முற்பட்டார் பிற்பட்டாரை எழுப்பி –
எல்லாரும் திரண்டு நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக
கிருஷ்ணனை எழுப்பி
ஸ்வ லாபங்களை அர்த்தித்துப் பெற்று அனுபவித்தால் போலேயும்

வங்கக் கடல் கடைந்து –அங்கு அப்பறை கொண்ட ஆறு இதுவரை-மேல் அணி புதுவை –இத்யாதி )

சீர் மல்கும் ஆய்ப்பாடிக்கு சத்ருசமான ஸ்ரீ வில்லி புத்தூரிலும் –
ஸ்ரீ வைஷ்ணவ சந்தான ப்ரஸூதையான-ஆழ்வார் திரு மகளாரான ஆண்டாள்
ஸ்ரீ கிருஷ்ண அநு காரிகளான அவர்களை அநு கரித்து –

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து என்கிறபடியே –
வேதப் பயன் கொள்ள வல்ல விஷ்ணு சித்தன் (2-8-10)சம்பந்தத்தாலே-
வேதம் அனைத்தைக்கும் வித்தான அர்த்தத்தைக் கொண்டு
பகவத் ருசி யுடையாரைக் கொண்டு –

பத்துப் பெண்களை எழுப்புகிற முகேன -பிரபன்ன ஜன கூடஸ்தரான பதின்மரை முன்னிட்டு
வேதப் பொருளாய் – யமுனைத் துறைவன் -என்று
பேர் பெற்ற எம்பெருமான் திருவடிகளை பற்றும் அளவும் சொல்லுகிறார்கள் –
புள்ளும் தொடங்கி -எல்லே அளவும் –
தசமாந்த மாயே -என்றார் இறே தேசிகரும் –(6-15 பாசுரங்கள் ஒரு பதிகம் தானே)

இவர்கள் கிருஷ்ண அனுபவத்துக்கு தேசிகர் ஆகையாலும்-
பிராட்டியோடே சாம்ய குண ஷட்கத்தை யுடையவர் ஆகையாலும்
இவ் வனுபவத்துக்கு இவர்களைக் கூட்டிக் கொள்ளுகிறது –

இன்னமும் பகவத் விஷயத்தில் முற்பட்டார் பிற்பட்டாரையும் கூட்டிக் கொண்டு போக வேண்டும் –
பர ஸம்ருத்தியாலும் எழுப்புகிறார்கள் –

புஷ்ப்ப ராத்ரிஸ்து தத்ரைவ கங்கா கூலே ச ராகவ(ரகுகுல பரதனைச் சொன்னவாறு-நடுவில் பிள்ளை )
ப்ராத கால யமுதாய சத்ருக்நமித மப்ரவீத் –
சத்ருக்ந உத்திஷ்ட கிம் சேஷ நிஷாதாதிபதிம் குஹம்
சீக்ரமா நய பத்ரந்தே தார யிஷ்யதி வாஹி நீம் –
ஜாகர்மி நாஹம் ஸ்வபிமி தமேவார்யம் விசிந்தயன்-என்னக் கடவது இறே –

இங்கும் அப்படியே யாயிற்று –
ப்ரத்யக்ஷ அனுபவத்தால் அல்லது தரியாதார்
குண அனுபவத்தால் தரித்து இருப்பாரை த்வரித்து எழுப்புகிற படி

———————————

இப் பத்து பாட்டுக்கும்
குண சாம்யத்தாலும்-கௌரவ்யதையாலும்-பத்துப் பெண்களை எழுப்புகிற முகத்தால்
ஆழ்வார்கள் பதின்மரையும் கூட்டிக் கொண்டு
ஆழ்வார் திரு மகளார் அனுசந்திக்கிறதாக அறுதி இட்டார்கள் –

இப்படி பக்தராய் முக்தராய் இருப்பார் ஆழ்வார்கள் –
அநந்தரம்
நித்ய கைங்கர்ய நிரதரான நித்யரையும் –
நித்ய அநபாயினியான பிராட்டியையும் உணர்த்தி-
இவர்களை முன்னிட்டு
நித்ய முக்த அநு பாவ்யானான எம்பெருமானைப் பற்றும் படி சொல்லுகிறது –
நாயகன் -தொடங்கி -அஞ்சு பாட்டாலே –

(ஜனபத சரித் அந்தரீப புஷ்யத் புர பரிபாலந நித்ய ஜாக ரூகாந்
ப்ரஹரண பரிவார வாஹந ஆட்யாந் குமுத முகாந் கண நாயகாந் நமாமி –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–பூர்வ சதகம்–32-என்றும்

குமுதாதி கண நாதர்கள்–ஆயுதங்கள் பரிவாரங்கள் -வாஹனங்கள் உடன் ரக்ஷணத்தில் மும்முரமாக உள்ளனர் –)

ஸ்மேர ஆநந அஷி கமலை நமத புநா நாந் தம்ஷ்ரா கதா ப்ருகுடிபிர் த்விஷத துநாநாத்
சண்ட ப்ரசண்ட முகத ப்ரணமாமி ரங்க த்வார ஆவளீஷு சதஸ்ருஷு அதிகார பாஜ –37–என்றும் –

கோரைப் பற்களாலும் புருவ நெறிப்பாலும் அடியார் விரோதிகளை அச்சம் கொள்ளச் செய்கின்றனர்
தெற்கு வாசல் –பத்ரன் -ஸூ பத்ரன் –வடக்கு வாசல் -தாத்ரு –விதாத்ரு –மேற்கு வாசல் -ஜெயன் விஜயன் –கிழக்கு வாசல் -சண்டன் -ப்ரசண்டன்)

ஸேநாந்யம் அந்ய விமுகா தம் அசிஸ் ரியாம -என்றும் –

ஸைன்ய துரீண ப்ராண ஸஹாயம் ஸூத்ரவதீம் ஆஸீஸ்ரியம் யம்பாம் -என்றும்

(ஸ்ரீ ரெங்க சந்த்ர மசம் இந்திரியா விஹர்த்தும் விந் யஸ்ய விஸ்வ சித் அசித் நயன அதிகாரம்
ய நிர்வஹதி அநிசம் அங்குளி முத்ரயா ஏவ ஸேநாந்யம் அந்ய விமுகா தம் அசிஸ் ரியாம -50—ஸ்ரீ விஷ்வக் சேனரை ஸ்துதிக்கிறார்

ஸைன்ய துரீண ப்ராண ஸஹாயம் ஸூத்ரவதீம் ஆஸீஸ்ரியம்
ஸ்ரீ பத லாஷா லாஞ்ச்சித சேவா ப்ரோத லசத்தோர் வல்லி விலாசம் –51—ஸூத்ரவதி தேவியை ஸ்துதிக்கிறார்)

(ஓம் நமோ கஜவக்த்ராத்யை பாரிஷத்யை ப்ரசாஸதே
ஸ்ரீ ரங்கராஜ ஸேநான்யே ஸூத்ரவத்யா ஸமே யுஷே–ஸ்ரீ விஷ்வக் சேனர் ஸ்துதி–பகவத் குண தர்ப்பணம் )

நம ஸ்ரீ ரெங்கே நாயக்யை யத் ப்ரு விப்ரம பேதத ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்னோன்னதமிதம் ஜகத் என்றும்

ஸ்ரீ பெரிய பிராட்டியார் (பங்குனி உத்தரம்)
நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரோ விப்ரம பேதத: |
ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத் ||

எவளது புருவ நெறிப்பு ஜீவர்களின் நிலையைப் பாமரன் என்றோ பண்டிதன் என்றோ,
செல்வன் என்றோ தரித்ரன் என்றோ நிர்ணயிக்கிறதோ அந்த ஸ்ரீ ரங்க நாச்சியாரை வணங்குகிறேன்.

ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே சிந்தாமணி மிவோத் பாந்த முத் சங்கே நந்த போகின -என்றும் சொல்லுகிறபடி

(ஸ்ரீ பெரிய பெருமாள் (பங்குனி ரேவதி)
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆச்ரயே |
சிந்தாமணிம் இவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந: ||

ஸ்வயம் ப்ரகாசமானவனும், ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரின் திருமார்பில் ஒளிரும் அணிகலன் போன்றவனும்,
ஸ்ரீ ஆதிசேஷன் உமிழ்ந்த மணி போல் ஜ்வலிப்பவனுமான ஸ்ரீரங்க விராமனான
ஸ்ரீரங்கநாதனை அடியேன் சரண் அடைகிறேன்.)

வைகுந்தத்து அமரரான கோயில் கொள் தெய்வங்களையும்–
வானவர்களையும்
தேவியர்களையும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியை
ஆயிரம் முகத்தினால் காப்பாருடை  யவதாரமானவரையும் –
அவர்களையும் அதி சங்கை பண்ணி நெருங்க அனைத்துக் கொண்டு
கிடக்குமவர்களையும் எழுப்பி
அவர்களுடனே எம்பெருமான் திருவடிகளில் சென்று கிட்டி அபேக்ஷிதங்களை அர்த்திக்கும் படி சொல்லுகிறது

(வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-)

(கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5-)

ஸ்ரீ யை நம –
ஸ்ரீ தராய நம -என்று இறே க்ரமம் இருப்பது –

உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும் -என்றதிலே
முமுஷுக்களாய் முக்தரோடு சாம்யம் பெற்ற (விண்ணுள்ளாரிலும் சீரியரான )
நாத முனிகள்
யாமுன யோகி(முனிகளும் -அவர் குண அனுபவ நிஷ்டர் யோகிகளும் -இவர் கைங்கர்ய நிஷ்டர் )
யதி வராதிகளும் ஸூசித்தர் –
இது குரு பரம்பரையின் அடைவு –

ஆறாயிரப்படியில் -நாயனார் –(17 பாசுர அவதாரிகையில் )
பெறுகைக்குப் புறப்படுகிற திரளை
பெற்று அனுபவிக்கிற ஸ்ரீ நந்தகோபர் தொடக்கமானவரை எழுப்புகிறார்கள் –
அவர்கள் முன்னாக கிருஷ்ணனைப் பெற வேண்டுகையாலே –
அதாவது
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமானை திருப் பாதம் பணிகை இறே –

(வேதம் வல்லார்களைக் கொண்டு*  விண்ணோர் பெருமான் திருப்- 

பாதம் பணிந்து,*  இவள் நோய்*  இது தீர்த்துக் கொள்ளாது போய்*

ஏதம் பறைந்து அல்ல செய்து*  கள் ஊடு கலாய்த் தூய்,*

கீதம் முழவு இட்டு*  நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.  )

(வேதம் வல்லார்களைக் கொண்டு–பாசுரங்கள் 6-15 விண்ணோர் –பாசுரங்கள் -16-20
பெருமானை திருப் பாதம் பணிகை இறே–பாசுரங்கள் 21-29-)

நல் ஞானத் துறை படிந்தாடி -(திரு விருத்தம் -93)என்னுமா போலே –

நல் ஞானம் ஆகிறது -ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்கை-
விஞ்ஞானம் யதீதம் பிராப்தம் –என்னுமா போலே —

துறையாவது முறை தப்பாமல் குரு பரம்பரை வழியே பற்றுகை –

த்வய நிஷ்டருக்கு குரு பரம்பரையே பிரதானமாகக் கடவது –
துறை தப்பாதார் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் போல்வார் –

(காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – – -93 –)

வேதம் வல்லார்கள் என்றவிடத்து
குரு பரம்பரையை நினைத்து –
கீழ் பத்துப் பட்டாலும் அனுஷ்ட்டித்தார்கள் –

விண்ணோர் பெருமானில்-விண்ணோர் என்கிறது –
த்வார பாலர்கள் தொடக்கமான திவ்ய மஹிஷிகளாய் உள்ளவர்கள் -என்றபடி –

இந்த யோஜனைகள் எல்லாம் –
விஷ்ணு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே  -என்று அருளிச் செய்யும்
ஆச்சார்ய அபிமான நிஷ்டையான ஆழ்வார் திரு மகளார் படிக்கு சேரும் இறே –

பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் என்கிற இடத்து1-5-11
குண சாம்யத்தாலே யோஜித்த படியாகக் கடவது இங்கும் –

(வாக்ய குரு பரம்பரை விஷயமாக வியாக்யானம் இங்கும் குண ஸாம்யத்தாலே –என்றவாறு)

(நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-)

(மாலே ! மாயப் பெருமானே! மா மாயவனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே–1-5-11-)

———————————————————————

இனி த்வய யோஜகையில்-
அர்த்த விஷயமாக மெய்ப்பொருளை இறே விசதம் ஆக்கிற்று –

இரண்டு அர்த்தத்தையும் புலம் ஐந்து மேயும் -என்று உபதேசிக்கக் கேட்டவர்கள்-
அனுஷ்டானமாக திருப்பாவையில் –
தாயே தந்தையிலும் –(1-9)
ஸ்தோத்ர கத்யங்களிலும் (ஸ்தோத்ர ரத்னத்திலும் கத்ய த்ரயத்திலும் )த்வயத்தின் அடைவு காணும் படி எங்கனே என்னில் –

(புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி
நலம் அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலம் முந்து சீரில் படிமின் ஒவாதே)

முதல் பாட்டில் –
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்ற
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டையும்-
கறவைகள் பின் சென்றிலும்-
சிற்றம் சிறு காலையிலும் க்ரமத்திலே வெளியிடுகிறது –

(முதலில் உபதேச வேளை
இறுதியில் அனுஷ்டான வேளை)

நடுவடைய யுண்டானவை இரண்டு அர்த்தத்துக்கும் உபபாதங்களாய் இருக்கும் ஆகையால்
த்வயத்தின் அடைவு க்ரமமாகக் காணலாம் என்றபடி –

நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று
திரு மந்திரத்தில் பத த்ரயத்திலும் ப்ரதிபாதிக்கிற
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்கள் மூன்றும்
ஒவ் ஒன்றே பத்துப் பாட்டாய் பரவும் படி திருப்பாவை முப்பது பாட்டாக பாடி அருளிற்று –

திருமந்திரத்தில் ஸ்வரூப அனுரூபமாக நிஷ் கர்ஷித்த
ப்ராப்ய ப்ராபகங்கள் இறே த்வயத்தில் விசதமாக அனுசந்திக்கிறது –
அந்த க்ரமத்திலே யாயிற்று இங்கும் அனுசந்திக்கிறது –

————

குரு பரம்பரா பூர்வகமாக த்வயத்தின் அடைவு சொல்லுகிறது –

நப்பின்னை நங்காய் திருவே -என்கையாலே -ஸ்ரீ சப்தார்த்தமும் –

உன் மணாளனை என்கையாலே -ஸ்ரிங் சேவாயாம் -என்கிற தாத்வர்த்தமும்-

நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா -என்றும் –(அலர் மேல் மங்கை உறை மார்பன் இறையும் பிரிவில்லாமல் )

நீ உன் மணாளனை எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால் -என்கையால் –
வாத்சல்யாதி குண பிரகாசகமான நாராயண பதத்தில் அர்த்தமும் –

பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி என்றும் –
ஓங்கி உலகளந்த -அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த -அன்று இவ்வுலகம் அளந்தாய் -என்றும் –
லோக விக்ராந்த சரணங்களாய்
நாராயணன் த்ரிவிக்ரமன் அடியான உலகு அளந்த மெல்லடியை -உன் பொற்றாமரை அடி -என்றும் –
சரண -சப்தார்த்தமும் –

கார் மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் –
ஊழி முதல்வன் உருவம் போல் –முகில் வண்ணன் -சங்கோடு சக்கரம் ஏந்தும்
தடக் கையன் பங்கயக் கண்ணன் -என்றதில் விக்ரஹ யோகத்தையும்

(திருவடியைச் சொன்னது திவ்ய மங்கள விக்ரஹத்துக்கும் உப லக்ஷணம்
கண்கள்
உருவம்
தடக்கை
இவற்றுக்கும் பாசுரங்கள் உண்டே)

முத்துத் திரைக் கடல் சேர்ப்பன் -என்னும் படி சம்சாரி திரிந்த இடத்தில் வந்து கிடக்கிற
பாற் கடல் பையத் துயின்ற பரமன் என்கையாலே ஸ்வாமித்வமும்

(சித்தர குத்தன் எழுத்தால் தென் புலக் கோன் பொறி ஒற்றி
வைத்த இலச்சினை மாற்றி தூதுவரோடி ஒளித்தார்
முத்துத் திரை கடல் சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன்
பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே –5- 2-2 –)

(கீழ் வாத்சல்யம் சொல்லி இங்கு ஸ்வாமித்வம்-ஸ்வாமி சொத்தைத் தேடுமா போல் -கடலில் சயனித்து முத்து கிடைக்குமா என்று முக்தர்களைத் தேடிக் கிடக்கிறான் )

ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்கையாலே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த ஸுலப்யமும்-

(அதமன் -மத்யமன் -வ்யாவ்ருத்தம்(

மாயனை என்று தொடங்கி தாமோதரன் அளவும் -கட்டவும் அடிக்கவும் ஆம்படியான ஸுசீல்யமும் –

(ஆஸ்ரயண சவ்கர்ய ஆபாத குணங்கள் -பூர்வ வாக்ய நாராயண அர்த்தங்கள் இந்த நான்கும்)

குறை ஒன்றும் இல்லா கோவிந்தா என்று கல்யாண குண விசிஷ்ட வஸ்துவான உபாய பூர்த்தியையும்

அறிவு ஒன்றும் இல்லா ஆய்க்குலம் -அறியாத பிள்ளைகளோம்-என்கையாலே அதிகாரி ஸ்வரூபமான ஆகிஞ்சன்யமும் –

(புகல் ஒன்றும் இல்லா -த்வயத்தில் வாக்கியம் இல்லை -ஆழ்வார் இவற்றையும் வியக்தமாய் காட்டி அருளியது போல் இங்கும்)

தூயோமாய் வந்து நாம் தூய் மலர்கள் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும்
புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -என்றும் –

வந்து தலைப் பெய்தோம் -என்றும் –
உன்னை அருத்தித்து வந்தோம் -என்றும் -அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும்
தப்பாத உபாயமாக ஸ்வீகரிக்கும் உபாய வரணத்தையும் –

(உனது திருவடிகளை உபாயமாகப் பற்றினோம்
முக்கரணங்களாலும் -இங்கு உண்டே)

ஆவாவென்று ஆராய்ந்து அருள் –
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் –
இறைவா நீ தாராய் பறை -என்று
அவனுடைய பரகத ஸ்வீகாரத்தின் ஏற்றத்தையும் –

(ப்ரபத்யே -பற்றும் பற்றுதலும் உபாயம் அல்லவே
விடுவித்து பற்றுவிக்கும் அவனே -உபாயம்
துடிப்பால் வந்து நின்றோம்)

(இது வரை பூர்வ வாக்ய அர்த்தம்
மேல் உத்தர வாக்ய அர்த்தங்கள்
இடைவிடாமல் இரண்டும் வேண்டுமே -அவனுக்கு நாம் சொல்லும் மாஸூச அன்றோ இது)

குத்து விளக்கு எரியக் கோட்டுக் கால் காட்டில் மேல் -இத்யாதியிலே பர்யங்க வித்யையில் படியே இருவருமாய்
எழுந்து அருளி இருக்கிற சேர்த்தியான வேஷத்தை –
நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்கையாலும் –
தேவாதி தேவன் என்கையாலும் -உம்பர் கோமானே -என்கையாலும்
இறைவா நீ -என்கையாலும் -உத்தர வாக்ய நாராயண பதத்தில் ப்ரதிபாதிக்கிற சேஷித்வமும் –

(தட்டொளியும் தந்து உன் மணாளனை -என்கையாலும் –
இப்போதே எம்மை நீராட்டு -என்கையாலும் –
பூ வளரும் திருமகளால் அருள் பெற்று வரும் படியும் –

தேவரையும் அசுரர்களையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை கற்று வல்லார்
பூவளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே -11-6-10-)-

(அவள் ஏவ மிதுனத்தில் கைங்கர்யம் -அந்தப்புர கைங்கர்ய பரராய் இருப்பதில் ஏற்றம் உண்டே )

(மேல் ஆய நம -அர்த்தங்கள்
கைங்கர்ய பிரார்த்தனை
கைங்கர்ய உபகரணங்கள்
எவ்வித கைங்கர்யங்கள்
அவன் ஆனந்தத்துக்காகவே
இவ்வாறு நான்குக்கும் பாசுரங்கள் இங்கே உண்டே)

போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து -என்றும் –
பள்ளிக் கட்டில் கீழே -என்றும்
சீரிய சிங்காசனத்து இருந்து -என்றும் –
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி -என்றும் –
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -என்றும்
மாலே ஆலினிலையாய் அருளாய் -என்றும் –
கூடி இருந்து குளிர்ந்து என்றும் –
நீ தாராய் பறை -என்றும்

சிற்றம் சிறு காலே வந்துன்னைச் சேவித்து -என்று தொடங்கி –
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே
உத்தர சதுர்த்தியில்
கைங்கர்ய உபகரண ஸஹிதமான பல அனுபவ கைங்கர்ய பரம்பரைகளையும் –
கைங்கர்ய பிரார்த்தனையும் –
அவற்றில் களை அறுப்பையையும் –

செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று -என்கையால்
த்வயத்தில் பெரிய பிராட்டியாராலே என்றமதும் சொல்லித் தலைக் கட்டிற்று –

மாதவன் என்று த்வயம் ஆக்கினால் போலே –
மா மாயன் மாதவன் வைகுந்தன் (9)என்றும் 
மாதவனை (30)என்றும் இறே -இங்கு இரட்டித்து இருப்பது –

(மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே10-5-7-)-என்று என்று-இரட்டித்து இருப்பது

(மாதவன் என்று என்று-இரட்டித்து சொன்னது-த்வயத்தில் ஸ்ரீ சம்பந்தம் இரண்டு வாக்யத்திலும் உண்டே என்பதால் —
எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி மாதவன் என்று த்வ்யமாக்கி -ஆச்சார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி பிரகரணம் -4-சூர்ணிகை -10)

செல்வத் திருமாலால் -என்றும் –
பட்டர் பிரான் கோதை சொன்ன -என்கையாலே இவ்வர்த்தம்
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் -என்னும் இடம் சொல்லிற்று –

இப்படி குரு பரம்பரா பூர்வகமான த்வயத்தாலே பேறாக ப்ரதிபாதிக்கிறதாய் இறே திருப்பாவை தான் இருப்பது –ஆக விறே இதுக்கு வர்த்தகரான உடையவரும்
இத்தை நாள் தோறும் ஆதரித்திக் கொண்டு போந்து அருளிற்று – ஆகையால் இது ஆண்டாள் அடியாராக யாவர்க்கும் நித்ய அனுசந்தேயமாக நடந்து போருகிறது- கோப ஸ்த்ரீ குலமதி கோதாய உபதிஷ்ட்டம் க்ருஷ்ணாக்யம் பிரணவம் இவ அதிகாரி ஜப்யம் தம் த்ரிம்சத் பரி மித பத்ய மார்க்க சீர்ஷ ப்ராப்த உத்ஸவ சமயோசிதம் பிரசித்தம் –

திருப்பாவை முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு சங்க்ரஹமாய் இருக்கும் –
எங்கனே என்னில் –

ஸ்ரீ பாஷ்யம் ஒன்பதினாயிரம் கிரந்தத்துக்கும் முதல் ஸ்லோகம் சங்க்ரஹமானால் போலேயும்

ஸ்ரீ ராமாயணம் 24000 ஸ்லோகங்களும் முதல் சர்க்கம் சங்க்ஷேப ராமாயணம் -சங்க்ரஹமானால் போலேயும்-

ஸ்ரீ மஹா பாராதம் -125000–கிரந்தத்துக்கும் முதல் அத்யாயம் சங்க்ரஹமானால் போலேயும்

திருவாய் மொழிக்கு முதல் திருவாய்மொழி சங்க்ரஹமானால் போலேயும்

முதல் திருவாய் மொழிக்கு முதல் பாட்டு சங்க்ரஹமானால் போலேயும்

மந்த்ர சேஷத்துக்கு பிரணவம் சங்க்ரஹமானால் போலேயும்

முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு சங்க்ரஹமாயே இருக்கும் –

சங்க்ரஹமான படி எங்கனே என்னில்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் -என்ற இடத்தால்
முதல் ஐஞ்சு பாட்டுக்கள் சங்க்ரஹம் சொல்லிற்று –

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் -என்கிற இடத்தில்
பத்துப் பெண்களை எழுப்புகிற இடத்துக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –

கூர் வேல் கொடும் தொழிலன் -என்று –
கோயில் காப்பானே -என்கிற இடத்துக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –

நந்த கோபன் என்று –
நாயகனாய் நின்ற நந்தகோபன் -என்றும் –
ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் என்கிற இடங்களுக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –

குமரன் -என்றதால் –
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெறும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே -என்கிற
இடத்துக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –

கார் மேனி -என்று
முகில் வண்ணன் -என்றும் –
பூவைப் பூ வண்ணா -என்றும் –
மாயன் மணி வண்ணன் -என்றும்
மாலே மணி வண்ணா -என்றும் இடங்களுக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –

செங்கண் -என்று
கிண்கிணி வாய்ச செய்த தாமரைப் பூ போலே செங்கண் சிறிச் சிறிதே எம்மேல் விழியாவோ என்றும்
அங்கண் இரண்டும் கொண்டு -என்றும் –
பங்கயக் கண்ணன் -என்றும்
செங்கண் திருமுகம் -என்கிற இடங்களுக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –

கதிர் மதியம் போல் முகத்தான் -என்று –
திங்களும் ஆதித்யனும் சேர்ந்தால் போல் என்றும் –
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே -என்னும் இடங்களுக்கு சங்க்ரஹமாகச் சொல்லிற்று –

நாராயணன் -என்று –
நாராயணன் மூர்த்தி கேசவன் -என்றும் –
நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்றும்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும் –
மா மாயன் மாதவன் வைகுந்தன் -என்றும் –
முகில் வண்ணன் பேர் பாட -என்றும்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே -என்றும் –
வங்கக் கடல் கடைந்த மாதவன் -என்னும் இடங்களுக்கு சங்க்ரஹம்

நமக்கே பறை தருவான் -என்பதால் –
பாடிப் பறை கொண்டு -என்றும் –
நம்மால் போற்றப் பறை தரும் என்றும் –
இற்றைப் பறை கொள்வான் என்றும் –
அறை பறை -என்றும் –
சாலப் பெரும் பறை -என்றும் –
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் -என்றும் –
இறைவா நீ தாராய் பறை என்றும் –
அங்கு அப்பறை கொண்ட வாற்றை என்னும் இடங்களுக்கு சங்க்ரஹம்

பாரோர் புகழ -என்று –
நாடு புகழும் -எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்னும் இடங்களுக்கு சங்க்ரஹம் –

ஏலோர் எம்பாவாய் -என்று
முப்பது பாட்டிலும் சொல்லும் ஏலோர் எம்பாவாய்க்கு சங்க்ரஹம் –

இப்பாட்டில் காலத்தைக் கொண்டாட நின்று கொண்டு பிரபந்த தாத்பர்யமான
ப்ராப்ய ப்ராபகங்களை சொல்லுகிறது –

—————————————

அதிகாரி ஸ்வாபதேசம் –

இந்த ஸ்வாபதேசத்தில் –
முதல் ஐஞ்சு பட்டாலும் –
பிரபந்த நிஷ்டா க்ரமங்களையும் –
பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் பேசுகிறது –

அதில் முதல் பாட்டில்
பிரபன்ன அதிகாரிக்கு -ச ஏஷ தேச கால -என்கிறபடியே
தேச காலம் எல்லாம் அவனுடைய கடாக்ஷத்தாலே ப்ராப்யம் என்னுமத்தையும் –

கர்மாந்தர பரித்யாகத்தையும் –

பகவத் விஷயங்களில் ருசி விசுவாசங்களினுடைய பிரதான்யத்தையும் –

ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் சர்வ ஸ்வாமியான நாராயணனே என்றத்தையும்

ஏவ காரத்தால் தேவதாந்த்ர ராஹித்யத்தையும் –

பிரயோஜனாந்தர ராஹித்யத்தையும் –

அநந்ய பிரயோஜனத்தையும் –
த்ரிபாத் விபூதி நாயகனான சர்வேஸ்வரன் தங்களுக்கு அபேக்ஷிதா விதானம் பண்ணுவான் என்று
நிரபரத்வ அனுசந்தானத்தையும்

சர்வ ஜன ஸூ ஹ்ருதத்வத்தையும் –

இப்படி நிஷ்டா க்ரமங்களையும் பிரபத்தி வாசகமான திரு நாமத்தையும் சொல்லுகையாலே
அதிகாரி ஸ்வரூபம் சொல்லிற்று யாயிற்று –

நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கையாலே
திருமந்திரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்கிற –
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்கள் மூன்றும் சொல்லுகிறது –

ஆகையால் இப்பாட்டு
திருமந்த்ரத்துக்கு சங்க்ரஹம் என்றதாயிற்று –
இப் பாட்டில் பரத்வம் ஸூசிப்பிக்கிறது –

———

இரண்டாம் பாட்டில்
நோன்புக்கு பெண்கள் தங்கள் செய்யக் கடவ க்ருத்யத்தை நியமிக்கிற முகத்தாலே-
இவ்விஷயத்தில் இழிவாருடைய விரக்தியையும்
சம்பாவித ஸ்வபாவத்தையும் சொல்லுகிறது
என்ற ஒரு ஸ்வாபதேசம் –

இப் பாட்டில்
இந்த பிரபன்ன அதிகாரிக்கு சம்பாவிதமான நிஷ்டா க்ரமங்களையும்
பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் சொல்லுகிறது —
எங்கனே என்னில் –

ஸ்ரீ வைகுண்ட நிகேதனனாய் இருக்கிற சர்வேஸ்வரன் –
தேயே சதம் இத்யனுக்ரமாத் -என்று
யாதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ -என்கிறபடியே –(ஆனந்தவல்லி நூறு நூறாக பெருக்கிக் கொடு திரும்பியதே)
ஆஸ்ரிதர்கள் வந்து ஒரு விண்ணப்பம் செய்வதற்கு அங்கு அவசரம் இல்லாமையால் –

ஒரு பயணம் எடுத்து ஷீர சாகரத்தில் திரு வனந்த ஆழ்வான் மேலே
ஜகத் ரக்ஷண சிந்தனையாலே சாய்ந்து அருளி –
ஆஸ்ரிதற்கு யாராலே யாருக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று அந்த யுரைக்கு செவி கொடுத்து
கண் வளருகிறதாக நினைத்து இருக்கையும் –(ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீராப்தி நிகேதன் என்கிறபடி கூப்பீடு கேட்க்கும் இடம் )

சகல சேதன உஜ்ஜீவனமான த்வயத்தை பெரிய பிராட்டியாருக்கு உபதேசம் பண்ணுகிற
ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை வாயாலே சங்கீர்த்தனம் சதா பண்ணுகையும் –(பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடி பாடி )
ஆகையால் பிரபன்னனுக்கு த்வய அனுசந்தானம் சதா பண்ண வேணும் என்று தாத்பர்யம் –

அந்த ரசானுபவம் பண்ணுகிறவரைக்கும் இதர விஷயங்களில்
தவாம்ருதஸ் யந்தினி பாத பங்கஜே நிவேசி தாத்மாக தமன்ய திச்சதி-என்கிறபடி –
போக்யமான மது சக்கர ஷீரா ததி க்ருதாதிகளிலும் நைரபேஷயத்தையும்-

(தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-ஶ்லோகம் 27 –

ஆளவந்தார் “அநந்ய கதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்?
உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.

அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?

த்ரிவிக்ரமத் வச் சரணாம் புஜ த்வயம் மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி–என்கிறபடியே
அவன் திருவடிகளை சர்வ அலங்காரமாகப் பற்றுகையும்

(கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||ஶ்லோகம் 31 –

இதில், ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது, அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்”
என்று ஆழ்வார் திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்”
(இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும்
திருவாய்மொழி 4.3.6இல் “கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே”
(என்னுடைய தலைக்கு உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளே அலங்காரமாகும்) என்றும் கேட்டபடி அருளிச் செய்கிறார்.

த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம்
ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்)

அது ஒழிய ஸ்ரக் சந்தன வஸ்த்ராத்யா பரணங்களை நிஷேதித்தமையும்-
அவனுக்கு சேஷமாய் இருக்கிற சகல வஸ்து விஷயங்களில்
ஜாதி பேதத்தாலே அபோக்யமாய் இருக்கச் செய்தேயும் பரம போக்யத்தால் ஸ்வீகரிக்கையும்-

யதா சக்தி பாகவதருக்கு நித்ய ததீயாராதனம் பண்ணி பகவத் அனுபவம் பண்ணுவித்து –
ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -என்று இருக்கையும்(ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி )

இப்படி அதிகாரி நிஷ்டா க்ரமம் சொல்லுகிறது –

இரண்டாம் பாட்டில் வ்யூஹம் சொல்லுகிறது –

———

மூன்றாம் பாட்டில்
நோன்பில் இழியவே-தாத் பலமான சம்ருதிகள் அடைய உண்டாம் -என்கிறார்கள் –

இத்தால்
பகவத் ஸமாச்ரயண பலமான கைங்கர்யம் ஒழிய
வேறே -ஆயுராசாஸ்தே -என்கிறபடியே
ஐஹிக பலங்களும் ஆனு ஷங்கிக சித்தமாய்க் கொண்டு சித்திக்கும் என்கிறது –

—————

நாலாம் பாட்டில் –
வர்ஷ தேவதையைக் குறித்து வர்ஷிக்கும் படியை நியமிக்கிறார்கள்-

இத்தால்
அநந்ய பிரயோஜனராய் பகவத் ஸமாச்ரயணம் பண்ணுமவர்க்கு
இந்திராதி தேவதைகளும் நியாமியர் ஆவார்கள் என்று இவ்வதிகாரியினுடைய உத்கர்ஷம் சொல்லுகிறது –
சர்வேஸ்மை தேவா பலிமா வஹந்தி-என்னக் கடவது இறே

————-

அஞ்சாம் பாட்டில் –
ஸ்ரேயாம் சி பஹூ விக்நானி -என்கிறபடி
நோன்புக்கு விக்னங்கள் சம்பவியாதோ என்னில் –
மநோ வாக் காயங்களாலே கிருஷ்ணனையே அனுசந்திக்க அவை போம் -என்கிறார்கள் –

இத்தால்
பகவத் குண அனுபவம் பண்ணுமவனுக்கு
உத்தர பூர்வாக யோரச் லேக்ஷ விநாசவ்-என்கிறபடியே
பகவத் அனுபவ மஹாத்ம்யத்தாலே சகல துரிதங்களும் போம் என்கிறது –

————–

ஆக இவ் வைந்து பட்டாலும் –
நாராயணனே -என்றும் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றும் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும்
மாயனை வடமதுரை மைந்தனை -என்றும் சொல்லுகையாலே கிருஷ்ணனுடைய அடிப்பாடு சொல்லுகிறது –

இதுக்கு மேல் பத்துப் பாட்டும்
முற்பட்டவர்கள் பிற்பட்டவர்களை எழுப்பிச் செல்லுகிறது –

இத்தால்
பகவத் விஷயம் அபரிச்சின்னமாய் –
தனி அனுபவிக்க ஒண்ணாமையாலே பெருக்காற்றிலே இழிவார் துணை கொண்டு இழியுமா போலேயும்
ஏக ஸ்வாது நபுஞ்சீத-என்று தனி அனுபவிக்க மாட்டாத சாபல்யத்தாலும் பகவத் அனுபவம் பண்ணுவார்க்கு
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்கிறபடி
துணை தேட்டமாய் இருக்கும் என்னும் இவ்வர்த்தத்தைச் சொல்லுகிறது –

(கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின் றனவே.–5-2-2-)

————-

இதில் முதல் பாட்டில் –
கிருஷ்ண அனுபவத்தில் புதியளாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறாள் –

இத்தால்
பகவத் ஏக போக்யரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அநந்ய பிரயோஜனராய்
இவ் விஷயத்தில் தேசிகர் அன்றிக்கே இருப்பாரை அவர்கள் பக்கல்
பரிவாலே தேசிகர் ஆக்குகை தங்களுக்கு கிருத்யம் என்று இருக்கை ஸ்ரீ வைஷ்ணத்வம்
என்கிற ஸ்வபாவத்தைச் சொல்லுகிறது –

(எது தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணத்வம் என்று பாசுரம் தோறும் உண்டே)

———

இரண்டாம் பாட்டில் –
கிருஷ்ண அனுபவத்தை தேசிகையாய் -இவ் வனுபவத்தை ஸ்மரித்துக் கிடக்கிறாள் ஒருத்தி எழுப்புகிறார்கள் –

இத்தால்
பகவத் விஷயத்தில் ஞாதமான அர்த்தம் ஒருவனுக்கு விஸ்ம்ருதமானால் தங்கள் பரிவாலே
போதயந்த பரஸ்பரம் -என்கிறபடி அறிவிக்கை
ஸ்ரீ வைஷ்ணவர் ஆனார்க்கு ஸ்வரூபம் என்கிறது –

(போதயந்தபரஸ்பரம்– கதயந்தச் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச)

————-

மூன்றாம் பாட்டில் –
கிருஷ்ணனால் கொண்டாடப்படும் ஏற்றம் உடையவளை எழுப்புகிறார்கள் –

இத்தால்
பகவத் அனுபவத்தில் ப்ரத்யாசன்னராய் இருப்பார் இடத்தில் சா பேஷாராய் இருக்கையும் –
அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனை கிட்டுக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –

———-

நாலாம் பாட்டில் –
கிருஷ்ணன் வந்த போது வருகிறான் -என்று நிர்ப்பரரையாய்க் கொண்டு கிடக்கும் அவளை எழுப்புகிறார்கள் –

இத்தால்
தத் தஸ்ய சத்ருசம் பவேத் – என்று
பூர்வார்த்த நிஷ்டராய் இருப்பாரை பகவத் பிரேமாதிசயத்தாலே
தத் ஏக போகராய் இருக்குமவர்கள் போகார்த்தமாக ப்ரேரிக்கை
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிற அர்த்தம் சொல்லுகிறது –

(சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந: மாம் நயேத் யதி காகுத்ஸ்த: தத் தஸ்ய சத்ருசம் பவேத்”-சுந். 39:30)

————–

அஞ்சாம் பாட்டில் –
பெண்கள் எல்லாம் -கிருஷ்ணன் -என்றால் படும் பாட்டை –
அவன் தான் தண்ணீர் தண்ணீர் என்னும் படியாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

இத்தால்
ஞானீத் வாத்மைவ மே மதம் –
அஹம் ச சம ப்ரிய -என்றும் அவன் பக்ஷத்தில் இருப்பார் திறத்தில்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் நித்ய சா பேஷராய் இருக்கை ஸ்வரூபம் என்னும் இவ்வர்த்தம் சொல்லுகிறது –

(என்னது உன்னதாவியில் அறிவாராத்மா என்று அவன் மதம் தோன்றும். )

————-

ஆறாம் பாட்டில் –
அபிஜாதையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –(கோவலர் தம் பொற் கொடி )

இத்தால்
பகவத் சம்பந்தம் விச்சேதியாதே போந்த ஆச்சார்ய சந்தான ப்ரஸூதர் நமக்கு உத்தேச்யர் என்றும் –
அவர்கள் அடியாக பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வபாவம் என்கிறது –

———–

ஏழாம் பாட்டில் –
இளைய பெருமாளை போலே கிருஷ்ணனைப் பிரியாதே இருப்பான் ஒருவன் தங்கையை எழுப்புகிறார்கள் (நற் செல்வன் தங்காய் )

இத்தால்
பகவத் விஸ்லேஷம் அஸஹ்யமாம் படி அவகாஹித்தார் தங்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
உத்தேச்யராம் அளவன்றிக்கே-
தத் சம்பந்த சம்பந்திகளும் உத்தேச்யர் என்று இருக்கை ஸ்வரூபம் என்கிறது –

—————-

எட்டாம் பாட்டில் –
நம் கண் அழகு உண்டாகில் தானே வருகிறான் -என்று அவயவ சோபையை மதித்து கிடக்கிறாள்
ஒருத்தியை எழுப்புகிறார்கள் –(போதரிக் கண்ணினாய் -பரிபூர்ண ஞானம் உபாயம் அபாயம் அறிந்து )

இத்தால்
பகவத் அனுபவ பரிகரமான ஞான பக்தி வைராக்யங்களால் பூர்ணராய் இருக்குமவர் நிறத்திலும்
ததர்தமாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் சா பேஷராய் இருக்கை ஸ்வரூபம் என்கிறது –

————–

ஒன்பதாம் பாட்டில்
எல்லார்க்கும் தானே நிர்வாஹகையாய் -எல்லாரையும் தானே எழுப்பக் கடவளாய் சொல்லி விஸ்மரித்து
கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

இத்தால்
பகவத் விஷயத்தில் மூட்டுகையாலே அதிகரித்த
நிர்வாஹகர் முன்னாக பகவத் அனுபவம் பண்ணுகை ஸ்வரூபம் என்கிறது –

—————

பத்தாம் பாட்டில் –
எல்லாருடைய திரட்சியும் காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

இத்தால் ஸ்ரீ வைஷ்ணவ சமாஜ தர்சனம்
அபிமதமாய் இருக்குமவர்களைக் கண்டால் அந்த ஸமூஹமாக அவர்களை உகக்கை ஸ்வரூபம் என்கிறது –

———–

ஆக இப் பதினைந்து பட்டாலும் எழுப்பப் பட்டவர்கள் எல்லாரும் கூட வந்து –
மேல் பதினாறாம் பாட்டால்
ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையில் சென்று
கோயில் காப்பானையும் ஸ்ரீ வாசல் காப்பானையும் எழுப்புகிறார்கள் –

(ஆயர் சிறியோம் -அனைவரும் ஒரே பேரால் நாம ரூப விபாகம் அற்று கடலிலே நதிகள் சேருமா போல்)

———–

பதினேழாம் பாட்டில் –
இவர்கள் திருக் காப்பு நீக்கி -உள்ளே புக விட
ஸ்ரீ நந்தகோபர் தொடக்கமான உள் உள்ளாரை அடைய எழுப்புகிறார்கள் –

 இவ் விரண்டு பாட்டிலும்
பகவத் விஷயத்தை கிட்டுவார் தத் ப்ரத்யாஸன்னரை புருஷகாரமாகக் கொண்டு புகுருகை ஸ்வரூபம் என்கிறது –

—————

பதினெட்டாம் பாட்டில் –
இப்படி எழுப்பின இடத்திலும் எழுந்து இராமையாலே தங்களுக்கு புருஷகாரமாக நப்பின்னையை எழுப்புகிறார்கள் –

இத்தால்
பகவத் விஷயீ காரம் பிராட்டி புருஷகார சாபேஷை என்கிறது –

(புருஷ சாபேஷமாயும் புருஷகார சா பேக்ஷமாயுமாய் இருக்குமே பேறு பெறுவதற்கு)

————–

பத்தொன்பதாம் பாட்டில் –
இவள் திறக்கப் புக -நம்முடையாருக்கு இவள் முற்பட்டாளாக ஒண்ணாது -என்று இவளைத் திறக்க ஒட்டாதே
கட்டிக் கொண்டு கிடக்கிற கிருஷ்ணனை எழுப்பி –(மலர் மார்பா வாய் திறவாய் )
மறுமாற்றம் கொள்ளாமையாலே மீளவும் அவனை உணர்த்துகைக்காக அவளை எழுப்புகிறார்கள் –

இத்தால்
பிராட்டியை புருஷகாரமாக வரித்தால் அவனும் இவளும் இசலி இசலிப் பரியும் பரிவைச் சொல்லுகிறது –

————–

இருபதாம் பாட்டில் –
அவனுக்கும் எங்களுக்கும் அடியான நீ எங்களை நீராட்டுவீ -என்று
கிருஷ்ணனையும் நப்பின்னை பிராட்டியும் கூட எழுப்புகிறார்கள்

இத்தால்
அடிமை செய்யும் இடத்தில் இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்வதே முறை என்கிறது –

(கமலா -நமக்கும் அவனுக்குமாக இருப்பவள் -)

—————-

இருபத்தோராம் பாட்டில் –
நப்பின்னைப் பிராட்டியும் -நானும் உங்களில் ஒருத்தி அன்றோ –
நாம் எல்லாரும் கூட கிருஷ்ணனை அர்த்திக்க வாருங்கோள்-என்ன
அவன் குணங்களில் தோற்றார் தோற்றபடி சொல்லி எழுப்புகிறார்கள் –

இத்தால்
பிரபுத்தனாய் (விழித்து எழுந்தவனாய் )தங்கள் கார்யம் செய்கைக்கு
ஏத்த ஏழு உலகம் கொண்ட -என்கிறபடியே
ஆஸ்ரிதரானவர் களுக்கு நிர்மமராய்க் கொண்டு அவன் குண கீர்த்தனம் பண்ணுகை கர்த்தவ்யம் என்கிறது –

(ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லைஓர் ஊனமே.–2-2-11-)

(ஏழு உலகுக்கும் அதிபதி அவன் -ஏற்ற பாடுவது அவன் சம்பந்தம் உணர்ந்து பாடுவது –நானும் உனக்கு பழ அடியேன் என்று உணர வேண்டுமே)

—————-

இருபத்து இரண்டாம் பாட்டில்
கீழ்ப் பாட்டில் தங்கள் அபிமான ஸூ ன்யத்தையைச் சொல்லி
இப்பாட்டில் அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லுகிறது –

இத்தால்
அவனுடைய விசேஷ கடாக்ஷத்துக்கு தங்கள் அநந்யார்ஹ சேஷத்வம் அனுசந்தேயம் என்கிறது –

—————-

இருபத்து மூன்றாம் பாட்டில் –
உபஸ்தேயைர் உபஸ்தித -என்று
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகளினுடைய துக்க நிவ்ருத்திக்கு
நாம் முற்பாடராக பெற்றிலோம் என்று வெறுத்தால் போலே
இவர்கள் நோவு படப் பார்த்து இருந்தோம் ஆகாதே -என்று இன்னாதாய் –
அவர்களை அழைத்து செய்ய வேண்டுவது என் என்ன –

(உறாமையோடே உற்றேன் ஆக்காமல் -அதிகாரம் வளர்க்கவே)

இங்கனே சொல்ல ஒண்ணாது -பேர் ஓலக்கமாக இருந்து கேட்டருள வேணும் என்கிறார்கள் –

இத்தால் –
கர்ம பரதந்த்ரராய் இருந்துள்ள பிரயோஜனாந்தர பரரைக் காட்டிலும்
அநந்ய பிரயோஜனராய் சாதனாந்தர நிஷ்டராய் இருக்குமவர்களைக் காட்டிலும் -சித்த சாதனம் பண்ணினார்க்கு
தம் தாம் கையில் கைம் முதல் இல்லாமையால் ஈஸ்வரனே பிரபுத்தனாய்க் கொண்டு அபேக்ஷித சம் விதானம் பண்ண வேணும்
என்று இவ் வதிகாரத்தில் வியாவ்ருத்தி சொல்லுகிறது –

(யாம் வந்த கார்யம் ஆராய வேண்டிய பொறுப்பு உன்னடையதே -ரிஷிகளுக்கே உனது பொறுப்பு என்று இருந்தாய் அன்றோ)

————-

இருபத்து நாலாம் பாட்டில் –
அப்படியே செய்கிறோம் என்று பிரதிஞ்ஜை பண்ணின படியைக் கண்டு –
தங்கள் வந்த காரியத்தை மறந்து
தற் காலீகமான அழகிலே ஈடுபட்டு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –

(தற் காலீகமான அழகிலே ஈடுபட்டு-பஞ்ச லக்ஷம் பெண்களை ஒரு சேரப் பார்த்த அழகு -யார் உயிர் பட்டது எனது உயிர் பட்டது போல் அவனுக்கு இங்கு)

இத்தால்
அர்த்திகளாகச் சென்றால் தம் தாமுடைய
புருஷார்த்தத்தை விஸ்மரித்து மங்களா சாசனம் பண்ண வேண்டும்படியான விஷய வை லக்ஷண்யம் சொல்லுகிறது –

————-

இருபத்தஞ்சாம் பாட்டில் –
ஏதேனும் இப் பிரவ்ருத்திக்கு ஒரு பிரதிபந்தகம் உண்டே யாகிலும் நீயே போக்கி எங்கள் துக்கம் எல்லாம் கெட
விஷயீ கரிக்க வேணும் -என்கிறார்கள் –

இத்தால்
ஸ்வரூப லாபம் அத் தலைக்கே கூறானவோபாதி-துக்க நிவ்ருத்தியும்
அத் தலைக்கே பரம் என்னும் இவ் வர்த்தம் சொல்லுகிறது –

(தான் தீங்கு நினைத்த கம்சனைப் போக்கி-வருத்தமும் தீர்த்து மகிழ வைக்க வேண்டுமே)

———

(வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய -இதுவரை
மேல்
என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-
அவனது பாரிப்பு கடல் போல் -நமது பாரிப்பு குளப்படி போல்
அவா அறச் சூழ்ந்தது போல் இங்கும்
அத்தைக் கண்டு மாலே என்று தொடங்கும் இறுதி ஐந்து பாசுரங்கள் )

இருபத்து ஆறாம் பாட்டில் –
மற்ற அபேக்ஷிதம் என் என்ன நோன்புக்கு வேண்டும் உபகரணங்களை தர வேணும் என்கிறார்கள் –

இத்தால்
துக்க நிவ்ருத்தியோபாதி போக உபகரண சித்தியும் அவனாலே என்கிறது –

—————

இருபத்து ஏழாம் பாட்டில் –
நோற்றால் பெறக் கடவ பேறு சொல்கிறது –

இத்தால்
ப்ரஹ்ம அலங்காரரேன அலங்குர்வந்தி-
என்று அலங்காராதிகளும் பகவத் பிரசாதாயத்தாம் என்கிறது

————-

இருபத்து எட்டாம் பாட்டில் –
நாட்டார் இசைகைக்காக நோன்பு என்று ஒரு வியாஜத்தை இட்டு புகுந்தோம் அத்தனை
எங்களுக்கு அது உத்தேச்யம் அன்று –
உன் திருவடிகளில் கைங்கர்யம் என்று தங்களுக்கு உத்தேசியமான புருஷார்த்த சித்திக்கு
தங்கள் ஆகிஞ்சன்யத்தையும் ப்ராப்தியையும் முன்னிட்டு –
அவனே உபாயமாக வேணும் என்று அபேக்ஷித்து ஷாமணம் பண்ணிக் கொண்டு
ப்ராப்ய பிரார்த்தனம் பண்ணித் தலைக் கட்டுகிறது –

இதுக்கு கீழ் அடங்க ஒரு அதிகாரிக்கு சம்பவிக்கும் ஸ்வபாவங்களை சொல்லிற்று யாயிற்று
இப் பாட்டில்
அதிகாரி ஸ்வரூபமான உபாய ஸ்வீகாரத்தை ஸ ப்ரகாரமாகச் சொல்லுகிறது

—————

இருபத்து ஒன்பதாம் பாட்டில் –
தங்களுக்கு உத்தேச்யமானது கைங்கர்யம் -என்று பிரபந்த தாத்பர்யம் சொல்லி முடிக்கிறார்கள்

இத்தால்
ஸ்வீக்ருத உபாயத்துக்கு பலமான புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லுகிறது –

(இறைவா நீ தாராய் பறை -பிரார்த்தனை
உனக்கே நாம் ஆட் செய்வோம் –மற்றை நம் காமங்கள் மாற்று –புருஷார்த்த ஸ்வரூபம்)

————

முப்பதாம் பாட்டில் –
இப் பிரபந்தம் கற்றார் -நாய்ச்சியாராலும் ஈஸ்வரனாலும் சர்வ காலமும் உண்டான விசேஷ கடாக்ஷத்தைப் பெற்று
நித்ய ஸூகிகளாகப் பெறுவர் –

இத்தால்
யுக்தமான அனுஷ்டானம் இல்லாதார்க்கும் அவர்களுடைய பாசுரமே அவர்கள்
பெற்ற பேற்றைத் தரும் -என்று
இப் பாசுரத்தில் ஏற்றத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –

———–

ஆக
திருப்பாவையால் சொல்லிற்று யாயிற்று வேதார்த்தம் –

அதாவது
அவதாரமே சர்வ ஸமாஸ்ரயணீயம் என்றும்
அவதீர்ணனாவனுடைய வடிவு அழகே ருசி ஜனகம் என்றும்
ருசி யுடையார் ப்ராப்ய த்வரையாலே-அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ் விஷயத்தில் இழிவார்க்கு ருசி யுடையார் அடங்க உத்தேச்யர் என்றும்
ப்ராப்யம் ஆகிறது -அனுபவ ஜனித ப்ரீதி காரியமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் என்றும்
தத் சாதனமும் அவன் திருவருளே என்றும் சொல்லிற்று யாயிற்று –

(இரக்கம் ப்ராப்யம் -உபாயம்
இனிமை ப்ராபகம் -உபேயம்
இச்சையே அதிகாரம்)

(இயம் ஸீதா மம ஸுதா ஸஹ த4ர்ம சரீதவ| ப்ரதீச்ச2 சைநாம் ப4த்3ரம்தே பாணிம் க்3ருஹ்ணீஷ்வ பாணிநா ||

இயம் கோதா ஸஹ த4ர்ம சரீதவ| ப்ரதீச்ச2 சைநாம் ப4த்3ரம்தே பாணிம் க்3ருஹ்ணீஷ்வ பாணிநா ||
நாளை வதுவை –கனாக் கண்டேன் தோழீ நான் -கேசவ நம்பியைக் கால் பிடித்து மிதுனமாக நமக்கு நித்ய அநுக்ரஹம் செய்து கொண்டுள்ளார்கள்)

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ புருஷ ஸூக்த வ்யாக்யானம்‌-ஸ்ரீ உ. வே, K. ஸ்ரீ நிவாஸய்யங்கார்‌ ஸ்வாமிகள்–

April 15, 2025

ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌, துருவன்‌ பரந்தாமனை ஸ்தோத்திரம்‌ செய்‌யும்‌ ப்ரகரணத்தில்‌, புருஷ ஸூக்த மந்த்ரங்களை அனுஸரித்து ஸ்தோத்‌ரம்‌ செய்வதாகக்‌ காணப்படுகிறது. அவ்விடத்தில்‌ ஸகல சாஸ்த்ர பாரங்கதரும்‌, “எங்களாழ்வான்‌ *” என்று கீர்த்தி பெற்றவருமான ஸ்ரீவிஷ்ணுசித்தாசாரியர்‌. விசேஷமாக வியாக்யானம்‌ செய்திருக்கிறார்‌.
அதை அனுஸரித்து செய்தருளிய வியாக்யானம்‌ –

“யோநூசாந த்‌,விஜம்‌ க,த்வா ஹதவாந்‌ அர்.த்த,லோப,த: | ஸ படேத்‌ பெளருஷம்‌ ஸூக்தம்‌ ஜலஸ்த்த,: சிந்தயங்‌ ஹரிம்‌ |”-எவனொருவன்‌ ஸாங்கமாக வேதாத்யனம்‌ செய்த ப்ராஹ்மணனை அடைந்து, பணப் பேயாட்பட்டு. அவனைக்‌ கொன்றானோ, அவன்‌ ஜலத்தில்‌ நின்றுகொண்டு ஹரியை நினைத்துக் கொண்டு புருஷஸு9க்தத்தைப்‌ படிக்கக் கடவன்‌.] என்றும்‌,
“ஜப்த்வாத, பெளருஷம்‌ ஸூக்தம்‌ முச்யதே கு,ருதல்பக_:’”[குரு பத்தியுடன்‌ சேர்ந்தவன்‌ புருஷ ஸூக்தத்தை ஜபித்து, அந்த மஹா பாபத்தினின்றும்‌ விடுபடுகிறான்‌.] என்றும்‌,
“ப்‌, ரஹ்ம யஜ்ஜஞே த்‌,விஐ: ஸூக்தம்‌ பெளருஷம்‌ சிந்தயந்‌ ஹரிம்‌ |
ஸ ஸர்வாந்‌ ஜபதே வேதாந்‌ ஸாங்க உபாங்காந்‌ த்‌;விஜோத்தம: lI”

[தினந் தோறும்‌ செய்ய வேண்டிய பஞ்ச மஹா யஜ்ஞத்தில்‌ ஒன்றான
ப்ரஹ்ம யஜ்ஞத்தில்‌ ஹரியை நினைத்துக் கொண்டு புருஷ ஸூக்தத்‌தைப்‌ படிக்கும்‌ பிராம்மணன்‌ ஸாங்கோபாங்கமான எல்லா வேதங்‌களையும்‌ ஐபித்தவனாகிறான்‌.] என்றும்‌ பெரியோர்கள்‌ இதன்‌ பெருமையைப்‌ பேசி யிருக்கிறார்கள்‌. – செளநக பகவானும்‌ புருஷ
ஸூுக்தத்தின்‌ ருக்குகளினால்‌ ஸ்ரீமன் நாராயணனை ஆராதனம்‌ பண்ண வேண்டுமென்று உபதேசித்து,“ அர்ச்சிதம்‌ ஸ்யாத்‌ ஜக,தி;தம்‌’”என்று அதனால்‌ ஸகல லோகங்களையும்‌ ஆராதனம்‌ செய்யப் பட்டதாகிறது என்றும்‌ வெளியிட்டிருக்கிறார்‌.-மேலும்‌, “புருஷ ஸூக்தத்தின்‌ ருக்குகளைக் கொண்டு நெய்யினால்‌ அக்னியில்‌ ஹோமம்‌ செய்பவன்‌
ஸம்ஸாரத்துக்குக்‌ காரணமான பாபங்களை விட்டு மோக்ஷத்தை அடைவான்‌”’ என்றும்‌, ஜகத் காரணனாய்‌, திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனாய்‌, ஸகல கல்யாண குண பூர்ணனாய்‌, தேவாதி தேவனாயிருக்கிற ஸ்ரீமந் நாராயணனை, புருஷ ஸுூ9க்தத்தினால்‌ : தியானம்‌ செய்பவன்‌ மோக்ஷத்தை யடைந்து, “ஸோஸ்நுதே ஸர்வாந்‌ காமாந்‌
ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா””
[முக்தி யடைந்தவன்‌, ஸர்வஜ்ஞனான பரமாத்மாவுடன்‌ கூட அவனுடைய ஸகல கல்யாண குணங்களையும்‌ அனுபவிக்கிறான்‌] என்றபடி ப்ரம்மாநந்தத்தை அடைகிறான்‌ என்றும்‌ இதன்‌ மஹிமை விஸ்தாரமாக வெளியிடப் பட்டிருக்கிறது.

——————–

ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்‌ ஸ பூ,மிம்‌ விஸ்வதோ வ்ருத்வா. அத்யதிஷ்டத்‌ தசாங்குலம்‌–1-

புருஷ ஏவேதம் ஸர்வம்‌, யத்‌, பூ,தம்‌. யச்ச பவ்யம்‌ உதாம்ருதத் வஸ்யேசாந:, யத,ந்நேநாதி ரோஹதி-2-

ஏதாவாந் ௮ஸ்‌ய மஹிமா, அதோ ஜ்யாயாம்ச்ச பூருஷ:
பாதோஸ்ய விஸ்வா பூ,தாநி ,த்ரிபாத,ஸ்யாம்ருதம்‌ திவி.–3-

த்‌ரிபாதூர்த்‌வ உதைத்‌ புருஷ; பாதோஸ்யே ஹா பவாத்புந :
ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி..| -4-

தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:–5-

யத் புருஷேணே ஹவிஷா, தே,வா யஜ்ஞமதந்வத
வஸந்தோஸ்யா ஸீதஜ்யம்‌, க்ரீஷ்ம இத்‌மச்‌ஸ்ரத்‌தவி:–6-

ஸப்தாஸ்யாஸந்‌ பரித,ய:, த்ரிஸ் ஸப்த ஸமித,: க்ருதா:
தே,வா யத்‌;யஜ்ஞம்‌ தந் வாநா :; அபத்நந்‌ புருஷம்‌ பசும்‌.-7-

தம்‌ யஜ்ஞம்‌ ப,ர்ஹிஷி ப்ரெளக்ஷந்‌, புருஷம்‌ ஜாதம் அக்ரத :
தேந தே,வா அயஜந்த, ஸாத்‌,யா ருஷயச்ச யே. –8-

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத:, ஸம்ப்‌,ருதம்‌ ப்ருஷதாஜ்யம்‌
பசூம்ஸ்தாம்ஸ் சக்ரே வாயவ்யாந்‌, ஆரண்யாந் க்‌,ராம் யாச்சயே–9-

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத: ருசஸ்‌ ஸாமாறி ஜஜ்ஞிரே
சந்தராம்ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத்‌, யஜுஸ்‌ தஸ்மாத, ஜாயத,–10-

தஸ்மாத,ச்வா அஜாயந்த ஏகேசோப,யாத,த:
காவோ ஹ ஐஜ்ஜிரே தஸ்மாத்‌ தஸ்மாத்‌ ஜாதா அஜா வய:–11-

யத்‌ புருஷம்‌ வ்யத,து,: கதிதா வ்யகல்பயந்‌
முக,ம்‌ கிமஸ்ய கெள பராஹ, காவூரு பாதர வுச்யேதே-12-

ப்‌ராஹ்மணோஸ்ய முக,மாஸீத்‌ பாஹூ ராஜந்ய: க்ருத;
ஊரூ ததஸ்ய யத்‌,வைச்ய: பத்‌,ப்‌,யாம்‌ சூத்‌ரோ அஜாயத.–13-

நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-15-

நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-15-

வேதாஹ மேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌
ஆதித்ய வர்ணம்‌ தமஸஸ்து பாரே
ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர:
நாமாநி க்ருத்வாபி,வதந்‌ யதாஸ்தே–16-

தாதா புரஸ்தாத்‌, யமுதாஜஹார சக்ர: ப்ரவித்‌,வாந்‌ பரதி ,சச்சதஸ்ர:
தமேவம்‌ வித்‌,வாந்‌ ௮ம்ருத இஹப,வதி நாந்ய: பந்தா: அயநாய வித்‌யதே.-17-

யஜ்ஞேந யஜ்ஞமயஜந்த தே,வா: தாநி தர்மாணி ப்ரதமா ந்யாஸந்
தே ஹ நாகம்‌ மஹிமாநஸ்‌ ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்‌யாஸ்‌ ஸந்தி தேவா–18

உத்தரானுவாகம்‌.
1-அத்ப்‌யஸ்‌ ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விஸ்வ கர்மணஸ்‌ ஸம வர்த்ததாது,
தஸ்ய த்வஷ்டா விததத்‌, ரூபமேதி தத் புருஷஸ்ய விஸ்வமாஜா நமக்‌ரே.

வேதாஹமேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌, ஆதித்ய வர்ணம்‌ தமஸ: பரஸ்தாத்‌
தமேவம்‌ வித்‌வாந்‌ அம்ருத இஹ ப,வதி, நாந்ய: பந்தா வித்‌யதேயநாய–2-

ப்ரஜாபதிச்‌ சரதி கர்ப்பே, அந்த:, அஜாயமாநோ பஹுதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌, மரீசீகாம்‌ பதமிச்சந்தி வேத,ஸ:3-

யோ தே,வேப்‌,ய ஆதபதி, யோ தே,வாநாம்‌ புரோ ஹித:.
பூர்வா யோ தே வேப்‌யோ ஜாத:, நமோ ருசாய ப்‌ராஹ்மயே–4-

தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:–5-

ருசம்‌ ப்‌ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா அக்‌ரே தத;ப்‌ருவந்‌
யஸ்த்வைவம்‌ ப்‌ராஹ்மணோ வித்‌யாத்‌ தஸ்ய தே,வா அஸந்‌ வசே.–5

ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ந்யெள, அஹோராத்ரே பார்ஸ்வே நக்ஷத்ராணி ரூபம்‌ அஸ்விநெள வ்யாத்தம்‌ இஷ்டம்‌ மநிஷாண அமும்‌ மநிஷாண ஸர்வம்‌ மநிஷாண,-6-

———

ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்‌ ஸ பூ,மிம்‌ விஸ்வதோ வ்ருத்வா. அத்யதிஷ்டத்‌ தசாங்குலம்‌–1-
[புருஷனென்று சொல்லப்படும்‌ நாராயணன்‌ அநந்தமான தலைகளையும்‌, எண்ண முடியாத கண்களையும்‌, அநேகம்‌ கால்களையும்‌ உடையவர்‌. அவர்‌ பூமியை நான்கு புறத்திலும்‌ வியாபித்து அநந்த யோஜன ப்ரமாணமான ப்ரம்ஹாண்டத்தை ஆக்ரமித்தார்‌.
“ஸஹஸ்ர சீர்ஷா இத்யத்ர ஸஹஸ்ர அநந்த வாசக:-அநந்த யோஜநம்‌ ப்ராஹத,சாங்குலவசஸ்‌ ததா தஸ்ய ப்ரதமயா விஷ்ணோர்‌ தே சதோ வ்யாப்திருஸ்யதே”
[“ஸஹஸ்ர சீர்ஷா””
என்னுமிடத்தில்‌ ஸஹஸ்ர சப்தம்‌ அநந்தம்‌ என்னும்‌ அர்த்தத்தைச்‌ சொல்லுகிறது. தசாங்குல பதம்‌ அநந்த யோஜனையைச்‌ சொல்லுகிறது. புருஷ ஸூக்தத்தின்‌ முதல்‌ மந்திரத்‌தினால்‌ விஷ்ணுவினுடைய ஸர்வ தேச வ்யாப்தி சொல்லப்படுகிறது] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ இந்த முதல்‌ மந்திரத்தின்‌ அர்த்தம்‌ சொல்லப்பட்டது.
(ஸஹஸ்ரசீர்ஷா)கணக்கற்ற தலைகளை உடையவன்‌, இங்கு தலை என்பது எல்லா அங்கங்களையும்‌ காட்டுகிறது. மெய்‌, வாய்‌, கண்‌, மூக்கு, செவி என்னும்‌ ஜ்ஞானேந்த்ரியங்கள்‌ ஐந்தையும்‌ உடைத்தாயிருப்பதால்‌ தலை முதலில்‌ எடுக்கப்படுகிறது. இங்கு சீர்ஷ சப்தம்‌ ஜ்ஞானேந்த்ரியங்களால்‌ உண்டாகும்‌ ஜ்ஞானத்தைக்‌ குறிக்கிறது.
ப்ராம்ஹணத்தில்‌ போத,ந மநந ஸ்ரவண ஸ்பர்சந தரர்சந ரஸந க்ராண ஜ்ஞாநாநி ஸ்ருதாநி ப,வந்தீத்யத: சிரஸ் ‘” .[அறிதல்‌, நினைத்‌தல்‌,கேட்பது, ஸ்பர்சம்‌, பார்ப்பது, ரசிப்பது, முகர்வது என்னும்‌ ஞானங்கள்‌ இதனால்‌ அறியப்படுவதால்‌ இது சிரஸ்‌ என்று சொல்லப்‌ படுகிறது] என்று “சிரஸ்‌’ என்னும்‌ சப்தத்தின்‌ பொருள்‌ சொல்லப்‌ பட்டிருக்கிறதன்றோ. இதனால்‌ அபரிமிதமான ‘அறிவை யுடையவன்‌ அநந்தன்‌ என்று அறிவிக்கப்பட்டதாயிற்று. இதையே (ஸஹஸ்‌ராக்ஷ:) என்று விவரித்திருக்கிறது வேதம்‌. ‘“ஸர்வேந்த்‌ரியாணாம்‌ நயதம்‌ ப்ரதாதம்‌’” என்பதினால்‌ கண்‌ எடுக்கப்பட்டது. இவ்விடக்‌ தில்‌ கண்‌” என்னும்‌ பதம்‌ ஐந்து ஜ்ஞானேந்த்ரியங்களையும் காட்டி புருஷோத்தமன்‌ அநந்தமான ஜ்ஞானத்தை யுடையவன்‌ என்று விளக்குகிறது. (ஸஹஸ்ரபாத்‌) அளவற்ற திருவடிகளை உடையவன்‌. இங்கு ‘பாத்‌’ என்னும்‌ சப்தம்‌ ஐந்து கர்மேந்த்ரியங்களையும்‌ காட்டுவதன் மூலம்‌ அளவற்ற சக்தியை யுடையவன்‌ என்று அச்யுதன்‌ அறிவிக்கிறது. இவ் விரண்டு பதங்களாலும்‌ அளவற்ற ஞான சக்திகளை யுடையவன்‌ பகவான்‌ என்று உரைக்கப்பட்டது.

பராஸ்ய சக்திர்‌ விவிதை,வ ஸ்ரூயதே ‘ஸ்வாபவிகீ ஜ்ஞாந ப,ல க்ரியா ச -ஸர்வேஸ்வரேஸ்வரனுடைய சக்தியும்‌, ஜ்ஞானமும்‌, பலமும்‌, செய்கைகளும்‌, ஸ்வாபாவிகமானதாகவும்‌, பலபடிப் பட்டதாகவும்‌, மேலானதாகவும்‌
‘சொல்லப் படுகிறது.] என்றல்லவோ உபனிஷத்‌ உத்கோஷித்தது.
(ஸஹஸ்ரசீர்ஷா): இதற்கு வேறு வகையாகவும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. ஸகல ப்ராணிகளடங்கிய ப்ரம்மாண்ட்ம்‌ – நாராயணனுக்கு சரீரமானதினால்‌ இதற்குள்‌ளடங்கிய பிராணிகளுடைய தலை,கண்‌, கால்‌ முதலியவை இவனுடையவையே என்னத்‌ தட்டில்லை.
இவ் விடத்தில்‌ வித்யாரண்ய பாஷ்யத்திலும்‌ ஸர்வ ப்ராணிகளும்‌ இவருடைய சரீரத்தில்‌ அடங்கினபடியால்‌ அந்த அவயவங்களெல்‌லாம்‌ இவருடைய அவயவங்களாகும்‌ என்று காணப்படுகிறது ஸகல ப்ராணிகளுடைய அவயவங்களையும்‌ தனக்கு சேஷமாக உடையவன்‌ பகவான்‌ எனப்படுகிறது. அதனாலேயே அவன்‌ ஹ்ருஷீகேசன்‌
(இந்த்ரியங்களை நியமிப்பவன்‌) எனப்படுகிறான்‌. தலையால்‌ வணங்‌கப் படவேண்டியவன்‌ அவனே. வாயினால்‌ பேசத் தக்கவனும்‌ அவனே. புத்தியினால்‌ அறியப்பட வேண்‌டியவன்‌ ஹரியே: .கண்‌ களால்‌ பார்க்கத் தக்கவனும்‌ அவனே. செவிகளால்‌ கேட்க வேண்டியது அவனுடைய கீர்த்திகளையே. (ஸஹஸ்ரபாத்‌) என்று நம்முடைய கர்மேந்த்ரியங்களும்‌ அவனுடைய கைங்கர்யம்‌ செய்ய ஏற்பட்டவைகள்‌ என்று உணர்த்தப்படுகிறது. இவ்விடத்தில்‌,
வாய்‌ அவனை யல்லது வாழ்த்தாது கை உலகம்‌
தாயவனை யல்லது தாம்‌ தொழா–பேய்முலை நஞ்சு
ஊணாக உண்டான்‌ உருவோடு பேரல்லால்‌
காணா கண்‌ கேளா செவி,-
என்ற பாசுரம்‌ அனுஸந்திக்கத்தக்கது. (ஸஹஸ்ரசீர்ஷா) முதலிய
பதங்கள்‌ அர்ஜுனனுக்கு விஸ்வரூப தர்ஸசனத்தின் போது காட்டப்‌ பட்டது போன்ற அஸாதாரணமான விக்ரஹத்தை வர்ணிக்கின்றனஎன்றும்‌ கொள்ளலாம்‌. ஆழ்வாரும்‌ இதையே, “தோள்களாயிரத்தாய்‌! முடிகளாயிரத்தாய்‌! துணை மலர்க்‌ கண்களாயிரத்தாய்‌! தாள்களாயிரத்தாய்‌!” என்று வர்ணித்தாரன்றோ.

(புருஷ:) இதில்‌ சொல்லப்படும்‌ புருஷன்‌ யார்‌? இது எந்த தெய்வத்தையும்‌ குறிக்கலாமே. புருஷ: என்பது ஸாமாந்ய சப்தமல்லவா? என்று சிலர்‌ கேட்கிறார்கள்‌.
“ப,கவாநிதி சப்தோயம்‌ ததா புருஷ இத்யபி | நிருபாதீ, ச வர்த்தேதே வாஸு தே,வே ஸ. நாதநே ||
ஸ ஏவ வாஸு தே,வோஸெள ஸாக்ஷாத்‌ புருஷ உச்யதே | ஸ்த்ரீ ப்ராயமிதரத்‌ ஸர்வம்‌ ஐகத்‌ ப்‌,ரஹ்ம புரஸ் ஸரரம்‌ |

[பகவான்‌, புருஷன்‌ என்னும்‌ இத்த இரு சப்தங்களும்‌ இயற்கையாகவே ஸநாதனனான வாஸுதேவனைக்‌ குறிக்கின்றன. அந்த வாஸு தேவனே ஸாக்ஷாத்‌ புருஷனாகச்‌ சொல்லப் படுகிறான்‌. பிரம்‌மாவை முன்னிட்ட மற்ற ஸகல ப்ராணிகளும்‌ ஸ்த்ரி ப்ராயர்களே.] என்று பாத்ம புராணத்தில்‌ பேசப் பட்டிருக்கிறது. பகவான்‌, புருஷன்‌ என்னும்‌ இவ்விரு பதங்களும்‌ முக்யமாக நாராயணனையே குறிக்கும்‌. அவன்‌ ஓருவனே புருஷன்‌. மற்றவர்கள்‌ ஸ்த்ரீ ப்ராயர்‌களே. ஸ்த்ரீ புருஷனை விட்டால்‌ ஜார ஸ்த்ரீயாவது போல்‌ இதர தெய்வங்களைத்‌ தொழும்‌ ஜீவனும்‌ அப்படியே கருதப் படுகிறான்‌.-புருஷன்‌ என்றால்‌ ஸகல சேதந அசேதநங்களிலும்‌ வியாபித்து நிறைந்து நிற்பவன்‌ என்று பொருள்‌. இது நாராயணனுக்கே அஸாதாரணமான குணம்‌. ஸுபாலோபநிஷத்தில்‌ “ஸஹஸ்ர சீர்ஷா…” என்னும்‌ மந்த்ரத்தைப்‌ பரம புருஷனைக்‌ குறித்து ப்ரயோகம்‌ செய்து அவனே ஸர்வ பூதாந்தராத்மாவான நாராயணன்‌ என்று நிர்ணயம்‌ செய்திருப்பதால்‌ இந்தப்‌ புருஷ சப்தம்‌ நாராயணனையே குறிக்கிறது என்பது ஸர்வ வேதாந்த ப்ரத்யய ந்யாயப்படி ஸித்திக்கிறது. கீதாசார்யனும்‌,
“யஸ்மாத்‌ க்ஷரமதீதோஹம்‌ அக்ஷராத,பி சோத்தம: |
தஸ்மாத்‌ வேதே; ச லோகே ச ப்ரதி,த: புருஷோத்தம: ||’”

[ஞானத்தில்‌ ஏற்றத் தாழ்வுகளுள்ள ஸம்ஸாரி புருஷனை அதி க்ரமித்தவனாகவும்‌, ஜ்ஞானத்தில்‌ ஸங்கோச விகாஸமற்றவனான முக்‌தனைக் காட்டிலும்‌ மேலானவனாகவும்‌ நான்‌ இருப்பதால்‌ லோகத்‌திலும்‌, வேதத்திலும்‌ புருஷோத்தமன்‌ என்று பிரஸித்தி பெற்றிருக்‌கிறேன்‌] என்று கீதையில்‌ அருளிச் செய்திருக்கிறார்‌.

(ஸ:) இப்படி வேதத்தில்‌ ப்ரஸித்தி பெற்றவரான அந்த நாராயணன்‌.
(பூமிம்‌) “பூ,மிர்‌ பூ,ம்நா * என்று பூஸூக்தத்தில்‌ சொல்லியபடி பரப்பை உடைத்தாயிருப்பதால்‌ பூமி எனப்படுகிறது. இங்கு பூமி என்பதினால்‌ பதினாலு புவனங்களும்‌ சொல்லப்படுகின்றன. (விஸ்வதோ வ்ருத்வா…) இப்படிப்பட்ட கீழேழு மேலேழு லோகங்‌களையும்‌ நான்கு புறமும்‌ வியாபித்து, அவருடைய அங்குலத்தில்‌ பத்து அங்குலம்‌ ப்ரமாணமுள்ள ப்ரஹ்மாண்டத்தை ஆக்ரமித்தார்‌. இந்த ப்ரஹ்மாண்டம்‌ அவருடைய ஸ்வரூபத்தில்‌ ஒரு மூலையில்‌ அடங்கி விட்டது என்று பொருள்‌. (தசாங்குலம்‌) என்பதற்கு விஷ்ணு சித்தாசாரியர்‌ தசகுணம்‌” என்று பொருள் கூறி மஹா ப்ரமாணமான இந்த அண்டம்‌ என்று விளக்கி யிருக்கிறார்‌. புருஷ ஸம்ஹிதையிலும்‌ இந்த அர்த்தமே ஆதரிக்கப்பட்டது. மாத்வர்‌ பிரஹ்மா முதலிய ஜீவர்‌களுடைய பத்தங்குலம்‌ அளவுடைய ஹ்ருதய கமலத்தில்‌ அந்தர்‌யாமி யாயிருக்கிறார்‌ என்று அர்த்தம்‌ செய்தார்‌. நாபிக்கு மேல்‌ பத்தங்‌குலத்திற்கு மேற்பட்டிருக்கிற ஹ்ருதயத்தில்‌ வஸிக்கிறார்‌ என்றார்‌ மஹீ தரர்‌. வித்யாரண்யர்‌ பத்து என்பதற்கு அநேகம்‌ என்று பொருள் கொண்டு அண்டத்திற்கு வெளியிலும்‌ வியாபித்திருந்தார்‌ என்று சொல்லி யிருக்கிறார்‌.

இதனால்‌ பரம புருஷனுக்கு தேச பரிச்சேதம்‌ (தேசத்தினால்‌ அளவு பட்டிருத்தல்‌) இல்லை என்று சொல்லப்பட்டது. அங்கும்‌ இங்கும்‌ எங்கும்‌ பரந்துளான்‌ புருஷோத்தமன்‌. இங்கு ஸர்வ வ்யாபகத்‌வத்தைக் கொண்டு இவன்‌ விஷ்ணுவே என்று காட்டப்பட்டது. ““விசதீதி விஷ்ணு:’” என்று எங்கும்‌ நுழைந்திருப்பதால்‌ விஷ்ணு எனப்படுகிறானன்றோ. இவ் விடத்தில்‌ பகவான்‌ ஜ்ஞானம்‌, சக்தி முதலிய கல்யாண குணங்களை உடையவனென்றும்‌, ஸகல லோகங்‌களையும்‌ வியாபித்து அவைகளை சரீரமாகக் கொண்டிருக்கிறான்‌
என்றும்‌, அஸாதாரணமான அப்ராக்ருத சரீரத்தை உடையவனென்‌ றும்‌ தெளிவாகச்‌ சொல்லப் பட்டிருக்கிறபடியால்‌, பூமி பொய்‌” என்‌றும்‌, **குணமில்லை ரூபமில்லை’” என்றும்‌ சொல்லும்‌ அத்வைத வாதங்‌கள்‌ அடியோடு அகற்றப் பட்டன.

———-

2-புருஷ ஏவேதம் ஸர்வம்‌, யத்‌, பூ,தம்‌. யச்ச பவ்யம்‌ உதாம்ருதத் வஸ்யேசாந:, யத,ந்நேநாதி ரோஹதி,[எந்த ஐகத்தானது முன்‌ கல்பத்திலிருந்ததோ, எந்த ஜகத்தானது பின் வரும்‌ கல்பத்தில்‌ உண்டாகப் போகிறதோ, எது இந்தக்‌ கல்பத்‌திலிருக்கிறதோ, எந்த ஜகத்தானது அந்நத்தினால்‌ மறையாமலிருக்‌கிறதோ இந்த ஸமஸ்தமான ஜகத்தும்‌ புருஷனாகிற நாராயணனே. மேலும்‌, மோஷாத்துக்கு ப்ரபுவும்‌ ஸ்ரீமந்‌ நாராயணனே.]“தீவிதீயயா சாஸ்ய விஷ்ணோ: கால தோ வ்யாப்தி ருஸ்யதே”” –[இரண்டாவது மந்த்ரத்தினால்‌ இந்த விஷ்ணுவுக்கு ஸர்வ காலத்‌திலும்‌ வ்யாப்தி சொல்லப்பட்டது. | என்று இந்த ருக்கின்‌ அர்த்தம்‌ புருஷ ஸம்ஹிதையில்‌ ஸங்க்ரஹிக்கப்பட்டது.

(புருஷ…… ) ‘போகின்ற காலங்கள்‌ போய காலங்கள்‌ போகு காலங்கள்‌” எனப்படும்‌ மூன்று காலங்களிலும்‌: இருக்கும்‌ வஸ்துக்களெல்லாம்‌ புருஷனே என்று சொல்லப் படுகிறது. :முன்‌ மந்த்ரத்‌தில்‌ பரம புருஷன்‌ எங்கும்‌ வியாபித்திருக்கிறான் என்று சொல்லப்‌பட்டது. ஆகாசம் போல்‌ வியாபித்திருப்பது மட்டுமல்ல; எல்லா வற்றையும்‌ சரீரமாகவும்‌ கொண்டிருக்கிறான்‌ பரமாத்மா என்பதை இது காட்டுகிறது.” என்று விஷ்ணுசித்தர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌.
“இதம்‌ ஸர்வம்‌” என்றதினால்‌ புருஷோத்தமனுக்கு வஸ்து பரிச்சேதம்‌ (வஸ்துவினால்‌ அளவு பட்டிருத்தல்‌) இல்லை என்று காட்டப்பட்டது. அவனில்லாத வஸ்துவே இல்லை யன்றோ. “யத்‌.பூ,தம்‌…ப,வ்யம்‌’” என்‌பதினால்‌ கால பரிச்சேதமில்லாதவன கேசவன்‌ என்று காட்டப்பட்டது.-ஆதி மத்‌,யாந்த ரஹிதனன்றோ அநந்தன்‌. “முன்‌ காலத்திலிருந்தான்‌; இப்பொழுதில்லை.” முதலிய குறைகள்‌ அவனைப் பற்றிச்‌ சொல்ல முடியாது. எல்லாம்‌ அவன்‌’ என்பதினால்‌ ஸர்வம்‌ விஷ்ணு மயம்‌ ஜகத்‌” என்று தெரிவிக்கப் படுகிறது.-அதனால்‌ மற்றவைகளில்லை என்று ஏற்படாது. மற்றவைகள்‌ அவனுக்கு சரீரமென்றும்‌, அவைகளுக்கு அவன்‌ அந்தர்யாமி என்றுமே ஏற்படும்‌. சரீரத்திற்குப்‌ பெயரான கிருஷ்ணன்‌, ஸ்ரீநிவாஸன்‌ முதலியவைகள்‌ ஆத்மாவையும்‌ குறிக்கின்றன. அம் மாதிரியே இவ் வுலகத்தை யெல்லாம்‌ சரீரமாகக்‌ கொண்ட புருஷனை ‘எல்லாம்‌ அவனே” என்று சொல்வது பொருந்‌ தும்‌. *இந்தக்‌ குடம்‌ கருப்பு” ‘என்று சொன்னால்‌ :குடம்‌” என்று சொல்லப்படும்‌ வஸ்துவும்‌ “கருப்பு என்று சொல்லப்படும்‌ வஸ்துவும்‌ ஓன்றாகி விடுமோ? கருப்பு நிறமானது பிரிக்க முடியாதபடி குடத்‌தில்‌ ஒன்றி நிற்கிறது என்றே ஏற்படும்‌. அம் மாதிரியே *புருஷனே இவ் வுலகம்‌” என்று சொன்னால்‌ இவ் வுலகமானது பரமாத்மாவை விட்டுப்‌ பிரிக்க முடியாதபடி ‘ அவனுடன்‌ ஒடுங்கி நிற்கிறது என்றே பொருள்படும்‌. இவ் விஷயத்தை ::அந்பச்ச ராஜந்‌ ஸ பர: ததராந்ய:பஞ்ச விம்சக: தத்ஸ்த,த்வாதநு பஸ்யந்தி ஹ்யேக்‌ ஏவேதி . ஸாத,வ[ராஜனே! பரமாத்மா வேறானவன்‌. இருபத்தைந்தாவது தத்வமான ஜீவன்‌ வேறானவன்‌. அவனுக்குள்‌ அந்தர்யாமியாக இருப்பதால்‌,
ஸாதுக்கள்‌ ஓருவனென்றே நினைக்கிறார்கள்‌-] என்று வ்யாஸரால்‌ மோஷ தர்மத்தில்‌ சொல்லப்பட்டது. கீதையில்‌ அர்‌ ஜுனனும்‌ “ஸர்வம்‌ ஸமாப்நோஷி ததோஸி ஸர்வ:”” [நீ எல்லாவற்றினுள்ளும்‌ நிறைந்திருப்பதால்‌ எல்லாமாக இருக்கிறாய்‌-] என்று கண்ணனைத்‌ துதித்தான்‌. இங்கும்‌ புருஷோத்தமன்‌ எங்கும்‌ வியாபித்திருக்கிறான்‌என்று சொன்ன பின்பல்லவோ புருஷனே எல்லாம்‌” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆழ்வாரும்‌ :’அவனே மற்றெல்லாமும்‌ அறிந்தனமே’‘ என்றும்‌, “வருங்காலம்‌ நிகழ் காலம்‌ கழி காலமாய்‌ உலகை ஒருங்காக அளிப்பாய்‌” என்றும்‌ பாடி யிருக்கிறார்‌.
(யத்‌ அந்நேந .அதி ரோஹதி) எந்த உலஃமானது அந்நத்தினால்‌ நசிக்காம லிருக்கிறதோ” என்று அர்த்தம்‌.-உலகத்திற்கு ஆஹாரத்தை அளித்து அவைகளை அழியாமல்‌ காக்கும்‌ இயல்வினன்‌ கண்ண பெருமான்‌‘. இங்கு அந்நம்‌’ என்பது . இந்திரியங்களால்‌ அனுபவிக்கப்படும்‌ விஷயங்களைக்‌ குறிக்கும்‌. தர்மார்த்த காமங்களாகிற இஹ லோக புருஷார்த்தங்களாக்‌ கொடுப்பவன்‌ பகவான்‌ என்று சொல்லப்படுகிறது. (உதாம்ருதத்வஸ்ய ஈசாந:) மோக்ஷ புரு ஷார்த்தத்தையும்‌ கொடுப்பவன்‌ பகவானே என்று சொல்லப்படுகிறது. இது பகவானுடைய அஸாதாரணமான லக்ஷணம்‌. இதர புருஷார்த்தங்களைக்‌ கொடுப்பதற்குப்‌ பல தேவதைகளை நாட்டி வைத்‌திருக்கிறான்‌ நாராயணன்‌. ஆனால்‌ மோக்ஷத்தையும்‌ கொடுப்பவன்‌ முகுந்தனே. “அம்ருதத்வம்‌ அஸ்நுதே‘ என்று வேதங்களில்‌ கோஷிக்கப்‌ பட்ட மோக்ஷத்திற்கு ப்ரபு நாராயணனே. வித்யாரண்யர்‌ ‘முக்காலங்‌களிலும்‌ உள்ள ஜகத்‌ எல்லாம்‌ விராட் புருஷனே. . எல்லாக் காலங்‌களிலுமுள்ள ஸஃல ப்ராணிகளுடைய தேஹங்களும்‌ விராட் புருஷனுடைய அவயவங்களே. ப்ரஹ்மா, இந்திரன்‌ முதலியவர்களும்‌ அவரை ஆஸ்ரயித்தே தங்களுடைய ஸ்தானங்களை யடைகிறார்கள்‌”*
என்று அர்த்தம்‌ செய்தார்‌. மேலும்‌, “தங்கக் கட்டி, குண்டலம்‌ முத லியஆபரணமாக ஆனாலும்‌, அந்தக்‌ குண்டலம்‌ முதலியவை உண்டாவதற்கு முன்னும்‌ அழிந்ததற்குப் பின்னும்‌ காணாப் படாமையால்‌ வாஸ்தவமாகாது. தங்கம்‌ எப்போதும்‌ காணப் படுவதால்‌ உண்மையானதாகக்‌ கொள்கிறோம்‌. அதுபோல்‌ இந்த உலகமும்‌ முன்‌ இல்லாமலிருந்து இப்போது தோன்றி சில நாளைக்குப் பின்‌ அழித்து போகிற படியால்‌ உண்மை யல்ல. விராட் புருஷனுடைய (ஸ்வரூபம்‌ எப்போதுமிருப்பதால்‌ உண்மையானது. அவரே, ஜீவாத்மாக்களுடைய புண்ய பாபங்களுக்குத்‌ தகுந்தபடி அவர்களுக்குப்‌ பலன்‌ கொடுப்பதற்காகத்‌ தன்னுடைய நிஜ ஸ்வரூபத்தை ‘விட்டு இந்த ஜகத் ரூபமாய்‌ ஆகி யிருக்கிறார்‌.” என்றும்‌ சொல்லி இருக்கிறார்‌. இது சரியன்று. உண்டாவதற்கு முன்னும்‌ அழிந்ததற்குப்‌ பின்னும்‌காணப் படாததால்‌ உலகம்‌” மாறுபாட்டை யுடையது என்றும்‌,அநித்யமானது (நிலை யற்றது) என்றும்‌ ஏற்படுமே யொழியப்‌ பொய்யானது என்று ஏற்படாது. இந்த ருக்கில்‌ இதம்‌” என்று சேதனாசேதனங்களடங்கிய ஜகத்தைக் காட்டுகிறது. புருஷனென்று
பரமாத்மா சொல்லப்படுகிறான்‌. ஜகத்‌ பொய்யான வஸ்துவானால்‌ பொய்யான வஸ்துவைப்‌ புருஷன்‌ என்று சொல்லுவது அர்த்தமற்ற பேச்சு. *இதம்‌’ என்றும்‌, ‘புருஷ:” என்றும்‌ தனித் தனியாக எடுக்கப்‌ பட்ட இரண்டும்‌ ஸத்யமானது என்றே ஏற்படும்‌. யத்‌ பூதம்‌…… ்‌என்று மூன்று காலங்களும்‌ குறிக்கப்படுவதால்‌ காலம்‌ என்னும்‌ தத்வமும்‌ உண்மை யானது என்று உணர்த்தப் படுகிறது. அம்ரு தத்வமென்றும்‌ அதற்கு ஈசனனென்றும்‌ இரண்டு சொல்லப்படு கின்றன. அம்ருதத்வம்‌ (மோக்ஷம்‌) என்று ஒன்றிருந்தால்‌ அதை அடைகிற வஸ்துவும்‌ இருந்தேயாக வேண்டும்‌. ஜகத்‌ பொய்யானால்‌“அது அந்நத்தினால்‌ நாசமடையாம லிருக்கிறது” என்பது அஸம்பாவிதம்‌. ஆகையால்‌ இங்கு அத்வைத வாதத்திற்கு அணு வளவும்‌ அவகாசமில்லை- இந்த மந்த்ரத்தின்‌ அர்த்தம்‌
புருஷோ நாராயண: பூ,தம்‌ ப,வ்யம்‌ ப,விஷ்யச்ச ஆஸீத்‌
ஸ ஏஷ ஸர்வேஷாம்‌ மோக்ஷத,ச்ச ஆஸீத்‌”?

[புருஷனாகிற நாராயணன்‌ சென்றவைகளும்‌, வருமவைகளும்‌, இருப்பவைகளுமாக ஆனார்‌. அவர்‌ எல்லோருக்கும்‌ மோக்ஷத்தைக்‌ கொடுப்பவராகவும்‌. ஆனார்‌.] என்று முத்‌கலோபனிஷத்தில்‌ சொல்லப் பட்டது.

———-

ஏதாவாந் ௮ஸ்‌ய மஹிமா, அதோ ஜ்யாயாம்ச்ச பூருஷ:
பாதோஸ்ய விஸ்வா பூ,தாநி ,த்ரிபாத,ஸ்யாம்ருதம்‌ திவி.–
3-
[இந்தப்‌ புருஷனுடைய பெருமை இப் பேர்ப்பட்டது. ஆகையால்‌ புருஷோத்தமன்‌ மேலானவன்‌. எல்லா பூதங்களும்‌ இவனுடைய ஒரு பாகம்‌. போக்யமாயிருப்பதான மூன்று பாகம்‌ இவனுடைய பரம பதத்திலிருக்கிறது.]
ஏதாவாநிதி மந்த்ரேண வைப,வம்‌ கதி,தம்‌ ஹரே:’” [ஏதாவாந்‌……..” என்னும்‌ மந்த்ரத்தினல்‌ ஹரியினுடைய பெருமை பேசப்பட்டது] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ சொல்லப் பட்டிருக்கிறது.-

(ஏதாவாந்‌……) இந்தப்‌ புருஷோத்தமன்‌ தேசத்தினாலும்‌,காலத்தினாலும்‌, வஸ்துவினாலும்‌ அளவிட முடியாதவன்‌. போக மோக்ஷங்களைத்‌ தருபவன்‌ முகுந்தன்‌. இப்படிப்பட்டது அவனுடைய மஹிமை. ஆகையால்‌ அவனே மேலானவன்‌. (ஏதாவாந்‌ அஸ்ய
மஹிமா?…
) என்று வைத்துக் கொண்டு““இவ்வளவு தானே அவன்‌ மஹிமை? இதைக் காட்டிலும்‌ மேலானவனன்றோ புருஷன்‌”” என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. “ஸோ அங்க; வேத; யதி;வா ந வேத ” [தன்‌ பெருமையை, அவனே அறிவனோ? அறியானோ?] என்றது வேதம்‌.“தனக்கும்‌ தன்‌ தன்மை அறிவரியானை”:- நம்மாழ்வார்‌.
**யஸ்யாமதம்‌ தஸ்ய மதம்‌” [எவன்‌ பரமாத்மாவை அளவிட்டு அறிய முடியாத வனென்று நினைக்கிருனோ அவனே அறிந்தவனாகிறான்‌.] என்று மறைகள்‌ முறை யிட்டன. ஆயிரம்‌ நாவு படைத்த ஆதி சேஷனாலும்‌, ‘ஸஹஸ்ர சீர்ஷா’ வான எம்பெருமானாலும்‌ அப்‌ பெருமையைப்‌ பேச முடியாது. எவ்வளவு வர்ணித்தாலும்‌ அதற்கும்‌ மேலானவனாகவே இருப்பான்‌ அநந்தன்‌.
(பாதோஸ்ய…… ) இவ் வுலகிலிருப்பவை களெல்லாம்‌ இவனுடைய ஏக தேசத்தில்‌ அடங்கி விடுகின்‌றன.*“யஸ்யா யுதாயுதாம்சாம்சே விஸ்வ சக்திரியம்‌ ஸ்திதா’ (எந்தப்‌ பரமாத்மாவினுடைய பல்லாயிரத்தில்‌ ஒரு பாகத்தில்‌ இந்த லீலா விபூதியானது அடங்கி விடுகிறதோ………] என்று பராசரர்‌ விஷ்ணு புராணத்தில்‌ விளக்கினார்‌… (த்ரிபாத்‌) அளவற்றதான இந்த லீலா விபூதியைக் காட்டிலும்‌ பன்‌ மடங்கு அளவற்றது நித்ய விபூதி.-இங்கு “மூன்று என்பது “அநந்தம்‌” என்பதைக்‌ குறிக்கும்‌.-இதனாலேயே பரம பதத்தை “த்ரிபாத் விபூதி” என்கிறோம்‌. (அம்ருதம்‌) அழியாதது. ::நச புநராவர்த்ததே’” [மோக்ஷமடைந்தவன்‌ மறுபடி திரும்பி வருவதில்லை.]என்று வேதம்‌ கோஷித்தது.-புணைக்‌ கொடுக்‌கிலும்‌ போக லொட்டான்‌” என்றார்‌ ஆழ்வார்‌. ஏற விட்டு ஏணி வாங்குபவனன்றோ எம்பெருமான்‌. இந்தப்‌ பரம பதத்திற்கும்‌ அதி லுள்ளார்க்கும்‌ அழிவு கிடையாது.-‘இனிமையானது”என்றும் பொருள்‌ கொள்ளலாம்‌. கனியைக்‌ கரும்பினின்‌ சாற்றைக்‌ கட்டியைத்‌ தேனை அமுதை” எனப்படும்‌ ஆராவமுதாகிய அச்யுதனை அனுபவிக்கும்‌ ப்ரதேசமாகையால்‌ “:அம்ருதம்‌’” எனப்படுகிறது. “ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந்‌’” என்கிறபடி பகவத் குணங்களை அனுபவித்து “ப்ரஹ்மானந்தமடையும்‌ இடமன்றோ அது. (திவி) ப்ரகாசிக்கும்படியான பரம பதத்தில்‌ இருக்கிறது.

அத்யர்காநல தீப்தம்‌ தத்‌ ஸ்தராநம்‌ விஷ்ணோர்‌ மஹாத்மந :”[மஹாத்மாவான விஷ்ணுவினுடைய ஸ்தாநமானது ஸூர்யன்‌, அக்னி முதலியவர்களின்‌ ஓளியை அதிக்ரமித்த தேஜஸ்ஸை உடை யது.] என்றல்லவோ பாரதத்தில்‌ சொல்லப் பட்டிருக்கிறது.-வித்யாரண்யர்‌ இதற்கு பாஷ்யம்‌ செய்யும் போது மஹிமை என்றால்‌ ஸாமர்த்யம்‌ என்றும்‌ ஆகையால்‌ இது வாஸ்தவமன்று என்றும்‌ சொல்லியிருக்கிறார்‌. அப்படி யென்றால்‌ இது இந்த்ரஜாலமென்றே ஏற்படும்‌. இது ஸாஹஸமே யொழிய வேறல்ல. “மஹிமை” என்பது பெருமையைக்‌ காட்டுகிறது. ந தத் ஸமச்ச அப்‌,யதி,கச்ச த்‌ருச்யதே”” என்கிறபடி ஓப்பாரும்‌ மிக்காரு மற்றவன்‌ மாதவன்‌ என்றே பொருள்படும்‌..அவனை விடத்‌ தாழ்ந்த வஸ்துக்களில்லா விடில்‌ பெருமையே ஏற்படாது. பெருமை யென்று சொன்னாலும்‌ கேலிக்‌கூத்தாகும்‌. பெருமையும்‌ சிறுமையும்‌ ஒன்றை யொன்று அபேக்ஷித்‌திருக்கும்‌ வார்த்தைகளன்றோ. மேலும்‌, பகவான்‌ உபய விபூதி நாயகன்‌ என்று சொல்லப் பட்டபடியால்‌ அத்வைத வாதத்திற்குச்‌ சிறிதும்‌ இங்கு இடமில்லை.
ஸச ஸர்வஸ்மாந் மஹிம்நோ ஜ்யாயாந்‌, தஸ்மாந் ந கோபி ஜ்யாயாந்‌”
[அவன்‌ எல்லா மஹிமைகளைக் காட்டிலும்‌ உயர்ந்தவன்‌. அவனைக்‌ காட்டிலும்‌ உயர்‌ந்தவனில்லை.] என்று முத்கலோபநிஷத்தில் இந்த மந்திரத்தின்‌ பொருள்‌ உரைக்கப்பட்டது.

————-

த்‌ரிபாதூர்த்‌வ உதைத்‌ புருஷ; பாதோஸ்யே ஹா பவாத்புந :
ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி
..| -4-பரம பதத்திலிருக்கும்‌ பரம புருஷன்‌ மூன்று அவதாரத்தை உடையவனாகி ஸங்கல்பித்தார்‌. இவருடைய ஒரு அவதாரமான (அநிருத்தன்‌) இவ் வுலகத்தில்‌ அவதரித்தார்‌. அதற்குப் பின்‌ எல்லாப் பக்கத்திலும்‌
ஜீவன்‌ ஜடம்‌ இவர்களைக்‌ குறித்து (அவதாரம்‌ செய்வதன்‌ மூலம்‌)வியாபித்தார்‌.]
த்ரிபாதி,த்யநயா ப்ரோக்தம்‌ அநிருத்‌தஸ்ய வைப,வம்‌”[“த்ரிபாத்‌…” என்னும்‌ மந்த்ரத்தில்‌ அநிருத்த நாராயணனுடைய வைபவம்‌ விளக்கப் படுகிறது.] என்று புருஷ ஸம்ஹிதை சொல்லிற்று.

(த்ரிபாத்‌……) பரம பதத்திலிருக்கும்‌ பர வாஸுதேவன்‌ ஸங்கர்‌ஷணன்‌, அநிருத்தன்‌, ப்ரத்யும்நன்‌ என்னும்‌ மூன்று வ்யூஹங்களை உடையவரா யிருக்கிறார்‌. இந்த வ்யூஹங்களைப் பற்றிப்‌ பாஞ்சராத்‌ரத்தில்‌ அஹிர் புத்ந்ய ஸம்ஹிதையில்‌ விசேஷமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
(உதைத்‌) “இவ் வுலகை யெல்லாம்‌ ரக்ஷிக்கக் கடவேன்‌” என்று ஸங்கல்பித்தார்‌.
(அஸ்ய பாத:) இவருடைய ஒரு அவதாரமான அநிருத்தன்‌.
(இஹ அபவாத்புந:) மறுபடியும்‌ இங்கு விஷ்ணுவாகத்‌ திருப் பாற்கடலில்‌ அவதரித்தார்‌.
(ததோ…வ்யக்ராமத்‌) அதன்‌ பிறகு அயோத்தி த்வாரகை முதலிய திவ்ய நகரங்களில்‌ ராமக்ருஷ்‌ணாதிகளாக அவதரித்தார்‌. அவைகளுக்கும்‌ பிற்பாடரானவர்களை உய்விப்பதற்காகத்‌ திருவரங்கம்‌, திருப்பதி முதலிய திவ்ய தேசங்‌ களிலும்‌, கிராமங்கள் தோறும்‌, பக்தர்களுடைய கிருஹங்கள் தோறும்‌ அர்ச்சா மூர்த்தியாக அவதரித்தார்‌. ‘விஷ்வக்‌’ என்றதால்‌ எண்ணிறந்த இடங்களில்‌ அவதாரம்‌ செய்திருப்பது தோற்றுகிறது–ஸ்வரூபவ்யாப்தி முதல்‌ மந்த்ரத்திலேயே சொல்லப்பட்டதால்‌ இங்கு “வ்யக்ராமத்‌” என்பதற்கு அவதாரம் செய்து வியாபித்தார்‌ என்றே பொருள் கொள்ளவேண்டும்‌. இவர்‌ எதற்காக இப்படி அவதாரம்‌ செய்ய வேண்டும்‌ எனில்‌: (ஸாசநாநசநே அபி) உணவருந்துபவர்‌களான தேவர்‌, மனுஷ்யர்‌ முதலியவர்களையும்‌, உணவருந்தாமல்‌ பாறை முதலியவையாய்க் கிடக்கும்‌ சேதனர்களையும்‌ உய்விப்ப்தற்கே–இப்படிப்‌ படாதன படுகிறான்‌ பரமபுருஷன்‌ என்று சொல்லப்படு கிறது. “உயிரளிப்பான்‌ எந் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தாய்‌! இமை யோர்‌ தலைவா!” என்றார்‌ ஆழ்வார்‌. “*அஜாயமாநோ பஹுதா விஜாயதே”” [பிறப்பிவியான பகவான்‌ பல தடவை பிறக்கிறான்‌] என்றது வேதம் -புற்பா முதலாப்‌ புல்லெறும்பாதி ஓன்றின்றியே்‌ நல்ல கதிக்கு அழைத்துச்‌ செல்ல வன்றோ அவதாரம்‌ செய்கிறான்‌ அச்யுதன்‌.-சேதநாசேதநங்களெல்லாம்‌ அவனுடைய உடைமைகளாயிற்றே.-உடைமையைப் பற்றிய கவலை உடையவனுக் கல்லவோ உண்டு.-விபவாவதாரங்களைப் பற்றி ராமாயணம்‌, பாரதம்‌, பாகவதம்‌ முதலியவைகளில்‌ விஸ்தாரமாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது. அர்ச்சாவ தாரமாஹாத்ம்யங்கள்‌ பாஞ்சராத்ர வைகானஸ’ ஸம்ஹிதைகளிலும்‌,-வாராஹம்‌, ப்ரஹ்மாண்டம்‌ முதலிய புராணங்களிலும்‌ கீர்த்திக்கப்‌ பட்டிருக்கின்றன. ஆழ்வார்கள்‌ அருளிச் செயல்களிலும்‌ அனுபவிக்கிறோம்‌-இப்படி அவதாரம்‌ செய்தது ஸ்ரீமந்‌ நாராயணனே. வேறு தெய்வங்களல்ல,. பரித்ராணாய ஸாதூநாம்‌’”’ என்கிறபடி லோக ஸம் ரக்ஷணத்திற்காகப்‌ பல பிறப்புகளெடுத் திருக்கிறான்‌ பரந்தாமன்‌. உலகத்தைக்‌ காப்பதற்காக மற்ற தெய்வங்கள்‌ அவதாரம்‌ செய்ததில்லை. அவர்கள்‌ அவதாரம்‌ செய்ததாகச்‌ சொல்லுவதும்‌ அல்ப காரியங்களுக்கே. தாயில்லாப் பெண்‌ ப்ரசவ வேதனைப்படும் போது தாயும்‌ ஆகி ‘தாயுமானவர்‌’ என்று பெயர்‌ பெற்றதாகச்‌ சொல்லுகிறார்கள்‌. இப்படிச்‌ சில விருத்தாந்தங்கள்‌ சொல்லப்படுகின்றன–அவதாரங்கள்‌ செய்து மஹத்தான கீர்த்திய டைந்தவன்‌ மாதவனே.-வியூஹங்கள்‌ தேவர்களுக்குக்‌ கூப்பீடு கேட்குமிடங்கள்‌. நம்மால்‌ அணுக முடியாதவை.-விபவாவதாரங்களோ அக்காலத்திலிருந்த பாக்யவான்களுக்கே. ‘புல்லாய்ச்‌ சிலையாய்க்‌ கிடந்திலமே கழல்‌ தீண்டுகைக்கே”” என்றே நாம்‌ நினைக்க வேண்டி யிருக்கிறது. அவைகளைப் பற்றி இதிஹாஸ புராணங்களில்‌ கேட்டே ஆநந்தமடைகிறோம்‌. அவை ஒரு காலத்திலோடும்‌ பெருக்காறு போன்றவை.-அவற்றில்‌ தேங்கின மடுப் போலே சொல்லப்பட்ட அர்ச்சாவதாரமும்‌ வற்றி விட்டதோ என்று தோன்றுகிறது. அவைகட்கு யாதொரு தீங்‌கும்‌ ஏற்படாதென்று மநோ ரதித்திருந்தோம்‌. அவைகளும்‌ ஸமாப்தி யடைந்தனவோ என்றேங்கும்படி இருக்கிறது இப்போதிருக்கும்‌ நிலைமை. கூரத்தாழ்வாணையும்‌ பட்டரையும் போல்‌, கல்கி அவதாரத்தை இப்போதே எடுத்துச்‌ சீர்திருத்தும்படி பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை,

————

தஸ்மாத்‌, விராட, ஜாயத விராஜோ ௮தி பூருஷ:
ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்‌ பூ,மிமதோ புர:
–5-
[அந்த விஷ்ணுவிடமிருந்து ப்ரஹ்மாண்டம்‌ உண்டாயிற்று. ப்ரஹ்‌மாண்டத்தில்‌ பிரமன்‌ உண்டானான்‌. அத்த நான்முகன்‌ பூமியைப்‌ பக்கங்களிலும்‌, கீழும்‌, மேலும்‌ ஆக்ரமித்தனன்‌.]
தஸ்மாத்‌, விராடி,த்யநயா பாத.நாராயணாத்‌ ஹரே:
ப்ரக்ருதே: புருஷஸ்யாபி ஸமுத்பத்தி : ப்ரதர்‌சிதா”
[(“தஸ்மாத்‌ விராட்‌…
” என்னும்‌ மந்த்ரத்தினல்‌ நாராயணனுடைய ஓர்‌ அவதாரமான ஹரியினிடமிருந்து ப்ரக்ருதியினுடையவும்‌, பிரமனுடையவும்‌ உத்பத்தியானது காட்டப்பட்டது.] என்று புருஷ ஸம்‌ஹிதையில்‌ இதன்‌ பொருள்‌ உரைக்கப்பட்டது. (தஸ்மாத்‌…) இப்‌படிப்‌ பலவிதமான அவதாரங்களைச்‌ செய்‌த மஹா விஷ்ணுவிடமிருந்து முட்டை வடிவமான ஒரு அண்டம்‌ உண்டாயிற்று.

அயம்‌ லோகஸ்து வை ஸம்ராட்‌ அந்தரிக்ஷம்‌ விராட்‌ ஸ்ம்ருதம்‌”[இந்த லோகம்‌ ஸம்ராட்‌ என்றும்‌, அந்தரிக்ஷம்‌ விராட்‌ என்றும்‌ சொல்லப் படும்‌.] என்று வாயு புராணத்தில்‌ “ “விராட்‌’ என்பது அந்தரிக்ஷத்தை மட்டும்‌ குறிப்பதாகச்‌ சொல்லப்பட்டாலும்‌ – இங்கு எல்லா லோகங்களுமடங்கிய ப்ரஹ்மாண்டத்தையே குறிப்பதாகக்‌ கொள்ளலாம்‌-(விராஜோ…) அந்த அண்டத்தை ஆஸ்ரயித்து பிரமன்‌ உண்டானான்‌. அண்டத்திற்கு அதிகாரி புருஷனாகிற பிரமன்‌ உண்டானான்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.-ஸுபாலோபனிஷத்தில்‌ அண்‌டம்‌ ஸமபவத்‌: [அண்டம்‌ உண்டாயிற்று.] என்றும்‌, “மத்‌யே புருஷ:”[மத்தியில்‌ பிரமனாகிற புருஷன்‌ உண்டானான்‌.] என்றும்‌ இவ்‌ விஷயமே சொல்லப் பட்டபடியால்‌ இப்படி ஸ்ருஷ்டித்தவன்‌ நாராயணனே என்று அறிகிறோம்‌-இதிலிருந்து அண்ட ஸ்ருஷ்டி, அனாதிபுருஷனும்‌, அகார வாஸ்யனுமான அநந்தனுடையதே என்று அறிவிக்‌கப் படுகிறது. இப்படி உண்டாக்கப்படும்‌ அண்டங்கள்‌ ஓன்றிரண்டல்ல.-ப்ரஹ்மாக்களும்‌ அப்படியே. இதையே பெரியாழ்வாரும்‌’அண்டக்குலத்துக் கதிபதியாகி’ என்றார்‌. பிரமன்‌ தன்‌னைத் தானே ஸ்ருஷ்டிக்கவுமில்லை. தான்‌ இருக்குமிடத்தை ஸ்ருஷ்டிக்கவுமில்லை.-அண்ட ஸ்ருஷ்டி அவனுடைய சக்திக்கு மீறினது. ப்ரஜா ஸ்ருஷ்டியே அவன்‌ . வல்லமைக்குட்பட்டது- அதுவும்‌ அச்யுதனுடைய அருளினலும்‌, நியமனத்தினாலும்‌ ஏற்படுவது. அப்படி ப்ரஜா ஸ்ருஷ்டி பண்ணின காலத்தில்‌ ப்ரஜைகள்‌ ‘இட்ட கால்‌ இட்ட கைகளாய்‌” “அயம்‌ லோகஸ்து வை ஸம்ராட்‌ அந்தரிக்ஷம்‌ விராட்‌ ஸ்ம்ருதம்‌”[இந்த லோகம்‌ ஸம்ராட்‌ என்றும்‌, அந்தரிக்ஷம்‌ விராட்‌ என்றும்‌ சொல்லப் படும்‌.] என்று வாயு புராணத்தில்‌ “ “விராட்‌’ என்பது அந்தரிக்ஷத்தை மட்டும்‌ குறிப்பதாகச்‌ சொல்லப்பட்டாலும்‌ – இங்கு எல்லா லோகங்களுமடங்கிய ப்ரஹ்மாண்டத்தையே குறிப்பதாகக்‌ கொள்ளலாம்‌. (விராஜோ…) அந்த அண்டத்தை ஆஸ்ரயித்து பிரமன்‌ உண்டானான்‌. அண்டத்திற்கு அதிகாரி புருஷனாகிற பிரமன்‌ உண்டானான்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.-ஸுபாலோபனிஷத்தில்‌ “அண்‌டம்‌ ஸமபவத்‌: [அண்டம்‌ உண்டாயிற்று.] என்றும்‌, “மத்‌யே புருஷ:”[மத்தியில்‌ பிரமனாகிற புருஷன்‌ உண்டானான்‌.] என்றும்‌ இவ்‌ விஷயமே சொல்லப் பட்டபடியால்‌ இப்படி ஸ்ருஷ்டித்தவன்‌ நாராயணனே என்று அறிகிறோம்‌-இதிலிருந்து அண்ட ஸ்ருஷ்டி, அனாதி புருஷனும்‌, அகார வாஸ்யனுமான அநந்தனுடையதே என்று அறிவிக்‌கப் படுகிறது. இப்படி உண்டாக்கப்படும்‌ அண்டங்கள்‌ ஓன்றிரண்டல்ல.-ப்ரஹ்மாக்களும்‌ அப்படியே. இதையே பெரியாழ்வாரும்‌’அண்டக்குலத்துக் கதிபதியாகி’ என்றார்‌. பிரமன்‌ தன்‌னைத் தானே ஸ்ருஷ்டிக்கவுமில்லை. தான்‌ இருக்குமிடத்தை ஸ்ருஷ்டிக்கவுமில்லை.-அண்ட ஸ்ருஷ்டி அவனுடைய சக்திக்கு மீறினது. ப்ரஜா ஸ்ருஷ்டியே அவன்‌ . வல்லமைக்குட்பட்டது- அதுவும்‌ அச்யுதனுடைய அருளினலும்‌, நியமனத்தினாலும்‌ ஏற்படுவது. அப்படி ப்ரஜா ஸ்ருஷ்டி பண்ணின காலத்தில்‌ ப்ரஜைகள்‌ ‘இட்ட கால்‌ இட்ட கைகளாய்‌”செயலற்று இருந்தன. பிறகு பிரமன்‌ மாதவனிடம்‌ முறையிட்டதாகவும்‌, அவன்‌ ஸர்வேந்த்ரியங்களிலும்‌ வியாபித்து அவைகளுக்குக்‌ கார்யம்‌ செய்ய சக்தி கொடுத்ததாகவும்‌ அறிகிறோம்‌-முற் கூறிய பல உபனிஷத்துக்களலும்‌ சொல்லப்பட்ட நாராயணனே இப்படி ஸர்வ விதத்திலும்‌ ஸ்ருஷ்டி செய்கிறான்‌ என்று ஏற்படுகிறது.(ஸ ஜாதோ…) அந்தப்‌ பிரமன்‌ பூமியை, நான்கு பக்கங்களிலும்‌, கீழும்‌, மேலும்‌ வியாபித்ததாகச்‌ சொல்லப் படுகிறது.-*பச்சாத்‌” என்‌றதனால்‌ எல்லா த்வீபங்களிலும்‌, “அத; என்பதால்‌ பாதாளத்திலும்‌, புர: என்பதினால்‌ ஸ்வர்க்கம்‌ முதலியவைகளிலும்‌ வியாபித்தான்‌ என்று ஏற்படுகிறது.-பிரமனுடைய ஸ்வரூபம்‌ அணுவான படியால்‌ ஸ்வரூபத்தினால் இவைகளை வியாபிக்க. மூடியாது. ஆகையால்‌ ஞானம்‌, சக்தி முதலிய குணங்களால்‌ வியாபித்ததாகவே கொள்ள வேண்டும்‌. தன்னுடைய ஞானத்தினால்‌ பதினாலு உலகங்களிலும்‌ நடக்க வேண்டியவைகளை அறிந்து, சக்தியினால்‌ ஸ்ருஷ்டி செய்வதால்‌ இவ் வண்டத்திலுள்ள உலகங்களிலும்‌ ஞானத்தினாலும்‌ சக்தியினாலும் வியாபித்தான் என்றே கொள்ள வேண்டும்‌.-ஸ்ரீவிஷ்ணுசித்தர்‌ “தன்னுடைய பிரஜைகள்‌ மூலமாக வியாபித்தான்‌” என்றும்‌ பொருள் கொண்டார்‌. பெரிய சரீரத்தினால்‌ வியாபித்ததாகவும்‌ சொல்லலாம்‌.“ஸ ச பாத,நாராயண: ஐகத்‌ ஸ்ரஷ்டும்‌ ப்ரக்ருதிம்‌ அஜாயத்‌”[ நாராயணனின்‌ அவதாரமாகிய அந்த விஷ்ணு உலகை ஸ்ருஷ்டிப்‌பதற்காகப்‌ பிரமனை ஸ்ருஷ்டித்தார்‌.] என்று இத்த மந்திரத்தின்‌ பொருள்‌ முத்கலோபனிஷத்தில்‌ உரைக்கப்பட்டது. இங்கு “ப்ரக்ருதி”சப்தம்‌ ப்ரஜைகளுக்குக்‌ காரண பூதனான: பிரமனைக்‌ குறிக்கிறது.

——————

யத் புருஷேணே ஹவிஷா, தே,வா யஜ்ஞமதந்வத
வஸந்தோஸ்யா ஸீதஜ்யம்‌, க்ரீஷ்ம இத்‌மச்‌ஸ்ரத்‌தவி:–6-
[தேவர்கள்‌ (நித்ய ஸூரிகள்‌) சதுர்முகனாகிற ஹவிஸ்ஸினால்‌ ஸ்ருஷ்டியைக் குறித்துச்‌ செய்த (தியான ரூபமான ) யாகத்திற்கு வஸந்த ருது நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருது ஸமித்தாகவும்‌, சரத் ருது புரோடாசமென்னும்‌ ஹவிஸ்ஸாகவும்‌ ஆயிற்று.]
“யத்‌ புருஷேணேத்யநயா ஸ்ருஷ்டி யஜ்ஞ்ஸ்‌ ஸமீரித:”
[யத்‌ புருஷேண’ என்னும்‌ மந்த்ரத்தினால்‌ ஸ்ருஷ்டிக்காகச்‌ செய்யப்பட்ட யஜ்ஞம்‌ சொல்லப் பட்டது.] என்று புருஷ ஸம்‌ஹிதை சொல்லிற்று-இந்த மந்த்ரத்திலிருந்து ஸ்ருஷ்டியைக்‌ குறித்து யஜ்ஞம்‌ செய்யப்‌பட்ட விஷயம்‌ விவரிக்கப்படுகிறது. பிரமனுக்குப்‌ பிறந்த போதே ஸ்ருஷ்டி சக்தி யில்லை என்பது இதிலிருந்து ஏற்படுகிறது. நான்‌ முகனுக்குப்‌ படைக்கும்‌ சக்தி உண்டாவதற்காக எம்பெருமானணைக்‌ குறித்து யஜ்ஞம்‌ செய்தார்கள்‌ என்றும்‌ ஏற்படுகிறது. (யத்‌ புருஷேண…) இந்தப்‌ பிரமனாகிற புருஷனை அந்த யஜ்ஞத்தில்‌ ஹோமம்‌ செய்யப்படும்‌ பசுவாகக்‌ (ஹவிஸ்ஸாக) கல்பித்தனர்‌ என்று ஏற்படு கிறது. யார்‌ கல்பித்தார்கள்‌? (தேவா?) தேவர்கள்‌. யார்‌ அந்த தேவதைகள்‌? என்னும்‌ விசாரணை உண்டாகிறது.-இந்த்ராதி தேவர்‌ களோவெனில்‌ ஸ்ருஷ்டி சக்தியை அடைந்த பின்பு பிரமனால்‌ படைக்‌கப்பட்ட கச்யப ப்ரஜாபதிக்கு அதிதியிடம்‌ பிறந்த புத்திரர்கள்‌. ஆகையால்‌ இங்கு சொல்லப்பட்ட தேவர்கள்‌ அவர்களாக இருக்க முடியாது.-ஆகையால்‌ பிரகாசிக்கும்படி யானதும்‌ பரமாகாசமென்று புகழ்‌ பெற்‌றதுமான ஸ்ரீவைகுண்டத்திலிருக்கும்‌ நித்ய ஸூரிகளே இங்கு சொல்‌லப்படும்‌ தேவர்கள்‌ என்று கொள்ள வேண்டும்‌. (யத்‌ யஜ்ஞம்‌ அதந்வத அஸ்ய) பிரமனைப்‌ பசுவாகக் கொண்டு எந்த தியான ரூபமான
யஜ்ஞத்தைச்‌ செய்தார்களோ அந்த யஜ்ஞத்திற்கு. (வஸந்த: ஆஜ்‌யம்‌ ஆஸீத்‌…) வஸந்த ருதுவானது நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருது ஸமித்‌தாகவும்‌, சரத் ருது புரோடாசம்‌ எனப்படும்‌ ஹவிஸ்ஸாகவும்‌. ஆயிற்று.
இந்த யஜ்ஞம்‌ பரம புருஷனைக்‌ குறித்து ஸ்ருஷ்டிக்காகச்‌ செய்யப்பட்ட தியான ரூபமான யஜ்ஞமாகும்‌. ஸ்ருஷ்டிக்குக்‌ காலம்‌ அவசியமாக வேண்டியபடியால்‌ அது இம் மாதிரி உபகரணங்களாகச்‌ சொல்லப்‌ பட்டிருக்கிறது. ‘புருஷேணா ஹவிஷா” என்கிற இடத்தில்‌ பிரமன்‌ யாக பசுவாகிற ஹவிஸ்‌ ஆகிறான்‌ என்று சொல்லப்பட்டது. “சரத்‌ஹவி:’ என்ற இடத்தில்‌ சரத்காலம்‌ புரோடாசம்‌. எனப்படும்‌ ஹவிஸ்‌ ஆகிறது என்று சொல்லப்படுகிறது. அரிசியின்‌ மாவினால்‌ செய்யப்‌ பட்டு ஹோமம்‌ பண்ணப்படுகிற அடை புரோடாசம்‌ எனப்படும்‌.-நித்ய ஸரிகள்‌ பிரஹ்மாவை ஸ்ருஷ்டிக்கு. முக்யமான உபகரணமாகவும்‌ காலத்தை ஸஹ காரியாகவும் கொண்டு ப்ரஜா ஸ்ருஷ்டிக்காக பகவானை தியானித்தார்கள்‌ என்று இதன்‌ பொருள்‌. அப்படி அவர்‌கள்‌ செய்ததற்குக்‌ காரணம்‌ பகவந் நியமனமே என்று நாம்‌ ஊஹிக்க வேண்டியிருக்கிறது-இங்கு சொல்லப்பட்டிருக்கிற ஸ்ருஷ்டி “பஹுஸ்யாம்‌ ப்ரஜாயேய”[நான்‌ பலவாக ஆகக் கடவேன்‌.] என்ற ஸங்கல்பத்துடன்‌ நிமித்தோபாதான காரணமான நாராயணனால்‌ செய்யப்படும்‌ ஸமஷ்டி ஸ்ருஷ்டி யல்ல. இது வ்யஷ்டி ஸ்ருஷ்டி எனப்படும்‌ ப்ரஜா ஸ்ருஷ்டியே. இம் மாதிரியான சக்தி நித்யர்களுக்கு உண்டென்பதற்குப்‌ பல ஆதாரங்களிருக்கின்‌றன. விஷ்வக்ஸேனருடைய மந்த்ரத்தில்‌ “விஸ்வ ஸ்ருஜே ” | உலகத்தை ஸ்ருஷ்டிப்பவருக்கு]’ என்‌று சொல்லப்பட்‌டிருக்கிறது. நாரதீயமென்று ப்ரஸித்தமான ஹரி பக்தி ஸுதோதயத்‌தில்‌ ஐந்தாவது அத்யாயத்தில்‌’தே ஹி குர்யுர்‌ யதீச்சந்தி ஐகத் ஸர்க்க லயெள ஸ்வயம்‌”” [நித்ய ஸூரிகள்‌ விரும்பினார்களாகில்‌ ஜகத் ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களைத்‌ தாமே செய்வார்கள்‌.] என்று சொல்லப்பட்டிருக்‌ கிறது. ஆளவந்தார்‌ “த்வயா நிஸ்ருஷ்டாத்மப,ரேண”’| உன்னால்‌ வைக்கப்‌பட்ட உபய விபூதி நிர்வாஹ பாரத்தை யுடைய (விஷ்வக்ஸேனரால்‌)]
என்று பகவானை ஸ்தோத்ரம்‌ செய்திருக்கிறார்‌. ஸ்ரீராமாநுஜர்‌,
ஸ்வ ஸங்கல்ப மாத்ரா வக்லுப்த ஐகஜ் ஜென்ம ஸ்திதி த்‌வம்ஸா திகே
ஸ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த ஸமஸ்‌ தாத்மைஸ்வர்யம்‌”[தன்னுடைய ஸங்கல்பத்தால்‌ கொடுக்கப்பட்ட ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை யுடைய ஸ்ரீவிஷ்வக்ஸேனரிடம்‌ – வைக்கப்பட்ட தன்‌னுடைய எல்லா ஐஸ்வர்யங்களையும்‌ உடையவனை] என்று ஸ்ரீவைகுண்ட கத்யத்தில்‌ அருளிச் செய்திருக்கிறார்‌.-பிரமனாகிற ஜீவனுக்கு இச் சக்தி யிருக்கும் போது அவரைக் காட்டிலும்‌ பல்லாயிரம்‌ மடங்கு பெரியவர்களான நித்யர்களுக்கு இச் சக்தி யிருப்பது அதிசயமல்ல. இந்த யாகத்தினால்‌ பிரமனுக்கு ஸ்ருஷ்டி செய்யும்‌ சக்தி
கிடைக்கிறதென்றும்‌, அந்தப் பிரமனை நிமித்த மாத்ரமாகக் கொண்டு அவர்‌ மூலமாக நித்ய ஸூரிகள்‌ ஸ்ருஷ்டி செய்விக்கிறார்களென்றும்‌ ஏற்படுகிறது. முத்கலோபனிஷத்தில்‌ இதன்‌ பொருள்‌ வேறுவகையாகச்‌ சொல்லப்பட்டிருக்கிறது.
ஸ ஸம்ருத்‌த,காயஸ்‌ ஸந் ஸ்ருஷ்டி கர்ம ந ஜஜ்ஞிவாந்‌,ஸ: அநிருத்‌த,
நாராயண: தஸ்மை ஸ்ருஷ்டிம்‌ உபாதி;சத்‌:-*ப்‌ரஹ்மந்‌ தவ இந்த்‌ரியாணி
யாஜகாநி த்‌,யாத்வா கோச பூ,தம்‌ த்‌ருட க்‌ரந்திரம்‌ கலேவரம்‌ ஹவிர்‌ த்‌யாத்வாமாம்‌ ஹவிர் புஐம்‌ த்‌யாத்வா வஸந்த காலம்‌ ஆஜ்யம்‌ த்‌யாத்வா க்‌ரீஷ்மம்‌ இத்‌ஃமம்‌ த்‌,யாத்வா சரத்‌,ருதும்‌ ரஸம்‌ த்‌,யாத்வா ஏவம்‌ அக்‌;கெள ஹுத்வா அங்கஃ ஸ்பர்சாத்‌ கலேவர: வஜ்ரம்‌ ஹீஷ்யதே, தத: ஸ்வ கார்யாந் ஸர்வ ப்ராணி ஜீவாந்‌ ஸ்ருஷ்ட்வா பச்வாத்‌யா: ப்ரா துர்ப,விஷ்‌பந்தி, தத:
ஸ்தாவர ஜங்க மாத்மகம்‌ ஜகத்‌ ப,விஷ்‌பதி””
[பெரிய தேகத்தை உடையவரான அப் பிரமன்‌ ஸ்ருஷ்டியை அறியவில்லை. அந்த அநிருத்த நாராயணன்‌ அவருக்கு ஸ்ருஷ்டியை உபதேசித்தார்‌:– *பிரமனே! உன்னுடைய இந்திரியங்களை யாகம்‌ செய்பவர்களாகவும்‌, சரீரத்தை ஹவிஸ்ஸாகவும்‌, என்னை அந்த
ஹவிஸ்ஸை உண்பவனாகவும்‌, வஸந்த காலத்தை நெய்யாகவும்‌, க்ரீஷ்ம ருதுவை ஸமித்தாகவும்‌, சரத் ருதுவை(ஹோமம்‌ செய்யப்படும்‌)ஷட்ரஸமாகவும்‌ தியானித்து, இம் மாதிரியாக அக்னியில்‌ ஹோமம்‌ செய்து, அதன்‌ ஸ்பர்சத்தினால்‌ (உன்னுடைய) சரீரம்‌ வஜ்ரம் போல்‌(ஸ்ருஷ்டி செய்ய ஸமர்த்தமானதாக) ஆகி விடும்‌. பிறகு தங்களிடமிருந்து உண்டாகும்‌ ஸா்வ ப்ராணிகளையும்‌ உண்டாக்கிக் கொண்டு பசு முதலியவை. உண்டாகப் போகின்றன. அதன்‌ பிறகு ஸ்தாவர ஜங்கமங்களடங்கிய ஜகத்‌ உண்டாகும்‌’”]=இதிலிருந்து பிரமன்‌ ஸ்ருஷ்டி செய்ய ஞானமும்‌, சக்தியுமில்லாமல்‌ திகைத்ததாகவும்‌
பகவான்‌ ஸ்ருஷ்டி செய்ய வழியை உபதேசித்ததாகவும்‌ அறிகிறோம்‌.
“*மஹாதே,வஸ்‌ ஸர்வமேதே, மஹாத்மா ஹுத்வாத்மாநம்‌ தேவதேவோ
பபூவ” [மஹாத்மாவான மஹா தேவர்‌ (சிவன்‌) ஸா்‌வமேத யாகத்தில்‌தன்னை ஹோமம்‌ செய்து தேவர்களுக்கெல்லாம்‌ தேவரானார்‌.]என்பது போல்‌ பிரமனும்‌ பகவானைக் குறித்து ஆத்ம ஸமர்ப்பணமாகிற யாகத்‌தைச்‌ செய்து ஸ்ருஷ்டி சக்தியை அடைந்தார்‌ என்று ஏற்படுகிறது.

————

ஸப்தாஸ்யாஸந்‌ பரித,ய:, த்ரிஸ் ஸப்த ஸமித,: க்ருதா:
தே,வா யத்‌;யஜ்ஞம்‌ தந் வாநா :; அபத்நந்‌ புருஷம்‌ பசும்‌.
இந்த யஜ்ஞத்துக்கு ஏழு வஸ்துக்கள்‌ பரிதிகளாக ஆயின. இருபத்‌தொரு வஸ்துக்கள்‌ ஸமித்துக்களாகச்‌ செய்யப்பட்டன. யஜ்ஞத்தைச்‌ செய்யும்‌ தேவர்கள்‌ நான்முகனாகிற. புருஷ (ஹோமம்‌ செய்யப்‌ படும்‌) பசுவாகக்‌ கட்டினார்கள்‌. யாகம்‌ செய்யும்‌ போது அக்னிக்குத்‌ தெற்கு, மேற்கு, வடக்கு திக்குகளிலும்‌, உத்தர வேதிக்குத்‌ தெற்கு, மேற்கு, வடக்கு திக்குகளலும்‌ ஆறுதண்டங்‌கள்‌ (பலாசம்‌ முதலிய மரங்களின்‌ கொம்புகள்‌) வைக்கப்படுகின்றன. கிழக்கு திக்கில்‌ ஸூர்யனைச்‌ சேர்த்து ஏழு பரிதிகளாகக்‌ கணக்கிடப்‌படுகின்றன. இந்த ஸ்ருஷ்டி யஜ்ஞத்திலும்‌ ஏழு பரிதிகள்‌ ஏற்பட்டன என்று சொல்லப்படுகிறது. அவையாவன:.ப்ருதிவீ, ஜலம்‌, அக்னி, வாயு, ஆகாசம்‌ எனப்படும்‌ ஐந்து பூதங்களும்‌, அஹங்காரமும்‌ மஹானும்‌. (த்ரிஸ்‌…க்ருதா🙂 இங்கு இருபத்தொரு ஸமித்துக்கள்‌
அக்னியில்‌ ஹோமம்‌. செய்வதற்காகக்‌ கல்பிக்கப்பட்டன. அவையாவன–ப்ருதிவீ முதலிய ஐந்து பூதங்கள்‌; இவைகளுக்கு முறையே காரணமான கந்த தன்மாத்ரை, ரஸ தன்மாத்ரை, ரூப தன்மாத்ரை, ஸ்பர்ஸ தன்மாத்ரை, சப்த தன்மாத்ரை எனப்படும்‌ ஐந்து தன்மாத்ரைகள்‌; கண்‌, காது, நாக்கு, மூக்கு, தோல்‌ எனப்படும்‌ ஐந்து ஞானேந்‌திரியங்கள்‌. வாய்‌, கால்‌, கை, ஆண்‌ பெண்‌ குறிகள்‌, ஆஸனவாய்‌ எனப்படும்‌ ஐந்து கர்மேந்திரியங்கள்‌; மனஸ்‌. ஆக இந்த இருபத்‌தொரு தத்வங்களும்‌ ஸமித்துக்களாகக்‌ கல்பிக்கப்பட்டன. ப்ரஜைகளை ஸ்ருஷ்டிப்பதற்கு இவைகள்‌ உபகரணங்களாகையால்‌ ஸ்ருஷ்டி யஜ்ஞத்திற்கு ஸாம க்ரிகளாகச்‌. சொல்லப்படுகின்றன. (தேவா… பசும்‌) “இப்படி யஜ்ஞம்‌ செய்பவர்களான நித்ய ஸூரிகள்‌ யஜ்ஞத்‌தில்‌ ஹோமம்‌ செய்யப்படும்‌ பசுவான பிரமனை ப்ரக்ருதியாகியயூப ஸ்தம்பத்தில்‌ கட்டினார்கள்‌. அடுத்த மந்தர த்தில்‌ “படர்ஹிஷி :பஜ்ஞம்‌ ப்ரெளக்ஷந்‌” [மூல ப்ரக்ருதியிலுள்ள பிர மனை ப்ரோக்ஷித்தார்கள்‌ ] என்று வருவதால்‌ இங்கு மூல ப்ரக்ருதியாகிய யூப ஸ்தம்பத்தில்‌ கட்டினார்கள்‌ என்றே கொள்ள வேண்டும்‌.

————

தம்‌ யஜ்ஞம்‌ ப,ர்ஹிஷி ப்ரெளக்ஷந்‌, புருஷம்‌ ஜாதம் அக்ரத :
தேந தே,வா அயஜந்த, ஸாத்‌,யா ருஷயச்ச யே. –8-
[முதலில்‌ உண்டானவனும்‌ யஜ்ஞத்தில்‌ ஹோமம்‌. செய்யப் படுபவனும்‌,மூல ப்ரக்ருதியில்‌ உட்ப்பட்டவனுமான பிரமனாகிற புருஷனை ப்ரோக்ஷித்தார்கள்‌. ஸாத்யர்களென்று சொல்லப்படும்‌ நித்யஸூரிகளும்‌, ரிஷிகளும்‌ (முக்தர்களும்‌) அப்பசுவைக் கொண்டு யஜ்ஞம்‌ செய்‌தனர்‌.] (தம்‌ யஜ்ஞம்‌) யஜ்ஞநத்தில்‌ ஹோமம்‌ செய்யப்படுபவனான அப்‌
பிரமனை. (பர்ஹிஷி) ‘பர்ஹி:‘ என்னும்‌ பெயரை யுடைய மூல ப்ரக்ருதியில்‌ முன் சொன்னபடி கட்டி. (ப்ரெளக்ஷந்‌) ப்ரோக்ஷணம்‌ என்னும்‌ ஸம்ஸ்காரத்தைச்‌ செய்தார்கள்‌. (புருஷம்‌ ஜாதம்‌ அக்ரத:) முன்னால்‌ பிறந்தவனான அந்தப்‌ பிரமனாகிற புருஷனை ப்ரோக்ஷித்தார்கள்‌. “ப்‌, ரஹ்மா: தேஃவாநாம்‌ ப்ரதமஸ்‌ ஸம்பஃபூ,வ”” [பிரமன்‌ தேவர்களுள்‌ முதலில்‌ உண்டானான்‌] என்று முண்டக உபனிஷத்தில்‌ சொல் லியிருக்‌கிறபடியால்‌ இங்கு சொல்லப்படும்‌ ‘புருஷன்‌’ பிரமனே என்று நிச்ச யிக்கப்படுகிறது. (தேந அயஜந்த) அப் பிரமனைப்‌ பசுவாகக் கொண்டு யாகம்‌ செய்தார்கள்‌. ஒரு த்ரவ்யத்தை ஓரு தேவதையை உத்தேசித்‌துக்‌ கொடுப்பது யாகமெனப்படுகிறது. இங்கு நான்முகனாகிய
ஹவிஸ்ஸை அநிருத்த நாராயணனகிய அக்நியில்‌ ஹோமம் செய்வதாகிய யஜ்ஞத்தைச்‌ செய்தார்கள்‌ என்று தாத்பர்யம்‌. எவர்‌ இம்‌ மாதிரி யாகம்‌ செய்தார்களெனில்‌: (ஸாத்யா தேவா;) ஸாத்யர்களென்று ப்ரஸித்தரான நித்யஸூரிகளே இப்படி யாகம்‌ செய்தவர்‌
என்று சொல்லப்படுகிறது. இப்புருஷஸூக்தத்தின்‌ பூர்வானுவாகத்தில்‌ கடைசி மந்திரத்தில்‌ “யத்ர. பூர்வே ஸாத்‌,யாஸ்‌ ஸந்திதேஃவா:”” [எந்தப்‌ பரமபதத்தில்‌ பழைமையானவர்களும்‌ ஸாத்யர்கள்‌என்று சொல்லப்படுபவர்களுமான தேவர்கள்‌ இருக்கிறார்களோ… ]என்று சொல்லப்பட்டதால்‌ இங்கு சொல்லப்படும்‌ தேவர்கள்‌ பிறப்‌பற்றவர்களான நித்ய ஸூரிகளே என்று நிஸ் ஸந்தேஹமாக நிர்ணயிக்கப்படுகிறது. (ருஷயச்சயே) முக்தர்களும்‌ இந்த யஜ்ஞத்தில்‌ கலந்து கொண்டார்கள்‌ என்று சொல்லப்படுகிறது. பிரமனுக்கு ஸ்ருஷ்டி சக்தி கிடைத்த பின்பு ஸ்ருஷ்டிக்கப் பட்டவர்களான அத்ரி, பிருகு, வஸிஷ்டர்‌ முதலிய ரிஷிகள்‌ இங்கு சொல்லப்படும்‌ ரிஷிகளாக ஆக முடியாது. ஆகையால்‌ முக்தர்களே இங்கு சொல்லப்படுபவர்‌கள்‌. புஷோத்தமனை த்யானம்‌ பண்ணுவதையே தங்களுக்கு உண்‌ணும்‌ சோறும்‌, பருகும்‌ நீரும்‌, தின்னும்‌ வெற்றிலையுமாகக்‌ கொண்‌டிருக்கும்‌ முக்தர்களை ரிஷிகள்‌ என்று சொல்லத் தட்டில்லை.

———–

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத:, ஸம்ப்‌,ருதம்‌ ப்ருஷதாஜ்யம்‌
பசூம்ஸ்தாம்ஸ் சக்ரே வாயவ்யாந்‌, ஆரண்யாந் க்‌,ராம் யாச்சயே–9-
[ எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்யப்பட்ட அப் பிரமனிடமிருந்து, தயிருடன்‌ கூடிய நெய்‌ (ஜகத் காரண பூதமான வீர்யம்‌) உண்டாயிற்று. அந்த நான்முகன்‌ வாயு மார்க்கத்தில்‌ ஸஞ்சரிக்கும்‌ பக்ஷி களையும்‌, காட்டில்‌ ஸஞ்சரிக்கும்‌ ம்ருகங்களையும்‌, கிராமத்திலிருக்கிற
மிருகங்களையும்‌ படைத்தனன்‌.] “தஸ்மாதி,தி ச மந்த்ரேண ஜகத் ஸ்ருஷ்டிஸ்‌ ஸமீரிதா”'[*தஸ்மாத்‌…” என்னும்‌ மந்த்ரத்தினால்‌ ஜகத் ஸ்ருஷ்டியானது சொல்‌லப்பட்டது.|] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ சொல்லப்பட்டது. “ச’காரத்தினால்‌ இது முதல்‌ ஏழு மந்த்ரங்களில்‌ ஜகத் ஸ்ருஷ்டி சொல்‌லப் படுகிறதென்று அறியப்படுகிறது. (ஸர்வஹுத: தஸ்மாத் யஜ்‌ஞாத்‌) தன்னை யுள்ளிட்ட எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்விக்கப்‌பட்ட அப் பிரமனிடமிருந்து. நித்ய ஸூரிகளால்‌ பகவானிடம்‌ ஆத்ம ஸமர்ப்பணம்‌ செய்விக்கப்பட்ட அந்த நான்முகனிடமிருந்து.(ப்ருஷதாஜ்யம்‌ ஸ்ம்ப்‌ருதம்‌) தயிருடன்‌ கூடிய நெய்‌ உண்டாயிற்று.-இங்கு ‘ப்ருஷதாஜ்யம்‌’ என்று ஜகத்‌ ஸ்ருஷ்டிக்குக்‌ காரணமான
வீர்யம்‌ சொல்லப்படுகிறது, (பரூம்ஸ்தாந்‌…) வாயு ஸஞ்சரிக்கும்‌படியான ஆகாசத்தில்‌ பறக்கும்‌ பக்ஷிகளையும்‌, காட்டில்‌ ஸஞ்சரிக்கும்‌ புலி, கரடி முதலிய ப்ராணிகளையும்‌, கிராமங்களில்‌ திரியும்‌ பூனை முதலிய ப்ராணிகளையும்‌ அந்த நான்முகன்‌ ஸ்ருஷ்டித்தார்‌.

————

தஸ்மாத்‌, யஜ்ஞாத்‌ ஸர்வஹுத: ருசஸ்‌ ஸாமாறி ஜஜ்ஞிரே
சந்தராம்ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத்‌, யஜுஸ்‌ தஸ்மாத, ஜாயத,–10-
[எல்லாவற்றையும்‌ ஹோமம்‌ செய்யப்பட்ட அப் பிரமனிடமிருந்து ருக் வேதங்களும்‌, ஸாம வேதங்களும்‌ உண்டாயின. அந்த நான்முகனிடமிருந்து சந்தஸ்ஸுக்கள்‌ உண்டாயின; யஜுர் வேதமும்‌ அவனிடமிருந்து உண்டாயிற்று.] ்‌
பிரமனுடமிருந்து ருக் யஜுஸ் ஸாம வேதங்களும்‌, க௱யத்ரி முதலிய சந்தஸ்ஸுக்களும்‌ உண்டாயின வென்று சொல்லப்படுகிறது.
யோ ப்‌,ரஹ்மாணம்‌ விததாதி பூர்வம்‌ யோ வை வேதாம்ச்ச ப்‌ரஹிணோதி தஸ்மை”[எந்தப்‌ பரமாத்மாவானவர்‌ ஸ்ருஷ்டி காலத்தில்‌ பிரமனைப்‌ படைத்துஅவனுக்கு வேதங்களை உபதேசிக்கிறாரோ…] என்று சொல்லப்‌ பட்டிருக்கிறபடியால்‌ பரம புருஷனிடமிருந்து உபதேதசம் பெற்று வேதங்களை வேதன்‌ (பிரமன்‌) வெளிப்படுத்தினா்‌ என்றே கொள்ள வேண்டும்‌. “தஸ்ய ஹ வா ஏதஸ்ய மஹதோ பூ,தஸ்ய நிச்வஸிதம்‌ ஏதத்‌, ருக்‌, வேதோ யஜுர்வேதஸ்‌ ஸாமவேதே…”” (ருக்‌ யஜுஸ்‌ ஸாமம்‌ முதலிய வேதங்களெல்லாம்‌ பரமாத்மாவினுடைய மூச்சுக் காற்றுகள்‌.] என்று மஹா புருஷனுடைய மூச்சுக் காற்றாகச்‌ சொல்லப்பட்ட அபெளருஷேயமான வேதங்களைப்‌ பிரமன்‌ பிரகாசப் படுத்தினான்‌ என்று ஏற்படுகிறது.

———–

தஸ்மாத,ச்வா அஜாயந்த ஏகேசோப,யாத,த:
காவோ ஹ ஐஜ்ஜிரே தஸ்மாத்‌ தஸ்மாத்‌ ஜாதா அஜா வய:--11-
[அந்த நான்முகனிடமிருந்து குதிரைகளும்‌, ஒரு பக்கத்தில்‌ பற்களையுடைய எருமை முதலிய ப்ராணிகளும்‌. இரண்டு பக்கத்தில்‌ பற்களை யுடைய கழுதை முதலியவைகளும்‌ உண்டாயின.-அவரிடமிருந்து பசுக்களும்‌ உண்டாயீன.] (காவோ ஹ…) ஒரு பக்கத்தில்‌ பற்களை யுடைய ம்ருகங்களில்‌ பசுக்களும்‌ அடங்கின போதிலும்‌ அவைகளின்‌ மேன்மையை முன்‌னிட்டு அவை தனியாகச்‌ சொல்லப்படுகின்றன என்று விஷ்ணு
சித்தாசாரியர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌. புருஷோத்தமனுடைய ‘ ஆராதனமாகிய யஜ்ஞத்திற்கு உபயோகப்படும்‌ பால்‌, தயிர்‌, நெப்‌ முதலியவை பசுக்களிடமிருந் தல்லவோ கிடைக்கிறது.

—————

யத்‌ புருஷம்‌ வ்யத,து,: கதிதா வ்யகல்பயந்‌
முக,ம்‌ கிமஸ்ய கெள பராஹ, காவூரு பாதர வுச்யேதே.[பிரமனாகிய புருஷனைப்‌ (பசுவாகச்‌) செய்த போது, எவ்வளவு விதமாகக்‌ கல்பித்தார்கள்‌? இந்த ப்ரஹ்மாவினுடைய முகம்‌ எதுவாக ஆயிற்று? கைகள்‌ எவர்களாக ஆயின?துடைகளும்‌ திருவடிகளும்‌
எவர்களாகச்‌ சொல்லப்படுகின்‌றன?] யஜ்ஞத்தைச்‌ செய்பவர்களான ப்ராஹ்மணர்‌ முதலியவர்களின்‌ ஸ்ருஷ்டியை இம் மந்த்ரமும்‌ அடுத்த மந்த்ரமும்‌ சொல்லுகின்‌றன. இந்த ருக்‌ கேள்வியாகவும்‌ அடுத்த ருக்‌- பதிலாகவும்‌ இருக்கின்றன. நித்ய ஸூரிகள்‌ பிரமளைப்‌ பசுவாகக்‌ கல்பித்த போது அவருடைய அவயவங்கள்‌ எத்தனை விதமாகக்‌ கல்பிக்கப்பட்டன வென்றும்‌ எத்‌ தெந்த அவயவங்களினின்றும்‌ எந்தெந்தப்‌ பதார்த்தங்கள்‌ படைக்கப்‌பட்டன வென்றும்‌ கேட்கப் படுகிறது. விசேஷமாக முகம்‌, கைகள்‌, துடைகள்‌, பாதங்கள்‌ இவைகளிலிருந்து எவர்‌ உண்டானார்கள்‌ என்றும்‌ கேட்கப் படுகிறது.

————

ப்‌ராஹ்மணோஸ்ய முக,மாஸீத்‌ பாஹூ ராஜந்ய: க்ருத;
ஊரூ ததஸ்ய யத்‌,வைச்ய: பத்‌,ப்‌,யாம்‌ சூத்‌ரோ அஜாயத.–13-ப்ராஹ்மணான்‌ இவருடைய முகமானான்‌. கைகள்‌ க்ஷத்ரியனாகச்‌ செய்யப்பட்டன. அப்பொழுது துடைகள்‌ வைச்யனாக ஆயின. திருவடிகளிலிருந்து சூத்ரன்‌’ உண்டானான்‌. முகம்‌ ப்ராஹ்மணனாக ஆயிற்று என்று சொல்லப் படுகிறது. பாதங்களிலிருந்து சூத்ரன்‌ உண்டானான்‌” என்று கடைசியில்‌ சொல்லப்படுகிறபடியால்‌ இங்கும்‌ முகத்திலிருந்து ப்ராஹ்மணன்‌ உண்டானான்‌ என்றே தாத்பர்யம்‌. ப்ராஹ்மணன்‌ அதிகமான ஞானத்‌தை உடையவனாதலால்‌ ஞானேந்த்ரியங்க ளெல்லாவற்றையும்‌ உடையதான முகத்தினின்றும்‌ அவனைப்‌ படைத்‌ தார் . (பாஹூ…க்ருத:) கைகளிலிருந்து க்ஷத்ரியன்‌ உண்டானான்‌.-யுத்தம்‌ செய்வதைத்‌ தொழிலாக உடைய க்ஷத்ரியனுக்குத்‌ தோள்‌ வலிமையும்‌ கை வன்மையும்‌ அவச்யமாதலால்‌ -ப்ரஹ்ம தேவன்‌ அவனைத்‌ தன்‌ கைகளிலிருந்து ஸ்ருஷ்டித்தார்‌. -(ஊரூ…வைச்ய) உழுதலையும்‌ வியாபாரத்தையும்‌ தொழிலாக வுடைய வைச்யனுக்குத்‌ துடை பலம்‌ முக்யமாதலால்‌ நான்முகன்‌ அவளைத்‌ தன்‌ துடைகளிலிருந்து படைத்தார்‌.-(பத்ப்யாம்‌.. ) பாதங்களினின்றும்‌ நான்காவது வர்ணத்தைச்‌ சேர்ந்த சூத்ரன்‌ உண்டானான்‌. முதல்‌ மூன்று வர்‌ணத்தவர்களுடைய ஏவல்களைச்‌ செய்வதே ஸ்வ தர்மமாக வுடைய சூத்ரனுக்குக்‌ கால் வன்மை அவச்யமாதலால்‌ பிர்மன்‌ தன் கால்களிலிருந்து அவனைப்‌ படைத்தார்‌. இதிஹாஸ புராணங்களில்‌ பலவிடங்களில்‌ நாராயணனுடைய முகம்‌, கைகள்‌, துடை, திருவடி முதலியவைகளிலிருந்து நான்கு வர்ணத்தவர்களும்‌ உண்டானதாகச்‌ சொல்லப்பட்டிருக்க – இங்கு நான்முகனின்‌ அவயவங்களிலிருந்து அவர்கள்‌ உண்டானதாகச்‌ சொல்லுவது எப்படிப்‌ பொருந்தும்‌? என்ற ஸந்தேஹம்‌ ஏற்படுகிறது.-பிரமனை சரீரமாகக் கொண்ட புருஷோத்தமனே இப்படிப்‌ படைப்ப தாலும்‌, நான்முகனுடைய அவயவங்கள்‌ நாராயுணனுடைய அவ யவங்களே யாகையாலும்‌ இதில்‌ ஒரு’ விரோதமுமில்லை.-இந்தப்‌ புருஷ ஸூக்தம்‌ முழுவதும்‌, தைத்திரீய ஆரண்யகத்தில் மூன்றாவது ப்ரச்நத்தில்‌ படிக்கப் பட்டிருக்கிறது. ஆகையால்‌ நான்கு ஜாதிகளும்‌ ஸ்ருஷ்டி காலத்திலேயே தனித் தனியாகப்‌ படைக்கப்பட்‌டனவென்று வேதத்திலிருந்தே அறிகிறோம்‌. நவீன காலத்தில்‌ சிலர்‌ வேதங்களில்‌ ஜாதி சொல்லப் படவில்லை யென்றும்‌,. புராணாங்களிலேயே ஜாதிப் பிரிவினை சொல்லப் பட்டிருக்கிறதென்றும்‌ கட்டுரைகள்‌ எழுதுவது இதனால்‌ நிராகரிக்கப்பட்ட.து. கீதையிலும்‌ பகவான்‌, “சாதுர் வர்ண்யம்‌ மயா ஸ்ருஷ்டம்‌ குண கர்ம விபாக,ச:’ [குணம்‌, தொழில்‌ முதலியவைகளில்‌ பேதங்களுடன்‌ கூடிய நான்கு வர்ணங்களும்‌ என்னால்‌ ஸ்ருஷ்டிக்கப்பட்டன.] என்று அருளிச்‌ செய்திருக்கிறார்‌.-ஜன ஸமூஹத்தினுடைய முக ஸ்தானமாயிருக்கும்‌ ப்ராஹ்மண ஜாதி பிரமனுடைய முகத்தினின்றும்‌ உண்டாயிற்று. முகத்தில்‌ ஞானேந்த்ரியங்களான கண்‌, மூக்கு, நாக்கு, செவி, மெய்‌ (தோல்‌) என்னும்‌ ஐந்தும்‌ இருக்கின்றன. ‘ஸர்வேந்த்‌ரியாணாம்‌ நயநம்‌ ப்ரதாநம்‌” என்று எல்லா இந்த்ரியங்களிலும்‌ முக்கியமானதாகச்‌ சொல்‌லப்படும்‌ கண்ணினாலேயே படைக்கப்பட்ட எல்லாப்‌ பொருள்களையும்‌ பார்க்கிறோம்‌.-கண்ணால்‌ பார்க்கப்பட்டதே ப்ரத்யக்ஷ ப்ரமாணமாகிறது, படைக்கப்பட்ட பொருள்‌களைப்‌ பார்ப்பதிலிருந்து அவைகளை நியமிக்கும்‌ ஜீவனையும்‌, படைப்பவனான ஈஸ்வரளையும்‌ அறி கிறோம்‌. அம் மாதிரியே ப்ராஹ்மணார்களும்‌ திர்க்க தர்சிகளாகவும்‌,ஜீவாத்ம பரமாத்ம தத்வ ஜ்ஞானிகளாகவும உலகத்திற்குக்‌ கண்‌
போன்றும்‌ விளங்குகிருர்கள்‌. கண்ணிற்கு அடுத்த படியான மேன்மை வாய்ந்தது காது. சப்த ராசியான வேதமும்‌ கர்ண பரம்பரையாகவே வந்தது. ‘பஹுநா ஸ்ருதேந ” என்கிறபடி பலரிடம்‌ கேட்டுப்‌ பரமாத்ம ஜ்ஞானத்தை அடைவதற்கு ஸாதனமாயிருப்பது இது.-ரஸனேந்திரியம்‌ ருசிப்பதாகிற ஞானத்தை அறிகிறது. ஞானத்திற்கு ஆதாரமான தேஹத்தைப்‌ போஷிப்பதற்கும்‌ ரஸனேந்திரியம்‌ அவச்‌ யம்‌.. “ஸ்வ தேஹம்‌ ஆத்ஃயம்‌ க,லு தர்ம ஸாதநம்‌”” [ தன்னுடைய தேஹ மல்லவோ தர்மத்திற்கு முதன்மையான ஸாதனம்‌. |என்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அச்யுதனுக்கு அளிக்கப்பட்ட ப்ரஸாதங்களை ருசிப்‌பதற்கே ஏற்பட்டது நாக்கு. க்ராணேந்திரியம்‌ (மூக்கு) புருஷோத்தமனுக்கு ஸமர்ப்பிக்கப்பட்ட புஷ்பம்‌, சந்தனம்‌ முதலியவைகளை முகர்வதற்கு ஸாதனமானது. ஸ்வாஸம்‌ விடுவதற்கும்‌ மூக்கு உபயோகமாயிருக்கிறது. தொடுவதினால்‌ ஏற்படும்‌ உணர்ச்சியை அறிவிப்பது த்வக்‌ (தோல்‌) என்னும்‌ இந்த்ரியம்‌,-““உடுத்துக் களைந்த நின்‌ பீதக வாடை உடுத்துக்‌ கலத்ததுண்டு தொடுத்த துழாய்‌ மலர்‌ சூடிக்‌ களைந்தன சூடும்‌ இத் தொண்டர்களோம்‌’என்பது போல்‌ தம்முடைய ஞானேந்த்ரியங்களையெல்லாம்‌ புரு ஷோத்தமன்‌ விஷயத்தில்‌ ஈடுபடுத்துபவர் களாகையால்‌ ப்ராஹ்‌மணர்கள்‌ முகத்தினின்றும்‌ உண்டானார்கள்‌. கர்மேந்த்ரியங்களில்‌ ப்ரதானமான வாயும்‌ முகத்திலிருக்கிறது. இது ப்ராம்ஹணர்களின்‌ வாக்கு வன்மையையும்‌ சாபானுக்ரஹ ஸாமர்த்யத்தையும்‌ காட்டுகிறது. வாயினால்‌ “கடல்‌ சூழ்ந்த மண்ணுலகம்‌ வாழ”’ என்றும்‌, “ஸர்வே ஜநா: ஸுகிநோ ப,வந்து’” என்றும்‌ அச்யுதனால்‌ படைக்கப்பட்ட அவனியிலுள்ளோர்‌ எல்லோரும்‌ ஸுகமாயிருக்க வேண்டுமென்று வாழ்த்துவது ப்ராஹ்மணானுடைய தொழில்‌ என்று உணர்த்தப்படுகிறது.-வேதாத்யயனத்திற்கும்‌ வேதத்தை ஓதுவிப்பதற்கும்‌ யஜ்ஞம்‌ முதலியவைகளைப்‌ பண்ணி வைப்பதற்கும்‌, வாய்‌ உபயோகப்படுவ தாகையால்‌ இவைகள்‌ அவனுடைய தொழில்கள்‌ என்றும்‌ தெரிவிக்‌ கப்படுகின்றன. முகம்‌ புத்தி (மூளை)யையும்‌ தேஜஸ்ஸையும்‌ உடைய தாதலால்‌ ப்ராஹ்மணான்‌ புத்திமானாகவும்‌, ப்ரஹ்ம தேஜஸ்ஸை உடையவனாஃவும்‌ இருப்பான்‌ என்று தெரிவிக்கப்படுகிறது. ப்ரஹ்ம ஜ்ஞானியாகையால்‌ ப்ராஹ்மணான்‌ எனப்படுகிறான்‌. ராஜாக்‌களுக்கு மந்தரியாகவும்‌ ஆசார்யனாகவும்‌ இருந்து புத்திமதியும்‌ உபதேசமும்‌ செய்பவன்‌ ப்ராஹ்மணன்‌. இவ்வளவு கார்யங்களையும்‌ செய்வதற்கேற்பட்ட ப்ராஹ்மணன்‌ பிரமனின்‌ முகத்திலிருந்து உண்டானான்‌. ப்ராஹ்மணர்களுடைய தேஹ குடும்ப ஸம்ரக்ஷணங்‌கள்‌ ராஜாக்களால்‌ நன்கு கவனிக்கப்பட்டு வந்ததால்‌ முன் காலத்தில்‌ அவர்கள்‌ தங்கள்‌ தொழிலை சரியாகச் செய்துவந்தார்கள்‌. ஆசார்‌யர்கள்‌ காலத்தில்‌, ராஜாங்கம்‌ பரதேசிகள்‌ கையில்‌ அகப்பட்ட போதிலும்‌, ப்ராஹ்மணார்கள்‌ உஞ்ச வ்ருத்தி செய்தாவது தங்கள்‌ தொழிலைச்‌ செய்து வந்தார்கள்‌. கவியின்‌ கோலாஹலத்தினாலும்‌, பலவித அஸெளகர்யங்களாலும்‌, இப்போது ப்ராஹ்மணார்கள்‌ தங்கள்‌ தொழிலை விட்டுப்‌ பல தொழில்களிலும்‌ புகும்படி தேரிட்டிருக்கிறது.-சில பாக்யவான்கள்‌ இக் காலத்திலும்‌ வைதிக மார்க்கத்திலிருந்துகொண்டு பணப் பேயாட்படாமல்‌ முறை தவராமல்‌ இருந்து கொண்டு வருகிறார்கள்‌-கர்மேந்த்ரியங்களுள்‌ வலிமை வாய்ந்ததான கையிலிருந்து தோளாண்மை யுடைய க்ஷத்ரியன்‌ பிறந்தான்‌. தேஹம்‌ கையினுடைய பலத்தினாலேயே ரக்ஷிக்கப்படுவது போல்‌ ஜன ஸமூஹமும்‌ க்ஷத்ரியனுடைய தோள்வலியினால்‌ ரஷிக்கப் படுகிறது. ராஜாக்களில்லாவிடில்‌உலகம்‌ அராஜமாகி அழிந்துவிடும்‌. அதனாலேயே அரசனுக்குத்‌ திருமாலின்‌ அம்சம்‌ உள்ளதாகக்‌ கூறப்படுகிறது.எல்லாரும்‌ உண்டு ஜிவிப்பதற்கு அவச்யமான உணவுப்‌ பொருள்களை உண்டாக்குவதையும்‌ பலருக்கு வினியோகிப்பதையும்‌ தொழிலாக வுடைய வைச்யன்‌ துடையிலிருந்து உண்டாக்கப்பட்‌டான்‌. வைஸ்யனுடைய தாளாண்மையினாலேயே வேளாண்மை நடக்கிறதன்றோ. எல்லாருடைய தேஹத்தையும்‌ போஷிப்பது வைஸ்யனுடைய தொழில்‌. இம் மூவர்ணத்தார்க்கும்‌ வேண்டிய உபகரணங்களை ஸம்‌பாதித்துக்‌ கொடுப்பதற்காக ஆடி ஓடித்‌ திரிந்து நடந்து கார்யம்‌ செய்பவனாகையால்‌ சூத்ரன்‌ காலிலிருந்து படைக்கப்பட்டான்‌. கால்‌கள்‌ சரீரத்தைத்‌ தாங்குவது போல்‌ அவன்‌ இம் மூவர்ணத்தாரையும்‌ தாங்குகிறான்‌. காலிலிருத்து உண்டானதால்‌ ஒருவிதமான தாழ்வும்‌ கிடையாது. எம்பெருமானுடைய திருவடிகளே எல்லோருக்கும்‌ வணங்கும்‌ துறையாகும்‌. மற்ற வர்ணத்தார்க்குள்ள நியம நிஷ்டை கள்‌, ஆசார வ்யவஹாரங்கள்‌ முதலிய கஷ்டங்கள்‌ இவர்களுக்குக்‌ கிடையாது. சொன்னதைச்‌ செய்வதில்‌ பாபமும்‌ கிடையாது; பொறுப்‌பும்‌ கிடையாது. அவர்களுக்கு நற்கதியடைவது மிகவும்‌ ஸுலபமாகும்‌, பிறப்பினலேயே அவர்களுக்கு நைச்யமும்‌, அஹங்கார மமகாரமில்லாமையும்‌ ஏற்பட்டிருக்கின்றன. ஆசார்யர்களும்‌ உயர்ந்த வர்ணத்தார்க்குப்‌ பிறப்பினாலேற்படும்‌ அஹங்கார மமகாரங்கள்‌ அழிய வேண்டுமென்று உபதேசித்திருக்கிறார்கள்‌. “தொழுமினீர்‌ கொடுமின்‌ கொண்மின்‌” என்று அவர்களிடமிருந்து ஞானத்தைப்‌ பெற்றுக் கொள்வதிலும்‌, அவர்களுக்கு ஞானத்தைக்‌ கொடுப்பதிலும்‌ தடையில்லை என்று தொண்டரடிப் பொடி யாழ்வாரும்‌ அருளி யிருக்கிறார்‌. போதனம்‌, ரக்ஷணம்‌, போஷணம்‌, ஸேவகம்‌ என்பவை முறையே நான்கு வர்ணத்தாருக்கும்‌ தொழிலாகும்‌. ஓவ்‌வொருவரும்‌ மற்ற வர்ணத்தார்க்காக உழைக்கிறார்கள்‌. நால்வரும்‌ பகவானுடைய அவயவங்களே. அவர்களுக்குள்‌ ஏற்றத் தாழ்வு கிடையாது. அவர்கள்‌ ஓருவர்க்கொருவர்‌ சண்டையிடுவது சரீரத்தின்‌ அவயவங்கள்‌ ஒன்றுக்கொன்று சண்டையிடுவதை யொக்கும்‌, வயிறுடன்‌ மத்த அவயவங்கள்‌ சண்டையிட்ட கதை எல்லோரும் அறிந்ததே -நமது ஸநாதன வைதிக தர்மமாகிற மண்டபத்தைத்‌ தாங்கும்‌ தூண்கள்‌ ஐந்து. நடுத்தூண்‌ ஸ்ருதி ஸ்ம்ருதீதிஹாஸ புராணங்கள்‌ மூதலியவையும்‌ அவைகளில்‌ சொல்லப்பட்டிருக்கும்‌ தெய்வங்களின்‌ கோவில்களுமேயாகும்‌. ஜாதி, ஸ்த்ரீகள்‌, சொத்து, சுதந்திரம்‌ ஆகிய நான்கும்‌ மற்ற தூண்களாகும்‌. இவைகளைக்‌ காப்பாற்றுவதே அரசர்களின்‌ கடமை யென்று பாரதத்தில்‌ ராஜ தர்மத்தில்‌ பரக்கப்‌ பேசப் பட்டிருக்கிறது. ஸ்ருதி ஸ்ம்ருதிகளில்‌ இவைகளைப் பற்றி ஏற்‌ பட்டிருக்கும்‌ சட்ட திட்டங்களை மாற்ற அரசனுக்காவது, அவனுடைய மந்த்ரிகளுக்காவது, ஜன ப்ரதிநிதி ஸபைக்காவது அதிகாரம்‌ கிடையாதென்பது ஸர்வ ஸித்தமாக ஏற்பட்டிருந்தது. இதை மாற்ற ப்ரயத்னம் செய்த வேன மஹாராஜன்‌ அடைந்த கதியை ஹரி வம்சம்‌ முதலியவைகளில்‌ நன்கு காணலாம்‌. இக்காலத்தில்‌ அந்த நியமத்திற்கு ஏட்டிக்குப்‌ போட்டியாக” மாற்ற முடியாதது ஓன்றும்‌ கிடையாது என்ற கொள்கையைக்‌ கொண்டிருக்கிறார்கள்‌.-முன்பு நியமிக்கப்பட்டதெல்லாம்‌ பிசகென்று கொண்டு அவைகளுக்கு தேர்‌ மாறாக ஆக்க வேண்டுமென்று சட்டம்‌ செய்கிறார்கள்‌. கோயில்களேற்பட்ட தத்வத்திற்கு விரோதமாகச்‌ சட்டங்களேற்படுத்தி தெய்வ ஸாந்தநித்யத்தைச்‌ சிதைத்தது தேசமெங்குமறிந்ததே. பிறப்பையும்‌ புத்தியிருப்பதையுமே குற்றமாகக் கொண்டு உத்யோகங்களுக்கு உள்ளே விடாமலும்‌, பாடசாலைகளில்‌ படிக்கவிடாமலும்‌ ப்ராஹ்‌மணர்களை த்வேஷிப்பது எல்லோரும்‌ அறிந்ததே. ப்ராஹ்மணர்‌கள்‌ க்ருஷ்ணணையே கதியாகக்‌ கொண்டவர்கள்‌. க்ருஷ்ணனும்‌ ப்‌ராஹ்மணோ மம தே;வதா””[ப்ராஹ்மணன்‌ என்னுடைய தேவதை]என்று அருளிச் செய்தார்‌. ஆகையால்‌ ப்ராஹ்மண த்வேஷமானது தெய்வ த்வேஷத்திலேயே முடியுமென்று எல்லோரும்‌ பயந்துகொண்டிருந்தோம்‌. அம்மாதிரியே ப்ராஹ்மண த்வேஷத்தில்‌ ஆரம்பித்த ஒரு சாரார்‌ தெய்வ த்வேஷத்திற்குக்‌ கொடி கட்டிக் கொண்டு கதறுகிறார்கள்‌. ஜாதியென்பது அவரவர்‌ கர்மானுகுணமாக பகவந்‌ நியமனப்படி ஏற்பட்டது. சொத்து அவரவர்‌ பண்ணிய புண்யபாபத்தின்‌ பலனேயாகும்‌. :மேலைத் தவத்தளவே யாகுமாம்‌ தான்பெற்ற செல்வம்‌ குலத்தளவே யாகும்‌ குணம்‌’” என்றல்லவோ சொல்லப்பட்‌டிருக்கிறது. ஆங்கிலேயர்களும்‌ பணத்தினாலும்‌ அந்தஸ்தினாலும்‌ பேதம்‌ ஏற்படுத்தி யிருக்கிறார்கள்‌. சமதர்மக் கொள்கை பேசும்‌ ருஷ்ய தேசத்திலும்‌ அதிகாரப் பதவியினால்‌ வித்தியாசங்களிருக்கின்றன. அம்மாதிரியான . வித்தியாசங்கள்‌ இங்கு கிடையா. பேதமென்பது இயற்கையின்‌ சட்டமாகும்‌. அதை ஓழிப்பதென்பது மனிதனால்‌ முடியாத முயற்சியே. ஒரு விதமாக ஓழிக்கப் பார்த்தால்‌. மற்றொரு விதமாக முளைக்கும்‌. பழைய -பேதத்திற்குப்‌ பழகி யிருக்கிறோம்‌.
‘அபேதம்‌” என்பதினாலேற்படும்‌ புது பேதங்கள்‌ படு விஷத்தைக்‌ கக்குமே யொழிய வேறொரு குணமும்‌ காணக் கிடைக்காது. ஸ்த்ரீகள்‌ மனுஷ்ய வர்க்கத்திற்கே தாயாயிருக்கும்‌ தனிப் பெருமையுடையவர்கள்‌; அவர்கள்‌ அதற்காகவே பிறப்பிக்கப்பட்டவர்கள்‌. அதற்கனுகுணமாகவே அவர்களுடைய கல்வியோ, குணமோ, செயலோ இருக்க வேண்டும்‌. அவைகளை அழிக்க முயன்றால்‌ மானிட ஸமூஹமே
முறை கெட்டு நிலை கலங்கி அழிந்து விடும்‌. குடும்பமென்பது இடும்பையாய் விடும்‌, கிருஹமென்பது குட்டிச் சுவராய் விடும்‌. கற்பு நிலையென்பது அழிந்து, கல்யாணமென்பது ஓழிந்து உயிர்வாழ்வகுற்கோர்‌ நோக்கமுமில்லாமல்‌ உலகம்‌ சுடுகாடாய் விடும்‌, ஆண்‌ வார்சு க்ரமம்‌ மாறிப்‌ பெண்மலையாளமாகிவிடும்‌.-சொத்து விஷயத்தைப் பற்றிச்‌ சில உண்மைகள்‌ உரைக்க வேண்டி யிருக்கிறது.உழைப்பின்‌ கூலியில்‌ செலவழித்தது போக மிகுந்ததைச்‌ சேர்த்து வைத்ததே சொத்தாகும்‌. அதை அழிக்க முயற்சித்தார்களாகில்‌
உழைப்பதற்குத்‌ தூண்டுகோலே இல்லாமல்‌ போய்விடும்‌. எல்லோரும்‌ சோம்பேறிகளாகத்‌ திரிவார்கள்‌. சொத்தை அபஹரிக்கச்‌ சட்டம்‌ செய்வது பகல் கொள்ளைக்கு ஸமானமாகும்‌. ஏழைகளுக்கு என்னகதி? என்று நினைக்கலாம்‌. அவர்களுக்கு உழைக்க வேலையும்‌, உண்ண உணவும்‌, உடுக்க. ஆடையும்‌ கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டியது முற்காலத்திலும்‌ ராஜ தர்மமாகச்‌ சொல்லப்பட்டிருக்‌கிறது. செய்வதற்கு. வழிகளும்‌ சொல்லப்பட்டிருக்கின்‌றன. சொத்து என்னும்‌ தத்வமழிந்தால்‌, கணவன்‌, மனைவி என்னும்‌ ஸம்பந்தமும்‌, தாய்‌, தகப்பன்‌, பின்ளை, பெண்‌ என்னும்‌ ஸம்பந்தமும்‌ அழிந்துவிடும்‌. குடும்பமென்பது உடும்பு பிடித்தவன்‌ கைபோலாகி விடும்‌.-இவைகளெல்லாம்‌. போனால்‌ சுதந்திரமும்‌ பெரும்பாலும்‌ தானாகவே போய்விடும்‌. பேச்சு சுதந்திரம்‌, கார்ய சுதந்திரம்‌, முன்னோர்‌ மொழிந்த முறைப்படி வாழும்‌ சுதந்திரம்‌, மத சுதந்திரம்‌ முதவியவைகளை இழப்போமாகில்‌ நாம்‌ நடை பிணமாகவே கருதப் படுவோம்‌.-உயிர்‌ வாழ்வதற்கு ஓர்‌ நோக்கமும பலனும்‌ இல்லாமல்‌ போய்விடும்‌.-ஆகையினால்‌ சீர்திருத்தக்காரர்கள்‌ முன்‌ இருப்பதை மாற்றுவதற்கு முன்‌ பின்‌ வரும்‌ கெடுதல்களைப் பற்றி தீர்க்காலோசனை செய்ய வேண்டும்‌.

————-

சந்த்‌ரமா மநஸோ ஜாத:, சக்ஷாஸ்‌. ஸர்யோ அஜாயத
முகாதிந்த்‌ரச்‌ சாக்‌,நிச்ச, ப்ராணாத்‌, வாயுர ஜாயத–14-
[மனத்தில்‌ நின்றும்‌ சந்திரன்‌ ‘உண்டானான்‌. கண்ணிலிருந்து ஸூர்யன்‌ உண்டானான்‌. முகத்திலிருந்து இந்த்ரனும்‌, அக்னியும்‌ ஜனித்தார்கள்‌. ‘ ப்ராணனிலிருந்து வாயு உண்டானான்‌.]-இந்த மந்த்ரத்தில்‌ ஸர்வ லோகோபகாரகமான ஸ்ருஷ்டியைச்‌ சொல்லுகிறது. (சந்த்ரமா…ஜாத:) சந்திரன்‌ மனத்திலிருந்து உண்‌ டானான்‌. ஏன்‌ மனஸ்ஸிலிருந்து சந்திரன்‌ உண்டாக வேணும்‌? மற்ற அங்கங்களிலிருந்து ஏன்‌ உண்டாகக் கூடாது? பிரமனை சரீரமாகக்‌ கொண்ட பகவானுடைய மனஸ்ஸிற்கும்‌, சந்திரனுக்கும்‌ எவ்விதமான ஓற்றுமை இருக்கிறது? உலகிலிருப்பவர்களுடைய மனஸ்ஸிற்கு- ஸந்தோஷத்தைத்‌ தருபவனாதலால்‌ சந்திரன்‌ மனஸ்ஸிலிருந்து படைக்கப்பட்டான்‌. அவன்‌ உலகத்திலுள்ள உயிர்களுக்கும்‌, பயிர்‌களுக்கும்‌ குளிர்ச்சியையும்‌ ஸந்தோஷத்தையும்‌ உண்டாக்குபவன்‌-அவனுடைய கிரணங்களே பயிர்களுக்கு உயிர் கொடுப்பவை. சந்‌திரனில்லா விடில்‌ உலகம்‌ காய்ந்து தீய்ந்து விடும்‌. கேசவனும்‌ குளிர்ந்த சுபமான மனத்தை யுடையவன்‌.-அப்படிப்பட்ட மனத்தினால்‌ எல்லோரும்‌ வாழ்வதற்கு ஸங்கல்பித்து, அத்வேஷத்தை உண்‌டாக்கி, ஆபிமுக்யத்தை வளர்த்து ஞானப் பயிரை விருத்தி செய்கிறான்‌.-மேலும்‌ சந்திரன்‌ மனத்திற்கு அதி தேவதையாகவும்‌ இருக்கிறான்‌.-இக் காரணங்களால்‌ சந்திரன்‌ புருஷோத்தமனுடைய மனத்திலிருந்து உண்டானான்‌. (சக்ஷோஸ்‌…)உலகத்திற்குக்‌ கண்ணாயிருப்பவனும்‌, வெளி யிருளை விரட்டுபவனுமான ஸுர்யன்‌ அஞ்ஞானமாகிய இருளைப் போக்குகிற, மண்ணுக்கும்‌ விண்ணுக்கும்‌ கண்ணாகிய கண்ணனுடைய கண்ணிலிருந்து உண்டானான்‌. உலகத்தைப்‌ பார்க்‌கும்படி செய்வது கண்‌. ஸுூர்யனும்‌ பார்ப்பதற்கு ஸாதனமாயிருக்‌கிறான்‌., ஸூர்யன்‌ கண்ணுக்கு அதி தேவதை. கண்ணின்‌ ரோகங்‌கள்‌ ஸூர்ய நமஸ்காரம்‌ செய்வதினால்‌ போக்கப்படுவதாகச்‌ சொல்‌லப்படுகிறது. ஸூர்ய நமஸ்காரம்‌ வேதத்திலும்‌ உரைக்கப்படுகிறது. ஸூர்ய நமஸ்காரத்திலும்‌ ‘த்‌,யேயஸ் ஸதா ஸவித்ரு மண்‌டல மத்‌,யவர்த்தீ நாராயண:”” என்று சொல்லப்பட்ட, தாமரைக் கண்ணனான நாராயணனே நமஸ்கரிக்கப்படுபவன்‌. ஸூர்யன்‌ தன்‌ கிரணங்‌களால்‌ பாஹ்யாந்தகாரத்தைப்‌ போக்கடித்து, ப்ராணிகளுக்கு உஷ்ணத்தைக் கொடுத்து ஜீவிக்கும்படி செய்கிறான்‌. கேசவனுடைய கண்ணிலிருந்து உண்டாகும்‌ கடாஷத்தினால்‌, ஜிவர்கள்‌ அஜ்ஞானம்‌ நசிக்கப் பெற்று ஞான மடைந்து மோக்ஷம்‌ பெறுகிறார்கள்‌. ஆதித்‌யன்‌ தேஜோ மயமானவன்‌. அச்யுதனும்‌ தேஜோ மயமான தாமரை போன்ற கண்ணை யுடையவன்‌. ”தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்ட,ரீகமேவ மக்ஷிணீ” [அந்தப்‌ பரமபுருஷனுக்கு ஸூர்யனால்‌ மலரும்‌ தாமரை போன்ற இரு கண்களிருக்கின்றன.] என்றல்லவோ பர ப்ரஹ்ம லக்ஷணம்‌ சொல்லப் பட்டிருக்கிறது. இக் காரணங்களால்‌ பரந் தாமனுடைய கண்களிலிருந்து பாஸ்கரன்‌ உண்டானான்‌.-(முகாத்‌…)முகம்‌ ஆதிபத்யத்தையும்‌ தேஜஸ்ஸையும்‌ காட்டுகிறது. ஆகையால்‌ தேவர்களுக்கு அதிபதியானவனும்‌, தேஜோவானுமாயிருக்கும்‌ இந்‌திரன்‌ முகத்திலிருந்து உண்டானான்‌. .-தேஜோ மயமான அக்னியும்‌ முகத்திலிருந்து உண்டானான்‌. “அக்‌நி முகா வை தேஃவதா:”” [தேவதைகள்‌ அக்னியை முகமாக உடையவர்கள்‌.] என்கிறபடி தேவர்களுக்கு முகமாயிருக்கும்‌ அக்னி முகத்திலிருந்து உண்டாவது நியாயமே. (ப்ராணாத்‌ வாயுரஜாயத) ப்ராணனிலிருந்து வாயு உண்டானான்‌. ப்ராணன்‌ ஒரு வாயு விசேஷமே. அதிலிருந்து வாயு உண்டாயிற்று.-எல்லோருக்கும்‌ ப்ராணனாயிருக்கும்‌ வாயு ப்ராணனிலிருந்து உண்‌டாவது பொருத்த முடையது. வாயுவில்லாவிடில்‌ ஜீவிக்க முடியாது.-அனுமான்‌ வஜ்ராயுதத்தினால்‌ அடிபட்டபோது வாயு ஸ்தம்பித்ததும்‌ உலகமெல்லாம்‌ திண்டாடினது எல்லோரும்‌ அறிந்ததே. இம்மாதிரியாக உலகத்திற்கு உபகாரகமான வஸ்துக்கள்‌ உண்டாக்கப்பட்டன.

———-

நாப்‌,யா ஆஸீ த,ந்தரிக்ஷம்‌, சீர்ஷ்ணோ த்‌,யெளஸ்‌ ஸம வர்த்தத
பத்ப்‌,யாம்‌ பூ,மிர்‌ தி,சச்‌ ச்ரோத்ராத்‌, ததர லோகாந்‌ அகல்பயந்-
15-
[நாபியிலிருந்து ௮ந்‌தரிக்ஷம்‌ உண்டாயிற்று. தலையிலிருந்து ஸ்வர்க்கம்‌ உண்டாயிற்று. பாதங்களினின்றும்‌ பூமி உண்டாயிற்று. திக்குகள்‌ காதிலிருந்து உண்டாயின. அப்படியே லோகங்களை யெல்லாம்‌ பிரமன்‌ படைத்தான்‌.] இதில்‌ உலகங்களுடைய ஸ்ரூஷ்டி சொல்லப்படுகிறது) தேஹத்தின்‌ நடுவிலிருக்கும்‌ நாபியிலிருந்து பூமிக்கும்‌ மேலுலகங்களுக்கும்‌ நடுவிலிருக்கும்‌ அந்தரிக்ஷம்‌ உண்டாயிற்று.(சீர்ஷ்ணோ…) மேலேயிருக்கும்‌ தலையிலிருந்து மேலேழுலோகங்‌களும்‌ உண்டாயின. இங்கு “த்‌யெள:” என்னும் பதம்‌ மேலேழு உலகங்களையும்‌ உணர்த்துகிறது. (பத்ப்யாம்‌ பூமி🙂 பாதங்களி லிருந்து பூமி உண்டாயிற்று. திருவடிகளிலிருந்து: பிறந்ததா லன்றோ ‘பொருவில்‌ சீர்ப்பூமி” என்று ஆழ்வாரும்‌ புகழ்‌ந்திருக்கிறார்‌. தேஹத்தைத்‌ தாங்குவது திருவடி. எல்லோரையும்‌ தாங்குவதால்‌ தரணியென்று பெயர் பெற்றது பூமி. கேசவ நம்பியைக்‌ கால் பிடிக்‌கும்‌ பேற்றுக்குப் பிறந்தவள்‌ பூமி தேவி.“இடந்திருந்து நின்றனந்து கேழலாய்க்‌ கீழ்ப்புக்கு இடந்திடும்‌ தன்னுள்‌ கரக்கும்‌ உமிழும்‌ தடம்‌ பெரும்‌ தோளாரத்தழுவும்‌ பாரென்னும்‌ மால்‌ செய்கின்ற மால்‌ ஆர்‌ காண்பாரே”[கேழல்‌-வராஹம்‌. இடந்திடும்‌-கு த்தி எடுக்கும்‌. தன்னுள்‌ கரக்கும்‌- ‘தன்‌ வயிற்றினுள்ளே மறைத்து வைக்கும்‌. பார்‌-பூமி. மால்‌-திருமால்‌-அன்பு.] என்று நம்மாழ்வாரும்‌,“அரவாகிச்‌ சுமத்தியால்‌ அயிலெயிற்றின்‌ ஏந்துதியால்‌ ஒரு வாயின்‌ விழுங்குதியால்‌ ஓரடியால்‌ ஒளித்தியால்‌ திருவான நிலமகளை”?என்று கம்ப நாட்டாழ்வாரும்‌ அருளிச் செய்தபடி பகவானுடைய ஸர்வாவயவங்களாலும்‌, விசேஷமாகத்‌ திருவடியினாலும்‌ தீண்டப் பெற்ற வளன்றோ தரணி. இக் காரணங்களாலும்‌, மண்ணுலகில்‌ மாந்தர்கள்‌ உய்வதற்கு உபாயம்‌ நாராயணனுடைய திருவடிகளே என்று காட்டுவதற்கும்‌ பூமி திருவடிகளிலிருந்து படைக்கப்பட்டது. இங்கு பூமி கீழிருக்கும்‌ ஏழுலோகங்களையும்‌ காட்டும்‌. கீழேழுலோகங்களும்‌ திருவடிகளிலிருந்து படைக்கப்பட்டன என்று கொள்ள வேண்டும்‌-(திசச்‌ ச்ரோத்ராத்‌) காதுகளினின்றும்‌ திக்குகள்‌ படைக்கப்பட்டன. சப்தத்திற்கு ஆதாரமான திக்குகள்‌ சப்தத்தைக்‌ கேட்கும்‌ இந்த்ரியமான காதிலிருந்து படைக்கப்பட்டன. (தத…) அப்படியே இவ்‌ வண்டத்திலுள்ள மற்ற உலகங்களையும்‌ பரந்தாமனை அந்தர்யாமியாகக் கொண்ட பிரமன்‌ படைத்தான்‌.” அகல்பயந்‌ என்று பன்மை யாகச்‌ சொல்லியிருப்பது சாந்தஸம்‌ என்று கொள்ள வேண்டும்‌; அல்லது பிரமணை உபகரணமாகக் கொண்ட நித்ய ஸூரிகள் படைத்தனர்‌ என்றும்‌ கொள்ளலாம்‌.

———–

வேதாஹ மேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌
ஆதித்ய வர்ணம்‌ தமஸஸ்து பாரே
ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர:
நாமாநி க்ருத்வாபி,வதந்‌ யதாஸ்தே–
16-
[எல்லா சரீரங்களையும்‌ உண்டு பண்ணி, பெயர்களைக்‌ கொடுத்து அவைகளை உச்சரிததுக்‌ கொண்டிருப்பவரும்‌, ‘விகாரமற்றவரும்‌, ஸூர்யன் போன்‌ற வர்ணத்தை யுடையவரும்‌,ப்ரக்ருதி மண்டலத்திற்கு அப்பாலிருப்பவரும்‌, (எல்லா விதத்திலும்‌) பெரியவருமான இந்தப்‌ புருஷ, (வேத புருஷனாகிய) நான்‌ அறிகிறேன்‌.
வேத ஹமிதி மந்த்ராப்‌,யாம்‌ வைப,வம்‌ கதிதம்‌ ஹரே:” [“வேதாஹம்‌…” என்னும்‌ இரண்டு மந்த்ரங்களாலும்‌ ஹரியினுடைய வைபவம்‌ வெளியிடப்பட்டது.] என்று புருஷ ஸம்ஹிதையில்‌ இந்த மந்த்ரமும்‌, அடுத்த ருக்கும்‌, ஹரியின்‌ வைபவத்தைச்‌ சொல்லு
கின்றனவென்று உரைக்கப்பட்டது. வேத புருஷன்‌ மஹா புருஷனின்‌
மஹிமையை மகிழ்ந்துரைக்கும்‌ பாசுரங்களிவை. இந்த மந்திரத்தின்‌ முதலடி ஸ்ரீராமாயணத்தில்‌ **அஹம்வேத்‌மி மஹாத்மாநம்‌ ராமம்‌ ஸத்ய பராக்ரமம்‌” [நான்‌ உண்மையான பராக்ரமத்தை யுடையவனும்‌, மஹாத்மாவுமான ராமனை அறிவேன்‌.] என்ற விச்வாமித்ர வாக்யத்‌தினால்‌ உப ப்ரும்ஹணம்‌ செய்யப்பட்டது என்‌று பெரியவாச்சான்‌ பிள்ளை அருளிச் செய்திருக்கிறார்‌. பரமகாருணிகரான பெரியவாச்சான்‌ பிள்ளையின்‌ வியாக்யானத்தை அனுசரித்து நாம்‌ இங்கு விவரிக்‌கிறோம்‌. ராமாயணத்தில்‌ உப ப்ரும்ஹணம்‌ செய்யப்பட்டதால்‌ இந்த ஸ்ருதி ராமனாய்‌ அவதாரம் செய்த நாராயணனையே குறிக்கிறது என்‌பது தெளிவாகிறது. இந்த மந்த்ரத்தின்‌ முற்பாதி ஸ்வேதாஸ்வதரத்தி லும்‌ சிறிது வித்தியாசத்துடன்‌ படிக்கப்படுகிறது. இதிலிருந்து ஸர்வ வேதாந்த ப்ரத்யய ந்யாயப்படி, ஸ்வேதாஸ்வதரத்தில்‌ சொல்லப்படுபவனும்‌, இங்கு சொல்லப்படுபவனும்‌ ஸ்ரீமந்நாராயணனே என்று ஸித்திக்கிறது. அங்கு வியாக்யானம்‌ செய்த ரங்கராமாநுஜ முனியும்‌,“ப்ரக்ருதே: பரஸ்தாத்‌ ஜ்யோதி: மஹா புருஷம்‌ தமேவ நாராயணம்‌ விதி,த்வா ம்ருத்யு சப்‌,தி,தம்‌ ஸம்ஸாரம்‌ அதிக்ராமதி”‘[ப்ரக்ருதிக்கு மேற்பட்டவனும்‌, ஜ்யோதிர் மயமானவனும்‌, மஹா புருஷனுமான நாராயணனையே அறிந்து “ம்ருத்யு என்று சொல்லப்படும்‌ ஸம்ஸாரத்தைத்‌ தாண்டுகிறான்‌.] என்று பொருளுரைத்திருக்கிறார்‌.(அஹம்‌ வேத) நான்‌ அறிகிறேன்‌. இங்கு நான்‌” என்று சொல்லுபவன்‌ வேதபுருஷன்‌. பரமாத்மாவை அறிவதினாலும்‌, பிறரை அறியச் செய்வதினாலும்‌ வேதமென்றே பெயரும்‌ புகழும்‌ பெற்ற நான்‌ அறிகிறேன்‌. நித்யனான நான்‌ அறிகிறேன்‌. அபெளருஷேயனான நான்‌ அறிகிறேன்‌. ப்ரமம்‌ (தவறாக நினைத்தல்‌), விப்ரலம்பம்‌ (வஞ்‌சனை) முதலிய குறைகளில்லாத நான்‌ அறிகிறேன்‌. *வேதநம்‌”- உபா ஸநம்‌” என்னும்‌ சப்தங்களால்‌ சொல்லப்படுவதும்‌,தைல தாரயைப் போல்‌ இடைவிடாததும்‌ பார்ப்பதற்கு ஸமானமானதுமான பக்தி ரூபமான ஞானமே இங்கு *வேத;” என்று சொல்லப்படுகிறது. வாக்‌யத்தினல்‌ ஏற்படும்‌ அர்த ஜ்ஞானம்‌ மட்டுமல்ல. (வேத) அறிகிறேன்‌. . **ந சஷுஷா க்ருஹ்யதே‘” [பரமாத்மா கண்ணால்‌ காணப்‌படாதவன்‌.] என்றும்‌, **மநஸா து விசுத்‌தேந ”” [சுத்தமான மனத்தாலேயே அறியத் தக்கவன்‌)] என்றும்‌, “என்றேனும்‌ கட் கண்ணால்‌ காணாத அவ் வுருவை நெஞ்சென்னும்‌ உட் கண்ணால்‌ காணும்‌ உணர்ந்து”” என்றும்‌ சொல்லுகிறபடி வேத புருஷன்‌ தன்னுடைய ஞானக் கண்‌ணால்‌ கண்டு சொல்லுகிறான்‌. “நேதி நேதி ”[பரமாத்மா இப்படிப்‌பட்டவன்‌ அல்லன்‌; இப்படிப்பட்டவன்‌ ஓருவனுமில்லை.] என்றும்‌,““க இத்தா வேத; யத்ர ஸ:”” [பரமாத்மா இப்படிப் பட்டவன்‌ என்று யார்‌ அறிவார்‌?] என்றும்‌ ப்ரமாண பூதமான வேதத்திலும்‌ பரம புருஷன்‌ அறிய முடியாதவன்‌ என்று கீர்த்திக்கப் பட்டிருக்கிறது.“ப்‌ரஹ்ம ருத்‌,ரேந்த்‌ர பூதா நாம்‌ மநஸா மப்ய கோசரம்‌”[ப்ரஹ்மா, ருத்ரன்‌, இந்திரன்‌, என்னும்‌ இவர்களுடைய மனத்திற்‌கும்‌ எட்டாதவன்‌ ] என்றும்‌, “நான்முகன்‌ செஞ்சடையான்‌ என்றிவர்கள்‌ எம்பெருமான்‌ தன்மையை யாரறிகிற்பார்‌?”” என்றும்‌ ப்ரமாதாக்களான (அறிவுடையவர்களான) ப்ரஹ்ம ருத்ராதிகளாலும்‌ அச்யுதனை அறிய முடியாதென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. “ஸோ அங்க; வேத; யதி,வா ந வேத”: [(தன்‌ பெருமையை) அவனே அறிவனோ?அறியானோ?]என்றும்‌, “தனக்கும்‌ தன்‌ தன்மை அறிவரியானை’” என்றும்‌ புருஷோத்தமன்‌ தானும்‌ தன்‌ பெருமையை அறிய மாட்டான்‌ என்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அளவுபட்ட ஞானத்தை யுடைய ப்ரஹ்ம ருத்ராதிகள்‌ அறியாதது நியாயமே. *யஸ் ஸர்வஜ்ஞ: ஸர்வவித்‌’” “ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச ‘” என்னும்‌ ப்ரமாணங்களை நம்பி ஸார்ஜ்ஞ்யம்‌ கொண்டாடி ஒரு ஆசாரியன் பக்கல்‌ அடி பணிந்து அறியாமையால்‌ அவனும்‌ அறியான்‌. வேதம்‌ அறிந்தபடி எப்படி என்னில்‌: (மஹாந்தம்‌) அளவிட முடியாதவனென்றே அறிந்தது. “அறிந்தன வேதவரும்‌பொருள்‌ நூல்கள்‌ அறிந்தன கொள்க அரும் பொருளாதல்‌’” என்றும்‌, “யஸ்யாமதம்‌ தஸ்ய மதம்‌” [எவனுக்கு பரமபுருஷனை (அளவிட்டு) அறிய முடியவில்லையோ அவனே அறிந்தவனாகிறான்‌.] என்றும்‌ சொல்லியபடி அளவிட முடியாதவன்‌ என்று அறிகையே உள்ளபடி அறிவது. “வேதாஹம்‌’”’ என்பதை ராமாயணத்தில்‌ *அஹம்‌ வேத்மி”என்பது விவரிக்கிறது.-இங்கு ‘வேத’ என்பது அங்கு *வேத்மி‘ என்றும்‌,இங்கு “அஹம்‌’ என்பது அங்கு “அஹம்‌” என்றும்‌ சொல்லப்படுகிறது,(ஏதம்‌ வேத;) இப்படி ப்ரஸித்தமானவனை -அறிகிறேன்‌. ஸர்வ காரண புருஷனாயிருந்தும்‌, மனிசர்க்காகப்‌ படாதன பட்டு என் நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்த இவனை அறிகிறேன்‌- அவதார ஸெளலப்‌யத்தைக்‌ காட்டுவது இந்த ஏதச் சப்தம்‌. இங்கு “ஏதம்‌” என்பதை அங்கு :ராமம்‌” என்று அவதார நிர்தேசம்‌: செய்கிறது. (புருஷம்‌)அவன்‌ ஓருவனே புருஷன்‌ எனத் தகுந்தவன்‌. மற்றவர்கள்‌ ஸ்த்ரீ ப்ராயர்களே. ஸகல கல்யாண குணங்களாலும்‌ பூர்ணமானவன்‌ புருஷன்‌. இங்கு சொல்லப்படும்‌ செளர்ய வீர்யாதி குணங்கள்‌ ராமாயணத்தில்‌ “ஸத்ய பராக்ரமம்‌” என்று பேசப்படுகின்றன. புரி சேதே”என்ற வ்யுத்பத்தியின்படி வைகுண்டத்தில்‌ ஆதிசேஷன் மேல்‌ பள்ளி கொண்ட புருஷன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.-(ஏதம்‌ புருஷம்‌)-அங்குஷ்ட்ட மாத்ர: புருஷோந்தராத்மா ஸதா ஜநாநாம்‌ ஹ்ருதயே ஸந்நிவிஷ்ட:’” [கட்டை விரல்‌ பரிமாணாமுள்ளவனும்‌, அந்தர்யாமியுமான புருஷன்‌ ஜனங்களுடைய ஹ்ருதயத்தில்‌ எப்பொழுதும்‌ இருக்கிறான்‌. ]என்று சொல்லுகிறபடி எல்லா ஜனங்களுடைய ஹ்ருதய புரத்திலும்‌ வசிப்பவன்‌ புருஷன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. தேசாந்தரத்‌தில்‌ எட்டியிராமல்‌ அருகில்‌ அந்தர்யாமியாயிருப்பதால்‌ “இந்தப்‌ புருஷன்‌’ என்று சொல்லப்படுகிறான்‌. அவன்‌ பரவஸ்து வாயிற்றே யென்று நாம்‌ பயப்படவேண்டியதில்லை.-அருவருக்கும்படியான தோஷங்களுக்கு இவர்கள்‌ ஓரு கொள்கலமாயிற்றே என்று அவன்‌ அகல நிற்க மாட்டான்‌. அவனிடம்‌ நாம்‌ முறையிடும்போது முன் வருவதற்காக அருகிலேயே அமர்ந்திருப்பவன்‌.-(மஹாந்தம்‌) இதை அனுஸரித்து ஸ்ரீராமாயணத்தில்‌ ‘மஹாத்மானம்‌‘ எனப்படுகிறது.-மிகவும்‌ பெரியவனென்று அறிவேன்‌. *“ஸ உ ச்ரேயாந்‌ ப,வதி ஜாயமாந ”” [அந்தப்‌ புருஷோத்தமன்‌ பிறந்த பின்பே பெரியவனாகிறான்‌.] என்று தாழ்ந்தார்க்கு முகங்கொடுக்கைக்காகப்‌ பல அவதாரங்‌கள்‌ செய்த பின்பு அவனைப்‌ பெரியவனென்று அறிகிறேன்‌. எல்லா விதத்திலும்‌ பெரியவன்‌ பரம புருஷன்‌.-(மஹாந்தம்‌) ஸ்வரூபத்தில்‌ பெரியவன்‌ இவன்‌ ஓருவனே. எங்கும்‌ பரந்துளன்‌. (மஹாந்தம்‌) குணங்களில்‌ பெரியவன்‌. கணக்கற்ற கல்யாண குணங்களை யுடையவன்‌. ஓவ்வொரு குணமும்‌ அளவிட முடியாதது. ஆனந்த குணம்‌ ஓன்றை மட்டும்‌ அளவிடப் பார்த்த வேதம்‌ யதோ வாசோ நிவர்த்‌தந்தே” என்று கை விட்டுத்‌ திரும்‌பி வந்ததல்லவோ? எல்லையில்‌ ஞானத்தன்‌’ என்று-ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தபடி அளவற்ற ஞானத்தை யுடையவன்‌; பலத்தில்‌ பெரியவன்‌; ஐஸ்வர்யத்தில்‌ பெரியவன்‌: வீர்யத்தில்‌ விஞ்சியன்‌; சக்தியில்‌ சிறந்தவன்‌; தேஜஸ்ஸில்‌ மிக்கவன்‌: பிறருடைய துக்கத்தைக் கண்டு ஐயோ வென்று இரங்கும்‌ தயையை யுடையவன்‌. அடியார்களின்‌ தோஷத்தை அறியாதவன்‌-தன்னடியார்களின்‌ தோஷங்களை குணங்களாகக்‌. கொள்ளும்படியான வாத்ஸல்யத்தையுடையவன்‌. “செய்தாரேல்‌ நன்று செய்தார்‌” என்றும் அல்லவோ அவன் வார்த்தை-அபயம்‌ ஸர்வ பூதேப்‌யோத,நாம்யே தத்‌ வ்ரதம்‌ மம” [(என்னை சரணமடைந்தவனுக்கு) எல்லா பூதங்களிடமிருந்தும்‌ அபயமளிக்கிறேன்‌. இதுவே என்னுடைய” விரதம்‌.]என்று சொல்லி ஆபத்தில்‌ அகப்பட்டவர்களை ௮ஞ்சலென்று அளிக்கும்‌ அரிய பெரிய ஸ்வபாவத்தை யுடையவன்‌. பெரிய விரோதிகளையும்‌ புழுப் பூச்சிகளை நசுக்குவது போல்‌ நசுக்க வல்ல பராக்ரமத்தை யுடையவர் ஜயிப்பரோ? தோற்பரோ?” என்னும்‌ ஸந்தேஹம்‌ இவருடைய பராக்ரம விஷயத்தில்‌ கிடையாது. “நாவிஜித்ய நிவர்த்ததே’ என்றும்‌ “சென்று கொன்று வென்றி கொண்ட”” என்றும்‌ சொல்லுகிற படி புறப்பட்டால்‌ ப்ரபல விரோதிகளையும்‌ பராஜயப் படுத்தித்‌ தலையறுத்தல்லது மீளார்‌. (மஹாந்தம்‌) பெருமை யுள்ள சரீரத்தை யுடையவன்‌. “மாசூணாச்‌ சடருடம்பாய்‌’* என்றும்‌, “ந தஸ்ய பராக்ருதா மூர்த்தி: மாம்ஸமே தோஸ்தி,ஸம்பவா”” அந்த மஹா புருஷனுக்கு மாம்‌ஸங்களாலும்‌, கொழுப்பினாலும்‌, எலும்புகளாலுமான ப்ராக்ருத சரீரம்‌ கிடையாது. என்றும்‌, “*நித்யம்‌ நித்யாக்ருதிதரம்‌”” [ நித்யமானவனும்‌,நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனும்‌] என்றும்‌ சொல்‌லப்பட்ட நித்ய நிரவத்ய நிரதிசய ஓளஜ்வல்யமுடைய (என்றும்‌”குற்றமற்றதும்‌ ஓப்பற்ற ஓளியை யுடையதுமான) சரீரத்தையுடையவன்‌. எல்லா அண்டங்களிலுமுள்ள ஸகல சேதனாசேதனங்களையும்‌ சரீரமாக உடையவனாதலால்‌ பெரிய சரீரத்தை யுடையவன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (மஹாந்தம்‌) பரமாத்மாவாயிருப்பவன்‌. *யஸ்‌மாத்‌ பரம்‌ நாபரமஸ்தி கிஞ்சித்‌‘ [எவனைக் காட்டிலும்‌ பெரிய வஸ்து வேறொன்றும்‌ கிடையாதோ.] என்றும்‌, “ந தத் ஸமச்ச அப்‌,யதி,கச்ச த்ருஸ்யதே” | அவனுக்கு ஸமானமானவனும்‌, மேலானவனும்‌ காணப்‌ படவில்லை.] என்றும்‌, தமீஸ்வராணாம்‌ பரமம்‌ மஹேஸ்வரம்‌, தம்‌ தேவதா நாம்‌ பரமம்‌ ச தைவதம்‌’” [ஈஸ்வரர்களுக்கும்‌ மேலான ஈஸ்வரனும்‌, தேவதைகளுக்கும்‌ மேலான தேவதையுமான அவனை] என்றும்‌, “ஒத்தார்‌ மிக்காரை இலையாப மாமாயா!’ என்றும்‌ சொல்லுகிறபடி தேவாதி தேவனாய்‌, ஆதி மூலமாய்‌, அந்தர்யாமி யாயிருப்பவன்‌.(ஆதித்யவர்ணம்‌) ஸூர்யனைப் போன்ற ஓளியை யுடையவன்‌.-கோடி ஸூர்ய ப்ரகாசத்தையுடைய பரஞ் சோதிக்கு அல்ப ப்ரகாசத்தை யுடைய ஆதித்யனை உபமானமாகச்‌ சொல்லலாமோ? எனில்‌: நாம்‌ கண்ணால்‌ காணும்‌ ஜ்யோதிஸ் ஸுகளுக்குள்‌ ஸூர்யனே மிகுந்த ஓளி யுடையவனாகக்‌ காணப்படுவதால்‌ அவனே உபமானமாகச்‌ சொல்லப் பட்டான்‌. ‘ய ஏஷ அந்தராதித்யே ஹிரண் மய: புருஷ:’” [ஸூர்யனுக்கு நடுவில்‌ ஸுவர்ணம்‌ போன்ற ஓளியை யுடையபுருஷன்‌ ] என்று பரம புருஷன்‌ வர்ணிக்கப்பட்டானன்றோ.-இந்த மஹா புருஷணையே “ஸவிதுர்‌ வரேண்யம்‌’” என்று காயத்ரியில்‌ அனு சந்திக்கிறோம்‌. :மலர் கதிரின்‌ சுடருடம்பாய்‌’” என்று ஆழ்வாரும்‌ அருளினார்‌. வேதங்களும்‌, வைதிக புருஷர்களும்‌ இவனைப் பேசப்‌ புக்கால்‌ ஸூர்யனுக்கு ஓப்பான ஒனியை யுடையவன்‌ என்றே பாசுரமிடுகிறார்கள்‌. (தமஸஸ்து பாரே) தமஸுக்கு அக்கரை யிலிருப்பவன்‌-தமஸ;: பரமோ தாதா சங்க,சக்ர கதா தர’”’ என்று மண்டோதரியால்‌ சொல்லப்பட்ட சக்ர பாணியே இவன்‌. *தம:” என்பது மூலப்ரக்ருதியைக்‌ குறிக்கிறது. ப்ரக்ருதி மண்டலத்திற்கு அப்பாலிருப்பவன்‌ என்று பொருள்‌. *தம:’ என்பது அஜ்ஞானத்தையும்‌ ஸம்ஸாரத்‌ தையும்‌ குறிக்கும்‌. “ஸோத்‌,வந: பாரமாப்நோதி தத்‌ விஷ்ணோ: பரமம்‌ பதம்‌” [அவன்‌ ஸம்ஸாரத்திற்கு அக் கரையை அடைகிறான்‌. அதுவே விஷ்ணுவினுடைய பரம பதம்‌] என்று கடோபனிஷத்தில்‌ சொல்லப்‌ பட்டிருப்பதிலிருந்து இங்கு சொல்லப்பட்டதும்‌ விஷ்ணுவினுடைய பரமபதமே என்று நிஸ் ஸந்தேஹமாக நிச்சயிக்கப்படுகிறது.(ஸர்வாணி…) சேதனர்கள்‌ “லூந பக்ஷ இவாண்ட ஐ:’* என்று சிறகொடிந்த பக்ஷி போல்‌ அசித் ஸமராய்‌, கரண களேபரமற்று போக மோக்ஷ சூந்யராய்‌ இருக்கும்படியான எளிவரவைக் கண்டு தயையுடைய மனஸ்ஸை யுடையவனாய்‌ அவர்கள்‌ தன்னை அடைவதற்காக சரீரங்களைக்‌ கொடுத்து நாம ரூபங்களை ஏற்படுத்தினான்‌. (ஸர்வாணி ரூபாணி விசித்ய) தேவர்‌, மனுஷ்யர்‌, திர்யக்‌ (ஊர்வன) ஸ்தாவரம்‌ எனப்படும்‌ நான்கு விதமான சரீரங்களையும்‌ ஏற்படுத்தி. (நாமாநி க்ருத்வா…) அவர்களுக்கு நாமங்களைக் கொடுத்து அவற்றை உச்சரித்துக் கொண்டு எந்தப் பரமாத்மா இருக்கிறாரோ அவரை அறிவேன்‌. “*அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி””[இவற்றைவியாபித்து நாம ரூபங்களைக்‌ கொடுக்கக் கடவேன்‌] என்று பரமபுருஷன்‌ ஸங்கல்பிப்பதாகச்‌ சொல்லப்பட்டிருக்கிறதன்றோ. (தீர)இம் மாதிரியாக இவற்றை வியாபித்து இவற்றுக்கு நாம ரூபங்களைக்‌ கொடுத்த போதிலும்‌ அவற்றின்‌ விகாரங்கள்‌ தன் மேல்‌ படாதபடி இருப்பதால்‌ புருஷோத்தமன்‌ தீர-என்று சொல்லப்படுகிறான்‌.-புத்தியை ரமிக்கச் செய்பவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.-யத்‌” என்கிற விடத்தில்‌ நபும்ஸகலிங்கம்‌ சாந்தஸம்‌.-இதிலிருந்து உண்மையான தத்வமான வேதம்‌ ஒன்றிருக்கிற தென்று அறிகிறோம்‌. “புருஷம்‌” என்பதிலிருந்து ‘ ப்ரமாத்மாவுக்கு குணங்களிருக்கின்‌றனவென்று. ஏற்படுகிறது. *மஹாந்தம்‌’ என்பதிலிருந்து அவனுக்குக்‌ கீழ்ப்பட்டவர்கள்‌ உளர்‌ என்று உணர்த்தப்‌படுகிறது. “ஆதித்ய வர்ணம்‌” என்பதிலிருந்து அஸாதாரணமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவன்‌ என்றும்‌ தெரிவிக்கப்படுகிறது. ‘*தமஸஸ்து பாரே”” என்று அப்ராக்ருதமான திவ்ய தேசத்தில்‌ திகழ்கின்றான்‌ தாமோதரன்‌ என்றும்‌ ஏற்படுகிறது.” அநேக சேதனர்கள்‌ உண்மையாக இருக்கின்றனரென்றும்‌-அவர்களுக்கு நாம ரூபங்களைக்‌ கொடுத்தான்‌ என்பதும்‌ அறியப்படுகிறது.-இவைகளை ஓப்புக் கொண்டால்‌ அத்வைதம்‌ அழிந்து விடும்‌ என்னும்‌ பயத்தினால்‌ வேதம்‌ வாஸ்தவமல்ல வென்றும்‌, புருஷோத்தமனுக்கு ரூபமில்லை, குணமில்லை, ஸ்தானமில்லை என்றும்‌ சேதனாசேதநங்கள்‌ உண்மையல்ல வென்றும்‌, மாயையினால்‌ ஏற்படும்‌ தோற்றமே யென்றும்‌ சொல்லும்‌ மாயா வாதிகளின்‌ மதம்‌ முழுவதும்‌ இங்கு மறுக்கப்பட்டது.

————-

தாதா புரஸ்தாத்‌, யமுதாஜஹார சக்ர: ப்ரவித்‌,வாந்‌ பரதி ,சச்சதஸ்ர:
தமேவம்‌ வித்‌,வாந்‌ ௮ம்ருத இஹப,வதி நாந்ய: பந்தா: அயநாய வித்‌யதே.-17-
[எவரை முன்‌ பிரம தேவர்‌ தியானித்தாரோ, பரமாத்ம ஜ்ஞானியான இந்திரன்‌ எவரை உபாஸித்தானோ, எட்டு திக் பாலகர்களும்‌ (ருஷிகளும்‌) எவரை தியானம்‌ செய்தனரோ அந்தப் பரம புருஷனை இம் மாதிரியாக அறிபவன்‌ இந்த ஜன்மத்திலேயே முக்தி யடைகிறான்‌. மோக்ஷத்திற்கு வேறு வழியில்லை.] வேத புருஷன்‌ தன்னைத் தவிர மற்றும்‌ சிலரும்‌ இந்த மஹா புருஷனை அறிந்துள்ளார்களென்று வெளியிட்டு அவனை இம் மாதிரி அறிவதே மோக்ஷோபாயம்‌ என்று நிர்ணயிக்கிறான்‌. (ததா…) முதலில்‌ ஸ்ருஷ்டிக்கப்பட்ட பிரமன்‌ மஹா புருஷனை தியானித்தார்‌ என்று சொல்லப்படுகிறது. ஸ்ருஷ்டிக்கு முன்‌ ஸ்ருஷ்டி செய்ய வழி தெரியாத நான்முகன்‌ பகவானை நோக்கி தியானம்‌ செய்தாரென்று இதிலிருந்து ஏற்படுகிறது.
“யுக கோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்‌ய பத்‌ம பூ , புநஸ்‌ த்ரைலோக்ய தாத்ருத்வம்‌ ப்ராப்தவாநிதி சுச்ரும:”[பிரமன்‌ ஆயிரங் கோடி யுகங்கள்‌ விஷ்ணுவை ஆராதித்து, அடுத்த கல்பத்திலும்‌ ப்ரஹ்ம பட்டத்தை அடைந்தான்‌ என்று கேள்விப் படுகிறோம்‌.] என்று சொல்லப்பட்டபடி தன்‌ பதவிக்காகச்‌ சென்ற கல்பத்தில்‌ பிரமன்‌ புருஷோத்தமனைத்‌ தியானித்தார்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (சக்ர:…) நூறு அச்வமேத யாகங்கள்‌ செய்து பகவானை ஆராதித்து இந்திரப் பதவியை அடைந்தான்‌ இந்திரன்‌-அடுத்த மன்வந்தரத்தில்‌ இந்திரப் பதவியை அடையப் போகும்‌ மஹா பலியும்‌ அம்மாதிரியே பகவானை உபாஸித்திருக்கிறார்‌. (ப்ரதிச:…) ‘சதஸ்ர:’ என்று கிழக்கு முதலிய நான்கு திக்குகளும்‌ ப்ர திச:என்று தென் கிழக்கு முதலிய விதிக்குகளும்‌ சொல்லப்படுகின்‌றன. இந்த எட்டுத்‌ திக்குகளுக்கும்‌ பாலகர்களும்‌, இந்த திக்குகளிலுள்‌ள ரிஷிகளும்‌ இப் பதங்களால்‌ உணர்த்தப்படுகின்றனர்‌.-அவர்களும்‌ புருஷோத்தமனை உபாஸிக்கிறார்களென்று ஏற்படுகிறது. ஈசான்ய திக்கிற்கு அதிபதியும்‌ அங்கு வாஸம்‌ செய்பவருமான சிவனும்‌ இந்தப்‌ பரம புருஷணையே உபாஸனை செய்கிறார்‌ என்றும்‌ ஏற்படுகிறது.

நம்மாழ்வாரும்‌ இதையே, “கள்வா! எம்மையும்‌ ஏழுலகும்‌ நின்‌ உள்ளே தோற்றிய இறைவ! என்று வெள்ளேறன்‌ நான்முகன்‌ இந்திரன்‌ வானவர்‌ புள்ளூர்தி கழல்‌ பணிந்து ஏத்துவரே”-[வெள்ளேறன்‌–வெளுத்த காளையை வாஹனமாகவுடைய சிவன்‌.-புள்ளூர்தி–கருட வாஹனன்‌.] என்று அருளிச் செய்தார்‌. அத்ரி, ப்ருகு, காச்யபர்‌, கர்தமர்‌, தக்ஷர்‌, வஸிஷ்டர்‌, நாரதர்‌, வால்மீகி, பராசரர்‌, வியாஸர்‌, சுகர்‌, செளநகர்‌, யாஜ்ஞவல்க்யர்‌ முதலிய ரிஷிகளும்‌ இந்த இருடீகேசனையே ஏத்துகிறார்கள்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது. (தம்‌) இப்படிப்பட்ட ப்ரஸித்தமான பரமாத்மாவான நாராயணனை. (ஏவம்‌ வித்வாந்‌) இம் மாதிரியாக அறிபவன்‌. ஸர்வ காரண பூத னென்றும்‌, ஸர்வ ரக்ஷகனென்றும்‌, ஸமஸ்த கல்யாண குணாத்மகனென்றும்‌, ஸ்ரீவைகுண்ட வாஸனென்றும்‌, அஸாதாரணமான திவ்ய மங்கள விக்ரஹ முடையவனென்றும்‌, சேதனர்களுக்கு நாம ரூபங்‌களையும்‌, கரண களேபரங்களையும்‌ கொடுப்பவனென்றும்‌, பிரமன்‌, ருத்ரன்‌, இந்திரன்‌, முதலியவர்களால்‌ பூஜிக்கப் படுபவனென்றும்‌ அறிபவன்‌. இங்கு ‘அறிவு’ என்பது தியான ரூபமான அறிவையே காட்டுகிறது. (அம்ருத…) * இந்த ஜன்மத்திலேயே பிறப்பிறப்பாகிற ஸம்ஸார ஸாகரத்தைத்‌ தாண்டுகிறான்‌. இந்த உலகத்திலேயே முக்தனுக்கு ஸமானமாக ஆகிறான்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. (ப்ராரப்த கர்மம்‌ எந்த ஜன்மத்தில்‌ முடிகிறதோ, அந்த ஜன்‌ மத்திலேயே மோக்ஷம்‌. என்பது சாஸ்திரார்த்தமாயிருக்க, “இந்த ஜன்மத்திலேயே’ என்ற்து. எப்படியெனில்‌: ‘ஏதம்‌ புருஷம்‌* என்று அவதாரத்தைக் காட்டுகையால்‌, அவதார ரஹஸ்ய ஜ்ஞாநத்தோடு கூடிய பக்தியாலே இந்த : ஜன்மத்திலேயே மோக்ஷமடைகிறான்‌ என்பது “புநர் ஜந்ம நைதி’” [கீதை] முதலான ப்ரமாணங்களில்‌. உணர்த்தப் பட்டதாகையாலே விரோதமில்லை.)

நம்‌மாழ்வாரும்‌, “பிடித்தேன்‌ பிறவி கெடுத்தேன்‌ பிணி சாரேன்‌”” என்று
பரந்தாமனின்‌ பாதங்களைப்‌ பிடித்தவுடன்‌ பிறப்பு இறப்பு முதலிய ஸகல துக்கங்களும்‌ நீங்குகின்றன என்றல்லவோ அருளினார்‌. நாராயணனை அடி பணிந்து, பல்லாண்டு பாடி, ஆனந்த ஸாகரத்தில்‌ அமிழ்ந்து “அச் சுவை பெறினும்‌ வேண்டேன்‌” என்று சொல்லுபவர்‌களை முக்தர்கள்‌ என்று சொல்லத்‌ தட்டில்லை.-அவர்கள்‌ கலி தன்னைக்‌ கடக்கப்‌ பாய்ந்தவர்களே. (நாந்ய:..) மோக்ஷமடைவதற்கு வேறொரு மார்க்கமும்‌ கிடையாது. “அயநாய* என்றவிடத்தில்‌ பரம பதமடைவதற்கு’ என்று ஸ்வேதாஸ்வதரோபதிஷத் பாஷ்யத்தில்‌ சங்கரர்‌ வியாக்யானம்‌ செய்தார்‌.-இவ் விடத்தில்‌,“நாயமாத்மா ப்ரவசநேஈ லப்‌ய: ந மேதயா ந ப,ஹுநா ஸ்ருதேந யமேவைஷ வ்ருணுதே தே லப்‌,ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌”[| இந்தப்‌ பரமாத்மா (பக்தி யில்லா) ஸ்ரவண மனன தியானங்களால்‌ அடையத் தக்கவனல்லன்‌: எவனை இப் பரம புருஷன்‌ வரிக்கிறானோ அவனுக்கே தன்‌ ஸ்வரூபத்தைக்‌ காட்டுகிறான்‌.]“ந கர்மணா ந ப்ரஜயா த,நேந த்யாகே,ந ஏகேந அம்ருதத்வ மாநசு:’?[கர்மத்தினாலும்‌, ப்ரஜையினாலும்‌, தனத்தினாலும்‌, மோக்ஷமடைய முடியாது. நீயாஸ வித்யை (சரணாகதி) யினாலேயே (பலர்‌) மோக்ஷ
மடை ந்தனர்‌] என்னும்‌ ஸ்ருதி வாக்யங்கள்‌ அனுஸந்திக்கத் தக்கன. கீதாசார்யனும்‌,
நாஹம் வேதைர் ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா
சக்ய ஏவம் விதே த்‌ரஷ்டும்‌ த்‌ருஷ்டவாநஸி மாம்‌ யதா
ப,க்த்யா த்வத் அந்யயா சக்ய: அஹமேவம்‌ விதோர்‌ஜுந”[அர்ஜுனா! (என்னிடத்தில்‌ பக்தி யற்ற) வேதாத்யயனத்தாலும்‌, தபஸ்ஸுகளாலும்‌, தானத்தினாலும்‌, யாகத்தினாலும்‌, நீ என்னைக்‌கண்டது போல்‌, நான்‌ (எவராலும்‌) காணத் தக்கவனல்லன்‌. அனன்ய ப்ரயோஜனமான பக்தியினாலேயே காணத் தக்கவன்‌.] என்று அருளிச் செய்தாரன்றோ. இந்த மந்த்ரத்தில்‌, பிரமன்‌, இந்திரன்‌ முதலிய பலர்‌ பரமாத்‌மாவை உபாஸிப்பதாகச்‌ சொல்லப் படுவதிலிருந்து ஜீவாத்மாக்கள்‌ பலருண்டென்பது ஸித்திக்கிறது. *தம்‌ ஏவம்‌ வித்‌வாந்‌ என்பதிலிருந்து அறியப் படுபவன்‌, அறிவு, அறிகிறவன்‌ என்னும்‌ மூன்றும்‌ உண்டென்று உணர்த்தப்படுகிறது. “ஏவம்‌” என்பதிலிருந்து மேலே சொன்னபடி ஸமஸ்த கல்யாண குண ஸம்பன்னனென்றும்‌, விக்ரஹ விபூதி விசிஷ்டனென்றும்‌ அறிய வேண்டும்‌ என்று அறிவிக்கப்படுகிறது. ‘விக்ரஹமில்லை; விபூதியில்லை: குணமில்லை’ என்பவருடைய பிடரியைப்‌ பிடித்துப்‌ புறக்கணிக்கிறது இவ்வாக்கியம்‌. “ஏவம்‌ வித்‌வாந் -என்பதை கீதாசார்யன்‌ *ஏவம் விதோ த்ரஷ்டும்‌* [இம் மாதிரி காண்பதற்கு] என்றும்‌, ‘பக்த்யா” என்றும்‌ விவரித்த படியால்‌ இங்கு சொல்லப்படும்‌ அறிவு காண்பதற்கு ஸமானமான பக்தியே என்று ஏற்படுகிறது. ஆகையால்‌ வாக்யார்த்த ஜ்ஞானத்தினால்‌ மோக்ஷமடைய முடியாதென்றும்‌ ஸித்திக்கிறது. “அம்ருதோ பவதி‘ என்பதிலிருந்து ஸம்ஸாரி, முக்தன்‌ என்னும்‌ பேதமுண்டென்றும்‌ தெரிவிக்கப்படுகிறது.

—————–

யஜ்ஞேந யஜ்ஞமயஜந்த தே,வா: தாநி தர்மாணி ப்ரதமா ந்யாஸந்
தே ஹ நாகம்‌ மஹிமாநஸ்‌ ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்‌யாஸ்‌ ஸந்தி தேவா–18- [நித்ய ஸூரிகள்‌ பிரமனை உபகரணமாகக் கொண்டு ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தைச்‌ செய்தார்கள்‌. அந்த யஜ்ஞம்‌ முதலிய்‌ தர்மங்‌கள்‌ முக்யங்களாக ஆயின.-இவ் விதமாக அறிபவர்கள்‌ மஹிமை யுடையவர்களாய்‌ பழைமை யானவர்களான நித்ய ஸூ9ரிகள்‌ வாஸம்‌ செய்யும்‌ பரம பதத்தை அடைகிறார்கள்‌.] இந்த மந்த்ரத்தின்‌ பூர்வார்த்தத்தில்‌ இந்த அனுவாகத்தில்‌ சொல்லப்பட்ட ஸ்ருஷ்டி ப்ரகாரமும்‌ பின்‌ பாதியில்‌ *வேதாஹம்‌”
என்னும்‌ இரண்டு மந்த்ரங்களினால்‌ சொல்லப்பட்ட பகவதுபாஸனமும்‌ அதின்‌ பலமும்‌ சொல்லப் படுகின்‌றன வென்று வித்யாரண்யர்‌.“நாராயணம்‌” என்று ப்ரஸித்தமான புருஷ ஸூக்தத்தின்‌ பூர்வானுவாகம்‌ இந்த ருக்குடன்‌ முடிவடைகிறது. (யஜ்ஜஞேந ..) யஜ்ஞத்‌திற்கு முக்ய ஸாதனமான பிரமனைக் கொண்டு நித்ய ஸூரிகள்‌ ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தைச்‌ செய்தனர்‌. (தாநி…) அது முதல்‌ அந்த யஜ்ஞம்‌ தானம்‌ முதலிய தர்மங்கள்‌ முக்யமானவையாக ஆயின-தர்மார்த்த காம மோக்ஷம்‌ எனப்படும்‌ நான்கு புருஷார்த்‌தங்களுக்கும்‌ ஸாதனமாயிருக்கின்றன. கீதையில்‌,
ஸஹ யஜ்ஷஞை: ப்ரஜாஸ்‌ ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:
அநேந ப்ரஸவிஷ்யத்‌வம்‌ ஏஷ வோஸ் த்விஷ்ட காம துக்‌”(யஜ்ஞங்களுடன்‌ கூட, ப்ரஜைகளை முன்‌ ஸ்ருஷ்டித்து, பகவான்‌ பின் வருமாறு சொன்னார்‌:–இந்த யஜ்ஞத்தைக் கொண்டு வ்ருத்தி யடையுங்கள்‌. இது நீங்கள்‌ விரும்பியதை யெல்லாம்‌ கொடுக்கக்‌ கடவது.] என்று சொல்லப்பட்டது இங்கு அனுஸந்திக்கத்தக்கது.(தேஹ…) இந்த ஸ்ருஷ்டி ரூபமான யஜ்ஞத்தை அறிந்து அர்தத்‌துடன்‌ அனுஸந்திப்பவர்கள்‌, ஸனாதனிகரான ஸாத்யர்களென்னும்‌ பெயரை யுடைய நித்ய ஸூரிகள்‌ வாழும்‌ ஸ்ரீ வைகுண்டத்தை மஹிமை யுடையவர்களாய்‌ அடைகிறார்கள்‌. (நாகம்‌) *நாகஸ்ய ப்ருஷ்டே,” என்று நாராயண வல்லியில்‌ சொல்லப்பட்ட ஸ்ரீ வைகுண்டமே இங்கு சொல்லப்படுகிறது. (மஹிமான….) ஜ்ஞான ஸங்கோச மில்லாதவர்‌களாக அனந்த கருட விஷ்வக்ஸேனாதி களிருக்கும்‌ பரமபதத்தை அடைகிறார்கள்‌.
ஒளிக் கொண்ட சோதியமாய்‌ உடன்‌ கூடுவதென்று கொலோ..? அளிக்கின்ற மாயப் பிரான்‌ அடியார்கள்‌ குழாங்களையே” என்று ஆழ்வாரால்‌ பிரார்த்திக்கப்பட்ட பலத்தைப்‌ பெறுவார்கள்‌. இதிலிருந்து ஸாத்ய தேவர்களென்று சிலர்‌ இருக்கிறார்களென்றும்‌ அவர்கள் இருக்குமிடத்தை யடைவதே மோக்ஷ மென்றும்‌ ஏற்படுகிறது. ஸாத்யர்‌-ப்ராப்யா்‌.

————-

உத்தரானுவாகம்‌.
1-அத்ப்‌யஸ்‌ ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விஸ்வ கர்மணஸ்‌ ஸம வர்த்ததாது,
தஸ்ய த்வஷ்டா விததத்‌, ரூபமேதி தத் புருஷஸ்ய விஸ்வமாஜா நமக்‌ரே.[உலகம்‌ ஐலத்தினின்றும்‌ உண்டாயிற்று. பூமியிலுள்ள அன்ன ரஸத்தினால்‌ விருத்தி யடைந்தது. பரம புருஷனிடத்திலிருந்து உண்‌டாயிற்று. புருஷோத்தமன்‌ அதை தரித்துக் கொண்டு வியாபிக்கிறான்‌. ஆகையால்‌ இவ் வுலகமெல்லாம்‌ மஹா புருஷனுக்கு சேஷமாயிருப்பது என்று முன்னமே அறிந்தேன்‌.]-(அத்ப்யஸ்‌ ஸம்பூத:) உலகம்‌ நீரிலிருந்து உண்டாயிற்று என்று சொல்லப்படுகிறது. மஹோபனிஷத்தில்‌,
அத; புநரேவ நாராயணஸ்‌ ஸோந்யம்‌ காமம்‌ மநஸா த்‌யாயீத
தஸ்ய த்‌யாநாந்தஸ் தஸ்ய லலாடாத்‌ ஸ்வேதோபதத்‌ தா இமாஆப: தத்‌ ஹிரண்மய மண்டம பவத்‌”[பிறகு, நாராயணன்‌ மற்றொரு ஸங்கல்பத்தை மனத்தினால்‌ செய்தார்‌:ஸங்கல்பம்‌ செய்தவுடன்‌ அவருடைய நெற்றியிலிருந்து வேர்வை விழுந்தது. அதுவே இங்கு காணப்படும்‌ தண்ணீர்‌. அதில்‌ ஹிரண்‌ மயமான அண்டம்‌ உண்டாயிற்று.] என்று சொல்லப்பட்டது இங்கு உணர்த்தப்படுகிறது. இதுவே அப ஏவ ஸஸர்ஜாதெள…ததண்ட,மபவத்‌ ஹைமம்‌’ [நாராயணன்‌ தண்ணீரை முதலில்‌ படைத்தான்‌. அதில்‌ பொன்மயமான அண்ட முண்டாயிற்று.] என்று மனு ஸ்ம்ருதியிலும்‌ உரைக்கப்பட்டது. ஆழ்வாரும்‌ ‘“தானோர்‌ பெருநீர்‌ தன்னுள்ளே தோற்றி’” என்று அருளிச் செய்தார்‌. (ப்ருதிவ்யை ரஸாச்ச ஸம்பூத:) பூமியிலிருந்து உண்டான அன்ன ரஸங்களினால்‌ வ்ருத்தி யடைந்தது.(விஸ்வ கர்மண:…) பரமாத்மாவினிடமிருந்து இவை உண்டாயின.ஜலத்திலிருந்தும்‌ பூமியிலிருந்தும்‌ தானாகவே உண்டாக வில்லை என்று உணர்த்துவதற்காக உலகத்தை உண்டாக்கிய உத்தமனால்‌ கர்மானுகுணமாக உயர்வு தாழ்வுகளுடன்‌ உண்டாக்கப்பட்டன வென்று உரைக்கப்படுகிறது. மஹோபனிஷத்தை அனுஸரித்து, இங்கு சொல்லப்படும்‌ ‘விஸ்வகர்மா’ முதலிய சப்தங்கள்‌ நாராயணனையே குறிக்கின்றன வென்று அறிகிறோம்‌. (தஸ்ய…) ஸர்வேஸ்வரன்‌ அந்த உலகத்தை தரித்துக் கொண்டு வியாபிக்கிறான்‌. தாதா நாராயண:’ என்றல்லவோ ஸுபாலோபனிஷத்தில்‌ இம் மஹாபுருஷன்‌ கீர்த்திக்கப் பட்டான்‌. (தத் புருஷஸ்ய விச்வம்‌) ஆகையினால்‌ இவ்வுலகம்‌ புருஷனுடையதே. உலகம்‌ உடமை. உடையவன்‌ புருஷோத்‌தமன்‌. ‘க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதமிதம்‌ விஸ்வம்‌ சராசரம்‌” [சராசரமான ஜீவராசிகளெல்லாம்‌ க்ருஷ்ணனுடையதன்றோ?] என்னும்‌ ஸ்ம்ருதி வசனம்‌ இந்த ஸ்ருதியை விவரிக்கிறது. (ஆஜாநம்‌ அக்ரே) “பகவானுக்கு சேஷ பூதமானது இவ் வுலகம்‌ என்பதை நான்‌ முன்‌னமே அறிந்தேன்‌’ என்று வேத புருஷன்‌ வெளியிடுகிறான்‌. பகவான்‌ உலகத்தை உண்டாக்கி, தரித்து, வியாபிப்பதாகச்‌ சொல்லுகிற படியாலும்‌ உலகத்தை உடையவன்‌ என்று உரைக்கிறபடியாலும்‌ விசிஷ்டாத்வைத வேதாந்தமே வேதத்தின்‌ உட்பொருள்‌ என்பது நன்கு விளங்குகிறது.

——–

வேதாஹமேதம்‌ புருஷம்‌ மஹாந்தம்‌, ஆதித்ய வர்ணம்‌ தமஸ: பரஸ்தாத்‌
தமேவம்‌ வித்‌வாந்‌ அம்ருத இஹ ப,வதி, நாந்ய: பந்தா வித்‌யதேயநாய–2-
“அண்டக்குலத்துக்கதிபதியாகி, அண்டத்திற்கு அப் புறத்திலுள்ள சுத்த சத்வ மயமான ஸ்ரீவைகுண்டத்தில்‌ கோடி ஸூர்ய ப்ரகாசத்துடன்‌ எழுந்தருளி யிருக்கும்‌ இந்த மஹாபுருஷனை நான்‌ அறிகிறேன்‌? அவனே உபாயமும்‌, உபேயமும்‌ என்று அறிபவன்‌ இந்த ஜன்மத்திலேயே மோக்ஷமடைகிறான்‌. மோக்ஷத்திற்கு வேறு மார்க்கமில்லை’ என்னும்‌ இந்த ரஹஸ்யார்த்தத்தை வேதம்‌ ஆதராதி சயத்தினால்‌ மறுபடியும்‌ உத்கோஷிக்கிறது. இதன்‌ பொருள்‌ பூர்வானுவாகத்தில்‌ விசேஷமாக விவரிக்கப்பட்டது. பூர்வானுவாகத்தில்‌
16-வது மந்த்ரத்தின்‌ முற்பாதியும்‌, 17-வது மந்த்ரத்தின்‌ பிற்‌பாதியும்‌ காண்க.

———-

ப்ரஜாபதிச்‌ சரதி கர்ப்பே, அந்த:, அஜாயமாநோ பஹுதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌, மரீசீகாம்‌ பதமிச்சந்தி வேத,ஸ:3-(பரம புருஷன்‌ ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமியாய்‌ ஸஞ்சரிக்கிறான்‌. உத்‌பத்தி யில்லாத புருஷோத்தமன்‌ பலபடியாகப்‌ பிறக்கிறான்‌.அவனுடைய அவதாரங்களை தீரர்களே அறிகிறார்கள்‌. (அவர்கள்‌) பரம புருஷன்‌ வாழும்‌ நித்ய ஸூரிகளின்‌ நாட்டை விரும்புகிறார்கள்‌.]**ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸாசநா நசநே அபி,” என்று பூர்‌வானுவாகத்தில்‌ சொல்லப்பட்ட அவதார வைபவம்‌ இங்கு அனுபவிக்கப் படுகிறது.-“விஷயஸ்‌-பாதி பூமித்வாத்‌ ஜ்ஞாந தெ,ஃளஷ்கர்ய சங்கிநாம்‌ அவதாரேண ஸெளலப்யம்‌ த்ரிஷ்டு போக்தம்‌ த்ருதீயயா”[ பகவத் ஸ்வரூபமானது அறிவிற் கெட்டாத படியால்‌, அவளை அறிய முடியாது என்று ஸந்தேஹிப்பவர்களுக்கு, மூன்றாவது மந்திரத்தில்‌ அவ்தார ஸெளலப்யம்‌ சொல்லப்பட்டது.] என்று மணவாள மா முனிகளின்‌ ப்ரமாணத்திரட்டில்‌ எடுக்கப்பட்டிருக்கும்‌ “நாராயண முனி”
என்பவரின்‌ வியாக்யானத்தில்‌ இந்த மந்த்ரார்த்தம்‌ ஸங்க்ரஹிக்கப்‌ பட்டிருக்கிறது. முத்தின மந்த்ரத்தில்‌ ப்ரஹ்மத்தை அறிவதினலேயே மோக்ஷம்‌ என்று சொல்லப்பட்டது. இங்கு அவதாரங்கள்‌ பல செய்திருக்கும்‌ ௮ச்யுதனை அறிவது எளிது என்று காட்டப்படுகிறது.(ப்ரஜாபதி:…௮ந்த:) ப்ரஜைகளைக்‌ காப்பாற்றுபவனுன ஸர்வேஸ்வரன்‌ ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமியாக ஸஞ்சரிக்கிறான்‌. இந்த வாக்யம்‌ நாராயணவல்லியிலும்‌ காணப் படுகிறது. அதனால்‌ நாராயணனே இங்கு ப்ரஜாபதி சப்தத்தினால்‌ சொல்லப் படுகிறான்‌ என்று நிர்ணயிக்கிறோம்‌. மேலும்‌, ஸர்வ ஜீவர்களையும்‌ காப்பது விஷ்ணுவுக்கே அஸாதாரணமானது. பதிம்‌ விச்வஸ்ய என்று சொல்லப்பட்ட அவனே உலகிற்கெல்லாம்‌ ஸ்வாமியாவான்‌.-ஆத்மாவிற்கு நிலைநின்ற புருஷார்த்தமாகிற மோக்ஷத்தை மற்றவர்களால்‌ கொடுக்க இயலாது. நசிக்கக் கூடிய சிற்றின்பப்‌ பலன்களாகிய, அர்த்த காமங்‌களையும்‌, பகவானிடமிருந்து வரம் பெற்றே கொடுக்கிறார்கள்‌-மஹாபாரதத்தில்‌,
ராஜாதி,ராஜஸ்‌ ஸர்வேஷாம்‌ விஷ்ணுர்‌ ப்‌,ரஹ்ம மயோ மஹாஙந்‌ ஈஸ்வரம்‌ தம்‌ விஜாநீம: ஸ பிதா ஸ ப்ரஜாபதி:”'[எல்லா அரசர்களுக்கும்‌ மேலான அரசராயிருப்பவரும்‌, பெரியவரும்‌, ப்ரஹ்ம ஸ்வரூபியுமானவர்‌ விஷ்ணு. அவரை ஈஸ்வரரென்று அறிகிறோம்‌. அவரே (எல்லோருக்கும்‌) தந்‌தை . அவரே ப்ரஜாபதி.]என்று சொல்லப் பட்டபடியால்‌ ப்ரஜாபதி சப்தத்தினால்‌ குறிக்கப்‌ படுபவன்‌ கேசவனே.-:அஸத்‌(இல்லாதவை)திலிருந்து வேறுபட்ட எல்லா வஸ்துக்களுக்கும்‌ ஸ்வாமியாகவும்‌, ரக்ஷகராகவும்‌ இருப்பவர்‌ ப்ரஜாபதி” என்று நாராயணயதி வியாக்யானம்‌ செய்தார்‌. (கர்ப்பே அந்த:சரதி) ஹ்ருதயத்தில்‌ அந்தர்யாமி யாயிருக்கிறான்‌. இப்படி அந்தர்யாமி யாயிருப்பதற்குக்‌ காரண மென்ன?ப்ரயோஜனமென்ன? துஷ்ட நிக்ரஹ சிஷ்டபரிபாலனங்கள்‌ காரணமல்ல. இவனுக்குத்‌ தன்னிடம்‌ அத்வேஷத்தை உண்டாக்கி, ஆபிமுக்யத்தை வளர்ப்ப,தற்காக அந்தர்யாமி யாமிருக்கிறான்‌ அநந்தன்‌. யோக ஸாக்ஷாத்‌ காரம்‌ கை வந்தவர்களுக்கு ஹ்ருதய கமலத்தில்‌ ஸேவை ஸாதிக்கிறான்‌. தினந்தோறும்‌ உறங்கும் போது ஜீவர்களை ஆலிங்கனம் செய்து கொண்டு ஸகல ஸ்ரமங்களையும்‌ போக்குகிறான்‌. ஜன்மம்‌ கழியும்போது மரணாவஸ்தையின்‌ ஸ்ரமத்தைக்‌ குறைக்கிறான்‌. மோக்ஷமடைபவர்‌களான ஜீவாத்மாக்களுக்கு ஸுஷும்னா நாடியைத்‌ தெரியும்படி செய்து அதன் வழியே ப்ரஹ்ம ரந்த்ரத்தை பேதித்துக் கொண்டு போக அனுக்ரஹம்‌ செய்கிறான்‌.-அந்தர்யாமியை அறிவது மிகவும்‌ கடினம்‌. பூகத (பூமிக்குள்‌ இருக்கும்‌) ஜலத்திற்கு ஸமானமானது அந்தர்யாம்யவஸ்தை என்று ஆசாரியர்கள்‌ அருளி யிருக்கிறார்கள்‌. மண்ணைத்‌ தோண்டி யெடுத்து அவசியமானால்‌ பாறையையும்‌ உடைத்து பூமியிலிருக்கும்‌ ஐலத்தைத்‌ தேடிக்‌ கண்டுபிடிக்குமாப் போலே மாம்ஸ சரீரமாகிற மண்ணினால்‌ மறைக்கப்பட்டதும்‌, நெஞ்சாகிற பாறையினால்‌ மூடப்பட்டதுமான அந்தர்யாமியை அறிய முடியாதென்றே பூகத ஜலத்தை உவமை யிட்டார்கள்‌. அம்மாதிரியான அருமை யில்லாமல்‌, எல்லாருடைய
ஊனக் கண்ணுக்கும்‌ இலக்காகும்படியான அவதாரங்களை அடுத்த
படியாக அறிவிக்கிறது. அப்படி அவதாரம்‌ செய்வதற்குக்‌ கர்மம்‌ காரணமன்று. அனுக்ரஹமே காரணம்‌. கிணற்றில்‌ விழுந்த குழந்தையை எடுப்பதற்குத்‌ தாயும்‌ கூடக் குதிக்குமாப் போல்‌ ஸம்‌ஸார ஸாகரத்தில்‌ அமிழ்ந்து அவஸ்தைப்படும்‌ சேதனர்களை அக்‌ கடலினின்றும்‌ கறை யேற்றுவதற்காக நாட்டில்‌ பிறந்து மனிசர்க்‌காகப்‌ படாதனபடுகிறான்‌ நாராயணன்‌.-துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்‌ செய்வதற்காகப்‌ பிறக்கிறான்‌ பர வாஸுதேவன்‌, இந்திரியங்களுக்கு எட்டாத தன்னை ஸம்ஸாரிகள்‌ கண்ணுக்குத்‌ தோன்றும்‌ படி செய்கிறான்‌. வேண்டினவற்றை யெல்லாம்‌ தன்னடியார்களுக்குத்‌ தருகிறான்‌. குளிரக் கடாக்ஷிப்பது, பேசுவது, கேட்பது, சிரிப்பது. ஆலிங்கனம் செய்வது, இப்படிப்‌ பலவிதமாக அவர்‌களை ஆட்‌ கொள்ளுகிறான்‌. “*ஹஸிதம்‌ பாஷிதம்‌ சைவ” [சிரிப்பதையும்‌, பேசுவதையும்‌] என்றார்‌ வால்மீகி. ராமனுடைய ஆலிங்கனத்தை அனுமானும்‌ ““பாவோ நாந்யத்ர கச்சதி”” [என்‌ நினைவு வேறெங்கும்‌ செல்லாது.] என்றார்‌. ‘“ஸம்ஸ்ப்ருச்யாக்ருஷ்ப ச ப்ரீத்யா ஸூ காடம் பரிஷஸ்வஜே’”[க்ருஷ்ணன்‌ அக்ரூரனைத் தொட்டு, இழுத்து, ப்ரீதியுடன்‌ நன்கு தழுவிக் கொண்டார்‌.] என்றதும்‌ இங்கு நினைக்கத் தக்கது. விபவாவதார காலங்களில்லாமல்‌ இழந்தவர்க்கும்‌ அவ் விழவு தீருவதற்காக எடுக்கப்படும்‌ அர்ச்சாவதாரமும்‌ இங்கு சொல்லப்‌ படுவதாகக்‌ கொள்ளலாம்‌. ஒரு காலத்திலோடும்‌ க௱ட்டாறு போன்றது விபவாவதாரம்‌. அதில்‌ தேங்கின மடுப் போன்றது அர்ச்சாவதாரம்‌. பாஞ்சராத்ர வைகானஸ ஆகமங்களில்‌ சொன்ன படி ஸுதை, சிலை முதலியவைகளால்‌ செய்யப்பட்ட ரூபங்களில்‌ ஆவாஹனம்‌ செய்யப்பட்டு சாஸ்த்ர வஸ்யனாயும்‌ அர்ச்சக பராதினனாயும்‌ இருக்கிறான்‌ இருடீகேசன்‌. எல்லா ஜனங்களுடைய ஊனக்‌ கண்ணுக்கும்‌ தன்னை விஷயமாக்கிக் கொண்டு ஸ்ர்வாபேக்ஷிதங்‌களையும்‌ கொடுக்கிறான்‌.

(அஜாயமாநோ பஹுதா விஜயாதே) *பிறப்பில்லாதவனாயிருந்‌தும்‌ பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌” என்கிற து வேதம்‌. ** அஜோபி ஸந்‌-ஸம்பவாமி’” [பிறப்பற்றவனாயிருந்தும்‌ பிறக்கிறேன்‌.] என்று க்ருஷ்ண பகவான்‌ கீதையில்‌ அருளினான்‌. “பிறப்பில்‌ பல் பிறவிப்‌ பெருமான்‌” என்றார்‌ வேதம்‌ தமிழ்‌ செய்த மாறன்‌. (அஜாயமாந:) “ஜநிஜராதி; ஸகலதுரித தூ;ர:” [பாப பலமான ஜன்மம்‌, கிழத்தனம்‌ முதலியவைகள ற்றவன்‌.] என்று வியாக்யானம்‌ செய்தார்‌ நாராயணயதி. இங்கு “பிறப்பு என்பது, கிழத்தனம்‌, இறப்பு முதலிய ஆறு விகாரங்களையும்‌ காட்டுகிறது. (பஹுதா விஜாயதே)எந்நின்ற யோனியுமாய்ப்‌ பிறந்தான்‌. “ப;ஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி””[எனக்குப்‌ பல பிறப்புகள்‌ கடந்து விட்டன.] என்று தன்‌ ஜன்மத்‌தைத்‌ தானே சொன்ன அவனும்‌ தெஞ்சு உளுக்கியிறே இருப்பது.-ஆழ்வாரும்‌ “சன்மம்‌ பலபல செய்து” என்றார்‌. (பஹுதா) தேவர்‌, திர்யக்‌, மனுஷ்யர்‌, ஸ்தாவரம்‌ என்று சொல்லப்படும்‌ எல்லா யோனிகளிலும்‌ பிறந்தான்‌. வ்யூஹம்‌, விபவம்‌, அர்ச்சை எனப்படும்‌ எல்லா அவஸ்தைகளிலும்‌ ஆவிர்ப்பவித்தான்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. பிறக்கைக்கு ஹேதுவான கர்மம்‌ இல்லாமலிருந்தும்‌ கர்ம வஸ்யரும்‌ பிறவாத ஜன்மங்களிலும்‌ பிறந்தான்‌. கர்ம வஸ்யன்‌ பிறவிக்கு எல்லை காண்கிறோம்‌. அகர்ம வஸ்யன்‌ (கர்மத்திற்கு வசப்‌ படாதவன்‌) பிறவிக்கு எல்லை காணவில்லை. கர்மத்திற்கு எல்லையுண்டு. அனுக்ரஹத்துக்கு எல்லை யில்லை. (விஜாயதே) “பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌’ என்றும்‌, ‘விசேஷமாகப்‌ பிறக்கிறான்‌. என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. “தேவர்‌ முதலிய ஓவ்வொரு ஜாதியிலும்‌ பலவிதமாகப்‌ பிறக்கிறான்‌ என்று நாராயண முனி. (விசேஷேண ஜாயதே) விசேஷமாகப்‌ பிறக்கிறான்‌. அப்ராக்ருத சரீரத்தை இதர ஸஜாதீயமாக்கிப்‌ பிறக்கிறான்‌. “சங்கொடு சக்கரம்‌ வில்‌ ஓண்மையுடைய உலக்கை ஓள் வாள்‌ தண்டு கொண்டு” பிறக்கிறான்‌. தன்‌ ஐஸ்வர்ய சக்திகளில்‌ ஓன்றும்‌ குறையாமல்‌ பிறக்கிறான்‌. அவதார ரஹஸ்யத்தை அறிந்து அனுஸந்தித்தவர்கள்‌ ஜன்மம்‌ அறும்படி பிறக்கிறான்‌. பிறந்த பின்பே மேன்மை யடைகிறான்‌. வேதத்திலும்‌-யுவா ஸுவாஸா: பரிவீத ஆகத்‌ ஸ உ ஸ்ரேயாந்‌ ப,வதி ஜாயமாந: தம்‌ தீராஸ: கவய உந்நயந்தி’” [யெளவனத்தை யுடையவனாகவும்‌, அழகிய பீதாம்பரத்தை தரித்தவனாகவும்‌, நித்ய ஸூரிகளால்‌ சூழப்பட்டவனாகவும்‌ புருஷோத்தமன்‌ பிறக்கிறான்‌. அவன்‌ பிறந்த பின்பே மேன்மை யுடையவனாகிறான்‌. அவளை தீரர்களான கவிகள்‌ தியானிக்‌கிறார்கள்‌] என்றல்லவோ சொல்லப்பட்டது.(விஜாயதே) கர்ம வஸ்யர்களைப் போன்ற சரீரத்துடன்‌ பிறக்கிறான்‌. அவர்கள்‌ பத்து மாதம்‌ வயிற்றிலிருந்து பிறந்தால்‌ இவன்‌ பன்னிரண்டு மாதம்‌ கர்ப்ப வாஸம்‌ செய்து பிறக்கிறான்‌. “ததச்ச த்‌வாதசே மாஸே” [பன்னிரண்டாவது மாதத்தில்‌] என்றும்‌, ‘பன்னிரு திங்கள்‌ வயிற்றிற்‌ கொண்ட” என்றுமல்லவோ சொல்லப் பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஆபத்தேற்படும்‌ காலத்தையே தனக்குப்‌ பிறக்கைக்குக்‌ காலமாகக்‌ கொண்டு பிறக்கிறான்‌. அவர்களுடைய ஸம் ரக்ஷணத்தையே. ப்ரயோஜனமாகக் கொண்டு பிறக்கிறான்‌. ஆவிர்பூ,தம்‌ மஹாத்மநா:”[மஹாத்மாவான நாராயணன்‌ ஆவிர்பவித்தான்‌.] என்ற வால்மீகி மஹரிஷி அவதரித்ததினால்‌ தோஷமில்லை என்பதைக்‌ காட்டுவதற்காக
*ஆவிர்ப்பவித்தான்‌” என்று உரைத்தார்‌. ஆஸ்ரிதர்க்காக கர்ப்ப வாஸம்‌ பண்ணின மஹா குணத்தை இழக்கலாகாது என்று வேதம்‌“பிறந்தான்‌” .என்கிறது. ஆழ்வாரும்‌ *தோன்றினவாறும்‌* என்று சொல்லாதே *பிறந்தவாறும்‌” என்ற்ல்லவோ பாடினர்‌. ஸம்ஸாரிகளுக்குப்‌ பிறக்கப்‌ பிறக்க ஞானம்‌ மழுங்கும்‌.. ரத்னத்தைத்‌ தேய்க்கத்‌ தேய்க்க ஒளி அதிகமாமாப் போலே அவதாரம்‌ செய்யச்‌செய்ய இவனுடைய மஹா குணங்கள்‌ பிரகாசிக்கும்‌. ராமாவதாரத்‌தைக்‌ காட்டிலும்‌ க்ருஷ்ணாவதாரத்தில்‌, பாண்டவ தூதனாயும்‌,பார்த்த ஸாரதியாயு மிருந்து தன்‌ பெருங் குணங்களை வெளியிட்டானன்றோ? தானே சொல்லும்போதும்‌ “ஜென்ம கர்ம ச மே திவ்யம்‌”[என்னுடைய ஜன்மங்களும்‌, சேஷ்டிதங்களும்‌ அப்ராக்ருதமானவை] என்று மதிப்புடனன்றோ சொன்னான்‌.

(தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌) அவனுடைய அவதார ரஹஸ்யத்தை தீரர்களே அறிகிறார்கள்‌. (தீரா:)புத்திமான்கள்‌. “தீரர்களான கவிகள்‌” என்று மற்றொரு ஸ்ருதியில்‌ சொல்லப்பட்ட வர்கள்‌. – பராங்குச பட்டநாத பரகாலாதிகளே இவன்‌ பிறப்பின்‌ பெருமையை அறிவார்கள்‌. (தீரா:) கலங்காதவர்கள்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. ஸ்ருதிகளை அறியாதவர்கள்‌ புருஷோத்தமனுடைய அவதார மஹிமையை அறியாமல்‌, “பர ப்ரஹ்மத்திற்கு ஜன்மமுண்டோ’ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டு இவன்‌ மனுஷ்‌யனோ?” என்று கலங்குவார்கள்‌.-அம் மாதிரியான கலக்கமில்லாதவர்கள்‌. “பிதா புத்ரேண பித்ருமாந்‌ யோநி யோநவ் நாவேத,விந் மநுதே தம்‌ ப்‌ருஹந்தம்‌’ [ஒவ்வொரு அவதாரத்திலும்‌ ஸர்வலோக பிதாவான நாராயணன்‌ தன்னால்‌ உண்டாக்கப்பட்ட ஒருவனைத்‌ தனக்குத்‌ தகப்பனாகக் கொண்டு பிறக்கிறான்‌. வேதத்தை அறியாதவன்‌ அவனே ‘பரமாத்மா வென்று அறிய மாட்டான்‌. ] என்றல்லவோ மறைகள்‌ முறையிட்டன. (தஸ்ய யோநிம்‌ பரிஜாநந்தி) அவனுடைய:அவதாரத்தை நன்கு அறிகிறார்கள்‌. (பரிஜாநந்தி). திரும்பத் திரும்ப அறிகிறார்கள்‌.-ஸகல சேஷ்டிதங்களையும்‌ அறிகிறார்கள்‌. அதை விட்டுப்‌ பரத்வத்‌திலும்‌ மனம்‌ செலுத்தமாட்டார்கள்‌. *பாவோ: நாந்யத்ர கச்சதி”-என்பார்கள்‌. *அச்சுவை பெறினும்‌ வேண்டேன்‌”” என்று இருப்பார்கள்‌. நம்மாழ்வார்‌; ஸர்வேச்வரன்‌ யசோதையால்‌ உரலில்‌ கட்டுண்டு ஏங்கிய எளிவை அனுஸந்தித்தவுடன்‌ எத்திறம்‌!’” என்று ஆறு மாதம்‌: மோஹித்துக்‌ கிடந்தாரன்றோ. மறுபடியும்‌ ‘”பிறந்தவாறும்‌’என்று பரம புருஷனுடைய பிறப்பை அனுஸந்தித்து ஆறு மாதம்‌ மோஹித்துக்‌ கிடந்தார்‌ என்று நம்‌ ஆசார்யர்கள்‌ அருளிச் செய்வர்‌கள்‌. அவனுடைய பிறப்பின்‌ பெருமையை அநிந்தவர்களை தீரர்‌கள்‌” என்றது வேதம்‌; அறியாதவர்களை :மூடர்கள்‌” என்றான்‌ கண்ணன்‌. *யோநிம்‌” என்றது ஸ்ருதி; *மாநுஷீம்‌ தநும்‌ ஆஸ்ரிதம்‌” என்‌றான்‌ மாதவன்‌. . அறிந்தவர்களை “பரிஜாநந்தி’ என்றது மறை; அறியாதவர்களை *அவஜாநந்தி’ என்றான்‌ அச்யுதன்‌.

எதற்காக இந்த அவதார ரஹஸ்யத்தை அறிகிறார்கள்‌? எனில்‌:(மரீசீநாம்‌ பதமிச்சந்தி வேதஸ:) சோதி மயமான நித்ய ஸூரிகளுடைய பரம பதத்தை அடைவதற்காக என்று சொல்லப்படுகிறது.(மாரீசீநாம்பதம்‌… வேதஸ:)’ நித்ய ஸூரிகளின்‌ நாடு: என்று சொன்ன
பின்‌ அப்ரதானமாக. ,புரம புருஷனுடைய தேசம்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது.-நம்மாழ்வாரும்‌ “வானவர்‌ நாடு” என்றல்லவோ அருளிச் செய்தார்‌. , அவர்களிட்ட வழக்காயிருப்பதால்‌” அவர்‌களுடைய பரம பதம்‌ என்று உரைக்கப்படுகிறது. * வானவர்‌ நாட்டையும்‌” என்னுமிடத்தில்‌ வியாக்யானத்தில்‌ நம்‌ ஆசார்யர்கள்‌ “குடியிருப்பாரோ பாதியாயிற்று பரம பதத்தில்‌ ஸ்ரீவைகுண்ட நாதனுக்கு(இருப்பு). ப்ராப்தி தேசம்‌ நித்ய ஸூரிகள்‌ இட்ட வழக்காயிருக்கும்‌.”‘என்று அருளிச் செய்தது இங்கு அனுஸந்திக்கத் தக்கது. அவதார
ரஹஸ்யத்தை அறிவதால் மோஷம் அடைவார்கள் என்பதை “ஜந்ம கர்ம ச மே திவ்யம்‌ ஏவம்‌ யோ வேத்தி. தத்த்வத; த்யக்த்வா தேஹம்‌ புநர்‌ ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜூநா ”[அர்ஜுனா! என்னுடைய அப்ராக்ருதமான ஜன்மத்தையும்‌ ‘சேஷ்டிதங்களையும்‌ இம் மாதிரியாக எவன்‌ உண்மையாக அறிகிறானோ அவன்‌ தேஹத்தை விட்டு மறு ஜன்மத்தை யடைவதில்லை.-என்னையே-அடைகிறான்‌.] என்று கீதாசார்யனால்‌.சொல்லப் பட்டது;-இம்மாதிரியான அவதார வைபவம்‌ மற்ற தேவதைகளுக்குக்‌ கிடையாது-

———–

யோ தே,வேப்‌,ய ஆதபதி, யோ தே,வாநாம்‌ புரோ ஹித:.
பூர்வா யோ தே வேப்‌யோ ஜாத:, நமோ ருசாய ப்‌ராஹ்மயே
–4-
[எந்தப் பரம புருஷன்‌ நித்ய ஸூரிகளுக்காகப்‌’ பிரகாசிக்கிராரோ. எவர்‌ நித்ய ஸூரிகளுக்கு அநாதி காலமாக ஹிதத்தைக்‌ கொடுப்‌பவரோ, எவர்‌ நித்ய ஸூரிகளுக்கும்‌ முதல்‌வரா யிருக்கிறாரோ. பிரகாசிப்பவரும்‌, பர ப்ரம்ஹ ஸ்வரூபியுமான அவருக்கு நமஸ்காரம்‌.]இந்த மந்திரத்தில்‌ புருஷோத்தமன்‌ நித்ய ஸூரி நிர்வாஹகன்‌ என்னும்‌ விஷயம்‌ சொல்லப்படுகிறது.-இதையே வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனும்‌,
வானவராதியென்கோ? வானவர்‌ தெய்வமென்கோ?
வானவர்‌ போகமென்கோ? வானவர்‌ முற்றுமென்கோ?
‘” என்று திருவாய்மொழியில்‌ ‘ திருவாய் மலர்‌ந்தருளினார்‌.
(யோ தேவேப்ய ஆதபதி) எந்தப்‌ பரம புருஷன்‌ நித்ய ஸூரி களுக்காக ஆதியஞ்சோதி யுருவுடனும்‌, ஸமஸ்த கல்யாண குணங்களுடனும்‌ பிரகாசிக்கிறாரோ என்று சொல்லப்படுகிறது. ஜிதந்தே ஸ்தோத்ரத்திலும்‌, ‘பக்தாநாம்‌ த்வம்‌ ப்ரகாசஸே”” [பக்தர்களுக்காகவே நீ பிரகாசிக்கிறாய்‌] என்றல்லவோ சொல்லப் பட்டது. நம்மாழ்வார்‌-இதை வானவர்‌ தெய்வமென்கோ?” என்றார்‌. (யோ தேவாநாம்‌ புரோஹித:). எந்தப்‌ பரமாத்மா நித்ய ஸூரிகளுக்காக அநாதி காலமாக ஹிதத்தைக்‌ கொடுக்கிறாரோ-அவர்களுக்கு உண்ணும்‌ சோறு பருகு நீர்‌ தின்னும்‌ வெற்றிலையுமான பகவத் கைங்கர்யத்தைக்‌ கொடுக்கிறார்‌ என்று தாத்பர்யம்‌- “தத்‌; விப்ராஸோ விபந்யவோ” என்று சொல்லுகிறபடி பகவானைச்‌ சூழ்‌ந்திருந்தேத்துவதாகிற ப்ரஹ்‌மானந்தத்தை அவர்கள்‌ அநாதி காலமாக அனுபவிக்கிறார்கள்‌ -கைங்‌கர்யமே உண்மையான ஹிதம்‌; “இவ்வுலகிலுள்ள ஐஸ்வர்யங்களும்‌ ஹிதமல்ல. கைவல்ய நிஷ்டர்களுடைய ஆத்மாநுபவமும்‌ உண்மையான ஹிதமல்ல.. ப்ரகாரத்தளவில்‌ நிற்கும்‌ ஆத்மானுபவ மாத்ரத்திலன்றிக்கே ப்ரகாரியளவும்‌ செல்லும்‌ பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷமே ஹிதமெனத் தகுந்தது, சடகோபன்‌ இதை “வானவர்‌,போக மென்கோா? வானவர்‌ முற்றுமென்கோ?” என்று அருளினார்‌. (பூர்வோ…ஜாத:). எவர்‌ . நித்ய ஸூரிகளுக்கு முதல்வரா யிருக்‌கின்றாரோ. ‘வானவராதியென்கோ?” என்றார்‌ நம்மாழ்வார்‌. நித்ய ஸூரிகளுக்கு. நிர்வாஹகன்‌-அவர்களுடைய ஸத்தைக்கு (இருப்‌புக்கு) காரணமாயிருப்பவன்‌-அவர்கள்‌ நித்யராயிருக்கும் போது ஸத்தா ஹேதுவென்று எப்படிச்‌ சொல்லமுடியும்‌? அவர்‌களுடைய நித்யத்வம்‌ அவனுடைய நித்யேச்சையாலே இருக்கிற படியால்‌ அவர்களுக்கு ஸத்தா ஹேது வென்று சொல்லலாம்‌. இந்த இச்சை அழிந்தால்‌ நித்யத்வமும்‌ மாள வேண்டிவருமன்றோ?-(ருசாய) திவ்ய மங்கள விக்ரஹத்துடன்‌ ப்ரகாசித்துக் கொண்டிருக்கும்படியான பரம புருஷ்னுக்கு. “ ஒளி மணி வண்ணன்‌ என்று சொல்லப்பட்ட அவனுடைய சோதி வடிவு இங்கு உணர்த்தப்படுகிறது.(ப்ராஹ்மயே நம🙂 பர ப்ரஹ்மமா யிருக்கும்‌ ஸ்ரீமந் நாராயணனுக்கு நமஸ்காரம்‌.-நாராயணாய நம:‘ என்று த்‌வயத்தில்‌ சொல்லப்பட்டது இங்கு உணர்த்தப் படுகிறது. ப்ராஹ்மயே’ என்னுமிடத்தில்‌ நான்காம்‌ வேற்றுமையால்‌ கைங்கர்யம்‌ பிரார்த்திக்கப் படுகிறதென்றும்‌, “நம:
என்று “அந்தக்‌ கைங்கர்யத்தினால்‌ வரும்‌ ஆனந்தமும்‌ என்னுடையதல்ல; பகவானுடையதே’ என்று சொல்லப் படுகிறதென்றும்‌ கொள்ள வேண்டும்‌
. இந்த மந்திரத்திலுள்ள தேவ சப்தங்களை ப்ரஹ்மாதி தேவ பரமாகவும்‌ ஆசாரியர்கள்‌ பொருள் கொண்டுள்ளனர்‌-

———–

ருசம்‌ ப்‌ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா அக்‌ரே தத;ப்‌ருவந்‌
யஸ்த்வைவம்‌ ப்‌ராஹ்மணோ வித்‌யாத்‌ தஸ்ய தே,வா அஸந்‌ வசே.–5

[பர ப்ரஹ்மத்தினுடைய ப்ரீதியை உண்டு பண்ணும்‌ நித்ய ஸூரிகள்‌ புருஷோத்தமனுக்கெதிரில்‌ நம.” என்னும்‌ அச் சொல்லை உரைத்தனர்‌-ப்ரஹ்ம ஜ்ஞானியான ஓருவன்‌ உம்மை இப்படி அறிந்தானாகில்‌, அவனுக்கு ப்ரஹ்மாதி தேவர்கள்‌ வசத்திலிருப்பார்கள்‌.](ருசம்‌ ப்ராஹ்மம்‌ ஜநயந்த: தேவா…) புருஷோத்தமனுடைய
ப்ரீதியை உண்டு பண்ணும்‌ தேவர்களான நித்ய ஸூரிகள்‌, அவ னுக்கு எதிரில்‌ “நம:* என்னும்‌ சொல்லைக்‌ கூறுகின்றனர்‌. இதிலிருந்து பகவானுடைய முகோல்லாஸத்திற்காகக்‌ கைங்கர்யம்‌ செய்‌யப்படுகிறதே யொழிய, நம்முடைய ஆனந்தத்திற்காக வல்ல என்று உணர்த்தப் படுகிறது. அவனுகக்கிறான் என்பதற்காக நாமுகந்து செய்ய வேண்டுமே யொழிய நம்‌ உகப்புக்காகக்‌ கைங்கர்யம்‌ செய்யலாகாது, நம:’ என்னும்‌ பதம்‌ “அஹமபி நமம பகவத ஏவாஹமஸ்மி””-[நானும்‌ எனக்குரியேனல்லேன்‌. பகவானுக்கே நான்‌ உரியவன்‌.] என்னும்‌ பொருளை யுடையதன்றோ. :நம இத்யேவ ‘வாதி,ந:”* [நம:”என்றே சொல்லுபவர்கள்‌ நித்ய ஸூரிகள்‌.] என்றல்லவோ சொல்லப்‌ பட்டிருக்கிறது. “பூயிஷ்டராம்‌ தே நம உக்திம்‌”” என்கிறபடி “நம:என்னும்‌ சொல்லை மிகப் பெரிதாக வன்றோ நினைத்து உகக்கிறான்‌ மாதவன்‌.-(யஸ்த்வைவம்‌…) எவன்‌ இம் மாதிரி பகவத் கைங்கர்யமே பரம புருஷார்‌த்தமென்‌ றிருக்கிறானோ அவனுக்கு ப்ரஹ்மாதி தேவர்கள்‌ வசத்திலிருக்கிறார்கள்‌. ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌,-“ஸ்வ பருஷமபி,வீக்ஷய பாச ஹஸ்தம்‌ வததி பம: கில’தஸ்ய கர்ண மூலே -பரிஹர மதுஸூதந ப்ரபந்நாரந் ப்ரபு,ரஹமந்‌ய ந்ருணாம்‌ ந வைஷ்ணவாநாம்‌””[யமன்‌ பாசத்தைக்‌ கையில் கொண்ட தன்‌ தூதனைப் பார்த்து, அவன்‌ காதினுள்‌ பின் வருமாறு சொல்லுகிறான் :-‘மதுஸூதனனை சரணமடைந்தவர்களை அணுகாதே. நான்‌ மற்றவர்களுக்கே பிரபு: வைஷ்ணவர்களுக்கல்ல.] என்றல்லவோ யமன்‌ கூறியதாகச்‌ சொல்லப்பட்டது.-திருமழிசையாழ்வாரும்‌,
திறம்‌ பேன்மின்‌ கண்டீர்‌ திருவடி தன்‌ நாமம்‌ மறந்தும்‌ புறந்தொழா மாந்தர்‌–இறைஞ்சியும்‌ சாதுவராய்ப்‌ போதுமின்களென்றான்‌ நமனும்‌ தன்‌ தூதுவரைக்‌ கூவிச்‌ செவிக்கு.-என்று இதையே அருளிச் செய்தார்‌.-தொண்டரடிப்பொடியாழ்வார்‌
“*நாவலிட்டுழி தருகின்றோம்‌ நமன்‌ தமர்‌ தலைகள்‌ மீதே” என்று அருளிச்‌ செய்தார்‌. ‘-திருமங்கை யாழ்வாரும்‌ “வள்ளலே! உன்‌ தமர்க்‌ கென்றும்‌ நமன்‌ தமர்‌ கள்ளர் போல்‌” என்று அருளினார்‌. “என்‌ தமர்‌ நமன்‌ தமரால்‌ ஆராயப்படார் காண்‌”” என்றும்‌, **நமன்‌ தமர்‌ என்‌ தமரை வினவப்‌. பெறுவாரலர்‌” என்றும்‌ அபயமளித்தான்‌ அச்யுதன்‌. பகவானைப்‌ பற்றினவுடன்‌ எத் தேவர்‌ வாலாட்டும்‌ ஓழியும்‌. “பிஞ்ஞகன்‌ தன்னோடும்‌ எதிர்‌வன்‌ அவன்‌ எனக்கு நேரான்‌’” [பிஞ்ஞகன்‌-சிவன்‌]என்றல்லவோ திருமழிசைப் பிரான்‌ அருளிச் செய்தார்‌.

————–

ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ந்யெள, அஹோராத்ரே பார்ஸ்வே நக்ஷத்ராணி ரூபம்‌ அஸ்விநெள வ்யாத்தம்‌ இஷ்டம்‌ மநிஷாண அமும்‌ மநிஷாண ஸர்வம்‌ மநிஷாண,-6-[உனக்கு பூமி தேவியும்‌, ஸ்ரீ தேவியும்‌ பத்நிகள்‌. பகலுமிரவும்‌ பக்கத்திலிருக்கிறார்கள்‌. உன்‌ உருவம்‌ -நக்ஷத்திரங்கள் போல்‌(ஒளியுள்ள தாய்‌) இருக்கிறது. அச்விநீ தேவர்கள் போல்‌(உம்முடைய திரு முகம்‌) அழகாயிருக்கிறது. இஷ்டத்தைக் கொடுக்கும்‌. இந்தக்‌ கைங்கர்யத்தைக்‌ கொடுக்கும்‌. எல்லாவற்றையும்‌ கொடுக்கும்‌.]முன்‌ இரண்டு மந்த்ரங்களிதும்‌ சொல்லப்பட்ட கைங்கர்யம்‌ எம்பெருமானும்‌ பிராட்டியுமான சேர்த்தியிலேயே செய்யப்பட வேண்டும்‌ என்று கோஷிக்கிறது இந்த ருக்‌. இது வரையில்‌, விக்ரஹத்தாலும்‌, குணங்களாலும்‌, பரிகரங்களாலும்‌ பரம புருஷன்‌ நிர்ணயிக்கப் பட்டான்‌. புருஷ ஸூக்தத்தின்‌ கடைசி மந்த்ரமான இதில்‌ அவனுக்கே அஸாதாரணமான பிராட்டிகளைக் கொண்டு நிச்சயிக்கப்‌ படுகிறான்‌. பட்டரும்‌,“வேதாந்தா: தத்வ சிந்தாம்‌ முரபிதுராஸி யத் பாத,சிந்ஹைஸ் தரந்தி””[வேதாந்தங்கள்‌, முராரியின்‌ மார்பில்‌ எந்தப்‌ பிராட்டியின்‌ திருவடி யடையாளத்தைக் கொண்டே, பர தத்வ விசாரத்தை முடிக்கின்றனவோ] என்று இவ் விஷயத்தை அழகாக அருளிச்‌ செய்தார்‌-மேலும்‌,“ஈஷ்டே கச்சித்‌ ஜகத இதிய: பெளருஷே ஸுூக்த உக்த:தம்‌ ச த்‌வத்கம்‌ பதிமதி ஜகாவுத் தரச்சாநுவாக:’”[புருஷ ஸூக்தத்தில்‌ உலகத்திற்கெல்லாம்‌ நாயகனாகச்‌ சொல்லப்‌ பட்டவனை, உன்னுடைய (லக்ஷ்மியினுடைய) பதி யென்று உத்தரானுவாகம்‌ உத்கோஷித்தது.] என்றும்‌ அருளிச் செய்தார்‌. திருவின்‌ நாயகன்‌, நிலமகள்‌ நண்பன்‌, ஆயர் மடமகள்‌அன்பன்‌, அச்யுதனே இங்கு அறிவிக்கப் படுகிறான்‌, நமக்கு உபாயோபேயங்கள்‌ ஸ்ரீய:பதியே ஓழிய. ப்ரஹ்மசாரி நாராயணனல்ல என்னும்‌ ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தம்‌ இங்கு வெளியிடப்படுகிறது-(தே): உமக்கு.-

  1. தலைகளாயிரம்‌, கண்களாயிரம்‌, தாளன்களாயிரமுடைய உமக்கு.
  2. ஸகல சராசரங்களையும்‌ வியாபித்திருக்கும்‌ உமக்கு.
  3. “ஸர்வம்‌ விஷ்ணு மயம்‌ ஜகத்‌” எனப்படும்‌ உமக்கு.
  4. தேச கால வஸ்து பரிச்சேதமில்லாத உமக்கு.
  5. மோக்ஷத்திற்கு ப்ரபுவான உமக்கு.
  6. ஸ்ரீவைகுண்ட வாஸியான உமக்கு.
  7. அண்‌டத்தை உண்டாக்கின உமக்கு.
  8. நான்முகனைப்‌ படைத்த நாராயணனான உமக்கு.
  9. ப்ரக்ருதி மண்டலத்திற் கப்பால்‌ சோதி யுருவா யிருக்கும்‌ உமக்கு.
  10. நாம ரூபங்களைக்‌ கொடுத்தருளிய உமக்கு.
  11. ப்ரஹ்ம ருத்ரேந்த்ர்களால்‌ தியானிக்கப்படும்‌ உமக்கு.
  12. “உம்மை உபாஸிப்பதைத் தவிர வேறு மோக்ஷோபாயமில்லை” என்னும்‌ கீர்த்தி பெற்ற உமக்கு.
  13. பாற் கடலில்‌ பள்ளி கொண்ட பரமனாய்‌ அந்தர்யாமி யாயிருக்கு முமக்கு.
    14. பிறப்பில்‌ பல் பிறவிப்‌ பெருமானா யிருக்கு முமக்கு.
  14. அவதார ரஹஸ்யத்தை அறிந்தவர்‌களால்‌ அடையப்படும்‌ உமக்கு. 16. ‘நித்ய ஸூரிகளுக்கு: நாதனாயும்‌,அவர்களால்‌ வணங்கப் படுபவனாயு மிருக்கும்‌ உமக்கு-இங்‌கு சொன்ன ஏற்றங்களுக்கெல்லாம்‌ மேலான ஏற்றத்தை அடுத்தபடியாகச்‌ சொல்லுகிறது. (ஹ்ரீச்ச லக்ஷ்மீச்ச பத்ந்யெள) பூ தேவியும்‌,ஸ்ரீ தேவியும்‌ உமக்குப்‌ பத்னிகள்‌.-இரண்டாவது ‘சகார”த்தினால்‌ நீளா தேவியும்‌ உணர்த்தப் படுகிறாள்‌. ஆழ்வாரும்‌ ‘குழற் கோவலர்‌ மடப் பாவையும்‌ மண் மகளும்‌ திருவும்‌” என்று அருளினார்‌. ஆஸ்ரிதர்‌ குற்றத்தைப்‌ பொறுப்பிக்கும்‌ பிராட்டி; “குற்றம்‌ காண்பானென்‌? பொறுப்பானென்‌?” என்றிருக்கும்‌ ஸ்ரீ பூமிப் பிராட்டி; நப்பின்னைப்‌ பிராட்டி க்ஷ்மை தான்‌ ஒரு வடிவாயிருக்கும்‌-பெரிய பிராட்டியார்‌ இவனுக்கு ஸம்பத்தாயிருக்கும்‌; அது விளையும்‌ தரை (பூமி); அதனை அனுபவிக்கும்‌ போக்தாவாயிருக்கும்‌ நப்பின்னை;’? என்ற பெரிய வாச்சான் பிள்ளையின்‌ ஸ்ரீஸூக்தி இங்கு அனுஸந்திக்கத் தக்கது. :நகச்சிந்‌ நாபராத்‌,யதி’* [குற்றம்‌ செய்யாதவர்கள்‌ ‘ஒருவருமில்லையே. ]என்பாள்‌ ஸ்ரீதேவி. *குற்றமே இல்லையே’ என்று காணாக் கண்ணிட்‌டிருப்பாள்‌ பூமி தேவி. ‘“க்ஷமயா ப்ருதிவீ ஸம:’” [(ஸ்ரீராமன்‌) பொறுமையில்‌ பூமிக்கு ஸமானமானவன்‌.] என்றல்லவோ சொல்லப் பட்டது.-பூமிப் பிராட்டிக்கு நாம்‌ செய்யும்‌ குற்றங்களுக்கோர்‌ கணக்கில்லை.-அவள்‌ நமக்குச்‌ செய்யும்‌ நன்மைகளுக்கோ எல்லையில்லை. ‘ நாம்‌ உண்டாவதற்கு உதவுகிறாள்‌. நாம்‌ நடக்கும் போதும்‌ கிடக்கும்‌ போதும்‌ நம்மைத்‌ தாங்குகிறாள்‌. தாம்‌ உயிருடனிருப்பதற்கு வேண்டியவைகளைக்‌ கொடுத்துக்‌ காப்பாற்றுகிறாள்‌. நாம்‌ அதற்குப்‌ பதில்‌ அவளை வெட்டுகிறோம்‌; கூரிய ஆயுதங்களினால்‌ குத்திக்‌ கீறிக்‌ கிழிக்‌கிறோம்‌; மல ஜலாதிகளை விட்டு அசுத்தம்‌ செய்கிறோம்‌. பூமியின்‌ புத்ரர்களான நாம்‌ ஒருவர்க்கொருவர்‌ த்வேஷிப்பதன்‌ மூலமும்‌, தூஷிப்பதன்‌ மூலமும்‌ முக் கரணங்களாலும்‌ முடிவில்லாத துன்பங்கள்‌ செய்வதன்‌ மூலமும்‌ நம்‌ தாயாகிய பூமியைத்‌ துன்புறுத்துகிறோம்‌.-பொறுமையாகிய பாலை நமக்கு ஊட்டின தாயின்‌ வழி நாம்‌ நடக்க வேண்டாமா? பொறையின்‌ மக்கள்‌ குறை கூறலாமோ? பொறுமையில்‌ மிக்கவளாகையாலும்‌, பூமியில்‌ பிறந்து வளர்ந்த நமக்கு இஹ பர புருஷார்த்தங்களை அடையச்‌ செய்பவள்‌ இவளே யாகையாலும்‌ முதலில்‌ “ஹ்ரீ:’ என்று பூமி தேவி சொல்லப் பட்டாள்‌. தேச பக்தி யென்‌பது தாயிடம்‌ அன்பே. ஆனால்‌ அந்த மாதவியோ மாதவனுடையவள்‌-அவளிடம்‌ பத்தி யென்று பெயர் பூண்டு அவனியாள்‌ நாதனின்‌ ஆஜ்ஞைகளை மீறுகிறார்கள்‌ சிலர்‌. பூமி தேவி அவர்களைப்‌ பொறுக்‌காமல்‌ பாரமாகவே கருதுவாள்‌. புருஷோத்தமனிடமிருந்து பூமியைப்‌ பிரிப்பவர்கள்‌ தகப்பனை விட்டுத் தாயைப்‌ பிரிப்பவர்களாகக்‌ கருதப்‌ படுவார்கள்‌. பிராட்டியை பகவானை விட்டுப்‌ பிரித்த ராவணன்‌ தலை யறுப்புண்டான்‌; பிரிக்கப் பார்த்த : சூர்ப்பணகை மூக்கறுப்புண்‌டாள்‌” என்று நம்‌ ஆசார்யர்கள்‌ அருளிச் செய்திருப்பது இங்கு அனுஸந்திக்கத் தக்கது.

(லக்ஷ்மீ:) திவ்ய லக்ஷணங்கள்‌ பொருந்தியவளாதலால்‌ :லக்ஷ்மி” என்று கீர்த்தி பெற்றிருக்கிறார்‌ பெரிய பிராட்டியார்‌- தேவர்‌,” மனுஷ்‌யர்‌ முதலிய எல்லாராலும்‌ பிரார்த்திக்கப் படுபவளாதலால்‌ ‘லக்ஷ்மி’ என்றுரைக்கப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.-பகவானுக்கு ஜ்ஞானனந்தாதி குணங்களைப் போல்‌ ஸவரூப நிரூபக பூதையா யிருப்பவள்‌.-மற்ற எல்லா மஹிஷிகளுக்கும்‌ தலைவியா யிருப்பவள்‌. ஜீவர்களுககெல்லாம்‌ புருஷகாரமா யிருப்பவள்‌. உலகிலுள்ள ஐஸ்வர்யங்களை யெல்லாம்‌ கொடுப்பவள்‌ ஸ்ரீதேவி. ஐஸ்வர்யங்கள்‌ எட்டு வகைப்‌ படும்‌:- 1-தங்கம்‌, வெள்ளி முதலியவைகள்‌ (தன லக்ஷ்மி). 2. தான்‌யங்கள்‌ (தான்ய லக்ஷ்மி). 3-புத்ர பெளத்ராதிகள்‌(ஸந்தான லக்ஷ்மி),4, ரத கஜ துரக பதாதிகளை யுடைய ராஜ்ய லக்ஷ்மி-5-வீர்ய (பராக்ரம) லக்ஷ்மி, 6. விஜய லக்ஷ்மி. 7. துஷ்டி, புஷ்டி முதலியவற்றைத் தரும்‌ ஸெளபாக்ய லக்ஷ்மி. 8, மோக்ஷ லக்ஷ்மி. இவற்றை யெல்லாம்‌ கொடுப்பவள்‌ ஸ்ரீ தேவி.

(ஹ்ரீச்ச லக்ஷ்மீச்ச) ஸம்பத்தாயிருப்பவள்‌ ஸ்ரீதேவி; ஸர்வ ஸம்பத்துகளுக்கும்‌ விளை நிலமாயிருப்பவள்‌ நிலமகள்‌. பெருமை யுடையவள்‌ பூமகள்‌; பொறுமை யுடையவள்‌ பூ தேவி. குணமுடையவள்‌ ஸ்ரீதேவி;மணமுடையவள்‌ மண்‌ மடந்தை. கோஷிப்பிப்பவள்‌ ஸ்ரீதேவி; போஷிப்பவள்‌ பூமி தேவி. அழகுடையாள்‌ இலக்குமி; புகழமுடையாள்‌ பூ தேவி. ஆதரமுடையவள்‌ அலர் மேல் மங்கை; ஆதாரமானவள்‌ அவனியாள்‌.

(பத்ந்யெள) இப்படிப்பட்ட கீர்த்தியை யுடைய இவர்கள்‌ .பரம புருஷனுக்குப்‌ பத்னிகள்‌ என்று உரைக்கப்படுகிறது. “பதிம் நயதி “என்னும்‌ வ்யுத்பத்தியின்படி ஸர்வேஸ்வரனைக்‌ கண் காட்டிய இடத்‌தில்‌ காரியம்‌ செய்யச் செய்பவள்‌ என்று பொருள் கொள்ளலாம்‌.
**யஸ்யாவீக்ஷ்ய முகம்‌ ததிங்கித பராதீநோ விதத்தேகி,லம்‌” [எந்தப்‌ பிராட்டியின்‌ முகத்தைப்‌ பார்த்து அவளுடைய முக பாவத்திற்கு வசப்‌பட்டு ஸர்வேஸ்வரன்‌ எல்லாவற்றையும்‌ செய்கிறானோ…]என்றல்‌லவோ ஆழ்வான்‌ அருளினார்‌. ‘ப்ரஜைகளை பகவானிடத்தில்‌ அழைத்‌துச்‌ செல்லுபவள்‌’ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌-இதனால்‌ இவ்‌விருவரும்‌ புருஷகாரமா யிருக்கிறார்களென்று அறிவிக்கப் படுகிறது.

“லஷ்மீ: புருஷகாரத்வே நிர்தி,ஷ்டா பரமர்ஷிபி,:’”? [லக்ஷ்மி புருஷகாரம்‌ (சிபார்சு) செய்பவள்‌ என்று பரம ரிஷிகளால்‌ நிர்ண யிக்கப்பட்டிருக்கிறாள்‌.] என்ற பாஞ்சராத்ர வசனம்‌ இங்கு அனு ஸந்திக்கத் தக்கது; பூதேவியும்‌ புருஷகாரத்வத்தை உடையவளென்‌பது * விஷ்ணுக்ராந்தே வஸுந்தரா…தயா ஹதேந பாபேந கச்சாமி பரமாம்‌ கதிம்‌” [விஷ்ணுவினால்‌ (திரிவிக்ரமாவதாரத்தில்‌) அளக்கப்‌ பட்ட பூமியே… அவளால்‌ பாபம்‌ நீங்கினவனாகி பரம பதத்தை அடைகிறேன்‌.] என்று வேதத்தில்‌ சொல்லப்பட்டது. “*பத்யுர்‌ நோ யஜ்ஞ ஸம்யோகே” என்கிற பாணினி ஸூத்ரத்தின்படி ஆஸ்ரிதர்களை
ரக்ஷிப்பதாகிற யஜ்ஞத்தில்‌ ஸஹ தர்ம சாரிணியா யிருப்பவள்‌ என்றும்‌ பத்னீ சப்தத்திற்குப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. ஹ்ரீ:” என்‌ று லஜ்ஜைக்கு அபிமானி தேவதை; :லக்ஷ்மீ:” என்று ஐஸ்வர்யத்துக்கு அபிமானி தேவதை’” என்றார்‌ வித்யாரண்யர்‌.

எவ்வுலகத்திலி ருப்பவரும்‌, எம்மதத்திலி ருப்பவரும்‌ விரும்பும்‌ இஹ புருஷார்த்தங்கள்‌ தனம்‌, தான்யம்‌, ஸெளக்யம்‌ என்பவையே யாம்‌. இவைகளைக்‌ கொடுப்பவர்கள்‌ ஸ்ரீபூமி நீளா தேவிகளே. இவர்கள்‌ மூவருக்கே :ஸ்ரீஸூக்தம்‌” *பூஸூக்தம்‌” ‘நீளா ஸூக்தம் ’ என்று மூன்று ஸூக்தங்கள்‌ வேதத்தில்‌ படிக்கப் பட்டிருக்கின்‌றன. இவைகள்‌ நாராயண ஸூக்தத்திற்குப்‌ பின்‌ விவரிக்கப்படும்‌, ஸ்ரீஸூக்தம்‌ லக்ஷ்மியைச்‌ சொல்லுவதென்பதை சைவர்களுட்பட எல்லோரும்‌ ஓப்புக் கொள்ளுகிறுர்கள்‌. ஸ்ரீதேவியினால்‌ கொடுக்கப்‌ படும்‌ ஐஸ்வர்யங்களும்‌, பூமியில்‌ விளையும்‌ நவதான்யங்களும்‌, காய்‌ கனிகளும்‌, அதிலிருக்கும்‌ மண்‌, நீர்‌, அக்னி, வாயு, ஆகாசம்‌ எனும்‌ பஞ்ச பூதங்களுமில்லாமல்‌ மனிதர்களோ மற்ற பிராணிகளோ உயிருடனிருக்க முடியுமோ? இஹ லோக ஸுக ஸாதனங்களான நெய்‌, பால்‌, தயிர்‌, உண்ணும்‌ சோறு, பருகுநீர்‌, தின்னும்‌ வெற்றிலை முதலிய பதார்த்தங்களை விரும்பாதார்‌ யாவரே இவ் வுலகிலுள்ளார்‌?இந்த ஸ்ரீஸூக்த, பூஸூக்த, நீளா ஸூக்தங்களைப்‌ படிப்பதனால்‌ இஹ லோக புருஷார்த்தங்களெல்லாவற்றையும்‌ அடையலாம்‌. இவற்றைத்‌ தருவதுடன்‌ நில்லாமல்‌ பரம புருஷார்த்தமாகிய பகவத்‌ கைங்கர்யத்தையும்‌ பரந்தாமனுடைய பத்னிகள்‌ கொடுக்கிறார்கள்‌-புருஷோத்தமன்‌ தன்‌ பத்னிகள்‌ மூலமாக இவற்றைத்‌ தருகிறான்‌.

(அஹோராத்ரே பார்ஸ்வே) ‘பகலுமிரவும்‌ பரந்தாமன்‌ பக்கத்‌தில்‌ இப் பத்னிகளிருக்கிறார்கள்‌. அகலகில்லேன்‌ இறையும்‌ என்றிருக்‌கிறார்கள்‌. நம்மாழ்வாரும்‌, உடனமர்‌ காதல்‌ மகளிர்‌ திருமகள்‌ மண்‌மகள்‌ ஆயர்‌ மடமகள்‌ என்றிவர்‌ மூவர்‌‘” என்றும்‌, “நிழல்‌ போல்வனர்‌”‘ என்றும்‌ அருளிச்செய்தார்‌. எதற்காக இப்படி இருக்கிறார்களென்றுல்‌:
“சஞ்சலம்‌ ஹி மந:’* [மனது சஞ்சலமானது.] என்றும்‌, “நின்றவா நில்லா நெஞ்சு” என்றும்‌ சொல்லுகிறபடியே சேதனர்கள்‌ மிகவும்‌ நிலை யற்ற நெஞ்சை யுடையவர்களாதலால்‌, அவர்களுக்கு பகவத்‌ விஷயத்தில்‌ ருசி ஏற்பட்டவுடன்‌ அவர்களை பகவானிடம்‌ சேர்த்து
விட வேண்டும்‌ என்றே அச்யுதனின்‌ அருகிலிருக்கிறார்கள்‌. மேலும்‌, இருவருமான சேர்த்தியே உத்தேச்யம்‌. *தேவிமாராவர்‌ திருமகள்‌ பூமி ஏவ மற்றமரர்‌ ஆட் செய்வார்‌’” என்று நித்யஸூரிகளும்‌ இவர்களுடைய சேர்த்தியில்‌ ஏவினதை எடுத்துக்‌ கை நீட்டுபவர்களென்று சொல்லப்‌ பட்டிருக்கிறது. அவர்கள்‌ ஏவலைக் கேட்பதே பரமானந்தமாகும்‌.-சேஷனான இளைய பெருமாள்‌ :க்ரியதாமிதி மாம்‌ வத;’”[செய்யப்படட்டும்‌ என்று என்னை ஆஜ்ஞாபிப்பாயாக.] என்று இதையே விரும்பினர்‌.““ரமமாணா வநே த்ரய:‘”[மூவரும்‌ வனத்தில்‌ ரமித்தார்கள்‌,] என்று சொல்லப்பட்டபடி ஜீவன்‌, எம்பெருமான்‌, பிராட்டி என்னும்‌ மூவர்‌களுடைய சேர்த்தியே பரஸ்பரம்‌ ஆனந்தத்தைத்‌ தருவதாகும்‌.-ஸீதா ராமர்களுக்குப்‌ பரஸ்பர ஸம்ஸ்லேஷத்தினா லேற்படும்‌ ஸந்‌ தோஷம்‌, இளைய பெருமாளுக்கு (லக்ஷ்மணனுக்கு) இருவருமான சேர்த்தியை ஸேவிப்பதனால்‌ ஏற்பட்டதன்றோ. இங்கு பிராட்டிகளும்‌ பகவானும்‌ வெவ்வேறு தத்வங்கள்‌ என்பதும்‌ காட்டப்படுகிறது.

“ராமஸ்ய தக்ஷிணே பார்ஸ்வே பத்‌மா ஸ்ரீஸ்ஸம வஸ்த்திதா- ஸவ்யே து ஹ்ரீர்‌ விசாலாக்ஷ”[ராமனுடைய வலது புறத்தில்‌ தாமரையாளாகிற ஸ்ரீதேவி இருந்‌
தாள்‌; இடது புறத்தில்‌ விசாலமான கண்களை யுடைய பூதேவி இருந்தாள்‌.] என்னும்‌ ஸ்ரீராமாயண வசனத்தாலும்‌“தரணீ தேவீ தஷிணேதரகா ததா [பூமிதேவி இடது புறத்திலிருப்பவள்‌.| என்‌னும்‌ பாத்ம புராண வசனத்தினாலும்‌ இந்த மந்திரம்‌ . விவரிக்கப்‌ பட்டது. இத்தால்‌ ‘திருவில்லாத்‌ தேவரைத்‌ தேறேன்மின்தேவு”” என்று திருமழிசை யாழ்வாரால்‌ சொல்லப்பட்டபடி, மற்ற தெய்வங்களிற்‌ காட்டிலும்‌, மாதவனின்‌ மேன்மை உரைக்கப்பட்டது. மற்றிருந்தீர்‌ கட்கறியலாகா மாதவனென்பதோர்‌ அன்பனாகிய அச்யுதனுக்கு “தே,வ்யா காருண்ய ரூபயா”” என்று ப்ரஸித்தமடைந்த வேரி(வாஸனை) மாறாத பூமேலிருப்பவளான ஸ்ரீதேவியும்‌, மாதவியாகிய பூதேவியும்‌ பத்னிகளாயிருந்து கொண்டு சேதனர்களை ஸ்ருஷ்டிக்கும்படியும்‌,மோக்ஷத்தை அடையும்படியும்‌ செய்கிறார்கள்‌. இம் மூவரும்‌ சேர்ந்து கொண்டு ஒருவர்க்கொருவர்‌ சேதனரிடம்‌ அன்பு காட்டுவதில்‌ போட்டி போடுகிறார்கள்‌, “தன்னடியார்‌ திறத்தகத்துத்‌ தாமரையாளாகிலும்‌ சிதகுரைக்குமேல்‌ என்னடியார்‌ அதுசெய்‌யார்‌ செய்தாரேல்‌ நன்று செய்தார்‌ என்பர் போலும்‌
என்று அருளிச் செய்தார்‌ பெரியாழ்வாரும் -இம் மாதிரியாக பரனுக்கே ஸ்ரீ, பூமி, நீளா என்று மூன்று பத்னிகள்‌ பரத்வாவஸ்தையிலும்‌ இருப்பதாகச்‌ சொல்லப்பட்டது.-அவர்‌ புத்ரனான பிரமனுக்கும்‌ ஸரஸ்வதி, காயத்ரி, ஸாவித்ரி என்று மூன்று பத்னிகளிருப்பதாக அறிகிறோம்‌. அவருடைய பேரனாகிய ஸுப்ரஹ்மண்யனுக்கும்‌ வள்ளி, தேவ ஸேனை என்று இரு பத்னிகளிருப்பதாகப்‌ புராணங்களில்‌ பேசப்பட்டிருக்கிறது.-புருஷோத்தமனுடைய விபவாவதாரங்களிலும்‌ க்ருஷ்ணாவதாரத்தில்‌ அஷ்ட மஹிஷி களுடனிருந்தது எல்லோரும்‌ அறிந்ததே.-யாஜ்ஞ வல்க்யர்‌ இரண்டு பத்னிகளை யுடைவரென்பது வேத ப்ரஸித்தம்‌. வைஷ்ணவ ஆசார்ய ஸ்ரேஷ்‌டர்களான பட்டர்‌, நஞ்சியர்‌, நம்பிள்ளை என்னும்‌ இம் மூவரும்‌ இரண்டு பத்னிகளை உடையவர்களென்று படித்திருக்கிறோம்‌.இப்படி புண்ய பூமியாகிய பாரத தேசத்தில்‌ நாம்‌ வணங்கும்‌ தெய்வமும்‌; ரிஷிகளும்‌, ஆசார்யர்களும்‌ அனேக பத்னிகளை உடையவர்களாக இருந்திருக்‌கிறார்கள்‌. ஸ்ம்ருதிகளிலும்‌ பல தாரங்களை மணம்‌ செய்து கொள்ளப்‌ புருஷர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. பல கோடிக்‌ கணக்‌
கான வருஷங்களாக இருந்து வரும்‌ இவ் வழக்கத்தை கிறிஸ்தவ மதக்‌ கொள்கையைக்‌ காரணமாகக் கொண்ட ஐரோப்பியரின்‌ அனுஷ்‌டானத்தைக் கொண்டு மாற்ற சட்டம்‌ ஏற்படுத்தப்‌ பார்க்கிறார்கள்‌-அப்படிச்‌ செய்வது நமது நாட்டுக்கும்‌ அதன்‌ மக்களுக்கும்‌ அதில்‌ வழங்கி வரும்‌ மதங்களுக்கும்‌ பெருத்த தீங்காகும்‌.

(நக்ஷத்ராணி ரூபம்‌) உம்முடைய .. திரு வுருவம்‌ நக்ஷத்ரங்கள்‌ போல்‌ அழகா யிருக்கிறது. ஆதித்யனைப் போன்ற ஒளியை யுடையவன்‌ என்று முன்‌ சொன்னதில்‌ த்ருப்தி யில்லாமல்‌ கணக்கற்ற நக்ஷத்‌ரங்களைப் போல்‌ அழகியதா யிருக்கிறது உன்‌ சோதி யுருவம்‌ என்று சொல்லப்படுகிறது. சங்க சக்ரங்கள்‌, திவ்யாபரணங்கள்‌, ஹிரண்யவர்ணையான பிராட்டி பீதாம்‌பரம்‌ முதலியவைகளுடன்‌- கூடிய திவ்ய மங்கள விக்ரஹம்‌ நக்ஷத்ரங்களுடன்‌ கூடிய நீல மேகம் போல்‌ விளங்குகிறதன்றோ-“தாரா ரூபாணி த்‌ருஸ்யந்தே யாந்யேதாநி நபஸ் ஸ்தலே மம ரூபாணி தாந்யேவ”[ஆகாயத்தில்‌ காணப்படும்‌ நக்ஷத்ர ரூபங்களெல்லாம்‌ என்னுடைய உருவங்களே.] என்று மஹா பாரதத்தில்‌, ஆரண்ய பர்வத்தில்‌ பகவான்‌ மார்க்கண்டேயரைக்‌ குறித்துச்‌ சொன்ன வசனத்தை அனுஸரித்து நக்ஷத்ரங்கள்‌ பகவானுடைய சரீரங்களே என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. (அச்விநெள வ்யாத்தம்‌) அழகில்‌ மிக்க உம்முடைய திருமுக மண்டலம்‌ அச்வினீ தேவர்கள் போல்‌ விளங்குகிறது. “அழகனே! காப்பிட வாராய்‌”” என்றார்‌ பெரியாழ்வார்‌. கண்டவர்‌ தம்‌ மனம்‌ வழங்கும்‌ அழகுடையவனன்றோ இவன்‌. அச்வினீ தேவர்‌களைக் காட்டிலும்‌ அழகிய உருவமுடையவர்‌ லீலா விபூதியில்‌ இல்‌லாமையால்‌ இவர்கள்‌ உபமானமாகச்‌ சொல்லப் பட்டனர்‌. இவர்‌களும்‌ பகவானுடைய திருமுக மண்டலத்திற்கு ஓப்பாகார்கள்‌.

பட்டரும்‌-ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில்‌ ““விஹரது மயி ரங்கிரணச் சூலிகா ப்‌ரமரக திலகோர்த்‌வ புண்ட்‌ரோஜ்ஜ்வலம்‌ முகம ம்ருத தடாக சந்த்‌ராம்பு,ஜஸ்மர ஹரசுசி முக்‌த,மந்த;ஸ்மிதம்‌’”-[திருமுடி, திரு நெற்றியில்‌ அலையும்‌ திருக் குழல்‌, திலகம்‌, திருமண்‌காப்பு, இவற்றால்‌ பிரகாசிப்பதும்‌, அம்ருத தடாகம்‌, சந்திரன்‌,தாமரைப் பூ, இவற்றின்‌ கர்வத்தைப்‌ போக்கடிப்பதும்‌, வெண்மையான, அழகிய புன் முறுவலை உடையதுமான ஸ்ரீரங்கநாதனுடைய முகம்‌ என்னிடம்‌ விஹாரம்‌ செய்யக் கடவது என்று பகவானுடைய திரு முகத்தை ஓப்பற்றதாக வன்றோ பேசினார் -இதற்கு மேல்‌ வேத புருஷன்‌, இப் புருஷ ஸூக்தத்தை அனுஸந்‌தித்தவர்களுக்கு இஹ லோக புருஷார்த்தங்களையும்‌, பகவத் கைங்கா்‌யத்தையும்‌ கொடுக்கும்படி புருஷோத்தமனைப்‌ பிரார்த்திக்கிறான்‌.-இங்கு கைங்கர்ய ப்ரார்த்தனை செய்யப் படுகிறதென்பது கருணைக் கடலான பெரியவாச்சான் பிள்ளையால்‌ பரந்த ரஹஸ்யத்தில்‌ அருளிச் செய்‌யப்பட்டது. (இஷ்டம்‌ மநிஷாண) இவர்கள்‌ விரும்பின எல்லாப்‌ புருஷார்த்தங்களையும்‌ கொடும்‌. இதனால்‌ ப்ரயோஜனாந்தர பரராக மாட்டார்களோ என்ற ஸந்தேஹம்‌ எழுகிறது. புருஷோத்தமனிடம்‌ மற்ற பலன்களை நமக்காக விரும்பினால்‌ ப்ரயோஜனாந்தர பரராவோம்‌. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இவ் வுலகிலுள்ள எல்லா ஸம்ருத்திகளும்‌ உண்டாக வேண்டும்‌ என்று பிரார்த்திப்பது தோஷ மன்று. ஆழ்வார்‌களும்‌ ‘நன் மக்களைப்‌ பெற்று மகிழ்வரே” என்றும்‌, “நல்ல பதத்தால்‌ மனை வாழ்வர்‌ கொண்ட பெண்டிர்‌ மக்களே’” என்றும்‌, “விடுமால்‌ வினை வேண்டிடில்‌ மேலுலகும்‌ எளிதாயிடும்‌ அன்றி இலங்கொளி சேர்‌ கொடு மா கடல்‌ வையகம்‌ ஆண்டு மதிக்குடை மன்னவராய்‌ அடி கூடுவரே'” என்றும்‌ அருளிச் செய்தனரன்றோ.(அமும்‌ மநிஷாண) முன்‌ மந்திரங்களில்‌ சொல்லப்பட்ட கைங்‌கர்யம்‌ ‘அமும்‌’ என்று காட்டப்படுகிறது. நித்யஸூரிகள்‌ செய்யும்‌ கைங்கர்யத்தையும்‌ கொடும்‌; பரம புருஷார்த்தமாகிற பகவதநுபவத்தைக்‌ கொடுப்பீராக. பிராட்டியும்‌ நீருமாயிருக்கிற சேர்த்தியில்‌ அடிமையை அருளுவீராக. (ஸர்வம்‌ மநிஷாண) எல்லாவற்றையும்‌ கொடும்‌. வேண்டிற்றெல்லாம்‌ தருபவனன்றோ தாமோதரன்‌-“சாய் கொண்ட இம்மையும்‌ சாதித்து வானவர்‌ நாட்டையும்‌ நீ கண்டு கொள்ளென்று வீடும்‌ தரும்‌ நின்று நின்றே”என்றார்‌ நம்மாழ்வார்‌.

இந்த ருக்கில்‌ அச்யுதனுடைய அன்பெனும்‌ அவியா விளக்கை ஸ்ரீ பூமிகள்‌ தூண்டுகிறார்களென்றும்‌, புருஷோத்தமன்‌ அன்பு மயமானவனென்றும்‌, சோதி வடிவானவனென்றும்‌; அழகமா் சூழொளிய னென்றும்‌ சொல்லப் பட்டது-“ஸர்வம்‌ ஐகந் மம பவேதிதி ஸஞ் சிந்தயந்‌ முநி: த்‌யாயேத்‌ புருஷ ஸூக்தேந ப்ரதி பாத்‌,ய ஜநார்த்தநம்‌ விஷ்ணு: புருஷ ஸூக்தார்த்த, இதீயம்‌ வைதிகீ ஸ்ருதி: புருஷஸ்ய ஹரேஸ்‌ ஸூக்தம்‌ ஸர்‌வ பாப ப்ரணாசநம்‌”[“இவ் வுலகெல்லாம்‌ எனக்காகட்டும்‌” என்று நினைத்துக் கொண்டு, முனியானவன்‌, புருஷ ஸூக்தத்தினால்‌ ஜனார்த்தனனைச்‌ சொல்லி, தியானிக்கக் கடவன்‌.-விஷ்ணுவே புருஷ ஸுூக்தத்தினால்‌ சொல்லப்‌ படுபவனென்று வேதத்தில்‌ உரைக்கப் பட்டது. ஹரியாகிற புருஷ, னுடைய ஸூக்தம்‌ எல்லாப்‌ பாபங்களையும்‌ போக்கடிப்பது.] என்று கார்க்க செளநக மஹ ரிஷிகளால்‌ புருஷ ஸூக்தம்‌ நாராயணனைச்‌ சொல்லுவதென்று உரைக்கப் பட்டது. போதாயனரும்‌,““அதைநம்‌ ருக்‌,யஜுஸ் ஸாமபி,ஸ்‌ ஸ்துவந்தி த்‌ருவ ஸூக்தம்‌ ஜபித்வா புருஷ ஸூத்தம்‌ ச அந்யாம்ச்ச வைஷ்ணவாந் மந்த்ராந்‌”*(இத்த நாராயணனை, த்ருவ ஸூக்தத்தையும்‌, புருஷ ஸூக்தத்தையும்‌ மற்ற வைஷ்ணவ மந்திரங்களையும்‌ ஜபித்து, ருக் யஜுஸ் ஸாம வேதங்‌களால்‌ ஸ்தோத்ரம்‌ செய்கிறார்கள்‌.] என்று விஷ்ணுவினுடைய ஆராதனத்தில்‌ புருஷ ஸூக்த ஜபம்‌ செய்ய விதித்திருக்கிறார்‌.“ஏஷா வைஷ்ணவீ நாம ஸம்ஹிதா, ஏதாம்‌ ப்ரயுஞ்ஜந்‌ விஷ்ணும்‌ ப்ரீணாதி”[இது விஷ்ணுவினுடைய நாம ஸம்ஹிதை; இதை ப்ரயோகிப்பவன்‌
விஷ்ணுவை ப்ரீதி யடையச்‌ செய்கிறான்‌.] என்று ஸாம விதி ப்ராஹ்மணத்தில்‌ சொல்லப் பட்டது. ஆதர்வணத்திலும்‌, கோ பத ப்ராஹமணத்தில்‌, ‘“வைஷ்ணவ்யா புருஷ ஸூக்தம்‌’” என்று உரைக்கப்பட்டது.

புருஷஸ்ய ஹரேஸ் ஸூக்தம்‌ ஸ்வர்க்‌யம்‌ தந்யம்‌ யசஸ்கரம்‌…ஸ்ருதிஷு ப்ரப,லா மந்த்ராஸ்‌ தேஷ்வப்யத்‌,யாத்ம வாதி: தத்ராபி பெளருஷம்‌ ஸூக்தம்‌ ந தஸ்மாத்‌, வித்‌யதே பரம்‌”[புருஷனாகிய ஹரியின்‌ ஸூக்தம்‌ ஸ்வர்க்கத்தைத்‌ தருவது; மேலானது; கீர்த்தியைக்‌ கொடுப்பது. வேதங்களில்‌ மந்த்ரங்கள்‌ மேலானவை? அவைகளிலும்‌ பரமாத்மாவைச்‌ சொல்லுபவை சிறந்‌தவை. அவற்நிலும்‌ புருஷ ஸூக்தம்‌ பெருமை வாய்ந்தது. அதைக்‌ காட்டிலும்‌ மேலானதில்லை.] என்று செளநக ஸ்ம்ருதியில்‌ புருஷ ஸூக்தத்தின்‌ பெருமை பேசப்பட்டது. வியாஸ ஸ்ம்ருதியிலும்‌,“ந விஷ்ண்வாராத நாத்‌ புண்யம்‌ வித்‌யதே கர்ம வைதிகம்‌ . தஸ்மாத,நாதி, மத்‌,யாந்தம்‌ நித்யமாராத,யேத்‌ ஹரிம்‌ தத்‌; விஷ்ணோரிதி மந்த்ரேண ஸுக்தேந பெளருஷேண ச நைதஸ்ய ஸத்‌,ருசோ மந்த்ர: வேதே,ஷூக்தச்‌ சதுர்ஷ்வபி”[விஷ்ணுவை ஆராதிப்பதைக் காட்டிலும்‌ புண்யமான வைதிக கர்மம்‌
கிடையாது. ஆகையால்‌ :*தத்‌; விஷ்ணோ: பரமம்‌ பத;ம்‌’” என்னும்‌ மந்‌திரத்தாலும்‌, புருஷஸூக்தத்தாலும்‌, ஆதி மத்யாந்தமில்லாத ஹரியை தினந்தோறும்‌ ஆராதிக்கக் கடவன்‌. இதற்கு ஸமானமான மந்திரம்‌ நான்கு வேதங்களிலும்‌ சொல்லப் படவில்லை.] என்று உத்கோஷிக்‌ கப்பட்டது. விஷ்ணு ஸ்ம்ருதியிலும்‌, “வாஸுதேவம்‌ ஸமர்ச்சயேத்‌::…[வாஸு தேவனை அர்ச்சனை செய்ய வேண்டியது. ] என்று ஆரம்பித்து“ஏவமப்‌யர்ச்ய து ஜபேத்‌ ஸூக்தம்‌ வை பெள்ருஷம்‌ தத:””[இம்மாதிரி ஆராதித்து புருஷ் ஸூக்தத்தை ஜபிக்க வேண்டியது.] என்று சொல்‌லப்பட்டது. வாதூல ஸூூத்ரத்தில்‌. “யத்ர யத்ர கர்ம ப்ரேஷோ ஜாயதே தத்ர தத்ர புருஷம்‌ த்‌யாயந் புருஷ ஸூக்தம்‌ ஜபே தர்ச்சயேத்‌ பூர்ணத்வாத்‌ புருஷ:”” [கர்ம ப்ரம்சம்‌ உண்டாகும் போது, புருஷனை தியானித்து,புருஷ் ஸூக்தத்தை ஜபித்து ஆராதிக்க வேண்டியது; . பூர்ணானாகை’யால்‌ புருஷனெனப்படுகிறான்‌.] என்று.புருஷ ஸூக்தத்தின்‌ சிறப்பு சொல்லப் பட்டது. இம் மாதிரியாகப்‌ பல்லாயிரக்கணக்கான இடங்‌ களில்‌ புருஷ ஸூக்தத்தில்‌ ப்ரதிபாதிக்கப் படுமவன்‌ நாராயணனே என்று சொல்லப் பட்டிருக்கிறது.

இதிஹாஸ புராணங்களிலும்‌ பல பல விடங்களில்‌. இது பகவத் பரமென்று பேசப் பட்டிருக்கிறது.’ ஸாரமான சிலவற்றை எடுத்துக்‌ காட்டுவோம்‌. : மஹாபாரதத்தில்‌,மோக்ஷதா்மத்தில்‌,“ப;ஹவ: புருஷா ராஜந்‌ உதாஹோ ஏக ஏவது।கோஹ் யத்ர புருஷ: ச்ரேஷ்ட்ட,: கோ வா யோநிரிஹோச்யதே॥”[ப்ராஹ்மணரே! புருஷர்கள்‌ பலரா? அல்லது ஒருவனா?(பலரானால்‌)இவர்களுள்‌ எந்தப்‌ புருஷன்‌ மேலானவன்‌? எவன்‌ மற்றவர்களுக்கு காரணமாயிருப்பவன்‌?] என்று ஜனமேஜயர்‌ வைசம்பாயனரை வினவினார்‌.-வைசம்பாயனரும்‌ தாம்‌ சொல்லப் போகும்‌ விஷயம்‌ அதி ரஹஸ்யமானதாகையால்‌ தன்‌ குருவான வியாஸரை நமஸ்கரித்து,“ப,ஹவ: புருஷா ராஜ்‌ ஸாங்க்‌,ய யோக,விசாரிணாம்‌.। நைத திச்ச,ந்தி புருஷம்‌ ஏகம்‌ குரு குலோத்‌,வஹ।’ பாஹுநாம் புருஷாணாஞ்ச யதை,கோ யோ நிருச்யதே |ததா தம்‌ புருஷ வ்யாக்‌,ரம்‌ வ்யாக்‌,யாஸ்யாமி கு.ணாதி,கம்‌ ॥ இத,ம்‌ புருஷ ஸுக்தம்‌ ஹி ஸர்வ வேதே,ஷு பார்த்திவ | ருதம்‌ ஸத்யம்‌ ச விக்‌,யாதம்‌ ருஷி ஸிம்ஹேந சிந்திதம்‌ |”-(குருகுல ச்ரேஷ்ட்டனான அரசனே! ஞானிகளும்‌. யோகிகளும்‌ புருஷர்‌கள்‌ பலரென்ற நிர்ணயித்திருக்கிறார்கள்‌. ஒரு புருஷன்‌ என்பதை அவர்கள்‌ அங்கீகரிக்க மாட்டார்கள்‌. பல புருஷா்களுக்கும்‌ காரண மானவனும்‌, குணங்களில்‌ சிறந்தவனுமான புருஷ ச்ரேஷ்டனைச்‌ சொல்லுகிறேன்‌. ரிஷி ச்ரேஷ்ட்டரால்‌ ஸாஷாத் கரிக்கப்பட்ட இந்தப்‌ புருஷஸூக்தம்‌ எல்லா வேதங்களாலும்‌ உண்மையை உணர்த்துவது என்று கீர்த்தி பெற்றிருக்கிறது- என்று அத்வைத நிரஸனம்‌ செய்து புருஷ் ஸூக்தமே காரண புருஷனைக்‌ கூறுகிறது என்று உரைத்து,புருஷோத்தமன்‌ யாரென்பதை நிர்ணயம்‌ செய்ய ப்ரஹ்மாவுக்கும்‌ ருத்ரனுக்கும்‌ நடந்ததான பின் வரும்‌ ஸம்பாஷணையைச்‌ சொன்னார்‌:-

முன்‌ ஒரு காலத்தில்‌, பாற்கடலின்‌ நடுவிலுள்ள வைஜயந்த மென்னும்‌ பர்வதத்தில்‌ பிரமன்‌ தவம்‌ செய்து கொண்டிருக்கும்‌ போது, சிவபிரான்‌, ‘தன்‌ தகப்பனான பிரமனை அடி பணிந்து பல புருஷர்களை ஸ்ருஷ்டி செய்யும்‌ நீர்‌ எந்தப் புருஷனை தியானிக்கிறீர்‌? என்று கேட்டார்‌. அதற்கு பிரமன்‌’ஸ்ருணு புத்ர யதரா ஹ்யேஷ புருஷ: சாஸ்வதோவ்யய:…ந ஸ ஸக்யஸ்‌ த்வயா த்‌,ரஷ்டும்‌ மயாந்யைர் வாபி ஸத்தம…மமாந்தராத்மா தவ ச யே சாந்யே தேஹி ஸம்ஜ்ஜிதா:…விஸ்வ மூர்த்த, விஸ்வ பு,ஜ: விஸ்வ பாதாஷி நாஸிக:…மஹா புருஷ சப்‌தம்‌ ஸ பிபர்த்யேகஸ்‌ ஸநாதந:…ஸஹி நாராயணோ ஜ்ஜேய: ஸர்வாத்மா புருஷோ ஹி ஸ.””[குழத்தாய்‌! நித்யனானவனும்‌, அழிவற்றவனுமான புருஷனைப் பற்றிக்‌ , கேட்பாயாக.-அவனை உன்னாலும்‌, என்னாலும்‌, எவராலும்‌ காண முடியாது. அவன்‌ உனக்கும்‌ எனக்கும்‌, எல்லோருக்கும்‌ அந்தர்‌யாமி, அவன்‌ முடிகளாயிரம்‌, அடிகளாயிரம்‌, கைகளாயிரம்‌, கண்‌களாயிரமுடையவன்‌. பழைமையான அவனே மஹா புருஷ சப்தத்தை வஹிக்கிறான்‌. அவனை நாராயணனென்று அறிவாயாக;-ஸர்வாந்தர்‌யாமியான அவனன்றோ புருஷன்‌.] என்று புருஷ ஸூக்தத்தால்‌ சொல்லப் படுபவன்‌ பரமாத்மாவான நாராயணனே என்று தெளிவாகத்‌ தெரிவித்தார்‌. விஷ்ணு புராணத்தில்‌ துருவன்‌ இவ் விஷயத்தை விளக்கினான்‌. மேலும்‌, ஹரி வம்சத்தில்‌ கைலாஸ யாத்ரையின் போது ருத்ரன்‌, உமையுடன்‌ கூடி யிருந்து கை கூப்பி, பகவானைக் குறித்து,-ஸஹஸ்ர சீர்ஷா புருஷஸ்‌ ஸஹஸ்ராக்ஷஸ்‌ ஸஹஸ்ர பாத்‌ ஸஹஸ்ரோதர பாஹுச்ச ஸஹஸ்ராத்மா திவஸ்பதி:….”முதலிய ஸ்லோகங்களால்‌ ஸ்தோத்ரம்‌ செய்ததாலும்‌ புருஷ ஸூக்தம்‌ பேச நின்ற சிவனுக்கு நாயகனான நாராயணனையே சொல்லுகிறதென்று ஸித்திக்கிறது. மோக்ஷதர்மத்தில்‌ முப்பத்து மூன்றாவது’ அத்யாயத்தில்‌ பீஷ்மரை யுதிஷ்டிரன்‌ .-நாராயணம்‌ ஹ்ருஷீகேசம்‌ கோவிந்தம் அபராஜிதம்‌ தத்‌வேந பரத ஸ்ரேஷ்ட்ட, ஸ்ரோதுமிச்ச,ரமி கேஸவம்‌”[பரத குலத்தில்‌ பிறந்தவருள்‌ சிறந்தவரே! ஐயிக்கப்படாதவனும்‌, கோவிந்தன்‌, ஹ்ருஷீகேசன்‌, கேசவன்‌ என்னும்‌ பெயர்களை யுடையவனுமான நாராயணனை உண்மையாக அறிய விரும்புகிறேன்‌-என்று கேட்க,கேசவோ பரத ஸ்ரேஷ்ட்ட, பகவாநீஸ்வர: ப்ரபு: புருஷஸ்‌ ஸர்வமித்யேவ ஸ்ரூயதே பஹுதா விபு : ப்‌ராஹ்மணாநாம்‌ சதம்‌ ஜ்யேஷ்ட,ம்‌ முகாதஸ்யாஸ்‌ ருஜத் ப்ரபு,:”[பரத ஸ்ரேஷ்ட்டனே! ப்ரபுவும்‌, பகவானுமான கேசவனே ஸர்வேசஸ்வரன்‌, ஸர்வ வ்யாபியான அந்தப்‌ புருஷனே எல்லாமென்று பலவிதமாகச்‌ சொல்லப் படுகிறான்‌. ப்ரபுவான இவனே முகத்திலிருந்து உயர்ந்தவர்களான நூறு ப்ராஹ்மணார்களை ஸ்ருஷ்டித்தான்‌.] முதலிய ஸ்லோகங்களாலும்‌ இவ் விஷயம்‌ நன்கு விளக்கப்பட்டது.-ராமாயணத்திலும்‌, பாகவதத்திலும்‌, கீதையிலும்‌, மற்ற புராணங்‌களிலும்‌ புருஷ ஸூக்தம்‌ நாராயணனையே பரமாத்மா வென்று உத்‌கோஷிக்கிற தென்பது சொல்லப்பட்டது. இதைப்‌ பன்னியுரைக்குங்‌கால்‌ பாரதமாம்‌. ஆதலால்‌ இத்துடன்‌ நிறுத்திக் கொள்கிறோம்‌.

கூரத்தாழ்வான்‌ ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில்‌-*யம்‌ பூத பவ்ய பவதீ சமநீ சமாஹு: அந்தஸ் ஸமுத்‌ர நிலயம்‌ யமநந்தரூபம்‌ யஸ்ய த்ரிலோக ஜநநீ மஹிஷீ ச லக்ஷ்மீ: ஸாக்ஷாத்‌ ஸ ஏவ புருஷோஸி ஸஹஸ்ர மூர்த்தா ஸர்வ ஸ்ருதிஷ்வநுக;தம்‌ ஸ்திரம ப்ரகம்ப்பம்‌ நாராயணாஹ் வயத,ரம்‌ த்‌வமிவாந வத்‌யம்‌ ஸூக்தம்‌ து பெளருஷ மசேஷ ஜகத் பவித்ரம்‌ த்வாமுத்தமம்‌ புருஷமீச முதாஜஹார”[முக் காலங்களிலுள்ள வற்றிற்கு ஈசனென்றும்‌, தனக்கொரு ஈசன் இல்லாதவனென்றும்‌, பாற் கடலில்‌ பள்ளி கொண்டவனென்றும்‌,அபரிமிதமான அவதார ரூபங்களை யுடையவனென்றும்‌, மூவுலகிற்கும்‌ தாயாகிய லக்ஷ்மியைப்‌ பத்னியாக வுடையவனென்றும்‌ சொல்லப்‌ பட்ட நீயே ஆயிரம்‌ தலையை யுடைய புருஷனாகிறாய்‌. உன்னைப்‌ போல்‌, எல்லா ஸ்ருதிகளிலும்‌ உத்கோஷிக்கப் பட்டதும்‌, நிலையானதும்‌, அசைக்க முடியாததும்‌, ‘நாராயணம்‌’ என்ற பெயரை யுடையதும்‌, குற்றமற்றதும்‌, உலகை யெல்லாம்‌ புனிதமடையச் செய்வதுமான புருஷ ஸூக்தம்‌, உன்னையே மேலான புருஷனாகவும்‌, ஈஸ்வரனாகவும்‌ சொல்லிற்று.] எனறு புருஷ ஸூக்தத்தின்‌ பெருமையையயும்‌, பொருளையும்‌ ஸங்க்ரஹித்தார்‌.-பெரியவாச்சான்பிள்ளையும்‌ திருவாய்‌ மொழி வியாக்யானத்தின்‌ கடைசியில்‌ ”ஸ்ரீமானான நாராயணானே ப்ராப்யமும்‌ ப்ராபகமும்‌ என்று இவர்க்குப்‌ பஷமென்னுமிடம்‌ தோற்றிற்று. இவ்வர்த்தம்‌ உபநிஷத்‌ ப்ரஸித்தமும்‌;-அநந்ய பரமான நாராயண அநுவாகத்திலே, நாராயண சப்தத்தாலே ஸர்வாதிகனைச் சொல்லி, ‘ஹ்ரீச்ச தே லக்ஷமீச்ச பத்ந்யெள’*? என்று உத்தர நாராயணத்தே சொல்லிற்று” என்று அருளிச் செய்தார்‌.

இந்தப்‌ புருஷ ஸூக்தத்தில்‌, ஸ்ரீ பூமி நாதனான நாராயணனே பராத் பரனென்றும்‌, அவனே நான்முகளைப்‌ படைத்தானென்றும்‌,அவனே ஸர்வ காரண பூதனென்றும்‌, ஸர்வாந்தர்யாமி யென்றும்‌, லோக ஸம்ரக்ஷணார்த்தம்‌ பல அவதாரங்களைச்‌ செய்தானென்றும்‌, நித்ய விபூதி நாயகனென்றும்‌ நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. புருஷ ஸூக்தம்‌ என்னும்‌ பெயரிலிருந்தே ஸ்தோதாவாகிய ஜிவாத்மா உண்டென்றும்‌, ஸ்தவ ப்ரியனாகிய மஹா புருஷன்‌ உண்டென்றும்‌, ஸ்தோத்ரமும்‌ உண்‌மை யென்றும்‌ உணர்த்தப்படுகிறது. ஜ்ஞாதா,
ஜ்ஜேயம்‌, ஜ்ஞானம்‌ என்னும்‌ மூன்று இல்லை என்று சொல்லும்‌ அத்வைத வாதம்‌ இங்கு ஓப்புக் கொள்ளப் படவில்லை. உலகம்‌ பொய்‌ யென்கிற ப்ரம வாதத்திற்கு, இங்கு விவரமாகச்‌ சொல்லப்பட்ட ஸ்ருஷ்டி க்ரமத்தில்‌ இடமுண்டோ? பரம புருஷனுக்கு ஆயிரம்‌ கண்‌கள்‌, ஆயிரம்‌ தலைகள்‌ என்றும்‌, ஆதித்ய வர்ணமானவனென்றும்‌, நக்ஷத்ரங்கள் போல்‌ உருவமுடையவனென்றும்‌, அச்வினீ தேவர்கள்‌ போல்‌ அழகானவனென்றும்‌ சொல்லப்பட்டதால்‌ ரூபமில்லை என்னும்‌ வாதம்‌ வீண் வாதமென்று விளங்குகிறது. “சேதனர்கள்‌, நித்யர்‌,முக்தர்‌, பத்தர்‌ என்று மூன்று விதமானவர்களென்றும்‌, மோக்ஷத்தைக்‌ கொடுப்பவன்‌ முகுந்தவனே என்றும்‌ காட்டப்படுகிறது. காலமும்‌ வருங்காலம்‌, நிகழ்காலம்‌, கழிகாலம்‌ என்னும்‌ மூன்று பேதத்தை உடையதென்று தெரிகிறது. புருஷோத்தமனுடைய மஹிமை வாக்குக்‌கும்‌ மனத்திற்கும்‌ எட்டாததென்று அறிவிக்கப்படுகிறது. புருஷோத்தமன்‌ ஸமஸ்த கல்யாண குணங்கள்‌ நிறைந்தவனென்றும்‌, ஹேய குணம்‌ சிறிதும்‌ இல்லாதவனென்றும்‌, ஸுலபமாக ஆராதிக்கத்‌ தக்கவனென்றும்‌ உத்கோஷிக்கப்பட்ட திலிருந்து குண மில்லை என்‌னும்‌ கட்சிக்குக்‌ கொஞ்சமும்‌ இடமில்லை. ப்ரக்ருதிக்கு அப்பாற்‌ பட்டதும்‌, “விஷ்ணோர்‌ யத்‌ பரமம்‌ பதம்‌” என்றும் சொல்லப்பட்டதுமான ஸ்தான விசேஷம்‌ இருக்கிறதென்றும்‌, அதை அடைவதே மோக்ஷமென்றும்‌ விரித்துரைக்கப் பட்டிருக்கிறது. பகவத்‌ கைங்கர்‌யமே பரம புருஷார்த்தமென்றும்‌ அதுவும்‌ இருவருமான சேர்த்தியில்‌ செய்யப் படவேண்டும்‌ என்றும்‌ சொல்லும்‌ ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்‌தம்‌ ஓப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. விசிஷ்டாத்வைதமே, வேதாந்‌தத்தின்‌ விழுப்பொருள்‌ என்னும்‌ ஸித்தாந்தம்‌ ஸ்தாபிக்கப்பட்டது.

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ. வே, K. ஸ்ரீ நிவாஸய்யங்கார்‌ ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருக் கண்ண மங்கை பதிகம் பாசுரங்களின் விவரணம் -ஸ்ரீ ஸ்வாமிகள் அருளிச் செய்த ஒன்பது ஸ்ரீ திவ்ய கிரந்தங்கள்-

April 10, 2025

1-ஸ்ரீ பாஷ்யம்
2-வேதார்த்த தீபம் –
3-வேதார்த்த சாரம்
4-வேதார்த்த ஸங்க்ரஹம்
5-சரணாகதி கத்யம்
6-ஸ்ரீ ரங்க கத்யம்
7-ஸ்ரீ வைகுண்ட கத்யம்
8-நித்ய கிரந்தம்
9- கீதா பாஷ்யம்

சித்தி த்ரவ்யம் -ஸ்ரீ பாஷ்யம் -வேதார்த்த சக்கரம் -வேதார்த்த தீபம்
ஸ்தோத்ரம் ரத்னம் சாதுஸ்லோஹி -கத்ய த்ரவ்யம்
ஆகம பிரமாணம் -நித்ய கிரந்தம்
கீதார்த்த ஸங்க்ரஹம் -கீதா பாஷ்யம்
மாயாவாதக்கண்டனம் -வேதார்த்த ஸங்க்ரஹம் -ஸ்ரீ பாஷ்யம்

பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள்
திருக்கண்ண மங்கை -பத்தராவி பெருமாள்
திருக்கண்ண புரம்
திருக்கண்ணங்குடி -தாமோதர நாராயண பெருமாள்
வரிசையாக காட்டிக் கொடுக்க அனுபவம்
திருக்கோவலூர்
கபிஸ்தலம் -மற்ற இரண்டும்
பெரிய வடிவம் -நின்ற திருக்கோலம் -பெரும் புறக் கடல்
கற்கலாம் கவியின் பொருள் தானே இதிலே -இறுதியில் –
நம்பூர் வரதாச்சார்யார் -நம்பிள்ளை-கலி கன்றி தாஸர் -கார்த்திகை கார்த்திகை –
பெரியவாச்சான் பிள்ளை -ஆவணி ரோஹிணி – –

முதல் சொல்லே பெருமாள் திரு நாமம் -ப்ருஹத் பஹிர் ஸிந்து -பாற் கடல் இல்லாமல் வெளிக்கடல்
லஷ்மீ வனம்-கிருஷ்ணாரண்யம் -கண்ணன் கடு -கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம்
மங்கையைக் கண்டு மணம் புரிந்த தேசம்
கடலைக் கடைந்து பெண் அமுதைக் கொண்டு உகந்தானே
பிராட்டி தபஸ் இருந்து திருக்கல்யாணம்
தேவர்கள்-வண்டு ரூபம் –
கண்ண மங்கை தாயார் -இன்றும் -தேன் வண்டுகள்
அயனம் மாறி பிறையில்
தர்சன புஷ்கரணி
சப்த அம்ருத க்ஷேத்ரம்
மூலவர் பத்தராவி
உத்சவர் -அபிஷேக வல்லி தாயார் பெரும் புற கடல்
திருக்கண்ண மங்கை ஆண்டான் -நாதமுனி சஸ் சிஷ்யர் –
நாய்கள் சண்டை -எஜமானர்கள் -வாக்குவாதம்
பார்த்து -பரமசேதனன் அபிமானம் இருக்க என்ன குறை
கௌஸ்துபம் ஸ்தானம் -நன் பொருள்
ஸ்வ வியாபாரத்தை விட்டார்
பகவத் கைங்கர்யம் ஒன்றே கார்யம்
சக்தி லஜ்ஜை வியாபாரம் விட உபாயம்
இவர் திருவரசும் இங்கே சந்நிதியில் தெற்குப்புறம்
பெரிய உடையார் இளைய பெருமாள் தீர்க்க சிந்தயந்தி நறையூர் அரையர் -உபேய த்ருஷ்டாந்தம்
இந்த பெருமாளே பெரிய வாச்சான் பிள்ளை -அனைத்துக்கும் வியாக்யானம்
உத்பல விமானம்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -கண மங்கை -கண்ணனூர் -மடலில்
கருத்தினால் வாக்கினால் நான்மறை காணாத இவனைக் ககாணலாம் -பிள்ளைப்பெருமாள் ஐ யங்கார்

பெரும் புறக் கடல் -பிரவேசம் –

அவன் அல்லது ஆஸ்ரயணீயன் இல்லை என்று
பிறருக்கு உபதேசிக்கப் புக்கவர்
அமலா அருளாய்-7-9-8- -என்றும்
உன தடியே சரணாமே -7-9-9–என்றும்
தம்முடைய அபேஷையின் மிகுதியைச் சொல்லி  தலைக் கட்டினார் –

( கீழே இப்படி பிரார்த்தித்தவர்
பரம ப்ராப்யம் பெறாமல் –
ஸ்ரீ வைகுந்தம் பெறாமலேயே –
இதில் கண்டு கொண்டேனே-ஒன்பதில் கால் – ஹ்ருஷ்டராய் அருளுகிறார்
நாட்டார் திருந்த இன்னும் இவரைக் கொண்டு பாசுரம் பெற வேண்டுமே
நம்மாழ்வார் ஆயிரம் ப்ரதிஜ்ஜை உண்டு
இவர் இடம் அது இல்லையே )

இவர்க்கு இனிச் செய்யலாவது என் என்று பார்த்து
வேறே ஒராசனமாக ( எழுந்து அருளி ) விருந்து
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை அடைய
காட்டிக் கொடுத்து
நம்மை ஒழிந்த வஸ்துக்கள் அடைய நமக்கு உபமானமாய் இருத்தல்
பிரகாரமாய் இருத்தல் செய்யும்படி இருக்கிற நாம்
(விபூதிகள் எண்ணிறந்தவை -ஸ்ரீமத் -உயர்ந்த எல்லாம் எனது தேஜஸ்ஸின் அம்சம் –
சிறந்ததாக உள்ளேன் சில வற்றைக் காட்டி அருளி ஸ்ரீ கீதையில்-பிரகாரம் -அப்ருதக் சித்த விசேஷணம் )
உமக்கு ( மானஸ அனுபவமாக மட்டும் இல்லாமல் ) கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி வந்து நின்றோம் ஆகில்
நீர் என் பெறாதாராய் தான் கிடந்தது கூப்பிடுகிறது –
இனி
மேல் உள்ள காரியமும் நாமே செய்வுதோம் காணும் -என்று சமாதனம் பண்ண –
அப்படியே அனுசந்தித்து த்ருப்தராகிறார் –
(சரீர யாத்திரை கர்மாதீனம் -ஆத்மயாத்ரை கிருபாதீனம்
அனைத்தும் உபமானம் – பிரகாரம்
கண்ண மங்கையுள் கண்ணாலே கண்டேன் களித்தேன் என்று பேசி அருளுகிறார் )

ஆருரோஹ ரதம்  ஹ்ருஷ்டஸ் சத்ருக்க்ன சஹிதோ பலீ  –
பெரிய ஆசை உடன் வந்த ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு
நினைத்து வந்த கார்யத்தில் செய்தது ஒன்றும் இல்லை –
ஆகிலும் மீண்டு போகிற போது ஹ்ருஷ்டனாய்ப் போனான் இறே-

அப்படியே யாய்த்து இவர் விஷயத்தில் சமாதானம் பண்ணின படியும் –

———————————————————–

பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-

திரட்கோவையை-இனிமை பாக்யம் -ப்ராப்யம்
பக்தராவி -என்னது உன்னதாவியில் அவன் மதம் -பத்தருக்கு பிராணன் -என்றும்
முத்து மாலை -ப்ராப்யம் -கழுத்தில் போட்டு அனுபவிக்க
முத்துக்குவியல் -ப்ராபகம் -வித்து ஜீவிக்கலாம் -உபாயம்-ரக்ஷகனாய் -பிராபகம்
அரும்பினை யலரை-யுவா குமாரா –
திருமணம் பண்ண யுவா வாய் இருக்க வேண்டும் -பாலகன் மாறிக்கொண்டே யுவாவாய் இருப்பானே எப்பொழுதும்
மனத்தாசையை-ஆசை நிறைவேற்றுபவன் இல்லை -ஆசைக்கு விஷயமாகவே இருப்பானே –
அமுதம் பொதியின் சுவைக்கரும்பினை–அமுதமே நீராகி கருப்பஞ்சாறு போல் போக்யன் –

சென்று நாடி -ஆசையே வேண்டுவது
தபஸை -தப -ஆலோசனை பண்ணும் சர்வஞ்ஞன்

பெரும் புறக் கடலை –
சர்வ பதார்த்தங்களையும் தன்னுள்ளே அடக்கி நோக்கும் கடல் போலே
அபரிச்சேத்யனாய் உள்ளவனை –
எல்லா கடலுக்கும் புறம்பாய்
தான் பெருத்து இருக்கிற கடல் போன்று இருக்கிறவனை –

யடல் ஏற்றினைப்-
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த்த வஸ்துக்களையும்
தன்னுள்ளே இட்டு நோக்கும் படி
இவற்றை உடையன் ஆகையாலே வந்த
மேனாணிப்பை உடையவனை –

பெண்ணை –
அப்படி இருந்தால் ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத படியாய்
இருக்குமோ என்னில்
பரதந்த்ரனாய் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –

வெறும் பாரதந்த்ரமேயாய்  இருக்கம் இத்தனையோ என்னில் –
யாணை-
நிரங்குசமான ஸ்வா தந்த்ர்யத்தை உடையவனை –

எண்ணில் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை –
எண்ணிறந்த தபஸை உடைய யோகிகளுக்கு
அந்த தப  பலத்தை கொடுக்கும்
தபஸ் ஆனவனை –

முத்தின் திரட்கோவையைப் –
கண்ட போதே ஸ்ரமம் எல்லாம் ஆறும்படி
உடம்பிலே ஏறிட்டுக் கொண்டு அனுபவிக்கலாம் படி
முத்தின் உடைய திரண்ட மாலை போலே இருக்கிறவனை-

பத்தராவியை –
தன் பக்கல் பரிவை உடையார்க்கு
தன்னை ஒழிய ஜீவிக்க அரிதாம்படி இருக்கிறவனை –

நித்திலத் தொத்தினை –
மேன் மேல் என நமக்கு உண்டு என்று
தேறி இருக்கலாம்படி
முத்துக் குவை போன்று இருக்கிறவனை –
நித்திலம் -முத்தும் -அழகும் -சௌந்தர்யத் தொத்தை-

அரும்பினை யலரை –
இரண்டு அவஸ்தையும் ஒரு காலே
சூழ்த்துக் கொடுக்கலாம்படி இருக்கிறவனை –
யுவா குமார –

அடியேன் மனத்தாசையை –
நான் நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தேயும்
இதுக்கு முன்பு அனுபவித்து அறியாதது ஒன்றில் போலே
பிறக்கிற ஆசை யானவனை –

அமுதம் பொதியின் சுவைக் கரும்பினைக்
அம்ருதத்தை நீராகப் பாய்ச்சி வளர்த்தால் போலே
நிரதிசய போக்ய பூதமான
கரும்பு போலே இனியனாய் இருக்கிறவனை –

கனியைச் –
அப்போதே நுகரலாம்படி
பக்வ பலமாய் இருக்கிறவனை –

சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே   –
பசித்த இடத்தே
ஸூக போஜனம் பண்ணப் பெறுவாரைப் போலே
அபேஷை பிறந்த இடத்தே
கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

—————————————-

எவ்வழியால் காட்டினார்
பக்திக்கும் பிரபத்திக்கும் அவன் இட்ட வழக்கு -நிர்வாகன்
அவ்வழியால் அடைந்து பெரும் இன்பத்தை பெற்று அனுபவிக்கிறார்
நிரதிசய போக்யதையாய் -அவன் காட்டக்கண்டு பெற்று அனுபவிக்கிறார் –

மெய்ந் நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை
மைந் நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளி கொள் மாயனை
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண  மங்கையுள்  கண்டு கொண்டேனே —7-10-2-

மெய்யை-விஸ்வசீயமான பிரபத்திக்கு விஷயமானவன்-
கையிலோர் சங்குடை மைந்நிறக் கடலை -உடையவனை இல்லையே ஆகவே சேர்த்தே பொருள்
மைந்நிறக் கடலை கடல் வண்ணனை-மை நிறம் -நிறம்சொல்லி வண்ணம் ரக்ஷண ஸ்வபாவம்
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய்–கடந்த வர்த்தமானம் வரும் காலம் –
நினைத்த மாத்திரமே இன்ப மயம் எப்பொழுதும் -ஆனந்தமயம் -சைந்தனம் போல் –

மெய்ந் நலத் தவத்தைத் –
ஸ்வரூப அனுரூபமாய்
சிநேக  ரூபமாய் இருக்கிற அபிமத சாதனமான பக்தியை –
(போஜனத்துக்கு ஷூத்து போல் )

திவத்தைத் தரும் மெய்யை –
பிரபத்தியை –

பொய்யினைக் –
இவ்விரண்டும் இல்லாதார்க்கு
தன் படிகளை ஒன்றும் அறிய ஒண்ணாது இருக்குமவனை –

கையிலோர் சங்குடை மைந்நிறக் கடலை –
கீழ்ச் சொன்ன இரண்டும் உடையார்க்கு
காட்சி கொடுக்கும் வடிவை உடையவனை –
கண்டத்தை எல்லாம் அடைய உள்ளே இட்டு நோக்கும்
கடல் போல் அன்றியே
ஓர் சங்குடை மைந்நிறக் கடலை –
(சேர்த்தி வெள்ளை விழி சங்கும் மைந்நிறம் -பராபக வண்ணம்-நிறம் இங்கு )

கடல் வண்ணனை –
சர்வ பதார்த்தங்களையும் தன்னுள்ளே அடக்கி
சிறியதை பெரியது நலியாத படி
தன் திரைகள் ஆகிற கைகளால் நோக்கும்
கடல் போலே இருக்கும் ஸ்வபாவத்தை உடையவனை –

மாலை –
சர்வாதிகனை –

ஆலிலைப் பள்ளி கொள் மாயனை –
அகடிதகடநா சாமர்த்தியத்தை உடையவனை –
ஒரு சிறு வடிவாலே சகல லோகங்களையும் அடக்கி
ஒரு பவனான ஆலந்தளிரிலே
கண் வளர்ந்து அருளின
ஆச்சர்ய பூதனை –

நென்னலைப் பகலை-
அபிமத லாபம் உண்டான பிற்றை நாளிலே நிர்வ்ருதி ( நினைவு )போலே
நேற்றைப் பகலிலே அனுபவம் இருந்தபடி என்-என்று
ஸ்மரித்து தரிக்கலாம் படி இருக்கிறவனை –

யிற்றை நாளினை –
அநு பூயமான நாள் ஆனவனை –

நாளையாய் வரும் –
இவ்வனுபவத்துக்கு விச்சேதம் பிறவாமே
நாளையாயும் வரப்  புகா நின்றது என்று
அனுசந்திக்கலாம்படி இருக்கிற நாளையாய்

நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்-
அது தான் ஒரு நாளேயாய்ப் போகாமே
அப்படி என்றும் ஒக்க யாண்டினைக்-
அப்படிப் பட்ட மாசங்களை உடைய ஆண்டு ஆனவனை –
இனி அவ்வாண்டு  தன்னை
அப்படியே இரட்டித்துக் கொள்ளும் இத்தனை –

கன்னலைக் –
நிரதிசய போக்கியம் ஆனவனை –

கரும்பினிடைத் தேறலைக் –
நெருக்கிக் கார்யம் கொள்ள வேண்டாதே
அப்போதே பருகலாம்படி இருக்கிற
கரும்பில் ராசம்சம் ஆனவனை –
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –

————————————————

கீழே தவம் மெய் இரண்டையும் வியாஜ்யமாக்கி ரஷிப்பான்
பக்தி பிரதிபத்தி -இதில்
உமக்கு எத்தாலே ரக்ஷித்தான்
நிருபாதிக கிருபையாலே ரக்ஷித்தன் என்று அருளிச் செய்கிறார் –

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலை மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனி மா மதி யந்தவழ்
மங்குலைச் சுடரை வட மா மலை யுச்சியை நச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப்  பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே—7-10-3-

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை –
அநந்ய கதிகளான எங்கள் பக்கலிலே
நிர்ஹேதுக கிருபையை  பண்ணுகிற
சர்வேஸ்வரனை –

வாசவார் குழலாள் மலை மங்கை தன்னை பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் –
எங்களைப் போல் அன்றியே -தானும் ஒரு ஸ்திரீயுமாய்
ஈஸ்வர அபிமானம் கொண்டாடி இருக்கிற ருத்ரனை
தன் திருமேனியிலே ஒரு பார்ஸ்வத்திலே வைத்து
அது தன்னை தன் பேறாக வைத்து உகந்து இருக்கிற சீலத்தை உடையவனை –

பான்மையைப் –
இந்த சீலம் தான் புழுக் குறித்து எழுத்தாமாப் போலே
ஒரு கால் உண்டாய் போமது அன்றிக்கே
இதுவே ஸ்வ பாவமாம்படி இருக்கிறவனை –

பனி மா மதி யந்தவழ் மங்குலைச் –
குளிர்ந்து நிறைந்து இருக்கிற சந்தரன் உடைய சஞ்சாரத்தை உடைய
ஆகாசம் ஆனவனை –

சுடரை –
நீர்க் களிப்பை அறுக்கைக்கு ஈடான
கிரணங்களை உடைய ஆதித்யனை –

வட மா மலை யுச்சியை –
இப்படி சாதாரணமான வடிவே அன்றியே
அசாதாரணமான விக்ரஹத்தோடே
அத் திருமலையிலே ஏக தேசமாய் இருக்கிறவனை –

நச்சி நாம் வணங்கப் படும் கங்குலைப்  –
நசையை  உடையோமாய்க் கொண்டு நம்மாலே
ஆஸ்ரயிக்கப்படுகிற போக யோக்யமான காலம் ஆனவனை –

பகலைச் –
அதுக்கு உறுப்பாக த்ரவ்யார்ஜனத்து ஈடான
காலம் ஆனவனை
சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-

—————————————————————-

திருக்கோவலூர் சேர்த்து அனுபவம் -கிருஷ்ண க்ஷேத்ரம் அன்றோ –
நிர்ஹேதுக கடாக்ஷம் உம்மை மட்டுமேயோ -பலரையோ
முதல் ஆழ்வார்களும் கடாக்ஷித்தான்
என்றவர் திவ்ய தேசம் சொல்லாமல் போக மாட்டார்
ஆயனது பிள்ளைச் சேவகம் சேர்த்து அனுபவம்
அனைத்து ஆழ்வார்களும் கடாக்ஷித்து அருளினான் என்கிறார் இதில்
தெள்ளியார் என்று -மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் –

பேய் முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை  எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-4-

தேவனை-ஆழ்வார்களை பெற்றதும் தேஜஸ் மிக்கு ஆனவனை –
அந்தணர்-பட்டர் பிரான் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திருமழிசைப்பிரான் -த்விஜர் இரு பிறப்பு

பேய் முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையைத் –
பூதனை உடைய முலை ஸ்தலத்தில் உண்டான விஷத்தை அமுது செய்து
விழுக்காடு அறியாத முக்த்தனை-

தெள்ளியார் வணங்கப் படும் தேவனை –
இப்படி முக்க்தர் அன்றியே
அறிவுடையாராய் இருப்பாராலே ஆஸ்ரயிக்கப் படுவானாய்-
அத்தாலே தீப்யம் ஆனவனை –
(தெள்ளியார் -முதல் ஆழ்வார்கள் மூவரும் )

மாயனை –
ஆச்சர்ய பூதனை –

மதிள் கோவலிடைக் கழி மைந்தனை –
இடம் இல்லாத இடத்தே
ஆஸ்ரிதரோடு புகுந்து நெருக்கின
நித்ய யௌவன ஸ்வ பாவனை –

யன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை-
அதுக்கு மேலே ஆஸ்ரிதர் உடைய ஹிருதயத்திலே புகுந்து
அவர்களைத் தன் வழியே நியமித்துக் கொண்டு இருக்கிறவனை –
(அந்தணர் சிந்தையுள் ஈசனை-பெரியாழ்வார் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -திருமழிசைப் பிரான்
பாடுபவர் இவர் தானே
இவர்களை உப லக்ஷணம் ஆக்கி
ஆஸ்ரிதர் ஹிருதயம் -என்றது மாறன் குலசேகரப்பெருமாள் பாணன் )

யிலங்கும் சுடர்ச் சோதியை  –
இவர்கள் உடைய சரீரத்திலும் ஆத்மாவிலும்
வர்த்தியா நிற்கச் செய்தே
அவற்றைப் பற்றி வரும் தோஷங்கள் தன் பக்கலிலே தட்டாதபடி இருக்கிறவனை –

எந்தையை –
இந்த ஸ்வ பாவத்தைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனை –

எனக்கு எய்ப்பினில் வைப்பினைக் –
எனக்கு கைம் முதல் இல்லாத வன்று
அழித்துக் கெடுத்து ஜிவிக்கலாம் படி யான
நிதியானவனை –

காசினை –
பொன் போலே ஸ்ப்ருஹணீயம் ஆனவனை –

மணியைச் –
அப் பொன்னை அழித்தும் ஸ்வீகரிக்கக் கடவ
ரத்னம் போலே ஸ்லாக்கியம் ஆனவனை –
சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-

—————————————————

திரு நின்றவூர்
பத்தராவிப்பெருமாள் இருவரும்
சேர்த்து அனுபவிக்கப் பண்ண அருளுகிறார்
பால்யர் -ஒன்றும் அறியாதவர் போல் ஞானிகள்
கீழே தம்மை விஷயீகரித்தது த்ருஷ்டாந்தம் சொல்லி
ஆழ்வார்களைப் பெற்ற மேனாணிப்பு தோற்ற
திருப் ப்ரீதி தொடங்கி இவ்வளவும் வந்து அனுபவத்து ஹ்ருஷ்டராய்
அவனது ஐஹிக ஆமுஷ்கிக மோக்ஷ பிரதத்வம் அனுசந்தித்து அருளுகிறார்

ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய
கூற்றினைக் குரு மா மணிக் குன்றினை நின்றவூர்  நின்ற நித்திலத் தொத்தினைக்
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-5-

ஏற்றினை-
ஸ்வ ஆனந்த அனுபவத்தால் வந்த
செருக்கை உடையவனை –

இமயத்துள் எம் மீசனை-
ஹிம வானில் திருப் பிரிதியில் இருக்கும் இருப்பைக் காட்டி
என்னை வசீகரித்தவனை –

இம்மையை மறுமைக்கு மருந்தினை –
ஐஹிகமாயும் ஆமுஷ்மிகமாயும் உள்ள பலங்களுக்கு சாதன பூதன் ஆனவனை –

ஆற்றலை-
ஒரு வஸ்துவோ எல்லாவற்றையும் தர வற்றோ என்னில்
அக் கண்  அழிவு   சொல்ல ஒண்ணாத படி
சர்வ சக்தி உக்தனாய் உள்ளவனை –

யண்டத்தப் புறத்து உய்த்திடும் –
இந்த சர்வ சக்தித்வம் கொண்டு கொள்ள இருக்கிற கார்யம் என் என்னில் –
இவற்றை பரம பதத் தளவும் செல்ல நடத்துகை –

அது தான் அவனுக்கு வேண்டுகிறது என் என்னில் –
ஐயனைக் –
நிருபாதிக பந்துவாகை-

கையில் ஆழி ஓன்று ஏந்திய கூற்றினைக் –
ஆதி வாஹிகர் கையிலே காட்டிக் கொடுத்து
கொடு போகா நின்றால்
ஆரேனும் சிலர் விலக்கினார் உண்டாகில்
இரு துண்டம் ஆக்குகைக்கு ஈடான பரிகரத்தை உடையவனாய்
சத்ருக்களுக்கு மிருத்யு போல் ஆனவனை –

குரு மா மணிக் குன்றினைக் –
ஸ்லாக்யமான நீல ரத்ன பர்வதம் போன்ற வடிவை உடையவனை –
அங்கே கொடு போனால் காட்சி  கொடுக்கும் படியான வடிவு இருக்கிறபடி –

நின்றவூர்  நின்ற நித்திலத் தொத்தினைக் –
அவ்வளவும் போகப் பற்றாதார்க்கு
(திருமங்கை ஆழ்வார் போல் அர்ச்சாவதாரத்தில் மண்டி அனுபவிப்பாருக்கு
அங்கு போகும் வரை காத்து இருக்க முடியாத ஆர்த்தர்களுக்கு )
காட்சி கொடுக்கைக்காக
திரு நின்றவூரிலே நிற்கிற
முத்துத் திரள் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –

காற்றினைப் –
ஸ்வ ஸ்பர்சத்தால் வரும்
ஸூகமாய் இருக்கிறவனை –

புனலைச் –
தாரகம் ஆனவனை –
சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே-

(வாழ் முதல் மகிழ் முதல் வளர் முதல் -தாயகம் -போக்யம் -போஷகம் )

——————————————————–

கீழ் பல பிரத உபயுக்தமான
சாமர்த்தியம் தத் கார்யமான விரோதி நிரசனத்தையும்
இவற்றுக்கு நிதானமான ஸ்ரீ யபதித்தவம் அனுசந்தானம் இதில்

துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் சுடர் வான் கலன் பெய்ததோர்
செப்பினை திருமங்கை மணாளனைத் தேவனைத் திகழும் பவளத்தொளி
யொப்பனை யுலகேழினை   யூழியை ஆழி ஏந்திய கையனை யந்தணர்
கற்பினை கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6-

கற்பினை-சங்கல்பம் -அத்யயனம் இரண்டையும் சொல்லிற்று –

துப்பனைத்-
தான் நினைத்தது செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான
சாமர்த்தியத்தை உடையவனை -( ஸத்ய ஸங்கல்பன் அன்றோ )

துரங்கம் படச் சீறிய தோன்றலைச் –
கேசி உடைய வாய் கிழியும்படி
சீறிய முக்த்தனை -( அழகனை )

சுடர் வான் கலன் பெய்ததோர் செப்பினை –
ஒளியை உடைத்தாய் –
பெரிய விலையனாய் இருந்துள்ள ஆபரணங்களை
இட்டு வைக்கும் செப்பானவனே –
( பத்து ஆழ்வார்களைப் பூட்டி வைத்துள்ள பெட்டி அன்றோ இவன் )

சுடர் வான் கலன் ஆகிறது தான் என் என்னில் –
திருமங்கை மணாளனைத் தேவனைத் –
பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே
உண்டான ஒத்து மஞ்சளும்
செம்பஞ்சிக் குழம்பும்
மாளிகை சாந்தின் நாற்றமுமாயக் கொண்டு
திரு மேனியிலே புகர் தோன்ற நின்ற நிலை –

திகழும் பவளத்தொளி யொப்பனை-
சர்வைஸ் ஸ்ப்ருஹணீயமானவனை-

யுலகேழினை –
போக்ய
போக உபகரண
போக ஸ்தானங்களாய் உள்ளவனை  –

யூழியை –
காலமே சேஷித்த அன்று
காலமாய் நின்றவனை –

ஆழி ஏந்திய கையனை –
நித்தியமான திவ்ய ஆயுதங்களை
ஏந்தும் திருக் கையை உடையவனை –
நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனை -என்றபடி –

யந்தணர் கற்பினை –
பிராமணர்  உடைய மரியாதை போலே இருக்கிற
சங்கல்பத்தை உடையவனை –
பிராமணராலே   அத்யயனம் பண்ணப் படுகிறவனை-என்றுமாம் –

கழுநீர் மலரும் வயல் –
செங்கழுநீர் தொடக்கமான புஷ்பங்கள் அலரா நின்றுள்ள
வயலை உடைத்தான –
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே  –

————————————–

ஸ்ரீ யபதியாய்
பரம ஸ்வாமி -அபரமன் –அப ரமன் ரம சம்பந்தம் இல்லாதவர்
சர்வ சக்தித்வம் சொல்லி
ஆஸ்ரித விரோதி நிரஸனம் அனுபவம் –

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவ தேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற
கருத்தனை களி வண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே—7-10-7-

திருத்தனை-திருப்தன் –

திருத்தனைத் –
ஸ்வ ஆனந்த அனுபவத்தாலே
நித்ய த்ருப்தன் ஆனவனை –
(நித்யோதிக சாந்தோதிக திசைகள் உண்டே
த்யேயம் -த்யேயா இருவரும் அவனும்
ஸ்வரூபம் குண அனுபவம் செய்து திருப்தனாய் இருப்பானே)

திசை நான்முகன் தந்தையைத் –
இவ்வருகில் உள்ளாரைக் காட்டில் அதிகனாய் இருக்கிற
சதுர்முகனுக்கு
ஜனகன் ஆனவனே –

தேவ தேவனை-
அவன் ஒருவனுக்கும் அன்றிக்கே
தேவர்கள் ஆனார் எல்லாராலும் ஆஸ்ரயிக்கப்
படுமவனை –

மூவரில் முன்னிய விருத்தனை –
மூவருமான நிலையில்
மற்றை இருவருக்கும் தானே நியாமகனாய்
தானான நிலையில் வந்தால்
சேஷித்வத்தால் வந்த உறைப்புத் தோற்ற இருக்கிறவனை
விருத்தனை -தலைமகனை –

விளங்கும் சுடர்ச் சோதியை-
த்ரிமூர்த்தி மத்ஸ்யத் தனான நிலை ஒழிய
அசாதாரணமான
திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையன் ஆனவனை –

விண்ணை –
போக பூமிகளான ஸ்வர்க்காதிகள் ஆனவனை –

மண்ணினைக் –
அதுக்கு சாதன அனுஷ்டானம் பண்ணும்
கர்ம பூமி யானவனை –

கண்ணுதல் கூடிய அருத்தனை –
லலாட நேத்ரனான ருத்ரனை உடைத்தான
அர்த்த பாகத்தை உடையவனை –
அருத்தன் -அர்த்த பாகன் –

யரியைப் –
விரோதிகளைப் போக்குமவன் –

பரி கீறிய அப்பனை-
விரோதி நிரசனத்தை சீலமாக உடைய
உபகாரகனை –

யப்பிலார் அழலாய் நின்ற கருத்தனை –
படபாமுகாக்னி ஜலம் அடைய தன் பக்கலிலே வந்து
சுவரும்படி இருக்குமா போலே
சர்வ பதார்த்தங்களும் தன பக்கலிலே வந்து
லயிக்கும்படி இருக்கும் சக்தியை உடையவனை –

(படபாமுகாக்னி-குதிரை முக அக்னி கடலுக்குள் இருந்து -தண்ணீருக்கு லய ஸ்தானம் )

களி வண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே-

——————————————————–

சர்வ ஸமாச்ரயணீயன்
அதுக்கு உறுப்பாக விரோதி நிரசனம் பலபடியாக அனுசந்தித்து
அப்ரதிஹதன் எதிர்ப்பவர்கள் இல்லாதவன் -என்கிறார் –

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே —7-10-8-

தோன்றலை-பாலகனாய் –

வெஞ்சினக் களிற்றை –
வெவ்விய சினத்தை உடைய மத ஹஸ்தி போலே
தர்ச நீயமானவனை –

விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை-
கன்றாயும் விளவாயும் வந்த அசுரர்கள் இருவரையும்
தன்னைக் கொண்டு தன்னையே மாய்த்துத் தர
தான் நினைத்தது தலைக் கட்ட வல்லவனை –

பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் –
பூதனை முடியும்படி அவளுடைய விஷத்தைப் போக்யமாகக் கொண்டு
அமுது செய்த முக்த்தனை –

தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை-
சத்ருவாக சர்வ லோகங்களிலும் பிரசித்தனாய்
சாயுதனுமாய் இருக்கிற
ராவணன் முடியும்படி தோன்றின மிருத்யுவை –

அமுதத்தினை-
அவ் விருப்பு தானே அனுகூலர்க்கு போக்யமாய்
இருக்கிறவனை –

நாதனை-
நிருபாதிக சேஷியை-

நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியைக் –
தன் பக்கல் ஆசை உடையார் தலை மேலே நிற்கிறவனாய்-
அது தான் பெறாப் பேறாக நினைத்து பூர்ணனாய் இருக்கிறவனை –
( உச்சி உளானே திரு முடி சேவை இன்றும் சேவிக்கிறோமே
ஆற்றாமை உள்ளாருக்கு சமகாலத்தில்
ஆசையின் தலை மேல் சடக்கென
வந்து ரக்ஷித்து அருளுவான்
ஆங்கு அப் பொழுதே தோற்றுவானே )

கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக் –
கம்சனுடைய துரபிசந்தியை அவன் தன்னோடு போக்கி
உகவாதாரோடு செவ்வை அழியப் பரிமாறுமவனை –
கண்ண மங்கையுள் கண்டேனே –

———————————————

விரோதி நிரசனத்துக்கு மட்டும் அன்றியே
ஒப்பனையை
நிரதிசய போக்யனாய்
சர்வபிரகார வை லக்ஷண்யம் அனுசந்திக்கிறார் –

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய்  நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-9-

மறையோர் தங்கள் கண்ணினை-வேதார்த்தம் விளங்க வைக்கும் கண் -அவனே

பண்ணினைப் –
யஆத்யஸ் ஸ்வா தூ நாம் -என்கிறபடியே
பண் போல் இனியன் ஆனவனை –

பண்ணில் நின்றதோர் பான்மையைப் –
இன்னார் இனையார் என்று அன்றியே
எல்லாரையும் ஒக்க வருத்தக் கடவதாய் இருக்கிற
அந்த பண்ணின் இசை போலே நிரதிசய போக்யன் ஆனவனை –

பாலுள் நெய்யினை –
சாராம்சத்தோடு ருஜீஷாம்சத்தோடு வாசி அற
இரண்டிலும் உண்டான உபாதேய அம்சம் ஆனவனை –

(பண்ணின் பான்மை
பாலில் நெய்
சார அம்சம் என்று மட்டும் இல்லை
சாரமாகவும் சாரா அம்சமும் அவனே
எல்லாவற்றிக்கும் போக்யம் உண்டே
பண்ணை போல் அல்லவே பால்
பாலே இனிமை -பாட்டு இசை இல்லாமல் ருசிக்காதே )

மாலுருவாய் நின்ற விண்ணினை-
த்ரிபாத்விபூதி -என்னலாம்படியான பரப்பை உடைய
நித்ய விபூதி உக்தன் ஆனவனை –

விளங்கும் சுடர்ச் சோதியை –
அங்கே நிரவதிக தேஜோ ரூபமான
திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனாய் நிற்கிறவனை –

வேள்வியை –
அத் தேசத்தை பிராபிக்கைக்கு
சாதனமான கர்மங்களாய் நிற்கிறவனை –

விளக்கின் ஒளி தன்னை –
ஸ்வ ஆயத்தமான தேஜஸ்சை உடையவனை –
(தன்னிலே தான் சார்ந்து இருப்பவன் )

மண்ணினை –
செய்தார் செய்த குற்றங்களை அடைய மறக்குமவனாய்
குற்றம் செய்வார்க்கு தன்னைப் பற்றி
நிற்கும்படி இடம் கொடுக்குமவனை -( பூமியைப் போல் )

மலையை –
இப்படிப் பட்ட தன் ஸ்வபாவத்தை ஒருவரால் சலிப்பிக்க அரிதாம்படி இருக்கிறவனை –

யலை நீரினை –
நினைத்த இடம் எங்கும் ஏற்றிப் பாய்ச்சிக் கொள்ளலாம்படி
இருக்கிறவனை –

மாலை –
ஆஸ்ரிதர் பக்கலிலே வ்யாமோஹமே வடிவாய் இருக்கிறவனை

மா மதியை-
ததாமி புத்தி யோகம் தம் -என்கிறபடியே
தன்னைப் பிராபிக்கைக்கு ஈடான
புத்தி யோகத்தை கொடுக்குமவனை –
( மதி கொடுப்பவன் மா மதி )

மறையோர் தங்கள் கண்ணினைக்-
வேதத்தை எங்கும் ஒக்க அதிகரித்து இருப்பார்க்கு
தன்னை ஒழிய பதார்த்த தர்சனம் பண்ண ஒண்ணாத படி
அவர்களுக்கு -திருஷ்டி பூதனாய் உள்ளவனை –

கண்கள் ஆர அளவும் நின்று –
காணப் பெறாமையால்
உறாவின கண்களின் உறாவுதல் தீரும்படி -நின்று
கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –

——————————————————-

பல ஸ்ருதி அவனுக்கே சொல்லி நிகமிக்கிறார் –
ஸ்ரீ கீதா உபநிஷத்துக்கு அவன்
ஸ்ரீ திராவிட உபநிஷத் சாரம் அருளவே கண்ணனாக ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று –
ஒரு தேச விசேஷத்திலே போய் காணும் வஸ்துவை
சம்சாரத்திலே
திருக் கண்ண மங்கையிலே காணப் பெற்றேன் -என்று

காதலால் கலிகன்றி யுரை செய்த –
அபி நிவேசத்தால் ஆழ்வார் அருளிச் செய்த –

வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை –
இசையை உடைத்தாய்
அழகியதாய் இருக்கிற
இவை பத்தையும் –

வல்லராய் யுரைப்பார் –
அனுசந்திப்பார்க்கு
அடைவு படச் சொல்லுகையால் உண்டான அருமையாலே
வல்லராய் -என்கிறார் –

மதி யந்தவழ் விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் –
மதி தவழ் அம் விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் –
உபாதான லோகங்களில்
போக பூமிகள் எல்லாம் புக்கு
அங்கு உண்டான போகங்களைப் புஜிப்பார்கள்-

மெய்மை சொல்லில்-
அர்த்த தத்வம் இருந்த படி சொல்லில் –

வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ண நின் தனக்கும் –
ஐஸ்வர்ய ஸூசகமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கையிலே உடைய சர்வாதிகனே
உனக்கும் இதில் ஆதாரம் உண்டாகில்
எனக்கு சிஷ்யனாய்-உனக்கும் அதிகரிக்க வேண்டும்படி யாயிற்று
இதன் உள்ளீட்டின் கணம் இருக்கிறபடி –

குறிப்பாகில்
திரு உள்ளமாகில் –

கற்கலாம் கவியின் பொருள் தானே
ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது
என்னோடு அதிகரிக்கில் அறியலாம்

ஒரு வசிஷ்டனோடே
ஒரு சாந்தீபனோடே
தாழ நின்று அதிகரிக்கக் கடவ
அவனுக்கு
திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –

அவதாரிகை

இப்படி எம்பெருமானார் செய்த உபகாரத்தை கேட்டு தத் சமாஸ்ரயண ருசி பிறந்தவர்கள் இவ் விஷயத்தை
ஆஸ்ரயித்தாலும்-சுக துக்க நிபந்தனமான -கலக்கம் வரில் செய்வது என்ன –
திருமங்கை ஆழ்வார் பக்கலிலே சிநேக யுக்தராய் -எங்கள் நாதராய் இருக்கிற
எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்கள் அவை மேலிட்டாலும் கலங்கார் என்கிறார் –

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வெந்து எய்தினரே -17 –

சகல சாச்த்ரங்களாலும் ஸ்துதிகப் படுபவனாய் அத்வதீயமான மத்த கஜம் போலே -அத்தால் வந்த
செருக்கை உடையனாய் கொண்டு -திருக் கண்ண மங்கையிலே நின்று அருளினவனை –நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் -பெரிய திருமொழி – 7-10 10- என்னும்படி
பிரதிபாத்யார்த்த கௌரவத்தாலே சாம்சாரிக்க சகல தாப ஹரமான தமிழை செய்து அருளின
திருமங்கை ஆழ்வாருக்கு லோகத்திலே ச்நேஹியாய் இருப்பாராய்-எங்களுக்கு நாதரான –
எம்பெருமானாரை வந்து ப்ராபித்தவர்கள் -துக்கங்கள் ஆனவை அஹமஹமிகயா வந்தாலும்
இது வந்ததே என்று வெறார்கள்–சுகங்கள் ஆனவை எகோத்யோகென வந்து திரண்டாலும்
பக்வபலம் போலே மனசு இளையார்கள் -ஆன பின்பு நீங்களும் இவற்றால்
வரும் ஹ்ருதயகாலுஷ்யத்தை-நினைத்து அஞ்ச வேண்டாம் என்று கருத்து –
முனிவு -வெறுப்பு / மொய்த்தல்-திரளுதல்

ப்ராசங்கிக்கமாக -அமைந்த பாசுரம் இது –ராமானுஜர் திருவடிகளை ஆஸ்ரயித்தால் துன்பம் வாராதோ என்று கேட்டவர்களுக்கு பதில் அளிக்க இந்த பாசுரம் -சுகம் துக்கம் ஏற்படும் -ஆனாலும் கலங்காத திடமான நெஞ்சை திருவடிகளே கொடுத்து  அருளும் என்றவாறு –
கலை பரவும் தனியான்–தனியானை–அத்விதீயம் -செருக்கு அவனுக்கு குணம் —கண்ண மங்கையுள் நின்றான் -நின்றது -இவர் பாசுரம் கேட்ட பின்பு அன்றோ –
ஆடினவன் நின்றான் —

பெரும் புறக்கடல் -பிருஹத் பஹு சிந்து -திருப் பாற் கடல் பிராட்டி தோன்றி மாலை சாத்த -முப்பத்து முக்கோடி தேவர்கள் தேனீக்கள் வடிவில் திருக் கல்யாணம் அனுபவிக்க -பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள் –
பத்தர் ஆவி பத்தராவி -பெருமாள் -கருடனுக்கு -கட்டம் போட்ட புடவையை சாத்திக் கொள்வார் -திருப் பாற் கடலை விட்டு வந்ததால் புறக் கடல்
அநவசாதம்-அனுத்ருஷம் -துன்பம் இன்பம் கண்டு கஷ்டம் இன்பம் பெறாமல் ஸூ க துக்க சமம் -திருவடிகளில் ஈடுபட்டு இவை முக்கியம் இல்லை –
கோவையை பத்தராவியை நித்திலத் தொத்தினை -கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -பராங்குச முகத்தாமரை ராமானுஜர் என்றாலே மலரும் –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
கீழ் எல்லாம் ஆழ்வார்களை இட்டே எம்பெருமானாரை கொண்டாடுகிற பிரகரணம் ஆகையாலே
இப்படி எம்பெருமானார் செய்து அருளின உபகாரங்களைக் கேட்டு -தத்சமாசரயண ருசி பிறந்தவர்கள் இவ் விஷயத்தை
ஆஸ்ரயித்தாலும் சுக துக்க நிபந்தமாக கலக்கம் வரில் -செய்வது என் என்று -திருக் கண்ண மங்கையுள் நின்று அருளின
பக்தராவி விஷயமாக திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்த -திருமங்கை ஆழ்வாருக்கு பிரிய தமரான
எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்களுக்கு -சுக துக்கங்கள் வந்து மேல் விழுந்தாலும் –
ஹர்ஷாமர்ஷங்களாலே சலியார்கள்-என்கிறார் .

வியாக்யானம் –
கலை பரவும்
-சர்வே வேதாயாத் பதமாமனந்தி -வேதாஷராணி யாவந்தி படிதா நித்விஜாதிபி-தாவந்தி ஹரி நாமானி கீர்த்தி தாநி ந சம்சய
-வேதே ராமாயனே-புண்யே பாராதே பரதர்ஷப -ஆதவ் மத்யே ததாந்தேச விஷ்ணுஸ் சர்வத்ர கீயதே -என்கிறபடியே
சகல சுருதி ஸ்ம்ருதி இதிகாச புராணங்களாலும் ஸ்துத்திக்கப் படுபவனாய்-
தனி யானையை
-த்யாவாப்ர்தி வீஜ நயன் தேவ ஏக -என்றும் -சயசாயம் புருஷே யாச்சா சாவித்த்யே ச ஏக -என்றும்
திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்கிறபடியே -அத்விதீயமாய் -மத்த கஜம் போலே -செருக்கை உடையனாய் கொண்டு –
கண்ண மங்கையுள் நின்றானை –
முத்தின் திரள் கோவையை -பத்தராவியை -நித்திலத்தொத்தினை –யரும்பினை யலரை -யடியேன் மனத்தாசையை
-அமுதம் பொதியும் சுவைக் கரும்பினை -கனியை-சென்று நாடி -கண்ண மங்கையுள் கொண்டு கொண்டேனே -என்கிறபடி
தன்னுடைய போக்யதையை-எல்லாரும் அனுபவிக்கும் படி -திருக் கண்ண மங்கையில் எழுந்து அருளி இருக்கிற -பத்தராவியை –
தண் தமிழ் செய்த
-நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே -என்கிறபடியே
அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளாகிற பிரதிபாத்யர்த்த கௌரவத்தாலே தன்னை அப்யசித்தவர்களுடைய
சகல தாபங்களும் மாறும்படி -சரம ஹரமாய் திராவிட பாஷா ரூபமாய் பிரபந்தீ கரித்து அருளின
நீலன் தனக்கு –
திரு மங்கை ஆழ்வாருக்கு-
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலியன் உரை செய்த வண் ஒண் தமிழ்-என்று ஆழ்வார் தாமே அருளிச் செய்தார் இறே –
உலகில் இனியானை –
இவ் விபூதியில் சமஸ்த பாப ஜனங்களும்-அதி பிரியகரரான -பரகால முகாப்ஜமித்ரம் -என்று ஜீயரும் அருளிச் செய்தார் இறே –
எங்கள் இராமானுசனை –
என்னைப் போலே எல்லாரையும் உத்தர்பிக்கைக்காக வந்து-அவதரித்து அருளின எம்பெருமானாரை –
வந்து எய்தினரே
-ஸ்ரீ மான் ஆவிரபூத பூமவ்ர ராமானுஜ திவாகர –என்னும்படியான பிரபாவத்தை அறிந்து வைத்து -சபக்தி பண்ணி ஆஸ்ரயித்த பாக்யவான்கள்
முனியார் துயரங்கள் முந்திலும் –
துக்கங்கள் ஆனவை அஹம் அஹம் என்கையாய் வந்து மொசிந்தாலும்-இவை வந்ததே என்று வியாகுலப் படார்கள் ..முனிவு -வெறுப்பு .
.இன்பங்கள் மொய்ந்திடிலும் கனியார் மனம் –
சுகங்களானவை ஏகோத் யோகென வந்து திரண்டாலும் இந்த அதிசயம் நமக்கு வந்ததே என்று பக்வ பலம்-போலே – மனசிலே ஏகாகாரங்களாய்
–மொய்த்தல் -திரளுதல் -ந பிரகர்ஷ்யதே த்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்-ப்ராப்யசாபிரியம் -என்றார் இறே கீதாசார்யரும் .
-மதன கதனைர் நக்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா -என்று-இவ் அர்த்தத்தை அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –

————————————————————————–

அமுது உரை
அவதாரிகை

இங்கனம் கலியினால் நலி உறாது உலகினைக் காத்து எம்பெருமானாரைப் பற்றிடினும்
இன்ப துன்பங்களால் நேரிடும் கலக்கம் விளக்க ஒண்ணாதது அன்றோ என்பாரை நோக்கி-திரு மங்கை ஆழ்வாருக்கு இனியரும் எங்களுக்கு நாதருமான எம்பெருமானாரைப்-பற்றினவர்கள் இன்ப துன்பங்களால் கலங்க மாட்டார்கள் -என்கிறார் —

பத உரை –

கலை-சாஸ்திரங்கள்
பரவும் -துதிக்கும்
தனி ஆனையை -ஒப்பற்ற மதம் கொண்ட யானை போன்றவனான
கண்ண மங்கை நின்றானை -திருக் கண்ண மங்கையில் எளுந்துஅருளி இருக்கும் பத்தராவி எம்பெருமானை
தண் தமிழ் செய்த -குளிர்ந்த தமிழ் கவி பாடின
நீலன் தனக்கு -திரு மங்கை ஆழ்வாருக்கு
உலகில் -உலகத்தில்
இனியானை -அன்பரான
எங்கள் -எங்களுடைய
இராமானுசனை -எம்பெருமானாரை
வந்து -அடைந்து
எய்தினர் -பற்றினவர்கள்
துயரங்கள் -துன்பங்கள்
முந்திலும் -முன் முன்னாக வரினும்
முனியார் -வெறுப்படைய மாட்டார்கள்
இன்பங்கள் -சுகங்கள்
மொய்த்திடினும் -ஓன்று திரண்டு வந்தாலும்
மனம் கனியார் -உள்ளம் நெகிழ மாட்டார்கள் –

வியாக்யானம் –
முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் மனம் –
துன்பத்தையும் இன்பத்தையும் துல்யமாக பார்க்கிறவர்கள் -எம்பெருமானார் அடியார்கள் -என்றபடி –
துன்பங்களோ இன்பங்களோ -கன்ம பலங்களாக தாமே வந்து தாமே தொலைகின்றன –
கர்மம் தொலைகின்ற்றது என்று அமைதியாய் இருத்தல் வேண்டும் -என் தளரவோ கிளறவோ
வேண்டும் எனபது அவர்கள் உறுதிப்பாடு –
ந ப்ரகுருஷ்யேத் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய சாப்ரியம் -கீதை – 5-20 – என்று விரும்பிய பொருளைப்
பெற்று களிப்புறலாகாது –விரும்பத் தகாத பொருளைப் பெற்று வெறுப்பு உறலும் ஆகாது -எனபது
இங்கு நினைவு உரத்தக்கது -ஆன்ம தத்தவத்தின் உண்மை நிலையை தத்துவ ஞானிகள் இடம் இருந்து தெரிந்து
அதனைப் பெற முயல்வானாய் -உடலையே ஆன்மாவாக கருதும் அறியாமையை விட்டு ஒழிந்து –
ஸ்த்திரமான ஆத்மா தர்சன சுகத்தில் நிலை நிற்றலின் -அஸ்திரமான பொருள்களைப் பற்றிய களிப்பும் கவர்வும்
அற்றவனாய் இருத்தல் வேண்டும் என்கிறது இந்த கீதா ஸ்லோகம் –
எம்பெருமானைப் பற்றினவர்களும் –தத்துவம் அறிந்த பெரியோர் இடம் இருந்து ஆசார்யனுக்கு
உரிமை பட்டு இருத்தலே ஆன்ம தத்துவத்தின் உண்மை நிலை என்பதை தெரிந்து அந்நிலையிலே
ஊன்றி நிற்க முயல்வராய் உடலையும் உடல் உறவு படைத்தவர்களையும் -நான் எனது -என்று கருதும்
அறியாமையை விட்டு ஒழிந்து -ஸ்திரமான ஆசார்யனுக்கு உரிமைப் பட்டு இருத்தலாம் சுகத்தில்-நிலை நின்ற பின் அஸ்திரமான உடல் முதலிய பொருள்களைப் பற்றிய களிப்பும்-கவர்வும் அற்றவர்களாய் இருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள் -எங்க –இங்கு –
ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் ஒழிந்திடுக
என்றும் இறவாது இருந்திடுக -இன்றே
இறக்க களிப்பும் கவர்வும் இவற்றால்’
பிறக்குமோ தற்றேளிந்த பின் – ஞான சாரம் -17 – என்று
விண்ணவர் கோன் செல்வம் என்பதை முன்னும் பின்னும் கூட்டுக –
தற்றேளிந்த பின் -தன் ஸ்வரூபத்தை தெளிவாக அறிந்த பிறகு
பின் இவற்றால் களிப்பும் கவர்வும் பிறக்குமோ என்று கூட்டிப் பொருள் கூறுக –
கண்ண மங்கை நின்றானை –
திருக் கண்ண மங்கை சோழ நாட்டுத் திவ்ய தேசமாம் -அங்கு எழுந்து அருளி உள்ள எம்பெருமானுக்கு
பத்தராவி -எனபது திரு நாமம்
கலை பரவும் தனி யானையை –
பரவுதல்-துதித்தல்
சாஸ்திரங்கள் பத்தராவி பெருமாள் குணங்களை பரக்க பேசுதலின் துதிப்பன ஆயின –
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்று–எல்லா வேதங்களாலும் நான் ஒருவனே அறியப் படுகிறேன் -என்றபடி வேதம் அனைத்தும் துதிக்கும்
நோக்கம் உடையவைகளாய் இருத்தல் பற்றி செருக்கு தோற்ற ஒப்பற்ற மதம் பிடித்த யானை போலே
தோற்றம் அளிக்கிறான் -அவ் எம்பெருமான் திருமங்கை ஆழ்வாருக்கு –
வேதத்தில் சொல்லப்படுதல் என்னும்படி -நெருங்க ஒண்ணாதபடி யானைக்கு பிடித்து
இருக்கும் மதம் போன்று உள்ளது –வெஞ்சினக் களிற்றை -பெரிய திருமொழி – 7-10 8- -என்று
வெவ்விய சினம் உடைய யானை போலே இருப்பவன் -என்று இவ் எம்பெருமானைத் திரு மங்கை-ஆழ்வாரே வர்ணித்து உள்ளார் –
கிட்ட ஒண்ணாத வனேயாயினும்-யானை போல் கண்டு களிக்கத் தக்கவன் -எனபது அதன்கருத்து –
கலை பரவும் பீடு படைத்த அவ் எம்பெருமான் திரு மங்கை ஆழ்வார் உடைய
ஈடு இல்லாத தண் தமிழ்க் கவியைக் கண்டு வியக்கிறான் -வேதம் அனைத்தும் சேர்ந்து பரவுவதைத்
தண் தமிழ் காவியம் ஒரு பதிகத்திலே பொருள் ஆழத்துடன் ரசமாக காட்டுவது வியப்பூட்டுவதாக
இருந்தது அவ் எம்பெருமானுக்கு .வேதங்கள் பரவுவது கிடக்கட்டுமே-அதனால் செருக்கு உற்று என் பயன் –
இத் தண் தமிழ் கவியின் உள் ஈடான பொருள் சீர்மையை ஆராய்ந்து இன்புறுவோம் என்று கருதி அத் துறையில்
இறங்கினான் -தானாகப் பார்த்து அறியத் தக்கதாக அத் தண் தமிழ் அமைய வில்லை -வேத விதேவசாஹம்-வேதப்-பொருளை அறிந்தவனும் நானே -என்று கூறிக் கொண்ட கண்ணனுக்கும் கற்றே அறிய வேண்டும்படியாக
அமைந்து இருந்ததாம் இக் கவியின் உள்ளீட்டான கனம்-அவன் கருத்தை அறிந்து –நின் தனக்கும் குறிப்பாகில்
கற்கலாம் கவியின் பொருள் தானே -என்கிறார் ஆழ்வார் -உனக்கு இதிலே ஆதரம் உண்டாகில் எனக்கு சிஷ்யனாய்
உனக்கும் அதிகரிக்க வேண்டும் படி யாயிற்று இதின் உள்ளீட்டின் கனம் இருக்கிறபடி -எனபது பெரியவாச்சான் பிள்ளை-வியாக்யானம் .
இங்கனம் செருக்குற்ற சர்வேஸ்வரனையும் கற்பிக்கலாம் படியான கவிதை எனபது தோன்ற –
தனியானைத் தண் தமிழ் செய்த – என்கிறார் –
தமிழ் -தமிழ் ஆகிய கவிக்கு ஆகு பெயர்-தண் தமிழ் செய்த -தண் தமிழ் கவி பாடின என்றபடி –
கவி வாணர்கள் யானையை பாடுவார் -அதனைப் பரிசிலாகப் பெருவதுகவி வாணர் நோக்கம் –
திருமங்கை ஆழ்வாரும்-தனி யானையைப் பாடுகிறார் -அதனைப் பரிசிலாகப் பெறுவது இவர்க்கும் நோக்கமாகும் –
இந்த யானையை கொடுப்பார் வேறு எவரும் இலர் -தன்னையே தான் தருவது இது –
தன்னைத் தந்த கற்பகம் -என்னும் நம் ஆழ்வார் திரு வாக்கும் காண்க
கண மங்கை கற்பகத்தை -எனபது திரு மங்கை ஆழ்வார் அருளிய பெரிய திரு மடல் –
ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் என்னும் இவை அனைத்தும் இறைவன் காட்ட -தம் கண்டபடியே
கற்பவர் மனத்தில் பதியும் படியும் -உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் அவனுக்கு போலி யாயும் –
பிரியாது இணைந்த பிரகாரமாயும் இருப்பதை உணரும் படியும் -அவனது இனிமையை நுகரும்படியும் –
செய்து -சம்சார தாபத்தை அறவே போக்கி குளிர வைப்பதாய் இருத்தல் பற்றி –தண் தமிழ் -என்கிறார் –
நீலன்-
திருமங்கை ஆழ்வார் திரு நாமங்களில் இதுவும் ஓன்று
இந்த உலகத்தில் எம்பெருமானார் ஒருவரே திரு மங்கை ஆழ்வாருடைய தண் தமிழ் கவியின்
பொருள் உணர்ந்து தாபம் அற்றவராய் விளங்குதலின் –
நீலன் தனக்கு உலகில் இனியானை-என்கிறார் –
வந்து எய்தினர் –
சென்று ஆஸ்ரயித்தவர்கள் என்னாது வந்து ஆஸ்ரயித்தவர்கள் என்கிறார் –
தாம் எப்பொழுதும் பிரியாது எம்பெருமானார் சந்நிதியிலேயே இருப்பவர் ஆதலின் –
எய்தினர் -வினையால் அணையும் பெயர் –
நீலன் பத்தராவிப் பெருமாளையே கண்களார அளவும் நின்று -கண்ண மங்கையுள் காண வேண்டும்படியான
காதல் விஞ்சியவராய் -காணாது பிரிந்து இருப்பதையே துன்பமாகவும் -கண்டு கொண்டு கிட்டி இருப்பதையே
இன்பமாகவும் கொண்டு இருத்தலின் -ப்ராக்ருதமான -தேக சம்பந்தத்தால் ஆன-முனிவும் கனிவும் அற்றவர் ஆனார் –
எம்பெருமானாரும் அந்நீலன் தண் தமிழ் இன்பத்திலேயே மூழ்கி -அவருக்கு இனியராய் -அத்தகையரானார்-
அவரைப் பற்றினவர்களும் தண் தமிழ் இன்பத்தைக் காட்டின நீலனுக்கு இனிய ஆசார்யன் திறத்து உரிமைப் பட்டு
இருத்தலாம் பேரின்பத்திலே திளைத்து -அத்தகையார் ஆனார் -என்க-
எய்தினர் முனியார் மனம் கனியார் -என்று கூட்டிப் பொருள் கூறுக —

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வித்யா ஸ்ரீ இராஜ மன்னார் குடி -பங்குனி ப்ரஹ்மோத்ஸவம்-

April 10, 2025

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி.

பங்குனி ப்ரும்மோத்ஸவ முதல் திருநாள் இரவு பேரிதாடகம் ருக்மினி ஸத்யபாமா ஸமேதராய் ஸ்ரீ பெருமாள் கல்யாண அவசர திருக்கோலத்தில் தங்க திருச்சிவிகையில் புறப்பாடு கொடிச்சப்பரம்-

On The Night Of Panguni Brahmotsavam’s First Day, Sri Perumal With His Consorts Rukmini And Satyabhama, Graced The Occasion In Kalyana Avasara Thirukolam. The Grand Perithadagam Was Performed, And The Divine Procession In Golden Thiruchivigai Proceeded To Yanai Vahana Mandapam. Followed By The Deities Being Seated In A Chapparam And Taken In A Procession From Panthaladi Through Mela Raja Veedhi And Gopalasamudram Mada Veethi.

பங்குனி ப்ரும்மோத்ஸவ இரண்டாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு

On The Second Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion In The Attire Of Krishna Alankaram, Seated In A Golden Palanquin And The Procession Proceeded To Punnai Vahana Mandapam.

கோபாலன் காவேரியில் இறங்குதல் 👑😍

பங்குனி ப்ரும்மோத்ஸவ இரண்டாம் திருநாள் இரவு புன்னைமர வாகனம் கண்ணன் திருக்கோலம்.

On The Night Of Panguni Brahmotsavam’s Second Day, Sri Perumal Graced The Occasion In The Attire Of Kannan Thirukolam, Mounted On Punnai Vahanam.

புன்னைமர கிளையில் குழலூதும் கண்ணாக…! 😍

பங்குனி ப்ரும்மோத்ஸவ மூன்றாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு

On The Third Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion With Regal Embellishments, Seated In A Golden Palanquin And The Procession Proceeded To Yanai Vahana Mandapam.

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி ப்ரும்மோத்ஸவம் தினமும் வாகனங்கள் புறப்படும் இடம் 💫

பங்குனி ப்ரும்மோத்ஸவ மூன்றாம் திருநாள் இரவு வெள்ளி ஹம்ச வாகனம் இராஜ அலங்காரம்

On The Night Of Panguni Brahmotsavam’s Third Day, Sri Perumal Graced The Occasion Mounted On Silver Hamsa Vahanam With Regal Embellishments.

பங்குனி ப்ரும்மோத்ஸவ நான்காம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு

On The Fourth Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion Adorned With Divine Ornaments And A Rathinam-Studded Crown, Seated In A Golden Palanquin And The Procession Proceeded To Vanamamalai Mandapam.

உருவச் செஞ்சுடராழிவல்லானே!
உலகுண்டஒருவா! திருமார்பா ! 🥹♥️

பங்குனி ப்ரும்மோத்ஸவ நான்காம் திருநாள் இரவு தங்க கோவர்த்தனகிரி கண்ணன் திருக்கோலம் திருப்பாவாடை கோவிந்த பட்டாபிஷேகம்-குன்றெடுத்து ஆநிரை மேய்த்த பிரான் 🥹❤️

On The Night Of Panguni Brahmotsavam’s Fourth Day, Sri Perumal Graced The Occasion In The Attire Of Krishnan Thirukolam. The Offering Of Thirupavadai Govindha Pattabishegam, Followed By Sri Perumal Mounted On Golden Govardhanagiri Vahana

பங்குனி ப்ரும்மோத்ஸவ ஐந்தாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு-On The Fifth Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion In The Incarnated As Ramar Thirukolam, Seated In A Golden Palanquin, And The Procession Proceeded To Yanai Vahana Mandapam.

பங்குனி ப்ரும்மோத்ஸவ ஐந்தாம் திருநாள் இரவு பஞ்சமுக ஹனுமார் மரவுரி இராமர் திருக்கோலம்—இன்னமுதே இராகவனே 🥹♥️-On The Night Of Panguni Brahmotsavam’s Fifth Day, Sri Perumal Graced The Occasion In The Incarnated As Maravuri Ramar Thirukolam, Carried On Panchamukha Hanuman.

பங்குனி ப்ரும்மோத்ஸவ ஆறாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு சிக்கு தாடை

Sri Vidhya Rajagopalaswamy Temple, Rajamannargudi.

On The Sixth Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion In Sikkuthadai Alankaram, Seated In A Golden Palanquin And The Procession Proceeded To Yanai Vahana Mandapam.
பங்குனி ப்ரும்மோத்ஸவ ஆறாம் திருநாள் இரவு கண்ட பேரன்ட பக்ஷி வாகனம் இராஜ அலங்காரம்.

வாகனத்தின் சிறப்பு : அனைத்து திவ்ய தேசங்களிலும் இந்த பறவை பெருமாள்களுக்கு திருவாபரணங்களாகளே காணப்படுகிறது. கோபாலனுக்கு மட்டுமே வாகனமாக அமைந்திருப்பது பெருமைக்கு கூறியதாகும்.

Sri Vidhya Rajagopalaswamy Temple, Rajamannargudi. 

   On The Night Of Panguni Brahmotsavam's Sixth Day, Sri Perumal Graced The Occasion Mounted On Kanda Peranda Pakshi Vahana With Regal Embellishments. 

Glory Of The Vahanam: In All Divya Desams, This Sacred Celestial Bird Is Revered As An Ornament Of Sri Perumal. It Attains The Unique Honor Of Being The Exclusive Divine Vahanam Of Sri Rajagopalan.

பங்குனி ப்ரும்மோத்ஸவ ஏழாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு நாயக்கர் திருக்கோலம்—கண்ணே கண்மணியே 🥹🙇🏻‍♂️-திருவடி திருமஞ்சனம் 😍-On The Seventh Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion In The Attire Of Nayakkar Thirukolam, Seated In A Golden Palanquin And The Procession Proceeded To Yanai Vahana Mandapam.

பங்குனி ப்ருமோத்ஸவ ஏழாம் திருநாள் இரவு புஷ்ப பல்லக்கு இராஜ அலங்காரம்-வண்துவராபதி மன்னன் 👑😍-On The Night Of Panguni Brahmotsavam’s Seventh Day, Sri Perumal Graced The Occasion With Regal Embellishments, Mounted On The Grand Floral Palanquin.

பங்குனி ப்ரும்மோத்ஸவ எட்டாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு இராமர் திருக்கோலம்-On The Eighth Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion In The Incarnated As Ramar Thirukolam, Seated In A Golden Palanquin And The Procession Proceeded To Yanai Vahana Mandapam.

பங்குனி ப்ரும்மோத்ஸவ எட்டாம் திருநாள் இரவு ரிஷியமுகபர்வதம் பட்டாபிராமர் திருக்கோலம்–இனிதமர்ந்த அம்மானை இராமன்றன்னை ஏத்துவாரிணையடியே ஏத்தினேனே 😍-On The Night Of Panguni Brahmotsavam’s Eighth Day, Sri Perumal Graced The Occasion In The Incarnated As Pattabhiraman Thirukolam, Mounted On Rishyamukha Parvatham.

பங்குனி ப்ரும்மோத்ஸவ ஒன்பதாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு இராஜ அலங்காரம்-On The Ninth Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion With Regal Embellishments, Seated In A Golden Palanquin And The Procession Proceeded To Yanai Vahana Mandapam.

பங்குனி ப்ரும்மோத்ஸவ ஒன்பதாம் திருநாள் இரவு சிம்ம வாகனம் இராஜ அலங்காரம்–எங்கும் நாடி நாடி நரசிங்காவென்று வாடி வாடும் இவ்வாணுதலே 🦁👑-On The Night Of Panguni Brahmotsavam’s Ninth Day, Sri Perumal Graced The Occasion Mounted On Simha Vahanam With Regal Embellishments.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பத்தாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு கிளி கண்ணன் திருக்கோலம்-On The Tenth Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion In The Attire Of Krishna Alankaram, Seated In A Golden Palanquin, And The Procession Proceeded To Yanai Vahana Mandapam.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பத்தாம் திருநாள் இரவு தங்க சூரிய பிரபை வேணுகோபாலன் திருக்கோலம்-On The Night Of Panguni Brahmotsavam’s Tenth Day, Sri Perumal Graced The Occasion In The Attire Of Venugopalan Thirukolam, Mounted On The Golden Surya Prabhai Vahanam.

பெரிய திருநாள் ஆரம்பம் 🔥👑கோபிகளின் நாதனே 😍

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதினொன்றாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு ரத்ன கிரீடம்-On The Eleventh Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion, Adorned With Divine Ornaments And A Rathinam-Studded Crown, Seated In A Golden Palanquin And The Procession Proceeded To Gopinatha Swamy Temple.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதினொன்றாம் திருநாள் இரவு வெள்ளி சேஷ வாகனம் பரமபதநாதன் திருக்கோலம்–பரமபத நாதனே..! 😍-On The Night Of Panguni Brahmotsavam’s Eleventh Day, Sri Perumal Graced The Occasion In The Attire Of Paramapadanathan Thirukolam, Carried On Silver Sesha Vahanam.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பன்னிரெண்டாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு வைரமுடி சேவை–செண்டலங்கார மன்னா..! 👑😍–On The Morning Of The Panguni Brahmotsavam’s Twelfth Day, Sri Perumal Graced The Occasion, Adorned With Divine Ornaments And A Vairamudi Diamond Crown, Seated In A Golden Palanquin And Was Taken In A Divine Procession around Gopalasamudram Mada Veethi.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பன்னிரெண்டாம் திருநாள் இரவு தங்க கருட சேவை வைகுண்டநாதன் திருக்கோலம் இரட்டை குடை சேவை—நால் திசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி 🦅-On The Night Of Panguni Brahmotsavam’s Twelfth Day, A Spectacular Procession Of Sri Perumal, Seated On The Golden Garuda Vahanam, Graced The Occasion In The Attire Of Vaikunthanathan Thirukolam. Accompanied By The Traditional Twin Umbrellas Sevai, The Procession Proceeded To Garuda Vahana Mandapam.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பன்னிரெண்டாம் திருநாள் இரவு தங்க கருட சேவை சப்பரம்-பறவையேறும் பரம்புருடா…! 🦅😍

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதிமூன்றாம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு காளிங்கநர்த்தனம்—கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் 😍–On The Thirteenth Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion In The Attire Of Kalinga Narthanam Thirukolam, Seated In A Golden Palanquin And The Procession Proceeded To Yaanaimal Thotta Mandapam.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதிமூன்றாம் திருநாள் இரவு வெள்ளி ஹனுமந்த வாகனம் ராமர் திருக்கோலம்—இன்னமுதே இராகவனே 😍-On The Night Of Panguni Brahmotsavam’s Thirteenth Day, Sri Perumal Graced The Occasion In The Incarnated As Ramar Thirukolam, Carried On Silver Hanuman Vahanam.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதிநான்காம் திருநாள் காலை தங்க பல்லக்கில் ஸத்யபாமா நாச்சியாருடன் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு இராஜ அலங்காரம்-ஆயர் ஏறு அமர்கோ அந்தணர் தம் அமுதே..! 😍-On The Fourteenth Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal With His Consort Satyabhama, Graced The Occasion In A Golden Palanquin With Regal Embellishments, And The Procession Proceeded To Yanai Vahana Mandapam.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதிநான்காம் திருநாள் இரவு யானை வாகனம் ஸத்யபாமா நாச்சியாருடன் இராஜ அலங்காரம்-செண்பகவல்லி மன்னா 👑-On The Night Of Panguni Brahmotsavam’s Fourteenth Day, Sri Perumal With His Consort Satyabhama Graced The Occasion, Mounted On Yanai Vahanam With Regal Embellishments.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதினைந்தாம் திருநாள் காலை பள்ளியறை சேவை ஶ்ரீ ருக்மினி ஸத்யபாமா ஸமேதராய் ஸ்ரீ பெருமாள் க்ருஷ்ண திருக்கோலம்–ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே…! 🥰😍-On The Fifteenth Day Morning Of Panguni Brahmotsavam, Sri Perumal With His Consorts Rukmini And Sathyabhama, Graced The Palliyarai Sevai In The Attire Of Krishna Alankaram, Adorned With Divine Ornaments.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதினைந்தாம் திருநாள் மாலை சூர்ணோத்ஸவம் நெல் அளவை கோரதம் ஶ்ரீ ருக்மினி ஸத்யபாமா ஸமேதராய் ஸ்ரீ பெருமாள் கல்யாண அவசர திருக்கோலம்-On The Evening Of Panguni Brahmotsavam’s Fifteenth Day, Sri Perumal With His Consorts Rukmini And Satyabhama, Graced The Occasion In The Kalyana Avatara Thirukolam. The Soornabhishekam Was Performed, Followed By The Offering Of Paddy Measures

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதினாறாம் திருநாள் காலை வெள்ளி பல்லக்கு வெண்ணைத்தாழி உத்ஸவம் நவநீத சேவை–கண்ணன் வருகின்ற நேரம் 😍-வெண்ணைத்தாழி மஹோத்ஸவம்💫🥳–இந்த வெண்ணெய் அடி எவ்வளவோ பரவாயில்லை யசோதையிடம் பட்ட அடையை விட…!–வைகலும் வெண்ணை கலந்துண்டான் பொய் கலவாது என் மெய்கலந்தான் 😍–On The Sixteenth Day Morning Of Panguni Brahmotsavam, On The Auspicious Occasion Of The Divine Vennaithazli Uthsavam, Sri Perumal Graced The Occasion In The Attire Of Navaneetha Sevai, Adorned In Divine Ornaments And Seated In A Silver Palanquin With A Pot Of Butter. Devotees Offered Butter In A Traditional Gesture Of Devotion.

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதினாறாம் திருநாள் மாலை செட்டி திருக்கோலம்–சேயன் அணியன் என் சிந்தையுள் நின்ற மாயன் 😍-On The Sixteenth Day Evening Of Panguni Brahmotsavam, Sri Perumal Graced The Occasion In The Attire Of Chetty Thirukolam

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதினாறாம் திருநாள் இரவு தங்க குதிரை வாகனம் வையாளி சேவை இராஜ அலங்காரம்—இராஜமன்னை மாமன்னன்…! 👑😍—On The Night Of Panguni Brahmotsavam’s Sixteenth Day, Sri Perumal Graced The Occasion Mounted On The Golden Kuthirai Vahanam With Regal Embellishments, Accompanied By The Viyali Sevai.

பங்குனி ரோகிணியில் அவதரித்தான் வாழியே…! 😍பங்குனி ரோகிணி நக்ஷத்திரம் ஸ்ரீ வித்யா இராஜகோபால திருநக்ஷத்திரம் 👑♥️Happy birthday Gopala 💫🥳-பங்குனி ப்ரும்மோத்ஸவ பதினேழாம் திருநாள் பங்குனி ரோகிணி கோபாலன் திருநக்ஷத்திரம் திருத்தேர்—-உன்னைக் காண்பான் நான் அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே…🥹🙇🏻‍♂️–பங்குனி ரோஹிணி திருத்தேர் மஹோத்ஸவம் 😍–On The Auspicious Day Of Panguni Rohini Nakshatram, The Seventeenth Day Of Panguni Brahmotsavam, Sri Perumal Thirunakshatram Was Celebrated. Sri Perumal With His Consorts Rukmini And Satyabhama, Graced The Occasion In Kalyana Avatara Thirukolam, Seated In A Chariot, And Was Taken In A Chariot Procession

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதினெழாம் திருநாள் இரவு ஹரித்ரா நதியில் ஸ்ரீ தீர்த்த பேரர் திருமஞ்சனம் தீர்த்தவாரி.–

பங்குனி ப்ரும்மோத்ஸவ பதினெட்டாம் திருநாள் ஸப்தாவர்ணம் புஷ்பயாகம் த்வாதஸாராதனம்–நித்ய ஶ்ரீ நித்ய மங்களம்-நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்…! 😍–On The Night Of The Eighteenth Day Of The Panguni Brahmotsavam, Sri Perumal, With His Consorts Rukmini And Satyabhama, Graced The Occasion Adorned With Divine Ornaments And A Swarna Vairamudi Crown. Followed By Dwadasaradhanam And Pushpayagam Performed As The Part Of Sapthavarnam. Sri Perumal, Taken In A Procession In Around Gopalasamudram Mada Veethi. Nithyasri Nithya Mangalam!

பங்குனி ப்ருமாமோத்ஸவ விடையாற்றி முதல் திருநாள் மாலை சேதுபாவாசத்திரத்தில் ஆண்டாள் திருக்கோலம் ஹரித்ராநதி படித்துறை—என்னை களிதீர்த்தே…! 🥺-On The Evening Of Panguni Brahmotsavam Vidayatri Vizha First Day, Sri Perumal Graced The Occasion In The Andal Thirukolam HarithraNadhi North Mandapam.

பங்குனி ப்ரும்மோத்ஸவ விடையாற்றி முதல் திருநாள் இரவு இராமர் திருக்கோலம் பல்லக்கு சேவை—புன்னகை தவழும் இராம கோபாலன் ♥️-On The Night Of Panguni Brahmotsavam Vidayatri Vizha First Day, Sri Perumal Graced The Occasion In The Incarnated As Ramar Thirukolam, Seated In A Golden Palanquin, And The Procession Proceeded To The Temple.

பங்குனி ப்ரும்மோத்ஸவ விடையாற்றி இரண்டாம் திருநாள் இரவு ராயர் தோட்டத்தில் கிளி கண்ணன் திருக்கோலம்—ஆறா அன்பில் அடியேன் உன் அடிசேர் வண்ணம் அருளாயே 🥹🙇🏻-On The Night Of The Second Day Of Panguni Brahmotsavam Vidayatri Vizha, Sri Perumal Graced The Occasion In The Attire Of Kili Kannan Thirukolam At Rayar Thottam, And The Procession Proceeded To The Temple.

பங்குனி ப்ரும்மோத்ஸவ விடையாற்றி மூன்றாம் திருநாள் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு–On The Night Of The Third Day Of Panguni Brahmotsavam Vidayatri Vizha, Sri Perumal Graced The Occasion With A Divine Procession Within The Temple Precincts.

பங்குனி ப்ரும்மோத்ஸவ விடையாற்றி நான்காம் திருநாள் ஆண்டாள் திருக்கோலம் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு–On The Night Of The Fourth Day Of Panguni Brahmotsavam Vidayatri Vizha, Sri Perumal Graced The Occasion In The Attire Of Andal Thirukolam With A Divine Procession Within The Temple Precincts.

பங்குனி ப்ரும்மோத்ஸவ விடையாற்றி ஐந்தாம் திருநாள் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு-On The Night Of The Fifth Day Of Panguni Brahmotsavam Vidayatri Vizha, Sri Perumal Graced The Occasion With A Divine Procession Within The Temple Precincts.

இவ்வாரு 12 நாள்கள் விடையாற்றி உத்சவம் நடைபெறும் -12நாள் இரவில் கிருஷ்ண தெப்பம் கண்டு அருளுவார்

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ செண்பக வல்லித் தாயார் ஸமேத ராஜ கோபால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஜெகன் மோஹன -மத்யம ரெங்கம் -காவேரி -சிவ சமுத்திரம் –

April 10, 2025

அது கருநாடக மாநிலத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கருநாடகத்தில் குடகு, ஆசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ஊரகம், சாமராசநகர் மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.[3]
காவிரி ஆறு தான் செல்லுமிடமெல்லாம் சோலைகளை விரித்துச் செல்லுவதால் காவிரி எனப்பெயர் பெற்றது.

(கா- காடு, சோலை. பூ+ கா= பூங்கா- பூக்கள் நிறைந்த சோலை) [4]. தமிழ் இலக்கியங்களில் பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பிற பகுதிகள் போலவே தமிழகத்திலும் ஆறுகளின் பெயர்கள் பெண்பால் பெயர்களாக இருக்கின்றன. அவை காரணமாகவே ‘பொன்னி’ என்ற பெயர் காவிரிக்கு வந்திருக்கக்கூடும் எனலாம். அந்த ஆறு சோழ நாட்டை செழிக்கச் செய்கிறது.. பொன்படு நெடுவரையில் (குடகு மலை) தோன்றிப் பாய்வதாலும் பொன்னி என்னும் பெயர் வந்தது.
கருநாடக மாநிலத்தில் சிரீரங்கப்பட்டணம், சிவசமுத்திரம் ஆகிய இரு தீவுகளையும் தமிழகத்தில் சிரீரங்கம் (திருவரங்கம்) தீவையும் காவிரி ஆறு கொண்டுள்ளது. இந்த மூன்றில் சிரீரங்கப்பட்டணம் தீவானது மிகப்பெரியது, இது திப்பு சுல்தானின் தலைநகராக விளங்கியது. இம்மூன்று தீவுகளிலும் அரங்கநாத சுவாமிக்குக் கோயில் உள்ளது மற்றொரு சிறப்பு. சிரீரங்கப்பட்டணத்தில் உள்ள அரங்கனை ஆதிரங்கன் என்றும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் என்றும் திருவரங்கத்தில் (சிரீரங்கம்) உள்ள அரங்கனை அந்தரங்கன் என்றும் அழைப்பர்.
குடகு மாவட்டத்திலுள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி உற்பத்தியாகிறது. ஆரங்கி ஆறானது குடகு மாவட்டத்தில் காவிரியுடன் இணைந்து மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருட்டிணராசசாகர் அணையை அடைகிறது. கிருட்டிணராச சாகர் அணை மைசூருக்கு அருகில் உள்ளது. ஏமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருட்டிணராச சாகர் அணையால் ஏற்பட்ட நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன. கிருட்டிணராச சாகர் அணையிலிருந்து வெளிவரும் காவிரி சிரீரங்கப்பட்டணம் தீவை உண்டாக்குகிறது. பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியுடன் இணைகின்றன. பின் காவிரி சிவசமுத்திரம் தீவை உண்டாக்குகிறது. இங்கு இரு பிரிவுகளாகப் பிரியும் காவிரி ஒரு புறம் ககனசுக்கி (Gaganachukki) அருவியாகவும் மறுபுறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது. வலப்புறம் அமைந்த ககனசுக்கி அருவியில் 1902 இல் ஆசியாவின் முதல்[சான்று தேவை] நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. பின் காவிரியுடன் சிம்சா, அர்க்கவதி ஆறுகள் இணைகின்றன. அர்க்கவதி ஆறு இணைந்தவுடன் காவிரியானது ஆழமான குறுகிய பாறைகளின் வழியாகப் பாய்ந்து தமிழகத்தை அடைகிறது. பழங்கதையில் ஒரு ஆடு இவ்விடத்தில் காவிரியைத் தாண்டிக் குதித்து ஓடியதால், இதை ஆடு தாண்டும் காவிரி என்று அழைப்பர். (கன்னட மொழியில் மேகேதாட்டு (Mekedatu) என்று பெயர்). ஆனால் இன்றுள்ள நிலையில் அஃது இயலாததாகும்.
மிகக் குறுகிய அகலமுடைய, ஆனால் மிக ஆழமான ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து சிடான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழகக் காவிரிப் பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானி என்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது. ஈரோடு நகரைக் கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறு கலக்கிறது. அமராவதி ஆறானது கரூர் அருகேயுள்ள திருமுக்கூடலூர் என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கரூர், திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்குப் பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர். முசிறி, குளித்தலை நகரங்களைத் தாண்டிச்செல்லும் காவிரி முக்கொம்பு என்னும் இடத்தில் மேலணையை அடைகிறது. இங்குக் காவிரி இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. வடகிளை கொள்ளிடம் என்றும் தென்கிளை தொடர்ந்து காவிரி என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளக் காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம், காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே சிரீரங்கம் (திருவரங்கம்) தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது. கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாகப் பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது. காவிரி டெல்டாவில் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை நாகப்பட்டிணம் மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை [5] சேர்ந்தவை.
கருநாடகாவில் காவிரியின் நீளம் = 320 கிமீ
தமிழ்நாட்டில் காவிரியின் நீளம் = 416 கிமீ
கருநாடக தமிழக எல்லையில் காவிரியின் நீளம் = 64 கிமீ
வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்குஏகினும்

தற்பாடிய தளியுணவின் புள்தேம்பப் புயல்மாறி வான்பொய்ப்பினும்

தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி”

— (பட்டினப்பாலை:1-6)
“அலங்கு கதிர்க் கனலி நால்வையின் தோன்றினும்

இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்

அநதண் காவிரி வந்து கவர்ப்பு ஊட்ட்த்

ஆடுகண் கரும்பின் வெண்பு நுடங்கும்…”

— புறநானூறு (பாடல் 35)
“விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்

கால்பெரு நிவப்பில் கடுங்குரல் ஏற்றொடும்

சூன்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்ப

குடமலை பிறந்த கொழும்பல் தாரமொடு

கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்

காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை”

— சிலப்பதிகாரம் (காதை 10:103-108)
“கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தன்நிலை திரியாத் தந்தமிழ்ப் பாவை”

— மணிமேகலை (பதிகம்:24-25)
“வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாய்ஆகி

ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாய் வாழி காவேரி.

ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும்

ஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி”

— சிலப்பதிகாரம் கானல்வரி 152-55
“மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூஆடை அதுபோர்த்துக்

கருங்கயல்கண் விழித்து நடந்தாய் வாழி காவேரி

கருங்கயல்கன் விழித்து ஒல்கி நடந்தவையெல்லாம் நின்கணவன்

திருத்த செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி”

— கானவரி,கட்டுரை 25
“உழவர்ஓதை மதகுஓதை உடைநீர்ஓதை தண்பதம்கொள்

விழவர்ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி

வாய்காவா மழவர்ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி”

— கானல்வரி,கட்டுரை 4
ஸ்ரீ வரபுரம்
சிவன சமுத்திரம்
காவேரியை சிவன் சமுத்திரம் போல் அகன்று பரந்து இருப்பதால் சொன்னானாம்
மத்யம ரெங்கம்
ஜெகன் மோஹன ரெங்கன்
சிவனசமுத்திரம் மாண்டியாவிற்கு அருகில் உள்ள சாமராஜனரா மாவட்டத்தில் காவேரி ஆற்றில் உள்ள புகழ்பெற்ற நீர்வீழ்ச்சியாகும்
ஷிவனசமுத்ரம் அல்லது ஷிவசமுத்ரம் கர்நாடகா மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலாத் தலம் ஆகும். ஷிவசமுத்ரம் என்பதற்கு ‘ சிவனுடைய சமுத்திரம்’ என்பது பொருளாகும். இது காவிரி ஆற்றில் உள்ள புராதனமான தீவு நகரமாகும்.
ககன -ஆகாச அருவி -பெரிய அருவி –
திருவரங்கன் இங்கு சிறிய வடிவம் மயக்கும் திருமேனி இளைஞ்ஞான் ரூபம்
ஆதி சேஷனுக்கு ஏழு தலைகள் இங்கு -ஸ்ரீ ரெங்கம் ஆதி ரெங்கம் ஐந்து தலைகள் –

காவிரியின் கரையில் அமைந்துள்ள சத்யகலாவில் உள்ள ரங்கநாத சுவாமி கோயில், மதய் ரங்கம் என்று குறிப்பிடப்படுகிறது, இது கிரேத யுகத்திற்கு முந்தைய புராணக்கதை கொண்ட கோயிலாகும். காவிரிக் கரையில் அமைந்துள்ள மூன்று பழமையான ரங்கநாதசுவாமி கோயில்களான ஸ்ரீரங்கப்பட்டணம் (ஆதி ரங்கம்), சத்தியகலா (மத்திய ரங்கம்) மற்றும் ஸ்ரீரங்கம் (அந்தி ரங்கம்) ஆகிய மூன்று கோயில்களையும் ஒரே நாளில் தரிசித்தால், ஒருவரின் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கர்நாடகாவில் உள்ள பக்தர்களின் நீண்ட காலமாக வழக்கம் என்னவென்றால், காலை 730 மணிக்கு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் விஷ்ரூப சேவையையும், காலை 9 மணிக்கு சத்தியகலாவையும், மாலையில் ஸ்ரீரங்கத்தில் மூன்றாவது தரிசனத்தையும் மேற்கொள்வதுதான்.

மகிமையான காலங்கள்

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை , ரங்கநாத சுவாமி கோயில் மைசூர் அரண்மனையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது, அது கோயிலுக்கும் அதன் பணியாளர்களுக்கும் மகிமை நிறைந்த நாட்களாக இருந்தது. சத்தியகலையைச் சுற்றியுள்ள பல கிராமங்கள் கோயிலின் பராமரிப்பு மற்றும் உற்சவங்களை நடத்துவதற்காக அரண்மனையால் நன்கொடையாக வழங்கப்பட்டன. 800 ஏக்கர் நிலத்திலிருந்து கிடைக்கும் வருமானம், இங்கு வசித்து, வருடத்தின் ஒவ்வொரு நாளும் வேதங்களை ஓதும் 100க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்களைப் பராமரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.

உடையார் காலத்தில், ராஜாவின் பிரதிநிதியான ராமசாமி முதலியார், கோயிலுக்கு அதிக அளவில் நெல் கிடைப்பதையும், தினசரி பூஜைகள் மற்றும் உற்சவங்களை நடத்துவதற்குத் தேவையான எதற்கும் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்தார். முந்தைய நூற்றாண்டின் நடுப்பகுதியில், இறைவனுக்கு நைவேத்தியமாக முந்திரி பையில் நிரப்பி காணிக்கையாக வழங்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு 96 வயதில் காலமான டி.எஸ். கிருஷ்ண பட்டர், இந்தப் பகுதியில் மிகவும் மதிக்கப்படும் பாதிரியார்களில் ஒருவர். 12 வயதில் சேவையைத் தொடங்கிய அவர் 84 ஆண்டுகளாக கோயிலில் ஆராதனை செய்து வந்தார். தனது பக்தி அர்ப்பணிப்பு மூலம் சத்தியகலாவில் மட்டுமல்ல, கர்நாடகா முழுவதும் உள்ள மக்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

அவர் ஒரு மதிப்பிற்குரிய ஆகம பயிற்சியாளராக இருந்தார் மற்றும் கர்நாடகாவில் உள்ள சமஸ்கிருத நிறுவனங்களின் குழுவில் இருந்தார். அவரது சேவையின் பல தசாப்தங்களில், சத்தியகலா மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 கோயில்களில் ஆராதனை செய்தார். வயதான காலத்திலும் கூட, மத்திய ரங்கத்தில் உள்ள ரங்கநாத சுவாமி கோவிலில் முழுநேர சேவை செய்வதோடு, இந்தக் கோயில்களில் தினசரி ஆராதனை செய்ய அவர் ஒரு பழைய சுழற்சியில் சுற்றி வருவார்.

கிருஷ்ண பட்டர் ரங்கநாதரிடம் மிகவும் பக்தி கொண்டிருந்தார், மேலும் நிதி எண்ணங்கள் அவருக்கு அரிதாகவே தோன்றின. தனது வாழ்நாள் முழுவதும், தனது அனைத்து மகன்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர் கூறிய செய்தி, இறைவனிடம் பக்தியுடன் அர்ப்பணிப்புடன் இருப்பதன் மூலம் கோவிலைப் பாதுகாக்க வேண்டும் என்பதாகும். 

வரலாற்று ரீதியாக, ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற திருவிழாக்கள் இருந்தன. ஜனவரி மாத இறுதியில்/பிப்ரவரி மாத தொடக்கத்தில் பிரம்மோற்சவம் கொண்டாடப்படும் ஒரு பிரமாண்டமான நிகழ்வாகும், தீர்த்தவாரி உற்சவத்திற்காக இறைவன் காவிரிக்கு வருகை தருகிறார்.

1970கள் மற்றும் பொருளாதார மந்தநிலை

‘நிலம் உழுபவர் உரிமையாளராகிறார்’ சட்டம் அமலுக்கு வந்தபோது, ​​கோயிலுக்குச் சொந்தமான 800 ஏக்கர் நிலம் போகத் தொடங்கியது. HR & CE-ஆல் கோயில் கையகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கோயிலுக்கான பொருட்களில் வியத்தகு சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு தசாப்தங்கள் பரம்பரை பூசாரிகளுக்கு சவாலான காலங்களாக இருந்தன.

புதுப்பித்தல் பணிகள் நிறைவடைய உள்ளன.

இந்தப் பத்தாண்டு வரை கிழக்கு நுழைவாயில் ஒரு மொட்டை கோபுரமாக மட்டுமே இருந்தது. இப்போது புதிதாக கட்டப்பட்ட ராஜ கோபுரத்தின் கீழ் லட்சுமி நாராயணன், யோக நரசிம்மர், கோபால கிருஷ்ணன் மற்றும் லட்சுமி ஹயக்ரீவர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கோயிலின் பல பகுதிகளில் சுவர்களில் பல விரிசல்களைக் காண்கிறோம். பழுதுபார்க்கும் பணிகளுக்கான திட்டம் HRCE க்கு அனுப்பப்பட்டுள்ளது, மேலும் கோயில் தற்போது ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. இந்தக் கோயில் நகரத்தில் குளியலறை அல்லது கழிப்பறை வசதிகள் இல்லை. கோயிலுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்து வசதிகளும் இல்லை. ஆனால் கிருஷ்ண பட்டரின் மகன் ஸ்ரீதர் பட்டர், விரைவில் இந்தக் கோயில் அதன் வரலாற்றுப் பெருமையைப் பெறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார். 

புராணக்கதை

எந்த ஆயுதத்தாலும் தன்னைக் கொல்ல முடியாது என்ற பிரம்மம்மாவின் வரத்தைத் தொடர்ந்து, விருத்திராசுரன் ரிஷிகளின் தவத்தைத் தொடர்ந்து தொந்தரவு செய்து அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தினான். சப்த ரிஷிகள் ஒரு தீர்வுக்காக சிவனை அணுகியபோது, ​​அவர்கள் பிரம்மம்மாவிடம் திரும்பினர், ஏனெனில் அவரே வெல்ல முடியாத வரத்தை வழங்கியவர். வரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என்ற அடிப்படையில், பிரம்மம்மா அவர்களை விஷ்ணுவிடம் அனுப்பினார், அவர் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இந்திரனைத் தேடும்படி கேட்டார்.

அவர்கள் இந்திர லோகத்தை அடைந்து, தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களை விவரித்தபோது, ​​திரி மூர்த்திகளால் தீர்வு காண முடியாதபோது, ​​அவரால் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முடிந்ததைக் கண்டு இந்திரன் ஆச்சரியப்பட்டான். ஆனால் விஷ்ணு ரிஷிகளின் பிரச்சினையைத் தீர்க்க பரிந்துரைத்ததால், இந்திரன் ததீச்சி ரிஷியை அணுகினார், அவர் தனது தவத்தின் அசாதாரண சக்திகளால் ஆணவம் கொண்டு, ரிஷிகளைப் பாதுகாப்பதற்காக தனது உயிரைத் தியாகம் செய்யும்படி கேட்டார். இந்திரன் தனது உடலை தியாகம் செய்தபோது, ​​இறந்த ரிஷியின் முதுகு எலும்பிலிருந்து ஒரு புதிய வஜ்ராயுதத்தை உருவாக்கினார். ரிஷிக்கு இறுதிச் சடங்குகளைச் செய்த பிறகு, இந்திரன் புதிய ஆயுதத்தை எடுத்து அசுரனைக் கொன்றான்.

இருப்பினும், தாதிச்சி ரிஷியைப் போன்ற ஒரு தபஸ்வியின் உயிரைப் பறித்ததால் இந்திரன் பிரம்ம ஹதி தோஷத்தால் பாதிக்கப்பட்டார். விஷ்ணு அவரை ஆற்றில் நீராடி, ரங்கநாத சுவாமியின் ஆசிகளைப் பெற்று தக்ஷக க்ஷேத்திரத்தில் (இந்த இடத்தின் வரலாற்றுப் பெயர்) தவம் செய்யச் சொன்னார். அவர் கட்டிடக் கலைஞரான விஸ்வகர்மாவை அழைத்து, ரங்கநாதரின் சாலிகிராம சிலையை வைகுண்டத்தில் காணப்படுவது போல் தூங்கும் நிலையில் நிறுவினார், தலைப்பாகை அணிந்த பாம்பின் மேல், அனைத்தும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டில் ஆதிசேஷனின் பரம எதிரியான கருடன் இருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும், இது இந்தப் பகுதி மக்களின் ஒற்றுமையைக் குறிக்கிறது. வரலாற்று ரீதியாக, வடகலையர்களும் தென்கலையர்களும் இந்த இடத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கோயில் காலை 730 மணி முதல் மதியம் 1230 மணி வரையிலும், மாலை 430 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஸ்ரீதர் பட்டரை @ 99012 72621 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

எப்படி அடைவது

மத்தூருக்கு தெற்கே சுமார் 40 கி.மீ தொலைவில் மாலவள்ளி – கொல்லேகால் நெடுஞ்சாலையில் சத்தியகலா உள்ளது. மத்தூர்/மாலவள்ளியிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மைசூருவிலிருந்து மைசூரு-கொல்லேகல் சாலை (NH766) அல்லது மைசூரு-திருச்சி சாலை – டி.நரசிபூர் சாலை வழியாக 70 கிலோமீட்டர் தொலைவில்.

இங்கு வரும்போது, ​​மத்திய ரங்கத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள வேதாந்த தேசிகர் கோட்டே வரதராஜர் கோயிலுக்கும் செல்லுங்கள்.

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –