Archive for the ‘ஸ்தவம்’ Category

ஸ்ரீ எம்பெருமானார் வைபவம்-

August 16, 2026

அநந்த: ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணஶ்ச தத: பரம் பலபத்ரஸ் த்ருதீயஸ்து கலௌ கஶ்சித் பவிஷ்யதி”, என்கிற ப்ரஸித்தமான ஶ்லோகத்தில் ஆதி ஶேஷன் யுகம்தோறும் அவதரிக்கும் க்ரமமும் கலி யுகத்தில் வரவிருக்கும் அவதாரமும் காட்டப்பட்டுளது(கலௌ கஶ்சித் பவிஷ்யதி) என்றதுக்கு நாமே விஷயம்;-நம் பிறவி ஸர்வோத்தாரகமாகப் பிறந்த பிறவியாய் இருக்கும். ஆகையாலே எல்லாரும் நம்மைப் பற்றி நிர்ப் பரராய் இருங்கோள். ஒரு குறைகளுமில்லை” என்றருளிச் செய்தார்.-இவ்வர்த்தம் பரம ரஹஸ்யம்.–சரமோபாய நிர்ணயம்

பூர்வாபர குரூகதைஶச ஸ்வப்ந வ்ருத்தைர் யதீஶபாக் |
க்ரியதேத்ய மயா ஸம்யக் சரமோபாய நிர்ணயம் |
|-சரமோபாய நிர்ணயம்

எம்பெருமானாருக்கு முன்னும் பின்னுமிருந்த ஆசார்யர்களின் ஶ்ரீஸூக்திகளைக் கொண்டும், ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களாலும், சரமோபாயத்வம் உடையவரிடத்திலேயே பொருந்தும் என்று சரமோபாய நிர்ணயத்தில் நன்கு நிரூபிக்கப்படுகிறது.

விஷ்ணு: ஶேஷீ ததீய: ஶுப குண நிலயோ விக்ரஹ: ஶ்ரீஶடாரி:
ஶ்ரீமாந் ராமாநுஜார்ய: பத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம்|
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர, தஸ்மாத்
ஶிஷ்டம் ஶ்ரீமத் குரூணாம் குலமித மகிலம் தஸ்ய நாதஸ்ய ஶேஷ:||
-பெரியவாச்சான் பிள்ளை யருளியதாக ஶ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப்பட்ட ஶ்லோகம்

[விஷ்ணுவானவர் அனைவர்க்கும் ஶேஷி யாயிருப்பவர்:-நற்குணங்களுக்கு இருப்பிடமான நம்மாழ்வார் அவருடைய திருமேனி யாவார்.-கைங்கர்யச் செல்வம் நிறைந்த எம்பெருமானார் அந்த நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரையிணையாய் விளங்குகிறார்.-அந்த எம்பெருமானாரிடத்திலேயே ஆசார்ய ஶப்தம் நிறை பொருளுடையதாய் விளங்குகிறது. வேறெவரிடமும் அப்படி விளக்கவில்லை. ஆகையால், மற்ற ஸதாசார்ய பரம்பரை முழுவதும் அந்த எம்பெருமானார்க்கு ஶேஷமாயிருப்பது.] (குருகுணாவளி)

யஸ் ஸ்வாபகாலே கருணாஸ்ஸந் பவிஷ்யதாசார்ய பர ஸ்வரூபம் |
ஸந்தர்ஶயாமாஸ மஹாநுபாவம் தம் காரி ஸூநும் ஶரணம் ப்ரபத்யே ||-
எந்த நம்மாழ்வார் கருணை மிக்கவராய், அடியேன் தூங்கும் போது பவிஷ்யதாசார்யரின் சிறந்த விக்ரஹத்தை
எனக்கு காட்டியருளினாரோ, காரியாரின் பிள்ளையான அவரை ஶரணமடைகிறேன். (நாதமுனிகளருளியது)

“ப்ரயாணகாலே சதுரஸ் ஸ்வஶிஷ்யாந் பதாந்திகஸ்தாந் வரதோ ஹி வீஷய|
பக்திப்ரபத்தீ யதி துஷ்கரே வ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்||”-
தன் சரம காலத்தில் தன் திருவடி வாரத்திலிருந்த நாலு ஶிஷ்யர்களைப் பார்த்து நடாதூர் அம்மாள்-‘பக்தி ப்ரபத்திகள் உங்களுக்கு செயற்கரியவையாகில் எம்பெருமானாரை ஶரணமாக கொள்ளுங்கள்’ என்று உபதேஶித்தார்

ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத் குரு|
ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய :||)-
எல்லார்க்கும் எம்பெருமானார் திருவடிகளொழிய வேறொரு தஞ்சமில்லை, த்ரி ப்ரகாரமும் ஸத்யமே சொல்லுகிறேன்,
ப்ரபன்ன குலாந்தர்ப்பூதர்க்கெல்லாம் எம்பெருமானாரே உத்தாரகர், இதில் சற்றும் ஸம்ஶயமில்லை”

“இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கியாதென்றுலர்ந்து அவமே ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே”-அமுதனார் அருளிச் செய்தார்-

மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்களெல்லாம் அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணற்காயினரே

கேஶவ ஸோமயாஜியார் மற்றும் காந்திமதி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார் இவர். இவரின் மாமாவான பெரிய திருமலை நம்பி, இவருக்கு “இளையாழ்வார்” என்ற திருநாமமிட்டு, தாப ஸம்ஸ்காரம் செய்து வைத்து இவரை ஸ்ரீவைஷ்ணவத்தில் ஈடுபடுத்தினார்.

இளமையில், இவர் பேதாபேதம் (ப்ரஹ்மத்துக்கும் ஆத்மாவுக்கும் ஒரே சமயத்தில் ஒற்றுமை மற்றும் வேற்றுமை உள்ளது என்று கூறுவது) என்னும் வேற்று ஸித்தாந்தத்தில் சிறந்து விளங்கிய யாதவப்ரகாஶர் என்கிற வித்வானிடத்தில் வேதாந்தக் கல்வி பயின்றார். ஒரு கேள்வி எழலாம் – ஏன் இவர் வேற்று ஸித்தாந்த வித்வானிடத்தில் பயில வேண்டும்? பெரியோர்கள் இவ்வாறு ஸமாதானம் அளிப்பர் – ஒரு ஸித்தாந்தத்தை வாதில் வெல்வதற்கு முதலில் அதை முழுமையாகக் கற்றறிய வேண்டும். இவரும் அவ்வாறே, பூர்வபக்ஷத்தை நன்றாகக் கற்றறிந்து, பின்பு விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலை நாட்டினார். இந்தக் கொள்கையைப் பெரியவாச்சான் பிள்ளை தன்னுடைய ஆசார்யனான நம்பிள்ளையைப் பெரிய திருமொழி 5.8.7 பாசுர வ்யாக்யானத்தில் “அந்தணன் ஒருவன்” என்பதை விளக்குமிடத்தில் கொண்டாடும் விதத்தைக் கொண்டு அறியலாம். அவர் கூறுவது “முற்பட த்வயத்தைக் கேட்டு, இதிஹாஸ புராணங்களையும் அதிகரித்து, பரபக்ஷ ப்ரத்க்ஷேபத்துக் குடலாக ந்யாயமீமாம்ஸைகளும் அதிகரித்து, போதுபோக்கும் அருளிச்செயலிலேயாம்படி பிள்ளையைப்போலே அதிகரிப்பிக்க வல்லவனையிரே ஒருவன் என்பது” (முதலில் த்வயத்தை ஆசார்யன் மூலம் அறிந்து கொண்டு, பின்பு இதிஹாஸ புராணங்களை அறிந்து, ப்ரதிவாதிகளை வாதில் ஜயிக்க ந்யாயம் மீமாம்ஸை போன்றவற்றைக் கற்று, பின்பு ஆழ்வார்களின் அருளிச்செயலிலேயே பொழுதைப் போக்கும் நம்பிள்ளையே சிறந்த ‘ஒருவன்’ என்று கொண்டாடப்படுபவர்). இதிலிருந்து தங்களுடைய ஸித்தாந்த்தை நிலை நாட்டுவதற்கு, பூர்வபக்ஷத்தை (எதிராளிகளின் வாதத்தை) அறிந்து கொள்வதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஸ்ரீ ராமானுஜர் யாதவப்ரகாஶரிடம் கல்வி பயிலும்பொழுது, இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. மேலும், ஸ்ரீ ராமானுஜரின் சிறந்த ஞானத்தாலும், பிறருக்கு விஷயங்களைத் தெளிவாக எடுத்துரைக்கும் திறமையாலும், அவரின் புகழ் வளரத் தொடங்கியது. இது கண்டு பொறுக்க முடியாத யாதவப்ரகாஶரின் ஶிஷ்யர்கள் அவரைக் காசி யாத்ரைக்கு அழைத்துச் சென்று அச்சமயத்தில் கொல்ல நினைத்தனர். ஆனால், (பிற்காலத்தில் எம்பார் என்று கொண்டாடப்பட இருக்கும்) கோவிந்தரின் ஸமயோஜித புத்தியால், அவர்களிடமிருந்து தப்பி, ஒரு வேடுவ தம்பதியின் உருவில் வந்த காஞ்சீபுரம் பெருந்தேவித் தாயார் பேரருளளான் எம்பெருமானின் துணையால் காட்டில் இருந்து தப்பி காஞ்சீபுரம் வந்தடைகிறார் ராமானுஜர்.அங்கு வந்த பிறகு, ராமானுஜர் தேவப் பெருமாளுக்குத் திருவாலவட்டம் (விசிறி) கைங்கர்யம் செய்யும் அந்தரங்கரான பூவிருந்தவல்லியைச் சேர்ந்த திருக்கச்சி நம்பியைச் சந்திக்கிறார். திருக்கச்சி நம்பி ஆளவந்தாரின் ப்ரிய ஶிஷ்யர்.தேவப் பெருமாள் நம்பியிடம் அவ்வப்பொழுது உரையாடும் அளவுக்கு மிகவும் அன்பு கொண்டவர். ராமானுஜர் நம்பியின் மேற்பார்வையில் தேவப் பெருமாளுக்குத் தினமும் சாலைக் கிணற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வரும் கைங்கர்யம் செய்து வருகிறார். அச்சமயத்தில், ராமானுஜர் தஞ்சம்மாளை மணம்புரிந்து காஞ்சீபுரத்திலேயே வசித்து வருகிறார். அவருக்குச் சில சந்தேகங்கள் எழ, தேவப் பெருமாளிடம் அவற்றைக் கேட்டுத் தெளிவு படுத்துமாறு நம்பியிடம் (என்ன சந்தேகங்கள் என்று கூறாமல்) ப்ரார்த்திக்கிறார். நம்பியும் ராமானுஜரின் நிலையைத் தேவப் பெருமாளுக்கு உரைக்க, தேவப் பெருமாள் நம்பி மூலமாக ராமானுஜருக்கு ஆறு வார்த்தைகளை அருளுகிறார்.

1-அஹமேவ பரம் தத்துவம்”-நாராயணமே உயர்ந்த தத்துவம், நாராயணனே பரம் பொருள்.-2-தர்சநம் பேத ஏவச”-ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.-3-“உபாயேஷு ப்ரபத்திஸ்யாத்”-மோட்சத்திற்கு ப்ரபத்தியே சிறந்த உபாயம்.-4-அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்”-அப்படிச் சரணடைந்தவர்கள் கடைசிக் காலத்தில் என்னை நினைக்க வேண்டாம் (நான் அவர்களை அப்பொழுது நினைப்பேன்)-5-தேஹாவஸாநே முக்தி ஸ்யாத்”-அப்படிச் சரணடைந்தவர்கள் இந்த உடம்பின் முடிவிலேயே முக்தி அடைவர்கள்-6-“பூர்ணாசார்ய ஸ்மாச்ரய”-பெரிய நம்பியை ஆசார்யனாகப் பற்று

ராமானுஜரும், உடனே பெரிய நம்பியைச் சந்திக்க ஸ்ரீரங்கத்தை நோக்கிப் பயணிக்கிறார்.

பெரிய நம்பி நாதமுனிகளின் திருப்பேரனாரான ஆளவந்தாரின் முக்கிய சீடர்களில் ஒருவர். முன்னதாக, ஸம்ப்ரதாயத்தின் தலைமை ஆசார்யான ஆளவந்தார், காஞ்சீபுரத்திற்கு வந்தபோது,  ராமானுஜர் ஒரு சிறந்த ஆசாரியராவார் என்று கடாக்ஷித்தார். ராமானுஜரும் ஆளவந்தாரின் பெருமையை அறிந்திருந்ததால் அவரின் சீடராக விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் ராமானுஜர் சென்ற முறை ஆளவந்தாரைச் சந்திக்கச் ஸ்ரீரங்கம் சென்றபோது, காவிரிக்கரையை அடையும் சமயத்திலேயே ஆளவந்தார் திருநாடு எழுந்தருளிவிட்டார். ஆளவந்தார் அச்சமயத்தில் மூன்று குறைகளோடு இருந்தார் – அவை 1) வ்யாஸ பராஸர ரிஷிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும், 2) நம்மாழ்வாருக்கு நன்றி செலுத்த வேண்டும் 3) ப்ரஹ்ம ஸூத்ரத்திற்கு விளக்கம் எழுத வேண்டும். மடங்கிய மூன்று விரல்களுடன் கூடிய ஆளவந்தாரின் சரம திருமேனியைச் சேவித்த ராமானுஜர், தான் அந்த மூன்று குறைகளையும் போக்குவதாக சபதம் செய்ய, மூன்று விரல்களும் உடனே விரிந்தன. பின்பு ராமானுஜர் வருத்தத்துடன் காஞ்சீபுரம் திரும்பி தன் கைங்கர்யத்தைத் தொடர்ந்து செய்து வந்தார். அதன் பின், ஸ்ரீரங்கத்து ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிய நம்பியிடம் ராமானுஜரை பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து, தர்சன ப்ரவர்த்தகராக ஆக்குமாறு ப்ரார்த்தித்தனர். பெரிய நம்பியும் ராமானுஜரை தன்னுடைய சிஷ்யராக்கும் எண்ணத்துடன் காஞ்சீபுரத்தை நோக்கிப் பயணிக்கிறார்.

இருவரும், காஞ்சீபுரத்துக்கு அருகில் உள்ள மதுராந்தகம் என்னும் இடத்தில் சந்தித்தனர்.ராமானுஜர் ஏரிகாத்த பெருமாள் கோயிலுக்கு வந்தவுடன், பெரிய நம்பியை அவருடைய குடும்பத்துடன் சந்திக்கிறார். அவரை வணங்கி, தன்னை அவருடைய சீடராக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறார். பெரிய நம்பி காஞ்சீபுரத்துக்குச் சென்று அங்கே வைத்து பஞ்சஸம்ஸ்காரம் செய்யலாம் என்கிறார். ராமானுஜரோ “இவ்வுலகம் மிகவும் அநித்யம், முன்பே ஆளவந்தாரிடம் சீடராகும் வாய்ப்பை இழந்தேன், அதே போல மீண்டும் நடக்கக் கூடாது” என்கிறார். எனவே, நம்பியை அப்போதே பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தருளுமாறு ப்ரார்த்திக்க நம்பியும் அவ்வாறே செய்தார். இவ்வாறு, ராமானுஜர் ஶாஸ்த்ரத்தில் கூறியபடி ஒரு ஆசார்யனிடத்தில் க்ரமமாக சரணடைய வேண்டியதின் முக்கியத்துவத்தைத் தானே அனுஷ்டித்துக் காட்டினார். பின்பு, அங்கிருந்து அனைவரும் காஞ்சீபுரம் சென்றடைய, பெரிய நம்பி தன்னுடைய குடும்பத்துடன் சில காலம் அங்கு தங்குவதாகத் தீர்மானிக்கிறார்.-காஞ்சீபுரத்தில் பெரிய நம்பி திருக்கச்சி நம்பியால் வரவேற்கப்பெற்று தேவப் பெருமாளுக்கு மங்களாஶாஸனம் செய்தார். பின்பு, ராமானுஜர் பெரிய நம்பிக்குத் தன் திருமாளிகையின் ஒரு பகுதியைத் தங்குவதற்குக் கொடுத்தார். நம்பியும் தன் குடும்பத்துடன் அங்கே ஆறு மாதங்கள் தங்கி இருந்து ராமானுஜருக்கு திவ்ய ப்ரபந்தம் ரஹஸ்யார்த்தங்கள் முதலியவற்றைக் கற்றுக் கொடுத்தார்.

ஒரு முறை, ராமானுஜரின் திருமாளிகைக்கு ஒரு ஸ்ரீவைஷ்ணவர் பசியுடன் வர, ராமானுஜர் தன் மனைவியிடம் அவருக்கு உணவு அளிக்கும்படிக் கூற, அவரின் மனைவியோ உணவு இல்லை என்று மறுக்கிறார். அந்த ஸ்ரீவைஷ்ணவர் வருத்தத்துடன் செல்ல, ராமானுஜர் மடப்பள்ளி உள்ளே சென்று ப்ரஸாதம் இருப்பதைக் காண்கின்றார். மிகவும் கோபம் கொண்ட அவர், அக்கோபத்தை தன் மனைவியிடம் வெளிப்படுத்தினார். முன்பு கூட, ராமானுஜரின் மனைவியான தஞ்சம்மாள் திருக்கச்சி நம்பியிடம் முறை தவறி நடந்தார். ஒரு முறை திருக்கச்சி நம்பியை தன் திருமாளிகைக்கு அழைத்து, உணவிட்டு அவ்வுணவின் மிச்சத்தை தான் உண்ணவேண்டும் என்று விரும்பினார் ராமானுஜர். ஆனால் அவர் மனைவியோ, நம்பியின் பெருமை மற்றும் ராமானுஜரின் ஆசையையும் புரிந்து கொள்ளாமல் நம்பி வந்தவுடன் அவருக்கு உணவிட்டு அந்த இடத்தையும் சுத்தம் செய்து விடுகிறார். இறுதியான ஒரு நிகழ்வு – ஒரு முறை ராமனுஜரின் மனைவிக்கும் பெரிய நம்பியின் மனைவிக்கும் கிணற்றில் தண்ணீர் எடுப்பதில் ஒரு பிணக்கு ஏற்பட்டது. மிகவும் வருத்தமுற்ற பெரிய நம்பி, ராமானுஜரிடம் சொல்லிக்கொள்ளாமல் தன் குடும்பத்துடன் ஸ்ரீரங்கத்துக்குச் சென்று விட்டார். இதை அறிந்த ராமானுஜர் மிகவும் உடைந்து போனார்.

அவர் பகவத் விஷயத்திலேயே தன் பொழுதை முழுமையாகப் போக்க நினைத்து, முற்றும் துறந்த நிலையான ஸந்யாஸ ஆஶ்ரம ஸ்வீகாரம் செய்வதாக முடிவெடுத்தார். அவர் உடனே காஞ்சீபுரம் தேவப் பெருமாள் ஸன்னிதியில் உள்ள அனந்த ஸரஸ்ஸில் சென்று தீர்த்தமாடி தேவப் பெருமாள் முன்பு சென்று அவரையே ஆசார்யனாகக் கொண்டு தனக்கு ஸந்யாஸிகளுக்கு ஏற்றதான த்ரிதண்ட காஷாயங்களை அளிக்குமாறு ப்ரார்த்தித்தார். தேவப் பெருமாளும் ராமானுஜரின் திருவுள்ளத்தை ஆமோதித்து அவருக்கு ஸந்யாஸ ஆஶ்ரம ஸ்வீகாரத்தைச் செய்து வைத்து, “ராமானுஜ முனி” என்ற பெயரையும் அளித்து அவருக்கு ஒரு மடத்தையும் அளித்தார். இதைக் கேள்வியுற்ற முதலியாண்டான் மற்றும் கூரத்தாழ்வான் உடனே காஞ்சீபுரம் வந்தடைந்து அவரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றுக் கொண்டு அவருக்கு இடை விடாது கைங்கர்யம் செய்யத் தொடங்கினர். யாதவப்ரகாஶரும் அவரின் தாயாரின் அறிவுரையை ஏற்று ராமானுஜரின் ஶிஷ்யரானார். இவ்வாறு ராமானுஜர் ராமானுஜ முனியாகி ஸந்யாஸ ஆஶ்ரமத்தை சிறந்த முறையில் நடத்திப் போனார்.ராமானுஜர் யதிராஜர் என்று ப்ரசித்தமாக அழைக்கப்பட்டார்; மிகுந்த பெருந்தன்மையுடன் யாதவப்ரகாஶரைத் தன் சீடராக ஏற்றுக் கொண்டு, அவரை ஸந்யாஸ ஆஶ்ரமத்தில் ஈடுபடுத்தி, கோவிந்த ஜீயர் என்று அவருக்குப் பெயரிடுகிறார்.  மேலும், அவரைக் கொண்டே ஸ்ரீவைஷ்ணவ ஸந்யாஸிகளின் நடத்தையை விளக்கும் “யதி தர்ம ஸமுச்சயம்” என்ற ப்ராமாணிகமான மற்றும் விரிவான க்ரந்தத்தை எழுதச் செய்கிறார். இந்நிகழ்ச்சி மூலம் ராமானுஜர் தன்னை முன்பு கொல்லவே முயன்ற யாதவப்ரகாஶரைத் தான் ஏற்றுக்கொண்டதோடு அவரைச் சிறந்த கைங்கர்யத்திலும் ஈடுபடுத்தினார்.-காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு, கூரத்தாழ்வானுக்கும் முதலியாண்டானுக்கும் ஶாஸ்த்ர உபதேஶம் செய்துகொண்டிருந்தார்.

ஸ்ரீரங்கநாதர் ஸம்ப்ரதாயத்தைச் சிறந்த முறையில் வளர்க்கும் பொருட்டு ராமானுஜரை ஸ்ரீரங்கம் அழைத்து வர விரும்பி  தேவப்பெருமாளுக்கு ஸ்ரீமுகம் அனுப்புகிறார். தேவப்பெருமாளோ அதற்கு செவி சாய்க்க மறுக்கிறார். ஸ்ரீரங்கநாதர் ஸமயோஜிதமாக திருவரங்கப் பெருமாள் அரையரைக் காஞ்சிபுரத்துக்கு அனுப்பி, அவரின் திவ்ய கானத்தைக் கொண்டு தேவப்பெருமாளைக் கவர்ந்து ராமானுஜரைப் பரிசாகப் பெற்று வருமாறு நியமிக்கிறார். அரையர் காஞ்சிபுரம் அடைந்து, திருக்கச்சி நம்பி புருஷகாரத்துடன் தேவப்பெருமாளை அணுகி, அவரின் திருமுன்பே பண்ணிசைத்துப் பாட, எம்பெருமான் அந்த கானத்தில் மிகவும் மயங்கி “நீர் விரும்பியதைக் கேட்டு பெற்றுப் போம்” என்கிறார். உடனே, அரையர் எம்பெருமானிடம் ராமானுஜரைத் தன்னுடன் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்புமாறு ப்ரார்த்திக்கிறார். அது கேட்டு ராமானுஜரின் பிரிவை உணர்ந்த தேவப்பெருமாள் மிகவும் வருந்தினார் – ஆயினும் தான் கொடுத்த வார்த்தைக்காக ராமானுஜரை அரையருடன் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பினார்.

ஸ்ரீரங்கம் அடைந்தவுடன், அரையரும் யதிராஜரும் சிறப்பாக வரவேற்கப்பட்டனர். இருவரும் பெரிய பெருமாள் ஸந்நிதிக்குச் செல்ல, பெரிய பெருமாளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றார். அவர், ராமானுஜருக்கு “உடையவர்” (பெருமானின் நித்ய விபூதி மற்றும் லீலா விபூதிக்கு ஸ்வாமி) என்கிற பட்டத்தை அளித்து, அவர் தங்குவதற்கு ஒரு மடத்தையும் அளித்து, அவருக்குக் கோயில் நிர்வாகத்தைச் சீர் செய்யும்படி ஆணையும் பிறப்பித்தார். மேலும், அவர், ராமானுஜருடன் தொடர்புள்ள அனைவருக்கும் மோக்ஷம் உறுதி என்று அறுதியிட்டார். உடையவரும், பெரிய நம்பியிடம் தன்னுடைய உபகார ஸ்ம்ருதியை வெளியிட்டார். பெரிய நம்பியும் ஸம்ப்ரதாயத்திற்கு நன்மை விளைவதைக் கண்டு பேரின்பம் அடைந்தார். உடையவரும் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்து கோயில் செயல்பாடுகளைச் சிறந்த முறையில் நேர்படுத்தத் தொடங்கினார்.

ஸ்ரீ ராமானுஜர் இவ்வாறு ஸ்ரீரங்கத்தில் இருந்தவாறு கோயில் காரியங்களைச் சீர் செய்து வந்தார். ஶிவ பக்தராய் மாறி காளஹஸ்தியில் இருந்த தன்னுடைய சிறிய தாயார் குமாரரான கோவிந்தரைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளம் கொண்டு, திருமலை நம்பியிடம் அவருக்கு நல்லுபதேஶம் செய்து நம் ஸம்ப்ரதாயத்திற்கு ஆக்கும்படி ப்ரார்த்தித்தார் [இந்த கோவிந்தரே யாதவ ப்ரகாஶருடன் யாத்ரை சென்றபோது ராமானுஜரின் உயிரைக் காத்தவர்). பெரிய திருமலை நம்பி காளஹஸ்தி சென்று சிறந்த ஶிவ பக்தராக மாறி சேவை செய்து வந்த கோவிந்தரை வழி மறித்தார். அவர் ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னம் மற்றும் ஆழ்வார் பாசுரங்களைக் கொண்டு ஸ்ரீமந்நாராயணின் பரத்வத்தை கோவிந்தருக்கு விளக்கினார். சில முறை அந்த உபதேஶங்களைக் கேட்டு, கோவிந்தரின் மனம் தெளிவு பெற்று, ருத்ரனிடத்தில் இருந்த பிடிப்பு நீங்கி, பெரிய திருமலை நம்பியின் திருவடியில் வந்து ஆதரத்துடன் விழுந்தார். நம்பியும், கோவிந்தரைப் பேரன்புடன் ஏற்றுக் கொண்டு, அவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரமும் செய்து தன்னுடன் அழைத்து வந்தார்.  கோவிந்தரும் நம்பியுடன் திருமலையில் தங்கி இருந்து, அறிய வேண்டிய அர்த்தங்களைக் கற்றுத் தேர்ந்து, நம்பிக்குத் தொண்டு புரிந்து வந்தார். இறுதியில், எம்பெருமானாருடன் நிரந்தரமாக வாழ ஸ்ரீரங்கத்துக்கே வந்து சேர்கிறார் 

ராமானுஜர் பின்பு பெரிய நம்பி திருமாளிகைக்குச் சென்று அவரிடம் ஸாரார்த்தங்களைக் கற்றுத் தருமாறு ப்ரார்த்திக்கிறார். நம்பியும் ஆனந்தத்துடன், மிகச் சிறந்ததான த்வய மஹா மந்த்ரத்தின் திவ்யமான அர்த்தங்களை ராமானுஜருக்கு விளக்குகிறார்.  மேலும் அவர் ராமானுஜரிடம் “இதில் அறிய வேண்டுவது மேலும் உள்ளது; ஆளவந்தாரின் ப்ரிய ஶிஷ்யரான திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சென்று அவற்றைக் கற்று வரவும்” என்று ஆணை இடுகிறார்.

ராமானுஜர் உடனே திருக்கோஷ்டியூர் திவ்ய தேசத்துக்குப் புறப்பட்டார். ஊர் எல்லையை அடைந்ததும், அங்கிருக்கும் சிலரிடம் திருக்கோஷ்டியூர் நம்பியின் திருமாளிகை எங்கு உள்ளது என்று வினவினார். அங்கிருந்தவர்கள் நம்பியின் திருமாளிகை இருக்கும் திசையைக் காட்ட, தண்டனிட்டுக்கொண்டே அவர் திருமாளிகையைச் சென்று அடைந்தார். இதைக் கண்ட ஊர் மக்களும் நம்பியின் பெருமைகளை அறிந்து ஆச்சர்யம் அடைந்தனர். ராமானுஜரும் நம்பியைக் கண்டவுடன் அவர் திருவடியில் விழுந்து ரஹஸ்யார்த்தங்களைக் கற்றுத் தருமாறு ப்ரார்த்திக்கிறார். ஆனால் நம்பியோ அவருக்குக் கற்றுக் கொடுப்பதில் சிறிதும் ஈடுபாடு காட்டாமல் இருக்க, ராமானுஜர் வருத்தத்துடன் ஸ்ரீரங்கம் திரும்புகிறார்.

ராமானுஜர் ஸ்ரீரங்கம் திரும்பியும், திருக்கோஷ்டியூர் நம்பியிடத்தில் ரஹஸ்யார்த்தங்கள் கேட்க மிகவும் பாரிப்புடன் இருக்கிறார். நம்பி ஒருமுறை ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளி இருந்து, பின் திருக்கோஷ்டியூர் திரும்பும் பொழுது, நம்பெருமாள் ராமானுஜருக்கு ரஹஸ்யார்த்தங்கள் கற்றுக் கொடுக்குமாறு நம்பிக்கு ஆணையிடுகிறார். நம்பி நம்பெருமாளிடம் ஶாஸ்த்ரத்தில் முயன்று சேவை செய்யாதவர்களுக்கு இவ்வர்த்தங்களை உபதேஶிக்கக் கூடாது என்று உள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார். நம்பெருமாளோ ராமானுஜரிடம் ஶிஷ்ய லக்ஷணப் பூர்த்தி உள்ளதால் அவருக்குக் கற்றுக் கொடுப்பது பொருந்தும் என்று ஸமாதானம் சொல்கிறார். நம்பியும் அதற்கு இசைந்து ராமானுஜரைத் திருக்கோஷ்டியூருக்கு வந்து விஷயங்களைக் கற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார். ராமானுஜரும் திருக்கோஷ்டியூருக்குச் செல்ல, நம்பியோ மற்றொரு ஸமயம் வந்து கற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார். இவ்வாறு பதினெட்டு முறை நடக்கிறது. ராமானுஜர், இந்த நிலை பொறுக்காமல், நம்பியின் ஶிஷ்யர் ஒருவர் மூலமாக தன்னுடைய ஆர்த்தியை நம்பிக்கு வெளியிடுகிறார். இறுதியாக நம்பியின் இசைவினோடு, ராமானுஜர் கீதா சரம ஶ்லோகத்தின் அர்த்தத்தைக் கேட்டு அறிகிறார். நம்பி ராமானுஜரிடம் இவ்வர்த்தங்களை தகுதியற்றவருக்கு வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். ஆனால் ராமானுஜரோ ஆசையுடையோர்க்கெல்லாம் அவ்வர்த்தங்களை அறிவிக்கிறார்.  அதைக் கேட்ட நம்பி கோபமடைந்து ராமானுஜரை வருமாறு ஆணை இடுகிறார். ராமானுஜர் நம்பியிடம் இவ்வர்த்தங்களை அறிந்தவர்கள் உண்மை ஞானம் பெற்று உஜ்ஜீவனம் அடைவர்கள் என்பதை விளக்குகிறார்.  ராமானுஜரின் பரந்த உள்ளத்தை உணர்ந்த நம்பி, அவரை “எம்பெருமானார்” (எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனிலும் மேம்பட்டவர்) என்று கொண்டாடுகிறார். பின்பு, நம் ஸம்ப்ரதாயமும் “எம்பெருமானார் தரிஶனம்” என்றே பேர் பெற்று விளங்கியது. பின்பு, எம்பெருமானார் இந்த ரஹஸ்ய அர்த்தங்களை கூரத்தாழ்வானுக்கும் முதலியாண்டானுக்கும் அவர்கள் ப்ராத்தனைக்கு இணங்க விளக்குகிறார்.

1-முமுஷுவுக்கு சம்சார பீஜம் நசிக்க வேணும்
அது நசித்தால் ஒழிய அகங்கார மமகார நிபிருத்தி ஆக மாட்டாதே -அஹங்காரம் -கர்வம் -மமகாரம் -மாத்சர்யம் –
2- அஹங்கார மமகாரம் நிவ்ருத்தியானால் ஒழிய தேஹாத்ம அபிமானம் போகாது
3- தேஹாத்ம அபிமானம் போனால் ஒழிய ஆத்ம ஞானம் பிறவாது
4-ஆத்ம ஞானம் பிறந்தால் ஒழிய ஐஸ்வர்ய போகாதிகளில் உபேக்ஷை பிறவாது –
5-ஐஸ்வர்ய போகாதிகளில் உபேக்ஷை பிறந்தால் ஒழிய பகவத் ப்ரேமம் பிறவாது
6-பகவத் ப்ரேமம் பிறந்தால் ஒழிய விஷயாந்தர ருசி விடாது
7-விஷயாந்தர ருசி விட்டால் ஒழிய பாரதந்தர்யம் பிறவாது
8-பாரதந்தர்யம் பிறந்தால் ஒழிய அர்த்த காம ராக த்வேஷாதிகள் ஒழியாது
9-ராக த்வேஷாதிகள் ஒழிந்தால் ஒழிய ஸ்ரீ வைஷணத்வம் உண்டாகாது
10-ஸ்ரீ வைஷ்ணவத்வம் கை கூடினால் ஒழிய ஸாத்விக பரிக்ரகம் ஏற்படாது
11-சாத்விக பரிக்ரஹம் பிறந்தால் ஒழிய பாகவத பரிக்ரஹம் பிறக்க மாட்டாது
12-பாகவத பரிக்ரஹம் பிறந்தால் ஒழிய பகவத் பரிக்ரஹம் பிறக்க மாட்டாது
13-பகவத் பரிக்ரஹம் பிறந்தால் ஒழிய அநந்ய ப்ரயோஜனன் ஆக மாட்டான்
14- அநந்ய ப்ரயோஜனன் ஆகாதே அநந்யார்ஹ சேஷ பூதன் ஆகான்
15-அநந்யார்ஹ சேஷ பூதன் ஆகாதே அநந்ய சரண்யன் ஆக மாட்டான்
16-அநந்ய சரண்யன் ஆகாதே அதிகாரி புருஷன் ஆக மாட்டான்
17-அநந்ய சரண்யன் ஆணவனுக்கே திரு மந்த்ரம் கை கூடும்
18-இப்படி 18 படிகள் தாண்டிய பின்பே எம்பெருமானாருக்கு திருக்கோட்டியூர் நம்பி அருளிச் செய்தார்

பின்பு, திருக்கோஷ்டியூர் நம்பி எம்பெருமானாருக்குத் திருவாய்மொழியின் அர்த்தங்களைக் கற்றுக் கொடுக்குமாறு திருமாலை ஆண்டானிடம் பணித்தார். எம்பெருமானாரும் அறிந்துகொள்ள வேண்டிய அர்த்தங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். சில சமயங்களில் ஆண்டானுக்கும் எம்பெருமானாருக்கும் சில பாசுர அர்த்தங்களில் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. திருவாய்மொழி 2.3.3. “அறியாக் காலத்துள்ளே” பாசுர விளக்கத்தின் போது, எம்பெருமானார் மாற்றுக் கருத்தைச் சொல்ல, ஆண்டான் கோபித்துக் கொண்டு காலக்ஷேபத்தை நிறுத்தி விடுகிறார். திருக்கோஷ்டியூர் நம்பி இது பற்றிக் கேள்விப்பட்டு உடனே திருவரங்கத்துக்குச் செல்கிறார். அவர் ஆண்டானிடம் எம்பெருமானாரின் பெருமைகளை எடுத்துரைத்து எந்த நிலைமையிலும் காலக்ஷேபத்தை நிறுத்தாமல் நடத்துமாறு கூறுகிறார். ஆண்டானும் அதற்கு இசைந்து காலக்ஷேபத்தைத் தொடருகிறார். ஆனால், மீண்டும் ஒரு முறை கருத்து வேறுபாடு வர, எம்பெருமானார் “ஆளவந்தார் இவ்வாறு இதை விளக்க மாட்டார்” என்று கூற, ஆண்டானும் “நீரோ ஆளவந்தாரைச் சந்தித்ததே இல்லை. இவ்வாறு இருக்க இது எப்படி உமக்குத் தெரியும்” என்று வினவ, எம்பெருமானார் “அடியேன் ஆளவந்தாருக்கு ஏகலவ்யனைப் போலே” என்றார். அது கேட்ட ஆண்டான் எம்பெருமானாரைப் பற்றி திருக்கோஷ்டியூர் நம்பி விளக்கியது பொருத்தமாக இருக்கவே, எம்பெருமானார் ஒரு அவதார விஶேஷம் என்று உணர்ந்து, ஆளவந்தாரிடம் கேட்காமல் விட்டுப் போன அர்த்தங்களை எம்பெருமானாரிடம் இருந்து கேட்டு அறியலாம் என்ற எண்ணத்துடன், அவரை மிகவும் ஆதரித்துப் போந்தார்.

இவ்வாறு திருவாய்மொழி காலக்ஷேபம் முடிந்தபின், எம்பெருமானார் பெரிய நம்பியிடம் செல்ல, நம்பியும், எம்பெருமானாரைத் திருவரங்கப் பெருமாள் அரையரிடம் சென்று சில ரஹஸ்யார்த்தங்களைக் கேட்டு அறியுமாறு பணிக்கிறார். எம்பெருமானாரும் அரையரிடம் சென்று, 6 மாதங்கள் அவருக்குப் பாலமுது செய்தல் மற்றும் மஞ்சள் காப்பு செய்து தருதல் ஆகிய கைங்கர்யங்களைப் பணிவுடன் செய்கிறார். ஒரு முறை எம்பெருமானாரால் ஸமர்ப்பிக்கப்பட்ட மஞ்சள் காப்பு தரமாக இல்லாததால் அரையர் தன் திருமுகத்தைத் திருப்பி வைத்துக் கொள்கிறார். உடனே எம்பெருமானார் மீண்டும் ஒரு முறை மஞ்சள் காப்பு புதிதாகத் தயார் செய்து அரையரின் ஆனந்தத்திற்காக ஸமர்ப்பிக்கிறார். மிகவும் ஆனந்தித்த அரையர், ரஹஸ்யார்த்தமான “சரமோபாயம்” (இறுதியான வழி) – ஆசார்யனையே எல்லாமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதை உபதேஶிக்கிறார்.

எதற்காக எம்பெருமானார் பல ஆசார்யர்களிடம் பயில வேண்டும் என்று ஒருவர் நினைக்கலாம். ஒரு ராஜா தன்னுடைய பல மந்திரிகளைக் கொண்டு ஒரு இளவரசனைத் தயார் செய்வது போல், ஆளவந்தார் மிகச் சிறந்த ஞானச் செல்வத்தை தன்னுடைய ஶிஷ்யர்களிடம் அளித்து அவற்றைத் தக்க சமயத்தில் எம்பெருமானாருக்கு கற்றுக் கொடுக்குமாறு ஆணையிட்டார். ஆளவந்தார் ராமானுஜரிடம் கொண்டிருந்த அன்பைக் கண்ட ஆளவந்தாரின் ஶிஷ்யர்களும், ராமானுஜரிடம் மிகுந்த ஈடுபாடும் மரியாதையும் கொண்டிருந்தனர். இதனாலேயே எம்பெருமானாருக்கு முன்பிருந்த ஆசார்யர்கள் அவர் திருமுடி சம்பந்தத்தாலும் பின்புள்ளவர்கள் அவர் திருவடி சம்பந்தத்தாலும் மிக்க பெருமையை அடைந்தார்கள். எப்படி ஒரு ஹாரத்தின் நடு நாயகமான மாணிக்கக் கல் அந்த ஹாரத்தின் இரண்டு பக்கத்துக்கும் அழகு சேர்க்குமோ, அப்படியே எம்பெருமானாரும் தனக்கு முன்பிருந்த ஆசார்யர்களுக்கும் பின்பிருந்த ஆசார்யர்களுக்கும் பெருமை சேர்க்கிறார்.

பின்பு, ஸ்ரீரங்கத்தில் ஒரு பங்குனி உத்திரத் திருநாளில் ஸ்ரீ ரங்கநாயகித் தாயார் மற்றும் ஸ்ரீ ரங்கநாதன் திருமுன்பே கத்ய த்ரயத்தை அருளிச்செய்தார். அதன் பிறகு எம்பெருமானை க்ருஹங்களில் திருவாராதனம் செய்யும் முறையை விளக்கும் நித்ய க்ரந்தத்தையும் அருளிச்செய்தார்.

இச்சமயத்தில், எம்பெருமானார் ஸ்ரீரங்கத்தில் ஏழகம் (ஏழு வீடுகளில்) மாதுகரம் (பிக்ஷை) கொண்டு அமுது செய்து வந்தார். அவர் ஸ்ரீரங்கத்தில் செய்யும் சீர்திருத்தங்களை விரும்பாத சிலர், ஒரு பெண்ணின் மூலம் விஷமிட்ட அன்னத்தைக் கொடுக்குமாறு செய்தனர். அவளுக்கு இதில் உடன்பாடு இல்லாவிடினும், வேறு வழியின்றி, மிகுந்த மன வருத்தத்துடன் எம்பெருமானாருக்கு பிக்ஷை இட்டாள். ஏதோ தவறு நடப்பதை உணர்ந்த எம்பெருமானார், அந்த அன்னத்தைக் காவிரியில் கரைத்து உபவாஸம் இருக்க ஆரம்பித்தார். விஷயம் அறிந்த திருக்கோஷ்டியூர் நம்பி உடன் ஸ்ரீரங்கத்துக்கு விரைந்தார். கடும் வெயிலில் எம்பெருமானார் அவரை வரவேற்கக் காவிரிக் கரைக்கு எழுந்தருளினார். எம்பெருமானார் நம்பியைக் கண்டவுடன், வெயிலையும் பொருட்படுத்தாமல் கீழே விழுந்து தண்டன் ஸமர்ப்பித்து நம்பி எழுந்திருக்கச் சொல்லும் வரை அப்படியே இருந்தார். நம்பி சிறிது நேரம் தாமதிக்க, எம்பெருமானாரின் சிஷ்யரான கிடாம்பி ஆச்சான் எம்பெருமானாரை உடனே எடுத்து நிறுத்தி, நம்பியிடம் “இப்படிப்பட்ட ஆசார்யனை இந்த வெப்பத்தில் எப்படித் தவிக்கவிட விடுகிறீர்” என்று கடிந்து கொண்டார். நம்பியும் ஆச்சானிடம் “எம்பெருமானாரிடம் பரிவுள்ள ஒருவரைக் கண்டு கொண்டேன். என்னையும் மீறி அவரை எடுத்து நிறுத்தினீரே. இனி, நீரே அவருக்குத் தினமும் ப்ரஸாதம் செய்து கொடுக்கவும்” என்று கூறினார். இவ்வாறு, அனைவரும் எம்பெருமானாரிடம் தங்கள் அன்பையும் பரிவையும் காட்டினர்.

யஞ்ய மூர்த்தி என்னும் வித்வான், காசிக்குச் சென்று பல வித்வான்களை வாதத்தில் வென்று, ஸந்யாஸியாகி, பல விருதுகளுடனும் ஶிஷ்யர்களுடனும் இருந்தபோது ராமானுஜரின் பெருமை அறிந்து, ஸ்ரீரங்கத்துக்கு வந்து ராமானுஜரை வாதப் போருக்கு அழைத்தார். ராமானுஜரும் அதை ஏற்றுக் கொண்டார். யஞ்ய மூர்த்தி தான் தோற்றால் ராமானுஜரின் பாதுகைகளைத் தலை மேல் தாங்கி, அவருடைய திருநாமத்தைத் தான் சூட்டிக்கொண்டு அவருடைய ஸித்தாந்தத்தை ஏற்பதாகக் கூறினார். உடையவரோ தான் தோற்றால் க்ரந்த ஸந்யாஸம் (க்ரந்தங்கள் எழுதுவது, விளக்குவது முதலியவை செய்யாமல் இருத்தல்) ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். பதினேழு நாட்களுக்கு இருவரும் மிகவும் தீவிரமாக வாதம் செய்தனர். பதினேழாவது நாளன்று யஞ்ய மூர்த்தியின் வாதம் ஓங்கி இருக்க, அவர் மிகுந்த மிடுக்குடன் சபையை விட்டுச் சென்றார். ராமானுஜர் மிகுந்த வருத்தத்துடன் தன்னுடைய திருவாராதனப் பெருமாளான பேரருளாளனிடம் “மஹநீயர்களான ஆழ்வார் தொடக்கமாக ஆளவந்தார் வரை வளர்த்த இந்தத் தலை சிறந்த ஸம்ப்ரதாயம் இன்று என்னால் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது; ஒரு மாயாவாதி இன்று இதை அழிக்கப் பார்க்கிறான்; இதுவே உன் திருவுள்ளமாகில், அப்படியே ஆகுக” என்று கூறி ப்ரஸாதம் எடுத்துக் கொள்ளாமல் உறங்கச் சென்றார். இரவில், பெருமாள் அவரின் கனவில் தோன்றி ஆளவந்தாரின் ஸ்ரீஸூக்திகளைக் கொண்டு யஞ்ய மூர்த்தியை ஜெயிக்குமாறு உணர்த்தினார். விழித்தெழுந்த ராமானுஜர் வருத்தம் தீர்ந்து, தன்னுடைய அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, மடம் திருவாராதனப் பெருமாளிடம் விடை கொண்டார். ராமானுஜரின் கம்பீரமான வரவைக்கண்ட யஞ்ய மூர்த்தி, வித்வானாகையாலே, ஒரு தெய்வீகச் செயல் நடந்திருப்பதை உணர்ந்து, அவரின் திருவடிகளிலே விழுந்து “நான் வாதில் தோற்றேன்” என்றார். ஆச்சர்யமடைந்த ராமானுஜர் “மேலே வாதம் செய்ய வேண்டாமோ” என்று வினவ, யஞ்ய மூர்த்தி “தேவரீரிடம் பெரிய பெருமாளே பேசின பின்பு, தேவரீர் பெரிய பெருமாளிடம் இருந்து வேறு பட்டவர் அல்ல என்பதை நான் புரிந்து கொண்டேன். இனி நான் வாய் திறப்பதற்குப் ப்ராப்தி இல்லை. ராமானுஜரோ ப்ரஹ்மத்தின் குணங்களை விளக்கிக் கூறி மாயாவாத ஸித்தாந்தக் கொள்கைகளைத் தகர்த்தெறிந்தார். யஞ்ய மூர்த்தி உண்மையை உணர்ந்தவராய் தன்னுடைய (மாயாவாத ஸந்யாஸிகள் வைத்துக் கொள்ளும்) ஏகதண்டத்தை உடைத்தெறிந்து, ராமானுஜரைத் தனக்கு ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய த்ரிதண்ட ஸந்யாஸம் தருமாறு வேண்டுகிறார். பேரருளாளப் பெருமாளின் நினைவாகவும், யஞ்ய மூர்த்தியின் ஶபதமான “தோற்றால் ராமானுஜரின் திருநாமத்தை வைத்துக் கொள்வேன்” என்றதையும் நினைவில் கொண்டு ராமானுஜர் அவருக்கு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்ற திருநாமத்தைச் சூட்டினார். ராமானுஜரே அவருக்கு அருளிச்செயலையும் அதன் ஆழ்ந்த அர்த்தங்களையும் கற்றுக் கொடுக்கிறார். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் மிகுந்த ஈடுபாட்டுடன் எம்பெருமானாரை விட்டுப் பிரியாமல் இருந்தார்.

உடையவர் ஆழ்வான் ஆண்டான் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் மற்றும் பலருக்கு ஸ்ரீரங்கத்தில் தொடர்ந்து உபதேஶங்களைச் செய்து வந்தார். பல வித்வான்களும் அவர் பெருமையைப் பற்றிக் கேள்விப்பட்டு, ஸ்ரீரங்கம் வந்தடைந்து அவரை ஆஶ்ரயித்தனர். அநந்தாழ்வான், எச்சான், தொண்டனூர் நம்பி மற்றும் மருதூர் நம்பி ஆகியோர் உடையவரை ஆஶ்ரயிக்க வர, அவர் அவர்களை அருளாளாப் பெருமாள் எம்பெருமானாரிடம் ஆஶ்ரயிக்கும்படி ஆணையிடுகிறார். அவர்களும் அவ்வாறே செய்ய, அருளாளாப் பெருமாள் எம்பெருமானார் அவர்களை “எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்” என்றிருக்குமாறு கூறுகிறார்.

பின்பு ஒரு ஸமயம், உடையவர் திருவாய்மொழி காலக்ஷேபம் செய்து வந்தார். திருவேங்கடமுடையான் விஷயமான “ஒழிவில் காலம்” பதிகத்தை விளாக்கும்போது “இங்கு எவரேனும் திருமலைக்குச் சென்று ஒரு நந்தவனம் அமைத்து, திருவேங்கடமுடையானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்ய முடியுமா” என்று கேட்க, அநந்தாழ்வான் உடனே எழுந்து தான் அதைச் செய்வதாகக் கூறினார். எம்பெருமானாரும் அவருக்கு க்ருபை பண்ண, அவர் திருமலைக்குச் சென்று, ஒரு நந்தவனத்தையும், குளத்தையும் செய்து, அந்த நந்தவனத்துக்கு “இராமானுசன்” என்று பெயரிட்டு, திருவேங்கடமுடையானுக்குக் கைங்கர்யம் செய்யத் தொடங்கினார்.-உடையவரும் ஒரு திவ்யதேச யாத்ரை செய்யத் திருவுள்ளமாகி, நம்பெருமாளிடம் அதற்கு அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்தவுடன், திருக்கோவலூர் மற்றும் காஞ்சீபுரம் திவ்ய தேச எம்பெருமான்களுக்கு மங்களாஶாஸனம் செய்து பின்பு திருமலையை நோக்கிச் சென்றார்.உடையவர் திருமலை திருப்பதி நோக்கித் தன் ஶிஷ்யர்களுடன் செல்லத் தொடங்கினார். ஒரு சமயத்தில் வழி தெரியாமல் திகைத்து அங்கே இருந்த ஒரு விவசாயியிடம் வழி கேட்டார். அவனும் தெளிவாக வழி காட்ட, உடையவர் உணர்ச்சிப் பெருக்கினால் அவனைப் பரமபதத்திற்கு வழிகாட்டும் அமாநவனாக எண்ணி நன்றியுடன் தண்டனிட்டார். சில நாட்களில் திருப்பதியை அடைந்து திருமலை அடிவாரத்தில் ஆழ்வார்களைத் தொழுதார். அவர் அங்கேயே சில காலம் எழுந்தருளியிருந்து, அந்த நாட்டு ராஜாவை ஶிஷ்யனாக ஏற்றுக் கொண்டு, தன்னுடைய ஶிஷ்யர்களையும் அங்கே குடியேற்றினார். இந்த விஷயங்களைக் கேள்வியுற்ற அநந்தாழ்வான் மற்றும் பலரும் வந்து அவரை வரவேற்று, அவரைத் திருமலை ஏறி திருவேங்கடமுடையானுக்கு மங்களாஶாஸனம் செய்யுமாறு வேண்டினர். அவரோ ஆழ்வார்கள் திருமலையைப் புனிதமாகக் கருதியதால் அதில் ஏறியதில்லை, ஆதலால் தானும் ஏற மாட்டேன் என்று முதலில் மறுத்தாலும், ஶிஷ்யர்களின் ப்ரார்த்தனையால், திருமலை அடிவாரம் சென்று, தீர்த்தமாடி, மிகவும் பக்தியுடன், எம்பெருமானின் ஸிம்மாஸனத்தில் ஏறுவது போலத் திருமலையில் ஏறினார்.

உடையவர் திருமலை சென்று அடைந்தவுடன், திருமலை நம்பி, திருவேங்கடமுடையான் ப்ரசாதங்களோடு வந்து வரவேற்றார். தன்னுடைய ஆசார்யர்களில் ஒருவரான திருமலை நம்பியே எதிர் கொண்டு அழைத்ததைக் கண்ட உடையவர் அவரிடம் “யாரேனும் சிறியவரை விட்டு அடியேனை வரவேற்றிருக்கலாமே” என்று கூற, நம்பியோ, “நான்கு வீதியிலும் சுற்றிப் பார்த்தும், என்னை விடத் தாழ்ந்தவர் தென்படவில்லை” என்று விடை அளித்தார். இதைக் கேட்ட உடையவரும் அவர் ஶிஷ்யர்களும் மிகவும் ஆச்சர்யம் அடைந்தனர். பின்பு, ஜீயர்கள், ஏகாங்கிகள் கோயில் கைங்கர்யபரர்கள் என்று அனைவரும் வந்து உடையவரை வரவேற்றனர். பின்பு, உடையவர் கோயிலைப் ப்ரதக்ஷிணமாக வந்து ஸ்வாமி புஷ்கரணியில் தீர்த்தமாடி த்வாதஶ ஊர்த்வ புண்ட்ரங்கள் அணிந்து கொண்டு வராஹப் பெருமாளை வணங்கி  ப்ரதான ஸந்நிதியை அடைந்து ஸேனை முதலியாரை வணங்கி திருவேங்கடமுடையானுக்கு மங்களாஶாஸனம் செய்தார். பின்பு இது நித்யஸூரிகள் வாழும் இடம் ஆதலால் இரவில் தங்கக் கூடாது என்று கூறி, திருமலை அடிவாரத்துக்குத் திரும்பத் திருவுள்ளம் கொண்டார். ஆனால் நம்பியும் மற்றவர்களும் திவ்ய தேசமாதலால் அவரை மூன்று நாட்கள் தங்குமாறு வேண்ட, அவரும் அதற்கு இசைந்து ப்ரஸாதம் ஸ்வீகரிக்காமல் திருவேங்கடமுடையானை அனுபவித்தே மூன்று நாட்களைக் கழித்தார். பின்பு திருவேங்கடமுடையானிடம் விடை பெற்றுக்கொள்ளப் ப்ரார்த்திக்க, அப்பொழுது எம்பெருமானும் அவரை நித்ய விபூதிக்கும் லீலா விபுதிக்கும் உடையவர் என்று முன்பு சொன்னதை வழி மொழிந்து அவரை வழி அனுப்புகிறார்.

பின்பு அவர் திருமலையில் இருந்து இறங்கி, திருப்பதியில் ஒரு வருட காலம் தங்கி இருந்தார். திருமலை நம்பியிடத்தில் ஒரு வருட காலமும் ஸ்ரீ ராமாயணத்தின் ஆழ்ந்த அர்த்தங்களைக் கற்று அறிகிறார்-அதன் முடிவில் நம்பியிடம் ஸ்ரீரங்கம் திரும்ப நியமனம் கேட்கிறார். நம்பி உடையவருக்கு ஏதாவது பரிசளிக்க விரும்ப, உடையவர் நம்பியிடம் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் கோவிந்தப் பெருமாளைத் தன்னுடன் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பி வைத்து நம் ஸம்ப்ரதாயத்தை வளர்ப்பதற்கு உதவுமாறு கேட்கிறார். நம்பியும் மகிழ்ச்சியுடன் கோவிந்தப் பெருமாளை உடையவருடன் அனுப்பி வைக்க, உடையவரும் ஸ்ரீரங்கத்தை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கினார்.

உடையவர் கோவிந்தப் பெருமாளுடன் கடிகாசலத்தை (சோளிங்கர்) அடைந்து அக்காரக் கனி எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்தார். பின்பு திருப்புட்குழி அடைந்து ஜடாயு மஹாராஜர், மரகதவல்லித் தாயார் மற்றும் விஜயராகவன் எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்தார். பின்பு கச்சியைச் சுற்றியுள்ள பல திவ்ய தேசங்களைச் சேவித்து திருக்கச்சி நம்பி ஸந்நிதியை அடைந்தார். இது நடுவே, கோவிந்தப் பெருமாள் தன்னுடைய ஆசார்யரான பெரிய திருமலை நம்பியைப் பிரிந்ததால் வருத்தமுற்று உடல் வெளுத்தார். இதை உணர்ந்த உடையவர் அவரைத் திருப்பதி சென்று ஆசார்யரைச் சேவித்து வருமாறு கூறி சில ஸ்ரீவைஷ்ணவர்களையும் உடன் அனுப்புகிறார். தானோ திருக்கச்சி நம்பியுடன் கச்சியில் இருந்து தேவாதிராஜனைச் சேவித்து வருகிறார். கோவிந்தப் பெருமாள் திருமலை நம்பி திருமாளிகையை அடைந்து, அங்கே கதவுகள் சாற்றியிருந்ததால் வாயிலில் காத்திருந்தார். அங்கே இருந்தவர்கள் திருமலை நம்பியிடம் இவரின் வரவை அறிவிக்க, அவர் கதவைத் திறக்க மறுத்து உடையவரிடமே சென்று அவரையே தஞ்சமாகக் கொண்டிருக்கும்படி கூறினார். தன்னுடைய ஆசார்யரினின் திருவுள்ளத்தை முழுதுமாக அறிந்த கோவிந்தப் பெருமாள் உடையவரிடம் வந்தடைந்தார். உடன் சென்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் உடையவரிடம் அங்கே நடந்ததை விவரிக்கத் திருமலை நம்பியின் உபதேசத்தை அறிந்த உடையவர் மிகவும் மகிழ்ந்தார்.

பின்பு, அவர்கள் அங்கிருந்து விடைபெற்று ஸ்ரீரங்கத்தை வந்தடைந்தனர். ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆரவாரத்துடன் வரவேற்க, உடையவர் ஸேவா க்ரமத்தில் பெரிய பெருமாளைச் சென்றடைந்தார். பெரிய பெருமாள் அவரைப் பேரன்புடன் வரவேற்று, யாத்ரையைப் பற்றி விசாரித்து, தீர்த்தம் ஸ்ரீசடகோப மரியாதைகளை அளிக்கிறார். இதன் பின்பு, ஸ்ரீரங்கத்தில் உடையவர் கருணையுடன் தன்னுடைய அனுஷ்டானங்களுடன் இந்த உயர்ந்த ஸித்தாந்தத்தைக் காலக்ஷேபம் செய்து கொண்டிருந்தார்.

கோவிந்தப் பெருமாளும் ஆனந்தத்துடன் காலக்ஷேபங்களிலும் கைங்கர்யங்களிலும் பங்கு பெற்று வந்தார். ஒரு முறை சில ஸ்ரீவைஷ்ணவர்கள் கோவிந்தப் பெருமாளைக் கொண்டாட அவரும் அதை ஆனந்தத்துடன் ஆமோதித்தார். இதைக் கண்ட உடையவர் அவரிடம் “நம்மை ஒருவர் கொண்டாடும்போது நாம் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் கூடாது. நாம் அவர்களிடம் அதற்குத் தகுதி அற்றவர் என்று தாழ்மையுடன் கூறிக் கொள்ள வேண்டும்” என்றார். அதைக் கேட்ட கோவிந்தப் பெருமாள் “நான் காளஹஸ்தியில் நீசனாக இருந்தேன். இன்று என்னை ஒருவர் புகழ்கிறார் என்றால் அது தேவரீருடைய பெரிய கருணையால் என்னைத் திருத்திப் பணி கொண்டு இந்நிலைக்கு உயர்த்தியதாலேயே. ஆகையால் எல்லாப் பெருமைகளும் தேவரீருக்கே” என்றார். இதைக் கேட்ட எம்பெருமானார் கோவிந்தப் பெருமாளின் சிறந்த நிஷ்டையை அங்கீகரித்தார். அவர் உடனே கோவிந்தப் பெருமாளிடம் “இப்படிப்பட்ட நற்குணங்களை எமக்கும் தந்தால் ஆகாதோ” என்று கூறி அவரை அணைத்துக் கொண்டார். கோவிந்தப் பெருமாளும் உலக இன்பங்களில் ஈடுபாடு அற்று இருந்ததால் எம்பெருமானார் அவரை ஸந்யாஸாச்ரமத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஆணையிடுகிறார். கோவிந்தப் பெருமாளும் ஸந்யாஸாச்ரமத்தை ஏற்றுக் கொள்ள, எம்பெருமானாரும் அவருக்கு எம்பார் என்று பெயரிட்டார்.-பின்பு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நம்முடைய ஸம்ப்ரதாயத்தின் ஸாரமான அர்த்தங்களைக் காட்டும் ஞான ஸாரம் மற்றும் ப்ரமேய ஸாரம் அருளிச் செய்கிறார்.

வேதாந்தக் கொள்கைகளை நிர்ணயம் செய்யும் நோக்குடன், எம்பெருமானார் ஆழ்வான் மற்றும் ஏனைய ஶிஷ்யர்களோடு ப்ரஹ்ம ஸூத்ரத்துக்குப் பொருள் விரிக்கும் க்ரந்தமான போதாயன வ்ருத்தி க்ரந்தத்தைப் பெற காஷ்மீர் செல்லத் தொடங்கினார். அந்த க்ரந்தத்தைப் பெற்றுக் கொண்டு ஸ்ரீரங்கத்தை நோக்கிச் சென்றார். வரும் வழியில், காஷ்மீரத்தைச் சேர்ந்த சில தீயவர்கள் போதாயன வ்ருத்தி க்ரந்தத்தை அபஹரித்துச் சென்றார்கள். எம்பெருமானார் முழுதும் அந்த ஸ்ரீ கோஶத்தைப் படிக்காததால் மிகவும் வருந்த, ஆழ்வான் அவரைத் தேற்றி, தாம் அதை எம்பெருமானார் ஓய்வெடுக்கும்போது முழுவதுமாகப்  படித்து விட்டதாகக் கூறினார். ஸ்ரீரங்கம் திரும்பியவுடன் எம்பெருமானார் தாம் சொல்லச் சொல்ல ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு ஒரு வ்யாக்யானம் எழுதுமாறு ஆழ்வானை நியமிக்கிறார். அவர் ஆழ்வானிடம் “நமக்கும் உமக்கும் கருத்து பேதங்கள் இருந்தால் நீர் எழுதுவதை அப்போதே நிறுத்தலாம்” என்றார். இவ்வாறு ஒரு முறை ஆத்மாவைப் பற்றி விளக்கும்போது, உடையவர் ஆத்மாவுக்கு ஞாத்ருத்வம் ஸ்வரூபம் என்று சொல்ல ஆழ்வானோ ஶேஷத்வமே முக்கியம் என்றிருப்பவராதலால் எழுதுவதை நிறுத்தி விடுகிறார். எம்பெருமானார் கோபமுற்று ஆழ்வானைத் தாம் சொல்லுவதை எழுதும்படி ஆணையிட, ஆழ்வான் பின்பும் எழுத மறுக்க எம்பெருமானார் மிகுந்த கோபத்தை அடைந்தார். அருகில் இருந்தவர்கள் “எம்பெருமானாரின் இந்தச் செயலைப் பற்றி என்ன நினைக்கிறீர்” என்று வினவ, ஆழ்வானோ “அவர் சொத்தை உடையவர், நாமோ சொத்து. அவர் என்னை எவ்வாறு வேண்டுமானாலும் நடத்தலாம்” என்றார். சிறிது நேரத்துக்குப் பிறகு எம்பெருமானார் யோஜித்துத் தன்னுடைய தவறை உணர்ந்து ஆழ்வானிடம் மன்னிப்புக் கோரி, ஸ்ரீ பாஷ்யத்தை மீண்டும் தொடருகிறார். இவ்வாறே எம்பெருமானார் ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம், கீதா பாஷ்யம் போன்ற க்ரந்தங்களை அருளிச் செய்தார். இவ்வாறு ஆளவந்தாரின் ஆசைகளை நிறைவேற்றினார்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் உடையவரிடம் சென்று “தேவரீர் பிற மதங்களை ஜயித்து நம் ஸித்தாந்தத்தை நன்றாக நிலை நிறுத்திவிட்டீர். இனி திவ்ய தேஶங்களுக்கு திக்விஜயம் செய்து மங்களாஶாஸனம் செய்யவும்” என்று ப்ரார்த்தித்தனர். அதை ஆமோதித்த உடையவர் அவர்களுடன் நம்பெருமாளிடம் சென்று யாத்திரைக்கு அனுமதி கேட்டு நின்றார். நம்பெருமாளும் அதற்கு இசைந்தார்.-உடையவரும் பல ஸ்ரீவைஷ்ணவர்களுடன் தன்னுடைய யாத்திரையைத் தொடங்கி, பாரத தேஶத்தில் உள்ள பல திவ்ய தேஶங்களையும் க்ஷேத்ரங்களையும் தரிசித்தார். முதலில் சோழ நாட்டு திவ்ய தேஶங்களில் தொடங்கி, திருக்குடந்தை மற்றும் பல திவ்ய தேஶங்களை மங்களாஶாஸனம் செய்தார். பின்பு திருமாலிருஞ்சோலைக்கும் அதன் அருகில் இருக்கும் கோயில்களுக்கும் சென்று, திருப்புல்லாணியை அடைந்து ஸேது தர்ஶநமும் செய்து, ஆழ்வார்திருநகரி சென்றடைந்தார். அங்கே நம்மாழ்வாருக்கும் பொலிந்து நின்ற பிரானுக்கும் மங்களாஶாஸனம் செய்து நிற்க, நம்மாழ்வார் இவரைக் கண்டு மிகவும் உகந்து அனைத்து மரியாதைகளும் அளித்தார். பின்பு நவ திருப்பதிகளையும் மங்களாஶாஸனம் செய்தார். வழி நெடுகிலும் பிற மத வித்வான்களை ஜயித்து நம் விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலை நிறுத்தினார்.-அவர் அங்கிருந்து திருக்குறுங்குடியை வந்தடைந்தார். நம்பியும் உடையவரை வரவேற்று அர்ச்சகர் மூலம் “நான் எத்தனையோ அவதாரங்கள் செய்தும் ஒரு சில ஶிஷ்யர்களே தேற, நீர் எவ்வாறு இத்தனை ஶிஷ்யர்களை உருவாக்கியுள்ளீர்” என்று கேட்டான். உடையவரோ அதற்கு “கேட்கும் க்ரமத்தில் கேட்டாலே சொல்ல முடியும்” என்றார். நம்பியும் அவருக்கு ஒரு ஆஸனத்தை அளித்து, தான் தன்னிடத்தை விட்டு இரங்கிப்  பணிவுடன் நின்றான். உடையவர் அந்த ஆஸனத்தில் தன் ஆசார்யனான பெரிய நம்பி இருப்பதாகப்  பாவித்து அதன்  அருகில் தான் அமர்ந்து, த்வய மஹா மந்த்ரத்தின் பெருமையை எடுத்துரைத்து, அதனாலேயே இந்த வழியில் பலரை ஈடுபடுத்துவதாக விளக்கினார். நம்பியும் அகமகிழ்ந்து ராமானுஜரை ஆசார்யனாக  ஏற்க, ராமானுஜரும் அவனுக்கு “ஸ்ரீவைஷ்ணவ நம்பி” என்ற திருநாமத்தைச் சாற்றினார்.பின்பு, உடையவர் திருவண்பரிஸாரம், திருவாட்டாறு மற்றும் திருவனந்தபுரம் திவ்ய தேஶங்களுக்குச் சென்றார். திருவனந்தபுரத்தில் ஒரு மடத்தை ஏற்படுத்தி, அங்கிருந்த இதர மத வித்வான்களையும் ஜயித்தார். மற்ற மலை நாட்டு திவ்ய தேசங்களை மங்களாஶாஸனம் செய்து மேற்குக் கடற்கரை மார்க்கமாகச் சென்று உத்தர பாரத தேஶத்தை அடைந்தார். அங்கு மதுரா, சாளக்ராமம், த்வாரகா, அயோத்யா, பத்ரிகாஶ்ரமம், நைமிசாரண்யம், புஷ்கரம் போன்ற ஸ்தலங்களில் மங்களாஶாஸனம் செய்து, கோகுலம், கோவர்தனம், வ்ருந்தாவனம் போன்ற திவ்ய ஸ்தலங்களுக்கும் சென்று, பல இதர மத வித்வான்களை வாதிட்டு வென்றார்.

அங்கிருந்து அவர் காஷ்மீர தேஶத்தை அடைந்து ஸரஸ்வதீ தேவியின் தலைமையில் இருந்த ஸரஸ்வதீ பண்டாரத்தை அடைந்தார். ஸரஸ்வதீ தேவி தானே உடையவரை எதிர் கொண்டு வரவேற்று சாந்தோக்ய உபநிஷத்தில் காணப்படும் “தஸ்ய யதா கப்யாஸம்” ஶ்ருதியின் அர்த்தத்தை விளக்குமாறு வேண்டினாள் (முன்பு இந்த ஶ்லோகமே ராமானுஜருக்கும் யாதவ ப்ரகாஶருக்கும் வேற்றுமை வளரக் காரணமாயிருந்தது). உடையவரும் அதன் அர்த்தத்தை உள்ளபடி எடுத்துரைக்க, அவள் பெரிதும் மகிழ்ந்து, உடையவரின் ப்ரஹ்ம ஸூத்ர உரையான ஸ்ரீபாஷ்யத்தைத் தன் தலை மேல் தாங்கி, அவரைக் கொண்டாடினாள். அவள் உடையவருக்கு “ஸ்ரீ பாஷ்யகாரர்” என்ற விருதத்தை அளித்து ஹயக்ரீவர் விக்ரஹத்தையும் அளித்தாள். உடையவர் அவளிடம் “ஏன் இத்தனை மகிழ்ச்சி?” என்று வினவ, அவளும், முன்பு ஶங்கரர் வந்த பொழுது, இதே ஶ்ருதிக்கு விளக்கம் கேட்ட பொழுது, அவர் சரியாக விளக்காதாதை, இப்பொழுது தேவரீர் விளக்கியதால் தான் ஆனந்தப் படுவதாகக் கூறினாள். இது கண்டு அங்கிருந்த வித்வான்கள் வாதப் போருக்கு வர, அவர்கள் அனைவரையும் வாதில் வென்று, ஸித்தாந்தத்தை நிலை நாட்டினார். இது கண்ட அவ்வூர் ராஜா மிகவும் ஆச்சர்யப்பட்டு, உடையவர் ஶிஷ்யனானான். தோற்ற வித்வான்கள் மிகவும் ஆத்திரப்பட்டு, ஸூந்யம் வைத்து உடையவரைக் கொல்ல முயல, அது அவர்களையே கெடுக்கத் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்தனர். ராஜா உடையவரிடம் அவர்களைக் காக்குமாறு ப்ரார்த்திக்க, அவர்கள் அனைவரும் கோபம் தணிந்து, பின்பு உடையவர் ஶிஷ்யர்களாகவும் ஆயினர்.

பின்பு, புருஷோத்தம க்ஷேத்ரத்தை (ஜகந்நாத புரியின் இருப்பிடம்) அடைந்து, ஜகந்நாதனுக்கு மங்களாஶாஸனம் செய்தார். மாயாவாதிகளை ஜயித்து, ஒரு மடத்தையும் நிறுவினார். அங்கிருந்து ஸ்ரீ கூர்மம், ஸிம்ஹாத்ரி, அஹோபிலம் திவ்ய தேஶங்களுக்குச் சென்ரார்.-இறுதியாக அவர் திருவேங்கடத்தை அடைந்தார். அச்சமயத்தில் ஒரு சில ஶைவர்கள் திருவேங்கடமுடையான் (ஸ்ரீனிவாஸன் எம்பெருமான்) ருத்ரன் என்று சொல்லிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது உடையவர் “நீங்கள் உங்கள் தேவதையின் ஆயுதங்களை வைத்துச் செல்லுங்கள், நாமும் நம் தேவதையின் ஆயுதங்களான சங்கு மற்றும் சக்கரத்தை வைத்துச் செல்லுவோம். எந்த தேவதையோ அதன் ஆயுதங்களைத் தானே எடுக்கும். இங்கிருக்கும் தெய்வமே முடிவெடுக்க வேண்டும்” என்று கூறி, அனைவரையும் கர்ப்ப க்ருஹத்தில் இருந்து வெளியேற்றித் திருக்காப்பு சேர்த்தனர்.எம்பெருமான் ஶங்க சக்கரங்களோடு சேவை ஸாதித்தான். அதன் பிறகு உடையவர் மலை இறங்கி அங்கிருந்து தன் யாத்திரையைத் தொடர்ந்தார்.-பிறகு, உடையவர் காஞ்சீபுரம், திருவல்லிக்கேணி, திருநீர்மலை மற்றும் அங்கிருக்கும் பல திவ்ய தேஶங்களுக்குச் சென்று மங்களாஶாஸனம் செய்தார். அவர் அங்கிருந்து புறப்பட்டு மதுராந்தகத்தை அடைந்து தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த பல மாயாவாத வித்வான்களை வாதிட்டு வென்றார். பின்பு திருவஹிந்த்ரபுரம் மற்றும் காட்டுமன்னார்கோயிலுக்கும் சென்றார்.-இவ்வாறு, உடையவர் பல திவ்ய தேஶங்களுக்குச் சென்று தன் யாத்திரையை முடித்துக் கொண்டு ஸ்ரீரங்கம் திரும்பினார். அவர் பெரிய பெருமாளிடம் சென்று அமலனாதிபிரான் ஸேவித்து மங்களாஶாஸனம் செய்ய, பெரிய பெருமாள் அவர் சௌகர்யத்தை விசாரித்தார். உடையவரும் “எங்கிருந்தாலும் தேவரீரையே நினைத்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு என்ன வருத்தம் வந்துவிடும்?” என்றார். அதன் பின்பு ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு, தன் நித்யானுஷ்டானங்களைச் செய்து போனார்.

இச்சமயத்தில், ஸ்ரீரங்கத்தில், மழை காரணமாக கூரத்தாழ்வான் தன்னுடைய உஞ்சவ்ருத்திக்குச் செல்ல முடியவில்லை. தன்னுடைய மாலை அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, ப்ரஸாதம் உட்கொள்ளாமல் இருந்தார். இரவில், நம்பெருமாள் அரவணை அமுது செய்யும் காலத்தை உணர்த்தும் கோயில் மணியோசை கேட்டது. அதைக் கேட்ட ஆழ்வானின் தர்மபத்தினி ஆண்டாள், தன்னுடைய கணவரின் நிலையை நினைந்து மனம் வருந்தி, நம்பெருமாளிடம் “உம்முடைய பக்தர் இங்கே உணவில்லாமல் இருக்க, நீர் மட்டும் நன்றாக அமுது செய்வதென்?” என்று வினவ, அவளின் நிலை உணர்ந்த நம்பெருமாள், தன்னுடைய கைங்கர்யபரர்கள் மூலம் ஆழ்வான் திருமாளிகைக்கு உடனே ப்ரஸாதம் கொடுத்து விடுகிறார். அதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஆழ்வான் ஆண்டாளைப் பார்க்க, அவள் நடந்ததைச் சொன்னாள். எம்பெருமானிடம் இப்படி ப்ரார்த்தித்துப் பெறுவதை ஆழ்வான் விரும்பவில்லை. இருந்தாலும், இரண்டு திரள்களைக் கையில் வாங்கி, தான் சிறிது உண்டு, ஆண்டாளுக்கும் அந்தப் ப்ரஸாதத்தைக் கொடுத்தார். இந்த இரண்டு ப்ரஸாதத் திரள்களே ஆண்டாளுக்கு இரண்டு அழகிய குழந்தைகளை அளித்தன. பதினோறு நாட்கள் தீட்டுக் கழிந்து, பன்னிரண்டாம் நாள், எம்பெருமானார் எம்பார் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர்களுடன், ஆழ்வான் திருமாளிகைக்குக் குழந்தைகளைக் கடாக்ஷிக்க ஆர்வத்துடன் எழுந்தருளினார். எம்பெருமானார் எம்பாரைக் குழந்தைகளைத் தன்னிடம் கொண்டு வருமாறு கூற, எம்பார் பட்டரைத் தன் கையில் கொண்டு வருகிறார். அப்பொழுது எம்பெருமானார் எம்பாரிடம் “இந்தக் குழந்தையிடம் தேஜஸ் நன்றாக விளங்குகிறது, ஒரு அழகிய பரிமளமும் தெரிகிறது. என்ன செய்தீர்?” என்ன, எம்பாரும் “த்வய மந்த்ரத்தை ரக்ஷையாக ஓதினேன்” என்றார். எம்பெருமானார் எம்பாரிடம் “என்னை முந்திக் கொண்டு விட்டீரே, சரி நீரே இக்குழந்தைக்கு ஆசார்யனாக இரும்” என்றார்.   எம்பெருமானார் அக்குழந்தைக்குப் பராஶர முனியின் நினைவாக “பராஶர பட்டர்” என்று பெயரிட்டு, ஆளவந்தாரிடம் செய்த இரண்டாவது ஶபதத்தை நிறைவேற்றினார். பின்பு, இவர் தலைமையில் எம்பார் அக்குழந்தைக்குச் ஸமாஶ்ரயணம் செய்தார். பின்பு, எம்பெருமானார் ஆழ்வானிடம் அக்குழந்தையை பெரிய பெருமாள் மற்றும் பெரிய பிராட்டிக்கு தத்துக் கொடுக்கச் சொல்ல, ஆழ்வானும் அவ்வாறே செய்தார். பட்டர் சிறு குழந்தையாக இருந்தபோது, பெரிய பிராட்டியாரே அவருக்குத் தாலாட்டுப் பாடி வளர்த்தார். மேலும் பெரிய பெருமாள் முன்பு போகம் வைக்கப் பட்டால், பட்டர் தவழ்ந்து சென்று அதிலிருந்து உண்டபின்னேயே எம்பெருமான் அதை ஆனந்தத்துடன் அமுது செய்வான். இவ்வாறு பட்டர் சிறு வயதிலேயே சிறந்த பண்டிதராக விளங்கி, எம்பெருமானார் மற்றும் எம்பாருக்குப் பின்பு ஸம்ப்ரதாயத் தலைவர் ஆனார்.

எம்பாரின் பூர்வாஶ்ரமத் தம்பியான சிறிய கோவிந்தப் பெருமாளின் தர்மபத்தினி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க, நம்மாழ்வாரின் நினைவாக, அக்குழந்தைக்கு “ஸ்ரீ பராங்குஶ நம்பி” என்று திருநாமமிட்டு, ஆளவந்தாரின் மூன்றாவது குறையையும் போக்கினார்.-முதலியாண்டான் எம்பெருமானாரிடம் மிகுந்த ஈடுபாட்டுடனும் எம்பெருமானாரும் அவரிடம் பேரன்புடனும் இருந்தார். ஒரு முறை எம்பெருமானார் பெரிய நம்பி திருக்குமாரத்தி அத்துழாய்க்கு வேலையாளாகச் செல்லும்படி ஆணையிட, உகந்து அவ்வாணையை ஏற்றார் ஆண்டான்.-ஆளவந்தாரின் சிறந்த ஶிஷ்யரான மாறனேர் நம்பியின் இறுதிச் சடங்குகளைப் பெரிய நம்பி செய்ய, உள்ளூர் ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிய நம்பி ப்ராஹ்மணராகையாலும் மாறனேர் நம்பி பஞ்சமராகையாலும், அச்செயலை ஏற்கவில்லை. எம்பெருமானார் பெரிய நம்பியை வரவழைத்து விளக்கம் கேட்க, அவரும் மாறனேர் நம்பியின் பெருமையை எடுத்துரைத்துத் தன் செயல் சரியே என்பதை உணர்த்தினார். அதைக் கேட்டு மகிழ்ந்த எம்பெருமானார், பெரிய நம்பியின் செயல் சரி என்பது தெரிந்தும், அவரிடமே அதற்கு விளக்கம் அறிய விரும்பியதை மற்றவர்களுக்கு உணர்த்தினார்.

இவ்வாறு அனைவரும் ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானாரின் வாக்குப்படி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வர, கொடியவனான சோழ ராஜா சைவ மதத்தில் ஈடுபட்டு, சிவனைப் பரதெய்வமாக நிலை நாட்ட விரும்பினான். அவன் அனைத்து வித்வான்களையும் வரவழைத்து சிவ பரத்வத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஆணையிட்டான். அச்சபையில் இருந்த ஆழ்வானின் ஶிஷ்யனான நாலூரான் “பலர் ஏற்று என்ன பயன்? எம்பெருமானாரும் ஆழ்வானும் ஏற்றுக் கொண்டாலே அது உண்மையாக நிலைநிற்கும்” என்று கூற, அதை கேட்ட ராஜா தன் சேவகர்களை ராமானுஜரின் மடத்துக்கு அனுப்பி அவரை அழைத்து வரக் கூறினான். அச்சமயம் எம்பெருமானார் தீர்த்தமாடச் சென்றிருக்க, அங்கிருந்த ஆழ்வான், ராஜாவின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு, தானே எம்பெருமானாரின் த்ரிதண்ட காஷாயங்களை சாற்றிக் கொண்டு, ராஜாவின் சேவகர்களுடன் சென்றார். மடத்துக்குத் திரும்பிய எம்பெருமானார் இவ்விஷயம் கேள்விப்பட்டு, ஆபத்தை உணர்ந்து, ஆழ்வானின் வெள்ளை ஆடைகளை அணிந்து கொண்டு, தன்னுடைய ஶிஷ்யர்களுடன் ஸ்ரீரங்கத்தை விட்டுச் சென்றார். இதை அறிந்த சில சேவகர்கள் அவர்களைத் தொடர்ந்து செல்ல, எம்பெருமானார் மணலைக் கையில் எடுத்து மந்திரித்துத் தன் ஶிஷ்யர்களிடம் கொடுக்க, அவர்கள் அதை வழியில் தூவிச் சென்றனர். அந்த மணலை மிதித்த சேவகர்கள் கடும் வலிக்கு உள்ளாகி, அவர்கள் பின்வாங்கிச் சென்றனர்.எம்பெருமானார் மேற்கே பாதுகாப்பான இடமாகக் கருதப் பட்ட திருநாராயணபுரத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார். காட்டு வழியில், அவரின் ஶிஷ்யரான நல்லான் சக்ரவர்த்தியால் திருத்தப்பட்ட சில வேடர்களைச் சந்தித்தார். ஆறு நாட்கள் தொடர்ந்து நடந்ததால் மிகவும் களைப்புற்றிருந்ததால் மிகவும் பசியுடன் இருந்த ஸ்ரீவைஷ்ணவர்களை அவ்வேடர்கள் வரவேற்று, எம்பெருமானாரின் க்ஷேமத்தை வினவினர். எம்பெருமானாரை ஸ்ரீவைஷ்ணவர்கள் வேடர்களுக்குக் காட்டிக் கொடுக்க, அவ்வேடர்கள் மிகவும் ஆநந்தப்பட்டு, தேனும் தினை மாவும் ஸமர்ப்பிக்க, எம்பெருமானார் தவிர மற்ற அனைவரும் அதை ஏற்று உண்டனர். வேடர்கள் அருகில் இருந்த க்ராமத்தில் சென்று அவர்களை ஒரு ப்ராஹ்மண இல்லத்தில் விட்டு, சமைப்பதற்குத் தேவையான பதார்த்தங்களையும் கொடுத்தனர்.

அந்த இல்லத்தில் ப்ராஹ்மணரின் (கொங்கிலாச்சான்) தர்ம பத்தினி, எல்லோரையும் வணங்கி, தான் தயார் செய்யும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறார். ஸ்ரீவைஷ்ணவர்களோ, தாங்கள் எல்லோரிடமும் உணவு ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுக்க, அவளும் உடனே தானும் எம்பெருமானாரின் ஶிஷ்யை என்றும், ஸ்ரீரங்கத்தில் சில காலம் முன்பு வசித்த போது எம்பெருமானார் தன்னைச் ஶிஷ்யையாக ஏற்றுக் கொண்டதாகவும் கூறினாள். அவள் கூறியது – முன்பு ஒரு காலத்தில், நன் ஸ்ரீரங்கத்தில் இருந்த போது, ராஜாக்களும் மந்திரிகளும் எம்பெருமானாரிடம் வந்து ஆசி வாங்கிச் செல்வர். ஆனல் அவரோ தினமும் பிக்ஷைக்கு வருவார். ஒரு நாள் அவரிடம் “ஏன் இந்த நிலை?” என்று கேட்க அவரும் “நான் அவர்களுக்கு பகவானைப் பற்றிய விஷயங்களை உணர்த்துவதால் அவர்கள் என்னிடம் வருகின்றனர்” என்றார்.நான் அவரிடம் எனக்கும் அதே விஷயங்களை உபதேசிக்குமாறு கேட்க, அவர் என்னைத் தன் ஶிஷ்யையாக ஏற்றுக் கொண்டு உபதேசித்தார். நாங்கள் எங்கள் ஊருக்குத் திரும்பும் காலத்தில் அவர் ஆசிகளைக் கேட்க, அவரும் தன் திருப்பாதுகைகளை எனக்கு அளித்தார். பின்பு நாங்கள் இங்கே வந்து விட்டோம். இதைக் கேட்ட எம்பெருமானார் தான் யார் என்பதை கூறாமல், ஸ்ரீவைஷ்ணவர்களை அவள் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளுமாறு கூறினார். அதற்கு முன், ஒரு ஸ்ரீவைஷ்ணவரை அவள் செய்வதைப் பார்க்குமாறு கூறினார். அவள் தளிகை சமைத்து முடித்து, தன் பூஜை அறைக்குச் சென்று, அங்கிருந்த ஸன்னிதிக்கு முன்பு இருந்து த்யானித்தாள். அந்த ஸ்ரீவைஷ்ணவர் ஒரு விக்ரஹம் போன்று இருந்த ஒரு வஸ்து இருப்பதைக் கண்டார். அவர் எம்பெருமானாரிடம் அவர் கண்டதைக் கூறினார். எம்பெருமானார் அவளிடம் “நீ உள்ளே என்ன செய்தாய்” என்று கேட்க அவள் “எம்பெருமானார் அளித்த திருப்பாதுகைகளை வணங்கி உணவை அவற்றுக்கு நைவேத்யம் செய்தேன்” என்றாள்.அவர் அவளிடம் அவற்றை வெளியே எடுத்து வரச் சொல்ல அவளும் அவ்வாறே செய்தாள். அவர் அது தன்னுடையது என்பதை உடனே உணர்ந்து கொண்டார். அவளிடம் “இங்கு எம்பெருமானார் இருப்பது உனக்குத் தெரிகிறதா” என்று கேட்க, அவளும் விளக்கை ஏற்றிக் கொண்டு வந்து எல்லோருடைய திருவடிகளையும் கண்டாள். எம்பெருமானாரின் திருவடிகளைக் கண்டு ஆநந்தத்துடன் “இவை எம்பெருமானாரின் திருவடிகள் போல உள்ளன, ஆனால் நீரோ வெள்ளை சாற்றிக் கொண்டிருப்பதால், என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை” என்றாள். எம்பெருமானார் தான் யார் என்பதை அவளுக்கு உணர்த்தி, அவளுக்குத் தான் செய்த உபதேசங்களைக் கூறுமாறு கூறினார். அவளும் அவற்றை மகிழ்ச்சியுடன் சொல்ல, எம்பெருமானார் அனைவரையும் ப்ரஸாதம் எடுத்துக் கொள்ளுமாறு ஆணையிட்டார். ஒரு பகவத் விக்ரஹத்துக்கு நைவேத்யம் செய்யப்படாததால் தான் அந்த ப்ரஸாதத்தை எடுத்துக் கொள்ளவில்லை. பின்பு அவள் பழங்கள், பால் மற்றும் சர்க்கரையை அவரிடம் ஸமர்ப்பிக்க அவரும் தன் பெருமாளுக்கு அவற்றைப் படைத்து, பின்பு தானும் ஏற்றுக் கொண்டார். ஸ்ரீவைஷ்ணவர்களின் ஶேஷப்ரஸாதத்தைத் தன் கணவருக்குக் கொடுத்துத் தான் மட்டும் உண்ணாமல் இருக்கிறாள். அதைக் கண்டு ஏன் என்று அவர் வினவ, “நீர் முன்பு எம்பெருமானாரை ஆசார்யனாக ஏற்கவில்லை. இன்று அவரே நம் இல்லம் தேடி வந்துள்ளார். நீர் அவரை ஆசார்யனாக ஏற்பேன் என்று சம்மதித்தால் மட்டுமே நான் உண்பேன்” என்ன அவரும் அதை ஏற்க, அவளும் ப்ரஸாதத்தை எடுத்துக் கொள்கிறாள். காலையில், அவர் எம்பெருமானாரிடம் சென்று சரணடைய எம்பெருமானாரும் அவருக்கு உபதேசங்கள் செய்து அவரைச் ஶிஷ்யராக ஏற்கிறார். பின்பு, எம்பெருமானார் காஷாய த்ரிதண்டத்தைச் ஸம்பாதித்து, சில நாட்கள் அங்கேயே இருந்து, மீண்டும் மேற்கு நோக்கிச் செல்லத் தொடங்கினார்.

அங்கிருந்து பௌத்த ஜைனர்கள் நிறைந்த ஸாளக்ராமம் வந்தடைந்தார். அவர்கள் இவரை கணிசியாமல் இருக்க, முதலியாண்டானை அவரின் திருவடிகளை ஊரில் உள்ள கேணியில் விளக்கச் சொல்ல, அவரும் அப்படியே செய்ய, புனிதமான அந்த தீர்த்தத்தை உட்கொண்ட அனைவரும் எம்பெருமானாரிடம் ஈடுபாடு கொண்டனர். அதே ஸமயத்தில் அந்த ஊரில் இருந்த வடுக நம்பி எம்பெருமானாரை எல்லாமாக ஏற்றுக் கொண்டு, ஆசார்ய பக்திக்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்கினார். எம்பெருமானார் அங்கிருந்து தொண்டனூர் சென்றடைந்து, விடல தேவ ராயன் என்கிற ராஜாவின் பேய் பிடித்த மகளை குணமாக்குகிறார். ராஜாவும் அவனின் குடும்பமும் எம்பெருமானார் ஶிஷ்யர்களாக, எம்பெருமானார் அந்த ராஜாவுக்கு விஷ்ணு வர்தந ராயன் என்று பெயரிடுகிறார். இதைக் கேள்விப்பட்ட 12000 ஜைன வித்வான்கள் எம்பெருமானாரிடம் வாதிட வர, எம்பெருமானார் தனக்கும் அவர்களுக்கும் நடுவே திரையிட்டு தான் திரைக்குப் பின்னிருந்து ஒரே சமயத்தில் அவர்கள் அனைவரிடமும் வாதிடுகிறார். திரைக்குப் பின்னால், தன்னுடை நிஜ ரூபமான ஆயிரம் தலை கொண்ட ஆதிஶேஷ வடிவை எடுத்துக் கொண்டு அவர்கள் அனைவரின் கேள்விகளுக்கும் ஒரே ஸமயத்தில் விடை கொடுக்கிறார். அவரிடம் தோற்ற பலரும் அவரின் ஶிஷ்யர்களாக தன்னுடைய மேன்மையை அவர்களுக்கு வெளியிடுகிறார். ராஜாவும் எம்பெருமானாரைக் கொண்டாடுகிறான்.-இவ்வாறு தொண்டனூரில் வாழ்ந்து வந்த காலத்தில், அவரிடம் இருந்த திருமண் முடிந்து போக, அவர் வருத்தமுடன் இருந்தார். திருநாராயணபுரத்து எம்பெருமான் அவர் கனவில் வந்து “நாம் உமக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கிறோம், திருமண்ணும் இங்கேயே உள்ளது” என்று கூற, ராஜாவின் உதவியுடன் திருநாராயணபுரம் அடைந்து, திருநாராயணபுரத்து எம்பெருமானைச் சேவிக்க முற்பட, அங்கே கோயில் இல்லாமல் இருப்பது கண்டு மிகவும் வருத்தமுற்றார். பின்பு திருமேனி சோர்வுற்று சிறிது கண்ணயர, கனவில் எம்பெருமான் தான் இருக்கும் இடைத்தைக் காட்டிக் கொடுக்க, எம்பெருமானார் எம்பெருமானை பூமியில் இருந்து வெளிக்கொணர்ந்தார். நம்மாழ்வார் பேரன்புடன் திருநாரணனைக் கொண்டாடியதால் திருவாய்மொழியில் “ஒரு நாயகமாய்” பதிகத்தை இந்த எம்பெருமானுக்கு என்று எம்பெருமானார் ஆக்கினார். திருமண் கிடைக்கப் பெற்று, பன்னிரு திருநாமங்கள் சாற்றிக்கொண்டார். பின்பு, ஊரைத் திருத்தி, கோயிலைப் புனர் நிர்மாணம் செய்து பல கைங்கர்யபரர்களையும் நியமித்தார்.-உத்ஸவ விக்ரஹம் இல்லாததால் உத்ஸவங்கள் கொண்டாட முடியாத நிலை இருந்தது. இது கண்டு வருத்தமுற்ற எம்பெருமானாரின் கனவில் மீண்டும் எம்பெருமான் தோன்றி, ராம ப்ரியன் என்கிற உத்ஸவர் தற்பொழுது தில்லி பாதுஷாவின் அரண்மனையில் இருப்பதைக் காட்டிக்கொடுக்க, எம்பெருமானாரும் தில்லி சென்று, ராஜாவிடம் இவ்விஷயத்தைக் கூற, ராஜாவும் தன் மகளின் அந்தப்புரத்துக்கு எம்பெருமானாரை அழைத்துச் சென்று காண்பித்தான். அந்தப்புரத்தில் ராமப்ரியன் விக்ரஹத்தை அதீத ப்ரீதியுடன் ராஜாவின் குமாரத்தி பேணிக்கொண்டிருந்தாள். எம்பெருமானார் அந்த விக்ரஹத்தைக் கண்டவுடன் மிகவும் ஆனந்தித்து “செல்லப்பிள்ளை இங்கே வாராய்” என்று கூற, எம்பெருமானும் உடனே துள்ளிக் குதித்து எம்பெருமானார் மடியில் வந்தமர்ந்தான். இதைக் கண்டு ஆச்சர்யமடைந்த ராஜா எம்பெருமானுக்கு பல திருவாபரணங்களைச் சமர்ப்பித்து எம்பெருமானாருடன் அனுப்பி வைத்தான். ராஜாவின் குமாரத்தியோ ராமப்ரியன் பிரிவு தாங்காமல் எம்பெருமானார் கோஷ்டியைத் தொடர்ந்து வர, திருநாராயணபுரத்து எல்லையில், எம்பெருமான் அவளைத் தன்னுள் (ஆண்டாளைச் செய்தது போல) அந்தர்கதம் ஆக்கிக்கொண்டான். எம்பெருமானாரும் அவளைத் துலுக்க நாச்சியார் என்று பெயரிட்டு எம்பெருமான் திருவடியிலேயே ப்ரதிஷ்டை செய்தார். பின்னர், உத்ஸவரை ஸந்நிதியில் புனர் ப்ரதிஷ்டை செய்து அனேக உத்ஸவங்களை நடத்திப் போனார்.

இவ்வாறு பன்னிரண்டு ஆண்டு காலம் திருநாராயணபுரத்தில் இருந்து கொண்டு பல கைங்கர்யங்கள் செய்தும் பல ஸ்ரீவைஷ்ணவர்களை உருவாக்கியும் தன் காலத்தை ஸம்ப்ரதாயத்தை வளர்ப்பதற்கு ஏற்றவாறு கழித்தார். ஸ்ரீரங்கத்திலிருந்து மாருதி சிறியாண்டான் மூலமாக ஶைவ ராஜா மாண்டான் என்ற செய்தி கேட்டு மிகவும் ஆனந்தித்து ஸ்ரீரங்கம் புறப்பட முற்பட்டார். அங்கிருந்த அவரின் ஶிஷ்யர்கள் இவ்விஷயம் கேட்டு எம்பெருமானாரைப் பிரிந்து எப்படி இருக்க முடியும் என்ற கவலைக்கடலில் மூழ்கினர். எம்பெருமானார் அவர்களைத் தேற்றி, அவர்கள் விருப்பத்துக்கு இணங்க தனக்கு ஒரு திருமேனியை ஏற்படுத்த ஒப்புக் கொண்டார். இத்திருமேனியே “தமருகந்த திருமேனி” என்று ப்ரஸித்தமாகக் கொண்டாடப்படுகிறது. பின்பு அங்கிருந்து புறப்பட்டு பயண கதியில் ஸ்ரீரங்கம் வந்தடைந்து பெரிய பெருமாளுக்கும் பெரிய பிராட்டிக்கும் மங்களாஶாஸனம் செய்துகொண்டு நம் ஸம்ப்ரதாயத்தையும் செவ்வனே வளர்த்துக் கொண்டு வாழ்ந்தார்.ஸ்ரீரங்கம் எழுந்தருளிய உடையவர் பெரிய பெருமாளை மங்களாஶாஸனம் செய்து, ஸன்னிதி ப்ரதக்ஷிணம் செய்து புத்துணர்வு பெற்று, தன்னுடைய ஶிஷ்யர்களுடன் கூரத்தாழ்வான் திருமாளிகைக்குச் சென்றார். ஆழ்வான் பக்திப் பெருக்குடன் உடையவர் திருவடிகளில் விழுந்து அவர் திருவடிகளைப் பற்றிக் கொண்டு கிடக்க, உடையவர் அவரை ஆதரத்துடன் எடுத்து அணைத்துக் கொண்டு, ஆழ்வானின் கண்ணில்லாத கோலத்தைக் கண்டு மாளாத துன்பத்துடன் பேசாதிருந்தார். பின்பு கண்ணீருடன் தழுதழுத்த குரலில் ஆழ்வானிடம் “நம்முடைய தரிஶனத்துக்காக (ஸம்ப்ரதாயத்துக்காக) உம்முடைய தரிஶனத்தையே (கண்களையே) இழந்தீரே” என்று கூற, ஆழ்வானும் “இது என்னுடைய அபசாரத்தினாலேயே நடந்தது” என்று கூறினார். உடையவர் “அன்று! நீர் அபசாரப்படுவீரோ? இது என்னுடைய அபசாரமாகவே இருக்க வேண்டும்” என்று தேற்றினார். ஒருவாறு எல்லோரும் தேறி நிற்க, உடையவர் தன்னுடைய மடத்துக்குத் திரும்புகிறார்.

இச்சமயத்தில், சில ஸ்ரீவைஷ்ணவர்கள் உடையவரிடம் (தற்பொழுது சிதம்பரம் என்று அழைக்கப்படும்) திருச்சித்ரகூடம் ஶைவ ஸமயத்தைச் சேர்ந்த தீயவர்களால் அழிக்கப்பட்டது என்று கூறினர். உடையவரும், அந்த திவ்ய தேசத்து எம்பெருமானின் உத்ஸவ விக்ரஹம் திருப்பதிக்குப் பாதுகாப்பாக எழுந்தருளுப்பட்டது என்று அறிந்து உடனே திருப்பதி நோக்கி விரைந்தார். அங்கே திருச்சித்ரகூடத்தில் இருந்தது போன்றே ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு புதிதாக ஒரு மூல மூர்த்தியை ப்ரதிஷ்டை செய்வித்தார் (தற்காலத்தில் கீழ் திருப்பதியில் நாம் ஸேவிக்கும் கோவிந்தராஜப் பெருமாள் இவரே). பின்பு உடையவர் திருமலை மேல் சென்று திருவேங்கடமுடையானுக்கு மங்களாஶாஸனம் செய்து, அங்கிருந்து காஞ்சீபுரம் சென்று தேவப் பெருமாளுக்கு மங்களாஶாஸனம் செய்து, ஸ்ரீரங்கம் வந்தடைந்து தொடர்ந்து ஸம்ப்ரதாயத்தை வளர்த்து வந்தார்.

பின்பு, உடையவர் ஆழ்வானை அழைத்து “தேவப் பெருமாளைப் ஸ்தோத்ரம் செய்தால் அவர் வேண்டியது அருள்வார் என்று கூறி”, அவரை ஸ்தோத்ரம் செய்து அவருடைய கண் பார்வை திரும்பப் பெறப் ப்ரார்த்திக்குமாறு ஆணையிடுகிறார். ஆழ்வான் முதலில் தயங்கினாலும், உடையவரின் ஆணையை மீற முடியாமல் ஏற்றுக் கொண்டு, ஶ்ரீவரதராஜ ஸ்தவத்தை அருளிச்செய்து, அதன் இறுதியில் தன் உட்கண்களால் எம்பெருமானைக் காணும்படி ஆக வேண்டும் என்று ப்ரார்த்திக்க எம்பெருமானும் ஆனந்தத்துடன் அதை நிறைவேற்ற, இதை ஆழ்வான் உடையவரிடம் எடுத்துரைத்தார். அதைக் கேட்டு த்ருப்தி அடையாத உடையவர் ஆழ்வானையும் அழைத்துக் கொண்டு காஞ்சீபுரம் வந்தடைந்து, தேவப் பெருமாள் திருமுன்பே ஆழ்வானை ஶ்ரீவரதராஜ ஸ்த்வம் ஸேவிக்குமாறு கூறுகிறார். அவ்வாறு ஸேவித்துக் கொண்டு இருக்கும் பொழுது வேறு காரியமாக வெளியே செல்ல, ஆழ்வான் ஸ்த்வத்தைச் ஸேவித்து முடிக்கிறார். தேவப் பெருமாளும் ஆழ்வானுக்கு என்ன வேண்டும் என்று கேட்க, ஆழ்வானும் “நாம் பெற்ற பலன் நாலூரானும் பெற வேண்டும்” என்று கேட்க தேவப் பெருமாளும் அதை ஏற்றுக்கொள்கிறார். அங்கே மீண்டும் எழுந்தருளிய உடையவர் நடந்த விஷயம் கேட்டுப் பெருமாளையும் ஆழ்வானையும் வெறுத்து, தன்னுடைய ஆசையை நிறைவேற்றாததற்காகக் கடிந்து கொண்டார். தேவப் பெருமாள் உடனே ஆழ்வானுக்குப் பெருமாளும் உடையவரும் தெரியும்படி அருளினார். அவ்வாறு அருளப்பட்ட ஆழ்வான், தேவப் பெருமாளின் அழகை அனுபவித்து உடையவரிடம் விண்ணப்பிக்க, உடையவரும் த்ருப்தி அடைந்தார்.

ஒருமுறை உடையவர் நாச்சியார் திருமொழிக்குப் பொருள் விளக்கிக் கொண்டிருக்க, “நாறு நறும் பொழில்” பாசுரம் வர, அதில் ஆண்டாள் திருமாலிருஞ்சோலை அழகர் எம்பெருமானுக்கு நூறு தடா அக்கார அடிசிலும் நூறு தடா வெண்ணெயும் ஸமர்ப்பிக்க ஆசைப் படுவது கண்டு, உடனே புறப்பட்டு திருமாலிருஞ்சோலை வந்தடைந்து, எம்பெருமானுக்கு ஆண்டாள் விருப்பப்படி அக்கார அடிசிலும் வெண்ணெயும் ஸமர்ப்பித்தார். அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்து ஆண்டாள் ரங்கமன்னாருக்கு மங்களாஶாஸனம் செய்தார். ஒரு அண்ணன் தன் தங்கைக்குப் பரிவுடன் செய்வது போன்ற உடையவரின் இந்தச் செயலால் மிகவும் மகிழ்வுற்ற ஆண்டாள், உடையவரை “நம் கோயில் அண்ணர்” (ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அண்ணன்) என்று அழைத்தார். அங்கிருந்து புறப்பட்டு ஆழ்வார்திருநகரி சென்றடைந்து ஆழ்வார் மற்றும் ஆதிநாதருக்கு மங்களாஶாஸனம், பின்பு ஸ்ரீரங்கம் வந்தடைந்து தன்னுடைய காலக்ஷேபத்தைத் தொடர்ந்தார்.அவருக்குப் பல ஶிஷ்யர்கள் இருந்தனர். மேலும் அவர் 74 ஸிம்ஹாஸனாதிபதிகளையும் ஆசார்யர்களாக நம் ஸம்ப்ரதாய வளர்ச்சிக்காகவும், கொள்கைகளை அனைவருக்கும் எடுத்துரைக்கவும், நியமித்தார். இந்தச் சமயத்தில், பல ஸ்ரீவைஷ்ணவர்கள் உடையவருக்குக் கைங்கர்யம் செய்து வந்தனர்.

கூரத்தாழ்வான், முதலியாண்டான், நடாதூர் ஆழ்வான், பட்டர் போன்றோர் ஸ்ரீபாஷ்யத்தை ப்ரசாரம் செய்ய உதவினர்.–அருளாளப் பெருமாள் எம்பெருமானார், எம்பெருமானாரின் எம்பெருமான்களுக்குத் திருவாராதனம் செய்து வந்தார்.-கிடாம்பிப் பெருமாளும் கிடாம்பி ஆச்சானும் திருமடைப்பள்ளியை நிர்வஹித்தனர்.-வடுக நம்பி உடையவருக்கு எண்ணெய்க்காப்பு ஸமர்ப்பிக்கும் கைங்கர்யம் செய்தார்.-கோமடத்துச் சிறியாழ்வான் கலசப் பானையும் திருவடிஜோடுகளையும் எடுப்பார்.-பிள்ளை உறங்கா வில்லி தாஸர் கருவூலத்தை நோக்கினார்.-அம்மங்கி பால் காய்ச்சுவார்; உக்கலாழ்வான் ப்ரஸாதம் எடுப்பார்.-உக்கலம்மாள் திருவாலவட்டக் கைங்கர்யம் செய்வார்.-மாருதிப் பெரியாண்டான் உடையவரின் திருக்கைச் செம்பு பிடிப்பார்.-மாருதிச் சிறியாண்டான் மடத்துக்குத் தேவையான மளிகை, காய்கறிகள் ஏற்பாடு செய்வார்.-தூய முனி வேழம் தீர்த்த கைங்கர்யம் செய்வார்.-திருவரங்கமாளிகையார் ஶ்ரீபண்டாரம் நிர்வஹிப்பார்.-பிள்ளை உறங்கா வில்லி தாஸரின் மருமக்களான வண்டரும் செண்டரும் ராஜ சேவை செய்து ஆயிரம் பொன் சம்பாதித்து மடத்துக்குச் சமர்ப்பிப்பர்.-இராமானுஜ வேளைக்காரர் உடையவருக்கு மெய்க்காவலாக இருப்பார்.-அகளங்க நாட்டாழ்வான் பிற மத வித்வான்களுடன் தர்க்கிப்பார்.-

உடையவரின் பெருமை பெரிய பெருமாள், திருவேங்கடமுடையான், பேரருளாளன், திருநாராயணப் பெருமாள், அழகர், திருக்குறுங்குடி நம்பி, நம்மாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், ஆளவந்தார், பெரிய நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமலை நம்பி, திருமாலை ஆண்டான், ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர், உடையவருடைய பல  ஶிஷ்யர்கள், ப்ரஹ்ம ராக்ஷஸு மற்றும் ஊமை முதலானோர்களால் வெளியிடப்பட்டது.-பெரிய பெருமாள் (ஸ்ரீரங்கம்) தன்னுடைய நித்ய விபூதியையும் லீலா விபுதியையும் உடையவருக்கு அளித்து உடையவரின் ஸம்பந்திகளுக்கும் அவற்றை அவர் இஷ்டப்படி வினியோகம் செய்யும்படி அருளினார்.-திருவேங்கடமுடையான் (திருமலா திருப்பதி)பெரிய பெருமள் எம்பெருமானாருக்கு அளித்த “உடையவர்” என்ற விருதை அங்கீகரித்தார். மேலும் அவர் உடையவரின் விருப்பத்தின் பேரில், தும்பையூர்க் கொண்டி என்னும் தயிர்க்காரிக்கு மோக்ஷம் அளித்தார்.-பேரருளாளன் (காஞ்சீபுரம்) உடையவர் யஞ்ய மூர்த்தியை வாதத்தில் ஜயிப்பதற்கு உதவினார். மேலும் முன்பு வேறு ஸித்தாந்த்தத்தைச் சேர்ந்திருந்து சிறு வயதில் உடையவருக்கு ஸாமான்ய ஶாஸ்த்ரம் கற்றுக் கொடுத்த யாதவ ப்ரகாஶனை உடையவருக்கு ஶிஷ்யராகி அவரிடமே ஸந்யாஸாஶ்ரமம் ஏற்றுக் கொள்ளச் சொன்னார்.-திருநாராயணன் (மேலக்கோட்டை) உடையவரைக் கொண்டு தன்னுடைய திவ்ய க்ஷேத்ரத்தைப் புனர் நிர்மாணம் செய்யச்செய்து உடையவரின் செல்லப் பிள்ளையாகி, உடையவர் தன்னை எடுத்து அணைக்கும்படி அமைத்துக் கொண்டார்.-அழகர் (திருமாலிருஞ்சோலை) உடையவரின் பெருமையை இரண்டு முறை வெளியிட்டார் – பெரிய நம்பி திருவம்ஶத்தார் உடையவர் உடையாருக்குப் பெருமாள் அருளப்பாடிட்டு அழைக்க, தாங்கள் உடையவருக்கு ஆசார்ய வர்க்கம் என்றெண்ணி ஒதுங்கி நிற்க, அழகர், நீங்களும் உடையவர் உடையார் கோஷ்டியில் சேர்தலே நன்று என்றார். மேலும், கிடாம்பி ஆச்சானிடம் உடையவரின் ஶிஷ்யர்கள் அகதி இல்லை என்று நிர்ணயித்துக் காட்டினார்.-திருக்குறுங்குடி நம்பி உடையவரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டு ப்ரஸித்தமாக ஸ்ரீவைஷ்ணவ நம்பி என்றே அழைக்கப்பட்டார்.-நம்மாழ்வார் ஸம்ஸாரத்தில் துன்பப்படும் ஆத்மாக்களைக் கண்டு வருந்தி பின்பு எம்பெருமானாரின் அவதாரத்தை உணர்ந்து ஆனந்தத்துடன் “பொலிக! பொலிக! பொலிக!” என்று பாடினார்.-ஸ்ரீமந் நாதமுனிகள் “நாம் உபதேசித்தால் சில ஆத்மாக்கள் உஜ்ஜீவனம் அடைவர் ஆனால் எம்பெருமானார் உபதேசித்தால் அனைவரும் உஜ்ஜீவனம் அடைவர், எப்படி வீர நாராயணபுரம் (வீராணம்) ஏரி எல்லோருக்கும் பயன்படுகிறதோ அது போல” என்றார்.-ஆளவந்தார் உடையவரைக் கண்டு “ஆம் முதல்வன்” என்று மொழிந்தார்.-பெரிய நம்பி எம்பெருமானாருக்கு ஆசார்யராக இருந்தும் அவரின் பெருமைகளைக் கண்டு அவருக்கு தண்டன் ஸமர்ப்பித்தார்-திருக்கோஷ்டியூர் நம்பி ஆசை உடையோர்க்கெல்லாம் ரஹஸ்யார்த்தங்களை உபதேஶித்த உடையவரின் பெரும் கருணையைக் கண்டு உடையவருக்கு “எம்பெருமானார்” (எம்பெருமானையும் விடப் பெரியவர்) என்ற விருதை அளித்தார்-திருமாலை ஆண்டான் உடையவருடன் சில கருத்து வேற்றுமைகள் கொண்டிருந்தார். ஆயினும், உடையவரின் பெருமைகளை உணர்ந்தபின் அவரை மிகவும் கொண்டாடி, தன் திருக்குமாரரையும் அவரிடமே ஶிஷ்யாராக ஆக்கினார்-திருவரங்கப் பெருமாள் அரையர் மிகவும் ரஹஸ்யார்த்தமான “ஆசார்ய அபிமானம்” என்பதை உடையவருக்கு உபதேஶித்து, தன் திருக்குமாரரையும் அவரிடமே ஶிஷ்யாராக ஆக்கினார்.-உடையவரின் ஶிஷ்யர்கள் அவரின் திருவடித் தாமரைகளில் மிகுந்த விஶ்வாஸத்துடன் இருந்து, அவற்றையே தங்களுக்கு உபாயமாகவும் உபேயமாகவும் கொண்டிருந்தனர்.-அமுதனார் உடையவர் விஷயமாக இராமானுச நூற்றந்தாதியை ஸமர்ப்பிக்க, அது 4000 திவ்ய ப்ரபந்தத்திலும் சேர்க்கப்பட்டது.-ராஜகுமாரியின் உடம்பில் புகுந்திருந்த ப்ரஹ்ம ராக்ஷஸு யாதவ ப்ரகாஶனைக் கணிசியாமல் எம்பெருமானாரை நித்யஸூரிகளின் தலைவர் என்று காட்டிக் கொடுத்தது.-உடையவரால் அருளப்பட்ட ஒரு ஊமை சில வருடங்கள் காணாமல் போய்த் திரும்பி வந்து “உடையவர் விஷ்வக்ஸேனரே” என்று கூறி மறைந்தார்.-இவ்வாறு பல பெரியோர்கள் உடையவரின் பெருமையை வெளியிட்டனர்.-

ஸ்ரீமந் நாதமுனிகள் தொடக்கமாகப் பல ஆசார்யர்கள் இருக்க உடையவருக்கு என்ன தனிச் சிறப்பு எனில் எம்பெருமான் பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், ஸ்ரீ ராமாவதாரமும் க்ருஷ்ணாவதரமும் அவர்களின் மற்றவர்களுக்குச் சரண் அளித்ததாலும் கீதோபதேஶம் செய்ததாலும் சிறந்ததாகக் கருதப்படுகின்றன-பல திவ்ய தேஶங்கள் இருந்தாலும், கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை (திருப்பதி), பெருமாள் கோயில் (காஞ்சீபுரம்) மற்றும் திருநாராயணபுரம் ஆகியவை ஆசர்யர்களுடன் இருந்த விசேஷ ஸம்பந்தத்தால் சிறந்ததாகக் கருதப்படுகின்றன.-பல ரிஷிகள் இருந்தாலும், வேத வ்யாஸ பகவான், பராஶர பகவான், சௌனக பகவான், ஶுக பகவான், நாரத பகவான் ஆகியோர் அவர்களின் வேத வேதாந்த புராண இதிஹாஸ வெளியீடுகளால் சிறந்தவர்களாக் கருதப்படுகின்றனர்.-பல ஆழ்வார்கள் இருந்தாலும் நம்மாழ்வார் அறிய வேண்டிய அர்த்தங்களையும், ஸித்தாந்த்தையும் தெளிவாக அறிவித்ததால் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறார்.-இதே போல, உடையவர் இங்கே கூறியுள்ள அனைத்து விஷயங்களிலும் பங்கு பெற்றதாலும், நம் ஸித்தாந்தத்துக்கும் ஸம்ப்ரதாயத்துக்கும் சிறந்த அடித்தளம் அமைத்ததாலும் அவற்றின் வளர்ச்சிக்கு வித்திட்டதாலும் மிகவும் கொண்டாடப்படுகிறார்.-

உடையவரின் ஶிஷ்யர்கள் அவர்களின் ஆசார்ய ப்ரதிபத்தியாலும், எம்பெருமானார் நம்மாழ்வாரின் திருவடி நிலைகளாக இருந்ததாலும், ஆழ்வார் “பொலிக பொலிக பொலிக” என்று இவர் திருவவதாரத்தை முன்பே அறிவித்ததாலும் “எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம்” என்றே எப்பொழுதும் இருந்தனர். மேலும், உடையவர் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைக் கொண்டே நம் ஸம்ப்ரதாயத்தை வளர்த்ததால், ஆழ்வாரின் நேர் ஶிஷ்யராகவே கருதப்படுகிறார். ஆளவந்தாரும் இவரும் நேரில் சந்தித்துக் கொண்டதில்லையாயினும், ஆளவந்தாரின் திருவுள்ளக் கருத்தை நன்றாக அறிந்திருந்ததாலும் அவரின் ஆசைகளைத் தாம் பூர்த்தி செய்ததாலும், ஆளவந்தாருக்கும் நேர் ஶிஷ்யராகவே கருதப்படுகிறார்.உடையவர் ஸ்ரீராமாயணத்தில் வரும் விபீஷண ஶரணாகதி சரித்ரத்தைக் கொண்டு ஶரணாகதி தத்துவத்தை விளக்கிக் கொண்டிருந்த பொழுது, பிள்ளை உறங்கா வில்லி தாஸர் மிகவும் உள்ளம் கலங்கினார். அதைக் கண்ட உடையவர் தாஸரை “ஏன் வருந்துகிறீர்” என்று கேட்க தாஸரும் “அனைத்தையும் விட்டு ஸ்ரீ ராமனே ஶரணம் என்று வந்த விபீஷணனையே இவ்வளவு காக்க வைத்தால் நம் நிலை என்ன? நமக்கு மோக்ஷம் கிடைக்குமா?” என்று வினவினார். இதை கேட்ட உடையவர் தாஸரிடம் “கேளீர் பிள்ளாய்! எனக்கு மோக்ஷம் கிடைத்தால், உமக்கும் கிடைக்கும்; பெரிய நம்பிக்குக் கிடைத்தால், எனக்குக் கிடைக்கும்; ஆளவந்தாருக்குக் கிடைத்தால் பெரிய நம்பிக்குக் கிடைக்கும் …. இவ்வாறு நம்மாழ்வார் வரை சென்றால் அவர் திருவாய்மொழியின் இறுதியில் தான் மோக்ஷம் பெற்றதாக அறிவித்துள்ளதால், உமக்கும் கட்டாயம் கிடைக்கும்” என்று கூறி அவரைத் தேற்றினார்.

ராமானுச நூற்றந்தாதி ப்ரபந்தம் மூலம் அமுதனார் எம்பெருமானாரே மோக்ஷத்துக்கு உபாயம் என்றும் அவருக்கும் அவர் அடியவர்களுக்கும் சேவை செய்வதே நம் குறிக்கோள் என்றும் நிர்ணயித்துள்ளார்.-முதலியாண்டானின் திருக்குமாரர் கந்தாடையாண்டான் இப்படிப்பட்ட எம்பெருமானாரிடம் அவரின் ஒரு விக்ரஹத்தைப் நிர்மாணித்து அதை ஸ்ரீபெரும்பூதூரில் ப்ரதிஷ்டை செய்து அனைவரும் அவரைப் பிற்காலத்தில் சேவிக்குமாறு ஏற்பாடு செய்ய உத்தரவு கேட்க எம்பெருமானாரும் அனுமதி அளித்தார். ஒரு சிறந்த சிற்பியைக் கொண்டு ஒரு அழகிய விக்ரஹம் செய்யப்பட்டது. அந்த விக்ரஹம் எம்பெருமானாரின் திருவுள்ளத்துக்கு  மிகவும் ஏற்புடையதாக இருந்ததால் எம்பெருமானாரும் அதைத் தழுவிக் கொண்டார். அந்த விக்ரஹம் ஸ்ரீபெரும்பூதூரில் தை புஷ்யத்தன்று ப்ரதிஷ்டை செய்யப் பட்டது.-இவ்வாறு உடையவர் 120 வருடங்கள் இம்மண்ணுலகில் வாழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்று நித்யஸூரிகளுடன் சேர்ந்திருக்க மிகுந்த ஆர்த்தி தலை எடுக்க, பெரிய பிராட்டி புருஷகாரத்துடன் பெரிய பெருமாளிடம் சென்று கத்ய த்ரயம் ஸேவித்துத் தன்னை இங்கிருந்து அங்கு அழைத்துக் கொள்ளுமாறு ப்ரார்த்தித்தார். பெரிய பெருமாளும் எம்பெருமானாருக்கு அன்றிலிருந்து ஏழாம் நாள் மோக்ஷம் கொடுப்பதாக வாக்களித்தார். எம்பெருமானார் பெருமாளிடம் “என்னுடைய ஸம்பந்த ஸம்பந்திகளுக்கும் எனக்குக் கிடைத்த பேறு கிடைக்க வேண்டும் ப்ரார்த்திக்க”, எம்பெருமானும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான். உடையவர் பெரிய பெருமாளிடம் இருந்து விடை பெற்று, ராஜ நடையுடன் தன் மடத்தைச் சென்றடைந்தார். அவர் அடுத்த மூன்று நாட்களுக்குத் தன் ஶிஷ்யர்களுக்கு அரிய அர்த்தங்களை அறிவிக்க, அவர்கள் அதைக் கண்டு ஆச்சர்யப் பட, மேலும் மறைக்க முடியாது என்று உணர்ந்த உடையவர் “இன்றிலிருந்து நான்காம் நாள் பெரிய பெருமாள் அனுமதியின் பேரில் நாம் பரமபதத்துக்குச் செல்கிறோம்” என்று அருளிச்செய்ய, அங்கிருந்த ஶிஷ்யர்கள் கடல் கலங்கினாப் போலே திடித்து “நாமும் ப்ராணத் த்யாகம் செய்வோம்” என்று கூற, உடையவர் “அவ்வாறு செய்தால் உமக்கும் எனக்கும் இனி ஸம்பந்தம் இல்லை” என்று அருளித் தேற்றினார்.இவ்வாறு மேலும் பல அரிய உபதேஶங்களைச் செய்து, தன்னுடைய ஶிஷ்யர்கள் பலருக்கும் ஓரோர் பொறுப்பை அளித்தார். அனைவரையும் கூரத்தாழ்வான் திருக்குமாரரான பட்டருக்கு அனுகூலமாக இருக்கும்படி ஆணையிட்டார். அனைவரிடமும் அபராத க்ஷாமணம் செய்து கொண்டு மீண்டும் தன் சரம உபதேஶங்களை அருளினார். முக்கியமாக மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களின் குணங்களைக் கொண்டாடும்படியும், ஸஹோதரர்கள் போலே கூடி உழைக்குமாறும் ஆணையிட்டார். உபாயாந்தரங்களில் கண் வையாமல், அனைத்துப் பொறுப்பகளையும் கைங்கர்யமாகச் செய்யுமாறு கூறினார். மேலும், ஸ்ரீவைஷ்ணவர்களிடத்தில் த்வேஷம் பாராட்டமலும் ஸம்ஸாரிகளைக் கொண்டாடாமல் இருக்கவும் ஆணையிட்டார்.-பின்பு, பட்டரைப் பெரிய பெருமாளிடம் அழைத்துச் சென்று, தீர்த்த மரியாதைகளை வாங்கிக் கொடுத்து, அனைவரிடமும் பட்டரே தர்ஶன நிர்வாஹம் செய்வார் என்றும், பட்டரிடம் “மேல்நாடு சென்று வேதாந்தியைத் திருத்தும் என்றும் ஆணையிட்டார். எம்பார் பெரியவராக இருந்ததால், தன்னுடைய ஶிஷ்யரான பட்டரை வழி நடத்திச் சென்றார்.

பரமபதம் செல்ல வேண்டிய நாள் அன்று, எம்பெருமானார் தன்னுடைய நித்யானுஷ்டான கர்மங்களான ஸ்நானம், பன்னிரு திருமண்கள் சாற்றிக்கொள்ளுதல், ஸந்த்யாவந்தனம் முதலியவை அனுஷ்டித்து மடத்துப் பெருமாள் திருவாராதனம் முடித்து, குருபரம்பரையை த்யானித்து, பத்மாஸனத்தில் அமர்ந்து, பரவாஸுதேவனில் தன் மனத்தை நிறுத்தி, ஆளவந்தாரின் திவ்ய மங்கள விக்ரஹத்தை த்யானித்து, சாய்ந்து கொண்டு, தன் கண்களை அகல விரித்து, தன் திருமுடியை எம்பார் மடியிலும், தன் திருவடியை வடுக நம்பி மடியிலும் வைத்துக் கொண்டு, ஒளிமயமான ஆதிஶேஷ உருவத்தில் பரமபதத்தை நோக்கி எழுந்தருளினார். இதைக் கண்ட ஶிஷ்யர்கள் வேரற்ற மரம் போல் கீழே விழுந்து  கதறினர். சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டனர். பெரிய பெருமாள் தன்னுடைய இழப்பையும் பரமபதநாதனின் லாபத்தையும் நினைத்து வருந்தி, சுருளமுதை விலக்கினான். பின்பு உத்தம நம்பி மூலம் தன்னுடைய அனைத்து பரிகரங்களையும் எம்பெருமானாருக்குக் கொடுத்து விடுகிறான். மடத்தில், எம்பெருமானாரின் விமல சரம திருமேனிக்கு ஸ்நாநம், பன்னிரு திருநாமம் சாற்றுதல், தீபம் தூபம் போன்ற உபசாரங்கள் ஸமர்ப்பிக்கப்பட்டன. அபிமான புத்ரரான பிள்ளான், சரம கைங்கர்யங்களைச் செவ்வனே செய்தார்.திருவரங்கத்து ஸ்ரீவைஷ்ணவர்கள் மிகவும் உத்ஸாககத்துடன் வேதம், உபநிஷத், திவ்ய ப்ரபந்தம், வாத்யம், அரையர் ஸேவை போன்றவைகளை ஏற்பாடு செய்து இருந்தனர். மேலும் எம்பெருமானார் சரம திருமேனியை எழுந்தருளிக் கொண்டு போகையில், பூவும் பொரியும் தூவிக்கொண்டு சென்றனர். பெரிய பெருமாளின் ஆணைப்படி, எம்பெருமானார் யதி ஸம்ஸ்கார விதியின் படி பூமிக்கடியில் பெருமாளின் வஸந்த மண்டபத்திலேயே திருப்பள்ளிப் படுத்தப் பட்டார். பெரிய பெருமாள் ஆணைப்படி, திருப்பள்ளிப்படுத்திய இடத்தின் மேலேயே முதலியாண்டான் எம்பெருமானாருக்கு ஒரு திருமேனியைப் ப்ரதிஷ்டை செய்தார்.-பின்பு, பல ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளியதைக் கேள்வியுற்று மிகவும் வருந்தினர். சிலர் எம்பெருமானாரின் பிரிவைத் தரிக்க முடியாமல் உயிரையும் விட்டனர். ஸ்ரீரங்கத்துக்கு வந்தவர்களோ பட்டர் அங்கு தர்ஶன நிர்வாஹம் செய்வது கண்டு தங்களைத் தேற்றிக் கொண்டனர்.-

சொல்லுவோம் ராமானுஜன் நாமங்களே-1..இளையாழ்வார்- 2-இராமானுசன்”-3-யதிராஜர் :–4-உடையவர்-5-லஷ்மண முனி-6-எம்பெருமானார்-7-சடகோபன் பொன்னடி-8-கோயில் அண்ணர்-9-தேசிகேந்த்ரன்-10-தபரேசர்-11-ஸ்ரீ பாஷ்யகாரர்-12-ஸ்வாமி தகப்பன்-13-ஸ்வாமி :-

ஸ்ரீமந் மஹாபூதபுரே ஸ்ரீமத் கேஶவ யஜ்வன: |
காந்திமத்யாம்
 ப்ரஸூதாய யதிராஜாய மங்களம் ||

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே | 
ஸ்ரீரங்க வாஸினே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம் ||


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ள ஸ்ரீமத்‌ அபாமார்ஜந ஸ்தோத்ரம்‌ –

August 11, 2026

பாராயணத்திற்குச்‌ சிறந்ததாக ““ஸ்ரீ அபாமார்ஜந ஸ்தோத்ரம்‌” பெரியோர்களால்‌ உகந்து ஏற்றுக் கொள்ளப் பட்டதாம்‌-பலவித ஜ்வரமும்‌ மற்றும்‌ வ்யாதிகளும்‌ துர் தைவ, க்ரஹ. | பீடைகளும்‌ தனித்தனியே பெயரிட்டுக்‌ கூறப்பட்டு, அதன்‌ நிவ்ருத்தி வேண்டிக் கொள்ளப்படுகிறது. ‘ஹிரண்யாக்ஷனைக்‌ | கொன்று பூமிப் பிராட்டியின்‌ துயர்‌ துடைத்த ஸ்ரீ மஹா வராஹரும்‌, தந்தையின்‌ உத்தரவால்‌ நலியும்‌ க்ருத்யையையும்‌ விஷத்தையும்‌ போக்கி ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானை ரக்ஷித்த ஸ்ரீ அழகிய சிங்கரும்‌, இந்த்ரனது செல்வத்தைக்‌ கவர்ந்த மாவலியை வஞ்சித்த ஸ்ரீ வாமநரும்‌, எங்கும்‌. பரந்த, திருமேனியுடன்‌ எல்லாரையும்‌ அணைத்துக்‌ கொண்ட ஸ்ரீ திரிவிக்கிர்மனும்‌, கஜேந்த்ராழ்வான்‌ முதலியவரை ரக்ஷித்த ஸ்ரீ ஸுதார்சநாழ்வானும்‌ நம்மைக்‌ கைவிடமாட்டார்கள்‌ என்றே பரம விச்வாஸத்துடன்‌ இந்த ஸ்ரீ அபாமார்ஐந ஸ்தோத்‌ரத்தைப்‌ பாராயணம்‌ செய்து ஸகல வித வ்யாதிகளும்‌ நீங்கப்‌ பெற்றும்‌, ஸகல க்ஷேமங்களும்‌ கூடப் பெற்றும்‌ நல் வாழ்வு வாழ வேண்டுமென்று ப்ரார்த்திக்கிறோம்‌

ஸ்ரீ தால்ப்ய உவாச
பகவந்‌ ப்ராணிநஸ்‌ ஸர்வே விஷ ரோகாத் யுபத்ரவை; |
துஷ்ட க்ரஹாபி காதைச்‌’ ச ஸர்வ கால-முபத்ருதா –
ஆபிசாரிக க்ருத்யாபி: ஸ்பர்ச ரோகைச்‌’ ச தாருணை: |
ஸதா ஸம்பீட்யமாநாஸ்து திஷ்டந்தி முநி ஸத்தம —
கேந கர்ம விபாகேந விஷ ரோகாத் யுபத்ரவா: |
ந பவந்தி ந்ருணாம்‌ தந்மே யதாவத்‌ வக்து மர்ஹஸி –

ஸ்ரீ புலஸ்ய உவாச
வ்ரதோபவா ஸைர்யைர் விஷ்ணுர் நான்ய ஜென்மநி தோஷித: |
தே நரா முநி சார்தூல விஷ ரோகாதி பாகிந
ஆரோக்யம்‌ பரமாம்‌ ருத்திம்‌ மநஸா யத்‌ யதிச்சதி |
தத் ததாப்நோத்ய ஸந்திக்தம்‌ பரத்ராச்யுத தோஷ க்ருத் –
நாதீந்‌ ப்ராப்நோதி ந வ்யாதீந்‌ விஷ க்ரஹ நிபந்தநம்‌।
க்ருத்யா ஸ்பர்ஸ பயம்‌ வாபி ததோஷிதே மது ஸூதநே —
ஸர்வ து:க சமஸ்தஸ்ய ஸெளம்யாஸ்‌ தஸ்ய ஸதா க்ரஹா; |
தேவாநாமபி துஷ்ட்யை ஸ யஸ்ய துஷ்டோ ஜநார்தந —
யஸ் ஸமஸ்‌ ஸர்வ பூதேஷு யதாத்மநி ததா பரே |
உபவாஸாதி தாநேந தோஷிதே மதுஸூதநே ॥
தோஷகாஸ்‌ தஸ்ய ஜாயந்தே நரா: பூர்ண மநோ ரதா.।
அரோகாஸ்‌ ஸுகிநோ போகாந்‌ போக்தாரோ முநி ஸத்தம ॥
ந தேஷாம்‌ ச’த்ரவோ நைவ ஸ்பர்ஸ ரோகாதி பாகிந;। |
க்ரஹ ரோகாதிகம்‌ வாபி பாப கார்யம்‌ ந ஜாயதே ||
அவ்யாஹதாநி க்ருஷ்ணஸ்ய சக்ராதீந் யாயுதாநி ச |
ரக்ஷந்தி ஸகலாபத்ப்ய, யேந விஷ்ணு ருபாஸித-

ஸ்ரீ தால்ப்ய உவாச
அநாராதித கோவிந்தா யே நரா து:க பாகிந:| தேஷாம்‌ து:காபி பூதாநாம்‌ யத்‌ கர்தவ்யம்‌ தயாளுபி –
பச்‌’யத்பிஸ்‌ ஸர்வ பூதஸ்தம்‌ வாஸுதேவம்‌ மஹாமுநே ।
ஸமத்ருஷ்டிபிரீ சே’சச’ம்‌ தந் மம ப்ரூஹ்ய சேஷத-

ஸ்ரீ புலஸ்த்ய உவாச
ஸ்ரோது காமோஸி வை தால்ப்ய ஸ்ருணுஷ்வ்‌ ஸுஸமாஹித: | அபமார்ஜநகம்‌ வக்ஷயே ந்யாஸ பூர்வ மிதம்‌ பரம் –

ஓம்‌ நமோ பகவதே வாஸு தேவாய ஸர்வ க்லேசாப ஹந்த்ரே நம –

அத ந்யாஸ :
அஸ்ய ஸ்ரீமத்‌ அபாமார்ஜந ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய ஸ்ரீபுலஸ்த்யோ பகவாந்‌ ருஷி:-அநுஷ்டுப் சந்த;- ஸ்ரீவாராஹ நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுதர்ச’நா தேவதா: ஹராமுகஸ்ய துரிதமிதி பீஜம்‌ | அச்யுதாநந்த கோவிந்தேதி சக்தி:| _ ஜ்வலத் பாவக லோச நேதி கலகம்‌ | வஜ்ராயுத நக ஸ்பர்‌சேதி கவசம்‌ | ஸ்ரீவாராஹ நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுதர்சந ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக —

வராஹாய அங்குஷ்டாப்யாம்‌ நம: | நாரஸிம்ஹாய தர்ஜநீப்யாம்‌ ஸ்வாஹா | வாமநாய மத்யமாபயாம்‌ வஷட்‌ | விஷ்ணவே அநாமிகாப்யாம்ஹும்‌ |ஸூதர்சநாய கநிஷ்டிகாப்யாம்‌ வெளஷட்‌ | பாஞ்சஜந்யாய கரதல கர ப்ருஷ்டாப்யாம்‌ பட்‌ நம, | இதி கர ந்யாஸ: ॥

அத அங்க ந்யாஸ:

வராஹ நரஸிம்ஹாய வாமநாய மஹாத்மநே | ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம: (மார்பில்‌)
நம: கமல கிஞ்ஜல்க பீத நிர்மல வாஸஸே-— ஐஸ்வர்யாய சிரஸே ஸ்வாஹா (தலையில்‌)
நம: புஷ்கர நேத்ராய கேச’வாயாதி சக்ரிணே, சக்த்யை சி’காயை வஷட்‌ (சிகையில்‌)
தாமோதராய தேவாய அநந்தாய மஹாத்மநே , பலாய கவசாய ஹும்‌ (கவசம் போல்‌ இரு புறத்தில்‌)
காச்‌’யபாயாதி ஹ்ரஸ்வாய ருக் யஜுஸ் ஸாம மூர்த்தயே தேஜஸே நேத்ராப்யாம்‌ வெளஷட்‌ (கண்களில்‌)
ஓம் நம: பரமார்த்தாய. புருஷாய மஹாத்மநே ॥ வீர்யாய அஸ்த்ராய பட்‌ (இரு கையைத் தட்ட)
ஓம்‌ பூர்‌ புவஸ் ஸூவரோம்‌ இதி திக்பந்த: | (எட்டு திக்கில்‌ வலமாகச்‌ சொடக்கவும் )

த்யானம்
அத த்யாநம்‌ ப்ரவக்ஷ்யாமி ஸர்வ பாப ப்ரணாச நம்‌|
வராஹ ரூபிணம்‌ தேவம்‌ ஸம்ஸ்மரந்‌ அர்ச்சயேத்‌ ஜபேத்
ஜலெளகதாம்‌ ந: ஸசராசரா தரா விஷாண கோட்யா கில விச்‌’வரூபிணா |
ஸமுத் த்ருதா யேந வராஹ ரூபிணா ஸ மே ஸ்வயம்பூர்‌ பகவாந்‌ ப்ரஸீதது ॥

சஞ்சத்‌ சந்த்ரார்க தம்ஷ்ட்ரம்‌ ஸ்புரதுரு ரதநம்‌ விதயுதுத்யோத ஜிஹ்வம்‌
கர்ஜத்‌ பர்ஜந்ய நாதம்‌ ஸ்புரித ரவி ருசிம்‌ சஷுர ஷூத்ர ரெளத்ரம்‌ |
த்ரஸ்தாசா’ ஹஸ்தியூதம்‌ ஜ்வலதநல ஸடா கேஸரோத் பாஸமாநம்‌
ரஷோ ரக்தாபிஷிக்தம்‌ ப்ரஹரதி துரிதம்‌ த்யாயதாம்‌ நாரஸிம்ஹம்

அதிவிபுல ஸுகாத்ரம்‌ ருக்ம பாத்ரஸ்த மந்நம்‌
ஸலலித ததிகணடம்‌ பாணிநா தக்ஷிணே ந।
கலச’ம்‌ அம்ருத பூர்ணம்‌ வாம ஹஸ்தே ததாநம்‌
தரதி ஸகல து:கம்‌ வாமநம்‌ பாவயேத ய: —

விஷ்ணும்‌ பாஸ்வத்‌ கிரீடாங்கத வலயகளா கலப ஹாரோஜ்‌ ஜ்வலாங்கம்‌
ஸ்ரோணீ பூஷா ஸுவக்ஷோ மணி மகுட மஹா குணடலைர்‌ மண்டி தாங்கம்‌ | ஹஸ்தோதயத்‌-சங்க சக்ராம்புஜ கத மமலம்‌ பீத கெளசே’ய மாசா”
வித்யோதத-பாஸ முத்யஜ்‌ திநகர ஸத்ருச’ம்‌ பத்ம ஸம்ஸ்தம்‌ நமாமி ॥

கல்பாந்தார்க ப்ரகாசம்‌ த்ரி புவந- ‘ மகிலம்‌ தேஜஸா பூரயந்தம்‌
ரக்தாக்ஷம்‌ பிங்ககேசம்‌ ரிபுகுலதமநம்‌ பீம-தம்ஷ்ட்ராட்ட ஹாஸம்‌ |
சங்கம்‌ சக்ரம்‌ கதாப்ஐம்‌ ப்ருதுதர முஸலம்‌ சூல பாச’ங்குசாக்நீந்
பிப்ராணம்‌ தோர்பிராத்யம்‌ மநஸி முரரிபும்‌ பாவயே சக்ர ஸம்ஜ்ஞம்‌ ||

ஓம்‌ நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மநே |
அரூப பஹு ரூபாய வ்யாபிநே பரமாத்மநே

நிஷ் கல்மஷாய சு’த்தாய த்யாந யோக ரதாய ச |
நமஸ்க்ருத்ய ப்ரவஹ்யாமி யத்ர ஸித்யது மே வச –

நாராயணாய ஸூத்தாய விச்வேசா யேஸ்வராய ச |
அச்யுதாநந்த கோவிந்த பத்ம நாபாய ஸெளஹ்ருதே —

ஹ்ருஷீகேசாய கூர்மாய மாதவா யாச்யுதாய ச |
தாமோதராய தேவாய அநந்தாய மஹாத்மநே ॥

ஐநார்தநாய க்ருஷ்ணாய உபேந்த்ர ஸ்ரீதராய்‌ ச |
த்ரிவிக்ரமாய ராமாய வைகுண்டாய ஹராய ச |!
பிரத்யும்நா யாநிருத்தாய புருஷோத்தம தே நம: |
யோகீஸ்வராய குஹ்யாய கூடாய பரமாத்மநே ॥
பச்த ப்ரியாய தேவாய விஷ்வக்ஸேநாய சார்ங்கிணே।
அதோக்ஷஜாய தஷாய மத்ஸ்யாய மது ஹாரிணே–

வராஹாய ந்ருஸிம்‌ஹாய வாமநாய மஹாத்மநே |
வராஹேச’ ந்ருஸிம்ஹேச” வாமநேச: த்ரி விக்ரம-
ஹயக்ரீவேச ஸர்வேச ஹ்ருஷீகேச ஹராசு:பம்‌ |
அபராஜித சக்ராத்யை: சதுர்பி: பரமாத்புதை:
அகண்டிதா நுபாவைஸ்த்வம்‌ ஸர்வ துஷ்ட ஹரோ பவ।
ஹரா முகஸ்ய துரிதம் துஷ்க்ருதம் துருபோஷிதம்
ம்ருத்யு பந்தார்த்திபயதம்‌ அரிஷ்டஸ்ய ச யத்பலம்‌ |
பரமத்வாந ஸஹிதம்‌ ப்ரயுக்தம்‌ சாபிசாரிகம் –

கர ஸ்பர்ச” மஹா ரோகாந்‌ ப்ரயுக்காந்‌ த்வரயா ஹர |
ஓம்‌ நமோ வாஸுதேவாய நம: க்ருஷ்ணாய சார்ங்கிணே–
நம: புஷ்கர நேத்ராய கேச’வாயாதி சக்ரிணே |
நம: கமல கிஞ்ஜல்க பீத நிர்மல வாஸஸே ||
மஹாஹவ ரிபுஸ்கந்த கருஷ்ட சக்ராய சக்ரிணே |
தம்ஷ்ட்ராக்ரேண க்ஷிதி த்ருதே த்ரயீ மூர்த்தி மதே நம: ॥
மஹா யஜ்ஞ வராஹாய சேஷ போகோப சாயிநே |
தப்தஹாடக கேசாந்த ஜ்வலத்பாவக லோசந ॥

வஜ்ராயுத நகஸ்பர்ச” திவ்ய ஸிம்ஹ நமோஸ்து தே |
காச்‌’யபாயாதி ஹ்ரஸ்வாய ருக் யஜுஸ் ஸாம மூர்த்தயே
துப்யம்‌ வாமந ரூபாய க்ரமதே காம்‌ நமோ நம; |
வராஹா சேஷ துஷ்டாநி ஸர்வ பாப பலாநி வை ||
மர்த மர்த மஹா தம்ஷ்ட்ர மர்த மர்த ச தத் பலம்‌ |
நரஸிம்ஹ கராளாஸ்ய தந்த ப்ராந்தோஜ் ஜ்வலாநந —

பஞ்ஜ்‌ பஞ்ஜ நிநாதேந துஷ்டாந்யஸ் யார்த்தி நாஸந |
ருக் யஜுஸ் ஸாம ரூபாபிஃ வாக்பிர்‌ வாமந ரூப த்ருக்‌ |
ப்ரசமம்‌ ஸர்வ துஷ்டாநாம்‌ நயத்வஸ்ய ஐநார்தந:।
கெளபேரம்‌ தே முகம்‌ ராத்ரெள ரெளத்ரம்‌ . ்‌ ஸெளம்யம்‌ முகம்‌ திவா ॥ .
ஜ்வராந்‌ ம்ருத்யு பயம்‌ கோரம்‌ விஷம்‌ நாச’யதே ஜ்வரம்‌ |
த்ரிபாத் பஸ்ம ப்ரஹரண: த்ரிசிரா ரக்த லோசந: |
ஸ மே ப்ரீதஸ்‌ ஸுகம்‌ தத்யாத்‌ ஸர்வாமய பதிர் ஜ்வர –

ஆத்யந்தவந்த: கவய: புராணா; ஸந் மார்க வந்தோ ஹ்யநுசாஸிதார; |
ஸர்வ ஜ்வராந்‌ க்நந்து மமா நிருத்த ப்ரத்யும்‌ந ஸங்கர்ஷண வாஸு தேவா. || ஐகாஹிகம்‌ த்வ்யாஹிகம்‌ ச ததா த்ரி திவஸ ஜ்வரம்‌ |
சாதுர்த்திகம்‌ ததாத் யுக்ரம்‌ ததைவ ஸதத ஜ்வரம்‌ ||
தோஷோத்தம்‌ ஸந்‌நிபா தோத்தம்‌ ததைவாகந்துகம்‌ ஜ்வரம்‌|
சமம்‌ நயாசு கோவிந்த சிந்த்திச்‌ சிந்த்யஸ்ய வேதநாம் –

நேத்ர்து;கம்‌ சி’ரோது;கம்‌ து;கம்‌ சோதர ஸம்பவம்‌ |
அதிச்‌’வாஸ மநுச்ச்வாஸம்‌ பரிதாபம்‌ ஸவேபதும்‌ ||
குதக்ராணாங்க்ரி ரோகாம்ச்‌’ ச குக்ஷி ரோகம்‌ ததா க்ஷயம்‌|
காமாலாதீந்‌ ததா ரோகாந்‌ ப்ரமே ஹாம்ச்‌’ சாதி தாருணாந்‌ |
பகந்தராதி ஸாராம்ச்‌’ச முக ரோகாம் ஸவல்குளிம்‌ |
அச்‌’மரீ மூத்ர க்ருச்ச்ரம்‌ ச ரோகா நந்யாம்ச்‌’ ச தாருணாந்‌ |
யே வாத ப்ரபவா ரோகா; யே ச பித்த ஸமுத்பவா; |
கபோத் பவாச்‌’ச யே ரேகா; யே சாந்யே ஸாந்நி பாதிகா —

ஆகந்துகாச்‌’ச யே ரோகா; லூதாதி ஸ்போடகாதய: |
ஸர்வே தே ப்ரசமம்‌ யாந்து வாஸூ தேவாபமார்ஐநாத்‌ ||
விலயம்‌ யாந்து தே ஸர்வே விஷ்ணோ ருச்சாரணேந ச |
க்ஷயம்‌ கச்சநது சாசேஷா; சக்ரேணாபி ஹதா ஹரே: ॥
அச்யுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயணாம்ருத |
ரோகாந்‌ மே நாச’யாசேஷாந ஆசு: தந்வந்தரே ஹரே ॥
௮ச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்‌ |
நச்‌’யநதி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம்‌ வதாமயஹம்

ஸத்யம் ஸத்யம்‌ புநஸ் ஸத்யம்‌ உத்த்ருத்ய புஜமுச்யதே |
வேதாச் சாஸ்த்ரம் பரம்‌ நாஸ்தி நதைவம்‌ கேசவாத் பரம்‌ ॥
ஸ்தாவரம்‌ ஜங்கமம்‌ சாபி க்ருத்ரிமம்‌ சாபி யத்விஷம்‌ |
தநதோத்பவம்‌ நகோத்பூதம்‌. ஆகாஸ ப்ரபவம்‌ விஷம்‌ |
லூதாதிஸ் போடகம்‌ சைவ விஷமத் யந்த துஸ் ஸஹம்‌ |
சமம்‌ நயது தத் ஸர்வம்‌ கீர்த்தி தோஸ்ய ஜநார்தந 😐
க்ரஹாந்‌ ப்ரேத க்ரஹாந்‌ சைவ ததா வைநாயிக க்ரஹாந்‌ |
வேதாளாம்ச்‌’ ச பிசாசாம்ச்‌’ ச கந்தர்வாந்‌ யஷ ராக்ஷஸாந் –
சாகிநீபூத நாத்யாம்ச்‌’ ச ததா வைநாயிக க்ரஹாந்‌ |
முக மண்டலிகாந்‌ க்ரூராந ரேவதீந் வ்ருத்த ரேவதீந்‌ ||
வ்ருச்‌’சிகாக்யாந்‌ க்ரஹாந்‌ சோக்ராந்‌ ததா மாத்ரு கணாநபி |
பாலஸ்ய விஷ்ணோச்‌’சரிதம்‌ ஹந்து பால க்ரஹாநி மாந ॥|
வ்ருத்தாநாம்‌ யே க்ரஹா: கேசித்‌ யேச பால க்ரஹா: க்வசித்‌।
நரஸிம்ஹஸ்ய: தே த்ருஷ்ட்யா தக்தா யே சாபி யெளவநே —

ஸடா கராள வதநோ நரஸிம்ஹோ மஹா பல: | க்ரஹாந சேஷாந் நிச்‌சேஷாந கரோது ஜகதோ ஹித:
நர ஸிம்ஹ மஹா ஸிம்ஹ ஜ்வாலா மாலோஜ் ஜ்வலாநந |
க்ரஹாந சே’ஷாந்‌ ஸர்வேஷாம்‌ காதகாதாக நிலோசந
யே ரோகா யே மஹோத்பாதா யத் விஷம்‌ யே மஹோரகா: |
யாநி ச க்ரூர பூதாநி க்ரஹ பீடாச்‌’ ச தாருணா-

சஸ்த்ரஷதே ச யே தோஷா: ஜ்வாலா கர்தமகாதய: |
யாநி சாந்யாநி துஷ்டாநி ப்ராணி பீடா கராணி ச ॥
தாநி ஸர்வாணி ஸர்வாத்மந்‌ பரமாத்மந்‌ ஜநார்தந |
கிஞ்சித் ரூபம்‌ ஸமாஸ்தாய வாஸு தேவாஸ்ய நாசய ||
க்ஷிப்த்வா ஸுதர்சநம்‌ சக்ரம்‌ ஜ்வாலா மாலாதி பூஷணம்‌ |
ஸர்வ துஷ்டோபச’ மநம்‌ குரு தேவவராச்யுத ॥.
ஸுதர்ச’ந மஹா சக்ர கோவிந்தஸ்ய கராயுத |
தீஷ்ண பாவக ஸங்காச’ கோடி ஸூர்ய ஸமப்ரப |
த்ரைலோக்ய கர்தா த்வம்‌ துஷ்ட த்ருப்த தாநவதாரண |
தீஷ்ண தார மஹா வேக சிநதி சிந்தி மஹாஜ்வரம்‌ ॥

சிந்தி பாதம்‌ ச லூதம் ச சிந்தி கோரம்‌ மஹத்பயம்‌ |
க்ருமிம்‌ தாஹம்‌ ச சூலம்‌ ச விஷ ஜ்வாலாம்‌ ச கர்தமாந்‌ ||
ஸர்வதுஷ்டாநி ரஷாம்ஸி க்ஷபயாரி விபீஷண |
ப்ராச்யாம்‌ ப்ரதீச்யாம்‌ திசிச தக்ஷிணோத்தர யோஸ்ததா ॥
ரக்ஷாம்‌ கரோது பகவாந்‌ பஹு ரூபீ ஜநார்தந: |
பரமாத்மா யதா விஷ்ணு: வேதாந்தேஷ் வபிதீயதே ||
தேந ஸத்யேந ஸகலம்‌ துஷ்டமஸ்ய ப்ரசாம்யது |:
யதா விஷ்ணுர்‌ ஜகத் ஸர்வம்‌ ஸதேவாஸாுர மாநுஷம் —

தேந ஸத்யேந ஸகலம்‌ துஷ்டமஸ்ய ப்ரசாம்யது |
யதா விஷ்ணெள ஸ்ம்ருத ஸத்ய: ஸம்க்ஷயம்‌ யாந்தி த பாதகா: |.
தேந ஸத்யேந ஸகலம்‌ துஷ்ட மஸ்ய ப்ரசாம்யது |
யதா யஜஞோச்‌’வரோ விஷ்ணு: வேதாந்தேஷ் வபிதீயதே ॥
தேந ஸத்யேந ஸகலம்‌ யந்மயோக்தம்‌ ததாஸ்து தத்‌ |
சாந்திரஸ்து சிவம்‌ சாஸ்து ஹ்ருஷீகேச”ஸ்ய கீர்த்தநாத் –

வாஸுதேவ சரீரோத்தை: குசை’ஸ் ஸம் மார்ஜிதம்‌ மயா |
அபாமார்ஜது கோவிந்தோ நரோ நாராயணஸ்‌ ததா |
மமாஸ்து ஸர்வ து:காநாம்‌ ப்ரசமோ யாசநாத்‌ ஹரே! |
சாந்தாஸ் ஸமஸ்தா ரோகாஸ்தே க்ரஹாஸ்‌ ஸர்வ விஷாணி ச
பூதாநி ச ப்ரசாம்யந்து ஸம்ஸ்ம்ருதே மதுஸூதநே |
ஏதத்‌ ஸமஸ்த ரோகேஷு பூத க்ரஹ பயேஷு ச ॥
அபாமார்ஜநகம்‌ சஸ்த்ரம்‌ விஷ்ணு நாமாபி மந்த்ரிதம் –

ஏதே குசா விஷ்ணு ச:ரீர ஸம்பவா!:
ஐநார்தநோ அஹம்‌ ஸ்வயமேவ சாகத: | ஹதம்‌ மயா துஷ்டமசேஷ மஸ்ய
ஸ்வஸ்தோ பவத்வேஷ யதா வசோ ஹரே: |
‘சாந்திரஸ்து சிவம்‌ சாஸ்து ப்ரணச்‌:ய த்வ ஸுகம் சயத்‌ |
ஸ்வாஸ் த்யமஸ்து சிவம்‌ சாஸ்து துஷ்டமல்ய ப்ரசாம்யது ||
யதஸ்ய துரிதம்‌ கிஞ்சித்‌ தத் க்ஷிப்தம்‌ லவணார்ணவே |
ஸ்வாஸ்த்ய மஸ்து சி’வம்‌ சாஸ்து ஹ்ருஷீ கேச’ஸ்ய கீர்த்தநாத் –

ஏதத்‌ ரோகாதி பீடாஸு ஐந்தூநாம்‌ ஹித மிச்சதா |
விஷ்ணு பக்தேந கர்தவ்யம்‌ அபாமார் ஜநகம்‌ பரம்‌ |
அநேந ஸர்வ துஷ்டாநி ப்ரசமம்‌ யாந்த்ய ஸம்‌சய: |
ஸர்வ பூத ஹிதார்த்தாய குர்யாத் தஸ்மாத்‌ ஸதைவ ஹி ||
குர்யாத் தஸ்மாத்‌ ஸதைவ ஹ்யோம்‌ நம இதி |
இதம்‌ ஸ்தோத்ரம்‌ பரம்‌ புண்யம்‌ ஸர்வ வ்யாதி விநாசநம்‌ |
விநாசாய ச ரோகாணாம்‌ அப ம்ருத்யு ஐயாயச |
இதம்‌ ஸ்தோத்ரம்‌ ஜபேத்‌ சாந்த: குசை’ஸ் ஸம்மார்ஜயேத்‌ சுசி; ||
வ்யாத் யபஸ்மார குஷ்டாதி பிசா சோரக ராக்ஷஸா: |
தஸ்ய பார்ச்‌வம்‌ ந கச்சந்தி ஸ்தோத்ர மேதத்து ய: படேத்‌।
வாராஹம்‌ நார ஸிம்ஹம்‌ ச வாமநம்‌ விஷ்ணு மேவ ச |
ஸ்மரந்‌ ஜபேதிதம்‌ ஸ்தோத்ரம்‌ ஸர்வ து:கோப சாந்தயே ॥

இதி ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தர புராணே தால்ப்ய புலஸ்த்யஃ ஸம்வாதே அபாமார்ஜந ஸ்தோத்ரம்‌ ஸம்பூர்ணம் –

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு விஜய ஸ்தோத்திரம்-

August 10, 2026

தேவா ஊச:
ததா: ஸ்ம விஷ்ணும்‌ ஐகதாதி பூதம்‌ ஸுரா ஸுரரேந்த்ரம்‌ ஜகதாம்‌ ப்ரபாலகம்‌ | யந்நாபி-பத்மாத்‌ கில பத்ம யோநி: பபூவ தம்‌ வை சரணம்‌ கதா: ஸ்ம: ॥–1-

நமோ நமோ மத்ஸ்ய-வபுர்த்தராய நமோஸ்து தே கச்சப ரூப-தாரிணே |
நம: ப்ரகுர்மச்‌’ ச ந்ருஸிம்ஹ ரூபிணே ததா புநர்‌ வாமந ரூபிணே நம; ||–2-

நமோஸ்து தே க்ஷத்ர விநாச: நாய ராமாய ராமாய தசாஸ்ய நாசிநே |
ப்ரலம்ப ஹந்த்ரே சிதிவாஸஸே நமோ நமோஸ்து புத்தாய ச தைத்ய மோஹிநே–3–

ம்லேச்சாந்த காயாபி ச கல்கி நாம்நே நம: புந: க்ரோட வபுர்த்தராய |
ஜகத்திதார்த்தம்‌ ச யுகே யுகே பவாந்‌ பிபர்த்தி ரூபம்‌ த்வ ஸுராபவாய ॥–4-

நிஷூதி தோயம்‌ ஹ்யதுநா கில த்வயா தைத்யோ ஹிரண்யாக்ஷ இதி ப்ரகல்ப: |
யச்‌ சேந்த்ர முக்யாந்‌ கில லோக பாலாந்‌ ஸம் ஹேலயா சைவ திரச்‌’சகார | –
-5-

ஸ வை த்வயா தேவ ஹிதார்த்த மேவ நிபாதிதோ தேவவர ப்ரஸீத |
த்வமஸ்ய விஸ்வஸ்ய விஸர்க கர்த்தா ப்ராஹ்மேண ரூபேண ச தேவ தேவ ||-
-6-

பாதா த்வமேவாஸ்ய யுகே யுகே ச ரூபாணி தத்ஸே ஸு மநோ ஹராணி |
த்வமேவ காலாக்நி ஹரச்‌ச பூத்வா விஸ்வம்‌ க்ஷயம்‌ நேஷ்யஸி சாந்த காலே-
-7-

அதோ பவாநேவச விஸ்வகாரணம்‌ ந தே பரம்‌ ஜீவ-மஜீவமேவ |
யத்கிஞ்ச பூதம்‌ ச பவிஷ்ய ரூபம்‌ ப்ரவர்த்தமாநம்‌ ச தவைவ ரூபம்‌ ॥-8-

ஸர்வம்‌ த்வமேவாஸி சராசராக்யம்‌ ந பாதி விஸ்வம்‌ த்வத்ருதே ச கிஞ்சித்‌ |
அஸ்தீதி நாஸ்தீதி ச பேத-நிஷ்ட்டம்‌-த்வய்யேவ பாதம்‌ ஸதஸத்‌ ஸ்வரூபம்‌ ॥–9-

ததோ பவந்தம்‌ கதமோபி தேவ ந ஜ்ஞாது மர்ஹ-த்யவிபக்வ-புத்தி: |
ருதே பவத்‌-பாத-பராயணம்‌ ஜநம்‌ தே நாகதா; ஸ்ம: சரணம்‌ சரண்யம்‌ ॥–10-

வ்யாஸ உவாச
ததோ விஷ்ணு; ப்ரஸந்நாத்மர உவாச த்ரிதிவெளகல: | |
துஷ்டோஸ்மி தேவா பத்ரம்‌ வோ யுஷ்மத்‌-ஸ்தோத்ரேண ஸாம்ப்ரதம் –11-

பல ஸ்ருதி
ய இதம்‌ ப்ரபடேத்‌ பக்த்யா விஜய ஸ்தோத்ர மாதராத்‌ ॥
ந தஸ்ய துர்லபம்‌ தேவா; த்ரிஷு லோகேஷு கிஞ்சந —
12-

கவாம்‌ சத ஸஹஸ்ரஸ்ய ஸம்யக்‌ தத் தஸ்ய யத் பலம்‌ |
தத் பலம்‌ ஸமவாப்நோதி கீர்த்தந-ஸ்ரவணாந்‌ நர: |॥ –
-13-

ஸர்வ காம ப்ரதம்‌ நித்யம்‌ தேவ தேவஸ்ய கீர்த்தநம்‌ |
அத: பரம்‌ மஹா ஜ்ஞாநம்‌ ந பூதம்‌ ந பவிஷ்யதி–14–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மாங்கள்ய வ்ருத்தி ஸ்தவ ஸ்தோத்ரம் -ஸ்ரீ தால்ப்யர் ஸ்ரீ புலஸ்ய மஹ ரிஷி ஸம்வாதம்–ஸ்ரீ விஷ்ணு தர்மம்–

August 10, 2026

கார்யாரம்பேஷு ஸர்வேஷு து:ஸ்வப்நேஷு ச ஸத்தம |
அமங்கள்யேஷு த்ருஷ்டேஷு யஜ் ஜப்தவ்யம்‌ ததுச்யதாம்‌ ॥
யே நாரம்பாச்‌’ச ஸித்த்யந்தி து:ஸ்வப்நச்‌’சோப சாந்தயே |
அமங்களாநாம்‌ த்ருஷ்டாநாம்‌ பரிஹாரச்‌’ச ஜாயதே ||-
1-2-

தால்ப்யர் கூறுகிறார்‌: ‘ ப்ரஹ்மத்தை உணர்ந்தவருள் பெரியோரே, கார்யங்களை ஆரம்பிக்கும்‌ போதும்‌, துஸ்வப்நமேோ அமங்களமோ நேரும் போதும்‌ எதனை ஜபிக்க வேண்டும்‌? அறிவுறை எங்கட்கு வழங்கப்பட வேண்டும்‌. துவங்கிய கார்யங்கள்‌ இனிது திறைவேறுவது எதனால்‌ 2? கெட்ட கனவு பலனற்றுப்‌ போவதும்‌ எதனால்‌ ? யாம்‌ காணும்‌ அசுபங்களுக்குப்‌ பரிஹாரம்‌ உண்டாவதும்‌ எதனால்‌ ?

ஸ்ரீ புலஸ்த்ய:–

ஜநார்தநம்‌ பூத பதிம்‌ ஜகத் குரும்‌ ஸ்மரந்‌ மநுஷ்யஸ்‌ ஸததம்‌ மஹாமுநே | துஷ்டாந் யசே’ஷாண் யபஹந்தி ஸாதயதி அசேஷா கார்யாணி ச யாந்ய பீப்ஸதி-3-

புலஸ்தியர்‌ மொழிவது :- மா முனிவரே, பிறவியை நீக்க வல்லவரும்‌, உலகில்‌ உள்ள பொருள்‌ எல்லாவற்றிற்கும்‌ சொந்தக்‌காரரும்‌, உலகிலேயே மிக உயர்ந்தவருமான எம்பெருமானைத் தியானித்துக்‌ கொண்டிருக்கும்‌ மனிதன்‌ தீயனவெல்லாம்‌ போக்கிக்‌ கொண்டு, தான்‌ விரும்பும்‌ எல்லாச் செயல்களையும்‌ நற் பயனளிக்கும்‌ படி ஸாதித்துக்‌ கொள்ளுகிறான்

ச்‌’ருணுஷ்வ சாந்யத்‌ கததோ மமாகிலம்‌ வதாமி யத்தே த்விஜ வர்ய மங்களம்‌ |
ஸர்வார்த்த ஸித்திம்‌ ப்ரததாதி யத்‌ ஸதா நிஹந்த்யசே’ஷாணி ச பாதகாநி ॥|-4-

அந்தணர்‌ பெருமானே, எது உமக்குச்‌ சுபமோ, எது வேண்டிய பலன் யாவும்‌ கைகூடும்படி செய்ய வல்லதோ, எது தீவினை யாவற்றையும்‌ ஒழிக்க வல்லதோ அத்தகைய ஸ்துதியை உமக்குக்‌ கூறுகிறேன்‌. அதை முழுவதும்‌ கேட்பீராக

ப்ரதிஷ்டிதம்‌ யத்ர ஜகத்‌ சராசரம்‌ ஜகத் த்ரயே யோ ஜகதச்‌’ ச ஹேது: |
ஜகத்‌ ச பாத்யத்தி ச யஸ்ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||
-5-

மூவுலகிலும்‌ யார்‌ ஜங்கம ஸ்தாவர ரூபமான உலதற்குக்‌ காரணமானவரோ, யாரிடத்தில்‌ இது நிலைத்துக்‌ கீழே விழாது தாங்கப்பட்டு நிற்கிறதோ, இவ் வுலகை யார்‌ ரஷிக்கிறாரோ,.(ப்ரளய காலத்தில்‌) யார்‌ இதனை உணவைப் போல்‌ தம்முள்‌ ஒடுங்கும்‌ படி செய்கிறாரோ, ஸர்வ பாபங்களையும்‌ போக்கும்‌ அந்தத்‌ திருமால்‌ “எனக்கு மங்களங்கள்‌ பொங்கிப்‌ பெருக அருள்வாராக –

வ்யோமாம்பு வாய்வக்நி மஹீஸ்வ ரூபை: விஸ்தாரவாந்‌ யோ அணுதரோ அணுபாவாத்‌ |
அஸ்தூல ஸூக்ஷ்மஸ்‌ ஸததம்‌ பரேஸ்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: –6-

வான்‌, வாயு, தீ, நீர்‌, பூமி எனும்‌ இவ்வுருவுகளால்‌ தம்மைப்‌ பெருக்கிக்‌ கொண்டவரும்‌, சிறிய பொருட்களிலும்‌ சிறியவரும்‌, சிறிது, பெரிதென்றளவுள்ள பொருட்களைக்‌ காட்டிலும்‌ முற்றிலும்‌ வேறான்‌ தன்மை யுள்ளவருமான ஹரி எக் காலத்திலும்‌ எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக-

யஸ்மாத்‌ பரஸ்மாத்‌ புருஷா தநந்தாத்‌ அநாதிமத்யா ததிகம்‌ ந கிஞ்சித்‌ |
ஸ ஹேது ஹேது: பரமேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–7-

காலத்தாலும்‌, இடத்தாலும்‌, குணங்களாலும்‌ அளப்பரியதானவரும்‌, பிறப்பும்‌ இறுதியுமற்றவரும்‌, தம்மிலும்‌ உயர்ந்த ஒருவரைக்‌ கிடையாதவரும்‌, படைப்போரையும்கூட. படைப்பவராகவும்‌, தேவர்க்கும்‌ தேவனாகவும்‌ உள்ள ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக.

ஹிரண்ய கர்ப்பாச்யுத ருத்ர ரூபீ ்‌ ஸ்ருஜத்யசே”ஷம்‌ பரிபாதி ஹந்தி |
குணாக்ரணீர்‌ யோ பகவாந்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; ||-8-

நான்முகனுக்கு அந்‌தராத்மாவாயிருந்து உலகத்தைப்‌ படைத்‌தும்‌, தானே நேரில்‌ அச்சுதனாய்த்‌ தோன்றி அதை ரஷித்தும்‌, ருத்ரனுக்கு ஆத்மாவாய்‌ நின்று இதனை அழித்தும்‌ வருகிறவரும்‌, குணசாலிகளுள்‌ முதல்வரும்‌, நன் ஞானம்‌, படைக்கப்படும்‌ பொருளாக ஆகும்‌ ஆற்றல்‌, அனைத்தையும்‌ தாங்கும்‌ வலிமை, இதில்‌ ஆயாஸமின்மை, பிறரைத்‌ தம்‌ இஷ்டப்படி இயங்கும்படிச்‌ செய்யா வல்ல மிடுக்கு, ஸூர்ய வெளிச்சத்தில்‌ விளக்குப் போல்‌ . பிற பொருளை யில்லை யாக்கவல்ல பேரொளி இவை யாவும்‌ உடையவரும்‌, தோஷம்‌ சிறிதுமில்லாதவருமான ஹரி எனக்குச்‌ சுபங்களே பெருக அருள் பாலிப்பாராக

பரஸ்‌ ஸுராணாம்‌ பரமோ அஸுராணாம்‌ பரோ யதீநாம்‌ பரமோ முநீநாம்‌ |
பரஸ்‌ ஸமஸ்தஸ்ய ச யஸ்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||
-9-

தேவர்க்கும்‌, : அஸுரர்க்கும்‌, துறவிகட்கும்‌, முனிவர்க்கும்‌, எல்லாவற்றிற்குமே மிகமிக உயர்ந்தவரான ஹரி எனக்கு மங்களங்‌கள்‌ பெருக அருள வேண்டும் –

த்யாதோ முநீநா மபகல்மஷைர்‌ யோ ததாதி முக்திம்‌ பரமேஸ்வரேஸ்வர : |
மநோபிராம: புருஷஸ்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥-10-

எல்லாக் காலத்திலும்‌ தன்னையே நினைத்திருப்பவர்களின்‌, குற்று மற்ற உள்ளங்களால்‌ சிந்தனை செய்யப்பட்டு, அவர்க்கு முக்தி யளிப்‌ யவராயும்‌, மனதைக்‌ கவரும்‌ அழகுடையவராயும்‌ எல்லா பலனையும்‌ தர வல்லவராயும்‌ இருக்கும்‌ ஹரி எனக்கு மங்களங்கள்‌ வ்ருத்தி யாக அநுக்ரஹம்‌ செய்வாராக–

ஸுரேந்த்ர-வைவஸ்வத-வித்தபாம்‌ புப ஸ்வரூப ரூபீ பரிபாதி யோ ஜகத்‌ |
ஸ ஸூத்த ஸூத்த: பரமேஸ்வரேஸ்வர: மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–11-

தேவேந்த்ரன்‌, இயமன்‌, வருணன்‌, குபேரன்‌ என்பவரைத்‌ தம்‌ உடலாகக்‌ கொண்டு யார்‌ உலகைப்‌ பரிபாலிக்கிறாரோ, தூய பொருட்கும்‌ தூய்மை யளிக்கும்‌ அந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக.

யந்நாம-ஸங்கீர்த்தநதோ விமுச்யதே ஹி அநேக-ஜந்மார்ஜித-பாப ஸஞ்சயாத்‌ |
பாபேந்தநாக்நிஸ்‌ ஸ ஸதைவ நிர்மலோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥ -12-

பல பல பிறவிகளில்‌ ஈட்டிய பாப மூட்டைகள்‌ எவருடைய திருநாம ஸங்கீர்த்‌தநத்தால்‌ தொலைகிறதோ, விறகை அழிக்கும்‌ தீ போலே பாபத்தை அழிக்க வல்லவரும் மாசற்றவருமான அந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ எப்பொழுதும் பொங்கிப் பெருக அருள் செய்ய வேண்டும் –

ஸ்ரீ வராஹாவதாரம்
யேநோத்த்ருதேயம்‌ தரணீ ரஸாதலாத்‌ அசேஷ ஸ்ருஷ்டி ஸ்திதி காரணாதிகம்‌ |
பிபர்த்தி விஸ்வம்‌ ஜகதஸ்‌ ஸ மூலம்‌ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–13-

பாசி தூர்த்துக் கிடந்த பார்மகளைப்‌ பாதாளத்திலிருந்து யார்‌ தூக்கி எடுத்தாரோ, யார்‌ மற்றெல்லாரையும்‌ படைத்தளித்து அழிக்கவும்‌ செய்கிறாரோ, ஜகந்‌ மூலமான அந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக-

பாதேஷு வேதா ஜடரே சராசரம்‌ ரோமஸ்‌-வசேஷா முநயோ முகே மகா: | யஸ்யேஸ்வரேஸஸ்ய ஸ ஸர்வதா ப்ரபு மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–14-

எந்த தேவ தேவனுடைய பாதங்களில்‌ வேதங்களும்‌, திருவயிற்‌றில்‌ அண்ட சராசரம்‌ முழுவதும்‌, உரோமங்களில்‌ முனிவர்கள் அனைவரும்‌, முகத்தில்‌ யாகங்களும்‌ இருக்கின்றனவோ அந்த ஆற்றல்‌ மிக்கானான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அநுக்ரஹம்‌ செய்ய வேண்டும்‌-

ஸமஸ்த யஜ்ஞாங்க மயம்‌ வபு: ப்ரபோ:யஸ்யாங்க-மீசேஸ்வர-ஸம்ஸ்துதஸ்ய |
வராஹ ரூபீ பகவாந்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: –15-

ஸமஸ்த தேவர்களாலும்‌ ஸ்துதிக்கப்பட்ட எந்த ப்ரபுவின்‌ திரு அவயவங்கள்‌ யாக உபகரணங்களனைத்துமாய்‌ ஆகின்றனவோ, அந்தக்‌ கோல வராஹ வடிவம்‌ கொண்ட பக்வானான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பல்கிப்‌ பெருக அருள வேண்டும்‌-

விக்ஷோப்ய ஸர்வோததி-தோய-ஸம்பவம்‌ ததார தாத்ரீம்‌ ஜகதச்‌ ச யோ புவம்‌ |
யஜ்ஞோஸ்வரோ யஜ்ஞ புமாந்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: || –16-

மாகடல்‌ நீரனைத்தையும்‌ கலக்கி ப்ராணிகளின்‌ இருப்பிடமான . வார் மடந்தையைப்‌ பேர்த்தெடுத்தவரும்‌ யாகங்களால்‌ பூஜிக்கப்படுபவரும்‌ யஜ்ஞ வராஹ மூர்த்தியுமான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள வேண்டும்‌-

விந்யஸ்ய பாதெள ப்ருதிவீம்‌ ச பிப்ரத: | யஸ்யோபமாநம்‌ ந பபூவ ஸோச்யுதோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–17-

ஸமஸ்த ஜகதாதாரனான பரமனது திருப் பள்ளியான ஆதி சேஷன் மேல்‌ திருப் பாதங்களை ஊன்றிப்‌ பூமி தேவியைப்‌ பேர்த்‌தெடுத்த எந்‌த பகவானுக்கு உவமையே இல்லையோ அந்த பகவான்‌ எனக்கு மங்கள வ்ருத்தியைச்‌ செய்வாராக-

ஸகர்கரம்‌ யஸ்ய ச ப்ரும்ஹிதம்‌ முஹா:ஸநந்தநாத்யைர்‌ ஜந லோக-ஸம்ச்‌’ரிதை: |
ஸ்ருதம்‌ ஜயே த்யுக்தி பரைஸ்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி; | –18-

உறுமலுடன்‌ கூடிய எவரது ஐய கோஷத்தை ஐந லோகத்தில் இருந்த ஸநந்தநாதியர்‌ பல்லாண்டு பாடிய வண்ணமே கேட்டு மகிழ்ந்தனரோ அந்த ஹரி எனக்கு மங்களங்களைப்‌ பெருக்கி அருள்‌ செய்ய வேண்டும் –

ஏகார்ணவாத்‌ யஸ்ய மஹீயஸோ மஹீம்‌ ஆதாய வேகேந கமுத்பதிஷ்யத: |
நதம்‌ வபுர்‌ யோகிவரைஸ்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; | .-19-

மிகப் பெரிய நீர்ப் பரப்பிலிருந்து நிலமகளைப்‌ பெயர்ந்து எடுத்துக் விரைவாக விரைவாக மேலே பாய்ந்து வந்த எந்தக்‌ கோல வராஹ மூர்த்தியை ஸநகாதி யோகியர்‌ கண்டு வணங்கினரோ அந்த ஹரி எனக்கு மங்களங்களைப் பெருக்குவராக –

ஹதோ ஹிரண்யாஷ மஹாஸூர: புரா புராண பும்ஸா பரமேண யேந |
வராஹ ரூபஸ்‌ ஸ பதி: ப்ரஜாபதி:மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; ||–20-

மிகச் சிறந்த புராண புருஷரான யாரால்‌ ஹிரண்யாக்ஷனென்ற அஸுரன்‌ அழிக்கப் பட்டானோ, அந்த ஞானப் பிரான்‌ எனக்கு மங்களங்கள் பெருக அருள்‌ செய்ய வேண்டும் –

ஸ்ரீ நரஸிம்ஹாவதாரம்
தம்ஷ்ட்ரா-கராளம்‌ ஸுர பீதி நாச”கம்‌ க்ருதம்‌ வபுர்‌ திவ்ய-ந்ருஸிம்ஹ-ரூபிணா |
த்ராதும்‌ ஜகத்‌ யேந ஸ ஸர்வதா ப்ரபு: மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–21-

தேவர்களின்‌ பயத்தை அகற்ற வல்லரும்‌ கோரைப் பற்களால்‌ அச்சுறுத்துவதுமான நரங் கலந்த சிங்க உருவை உலகைக்‌ காக்க வென்றே யார்‌ தரித்தாரோ அந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்‌ செய்ய வேண்டும்‌-

தைத்யேந்த்ர-வக்ஷஸ் ஸ்தல-தார-தாருணை: கரேருஹைர்‌ ய: க்ரகசாநுகாரிபி: |
சிச்சேத லோகஸ்ய பயாநி ஸோ அச்யுதோ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ||–22-

அவுணன்‌ மார்பைக்‌ கிழிக்க வல்லதும்‌ ரம்பம்‌ போன்றதுமான நகங்களால்‌ உலகின்‌ பயத்தைப்‌ போக்கிய ஹரி எனக்கு மங்களங்‌கள் பெருக அருள வேண்டும் –

தந்தாந்த-தீப்தத்யுதி-நிர்மலாநி ய; சகார ஸர்வாணி திசாம்‌ முகாநி |
நிநாத-வித்ராஸித-தாநவோ ஹ்யஸெள மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: |–23-

பற்களின்‌ காந்தியால்‌ திசை முடிவிலும்‌ ஒளி பரப்புகிறவரும்‌ ஸிம்ஹ நாதத்தால்‌ அஸுரர்களை நடுக்கமுறச்‌ செய்பவருமான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள வேண்டும் –

யந்நாம-ஸங்கீர்த்தநதோ மஹா பயாத்‌ விமோக்ஷ-மாப்நோதி ந ஸம்சயம்‌ நர; |
ஸ ஸர்வ-லோகார்த்தி-ஹரோ ந்ரு கேஸரீ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ॥–24-

தன்‌ நாமத்தைச்‌ சொல்பவனது பெரும்‌ பயத்தைப்‌ போக்கி அருள்பவரும்‌ உலகனைத்தின்‌ துயரைத்‌ துடைப்பவருமான சிங்கப்‌ பிரான்‌ எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக-

ஸடா-கராள-ப்ரமணா நிலாஹதா: ஸ்புடந்தி யஸ்யாம்புதராஸ்‌ ஸமந்தத: |
ஸ திவ்ய ஸிம்ஹ: ஸ்புரிதா-நலேக்ஷணோ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி:–25-

அசையும்‌ பிடரி மயிர்களால்‌ மேகக்‌ கூட்டங்களை நாற் புறமும்‌ சிதறி விழும்படி செய்பவரும்‌ ஜ்வலிக்கும்‌ கனல்‌ போன்ற கண்களை வுடையவருமான சிங்கப்பிரான்‌ எனக்கு மங்களம்‌ பெருக அருள்வாராக.

யதீஷண-ஜ்யோதிஷி ரஸ்மி-மண்டலம்‌ ப்ரலீந-மீஷந்‌ ந ரராஜ பாஸ்வத: |
குத: ச சாங்கஸ்ய ஸ திவ்ய ரூப-த்ருக்‌ மமாஸ்து: மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: |–26-

பகலவனது கதிர்க் கூட்டங்கள்‌ எவரது கண்ணொளியில்‌ மங்கிப்‌ போகிறதோ, சந்திரனைப் பற்றிப்‌ பேசவே வேண்டிய தில்லையோ, அந்த அழகிய சிங்க உருவம்‌ தரித்த ஹரி எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக-

அசே’ஷ-தேவேச’-நரேஸ்வரேஸ்வரை: ஸதா ஸ்துதம்‌ யஸ் சரிதம்‌ மஹாத்புதம்‌ |
ஸ ஸர்வ-லோகார்த்தி-ஹரோ மஹா ஹரி: மமாஸ்து மாங்கள்ய- -விவ்ருத்தயே ஹரி: ॥–27-

எந்த சிங்கப் பிரானது மிக அத்புத சரிதையை ப்ரபுக்களும்‌ மேலாத்‌ தேவரும்‌ நிலத் தேவரும்‌ புகழ்ந்த வண்ண மிருக்கிறார்களோ உலகனைத்தின்‌ துயரையும்‌ பாபங்களையும்‌ போக்க வல்ல அந்த ஹரி: எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக –

த்ரவந்தி தைத்யா: ப்ரணமந்தி தேவதா: நச்‌யந்தி ரஷாம்ஸி அபயாந்தி சாரய; | யத் கீர்த்தநாத்‌ ஸோ அத்புத-ரூப கேஸரீ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–28-

எவருடைய திரு நாமத்தைச்‌ சொன்ன மாத்திரத்தாலேயே அஸூரர்கள்‌ ஒடுகின்றனரோ, தேவர்கள்‌ வணங்குகின்றனரோ, அரக்கர்கள்‌ அழிந்து போவார்களோ, எதிரிகள்‌ திரும்பி ஓடுவார் களோ, அந்த அழகிய சிங்கர்‌ எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக-

வாமனாவதாரம்‌
ருக்பாவிதம்‌ யோ யஜுஷா ஹி ஸ்ரீமத்‌ ஸாம த்வநி-த்வஸ்த-ஸமஸ்த-பாதகம்‌ |
சக்ரே ஜகத்‌ வாமநகஸ்‌ ஸ் ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி –29-

ருக் வேதத்தை உச்சரித்து உலகைத்‌ தூயதாக்கியும்‌, யஜுர்‌ வேதத்தால்‌ நிறம் பெறச் செய்தும்‌ ஸாம கானத்தால்‌ ஸமஸ்த பாதகத்தையும்‌ அழித்து முள்ள திருக் குறள்‌ உருவனான மாயன்‌ எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக-

யத்பாத-விந்யாஸ-பவித்ரதாம்‌ மஹீ யயெள வியச்சர்க்‌-பஜுஷா-முதீரணாத்‌ |
ஸ வாமநோ வாம சரீர-ரூப த்ருக்‌ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ॥–30-

எவருடைய திருவடி படுதலால்‌ நிலப் பரப்பும்‌, ருக்‌ யஜுஸ்‌ மூதலிய வேதங்களைச்‌ சொல்வதால்‌ வானமும்‌ புனிதமாயினவோ அந்த வாமன மூர்த்தி எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக –

யஸ்மிந்‌ ப்ரயாதே அஸூர-பூப்ருதோ அத்வராத்‌ நநாம கேதாத்‌ அவநிஸ்‌ ஸஸாகரா |
ஸ வாமநஸ்‌ ஸர்வ-ஜகந் மயஸ்‌ ஸதா மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ॥–31-

அஸுர மன்னன்‌ மஹா பலியின்‌ அரண்மனையை நோக்கி எவர்‌ போன போது கடல்‌ சூழ்ந்த நில மங்கை வருந்தித் தலை குனிந்தாளோ உலகனைத்தையும்‌ தன்னுள்‌ ஒடுக்கிய அந்தத்‌ திருக் குறளப்பன்‌ எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக–

மஹாத்புதே தைத்ய பதேர்‌ மஹா த்வரே யஸ்மிந்‌ ப்ரவிஷ்டே ஷுபிதம்‌ மஹா ஸூரை: |
ஸ வாமநோ அந்தஸ்‌ ஸ்தித ஸப்த லோக த்ருக்‌ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–32-

மிக ஆச்சர்யமான அஸூர மன்னனது யாக சாலையில்‌ எவர் ப்ரவேசித்ததும்‌ அஸுரரனைவரும்‌ குழப்ப மடைந்து போயினரோ, ஸப்த லோகத்தையும்‌ தன்‌ வயிற்றில்‌ வைத்துக் கொண்ட அந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக–

ஸங்கைஸ்‌ ஸுராணாம்‌ திவி பூதலஸ்திதை: ததா மநுஷ்யைர்‌ ககநே ச கேசரை: |
ஸ்துத: க்ரமாத்‌ ய: ப்ரசசார ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–33-

ஸ்வர்க்கத்தில்‌ தேவர்களாலும்‌, தரையில்‌ மனிதர்களாலும்‌, வானில்‌ வானவர்களாலும்‌ முறையுடன்‌ ஸ்துதிக்கப்பட்டவாறு உலகளந்த ஹரி எனக்கு மங்கள வ்ருத்தியை செய்தருள வேண்டும் –

க்ராந்த்வா தரித்ரீம்‌ ககநம்‌ ததா திவம்‌ மருத் பதேர்‌ ய: ப்ரததெள த்ரிவிஷ்டபம்‌ |
ஸ தேவ தேவோ புவநேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; –34-

நிலத்தையும்‌ வானத்தையும்‌ ஸ்வர்க்க உலகையும்‌ அளந்து கொண்டு இந்த்ரனுக்கு மூவுலகையும்‌ அளித்த ஜகந் நாதனான ஹரி எனக்கு மங்களங்களைப்‌ பெருக்கி யருள வேணும் –

அநுக்ரஹம்‌ சாபி பலே-ரநுத்தமம்‌ சகார யச்சேந்த்ர-பதோபமம்‌ க்ஷணாத்‌ | ்‌
ஸுராம்ச்‌’ச யஜ்ஞாம்ச”புஜஸ்‌ ஸ ஸர்வதா |மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–35-

மஹாபலிக்கு இந்திர பதவியை யொத்த உயர்‌ பதவியையும்‌. வாசகத்தின்‌ ஹவிர்ப் பாகத்தைத்‌ தேவர்களுக்கும்‌ விரைவில்‌ அளித்த ஹரி எனக்கு மங்களங்களே பெருக அருள் பாலிப்பாராக —

ஸ்ரீ மத்ஸ்யாவதாரம்‌
ரஸாதலாத்‌ யேந புரா ஸமாஹ்ருதா: ஸமஸ்த வேதா ஜல சார ரூபிணா |
ஸ கைடபாரிர்‌ மதுஹாம்புசாயீ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–36-

மீனாக, மது கைடபர்களை அழித்து, பாதாளத்‌திலிருந்து வேதங்‌களை மீட்டுக்‌ கொணர்ந்த ஷீராப்தி நாதனான ஹரி என்‌ மங்கள்‌களைப்‌ பெருக்குவாராக–

ஸ்ரீ பரசுராமாவதாரம்‌
நி:ஷத்ரியாம்‌ யச்‌’ச சகார மேதிநீம்‌ அநேகசோ பாஹு வநம்‌ ததாச்சிநத்‌ |
ய:கார்த்த வீர்யஸ்ய ஸ பார்க வோத்தமோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; || –37-

கார்த்த வீர்யார்ஜுனனது ஆயிரம்‌ தோள்களைத்‌ துணித்து, பலகால்‌ அரசர்களை யழித்த பரசுராமராகிய ஹரி எனக்கு மங்களங்‌களைப்‌ பெருக்க வேணும்‌–

ஸ்ரீ ராமாவதாரம்‌-
நிஹத்ய யோ வாலிந-முக்ர-விக்ரமம்‌ நிபத்ய ஸேதும்‌ ஜலதெள தசா நநம்‌ |
ஜகாந சாந்யாந்‌ ரஜநீ சரா நஸெள மமாஸ்து மாங்கள்ய விவருத்தயே ஹரி: ॥ –38-

கொடிய வலிமை யுள்ள வாலியைக்‌ கொன்று, மா கடலில்‌ அணையைக்‌ கட்டி தசமுகனையும்‌ மற்றுமுள்ள அசுரர்களையும் அழித்த ஹரி எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக–

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்‌-
சிக்ஷேப பால: சகடம்‌ பபஞ்ஜ யோ யமார்ஜுநம்‌ கம்ஸமரிம்‌ ஜகாந ௪ |
மமர்த சாணூர முகாந்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–39-

பால கிருஷ்ணனாய்ச்‌ சகடெறிந்தும்‌, மருத மரங்களை முறித்தும்‌ சாணூராதியரையும்‌, பகைமை கொண்ட கம்சனையும்‌ அழித்‌தும்‌ உகந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள் பாலீப்பாராக–

ப்ராதஸ்‌ ஸஹஸ்ராம்சு” மரீசி-நிர்மலம்‌ கரேண பிப்ரத்‌-பகவாந்‌ ஸுதர்ச’நம்‌ |
கெளமோதகீம்‌ சாபி கதா-மநந்தோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: |-40-

காலையில்‌ ஆயிரம்‌ கதிரவனது கதிர்க் கூட்டத்தைப்‌ போன்ற பேரொளி யுள்ள சக்கரத்தையும்‌ கெளமோதகி எனும்‌ கதையையும்‌ ஏந்திய பகவானான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள் பாலிப்‌ பாராக.-

ஹிமேந்து-குந்த-ஸ்படிகாப-நிர்மலம்‌ முகா நிலா பூரிதம்‌ ஈஸ்வரேஸ்வர | மத்யாஹ்ந காலே அபி ஸ ச’ங்கமுத்வஹந்‌ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–41-

பனி நீர்‌, சந்த்ர மண்ட்லம்‌, குந்தப்பூ, ஸ்படிகமணி இவை போன்று வெண்ணிறமாயும்‌, திரு முகத்தால்‌ காற்று நிரப்பப் படுவதாயும்‌ உள்ள ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை நடுப் பகலில்‌ ஏத்தி யருளும்‌ ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்‌ செய்வாராக –

ததா அபராஹ்ணே ப்ரவிகாஸி பங்கஜம்‌ வக்ஷஸ் ஸ்தலேந ஸ்ரிய முத்வஹந்‌ ஹரி: |
விஸ்தாரி-பத்மாயத-பத்ர லோசநோ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே –42-

மலர்த்த தாமரையைக்‌ கையிலும்‌ திருமகளைத்‌ திரு மார்பிலும்‌ மாலையில்‌ ஏந்தி யருளும்‌ மலர்ந்த தாமரை யிதழை யொத்த கண்ணீனரான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்‌ செய்வாராக –

ஸர்வேஷு காலேஷு ஸமஸ்த தேசேஷு அசேஷ கார்யேஷு ததேஸ்வரேஸ்வர: |
ஸர்வைஸ்‌ ஸ்வரூபைர்‌ பகவாநநாதிமாந்‌ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ॥ –43-

எல்லாக்‌ காலத்திலும்‌, எல்லா இடங்களிலும்‌, எல்லாத்‌ தொழில்களிலும்‌, எல்லா வித உருவங்களுடன்‌ தோன்றி யருளும்‌ ஆதி யந்த மற்ற பகவானான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அநுக்ரஹம்‌ செய்வாராக –

பல ஸ்ருதி
ஏதத்‌ படந்‌ தால்ப்ய ஸமஸ்த பாபை; விமுச்யதே விஷ்ணு பரோ மநுஷ்ய: |
ஸித்த்யந்தி கார்யாணி ததாஸ்ய ஸர்வாந்‌ அர்த்தா-நவாப்நோதி யதேச்சதே தாந்‌ ॥–44-

தால்ப்ய முனிவரே, விஷ்ணுவே பர தேவதை யெனும்‌ உண்மை உணர்ந்த மனிதன்‌ இத்துதி நூலைப்‌ பாராயணம்‌ செய்து எல்லாப்‌ பாபங்களிலிருந்தும்‌ விடுபடுகிறான்‌. அவனுடைய கார்யங்கள்‌ யாவும்‌ நற் பயனை அளிக்கின்றன. விரும்பிய எல்லாப்‌ பொருளும்‌ அவனுக்‌குக்‌ கை கூடுகின்றன-

துஸ் ஸ்வப்ந: ப்ரச’ம-முபைதி பட்ய மாநே ஸ்தோத்ரேஸ்மிந்‌ ஸ்ரவண விதெள ஸதோத்ய தஸ்ய!
ப்ராரம்போ த்ருத முபயாதி ஸித்திமீச பாபாநி க்ஷபயதி சாஸ்ய தேவ தேவ: ||–45-

இத்துதியை எப்பொழுதும்‌ படிப்பதைக்‌ கேட்பதென்னும் விரதம்‌ பூண்டவனது கெட்ட கனவுகள்‌ அடங்கிப்‌ பயனற்றுப்‌ போகும்‌, துவங்கிய தொழில்கள்‌ விரைவில்‌ நற்பயனளிக்கும்படி, நிறைவேறும்‌, தேவ தேவனாய இறைவன்‌ பாவங்களை யெல்லாம்‌ போக்கி விடுதிறான் –

மாங்கள்யம்‌ பரமபதம்‌ ஸதார்த்த-ஸித்திம்‌ நிர்விக்நா-மதிகபலாம்‌ ஸ்ரியம்‌ ததாதி |
கிம்‌ லோகே ததிஹ பரத்ர சாபி பும்ஸாம்‌ யத்‌ விஷ்ணு-ப்ரவணதியாம்‌ ந தால்ப்ய ஸாத்யம்‌ ॥–46-

மங்களத்தையும்‌, நலமந்தமில்லதோர்‌ நாட்டையும்‌, விரும்பியது நன்கு விரைவில்‌ கை கூடுவதையும்‌, தடை யற்ற பெருஞ் செல்வத்தையும்‌ இறைவன்‌ அருள்வான்‌. தால்ப்ய முனிவரே, இம்மையிலும்‌ மறுமையிலும்‌ திருமாலடி யார்க்குக்‌ கிட்டாதது யாதுமில்லை —

தேவேந்த்ரஸ்‌ த்ரிபுவந-மர்த்த-மேகபிங்க: ஸம் ஸித்திம்‌ த்ரி புவநகாம்‌ ச கார்த்த வீர்ய: |
வைதேஹ: பரமபதம்‌ ப்ரஸாத்ய விஷ்ணும்‌ ஸம் ப்ராப்தஸ்‌ ஸகல-பல ப்ரதோ ஹி விஷ்ணு: ||–47-

கார்த்த வீர்யார்ஜுனன்‌ மூவுலகிலும்‌ அதர்மத்தைத் தடுக்க வல்ல தர்ம சக்தியையும்‌, குபேரன்‌ பணத்தின்‌ அதிபனாகும்‌ பதவியையும்‌, இந்த்ரன்‌ மூவுலகில்‌ உள்ள இன்பத்தையும்‌, விதேஹ மன்‌னன்‌ பரம பதத்தையும்‌ திருமாலைப்‌ பூசித்தே பெற்றனர்‌. எல்லாப் பயன்களையும் அளிக்க வல்லவர்‌ திருமால் தானே –

ஸர் வாரம் பேஷு தால்ப்யைதத்‌ துஸ் ஸ்வப்நேஷு ச பண்டித:
ஜபே-தேகமநா விஷ்ணெள ததா மங்கள்ய-தர்சநே ॥-48-

தால்ப்யரே, அறிவுள்ளவன்‌ எல்லாக்‌ கார்யங்களை ஆரம்பிக்‌கும் போதும்‌, கெட்ட கனவுகள்‌ தோன்றும் போதும்‌, அமங்களங்கள்‌ நேரும் போதும்‌, இறைவனான திருமாலிடம்‌ மாறாத பக்தியுடன்‌ இத்‌ ஸ்துதியை ஜபம்‌ செய்ய வேண்டும் –

சமம்‌ ப்ரயாந்தி துஷ்டாநி க்ரஹபீடாச்‌’ச தாருணா: |
கர்மாரம்பாச்‌’ ச ஸித்த்யந்தி புண்யமாப்நோதி சோத்தமம்‌ –49-

அவனது தீமைகள்‌ யாவும்‌ அழிந்து போகின்றன. கொடிய கிரஹங்களின்‌ தீய பலன்களும்‌ மாறுகின்றன. தொழில்களும்‌ நற்‌ பயனளிக்கின்றன. தீய கனவும்‌ பயனற்றதாகிறது. நல் வினையின்‌ உயர்ந்த பயனையும்‌ பெறுகிறான் —

ஹரிர்‌ ததாதி பத்ராணி மங்கள்ய ஸ்துதி ஸம்ஸ்துத;
கரோ-த்யகில-ரூபைஸ்து ரக்ஷா-மக்ஷத-ச’க்தி ப்ருத்‌ ॥–50-

மாங்கள்ய ஸ்தவத்தால்‌ ஸ்துதிக்கப் பெற்ற திருமால்‌ எல்லா மங்களங்சளையும்‌ நல்குகிறான்‌. எல்லா வித வடிவத்திலும்‌ தோன்றி குறைவற்ற ஆற்றல்‌ படைத்த அந்தப்‌ பரமன்‌, அடியார்க்கு நற் பாது காப்பையும்‌ அளிக்கிறான் –

ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தரத்திலுள்ள மாங்கள்ய ஸ்தவம்‌ முற்றும்‌.

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ த்ரிம்சத் ப்ரஸ்ந உத்தரம்-ஸ்ரீ பழ நடை விளக்கம்‌-ஸ்ரீ திருமழிசை அண்ணா அப்பங்கார் ஸ்வாமிகள்-

June 11, 2026

ஸ்ரீ அண்ணா அப்பங்கார் ஸ்வாமி செய்தருளிய ப்ரபந்தங்கள்.
க. ஸ்ரீ வசந பூஷண வ்யாக்யாநத்திற்கு அரும் பதம்.
உ.தத்வ ஸார வ்யாக்யாநம்.
3-ஸூக்தி ஸாதுத்வ மாலிகை
ச. வச ஸூதா மீமாம்ஸை.
ரு .நியாய மந்திரம்.
சு. ஸ்ரீதத்வஸூ
எ .லஷ்மீ மங்கள தீபிகை.
இவை முதலானவை இன்னும் 30 க்ரந்தங்களுண்டு

பழநடைவிளக்கம் என்பது ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில், ஆச்சாரியர்களின் மரபு, வழிமுறைகள் மற்றும் ஒழுக்க நெறிகளை விளக்கும் ஒரு முக்கிய நூலாகும். இந்த நூலை திருமழிசை அண்ணா அப்பங்கார் சுவாமி அருளிச்செய்துள்ளார்.

வேதாந்தாசார்யர், குரு பரம்பரையிலெங்கே யிருந்து பிரிவென்றில் –
எம்பெருமானார், கிடாம்பி யாச்சான், கிடாம்பி ராமாநுஜாசார்யர், ஸ்ரீரங்க ராஜ குரு, கிடாம்பி யப்புள்ளார், வேதாந்தாசார்யர், என்று க்ரமமாகையாலே கிடாம்பி யாச்சான் வகுப்பிலே பிரிவு. அதிலிவர் திருவடிகளிலே யாச்ரயித்தவர் நயிநாராசார்யரும் ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்.அதில் ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் திருவடிகளிலே யாச்ரயித்தவர் வாத்ஸ்ய வரதாசாரயர். அவரை யாச்ரயித்தவர் வரத விஷ்ணவாசார்யர். அவரை யாஸ்ரயித்தவர் தயாதீசகுரூத்தமர். அவரை யாஸ்ரயித்தவர் ந்ருஸிம்மாசார்யர். அவரை யாச்ரயித்தவர் வரதாசார்யர் . அவரை யாஸ்ரயித்தவர் பராங்குசார்யார். அவரை யாச்ரயித்தவர் தாதாசார்யர் . அநந்தரம் ராமானுஜாசார்யர். அநந்தரம் ஸ்ரீ வேங்கடா சார்யர்.அநந்தரம் ஸ்ரீவீரராகவாசார்யர். அநந்தரம்ஸ்ரீரங்கபதி தேசிகர். அநந்தரம்ஸ்ரீ
ரங்கநாதாசார்யர், அநந்தரம் ஸ்ரீதத்வ ஸித்தாஞ்சந நிர்னமாதிரு வேதாந்த ராமாநுஜ ஜீயர். அநந்தரம் கோபாலாசார்யர், அநந்தரம் வேதாந்த ராமாநுஜ ஜீயர்
இவர்களுக்குள் சிலருக்கு தப்த சக்ராங்கனமும் க்ரந்தமுமுண்டு. சிலருக்கு க்ரந்த மாத்ரம் வேதாந்தாசார்யர் ஸம்ரதாயத்திலே யென்று சொல்லுவார்கள். ப்ரம்ம தந்த்ர ஜீயர் துடங்கி ஜீயர்கள் க்ரமமாக வந்த மடம் பிரம்ம தந்தர ஜீயர் மடமென்று சொல்லுவர்கள். வேதாந்தாசார்யர் தம்முடைய சிஷ்யரான ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயருக்கு தம்முடைய திருவாராதநமானஸ்ரீ ஹய க்ரீவரை யெழுந்தருளப் பண்ணிக் கொடுத்தாரென்று சொல்லுவர்கள். இவருக்கு பிதா அநந்தாசார்யர். அவருக்கு பிதா புண்டரீகாக்ஷயஜ்வா.
வேதாந் தாசார்யர் குடி தூப்பில். அவதார ஸ்தலம் பெருமாள் கோவில் . அவதரித்த
வருஷம் கலி யுகத்தில் சகாப்தம் ஆயிரத்து நூற்றுத் தொண்ணூத்திரண்டாவதான சுக்ல வர்ஷம். திருநாட்டிற் கெழுந்தருளினது சகாப்தத்தில் ஆயிரத்தி யிரு நூற்றி முப்பத்திரண்டாவதான சவ்ம்ய வருஷம்.

ஆதி வண் சடகோப ஜீயர் மடத்திலவர் விஷயமான ஏக விம்சதி ப்ரஸ்நோத்தரம் எங்ஙனே யென்றில் :-பெரிய வாச்சான் பிள்ளை துடங்கி யாதி வண் சடகோப ஜீயரளவும் இப்பால் மூன்று நான்கு பட்டத் தளவிலும் திரு விலச்சினை விஷயமாகவும் கிரந்த விஷயமாகவும் பெரிய வாச்சான் பிள்ளை யொன்றே யாகக் கலப்பற்று நடந்து வந்தது. இப்பால் ருசி பேதத்தாலே ஸ்ரீ ரகஸ்ய த்ரய ஸாரம் ஸ்வாசார்ய ஸம்பிரதாய விருத்தமே யாகிலும் அத்தை யதிகரித்துக் கொண்டு போந்து ததனுகுண ப்ரதிபத் யநு வர்த்தனமும் பண்ணிக் கொண்டு போந்தார்கள். இப்படி யிருந்தாலும் யைந்த் யுத்ஸவ தத் பாரணாதி விஷயங்களிலே ஸம்பரதாயாத்திலங்கம் பண்ணினார்களில்லை. ஈடு முப்பத்தாறாயிரம் முதல் திருமந்திரார்த்த விஷயமான முமுஷுப்படி பர்யந்தமான பூர்வ ஸம்பரதாய கிரந்தங்களையும் விட்டார்களில்லை. ஆகையால் இப்படி உபய ஸம்ப்ரதாய மிச்ரராயிருப்பர்கள். இந்த ஆதி வண் சடகோப ஜீயருடைய மடம் மணவாள மா முனிகளுடைய நியமநத்தாலே யுண்டாய்த்த தென்று தத் ஸம்ப்ரதாயஸ்தருஞ் சொல்லுவார்கள். ஆதி வண் சடகோப ஜீயர் திரு நாராயண புரத்திலே செல்வப் பிள்ளை ஸன்னிதியிலே மணவாள மா முனிகளைத் திருப்ரதிஷ்டை பண்ணி வைத்து தனிக் கோவிலும் கட்டி வைத்தா ரென்றும் சொல்லுவார்கள்
இவர் திருநக்ஷத்ரம் புரட்டாசி கேட்டை

இந்த மடத்தில் வடகலையார் ப்ரவேச விஷயமான ப்ரஸ்நத்திற்கு உத்ததரம்:- முன்னெழுதிய நாலு மூன்று பட்டத்திற்கிப்பால் வரவர ஸஹவாஸ விசேஷத்தாலும் ருசி விசேஷத்தாலும் புண்டர பேதமும் ஸம்ப்ராதாய விருத்தமாக மடத்து சிஷ்யர்கள் ஏகாதசீச் ராத்தாதிகள் பண்ணிக் கொண்டு வர,அத்தை நிவாரியாமல் ராமானுஜ தயா பாத்ரத்தையுங் கூட்டி யநுஸந்தித்துக் கொண்டும் போருகையாலே இந்த மடத்திலே வடகலையார்கள் பிரவேசித்தார்களென்றும்படி யிருந்தார்களல்லது பெரிய வாச்சான் பிள்ளையோடே திருவிலச்சினை ஸம்பந்தமற்ற சுத்த வடகலையார் இந்த மடாதிபதிகளாய் இருப்பதில்லை.

அநந்தரம் ப்ரம்ம தந்த்ர ஜீயர் மடத்திற்கும் பரகால ஜீயர் மடத்திற்கும் நிஷ்பத்தி க்ரம ப்ரஸ்நத்திற்குத்தரம் எங்ஙனே யென்றில் – வேதாந்தாசார்யர் திருவடிகளிலே யாச்ரயித்த பேரருளாளயனென்கிறவர் அவர் ஸன்னிதியிலே ஸகல சாஸ்த்ரங்களை யுமதிகரித்து வேதாந்தத்திலே அதி நிபுணராயிருக்கையாலே நீர் ப்ரம்ம தந்த்ர ஸ்தந்ரரென்று வேதாந்தாசார்யராலே திருநாமஞ் சாற்றப் பட்டு பின்பு ஸந்யஸித்து ஆசார்ய பரதந்த்ரராயிருந்தார். இவருக்கு
வேதாந்தாசார்யர் தம்முடைய ஹயக்ரீவரை யெழுந்தருளப் பண்ணிக் கொடுத்தார் . பரம்ம தந்திர ஜீயரும் பின்பொரு ஜீயருக்கு ஹயக்ரீவரை யெழுந்தருளப் பண்ணிக் கொடுக்க அன்று முதல் அவர் நியமனத்தாலே அந்த மடம் நடந்து வருகிறது. இந்த ஜீயர்களுடைய திரு முடி வர்க்கம் வண் சடகோப ஜீயர் மடத்திலே பிரிவு.இதை பரகால ஜீயர் மடமென்று வண் சடகோப ஜீயர் மடத்தார் சொல்வார்கள்-

அநந்தரம் முனி த்ரயமென்று லோகத்தில் வ்யவஹரிக்கிற வேதாந்த ராமாநுஜ ஜீயரவர்களுக்கும் வண் சடகோப ஜீயரவர்களுக்கும் மடத்தாருக்கும் ஆசார பேத மென்னென்ன வித்யாதி ப்ரச்நோத்தரம்–எங்ஙனே யென்றில் –
முனி த்ரய ஸம்பரதாயத்தில் அவர்கள் ஸ்ரீஜயந்தி விஷயத்திலே ஸர்வ வித வேதாத்யாகம் வைஷ்ணவர்களுக்கு ஆவஸ்யகமா யிருக்க, சந்த்ரோதய வேதா த்யாகம் மாத்ரம் ஆவஸ்யகம்,மற்றை வேதாதோஷமன்றென்றும்; அஹோ ராத்ரம் உபவாஸமும் மற்றை நாள் பாரணையும் ;ஸ்ரீராம நவமி விஷயத்திலும் ந்ருஸிம்ம ஜயந்தீ விஷயத்திலும் அஹோராத்ரோபவாஸமும் மற்றை நாள் பாரணையும் ; ஸ்ரீ தத்வ விஷயத்தில் ஈச்வர தத் வாந்தர்ப்பாவமும் ஐச்சிக பகவச் சேஷத்வமும்; பர நியாஸ விஷயத்தில் பிராட்டிக்குப் ப்ரயோக பேதேந ஸம பிரதாந்யேநோத்தேசயத்வமும் விசேஷண விசேஷ பாவேந உத்தேச்ய த்வமும்; இன்னும் சில பேதங்களையுங் கொள்ளுவர்கள் -வண் சடகோப ஜீயர் ஸம் ப்ரதாயஸ்தர் ஐயந்தீ விஷயத்தில் ஸர்வ வேதா த்யாகமும் ராத்ரியிலே உத்ஸவாந்தத்திலே பாரணையும் ந்ருஸிம்ம ஜயந்தியிலே ஸாயங்கால மானவாறே உத்ஸவாந்தத்தில் பாரணையும் ஸ்ரீராம நவமி விஷயத்தில் திவாப் பாரணையும் பிராட்டி விஷயத்தில் வேதா தாசார யோக்த பஞ்சகங்களிலே
த்விதீய பக்ஷமும் பிராட்டிக்கு வயாஸஜ்ய விருத்யுபாயத்வமாதல் ஸம ப்ராதாங்யேந ப்ராத்யேகருத்யு பாயவமாதல் விசேஷண விசேஷயாவே உபா யத்வமாதல் விசேஷ்ய கதோபாயத்தில் லஷணமான விசேஷணோபாயத்வ மாதவில்லை; பின்னை புருஷகாரத்வ மாத்ரமுள்ளது என்றுங் கொள்ளுவர்கள்.
இன்னுமிரண்டு மடஸ்தர்களுக்கும் ப்ரபத்தி ப்ரயோகாதிகளிலும் பேத முண்டு. இந்த விரண்டு மடஸ்தர்களுக்கும் பரகால ஜீயர் மடஸ்தர்களுக்கும் தத்வ விஷயத்திலும் பேதமுண்டு. எங்ஙனே யென்றில் – பரகால ஜீயர் ஸம்பரதாயஸ்தர் பிராட்டிக்கு ப்ரம்மத்வமும் ஜகதி யாபாரமும் நிக்ரஹ கர்த்ருத்வமாகிற தத்வ விஷயத்தில் ப்ரகார பேதமும் யதிவந்தந விஷயத்தில் ஆசாரயனான க்ரஹியையுங் கூட யதியானவன் வந்தநம் பண்ணக் கூடாதென் றித்யாத்யாசார பேதங்களுங் கொண்டார்கள். கீழ்ச் சொன்ன விரண்டு ஸம்ப்ரதாயஸ்தரும் இவை யொன்றுங் கொண்டார்களில்லை.ஆகையா லிந்த ஸம் பரதாயத்திற்கு தத்வவிஷயத்திலும் ஆசார விஷயத்திலும் பரஸ்பர பேத முண்டு.

தென்னாசார்யர்களிலே யிப்படி தத்வ விஷயத்திலும் ஆசார விஷயத்திலும் பேத முண்டோ வென்கிற த்ரயோ விம்சதி ப்ரச்நோத்தரம். எங்ஙனே யென்னில் -கீழ்ச் சொன்னவர்களைப் போலே தத்வ விஷயத்திலும் ஆசார விஷயத்திலும் நிபந்த க்ரந்தங்களிலே அநுவாதமும் தூஷணமும் பண்ணும்படியான ப்ரபல விரோத மொன்றுமில்லை. கிந்து, ஸ்ரீபாத தீர்த்த க்ரஹண விஷயத்தில்
த்விவாரமென்று வானமாமலையார். திரிவாரமென்று கந்தாடையார். இங்ஙனே ஸூஷ்ம பேதங்கள் சிலதுண்டு.

சதுஸ்ஸப்தி பீடஸ்த விஷயமான சதுர் விம்சதி ப்ரச்நோத்தரம் எங் ஙனேயென்றில் –
ஆளவந்தார் திருப்பேரனாரப் பிள்ளையப்பன்-க.
பெரியநம்பி குமாரர் ஸ்ரீபுண்டரீகர்-உ.
திருக் கோட்டியூர் நம்பி குமாரர் தெக்காழ்வான்-
திருமலை யாண்டான் குமாரர் சுந்திரத்தோளிணையார் -ச.
பெரிய திருமலை நம்பி குமாரர்களில் இராமாநுஜ நம்பியும்- திருமலை நம்பியும் -ரு.
கூரத்தாழ்வான் குமாரர்களான பட்டரும் ஸ்ரீ ராமப் பிள்ளையும் –
முதலியாண்டானவர் குமாரர் கந்தாடை யாண்டான்- எ.
நடுவிலாழ்வான் – அ.
கோமடத்தாழ்வான்- சூ.
திருக்கோவலூராழ்வான் – க0.
திருமோகூராழ்வான்-கக.
பிள்ளைப் பிள்ளை யாழ்வான் – உ.
நடா தூராழ்வான் – ககூ.
எங்களாழ்வான்- கசா.
அனந்தாழ்வான்- கரு.
மிளகாழ்வான் -16
நெய்யுண்டாழ்வான்- கஎ.
சேட்டலூர் சிறியாழ்வான்- கஅ. வேதாந்தியாழ்வான் -19
கோவிலாழ்வான்- உ0.
உக்கலாழ்வான் – உக
அரணபுரத்தாழ்வான் – உஉ.
எம்பார் – உங.
கிடாம்பி யாச்சான்- உச.
கணியனூர் சிறியாச்சான் -உரு .
தொங்கிலச்சான்- 26-
ஈச்சம்பாடி யாச்சான்-27
திருமலை நல்லான் -28
செட்டம்பள்ளியர்-உசு.
ஈச்சம்பாடி யர் – 30.
திருவள்ளரையர் -கூக.
ஆட்கொல்லி யர்-கூஉ.
திருநகரிப்பிள்ளை- கூகூ .
காராஞ்சி ஸோமயாஜியார் – கூசு.
அலங்கார வேங்கடவர் – உரு .
நம்பி குருந்தேவர் – கூசு.
செருப்பள்ளி தேவராஜ பட்டர் – கூ எ .
பிள்ளையுரந்தை யுடையார் – கூ அ.
திருக்குறுகைப் பிரான் பிள்ளான்- கூ க.
பெரியகோயில் வள்ளலார்4O.
திருக்கண்ணபுரத்தெச்சான்-சுக .
ஆசூரிப்பெருமாள்- சுஉ .
முனிப் பெருமாள் -சங.
அம்மங்கிப் பெருமாள்-சுசு .
மாருதிப் பெரியாண்டான்-சரு
மாறொன்றில்லா மாருதி யாண்டான்-சசு.
ஸோயாஜி யாண்டான் சஎ.
ஜீயராண்டான்- சஅ.
ஈச்வராண்டான்-சுக.
ஈயுண்ணிப் பிள்ளை யாண்டான் – 50 .
பெரியாண்டான் – ருக.
சிறியாண்டான்- ருஉ.
குஞ்சிப்பூர் சிறியாண்டான்- 53-
அம்மங்கி யாண்டான்-54
ஆளவந்தாராண்டான்-ருரு.
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் – ருகா.
தொண்டனூர் நம்பி – ருஎ .
மருதூர் நம்பி – ருஅ.
மழுவூர் நம்பி -ருசு.
திருக்குருங்குடி நம்பி-60-.
குரவிநம்பி – சுக.
முடும்பை நம்பி கூஉ.
வடுகநம்பி – 63.
வங்கி புரத்து நம்பி – காச .
ஸ்ரீ பாரங்குச நம்பி -கரு.
அம்மங்கியம்மாள்- 66
பருத்திக் கொல்லை யம்மாள் – காஎ. உக்கலம்மாள் –கூஅ.
சொட்டை யம்மாள்- 69
முடும்பை யம்மாள்- 70-
குமாண்டூர் பிள்ளை- 71-
குமாண்டூர் இளைய வில்லி – எவு.
கிடாம்பிப் பெருமாள்–73
ஆர்க்காட்டுப் பிள்ளான்–74

பாஷ்யகாரர் நாளையிலே தத்வ விஷயத்திலும் ஆசார விஷயத்திலும் அந்யோயம் ஸ்புட விரோதத்தை யுடைத்தான தென்கலை வடகலை பேதமில்லை. பின்பு வேதாந்தாசார்யர் நாளிலே ஸ்புட விரோதத்தாலே பேதமுண்டாய்த்தது. அப்போது எழுபத்தினாலு ஸிம்மாஸனாதிபதிகளுடைய வம்சஸ்தரிருந்தார்கள். அவர்களிலே சிலர் வேதாந்தாசார்யருடைய ஸம்ரதாயஸ்தராய்க் கொண்டு வடகலை யானார்கள். அவர்களாரென்றில்
பெரிய திருமலை நம்பி வம்சயர் -க.
நடுவிலாழ்வான் வம்சயர்-உ.
நடா தூராழ்வான் வம்சியர் – கூ .
கிடாம்பியாச்சான் வம்சயர் – ச .
ஈச்சம்பாடியாச்சான் வம்சயர் – ரு.
திருமலை நல்லான் வம்சியர் – சு.
ஸோமாஜி யாண்டான் வம்ச்யர் எ.
ஈயுண்ணிப் பிள்ளை யாண்டான் வம்ச்யர் – அ.
வங்கி புரத்து நம்பி வம்சயர் -கூ. இவர்களெல்லாரிலும் நாலு திருமாளிகையார் தென் கலையாரும்
நாலு திருமாளிகையார் வடகலையாருமாக நடந்துக் கொண்டு வருகிறது . மற்ற அறுபத்தியைந்து ஸிம்மாஸனாதிபதி வம்ச்யரில் பூர்த்தியாய்ப் போனது போக இருக்கிறவர்களெல்லாரும் அன்று முதல் இன்றளவாக தென் கலையாராகவே நடந்து வருகிறார்கள்.இதிலே பிள்ளை லோகாசார்யரும் ப்ரதிவாதி பயங்கர மண்ணனும் எழுபத்தினாலு பீடஸ்தரிலே ஒருவரான முடும்பை நம்பி யினுடைய திரு வம்ச்யரென்று சொல்லுவர்கள்.

அநந்தரம் இந்த எழுபத்தி நாலு ஸிம்மாஸனாதிபதிகளிலே ஸப்த கோத்ரத்தாரும் அஷ்ட கோத்ரத்தாரும் அந்தர்ப் பூதர். இந்த ஸப்த கோத்ர வ்யவஸ்த்தை யாருடைய நியமனத்தாலே யென்கிற பஞ்சவிம்ச ப்ரச்நத்திற்கு உத்தரம்–எங்ஙனே யென்றில் – கோயிற் கந்தாடை யண்ணனும் எரும்பியில் ஸ்ரீரங்கராஜரும் முன்பு லாட புரத்திற்கு ஸ்தாலீபாகார்த்தம் போன விடத்திலே நடந்த லாட புரஸ்தருடைய வாசார வைகல்யாதிகளையும் தமக்கு அந்த தேஹாநுபந்தத்தில் ருசி யில்லாமையையும் பெரிய ஜீயருக்கு விண்ணப்பஞ் செய்ய,அதைக் கேட்டருளிய பெரிய ஜீயரும் வைலக்ஷண்யமுடையராய் பூர்வமே பிடித்து அந்யோய ஸம்பந்த முடையராய் ஸமான ப்ரவர தோஷமில்லாம லிருக்கிற வாதூல ஹரீத ஸ்ரீவத்ஸ களண்டிய களசிக பரத்வாஜாத்ரேயகோ
த்ரஸ்தர் எழுவர்களையும் அந்யோய ஸம்பந்தம் பண்ணிக் கொண்டு வரும்படியும் கோத்ராந்தரத்திலே ஸம்பந்தம் பண்ணாதே யிருக்கும் படியும் ஏதத் கோத்ரங்களிலே குடிக் கந்தாடை முதலான வந்ய ஸம்பந்த மில்லா திருக்கும்படியும் அண்ணனையும் வேடலப்பையையும் எரும்பியிலப்பா முதலானாரையும் நியமித்து அத்தைத் தப்பாமைக்குத் தம் ஸ்ரீபாதத்திலாணை யிட்டருளினார்.இச் சேதிக்கு எரும்பி, விராலி, வேடல்-திருவிண்ணகர், திருக்குடந்தை, முறப்பாக்கம், கடிகை, கச்சிநகர்,ஸ்ரீபெரும்பூதர்,திருநறையூர், திரு எவ்வுளூர்,திருமழிசை,முதலான விடங்களில் உண்டான தாசரதி வம்ச்யரான வாதூலவருக்கும் ஸ்ரீபாஷ்யகார வம்ஸ்யரான ஹாரிதருக்கும் மற்றும் ஏததனுபந்திகளான கோத்ராந்தரஸ்தருக்கும் ஜீயர் ஸ்ரீமுகம் வர அத்தை சிரஸாவஹித்து அன்று
முதலின்றளவும் அந்த நியமனத்தாலே நடந்து வருகிறது

இந்த நியமனத்திற்குட்பட்ட விந்த ஏழு கோத்ரத்தாருக்கும் கந்தாடையாரென்று வியபதேசம் நடந்து வருகிறது. இவர்களெல்லாரும் எழுபத்தி நாலு ஸிம்மாஸனாதிபதிகளுக்குள் சேர்ந்த முதலியாண்டான் முதலானாருடைய திருவம்ஸ்யர்.இது ஸப்த கோத்ர வியவஸ்தா ப்ரகாரமிருக்கும்படி. இந்த ஸப்த கோத்ரத்தாரில் வாதூல வம்சியராய் ஸ்ரீ பாஷ்ய ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராய் ஐகஜ் ஜீவாதுவான போளிப்பாக்கம் நயினார், பெரியதிருமலை நம்பி வம்ச்யராய் சடமர்ஷண கோத்ரரான எட்டலூர் சிங்கராசாரியரையும் மற்ற வேழு கோத்ரஸ்தரையுங் கூட்டி யஷ்ட கோத்ரமாக நியமித்தருளினார்.போளிப்பாக்கம் நயினார் ஸப்த கோத்ரஸ்தர்; அஷ்ட கோத்ரத்திற்கு நியமன கர்த்தா.
இது அஷ்டகோத்ர வயவஸ்த்தை. இவர்களிலும் ப்ரயாச: எழுபத்திநாலு ஸிம் மாஸனாதிபதி வம்ஸ்யர்களுண்டு. திருவனந்தாழ்வான் பூமியை வஹிக்க அஷ்டதிக் கஜங்கள் ஸஹகரிக்க ஸப்த குல பர்வதங்களும் பூமிக்கு அஞ்சூராணி விட்டாப் போலே யிருக்கும். அது போல திருவநந்தாழ்வானுடைய திரு வவதாரமான பெரியஜீயர் பராங்குச பரகால யதிவரர்களுடைய ஸம்ப்ரதாய நிர்வஹணமாகிற பாரத்தை வஹித்தருளுவதற்கு அஷ்ட திக் கஜங்களும் ஸஹகரித்து ஸப்த கோத்ரமும் ஸம்ப்ரதாயத்திற்கு ஆணி விட்டாப் போலே வியவஸ்தாபகமா யிருக்கும்படி. கோத்ரமென்று பர்வதத்திற்கும் குலத்திற்கும் பேரென்று சொல்லுவர்கள்.

அநந்தரம் ஏவம் பூதரான மணவாள மா முனிகளுக்கு ஈடு வந்த க்ரமம்-அவர் பெருமாளுக்கு ஸாதித்தருளின க்ரமம் முதலானவை விஷயமான பிரஸ்நத்திற்குத்தரம். எங்ஙனே -யென்றில் ஈடு வந்த க்ரமம் த்விதீய பிரஸ்நோத்தரத்திலே சொல்லிற்றிறே. ஒரு நாள் முதலிகளுடனேக் கூட பெருமாளை பெரிய ஜீயர் மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டிருக்கப் பெருமாளும் ஜீயரை யருளப் பாடிட்டருளி நம் பெரிய திருமண்டபத்திலே திருவாய்மொழிப் பொருளை ஈடு மூப்பத்தாறாயிரம் துடக்கமான வியாக்யானங்களோடே நடத்துமென்று நியமித்தருள, ஜீயரும் மிகவும் ஹ்ருஷ்டராய் உபக்ரமிக்கிற வளவிலே பெருமாளும் நாச்சிமாரும் எழுந்தருளி ஸ்ரீஸேநாபதியாழ்வான் நம்மாழ்வார் துடக்கமான ஆழ்வார் பதின்மரோடும் அனைத்துப் பரிகரத்தோடும் கூடப் பெருந் திருவோலக்கமாக வெழுந்தருளி யிருக்க, இவர் துடங்கி யர்த்தம் நடத்தும் படியைத் திருச் செவி சாற்றி யருளி, இப்படி யொரு ஸம்வத்ஸரம் நிர்விக்நமாக நடந்து சாற்றி யருளும் போது முன்பு போலே பெரிய பெருமாள் பேரோலக்கமாக வெழுந்தருளி யிருந்து திருச் செவி சாற்றி யருளி, மிகவு முவந்து தீர்த்தம் முதலான வரிசைகளைப் ப்ரஸாதித்து அந்த வுகப்பின் மிகுதியாலே அகில ஸ்ரீவைஷ்ணவர்களையுங் குறித்து நம் வீடு முதலான நூற்றெட்டு திருப்பதியிலும் இவர் தனியனான ஸ்ரீ சைல தயா பாத்ரமாதியாய் பிரபந்தாநுஸந்தாநம் நடத்திப் போருங்கோளென்று நியமித்தருளினார். இது யதீந்தர பிரவணப் ரபாவத்தின்படி. இது ஸ்ரீபாதத்து முதலிகள் மூவர் நாலு பாதமருளிச் செய்தாரென்று மதற்குச் சேரும். அப் பெரிய திருவோலக்கத்திலே சாற்று முறை திருச் செவி சாற்றி யருளின பின்பு பெரிய பெருமாள் ஒரு பாலனாய் வந்து இந்தஸ் ஸ்ரீ சைலேசதயா பாத்ரமாதியாய் இந்தத் தனியனை யருளிச் செய்து அந்தர்த்தாகதரானார். அது முன்பே பதரிகாச்ரமத்தி லெம்பெருமான் அங்கே யிந்தத் தனியனை யனுஸந்திக்கும்படி நியமித்தருளினாரென்று பின்பு சில நாளையிலே யங்கு நின்றும் வந்தவர்கள் சொன்னார்களாய், இங்கு நடந்த வித்தையு மங்கு நடந்தவத்தையுங் கூட்டி யநுஸந்தித்துக் கோயில் முதலான ஸர்வ தேசங்களிலுண்டான ஸகல ப்ராமாணிகரும் இந்தத் தநியனை பகவத் ப்ரஸாதமென்று நிர்ணயித்துக் கோயில்களிலும் திரு மாளிகைகளிலும் இந்தத் தனியனை ப்ரபந்தாதியிலே யநு ஸந்தித்துக் கொண்டு வருகிறார்களென்றுஞ் சொல்லுவர்கள். இது அயோத்யை ராமாநுஐய்யங்கார் படி, என்கிற க்ரந்தத்தில்படி. இன்னுந் தடஸ்தங்களான திருவரங்கம் பெரிய கோயில் ஒழுகுகளிலே இவ் வர்த்தங்கள் ஸ்பஷ்டங்களாயிருக்கும். இன்னமும் மாசி மாஸத்திலே க்ருஷ்ண பக்ஷ த்வாதசியிலே பெரிய பெருமாள் தம்முடைய திருக் கோயிலனைத்துப் பரிஜநங்களுடைய படித் தனத்தைக் கொண்டு பெரிய ஜீயருடைய திருவத்யயநத்தை அத்யாபி நடத்துகிற விதுவும் இவரிடத்தில் அவர் முப்பத்தாறாயிரப்படி கேட்டமையில் ப்ரமாணம். இதுவும் –
வாசி யறிந்த வதரி நாராயணனார் மணங் கொட் டேசுடை யெந்தை மணவாள முனி சீர் தழைப்பச் சிரீசை,லேச தயா பாத்திரமென்று மிம் மா மந்திரத்தைத், தேசிகராய்க் கண்டுரைத்தார் வையகஞ் சீருறையவே.” என்று கோயில் கந்தாடை யண்ணனும் பெரிய ஜீயர் விஷயமான “கண்ணி நுண் சிருத்தாம்பு என்கிற ப்ரபந்தத்திலே முடிவிலே யருளிச் செய்கிறார்

வாசி யறிந்த வதரியில் நாரணார் மனம் கொள்
தேசுடை எந்தை மணவாள மா முனி சீர் தழைப்பச்
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டு உரைத்தார் இவ்வையகம் சீருறவே–13-

வாசி யறிந்த வதரியில் நாரணார் -திருமந்திரம் அருளிச் செய்த பிரதம ஆச்சார்யர்
தானே சிஷ்யனுமுமாய் இருந்து அருளினாலும் திருந்தாத ஜனங்கள் உஜ்ஜீவிக்க –

திருக்குறுங்குடி நம்பி எம்பெருமானார் இதன் கேட்டு அறிந்து ஸ்ரீ வைஷ்ணவ நம்பியான ரஹஸ்யம் வாசி அறிந்தவர் அன்றோ –
பெரிய பெருமாள் அருளிச் செய்த தனியனை முதல் முதலில் சொல்லி அருளியவர் இவர் தானே

தஞ்சமாய் இருக்கும் வார்த்தை கேட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பூர்வ அர்த்தம் அருளிச் செய்து பிற் பகுதியை
இரண்டு ஆற்றுக்கு நடுவில் ஸ்ரீ ரெங்கம் சென்று அறிந்து கொள்ள உபதேசித்தார்
இவர்கள் வந்து சேரும் பொழுது ஈட்டு சாத்துமுறை ஆகப் போகும் நாளில் -அரங்கநாதன் –
முழுவதையும் அருளிச் செய்த வ்ருத்தாந்தம் யதீந்த்ர ப்ரணவ ப்ரபாவத்தில் உண்டே –
இவரே ஆச்சார்யர் என்று காட்டிக் கொடுக்கவே இங்கு அனுப்பி வைத்தான் —
இவர் பெருமை அறிந்த நாரணார் —

மனம் கொள் தேசுடை எந்தை மணவாள மா முனி -திரு உள்ளத்தில் எழுந்து அருளிய தேஜஸ்ஸூ —
சீர் தழைப்பச்-பெருமையை உலகோர் அறியும்படி
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டு உரைத்தார் -ஸ்வாமியை ஆச்சார்யராகக் கண்டு அருளிச் செய்தார் அன்றோ –

இவ்வையகம் சீருறவே-அத்தாலே-இந்த லீலா விபூதி சீர் பெற்று நித்ய விபூதியில் சிறந்து விளங்கிற்றே
இப்பிரபந்த சாரமே இந்த தனியன் தானே –
தீ -தொல் அருள் ஞானம் -முக்கோல் தரித்த நம் ஸ்வாமி –பாட்டுத் தோறும் அருளிச் செய்து —
நிகமித்து அருளுகிறார் நம் கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் –

வதரியாச் சிரமத்தில் இருமெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடிவணங்கிக்
கதியாக ஓர்பொருளை அளிக்க வேண்டும்
கண்ணனே ! அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீசைல மந்திரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச்செய்து
பதியான கோயிலுக்குச் சென்மின் நீவிர்,
பாதியையும் சொல்லுதும்யாம் தேற வென்றார். -ஸம்ப்ரதாய சந்த்ரிகை – 4

சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்க்ன் தினசரியை கேளா நிற்பச்
சன்னிதிமுன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னிதனில் நீராடிப் புகழ்ந்து வந்து
புகழரங்கர் சன்னிதிமுன் வணங்கி நிற்பச்
சன்னிதியினின்று அரங்கர் தாமே அந்தத்
தனியனுரை செய்து தலைக் கட்டினாரே. ஸம்ப்ரதாய சந்த்ரிகை – 5

இப்படி யநந்யா ஸித்த பிரபல ப்ரமாணங்களாலே இதினுடைய மாஹாத்ம்யம் வியக்தம்.-இன்னாரின்னாரென்றாதே ஸகல ஸ்ரீ வைஷ்ணவர்களையும் குறித்து நம் வீடு முதலான நூற்றெட்டு திருப்பதியிலும் இவர் தனியனான ஸ்ரீசைலேச தயா பாத்ரமாதியாய் திவ்ய பிரபந்தாநு ஸந்தாநம் நடத்திப் போருங்கோளென்று பெரிய பெருமாள் ஆஜ்ஞா பித்தருளி யிருக்க, ராமாநுஐ தயா பாத்ரமாதியாய் திவ்ய ப்ரபந்தானுஸந்தாநம்
நடக்க வேணு மென்று நிர்ப்பந்தித்துக் கொண்டு திவ்ய தேச ஷோபம் பண்ணு
மவர்களுக்கு பகவதாக்ஞாதி லங்கநமன்றி வேறு ப்ரயோஜந மில்லை யென்னுமிடம் நிரூபர்களுக்கு ஸூஜ்ஞேயம்.

அநந்தரம் பூர்வ ப்ரஸ்துதமான ராமாநுஜ தயா பாத்ர விஷயமான ஸ்ப்த விம்சதி ப்ரச்நோத்தரம் எங்ஙனே யென்னில் – இந்த “ராமாநுஜ தயா பாத்ரம்” என்கிற தநியன் பரகால ஜீயர் நியமித்தா ரென்கிற லோக ப்ரஸித்திக்கு மபவாதக பிரமாண மில்லாமையாலே அவருண்டாக்கினா ரென்று மிடம் யுக்தம்.-இந்தத் தநியன் அவருக்கு முன்னே யுண்டு, அவர் இதற்கு ப்ரவசந மாத்ரம் பண்ணினார், அது கொண்டு அவர் செய்தாரென்று லோக ப்ராஸித்தி; என்று சொல்லப் பார்க்கில் வேதாந்தாசார்யருடைய வைபவ விஷயமாக நடுவிலாழ்வான் திரு வம்சஸ்தரான மத்யேஸ-தர்சநாசார்யர் முதலானார் பண்ணின அனுஷ்டுப் ஸ்லோக ப்ரபந்தத்திலும் ஆசார்ய விருத்த ஸ்லோக ப்ரபந்தத்திலும் இந்தத் தனியனை ப்ரதிபாதியாமையாலே யிது முன்புண்டென்று மிடம் அனுபபந்நம்
வேதாந்தாசார்யருடைய அவதார விஷயமாகவும் ராமானுஜ தயா பாத்ர மென்கிற தநியன் விஷயமாகவும் ப்ரம்மாண்ட புராணத்தில் க்ருஷ்ணார்ஜூந ஸம்வாதமான நாலு அத்யாய முண்டென்று வைத்துக் கொண்டிருக்கு மவர்கள் அத் யந்தம் அபஹாஸ்யர். எங்கனேயென்றில்

ஸ்வப்ந வ்ருத்தாந் தாதிகளாகிற உபபத்திகளாலே புத ஜநங்கள் தம்மைக் கண்டாவதாரமாக உத்ப்ரேஷிக்கிறார்கள்; அதாவது:- உத் கட கோடிக ஸம்சயமான ஸாம்பாவநாத்மகக் ஞாநத்திற்கு விஷய மாக்குகிறார்களென்று புராண ப்ரதிபாத்யராக ஸ்வாபிமதரான வேதாந்தா
சாரியரே யருளிச் செய்கையாலே புராண மில்லை யென்று மிடம் ஸித்தம். புத
ஜனங்கள் கண்டாவதாரமென்று ஸம்சயிக்கிறாரென்று மிதிற் காட்டில் பரம ரிஷிகள் புராணங்களிலே கண்டாவதார மென்று தம்மை நிச்சய ரூபேண ப்ரதிபாதித்தார்கள் என்றால் ப்ரசம்ஸாதிசயம் ஸித்திக்குமே. ஆகையாலிவ் விஷயத்தில் புராணமில்லை யென்னு மிடம் ஸித்திக்கையாலே யிவ் விஷய த்தில் புராணமுண்டென்றுமவர்கள் அத்யந்த மபஹாஸ்யர்.இந்தத் தநியன் உண்டாய் நூற்றிருப்பது ஸம்வத்ஸரமுண்டு.இத்தை மேல் நாட்டிலே க்ருஷ்ண தேவராய வுடையார், சிங்க தேவராய வுடையார், கண்டீரவ நரஸ தேவ ராய வுடையார் என்கிற விவர்களை பரகால ஜீயர் அனுவர்த்தித்து வச்யராக்கிக் கொண்டு அவர்கள் பலத்தினாலே இந்தத் தநியனையுங் கூட பிரபந்தாதியிலே யநுஸந்திக்கும்படி திரு நாராயண புரத்திலே இசைவித்தார். இந்த ராஐ க்ருஹத்திலே போக்கு வரத்தாயிருக்கிற சிங்காரம்ம னென்கிற ஸ்வ சிஷ்யை யடியாக ராஜானுமதியாலே வேதாந்தாசார்யரைத் திரு நாராயண புரத்திலே ப்ரதிஷ்டை பண்ணி வைத்தாரென்று சொல்லுவர்கள். இவருடைய யத்னம் தொண்டீர மண்டலத்தில் பலியாமற் போச்சது. பகு விடங்களிலே பலியாமலிருந்தது. கோயிலிலே யிந்த பரகால ஜீயர் ப்ரஸத்தி யில்லை.

பரகால ஜீயர் பெருமாள் கோவிலுக்கு வந்த விஷயமான வஷ்டாவிம்ச ப்ரச்நோத்தரம் எங்ஙனேயென்றில் – பரகால ஜீயர் பெருமாள் கோவிலுக்கு வந்து அழகிய மணவாள ஜீயர், ஆத்தான் ஜீயர், திருமலை தாதாசார்யார், இவர்கள் யெழுந்தருளி யிருக்கிற நாளையிலே திருமலை தாதாசார்யர் திருமாளிகையிலே வந்து ” ராமாநுஜ தயா பாத்ரம்” என்கிற தநியனை இந்தக் கச்சி நகர் பதி னெட்டுத் திருப்பதியிலும் ப்ரபந்தானுஸந்தானத்திற்கு ஆதியிலே யனுஸந்திக்கும்படி பண்ண வேணுமென்ன,திருமலை தாதாசார்யரும் “கோயில் அழகிய மணவாள ஜீயர் அயோத்யை ராமானுஐய்யங்கார் நாள் துடங்கி பகு காலமாய் நடந்து வந்து முன்பு அஸ்மத் கூடஸ்தரான தாததேசிகரும் நடப்பித்து பெரியஜீயருக்குத் தனிக் கோவிலுங் கட்டி வைத்து அங்கே யெழுந்தருளப் பண்ணி வைத்து இப்படி யன்று முதவின்றளவு மவிச்சிந்தமாய் நடந்து வருகிற விந்த ஸ்ரீசைலே தயா பாத்ரமென்கிற தநியனை நாம் விரோதிப்பதில்லை” யென்று சொல்ல,பரகால ஜீயரும் அத்யந்தம் கோபித்துக் கொண்டு தம்முடைய கமண்டலுவைத் திருமலை தாதாசார்யர் திருமாளிகை வாசலிலே யுடைத்து சபித்துப் போனார். திருமலை தாதாசார்யரும் பேரருளாளருடையவும் பெரிய ஜீயருடையவும் பெருங் கருணையாலே நிர்த் துக்கராய் – கோத்தரராய்க் கொண்டு பதினெட்டு திருப்பதியிலும் அத்தைச் சேர்ந்த ஆழ்வார்கள் ஆசார்யர்கள் ஸன்னிதிகளிலும் “ஸ்ரீசைலேச தயா பாத்ர மென்கிற” தநியனை நடப்பித்துக் கொண்டு வந்தாரென்று ப்ரஸித்தம். கூடஸ்தரான தாதாசார்யர் தம்முடைய சிஷ்யரான ராயனுடைய ராஜ்ய தந்த்ரம் பண்ணிக் கொண்டு வருகிற போது தென்னேரி உடைந்து போனதாய் ஸர்வ ப்ரகாரத்தாலும் கட்டுப்படாததாய் தாமே போய் கட்டி வைக்க வேணுமென்று புறப்பட்டு,வழியாக ஹஸ்திகிரியிலே யேறிப் பேரருளாளரை ஸேவிக்க வர, அப்பொழுது சதிராக வாழ்திடுவர் தாமென்கிற சாற்று முடிவு செவிப்பட, அத்தை யுப ச்ருதியாகக் கொண்டு ஹர்ஷப்பட்டு நாம் போகிற கார்யம் தலைக் கட்டினால் இப்ரபந்த கர்த்தாவான பெரிய ஜீயருக்குத் தனிக் கோவில் கட்டி வைக்கிறேனென்று ப்ரதிஞைபண்ணிக் கொண்டுபோன விடத்தில் யேரி யுடைப்பு ஸ-கமாய்க் கட்டுப்பட்டதாய் மீண்டு அதி த்வரையுடனே வந்து பெருமாளுடைய திருநந்தநவநத் துள்ளிருக்கிற சது ஸ்தம்ப மண்டபத்தை மூன்று பக்கம் சுவரடைத்து கர்ப்ப க்ரஹமாக்கி யதிலே பெரிய ஜீயரை ப்ரதிஷ்டை பண்ணிவைத்து க்ரமண மகாமண்டபம் மடப்பள்ளி முதலானவை கட்டி வைத்தாரென்று ப்ரஸித்தமிறே.

அநந்தரம் தென்கலையார் வடகலையார் என்கிற வயபதேச பேத விஷயமான பராச்நத்திற்குத்தரம் எங்ஙனே யென்றில் -கலையென்று வித்யையாய் தென்கலை யென்று தமிழ் வித்யை.வடகலையென்று ஸம்ஸ்க்ருத வித்யை -அதில் விவக்ஷாவிசேஷத்தாலே தென்கலையென்று ஆறாயிரப்படி முதலான திவ்ய ப்ரபந்த வயாக்யாநங்களையும், வடகலை யென்று ப்ரஹ்ம ஸூத்ர போதாய வருத்தி ஸ்ரீ பாஷ்யாதி க்ரந்தஙகளையும் வியபதேசிப்பதாய்,தத்ர வர்த்தக வத்தாலே ஆழ்வான், எம்பார், பட்டர், நஞ்சியர், நம்பிள்ளை, முதலானாரைத் தென்கலையா ரென்பதாய், பாஷ்யாதி விர்த்தகத்வத்தாலே நடாதூர் பெரியம்மாள் முதலானாரை வடகலையாரென்பதாய்,உபயர்க்கு முபய ப்ரவர்த்தகத்வ முண்டா யிருக்கச் செய்தேயும் ” பூயஸா வியபதேசோ மல்லக்ராமா திவத்” என்கிற நியாயத்தாலே தத்தத்ர வர்த்தகத்வ பிராசுர்ய மடியாகத் தென்கலையாரென்றும் வடகலையாரென்றும் வியபதேச பேத மிருக்கிறது. இன்னமும் இவர்களுக் குத் தென்னாசார்யரென்றும் வடமாசார்யரென்றும் வியபதேசபேதமுண்டு. இது பரீஷிக வ்யஹாரபேத மிருக்கிறபடி, இது வன்றிக்கே யிராமானுஜனோடே கூடின திருமண்காப்பும் ”ஸ்ரீசைலேசதயாபாத்ர மாகிற தனியன் விஷயமான ப்ராவண்யமாகிற விவற்றை யிட்டு சிஷ்யாசார்ய ஸாதாரண்யேந தென்கலையா ரென்கிற வ்யவகாரமும்,ஸ்ரீராமாநுஐ நிழந்த திருமணும் ராமானுஜ தயா பாத் ரத் தனியன் விஷயமான ஸ்ரத்தையுமாகிற விவற்றை யிட்டு வடகலையார் என்கிற வ்யவஹாரமுமுண்டு . இது பரீஷக பாமர ஸாதாரண வ்யவஹாரமிருக்கிற படி.
அயமத்ரநிஷ்கர்ஷ -தென்கலையாரில் வாநமாமலை மடம்.கோயில் ஸ்ரீரங்கராஜ ஜீயர் மடம், திருமலையில் பெரிய ஜீயர் மடம், சிறியஜீயர்மடம், பெருமாள் கோவில் அழகியமணவாளஜீயர்மடம்,முதலானமடங்களும் தத் ஸம்பந்திகளும், முதலியாண்டான்,பட்டர்,அநந்தாண்பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை, முதலான அசேஷாசார்ய புருஷ வம்சயர்களும் தத் ஸம்பந்திகளுமாக விவர்களெல்லாம் பிள்ளான் முதலான கூடஸ்த ஸம்ப்ரதாயத்திற்கனுகுண மான பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை முதலானார் ஸம்பந்தத்திலே பஞ்ச ஸம்ஸ்காரத்தைப் பெற்று, மந்த்ரோப தேஷ்டாக்களானவர்கள் ளருளிச் செய்த மந்திரார்த்த விஷய ப்ரபந்தங்களை யத்யாதரத்துடனே யதிகரித்துக் கொண்டு,ததுக்தங்களான ஸ்வரூபானுரூப விருத் தங்களையும் நிஷிந்த காம்ய ஸ்பர்சர ஹிதங்களுமாய் அத்யாவச்யகங்களுமான வர்ணாச்ரம தர்மங்க ளையும் அநுஷ்டித்துக் கொண்டு சத்வ விஷயத்திலும் அனுஷ்டானாதி விஷயத்திலும் அந்யோக்ய வைஷம்ய விரஹிதராய் ஸ்ரீ பாஷ்யவிஷயத்தில் வேதாந்தாசார்ய ஸம்ப்ராதாய முடையராயிருக்குமவர்கள் தத்தனுகுணமாக ஸ்ரீ பாஷ்ய குருரம்பராத்ரமத்திலே “ஸ்ரீமாங் வேங்கடநாதார் !” என்கிற தனியனை யனுஸந்தித்துக் கொண்டுஸ்ரீ பாஷ்ய கர்த்தா விஷயத்தில் வேதாந்தசார்யா பிப்ராயாநு குணமாகவே வசந பிரவசநங்களைப் பண்ணிக் கொண்டு இப்படி ஏக கண்டராய்ப் போருவர்கள். வடகலையாரில் அஹோபில மடத்தாரும் தத் ஸம்பந்திகளும் தங்களுக்கு பஞ்ச ஸம்ஸ்கார ரதரான பெரியவாச்சான்பிள்ளை முதலானார் அருளிச் செய்த மந்த்ரார்த்த விஷய க்ரந்தங்களை யநாதரித்துத் தத் விருத்தங்களான ரஹஸ்ய த்ரய ஸாராதி க்ரந்தங்களை யாதரித்து அதிகரித்துக் கொண்டு ஸம்ப்ரதாயாதி லங்க ம் பண்ணுகிறார்களாகையாலே அதவர்களுக்கு மனுசிதம்.முநி த்ரய ஸம்ராதாயஸ்தருக்கும் பரகால ஜீயர் ஸம்ரதாயஸ்தருக்கும் அஹோபில மடத்திற் கதிபதியான ஷஷ்ட பராங்குச ஸ்வாமி யினுடைய ஸம்பரதாய முண்டாகையாலே ஷஷ்ட பராங்குச ஸ்வாமிக்குப் பெரிய வாச்சான் பிள்ளை ஸந்நிதியிலே பஞ்ச ஸம்ஸ்கார ஸம்பரதாயமுண்டாகையாலே யவரினி யிரண்டு ஸம்பரதாயஸ்தருக்கும் தத்ச் சிஷ்ய ப்ரசிஷ்யர்களுக்கும் ஸ்வ பரமாசார்யரான ஷஷ்ட பராங்குச ஸ்வாமிக்குப் பரமாசார்யாரான் பெரியவாச்சான்பிள்ளை திருவடிகள் விஷயத்தில் அநாதரம் பண்ணுகை யனுசிதம். வேதாந்தாசார்ய ரருளிச் செய்த தாத்பர்ய சந்த்ரிகை,மணி ப்ரவாளமான ரஹஸ்ய த்ரய விரோத பரிஹாரம்,ஸ்ரீபாஞ்சாராத்ர ரஷை , இவைகளாகாங் க்ஷிதாம்சங்களிலே யந்
யோந்யமேக வாக்கியங்களாய்க் கொண்டு நாதயாமுந யதிவர ஸம்பரதாய விருத்
திகளாகிற கார்த்தயுக தர்ம்ம் நிஷ்டாத்திகாரிகளுக்கு பிஷ்டபசுயாக மல்லது ஸாக்ஷாத்பசு யாகங்கூடாதென்று வேதாந்தாசார்யருக் கபிமதமென்று ப்ரதி பாதியா நிற்கச் செய்தேயும், அத்தை யதிலங்கித்து ப்ரத்ய பசு யாகம்பண்ணுகையும், இப்படி தத் விருத்தங்களுமாய் தம்மில் மிதோ விருத்தங்களுமான தத்வ அனுஷ்டானங்களைப் ப்ரதிபாதித்துக் கொண்டு திவ்ய தேசங்களைத் தநியனுக்காக ஷுபிதங்களாக்கிக் கொண்டு இப்படி ஜகத் க்ஷோப பர்யவஸிதராகிறார்.ஆகையால வர்களெல்லார்க்கு மிது அத்யந்தமனுசிதம். இவ் வர்த்தம் நிரூபக மத்யஸ்த த்ருஷ்டியாக நிரூபித்துப் பார்க்குமளவில் ஸஹ்ருதய ஹ்ருதயாரூடமாம்.

அநந்தரம் திவ்ய தேசங்களிலே பெருமாள் புறப்பாடு கண் டருளுகிற போது திவ்ய பிரபந்தானுஸந்தாநம் முன்னும் வேத பாராயணம் பின்னுமாக நடந்துப் போருகைக்கு மூலமென்னென்கிற பிரஸ்ந த்துக்கு உத்தரம் எங்ஙனேயென்றில் – ருக் யஜுஸ் ஸாமாதர்வண வேதங்கள் நாலும் தனித் தனியே ஸ்வ ஸ்வ மாத்ர பர்யவஸிதங்களாகையாலும் திவ்ய ப்ரபந்தம் சதுர்வேத ஸம்மிதமாகையாலும் இந்த பிராதாந்ய அப்ராதாந் யங்களை யிட்டு சதுர் வேத ஸம்மிதங்களான பிரபந்தங்கள் முன்னும், சதுர் வேதங்களி லொன்றான ருகாதிகள் பின்னும், அநுஸந்திக்கப் படுகிறது. இன்னமும் வேதம் பரத்வ பிரவண மாகையாலும் திவ்ய ப்ரபந்தம் அர்ச்சாவதார பிரவணமாகையாலும் இவற்றிற்கு ப்ரக்தோபயோகானுபயோக பிரயுக்த வை
லஷ்ன்ய நிபந்தனமாக திவ்ய ப்ரபந்தம் முன்னும் வேதம் பின்னுமாகிறது. இன்னமும் “ராஜவத்சோபசாராத்’ என்கிறபடியே ராஜாக்களுக்கு போகா வலி பிருத வலிகள் முன்னும் ஸ்வஸ்தி வசநம் பின்னும் ஆகிறாப் போலே யிங்குமர்ச்சவதாரம் ராஐவதுபசரணீய மாகையாலே விருதாவலி ஸ்தாநீயங்களான திவ்ய ப்ரபந்தங்கள் முன்னும் ஸ்வஸ்தி வாசந ஸ்தாநீய வேத பாராயணம் பின்னுமாயிருக்கும். இன்னமும் ஸூரியனுக்கு முன்னே காநமும் பின்னே ஸ்துதியும் நடக்கிறாப் போலே யிங்குங் கோடி ஸூர்ய ஸமரான வர்ச்சாவதாரத் தெம்பெருமான்களுக்கு முன்னே திவ்ய ப்ரபந்தாஸந்தானமும் பின்னே பகவத் ஸ்துதி பரமான வேத பாராயணமும் நடக்கிறது. இன்னமு மிதற்கு மூலாந்தரமுங் கண்டு கொள்வது.

பரீதாபி வருஷத்ற் கைந்தாவதான நள வருஷத்திலே வேதாந்தாசார்யருடை யவதாரம். அநற்கைம்பத்தினாலாவதான் ஸெளம்ய வருஷத்திலே வேதாந்தாசார்யர் திருநாட்டிற் கெழுந்தருளினார். ஸாதாரண வர்ஷம்-மணவாளமாமுநிகள் திருவதாரம் . விரோதி க்ருத் வர்ஷத்தில் நம்பெருமாள் மீளவுங் கோயிலுக் கெழுந்தருளினார். ஆக பரீதாபி வருஷம் முதல் விரோதிக்
ருத் வருஷத்தளவும் அறுபது வர்ஷம் உலசைசெய்ய, அந்த விரோதிக்ருதி வரு ஷத்திற்கு நாற்பத்தி மூன்றாவதான ஐய வர்ஷத்திலே நயினாசார்யர் திருநாட் டிற்கெழுந்தருளினார். அந்த ஐயாக்ய வருஷத்திற்கு முப்பத்தோராவதான் ருத்ரோத்காரி வருஷத்திலே மணவாளமாமுனிகள் திருநாட்டிற் கெழுந்தருளினார். இது அவதார தீர்த்த வருஷாதிகளிருக்கும்படி. இன்னமும் மணவாளமாமுநிகள் வண்டுவராபதி மன்னனென்கிற மந்த்த லிங்கமடியாக தக்ஷிணத்வாரகாயீசரான மன்னனாருக்கு மாசறு சோதி யென்கிற திருவாய்மொழியை நித்யாநுஸந்தேயமாக ஸமர்ப்பித்தார். மணவாள மாமுகளுக்கநந்தரம் அவர் திருப் பேரனாரான ஜீயர் நயினார் திருநகரியில் திருக்கோபுரங்களையும் பிராகாரங்களையும் பெரியஜீயர் நாளையில் குறை யிருந்ததைத் தலைக் கட்டினார். ஆழ்வார் விஷயமான நக்ஷத்ர மாலிகை யென்கிற சப்தார்த்தோபயசித்ர ப்ரபந்தத்தை யருளிச் செய்தார்-

நம்பெருமாள் தம்முடைய ஸந்நிதி வாசல் படியைப் பிடித்துக் கொண்டு உள்ளே யிருந்து கொண்டு நம்பிள்ளை திருவோலக்கத்தைக் கடாட்சித்துக் கொண்டு பிள்ளை யுபந்யாஸத்தைத் திருச் செவி சாற்றி யருளா நிற்க,திருவிளக்குப் பிச்சனென்கிறவன் ”இப்படி கலியிலே அர்ச்சாவதார ஸமாதியைக் குலைத்துக் கொள்ளக் கடவீரோ” வென்று அடர்த்து வார்த்தை சொல்ல, ஆகிலுள் ளே போகிறேனென்று பூபாலராயனிலே யெழுந்தருளுவராம். இப்படியிறே நம்பெருமாள் பிள்ளை யுபந்யாஸத்திலே செவிசீபாய்ந்திருப்பது? பட்டருக்கு உடையவர் வேதாந்தசார்ய பதத்தையும் ஸ்ரீஸூக்தி ஸிம்மாஸனத்தையும் சாதித்தருளி நம்மைப் போலே இவரை ப்ரதிபத்தி பண்ணுங்கோளென்றருளிச் செய்கையாலே கிடாம்பியாச்சான் முதலானாரும் பட்டரை யநுவர்த்தித்துக் கொண்டு போந்தார்கள். உடையவர் திருவெள்ளறை யெம்பெருமான் விஷயமாக ஒரு ஸ்லோகமும் ஆழ்வார் விஷயமாக ஒரு ஸ்லோகமும் ஆண்டாள் விஷயமாக ஒரு ல்லோகமும் முக்தகமாக வருளிச் செய்தார். இன்னமும் இங்கனே கண்டு கொள்வது. மணவாளமாமுநிகள் அவ்வோ திவ்ய தேசங்களி லெம்பெருமான்களை மங்களாசாஸனம் பண்ணும் போது முக்தகங்களாகப் பாட்டுக்களைப் பலவு மருளிச் செய்தார்.

விசேஷித்து திவ்ய பிரபந்த விஷயமாக சர்வ ஜநங்களுக்கும் திவ்ய ப்ரபந்த பிரமாண ப்ரத்யயம் வரும்படி யருளிச் செய்தார்.-ஏவம் பூதரான மணவாளமாமுநிகள் விஷயமான ஸ்ரீ சைலேச தயா பாத்ரதஸ் தநியனை விரோதிக்க வேணு மென்று சில அத்யந்தார்வாசீநர் திருமலையிலே போய் அவிடத்தில் அதிகாரி யாயிருக்கிறவன் தம்முடையவனென்று அவன் முகத்தாலும் அர்த்த ப்ரதாந முகத்தாலும் அர்ச்சகனை யநுகூலிப்பித்துக் கொண்டு அநாதி காலமாகத் திருவாராதநோப க்ரமத்திலே “துடங்கண்டி ஸ்ரீசைலேச தயா பாத்ர மென்று பெரிய ஜீயர் முதலானாருக்கு அருளப்பாடிடுமத்தைத் தவிர்த்து ராமாநுஜ தயா பாத்ரமென்று அர்ச்சகனைச் சொல்லும்படி கற்பித்து வைக்க,வவனுமத்தை யங்கீகரித்துக் கொண்டிருக்க,பெரிய திருவோலக்கமாய் வடகலையாரும் ராஜகீயருமாய்த் திரண்டிருக்கிற வளவிலே திருவாராதநோ பக்ரமத்திலே யந்த வர்ச்சகன் பரவசஹ்ருதயனாய் அத்தை மறந்துப் பழையபடியே தானே “துடங் கண்டி ஸ்ரீசைலேசதயாபாத்ர” மென்றருளப் பாடிட, வவர்கள் பக்நோத்ஸாஹராய் நம்முடைய யத்னம் பெருமாளுக்குத் திருவுள்ளமில்லை யென்று ஸ்வயமோ நிவ்ருத்தரானார்களென்று ப்ரஸித்தம். மற்றொரு காலத்திலே யொரு வடகலை ஜீயர் அதிகாரி பலத்தாலே பெருமாள் புறப்பாட்டிலே இயல் துடக்கத்திலே ராமாநுஜ தயா பாத்ரத்தைச்சொல்லுவதாக வுருப்பட்டு எல்லாரும் திரண்டிருக்கிற வளவிலே வாத்யவாஹமான அநட் வாஹமானது ஜீயர் மேலே பாய்ந்து விழ ,வெல்லாருங் கூட்டங் கலைந்து பெருமாளுக்குத் திரு வுள்ளமில்லை யென்று நிவ்ருத்தரானார்களென்று ப்ரஸித்தமிறே

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை அண்ணா அப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

ஸ்ரீ மணவாள மா முனிகள்‌ விஷயமான ஸ்தோத்ரங்கள்‌–

May 22, 2026

ஸ்ரீ சைல அஷ்டகம் -ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள்-

ஸ்ரீ சைல தனியன் அவதார பெருமை –
ஸ்ரீ ஆனி திரு மூலம் -ஸ்ரீ சைல தனியன் அவதார திரு நாள் –

ஸ்ரீ எறும்பி அப்பா -தனியன் –

ஸுவ்ம்ய ஜா மாத்ரு யோகீந்த்ர சரணம் புஜ ஷட் பதம்
தேவ ராஜ குரும் வந்தே திவ்ய ஞான ப்ரதம் ஸூபம்

சேஷ ஸ்ரீ மான் அஜனி ஹி புரா ஸுவ்ம்யா ஜாமாத்ரு யோகீ
போகீ பூதஸ்த தனு பகவான் ராகவஸ் யனு ஜன்மா
பூத்வா பவ்யோ வர வர முனிர் பூயஸா பாஸமான
ரஷத்வஸ்மான் ரகு குல பதே ஆஸ்திதோ பத்ர பீடம் –1-

போகீந்த்ர சாயினம் -அனந்த பத்ம நாதர் ஸ்வாதி திருநாள் கீர்த்தனை
பூதஸ்த தனு-பூத பூரி அவதார ராமானுஜர்
பகவான் ராகவஸ் யனு ஜன்மா -இளைய பெருமாள்
பத்ர பீடம்-மங்களா சாசன பதம் -ஆதி சேஷ பீடம் -ஸூ சகம் -இங்கு ஈடு கால ஷேபம் சாதிக்க பீடம்

———–

ஸ்ரோதும் திராவிட வேத பூரி விவ்ருதம் ஸுவ்ம்யோ பயந்துர் முநே
உத கண்டாஸ்தி மமை ந மாந யததம் தார்ஷ்யா ஸ்ரயம் மண்டபம்
ஆவிஸ் யார்ச்சகம் ஊசிவாநிதி முதா நிஸ் சேஷ லோகான்வித
ரங்கீ வத்ஸரம் ஏகம் ஏவம் அஸ்ருனோத் வ்யக்தம் யதோக்த க்ரமாத் -2-

முத -மகிழ்ந்து -இவர் மகிழ்ந்து கூப்பிட -அவரும் மகிழ்ந்து அவதாரம்
யதோக்த க்ரமாத்-ஆச்சார்ய சிஷ்ய லக்ஷணங்கள் பூர்ணமாக நிறைந்து –

————

ஸ்ரீ பூப்யாம் ரங்க நாதே சடஜித் உபநிஷத் வ்யாக்ரியாம் ஸ்ரோது காமே
சேஷஸ் சந்தோக்ஷ யிஷ்யன் வர வர முனி தாம் ப்ராப்யயோ வர்த்ததே அக்ரே
காஷாய ஸ்ரீ துளஸ் யம்புஜ மணி ஸூஸிகா யஜ்ஞ ஸூத்ர த்ரி தண்டை
பாந்தம் ஸூப்ரோர்த்வ புண்ட்ரம் ஸ்மர ஹ்ருதயம் சதா கோச முத்ராந்த ஹஸ்தம் –3-

ஸ்ரீ பூப்யாம் ரங்க நாதே-உபய தேவிகள் உடன் அரங்கன்
ஸ்ரீ துளஸ் யம்புஜ மணி-ஸ்ரீ துளஸீ தாமரை மணிமாலைகள் அணிந்து –

————

கிருபயா பரயாச ரெங்கராட் மஹிமானம் மஹதாம் பிரகாஷாயன்
லுலுபே ஸ்வயமேவ சேதஸா வர யோகி ப்ரவரஸ்ய சிஷ்யதாம் -4-

மஹத்வம் பிரகாசப்படுத்திய நிகழ்வு -தம்முடையவும் மா முனிகளுடையவும் அன்றோ இது –
லுலுபே-கிளர்ச்சி -வெளிப்படுத்தி –

————–

ஸமாப்தவ் க்ரந்தஸ்ய ப்ரதித விவித உபாய நசயே
பரம் சஜ்ஜி பூதே வர வர முநேர் அங்க்ரி சவிதே
ஹடாத் பாலக கஸ்சித் குத இதி நிரஸ்தோப் யுபகத
ஜகவ் ரெங்கே ஸாக்ய பரிணத சதுர்ஹாய ந இதம் –5-

ஜகவ்-வந்ததும் -நாம சங்கீர்த்தனம் செய்வதையும் காட்டும்
சதுர்ஹாய-நான்கு வயஸு பாலகன்

——————–

ஸ்ரீ மான் ரெங்கேஸ்வரோ யத் வகுல வர வஸோ பாஷ்ய ஸாரார்த்த ஜாதம்
ஸ்ருத்வா ஸுவ்ம்யோ பயந்தா முனி வர சரணே ஸாத்ர பாவம் ப்ரபந்ந
ஸ்ரீ சைலே ஸேதி பத்யம் ககபதி நிலேயே மண்டபே தத் ஸமாப்தவ்
உக்த்வாஸ் அத்யே தவ்யமே தன் நிகில நிஜ க்ருஹே ஸ்வாதி ஸத் தத் ததாதவ் –6-

ஸாத்ர பாவம்-ஸிஷ்ய பாவம் –
உக்த்வாஸ் அத்யே தவ்யம் ஏதன் -முதல் முதலில் இத்தையே சொல்ல வேண்டும்
நிகில நிஜ க்ருஹே-அனைத்து க்ருஹங்களிலும் திவ்ய தேசங்களிலும்

————–

வேதா தவ் பூர்வம் உக்த்வா ஹரி ரிதி ஸூ ஜநோ வக்தி பஸ் ஸாத்ய தோமித் யேவம்
வக்தவ்யம் ஏதத் வகுள தர வச அநுஸ்ர வாரம்ப காலே
ஸ்ரீ சைலே ஸேதி பத்யம் ப்ரதம மத ஸதாம் ஸம் ப்ரதாய ஏக நிஷ்டை
லஷ்மீ நாதேதி பத்யம் ஸ்வயம் இதி பகவான் ஆதி ஸத் ரெங்க நாத –7-

ஆதி ஸத்-ஆஜ்ஜை-

——————

யத் வத் வக்தும் ந யுக்தம் ப்ரணவ ஹரி பதாப் யந்த்ர அந்யத் பதம் தத்
கிருஷ்னே த்யே தத் கதாசின் முனி சத வசநைர் வைதிகைர் ப்ரஹ்ம நிஷ்டை
தத் வத் ரெங்கேச பக்தைர் சம தம நியதை ஸாதுபி தத்வ வித்பி
வக்தும் யுக்தம் ந மத்யே சபதி நியதை யோரேதையோ பத்ம மன்யத் –8-

ந மத்யே-ஹரி பிரணவம் நடுவில் வேறே ஒன்றும் சொல்லாதது போல்
ஸ்ரீ சைல பாத்யம் லஷ்மி நாத பாத்யம் நடுவில் வேறே ஒன்றுமே சொல்லக் கூடாது
என்பதும் நம் பெருமாள் ஆஜ்ஜை

—————-

பல ஸ்ருதி –

ஸடரிபு ரேக ஏவ கமலா பதி திவ்ய கவி
மதுர கவிர் யதா ச சடஜிந் முனி முக்ய கவி
யதி குல புங்க வஸ்ய புவி ரெங்க ஸூதா கவிராட்
வர வர யோகிநோ வரதராஜ கவியஸ் ச ததா

—————–

வந்தே தம் தேவராஜம் வர வர முனிம் ஹ்ருதயம் முத
ஆஸ்ரிதானாம் பிரபத்யே ஸர்வத்ர ஸதா

ஸ்ரீ எறும்பி அப்பா திருவடிகளை ஸதா காலமும் பற்றி ஸ்ரீ மா முனிகள் சம்பந்திகளாக உஜ்ஜீவிப்போம்

——————————————–

ஸ்ரீ பரவாதிகேசரியார்‌ அருளிய ஸ்ரீ சைல வைபவம்‌

கூறுகேன்‌ உலகீரே கும்குமத் தோளரங்கேசர்‌ மாறன்‌ மறைப்பொருள்‌ கேட்க மணவாள மாமுனியை
ஏறுமணை தனிலிருத்தி இருநிலத்தில்‌ தாமிருந்து வீறுடனே செவி சாத்தி விரையடி பூசனை யாற்றி, –1-

ஏறுமணை–உயர்ந்த ஆஸனம்‌
இருநிலத்தில்‌ -பூமியில்‌
விரையடி-திருவடிகளை
பூசனை யாற்றி-தொழுது

ஆறு இரண்டு புறஞ்சூழ அரங்க முதல்‌ நூற்றெட்டும்‌
கூறியசீர்‌ சயிலத்தைக்‌ கொண்டாடி உரைக்க வெனா
ஊறிய தேன்‌ பெருக்கெள்ன உன்னிஅதை உகந்துரைத்தான்‌
சேறுவளர்‌ கமலை மைந்தன்‌ சிந்தை மகிழ்ந்து ஒருப்பட்டே.—2–

ஆறு இரண்டு–இரண்டு காவேரிகள்‌
அரங்க முதல்‌ நூற்றெட்டும்‌ -திருவரங்கம்‌ முதலான 108 திருப்பதிகள்‌
சயிலத்தைக்‌ கொண்டாடி-ஸ்ரீ சைலேச …என்னும்‌ தனியன்‌
உன்னி-எண்ணி
மைந்தன்‌ -அன்பன்‌ (கமலை மைந்தன்‌ -லஷ்மீ காத்நன்‌; சரிய:பதி!
ஒருப்பட்டே–ஒப்புக்‌ கொண்டு,

பட்டர் பிரான்‌ முதலாய பதின்மர் கலை பழிச்சலிலும்‌
சிட்டார்களாய்த்‌ தினந் தோறும்‌ திருமணிடு வேளையிலும்‌
இட்டமுற உணும் பொழுதத்து ஓண்கரநீர்‌ ஏற்கையினும்‌
அட்டதிக்கும்‌ விளங்குரைத்தார்‌ ஆரியர்கள் அனைவருமே–3

பதின்மர்கலை -ஆழ்வார்கள்‌ பதின்மரும்‌ பாடியுள்ள புகழ் மாலைகள்‌
ஓண் கர நீர்‌ –பரிசேஷணத்தில் ஆசமநம்‌
ஆரியர்கள்னைவருமே, -ஆசாரியர்கள்‌

ஆரியர்கள்‌ கொண்டாடி ஆசரித்த தனியனைத் தான்‌
பேரியலும்‌ தொண்டர் குழாம்‌ பெரும் பேறாக்‌ கொண்டனரால்‌
சீரியராய்‌ வாழ வெண்ணில்‌ செக தலத்தீர்‌ கற்றுணர்மின்‌
தாரியலும்‌ அரங்கருக்கும்‌ தமிழ் மறைக்கும்‌ மணமாமே
–4–தார்‌-பூமாலை

மணவாளமாமுனியை வழுத்துறவோர்‌ பயன்‌ பெறுவர்‌
குணமாகக்‌ கொண்மின்‌ இதைக்‌ கொடும் பிறவிப்‌ பிணி அகல்வீர்‌
பணவாளராவிவராம்‌ பகைத்தாரே யுய்தலிலர்‌
மணமுடைய மந்திரமா மதிக் கொள்ளீர்‌ தனியனையே–5
-(மணவாளராவிவராம்‌ -பாடபேதம்_
வழுத்துறவோர்‌ -துதிப்பவர்கள்‌
பணவாள்‌ அரா–(மணவாளராவிவராம்‌ -பாடபேதம்)-பணா மணிகளுடைய ஆதி சேஷன்‌;

தனியனென்று பேர்‌ சாற்றித்‌ தண்ணரங்கர்‌ முன்னர்‌
இனிய திருப் பவளத்தாலே –முனிவரானார்‌
மாறன்மறை முப்பத்தாறாயிரத்தின்‌ மாண் பொருளைக்‌
கூற உபதேசித்தார்‌ கொண்டு–6-

மா முனிவர்‌–சடகோப மா முனிகள்‌
ஈடுமுப்பத்தாறாயிரம்‌
மாண் பொருளை-உயர்ந்த அர்த்தங்களை

தேசமெங்கும்‌ இது திருப்பதிகள்‌ தோறுரைக்க
நேசமுற அரங்கர்‌ நேமித்தார்‌–ஏசுமவர்‌
பாதகராய்‌ எரிவாய்‌ பாழ் நகரில்‌ துய்ப்பர்‌ இன்னல்‌
வேதனார்‌ உள்ள மட்டும்‌ எய்த்து –7-

துய்ப்பர்‌ இன்னல்‌–இன்னல்‌ படுவர்‌
வேதனார்‌-பிரம்மா
எய்த்து-வருந்தி

எய்யத்‌ துணிய இராவணியைக்‌ கொன்றவன்‌ காண்‌
செய்ய நெறி விளங்கும்‌ சேஷனவன்‌–வையக்‌
தனை வளர்க்குமாறு வர யோகி தானாய்‌
வினையறுத்து வீடருளும்‌ வேந்து–8-

இராவணியைக்‌ கொன்றவன்‌–ராவணன்‌ பிள்ளையான இந்த்தரஜித்தைக்‌ கொன்ற லக்ஷ்மணன்‌
வினையறுத்து–பாபங்களைப் போக்கி
வீடருளும்‌–மோக்ஷம்‌ தரும்‌
வேந்து–முனிவர்‌ பெருமான்‌

வேந்தராய்‌ மண்ணாண்டு விண்ணேறலாம்‌ எளிதாய்‌
தோய்ந்த உறவாயிருக்கில்‌ தொல்லுலகீர்‌–ஒர்ந்துய்ய
ஏதிகொடு காலனிழந்து அமர்மேவான்‌ விண்ணோர்‌
நாதனும்‌ வந்தே வணங்கு நன்‌கு — 9–

விண்‌-பரமபதம்‌
ஏதிகொடு–ஆயுதம்‌
நாதன்‌-பரமபத நாதன்‌

வணங்கினர்‌ சீர் பெற்றார்‌ வரன்‌ முறையால்‌ வீடணர் போல்‌
இணங்கினார்‌ ஒரொருவர்‌ இரு நிலத்தில்‌ சிறப்புற்றார்‌
பிணங்கினார்‌ பேய்ப் பிறவிப்‌ பேதையர்‌ கடமைக் கண்டே
உணங்கினார்‌ தாமதராய்‌ உட்சனந்தார்‌ தென்றவரே–10-

வீடணர்–விபிஷணன்‌
பிணங்கினார்‌ –மாறுபடுபவர்‌
பேதையர்‌ -அறிவிலிகள்‌
உணங்கினார்‌ -காய்கின்றவன்‌
தாமதராய்‌–மந்தர்‌

தென் கலையாம்‌ தமிழ் வேதச்‌ சீர்சைலத்‌ தனியனெனும்‌
நன்கலையும்‌ உள் கசிந்து நவிற்று பெருந்தகை மாந்தர்‌
மின் கலையும்‌ புரி நூலும்‌ மேனோக்கு புண்டரமும்‌
தென் கலையும்‌ வட கலையும்‌ திகழ் நாவர்‌ ஆகுவரே–11-

தென் கலை–அழகிய கலை
மின்‌-ப்ரகாசம்‌
மேனோக்கு புண்டரமும்‌ –ஊர்த்வ புண்ட்ரம்‌-திருமண்‌ காப்பு

ஆகுகலென்‌ இனி எனக்கோர்‌ ஆராவமுதாய்‌ என்‌
சோகமற உளத்தடத்து துலங்கு வர வர யோகி
சேகறு செம்மலர்த் தாளும்‌ சீர்‌ சைலத் தனியனும் இன்று
ஓகையுறப்‌ பெற்றனெனால்‌ ஒலி கடல்‌ தாரணியீரே. –12-

சேகறு-துயாறு
ஓகை–மகழ்ச்சி

தாரணியோர்‌ வாழ வெண்ணித்‌ தானே திரு வநந்தன்‌
பேரணியும்‌ குருகை நகர்‌ பிறங்க நனிப்‌ பேரருளால்‌
சீரணியும்‌ மணவாள மா முனியாய்ச்‌ செனித்தனால்‌
தாரணியும்‌ அரங்கருக்குத்‌ தமிழ் மறைத்‌ தேசிகனெனவே–13–

பிறங்க–விளங்க
செனித்தனன் -அவதரித்தனன்‌

தமிழ் மறை ஓதுவரேல்‌ தனியனது மற்றில்லை
திமிரமற மெய்ஞ் ஞானச்‌ செழுஞ்சுடர் சேர்‌ மனமுடையீர்‌
அமிழாமல்‌ சமுசாரத்து ஆழ் கடலைக்‌ கடத்தி ஒரு
நிமிடத்தில்‌ நித்தியராய்‌ நிறுத்தும்‌ பேரின்பத்தே
–14-திமிரமற-மயர்வற-இருள் போக

பத்துத் திசைகளினும்‌ பண மணிகள்‌ சுடரெறிப்ப
முத்தி தரும்‌ அரங்கருக்கு மூவணையாய்‌ சூழ்ந்திலங்கும்‌
எத் திசையும்‌ பணிந்தேத்தும்‌ எம்‌ பெரிய முனியாகும்‌
அத்தனெழில்‌ வர யோகி ஆயிர வாய்‌ அரவரசே-
-15-அத்தனெழில்‌ வர யோகி–ஆசார்யனான அழகிய மணவாள மா முனிகள்‌

அரவேறு மேவி யறி துயில்‌ கொள்ளும்‌ அரங்க நகருரை
வர யோகி சீர்சைலத்தின்‌ பெருமாப் புகழ்‌ வைபவத்தை
விரகால்‌ இசை மறையோர்‌ திலகன்‌ தமிழ் வீறுடைய
பரவாதி கேசரி பாப் பதினைந்து பணித்தனனே
–15-யோக நித்‌திரையில்‌ ஆழ்ந்த திருவரங்கன்‌ அருளிச் செய்த,

ஸ்ரீ மணவாள முனிகள் வைபவம் —ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா அருளிச் செய்த பாதாதி கேச மாலை -ஸ்ரீ மா முனிகள் விஷய ஸ்ரீ அமலனாதி பிரான் —

ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –

எம் எம் பச்யதி எம் எம் ஸ்பர்சதி–அக்றிணை பொருள்களும் –
கிம் புன பாந்தவா ஜனகா -புளிய மரத்தை மோஷம் புக வைத்து அருளினார் –
பாகவதர் அபிமானத்தில் ஒதுங்கி மோஷம் பெறலாமே –
உடையவர் சரம காலத்தில் அருளிச் செய்த ஆறு வார்த்தைகளில் இறுதியானது –
அழகிய மணவாள நகர் -முத்தப்ப நகர் -பாண்டியன் சமர்ப்பித்த -நகர் –
அந்த பாண்டிய மன்னன் திரு மால் இரும் சோலை திருக்கோயில் புநர் நிர்மாணம் செய்தானாம் –
பட்டர் பிரான் ஜீயர் -கோவிந்த தாசர் -வடுக நம்பி பரம்பரை -என்பர் –

———————————————————————

போதச் சிவந்து பரிமளம் வீசிப் புதுக் கணித்த
சீதக் கமலத்தை நீரே ஏற ஓட்டிச் சிறந்து அடியேன்
ஏதத்தை மாற்று மணவாள யோகி இனிமை தரும்
பாதக் கமலங்கள் கண்டேன் எனக்குப் பயம் இல்லையே –1-

புதுக்கணித்த -அலங்கரித்த
செய்ய தாமரைத் தாளிணை வாழியே போல்

—-

வேழக் குருத்தின் அழகைப் பழித்து விரை மருவும்
வாழைப் பருவத்தின் ஆகாரம் கொண்டு வளம் புனைந்த
ஏழைக்கு இரங்கும் மணவாள யோகி இரு குறங்கைக்
கேழற்ற நெஞ்சில் வைப்பேற்கு ஒரு கோலமும் கேடில்லையே –2-

குறங்கு -தொடை
கேழற்ற-ஒப்பில்லாத

———–

தேனமர் மாலை மணவாள யோகி திரு மருங்கு
வீனமிலாத இளமையின் எழில் சகனம்
வானிலை உய்த்த துவராடை இன்று என் மனத்தை விட்டுத்
தான் அசலாமல் என்னை ஊழி காலமும் தாங்கியதே –3–

மருங்கு -இடை
சகனம்-தொடையின் உள் பாகம்
வான் -பெருமை
துவராடை -காவி யூட்டிய ஆடை

————

வந்திக்க வாழ்வித்து அருள் மணவாள முனி வடிவைச்
சிந்திக்கவும் அரிதாம் அழகாற்றில் திகழ் சுழி போல்
உந்திச் சுழி எனது உள்ளம் குறை கொண்டாயதென்றும்
சந்தித்தவர் கண்ணும் நெஞ்சும் கொள்ளா நிற்கும் தாம் இருந்தே –4–

சூறை- கொள்ளை

வலம் சுழித்து ஒழுகு நீர் வழங்கு நீர் கங்கையின்
பொலம் சுழி என்றலும் புன்மை பூவொடு
நிலம் சுழித்து எழு மணி யுந்தி நேர் இனி
இலஞ்சியும் போலும் வேறு உவமை யாண்டாரோ -கம்பர் —சுந்தர காண்டம் உருக்காட்டு படலம் -45-

———–

ஆறும் வணங்கு மணவாள மா முனி அம்புயமும்
காரும் சுரபியும் போலே வழங்கும் கைத் தாமரையில்
சேரும் திருத் தண்டும் சேவித்த மானிடர் தீ வினையால்
ஈரும் படிப் பிறவார் திரு நாட்டு இன்பம் எய்துவரே –5-

அம்புயம் -திருத்தோள்
கார் -மேகம்
சுரபி -காம தேனு
திருத்தண்டு -திருக்கையில் ஏந்தும் முக்கோல்
ஈரும் படி -அறும் படி

கையும் ஏந்திய முக்கோலும் வாழியே

————

தடம் கொண்ட கோயில் மணவாள மா முனி தாமரைத் தார்
வடம் கொண்ட மார்பினில் வண் புரி நூலும் எனது நெஞ்சில்
இடம் கொண்டு அடங்க எழுதி வைத்தேன் இனி வல் வினைகாள்
திடம் கொண்டு நீசர் தம் தேயத்தில் ஏசிடும் தீதறவே –6–

தார் –கிண்கிணி மாலை
வடம் -மணி வடம்
வண் புரி நூல் -முப்புரி நூல்
எழுதி வைத்தேன் -சுவர் வழி எழுதிக் கொண்டேன் -பெரியாழ்வார்

துய்ய மார்பும் புரி நூலும் வாழியே

————

மங்காது உலகை அருள் மணவாள மா முனி மருவார்
சிங்கார மாலைத் திருத் தோள்களும் அவற்றே திகழும்
சங்காழியும் தொழுது ஏத்தினேனால் தமியேனுடைய
பங்காளும் வல்வினை எங்கோ கணத்தினில் பாறியதுவே –7-

மங்காது -குறையாது
மருவார் -வாசனை நிரம்பிய
தமியேன் -கதி அற்றவன்

சுந்தரத் திருத் தோளிணை வாழியே

———–

பொழியும் தமிழ் புனையும் மணவாள முனி கருணை
பொழியும் திரு விழியும் மூக்கும் பொலி மறைகள்
செழி யன்பு கொண்டு உரைக்கும் திரு நாவும் திரு முகமும்
வழி யன்பு கொண்டு வழுத்தினேன் பேரின்பம் மற்று இல்லையே –8–

வழுத்தினேன் -தொழுதேன்

மாறன் திருவாய் மொழிப் பொருளை மா நிலத்தோர்
தேறும் படி உரைக்கும் சீர்

கருணை பொங்கிய கண்ணினை வாழியே

————

பொருநல் துறையில் அருளால் இருந்த நம் புங்கவர் கோன்
அருள் நல் தமிழ் உரை மா மணவாள வரு முனிவன்
திரு நெற்றியும் திரு நாமமும் நாலும் திருச் சிகையும்
வருணத்து எழிலும் மனத்துள்ளே நின்று வாழ்விக்குமே –9-

புங்கவர் கோன் –ஆச்சார்ய சிகா மணி
நாலும் திருச்சிகை -தாழ் முடி
வருணம் -நிறம்

————

வாழி செந்தாமரைத் தாள் துவராடை மருங்கு கொப்பூழ்
வாழி முந்நூலுறை மார்பு முக்கோல் அங்கை வாழி திண் தோள்
வாழி செவ்வாய் விழி வாழி பொன் நாம மருவு நுதல்
வாழி பொற் கோயில் மணவாள மா முனி வாழ் முடியே -10-

செய்ய தாமரை தாளிணை வாழியே
சேலை வாழி திரு நாபி வாழியே
துய்ய மார்பும் புரி நூலும் வாழியே
சுந்தரத் திருத் தோளிணை வாழியே
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே
கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யிலாத மணவாள மா முனி
புந்தி வாழி புகழ் வாழி வாழியே –

ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த சாத்து முறைப் பாசுரத்துடன் ஒப்பு நோக்குக

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்த -ஸ்ரீ மா முனிகள் விஷய-ஸ்ரீ கண்ணி நுண் சிறுத்தாம்பு–

ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –

—————

எக்குணத்தோர் எக்குலத்தோர் எவ்வியல்வோர் யாயிடினும்
அக்கணத்தே நம் இறைவராவாரே -மிக்க புகழ்
காரார் பொழில் கோயில் கந்தாடை அண்ணன் என்னும்
பேராளனை அடைந்த பேர் -தனியன் –

ஸ்ரீ வரத நாராயண குரு -என்னும் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனுக்கு –
சிஷ்யருக்கு ஸ்ரீ மா முனிகளே அருளிச் செய்த தனியன்
ஸ்ரீ பெரிய கோயிலே நிரூபணம் கோயிலில் வாழும் வைஷ்ணவர் என்றபடி –
ஸ்ரீ ராமானுஜருக்கு ஸ்ரீ முதலியாண்டான் பாதுகை அம்சம் போல் ஸ்ரீ அண்ணன் ஸ்ரீ மா முனிகளுக்கு பாதுகை ரத்னம்
ஸ்ரீ பெரிய பெருமாள் தாமே நம்முடைய அண்ணன் என்று அபிமானித்து அருளிச் செய்த திரு நாமம்

ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஸாஸ்த்ரம் -யார் அறிவார் -யார் அனுஷ்ட்டிப்பார் -ஓர் ஒருவர் உண்டாகில் –
அனுஷ்டான பர்யந்தம் மா முனிகள் இடம் தானே காணலாம்
ஆச்சார்யன் தனது சிஷ்யனை தனது ஆச்சார்யருடைய சிஷ்யனாகவே நினைத்து உபதேசிக்க வேண்டும் –
ச ப்ரஹ்மச்சாரிகள் என்ற நினைவு கொண்டு -மா முனிகள் அனுஷ்ட்டித்து காட்டியதும் இதுவே உதாஹரணம் –
ஆகவே அவரை ஆஸ்ரயித்தவர்களே தமக்கு இறைவர் ஆவார் என்று அருளிச் செய்கிறார் –

தான் ஹித உபதேசம் பண்ணும் போது தன்னையும் சிஷ்யனையும் பலத்தையும் மாறாடி நினைக்கை
க்ரூர நிஷித்தம் -ஸ்ரீ வசன பூஷண ஸூர்ணிகை –308-
சிஷ்யனாக நினைக்காமல் ச ப்ரஹ்ம சாரியாக-தன்னுடனே கற்பவனாகவே – –
தனது ஆச்சார்யருக்கு சிஷ்யராக நினைத்து உபதேசிக்க வேண்டும்

பரமனைப் பயிலும் திருவுடையார் யாவராலும் அவர் கண்டீர் எம்மை ஆளும் பரமர்
ஆழிப்பிரான் தன்னைப் பணியுமவர் கண்டீர் எம்மை யாளுடை நாதர்
கடல் மல்லைத் தல சயனத்து உறைகின்ற ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே
கடல் மல்லைத் தலை சயனத்து உறைவாரைக் கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வம்
மத்யம பர்வம் ப்ரக்ருஷ்டம் அன்றோ
இந்தத் தனியன் யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் உள்ளது
மா முனிகள் அருளிச் செய்த தனியன்

———-

சதாச்சார்ய சம்பந்தம் பெற்ற மா முனிகளைத் தாம்
அகதிகராய் ஆஸ்ரயித்த விஷயத்தை அருளிச் செய்கிறார்

சீருற்ற செஞ்சொல் திருவாய் மொழிப் பிள்ளை செம் முகமும்
தாருற்ற மார்பும் தளிரேய் பதங்களும் தன் மனத்துப்
பூரித்து வாழும் மணவாள மா முனி பொன்னடிகள்
பாரில் தனித்த அடியேன் சரண் என்று பற்றினனே –1-

சீருற்ற செஞ்சொல் திருவாய் மொழிப் பிள்ளை -ஆச்சார்யரைப் பற்றும் பொழுது
அவரது ஆச்சார்யரைப் பற்றியும் சிந்திக்க வேண்டுமே
குரு பரம்பரையும் அனுசந்தேயம்
சீர்மையும் செம்மையும் -உடைய சொற்கள் –
இனிமையாகவும் -உண்மையாயும் -எக்காலத்துக்கும் பிரயோஜனமாயும் இருக்குமே
சீரூற்ற -சொற்களுக்கும் திருவாய் மொழிப்பிள்ளைக்கும் விசேஷணம்
திருவாய் மொழியையே நிரூபகமாகக் கொண்ட சீர்மை உண்டே –

மேலே அவரது வடிவு அழகு ஈடுபாடு
செம் முகமும் –
தாருற்ற மார்பும் -தாமரை மணி மாலை திருத்துழாய் மாலை
தளிரேய் பதங்களும்
தன் மனத்துப் பூரித்து வாழும் மணவாள மா முனி -ஸதா தியானத்துக்கு —
சிஷ்யரானவர் ஆச்சார்யர் உடைய சீர் வடிவை ஆசையுடன் நோக்குபவர் அன்றோ
தனது வாக்கின் படியே அனுஷ்ட்டித்து காட்டி அருளுபவர்

பொன்னடிகள் -பூணுபவர்க்கு ப்ராப்யமாயும் ப்ராபகமாயும் இருக்குமே பொன் –
மா முனிகள் திருவடித்தாமரைகள் -பாவானத்வம் போக்யத்வம் இரண்டும் உண்டே —
திருக்கமல பாதம் -திருப்பாதம் -கமல பாதம் போல் அன்றோ இவரதுவும்
பாரில் தனித்த அடியேன் சரண் என்று பற்றினனே-
ஆகிஞ்சன்யனான -அநந்ய கதியான தமியேன் ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்தேன்

————-

ஆழ்வான் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்திலே முதல் ஸ்லோகத்திலே எம்பெருமானாரை சரண் புகுந்து
அவர் உகப்புக்காக நம்மாழ்வாரை அடுத்த ஸ்லோகத்திலே சரண் புகுந்தால் போலவே இவரும்
அவர் உகப்புக்காக திருவாய் மொழிப்பிள்ளை திருவடிகளில் சரணம் புகுகிறார்

பற்றினன் செம்மைத் திருவாய் மொழிப் பிள்ளை பாதங்களே
உற்றனன் செம் மறை உள்ளதெல்லாம் இவை யுண்மை என்றே
கற்றனன் கோயில் மணவாள மா முனிக் கார் முகிலைப்
பெற்றனன் இங்கே அடியேன் இன் மேல் பிறவாமலுக்கே –2–

பற்றினன் செம்மைத் திருவாய் மொழிப் பிள்ளை ஆச்சார்யர் – தம்முடைய ஆச்சார்யர் இடமும்
சிஷ்யர் ப்ரீதியுடன் இருப்பதையே விரும்புவார்

உற்றனன் செம் மறை உள்ளதெல்லாம் இவை யுண்மை என்றே கற்றனன் -ஸமஸ்த வேதங்களும் அருளிச் செயல்களும்
ஸஹஸ்ர மாதா பிதாக்கள் போல் பிரதி பத்தி பண்ண வேண்டுமே
கோயில் மணவாள மா முனிக் கார் முகிலைப் பெற்றனன் -தனது பேறாகவே பொழியும் கார் முகில் –
காரேய் கருணை யதிராசருடைய புனர் அவதாரம் அன்றோ

இங்கே அடியேன் இன் மேல் பிறவாமலுக்கே-பேற்றுக்கு உபாயம் ஆச்சார்யர் அபிமானமே -இதுவே உத்தாரகம்

பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி
பிரபத்தியில் அசக்தனுக்கு ஆச்சார்ய அபிமானம் தானே

———————-

மா முனிகளுக்கு திருவாய் மொழிப்பிள்ளை இன்னருளால் கிடைத்த எம்பெருமானார்
திருவடிகளிலே ப்ராவண்யத்தைப் பேசி
யதீந்த்ர ப்ரவணரான மா முனிகளை வாழ்த்த வேண்டி இருக்க –
அப்படிச் செய்யாதவர்களை நிந்திக்கிறார் –

பிறவாமல் வாழ்விக்கும் பேரருளாளர் பெருமை என்றும்
துறவாத சிந்தை எதிராசன் துய்ய பதங்கள் நெஞ்சில்
மறவாத சீலன் மணவாள மா முனி மா மலர்த்தாள்
பறையாத வாசகர் யாரவர் பஞ்ச மகா பாதகரே —3–

பிறவாமல் வாழ்விக்கும் பேரருளாளர் -வரம் கொடுப்பவர்களில் ராஜர் -தியாகராஜர் -சம்ப்ரதாயம் வளர்த்த வள்ளல்
விந்த்யா ஆடாவியில் பெரிய பிராட்டியார் உடன் வந்து ரக்ஷித்து
ஆ முதல்வன் இவன் என்று ஆளவந்தார் கடாக்ஷித்து பிராரத்தபடி ராமானுஜரை ஆக்கி அருளி
ஆறு வார்த்தை அருளி சங்கை தீர்த்து தர்சனத்துக்கு ஆக்கி அருளி
வாதத்தில் எஜ்ஜ மூர்த்தியை -வென்று அருளாள பெருமாள் எம்பெருமானார் ஆக்கிய பெருமை –

பெருமை என்றும் துறவாத சிந்தை எதிராசன் –காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ்ப்
பூண்ட அன்பாளன் அன்றோ நம் இராமானுசன் -திருவாராதன பெருமாள் இவரே

துய்ய பதங்கள் நெஞ்சில் மறவாத சீலன் மணவாள மா முனி -யதீந்த்ர பிரவணர் இவர் ஒருவரே –
மா மலர்த்தாள் -மா முனிகள் திருவடிகள் தானே மா மலர்த்தாள்களாய் இருக்கும்

பறையாத வாசகர் யாரவர் பஞ்ச மகா பாதகரே -இவற்றை அறிந்தும் ஆஸ்ரயிக்காத
யார் ஒருவர் இருந்தால் அவர் மஹா பாதகர் தானே

—————-

அனுகூலர் அல்லாதவர்களை நிந்தித்து
அனுகூலர்களுக்கு அவரே மோக்ஷ உபாயமாகும் தன்மையைப் பேசி மகிழ்கிறார் –

பாதகம் உள்ளவை தாமே ஒழித்துப் பரிந்து அவர்க்குச்
சாதகமானதும் ஈதென்று கொண்டு சரண் கொடுக்கும்
மா தகவோன் மணவாள மா முனி மா மலர்த்தாள்
பாதுகையை முடி மேல் சரணாகக் கொண்டு பற்றினார்க்கே –4–

திருப் பாதுகையே தனது ஸ்பர்சத்தாலே பிரதிபந்தகங்களை ஒழித்து -பரிந்து ஒழித்து –
சாதகமும் ஈதே என்று தன் தாளும் அருளுவாரே

தகவு -மா -தகவு -பிரதிபலன் எதிர்பார்க்காமல் தன் பேறாக -நிர்ஹேதுகமாக –
மா விசேஷணம் -தகவுக்கும் -முனிகளுக்கும் -தாள்களுக்கும் –
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் – இவரும் பாதுகா ஸ்தானீயம் அன்றோ –

பொன்னடியாம் செங்கமலப் பொதுக்களை உன்னிச் சிரத்தால் தீண்டில்
அமானவனும் நம்மைக் கரத்தால் தீண்டல் கடன் -அன்றோ

—————–

கீழே பாவநவத்தைப் பேசி இதில் போக்யத்வத்தைப் பேசுகிறார்
அல்லது
மோக்ஷம் அளிக்காமல் படுகொலை செய்தாலும் விட ஒண்ணாத
கண்ணுக்கும் நெஞ்சுக்கும் போக்யமான
திவ்ய மங்கள விக்ரஹத்தின் அழகைப் பேசுகிறார்

நற் கேசவன் தமர் நற் றவத்தோர் நயனங்களுக்குப்
பொற் கோல மேனியன் பூ தலத்தோர் செய்த புண்ணியமாம்
முக் கோல் தரித்த மணவாள மா முனி மூர்த்தி தனை
எக் கோடி காலமும் சிந்தை செய்வார் தமக்கீடு இல்லையே –5–

நற் கேசவன் தமர் நற் றவத்தோர் நயனங்களுக்குப்
பொற் கோல மேனியன் பூ தலத்தோர் செய்த புண்ணியமாம் -மோக்ஷ பிரதனாக இல்லாமல் இருந்தாலும்
திவ்ய மங்கள வடிவு அழகு விட ஒண்ணாதே

கேசவன் -நன்மை -கெடும் இடம் எல்லாம் கேசவா என்ன -நாம் அறியாத நன்மைகளையே தானே அருளுபவர் அன்றோ –
நன்மை -தமர்களுக்கு விசேஷணம் -ததீய சேஷத்வம் அறிந்து -இதுவே நல் தவம்
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -ஆச்சார்ய கைங்கர்யமே போது போக்கு -ஆச்சார்ய திருவடிகளே ப்ராப்யம்
இவர் கண்களுக்கு விருந்தாய் இருப்பாரே —

கோளரியை வேறாக ஏத்தி இருப்பரை வெல்லும் மற்று அவரை சாத்தி இருப்பார் தவம்
பொன் மேனி கண்டேன் -கோல மேனி காண வாராய் -இங்கு தான் பெண்ணாகவும் கோலமாகவும்
திருவாலே பொன்னாக பிரகாசிக்கும் கரிய முகில் புரையும் திரு மேனி அவனது
பொன் மேனி அவயவ சோபை -கோல மேனி -சமுதாய சோபை –இரண்டுமே இங்கு –

முக் கோல் தரித்த மணவாள மா முனி மூர்த்தி தனை -திவ்ய மங்கள விக்ரஹ சிந்தனையே
எக் கோடி காலமும் சிந்தை செய்வார் தமக்கீடு இல்லையே-கோடி கோடி யுகங்களாக –
கோடி -மூலை -க்ஷணம் காலமாகவாவது சிந்தித்தாலே அத்விதீயமாவோமே

கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரை சாத்தி இருப்பார் தவம் -நான்முகன் -18-என்று
ஆச்சார்ய அபிமானத்தை தவம் என்றது போல் இங்கு புண்ணியம் என்கிறார்

ஞாலம் உண்ட ஞான மூர்த்தி நாராயணன் கோல மேனி
மா முனிகளுடையதோ பொற் கோல மேனி

தேசிகர் -த்ரிஜகத் புண்ய பலம் த்ரி தண்ட ஹஸ்தம் -என்றார் யதிராஜ சப்ததியில்
அதே போல் இங்கு பூதலத்தோர் செய்த புண்ணியமாம் முக்கோல் தரித்த மா முனி என்கிறார்

கோடி மூலை சிறு பகுதி -க்ஷணப் பொழுதாவது மா முனிகளின் திவ்ய மங்கள விக்ரஹ
சிந்தை செய்வோருக்கு யாரும் ஈடில்லை என்றவாறு

———————

இல்லை என்றே எண்ணி என் பவக் காட்டை எரியிலிட்டு
நல்லருள் மாரி பெய்து என்னைத் தளிர்ப்பித்து நன்கு தன்பால்
தொல்லருள் ஞானம் விளைத்து ஆழ்ந்த போகத்தை துய்ப்பிக்கவே
வல்லவன் கோயில் மணவாள மா முனியை வாழ்த்துவனே —6–

இல்லை என்றே எண்ணி என் பவக் காட்டை எரியிலிட்டு-கர்மங்கள் ஆகிற காடு –
அநாதி பிறவிச் சூழலில் திக்கித் தடுமாறி -ஆர்ஜித்தவற்றை
அக்னியில் இட்டால் போல் -அழித்து –தீயினில் தூசாகும் -அதுக்கும் மேலே

நல்லருள் மாரி பெய்து என்னைத் தளிர்ப்பித்து -நிர்ஹேதுக கடாக்ஷ வர்ஷம் -குளிர்வித்து

நன்கு தன் பால் தொல்லருள் ஞானம் விளைத்து -நிலத்தில் விளைக்கும் -தொல் ஞானம் -அருள் ஞானம் –
பூர்வாச்சார்யர் வர்ஷித்த அர்த்த விசேஷங்களைத் தொகுத்து –
அனைத்தும் சேர்ந்த மடு அன்றோ இவர் -இதுவே தொல் ஞானம்
இவற்றை நிர்ஹேதுகமாக தமது பேறாக அருளியதே அருள் ஞானம்

ஆழ்ந்த போகத்தை துய்ப்பிக்கவே வல்லவன்-பரமபத அனுபவம் -ஞான கார்யமான அனுபவ ஜனித்த ப்ரீதி காரித
அசேஷ சேஷ வ்ருத்திகளும் பண்ணும் படி அருள வல்லவர் அன்றோ

கோயில் மணவாள மா முனியை வாழ்த்துவனே-இவருக்கு நிரூபகமே கோயில் மணவாள மா முனி

எந்தை எதிராசருக்கு அரங்கன் ஈந்த வரம் -இந்த திருவரங்கத்தில் இனிது இரும் என்ற திரு முக வார்த்தை
தம் தமக்கும் என்று கொண்டு இருந்தாரே –

த்வயம் அர்த்த அனுசந்தான ஸஹ அத்ரைவ ஸ்ரீ ரெங்கம் ஸூகம் ஆஸ்வ -வரம் -நியமனம் -இவருக்கும் தானே
உபகார ஸ்ம்ருதியாலே இவரை மங்களா சாசனம் பண்ணுகிறார் –

—————-

ஐந்தாம் பாட்டில் மானஸீக தியானத்தையும்
அடுத்து வாசக ஸ்தோத்ரம்
இதில் காயிக பிராணாமம்
நினைப்பதும் பேசுவதும் வணங்குவதும் ஒரே வியக்தியான மா முனிகளே என்கிறார்

வாழ்த்துவன் எந்தை மணவாள மா முனி மா மலர்த்தாள்
தாழ்த்துவன் யான் அவன் தாளிணைக் கீழ் சிரம் தாரணியில்
காழ்த்திடும் செல்ல முதல் முக்குறும்பும் கரிசறவே
பாழ்த்திடும் என் தன் அதி கோர பாவங்கள் பற்றறவே –7–

வாக்கு -செயல் -மனம் முக்கரணங்கள் ஒருப்பட்ட மஹாத்மாக்கள் -ஆர்ஜவ குணம் –
ஐந்தாதவது பாசுரம் மனம் ஈடுபட்டு -மணவாள மா முனி மூர்த்தி தனை எக் கோடி காலமும் சிந்தை செய்வார்
ஆறாவது பாசுரம் வாக்கு ஈடுபட்டு -இதிலும் -வாழ்த்துவன் எந்தை மணவாள மா முனி மா மலர்த்தாள் –
அடுத்து காயிக ஈடுபாடு -இதில் -தாழ்த்துவன் யான் அவன் தாளிணைக் கீழ் சிரம் தாரணியில் –
சிரம் அனைத்துக்கும் உப லக்ஷணம் -தண்டன் இட்டு வணங்கி

இவை மூன்றும் முக்குறும்பு போக்கவே
தன -அபிஜன -வித்யா கர்வங்கள் போக்கவே -எளிதில் போக்க முடியாதே –
நம் ஸ்ரீ வத்ஸாங்கர் -கூரத்தாழ்வான் போலே ஆகவே-

அருளிச் செயல்களில் ஆழ்ந்து இருப்பதால் உடையவரால் அபிமானிக்கப் பட்டு ஆழ்வான் –
அவர் அபிமானத்தாலே முக்குறும்பு அறுக்கப் பட்டவர் –
ஆச்சார்ய அபிமானத்தாலே நமது பிரதிபந்தகங்கள் போக்கப் பெறுவோம் -அதி கோர பாவங்கள் பற்றறவே-

————————-

வாழ்த்துவன் என்றாரே -நமக்கோ வாழ்த்த ஸாமர்த்யம் இல்லையே –
நீசர்களாய் இருக்கிறோமே என்னாகும் அவன் புகழுக்கு என்று இருக்கவே
சிந்திக்கவே பெறப் போகும் அனைத்தையும் இங்கு காட்டி அருளுகிறார் –
சிற்ற வேண்டாம் சிந்திப்பே அமையும் என்கிறார்

பாவங்கள் பற்றறும் பாசங்கள் பற்றறும் பற்றி வைகும்
கோவங்கள் பற்றறும் குற்றங்கள் பற்றறும் கோடி சன்ம
தாவங்கள் பற்றறும் தண்ண ரங்கன் புகழ் சாந்த குண
தீவன் கருணை மணவாள யோகியைச் சிந்திக்கவே –8-

பாவங்கள் பற்றறும் -பிரதிபந்தங்கள் போக்கி அருளுவார்
பாசங்கள் பற்றறும் -விஷயாந்தரங்களின் பற்று போக்கி அருளுவார் -இவை அன்றோ பாபங்களுக்கு வேர்ப்பற்றுகள் –

பற்றி வைகும் கோவங்கள் பற்றறும் –ராக த்வேஷங்கள் -காமம் கோபம் இத்யாதிகளை போக்கி அருளுவார்

குற்றங்கள் பற்றறும் -இவற்றால் வரும் குற்றங்களையும் போக்கி அருளுவார்

கோடி சன்ம தாவங்கள் பற்றறும் -தாப த்ரயங்கள் போக்கி அருளுவார் –

தண்ண ரங்கன் புகழ் சாந்த குண தீவன் -ஈடு கேட்டு அருளினான் இவர் திரு வாயாலே –

அரங்கன் புகழ் சாந்த குண தீவன்-இவரை ஆஸ்ரயித்தே பெரிய பெருமாள் ஆனார் –

அனைத்து ஆச்சார்யர்கள் வியாக்யானங்களும் இவர் இடம் சேர்ந்து உள்ளனவே -ஆகவே ரசிக்கும்
கருணை மணவாள யோகியைச் சிந்திக்கவே-சிந்தித்த -மாத்திரமே சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்

——————-

பெருமையை நினைந்து சிந்திப்பவர்களையே அன்றி
பொறாமை கொண்டு நிந்தித்தாலும் கூட விடாமல் உஜ்ஜீவிக்கப் பண்ணி அருள்வார் என்கிறார் –

சிந்தித்து அரங்கரைச் சிந்தை பயம் கெடச் சென்னி தன்னால்
வந்தித்து நிச்சலும் வாயாரா வாழ்த்து மெய்ம்மா மறையோர்
புந்திக்குள் மேவும் வர யோகி தம்மைப் புகைந்து சிலர்
சிந்திக்கிலுமே விடார் இது காண் அவர் நீர்மை நெஞ்சே –9–

சிந்தித்து அரங்கரைச் சிந்தை பயம் கெடச் -இஹ லோகம் பயம் கெடவும் –
கைங்கர்யம் -குண அனுபவ போது போக்கு நிச்சலுமாகக் கிடைக்குமா -என்றும்
அங்கு சென்று நித்ய கைங்கர்யம் பெறுவது என்றோ என்னும் பயமும் இருக்குமே

சென்னி தன்னால் வந்தித்து -சிந்தனைக்கு மேலே காயிக விருத்தியும்

நிச்சலும் வாயாரா வாழ்த்து -வாயார ஸ்தோத்ரங்களைச் சொல்லியும்

மெய்ம்மா மறையோர் -கற்றதன் பலனை அனுஷ்டித்துக் காட்டுபவர்கள் -நன்மையால் மிக்க நான் மறையோர்
ஆச்சார்யர் உகந்த விஷயம் என்றே பகவத் விஷயத்தில் இழிவார்கள் அன்றோ –
மதுரகவி ஆழ்வார் -அனந்தாழ்வான் போல்வார் நிஷ்டைகள் –

புந்திக்குள் மேவும் வர யோகி -இப்படி உள்ளார் சிந்தைக்குள் அன்றோ மா முனிகள்

தம்மைப் புகைந்து சிலர் சிந்திக்கிலுமே -இப்படிப்பட்ட அவரை த்வேஷிப்பார் ஓர் ஒருவர் இருந்தாலும்

விடார் இது காண் அவர் நீர்மை நெஞ்சே–அவர்கள் உஜ்ஜீவனத்துக்காக -அவர்களையும் கூட விடாதவர் அன்றோ -மா முனிகள்

மித்ர பாவேந -வேண்டாவே -நிந்திப்பார்க்கும் -நாலூரானுக்கு இரங்கி அருளிய கூரத்தாழ்வான் போல் அன்றோ நம் ஸ்வாமி –

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் -கூரத்தாழ்வான் –அவர் தேவிகள் குறைத்து ஆண்டாள் பிராட்டி –
நாலூரானுக்கும் -பட்டர் இடம் அபசாரம் பண்ணிய அரசன் -ராக்ஷஸிகள் பக்கல் கிருபை பண்ணி அருளியது போல் இங்கு மா முனிகளும்

——————–

பெரும் பாலோர் சிந்தித்து வந்தித்து வாழ்த்தி
ஸ்வாமியின் பெருமையை உள்ளபடி உணர்ந்து
இந்த சேவையே பரம பாவனம் போக்யம் என்று புகழ்ந்து நேசிக்கிறார்கள்

நெஞ்சே அனைய அடியார் நிறம் கொண்ட நிச்சயமாம்
மஞ்சேறு சோலை அரங்கப் பதி தனில் வாதியர்க்கு
நஞ்சேயனையே மணவாள யோகி இந்நாள் அளிக்கும்
தம் சேவை தன்னை இகழ்வார்க்கு அல்லால் அவர் தாம் இட்டரே –10-

நெஞ்சே அனைய அடியார் நிறம் கொண்ட நிச்சயமாம்-அவர் திரு உள்ளம் போல் விசால திரு உள்ளம் கொண்ட அடியார்கள்
மஞ்சேறு சோலை அரங்கப் பதி தனில் -மேகம் சூழ்ந்த திருவரங்கத்தில்

வாதியர்க்கு – வீணான வாதிகளுக்கு -கால ஷேபத்துக்கு அருளிச் செயல்களே இருந்தாலும் – –
மாயா வாதிகள் வந்தால் சிஷ்யர்களை இட்டே வெல்லும் சீர்மை -வேடலப்பர் இட்டு வென்ற

நஞ்சேயனையே மணவாள யோகி இந்நாள் அளிக்கும் தம் சேவை தன்னை -எம்பெருமானாரை நேரில் சேவிக்காத
இழவு தீர சேவை சாதித்து தர்சன நிர்வாஹம் பண்ணி அருளும் மா முனிகளை

இகழ்வார்க்கு அல்லால் அவர் தாம் இட்டரே-இகழ்வார் கல்லார் -பாட பேதம் -அறிவில்லாதவர் –
இவர்களுக்கும் கூட கிருபை -அடைந்தர்வர்கட்க்கு எல்லாம் அன்பராய் இருக்கிறாரே –

———————–

இட்டர்கள் வாழ எதிராசர் வாழ இரு நிலத்தே
சிட்டர்கள் வாழ நம் தேசிகர் வாழச் செகத்தில் உள்ள
துட்டர்கள் மாள மணவாள மா முனி தோன்றினனே
எட்டும் இரண்டும் அறியார் இங்கு ஏசினும் யாவருமே –11-

இட்டர்கள் வாழ -மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் -நித்யம் –
இதுக்கு பிரயோஜனம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ
எதிராசர் வாழ -எம்பெருமானார் அதுக்கு வாழ வேண்டுமே

இரு நிலத்தே சிட்டர்கள் வாழ -ஆச்சார்ய அபிமானம் என்று இருப்பார்கள் வாழ

நம் தேசிகர் வாழ- நமது ஆச்சார்யர்கள் வாழ்வதாவது அவர் காலக்ஷேபங்களைக் கேட்டு அனுஷ்டித்த பின்பே

செகத்தில் உள்ள துட்டர்கள் மாள-மாறன் கலையே உணவாகப் பெற்றார் நமது ஸ்வாமி –
துஷ்டர்கள் தாங்களே மாண்டு போவார்கள் நம் ஸ்வாமி பிரபாவம் கேட்ட மாத்திரத்தாலே –
திருவாய் மொழியும் ஸ்ரீ ராமாயணமும் அரண் போல் ஸ்வாமியுடைய காலஷேபமே ரக்ஷை நமக்கு –
நடையாடும் மதிள் போல் –
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த அன்றோ திருவாய் மொழி
ஸ்வாமி ஈட்டு ஸ்ரீ ஸூக்திகளையே வாய் வெருவிக் கொண்டு இருப்பாரே

மணவாள மா முனி தோன்றினனே-காண வாராய் என்று இருப்பார் கண்டு மகிழ்வதே பரம பிரயோஜனம் –
அவனுக்குப் போலே ஸ்வாமிக்கும் –
ஆகவே சாது பரித்ராணாம் முதலில் சொல்லி துஷ்ட நிரஸனம் பின்பு –
எட்டும் இரண்டும் அறியார் இங்கு ஏசினும் யாவருமே-திரு -அஷ்டாக்ஷரம் த்வயமும் இருக்கு என்று அறியாதவர்

—————-

பகவத் திரு அவதாரத்தைப் போல் என்றார் கீழே
இதில் அவன் அவதாரத்தை விட நம் ஸ்வாமி, திரு அவதாரத்தின் சீர்மை இதில்

யாவரும் உய்ய மணவாள யோகி தயாளு என்னப்
பூ மகள் மண் மகள் புண்ணியமாய் இந்த பூதலத்தே
தாம் அவதாரம் செய்யாது இருந்தால் சடகோபர் திரு
வாய் மொழியோடு கடலோசை யோடு என்ன வாசி யுண்டே –12-

யாவரும் உய்ய -ஸமஸ்த ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக
மணவாள யோகி தயாளு என்னப்-காரேய் கருணை ராமானுஜர் போல் தயையே வடிவாகக் கொண்டு

பூ மகள் புண்ணியமாய் மண் மகள் புண்ணியமாய் -உபய நாச்சியார் கடாக்ஷமே ஹேதுவாக —
சேதன ஸமூஹங்களை பரமபுருஷன் திருவடிகளிலே சேர்த்து அருளுவதற்காகவே
சகலரையும் திருத்தித் திரு மகள் கேள்வனுக்கே ஆள் படுத்தி அருளவே -பூ பாரம் தீர்த்து அருளவே –
ஒரு மடையாக நம் ஸ்வாமியைக் கடாக்ஷித்து அருளி –

இந்த பூதலத்தே தாம் அவதாரம் செய்யாது இருந்தால் -இருள் தரும் மா ஞாலமான இதில் நம் ஸ்வாமி
திரு அவதாரம் பண்ணி இருக்கா விட்டால்

சடகோபர் திரு வாய் மொழியோடு கடலோசை யோடு என்ன வாசி யுண்டே -அருளிச் செயல்களே போது போக்காக
இருக்க ஸ்வாமி ஈட்டைப் பெருக்கி அருளினார் அன்றோ –

சூழ் விசும்புக்குப் போவதற்கு முன்பு நம்மாழ்வார்

நந்திபுர விண்ணகர -திரு விண்ணகர அனுபவத்துக்குப் போவதற்கு முன்பு கலியன்

திருப்பேர் நகர் பல சுருதி -தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே –10-8-11-

கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை கொண்டு இவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே –5-9-10-

ஸ்வாமித்வம் -காட்டும் திவ்யதேச பதிகங்கள் -இவை போன்ற சாம்யங்களை அனுபவித்து போது போக்கப்
பெற்றுக் கொண்டு இருப்பது ஸ்வாமி காட்டி அருளியதாலேயே தானே –
மாறன் கலையே உணவாகப் பெற்ற நம் ஸ்வாமி –

————

வாசி யறிந்த வதரியில் நாரணார் மனம் கொள்
தேசுடை எந்தை மணவாள மா முனி சீர் தழைப்பச்
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டு உரைத்தார் இவ்வையகம் சீருறவே–13-

வாசி யறிந்த வதரியில் நாரணார் -திருமந்திரம் அருளிச் செய்த பிரதம ஆச்சார்யர்
தானே சிஷ்யனுமுமாய் இருந்து அருளினாலும் திருந்தாத ஜனங்கள் உஜ்ஜீவிக்க –

திருக்குறுங்குடி நம்பி எம்பெருமானார் இதன் கேட்டு அறிந்து ஸ்ரீ வைஷ்ணவ நம்பியான ரஹஸ்யம் வாசி அறிந்தவர் அன்றோ –
பெரிய பெருமாள் அருளிச் செய்த தனியனை முதல் முதலில் சொல்லி அருளியவர் இவர் தானே

தஞ்சமாய் இருக்கும் வார்த்தை கேட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பூர்வ அர்த்தம் அருளிச் செய்து பிற் பகுதியை
இரண்டு ஆற்றுக்கு நடுவில் ஸ்ரீ ரெங்கம் சென்று அறிந்து கொள்ள உபதேசித்தார்
இவர்கள் வந்து சேரும் பொழுது ஈட்டு சாத்துமுறை ஆகப் போகும் நாளில் -அரங்கநாதன் –
முழுவதையும் அருளிச் செய்த வ்ருத்தாந்தம் யதீந்த்ர ப்ரணவ ப்ரபாவத்தில் உண்டே –
இவரே ஆச்சார்யர் என்று காட்டிக் கொடுக்கவே இங்கு அனுப்பி வைத்தான் —
இவர் பெருமை அறிந்த நாரணார் —

மனம் கொள் தேசுடை எந்தை மணவாள மா முனி -திரு உள்ளத்தில் எழுந்து அருளிய தேஜஸ்ஸூ —
சீர் தழைப்பச்-பெருமையை உலகோர் அறியும்படி
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டு உரைத்தார் -ஸ்வாமியை ஆச்சார்யராகக் கண்டு அருளிச் செய்தார் அன்றோ –

இவ்வையகம் சீருறவே-அத்தாலே-இந்த லீலா விபூதி சீர் பெற்று நித்ய விபூதியில் சிறந்து விளங்கிற்றே
இப்பிரபந்த சாரமே இந்த தனியன் தானே –
தீ -தொல் அருள் ஞானம் -முக்கோல் தரித்த நம் ஸ்வாமி –பாட்டுத் தோறும் அருளிச் செய்து —
நிகமித்து அருளுகிறார் நம் கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் –

வதரியாச் சிரமத்தில் இருமெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடிவணங்கிக்
கதியாக ஓர்பொருளை அளிக்க வேண்டும்
கண்ணனே ! அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீசைல மந்திரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச்செய்து
பதியான கோயிலுக்குச் சென்மின் நீவிர்,
பாதியையும் சொல்லுதும்யாம் தேற வென்றார். -ஸம்ப்ரதாய சந்த்ரிகை – 4

சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்க்ன் தினசரியை கேளா நிற்பச்
சன்னிதிமுன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னிதனில் நீராடிப் புகழ்ந்து வந்து
புகழரங்கர் சன்னிதிமுன் வணங்கி நிற்பச்
சன்னிதியினின்று அரங்கர் தாமே அந்தத்
தனியனுரை செய்து தலைக் கட்டினாரே. ஸம்ப்ரதாய சந்த்ரிகை – 5

————–

சீருற்ற செஞ்சொல் திருவாய் மொழிப் பிள்ளை செம் முகமும்
தாருற்ற மார்பும் தளிரேய் பதங்களும் தன் மனத்துப்
பூரித்து வாழும் மணவாள மா முனி பொன்னடிகள்-1-
என்று த்யான முகத்தால்
ஸ்ரீ சைல தயா பாத்ரத்வம் கூறப்பட்டது -காருணிகரே த்யானிக்கப் பட வேண்டியவர்கள்

தொல்லருள் ஞானம் விளைத்து-6-என்றும்
இந்த பூதலத்தே தாம் அவதாரம் செய்யாது இருந்தால் சடகோபர் திரு வாய் மொழியோடு
கடலோசை யோடு என்ன வாசி யுண்டே –12-என்றும்
தத்வ ஹித புருஷார்த்த ஞானத்தையும்
பகவத் விஷயார்த்த ஞானத்தையும் பிறருக்கு உண்டாகும் படி செய்வதைக் கூறும் முகத்தால்
மா முனிகளுக்கு உள்ள ஞானத்தையும்

சிந்தித்து அரங்கரைச் சிந்தை பயம் கெடச் சென்னி தன்னால் வந்தித்து நிச்சலும் வாயாரா வாழ்த்து
மெய்ம்மா மறையோர் புந்திக்குள் மேவும் வர யோகி–12-
என்று மா முனிகள் ஸ்ரீ ரெங்கநாத பக்தர்களால் த்யானம் செய்யப்படுகின்றமை கூறும் வாயிலாக
மா முனிகளுடைய ஸ்ரீ ரெங்கநாத பக்தியும் பேசப்பட்டன

முக் கோல் தரித்த மணவாள மா முனி -5-என்று வைராக்கியமும்
மணவாள மா முனிக் கார் முகிலை-2-என்று ஒவ் கார்யமும்
கருணை மணவாள யோகி-8- தயை என்று
தீ பக்த்யாதி -ஆதி யால் ஸங்க்ரஹிக்கிக்கப் பட்ட -தீ பக்த்யாதி குண ஆர்ணத்வம் கூறப்பட்டது

எதிராசன் துய்ய பதங்கள் நெஞ்சில்
மறவாத சீலன் மணவாள மா முனி-3-யதீந்த்ர ப்ரணத்வம் கூறப்பட்டது

மணவாள மா முனி -வரயோகி -மணவாள யோகி-பல இடங்களிலும் வருவதால்
ரம்ய ஜா மாத்ரு முனித்வம் கூறப்பட்டது

மணவாள மா முனியை வாழ்த்துவனே —6–என்றும்
வாழ்த்துவன் எந்தை மணவாள மா முனி மா மலர்த்தாள்
தாழ்த்துவன் யான் அவன் தாளிணைக் கீழ் சிரம்-7- என்பதால்
வந்தே பதார்த்தம் சொல்லப் பட்டது

ஆக இப்பிரபந்தம் ஸ்ரீ சைல தயா பாத்ர தனியன் விவரணம் என்பதும் தேறும்

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்த ஸ்ரீ வரவர முனி அஷ்டகம்

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் தனியன் –

ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணா ஷயம் விபுல வாதூல கோத்ர உத்பவாநாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்திர பாதாஸ்ரயம் வரத நாராயணம் மத் குரும் ஸமாஸ்ரயே

பர்யங்கேபி பரம் தத்வம் ரங்க ஷாயிந மேவய
உத்திஷ்டத் யநு பூயாஹம் தம் வந்தே வர யோகிநம் –1-

உஷஸ் யுக்தாய லோகார்ய ப்ரமுக ஆச்சார்ய ஸூக்திபி
உச்சைஸ் ஸ்துத்வாத கோவிந்தம் தத் திவ்ய ஸ்தல காஞ்சிதம் –2-

காவேர்யா கமல உத்பாஸி ஸம்ஸ்ப்ருஷ்ய ஸலீலம் ஷுபம்
கோவிந்த குண ஷிலாதி த்யாத்வா அஷ்ரு கலிலாநந –3-

ரோமாஞ்சித சலத் காத்ர பக்த்யா பரமயைவ ய
புநாதி தீர்த்தம் சங்காஹ்ய தம் வந்தே வர யோகிநம் –4-

பகவத் ஸாஸ்த்ர நிர்த்திஷ்ட விதி நைவ நிமஜ்ஜ்ய
திவ்ய காஷாய ஸூத்த ஊர்த்வ புண்ட்ர மாலாதி பூஷித –5–

மஹா மந்த்ராதி ஸம் ஜப்ய விஷிஷ்டைஸ் பரி வாரித
ஸ்ரீ ரெங்க தாம ஸம் ஸேவ்ய தத் தத்வாந் யுப ப்ரும்ஹ்ய ச –6–

ஆராத்ய ரங்க ராஜாதீந் அநு யோகம் விதாய ச
அபு நாத் அம்ருதைர் ஆர்யாந் தம் வந்தே வர யோகிநம் –7-

வந்தே ஸுவ்ம்ய வராக்ரிய யோகிநம் அஹம் த்யான அம்ருதா ஸ்வாதிநம்
ஸ்ரீ ரெங்காதிப பாத பங்கஜ பரி சார்யா குணை காந்திநம்
ஆஜ்ஜா ஸாஸ்த்ர விதேர விஸ்யதமலம் ஸம்ஸாரி கந்தாஸஹம்
காலே ஷு த்ரி ஷு சைவ காமித பல ப்ராப்த் யை குரூணாம் குரும் — 8-

இது ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ பூர்வ தினசரி சுருக்கம் –
த்யான ஸ்லோகம் -போல் அமைந்துள்ளது

———–

ஸ்ரீ அழகிய மணவாள மா முனிகள் வைபவம் –ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை–ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள்–

ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –

எம் எம் பச்யதி எம் எம் ஸ்பர்சதி–அக்றிணை பொருள்களும் –
கிம் புன பாந்தவா ஜனகா -புளிய மரத்தை மோஷம் புக வைத்து அருளினார் –
பாகவதர் அபிமானத்தில் ஒதுங்கி மோஷம் பெறலாமே –
உடையவர் சரம காலத்தில் அருளிச் செய்த ஆறு வார்த்தைகளில் இறுதியானது –
அழகிய மணவாள நகர் -முத்தப்ப நகர் -பாண்டியன் சமர்ப்பித்த -நகர் –
அந்த பாண்டிய மன்னன் திரு மால் இரும் சோலை திருக்கோயில் புநர் நிர்மாணம் செய்தானாம் –
பட்டர் பிரான் ஜீயர் -கோவிந்த தாசர் -வடுக நம்பி பரம்பரை -என்பர் –

———————————————————————

ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர்
அவனியிலே இரு நூறு ஆண்டு இரும் நீர் என்னப்
பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப்
பரமபதம் நாடி அவர் போவேன் என்ன
நீதியாய் முன் போலே நிற்க நாடி
நிலுவை தன்னை நிறைவேற்றி வாரும் என்னச்
சாதாரணம் என்னும் மா வருஷம் தன்னில்
தனித் துலா மூல நாள் தான் வந்தாரே—1-

நற்குரோதன வருட மகரமாத
நலமாகக் கன்னிகையை மனம் புணர்ந்து
விக்கிரம வற்சரக்கில் வீட்டிருந்து
வேதாந்த மறைப் பொருளைச் சிந்தை செய்து
புக்கத்தில் பெண் பிள்ளை போலே சென்று
புவனியுள்ள ஸ்தலங்கள் எல்லாம் வணங்கி வந்து
துக்கமற வைணவர்கள் தொண்டு செய்யத்
துரிய நிலை பெற்று உலகை உயக் கொண்டாரே –2-

செய நாமமான திருவாண்டு தன்னில்
ஸ்ரீ ரங்க ராஜருடைத் திருநாள் தன்னில்
செயமாகத் திருவீதி வாரா நிற்கத்
தென்னாட்டு வைணவர் என்று ஒருவர் வந்து
தயையுடைய மணவாளப் பெருமாணைனார்
தன முன்னே ஓரருத்தம் இயம்பச் சொல்லி
சயனம் செய்து எழுந்து இருந்து சிந்தித்து ஆங்கே
சந்தித்துக் கோயில் காத்து அருளினாரே –3-

வதரியாச் சிரமத்தில் இரு மெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடி வணங்கிக்
கதியாக ஒரு பொருளை அளிக்க வேண்டும்
கண்ணனே அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீர்சைல மந்திரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச் செய்து
பதியான கோயிலுக்கு சென்மின் நீவீர்
பாதியையும் சொல்லுதும் யாம் தேற வென்றார் –4-

சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்கன் தினசரியைக் கேளா நிற்பச்
சந்நிதி முன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னி தனில் நீராடி புகழ்ந்து வந்து
புகழ் அரங்கர் சந்நிதி முன் வணங்கி நிற்பச்
சந்நிதியின்று அரங்கர் தாமே அந்தத்
தனியனுரை செய்து தலைக் கட்டினாரே –5–

நல்லதோர் பரிதாபி வருடம் தன்னில்
நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
தொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர் பக் நாலாம் நாளில்
செல்வமிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்றே
வல்லி யுரை மணவாளர் அரங்கர் நங்கண்
மணவாள மா முனிக்கு வழங்கினாரே –6–

ஆனந்த வருடத்தில் கீழ்மை ஆண்டில்
அழகான ஆனி தனில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீறிட்ட வழக்கே என்ன
மணவாள மா முனிகள் களித்திட்டாரே –7–

தேவியர்கள் இருவருடன் சீர் அரங்கேசர்
திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
தாவிதமா இந்த உலகோர்கள் வாழத்
தமிழ் மறையை வர முனிவன் வரக் கேட்டே
ஆவணி மாசம் தொடங்க நடக்கும் நாளில்
அத்தியனத் திருநாள் அரங்க நாதர்
தாவமற வீற்று இருந்து தருவாய் என்று
தாம் நோக்கி சீயர் தமக்கு அருளினாரே –8–

அருளினதே முதலாக அரங்கருக்கும்
அன்று முதல் யரும் தமிழை அமைத்துக் கொண்டு
தெருளுடைய வியாக்கியை ஐந்துடனே கூட்டித்
திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
பொருள் உரைக்கும் போது எல்லாம் பெருமாளுக்குப்
புண் சிரிப்பும் பாவனையும் மகிழ்வும் கொள்ள
அருளுடைய சடகோபர் உரைத்த வேத
மது கேட்டுச் சாற்றியது இத் தனியன் தானே –9-

நாமார் மெருஞ்சீர் கொள் மண்டபத்து நம் பெருமாள்
தாமாக வந்து தனித்து அழைத்து –நீ மாறன்
செந்தமிழின் வேதத்தின் செழும் பொருளை நாள் தோறும்
வந்துரையாய் என்னுரையால் வாய்ந்து –10-

சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தலைப்பப்
போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ விப்பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே –11-

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம்‌ அண்ணா அருளிச் செய்த்‌ ஸ்ரீ வரவர முநி ஸுப்ரபாதம்‌
வேதாத்த தேஸிக கடாக்ஷ விவ்ருத்த போகம்‌
காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம்‌ |
வத்ஸாந்வவாய மநவத்ய குணைருபேதம்‌
பக்த்யா பஜாமி ப்ரவாதி பயங்கரார்யம்‌ ॥

ரவிருதிகஸ் த்வதாபி ந விநஸ்யதி மே திமிரம்‌
விகஸத பங்கஜம்‌ ஹ்ருதய பங்கஜமேவ ந மே |
வரவர யோகி வர்ய! வரணீய.! தயைகநிதே!
ஐயஜய தேவ ஜாக்ருஹி ஜநேஷு நிதேஹி தியம்‌ ॥–1-
ஸ்வப்‌நமிதம்‌ தவ ஸ்வ மஹிமா நுபவைக ரஸம்‌ ததாபி
ததாவிகம்‌ ததிதி ஜாது ந வேத்தி ஐந | வரவர யோகி வர்ய! ததிதப விஜஹாது பவாந்‌
அபரிமிதம்‌ ஹிதம்‌ த்ரிஜகதா மநு சிந்தயிதும்‌ ॥–2-
அவதரணம்‌ ததேவ ஜகதாம விவேக ப்ருதாம்‌
விவித ஹிதா வபோதந க்ருதே ஹி க்ருதம்‌ பவதா |
தத இஹ ஏஹி யோக ஸயநாத்‌ மம நாத
ஜநாந்‌ அம்ருத மயைர பாங்க வலயைரபி ஷேச யிதும்‌ –3-

ஸரதர வித்த ப்ருந்த ஸூஷமா பரிபோஷ ஜுஷா
தவ நயநேந கேசந பரே சரணே நிததா |
மது கபீர தீர சதுரை ருகிள நரி தரே வரத
துரம்‌ தரந்தி பவஸிந்துமமும்‌ தரிதும்‌ ॥–4–
பரம நபோ நிவாஸ! பணி புங்கவ! ரங்க பதே:
பவந மிதம்‌ ஹிதாய ஜூகோ பவதா ததிகதம்‌ |
ததபிஸ வை தேவ ந்ருகநிம் ப்ரசுபீகுருஷே
ததிஹ மஹத்‌ தவைவ குரு வைபவ யத் பிதுரம்‌ ॥–5-
த்வதபிமத ப்ரியஸ்த்வ தநு வர்‌த்தந தந்யதமாத்‌
அலமதிரிக்த இதயகில லோக ஸுபோ தமிதம்‌ |
அவநி தலம்‌ த்வதீப்ஸித மிதம்‌ ச ஹி தத்ர வஸந்
அயமகிலஸ்‌ததைவ நிருபாயமுபைதி பதம்‌ –6-

ஸத்வோத்தரைஸ் ஸதத ஸேவ்ய பதாம் புஜேந
ஸம்ஸார தாரக தயார்த்ர த்ருகஞ்சலேந |
ஸெளம்யோ பயந்த்ரு முநிநா மம தர்ஸிதெளா தே
ஸ்ரீ வேங்கடேஸ சரணெள சரணம்‌ ப்ரபத்யே
ஸ்ரீ மத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே |
ஸர்வ லோக நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்‌ ॥
–்ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வேங்கடச ஸ்தோத்ரத்திலுள்ளவை)

ஸ்ரீ வரவர முநி விஷய முக்தகம்‌
ப்ரபத்யே பத பத்மாநி பரம ப்ரேம ஸம்பதாம்‌
ஸெளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணைக ஜுஷாம்‌ ஸதாம்‌
ஸம்பத் ஸ்வருபா நுகுணைக யஸ்மிந்‌ ஸர்வோத்தரோ யத்ர மந : ப்ரஸாத: |
ஸ்த்பிஸ் ஸமம் தேவ தமேவ தேஸம்‌ ப்ராப்யம்‌ ப்ரபத்யே பவதங்க்ரி மூலம்‌ ॥

யந் மூலாஸ் வயுஜமாஸ் யவதார மூலம்‌
காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக ஸிந்தோ: |
ஆஸீதஸத் ஸூகணிதஸ்ய மமாபி ஸத்தா மூலம்‌
ததேவ ஐகதப் யுதயைக மூலம்‌ ॥

ஸ்ரீ மத் ரங்கம்‌ ஐயது பரமம்‌ தாம தேஜோ நிதாம்‌
பூமா தஸ்மிந்‌ பவது குஸலீ கோ அபி பூமா ஸஹாய: |
திவ்யம்‌ தஸ்மை தாது விபவம்‌ தேஸிகோ தேஸிகோநாம்‌
காலே காலே வரவர முநி கல்பயந் மங்களாநி

அபகத மதமாதைரந்தி மோபாய நிஷ்டை:
அதிகத பரமார்த்தை ரர்த்த காமா நபேஷை : |
நிகல ஜந ஸுஹ்‌ருத்பிர் நிர் ஜிதக்‌ரோத லோபை:
வரவர முநி ப்ருக்யைரஸ்து மே நித்ய யோக ॥

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே |
ஸ்ரீரங்கவாஸிநே பூயாத்‌ நித்ய ஸ்ரீர்‌ நித்ய மங்களம்‌ ॥

—————-————————————————————————————————————–————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரவாதி கேசரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீசைலேச மந்த்ர ப்ரபாவம் —

May 22, 2026

மணவாள மாமுனிகள்‌ வைபவ பரமான யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்‌ எனும்‌ இந்த திவ்ய க்ரநததத்தை அருளிச் செய்த பிள்ளை லோகார்ய (பிள்ளைலோகம்‌) ஜீயர்‌ மணவாளமாமுனிகள்‌ திருவடிகளில்‌ மதுரகவி நிஷ்டராய்‌ அந்தரங்கரான கோவிந்தப்ப தாதர்‌(தாஸர்‌) என்பவரின்‌ திரு வம்சத்தில்‌ உதித்தவர்‌. இந்த கோவிந்‌தப்பர்‌ ஆஸ்ரம ஸ்வீகாரம்‌ பண்ணி பட்டர் பிரான்‌ ஜியர்‌ என்று திருநாமம் பெற்று மாமுனிகளின்‌ அஷ்ட திக் கஜங்களில்‌ ஒருவராய்‌ விளங்கினார்‌. கோவிந்தப்பருடைய குமாரர்‌ அழகிய மணவாளர்‌-அழகிய மணவாளருடைய பெளத்ரரான வரதாசாரியர்‌ என்பவர்‌
உததமாஸ்ரமம்‌ ஸ்வீகரிதது பிள்ளை லோகம் ஜீயர்‌ என்று ப்ரஸித்தி பெற்ரார்
. இவர்‌ மணவாள மாமுனிகள்‌ அருளிச் செய்த யதிராஜ விம்சதி, உபதேச ரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி ப்ரபந்தம்‌ இவைகளுக்கு மணி ப்ரவான வ்யாக்யானங்கள்‌ அருளிச் செய்துள்ளார்‌. ராமாநுஜார்ய திவ்ய சரிதம்‌ என்னும்‌ வைபவ க்ரந்தம்‌, இராமானுச நூற்றந்தாதி வ்யாக்யானம்‌, நாலாயிர தனியன்கள்‌ வ்யாக்யானம்‌ இவைகளையும்‌ அருளிச்‌ செய்துள்ளார்‌. இவருடைய திருநஷத்ரம்‌ சித்திரையில்‌ திருவோணம்‌,-திருக் கடல்‌ மல்லையில்‌ கடல்‌ கொண்டு விட்ட தல சயனத்‌ துறைவார்‌ ஸந்திதியை இப்போதுள்ள விடத்தில்‌ கட்டி, அதில்‌ பெருமாளையும்‌ பூதத் தாழ்வாரையும்‌ திருப்ரதிஷ்டை கண்டருளப் பண்ணி அந்த ஸந்நிதியில்‌ தீர்த்தம்‌ முதலிய சிறப்புகளைப்‌ பெற்று வாழ்ந்திருந்தார்‌ இன்றும்‌ இவருடைய பூர்வாச்ரம ஸந்ததியினர்‌ இச் சிறப்புகளை அநுபவித்து வருகின்றனர்‌.

—–

ஸ்ரீஸைலேஸ தயா பாத்ரம்‌ தீ பக்த்யாதி குணார்ணவம்‌’ |
யதீந்த்ர ப்ரவணம்‌ வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்‌

மணவாள மா முனிகள்‌ லிஷயமாக இந்தத்‌ தனியனை , ஸ்ரீரங்க நாதன்‌ தான்‌ மாமுனிகளுக்குச்‌ சிஷ்யனாயிருத்து அருளிச் செய்தது ப்ரஸித்தம்‌. இது நமக்கு மந்த்ர ரத்னததுக்‌ கொப்பான மஹா
மந்த்ரமாகும்‌.

வாழி திருவாய்மொழிப் பிள்ளை மாதகவால்‌ வாழும்‌ மணவாள மாமுனிவன்‌” என்று பேசும்படி பெரிய ஜீயர்‌ திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளை ஆஸ்யித்துத்‌ திருவாய்‌மொழி முதலான திவ்ய ப்ரபந்த தாத்பர்யங்களையும்‌ அவரடி பணிந்து பெற்று, தாம் பெற்ற அர்த்தங்களை எல்லாரும்‌ கேட்டு உஜ்ஜீவிக்கும் படியாக நடத்த வேணும்‌ என்று அதற்கநுகுணமாக ஈடுபட்டிருக்க, இவரை நம்பெருமாள்‌ அர்ச்சகர்‌ மூலம்‌ அழைத்‌தருளி, “திருவாய்மொழியின்‌ அர்த்தத்தை நாமும்‌ நம்‌ மடியார்களும் கேட்டு வாழும்படி பெரிய திரு மண்டபத்திலே நடத்தும்‌ என்று தம்‌ திருவடிகளை ஊன்றுவிதது அருள்பாடிட்டு. நியமித்‌த௫ள, இவரும்‌ அப்படியே நடத்த, உயர்வற வுயர் நலம்‌-தொடங்கி அவாவறச் சூழ்‌” என்கிற சாற்றுப் பாட்டான வாறே
இவர்‌ உபன்யாஸம்‌ நடத்துவதைக்‌ கேட்டருளி, மிகவும்‌ உகந்து முப்பத்தாறாயிரப்‌ பெருக்கர்‌ என்று இவருக்குத்‌ திரு நாமம்‌ சாத்தியருளி ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்‌’–என்கிற தனியனும்‌ அனு ஸந்தித்‌தருளினார்‌.
இப்படிப்‌ பெரிய பெருமாள்‌ நிர்ஹேதுகமாகத்‌ தம்மை விஷயீ கரித்து நியமித்தருளியதற்கு ஜீயர்‌ அருளிச்‌ செய்த திருநாமம்‌ (பாசுரம்‌):
நாமார்‌ ? பெரிய திருமண்டபமார்‌? நம் பெருமாள்‌ ,
தாமாக நம்மைத் தனித்தழைத்து– நீ மாறன்‌
செந்தமிழ்‌ வேதத்தின்‌ செழும் பொருளை நாளு மிங்கே
வந்துரை யென்றேவுவதே வாய்ந்து.

இப்படி நம் பெருமாள்‌ அருளிச் செய்த பெரிய ஜீயரது தனியனுக்கு அர்த்தம்‌–திருவாய் மொழிப் பிள்ளை யினுடைய க்ருபைக்கு விஷய பூதராய்‌, ஞான பக்‌தி வைராக்ய மஹோ ததியாய்‌ ஸ்ரீபாஷ்யகாரர்‌ விஷயத்திலே ப்ராவண்யத்தை யுடையராய்க்‌ கொண்டிருக்கிற கோயில்‌ அழகிய மணவாளச்‌ சியரை ளேலிக்கறேன்‌”-என்றபடி.

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்‌ : நம்மாழ்வாருளாலே அவர்‌ திருவடிகளான எதிராசர்‌ திருவடிகளை எப்போதும்‌ மறவாமல்‌ இறைஞ்சி ஏத்தும்‌ திருவாய் மொழிப் பிள்ளை சீரருளுக்கு ஏற்ற கலமாயிருப்‌பவர்‌ மணவாளமாமுனிகள்‌–ஸ்ரீசைல பூர்ணர்‌-(பெரிய திருமலை நம்பி) கிருபையால் பக்தி வெள்ளத்தைப்‌
பெற்றது -முன்பு ராமாநுசனாக ; தீர்த்தங்களாயிரத்தை ஸ்ரீ சைலேசர்‌ தயையால்‌ பெற்றது பின்பு மா முனிகளாக )
ஸ்ரீ சைலேசரான பெரிய திருமலை நம்பி க்ருபையாலும்‌ ஸ்ரீசைல தேசிகர்‌ ( திருவாய் மொழிப் பிள்ளை) தயையாலும்‌ இராமாயணமென்னும்‌ பக்தி வெள்ளமும்‌. தீர்த்தங்‌கள் ஆயிரமான திருவாய் மொழியும்‌ யதீந்த்ர ப்ரவணரான இவரிடம்‌ குடி கொண்டுள்ளன

தீ பக்த்யாதி குணார்ணவம்‌-
ஞானம்‌, பக்தி வைராக்யம் முதலான குணங்களுக்குக்‌ கடலாயிருப்பவர்‌ மணவாள முனிகள்‌. முன்‌ நிலைகளான இளைய பெருமாள்‌ (லஷ்மணர்‌) இளையாழ்வார்‌ (உடையவர்‌) இரண்டிலும் ஞான பக்த்யாதிகள்‌ பூர்ணமாய்‌ உண்டு-பெரிய ஜீயருடைய அந்தப்ரேமாதிகள் பெரிய பெருமாள விஷயத்துச்குச்‌ சேர இரட்டித் திருக்கும் -.

யதீந்த்ர பிரவணம்‌ -இனி நம் பெருமாளிடத்தில் ப்ராவண்யம் அதன்‌. எல்லை நிலமான எம்பெருமானார் அளவும்‌ செல்லதைச்‌சொல்வது -யதீந்த்ர ப்ரவணம்‌’-அவர்‌ (எம்பெருமானார்‌) பராங்குச பக்தர்‌. இவர்‌ (மா முனிகள்‌) யதீந்த்ர ப்ரவணர்‌ இவரை அனைவரும் கால்‌ கட்டுகிறது இவர்‌ யதீந்தர ப்ரவணராகையாலே

வந்தே ரம்ய ஜாமாதரம்‌ முநிம்‌-அழகிய மணவாள மா முநி-என்று திருநாமத்தை யநுஸந்தித்து அவர்‌ கால்களில்‌ விழுகிறார்‌.

இப்படிகளால்‌ ஏற்றங்களை யுடைய இவர்‌ ஸ்துதி ரூபாமான இத் தனியன் -யத் வேதா தெளஸ்வர : ப்ரோக்தா வேதாத்தேச ப்ரதிஷ்டித;'” என்று வேதத்துக்கு ஓம்‌ என்னுமா போலே, ஸகல
திவ்ய ப்ரபந்தங்கள்‌, அவைகளின்‌ வ்யாக்யான விசேஷங்கள்‌,இவைகளில்‌ ஸாரமான ரஹஸ்யங்கள்‌, இவை. எல்லாவற்றினுடைய முதலிலும்‌ முடிவிலும்‌ அகில திவ்ய தேச விலக்ஷண அதிகாரிகளாலும்‌ அநுஸத்திக்கப் படுமthaaய்‌ இருக்கும்‌.

ப்ரணவத்‌தில் அகாரம்‌ பகவத் வாசகமாயும்‌ மகாரம் ஜீவ வாசகமாயும்‌ உகாரம்‌ இருவருடைய உறவை ப்ரகாஸிப்பதாகவும்‌ இருக்கும்‌.-
அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லம்
உவ்வானவரடிமை யென்றுரைத்தார்- இவ்வாறு
கேட்டிருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியில்லா
நாட்டிருப்பார் என்றிருப்பன் நான் -ப்ரமேய ஸாரம் – 1
இந்த ஸ்லோகத்‌திலே பதங்கள்‌ தோறும்‌ இவ் வர்த்தம்‌ காணலாம்‌.

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்‌ : ஸ்ரீஸைலேச என்று அகார வாச்‌யனான ஸர்வேஸ்வரனைச்‌ சொல்லி, தயா பாத்ரம்‌ என்று வேறு யாவர்க்கு மில்லாமல்‌ அவனுக்கே உள்ளவனான சேதனன்‌ அவன்‌
க்ரூபைக்கு பாத்ரம்‌ என்பதைச்‌ சொல்கிறது, மேலும்‌, ஆசார்‌யனை அவன்‌. தானாகவே சொல்லுவது விசேஷாதிஷ்டானத்தாலே.-“ஆசார்யஸ் ஸ ஹரிஸ் ஸாக்ஷாத்‌” என்று ப்ரமாணம்‌.

தீ பக்த்யாதி குணார்ணவம்‌: என்கிற இப் பதத்தாலும்‌ (தாமரையாள்‌ கேள்வன்‌ ஒருவனையே நோக்குமுணர்வு”‘ என்றும்‌, ஆதியம் சோதிக்கே ஆராத காதல்‌’‘ என்றும்‌ உன்னித்து மற்றொரு தெய்வம்‌ தொழாள்‌‘ என்றும்‌ சொல்லுகிறபடியே ஞான பக்தி வைராக்கியங்களைச்‌ சொல்லுகையாலே, அகாரத்தில்‌ சொன்ன பகவத் சேஷத்வத்தை பக்தியால்‌ சொல்லுகிறது. ஸ்வருபமும்‌-உன்னிணைத்‌ தாமரைகட்கு அன்புறுகி நிற்குமதே. எம்பெருமானைப் பற்றியே ஜ்ஞானமாதலால்‌, சேஷத்வம்‌ பற்றிய ஞானமே ஞானம்‌. தேவதாந்தர த்யாக ப்ரதானமா யிருப்பது வைராக்யம்‌.

யதீந்த்ர ப்ரவணம்‌ –-யதீந்த்ரராகை யாவது–பகவத்‌ பரதந்த்ரரான தம்‌ நிலையை நினைத்து துரும்பும்‌ நறுக்காமல்‌ வெறுமனே இருப்பவர்களைத்‌ திருத்தித்‌ திருமகள்‌ கேள்வனுக்காக்கி அடிமை செய்விக்கை. இது பற்றி எம்பெருமானாரிடம்‌ ப்ரவணராகிறார்‌ . பகவதநத்யார்‌ஹ சேஷத்வம்‌ அவனடியார்‌ வரையிலும்‌ செல்ல வேணும்‌. மேலுர்‌, யதிந்தர சப்தம்‌ அஸாதாரணமாக ராமானுஜனைச்‌ சொல்லுவது, ராம சப்தத்தாலே அகாரார்‌தமும், அநுஜ சப்தத்தாலே கைங்கர்ய பரனான ஆத்ம ஸ்வரூபத்தையும்‌ சொல்லிற்று. ராமாநுஜம்‌ யதிபதிம்‌ ப்ரணமாமி மூர்த்தா’ என்றபடி ப்ராவண்ய நிலை

வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்‌: இத்தாலும்‌ உக்தார்த்தமே- சொல்லுகிறது. ரம்ய ஜாமாத்ரு சப்தத்தாலே அகார வாச்யனான பகவானைச் சொல்லி முநி சப்தத்தாலே பகவத் தநந்யார்‌ஹ சேஷத்வ ஜ்ஞானருடைய பரம சேதனனைச்‌ சொல்லுகிறது – ரம்ய ஜாமாத்ரு மநநம்‌ கரோ தீதி ரம்ய ஜாமாத்ரு முநி;-ஆக இவை எல்லா வற்றாலும் ப்ரணவார்த்தமாக யோஜிக்கத் தட்டில்லை.

பெருமாளுடைய கார்யத்தை கவனியாமலிருக்க, பெருமாள்‌ இளையோனை நோக்கி, லஷ்மணா! நீ ஸுக்ரீவனிடம்‌ சென்று நான்‌ சொன்னதாகச் சொல்லு. செய் நன்றி மறந்த பாபிஷ்டன்‌ புருஷர்களிற் கடையானவன்‌- வாலி சென்ற வழி ஸூக்ரீவனுக்கும்‌ திறந்திருக்கிறது அவனை உற்றார் உறவினரோடும்‌ யம புர மனுப்பச்‌ சித்தமாயிருக்கிறேன்‌.” இப்படி மனஸ்தாபப்பட நேர்ந்து விட்டதனால்‌ முன்பு சைலேச தயா பாத்ர பூதனான வொருவனை வணங்கின குறை தீர இப்போது ஸ்ரீசைலேச தயா பாத்ர பூதரை வணங்கி வாழ்‌கிறேன் என்றதாயிற்று,-திருமலை யாழ்வாரென்கிற திருவாய்‌ மொழிப் பிள்ளையின்‌ இன்னருளுக்கு இலக்கான மா முனிகளை வணங்குகிறேன்‌ என்கை.

தீ பக்த்வாதி குணார்ணவம்‌ : ராமாவதார காலத்தில்‌ லவணார்ணவமான ஸமுத்ரத்தின்‌ காலிலும்‌ குனிந்தமை ப்ரஸித்தம்‌ –ஸமுத்ரம் ராகவோ ராஜா சரணம்‌ கந்துமர்ஹதி” என்ற விபீஷணாழ்வானுடைய வாக்கின் படி லவணார்‌ணவத்தை நோக்கிச்‌ சரணாகதி பண்ணி யிருந்து அங்கும்‌ மந ஸ்தாபமே மிகுந்தது. ௮க்‌ கடலரசன்‌ முகங்காட்டிற்றிலனாக, மிகவும்‌ சீறிச் சிவந்து, சாபமாதய ஸ சவ் மித்ரே! சாராம்ச்ச ஆசீ விஷோபமாந் ஸாகர மாயோசயிஷ்யாமி”-லஷ்மணா! வில்லையும்‌ கொடிய அம்புகளையும்‌ கொண்டு வா; இதோ கடலை வெறுந்தரையாக்கி விடுகிறேன்‌! ‘ என்று கூறி சரணாகதி பண்‌னின விடத்தில்‌ நிக்ரஹத்திலே யன்றோ நின்றது. அப்படியான குறை தீர அந்த லவணார்ணவத்தை விட்டு தீ பக்க்யாதி குணார்ணவத்தை அடி பணிந்து வாழப் பார்க்கிறபடி,
ஞானபக்தி வைராக்யங்களுக்குக்‌ கடலான மாமுனிகளை வணங்குகி்றேனென்‌றபடி

யதீந்த்ர ப்ரவணம்‌! ‘மந்திபாய்‌ வடவேங்கடமாமலை வானவர்கள்‌ சந்தி செய்ய நின்றான்‌ அரங்கத் தரவினணையான்‌’! ஸ்ரீரங்க நாத பெருமாள திருவேங்கடமுடையானாகவும்‌ நிற்கிற நிலையிலே ”அப்பனுக்குச்‌ சங்காழி அளித்தருளும்‌ பெருமாள்‌! என்று போற்றப் படும்‌ ஸ்ரீராமாநுஜரிடம்‌ திருவாழி திருச்சங்கு பெற்றதனால்‌ அத்த யதீந்ரரிடத்தில்‌ சிஷ்ய வ்ருத்தி கொண்டிருந்தது ப்ரஸித்தம்‌, அங்கு மநஸ்தாபம்‌ ஒன்று நேரவில்லை யாயினும்‌ தன்னை யுற்றாட் செய்யும்‌ தன்மையினார்‌” (ராமாதுச.தூற்‌-97) என்கிற பாட்டைத்‌ திருச் செவி சாத்தின பின்பு “யதீந்த்ரரிடத்‌தில்‌ சிஷ்ய வ்‌ருத்தி செய்வதிற்‌ காட்டிலும்‌ யதீந்த்ர ப்ரவணனார்‌ திறத்திலே சிஷ்‌ய வ்‌ருத்தி செய்வது தான்‌ சிறந்தது என்று தோன்‌றி விட்டது. ராமானுசன்‌ தன்னை யுற்று ஆட் செய்வதிற் காட்டிலும்‌ தன்னை யுற்று ஆட்‌ செய்யும்‌ தன்மையினேரை யுற்று ஆட் செய்வாரே சிறந்தவர்‌ என்பது இந்தப் பாட்டில்‌ காட்டப்பட்ட தன்றோ? அதனால்‌ யதீந்த்த்ர ப்ரவணரை யிறைஞ்சுகிறேன் என்றதாயிற்று, மா முனிவனுக்கு யதீந்த்ர ப்ரவணரென்ற திரு நாமம்‌ சிறப்பாகக் கிடைத்தது ஓன்று –

வந்தே ராம்ய ஜாமாதரம்‌ முநிம்‌ : இராமனாயும்‌ க்ருஷ்ணனாயும்‌ அவதரித்த ஸமயங்களில்‌ இரண்டு முனிவர்களிடத்திலே சிஷ்ய விருத்தி செய்திருந்தானெம்பெருமான்‌ -அதாவது விச்வாமித்ர முனிவரிடத்திலும் சந்திபினி முனிவரிட ததிலும்‌. அவ் லிருவரிடத்திலும்‌ வெறுப்பே யாயிற்று. மிதிலையில்‌ ஜனகருடைய யாகசாலையில்‌ கெளதம புத்ரரான சதாநந்தர்‌ (பாலகாண்டம்‌ 51-ம்‌ சர்க்கம் முதலாக] விச்வாமித்ரருடைய பழைய வரலாற்றை எல்லாம்‌ சொல்ல, மேனகையுடன்‌ கூடியது, சண்டை யிட்டது முதலான ரஜோ குண தமோ குண கார்யங்களைக்‌ கேட்ட போது “இப்படிப்பட்ட ஒருவரையா ஆசார்யனாகக் கொண்டோம்‌” என்று வெறுத்திருக்க நேர்ந்தது. க்ருஷ்ணாவதாரத்திஸ்‌ ஸாந்தீபினி முனிவரிட த்தில்‌ ஸகல ௧லைகளையும்‌ பயின்று முடிவில்‌, குரு தஷிணை ஸமர்ப்பிக்க நின்ற வளவிலே -மாதவத்‌தோன்‌ புத்திரன் போய்‌ மறி கடல் வாய்‌ மாண்டாளை ஒதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தான்‌! என்கிறபடியே என்றோ ப்ரபாஸ தீர்த்தத்தில மாண்டு போன மகனை மீட்டுத் தர வேண்டும்‌ என்று வேண்டி அப்படியே பெற்றான்‌ -கண்ண பிரான்‌ ஸாக்ஷாத்‌ ஸ்ரீமன் நாராயணன்‌ என்று அறிந்து வைத்தும்‌ அவனிடம்‌ மோக்ஷத்தை வேண்டாமல்‌ ஷுத்ர புருஷார்‌தத்தையே வேண்‌டினமையால்‌ அvaன்‌ பக்கலிலும்‌ வெறுப்பாவயிருந்தது, இப்படி வெறுப்புக்கு இலக்கான இரண்டு முனிகளையும்‌ விட்டு ஸமஸ்த கல்யாண குணக் கடலாய்‌ வைராக்ய நிதியான ரம்ய ஜாமாத்ரு முனியை வணங்கி வாழ்கின்றேனென்கிற தாயிற்று

இவ்வளவு அர்த்த விசேஷங்களைக் கொண்ட இந்த ஸ்லோகம்‌ எம்பெருமான் தானே சொல்லி யிருக்கவேண்டும்‌. இவையெல்லாம்‌ அவன்‌ நெஞ்சு தன்னில்‌ உறையும்‌ விஷயங்களாகையால்‌ பிறரொருவர்க்கு. ஏறிட்டுக் கொள்ளவும்‌ முடியாது. ஆகவே இந்தத் தனியன்‌ தெய்வ வாக்கே என்பது திண்ணமாயிற்று

ஸ்ரீ மத் உபயவே. காரப்பங்காடு வேங்கடாசாசியர்‌ ஸ்வாமிகள் வழங்கும்‌ செம் பொருள்‌ :
ஸாஷாத்‌ ஸர்வேஸ்வரனான ஸ்ரீரங்க நாதனாலேயே அருளிச்‌ செய்யப்பட்ட இந்த மந்த்ரத்தை விட உத்க்ருஷ்டமான மந்த்ரமே இல்லை என்றால்‌ மிகையாகாது,ஸ்ரீசைலேச தயா பாத்ரம்‌ என்று “ஸ்வாசார்யரான திருவாய்மொழிப்‌ ‘ பிள்ளையினுடைய பூர்ண கிருபைக்கு பாத்ரமாயிருந்தவர்‌ ஸ்வாமி மணவாளமாமுனிகள்‌, இப்படி சொல்லப்பட்ட ஆசார்யாபிமானத்தின்‌ பலனை பகவத்‌ ப்ராப்தியாகச்‌ சொல்லாமல்‌ யதீந்த்ர ப்ராவண்யமும்‌ தீ பக்த்யாதி குணார்ணவத்வமுமாகக் காட்டப் படுகின்றன -இங்கு ஸ்வாமி எம்பெருமானாரிடம்‌ அதிகமான ப்ரேமை யுடையவராய்‌ யதீந்த்ர ப்ரவணராய்த்‌ திகழ்ந்ததும்‌, ஞான பக்தி வைராக்யங்களாகிற குணங்களுக்குக்‌ கடலாக விளங்கியதும்‌ எந்தை திருவாய்மொழிப்‌ பிள்ளை இன்னருளால்‌ வந்த-என்று ஸ்வாமியே உணர்த்தும்‌
‘ஸ்வாசார்ய (ஸ்ரீசைலேசரின்‌) க்ருபை.
தனமுள்ளவன்‌ ஸுக அநுபவம்‌ பண்ணுகிறான்‌. அவனுக்கு ஸுகாநுபவம்‌ கேவலம்‌ தனமுள்ளமையால்‌ ஏற்படுமாப் போலே; ஸ்வாமிக்கு யதீந்த்ர ப்ராவண்யம்‌, ஆத்ம குண பூர்த்தி ஆகிய பெருமைகள்‌, ஸ்வாசார்ய கிருபையால்‌–இவர்‌ ஸ்ரீசைலேச தயா பாத்ரராகையாலே –ஏற்பட்டவை, ௨பகாரகரான ஸ்வாசார்யருடைய க்ருபையால்‌
உத்தாரகரான யதிராஜ ஸம்பந்தமும்‌ அபிமானமும்‌, ஏற்படுகின்றன –ராமாநுஜார்ய கருணைவது மத்கதிஸ்தே” என்று யதிராஜ விம்சதியிலும்‌, :மாசில்‌ திருமலையாழ்வார்‌ என்னை
நேசத்தால்‌ நின்பால் சேர்த்தார்‌ ‘; உந்தனபிமானமே உத்தாரகமென்று சிந்தை செய்திருக்கச்‌ செய்த நீ அந்தோ! எதிராசா! சதிராக நின்‌ திருத்தாள்‌ தா;” அவர்க்காய்‌ (ஸ்வாசாரியருக்காக)
எதிராசர்‌ எம்மைக்‌ கடுகப்‌ பரமபதம்‌ தன்னில்‌ ஏற்றுவர்‌, என்ன பயம்‌ நமக்கே?; எதிராசர் தம் அபிமான மென்னும்‌ போதத்தை ஏறிப்‌ பவமாம்‌ புணரிதனைக்‌ கடந்து பாதக் கரையைக்‌ குறுகுவனே !-
என்றெல்லாம்‌ ஆர்த்தி ப்ரபந்தத்திலும்‌ எம்பெருமானாரிடத்‌தல்‌ தம்து மதுரகவி நிஷ்டையையும்‌ ப்ராவண்யத்தைபும வெளியிட்‌டுள்ளார் –ஸ்ரீ ஸ்வாமி உபதேச ரத்தின மாலையிலும்‌ நூற் பயனாக -எந்தை எதிராசரின் னருளுக் கிலக்காகி சதிராக வாழ்ந்திடுவர்‌” என்றுரைத்தார்‌. ஆக நாராயண சதுரஷரியினும்‌ எதிராஜ, ராமாநுஜ சதுரக்ஷரிகள்‌ மிகச்‌ சீரியவை என்பது மாமுனிகள்‌ காட்டும்‌ பரமார்த்சம்‌ இதுவே ஸார தமமான செம் பொருள்‌. இந்தத்‌ தனியனில்‌ நம்பெருமாள்‌ அருளும்‌ பரமார்த்தம்‌. எம்பெருமான்‌ திருநாமத்தையும்‌ உள்ளடக்கியுள்ள ரம்ய ஜாமாத்ரு முநி என்ற திரு நாமத்தை அநுஸந்தித்து வந்தே ரம்ய ஜாமாதாம்‌ முநிம்‌ என்று ஸ்வாமியை சரணம்‌ பற்றுவோம்‌,

ஸ்ரீமத் உபயவே நல்லான்‌ சக்ரவர்த்தி ஸ்ரீ ராம க்ருஷ்ணய்யங்கார்‌ ஸ்வாமிகள்
திருமகள்‌ கேள்வனே முழு முதற்‌ கடவுள்‌. உலகனைத்தையும்‌ ஈன்றெடுத் தளிப்பவன்‌ அவனே, அத் தகையோன்‌ தன்னை ஈன்றெடுத் தளிக்கு மொருவனைப்‌ பெற நெடு நாட்களாக அவாவி வந்தனன்‌. அவ்வவா தயரதனைத்‌ தந்தையாகப்‌ பெறும்‌ வாய்ப்‌பினால்‌ நிறைவேறியது உலகிற்கோர்‌ ‘முந்தைத் தந்தை சக்ரவர்த்தித்‌ திருமகனானான்‌.
உடல்‌ கொடுப்பவன்‌ தந்‌தை ; மெய்யுணர்வை அளிப்பவன்‌ ஆசார்யன்‌; தந்தையினும்‌ ஆசார்யன்‌ சிறந்தவன்‌. தந்தை தருமூடல்‌ அழியும்‌; ஆசார்யன்‌ அளிக்கும்‌ மெய்யுணர்வு அழியாது.
அத்தகைய ஆசாரியனாயிருப்பவனும்‌ திரு மகள்‌ கேள்வனே; நமது குரு பரம்பரையில்‌ அவனே முதலாசாரியனாய்‌ விளங்குகிறான்‌.-அவனுக்கு வேறொரு குரு இல்லை. அத்தகையான்‌ தனக்கு
அறிவுரை கூறும்‌ குரு ஒருவனைப்‌ பெற நெடுங்காலமாக அவாவி வந்தனன்‌, அவ்வவா மணவாளமாமுனிகளைக்‌ குருவாகப்‌ பெறும்‌ வாய்ப்‌பினால்‌ நிறைவேறியது. ஆதி குரு மணவாளமாமுனிகளுடைய சீடனானான்‌. எல்லாம்‌ இயல்பாக அறிபவன்‌ ஆதி குரு ,
அவனே மா முனிகளைக்‌ குருவாய்ப்‌ பெற விரும்பினால்‌ மாமுனிகளின்‌ மதி நுட்பத்தை நாம்‌ என்னென்பது!

மணவாளமா முனிகளிடமே அஸாரமானவைகளை நீக்கி ஸார தம மந்த்ர ரத்நார்த்தமான திருவாய்மொழியின்‌ வியாக்யான மான ஈடு என்னும்‌ திவ்ய சாஸ்திரத்தை ஒராண்டு முழுதும்‌ விழுமிய வேட்கையுடன்‌ அரங்கள்‌ கோட்டான்‌. ‘*தத்தேரங்‌கீ நிஜமபிபதம்‌ தேசிகா தேச காங்க்ஷ” என்கிறபடி அரங்கன்‌ குரு வாக்கை மறுக்க கிலாதவன்‌, கண்ணனைப்‌ போல்‌ படித்ததாகப்‌ பேராக்கிக்‌ கொள்‌ளாமல்‌ கேட்டறிந்து ரஸிக்கும்‌ சிஷ்யனாய்ப்‌ பேரின்பம்‌ கண்டனன்‌ அரங்கன்‌. அர்ச்சை வடிவினனாய்க்‌ கேட்கும் அரங்கன்‌ தன்‌ ஈஸ்வரத்‌ தன்மையை மறைத்து வடிகட்டின சீடத் தன்மை வாய்ந்தனனாய்‌ ஈடு கேட்பதில் மிக்க ஈடுபாடு கொண்டான்‌-

ஈஸ்வரத்தன்மை விஞ்சிநின்ற ஸாந்‌தீபநீ சிஷ்யன்‌ கண்ணன்‌ பண்டே இறந்து போன குருவின் மகனை உயிர்ப்பித்து குரு தக்ஷிணை வழங்கினான்‌. ஈஸ்வரத் தன்மை மறைந்த சிஷ்யத் தன்மை விஞ்சி நின்ற மா முனிவரின்‌ சிஷ்யனாக அரங்கனோ ‘ஸ்ரீசைலேச தயா பாத்ரம்‌’ என்று தொடங்கும்‌ தனியனை ஸமர்ப்பிப்பதன்றி வேறு குரு தக்ஷிணை தர வழியின்றி நிற்கின்றான்‌. எம்பெருமானார்‌ தனியனான யோ நித்யமச்புத’ என்று தொடங்கும்‌ ஸ்லோகம்‌ போல்‌ பெரிதாக அமைத்திலது மாமுனிகள்‌ தனியன்‌. உவகையால்‌ உள்ளம்‌ உடை குலைப் பட்டிருக்கிற அரங்கனுக்கு ஸ்லோகம்‌ சிறிதாகவே அமைந்தது.

வஸிஷ்ட்டரும்‌ ஸாந்தீபிநீ யும்‌ அவதார நிலையில்‌ ராமனுக்கும்‌ கண்ணனுக்கும்‌ ஆசார்யராயிருந்தனர்‌. மாமுனிகளோ அர்ச்சை நிலையில்‌ ஆசார்யராய்‌ வீறு பெற்று இருக்கிறார் -. ஆழ்வார்‌ ஆசார்யர்கள்‌ அர்ச்சை நிலையில்‌ ஆசார்யராய்‌ விளங்கினாலும்‌ மாமுனிகளுக்கு உள்ள ஏற்றமவர்களுக்கும்‌ இல்லை, நம்‌மாழ்வார்‌ பல காலும்‌ அர்ச்‌சாவதார பரமான திருவாய்மொழியில்‌ உபதேசிப்பதும்‌ ஈச்வரனிடத்தில்‌ சிஷ்ய லக்ஷணம்‌ அமைந்திருப்பதும்‌ ஆசார்ய ஹ்ருதயத்‌தில் நன்கு காட்டப்பட்டுள்ளன. ஆண்டாள்‌ கண்ணனை எழுப்பி“உனக்கே நாமாட்செய்வோம்‌” என்று கற்பித்‌திருக்கிறாள் – ஆயினும்‌ மாமுனிகள்‌ போலத்‌ தொடர்ந்து ஒரு நூலை விரித்துரைத்து அவர்கள்‌ கற்பித்திலர்‌ என்பது கருத்தக்கது, திருமங்கை மன்னன்‌ ஒலிமிக்க பாடலை அவரிடமே கற்க விரும்பினான்‌ எம்பெருமான்‌.
நின்‌ தனக்கும்‌ குறிப்பாகில்‌ கற்கலாம் கவியின்‌ பொருள் தானே ”’ என்று கற்பிக்கத்‌ திருமங்கை மன்னனும் முற்படுகிறார்‌,

ஆழ்வார்களோடு ஒரே கோவையாகக்‌, கருதப்படுகிறவர் எம்பெருமானார்‌. அவரிடம்‌ பலகால்‌ சிஷ்யனாகி யிருக்கிறான்‌-எம்பெருமான்‌, வட வேங்கடவன்‌ வடமொழி வேதாந்தத்தைச்‌
சுருக்கமாக ஸ்ரீபாஷ்யகாரரிடம்‌ கேட்டான்‌. அவ்வுபதேசமே -“வேதார்த்த ஹங்க்ரஹம்‌’? என்னும்‌ நூலாய்‌ விளங்குகிறது.-உபதேசித்த ஸ்ரீபாஷ்யகாரர்‌ இன்னும்‌ ஞாந முத்ரைக்‌ கையுடன்‌ விளங்குவதை நாம்‌ திருமலையிலே ஸேவிக்கலாம்‌. சங்காழி அளிக்கப் பெற்று அப்பன்‌ ஸ்ரீபாஷ்யகாரருக்குச்‌ சிஷ்யனாய்‌. உய்வு பெற்றதும்‌ உலகறிந்ததே. திருக்குறுங்குடி நம்‌பி ரஹஸ்ய உபதேசம்‌ பெற்று ஸ்ரீராமாநுஜ சிஷ்யராகி “ஸ்ரீவைஷ்ணவ நம்பி’*என்று பேர்‌ பெற்றதும்‌ ப்ரஸித்தம்

வட வேங்கடவன்‌ வடமொழி மறைப் பொருளை ஸ்ரீபாஷ்யகாரரிடம்‌ ஸங்க்ரஹமாகத் தான்‌ கேட்டான்‌. தென்னரங்கனோ தென் மொழி மறை முழுதும்‌ விரித்துரைக்கத்‌ தினவு தீரும்படி. ஈடு முப்பத்தாறாயிரப் பெருக்கரிடம்‌ கேட்டான்‌. ஸ்ரீரங்கநாதன்‌ யதி நாதனோடு ஸம்பாஷணை செய்து கொண்டிருந்தது ஐதிஹ்யத்‌தாலும்‌ கத்யத்தாலும்‌ தெரிகிறது. திருவாய்மொழியின்‌ வளர்ப்புத்‌ தாயான அந்த யதி நாதனிடம்‌ ஸ்ரீரங்கநாதன்‌ தென்மொழி மறைப்‌ பொருளைக்‌ கேட்டிருக்கலாம்‌. கேட்டிலன்‌, ஏன்‌? த்ரமிடோபநிஷத் பாஷ்யம்‌ எனப்படும்‌ ஈடு அக் காலத்‌தில்‌ இல்லையே! நம்பிள்ளையிடம்‌ ஈடு கேட்டிருக்கலாம்‌, கேட்டிலன்‌: காரணம்‌, பெருக்கிச்‌ சொல்லி விளக்கும்‌ வாக்குப் படைத்த மணவாளமாமுனிகள்‌ திருவாயாலே விளக்கமுறக்‌ கேட்டு மகிழ வேண்டும்‌ என்கிற பேரவா தான்‌. மணவாளமாமுனிகளால் தான்‌ அரங்கனது நெடுநாளைய ஆசை நிறைவேறியது,வடக்கே ஸ்ரீபெரும்பூதாரில்‌ வடமொழி வேதாந்தத்தை வளர்க்க அவதரித்த ஸ்ரீபாஷ்யகாரர்‌ தெற்கே தென் மொழி மறை தோன்றிய ஆழ்வார்‌ திருநகரியிலேயே அதனைப்‌ பரப்ப மீண்டும் மாமுனிகளாய்‌ அவதரித்ததும்‌, மாமுனிகளுக்குத்‌ தென் மொழி மறையிலேயே கண்‌ செலுத்துமாறு ஆசார்ய நியமநம்‌ ஆனதும்‌, ஸர்‌வஜ்ஞனும்‌ ஸத்ய ஸங்கற்பனுமான அரங்கனது ஆசை நிறை வேறுவதற்காகவே அமைந்தன என்பதுணரத்தக்கது. ஆக அரங்கன்‌ ஈடு கேட்டதால்‌ வந்த பெருமை வேறெந்த ஆசாரியருக்கும்‌ இல்லாத தனிப் பெருமையாக மாமுனிகளுக்கு அமைந்தது என்பதல்‌ ஐயமில்லை.

திருவாய்மொழி மதிளரங்கரையே ஓதுவதாக தாம்‌ கருதுகிறோம்‌.-மதுரகலியாழ்வார் நேரே நம்மாழ்வாரிடமே திருவாய்மொழி கேட்டார்‌- அவருடைய நுண்ணறிவுக்கு அதன்‌ உட்பொருள்‌ புலனாயிற்று. தம்‌ நெஞ்சில்‌ உட்பொருள்‌ நிற்கும்படி நம்மாழ்வார்‌ தமக்கு அருளிச் செய்ததாக அவர்‌ கூறிக் கொள்கிறார்‌. “வேதத்தின்‌ உட் பொருள்‌ நிற்கப் பாடி என்னெஞ்சுள்‌ நிறுத்தினன்‌’* என்பது
அவர்‌ திருவாக்கு. வேதத்தின்‌ ‘ பொருள்‌ எம்பெருமான்‌; “வேதப்‌ பொருளே என்‌ வேங்கடவா’! என்று காண்க. உட்பொருள்‌. பாகவதர்‌. பாகவதருக்கு ஆட்படும்‌ மனப் பான்மையை நம்மாழ்‌வார்‌ அ௫ளினார்‌ என்றபடி, அவர்‌ ஆட்பட்ட பாகவதர்‌ நம்மாழ்‌வரே. திருவாய்‌ மொழியின்‌ உட்பொருள்‌ மதுரகவியாருக்கு நம்‌மாழ்வாராயினர்‌. ‘தேவுமற்றறியேன்‌” என்று நம்மாழ்வாரைத்‌ தவிர வேறு தெய்வமில்லை என்று அவர்‌ முடிவு கட்டினார்‌. திருவாய்‌ மொழியை ஓதி முடிக்கும் போதெல்லாம்‌ -ஆழ்வார்‌ திருவடிகளே சரணம்‌” என்று தான்‌ முடிவு கட்டினதைச்‌ சொல்லி முடிப்பது வாடிக்கை யாயிற்று, பின்னர்‌ நாதமுனிகள்‌ நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து த்ரமிடோபநிஷத்தைப்‌ பெற்று அதனைத்‌ தன்‌ ஸந்தானத்துக்கும்‌ உபகரித்து மதுரசவிகளைப்‌ போலவே “ஆழ்வார்‌. திருவடிகளே சரணம்‌” என்று சொல்லி முடிப்பதை வாடிக்கை யாக்கினார்‌,

உரை நூல்‌ இடுவித்தும்‌ காலஷேப கோஷ்ட்டிகளை நடத்தியும்‌ நடப்பித்தும்‌ திருவாய் மொழியை வளர்த்த எம்பெருமானார்‌ காலத்திலே ‘ பெரியோர்‌ அவரை நம்மாழ்வார்‌ திருவடியாகக்‌
கொண்டு நம்மாழ்வார்‌ திருவடி உத்தேச்ய மன்றோ என்னும்‌ கருத்துடன்‌ ஸ்ரீராமாநுஜனையும்‌ வேதத்தின்‌ உட்பொருளாக ஏற்றனர்‌. ஏற்கவே முன்னவர்‌ கட்டின முடிவுடன்‌ தங்கள்‌
முடிவையும்‌ சேர்த்து “ஆழ்வார்‌ திருவடிகளே சரணம்‌-“எம்பெருமானார்‌ திருவடிகளே சரணம்‌,” எனறு அதன் மொழி மறையை ஒது முடிக்கும்போதெல்லாம்‌ அவர்கள்‌ அநுஸந்திப்பாராயினர்‌, தற் காலத்தில்‌ “ஜீயர்‌ திருவடிகளே சரணம்‌” என்பதையும்‌ சேர்த்து அநுஸந்தித்து முடிப்பது ஸம்ரதாயமா யிருக்கிறது-
இந்த ஸம்ப்ரதாயம்‌ அரங்கன்‌ திருவுள்ளத்துக்கு மிகவும்‌ ஒத்தது என்பது அவன்‌ தனியன்‌ ஸமர்ப்பித்துத்‌ தென் மொழி மறை ஓதும்‌ போதல்லாம்‌ முன்னும்‌ பின்னும்‌ அதனை அநுஸந்திக்க வேண்டு மென்று திவ்யாஜ்ஜை பிறப்பிப்த்ததனால்‌ நன்கு விளங்குகிறது. ஜீயர்‌ என்பது இங்கே மணவாள மாமுனிகளை, -பெரியஜீயர்‌” என்று வழங்குவது முண்டு.
ஆழ்வார்‌, எம்பெருமாளனார்‌, ஜீயர்‌, என்று மூன்று திருநாமங்‌களைச்‌ குறிப்பிட்டாலும்‌ மூவரிலும்‌ வேறுபாடின்மையின்‌ உட்‌பொருள்‌ மாறுபடவில்லை . திருவடியாதலின்‌ நம்மாழ்வாரினும்‌ எம்‌பெருமானார்‌ வேறுபடாமலிருப்பதும்‌, எம்பெருமானார்‌ எடுத்த புநரவதாரமே ஜீயராதலின்‌ அவரும்‌ வேறுபடாம லிருப்பதும்‌ காண்க. ஆக இம் மூவரையும்‌ மாமுனிகள்‌ காலத்திலுள்ள பெரியோர்‌ உட்பொருளாகக்‌ கருதி “ஆழ்வார்‌ திருவடிகளே சரணம்‌,எம்பெருமானார்‌ திருவடிகேளே சரணம்‌, ஜீயர்‌ திருவடிகனே சரணம்‌” என்று ஒதி முடிப்பது ஏற்புடையதே என்க,-இம் மூவரை மட்டும்‌ உட்பொருளான பாகவதர்‌ என்று பெரியோர்‌ விசேடித்துக்‌ கொண்டதற்குக்‌ காரணம்‌ இவர்கள்‌ மூவரும்‌ முறையே தமிழ்மறைக்கு ஈன்ற தாயாகவும்‌, வளர்ப்புத்‌ தாயாகவும்‌ பெருக்கி வாழ்வளிக்கும்‌ வள்ளாலகவும்‌ விளங்கியதே என்க,மேலும்‌ பகவத்‌, பாகவத, ஆசார்யர்கள்‌ மூவரும வேதப்‌ பொருளாவர்‌. பகவான்‌ புறப் பொருள்‌. ஏனையோர்‌ உட் பொருள்கள்‌,அவர்களுள்‌ ஆசார்யனை உட் பொருளாகக்‌ கொண்டால்‌ ‘*குருரேவ பரம் ப்ரஹ்ம:” என்றபடி அவர்‌ பகவானாகவும்‌, அவர்‌ இயல்பினில்‌ பாகவதராகவும்‌ இருத்தலின்‌; முப் பொருளாகவும்‌ இருத்தல்‌ ஆசார்‌யனுக்கே அமைகிறது. ஏனைய ஆசார்யர்கள்‌ இம் மூவருமே யாதலின்‌ ரஸிகப்‌ பெருமக்கள்‌ இம் மூவரையும்‌ வேதத்தின்‌ உட்பொருளாகக்‌ கொண்டது மிகவு மேற்புடையா தயிற்று.-திருவாய்மொழியில்‌ முதலில்‌ தோன்றும்‌ புறப்பொருள்‌ மதிளரங்க மணவாளன்‌, முடிவெல்லையாய்த்‌ தோன்றும்‌ உட்‌ பொருள்‌ கோயில்‌ மணவாள மாமுனிகள்‌, அரங்கனுடைய உலகமளந்த பொன்னடி புறப் பொருளின்‌ ஸாரம்‌. மாமுனிகளின்‌
**பொன்னடியாம்‌ செங்கமலம்‌” உட் பொருளின்‌ ஸாரம்‌ –ஸாரமான இவ்விரு பொருள்களும்‌ நெஞ்சில் இருக்கும்படி ஈடு முப்பத்தாறாயிரத்தைப்‌ பெருக்கி மா முனிகள்‌ உரைப்‌ பதைச்‌ செவிமடுத்த அரங்கன்‌ அரும் பொருளை இங்ஙன்‌ எளிமைப்படுத்துவதே! என்று நாவன்மையை வியந்து, தக்க கைம்மாறு காணகிலாது சாத்து முறையின் போது நன்றி யறிவுடன்‌ *ஸ்ரீசைலேச”த்‌ தனியனாம்‌ மந்த்ர ரத்நத்தை ஸமர்ப்பித்ததாக மாமுனிகள்‌ காலத்தவரான எறும்பி யப்பாவே ௮ருளிச் செய்கிறார்‌

ஆத்மாநாத்ம ப்ரமிதி விரஹாத்‌ பத் யுரத் யந்த தூர:
கோரே தாபத்ரிதயகுஹரே கூர்ணமாநோ ஜநோயம்‌,
பாதச் சாயாம்‌ வரவர முநே! ப்ராபிதோ யத் ப்ரஸாதாத்‌
தஸ்மை தேயம்‌ ததிஹ கிமிவ ஸ்ரீநிதேர்வர்த்ததே தே.(வரவரமுநி சதகம்‌-63)

(தேஹாத்ம விவேகம்‌ கூட இல்லாமையால்‌ எம்பெருமானுக்கு நெடுந் தூரத்திலுள்ளவரும்‌, கோரமான தாப த்ரயப்‌ படுகுழியிற்‌ சுழலுகின்றவருமான என்னைப் போன்ற மக்கள்‌ எவருடைய அனுக்‌ரஹத்தால்‌ திருவடி நிழலிற்‌ சேர்க்கப்பட்டனரோ, அத்தகைய தேவரீருக்குத்‌ திருமகள்‌ கேள்வனும்‌ இவ் விஷயத்தில்‌ வழங்கலாம்‌படியான வேறு கைம்மாறு யாது உள்ளது? என்னைப்‌ போன்றவரையும்‌ திருவடி நிழலிற்‌ சேர்த்து வைத்த பேருதவிக்குத்‌ தனியன்‌ ஸமர்ப்பித்தது தவிரத்‌ திருமாலுக்கும்‌ வேறு கைம்மாறு செய்ய இயலாதென்பது கருத்து.)
இந்த ஸ்லோகத்தில்‌ “பாதச்‌ சாயா” என்னுமிடத்தில்‌ பற்றப்‌படும்‌ திருவடி என்னும்‌ உபாயமும்‌, நிழல்‌ என்று ஒதுங்கும்‌ இடமாகிய ௨பேயமும்‌ தோன்றுகின்றன. அரங்கன்‌ திருவடியே உபாயம்‌; நிழல்‌ தந்து தாபந் தவிர்க்கும்‌ அவ்வடியே உபேயம்‌ என்‌ றதாயிற்று, இது திருவாய்மொழியின்‌ புறப்பொருளாக முதலிற்‌ புகட்டப் படுவதாகும்‌. இதே பாதச்‌ சாயா’ என்பது பின்னர்ப்‌ புகட்டப்படும்‌ உட்பொருளின்‌ முடிவு நிலத்தையும்‌ காட்ட வற்றாயுள்ளது. திருவாய்‌ மொழியின்‌ உட்பொருளின்‌ முடிவு நிலமான மணவாள மாழனிகளையே குறிப்பதாகவும்‌ நுண்ணறிவுடையோர்‌ கொள்ளும்படி இது அமைந்துள்ளது. “*விஷ்ணு: சேஷீ ததீய। சுப குண நிலயோ விக்ரஹ: ஸ்ரீசடாரி;; ஸ்ரீமாந்‌ ராமாநுஜார்ய:
பத கமல யுகம்பாதி ரம்யம்‌ ததீயம்‌?”’ என்றபடி எம்பெருமானது நற் குணம்‌ நிரம்பிய திருமேனியாக நம்மாழ்வாரையும்‌, அவருடைய இணைத் தாமரையடியாக ராமாநுஜனையும்‌ கொள்ளும்
மரபிலே அரங்கன்‌ திருவடியாகிறார்‌ ராமாநுஜன்‌, அவர்‌ திறத்து அத்யந்த பாரதந்த்ரியத்தை அநுஸந்திப்பதனால்‌ நிழல்‌ போன்றவரான யதீந்த்ர ப்ரவணர்‌ திருவடி. நிழலாகிறார்‌
ஆகலே, அடிப்‌படையான தேஹாத்ம விவேகமே யில்லாத பாமரரையும்‌ பேற்றின்‌ எல்லை நிலமான தன்னையே [மணவாள மாமுனிகளையே) சேர்ப்‌பிக்கும்‌ வித்தகத்தைக்‌ கண்டு இவ்வரிய பொருளை ௨லகம்‌ மறவாது என்றும்‌ நெஞ்சில்‌ நிலை நிறுத்தற்கும்‌, தன்‌ நன்றியை வெளிப்படுத்‌தற்கும்‌ ஸ்ரீசைலேசத்‌ தனியன் வெளியிட்டுத்‌ தமிழ்‌ மறைத்‌ தொடக்கத்திலும்‌ முடிவிலும்‌ அதனை யாவரும்‌ எங்கும்‌ அநுஸந்திக்க வேண்டுமெனறு ஸ்ரீரங்கநாதன்‌ கட்டளை யிட்டருளினான்‌.
வேதப்‌ பொருள்‌ ஹரியே என்பது தோன்ற முதலிலு மிறுதியிலும்‌ ஹரி: என்று வேதமோதும்‌ போது சொல்வது போலத்‌ தமிழ்‌ மறை ஓதும்‌ போது அதன்‌ உட்பொருளின்‌ மூடிவு நிலமான
ரம்ய ஜாமாத்ரு முனிவரை முதலிலும்‌ இறுதியிலும்‌ தான்‌ ஸமர்ப்‌பித்த தனியனால்‌ அநுஸந்திக்கு வேண்டும்‌ என்பது ரங்கநாதன்‌ திருவாணை. வடமொழி மறை எல்லாருக்கும்‌ பொதுவானது.ஆதலின்‌ உட்பொருளைக்‌ கூறாது புறப்பொருளாகிய ஹரியையே முதலிலும்‌ இறுதியிலும்‌ கூறுகிறோம்‌. உட்பொருளை . ஹரி ‘சப்தத்‌திலும்‌ ப்ரணவத்திலும்‌ பரம ஸாத்விகர்கள்‌ அநுஸந்திப்பர்‌, தென்‌ மொழி மறையோ பரம ஸாத்விகர்க்கே ஏற்பட்டதாதலின்‌ ரம்யஜா மாத்ரு முனியாகிய உட்பொருளையே அநுஸந்திக்க வேண்டு மென்பது ஸ்ரீரங்கராஜ திவ்யாஜ்ஞை. ஸம்ஸார மோக்ஷ ஹேதுவான ஹரியை அநுஸந்திப்பது இம்மை மறுமை வீடுகளைப்‌ பற்றிக்‌ கலந்து பேசும்‌ வடமொழி மறைக்கு ஏற்கும்‌. வடி கட்டின வீட்டின்பம்‌ பேசும்‌ தென்மொழி மறைக்கு மோக்ஷ ஹேதுவான ரம்ய ஜாமாத்ரு முனிவரை வந்திப்பதே பொருந்தும்‌.

மணவாள மாமுனிகளே உட்பொருள்‌ என்பதைத்‌ தாமே அவர்‌ வெளிப்படையாகக்‌ கூறா விடினும்‌ அவரிடம்‌ காலக்ஷேபம்‌ கேட்ட பெரியோர்‌ இந்நுண்‌ பொருளை உணர்த்திருந்தனர்‌,தமக்குள்‌ அந்த ரஹஸ்யத்தை அவர்கள்‌ பேணிப்‌ பாதுகாத்தனர்‌,கருணை வாய்ந்த திருவரங்கன்‌ ஓராண்டு கேட்டு வந்து இந்த உண்மையான ஒண்‌ பொருளைக்‌ கோஷ்ட்டியில்‌ அந்வயிக்காதவர்‌களும்‌ பிற்பட்டவர்‌களும்‌ இழக்க வொண்ணாதென்று தான்‌ அருளிச்‌ செய்த தனியனை முதலிலும்‌ முடிவிலும்‌ சொல்லுமாறு தென்‌ மொழி மறையை அநுஸந்திப்பவர்களுக்குக்‌ கட்டளை யிட்டு இவ் வொண் பொருளை நாமும்‌ ௨ய்த்துணருமாறு செய்திருக்‌கிறான்‌. அந்தக்‌ கட்டளையின்‌ பலனே நாம்‌ இன்று முடிவுப்‌ பொருளாய்‌ அநுஸந்திக்கும்‌ “ஜீயர்‌ திருவடிகளே சரணம்‌” என்பது,


ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-4–

May 21, 2026

ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)

மற்றுமொரு நாள்‌ கந்தாடை யணணனை அழைத்தருளி, பெரிய கந்தாடை யப்பன்‌, திருக் கோபுரத்து நாயனார் பட்டர்‌, சுத்த ஸத்வமண்ணன்‌, ஆண்ட பெருமாள்‌ நாயனார்‌, அய்யனப்பா இவர்களுக்கு
பகவத் விஷயம்‌ ப்ரஸாதிக்கும்படிக்கு நியமித்தருளி ”பகவத்ஸம்‌பத்தாசாரியர்‌” என்று திருநாமம்‌ ஸாதித்தருளி ஆசார்ய ஸிம்‌ஹாஸநத்திலே அபிஷேகம்‌ செய்தருளினார்‌.
சுத்த ஸத்வமண்ணனுடைய வ்யாக்யாந சாதுர்யத்தைக் கண்டு போரவுகந்தருளி அவருக்குத்‌ ‘திருவாய்மொழியாசாரியர்‌” என்று திருநாமஞ் சாத்தி பகவத் விஷய ஸிம்ஹாஸனத்திலே அபிஷேகஞ் செய்தருளினார்‌.

ஒரு நாள்‌ ராத்திரி கந்தாடை நாயனும்‌ ஜீயர் நாயனாரும்‌ பகவத் விஷயத்திலே கூடமான வாக்யங்களுக்கு அர்த்த விசாரம்‌ செய்ய,நாயன்‌ ஸம்ஸ்க்ருதமாக அர்த்தோபந்யாஸம்‌ செய்யக் கண்டு
பகவத் விஷயத்திற்கு ஸம்ஸ்க்ருதத்தில்‌ அரும் பத விளக்கம்‌ பண்ண நியமித்தளி உபலாளித்தருளினார்‌.

முதலிகளை ஆசார்ய ஸிம்ஹாஸனங்களில்‌ அபிஷேகம்‌ செய்தல்‌
ஒருநாள்‌ ப்ரதிவாதி பயங்கர மண்ணாவை அழைத்தருளி, கந்தாடை யண்ணன்‌, போரேற்று நாயனார்‌, அநந்தய்யனப்பை. எம்‌பெருமானார்‌ ஜீயர்‌ நாயனார்‌, கந்தாடை நாயன்‌ இவர்களெல்லாருக்கும்‌ ஸ்ரீபாஷ்யம்‌ ஸாதித்தருளும்படிக்கு நியமித்து அவருக்கு ஸ்ரீபாஷ்யாசாரியர்‌” என்று திருநாமம்‌ ப்ரஸாதித்தருளிஸ்ரீபாஷ்ய ஜிம்ஹாஸனத்திலே அபிஷேகம்‌ செய்தருளினார்‌,

எறும்பி அப்பாவை கோயிலுக்கு அழைத்தல்‌
முன்பு ஜீயர்‌ ஸந்நிதியினின்று அனுப்புவித்துக் கொண்டு எழுந்தருளின எறும்பி அப்பா தத் விஸ்லேஷம்‌ ஸஹிக்க மாட்டாமல்‌ ஜீயருடைய தினசர்யா ப்ரகாரங்களை அநுஸந்தித்துக் கொண்டு ௮நுபவ பரீவாஹ ரூபமாக திநசர்யை” என்கிற ப்ரபந்தத்தைச்‌ செய்‌தருளி, ஜீயர்‌ ஸந்நிதிக்கு ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கையிலே கொடுத்து வரக் காட்ட, அத்தைக் கண்டு ஜீயர்‌ மிகவும்‌ உகந்தருளி, ”அபிமத
நிஷ்டராகில்‌ இப்படி யிருக்க வேண்டாவோ?” என்று மிகவும்‌ க்ருபை பண்ணி, அவரிடத்திலே திருவுள்ளம் சென்று, அப்போதே அப்பா எழுந்தருளும் படிக்கு ‘ப்ரீத: ப்ரேஷிதவாந்‌ முநிர் வர வரோ
யஸ்மை முஹுஸ்ரீமுகம்‌!* என்கிறபடியே எறும்பி யேறத் திருமுகம்‌ போக விட்டருள. அப்பாவும்‌ ஜீயரை அப்போதே காண வேணும்‌ என்று பேராசையோடிருக்க,
பாராவாரப் லவந சதுர: குஞ்ஜரோ வாநராணாம்‌ பத்மாபர்த்து: ப்ரிய ஸஹ சர : பத்ரிணாமீஸ்வரோ வா
வாயுர்பூத்வாஸ பதியதிவா மார்க்க முல்லங்க்ய துர்க்கம்‌ காலே காலே வரவரமுநே காமயே வீக்ஷிதும்‌ த்வாம்‌ ॥

[மணவாளமாமுனியே ! பெருங் கடலைத்‌ தாண்டுவதில்‌ சமர்த்தரான வானரங்களுள்‌ ஸ்ரேஷ்டரான சிறிய திருவடியாகவாவது பூமகள்‌ கேள்வனான எம்பெருமானுக்கு ப்ரியனாய்‌ ஸதா அருகே நித்ய கைங்கர்யம்‌ செய்து கொண்டிருக்கும்‌ பக்ஷி ராஜனான பெரிய திருவடியாகவாவது அடியேன்‌ ஆகி இப்பொழுதே கடக்த முடியாத வழியையும்‌ கடந்து தேவரீரைக்‌ காலந் தோறும்‌ கண்‌ணாரக் கண்டு களிக்க ஆசைப்படுகிறேன் ] என்றும்‌ மநோ ரதித்துக்‌ கொண்டிருக்கிற தசையிலே திருமுகம்‌ வரக் கண்டு அத்யாதரத்‌துடனே ப்ரத் யுக்தராய்ச்‌ சென்று ஸேவித்து திருமுகத்தை சிரஸா வஹித்து.

தேவ:ஸ்வாம்‌ ஸ்வயமிஹ பவந்‌ வெளம்ய ஜாமாத்ரு யோகீ |
போகீஸ த்வத் விமுக மபிமாம்‌ பூய ஸாபஸ்ய ஸித்வம்‌’?
அர்த்தெள தார்யாதசே வசஸா மஞ்ஜாஸா ஸந்நிவே ஸாதா
விர் பாஷ் பைர மலமபிதிர்‌ நித்ய மாராதநீயம்‌
ஆஸா ஸாநைர் வரவரமுநே நித்ய முக்தைரலப்யம்‌ மர்த்யோ லப்தும்‌
ப்ரபவதிகதம்‌ மத்வித: ஸ்ரீமுகம்தே
ஸாரா ஸார ப்ரமிதி ரஹிதஸ் ஸர்வதா ஸாஸ நம்தே ஸத்ய ஸ்ரீ மாந்‌
கபிகர க்ருதர மாலிகா மேவ குர்யாம்‌’

[திரு வநந்தாழ்வானே! தேவரீர் தாமாக இவ் வுலகில்‌ அஸ்மதாதிகளுக்கு ஸ்வாமியான மணவாளமாமுனிகளாகத்‌ திருவவதரித்து,தேவரீரிடத்தில்‌ விமுகனாயிருப்பினும்‌ அடியேனை விசேஷமாக கடாஷித்தருளிற்று. மணவாளமாமூனியே! தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளின்‌ அமைப்பினாலும்‌ அர்த்த கெளரவத்தாலும்‌ தூய மதியுடையவரால்‌ ஆநந்தக் கண்ணீருடன்‌ எப்போதும்‌
ஆராதிக்கத் தக்கனவாய்‌, எப்‌போதும்‌ பல்லாண்டு பாடிக் கொண்டுள்ள நித்ய முக்தர்களாலும்‌ அடைய வரிதான தேவரீருடைய ஸ்ரீ முகத்தை அடியேன்‌ போல்வார்‌ அடைய எப்படித் தக்கவராவர்‌.’
நன்மை தீமைகளைப்‌ பகுத்தறியும்‌ அறிவற்ற அடியேன்‌ எல்லா விதத்திலும்‌ தேவரீருடைய ஸ்ரீமுகத்தை குரங்கின்‌ கைப் பூ மாலை யாகவே ஆக்குவேன்‌] என்று அதிலே ஈடுபட்டு, அப்போதே கோயிலைக் குறித்து அத்யபி நிவேசத்துடேன எழுந்தருளி மடத்திலே புகுந்து வழியிலுண்டான விடாயும்‌ நெடு நாளாக ஸேவியாத விடாயும்‌ தீர “ஸுதா நிதிமிவ ஸ்வைர ஸ்வீக்ருதோ தகர விக்ரஹம்‌”? [அமுதக் கடல் போல தமதிச்சையாலே ஸ்வீகரிக்கப்‌ பட்ட உயர்ந்த திருமேனி] என்னும்படியான விக்ரஹத்தைக் கண்டு
களித்து, வரவர முநி யோகி வர்யருடைய ஸ்ரீபாதபத்மங்களைத் தம்‌ நெஞ்சிலும்‌ கண்ணிலும்‌ ஒற்றிக் கொண்டு ஸேவித்து,
பொன்னிதனிற்‌ குளித்தாங்கந்‌ தனிற் புகுதப்‌ பெற்றோம்‌
பொருவருஞ் சீர்‌ நம்பெருமாள் பதம்‌ புகழப் பெற்றோம்‌
மன்‌னிய சீர்‌ மணவாள மாமுநி வனென்னையன்‌ வாழ்ந்திருக்கும்‌ மடம் தனில்‌ வந்திருக்கப் பெற்றோம்‌
சென்னி தனிலவனடியார்‌ பதஞ்சூடப்‌ பெற்றோம்‌
திருமலையாழ்வாரிலென்றும்‌ சிறந்திருக்கப் பெற்றோம்‌
பின்னை யவர்க்கந்தரங்கப்‌ பொருளும்‌ பெற்றோம்‌
பெருந் திவத்தி லின்‌பமிங்கே பெருகவும்‌ பெற்றோமே
–என்றும்‌
மண்ணாடு வாழ வந்தோன்‌ மணவாளமா முனிவன்‌ வண்மை
கண்ணாருளுக் கிலக்காக நல் வாழ்வுங் கண்டவன் தன்‌
திண்ணாரடிகளில்‌ குற்றேவல்‌ செய்து திரியவும்‌ நான்‌
எண்ணாதிருக்க நடுவே நமக்கு வந்‌தெய்தியதே
–என்றுஞ்‌ சொல்லுறபடியே தாம் பெற்ற பேற்றினுடைய கெளரவத்தை நாடோறும்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டு,

அந்த: ஸ்வாந்தம்‌ கமபி மதுரம்‌ மந்த்ர மாவர்த்த யந்தீம்‌ உத்யத் பாஷ்ப ஸ்திமித நயநா ழுஜ்ஜிதா ஸேஷ வ்ருத்திம்‌ | வ்யாக்யா கர்ப்பம்‌ வரவர முநே த்‌வந் முகம்‌ யீக்ஷமாணாம்‌ கோணேலீந : க்வசித ணுரசவ் ஸம் ஸதம் தாமுபாஸ்தாம்‌
(மணவாள மாமுனிகளே, மனத்தினுள்ளே மதுரமான தோர் மந்த்ரத்தை அடிக்கடி உச்சரிப்பதும்‌, உண்டான ஆனத்தக்‌ கண்ணீரினால்‌ அசையாத திருக் கண்களை யுடையதும்‌, வேறு காரியங்‌களை விட்டிருப்பதும்‌, உபய வேதாந்த ரஹஸ்யார்‌த்த விவரணத்தை உள்ளடக்கிக்‌ கொண்டிருக்கிற தேவரீர்‌ திருமுக மண்டலத்தை ஸேவித்துக்‌ கொண்டிருப்பதுமான(பெரியோர்களுடைய) அந்த கோஷ்டியை, அற்பனான அடியேன்‌ ஒரு மூலையில்‌ மறைந்திருத்து அருகிலேயே ஸேவித்திருக்கக் கடவேன்‌.] என்னும்படியான திவ்ய கோஷ்டியை ஸேவித்துக் கொண்டு வரவர முநி ப்ருத்யர்‌ களுடனே வாழ்ந்து கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌. அவர்களிலே வரந் தரும்‌ பெருமாள்‌ பிள்ளை ஜீயருடைய திருக் கைச்‌ செம்பும்‌ திரு வொற்று வாடையுங் கொண்டு ஸேவிப்பாரா யிருக்கிற நாளிலே அவர்க்குத்‌ திருக் குழற் கற்றை வளர்ந்திருக்க, இதேதென்று ஜீயர்‌ கேட்டருள தத் தேதுவை அவர்‌ விண்ணப்பஞ் செய்ய, ‘இன்று திரு முடி விளக்கும்‌” என்று நியமித்தருள, அவரும்‌ அப்படியே திருமுடி விளக்குவித்துக்‌ கொண்டு எழுந்தருள, அவர்க்கு குமாரர்‌ திருவவதரித்தா ரென்றும்‌ பத்து நாளாயிற் றென்றும்‌ அன்று ஆள் வர?இத்தைக் கேட்டு இதென்ன ஸர்வஜ்ஞதை! என்று எல்லோரும்‌ விஸ்மயப் பட்டார்கள்‌ அவரும்‌ பின்பு தம்முடைய குமாரருக்கு நாயனாரென்று ஜீயர்‌ திரு நாமஞ் சாத்‌தி யருளினார்‌; இப்படி பலரும்‌ திரு நாமஞ் சாத்தினார்கள்‌; ஆகையாலே வந்து பரந்த தெங்கு மித்‌ திருநாமமிங்கு என்கிறபடியே இதுவும்‌ அழகிய மணவாளன்‌ கோத்ர மென்னும்படி எங்கும்‌ விஸ்த்ருதமாயிற்று,

அக் காலத்திலே கந்தாடை யண்ணன்‌ ஜீயர்‌ விரும்பி யமுது செய்தருளும்‌ கீரைக் கறியமுது நடத்திக் கொண்டு போந்து ஸர்வ காலத்திலும்‌ தத்பதாஸ்ரயராய்‌ ஸேவித்துக் கொண்டு போருகிறவர்‌ ,தம்முடைய எம்பெருமான்‌ தளிகைக்கு உபாதான த்ரவ்யத்தாலே நடத்திக் கொண்டு செல்ல, அவருக்குண்டான த்ருஷ்ட ஸங்‌கோசதைத்‌ திருவுள்ளம் பற்றி, தமக்கு வந்த திரு முன் காணிக்கைகளையும்‌ அவர்க்கு ப்ரஸாதித்தருளி, இப்படி.த்ருஷ்டாத்ருஷ்டங்‌களிரண்டும்‌ ஸ்வாதீனமாக நடத்திக் கொண்டு போருகற நல்லடிக் காலத்திலே,
அப்பிள்ளை கந்தாடையண்ணன்‌ முதலானோர்‌ செப்பமுடன்‌ சேர்ந்த திரள் தன்னை-யெப்பொழுதும்‌ பார்த்தாலும்‌ எமக்கிழவாம்‌ பட்டர் பிரான்‌ தாதர் தனைச்‌ சூர் தீரக் காணாமையால்‌
என்று! அவர்‌ விச்லேஷம்‌ ஸஹியாமலருளிச்‌ செய்துவிட,
அப்பிள்ளானுங் கந்தாடை யண்ணனு மருள் புரிந்த சடகோபதாதரும்‌
ஒப்பிலாத சிற்றானுங் கூடியே யோங்கு வண்மை மணவாள யோகி தாள்‌
செப்பி வாழ்ந்து களித்துத்‌ தென் கோயிலிற்‌ சிறந்த வண்மையைச்‌ சேவித்திராமலே
தப்பி யோடித்‌ தவித்துத் திரிவது தலை மெழுத்துத்‌ தப்பாது காணுமே

என்று தம்முடைய இழவை அநுஸந்தித்து அப்போதே புறப்பட்டு வந்து திருவடிகளிலே ஸேவித்துக்‌ கொண்டிருந்தார்‌. பின்பு.

வாது செயவென்று சில வாதினர்கள்‌ வந்து மனமுறிய நிற்ப ரொருபால்‌
வாழி யெனவே பெரிய சாப மறவென்று சிலர் வந்தனைகள்‌ செய்வ ரொருபால்‌
போதுமினி வாதமுன பாதம்ருளென்று புகழ்ந்து சிலர்‌ நிற்ப ரொருபால்‌
பொங்கி வருமெங்கள் வினை மங்க வருளென்‌று சிலர்‌ போற்றி செய்து நிற்ப ரொருபால்‌
ஈதிவை கிடக்க மறை நூற் றமிழ்‌ தெரிந்து சிலரேதமற வாழ்வ ரொருபால்‌
ஏதமற வாதுலர்கள்‌ பேதையர்கள்‌ தாமயங்கி நிறை திறைஞ்சி நிற்ப ரொருபால்‌
மா தகவினாலுலக மேழையு மளிக்க வென வந்த வெதிராசனடி சேர்‌
மா முனிவர் தீபமருளாளர்‌ மணவாள முனி மன்னு மடம்‌ வாழும்‌ வளமே

என்று இப்படி பாகவத ஸம்‌ருத்தி யுடனே வாழுகிற நாளிலே

(1432-தொடங்கி –1433-பரிதாபி ஆவணி மூலம் தொடங்கி ஆனி மூலம் வரை -பஞ்ச வ்யாக்யானங்களையும் ஸாதித்து அருளினார்)

நல்லதோர் பரிதாபி வருடம் தன்னில்
நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
தொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர் பக் நாலாம் நாளில்
செல்வமிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்றே
வல்லி யுரை மணவாளர் அரங்கர் நங்கண்
மணவாள மா முனிக்கு வழங்கினாரே
–-ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை–-6–

ஆனந்த வருடத்தில் கீழ்மை ஆண்டில்
அழகான ஆனி தனில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீறிட்ட வழக்கே என்ன
மணவாள மா முனிகள் களித்திட்டாரே
–ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை–-7–

நம்பெருமாள்‌ ஜீயரை பகவத் விஷய கால க்ஷேபம் ஸாதிக்க நியமித்தது
தத : கதாசிதா ஹூ௰ தமேகம்‌ முநி புங்கவம்‌!
ஸத் க்ருதம்‌ ஸாது ஸத் க்ருத்ய சரணாப்‌ஐ ஸமர்ப்பணாத்‌’ ॥
ஸந்நிதெள மேநிஷீதேதி ॥ஸஸாஸ முரஸாஸந : |
மஹாந் ப்ரஸாத இத் யஸ்ய ஸாஸநம்‌ ஸிரஸா வஹந்
ததைவ தத்ர வ்யாக்பாதும் தத் ஷணாதுப சக்ரமே |
ஸ்ரீமதி ஸ்ரீ பதிஸ் ஸ்வாமி மண்டபே மஹதி ஸ்வயம்‌ |
தத் வந்தஸ்ய ப்ரபந்தஸ்ய வயக்தந் தேநைவ தர்ஸிதம்‌
ஸடவைரிமுகை: ஸ்ருண்வந்‌ தேஸிகைர் திவ்ய தர்ஸநை: |
அத திவ்ய முநேஸ் தஸ்ய மஹிமாந மமாநுஷம்‌ ॥
அநுபூயே மமாபால கோபால மகிலோ ஜந: |
அமந்யத பரம் தந்ய மாத்மாநம்‌ தத்ர நிக்ஷிபந் ॥

[பின்பொரு கால்‌ நித்ய ஸூரி நிர்வாஹகரான பெருமாள்‌ முனிவர்‌ பெருமானாகிய இம் மணவாள மா முநிகளை வரவழைத்து கிருபையினால்‌ தமது ஸ்ரீசடகோபனை ஸாதிப்பதன்‌ மூலமாக மிகவும்‌ கெளரவித்து, “தேவரீர்‌ நமது ஸந்நிதியல்‌ திருவாய்‌ மொழி ஸ்ரீஸக்திகளின்‌ அறிவரிய விசேஷார்த்தங்களை ௨பந்யஸித்து கொண்டு வாரீர்‌” என்று நியமித்தருளினார்‌. மாமுனிகள்‌
அவருடைய உத்தரவை, பெரிய அநுக்ரஹ மென்று சிரஸாவஹித்து அப்படியே அங்கு அந்த ஷணத்திலேயே உபந்யஸிக்கத்‌ தொடங்கினார்‌. ஸ்ரீய பதியான ஸ்ரீ ரங்க நாதர்‌ பெரிதாய்‌ அழகிய பெரிய திருமண்டபத்தில்‌ தாம்‌ நம்மாழ்வார் முதலான திவ்ய ஞாநம் படைத்த ஆசார்யர்களுடன்‌ எழுந்தருளி யிருந்து அந்தத்‌ திருவாய்மொழிக்கு அம் மணவாள மா முனிகளாலேயே தெளிவாக அருளிச்‌ செய்‌யப்பட்ட உண்மைப்‌ பொருள்களைக்‌ கேட்டருளி மகிழ்ந்தார்‌. பின்பு குழந்தைகள்‌ இடையர்‌ தொடக்கமான சாதாரண ஜனங்கள்‌ முதலாக எல்லோரும்‌ அந்த உயர்ந்த முனிவரான மணவாள மா முனிகளின்‌ அமானுஷமான வைபவத்தை அனுபவித்துத்‌ தம்மை அவரிடத்திலேயே ஸமர்ப்‌பித்துத்‌ தம்மை மிகவும்‌ பாக்ய சாலிகளாக நினைத்தார்கள்‌, என்கிறபடியே பரீதாபி வருஷத்தில்‌ திருப் பவித்ரத் திருநாளிலே

க்ருபயா பர யா ஸ ரங்கராட்‌ மஹிமாநம்‌ மஹதாம்‌ ப்ரகாஸயந்‌
குரு’சே ஸ்வயமேவ சேதஸா வர யோகி ப்ரவரஸஸ்ய ஸிஞ்யதாம்‌

[அந்த ஸ்ரீரங்கராஜர்‌ தமது உயர்ந்த தயையினாலே முநி ஸ்ரேஷ்டரான மணவாள மாமுனிகளின்‌ பெருமையைப்‌ பெரியோர்‌களுக்கு வெளிப்படுத்துவதற்காக, அம் முனிவர்க்குத்‌ தாம் சிஷ்யராக வேணுமென்று தாமே தமது மனத்தினால்‌ விருமபினார்‌ ] என்று ஸ்ரீரங்கநாயகரான பெருமாள்‌ தம்முடைய ப்ரம க்ருபையாலே ஜீயருடைய மஹிமையை பெரியோர்களுக்கெல்லாம்‌ ப்ரகாசிப்பிப்பதாக ஸ்ரேஷ்டரான ஜீயருக்கு சிஷ்யராகுகையை -பிதரம்‌ ரோசயாமாஸ ததா தஸரதம்‌ ந்ருபம்‌- என்று பெருமாள்‌ சக்ரவர்த்தியை பிதாவாக ருசித்தாப் போலே இங்கும்‌ தாமே திரு வுள்ளத்திலே ருசித்தருளினார்‌, அநந்தரம்‌,
ஸ்ரோதும்‌ த்ராவிட வேதபூரி விவ்ருதிம்‌ ளெளம்யோம் பயந்துர் முநே ருத்கடண்டாஸ்தி மமைந மாந்ய ததஸ் தார்க்ஷ்யாஸ்ரயம்‌ மண்டபம்‌ ஆவிஸ்ய அர்ச்சக மூரிவாநிதிமுதா, நிஸ்போஷ லோகாந்விதோ
ரங்கீ வத்ஸர மேகமேவம ஸ்ருணோத்‌ வ்யக்தம்‌ யதோக்தம்‌ க்ரமாத்‌ ॥

[ஸ்ரீ ரங்கநாதன்‌ திராவிட வேதமான திருவாய்மொழியின்‌ உரையாகிய ஈட்டை மணவாளமா முனிவரிடமிருந்து கேட்க வேணுமென்ற ஆசை எனக்குள்ளது -ஆகையால்‌ அவரை கருட மண்டபத்துக்கு அழைத்து வாரும்‌” என்று அர்ச்சகரை ஆவேசித்து அருளிச் செய்தான்‌, பின்பு அப்பெருமான்‌ எல்லாரோடும்‌ கூடி யிருந்து ஸந்தோஷமாக முறையே ஒரு வருஷ காலம்‌ அம் முனிவர்‌ ஸ்பஷ்டமாக ஸாதிக்கக்‌ கேட்டருளினான்‌] என்று ஸ்ரீரங்கநாதர்‌ நமக்கு அழகிய மணவாளமாமுனி யிடத்திலே திராவிட வேதமான நாலாயிரம்‌ திவ்ய ப்ரபந்த வ்யாக்யானங்‌களைக் கேட்டருள அபி நிவேசமா யிருக்கிறது; ஆகையாலே இந்த மணவாளமாமுனியை கருட மண்‌டபத்திலே அழைப்பியும்‌!’ என்று அர்சசகரிடத்திலே ஆவிஷ்டராய்‌ ஸந்தோஷத்துடனே அருளிச்‌ செய்து, தாமுமங்கே யெழுந்தருளி, ஸமஸ்த ஜனங்களோடுங்‌ கூடி யிருந்து ஒரு ஸம்வத்ஸரம்‌ இப்படியே வ்யக்தமாக ஜீயரருளிச்‌ செய்த கிர்மத்திலே கேட்டருளினார்‌, அதெங்ஙனே எனில்‌;

மங்களா யதநே ரங்கே ரம்ய ஜாமாத்ரு யோகிராட்‌ |
யுகபத த்ராவிடாம்நாய ஸர்வ வ்யாக்யாந கெளதுகீ
॥-என்கிறபடியே மிகவும்‌ ஹ்ருஷ்டராய்‌
தேஸாந்தர கதோ வாபி த்வீபாந்தர கதோபி வா |
ஸ்ரீரங்காபிமுகோ பூத்வா ப்ரணி பத்ப நஸீததி ॥

[மங்களங்களுக்கு இருப்பிடமான ஸ்ரீரங்கத்தில்‌ மணவாள மாமுனிகள்‌ ஒரே சமயத்தில்‌ திருவாய்மொழியின்‌ எல்லா வ்யாக்‌யானத்தையும்‌ உபந்யஸிப்பதில்‌ ஆசை யுடையரா யிருந்தார்‌ ]
[தேசாந்தரத்திலிருந்தாலும்‌ த்வீபாந்தரத்திலே யிருந்தாலும்‌ ஸ்ரீரங்கத்திற் கெதிர்முகமாக நின்று ஒருவன்‌ தண்டம்‌ ஸமர்ப்‌பித்தானாகில்‌ அவன்‌ எவ்வித வருத்தமும்‌ அடைய மாட்டான்‌] என்றும்‌ தேசாந்தரங்களி$ல இருந்தானே யாகிலும்‌ திருவரங்கன்‌ திருப்பதியை திக்கு நோக்கி தண்டன்‌ ஸமர்ப்பித்த மாத்ரத்திலே ஸகல துரித நிவர்த்தகமாய்‌ ஸகல மங்கள ப்ரதமான கோயிலிலே எழுந்தருளியிருந்து -ஸ்ரீரங்கமங்கள மணியான பெருமாள்‌ ஸந்‌நிதியிலே ஸ்வாமி அழகிய மணவாளமாமுனி, த்ராவிட வேதமான திருவாய்‌ மொழிக்கு ஆறாயிரப்படி , ஒன்பதினாயிரப்படி,பன்னீராயிரப்படி, இருபத்நாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்‌ படிகளையும்‌, திருவாய்மொழிக்கு அங்கோபாங்கங்களான அருளிச்‌ செயல்‌ வ்யாக்னங்களையும்‌ ஒருக்கால்‌ காலக்ஷேபம்‌ நடத்தத் திருவுள்ளமா யெழுந்தருளி யிருந்தார்‌. பெருமாளும்‌ திருப் பவித்ரோத்‌ஸவ வ்யாஜமாகப்‌ புறப்பட்டருளி யிருந்தார்‌, பெருமாளும்‌ திருப் பவித்ர மண்டபத்திலே யேறி யருளி பேரோலக்கமா யெழுந்‌ தருளி “அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌, ஆசார்ய புருஷர்கள்‌, ஜீயர்கள்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அனைத்துக் கொத்துக்கும்‌ அருளப் பாடு ஸாதித்தருளி, ஜீயரும்‌ முதலிகளுடனே பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணிக் கொண்டெழுந்தருளி யிருக்க, பலரடியார்‌ முன்பருளிய என்ற படியே ஜீயரைத்‌ தனித்து அருள்பாடிட்டருளி, ஸ்ரீசடகோபனையும்‌ ப்ரஸாதித்தருளி, ‘* நாளை முதலாக தம்முடைய பெரிய திருமண்டபத்திலே பெரிய வண்குருகூர்‌ நம்பியான ஆழ்வாருடைய திருவாய்மொழிப் பொருளை ஈடு முப்பத்தாறாயிரத்துடனே நடத்தும்‌’” என்ன; “இப்படி அருளுவதே!” என்று மிகவும்‌ ஹ்ருஷ்டராய்
நாமார்‌? பெரிய திருமண்டபமார்‌? நம் பெருமாள்‌
தாமாக நம்மைத் தனித் தழைத்து–நீ மாறன்‌
செந் தமிழ்‌ வேதத்தின்‌ செழும் பொருளை நாளுமிங்கே
வந்துரை யென்றேவுவதே வாய்ந்து.
-என்று அருளிச் செய்தார் –

பிற்றை நாள்‌ தொடங்குவதாக எழுத்தருஸி இன்பம்‌ பயக்க விருக்க நிலத் தேவர்‌ குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக காந கோஷ்டியைப்‌ பாரித்தாப் போலவும்‌ இராமாயணத்தைக்‌ கேட்‌பதாக பார்‌த்‌தி வாம்ஸ் ச நர வ்யாக்ர: பண்டிதாத்‌ நைகமாம்ஸ்த தா”! [(புருஷஸ்ரேஷ்டனான) இராமபிரான்‌ அரசர்களையும்‌ புலவர்‌ களையும்‌ வேதம் வல்லவர் களையும்‌ வரவழைத்தான்‌] என்று தொடங்கி பரிகணிதரான அனைவரையும்‌ திரட்டினாப்‌ போலவும்‌ பெருமாள்‌ நாய்ச்சிமாருடனே கூட திவ்ய ஸிம்ஹாஸநத்திலே யேறி யருனி திவ்ய கோஷ்டியைப்‌ பாரித்து அந்த கோஷ்ட் யந்தர் பூதராய்‌ சேர்த்தியை அநுபவிக்க -அயர்வறுமமர்களான திருவநந்தாழ்‌வான்‌, பெரிய திருவடி, ஸேநாபதியாழ்வான்‌ என்கிற ஸுரிமார்‌ களோடும்‌, -வைகுத்தத்து முனிவராயிருந்துள்ள நம்மாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்கள்‌ பதின்மரோடும்‌, நாதமுநி யதிவர ப்ரப்ருதிகளான ஆசார்யர்களனைவரோடும்‌, ஸ்ரீரங்கநாராயண ஜீயர்‌, திருமாலை தந்த பட்டர்‌ தொடக்கமானாரோடும்‌, அணிய ரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌ தங்கள் இன்ப மிகு பெருங் குழுவோடுங்கூட பேரோலக்கமாக வெழுந்தருளி யிருத்து ஈடு தொடக்கமான ஐத்து வ்யாக்யானத்துடனே திருவாய்மொழி தொடங்க, அவ் வவ்விடங்‌ களிலே இது ஸ்ருதி ப்ரக்ரியை, இது ஸ்ரீபாஷ்ய ப்ரக்ரியை, இது ஸ்ருத ப்ரகாசிகா ப்ரக்ரியை, இது கீதா பாஷ்ய ப்ரக்ரியை, இது ஸ்ரீ பாஞ்சராத்ர ப்ரக்ரியை, இது ஸ்ரீ ராமாயண ப்ரக்ரியை, இத மஹா பாரத ப்ரக்ரியை, இது ஸ்ரீ விஷ்ணு புராண ப்ரக்ரியை, இது மஹாபாகவத ப்ரக்ரியை, இது பதார்த்தம்‌, இது வாக்யார்த்தம்‌, இது மஹா வாக்யார்த்தம்‌, இது ஸமபிவ்யாஹாரார்த்தம்‌, இது ஸ்த்வநி யர்த்தம்‌, இது அர்த்த ரஸம்‌, இது பாவ ரஸம்‌, இது ஒண்‌ பொருள் , இது உட் பொருள்‌ என்று இவர்‌ இப்படி அருளிச்‌ செய்யும்படியையும்‌, ரங்கீ வத்ஸர மேகமேவம ஸ்ருணோத்‌ வ்யக்தம்‌ யதோக்தம்‌ க்ரமாத்‌” [ஸ்ரீரங்கநாதன்‌ மாமுனிகளால்‌ முறையே ஸ்பஷ்டமாக சொல்லப்பட்ட விஷயத்தை இங்ஙனமே ஒரு வருஷ காலம்‌ கேட்டருளினான்‌] என்றபடியே இவர்‌ தொடங்கி நடத்தி யருளும் படியையும்‌ திருச் செவி சாத்தி யருளி அங்கே இப்படியே ஒரு ஸம்வத்ஸரம்‌ நடந்து பின்பு சாத்தி யருளும் போது।

பகவத்‌ விஷய சாத்து மறை
முன்பு போலே, பராங்குஸ பரகால பட்டநாத யதிவராதிகளுடனே கூட ஏறி யருளித்‌ திருச்செவி சாத்தி யருளி ஜீயரை மிகவும்‌ உபலாளித்தருளி திவ்ய ப்ரபந்த தத்வ வ்யாக்யாந வைபவங்களையும்‌, ஜீயருடைய வைபவங்களையும்‌ ப்ரகாசஞ்‌ செய்தருள வேணுமென்றும்‌, தாம்‌ அநுஷ்டித்துக்‌ காட்ட வேணுமென்றும்‌ திரு வுள்ளமாய்‌

(சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தலைப்பப்
போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ விப்பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே
–11இந்தப் பாசுரம் பகல்பத்து ஐந்தாம் நாள் இன்றும் அரையர் விண்ணப்பம் செய்து அருளுகிறார்)

ஸமாப்தெள க்ரந்தஸ்ய ப்ரதிதஸீ விநிதோ பர்யாயசசயே பரம்‌
ஸஜ்ஜீபூதே வரவர முநேரங்க்ரி ஸவிதே |
ஹடாத்பால: கஸ்சீத் குத இதி நிரஸ்தோப் படிபகத: ஐகெள
ரங்கே ஸாக்ய: பரிணத் சதுர் ஹாயாந இதம் ॥

[பகவத் விஷய க்ரந்தத்தின்‌ சாத்துமுறை ஸமயத்தில்‌, வெற்றிலை பாக்கு பழம்‌ என்றிங்ஙனே ப்ரஸித்தமான பலவகைப்பட்ட உபஹாரங்கள்‌ ஸித்தப்படுத்தப் பட்டவளவில்‌, நான்கு பிராயம்‌ நிறைந்து ‘ரங்கநாயகன்‌ என்னும்‌ பெயர் பூண்ட சிறுவனொருவன்‌ திடீரென்று அங்கு வரப் புக, “நீ எதற்கு வருகிறாய்‌ அப்பால்‌ செல்‌’ என்று |தடுக்கப்பட்ட போதிலும்‌ அருகே வந்து நின்று இத் தனியனைச்‌ சொன்னான்‌ ) என்கிறபடியே ஜீயருக்கு ஆசார்ய ஸம்‌பாவனையாக சில த்ரவ்யங்களும்‌ ஏலா லவங்க கர்ப்பூராதிகளும்‌ திருப்பரிவட்டங்களும்‌, அடைக்காயும்‌, பலங்களும்‌, அமர்த்தி நிற்க

ஸ்ரீ சைலேச தயா பாத்ர தனியனவதாரம்‌
அழகிய மணவாள பட்டரான அர்ச்சக குமாரராய்‌ ஐந்தாம்‌ வயதாய்‌ ரங்கநாயக மென்கிற திருநாமத்தை யுடையரான ஒரு பிள்ளை, ஸம்பாவனைத்‌ தட்டுக்களுக்கும்‌ பெருமாளுக்கும்‌ நடுவே வத்து நிற்க, அப்பாலே விடவிடத் திரும்பி வந்து நிற்கும் , இது வெறுமனன்று, ஒரு ஆஸ்சர்ய முண்டாக வேணும்‌” என்று எல்லாரும்‌ பார்த்திருந்து சிறு பிள்ளையை நீர்‌ நிற்கிற காரியமேதென்ன, அவர்‌ கையைக் கூப்பிக் கொண்டு பயப்படாமல்‌ ஸ்ரீ ஸைலேஸ தயா பாத்ரம்‌ என்ன, பின்னுமேதென்ன, தீ பக்த்யாதி குணார்ணவம்‌ என்ன, இன்னஞ் சொல்லுமென்ன, யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜா மாதரம்‌ முநிம்‌ என்று சொல்லி ஓடிப் போக, பெரியோர்களெல்லாம்‌ ஆஸ்சர்யப்பட்டு இந்த ஸ்லோகத்தைப்‌ பட்டோலை கொண்டு மஞ்சட் காப்புச்‌ சாத்தித்‌ திருவடிகளிலே ஸமர்ப்பித்து, பின்பு அத்தைத்‌ தட்டிலே வைத்து ரங்க நாயகத்தை உபலாளித்‌ தழைத்து இன்ன மேதென்ன, நானொன்று மறியேன் என்ன முன்பு சொன்‌னத்தை இன்னமொறு முறை சொல்லுமென்ன, நானொன்று மறியேனென்று ஓடி விட;

வாழி திரு நாமத்துக்கு நியமனம்‌
பின்பு அப் பிள்ளைக்கு அருள்பாடு ஸாதித்து,நீர்‌ வாழித் திரு நாமமோதுமென்ன, அவர்‌ தமிழிலே அதி சதுரராகையாலே,

வாழி திருவாய்மொழிப் பிள்ளை மாதகவால்‌
வாழும்‌ மணவாள மா முனிவன்‌–வாழியவன்‌
மாறன்‌ திருவாய்மொழிப் பொருளை மா நிலத்தோர்‌
தேறும்படி யுரைக்கும்‌ சீர்‌-
– என்றும்‌(இப் பாசுரம்‌ மடத்துப்‌ பிள்ளை அருளிச்‌ செய்தது என்பர்-அப்பிள்ளை அருளிச் செய்தார் என்பாரும் உண்டு )
செய்ய தாமரைத்‌ தாளிணை வாழியே
சேலை வாழி திரு நாபி வாழியே
துய்ய மார்பும்‌ புரி நூலும்‌ வாழியே
சுந்தரத் திருத் தோளிணை வாழியே
கையுமேக்திய முக்கோலும்‌ வாழியே
சுருணைபொங்கிய கண்ணிணை வாழியே
பொய்யிலாத மணவாளமாமுனி புந்திவாழி புகழ்வாழி வாழியே
என்றும்‌–(ப்ரதிவாதி
பயங்கரம்‌ அண்ணன்‌ அப் பிள்ளை அருளிச் செய்ததாகச் சொல்வர் )
அடியார்கள்‌ வாழ அரங்க நகர்‌ வாழ
சடகோபன்‌ தண்டமிழ் நூல்‌ வாழ–கடல்‌ சூழ்ந்த
மன்னுலகம்‌ வாழ மணவாள மா முனியே!
இன்னுமொரு நூற்றுண்டிரும்‌
-என்றும்‌ -(ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணன்‌ அப் பிள்ளை அருளிச் செய்ததாகச் சொல்வர் )
ஒத, பெருமாளுகந்தருளி அவரை க்ருபை பண்ணி யருளி வரிசைகளும்‌ ப்ரஸாதித்து:

திவ்ய தேசங்களுக்கு நம்பெருமாள்‌ நியமனம்‌-
உடனே திருமலை, பெருமாள் கோயில்‌ தொடக்கமான திருப்‌பதிகளுக்கெல்லாம்‌ ஸ்ரீசேனை முதலியாருடைய ஸ்ரீ முகமாக அநுஸந்தான காலங்கள்‌ தோறும்‌ ஜீயர்‌ விஷயமாக நம்பெருமாளருளிச்‌ செய்த தனியன்‌ ,
ஸ்ரீ ஸைலேஸ தயா யாத்ரம்‌ தீ பக்த்யாதி குணார்ணவம்‌ |
யதீந்த்ர ப்ரவ்ணம்‌ வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ॥
-என்‌றநுஸந்திந்துத்‌ தொடங்கவும்‌, ப்ரபந்தம்‌ சாத்தி -வாழி திருவாய்மொழிப் பிளளை என்று தொடங்கி , மணவாளமாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்‌ என்று அநுஸந்தித்துத்‌ தலைக் கட்டவும்‌ என்று அனுப்பி விட்டருளி ஜீயருக்கு ஸம்பாவனையும்‌ செய்‌தருளி வரிசையுடன்‌ மடத்திற்கு அனுப்பி யருளி நிற்க, பின்னும்‌ ஒரு அதிசயம்‌ ப்ரவர்த்தமாயிற்று,

ஸ்ரீசைலேச தயாபாத்ரம்‌: என்பது ப்ரணவார்த்தம்‌. ஸ்ரீசைலேச-(திருமலையப்பன்‌) ௮காரார்த்தம்‌. தயா-பாத்ரம்‌-௮வன்‌ க்ருபைக்கு பாத்ரமான ஜீவாத்மா மகார வாச்யன்‌.-எம்பெருமானுகக்குரியன்‌ என்ற ஸம்பந்தார்த்தமும்‌ தயா பாத்ரம்‌ என்பதனால்‌ காட்டப்பட்டது,

அண்ணன்‌ திருமாளிகையில்‌ அதிசய நிகழ்ச்சி
ஈடு சாத்து முறை யுத்ஸவம்‌ ஸேவிக்க அனைவரும்‌ கோயிலிலே சேர்ந்த வளவிலே அண்ணன்‌ திருமாளிகையிலே ஜ்ஞாநாதிகைகளான அம்மைமார்களும்‌ அண்ணன் தேவிகளும்‌ சேர விருந்து கொண்டு ஜீயருடைய வைபவத்தை அநுஸந்தித்திருக்கிற வளவிலே ஒரு ப்ரஹ்மசாரி வந்து ஒரு சீட்டை அண்ணன் தேவிகள்‌ கையிலே கொடுத்து, இத்தை அண்ணன்‌ திருக் கையிலே ஸமர்ப்பியும்‌-என்ன; அவர்‌ அத்தை வாங்கி வாஸிப்பித்து “இது ஒரு ஸ்லோகமிருத்தபடியே!*? என்று உகந்து ப்ரஹ்மசாரியைக்‌ கேட்டு ஆதரிக்‌ கப்பார்க்க, அங்கே அவரைக்‌ காணா தொழிய பின்பு எல்லாரும்‌ எழுந்திருந்து எங்குந் தேடியுங்‌ காணப் பெறாமையாலை அங்குள்ளவர்கள்‌ பகவல் லீலை யென்று அறுதியிட , அவர்களிலே சிலர்‌ பெரிய திருமண்டபத்திலே சென்று முறியை ஸமர்ப்பித்துச்‌ செய்தியை விண்ணப்பஞ்‌ செய்யக் கேட்டு
ஹடாத் தஸ்மிந்‌ ஷணே கஸ்சித் வர்ணீ ஸம் ப்ராப்ய பத்ரிகாம்‌ |
வாதூல வரதாசார்ய தர்ம பத்ந்யா: கரே ததெள ॥

திடீரென்று அக் கணத்திலே ஒரு ப்ரஹ்மசாரி வந்து கோயிற் கந்‌தாடை யண்ணனுடைய தேவிகளின்‌ கையில்‌ ஒரு ஓலையைக்‌ கொடுத்‌தான்‌] என்று அநுஸந்தித்து அனைவரும்‌ ஆச்சர்யப்பட்டு முறியில்‌ திருவெழுத்துப்பட்ட ஸ்ரீஸைலேஸ தயாபாத்ர ஸ்லோகத்தைக் கண்டு வித்தராய்‌, தனியனின்‌ அர்த்தத்தை திருமந்த்ரமாக யோஜித்து -அநுஸந்தித்து, வானமா மலை ராமாநுஜ ஜீயர்‌; கந்தாடை அண்ணன்‌, அப்பா, அண்ணா முதலான பெரியோர்கள்‌ தாங்கள்‌ தங்களுடைய பக்த் யதிசயத்தாலே தனியனாக வேணுமென்று அருளிச் செய்த ஸ்லோகங்களையும்‌ இதிலே அந்தர் பவிப்பித் தருளி -இது எல்லார்க்கும்‌ உத்தாரகம்‌’- என்று உகந்திருக்க, பெருமாள்‌ ஆழ்வார்களுக்கு அருள் பாடிட்டு அனுப்பி யருளி, -உள்ளே பெரிய பெருமாள்‌ சேர்த்தியிலே எழுந்தருளினவாறே கோயில்‌ பரிகரமனைத்துக் கொத்தும்‌ ஸகல வரிசைகளுடனே ஜீயரை யெழுந்தருளப்‌ பண்ணி வைத்துக் கொண்டு திருவீதி ப்ரதக்ஷிணமாக மடத்திலே யெழுந்தருளப்‌ பண்ணி வைத்தார்கள்‌. பின்பு கோயில்‌ பரிகரமனைத்‌துக் கொத்தும்‌ ஸந்நிதியிலே சென்றவாறே அவர்களைப்‌ பெருமாள்‌ உகந்தருளி, ஜீயர்‌ முப்பத்தாறாயிரப்‌ பெருக்கர்‌ என்னுமது கண்‌டோம்‌ என்று மிகவும்‌ க்ருபை பண்ணி யருளினார்‌. இதற்கு முதலிகளும்‌-வாழி திருவாய்மொழிப் பிள்ளை என்று தொடங்கி மங்களா சாஸநம்‌ பண்ணியும்‌
அடிசூடி யென்‌ தலைமேலரு மறை யாய்ந்து தொண்டர்‌
முடி சூடிய பெருமான்‌ வரயோகி முனங்குரவோர்‌
படி சூடு முப்பத்தாறாயிரமும்‌ பணித் தரங்க
ரடி சூடி விட்டதற்கோ எந்தாயென்ப துன்னையுமே
–என்று ஆபால கோபாலரெல்லாரும்‌ தத் வைபவத்துலே யீடு பட்டு ததேக பரராய்‌ தந் நாம குணங்களை அநுஸந்தித்துக்‌ கொண்டு ஹ்ருஷ்டரா யிருந்தார்கள்‌.

திருவேங்கடமுடையான்‌ இத் தனியனை ப்ரவர்த்திப்பித்தது
இத் தனியனுக்கு இன்னம்‌ அதிசயமுண்டு. அதெங்ஙகனே யென்னில்‌; –தென்னனுயர்‌ பொருப்பி லழகரும்‌ தெய்வ வடமலை யப்‌பனும்‌ இதற்கு ப்ரவர்த்தகரா யிருப்பர்கள்‌. முன்பு முமுஷுவாய்‌ தேசாந்தரங்களிலே திரிவாரொருவருடைய உஜ்ஜீவநார்த்தமாக ஸர்வேஸ்வரன்‌ ஸ்வப்நத்திலே இந்த ஸ்லோகத்தை யவருக்கு உபதேசிக்க, அவரும்‌ அத்தைத்‌ தஞ்சமாக நினைத்திருந்து பின்‌பொருக்‌கால்‌ இந்த ஸ்லோகம்‌ நடையாடுகிற தேசமான திருமலையிலே திருப் புரட்டாசாதி திருநாள்‌ ஸேவிக்கும் போது திருவேங்கடமுடையான்‌ அவரை க்ருபை பண்ணி அர்ச்சசக முகேந கையைப்‌ பிடித்திட்டு வந்து திருவோலக்கத்திலே வைஷ்ணவர்கள்‌ நடுவே யிட்டு, -அவர்கள்‌ அருளிச் செய்வதைக்‌ கேள்‌” என்றும்‌ அவர்களை“இவன்‌ பணிப்பதைக்‌ கேளுங்கோள்‌” என்றும்‌ நியமிக்க, சேனை முதலியார்‌ திருமுகப்படியே நடத்துகிற தனியனை பெரிய கேள்வி ஜீயர்‌ தொடங்க, அத்தைக் கேட்டு விலஷணராகையாலே தெண்‌டனிட்டு,! “ஒரு விண்ணப்பம்‌; கேட்டருள வேணும்‌” என்றது விண்ணபஞ்‌ செய்து “அடியேனுக்கு ஸ்வப்ந லப்தமாய்‌ அது.தன்னை அடியேன் தஞ்சமாக நினைத்திருக்க ஸ்லோகத்தையே தேவரீர்‌களும்‌ அநுஸந்தித்தது இதென்ன ஆஸ்சர்யம்‌- என்ன, ஆகில்‌ நீர்‌ அந்த ஸ்லோகத்தைச்‌ சொல்லிக் காணீர்‌” என்ன, அவர்‌
ஸ்ரீசைலேச தயா பாத்ரத்தைச்‌ சொல்ல அத்தைக் கேட்டு எல்லாரும்‌ மிகவுமுகந் தருளித்‌ தங்களுக்கு வந்தவற்றை யெல்லாம்‌ ஸ ப்ரகாரமாக அருளிச் செய்யக்‌ கேட்டு அதி ப்ரவணராய்ப்‌ புறப்பட்டுக்‌ கோயிலிலே சென்று ஜீயர்‌ திருவடிகளிலே வேரற்ற மரம்‌ போலே விழுந்து கிடக்க; பரம தயாளுவான ஜீயரும்‌ அவரைத்‌ திருக் கையாலே ஸப்ர்சித்து ”நீயார்‌? வந்த காரியமேது?” என்று கேட்டருள“அடியேன்‌ முமுக்ஷுவாய்‌ தீர்த்த யாத்ரா ப்ரனாய் திரிவானொருத்‌தன்‌”என்று தொடங்கிச்‌ சிலவற்றையும்‌, ஸ்வப்ந வ்ருத்தாத்தத்தையும்‌ தனியனையும்‌ விண்ணப்பஞ் செய்து ஜீயர்‌ திருவடிகளைத்‌ தன் தலையிலே நற்றரிக்க வைத்துக் கொண்டு, திருவேங்கடமுடையான்‌ அடியேனை விசேஷ கடாஷம் செய்தருளி, இத்‌ தனியனைத்‌ திருவோலக்கத்திலே ஸாதித்து தேவரீர்‌ திருவடிகளை ஸேவிக்க விட்டார்‌” என்று விண்ணப்பஞ் செய்து நிற்க; , இப்படி, பகவத்‌ கடாஷ பாத்ர பூதனோ நீ!” என்று மிகவும்‌ உகந்தருளி-இனி உனக்கு வேண்டுவதென்‌?” என்ன.-மோஷ உபாயமான மந்த்ர ரூபமான தனியனையும்‌ மந்த்ரதாசார்ய ரூபியான அப்பனையும்‌, மந்த்ர ப்ரப்‌திபாத்ய தேவதையான தேவரீர்‌ திருவடிகளையும்‌ த்ருடமாகப்‌ பற்றி முத்தனானேன்‌; இனி வேண்டுவதுண்டோ?’-என்று கையைத் தட்டிச்‌ சிரித்துக்‌ கூத்தாடி நிற்க, ஜீயரும்‌,
மந்த்ரே தந் தேவதாயாஞ்ச। ததா மந்த்ர ப்ரேத குரெள |
த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸாஹி ப்ரதம ஸாதநம்‌ ॥

[மந்த்ரத்தினிடத்தும்‌, அதன்‌ உள்ளீடான தேவதை யிடமும்‌ அப்படியே அம் மந்த்ரத்தை யுபதேசித்த ஆசாரியனிடமுமாக இம்‌ மூன்று விஷயங்களிலும்‌ எப்போதும்‌ பக்தி செய்யப்பட வேண்டும்‌;இந்த பக்தியே பகவத் ப்ராப்திக்கு முக்ய ஸாதநம்‌] என்னுமது இவருக்குண்டா யிருக்கிறதே! அதிகார பூர்த்திக்கு வேண்டுவதும்‌ இதுவே யன்றோ?’? என்று உகந்தருளி, அவருக்கு தாபாதி பஞ்‌ச ஸம்ங்காரங்களையும்‌ ஸாதித்து ‘*திருவேங்கட ராமாநுஜ தாஸர்‌”என்று தாஸ்ய நாமத்தையும்‌ ஸாதித்து க்ருபை பண்ணி யருளினார்‌.பெருமாளும்‌, * வாரீர்‌ திருவேங்கட ராமாநுஜ தாஸரே! உமக்கு மேல்‌ வீடு தந்தோம்‌”? என்று ஸ்ரீ சடகோபனை ஸாதிக்க உடனே அவர்‌ திரு நாட்டுக் கெழுந்தருளினார்‌- எல்லாரும்‌ அவருக்குப்‌ பெரியோர்களுக்குச்‌ செய்யும்‌ க்ரியைகளெல்லாஞ்‌ செய்து நிறை வேற்றி ஜீயருடைய வைபவத்தை எல்லாருமாகக்‌ கொண்டாடிக் கொண்டு எழுந்தருளி யிருந்தார்கள்‌ ‘-(எட்டாவதாக வந்த இவருக்கு முதலில் பேறு -தனியன் அவதரித்த பின்பு வந்தவர்)

திருமாலிருஞ்சோலை அழகர்‌ இத் தனியளை ப்ரவர்த்திப்பித்தது
அழகர்‌ திருமலையிலே ஸமஸ்த கைங்கர்ய நிரதராய்‌ ஜீயர் திருவடி ஸம்பந்த முடையார யிருக்கிற ஜீயர்‌ தம்முடைய ஆசார்யருடைய ஆத்ம குணங்களையும்‌ விக்ரஹ குணங்களையும்‌ சிந்தித்து–அனுஸந்தித்துக்‌ கொண்டு ப்ரதஷிணமாக வெழுந்தருளி, தமக்கு நித்யா நுஸந்தேயமாக ஜீயர்‌ விஷயமான தனியன்‌ பெரியோர்களிடத்தினின்று உண்டாக வேணுமென்று எண்ணிக் கெண்டு சேனை முதலியார்‌ ஸந்நிதியிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து நிற்க: அந்த அவஸரத்திலே அர்ச்சகரும்‌ ஸேனை முதலியாருக்குத்‌ திருவாராதநங்‌ கண்டருளப் பண்ணி திருவந்திக்‌ காப்புங் கண்டருளப்‌ பண்ணி திருமுக மண்டலத்தை ஸேவித்து
ஸ்ரீசைல ஸூந்தரே ஸஸ்ய கைங்கர்ய நிரதோ யதி: |
அமந்யத குரோஸ் ஸ்வஸ்ய பத்ய ஸம்பவ மார்யத; ॥

[தெற்குத்‌ திருமலை யழகருடைய கைங்கர்யத்திலே ஊற்றமுடைய ஒரு ஜீயர்‌ தமது ஆசார்யராகிய மணவாளமாமுனிகளுக்கு ஒரு தனியன்‌ பெரியோர்‌ திருவாக்கிலிருந்து அவதரிக்க வேணுமென்று எண்ணினார் என்று விண்ணப்பஞ் செய்து கொண்டு பெருமாள்‌ ஸன்னிதியிலே அமுது செய்தருளப்‌ பண்ணச்‌ செல்ல, அவ் வளலிலே அழகிய மணவாளமாமுனியினுடைய திருவடி ஸம்பந்தமுடைய சேனை முதலியார்‌ என்பவர்‌ தெற்குத்‌ திருப்பதிகளெல்லாம்‌ மங்களாசாஸனம் பண்ணி அழகரைத்‌ திருவடி தொழ வெழுந்தருள, ஸ்ரீகார்யம் பார்க்கிற ஜீயரும்‌. அவரைக்‌ கண்டு மிகவும்‌ ஆதரித்துப்‌ பெருமாளை மங்களாசாசனம்‌ பண்ண வெழுந்தருளப்‌ பண்ணி வைத்துக் கொண்டு திரு முன்பே செல்ல, அழகரும்‌ அவரை மிகவும்‌ க்ருபை பண்ணி யருளி தீர்த்தம்‌ முதலான வரிசைகள்‌ ப்ரஸாதித்து ஸ்ரீ சடகோபனையும்‌ அவர்‌ திரு முடியிலே நற்றரிக்க வைத்தருனி உமது நாவின்‌ நுனியில்‌ நான்‌ இருந்து
ஜிஹ்வாக்ரே தவ வக்ஷ்யாமி ஸ்த்தித்வா வதஸூ பாவநம்‌ |
பத்மம்‌ த்வதார்ய விஷயம்‌ முநீகரஸ்ய மமாஜ்ஞாயா: ॥

கொண்டு சொல்லப்‌ போகிறேன்‌, என்னுடைய நியமனமாக ௨ம்‌முடைய ஆசார்யரான மணவாள மா முனிகளுடையதாய்ப்‌ பரம பவித்ரமான (இந்த) ஸ்லோகத்தை இந்த ஜீயருக்குச்‌ சொல்லும்‌,என்று அர்ச்சக முகேந நியமிக்க சேனை முதலியாரும்‌,
தந்யோஸ் மீதிஸ் ஸேநேஸ தேஸி கோ வதந ஸ்லயம்‌’]
வஹக் ஸிரஸி தேவஸ்ய பாதெள பரம பாவநவ் ॥

(சேனை முதலியாரென்பவர்‌ அழகருடைய பரம பாவநமன திருவடி நிலைகளை ‘தமது திருமுடியில்‌ வைத்துக் கொண்டு அடியேன்‌ தந்யனானேன்‌ என்று கூறி, தாமே அத் தனியனைச்‌ சொன்னார்‌] என்கிறபடியே ஸ்ரீசடகோபனையும்‌ முடியில்‌ தரித்துக்‌ கொண்டு ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்‌”” என்னுமித் தனியனை யருளிச்‌’ செய்‌த உடனே அர்ச்சகரும்‌ தெரியப்பட்டு ஜீயருக்கு ஸாதித்தருளின்ர்‌-பின்பு சேனை முதலியாருக்கும்‌ அர்ச்சகருக்கும்‌ இந்த ஸ்லோகம்‌ தெரியா தொழிய, ஜீயர் மடமே சென்று ஸ்லோகம் அருளிச்‌ செய்ய வேணு மென்று கேட்க, அருளிச் செய்த தேவரீரே கேட்க வேணுமோ “என்ன, ”எனக்கொன்றுமே தெரிய லில்லை, இது ஸுந்தர ராஜர்‌’ தானே ஸூந்தர ஜாமாத்ரு முநி விஷயமாக அருளிச்‌: செய்த என்று மூன்று திருநாமமும் கூடி தெரிவிப்பை கடாஷித்துத்‌ கொண்டு வித்தராய்த்‌ தங்களுக்குத் தஞ்சமாகக்‌ கொண்டருள்‌,சேனை முதலியாரும்‌ அதி ப்ரீதியடனே இச் செய்தியைக்‌ கோயிலிலே பெரியோர்களுக்செல்லாம்‌ தெரிவிக்க வேணுமென்று அதி த்வரையாக எமுந்தருளி கோஷ்டியிலே ஜீயரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து இவ் வைபவங்களை யெல்லாம்‌ “விண்ணப்பஞ் செய்ய, எல்லாரு மிகவும் உகந்தருளி இப்படி திருவேங்கடமுடையானும்‌ அழகரும்‌ உகந்தருளின இத் தனியனை ப்ரகாசப்‌பித் தருளுகிறதே ! இதென்ன வைபவம் தான்‌!” என்று போர வித்தரா யருளினார்கள்‌. –

வானமாமலை ஜீயர்‌ முதலானார்‌ ஜீயரைப்‌ புகழ்தல்‌
வான மாமலை ராமாநுஜ ஜீயர்‌ மிகவும்‌: ஹர்ஷ பரவசராய்‌”’ ஸ்தப்தராயிருக்க, ஜீயரும்‌ திருக் கைகளாலே அவரைத்‌ தட்டி உம்முடைய ஹர்ஷத்துக்குப்‌ போக்குவீடாக வார்த்தை யருளிச் செய்யலாகாதோ?” என்ன, அவரும்‌ “இரண்டு முலைக் காம்பினும் மாறாதே பெருகுகிற பாலை ஆராவமுதமாகப் பருகுவார்‌ நாமே யன்றோ?’” என்று கத்தாடை யண்ணனைப்‌ பார்த்தருளிச்‌ செய்ய -அண்ணணும்‌ -அந்தப் பாலிலும்‌ இந்த உக்தி ரஸம்‌ அதிசயமாயிருக்கிறதே!” என்ன, ப்ரதிவாதி பயங்கரரும்‌ உத்தரோத்தரம் அதிசயமாயிருக்கிற தென்று அண்ணனைக் கொண்டாட, அப்பிள்ளை இருத்து, மந்த்ரோத்தரமான பூர்வ வாக்கியத்திலும்‌ உத்தர வாக்கியம் அதிசயித்து இருக்குமென்ன, பட்டர்‌ பிரான் ஜீயர் த்வயத்திலும்‌ சட கோப த்வயம்‌ அதிசயிதமாய்‌, அது தன்னிலும்‌ ராமாநுஜ த்வயம் உத்‌தரம்‌ அதிசயமாய்‌, (அதுதன்னிலும்‌) தந் நிஷ்டரான நம்‌ ஜீயரைத்‌ தொழுவதா யிருக்கிற இந்தத் தனியனே ஸ்ரேஷ்ட்ட மென்று ஒருவருக் கொருவர்‌ இட்டீடு கொண்டு சாடுரஸோக்திகள்‌ அருளிச்‌ செய்து கொண்டு எழுந்தருளி யிருந்தார்கள்‌-

ஜீயர்‌ வடதேசத் தெம்பெருமான்களை த்யாநித்தது
அநந்தரம்‌ ஒருநாள் ஜீயர் ப்ராத: காலத்திலே திருமலை யாழ்வாரிலே எழுந்தருளி யிருந்து திவ்ய தேசங்களை த்யாநித்து அங்கே ஆஸக்தமான திருவுள்ளத்தை உடையராய்‌ –பாரவஸ்யத்தை யுமடைந்து அந்த திவ்ய தேசங்களையே வாய் புலத்தித்‌ கொண்டு இரண்டு யாம பர்யந்த மெழுந்தருளி யிருத்து “காலம்‌ போகிறதே” என்று, சிந்திக்கும்‌ திசைக்கும் தேறும்‌ கை கூப்பும்‌; -வெருவாதாள்‌ வாய் வெருவி,
அருவி சோர் வேங்கடம நீர்மலையென்று-வாய் வெருவி; இவறிராப்‌ பகல்‌ வாய்வெரீஇ என்கிறபடியே வாய் புலத்திக்‌ கொண்டு தளர்ந்து சாய்ந்தருள, கால ஷேபத்திற்கு சில ஆசார்யர்க ளெழுந்‌தருளி பின்னுஞ் சில ஆசார்யர்கள்‌ எழுந்தருள வேண்டி யிருக்‌கிற அவஸரத்திலே.
அவ்யாஜ பந்தோர்‌ கருட த்வஜஸ்ய திவ்யாஞ்சிதாந்யா யதநா நிபூய: |
த்யாயம் ஸ்தமோ நாஸகராணி மோஹ வஸாத்த தேவ ப்ரஹரத் வயம்ல:
த்யாத்வாதி வ்யாஞ்சிதார்ச்ந விலஸித நிலயாந் யெளத்தராண்யாஸூ
விஷ்ணேஸ் தத் ஸேவாயத்த சித்தே ப்ரணிகததி முஹுர்நாமதஸ்‌ தாநிதாநி |
தூஷ்ணீம்‌ பூதேஸ பாஷ்பம்‌ ஸபுளகநிசயம்‌ ரம்ய ஜாமாத்ரு யோகி ந்யப்‌
யேத்யா நம்ய ஸர்வே கிமிதமிதி பராமார்தி மார்திமா பூரம ஹாந்த: |

[இயல்பாகவே உறவினனாய்‌ கருட த்வஜனான எம்பெருமானுடைய அஜ்ஞான நாசகங்களான திவ்யங்களென்று கௌரவித்துச்‌ சொல்‌லப்படுகிற திருப்பதிகளை (திவ்ய தேசங்களை! தியானித்துக்‌ கொண்டே மோஹித்து இரண்டு நாழிகைக் காலம்‌ அப்படியே மாமுனிகள்‌ இருந்தார்‌.

பின்பு எம்பெருமான்‌ அர்ச்சாவதாரமாக ஸேவை ஸாதிக்கிற-வடதேசத்திலுள்ள திவ்ய தேசங்களை த்யானித்து . அவற்றை ஸேவிக்க வேணுமென்ற ஆசை யுடையவராய்‌ அத் திருப்‌பதிகளின் திருநாமங்களையே அடிக்கடி உச்சரிப்பவராய்‌ மயிர்க்‌ கூச்செறியக்‌ கண்ணீர்‌ மல்‌கி வெறுமனே அவர்‌ இருந்தவளலிலே சிஷ்யர்களான பெரியோர்கள்‌ அருகில்‌ வந்து வணங்கி இது என்‌?என்று மிசுவும்‌ வருத்த மடைந்தார்கள்‌ ] என்கிறபடியே ஜீயர்‌ கிளர் ஒளி 2-10-1) என்றநு ஸந்தித்திருந்து, வட தேசத்திலே திருவயோத்யை முதலான திவ்ய தேசங்களை ‘[த்யானித்து ‘ஸேவிக்கப்‌ பெற்றிலேமே!! என்று நிருபாதிக பந்துவாய்‌ ஆஸ்ரித ரஷணத்திற்குக்‌ கொடி கட்டி யிருக்கிற திவ்ய தேசங்களை த்யாநித்து மோஹித்திருக்க அஷ்டதிக் கஜங்கள்‌ முதலான ஆசாரியர்கள்‌ இதென்னென்ப தென்று கலங்கி அநேக விதமாக ஸமாதானம்‌ விண்ணப்‌பஞ் செய்யச்‌ செய்தேயும்‌ திருக் கண்களைத்‌ திறவாமல் அஸ்ருக்களோடே புளகிதகாத்ரராய்‌ ஜீயரெழுந்தருளி யிருக்கக்‌ கண்டு கிட்ட வந்து, உற்று ஸேவித்து இதென்னவென்று பெரியவர்களெல்லாம்‌ பரவஸராய்‌ ஆர்த்தியை யடைந்து விட்டார்கள்‌;

அவ் வளவிலே சரம பர்வ நிஷ்டராய்‌ திருவடிகளுக் கந்தரங்கராய்‌-கண்‌டியூ ரரங்கம்‌ மெய்யம்‌ கச்சி பேர்‌ மல்லை என்கிறபடியே திவ்ய தேசங்களில்‌ மிகுந்த கைங்கர்யத்தைப்‌ பண்ணுகிற ராமாதுஜ தாஸர்‌,
ஸூமத்யே ராமாநுஜ தாஸ நாமாவ்ய ஜிஜ்ஞ பத்தம்‌ வர யோகி வர்யம்‌–
நிஷேவ்ய ஸர்வாணி பதாநி விஷ்ணோ: ஸமர்ப்ப யிஷ்யாமித தைவதத்வ:

[ராமாநுஜ தாஸரென்னும்‌ பெயர்‌ பெற்ற ஒருவர்‌ வந்து, “விஷ்‌ணுவின்‌ ஸ்தலங்களனைத்தையும்‌ சென்று ஸேவித்துத்‌ திரும்பி வந்து அந்த ஸேவையை அப்படியே தேவரீருககுக்‌ காணிக்கையாகச்‌ செலுத்துகிறேன்‌” என்று அம்மா முனிகளிடம்‌ விண்ணப்பம்‌ செய்தார்‌] என்கிறபடியே அவர்‌ ஜீயர்‌ ஸந்நிதியிலே சென்று”அடியேன்‌ ராமாநுஜ தாஸன்‌ தேவரீர்‌ திருவடிகளை முன்னிட்டு வட தேச திருப்பதிகளெல்லாம்‌ தேவரீர்‌ மங்களாசாஸநமாகத்‌ தொழுது வந்து அந்தப் படியே ஸமர்ப்பிக்கிறேன்‌’* என்றும்‌
ஆஸேதோரா பதர்யாஸ்ரம வர நிலயா தர்ச பூர்வா பராப்தே
க்ஷேத்ராணி ஸ்ரீதரஸ்ய த்ருஹிண ஸட ஜிதாத் யஞ்சிதாநி ப்ரணம்ய |
ப்ராப்ஸ்யே ராமாநுஜோலம்‌ பவ தய தநுசதஸ் சிந்த யம்ஸ் த்வத்‌
பதா வித்யஸ்மிந்‌ விஜ்ஞாப யித்வா ப்ரணமதி புபுதே ஸெளம்ய ஜாமாத்ரு யோகீ ॥

“தென் திசையில்‌ உள்ள ஸேது முதலாக வடதிசையிலுள்ள பத்ரிகாஸ்ரமென்னும்‌ உயர்ந்த ஸ்தானம்‌ வரையில்‌ கிழக்குக்‌ கடல்‌ தொடநக்கி மேற்குக் கடலீறான இடங்களிலு முள்ளவையாய்‌, பிரமன்‌ முதலிய தேவர்களாலும்‌ நம்மாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்களாலும் பூஜிக்கப் பட்ட விஷ்ணுவின்‌ ,திவ்ய தேசங்களை எல்லாம் சேவியாததனால்‌ . தேவரீர்க்குள்ள மன வருத்தம்‌ காரணமாகச் சென்று தேவரீர்‌ திருவடிகளைத் தியானித்துக்‌ கொண்டு ராமானு தாஸனாகிய அடியேன்‌ ஸமர்த்தனாய்‌ ஸேவித்து வருகிறேன்‌! என்று விண்ணப்பித்து அவர்‌ வணங்க, மாமுனிகள்‌ மோஹம் தெளியப்‌ பெற்றார்‌] என்று ராமாநுஜ தாஸர்‌ விண்ணப்பஞ்‌ செய்து தண்‌டன் ஸமர்ப்பித்த வுடனே ஜீயர்‌ தெளிந்து திருக் கண்களை மலரத்‌ திறந்து “வாரீர்‌ ராமாநுஜ தாஸரே!” என்றருளிச்‌ செய்ய திக் கஜங்‌கள்‌ , முதலானா ரெல்லாரும்‌ தேறி அவரை மிகவும்‌ கொண்டாடி இருக்க, ஜீயரும்‌ எழுந்திருந்து நெடும்‌ போதாயிற்றே காலஷேப மின்றிக்கே யொழிந்ததே!’” என்று அருளிச் செய்ய, தேவரீர்‌ திவ்ய தேசங்சளில்‌ அநுபவ பரவசரா யெழுந்தருளி யிருக்க ஸேவித்து அநுபவித்துக்‌ கொண்டிருக்க மாட்டாமல்‌ சுலங்கி பயப்பட்டு விட்‌டோம்‌” என்று விண்ணப்பஞ் செய்து நிற்க, “ராமாநுஜ தாஸரே!”நீர்‌ சொன்னது கூடவற்றோ?’” என்றருளிச் செய்ய, அவரும்‌, அப்‌பொழுதே பயணமாகப் புறப்பட்டு நிற்க, திருவடி நிலைகளில்‌ ஸம்‌பந்த முடையாரயிருக்கிற, குமாண்‌டூர்‌ இளையாழ்வார்‌ பிள்ளையை யழைத்தருளி, “ரஈமாநுஜ தாஸரைக்‌ கூட்டிக் கொண்டு திருப்பதிகளை ஸேவித்து வருகிறீரோ?”” என்று கேட்டருள அவரும்‌ பாக்யமாயிற் றென்று விண்ணப்பஞ் செய்து நிற்க
ததோஸ் ப்வுங்க்த ஸ்வக முத்தரீயம்‌ விதீர்ய ராமாநுஜ தாஸ மாஸூ |
ஸஹஸ்வ பாதாவநி நித்ய யோக மஹோ ஜுஷாசாசுக லக்ஷ்மணேந ॥

பின்பு ஜீயர்‌ உடனே ராமாநுஜ தாஸருக்குத் தமது உத்தரீயத்தைத்‌ ப்ரஸாதித்தருளி அவரை–தம்‌ திருவடி நிலைகளோடு நித்ய ஸம்பந்தமாகிற தேஜஸ்ஸைப்‌ பெற்றவராய்‌ வேகமாகச்‌ செல்லும்‌ இளையாழ்வார்‌ பிள்ளையோடு செல்லுமாறு நியமித்தார்‌.] என்கிறபடி ஜீயர்‌ திருவடிக்குத்‌ திருவடி நிலைகள்‌ கொண்டு ஸதா ஸேவிக்கிற மஹாதிசயத்தை யுடைய இளையாழ்வார்‌ பிள்ளையோடே ராமாநுஜ தாஸரைத் தம்முடைய திருவடி நிலைகளை ஸூக்தமாக ப்ரசாதித்துப்‌ பயணமாக நியமித்தருளினர்‌-

இளையாழ்வார் பிள்ளையும்‌ ராமாநுஜ தாஸரும்‌ யாத்திரை செய்தல்‌,
சக்ரவர்த்தி திருமகனார்‌ ஸ்ரீபரதாழ்வானுக்குத்‌ திருவடி சாதிக்க அப்போது இளைய பெருமாளுக் கல்லாது ஒழிந்ததே– பரதாழ்வானைப் போலே. இளைய பெருமாள் திரு நாமத்தை யுடைய இவரும் ஜீயருடைய திருவடி நிலைகளை லபித்து, வோசத்‌தில் ஜனங்களுக்கு ஸந்தோஷ உத்ஸவத்தைச்‌ செய்தருளினார்‌-இப்படி அவருக்குத்‌ திரு உத்தீரீயம்‌ ஸாதித்தருளினாப் போலே இவருக்குத் திருவடி நிலைகள்‌- இப்படி தமக்கு ப்ரதி நிதியாக திருவடி நிலைகளை ஸாதித்தருளி யிருக்க, இளையாழ்வாரும்‌, -தநம்‌ மதீயம்‌ தவ பாத பங்கஜம்‌” என்கிறபடியே மஹா தநத்தை லபித்‌தருளி-மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி” என்று திருமுடி மேலே நற்றரிக்க வைத்துக் கொண்டு நிர்‌ மர்யாத ஹர்ஷ யுக்தரா யருளினார்‌-ராமாநுஜ தாஸரும்‌ பெருமானரையில்‌ பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசினீர்‌-என்று மிகவுமுகந்தார்‌-இப்படி அவரும்‌ ஜீயர்‌ திருவடி நிலைகளையே திருவாராதனமாக வெழுந்தருளப் பண்ணி வைத்துக் கொண்டு “அதி த்வரையாக கங்கா தீரத்திலே எழுந்தருளி திருவடி நிலைகளுக்கு நன்றாக சாஸ்த்ர ப்ரகாரம்‌ நெடும் போது கங்கையில்‌ திருமஞசனம்‌ ‘பண்ணி ஜீயர்‌ நீராடுவதாக அத்யவஸித்து அத் தீர்த்தத்திலே தாங்களும்‌ நீராடி பின்பு அங்குண்டான இடங்களெல்லாம்‌ ஸேவித்து
க்ரமேண தீர்த்தாநி ஸரீர பாஜாம்‌ பாபா பஹாந் யூர்ஜித ஸெயக்யதாநி ]
பரிக்ர மந்தாவதிதிம்‌ த்ருஸேர்ஸ்தெள விநிந்யது: ஸ்ரீ பதரீ நிவாஸம்‌ ॥
விசித்ரர் தேஹ ஸம்பத்திரீரஸ்வராய நிவேதிதும்‌

அவ் விருவரும்‌-மனிதர்களின்‌ பாபங்களைப்‌ போக்க வல்வையாய்‌ உயர்ந்த ஸெளக்யத்தை யளிக்க வல்ல தீர்‌த்தங்களை யெல்லாம்‌ முறையே நீராடிச் சென்று பின்பு தம்‌ கண்களுக்கு ஸ்ரீபதரிகாஸ்ரமப்‌ பெருமாளை அதிதியாக (விருந்தாக) ஆக்கினர்‌ ] [பல வகையான சத்திகளைப் பெற்ற சரீராவயவய ஸம்ருத்தியானது பகவானுக்குக் கைங்கர்யம் செய்வதற்காக ஏற்படுத்தப் பட்டுள்ளது ] என்கிறபடியே பகவதர்த்தமாக தேஹ பரிக்‌ரஹம்‌ பணணினவர்‌களுக்கு ஸ்வ ஸம்பந் தத்தாலே ஸமஸ்த ப்ரதிபந்தகங்களையம்‌ போக்கி ஊர்ஜிதமான மஹா புருஷார்த்தத்தை ஸாதிக்கற திவ்ய தேசங்களை-இரண்டு திருநாமங்களும்‌ க்ரமேண ஸஞ்சரித்து ஸேவித்து பத்ரிகாஸ்ரம நாராயணனைத்‌ தங்களுடைய திருக் கண்‌ மலர்களுக்கு ஸர்வ ப்ரிய தர்ஸந மாக அடைவித்தார்கள்‌.

இப்படி நர நாராயணப்‌ பெருமாளை மங்களாசாஸநம்‌ பண்ணிப் புக்க வளவிலே
அயோத்ய ராமாநுஜ தாஸ நாமக ஸதா முதா பூஜயதி ப்ரஸந்ந |
வஸீ நிஜ ஸ்ரீ குல சேகரஸ் ஸந் ஹரிம்‌ பதர்யாஸ்ரம வாஸிநம் தம்‌ ॥

(அயோத்யா ராமானுஜ தாஸரென்‌பவர்‌, அனைவரையும் தாமிட்ட வழக்காக்கியவராய்த் தமது ஸ்ரீ வைஷ்ணவ குலத்துக்குச் சிரோ பூஷணமானவராய்‌, மிகத் தெளிந்த மனமுள்ளவராய்க்‌ கொண்டு மகிழ்ச்சியுடன்‌ எப்போதும்‌ ப்ரஸித்தரான பதரிகாச்ரமப்‌ பெருமானை ஆராதித்து வருகிறார்‌] என்று அயோத்யை ராமாநுஜ தாஸ ரென்கிற திரு நாமத்தை யுடையவர்‌, குலசேகரராய்க்‌ கொண்டு ஸமஸ்த துரிதஸ்ஹரான வயதாஸ்ரிமப்‌ பெருமாளை எக் காலத்‌திலும்‌ ஸந்தோஷத்துடனே ஆராதித்துக் கொண்டிருந்தார்‌,

ஸ லஷ்மணம்‌ வீஷ்ய பவித்ர ரூபம்‌ ஸமேத்ய ராமநுஜ தாஸ மேநம்‌ |
ஸமர்ச்ச யித்வா விவிதோபசாரைஸ் ஸ தர்ஸ யாமாஸ ரமாஸஹாயம்‌ ॥

[அந்த அயோத்யா ராமானுஜ தாஸர்‌-இளையாழ்வார்‌ பிள்ளையோடு வந்த இந்த சுத்த ஸ்வரூபரான ராமாநுஜ தாஸரை கிட்டி வந்து பல வகைப்பட்ட உபசாரங்களைச்‌ செய்து ஆராதித்துப்‌ பின்பு பதரிகாச்ரம பெருமாளான ஸ்ரீயபதியை இவர்களுக்கு ஸேவை ஸாதிக்கப்‌ பண்ணினார்‌] என்று ராமாநுஜய்யங்கார்‌ பரம பாவநரா யிருக்கிற இவரைக்‌ கண்டு ஸேவித்து நர நாராயணப்‌ பெருமாளுக்கு விசேஷித்து தளிகைக்கு வரிசையாக ஸமர்ப்பித்துத்‌ தளிகை அமுது செய்தருளப்‌ பண்ணுவித்து உடனே அநுஸந்தாநம்‌ நடக்க வேணு மென்ன;
வரயோகி வராகதெள ஸைலேதெள நர நாராயண ஸந்நிதெள புரஸ்தாத்‌ |
த்ரமிடோப நிஷந் மஹா பிரபந்த பிரதமோ உதாஹரணே ந்ய யுங்த வித்வாந் ॥

[வித்வானாகிற அயோத்யா ராமானுஜ ஐய்யங்கார்‌- மணவாள மா முனிகள்‌ ஸந்நிதி யிலிருந்து வந்த இவ் விருவரையும்‌-நர நாராயணப்‌ பெருமாள்‌ ஸந்நிதியில்‌ பெருமாளுக்கு முன்னிலையில்‌ திவ்ய ப்ரந்தம்‌ தொடங்கும்படி நியமித்தார்‌-. என்கிறபடியே அழகிய மணவாளமாமுனினுடைய ஸந்நிதி யினின்றும்‌ அவருடைய மரியாதையாக எழுந்தருளின இவர்களை நர நாராயணப்‌ பெருமாள்‌ திரு வோலக்கத்தலே அருளிச் செயலாகிய மஹா ப்ரபந்தாநுஸந்தானத்‌ தொடக்கத்திலே நியமிக்க, இளையாழ்வார்‌ பிள்ளையும்‌
ததா விதிஜ்ஜோ விதிவித்‌ ப்ரஸாதாத் வரோப்யந்துர் துரி ரங்க தாம்நா |
நிவேநிதம்‌ பத்ய வரம்‌ த்வி கண்டம் படந் ஜகெள த்ராவிட வேதமேஷ। ॥

[முறை யறித்த இவ் விளையாழ்வார்‌ பின்ளை அவர்‌ நியமனத்‌தின் படியே, மணவாள மாமுனிகள்‌ முன்பே ஸ்ரீரங்க நாதரால்‌ மனத் தெளிவோடு அருளிச் செய்யப்பட்டதாய்‌ இரண்டு பாகங்கள்‌ கொண்ட (ஸ்ரீசைலேச’ என்ற ஸ்லோக ரத்நத்தை முதலில் சொல்லிப்‌ பின்பு திவ்ய ப்ரபந்தத்தை ஓதினார்‌.] என்‌கிறபடியே ராமாநுஜருடைய நியமனத்தின் படியே தொடங்குகிறவராய்க்‌ கொண்டு “ஸ்ரீஸைலேஸ தயா பாத்ரம்‌” என்னும் தனியனை முந்துற அனுஸந்தித்து மற்றத்‌ தனியன்களையும்‌ க்ரம ப்ரகாரம்‌ அநுஸந்தித்து ப்ரபந்தாநுஸந்தாநஞ்‌ செய்தருளினார்‌.

அது கண்டு ராமாநுஜய்யங்கார்‌ முதலானவர்கள்‌ விஸ்மிதராயிருக்க,
ஜஜ்ஜே அமுநா ஸ்வப்ந நிவேதிதம் ஹி யத்‌ கதம்‌ பதர்யாஸ்ரம நித்ய வாஸிநா |
ப்ராகாஸி மந்த்ரர்ர்த்த மிதம்‌ முரத் விஷேத் யாயோத்ய ராமாநுஜ ஆவிஸிஷ்மயே 1

[பத்ரிகாச்ரமற்தில்‌ நித்ய வாஸம்‌ செய்யும்‌ இந்த முராரியான பகவானாலே தம் ஸ்வப்நததில்‌ அருளிச்‌ செய்யப்பட்டு எந்தத்‌ தனியன்‌ உண்டாயிற்றோ-மந்த்ரார்த்தங்களைத்‌ தன்னகத்தே கொண்ட இந்தத் தனியன்‌ இவர்களால்‌ எப்படி வெளிப்படுத்தப்‌ பட்டது” என்று அயோத்யா ராமானுஜய்யங்கார்‌ மிக்க ஆச்சரிய மடைந்தார்‌]. என்று ‘ஸ்ரீபதரிகாச்ரமப்‌ பெருமாளாலே தமக்கு ஸ்வப்நத்திலே அருளிச்‌ செய்யப்‌ பட்டதன்றோ இது ‘” என்று இவர்களாலே ப்ரகாசமாய்‌ மந்த்ரார்த்த மானத்தை யறிந்து இது க்ருஷ்ண லீலை யென்று ராமாநுஜய்யங்கார்‌ மிகவும்‌ ஆஸ்சர்யப்‌ பட்டு, பின்பு இந்த ஸ்லோகம்‌ தேவரீருக்கு வந்தபடி யென்னென்ன)-கோயிலிலும்‌ பெருமாள்‌-ஆசிநோதிஹி ஸாஸ்த்ரார்த்தாத்‌[சாஸ்த்ரப்‌ பொருள்களை வெளியிடுமவன்‌ ஆசாரியன்‌] என்கிற படியே இந்த ஸ்தலததிலே நர நாராயண ரூபேண பெரிய திருமந்தரத்தை வெளியிட்டருளினாப்‌ பாலே அந்த மந்த்ரார்த்தமான திவ்ய ப்ரபந்த தத் வ்யாக்யாநங்களை லோகோபகாரமாக ப்ரவர்த்‌திப்‌ பிக்கத்‌ திருவுள்ளமாய்‌ ”யதோசிதம்‌ சேஷ இதீரிதே”* [ஸமயத்‌துக்குத்‌ தக்கபடி அடிமைக்கு உறுப்பான பல சரீரங்களைக்‌ கொள்ளுகையால்‌ சேஷன்‌ என்று சொல்லப்பட்டவன்‌] என்கிறபடியே அசேஷ சேஷ வருத்தியிலும்‌ அந்வயித்திருக்கிற திருவநந்‌ தாழ்வானை ஜீயராக வவதரிக்கச்‌ சொல்லி நியோகிக்க, அவரும்‌ தத் கைங்கர்யமாய்‌ அவதரித்து திவ்ய ப்ரபந்ததத்‌ வ்யாக்‌யாதங்களை அதி சதுரராய்‌ நடத்திக் கொண்டு போர, அவருடைய வைபவங்களை ப்ரகாசஞ்‌ செய்தருளத்‌ திருவுள்ளமாய்‌ ஜீயரிடத்‌திலே தாம்‌ ஈடு கேட்டருள நியமிக்க, ஜீயரும்‌: இதுவுமொரு கைங்கர்யமென்று தொடங்கி. நடத்திச்‌ சாத்துகிற ஸமயத்திலே

(வதரியாச் சிரமத்தில் இரு மெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடி வணங்கிக்
கதியாக ஒரு பொருளை அளிக்க வேண்டும்
கண்ணனே அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீர்சைல மந்திரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச் செய்து
பதியான கோயிலுக்கு சென்மின் நீவீர்
பாதியையும் சொல்லுதும் யாம் தேற வென்றார் –
4-)

ஆசார்ய சம்பாவனை காலத்திலே, அர்ச்சக புத்ரராம்‌ ரங்கநாயகன்‌ என்கிற பெயருடையரான அஞ்சு வயஸ்ஸூ உள்ளவர் மேலே பெருமாள் ஆவேஸித்து அருளிச்செய்த படியையும்‌, ‘ அப்‌பிள்ளையைக்‌ கொண்டு வாழி திரு நாம மவதரிப்பித்தபடியையும்‌ ப்ரபந்தாநுஸத்தான காலத்திலே ஆதியிலே இந்தத் தனியனையும்‌ ப்ரபந்தம்‌ சாத்தினால்‌ இந்த வாழித் திருநாமத்தையும்‌ அநுஷத்‌திக்கும்படி திருமலை பெருமாள்‌ கோயில்‌ தொடக்கமான திவ்ய தேசங்களிலும்‌ மற்றெங்கும்‌ நடக்கும்‌ படிக்கு
ஸ்ரீபந்நகாதீஸ முநே பத்யம்‌ ரங்கேஸ பாஷிதம்‌ | அஷ்டோத்தர தசஸ் தாலேஷ் வநுஸந்தாநமாசரேத்‌ ॥
இத்யாஜ்ஞா பத்ரிகா விஷ்வக்ஸேநேந ப்ரதி பாதிதா | ததாரப்ய மஹத் பிஸ்ச பட்யதே ஸந்நிதே:புரா ॥

[ஸ்ரீரங்க நாதனால்‌ மணவாள மாமுனிகள்‌ விஷயமாக அருளிச்‌ செய்யப் பட்டது இந்த ஸ்லோகம்‌. இது தன்னை நூற்றெட்டுத்‌ திருப்பதி களிலும்‌ எல்லோரும்‌ அனுஸந்தானம் செய்யக் கடவர்கள்‌ -என்று நியமன பத்ரிகை ஸ்ரீஸேனை முதலியாரால்‌ அனுப்பப்பட்டது. அது முதலாகப்‌ பெரியோர்களாலும்‌ இஸ் ஸ்லோகம்‌ பெருமாள்‌ ஸந்நிதானத்தில்‌ முதலில்‌ அநுஸந்திக்கப்‌ பட்டு வருகிறது. என்கிறபடியே ஸ்ரீசேனை முதலியார்‌ திருமுகம்‌ வரவிட நடக்கிற படியையும்‌, திருவேங்கடமுடையான்‌ தீர்த்த
யாத்ரா ப்ராஹ்மணனுக்கு
உபதிஷ்டம்‌ மயாஸ்வப்நே திவ்யம்‌ பத்யமிதம்‌ ஸூபம்‌ |
வரயோகி ஸமாஸ் ரித்ய பவத:ஸ்யாத்‌ பரம்‌ பதம்‌ ॥

மிக வுயர்ந்ததும்‌ மங்களகரமுமான இந்த ஸ்லோகம்‌ கனவில்‌ உனக்கு உபதேசிக்கப்பட்டது. மணவாள மாமுனிகளை ஆஸ்ரயித்தால்‌ உனக்குப்‌ பரமபத ப்ராப்தி உண்டாகும்‌.] என்று.. ஸ்வப்நத்திலே இந்தத் தனியனையும்‌ ப்ரஸாதித்து சில நாட்களுக்குப்‌ பின்‌ அந்த ப்ராஹ்மணனை ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸரயிக்கும்‌ படிக்கு
இத் யுக்த்வாதம்‌ வ்ருஷாத்ரீஸோ ஸ்ரீபதாத ரேணு மேவச | தத்‌வா ஸூப்ரேஷ யாமாஸ கச்ச யோகி வரம்‌ ஸூசிம்‌.॥-[திருவேங்கடமுடையான்‌’ இங்ஙனம்‌ கூறிவிட்டு, ஸ்ரீ பாத ரேணுவையும்‌ அவனுக்குக்‌ கொடுத்து, பரிசுத்தரான ‘ மாமுனிகளிடம்‌ செல்வாயாக என்று சொல்லி விரைவாக அனுப்பினார்‌.] என்கிறபடியே அவருக்கு ஸ்ரீசடகோபனையும்‌ ஸ்ரீபாத ரேணுவையம ப்ரஸாதித்தருளின படியையும்‌, அவரும்‌ ஆஸ்ரயித்துத்‌ திருவடிகளைச்‌ சார்ந்த படியையும்‌, திருமாலிருஞ்சோலையழகர்‌ ஜீயர்‌ திருவடிகள்‌ ஸம்பந்த முடைய ஸேனை முதலியார்‌ முகமாக இந்தத் தனியனை அருளிச்‌ செய்தபடியையும்‌, பகவதுக்ததி யாயிருக்க ஈஷத் பேத முண்டாயிருந்ததே யானாலும்‌ அர்த்தைக்ய ப்ராதாந்யேந ஸேனை முதலியார்‌ ஆசார்ய கோடி ப்ரவிஷ்டராகையாலே “அவர்‌ திரு முகத்தின்படியே எங்கும்‌ அநுஸந்தித்துப்‌ போருகிறபடியையும்‌ ப்ரஹ்‌மசாரி சிறுமுறி கொடுத்ததையும்‌ ஸர்வ வ்ருத்தாந்தாந்தங்‌ களையும்‌ அருளிச் செய்யக் கேட்டு வித்தராய்‌ தமக்கு இந்தத்‌ தனியன்‌ வந்தபடியை அருளிச்‌ செய்யத்‌ தொடங்கினார்‌-

தனியனவதரித்த வருஷம்‌ மாதம்‌ முதலியன கூறல்‌
அதில்‌ முந்துற இத் தனியனும்‌ வாழித் திருதாமமும்‌ அவதரித்த வருஷம்‌ மாஸம்‌ தேதிகளைக்‌ கேட்டருள, இளையாழ்வார்‌ பிள்ளையும்‌
நல்லதோர்‌ பரீதாபி வருடந் தன்னில்‌ நலமான வவ் ஆவணியின்‌ முப்பத்‌ தொன்றில்‌
சொல்லரிய சோதியுடன்‌ விளங்கு வெள்ளித்‌ தொல் கிழமை வளர் பக்க நாலா நாளில்‌
செல்வ மிகு பெரிய திருமண்டபத்தில்‌ செழுந் திருவாய்மொழிப்‌ பொருளைச்‌ செப்புமென்று
வல்லி யுறை மணவாளரரங்கர்‌ நங்கண்‌ மணவாள மாமுனி வழங்கினாரே
—என்றும்‌,
ஆனந்த வருடத்தில்‌ கீழ்மை யாண்டில்‌ அழகான ஆனி தனின்‌ மூல நாளில்‌
பாநுவாரங் கொண்ட பகலில்‌ செய்ய ‘பெளரணையினாளி யிட்டுப்‌ பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்‌ அழகாக மணவாளரீடு சாத்த
வானவரும்‌ நீரிட்டவழக்கே என்ன மணவாள மாமுனிகள்‌ களித்திட்டாரே
–என்றும்‌

தத: கதாசிதாஹூய தமேநம்‌ முநி புங்கவம்‌ |
கிருபயா ஸாது ஸக்ருத்ய சரணாம் புஜ ஸமர்ப்பணாத்‌ ॥
தர்ஸயந்‌ துர்க்ரஹாரர்த்தாந் த்ரமிடோபநிஷத் கிராம்‌ |
ஸந்நிதெள வ்யாகுருஷ்வேதி ஸஸாஸ அமர ஸாஸந : ॥

என்கிறபடியே பெருமாளும்‌ ஒரு திருப் பவித்ரோத்ஸவத்‌ திரு நாளிலே அங்குண்டான அனைவரும்‌ பேரோலக்கமாக ஸேவித்துக்‌ கொண்டிருக்கச் செய்தே, ஜீயரும்‌ முதலிகளும்‌ பெருமாளை
மங்சகளாசானைம்‌ பண்ண எழுந்தருளின வளவிலே, பலரடியார்‌ முன்பருளிய பாம்பணை யப்பன்‌ என்கிறபடியே, தம்முடைய பரம கிருபையாலே உடையவருடைய வைபவத்தை நம்பி தாமே வெளியிட்டாப் போலே ஜீயருடைய மஹிமையை ப்ரகாசிப்பித் தருளுவதாகத்‌ திருவுள்ளம் புற்றி தாமும்‌ ஜீயருக்கு சிஷ்யராகுகையைக்‌ குறித்து ஜீயரைத்‌ தனித்தருளப் பாடிட்டருளி, “நாளை முதல்‌ நம்முடைய பெரிய திருமண்டபத்திலே பெரிய வண்‌ குருகூர் நகர்‌ நம்பியான ஆழ்வாருடைய திருவாய்மொழியை ஈடு முப்பத்தாறாயிரம்‌ தொடக்கமான ஐந்து வ்யாக்யானங்களுடனே நடத்தும்‌”:
என்று நியமித்தருள,
மங்கள ஆயதநே ரங்கே. ரம்ய ஜாமத்ரு யோகிராட்‌ |
யுகபத்‌ த்ராவிடாம்நாய வ்யாக்யநத்யாந கெளதுகி–
–என்‌கிறபடியே, ‘“இப்படி ஏவி யருளுகிறதே!” என்று ஹ்ருஷடராய்‌

மஹாந் ப்ரஸாத இத்யஸ்ய ஸாஸநம்‌ ஸிரஸா வஹந்
ததைவ தத்ர வ்யாக்யாதும்‌ தத் க்ஷணா துபசக்ரமே ॥
ஸ்ரீபதி ஸ்ரீபதிஸ் ஸ்வாமி மண்டபே மஹதி ஸ்‌வயம்‌ |
தத்‌வம் தஸ்ய ப்ரபந்தஸ்ப வ்யக்தம்‌ தேநைவ தர்ஸிதும்‌ ॥
ஸடவைரி முகை ஸ்ருண்ஸந் தேசிகைர் திவ்ய தர்‌ஸநை |.
அத திவ்ய முநேஸ் தஸ்ய மஹிமாந மமாநுஷம்‌
அநு பூயே மஹா பூகணே ஆபால கோபால மகிலோ ஜநா |
அமந் யத பரம் தந்ய மாத்மாநம்‌ தத்ர நிக்ஷிபந் ॥

என்கிறபடியே ஈடு தொடக்கமாக ஐந்து வ்யாக்யானங்களுடன்‌ மாறன்‌ பணித்த தமிழ்‌ மறைக்கு அர்த்தம்‌ நடத்துகிறபடியை அருளிச் செய்ய; (இன்பம்‌ பயக்க விருக்க நிலத்தேவர் குழுவிலே பாட்டு கேட்பிப்‌பதாக கான கோஷ்டியைப் பாரித்தாப் போலே பெருமாளும்‌ நாச்சி மாருடனே திவ்ய ஸிம்ஹாஸநத்திலே ஏறி யருளி அச் சேர்த்‌தியை யநுபவிக்கிற அயர்வறுமமரர்களான திருவநத்தாழ்வான்‌ பெரிய திருவடியாழ்வான்‌, ஸ்ரீசேநாபதி யாழ்வானாகிற நித்ய ஸூரிகளோடும்‌, வைகுந்தத்து முனிவரான நம்மாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்கள்‌ பதின்மரோடும்‌ ஸ்ரீரங்க மா மறையோரான அனைத்துப்‌ பரிகரத்தோடும்‌ அணி யரங்கத் திருமுற்‌றத்தடியார்‌களோடுங் கூடப்‌ பேரோலக்கமாக எழுந்தருளி யிருத்து “ரங்கி வத்ஸர மேக மேவம்‌ ஸ்ருணோத் வ்யக்தம் யதோக்தம்‌ க்ரமாத்‌- என்கிறபடியே திருச்செவி சாத்தியருள-)அன்று ராத்ரி ஸ்வப்நத்தில பதர்யாஸ்ரம நாராயணன்‌ தமக்குப்‌ பாடமாமளவும்‌ ஸாதித்து ஸாயம் ப்ராத: அநு ஸந்தான காலத்திலே அநுஸந்தித்து ப்ரபந்தாநுஸந்தானஞ்‌ செய் யென்று நியமித்த படியைச்‌ சொல்லிக் கொண்டு விஸ்மிதராய்‌ ஆநந்த பரவசரா யிருகக, இளையாழ்வார்‌ பிள்ளை முதலானாரும்‌
பகவத் ப்ரஸாத லப்தமன்றோ இத் தனியன்‌?’‘ என்று பரஸ்பரம்‌ கொண்டாடிக்‌ கொண்டு மிகவும்‌ ஈடுபட்டிருக்க, ராமாநுஜ ஐயங்கார்‌ க்ரமத்திலே தேறி அழகிய மணவாள மா முனியினுடைய வைபவங்களை யெல்லாம்‌ அடியேனுக்கு இரங்கி ப்ரஸாதித்தருள வேணுமென்று திருவடிகளைப்‌ பிடித்து ப்ரார்‌த்‌திக்க, இளையாழ்வார்‌ பிள்ளையும்‌ ஒமறைந்து மடத்திலே யாகிறதென்ன; திருப்பாவை
அநுஸந்தாநத்தையும்‌ நிறைவேற்றிச்‌ சாத்தி தீர்த்த ப்ரஸாதங்கஞம்‌ விநியோகமாய்‌ இளையாழ்வார்‌ பிள்ளைக்கு வரிசைகளும்‌ ப்ரஸாதித்தனுப்பி யருள, அவரும்‌ ராமாநுஜய்யங்கார்‌ மடத்திலே யெழுந்தருளி அவருக்கு அழகிய மணவாள மாமுனியினுடைய வைபவங்களை யெல்லாம்‌ ஸாதித்து உகப்பித்தருளினார்‌, ராமாநுஜய்‌யங்காரும்‌ லைபவங்களை யெல்லாங் கேட்டு வித்தராய்‌ ஜீயரைக்‌ கண்டு ஸேவிக்க வேணுமென்று அத்யபிநிஷ்டராயிருக்க’ அவருடைய மநஸ்ஸை யறிந்து ராமாநுஜ தாஸர்‌ -பத்ரிகாச்ரமம்‌ முதலான திவ்ய தேசங்களில்‌ கைங்கர்யங்களுக்கு தேவரீர்‌ நியமித்த படிக்கு சில நாளைக்கு ஸேலித்துக் கொண்டிருந்து ஜீயர்‌ திருவடிகளை ஸேவிக்க விடை கொள்ளுகிறேன்‌” என்று சொல்லி,தேவரீர்‌ இளையாழ்வார்‌ பிள்ளையுடன்‌ கோயிலுக்கு எழுந்தருள வென்று அருளிச்‌ செய்ய, ராமாநுஜய்யங்காரும்‌ மிகவும்‌ ப்ரியப்‌பட்டு அவரை பஹுவாக உபலாளித்தருளி ஜீயர்‌ திருவடி நிலைகளை வரிசையுடன்‌ எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு இளையாழ்வார்‌ பிள்ளையும்‌ ராமானுஜய்யங்காரும்‌ திருமலையிலே சென்று திருவேங்கடமுடையானை ஸேவிக்க நிற்க, அப்பனும்‌ இவர்களை மிகவும்‌ க்ருபை பண்ணி யருளி அயோத்யை ராமானுஜய்யங்காருக்குச்‌ சில கைங்கர்‌யங்களை நியமிக்க, அவரும்‌ அதற்கு அங்கே நிற்க வேண்டுகையாலும்‌ ஜீயரைத் தம்முடைய மநோரதத்தின்படி ஸேவிக்கப்‌ பெறாமையாலும்‌ ப்ரீத்யப்ரீதி ஸமராயிருத்தார்‌ (சில கைங்கர்யங்கள் என்பவற்றை -அடிவாரத்துக்கும் திருசுகவனூருக்கும் படிக்கட்டு கட்டச் சொல்லி – அழகிய சிங்கப்பெருமாள் ஸ்தாபித்தார் -மார்க்க மத்யத்தில் -சேவிக்கும் படி -திருக்கோவில் கட்டி- வழி எம்பெருமானார் சந்நிதியும் உண்டாக்கி-போகும் வழியில் மண்டபங்களும் கட்டி அருளி -எம்பெருமானாருக்கும் கோவிந்தராஜர் கோயிலில் பிரதிஷ்டை செய்தருளி -போன்றவை -)-

(அயோத்ய ராமானுஜ ஐயங்கார் இங்கு திருமலையில் கைங்கர்யம் செய்து பின்பு 1489 திருவரங்கம் வந்து -வெள்ளை கோபுரம் கைங்கர்யம் -அண்ணனை ஆஸ்ரயித்து –கந்தாடை ராமானுஜ முனி -பின்னர் பெற்ற திரு நாமம் -கல்வெட்டு பதிப்புக்களும் உண்டு -திருமலையில் வழி எம்பெருமானார் சந்நிதியும் இவரே செய்தார் -வேங்கடாத்ரி கொண்டை சாத்தி அருளி -இன்றும் சேவிக்கிறோம் -)

மேலும்‌ கோயிலில்‌ நடந்தவை ‘
இனிக் கோயில்‌ வ்ருத்தாந்தம்‌-
திருவேங்கடமுடையான்‌ ராமாநுஜ அய்யங்காருக்கு கைங்கர்யம்‌ நியமித்தருளின தினத்‌திலே திருமலை யாழ்வாரிலே பகவத்‌ விஷய காலஷேபம்‌ நடத்தி யருள, அற்றைக்கு ஒழிவில்‌ காலத்தறுவாய்‌ நடந்து செல்ல,-ஒழிவில்காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டும்‌-என்று ௨க்தி மாத்ரமாயொழிவதே! என்று மிகவுத்‌ தளர்ந்து பரவசராய்ப்படுப்பதும்‌ இருப்‌பதும்‌ நிற்பதும்‌ புலம்புவதுமாயிருக்க, அற்றைக்கு முதல் நாள் ராத்ரி ப்ரதிவாதிபயங்கரமண்ணா ஸ்வப்நத்திலே திருவேங்கடஜீயர்‌ என்னும்‌ திரு நாமத்தை யுடை த்தாயிருக்கிற ஒரு ஏகாங்கி சென்று, “வாரீர்‌! ஸ்ரீவைஷ்ணவ தாஸரே நாளை ஒழிவில் கால வ்யாக்யாநாவஸரத்‌திலே ஜீயர் கைங்கர்ய ருசி விவசராயிருப்பர்‌, அவருக்கு சேஷசைலத்‌திலே சேஷாவதராமான ஜீயர்‌ மனோரதப்படியே கைங்கர்யம்‌ கொண்டருளுகிறோம்‌ என்று நீர்‌ விண்ணப்ஞ் செய்யும்‌’; என்று இப்படிக்‌ கண்டு எழுந்திருந்து வித்தராய்‌ ‘ ஈதொரு ஸ்வப்ந வைபவமிருந்தபடியே!” என்று எண்ணிக் கொண்டு நித்ய கர்மாநுஷ்‌டானங்களை நிறைவேற்றி மடத்திலே யெழுந்தருளித்‌ திருமலை யாழ்வாரிலே ஜீயரை தண்டன்‌ ஸமர்ப்பித்து, எழுந்தருளி யிருக்‌கிற ப்ரகாரத்தைக் கண்டு தம்முடைய ஸ்வப்ந மிருந்த ஸ்த்திதியும்‌ சேர்ந்திருக்கிற படியையுங் கண்டு, ஹ்ருஷ்டராய்‌ இந்த ஸ்வப்ந வ்ருத்தாந்தத்தை ஜீயர்‌ திருவுள்ளத்தில் படுத்த, ஜீயரும்‌ -இதுவுமொரு க்ருபையே!’” என்று ஹருஷ்டராய்‌ அண்ணாவை உபலாளித்தருளி, புந புந: கேட்டருளி, திக் கஜங்களை ‘இது எப்படி இருக்கிறது?? என்று கேட்டருள, அவர்களும்‌ “இந்த வேளை திருமலையிலே ஒரு அத்புத முண்டாயிருக்க வேணும்‌; அத்தை யறியும்‌ படிக்கு ஒருவரை நியமித்தருள வேணும்‌” என்று விண்ணப்பம் செய்ய; அவ்வளவிலே ௮ழகரண்ணன்‌ -எழுத்திந்து தண்டன்‌ ஸமர்ப்பித்து, “அடியேன்‌ தேவரீர்‌ திருவடிகளை – முன்னிட்டுக்‌ கொண்டு திருமலைக்கு விடை கொண்டு அப்பனையும்‌ ஸேலித்து செய்தியையும்‌ அறித்து கொண்டு விடை கொள்ளுகிறேன்‌’ என்று விண்ணப்பஞ் செய்ய, ஜீயரும்‌ போர உகந்தருளி அனுப்பி யருள,அவரும்‌ அதி த்வரையாகக்‌ திருமலையிலே சென்று பெருமாளை ஸேவிக்க, உடனே இளையாழ்வார்‌ பிள்ளையைக் கண்டு அந்யோந்பவந்தந பரராய்க் கொண்டு குசல ப்ரச்நம்‌ பண்ணிக் கொண்டு அயோத்யை ராமாதுஜய்யங்கார் பாடே செல்ல, அழகரண்ணனுக்கு பஹுமாநம் பண்ணி ப்ரதிபத்தி பண்ண, ஜீயருடைய வைபவங்களை புந:புந: கேட்டுத்‌ திருவேங்கடமுடையான்‌ தமக்குக்‌ கைங்கர்யங்கள்‌ நியமித்தருளின படியையும்‌ தாம்‌ ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க வேணுமென்கிற த்வரையையும்‌ அருளிச்‌ செய்ய அழகரண்ணனும்‌, ஜீயருக்கு உகப்பு கைங்கர்யம்‌ செய்து போருகையாய்‌ இருக்குமென்று, ப்ரதிவாதி பயங்கரருடைய ஸ்வப்ந வ்ருத்தாந்‌தத்தையு மருளிச் செய்ய; ராமாநுஜ அய்யங்காரும்‌, “ஆனால்‌ தன்‌யனானேன்‌, ஜீயர்‌ நியமனப் படிக்கு அவருடைய திருக் கைகளாலே யதா-சக்தி செய்து போருகிறேன்‌” என்று சொல்லி இளையாழ்வார பிள்ளையையும்‌ அழகரண்ணனையும்‌ கோயிலுக்கு அனுப்பி விட அவர்களும்‌ உடனே புறப்பட்டெழுந்தருளி ஜீயரை தண்டன்‌ ஸமர்ப்பித்து வடக்கில்‌ எம்பெருமான்களுடைய அபய ஹஸ்த ப்ரஸாதங்களையும்‌ ஸமர்ப்பித்துத்‌ திருவடி நிலைகளையும்‌ திருவடிகளிலே சேர்க்க, ஜீயரும்‌ இளையாழ்வார் பிள்ளையை பஹு நாளைக்‌காகக்‌ கண்டோமே! என்று மிகவும்‌ க்ருபை பண்ணி யருளி, அழகரண்ணனையும்‌ போர க்ருபை செய்தருளி, ப்ரதிவாதி பயங்கர மண்ணாவை -உம்முடைய ஸ்வப்நம்‌ பல வ்யாப்தமாயிற்று; உமக்‌காக வன்றோ திருவேங்கட முடையான்‌ க்ருபை பண்ணி யருளினார்‌!-என்று உகப்பு தோன்ற அடிக்கடி அருளிச் செய்து கொண்டு இளையாழ்வார் பிள்ளையை அடிக்கடி திருக்கையாலே தழுலி உபலாளித்து, ”நெடுந் தூரம்‌ சென்று வந்தீரே!” என்று அருளிச்‌ செய்து கொண்டு ராமாநுஜ அய்யங்கார்‌ ஸ்வரூப ஸ்வபாவங்களை உகந்தருளிக்‌ கேட்டுக் கொண்டு, நம்பெருமாள்‌, ஸ்ரீபத்ரிகாச்ரமப்‌ பெருமாள்‌, திருநாராயணப்‌ பெருமாள்‌, திருவேங்கடமுடையான்‌,அழகர்‌, இவர்களுடைய ஐக கண்ட்யத்தையும்‌ அருளிச் செய்து கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌. இந்த அர்த்தங்களை யெல்லாம்‌ வரவரமுநி வைபவ விஜயம்‌ என்கிற ப்ரபந்தத்திலே கந்தாடை யப்பன்‌ விஸ்த்ருதமாக அருளிச்‌ செய்ய ஜீயர்‌ திருச்செவி சாத்தி யருளினார்‌.
பின்பொருநாள்‌ திருக் காவேரியினின்றும்‌ எழுந்தருளச்‌ செய்தே ஜீயருக்கு இளையாழ்வார்‌ பிள்ளை திருக்கை ஸர்ப்பித்துக்‌ கொண்டு வரும் போது ப்ரஸங்காத்‌ அயோத்யை ராமாநுஜ அய்யங்காருடைய மநோ ரதத்தை விண்ணப்பஞ் செய்யக் கேட்‌டருளி, ‘திருவேங்கடமுடையானை இன்னுமொருக் கால்‌ ஸேவிக்‌கையுமுண்டாம்‌, அப்போது அவர்‌ மநோரதப் படியே ஆகிறது;இப்போது அவர்‌ கைங்கர்யஸ்ரீ யுடனே யிருக்கக் கடவர்‌ ‘ என்றருளிச் செய்ய, பின்னும்‌ ராமாநுஜ அய்யங்கார்‌ இந்‌தத் திருவடி நிலைகளைத்‌ தமக்குத்‌ திருவாராதனமாசு ப்ரார்த்தித்துக்‌ கொண்‌டிருக்கிறாரென்று விண்ணப்பஞ்செய்ய , அப்படியே ஆகிறதென்று மடத்திலே யெழுந்தருளி னவுடனே தைவாதீனமாகத்‌ திருவடி ஸம்பந்தமுடையரான சில வைஷ்ணவர்கள்‌ திருமலைக்கு விடை கொண்டு திருப் புரட்டாசித்‌ திருநாள்‌ ஸேவித்து விடை கொள்ளுகிறோம் என்று தண்டன்‌ சமர்ப்பித்து நிற்க, போர உகந்தருளி,புணர்‌த்த கையினராயடியேனுக்கும்‌ போற்றுமினே என்று திருமலையை நோக்கித் தொழுது ராமாநுஜ அய்யங்காருக்குத்‌ திருவடி நிலைகளை ஸாதித்து விடை கொடுத்தருள; அவர்களும்‌ புறப்பட்டுத்‌ திருமலைக்கு எழுந்தருளினார்கள்‌.

கந்தாடை அண்ணன்‌ திருமலைக்கு எழுந்தருளல்‌
பின்பொரு நாள்‌ கந்தாடையண்ணனை கடாஷித்தருளி திரு வேங்கட முடையானை மங்களாசாஸநம்‌ பண்ண வேண்டாவோ?என்ன, அப்பிள்ளை, “காவேரி கடவாத கந்தாடை யண்ணரன்றோ?” என்ன, அரங்கத்தரவினணையான்‌ வானவர்கள்‌ சந்தி செய்ய நின்றது அங்கேயே யன்றோ? என்று ஜீயரருளிச்‌ செய்ய,அண்ணனும்‌ அப்படியே நியமித்தருள வேணும்‌” என்ன, அவரையுங் கூட்டிக்‌ கொண்டு பெருமாள்‌ ஸந்நிதியிலே எழுந்தருளி விடை கொடுப்பித்தருளி உத்தம நம்பியையும்‌ கூடவே ஸேவித்துக்‌ கொணடு போரும்படி நியமித்தருளி, அனேகம்‌ ஸ்ரீவைஷ்ணவர்‌களையும்‌ ஜீயர்களையும்‌ ஏகாங்கிகளையும்‌ சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்‌களையும்‌ கூடப் பயணஞ்‌ செய்தருளி யிருக்கிற வவஸரத்திலே; உத்தம நம்பியும்‌ (அண்ணனுக்குத்‌ திருப்பல்லக்கு முதலான வரிசைகளைச்‌ சேர்த்துப்‌ புறப்பட்டிருக்கும் படிக்கு விண்ணப்பஞ் செய்து கொண்டு நிற்க, அண்ணனும்‌ அவைகளை யெல்லாம்‌ நிரோதித்து -ஸ்ரீ வைஷ்‌ணவ கோஷ்டியை ஸேவித்துக் கொண்டு திருமலைக்குப்‌ பெரும் கூட்டத்துடனே செல்லுகிற நமக்கு உசிதமன்றென்று மறு விண்ணப்பஞ் செய்ய வொண்ணாதபடிக்கு நிஷேஷித்து விட்டு ” திரு நாளிலே இரண்டு மூன்று நாளாகிலும்‌ மங்களாசாளனமாக வேண்டும்‌” என்று அதி த்வரையாகப்‌ பயண கதிகளிலே யெழுந்தருளி திருமலை யடிவாரத்திலே அடிப்புளி யழகிய சிங்கரைத்‌ தொழுது திருமலை யேறி யருள; அச் செய்தியைத்‌ திருமலை யநந்தாழ்வான் கேட்டருளி,(இவர்‌ ஒன்றான திருமலை யநத்தாழ்வான்‌ திருவம்ச்யராய்‌ அவர்‌ ஸ்தாநத்தில்‌ கைங்கர்யம்‌ பண்ணி யிருந்தவர் ) பெரிய கேள்வி ஜீயர்‌ முதலானார்‌, மற்ற ஆசார்ய புருஷர்கள்‌, ஸ்தலத்தார்‌ எல்லாருக்கு மறிவிக்க, அவர்களெல்லாரும்‌ போர உகந்தருளி வெள்ளிக் கிழமை புழுகுக் காப்பு. உத்ஸவத்தை அண்ணன்‌ மங்களாசாஸனம்‌ செய்தருள வேணுமென்று ப்ராத; கால வேளைக்கு நிறுத்தி, பெருமாள்‌ திருத் தேரிலே ஏறி யருளின வுடனே அனைவரும்‌ வரிசையுடனே ௮ண்ணனை எதிர்‌ கொண்டு எழுந்தருளப் பண்ணுவித்துக் கொண்டு வந்து திருத்‌ தேரிலே பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணுவித்து, பின்பு திருத் தேர்‌ திரு வீதி யெழுந்தருள இயல்‌ தொடங்குகிற விடத்திலே அயோத்யை ராமாநுஜ அய்யங்கார்‌ கண்டு பக்தி பரவசராய்‌ ஸேவித்து நிற்க, அவரையும்‌ க்ருபை பண்ணி யருளி எழுந்தருளா நிற்கிற வளவிலே:ஸ்ரீபத்ரிகாச்ரமத்தினின்றும்‌ ராமாநுஜ தாஸர்‌ வந்து அசிந்தமாக அண்ணன் எழுந்தருளி யிருக்கக்‌ கண்டு மிகவும்‌ வித்தராய்‌ உகந்து திருவடிகளிலே தண்டன்‌ ஸமர்ப்பிக்க,, அண்ணனும்‌ போர வுகந்தருளி எடுத்தணைத்தக்‌ கொண்டு அத்யந்தம்‌ ஹர்ஷ பரவசராய்‌ “வாரீர்‌ ராமாநுஜ தாஸரே! உம்மைக்‌ காணப் பேருமே பெற்றோமே! தேசாந்தர கதனான புத்ரனிடத்தில்‌ பித்ரு ஹ்ருகயம் போலே ஜீயர்‌ திருவுள்ளம்‌ உம்மிடத்தலே ஒருமைப் பட்டிருக்கிறது’என்று அங்குள்ள பெரியோர்களுக்கெல்லாம் இவருடைய ஆசார்ய நிஷ்டையை யருளிச் செய்து, திருத் தேர்‌ நிலையில்‌ எழுந்தருள, பெருமாளும்‌ உள்ளே எழுந்தருளின வுடனே ஸேவாக்ரமத்திலே அப்பனை பாதாதி கேசாந்தமாகவும்‌ கேசாதி பாதாந்தமாசுவும்‌ ஸேவித்து பூர்ண மநோரதராய்‌, புழுகுக் காப்பு ஸேவையுமாய்‌,தீர்த்தம்‌ ஸ்ரீசடகோபன்‌, ஸ்ரீபாத ரேணு ப்ரஸாதித்தருள ஸ்லீகரித்தருளி, பின்பு அநந்தாழ்வான்‌ திருமாளிசைக்கு எழுந்தருளப்‌ பண்ணுவித்துக் கொண்டு எழுந்தருள, ‘அங்கே யெழுந்தருளின வுடனே அநந்தாழ்வானும்‌ ஸர்வோபசாரங்களையுஞ்‌ செய்தருள அங்கே எமுந்தருளி இருந்தார்‌.

அயோத்யை ராமாநுஜ அய்யங்கார்‌ அண்ணனை ஆச்ரயித்தது.
ராமர்நுஜ தாஸரும்‌ ராமாநுஜ அய்யங்காரைக்‌ கண்டு,“தேவரீர்‌ திருமுக ப்ரசாரம்‌ அவ் விடத்தில்‌ கைங்கர்யங்களெல்லாம்‌ அமர்த்தி, சிறிய ராமானுஜ அய்யங்காரைக்‌ கற்பித்து அவரைக்‌ கொண்டு ஸகல வித கைங்கர்யங்களும்‌ நடக்கும்படி பண்ணி வந்தேன்‌; தேவரைக்‌ காணப் பெற்றேன்‌; அண்ணன்‌ திருவடி நிலையும்‌ ஸேவிக்கப் பெற்றேன்‌? என்று விண்ணப்பஞ்செய்ய;
ராமாநுஜ அய்யங்காரும்‌ போர உகந்தருளித்‌ தமக்கு ஹிதங்‌ கேட்கத்‌ தொடங்கி அப்பன் திருவடி தொழுதவன்று தொடங்கி இற்றை வரைக்கும்‌ தம்முடைய வ்ருத்தாந்தங்களை யெல்லாம்‌ விண்ணப்பஞ் செய்யக்‌ கேட்டு அவருக்கு ஹிதமருளிச்‌ செய்தபடி,-“ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்க வில்லை யென்கிற குறையை விடும்‌;அதிலும்‌ அதிசயமாய்‌ ஜீயருக்கு இரட்டிப்பு உகப்பாயிருக்கும்‌:நாளை தீர்த்தம்‌ திருவோணத்தில்‌ அண்ணன்‌ திருவடிகளிலே ஆஸ்ரயணமாக:’ என்று நியமிக்க: ராமாநுஜ அய்யங்காரும்‌ அதி ஸந்தோஷத்துடனே அவரையுங் கூட்டிக் கொண்டு அண்ணனைத்‌ தெண்டன்‌ மைர்ப்பித்து நின்று இச் செய்தியை விண்ணப்பம் செய்ய, அண்ணனும்‌ ”ஜீயருடைய நியமனமும்‌ அப்படியே இருக்கும்‌’* என்றருளிச்‌ செய்து, -ராமாநுஜ தாஸர்‌ ஹ்ருதமமும்‌ ஜீயர்‌ திரு வுள்ளமும்‌ ஏகமாய் இருந்தபடி யென்‌!” என்று போர வித்தராயிருக்க, அண்ணனும்‌ “ஜீயர்‌, தமக்கு ப்ரதி பிம்பமாக அபிமானித்தருளி திவ்ய தேச மங்களாசாஸநம்‌ செய்தபடி அறிவீரே’” என்று அருளிச்‌ செய்து வைஷ்ண கோஷ்டி புரஸ்ஸரமாக ராமாநுஜ அய்யங்காருக்கு ஸமாஸ்ரயணம்‌ செய்தருளினார்‌. ராமாநுஜ தாஸரும்‌ பண்டைக்‌ குலத்தைத்‌ தவிர்த்து தாமும்‌ வேதகப்‌ பொன்னானார்‌ பின்பு அண்ணன்‌ இருவரையும்‌ கூட்டிக் கொண்டு கோவிலிலே எழுந்தருளி அப்பனை மங்களாசாஸதம்‌ செய்தருளா நிற்க , பெருமாளும்‌ அண்ணனை மிகவும்‌ க்ருபை. பண்ணி யருளி ராமாநுஜ அய்யங்காருக்கு அண்ணன்‌ திருவடி ஸம்பந்தம்‌ தோற்ற
“கந்தாடை ராமாநுஜ அய்யங்கார்‌” என்று அருள்‌ பாட்டுடன் பட்டு வஸ்த்ரம்‌ ப்ரஸாதித்து இதுவே இவருக்குத்‌ திருநாம மென்று விதித்தருளிச் செய்து உபலாளித்தருளினார்‌ பின்பு பெரிய கேள்வி சிறிய கேள்வி ஜீயர்கள, ஏகாங்கிகள், ஆசார்ய புகுஷர்கள்‌ முதலான ஸ்தலஸ்தாரனைவரும்‌ அண்ணன்‌ சந்நிதிக்கெழுந்‌தருளி, சிறப்பு வரிசைகளும்‌ ஸமர்ப்பித்து, ஆஸ்ரயிக்க வேண்டியவர்கள்‌ ஆஸ்ரயித்து ஸ்ரீபாத தீர்ததம்‌ ஸ்வீகரித்து, அமுது செய்யத் தக்கவர்கள்‌ அமுது செய்தருளி, தளிகை ப்ரஸாத ப்ராப்‌தாக்கள்‌ தளிகை ப்ரஸாதம்‌ ஸ்வீகரித்து ௨பலாளித்து க்ருதார்த்த ரானார்கள்‌-

அண்ணன்‌ திருமலையினின்‌றும்‌ கோயிலுக்கெழுந்தருளல்‌
மற்றை நாள்‌ அண்ணனை அனைவரும்‌ கோவிலுக்கு வரிசையுடனே எழுந்தருளப்‌ பண்ணிக் கொண்டு வந்து மங்களாசாஸநம்‌ பண்ணின வுடனே பெருமாளரையில் பீதக வண்ண வாடையான பெரிய பீதாம்பரம்‌ முதலான வரிசைகளெல்லாம்‌ ஸாதித்தருளி கந்தாடை ராமாநுஜ ௮ய்யங்காருடைய திருப் பல்லக்கு, சத்ர சாமராதிகள்‌, மற்றை ஸமர்ப்பணைகளை யெல்லாம்‌ பரிக்ரஹிக்கும்‌ படிக்கு அர்ச்சக முகேந நியமித்தருளி விடைகொடுத்தருள உடனே புறப்பட்டருளிக்‌ கீழ்த் திருப்பதியிலே யெழுந்தருளி ஸ்ரீகோவித்த ராஜப்‌ பெருமாளையும்‌ மற்றவர்களையும்‌ மங்களாசாஸநஞ்‌ செய்தருளி வரிசை பெற்றுப்‌ புறப்பட்டு எறும்பியிலே எழுந்தருள, அப்பா திருத் தகப்பனார்‌ ஐயைகளும்‌ அழகிய மணவாள தாஸராகிய ஸ்ரீவைஷ்ணவர்களுடனே எதிர் கொண்டு ஸேவித்துத்‌ தம்முடைய திருமாளிகையிலே எருந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு சென்று உபசரித்தருளின வளவிலே; அண்ணன்‌,இளையாழ்வார்‌ பிள்ளை, திருவாய்மொழியாழ்வார்‌ பிள்ளை முதலான ஆசார்யர்களும்‌, எம்பெருமானார்‌ ஜீயர்‌, திருவேங்கட ஜீயர்‌ முதலான ஜீயர்களும்‌, முந்தி எழுந்தருளுகிறார்கள்‌’- என்‌கை -“அடியேன்‌ சேரிக்கு எழுந்தருளி க்ருபை பண்ணி யருளாமல்‌ அப்படிச்‌ செய்தருளலாமோ?” என்று ஐயைகள்‌ வெறுத்துக்‌ கொண்டு சுத்த ஸத்வமண்ணனைக்‌ கேட்டருள, அண்ணனும்‌,“ஸ்வாமி ஆசார்யரண்ணன்‌, தாம்‌ திருப் பல்லிக்கலே யெழுந்தருளச்‌ செய்தே அவர்களும்‌ கூட எழுந்தருளப் போகாதென்று முன்னே அனுப்பி யருளினார்‌. அவர்களும்‌, பத்மபுரமென்சிற திருமலையடி வாரத்திற் கெழுந்தருளுகிறார்கள்‌’” என்ன, ஆகில்‌ தாம்‌ எழுதந்தருளி அவர்களை யெல்லாரையும்‌ எழுந்தருளப்‌ பண்ணிக் கொண்டு வர வேணுமென்று சுத்த ஸத்வ மண்ணன்‌ திருக் கைகளைப் பிடித்துக்‌ கொண்டு பத்ம புரம் யெழுந்தருள, அவர்களுங் கண்டு அந்யோந்யம் வந்தந பராய்‌ குசல ப்ரச்நம்‌ பண்ணிக் கொண்டு எல்லாரும்‌ எறும்பியிலே ஐயைகள்‌ திருமாளிகையிலே எழுந்தருளி சக்ரவர்‌த்தி திருமகன்‌ அதி விஜ்ரும்‌பணமாக பூர்ணமாக அமுது செய்தருளி ததீயாராதநமும்‌ நடக்க, மற்றை நாள்‌ திருக்‌ கடிகையில்‌ ௮க்‌காரக் கனியை யடைந்து மங்களாசாஸநஞ் செய்தருளிப்‌ புறப்‌பட்டுப்‌ புட்குழி யம் போரேற்றைத் தொழுது பெருமாள்‌ கோயிலுக் கெழுந்தருள, அங்குள்ள ஆசார்யர்களும்‌ கோவிலனைத்துக் கொத்தும்‌ எதிர் கொண்டு எழுந்தருளிவித்துக்‌ கொண்டு போய்‌ பேரருளாளர்‌ பெருந் தேவியாரை ஸேவா க்ரமத்‌திலே மங்களாசாஸதம்‌ பணணுவித்துத்‌ திருமாளிகையிலே எழுந்தருளப்‌ பண்ணிச்‌ சிறப்பும்‌ நிரவதிகமாக ஸமர்ப்பித்து உபசரித்‌தருளினார்கள்‌-அப்பாச்சியாரண்ணாவும்‌ முதலியாண்டான்‌ தொடங்கி யுண்டான தம்முடைய பெரியோர்களை யெல்லாம்‌ ஸேவித்தாற்‌ போலிருக்கிறதென்று மிகவும்‌ உகந்தருளி ப்ரதிபத்தியுடனே ஸ்வாமி யண்ணனையும்‌, கூட எழுந்தருளின ஸ்வாமிகளையும்‌ மற்றுமுண்டான பரிஜனங்களையும்‌ தம் திருமாளிகையிலே தானே எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு பஹுவாக உபசரித்து உபலாளித்துக்‌ கொண்டெழுந்தருருளி யிருந்தார்‌. பேரருளாளரும்‌ உகந்தருளி அண்ணனுக்குத்‌ திருநாமம்‌ :ஸ்வாமி’” என்று அனைவரும்‌ அநுஸந்திக்கும் படிக்கு ஆஜ்ஞாபித்தருளி அருள் பாடும்‌ ப்‌ரஸாதித்தருளினார்‌.

ஸ்வாமி யண்ணன்‌ பேரருளாளனுக்கு சாலைக் கிணற்றில்‌ திருமஞ்சந கைங்கர்யம்‌ செய்தல்‌-
ஸ்வாமி யண்ணனும்‌ பேரருளாளனுக்கு மிகவும்‌ ௨கப்பாக எம்‌பெருமானார்‌ உகந்து செய்தருளின கைங்கர்யமாய்‌, பின்பு முதலியாண்டானும்‌ அப்படியே செய்தருளி, துன்னு புகழ்க்‌ கந்தாடைத்‌ தோழப்பரும்‌ விரும்பிச்‌ செய்தருளின சாலைக் கிணற்றில்‌ திருமஞ்சந கைங்கர்ய மின்றிக்கே யொழிய வொண்ணா தென்று அப்பாச்சியாரண்ணாவுக் கருளிச்‌ செய்து, தாமும்‌ புறப்பட்டருளி அருணோதய காலத்திலே அநுஷ்டாந குளத்திலே நீராடி நித்ய கர்‌மாநுஷ்டாநங்களையும்‌ நிறை வேற்றி, கைங்கர்ய ருசியை யுடையருமாய்‌ சக்தருமா யெழுந்தருள ஸ்ரீவைஷ்ணவர்களுடனே சாலைக்‌ கிணற்றருகே எழுந்தருளி குடங்களை சோதித்துத்‌ திருமஞ்சநம்‌ பூரித்துத்‌ திரு முடியிலே வைத்துக் கொண்டு ஆளவந்தார்‌ ஸ்தோத்ர அநுஸந்தாநத்துடனே தண்ணீரமுது வழி திருத்துகிற உத்ஸவம்‌ (எம்பெருமானார் திரு மலையிலே நியமித்து ஏற்படுத்தி யருளிய ஒரு உத்ஸவம்‌, திரு மலையப்பன்‌ ஒரு வேடனுருலில்‌ பெரிய திருமலை நம்பி நித்யமாக ஆகாச கங்கை யினின்றும்‌ கோயிலுக்கு எழுந்தருளப்‌ பண்ணும்‌ திருமஞ்நத்தை ஒருநாள்‌ குடத்தை அம்பெய்து ஒட்டை பண்ணி பெருகிய தீர்க்தத்தைப்‌ பருகி யருளியதை அனைவரும்‌ அறியும்படி, பல ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ குழாமாக ஆகாச கங்கையிலிருந்து அத்‌யயந உத்ஸவம்‌ முடிந்த மறு தினம்‌ திருமஞ்சனம்‌ எழுந்தருளப்‌ பண்ணிக் கொண்டு திருவீதி வலம்‌ வந்து கோயிலில்‌ ஸமர்ப்பித்தல்‌ )போலே தாம்‌ எழுந்தருளி யிருக்கிற நாளெல்லாம்‌ பேரருளாளருக்குத்‌ திருமஞ்சந கைங்கர்யம்‌ செய்தருளி, பின்பு அப்பாச்சியர் அண்ணாவை -இந்த கைங்கர்யம்‌ தப்பாமல்‌ நடத்தி வாரும்‌’” என்று நியமித் தருளினார்‌.

கந்தாடை ராமாநுஜ அய்யங்கார்‌ செய்த கைங்கர்பங்கள்‌
ஒரு நாள்‌ கந்தாடை ராமாநுஜ அய்யங்காரைத்‌ திருமவை திருப்பதியில்‌ கைங்கர்யங்களை நிறைவேற்றி மீண்டு வந்து, திருவநந்த ஸரஸ்ஸுக்கு நீராழி மண்டபமும்‌, சுற்றி வர ஸோபானங்களும்‌ தென் கரையில்‌ உந்நதமான குளக் குறடும்‌, ஸிம்ஹாஸநமும்‌,மண்டபமும்‌, திருமழிசைப் பிரான்‌ கோயில்‌ கைங்கர்யமும்‌, திரு வபிஷேக மணடபத்திற்கு முன்னே பெரிய மண்டபமும்‌ திருமலைக்கு ஒலிமுக மண்டபம்‌ முதலான இன்னும் சில மண்டபங்களும்‌, திருமடைப் பள்ளி, வடக்குத்‌ திருக்குளப் படிக்கட்டும்‌, யதா ஸம்பவம்‌ திருவாபரணங்களும்‌, திருமஞ்சந காலத்திற்கு மஞ்சள் காப்பு கைங்கர்யம்‌ முதலான அநேக கைங்கர்யங்களும்‌,திருப் பவளத்திற்கு உகப்பாக அமுது செய்தருளும் படிக்கு சில கட்டளைகளும் நியமித்து,-இவைகளெல்லாம்‌ அழகிய மணவாள மாமுனிகள்‌ கைங்கர்யம்‌, அவச்யம்‌ நடத்‌தி வாரும்‌” என்றும்‌-அப்பாச்சியாரண்ணாவை நாமாகவே ப்ரதிபத்தி பண்ணி வாரும்‌’* என்றும்‌ புத்திகளை ஸாதித்து திருமலைக்கு அனுப்பி யருளினார்‌.

“அண்ணன்‌ ஜீயர்‌- ஜீயரண்ணன்‌”
பின்பு தாமும்‌ ஸ்ரீபெரும்பூதூர்‌ முதலான திவ்ய தேசங்களை மங்களாசாஸநம்‌ பண்ணத் திருவுள்ளமாய்‌, பேரருளாளர்‌ ஸந்நிதியிலே அனுப்புவித்துக் கொள்ள எழுந்தருள, திருவாராதநம் கண்டருளி தத்யோதந அவஸரம்‌ அமுது செய்தருளின வுடனே அண்ணனை அருள்பாடிட்டழைத்து உடுத்துக் களைந்த பீதக வாடை, அபய ஹஸ்தங்கள்‌, திருவடிசோடு, களபம்‌, சூடிக் களைத்த தொடுத்த துழாய் மலர்‌, ப்ரஸாதங்தள்‌ இவையெல்லாங் கட்டி “இவை ஜீயருக்கு’” என்று அண்ணன்‌ திருக் கைகளிலே ஸாதித்தருளி அண்ணனுக்கு உகப்புடனே வரிசைகளும்‌ ஸாதித்தருளி விடை கொடுத்தருள, ஸ்வாமி யண்ணனும்‌ திருவைய மாளிகையிலே கச்சிக்கு வாய்த்தான் திரு மண்டபத்திற்கு எதிராக எழுந்தருளி இருந்து ஜீயருடைய வைபவங்களை அநுஸந்திக்க அதற்கு அநு குணமாக பேரருளாளர்‌ உபலாளித்தருளி உகந்து கொண்டிருக்க , அவ்வளவிலே சில பெரியோர்கள்‌ “தம்முடைய ஸ்வாமி ஜீயருக்கு”: “அண்ணன்‌ ஜீயர்‌” என்று பேரருளாளர்‌ திருநாமம்‌ சாத்துவது!” என்று உகந்தருள! வேறு சில பெரியோர்கள்‌, அண்ணனுக்கு பெரிய பெருமாள்!”ஜீயரண்ணன்‌’ என்று திருநாமம்‌ சாத்தினதுண்டே!யென்று, “ராமாநுஜம்‌ லக்ஷ்மண பூர்வஜம்‌ ச ‘- என்கிறபடியே ஜீயருக்கும்‌ அண்ணனுக்கு முண்டான அந்யோந்ய ப்ரீத்யதிசயத்‌தையும்‌ அப்ரதிம னவபவங்களையு மிட்டுப்‌ பேரருளாளரும்‌ பெரியோர்களும்‌ உகந்தருளி இப்படித் திரு நாமங்கள்‌ சாத்தினார்‌களென்று எல்லாருங்‌ கொண்டாடிக் கொண்டு திரு மாளிகை யிலே எழுந்தருள; ‘பஹுநாளாயிற்று அதி சீக்ரமாக வரவும்‌” என்று அண்ணனுக்கு ஜீயருடைய திருமுகம்‌ வர, அண்ணனும்‌ அந்தத்‌ திரு முகத்தை சிரஸா வஹித்தருளி உட்பட்டுக்‌ கொண்டு ஸ்ரீ பெரும்‌பூதூர்‌ முதலான திவ்ய தேசங்களை திக்கு நோக்கி தண்டன்‌ ஸமர்ப்‌பித்துக்‌ கோயிலுக்குப்‌ புறப்பட்டு -பொன்னடி காண்பதோராசையினால்‌ அதி த்வரையாக பயண கதியில் எழுந்தருளித்‌ திருக் காவேரிக்‌ கரையிலே யெழுந்தருள, கோயிலுள்ள பெரியோர்களெல்லாருங்‌ கேட்டருளி மிகவுமுகந்திருக்க, பட்டர்‌ கோயில் பரிகரமனைத்‌துடனே எதிர் கொண்டு திருமாளிகையிலே எழுந்தருளிப்‌ பண்ணி வைத்தார்‌. ஜீயரும்‌ அண்ணன்‌ திரு மாளிகையிலே எழுந்தருளி யிருந்து அண்ணனை க்ருபை பண்ணி யருளி, திரு வேங்கடமுடையான்‌, பேரருளாளர்‌ ப்ரஸாதங்களையும்‌ அங்கீ கரித்தருளி அவ்வவ்‌ விடங்களிலுள்ள வைபவங்களைக் கேட்டருளி உகப்புடனே எழுந்‌தருளி யிருக்கிற வளவிலே, ஸ்ரீவைஷ்ணவர்கள்‌, பேரருளாளர்‌ ஜீயருக்கு அண்ணன்‌ ஜீயர்‌” என்று திரு நாமம்‌ ஸாதித்தபடியை விண்ணப்பஞ்‌ செய்யக் கேட்டருளி மிகவுமுகந்து, -நம்முடைய மனஸ்ஸூக்குத் தக்கபடி பேரருளாளரும்‌ தேவரீர் ஸம்பந்தம் தோற்ற அருளிச் செய்வதே!” என்று அண்ணனைப்‌ பார்‌த்தருளிச் செய்ய, ஸ்வதந்த்ரனுடைய அதி க்ரமணத்துக்குத்‌ தடை யுண்டோ? என்று சிலர் அருளிச்‌ செய்யப் புக ப்ரதிவாதி பயங்கர மண்ணாவும்‌ “ஸ்ரீயபதி’* என்னுமா போலே ஜீயருக்கு இதுவுமொரு திருநாம மென்ன , அவரை எல்லாரும்‌ கொண்டாடினார்கள்‌,
பின்பு ராமாநுஜ தாஸர்‌ திருவடிகளிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து நிற்க, அவர்‌ திருமுடியில் திருவடிகளை நற்றரிக்க வைத்தருளி மிகவும்‌ விஸேஷ கடாக்ஷம்‌ பண்ணி யருளினர்‌. அவரும்‌ வட தேசத்‌ தெம்பெருமான் களுடைய ப்ரஸாதங்களை நாலு ஸ்ரீவைஷ்ணவர்‌களைக் கொண்டு எழுந்தருளப் பண்ணி அவற்றை யெல்லாம்‌ ஸமர்ப்‌பிக்க , அங்கீ கரித்தருளி விநியோகம்‌ செய்தருளி தாமும்‌ ஸ்வீகரித்‌ தருளி பூர்ண மநோ ரதராய்‌, வடக்கில்‌ திருப்பதிகளெல்லாம்‌ ஸேவித்தாராயிற் றென்று ராமனுஜ தாஸரை நெருங்கத் தழுவி யருளினார்‌,

அநந்தரம்‌ அப்பாவை ஊரேற வரும்படிக்கு அவர்‌ திருத் தமப்‌பனார்‌ ராமாநுஜ தாஸர்‌ திருக்கையிலே திருமுகம்‌ வரக் காட்ட அவரும்‌ ஸேவா விஸ்லேஷ பீருவாயிருக்க, அவருக்குத் தஞ்சமாகத் தம்‌முடைய விக்ரஹமாக ஒரு விக்ரஹத்தையும்‌ திருவடி நிலைகளையும்‌ திரு உத்தரீயத்தையும ப்ரஸாதித்தருளினார்‌
ப்ரீத। ப்ரேஷி தவாந் முநிர் வர வரோ யஸ்மை முஹு: ஸ்ரீமுகம்‌
ப்ராதாத்‌ ஸ்வாங்க்ரி ஸரோஜ ஸங்க ஸுபகம்‌ ஸ்வீயா முபாநத்யுகீம்‌ |
ஸ்வீயம்‌ ஸுந்தர முத்தரீய மமலம்‌ ஸ்வாம் மூர்த்தி மர்ச்சா மயீம்‌
தம்‌ தேவேஸ குரும்‌ பஜேம ஸரணம்‌ ஸம்ஸார ஸந்தாரகம்‌ ॥

[மணவாளமாமுனிகள்‌ யாருக்கு அடிக்கடி உகந்து ஸ்ரீ முகம் ஸாதித்‌தாரோ, யாருக்கு தம் திருவடித் தாமரைகளின்‌ ஸம்பந்தத்தினால்‌ பாக்யம்‌ பெற்ற தமது பாதுகைகளிரண்டையும்‌, தமது அழகியதாய்த்‌ தூயதான உத்‌தரீயத்தையும்‌- தமது அர்ச்சா விக்ரஹத்தையும்‌ தந்தருளினாரோ, ஸம்ஸார தாரகரான அந்த தேவராஜ குரு வென்னும்‌ எறும்பி யப்பாவைச்‌ சரணமாகப்‌ பற்றக் கடவோம்‌]
என்று பின்புள்ளாரும்‌ இவ் வ்ருத்தாந்தத்தை யநுஸந்திக்கும்படி அபிமானித்தருள, பின்பு எறும்‌பியப்பாவின்‌ திருப் பேரனாரான பிள்ளை யப்பாவும்‌ இந்த வ்ருத்தாந்தத்தை அநுஸந்‌தித் தருளினாரிறே. அப்பாவும்‌ ஜீயரநுமதி கொண்டு கோயிலினின்றும்‌ புறப்பட்டு எறும்பி யேற எழுந்தருளி தம் திருத் தமப்பனாரைத்‌ திருவடி தொழுது அவருக்கு சுஷ்ரூஷித்திக்‌ கொண்டிருந்து, –எண்டிசையுமறிய இயம்‌புகேன்‌ ஒண்டமிழ்ச்‌ சடகோப னருளையே-என்கிறபடியே, ஜீயருடைய சேஷா க்ருதித்வ லஷ்மணா க்ருதித்வ ப்ரப்ருதிகமான அப்ரதிம ப்ரபாவத்தை வரவர முநி ஸதகம்‌, வரவர முநி ப்ரபந்தம்‌,வர வரமுநி பஞ்சாஸத்‌, வரவர முநி ஸ்தவம்‌, வரவர முநி மங்களாசாஸநம்‌ வரவர முநி கத்யம்‌ முதலான ஹ்ருதயமான அநேக ப்ரபந்தங்களாலே வெளியிட்டு உபகரித்தருளினார்‌

ஸ்ரீ வான மாமலை ஜீயர்‌ அரங்க நகரப்பனை திருவாரதனமாகப் பெறுதல்‌
அவ்வளவிலே வானமாமலை ஜீயரை வானமாமலை ஸ்ரீகார்‌யார்த்தமாக அனுப்பி யருளவேணுமென்று ஸேனை முதலியார்‌ ஸ்ரீமூகம்வர, எதிர்கொண்டு சிரஸா வஹித்து உட்பட்டுக் கொண்டு அப்படியே ஸம்மதியாம் படி ஜீயர்‌ நியமித்தருளி, அவரையும்‌ கூட்‌டிக் கொண்டு பெருமாள்‌ திரு முன்பே சென்று இச் செய்தியை விண்ணப்பஞ் செய்து தாமும்‌ திவ்யப் ப்ரபந்தம்‌ நாலாயிரத்திலும் நூறு பாட்டு க்ரமத்திலே நித்யாநுஸந்தானமாக அநுஸந்‌திக்‌கிறது அன்றைக்குத்‌ திருமொழி சாற்று முறையாய்‌, அணியார்‌ பொழில் சூழ்‌ அரங்கநகரப்பா என்று -அநுஸந்திக்கிற வேளையில பெருமாளும்‌ அப்படியே ஸம்மதித்து, தம்முடைய ஸந்நிதியிலே பூபால ராயனில்‌ தட்டிலே யெழுந்தருளி யிருக்கிற அரங்க நகரப்பனாகிய லஷ்மீ நாராயணனான நாம்‌ வானமாமலை ஜீயருக்கும்‌ உமக்குமாக வருகிறோமென்று வானமாமலை ஜீயர்‌ இருக்கையிலே எழுந்‌தருளப் பண்ணிக்‌ கொடுக்க, அவரும்‌ ஜீயர்‌ திரு முக மண்டலத்தைப்‌ பார்த்து பெரியார்க் காட்பட்டக்கால்‌ பெறாத பயன்‌ பெறுமாறு என்று விண்ணப்பஞ்செய்ய., பெருமாளும்‌ தீர்த்தம்‌ திருப்பரியட்‌டம்‌, திருமாலை அபய ஹஸ்தம்‌ முதலான வரிசைகளும்‌ ஸ்ரீசடகோபனும்‌ ப்ரஸாதமும்‌ ஸாதித்து விடை கொடுத்தருள, ஜீயரும்‌ மங்கள வாத்யங்களுடளே அரங்க நகரப்பனை எழுந்தருளப் பண்ணிக்‌ கொண்டு மடத்திலே யெழுந்தருளி அமுது செய்தருளின வுடனே ஜீயரை வாழ்த்தி அரங்கநகரப்பனை ப்ரஸாதித்து வானமா மலைக்கு அனுப்‌பி யருளினார்‌.

ஸ்ரீ கோவிந்த தாஸரப்பனின்‌ மதுரகவி நிஷ்டை
அநந்தரம்‌ ஜீயரும்‌ ஒரு நாள்‌ எல்லாரும்‌ பேரோலக்கமாக ஸேவித்துக்‌ கொண்டிருக்கச்‌ செய்தே முதலிகளைக் குறித்து, எல்லாரு மறிந்தார்களே யாகினும்‌ தேவு மற்று அறியேன் என்றிருக்கிற இருப்பு ஸ்ரீ கோவிந்த தாஸரப்பனுக்கே யுள்ளதொன்றிறே என்று விசேஷாபிமாநம்‌ செய்தருளி (இவரே பட்டர்பிரான் தாசர் -அடுத்து ஜீயர் ஆனவர் -முன்னால் மோர் முன்னார் ஐயர் -30 வர்ஷம் -ஆஸ்ரம ஸ்வீகாரம் முன்பே 18 வர்ஷம் -பிண்பு 12 வர்ஷம் ),
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்ய மயீம்‌ தநும்‌ |
மக்நா நுத்தரதே லோதாந்‌ காருண்யாச் சாஸ்த்ர பாணிநா |
என்றும்‌
ஐகதோ ஹித சிந்தாயை ஜாக்ரத பணி ஸாயிந : |
அவதாரேஷ் யந்ய தமம்‌ வித்தி ஸெளம்ய வரம்‌ முநிம்‌ ॥

[ஸர்வேஸ்வரனான நாராயணன் தானே இவ் வுலகில்‌ மனித வுருவில்‌ (ஆசார்யனாய்‌) வந்தவதரித்து ஸம்ஸாரமாகிற கடலில்‌ முழுகிக்‌ கிடக்கும் ஜனங்களைத்‌ தமது கருணையினால்‌ சாஸ்த்ரங்களைக்‌ கைக் கொண்டு மேலெழச் செய்கிறான்‌-என்றும்‌, உலகங்களுக்கு நன்மை செய்யும்‌ எண்ணத்தினால்‌ அதன் பொருட்டு விழிப்புடனுள்ள சேஷ சாயியான எம்பெருமான்‌ பண்ணி யருளும்‌ அவதாரங்களில்‌ மணவாள மா முனிகளையும்‌ ஒரு அவதாரமாக அறிவீர்‌] என்றும்‌ சொல்‌லுகிறபடியே தாம்‌ பகவதவதார மென்னுமிடம்‌ தோன்ற நாமே கிடீர்‌’ என்றருளிச் செய்து தம் மழகிய மணவாளப்‌ பெருமாளையும்‌ அவருக்குத்‌ திருவாராதனமாக ப்ரஸாதித்து ப்ராப்யைக நிஷ்டராக்கி யருளினார்‌.(ஆச்சார்யர் ப்ராபகம் பெருமாள் ப்ராப்யம் என்று இருக்காமல் ஆச்சார்யரே ப்ராப்யம் என்று) அவரும்‌, மோர் முன்னாக முப்பது ஸம்வத்ஸரம்‌ தளிகை ப்ரஸாதம்‌ ஸ்வீகரிக்கப் பெற்று (ஆசார்யன்‌ அமுது செய்த பாத்ரத்தில்‌ (இலையில்‌) அவர்‌ கடைசியாக அமுது செய்த மோர் ப்ரஸாதம்‌ ரஸம்‌ மாறாமல்‌ அதையே சிஷ்யனான தாம்‌ முதலில்‌ உணடு பிறகு மற்ற வ்யஞ்சளங்‌களுடன்‌ அதே இலையில்‌ உண்பது. ஆசாரியன்‌ போனகம்‌ செய்த சேடம்‌ உண்கை சிஷ்யனுக்கு ப்ராப்யம்‌. இப்படி மோர் முன்னாரையன்‌ என்னும்படி 30 ஆண்டுகள்‌ தினமும்‌ ஆசாரியனின்‌ உச்சிஷ்ட முண்டு சிரோபாஸித ஸத் வ்ருத்தர்‌ என்று கொண்டாடப்‌ பெற்றவர்‌ பின்புள்ளாரிலு முண்டு )க்ருதார்த்தராய்‌ ஸகல ரஹாஸ்யார்த்தங்களையுங்‌ கேட்டு ஜீயர் திருவடிகளை ஒருக் காலும்‌ பிரியாதே, பிரிந்தாலும்‌ இராத் தங்குமூருக்கும்‌ போகாதே, நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டிருந்தார்‌. பின்பொரு திருவாடிப்‌ பூரத்திலே சூடிக் கொடுத்த நாச்சியார்‌ தீர்த்த ப்ரஸாதங்களை போர ஆதரித்துக்‌ கொண்டு வந்து ஸமர்ப்பிக்க, ஜீயரும்‌ அங்கீகரித்‌தருளி பெரிய ப்ரீதியோடே ஆண்டாளுக்குகப்பாக பட்டர்‌ பிரான்‌ தாஸர்‌” என்று திரு நாமம்‌ ஸாதித்தருளினார்‌. பின்பு கோவிந்த தாஸரப்பன்‌ மஹா விரக்தராய்‌ ஆஸ்ரம ஸ்வீகாரம்‌ செய்ய,பட்டர் பிரான்‌ ஜீயர்‌!’ என்று, திருநாமமாயிற்று. எம்பெருமானார்‌ திருவடிகளுக்கு வடுக நம்பியைப் போல யாய்த்து இவரும்‌ ஆசார்ய நிஷ்ட அக்‌ரேஸரரா யிருக்கும்படி-இப்படியான விவர்‌ சரம பர்வ நிஷ்டை மணவாள யோகி வாழ்ந்தருளிகிற காலத்திலே தணவாத வடிமை ஸகல காலத்திலும்‌ செய்தருள, ‘பட்டர் பிரான்‌ ஜீயர்‌’” என்றும்‌, தேவு மற்றறியேன்‌ என்றும்‌, ‘பட்டநாத முநி வர அபீஷ்ட தைவதம்‌” [மணவாளமாமுனிகள்‌ பட்டர்பிரான்‌ ஜீயருக்கு இஷ்ட தேவதை] எனறும்‌ “ஸ்ரீமதுரகவி சரிதகாரி மஹித சாரித்ர ஸ்ரீமாந்‌ பட்டநாத யதீஸ்வர – [ஸ்ரீமதுரகவி நிஷ்டையை மணவாள மாமுனிகளிடம்‌ உடையவர்‌ நன்னடத்தை யுள்ள ஸ்ரீபட்டர்‌ பிரான்‌ ஜீயர்‌] என்றும்‌ அங்குத்தைக்கு அந்தரங்கரானவர்கள்‌ அருளிச்‌ செய்தார்கள்‌-இப்படி அந்திமோபாய நிஷ்ட்ட அக்ரேஸராகவே ஸேவ்யமாநராய் எழுந்தருளி யிருக்கிற ஸெளம்ய ஜாமாத்ரு முநி வர்யரான ஜீயரும்‌ அன்னையாய்‌ அத்தனாய்‌ என்கிறபடியே தமக்கு ஸர்வ விதோத்தாரக பந்து பூதரான நம்மாழ்வாரை ஸேவித்து நெடுநாளாயிற்று ஆகையால்‌ தத் விஷய ப்ரேமம் அதிசயித்து தாய்‌ நாடு கன்றே போல த்வரித்துக்‌ கொண்டு பெருமாளுக்கு விண்ணப்பஞ் செய்து அப்போதே திருதகரி யேற வெழுந்தருளுவதாகப்‌ புறப்பட்டு, ““கூடல்‌” என்றது மதுரையிலே சென்று திருப் பல்லாண்டு அவதரித்த ஸ்தலமென்று உகந்தருளி மல்லாண்ட திண்டோள்‌ மணி வண்ணரையும்‌ திருவடி தொழுது,பல்லாண்டு பல்லாண்டு என்று மங்களாசாஸநம்‌ செய்தருளி அங்கே யெழுந்தருளி யிருக்குமளவிலே।

மஹாபலி வாண நாத ராயன்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
அத் தேசத்துக்கு அதிபதியான மஹாபலி வாண நாத ராயன்‌ (1422-1477-வரி 55 வருஷங்கள் ஆண்டவர் )வந்து திருவடிகளிலே ஆஸ்ரயிக்க, அவனையும்‌ விசேஷ கடாக்ஷம்‌ பண்ணி தாப புண்ட்ராதி பஞ்ச ஸம்ஸ்கார யுக்தனாக்கித்‌ திருவடிகளுக்‌ காட்படுத்திக் கொண்டு அற்றைக்கு அங்‌கே யெழுந்தருளி யிருந்து பிற்றை நாள்‌ அர்த்த ராத்ரியிலே
மணி காஞ்சந ஸஞ்சந்நாம்‌ சிபிகாம்‌ தததிஷ்ட்டிதாம்‌ |
ஸபந் நயந்த ஸ்வஸ்கந்தே க்ருத்வா கேகித்‌ ப்ர தஸ்த்திரே ॥

(சில ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ பொன்னாலும்‌ ரத்னங்களாலும்‌ ஆனதும்‌, நன்கலங்கரிக்கப் பட்டதும்‌, மாமுனிகள்‌ எழுந்தருளி யுள்ளதுமான அத் திருப் பல்லக்கை சலிப்பில்லாமல்‌ தமது தோள்களிலே தாங்கிக் கொண்டு புறப்பட்டார்கள்‌ ] என்கிறபடியே அந்த ராஜா ஸமர்ப்பித்த அநர்க்கமான நவ ரத்ந கசித ரமணீயாந்‌ தோளிகையிலே ஏறி யருளிப்‌ புறப்பட்டு மூடு பனி யாகையாலே திருப் பல்லக்கை குக்கூடலிட்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஸ்ரீபாதந்‌ தாங்கிக்‌ கொண்டு எழுந்தருளா நிற்க,
சத்ரம் சித்ரம்‌ தது : கேசித்‌ சாமரே ததிரேபரே |
ப்ருங்கார மவரே அபிப்ரந் களாசீமமி கேசந ॥
தத் பதாப்ஜா ஜஸ்பர்‌ஸ பாவநீ மாத்ம பாவிநீம்‌ |
ஸந்த்ஸ் ஸந்தாரயந்தி ஸ்ம மெளளி நாமணி பாதுகாம்‌ |
அகாயந் நக்ரத;கேசிதத ந்ருத்யந்தி கேசக ॥

[சிலர்‌ திரு வெண்‌ கொற்றக் குடையைத்‌ தாங்கிச்‌ சென்றனர்‌ ;சிலர்‌ திரு வெண் சாமங்களை வீசினர்‌; சிலர்‌ படிக்கும்‌ காளஞ்சிகளைத்‌ தாங்கிச்‌ சென்றனர்‌ -சில பாகவதர்கள்‌ ஜீயருடைய ஸ்ரீபாத ரேணு படுதலால்‌ பரிசுத்தராய்‌ ஸ்வரூபாநுகுணமாக ஸ்வாமியினுடைய மணி பாதுகங்களைத் திருமுடி மேல்‌ தாங்கிச் சென்றனர்‌ -பிலர்‌ முன்னே பாடிச்‌ சென்றனர்‌; சிலர்‌ ஆடிச் சென்றனர்‌] என்கிறபடியே-சத்ர சாமராதிகள்‌ தொடக்கமான கைங்கர்யோப கரணங்களைத் தரித்துக் கொண்டு பாடுவாராடுவார்‌ உகந்தாலித்துக்‌ கேட்பாராய்‌ ஸஸம்ப்ரம ந்ருத்த கீதத்தடனே அனைவரும்‌ ஸேவித்துக் கொண்டு போருகிற படியைக் கண்டு இரவெல்லாம்‌ அவஸர ப்ரதீஷராய்‌ ஜீயரறியாதபடி ஸ்ரீ பாதம்‌ தாங்கிக் கொண்டு இரு காத வழி ஸேவித்து வர, விடிந்த பின்பு வைகை யாற்றின்‌ கரையிலே அநுஷ்ட்டா நார்த்தமாக இறங்கி யருளின வளவிலே ராஜாவும்‌ கச்சை கட்டி யுடுத்து ஸந்நத்தனாய் ஸ்ரீபாதம்‌ தாங்கின வேஷத்தோடே வந்து திருவடிகளிலே ஸேவிக்க, ஜீயரும்‌ அது கண்டு இப்படி செய்வதே என்று ஆச்சர்யப் பட்டருள அப்போது அநுஷ்ட்டானம்‌ பண்ணுவதாக வெழுந்தருளி யிருந்த “முத்தரசன்‌” என்கிற கிராமத்தை அங்கீ கரித்தருள வேணு மென்று அபேக்ஷிக்க, ஜீயருமவனுடைய நிர்ப்‌பந்தத்துக்காக அந்த க்ராமத்தை அங்கீகரித்தருளி அன்று தொடங்கி அந்த க்ராமத்திற்கு ”அழகிய மணவாள நல்லூர்‌”என்று திரு நாமம்‌ ப்ரஸாதித்து (முத்தரசன் ஏந்தல் இன்றையப் பெயர் )மஹாபலி வாண நாத ராஜாவையும்‌ மிகவு முகப்போடே அனுப்பி யருளி, திருப் புல்லாணி வழியாக எழுந்தருளு மளவிலே முதலிகளும்‌ தாமாக அத்வ ஸ்ரமாந்தராய்‌ நிழல் தேடி வாரா நிற்க, அங்கே ஸ்த்தாவர விசேஷமா யிருப்பதொரு இந்த்ரிணீ வ்ருஷம்‌ நீரந்தீரச் சாயா யுக்தமாய்‌ நிற்கக் கண்டு அங்கே வெழுந் தருளி அப் புளிய மர நிழலிலே விஸ்ரமித்து அத்வ ஸ்ரமம்‌ தீர்த்துக் கொண்டு எழுந்தருளி யிருக்க

ஜீயர்‌ புளிய மரத்துக்கு மோக்ஷமருளுதல்‌
முதலிகளெல்லாரும்‌ இப்படி மஹோபகாரம்‌ பண்ணின விதற்கு ஒரு கிருபை பண்ணி யருள வேணு மன்று ஜீயரைப் ப்ரார்த்திக்க, அவரும்‌ ஸ்வ க்ருபாதிசயத்தாலே அந்தப்‌ புளிய மரத்தைத்‌ திருக்கையாலே ஸ்பர்‌சித்து, தாம்‌ பெற்ற பேற்றை நீயும்‌ பெறக் கடவாய்‌’-என்று அநுக்ரஹித்து எழுந்தருளினார்‌. பின்பு அசிரேண அம் மரம்‌ உலர்ந்திருக்கக்‌ கண்டு முதலிகள்‌
யம்யம்‌ ஸ்ப்ருஸதி பாணிப்யாம்‌ யம்யம்‌ பஸ்யதி சஷுஷா |
ஸ்தாவராண்யபி முச்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா ; ॥

[ஸத்துக்கள்‌ யார் யாரைத்‌ திருக் கைகளால்‌ ஸ்பர்சிப்பார்களோ ,யார் யாரைத்‌ திருக் கண்களால் கடாக்ஷிப்பர்களோ அவரில்‌ தாவரங்‌களும்‌ மோஷமடைகின்றன; பந்து ஜனங்களைப் பற்றிச்‌ சொல்லவும்‌ வேணுமோ? என்கிற அர்த்தம்‌ இவரிடத்திலே அந்வர்த்த ஸித்தமிறே ! என்று உகந்தருளினார்கள்‌-

அநந்தரம்‌ ஜீயரும்‌ திருப்புல்லாணி யேற எழுந்தருளி புல்லாணி யெம் பெருமானைத்‌ திருவடி தொழுது அங்கு நின்றும்‌ புறப்பட்டுப்‌ பயண கதியிலே திருநகரி யேற வெழுந்தருளி ஸேவா கிரமம்
தப்பாமல்‌ அடைவே ஆழ்வாரையும்‌ பொலிந்து நின்ற பிரானையும்‌ ஸேவித்து மங்களாசாஸநம்‌ பண்ணிக் கொண்டு அங்கே அங்கே ஆத்மாக்களை திருத்தித் திருமகள் கேள்வனுக்காக்கி , திருவாய்‌மொழி முதலான திவ்ய ப்ரபந்தங்களையும்‌ ப்ரஸாதித்து நின்று, ப்ரதி தினம்‌ ஆழ்வார்‌ திரு மஞ்சன காலத்தையும்‌ மற்ற திவ்யோத்‌ ஸவங்களையும்‌ ஸேவித்துக்‌ கொண்டெழுந் தருளி யிருக்க।

கோயிலில்‌ அநுபவங்களில்லாமைக்கு வருந்துதல்‌
இப்படிக்‌ காலங் கழித்து செல்லா நிற்கச்‌ செய்தே மார்கழி மாஸம்‌ வர,
எந்தை யெதிராசர் சிறப்பை யெழிலரங்கர்‌
சிந்தை மகிழ்ந் தமுது செய்ய–அந்த நிலம்‌
சென்று நின்று சேவிக்கும்‌ செல்வமின்று பெற்றிலமே

என்று சேவிக்குமினி யாம்‌?
என்று எம்பெருமானார்‌ திருப்பாவைச்‌ சிறப்பை ஸேவிக்கப்‌ பெற்றிலோமில்லையீ என்று வெறுத்தருளியும்‌, பின்பு ஸங்க்ரமணம்‌ வர
சீராரங்கர் தந் தேவியரோடு சிறப்புடனே
யேராரு மாறன்‌ கலியனெதிராசனோடமரப்‌
பாரோர்‌ மகிழ்ந்தேத்தும்‌ தட்டுக்கள் தன்னுடன்‌ போற்று மந்தப்‌
பேரார வாரத்தை யின்று கண்டின்‌ புறப்‌ பெற்றிலமே

என்று அதற்கும்‌ நொந்தருளி, பின்பு தைத் திரு நாளை நினைத்தருளி (பூபதி திருநாள் -உபய நாச்சியார் உடன் திருத் தேரில் எழுந்தருளி -)
தேவியருந் தாமும்‌ திருத்தேரின்‌ மேலரங்கர்‌
மேவி விக்கிரமன்‌ வீதி தனிற்‌–சேவைசெயு
மந்தச் சுவர்க்கத்தை யநுபவிக்கப்‌ பெற்றிலமே
யிந்தத் திருநாளிலே யாம்‌

என்றநுஸந்தித்துப்‌ பேரிழவோடே யெழுந்தருளி யிருந்து தொந்து
அணி யரங்க மாடுதுமோ என்றும்‌, திரு வரங்கப் பெரு நகருள்‌ தெண்ணீர்ப்‌ பொன்னி திரைக் கையாலடி வருடப்‌ பள்ளி கொள்ளும்‌ கருமணியைக்‌ கோமளத்தைக்‌ கண்டு கொண்டென்‌ கண்ணினைகள்‌ . என்று கொலோ களிக்கும்‌ நாள்‌ (பெருமாள்‌ திரு.1-1) என்றும்‌.
“ஊரரங்கமே யென்பதிவன்‌ தனக்காசை” என்றுஞ்‌ (
காரிளம்‌ புரை மேனி நம் கதிர்‌ முத்த வெண்ணகைச்‌ செய்யவாய்‌ ஆரமர்வ னரங்கமென்னும்‌ அரும் பெருஞ்சுடரொன் றிை , (பெரு திரு. 2-7) சேரும்‌ நெஞ்சுடையராய்‌ அப்போதே ஆழ்வார்‌ திரு முன்பே சென்று-)சொல்லுகிற படியே அபிநிவேசத்தைப்‌ பண்ணிக் கொண்டு அதி த்வரையுடனே ஆழ்வார்‌ திரு முன்பே சென்று

திருக்குருகைப்பெருமாள்‌ தன்‌ திருத்தாள்கள்‌ வாழியே
திருவாளதிருமுகத்துச்‌ செவியென்‌ றும்‌ வாழியே
இருக்கு மொழி யென்னெஞ்சில்‌ தேக்கினான்‌ வாழியே
யெந்தை யெதிராசர்க் கிறைவனார்‌ வாழியே
கருக் குழியில்‌ புகா வண்ணம்‌ காத்தருள்வோன்‌ வாழியே
காசினியி லாரியனாய்க்‌ காட்டினான்‌ வாழியே
வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான்‌ வாழியே
மதுரகவி தம்பிரான்‌ வாழி வாழி வாழியே

என்று மங்களாசாஸனம்‌ பண்ணி ஸேவித்து, ஆழ்வாரனுமதி கொண்டு அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி அதி த்வரையுடனே ஸ்ரீ வில்லிபுத்தூர்‌ சென்று ப்ரவசித்து பொங்கும்‌ பரிவுடைய பட்டர்‌ பிரானையும்‌ வட பெருங்கோயிலு டையானையும்‌ ஸேவித்து, நாச்சியார்‌ திரு மாளிகையிலே சென்று புகுந்து (19 வருஷங்களுக்கு ஒருதரம் தை உத்சவம் ஆரம்பம் மாறும் -தை முதல் நாள் ஜீயருக்கு நீராட்ட உத்சவம் ) ஆழ்வார்‌ திருமகளாராண்டாளையும்‌ அன்புடனே அடி பணித்து நிற்க, கோதையும்‌ கோயிலண்ணருடைய திருவவதார மன்றோ நீர்‌!” என்று மிகவும்‌ க்ருபை செய்தருள, ஆண்டாளருள்‌ கொண்டு புறப்பட்டு அழகனலங்காரன்‌ மலையான திருமாலிருஞ்‌சோலை மலை நின்ற சுந்தரத் தோளுடையானான பரம ஸ்வாமியையும்‌ ஸேவித்து, அழகர்‌ திருக்குறுங்குடிக்குக்‌ குடி வாங்கிப்‌ புறப்‌ டெழுந்தருளி யிருக்கையாலே அவ்விடம்‌ “நல்லதோர்‌ தாமரைப்‌ பொய்கை நாண் மலர் மேல்‌ பனிசோர அல்லியுந் தாதுமுதிர்‌ந்திட்‌ டழகழிந்தாவொத்ததாலோ, இல்லம்‌ வெறியோடிற்றுலோ என்‌ மகளை யெங்குங் காணேன்‌ (பெரியாழ்வார்‌ திரு. 3-8-1) என்று-அழகழிந் திருக்கிற கோயிலைக் கண்டு ‘புத்ர த்வய விஹீநம்‌ தத்‌:(ராம லஷ்மணர்களாகிற புத்திர ரிருவரும்‌ இல்லாத அந்த வீடு-இத்யாதிப் படியே மிகவும்‌ அவஸந்நராய்‌ க்லேசித்தருளி இவரும்‌ உடையவரைப் போல்‌ வேண்டும்‌ பொருள்களை யெல்லாம்‌ அழைப்‌பித்தருளி அங்கே பாங்காக தளிகை பண்ணி நாறு நறும்‌ பொழில்‌ மாலிருஞ் சோலை நம்பிக்கு (நாச்‌ திரு. 9 6) என்கிறபடியே அமுது செய்தருளப் பண்ணி, அத்தைக் கண்டருளினதற்குக்‌ கைக் கூலியாக-பின்னுமாளுஞ் செய்வன்‌-உன் பொன்னடி வாழ்க (பெரியா திரு-5.3.3) என்று மங்களாசாஸநம்‌ பண்ணி யருளி பரம ஸ்வாமியின்‌ திரு முக மண்டலத்தை ஸேவித்து -நங்கள் குன்றம்‌ கை விடான்‌(திருவாய்‌ 10-8-4) என்று ஆழ்வாரருளிச்‌ செய்த பொய்யில் பாடலை அந்வர்த்த ஸித்தமாக்கி யருள வேணுமென்று ப்ரார்த்தித் தருளி;

ஜீயர்‌ மீண்டும்‌ கோயிலுக் கெழுந்தருளியது
அங்கு நின்றும்‌ புறப்பட்டு மாலிருஞ் சோலை மணாளனார்‌ பள்ளி கொள்ளுமிடமான திருவரங்கன் திருப்பதியைக்‌ குறித்து எழுந்‌ தருளி -கொடி யணி நெடு மதிள்‌ கோபுரம்‌ குறுகினர்‌ (திருவாய்‌-10-9-8)என்னும்படி கிட்டியவாறே அங்குண்டான வர்களெல்லாம்‌ எதிர் கொண்டு வந்து திருவடி களிலே ஸேவித்து
வகுள தர ஸவித்ரீம்‌ யாதி யஸ்மிந் தரித்ரீம்‌ மது மதந நிவாஸோ ரங்க மாஸீ தஸாரம்‌ |
புநரிபி ஸூஸம்ருதம்‌ பூயஸா ஸம் ப்ரவிஷ்டே’ வர வர முநிவர்யோ மாநுஷ:ஸ்யாத் கிமேஷ ॥

எந்த மணவாள மா முனிகள்‌ மகிழ் மாலை மார்பரான நம்மாழ்‌வாருடைய பிறப்பிடமான திரு நகரியை அடைந்திருந்த போது மதுமதநனான பெருமாளுக்கு வாஸஸ்தானமான திருவரங்கமானது பொலிவற்றதாய்ப்‌ போயிற்றோ அவர்‌ அங்கு மீண்டும்‌ எழுந்தருளின வளவில்‌ அந்த ஸ்ரீரங்கம்‌ மிகவும்‌ நன்றாக பொலி வுற்றது; இந்த மணவாளமாமுனிகள்‌ மனிதராக எண்ணத் தக்கவராவாரோ?] என்றநுஸந்தித்து ப்ரீதராய்‌ ப்ரதிபத்தி பண்ண,அவர்களையும்‌ க்ருபை பண்ணி யருளி அவர்களுடனே கூட-ப்ரதமம்‌ எம்பெருமானாரைத்‌ திருவடி தொழுது அவர்‌ புருஷகாரமாக ஸ்ரீரங்கநாச்சியாரையும்‌ பெரிய பெருமாளையும்‌ திருவடி தொழுது அவர்கள்‌ ப்ரஸாத விசேஷங்களையும்‌ பெற்று மடம் யெழுந் தருளி -ரங்கே தாம்நி ஸுகாஸீதம்‌” என்‌கிறபடியே திருமலை யாழ்வாரிலே இனிதாக வீற்றிருத்து வ்யாக்யாநித்து அகிலரையும்‌ ஆநந்திப்‌ பித்துக் கொண்டு வாழ்த்தருளா நிற்க, முதலிகளும்‌ அவ் விருப்புக்கு
ஜயது யஸஸா துங்கம் ரங்கம்‌ ஜகத் த்ரய மங்களம்‌
ஜயது ஸுசிரம்‌ தஸ்மிந் பூமா ரமா மணி பூஷணம்‌
வரத குருணா ஸார்த்தம்‌ தஸ்மை ஸுபாந் யபிவர்த்தயந்‌
வரவர முநி:ஸ்ரீமாந் ராமாநுஜோ ஐயது க்ஷிதெள ॥

[பெருமையினால்‌ உயர்ந்து முவ் வுலகுக்கும்‌ மங்களாவஹமான திரு வரங்கமானது பெருமை யுற்று விளங்க வேணும்‌; அத்‌ திருப்பதியிலே பெரிய பிராட்டியாரையும்‌ ஸ்ரீகெளஸ்துபத்தையும்‌ திவ்ய ஆபரணமாக வுடையனான எம்பெருமான்‌ பல்லாண்டாக விளங்க வேணும்‌; அவ் வெம் பெருமானின்‌ பொருட்டு வரத குருவான அண்ணனுடன் மங்களங்களை மேலும்‌ மேலும்‌ உண்டாக்குபவரான ராமாநுஜாபரா வதாரரான மணவாள மா முனிகள்‌ இப் புவியில்‌ விளங்க வேணும்‌-என்று மங்களாசாஸனம்‌ பண்ணிக் கொண்டு வாழ்ந்தருளுகிற காலத்திலே

அழகர்‌ கோவிலுக்கு நிர்வாஹகராக ஒரு ஜீயரை அனுப்பியது -இவர்‌ அழகருக்குப்‌ பண்ணிய மங்களாசாஸனம்‌ பலித்து அழகர்‌ மீண்டும்‌ தம் கோயிலிலே குடி புகுந்தருளி ஜீயருக்குத் தம்‌ திருமுக மெழுதி,நாம்‌ உம்முடைய நினைவின் படியே வந்து-“நங்கள்‌ குன்றங் கைக் கொண்டு குடி புகுந்‌தோம்‌; நம்‌ வீட்டில்‌ கார்யமாராய்ந்து நன்றாக நடத்தி யருளும்‌ ஒருவரை வரவிட வேணும்‌’ என்று வரக் காட்டி யருள, ஜீயரும்‌ போர உகந்தருளி எதிராஜ ஜீயர்‌ என்னு திருநாம முடையராய்‌ மஹா விரக்தராய்‌ மங்களாசாஸன பரராயிருக்குமரை அழகர்‌ ஸ்ரீ கார்யார்த்தமாக அனுப்பி யருள, அவரும்‌ அங்கே சென்று அழகரை ஸேவிதது ஆசார்ய ப்ரீத் யர்த்தமாக அனைத்தழகும்‌ கண்டருளப் பண்ணினாரிறே.

முதலிகளைக்‌ கொண்டு திவ்ய தேச கைங்கர்யங்கள்‌ செய்வித்தல்‌
அநந்தரம்‌, ஜீயரை யாஸ்ரயித்த மஹாபலி வாண நாதரும்‌ திருமாலை தந்தான்‌ தோழப்பரை (திருமலை தோழப்பரை) முன்னிட்டுக்‌ கொண்டு மாலிருஞ் சோலை மாலுக்கு ஸர்வ வித கைங்கர்யங்களும்‌ செய்து போந்தார்‌. இவர்களாலே அழகர் கைங்கர்யம்‌ ஸம்ருத்த மாயிற்று. இப்படி கோயில்‌ திருமலை முதலான திருப்பதிகளின்‌ கைங்கர்ய மெல்லாம்‌ குறைவறக்‌ கொண்டருளு கையாலே மிகவு முகப்புடனே எழுந்‌தருளிருக்கும்‌ காலத்திலே துளுவருடைய வம்சத்திலே பிறந்து தேசாந்தரத்திலே திரிந்து போருவானொரு பிள்ளை திருவடிகளிலே வந்து ஆஸ்ரயிக்க, அவரை விசேஷித்து க்ருபை பண்ணி யருளி,-ஸ்ரீராமானுஜ தாஸர்‌’-என்று தாஸ்ய நாமம்‌ ப்ரஸாதித்து அவரைக்‌ கொண்டு அநேகம் திருப்பதிகளில்‌ கைங்கர்யமெல்லாங்‌ கொண்டருளப் பண்ணும்படிக்கு விசேஷாபிமானஞ்‌ செய்தருள, அவ் விசேஷ கடாக்ஷ மடியாக பெருமாள்‌ கோயில்‌ தொடக்கமான திருப்பதிகளில்‌ அவரைக் கொண்டு கைங்‌கர்யங்களெல்லாம்‌ கொண்டருளப்‌ பெற்றது. அநந்தரம்‌ ஜீயரும்‌.
திவ்யோத்‌வ ப்ரஸங்கேஷு தேவ தேவ மதந்த்ரித: |
ஆஸாஸாநஸ் ஸமா ஸீதந் நத்ராக்ஷீத்‌ ரங்க பூஷணம்‌ ॥

[விசேஷமான உத்ஸவ காலங்களில்‌ சோர்வில்லாமல்‌ ஸர்வேசஸ்வரனான ஸ்ரீரங்கநாதனை அணுக்கராய்‌ ஸேவித்து மங்களாசாஸனம்‌ பண்ணினார்‌ ] என்கிறபடியே திவ்யோத்ஸவங்களிலும்‌ நம் பெருமாளை மங்களாசாஸநம்‌ பண்ணிக் கொண்டு
கஸ்தூரி ஹிம கற்பூர ஸ்ரக்‌ தாம்பூல அநுலேபரை: |
திவ்யைரப்ய பஜத்‌ போஜ்யை: ரங்கநாத திநே திநே –

அநு தினமும்‌ ஸ்ரீரங்கநாதனை கஸ்தூரி, பச்சை கற்பூரம்‌,பூ மாலை, அடைக் காயமுது, பரமள த்ரவ்பங்கள்‌. இவற்றினால்‌ உபசரித்தராதித்தார்‌. என்கிறபடியே ப்ரதி தினமும்‌ பாங்காக கிஞ்சித்கார பூர்வகமாக கைங்கர்யங்களையும்‌ நடத்திக் கொண்டு, மார்கழி மாஸத்திலு மப்‌படியே
காலே கோதண்ட மார்த்தாண்டே காங்ஷந்நே வாருணோதயம்‌ |
ந்யஷேவ தவிஸேஷேண ஸேஷிணம்‌ ஸேஷ ஸாயிநம்‌ ॥ –
மங்களாநி ப்ரயுஞ்ஜாநோ மாதவம்‌ ப்ரத்ய போதயத்‌
ஸம்யகேநம்‌ ஸமப்யர்ச்ய ஸர்வதாநுகதை : க்ரமை: ॥
ஸ்வ ஸ்வ காலோசிதைர் திந்யை : ஸ்வாங்கல்போப லம்பிதை: |
அபோஜயதயம்‌ போஜ்யை ஸாக மூல பலாதிபி; ॥
ஸுூபா அபூப க்ருத க்ஷீர சர்க்கரா ஸஹிதம்‌ ஹவி: |

தநுர் மாதத்தில்‌ அருணோயத்திற்கு முன்னே அரவணை மேல்‌ பள்ளியானான எம்பெருமானை விசேஷமாக பூஜித்‌தார்‌. மங்களமான பாசுரங்களை அநுஸந்தித்து திருமகள்‌ மணாளனை திருப் பள்ளி யுணர்த்தினார் – எல்லாப் படியாலும்‌ சாஸ்த்ர முறையான திருவாராதன க்ரமங்களால்‌ எம்பெருமானை நன்றாக ஆராதித்து, பின்னர்‌ மணவாள மாமுனிகள்‌ தமது நியமனப்படி வரவழைக்கப்பட்ட தத் தத் காலோசிதங்களாய்‌ உயர்ந்தவையான காய்‌, கிழங்கு, பழம்‌, முதலான இனிய பதார்‌த்தங்களுடன்‌ வடை,பருப்பு, நெய்‌, பால்‌ சர்க்கரை இவைகளுடன்‌ கூட ப்ரஸாதத்தை அமுது செய்தருளப்‌ பண்ணினார்‌ ]
செந்நெலரிசி பருப்புச்‌ செய்த வக்காரம்‌ நறு நெய்‌ பாலால்‌ என்று சொல்லப்‌ படுகிற அக்கார வடிசில்‌ தொடக்கமான அனேக வகைத்‌ தளிகைகளும்‌ அமுது செய்தருளப் பண்ணிப் போருகிறதுக்கு மேலே ஒன்றும்‌ தேவும்‌ சிறப்பும்‌, கண்ணி நுண்‌ சிறுத் தாம்புச்‌ சிறப்பும்‌, நூற்றந்‌தாதிச்‌ சிறப்பும் ப்‌ரதி ஸம்வத்ஸரம்‌ பெருமாளும்‌ நாச்சியாரும்‌ உகந்து அமுது செய்தருளும்படி நன்றாக நடத்திக் கொண்டு ஆழ்வார்களின்‌ அருளிச் செயல்களை ல்யாக்யானங்களுடன்‌ அநு தினம்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டு எழுந்தருளி யிருக்கும்‌ நாளிலே

பெரியாழ்வார்‌ திருமொழிக்கு வ்யாக்யானம்‌ அருளிச் செய்தல்‌
பெரியாழ்வார்‌ திருமொழிக்குப்‌ பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செய்த வ்யாக்யானம்‌ காணாமையாலே அதற்கு வ்யாக்‌யானம்‌ செய்தருளத்‌ திருவுள்ளமாய்‌ (திருபபாணாழ்வார் தாதர்‌ நாயனாருக்கு)
செந் தமிழிலாழ்வார்கள்‌ செய்த வருளிச்‌ செயலை
சிந்தை செயல்‌ தன்னுடனே செப்பலுமாம்‌-அந்தோ
திருப்பாணாழ்வார் தாதர்‌ நாயனார்‌ சேர
விருப்பாராகில்‌ நமக்கீடாவர்‌ யார்‌

சிந்தையினால்‌ தேறலுமாம்‌ வாய் கொண்டு செப்பலுமாம்‌’என்று திருமுகம்‌ போக விட்டருள, அவரும்‌ திருநகரியிலே தம் திருநந்தவனத் திலிருக்கிறவர்‌ அந்த ஸ்ரீஸக்தியைக்‌ கண்டு உகந்து சிரஸா வஹித்து, திருநந்த வனத்தினின்றும்‌ அப்போதே புறப்பட்டு அதி சிக்ரமாக வெழுந்தருளி வந்து ஸேவித்து நிற்க, அவருடைய அத்வ ஸ்ரமத்தையும்‌ ஸ்வ விஸ்‌லேஷத்தா லுண்டான பெரு விடாயையும்‌ தத் விக்ரஹத்திலே கண்டு “மிகவு மிளைத்தீரே”’ என்று குசல ப்ரஸ்நம்‌ பண்ணிக்‌ குளிர கடாஷித்தருளி, பிற்றை நாள்‌ அவரையுங் கூட்டிக் கொண்டு திருமொழி நாலு பத்தளவாக நன்றாக வ்யாக்யாநஞ்‌ செய்தருளி மற்றை நாற்பது பாட்டுக்களுக்கு சேஷித்திருந்த பூர்வர்கள்‌ வ்யாக்‌யானத்தை அழைப்பித்து அத்தோடு சேர்ப்பதாக வைத்திருக்க,
கந்தாடை நாயன்‌ ஜீயரருளிய வ்யாக்யானத்தை ஸேவித்தது
அப்போது அதி பாலரா யிருக்கிற கந்தாடை நாயன்‌ அங்கே எழுந்தருளி ஜீயருடைய ஸ்ரீ ஸூக்திகளையும்‌ அபய ப்ரதராஜ ஸூரி ஸ்ரீஸூக்திகளையும்‌ ஆலேகித்து அவற்றில்‌ அபய ப்ரதராஜ ஸுரி திவ்ய ஸூக்தியைக்‌ கீழே ஒரு பீடத்திலிட்டு வைத்து அபிராமவர யோகி திவ்ய ஸுூக்தியை ஆதரேண ஆலோகியா நிற்கிறவர்‌ “இந்த நாற்பது பாட்டுக்கும்‌ சேஷியாதே முற்றப் போகா தொழிவதே!’என்ன; இத்தை மணவாள மா முனிகள கேட்டருளி, ‘அதி பால்யத்‌திலே இவருக்கு இத்தனை ஞான பூர்த்தி யுண்டாவதே!’” என்று உகந்து, நாயனைக்‌ “கருணை பொங்கிய கண்ணிணைகளாலே கடாக்ஷித்து அழைத்தருளி “ஒன்றைப்‌ பொகட்டு ஒன்றை ஆதரிப்பானென்‌); இங்ஙன மிருப்ப தொன்றுண்டோ?”?. என்று கேட்டருள, நாயனும்‌, மாம்பொழிற் றளிர் கோதிய மடக் குயில்‌ வாயது துவர்ப் பெய்த தீம்பலங் கனித் தேனது நிகர்‌”என்று சொல்லுகிறபடியே அஸாரத்தை விட்டு ஸாரத்தைப் பற்றுகை யன்றோ ஸாரஜ்ஞ க்ருத்யம்‌; ஆகையாலே அதிலுமிது மஹா ரஸ வாக்ய ஜாலவத்தா யிருக்கிற தென்று ஆதரித்தது என்ன, ஜீயரும்‌ அது கேட்டாநந்தித்து இவரும்‌ ஒரு அவதார விசேஷ மென்று ஆலிங்கித்‌துக் கொண்டருளினார்‌. *இவள்‌ வாயனகள்‌ திருந்தவே என்கிறபடியே நாலூர்‌ பிள்ளை (திருவாய் மொழிப் பிள்ளை )யிட்டருளின வ்யாக்யானங்க ளெல்லாவற்றிலும்‌ அதிசயித்திறே இவருடைய ஸூக்தி வைபவமிருப்பது-இப்படிப்‌ பெரியாழ்வார்‌ திருமொழிக்கு ஸர்‌வ ஜந ஹ்ருதய மாம்படி வ்யாக்யானஞ் செயதருளி, திருப் பாணாழ்வார்‌ தாதர் நாயனார்க்கு– பிள்ளை லோகாசாரியர்‌ திருக் கை ஸ்பர்சமுடையராய்‌ ஸ்ரீரங்க ராஜ: பதிமே ஸஹாய:’ என்கிறபடியே தமக்குத் துணையாய்‌ எழுந்தருளி யிருக்கிற ஸ்ரீ ரங்கராஜரையும்‌ திருவாராதனமாக ப்ரஸாததித்து விடை கொடுத்தருளினார்‌.

ஜீயர்‌ ஆசார்ய ஹ்ருதயத்திற்கு வ்யாக்யான மருளியது
அநந்தரம்‌ ஆசார்ய ஹ்ருதயத்திற்கு வ்யாக்யாநஞ்‌ செய்தருளத்‌ திருவுள்ளமாய்த்‌ திரு மேனியில்‌ தெளர்ப்பல்யத்தையும்‌ பாராமல்‌ திருவணையிலே சாய்ந்தருளினபடியே திருக்கழுத்து நோவத் திரு வெழுத்துச் சாத்தி யருளும்படியைக்‌ கந்தாடை யண்ணன்‌ கண்டு தேவரீர்‌ இப்படி எதுக்காக ப்ரயாஸப்படுவது?’” என்ன, ஜீயரும்‌“உம்முடைய புத்ர பெளத்ராதிகளுக்காகப்‌ படுகிறேன்‌” என்றருளிச்‌ செய்து வ்யாக்யானத்தை யருளிச்‌ செய்து தலைக் கட்டினார்‌.

ஏட்டூர்‌ சிங்கராசாரியர்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌ -அஷ்ட கோத்ர நிபந்தனை–
அக் காலத்தில்‌ பெரிய திருமலை நம்பி திருவம்சஸ்தரான ஏட்டூர்‌ சிங்கராசாரியர்‌ ஜீயருடைய அப்ரதிம ப்ரபாவத்தைக் கேட்டு-பெருமையும்‌ நாணும்‌ தவிர்ந்து ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வங்களை
முன்னிட்டு அநந்ய சரணராய்‌ ஜீயர்‌ திருவடிகளை ஆஸ்ரயிக்க, அவரை க்ருபை செய்தருளி, தன் மூலமாக வந்த திரவியத்தை ஆழ்வார்‌ திருக் கோபுர கைங்கர்யத்துக்கு திரு நகரிக்குப்‌ போக
விட்டருளினார்‌. அக் கைங்கர்யம்‌ சிறிது குறையாக விருக்க பின்பு ஜீயர்‌ நாயனார்‌ அக் குறையைத்‌ தீர்த்தருளி சிகர பர் யந்தமாக நிறைவேற்றி யருளினார்‌- பின்பு போளிப் பாக்கம்‌ நாயனாரை
அழைப்பித்தருளி அவர்‌ முகமாக ஸப்த கோத்ர நிபந்தனை செய்‌தருளி அதில்‌ இந்த ஏட்டூர்‌ சிங்கராசாரியரையுங் கூட்டிக் கொண்டு அஷ்டகோத்ர ஸங்கயை யாயிரும்‌ என்று நியமித்தருளினார்‌.

இப்படி வாசா மசோசரமான வைபவத்தை யுடைய ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்து
ஜகத் ரஷா பரோ அநந்தோ ஜநிஷ் யத்ய பரோ முநி |
ததாஸ்ரயாஸ் ஸதாசாராஸ்‌ ஸாத்விகாஸ் தத்வ தர்‌ஸிந : ॥

[ஐகத் ரக்ஷணத்தில்‌ ஊன்றி யுள்ள திருவநந்தாழ்வான்‌’ வேறு முனிவராக-மணவாளமாமுனியாக- அவதரிக்கப்‌ போகிறார்‌. அவரை ஆஸ்ரயிப்போர்‌ நல்ல ஆசார சீலர்களாகவும்‌, ஸாத்விகர்களாகவும்‌ தத்வார்த்தங்களை உணர்ந்தவர்களாகவும்‌ ஆவார்கள்‌ என்கிறபடியே ஸத்வோத்தரராய்‌ ஸதாசார நிரதராய்‌ தத்வ தர்சிகளாய்‌ அதிகத பரமார்த்தராய்‌ அநவரதம்‌ ஜீயரை ஸேவித்துக்‌ கொண்‌டிருக்கும்‌ முதலிகள்‌; (இந்த ஸ்லோகம்‌ துன்னு புகழ்க் கந்தாடைத்‌ தோழப்பருக்கு ஸ்வப்‌நத்தில்‌ கச்சிப்‌ பேரருளாளன்‌ அருளியதாக இந்த நூலின்‌ தொடக்கத்தில்‌ வந்துள்ளது காண்க, )

அஷ்டதிக்கஜங்கள்‌
பாராரு மங்கை திருவேங்கட முனி பட்டர் பிரான்‌
ஆராமம்‌ சூழ் கோயில்‌ கந்தாடை யண்ணன்‌ எறும்பி யப்பா
ஏராரு மப்பிள்ளை அப்பிள்ளார்‌ வாதி பயங்கரரென்‌
பேரார்ந்த திக் கயஞ் சூழ்‌ வர யோகியைச்‌ சிந்தியுமே

என்று சொல்லப்பட்ட வானமாமலை ஜீயர்‌, திருவேங்கடஜீயர்‌-பட்டர் பிரான்‌ ஜியர்‌, கந்தாடை யண்ணன்‌, எறும்பி யப்பா, அப்‌பிள்ளை, அப்பிள்ளார்‌, ப்ரதிவாதி பயங்கர மண்ணா என்கிற அஷ்ட திக்கஜங்களுக்கும்‌, திருப்பாணாழ்வார்‌ தாஸர்‌, ஏட்டூர்‌ சிங்கராசாரியர்‌, வரந் தரும்‌ பெருமான்‌ பிள்ளை, மேனாட்டுத்‌ தோழப்பர்‌,அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌, ஜீயர்‌ நாயனார்‌, அண்‌ணராய சக்ரவர்த்திகள்‌ தொடக்கமானாரும்‌ ஜகத் ரஷா பரோ அநந்தோ…தத்வ தர்ஸிந:” என்கிறபடியே இவர்களெல்லாரும்‌ ஸத்வோத்தரராய்‌ ஸதாசார நிரதராய்‌ தத்வ தர்சிகளாய்‌ ஜகதுஜ்‌ஜீவநைக பரராய்‌ இருப்பார்கள்‌.

முதலிகளுக்கு வகுத்த கைங்கர்யங்கள்‌
இப்படிப்பட்ட திக்கஜங்களாலும்‌ மற்றுமுள்ள முதலிகளாலும்‌ ஸேவ்யமாநரா யிருக்கிற ஜீயர்‌ திருவடிகளிலே நித்யகைங்கர்யம்‌ செய்யும்‌ முதலிகளாரென்னில்‌:
1-வானமாமலை ஜீயர்‌-பால்யாத் ப்ரப்ருதி ஸுஸ்நிக்தராய்‌ ஆஸ்ரயித்தவன்‌று தொடங்கி பிரியாதாட்‌ செய்‌திருப்பர்‌,
2-கந்தாடை அண்ணன்‌ ‘“ராமாநுஜ முநீந்த்ரஸ்ய ஸ்ரீமாந் தாஸரதிர் யதா” என்று உடையவருக்கு முதலி யாண்டானைப் போலே அத்யந்தம்‌ பீரீதி விஷய பூதராய்‌ பாதுகா ஸ்தாநீய் இருப்பர்‌
3-எறும்பி யப்பா வடுக நம்பியைப்‌ போலே தேவுமற்றறியாதே ஜீயருக்கு அத்யந்த மபிமதராயிருப்பர்‌.
4- ப்ரதிவாத பயங்கர மண்ணா உடையவர்‌ திருவடிகளுக்குக்‌ கூரத் தாழ்வான்‌ போலே ப்ரதி பக்ஷ நிரஸந பூர்‌ வகமாக ஸ்ரீபாஷ்யத்திற்கு உசாத் துணையா யிருப்பர்‌.
5-ஸேனை முதலியாரண்ணன்‌, சடகோப தாஸர்‌, அப்பிள்ளை, திருப்பாணாழ்வார்‌
தாஸர் இவர்கள்‌ திருவாய்மொழி முதலான அருளிச் செயல்களுக்கு உசாத் துணையாய் இருப்பர்கள் -விசேஷித்து அப்பிள்ளை ஜீயர் நியமனத்தாலே ஐந்து திருவந்தாதிகளுக்கும் உரை யருளிச்‌ செய்து யதிராஜ விம்ஸதிக்கும்‌ வ்யாக்யாநம்‌ செய்தருளினார்‌.
6-அப்பிள்‌ளார்‌ மட த்தில்‌ ஸர்வ பரங்களையும்‌ பரித்துக் கொண்டு தளிகைக்குப்‌ பாங்காக அமுதுபடி, பருப்பமுது, கறியமுது, பாலமுது, நெய்‌யமுது,தயிரமுது தொடக்கமானவை நடத்திக் கொண்டு போருவர்‌
7-பட்டர் பிரான்‌ ஜீயர்‌ எம்பாரைப் போலே ஸ்ரீபாதச்சாயா பந்தராய்‌ பிரியில்‌ தரியாமையை முன்னிட்டு அடிமை செய்து ததேக நிஷ்டராய்‌ ஸர்வ வித கைங்கர்யங்களிலும்‌ அந்வயிததுத்‌ திருவடிகளை யல்லது ஒரு தெய்வ மறியா திருப்பர்‌,
8-ஜீயர்‌ நாயனார்‌ இளவரசராய்‌ எல்லார்க்கும்‌ உத்தேச்யராய்‌ திருக் குருகைப் பிரான்‌ பிள்ளானைப் போலே அத்யாதரணீயராயிருப்பர்‌

இப்படி இவர்களாலே ஸேவ்யமானரா யிருக்கிற வரவர முநி வர்யரான பெரிய ஜீயர்‌, திருமகள்‌ தன்‌ கொழுநன் திருக் கழல்‌ சேர்‌ மாறனடி பரவும் எதிராசர்‌ செம் பொற் பாத மிரவு பகல்‌ மறவாமலிறைஞ்சி யேத்து மெழில்‌ திருவாய் மொழிப்‌ பிள்ளை யிணைத் தாள் பேணுமவரான மணவாள மா முனிவனெந்தை மண்ணுலகலவதரித்து வாழ்ந்த பின்‌ முன்னறிவெனவு மறியாத மானிடவரெல்லா முதிதான வர்த்த பஞ்சக நிஷ்டரார்‌ என்றும்‌,
இத்தம்‌ ப்ருத்யா நர்த்திரஸ் தோஷ யித்வா தேஸே தஸ்மிந் தர்ஸயந் வைபவம்‌ ஸ்வம்‌
ப்ரத்யா வ்ருத்தஸ் த்வந்திமோபாய தத்வம்‌ தத்ரத்யேஷு ஸ்தாபயித்வா ஜநேஷு ॥
-இப்படி விஷயங்களை யறிய வேணுமென்று வந்த சிஷ்யர்‌களை மகிழ்‌வித்துக்‌ கொண்டு அந்த திவ்ய தேசத்தில்‌ தமது வைபவங்களை ப்ரகாசிப்பித்துக்‌ கொண்டு அங்குள்ள வைஷ்ணவரிடையே அந்திமோபாய நிஷ்டையில்‌ உண்‌மையை நிலை நிறுத்தித்‌ திரும்‌பி யெழுந்‌தருளினார்‌ என்றுசொல்லுகிறபடியே-)ஜகத்திதுண்டான சேதனரெல்லாரையும்‌ அர்‌த்த பஞ்சக நிஷ்டராயும்‌ அந்திமோபாய நிஷ்டராயும்‌ உஜ்ஜீவிக்கும்படிக்குத் திருத்தி வாழ்வித்ருளி நாயனாருக்குத்‌ திரு வாய் மொழி ஈடும்‌ ஸ்ரீபாஷ்யமும்‌ விசதமாக ப்ரஸாதிக்கும்படி,அண்ணனையும்‌ அண்ணாவையும்‌ நியமித்தருளி க்ருதார்த்த்ராய்‌,
தென்னரங்கா்‌ சீரரளுக் கிலக்காகப்‌ பெற்றோம்‌
திருவரங்கந் திருப்பதியே இருப்பாகப்‌ பெற்றோம்‌
மன்னிய சீர் மாறன் கலை யுணவாகப் பெற்றோம்‌
மதுரகவி சொற் படியே நிலையாகப்‌ பெற்றோம்‌
முன்னவராநங் குரவர்‌ மொழிகளுள்ளப்‌ பெற்றோம்‌
முழுது நமக்கிவை பொழுது போக்காகப்‌ பெற்றோம்‌
பின்னை யொன்று தனில் நெஞ்சம்‌ போராமற் பெற்றோம்‌
பிறர் மினுக்கம்‌ பொறாமை யில்லாப்‌ பெருமையும்‌ பெற்றோமே

என்று இப்படி ஸ்வ நிஷ்டா விசேஷத்தை மதித்துக் கொண்டு அகாரண க்ருபா பரிதஸ்வ விஸேஷ கடாஷ பாதேந புளி முதலான வ்ருஷாதிகளையும்‌ உஜ்ஜீவிப்பித்துக்‌ கொண்டெழுந் தருளியிருந்‌தார்‌. யம் யம்‌ ஸ்ப்ருஸதி பாணிப்யாம்‌” என்கிற ஸ்லோகார்த்தம்‌ இவரிடத்திலே அந்வர்த்த ஸித்தமாய்‌ பலித்தபடி கண்ட பின்பு மனுஷ்யரான ஜ்ஞாநிகளுக்குஜ் ஜீவநம்‌ கிம் புநர்‌ ந்யாய ஸித்தமிறே-

தத்‌ பாத பத்ம ஸம் ஸ்பர்ஸ பாவநம்‌ ஸலிலம்‌ ஐநா |
ஸ்வீகுர் வந்தஸ் ஸூகேநைவ ஸ்வரூபம்‌ ப்ரதி பேதிரே ॥
ஆலோகைர நுகம்பாத்யை ராலாபை ரம்ருதச்யுதை: !
அந்வஹம்‌ பாணி சாதன்‌ய ஸ்பர்ஸந் யாஸைஸ் சபாவநை : ॥
மந்த்ர ரத்ந ப்ரதாநேந ததர்த்த ப்ரதி பாதநாத்‌ |
ஆத்மார்ப்பணேந கதிசித் அஜ்ஞாதஜ் ஞாபநே ந௪ ॥
கேசித் ஷேமம் யயுஸ்‌ தஸ்ய பாதபத்மஸ்ய ஸம்ஸ்ரயாத்‌ |
அந்யே தத் ரூப நித்யா சிந்தநாத் நாதந்யே தந் நாம கீர்தீதநாத்‌ ॥
ஸம்ருத்வா தஸ்ய குணான் திவ்யாந்‌ ஸ்துத்வா தாநேவ கேசந |
நத்வாதாம்‌ திஸ முத்திஸ்ய ஸ்ம்ருத்வா தத் வைபவம்‌ பரே ॥
அபதிஸ்ய கமப்பயேந மந்யே ப்ரதித வைபவம்‌ |
அந்யேதத்‌ பருத்ம ப்ருத்யா நாம லோக ஸ்பர்ஸ நாதபி:॥
அந்யே தத் பாத ஸம்‌ ஸ்பர்ஸ தந்யே ஸம்பூய பூதலே |
அபவந்‌ பூயஸா தஸ்ய முநே : பாத்ரம்‌ க்ருபா த்ருஸநம்‌ ॥
ஏவம்‌ ஸர்வே முநீந்தரேண பபூவுஸ் ஸ்ரஸ்த பந்தநா;
|
[அம் மணவாள மாமுனிவருடைய திருவடித் தாமரைகளின்‌ ஸம்பந்‌தத்‌தினால்‌ பரிசுத்தமான ஸ்ரீபாத தீர்‌த்தத்தைப்‌ பருக அடியார்கள்‌ எளிதில்‌ தமது ஸ்வரூபத்தை (சேஷத்வத்தை)உணர்ந்தனர்‌. அவருடைய திவ்ய கடாக்ஷத்தாலும்‌ அம்ருதம் போல்‌ பாயா நின்ற க்ருபாதிசயத்தாலும்‌, திருவடிகளின்‌ ஸ்பர்சத்தாலும்‌ அவற்றில்‌ பர ஸமர்ப்பணத்தினாலும்‌, மந்த்ர ரத்நமான த்வயத்தை ௨பதேசமாகப்‌ பெற்றும்‌ அதன்‌ பொருளை அருளிச்‌ செய்யக்‌ கேட்டும்‌ சிலர்‌ ஆத்ம ஸமர்ப்பணத்தினாலும்‌ (ப்ரபத்தியாலும்‌)), தமது அறியாமையை விண்ணப்பம்‌ செய்வதாலும்‌, (சிலர்‌) அம்மா முனிவருடைய திருவடித் தாமரைகளில்‌ ஆஸ்ரயிப்பதாலும்‌, ஆத்மோஜ்‌ ஜீவனத்தை (க்ஷேமத்தை) அடைந்தார்கள்‌. சிலர்‌ அம்மாமுனிவருடைய திருமேனியை எப் போதுமாக தியாந விஷயமாக்குதலாலும்‌, அவர்‌ திரு நாமங்களைப்‌ பாடுதலாலும்‌,சிலர்‌ அவருடைய கல்யாண குணங்களைக் கேட்டு அவற்றைக் கொண்டு அவரைத்‌ துதித்தும்‌, அவர்‌ எழுந்தருளி யுள்ள திக்கு நோக்கித்‌ தண்டனிட்டும்‌,அவருடைய பெருமைகளைச்‌ சிந்தித்து மூழ்ந்தும்‌, இப்படிப்பட்ட வைபவமுடைய ‘ஸ்வாமியை ஈடற்றவராக நிச்சயித்தும்‌, சிலர்‌ அவருடைய தாஸ தாஸர்களின்‌ கடாக்ஷித்தினாலும்‌ ஸ்பர்ஸத்தினாலும்‌, அவர்களின்‌ பாத ஸ்பர்ஸத்தினாலும்‌ தன்யமான இப்‌பூவுலகில்‌ (பாக்ய சாலிகளாக) பிறந்து, அம் முனிவருடைய க்ருபா கடாஷத்திற்கு மேலான பாத்ர பூதர்களாக ஆனார்கள்‌. இப்படி
யாவரும்‌ முநீந்தரரான மணவாள மாமுனிகளருளாலே பந்தங்‌கள்‌ நீங்கியவர்களாக ஆனார்கள்‌] என்கிற படியே தம்முடைய ஸ்ரீபாத தீர்‌த்த ஸ்வீகாராதிகள்‌ தொடக்கமாக ஈஷண த்யாந ஸம்ஸ்பர்ஸ அபிமாநாதி விசேஷங்களாலே ஸமீபஸ்தரோடு தூரஸ்தரோடு பவிஷ்யோத்தர முண்டாமவர்களோடு வாசியற ஸர்வரையும்‌ ஸம்ஸாராதுத் தீர்ணராம்படி பண்ணி ஸம்ஸார பரமபத விபாகமற பூதலமெங்கும்‌ பொன்னுலகமாக்கி, இனி தேடித்‌ திருந்தும் படியாக வொழிந்த தசையாய்‌

ஸர்வாவஸ்தா ஸத்ருஸ விபவா ஸேஷக்ருத்த்வம்‌ ரமயா பர்த்து;
த்யக்வா ததபி பரமம்‌ தாம தத் ப்ரீதி ஹேதோ: |
மக்நா நக்நெள வரவரமுநே மாத்ரு ஸாநுந்நி நீஷந்‌
மர்த்யா வாஸே பவஸி பகவந்‌ மங்களம்‌ ரங்க தாம்‌ந : ॥

(கல்யாண குண பூர்ணரான மணவாள மா முனிவரே! ஸ்ரீய:பதியான எம்பெருமானுக்கு எல்லா நிலைகளிலும்‌ தகுந்தபடி வைபவம்‌ மிக்க குற்றேவல்கள் அனைத்தும்‌ செய்து கொண்டுள்ள தேவரீர்‌ அந்தப்‌ பரம பதத்தையும்‌ விட்டு அவ் வெம்பெருமானுடைய பிரீதியின்‌ பொருட்டு ஸம்ஸாராக்நியில்‌ அழுந்திக் கிடக்கிற அடியேன்‌ போல்‌வாரை உத்தரிப்பிக்கத்‌ திருவள்ளமாய்‌ இம் மாநிட வுலகில்‌ திருவரங்கமான திருப்பதிக்கு அணி விளக்‌ஈய்‌ உள்ளீர்‌] என்றபடியே தம்முடைய அவதார காரியம்‌ தலைக் கட்டி யருளி:

இப்படி தம்முடைய திருவவதார கார்யம் தலைக் கட்டினவாறே -அயர்வறும் அம்பரங்கள் அதிபதியானவனுடைய மேலை வைகுந்தத்தில் சென்று இமையாத கண்ணினராய் ஆதி யஞ்சோதியுருவை அனுபவித்து அவ்வனுபவ ஜெனித ப்ரீதி உள்ளடங்காமல் அசேஷ சேஷ விருத்திகளிலும் அன்வயித்து அடிமை செய்ய வேணும் என்கிற அபிநிவேசத்தை யுடையவராய் விண்ணுக்குச் செல்ல இசைந்திருக்கும் அளவிலே திருமேனியைக் நோவு சாத்தி ஸஞ்சார ஷமர் அன்றிக்கே மிகவும் தளர்ந்திருக்கும் நாளிலே
திரு நாளுக்காகத் திருவீதியில் அரங்கர்
வருநாளுமாற தெந்தைக்கின்று -பெருமாள் தன்
அந்தப் வடிவழகைத் தானோர் நாளும் காணேனே
இந்த உடம்போடு இனி –

என்னும் பேராசையோடே பெருமாள் சேவையை அபேக்ஷித்து இருக்க
ஸத் சம்பந்தோ பவதி ஹித மித்யாத்மநை லோப நிஷ்டம்
சிஷ்டாசாரம் த்ரடயிதுமிஹ ஸ்ரீ ஸகோரங்க துர்ய
த்வாரம் ப்ராப்ய பிரதித விபவோ தேவதேவ வஸ்த்வதீயம்
திருஷ்ட்வை வத்வாம் வரவரமுநே த்ருஸ்யதே பூர்ணகாம

மணவாள மா முனிவரே யாவரும் அறிந்த வைபவம் உடையவனாய் ஸர்வேஸ்வரனாய் ஸ்ரீ யபதியான அழகிய மணவாளன் சத்துக்களில் சம்பந்தம் நன்மை பயக்கிறது என்றும் தன்னாலேயே காட்டப்பட்ட சிஷ்டாசாரத்தை திடப்படுத்துவதற்காக இங்கு தேவரீருடைய திருவாசலை யடைந்து தேவரீரைக் கடாஷித்து தனது ஆசை நிறைவேறியவனாய் காணப்படுகிறான் –என்கிறபடியே
அப்பொழுது பெருமாளும் உடுத்து முடிந்து அலங்கரித்து ஒப்பித்துக் கொடு திருவீதியிலே புறப்பட்டவர் இவர் மடத்து வாசலிலே நெடும் போது நின்றும் சேவை ஸாதித்தருள வாடிக்கிடந்த பயிரைத் தளிர்ப்பிக்கும் மேகம் போலே
நீடு புகழ்த் தென்னரங்கர் தேவியரும் தாமுமாக வந்து என்னிடர் தீர்த்தார் இப்போது -என்று தம்மார்த்தி தீரச் சேர்த்தியை அனுபவித்தருள -பின்னும் திருமேனி மிகவும் தளர்ந்து இட்டகால் இட்ட கைகளாய் பரவசகாத்ரராய் நிற்க -மீளவும் பெருமாள் எழுந்தருளி மடத்து வாசலிலே நின்ற வன்று
இந்த உடல் நோட் வீழ்ந்தென்னை வல் வினையேனை
அந்தோ எனக்குத் தென்னரங்கா
இந்த உடம்புடன் சேவை தனக்கென் விரோதியாய்
வன் பரையே தாளினி

என்று அனுசந்தித்துக் கொண்டு திருக்கைத்தலத்தில் எழுந்தருளி சேவித்துப் பேர் இழவாளராய்
பாராரும் அண்ணல் இராமானுஜ சீயர்
சீராரும் சேனை முதல் நாயனார் ஆராத
அன்புடையவாத் தான் அறிந்திலரே என்னுடைய
துன்பமதைத் தீர்த்ததற்குத் தான்

என்று அருளிச் செய்து -தாய் மனம் நின்றும் இரங்கத் தனியே நெடுமால் துணையாய்ப் போயின -என்று அருளிச் செய்து -இங்கு திருவேங்கட சீயரைச் சொன்னபடி -எம்பெருமானார் திருப்பாவை ஜீயர் அன்றோ -திருமுகம் போக விட்டருள-அவர்களும் அந்த ஸ்ரீ திருமுகத்தை சிரஸாவஹித்து சீக்ரமாகப் புறப்பட்டு எழுந்தருளி வந்து திருவடிகளிலே சேவித்துக் கொண்டு எழுந்தருளி இருந்தார்கள் – அவ்வளவிலே திருமேனியிலே நோய் சகல்பம் இன்றிக்கே சமித்திருக்க அத்தைக் கண்டு வானமா மலை சீயர் வான மா மலை ஸ்ரீ கார்யத் த்வரையாலே த்வரித்து -மீண்டு வருகிறோம் என்று விண்ணப்பம் செய்ய ஜீயரும் அவரைக் கடுக வாரும் என்று அனுப்பி விட அவரும் புறப்பட்டு வடதேசத்து எழுந்தருளினார்

ஜீயர் ஆர்த்தி மிக்கு திருநாடு அடைய த்வரித்தல்
அவர் எழுந்தருளின பின்பும் சில நாள் கழிந்தவாறே ஜீயருக்கு முன்பு போல் ப்ராப்ய பூமியில் ப்ராவண்யமும் -த்யாஜ்ய பூமியில் ஜிஹாசையும் அனுபவ அலாபத்தில் ஆத்ம தாரணா அயோக்யதையும் அத்யந்தம் அதிசயித்து வர –அதற்கு மேலே தமக்கு ப்ராப்யரான உடையவர் திருவடிகளிலே ப்ராவண்யம் அதிசயித்தது தத் அனுபவ அலாபத்தில் ஆர்த்தியும் அதிசயித்து அதடியாக பரமபக்தி தலையெடுத்து அதினாலேயே நாள் தோறும் ஸ்வ தசையடியாக வருகிற ஸ்வ அபேஷிதங்களை அவர் திரு முன்பு விண்ணப்பம் செய்வாராய்ப் போருகிறவர்-வாழி எதிராசன் என்று தொடங்கி இராமானுசன் திருவடிகளே சரணம்‌,-இராமானுசாய நம : என்றது நடுவாக இந்த வரங்கர்‌ என்று தலைக் கட்டி அருளிச் செய்ய- அதுவே-ஆர்த்தி என்று அறுபது பாட்டாய்‌ ஒரு ப்ரபந்தமாய்த்‌ தலைக்‌ கட்டிற்று, அந்த அபிநிவேசம்‌ அவ்வளவிலே நில்லாதே பரவி
எம்பெருமானார்‌ தம்பிரானென்னுமவரை
நம்பெருமாள்‌ தாமுகந்து நாள் தோறும்‌–தம் பரமா
ஏறிட்டுக் கொண்டளிப்ப ரென்றுமவர்‌ தம்மை
வேறிட்டுத்‌ தாங் கைவிடார்‌ —
என்று தேறுவதென்றும்‌,
பொல்லானிவனென்று போதிடென்று நங்குரவ
ரெல்லாரு மென்னை யிகழ்ந்தாரோ-நல்லார்கள்‌
வாழ்வான வைகுந்த வான்‌ சபையில்‌ வண் கூரத்‌
தாழ்வானி ருந்திலனோ வங்கு?
என்று கலங்குவதுமாய்‌ அநுகம்பாஞ்சலி யானவர்களை ஆராய்‌வதும்‌,
ஆரியர்காள்‌! ஆழ்வீர்காள்‌! அங்குள்ள முக்தர்காள்‌ !
சூரியர்காள்‌! தேவியர்காள்‌! சொல்லீரோ–நாரணற்கு
எங்களடியானிவன்‌ மீடேற வேணுமென்‌
நுங்களடியரருமுள
என்று கடகர்‌ பலரையும்‌ பல கால்‌ கால் கட்டி அர்த்திப்பதும்‌,
தென்னரங்கர்‌ தேவியே! சீரங்க நாயகியே!
மன்னுயிர்கட்கெல்லாம்‌ மாதாவே!–என்னை யினி
இவ் வுலகந் தன்னிலிருந்து நலங்காமல்‌
அவ் வுலகில்‌ வாங்கி யருள்‌
என்றும்‌
சீ ரங்க நாயகியே! தென்னரங்கள்‌ தேவியே! ்‌
நாரங்கட்கெல்லாம்‌ நற்றாயே ! — மாருதிக்கு
வந்த விடாய்‌ தன்னை யொரு வாசகத்தால்‌ போக்கின நீ
எந்தனிடர்‌ தீராத தென்‌
? என்றும்‌ மறுக்க வொண்ணாத மாத்ருத்வ ஸம்பந்தத்தைச்‌ சொல்லி மடி பிடிப்பதும்‌
இந்த வுடம்‌ போடினி யிருக்கப்‌ போகாதுன்‌
செங்கமலத் தாள் தன்னைத்‌ தந்தருள்நீ–அந்தோ
மையார் கருங் கண்‌ணி மணவாளா! தென்னரங்கா!
வையாம லிருப்பாயே யிங்கு
-என்று ஆர்த்ர ஹருதயத்வ விஸிஷ்டராய்–ஆர்த்தி ஹரத்வ விசிஷ்டரான – அவர் முன்பே தம்‌முடைய ஆர்த்தியைச்‌ சொல்லுவதும்‌,

சென்று திருமாலடியார்‌ தெய்வக் குழாங்கூடு
மென்று மொரு நாளாமோ? ஆழ்வாரே!-துன்னு புகழக்‌
கமலம்பாடினீரையோ அடியேனுமிக்‌
கமலஞ் சேர் காயம்‌ விட்டு
(கமலம்பாடி நிறையா அடியேனுமிக்‌–பாட பேதம்)என்று “அடியார்கள்‌ குழாங்களை உடன்‌ கூடுவதென்று கொலோ? என்று அர்த்தித்த ஆழ்வாரிடத்தில்‌ ஸ்வரூபா நுரூபமான ப்ராப்யத்தை அபேக்ஷிப்பதும்‌
இந்த வுடம்போ டிருவினையாலிவ்வளவும்
உந்தனடி சேராதுழன்றேனே–அந்தோ
அரங்கா! இரங்கா யெதிராசர்க்காக
இரங்காய்‌ பிரானே இனி–
என்றும்‌ திருவாங்கா! அருளாய்‌ இனி யுன் திருவருளாலன்றிக்‌ காப்பரிதால்‌” என்கிறபடியே மீளவும்‌ மரங்களுமிரங்கும்படி அவர்க்கந்தரங்கரை முன்னிட்டுக் கொண்டு அவரிரக்கத்தை இரப்‌பதுமாய்‌, இப்படி ஒரு தேச விஸேஷத்திலே சென்றாலொழிய தரியாத தசையை யடைந்து எழுந்தருளி யிருக்க;

அந்த தசையிலே தேசாந்தரஸ்தரான மேல்நா ட்டுத்‌ தோழப்‌பரும்‌ அவர்‌ திருத்தமயனாரான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாரும்‌ பெருமாளை ஸேவிப்‌பதாகக்‌ கோயிலுக்கெழுந்தருள।
அவர்களைத்‌ தென் மாடத்திருவீதியிலே பட்டர்பிரான்‌ ஜீயர்‌ கண்டருளி, “நீங்கள்‌ எங்கு நின்றும்‌ எழுந்தருளினீர்கள்‌? எங்கேறப்‌ போகிறீர்கள்‌?” என்று கேட்க, அவர்களும்‌ ஸ ஸாத்வ ஸ விநயராய்‌ ஸாஷ்டாங்க ப்ரணாமம் பண்ணி உகப்போடே யதா மநோ ரதம்‌ வ்ருத்தாந்தத்தை விண்ணப்பஞ் செய்ய, ‘ இப்படி ஜ்ஞாநாக்த்யாதிகள்‌ வடிவிலே தொடை கொள்ளலாம்படி அநுகூலராயிருக்கிற நீங்கள்‌ யதிபுநரவதாரமான நம்முடைய பெரிய ஜீயரை ஸேவிக்க வேண்டாவோ?” , என்றருளிச்செய்ய-
அவர்களும்

அதற்கு இசைந்து மடமேற கூடவெழுந்தருள, மணவாள யோகி தஞ்சமாம்‌ மலர்த் தாளிணைகாட்டி-என்கிறபடியே-ஜீயர்‌ திருவடிகளை ஸேவிக்கப் பண்ண, அவ்வளவிலே நாயனாரும்-புரை கொண்ட கோயில்‌ மணவாளமாமுனிக்கண்ணருளே” என்றும்‌ போதச்‌ சிவந்து பரிமளம்‌ விஞ்சும்‌ புதுக் கணித்த
சீதக் கமலத்தை நீரேற வோட்டிச்‌ சிறந்தடியேன்‌ ஏதத்தை மாற்றும்‌ மணவாள யோகி யினிமைதரும்‌
பாதக் கமலங்கள்‌ கண்டேனெனக்குப்‌ பயமில்லையே என்றும்‌ வாசிக கைங்கர்யமாக இந்தத்‌ திருநாமத்தை விண்‌ணப்பஞ் செய்து கொண்டு
திருவடிகளிலே ஸாஷ்டாங்கமாக
தெண்டன்‌ ஸமர்ப்பித்து நிற்க, ஜீயரும்‌ அவர்‌ அபேஷித்தபடியே அமலங்களாகக்‌ கடாக்ஷித்தருளி அப்போது எம்பெருமானார்‌ திறத்திற் சென்ற சிந்தையரான தாம்‌ இவர்கள்‌’ என்றவாறே
எம்பெருமானாருடைய விசேஷாபிமானமுள்ள திருநாராயண புரத்தை நினைத்து, அவர்‌ அந்திம தசையிலருளிச்‌ செய்தருளின
கச்சந் பதம் பரமுவாச வசாம்ஸி யாரி
ராமநுஜார்ய இஹதேஷு சதுர்த்த ஸித்தாம்‌ |
ஸ்ரீ யாதவாத்ரி வஸதிம்‌ ஸததம் பஜந்தஸ்‌
ஸக்தோ பவந்தி மம ஸந்ததி மூலநாத: 1

[எமது குலகூடஸ்தரான எம்பெருமானாருக்‌கு தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளுமளவில்‌ அருளிச் செய்த (ஆறு) வார்த்தைகளில்‌ நாலாவதான (வார்த்தைப்படி) திருநாராயணபுரத்தில்‌ இடை விடாமல்‌
வாஸம்‌ செய்பவர்கள் மஹான்களாவர்‌] என்கிறபடியே திரு நாராயண புரத்திலே நித்ய வாஸம்‌ பண்ணுவார்‌ நம்முடைய முதலிகளிலே ஒருவருமில்லையோ?” என்று ஜீயரரருளிச்‌ செய்ய,
அட்போது தோழப்பர்‌ திருப் பரியட்டத்தைத்‌ தலையிலே முடிந்து கொண்டு -‘இந்தக் கைங்கர்யம்‌ அடியேனுக்காக வேணும்‌”’ என்று ப்ரார்த்திக்க, ஜீயரும்‌ மிகவுமுகந்தருளி, “எம்பெருமானாருக்கும்‌
நமக்கும்‌ ப்ரியமாம்படி கிஞ்சித்கார பூர்வமாக எதிராஜ குமாரரை ஸேவித்து மங்களாசாஸந பரராய்‌ நித்ய வாஸம்‌ பண்ணியிரும்‌” என்று நியமித் தருளினார்‌-

அண்ண ராயரை பட்டர்பிரான்‌ ஜீயர்‌ திருவடிகளுக்கு ஆளாக்கினது
அந்த சமயத்திலே ராமாநுஜ பரிக்ருஹீதராய்‌ திருமலை நல்லான்‌ திருவம்சஸ்தராய்‌ .”இடங்கொள் சமயத்தை யெல்லாம்‌ எடுத்துக்‌ களைந்து ஸ்வமத ஸ்தாபகராயிருக்கிற அண்ணராய சக்ரவர்த்திகள்‌ ஸ குடும்பராக பெருமாளை ளேவிக்க எழுந்தருளிக்‌ கோயிலிலே பெருமாளை ஸேவித்துக்‌ கொண்டெழுந் தருளியிருக்க, அப்போது ஜீயருடைய சரம தசையை தேசாந்தரஸ்த்தரோடும்‌ தத் தேஸிரீயரோடும்‌ வாசியற ஸர்வரும்‌ குழாங் குழாமாகச்‌ சென்று ஸேவித்து மீளுகிறபடியை அண்ணராய சக்ரவர்த்தி திருத்தாயார்‌ ஆச்சி கண்டு, அவ் விசேஷங்சேட்டு, ”அண்ணராயனே! நமக்கு ஜீயரை ஸேவிக்க வேண்டாவோ?! என்ன, சக்ரவர்த்தியும்‌ இசைந்து எல்லாரையுங் கூட்டிக் கொண்டு ஜீயர்‌ மடத்திலே சென்று பட்டர்‌பிரான்‌ ஜீயர்‌ புருஷகாரமாக வந்து ஸேவித்து திருவடிகளிலே வேரற்ற மரம் போலே விழுந்து கிடக்க, ஜீயர்‌ நெடுநாளாக அங்‌கீ கரிக்கைச்கு விஷயங் காணாமையாலே முடங்கிக் கிடந்த திருவடிகள்‌ இப்போது இவரைக் கண்டு (தத ஸ்திமித முத்க்ஷிப்ப சரணம்‌ சக்ரலாஞ்சிதம்‌ |
க்ருபயாமூர்த்கி விந்யஸ்ப ஸநிநாய குருஸ்ரமம்‌
॥ [பிறகு அம் மணவாளமாமுனிகள்‌ சக்கர அடையாளம்‌ பெற்ற நிச்சலமான தம்‌ திருவடிகளை உயர வெடுத்து க்ருபையுடன்‌ அவர்‌ திருமுடியில்‌ வைத்தருளி அவரது பெரு விடாயைப்‌ போக்கினார்‌ -என்கிறபடியே; )நிமிரப் பெற்றுத் தந் திருவடித் தாமரைகளை இவர்‌ திரு முடியிலே வைத்தருள, இத்தைக் கண்டு முதலிகளெல்லாரும்‌ இவருடைய பேறிருந்தபடியென்‌! என்று உகந்தருளினார்கள்‌. ஜீயரும்‌ சக்ரவர்‌த்‌திகளைக் குறித்து எம்பெருமானார்‌ ஜீயரை திருவேங்கட த்ரோஹிகள்‌ நலியா வண்ணம்‌ காத்து ரக்ஷித்து நம்‌ தர்சந விஷயமாக அநேக கார்யங்கள்‌ பண்ணிப் போந்தவரன்றோ நீர்‌!” என்று மிகவுமுகந்தருளி, உமக்குத் தகுதியான பேறில்லையே, சற்று முந்துறச் சேரப் பெற்றீரில்லையே!’ என்று அருளிச் செய்து, பட்டர்பிரான்‌ ஜீயரைப் பார்த்து, வாரீர்‌ கோவிந்தப்ப தாஸரே! என்றழைத்தருளி, :ராமஸ்ய தஷிணோ பாஹு:”‘ [ராமபிரானுக்கு வலது கை லக்ஷ்மணன்‌ ] என்று நமக்கு தஷிண பாஹாு ஸ்த்தாநீயரன்றோ நீர்‌? ஆகையாலே நாம்‌ செய்கிறதாக நினைத்து நம்‌ ஸம்பந்தத்தை அபேக்ஷித்திருக்கிற இவர்களுக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களையும்‌ செய்யுமென்று அண்ணராய சக்ரவர்த்திகளையும்‌ தோழப்பரையும்‌ நாயனாரையும்‌ அவர்‌ கையில காட்டிக்‌ கொடுத்து “தர்‌சந ப்ரவர்த்தகராம்படி திருத்தம்‌’” என்று
நியமித்தருள, அவரும்‌ அப்படியே அவர்களை விசேஷ கடாக்ஷம்‌ செய்தருளினார்‌. பின்பு அப்பிள்ளானும்‌ ஜீயர்‌ நாயனாரும்‌ ஜீயர்‌ திருவடிகளிலே ஸேவித்து, ‘அடியோங்களுக்குத்‌ தஞ்சமாசு தேவரீருடைய அர்ச்சா ரூபமான விக்ரஹம்‌ வேணும்‌” என்றபேஷிக்க,அப்படியே அநுமதி பண்ணித்‌’ தம்முடைய திருக்கைச் செம்பை உபாதாநமாக்கி யருள, அப்படியே அவர்களும்‌ இரண்டு விக்ரஹம்‌ ஏறி யருளப் பண்ணிக் கொண்டு உகந்தருளினார்‌கள்‌.

பெரிய ஜீயர்‌ சரம தசையில்‌ நாலாயிரமும்‌ கேட்டருளியது
பின்பு தனித் தனியே முதலிகளெல்லாருக்கும்‌ வேண்டிய ஹிதங்‌களை யெல்லாம்‌ ப்ரஸாதித்தருளி மேலிலங்குவானான கலங்காப்‌ பெரு நகரில்‌ சென்று இமையாத கண்ணீனராய்‌ வழுவிலா வடிமை
செய்யப்‌ புறப்பட்டெழுந்தருள நாலு நாள் என்னவே, :’“நாலாயிரமும்‌ தொடங்கி நடத்துங்கோள்‌” என்று நாயனார்‌ தொடக்கமான முதலிகளுக்கு நியமித்தருள, அவர்களுமப்படியே தொடங்கி அநுஸந்திக்க, இவைகளை யெல்லாம்‌ திருச் செவி சாத்தி யருளி
-ஜீயரும்‌ உகப்புடனே -வளர்த்ததனால்‌ பயன்‌ பெற்றேன்‌ என்‌றருளிச்‌ செய்து, மஸ்தகாஞ்சலியாய்‌ ததர்த்தாநுபவ பாரவஸ்யததாலே நிமீலிதாக்ஷ யுகளராயிருக்க, “இப்போது திருவுள்ளத்திலோடுகிறதென்‌?” என்று கந்தாடை யண்ணன்‌ கேட்டருள, “ஈட்டில்‌ அர்த்த ரஸம்‌ தலை மண்டி யிட்டுச்‌ செல்கிறது” என்று அருளிச் செய்து, அப்படியே நடக்கும் போது *மருளொழி நீ மட நெஞ்சே என்னும்‌ தசையை ப்ராப்தராய்‌ இங்ஙன்‌ ஏகாதசி சென்று மற்ற நாள்‌ திருத்‌ த்வாதசியிலே உத்தம நம்‌பி தொடக்கமான அனைத்துப் பரிகரத்தையும்‌ அழைப்பித்து ‘ஸர்வாபராதங்களையும்‌ பொறுத்தருள வேணும்‌”’ என்று ஷாமணம் பண்ணிக் கொள்ள, அவர்களும்‌ தேவரீருக்குமோரபசாரமுண்டோ?’? என்று அருளிச் செய்ய, மீளவும்‌ அவர்களைக்‌ குறித்து ‘பெரிய பெருமாளுடைய ஸ்ரீகார்யத்‌தைக்‌ குறைவற நடத்திக் கொண்டும்‌, ஸ்ரீவைஷ்ணவர்களை
வரவளைத்துக் கொண்டும்‌ போருங்கோள்‌”” என்‌றருளிச் செய்துப்‌ போக விட்டு, திருவாராதநம்‌ [திருவாராதந எம்பெருமான்‌ ஆசாரியர்‌ திருமேனிகள்‌], ஸ்ரீகோசங்கள்‌, மற்றுமுண்டான உபகரணங்கள்‌, மடம்‌ முதலான எல்லாவற்றையும்‌ :யஸ்யை தே தஸ்ய தத் தநம்‌’‘என்னும்படி நம் பெருமாளுக்கு சேஷமாக்கி ஸமர்ப்‌பித்து, ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்வித்து அவர்கள்‌ தீர்த்‌தமும்‌ ஸ்வீகரித்து அபராத ஷாமணம்‌ பண்ணிக் கொண்டு எழுந்‌தருளி யிருக்க, முதலிகளும்‌ பலிதமான வ்ருக்ஷத்தை பக்ஷி ஜாதங்கள்‌ காத்துக்‌ கொண்டிருக்குமா போலே பரிந்து ஸேவித்துக் கொண்டு அஞ்ஜலி பத்மதங்களை யுடையராய்‌ அநுபவித்துக் கொண்டிருக்க, ஆதித்ய அஸ்தமான வாறே தத் காலீந கர்மத்தையுஞ்‌ செய்தருளி பிள்ளை திருவடிகளே சரணம்‌-வாழி உலகாசிரியன்‌” என்றநுஸந்தித்துப்‌ பிள்ளையை த்யாநித்துக்‌ கொண்டு அவசராக அணையிலே சாய்ந்தருள, ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும்‌ கை கூப்பிக்‌கொண்டு ப்ரஹ்‌ம வம்லி ப்ருகு வல்லி, சூழ்விசும்பணிமுகில்‌, அர்ச்‌சிராதி, நூற்றந்தாதி இவைகளை அநுஸந்திப்பாராய்‌ பெரிய ஆரவாரத்துடளே செல்லுகிறவளவி3ல அங்கயல் பாய் வயல் தென்‌னரங்கன்‌ [இரா. நற்‌. 108] என்ற பாசுரத்தை ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அநுஸந்திக்கக் கேட்டு தாமும்‌ க்ருதாஞ்ஜலிபுடராய்‌ ”எம்‌பெருமானார்‌ திருவடிகளே சரணம்‌”’ என்றநுஸந்தித்து தத் கத சித்தராய்த்‌ திருக் கண்களைச்‌ செம்பளித்துக்‌ கொண்டிருக்க:

ஜீயர்‌ திருநாட்டுக்கெழுந்தருளியது
*கநசகிரி மேலே கரிய முகல்போல விநதை சிறுவன்‌ மேற்‌ கொண்டு என்றும்‌, எந்தை திருவரங்கரேரார்‌ கருடன்‌ மேல்‌ வந்து முகங் காட்டி வழி நடத்த
என்றும்‌ இவர்‌ அபேக்ஷித்தபடியே பெரிய
பெருமாளும்‌ -செழும்பறவை தானேறித் திரிவாராய்த்‌ தம்‌ தாளிணையை இவர்‌ திருமுடி மேலே வைத்து –மஞ்சுயர்‌ பொன் மலை மேலெழுந்த மாமுகில் போன்ற தன்‌ வடிவை ஸாக்ஷாத்கரிப்பித்து
அநுபவிப்பிக்க அநுபவித்து – உன் சரணந் தந்தென்‌ சன்மங் களையாயே என்றும்‌ ”ஸுகேநேமாம்‌ ப்ரக்ருதிம்‌ ஸ்தூல ஸூஷ்ம ரூபாம்‌ விஸ்ருஜ்ய’ ‘ என்றும்‌,-நோய்களாலென்னை நலங்காமல்‌ சதிராக
உன்‌ திருத்தாள்‌ தா என்றும்‌ -நிரதிசய போக்யமான திருமேனியை விடுவித்து அங்‌கீ கரிக்கப்பெற்று, மாதவன்‌ தன்‌ துணையா நடந்‌தாள்‌ என்றும்‌ அரங்கத்துறையுமின்‌ துணைவனொடும்‌ போய்‌ என்றுஞ்‌ சொல்லுகிறபடியே
ஸ்ரீயபதியான பெரிய பெருமாள்‌ பெரிய திருவடி மேற்கொண்டு ஹார்த்தன்‌ வழி நடத்த, ஸுஷும்‌நை யாகிற வாசலிலே புறப்பட்டு சிர:கபாலத்தை பேதித்து ப்ரஹ்மரந்த்ரத்தாலே ஜீயர்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌

அநந்தரம்‌ பெரிய பெருமாளும்‌ ‘விஸ்ருஜ்ய லஷ்மணம்‌ ராமோ துக்க ஸோக ஸமந்வித :- [இளையபெருமாளைப்‌ பிரிந்த ராம பிரான்‌ சோக துக்கங்களின்‌ வசமானான்‌] என்கிறபடியே ‘ஸெளமித்ரிர்மே ஸகலு பகவாந்‌ ஸெளம்ய ஜாமாத்ரு யோகீ – (ஸெளம்ய ஜாமாத்ரு யோகி-மணவளவாளமாமுனிகள்‌ இளைய பெருமாளே] என்கிற இளைய பெருமாளவதாரமான ஜீயரையும்‌ வழி விட்டு வந்து, இளைய பெருமாளைப்‌ பிரிந்து ஒரு பகலாயிரமூழியாய்‌ அமுது செய்யாதே முசித்துக்‌ கொண்டு பெருமாளிருந்தாப்போலே இவரும்‌ அமுது செய்யாதே முசித்து மூடிக்கிடந்தார்‌. ஸ்ரீ பாதத்து முதலிகளெல்‌லாரும்‌ –ஐயோ கண்ணபிரான்‌! அறையோ! முறையோ? அரவணை மேல்‌ பள்ளி கொண்ட முகில்‌ வணணனே| என்று பெரு மிடறு செய்து கையெடுத்துக்‌ கூப்பிட்டுக்கொண்டு துடிக்க,அருகிலிருந்த முதலிகள்‌ தேற்றத் தேறி தின்று இப்படி யெழுந் தருளின அவருடைய அந்திம தசையை எல்லாருமறிந்து உஜ்ஜீவிக்‌கும்படி
கும்பம்பாஸ்வதி யாதி தத் ஸுததிநே பஷே வள க்ஷேதரே
த்வாதஸ்யாம்‌ ஸ்ரவணர் க்ஷ்பாஜி ருதிரோத் கார்யாக்ய ஸம்வத்ஸரே |
தீ பக்த்யாதி குணார்ணவோ யதி வராதீநாகிலாத்ம ஸ்த்திதி:
ஸ்ரீ வைகுண்ட மகுண்ட வைபவமகாத்‌ காந்தோ பயந்தா முநி : ॥

ஜ்ஞாந பக்தி வைராக்யம்‌ முதலான குணங்களுக்கு மஹா ஸமுத்ரம்‌ போன்றவரும்‌, எம்பெருமானாருக்கு ஸ்வாதீநமான தமது ஸமஸ்தமான நிலைகளையு முடையவருமான மணவாளமாமுனிகள்‌ ருதிரோத்காரி ஸம்வத்ஸரத்தில்‌ சூரியன்‌ கும்ப ராசியை யடைந்த அளவில்‌ (மாசி மாதத்தில்‌) சனிக் கிழமையில்‌ க்ருஷ்ண பக்ஷத்த்தில்‌ திருவோண நக்ஷத்ரம்‌ கூடிய த்வாதசி தினத்தன்று எல்லை யற்ற பெருமை யுள்ள ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தருளினார்‌-
என்று அங்குத்தைக்கு அந்தரங்கர்கள்‌ அருளிச் செய்தார்கள்‌-
அவ்வளவு மன்றிக்கே,
ஆசிலாத மணவாள மா முனி யண்ணல் பூமியுறு வைப்‌பசியிற் றிருமூலம்‌
தேச நாளது வந்தருள் செய்த நந் திருவாய் மொழிப்பிள்ளை தா
ளீசனாகி யெழுபத்து மூவாண்‌ டெவ் வுமிர்களையு முய்வித்து வாழ்ந்தனன்‌
மாசி மால்‌ பக்கத் துவாதசி மா மணி மண்டபத் தெய்தினன்‌ வாழியே

என்று இப்படி அவர்‌ தோன்றியது முதலாகத்‌ தன்னுலகம்‌ புக்க தீறாகப்‌ பேசித்‌ தலைக் கட்டினார்களிறே-

(ஜீயர் நாயனாரும் வான மா மலை ஜீயரும் -மா முனிகளின் இரண்டு பக்கமும் சேவை சாதிக்கிறார்கள் -கந்தாடை அண்ணனும் உத்தம நம்பியும் தூணில் இரண்டு பக்கமும் மா முனிகளின் நிஜ ஸ்வரூபத்துடன் சேவை சாதிக்கிறார்கள் -)

(பெரிய அவசரமான பின்பு திருமூலத்தில் பிரஸாதம் வரும் -திரு அத்யயன த்துக்கு முன்பே வந்து அரங்கன் அர்ச்சகர் மா முனிகளுக்கு அமுது செய்யப் பண்ணி பின்பு தான் அரங்கனுக்கு கோயிலே ஏறி அமுது செய்யப் பண்ணுவார்)

ஜீயருக்கு சரம கைங்கர்யங்கள்‌
அநந்தரம்‌ ஜீயருக்கு சரம கைங்கர்‌யங்களைச்‌ செய்வதாக முதலிகளெல்லாரையுங் கூட்டிக்கொண்டு ஜீயர்‌ நாயனார்‌ திருக் காவேரிக்‌ கெழுந்தருளி நீராடி அலங்காரத் திருமஞ்சனங் கொண்டு வந்தருளி
ஜீயரைத்‌ திருமஞ்சநம்‌ கொண்டருளப் பண்ணுவதாக ஒரு திருமஞ்‌சந வேதிகையிலே விமல சரம விக்ரஹத்தை யேறி யருளப் பண்ணி புருஷ ஸுக்தா நுஸத்தத்தாலும்‌ த்வயாநுஸந்தாத்தாலும்‌ மற்று முண்டான அநு ஸந்தாநத்தாலும்‌ திருமஞ்சநங்‌ கொண்டருளப்‌ பண்ணி திருவொற்று வாடை சாத்தி, திருப் பரியட்டஞ் சாத்தி அலங்கரித்து, ‘விஸ்தீர்ண பால தல விஸ்புர தூர்த்வ புண்ட்ரம்‌”[விசாலமான திரு நெற்றியில்‌ மிக விளங்கும்‌ திருமண் காப்புடையவர்‌ ] என்றபடி த்வாதசோர்ந்த்வபுண்ட்ரங்களையும்‌ தரிப்பித்து தச் சேஷமான திருமண்‌ ஸ்ரீசூர்ணங்களை யெல்லாம்‌ தங்களுக்கு ஆபத் தநமாகச்‌ சேர்த்து வைத்துக்‌ கொண்டு, ஜீயரை திவ்ய ஸிம்‌ஹாஸநத்திலே ஏறி யருளப் பண்ணி அவர்‌ திருவடிகளைக்‌ கண்ணிலும்‌ நெஞ்சிலும்‌ ஒற்றிக் கொண்டு ஸ்வ சிரோ பூஷணமாக தரித்துக்‌ கொண்டு, அத்தன்‌ மணவாளயோகி அடியிணையைச்‌ சித்தப்‌ பெருங்கோயில்‌ கொண்டருளி என்று ஸூபாஸ்ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தைத் தம் தாம்‌ திருவுள்ளங்களில தேக்கிக் கொண்டு வைத்த கண் வாங்காதே விமல சரம விக்ரஹாநுபவம்‌ பண்ணிக்‌ கொண்டிருக்க :அவ்வளவிலே-௮ரங்கத் தம்மானரைச் சிவந்த வாடையையும்‌,-அவன் மார்வணிந்த வன மாலையையும்‌ பொற்றட்டிலே வைத்துக்‌ கொண்டு ஸகல வாத்ய கோஷங்களுடனே உத்தம நம்பி ஸிரஸா வஹித்துக்‌ கொண்டு அனைத்துக் கொத்துப் பரிகரத்துடனே மடத்து வாசலிலே செல்ல, முதலிகளும்‌ அவற்றை எதிர் கொண்டு தண்டன்‌ ஸமர்ப்பித்து அங்கீரித்து, உடுத்துக் களைந்த பீதக வாடை யுடுத்துக்‌ கலத்ததுண்டு தொடுத்த துழாய்‌ மலர்‌ சூடிக் களைந்தன சூடுமித் தொண்டரான ஜீயருக்கு அவற்றைச்‌ சூட்டி அலங்கரித்து, கோயில் அனைத்துப் பரிகரம்‌, ஆசார்ய புருஷர்கள்‌ ஜீயர்கள்‌, ஏகாங்கிகள்‌, ஸ்ரீவைஷ்ணவர்கள்‌, சாத்தாத முதலிகள்‌ மற்று முண்டானவர்க ளெல்லாருங் கூடி ஜீயரை ஸேவித்து, -செய்‌ய தாமரைத் தாளிணை வாழியே என்று தொடங்கி அநுஸந்தித்து மங்களா சாஸநம்‌ பண்ணி ”எம்பெருமானாரை ஸேவியாத இழவெல்லாம்‌ தீர்ந்தோம்‌ இவரை ஸேவித்து; இப்போது இவ் வவதாரமும்‌ தீர்த்தம்‌ ப்ரஸாதித்துப்‌ போவதே! என்று மிகவும்‌ துக்காபிதப்தராய்‌ (சோகித்து, பின்பு அங்கிருந்த முதலிகள்‌ தேற்‌றத் தேறி நின்று ஸந்நிதியில்‌ முதலிகளெல்லாரையுங்‌ கூட்டிக்‌ கொண்டு யதா க்ரமத்திலே ஸ்ரீசூர்ண பரிபாலநத்தையும்‌ நடத்தி தச் சேஷமான ஸ்ரீசூர்ண ப்ரஸாதங்களைத்‌ தாங்களும்‌ தரித்துக்‌ கொண்டு, பின்பு எண்ணெய்‌ சுண்ணங் கொண்டாடி திவ்யாலங்க்ருதமான புஷ்பக விமாநத்திலே ஜீயரை ஏறி யருளப் பண்ணி வைத்து எல்லோரும்‌ ஸ்ரீபாதந் தாங்கிக்‌ கொண்டு சத்ர சாமர தால வ்ருத்தாதிகள்‌ பணிமாற, மஹாஸம்ப்ரமத்துடனே மத்தளங்‌கள்‌ சங்க காஹள பேரிகள்‌ தொடக்கமான ஸகல வாத்யங்கள்‌ கடல்‌ போலே முழங்க,
பதாகா த்விஜிநீம் ரம்யாம்‌ தூர்யோ த்ருஷ்ட நிகாதநீம்‌ |
ஸிக்தராஜ பதாம் ராம்யாம்‌ க்ருத்ஸ்நம்‌ ப்ரகீர்ணகுஸு மோத்கராம்‌ ॥

[நகரத்தையும்‌ மார்க்கத்தையும்‌ அலங்கரித்தக்‌ க்ரமம்‌-அங்கங்கே நாட்டிய கொடிகளால்‌ அழகியதாய்‌, ஸகல வாத்ய கோஷங்களால்‌ சப்த மயமானதாய்‌, நீர் தெளித்து அலங்கரிக்கப் பட்டதாய்‌, புஷ்பங்‌களை ராஜ மார்க்க மெங்கும்‌ தெளித்து வைத்ததாய்‌ ஆக்கினார்கள்‌] என்கிறபடியே காவொத்த கமுகு, பல, கதாலிச் சோலைகளாய்‌ அரங்‌கன்‌ திருவீதி யெட்டிலும்‌ நாட்டி -மகர தோரணம்‌ மேற்கொடிகளாட -என்று சொல்லுகிறபடியே ஸர்வாலங்கார ஸம்ப்ருதையான எட்டுத் திரு வீதிகளிலும்‌ கரும்பேந்தி நூற்றந்தாதி முதலாக அநுஸந்திக்க, திரு நீர்‌ பரிமாற பொரியும்‌ புஷ்பமும்‌ சிதற “தர்‌சநத்திலே மணவாளமாமுனிகள்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌’-என்று ஒற்றைத் திருச் சின்னம்‌ பணிமாற ஸூமங்கலிகள்‌ தீப மெடுக்க, திரு வீதிகளிலே அங்குண்டானவர்களெல்லாம்‌ ஸேவிக்க எழுந்தருளப்‌ பண்ணு வைத்துக்‌ கொண்டு போய்‌;

திருப் பள்ளிப் படுத்தல்‌
மகிழாதி கேசவன்‌ தன்னடிக்கீழாக”? என்கிறபடியே ஆதிகேசவப் பெருமாள்‌ திருவடிக்கீழாக ௮வர்‌ திருவடி பிரியா வண்‌ணம்‌ தவராசன்‌ படுகையிலே பொன்னித் தென் பாலிலே (இங்கு சொல்லப்படும்‌ ஆதி கேசவப்‌ மெருமாள்‌ ஸந்நிதியையும்‌ மணவாளமாமுனிகள்‌ திருவரசையும்‌ தென் திருக் காவேரிப்‌
படுகையில்‌ இன்றும்‌ ஸேவிக்கலாம்‌; )எழுந்தருளப் பண்ண ஒருப்பட அவ் வளவிலே பூதேவி யானவள்‌ முன்பு ஜனக ராஜன்‌ திரு மகளை மடியில வைத்து அணைத்துக் கொண்டு ஆதரித்தாற் போலே அந்த மண்மகளான பிராட்டியும்‌ மணவாளமாமுனியான இவரையும்‌ மடியிலே எழுந்தருளப் பண்ணி வைத்‌துக் கொண்டு மகிழ, ஆளவந்தார்‌ எம்பெருமானாரைப்போலே யதி ஸம்ஸ்கார விதி யடங்கச்‌ செய்து கனித்து வாழும்படி திருப் பள்‌ளிப் படுத்தினார்கள்‌.

முதலிகள்‌ ஜீயர்‌ பிரிவாற்றாமல்‌ சோகித்தல்‌
அநந்தரம்‌ ”கதிரவன் போய்‌ குணபால் சேர்ந்த மகிமை போல்‌”-என்கிறபடியே கீழ்திக்கில்‌ ஒரூ ஆதித்யன்‌ அஸ்தமித்தாற் போல இருக்கையாய்‌ தத் ப்ரபாவஜ்ஞரான ஜீயர் நாயனார்‌ கந்தாடை யண்ணனுள்ளிட்ட முதலிகளெல்லாரும்‌
ஜீயரெழுந்தருளி விட்டார்‌ செக ழுழுதும்‌
போயிருள்‌ மீளப் புகுந்ததே தீய
வினை நைய வெம் புலனா லீடழிந்து மாய்வோ
ரனை வார்க்குமேதோ வரண்‌?

என்று மிகவும்‌ சிந்தாக்ராந்தராய்‌ துக்கித்து பின்பு சிஷ்யர்களான தாங்கள்‌ தங்களுடைய சேஷத்வாநுகுணமாக திருமுடி விளக்குவித்துக் கொண்டு பெருமாள் அவப்ருதம்‌ கொண்டாடுமா போலே அவப்ருதம்‌ கொண்டாடி மீண்டும்‌ மடத்திலே எழுந்‌தருளி வெறித்தான மடத்தைக் கண்டு –இல்லம்‌ வெறி யோடிற்‌றாலோ என்று ஆசார்ய விஸ்லேஷ அஸஹிஷ்ணுக்களாய்‌ மிகவும்‌
க்லேசித்து தங்களிலே தேறி நின்று
சீயர் திருத் தம்‌ பிரானாரே தென்னரங்க
மேய பெருமானே விண்ணப்பம்‌-காய விலங்‌
கெந்நாள்‌ விடுவீரெடுத்த பணி யுமக்குப்‌.
பன்னாளும்‌ செய்யும்படி –
-என்றும்‌
சீயரபிமானமே தேர்ந்தருளித்‌ தீ வினையோம்‌
காய விலங்கைக் கழித்தருளீர்‌–தூய புகழ்‌
நம்பெருமாளே! இமையோர்‌ நாயகரே!- நான்மறை தேர்‌
எம்பெருமானார்‌ பெருமாளே!
–என்றும்
தாயகலக்‌ கண்டு சிலுகிட் டடியேனை
மாயையிலே மூட்டி மருட்டாதே-சீயரே
காய விலங்கைக் கடுகெனவே தீர்த்தருளீர்
தூய திருத் தாளே தொழ-
-என்றும்
எழும் பாவி யைம் புலன்கள்‌ சொன்ன வண்ணம்‌ செய்து
தழும்பேறி வாழுந் தமியேன்‌-செழும் பொன்‌
மணவாள மா முனியே மா சுடலைத் தீர்க்குமின
முணவாக வாழ்ந்திடுகையோர்‌
–என்றும்
நானென தென்னும்‌ நரகத்திடை யழுந்திப்‌
போன விந்தக் காலமெல்லாம்‌ போதாதோ?-கான மலர்‌
மாலை யணி திண்டோண்‌ மணவாள மா முனியே
சால நைந்தேனுன்‌ பாதம்‌ தா-
-என்றும்
புண்ணாராக்கை தன்னுள்‌ புக்குழலும்‌ தீ வினையேன்‌
தண்ணாருமென் கமலத் தாளணைவ தென்று கொலோ
பண்ணாரு நால் வேதம்‌ பயின்றுய்யும்‌ பண்டிதனே
மண்ணாள வந்த மணவாள மா முனியே

என்று இத்யாதியான ஆர்த்தியை அவர் விஷயத்தில்‌ விண்ணப்‌பஞ்செய்து திருமிடறு தழுதழுப்பத்‌ திரு முத்துதிர்த்துத்‌ தங்களிலே தேறி நின்று வித்த்யுக்த ப்ரகாரேண செய்ய வேண்டுங்‌ க்ருத்யங்‌களை யெல்லாஞ் செய்து ஜீயர்‌ வைபவத்திற்கு அநுகுணமாகப்‌ பெருக்கத் திருவத்யயநம் நடத்தி யருளி தீர்த்த ப்ரஸாதங்களும்‌ ஸ்வீகரித்து, பின்பு தந்தாமுக்கு நியமித் தருளின கைங்கர்யங்களைச்‌ செய்து கொண்டு போந்தார்கள்‌

அநந்தரம்‌ –இஷ்வாஹூணாம்‌ குலதநம்‌’”’ என்னும்படியான-பெரிய பெருமாளும்‌ ஜீயர்‌ நாயனாருக்குக்‌ குலதநமான ஸ்ரீரங்கராஜரையும்‌ மடத்தையும்‌ நேக்கிக்‌ கொண்டு போருமென்று திரு வுள்‌ளமாய்‌, தீர்த்தம்‌, திருமாலை, திருப்பரியட்டம்‌, ஸ்ரீசடகோபன்‌ எல்லாம்‌ ஸாதித்து வாழ்வித்தருளினார்‌. இத்தைக் கண்டு ஜீயருடைய அபிமாநாந்தர்ப் பூதரெல்லாரும்‌ ஹர்‌ஷ ப்ரகர்ஷ யுக்தராய்‌ ஜீயர்‌ நாயனாரை பெரிய ஜீயரைக்‌ கண்டாப்‌ போலே கண்டு அநுவர்‌த்தித்து ஸேவித்துக்‌ கொண்டிருந்தார்கள்‌.

(இப்பொழுது மா முனிகளின் 27 தலைமுறை கோமடத்து வம்ஸர் இன்றும் மா முனிகள் மடம் பரிபாலனம் செய்து வருகிறார்)

ஜீயர்‌ நாயனார்‌ ஸ்ரீபாஷ்யம்‌,திருவாய்மொழி ஈடு பெறுதல்‌.
கந்தாடை யண்ணனும்‌ ஆசார்ய நியமனத்தின் படியே ஆசார்ய பெளந்ரரான ஜீயர்‌ நாயனாருக்குத் திருவாய்‌ மொழியினீட்டை ப்ரஸாதித்தருளினார்‌. அநந்தரம்‌ ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணாவும்‌ ஸ்வாசார்ய நியமனததின் படியே நாயனாருக்கும்‌ கத்தாடை நாயனுக்கும்‌ ஸ்ரீபாஷ்யம்‌ ஸாதித்தருளி,
ஸ்ரீமாந்‌ ஸுந்தர ஜாமாத்ரு முநி: பர்யாய பாஷ்ய க்ருத்‌ |
பாஷ்யம்‌ வ்யாகுருதே தஸ்ய ஸ்ரோத்ரு கோடெள மமாந்வய; ॥

[பாஷ்யகாரருடைய புநவரவதாரமான, கைங்கர்ய ஸ்ரீமானான மணவாள மாமுனிகளே ஸ்ரீபாஷ்யத்தை விளக்கிக்‌ கொண்‌டிருக்கிறார்‌. அந்த ஸ்ரீபாஷ்யத்தை அதிகரிப்பாருடைய கோஷ்‌டியிலே அடியேனுக்கு ஸம்பந்தமுள்ளது] என்று அதில்‌ தமக்குண்டான கர்த்ருத்வத்தையும்‌ கழித்துக்‌ கொண்டருளினார்‌,-பின்பு திருப்பதியே யிருப்பாக எழுந்தருளியிருந்த போளிப்‌பாக்கம்‌ போரேற்று நாயனார்‌ தொடக்கமானவர்களுக்கும்‌ ஸ்ரீபாஷ்யத்தை ப்ரஸாதித்தருளியும்‌, பட்டர் பிரான்‌ முனி பாத சேகராய்‌ தத்‌ வம்ஸ்யரான பர வஸ்து ஸ்ரீநிவாஸாசாரியருக்கும்‌ அவருக்கு ஸ ப்ரஹ்மசாரிகளான பரவஸ்து அழகிய மணவாள ஜீயருக்கும்‌, திருவாய்மொழி நாயனார்‌ என்று நிரூபகமாம்படி திருவாய் மொழியினீட்டை ப்ரஸாதித்தருளியும் , ப்ரதிவாதி பயங்‌ கர ரென்னும்‌ ப்ரஸித்தி தோற்ற ஸ்ரீராமாநுஜ ஸித்தாந்தத்தை ரக்ஷித்துப் போந்தார்‌,

வானமாமலை ஜீயர்‌ எழுந்தருளல்‌
அநந்தரம்‌ அழகிய வரதரான வானமாமலை ஜீயர்‌ வடதேசத்தினின்‌றும் எழுந்தருளி ஜீயர்‌ திருநாட்டுக் கெழுந்தருளின வருத்தாந்‌தத்தை பெரிய திருமலை யருகே கேட்டு மிகவும்‌ ப்ரலாபித்தருளி
திருமலை யேற வெழுந்தருளி அங்கே சிறிது காலம்‌ பாடாற்றிக்‌ கொண்டு எழுந்தருளி யிருந்து கைங்கர்யார்த்தமாகக்‌ கூட்டின த்ரவ்யங்களை யெல்லாம்‌ கொண்டு கோயிலேற வெழுந்தருளி மடத்‌திலே சென்று போர க்லேசித்து ஜீயர்‌ நாயனாரையும்‌ ஸேவித்து-உடனே வானமாமலை யேற வெழுந்தருளி, கைங்கர்யங்களை எல்‌லாம்‌ தலைக்கட்டி யருளி மீண்டு திருமலை யேற வெழுந்தருளி நடுவே எறும்பியிலே சிலநாளெழுந்தருளி யிருந்து சுத்த ஸத்வ மணணாவுக்கும்‌ போளிப்பாக்கம்‌ நாயனாருக்கும்‌ திருவாய்மொழயின்‌ ஈடு முதலாக பகவத் விஷயத்தை ப்ரஸாதிந்தருளி மீண்டு வான
மாமலை யேற வெழுந்தருளி தெய்வ நாயகன்‌ கைங்கர்ய ஸாம்ராஜ்‌யத்துடன்‌ வாழ்ந்து கொண்டிருந்தார்‌.

பட்டர்பிரான்‌ ஜீயர்‌ அந்திமோபாய நிஷ்டை அருளியது
பட்டர்பிரான்‌ ஜீயரும்‌ ‘வடமாமலைக்கதிபர்‌ பட்ட நாதமுனி’ என்கிறபடியே திருமலையிலே எழுந்தருளி யிருந்து அண்ணராய சக்ரவர்த்தி, நாயனார்‌, தோழப்பர்‌ தொடக்கமான அனேகாத்‌ மாக்களைத்‌ திருத்தி இந்தத் தரிசன ப்ரவர்த்கர்களாக்கி யருளி பர வஸ்து அண்ணரையும, பரவஸ்து அழகிய மணவாள ஜீயரையும்‌ ஸத் புத்ர ஸச் சிஷ்யர்களாச அபிமானித்து ஸத் ஸம்ப்ரதாய ப்ரவர்‌த்‌தகராம்படி திருத்தி யருளி அகிலாத்மாக்களும்‌ உஜ்ஜீவிக்கும்படி அந்திமோபாய நிஷ்டா க்ரேஸரர்‌ என்னுமது தோற்ற “அந்தி மோபாய நிஷ்டை” என்கிற சரம ரஹஸ்‌ய ப்ரபந்தத்தை யருளிச்‌ செய்து வாழ்வித்தருளியும்‌.

அந்திமோபாயநிஷ்டாயா வக்தா ஸெளம்ய வரோமுநி; ॥
லேககஸ்யாந்வயோ மே அத்ர லேகநீ தாள பத்ரவத்‌ ॥

[அந்திமோபாய நிஷ்டா எனுமிந்த க்ரந்தத்தை அருளிச்‌ செய்‌தவர்‌ மணவாளமாமுனிகள்‌ ஒலை போலவும்‌ எழுத்தாணி போலவும்‌ பட்டோலையில் இதை எழுதும் தொடர்பே அடியேனுக்‌ குள்ளது] என்றும்‌
எந்தை மணவாள யோகி யெனக்களித்த
அந்திமோபாய நிட்டையாமிதனைச்‌-சிந்தை செய்திங்‌
கெல்லாரும்‌ வாழ வெழுதி வைத்தேனிப் புவியில்‌
நல்லறி வொன்‌ றில்லாத நான்‌

என்று அதில்‌ தமக்கு கர்த்ருத்வ ராஹித்யத்தையும்‌ அருளிச் செய்து உபகரித் தருளினார்‌.

(ஐப்பசி மூலம் தாயார் மாலைப்பிரசாதம் முதல் ஐந்து நாள்களிலும் -பெருமாள் மாலைப் பிரசாதம் இறுதி ஐந்து நாள்களிலும் வரும்-விட்டவன் விழுக்காடு பகல் பத்து ஆறாம் நாள் பிரசாதமும் மா முனிகளுக்கு இன்றும் வரும்)

திருநாராயண புரத்தில்‌ திரு நந்தவன கைங்கர்யம்‌
ஆசார்ய பரதந்த்ரரான பட்டர் பிரான்‌ ஜீயர்‌ திருவடிகளிலே ஆச்ரயித்த தோழப்பரும்‌ அவர்‌ திருத் தமையனாரான அழகிய மணவாள தாஸ நானாரும்‌ ஜீயர்‌ நியமனத்தின் படியே அரங்கத்‌துறைவா ரநுமதியடனே திரு நாராயண புரத்திலெழுந்தருளி, எம்பெருமானாருக்கும்‌ செல்வப் பின்ளைக்கும்‌ திரு நாராயணப்‌ பெருமாளுக்கும்‌ திரு நந்தவனம்‌ தொடக்‌கமான எல்லா வடிமைகளும்‌ செய்து கொண்டு அங்கே அனேகரையும்‌ ஜீயரபிமானாந்தர்‌ பூதராம்படி திருத்தி ஸ்ரீசைலத்துற்கு மேற்கும்‌ ஸ்ரீசைலே தயா பாத்ரரின்‌ வைபவத்தை வர்த்திப்பித்துக்‌ கொண்டு எதிராஜர்‌ மடத்துக்குப்‌ பின்னடியிலே வாழ்ந்து கொண்டிருந்தார்‌. பின்பு அவர்கள்‌ ஸந்தான பரம்பரையிலுணடான ஐயன்‌ முதலானாரும்‌ அந்தக் கைங்கர்யங்களை அபிவ்ர்த்தமாக நடத்திக் கொண்டு போந்‌தார்களிறே.

எறும்பி யப்பாவின்‌ ஆர்த்தி
பின்பு அழகிய மணவாள தாஸரான எறும்பி யப்பாவும்‌ ஜீயர்‌ திருநாட்டுக்‌கெழுந்தருளிள செய்தியைக் கேட்டு
வரவர முநி பதிர் மே தத் பதயுகமேவ ஸரண மநுரூபம்‌ |
தஸ்யைவ சரண யுகளே பரி சரணம்‌ ப்ராப்யமிதி நநு ப்ராப்தம்‌ |

[மணவாளமாமுனிகளே அடியேனுக்கு ஸ்வாமி; அவருடைய திருவடித் தாமரைகளே பேற்றுக் கநுரூபாமன உபாயம்‌; அவருடைய திருவடித் தாமரைகளில்‌ கைங்கர்யமே உபேயம்‌ என்றே அடியேனால்‌ அடையப்பட்டது; இதுவே எனது அத்யவஸாயம்‌ என்கிற நிஷ்டை யுடையவராகையாலே ஆசார்ய விச்லேஷாஹிஷ்‌ணுவாய்‌ அவர்‌ விஷயத்திலே ஆர்த்தி மிகுந்து
வபுரபி, ஸபதிமதீயம்‌ வரவர முநிவர்ய; மோசநீயமிதம்‌ |
பரிசரதி நஹி பவந்தம்‌ பகவநிநஹி பகவதபிமதா நபிவா ॥
–கல்யாண குண பூர்ணரான மணவாள மாமுநிவரே’ அடியேனுடைய இவ்வுடலும தேவரீரால்‌ இப்போதே விடுவிக்கத் தக்கது -இதனால் தேவரீருககு கைங்கர்யம்‌ செய்யப்‌ பெற்றதில்லை-எம்பெருமானடியார்களான பாகவதர்கள்‌ விஷயததிலுமில்லை. –என்றும்‌
இதி புநரேஷு விதந்நபி துரி தரதிர்தூர நிம்ந பதரூட: |
வரவர முநி வர கருணாம்‌ நிக்நந்‌ பத ந்ருபசு ரஸ்நுதே நியமாந்‌ ॥
-இவன்‌ மனிதவுடல் படைத்த விலங்கினம்‌!” என்னுமபடி, அறிவிருந்தும்‌ பாப கார்யங்களில்‌ ஆசை யுடையவனாய்‌ மிகத்‌ தாழ்ந்ததான நிலையிலிழிந்து மணவாளமாமுனிகளுடைய க்ருபையை யழித்துக்‌ கெண்டு கர்ம பலன்களை அநுபவிக்கிறான்‌–என்றும்‌
ஆயுரபஹரதி ஜகதாமய முதயம்‌ விலயமபி பஜந்‌ பாநு. |
மயி புநரிதம ந்ரு ஸம்ஸோ வரவர முநி வர்ய வர்த்தயத் யேவ ॥
-மணவாள மாமுனிகளே! இந்த ஸூரியன்‌ உதயத்தையும்‌ அஸ்தமனத்தையும்‌ செய்து உலகங்களின்‌ ஆயுளை அபகரிக்கிறான்‌.-அடியேன்‌ விஷயததில்‌ மட்டும்‌ கொடியவனாய்‌ இந்த ஆயுளை வளரச் செய்கிறான்‌–என்றும்‌
ததித பரமநுரூபம்‌ ந விளம்பிதுமிதி சிந்தயந்தயயா |
மலபாஜநாதி தோமாம்‌ வரவரமுநி வர்ய மோசயத்வரிதம்‌
–ஆதலால்‌, மணவாள மாமுனிவரே-அடியேன்‌ விஷயத்தில்‌ இனி கால விளம்பம்‌ செய்யத் தக்கதன்று.-தயை யுடைய மனத்தினராய்‌ இவ்வழுக்குடம்பினின்றும்‌ அடியேனை விடுவித் தருள வேணும்‌- என்கிறபடியே தம்முடைய ஆர்த்தியை ஆவிஷ்கரித்து குணாநுபவைக தத் பரராய்‌ தத் ஸேவாபி நிவேசத்தை யுடையராய்‌ ஜீயரைப்‌ பிரிந்து ஸம்ஸாரத்திலிருக்கு மிருப்பு பிராட்டி பெருமாளைப் பிரிந்து ராவண பவநத்திலே தனிச் சிறை யிருந்தாப் போலே அதிதுஸ்ஸஹமாய்‌ பொய்ந்நின்‌ற ஞானமும்‌ பொல்லா வொழுக்கு மழுக்குடம்பும்‌ இந் நின்ற நீர்மை யினியா முறாமை என்றும்‌, கூவிக் கொள்ளுங்கால மின்னங்‌ குறுகாதோ?-என்றும்‌, ஆவிக்கோர்‌ பற்றுக் கொம்பு நின்னலா லறிகின்‌றிலேன்‌ யான்‌ என்றுஞ்‌ சொல்லுகிறபடியே பெற்றல்லது தரிக்க கில்லாத பேரார்த்தியை யுடையராய்‌ ஒருபகலாயிர மூழியாய்‌ அவர்‌ திரு
நாமந் தன்னையே பலகாலும்‌ வாய் வெருவிக் கொண்டு முன்னடி தோற்றாதே திகைத்து மதி மயங்கி உன்மத்தர் போல்‌ பித்தேறி என்னும்படி எழுந்தருளி யிருந்தார்‌,

ஸ்ரீ பாதத்து முதலிகள்‌ தந் நிஷ்டராய்‌ வாழ்ந்தது
இப்படி ஜீயர்‌ திருவடிகளிலாஸ்ரயித்த முதலிகளெல்லாரும்‌ஆசார்யாபிமான நிஷ்டராய்‌ -யதீந்த்ர ப்ரவணரான ஜீயர்‌ திருவடிகளே தஞ்சமென்றிருங்கோள்‌”’ என்று தந் தாம்‌ சிஷ்யர்களுக்கு
அருளிச் செய்து எல்லாரையும்‌ வரவரமுநி ப்ருத்யராக்க அவர்களும்‌
அபகதமத மாநை: அந்திமோபாயநிஷ்டைஃ
அதிகத பரமார்த்தை ரர்த்த காமாநபேக்ஷை: |
நிகில ஜுஸுஹ்ருத்பிர்‌ நிர் ஜிதக்ரோத லோபை :
வர வர முநி ப்ருத்யைரஸ்துமே நித்ய யோக: ॥

[செருக்கும்‌ நான்‌ சுதந்திரனென்னும்‌ அபிமான முமில்லாதவர்களும்‌, கருமம்‌ ஞானம்‌ பக்தி ப்ரபத்தி ஆசார்யாபிமானம்‌ என்பவற்றில்‌ ஐந்தாமுபாயமான ஆசார்யாபிமானத்தில்‌ ஊன்‌றியவர்களும்‌, புருஷார்த்தத்தின்‌ எல்லையான ஆசார்ய கைங்‌கர்யத்தை யடைந்தவர்களும்‌, செல்வத்திலும்‌ அதைக்‌ கொண்டு அனுபவிக்கும்‌ சிற்றின்பத்திலும்‌ ஆசை யற்றவர்களும்‌ பகைவரிடமும்‌ நல்ல மனமுடையவர்களும்‌ கோபத்தையும்‌ உலோபித் தனத்தையும்‌ வென்றவர்களுமாகிய மணவாளமா முனி சிஷ்யர்‌களுடன்‌ சேர்க்கை அடியேனுக்கு உண்டாக வேணும்‌] என்கிற படியே ஜீதாரிஷட் வர்க்கமாய்‌ த்ரணீ க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதிகளை யடையராய்‌ அதிகத பரமார்த்தராய்‌ அந்திமோபாய நிஷ்டராய்‌ ஆஸ்திகாக்‌ரேஸரராய்‌, இடைச் சுவர் தள்ளி இரண்டு விபூதியையு மொன்றாக்கிக்‌ கொண்டு எல்லாரும்‌ தத் நிஷஷ்டராய்‌ தத் ஸேவோத் ஸுகராய்‌ வாழ்ந்து கொண்டிருந்தார்கள்‌.
ஸ்ரீ ஸடாரி குரோர் திவ்ய ஸ்ரீபாதாப்‌ஜ மதுவ்ரதம்‌ |
ஸ்ரீமத்‌ யதீந்த்ர ப்ரவணம்‌ ஸ்ரீலோகார்ய முநிம்‌ பஜே ॥

இப்புவியில ரங்கேசர்க்‌ கீடளித்தான்‌ வாழியே
எழில்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை இணை யடியோன்‌ வாழியே
ஐப்பசியில்‌ திருமூலத் தவதரித்தான்‌ வாழியே
அரவரசப்‌ பெருஞ்சோதி அநந்தனென்றும்‌ வாழியே
எப்புவியும்‌ ஸ்ரீ சைலமேத்த வந்தோன்‌ வாழியே
ஏராருமெதிராசரென வுதித்தான்‌ வாழியே
முப்புரிநூல்‌ மணி வடமும்‌ முக்கோல் தரித்தான்‌ வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன்‌ வாழியே

செந்தமிழ்‌ வேதியர்‌ சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்‌
சீருலகாரியர்‌ செய்தருள்‌ நற்கலை தேசு பொலிந்திடுகாள்‌
மந்த மதிப்புவி மானிடர்‌ தங்களை வானிலுயர்த்திடு நாள்‌
மாசறு ஞானியர்சேரெதிராசர் தம்‌ வாழ்வு முளைத்திடு நாள்‌
கந்தமலர் பொழில் சூழ்‌ குருகாதிபன் கலைகள் விஎங்கிடு நாள்‌
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள்‌ களித்திடு நாள்‌
அந்தமில் சீர் மணவாளமுனிப் பரன்‌ அவதாரம்‌ செய்திடு நாள்‌
அழகு திகழ்ந்திடும்‌ ஐப்பசியில்‌ திரு மூலமதெனும்‌ நாளே.

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே |
ஸ்ரீரங்க வாஸிநே பூயாத்‌ நித்யஸ்ரீர் நித்ய மங்களம்‌ ॥

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-3–

May 17, 2026

ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

(மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)

ஜீயர்‌ நாயனார்‌ திரு வவதாரம்‌.
இப்படி ஸம்பந்த ஸம்பந்திகளும்‌ உத்தாரகராம்படி வைபவமுடைய ஜீயர்‌ தர்சநம்‌ நிர்வஹிக்கிற காலத்திலே ஜீயருடைய பூர்வாஸ்ரமத்தில்‌ குமாரரான நம்மையனிராமானுசன்‌ திருநகரியிலே வளர்ந்தருளி அங்கே திருக்கல்யாணஞ்‌ செய்தருளி சில காலத்‌துக்கு மேல்‌ அவருக்குக்‌ குமாரர்‌ திருவவதரிக்க, அவருக்கு – அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌?’ என்று ஜீயர்‌ திருநாமம்‌ சாத்தி
யருளினார்‌.
பின்பு அவர்‌ ஸ்ரீவில்லிபுத்தூரிலே யெழுந்தருளியிருக்க பின்னுமொரு குமாரர்‌ திருவவதரிக்க, அவருக்குத்‌ திருநாமமேதென்று ஜீயர்‌ ஸந்நிதியிலே கேட்டு வரக் காட்ட, ஸ்ரீவில்லிபுத்‌தூரிலே பிறந்த பிள்ளைக்கு பெயரேதென்று கேட்டு வர விடுவதென்‌! பெரியாழ்வார்‌ திருநாமம்‌ சாத்துங்கோள்‌” என்று அருளிச்‌செய்து போகவிட, அப்படியே ‘பெரியாழ்வாரையன்‌”” என்று திருதாமஞ்‌ சாத்தி யருளினார்‌. அவர்களும்‌ வளர்ந்து உபநீதநான பின்பு ஜீயர்‌ திருவடிகளிலே வந்தாஸ்ரயித்தார்கள்‌. அவ்விருவரும் அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌ ஜீயர்‌ திருவடிகளைப் பிரியாது ஆட்செய்து ஸேவித்திருந்தார்‌. ஸ்ரீபாதத்து முதலிகளெல்‌லாரும்‌ ஸ்வ புத்ரர்களுக்கு நாயனார்‌ என்று திரு நாமம்‌ சாத்துகையாலே இவருக்கும்‌ *’ஜீயர்‌ நாயனார்‌” என்றே நிரூபகமாயிருக்கும்‌. இவரும்‌ ‘ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு ஆளவந்தாரைப்‌ போலே தமக்குப்‌ பெளத்ரரான இவரை தர்சந ப்ரவர்த்தகாரம்படி விசேஷ கடாக்ஷம்‌ செய்தருளினார்‌. ஆசார்ய பெளத்ரரான அவரும்‌ தீபாதுத்பந்ந ப்ரதீபம்‌ போலே மிகவும்‌ ப்ரகாச மாநராயிருத்தார்‌.-இத்தைக்‌ கொண்டு ஸ்ரீபாதத்து முதலிகள்‌ அஸ்மாஸு வத்ஸல தயா க்ருபயாச பூய:
ஸ்வச்சாவதீர்ணமிவ ஸெளம்ய வரம்‌ மூநீந்த்ரம்‌
ஆசார்ய பெளத்ர மபிராமவராபிதாநம்‌
அஸ்மத் குரும்‌ குணநிதிம்‌ ஸததம்‌ ஸ்ரயாம: ॥

நம்மிடம்‌ வாத்ஸல்யத்தாலும்‌ பரம க்ருபையாலும்‌ தமதிச்சையாலே மணவாளமாமுனிகள்‌ மீண்டுமவதரித்தாரோ என்னலாம்‌படி யுள்ளவரும்‌ நற் குணங்களுக்கு நிதி போல விருப்பிடமும்‌,
ஆசாரியர்‌ திருப் பேரனாரும்‌, அபிராமவரர்‌ (அழகிய மணவாளர்‌) என்ற திருநாம முடையவருமான ஜீயர்‌ நாயனாரான அஸ்மதசார்‌யரை எப்போதும்‌ அடி பணிகிறேன்- என்று அநுஸந்தித்துப்‌
போந்தார்கள்‌.

ஜீயர்‌ ஆழ்வார்‌ திருநகரி யேற எழுந்தருளுதல்‌
அநந்தரம்‌ -எமரேழெழு பிறப்பும்‌ கேசவன்‌ தமரானார்கள்‌ என்‌னும்படி ஆழ்வாரபிமாநாந்தர்ப் பூதரில்‌ அக்ர கண்யரான ஜீயரும்‌-பகவந்‌ பவதுத்பவஸ்தலீ பவது ஸ்ரீநகரீகரீயஸீ” –கல்யாண குண பரி பூர்ணரே! தேவரீருடைய அவதார ஸ்தலமான திருகரியானது எல்லா விடங்களிலும்‌ உயர்ந்து விளங்கட்டும்‌–என்று சொல்லுகிற படியே, ஜீயர்‌ தமக்குப்‌ பிறந்தகமான ஆழ்வார்‌ திருநகரியிலே சென்று ஆழ்வாரைத்‌ திருவடி தொழ வேணுமென்று திருவுள்ளமாய்‌, குருகூர்நம்பி! முயல்கின்றேனுன் தன்‌ மொய் கழற்கன்‌பயே -என்றபடியே உத்ஸாஹத்தை யுடையராய்‌, நம்பெருமாளை ஸேவித்து அநுமதி கொண்டு நம்மாழ்வாரை ஸேவிக்கப்‌ புறப் பட்டருளி அரங்கத்‌ துறையுமின் துணைவனே வழித் துணையாக எழுந்தருளி, திருவாய்மொழிப் பிள்ளை திருவவதார ஸ்தலமான குந்தீ நகரத்திலே த்ரிராத்ர மெழுந்தருளி யிருந்து,

சித்தந் திருமால் மேல்‌ வைத்தருளும்‌ சீர் மன்னர்‌
நத்தமிது காணு நாந் தொழில்‌–முத்தராய்ப்‌
போனாரே யாகிலும்‌ பூங் கமலத்தாள்‌ கடனைத்‌
தாமார வைத்தார்‌ தலம்‌-
என்றநுஸந்தித்து, ஸேவித்துப்‌ புறப்பட்டருளி,
யாநி யாநிச திவ்யாநி தேஸே தேஸே ஜகந்திதே: |
தாநிதாநி ஸமஸ்தாநி ஸ்த்தாநாநி ஸமஸேவத ॥

அவ்வோ இடங்களில்‌ எம்பெருமானுக்கு எந்தெந்த உகந் தருளின திவ்ய தேசங்கள்‌ உண்டோ அந்தந்த ஸ்தலங்கள்‌ எல்லாவற்‌றையும்‌ திருவடி தொழுதார்‌–என்றும்‌ தானுகந்த வூரெல்லாம்‌ தன் தாள் பாடி -என்றுஞ் சொல்லுகிறபடியே வழியிலுண்டான திருப்‌பதிகளை யெல்லாம்‌ திருவடி தொழுது அவ்வவ் விடங்களிலே தத் ஸ்தலோசிதமான மங்களசாஸநங்களைப்‌ பண்ணி ஸேலித்தருளி,
வைகுண்டநாத விஜாயஸந பூமி பாலாந்‌ தேவேஸ பங்கஜ விலோசந சோர நாட்யாந் |
நிக்ஷிப்த வித்த மகராலய கர்ண பாஸாந் நாதம்‌ நமாமி வகுளாபரணேந ஸார்த்தம்‌ ॥

ஸ்ரீவைகுண்டநாதன்‌, விஜயாஸநர்‌, பூமிபாலர்‌ தேவபிரான்‌,(புளிங்குடி ) ‘ அரவிந்த லோசநர்‌ (துலை வில்லி மங்கலம்‌), சோரநாட்‌யர்‌ (மாயக் கூத்தர்‌), வைத்த மா நிதி, மகர நெடுங் குழைக் காதர்‌, வகுளாபரணரான ஆழ்வாருடன்‌ ஆதி நாதரையும்‌ திருவடி தொழுகிறேன்‌- என்கிறபடியே அஷ்ட தளம்‌ போலவே யிருக்கிற ஸ்ரீவைகுண்டம் முதலான திருப்பதிகளை ஸேவித்து, தத் கர்ணிகை போலிருந்துள்ள திருநகரியை திருக் குருகூரதனைப் பாடி யாடிப்‌ பரவிச்‌ சென்மின்கள்‌ என்று அத்யந்தம்‌ ஹர்ஷ ப்ரஹர்ஷத்துடன்‌ சென்று கிட்டி திருத் தாமிரபரணிச்‌ சங்கணித்‌ துறையிலே நீராடி–கேசவன்‌ தமரில்படியே திரு த்வாதச நாமங்களையும்‌ சாத்தி யருளித் தாமும்‌ முதலிகளுமாக குயில் நின்றார்‌ பொழில்களையும்‌, செந்தாமரைத்‌ தடங்களையும்‌, அதிலே அறு கால வரி வண்டிசை பாட-அன்னமென்‌ கமலத் தணி மலர்ப் பீடத்து அலை புனலிலைக் குடை நீழல்‌ செந் நெல் ஓண்‌ கவரி யசைய வீற்றிருக்கும்‌ (திருமொழி 9-1-5) படியையும்‌ செம் பொன்‌ மாடங்களையும்‌, உயர்ந்த திருமாளிகைகளையும்‌ சிரங்களாலமரர்‌ வணங்கும்‌ திருக்குருகூர்‌ என்ற ஊரையும்‌ அனுபவித்து

புக்ககத்தினின்‌றும்‌ பிறந்தகத்தில்‌ போந்தது போல்‌
தக்க புகழ்த் தென்னரங்கந் தன்னினின்றும்‌–மிக்க புகழ்‌
மாறன்‌ திருநகரி வந்தோம்‌ அரங்கன்‌ தன்‌
பேறன்றோ? நெஞ்சே! இப்போது–

என்றநுஸந்தித்துக்‌ கொண்டு எழுந்தருளி யிருக்கிற வளவிலே-நல்லார்‌ பலர் வாழ்‌ திருக்குருகூரிலுண்டான ஸத்துக்களெல்‌லாரும்‌ குழாங்‌ குழாமாக வந்து திருவடிகளிலே ஸேலிக்க, அவர்‌களையும்‌ கிருபை பண்‌ணி யருளி, அவர்களுடனே கூட வெழுந்தருளி,
பிரதமம்‌ எம்பெருமானாரை ஸ்ரீமாதவாங்கரி என்று தொடங்கி,
ராமாநுஜம்‌ யதிபதிம்‌ ப்ரணமாமி மூர்த்நா*(யதிராஜ விம்சதி-1) என்று ஸேவித்தருளி,
அதி ப்ரீதியடனே தீர்த்தம்‌ ப்ரஸாதப்பட்டு, அங்கு நின்றும்‌ புறப்பட்டு, பிள்ளை (திருவாய்மொழிப்‌பிள்ளை ) திருமாளிகை யேற வெழுந்தருளி தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளே புகுந்து இன வாயர்‌ தலைவனையும்‌ மங்களாசாஸநஞ்‌ செய்தருளி,-நம: ஸ்ரீஸைல நாதாய என்றநுஸந்தித்து, பிள்ளை எழுந்தருளி யிருந்து வ்யாக்யானஞ்‌ செய்தருளின ஸ்தலத்தையும்‌ ”தம்மை விஷயீகரித்த இடமன்றோ!” என்று ஸேவித்து, அங்கு நின்றும்‌ புறப்பட்டு,குன்‌றம் போல்‌ மணி மாடங்களையும்‌ “செம் பொன்‌ மாடங்களையும்‌ ஸேவித்துக்‌ கொண்டு போய்‌ உபய ப்ரதாந ப்ரணவமான உறை கோயிலிலே புக்கு, ‘வகுளாபரணம்‌ தேவம்‌ ஸ்வ குலாபரணம்‌ யயெள” -தமது குலத்துக்கு பூஷணமான பூஜ்யரான நம்மாழ்‌வாரைக்‌ கிட்டினார்‌-ஆஸ்ரயித்தார் – என்கிறபடியே முந்துற நாட் கமழ்‌ மகிழ் மாலை மார்பனான ஆழ்வார்‌ திருவடிகளைச்‌ சென்று கிட்டி, மாதா பிதா என்று தொடங்கி -வகுளாபிராமம்‌ ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம்‌ ப்ரணமாமி மூர்த்நா என்றநுஸந்தித்து ஸேவித்தருளி, கண்ணி நுண் சிறுத் தாம்பை யநுஸந்தித்து, அன்னையாய் யத்தனாய்‌ என்கிற பாட்டின் படியே ஸர்‌வ வித பந்து விசேஷங்களெல்லாம்‌ தமக்கு ஆழ்வாரே யென்று தோற்றும்படி அதி ப்ரேமத்துடனே அநுபலித்துக்‌ கொண்டு அஞ்ஜலித்து நிற்க, ஆழ்வாரும்‌ தேசாந்தர கதனான புத்ரனைக் கண்ட மாதா பிதாக்களைப்‌ போலே காரி மாறப் பிரானார்‌ தாம்‌. இவரைக்‌ கண்டு கொண்டிருந்து , பின்பு தீர்த்த ப்ரஸாதங்களையும்‌ ப்ரஸாதித்து ஸ்ரீராமாநுஜனையும்‌ ப்ரஸாதித்தருள. *செல்வச் சடகோபர்‌ தே மலர்த் தாட்‌ தேய்த்தினிய –பாதுகமா மெந்தை யிராமானுசனை வாய்ந்தெனது நெஞ்சமே வாழ்‌” என்றும்‌, “வகுளாலங்க்ருதம்‌ ஸ்ரீமச் சடகோபத் த்வயம்‌. அஸ்மத் குல தநம்‌ போக்யமஸ்துமே மூர்த்நி பூஷணம் ‘-மகிழ மலர்‌ மாலையால லங்கரிக்கப்பட்ட செல்வச்‌ சடகோபரின்‌ (ஆழ்வாரின்‌) இனிய திருவடியிணை அடியேனுக்கு சிரோ பூஷணமாய்‌ அமையட்டும்‌ என்று மநுஸந்தித்து ஹ்ருஷ்டராய்‌, அநந்‌தரம்‌ திரி தந்தாகிலும்‌ தேவ பிரானுடைக்‌ கரிய கோலத் திரு வுருக்‌ காண்பன்‌ நான்‌ என்கிறபடியே அவருகந்த விஷயமான பொலிந்து நின்ற பிரானையும்‌ மங்களாசாஸனம்‌ பண்ணிப்‌ புறப்பட்டருளி மடமே யெழுந்தருளி அங்கே சிறிது காலம்‌ எழுந்தருளி யிருந்தார்‌

அங்குண்டானவர்களெல்லாம்‌ இவரை அவதார விசேஷ மென்றறிந்து இவர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்தார்கள்‌. அவர்களை க்ருபை பணணி யருளி மாஹப்ரபாவரா யெழுந்தருளி யிருக்கிற காலத்திலே
சுருதித் தமிழ் மொழியுஞ்‌ சடகோபர் தம்‌ பாதத்தைக்‌
கருதிப்‌ பரவு மெதிராசராசன்‌ கவியமுதம்‌
வருதிக் கறிந்துரை செய்யுமோ மா முனிவன்‌ புகழ் போய்ப்‌
பருதிக் கதிர்‌ செல்லு மண்டலமேறப்‌ பரந்ததுவே

என்னும்‌ படியான இவர்‌ வைபவங்களெல்லா வற்றையும்‌ அறிந்து இருக்கிறவர்களுக்கு ஆழ்வார்களின்‌ திவ்ய ப்ரபந்தங்களின்‌ அர்த்த மருளிச்‌ செய்து கொண்டிருக்குங் காலத்திலே;

திருநாராயணாபுரத் தாயி யுடன்‌ ஸமாகமம்‌
ஆசார்ய ஹ்ருதயத்திற்குப்‌ பொருள்‌ அருளிச்‌ செய்யும் போது ‘ஜ்ஞாந சதுர்த்திகளின்‌ மேலே யிறே ஆநந்த ஷஷ்டிக் குதயம்‌।” என்கிற வாக்கியத்திற்கு அர்த்தம்‌ ஸ்வ ரஸமாக வாகாமையாலே இதற்கு அர்த்த மருளிச்‌ செய்வாராரென்று விசாரமுண்டால்‌ திரு நாராயண புரத்தாயி பக்கலிலே இவ் வர்த்தம்‌ கேட்க வேணும்‌ என்னும்‌ பேராசையோடே ஆழ்வாருக்கு விண்ணப்பஞ்‌ செய்து அவரநுமதி கொண்டு திருநாராயண புரத்துக்குப்‌ போவோ மென்று புறப்பட்டெழுந் தருளா நிற்க, ஆயியும்‌ ஜீயருடைய ப்ரபாவங்‌ கேட்டு இவரை ஸேவிப்பதாகத்‌ திருநகரிக்கு ஆஸந்தமாக, மார்க்க மத்யே வந்து ஸங்கதராக, அவரைக்‌ கண்டு எண்‌ணின பலம்‌ எதிரிலே வரப் பெறுவதே” என்று பெரிய ப்ரீதியோடே தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி நிற்க, ஆயியும்‌ தாளுந் தடக் கையுங்‌ கூப்பி ஸேவிக்க, இருவரும்‌ அந்யோந்யம்‌ வந்தந பரராய்‌ குசல ப்ரஸநம்‌ பண்ணி நிற்க, இத்தைக்‌ கண்டு ஜீயர்‌ ஸ்ரீபாதத்து முதலிகளெல்லாரும்‌ ‘பெரிய நம்பியும்‌ எம்பெருமானாரும்‌ எதிர்ப்பட்டாப்‌ போலே யாயிற்று” என்று மிகவும்‌ உகந்தருளினார்கள்‌. அநந்தரம்‌ குன்‌ற மாட திருக் குருகூரேற வெழுந்தருளி ஆயி பக்கலிலே ஆசார்ய ஹ்ருதய ரஹஸ்யார்த்தங்களை யெல்லாம்‌ கேட்டருளி,
ஆசார்ய ஹ்ருதயஸ் யார்த்தாஸ் ஸகலா யேந தர்ஸிதா: |
ஸ்ரீஸாநுதாஸ மமலம்‌ , தேவ ராஜம்‌ தமாஸ்ரயே ॥

[எவரால்‌ ஆசார்ய ஹிருதயத்தின்‌ எல்லா வர்த்தங்களும்‌ விளக்கமாகக்‌ காட்டப்பட்டதோ, தோஷமற்ற திருத் தாழ்வரை தாஸர்‌ என்ற அந்த தேவ ராஜரை (ஆயியை) அடி பணிகிறேன்‌ -என்று (ஸ்ரீ ஸாநு தாஸம்‌ என்று தெலுங்குப்‌ பதிப்பில்‌ பாடம்‌-ஆயிஸ்வாமிக்கு திருத்தாழ்வரை, தாஸர்‌ என்று திருநாமமுள்ளபடியால்‌ [௨. ர. மாலை 58ம்‌ பாசுர வ்யாக்யாநம்‌ காண்க ] ஸ்ரீஸாநு தாஸர்‌ என்ற பாடமே ஆதரணீயம்‌, ஸாநு-தாழ்வரை. –கிரிஸாது ஷுரம்ஸ்யஸே-அஹாம்‌ ஸர்வம் கரிஷ்யாமி*‘ எ்ன்‌று இளைய பெருமாள்‌ திருத் தாழ்வரை தாஸரானார்‌. )அந்த உபகார ஸ்ம்ருதிக்கு அவர் விஷயமாக ஒரு தனியன் அருளிச்‌ செய்தருள; ஆயி அதில்‌ தமக்கந்வய மற்றபடி தோற்ற,
பூதூரில்‌ வந்துதித்த புண்ணியனோ? பூங் கமழும்‌
தாதரு மகிழ் மார்பள்‌ தானிவனோ–தூதூர
வந்த நெடுமாலோ? மணவாள மா முனிவன்‌
எந்தை யிவர்‌ மூவரிலும்‌ யார்‌?

என்றருளிச்‌ செய்து ‘ஜீயரை அவதார விசேஷமென்று ஆதரித்துக்‌ கொண்டு அங்கே சில கால மெழுந்தருளி இருக்க; அதுவே ஹேதுவாக, ‘ஆயி திருநாட்டுக்‌ கெழுந்தருளினார்‌’ என்று திரு நாராயண புரத்திலுளள அஸுயாளுக்கள்‌ அவர்‌ திருமாளிகையிலுள்ள ஸர்வஸ்வத்தையும்‌ செல்வப் பிள்ளை அங்கீ கரித்தருளும்படி ஸ்ரீபண்டாரத்தில்‌ சேர்க்க அக் காலத்திலே ஆயிவும்‌ மீண்டும்‌ திருநாராயண புரத்தேற எழுந்தருளி இச் செய்‌தியைக்‌ கேட்டு ஹ்ருஷ்டராய்‌ “யஸ்யாநுக்ரஹ மிச்சாமி தஸ்ய வித்தம்‌ ஹராம்யஹம்‌’” -நான்‌ எவன்‌ விஷயத்தில்‌ அநுக்ரஹம்‌ பண்ண விரும்புகிறேனோ அவன்‌ தனத்தை அபஹரிக்கிறேன்‌-என்னுந்‌ திருமுகப்படியே ப்ரத்யக்ஷமாகச்‌ செல்வப் பிள்ளை இத்‌தைக் கொண்டருளிய பின்பு நாம்‌ இரக்கத்துக்கு விஷயமென்பது கிம் புநர் ந்யாய ஸித்தமிறே, ”யஸ்யைதே தஸ்ய தத் தநம்‌-. உடையவன்‌ உடைமையை ஸ்வீகரிக்கை ப்ராப்தமிறே” என்று ஈடுபட்டு
ஆநந்தாஸ்ருக்கள்‌ பனிப்ப எழுந்தருளி ஆசார்ய க்ருபா லப்தரான ஞானப் பிரான்‌ ஒருவரையுமே அர்த்தித்துப்‌ பெற்று மற்றவைகளை யெல்லாம்‌ அங்குத்தைக்கு ஸமர்ப்பித்து யாதவ கிரி நிலயனுக்கு மால்ய சமர்ப்பணைக நிஷ்டராய்‌ அங்கே ப்ரீதராய்‌ எழுந்தருளி யிருந்தார்‌.

அநந்தரம்‌ திருநகரியிலே பெரிய ஜீயரும்‌,
மாதவத்தோர்‌ வாழ்த்தும்‌ முடும்பை மணவாளன்‌
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார்‌–தீதற்ற
ஆசாரிய விதயம்‌ பெற்றார்‌ நம்மாயி யிவர்‌
தேசாரத்தன் கண்‌ நெஞ்சே காண்‌
-என்று ஆசார்ய ஹ்ருதய ஸம்ப்ரதாயத்தைத் தாமநுஸந்தித்தருள-அப்படியே முதலிகளும்‌
மாதவத்‌ தோன்‌ மாறன் மனம்‌ கூறும் மணவாளன்‌
தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார்‌- நீதியினால்‌
ஆங்கவர் தாள்‌ சேரப் பெற்றாராயி மணவாள முநி
பூங்கமலத் தாள்கள்‌ நெஞ்சே! போற்று.
என்றநுஸந்தித்தார்கள்‌.

திருநகரியில்‌ ஜீயர் மடம்‌ தீக்கிறையாதல்‌.
இப்படி பெரிய ஜீயர்‌ ஜ்ஞாந ஸம்ருத்தியுடனே திருநகரியிலே வாழ்ந்தருளுங் காலத்திலே, இத்தைக் கண்டு ஸஹிக்க மாட்டாதசில அஸுயாளுக்கள்‌ ஆஸூர ப்ரக்ருதிகளாய்‌ மஹா பாபிகளாய்க்‌ கொண்டு கூரை மேய்ச்சலா யிருக்கிற மடத்திலே ஜீயர்‌ எழுந்தருளி யிருக்க,அர்த்தராத்ரியிலே அக்நி ப்ரஷேபணம்‌ பண்ண, அத் தசையிலே ஜீயர்‌ தம்முடைய ப்ரபாவத்தாலே அவ் வழல் தட்டாதபடி சேஷாக்ருதியாய்க்‌ கொண்டு அனைவருங் காணப் புறப்பட்டு; மடம்‌ வேகிறபடியைக் கண்டு விஷண்ணராய்‌ சோகார்த்தரா யிருக்கிற முதலிகள் திரளிலே வந்து புகுந்து நிற்க, இந்த அத்புதத்தைக்‌ கண்ட முதலிகளெல்லாருங் கண்டு மிகவும்‌ ஸந்துஷ்டராயிருத்‌தார்கள்‌,இந்தச்‌ செய்தியை அந்த தேசாதிபதியான ராஜா கேட்டு ப்ரச்சந்ந சாரிகளான அவர்களைக்‌ கண்டு பிடித்து தண்டிக்கத் தேட ஸாபராதைகளான ஏகாக்ஷி ஏககரணி தொடக்கமானவர்களையுமுட்பட திருவடியோடே மறுதலித்து, :’பாபாநாம்‌ வா சுபாதாம்‌ வா ”, ‘*த்ராஹி த்ராஹி’‘ இத்யாதிப்படி ரக்ஷித்த ஜநக குல ஸூந்தரியைப் போலே ஸுந்தர வர முநியான இவரும்‌, தேவீ லஷ்மீர்ப்‌ பவஸி தயயா வத்ஸலத்வேந சத்வம்‌” [தயையாலும்‌ வத்ஸல்யத்‌தாலும் தேவரீர்‌ லக்ஷ்மீ தேவியாகிறீர்‌– வர. சத்கம்‌-14], என்னும்‌படியான தம்முடைய பரம க்ருபையாலும்‌ வாத்ஸல்யத்தாலும்‌ அவர்களையும்‌ அப்படியே ரக்ஷித்தருளினார்‌. பின்பு அநேக காலத்‌திற்கு மேல்‌ அவர்கள்‌ ஸாந்தா நிகரா யுள்ளவர்கள்‌ கருணாம்ருத ஸிந்துவான காந்தோ பயந்த்ரு முநிவர்ய கமநீய சரண கமலங்களை வந்தாஸ்ரயித்து அபராத ஷாமணம்‌ பண்ணிக் கொண்டார்கள்‌.

திருக் குருகூரிலும்‌ திருக் குறுங்குடியிலும்‌ கைங்கர்யங்கள்‌
அநந்தரம்‌ அத் தேசத்துக்கு அதிபதியா யிருப்பானொருவன்‌ ஜீயருடைய ஜ்ஞாநாநுஷ்டான பூர்த்தியையும்‌ ஸர்வஜ்ஞத்வாதி களையுங் கண்டு அத்யந்தம்‌ ப்ரவணனாய்த்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க அவனுக்கு சடகோப தாஸர்‌ என்று தாஸ்ய நாமம்‌ ப்ரஸாதித்‌தருளி, அவனைக் குறித்து அத்ருஷ்டத்திலே முக்காற் கூறு ருசியும்‌ – அத்ருஷ்டாநுகுணமான த்ருஷ்டத்திலே காற் கூறு ருசியும பண்ணிக் கொண்டு போரும்‌” என்று நியமித்தருள அவனும்‌ அபப்டியே செய்து கொண்டு வர்த்தித்து, காளமேகன்‌ திரு மண்டபம்‌ தொடங்கித்‌ திரு வீதிகள்‌, திரு மதிள்கள்‌, திரு வெல்லைகள்‌ முதலான அனேக கைங்கர்யங்களை ஆழ்வாருகந்தருளும்படி பண்ணி அழகிய மணவாளன்‌ திரு மண்டபத்தையும்‌ உண்டாக்கினான்‌.

அநந்தரம்‌ ஜீயர்‌ திருக் குறுங்குடியிலே சென்று அங்கே திரு வேங்கடமுடையான்‌ என்றொரு ப்ராஹ்மணனை க்ருபை பண்ணி யருளி அவருக்குத்‌ திருவேங்கட தாஸர்‌ என்று தாஸ்ய நாமம்‌ ப்ரஸாதித்தருளி அவருக்குத்‌ திருக் குறுங்குடியில்‌ கைங்கர்யத்தை என்று நியமித்தருள–ஸ்ரீ வாரஹ புராண ப்ரஸித்தமான -அவர்‌ நின்ற நம்பி இருந்த நம்‌பி, கிடந்த நம்பி ப்ரஸித்தமான நம்பிகள் மூவருக்கும்‌ (திருப்பாற்கடல்‌ நம்பி, மலை மேல்‌ நம்பி என்று நம்பிகள் ஐவர்க்கும்‌ ) தனித் தனியே திரு விருப்புகளையும்‌ திரு மண்டங்களையு முண்டாக்கி ஸேவித்துக்‌ கொண்டிருந்தார்‌ இப்படி திருக் குருகூர்‌ நம்பிக்கும்‌ திருக் குறுங்குடி நம்பிக்கும்‌ அனைத்தழகும்‌ கண்டருளப்‌ பண்ணி, மற்றும்‌ அத் தேசத்திலுண்டான திருப்பதிகளுக்கெல்லாம்‌ அதிசயத்தை யுண்டு பண்ணத் தக்க ஆஸ்ரிதரையும்‌ கற்பித்தருளி, பின்பு,

ஜீயர்‌ மீண்டும்‌ கோயிலே எழுத்தருளல்‌
பிறந்தகத்திற்‌ சீராட்டுப்‌ பெற்றாலும்‌ தன்னைச்‌ –
சிறந்துகக்கும்‌ சீர் கணவன்‌ தன்னை-மறந்திருக்கப்‌
போமோ மணவாளர்‌ பொன்னடியை விட்டிருக்க
லாமோ கல்வி யறிந்தால்‌,

என்றநுஸந்தித்து அப்போதே ஆழ்வாரநுமதி கொண்டு கோயிலேறப்‌ புறப்படெழுந்தருளி பெருமாளை ஸேவித்துக்‌ கொண்டு இதர மத நிரஸந பூர்வகமாக ஸ்வமத ஸ்த்தாபநம்‌ பண்ணிக்‌ கொண்டு சேஷாவதார மென்னுமது தோற்ற பெரிய பெருமாள்‌ பரிஸரத்திலே ஸுகமே வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்திலே அப்பிள்ளா ரென்றொரு வித்வான்‌ வாதிகளை ஜயிக்கப் போய்‌ வடதேசத்தி லுள்ளாரை ஜயித்து எறும்பியில்‌ அப்பாவுடனே தர்க்‌கிக்க வேணுமென்று புக, அப்பாவுடைய ப்ரபாவத்தைக்‌ கண்டு வித்தராய்‌ அவரை யநுவர்த்தித்துக்‌ கொண்டு மூன்று நாளிருந்து ஜ்ஜாதவ்யாம்சங்களைக்‌ கேட்டறிந்து, அனுப்புவித்துக்‌ கொண்டு புறப்பட, வழிவிட வெழுந்தருளின அப்பாவும்‌ இப்பால்‌ நீர்‌ இனி எங்குப்‌ போக வேண்டுவது?” என்று கேட்க, ஸ்ரீரங்க ஸ்தலத்திலே ஜீயரென்றொருவர்‌ ப்ரஸித்தரா யிருக்கிறார்‌; அவரைக் கண்டு வாதிக்க வேணும்‌.’” என்ன, அப்பாவும்‌ அத்தைக் கேட்டு இவருக்கு ஹிதமாய்‌ ”நீரிப்படி செய்ய வொண்ணாது; ஜீயருடைய ப்ரபாவம்‌ நானறிவேன்‌; பெருமாள்‌ கோயிலிலே கிடாம்பி நாயனார்‌ பாடே ஸ்ரீபாஷ்யம்‌ ஸ்ரவித்தார்‌; நாயனாரும்‌ (கிடாம்பி நாயனார்‌ பாடே பாஷ்யம்‌ கேட்ட போது சிந்தனை பண்ணுவித்தவர்‌ திருநாமம்‌ ஐயைகளப்பா (பக்‌. 81) என்றுள்ளது. இங்குள்ளது மேல்‌ வரும்‌ விருத்தாந்தத்‌துடன்‌ சேரவில்லை: )நம்மை அவருடனே சிந்தனைக் கிருக்கச்‌ சொல்ல இருந்தேன்‌; அவர்‌ ஸகலார்த்தங்களையும்‌ யுகபத்‌ ஸாக்ஷாத்கரித்து உபந்யஸிப்பர்‌; அவருடனே வாதிக்க ஒருவர்க்கும்‌ க்ஷமமன்று; அதுக்கு மேலே அவர்‌ யதீஸ்வரர்‌, ஸ்ரீவைஷ்ணவ தர்சநத்திற்கு அபி வ்ருத்திரர்‌, அவரிடத்திலே நமக்கெல்லாம்‌ ப்ரதி பத்தி க்ரமம்‌ வேறே இருக்கிறது, ஸமய ப்ராப்தே சொல்‌லுகிறேன்‌”என்றருளிச்‌ செய்து அனுப்பி யருளி மீண்டும்‌ எறும்பியிலே எழுந்தருளினார்‌.

எறும்பியப்பா ஜீயரிடம்‌ ஆஸ்ரயித்தல்‌
அநந்தரம்‌ ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கோயிலினின்றும்‌ திருமலைக்கு எழுந்தருளுவதாக எறும்‌பியிலே வர, அப்பா கண்டு அவரை யழைத்‌தருளி ஆதரித்து, கோயில்‌ விருத்தாந்தங்களையும்‌ ஜீயருடைய விருத்‌தாத்தங்களையுங்‌ கேட்டருள, அவர்‌, ‘கந்தாடை யண்ணன்‌ முதலான கந்தாடை யய்யங்கார்களும்‌ மற்றும்‌ திருவாழியாழ்வார்‌ பிள்ளை முதலான பெரியோர்களும்‌ ஸ குடும்பமாகவும்‌ மற்றும்‌ அநேகம்‌ ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்‌தார்கள்‌;-ஜீயருடைய வைபவம்‌ உத்தரோத்தர்ம்‌ அதிசயமாக நடக்கிறது” என்று விண்ணப்பஞ் செய்ய, திருவுள்ளமுகந்தருளி,அவருக்கு பஹுமாநஞ்‌ செய்தருளி அற்றைக்கு அவரை நிறுத்திக்‌ கொண்டு, நீர்‌ சொன்னதெல்லாம்‌ ஸாமாந்யமாகக்‌ கேட்டிருந்‌தோம்‌; அந்த வ்ருத்தாந்தங்களையும்‌, ஜீயர்‌ திருநகரிக் கெழுந்தளி திரும்பி யெழுந்தருளின: செய்தியையும்‌ விஸ்தாரமாக வருளிச் செய்யும்‌” என்று கேட்டருளி. அவரை, பிற்றை நாள்‌ திருவேங்கடமுடையானை ஸேவித்து சீக்கிரமாக வரச்‌ சொல்லி நியமித்து நாமும்‌ பயணமாயிருக்கிறோம்‌, கூடப் போவோம்‌” என்றருளிச்‌ செய்து விட. பின்பு தமது திருத் தமப்பனாருக்கு இச் செய்தியை யறிவிக்க’ அவரும்‌, ”ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்க வேணுமென்று ருசி யுண்டு போலே யிருக்கிறது; இனி மேல்‌ அது நன்றன்று போலே தோற்றுகிறது; வேணுமாகில்‌ அவரிடத்தில்‌ ப்ரதிபத்தி பண்ணி ஜ்ஞாதவ்யாம்ச முண்டானால்‌ அநுவர்த்தித்துக் கேட்டு, ஸ்ரீபாத தீர்த்த தளிகை ப்ரஸாத ஸ்லீகாராதிகளைப்‌ பண்ணி வாரும்‌’” என்ன, அந்த ஸ்ரீவைஷ்ணவரும்‌ திருமலையில்‌ நின்றும்‌ வர,

அவரைக்‌ கூட்டிக்‌ கொண்டு எறும்பியப்பா கோயிலேற வெழுந்‌தருளி நம்பெருமாளைத்‌ திருவடி தொழுது, பெரிய கந்தாடை அண்ணன்‌ ஆப்த பந்துவாகையாலே அவர்‌ திருமாளிகையிலே அமுது செய்தருளி அவருடனே ஜீயர்‌ ஸந்நிதிக் கெழுந்தருள, ஜீயரும்‌ இவரைப்‌ பெரிய வித்வான்‌ என்றறிந்து, பரத்வ ப்ரதிபாதகமான உயர்வற வுயர் நல ப்ரவேசத்தை ௨பந்யஸித்துக்‌ காட்டி யருள. அப்பா அது கேட்டு ஆஸ்சர்யப்பட்டு ‘ஜீயருக்குத்‌ தமிழொழிய ஸம்ஸ்க்ருதத்தில்‌ மிகவும்‌ பரிசயமில்லை யென்று கேட்டிருந்தோம்‌; இவர்‌ உபய வேதாந்தத்திலும்‌ மிக நிபுணரயிருக்‌ கிறார்‌?” என்று போர ப்ரீதராயிருக்க ஜீயர்‌ இவரை மடத்தில்‌ அமுது செய்ய ப்ரார்‌த்திக்க, அவரும்‌,
யத் யந்நம்‌ பதிபாத்ரஸ்தம்‌ யதிநா ப்ரேஷிதம்ச யத்‌ |
அந்ந த்ரயம்‌ ந போக்தவ்யம்‌ புக்த்வா சாந்த்ரயணம்‌ சரேத்‌ ॥

ஸந்யாஸி களுடைய அந்நமும்‌, ஸந்யாஸிகளுடைய பாத்ரத்‌திலுள்ள அந்நமும்‌, ஸந்யாஸிகளால்‌ அனுப்பப்பட்ட அந்நமும்‌-இப்படி மூன்றும்‌ புசிக்கத் தக்கவை யன்று , அப்படி புசித்தானாகில்‌ சாந்த்ராயண வ்ரதத்தை யநுஷ்டிக்கக் கடவன்‌ -என்கிற ஸாமாந்ய சாஸ்த்ரைக நிரதராய்‌, ‘தருவரேல்‌ (திருமாலை-41),“ப்ரார்த்தயேத்‌’ என்கிற விசேஷ சாஸ்த்ர ஜ்ஞாத ரஹிதராய்‌ ஜீயர்‌ திருவடிகளிலாஸ்ரயியாமல்‌ மறுத்தெழுந்தருளி அண்ணனைப்‌ போர வெறுத்து அவர்‌ திருமாளிகைக்‌ கெழுந்தருளாமல்‌ அப்போதே கோயிலிலிருந்து புறப்பட்டுத்‌ தம் மூரேற வெழுந்‌தருளி

தமது திருவாராதநமான சக்ரவர்த்தி திருமகனாரைத்‌ திருவடி விளக்குவதாகக்‌ கோயிலாழ்வாரைத் திருக் காப்பு நீக்கப் புக; அது அவிசால்யமாய்‌, ஸக்லோபாயங்களாலும்‌ நீக்கப்‌ போகாமையாலே மிகவும்‌ து:கிதராய்‌ அமுது செய்யாமலே கண் வளர்த்தருள அவ்வளவில்‌ அப்பாவின்‌ ஸ்வப்நத்திலே
ஸேஷ: ஸ்ரீமாநஜநிஹி புரா ஸெளம்ய ஜாமாத்ரு யோகீ
போகீ பூதஸ்‌ ததநு பகவாந்‌ ராகவஸ் யாநு ஜந்மா |
பூத்வா பவ்யோ வரவர முநிர்‌ பூபஸாபா ஸமாந:
ரக்ஷத் யஸ்மாந்‌ ரகுகுல பதே ராஸ்திதோ பத்ர பீடம்‌ ॥
பூத்வா பவ்யோ வரவர முநிர்‌ போகிநாம்‌ ஸார்வ பெளம:
ஸ்ரீமத் ரங்கே வஸதி விஜயீ விஸ்வ ஸம் ரக்ஷணார்த்தம்‌ |
தத்வம்‌ கந்தும்‌ வ்ரஜ ஸரண மித்யாதி ஸத்‌ ராகவோயம்‌
ஸ்வப்நே ஸோயம்‌ வரவர குருஸ்‌ ஸம்ஸ்ரயோ மாத்ரு ஸாநாம்‌ –

இந்த மணவாள மாமுனிகள்‌ முதன் முதலில்‌ கைங்கர்ய ஸ்ரீயை யுடைய திருவனந்தாழ்வானாக இருந்தார்‌. அவ் வரவரசனே பின்பு இராம பிரானுடைய தம்பியான லஷ்மண பகவானாகப் பிறந்தான் -பின்பு ஆஸ்ரித ஸுலபரான மணவாள மா முனிகளாக அவரே அவதாரம்‌ செய்து சக்ரவர்த்தி திருமகனுடைய மங்களமான ஸிம்ஹாஸனத்தில்‌ வீற்றிருந்து நம்மை ரக்ஷிக்கிறார்‌-

திருவனத்தாழ்வான்‌ ஆஸ்ரித ஸூலபரான மணவாள மா முனிகளாக அவதரித்து லோகத்தை ரஷிப்பதற்காக ஸ்ரீரங்கத்‌தில்‌ எல்லோரினும்‌ மேம்பட்டு வாழ்கிறார்‌. தத்வ ஜ்ஞானம்‌ பெறுவதற்காக அவரை நீர்‌ தஞ்சமாகப்‌ பற்றுவீராக” என்று இந்த சக்ரவர்த்தி திருமகன்‌ அப்பாவுக்கு ஸ்வப்நத்திலே உத்தரவிட்டருளினார்‌. அப்படிப்பட்ட. மணவாள மாமுனிகள்‌ நம்மைப்‌ போன்றவர்களுக்கு சரணமடையத் தக்கவராகிறார்‌ -என்கிறபடியே, அவர்‌ திருவாராதநமான சக்ரவர்த்தி திருமகன்‌,நீர்‌ சேஷாவதாரமான ஜீயர்‌ திருவடிகளிலே அபசாரப்பட்டு. வந்தீர்‌; பகவத்‌ பக்த ஸம்புக்த பாத்ர சிஷ்டோதநாதராத்‌–கோபி தாஸீ ஸுதோப்யாஸீ தம்ருதோ வை நாரதோ அபவத்‌–பகவத் பக்தரொருவர்‌ அமுது செய்த பாத்திரத்தில்‌ மிச்சமான ப்ரஸாதத்தை அன்போடு உண்டதனால்‌,, வேசியின்‌ மகனொருவன்‌ கூட தான்‌ இறந்த பின்பு மறு பிறவியில்‌ நாரதராகப்‌ பிறந்தான்‌-என்று ஸ்ரீநாரத பகவான்‌ உத்பத்தி கேட்டறியீரோ? ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்து அபராத ஷாமணம்‌ பண்ணிக்‌ கொண்டு வந்தாலொழிய உம்முடைய கையினாலே நாம்‌ திருவராதநம் கொள்ளக்‌ கடவோமல்லோம்‌; சடக்கெனப்‌ போகீர்‌” என்று நியமித்தருள; அப்பாவும்‌ திருக் கண்களை விழித்து விஸ்மிதராய்‌ ஸ்வப்நத்தை விச்வஸித்து -அப்போதே புறப்பட்டுக்‌ கோயிலேறச்‌ சென்று புக்கு, ”அங்கே கவேர கந்யாயாஸ் துங்கே புவந மங்களே ..ரங்கே தாம்நி ஸுகாஸீநம்‌ வந்தே வரவரம் முதிம்‌”– திருக்‌ காவேரி மத்யத்தலே, உலகங்களுக்கு மங்களாவஹமாய்‌ விளங்கும்‌ திருவரங்கத்‌ திருப்பதியில்‌ இனிதாக வெழுந்தருளியுள்ள மணவாள மா முனிகளை அடி பணிகிறேன்‌-என்றநுஸந்திக் கொண்டு செல்ல; அவ்வளவிலே ஜீயரும்‌ பெருமாளை ஸேவிப்பதாகப்‌ புறப்பட்டு எதிரே எழுந்தருளக் கண்டு அத்யாதரத்துடனே ‘தண்டவத் ப்ரணமேத் பூமாவு பேத்ய குருமந்வஹம்‌”-நாடோறும்‌ ஆசாரியனைக்‌ கிட்டி தரையில்‌ தடி போல்‌ விழுந்து ஸேவிக்கக் கடவன்‌-என்கிறபடியே திருவடிகளிலே தண்டன்‌ ஸமர்ப்பிக்க, ஜீயரும்‌ அவரை “லோசநாப்யாம்‌ பிபந்நிய’ என்கிறபடியே நிரீஷண ஸுதாஸந்து ஷிதாரம்படி குளிர நோக்கிக்‌ கொண்டு நிற்க, அப்பாவும்‌ அப்போது தம்மை விஷயீகரிக்கப்‌ புறப்பட்டருளின ஜீயரின்‌ திவ்ய மங்கள விக்ரஹம ஸெளந்தர்யத்திலே யீடுபட்டு, ”மயி ப்ரவிதி ஸ்ரீமந் ‘ என்று தொடங்கி மயி ப்ரஸாத ப்ரவணம்‌” (பூர்வ தின சர்யை -என்னுமளவாக அநுஸந்தித்துக்‌ கொண்டு நிற்க

ஜீயரும்‌ இவருடைய உஜ்ஜீவநத்திலே யூன்‌றிப்‌ போமவராகையாலே மீண்டும்‌ உள்ளே புக்கு, ஆத்ம லாபத்தைப் பார்க்கிலும்‌ வேறொரு உயர்ந்த லாபமில்லை யென்றறுதியிட்டு, இவரை யங்கீ கரிக்கையிலுள்ள நசையாலே மதுரோதார பாஷணம்‌ பண்ணி யிருந்து, ஸ்ரீபாதத்து முதலிகளை ‘-பெருமாளை ஸேலித்து வாருங்கோள்‌’என்றனுப்பியருள, அவர்களும்‌ பெருமாளை ஸேவித்து மீண்டு வர ஜீயரும்‌; அவர்களுடனே ‘பெருமாள்‌ இன்னவொப்‌பனையோடே யெழுந்தருளியிருக்கிறார்‌; இன்னபடி, அமுதுசெய்ததருளினார்‌” என்றருளிச்‌ செய்ய, அவை ஒத்திருக்கையாலே, எல்‌லாரும்‌ ஜீயருடைய ஸர்வஜ்ஞதையைக் கண்டு விஸ்மயப்பட்‌டார்கள்‌. அப்பா,நெடுந்தூரத்திலிருந்து வந்தவராகையாலே வழியிலுண்டான விடாயெல்லாந்தீர பசியன்‌ சோற்றைக்‌ கண்டாப்‌போலே பவந்தமேவ நீரந்த்ரம்‌ பச்யந்வச்யேந சேதஸா” -தேவரீரையே, அடியேன்‌ வசப்பட்ட மனத்தோடு, இடை விடாமல்‌ ஸேவித்துக்‌ கொண்டு- என்றபடியே வைத்த கண்‌ வாங்க மாட்‌டாதே தாரக போஷக போக்யங்களெல்லாம்‌ ஜீயருடைய திவ்ய மங்கள விக்ரஹாநுபவமேயாக அநுபவித்துக்‌ கொண்டு போந்தார்‌ .

மற்றை நாள்‌ அபர ராத்திரியிலே அண்ணன்‌ முதலாவனார்கள்‌ ஜீயர்‌ திருப்பள்னியறை வாசலிலே எழுந்தருளி
ரவிருத யத்யதாபி ந விநஸ்யதி மே திமிரம்‌
விகஸதி பங்கஜம்‌ ஹ்ருதய பங்கஜமேவ நமே |
வரவர யோகி வர்ய! வரணீய குணைக நிதே
ஐயஜய தேவ! ஜாக்ரஹி ஜநேஷு நிதேஹி த்ருஸம்‌ ॥

சூரியன்‌ உதித்த போதிலும்‌ அடியேனுடைய அக விருள்‌ நீங்க வில்லை;-குளங்களில்‌* தாமரை மலர்கள்‌ மலரா நின்றன;-அடியேனுடைய மனமான தாமரை மலரவில்லை; விரும்பத் தக்க கல்யாண குண நிதியே! ஸ்வாமிந்‌! மணவாள மமுனியே ! விஜயியா யெழுந்தருளி யிருக்க வேணும்‌; திருப்பள்ளி உணர்ந்தருள வேணும்‌; ஆஸ்ரித ஜனங்‌களைக்‌ கடாக்ஷித்தருள வேணும்‌- என்று திருப்பள்ளி யுணர்த்த, திருப்பள்ளி யுணர்ந்து, குருபரம்பரா பூர்வகமாக ரஹஸ்ய த்ரயத்‌தையும்‌ அநுஸந்தித்தருளி அதில்‌ பர வ்யூஹாந்தர்யாமி குணங்‌களைத் திருமந்த்ரத்தாலும்‌, விபவ லெளலப்யாதி குணங்களை சரம ஸ்லோகத்தாலும்‌, அர்ச்சாவதார குண பூர்த்தியை த்வயத்தாலும்‌ அநுஸந்தித் தருளி பின்பு,

அயபம் புநஸ் ஸ்வயம் வ்யக்தாந வதாரா கநுத்தமாலந் |
நிதாய ‘ஹ்ருதிநீ ரந்தரம்‌ நித்யாயந்‌ ப்ரத்யபுத்யத ॥
விஸேஷேண விஷேவேச ஸேஷ போக விபூஷணம்‌ |
அமேயமாதிமம்‌ தாம ரமேஸம்‌ ரங்கஸாயிநம்‌ ॥
த்யாயம்‌ த்யாயம்‌ வபுஸ் தஸ்ய பாயம்‌ பாயம்‌ தயோததிம்‌ |
காயம்‌ காயம்‌ குணுநுச்சைஸ்‌ ஸோயம்‌ தத்பூய ஸாந்வயூத்‌

இம் மணவாள மாமுனிகளோ வென்னில்‌ ஸ்வயம் வ்யக்தங்‌களான அர்ச்சாவதாரங்களை முறையே சிந்தையில்‌ வைத்து இடைவிடாமல்‌ த்யானித்துக்‌ கொண்டே திருக்கண் விழுத்தருளினார்‌.சிறப்பாக, திருவனந்தாழ்வானுடைய திருமேனிக்கு ஆபரணமும்‌ அளவிடற்கரியதும்‌ ஸ்ரீரங்கத்தில்‌ துயில் கொண்டிருப்பதுமான ஸ்ரீய:பதியென்னும்‌ உயர்ந்த தேஜஸ்ஸை த்யானம்‌ செய்தருளினார்‌,-அத் திருவரங்க நாகனுடைய திரு மேனியை த்யானித்துக் கொண்டும்‌ அவனுடைய கருணையாகிய கடலைப்‌ பருகிக்‌ கொண்டும்‌ அவன்‌ குணங்களைப்‌ புகழ்ந்து பாடிக்‌ கொண்டும்‌ இம் மாமுனிகள்‌ முற்‌கூறிய தேஜஸ்ஸாகிய ஸ்ரீரங்கநாதனை மறுபடியும்‌ மறுபடியும்‌ அனுபவித்தார்‌-என்கிறபடியே, அர்ச்சாவதாரத்துக்கு வேர்ப் பற்றான பெரிய பெருமாளுடைய விக்ரஹ குணங்களை விசேஷித் தநுஸந்தித்தருளி அதினுடைய பராகாஷ்டையான யதீந்த்ர சரணத்வvத்வ ப்ராவண்யத்‌தோடே நீராடி நித்யா நுஷ்டானங்களையுஞ்‌ செய்தருளித்‌- திருமண்‌ காப்புச்‌ சாத்தி யருளி; தம்முடைய திருவாராதனமான ஸ்ரீரங்கராஜர்‌ திருமுன்பே எழுந்தருளி, தண்டன் ஸமர்ப்பித்து

ஆத்ம ஸ்வரூப யாதாத்ம்யம்‌ ஆசார்யாதீந தைவயத்‌ |
ஆம்நாயாராம்‌ ரஹஸ்யந்த தகிலேப்ய: ப்ரகாஸயந்‌ ॥
ஸர்வம் யதிபதேரேவ குர்வந் நாதேஸ பூர்வகம்‌ |
க்ருத்யாக்ருத்யேஷு கர்த்ருத்வம்‌ க்ருதீகிமபி நஸ்ப்ருபுஸக்‌ ॥
ததஸ் தஸ்ய முகோல்லாஸம்‌ சிகீர்ஷந் நேவ கேவலம்‌

யாதொரு ஆத்ம ஸ்வரூபத்தின்‌ உண்மையாண தன்மையானது ஆசார்யனுக்கே பரதந்த்ரமா யிருப்பதோ, ஸ்ருதிகளில்‌ ரஹஸ்ய மாயுள்ள அந்த ஆசார்ய பாரதந்த்ர்யத்தை ப்ரகாசிப்பிப்பவராய்‌,கேவலம்‌ அவ்வாசார்யருடைய(எம்பெருமானாருடைய) முக மலர்த்தியையே விரும்பிச்‌ செயல்படுபவரரய்‌ அவ் யதீந்த்ரரின்‌ நியமனப்படியே எல்லா விதமான கைங்கர்யங்களையுஞ்‌ செய்து கொண்டு ‘கார்யாகார்யங்களில்‌ நாம் செய்தோம்‌” என்ற எண்‌ணம்‌ சிறிதுமில்லாதவராய்‌ தந்யராய்‌ எழுந்தருளியிருந்தார்‌ -என்கிறபடி தம்முடைய பாரதந்தர்யத்துக்குச்‌ சேர்ந்த ப்ரதிபத்தியுடனே திருவாராதநத்தையும்‌ செய்தருளி;

(ஐயைகள் அப்பா -எறும்பி அப்பாவின் திருத்தகப்பனார் -கிடாம்பி நாயனார் இடமும் ஸ்ரீ பாஷ்யம் காலஷேபம் பண்ணும் பொழுது கூட இருந்து மா முனிகளின் வைபவம் அறிந்தவர்-74 லில் ஒருவராக இருந்தும் அண்ணன் போல்வார் மீண்டும் இவரிடம் ஸமாஸ்ரயணம் செய்து கொண்டதும் இவர் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பதால் பெறும் ஸ்ரேஷ்டத்துக்காகவே -)

அநந்தரம்‌ -ஸந்நிதிஸ்‌ நம்பமூல பூதல பூஷணமாய்‌ எழுந்‌தருளி யிருக்க, அவ் வளவிலே அப்பாவும்‌ அண்ணனைப்‌ புருஷகாரமாகக்‌ கொண்டு” அடியேனை அங்கீகரித்தருள வேண்டும்‌” என்றபேக்ஷிக்க அப்படியே அங்கீ கரித்தருளி, திருவிலச்சினை முதலான பஞ்ச ஸம்ஸ்காரங்களையும்‌ ப்ரஸாதித்து விசேஷ கடாக்ஷம்‌ ‘செய்‌தருளி, திருவடிகளாலே அவருடைய திருமுடியை யலங்கரித்தருளி,பின்பு அத்தலைக்கு மங்களாசாஸன பரராக வேணுமென்னும்‌ திருவுள்ளக் கருத்தோடே மந்த்ர த்ரயத்தையும்‌ ப்ரஸாதித்தருளி; அவரையும்‌ அந்தரங்கராக்கிக்‌ கொண்டு அவருடன்‌ கூட பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணுவதாகப்‌ புறப்பட்டருளி நான்‌முகன்‌(கோட்டை வாசல் வழியாக -ரெங்க ரெங்கா கோபுரம் ) தண்டன்‌ ஸமர்ப்பித்து மெள்ள வெழுந்‌தருளி உள்ளே புக்கு
தேவீ கோதா யதிபதி ஸடத்வேஷிணெள ரங்க ஸ்ருங்கம்‌
ஸேநா நாதோ விஹக வ்ருஷபஸ்‌ ஸ்ரீநிதிஸ் ஸிந்து கந்யா |
பூமா நீளா குருஜந வ்ருத: பூரூஷஸ் சேத்யமீஷாம்‌
அக்ரே நித்யம்‌ வரவர முநே ரங்க்ரி யுக்மம்‌ ப்ரபத்யே(பூர்வ தினசரி -24 )

ஆண்டாள்‌, எம்பெருமானார்‌, நம்மாழ்வார்‌, ஸ்ரீரங்கவிமானம்‌, சேனை முதலியார்‌, பக்ஷி ராஜனாம்‌ பெரிய திருவடி ஸ்ரீரங்கநாதீன்‌, ஸ்ரீரங்கநாச்சியார்‌. பூமிதேவி, ஸ்ரீதேவி நீளாதேவி ஆழ்வார்கள்‌ ஆகியவர்களால்‌, சூழப்பட்ட பரமதநாதன்‌. என்‌னும்‌ க்ரமத்திலே மங்களாசாஸனார்த்தமாசு எழுந்தருளி ஸேவை ஸாதித்தருளும்‌ மணவாள மா முனிகளின்‌ இணை யடிகளை தினமும்‌. தொழுகின்றேன்‌-என்கிற அடைவிலே ஸேவித்து – தத்தத் ஸ்தலோசித மங்களாசாஸனங்களைப்‌ பண்ணி, பெரிய பெருமாளையும்‌ நம்பெருமாளையும்‌ திருவடி தொழுது அநந்தரம்‌
உபேத்ய புநரப்யேஷி நிஜமேவ நிவேஸநம்‌ |
நிவேத்ய நிகிலம்‌ தத்ர யதீந்த்ராய நமஸ்யயா ॥

இந்த மணவாளமாமுனிகள்‌ மீண்டும்‌ தமது மடத்துக்‌கெழுந்தருளி அங்கு கோயில்‌ கொண்டெழுந்தருளியுள்ள யதிராஜரிடம்‌ நடந்ததை யெல்லாவற்றையும்‌ தெண்டனிட்டு விஜ்ஞாபித்து-என்கிறபடியே மீண்டும்‌ மடமே யெழுந்தருளி அங்கு எழுத்தருளி யிருக்கும்‌ உடையவர்‌ ஸந்நிதியிலே ஸர்வமும்‌ விஜ்ஜாபித்து, திருமலை யாழ்வாரிலே தத் பாதச் சாயையாக ப்ரதிபத்தி பண்ணிக்‌ கொண்டு எழுந்தருளி யிருந்து, இவர்க்கு [எறும்பியப்‌பாவுக்கு]

ஸம்சார நிவர்‌த்நகமாயிருக்கிற ஸ்வ திவ்ய சரணாம் போஐ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸெளரபமான ஸ்ரீபாத தீர்த்தத்தையும்‌ ப்ரஸாதித்தருளி
அத மாத்யாஹ்நிகம்‌ க்ருத்யம்‌ க்ருத்வா ஸத்வோத்தரம்‌ முநி . |
ஆராத்ய விதிவத் தேவ மந்வபூத்‌ ரங்க பூஷணம்‌ ॥
ததஸ்தந்‌ முக ஸம்ஸ்பர்ஸரஸேந ஸுகந்திநா |
ஸூசிநா ஸுகுமாரேண ஸத்வஸம்‌ ஸூத்தி ஹேதுநா ॥
பக்தி பூர்வம்‌ ப்ரபூதேந போஜ்யேந பகவத் ப்ரியாந்‌ |
தத் பரஸ் தர்ப்ப யாமாஸ ததீய ப்ரேம வ்ருத்தயே
ஆத்மாந மாத்மநா பஸ்‌யந்‌ போக்தாரம்‌ புருஷம்பரம்‌ ॥
அநு யாகம்‌ யதா யோகம்‌ நிஸ்ஸங்கோ நிரவர்த்தயத்‌ |

பிறகு பரம ஸாத்விகரான மணவாளமாமுனிகள்‌, மத்யாஹ்ந அநுஷ்டானங்களை முடித்து ஸ்ரீ அரங்கநகரப்பனுக்கு முறைப்படி திருவாராதனம்‌ கண்டருளப் பண்ணி, குணாநுபவம்‌ பண்ணிக்‌ கொண்டிருந்தார்‌. பின்னர்‌ அவ்வெம்பெருமானுடைய திருப்பவள ஸம்பத்தத்தினால்‌ அமுதமாய்‌, பரிமளிதமாய் ,தூயதாய்‌, மென்மை யுடைத்தாய்‌, ஸத்வ ஸ்வபாவத்துக்கும்‌ மனத் தூய்மைக்கும்‌ முக்‌கிய காரணமாயிருப்பதான, ஸம்ருத்தமான பகவத்‌ ப்ரஸாதத்தால்‌ எம்பெருமானடியார்களை ததீய பக்தி பூர்வமாக , தத் கைங்கர்ய பரராக அவர்களிடம்‌ ப்ரேமம்‌ வளர்வதற் குறுப்பாக ஆராதித்தார்‌; தாம்‌ (ப்ரஸாதத்தை) அமுது செய்தருளுவதனால்‌ தம் மூலமாத அந்தர்யாமியான பரம புருஷனையே போக்தாவாக அத்யவஸித்து அமுது செய்வதில்‌ நேரே தொடர்பில்லாத மனதுடன்‌ பிஷை யேற்றருளினார்‌ -என்கிறபடியே பெருமாளமுது செய்தருளின அநந்தரம்‌ தாமும்‌ அமுது செய்தருளி, போனகஞ் செய்த சேடந் தருவரேல்‌ புனிதமன்றே” என்னும்படி ஸுபாவனமான திருத் தளிகை ப்ரஸ்தம்‌ ப்ரஸாதிக்கப்‌ பெற்று இவர்‌ (அப்பா) க்ருதார்த்தரா யெழுந்தருளி யிருக்க; பின்பு,

ததஸ் ஸ ஜீமூல ஜீதஸ்யாம கோமள விக்ரஹே |
பீத கெளஸேய ஸம்வீதே பீந வ்ருத்த சதுர் புஜே ॥
ஸங்க சக்ர கதா தாரே துங்க ரத்ந விபூஷணே |
கமலா கெளஸ்து போரஸ்கே விமலாயத லோசநே ॥
அபராத ஸஹே நித்யம்‌ தஹ ராகாஸ கோசரே |
ரேமே தாம்நி யதாகாஸம்‌ யுஞ்ஜாநோத்யாந ஸம்பதா ॥
ஸதத்ர நிஸா சலம்‌ சே த, சிரேண விநிவர்த்தயஙந் |

பிறகு நீர்‌ கொண்ட மேகம் போல கருமையா யழகான திருமேனியில்‌ பீதாம்பர மணிந்தவனாய, பருத்து திரண்ட நான்கு திருத் தோள்களை யுடையனாய்‌, திருவாழி திருச்சங்கு கதைகளுக்கு இருப்பிடமாய்‌, சிறந்த ரத்ந மயமான திருவாபரணங்களால லங்கரிக்கப் பட்டவனாய்‌, பெரிய பிராட்டியாரையும்‌ ஸ்ரீகெளஸ்துபத்தையும்‌ திரு மார்பில்‌ தரித்தவனாய்‌ நிர்மலமான நீண்ட பெரியவாய கண்களை யுடையனாய்‌, ஆஸ்ரிதாபரதங்களைப்‌ பொறுப்பவனாய்‌ எப்போதும்‌ சேதந ஹ்ருதய மத்யத்தில்‌ வாஸம் செய்பவனாய்‌ பரம ப்ராப்யனான பரம புருஷனிடம்‌, தமது த்யான ஸம்ருத்தியினால்‌ ஒன்று பட்டு லயித்து யதாவகாசம்‌ தமது மடத்தில்‌ மகிழ்ந்திருந்தார்‌. அப் பெருமானிடத்தில்‌ ஸ்திரமாயிருந்த தமது மனஸ்ஸை வெகு காலம்‌ கழித்து மீட்டு–என்கிறபடியே
ஸூபாஸ்ரயமான அந்தர்யாமி விஷயத்திலே நிமக்ந ஹ்ருதயத்தை யுடையராய்‌ அத்தை ஒரு படி மீட்டு, யதீந்த்ர ப்ரவணமாக்கி, யதிராஜ விம்சதியை யநுஸந்தித் தருளி, பின்பு ஸ்ரீவசநபூஷண வாக்யங்களுக்கு வ்யாக்யாநம்‌ ப்ரஸாதித்தருளி, ஸாயங்காலமானவாறே ஸர்வாநுஷ்டானங்களையும்‌ முன்பு போலவே செய்தருளி, மீளவும்‌ ஸந்நிதயிலே யெழுந்தருளி எல்லா வுபசாரங்களையும்‌ கண்டருளப் பண்ணி, திருப்‌ பல்லாண்டை யநுஸந்தித்து மங்களாஸசாநம்‌ பண்ணி, பின்‌ கண்‌ வளர்ந்தருளுவதற்காக ்‌
தத:.கநக பர்யங்கே தருணத் த்யுமணி த்யுதெள |
ரத்ந தீபத்வ யோதஸ்த மஹதஸ்‌ ஸ்தோமஸ மேதிதே ॥,
ஸோபதாநே ஸுகாஸீநம்‌ ஸுகுமாரே வாரஸநே |:
அநந்ய ஹ்ருதயைர்த் தந்யை ரந்தரங்கைர்‌ நிரந்தரம்‌ ॥,
ஸூஸ்ரூஷமாணை; ஸூசிபி; த்வித்ரைர் ப்ருத்யை ருபாஸிதம்‌ |
ப்ராசாமாசார்ய வர்யாணாம்‌ ஸூக்தி வ்ருத்‌ த்யநு வர்ணநை : ॥
வ்யாச ஷாணம்‌ பரம் தத்வம்‌ வ்யக்தம்‌ மந்ததியாமபி |

பிறகு உச்சிப்பட்ட சூரியன் போல ப்ரகாசமுடைத்தாய்‌, ரத்ந மயமான இரு தீபங்களினின்றும்‌ உண்டான ஒளியினால்‌ மிக விளங்கா நின்ற பொன்னாலான கட்டிலில்‌ தவையணையுடன்‌ கூடிய மென்மையான அழகிய ஆஸனத்தில்‌ இனிதே யெழுந்தருளி யிருப்பவரும்‌. அந்த மாமுனிகளள்லது வேறிடத்தில்‌ செல்லாத மனதை யுடையராய்‌ பாக்யமுடையரான அந்தரங்கராய்‌ கைங்கர்ய பரரான இரண்டு மூன்று சிஷ்யர்களால்‌ இடைவிடாமல்‌ ஆட் செய்யப்படுமவராய்‌, பூர்வாசாரியர்கஞ்டைய ஸ்ரீஸூக்திகளையும்‌ அநுஷ்‌டான க்ரமங்களையும்‌ அருளிச் செய்வதால்‌ மந்த மதிகளுக்கும்‌ பர தத்‌வத்தை தெளிவா யருளிச்‌ செய்து கொண்டிருக்கும்‌ மாமுனிகளை–என்றபடியே திருப்பள்ளி யறையிலே புக்கு ‘திருப்‌ படுக்கையிலே சாய்ந்தருளி எல்லார்க்கும்‌ தெரியும்படி பூர்வாசாரியர்கள்‌ போதமனுட்டானங்கள்‌ கூறுவாராக வெழுந்தருளி யிருக்கற, போக்‌யதையை அநுபலித்து அவ் வனுபவத்துக்குத்‌ தேசிகரானவர்களோடே கூட அஸ்தாநே பய சங்கிகளாய்‌
மங்களம்‌ ரம்ய ஜாமாத்ரு முநி வர்யாய மங்களம்‌ |
மங்களம்‌ பந்ந கேந்த்ராய மர்த்ய ரூபாய மங்களம்‌ ॥
ஏவம் மங்கள வாணீபி ரேநம்‌ ஸாஞ்ஜலி பந்தநா; |
ஸத் க்ருத்ய ஸம் ப்ரஸீ தந்தம்‌ ப்ரணேமு; ப்ரேம நிர்ப்பரா; ॥

ஆசார்ய ஸ்ரேஷ்டரான மணவாள மா முனிகளுக்கு மங்களம்‌ மங்களம்‌, மனித வுருவில்‌ அவதரித்துள்ள திருவனந் தாழ்வானான மா முனிகளுக்கு மங்களம்‌, மங்களம்‌; இப்படி மங்கள வார்த்தைக்ளால்‌ ப்ரஸந்நரான இந்த மணவாள மா முனிகளை பக்தி நிறைந்த சிஷ்யர்கள்‌ கை கூப்பிக்‌ கொண்டு ஸேவித்தார்கள்‌-என்கிறபடியே மங்களாஸாசனம்‌ பண்ணி ஸாஞ்ஜலி ஹஸ்தராய்‌ ஸாஷ்டாங்க தீர்க்க ப்ரணாமாதிகளைப்‌ பண்ணிப் ப்ரேம நிர்ப்பரராய்‌ ஸேவித்துக்‌ கொண்டிருக்க, அதப்ருத்யாநநுஜ்ஞாப்ய’” என்கிறபடியே அவர்ளை விடை கொடுத்தனுப்பி யருளி
ததஸ் ஸஜ்ஜீக்குருதம்‌ ப்ருத்யை; ஸூயநீ யம்‌ விபூஷயந்‌ |
யுயோஜ ஹ்ருதயம் தாம்நி யோகித்யேய பதத்வயே ॥

பிறகு சிஷ்யர்களால்‌ ஸித்தப்படுத்தப்பட்ட படுக்கையில்‌ சயனித்து, யோகிகளால்‌ த்யானிக்கத் தக்க திருவடிகளை யுடைய பரம புருஷனிடத்தில்‌ மனதை சேர்ப்பித்தார்‌- என்கிறபடியே
படுத்த பைந் நாகணையாயிருக்கிற தாமும்‌ ஒரு படுக்கையைப் பற்றிக் கண் வளர்‌ந்தருளுவதற்காக யோகீ த்யேயமுமாய்‌ -ரங்காஸ்ரயம்‌ மம ஸூபாஸ்ரய மாஸாயாணி” என்னும்படி ஸூபாஸ்ரயமுகமாய் –அணைப்பார்‌ கருத்தனுவானான வெள்ளத் தரவில்‌ துயிலமர்ந்த வித்தினை மணவாள யோகியான தாம்‌ மனத்திற்‌ கொண்டு நெஞ்சத்துப்‌ பேராது நிற்கும்‌ பெருமானாய்‌ ஸூ ப்ரதிஷ்டிதஞ்‌ யெழுந்தருளி யிருக்கிற சேஷசாயியான ஸர்வேஸ்வரன்‌ திருவடிகளிலே வைத்த இத் தயை யுடையராய்‌ நிர்ப் பரராய்‌ கண் வளர்ந்தருளப் புக்கார்‌.

இத்தம்‌ திநே திநே குர்வந் வ்ருத்திம்‌ பத்யு, ப்ரஸாதிநீம்‌ |
க்ருதீர்‌ கடாபதம்‌ சக்ரே ப்ராக்தநீம்‌ தத்ர வர்த்தநீம்‌ 1
இத்தம்‌ திநே திநே குர்வந்‌ வ்ருத்தம்‌ பர்த்து; ப்ரஸாதிகீம்‌ |
க்ருதி கண்டா பதஞ்சக்ரே ப்ராக்த்நீம்‌ தத்ர வர்த்தநீம்‌ 1

இப்படி ஸ்வாமியான மணவாள மா முனிக்கு திரு வுள்ளத்துக்கு உகப்பான கைங்கர்யத்தை நாடோறும்‌ செய்து கொண்டு அவ்விடத்தில்‌ திநசர்யையை (45-ஸ்லோகங்களுடன் ) க்ரந்தமாகச்‌ செய்தருளி அதன்‌ மூலமாம்‌ அந்த கிரந்தத்தை எல்லோரும்‌ அனுஸந்திக்கும்படி ராஜ மார்க்கம் போலே ப்ரஸித்தமாக்கினார்‌- என்கிறபடியே எழுந்தருளி யிருக்கற நாளிலே நாடோறும்‌ ஸந்நிதியிலே கைங்கர்யம் பண்ணிக்‌
கொண்டு செய்து கொண்டு அப்பா எழுந்தருளி யிருக்க; பின்பு
வரவர முநி வர்ய பாத யுக்மம்‌ வரத குரரோ; கர பல்லவ த்வயேந |
ரஹஸி ஸீரஸிமே நிதீயமாநம்‌ மநஸி நிதம்ய நிதாநவாந் பவாமி ॥

கந்தாடை யண்ணனுடைய இருதளிரன்ன கைகளாலும்‌ ஏகாந்தத்தில்‌ அடியேனுடைய சிரஸில்‌ வைக்கப்பட்ட மணவாள மாமுனிகளின்‌ திருவடித்‌ தாமரைகளை மனதில்‌ கொண்டு ஸத்தை
பெற்றவனாகிறேன்‌- என்று இவர்‌ ஹ்ருஷ்டராம்படி தம்‌ திருவடிகளைப் ப்ரஸாதித்து , ”ஊரேறப் போம்‌” என்று விடை கொடுத்தருள அப்பாவும்‌ பெரு வருத்தத்தோடே ஊரேற வெழுந்தருளினார்‌

நாயனார்‌ ஸப்த கோத்ர வ்யவஸ்தை செய்தருளியது
இவர்க்கு அநுபந்திகளுமாய் கந்தாடை யண்ணனுக்கு ஸம்பந்திகளுமாயிருப்பார்‌, கந்தாடை நாயன்‌ தேவிகளைப்‌ பிறந்தகத்தினின்‌றும்‌ புக்ககத்திற்கு அழைத்துக்‌ கொணடு வருமளவில்‌ அப்ராப்த வாஹநத்திலே ஏற்றிக்‌ கொண்டு வர, அப்பா அத்தைக் கண்டு ஜீயர்‌ ஸந்நிதியிலே விண்ணப்பஞ்செய்ய, திருவுள்ளங் கலங்கி உடனே ௮ண்ணனை அழைத்தருளி இப்படியாகாது, அவர்களையும் பெண்ணையும்‌ த்யஜிக்கிறது தகுதி ” என்ன -அவர்களுக்கு ஸ்வரூபசிஷா பூர்வகமாக ஹிதோபதேசம்‌ செய்யலாகாதோ? என்ன,-அப்படியாகாது, எம்பாவுக்கு ஆப்த ஸம்பந்திகளான துர்மாதிகள்‌!” என்ன, ஆகில்விடும்‌:’ என்ன, பின்பு முதலியாண்டான்‌ திரு வம்ஸ்யரான கந்தாடை யண்ணன்‌ முதலான கந்தாடைஅய்யங்கார்களையும்‌ அவர்களுடைய ஸம்பந்திகளையும்‌ கூட்டி விசாரித்து அவர்களை க்ருபை பண்ணி யருளி ஹிதோபதேசஞ்‌ செய்தருளி, ஸப்த கோத்ர வ்யவஸ்தை செய்தருளி-இந்த ஸப்த பர்வஸ்த்ருக்கும்‌ பரஸ்பர ஸம்பந்தங்களும்‌ அப்யவஹாராதிகளுமாம்படி மர்யாதை கட்டி இன்ன கோத்ரத்தாரின்னரென்று பட்டோலை கொண்டு திருமங்கைமன்னன்‌ திருமாளிகையில்‌ சிலா சாஸனமுமிடுவித்து விசேஷித்து கந்தாடையய்யங்கார்களுக்கு விலஷண ப்ரவரமும்‌ ஸாதித்து அப்பா திருவுள்ளம்‌ மிகவும்‌ ப்ரஸந்நமாம்படி, செய்தருளி எழுந்தருளி யிருக்கிற காலத்திவே ஜீயர்‌ திருவடிகளிலே ஆநுகூல்யமில்லாமை மாத்ரமன்றிக்கே ப்ரதிகூலித்து வாக் துருக்திகளும்‌ பண்ணினவாகள்‌ , தரித்ரராய்‌ அபக்‌யாதி பாரீத்ர பூதரர்ய்‌ அநர்‌த்தப்பட்டுப்‌ போனார்கள்‌ –

(ப்ரும்மாவின் புத்ரகளான,ப்ருகு, அங்கிரஸ், மரீசி, அத்ரி ஆகிய நால்வர் மற்றும் இவர்களில்,ப்ருகுவின் புத்ரரான ஜமதக்னி, அங்கிரஸரின் புத்ரகளான கெளதமர், பரத்வாஜர், மரீசியின் புத்ரரான கஸ்யபர், வஸிஷ்டர், அகஸ்தியர் மற்றும் அத்ரியின் புத்ரரான விஸ்வாமித்ரரும் கோத்ர ரிஷிகளில் வரும் மூலவர்கள்.கோத்ர ரிஷிகள் 8 என்று சொல்லும் ஸ்மிருதிகள், மேற்சொன்ன புத்ரர்களான 7 நபர்களையும், அத்ரியையும் சேர்த்து 8 ரிஷிகளாக குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லுகிறார்கள். ப்ருகு மற்றும் அங்கிரஸ் ஆகிய இருவர்கள் பற்றி ஸ்மிருதிகளில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறதால் அவர்களையும் சேர்த்து 10 ரிஷிகள் என்பதாக சில ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது)

(கந்தாடை ஆண்டான் முன்பே சந்யாச ஆஸ்ரமம் -வேண்ட -ராமானுஜர் முதலியாண்டான் சன்னதியில் சந்யாச ஆஸ்ரமம் வேண்டாம் என்று-ஆறு கோத்தர வ்யவஸ்தை செய்து அருளினாராம் -அதேபோல் இங்கும் கந்தாடை அண்ணனுக்கு ம் சந்யாச ஆஸ்ரமம் வேண்டாம் என்று அருளிச் செய்து ஏழு கோத்தர வ்யவஸ்தை செய்து அருளினார் -)

(கோயிற் கந்தாடை யண்ணனும் எரும்பியில் ஸ்ரீரங்கராஜரும் முன்பு லாட புரத்திற்கு ஸ்தாலீபாகார்த்தம் போன விடத்திலே நடந்த லாட புரஸ்தருடைய வாசார வைகல்யாதிகளையும் தமக்கு அந்த தேஹாநுபந்தத்தில் ருசி யில்லாமையையும் பெரிய ஜீயருக்கு விண்ணப்பஞ் செய்ய,அதைக் கேட்டருளிய பெரிய ஜீயரும் வைலக்ஷண்யமுடையராய் பூர்வமே பிடித்து அந்யோய ஸம்பந்த முடையராய் ஸமான ப்ரவர தோஷமில்லாம லிருக்கிற வாதூல ஹரீத ஸ்ரீவத்ஸ களண்டிய களசிக பரத்வாஜாத்ரேயகோத்ரஸ்தர் எழுவர்களையும் அந்யோய ஸம்பந்தம் பண்ணிக் கொண்டு வரும்படியும் கோத்ராந்தரத்திலே ஸம்பந்தம் பண்ணாதே யிருக்கும் படியும் ஏதத் கோத்ரங்களிலே குடிக் கந்தாடை முதலான வந்ய ஸம்பந்த மில்லா திருக்கும்படியும் அண்ணனையும் வேடலப்பையையும் எரும்பியிலப்பா முதலானாரையும் நியமித்து அத்தைத் தப்பாமைக்குத் தம் ஸ்ரீபாதத்திலாணை யிட்டருளினார்.இச் சேதிக்கு எரும்பி, விராலி, வேடல்-திருவிண்ணகர், திருக்குடந்தை, முறப்பாக்கம், கடிகை, கச்சிநகர்,ஸ்ரீபெரும்பூதர்,திருநறையூர், திரு எவ்வுளூர்,திருமழிசை,முதலான விடங்களில் உண்டான தாசரதி வம்ச்யரான வாதூலவருக்கும் ஸ்ரீபாஷ்யகார வம்ஸ்யரான ஹாரிதருக்கும் மற்றும் ஏததனுபந்திகளான கோத்ராந்தரஸ்தருக்கும் ஜீயர் ஸ்ரீமுகம் வர அத்தை சிரஸாவஹித்து அன்று
முதலின்றளவும் அந்த நியமனத்தாலே நடந்து வருகிறது-இந்த நியமனத்திற்குட்பட்ட விந்த ஏழு கோத்ரத்தாருக்கும் கந்தாடையாரென்று வியபதேசம் நடந்து வருகிறது. இவர்களெல்லாரும் எழுபத்தி நாலு ஸிம்மாஸனாதிபதிகளுக்குள் சேர்ந்த முதலியாண்டான் முதலானாருடைய திருவம்ஸ்யர்.இது ஸப்த கோத்ர வியவஸ்தா ப்ரகாரமிருக்கும்படி. இந்த ஸப்த கோத்ரத்தாரில் வாதூல வம்சியராய் ஸ்ரீ பாஷ்ய ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராய் ஐகஜ் ஜீவாதுவான போளிப்பாக்கம் நயினார், பெரியதிருமலை நம்பி வம்ச்யராய் சடமர்ஷண கோத்ரரான எட்டலூர் சிங்கராசாரியரையும் மற்ற வேழு கோத்ரஸ்தரையுங் கூட்டி யஷ்ட கோத்ரமாக நியமித்தருளினார்.போளிப்பாக்கம் நயினார் ஸப்த கோத்ரஸ்தர்; அஷ்ட கோத்ரத்திற்கு நியமன கர்த்தா.
இது அஷ்டகோத்ர வயவஸ்த்தை. இவர்களிலும் ப்ரயாச: எழுபத்திநாலு ஸிம் மாஸனாதிபதி வம்ஸ்யர்களுண்டு. திருவனந்தாழ்வான் பூமியை வஹிக்க அஷ்டதிக் கஜங்கள் ஸஹகரிக்க ஸப்த குல பர்வதங்களும் பூமிக்கு அஞ்சூராணி விட்டாப் போலே யிருக்கும். அது போல திருவநந்தாழ்வானுடைய திரு வவதாரமான பெரியஜீயர் பராங்குச பரகால யதிவரர்களுடைய ஸம்ப்ரதாய நிர்வஹணமாகிற பாரத்தை வஹித்தருளுவதற்கு அஷ்ட திக் கஜங்களும் ஸஹகரித்து ஸப்த கோத்ரமும் ஸம்ப்ரதாயத்திற்கு ஆணி விட்டாப் போலே வியவஸ்தாபகமா யிருக்கும்படி. கோத்ரமென்று பர்வதத்திற்கும் குலத்திற்கும் பேரென்று சொல்லுவர்கள்.பழ நடை விளக்கம்‌-திருமழிசை அண்ணா அப்பங்கார் சுவாமி-)

(ஸப்த கோத்ர வ்யவஸ்தை
பிற்காலத்தில், ஏட்டூர் சிங்கராசார்யர் அவர்களின் வைபவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வரிசை அஷ்ட கோத்ர வ்யவஸ்தை (எட்டு கோத்திரங்கள்) என மாற்றப்பட்டது
ஸ்ரீ வாஸ்த்ரேய கௌடின்யம் பாரத்வாஜஸ் ச கௌசிக
சடமர்ஷணஸ் ச வாதூல காஸ்யபஸ் ச அஷ்டகோத்ர ஜா
ஸ்ரீ வத்ஸம் –வாதூல்யம் -கௌடின்யம் பாரத்வாஜம் -கௌசிகம்- ஆத்ரேயம்
ஷடமர்ஷணம் -நைத்ருவ காஸ்யபம்
-)

பின்பு ஜீயரும்‌ முதலிகளும்‌ ஒரு நாள்‌ ஆலின் மேலமர்ந்தான் என்கிற பாட்டுக்கு அர்‌த்த சிந்தநம்‌ பண்ணிக்‌கொண்டிருக்கிற வளவிலே, ஒன்று ஆல வ்ருக்ஷமாய்‌, மற்றதற்கு பத்ர பரமாய்‌ அர்த்தம்‌
சொல்ல, !’ஆல்‌ என்று இலையைச்‌ சொல்லாது” ‘ என்று ஜீயரரருளிச்‌ செய்ய; பாலராய்‌ ஒத்த பருவத்தாரோடே க்ரீடா ஸக்தராயிருக்‌கிற கத்தாடை நாயன்‌ ”ஜீயா! ஆலாங்கட்டி யென்‌றன்றோ வ்யவஹாரம் ‘” என்ன, அவரை யழைத்து மடி மேலே வைத்துக்‌ கொண்டு நீர்‌ தொழு குலமன்றோ?” என்று உகந்தருளி தர்சந ப்ரவர்த்தகராம்படி நன்றாக வாழ்த்தி யருளினார்‌

(மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-ஆல் -நீரும் இடமும்-
தண்ணீரின் மேல் இருக்கிற ஆல் என்னுதல்-ஆலின் மேலிடத்து என்னுதல்-பவனான உண்டாகும் நிலை -யில் உள்ள ஆலின் இலை – ஆல்-நீரை சொல்லுமோ -ஆலங்கட்டி -கந்தாடை ஆண்டான் சொல்ல பெரிய ஜீயர் உகந்து அருளினார் –
)

அப்பிள்ளை, ‘அப்பிள்ளார்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்தல்‌
அநந்தரம்‌ அப்பா சகுந விருத்தமென்று மீண்டு தண்டன்‌ ஸமர்ப்பிக்க, ஜீயரும்‌ இவ் விடத்திலே ஒரு அதிசயமுண்டாக வேணும்‌, ஒரு நல்ல நாளிலே பயணப் படுத்துவோம்‌” என்று உகப்‌புடனே அருளிச்‌ செய்ய, இது கேட்டுப்‌ பெரியோர்கள்‌ ‘“ஸ்ரீஸூக்தி யில்‌ மோகமாவது ஒன்றுமில்லையே: ஏதோ அதிசயமுண்டாம்‌’ என்று ஒருவருக் கொருவர்‌ அருளிச் செய்து கொண்டிருக்க, அவிளம்பேந அக்காலத்தே அப்பிள்ளை அப்பிள்ளார்‌ இருவரும்‌ ஜீயர்‌ திருவடிகளீலே ப்ராவண்யமின்றிக்கே பெருமாளை ஸேலிக்க வேணு மென்று திருக் காவேரிக் கரையிலே வந்திறங்கி இரண்டு நாளிருந்து ஜீயருடைய ஸ்த்திதிகதிகளையும் அவருடைய வாக்‌ சாதுர்யத்தையும்‌,ஆராய்ந்து கந்தாடை யண்ணன்‌ முதலானோர்‌ ஆஸ்ரயித்த படிகளையும்‌ ஸ ப்ரகாரமாகக் கேட்டு ‘இதுவென்‌”என்று விஸ்மிதராயிருந்து, அப்பிள்ளை அப்பிள்ளாரை யழைத்து -இது ஸம்பவிக்குமோ” என்று கேட்க , இவர்‌: ‘“எறும்பி யப்பா ஸகல ஸாஸ்த்ர வல்லபர்‌, அதிக்ருத பரமார்த்தர்‌; அவரிப்படிச்‌ செய்யார்‌; நாம் விசாரித்து வருகிறோம்‌” என்று போய்‌ மடத்துக்கு ஸமீபத்திலே யிருந்து, தமக்கு அந்தரங்கராய்‌ ஸமர்த்தரா யிருப்பாரொவரை யமைத்து ”நீர் போய்‌ அப்பிள்ளான்‌ வந்திருக்கிறான்‌ ” என்றறிவியும்‌ -அந்த எறும்பியப்பாவே யாமாகில்‌ உடனே எழுந்தருளுகிருர்‌; அன்றிக்கே மற்றொருவராகில்‌ அப் பிள்ளானை யாரறிவார்‌? என்கிறார் என்று விட, அவர்‌ சென்று எறும்பியப்பாவைக்‌ கேட்டறிந்து கொண்டு தண்டனிட்டு – அப்பிள்ளார்‌ வத்து தெருவிலேயிருக்கிறார்‌, தேவரீருக்குத்‌ தெரிவிக்கச்‌ சொன்னார்‌” என்ன. அப்பா, ௨கந்‌தருளி “அவருக்கு நல்விடிவு” என்‌றருளிச்‌ செய்து கொண்டு தாம்‌ புறப்பட்டெழுந்தருள, அப்பிள்ளார்‌ அவருடை புஜ மூலங்களிலே யிருக்கிற சிஹ்நங்களைக்‌ கண்டு ஒரு தெளிவு பிறந்து அவர்‌ திருவடிகளிலே தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி நிற்க, அப்பா குசல ப்ரச்நங்களுடன் ஆதரித்து இருவரும் கூடி ஒரு திண்ணையிலே இருந்து பெருமாள் தம்மை உஜ்ஜீவிப்பிக்க ஜீயர்‌ திருவடிகளிலே சேர்த்த ப்ரகாரத்தை முந்துற அப்பா அருளிச் செய்யக்‌ கேட்டுத்‌ தெளிந்து ஸ்வாத்மோஜ்ஜீவநபரராய்‌ , அப்பாவை அநுவர்த்தித்து, அப்பிள்ளை முதலானார்‌ திருக்காவேரிக் கரையிலிருக்கிற செய்தியையும் அவ்விடத்தே அப்பா எழுந்தருள வேணும் என்னும் காரியத்தையும் அறிவிக்கக் கேட்டருளி திரும்பி மடத்துக்கு எழுந்தருளி இச்செய்தியை வான மாமலை ஜீயருக்கு அறிவித்து நாம் அவர்களைத் திருத்திக் கொண்டு வரலாம் படி கடாஷித்து அருள வேண்டும் என்று புறப்பட்டு அப்பிள்ளாரைக்‌ கூட்டிக்‌ கொண்டு அப்பிள்ளை பாடே எழுந்தருளி அவருக்கு ஹிதமருளிச்‌ செய்து ஆஸ்திக்யாதரங்கள்‌ விஞ்சி வரப்‌ பண்ணிக்‌ கொண்டிருக்க, வானமாமலை ஜீயர்‌, ஜீயர்‌ ஸந்நிதியிலே எழுந்தருளி, ”அப்பிள்ளை அப்பிள்ளார்‌ என்பவர்கள்‌ ப்ரஸித்தர்‌ அவர்கள்‌ திருக்காவேரிக்கரையிலே இரண்டு நாளாக விருக்கிறார்‌கள்‌; அவர்களுக்கு

ஈஸ்வரஸ்யஸ்ய ஸெளஹார்தம்‌ யத்ருச்சா ஸுக்ருதம்‌ ததா விஷ்ணோ. கடாக்ஷமத்வேஷமாபிமுக்யம்ச ஸாத்விகை: ஸம்பாஷணம்‌ ஷடேதாநி.-யன்றோ? ஸாத்விக ஸம்பாஷணம்‌ ப்ராப்தமாயிற்று- எறும்பியப்பா அங்கே எழுந்தருளியிருக்கிறார்‌; இப்படி ஆசார்ய ப்ராப்தி ஹேதுக்களெல்லாமுண்‌ டானபடியினாலே தேவரீர்‌ திருவடிகளிலே ஸம் பந்தம்‌ லபிக்கிறது; ஆத்மலாபாத்பரம்‌ கிஞ்சிதத்யத்‌ நாஸ்தி” என்‌றன்றோ தேவரீர்‌ திருவுள்ளமிருக்கும்‌; ஆசார்யன்‌ இருவருக்கும்‌ உபகாரகன்‌ என்றன்றோ இருக்கிறது; அவர்கள்‌ விஷயத்தில்‌ இரங்கி யருள வேணும்‌; அப்பாவுடையவும்‌ அடியேனுடையவும்‌ மநோ ரதம்‌ நிறைவேறும்படி ‘ஸூபேந மநஸாத்யாதம்‌” என்கிறபடியே திருவுள்ளம் பற்ற வேணும்‌’ ‘ என்று விண்ணப்பஞ்‌ செய்ய, ஜீயரும்‌ “எம்பெருமானார்‌ அப்படியே திருவுள்ளமாயருளினாய் , ஒருவருக்கு எம்பெருமனார்‌ திருநாமம்‌’* என்று அருளிச்‌ செய்தருள, வானமாமலை ஜீயர்‌ ௨கந்தருளி *அவர்களை எதிர்‌ கொண்டு ஆதிரிப்பதற்காக அடியேனுக்கு விடை ஸாதிக்க வேணும்‌”என்ன அப்படியே அனேகம்‌ ஸ்ரீவைஷணவர்களைக்‌ கூட்டி அனுப்பி யருளப்‌ புறப்பட்டு எழுந்தருளா நிற்க, இவர்கள்‌ வருகிற செய்தியை அப்பிள்ளாருக்‌கறிவிக்க , அவரெழுந்திருந்து அந்த கோஷ்டியைக்‌ கண்டு ஸாஷ்டாங்க ப்ரணாமம்‌ பண்ணி அஞ்சலி ஹஸ்தராய் வைத்த கண்‌ வாங்காதே ஸேவித்துக் கொண்டு -தமக்கத்யந்த மபிமதமாயிருக்கிற பட்டுப் பச்சை வடத்தை இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ கையிலே கொடுத்து நீங்கள்‌ அதி த்வரையாகச் சென்று அவர்களெழுந்தருளுகிற வழியிலே அகலமெல்லாம்‌ படுத்து அத்தை நாலண்டையும்‌ எல்லாரு மெழுந்தருளும்படி பண்ணி, அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஸ்ரீபாதரேணுவை ஸாவதாநமாகக்‌ கொண்டு வரச்‌ சொல்லி விட்டு, அடைக்காய்த் தட்டும்‌ பழத் தட்டும்‌ மத்யையில்‌ வைத்து எறும்பியப்பாவை முன்னிட்டுக்‌ கொண்டு எதிரே சென்று ஜீயர்‌ திருவடிகளிலே தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி ஸ்வ ஜதங்களை யெல்லாம் காட்டி, அடியோங்களெல்லாரையும்‌ கற்றுவிப்பித்தருள வேணுமென்று ஸ்ரீபாத ரேளியை எல்‌லோரும்‌ சிரஸா வஹித்து நிற்க,

ஜீயர்‌ குசல ப்ரச்நம்‌ செய்தருளி உபலாளித்‌தருளி பெருங்கூட்டமாக அண்ணன்‌ திருமாளிகைக் கெழுந்தருள, அண்ணன்‌ எதிர் கொண்டு ஆதரித்தருளி உள்ளே அழைத்துக்‌ கொண்டு சென்று திருவோலக்கமாயிருந்து, தாம்‌ முன்னிருந்த இருப்பையும்‌, நிர்ஹேதுகமாக எம்பெருமானார்‌ க்ருபையால்‌ வந்த மஹா லாபத்தையும்‌, ஜீயர்‌ யதிபுநரவதார மென்பதையும்‌ பஹு முகமாக அருளிச் செய்யக் கேட்டுத்‌ தாம்‌ ஜீயர்‌ திருவடிளை ஸேவிக்க த்வரிக்க, அப்படியே திரு முன் காணிக்கையையும்‌ பட்டுப்‌படாவளிகளையும்‌ பச்சையையும்‌ முன்னே பிடித்துக் கொண்டு மடத்‌திலே சென்று திருமலை யாழ்வாரிலே ஜீயர்‌ கோஷ்டியாக எழுந்த ருளியிருக்கக்‌ கண்டு மிகவும்‌ ஈடுபட்டு,
அபூர்வ ருப ஸம்ஸ்தாதம்‌ தேஜஸாம்‌ ராஸ்மி மூர்ஜிதம்‌‘-எங்கும்‌ கண்டறியாத நிறத்தோடு கூடிய அவயவ ஸந்நிவேசமுடையவரும்‌ த்ருடமான தேஜோ ராசி போலிருப்பவருமானவரை என்று கொண்டு திருவடிகளிலே தீர்க்க ப்ரணாமம்‌ பண்ணி உபஹாரங்‌களையும்‌ ஸமர்ப்பிக்கத் தக்க மரியாதையுடனே ஸமர்ப்பித்து நிற்க, ஜீயர்‌ அவர்களுடைய வைதுஷ்யங்களுக் கநுரூபமாகச்‌ சிறிது ஸ்ரீஸூக்கிகளை யருளிச்‌ செய்ய, அவர்களும்‌ வித்தராய்‌ ஸமாஸ்ரயணத்துக்கு ப்ரார்த்தித்து த்வரைப்பட, தாப புண்ட்ர:’ இத்யாதிப்படியே பஞ்ச ஸம்ஸ்காரங்களையுஞ்‌ செய்தருளி கோயிலுக்குப்‌ புறப்பட்டு ‘தேவீ கோதா’ இத்யாதிப்படியே அவர்களோடே மங்களாசாஸனஞ்‌ செய்தருளி மீண்டு மடத்திலே யெழுந்தருளி ததீயாராதநமும்‌ நடந்து, ‘குரோருச்சிஷ்டம்‌ புஞ்ஜீத, போனகஞ் செய்த சேடந்‌ தருவரேல்‌ புனிதமன்றே-என்கிறபடியே ஸுபாவநமான தளிகை ப்ரஸாதத்தையும்‌ ப்ரஸாதித்தருளி திருவடிகளுக்கு அந்தரங்கராக்கி உஜ்ஜீப்பித்‌ தருளினார்‌. அப்பா திருத் தமப்பனா எறும்யியிலே அப்பாவைக்‌ காண வேணுமென்று ஜீயருக்குக் குறித்து வரக் காட்ட, பின்பு ஜீயர் தாமே அப்பாவை ஊருக்குப்‌ போம்‌” என்று விடை கொடுக்கப்‌ பெரு வருத்தத்தோடே ஊரேற எழுந்தருளினார்‌.

பெரிய பெருமான்‌ உத்தம நம்பியைத்‌ திருத்துதல்‌
பின்பொரு நாள்‌ ஜீயர்‌ பெருமாளை மங்களாசாஸநம்‌ பண்ண எழுந்தருளினவளவிலே ஏகாந்த ஸேயையாய்‌ திருத்திரை பரிமாறித்‌ திருவாராதநங்‌ கொண்டருளா நிற்க, இவரும்‌ உள்ளே சென்று திருவடி தொழுது நிற்க, அவ்வளவிலே திருவாலவட்டம்‌ ஸேவித்துக்‌ கொண்டிருந்த உத்தமநம்பியும்‌,-வெள்ளிப் பெருமலைக் குட்டரான ஜீயரூடைய “க்ஷீர ஸங்காத கெளரம்‌‘ என்றபடியே -பாலின்‌
நீர்மை போலிருக்கிற விக்ரஹ வைலஷண்யத்தைக்‌ கண்டு பாப வாஸனையாலே அந்யதா சங்கை பண்ணி ஜீயரை -நெடும்போதிருக்க வேண்டா”’ என்ன, இவரும்‌ அபிப்ராயமறிந்து ‘மஹாப்ர
ஸாதம்‌”” என்று புறப்பட்டு மடமே யெழுந்தருளினார்‌. அவ்வளவிலே திருவால வட்டம்‌ ஸேவித்துக்‌ கொண்டிருந்த உத்தம நம்பியும்‌ தரங்கிப்‌ பலகணிக் கதவிலே சாய்ந்திருக்க, –அரவினணை மிசை மேய மாயனாரான பெரிய பெருமாளும்‌ இவர்‌ கனாவில் வந்து,’திருப் பவளச்‌ செவ்வாய்‌ முறுவல்‌ தோன்ற,-௮ணி விளங்கு முயர் வெள்ளை யணையான திருவநந்தாழ்வானைத்‌ தொட்டுக் காட்டி, ‘ இவர் கிடீர்‌ ஜீயராக வந்து, அவதரித்தருளினார்‌; அவருடைய நிறம்‌ வெளுப்பு–விஸ்வஸித்திரும்‌” எனறருளிச் செய்ய, அவரும்‌ அத்யந்தம்‌ பீதராய்‌,அப்போதே மடமேற வந்து ஜீயர்‌ திருவடிகளை ஸேவித்து இச்‌ செய்தியை விண்ணப்பஞ் செய்து அபராத ஷாமணம்‌ பண்ணிக்‌ கொண்டு திருவடிகளுக் கந்தரங்கராய்ப்‌ போந்தார்‌, அது பற்றி-அனந்தாவதாரர்‌ வர யோகி யென்பது தென்னரங்கன், மனந்தானறியும்‌ மற்றாரறிவார்‌ “என்று பின்புள்ளாரும்‌ சொல்லும்‌ படி யாயிற்று,

ஒரு ஸாத்விகைக்கு ஜீயர் தமது நிஜாகாரத்தைக்‌ காட்டி யருளல்‌
அநந்தரம்‌ ஸாத்விகைகளில்‌ சடகோபக் கொற்றி யென்னும்‌ திருநாமத்தை யுடையளாயும்‌ ஆச்சியார் பாடே திவ்ய ப்ரபந்தம்‌ நாலாயிரத்வையும்‌ ரஹஸ்யங்களையும்‌ அதிகரித்தவளாயும்‌ திருவடிகளுக்கு மிகவும்‌ அந்தரங்கையாயு மிருப்பாளொரு அம்மையார்‌ ஒரு நாள்‌ திருவோலக்கங் குலைந்த வநந்தரம்‌ மத்யாஹ்நத்திலே திருமலை யாழ்வாராகிற வ்யாக்யாந மண்டபத்திவ ஏகாந்தமாகத்‌ திருக் காப்பு சேர்த்துக்‌ கொண்டு தக்க மா மணி வண்ணனடியிலே வைத்த சிந்தையராய்‌ எழுந்தருளி யிருக்க, அப்போது கதவுப்‌ புரையிலே ஸேவிக்குமளவில்‌ ஆயிரம்‌ பைந் தலையனான திருவநந்தாழ்வானாக ஸேவை ஸாதிக்கக்‌ கண்டு திடுக் குற்றிருக்க,ஜீயர்‌ அத்தைக் கண்டு திருக் காப்பு நீக்கிக்‌ கொண்டு, புறப்பட்டு வந்து சிரித்தருளி அம்மையாரை நடந்தபடி யென் னென்று கேட்டருள, அவள்‌ அப்போது ஸேவித்த படியை விண்ணப்பஞ்‌ செய்ய, ‘ஆகில்‌ ஒருவர்க்கும்‌ சொல்லாதே கொள்‌” என்று நியமித்தருளினார்‌. இப்படி ஜீயர்‌ அவதார விசேஷ மென்பது எல்லார்க்கும்‌ ப்ரத்யஷமிறே –

ஜீயர்‌ வ்யாக்யானங்கள்‌ அருளிச்‌ செய்தது.
பூத்வா பூயோ வரவர முநிர்‌ போகிநாம்‌ ஸார்வபெளம
ஸ்ரீமத் ரெங்கேவஸதி விஜயீ விஸ்வ ஸம்ரக்ஷணார்‌த்தம்‌”
[ஆதி சேஷன்‌ உலகைக்‌ காப்பதற்காக மறுபடியும்‌ மணவாளமாமுனிகளாக அவதரித்து ஸ்ரீரங்கத்தில்‌ மிகவும்‌ மேம்பட்டு வாழ்கிறார்‌] என்கிறபடி ஜகத் ரஷணார்த்தமாக அவதரித்தவராகையாலே ஜகத்தை யெல்லாம்‌ உஜ்ஜீவிப்பிக்கும்படி ஸகல ஜீவாதுவாகப்‌ பிள்ளை லோகாசாரியர்‌ அருளிச் செய்த ரஹஸ்யங்களுக்கெல்லாம்‌ வ்யாக்யாநம்‌
“செய்தருள்வதாகத்‌ திருவுள்ளம்‌ பற்றி
ரஹஸ்ய க்ரந்த தத்வேஷு ரமயாமாஸ தத் ப்ரியம்‌ |
வாக்ய ஸங்கதி வாக்யார்த்த தாத்பர்யாணி யதா ச்ருதம்‌ ॥
வ்யாகுர்வந்நேவ பூர்வேஷாம் வர்த்தமாந: பதே பதே |
ஸ்வமநீஷாகதாம்‌ நைவ கல்பயந்‌ கிஞ்சிதப்யயம்‌ ॥
குப்தாம ஸர்வைர் குருத்வேந கூடாநர்த்தாந தீதிஸத்‌ |
தேஸிகாநாம்‌ நிடந்த்ரூணாம்‌ தர்‌ | ஸ்யங்நேக கண்டதாம்‌. ॥
வாக்யாலங்கார வாக்யாநி வ்யாசக்ஷாணோ விசஷண: |
ஸுதீய:ஸ்வாதயாமாஸ;ஸ்வ ஸ்வ ரூபம்‌ ஸுதுர்க்ருஹம்‌ ॥

இந்த மணவாள மாமுனிகள்‌ முன்னோர்‌ மொழிந்த முறைகளில்‌ நிலை நின்றவராய்‌ ஒவ் வொரு சொல்லுக்கும்‌ தந் தெஞ்சில்‌ தோற்றினதே சொல்வதைச்‌ சிறிதும்‌ பண்ணாமல்‌ ஆசார்ய முகமாய்க் கேட்ட அர்த்தாநுகுணமாக வாக்யங்கள்‌, ஸங்கதிகள்‌ வாக்யார்த்தங்கள்‌ பாவார்த்தங்கள்‌ இவற்றை விசேஷமாக அருளிச் செய்து கொண்டு, ஸகல பூர்வாசாரியர்களாலும்‌ அர்த்த கெளரவம்‌ பற்றி மறைத்து வைக்கப்பட்ட ரஹஸ்யமான விசேஷார்த்தங்கலையும்‌ தமது க்ருபையால்‌ வெளியிட்டார்‌. இப்படி. ரஹஸ்ய க்ரந்தங்களில்‌ ஈடுபட்டவர்களை அவற்றின்‌ தத்வார்த்தங்‌களில்‌ மகிழச் செய்தார்‌. மேலும்‌ வேதங்களென்ன வேதாந்தங்‌களான உபநிடதங்களென்ன, இவற்றை யுட் கொண்டு பேசப்‌ பட்ட ஸ்ம்ருதிகளென்ன, ஸ்ரீராமாயணாதி இதிஹாஸங்கள் என்ன , ஸ்ரீபாஞ்சராத்ரமென்ன, இந்த ப்ரமாணங்களால்‌-பல க்ரந்தங்களை: யருளிச்‌ செய்துள்ள ஆசாரியர்களின் ஒருபடிப்பாட்டைக்‌ காட்டியருளி, நிபுணராய்‌ ஸ்ரீவசன பூஷண சூர்ணிகை வாக்யங்களை வியாக்யானம்‌ செய்தருளுமவராய்‌ அறிய வரிதான ஆத்ம ஸ்‌வருப யாதாத்ம்யத்தை ஞானிகளுக்கு அநுபவிப்பித்து மகிழ்வித்‌தார் ] என்றிப்படி ப்ரதமம்‌ தத்வ ரஹஸ்யங்களுக்கு வ்யாக்யாநம்‌ செய்தருளி அநந்தரம்‌ அசேஷார்த்த ப்ரதிபாதகமுமாய்‌ ஆழ்‌ பொருள்களை யுமுடைத்தான ஸ்ரீவசனபூஷணத்திற்கு மெச்சும்‌
வியாக்கியை யென்று விலக்ஷண பரிக்ரஹமாம்படி வயாக்யாநஞ்‌செய்தருளி, தாமும்‌
ஸ்ரீ வசன பூஷணமாந் தெய்வக் குளிகை பெற்றோம்‌
பார் தன்ளைப்‌ பொன்னுலகாப்பார்க்க வல்லோம்‌-தேரில் தமக்‌
கொப்பாரினியா ருலகாசிரியனருள்‌
தப்பாம லோதிய பின்‌ தான்‌

என்று இதினுடைய வைபவத்தை அநுஸந்தித்துப்‌ ப்ரீதராயருளினார்‌.-முதலிகளு மப்படியே
வாக் பூஷணம்‌ வகுள பூஷண ஸாஸ்த்ர ஸாரம்‌
யோ மாத்ருஸாஞ்ச ஸுகமம்‌ வ்யவ்ருணோத்தயாளூ |
ரம்யோ பயந்த்ரு முநயே யமிநாம்‌ வராய
தஸ்மை நமஸ் ஸமதமாதி குணார்ணவாய

(வகுளாபரணரான நம்மாழ்வாரின்‌ அருளிச் செயலான திருவாய்மொழி எனும்‌ சாஸ்தரத்தின்‌ ஸாரமான ஸ்ரீவசனபூஷணத்தை மந்தர்களான நம் போல்வாருக்கும்‌ எளிதில்‌ அறியும்படி எந்த மணவாளமாமுனிகள்‌ விவரித் தருளினாரோ, சமம்‌, தமம்‌ முதலான கல்யாண குணக் கடலாய்‌ யதி ஸ்ரேஷ்டரான அம் மணவாள மா முனிவருக்‌கு வணக்கம்‌) என்றும்‌,
மேவுந் தவத்து வர யோகி யிட்ட வியாக்கியையால்‌
தேவுந் திகைக்கும்‌, நற்றீந் தத்துவ ரகஸ்யத்துடனே
தாவும் பெரும்‌ புகழாசாரிய விதயத்திற்குமா .
தாவும்‌ பொருள் செறி சொல் லாபரணச்‌ சுருதிக்குமே
-என்றும்‌ இப்படி உபகரித்தமையை அநுஸந்தித்தார்கள்‌.

அநந்தரம்‌ ஸ்ரீவசனபூஷணத்திற்கு அடியாய்‌ சரம பர்வ நிஷ்‌டா கிரமங்ளை ப்ரதிபாதிக்கிற இராமானுச நூற்றந்தாதிக்கும்‌ ஞான ஸார ப்ரமேய ஸாரங்களுக்கும்‌ வியாக்யாளஞ்செய்தருளி (மற்றை ரஷஸ்யங்களுக்கும்‌ ஈட்டுக்கும்‌ ப்ரமாணத் திரட்டு ஸங்க்ரஹித்து அருளியும்‌ கீதைக்கு தாத்பர்ய தீபமென்றொரு வ்யாக்யானமும் இட்டருளி உடையவரருளிய நித்ய திருவாராதன க்ரமத்‌தையும்‌ ஸுக்ரஹமாகவும்‌ ஸுவ்யக்தமாகவும் ஸர்‌வவாத்மோஜ்‌ஜீவந தனமாகச்‌ செய்தருனாரிறே )திருவாய்மொழி முதலான அருளிச்‌ செயல்களை யெல்லாவற்றையும்‌ ப்ரவர்த்திப்பித்து, தர்‌சநத்துக்குப் பண்டில்லாத அதிசயங்களையும்‌ உண்டாக்கிக்‌ கொண்டு எழுத்தருளி யிருக்கிற காலத்திலே, திருவாய்மொழி விஷயமாக திருப் பவளத்தாலே ஏதேனுமொரு ப்ரபந்தம்‌ அருளிச் செய்ய வேணும்‌’ என்று முதலிகளெல்லாரும்‌ அபேஷிக்க, திருவாய்மொழி நூற்றந்தாதியை யருளிச்‌ செய்து தத்வ த்ரயத்திற்கும்‌ ஈட்டுக்கும்‌ ப்ரமாணத் திரட்டு ஸங்க்ரஹித்‌தருளி ஆசாரியர்களுடைய உபதேச பரம்பரா ப்ராப்தமாய்‌ வந்த தர்சந தாத்பர்யங்களை யெல்லாம்‌ உபதேச ரத்தின மாலை என்கிற
ப்ரபந்த முகேந ப்ரதிபாதித்து, உடையவர்‌ நித்யத்தை ஸுக்ரஹமாகவும்‌ பண்ணி யருளி இப்படி ஞான வர்த்தகராய்‌ எழுந்தருளி யிருக்கிற காலத்திலே

தம்முள்‌ விரோதப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்களைத்‌ திருத்தியது.
இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அஹங்காரத்தாலே அந்யோந்யம்‌ விவாதம்‌ பண்ணிக் கொண்டு போர, அப்போது நிஹீத ஜந்துக்‌களுக்கு விவாதமுண்டாக (நாய்களுக்குள்‌ சண்டை மூள), ஜீயர்‌
அத்தைக்‌ கண்டு ‘ நீங்களும்‌ இவர்களைப் போல ஸ்ரீவசன பூஷணாதிகாரிகளோ அஹங்காரம்‌ நடையாடி விவாதம்‌ பண்ணுகைக்கு–என்ன, அவர்கள்‌ இத்தைக்‌ கேட்டு லஜ்ஜா புரஸ்ரமாக அதில்‌
நின்றும்‌ நிவ்ருத்தரானார்கள்‌.

பொருளில்‌ பற்றின்மை
பின்பு வட தேசத்தினின்றும்‌ சில திரு நாமதாரிகள்‌ சில த்ரவ்வம்‌ மடத்திற்கு வரக்காட்ட, அத்தை நிரூபித்துப்‌ பார்த்த வளவில்‌ அநுகூலமன்‌றியிலே யிருக்க, அது த்யாஜ்யமென்று கழிக்க, அநந்தரம்‌ மடத்துக்கு ஷேத்ரமுண்டாய்‌ (விளை நிலம்‌ சேர்ந்ததால்‌) தத்‌த்வாரா வந்த குடிகள்‌ மடத்தில்‌ புஜித்துப் போக அவ்விடம்‌ கோ மயத்தாலே சுத்‌தி பண்ணி ஈரமாயிருக்க, யாத்ருச்சிகமாகப்‌ புறப்பட்டருளினவர்‌ அத்தைக் கண்டு ஈரமேதென்று கேட்டருள,அங்கிருந்தவர்கள்‌ அக் காரணத்தை விண்ணப்பஞ்‌ செய்ய அப்போதே அந்தப்‌ பங்கை பெருமாளுக்கு சமர்ப்பித்து அந்தக்‌ கை யோலையையும்‌ ஸ்ரீபண்டாரத்திலே அர்த்த ராத்திரியி?லே போகவிட்டருளி எழுந்தருளி யிருக்கிற காலத்திலே,

கிழட்டணிலாகிலும்‌ மரமேற வல்லதன்றோ?
அதி வ்ருத்தையாயிருப்பாள்‌ ஒரம்மையார்‌ ஒரு நாள்‌, ராத்திரி மடத்தை விட்டுப்‌ போக மாட்டாமையாலே சயநிக்க அவளைக்‌ கண்டு அர்த்த ராத்திரியில மடத்தினின்று புறப்பட விட்டு(கேட்டவர்களுக்கு) “கிழட்டாணிலாகிலும்‌ மரமேற வல்ல தொன்றன்றோ? உகவாதார் அபவாதம்‌ சொல்ல இது போறுமே’-என்‌றருளிச்‌ செய்து இப்படி யோக்யதை யில்லாத விடத்திலும்‌-பிணமெழுந்து கடிக்கிறதோ!’ வென்று அதி சங்‌கையும்‌ போரா நிற்க –

சிலருக்கு ஸ்வரூப சிக்ஷை
ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ தூதுளங் கீரை கொண்டு வந்து தளிகைக்குச்‌ செய்கிற (தளிகைக்குச்‌ செய்தலாவது-தளிகைக்கு உபயோகமாகக்‌ கறியமுது திருத்துதல்‌ முதலியன செய்தல்‌ )அம்மையார்‌ கையிலே ‘இத்தைப் பாங்காச்‌ செய்து ஸமர்ப்பியும்‌” என்று கொடுக்க, அவர்‌ அத்தை உதாசித்துச்‌ செய்யாமலிருக்க, பின்பு அமுது செய்தருளும் போது அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌ அம்மையார்‌ முகத்தைப் பார்க்க, ஜீயரும்‌ அத்தைக்‌ கண்டருளி இதென்னென்று கேட்டருள அவர்‌ உண்மையை விண்ணப்பஞ் செய்ய அத்தைக் கேட்டருளி அம்மையாரை ‘“ஆறு மாஸம்‌ தளிகைக்குப் பண்ண வேண்டாம்‌” என்று வெறுத்‌தருளிப்‌ பின்பு பாகவதாவமானம்‌ பண்ணினதற்கு ஷாமணம்‌ பண்ணுவித்து பின்பு பூர்வம் போலே நியமித்தருளி நடந்து செல்லுகிற நாளிலே!

ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ தனி வழி வரக்‌ கூடாது :
வரந் தரும்‌ பெருமாள் பிள்ளை ”ஜீயர்‌ திருவடிகளை ஸேவிக்க வேணும்‌” என்ற ஆதாரதிசயத்தாலே தனித்துப் புறப்பட்டு அதி த்‌வரையுடனே வந்து திருவடிகளிலே ஸேவிக்க, இப்படி ஸ்ரீவைஷ்ணவ ஸஹவாஸ மின்றிக்கே தனியே ஸாஹஸித்து வருவதே,!”என்று வெறுத்து அவரை ஆறு மாஸம்‌ புறத்திண்ணையிலே யிருக்கும்படி உபேஷித்து பின்பு அங்கீ கரித்தருளி ஏதத்‌விஷயமாக
1-பஷிதம்‌ ஹி, விஷம்‌ ஹந்தி ப்ராக்ருதம்‌ கேவலம்‌ வபு: |
மந்த்ரெளஷத மயீ தத்ர பவத்யேவ ப்ரதிக்ரியா,
தர்‌ஸந ஸ்பர்ஸ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷ ஸ்ரவணாதபி |
அப்ரதிக்ரிய மாத்மைவ ஹந்யதே விஷயைர்‌ த்ருடம்‌ ॥
இத்த முத்கோஷயந்‌ தோஷாந் விஸ்தரேண ஸாுதுஸ்தராந் |
தூரம்‌ நிர்வாஸ யாமாஸ வாஸநா விஷயேஷ் வஸெள ॥
என்றும்‌-
உட் கொள்ளப் பட்ட விஷம்‌ ப்ரக்ருதமான உடலை மட்டும்‌ அழியச் செய்கிறது; அவ் விஷயத்தில்‌ ‘மந்த்ர ரூபமாயும்‌ ஒளஷத ரூபமாயும்‌ பரிஹாரம்‌ இருக்கிறது ஸித்தம்‌, -ஜீவாத்மாவோ(அவற்றை) காண்பதாலும்‌, தொடுவதாலும்‌ அவற்றுடன்‌ கூடுவதாலும்‌ அவற்றைப்‌ பிரிவதாலும்‌, கேட்பதாலும்‌-பரிஹாரம்‌ பண்ண வொண்ணாதபடி விஷயங்களால்‌ நன்றாக அழிக்கப் படுகிறது- இந்த மணவாளமாமுனிகள்‌ எவ் விதத்திலும்‌ நிவர்‌த்திக்க முடியாத விஷய தோஷங்களை விரிவாக நன்றாக வெளிக் காட்டி ,அவற்றில்‌ வாஸனையை மீண்டும்‌ அணுக வெண்ணாபடி, ஸ மூலமாக
போக்கினர்‌)
2, நிதாநம்‌ ஸர்வ தோஷாணாம்‌ நிதாநம்‌ க்ரோத மோஹயோ; |
மாந ஏவ,மநாம் ஸ்யேஷாம்‌ நித்ய முந் மூல யத்யஸெள
॥ என்றும்‌
(ஸ்வாபிமாநமே (அஹங்காரமே) எல்லா தோஷங்களுக்கும்‌ காரணம்‌-கோப மோஹங்களுக்கும்‌ காரணம்‌,இவ் வபிமானமானது சேதநருடைய மதத்தை எப்போதுமாக அடியோடு அழித்து விடுகிறது. )

3-அர்த்த ஸம்பத்‌ விமோஹாய விமோஹோ நரகாயச |
தஸ்மா தர்த்த மார்த்தாக்யம்‌ ஸ்ரேயோர்த்தீ தூரதஸ் த்யஜேத்‌ ॥
யஸ்ய தர்மார்த்த மர்த்தேஹா தஸ்ய நீஹைவ ஸோபநா |
ப்ரஷாள நாத்தி பங்கஸ்ய தூராத ஸ்பர்ஸநம்‌ வரம்‌
॥ என்றும்‌
(பொருட்‌ செல்வமானது மோஹத்‌துக்குக்‌ காரணமாகிறது. மோஹம்‌ நரக ஹேதுவாகறது. ஆகையால்‌ நன்மையைக் கோருபவன்‌ அநர்த்தம்‌ என்ற பெயருடைய செல்வத்தைக் கிட்ட வொண்ணாமல்‌ விலக்கக் கடவன்‌’ எவனுக்குத்‌ தருமஞ் செய்வற்காகப்‌ பொருளில்‌ ஆசை யுண்டாகிற்றோ அவனுக்குப்‌ பொருளில்‌ ஆசை யில்லாமையே நல்லது. சேற்றைக்‌ காலிலிருந்து அலம்புவதை விட, தூர நின்று அதைக் காலில் பட விடாதிருப்பது நலம்‌.)

4–ப்ருத்யோஹம்‌ விஷ்ணு பக்தாநாம்‌ ஸாஸிதாரஸ் தஏவமே |
க்ரேதும்‌ விக்ரேதுமபிமாமீ ஸதேதே யதேப்ஸிதம்‌ ॥
இதி யஸ்ய மதம்‌ நித்ய மயமேவாத்ம வித்தம: ॥
ஸ்வரூப ஸித்திஸ் ஸர்வேஷாம்‌ ஸ்வோஜ் ஜீவந மபி த்ருவம்‌ |
ஸ்ரேயஸீ தேஸிகாநாஞ்ச ஸித்யதி ப்ரத் யுபக்ரியா ॥
என்றும்‌
அடியேன்‌ ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு தாஸ பூதன்‌. அவர்களே அடியேனுக்கு நியந்தாக்கள்‌-அவர்கள்‌ அடியேனை தங்களிஷ்டப்‌படி விற்கவும்‌ வாங்கவும்‌ உரியவர்கள்‌. இப்படி எத்த சேதனனுக்கு அத்யவஸாயம்‌ நித்தியமாய்ச்‌ செல்லுமோ அவனே ஆத்ம ஸ்வரூப முணர்ந்தவரில்‌ முதல்வன்‌. இதனால்‌ எல்லாருக்கும்‌ ஆத்ம ஸ்வரூபம்‌ நிலை பெறுகிறது.-தமதுஜ்தீவநமும்‌ ஸித்திக்கிறது, ஆசாரியர்‌களுக்கும்‌ மேலான ப்ரத்யுபகாரமானது ஸித்திக்கிறது.

5-ஆசார்யவத்‌ தேவதாவத்‌ மாத்ருவத்‌ பித்ரு வத் ததா
த்ரஷ்ட வ்யாஸ் ஸந்த இத்யா திர்த்ருஷ்ட: ஸாஸ்த்ரேஷுவிஸ்ராத்‌ ॥
என்றும்‌
ஆசார்யனைப் போலவும்‌ தேவதையைப்‌ போலவும்‌,தாயைப்‌ போலவும்‌. தந்தையைப்‌ போலவும்‌ ஸத் புருஷர்கள்‌ அபி மானிக்கத் தக்கவர்கள்‌ என்று இது போன்ற நல் வழிகள்‌ சாஸ்தரங்‌களில் விரிவாகக்‌ காட்டப்பட்டுள்ளன.,

6-ஸுஸீலஸ் ஸுலபஸ் ஸ்வாமீ ஸ்ரீமாநபிக் க்ருபாநிதி:
அணோரபி மஹத் த்வேஷா தத்த் யந்தாம்‌ யாதி விக்ரயாம்
பாவநீ மஹதாம்‌ த்ருஷ்டி: ப்ரச்யுதா நபி மோசயேத்‌ |
அமர்ஷ; புநரல் போபி நித்யாநபி நிபாதயேத்‌ ॥ ._
ப்ரியாத்‌ ப்ரிய தரம்‌ சவ்ரேஸ் ஸஜ்‌ ஜநாநாம்‌ ஸபாஜநம்‌ |
அப்ரியாத ப்ரியஸ் தேஷா மவ மாநோ மநாகபி ॥
என்றும்‌
ஸர்வ ஸ்வாமியான எம்பெருமான்‌ ஸ்ரீமானாயினும்‌, யாவருடனும்‌ கலப்பவனாயினும்‌, எளியனாயினும்‌, பரம காருணீகனாயினும்‌, மஹான்களிடம்‌ பண்ணப்பட்ட சிறிது அபசாரத்தாலும்‌ மிகவும்‌ மனக் கலக்கம்‌ (சீற்றம்‌) அடைகிறான்‌, யாவரையும்‌ பரிசுத்தராக்க வல்ல மஹான்௧ளுடைய கடாஷமானது எம்பெருமானிடமிருந்து நழுவியவரையும்‌ உயர்‌த்த வல்வது, அவர்களின்‌ மனக் கலக்‌கம்‌ சிறிதாயினும்‌ நித்யர்களையுங் கூட நழுவப் பண்ண வல்லது, அந்த மஹான்களுக்கு நேரிட்ட அவமானமானது சிறிதாயினும்‌,எம்பெருமானுக்கு-தனக்கு நேரிடும்‌ அநிஷ்டத்தைக் காட்டிலும்‌ மிகவும்‌ அநிஷ்டமா யிருக்கும்‌.

7-ஸஜ்‌ஜநாதிக்ரம க்ரெளர்யம்‌ ஸாஸ்த்ரைரர்த்தம்‌ ப்ரதர்‌ஸயகந் |
ஸூக்தி பிர்யுக்தி யுக்தாபிஸ் ஸர்வாந் ஸமுத ஜீவயத்‌
-என்றும்
ஸத் புருஷர்கள்‌ விஷயத்தில்‌ பண்ணுமபசாரத்தின்‌ (பாகவதபாசாரத்தின்‌) கொடுமையை இப்படி சாஸ்த்ர முகத்தாலும்‌ யுக்திகளுடன்‌ கூடிய திரு வாக்குக்களாலும்‌ எடுத்துக் காட்டி யாவரையும்‌ உய்வித்துப் பேந்தார்‌]-என்றும்‌ இத்யாதிகளாலே இவற்றினுடைய ஸாஹித்ய ராஹித்யங்களா லுண்டான குண தோஷங்களைத்‌ தம்முடைய தீர்க்க தர்ஸித்வத்தாலே தர்‌ஸிப்பித்‌தருளி ஸர்வரையும்‌ உஜ்ஜீவிப்பித்துக் கொண்டு போருகிற காலத்திலே

ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம்‌ காட்டித் தருதல்‌,
இவருடைய உக்த யநுஷ்டானங்களை யெல்லாம்‌ உத்தர தேசத்‌திலே வைஷ்ணவ ப்ரபுவாயிருப்பா ரொருவர்‌ கேட்டு, தம்முடைய உஜ்ஜீவநத்திற் குடலாக ஸகல சாஸ்த்ர தாத்பர்யங்களையும்‌ ஸங்க்ரஹ ரூபேண அநுஷ்டேயமா யிருப்பதொரு படி அடியேனுக்கு அருளிச் செய்து வரக் காட்டி யருள வேண்டும்‌” என்று குறித்து வரக் காட்ட, ஜீயரும்‌ அப்படியே ‘ பகவத் தாஸ்ய ரஸம்‌ புருஷார்த்‌தமென்று தெளிந்த அதிகாரிக்கு 1-கேவலம்‌ பகவத் ஆஸ்யரணம்‌ புருஷார்‌த்தமன்று; 2-கேவலம்‌ பகவல் லாஞ்சந தாரண மாத்ரமும்‌ போராது; 3-கேவலம்‌ பகவத் ஸமாராதந நிஷ்ட்டா மாத்ரமும் போராது; 4-கேவலம்‌ ஆசார்ய பர தந்த்ர யதிகார மாத்ரமும்‌ போராது; 5-கேவல பாகவதாநுவர்‌த்தந மாத்ரமும் போராது; பின்னை எங்ஙனே யென்னில்‌; யதோசித கைங்கர்யைக நிரதகனாய் ஸ்வ கீயமான க்ருஹத்திலே ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ நிஸ் ஸங்கமாக ப்ரவேஸித்திப்‌ பாங்காக வர்த்திக்கத்‌ தன்னை அத் தலைக்காகவே வைத்துத்‌ தலைக் கட்டும்‌-அடியார்க் கென்னை ஆட் படுத்த, *எம் தம்மை விற்கவும்‌ பெறுவார்களே என்‌னும்‌ நிலை யுண்டாக வேணுமிறே,-இப்படி இவ் வர்த்தம்‌ அநுஸத்தித்து அநுஷ்டியானாகில்‌ தனக்கு ப்ரதிபத்தி ஸெளபாக் யைஸ்வர்யங்கள்‌’ கை கூடாது.
“ந்ய க்ரோத பீ்ஜ வடவத்‌ ப்ரணவே ஸப்த ஜாலவத்‌;
ஸித்தே ததீய ஸேஷத்வே ஸர்வார்த்தாஸ் ஸம்பவந்தி ஹி”-

ஆலம்‌ விதையில்‌ பல கிளைகளை யுடைய ஆல மரம்‌ போலவும்‌, ப்ரணவத்தில்‌ பல சப்த ராசிகள்‌(அஷரங்கள்‌, பதங்கள்‌) போலவும்‌ -பாகவத ஸேஷத்வம்‌ அநுஷ்டாந ஸித்தமானால்‌ (உணர்ந்தால் மட்டுமே அல்ல அனுஷ்டான பர்யந்தமாக வேண்டுமே )எல்லா ஸத் ஸம்ப்ரதாய அர்‌த்தங்களும்‌ தன்னடையே கை புகும்‌] என்கிறபடியே சரமார்த்த விசேஷம்‌ கை புகுத்ததாகில்‌ விவிதங்களாய்‌ விசித்ரங்களாய்‌ அநந்தங்களா யிருந்துள்ள பகவத்‌ ரஹஸ்ய விசேஷங்களெல்லாம்‌ அறிய வேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை, இவ் விசேஷா நுஷ்டாந மின்றிக்கே செல்லுகிற ஜ்ஞாந அநுஷ்டாந ப்ரதி பாதநமும்‌ பகவத் ரஹஸ்ய விசேஷங்களும்‌ வேஸ்யை சொல்லுற பதி வ்ரதா தர்மம்‌ போலே வ்யர்த்தமாகி விடும்‌-
பூஜநாத்‌ விஷ்ணு பக்தாநாம்‌ புருஷார்த்தோஸ்தி நேதர:; தேஷு
வித்வேஷத: கிஞ்சித் நாஸ்தி,நாஸக மாத்மநாம்‌”’

எம்பெருமானிடம்‌ பக்தி யுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களை ஆராதிப்பதிற் காட்டில்‌ வேறு உயர்ந்த புருஷார்‌த்தமில்லை, அவர்களிடம்‌ த்வேஷம்‌ பண்ணுவதைக் காட்டில்‌ ஆத்ம நாசம்‌ பண்ணுவது வேறொன்‌றில்லை-என்கிறபடியே திருமந்த்ரார்த்தமான சரமார்த்த தந் நிஷ்டையை ஸ்வ திவ்‌ய ஸூக்தி விசேஷத்தாலே தர்சிப்பித்து எழுதிப் பேச விட்டருள,அவரும்‌ அப்படியே ததீயாராதநத்திலே நிஷ்ட்டராய்‌ :
தஸ்யை நித்யம்‌ ப்ரதி ஸததிஸே தஷிணஸ்யை நமஸ்யாம்‌”
[அந்த தெற்குத்‌ திசைக்கு எப்போதும்‌ நமஸ்காரம்‌ செய்யுங்கள்‌ ] என்றும்‌,
திஸே வாபி நமஸ் குர்யாத்‌ யத்ராஸெள வஸதி ஸ்வயம்‌”
[இவ் வாசாரியர்‌ தாம்‌ எத் திசையில்‌ வசிக்கிராரோ அத் திசைக்காவது நமஸ்கரிக்கக்‌ கடவன்‌] என்றுஞ்‌ சொல்லுகிறபடியே ஜீயரெழுந்தருளி யிருக்கிற திக்கை நோக்கி , –தொழுமத் திசை யுற்று நோக்கியே (திருவாய்‌ 6-5 5) என்கிறபடியே நாடோறும்‌ ஸேவித்துச்‌ கொண்டு தம்முடைய வர்ணாநு குணமான கைங்கர்யத்தையும்‌ மடத்திற்கு நடத்திக் கொண்டு போந்தார்‌.

அக் காலத்திலே கோயிலிலே யிருக்கிற பட்டர்‌ பெருமாள்‌ திருவோலக்கத்திலே ஜீயரை ஸேவித்து உம்முடைய சிஷ்யர்கள்‌ நம்மை தண்டனிடாமல்‌ அவமதி பண்ணிப்‌ போரா நிற்பர்கள்‌-என்று அறிவிக்க, ஜீயரும்‌ மடத்திற்கெழுந்தருளி அவர்களை யழைத்து நீங்கள்‌ இப்படி செய்வானென்‌?”‘ என்று கேட்டருள, அவர்‌கள்‌, அவரிருக்கற இருப்பை விண்ணப்பஞ் செய்து, அவரை யநுவர்த்திக்க எங்களுக்கு மனமில்லை’* என்ன, ‘ஆகில்‌, பெருமாளும்‌, பிராட்டியும்‌ திவ்ய ஸிம்ஹாஸநத்திலே எழுந்தருளி யிருக்கிறதாக ப்ரதி பத்தி பண்ணி ஸேவித்துக் கொண்டு போருங்கோள்‌” என்று அருளிச் செய்து, இப்படி தோஷமுள்ள விடத்திலும்‌ குண ப்ரதிபத்தி நடக்கும்படியான பகவத் ப்ராவண்யத்தை யுடையவராய்‌, பின்பு வ்ருத்தாசாரங்களை அறிந்தருளு மவராகையாலே வேதகப்‌ பொன்னான விலக்ஷண விஷயங்களையும்‌ ஆதரித்துக் கொண்டு,அவர்கள்‌ விஷயத்திலே பூர்வர்கள்‌ அநுஷ்டித்துப் போரும்‌ சேஷ வ்ருத்திகளெல்லாம்‌ அநுஷ்டாந பர்யவஸாயியாம்படி அநுஷ்டித்‌தருளி;
எக் குணத்தோ ரெக்குல்த்தோ ரெவ் வியல்‌ வோராயிடினும்‌
அக் கணத்தே நம்மிறைவராவரே-மிக்க புகழ்க்‌
காரார் பொழிற்‌ கோயிற் கந்தாடை யண்ணனெனும்‌
பேராளனை யடைந்த பேர்‌

என்று அநுஸூந்திந்தருளி, இப்படி விலஷணமான ஜ்ஞாந அனுஷ்‌டாநங்களோடே கூடி ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீ யுடனே எழுந்தருளி யிருக்கிற காலத்திலே –

வேடலப்பையைக் கொண்டு (வேடல் என்னுமூரில் அப்பை என்னும் கந்தாடை வம்சர் )குத்ருஷ்டியை நிரஸித்தல்‌
குத்ருஷ்டி மதாவலம்‌பியா யிருப்பானொருவன்‌ கோயிலிலே வந்து ஸ்வ மதாபந்யாஸம்‌ பண்ணிக் கொண்டு இறுமாந்திருக்க-ஸர்‌வஜ்ஞரான ஜீயரும்‌ அவனுடனே தர்க்கிக்கைக்கும்‌ ப்ரஸங்‌கத்தாலே அவனை வாய்‌ மூடப் பண்ணுகைக்கும்‌ ஸாமர்த்யமுண்டா யிருக்கச்‌ செய்தேயும்‌ -கலை யறக் கற்ற மாந்தர்‌ காண்பரோ கேட்பரோ தாம்‌ -என்கிறபடியே அவனை த்ருண வத்கரித்து அநாதரித்துக்‌ கொண்டு ”பகவதநுபவ விரோதியான இவனை ஊரோடு ஒட்டக்‌ கடவோம்‌” என்று ஸங்கல்‌பித்து, முன்னே அவன்‌, வாதூல வம்ஸ்‌யரான வேடலப்பையை ஆஸ்ரயித்திருந்தவன்‌, ஸஹ வாஸ தோஷத்‌தாலே கலங்கி ப்ரசந்ந பெளத்தரான விரோதிகளோடே கூடிக்‌ கொண்டு மதாந்தர ப்ரவிஷ்டனானாகையாலே, திரிசங்குவைப்‌ போலே கர்ம சண்டாளனான அவனை ஆலோசித்து வார்த்தை யருளிச்‌ செய்யக்‌ கூசி வேடலப்பையைக்‌ கொண்டு நிரஸிக்க வேணுமென்று திரு வுள்ளம்‌ பற்றி அவரை அழைப்பித்தருள; அவரும்‌ லந்து ஜீயரை ஸேவித்து கோயிலிலே அவனைக் கண்டு ‘“மாணீ! இவ்‌ விடம்‌ கொண்டயோ?” என்ன, அவனும்‌ அவரைக் கண்டு கருடனைக் கண்ட ஸர்ப்பம்‌ போல மிகவும்‌ பீதனாய்‌ ஸேவித்து அங்கு நின்றும்‌ புறப்பட்டு ஒடிப் போனான்‌. அப்பை யுடைய வித்வதப்ரதிம ப்ரபாவத்தை ஜீயர்‌ கண்டருளி விஸ்மயப் பட்டு அப்பையை, “தேவரீர்‌ இங்கே யெழுந்தருளி யிருக்க வேணும்‌ என்று மிகவும்‌ ஆதரிக்க,அவரும்‌ ஜீயர்‌ நியமித்தபடி செய்யாமல்‌ தம்‌ தேஹ யாத்ரா சேஷமான லெவ்கிக கார்யங்களையும்‌ அபிஜந வித்யாவ் விருத்தங்களையும்‌ நினைத்து- ப்ரக்ருதி பரவசராய்‌- பர்யுஷிதாந்நத்தையும மாஹிஷ ததியையும்‌ நினைத்து அங்கு நிற்க மாட்டாதே ஸ்வ க்ராமத்தை நோக்கி எழுந்தருளினார்‌.

மணவாள மாமுனிகளால்‌ வித்யா பூர்த்தியை யிட்டு மதிக்கப் பட்டவரும்‌, முதலியாண்டான்‌ திருவம்ஸ்யருமான வித்வானைக்‌ குறித்து இந்த பரிஹாஸோக்திகள்‌ பொருந்தவில்லை.
தமது வயது முதிர்ந்த பருவத்தை யுத்தேசித்து தம்மை யொத்த ஒரு வித்வானான தமது சிஷ்யரான தாசரதி ஆச்சானை ஜீயர் ஸந்‌நிதியிலிருக்கும்படி நியமித்து ஸ்வ க்ராமம்‌ எழுந்தருளியதாகப்‌ பழ நடை விளக்கம்‌ ‘ என்னும்‌ நூல்‌ கூறுகிறது. அதிலுள்ள விவரங்கள்‌ வருமாறு –
ஸ்ரீமான்‌ திருமழிசை கோயில்‌ கந்தாடை அண்ணா வப்பங்கார்‌ ஸ்வாமி அருளிச் செய்த பழநடைவிளக்கம்‌
பின்பு க்ருஷ்ணாநந்தி யென்‌கிற ஏக தண்டி ஸந்யாஸி கோயிலிலே வந்து தன்னோடே சாஸ்த்ர வாதம்‌ பண்ணச் சொல்ல, பெரிய ஜீயரும்‌, ‘இவனோடே வாதம்‌ பண்ணும் போது மங்களாசாஸந விரோாதமாமே! வாதம்‌ பண்ணா விட்டால்‌ விரோதி நிரஸனம்‌ ஸித்தியாதே! என்ன செய்வோம்‌?என்று சிந்தித்துக் கொண்டிருக்கச்‌ செய்தே, பெரிய பெருமாள்‌ நியமனத்தாலே வேடலப்பைக்குப்‌ பெரிய பெருமாள்‌ ஸ்ரீமுகத்தை வனுப்ப, முதலியாண்டான்‌ திருவம்ஸ்யராய்‌, மஹா வைபவ முடையரான வேடலப்பையும்‌ ஸ்ரீமுகத்தை சிரஸா வஹித்து, தம்முடைய ஸந்நிதியிலே சாஸ்த்ரங்களையும்‌ அதிகரிதது மஹா வித்வானாகிய தாசரதி யாச்சானையும்‌ கூட்டிக் கொண்டு கோயிலுக் கெழுந்‌தருளி நம் பெருமாளை மங்களாசாஸனம்‌ செய்தருளி -ஸகல வரிசைகளையும்‌ விசேஷ கடாக்ஷங்களையும்‌ பெற்று, ஸ்ரீரங்க நாயகியாரை மங்களாசாஸநம்‌ செய்தருளி அவருடைய ப்ரிபூர்ண கடாக்ஷம்‌ பெற்று, ஸம்மானமும்‌ பெற்று, வில்வ வ்ருக்ஷத்திற்கு ஸமீபமாக வெழுந் தருளிச்‌ செய்தே அப்போது அவ் விடத்தில்‌ ஜபம்‌ பண்ணிக்‌ கொண்டிருக்கிற ஏக தண்டியானவன்‌ இவர்களைக் கண்டெழுந்திருந்து, தனக்கு ஸகல சாஸ்த்ரங்களும்‌ படிப்பித்த வேடலப்பையை தண்டனிட்டு நின்றான்‌. வேடலப்பையும்‌ அவனைப் பார்த்து குசல ப்ரச்நம்‌ பண்ணினார்‌. அவனும்‌ தான்‌ வந்த காரியத்தை வேடலப்பைக்குச்‌ சொன்னான்‌ -வேடலப்பையும்‌ -அதற்கள்றோ நாமிங்கே வந்தது’-என்‌றருளிச்‌ செய்தார்‌.-ஆனால்‌ அபசாரப் பட்‌டேன்‌” என்று பயப்பட்டு தண்டனிட்டு நின்றான்‌. வேடலப்பையும்‌ அண்ணன்‌ திருமாளிகைக் கெழுந்தருளி, அண்ணனும்‌ வேடலப்‌பையும்‌ தாசரதி யாச்சானும்‌ அமுது செய்தருளி, க்ருஷ்ணாநந்தி இவர்களுடைய ப்ரஸாதத்தை அர்த்தித்தானாகையால்‌ ஒரு பரிசு ப்ரஸாதத்தை அவனுக்கு ப்ரஸாதித்தார்கள்‌. அவனுமிவர்கள்‌ அநுமதி கொண்டு புறப்பட்டுப்‌ போய் விட்டான்‌-பின்பு வேடலப்டையும்‌ தாசரதி யாச்சானையுங்‌ கூடக்‌ கூட்டிக்‌ கொண்டு அண்ணனும்‌, பெரிய ஜீயர்‌ ஸந்நிதியிலே யெழுந்தருளி தண்டன்‌ ஸமர்ப்பித்து க்ருஷ்ணாநந்தி போய்‌ விட்ட செய்தியை விண்ணப்பஞ் செய்ய, பெரிய ஜீயரும்‌ அண்ணனையும்‌ வேடலப்‌யையையும்‌ தாசரதி யாச்சானையுங்‌ கடாக்ஷித்து மிகவுமுகந்து”உகப்பினுடைய வதிசயத்தால்‌ முதலியாண்டான்‌ திருவம்ச விஷயமாக இரண்டு ஸ்லோகம்‌ அருளிச்‌ செய்து பரிபூர்ணாநுக்ரஹம்‌ செய்தருளி வேடலப்பையையும்‌ தாசரதி யாச்சானையும் ஸந்நிதியிலே நித்ய வாஸம்‌ பண்ணும்படி நியமித்தருள- வேடலப்பையும்‌ வார்த்தகமான படியினாலே தாசரதி யாச்சானை யங்கே யிருக்கும்படி நியமித்து தாம்‌ பெரிய ஜீயர்‌ ஸந்நிதியிலே அநுமதி பெற்று மிகவும்‌ உபலாளனம்‌ பெற்று வேடலுக்கு எழுந்தருளினார்

(வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்தபோதம்
காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம்
வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்
)–திரு ஆடி –திரு பூசம் திருவவதாரம் -ஏழாவதாக மா முனிகளை ஆஸ்ரயித்தார்-

ப்ரதிவாதி பயங்கர மண்ணா வருத்தாந்தம்‌ (இந்த வ்ருத்தாந்தம்‌ தெலுங்குப் பதிப்பில்‌ வேறு விதமாக உள்ளது. அதுவும்‌ பின்னர்‌ இப் பதிப்பில்‌ வெளியிடப்படுகிறது, )
இனி இதற்காவாராரென்று சிந்‌தித்திருக்க, அவ் வளவிலே -ஹஸ்திகிரிநாதரண்ணா வென்னும்‌ திருதாமத்தை யுடையராய்‌ தர்சந விரோதிகளான வாதிகளை ஜெயித்து ‘ப்ரதிவாதி பயங்கரர்‌’ என்று
விருதிடும்படியான ப்ரபாவத்தை யுடையராய்‌ ‘ லோகே வேதேச பண்டித; லெளகிகே ஸமயாசாரே க்ருத கல்போ விஸாரத;” இத்‌யாதிப்படியே லௌகிக வைதிகங்களிவே அத்விதீயராய்‌ பெருமாள் கோயிலிலே சில நாள்‌ வஸித்து -திருப் பதியிலே நித்ய வாஸமாக எழுத்தருளி யிருக்கிற காலத்திலே -அவருக்கு மூன்று குமாரர்கள்‌ திருவவதரித்திருந்து அவர்கள்‌ அதி மேதாவிகளாகவும்‌. தேவிகள்‌ கூரத்தாண்‌டளோ டொத்திருப்பவள் ஓருத்தியும்‌ இப்படி யிருக்கிற ப்ரதிவாதி பயங்கர மண்ணா கூரத்‌தாழ்வானைப்‌ போலே ப்ராப்ய விரோதி யென்று ஐச்வர்யத்தில்‌ ஜிஹாஸை பிறந்து கேவலம்‌ ஸத்வ நிஷ்டராய்‌ ”அர்த்த ஸம்பத் விமோஹாய”” இத்யாதிகளை யநுஸத்தித்து -முற்றவும்‌ வீடு செய்து எல்லாவற்றையும்‌ பகவத் பாகவத ஸ்வம் ஆக்கி, தமக்கு: பரம ஸேஷி விஷயத்தில்‌ கைங்கர்யமே புருஷார்த்தம்‌ என்றறுதி யிடடு திருவேங்கடமுடையான்‌ திருவடிகளிலே ஒழிவில்‌ காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி வழுவிலா வடிமை செய்ய வேணும்‌ என்று நிற்க, திருமலை தோழப்பர்‌ உகந்தருளி –அந்யத் பூர்ணாத் அபாம் கும்பாத் அந்யத் பதாவநே ஜநாத் அந்யத் குஸல ஸம் ப்ரஸ்நாத் ந சேச்சதி ஜநார்த்தந:’‘-ஐநார்த்தனனாகிய கண்ண பிரான்‌ பூர்ண கும்பமோ -திருவடி விளக்குதலோ குசல ப்‌ரஸ்னமோ இவற்றில்‌-ஒன்றைத் தவிர வேறொன்றையும்‌ ஆசைப் படமாட்டான்‌ என்று வெள்ளிக் குடத்தை ஸாதித்து ”ஆகாச கங்கையினின்றும்‌ திருமஞ்சநம்‌ கொண்டு வந்து பூர்ணமாக ஏலாதி ஸம்ஸ்‌க்ருத மாக்கி நீரே ஸமர்ப்பித்து வாரும்‌!’ என்று நியமிக்க,

அண்ணா-நாயன்தே, நாயன்தே” என்று குடத்தை வாங்கிக் கொண்டு அதி ஸந்துஷ்டராய்‌ :“இவ்வளவாகிலும்‌ சேஷத்வ ஸித்தி யுண்டாயிற்றே’” என்று நித்யமாக நடத்திக் கொண்டு போர, ஒரு ஸ்ரீவைஷ்‌வணர்‌ கோயிலினின்றும்‌ அப்பனை ஸேவிக்க வந்து நிற்க , அவரை ஸேவிக்கப்‌ பண்ணி வைத்து, வரிசை பெறுவித்துத்‌ தாமும்‌ ஸத்கரித்து -அற்றைக்கு தம்முடைய அண்டையிலே வைத்துக்‌ கொண்டு கோயில்‌ விருத்தாந்தங்களையும்‌ பெருமாளமுது செய்கிற வரிசைகளையும்‌ உத்ஸவங்களையும்‌ – அழகிய மணவாள மா முனி யுடைய அப்ரதிம வைபவத்தையும்‌ கேட்டுக்‌ கொண்டிருந்து பிற்றை நாள்‌ தாம்‌ திருமஞ்சனத்திற் கெழுந்தருளுகிற போது அவரையுங்‌ கூட்டிக் கொண்டு ”ஸ்ருணோம் யஹம்‌ ப்ரீதி கரம்‌ மம நாதஸ்ய கீர்த்தநம்‌’* [எனக்கு ப்ரீதியை யுண்டு பண்ணும்‌ என்‌ நாதனுடைய கதையைக்‌ கேட்கிறேன்‌] என்றபடியே அழகிய மணவாள மா முனியினுடைய திநசர்யையையும்‌ அத்புத வைபவங்‌களையும் சொல்லுமென்று ததேக சித்தராய்‌ திருமஞ்சநங் கொண்டு வந்து, ஏலாலவங்க கர்ப்பூராதிகளைப்‌ பரிமாறுவதற்காகத்‌ திருத்த, அப்போது ஒரு ஏகாங்கி ஓடி வந்து குடத்தை யெடுத்தக்‌ கொண்டு திருவாராதந ஸமயத்திற்கு உதவ வேணுமென்று கொண்டு போகா நிற்க , ‘-திருமஞ்சந த்ரவ்யங்கள்‌ இன்னும்‌ பரிமாற வில்லையே” -என்ன அதை அவர்‌ கேளாமல்‌ கொண்டு போய்‌ சமர்ப்பிக்க எப்போதும் போல்‌ திருவாராதநம்‌ கொண்டருளா நிற்க அண்ணா, “அபசாரம்‌ வந்ததே” எனறு ஏலாதிகளை வட்டிலிலே கொண்டு நிற்க br> br>அர்ச்சகர்‌, அவசராய்‌ ‘இத்தனை நாளைக் காட்டிலும்‌ பரிமள த்ரவ்யங்கள்‌ விஞ்சி, திருமஞ்சன வாஸனை அதிகமாயிருக்கிறதே’! என்ன அண்ணா பாவஜ்ஞராகையாலே ‘இது வெறுமன்று; ௨கப்பு விஞ்சி யிருக்கிறது; இதற்கு ஹேது ஜீயருடைய வைபவ ஸ்ரவணமாக வேணும்‌”’ என்று எண்ணி, அந்த ஸ்ரீவைஷ்ணவரை யழைத்து “நீர்‌ அழகிய மணவாளமாமுனி , வைபவமான ஐதிஹ்யங்களை அருளிச் செய்ய அடியேன்‌ கேட்டபடியினாலே க்ருதார்‌த்தனானேன்‌; அப்பன்‌ திருவுள்ளம்‌ ப்ரஸன்னமாயிற்று;, அழகிய மணவாளமா முனியை ஸேவிக்கப்‌ பெறுதேனாக வேணும்‌ என்ன; அப்பனும்‌ உகந்து அவரை ஸத்கரித்து அனுப்பி யருளினார்‌.பின்பு தாம்‌ எப்போதும் போலே சில நாள்‌ திருமஞ்சந கைங்கர்‌யஞ்‌ செய்தருளி, அப்பனுடைய நியமனத்தினாலே ஸ குடும்பமாகக்‌ கோயிலுக்கும்‌ புறப்பட்டருளி, பயண கதியிலே திவ்ய நகரத்தைத்‌ தண்டன்‌ ஸமர்பித்து வைத்த கண் வாங்காமல்‌ ஸேவித்துக்‌ கொண்டு நீராடி திருமண் காப்புச்‌ சாத்தி யருளி ஸ்ரீரங்க நாராயண ஜீயர்‌ மடத்திலே எழுந்தருளி பின்பு பெரிய பெருமாளை மங்களா சாஸநம்‌ பண்ணுவதாக ஸேவா க்ரமத்திலே யெழுந்தருள சித்ர மண்டபத்திலே ஜீயர்‌ கோஷ்டியாக எழுந்தருளியிருந்து -ஒன்றுந்‌ தேவு ப்ரவேசம்‌ நடத்த அந்த கோஷ்டியைக் கண்டு ஹர்ஷ பர வசராய்‌ தண்டன்‌ சமர்ப்பித்து நிற்க, ப்ரதிவாதி பயங்கரர்‌ அண்ணா’” என்று ஜீயர்‌ கேட்டருளி குசல ப்ரச்நம்‌ செய்தருளி-இத்தனை நாளைக்காக இன்று ஸேவிக்கப்‌ பெற்றேன்‌” என்று தழுவிக்‌ கொண்டு பின்பு அவரையும்‌ கூட வைத்துக் கொண்டு கால ஷேபம்‌ நடத்த மூன்று பாட்டாய்‌ நாலாம்‌ பாட்டுத்தருவாய்‌ நிறுத்தின வளவிலே ப்ரதிவாதி பயங்கர அண்ணா ‘ இப்படி ஆழ்வார்‌ பர தத்வ நிர்ணயஞ்‌:செய்தருளி வைத்த படியை தேவரீர்‌ திருவடிகளிலே ஸம்பந்த முண்‌டானாலல்லது ஆர்க்கு மறியப்‌ போகாது””என்று வித்தராயிருக்க அவர்‌ திருக் கைகளைப்‌ பிடித்துக்‌ கொண்டு பெருமாளைத்‌ திருவடி தொழப் புக, தீர்த்தம்‌ ஸ்ரீசடகோபன்‌ முதலான வரிசைகளெல்லாம்‌ ப்ரஸாதித்து, பெருமாள்‌ அர்ச்சக முகேந-வாரீர்‌ ப்ரதிவாதி பயங்கராசார்யரே! என்று அவர்‌ கையைப்‌ பிடித்துக்‌ கொண்டு ‘ திருமலையிலே போரத் திரு மஞ்சந கைங்‌கர்யம்‌ பண்ணினீரே: ஒரு நாள்‌ திருமஞ்சநங் கொண்டு வரும்‌ போது அழகிய மணவாளமாமுனி வைபவங்‌ கேட்டுக்‌ கொண்டு வர அதினாலே தீர்த்த ருச்யாதிக்யமும்‌ பரிமளாதிக்யமுமுண்டாய்‌ தாம்‌ உகந்த படியை நினைத்து வந்தீர்‌; உமக்கு விலக்ஷண ஸம்பந்தம்‌ தந்தோம்‌” என்று ஜீயர்‌ திருக் கையிலே இவரைக்‌ காட்டிக்‌ கொடுக்கப்‌ புறப்பட்டு மடமே யெழுந்தருள;

அநந்தரம்‌ அண்ணா கந்தாடை யண்ணன்‌ திருமாளிகைக்‌ கெழுந்தருளுவதாகப்‌ புறப்பட்டருள, அண்ணன்‌ எதிர் கொண்டு, “வைஷ்ணவோ வைஷ்ணவம்‌ த்ருஷ்ட்வா தாண்டவத்‌ ப்ரணமேத்‌ புவி” என்கிற படியே அந்யோத்ய வந்தந பரராய்‌ சேஷத்வ புரஸ்‌ ஸரமாக குசல ப்ரச்நங்களுடனே திருமாளிகையிலே எழுந்தருள, அங்கே யாத்ருச்சிகமாய்‌ வானமாமலை ஜீயரெழுந்தருளி யிருக்கக் கண்டு, “அருள் கொண்டாடு மடியவரன்றோ தேவரீர்‌!’* என்று திருவடிகளிலே தீர்க்கப் ப்ரணாமம்‌ பண்ண -ஜீயர்‌ ப்ரணாம பூர்வமாகத்‌ தழுவிக் கொண்டு மூவருங் கூடி யிருந்து ஜீயருடைய யதி புநரவதாராதி வைபவங்களை யெல்லாம்‌ அந்யோந்யம் அநுஸந்ததித்துக்‌ கொண்டு, மடத்திலே எழுந்தருளி; சிறட்பும்‌ திருமுன்‌ காணிக்கையும்‌, ஸமர்ப்பித்தருளி தேவிகள்‌ குமாரர்‌ எம்பெருமானாரப்பன்‌, அநந்தய்யன் அப்பை, திருவாய்மொழிப்‌ பெருமாள்‌ நாயனார்‌ முதலானாரெல்லாரைங்‌ கூட்டிக் கொண்டு திருவடிகளிலே ஆஸ்ரயித்தருளி க்ருதார்த்தராய்‌ ஸ்ரீபாத தீர்த்தமும்‌ தளிகை ப்ரஸாதமும்‌ ஸ்வீகரித்துத்‌ திருவடிகளுக்கு அந்ததரங்கராய்‌ வாழ்ந்தருளினார்‌, ஜீயருடைய ஸம்பந்த முடையராய்‌ -அடங்கெழில்‌ சம்பத்து என்கிறபடியே கட்டடங்க விலஷணமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை அடங்‌கக் கண்டு என்கிறபடியே கார்த்ஸ்ந்யேத கண்டு –அடங்கெழில்‌ என்றபடியே பந்நகாதீஸரான அழகிய மணவாளமாமுனிகளுடைய நிரவதிக விலக்ஷண ஸ்ரீயிலே அஃதென்‌ நடங்குக வுள்ளே-என்கிறபடியே தாமுமொன்றென்று அந்தர்பவித்து, ‘‘ப்ரஸித்த:பரகோஷ்டீஷு ப்ரவாதி பயங்கர:; ஸ்ரீவைஷ்ணவா நாம்‌ கோஷ்டீஷு தத்தாஸ இதி விஸ்ருத: [ஸ்ரீவைஷ்ணவரல்லாத புறம்‌பான கோஷ்டிகளில்‌ பிரதி வாதிபயங்கரரென்று பிரஸித்தரானாலும்‌ ஸ்ரீ வைஷ்ண கோஷ்டிகளில்‌ அவர்களுக் கடியவர்‌ என்‌று நன்கறியப்‌ பட்டவர்‌] என்று ஸ்வ சேஷத்வாநுஸந்தாநத்துடனே ஜீயர்‌ திருவடிகளுக் கந்தரங்கராய்‌ வாழ்ந்தருளினார்‌.(இந்த ஸ்லோகம் அடியாக இவர் சிஷ்யர்களுக்கு ஸ்ரீ வைஷ்ணவ தாஸன் என்றே திருநாமம்)

தெலுங்குப்‌ பதிப்பிலுள்ளபடி. ப்ரதிவாத பயங்கர மண்ணா வ்ருத்தாந்தம்‌-(வேடலப்பை ஸ்ரீரங்கத்தில்‌ நித்ய வாஸத்‌துக்கு இசையாமல்‌ அகன்று போக ‘இனி இதற்கு ஆவாரர்‌?” என்று சிந்தித்துப்‌ பெருமாள்‌ கோயிலில்‌ ‘ப்ரதிவாதி பயங்கரர்‌’ என்று திருநாம முடையராய்‌ விதேசேஷ்வபி விக்யாதராய்ப்‌ போருகிற ஹஸ்‌தி கிரிதாதரண்ணாவின்‌ பக்கல்‌ திருவுள்ளம்‌ குடி போய்‌ –ஆம்‌ முதல்வனிவன்‌ என்று அபிமானித்தருளி அவரை ஸ்ரீவைஷ்ணவ தாஸராக்க வேணும்‌” என்று ௧ருதித்‌ தன்‌ திருவடிகளுக் கந்தரங்கர்‌களான ஸ்ரீவைஷ்ணவரிருவர்‌ கையிலே தம்முடைய திருமுக மெழுதிக்‌ கொடுத்து அவர் பக்கல்‌ போக விட்டருள, அவர்களும்‌ ப்ரதிவாதி பயங்கர மண்ணாவைக்‌ கிடடித்‌ திருமுகத்தையும்‌ கொடுத்து ஜீயர்‌ அனுப்பின விருத்தாந்த்தையும்‌ அறிவிக்க, அண்ணாவுங்‌ கேட்டு அதி ப்ரீதராய்த்‌ திருமுகத்தை சிரஸா வஹித்துக்‌ கொண்டு; முன்பே திராவிட வேதாந்தார்த்த ஸ்ரவண ஸ்ரத்தா யுக்தரானவர்‌ இதுவே இடமாமென்று கருதி தத் ஷணமே புறப்பட்டு –தாய் நாடு கன்றே போல்‌ என்றும்‌ * வத்‌ஸோவா மாதரம்‌”’ என்றுஞ் சொல்லுகிறபடியே ஸ்ரீவத்ஸ குல திலகராய்‌ ஸ்ரீவத் ஸிஹ்ந மிச்ர துல்‌யரான இவரும்‌ ஸ்ரீரங்காபிமுகராய்‌ -ஆஜகாம முஹூர்த்தேநல்‌-என்கிறபடியே பயண கதிகளை அர்ச்சிராதி கதியாக மநோ ரதித்துக்‌ கொண்டு ::மணவாளமாமுனிவன்‌ பாத கமலங்கள்‌ காண வேணும்‌” என்ற பேராசையுடனே திருவரங்கப்‌ பெரு நகரிலே சென்று-காவேரீ விரஜா ஸேயம்‌’‘ என்கையாலே அந்த வைகுந்த நாட்டிலே விரஜை தானான தன்மை யுடைய திருக் காவேரியிலே நீராடி நதீ நிஸ்தரணாநந்தரம்‌ ப்லவ பரித்யாகம்‌ போலே, சேதனன்‌ வாஸநா ரேணுவைக்‌ கழிக்குமா போலே அநுவாத ரீதியாகிற வாஸநா ரேணுவைக்‌ கழித்து கேசவாதி த்வாதசோர்த்வ புண்‌டரங்களையும்‌ தரித்துக் கொண்டு ஸ்ரீவைஷ்ணவாலங்கார முடையராய்‌ திவ்ய நகர ப்ரவேச யுக்தராயிருக்க;

அவ்வளவிலே அவரண்டைக்குப்‌ போக விட்ட வைஷ்ணவர்‌களும்‌ ஜீயருக்கு இவர்‌ எழுந்தருளின வ்ருத்தாந்தத்தை விண்ணப்‌பம்‌ செய்ய, ஜீயருங் கேட்டு -பக்வமாய்ப்‌ பலிக்குமோ?”’ என்‌று அவர்களை வினவி யருள அவர்களும் தேவரீருடைய அமோக ஸங்கல்பம்‌ பழுது போமோ? அங்கோல தைலம்‌ போலே அப்போதே பல பர்யந்தமாய்‌ பலித்தது” என்ன, போர வுகந்தருளி,இவர்க்கு அபிமுகமாக கோயிலனைத்துப் பரிகரத்துடனே தம் ஸந்நிதி ஸ்ரீவைஷ்ணவர்களைப்‌ போக விட்டருள, இவரும்‌ அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌ தங்களின்பமிகு பெருங்குழுவு கண்டு கொண்டு ஸேவித்து ஹ்‌ருஷ்டராய்‌ நிகில ஜந ஸுஹ்ருத்துக் களானவர்‌களுடனே கூட திருவரங்கத்‌ திருப்பதியிலே ப்ரவேசித்து, “அவர்கள்‌ முன்னிலையாகப்‌ பெருமாள்‌ ஸேவா கிரமந் தப்பாமல்‌ ஸேவித்து மீண்டு வர யோகி மடத்திலே சென்று ‘‘ரங்கே தாம்நி ஸுகாஸீநம்‌- வந்தே வர வர முநிம்‌!’ என்‌கிறபடியே விசேஷாதிஷ்டாதமாக ஸ்வாங்கீகா ரோந்முகராய்‌ எழுந்தருளி யிருக்கிற ஜீயர்‌ திருவடிகளிலே ‘*அகிஞ்சநோ அநந்ய கதி ஸரண்ய த்வத் பாத மூலம்‌ சரணம்‌ ப்ரபத்யே” என்கிறபடியே ஆகிஞ்சந்ய அநந்ய கதித்வ பூர்வமாகத்‌,தாளுந் தடக்கையுங்‌ கூப்‌பி ஸாஷ்டாங்க ப்ரணாமம்‌ பண்ணா நிற்க; ஜீயரும்‌ க்ருபை செய்து, “லோசநாப்யாம்‌ பிபந்நிவ – என்னும்படியே (வில்லிறுத்து மெல் இயல் தோள் தோய்ந்தாய் என்னும் -அங்கும் உருகினார் -பருகினார் )குளிர நோக்க, –வசஸா ஸாந்தவயித்வைநம்‌”என்னும்படி குசல ப்ரஸநம் பண்ணி இருத்திக் கொண்டு அப்போது நடக்கிற *ஒன்றுந் தேவின்‌ ப்ரவேசத்தை உபந்யஸித்துக் காட்ட இவருங் கேட்டுப்‌ போர வாச்சர்யப்பட்டு, திருவாய்‌ மொழியிலு மருளிச் செயலிலு மொழிய ஸம்ஸ்‌க்ருத்தில்‌ பரிசயமில்லை” என்று கேட்டிருந்தோம்‌; இவர்‌ உபய வேதாந்தத்திலும்‌ மிகவும்‌ நிபுணரா யிருந்தார்‌’” என்று ஜீயரிடத்தில்‌ அத்யாதரம்‌ பண்ணி, இனி,-அடியேனை யாட் கொண்டருள வேணும்‌” என்ன, ஜீயரும்‌, “நீர்‌ ப்ரதிவாதி பயங்‌கரர்‌; நாம்‌ ஸாது; எங்ஙனே கூடுகிறது? என்ன, அண்ணுவும்‌ ஜீயரைக் குறித்து ”ப்ரஸித்த பர கோஷ்டீஷு பரவாதி பயங்கர:, ஸ்ரீவைஷ்ணவாநாம்‌ கோஷ்டீஷு தத் தாஸ இதி விஸ்ருத:” என்று அடியேனுக்கு இங்ஙனே இரண்டு ப்ரஸித்தி யுமுண்டு”’ என்ன அத்தைக் கேட்டு ஜீயரும்‌ உகந்த திருவுள்ளத்தை யுடையராய்‌ பஞ்ச ஸம்ஸ்காரங்களையும்‌ ப்ரஸாதித்து, –பலரடியார்‌ முன்பருளிய என்றும்‌ ‘பஹு மாநேந மஹதா?’ என்றுஞ்‌ சொல்லுகிறபடியே விசேஷாபிமானம்‌ செய்தருளி, ஐந்மாத்‌ யுத்க்ருஷ்ட தாதிகளால்‌ “உண்டான அபிமானம்‌ போம்படி-“அடியார்க்கென்னை யாட்படுத்த விமலன்‌ என்கிறபடியே ஆத்ம தாஸ்யமாக ஸ்ரீவைஷ்ணவ தாஸன்‌” என்று ஆர்க்கும்‌ ஸித்தியாத தாஸ்ய நாமத்தையும்‌ ததீய சேஷத்வமே நிலை நின்ற நிரூபகமாம்‌ படி ப்ரஸாதித்தருளி,((வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்தபோதம்-காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம் வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம் பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்)) “காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக பாத்‌ரம்‌” என்னும்படியான அண்ணாவைக்‌ குறித்து ”இதர மத நிராகரண பூர்வமாக ஸ்வ மதமான ஸ்ரீராமாநுஜ ஸித்தாந்தத்தையே ரக்ஷித்துக் கொண்டு விசிஷ்ட பஷத்திலேயே நிஷ்டராய்ப்‌ போரும்‌” (விசேஷணம் -சேதன அசேதனம் –இரண்டிலும் கண் வைக்காமல் -விசிஷ்டம் -பரமாத்மா )என்று நியமித்தருள, இவரும்‌ ஒரு பிறவியிலே இரு பிறவியாய்‌ ஸத்தா மூலமான மூல ஸ்பர்‌ஸமுள்ள (திருமூல வவதாரமான ஸ்வாமி)தொன்றைப்‌ பற்றி ”ஸந்தமேநம்‌ -என்னும்படி ஸத்தையும்‌ பெற்று க்ருதார்த்தராய்‌, உடையவர்‌ திருவடிகளுக்கு ஆழ்வானைப் போலே அந்தரங்கராய்‌, ஸகல வ்யாக்யான நிர்மாண ஸஹ காரியாய்‌ தத் பாதாப்த ஸேவைக தாரகராய்‌ வாழ்ந்து கொண்டு ஜீயருக்கு உகப்பாகப்‌ பெருமாளையும்‌ ஸேவித்து அரிய அருளிச்‌ செயற்‌ பொருளை யெல்லாங்‌ கேட்டு ஆதரித்துக் கொண்டு எழுந்தருளி யிருத்தார்‌. பின்பு ”தஸ்மாத் பார்‌யாதய: புத்ராஸ் தமேகம்‌ குருமாப்நுயு: [அண்ணா ஆஸ்ரயித்‌த படியால்‌ அவருடைய புத்ரர்களும்‌ பத்நீ முதலானவர்களும்‌ அம்‌ மா முனிகளொருவரையே ஆச்சார்யராக ஆஸ்ரயித்தார்கள்‌] என்‌னும் படி தத் ஸம்பத்திளான அப்பா முதலானவர்களும்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்தார்கள்‌. அந்த அப்பாவிறே அஸ்மத் தேசிகராயிருக்கிற சடகோப தேசிகரை ப்ரதமம்‌ கடாக்ஷித்‌தருளினார்‌.

ஜீயர்‌ மீளவும்‌ திருமலை யாத்ரை செய்தருளல்‌.
அநந்தரம்‌ ஜீயர்‌ மீளவும்‌ திருமலை முதலான திவ்ய தேசங்களைத்‌ திருவடி தொழ வேணுமென்று திருவுள்ளமாய்‌, “ப்ரதீதைரபி தத் ப்ருத்யை ப்ரதிவாதி பயங்கரை: (ப்ரதிவாதி பயங்கரம்‌ அண்ணாவுடனும்‌ பிரசித்தர்களான அவருடைய அடியார்களுடன்‌ )என்கிறபடியே ப்ரதிவாதி பயங்கர அண்ணா முதலான அனேக ஸ்ரீவைஷ்ணவர்களுடனே திருக் காவேரி வடக்கு நோக்கினாப்‌ போல புறப்பட்டருளி-அத விலோகந லோக தமேநுதம்‌ த்வதவலோகந துங்க குதூஹலம்‌ | த்விரத ஸைல ஸிரோக்ரஹ மேதிநம்‌ வரத முத்தர வேதி பூஷணம்‌ (பின்னர்‌ தமது கடாக்ஷத்தாலே ஐநங்களுடைய அஜ்ஞான இருளை அடியோடு போக்குமவராய்‌ தேவரீரை கடாக்ஷிப்பதில்‌ மிகவும்‌ குதூஹல முடையவராய்‌ திருவத்தி மலை யுச்சியில்‌ நித்ய வாஸம்‌ செய்தருள்பவராய்‌ உத்தர வேதியான யாக சாலைக்கு அலங்கார பூதரான பேரருளாளனை) என்கிறபடியே அர்த்திதார்த்த பரிதானத்‌தில்‌ அவஸர ப்ரதீஷார யெழுந்தருளி யிருக்கும்‌ பேரருளாளரைத்‌ திருவடி தொழுவாராக ப்ரதமம்‌ பெருமாள்‌ கோயிலேற எழுதந்தருள, அங்குண்டான ஸ்ரீ வைஷ்ணவர்களெல்லாரும்‌ எதிர்‌ கெண்டு வந்து ஸேவிக்க அவர்களை க்ருபை பண்ணி அவர்கஞடனே எழுந்தருளி கோயிலுக்குள்ளே புக்கு.
1-ஸ்ரீ மந் த்வாரவரம்‌ மஹத்தி பலி பீடாக்ர்யம்‌ பணீந்த்ரஹ்ரதம்‌ கோபீநாம் ரமணம்‌ வராஹ வபுஷம்‌ ஸ்ரீபட்ட நாதம்‌ ததா |
ஸ்ரீமந்தம்‌ சட வைரிணம்‌ கலிரிபும்‌ ஸ்ரீபக்தி ஸாரம்‌ முநிம்‌ பூர்ணம்‌ லக்ஷ்மண யோகிநம்‌ முநிவரிராநாத்யா த்வாரபவ்
ஸ்ரீமந் மஞ்ஜந மண்டபம்‌ ஸரஸிஜாம்‌ ஹேதீஸ போகீஸ்வரெள ராமம்‌ நீல மணிம்‌ மஹாந ஸவரம்‌ தார்க்ஷ்யம்‌ ந்ரு ஸிம்ஹம் ப்ரபும்‌
ஸே நாந்யம்‌ கரி பூதரம்‌ ததுபரி ஸ்ரீ புண்ய கோடிம்‌ ததா தந் மத்பே வரதம்‌ ரமா ஸஹசரம்‌ வந்தே ததீயைர் வ்ருதம்‌ ॥

நித்யஸ்ரீயுடன்‌ விளங்கா நின்ற பெரிய திருக் கோபுர வாயிலையும் பலி பீடத்துக்கு முன்புள்ள திருவநத்த ஸரஸ்ஸையும்‌, கோபீ ரமணனான ஸ்ரீவேணு கோபாலனையும, ஞானப் பிரானையும்‌, அப்‌படியே பட்டர்பிரானையும்‌, ஸ்ரீமானான சடகோபனையும்‌, திருக்கலிகன்‌றியான திருமங்கையாழ்வாரையும்‌, திருமழிசைப்‌ பிரானையும்‌ பெரியநம்பியாரையும்‌, எம்பெருமானாரையும்‌, முதலாழ்வார்களையும்‌, பிறகு திருவாசல் காக்கும்‌ முதலிகளையும்‌, திருவபிஷேக மண்டபத்தையும்‌, தாமரையாளான ‘பெரும் தேவித் தாயரையும்‌, திருவாழி யாழ்வானையும்‌, திருவநந்தாழ்வானையும்‌ சக்கரவர்த்தி திருமகனையும்‌, கரிய மாணிக்க வரதரையும்‌. திருமடைப் பள்ளியையும்‌, பெரிய திருவடி நாயனாரையும்‌, ஸ்வாமியான அழகிய சிங்கரையும்‌, சேனை முதல்வரையும்‌, திருயத்திமாமலையையும்‌ அதன்மேல்‌ ஸ்ரீபுண்ய கோடி விமானத்தையும்‌ அதன்‌ மத்தியில்‌ ஸ்ரீதேவி பூதேவி முதலானாரால்‌ சூழப்பட்ட திருமகள் கேள்வனான தேவப் பெருமானையும்‌: அடிபணிகிறேன்‌..


2-கமல நிவேஸி தாங்க்ரி கமலம்‌ கமலாபரணம்‌ கந மணி பூஷண த்யுதி கடாரித காத்த ருசிம்‌ |
அபய கதா ஸூதர்ஸந ஸரோருஹ சாருகரம்‌ கரிகிரி ஸேகரம்‌ கிமபி சேதஸி மேநிததே ।

ஆஸந பத்மத்தில்‌ அழுதியிட்ட திருவடித் தாமரைகளை யுடையனாய்‌ லஷ்‌மீ வல்லபனாய்‌ உயர்ந்த மணிமயமான திருவாபரணரங்களின்‌ ஒளியினால்‌ பொன் வண்ண மாக்கப்பட்ட திருமேனி
சோபை யுடையனாய்‌ அஞ்சேலென்று காட்டும்‌ முத்திரை யென்ன கதை சங்கம்‌ சக்ரம்‌ இவ்வாழ்வார்களென்ன இவற்றை தரிக்கும்‌ திருக்கைகளாலே அழகாக விளங்கா நின்‌ற அத்திகிரிக்கு சிரோ பூஷணமான அநிர்வசநீயனான பேரருளாளனான எம் பெருமானை எனது மனதில்‌ த்யாநிக்கிறேன்‌) என்கிற படியே அடைவே ஸேவித்தருளி வைய மாளிகையிலே ஏறி யருளி பேரருளாளரைத்‌ திருவடி தொழுது
மங்களம்‌ வேதஸோ வேதி மேதிநீ க்ருஹ மேதிநே வரதாயதயா தாம்நே தீரேதாராய மங்களம்‌ ”--பிரமனுடைய யாக பூமியில்‌ எழுந்தருளி யிருப்பவராய்‌, க்ருபா நிதியாய்‌, ஆஸ்ரிதாபேக்ஷிதங்‌களைத் தருவதில்‌ நிலை நின்றவரான பேரருளாளருக்கு மங்களம்‌,
மங்களம்‌-என்று தொடங்கி மங்களாசாஸனம் பணணி எழுந்தருளி நிற்க திருவடிக்‌கீழவர்கள்‌ தீர்‌த்த ப்ரஸாதங்களும்‌ ஸ்ரீ சடகோபனும்‌ ப்ரஸாதிக்க ஸ்வீகரித்தருளி தண்டன் ஸமர்ப்பித்துப்‌ புறப்‌பட்டருள, அங்குண்டானவர்கள்‌ எழுந்தருளியிருக்கும்படி அங்கே ஒரு மடத்தைக் தற்பிக்க.
கதி ஸித்திநாநி கரிஸைல வாஸிந கமலா ஸகஸ்ய நயநாதுதா பவந |
நிஜ பாத பங்கஜ ரஜோபி ஷேச நைரகிலாஸ்ரிதாந்‌ விமலாயக்நு வாஸை : ॥

(அம் மணவாளமா முனிகள்‌: சில நாட்கள்‌ ஹஸ்தி கிரியில்‌ நித்ய வாஸியாய்‌ ஸ்ரீ யபூதியான பேரருளாளனுடைய கடாக்ஷத்திற்கு இலக்காகி, அங்கு எல்லா ஆஸ்ரிதர்களையும்‌ தமது திருவடித்‌ தாமரைகளின்‌ ஸ்பர்சத்தால்‌ சுத்த ஸ்வபராகச்‌ செய்து கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌) என்கிறபடியே அங்கேயே அவர்களுக்கு உகப்பாக நாலாறு நாள்‌ எழுந்தருளி யிருக்க, அநந்தரம்‌ திரு வைசாகத்‌ திருநாள்‌ தொடங்கி நடக்க, முன்றாந் திருநாளன்று பெருமாள்‌ ஒப்பித்துக் கொண்டு
ஆரூட : பதகேந்த்ர மஸ்ய கரயோ ரங்க்ரி த்வயீ மர்ப்பயந்‌
திவ்யை ரம்பர பூஷணைர் திந க்ருதோ தீப்திம்‌ திவா தீபயத்‌ |
முக்தேந்து ஸ்மிதீரோ சிஷா மதுரயந் முக்தாத பத்ர ச்ரியம்‌
விஸ்வம்‌ பஸ்யதி சக்ஷுஷா விகஸ தாவீதீ விஹாரீ ஹரி!

(தேவப் பெருமாள்‌ பெரிய திருவடியின்‌ மேலே எழுந் தருளி அவருடைய கைகளிலே இரு திருவடிகளையும்‌ வைத்துக்‌ கொண்டு, திவ்யமான திருப் பரியட்டங்களாலும்‌ திருவாபரணங்களாலும்‌ சூரியனுடைய ஒளியைப்‌ பகல்‌ விளக்காக்குமவராய்‌, அழகிய வெண் மதி போன்ற புன்முறுவலுடைய காந்தியான திரு முத்துக்‌ குடைகளின்‌ சோபையை விளங்கச்‌ செய்பவராய்‌, திருவீதிகள்‌ தோறும்‌ பவநி எழுந்தருளி, திருக் கண்ணோக்கினால்‌ யாவரையும்‌ குளிரக் கடாக்ஷித்‌ தருளுகிறார்‌) என்கிறபடியே பெரிய திருவடி மேற்‌ கொண்டு திரு வீதியிலே புறப்பட்டருள ஜீயரும்‌ பெருமாளை ஸேவித்‌துக்‌ கொண்டு கங்கை கொண்டான்‌ மண்டபத்தேற வெழுந்தருள);

எறும்பியப்பா ஜீயரை ஸேவித்தல்‌
எறும்பியப்‌பாவும்‌ சில ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ திருநாள்‌ ஸேவிக்க எழுந்தருளினவர்கள்‌ அங்கே அசிந்திதமாக ஜீயரை ஸேவித்து
ஆருஹ்ய பதக வ்ருஷபமா யாந்தம்‌ வரதம் ஆதராத் த்ரஷ்டும்‌. |
கத்வாத தக்ர பூமிம்‌ நாத்ர நஷம்‌ தத்ர தேசிகம்‌ த்ருஷ்ட்வா

(பெரிய திருவடியின்‌ மேல்‌ ஏறி யருளி எழுந்தருஞம்‌ தேவப் பெருமாளை ஸேவிக்க ஆதரத்துடன்‌ சென்று அவ் விடத்தில்‌ ஆசார்‌யரை-மணவாளமாமுனிகளை-ஸேவித்து அங்கு ஈடுபாட்டினால்‌-அதற்கு மேலே எதையும்‌ பார்க்க வில்லை) என்னும்படி அப்பா விஸ்‌மித ஹ்ருதயராய்‌ மோஹித்து ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆதராதிசயத்‌தாலே விழுந்து தத் விக்ரஹாநுபவம்‌ பண்ணிக் கொண்டு ”சிரேண ஸம்ஜ்ஞநம்‌ ப்ரதி லப்ய சைவ விசிந்தயாமாஸ விஸால நேத்ரா””. வெகு காலம்‌ கழித்துத்‌ (சீதை] தன்னினைவடைந்து மேலும்‌ மலர்ந்த திருக் கண்களை யுடையளாய்‌ சிந்திக்கலானாள்‌-என்கிறபடியே மூன்று நான்கு நாழிகைக்கு மேலே தெளிந்து-பின்பு திரு நாளென்றறிந்து ஜீயரை ஸேவித்துக்‌ கொண்டு போய்‌ –குமிறு மோசை விழவொலி தொலை வில்லி மங்கலம்‌ கொண்டு புக்கு(திருவாய்‌ 2-4-2] என்றும்‌ (இழைகொள்‌ சோதிச்‌ செந்தாமரைக்‌ கண் பிரான்‌ இருந்தமை காட்டினீர்‌ [திருவாய்‌ 5-5] என்றுஞ்‌
சொல்லுகிறபடியே ஸேவித்தருளி
(என்கிறபடியே ஜீயர்‌ புருஷகாரமாக ‘ஸெளம்யோ பயந்த்ரு முநிசா மம தர்ஸிதெள தெள ஸ்ரீ தேவராஜ சரணெள சரணம்‌ ப்ரபத்யே ” என்கிற படியே ஸேவித்தருளி) பின்பு ஜீயரும்‌ பெரிய திருவடியோட்டைச்‌ சேர்த்தியை ஸேவித்தருளி
ஸூபர்ண ப்ருஷ்டரம் ஆரூடஸ் ஸ்யாம: பிதாம் புரோ ஹரி: |
காஞ்சநஸ்ய கிரேஸ் ஸருங்கே ஸ தடித் தோயதோ யதா ॥

(பெரிய திருவடி நாயனாரின்‌ முதுகிலே எழுந்தருளி யிருக்கும்‌ நீல மேக ஸ்யாமளனும்‌ பீதக வாடைப் பிரானுமான தேவப் பெருமாள்‌ திரு பொன்மலையின்‌ மேலே மின்னலுடன் கூடிய மேகம்‌ போலே விளங்கினார்‌.) என்கிறபடியே மஞ்சுயர்‌ பொன் மலை மேலெழுந்த மா முகில்‌ போன்ற வடிவை அநுபவித்தருளி –

தரசழுந்து மணி தவள நற் பவள மருண ரத்ந வகை சாத்தியே
சங்கு சக்ர முமங்கையில்‌ திகழ மங்கை பாகன் அரனேத்தவே
நரகு மொத்தமரர்‌ திரளு மேத்தும்‌ நர வாகவனன்‌ வருணனிந்திரன்‌
நடுவு நான்‌மறை கொள்‌ முனிவர்‌ வானவர்‌ குணாலமிட்டு நடமாடவே
வரைகளிற்‌ பெரிய வட கிரிக்குமிசை மரதகக் குவடு போலவே
வரதர்‌ கச்சி நகர்‌ வரு தனித் தெருவில்‌ வடகலைக்கழகு பொழியவே
அரவுதித்த மணி மகுட முற்றவொரு வணி பிணக்குடன்‌ மிழற்றவே
கநக மொத்த தொரு வடிவமொத்தி வரு கருடனிற் பவனி வருவரே
-என்றநுபவித்து அதற்குப்‌ பாசுரமிட்டருளி ஹ்ருஷ்டரா யெழுந்‌தருளி யிருந்து மற்றைத்‌ திருநாள்களையும்‌ ஸேவித்தருளி எழுந்தருளி யிருக்க.

அப்பாச்சி யாண்ணாவைக்‌ கச்சியில்‌ நித்ய வாசம் பண்ண நியமித்தல்‌
ஸ்தலத்திலுள்ள பெரியோர்கள் எல்லோரும் கூடி யெழுந் தருளி-ஜீயர்‌ மங்களாசாஸநஞ்‌ செய்தருளுகையாலே இந்த விசை திரு வைசாக மஹோத்ஸவம்‌ அதி விலஷணமாகக்‌ கண்டருளினார்‌” என்று உகந்தருளக்‌ கேட்டருளி, ஜீயர்‌ அவர்களை ஆதரித்தருளி- கர்த்தவ்ய ஆசார பாகங்களையும்‌ பரஸ்பர சேஷத்வ ஸெளஹார்த அவஸ்யாகத்வத்தையும்‌ திவ்ய ப்ரபந்த வாஸநாத்ய அவஸ்யகத்தையும்‌ அவர்களுக்கு உத்தரோத்தரம்‌ அதிசயமாக வேணுமென்று அருளிச்‌ செய்ய, எல்லோரும்‌ அப்படியே யாக வேணும்‌; இவற்றிற்க் கெல்‌லாம்‌ ஒருவரைக் கற்பித்தருளி’ அடியோங்களைத்‌ திருத்திப் பணி கொள்ளும்படி அந்த ஸ்தலத்திலே நித்ய வாஸமாக நியமித்தருள வேண்டும்‌” என்ன ஜீயரும்‌ போர வுகந்தருளி –வானமாமலை ஜீயரை இட்டு நம்முடைய அப்பாச்சி யாரண்ணாவை அழைத்து வாரும்‌” என்று நியமிக்க அவருமப்படியே செய்தருள, அப்பாச்சி யாரண்ணாவை எல்‌லார்க்குங் காட்டி யருளி, இவரை தம்முடைய மர்யாதையாக வெண்ணி க்ருபை பண்ண வாருங்கோள்‌” என்றருளிச் செய்து அவரையும்‌ நீர் முதலியாண்டான்‌ திரு வம்சத்திலே அவதீர்ணரா யிருக்கையாலே ஆண்டான்‌, தோழப்பர்‌, முதலானார்க்கு உகப்பாக நம்முடைய வாக்யாநுவிதாயியாய்‌ இவர்‌களுக் கெல்லாம்‌-ஹித ப்ரவர்‌த்தகராய்ப்‌ பேரருளாளருக்கு மங்களாசாஸந பரராய்‌ நித்ய வாஸம்‌ பண்ணும்‌
ஸ்ரே யாம்ஸி கரி ஸைலேந்த்ர। கருணா வருணால்ய: |
தோதுஹ்யாத் வரதஸ் ஸ்ரீமா நர்த்திநாம்‌ நிதிரவ்யய: ॥

யாசிப்பவர் களுக்குக்‌ குறையாத நிதியாய்க் கருணைக்‌ கடலாய்‌ ஹஸ்தி கிரி நாதனாய்‌ ‘ஸ்ரீமானான வரந் தரும்‌ பெருமாள்‌ நன்மைகளை(உமக்குச்‌) சுரந்தருளுவாராக] என்று ஆஸீர்‌வதித்தருளினார்‌-

ஜீயர்‌ திருக்கடிகை, எறும்பி வழியாகத்‌ திருமலை எழுந்தருளல்‌.
அநந்தரம்‌ அப்பாவையுங்‌ கூட்டிக்‌ கொண்டு திருப்புட்குழி வழியாக எழுந்தருளி அங்கே புட்குழி அம் போர் ஏற்றையும்‌ ஸேவித்‌துப்‌ புறப்பட்டு,
கடிகாசல ஸேகரம் ததோ நரஸிம்ஹம்‌ நயநேந நிர்விஸந் |
உதஜீவய தர்ஸ்ரிதைர ஜநைரவநீம்‌ தாம பநீத பந்தநை: ॥

(பிறகு கடிகைத் தடங் குன்‌றுக்கு சிரோ பூஷணமா யெழுந்தருளியுள்ள நரசிங்கப்‌பிரானைத்‌ திருக் கண்களாலே பூர்ணமாயநுபவித்து, தம்மை யாஸ்ரயித்தவர்களாய்‌ அறுக்கப்பட்ட ஸம்ஸார பந்தத்தையுடைய சில மனிதர்களுடன்‌ அந்த நாட்டை அநுக்ரஹித்தருளினார்‌) என்கிறபடியே வண்டு வளங் கிளரும்‌ நீள் சோலை வண் பூங் கடிகைத் தடங் குன்றேற வெழுந்தருளித்‌ தக்கானையும்‌ திருவடி தொழுது க்ராமாந்தரங்களினின்றும்‌ அநுகூலராய்‌ வந்து ஆஸ்ரயித்தவர்களையும்‌ க்ருபை பண்ணி யருளி, அநந்தரம்‌ கடிகைத்‌ தடங் குன்றின்‌ மேல்‌ ஏறி யருளி -மிக்கார் வேத விமலர்‌ விழுங்கும்‌ அக்காரக் கனியை யநுபவித் தருளி, அந்தியம் போதிலரியுருவாகி யரியை யழித்தவனைப்‌ பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்‌டென்று பாடுதும்‌ -என்கிறபடியே மங்களாசாஸனம்‌ பண்ணி-அங்கே யெழுந்தருளி நின்று எறும்பியைக்‌ கடாஷித்தருளி ‘வட திருவரங்கம்‌” என்று ஊருக்குத்‌ திருநாமஞ் சாத்‌தி யருளி-அங்குண்டானவர்களெல்லாரையும்‌ அழகிய மணவாள தாஸரென்று அபிமானித்தருளி அண்ணல் மலை யருகே அரங்க மா நகராக்கி அநந்தரம்‌ -வண் பூங் கடிகைக்கு பண்டெல்லாம்‌ வேங்‌கடம்‌ என்று திருமலையோடே சேர்த்தி யுண்டாகையாலே பொன்‌மணியை அணி யார்ந்ததோர்‌ மின்னை வேங்கடத்துச்சியில்‌ கண்டு இப்படி ஸ்ரீதிதி யாகிற பொருள் படைப்பாராக ஒண்ணுதல்‌ மாமையின் படியே மநோ ரதத்தை யுடையராய்‌ தேவம்‌ திவ்யம்‌ ஸேஷ ஸைலே வஸந்தம்‌ தத் பாதாப்ஜம்‌ வீக்ஷிதும்‌’-என்று வேங்கடத்து உச்சியில்‌ கோயில்‌ கொண்டுள்ள தேவனின்‌ திருவடி தொழுவாராக திருவடிவாரமான திருப்பதியிலே முந்துற வெழுந்தருள அங்குள்ள்‌ ஆசார்‌ய புருஷர்கள்‌ முதலானாரனைவரும்‌ எதிர் கொண்டு சேவிக்க-

அவர்களுடன்‌ கூட கோவிந்த ராஜப்‌ பெருமாளைத்‌ திருவடி தொழுவதாக எழுந்தருளி ப்ரதமம்‌ எம்‌ பெருமானாரைத்‌ திருவடித் தொழுது, அவருகந்து எழுந்தருளப் பண்ணினவரென்று அத்‌யாதரத்துடனே ஸ்ரீகோவிந்த ராஜப் பெருமாளையும்‌ –கையினார்‌ சுரி சங்கனலாழியர்‌ என்கிற படியே அத்யாதரத்துடன்‌ ஸேவித்‌தருளி கோவிந்தன்‌ குணம் பாடி மங்களசாளனம்‌ பண்ணி யருளி கோவிந்தன்‌ தன்னடியாரா யிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களுடனே புறப்பட்டருளி திருமலை யடிவாரத்‌திலே எழுந்தருளி யிருக்கிற நம்மாழ்வார்‌ முதலான ஆழ்வார்களையும் *உலகுய்ய மால்‌ நின்ற என்று தொடங்கி மகிழ் மாறன்‌ தாளிணையே ௨ன்‌ சரணாய்‌ நெஞ்சமே யுள்‌ (திருவாய் நூற்‌-60) என்றும்‌ ஓழிவில் காலம்‌ என்று தொடங்கி -மிக்க நலஞ்சேர் மாறன் பூங் கழலை நெஞ்சே புகழ்‌ (திருவாய்‌ நூற்‌-23) என்றும்‌ அநுஸந்தித்து ஸேவித்தருளி அன்றைக்கு அங்கே எழுந்தருளி யிருந்து அங்குண்டானவர்களையும்‌ க்ருபை பண்ணி யருளி, பிற்றை நாள்‌ திலத முலகுக்காய்‌ நின்ற திருவேங்கடத்தைச்‌ சென்று வணங்கி, அநந்தரம்‌ மொய்த்த சோலை மொய் பூந் தடந் தாழ்வரே (திருவாய்‌ 3-3-10) என்றும்‌ -தேனேய்‌ பொழில் சூழ்‌ திருவேங்கட மா மலை (திருமொழி 11-9-2) என்றும்‌-அப்ராக்ருத மமேயஞ்ச ஸர்வ ரத்ந மயம் கிரிம்‌, ஹிரண்மய மஹா ஸ்‌ருங்கம்‌ பஞ்ச உபநிஷதாத் மகம்‌:” (பஞ்சோபநிஷ மயமாய்‌ அப்ராக்ருதமாமய் அளவிடற்கு அரியதாய் ஸகல மணி மயமாய்‌ பொன்‌ மயமான பெரிய சிகரத்தை யுடைத்தான திருமலையை என்கிறபடியே அப்ராக்ருத திவ்ய வபுஸ்ஸை யுடைய திருமலை யாழ்‌வாரை யடைந்து வணங்கி, அப்பால்‌ பரம பதத்துக்குப்‌ படி யொழுங்கு போலே யிருக்கிற திருமலையிலே *தம்பாதே நாத்யாரோ ஹதி (கெளஷீடக்‌ 1-5) என்னும்‌ ப்ரதிபத்தியுடன்‌ ஏறி எழுந்தருளி காட்டு அழகிய சிங்கரையும் திருவடி தொழுது -தேனாறு பாயுத்‌ திரு வேங்கடத்தி லுண்டான கானாறுகளையும்‌ -கண்டு களித்து கொண்டு அவ் வருகே எழுந்தருளு கிறவர்‌ விண்ணின்‌ மீதி யன்றே வேங்கடத்திலுண்டான விலங்கல்‌ குடுமிகளையும்‌ மின்‌ திகழ்‌ குடுமிகளையும்‌ கோல் தேன் பாய்ந்தொழுகும்‌ குளிர் சோலை சூழ்ந்த வழகையும்‌ கல் தேன்‌ பாய்ந்தொழுகும்‌ கமலச் சுனைகளையும்‌ செப்பார்‌ திண் வரையையும்‌ ஸேவித்துக் கொண்டு அப்பாலே எழுந்தருளி காட்டில்‌ வேங்கடத்திலுண்டான காட்டையும்‌ வைகுந்த நாட்டுக்‌ கொப்பான வட வேங்கட நாட்டையு மநுபவித்து –மாலுகந்தவூரான ஊரருகே யெழுந்தருளி -நன் மணி வண்ணன்‌ (நான்‌திரு, 47)
என்ற பாட்டின் படியே அங்குண்டான ‘ அபூர்வங்களை யெல்லாம்‌ ஆஸ்சர்யத்துடனே அநுபவித்து,-கண்ணன்‌ விண்ணூரைத்‌ தொழுது ஊரருகே, ஸேவித்துக் கொண்டு நிற்க அவ்வளவில்‌ -வேங்‌கடத்தைப்‌ பதியாக வாழுகிற கோயில் கேள்‌வி ஜீயர்களும்‌ ஏகாங்கி ஸ்ரீ வைஷ்ணவர்களும்‌ மற்றெல்லாரும்‌ வந்தெதிர்‌ கொண்டு ஸேவிக்க, அவர்களை –நிகரிலமரர்‌ முனிக் கணங்கள்‌ என்று ப்ரதிபத்தி பண்ணி யருளி அவர்களுடனே கூடத்‌ திருவேங்கட நகரை ப்ரவேசித்து அவ் வருகே வைகுந்தன்‌ திருவாசல்‌, அவாவறச் சூழ்ந்‌தான்‌ திருவாசல்‌, என்கிற திரு வாசல்களையும்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து ப்ரதஷிணமாக வெழுந்தருளி அங்கே அநந்தாழ்வான்‌ கைங்‌கர்யமான ‘இராமானுசன்‌”’ என்கிற திரு நந்தவனத்தையும்‌ மற்றுமுண்டான திருநந்தவனங்களையும்‌ திருப் பூ மண்டபங்களையும்‌ ஸேவித்து திருவுள்ளமுகந்தருளி, பின்பு திருக் கோனேரியிலே நீராடி-த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களையும்‌ தரித்தருளி-மேலொரு நாள்‌ மண் கோட்டுக் கொண்டான்‌ மலை (மூன்றாம் -திரு-45) என்கிறபடியே-எறிதர வையம்‌ முற்றும்‌ ஏனத்துருவா யிடந்த ஷேத்ராதிபயான ஞானப் பிரானையும்‌ ஸேவித்து ஊனேறு!செல்வத்தை (பெரு. திரு .4) அநுஸந்தித்து அங்குண்டான திர்யக் ஸ்தாவர ஜந்மங்களை ப்ரார்த்‌தியா நின்று கொண்டு கோனேரி வாழுங் குருகு தொடக்கமான பஷி ஸங்கங்களையும்‌ தம்பகமாய்‌ நிற்கும்‌ தவமுடையாரையும்‌ அநுபவித்துக் கொண்டு, பெரிய திருக் கோபுரத்துக் கருகே தண்டன்‌ ஸமர்ப்‌பித்து உள்ளே புகுந்து, நம்‌ பெருமாள்‌ எழுந்தருளி யிருந்த அழகிய மணவாளன்‌ திரு மண்டபத்தையும்‌ ஸேவித்தருளி

1-ஸ்ரீமதி மஹாத்வரார சிஞ்சாம்‌ காஞ்சந மயஞ்ச பலிபீடம்‌ |
ஸ்தாந மதயாமுநேயம்‌ சம்பக தரு ஸம்பதம்‌ ப்ரதீ ஹாரம்‌ ॥
விநதா தநய மஹாநஸ மணி மண்டபம்‌ கநக மய விமாந வரம்‌ |
ப்ருதநாபதி யதி துர்யெள நர ஹரி மதந மத ஜாநகீ ஜாநிம்‌ ॥

பெரிய திரு வாயிலிலே அந்தாணிப் புளிபையும்‌ பொன் மபமான பலி பீடத்தையும்‌ அதன் பின்னர்‌ யமுனைத் துறைவர்‌’ என்கிற புஷ்ப மண்டபத்தையும்‌ செண்பக வ்ருக்ஷ ஸம்பத்தை யுடைய செண்பகத்‌ திரு வாசலையும்‌ பெரிய திருவடி நாயனாரையும்‌ திருமடைப்‌ பள்ளி யையும்‌ திருமாமணி மண்டபத்தையும்‌, தங்கத்தால்‌ சமைந்த ஆநந்த நிலய விமானத்தையும்‌, சேனை முதல்வரையும்‌, யதிராசனாரையும்‌, நரசிங்கப் பிரானையும்‌ பின்னர்‌ இராம பிரானையும்‌ வணங்கக்‌ கடவீராக.

2-அதபுந ரநக மணி த்யுதி கவசித கமலா நிவாஸ புஜ மத்யம்‌ |
கலயத கமல விலோசந மஞ்ஜந கிரிநிதி மநஞ்ஜநம்‌ புருஷம்‌ ॥

பின்னர்‌ தோஷமற்ற மணிகளின்‌ காந்தியால்‌ வியாபிக்கப் பெற்றதாய்ப்‌ பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமான திருமார்பை யுடையனாய்‌ செந்தாமரையை யொத்த திருக் கண்களை யுடையனாய்‌ அஞ்சன கிரி நிதியாய் ஹேய ப்ரதிபடனாய்‌ பரம புருஷனான திருவேங்கடமுடையானை கண்ணாரக் கண்டு களிக்கக் கடவீர்‌கள்‌

3-ஸரணமய மித்யங்க்ரிம்‌ நிர்திஸ்ய தக்ஷிண பாணிநா
கர கிஸலயம்‌ ஸவ்யம்‌ ஸவ்யோரு ஸீம்நி ஸமர்ப்பயந் |
மணி கண மஹோ மக்நே வக்ஷஸ் ஸ்தலே தததிந்திராம்‌
பவதபிமத ஸ்ரீமாநஸ் மாகமஸ்து பரம் பதம்॥

இந்தத் திருவடிகளே உங்களுக்கு மோக்ஷோபாயம்‌ என்று வலது திருக் கையால்‌ காட்டிக்கொண்டு, தளிர் போன்ற இடது திருக் கையை இடது திருத் தொடை ப்ரதேசத்தில்‌ வைத்திருப்பவராய்‌, ரத்நங்களின்‌ ஒளியில்‌ மூழ்கின திரு மார்‌பில்‌ பெரிய பிராட்டியாரைத்‌ தரிக்குமவனாய்‌ உங்களுக்கு ப்ரிய தமனுமான திருவேங்கடமுடையான்‌ ஸ்ரீநிவாஸன்‌ நமக்கு மேலான ப்ராப்ய ஸ்தானமாக ஆகக்‌ கடவன்‌]

என்கிறபடியே திருவேங்கடமுடையானைத் திருவடி தொழுவதாக ஸேவா க்ரமத்தில்‌ அடைவே அத்தாணிப் புளி, ஸ்ரீபலி பீடம்‌, யமுனைத் துறைவனென்கிற திருப் பூ மண்டபம்‌, செண்‌பகத் திருவாசல்‌, பெரிய திருவடி, திருமடைப் பள்ளி, திருமாமணிமண்டபம்‌, திவ்ய விமானம்‌, முதலானவற்றையும்‌ ஸேவித்தருளி, அநத்தரம்‌ சேனை முதலியாரையும்‌ திருவடி தொழுது -நின்ற வண்‌ கீர்த்தியும்‌ நீள் புனலும்‌ நிறை வேங்கடப்‌ பொற் குன்‌றமும்‌ என்றும்‌-இருப்பிடம்‌ வைகுந்தம்‌ வேங்கடம்‌ என்றும்‌ இத்யாதிகளை அநு ஸந்தித்து எம்பெருமானாரையும்‌ ஸேவித்து அவருடைய அநுமதியோடே புறப்பட்டருளி தூணாயதனூடரியாய்‌ என்றநுஸந்தித் தருளி -திருவேங்கடத் தரியையும்‌ ஸேவித்து, வென்று மாலை யிட்‌டான்‌ திருமண்டபத்தே யெழுந்தருளி தாயே தந்தை என்று தொடங்கி -நாயேன்‌ வந்தடைந்தேன்‌ நல்கி யாளென்னைக்‌ கொண்‌டருளே என்று தண்டன்‌ சமர்ப்பித்து உள்ளே புக்கு, பின்பு-மிடைந்த ஏழ் மரங்களுமடங்க வெய்து வேங்கட மடைந்த மாலான சக்ரவர்த்தி திருமகன்‌ திருவடிகளை யடைந்து, அப்பால்‌ அவன்‌ தாளிணைக் கீழ்ப் புகுங்‌ காதலை யுடையராய்க் குலசேகரன் படி
யருகே சென்று -அகலகில்லேன்‌ என்று பூர்வ வாக்ய ப்ரக்ரியையாலே-அடிக்கீழமர்ந்து புகுந்து நின்று ஸேவித்தருளி, அநத்தரம்‌ -செங்கமலக்‌ கழலில் படியே,

திருமகள்‌ மருவு மிருபதமலரு முழந்தாள்களுங் குறங்கும் தாங்கு
செக்கரம் மா முகில் போலத்‌ திருவரைச்‌ செம்பொனம்பரமும்‌
அருமை சேர்‌ சீராவு மயனைத் தந்த தோருந்தியு மமுதமாருதர பந்தமும்‌
அலர் மேல் மங்கை யுறை திருமார்வமு மாரமும்‌ பதக்க கன்னிரையும்‌
பெருவரை யனைய புய மொரு நான்கும்‌ பிறங்கடலாழியுஞ் சங்கும்‌
பெறு திவமென்று காட்டிய கரமும்‌ பிடித்ததோர்‌ மருங்கினிற் கரமும்‌
ஒருமதி யெனவே சோதி சேர் முகமு முயர் திருவேங்கடத் துறையு
மொப்பிலா வப்பன் கருணை சேர் விழியு மென்னுளெலாம்‌ நிறைந்து நின்றனவே

என்று பாதாதி கேசமாக அநுபவித்தருளி அலங்கல்‌ துளப முடியையும்‌ திருத்தியகோறம்பையும்‌ சுற்றுமொளி வட்டஞ்சூழ்ந்து சோதி பரந்த கோளிழைவாள்‌ முகத்தையும்‌ அதில்‌ தன் முகத்‌துச் சுட்டியையும்‌, திரு நெற்றியில்‌ சாத்தின முத்தின்‌ திருநாமத்தையும்‌ “வெண்ணெ யுண்டான்‌ திருமூக்கு” என்று ப்ரத்யபிஜ்ஞை பண்ணலாம்படி புழுகிலே முழுகி யிருக்கிற கோல நீள் கொடி மூக்கையும்‌ தாமரை கட் கனி வாயையும்‌, வார் காதிலே சாத்தின இலகு மகர குண்டலங்களையும்‌ உலகமுண்ட பெரு வாயாலே அண்டமுநாடுமடங்க விழுங்கிய கண்டத்தையும்‌ அத் திருக் கழுத்தினில்‌ காறையையும்‌ -அலர் மேல்‌ மங்கை யுறை மார்வையும்‌, அதில்‌ பவள வாய்ப் பூமகளும்‌ பன் மணிப் பூணாரமுமான சேர்த்தியையும்‌,அத்தோடு சேர்த்த வெண் புரி நூலையும்‌ வட வேங்கட வனுடைய மல்லார் தோள்களையும்‌ அதிலே சாத்தின தண் துழாய் விரை நாறு கண்ணியையும்‌ திருக் கைகளிலே தரித்த வலம்புரி ஆழியையும்‌ அவற்றிற்குப்‌ பரபாகாவஹமான வண்ண மருள்‌ கொளணி மேக வண்ணத்தையும்‌, உய்ய வுலகு படைத்துண்ட மணி வயிற்றையும்‌ அதில்‌ திரு வுதர பந்தநத்தையும்‌, அதுக்கநந்தர பாவியாய்‌ உடையார்‌ கனமணி யோடொண் மாதுளம்பூ இடை விரவிக் கோத்த வெழில்‌ தெழ்கனோடும்‌ பொன்னரை நாணொடு மாணிக்கக்‌ கிண்‌ கிணியையும்‌ -பெருமானரையில்‌ பீதக வண்ண வாடை என்று ப்ரணயினிகள்‌ வாய்‌ புலற்றும் படியான அந்தி போல்‌ நிறத்தாடையையும்‌ -பல்லி நுண் பற்றாகச் சாத்தின உடை வாளையும்‌, புரிந்து மலரிடுறை புண்டரீகப் பாதமான பூவார் கழல்களையும்‌ அதில்‌ அதிர் கழல் சதங்கைகளை யுமுடைய திருவேங்கடமுடையானை எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே ‘ என்கிறபடியே கேசாதி பாதாந்தமாக அநுபவித்தருளி ப்ரீதராய்த்‌ திருப் பல்லாண்டு தொடங்கி அநுசந்தித்து, மங்களாசாஸனம் பண்ணி, பர்யாப்தி பிறவாமையாலே.

மங்களம்‌ மாநுஷே லோகே வைகுண்டமதி திஷ்டதே | ஸேஷஸைல நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்‌ ॥-மானிட வுலகில்‌ ஸ்ரீவைகுண்டமான திருமலையில்‌ எழுந்தருளி யிருக்கிற திருவேங்கடவனுக்கு மங்களமுண்டாக வேணும்‌; என்று மங்களாசாஸநம் பண்ணியருளி.
ஸெளம்யோ பயந்த்ரு முநிநா மம தர்ஸி தெளதே |
ஸ்ரீ வேங்கடேஸ சரணெள சரணம்‌ ப்ரபத்யே ॥

ஆசார்யரான ஸ்ரீ மணவாள மா முனிகளாலே அடியேனுக்‌குப் புகலாகக்‌ காட்டி யருளப்பட்ட ஸ்ரீவேங்கடேச பாத கமலங்‌களைப் புகலாகப்‌ பற்றுகிறேன்‌ என்கிறபடியே எல்லார்க்கும்‌புகலாக அடிக்கீழம்ர்ந்துபுகுந்து அடியீர்வாழ்மின்‌ என்று திருவடியைக் காட்டி யருள அவனும்‌ மலை மேல் தான்‌’நின்று என்‌ மனத்‌துளிருந்தான்‌ என்கிறபடியே இவர்‌ திருவுள்ளத்தைக்‌ கணிஸித்துக்‌
கொண்டிருந்து இப்போது இவரைப்‌ பெற்றவாறே ‘ஸ்ரீமத் ஸூந்‌தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிதே’ என்னும்படி. இவர்‌ திருவுள்‌ளத்தைத்‌ தனக்கு ஆவாஸ ஸ்தாநமாக விரும்ப, –எந்தாய்‌-வந்தாய்‌
(திருவாய்‌ 2-6-9, திருமொழி 1-10-9) என்கிற பாட்டுக்களின்‌ படியே இனி யெங்குப் போகின்றதே , நிகரில் புகழான வாத்ஸல்‌யாதி குணங்களுக்குத் தோற்று அதிலே ஈடுபட்டு, ஒழிவில்காலம்‌-என்கிறபடியே உத்தர-வாக்யத்தில்‌ கைங்கர்ய ப்ரார்‌த்தனையையும்‌
பண்ணி யருளா நிற்கிற வளவிலே, தீர்த்தம்‌, ப்ரஸாதம்‌, ஸ்ரீசடகோபன்‌, பூவார்‌ கழல்கள்‌ முதலான வரிசை களெல்லாம்‌ ப்ரஸாதிக்கப்‌ பெற்று க்ருதார்த்தராய்‌ புறப்பட்டருளி :கதி சந திவஸாநி தாம்நி தஸ்மிந்‌ சுமல விலோசந மேந மீஷமாண;,’- இல
நாட்கள்‌ செந்தாமரைக்‌ கண்ணனான இவ் வெம்பெருமானை ஸேவித்துக் கொண்டு அவ் விடத்தில்‌ எழுந்தருளி யிருத்தார்‌ என்‌ கிறபடியே அங்கே சிறிது நாளெழுத்தருளி யிருந்து அங்குண்டான
வர்களையும்‌ அபிமானித்தருளி இது விண்ணோர்‌ வெற்பாயிருக்‌கிறது என்றருளிச்‌ செய்து அங்குள்ள வைபவங்கனை வைபவங்களை எல்லாம் ஸேவித்தருளிப்‌ புறப்பட்ட வளவிலே அங்தள்ளார்‌ ‘“இங்குத்தைக்‌குப் பரிவரா யிருப்பாரொருவரைக்‌ கற்பித்தருள வேணும்‌” என்ன,எம்பெருமானார்‌ ஜீயரைக்‌ கற்பித்தருளினார்‌.
திருவேங்கடவனுடைய ஐஸ்வர்யங்களை ரஷித்து நிர்வஹிக்க பகவத் ராமாநுஜர் ஸ்ரீ ஸேநாபதி ஜீயர்‌- என்‌ற பட்டப்‌ பெயருள்ள ஏகாங்கியை நியமித்ததாக அநந்தார்யர்‌ அருளிச்‌ செய்த வேங்கடாசல இதுஹாஸ மாலை கூறுகிறது. பின்னர்‌ அவ் விராமாதுஜரே அந்த ஏகாங்கித்கு ஸந்யாஸாஸ்ரமம்‌ தந்து “அப்பன்‌ திருவேங்கட சடகோப ஜீயர்‌” என்ற திரு நாமத்துடன்‌ கோயில்‌ கார்ய நிர்வாஹகராக நியமித்து அவருக்குத்‌ துணையாக நாலு ஏகாங்கிகளை ஏற்படுத்ததாக இதிஹாஸ மாலை கூறுகிறது. இவருக்குக்‌ ”கோயில்‌ கேள்வி ஜீயர் என்ற பிருதும்‌ உண்டு. பின்னர்‌ பெரிய கேள்வி ஜீயர்‌ என்றும்‌ சிறிய கேள்வி ஜீயர்‌ என்றும்‌ இரண்டு ஜீயர்‌ ஸ்வாமிகள்‌ பெரியவருக்கு சிறியவர்‌ இளவரசாக நியமனம்‌ பெற்றதாகத்‌ தெரிகிறது. மணவாளமா முனிகள்‌ ”சிறிது காலம்‌” திருமலை-திருப்பதியில்‌ தங்கி யிருந்ததாக யதீந்த்ர ப்ரவண ப்ரபாவமாகிற இந் நூலில்‌ சொல்லப்பட்டுள்ளது.-இந்த சிறிது காலம்‌ ஒன்றிரண்டு ஆண்டுகள்‌ இருக்கலாம்‌ பிள்ளை லோகாசாரியர்‌ காலத்துக்குப்‌ பின்னர்‌ ராமாநுஜார்ய திவ்‌யாஜ்ஞஜை என்று திருவரங்கம்‌ திருவேங்கடம்‌ முதலான இடங்‌களில்‌ நடந்து வந்த கட்டுக்கோப்பு கலக கலாபாங்கள்‌ காரணமாகக்‌ குலைந்து, பின்னர்‌ மா மாமுனிகள்‌ காலத்தில்‌ ராமாநுஜார்ய திவ்யாஜ்ஜஞை வரவர முநி திவ்யாஜ்ஞையாக நிலை நாட்டப்பட்டது. “கோயில்‌ கேட்கும்‌ எம்பெருமானார்‌ ஜீயர்‌ என்‌பவர்‌ [கி பி] 1445ம்‌ ஆண்டு திருப்பதி திருமலை கல்வெட்டில்‌ பேசப்படுகிறார்‌, 1370-1443-என்ற காலத்தில்‌ வாழ்ந்திருந்த மணவாள மாமுனிகள்‌ நியமித்த ஜீயர்‌ இவரே என்பது தெளிவாகிறது. இவர்‌ திருமங்கையாழ்‌வார்‌ கோயிலுக்கு தரும கர்த்தாவான படியால்‌ இவர்‌ சின்ன ஜீயரே யாவர்‌ என்று கல்வெட்டுச்‌ சான்றுகளிலிருந்து ஊகிக்க முடிகிறது- திருமலை திருப்‌பதி தேவஸ்தான வெளியீடான திருப்பதி, 1953] திருமலை யொழுகு”‘ என்ற திருமலை திருப்பதி ஐதிஹ்ய மாலையில்‌-சகாப்தம்‌ 379 விகாரி வருஷம்‌ தை மாசம் அப்பன்‌ சடகோப ஜீயரை பகவத் ராமாநுஜர்‌ கோயில்‌ கேள்வி ஜீயராகப் பட்டாபிஷேகம்‌ செய்வித்ததாகவும்‌ அவரும்‌ 45 ஆண்டுகள்‌ கைங்கர்யத்துக்குப் பின்‌ ஐய வருஷத்தில்‌ தமக்கு இளவரசாக அழகிய மணவாள ஜீயர்‌ என்‌பவரை தியமித்ததாகவும் காணப் படுகிறது [பக்‌.123], இதே நூலில்‌ (பக்‌ 104) காண்பது: “முன்னாளில்‌ ஸ்ரீராமாநுஜ தரிசந ப்ரவர்‌த்தகரான மணவாள மாமுனியானவர்‌ திருப்பதிக் கெழுந்தருளித்‌ தேசாதிபதியை ஆஸீர்வதித்து ஸ்தலத்திலே மதாந்தரஸ்தராலே உபத்ரவம்‌ வராதபடிக்கு ஒரு உத்தமாஸ்ரமியை ஸ்தலாதிபதியாக்க வேணுமென்று சிந்தித்து, தம்முடைய சிஷ்டராய்‌,கோயிலில்‌ ஸ்ரீரங்க நாராயண ஜீயர்‌ ஸ்ரீபண்டாரத்துக்கு நிர்வாஹகராய்‌ இருக்கிறாப்‌ போலே திருமலைக்கு உத்தாரகராய்‌ நிக்ரஹ அனுக்ரஹ ஸமர்த்தரான ஒரு ஜீயரைக்‌ ”கோயில்‌ கேள்வித் திருவேங்‌கட ஜீயர்‌” என்று திருநாமம்‌ சாத்தி தேசாதிபதி அனுமதி கொண்டு அர்ச்சகர்‌ முதலான ஸமஸ்த பரிகரங்களையும்‌ ஸ்தல நிர்வாஹகரான ஆழ்வார்‌ கோவிந்த ஜீயர்‌ என்ற ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவரையும்‌ திருவேங்கட ஜீயர்‌ அதீனமாக்கி இவர்‌களெல்லாருக்கும்‌ இவர்‌ சிஷகராயும்‌ ரஷகராயும்‌, திருவேங்சடச்‌ செல்வத்துக்கு வர்த்தகராயும்‌ தேசாதிபதிக்கு பகவத் தர்மோபதேஷ்டாவாயும்‌ கல்பித்து, எம்பெருமானார்‌ திருமேனி முத்ரையாக ஓரு முத்ரை மோதிரத்தைப்‌ பண்ணி ஜீயரைத்‌ தரிக்கச்‌ சொல்லிக்‌ கொடுத்து விஷ்வக்ஸேந முத்ரா ஸுசிதமாக எம்பெருமானார்‌ நியமன ஸித்தமாய்‌ ஏகாங்கி பரம்பரா ப்ராப்தமான கண்டா, கடாரி, ஹநுமத் த்வஜங்களையும்‌ அவர்‌ ‘வசம் பண்ணி, கைங்கர்ய யாத்ரா காலங்களிலே கண்டா நாத ஹநுமத் த்வஜ புரஸ் ஸரமாக ஸஞ்சாரம்‌ பண்ணுமென்று நியமித்து: ஸ்ரீராமாநுஜ புரத்திலே ஜீயருக்கு ஒரு மடமும்‌ ஸங்கல்‌பித்துக்‌ கொடுத்து திருவேங்கட ஜீயர்‌ ஜ்ஞாந ஸந்தான பரம்பராந்தர்பூதரான ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவர்களில் தானே திருமலை ஸ்தானத்‌துக்கு தத் தத் காலங்களிலே உத்தமாஸ்ரமியாய்‌ மடாதிபதியாய்த்‌ திருவேங்கட நாட்டுக்கும்‌ திருவேங்கடச்‌ செல்வத்துக்கும் கர்த்தாவாகவும்‌ நியமித்துக் கோயிலுக்கு எழுந்தருளினார்‌.’ இதுவரை திருமலை யொழுகு நூலில்‌ காண்பவை.

எம்பெருமானார்‌ நியமித்த ஸ்தலாதிகாரி ஜீயருக்கு திருவடி [அனுமான்‌ ] முத்ரையாக ஒரு முத்ராங்குளீயகத்தை தரிக்‌திருக்கும்படி எம்பெருமானார்‌ நியமநம்‌ [திருமலையொழுகு, பக்‌,
42] மணவாளமாமுனிகள்‌ நியமித்த ஜீயருக்கு எம் பெருமனார்‌ முத்ரையுள்ள அங்குளீயகம்‌ என்று சொல்லி யுள்ளபடியால்‌ இவர்‌ எம்பெருமானார்‌ ஜீயர்‌ என்று அழைக்கப்பட்டதாகத்‌ தெரிகிறது.

இவரே சின்ன ஜீயர்‌ என்றும்‌ தெரிய வருகிறது.

ஜீயர்‌ திருவாலி திருநகரியில்‌ திருமங்கை யாழ்வரை ஸேவித்தது:-அநந்தரம்‌ :
அஹி ராஜ ஸைலமபிதோ நிரந்தரம்‌ ப்ருதநாஸதேந ஸ விலோகயந் தத; |
அவருஹ்ய திவ்ய நகரம்‌ ரமாஸ்பதம்‌ புஜ கேஸயம்‌ புநருபேத்ய பூருஷம்‌ ॥

அந்த மணவாளமா முனிகள்‌ தாம்‌ சிஷ்ய ஜந பரிவாரத்துடன்‌ திருமலைக்கு நான்கு புறத்திலும்‌ இமை கொட்டாமல்‌ பார்த்துக்‌ கொண்டே அம் மலையினின்‌றும்‌ இறங்கி திவ்ய நகரமான கீழத் திருப்‌பதியை அடைந்து மறுபடியும்‌ பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமாய்த் திருவநந்தாழ்வான்‌ மேல்‌ பள்ளி கொண்டிருக்கிற பரம புருஷனான கோவிந்த ராஜனை ஸேவித்தார்‌.-என்கிறபடியே அங்கு நின்றுமிறங்கி யெழுந்தருளி-ஸ்ரீகோவிந்தராஜப்‌ பெருமாளையும்‌
குளிரருவி வேங்கடத் தென்‌ கோவிந்தன்‌ குணம் பாடுவாராய்‌ அநுபவித்துப்‌ புறப்பட்டருளி, திருவெவ்வளூர்‌, திருவல்லிக்கேணி முதலான திருப்பதிகளெங்கும்‌ திருவடி தொழுது பெருமாள்‌ கோயிலேற வெழுந்தருளி பேரருளாளரையும்‌ திருவடி தொழுது, அங்கு நின்றும்‌ அவரநுமதியுடனே புறப்பட்டருளி மண்ணில்‌ பெரிய மதுராந்தகத்தேற எழுந்தருளி
மருமலர்‌ கமழ் சோலை மதுரை மாநகர்‌ வந்தெய்தி
அருள் பொழி பெரிய நம்பி யன்றெதிராசற்கு
அரும் பொருள்‌ வழங்கு மெங்களேரி காத்தருள்வார்‌ கோயில்‌
திருமகிழடியிற் செல்வீர்‌ தீ வினை தீருமாறே
-என்று அங்கேற வெழுந்தருளி,-
இதுவோ கிளியாறிவ்வூரோ திரு மதுரை
இதுவோ திருமகிழுங் கோபுரமு- மிதுவோ
பெரியநம்பி தாமுகந்து பின்னு மெதிராசர்ச்குத்‌
துயமளித்த தூயப் பதி-
என்று அங்கே தண்டன்‌ ஸமர்ப்பித்து அத்யந்த ஹ்ருஷ்டராய்‌ அற்றைக்கங்கே எழுந்தருளி யிருந்து

பிற்றை நாள்‌ புறப்பட்டு திருச்சித்திர கூடத்தேற வெழுந்தருளி கோவிந்த ராஜரையும்‌ திருவடி தொழுது- (பாலாலயமாக இருக்க வேண்டும் -பிண்பு 1539-வருஷம் ஸ்வாமிகள் தொட்டாச்சார்யார் –முதலியாண்டானின் 12 திருவம்சம் -அச்யுத தேவராயர் -கிருஷ்ண தேவராயர் குமாரர் – உதவியுடன் பிரதிஷ்டை செய்து அருளினார் )அநந்தரம்‌ சோழ மண்டலத்திலுண்டான திருப்பதிகளைத்‌ திருவடி தொழுவாராக மநோ ரதித்துக்‌ கொண்டு புறப்பட்டருளி அப்படியே வழியிலுள்ள திவ்ய தேசங்களையும்‌ மங்களாசாஸநம்‌ செய்தருளி, பின்பு திருவாலி திருதகரி யேற வெழுந்தருளித்‌ திருமங்கை யாழ்வாரைத் திருவடி தொழுது

உறை கழித்த வேலை (வாளை )யொத்த விழி மடந்தை மாதர் மேல்‌
உறைய (உருக )வைத்த மனமொழித் தவ்‌ வுலகளந்த நம்பி மேல்‌
குறையை வைத்து மடலெடுத்த குறையலாளி திருமணங்‌
கொல்லை தன்னில்‌ வழி பறித்த குற்றமற்ற செங்கையான்‌
மறையன் வைத்த (மறை யுரைத்த )மந்திரத்தை மாலுரைக்க வவன் முன்னே
மடி யொதுக்கி மன மொடுக்கி வாய் புதைத்தல்‌ வொன்‌னலார்‌
கறை குளித்த வேலணைத்து நின்‌ற விந்த நிலைமை யென்‌
கண்ணை விட்டகன்றிடாது கலியம் ஆணை யாணையே– என்றும்‌

அணைத்த வேலும்‌! தொழு கையும்‌, அழுந்திய திரு நாமமும்‌
ஓமென்ற வாயும்‌, உயர்ந்த மூக்கும்‌, குளிர்ந்த முகமும்‌,
பரந்த விழியும்‌, இருண்ட குழலும்‌, சுருண்ட வளையமும்‌,
வடித்த காதும்‌, மலர்ந்த காதுகாப்பும்‌, தாழ்ந்த செவியும்‌
செறிந்த கழுத்தும்‌, அகன்‌ற மார்பும்‌, திரண்ட தோளும்‌
நெளித்த முதுகும்‌ குவிந்த இடையும்‌, அல்லிக் கயிறும்‌
அழுந்திய சீராவும்‌, தூக்கிய கருங்கோவையும்‌’
தெங்கலுந் தனி மாலையும்‌,சாத்திய திருத் தண்டையும்‌,
சதிரான வீரக் கழலும்‌ குந்தியிட்ட கணைக் காலும்‌.
குளிர வைத்த திருவடி மலரும்‌, மருவலர் தமுடல்‌ துணிய
வாள் வீசும்‌ பரகாலன்‌ மங்கை மன்னரான வடிவே
–என்றும்‌

ஐயனருள் வாழி செய்ய வடிவிணைகள்‌ வாழியே
அந் துகிலும்‌ சீராவுமணையுமரை வாழியே
மையிலகு வேலணைத்த வண்மை மிக வாழியே
மாறாமல்‌ அஞ்சலி செய்‌ மலர்க் கரங்கள்‌ வாழியே
செங்யகலனுட னலங்கல்‌ சேர் மார்பும்‌ வாழியே
திண் புயமும்‌ பணிந்த திருக் கழுத்தும்‌ வாழியே
மையல்‌ செய்யு முக முறுவல்‌ மலர்க் கண்கள்‌ வாழியே
மன்னு முடித் தொப்பாரம்‌ வலயமுடன்‌ வாழியே–
என்றும்‌ ஈடுபட்டு,

வேலணைத்த மார்வும்‌ விளங்கு திரு வெட்டெழுத்தை மாலுரைக்கத்‌ தாழ்த்த வலச்‌ செவியும்‌–காலணைத்த தண்டையும்‌ வீரக் கழலும் தார்க் கலியன்‌ வாண் முகமும்‌ கண்டு களிக்கு மென்‌ கண்‌.–என்று அவர்‌ மந்த்ர லாபத்துக்கு நின்ற நிலையிலே மக்ந மநாவாய்‌ அநுபவித்து மங்களாசாஸனஞ் செய்தருளி பரகாலர்க்கு பரம ப்ரீதி கரரான வயலாவி மணவாளரையும்‌ ஸேவித்துப்‌ புறப்பட்டுத்‌ திருமணங் கொல்லை யேற வெழுந் தருளி

ஈதோ திருவரசு? ஈதோ!மணங்கொல்லை
ஈதோ எழிலாலி என்னுமூர்‌–ஈதோ தான்‌
வெட்டுங்கலியன்‌ வேலை வெட்டி நெடுமால்‌
எட்டெழுத்தும்‌ பறித்த விடம்‌!
-என்று அவ்விடத்தையும்‌ ஸேவித்துப்‌ புறப்பட்டருளி,

நீணிலா முற்றத்து நின்றிவள்‌ நோக்கினாள்‌,
காணுமோ கண்ணபுரமென்று காட்டினாள்‌-
என்கிறபடியே திருக் கண்ண புரத்திலே திருவுள்ளஞ்‌ சென்று –இன்றே சென்று திருக்கண்ணபுரம்‌ புக்கு- என்கிறபடியே அதி த்வரையுடனே அங்கேற வெழுந்‌தருளி கருவரை போல்‌ நின்றானையும்‌ ஸர்வாங்க ஸுந்தரரான செளரி ராஜனையும்‌ ஸேவித்தருளி கண்ணபுரத் தடியன்‌ என்றதுவே நிரூபகமான திருமங்கை யாழ்வாரையும்‌ அங்கே யேறி யருளப்‌ பண்ணி, காலின்‌ மணி கரை யலைக்கும்‌ கணபுரத்தினின்றும்‌ போந்து வாவித் தடஞ்சூழ் மணி முத்தாற்றின்‌ நறையூர்‌ நெடு மாலான நம்பியையும்‌ நாய்ச்சியாரையும்‌ ஸேவித்துப் புறப்பட்டு
செழு மா மணிகள்‌ சேரும்‌ திருக் குடந்தையிலே சேர்ந்து ஆராவமுதாழ்வாருடைய ஏரார்‌ கோலத் திரு வுருவையும் திருவடி தொழுது, அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி, திருமால்‌ சென்று சேர்‌விடமான தென்திருப்பேரையில்‌ சென்று திருப்பேர் நகரானையும்‌ திருவடி தொழுது அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி மாமலராள்‌ புணர்ந்த பொன் மார்வன்‌ பொருந்தும் பதிதொறும்‌ புக்கு நிற்கும்‌
-என்றும்‌,

திவ்யாநி தத்ர நகராணி திகந்தராளேர் தேவே நயாநி ஹரிணு விஷயீ க்ருதாநி
ஸத்யம்‌ த்வ தீஷண ஸம்ர்த்த மஹோத்ஸ வாநி தங்யாநி தாநி ஜகதஸ்‌ ஸமயம் த்வகாநி

அவ்விடத்தில்‌ திங் மத்யத்தில்‌ எந்த திவ்ய தேசங்கள்‌ எம்பெருமானாலே ஆஸ்ரயிக்கப்பட்டனவோ, தேவரீருடைய கடாக்ஷத்தால்‌ ஸம்பூர்ணமான விஷோத்ஸவங்களை யுடையனவாய்‌. தந்யங்களான அந்த திவ்ய தேசங்கள்‌ லோகங்களுடைய ஸகல பாபங்களையும்‌ போக்கக் கடவன]என்றுஞ் சொல்லுகிறபடியே மற்றுமுண்டான திருப்பதிகளையும்‌ மங்களாசாஸநம்‌ பண்ணி யருளி, தையல் நல்லார் குழல் மாலையும்‌ மற்றவர்‌ தட முலைச்‌ செய்ய சாந்தும்‌ கலந்திழி புனல் சூழ்‌ தென்னரங்‌கத்தே சென்று பெரிய பெருமாளையும்‌ ”ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்‌டோஸ்தி கரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம்‌” [இந்த நான்‌ க்ரீஷ்ம காலத்‌தில்‌ குளிர்ந்திருக்கிற மடுவில் போல்‌ பர ப்ரஹ்மத்தில்‌ மூழ்கினவனாகிறேன்‌ ] என்றும்‌,பொற்றாமரைக் கயம்‌ நீராடப் போனாள்‌-என்றும் சொல்லுகிறபடியே விடாய் கெட படிந்து குடைந்தாடி யநுபவிந்து தீர்த்த ப்ரஸாதம்‌ பெற்று ஹ்ருஷ்டராய்ப்‌ புறப்பட்டு।

அப்பாச்சியா ரண்ணாவை பெருமாள்‌ கோயிலுக்கு நியமித்தது
தமக் கிருப்பான திருவரங்கன்‌ திருப்பதியிலே யெழுந்தருளி பெருமாளை ஸேவித்து,
சித்ராணி தீப்ததர ரத்ந விபூஷணாநி சத்ராணி சாமர யுகம்‌ வ்யஜ நாஸநாநி |
தக்நா மலாஞ்சக யுதாநி ததெள ததைவ ரங்காதிபாய தயிதா ஸஹிதாய தஸ்மை ॥

[அந்த அழகிய மணவாளனுடைய திரு நாமத்துடனும்‌ சங்கு சக்கரம்‌ முதலிய அடையாளங்களுடனும்‌ கூடி யிருக்கிற-ஆச்சர்யகரமாய்‌ மிகவும்‌ ப்ரகாசியா நின்ற ரத்ந மயமான திருவாபரணங்‌களையும்‌ திரு வெண் கொற்றக் குடைகளையும்‌ திரு வெண் சாமரங்களையும்‌ திருவாலவட்டங்களையும்‌ சித்ராஸநங்களையும்‌, பெரிய பிராட்டியாருடன்‌ கூடி யிருக்கிற அந்த அழகிய மணவாளன்‌பொருட்டு அப்போதே ஸமர்ப்பித்தார்‌.]’ என்னும்படி தாம்‌ கொண்டெழுந்தருளின திருவாபரணங்கள்‌, திரு வெண் கொற்றக்குடை. திரு வெண் சாமரம்‌,- திருவாலவட்டம்‌, ரத்ந கம்பளம்‌, திருமெத்தை முதலான வஸ்துக்களெல்லா வற்றையும்‌ ஸமர்ப்‌பித்து மங்களாசாஸநம்‌ பண்ணிக் கொண்டு எழுந்தருளி யிருக்க-
பெருமாளும்‌ மிகவுமுகந்தருளி, தீர்த்தம்‌, ஸ்ரீசடகோபன்‌ முதலான வரிசைகளையும்‌ ப்ரஸாதித் தருளி உத்தம நம்பி பிள்ளையை கோயில்‌ பரிகர மனைத்துக் கொத்துடன் வரிசையாக ஜீயரை மடத்‌திலே விட்டுவரவென்று அருள் பாடிட்டருள, அவரும்‌ அப்படியே அஷ்டாதச வாத்யங்களுடனே மஹோத்ஸவமாக மடத்திலே எழுந்தருளப் பண்ணினார்‌. நம்‌ பெரிய ஜீயரும்‌, மடத்திலே யெழுந்தருளி
யிருக்கிற அப்பிள்ளை, திருவாழி யாழ்வார்‌ பிள்ள தொடக்கமான பெரியோர்களையும்‌ மற்றும்‌ கைங்கர்ய பரராய்‌ எழுந்தருளி யிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களையுபம் க்ருபை பண்ணி யருளி திருமலை பெருமாள் கோயில்‌ தொடக்கமான திவ்ய தேசங்களினின்றும்‌ கொண்டெழுந்தருளின தீர்த்த ப்ரஸாதங்களையும்‌ விநியோகம்‌ செய்தருளி;

அப்பாச்சியாரண்ணாவை அழைத்தருளி முன் நியமனப் படிக்கு பெருமாள் கோயிலுக்கு நியமித்தருள, அவரும்‌ ‘இந்த ஸேவையையும்‌ கோஷ்டியையும்‌ விட்டு விடை கொள்ள வல்லேனோ?’” என்று
வ்யாகுலப்பட, ஜீயர்‌ அவர் கையைப் பிடித்துக் கொண்டு ஸந்நிதியிலே யெழுந்தருளி தாம்‌ அடி தொடங்கி ‘இராமானுசன்‌’* என்று திருநாமம் சாத்தி பஹுநாளாண்டதாய்‌ ஜீர்ணமாயிருக்கிற தீர்த்‌தச் செம்பு ஸ்வாமி யுடைய ப்ரஸாதமென்று வானமாமலை ஜீயர்‌ அணை கையவனாள்‌ தமது திருமண் கூடையிலே வைத்து ஸேவித்துக் கொண்டிருச்‌ கிறதைக்‌ கொண்டு வரச் சொல்லி திருக்கையிலே வாங்கிக்‌ கொண்டு: முன்னிருந்த இராமானுசன்‌ என்கிற விலாஸமும்‌, திருவாழி
திருச்சங்கு, திருமண் ஸ்ரீசூர்ணம்‌ எல்லாம்‌ பரிமுஷிதமாயும்‌ ஜீர்ணமுமாயு மிருப்பதனாலே, தம்மைப் போலிருக்கிற இரண்டு விக்ரஹங்கள்‌ இத்தை யிட்டு உண்டாக்‌க ‘உம்முடைய ஆசாரியருக்கு ஒரு விக்ரஹமும்‌ உமக்கு ஒரு விக்ரஹமுமாகக்‌ கொள்ளும்‌” என்று ஸாதித்‌தருளி
, கோயிலாழ்வாரிலே எழுந்தருளி யிருக்கிற “என்னைத்‌ தீ மனங்‌ கெடுத்தார்‌” ஆட்கொண்டவில்லி ஜீயர்‌ திருவாராதனமாய்‌ எழுந்‌தருளி யிருந்தவராகையாலே, அவர்‌ திருவடிகளுக்கு அந்தரங்கரான கந்தாடை யாண்டான்‌ திருவம்சமாக அவருடைய கைங்கர்யம்‌ போலே நீரும்‌ கைங்கர்யம் பண்ணத் தக்கவராகையாலே உமக்கு இவர்‌ திருவாரதனம்‌ என்று உகந்து ஸாதித்தருளி கோஷ்டியிலே எழுந்தருளி
ஸ்ரீ தீர்த்த தேவ ராஜார்ய தநயாம்பேதி விஸ்ருதா |
தஸ்யாஸ் தநூஜோ வரத: காஞ்சீ நகர பூஷண: ॥

[திருமஞ்சனம்‌ அப்பா என்ற தேவ ராஜார்யரின்‌ குமராத்‌தியாய்‌ ஆய்ச்சி–அம்பா என்று அறியப்பட்டவரின்‌ குமாரரான வரதாசாரியர்‌ (அப்பாச்சியாரண்ணா) காஞ்சீ நகரத்துக்கு ஆபரணமானவர்‌] என்று பேரருளாளரே ஆச்சியாருக்கக்‌ குமாரராக அவதரித்தருளினார்‌?” என்று ப்ரீத் யதிசயத்தாலே அருளிச் செய்து பெருமாள்‌ கோயிலிலே நித்ய வாஸம்‌ பண்ணிக் கொண்டு ஸுகோத்‌தரராயிரும்‌’” என்று விடை ஸாதித்தருளினார்‌.


ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-2-

May 15, 2026

ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

(ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

(மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)


இனி நம்பெருமாள் விருத்தாந்தம்
பின்பு நம்பெருமாளும்‌ *அரங்கதகருள் முனைவனைத்‌- திருமாலிருஞ் சோலை நின்றான்‌ என்கிற சேர்த்தியாலே -சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ் சோலையிலே யெழுத்தருளி! இவ்விடம் ஆயிரம் ஆறுகளும் சுனைகள்‌ பலவாயிரமும்‌ ஆயிரம்‌ பூம் பொழிலுமுடைத்தாய்‌ திருப் பொன்னியாலே சூழப்பட்ட ஆராமம்‌ சூழ்ந்த யரங்கத்தைப் போலே அதி மநோ ஹரமாயிருக்கையாலே, பிள்ளையைப் பிரிந்த க்லேசமெல்லாம்‌ மாறி

சிகரிஷு விபிநேஷ்வப் யாபகா ஸ்வச்ச தோயா ஸூ
அநுபவசி ரசஞ்ஜோ தண்டகாரண்ய வாசாந்
ததிஹ தத் அநு பூதவ் சாபிலாஷோத்ய ராம
ஸ்ரயஸி வந கிரீந்த்ரம் ஸூந்தரீ பூய பூயஸ் –-ஸுந்‌, ஸ்தவம்‌
103 —

தண்டகாரண்யம் போன்ற காடுகள்-கோதாவரி கங்கை போன்ற நதிகள் –இவற்றால் உண்டான விலக்ஷண ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டியே இங்கே அழகராக சேவை சாதித்து அருளுகிறீர்-சித்ரா கூடாதி பர்வத ஸ்தானத்தில் இத்திருமலையும் தண்டகாரண்யம் -ஸ்தானத்தில் வனராஜிகளும்-கங்கா நதி ஸ்தானத்தில் நூபுர கங்கையும் கொள்ளக் கடவன ரசிகரான தேவரீர் சித்ரா கூடாதி பர்வத ராஜங்களிலும் -என்னும்படியான வனங்களிலும் தண்டகாரண்ய வாசாந் -அநுபவசி –சித்ரகூட மனு ப்ராப்ய-பரத்வாஜஸ்ய சாஸனாத் ரம்யமா வசதம் க்ருத்வாரமமானா வநே த்ரய தேவ கந்தர்வ சங்கா சாஸ் தத்ர சே ந்யவசன் ஸூகம் –இத்யாதிப்படியே ஆரண்ய வாச ஸூகத்தை அனுபவித்தீர்-அநுபவசி -வர்த்தமான பிரயோகம் –அனுபவம் தொடர்ந்து கொண்டே இருப்பது பற்றி-இங்கனம் திருஉள்ளத்துக்கு பங்காக அனுபவித்த ராசிக்ய அதிசயத்தாலே மீண்டும் அவ்வனுபவங்களைச் செய்து போர திரு உள்ளம் பற்றினவராய்க் கொண்டு அழகராக திருவவதரித்து திருமாலிருஞ்சோலை மலையை உறைவிடமாகக் கொண்டு அருளிற்று–என்கிறபடியே வந வாஸ லாஞ்சையை யுடையராய்‌ வநகரி ப்ரஸ்தமான அங்கே சிலகால மெழுந்தருளி யிருந்து விச்ரமித்தருளி, அழகிய மணவாளன்‌ கிணற்றையும்‌ அறஞ்சுவராகி நின்ற வரங்கரான தாம்‌ தார்‌மிகன்‌ வைத்த தணணீர்ப் பந்தலோ பாதியாக உண்டாக வைத்து, பின்பு அனைத்துப் பரிகரத்துடனே கொல்லி காவவன்‌ கூடல் நாயகன்‌ கோழிக் கோன்‌ குலசேகரன்‌ என்று அதுவே நிரூபகமாம்படியான ஸ்ரீகுலசேகரப் பெருமாளாண்டருளிய தேசத்தை விரும்பி யெழுந்தருளி அவ்வவ தேசங்களிலே சில நாள்‌ இனிதமர்ந்‌திருந்து; அநந்தரம்‌ கோழிக்கோடேற எழுந்தருள:

(தன்வந்திரி சந்நிதி சேதம் -தங்க கொடிக் கம்பம் சேதம் -முதலாம் சடையவர்மன் சீர் படுத்தி –
விஜய ஸ்தம்பம் -திருப்பாண் ஆழ்வார் சந்நிதிக்கு எதிராக உள்ளது -ராமானுஜர் விஜயத்துக்காக வைத்த ஸ்தம்பம்-கூர நாராயண ஜீயர் ரஷித்த விருத்தாந்தம் -தகடுகளில் மந்த்ரம் பதித்து வைத்தார் –விருப்பண்ண உடையார் சக்கரத்தாழ்வார் சேதத்தில் இருந்து ரக்ஷித்தார் -இவற்றை கோயில் ஒழுகு விவரிக்கும்)

சுடர் கொள் சோதியைத்‌ தேவரும்‌ முனிவருந் தொடர என்கிறபடியே மற்ற திவ்ய தேசத் தெம்பெருமானகளும்‌ நம்மாழ்வாரும்‌ அங்கே வலசையாக எழுந்தருள, அவர்களையும்‌ ஆதரித்தரு௭
ஆழ்வாரைத் தம்முடைய திவ்ய ஸிம்ஹாஸனத்திலே வைத்துக்‌ கொண்டு. அடி யடையாதாள் போலணுகி யடைந்த இவரைக்‌ கண்டு கொண்டிருந்து, தம்முடைய திவ்ய ஸிம்ஹாஸனமான வட்ட
மணையையும்‌ முத்துச் சட்டையையும்‌, பகல் திரு முன் பந்தத்தையும்‌ ப்ரஸாதித்து க்ருபை பண்ணி அங்கு நின்றும்‌ புறப்பட்டு
ஆழ்வாருடனே தேனைக் கிடம்பைக்கு (திருக்கணாம்பி -தமிழ் மாடு கர்நாடகம் கேரளா -மூன்றுக்கும் எல்லை )எழுந்தருளி அங்கே சிறிது காலமெழுந்‌தருளி யிருந்து, *’கூட வருகிறேன்‌” என்ற ஆழ்வாரை நிறுத்தி, புங்கனூர்‌ வழியாக வெழுந்தருளி அங்கே யிருந்து திருநாராயண புரத்தேற ப்ரதஷிணமாக வெழுந்தருளி, அங்கே சில நாள்‌ விஹரித்து, திலதமுலகுக்காய்‌ தின்ற திருவேங்கடத்தை யடைந்து

ஸுரம்ய மாஸாத்யது சித்ர கூடம்‌ நதீஞ்சதாம்‌(மால்யவதீம்‌ ஸுதீர்த்தாம்‌ |,நநந்த ராமோ ம்ருக பக்ஷி ஜுஷ்டாம்‌ ஜஹெளச துக்கம்‌ புர விப்ரவாஸாத்‌[ஸ்ரீரா ஆர. 59-38 )ஸ்ரீ ராம பிரான்‌ மிக அழகியதான திரி கூடத்தையும்‌ நல்ல நீருடையதும்‌ விலங்குகள்‌ பக்ஷிகளால்‌ விரும்பப் பட்டதுமான அந்த மால்யவதீ என்னும்‌ நதியை யுமடைந்து அயோத்தி யினின்றும்‌ பிரினால் உண்டான துக்கத்தையும்‌ மறந்தான்‌ ]–என்கிற படியே *நன் மணி வண்ணனாரான குளிரருவி வேங்கடத்தில்‌ கூடி யிருந்து குளிரப் பெற்று, ‘ மந்திபாய்‌ வட வேங்கட மாலை வானவர்கள்‌ சந்தி செய்ய நின்றான்‌ அரங்கத்தரவினணையான்‌ என்னும்படியே ஏகமான ஆகாரத்தாலே அங்கே அநேக காலம்‌ திவ்யோத்ஸவாதி வைபவங்களுடனே வாழ்ந்து கொண்டெழந் தருளி யிருந்தார்‌.

(லோக குரும் குருபிஸ் சஹா பூர்வை கூர குலோத்தம தாசம் உதாரம்
ஸ்ரீ நக பதி அபிராம வரே ஸௌ தீப்ரசயம் வரயோகி ந மீடே–ரஹஸ்யரார்த்த பரம்பரை பற்றிய தனியன் -மா முனிகள்-
பூர்வர்கள் அனைவரையும் லோக குருவையும் சொல்லி கூர குலோத்தமை தாசர் அருள் பெற்ற இவர்களையும் சொல்லி அருளுகிறார் –
நகபதி திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை –
அபிராம வர சவ்–அழகிய மணவாள பெருமாள் பிள்ளை -மாப்பிள்ளை-தீப்ரசயம் வரயோகி-
திகழக் கிடந்தான் திரு நாவீறுடையான் தாதர் -மா முனிகளின் திருத் தகப்பனார் –)

இனி ஆம்வார்‌ வ்ருத்தாந்தம்‌
கோழிக் கோட்டினின்றும்‌ பெருமாள்‌ புறப்பட்டெழுந்‌தருளுகிற போது கூடப் புறப்பட்டருளாமல்‌, ஸ்தாநத்தார்‌ ஸ்தலத்தார்‌ பரஸ்பர வைஷம்யத்தாலே தடங்கல்‌ பண்ண அந்த ஸமயத்திலே மேற்கும்‌ கள்ளர் பற்றாய்‌, கிழக்கும்‌ கள்ளர்‌ பற்றாய்‌ வடக்கும்‌ துருஷ்க மயமாயிருந்த படியினாலே அத்திசைகளில்‌ இருக்கப்‌ போகாமல்‌ ஆழ்வாரை வலசையாகத்‌ தென் மேற்கு மூலையிலே பஹுதூரம்‌ எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு செல்ல, அங்கே கள்ளர் பயம் மிக, வேறு கத்யந்தர மில்லாமையாலே அத்யுந்நததமான ஒரு சரிவு கண்டு (முத்தரப்பு மலை -இன்றும் உள்ளது -)ஆழ்வாரை ஒரு திருப் பெட்டகத்திலே யெழுந்தருளப் பண்ணி, சங்கிலி கட்டி ‘அந்த அரங்கிலே பாங்காக எழுந்தருளப்‌ பண்ணி விட்டு திருவாபரணங்களையும்‌ திருப் பொஷகத்தையும்‌ நிக்ஷேபித்து எல்லோரும்‌ மலையினின்றும்‌ இறங்கின வளவிலே கள்ளர்‌ பள்ளர்‌ கையிலகப்பட்டவர்கள்‌ உடைகளை சூறை கொடுத்து விட, அதற்கும் தப்பினவர்கள்‌ தங்கள்‌ தங்களுடைய இடம்‌ போய்ச் சேர்ந்தார்கள்‌-

அவர்களிலே தோழப்பர்‌ என்பாரொருவர்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே அத்யந்த ப்ரவணராய்‌ அபிமானியா யிருக்கையாலே,தாம் மதுரையிலே சென்று திருமலை யாழ்வாருக் கறிவிக்கக்‌ காத்‌திருந்து இச் செய்தியை யெல்லாம் தெரியுச்‌ செய்ய , திருமலை யாழ்‌வாரும்‌ எல்லாவற்றையுங் கேட்டு அபிமானித்து (திருவிதாங்கூர் )மலையாள ராஜாவுக்கு தம்முடைய ஸ்ரீ முகமும்‌ கொடுத்து, அத்தரங்கராய்‌ ராஜ வல்லபராய் ஸ்ரீகார்‌யத்திலே அபிமானிகளா யிருக்கும் ஸ்வ படர்களையும் கூட்டி, த்ரவ்யமும்‌ ஸாதித்து அனுப்பி யருள-அவர்களும் அப்படியே திருவாங்கோட்டூரிலே. செல்ல, கலஹம்‌ தெளிந்தபடியினாலே ஹ்ருஷ்டராய்‌ ராஜாவைக்‌ கண்டு செய்‌தியைச்‌ சொல்ல, திருமலை யாழ்வாருடைய ஸ்ரீமுகத்தை ஸிரஸா வஹித்தித்துக்‌ கொண்டு. ப்ரியப்பட்டு, தோழப்பருக்கு பஹுமானம்‌, பண்ணி, ஆழ்வாரைத்‌ திருக் கணாம்பியிலே யெழுந்தருளப்‌ பண்ணி வைக்கும்படி மநுஷ்ய ஸாமக்ரியையும்‌ அர்த்த ஸாமுக்ரியையும்‌ பூர்ணமாகக்‌ கொடுத்தனுப்ப, அவர்களும்‌ முத்‌திரிப்பு என்‌கிற ஊரிலே சென்று சங்கிலிகஞம்‌ ஊஞ்சற் பலகைகளும் சேர்த்துக்‌, கொண்டு மலையிலேயேறி,-சரிவிலே யிழிவாரார்‌?’? “என்று, சித்திக்க, ப்ராண ஸந்தேஹிகளாகையாலே எல்லாரும்‌ பின்‌ வாங்கி யிருக்க தோழப்பர் “நாமே, இழிகிறோம்‌” என்று துணிய: அவருக்கு அப்போது ஸ்தலத்தார்‌ சொன்ன கட்டளை : உமக்கு, ஆழ்வார்‌ ஸந்நிதியில்‌ வகுளாபரண பட்டரோடொத்த ஸ்வதந்த்‌ரமும்‌, திரு மஞ்சன காலத்திலே ஸஹஸ்ர தாரை கண்டருளிய திருவந்திக் காப்பு ஆனவுடனே ஆழ்வார்‌ திருமுடியிலே சாத்தி யிருக்கிற அலுங்கலும்‌ பூந் தொடையலையும்‌, ஆழ்வார்‌ தோழப்பர்‌” என்‌று உமக்கு அருளப்பாடிட்டு நித்யமாக ஸாதிக்கிறோம்‌” என்று சொல்லி, அனைவரும்‌ உகந்து ஓமறைந்து ஆழ்வார் தோழப்பரைத்‌ தூங்கு பலகையிலே ஏற்றிச்‌ சரிவிலே விட்டு ஸாவதாநமாகப்‌ பார்த்திருக்க அவரும்‌ அதிலிறங்கித்‌ திருப் பெட்டகத்தைத் தேட, ஒரு ஷேமகாரி பஷி திருப் பெட்டகத்தின்‌ மேலே யிருந்து நெடும் போது சப்திக்க, ‘இதுவெறுமனன்று’ என்று உகந்து திருப் பெட்‌டகம் கண்டு ஸேவித்து சிறிது பொழுது ஆழ்வாரை த்யாநிக்க-உடனே அப் பஷி அப்புறத்திற் செல்ல, திருக் காப்பு நீக்‌கி ஆழ்வாரைக் கண்டு கொண்டு ஸேவித்து க்ருதார்த்தராய்த்‌ திருப் பெட்டகத்தை திருக் காப்பு சேர்த்துக்‌ கட்டி தூங்கு பலகையிலே ஏறி யருளப் பண்ணி: சங்கலியைக்‌ குலுக்க, அவர்களும் மேலே சேர்த்துக் கொள்ள தோழப்பர்‌ எழுத்தாணியையும் ஓலையையும் கொண்டு போனவராகையாலே அங்கு நடந்த வ்ருத்தாந்தத்தை யெழுதி வைக்கக் கண்டு அனைவரும்‌ சந்தோஷப்பட்டு சேவித்துத் திருப் பெட்டகத்தைப் பலகையினின்றும் இறக்கி யருளப் பண்ணி தோழப்பர் வரும்படிக்குத் திரும்பி பலகையை விட வந்து சேர்ந்தவுடனே தோழப்பரும் ஏறி சங்கிலியைக்‌ குலுக்க

அவர்களும் சங்கிலியை ஏத்த நடுவே. தட்டுப்‌ பட்டுத்‌ தோழப்பர்‌ விழுந்து விட்டார்‌. பிற்பாடு அவர்‌ குமாரரான அப்பன்‌ பிள்ளைக்கு எல்லாருமாக சமாதானம்‌ சொல்லி ஆழ்வாருடைய சமீபத்திலேயே திருமேனி விட்டவராகையாலே அவருக்கு நீர்‌ சோகிக்க வேண்டா- ஆழ்வார்‌ உம்மை புத்ரராக அபிமானித்தருளினார் -உமக்கு சந்திதியிலே முன்‌ கட்டளை ப்ரகாரத்துக்கு, ஆழ்வான்‌ தோழப்பர் என்று, அருள் பாடும்‌. வரிசைகளும்‌ நடப்பிக்கிறோம் !” என்று சொல்லி, ஆழ்வாரை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு முத்திரப்பிலே சென்று ஆழ்வாருக்கு அஞ்சு நாள் ஸ்ம்ப்ரோஷணம்‌ கண்டருளப்‌ பண்ணி மலையினின்றும்‌ புறப்பட்ட வன்று தொடங்கி திருவடி நம்பியாரும்‌ ஸ்தலத்தாரும்‌ ஆழ்வாரப்பனும்‌ நன்றாக ஆராதித்துக்‌ கொண்டு போந்தார்கள்‌.-அனைத்துப்‌ பரிகரத்துடன்‌. திருக்கணாம்பியில்‌ எழுந்தருளப் பண்ணி ஸம் ப்ரோஷணம்‌ செய்து நித்தியப்படி திருவாராதனம் முதலான. விசேஷ உத்சவங்கள் எல்லாம்‌ நடத்‌திக் கொண்டு ஆழ்வார்‌ திருவடிகளில்‌.அதிப்ரவணராய்‌ அபிமானிகளாய் வாழ்ந்து. கொண்டிருந்தார்கள்‌-

கள்ளர் பற்றி லுள்ளார் இச் செய்தியைக் கேட்ட மாத்திரத்திலே தெய்வ யோகத்தாலே ஆநுகூல்யம்‌ பிறந்து ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ரவணராய் அநேகமாக ஸத்கரித்து முன்பு பறித்‌ததையும்‌ ஸமர்ப்பிக்க, அழகிய மணவாளன்‌ ப்ரஸாத லப்தமான பொற்றகடு சேர்த்த வட்ட மணையையும்‌, முத்துச்‌ சட்டையையும்‌!வெள்ளி தீவர்த்திக் கோலையும்‌, சித்தையையும்‌ மைர்ப்பித்து ஆழ்வாரைத்‌. திருக்கணாம்பி யிலெழுந்தருளப்‌ பண்ணும்‌ படிக்குத்‌ திருப் பல்லக்கு முதலானவைகளைச் சேர்த்து மார்க்க கோதஷம்‌ பண்ணி மங்கள வாத்தியங்களுடனே எழுந்தருளப்‌ பண்ணினார்கள்‌. ஒரு பெரிய திருவடி பக்ஷியும்‌ ஆழ்வாருக்கு மேலாக ஆகாசத்திலே சூழ்ந்து கொண்டு திருக்கணாம்பியிலே ஆழ்வார் எழுந்தருளி யிருக்கற கோயில்‌ மரத்திலே கூண்டு கட்டி வஸிக்க இந்த ஆச்சர்யத்தைக்‌ கண்டு எல்லாரும்‌ ஆழ்வாரை ஸேவித்து அவர்‌ ப்ரபாவத்தைக்‌ கொண்டாடிக்‌ கொண்டு தங்கள்‌ தங்கள்‌ சக்திக்குத் தக்கபடி, சிறப்பு ஆராதனமும்‌ நித்ய உத்சவமும் யதோ உசிதம்‌. விசேஷ உத்சவமும்‌ நடப்பித்துக் கொண்டு போந்‌தார்கள் -இந்த அதிசயங்களை யெல்லாம்‌ திருவநந்தபுரம்‌, திருவட்டாறு திருவண்பரிசாரம்‌, திருவல்லவாழ்‌ முதலான திவ்ய தேசங்‌களிலுள்ள போற்றிமார்‌ நம்பூதரிமார்கள்‌ கேட்டு உடனே வந்து ஆழ்வாரை ஸேவித்து வித்தராய்‌ அவரை விட்டுப்‌ பிரிய மாட்டாமல்‌ உதய காலத்திலே எப்போதும்‌ போலே திருமஞ்சனங் கொண்டருளி தத்யோதநமும்‌ நெய்த் தோசைப் படியும்‌, பாகூட்டின கட்டிப்‌பொரியும்‌, பாற்கஞ்சிக் கடாரமும்‌ நித்யப்படியாக அமுது செய்‌தருளி விநியோகமாய்‌, பிற்பாடு ஒரைவகைகளும்‌ அமுது செய்‌தருளி, மத்யாஹ்ந காலத்திலே நாயகமலங்காரத்துடனே வரிசையாக சம்பாவவஸரமும்‌ அமுது செய்தருளி, திருப் பணியார வகைகளும்‌ அமுது செய்து பின்பு உச்சிக் காலமும்‌ அமுது செய்தருளி காலோசிதமான உபசாரங்களுடனே விச்ரமித்தருளத்‌ திருக் காப்‌புச்‌ சேர்த்து மீளவும்‌ போது போக, நாலு நாழிகைக்குத்‌ திருக்‌ காப்பு நீக்கி ஸாயங்காலம்‌ திருவாராதனங் கண்டருளி ‘அஸ்தமன ஸமயத்திலே உப்புச் சாற்றமுதும்‌, சம்பாவும்‌, தோசைப் படியும்‌ பொரியும்‌ அமுது செய்து விநியோகமாய்‌, பிற்பாடு அத்தாளம்‌ அமுது செய்த்ருளி, இராக் காலமுமாய்‌ ஸ்ரீபலிதுடி, திருவுற்றசாதம்‌, அரவணை, சுக்கு கஷாயம்‌, இவைகளெல்லாம்‌ அமுது செய்‌யும்படி போற்றிமார்‌ திட்டம்‌ பண்ணி நடப்பித்துப்‌ போந்தார்‌கள்‌. திருநகரியைப் போலே-பரிஜனங்களும்‌ பூர்ணமாய்‌ ஏழு மடாதிபதிகளும்‌ ஒன்று பட்டு ஆழ்வார்‌ திருவடிகளிலே அதி ப்ரவணராய்‌ அபிமானிகளாய்‌ தத்தத் காலோசிதமான உத்ஸவங்களை நன்றாக நடப்பித்துக்‌ கொண்டு வாழ்ந்தருளி யிருந்தார்க்கள்‌.

இனி கோயில்‌ வ்ருத்தாந்தம்‌
பெருமாள்‌ புறப்பட்டருளின பின்பு-அபிவ்ருஷ பரிம்‌லாநா: என்னும்படி அயோத்தி யென்னுமணி நகரமானது அழகழிந்தாற் போலே நம் பெருமாள்‌ புறப்பட்டருளின பின்பு அற்ற பற்றர்‌ சுற்றி வாழும்‌ அந்தணீரங்கம்‌ என்றும்‌, நல்லார்கள்‌ வாழும்‌ நளிரங்கம்‌ என்றும்‌, தென்னாடும்‌ வடநாடும்‌ தொழ நின்ற திருவரங்கம்‌ என்னும்படியான கோயிலானது அழகழிந்தது.-பின்னும்‌ அங்கே வந்து ஆக்ரமித்தவன்‌ செய்தபடி: -திட்‌ கொடி மதிளைப்‌ பிடுங்கி கண்ணனூரிலே தனக்கு ஆவரணமாகக்‌ கட்டுவித்து, பின்னையும்‌ அங்கே உபத்ரவங்களைப் பண்ண உபக்ரமிக்க , அவ்வளவிலே, சிங்கப் பிரான்‌ என்னும்‌ பேரை யுடையராய்‌ பெருமாள்‌ திருவிளையாட்டமான அழகிய மணவாளர்‌ காணிய ப்ராஹ்மணராய்‌ தமிழ்‌ விரகரான ஒருவர்‌ துருஷ்கன்‌ வாசலிலே காரியம்‌ ஆராய்ந்து நின்று அவன்‌ நினைத்தபடி ஒன்றும்‌ செய்யாமல்‌ அவனுக்கு அநுகூலமாகவே சொல்லிக்‌ கொண்டு, மதிள்கள்‌, மாளிகைகள்‌, கோபுரங்கள்‌ துன்னு மணி மாடங்கள்‌, சாலைகள்‌ தொடத்‌கமானவற்றையும்‌, செம்பொனாய வருவரை யனைய கோயில்‌ மணி யனாரையும்‌ காத்து ரக்ஷித்துக் கொண்டு போந்தார்‌. அது கண்டு அங்குண்டான ஆசார்யர்கள்‌ எல்லாரும்‌ அவரை அநுவர்த்தித்து நல் வார்த்தை சொல்லிக்‌ கொண்டு போந்தார்கள்‌.

திருவாய்மொழிப் பிள்ளை வையவம்‌.
பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளில் ஆச்ரயித்தவளான ஸாத்விகை அம்மையார்‌ அவர்‌ விச்லேஷம்‌ பொறுக்க மாட்டாமல்‌ பரமபதத்துக் கெழுந்தருள, அவள்‌ குமாரரான திருமலை யாழ்வாரை அவர்‌ சிறிய தாயாரான அம்மையார்‌ போஷித்துப்‌ போந்தார்‌.- திருமலையாழ்வாரும்‌ பால்யங்‌ கடந்து ப்ராப்த யெளவநராய்‌ ப்ரவபுத்வமுலடயராய்‌, சதிரிளமடவார்‌ தாழ்ச்சியை மதித்து, அணி மென் குழலாரின்பக் கலவியமுதுண்டு கொண்டு திரிய, இவர்‌ சதிருடைய தமிழ்‌ விரகராயிருக்கையாலே இவரைத்‌ திருத்துவதாகக்‌ கூர குலோத்தம தாஸர்‌ திருவுள்ளம் பற்றி இவர்‌ முன்பே திரு விருத்தத்தை அநுஸந்தித்துக்‌ கொண்டு எழுந்தருள, இவர்‌ (திருமலை யாழ்வார்‌) அர்த்தவானாய்‌ அதற்குப்‌ பொருள்‌ கேட்க,நாயனும்‌, “உனக்குச்‌ சொல்ல வொண்ணாது’ என்று குத்ஸித்து உமிய, (திருமலையாழ்வார்‌ அப்போது ராஜ ப்ரதிநிதியாய்‌ ராஜ்ய பாரம்‌ பண்ணிக் கொண்டிருந்தார்‌. ராஜா இறந்து ராஜ புத்ரர்கள்‌ பாலர்களாயிருந்தபடியால்‌ ராஜ பத்நி ராஜய பாரத்தை இவரிடம்‌ ஓப்புவித்திருந்ததாகத்‌ தெரிகிறது) திருப் பல்லக்கிலே இருந்த இவர்க்கு (திருமலை யாழ்‌வாருக்கு) பிள்ளை லோகாசாரியர்‌ விசேஷ கடாக்ஷம்‌ பண்ணி யிருக்கையாலே உமிழ்ந்தற்குக்‌ கோபியாமல்‌ ஸ்வ படரை விலக்கி அச் செய்தியை அம்மையாருக்குச்‌ சொல்ல, அவளும்‌ பிள்ளை லோகாசரியர்‌ திருவடிகளிலுண்டான ஸம்பந்தத்தை ஸ்மரிப்பிக்க,இவர்க்கு அநுதாபம்‌ பிறந்து ஆச்ரயணோந் முகராயிருக்க–அக் காலத்திலே சிங்கப்பிரானுக்குத்‌ திருமணத் தூண்‌ நம்பி!”என்று திருநாமமா யிருக்க, அவர்க்கு எல்லாரும்‌ ப்ரீத்யதிசயத்‌தாலே அனுவர்த்தித்து நல் வார்த்தை சொல்ல அவரும்‌, ‘பலரும்‌ அருளிச்‌ செய்கையாலே எனக்கொன்றும்‌ தெரிகிறதில்லை; வாக்மியா யிருப்பாரொருவரைத்‌ தெளிவா யருளிச்‌ செய்யும்படி கற்பிக்க வேணும்‌ என்ன; அவர்களும்‌, திருமலை யாழ்வாருடைய வாக் வ்யவஹார ஸாமர்‌தயத்தைக்‌ கண்டு “நீர்‌ சொல்லும்‌!” என்று நியமிக்க, அவரும்‌ அப்படியே சொல்ல, அவ் வார்த்தைகள் அஸம்ப்‌ரதாயமாயிருந்த படியையும்‌, அவருடைய ஆச்ரய ருசியையும் கண்டு, இவரை ஸத் ஸம்ப்ரதாய ப்ரவர்‌த்தகரர்க்கக்‌ கடவோமென்று -ஒது முடும்பை யுலகாசிரியரனருள்‌ ஏதும் மறவாத எம்பெருமானான கூரகுலோத்தமதாஸர்‌ இவரை அநுவர்த்தித்துத்‌ தம்முடைய நிர்ஹேதுக க்ருபையாலே செயல்‌ நன்றாகத்‌ திருத்துவதாக மதுரையிலே சென்று ஸமயம்‌ பார்க்க, ஒரு நாளளவிலே திருமலையாழ்வார்‌ யானை மேலேறிப்‌ புறப்பட, தாம்‌ மேட்டு நிலத்திலே நின்று தம்மைக்‌ காண்பித்துக்‌ கொள்ள, திருமலை யாழ்‌வார்‌ இவரைக்‌ கண்டவுடனே பிள்ளை லோகாசாரியராக ப்ரதிபத்தி பண்ணி, யானையினின்றும்‌ சடக்கென இறங்கி நாயன்‌ திரு வீதிகளில் தீர்க்க ப்ரணாமம்‌ பண்ண, நாயனும்‌ இவரை எடுத்‌ தணைத்து ஸ்வாசார்ய ப்ரபாவத்தை யிட்டு இவரைக்‌ கொண்டாட, திருமலை யாழ்வாரும்‌ இவரை (நாயனை) உள்ளே எழுந்தருளப்‌ பண்ணு வித்துக்‌ கொண்டு சென்று ஸத்கரித்து ஹிதம்‌ கேட்க, பிள்ளைலோகாசாரியர்‌ சரம காலத்திலே அருளிச்‌ செய்தபடிகளை யெல்லாம்‌ ஸவிஸ்தாரமாக அருளிச்‌ செய்யக்‌ கேட்டு உகந்து-தேவரீர்‌ அடியேனை க்ருபை பண்ணி இங்கே யெழுந்தருளி யிருந்து ப்ராத காலத்திலே திருமண்காப் பவஸரத்திலே எழுந்தருள வேணும்‌’* என்று வேண்டிக் கொண்டு, வைகை யாற்றின்‌ கரையிலே ஸந்த்யா மடத்தருகே ஒரு திருவீதியையையும்‌ அதில்‌ இவர்க்‌கொரு திருமாளிகையுஞ்‌ சமைத்து ஜாத்யாச்ர நிமித்த துஷ்டங்‌கள் ஏதோ அவைகளைப்‌ பரிஹரித்துத்‌ தளிகைக்கு நடக்கும்படி அமரிக்கை பண்ணினார்‌.

கூரகுலோத்தம தாஸ நாயனும்‌ நித்யமாகத்‌ திருமண்காப்பு வேளைக்கு எழுந்தருள, இவர்‌ திருமண்‌ சேர்க்கச்‌ செய்தே லோகா சார்யாய’ என்று தொடங்கி தனியன்களை யநுஸந்திக்கக் கண்டு மிகவும்‌ ப்ரியப்பட்டு அன்று தொடங்கி கிஞ்சித் கிஞ்சித் காலம்‌ அவரிருக்குமளவும்‌ அநுவர்த்திக் கொண்டிருந்து ரஹஸ்யார்‌த்தங்களை ப்ரஸாதிக்க, அவரும்‌ நன்றாக அநுவர்த்‌தித்துக் கொண்டு ப்ரதி பத்தி யுடனே கேட்டு வந்தார்‌. ஒருநாள்‌ ராஜ காரியாவஸரத்தினாலே சொன்ன அர்த்தத்தைக்‌ கேளாமல்‌ ‘பொறுத்தருள வேணும்‌’ என்ன; மற்றை நாள்‌ இவரெழுந்தருளாமலிருக்க, அற்றைத் தினம் பராமர்சமின்‌றிக்கே யொழிய,-பிற்றை நாள்‌ நாயனெழுந்தருள வில்லை யென்று பராமர்சித்து உடனே ஆளை விட, அவர்கள்‌ சென்று அறிவித்த விடத்து பேசாமலிகுந்து விட, அவர்கள்‌ சென்று திருமலையாழ்‌வாருக் கறிவிக்க, அவர்‌, மற்றை நாளும்‌ நாயனெழுந்தருளாத படியினாலே தம்முடைய ஆர்த்தி யெல்லாம்‌ தோன்றும்படி கால் நடையாக நாயன்‌ திருமாளிகைக்குச்‌ செல்ல, நாயன்‌ நெடும் போது விளம்பித்து ஸேவை ஸாதிக்க ஸேவித்து, திருவடிகளிலே விழுந்து போர க்லேஸிக்க, நாயனாரும்‌ ௨கந்தருளி ஷமித்தோம்‌” என்று சொல்ல, காலஷேப ஸமய மாகையாலே அது நிறைவேறுந் தனையுமிருந்து அவர்களுடன்‌ ஸ்ரீபாத தீர்த்த ஸ்வீகாரம்‌ பண்ணின பின்பு நாயனாரும்‌ திருமலை யாழ்வாரை அமுது செய்யும்படி நியமிக்க,திருமலை யாழ்வாரும்‌ தளிகையை ஸ்வீகரிக்க அபேஷிக்க, உகத்தருளி தளிகை ப்ரஸாதம்‌ ஸாதித்தருள, திருமலை யாழ்வாரும்‌ ப்ரஸாத ஸ்வீகாரம்‌ செய்த மாத்ரத்தில்‌ பரம விரக்தராய்‌ “”கூர குலோத்தம தாஸ நாயன்‌ திருவடிகளே சரணம்‌”என்று பல காலு மநுஸத்தித்துக்‌ கொண்டு சென்று, ராஜ கார்ய ஸமயத்திலேயும்‌, ஒருவரை பேர்‌ சொல்லி யழைக்கும்‌ போதும்‌ இப்படியே சொல்லத் தொடங்கினா ராகையாலே இவருக்கு உந்மாதம்‌ பிடித்ததாக வேணுமென்று ராஜபத்‌நிக் கறிவிக்க, அவளும்‌ திருமலை யாழ்வாரை யழைத்து வார்த்தை சொல்ல, இவரும்‌ உத்தரத்துக்கு ப்ரத்யுத்தரம்‌ சொல்லாமல்‌ கூர குலோத்தம தாஸ நாயன்‌ திருவடிகளே சரணம்‌; ஸகல கார்யமும்‌ பத்ரம்‌”” என்று இப்படியே சொல்ல. அவளும்‌ நாங்கள்‌ ஸ்த்ரீ பாலர்களா யிருக்கிறபடியால்‌ பிள்ளை ப்ரபுத்தனாகும்‌ தனையும்‌ எல்லாவற்றிற்கும்‌ தேவரீருண்டென்றிருந்தோம்‌; அப்படி யின்றிக்கே யொழிந்ததோ?’ என்று சோகிக்க, “நீர் சோகிக்க வேண்டா; பிள்ளை ஸமர்த்தனானான்‌, எனக்கு நாயன்‌ திருவடிகளை ஸேவித்துக் கொண்டிருக்க வேணும்‌; நீர்‌ தவிர்க்க வேண்டா; ராஜ கார்யத்தை அடிக்கடி விசாரித்துக் கொண்டு பிள்ளைக்கும்‌ புத்தி சொல்லிக் கொண்டு வருகிறேன்‌” என்று சொல்லி ஸமாதானம்‌ பண்ணி, ராஜ கார்யமும்‌ விசாரித்துக் கொண்டு நாயன்‌ திருவடிகளை யநுவர்த்தித்து ஸகலார்த்‌தங்களையும்‌ அருளிச் செய்யக் கேட்டு க்ருதார்த்தராய்‌ சிறிது நாள்‌ அங்கே தானே யிருந்து பிற்பாடு திருப் புல்லாணிக்கு ஸமீபத்திலே நாயனெழுந்தருளி யிருக்கிற சிக்கிலி என்‌கிற வூரிலே யெழுத்தருளி குருகுல வாஸம்‌ பண்ணிக் கொண்டிருந்தார்‌. நாயனாரும்‌ தமக்குப்‌ பிள்ளை லோகாசாரியர்‌ ப்ரஸாதித்த பரமார்த்தங்களை யெல்லாம்‌ இவருக்கு ப்ரஸாதித் தருளினராகையாலே கூர குலோத்தமை தாஸ முதாரம்‌ என்றருளிச் செய்தார்‌.

அநந்தரம்‌ நாயன்‌ தம்முடைய சரம காலத்திலே திருமலை யாழ்வாரை யழைத்தருளி ‘“விளாஞ்சோலைப்பிள்ளை யிடத்திலே இன்னம்‌ உமக்கு வேண்டிய அர்த்த விசேஷங்களை யெல்லாம்‌ கேளும்‌’‘ என்றும்‌, திருக்கண்ணங்குடிப்பிள்ளை யிடத்திலே திருவாய்‌மொழியைக்‌ கேளும்‌’” என்றருளிச்‌ செய்து, பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளை த்யாநித்துக் கொண்டு திருநாட்டுக்‌ கெழுந்தருளினார்‌ . அவர்‌ குமாரரைக்‌ கொண்டு நாயனுக்கு தீர்த்த திருவத்யயனமும்‌ நடத்தி யருளினார்கள்‌.
கூர குலோத்தம தாஸ நாயன்‌ திருநஷத்ரம்‌ ஐப்பசியில்‌ திருவாதிரை; அவர்‌ தனியன்‌
லோகாசார்ய க்ருபா பாத்ரம்‌ கெளண்டின்ய குல பூஷணம்‌ |
ஸமஸ்தாத்ம குணாவாஸம்‌ வந்தே கூரகுலோத்தமம்‌ ॥
ஸ்வயமாஹுய ஸைலேஸ குரவே அர்த் ப்ரதாநத: |
லப்தோ தாராபிதம்‌ கூர குலோத்தம மஹம்‌ பஜே ॥

பிள்ளை லோகாசாரியருடைய க்ருபைக்குக்‌ கொள்கலமாய்‌ கெளண்டின்ய குலத்துக்கணியாய்‌, எல்லா ஆத்ம குணங்களுக்குமிருப்பிடமான கூர குலோத்தம தாஸ நாயனாரை அடி பணிகிறேன்‌.
தானே வலிய அழைத்து திருமலை யாழ்வாருக்கு விசேஷார்த்‌தங்களை ப்ரஸாததித்ததனால்‌ பெறப்பட்ட -௨தரார்‌” என்கிற பெயரை யுடைய கூர குலோத்தம தாஸ நாயனாரை ஸேலிக்கிறேன்‌.

அநந்தரம்‌ திருமலையாழ்வாரும்‌ ‘திருக்கண்ணங்குடிப்பிள்ளை யருகே: எழுந்தருளி ஸேவித்து, ‘அடியேனுக்குத்‌ திருவாய்‌ மொழியின்‌ அர்த்தமருளிச் செய்யவேணும்‌‘ என்று வேண்ட,
அவரும்‌ அப்படியே தொடங்கி யருளிச்‌ செய்ய, அவர்‌ தாத்பர்ய ப்ரதாநராய்க் கொண்டு தாத்பர்யார்த்தங்களையே ப்ரஸாதிக்க, இவர்‌ சப்தத்துக்கிசைய அருளிச் செய்ய வேணும்‌” என்று நிர்ப்பந்திக்க,ஆகில்‌ திருப்புட்குழி ஜீயர்‌ பாடேறப்‌ போய்க் கேளும்‌” என்ன,
அப்படியே புறப்பட்டுப்‌ பெருமாள்‌ கோயிலிலே எழுந்தருளின அற்றை நாள்‌ அவர்‌ திருநாட்டுக்கெழுத்தருளின பன்னிரண்டாம்‌ திவஸமாய்‌ அவர்க்குத்‌ திருநாராயண பலி நடக்க அத்தைக்‌ கண்டு மிகவும்‌ துக்கித்திருக்க, பெருமாள் கோயிலாசார்யர்களும்‌ கோயில்‌ பரிகரமனைத்துக்‌ கொத்தும்‌ திருமலை யாழ்வாரை கோயிலுக்கெளுந்தருளப் பண்ணுவித்துக்‌ கொண்டு போய்‌ பெருந்‌
-தேவியாரையும்‌ பேரருளாளனையும்‌ ஸேலிக்கப் பண்ணி , தீர்த்தம்‌ ஸ்ரீசடகோபன்‌, சாத்துப்படி, திருத்துழாய்‌, திருமாலை முதலான வரிசைகள்‌ ப்ரஸாதித்து பஹாுமாளம்‌ பண்ணி தர்சந ப்ரவர்த்தகராக வாழ்த்தினார்கள்‌. பிற்றை நாள்‌ திருநாராயண புரத்திலிருந்து
நாலூர்ப்பிள்ளையும்‌ அவர் குமாரரான நாலூராச்சான்‌ பிள்ளையுமெழுந்தருளிப்‌ பேரருளாளனை மங்களாசாஸனம்‌ பண்ண வெழுந்‌தருள, அந்த வேளையில்‌ திருமலை யாழ்வார்‌ ஸத்நிதியிலே மங்களாசாஸனம்‌ பண்ணிக் கொண்டு எழுந்தருளியிருக்க, இவர்கள்‌ திருமலையாழ்வார்‌ எழுந்தருளின செய்தியும்‌ உள்ளே மங்களாசாஸனம்‌ பண்ணி யருளுகிறதும்‌ அறியாமல்‌ ஸந்நதியிலே பின்னே நின்று, ”உள்ளே ஸேவிக்கிறவரார்‌?” என்று கேட்க, கோயில்‌ திருமலை யாழ்வார்‌’”’ என்ன, ‘ கோயில்‌ திருமலை பெருமாள்‌ கோயிலன்றோ!’” என்றருளிச்‌ செய்து கொண்டு அவர்‌ ஸத்நிதி வைஷ்ணவர்களுக்குப்‌ பின்னே நின்று ஸ்ரீசடகோபனுக்கு திரு முடியை உயர வெடுத்ருள, ஸ்ரீ சட கோபன்‌ திருமுடியிலே தரிக்கிற வளவிலே தம்முடைய திருவிரலாலே ஊன்‌ற, அர்ச்சகரும்‌ சீக்கிர்மாக ஸந்நிதியிலே ஸ்ரீசடகோபனை யெழுந்தருளப்‌ பண்ணி வைத்து திருமலை யாழ்வார்‌ கைப்பிடித்து, பின்னே வருகிற நாலூர்‌பிள்ளையை ‘அருளாளர்‌ திருவடி யூன்றியவரே!”” (கோல வராஹரான நாலூர் பிள்ளைக்கு இந்தத் திருநாமம் )என்றழைத்துத்‌ திருமலை யாழ்வாரை அவர் கையில்‌ காட்டிக்‌ கொடுத்து, “இவருக்கு மூவாயிர வ்யாக்யானம்‌ ஸாதிக்கும்படி ஜ்யோதிஷ்குடியிலே. நியமித்தோம்‌; (பிள்ளை லோகாச்சார்யார் பேர் அருளாளன் தானே )இவர்‌ வந்தார்‌; திருப்புட்குழி ஜீயர் பாடே ஈடுகேளாத இழவு தீர அத்தையும்‌ இவருக்கு ஸாதியும்‌”’ என்று பரவசராய்‌ நியமிக்க, பிள்ளையும்‌, “அடியேன்‌ க்ருதார்‌த்தனாளேன்‌; திருக்‌ கண்ணங்குடிப்பிள்ளை போராத விவருக்குத்‌ தினவுகெடச்‌ சொல்ல வல்லேனோ?’” என்று சிந்தித்து நிற்க, மனமொத்த நாதனான பேரருளாளன்‌ ‘*ஆத்மாவை புத்ர நாமாஸி” என்று ஆச்சான்‌ பிள்ளை ஸாதித்தால்‌ நீர்‌ ஸாதித்ததாம்‌” என்று நியமித்தருள–நாயன்தே நாயன்தே ” என்று உகந்து புறப்பட்டருளி -வாரீர்‌ திருமலை யாழ்வாரே! நாம்‌ போர ஜரித்தோம்‌; நீர்‌ அதி நிபுணர்‌; உமக்குத்‌ தகும்படி சொல்ல வல்லவர்‌ இவர்‌? என்று *நல்ல மகனாரான ஆச்சான் பிள்ளை கையிலே காட்டிக்‌ கொடுத்து, தமக்குத்‌ திருநாராயணபுரத்துக்‌ கெழுந்தருளத்‌ திருவுள்ளமாய்‌ புறப்பட்டெழுந்தருளினார்‌.

(ஆங்கு அவர்பால் பெற்ற சிறியாழ்வானப் பிள்ளை
தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் -பாங்குடனே
நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு —49-)

திருமலையாழ்வாரும்‌,”க்ருதார்த்தனானேன்‌” என்று ஆச்சான்‌ பிள்ளை திருவடிகளிலே ந்யஸ்த பரராயிருக்க, இவரைக்‌ கைக்‌கொண்டருளித்‌ திருவாய்மொழி யீடு தொடங்கி நடத்தி யருளாநிற்க, இத்தைத்‌ திருநாராயணபுரத்தில்‌ ஆயி, பிள்ளை தொடக்கமானவர்கள்‌ கேட்டு, இவரை யெழுத்தருளும்படி எம்பெருமானாருடைய திருமுகமாக திவ்யாஜ்ஞையிட்டுவிட, அதைக்‌ கண்டு ஆச்சான் பிள்ளை திருமலை யாழ்வாரைக்‌ கூட்டிக்‌ கொண்டு திருநாராயணபுரத்தேற எழுந்தருள அவர்களும்‌ எதிர் கொண்டு திருவடிகளை ஸேவித்து எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு போர,

ஆகுஹ்யாமல யாதவாத்ரி சிகரம்‌ கல்யாண தீர்த்தம்‌ தத:
ஸ்நாத்வா லக்ஷ்மண யோகிந: பதயுகம்‌ நத்வாதுகத்வாதந : |
ஸ்ரீ நாராயயணமேத் யத்ய தத்ர தரணீ பத்மாலயா மத்யகம்‌
பஸ்யேயம்‌ யதிகிம்‌ தப: பலமத: ஸம்பத் குமாரம்‌ ஹரிம்‌ ॥

தூய்தான யாதவாத்ரியினுடைய உச்சியிலேறி திருக்கல்‌யாணி தீர்த்த புஷ்கரியிணியில்‌ நீராடி இளையாழ்வாருடைய (எம்பெருமானாருடைய) திருவடிகளைத்‌ தொழுது, மேலே சென்று திரு நாராயணனை ஆஸ்ரயித்து, அங்கு ஸ்ரீபூமிப் பிராட்டியார்‌, பெரியபிராட்டியார்‌ இவர்கள்‌ நடுவில்‌ எழுந்தருளி யிராநின்றுள்ள சம்பத்குமார்‌ (செல்வப்பிள்ளை) எனும்‌ எம்பெருமானைக்‌ காண்‌பேனாகில்‌ இதைக் காட்டிலும்‌ வேறான தப:பலனானது என்ன இருக்கிறது?] என்று சொல்லுகிற படியே க்ரமத்திலே பெரிய ப்ரீதியோடே சென்று திரு நாராயணன்‌ திருவடிகளை அரணாகப் பற்றி அங்கே இனிததமர்‌ந் தெழுந்ருளி யிருக்கிற எம்பெருமானாரை ஸேவித்து அவர்‌ புருஷகாரமாக யதுகிரி நாயகியாரையும்‌ செல்வப்‌ பிள்ளையையும்‌ திரு நாராயணனையும்‌ ஸேவித்து -அங்கே யெழுந்தருளி இருந்து எம்பெருமானார்‌ ஸந்நிதியிலே தொடங்கி *உறுபெருஞ்‌ செல்வம்‌ இத்யாதிப்‌படியே அவருக்குகப்பாக அங்கே ஆச்சான்‌ பிள்ளையுடனே ஈடு முப்பத்தாரறாயிரமுங்‌ கேட்டார்கள்‌; அவரும்‌ மேலோர்க்கீந்தார்‌ என்னும்படி ப்ரஸாதித்தருளினார்‌ -திருமலை யாழ்வாரும்‌ அவர்‌ திருவடிகளைப்‌ பழுக்க ஸேவித்து -அரிய வருளிச்‌ செயல் பொருளை ஆரியர்களெல்லாரும்‌ உகக்கும்படி கேட்டருளினார் -பின்பு தேவ ராஜரும்‌ இவருடைய ஜ்ஞாந பக்தி வைராக்‌யாதி குண பூர்த்தியைக்‌ கண்டுகந்து இவரை விசேஷாபிமானம்‌ பண்ணி யருளி தம்முடைய திருவாராதனமான *இன வாயர் தலைவனை இவர்க்கு ப்ரஸாதித்தருளினார்‌.

தேவாதி பாத் ஸமதிகம்ப ஹைஸ்ர கீதேர்‌ பாஷ்யம்‌ நிகூடமபிய ப்ரதயாம்‌ சமார | குந்தி புரோத்பவமமும்‌ ஸரணம் பஜேஹம்‌ ஸ்ரீ சைலநாதமுருபக்தி ப்ருதம்‌ ஸடாரெள

உறுபெருஞ்செல்வமும்‌ என்று தொடங்கி, -மாறன்‌ விளங்கிய சீர்‌ நெறி தரும்‌ செந் தமிழாரணமே -என்கிறபடியே உடையவருக்கு உகப்பாக நல்லருள்‌ நம்‌ பெருமாள்‌ நாராயணன்‌ நாமங்களாய்‌(திருவாய்‌ 5-9 10), கேட்‌டாரார்‌ வானவர்கள்‌ செவிக்கினிய செஞ்சொல்‌ (திருவாய்‌ 10-6-11)ஆன திருவாய்மொழி தொடங்கி ஈடு முப்பத்தாறாயிரமும்‌ அத்ருப்‌ தாம்ருத ரூபமான இதின்‌ சப்த ஸ்வாரஸ்யம்‌, அர்த்த ஸ்வாரஸ்யம்‌ த்வநி வ்யங்க்யம்‌, பாவார்த்தம்‌, ஸ்வாபதேசம்‌, அந்யாபதேசம்‌, எல்லாம்‌ ஸம்சய விபர்யமற நன்றாகத்‌ தெரியும்படி *மேலோர்க்‌ கீந்தார்‌ அவரேமிக்கு (௨ப.ர.மா 49) என்னும்‌ படி நாலுராச்சான்‌ பிள்ளை தம்‌ பரம க்ருபையாலே ப்ரஸாதித்தருள, பிள்ளை முதலானவர்கள்‌ கேட்டார்கள்‌, அத்தைப் பற்றி

ஸ்ரீஸைல நாத குரு மாத்ர குருத்தமாப்யாம்‌ ஸ்ரீஸூக்தி தேஸிக வரேண ச யஸ் த்ரிதைவம்‌ |
வ்யக்தஸ் ஸடாரி க்ருதிபாஷ்ய ஸு ஸம்ப்ரதாயோ விஸ்தாரமேதி ஸஹி வைஷ்ணவ புங்கவேஷு ॥-
என்றும்‌

கோலாதிபாத்‌ பிதுரவாப்ய ஸஹஸ்ர கீதேர்‌ பாஷ்யம்‌ ஹி பூர்வதக தேஸிக வர்யகுப்தம்‌ |
த்‌ரேதா ப்ரவர்த்ய புவிய: ப்ரத்யாஞ்சகார தம்‌ தேவ ராஜ குருவர்ய மஹம்‌ ப்ரபத்பே –
என்றும்‌ அநுஸந்தித்தார்கள்‌.
யாதொரு ஆழ்வாரருளிய திருவாய்‌ மொழியின்‌ பாஷ்யமான ஈட்டின்‌ நல்ல ஸம்ப்ரதாயமானது திருவாய்மொழிப் பிள்ளை திருநாராயணபுரத்தாய்‌ திருவாய்மொழி யாசார்யர்‌ என்னும்‌ இம் மூவராலும்‌ இப்படி மூன்று விதமாக வெளியாயிற்றோ, அது வன்றோ ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரேஷ்டர்களிடம்‌ (இப்போது) பல படியாகப்‌ பரவுதலைப்‌ பெற்றுள்ளது. யாவ ரொருவர்‌–பூர்வாசார்யர்களால்‌ மறைத்து வைக்கப்‌ பெற்ற திருவாய்மொழியின்‌ ஈட்டை தம்‌ தமப்பனாராகிய நாலுர் பிள்ளை யிடமிருந்து பெற்று (மூவரின்‌ மூலமாக) மூன்று விதமாகப் பிரவர்த்திப்பித்து பூமியில்‌ அது தன்னை ப்ரஸித்தமாக்கினாரோ,அந்த நாலுராச்சான்‌ பிள்ளையை அடியேன்‌ சரணமடைகிறேன்‌-திருவாய்மொழிக்கு ஈடு முப்பத்தாறாயிரம்‌ ஸாதித்த வுடன் நாலுராச்சான் பிள்ளை திருமலை யாழ்வாருடன்‌ ஸ்வ ஸ்தானத் தேற எழுந்தருளினார்‌.-

யாவரொரு திருமலையாழ்வாரானவர்‌ தேவாதிபர்‌ என்ற நாலூராச்சான் பிள்ளையிடமிருந்து ரஹஸ்யமான திருவாய்மொழி யாயிரத்தினுடைய பாஷ்யமான ஈடு முப்பத்தாறாயிரப்‌ படியைப்‌ பெற்று, பின்னர்‌ அத்தைப் ப்ரஸித்தமாக்கினாரோ, நம்மாழ்வார்‌ விஷயத்தில்‌ மிகவும்‌ பக்தியுடையவராய்‌, குந்‌தி நகரத்தில்‌ அவதரித்‌தவரான புகழ் பெற்ற அந்தத்‌ திருமலையாழ்வாரை சரணம்‌ பற்றுகிறேன்‌ –என்கிற படியே தேவப் பெருமாள்‌ கைக் கொண்டருளுந்‌ திருமலை யாழ்வாருக்கு ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ராவண்யமதிசயித்து அவர்‌ திருவடி தொழ வேணுமென்கிற அபிநிவேசத்‌தை யுடையராய்‌, ‘ஆஜகாம முஹார்த்தேந” என்கிறபடியே அவரெழுந்தருளி யிருக்கும்‌ திருக்கணாம்பி யென்கிற திருப்படை வீட்டைக்‌ குறித்து அங்கே சென்று அவர்‌ திருவடிகளை ஸேவித்துத்‌ தம்முடைய அபிநிவேசமெல்லாம்‌ தீர்ந்து;

(சடகோபர் தாசர் திருவாய்மொழிப்பிள்ளை இவை பட்டப்பெயர் -திருமலை ஆழ்வார் இயல் பெயர் –
1371-பரிதாபி ஸம்வத்சரம் வைகாஸி 17 நம்பெருமாள் மீண்டு அருளினார்
கோட்டூரில் அண்ணர்-திருகுமாரத்தியை ஸ்ரீ ரெங்கநாச்ச்யார் மணந்தவர் திகழக் கிடந்தான் பாடிய திரு நா வீறுடைய பிராணன் தாதர் அண்ணர் வீப்ர ஸயான குரு கோமடத்தாழ்வான் திருவம்சம் -இவர் திருக் குமாரர் நம் பெரிய ஜீயர் -சாதாரண வருஷத்தில் திருவவதாரம் -)

அநந்தரம்‌ ஆழ்வாரைத்‌ திருநகரியிலே திருக்குடி புகுவிப்பதாகத் திருவுள்ளமாய்‌, தாம் முந்தி திருநகரியேற யெழுந்தருளி, காடுவெட்டி நாடாக்கி, -நல்லார்‌ பலர்வாழ்‌ குருகூர்‌ என்னும்படி குடியேற்றி ஆழ்வாரை யெழுந்தருளப்‌ பண்ணுவித்துக்‌ கொண்டு குருகூர்ச் சடகோபன்‌ என்னும்படி யதா ஸ்தாதத்திலே திருப்ரதிஷ்டை பண்ணி யருளி
ஸடகோப முநிம்‌ வந்‌தே ஸடாநாம்‌ புத்தி தூஷணம்‌ |
அஜ்ஞாநாம்‌ ஜ்ஞாந ஜந கம்‌ திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம்‌ ॥

வஞ்சகர்களுடைய புத்தியை நாசம்‌ செய்பவராய்‌, ஜ்ஞானமில்லாத மூடர்களுக்கு ஜ்ஞானம்‌ பிறப்பிப்பவராய்‌, திருப்புளியினடியில்‌ எழுந்தருளி யிருக்கும்‌ ஸ்ரீசடகோப முநிவரை அடி பணிகிறேன்‌- என்கிறபடியே உறங்காப் புளி நிழல் தன்னிலே ஏறி யருளப்‌ பண்ணி ஸேவித்து நிற்க இவர்க்கு சடகோப தாஸர்‌ என்று தம்‌முடைய திரு நாமத்தை யாதார்த்த நாமமாம்படி ப்ராஸாதித்‌தருள, இருவரும்‌ “ப்ரஸாத லப்‌த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே –ஆழ்வாரின்‌ அநுக்ரஹத்தினால்‌ பெற்ற நிரதிசயமான பேறான
கைங்கர்யத்தினால்‌ விளங்கா நின்‌ற திருமலை யாழ்வார்‌- என்னும்படி,
பெரிய வண் குருகூர் நகர்‌ நம்பிக்காளுரியனாய்‌, புகழ் வண்‌ குருகையும்‌ பொற் கோபுரமும்‌ புரிசை சூழ் கழனி தண் பொருநை மன்னாழ்வார்‌ மறைத் தமிழாயிரமுநம் திகழும்படி செய்த ஸ்ரீசைலேசர்‌’–என்னும்படி ஆழ்வார்‌ திருவடிகளிலே ௮சேஷ சேஷ வ்ருத்திகளிலும்‌ அந்வயித்து அதுவே யாத்ரையாய்ப்‌ பேரா நிற்கிற காலத்திலே

(இன்றும் இனவாயர் தலைவன் திவ்ய விக்ரஹம் திருவாய் மொழிப்பிள்ளை திருமாளிகையில் சேவிக்கலாம் -விளாஞ்சோலைப் பிள்ளை யுடைய திருவாராதன திவ்ய மங்கள விக்ரஹம்)

திருமலை யாழ்வாரும்‌ விளாஞ்சோலைப் பிள்ளையும்‌
விளாஞ்சோலைப்‌ பிள்ளையை ஸேவித்து விசேஷார்த்தங்களைக்‌ கேட்க வேணும்‌” என்று திருவுள்ளமாய்த்‌ திருவநந்தபுரத்தே யெழுந்தருளி ஆழ்வாருடைய தமர்களில்‌ ப்ரதானரான வாசி தோற்ற –படமுடை யரவிற்‌ பள்ளி பயின்றவன்‌ பாதங்கண்டு பணிந்து, அநந்தரம்‌ “கண்ணன்‌ கழலினை காட்டுமுலகாரியன்‌ தாள்‌ நண்ணு நலந் திகழ்‌ நாரணனை”’ என்று சொல்லும்‌ படியான விளாஞ்சோலைப் பிள்ளையைத்‌ திருவடி தொழுவதாக அவரெழுந்‌தருளி யிருக்கிற -வாசமே கமழுஞ்‌ சோலையான திருச்சோலைக்‌ குள்ளே சென்று ஸேலிக்க,! ”குரு பதாம் புஜம்‌ த்யாயேத்‌ குரோர்‌
நாம ஸதா ஜபேத்‌”
-ஆசாரியனின்‌ தாமரை யடிகளை எப்போதும்‌ சிஷ்யன்‌ தியானிக்கக் கடவன்‌; ஆசாரியனின்‌ திருநாமத்தை விடாமல்‌ அநுஸந்திக்கக் கடவன்‌-
ஸ்ரீ லோகார்ய முகார விந்த மகில ஸ்ருத்யர்த்த கோஸம்‌ ஸதாம்‌ |
தத் கோஷ்டீஞ்ச ததேக லீந மநஸா ஸஞ்சிந்த யந்தம்‌ ஸதா ॥

ஸகல வேதார்த்தங்களாகிய செல்வம்‌ சேமிக்கப்பட்ட பொக்கிஷமான பிள்ளை லோகாசார்யருடைய தாமரை போன்ற திருமுக மண்டலத்தையும்‌ ஸத் புருஷர்களினுடைய இருப்பிடமான அவருடைய கோஷ்டியையும்‌ எப்போதும்‌ அவற்றிலேயே லயமடைந்த மனஸ்ஸோடு த்யானித்துக் கொண்டிருக்கிற விளாஞ்‌ சோலைப்‌ பிள்ளையை- என்றும்‌ சொல்லுகிறபடியே பிள்ளை லோகாசாரியருடைய திவ்ய மங்கள விக்ரஹத்தையும்‌ அவருடைய திருவோலக்கத்தையும்‌ த்யானித்துக்‌ கொண்டு தம்முடைய திரு மேனியிலே சிலந்தி நூலிழைக்கும்படி அஸ்தமிதாந்ய பாவராய்‌ நாலாறு நாள்‌ ஸமாதியாக வெழுந்தருளி யிருந்து அநுபவித்து,பின்பு இவரைக்‌ கண்டு இவர்க்கு ஸகலார்த்தங்களையும்‌ ஸாதிக்க இவரும்‌ கேட்டு க்ருதார்த்தராய்க்‌ வேதிகப்‌ பொன்னான இவர்‌ ஸம்பந்தத்தாலே தம்முடைய ஐந்மக் கொத்தையைக்‌ கழித்துக்‌ கொண்டு மீண்டு திருநகரி யேறே வெழுந்தருளினார்‌. விளாஞ்‌ சோலைப்‌ பிள்ளையும்‌ ஸ்ரீவசந பூஷணத்தின்‌ தாத்பர்யங்களை ஏழு -ஸப்த-காதையாக ஸங்க்ரஹித்து அருளிச்‌ செய்து ஸர்வர்க்கும் உபகரித்தருளி தாமும்‌ –செறிபொழிலந்தபுரத்து அண்ணலார்‌ கமல பாதமணுகுவார்‌ அமரராவார்‌-என்கிறபடி அயர்வறுமரர்‌களோடே கூடி அடிமை செய்ய வேணுமென்கிற ப்ராப்ய த்வரையாலே தடுத்தும்‌ வளைத்தும்‌ பெற வேண்டும்படி பரமபக்தி தலை யெடுத்து அவா வற்று வீடு பெற்றார்‌. (பாவோ நாந்யத்ர சச்சதி’ என்கிற திருவடியைப்‌ போல இவரும்‌ அஸ்தமிதாந்ய பாவராய்‌ நாலாறு நாள்‌ ஸமாதியாக எழுந்தருளி யிருந்து ஸ்வாசார்ய விக்ரஹா நுபவம்‌ பண்ணி யருளுகிறவர்‌ திருக் கண்களை விழித்து நீர்‌ யார்‌? இங்கு வந்த கார்யமென்‌?” என்று கேட்டருள இவரும்‌ அடைவே எல்லாம்‌ விண்ணப்பம்‌ செய்யக் கேட்டு ஸந்தோஷித்து இவருக்கு ஸ்ரீவசந பூஷண தாத்பர்யங்களை-ஸப்த-ஏழு காதையாக ஸங்க்ரஹித்து அருளிச்‌ செய்து ஸர்வர்க்கும் உபகரித்தருளினார் )

அப்போது நம்பிமார்‌ (அநந்த சயனனை) திருவாராதனம்‌ செய்யா நிற்க, விளாஞ்சோலைப்பிள்ளை திருவடி தொழச்‌ சென்று கர்ப்ப க்ருஹகத்திலே புகுந்து திருவடி யருகே நிற்கக் கண்டு நம்பிமாரும்‌ அது மலையாள தேசமாகையாலே புலையரான விளாஞ்‌ சோலைப் பிள்ளை யகத்து (அருகே) நாம்‌ போகிறதில்லை” என்று திருக் காப்பு சேர்த்துக்‌ கொண்டு புறப்பட, அவ்வளலிலே பிள்ளை ஸ்ரீபாதத்து முதலிகள்‌ ”விளாஞ்சோலைப் பிள்ளை வோகாசார்யர்‌ திருவடிகள்‌ சேர்த்தார்‌?” என்று நூற்றத்தாதி இயலுனே பரியட்‌டம்‌ திருமாலைக்குக்‌ கோயில்‌ வாசலிலே வரக்‌ கண்டு நம்பிமார்‌ ப்ரத்யஷமாகக்‌ கண்ட ஆஸ்சர்யத்தை அனைவரக்கும்‌ வெளிப்‌ படுத்தினார்களென்று ப்ரஸித்தமிறே, இச் செய்தியை யறிந்து திருமலையாழ்வார்‌ ஸ்ரீபாதத்து முதலிகள்‌.
கத்வா நந்தபுரம்‌ ஜகத் குரு பதத்யாநே ரதம்‌ குத்ர சித்‌தம்‌
நாராயண தாஸ மேத்ய விமலம்‌ ஈத்வா ததங்க்ரிம்‌ முதா |
தஸ்மாதார்ய ஜநோக்தி மெளக்தி கக்ருதம்‌ வேதாந்த வாக் பூஷணம்‌
ஸ்ரீவாக் பூஷணமப்ய வாப்பஸ ருதம்‌ ஸ்ரீஸைல நாதோ பவத்‌ ॥

அந்தத் திருமலையாழ்வார்‌ திருவநந்த புரத்தை யடைந்து ஓரிடத்தில்‌ (புறச் சோலையில்‌) பிள்ளை லோகாசாரியருடைய திருவடிகளை தியானம்‌ பண்ணுவதில்‌ விருப்பமுள்ள அந்த நாராயண தாஸரை(விளாஞ்சோலைப்‌ பிள்ளையை) அடைந்து நிர்மவமான அவர்‌ திருவடிகளை மகிழ்ச்சியுடனடி பணித்து அவரிடமிருந்து பூர்வாசார்யர்களுடைய ஸ்ரீஸூக்திகளாகிற முத்துக்‌களால் அமைக்கப் பெற்ற வேதாந்த வாக்யங்களுக்கு ஆபரணமான ஸ்ரீவசந பூஷணத்தைப்‌ பெற்று (மேலான) ஆசார்யரானார்‌ ] என்று அநுஸந்தித் தருளினார்கள்‌-

இத்தைத்‌ திருமலையாழ்வார்‌ கேட்டருளி சிஷ்ய புத்ரர்கள்‌ செய்யும்‌ க்ருத்யங்களை யெல்லாம்‌ பிள்ளை விஷயத்திலே அநுஷ்‌டான சேஷமாம்படி அநுஷ்டத்துக்‌ காட்டி யருளினார்-(பயிலுஞ்சுடரொளி, நெடுமாற்கடிமை திருவாய்மொழிகளில்‌ காட்டப்பட்ட ஸாரார்த்தமாய்‌ பெரிய் நம்பி மறாதே,
நம்பி விஷயத்தில்‌ அநுஷ்டித்ததை நினைப்பூட்டும்‌,
)இப்படி இவருடைய சரம சேஷி விஷய சரமாநுவர்த்தநத்தை யறிந்தவர்கள்‌
பற்றாத வெங்கள்‌ மணவாள யோகி பதம் பணிந்தோன்‌
நற்றேவராச னலந் திகழ்‌ நாரண தாதருடன்‌
கற்றாரெங் கூர குலோத்தம தாதன்‌ கழல்‌ பணிவோன்‌
மற்றாரு மொவ்வாத்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை வாழியவே–
என்று அநுஸந்தித்தார்கள்‌.
வாழி நலந் திகழ்‌ நாரண தாதன்‌ வடிவும்‌
வாழி யவனமுத வாய் மொழிகள்‌–வாழியவே
ஏறு திருவுடை யானெந்தை உலகாசிரியன்‌ சொல்‌
தேறு திருவுடையான்‌ சீர்‌
— என்று தாமும்‌ அநுஸந்தித்தருளினார்‌. பின்பு திருமலை யாழ்வார்‌ தம்முடைய திருமகனாரை புத்ராபிமானம்‌ பண்ணி, தேவப்‌ பெருமாள்‌ என்று நாலுராச்சான் பிள்ளை திருநாமம்‌ சாத்தி யருளினார்‌.

இனி பிள்ளை லோகாசாரியர்‌ சிஷ்யராய்‌ கொல்லி காவல தாஸரான கோட்டூர்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள் பிள்ளையும்‌(இவர்‌ மணவாள மா முனிகளின்‌ மாதா மஹர்‌,) லோகாசாரியர்‌ ப்ராஸாதித்தருளின அர்த்த விசேஷங்களை அநுஸந்தித்துக்கொண்டு சிக்கல்‌ கிடராம்‌ என்கிற க்ராமத்திலே சிலநாள் எழுந்தருளியிருந்தார்‌. பின்‌பு திகழக் கிடந்தான்‌ திருநாவீறுடைய
பிரான்‌ தாதரண்ணரையர்(மா முனிகளின்‌ தகப்பனார்‌; இவர்‌ 74 ஸிம்ஹாஸனாதி பதிகளில்‌ கோமடத்‌தாழ்வான்‌ என்பவரின்‌ திருவம்ஸ்யர்‌ )அவர்‌ குமாரத்தியான ஸ்ரீ ரங்க நாச்சியாரைத்‌ திருமணம்‌ புணர்ந்து அவர்‌ திருமாளிகையிலே யெழுந்தருளி யிருந்து தமக்கு ஜ்ஞாதவ்யார்த்தங்களை யெல்லாம்‌ அவர்‌ ஸந்நிதியிலே கேட்டருளி
பிள்ளை லோகாசாரியர்‌ ஸந்நிதியிலே கேளாத இழவெல்லாம்‌ தீர்ந்து அந்த க்ருதஜ்ஞதைக்கு
வாழி மணவாளன்‌ வாழி யவன்‌ வீர நகர்‌
வாழி யவன்‌ குரவை மண்ணின்‌ மேல்‌–வாழி
உலகாசிரியனுரைத்த பொருள்களெல்லாம்‌
பல காலும் உரைக்குமவன்‌ பண்பு

என்றநுஸந்தித்து அவரைப்‌ பிள்ளை லோகாசாரியராகவே ப்ரதிபத்தி பண்ணிக்‌ கொண்டு அவருக்கு அநந் யார்ஹராய்‌ அநுவர்த்‌தித்துப் போந்தார்‌. இப்படி அவருக்கு அசேஷ ரஹஸ்யங்களையும்‌ ஸாதித்து சில நாள்‌ கழிந்தவாறே அழகிய மணவாளப் பெருமாள்‌ பிள்ளையும்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌.

அழுகிய மணவாளா மா முனிகள் திருவவதாரம்‌
இப்படி ப்ரப்த்தி மார்க்கமானது ஸங்குசிதமாக நடந்து செல்லுகிற காலத்திலே ஸ்ரீய:பதியாய்‌ பரம காருணிகனாய்‌-திருவரங்கத் தரவணையிலே – உறங்குவான்‌ போல்‌ யோகு செய்த-என்கிறபடியே ஜகத் ரஷண சிந்தா யுக்தனாய்க்‌ கண் வளர்ந்தருளுகிற பெரிய பெருமாள்‌ மீண்டும்‌ தர்சநம்‌ இப்படி ஒராண் வழியாய்‌ வருகிறபடியைக்‌ கண்‌டு ‘எம்பெருமானாரைப்‌ (போலே லோகமெல்லாம்‌ உஜ்ஜீவிக்கும்படி ஒரு விஷயத்தை உண்டாக்குவோம்‌”’என்று யோசித்து இனி இதற்கு ஆவாரார்‌ என்று தேடி மீண்டும்‌ திருவநந்தாழ்வானையே. கடாக்ஷித்து ஜகத்தைத் திருத்தும்படி நியோகித்தருள அவரும்‌ அப்படியே

1–ததஸ் ததிங்கிதம்‌ தஸ்ய ஜாநந்நேவ ஜகக்நிதே: | தஸ்மிந் தாம்நி ஸடாராதே:புரே புநரவாதரத்‌ ॥ என்றும்‌
2–ஸம்ஸந்தி ஸமயம்‌ தஸ்ய துலாம் ப்ராப்தே த்விஷாம் பதெள |
மூலம்‌ ஹி ஸர்வ ஸித்தீநாம்‌ மூலருஷம்‌ ப்ரசஷதே ॥ என்றும்‌
3–யந் மூலயாஸ்வ யுஜமாஸ் யவதார மூலம்‌ காந்தோ பயந்த்ரு யமிந। கருணைக ஸிந்தோ:
நஸீத் அஸத்ஸு கணிதஸ்ய மமாபி ஸத்தா மூலம்‌ ததீத வஷகதுப்யுதயைக மூலம்‌ ॥என்றும்‌

1-அப்போது திருவநந்தாழ்வான்‌ பெரிய பெருமாளுடய திருவுள்ளத்தை யறிந்தவராய்‌, அதன்படியே சடகோபுனுடைய இருப்பிடமான அந்தத்‌ திருநகரியிலே மீண்டும்‌ அவதரித்தருளினார்‌-
2-ஸுரியன்‌ துலா ராசியை அடைந்திருக்கும் போது எல்லாகாரிய ஸித்திக்கும்‌ காரணமான மூல நக்ஷத்ரத்தை அந்தத்‌ திருவநந் தாழ்வானின்‌ அவதார காலமாக பூர்வாசாரியர்கள்‌ அருளிச்‌ செய்‌கிறார்கள்‌.
3–எந்த ஐப்பசி மாதத்தில்‌ மூல நஷாத்ரமானது கருணைக் கடலான மணவாள மா முனிகளின்‌ அவதாரத்துக்கு அடியாயிற்றோ அதே மூலமானது அஸத்துக்களில்‌ ஒருவனாக மதிக்கப்பட்ட
(தாழ்ந்தவனான) அடியேனுக்கும்‌ ஸத்தைக்குக்‌ காரணமாகவும்‌, உலகெல்லாம்‌ வாழ்வதற்கு முக்கிய காரணமாகவும்‌ அமைந்தது] என்றும்‌ சொல்லுகிற படியே திருவநந்தாழ்வானும்‌ தம்முடைய திருவவதாரத்துக்கு இடம்‌ பார்த்து ஆழ்வார்‌ திருநகரியிலே அண்ணர் தேவிகள்‌ கர்ப்பத்தை யடைந்து நவமாஸம்‌ சென்றவாறே

செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடுநாள்!
சீருல காரியர் செய்தருள் நற்கலை தேசு பொலிந்திடுநாள்!
மந்த மதிப்புவி மானிடர் தங்களை வானி லுயர்த்திடுநாள்!
மாசறு ஞானியர் சேரெதிராசர் தம் வாழ்வு முளைத்திடுநாள்!
கந்த மலர்ப்பொழில் சூழ்குருகாதிபன் கலைகள் விளங்கிடுநாள்!
காரமர் மேனியரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடுநாள்!
அந்தமிழ்சீர் மணவாள முனிப்பர னவதாரம் செய்திடுநாள்!
அழகு திகழ்ந்திடு மைப்பசியில் திருமூலமதெனுநாளே

பாதோபாவம்‌ கதாயாம்‌;கலியுக ஸரதி ஸ்ரத்தராயே ஸகாப்தே .
வர்ஷே ஸாதாரணாக்யே ஸமதிகததுலே வாஸரே தீர ஸங்க்‌யே |
வாரே ஜைவேசதுர்த்மாம்‌ ஸமஜநிசதிதெள ஸூக்லபஷே
ஸு*கர்மா ப்ராஜம்‌ மூலக்யதாரே யதிபதி ரபரோ ரம்ய ஜாமாத்ருந்‌ நாமா 1

கல்யப்தம்‌ 4471 என்ற எண்‌ அடைந்த வளவில்‌ சகாப்தம்‌ 1292ல்‌ ஸாதாரண வருஷத்தில்‌ சூரியன்‌ துலா ராசியை அடைந்துள்ள போது 26-ம்‌ தினத்தில்‌ வியாழக் கிழமையில்‌ விளங்கா நின்ற மூல நக்ஷத்ரத்தில்‌ சுக்ல பக்ஷ சதுர்த்தி திதியிலே ஸதாசார சீலராய்‌ ரம்ய ஜாமாத்ரு முநி என்னும்‌ !திருநாம முடையராய்‌ யதிபதி புநரவதாராய்‌ மணவாளமாமுனிகள்‌ அவதரித்தார்‌–என்கிறபடியே கலி யுகம்‌ பிறந்து நாலாயிரத்து நானூற்று எழுபத்தொரு வருஷத்துக்குப்‌ பின்பு’ ஸாதாராண வருஷம்‌ ஐப்பசி மாசத்தில்‌ சுக்ல பக்ஷத்தில்‌ சதுர்த்தியும்‌ வியாழக் கிழமையும் கூடின க்ர்ன திருமூலத்திலே (ஆங்கில கணக்கில் 1370)உபயவிபூதியும்‌ கொந்தளிக்கும்‌, குடியை யுடையரான திகழக்கிடந்தான்‌ திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்‌ண அரையருக்கு குமாரராகத்‌ திருவவதரித் தருளினார்‌. அநந்தரம்‌,

யஸ்மிந் ஸ்வ பாத பத்மேந பஸ்பர்ஸ ப்ருதிவீ மிமாம்‌ |
கலிஸ்ச தத் ஷணேநைவ துத்ருவே தூரதஸ்தராம்‌ ॥

எப்போது அவர்‌ தமது திருவடித்‌ தாமரைகளால்‌ இந்த பூமியைத்‌ தொட்டாரோ அப்போதே கலி புருஷனும்‌ வெகு தூரம்‌ ஓடி விட்டான் என்று இவர்‌ கால் காண கலி கால்‌ பறந்தோடிற்று:

இப்படி ஸமஸ்தாத்ம ஸமுஜ்ஜீவந ஜந்மாவாக அவதரித்‌தருளின தம்முடைய குமாரருக்கு அண்ணரும்‌ ஜாத கர்மம்‌ செய்‌தருளி பத்து நாளுங்கடந்த விரண்டாம் நாள்‌ திருவிலச்சினையும்‌ ப்ராஸாதித்து (முன்காலத்‌தில் குழந்தை பிறந்து புண்யாஹவாசநமானவுடன்‌ ‘புஷ்ப ஸமாஸ்ரயணம்‌” என்ற ஸம்ஸ்காரம்‌ பண்ணி வைத்தார்கள்‌. இதில் குழந்தைக்கு ஸுதர்ஸந பாஞ்சஜன்ய இலச்சினைகளை அக்நியால்லாமல்‌ திருமண்‌ ஸ்ரீ சூர்ணங்களால்‌ புஜங்களில் ஓத்துவது அநுஷ்டானம்‌. இத்த ஸம்ஸ்காரம்‌ இன்றும்‌ சில வைஷ்ணவர்களின்‌ ௮நுஷ்டாநத்திலுள்ளது. )
அததஸ்ய குரு: ஸ்ரீமாந் மத்வாதம்‌ திவ்ய தேஜஸம் |
அபிராம வராதீஸ இதி நாம ஸமாதிஸத்‌ ॥

ஸ்ரீமானாய்‌–அந்தக்‌ குமாரரின்‌ தமப்பனாரான அண்ணர்‌ அந்தக்‌ குமாரை, அப்ராக்ருகதா தேஜஸ்ஸை யுடையவராகக்‌ கருதி அவருக்கு அழகிய மணவாளப் பெருமாளென்று திருநாமம்‌ சாத்தினார்‌] என்கிறபடியே-பணமாடரவணைப்‌ பற்ப காலமும்‌ பள்ளி கொள் மணவாளரான அழகிய மணவாளப்‌ பெருமாளுடய திருநாமம் சாத்தி ஆயர் புத்திரனல்லனருந்‌ தெய்வம்‌ என்றும்‌
என்னையுமெங்கள்‌ குடிமுழுதாட்கொண்ட மன்னன்‌ என்றும் சொல்லுகிறபடியே விசேஷ ப்ரதிபத்தியுடனே மாதுல க்ருஹமான சிக்கல்‌ கிடாரத்திலே வர்த்திப்பித்துக்‌ கொண்டு போர, இவரும்‌
பரபக்தி:பரஜ்ஞாநம்‌ பரம பக்திரித்பபி |
வபுஷா வர்த்தமாநேந தத்‌ தஸ்ய வவ்ருதே த்ரயம்‌ ॥

அந்த அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாருடைய வளரும்‌ தேஹத்துடனே பர பக்தி பர ஜ்ஞானம்‌ பரம பக்தி என்னும்‌ படியான மூன்றும்‌ வளர்ச்சி யடைந்தன-என்றும்‌
உன்‌ வளர்த்தி யூடே வளர்கின்றதா லுன் தன்‌ மாயை தானே என்றும் சொல்லுகிற படியே நாடோறும்‌ வர்த்தித்துக்‌ கொண்டு போரா நிற்க தம்முடைய திவ்ய வபுஸ்ஸோடே பரிணதங்களாய்‌ வளருகிற
பர பக்த்யாதிகளை வடிவாக வுடையராய்‌ வளர்ந்து செல்லுகிற காலத்திலே மீளவும்‌ தமப்பரான அண்ணர்‌
ப்ராப்தான் ப்ராதமிகே வர்ணே கல்பஜ்ஞா:கல்பயந்தி யாந் |
காலே காலே ச ஸம்ஸ்காராந்‌ தஸ்ய சக்ரே க்ரமேண ஸ :

கல்பத் ஸூத்ரங்களை யறிந்தவர்கள்‌ முதல்‌ வருணத்தவரான அந்தணர்கட்கு உரித்தாக எந்த ஸம்ஸ்காரங்களை (சடங்குகளை) விதித்தனரோ அந்த ஸம்ஸ்காரங்களை அவர்‌ (அண்ணர்‌) தமது குமாரருக்கு முறைப்படிப்‌ பண்ணினார்‌- ‘என்கிறபடியே செளள உபநயநங்களையும சாஸ்த்ர ப்ரகாரத்தாலே தத் தத் காலத்திலே செய்வித்‌து வேத சாஸ்த்ரங்களையும்‌ அதிகரிப்பித்துக்‌ கொண்டு போரா நிற்க அநந்தரம்‌,
ஆதாம்ரபாத மாஜாநு புஜமம்புஜலோசநம்‌ |
ஆகாரமஸ்ய ஸ்ம்பஸ்பந்‌ முக்தோபி முமுதே ஜந
– என்றும்‌
ஸெளஸீல்யேந ஸுஹ்ருத்வேந காம்பீர்யேண கரீயஸா |
ரஞ்ஜநேந ப்ரஜாநாஞ்ச ராமோ அயமிதி மேநிரே ॥

அறிவில்லாத ஐநங்களும்‌ செந் தாமரை போல்‌ சிவத்த திருவடிகளையும்‌ முழந்தாள்‌ வரையிலும்‌ நீண்டுள்ள திருக் கைகளையும்‌, செந்தாமரையை யொத்த திருக் கண்களையு முடைத்தான இவருடைய திருமேனியை ஸேவித்து மகழ்வெய்தினர்‌-
தாழ்ந்தவர்களுடனும்‌ நன்கு கலந்து பழகுமியல்பாலும்‌ யாவரிடத்துத்‌ ப்ரீதி யுடையரா யிருப்பதாலும்‌ மிகவும்‌ கம்பீரமான ஸ்வபாவத்தாலும்‌, ஜநங்களை மகிழ்விக்கையாலும்‌, இவர்‌ ராமபிரான்‌ என்று எண்ணினார்கள்‌–என்கிறபடியே அகல ஐநங்களையும்‌ ஆநந்திப்‌பித்துக் கொண்டு
காலேந ஸகலா நாம்ச கலாநாமேக மாஸ்பதம்‌ |:
ஸூஸூபே ஸதநம்‌ பூர்ண: ஸுதாம் ஸூரிவ நிர்மல: ॥

பின்னர்‌ எல்லா வித்யைகளுக்கும்‌ சிறந்த கொள்கலமான அழகிய மணவாளப் பெருமாள்‌ களங்க மில்லாத பூர்ண சந்த்ரன்‌ போலே எப்போதும்‌ விளங்கினார்‌ -என்கிற படியே-(மேகோபராக திரோஹிதனாய்‌ க்ருஷ்ணபஷே க்ஷயிஷ்ணுவாய்‌ ஸ களங்கனான தோஷா கரனைப்‌ போலன்றிக்கே அகளங்கித ஸதா ஸம்பூர்ண கலாயுத ராகா சந்த்ரனைப் போலே ஷோடஸ வார்‌ஷிகரானவாறே ஷோடஸ ஸம்ஸ்கார ஸம்ஸ்க்ருதராய்‌ கலா பூர்த்தியால்‌ வந்த பரபூர்ண ஜ்ஞாநமுடையராய்‌ அத்தால்‌ அத்யந்தம்‌ ப்ரகாஸகராய்‌ போரா நிற்க ) பால சந்த்ரனாவன்‌ நாடோறும்‌ கலைகளாலே வர்த்தித்துக் கொண்டு பூர்ணனாய்‌ விளங்குமா போலே இவரும்‌ ஸகல கலா பூர்த்தியால்‌ வத்த பரி பூர்ண ஜ்ஞாதத்தாலே நிரதிஸய வைபவத்தை யுடையரா யெழுந்தருளி யிருந்தார்‌.

(1286-1406 திருவாய் மொழிப்பிள்ளை
1323-1371-நம்பெருமாள் விஜயம் -15 ஆண்டுகள் திருநாராயண புரம் -23 ஆண்டுகள் திருமலையில் –
வீரபாண்டியன் கலியுக ராமன் -சித்திரை வீதிக்கு முன் பெயர் –
இவன் தம்பி -சுந்தர பாண்டியன் -கைங்கர்யம் நிறைய பண்ணி யுள்ளான் -பராக்கிரம பாண்டியன் இவன் பிள்ளை -இவர் மந்திரி திருவாய் மொழிப் பிள்ளை –
1371-சாதாரண வர்ஷம் ஐப்பசி மூலம் மா முனிகள் திருவவதாரம்)

இனி கோயில்‌ வருத்தாந்த்தம்‌
அக் காலத்தில்‌ அங்கிருந்த மஹாத்மாக்கள்‌ நாடோறும்‌ பூர்வம்‌ போலே ஸ்ரீமந்‌ ஸ்ரீரங்க ச்ரிய மநுபத்ரவா மநுதிநம்‌ ஸம்வர்‌த்தய*” என்று ஸ்ரீரங்க ஐஸ்ர்வர்யம்‌ நித்யமாய்‌ நிர்வதிகமாய்‌ நிர் விக்நமாய்ச்‌ செல்ல வேணுமென்று –
திருப்பல்லாண்டும்‌,
ஏழை யேதலனும்‌,
ஆழி யெழச் சங்கும்‌ அநுஸந்தித்துப்‌ பெருமாளை ப்ரபத்தி பண்ணிப்‌ போருகையாலே
, அந்த மங்களாஸாஸநம்‌ பலித்து செஞ்சியில்‌ கோபணார்யனென்பானொரு வைஷ்ணவ ப்ரபு திருப்பதிக்குச்‌ சென்று திருவேங்கடத் தெம்பெருமானைத்‌ திருவடி தொழுது மீண்டு வருகிறவன்‌ அங்கே நம்பெருமாளை ஸேவித்து திருப்பதி யினின்றும்‌ நம்பெருமாளைத்‌ தன்னுடைய நகரமான செஞ்சி யேற எழுந்தருளுவித்துக் கொண்டு வந்து சிங்கராயபுரத்‌திலே யெழுந்தருளப் பண்ணிக்‌ கொண்டிருந்து பக்தி புரஸ்ஸரமாக ஆராதித்துக் கொண்டிருக்க, திருமணத்தூண்‌ நம்பியாகிய சிங்கப்‌ பிரானும்‌ காட்டிக்‌ கொடுக்க, பகவத் விட்டுக்களான துருஷ்கரை யடக்க ஸமயம்‌ பார்த்து, நிரவதிக பல ஸஹிதராய்ச்‌ செஞ்சியார்‌ சென்று நிஸ்ஸேஷமாக நிரஸித்து ஸ்வ நகரத்தினின்றும்‌ திரு வரங்கன் திருப்பதி யேற நம்பெருமாளைப்‌ பிராட்டிமாருடனே எழுத்தருளப் பண்‌ணி வைத்துக் கொண்டு யதாஸ்தாநத்தில்‌ பெரிய பெருமாளுடனே சேர்த்து ப்ரதிஷ்டிப்பித்து அனைத்தழகும்‌ கண்டருளப் பண்ணினானிறே –

ஆநீயா நீல ச்ருங்கத் யுதிரசித ஐகத் ரஞ்ஜநா தஞ்ஜநாத்ரேஸ்‌ செஞ்ஜ்யா
யாராத்ய கஞ்சித்‌ ஸமயமத நிஹத் யோத் தநுஷ்காந்‌ துருஷ்காந்‌ |
லக்ஷ்மீ க்ஷமாப்யா முபாப்யாம்‌ ஸஹ நிஜ நிலயே அஸ்தாபயத்‌ ரங்கநாதம்‌
ஸம்யக் சர்யாம்‌ ஸபர்யா மக்ருத நிஜயஸோ தர்பணோ கோபர்ணார்ய: ॥

தனது, கண்ணாடி போல்‌ பளபளக்கின்ற புகழை யுடைய கோபணார்யனென்பவன்‌, முழுவதும்‌ கறுத்த கொடி முடியின்‌ காந்தியினால்‌ உலகுக்கு மகழ்ச்சியை யூட்டுகின்ற அஞ்ஜநாசல மென்னும்‌ திருவேங்கட்மலையிலிருந்து எழுந்தருளி வித்துக் கொண்டு வந்து, செஞ்சியில்‌ சில நாட்கள்‌ ஆராதித்து பின்பு வில்லேந்தித்‌ சண்டை யிட வந்த துருஷ்கர்களைக்‌ கொன்று, ஸ்ரீதேவி பூதேவிகளோடு கூட ரங்க நாதனை அவர்‌ தமது ஸ்தானமாகிய திருவரங்கத்தில்‌ ஸ்தாபித்தான்‌. திருவாராதனத்தையும்‌ மிகவும்‌ ஒழுங்குடையதாக நடத்தினான்‌ -என்று இவ்வார்த்தை அபியுக்தருமருளிச் செய்தாரிறே,

கொங்குங்‌ குடந்தையுங்‌ கோட்டியூரும்‌ பேரும்‌ எங்குந்திரித்து விளையாடும்‌ என்கிறபடியே மயல்மிகுபொழில்சூழ்‌ மாலிருஞ்‌சோலையிலும்‌ -விரையார்‌ பொழில்‌ வேங்கடத்திலும்‌ விஹரித்து!
ப்ரதிபக்ஷ நிரஸந பூர்வகமாக கோயிற்பிள்ளாய்‌! இங்கே போதராயே என்னும்‌ படியான தாம்‌ மீண்டு கோயில் ஏற வெழுந்தருளி , பஹு ப்ரியமான சகாப்தம்‌(சகாப்தம்‌ 1293 பரீதாபி வைகாசி என்று கோயிலோழுகு,) ஆயிரத்திருநூறு சென்ற வர்த்தமான பரீதாபி ஸம்வத்ஸரம்‌ வைகாசி மாஸம்‌ பதினேழாந்தேதியில் அரங்க நகரானது -ராமஸ் ஸீதா மநுப்ராப்ய ராஜ்யம்‌ புநரவாப்‌தவாந்‌’–இராமபிரான்‌ ஸீதையைப் பெற்றுத் திரும்பி மறுபடியும்‌ ராஜ்யத்தை அடைந்தான்‌-என்றும்‌, திருமகளோடினிதமர்ந்த செல்வன்‌ என்றும்‌, வீற்றிருந்த மணவாளர்‌ மன்னு கோயில்‌ என்றும்‌ சொல்லுகிறபடியே அழகிய மணவாளரான தாம்‌ நாய்ச்சிமாருடனே கூடி சேர பாண்டியன்‌ என்கிற திவ்ய ஸிம்ஹாஸநத்திலே சேர்த்தியுடனே யேறி யருளி இனிதுடன்‌ வீற்றிருத்து-செங்கோலுடைய திருவரங்கச்‌ செல்வனார்‌ என்னுமது தோன்ற திருவாரதனங் கண்டருளி வாழ்ந்தருளா நிற்க:

(முதலான சடைய வர்மன் -பாண்டியன் கொண்டை சமர்ப்பித்தவன் ஸ்ரீ ரெங்கவிமானத்துக்கு பொன் வேய்ந்தவன்-பூ பல ராயன் சிங்காசனனம் பெயர் கர்ப்பக்ருஹ -உள்ளே இருக்கும் -சேர பாண்டியன் சிங்காசனனம் -மூன்றாம் குலோத்துங்கன் -வெளியில் திருமஞ்சனம் இதில் தான் செய்து அருளுவார் -)

அச்செய்தியை தேசாந்தரஸ்தரான ஸ்ரீவைஷ்ணவர்களெல்‌லாரும்‌ கேட்டு,
பஹுநிநாம வர்ஷாணி கதஸ்ய ஸூ மஹத்வரநம்‌ 1
ஸ்ருணோம்யஹம ப்ரீதிககும்‌ மமநாதஸ்ய கீர்த்தநம்‌ ॥

பலவாண்டுகள்‌ மிகப் பெரிய கானகத்தை யடைத்த நம்பெருமாளுடையதாய்‌ மகிழ்ச்சியை உண்டாக்குகிற (திரும்பி யெழிந்தருளினாரென்னும்‌) நல் வார்த்தையைக்‌ கேட்கப் பெற்தேன்‌-என்கிறபடியே நெடுங்காலத்திற்காக இப்போது பெருமாள் எழுந்தருளப் பெற்றதே! என்று போர ப்ரீதராய்‌ அப்போதே யாவரும் வந்தடி வணங்கி, ‘*ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக; -மக்கள்‌ மிகவும்‌ களிப்படைந்தனர்‌- என்றபடியே அத்யந்தம்‌ ஹ்ருஷ்டாரயிருக்க பெருமாளும்‌ ‘விஜ்வர: ப்ரமுமோதஹ”-ஜ்வரம்‌-கவலை- நீங்கியவராய்‌ மிகவும்‌ மகழ்வெய்தினார்‌- என்கிறபடியே துளக்கற்றமுதமாய்‌ எங்கும்‌ பக்க நோக்கறியாதே -ஸர்வரையுங்‌ குளிரக் கடாஷித்துக்‌ கொண்டு அன்பொடு தென் திசை நோக்கி அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாரைக்‌ கடாக்ஷித்துக் கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌.

அழகிய மணாவாளப் பெருமாள்‌ திருமலை யாழ்வாரை ஆஸ்ரயித்தல்‌
அக் காலத்தில்‌ திகழக் கிடந்தான்‌ திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்ணர்‌ தம்முடைய திருக் குமாரராக வளர்ந்தருளுகிற பரம போகீந்த்ரரான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாருக்குத்‌ திருக் கல்யாணமுஞ்‌ செய்வித்து, பின்பு அருளிச் செயல்களையும்‌ ரஹஸ்யங்களையும்‌ தாமே யோதுவித்தருளினார்‌. அவரும்‌ அந்த உபகாரத்துக் கீடுபட்டு
ஸ்ரீ ஜிஹ்வாவ ததீஸ தாஸ மமல மஸேஷ ஸாஸ்த்ர விதம்‌ |
ஸுந்தர வர குரு கருணாகந்‌ தனிது ஜ்ஞாந மந்திரம் ச லேய ॥-ஸ்ரீஜிஹ்வார்க்யாதீஸம்‌ என்றும்‌ பாடமுண்டு-

கோட்டூரழகிய மணவாளப் பெருமாள்‌ பிள்ளையினருளால்‌ விருத்தி யடைந்த ஜ்ஞாநத்திக் கிருப்பிடமாய்‌, எல்லா சாஸ்த்ரங்களையும்‌ குறை யறக்‌ கற்றறிந்தவரான திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்‌ணரை த்யானிக்கிறேன்‌ -என்றும்‌
வாழி திருநாவீறுடைய பிரான்‌ தாதனருள்‌
வாழியவன்‌ மாமை வாக்கின்பம்‌–வாழியவன்‌
வீரன்‌ மணவாளன்‌ விரை மலர்ததாள்‌ சூடி.
பாரமதைத்‌ தீர்த்தளித்த பண்பு
‘-என்று அநுஸந்தித்தருளினாரிறே.

பின்பு சிலகாலம் சென்‌றவாறே அண்ணரும்‌ திருநாட்டுக்கெழுந்தருள, அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ அவரை ஸம்ஸ்கரித்துப்‌ பள்ளிப் படுத்தி திருவத்யயநமும்‌ பெருக்க நடத்தி யருளினார்‌
அநத்தரம்‌ ஆழ்வார்‌ திருதகரியிலே தர்‌சந ப்ரவர்த்தகரா யெழுத்தருளி யிருக்கிற திருமலையாழ்வாரும்‌, “இனி தர்சநப்‌ ப்ரவர்த்தகராவாரார்‌?” என்று விசாரித்துக் கொண்டு-தொண்டர்க்கமுதுண்ணச்‌ சொன்‌ மாலைகளான திருவாய்‌ மொழி, நிலத் தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும்‌, பக்தாம்ருதம் என்னும்படி பரம போக்யமாக வவதரித்ததாகையாலே சப்த ரஸம்‌, அர்த்த ரஸம்‌, பாவ ரஸம்‌, என்கிற விவற்றை அநவரதம்‌ அநுஸந்தித்துக் கொண்டு ததேக் நிஷ்டராய்‌ தத் வ்யதிரிக்த சாஸ்த்‌ரங்களை த்ருணவத் ப்ரதிபத்தி பண்ணி யிருக்கையாலே திருவாய்‌ மொழிப் பிள்ளை என்று திருவாய்மொழி ஸம்பந்தத்தையே தமக்கு நிரூபகமாக வுடையராரய்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே கைங்கர்யமே அநவரதமுஞ் செய்து கொண்டு போரா நிற்கிற திருவாய்மொழிப்‌ பிள்ளையினுடைய திவ்ய கடாக்ஷத்திற்கு விஷயமாமபடி அழகிய மணவாளப்பெருமாள்‌ நாயனாரும்‌ திருவநந்தாழ்வான்‌ சகந் தன்னைத்‌ திருத்த மருவிய குருகூர்‌ வளநகர்‌ வந்து-என்‌கிற படியே ஸ்வ மாதுல க்ருஹமான சிக்கில் கடாரத்திலிருந்து தமக்கு ஜந்ம பூமியான திருநகரி யேற வெழுந்தருளி பொருநற் சங்கணித்‌ துறையிலே சங்கங்கள்‌ சேறுமா போலே சங்க வண்ண நம்பி யுடைய அவதாரமாகையாலே சுத்த ஸ்வபபாவரான தாமும்‌ திருவாய்‌ மொழிப் பிள்ளை திருத்‌ தாள்‌ சேர்ந்து என்கிறபடியே மெய்ஞ்ஞானத்‌ துறையான பிள்ளை திருவடிகளிலே ஆச்ரயித்து ”அஸிஸரிய தயம்‌ பூய: ஸ்ரீ ஸைலாதீஸ தேஸிகம்‌” -இந்த அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ திருமலை யாழ்வாரென்னும்‌ ஆசார்யரை ஆஸ்ரயித்தார்‌-என்கிறபடியே தேசந் திகழுந்‌ திருவாய்மொழிப் பிள்ளை வாச மலர்த்தாளடைந்து வைத்து என்னும்படி விலஷாண ஸம்பந்த யுக்தராய்‌;
ததஸ்‌ ஸ்ருதிதரஸ் ஸோயம்‌ தஸ்மாத் தஸ்ய ப்ரஸாதத: |
அஸேஷாந ஸ்ருணோத் திவ்யாந்‌ ப்ரபந்தாந்‌ பந்தநச்சித: ॥

பின்னர்‌ ஸாங்க வேதாத்யயநம்‌ பண்ணிய இவ் வழகிய மணவாளப்‌ பெருமாள்‌ திருமலை யாழ்வாருடைய அருளால்‌ அவரிடமிகுத்து ஸம்ஸார பந்தத்தை யறுப்பதான எல்லா வருளிச் செயல்‌களின்‌ தாத்பர்யங்களையும்‌ கேட்டறிந்தார்‌-என்கிறபடியே த்ராவிட வேத ததங்கோபாங்கங்களான ஸமஸ்த திவ்ய ப்ரபந்த தாத்பர்யங்களையும்‌ அவருபதேச முகத்தாலே.லபித்து மிக்க வேதியர்‌ வேதத்‌த்தின் உட்ப் பொருளான சரம பர்‌வத்திலே நிஷ்ட்டராய்‌- ஸேஷித்வ ஸரண்யத்வ ப்ராப்யத்வங்கள்‌ மூன்றையும்‌ பிள்ளை விஷயத்திலே அநுஸந்தித்து, (அன்னையுமத்தனு மாசாரியனு மனைத்துறவும்‌, மன்னிய பேறுமுபாயமும்‌ தெய்வமும்‌ மற்றுமெல்லாம்‌, என்னை யளித்த திருவாய்மொழிப்‌ பிள்ளையென்று நெஞ்சே! உன்னி யிராது மற்றோன்‌றில்‌ புல ஓதுவதே’ என்றும்‌, விண்ணும்‌ திருமலையாழ்‌ வாழ்வார் வடிவு விரை புடை சூழ்‌, மண்ணும்‌ திருமலை யாழ்லார்‌ வடிவு மற்றொங்கும்‌, கண்ணும்‌ திருமலை யாழ்வார்‌ வடிவன்றித்‌ காண்டகிறிலேன்‌, என்றும்‌ திருலையாழ்வார்‌ வடிவெங்கும்‌ யாவர்க்குமே–என்றும்‌. )ததேக நிஷ்டரா யெழுந்தருளி யிருக்கிற இவரை:

நாயனாரை திருவாய்மொழிப் பிள்ளை உடையவர் திருவடிகளில் ஈடுபடுத்தல்‌
பிள்ளை தாமே உகந்து உடையவர்‌ திருவடிகளைக்‌ காட்டிக்‌ கொடுத்தருள உன் பதயுகமேர் கொண்ட வீட்டை எளிதினிலெய்துவன்‌ என்கிறபடியே பரம புருஷார்த்தத்தை ஸுலபமாக லபித்து அத்யந்த ஹ்ருஷ்டராய்‌ எழுந்தருளி இருக்க, அவ்வளவில்‌ பிள்ளையும்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ராவண்யாதிசயத்தாலே அவரடி பணிந்துய்ந்த எம்‌பெருமானார்‌ திருவடிகளிலும்‌ அதி ப்ராவண்யத்தை யுடையவாராய்ப்‌ போருகையாலே ராமாநுஜ பதாம் போஜ த்வந்த்வ கைங்கர்யத்திலே அந்வயிக்க வேணுமென்று திருவுள்ளமாய்‌ அப்படியே தத் கைங்கர்யத்திலே அந்வயித்து
அவகாஹித்து அதுவே தமக்கு தாரகாதிகளாகச்‌ செய்து கொண்டு போருகிறவர்‌, உடையருக்குத்‌ தனிக் கோயில்‌ தொடக்கமான அனைத்தழகுங் கண்டருளப்‌ பண்ணி, கோயிலை வளைய ராமாதுஜ சதுர்வேத மங்கலம்‌.என்கிற திரு வீதியையும்‌ உண்டாக்கி, அங்கே ராமாநுசனைத் தொழும்‌ பெரியோரையும்‌ ப்ரதிஷ்டிப்பித்து, தாமும்‌ ஸூக ப்ரதிஷ்டிதராய்‌ எழுந்தருளி யிருந்தார்‌.
நாயனார் யதீராஜ விம்சதீ விண்ணப்பம் செய்தல்‌
அநந்தரம்‌ நாயனாரும்‌ தமக்குப்‌ பிள்ளை ப்ராப்யமாகக்‌ காட்டி யருளின உடையவர்‌ திருவடிகளிலே யதீந்த்ர ப்ரவணர்‌ என்னும்படி அத்யந்தம்‌ ப்ராவண்யத்தை யுடையராய்‌ தம்முடைய ப்ரேமாநுகுணமாக யதிராஜ விம்சதியை அவ்வெம்பெருமனார்‌ விஷயமாக அருளிச்‌ செய்ய, அந்த உபகாரத்திற்கு
வல்லார்கள்‌ வாழ்த்துங் குருகேசர்‌ தம்மை மனத்து வைத்துச்‌
சொல்லார வாழ்த்தும்‌ மணவாள மா முனி தொண்டர்‌ குழாம்‌
எல்லாந் தழைக்க எதிராச விம்சதி யின்றளித்தோன்‌
புல்லாரவிந்தத்‌ திருத்தாளிரண்டையும்‌ போற்று நெஞ்சே
-என்று பின்புள்ளாரும் அநுஸந்தித்து ஈடுபடும்படியாயிற்று,

இவருடைய விண்ணப்பமான விம்சதியைப்‌ பிள்ளையுங் கேட்டு உகந்தருளித்‌ திருப்புளி யாழ்வாரடியிலே தாம்‌ கண்ட(கண்டெடுத்த) தம் முடையவரையும்‌ (இந்த ஸன்னிதியில்‌ ப்ரதிஷ்டிப்பிதுள்ள உடையவர்‌ திருமேனி(உத்ஸவர்‌) பற்றி பெரியோர்‌ வாய் வழி வரும்‌ வரலாறு: மதுரகவிகள்‌ ஆழ்வாரின்‌ ஸ்வப்ந முக நியமனப்படி ஆழ்வார்‌ திருமேனி எழுந்தருளப்‌ பண்ணுவதாக தாம்ரபரணி நீரைக்‌ காய்ச்ச-முதலில்‌ உடையவர்‌ திருமேனி ஆவிர்ப்பவித்தாகவும்‌, மதுரகவிகள்‌
மாநஸிகமாய்‌ “இது உமது திருமேனி யல்லவே” என்று ஆழ்வாரை வேண்ட, ஆழ்வாரும்‌ இது *பொலிக பொலிக திருவாய்‌ மொழிக்கு விஷயமான பவிஷ்யதாசார்ய விக்ரஹம்‌; கலியுங்‌ கெடும்‌ கண்டு கொண்மின்‌ என்னும்படி இவர்‌ அவதரிக்கப்‌ போகிறார்‌. இவரை ஆராதியம்‌. மீண்டும்‌ தாம்ரபரணி நீரைக்‌ காய்ச்சும்‌; நாம்‌ அர்ச்சையாக ஆவிர்ப்பவிக்கிறோம்‌” என்று நியமிக்க, மதுரகவிகளும்‌ அப்படியே செய்ய, இன்றும்‌ உபதேச முத்ரையுடன்‌ ஸேவை தரும்‌ ஆழ்வார்‌ திருமேனி ஆவிர்ப்பாவித்தாகவும்‌
சொல்வர்‌. ஆழ்வார்‌ திருமேனிக்கும்‌ முன்னரே ஆவிர்ப்பவித்த உடையவர்‌ திருமேனியே இன்றும்‌ ஆழ்வார்‌ திருநகரி உடையவர்‌ ஸன்னிதியில்‌ ஸேவிப்பது என்று பெரியோர்‌ பணிக்கும்படி. )
இவர்க்கு ‘ப்ரஸாதித்தருளி இவரும்‌ ‘ஸ்ரீமந்யதீத்த்ர! தவ திவ்ய பாதாப்ஜ ஸேவாம்‌ ஸ்ரீஸைல நாத கருணா பரிணாமதத்தாம்‌” (யதிராஜ விம்சதி -19) என்று அநுஸந்தித்து ப்ரிதராய்‌, ‘ யதீந்தர்மேவ நீரந்த்ரம்‌ நிஷேவேதைவதம்பரம்‌--எம்பெருமானாரையே பரதெய்வமாக அத்யவஸித்து நித்யமாய்‌ கைங்கர்யம்‌ பண்ணிக்‌ கொண்டிருந்தார்‌–என்கிறபடியே அவருக்கு உகப்பாக ததாராதன பரராய்‌ ததேக நிஷ்டரா யெழுந்தருளி யிருக்க, இப்படி ஆழ்வாருடையவும்‌ எம்பெருமானாருடையவும்‌ கைங்கர்யமே புருஷார்த்தமாக வெழுந்தருளி யிருக்கிற பிள்ளையும்‌ அப்போதைக்கப்‌போது அபிநவங்‌களாய்‌ வர்த்தித்துக் கொண்டு போகிற இவருடைய ஜ்ஞான பக்த்யாதிகளைக்‌ கண்டு (ஜ்ஞான பக்தி வைராக்யங்கள்‌ இட்டு மாறினாப்‌ போலே வடிவிலே தொடை கொள்ளலாம்படியான இவருடைய பரமாஸ் திகத்வத்தைக்‌ கண்டு-)அபிமத விஷயத்தைக்‌ கண்டாற்‌ போலே ஆதரித்துப்‌ போரா நிற்க;

பின்பொருநாள்‌ தமது திரு நந்த்த வனத்தில்‌ விளைகிற பச்சைக் கறியமுதை இவர்க்குப்‌ போக விட்டருள, இவரும்‌ “இப்படிச்‌ செய்‌தருளுவதே?’” என்று விண்ணப்பஞ்‌ செய்ய, பிள்ளையும்‌ உம்மைப் போலே வொரு விஷயத்தைப்‌ பெறாமையாலே அர்ச்சாவதாராத்திலே மண்டினோம்‌*’ என்று அருளிச்‌ செய்து தாமும்‌ விரக்தராய் விருக்கச்‌ செய்தேயும்‌ இவருடைய ளெளகுமார்யத்துக் கநுகுண மாக அமுது செய்தருளுகை தொடக்கமான எல்லா உபுசாரங்களையு மாராய்ந்து கொண்டு போருகிறபடியையும்‌, அங்கீ கரித்த வன்று தொடங்கி பங்க்தி பாவநராம்படி அபிமானித்து ஆதரித்துக்‌ கொண்டு போருகிற படியையுங்‌ கண்டு ஸ்ரீ பாதத்து முதலிகளுக்கு இவரிடத்தலே அஸுயை நடந்து செல்ல, இத்தை ஸர்வஜ்ஞரான பிள்ளை அறிந்தருளி அவர்கள்‌ அபசாரப்படாதபடி இவருடைய சேஷாஹிபதி வேஷாந்தரத்தை எல்லோரும்‌ ப்ரத்யஷீ கரிக்கும் படி வாக் சாதுர்யங்களாலே காட்டி யருளி, அவர்களுக்கும்‌ இவரிடத்‌திலே விசேஷ ப்ரதி பத்தியை விளைவித்துப்‌ போரா நிற்க, இவரும்‌ பிள்ளை திருவுள்ளத்தை உகப்பித்துக்‌ கொண்டு அங்குத்தைக்கு விதேயரா யிருக்கிற காலத்திலே ஈடு முப்பத்தாறாயிரம்‌ பாட மிட்டருளி மற்று முண்டான வ்யாக்யானங்களையும்‌ பாட ப்ராயமாகப்‌ பண்ணி யிருக்கிற காலத்திலே நாயனாருக்கு திருக் குமாரர்‌ ‘திருவவதரிக்க, “’திருநாமமேது?” என்று பிள்ளையைக்‌ கேட்டருள, “ஒருக்கால்‌ சொன்னாற் போலே தூற்றெட்டு தரம்‌ சொல்லி யிருக்கிறதே!’” என்றருளிச்‌ செய்ய, எம்யைனிராமானுசன்‌ என்று : திரு நாமம்‌ சாத்‌தி யருளித்‌ தாமும்‌ *இராமானுசன்‌ திருநாமம்‌ நம்ப வல்லராய்‌ வாழ்ந்து கொண்டு போரா நிற்க; ஒரு நாள்‌ ஒரு திருவாதிரை நக்ஷத்ரத்திலே பிள்ளையும்‌ முதலிகளும்‌ அமுது செய்தருளா நிற்க,

இன்றோ வெதிராசரிவ்வுலகில்‌ தோன்றிய நாள்‌
இன்றோ கலி யிருள்‌ நீங்கு நாள்‌-
-என்று பிள்ளை ஈடுபட்டருளி மேல்‌ அருளிச்‌ செய்ய மாட்டரமல்‌ இத்தையே பலகாலுமருளிச்‌ செய்து கொண்டிருக்க
இன்றோ தான்‌ வேதியர்கள்‌ வாழ, விரை மகிழோன்‌ தான்‌ வாழ
வாதியர்கள்‌ வாழ்வடங்குநாள்‌–
என்று நாயனார்‌ தலைக்கட்டி யருள, இதைக் கேட்ட பிள்ளை மிகவும்‌ ப்ரீதராய்‌ அமுது செய்யா நிற்க மத்யே தளிகைப்‌ ப்ரஸாதம்‌ பரஸாதித்து பிகவும்‌ க்ருபை பண்ணி யருளினார்‌. இப்படி சிஷ்யாசார்ய க்ரமம்‌ நன்றாக நடந்து செல்லுகிற காலத்திலே ஸ்ரீபராங்குச தாஸரான்‌ பெரிய நம்பியை ஆஸ்ரயித்த ஏற்றம்‌ எம்பெருமானார்க்கு உண்டானாற் போல சடகோப தாஸரான பிள்ளையை யாஸ்ரயித்த வேற்றம்‌ இவர்க்குண்டாயிற்றென்று எல்லாரு மிவரை உடையவருடைய அவதார விசேஷமென்று ஆதரித்துக் கொண்டு போந்தார்‌கள்‌.

இப்படி அவதார விசேஷமான இவர்‌
வடமாமலை முதல்‌ மல்லனந்தபுரி யெல்லை மல்கித்‌
திடமாக வாழுந் திருவுடைய மன்னிரில்‌ தேசுடையோன்‌
திடமான ஞான விரக்தி பரமிவை சேர நின்ற
சடகோப தாதர்‌ குருகூர் வாழ்‌ பிள்ளையைச்‌ சேரு நெஞ்சே
-என்றும்‌
நம ஸ்ரீஸைல நாதாய குந்‌தீ நகரா ஜத்மநே !,ப்ரஸாத லப்த பரம
ப்ராப்ய கைங்கர்யய ஸாலிநே ॥
என்றும் -குந்தி புரத்தில்‌ திருவவதரித்தருளி ஆழ்வாரருளால் பெறப்பட்ட நிரதிசய ப்ராப்பமான கைங்கர்யத்தினால்‌ விளங்கும் திருவாய் மொழிப் பிள்ளயை வணங்குகிறேன்‌ —
செந்தமிழ்‌ வேதத் திருமலை யாழ்வார்‌ வாழி
குந்தி நகர்க்‌ கண்ணல்‌ கொடை வாழி—உந்திய சீர்‌
வாழியவனமுத வாய்‌ மொழி கேட்டப் பொருளில்‌
தாழுமற்றன்பர்‌ திருத்தாள்‌-
-என்றும் இத்தனியன்களை பிள்ளை விஷயத்தில்‌ தாமுமநுஸத்தித்‌தருளினார்‌. அநந்தரம்‌ உகப்புடனே இங்கிருக்கும்‌ காலத்திலே பிள்ளை
அப்யர்ச்ய நந்ததநயம்‌ கரபங்கஜாத்த வேணும்‌ ததீய சரண
ப்ரவணார்த்ரசேதா: |
கோதாபிதுர் கஹந ஸூக்தி நிபந்தநஸ்ய வ்யாக்யாம் வயதாத்‌
த்ரவிட வேத குரு: ப்ரஸந்நாம்‌-என்றும்‌ ॥

செந்தாமரைக் கைகளாலே தரிக்கப்பட்ட புல்லாங்குழலை யுடைய இன வாயர்‌ தலைவனை நன்றாக வாராதித்து, ‘ அக் கண்ணன்‌ கழலிணையில்‌ ப்ரேமத்துடன்‌ ஆழ்ந்த மனத்தை யுடைய திருவாய்‌
மொழிப் பிள்ளை பெரியாழ்வா ருடைய கம்‌பீரமான பாசுரங்களுக்குத்‌ தெளிவான வியாக்கியானத்தை அருளிச்‌ செய்தார்‌

அநந்தன்‌ திருமலை யாழ்வாரென வந்த வதரித்து
தனம் தன்கைப்படிற்றானம்‌ செய்வனென்று தரணி தனில்‌.
அநந்தம்‌ புரிய சடகோபனருட்‌ காட்செய்வது
இனந் தனிலொக்கு மென்று எல்லோரும்‌ பாவித்திருப்பதுவே
-என்றும்‌ பிள்ளையுடைய வைபவத்தை மற்றுமுண்டானவர்களும்‌ அநுஸந்தித்தார்கள்‌.

அழகிய மாணவாள எம் பெருமாளுக்குப்‌ பிள்ளை சரம நியமனம்‌.
இப்படி ஜ்ஞான பக்தி வைராக்யங்களை வடிவாக வுடையராய்‌, அத்தாலே வந்த மஹா ப்ரபாவத்தை யுடையரான பிள்ளை கைங்கர்யஸ்ரீயோடே நெடுங்காலம்‌ வாழ்ந்தருளி, பின்பு நித்ய விபூதியிலே
நித்ய கைங்கர்யாதராய்‌ வாழ்க்கையில்‌ நினைவாய்‌,
உத்தமனே! உலகாரியனே! மற்றொப்பாரை யில்லா
வித்தகனே ! நல்ல வேதியனே ! தண் முடும்பை மன்னா!
சுத்த நன்ஞானியர்‌ நற்றுணையே! சுத்த ஸத்துவனே!
எத்தனை காலமிருந் துழல்வேன்‌ இவ்வுடம்பு கொண்டே-
-என்று
அதற்கு ப்ரதி பந்தகம்‌ திருமேனி யோட்டை ஸம்பந்தமென்று அறுதி யிட்டு தத் விமோசனத்தையும்‌ தம்‌ தேசிகரிடத்திலே யபேக்ஷித்துக் கொண்டே யிருக்க, ௮வ்‌ வளவிலே திருமேனியிலே நோவு சாத்தி மிகவும் தளர்ந்து கண் வளர்ந்தருளுகிறவர்‌ பெரிய கிலேசத்துடனே முசித்து எழுந்தருளியிருக்க, “இது என்‌?” என்று நாயனார்‌ தொடக்கமான முதலிகள்‌ கேட்டருள, காலம்‌ கலிகால மாகையாலே ஆழ்வார்கள்‌ திவ்ய ஸூக்தகளான அருளிச் செயலிலே ருசி விஸ்வாஸங்களை யுடையராய்‌ இத்தை வளர்த்துப் போருவார்‌ ஆர்‌? என்று மிகவும்‌ க்லேசமா யிரா நின்றது” என்ன, பின்பு நாயனாரும்‌ திருவடியிலே ஸேவித்து அடியேன்‌ அப்படியே செய்‌கிறேன்‌’? என்ன, ”கேவலம்‌ வார்த்தை போராது” என்ன
நாயனாரும்‌ திருவடிகளைத் தொட்டு சபத பூர்வகமாக அப்படியே செய்கிறேன்‌” என்றருளிச் செய்ய, பின்பு திருவுள்ளம்‌ தேறி,நாயனாரை யழைத்தருளி, ஸம்ஸ்க்ருத சாஸ்த்ரங்களிலே பல காலும்‌ கண் வையாமல்‌ ஸ்ரீபாஷ்யத்தை ஒருக்கால்‌ கேட்டு தமக்கும்‌ எம்பெருமானாருக்கும்‌ ப்ரியமாகத்‌ திருவாய்மொழி முதலான அருளிச் செயலிலே அநவரதம்‌ பரிசீலனை பண்ணிக் கொண்டு பூர்வர்களைப் போலே பெருமாளுக்கு மங்களா சாசன பரராய்க்‌ கொண்டு கோயிலிலே நித்ய வாஸமாக எழுந்தருளியிரும்‌”‘ என்று நியமித்தருளி மற்று முண்டானவர்களை யழைத்தருளி நாயனார்‌ திருக்கையிலே காட்டிக் கொடுத்தருளி இவரை அவதார விசேஷமென்று ஆதரித்துப் போருங்கோள்‌” என்று அருளிச் செய்து ந்யஸ்த பரராய்‌ பின்பு மாக வைகுந்தம்‌ காண்பதற்கு என் மனமேக மெண்ணும்‌ என்கிறபடியே அதிலே அபிவ்ருத்த மநோ ரதராய்‌ பிள்ளை லோகாசாசியர்‌ திருவடிகளைத் த்யானித்துக்‌ கொண்டு வைசாக பஹுள அஷ்டமியில்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌.(ஊூனொழிந்தால்‌ நானிருந்ந உயர்திவத்து வாரும்‌ என்ற ஸ்வாசாரியரான பின்னைலோகாசாரியர்‌-)

திருவாய் மொழிப் பிள்ளையின் தன்னேற்றம்
அநந்தரம்‌ நாயனார்‌ தொடக்கமான முதலிகளெல்லாரும்‌ ஆசார்ய வியோகா அஸஹிஷ்ணுக்களாய்‌ அத்யந்தம்‌ ஆர்த்தராய்‌ க்லேசித்துத்தேறி ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரத்தாலே பள்ளிப்படுத்து தீர்த்தம்‌ கொண்டாடி பதிமூன்றாந்‌ திவஸத்திலே திருவத்யயனமும்‌ நன்றாக நடத்தி யருளினார்கள்‌ -நாயனாரும்‌ ப்ரதிவருஷம்‌ வைகாசி மாஸத்தில்‌ அபர பக்ஷத்தில்‌ அஷ்டமி தோறும்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களை நன்றாக அமுது செய்யப்‌ பண்ணி யருளி “’முப்பழமுமுண்டாகப்‌ பெறுவதே தீர்த்த திவஸம்‌!!’ என்று பரிபாலித்துக்‌ கொண்டு (ஆசார்ய நியமனத்தில் படியே திருவாய்மொழி முதலானஅருளிச் செயல்களை வயாக்யானத்துடன்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டு-) எழுந்தருளி யிருந்தார்
பெண்களும்‌ பேதைகளும்‌ உஜ்ஜீவிக்கும்படி பரமார்த்த விசேஷங்களை ஸுக்ரஹமாகப்‌ பண்ணப் பெற்ற தன்னேற்றமும்‌ பிரிவில்‌ தரியாமையை முன்னிட்டு பின்‌ தொடரந்தடிமை செய்யப்‌ பெற்ற தன்னேற்றமும்‌, பிள்ளை லோகாசாரியருக்கே உள்ள தொன்றிறே, ஸரரீரமர்த்தம்‌ ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவதயேத்‌” (உடல்‌ தனம்‌, உயிர்‌ யாவற்றையும்‌ ஸதாசாரியர்‌ பொருட்டுப்‌ பயன்படுத்த வேண்டும்‌) என்கிறபடியே பரமாசாரியரான பராங்குசரையும்‌ தத் ப்ரிய சிஷ்யரான உடையவரையும்‌ திரு நகரியிலே ப்ரதிஷ்டிப்பித்து அனைத்தழகுங் கண்டருளப்‌ பண்ணின தன்னேற்றமும்‌, ஆழ்வார்களின்‌ அருளிச்‌ செயல்களை ருசி விச்வாஸ பூர்வமாக ப்ரவர்த்திப்பித்துக்‌ கொண்டு போந்த
தன்னேற்றமும்‌, திருவாய்மொழிப்பிள்ளை யொருவர்க்கே யுள்ள தொன்றிறே.
இவர்‌ திருநக்ஷத்ரம்‌ வைகாசி விசாகம்‌, இவர்‌தனியன்‌:
நமஸ்‌ ஸ்ரீ ஸைல நாதாய குந்தீ நகர ஜந்மநே |
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே ॥

அநந்தரம்‌ நாயனாரும்‌ ஆசாரியன்‌ நியமித் தருளின படியே திருவாய்மொழி முதலான அருளிச்‌ செயல்கள் வ்யாக்யானமாக அநு ஸந்தித்துக்‌ கொண்டு.
ததஸ்து மூல பூதேஷு தேஷு திவ்யேஷு யோகிஷு
வவ்ருதே வர்த்தயந் பக்திம்‌ வகுளா பரணாதிஷு
ததா தத்தத் ப்ரபந்தார்த்த ஸம் ப்ரதாய ப்ரவர்த்தகாந்‌
அயமாத்ரியத ஸ்ரீமாந்‌ ஆசார்யாநாதி மாநபி

பின்னர்‌ ஸ்ரீமானான இவ் வழகிய மணவாளப் பெருமாள்‌ ப்ரபந்ந ஜந கூடஸ்தர்களாய்‌ பெரு மதிப்புற்ற நம்மாழ்வார்‌ முதலான ஆழ்வார்களிடத்தில்‌ பக்தியை வளர்த்துக்‌ கொண்டு(தாமும்‌) வளர்ந்தருளினார்‌; அப்படியே அந்த ஆழ்வார்களருளிச்‌ செய்த ஸம்ப்ரதாயார்த்தங்களை அநுஷ்டானத்தால்‌ ப்ரவர்த்தியா நின்ற பூர்வாசாரியர்களையும்‌ (ஆசார்யகளிடமும்‌) ஆதரித்துப்‌ போந்தார்‌ (மிக்க ஆதரம்‌ காட்டினார்‌] என்கிறபடியே விலஷண ப்ரமாண ப்ரமேய ப்ரமாதாக்களிடத்தில்‌ விசேஷ ப்ரதிபத்தியை யுடையராய்த்‌ திருநகரியிலே தர்சநத்தை வளர்த்துக்‌ கொண்டு போருகிற நல்லடிக்‌ காலத்திலே

அழகிய வரதர்‌ நாயனாரை ஆஸ்ரயித்தது.
ஸ்ரீஸெளம்ய ஜாமாத்ரு முநீஸ் வரஸ்ய ப்ரஸாத ஸம்பத்‌ ப்ரதமாஸ்பதாய” ஸ்ரீஸெளம்ய ஜாமாத்ரு முநீஸ்வரருடைய (அழகிய மணவாளர்‌ பின்னர்‌ உத்தமாஸ்ரமம்‌ பெற்று ஸெளம்ய ஜாமாத்ரு முனி- மணவாள மாமுனியானார்‌. ) அருட்‌ செல்வத்துக்கு முதல்‌ கொள்கலமான] என்கிறபடியே
அழகிய வரதர்‌ (இவரே பின்னர்‌. ‘ஒண்ணான ஸ்ரீவானமாமலை ஜீயரானவர்‌,-பொன்னடிக் கால்‌ ஜீயர்‌-என்றழைக்கப்பட்டவர்‌ ) சேனை முதலியார்‌ தொடக்கமானவர்கள்‌ இவர்‌ வைபவத்தைக்‌ கேட்டுத்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்தார்கள்‌ —அவர்களிலே அழகிய வரதர்‌, அப்போதே ஸந்யசித்து ‘ராமாநுஜ ஜீயர்‌’” என்னும்‌ திருநாமத்தை யுடையலராய்‌, நாயனாருக்கு நிழலுமடிதாறு மானோம்‌ என்னும்படி ஸதா பாதரேகா ஸமராய் நாயனாரை நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டு போந்தாரராய்‌, நாயனாருக்கு நிழலுமடிதாறு மானோம்‌ என்னும்படி ஸதா பாதரேகா ஸமராய் நாயனாரை நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டு போந்தார்‌.

நாயனார் திரு வரங்கத்து எழுந்தருளுதல்
இப்படி அந்தரங்கரானவர்களோடே கூட எழுந்தருளி யிருக்‌கிறவர்‌ –ஸூபேந மநஸாத் யாதம்‌: என்கிறபடியே அப்போதொரு சிந்தை செய்து,-நமக்கெல்லாம்‌ நற்சீவனமான நம் பெருமாளை சேவித்துக் கொண்டு அத்தலைக்கு அதிசயாவஹராய்‌ மங்களாசாஸனம்‌ பண்ணிக்‌ கொண்டு யாவத் தேஹாவஸாதம்‌ அங்கே யிருக்கை யன்றோ தமக்கு ப்ராப்தம்‌” என்று அறுதியிட்டு, அப்போதே ஆழ்வார்‌ திருமுன்பே சென்று ஸேலித்து, நண்ணா வசுரர்‌ நலிவெய்த நல்லவமரர்‌ பொலிவெய்த, எண்ணாதனக
ளெண்ணும்‌ நன்முனிவர்‌ இன்பந் தலைச்சிறப்ப, பண்ணார்‌ பாடலின்‌ கவிகளைப்பாடி தேவரீர்‌ மங்களாசாஸனம்‌ செய்தருளுகையாலே பெருமாளுடைய ப்ரதிபந்தங்ளெல்லாம்‌ நிரஸ்தமாய்ப்‌ பண்டு போல அனைத்தழகும்‌ கண்டருளுகிறார்‌; அடியேன்‌ பெருமாளை ஸேவிக்க விடை கொள்ளுகிறேன்‌
” என்று விண்ணப்‌பஞ்‌ செய்ய, அப்படியே நம்மாழ்வாரும்‌ விடை கொடுத்தருளினார்‌.

அநந்தரம்‌,
தத: கதிபயைர் திவஸைஸ்‌ ஸகுருர்‌ திவ்ய தர்ஸந |
ஆஜகாம பரந்தாம ஸ்ரீரங்கம்‌ மங்களம்‌ புவ:

பின்பு திவ்யமான திருமேனித்‌ தேற்றத்தை யடைய அந்த நாயனார்‌ சில தினங்களில்‌ உயர்ந்த திவ்ய தேசமாய்‌ பூமிக்கு மங்களகரமான ஸ்ரீரங்கத்துக்கு வ்ந்து சேர்ந்தார்‌- என்கிறபடியே முதலிகளும்‌ தாமுமாக, எம்பெருமான்‌ திருவரங்கம்‌ எங்கே என்று நாடிக்‌ கொண்டு புறப்பட்டெழுந் தருளுகிறவர்‌ – வில்லி புத்தூருறைவான் தன்‌ பொன்னடி காண்பதோராசையினாலே அங்கே எழுந்தருளி வட பெருங் கோயிலுடையானையும்‌ பெரியாழ்வாரையும்‌ திருவடி தொழுது. அநந்தரம்‌ அன்ன வயல் புதுவை யாண்‌டாளையும்‌ ”நீளா துங்கஸ்‌ தந கிரிதடீ” என்று தொடங்கி, கோதா”தஸ்யை நமஇதமிதம்‌ பூய,” என்கிறபடியே ஸேவித்து,

தேவஸ்ய மஹிஷீம்‌ திவ்யாம்‌ ஆதெள கோதாமுபாஸநத்‌ |
யந் மெளலி மாலிகாமேவ ஸ்வீகரோதி ஸ்வயம்‌ ப்ரபு –

எந்த ஆண்டாளுடைய திருக் குழலில்‌ ‘ சாத்தின திருமாலையையே ஸ்வாமியான அழகிய மணவாளன்‌ ஆதரவுடன்‌ சாத்திக்‌ கொள்கிறானோ, அந்த அழகிய மணவாள தேவனுடைய திவ்ய மஹிஷியான கோதையை முதல்‌ முன்னம்‌ ஸேவித்தார்‌ – என்கிறபடியே
சூடிக் கொடுத்தவள்‌ தொல்லரளால்‌ வாழ்கின்ற வள்ளலாய்‌-அங்கு நின்றும்‌ புறப்பட்டு -மாலிருஞ்சோலை தொழக் கருதி, -நெறி படவதுவே நினைவது நலமே-என்கிறபடியே மார்க்க சிந்தை பண்ணி அவ் வழியாலே அங்கே புக்கு, *பதியதுவேத்தி, அநந்தரம்‌ அழகர் தம்‌ கோயிலிலே புக்கு , திருமாலிருஞ்சோலை நின்றான்‌ கனை கழல்களைக் கண்டு வணங்கத்‌ தொழுது, -முடிச் சோதியில்‌ படியே-முடியார்‌ திருமலையில்‌” என்று தொடங்கி, -முற்றுமநுபவித்தார்‌- என்னும்படி அநுபவித்து தீர்த்‌த ப்ரஸாதங்களும்‌ ப்ரஸாதிக்க ப்ரஸாதப்படடு
விஞ்ஞாபநம்‌ வந கிரீஸ்வர! ஸத்ய ரூபா மங்கீ குருஷ்வ கருணார்ணவ மாமகீநாம் |
ஸ்ரீ ரங்க தாமநி யதா புரமேஷ ஸோஹம்‌ ராமாநுஜார்ய வஸாக பரிவர்த்திஷீய ॥

கருணைக் கடலான திருமாலிருஞ் சோலை யழகரே! யதார்த்தமான அடியேனது விண்ணப்பத்தைத்‌ திரு வுள்ளம்‌ பற்றி யருளவேணும்‌; அது ஏதெனில்‌; அடியேன்‌ முன்பு போலத்‌ திருவரங்கம்‌ பெரிய கோயிலிலே எம்பெருமானாருடைய திருவடிகளிலே சேர்ந்து வாழ்வேனாம்படி அருள் புரிய வேண்டும்‌-என்று தாமும்‌ இத்தை யநுஸந்தித்து அப்படியே ப்ரார்த்தித்தருள, அரங்கனென்னம்மானுக்கே காதல்‌ செய்யும் தொண்டராய்‌ அதி த்வரை யுடனே கோயிலேற எழுந்தருள:

அநந்தரம்‌
எண்டிசைக்‌ கணங்களுமிறைஞ்சியாடு திர்த்த நீர்‌-என்றும்‌,
கங்கையில்‌ புநிதமாய காவிரி என்றும்‌ சொல்லுகிறபடியே (காபாலி ஸ்ப்ர்ஸ ரஹிதராய்‌, ‘காவேரீ விரஜா ஸேயம்‌” என்கிற இவ் விரஜை யாறு இது வென்னும்‌ திருக் காவிரியிலே நீராடி-) திருக் காவேரியிலே நீராடி யருளி கேசவாதி பன்னிரண்டு திரு நாமங்களையும்‌ சாத்தி யருளி திருவரங்கப் பெரு நகரைத்‌ தண்டன் ஸமர்ப்பித்து நிற்க, அவ்வளவிலே தம்மை எதிர் கொள்ள வந்த அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌ தங்களின்பமிகு பெருங்‌ குழுவு கண்டு தண்டன் ஸமர்ப்பித்து அவர்களுடனே கூட வுள்ளே புக்கு, வழியிலுள்ள வண்டினமுரலுஞ்சோலை தொடக்கமான திருச் சோலைகளையும்‌ அநுபவித்துக்‌ சொண்டு அவ்வருகே யெழுந்தருளி

மாடமாளிகை சூழ்‌ திரு வீதியும்‌ மன்னு சேர்‌ ‘திரு விக்ரமன்‌ வீதியும்‌
ஆடல்மாறனகளங்கன் வீதியும்‌ ஆலி நாடன மர்ந்துறை வீதியும்‌
கூடல்‌ வாழ் குலசேகரன் வீதியும்‌ குலவுந் ராச மகேந்திரன்‌ வீதியும்‌
தேடு தன்‌வன்மாவின்‌ வீதியும்‌ தென்னரங்கர்‌ திருவாவரணமே

என்று சொல்லப்‌ படுகிற திருவீதிகளையும்‌ திருமதிள்களையும்‌ திருக்‌ கோபுரங்களையும்‌ கண்டு களித்துக்‌ கொண்டு எழுந்தருளி, தமக்கு ஆசார்ய துல்யரான கோட்டூரிலண்ணர்‌ திருமாளிகை யேற வெழுந்‌தருளினார்‌ -அவர்‌ திரு மெய்யத்திலே திருவாய்மொழி வ்யாக்யாநம்‌ இருபத்தி நாலாயிரத்தையும்‌ ஸாதித்துக்‌ கொண்டெழுந்தருளி யிருந்து பின்பு பெருமாளெழுந் தருளுகையாலே இங்கே நித்யவாஸமாக எழுந்தருளி யிருக்கிறவரை நாயனாரும்‌ அத்யாதரத்துடனே ஸேவித்தருள –அவரும்‌ உகந்தருளி இவரை அவதார விசேஷமென்‌றிந்து ஆதரித்து , பெருமாளை ஸேவிக்கப் பண்ணுவதாக எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு புறப்பட்டு, அக் காலத்திலே
கோயிலதிபதியா யிருந்த திருமலை தந்த பெருமாள்‌ பட்டருடைய அநுமதிக்காக அவர்‌ திருமாளிகையிலே எழுந்தருள; அவரும்‌ அப்ப்யுத்தாத பிரணாமாதிகள்‌ தொடக்கமான உபசாரங்களைப்‌ பண்ணி ஆஸநத்திலே எழுந்தருளுவித்து, ‘தேவரீரை ஸேலிக்கப் பெற்றோமே!?’ என்று பெரிய ப்ரீதியோடே ஆதரித்து “திருவாய்‌ மொழியிலே ஒரு பாட்டுக்கு அர்த்த மருளிச்‌ செய்ய வேணும்‌” என்ன, நாயனாரும்‌ ஆழ்வாருடைய வைபவத்தை ஐதிஹ்யமாகப்‌ ப்ரதிபாதிக்கிற பாட்டை யெடுத்து (துவளில்‌ மா மணி மாடம்‌, என்ற திருவாய்மொழியாக இருக்கலாம்‌ -இத் திருவாய்மொழி ஆழ்வார் ப்ரக்ருதி சொல்கிறது என்று நம்‌ முதலிகளெல்லாரும்‌ போர விரும்பி இருப்பார்கள் -என்று ஈட்டவதாரிகை )உபந்யஸித்தருள, பட்டரும்‌ போர வித்தராய்‌, ”இவர்‌ முப்பத்தாறாயிரப் பெருக்கர்‌ * என்று மிகவும்‌ உபலாளித்து “பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணி யருள”என்று அருளிச்‌ செய்து, அங்குண்டானண ஸ்ரீவைஷ்ணவர்‌களையும் கூட்டி யனுப்பி யருள, அவர்‌களும்‌’ அப்படியே புறப்பட்டருளி : ப்ரதமம்‌, பொன்னரங்கமென்னில்‌ மயலே பெருகுமிராமானுசன்‌ மன்னு மா மலர்த் தாளைக் கிட்டி, -யோ நித்யமச்யுத” என்று தொடங்கி , ‘ராமாநுஜஸ்ய சரணெ சரணம்‌ பரபத்யே!’ என்று அநுஸந்தித்து ஸேவித் தருளி.

இவ்வுலகந்தன்னி லெதிராசர்‌ கொண்டருளும்‌
எவ்வுருவும்‌ யான் சென்றிறைஞ்சினக்கால்‌–அவ்வுருவம்‌
எல்லா மினிதேலுமெழிலரங்கத் திருப்புப்‌ போல்‌
நில்லாதென்னெஞ்சு நிறைந்து

என்றநுபவித்தருளி பின்பு பூமகள்‌ கோன்‌ தென்னரங்கள்‌ பூங்கழற்குப் பாதுகமாய்த்‌, தாம்‌ மகிழுஞ்‌ செல்வச் சடகோபரையும்‌ ஸேவித்தருளி, ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி அங்கயல்‌ பாய் வயல்‌ தென்னரங்கனணி யாகம்‌ மன்னும்‌ பங்கய மா மலர்ப்‌ பாவையான ஸ்ரீரங்கநாச்சியாரையும்‌, ‘ஸ்ரீரங்க ராஜ மஹிஷீம்‌ ஸ்ரியமாஸ்ரயாம:”‘என்று திருவடி தொழுது, பூவளரும்‌ திருமகளாரருள்‌ பெற்று உள்ள புக்குத்‌ திருமண்டபங்களையும்‌ திருமடைப் பள்ளியையும்‌ கருவுகூலங்களையுங் கண்டு களித்தருளி ஸ்ரீபலிபீடத்தருகே தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளில்‌ திருச்‌ சுற்றையும்‌ ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி, அநந்தரம்‌ வேத ஸ்ருங்கமாய்‌ அயன்‌ பணிந்த கோயிலான ப்ரணவாகார விமாநத்தையும்‌ ஸேனை
முதலியாரையும்‌ ஸேவித்தருளி, அழகிய மணவாளன்‌ திரு மண்டபத்தில்‌ எழுத்தருளி, -ஆழி வண்ண। நின்‌ அடியிணை யடை ந்தேன்‌ அணி பொழில்‌ திருவரங்கத்தம்மானே என்று தண்டன்‌ ஸமர்ப்‌பித்துப்‌ பெரிய திருவடியையும்‌ திருவடி தொழுது, த்வார பாலகர்‌கள் அநுமதியுடனே யுள்ளே புகுந்து திருமணத் தூணருகே சென்று மாயோனை வாயார வாழ்த்தி, அரங்கமா கோயில்‌ கொண்ட கரும்பினைக்‌ கண்டு கண்ணினை களித்து அமலனாதிபிரானில்‌ படியே பாதாதி கேசாந்தமாக வநுபவித்தருளி, பழுதே பலபகலும்‌ போயின என்று இழந்த நாளுக்கு அநுதபித்து, அரங்கத் தரவணைப்‌ பள்ளியானாய்க் கண்வளர்ந் தருளுகிற சேர்த்தியைக்‌ கண்டு படுத்த பைந்நாகப் பள்ளி கொண்டானுக்குப்‌ பல்லாண்டு கூறுதுமே-என்கிறபடியே திருப்பல்லாண்டை யநுஸந்தித்து மங்களசாஸனம்‌ செய்தருளி, அநந்தரம்‌ பாயு நீரரங்கந்தன்னுள்‌ பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார்‌ திரு நன் மார்வும்‌ என்று தொடங்கி ஆய சீர் முடியுந்‌ தேசுமடியரோர்க்ககலாமே என்று ஸேவித்து, அதற்கு மேல் பெரிய பெருமாளுடைய வ்யூஹ சவ்ஹார்தாதி குணங்களை யநுபவித்து அநந்தரம்‌ திவ்ய ஸிம்ஹாஸந ஸமான சேர பாண்டியனிலே மலர் மடந்தை மண் மடந்தைகளாகிற உபய நாய்ச்சிமாருடனே எழுந்தருளி யிருக்கிற நம்பெருமாளை

அப்ப ஜந்யஸ்த பதாப்ஜம்‌ அஞ்சித கடீ ஸம்வாதி கெளஸேயகம்‌
கிஞ்சித்தாண்டவ கந்தி ஸம்ஹநநகம்‌ நிர் வ்யாஜ மந்தஸ்மிதம்‌ |
சூடாசும்பி முகாம்புஜம்‌ நிஜ புஜா விஸ்ராந்தி!திவ்யாயுதம்‌ :
ஸ்ரீ ரங்கே ஸரதஸ்சதம்‌ ததஇத: பஸ்யேம லக்ஷ்மீஸகம்‌ [ஸ்ரீரங்க ராஜஸ்தவம்‌, பூர்‌-74:)

ஆஸந பத்மத்திலழுத்தின திருவடித்‌ தாமரைகளை யுடையவரும்‌, சிறந்த திருவரைக்குப்‌ பாங்கான பட்டுத்‌ திருப்பரிவட்டத்தை யணிந்தவரும்‌, சிறிது நர்த்ததஞ்‌ செய்வது போல்‌ விளங்குகிற திருமேனியை யுடையவரும்‌ இயல்பான புன்முறுவலை யுடையவரும்‌, திருவபிஷேகத்தைத்‌
தழுவி யிருக்கின்ற முக கமலத்தை யுடையவரும்‌, தமது திருக் கையில்‌ இளைப்பாறுகின்ற திவ்யாயுதங்களை யுடையவருமான திருமகட்‌கன்பனான அழகிய மணவாளனைத்‌ திருவரங்கத்தலே இன்னமொரு நூற்றாண்டளவும்‌ அங்குமிங்கும்‌ (எழுந்தருளுமிட மெல்லாம்‌) ஸேவிக்கக்‌ கடவோம்‌] என்கிறபடியே ஸேவித்தருளி ,திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும்‌ வைத்தஞ்சலென்ற
கையும்‌ கவித்த முடியும்‌ முகமும்‌ முறுவலும்‌ ஆஸந பத்மத்திலே அழுத்திய திருவடிகளுமாய்‌ நிற்கிற நிலையே நமக்குத்‌ தஞ்சம்‌(முழுஷுப்படி த்வயம்‌-21)
என்று அநுஸந்திதருளி, அத நன்‌ நிதியைக்‌ கண்டாப்‌ போலே பூர்வர்கள்‌ தநமாயிருக்கிற ஸ்ரீநிதியான நம் பெருமாளைக்‌ கண்டு கொண்டு, சிவந்த திருமுக மண்டலத்‌தையும்‌ கஸ்தூரித்‌ திருநாமத்தையும்‌ (மதி நுதல்‌ கஸ்தூரி திருநாமத்தையும்‌, மறுவல் பூத்த பவன வாயையும்‌, கவித்த கதிராயிரமிரவி கலந்தெறித்தா லொத்த நீண் முடியையும்‌, கையினார்‌ சுரிசங்கனலாழி எழிலையும்‌, அஞ்சலென்ற கையையும்‌, திருவரை பூத்தாப் போலிருக்கற அந்தி போல்‌ நிறத்தாடையும்‌ ஆஸந பத்மத்திலே அழுத்தின செம் பங்கயத் பதாள்களையும்‌ கோல மா மணி யாரமும்‌ முத்துத் தாமமும்‌ முடிலில்லதோரெழிலையும் கண் வாங்க மாட்டாதே நிர்நிமேஷத்ரு ஸஞ்சலராய்‌-)வைத்த கண்‌ வாங்காதே அநிமிஷரா யநுபவித்துக்‌ கொண்டு நிற்க, தேசாந்தர கதனான புத்ரனைக்‌ கண்ட மாதா பிதாக்களைப்‌ போலே தந்தையுந் தாயுமான தாம்‌ இவரைக்‌ கண்டு ப்ரஸந்ந வதநேகஷணராய்‌ கருணாம்ருத ஸ்ஷ்டியாலே குளிரக்‌ கடாக்ஷித்தருளி ‘”தமக்காவாரை தாமே தேடிக்‌ கொள்வோம்‌” என்று அருளிச்‌ செய்து எம்பெருமானாரை விஷயீகரித்தாப்‌ போலே இவரையும்‌ விஷயீகரித்தருளினார்‌

பின்பு தீர்‌த்த ப்ரஸாதங்களையும்‌ ஸ்ரீ சடகோபனையும்‌ திருமாலை ப்ரஸாதத்தையும்‌ ப்ரஸாதிக்கப்‌ பெற்று, முடியும்‌ மாலையும்‌ பெற்றாப்‌ போலே தென்னங்கர்‌ சீரருளுக்கிலக்காகப்‌ பெற்று
அத்யந்தம்‌ ப்ரீதராய்‌ அண்ணரைப்‌ பார்த்து தேவரிருக்காக நம்பெருமாள்‌ இப்படி வாழ்வித்தருளினார்‌’” என்று அருளிச்‌ செய்து, அநந்தரம்‌ அண்ணருடனே கூடப் புறப்பட்டருளி அவர்‌ திருமாளிகையிலே எழுந்தருள, பட்டரும்‌ அனேக பதார்த்தங்‌களுடன்‌ சிறப்பு வரக்‌ காட்டி யருள அத்தை யங்கீ கரித்து அண்ணர்‌ திருமாளிகையிலே யமுது செய்து எழுந்தருளி யிருக்க அவரும்‌ பூர்வாசாரியர்கள்‌ ‘ போத மநுட்டானங்களை யருளிச்‌ செய்யக்‌ கேட்டுத்‌ திருவுள்ளந் தேறி அவருடனே கூடப் புறப்பட்டு பூர்வர்கள்‌
எழுந்தருளியிருந்த திருமாளிகைகளைச்‌ சென்று ஸேலித்து, பின்பு பிள்ளை லோகாசாரியர்‌ திரு மாளிகை நோக்கி யெழுந்தருளி,
வாழி யுலகாசிரியன்‌ வாழி யவன்‌ மன்னு குலம்‌
வாழி முடும்பை யென்னும்‌ மாககரம்‌–வாழி
மனஞ்சூழ்ந்த பேரின்மல்கு மிக நல்லார்‌
இனஞ் சூழ்ந்திருக்கு மிருப்பு
–என்றும்‌,
மணவாளன்‌ மாறன்‌ மனமுரைததான்‌ வாழி
மணவாளன் மன்னு குலம் வாழி–மணவாளன்‌
வாழி முடும்பை வாழி வடவீதி தான்‌
வாழியவன்‌ உரை செய்த நூல்‌
–என்றும்‌
அநுஸந்தித்துத்‌ திருமாளிகை வாசலிலே தண்டன்‌ சமர்ப்‌பித்து அஞ்ஜலித்துக்‌ கொண்டு,

ஆத வாணிம்‌ புண்ய ஸுதாபகாம்‌ ஸடஜித்ஸ் ஸ்வைரம்‌ விகாஹ் யாதராத்‌
ஆநீயாம்ருத மத்ர சக்ர துகுபெள லோகோபகரராத்மகெள |
யெள வாக் பூஷண தேஸி கேந்த்ர ஹ்ருதயாபிக்யெள ப்ரபந்தாவிமெள
தே வந்தே புவநார்ய ஸூந்தர வரெஎ க்ருஷ்ணாத்மஜெள தேஸிகவ் ॥

இங்கு உலகத்தவருக்கு உதவுமியல் புடையராய்‌ எந்த இரு ஆசாரியர்கள்‌ நம்மாழ்வாருடைய திருவாய்மொழியாகிற புண்யமான அமுத ப்ரவாஹத்தில்‌ ஆதரத்துடன்‌ யதேச்சையாயாழ்ந்து அதில்‌ நின்றும்‌ ௮ம்ருதத்தைக் கொண்டு எந்த ஸ்ரீவசந பூஷணம்‌ ஆசார்ய ஹ்ருதயம்‌ என்ற பெயரை யுடைய இரு ப்ரபந்தங்‌களையுமருளிச்‌ செய்தார்களோ, வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையின்‌ குமாரர்களான பிள்ளை லோகாசாரியர்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ என்ற ஆசாரியர்களை அடி பணிகிறேன்‌-

ஆர்யஸ் ஸெளம்ய வர ஸடாரிகலிஜித்‌ பட்டேஸ :॥ முக்யாத்மமாம்‌
பக்தாநாம்‌ விமலோக்தி மெளக்திக மணீநாதாய சக்ரே ப்ருஸும்‌ |
க்ருத்வா ஸாதுரஹஸ்த்ரயார்த்த மகிலம்‌ கூடம்‌ விபஸ் சித்ரியம்‌
லோகார்யா வரஜஸ்ஸூ ஸிக்ஷ்க வரஸ் சூடாமணிஸ் ஸோபதே

பிள்ளை லோகாசாரியரின்‌ திருத் தம்பியராய்‌ ஸத் ஸம்ப்ரதாயார்த்தங்களை சிக்ஷித்து அருளிச் செய்பவராய்‌, யாவருக்கும்‌ பூஜ்யராய்‌ சிரோ பூஷணமான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌,நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்‌. பெரியாழ்வார்‌, முதலான பக்தாக்ரேஸரர்களின்‌ தூய வாக்குக்களாகிற மணி, முத்துக்களைக்‌ கொண்டு ரஹஸ்ய த்ரயத்தின்‌ ஆழ் பொருள்களை யெல்லாம்‌ பூர்வாசாரியர்களின்‌ திருவுள்ளத்துக் கிசைய விளக்கி வெளியிட்டு மிகவும்‌விளக்கமுறுகிறார்‌.

யஸ்யாஹம்‌ குல தைவதம்‌ ரகுபதேரா ரதநம்‌ ஸ்ரீஸக:
காவேரீ ஸரிதிந்தரீ பநகரீ வாஸஸ்தலீ புண்யபூ: |
க்ருஷ்ணோ மாந்ய குருர்‌ வரேண்ய மஹிமா வேதாந்த வித்யாநிதி;
ப்ராதா சவ்ம்ய வரஸ்‌ ஸ்வயந்து புவநாசார்யோஸி கஸ்தே ஸம:

யாருக்கு சக்ரவர்த்தி திருமகனுடைய திருவாராதனமான அழகிய மணவாளன்‌ குலதெய்வமோ, திருக் காவேரியின்‌ நடுவிலுள்ள புண்ய பூமியான கோயிலானது இருப்பிடமோ, பெரும்‌ ‘ புகழாளராய்‌ பூஜ்யரான வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை தந்‌தையுமாசார்யருமாவரோ, உபய வேதாந்த நிதியான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ இளைய ஸஹோதரரோ, அப்படியான தேவரீரே ஜகத்துக்கெல்லாம்‌ ஆசாரியராக உள்ளீர்‌; இப்புடிபட்ட தேவரீருக்கு யார்‌ ஒப்பாவார்‌? என்கிறபடியே பிள்ளை லோகாசாரியருடைய ஸமாப்யதிக ரஹிதமான பெருமையைப்‌ பேசா நின்று கொண்டு -ரஹஸ்யம்‌ விளைந்த மண்ணன்றோ?’ என்று மிகவுமாதரித்தருளி, அங்கே யெழுந்தருளி யிருந்து பிள்ளலோகாசாரியர்‌’ வைபவங்களை யெல்லாம்‌ ௮ண்ணரருளிச் செய்யக்‌ கேட்டு, இவ்வளவாகிலும்‌ பெற்றோமே!!’ என்று ப்ரீதராய்‌ அண்ணரை ஸேவித்துக் கொண்டு ஆசாரியர்களுக்கு ஆவாஸ் பூமியான கோயிலிலே எழுந்தருளி யிருக்க, பின்னையும்‌ ஒருநாள்‌ வரையிலே நம்பெருமாளை இவர்‌ திருவடி தொழச்‌ சென்றவாறே தீர்த்தம்‌ திருமாலை பரியட்டத்துடனே தம்முடைய தேனே மலரும்‌ திருப்‌ பாதத்தை இவர்‌ திருமுடி சூடுவித்து

தஸ்மிந்‌ ஸஸ்மித நேத்ரேண ஸ்ரீமதா ஸேஷ ஸாயிநா |
ஸத்க்ருத: க்ருதவாந் வாஸம்‌ கிஞ்சித்தத்ர ததந்திகே

மலர்ந்து நீண்ட வப் பெரியவாய கண்களை யுடைய ஸ்ரீமானான பெரிய பெருமாளாலே அநுக்ரஹிக்கப் பட்டவராய்‌ சில நாட்கள்‌ அவர்‌ திருவடி வாரத்தில வாழ்ந்திருந்தார்‌- என்கிறபடியே,
திருப்பவளச் செவ்வாய்‌ முறுவல்‌ கொண்டு நம் முடையவரைப்‌ போலே நீரும்‌ நம் வீட்டில்‌ கார்யத்தையும்‌ தர்சந ரஹஸ்யங்களையும்‌ ஆராய்ந்து கொண்டு உம்முடைய சரீராவஸானத்தளவும்‌ இங்கேயே இரும்‌” என்று அருளிச் செய்ய; இவரும்‌ ‘ மஹா ப்ரஸாதம்‌” என்று அங்கீகரித்து நியமித்தபடியே அங்கே எழுந்தருளி யிருந்தார்‌-அக் காலத்திலே அங்குண்டான ரஹஸ்ய ப்ரபந்தங்களை யெல்‌லாம்‌ திருக் கண் சாத்தி ஜீர்ணோத்தாரணம்‌ பண்ணி யருளி அவற்றை ப்ரகாசிப்பித்துக் கொண்டு-எழுந்தருளி யிருக்க; பின்பு ஒரு நாள்‌ பெருமாள்‌ திருவாராதனம்‌ நடத்திக் கொண்டு போருகிற உத்த நம்பி தாழ்வாக நடத்துகிற படியையும்‌ அமுது செய்தருளுகிற தளிகைக் குறைகளையுங் கண்டு ”இவனை நிரஸித்தருளி அநுகூலரானவர்களைக்‌ கொண்டு குறைவறக் கண்டருளப் பண்ண வேணும் ‘
என்று வானமாமலை ஜீயரருளிச் செய்ய (அழகிய வரதர்‌ என்று திருநாமமுடையராய்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரை பால்யத்திலேயே ஆஸ்ரயித்துப்‌ பின்னர்‌ ஆஸ்ரம ஸ்வீகாரம்‌ செய்தருளி ஸ்ரீவானமா மலை ஜீயர்‌” என்றுஅழைக்கப்பட்டார்‌; )அத்தைக் கேட்டருளி தேவரீருடைய திருப்பணி திருவாராதநம்‌, குறைவற நடத்திப்‌ போம்படி இவனை யநுகூலனாகத்‌ திருத்திப் பணி கொணடருள வேணும்‌ என்று மங்களாசாஸனம்‌ பண்ணாீ!’ என்‌றருளிச் செய்து, தாமும்‌ அப்படியே மங்களாசாஸனம்‌ பண்ணி யருளி, (இவ்விடத்தில்‌ ஜீயர்‌, அழகிய மணவாள நாயனாரை, ”தேவரீர்‌ பெருமாளைக் குறித்து ‘இவனை நசிப்பித்து அநுகூலரைக் கொண்டு திருப்பணி திருவாராதனம்‌ குறைவறக்‌ கொண்டருளவேணும்‌” என்று ப்ரபத்தி பண்ண வேண்டிக் கொள்ளும்‌” என்ன; நாயனாரும்‌ அது கேட்டருளி அழகிய வரதரைக் குறித்து பெருமாளுக்கு-)

நாயனார் திருவேங்கட யாத்திரை எழுந்தருளுதல்‌
அநந்தரம்‌ வட திருவேங்கடமென்று ப்ரஸித்தமான வட மா மலை முதலான வடதிசை யிலுண்டான திருப்பதிகளைத்‌ திருவடி தொழுகையிலே மிகவுந் திருவுள்ளத்தை யுடையராய்‌ -ததஸ்தே நாப்ய நுஜ்ஞாதோ யாதோ தரணி முத்தராம்‌” -பின்னர்‌ பெருமாளால்‌ அநுமதிக்கப்‌ பட்டவராய்‌ வட தேசத்திலுள்ள திருப்பதிகளைச்‌ சென்றடைந்தார்‌-என்கிறபடியே பெருமாள்‌ ஸந்நிதியிலே
சென்று ஸேவித்து நின்று, அடியேன்‌ திருமலைச்குப்‌ போய் திருவேங்‌கடமுடையானைத்‌ திருவடி தொழ விடை கொள்கிறேன்‌” என்று விண்ணப்பம்‌ செய்ய, பெருமாளும்‌ தீர்த்த ப்ராஸதங்களும்‌ பரியட்‌டமும்‌ ஸ்ரீசடகோபனும்‌ ப்ரஸாதித்து ”போய் வாரும்‌’ என்று விடை கொடுத்தருள;

திருக் கோவலூர்‌, திருக் கடிகை மங்களாசாஸனம்‌
அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ *அணியரங்கத்‌தினின்றும்‌ பெரிய திருமலை யேறப்‌ போவாராய்‌ அப்போதே புறப்‌பட்டருளி, முப்போதும்‌ வானவரேத்தும முனிவர்கள்‌ வெள்ளறையிலே சென்று புக்கு பங்கயச் செல்வியார்‌ புருஷகாரமாகச்‌ செந்தாமரைக்‌ கண்ணரை ஸேவித்துத்‌ தீர்த்த ப்ரஸாதங்களும்‌ ப்ரஸாதப்‌பட்டு | பாதேயம்‌ புண்டரீக நாம ஸங்கீர்ந்தநம்ருதம்‌-செய்ய தாமரைக் கண்ணனின்‌ திருநாமங்களைப்‌ பாடுவதான அம்ருதம்‌ வழிக்கு உணவாகிறது-என்கிறபடியே! த்வய வசந பாதேயத்துடனே -பூங்கோவலுர்‌ தொழுதும்‌ போது நெஞ்சே! என்று பெரிய த்வரையோடே புறப்பட்டு அவனடி நிழற்றடங்‌களை யுடையராய்‌ விச்ரமித்து விடாயாறி, ஊரைச்‌ சென்று கிட்டி ,
உள்ளே புக்கு முதலாழ்வார்களை த்‌ திருவடி தொழுது அவர்கள்‌புருஷகாரமாக ”த்ரிவிக்ரம மபிகம்ய”’ என்கிறபடியே ஆழ்வார்கள்‌ நாயனாரையும்‌ ஆயனாரையும்‌ ஸேவித்து, தூவடிவில் பார்‌ மகள்‌[திருமொழி 2-10-9) என்று-தொடங்கி திருக்கோவலூரதனுட்‌ கண்டேன்‌ நான்‌ என்றபடியே அநுபவித்து, நீயும்‌ திருமகளும் நின்றாயால்‌ (முதல்‌ திரு-86) என்கிற பாட்டை யநுஸந்தித்து,
அன்‌றிவ்வுலகமளந்தாய்‌ அடிபோற்றி என்று மங்களசாஸநம்‌ பண்ணி யருளித்‌ தீர்த்தம்‌ ப்ரஸாதப்பட்டு, பூங்கோவலாயனழகு பின்னே தள்ள திருவங்கடத்தானருள்‌ முன்னே நடத்த’ புறப்‌பட்டு, குன்றமேந்திக்‌ குளிர்‌ மழை காத்தவன்‌ அன்று ஞாலமளந்த பிரான்‌ பரன்‌ சென்று சேர்‌ திருவேங்கடமாமலை (திருவாய்‌, 3-3-4)என்றும்‌ திருவேங்கடத்தாயன்‌ என்றும்‌ மொய்த்த சோலை மொய்‌ பூந்தடம்‌ என்றும்‌ சொல்லப்படுகிற நீர்மையை யுடைய திருவேங்‌கடமுடையானைத்‌ திருவடி தொழுகையிலே திருவுள்ளமாய்‌ பெருங்‌ கூட்டத்துடனே போவான் வழி கொண்டு அதி த்வரையுடனே (இதிலிருந்து திருக் கடிகை மங்களாசாஸனம்‌, )யெழுந்தருளுகையில்‌ நீள்‌ சோலை வண் பூங் கடிகையில்‌ தக்கானையும்‌, கடிகைத் தடங்குன்றில்‌ அக்காரக் கனியையும்‌ அடைந்து மங்களாசாஸநம்‌ பண்ணிப்‌ புறப்படா நிற்கச்‌ செய்தே எறும்பியிலுள்ள பெரியோர்களும்‌ பச்சையுடன்‌ வந்து ஸேவித்து நிற்க ,அவர்களை ஆதரித்துப்‌ புறப்பட்டருளினார்‌.

இனி திருமலை வ்ருத்தாந்தம்‌
திருப் புரட்டாசி முதல்‌ திருநாள்‌ ராத்ரி பெரிய கேள்வி ஜீயருடைய ஸ்வப்நம்‌: ஆழ்வார்‌ தீர்த்தத்திற்குத்‌ தெற்கிலுள்ள திருத்‌ தோப்பருகே ஒருவர்‌ வடக்கு முகமாக நிற்கிறதாகவும்‌ திருமலையாழ்வார்‌ மேல் கோடி தொடங்கி கிழக்கு முடிவு மட்டும்‌ ஸ்தூலமாய்‌ அதி தீர்க்கமா யிருக்கிற திருமேனி யுடையராய்‌ மேற்கே திருமுடியும்‌ இழக்கே திருவடிகளும்‌, தெற்கு திக்கைக்‌ கடாக்ஷித்துக்‌ கொண்டு பெரிய பெருமாளைப்‌ போல ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கண்‌ வளர்‌ந்தருளுகிறதாகவும்‌;- ஒரு ஜீயர்‌ திருவடி பார்ச்வத்திலே நிற்‌கிறதாகவும்‌ கண்டு ‘“இவரார்‌?” என்று போவார்‌ வருவாரைக் கேட்க, அவர்கள்‌ சொன்னபடி: ‘இவர்‌ முப்பத்தாரறாயிரப்‌ பெருக்‌கரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌; அவர்‌ பொன்‌னடிக்கால்‌ ஜீயர்‌” என்று,சொல்ல, கண் விழித்து ‘“இதொரு ஸ்வப்நமிருந்தபடி என்‌!” ‘ என்று அதி ப்ரீதியுடனே “எழுந்திருந்து பெருமாள்‌ திருலீதியில்‌ ப்ராதகாலம்‌ புறப்பாட்டிற்கு மங்களா சாஸநத்துக்‌ கெழுந்தருளி இயல்‌ தொடங்குகிற விடத்திலே இச்‌ செய்தியை ஸ்வாமிகளுக் கறிவிக்க இத்தை தோழப்பய்யங்கார்‌ கேட்டருளி

ஸ்வப்நே ப்ருஹத் யதீந்த்ரஸ்ய ஸ்ரீஸைல ஸமிதோ மஜாாந்‌ |
ஸயாந புருஷோத்ருஷ்ட: ஸெளம்ய ஜாமாத்ரு தேஸிக: |
ததர்ச பஸ்சாத்‌ தஸ்யைவ பாதமூலே யதீஸ்வரம்‌ |
ப்ராஞ்ஜலிம்‌ நிப்சுதம் ப்ரஹ்வம்‌ ஸ்வர்ணாதிபதி பத ஸம்ஜ்‌ஞகம்‌ ॥

பெரிய ஜீயருடைய ஸ்வப்நத்தில்‌: திருமலையோடு ஓத்த’ அளவுடையவராய்‌, மணவாளமாமுனி யென்கிற மிகப்‌ பெரிய புருஷர்‌ படுத்துக்‌ கொண்டிருப்பவராகக்‌ காணப்பட்டார்‌.
அவரது திருவடி வாரத்தில்‌ விநயத்துடன்‌ குனிந்து கை கூப்பி நிற்கும்‌ பொன்னடிக்கால ஜீயரையும்‌ அப் பெரிய ஜீயர்‌ கண்டார்‌-என்று ஸ்லோகமாக அருளிச்‌ செய்தார்‌. இத்தை எல்லாரும்‌ கேட்டு உகந்திருக்க, அப்போது தேசாந்தரத்தினினில்‌ நின்றும் வந்த பெரியோர்‌களில்‌ சிலர்‌ இப்படி ஸேவை ஸாதித்தவர்‌ கோயில்‌ நாயனார்‌ என்ன, வேறு சிலர்‌ அவர்‌ திருநாளுக் கெழுந்தருளுகிறார்‌ – என்ன,
மற்றும்‌ சிலர்‌ நாயனார்‌ தம்முடைய சிஷ்யரான வானமாமலை ஜீயரைத்‌ தமக்கு ப்ராண ஸூஹ்ருத்தென்றும்‌. பொன்னடிக்கால்‌ ஜீயரென்றும்‌ அருளிச்‌ செய்வர்‌ என்ன; ஆனால்‌ இந்த விசை
திருநாளுக்கு மஹாதிசய முண்டாயிற்று- என்று அனைவரும்‌ போர உகந்து எதிர்பார்த்துக்‌ கொண்டு எழுந்தருளியிருக்க நாயனாரும்‌ பயண கதியிலே யெழுந்தருளித்‌ திருமலை யாழ்‌வாரைக்‌ கண்டருளி திருவேங்கடமாமலை யொன்றுமே தொழ நம்‌ வினையோயுமே (திருவாய்‌ 3-3-8)என்று திருமலையாழ்வாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, வைத்த கண் வாங்காதே அநுபவித்துக்‌ கொண்டு சென்று ”ஸுவர்ண முசகரீம்‌ தத்ர ஸங்கதாம்‌ மங்களஸ்வதாம்‌- அத் திருமலையோடு சேர்த்து நல்ல ஓசை யுடைய ஸுவர்ண முகி நதியை- என்று மங்களாவஹமான ஸ்வர்ண முகியைக்‌ கட்டி அங்கே நீராடி யருளி, கேசவாதி த்வாதச நாமங்களையும்‌ சாத்தி யருளின வளவிலே ஸ்ரீகோவிந்த ராஐருடைய அபய ஹஸ்தம்‌, களபம்‌ திருமாலை தொடக்கமான வரிசைசள்‌ வர. அங்கீ கரித்தருளி
ஸ்ரீவைஷ்ணவர்களுக் கெல்லாருக்கும்‌ ப்ரஸாத விநியோகம்‌ செய்தருளித்‌ தாமும்‌ ஸ்வீகரித்துப்‌ புறப்பட்டு கோவிந்தராஐரை மங்களாசாஸநம்‌ செய்தருளி, வரிசை பெற்று திருமலை யடிவாரத்திலே
அழகிய சிங்கரைத்‌ தொழுது, -ஏவம்வித்‌ பாதேநாத்யாரோஹதி”- இப்படி உபாஸிப்பவன்‌ காலால்‌ ஏறுகிறான்‌ -என்‌கிற படியே ஏறியருளி, பரிஷத்‌ திருவேங்கட முடையானைத்‌ தொழுது
கர்ப்பூரக்காலிலே தீர்த்த ஸ்வீகாரம்‌ செய்தருளி, காட்டழகிய சிங்கரைத்‌ தொழுது, மாம்பழ வெம்பெருமானாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து விச்ரமித்துப்‌ புறப்பட்டருள; இச் செய்தி கேட்டுப்‌
பெரிய கேள்வி ஜீயரும்‌ ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவர்களும்‌, அனைத்துத்‌ கொத்துப்‌ பரிகாரத்துடனே பூவார் கழல்களை எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு, பெரிய பரிவட்டம்‌, ஸ்ரீபாத ரேணு,அபய ஹஸ்தம்‌ முதலான வரிசைகள்‌ கூட்டி மங்கள வாத்யங்களுடனே எதிர்‌ கொண்டு ப்ராஸாதிக்க ஸ்லீகரித்து

(அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்
ஆச்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்-
-ஆத்மாவுக்கு இருக்கவேண்டிய அனைத்து குணங்களுக்கும் இருப்பிடமானவரும், அறியாமையாகிற இருளை மீதமில்லாமல் போக்குபவரும், தம்மை அடைந்த சிஷ்யர்களுக்கு அகலாத தஞ்சமாக இருப்பவருமான அனந்தாழ்வான் என்னும் ஆசார்யரை வணங்குகிறேன்.
ஸ்ரீமத்ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம்போருஹத்வயம்|
ஸதுத்தமாங்க ஸந்தார்யம் அநந்தார்யமஹம் பஜே||
-ஸ்வாமி ராமாநுஜருடைய திருவடித்தாமரைகளாக இருப்பவரும், அதனால் நல்லோர்கள் சென்னிக்கு அணியாக இருப்பவருமான அநந்தாழ்வானை வணங்குகிறேன்.)

மொண்ணைத் திருக் கோபுரத்தருகே திவ்ய விமானத்தையும்‌ திரு நாராயண
கிரியையும்‌ த்வஜ ஸ்தம்‌பத்தையும்‌ பொற் கோபுரத்தையும்‌ கண்டு களித்துத்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து உள்ளே புக்கு, அவா வறச் சூழ்ந்தான்‌ திருவாசலிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து திருவீதிகளையும்‌ திரு மாளிகைகளையும்‌ கண்டு களித்துக்‌ கொண்டு ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி ஸ்வாமி புஷ்கரிணியிலே நீராடி யருளி, திருமண்காப்புச்‌ சாத்தியருளி, வேங்கட வராஹத்தை ஸேவித்து, தீர்த்தம்‌ ப்ரஸாதம்‌, ஸ்ரீ சடகோபன்‌ சந்தனம்‌ ப்ரஸாதிக்க ஸ்வீகரித்துப்‌ புறப்பட்டருளி திருத் தேர்களையும் கண்டு களித்து, உள்ளே யெழுந்தருளி அழகிய மணவாளன்‌ திருமண்டபத்தை தண்டன்‌ ஸமர்ப்பித்து ஸ்ரீபலிபீடத்தையும்‌ செண்பகத்‌ திருவாசலையும்‌ அத்தாணிப்‌ புளியையுந்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்துச்‌ செண்பகச் சுற்று ப்ரதஷிணமாக வெழுந்தருளிச்‌ சாலை வாசலாலே
யுள்ளே புக்கு நெய்க்கிணறு முதலான சாலை வரிசைகளைக்‌ கண்டு களித்துத்‌ திருமடைப் பள்ளியையும்‌ யமுனைத் துறைவனையுந்‌ தொழுது, புஷ்கரிணியிலே தீர்த்த ஸ்‌வீகாரம்‌ பண்ணி ஸ்வர்ணமண்டபமேறி நாராயண கிரியைச்‌ தொழுது, செண்பகத்‌ திருவாசலாலே யுள்ளே புக்கு, தேவப் பெருமாள்‌ எழுந்தருளியிருந்த பொன்‌விஞ்சு பெருமாள்‌ கோயிலையும்‌ அழகப் பிரானாரையும்‌ திவ்ய விமானத்தையும்‌ தொழுது திருமடைட்பள்ளி நாய்ச்சியாரையும்‌ ஸேவித்து தசாவதாரங்களையுந்‌ தொழுது, திருமாமணி மண்ட.பமான யாகமண்டபத்திலே நாய்ச்சிமாருடன்‌ மலைக்கினிய நின்ற பெருமாளையும்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, தீர்த்தம்‌, ஸ்ரீ சடகோபன்‌, ஸ்ரீபாதரேணு ப்ரஸாதிக்க ஸ்வீகரித்தருளி, திவ்ய விமானத்தைத்‌ தொழுது ஸேனை முதலியாரையும்‌ வணங்கி, ராமநுஜஸ்ய சரணெள சரணம்‌ ப்ரபத்யே’ என்று எம்பெருமானாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, தீர்த்தம்‌ அநந்தாழ்வான்‌, ப்ரஸாதம்‌, சந்தனம்‌, ப்ரஸாதிக்க ஸ்வீகரித்து, அழகிய சிங்கரையும்‌, திருநிலைக்‌ கண்ணாடி போலிருக்கிற பெரிய திருவடி நாயனாரையும்‌ ‘தொழுது உண்டியிலே திருமுன்காணிக்கையும்‌ ஸமர்ப்பித்து த்வார பாலகருடைய அநுமதி கொண்டு உள்ளே புக்கு, மத்யே சக்ரவர்த்தி
திருமகனாரையும்‌ தொழுது” குலசேகரன்‌ படியருகே சென்று, பொன்னம்‌ புயல் போல்‌ மரகதம் போல்‌ பூவை மலர் போல்‌ கருவிளை போல்‌ பொங்கார்கடல் போல்‌ பொலிந்திருண்ட புழுகிற்றுளைந்த
செஞ்சோதி, அன்னம்‌ பயிற்றி நடமாட அலர்மேல்‌ மங்கையுறை மார்பனாய்‌, ”ஸிஷேவே தேவதேவேசம்‌ சேஷ சைல நிவாஸிதம்‌”-திருமலையில்‌ நித்ய வாஸம்‌ பண்ணும்‌ தேவாதிதேவனான திரு
வேங்கட முடையானை ஸேலித்தார்‌-என்கிற படியே,எழில் கொள் சோதியான திருவேங்கடத்தெந்தையை அநபவித்து நிற்க-அப்பனும்‌ தீர்த்த ப்ரஸாதம்‌ திருமாலை, ஸ்ரீ சடகோபன்‌ இவை ப்ரஸாதிக்க, பெற்று க்ருதார்த்தராய்‌–

நாயனார்‌ பெருமாள்‌ கோயிலுக்கு எழுந்தருளுதல்‌
அங்கு நின்றும்‌ புறப்பட்டு நடுவே இரண்டு மூன்று நாள்‌ வஸித்து அதன்‌ பின்பு உலகேத்து மாழியானத்தியூரேற வெழுந்தருளி
தூரஸ்திதேபி மயித்ருஷ்டி பதம் ப்ரபந்நேது:கம்விஹாய பரமம்‌ ஸுகமேஷ்யதீதி |
மத்வேவயத்கக நசும்பி நதார்த்திஹந்து! தத் கோபுரம்‌ பகவதஸ் ஸரணம் ப்ரபத்யே॥

நான்‌ தூரத்திலிருந்தாலும்‌ ஒருவன்‌ கண்களுக்குப்‌ புலப்படுவேனாகில்‌, அவன்‌ துக்கத்தை விட்டு உயர்ந்த ஸுகத்தை அடைவான்‌ என்று நினைத்துப் போலும்‌ வானளாவி நிற்கிற–ப்ரணதார்த்தி ஹரனான பேரருளாளனுடைய எந்தக்‌ கோபுரமொன்றுண்டோ- அதைச்‌ சரணமடைகிறேன்‌- என்று திருக்‌ கோபுர நாயனாரை தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளே சென்று புண்ய கோடி விமானத்தையும்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து திரு வநந்த ஸரஸ்ஸிலே நீராடி யருளித்‌ திருமண்‌ காப்பு சாத்தி யருளி
அடைவே ஆழ்வார்களையும்‌ ஸேவித்து பலி பீடத்தருகே தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளே புக்கு, சேர்ந்த வல்லி நாய்ச்சியாரையும்‌ சக்ரவர்த்தி திருமகனாரையும்‌ திருவநந்தாழ்வானையும்‌ தொழுது
ப்ரக்ஷிணமாக வெழுந்தருளித்‌ திருப்புற்றுக்குக்‌ கீழாக இளையாழ்‌ வாரை ஆம்முதல்வனிவன்‌ என்று: கடாக்ஷித்தருளிய யமுளைத்துறைவன்‌ திரு முற்றத்தையும்‌ அவரெழுந்தருளி யிருக்கிற கரியமாணிக்‌கத்தாழ்வார்‌ ஸோபாநத்தையும்‌ ஸேவித்து, பேரருளாளர்‌ பெருந் தேவியாரையும்‌
ஆகார த்ரய ஸம்பந்நாம்‌ அரவிந்த நிவாஸிநீம்‌ |
அஸேஷ ஜகதீஸித்ரீம்‌ வந்தே வரத வல்லபாம்‌ ॥

அநத்யசேஷத்வ, அநந்ய சரணத்வ, அநத்ய போக்யத்வமாகிற மூன்று ஆகாரங்களோடே கூடியவளாய்‌, தாமரை மலர்மேல்‌ நித்ய வாஸம்‌ செய்யுமவளாய்‌ எல்லா வுலகங்களுக்கும்‌ ஈஸ்வரியாய்‌ தேவப் பெருமாளுக்கு வல்லபையான பெருந்தேவியாரை அடிபணிகிறேன் -என்று அநுஸந்தித்து ஸேவித்து பங்கயத்தாள் திருவருளும் கொண்டு அங்கே பெரிய திருவடியையும் தொழுது உள்ளே
புகுந்து தானவனை வன் நெஞ்சங்‌ கீண்ட சிங்கப் பிரானையும்‌ ஸேவித்‌துச்‌ சூடிக் கொடுத்த நாய்ச்சியாரையும்‌ ஸேனை முதலியாரையும்‌ ஸேவித்து அவ்வருகே ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி ஸ்ரீ ஹஸ்திகிரீ யருகே சென்று, ‘*ஏஷதம்‌ கரிகிரீம்‌ ஸமாஸ்ரயே”‘ என்று தண்டன்‌
ஸமர்ப்‌பித்து மலையாள நாய்ச்சியாரையும்‌ ஸேவித்து, பத க்ரமத்‌திலே படிகடந்தேறி, கச்சிக்கு வாய்த்தான்‌ திருமண்டபத்திலே திருக்கச்சி நம்பி முன்னாக வரதராஜர்‌ திருவரங்கப் பெருமாள அரையருக்கு இராமானுசனைத் த்யாகம்‌ செய்தருளிய ஸ்தலமன்றோ-என்று அஞ்சலித்து, அவ் விடத்தில்‌ அநவரத ஸந்நிதி பண்ணித்‌ கொண்டிருக்கிறவர்கள்‌ புருஷகாரமாக
ஸிந்துரர்ஜஸி ரோரத்ந மிந்திரா வாஸ வக்ஷலம்‌ |
வவந்தே வரதம்‌ வேதிமேதிநீ க்ருஹ மேதிரம்‌ ॥

திருவத்தி மா மலைக்குத்‌ தலைக் கணி மணியாய்‌ அலர்மேல் மங்கை வுறை திருமார்பை யுடையனாய்‌ யாக பூமிக்கு ஸ்வாமியான வரத ராஜனை அடிபணிந்தார்‌ -என்கிற படியே புண்ய கோட்‌ யாக்யாதமான விமான மத்யத்திலே எழுந்தருளி யிருக்கிற பேரருளாளரை:
ராமாநுஜாங்க்ரி ஸரணேஸ்மி குல ப்ரதீப.
த்வாஸீத்‌ ஸ யாமுந முநேஸ்‌ ஸ ச நாத வம்ஸ்ய: |
வம்ஸ்ய.பராங்குஸ முநேஸ்‌ ஸ ச ஸோபி தேவ்யா:
தாஸஸ்தவேதி வரதாஸ்மி தவேக்ஷணிய ॥

பேரருளாளனே! அடியேன்‌ எம்பெருமானார்‌ திருவடிகளை சரணம்‌ பற்றியவன்‌; அந்த எம்பெருமானாரோ ஆளவந்தாருடைய ஜ்ஞாத பரம்பரைக் கணி விளக்கானவர்‌, அவ் வாளவந்தார்‌ தாமும்‌ ஸ்ரீமத்‌ நாதமுனிகளுடைய வம்சத்தவர்‌. அந்த நாதமுனிகளும்‌ நம்மாழ்‌வாருடைய ஜ்ஞாந பரம்பரையினர்‌, அந்த ஆழ்வாரும்‌ பிராட்டிக்‌ கடியவர்‌; இப்படி பாரம்பர்யத்தாலே அடியேன்‌ தேவரீருக்கு கடாஷிக்கத் தக்கவனாகிறேன்‌ -என்றநுஸந்தித்து தண்டன்‌ ஸமர்ப்‌பித்து, அநந்தரம்‌ திருப்பல்லாண்டையும்‌ வரதராஜ அஷ்டகத்தையும்‌ ஸ்தோத்ர கத்யங்களையும்‌ அநுஸந்தித்து மங்களாசாஸனம்‌ பண்ணி யருள , தேவப் பெருமாளும்‌, ‘நம்மிராமானுசனைப் போலே யிருப்‌ பாரோருவரைப்‌ பெறுவதே!’ என்று மிகவும்‌ க்ருபை பண்ணி தீர்த்‌த ப்ரஸாதங்களையும்‌ ஸ்ரீசடகோபனையும்‌ ப்ரஸாதித்தருளி விடை கொடுத்தருள. அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி–
தீப ப்ரகாஸ நர கேஸரி வித்ருமாப வைகுண்ட வாமந யதோக்தகர அஷ்ட பாஹுூந்‌ | அந்யாந் ஸுதா பணி பாண்டவ தூத ஹேம வர்ணாதிமாந்‌ வாகுரு:க்ரமஸஸ்‌ ஸிஷேவே ॥
ஸ்ரீ அழகிய மண்வாள குருவானவர்‌, தீப ப்ரகாசர்‌, அழகிய சிங்கர்‌,
பவழ வண்ணர்‌, வைகுண்ட நாதர்‌, வாமனன்‌ (உலகளந்தார்‌]
யதோக்தகாரி, அட்டபுய கரத்தான்‌, இவர்களையும்‌ ஸுதாகரர் ஊரகத்தான்‌, பாண்டவ தூதர்‌, ஹேம வர்ணர்‌, இவர்கள்‌ முதலான மற்றுமுள்ள எம்பெருமான்களையும்‌ முறைப்‌படி ஸேவித்தார் -என்கிற படியே-நிறைந்த சீர்‌ நீள்‌ கச்சியிலுண்டான திருவெஃகா முதலான திருப்பதிகளையும்‌ திருவடி தொழுது

நாயனார் ஸ்ரீ பெரும் பூதூரேற எழுந்தருதளுல்‌-அநந்தரம்‌;,
யதீந்ரத் ஜநநீம் ப்ராப்ய புரீம்‌ புருஷ புங்கவ: |
அந்த.கிமபி ஸம்‌ பஸ்யந் நத்ராக்ஷீல் லஷ்மணம்‌ முநிம்‌ –

ஆண்களின்‌ சிறந்தவரான அழகிய மணவாளர்‌ யதிராஜரின்‌ அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்பூதுரை யடைந்து ஊரிலுள்ள சிறப்‌புக்களைக்‌ கண்டு களித்துக்‌ கொண்டு சென்று இளையாழ்வாரை ஸேவித்தார்‌-என்கிறபடியே ஸ்ரீ பெரும்பூதூர் ஏற வெழுந்தருளி ஊரருகே நின்று
இதுவோ பெரும்‌ பூதூர்‌? இங்கே பிறந்தோ
எதிராச ரெம்மிடரைத்‌ தீர்த்தார்‌? – இதுவோ தான்‌ :
தேங்கும்‌ பொருநல்‌ திருநகரிக் கொப்பான
ஓங்கு புகழுடைய வூர்‌
-என்று ஊரை யநுபவித்து ஊரிலே ப்ரவேசித் தருளி, ‘
எந்தை எதிராச ரெம்மை யெடுத்தளிக்க
வந்த பெரும்பூதூரில்‌ வந்தோமோ!–சிந்தை
மருளோ? தெருளோ? மகிழ் மாலை மார்பன்‌
அருளோ விப் பேற்றுக் கடி-
-என்று அலாப்ய லாபமாக ப்ராப்ய கெளரவத்தை யநுஸந்தித்து வித்தரா யுள்ளே புக்கு, ஆண்டுகள்‌ நாள்‌ திங்களாய்‌ (இரா-31) என்று தொடங்கி இராமானுசனைப்‌ பொருந்தினமே என்று விஸ்மித ஹருதயராய்‌ ஸேவித்து,

என்னெஞ்சே! எங்களிராமானுசனென்‌னும்‌
நன்னெஞ்சே! நல்லை காண்‌, இன்னுமின்னும்‌
பெரும்பூதாரென்னாய்‌ போரப்‌
பெரும் போகமெல்லாம்‌ பெற
— என்று
ஸஹ்ருத யநுபவம்‌ பண்ணி சரம பர்வத்திலே நிலை நின்று ஸேலித்து, இராமனுசனிணையடிகளை அடைந்து ‘யோ நித்யம்‌” என்று தொடங்கி ‘ ராமாநுஜஸ்ய ஸரணென ஸரணம்‌ ப்ரபத்யே-என்று அநுஸந்தித்து தண்டன் ஸமர்ப்பித்து எதிராஜன்‌ வடிவைத்‌ தன்‌ கண்ணுள்ளும்‌ நெஞ்சுள்ளும்‌ நின்று நீங்காதபடி நிலை நிறுத்திக்‌ கொண்டு தீர்த்த ப்ரஸாதங்களும்‌ பெற்று -சீராரும்‌
எதிராசர்‌ திருவடிகள்‌ வாழி என்று தொடங்கி, ‘ தேவரீர்‌ நித்ய மங்களராய்‌ வாழ்ந்தருள வேணும்‌’ என்று மங்ளாசாஸனம்‌ செய்தருளி, ஸ்ரீபாஷ்ய ஸ்ரவணத்துக்கு உடையவரநுமதி கொண்டு -ஸ்ரீபாஷ்யத்துக்கு அநுமதி கொண்டு -அநந்தரம்‌ கோயிலிலே யெழுந்தருளியிருக்க, ராத்ரி ஸ்வப்நத்திலே எம்பெருமானாரெழுந்தருளி நாயனாரை அழைத்தருளி ஸ்ரீபாஷ்ய கோசத்தை ஸாதித்து, “நாமே உமக்குப்‌ பெருமாள் கோயிலிலே ஸ்ரீ பாஷ்யம் சாதிக்கிறோம் -கிடாம்பி நாயனார் பாடேறேச் செல்லும் நமக்கும்‌ திருவாய்மொழிப் பிள்ளைக்கும்‌ ப்ரியமாக வாசித்து பின்பு அருளிச்செயல்‌ வ்யாக்யானங்களையே பஹுமுகமாக ப்ரவர்த்திப்பியும்‌’” என்று அருளிச் செய்கையாலே,
ராமாநுஜயதி பணித ஸ்ரீபாஷ்யார்த்த ஸ்ரவணத்திலே ஸ்ரத்தையுடைராய்‌ மீண்டு பெருமாள்‌ கோயிலேற வெழுந்தருளி:

நாயனார்‌ கிடாம்பி நாயனார் பாடே ஸ்ரீ பாஷ்யம் கேட்டது
அங்கே கிடாம்பி யாச்சான்‌ திருவம்ஸ்யரான கிடாம்பி நாயனாரை ஸேவித்து (அவர் பக்கலிலே ஸ்ரீபாஷ்யம்‌ ஸேவித்தருளி, பேரருளாளரையும்‌ ஸேவித்து, சிறிது காலம்‌ எழுந்தருளி யிருந்து ஸ்ரீபாஷ்யம்‌ அநுஸந்தித்துத்‌ தலைக்கட்டினவாறே –செந் தமிழும்‌ வட கலையுந்‌ திகழ்ந்த நாவர்‌ என்கிறபடியே உபய வேதாந்தாசார்யராய்‌ வேதாந்த லிழுப்‌ பொருளின்‌ மேலிருந்த விளக்கை விட்டுசித்தன்‌ விரித்தனன்‌ என்கிறபடியே தந் முகேந பேரருளாளருடைய வைபவத்தை ப்ரகாசிப்பித்துக்‌ கொண்டு, தேவ ராஜரை ஸேலித்து அவரநுமதி கொண்டு, அங்குண்டான தர்ஸந க்ரந்தங்களை எடுப்‌பித்துக் கொண்டு கோயிலேற எழுந்தருளினார்‌)அங்கே ஸ்ரீபாஷ்யம்‌ கேட்டருளா நிற்க,கிடாம்பி நாயனாருக்கு ஸஹ பாடியாயிருக்கிற ஐயைகளப்பாவும்‌ செல்வ நாயனாரும்‌ போர ஆதரித்து வைத்துக் கொண்டு பாடம்‌ நடத்த அப்பா, நாயனாருடைய வாசகதாடியையும்‌ க்ரஹண தாரண வாகவ்யவஹார சாதுர்யததையும்‌ கண்டு போர வித்தராய்‌ (கிடாம்பி )நாயனாரைப் பார்த்து, இவருடைய புத்திக்கநுகுணமாக ஸாதிக்‌க வில்லையே” என்ன, நாயனாரும்‌ அப்பாவை, நாளை இவருக்கு சிந்தனை பண்ணுவியும்‌’? என்று ஸாபிப்ராயமாக ஒரு வார்த்தை யருளிச் செய்ய, அப்பா, அதி நிபுராகையாலே’ பிற்றை நாள்‌ தொடங்கி நாயனாருக்கு சிந்தனை பண்ணுவிப்பதற்கு எழுந்தருளி யிருக்க, நாயனாரும்‌ ஸஹஸ்ர முகமாக உபன்யஸிக்கக் கண்டு ஐயைகள்‌ ‘ப்ரஸாதித்த அர்த்தங்கள்‌ ஒன்றும்‌ தப்பாமல்‌ பின்னையும்‌ போஷித்து விசேஷார்த்தங்களுடனே ஸாதித்தருளினீர்‌’- என்று அதிலே ஹர்ஷ யுக்தராய்‌ நெடும் போது பரவசராயிருக்க,-இத்தைக் கேட்டு கிடாம்பி நாயனாரும்‌ ஆங்கே யெழுந்தருள, அவர்‌ சிஷ்யர்களான வித்வஜ் ஜநங்கள்‌ நாயனாரோடே தர்க்கிக்க வேணு மென்றபேக்ஷிக்க, நாயனாரும்‌, ”நமக்கு இதர சாஸ்த்ர வ்யவஹாரத்துக்கு ஆசார்ய வாக்ய நிரோதமுண்டு” என்று அப்பாவுக்கு அருளிச் செய்ய, அப்பாவும்‌, “இவர்களும்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களன்றோ? இவர்களோடு ப்ரஸங்கித்தால்‌ ஸ்வரூப விரோதம்‌ வராது, அவர்‌களபிநிவேசத்தைச்‌ செய்தருள வேணும்‌’? என்றருளிச் செய்து அவர்களை முன்னே கொணர்ந்து விட, அவர்களுக்குத் தக்கதாக தர்க்க சப்த மீமாம்ஸைகளிலே பஹுமுகமாக உபந்யஸித் தருளின வளவிலே எல்லாரும் வித்தராய்‌ திருவடிகளிலே தீர்க்‌க ப்ரணாமம்‌ பண்ணிப்‌ புறப்பட்டு நாயனார் பாடே சென்று, ,’நாயனாரை இத்‌தனை நாளும்‌ ஸாதாரணமாக எண்ணி யிருந்தோம்‌; அவரிடத்திலே ஸகல சாஸ்த்ரங்களும்‌ ஒருமிடறு செய்திருக்கின்‌றன!” என்று ஆச்‌சர்யப்பட, ‘அவர்‌ ஒரு அவதார லிசேஷங் காணுங்கோள்‌”” என்று அருளிச் செய்து விட்டு அவரைக் கொண்டு அருளிச் செயல்‌ வ்யாக்‌யானங்களை ப்ரவர்த்திப்பிக்கத திருவுள்ளமாய்‌, பின்பு அதி த்வரை யுடனே ஸ்ரீபாஷ்யம்‌ நடத்திக்கொண்டு போர, நாயனார்‌ பல காலும்‌ ஈடு முப்பத்தாறாயிரப்படியை உருச் சொல்லிக்‌ கொண்டு போருகிறதைக்‌ கண்டு ஆச்சர்யப்பட்டு, ஒருவரு மறியாமல்‌ ஏகாந்‌தத்திலே நாயனார்‌ பாடே சென்று “முப்பத்தாறாயிரப்‌ பெருக்கர்‌’- என்று உமக்குத்‌ திருநாமஞ் சாத்தினது வெறுமனன்று; இந்த புத்தி ஸாமர்த்யம்‌ எங்குங் கண்ட தன்று; நமக்கொரு மநோ ரதமிருக்கிறது-அவஸ்யம்‌ செய்ய வேணும்‌’- என்று மறுக்க வொண்ணாதபடி அநுவர்த்திக்க, நாயனாரும்‌ இதுக்கென்‌ செய்வோ மென்று சிந்தித்துக் கொண்டு ஏதென்று கேட்க நாயனாரும்‌, ‘*தேவரீர்‌ அவதார விசேஷமென்று நிச்சயமாக வறிந்தேன்‌; எனக்கு அத்தை யொளிக்க வேண்டா. உள்ளபடி காட்ட வேண்டும்‌” என்றருளிச் செய்ய-ஆகில்‌ ஆசார்யராகிய தேவரீருக்கு ஒளிக்க ஒண்ணாதே; பெரிய பெருமாளுடைய ரஹஸ்ய நியோகத்தை’ ஒருவருமறிய வேண்டா: என்று விண்ணப்பஞ்‌ செய்து கொண்டு ஏகாந்த ஸ்லத்திலே மங்கள தீபத்தை ஸ்ப்புரித்து, ”அஞ்சாமலிருக்க’ வென்று விண்ணப்பஞ்‌ செய்து, அஹிபதி நிஜாகாரத்தைக்‌ காட்டக் கண்டருளி பீதி யுக்தராய்‌ – இத்தை உப ஸம்ஹரிக்க வேணும்‌ – என்றபேஷிக்க” உபஸம்‌ஹரித்து எப்போதும் போலே நாயனா ரெழுந்தருளி யிருக்கக் கண்டு விசேஷ ப்ரதி பத்தி யுடனே அத்யாதரம்‌ பண்ணிக் கொண்டு தேவ ரஹஸ்யம்‌ நடத்திக் கொண்டு நாடோறும்‌ அமுது செய்தருளின படியையும்‌ ஆராய்ந்து கொண்டு :திருமேனி ளெஎகுமார்யத்திற்கு அநுரூபமாம்படி பண்ணிக் கொண்டு வாரும்‌-என்று அடிக்கடி யருளிச் செய்து கொண்டு ஸ்ரீபாஷ்யம்‌ தலைக் கட்டி யருளும்படி தம்முடைய திருமாளிகையிலே கறக்கிற பசுவின் பாலை ஸாவதானமாகத்‌ திருத்தி நாயனார்‌ அமுது செய்யும்‌ படிக்கு ஸாதித்து உகப்புடனே ஸ்ரீபாஷ்யம்‌ நிறைவேற்றி “செந்தமிழும்‌ வடகலையுந்‌ திகழ்ந்த நாவர்‌ என்கிறபடியே உபய வேதாந்‌தாசார்யராய்‌ வேதாந்த விழுப் பொருளின்‌ மேலிருந்த விளக்கை விட்டு சித்தன்‌ விரித்தனனே -என்கிறபடியே தந் முகேநே பேரருளார்‌ வைபவத்தை ப்ரகாஸிப்‌பித்துக் கொண்டு (ஓராண்டு காலம்‌ யதோக்தகாரி ஸந்நிதியில்‌ ஸ்ரீபாஷ்யமும்‌ பகவத் விஷயமும்‌ ஸாதித்தருளினதாகவும்‌ அது காரணமாகவே அந்த ஸந்நிதியில்‌ மணவாள மா முனிகள்‌ உபதேச ஹஸ்த முத்ரையுடன்‌ ஸேவை ஸாதிப்பது என்றும்‌ பெரியோர்கள்‌ பணிக்கக்‌ கேட்டிருக்கை )அங்கே சில நாளெழுந் தருளி யிருந்து:-அநந்தரம்‌ அங்குண்டான பகவத் விஷய ஸ்ரீ கோசங்களை யெடுப்பித்துக் கொண்டு கோயிலிலே யெழுந்தருள-

தத: ப்ரதிநிவ்ருத்தம் தம்‌ புருஷோ புஜ கேஸய: | ப்ரத்யுத் கம்ய ப்ரபுஸ்ஸ்வைரம்‌ புந . ப்ராவேஸ யத்புரம்‌ ॥
பின்னர்‌ அரவணையில்‌ பள்ளியானான ஸ்ரீரங்கதாதன்‌ திரும்பவும்‌ எழுந்தருளின அவ் வழகிய மணவாளப்‌ பெருமாளை எதிர்‌ கொண்டு, தம்மிஷ்டப் படியே மீண்டும்‌ திருவரங்கத்தில்‌ ப்ரவேஸிப்‌பித்தார்‌-என்கிறபடியே பெருமாளாலே ப்ரத்யுத்கதராய்‌க் கொண்டு திருவரங்கப்‌ பெரு நகரிலே ப்ரவேஸித்துப்‌ பெருமாளை ஸேவித்தருள, பெருமாளும் போர வுகந்தருளி தீர்‌த்த ப்ரஸாதங்கள்‌ ப்ரஸாதித்து,
நித்யம்‌ ரங்கே நிவாஸய ப்ரார்த்தித: பணி ஸாயிநா ;
பஸ்யந்‌ பதாம் புஜம்‌ தஸ்ய பாலயாமாஸ ஸாஸநம்‌ ॥

இந்த வரங்கத்தே இனிதிரும்‌*” என்று ஸ்ரீ ரங்கஸாயியான பெருமாளால்‌ ப்ரார்த்திக் கப்பட்டவராய்‌ அழகிய மணவாளப் பெருமாளுடைய திருவடிகளை ஸேவித்துக்‌ கொண்டு அந்த நியமனதைப்‌ பரிபாலித்தார்‌ -என்கிறபடியே, ”இங்கேயே நித்ய வாஸம்‌ பண்ணும்‌” என்று நியமித்தருள, இவரும்‌ அப்படியே ஸம்மதி பண்ணி யெழுந்தருளி யிருக்க, அங்குண்டான பெரியோர்‌களெல்லாரும்‌ “தேவரீர்‌ இங்கே பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணிக்‌ கொண்டு எழுந்தருளி யிருக்க வேணும்‌” என்று ஆதரிக்க, அப்படியே -இன்பமிகு பெருங்குழுவுடனே யெழுந்தருளியிருக்க இசைந்து,
ஸ்ரீமத் ரங்கம்‌ ஐயது பரமம்‌ தாம தேஜோ நிதாநம்‌
பூமா தஸ்மிந்‌ பவது குஸலீ கோபி பூமா ஸஹாய: |
திவ்யம்‌ தஸ்மை திஸது விபவம்‌ தேஸீகோ தேஸகாநாம்‌
காலே காலே வரவரமுநி கல்பயந்‌ மங்களாநி ॥

பிறரை வெல்லும்‌ ஆற்றலுக்கு உயர்ந்த ஸ்தானமாய்‌, நித்ய ஸ்ரீயுடலன் கூடியதாய்‌ ஸ்ரீரங்கம்‌ என்கிற மேலான திவ்ய தேசமானது நன்றாக விளங்கட்டும்‌; அங்கு ஸ்ரீதேவி பூதேவிகளோடு கூடிய அநிவாச்யனான பெரிய பெருமாள்‌ பாங்காக எழுந்தருளி யிருக்க வேணும்‌; ஆசார்யர்களுக்கெல்லாம்‌ முதல்வரான வரவர முநி அநுதிமும்‌ மங்களாசாஸனங்களைப்‌ பண்ணிக்‌ கொண்டு அப் பெருமானுக்கு ஸ்ரேஷ்டமான வைபவங்களை உண்டாக்‌க வேணும்‌- என்று காலகாலங்களிலே மங்களாசாஸநம்‌ பண்ணி யருள அத்தாலே *அரங்கர் தஞ்சீர்‌ தழைப்ப என்கிற படியே பெரிய பெருமளுடைய திருச்செல்வம்‌, சிறந்த செல்வம்‌ மல்கி என்றும்‌ நீங்காத செல்வம்‌ நிறைந்து என்றும்‌ ஸம்ருத்தமாயிற்று-

நாயனார்‌ ஸந்யாஸாஸ்ரமம்‌ ஸ்வீகரித்தல்
அக் காலத்திலே பெருமாளுடைய ஸேவைக்கு விருத்தமான ஒரு ஆசெளச விசேஷத்தைத்‌ தெற்கினின்றும்‌ சிலர் வந்து விண்ணப்‌பஞ் செய்யக்‌ கேட்டருளி தென்னரங்கள்‌ கழல்‌ சென்னி வைத்துத்‌தானதில்‌ மன்னி யிருக்கிற தமக்கு தத்‌ விஸ்லேஷம்‌ அத்யந்தம்‌ துஸ் ஸஹமாய்‌ த்வத் பாத பத்ம ப்ரவணாத்ம வ்ருத்தேர்பவந்தி ஸர்வே ப்ரதி கூல ரூபா:” -தேவரீருடைய திருக் கமல பாதங்களில்‌ ஈடுபாடுள்ள மனமுடையவனுக்கு எல்லாம்‌ விரோதிகளாகவே ஆகின்றன-என்கிறபடியே பகவதநுபவ விரோதிகளான பரிகரங்‌களெல்லாம்‌ அத்யத்தம்‌ ப்ரதிகூலங்களா யிருக்கின்‌றன வென்று அறுதி யிட்டு அப்போதே தமக்கு ஸப்ரஹ்மசாரியான சடகோப ஜீயர்‌ ஸத்நிதியிலே யெழுந் தருளி
சந்தம்‌ தஸ்யைஷ விஜ்ஞாய நந்தந் நந்தந்‌ நிரந்தரம்‌ |
ஸர்வம்‌ ஸங்கம்‌ பரித்யஜ்ய துங்கம்‌ ப்ராவிஸதாஸ்ரமம்‌ ॥

இவ் வழகிய மணவாள நாயனார்‌ அந்த சடகோப ஜீயருடைய திருவுள்ளக்‌ கருத்தை யறிந்து மிகவும்‌ ௨கந்துகந்து, ஸர்வ ஸம்‌பந்தங்களையும்‌ விட்டு விட்டு உயர்ந்தான ஸந்நியாஸாஸ்ரமத்தில்‌ ப்ரவேசித்தார்‌-என்கிறபடியே ஸர்வஸங்க பரித்யாக பூர்வகமாக ஸந்யஸித்தருளி, த்ரி தண்ட காஷாயங்களை அவர்‌ திருக் கைகளாலே ஸாதிக்க தரித்தருளி துரீயாச்ரமத்தை யடைந்து அதற்கு அநுகுணமாக ‘சடகோப ஜீயர்‌” என்று பிள்ளை திரு நாமத்தை யுடையராய்‌, அற்ற பற்றராய்‌, பற்றிலார்‌ பற்ற நின்ற பெருமாள்‌ திரு முன்பே யெழுந்தருளி ஸேவித்து,
மங்களம்‌ ரங்க துர்யாய நம: பந்நக ஸா யிநே |
மங்களம்‌ ஸஹ்ய ஜாமத்யே ஸாந்நித்ய க்ருத சேதஸே ॥

ஸ்ரீ ரங்கநாதனுக்கு மங்கள முண்டாக வேணும்‌. அரவணை மேல் துயிலும்‌ பெருமாளை அடி பணிகிறேன்‌. உபய காவேரி மத்யத்தல்‌ நித்ய ஸாந்நித்யம்‌ பண்ணி யிருப்பதில்‌ நிலைத்த திருவுள்ளமுடைய பெருமாளுக்கு மங்களமுண்டாகுக-என்று மங்களாசாஸநம்‌ பண்ணிக்‌ கொண்டெழுந்தருளி நிற்க, பெருமாளும்‌ இவரை ஆதரித்தருளி, தம்முடைய திரு நாமமான முந்தின திருநாமத்‌தையே முடிய நடத்த வேணுமென்‌றருளிச் செய்து, ”உமக்கு பல்‌லவராயன்‌ மடத்தை ப்ரஸாதிக்கிறோம்‌; யாவச் சரீர பாதம்‌ எம்பெருமானாரைப்‌ போலே இங்கே இரும்‌” என்று நியமித்தருளி, எம்‌பெருமானார்‌ காலத்தில்‌ கந்தாடை யாண்டான்‌ தம்முடைய ஆசார்‌யரான ஆட் கொண்ட வில்லிஜீயர்‌ எழுந்தருளியிருக்கும்‌ படி மடமாக்கி, அவருடைய திருவராதனமான என்னைத் தீமனங்‌ கெடுத்‌தார்க்கு மத்யாஹ்ந கால அவஸரத்திலே அமுது செய்யப்‌ பண்ணும்‌ படி பெருமாள்‌ ஸந்நிதியிலே நித்யம்‌ ஒரு தளிகையும்‌ திருவிளக்கு நெய்‌ முதலியவையும்‌ நடக்கும்படி பொலிவிட்டு நடந்து வந்ததாயும்‌, சில நாள்களுக்குப்‌ பின்பு முதலியாண்டான்‌ திருவம்‌சத்தார்‌ பரஸ்பர விவாதத்தாலே ஸ்ரீபண்டாரத்தில்‌ சேர்த்ததாயும்‌ பூர்வ காலத்திலே அதி விலஷணமான ராமாநுஜ கூடம்‌ பல்லவராயன்‌ நடத்தின படியாலே பல்லவராயன்‌ மடமாயிற்று;

திருவாராதநமும்‌ என்னைத் தீ மனங்கெடுத்தார்‌, என்று திருநாமம்‌; அந்த மடத்தையும்‌, திருவாராத நத்தையும்‌ ப்ரஸாதித்து மிகவும்‌ க்ருபை பண்ணி யருளி நிஸ்ருஷ்டாத்மா ஸுஹ்ருத்ஸுச:-நண்பர்களிடத்தில்‌ தம் பொறுப்பை வைத்தவர்‌-என்கிறபடியே தாமும்‌ அவ் விடத்திலே ந்யஸ்த பரராய்‌ தீர்த்த ப்ரஸாதங்களையும்‌ ப்ரஸாதித்து, பரிவட்டம்‌ ஸ்ரீசடகோபன்‌ ப்‌ரஸாதித்து ‘-நம்முடைய அழகிய மணவாள ஜீயரை மடத்திலே விட்டு வாருங்கோள்‌-என்று உத்தம நம்பி முதலான அனைத்துப்‌ பரிகரத்தையும்‌ இவர்‌ பின்னே அனுப்பி யருள, அவர்களும்‌ அப்படியே ஸேவித்துச்‌ கொண்டு போய்‌ மடத்தில்‌ யெழுந்தருளப்‌ பண்ணி, அடியார்கள்‌ வாழ, அரங்க நகர் வாழ…….. மணவாள மா முனியே இன்னு மொரு நாற்றாண்டிரும்‌ என்று ஸேலித்து மீண்டார்கள்‌.
பின்பு மடம்‌ முழுவதையும்‌ வான மாமலை ஜீயர்‌ முதலான முதலிகளைக்‌ கொண்டு செப்பமிடுவித்து, ‘திருமலையாழ்வார்‌” என்று திருவாய்மொழிப் பிள்ளை பெயராலே யொரு வியாக்கியான மண்டபத்தையு (காலக்ஷேப கூடம்‌) முண்டாக்கி பிள்ளை லோகாசாரியர்‌ திருமாளிகையிலிருந்து ரஹஸ்யம்‌ விளைந்த மண்ணால்‌ தாம்‌ எழுந்தருளியிருக்கிற இடத்திற்கு மண் காப்புச்‌ சாத்துவித்து அவ்விடத்தை குருகுல ஸமமாகவே எண்ணி, ஸ்வாசார்ய பாத பங்கஜ த்வந்த்வச்சாய மத்யே ஸுகாஸீநராய்‌ இனிதமர்ந்து வியாக்யானித்துக்‌ கொண்டெழுந்தருளி யிருந்து, பிள்ளை நம்மாழ்வார்‌ திரு நாமத்தாலே விளங்கி யருளினாப்‌ போலே தாமும்‌ நம் பெருமான்‌ திரு நாமத்‌தாலே மிகவும்‌ விளங்கி யருளினார்‌. இப்படி ‘ரங்க மங்கள துர்யாய ரம்ய ஜாமாத்ரு யோகிநே ”’ ஸ்ரீரங்கத்துக்கு மங்களாசாஸன பரரான மணவாளமாமுனிகளுக்கு மங்களமுண்டாகுக- என்னும்படி கோயிலுக்கு மிசவும்‌ மங்களாசாஸன பரராய்‌ எழுந்தருளி யிருக்கும் நாளிலே,

ஆசாரஜ்ஞாந வைராக்ரை ராகாணே ச தாத்ரும: |
ஸ்ரீமாந்‌ ராமாநுஜஸ் ஸோயமித்யாஸம்‌ ஸந்‌ மித.ப்ரஜா:

ஆகாரத்தினாலும்‌, ஆசாரம்‌, ஜ்ஞாநம்‌, வைராக்யம்‌ இவற்றினாலும்‌, எம்பெருமானாரைப்‌ போலலே இந்த மணவாள மா முனிகளும்‌ உள்ளமையால்‌ ஸ்ரீமானான அந்த ராமாநுஜ முனிவரே இவர்‌ என்று ஜனங்கள்‌ பரஸ்பரம்‌ புகழ்ந்து பேசினர்‌ -என்னும்படியான திருவரங்கள்‌ திருமுற்றத் தடியவ ரெல்லாரும்‌ ‘இவர்‌ எம்பெருமானார்‌ அவதாரம்‌” என்று அறுதியிட்டு இவர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்து அத்யந்தம்‌ விலஷணராய்‌, ‘ பரமந போநிவாஸ பணி புங்கவ ரங்க பதேர் பவந மிதம்‌ ஹிதாய ஜகதோ பவதா அதிகதம்‌”” (பரமபதத்‌தில்‌ எழுந்தருளி யிரா நின்ற திருவநத்தாழ்வானே! இந்த அழகிய
மணவாளனுடைய வாஸஸ்தானமான இத் திருவரங்கமானது தேவரீரால்‌ லோக ஷேமத்தின்‌ பொருட்டு அடையப்பட்டது-என்றும்‌
வன் பெரு வானகமுய்ய, அமரருய்ய, மண்ணுய்ய மண்ணுலகில்‌
மனிசருய்ய, துன்பமிகு துயரகல, அயர்வொன்றில்லாச்‌ சுகம்‌ வளர
அக மகிழுந் தொண்டர்‌ வாழ அன்பொடு தென் திசை நோக்கப்‌பள்ளி கொள்ளும்‌
(பெரு திரு 1-10) பெரிய பெருமாள்‌ ஐகத் ரக்ஷணார்த்தமாக இங்கே யெழுந்தருளினாற் போலாயிற்று இவர்‌ இங்கே எழுந்தருளினது என்று மிகவும்‌ ஆதரித்துக் கொண்டு போந்தார்கள்‌.

திருமஞ்சந அப்பாவும்‌ பட்டர் பிரான்‌ ஜீயரும்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
இப்படி எழுந்தருளி யிருக்கிற காலத்திலே ஜீயர்‌ அருணோதயத்‌துக்குத்‌ திருக் காவேரியில்‌ நீராட எழுந்தருளுவர்‌; அக் காலத்திலே அத்யந்தம்‌ ஸத்வ நிஷ்டராய்‌ பெருமாள்‌ ஸந்நிதியிலே அநந்ய ப்ரயோஜனராய்‌ கைங்கர்யம்‌ பண்ணிப் போருகிற திருமஞ்ஜநம்‌ அப்பா வென்றொருவர்‌ கூடவே சென்று ஜீயர் நீராடுகிற ஸ்தானத்‌திற்குப்‌ பின்பே யிருந்து அந்த ப்ரவாஹ தீர்த்தத்தில்‌ தப்பாமல்‌ நீராடிக்‌ கொண்டு போக அவருக்கு ஞாநோதயமாய்‌ ஜீயர்‌ திரு வடிகளிலே நிரவதிக ப்ராவண்யமுண்டாய்‌ ஆஸ்ரயித்துக்‌கு க்ருதார்த்‌தரானார்‌. இந்த அர்த்தத்தை
உஷஸ்யயம் வாரிணி ஸஹ்யஜாயா: ஸ்நாதோ யதீந்த்ர ப்ரவணோ முநீந்த்ர: |
தத்ரைவ பஸ்சாதவ காஹ்ய தீர்த்தே ஸ்ரீ தீர்த்தாதாதஸ்‌ கமுபாஸரி தோபூத்‌ ॥

உஷ: காலத்தில்‌ யதீந்த்ர ப்ரவணாரான மா முனிகள்‌ நீராடிய காவிரி ப்ரவாஹத்தில்‌ பின்னர்‌ அமிழ்ந்தாடின திருமஞ்சனம்‌ ௮ப்பா அவரிடம்‌ ப்ராவண்யமுடையராய்‌ அவரை(மாமுனிகளை) ஆஸ்ரயித்‌தவரானார்‌] என்று அநுஸந்தித்தார்கள்‌. அப்பாவும்‌ ஜீயர்‌ திருப்‌ பவளத்தாலே ஸகலார்த்தங்களையும்‌ ஸ்ரவித்து, ”சாயா வாஸத்வ மநுகச்சேத்‌ –நிழலுறடிதாறுமா னோம்‌ என்கிறபடியே சாயாவத்‌ பரதந்த்‌தரராய்த்‌ திருவடிகளைப்‌ பிரியாமல்‌ அங்குத்தைக்கு அந்தரங்கராய்‌ எழுந்‌தருளி யிருத்தார்‌
(தீர்த்த தாதஸ் –திருமஞ்சனம் அப்பா)

அநந்தரம்‌ ‘கோவிந்த தாஸரப்பர்‌” என்னும்‌ நிரூபகத்தை யுடையவரான பட்டர்‌ பிரான் ஜீயர்‌, திருவடிகளிலே வந்து ஆஸ்ரயித்து தத் பாத பத்ம ஸேவைகதா ரகராய் ஸேலித்துக் கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌-கோவிந்ததாதர்‌–பட்டர்பிரான்‌ ஜீயர்‌ மாமுனிகளின்‌ அஷ்ட திக் கஜங்கனில்‌ ஒருவரானர்‌; பட்டர்‌ பிரான்‌ ஜீயர்‌ வந்து தண்டமிழோர்‌ மன்னு புகழ்‌ தொண்டை மண்டலத்தில்‌ வந்துதித்து தன்னுடைய வாசாரம்‌தப்பாமல்‌ இந்நிலத்திலாசரிததுக் காட்டி, யரங்கத்தே சென்று புகுந்து ஈஸரவணை மேல் எம் பெருமான்‌ வாச மலர்த்தாள்‌ பரவும்‌ மணவாள யோகி மலர்த் தாள்‌ தனிலிறைஞ்சி நண்ணி நில மேல்‌ சிச்சனாகாரம்‌ தெரிவிப்போம்‌’” என்று வந்த கோவிந்ததாதன்‌–என்கிறபடியே மணவாள மாமுனியை யாஸ்ரயித்து, *கோவிந்‌ தாஹ்வாநபாயிநீ’ என்கிறபடியே எம்பாரைப் போலே இவரும்‌ அவருக்கு நிழலுமடி தாறும்‌ போல வரவர முனி சரணத்தை அரை க்ஷணமும்‌ பிரிய க்ஷமரன்றிக்கே பிரியா வடிமை செய்து தத்பாத ஸேவைகதாரகராய்‌ வாழ்ந்து கொண்டிருந்தார்‌

அதன் பின்பு மணவாள மாமுனியும முகில்வண்ண்னடி மேல்‌ சொன்ன சொல் மாலையாயிரம்‌ என்றும்‌ மதிளரங்கர்‌ வண்‌புகழ்‌ மேலான்ற தமிழ்‌ மறைகளாயிரம்‌ என்றும்‌-இப்படி பெரிய பெருமாள்‌ விஷயமாக ப்ரதி பாதிக்கப்படுகிற திருவாய்மொழியினுடைய ஈடு முதலான வ்யாக்யானங்களையும்‌ மற்றுமுண்டான ஆழ்வார்கள்‌ அருளிச்‌ செய்த வ்யாக்யானங்களையும்‌ வ்யக்தமாக ப்ரஸாதித்திக்‌ கொண்டும்‌, ஸ்ரீவசந பூஷணாதி திவ்ய ரஹஸ்ய தாத்பர் யங்களையும்‌ தர்சிப்பித்துக் கொண்டும்‌ ராமாநுஜார்ய வசகராய்‌ நாடோறும்‌ ஸேவித்துக்‌ கொண்டும்‌ குரோர்‌ நாம ஸதா ஜபேத்‌”, என்று எம்பெருமானார்‌ திருநாமமாய்‌-சயந்தரு கீர்த்தியாய்‌-ஸ்ரீவைஷ்ணவ காயத்ரியான நூற்றந்தாதியை ‘அநவரதம்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டும்‌ ”வகுள பூஷண வாகம்‌ருதாராநம்‌” என்று தொடங்கி தம்முடைய அபேக்ஷிதங்களையும்‌ அவர்‌ திருவடிகளிலே நித்யமாக ப்ரார்த்திக்‌ கொண்டும்‌ தத் ப்ரஸாதைக தாரகராய்‌ தத்‌ வைபவத்தை ப்ரகாசித்துக்‌ கொண்டும் அஸத்ருச வைபவராய்‌ திருமாலை யாழ்வாருடைய அடி நிழலிலே (தத்‌ ப்ரஸாததைக ப்ரயோஜநராயிருக்க, ஸ்ரீபாதத்து முதலிகள்‌ தப்பா மறை மொழியானெதிராசன்‌ தண்டாமரைத்‌ தாள்‌, இப்பாரிடந்தனிலிட்டு வைத்த தனமிதன, வைப்பாகிய மனத்தான்‌ மணவாள மா முனியை இனி ஒப்பார்களில்லை உலகேழிலும் உம்பரிலுமே என்று உபய விபூதியிலும்‌ இவர்‌ அஸத்ருஸ வைபவ யுக்தராய்‌: தேசந் திகழ எழுந்தருளி யிருக்கிற காலத்திலே பெரிய பெருமாளுடைய நியமானத்தாலே தமக்குத்‌ திருவாராதனமாக ஸ்ரீரங்தராஜரை எழுந்தளருப்‌ பண்ணி வைத்துப்‌ பிள்ளை லோகாசாரியருடைய திருநஷத்ரமான ஐப்பசி மாஸம்‌ திருவோணத்‌ திரு நன்னாளிலே திரு ப்ரதிஷ்டையுங்‌ கொண்டருளப்பண்ணி, தமது திருக் கைகளாலே ஆராதநமுஞ்‌ செய்து ‘ ஐந்மர்க்ஷே ஸ்ரவணோபி வா” என்றும்‌ நீ பிறந்த திருவோணம்‌ என்றுஞ்‌ சொல்லுகிற படியே பிள்ளை லோகா சாரியர்‌ திரு நக்ஷத்ரமான திருவோணம்‌ முதலான மற்றுமுள்ள ஆசாரியர்கள்‌ திரு நக்ஷத்ரங்களையும்‌ *செந்தெலரிசி சிறுபருப்புச்‌ செய்த வக்காரம்‌ நறு நெய் பாலால்‌ பன்னிரண்டு திருவோணமட்டேன்‌ (பெரியா திரு, 2-9-7) என்கிறபடியே அக்கார வடிசிலாலே அமுது செய்தருளப்‌ பண்ணிப் பரிபாலித்துக் கொண்டும்‌ பூர்வாசாரியர்களுடைய வசநாநுஷ்டானங்களையும்‌ தம்முடைய உக்த்யநுஷ்டாநங்களாலே ப்ரகாசிப்பித்துக் கொண்டும்‌ ஸ்ரீரங்கஸ்ரீக்கு மங்கள தீபம்‌ போலே எழுந்தருளி யிருந்தார்‌.(விசத வாக் ஸிரோமணி –பிரமாணத் திரட்டு அருளிச் செய்து -)

இப்படி திசை விளக்காய்‌ நிற்கிற திருவரங்கத்திலே திக்குற்ற கீர்த்தி யிராமனுசனைப் போலே
சிர விரஹதஸ் சிந்தா ஸந்தாந நஜர்‌ ஜர சேதஸம்‌ புஜக ஸயநம்‌தேவம்‌ பூய! ப்ரஸாதயிதும்‌ த்ருவம்‌ |
யதிகுலபதிஸ்‌ ஸ்ரீமான் ராமாநுஜஸ் ஸம பூதயந்த்விதி ஸமதுஷக்‌ ஸர்வே ஸர்வத்ர தத்ர ஸுதீஜநா-
என்றும்‌,
வெகுகாலம்‌ பிரிந்திருந்ததால்‌, மிகவும்‌ நினைப்பதினால்‌ மனம்‌ தளர்ந்த அரவணை மேல்‌ பள்ளிகொண்டுள்ள பெருமாளை ஆஸ்வாஸிப்பிப்பதற்கு யதீந்த்ரரான ஸ்ரீமாந்‌ ராமநுஜரே இந்த மணவாளமாமுனிகளாக அவதரித்தார்‌ என்று வித்வஜ் ஜனங்கள்‌ எங்கும்‌ சொல்லி மகிழ்ந்தனர்‌.
அதுக்கும்‌ மேலே
(2) ஸமுநிஸ் ஸெளம்ய ஜாமாதா ஸர்வேஷாமேவ பஸ்யதாம்‌ |
ஸ்ரீஸகஸ்ய நிதேஸேந ஸூ ஸூபே தேஸிகே ஸ்ரியா -என்றும்‌

அழகிய மணவாள னென்று பெயருள்ள அந்த முனிவர்‌(ஆசாரியர்‌) திருமகளனபனான பெருமாளுடைய நியமனத்தினால்‌ எல்லோரும்‌ காண ஆசார்ய ஸ்ரீயுடன்‌ விளங்கினார்‌. தேஸிக ஸ்ரீயாலே மிகவும்‌ விளங்கா நிற்க இதை தேசாந்தரஸ்த ரெல்லாருங்‌ கேட்டு
(3) ததஸ் ஸமுத் ஸுகாஸ் ஸர்வே ஸதஸோத ஸஹ ஸ்ரஸ :
ஸரணம் தஸ்ய ஸம்ஸ்ரித்ய சரணேள தந்யதாம்‌ கதா: ॥ –

பிறகு மிக மகிழ்ந்த யாவரும்‌ நூற்றுக் கணக்கிலும்‌ ஆயிரக்‌ கணக்கிலும்‌ அந்த மணவாளமாமுனிகளுடைய திருவடிகளைப்‌ புசுலாப் பற்றி தந்யரானார்கள்‌-என்கிறபடியே ஸமீபஸ்தரோடு தூரஸ்தரோடு வாசியற அஸங்க்யாதராய்‌ ஆஸ்ரயிக்க, அவர்களை யெல்லாம்‌ பரம க்ருபையாலே திருத்தித் திருமகள்‌ கேள்வனுக்‌காக்கி என்றும்‌, அரங்கன்‌ செய்ய தாளிணை யோடார்த்தான்‌ என்றும்‌ சொல்லுகிறபடியே அரங்கன்‌ மெய்யடியார்கள்‌ என்றும்‌ திருமாலடியார்கள்‌ என்றும்‌ நிரூபகமாம்படி அத் தலைக்கு ஆளாக்கி யருள, அவர்களும்‌ அபகத மத மனை–இத்யாதிப்‌படியே குற்றமின்றிக்‌ குணம்‌ பெருக்கிக்‌ குருக்களுக்க நுகூலராய்‌,
-வரவர முநி ப்ருத்யர்‌” என்று நிரூபிக்கும்படி அங்குத்தைக்கு அந்‌தரங்கராய்த்‌ திருவடிசுளிலே நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டு அவர்‌ பிரஸாதித் தருளுகிற பகவத் விஷயங்களையுங்‌ கேட்டுக்‌
கொண்டு ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கி அநுகூலராயிருக்க-

அப்பா குமாரத்தி ஆச்சியார்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
ஜீயர்‌ ப்ராத காலத்தில்‌ நீராட்டத்திற்குப்‌ புறப்பட்டெழுந்‌தருளா நிற்கச்‌ செய்தே ஒரு நாள்‌ அசிந்திதமாக வர்ஷம்‌ வர, அதனால்‌ ஒரு வைஷ்ணவர்‌ க்ருஹத்தின்‌ வாசல்‌ திண்ணையை உத்‌தேசித்து எழுந்தருளா நிற்க அந்த க்‌ருஹ யஜமானை கண்டு அத்யந்‌தம்‌ ப்ராவண்யத்தாலே புடவைத்‌ தலைப்பாலே திண்ணையைத்‌ துலக்கி, “ஸ்வாமீ நீர் .இங்கே எழுந்தருள வேணும்‌” என்று ஸ விநய பக்தியோடே ஸேவித்து நிற்க, ஜீயரும்‌ திருவடி நிலைகளைக்‌ கீழே வீட்டுத்‌ திண்ணை மேலே ஏறி யருள அந்த அம்மை மழையிலே நனைகிற திருவடி நிலைகளை எழுந்தருளப்‌ பண்ணித் தம்‌ சிரஸ்ஸிலே தீர்த்‌தத்தோடு தரித்துக்‌ கொண்டு, பிற்பாடு தலைப்பாலே திருவொற்று வாடை சாத்தி மீளவும்‌ சிரஸா வஹித்து, திரு முன்பே எழுந்தருளப்‌ பண்ணி நிற்க, ஜீயரும்‌, ‘நீயார்‌? பேரேது? இது ஆருடைய திரு மாளிகை ?” என்று கேட்டருள, “தேவரீர்‌ திருவடி ஸம்பந்தியா யிருக்கிற திருமஞ்சனம்‌ அப்பாவுடைய பெண்‌- அடியேன்‌ பெயர்‌ ஆச்சி. இது அவருடைய மணவாளப்‌ பிள்ளை கந்தாடை ஐயங்‌கார்‌ க்ருஹம்‌ (முதலி யாண்டான்‌ திரு வம்ச்யரான சிற்றண்ணர்‌ )என்று விண்ணப்பம்‌ செய்யக்‌ கேட்டு உகந்தருளி,தம்முடைய அப்பாச்சியாரோ!’”’ என்று அருளிச்‌ செய்து கடாஷித்துக்‌ கொண்டு வர்ஷம்‌ நிவர்த்தமான வுடனே திருக் காவேரிக்‌ கெழுந்தருளினார்‌.

ஆச்சியாரும்‌ திருவடி நிலைகளின்‌ திருமஞ்சனம்‌, தலையிலே ஊறி ஜீயர் கடாஷம்‌ பெற்றவளாகையாலே உடனே ஜ்ஞாநோதயமுண்டாய்‌, அப்போதே ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க வேணு மென்னும்‌ ருசி பிறந்து, பிறந்தகத்திலே சென்று பிதாவுக் கறிவிக்க அவரும்‌ உகந்து, தம்முடைய தெளஹித்ரர்களும்‌ அறியா மலிருக்க வேணுமென்று அருளிச் செய்து, ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆச்ரயண மான பின்பு தம்முடைய திரு மாளிகையிலே தானே ஒரிடத்திற்கும்‌ புறப்பாடமல்‌ சில நாளிருக்கும்‌ படிக்கு ஆலோசனை பண்ணிய அப்பா, தம்முடைய குமாரத்தியாரைக்‌ கூட்டிக் கொண்டு மடத்திலே எழுந்தருளி ஜீயரை தண்டன்‌ ஸமர்ப்பித்து இச் செய்தியை விண்ணப்பஞ் செய்ய; ஜீயரும்‌, கந்தாடை
அய்யங்கார்கள்‌ ஸம்பந்தத்தைப்‌ பார்க்க வேண்டாவோ? காரியப்‌ படாது” என்றருளிச் செய்ய, அப்பாவும்‌ தம்முடைய குமாரத்தியாருடைய ஆஸ்திக்யாத்ரார்‌த்திகளை விண்ணப்‌பஞ் செய்து-ப்ரதிஹதி ஒன்றும்‌ வாராது; க்ருபை செய்தருள வேனும்‌” என்று விண்ணப்பஞ் செய்ய, -ஆகில்‌ இவளை யிட்டு இந்தத் திருவம்சத்திற்‌ கெல்லாம்‌ ஆநுகூல்ய முண்டாமென்று –ஸூபேந மநஸா த்யாதம்‌’-என்கிறபடியே அப்போது ஒரு சிந்தை செய்து ஆச்சியாருக்கு ஸமாஸ்ரயணம்‌ ஸாதித்தருளி ஹிதங்களையும்‌ ஜ்ஞாதவ்யார்த்தங்‌களையும்‌ உகந்து ப்ரஸாதித்தருளினார்‌, அப்பாவும்‌ தம்முடைய குமாரத்தியாரைத்‌ தம்முடைய திருமாளிகையிலே தானே சில நாளிருக்கும்படிக்கு நியமித்து அவருடைய குமாரர்‌ அண்ணா தொடக்கமானவர்களுக்கு ஒரு கார்யாந்தரத்தை அருளிச் செய்து பரிஹரித்து வைத்தருளினார்‌. இப்படி ஆச்சியாருக்கு ஸ்ரீபாத தீர்த்த வஹநத்தினாலே வந்து அதிசயத்தை
ஸ்ரீபாதுகாம்புஜ நிதாத்ம விவேகரங்க பூநாத தீர்த்த ஜலதாதஜ மாத்ரு தேவம்‌ |
த்வந்த்வச்சிதம்‌ நிகில தேஸி௧ வந்த்யபாதம்‌ ஸெளம்யோ பயந்த்ரு முநி வர்யமஹம்‌ நமாமி

என்று அநுஸந்தித்தார்கள்‌ -தமது பாதுகையின்‌ தீர்த்தத்‌தினால்‌ ஆத்ம விவேகத்தைப்‌ பெற்ற திருமஞ்ஜனம்‌ அப்பாவின்‌ பெண்ணான ஆச்சிக்குத் தேவதையும்‌, சீதோஷ்ணம்‌ ஸூக துக்கம்‌ முதலிய த்வத்வங்களை அறுப்பவரும்‌, ஆசார்யர்களனைவராலும்‌ வணங்கத் தக்க திருவடிகளை யுடையவருமான அழகிய மணவாள மாமுனிவரை அடியேன்‌ வணங்குகிறேன்‌-அநந்தரம்‌ கந்தாடை யண்ணன்‌ திருத் தகப்பனார்‌’ தேவ ராஜ தோழப்பருடைய தீர்த்தம்‌ வர-அற்றைக்கு சிற்றண்ணர்‌ தேவியாரான ஆச்சியாரைத்‌ தளிகை பண்ண அழைத்து விட, அவரும்‌ அப்படியே பாவநத்வ போக்யத்‌வங்களுடேன்‌ தளிகை பண்ண, பெருமாளமுது செய்தருளி முத்தின ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ அமுது செய்தருளி இஷ்ட பங்க்தியும்‌ அண்ணன்‌ தொடக்கமானாரும்‌ அமுது செய்தருளின அநத்தரம்‌ அண்ணன்‌ வாசல்‌ திண்ணையிலே எழுந்தருளியிருக்க;

சிங்கரையார் வ்ருத் தாந்தம்‌
ஓரு ஸ்ரீவைஷ்ணவர்‌ ஜீயர்‌ மடத்தில்‌ நின்றும்‌ புறப்பட்டுவர அவரைக்‌ கண்டு உமக்கு எந்த ஊர்‌?’என்று கேட்டருள, அவரும்‌ வள்ளுவ ராஜேந்த்ரம்‌ -என்ன இங்கே வந்த காரியமேது?’என்ன, ‘அடியேன்‌ ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்கக்‌ காத்திருக்‌கிறேன்‌: ப்ராப்‌தி காலம்‌ வர வேணும்‌ என்ன–இந்த ஸ்தலத்தில்‌ ஆசார்ய புருஷர்கள்‌ திரட்சியாக வுண்டே, மற்றோரிடத்தில்‌ ஆனாலோ? ‘என்ன, “இங்கே பகவந் நியமனமாயிருக்கிறது’ ‘ என்ன,
-அது எப்படி?” என்ன, அது ரஹஸ்யம்‌” என்ன, “உம்முடைய பெயரேது?’ என்ன, ”சிங்கரையர்‌” என்ன, இவர்‌ பகவத்‌ ப்ரஸாத பாத்ர பூதராக வேணுமென்று திருவுள்ளத்திலே எண்ணி, இவர்‌
கையைப்‌ பிடித்துக்‌ கொண்டு உள்ளே சென்று தீர்த்த ப்ரஸாதங்‌களையும்‌ சந்தனம்‌ அடைக்காய்களையும்‌ ப்ரஸாததித்து ஆதரித்தருளி இவ் விரா திருமாளிகையிலே சயியும்‌” என்று நியமித்தருளித்‌ தாமும்‌ திருத் தம்பிமார் கந்தாடை யப்பனும்‌, திருக் கோபுரத்து நாயனார் பட்டரும்‌ எழுந்தருளி யிருக்க, திருவத்யயநத் தளிகை கைங்கர்யமெல்லாம்‌ நிறைவேறி ஆச்சியார்‌ அலஸையாய்‌ உள்ளே படுக்‌கையிலே சாயும்‌ போது -ஜீயர்‌ திருவடிகளே சரணம்‌, பிள்ளை திருவடிகளே சரணம்‌, வாழி உலகாரியன்‌” என்று சயிக்க, இந்த சப்தத்தை மூவரும்‌ கேட்டு இதேது என்று விஸ்மித வ்யாகுலராயிருக்க, இவர்களில்‌ பாட்டர்‌ உள்ளே சென்று கேட்கிறேன்‌!”என்று போய்‌ மதினியாரே! என்றழைக்க, ஆச்சியார்‌ பயப்பட்டு,தாம்‌ சொன்னது இவர்‌ செவிப்பட்டதென்று பேசாமலிருக்க,
அண்ணனும்‌ அப்பனும்‌ அவரை யழைத்து “எல்லாம்‌ பொழுது விடிந்தவாறே தெரியும்‌, அவரை எழுப்ப வேண்டாம்‌” என்று மூவரும் கண் வளர்ந்தருள; அண்ணனுக்கு பய பக்திகள்‌ மிக்கு
மென்மலர்ப் பள்ளி வெம் பள்ளியாகி, ப்ராதாக்களறியாமல்‌ சிங்கரையர்‌ சயநித்த விடத்திலே எழுந்தருளி அவரை யெழுப்பி சில ஆத்யாத்மிக தர்மங்களை யருளிச்‌ செய்ய, அவர்‌ கேட்டு ௨கந்திருக்க அந்த வேளையிலே ‘ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்கும்படி உமக்கு பகவந் நியமனமான பெருமையை அறிய வேணுமென்று அத்யபி நிவேசமா யிருக்கிறது” என்றருளிச் செய்யக் கேட்டு அவர்‌ சொன்னது:-எங்களூரிலே யுண்டாகிற காய்‌ கிழங்குகளை யதா சக்தி ஸம்‌பாதித்து “இந்த ஸ்தலத்திலே பெரியோர்கள்‌ திரு மாளிகைகளுக்கு அடிக்கடி ஸமர்ப்பித்துப் போருவதுண்டு; அத்தை ஒரு நாள்‌ ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கண்டு இன்றைக்கு மடத்திலே ஸமர்ப்பியும்‌ என்ன, பாக்யமாயிற்று என்று கொண்டு ஸமர்ப்பித்தேன்‌; அத்தை ஜீயர்‌ கண்டு இது எங்கே விளைந்தது? எந்த நீர்‌ பாய்ந்தது?
நீரிறைத்தவரார்‌? எதற்காகக்‌ கொணர்ந்தீர்‌?” என்று கேட்டருள
அடியேன்‌ அதி விநயமயயும்‌ உசிதமாயும்‌ விண்‌ணப்பம்‌ செய்தபடி-பரிசுத்த ஸ்தலத்திலேயே விளைந்தது, அடிச் சேரியிலே தேவரீர்‌ தாஸ வர்க்கங்கள்‌ நீரியிரைத்துப்‌ பாய்ச்சினது, ஸ்ரீ பாகவத
ஸ்வத்து” என்று விண்ணப்பம்‌ செய்ய, அது கேட்டு ௨கந்தருளி அத்தை அங்கீகரித்தருளி கோயிலுக்குப் போய்‌ பெருமாளை ஸேவித்‌துப்‌ போருமென்று விடை கொடுக்கப்‌ பெருமாள் ஸந்நிதியிலே
செல்ல, அருகே யிருந்த அர்ச்சகர்‌-இன்றைக்குக்‌ காய்கறி யாருக்கு ஸமர்ப்பித்திர்‌?’* என்ன? ஜீயர்‌ மடத்திலே” என்ன, அர்ச்சகர்‌ ப்ரியப்பட்டுப்‌ பரவசராய்‌ அடியேன்‌ முதுகைத்‌ தட்டி ‘நீர்‌ பாக்யவான்‌; உமக்கு விலஷண ஸம்பந்த முண்டாகப்‌ போகிறது-என்று தீர்த்தம்‌, சந்தனம்‌ திருமாலை, வேளையம்‌, அபய ஹஸ்தம்‌, ஸ்ரீ சடகோபன்‌ ப்ரஸாதித்து பஹுமானம்‌ பண்ண, :அடியேனை இன்றைக்கு இத்தனை க்ருபை பண்ணி யருளுவதே! என்று ஸந்நிதியினின்றும்‌ புறப்பட்ட வளவிலே, ‘இவனை மல்லுக்கட்‌டிப்பிடி? என்கிற வார்த்தை கேட்க, அவ் வார்த்தை ஸாபிப்ராயமாக இருக்‌கிறதென்று மீண்டும்‌ மடத்திலே சென்று தண்டன்‌ ஸமர்ப்பித்து
தேவரீருக்காகப்‌ பெருமாள்‌ போர க்ருபை பண்ணி யருளினார்‌-என்று -இச் செய்தியை யெல்லாம்‌ விண்ணப்பஞ்‌ செய்து ஊருக்கு விடை கொள்ளுகிறேனென்ன; அங்குள்ளார்‌ அடியேனை யாதரித்து
ப்ரஸாதமும்‌ ப்ரஸாதித்தனுப்ப அத்தை வழியிலே ப்ரஸாதப்‌பட்டுச்‌ செல்ல, உடனே சித்த சுத்தி பிறந்து ஆஸ்ரயண ருசி யுண்டாயிற்று; அன்று ராத்திரி ஸ்வப்நத்திலே பெரிய பெருமாள்‌ ஸந்நிதியிலே திருமணத் தூணருகே நின்று ஸேவித்துக்‌ கொண்டிருக்க பெரிய பெருமாள்‌ அணையில்‌ வைத்த திருக் கையை உயர வெடுத்துத்‌ திருவநந்தாழ்வானைக்‌ காட்டி இவர்‌ கிடாய்‌ அழகிய மணவாளச்‌ சீயர்‌, இவரோடு உனக்கு ஸம்பந்த முண்டாக்கிக்‌ கொள்‌” என்றருளிச்‌ செய்ய, இந்த ஸ்வப்நத்தைக்‌ கண்டு க்ருதார்த்தனாய்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்கக் காத்திருக்கிறேன்‌’ என்று சிங்கரையர்‌ விண்ணப்பஞ் செய்யக்‌ கந்தாடை அண்ணன்‌ கேட்டருளி பய பக்திகள்‌ விஞ்சி நெடும்போது சிந்தித்து உள்ளே யெழுந்தருளித்‌ திருப் படுக்கையிலே சாய்ந்தருள, ஸ்வப்நமான ப்ரகாரம்‌:-

(ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பாதாச்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ச்ரயே
-தேவராஜ தோழப்பர் திருக் குமாரர் –வரதநாராயண குருவான அண்ணன்=திருமஞ்சனம் அப்பாவுக்கும் தேவராஜர் திருநாமம் உண்டு -திருவரங்கத்தில் இருந்து கொண்டே பேர் அருளாளன் திருநாமம் கொண்டவர்கள்)

கந்தாடை யண்ணன்‌ கண்ட ஸ்வப்நம்‌.
ஒரு ஸ்ரீவைஷணவர்‌ மெத்தையினின்றும்‌ ஏணி வழியாலே இறங்கி வந்து பெரிய கசையாலே தம்மை யடிக்க, தமக்கு நிவர்த்‌திப்பிக்க சக்தி யுண்டாயிருக்கச் செய்தேயும்‌, “நம்மிடத்தில்‌ ஸ்வரூப விருத்தமான நடக்கை யுண்டாயிருப் பதினாலே சிக்ஷித் தருளுகிறார்‌ ‘ என்றெண்ணி, –ஸாஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா–தன்‌ மகன்‌ புண்ணை ஆற்றுதற்காகத்‌ தகப்பன்‌ கத்தியாலறுப்பது, காரமான மருந்தை யிடுவது தீயினால்‌ கடுவது முதலிய செயல்களை ஹித புத்தியாலே செய்விக்குமா போலே- என்றநுஸந்தித்துக்‌ கொண்டிருக்க, கசையும்‌ துணிக்கை துணிக்‌கையாக அறுந்து போக, அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌ அண்ணன்‌ திருக்‌ கைகளைப்‌ பிடித்திழுக்க, அண்ணன்‌ ஏது செய்ய வேண்டுமென்ன ஏணி மேலேறி மெத்தை மேலை போவென்ன அண்ணனும்‌ அப்‌படியே செய்ய அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌ தாமும்‌ ஏறி வந்து எடுத்துக்‌ கட்டி மேலே கொண்டு போசு, அங்கே ஒரு ஜீயர்‌ ஒரு திருவடியைத்‌ தொங்க விட்டுக்‌ கொண்டும்‌ ஒரு திருவடியை குஞ்சித்துக்‌ கொண்‌டும்‌, த்ரிதண்டத்தைத்‌ தோளிலே சாத்திக்‌ கொண்டும்‌ திருக்கையிலே கசையைப்‌ பிடித்துக்‌ கொண்டும்‌ அக்நி கல்பராய்‌ மிகவும்‌ குபிதராயிருக்க, அவர்‌ முன்னே அண்ணனைப்‌ பிடித்துக்‌ கொண்டு போக , ஜீயர்‌ அண்ணனை பஹுவாக அடிக்க, கசையும்‌ துணிக்கையான வாறே இன்னுமடிக்கத் தக்கதாக உப தண்டத்தை வாங்கப்‌ புக, அத்த ஸ்ரீ வைஷ்ணவர்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து அஞ்சலி ஹஸ்‌தரராய்‌ ஜீயர்‌ திருமுக மண்டலத்தைப்‌ பார்த்து ‘இவன் சிறு பிள்‌ளை பஹுவாக அடிபட்டான்‌. இனி க்ஷமித்தருளித்‌ திருவுள்ள மிரங்கி க்ருபைப்‌ பண்ணி யருள வேணும்‌” என்ன; அவரும் இறங்கி யருளி அண்ணனை அழைத்து மடியிலே வைத்து உச்சி மோந்து திருக் கைகளாலே திருமேனி யெங்குந்‌ தடவி நீயும்‌ உத்தம நம்பியும்‌ போர அபசாரப்‌ பட்டீர்கள்‌” என்ன, ”அழகிய மணவாள ஜீயர் ப்ரபாவ மறியாமல்‌ அவிவேகம்‌ வந்தது; இனி க்ஷமித்தருள வேணும்‌!என்று திருவடிகளைப்‌ பிடித்துக்‌ கொள்ள, ஜீயர்‌ இரங்கி யருளி, நாம்‌ ஸ்ரீபாஷ்யகாரர்‌, இவர்‌ முதலியாண்டான்‌’ என்று தம்மையும்‌ அந்த ஸ்ரீவைஷ்ணவரையுங் காட்டி,
த்வதீயாந்‌ அபராதாந்யீரந்‌ த்வத் ஸம்பந்தி க்ருதாநபி |
க்ஷமாம் யஹம்‌ தாஸரீதஸ்‌ ஸம்பந்தம்‌ மா அந்யதாக்ருதா: ॥

நீர்‌ செய்த தவறுகளையும்‌ உம்‌முடைய ஸம்பந்திகள்‌ செய்த தவறுகளையும்‌ பொறுத்துக்‌ கொள்ளுகிறேன்‌ நான்‌, முதலியாண்டான்‌ ஸம்பந்தத்தை வ்யர்த்தமாக்காதீர்‌- என்றிந்த ஸ்லோகத்தை யுநு ஸந்தித்து ”நாமே திருவநந் தாழ்வான்‌, நாமே வரவர முனி; அவர்‌(அழகிய மணவாள ஜீயர்‌) திருவடிகளிலே நீயும்‌ உன்னுடைய ஸம்பந்திகளும்‌ ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்‌” என்று விட,
அண்ணனும்‌ திருக் கண்கள்‌ [விழித்து நெடும் போது ‘*ஈதொரு ஸ்வப்ந மிருந்தபடி யென்‌!” என்று விஸ்மிதராய்‌ கண்டவற்றை யெல்லாம்‌ புந:புந: சிந்தித்து மறவாமல்‌ திருவுள்ளத்திலே கட்டிபண்ணி, திருத் தம்பிமார்களை யெழுப்பி ஸ்வப்ந வ்ருத்தாந்தங்களை யருளிச் செய்யத்‌ தொடங்கி நடுவே நடுவே ஹர்ஷ பரவசராய்‌-ஸ்தப்தராயிருந்து அருளிச் செய்து தலைக் கட்டி யருளினார்‌.

இப்படி அண்ணனுக்கு எம்பெருமானார்‌ ஸாதித்தருளின அர்த்தத்தையும்‌ அண்ணன்‌ விண்ணப்ஞ்செய்த அர்த்தத்தையும்‌ அதற்கு உத்தரத்தையும்‌,
வாதூல துர்ய வரதார்ய குரோர்‌ பபாண ஸ்வப்நே யதீத்ர வபுரேத்ய க்ருபா பரோந்ய: |
ஸேஷோப் யஹம்‌ வர வரோ முநிரப் யஹம்‌ த்வம்‌ |மாம் ஆஸ்ரயேதி தமஹம்‌ கலயாமி சித்தே ॥
அத்யந்த பாப நிரத:கதமார்ய வர்ய-த்வாம் ஆஸ்ரயேஹமிதி தம்‌ க்ருபணம்‌ வதந்தம்‌ |
த்ருஷ்ட்வா க்ஷமாமி நநு தாஸரதேஸ் த்வதீய ஸர்வ அ பராதமிதி தம்‌ ப்ரவதந்த மீடே ॥

யாவர் ஓருவர்‌ வாதூல குலஸ்ரேஷ்டரான அண்ணனுடைய ஸ்வப்நத்தில்‌ எம்பெருமானார்‌ திரு மேனியாக ஸேவை ஸாதித்துப்‌ பரம க்ருபை யுடையராய்‌’ ஆதிசேஷனும்‌ நாமே, மா முநிகளும்‌ நாமே நீர்‌ நம்மை ஆஸ்ரயியும்‌” என்று அருளிச் செய்தாரோ அவரை அடியேன்‌ மனதில்‌ த்யானம்‌ செய்கிறேன்‌. பாப கார்யத்தில்‌ மிகவும்‌ ஊன்றிய அடியேன்‌ ஆசார்ய ஸ்ரேஷ்டராள தேவரீரை எப்படி ஆஸ்ரயிப்பேன்‌ என்று நமாகக்‌ கூறுகிற அவ் வண்ணனைப்‌ பார்த்து ஒ அண்ணனே! முதலியாண்டானுக்காக உம்முடைய ஸர்வாபாரதங்களையும்‌ பொறுத்துக்‌ கொள்ளுகிறோம்‌” என்று அருளிச் செய்யும்‌ அந்த ஜீயரை ஸ்தோத்ரம்‌ செய்கிறேன்‌- என்று பெரியோர்கள்‌ அநுஸத்தித்தார்கள்‌. அண்ணன்‌ தம்பிமார்களைக்‌ கூட்டிக்‌ கொண்டு “அத்யமே ஸபலம்‌ .ஐந்ம ஸுப்ர பாதாச மே நிமா” (விஷ்ணு 5) 7-3) இன்று என்‌ பிறவி பயன்‌ பெற்றது எனக்கு நேற்றிரவு இன்று நல்ல விடிவாயிற்று-என்று சொல்லிக்‌ கொண்டு புறப்பட்டு ஆச்சியாரருகே சென்று தண்டனிட்டு அவர்‌ பயப்படாத படிக்கு முந்துற ஸ்வப்ந வ்ருத்தாந்தத்தை யருளிச் செய்ய, ஆய்ச்சியார்‌ தமக்கு ஜீயர்‌ ஸம்பந்த முண்டான படியையும்‌ ‘அதற்கு மூல பூதமான ஜீயருடைய பாதுகா தீர்த்த வைபவத்தையும்‌ தம்முடைய திருத் தமப்பனாரான அப்பாவுக்கு ஜீயர்‌ நீராடி யருள அந்த தீர்த்தத்தலே அவகாஹித்ததால்‌ வந்த ஜ்ஞாநாதிக்யத்தையும்‌ ஆச்சியார்‌ முகத்தாலே கேட்டருளி அத்யந்த ஹ்ருஷ்டராய்ப்‌ புறப்பட்டு சிங்கரையரைக் கண்டு உகந்து அவருக்கு. எல்லாவற்றையு மருளிச்‌ செய்து கொண்டு திருக் காவேரிக்‌ கெழுந்தருளி நீராடி நித்ய கர்மாநுஷ்டாநங்களாகிப்‌ புறப்‌ பட்டருளி;

அண்ணன்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்க ஒருப்பட்டது
சுப ஸூசகங்களா யிருக்கிற நிமித்தங்களைச்‌ செய்து கொண்டு
ததா கதாம் தாம்‌ வ்யதிதாம நிந்திதாம்‌ வ்யபேத ஹர்ஷாம்‌ பரிதீந மாநஸாம்‌ |
ஸூபாந் நிமித்தாநி ஸூபாநி பேஜிரே நரம்‌ ஸ்ரியா ஜுஷ்ட மிவோப ஜீவிந:

சொல்ல முடியாத துன்பமுடையவரும்‌, இனி மேல்‌ தான்‌ அதிகமான துன்பங்கள்‌ நேரப் போகின்றன வென்று நினைத்தவளும்‌ குற்றமற்றவளும்‌, சிறிதும்‌ மகிழ்ச்சி யில்லாதவளும்‌, அறவே மனமழியப்‌ பெற்றவளுமான அந்த ஸீதாப் பிராட்டியை, யாசகர்கள்‌ பணமுள்ளவனை அடைந்து ஸத்தை பெறுமா போலே சில சுப ஸுசனைகளும்‌ அடைந்து ஸத்தை பெற்றன-என்கிறபடியே போய்‌ திருமாளிகையிலே யெழுந்தருளி ஆச்சியாரைக் கண்டு
ரங்கேஸ கைங்கர் ஸு தீர்த்த தேவ ராஜார்ய ஜ அம்பாகலு பாக்ய ஸீலா |
ரம்யோ பயந்து: பத ஸம்ஸ்ரயேணயா யஸ்மத் குலம்‌ பாவந மாத நோதி ॥

யாவருளாருத்தி மாமுனிகளின்‌ திருவடிகளை ஆஸ்ரயித்து நமது

குலத்தைப்‌ பாவனமாக ஆக்கினாளோ, திருவரங்கனுக்குத்‌ தொண்‌டரான திருமஞ்சனம்‌ தேவராஜர்‌ என்னும்‌ அப்பாவின்‌ புதல்வியான அந்த ஆச்சியார்‌ பாக்யசாலிநி யல்லவா? என்‌று அநுஸந்‌தித்தருளி “உம்முடைய திருக் கைகளாலே ‘ ப்ரஸாதப்‌பட்ட்ன்றோ இப்பேறு ஸித்தத்தது” என்று உகந்தருளி, உத்தம நம்பியை யழைத்து வரப்‌ போக விட்டு, தாமும்‌ தம்முடைய தாயாதரான கந்தாடை அய்யங்கார்கள்‌ எல்லாருக்கும்‌ இச் செய்தியை அருளிச்‌ செய்து அவர்களுக்கு ஜீயர்‌ ஸம்பந்த முண்டாக்கும்படி திருவுள்ளமாய்‌ அவர்களுடைய அகங்களிலே எழுந்தருள,ஆச்சியார்‌ குமாரரான அண்ணாவும்‌ -தாசரதி அப்பையும்‌, தந்தையரான எம்பாவும்‌ அண்ணன்‌ திருவடிசுளிலே தீர்க்க ப்ரணாமத்துடனே ‘தேவரீருக்கு ஸாதித்த ஸ்வப்நமே அடியோங்களுக்‌கும்‌” என்று விண்ணப்பஞ்செய்ய, அவர்களையுங்‌ கூட்டிக் கொண்டு லக்ஷ்மணா சாரியரென்று ப்ரஸித்தரா யிருந்தவருடைய பெளத்ரராய் இருக்கிற எம்பா வண்டையிலே எழுந்தருளி ஆஸ்ரயித்து (இந்த எம்பா என்னும்‌ ஸ்வாமி, அப்போது திருமண்‌ காப்பு வேளையா யிருக்க கோபத்தில்‌ அதையும்‌ பூர்த்தியாக அணியாமல்‌ உள்ளே எழுந்தருளி விட்டபடியினால்‌ ”ஒத்தைக்‌ கொம்பு எம்பா” என்று திருநாமம்‌ பெற்றதாக கர்ண பரம்பரைச்‌ செய்தி: பிறகு இவர்‌ ஸ்ரீரங்கத்திலிருந்து திருமழிசை எழுந்தருளி விட்டதாகச்‌ சொல்லப்‌ படுகிறது. )இச் செய்தியை அருளிச் செய்ய அவர்‌ குபிதராய்‌ ‘*அபிஜந வித்யா வ்ருத்தநங்களுடைய மஹா குலத்திகே பிறந்து இப்படி யானாயோ?’? என்று நாநா பெளருஷ உக்திகளைப்‌ பண்ணி விட, அவருக்கு புத்ர கோடிகளாய்ப்‌ பெரிய ஆயி திரு வம்சத்தராயுள்ள அப்பா முதலானார்‌ பதின்மர்‌ க்ருஹங்‌ளிலு மெழுந்தருளி ஹிதமருளிச்‌ செய்ய, அவர்களுக்கு அநபிதமாய்த்‌ தோன்றி பரிஹரிக்க, திருவுள்ளத்தில்‌ குறையோடே புறப்பட்டருளித்‌ தம்முடைய திரு வம்சஸ்த்தராய்‌ தமக்கு ப்ராத்ருரு கோடிகளா யுள்ளவர்கள்‌ திரு மாளிகைகளுக்கும்‌ புத்ர கோடிகளுடைய இருபது திருமாளிகைகளுக்கும்‌ எழுந்தருள, அவர்கள்‌ அதி ப்ரவணராய்‌ இருந்து கொண்டு தண்டன்‌ ஸமர்ப்பித்து அண்ணர் அருளிச்‌ செய்த ஹிதங்களை யெல்லாங் கேட்டு, தங்கள்‌ தங்களுக்‌குண்டான ஸ்வப்நங்களையும்‌ உப ச்ருதிகளையும்‌ சகுநங்களையும்‌ அழகிய மணவாள மா முனியினுடைய வைபவங்களையுஞ்‌ சொல்லிக்‌ கொண்டு ஆஸ்ரயணத்துக்கு த்வரிக்க, தமக்கு ப்ராத்ரு கோடிகளா யுள்ளவர்களையும்‌ புத்‌ர கோடிகளா யுள்ளவர்களையும்‌ தங்கள்‌ தங்கள்‌ பார்யாதிகளையுங்‌ கூட்டிக் கொண்டு உபஹார புரஸ்ஸரமாக மடத்துக்குப்‌ புறப்படும்படி நியமித்து,

தம்முடைய திருமாளிகையிலே திருத் தாயார்‌ திருத் தமப்பனார்‌ முதலானவர்களையும்‌ ;விட்டு குரு குல வாஸமாக தாரக போஷக போக்யங்களெல்லாம்‌ அண்ணன்‌ திருவடிகளே யென்றிருக்கிற திருவாழியாழ்வார்‌ பிள்ளையையும்‌, சுத்த ஸத்வம்‌ அண்ணனையும்‌,திருத் தம்பிமாரையும்‌ மற்றும்‌ பெரியோர்களையும்‌ அழைத்து வைத்துக் கொண்டு சுத்த ஸத்வ மண்ணன்‌ பாக்யாதிசயத்தாலே ஸ்வத ஏவே மிகவும்‌ பாகவத ப்ராவண்ய முடையராய்‌ ஜீயருடைய திநசர்யையை அடிக்கடி ஆராய்ந்து கொண்டு அதி ப்ரீதராய்‌ அண்ணன்‌ திருவுள்ளம்‌ சிறிது கலங்கினாலும்‌ –குரும்‌ ரஹஸி போதயேத்‌” என்கிற படியே திருவடிகளுக்கு ஹித பராய்‌ ஜீயரிடத்‌திலே ப்ரீதி வரும்படி யருளிச்‌ செய்து கொண்டு போருகிறவரா யிருப்பார்‌; அத்தைத்‌ திரு வுள்ளத்திலே வைத்து அண்ணன்‌ அருளிச்‌ செய்தபடி: இவருக்‌கு சுத்த ஸத்வம்‌ என்கிற திருநாமம்‌ யதார்த்தமாயிற்று; நமக்குப்‌ போர நல் வார்த்தை சொல்லிப்‌ போருவர்‌, இவருடைய ஹ்ருதயாநு ஸாரியாய்‌ யாவத் கார்யமும்‌ கடித்தது; இனி ஒரு குறையுமில்லை” என்றருளிச்‌ செய்து கொண்டு தம்முடையவர்களும்‌ மற்றக்‌ கந்தாடை அய்யங்கார்‌களும்‌ அவரைக்‌ கடாஷித்துக்‌ கொண்டிருக்க-

அண்ணன்‌ ஸ்வ ஸம்பந்திகளுடன்‌ ஜீயர்‌ மடத்துக்‌ கெழுந்தருளுதல்‌
அவர்களில்‌ சிலரை எம்பா மாறுபடுத்தி விட, சென்று அண்ணனுக்கு இச் செய்தியை அறிவிக்க, மிகவும்‌ கோபித்தருளி-அவர்களை விடும்‌’ என்று மற்றவர்களை யெல்லாம்‌ கூட்டிக் கொண்டு ஜீயர்‌ ஸந்நதிக் கெழுத்தருளுவதாக ஆச்சியாரை யழைத்து ஸமயமறிந்து திருவுள்ளத்தில்‌ படுத்தும்படிக்கு அனுப்பி யருள அவரும்‌ சென்று திருமலை யாழ்வாரில்‌ ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்ட்டியிலே ஜீயரெழுந்தருளி யிருக்கிறபடியினாலே கிட்டி விண்ணப்பஞ்‌ செய்ய ஸங்கோசப்பட்டு ஒரு ஸாத்விக ஸ்ரீவைஷ்ணவரை யழைத்து “ஸ்வாமியை உள்ளே யெழுந்தருளும்படி ஏகாந்தமாக திருச் செவியிலே லிண்ணப்பஞ் செய்யும்‌” என்ன அவர்‌ ,”ஏதுக்கு”?என்ன, அண்ணன்‌ முதலான கந்தாடை அய்யங்கார்‌களெல்‌லாருங் கூடி எழுந்தருளுகிறார்கள்‌” என்று ஆச்சியார்‌ உள்ளே சென்றார்‌-

அசட்டாச்சான்‌-
அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌, ஆச்சியார்‌ சொன்னதை அந்யதாவாக க்ரஹித்து ஓடிச் சென்று, ‘ஸ்வாமீ! சீக்கிரமாக எழுந்தருள। கந்தாடை அய்யங்கார்கள்‌ கூடி வருகிறார்களாம்‌’, என்ன-ஜீயர்‌ துணுக்கென்று எழுந்திருந்து புறக்கடைக்கு எழுந்தருள உள்ளே எழுத்தருளக் காணாமையாலே ஆச்சியார்‌ அந்த ஸ்ரீ வைஷ்ணவர்‌ என்ன விண்ணப்பஞ்‌ செய்தாரோ வென்று பயப்பட்டு, சோபந வார்த்தையை விண்ணப்பஞ்‌ செய்ய வேணுமென்று புறக்கடையில்‌ புகுவதற்கு ஸமயமாகக் காணாமையாலே, புறம்பே ஒளிக்க–அண்ணன்‌ முதலானார்‌ பெருங்கூட்டமாகத்‌ திருமுன் காணிக்கைகளும்‌ பலங்களும்‌ முன்னே பிடித்துக் கொண்டு மடத்து வாசலிலே எழுந்தருளி வானமாலை ஜீயர்‌ முதலானவர்களை புரஸ்கரித்தருளி அவர்களுடனே அண்ணன்‌ அதி விநீதராய்‌ ‘ஜீயர்‌ திருவடிகளே ப்ராப்ய ப்ராபகமாக வந்தடைந்தோம்‌; தேவரீர்‌ அங்கீகரிப்பித்தருள வேண்டும்‌:’ என்ன, வானமாமலை ராமாநுஜ ஜீயர்‌ இது கேட்டு அதி ப்ரிதராய்‌ ஸ்தப்தராயிருந்து பிற்பாடு ஸந்நிதிக் கெழுந்‌தருள; அதற்குள்ளே ஆய்ச்சியார்‌ அதி த்வரையுடனே ஸமயமானவாறே ஜீயர்‌ திருவடிகளிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து, இற்றைக்கு சோபநம்‌; அண்ணன்‌ முதலானாரெல்லமும்‌ திரளாகத்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க எழுந்தருளுகிறார்கள்‌” என்ன, அவ்வளவிலே வானமாமலை ராமாஜஜீயரு மெழுந்தளி ஹர்‌ஷ பரவசராய்‌ விண்ணப்பஞ்‌ செய்ய ஜீயர்‌ கேட்டு உகந்து, இவற்றிகெல்‌லாம்‌ மூல பூதை ஆச்சியாரன்றோ!’ என்று திருவுள்ளம் பற்றி,திருமலை யாழ்வாரிலே வந்து விண்ணப்பஞ்‌ செய்த ஸ்ரீவைஷ்ணவரை யழைத்தருளி உம்முடைய பேரேது?” என்று விநோதமாகக் கேட்டருள, அவரும்‌ “அடியேன்‌ ராமாநுஜ தாஸன்‌” என்ன, அப்படியன்று, அசட்டாச்சான்‌- என்று அவரைப்‌ பரிஹஸித்து திருவுள்ளத்தில்‌ உகப்போடே

அண்ணன்‌ ஐியரை ஸேவித்தல்‌
வித்யா விமுக்தி ஜநநீ விநயாதிகத்வ மாசார ஸம்பதநுவேல விகாஹஸீலம்‌
ஸ்ரீ லஷ்மணார்ய கருணா விஷயீ க்ருதாநாம்‌ சித்ரம்‌ ந தாசரதிவம்ஸ ஸமுத்பவாநாம்‌

மோக்ஷத்துக்கு உதவக்‌ கூடிய ஜ்ஜாநமும்‌ அதிசயிச்கத் தக்க விநயமும்‌, அநுஷ்டானச்‌ செல்வமும்‌ வேளைக்கு வேளை வளரும்‌ சீலமும்‌ எம்பெருமானார்‌ கருணைக்கு இலக்கான ஸ்ரீமுதலியாண்‌டான்‌ திரு வம்சத்தினருக்கு வாய்த்திருப்பதில்‌ வியப்பில்லை] என்று அருளிச்‌ செய்து (இந்த ஸ்லோகத்தை மாமுனிகள்‌ வேடலப்பை விஷயமாக அருளிச்‌ செய்ததாகவும்‌ கூறுவர்‌, வேடலப்பை விஷயம்‌ பின்னர்‌ வரும்‌, ௮ங்கு இது மிகப்‌ பொருந்தும்‌. ) புறப்பட்டருளி மடத்து வாசலிலே அவர்களெல்‌லாரையுங்‌ கண்டு ஸ்ரீ ராமாநுஜ யோகீந்த்ர கருணா பரிப்ரும்ஹிதாம்‌ |
ஸ்ரேயஸீம் அநகாம்‌ வந்தே ஸ்ரீமத் வாதூல ஸந்ததிம்‌ ॥

ஸ்ரீராமாநுஜர்‌ என்னும்‌ யோகியர்‌ தலைவர்‌ கருணையால் மல்கியதும்‌ சிறந்ததும்‌ குற்றமற்றதுமான ஸ்ரீமத் வாதூல குலக்‌ கொடி வழியை வணங்குகிறேன்‌] என்றநுஸந்தித்தருள, அவர்களெல்‌லாரும்‌ திருவடிகளிலே தீர்க்க ப்‌ரணாமம்‌ பண்ணி, ‘ந கர்மணா ந ப்ரஜியா தநேந:’வேதாஹமேதம்‌’ என்கிற பஞ்சாதிகளை அநுஸந்தித்து, உபஹாரங்களை ஸமர்ப்பிக்க, அங்கீகரித்தருளி,உள்ளே எழுந்தருளி திருவோலக்கமாக எழுந்தருளி யிருந்து
பொலிக பொலிக, என்கிற திருவாய்‌ மொழிக்கும்‌, திருப் பல்‌லாண்டுக்கும்‌ ஸங்க்ரஹமாக அர்த்தோபந்யாஸம்‌ செய்தருளி இப்படி ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தி நித்யமாய்ச் செல்லவும்‌ எல்லாரும்‌ மங்களாசாஸந பரராகவும்‌ ஆசீர்வதித்தருளி எழுந்தருளி யிருக்க;
அண்ணன்‌ வானமாமலை ஜீயருடனே ஸமாஸ்ரயணத்துக்கு த்வரித்‌தருள, அழகிய மணவாள மாமுனியும்‌ எழுந்திருந்து அப்பாலே ரஹஸ்ய ஸ்தலத்திலே எழுந்தருளி யிருந்து வானமாமலை ஜீயரைக்‌ கொண்டு அண்ணனை அழைப்பித்து, ‘தேவரீர்‌ மஹா குல ப்ரஸூதரும்‌ எல்லாருக்கும்‌ குருகுலமன்றோ! இப்படி எதுக்கு?’! என்ன;
அப்படி யொன்றும்‌ அருளிச்‌ செய்ய வேண்டா’! என்று தாம்‌ முன்‌ விருந்த இருப்புக்கு ஷாபணம்‌ பண்ணிக்‌ கொண்டு” ஸ்வப்ந வ்ருத்‌தாந்தத்தை முதலிலிருந்து தப்பாமல்‌ விண்ணப்பஞ்‌ செய்யக்‌ கேட்‌டருளி, ”ஈயானுடைய திருவம்சஸ்த்தராய்‌ அநுகூலித்தவர்‌ சிலருண்டே ; அவர்களுக்கும்‌ வேறே சில பாக்யாதிகர்களுக்கும்‌ பெருமாள்‌ இரங்கி ஸ்வப்நாதிகளாலே தேவரீர்‌ நியமனத்திலே கூட்டுகிறார்‌. அவர்களையுங்‌ கூட்டிக்‌ கொண்டு இற்றைக்கு மூன்று நாள்‌ கழித்து நாலாம்‌ நாள்‌ தேவரீர்‌ திருவுள்ள ப்ரகாரத்திற்கு எல்லோருக்கும்‌ ஸமாஸ்ரயணமாகிறது” என்று நிர்ணயித் தருளிப்‌ புறப்‌பட்டுத்‌ திருவோலக்கத்திலே யெழுந்தருளின வநந்தரம்‌ சாத்துப்‌ப்டி அடைக்காயமுது விநியோகமாய்‌ எல்லாரும்‌ தம் தம்‌ திருமாளிகைகளுக் கெழுந்தருளினார்கள்‌.

மீண்டும்‌ பெருமாள்‌ சிலரைத் திருத்துவதாகத்‌ திருவுள்ளம் பற்றி
புநஸ் ஸ்வப்நா பதேஸேந தேஸே தேஸே நிரங்குஸ . |
அயமர்ச்சா வதாரத்வ ஸமாதி மவதீரயத்‌
அத்ய மர்த்யந்‌ ததே தஸ்ய தத்வ மாத்யந்திகம்‌ ஹிதம்‌ |-
அஸங்குசித மாசக்யெள புஜங்க ஸயந: புமாந்‌ ॥

அரவ்ணையில்‌ துயிலும்‌ ப்ரம புருஷன்‌ மறுபடியும்‌ ஓவ்வோரிடத்திலும்‌, ஸ்வப்ந மென்கிற வ்யாஜத்தினால்‌, தன்னைத்‌ தடுப்பார்‌ யாருமில்லாமையாலே-அர்ச்சாவதாரத்வத்தின்‌ மெய்ப்பாட்டினை- பேசாமலிருக்கும்‌ ஸ்வபாவத்தை உதறித் தள்ளி விட்டு, தேவர்களையும்‌ விஞ்சிய-இம் மாமுனிகளுடைய உண்மைத்‌ தன்மையையும்‌ மோக்ஷத்திற்கு அந்திமோபாய மாயிருக்கும்‌ தன்மையையும்‌ விவரமாக அருளிச்‌ செய்தான்‌–என்று இத்யாதிகளாலே ”குருஸ்ச ஸ்வப்ந த்ருஷடஸ்ச” என்கிறபடியே அவர்கள்‌ ஸ்வப்நத்திலே அர்ச்சாவதார ரூபியாய்‌ வந்து நாமே இப்படி ஆசார்ய ரூபேண அவதரித்தோம்‌; நீங்களுமப்படியே ஆசார்யம்மாம்‌ விஜாநீயாத்‌ பவ பந்த விமோசநம்‌”‘ -ஸம்ஸார பந்தத்தை விடுவிக்கும்‌ நாமே மாமுனிகளென்று அறியக் கடவர்கள்‌- என்கிறபடியே விசேஷ:ப்ரதிபத்தி பண்ணி ஆஸ்ரயியுங்கோள்‌” என்றருளிச் செய்ய;

அநந்தரம்‌:
அண்ணன் ஜீயரிடம்‌ ஸமாஸ்ரயணம் பெற்றது
ராமாநுஜ பதாம் போஜ ஸெளகந்த்ய நித யோபியே |
அஸாதாரண மெளந்நத்ய மவதூய நிஜம்தியா
உத்தேஜ யந்தஸ்‌ ஸ்வாத்மாநம்‌ தத்ஜேஸ் ஸம்பதா ஸதா |
ஸ்வேஷா மதிசயம்‌ மத்வா தத்வேந ஸரணம்‌ யயு: ॥

எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளில்‌ நறு மணத்தையே நிதியாகப் பெற்றவர்களும்‌ தம்முடையதான பிறர்க்கில்லாத உயர்த்தியை புத்தி பூர்வகமாக உதறி விட்டுத்‌ தம்மை அதிகமாக ப்ரகாசிக்கும்படி செய்ய நினைத்தவர்களாய்‌, அம் மா முனிகளின்‌ தேஜஸ் ஸம்ருத்தியினால்‌ தமக்குப்‌ பெருமை உண்டாகுமென்று எண்ணி ௮ம் மா முனிகளைப்‌ பூர்ணமாகச்‌ சரணமடைத்தனர்‌-என்றபடியே ராமா நுஜ பரிக்ருஹீதராய்‌ அபிஜந வித்யாவ்ருத்தங்‌களா லுயர்ந்திருக்கிற கந்தாடை அண்ணன்‌ முதலான ஆசார்ய புருஷர்கள்‌ எல்லாரும்‌ தந்தம்‌ உயர்த்திகளைப்‌ பாராமல்‌ ஜீயர்‌ திருவடி ஸம்பந்தமே தங்களுக்கு ஸர்வாதிசயங்களுமாக வெண்ணி ஜீயர்‌ திருவடிகளை சரணமாக வந்தடைந்திருக்க அண்ணன்‌ ஜீயர்‌ திரு முன்பே சென்று, ‘தேவரீர்‌ அடியோங்களை க்ருபை பண்ணுகைக்கு இட்டிருந்த நாளும்‌ வந்தது; எம்பா முதனாராலே ப்ரதிபாதிக்கப்பட்ட நம்முடையவர்களுக்கு பெருமாள்‌ ஸ்வப்நாதி வ்யாஜத்தாலே திருந்தத் திருந்தி –தேவரீர்‌ திருவடிகளே ப்ராப்யமாக வந்து இந்த கோஷ்டியிலே கூடி யிருக்கிறார்கள்‌. எல்லாரையும்‌ க்ருபை பண்ணி யருளத்‌ திருவுள்ளமாக வேணும்‌” என்று விண்ணபஞ் செய்ய; ஜீயரும்‌ வானமாமலை ஜீயரை அழைத்து அதற்கு வேண்டியவைகளை ஸந்நத்தமாக்க நியமித்தருளி, தாமும்‌ திருவாராதநஞ் செய்தருளி -திருப்பணியாரமும்‌ பழவமுதும்‌ பூர்ணமாகக்‌ கண்டருளப்‌ பண்ணி, ஸந்நிதி முன்பாக எழுந்தருளி யிருந்து ஸமாச்ரயணமாக வேண்டியவர் களெல்லாரையும அழைத்து அண்டையிலே வைத்துக் கொண்டு செய்யுங் கிரிசைகளெல்லாஞ்‌ செய்தருளி, தாப புண்ட்ரஸ் ததா நாம மந்த்ரோ யாகஸ்ச பஞ்சம:” திருவிலச்சினை, திருமண்காப்பு, தாஸ்ய நாமம்‌, மந்த்‌ரோபதேஸம்‌, தேவ பூஜை என்று ஐந்து-என்கிறபடியே பஞ்ச ஸம்ஸ்‌காரங்களையும்‌ செய்தருளி பரமைகாந்த்ய மஹா பலத்தையும்‌ பூர்ணமாக்கி உகந்தருளி நெடும் போது அண்ணனை -இருந்தான்‌ கண்டு கொண்டு என்கிறபடியே கடாக்ஷித்துக்‌ கொண்டிருந்து;

அப்பாச்சியாரண்ணா வானமாமலை ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
வானமாமலை ராமநுஜ ஜீயரைக்‌ காட்டி யருளி-இவர்‌ தமக்கு ப்ராண ஸுஹருத்து, தமக்குண்டான அதிசயமெல்லாம்‌ இவர்க்கு முண்டாக வேணும்‌, முதலியாண்டான்‌ திரு வம்சத்திலே நமக்கு ஸம்பந்த முண்டானாற் போல இவர்க்கு முண்டாக வேணும்‌’ என்று அருளிச் செய்ய அண்ணன்‌, திருவுள்ளக் கருத்தறிந்து அடியேனை அங்கே ஆஸ்ரயிப்பித் தருளாதே யொழிந்ததே”’ என்று விண்ணப்பஞ் செய்ய, ‘ நமக்கு ப்ராப்தமானதை விடப் போமோ?!”என்ன, அண்ணன்‌ தம்முடைய அநுபந்திகளை ஸாபிப்ராயமாசப்‌ பின்னே கடாக்ஷித்தருள, பாவஜ்ஞராய்‌ ஆச்சியாருடை குமாரராயிருக்கிற அண்ணா எழுந்திருந்து தண்டன்‌ ஸமர்ப்பிக்க – என்ன வென்று கேட்டருள, *‘அடியேனை எங்களாண்டவன்‌ வானமாமலை ராமாநுஜ ஜீயருடைய திருவடிகளிலே ஆஸ்ரயிப்பிக்க வேணும்‌ என்ன, ஜீயரும்‌ மிகவுகந்தருளி, நம்மப்பாச்சி யாரண்ணாவோ- என்றருளிச் செய்து,(‘ஸ்ரீ தீர்த்த தேவராஜஸ்ய தநயாப் பேதி விச்ருதா. தஸ்யாஸ் தநுஜோ வரத:”‘ என்று இவர்‌ போற்றப்படுகிறார்‌.-திருமஞ்சனம்‌ அப்பா என்ற தேவராஜருடைய குமாரத்தியாய்‌ ஆச்சி என்று ப்ரஸித்தை யானவருடைய குமாரரான வரதாசாரியர்‌, ஜீயர்‌ இவருக்கிட்ட பெயர்‌ அப்பாச்சியாரண்ணா என்பது.) ‘அவரைக்‌ கையைப் பிடித்துத்‌ தம்முடைய அண்டையிலே வைத்துக் கொண்டு தாம்‌ எழுந்தருளி யிருந்த ஆஸநத்திலே வானமாமலை ஜீயரை யிருத்தித்‌ தம்முடைய திருக் கைகளிலிருந்த ஆழ்வார்களை அவர்‌ திருக் கைகளிலே ஸாதித்தருளி, இவர்க்கு ‘ஸாதியும்‌’ என்ன, அவர்‌ சற்று இறாய்க்க, “அப்படி, செய்ய வேண்டா, நமக்கு ப்ரியமானதைச்‌ செய்யும்‌” என்றருளிச்‌ செய்து ௮ண்ணாவை ப்ரீத்யதிசயத்தாலே தழுவிக் கொண்டிருந்து ஆஸ்ரயிப்பித் தருளினார்‌; உடனே அண்ணாவுடைய திருத் தம்பியாரன தாசரதி அப்பையும்‌ அங்கே ஆஸ்ரயித்தார்‌. உடனே வானமாமலை. ராமாநுஜ ஜீயர்‌ போதும்‌, இனி அடியேனை விட வேணும்‌” என்று எழுந்திருந்து தூரப் போய்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து நிற்க, “அப்படியே யாகிறது; எழுந்தருளி யிருக்க’ என்றருளிச் செய்து, தாமும் முன் போலே எழுந்தருளி யிருந்து கந்தாடை அப்பன்‌ முதலான அண்ணன்‌ ப்ராதாக்களுக்கும்‌, ப்ராத்ரு கோடிகளா யுள்ளவர்களும்‌, புத்ர கோடிகளா யுள்ளவர்களும்‌ ஸ்வ பார்யாதி வர்க்கங்களுடனே நூற்றிருபது திருநாமம்‌ மற்றும்‌ சிங்கரையர்‌ முதலான பகவத் க்ருபா பாத்ர பூதரான அநேகம்‌ பேர்களும்‌ ஆஸ்ரயித்தார்கள்‌. அந்த ஸமயத்தில்‌ கோயில்‌ பரிகரமனைத்துக்‌ கொத்தும்‌ ஸகல மங்கள வாத்யங்களுடனே பெருமாளுடைய ப்ரஸாதங்‌கள் கொண்டு வர, ஜீயர்‌ எதிர் கொண்டு ப்ரணாம புரஸ்கரமாக ஆதரித்து உள்ளே எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு போயிருக்க, அண்ணன்‌ அவர்களை யதோசிதம்‌ ஆதரித்து பஹுமாநஞ்‌ செய்தருளி, அவர்‌களுடனே ஜீயர்‌ தொடக்கமானவர்களும்‌ அன்று ஆஸ்ரயித்தவர்‌களும்‌ கோயிலிலே எழுந்தருளி எம்பெருமானார்‌, ஆழ்வார்‌ பெருமாள்‌, நாய்ச்சியார்‌, எல்லாரையும்‌ “தேவீ கோதா”-இத்யாதிப்படியே மங்களாசாஸனம் செய்தருளி மீண்டும்‌ மடத்திலே எழுந்தருளித் ததியாராதனமும்‌ மஹோத்ஸவமாக நடந்தது.
ஜகத் ரக்ஷாபரோ ஆநந்த'” என்று தோழப்பர்‌ ஸ்வப்நத்திலே பேரருளாளர்‌ அருளிச்‌ செய்த படி பலிக்கக் கண்‌டோம்‌” என்று எல்லாரும்‌ உகந்தருளினார்கள்‌.

இப்படி ஆஸ்ரயித்தவர்களெல்லாரும்‌ ஜீயருடைய அதி மானுஷமான அத்புத சரிதங்கள் எல்லாவற்றையும்‌ ஸேலித்து
சிர விரஹதஸ் சிந்தா ஸந்தாந ஜர்‌ஜ ஜர சேதஸம்‌
புஜக சயநம்‌ தேவம் பூய: ப்ரஸாத யிதும்‌ த்ருவம்‌ |
யதி குலபதி ஸ்ரீமாந் ராமாநுஜ ஸ்வய மித்யபூ
திதிதி ஸமதுஷந் ஸர்வே ஸர்வத்ர தத்ர ஸுதீ ஜநா; ॥

யதி குல நாதரான ஸ்ரீமத் ராமானுஜர்‌-தம்மை வெகு நாட்கள்‌ பிரிந்ததனால்‌ இடைவிடாமல்‌ தம்மையே நினைத்து நினைத்துத்‌ தளர்ந்த திருவுள்ளங் கொண்ட அரவணையானான ஸ்ரீரங்கநாதப்‌ பெருமாளை மறுபடியும் மகிழ்விக்கக் கருதியே போலும்‌, தாமே மணவாள மாமுனிகளாக அவதரித்‌தருளினாரென்று அங்கு எல்லா விடத்திலும்‌ உள்ள ஞானியர்‌ அனைவரும்‌ மிக மகிழ்ந்தனர்‌–என்கிறபடியே யதி புந அவதாரமாக வெண்ணித்‌ தாங்களும்‌ சிரோபாஸித ஸத் வ்ருத்தரென்னும்படி அவர்‌ திருவடிகளைப்‌ பழுக்க ஸேவித்து, அங்குத்தைக்குப்‌ பரிவராயிருந்தார்கள்‌. இப்படி ஜீயர்‌ சிஷ்ய ஸம்பத்துடனே இனிதாக வாழ்ந்தருளுகிற போது திருவாழி யாழ்வார்‌ பிள்ளையை ஸ்ரீ கோசங்களை யெல்லாம்‌ அப்போதைக்‌கப் போது சோதித்து ஸம் ரஷணம்‌ பண்ணிக் கொண்டு வரவும்‌ ஏறி யருளப்‌ பண்ண வேண்டிய ஸ்ரீ கோசங்களை லேகரிகளை யிட்டு நன்றாக ‘ஏறி யருளப் பண்ணவும்‌ தாமபேக்ஷித்த அவஸரங்களிலே அபேக்ஷிந்த ஸ்ரீகோசங்களை ஸமர்ப்பிக்கவும்‌ ஈடு முப்பத்தாறாயிரப்‌படி அர்த்தமாம்‌ படி சிறிது வ்யாக்யானங்களைக்‌ கூட்டி ப்ரதி ஏறி யருளப் பண்ணி வைக்கவும்‌ நியமிக்க, அவரும்‌ அப்படியே எல்லாவற்றையும்‌ செய்து கொண்டு போந்தார்‌.

ஆண்ட பெருமாள்‌ அண்ணனை ஆஸ்ரயித்தது
ஒரு நாள்‌ சுத்த ஸத்வம்‌ அண்ணனை யழைந்தருளி போர வுகந்‌தருளி “ஆழ்வாருக்கு ஸ்ரீ மதுர கவிகளைப் போலே நீர்‌ அண்ணனுக்கு அபிமத விஷயமாக விருக்கப்‌ பெற்றிரே; *தன்னாரியனுக்குத்‌ தானடிமை செய்வது இந் நாடு தன்னிலிருக்கும்‌ நாளன்றோ; ஸகல சுச்ரூஷைகளும்‌ பண்ணிக் கொண்டு வாழும்‌”- என்று ஆசீர்வதித்து;குமண்டூர்‌ ஆச்சான் பிள்ளை பெளத்ரராயும்‌ ஜ்ஞாநாதிகராயும்‌ ஸகல சாஸ்த்ர பாரங்கதரா யுமிருக்கற ஆண்ட பெருமாளை ஜீயர்‌ அண்ணனிடம்‌ “உம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கராய்‌ தர்சந ப்ரவர்த்தாராம்படி விநியோகித்துக்‌ கொள்ளும்‌” என்று விட, அண்ணனும்‌ அப்படியே செய்தருளினார்‌-

(வரவரமுநி ப்ருத்யர்‌” என்று நிரூபகமாம்படி திருவடிக்கு அந்தரங்கராய்‌ ஆசார்யாபிநைக நிஷ்டராயிரா நிற்க -இது கண்டு கந்தாடை அண்ணன்‌ முதலானோர்‌ இவர்‌ திருவடிகளில்‌ ஆச்ரயணோந் முகராயிருக்க, அவ்வளவிலே பெருமாளும்‌ அவர்கள்‌ ஸ்வப்நத்திலே அஸங்குசிதமாசக்யே புஜங்க ஸயந : புமாந்‌” (சேஷஸாயியான ரங்கநாதன்‌ விரிவாக அருளிச்‌ செய்தார்‌) என்கிறபடியே விசதமாக ஜீயர்‌ திருவடிகளே ஆஸ்ரயிக்கும்படி நியமித்தருள்‌, அவர்‌ திருமுகப்படியே ” ராமாநுஜ பதாம் போஜ ஸெளகந்த்ய நிதயோபியே”’ என்று தொடங்கி “ஸ்ருத்வைவ வைபவம்‌ தஸ்ய தத்வேத ஸரணம்‌ யயு.” [எவர்கள்‌ எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளின்‌ பரிமளத்தையே தமக்கு நிதியாக நினைத்திருத்தார்‌களோ அவர்களும்‌ அந்த மணவாள மாமுனிகளுடைய வைபவங்களை உள்ளபடி கேட்ட மாத்திரத்தலேயே அவரைச்‌ சரணம்‌ பற்றினார்கள்‌-என்கிறபடியே, ராமாநுஜ பரிக்ருஹீதராய்‌
அபிஜந வித்யா வ்ருத்தங்களாலும்‌ உயர்ந்திருக்குமவர்களான கந்‌தாடை அண்ணன்‌ முதலான ஆசார்ய புருஷர்களாயுள்ள அனைவர்‌களும்‌ தந்தாமுயர்த்திகளைப்‌ பாராமல்‌ இவர்‌ திருவடி ஸம்பந்தமே தங்களுக்கு தாரகமென்று அறுதியிட்டு வந்து ஜீயர்‌ திருவடிகளையே சரணமாகப்‌ பற்றி உஜ்ஜீலித்தார்கள்‌.
இப்படி ஆஸ்ரயித்தவர்களெல்லாரும்‌ ஜீயருடைய அதி மாநுஷமான அற்புத சரித்‌திரங்‌களெல்லாம்‌ கண்டு யதி புநரவதாரமாக எண்ணி, தாங்களும்‌-சிரே பாஸித ஸத் வ்ருத்தர்‌:”’ என்னும்படி அவர்‌ திருவடிகளைப் பழுக்க ஸேவித்துக்‌ கொண்டு அங்குத்தைக்கு அந்தரங்கராய்‌ இருந்தார்கள்‌– என்று மட்டுமே தெலுங்குப்பதிப்பில்‌ காண்பது, மேலே வேடலப்பை, ஹஸ்திகிரி நாதரண்ணா விஷயங்கள்‌ பேசப்பட்டு, ஜீயருக்கு பூர்வாச்ரம ஸந்ததி லிஷயம்‌ பேசப்பட்டுள்ளது, வேடலப்பை, அண்ணா பற்றியவை இப்பதிப்‌பில்‌ பின்னர்‌ வரும்‌.)

—==-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-