வீர நாராயணபுரத்திலே (தற்பொழுது காட்டு மன்னார்கோவில்) சுவாமி
மன்னனார் திருவடிகளிலே சகலவித கைங்கர்யங்களையும் செய்து கொண்டு வாழ்ந்து வருகிற ஈஸ்வர பட்டாழ்வாரும் அவரது குமாரர் ஸ்ரீ ரங்கநாதமுனிகளும் அவர் குமாரர் ஈஸ்வர முனிகளும், மன்னனனாரிடம் அருளாசி பெற்று, வடக்கே பத்ரிஹாஸ்ரமத்திலி௫ந்து பெருமாள் அவதரித்து விளையாடியருளின வடமதுரை, திருவாய்ப்பாடி, பிருந்தாவனம், யமுனாதீரம், கோவர்த்தனகரி, அயோத்தி, சாளக்கிராமம் முதலான வடதிசையில் உள்ள திவ்ய தேசங்களை யெல்லாம் சேவிக்க எண்ணிக் குடும்பத்தோடு புறப்பட்டுப் போய்ச் சேவித்து வருகையில், யமுனா தீரத்திலுள்ள ஸ்ரீகோவர்த்தனபுரம் என்ற நகரின் அழகிலே ஈடுபட்டு அங்கு நித்தய வாசம் பண்ண வேண்டும் என்று தீர்மானித்து வாழ்ந்து வரும் காலத்தில் சுவாமி மன்னனார் நாதமுனிகள் கனவில் தோன்றி நம்முடைய வீரநாராயணபுரத்திற்கே வாரும் என்று கூறியதால்,அங்கிருந்து புறப்பட்டு வாரணாசி, புருஷோத்தமம் (பூரி ஜகந்தாத்) சிருங்கேரி, அகோபிலமடம் வழியேத் திருவேங்கடம் வந்து,அங்கேயும் நித்ய வாசம் பண்ண மன்னனார் இசையாததால், அங்கிருந்தும் புறப்பட்டுக் காஞ்சி திருக்கோவலூர், திருவரங்கம், திருக்குடந்தைப் பெருமான்களையும் சேவித்து மீண்டும் வீரநாராயணபுரத்துக்கே வந்து, மன்னாருக்குத் திருநந்தவனம் அமைத்தும் புஷ்ப கைங்கர்யமும் ஏனைய கைங்கர்யங்களும் செய்து கொண்டு
வாழ்ந்து வருவாராயினர்.
இவ்வாறிருக்கையில் ஒரு நாள் சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் மன்னனாரைச் சேவித்து அவர் திருமுன்பு ஆரா அமுதே" என்றுதொடங்கும் திருவாய்மொழிப் பாடலை அனுசந்திக்க அதைக்கேட்டு மகிழ்ந்த நாதமுனிகள் அவர்களிடம் உங்களுக்கு இப்பிரபந்தம் முற்றும் தெரியுமா என்று கேட்டபொழுது அவர்களும் எங்களுக்கு இப்பத்துப்பாட்டு மட்டுமே தெரியும் என்று சொல்லிவிடவே, நாதமுனிகள் சடகோபன் அவதரித்துள்ள திருக்குருகூர் திருநகரிக்குச்சென்று அங்கு எழுந்தருளியுள்ள பொலிந்து நின்ற
பிரான், சடகோபன், முதலானோரைச் சேவித்து நின்றார். அங்குள்ள மதுரகவியாழ்வாரது சிஷ்யரான பராங்குஸதாஸரைச் சேவித்து அவரிடம் இவ்விடம் திருவாய்மொழி ஒதினவர்கள் உண்டா என்று கேட்க, அவரும் திருவாய் மொழியும் ஏனையப்பிரபந்தங்களும், வெகு காலத்துக்கு முன்பே அனுசந்திப்பார் இல்லாமல் மறைந்து போயின. என்னுடைய ஆச்சாரியார் அடியேனுக்கு அருளிய 'கண்ணினுண்சிறுதாம்பு' பதிகம் மட்டுமே உள்ளது என்றார். அதை அவரிடம் கற்று, திருப்புளியாழ்வாரடியில், ஆழ்வார் திருமுன்பு பன்னீராயிரம் உரு 'கண்ணினுண் சிறுத்தாம்பு" பாசுரத்தை நியமத்தோடு அனுசந்தித்தார்.
நம்மாழ்வார் அவருக்கு ஞானக் கண் அருளித் திவ்யப் பிரபந்தங்களையும்,, ரஹஸ்யத்திரயத்தையும், தர்ஸன தாத்பர்யங்களையும், அஷ்டாங்க யோக ரகஸ்யத்தையும் அருளிச்செய்தார். 'மிக்க வேதியர் வேதத்தினுட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்! என்கிறபடி இவர் பொலிந்து நின்ற பிரானையும், நம்மாழ்வாரையும் அனுபவித்து வரும்பொழுது, மன்னனார் மீண்டும் அவர் கனவில் தோன்றித் தான்
பிரபந்தத்தைக் கேட்க விரும்புவதாகவும், அதனால் மீண்டும் வீரநாராயண புரத்துக்கே வாரும் என்று கூறிவிடவே, அவரும் ஆழ்வார், ஆதிப்பிரான் அனுமதி பெற்று, வீரநாராயணபுரம் வந்து மன்னனார் திருமுன்பு ஓதினார். அதன் அழகிலும் சுவையிலும் ஈடுபட்டு மன்னனார் இத்தகைய உயர்ந்த செல்வம் மீண்டும் மறைந்துவிடக்கூடாது. நீர் இவற்றை இயலும் இசையுமாக்கும் என்று அர்ச்சகர் மூலமாகக் கட்டளையிட்டு நியமித்தார். நாதமுனிகளும் தன் மருமக்களான கீழையகத்தாழ்வான் (கிருஷ்ணமாச்சார்யார்] மேலையகத்தாழ்வான் (வரதாச்சார்யார்] இவர்களை அழைத்து, அவர்களின் மூலமாக இன்கவிபாடும் பரமகவிகளாக, திவ்யகானத்திலேயமைத்து, இயலும் இசையுமாக பாடுவித்தருள அது உலகத்தில் மீண்டும் சிறப்புற்று எல்லோராலும் பாடப்பட்டுப்
பரவி வந்தது.கோயில்களில் உற்சவ காலங்களில் இசையுடன் அபிநயித்துப் பாடவைத்தனர். இவ்வாறு ஆரம்பித்த அரையர்சேவை இன்றும் ஸ்ரீரங்கம், ஆழ்வார் திருநகரிபோன்ற முக்கிய வைணவ ஸ்தலங்களில் மட்டும் நடைபெறுகிறது. வேதவியாசர் அருளிய சூத்திரத்தின் விரிவாக்கமாக அமைந்தது நாதமுனிகள் அருளிய யோக ரஹஸ்யங்கள் என்பர். தியான யோகமே இறைவனையும் ஜீவனையும் இணைக்கின்ற பாலமாகும். இந்த உணர்வு எல்லோராலும் பெற முடியாது. மனதில் தானாகவே உருவாக வேண்டும். இந்த உள்ளொளியே உலகுக்கு நித்தியப் பிரகாசாதிபரன் எனச் சுயம் பிரகாசியாக உள்ளது.-இவருடைய முக்கிய சிஷ்யர்கள் உய்யக்கொண்டாரும் (புண்டரீகாக்ஷர்) குருகைக் காவலப்பனுமாவார்கள். அவர்கள் மூலமாகத் திவ்யப்பிரபந்தத்தையும் யோக ரகஸ்யத்தையும் பிரசாரம் செய்வித்து, இனிப்பிறக்க இருக்கும் தன்னுடைய பேரனான யமுனைத்துறைவருக்கு இவற்றை அளிக்கும்படி நியமித்து விட்டு குருகைக் காவலப்பன் கோயிலிலேயே பரம பதித்தருளினார். இவர் சுமார் 102 ஆண்டுகள் வாழ்ந்தார். இவர் கி.பி, 822ல் ஆனி மாதம் ஏழாம்தேதி பிறந்தார். இவர் பிறந்த இடம் சோழ நாட்டில் வீரநாராயணபுரம், பிறந்த குலம் சொட்டைக்குலம். இவருக்குத் தகப்பனார் இட்ட பெயர் ரெங்கனாதன் என்பது. இவர் யோகாப்யாசம் கைவந்தவராகையாலே இவரை ரெங்கநாதமுனிகள் என்றனர்.
அப்பெயரைச் சுருக்கி நாதமுனிகள் என்றும் அழைத்தனர். ஆளவந்தார் என்ற யமுனைத்துறைவர் அருளிய ஸ்தோத்திர ரத்னத்தின் கடைசி ஸ்லோகத்தில் 'என்னுடைய நடத்தையை நினைக்காமல், உன்னுடைய திருவடித்தாமரைகளில் இயற்கையாக
இருக்கும் மேலான அன்பிற்கு எல்லை நிலமாயிருப்பவரும்,ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்தவரும், எனக்குப் பாட்டனாருமாகிய நாதமுனிகள் கடாக்ஷித்து எனக்கு அருள் புரிய வேண்டும்" என்கிறார். நாதமுனிகள் வீட்டில் இல்லாதபோது வில்லேந்திய இருவீரரும், ஒரு பெண்ணும் ஒரு குரங்கும் அவரைத் தேடி வந்துவிட்டுப் போனதாக வீட்டிலுள்ளவர்கள் சொன்னதாகவும், அவ்வாறு வந்தவர் ஸீதா ராமலட்சுமண அனுமானாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணி அவர்களைத் தொடர்ந்து அவர்கள் போன இடமான கங்கைகொண்ட சோழபுரம் சென்று அங்கேயே தேகப்பிராப்தி அடைந்தார் என்பதும் கர்ண பரம்பரைச்செய்தி. நாதமுனி அதிக நாட்கள் வாழ்ந்தால் கூட அவர் வாழ்நாளிலேயே ஒரே மகனை இழக்கும் அவல நிலை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அவரது மகன் ஈஸ்வர முனியின் மகனான யமுனாச்சாரியார் இளவயதிலேயே மிகக் கீர்த்தி வாய்ந்தவராக இருந்தார்.
‘ஆரப்பொருள் தென்குருகைப்பிரான், அமுதத் திருவாய் ஈரத்தமிழின் இசையுணர்ந்தோர்கட்டு, இனியவர்தம்
சீரைப் பயின்றுய்யும் சீலங்கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மாநிதியே (இரநூந். 20)
தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவாரார்?
அருளிச் செயலை அறிவாரார்? — அருள் பெற்ற
நாதமுனி முதலான நம் தேசிகரை யல்லால்
பேதை மனமே! உண்டோ பேசு.(உபதே. 36)
நாதமுனிகள் அருளிய நம்மாழ்வார், பெரியாழ்வார் திருவாய்மொழி, மதுரகவியாழ்வார் இவர்களைப் பற்றி யருளிய தனியன்களில் மதுரகவி பற்றிய தமிழ்த் தனியன் வருமாறு.
“வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் ஏறு – எங்கள்
வாழ்வாமென்றேத்தும் மதுரகவியார் எம்மை
ஆழ்வார் அவரே அரண்–என்பதாகும். இவர் யோகத்தில் இருக்கும் பொழுதே குருகைக்
காவலப்பன் கோயிலில் சக்கரவர்த்தித் திருமகனார் திருவடிகளில் சேர்ந்தார் என்று கூறப்படுகிறது.
ஆனிதனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே.
ஆளவந்தார்க்குபதேசம் அருளி வைத்தான் வாழியே.
பானு தெற்கில் கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே
பராங்குசனார் சொற்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டுறைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக்கதியளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலந்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே
நாதமுனிகளின் பிரதான சீடரான உய்யக் கொண்டார், என்ற புண்டரீகாக்ஷர், நாதமுனிகள் அவதரித்து 63 வருடங்களுக்குப் பின்னர் கி.பி. 886-ல் சித்திரை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் திருவெள்ளறை என்னும் திருத்தலத்தில் ஸ்ரீ வைஷ்ணவ பிராமண குலத்தில் பிறந்தவர், ஆச்சார்ய பரம்பரையில் நாதமுனிகளாகிய மலையிலிருந்து விழுகிற அருவியாக அமைந்தவர் உய்யக்கொண்டார். ஆதி காலத்தில் தமிழ்நாடு முழுவதும் காடாக இருந்த காலத்திலே ஸ்ரீராமபிரானுக்கு முன்னோனாகிய சிபிச்சக்கவர்த்தியால், மத்தியப் பிரதேசத்திலிருந்து 2700 ஸ்ரீ வைஷ்ணவ பிராமண குடும்பங்கள் திருவெள்ளறையில் எழுந்தருளியிருக்கும் புண்டரீகாக்ஷப் பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டனர். இவ்வாறு ஆதி காலத்திலேயே ஏற்பட்ட புனிதத்தல மாகையால் இதை இன்றும் மக்கள் ஆதித் திருவெள்ளறை என்று அழைக்கின்றனர். ஆதிகாலத்திலேயே சோழ தேசத்திற்கு வந்தவர்களாதலால் சோழியர்கள் என்றழைக்கப்பட்டனர். இத்தகைய ஸ்ரீ
வைஷ்ணவப் பிரமாண குலத்தில் பிறந்தவர் உய்யக் கொண்டார். ஞான ஜன்மமே தேக ஜன்மத்தை விடச் சிறந்ததாகக் கருதப்பட்டு வந்த காலமாதலால் உய்யக்கொண்டாரது ஆச்சார்ய, சிஷ்யர்களைப் பற்றிக் குறிக்கப்பட்டது போல, அவரது பெற்றோர்களைப் பற்றியும் மக்களைப் பற்றியும் விவரங்கள் குறிக்கப்படவில்லை. சிறந்த வைணவ பக்தர்களுக்குக் குமாரராக அவதரித்தவர் என்றும் பெற்றோர்களால் முறைப்படி புண்டரீகாக்ஷன் என்று திருநாமம் சூட்டப்பட்டு உரிய காலங்களில் அன்னப் பிரசானம் செளனம், உபநயனம் முதலான சடங்குகளெல்லாம் செய்யப்பட்டு தக்க ஆச்சாரியனை எதிர்நோக்கிக் காத்திருந்தவர் என்றும் கொள்ளலாம்.
இந்நிலையில் அவரை நாதமுனிகளிடத்தில் சீடராய் இருந்து பாடங்கேட்குமாறு அனுப்பிவைத்தனர். அந்நாளிலிருந்து நாதமுனிகளையல்லாது அறியாதவராய், குருகுலவாசம் செய்து வந்தார்.-நாதமுனிகள் சிஷ்யர்களில் முக்கியமானவர்கள் உய்யக்கொண்டாரும், குருகைக் காவலப்பனுமேயாவார்கள். இதில் குருகைக் காவலப்பன், நாதமுனிகள் அருகில், எப்போதும் யோகத்தில் எழந்தருளியிருக்கும் இடத்திற்கு அருகிலேயே யோகத்திலே எழுந்தருளியிருந்தார். நாதமுனிகளிடம் இரு நிதிகள் இருந்தன. பகவத் பிராப்தக்கு (முக்திக்கு) உறுப்பான பக்தி யோகம் ஒன்று. பகவத்
குண ஸ்வரூப விபூதிகளைத் தெளியப் பேசும் நாலாயிரம் பாசுரங்களடங்கய திவ்யப்பிரபந்தம் மற்றொன்று. முதல் நிதியினிலால் சேதனன் ஒருவன்தான் முக்தி யடைய முடியும். இரண்டாவது நிதியினாலே உலகத்தையே உய்விக்க முடியும். இவற்றுள் எது வேண்டும் என்று குருகைக் காவல் அப்பனை வினவினார் நாதமுனிகள்.-நான் பக்தி யோகத்தைப் பெற்று உய்ந்து போகிறேன் என்றார் அவர். அதன் படியே உபதேசம் பெற்று உஜ்ஜீவனமடைந்தார். நாதமுனிகள் புண்டரீகாஷரையும் வினவ, அவர் ‘பிணங் கெடக்க மணம் புணருவாருண்டோ? உலகமே ஆத்ம நாசமடைந்து, பிணக்காடாயிருக்கும் பொழுது அடியேன் ஒருவன் பெருமானோடு ஆத்ம விவாஹம் செய்து கொண்டு மோட்சமடைவது சரியாகுமோ, அடியேன் எப்படியானாலும் பரவாயில்லை. உலகம் உய்யும் வகையாகத் திவ்யப் பிரபந்தங்களை உபதேஸிப்பீர்’ என்றார்.
இதைக் கேட்ட நாதமுனிகள் அவரை வாரி அணைத்துப் “புண்டரீகாக்ஷ்ரே! நீரே உலகையும், உலகை உடையவனான நாராயணனையும், அவனைச் சொல்லும் அருளிச் செயல்களையும் அதைப் பெற்ற என்னையும் உய்யக் கொண்டவர். உம்மாலே தான் நான்அரும்பாடு பட்டுப் பெற்ற அத்தமிழ் மறைகள் உலகெங்கும் பரவி அனைவரையும் உய்விக்கப் போகின்றன. இன்று முதல் நீர் ‘உய்யக் கொண்டார்’ என்ற திருநாமத்தாலேயே விளங்கக் கடவீர்’
என்று அருளிச் செய்து திவ்யப் பிரபந்தங்களை உய்யக்கொண்டாருக்கு உபதேசித்தருளினார், உய்யக்கொண்டாரது இத்தகைய சுயநலம் பேணாத பரந்த மனப்பான்மையினால் இன்று நாம் அருளிச் செயல்களாலேயே உய்ந்து போகிறோம். இதனாலேயே இவர் ஸ்ரீ வைஷ்ணவ சமூகம் முழவதற்கும் பிரேமாச்சாரியராய், நாதமுனிகளுக்கு பின் அனுசந்திக்கப்படுகிறார்.
நாதமுனிகள் யோக திசையில் நம்மாழ்வாரிடம் திருவாய்மொழி உபதேசம் பெறும் பொழுது ‘பொலிக பொலிக: என்னும் திருவாய்மொழி வந்தவுடன் கலியும் கெடும் கண்டு கொண்மின்:என்று நான் சொன்னதை மெய்யாக்க ஒரு மஹான் அவதரிக்கப் போகிறார் என்றார் ஆழ்வார். அவரைச் சேவிக்க வேண்டும் என்று நாதமுனி வேண்ட, ஆழ்வாரும் அப்படியே இராமானுஜரின் உருவைச் சேவை சாதிக்க தேவரீரைக் காட்டிலும் அழகிய இந்தத் திருமேனியை அடியேன் எப்பொழுதும் சேவித்து வழிபட வேண்டும் என்று நாதமுனி பிரார்த்திக்க ஆழ்வாரும் சிற்பிகளை கனவு மூலமாக நியமித்து எம்பெருமானாருடைய விக்ரகத்தைச் செய்வித்து நாதமுனிகளிடம் கொடுத்தருளி, இவரை நம்முடைய -அடியாக நினைத்திரும் என்று அருளினார் என்று நாயனாராச்சான் பிள்ளை என்ற வைஷ்ணவ சீலர் அருளிச் செய்வார்.
தம்முடைய அந்திம காலத்திலே நாதமுனிகள், உய்யக்கொண்டாரிடம் ‘ஒருவருக்கும் வெளியிடாதே கொள்ளும் என்று அந்தப் பவித்திரமான விக்ரகத்தைக் கொடுத்து ‘இதை என் பேரனுக்கு. நான் விரும்பின விஷயம்’ என்று கொடும் என்று கூறி ஆழ்வார் திருவடிகளே சரணம் என்று சடகோபன் பொன்னடியான அவ்விக்ரகத்தைத் தியானம் பண்ணிக் கொண்டு இறைவனடி சேர்ந்தார்.
உய்யக்கொண்டாரது கடைசிக்காலம் வரை நாதமுனிகளது பேரன் அவதரிக்காததால், அவ் விக்ரகத்தைத் தம்முடைய பிரதான சீடரான மணக்கால் நம்பியிடம் கொடுத்து நாதமுனிகளது பேரன் யமுனைத் துறைவரிடம் அதை அளிக்கும்படி கட்டளையிட்டார் என்றும் அவரும் அவ்வண்ணமே அளித்தார் என்றும் கூறுவர்.
உய்யக்கொண்டார் சீடர்கள் ஐந்துபேரில் பிரதானமான மணற்கால் நம்பியின் இயற்பெயர் ‘ஸ்ரீராமன்’ என்பது. இவர் உய்யக்கொண்டார் திருவடிகளில் 13 வருடகாலம் சகல கைங்கர்யங்களும் செய்து கொண்டிருந்தார். ஒரு சமயம் உய்யக் கொண்டாரது மனைவி இறந்துவிடவே திருமாளிகை (வீடு) காரியமெல்லாமும் தானே செய்துவந்த காலத்தில் ஒரு நாள் உய்யக் கொண்டாரது சிறுமிகள் இருவரையும் நீராட்டி அழைத்து வரும் பொழுது வழியில் வாய்க்கால் சேறாயிருப்பதைக் கண்டு அவர்கள் திகைத்துநிற்க, தாம் படியாய்க்கிடந்து, அவர்களைத் தன் முதுகிலே கால் வைத்து நடக்குமாறு செய்து கூட்டிப் போக, உய்யக் கொண்டார்,தம் புத்திரிகள் கால் சுவடுகள் (மணற்கால்] அவர் முதுகில் பொலிய நின்றதைப் பார்த்து அவரை மணற்கால் நம்பி என்றும் அவர் பிறந்த ஊருக்கு மணற்கால் என்றும் திருநாமம் சாத்தினார்.இத்தகைய ஆச்சார்ய நிஷ்டையினால் உய்யக் கொண்டாரது போற்றுதலுக்கும் பாத்திரரானார் மணற்கால் நம்பி. உய்யக்கொண்டாரது அந்திம காலத்தில் இந்த வைணவ தர்ஸனத்தை நடத்துபவர் யார் என்று கேட்க மற்ற முதலிகளையும் (ஸ்ரீவைஷ்ணவர்கள்) கூட்டிக் கொண்டு நீரே நடத்துவீர்: பின்னர் நாதமுனிகளுக்குப் பேரன் பிறந்த பின்னர் அவருக்கு யமுனைத் துறைவர்என்ற பெயரை வழங்கி இந்த எம்பெருமானார் விக்ரகத்தையும் கொடுத்து தகுந்த ஆச்சாரியரைத் தேடிக்கண்டுபிடித்து அவரிடம் தர்ஸன நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டியது அவரது கடமை என்று நாதமுனிகள் நியமித்ததாகச் சொல்லி அவருக்கு எல்லா அர்த்தங்களையும் உபதேசியும் என்று கூறி நாதமுனிகள் திருவடிகளை நினைத்தவாறே திருநாட்டுக்கு ஏகினார். உய்யக் கொண்டார் கிரந்தம் எதுவும் எழுதினதாகத் தெரியவில்லை. இவரது வேறு பெயர்கள் புண்டரீகாக்ஷர், பத்மாக்ஷர், அரவிந்தாக்ஷர் என்பர்.
இவரது ஆச்சாரியார் நாதமுனிகள் என்று கண்டோம். இவர் 105 ஆண்டுகள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகின்றது. இவர் அருளிய திருப்பாவைத் தனியன்கள்.
அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல் பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பா மாலை பூ மாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவாய்
பாடி யருள வல்ல பல் வளையாய் – நாடிநீ
வேங்கடவெற் கென்னை விதி யென்ற இம் மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு:
நாதமுனிகள் உய்யக் கொண்டாரிடம், குளப்படியில் நீரைத் தேக்கினால் வற்றிப் போகும். வீராணத்து ஏரியில் தேக்கினால் நாட்டுக்கு உபகாரமாகலாம். ஆகவே இந்தப் பிரமேய ரத்னத்தை ஆளவந்தாருக்கு உபதேசியும் என்று சொன்னதாகச் சொல்லுவர்.
வால வெய்யோன் தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பி தொழும் மலர்ப் பதத்தான் வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்பான் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தான் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மாலரங்க மணவாளர் வளமுரைப்பான் வாழியே
வையமுய்யக் கொண்டவார் தாள் வையத்தில் வாழியே
நாலிரண்டு – திருவெட்டெழுத்துதிருமந்திரம்
ஐயைந்து இருபத்தைந்து எழுத்துக்களுள்ள த்வையம் மந்திரம்
நாலெட்டு – முப்பத்திரண்டு எழுத்துக்களுள்ள சரம ஸ்லோகம்-ரகஸ்ய த்ரயம் சொன்னபடி.
நாதமுனிகளுக்கு மேலையகத்தாழ்வான் (வரதாச்சார்யார்,கீழையகத்தாழ்வான் (கிருஷ்ணமாச்சார்யார்] என்ற மருமக்கள் இருவர் உண்டு. இவர்களைப் பற்றி வேங்கட சேஷாச்சாரியார் என்பவர் வரதாச்சார்யார் என்பவர் ஸ்ரீதர யோகாபதி என்றும், கிருஷ்ணமாச்சார்யார் ஸ்ரீதர யோகக்கல்பகத்தரு என்னும் பெயருடைய
யோக சாஸ்திரங்களைச் செய்தனர் என்பார். வரதாச்சார்யார் குமார ரான நிர்மல தாஸர் ஸ்ரீமத்நாதமுனிகள் அருளிச் செய்த யோகசாராப்ரத்துக்கு விருத்தி (விளக்கம்) அருளிச்செய்தார். இவர் குமாரரான ஞான வராஹாச்சாரியார் நாதமுனிகளுடைய யோக சாஸ்திரத்துக்கும் பதஞ்சலி யோக சாஸ்திரத்துக்கும், ஐக கண்டயம் செய்தார்.
குருகைக் காவலப்பன் என்னும் இவர் குமாரரான குருகேசர் ஸ்ரீஆளவந்தாருக்கு யோக சாஸ்திரத்தை உபதேசிக்க விரும்பி நான் நித்ய விபூதிக்கு எழுந்தருளும்போது (மரணமடையும்) வருமாறு நியமித்திருக்க அக் காலத்தை ஆளவந்தார். மறந்து வராமலிருந்து விட்டபடியால் ஸ்ரீ குருகைக்காவலப்பன் வரை வந்த யோகானுஷ்டானம் நின்று விட்டது.
குருகைக் காவலப்பன் நாதமுனிகளின் மருமகனின் பூட்டன் -அக் காலத்தில் தமக்குத் தெரிந்த ஞான சாஸ்திரங்களைப் பிறருக்குச் சொல்வதில் எவ்வளவு கண்டிப்பாக இருந்தார்கள் என்பதை அறிகிறோம். இராமானுஜர் காலத்தில் எவ்வாறு இந்த நிலை மாற்றமடைந்தது என்பதைக் காண இருக்கிறோம். நாதமுனிகள் தன்னுடைய மருமக்களான கீழையகத்தாழ்வாரையும், மேலையகத்தாழ்வாரையும் அழைத்து ஆழ்வார் பாசுரங்களை இயலும் இசையுமாகப் பாடுவித்தருளிய வைபவத்தை ஸ்ரீவேதாந்த தேசிகர் குருபரம்பரா ஸாரத்தின் இறுதிப்பகுதியில்
காளம் வலம்புரியன்ன நற்காதலடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல்
மூளூம் தவநெறி மூட்டிய நாதமுனி கழலே நாளூம் தொழுதெழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே.-என்று அவர்கள் இருவரையும் காளம் வலம்புரி போல வைத்து இனிய தேவ கானத்தை அமைத்துக் கொடுத்த நாதமுனி என்று புகழ்கிறார்.
குருகைக் காவலப்பன் நாதமுனிகளின் சிஷ்யரென்றும் அவரிடமிருந்து யோக
ரகஸ்யத்தைக் கேட்டுப் பெற்றார் என்றும் முன்னரே கண்டோம்.ஆளவந்தாருக்குக் குருகைக் காவலப்பன் கூறியதாகச் சொல்லும் ஒரு செய்தி உண்டு. அப்பன் ஸ்ரீபாதத்தில் ஒரு ரகஸ்ய விசேஷம்உண்டு என்று மணற்கால் நம்பி கூற அதைக்கேட்க வேண்டும் என்று ஆளவந்தாரும், குருகைக் காவலப்பன் ஒரு குட்டிச்சுவரருகே யோகத்திலே இருக்கும் இடத்திற்கு வந்தார். ஆளவந்தார் அவரதுசமாதி நிலையைக் கலைக்க விரும்பாது மறைந்து நிற்க, அப்பனும் யோகத்திலிருந்து கலைந்து கண்விழித்துப் பார்த்து இங்கு சொட்டைக் குலத்திலிருந்து வந்தவர் யாரேனும் உண்டா என்று .கேட்க ஆளவந்தார் நாங்கள் மறைந்திருந்தது தேவருக்கு எப்படித் தெரிந்தது என்று கேட்டாராம். அதற்குக் குருகைக் காவலப்பனும் நானும் பெருமாளும் தனித்திருக்கும் பொழுது பெரிய பிராட்டியார் வந்தால் கூடக் கவனிக்காத எம்பெருமான், என் கழுத்தை அமுக்கி நாலு தரம் எட்டிப் பார்த்தார். அப்படி அவர் பார்த்தால் சொட்டைக்குடியில் யாரேனும் வந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன் என்றாராம்.-ஜகத்திற்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள தொடர்பு எத்தகையது என்று ஒருவர் அப்பனைக் கேட்டபொழுது இந்த சரீரத்திற்கும், இதற்கு ஈஸ்வரனாயுள்ள ஜீவாத்மாவிற்கும் உள்ள தொடர்பாகிற சரீராத்மாத் தன்மையே; உலகிற்கும் ஸர்வேஸ்வரனுக்கும் உள்ள தொடர்பாகும் என்று கூறினாராம். அதே மனிதன் அப்பனைப் பார்த்து எப்பொழுதும் எம்பெருமானை நினைத்துக் கொண்டிருக்கும் நீர் அவனை நினைக்க எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும் என்று வேண்ட, அதற்கு அவர், நான் உனக்கு எம்பெருமானை நினைக்க வழி சொல்லுகிறேன். நீ அவனை மறக்க எனக்கு வழி சொல்கிறாயா என்றாரம். இதன் பொருள், எந்தப்பொருளுமே எம்பெருமானுக்குச் சரீரியாய் இருப்பதால் சரீரமாய் விசேஷமான அவனுடைய நினைவே வரவேண்டியிருக்கும். ஆகவே உலகத்திலுள்ள அனைத்துப் பொருள்களும் பகவானது சரீரத்தின் பகுதிகளே, பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் அவன் என்பது கருத்து. ஆளவந்தாரால் இவரிடமிருந்து யோகானுஷ்டா னத்தைப் பெற முடியாமல் போன சம்பவத்தை முன்னரே பார்த்தோம் –
குருகைக் காவலப்பன் பிறந்த இடம் பாண்டிய நாட்டிலுள்ள திருக்குருகூர். பிறந்த நட்சத்திரம் தை மாதத்தில் விசாகம். அவர் இருந்த இடம் நாதமுனிகளது திருப்பள்ளி. அது அன்று முதலாக சோழ தேசத்திலே காவிரிக் கரையிலே குருகைக் காவலப்பன் கோயில் என்றழைக்கப்படுகிறது. அவருடைய ஆச்சார்யார் நாதமுனிகள். அவருடைய திருவாராதனப் பெருமாள் சக்கரவர்த்தித் திருமகனார். இவரது இளமைப்பெயர் புண்டரீகாக்ஷர். இவர் 157ஆண்டுகள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் அருளிய மூன்றாம் திருவந்தாதித் தனியன்
சீராரும் மாடத் திருக்கோவலூரதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு – ஓராத
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே
உரைக்கண்டாய் நெஞ்சே உகந்து:-என்பதாகும்.
மகரமதில் விசாகம் நாள் வந்துதித்தான் வாழியே
மாறன் தாள் நாதமுனி மலரடியோன் வாழியே
நிகரில் நன் ஞான யோகம் நீண்டு செய்வோன் வாழியே
நிர்ணயமா ஐந்து பொருள் நிலையறிவான் வாழியே
அகமறுக்குமிராமர் பதம் ஆசையுள்ளோன் வாழியே
ஆழ்வார்கள் மறையதனை ஆய்ந்துரைப்போன் வாழியே
செகதலத்தில் குருகூரில் செனித்த வள்ளல் வாழியே
செய்குருகைக் காவலப்பன் திருவடிகள் வாழியே
திருக்கண்ணமங்கையாண்டான் நாதமுனிகளின் முக்கிய சிஷ்யர்கவில் ஒருவர் – இவர் திருக்கண்ணமங்கை என்ற ஊரில் பிறந்தவர். இவரைப் பற்றிய பல செய்திகள் பல கிரந்தங்களில் உள்ளன. நாதமுனிகள் இவருக்குத் திருவாய் மொழி உபதேசிக்கும்பொழுது ‘பொலிக பொலிக’ என்ற பாசுரம் வந்தபொழுது நம்மாழ்வார் அளித்துள்ள இராமானுஜரது
விக்ரகத்தின் விருத்தாந்தங்களை யெல்லாம் கூறக்கேட்டு, அத்தகைய பேற்றைப் பெற்ற தங்களுடைய சீடனான எனக்கு ஒரு குறைவும் இல்லை என்று கூறினார் என்பர்.-ஒரு நாள் அவர் ஒரு மகிழ மரத்தடியில் உள்ள சருகுகளைப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது ஒரு நாஸ்திகர் அவரிடம் உமக்கும் எனக்கும் என்ன வித்யாசம் என்று கேட்க,
அவர் பெருக்க இடமும் பெருக்காத இடமும் போல என்றாராம்.
“உபாயத்தை நிலையிட்டவர்கள், பிராட்டி, திரெளபதி, திருக்கண்ணமங்கை ஆண்டான் என்பவர்கள்’ என்று பெரியவாச்சான்பிள்ளை மாணிக்கமாலை என்ற நூலில் அருளிச் செய்துள்ளார் . அவன் தன் சுயவியாபாரத்தை விட்டான் என்ற பதத்திற்கு உரை கூறும்பொழுது, ஒரு சேவகனது நாயை ஒரு சேவகன் அடிக்க, அதைப் பொறாமல் அடித்தவனை எதிர்த்துப் பொருது, அவனையும் கொன்று தானும் குத்திக் கொள்வதாக இருக்கிறதைப் பார்த்து, ஒரு சாதாரண மனிதன் ஒரு தாய்க்காகத் தன் உயிரையும் இழக்க இருக்கப் பரம சேதனான இறைவன் அவனடியாரை எவ்வளவு நிச்சயமாகப் பரிபாலிப்பான் என்று கருதித் தன் சுய வியாபாரத்தை விட்டுத் திருக்கண்ணமங்கையில் பக்தராகி, திருவாசலில் அடைக்கலம் புகுந்தார். எறும்பியப்பா என்ற பக்தர் திருக்கண்ண மங்கையாண்டானைப் போலப் பற்றற்றிருந்தால் அவனுக்கு உலக அபவாதமும் வராது. சாஸ்திர விரோதமும் வராது, லோக அபராதமும் வராது, பகவத நிக்ரகமும் வராது என்றார். இவர் அருளிய நாச்சியார் திருமொழித்தனியன்,
அல்லிநாட்டாமரைமேல் ஆரணங்கின் இன்துணைவி
மல்லி நாடாண்ட மடமயில் – மெல்லியலாள்
ஆயர்குல வேந்தன் ஆகத்தாள் தென்புதுவை வேயர் பயந்த விளக்கு’ –என்பதாகும் –
உய்யக்கொண்டாரது சிறந்த சீடரான மணற்கால் நம்பி என்ற ஸ்ரீ ராமமிஸ்ரர், உய்யக்கொண்டார் அவதரித்து 33 வருடங்களுக்குப் பின்னர் கி.பி. 929-ல் லால்குடி அருகே இப்பொழுது மணற்கால் என்று கூறப்படும் கிராமத்தில் அந்தணர் குலத்தில் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் பிறந்தார். இவருக்கு எதனால் மணற்கால் நம்பி என்ற பெயர் வந்தது என்பதை முன்னரே கண்டோம். இவர் தம் ஆச்சார்யரான உய்யக்கொண்டார் நியமனப்படி நாதமுனிகள் பேரரான ஆளவந்தாரைத் திருத்திப் பணிகொண்டு அவருக்குத் திவ்யப் பிரபந்தங்களையும் ரகஸ்ய த்ரயத்தையும் நம்மாழ்வாரிடமிருந்து பெற்ற பவித்ரமான ராமானுஜ விக்ரகத்தையும் கொடுத்தருளினார்.-அவரது அவதார ஸ்தலத்தில் உள்ள அவரது திருவிக்ரகம் திரிதண்டத்துடன் காணப்படுவதால் அவர் கடைசிக் காலத்தில் சந்யசித்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இவரும் கிரந்தம் எதுவும் எழுதினதாகத் தெரியவில்லை.
இவரது சீடர்கள் ஆளவந்தார் என்ற யமுனாச்சாரியார், திருவரங்கப் பெருமாளரையர், தெய்வத்துக் கரசு நம்பி, பிள்ளையரசுநம்பி, சிறு புள்ளூருடையார் பிள்ளை, திருமாலிருஞ்சோலைதாஸர், வங்கிபுரத்தாச்சி முதலியோர். இவர் 105 ஆண்டுகள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இவரையும் எம்பெருமானார் சீடர் வடுக நம்பியையும் ஆச்சார்ய கைங்கர்யத்திற்கு உதாரணமாகச் சொல்வர். இவர் அருளிய பெருமாள் திருமொழித் தனியன்
ஆரம் கெடப் பரனன்பர் கொள்ளாரென்று அவர்களுக்கே
வாரங்கொடு குடற் பாம்பிற் கை யிட்டவன், மாற்றலரை
வீரங்கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர் கோன்
சேரன் குலசேகரன் முடி வேந்தர் சிகா மணியே”
தேசமுய்யக் கொண்டவர் தாழ் சென்னி வைப்போன் வாழியே.
தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே.
தாசரதி திரு நாமம் தழைக்க வந்தோன் வாழியே.
தமிழ் நாத முனி யுகப்பைத் தாபித்தோன் வாழியே.
நேசமடன் ஆரியனை நியமித்தோன் வாழியே.
நீனிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினோன் வாழியே.
மாசிமகந் தனில் விளங்க வந்துதித்தான் வாழியே.
மால் மணற்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே.
மணற்கால் நம்பி அவதரித்து 47 வருடங்களுக்குப் பிறகு கி.பி. 976-வது வருஷம் ஆடி மாதம் பெளர்ணமி திதியில் உத்தராட நட்சத்திரத்தில் நாதமுனிகளின் குமாரரான ஈஸ்வர முனிகளுக்கும் அவருடைய தர்ம பத்தினியான ஸ்ரீரங்க நாயகிக்கும், நாதமுனிகள் அவதரித்த காட்டுமன்னார் கோவிலிலேயே அவதரித்தார். நாதமுனிகள் நியமித்தபடியே அவருக்கு யமுனைத்துறைவன் என்ற நாமம் சூட்டப்பட்டது. ஈஸ்வர முனிகளால் உரிய காலத்தில் அன்னப்பிரசானம் உபநயனம் போன்ற சடங்குகளெல்லாம் செய்யப்பட்டன. அவருக்கு வேதத்தை அப்யஸித்தபொழுது ஏகசிந்தைஉடையவராய் மகா மேதாவிலாசத்தை உடையவராய் இருந்தார். உரிய காலத்தில் இவருக்கு விவாகமும் செய்விக்கப்பட்டது.மகா பாஷ்ய பட்டர் என்பவரிடம் இவர் சாஸ்திரங்களைக் கற்று வந்தார். அக்காலத்தில் ராஜப் புரோகிதரான ஆக்கி யாழ்வான் என்பவன் தன் வித்யா கர்வத்தாலே எல்லா வித்வான்களிடமும் கப்பம் வாங்கி வந்தான். அவன் ஒரு நாள் கப்பம் கேட்டு மஹாபாஷ்ய பட்டருக்கு ஓலை அனுப்ப, பட்டர் கப்பம் செலுத்த வழியில்லாமல் தகைத்து நிற்பதைப் பார்த்து யமுனைத் துறைவர் அவ்வோலையைக் கிழித்தெறிந்து விட்டார். அதைக் கேட்ட ஆக்கி யாழ்வான் அவ்வோலையைக் கிழித்தவன் வெறும் கவியோ அல்லது சாஸ்திரம் தந்திரம் எல்லாம் அறிந்த பண்டிதனோ என்றுகேட்டனுப்பினான். அதற்கு அவர் ‘நாம் வெறும் பண்டிதன் மாத்திரமல்லோம் மீமாம்ஸ சாஸ்திரக்கடலை மாத்திரம் கரை கண்டவர்களல்லோம். எதிர்வாதம் புரிபவர்களாகிய யானைகளின் மத்தகத்தைப் பிளக்கும் வல்லமை யுடையோம்’ என்று பதில் அனுப்பினார். உடனே அரசன் யமுனைத் துறைவரை ராஜசபைக்கு வரச் சொல்லி ஒலை அனுப்பினார். அவர் ராஜ ஓலையையும் கிழித்துப் போட அவர் ஒரு மகான் என்பதை உணர்ந்து பல்லக்குபரிவாரங்களை அனுப்பினார் அரசர்.யமுனைத் துறைவரும் அப்பல்லக்கில் ராஜசபைக்கு வந்து தனக்குப் பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை இரண்டிலும் விசேஷமான பயிற்சி உண்டு. என்னைப் போன்ற மற்றொருவன் தேடினாலும் கிடைக்க மாட்டான் என்ற பொருளுடைய ஸ்லோகத்தை எழுதி யனுப்பினார். அதற்குப் பின்னர் இவருக்கும் ஆக்கி யாழ்வானுக்கும் வித்வான்௧ள் முன்னிலையில் சம்வாதம் (தர்க்கம்) நடந்தது. இந்த வாதத்தில் ராஜாவும், மகிஷியும் பின்வருமாறு சபதம் செய்து கொண்டனர். யமுனைத்துறைவர் தோற்றாராகில் நான் மகிஷி பதவியைத் துறந்து உமக்கு வேலைக்காரியாவேன் என்றாள் ராஜமகஷி. ஆக்கியாழ்வான் தோற்றானாகில் நான் யமுனைத்துறைவருக்குப் பாதி ராஜ்யம் தருவேன் என்றார் ராஜா. பின்னர் வாதம் ஆரம்பித்தது.இளம் பிள்ளையான இவரை சாஸ்திர விவாதமில்லாமல் லெளகிக விஷயங்களிலேயே தோற்கடித்து விடலாமென்றெண்ணிய ஆக்கி யாழ்வான் லெளசீகங்களில் நீர் இல்லையென்பது நான் உண்டு என்பேன், நீர் உண்டு என்பதை நான் இல்லையென்பேன்.வென்றவன் தோற்றவன் தலையில் அடிக்க வேண்டியது என்று கூறினான். அதற்கிசைந்த யமுனைத் துறைவர், 1) உன் தாய் மலடியல்ல, 3) அரசன் தார்மீகன், 3) ராஜ பத்தினி பதி விரதை என்ற மூன்று வாக்கியங்களைச் சொல்லி அவனை மறுக்கச் சொன்னார். அவற்றை மறுக்க இயலாமல் மெளனியாய் இருந்தான். பின்பு சாஸ்திர விவகாரமும் நடந்தது. அதிலும் அவன் தோல்வியுற்றான்.பின்னர் நீர் சொன்ன மூன்று லெளகிக வாக்கியங்களை உம்மால் மறுக்க முடியுமா என்று அரசனும் அரசியும் கேட்டனர். முடியும் என்று சொல்லி யமுனைத்துறைவர் பின்வருமாறு மறுத்துக்காட்டினார்.-ஒர் மரமும் தோப்பல்ல. ஒரு பிள்ளையும் பிள்ளையில்லை-என்ற ௨லக வழக்கின்படி நிலையற்றதான இவ்வுலகில் ஒரு பிள்ளையைப் பெற்றதாய், இப் பிள்ளை நமக்குத் தக்க வேணுமே என்று கலங்கிக் கொண்டே இருப்பாளாதலால், அவள் பிள்ளை பெற்றும் மலடியே யாவாள். இம் முறையில் ஒரு பிள்ளை பெற்ற ஆக்கியாழ்வானுடைய தாய் மலடியே யாவாளாதலால் முதல் வாக்கியம் மறுக்கப்பட்டது. அடுத்துக் குடிகள் செய்யும் பாபம் அரசனைச் சேருமாகையால், பரம தார்மீகமான இவ்வரசனும் குடிகள் செய்யும் பாவத்தில் பங்கு பெறுகிறானாதலால், இரண்டாவது வாக்கியமும் மறுக்கப்பட்டது. இறுதியாகச் சோமன் முதல் நாள் உன்னை மணம் புணர்ந்தான். கந்தர்வன் அடுத்த நாள் உன்னை மணம் புரிந்தான். மூன்றாவது நாள் அக்கினி உனக்குப் பதியாகிறான். நான்காவது நாளிலே தான் கைப்பிடித்த கணவன் உனக்குக் கணவனாகினான் என்ற வேத வாக்யெத்தின்படி எல்லாப் பெண்களுக்கும் முதல் மூன்று நாட்களில் தேவதைகளோடு தொடர்பு உண்டாகையால் பதிவிரதை தத்துவத்துக்குக் குறையுண்டு. ௮க் குறை பரம வைதிகமான முறையில் அரசனைக் கைப்பிடித்த அரசிக்கும் உண்டாகையால் மூன்றாவது வாக்கியமும் மறுக்கப்பட்டது.இவ்வாறு லெளகீக, சாஸ்திர வாதங்களில் ஆக்கியாழ்வானை வென்ற போதிலும் முதலில் பண்ணின சபதத்தின்படி அவன் தலையில் அடிக்க மறுத்து விட்டார். அவருடைய பண்பையும், புலமையையும், உலக அனுபவத்தையும் கண்டு வியப்புற்ற அனைவரும் அவரைப் பெருமைப்படுத்தி கெளரவித்தனர். ராஜமாதேவி “என்னை ஆளவந்தீரே’ என்று தன் பிள்ளையைப் போல் எடுத்தணைத்துக் கொண்டு அரசனுடன் அரண்மனைக்குள் புகுந்தாள்.-அரசன் தான் ஒப்புக் கொண்டபடியே இவருக்குப் பாதிராஜ்யம் கொடுத்தான். இவரை எல்லோரும் ஆளவந்தார் என்றே அழைக்கலாயினர். இவரும் தம் பத்தினியோடு கூடி அரசாட்சி செய்து கொண்டு அரச போகத்தில் ஆழ்ந்திருந்தார். உய்யக்கொண்டார் நியமனத்தாலே யமுனைத்துறைவரைத் தர்ஸன கைங்கர்யத்திலே ஈடுபட வைக்க ஆசைகொண்ட மணற்கால் நம்பியால் கட்டுங்காவலுமாய் இருந்த அரண்மனைக்குள் சென்று ஆளவந்தாரைக் காண இயலவில்லை. தூதுவளைக்கீரையே ஆளவந்தார் விரும்பி உண்ணும் கறியமுது என்றறிந்து மடப்பள்ளிக்கு ஆறுமாத காலம் கீரையை அளித்து வந்தார். அப்போதும் இவரைப் பற்றி ஆளவந்தார் விசாரிக்காமல் இருக்கவே நாலு நாள் தூதுவளை கொடுப்பதைத் தவிர்த்து இருந்தார். ஆளவந்தார் அமுது செய்யும் பொழுது தூதுவளை இல்லாமல் இருப்பதேன் என்று வினவிய பொழுது ஆறு மாத காலமாக ஒரு வயோதிக அந்தணர் அளித்து வந்தார். நாலு நாளாக வரவில்லை என்றனர். மறுநாள் மணற்கால் நம்பியும் இன்னமும் முயற்சி செய்து பார்க்கலாமென்றெண்ணி தூதுவளை கொண்டுவந்து மடைப்பள்ளியில் கொடுத்தார். அவர்களும் நம்பியை ஆளவந்தாரிடம் : அழைத்துச் சென்றனர். ஆளவந்தாரும் அவரை நல்லமுறையில் வரவேற்று ‘நீர் தூதுவளை கொண்டு வந்து கொடுக்கக் காரணம் யாது என்று வினவ, இவரும் உம்முடைய பாட்டனார் தேடி வைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது. அதை உம்மிடம் அளிப்பதற்கு நான் இங்கு வந்து போகத் தடை செய்யாமல் இருக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.
அன்றுமுதல் அவ்வாறே செய்யுமாறு அரண்மனை ஏவலாளர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார் ஆளவந்தார். நம்பியும் தினமும்அரண்மனைக்குச் சென்று கீதையின் செம்மைப்பொருளை உபதே சிக்க அதில் ஆவல்மிகுந்த ஆளவந்தார் எம்பெருமானை அடைய உபாயமேது என்று நம்பியைக் கேட்டார். நம்பியும் அவருக்கு சரம
ஸ்லோகத்தை (சரணாகதி தத்துவத்தை) உபதேசித்து அவனை
அடைய அவனே உபாயம் என்ற உறுதியை அவருக்கு உண்டாக்கினார். ஆழ்வார்கள் அருளிச்செயல்களையும் அவற்றின் அரும்பொருள்களையும் உபதேசித்தார். பின்னர் திருவரங்கத்திற்கு அவரை அழைத்துச்சென்று பெரிய பெருமாளைத் திருவடி தொழச்செய்து உங்களுடைய பாட்டனார் தேடிவைத்த பெருநிதி இதுவேயாகும்
என்று காட்டிக்கொடுக்க, பெரியபெருமானிடம் ஈடுபட்ட ஆளவந்தார், ராஜ்ய பாரத்தைத் துறந்து துறவு பூண்டு ஸ்ரீரங்கத்தில் தர்ஸன நிர்வாகம் செய்து வந்தார். அக்காலத்திலே, பெரியதம்பி திருக்கோட்டியர் நம்பி, பெரிய திருமலைநம்பி, திருமாலையாண்டான்
முதலான வைணவ பிராமணோத்தமர்களும், திருக்கச்சி நம்பி, மாறனேரிநம்பி முதலான பாகவதோத்தமர்களும் அவரை ஆஸ்ர யித்திருந்தார்கள். (அடைக்கலமடைந்திருந்தார்கள்].
பின்னர் மணற்கால் நம்பி, ஆளவந்தாரிடம் நாதமுனிகள் குருகைக் காவலப்பனிடம் யோக ரகசியத்தைத் தெரிந்து கொள்ளச் சொன்னதையும், அது நிறைவேறாமற்போனதையும் நாம் குருகைக் காவலப்பன் வைபவத்திலேயே தெரிந்து கொண்டோம். ஆளவந்தார் கோயில் நிர்வாகத்தின்போது நம் பெருமாள் திரு அத்யயன உத்சவத்தில், திருவரங்கப் பெருமாள் அரையர், ஆளவந்தார் திருமுகத்தைப்பார்த்து ‘நடமினோ நமர்களுள்ளீர், நாமுமக்கறியச் சொன்னோம்” என்று பல காலம் பாடியருள, ஆளவந்தாரும், பெரியபெருமாள், நியமனம் பெற்று திருவனந்தபுரம் சென்று சேவித்துத் திரும்பாமுன், இவருடைய பிரிவினால், மடத்துக்குக் காவலாயிருந்த தெய்வவாரியாண்டான், வாடி வலிய அவரை ஆளவந்தாரிடம் கூட்டிச் செல்லும்பொழுது பாதிவழியில் ஆளவந்தார் திரும்பி வரவும், அவரைக்கண்டபின் உடல் முன்போல் தேறி அவருக்கு ஆச்சார்ய கைங்கர்யம் செய்து வருவாரானார்.-இந்நிலையில் தனக்குப்பின் இந்தத் தர்ஸனத்திற்கு அதிகாரி யார் என்று மிகுந்த கவலையோடு இருந்தபொழுது காஞ்சியிலிருந்து வந்த இரு வைணவர்கள் ஆளவந்தாரிடம், யாதவப்பிரகாசன் என்ற ஏகதண்டி சந்நியாசியிடம் ஸ்ரீ பெரும்புதூர் இளையாழ்வார் என்ற ஒருவர் வேதாந்தம் கற்று வருகிறாரென்றும், அவர் வேதப் பொருளுக்கு விளக்கம் சொல்வது மிகவும் நன்றாக இருக்கிறது என்றும் சொன்னார்கள். ஒரு நாள் இளையாழ்வார் யாதவப்பிரகாசருக்கு எண்ணை தேய்த்துக் கொண்டிருக்கும்பொழுது யாதவப்பிரகாசர் ‘கப்யாசம்’ என்ற பதத்திற்கு குரங்கின் ஆசனவாய் என்று தப்பர்த்தம் சொன்னதைக்கேட்ட இளையாழ்வார் மனக்கிலேசப்பட்டு கண்ணீர் விட அது அவன் தொடையில் விழ அவன்
கிலேசத்திற்குக் காரணம் கேட்க, இவரும் சூரியனைக் கண்டு மலர்ந்த கமலம் போல பரமபுருஷன் கண்கள் என்று சொல்ல வேண்டியிருக்க தாங்கள் தப்பர்த்தம் சொல்லியதைக்கேட்டு வருந்தினேன் என்று சொன்ன சம்பவத்தைச் சொன்னார்கள்-
இந்த விருத்தாந்தங்களை யெல்லாம் கேட்ட ஆளவந்தார் இளையாழ்வாரது மேதா விலாசத்தையும், ஞானவைராக்யங்களையும் கேட்ட மாத்திரத்திலேயே மிகவும் மகிழ்ந்தவராய், அவரைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் பெரிய பெருமாள் அனுமதி
பெற்று காஞ்சி சென்று, அங்கு திருக்கச்சி நம்பிகள் மிகவும் பக்தியோடு இவரை வரவேற்க இவரும் மிக உகந்து பேரருளாள௫க்கு அவர் ஆலவட்டக் கைங்கர்யம் செய்து வருகிறதை சிலாகித்து அவரையும் உடன்கொண்டு அங்கு கோயில் அருகிலுள்ள புற்றின் சமீபத்தில் உள்ள திருவனந்தாழ்வானையும், கரிய மாணிக்கத்தாழ்வாரையும் சேவித்து வரும்பொழுது யாதவப்பிரகாசருடைய கூட்டம் வரக்கண்டு, இதில் யார் இளையபெருமாள் என்று கேட்க
நம்பியும் சிவந்து நெடுக வலியவராய், ஆஜானுபாகுவாய் நடுவில் வருகிறவர் என்று காட்டக்கண்டு மிகவும் மகிழ்ந்து ‘ஆம் முதல்வன் இவன்’ என்று மனதில் தெளிந்து, பின்னர் பேரருளாளரிடம் அடியேனுக்கு இளையாழ்வாராகிய மகானைத் தர்ஸனத்நிற்குத்
தந்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அப்போது அவருக்கு ஒரு நல்வார்த்தை சொல்ல வாய்ப்பில்லாததால் மீண்டும் திருவரங்கம் கோயிலுக்கே எழுந்தருவினார். இவரது அபிலாஷை நிறைவேறி இளையாழ்வார் கோயில் நிர்வாஹத்தைக் கைக்கொண்ட வரலாற்றை பார்க்கும் முன்பே ஆச்சார்யர் திருவடி சேர்ந்தார் என்பதை இளையாழ்வார் வைபவத்தில் காண இருக்கிறோம்.
ஆளவந்தார் தமக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடனேயே கோயில் தர்ஸனத்தை இளையாழ்வாரிடம் கொடுக்க எண்ணி,
பெரியநம்பி ஸ்வாமிகளைக் காஞ்சிக்கு அனுப்பி அவரைத் திருவரங்கத்துக்கு அழைத்து வரப்பணித்தார். ஆனால் அவர் வருமுன்பே ஆளவந்தார் பரமபதித்து விட்டதால், அவரை உயிரோடு நேரில் காணாத விரக்தியினால், ஏமாற்றமடைந்து காஞ்சிக்கே திரும்பச் சென்று விடுகிறார் இளையாழ்வார். ஆளவந்தாரது திஸ்ருமேனியை இளையாழ்வார் கண்டு சேவிக்கும் பொழுது கைவிரல்கள் மூன்று மடங்கி இருப்பதைப் பார்த்து, முன்னர் இவரது விரல்கள் இவ்வாறு தான் இருந்தனவா என்று விசாரித்து இல்லை என்று தெரிந்தவுடனே, அவரது மனதில் ஏதேனும் நிறைவேறாத ஆசைகள் இருந்தனவா என்று கேட்க, அங்குள்ளவர்கள் ஆளவந்தார்க்கு மூன்று விருப்பங்கள் உண்டு. அவை, பிரஹ்ம ஸூத்திரத்துக்கு மஹா பாஷ்யம் எழுதுதல், விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்குப் பாஷ்யம்
எழுதுதல், திருவாய்மொழிக்கும் பாஷ்யம் எழுதுதல் என்பன என்றார்கள். அவர் விருப்பத்தைத் தாம் நிறைவேற்றி வைப்பதாக உறுதிபூண்டு சபதம் செய்யவே, ஆளவந்தாரது மடங்கிய விரல்கள் மூன்றும் நிமிர்ந்தன என்பர்.
ஆளவதந்தாரது அந்திமகாலத்தில் அருகிருந்த அவரது சீடர்கள் எங்களுக்கு இனியார் தஞ்சம் என்று கேட்க, உங்களுக்கு நாம் ஒருவரை உண்டாக்கி யன்றோ பேறு பெறப் போகிறோம். உங்களுடைய இழவைத் தீர்த்து நாம் மாத்திரமன்றோ இழவோடு போகிறோம் என்றாராம். இவருக்கு ஆச்சாரியார் ஸ்ரீமத் நாத முனிகளும் புருஷாகாரர் (போதித்தவர்) மணற்கால நம்பியுமாகும். இவர் 125ஆண்டுகள் வாழ்ந்திருந்தார் என்பர்.
ஓம் நமோ நாராயணாய என்ற திருமந்திரத்தில் முதற்பதமான பிரணவம் ‘ஒம்’ ஸ்வரூப ஞானத்தை விளக்கு கையாலே பகவத் சம்பந்தத்தையும் ‘நம” பதம் பிரபத்தி வித்யா நிஷ்டை (சரணாகதி தத்துவம்)யையும், மூன்றாவதான ‘நாராயணாய: என்ற பதம்
பகவத் பாகவத கைங்கர்யமாகிற நல்லொழுக்கத்தையும் ஜீவனுக்கு
விளைவிக்கிறது என்பது ஆளவந்தார் கருத்து. திருக்கோஷ்டியூர்
நம்பி ஆளவந்தாரிடம் இறைவனை அடைய உபாயம் என்ன என்று கேட்க இறைவனுக்கும் ஜீவனுக்கும் உள்ள உறவு (பர்த்தா, பார்யா) கணவன் மனைவி உறவைப் போன்றது. அறியாமையாகிற அழுக்கு மண்டிக் கிடக்கும் ஜீவன் இவ்வழுக்கை அகற்ற அகற்ற, எம்பெருமான் திருஉள்ளம், கணவன் மனைவியிடம் உள்ள குண நலனள்களும்
அழகும் வெளிப்பட வெளிப்பட அவளை நேசிப்பதைப் போல பக்தனிடம் மிகவும் ஈடுபடும் ஆகவே இவனுக்கு வேறு ஒரு உபாயமும் தேவையில்லை என்று கூறினார் என்பர்.
ஏழைக்குப் புதையல் கிடைத்ததைப்போல நமக்கெல்லாம்’த்வய மந்திரம்’ என்பார் ஆளவந்தார். தம் சீடர்களில் ஒருவரான அம்மங்கி என்ற வாலிபனைப் பார்த்து உன்னுடைய வாலிப வயதைக் கவனிக்காமல் உனக்கு பகவத் விஷயத்தைச் சொல்லிவிட்டேன். உடம்புக்கு இரையிட்டு ஆத்ம நாசத்தை விளைவிக்காமல்,உயிருக்கு இரையிட்டு ஆத்ம ஜீவிதத்தை விளைவிப்பாயாக என்றாராம். இறைவனை அணுகும்போது வேறு எந்தப்பலனையும் விரும்பாது இறைவனையே விரும்பித்தொழ வேண்டும். எம்பெருமானாரின் திருவடிகளை உபாயமாக உடையவனாக இருக்கிறேன்.-அந்த எம்பெருமானார் யமுனைத்துறைவர் குலவிளக்காய் இருக்கிறார். அந்த யமுனைத்துறைவர் நாதமுனிகள் வம்சத்தவர். அந்த நாதமுனிகள் நம்மாழ்வார் வழிவந்தவர். அந்த நம்மாழ்வார் பெரியபிராட்டியின் திருவருள் பெற்றவர். வரதராஜரே இவ்விதம் தேவருக்கு வழி வழித் தொண்டன். தேவரீர் திருவருளுக்கு உரியவனாகிறேன் என்பது கூரத்தாழ்வான் அருளிய ‘ஸ்ரீவரதராஜஸ்தவம்’ ஸ்லோகத்தின் தமிழாக்கச் சுருக்கம்.
நிதியைப் பொழியும் முகிலென்று நீசர் தம்வாசல்பற்றித்
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன. இனித்தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதிபெற்றுடைய இராமானுசனென்னைக் காத்தனனே–
ஆளவந்தார் எழுதிய பிரபந்தங்கள் – ஆகமப்பிராமாண்யமும்,புருஷ நிர்ணயமும், ஆத்மஸித்தி ஈஸ்வர ஸித்தி, ஸம்வித்ஸித்தி என்ற ஸித்தித்திரயமும், ஸ்ரீ கீதார்த்த சங்ரஹமும், ஸ்தோத்ர ரத்னமும், சதுஸ்லோகியும் ஆக எட்டும் -. அவரது
குமாரர்கள் திருவரங்கப்பெருமாள் அரையர், தெய்வத்துக்கரசுநம்பி, பிள்ளை அரசு நம்பி, சொட்டை நம்பி என்று பெரிய திருமுடியடைவு குறிப்பிடுகிறது. இவர் திருநாட்டுக் கெழுந்தருளிய (இறந்த) இடம் பெரிய கோயில், திருப்பள்ளிப்படுத்தப்பட்ட
(அடக்கம் செய்யப்பட்ட) இடம் திருப்பராய்த்துறையாகும்.
பரப்பிரஹ்மமே மாயையால் மறைக்கப்பட்டு அறிவு குறைந்த ஜீவனாகவும், சம்ஸாரத்தில் ஈடுபட்டதாகவும் ஆகிறது-அந்தப் பரப்பிரஹ்மமே தேவர் மனிதர் முதலான உண்மையான சரீரங்களாகிற உபாதிகளோடு சம்பந்தப்பட்டு சம்சாரி ஜீவனாகிறது. அந்தப் பரப்பிரஹ்மமே உலகோடு இயல்பாகவே பேதாபேதமுடையதாகையாலும், உலகமாகப் பரிணமிக்கையாலும் தோஷங்களுக்குக் கொள்கலமாகிறது. -இவ்விதம் கூறும் சங்கரருடைய மாயா வாதமும் பாஸ்கரருடைய ஸத்யோபாதிமதமும், யாதவப் பிரகாசருடைய பேதா பேதமதமுமாகிற மூன்று மதங்களும் ஸ்ருதிக்கும் யுக்தக்கும் பொருந்தாதவையாகும். ஆயினும் மோகத்தை விளைவிக்கும் இம் மூன்று மதங்களாகிய இருள் எவரால் தமது
நூல்களின் மூலம் நீக்கப்பட்டதோ, அந்த யமுனைத் துறைவரான ஆளவந்தார் வெற்றியுடன் விளங்குகிறார். ஆளவந்தாராகிய அமுதக் கடலில் மூழ்கி, அறிந்த அளவு நான் பக்தி யோகமாகிற ரத்னத்தை எடுத்துக் காண்பிக்கிறேன் என்கிறார். ஸ்ரீ வைகுண்ட கத்ய
மங்கள ஸ்லோகத்தில் கூரத்தாழ்வான்.
என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கு
யானடைவேன் அவர் குருக்கள் நிறை வணங்கி
இன்னருளால் பெரும்புதூர் வந்த வள்ளல்
பெரியநம்பி, ஆளவந்தார் மணற்கால்நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக் கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே.
நீளவந்தின்று விதி வகையால் நினை ஒன்றிய நாம்
மீள வந்தின்னும் வினையுடம் ஒன்றி விழுந்துழலாது ஆள வந்தாரென்று வந்து அருள் தந்து விளங்கிய சீர்
ஆளவந்தா ரடியோம படியோமினி அல்வடிக்கே–என்று அருளிச் செய்கிறார் ஸ்ரீ தேசிகர் அதிகார சங்கிரஹம் என்ற நூலில்.
“மாதாபிதா யுவதயஸ்தநயாவிபூதிஸ்
ஸர்வம் யதேவ நியமேந மநந்வயாநாம்
அத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ॥ ஆளவந்தார் அருளிச்செய்த நம்மாழ்வார் தனியன்.
மச்சணியும் மதிள் அரங்கம் வாழ்வித்தான் வாழியே
மறை நான்கும் ஓருருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே
பச்சை யிட்ட இராமர் பதம் பகருமவன் வாழியே
பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழியே
கச்சி நகர் மாயனிருகழல் பணிந்தோன் வாழியே
கடக வுத்த ராடத்துக் காலுதித்தோன் வாழியே
அச்சமற மன மகிழ்ச்சி யணைத் திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே
ஆளவந்தார் பிறந்து 11 வருடங்களுக்குப் பின்னர் (கி பி.997-98-ல்] மார்கழிக் கேட்டையில் பிராமண குலத்தில் பரத்வாஜ கோத்திரத்தில் பராங்குச தாஸர் என்ற திருநாமத்தில் அவதரித்தவர் பெரியநம்பி ஸ்வாமிகள். ஆளவந்தாருடைய சிஷ்யர்களில் பெருமை பெற்றவர் இவர் தான். எம்பெருமானாருக்கு ஸமாஸ்ரயணம் செய்தவர். ஆளவந்தார் காலத்திற்குப் பின் ஆளவந்தாரது மற்ற சிஷ்யர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் இவரே இராமானுஜரை திருவரங்கர் சேவைக்கு அழைத்து வரக் காஞ்சிக்குச் சென்றவர்.
காஞ்சியில் தேவப் பெருமானின் நியமனம் பெற்று, இராமானுசரும் இவரிடம் சரண் புக எண்ணி திருவரங்கத்துக்குப் புறப்பட இருவரும் வழியில் மதுராந்தகம் ஏரி காத்த பெருமாள் கோவிலில் சந்திக்க நேர்ந்தது. அங்கு இராமானுசருக்கு ஸமாஸ்ரயணம் நடை பெற்றது.-எம்பெருமானார் வெள்ளை உடுத்தி மேல் நாட்டுக்குச் சென்ற பொழுது, கூரத்தாழ்வானோடு சோழ ராஜனது சபைக்குச் சென்று நம் தர்ஸனத்திற்காகத் தம் தர்ஸனத்தையும் (கண்களையும்) உயிரையும் இழந்தவர் தியாக மூர்த்தியான இந்தப் பெருமகனார். இவர் தம் குமாரரான புண்டரீகாக்ஷ்ரையும் பெண்ணான அத்துழாயையும் எம்பெருமானாருடைய திருவடிகளிலேயே சரணமடையச் செய்தவர். ஆளவந்தாரது சிஷ்யரான தாழ்ந்த குலத்தில் பிறந்த மாரனேரி நம்பிக்கு ஈமச்சடங்குகள் செய்து பெருமை பெற்றவர். இவரைப் பற்றிய விரிவான செய்திகளை இராமானுசருடைய வைபவத்தில் காண உள்ளோம்.-ஆளவந்தாரது சீடர்கள் எல்லோரும் கூடியிருந்து பெரிய நம்பியிடம், இனி இந்தத் தர்ஸனத்தை நடத்துபவர் யார்? என்று கேட்க இவரும் முன்னர் இராமானுஜர், தான் ஆளவந்தாரது மூன்று ஆசைகளையும் நிறைவேற்றுவதாகச் சொன்னவுடனேயே அவரது விரல்கள் நிமிர்ந்தனவே, அந்தக் குறியீடே ஆளவந்தார் தமக்குப் பின் அந்தப் பணியை இராமானுஜர் தான் செய்ய வேண்டும் என்று விரும்பினார் என்பதைத் தெரிவிக்கவில்லையா என்று சொல்ல, எல்லோரும் இராமானுசரையே தம் ஆச்சாரியராக முடிவு செய்து அவரைக் காஞ்சியிலிருந்து திருவரங்கத்துக்கு அழைத்து வருமாறு பெரிய நம்பியையே அனுப்பினார்கள். அவரும் அப்போதே குடும்ப சகிதமாகப் புறப்பட்டு நம் பெருமாள் அனுமதி பெற்று, காஞ்சிக்குச் செல்லும் வழியில், மதுராந்தகத்தில் ஏரி காத்த பெருமாள் கோயிலிலே, இராமானுஜரும் ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் அங்கு வர இருவரும் சந்தித்து மிகப் பிரீதியுடன் தழுவிக் கொண்டு மகிழ்ந்தனர். இளையாழ்வாரும் பெரிய நம்பியைத் தனக்கு அப்போதே ஹிதோபதேசம் செய்து ரட்சிக்க வேண்டும் என்று விண்ணப்பிக்க, பெரிய நம்பியும் இவருடைய ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்து திருவிலச்சனை பிரசாதித்து (சங்கு சக்கர முத்திரைகளைக் கையில் பொரித்து) தன் வலது புறத்தில் அடக்கத்தோடும் அஞ்சலியோடும் கூடிய சீடனை இருத்தி ஞானத்தைத் தரவல்ல தனது வலது கரத்தைச் சீடனின் சிரசில் வைத்து தனது இடது கையைச் சீடனின் மார்பில் வைத்து, அருளுடன் சீடனை ஆச்சார்யன் காப்பாற்றக் கடவன், தன் ஆச்சார்யனை இருதயத்தில் தியானித்து குரு பரம்பரையை ஜபித்து, இவ் வகையாக எம்பெருமானைச் சரண மடைந்து, ரிஷி, சந்தஸ் தேவதைகளுடன் கூடிய மூமலந்திரத்தைத் தானே சீடனுக்குக் கருணையால் உபதேசிக்கக் கடவன் என்று சொல்லுகிறாப்போல, ஆளவந்தார் திருவடிகளை மனதில் தியானம் பண்ணிக் கொண்டு த்வயத்தை (மந்திர ரத்னத்தை) இராமானுஜருக்கு அவரது வலது காதில் ஓதினார்.-இராமபிரான் தன் பாதுகைகளைப் பரதாழ்வானிடம் கொடுத்துக் காட்டுக்குப் போனாற்போல, ஆளவந்தாரது ஏவலாளன் நான்.உமக்கு நேரே ஆச்சார்யார், யமுனைத் துறைவரான ஆளவந்தாரே என்று கூறினார். ஆதலால் தான் இராமானுஜ நூற்றந்தாதியில்-பிள்ளை அமுதனார் ‘எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதிபெற்றுடைய இராமானுஜன் ‘என்றருளிச் செய்தார். இராமானுஜரும் ‘பிரமாணம் எது? பிரமேயம் எது? பிரமாதாக்கள் யார்? என்று பெரிய நம்பியைக் கேட்க, அவரும் மாதவன் பேர் சொல்வதே ஓத்தின் சுருக்கு என்றபடியே ‘பிரமாணம் த்வயமே’. பிரமேயமும் அத்தகிரி மேலிருக்கும் பெருமாளே, பிரமாதா நீர் தாம். இந்தப் பிரமாணத்தாலே பிரமேயத்தை அனுபவிக்க வாரும் என்று கூறினார். இருவரும் காஞ்சியில் பெருமாள் கோவிலுக்குச் சென்றார்கள். அங்கு திருக்கச்சி நம்பியும் பெரிய நம்பியைச் சரணடைய அவரையும் ஆசீர்வதித்து ஏற்றுக் கொண்டார். இராமானுஜர் பெரிய நம்பிகளைக் குடும்பத்துடன் தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்று தம் தேவியையும் பெரிய நம்பி திருவடிகளில் ஆஸ்ரயிக்கச் செய்தார். பெரிய நம்பி இளையாழ்வாருக்கு திருவாய்மொழி நீங்கலாக அருளிச் செயல் மூவாயிரத்தையும், தர்ஸனார்த்தங்களையும் போதித்துக் கொண்டிருக்கும் பொழுது அவ்விருவருடைய தேவிகளுக்குள்ளும் மனஸ்தாபம் வர, பெரியநம்பி, இளையாழ்வாரிடம் சொல்லாமலே மனைவியுடன் ஸ்ரீரங்கத்திற்குத் திரும்பிவிட்டார்.-பெரிய நம்பி திருமகளாரான அத்துழாய் புக்ககத்தில் வாழுங்காலத்தில், ஒருநாள் நீராடி வரத் துணைக்கு வருமாறு மாமியாரை வேண்ட அவளும் உன் சீதன வெள்ளாட்டியை அழைத்துக் கொண்டு போ என்று சொல்லி விடவே, அத்துழாய் பெரிய நம்பியிடம் விவரம் கூற அவர் ‘எனக்குத் தெரியாது. உங்கள் ஜீயரிடம் (இராமானுஜர்) சொல் என்று கூறிவிட, அவளும் அங்கே போய் விண்ணப்பம் செய்ய, ஜீயரும் அருகிருந்த முதலியாண்டானை “இந்தாரும் உமக்குச் சீதன வெள்ளாட்டி என்று சொல்லி“போம்” என்ன ஆண்டானும் கூடப் போய் நீராடப் பண்ணுவித்து அவளுடைய புக்கத்தில் வேலை செய்யத் தொடங்க, புக்ககத்தார் அவரிடம் ஆண்டான் இது என்’ என்று கேட்க அவரும் என்னை வரவிட்ட ஜீயரைக் கேளுங்கள். ஆச்சார்யார் சொன்னதைச் செய்ய வேணுமே’ என்று சொல்லிவிடவே அவர்களும் பெரிய நம்பியிடம் போய், ‘முதலியாண்டானை அனுப்பி எங்களை இப்படித் தண்டிக்க வேண்டுமா: என்று கேட்க அவரும் ‘நான் அறிந்தேனா? ஜீயரைக் கேளுங்கள் என்று சொல்லி விடவே அவர்களும் அங்கே சென்று விண்ணப்பிக்க இராமானுசரும், அத்துழாய்க்குச் சீதன வேலைக்காரியாகத் தந்தோம் அவர் அங்கிருப்பது பிடிக்கவில்லையாகில் இங்கிருந்து அடிமை செய்கிறார் என்று மீண்டும் அவரை அழைப்பித்துக் கொண்டார்.பெரிய நம்பி மாறனேரி நம்பிக்கு அந்திமக் கிரியைகள் செய்ததைக் கேட்ட இராமானுஜர் அவரிடம் ‘இவ்வாறு செய்யலாமா:என்று கேட்க அவரும் இக்ஷ்வாகு வம்சத்து இராமபிரான் சடாயுக்கு ஈமக்கிரியைகள் செய்ய வில்லையா? அவரைவிட நான் உயர்ந்தவனா? ஜடாயுவை விட இவர் தாழ்ந்தவரா? தருமபுத்திரன் விதுரனுக்குச் செய்ய வில்லையா?தருமரைக் காட்டிலும் நான் உயர்ந்தவனா? விதுரனைக் காட்டிலும் இவர் சிறியவரா? இத்தகைய மகான்கள் விஷயத்திலாவது இதைச் செய்யாவிடில் நம்மாழ்வார் அருளிச்செய்த ‘பயலுஞ்சுடரொளி’ (திருவாய் 3:7) நெடுமாற்கடிமை (இருவா 8:10) என்னும் திருவாய்மொழிகள் கடலோசை போல பொருளற்றதாகி விட்டதா என்று சொல்ல இராமானுஜரும் கேட்டு உகந்து இசைந்தார். பெரியநம்பி செய்த இக்காரியத்தைக் கண்டு ஸ்ரீரங்கத்தில்அந்தணர் பெரும்பாலோர் அவரைத் தள்ளி வைத்தனர் என்றும், நம்பெருமாள் சித்திரைத் தேரில் எழுந்தருளும்போது, பெரிய நம்பி திருமாளிகையிலிருந்து தேர் நகராமல் நிற்கவே அவருக்கு அருளப் பாடிட்டுத் தீர்த்தப் பிரசாதம் சாதித்து அவர் பெருமையை அனைவருக்கும் உணர்த்திய பின்னரே தேர் மேலே புறப்பட்டது என்பதும் வரலாற்றுச்செய்தி.-சோழ மன்னனால் கண்கள் பிடுங்கப்பட்டு சோழபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் திரும்பி வரும் வழியில் பெரிய நம்பிக்கு அந்திம காலம் நெருங்க வரும் பொழுது உயிர் பிரியுமுன் ஸ்ரீரங்கம் சென்று விட வேண்டும். வேகமாகச் செல்ல வாகனம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் குமாரி அத்துழாய் தெரிவித்தபோது இங்கேயே உயிர் பிரிந்தாலும் எம்பெருமான் அருளாலே பரமபதம் நிச்சயம். ஸ்ரீரங்கத்துக்குப் போய் பிராணனை விட்டால், மற்றுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களும் இதை முன் மாதிரியாகக் கொண்டு ஸ்ரீரங்கத்திதில் மரணமடைந்தால் தான் மோட்சம் என்று முடிவு கட்டி மற்ற இடங்களில் உயிர் விடப் பயப்படுவார்கள் என்று சொல்லி வழியிலேயே பரமபதமடைந்தார் என்று அறிகிறோம்.-பதி விரதைக்கு மங்கள ஸூத்திரம் போல நமக்குத் ‘த்வயம்:என்பார் பெரியநம்பி. ஒரு தரம் பிள்ளை உறங்கா வில்லி தாஸர் என்ற வைணவர் இராமானுஜரிடம், விபீஷணாழ்வார், இராமபிரானிடம் சரணம் புக வந்தபோது, வானர சேனைகள் அவரைத் தடியாலும் கல்லாலும் அடித்தனர் என்பதை எண்ணிப் பயப்படுகிறேன் என்ற போது இராமானுஜர் கமுகுண்ணில் வாழை உண்ணும்.எமக்குப் பெரிய நம்பியுண்டு. உமக்கு நானுண்டு. கமுகுக்குத் தண்ணீர் பாய்ச்சும் பொழுது வாழையும் அந்நீரை உண்டு வளருவதைப் போல, பெரிய நம்பி சம்பந்தத்தைப் பார்த்து பெருமாள் என்னை ரக்ஷிப்பார். என் சம்பந்தத்தைப் பார்த்து உம்மையும் ரட்சிப்பார் என்று கூறித் தேற்றினாராம்.-ஒரு நாள் இராமானுஜரும் முதலிகளும் எழுந்தருள பெரிய நம்பி தண்டனிட இராமானுஜர் அஞ்சலி பண்ணிப் போக முதலிகள் இது ஏன் என்று வினவ, இராமபிரான் கட்டளை யிட்டதற்கு இணங்கி பரதன் அரச பாரத்தை ஏற்றுக் கொண்டதைப் போல
பெரிய நம்பி தண்டனிட்டதை ஏற்றுக் கொள்வதே நமக்கு ஸ்வரூபம் என்றாராம்.
ஒரு நாள் பெரிய நம்பி திருக்கோஷ்டியூர் நம்பி திருமாலையாண்டான் மூவருங் கூடி யிருந்து தங்கள் ஆச்சாரியாரான ஆளவந்தார் வைபவத்தை எண்ணி அனுபவித்துக் கொண்டிருந்தபொழுது திருவரங்கச் செல்வர் (பலி சாதிக்கும் பெருமாள்) புறப்பட இவர்களது பகவத் பாகவத ஆச்சார்ய அனுபவத்துக்குத் தடை பிறந்து எழுந்திருந்து தண்டனிட வேண்டுமாகையால் கூட்டம் கலக்கியார் வந்தார். இனிமேல் பலி பெருமான் எழுந்தருளாத கோயிலிலேயே இருக்கக் கடவோம் என்று நீர்மானித்ததாகவும், இவ்வாறு மகாத்மாக்களுக்குத் தொல்லையா யிருப்பதைப் பார்த்த திருவரங்கச் செல்வர், தம்மைப் பலி சாதிக்க எழுந்தருளப் பண்ண வேண்டாம் என்று நியமித்து விட்டதாகவும் அந்த நியமனம் இன்றளவும் நடப்பதாகவும் கூறுவர். வித்தாகுங் காய் பிஞ்சிலேயே தெரியும் என்றார் பெரியநம்பி, உலகம் வாழ வந்தவர் எம்பெருமானார் என்பதை அவருடைய சிறுவயதிலேயே நாங்கள் கண்டு கொண்டு விட் டோம் என்ற கருத்தில்.-ஏற்றங்கள் பிராமணரல்லாத ஸ்ரீ வைஷ்ணவர்களிடமும் இருக்கிறது என்பதை மனதில் கொண்டே ஸ்ரீராமபிரான் ரிஷிகளைக் காட்டிலும் குகப் பெருமானிடமும், வானர முதலிகளிடமும், விபீஷணாழ்வாரிடமும் ஈடுபட்டார். நம் பெருமாள் லோக சாரங்க முனியைக் காட்டிலும் திருப்பாணாழ்வாரிடமும் திருமலையப்பன், முடி மன்னனாகிய தொண்டைமான் சக்கரவர்த்தியைக் காட்டிலும், குயவரான குறும்பறுத்த நம்பியிடமும் ஈடுபட்டார். பெரியநம்பி பிராமண, ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய விரோதத்தைப் பொருட்படுத்தாமல் மாறனோர் நம்பிக்கு அந்திம ஸம்ஸ்காரங்கள் செய்தருளினார். ஆகவே இதை உணர்ந்தவர்கள் சாத்தாத முதலிகளின் (பிராமணரல்லாதவர்) பெருமையை அறிவர்களாதலால் அவர்களிடம் அபசாரம் ஏற்படாது. எம்பெருமான் திருவடிகள் எளிதில் கிட்டும் என்று இராமானுஜர் முதலியாண்டானுக்கு ௮ருளிச் செய்தார்-ஆளவந்தாருடைய கட்டளையாலே ஸ்ரீ பாஷ்யகாரரான இராமானுஜரை அங்கீ கரித்த பூர்ணரான பெரிய நம்பி, அவரைத் தமக்கு நண்பர்களான திருக்கோட்டியூர் நம்பியிடம், அர்த்த சிக்ஷை பண்ணவும், திருமாலை யாண்டானிடம் திருவாய்மொழி கேட்கவும், திருவரங்கப் பெருமான் அரையரிடம் நல் வார்த்தை கேட்கவும் நியமித்தார். பெரிய நம்பி சோழ மன்னனால் ஹிம்சிக்கப்பட்டு கண்ணையும் இழந்து வரும் வழியில், இறுதிக் காலம் நெருங்கவே ஆழ்வான் மடியிலே கண் வளர, கோயிலும் பாஷ்யகாரரும் இருக்க, இங்கே மரணம் ஏற்படவா என்று ஆழ்வான் சோகிக்க, பெரிய நம்பி ஒரு பாகவதர் மடியை விடக் கோயில் சிறப்பான தல்ல என்று கூறி உயிர் நீத்தார். பாஷ்யகாரருக்கு ‘த்வயத்தை’ அருளிச் செய்தவர் பெரியநம்பி, அதன் அர்த்தத்தை அருளிச் செய்தவர் திருக்கோட்டியூர் நம்பி, ஞான பூர்ணரான ஆளவந்தார் சீடர் பெரிய நம்பி அருளிய திருப்பாணாழ்வார் தனியனில் இரு காவிரிகளுக்கு நடுவில் பள்ளி கொண்ட பெருமாளைத் திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்து பேரானந்தம் கொண்ட நெஞ்சினராய்த் தம் கண்கள் மற்றொன்றைக் காணா என்று எவர் அறுதியிட்டாரோ, அந்த முனி வாஹனரை அனுசந்திக்கிறேன் என்றார். பெரிய நம்பிக்குத் திரு அவதாரஸ்தலம் கோயில் (ஸ்ரீரங்கம்) இவரது இதர திருநாமங்கள் பராங்குசதாஸர், மஹாபூர்ணர் பூரணாசார்யார் என்பன. இவரது குமாரர்-பெயர் புண்டரீகாக்ஷர் திருவாராதனப் பெருமாள் அழகிய சிங்கன்-இவரது ஆச்சாரியார் ஆளவந்தார். இவரது சிஷ்யர்கள் திருக்கச்சி நம்பி, எம்பெருமானார், மலைகுனிய நின்றார், சடகோப தாஸர்,அணி அரங்கத்தமுதனார் (திருவரங்கத்தமுதனாரின் தந்தை ) திருவாய்க்குலமுடையார் பட்டர் முதலானோர். இவர் 105 ஆண்டுகள் வாழ்ந்தார். இவர் இறந்த இடம், சோழ தேசத்தில் பசுபதி கோயில்.
அம்புவியில் பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே.
உம்பர் தொழும் அரங்கேசர்க்குகப் புடையோன் வாழியே.
ஓங்கு தனுக் கேட்டை தனில் உதித்த பிரான் வாழியே.
வம்பவிழ்தார் வரதருரை வாழ்வளித்தான் வாழியே.
மாறனோர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே.
எம்பெருமானார் முனிவர்க் கிதமுரைத்தான் வாழியே.
எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே.
ஆளவந்தார் அவதரித்துப் 11 வருடங்கள் கழிந்த பின் கிபி-987-ல் பெரியாழ்வாருக்குப் பரம ஆப்தரான செல்வ நம்பியின் சந்ததியில் பிராமண குலத்திலே திருக்குருகைப்பிரான் என்னும் திருநாமமுடையவராய்ப் பிறந்தார் திருக்கோஷ்டியூர் நம்பி. நாதமுனிகளிடமிருந்து உய்யக்கொண்டார், மணற்கால் நம்பி மூலம் கிடைத்த அந்தப் பவித்ரமான இராமானுஜ விக்ரகத்தை ஆளவந்தார் தம்முடைய அந்திம காலத்தில் இவரிடம் கொடுத்து அது வந்த
வழியையும் கூறி ரகஸ்யார்த்தங்கள் அனைத்தையும் இராமானுஜருக்கு உபதேசிக்கும்படியும், நம் தர்ஸனத்தை அவர் நாமத்தாலே விளங்க வைக்கும்படியும் நியமித்துச் சென்றார். அதன்படியே நம்பியும், அனுவருத்தி பிர்சந்நாச்சாரியார் (ஒராண் வழி ஆச்சார்யர்] பரம்பரை தன்னுடன் முடிவு பெற்று எம்பெருமானார் தொடங்கி (கிருபாமாத்ர பிரசந்நாச்சார்யார்) ஆசையுள்ளோர் அனைவரும் கற்கும் உரிமைகளுடைய பரம்பரை வளர வேண்டும் என்னும், திருவுள்ளத்தாலே ஸ்ரீ ராமானுஜரை பதினெட்டு முறை திருக்கோட்டியூருக்கு நடக்கச் செய்து வேறு யாருக்கும் உபதேசிக்கக் கூடாது என்று வாக்குறுதி பெற்றுக் கொண்டு அவருக்குத் திருமந்திரத்தை உபதேசிதார். இராமானுஜர் தம் எல்லையற்ற கருணையினால் ஆச்சார்யார் கட்டளையையும் மீறித் தமக்கு நரகம் வந்தாலும் வரட்டும். பலர் உய்ந்து போனால் போதும் என்னும் திருஉள்ளத்துடன் பலருக்கும் திருமந்திரத்தை உபதேசித்தார். இதைக் கேள்விப்பட்ட நம்பி ‘எம்பெருமானாரே’ என்று இராமானுஜரை அணைத்துக் கொண்டு, அவர் பெயராலேயே எம்பெருமானார் தர்சனம் என்றே அந்தத் தர்சனம் விளங்கட்டும் என்று அனுக்கிரகித்து அவருக்குத் தாமே சரம ஸ்லோகத்தை (சரணாகதி தத்துவத்தை] உபதேசித்து அதைத் தக்க அதிகாரிகளுக்கு உபதேசிக்கும்படி கட்டளையிட்டார்-திருமாலை யாண்டானை எம்பெருமானாருக்குத் திருவாய்மொழி காலட்சேபம் சொல்லும்படி நியமித்தவரும் இவரே-ஆளவந்தாரிடம் கேட்காத அர்த்தங்களை விஸ்வாமித்ர ஸ்ருஷ்டியாக (தானே புதிதாக உண்டாக்கி) எம்பெருமானார் கூறியதாலே கோபமடைந்த திருமாலையாண்டான் காலட்சேபத்தை நிறுத்திய பொழுது எம்பெருமானாருடைய பெருமையைத் திருமாலை யாண்டானுக்கு எடுத்துரைத்து மறுபடியும் காலட்சேபம் தொடங்குமாறு செய்தவரும் இவரே. இராமானுஜர் உஞ்ச விருத்தி செய்து வரும்பொழுது ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒருவர் விஷங்கலந்த அன்னத்தை இட்டபடியால், இராமானுஜர் உபவாசமிருக்கிறார் என்று கேள்விப்பட்டுத் திருக்கோஷ்டியிலிருந்து பதறி ஓடிவந்து, எம்பெருமானார் சிஷ்யர்களில் கிடாம்பி யாச்சானுக்கே, எம்பெருமானாரது திருமேனியில் பரிவு உள்ளதைச் சோதித்து தெரிந்து கொண்டு அவரை உடையவருக்கு மடப்பள்ளிக் கைங்கர்யம் செய்யுமாறு நியமித்தவரும் இவரே. இவற்றிலிருந்து இவர் ஒரு பெரிய தீர்க்கதரிசி என்பதும் எம்பெருமானாரிடம் பொங்கும் பரிவை உடையவர் என்பதும் தமக்குக் கெட்ட பெயர் ஏற்படும் என்றாலும் எம்பெருமானாருக்குச் சிறப்பு விளைவிப்பதில் ஊன்றி நின்றவர் என்பதுவும், ஆளவந்தார் சிஷ்யர்களில் தலைமை பெற்றவர் என்பதும் விளங்குகிறது.இவர் குமாரத்தி தேவகிப்பிராட்டி ஒரு ஞானாதிகை (ஞானம் வாய்க்கப் பெற்றவர்). எம்பெருமானாருடைய சிஷ்யை! உந்து மத களிற்றன் பாட்டை (திருப்பாவை 18) எம்பெருமானார் பாடிக்கொண்டு உஞ்ச விருத்திக்கு வந்த பொழுது திருக்கோட்டியூர் நம்பி வாசலிலே செந்தாமரைக் கையால் சீரார் வளை யொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்து என்று பாடிய அளவிலே, தேவகிப் பிராட்டியார் கதவைத் திறக்க அவளை நப்பின்னையாகவே எண்ணித் திருவடியில் விழுந்தார், எம்பெருமானார் என்ற விபரம் பல நூல்களில் காண்கிறோம்.திருக்கோஷ்டியூர் நம்பி திருமாளிகை வாசலிலே திருப்பாவை அனுசந்தானத்துடனே தண்டன் சமர்ப்பித்து சீரார் வளை யொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்து என்ற விருத்தாந்தம் ராமானுஜார்ய திவ்ய சரிதையில் பின் வருமாறு உள்ளது.மாதுகரத்துத் கெழுந்தருளிவரும் போதன்றிப் போம் போதும் ஓதும் கோதை திருப்பாவை உரையோடுலாவித் திரிபவரும் வேதம் வல்ல திருக்கோட்டி நம்பி மனையில் மெய் ஞானப்போதமுடையார் ஆங்கொரு நாள் புக்கார் உந்து மகளிற்றில்.(மாதுகரம்-பிக்ஷ, மெய்ஞ்ஞான போதம் மெய்ஞான அறிவு).பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச் செந்தாமரைக் கையால் சீரார் வளை யொலிப்ப வந்தாரணங்கே திறவென்ன வாசலின் முன் எந் தாதை நின்றார், அவ்வெல்லையினில் நம்பி தரும் அன்னமென் நடையாள் தேவகி யென்னும் அரும் பெயருடைய ஆரணங்கு தன்னொரு கரத்தால் கந்துகமொன்று தாங்கியோர் தாமரைக் கையால் இன்னிசை எதிகட்கிறைவனார் திறவென்றிசைத்தசொல் இறுமுனம் திறந்தாள் மின்னுமா மணி சேர்ந்திலங்கிய கபாடம் விண்டுவின் தொண்டர் மெல்லியவாள் கண்டனர். பின்னைப் பிராட்டி மற்றிவளும் கள்வனேன் பொருட்டினாலலர்ந்த புண்டரீகச்சீர் திருவடி வருந்தப் போந்திவை திறந்தனளென்னப் பண்தரும் பனுவல் மறந்தனர், மண்ணில் பதைப்புற வொடுங்கினர், விழுந்தார் ஒண்டொடி கண்டு வெகுளியோடேகி உற்றதைப் பெற்றவர்க் குரைப்பாள் என்றிவை மகளார் இயம்பிட நம்பி இன்பமுற்றிருந்து இளையாழ்வீர்! ஒன்று சீர் உந்து மதகளிறென்ன ஓதிய பாடலோ சந்தை இன்று நம் வாசல் தலையுறுமளவில் என்றனர். ‘ஆம்’ என எழுந்து சென்று மா மாதுகரம் பரிமாறத் தேசிகக் குன்றையும் வணங்கி-என்று வடிவழகிய நம்பி தாஸராலும்-இவ் விருத்தாந்தம் வர்ணிக்கப்பட்டுள்ளது.
இராமானுஜர் திருக் கோட்டியூர் சென்று அங்குள்ளவர்களிடம் நம்பி திருமாளிகை எங்கே என்று கேட்க அவர்களும் அதோ தெரிகிற கூரை என்று கூறக் கேட்டு அவ் விடத்திருந்தே நம்பி திருமாளிகை யளவும் தண்டனிட்டுக் கொண்டே எழுந்தருளியதால், அவ்வூரிலுள்ள, குற்றமின்றிக் குருக்களுக்கு அனுகூலராய் வாழும் நல்லவர்கள் நம்பியின் பெருமையை அறிந்து அவரை வழிபடலா யினர்.
ஒரு நாள் திருக்கோட்டியூர் நம்பி கோயில் தர்ஸனம் செய்து திரும்பும்பொழுது எம்பெருமானார் அவரை அணுகித் தனக்குத் தஞ்சமாயிருப்பதொரு நல்வார்த்தை அருளுமாறு வேண்ட அவரும் தான் ஆச்சார்யார் ஆளவந்தார் நீராடும் பொழுது அவரது திரு முகுது இருக்கும் அழகைக் கண்டு அதுவே தஞ்சம் என்றிருப்பேன். நீரும் மறவாமல் இதை நினைத்திரும் என்றாராம் கூரத்தாழ்வான் ஒரு மாத காலம் உபவாசமிருந்து இராமானுஜரிடமிருந்து சரம ஸ்லோகத்தின் பொருளை அறிந்து கொண்டவராதலால், முதலியாண்டான், திருக்கோஷ்டியூர் நம்பி பக்கம் ஆறுமாதம் தொண்டு செய்து அவரிடம் ஸ்வரூப சிட்சை பெற்றபின்னர் இராமானுஜரிடம் சரம ஸ்லோகார்த்தத்தைப் பெற்றார்.
திருக்கோஷ்டியூர் நம்பி இராமானுஜருக்கு அருளிச்செய்த உபதேச மொழிகள் வருமாறு. ஒரு பக்தனது நித்தியக் கடமைகள் முறையே, ஆஸ்ரயண விரோதி, அதாவது நான், எனது என்னும் அகங்கார மமகாரங்களும் உடலின் மேல் உள்ள ஆசையும் நீக்குதல், அடுத்தது புருஷாகாரமான பிராட்டியையும், ஆச்சார்யர்களையும் அவமதிக்காது இருப்பது, அடுத்து பகவத் பிராப்தி (அருள்)கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஐயமும் ஒரு ஜீவனை எம்பெருமானை அணுகாதபடி தடுத்து விடுகின்றது என்ற கருத்து, அடுத்து ஸ்ரவண விரோதி என்பது தன்னை மறந்து மற்ற தெய்வங்களைப்பற்றிய கதைகளைக் கேட்பது எம்பெருமானைப் பற்றிய பெருமைகளைக் கேட்பதைத் தடுத்து விடும் என்ற கருத்து, அடுத்து அனுபவ விரோதி என்பது சந்தனம், புஷ்பம் முதலான போகப் பொருள்களை உபயோகிப்பதால் உலக இச்சைகளில் பற்றுகளை விளைவிப்பதன் மூலம் பகவதனுபவத்தைத் தடுத்து விடும் என்ற கருத்து.-அடுத்து ஸ்வரூப விரோதி என்பது எம்பெருமான் இட்ட வழக்காக பரதந்திரனாக இல்லாமல் தன்னை ஸ்வதந்தந்திரனாக நினைத்து அவன் ஆணையை மீறுவது. அடுத்து பரத்வ விரோது என்பது பிரமன், உருத்திரன் முதலான தேவதைகள் தன்னை விட விஞ்சியவர்களாக இருப்பதால் அவர்களை வணங்கினால் எம்பெருமானுடைய பரத்வத்தை அறிய முடியாதபடி தடுத்து விடும் என்ற கருத்து=அடுத்து ப்ராப்தி விரோதி என்பது எம்பெருமானை இனியவனாக
நினையாது தனக்கு உடல் சம்பந்தமான காரியங்களைச் செய்து தரும் பாவனனாக நினைப்பவரோடு சேருவது பகவத் பிராப்தியைத் தடுத்து விடும் என்ற கருத்து என்பதாகும்.-பொன்னைப் புடம் போடப் போட ஒளி விஞ்சுவதைப் போல ஜீவாத்மா ஸ்வரூபம் பொன் போல குற்றமற்றது. தேக சம்பந்தத்தால் ஏற்பட்ட அழுக்குகள் நீங்கி முக்தி நிலையில் அனன்ய சேஷத்வம், அனன்ய சரணத்வம், அனன்ய போக்யத்வம், ஸம்ஸ்லேஷத்தில் (கூடினால்) தரிப்பது, பிரிந்தால் தரியாமை, எம்பெருமானிட்ட வழக்கா யிருக்கை என்னும் ஆறு வகையாலே ஜீவனுக்கு நற் கதி உண்டாகும் என்ற கருத்து. எம்பெருமான் உபேயமாகும் போது பிராட்டிமார் நித்ய முக்தர்கள் முதலானவர்களோடு சேர்ந்தே உபேயமாகிறான்.
திருக்கோஷ்டியூர் நம்பி தனது அந்திம காலத்தில் தன் குமாரத்தி தேவகிப் பிராட்டியிடம் என் பிரயாணத்தில் (மரணத்தில்) நீ நினைத்திருப்பது என் என்று கேட்க, ‘அய்யரே, எங்கள் ஆச்சார்யரான எம்பெருமானாரோடு உண்டான சம்பந்தத்தினால் தேவரீருக்கு நற்கது உண்டாகப் போகிறது என்று நினைத்தேன்’ என்றாளாம். அவரும் தன் மகளிடம் ஆளவந்தாரிடம் பெற்ற இராமானுஜர் விக்ரகத்தைக் கொடுத்து வளர்த்ததனால் ஆய பயன் பெற்றேன் என்று கூறி எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று கூறி திருநாடு ஏகினார்.
திருக்கோட்டியூர் நம்பியின் வேறு திருநாமங்கள்:- கோஷ்டிபூரணர், கோஷ்டி புரீசர், என்பன. இவரது குமாரரான தெற்காழ்வானும், இராமானுஜரது சீடரே. இவரது இருப்பிடம் திருக்கோஷ்டியூர். இவர் 105 ஆண்டுகள் வாழ்ந்தார்.
மன்னியசீர் ஆளவந்தார் மலர்ப்பதத்தோன் வாழியே.
வைகாசிரோஹினிநாள் வந்துதித்தோன் வாழியே.
இன்னிளவஞ்சிக்கினிதுரைத்தான் வாழியே.
எம்பெருமானாரெனும்பேர் இயம்புமவன் வாழியே.
தென்னணியாம் காசிபகோத்திரத்துதித்தான் வாழியே.
திருக்குருகைப்பிரான் எனும் பேர் திகழ வந்தான் வாழியே.
முன்னாரும் பெரும் புதூர் முனிக்குரைத்தான் வாழியே.
மொழிந்த திருக்கோட்டி நம்பி மூதுலகில் வாழியே.
காசிபன் தன் கோத்திரத்தைக் கருதி வந்தோன் வாழியே
கலையனைத்தால் முன்னவர்க்குக் கதியளித்தான் வாழியே.
மாசற மெய்ப்பொருள் எதிக்கு வழங்குவோன் வாழியே.
வையகமுன் தர்சனத்தால் வாழுமென்றான் வாழியே.
ஏசறவே யுகந்தெதியை எடுத்தணைத்தான் வாழியே.
எம்பெருமானாரெனும் பெயர் இயம்புமவன் வாழியே.
தேசுபுகழ் செல்வன் மொழி தேர்ந்துரைப்பான் வாழியே.
திருக்கோட்டியூர் நம்பி சகதலத்தில் வாழியே.
ஈரேழு மூன்றொன்றில் இதமுரைத்தான் வாழியே.
ஏற்றமா ஆளவந்தாரிணையடியோன் வாழியே.
ஈரெழுவருக்கும் பதம் ஈயுமவன் வாழியே.
எம்பெருமானாரெனும் பேரியம்புமவன் வாழியே.
நாலேழில் நாலாநாள் நாடி வந்தான் வாழியே.
நன்மதுர கவி நிலையை நண்ணினான் வாழியே.
நாலேழு நாலெழுத்தை நன்குரைத்தான் வாழியே.
நங்கள் திருக்கோட்டி நம்பி நற் பதங்கள் வாழியே.
அல்லும் பகலும் ஆளவந்தார் அடி நினைவான் வாழியே.
அனவரதம் தெற்காழ்வார்க் காட் செய்வோன் வாழியே.
வெல் பொருள்வெளியிட எதியை வெறுத்துரைத்தான் வாழியே.
மேதினியோர் உய்வெரென்று மெச்சினான் வாழியே.
உள்மந்திர மெதிராசர்க் கொளித்துரைத்தான் வாழியே.
உந்துமதத்தெதியை உகந்தணைத்தான் வாழியே.
செல்வநம்பி குலம் தழைக்கச் செகத் துதித்தான் வாழியே.
திருக்கோட்டியூர் நம்பி செகதலத்தில் வாழியே.
திருக்கோட்டியூர் நம்பி பிறந்த மறு வருடம் அழகர் கோவிலான திருமாலிருஞ்சோலையில் ஸ்ரீ வைஷ்ணவப் பிராமண குலத்தில் பிறந்தவருக்கு ஞான பூரணர் என்று பெயர் சூட்டினர் பெற்றறோர்கள். இவருடைய முன்னோர்களில் ஒருவரான கண்ணுக்கினியான ஸ்வாமி என்பவர், ஒரு முறை சில மலையாள மாந்திரீகர்கள் கண்ணில் மையிட்டுக்கொண்டு வந்து அதன் மகிமையால் அழகரது தேஜசை அபகரித்துக் கொள்ள முயன்றதைக் கண்ட இந்த ஸ்வாமி,அவர்கள் உண்ணும் பிரசாதத்தில் மிளகை அதிகம் சேர்த்திட அதனால் அந்த மாய மை கண்ணிலிருந்து கரைந்திட அவர்கள் குற்றம் வெளிப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்களாம். அதனால் அந்தக் கண்ணுக்கினியான் ஸ்வாமிக்குத் திருமாலை யாண்டான் என்ற பட்டப்பெயரும் ஏற்பட்டு அந்தக்கோயில் புரோகிதராகவும் நியமிக்கப்பட்டு, பரம்பரையாக இன்றளவும் அப் பெருமைகள் அவருடைய சந்ததியாரால் அனுபவிக்கப்பட்டு வருகின்றன.திருக்கோட்டியூர் நம்பி கட்டளைப்படி இராமானுஜருக்கு திருவாய் மொழி உபதேசித்து வரும் காலத்தில், ஆளவந்தார் அருளிய அர்த்தங்களுக்கு மாறாக, இராமானுஜர் சில இடங்களில் அர்த்தஞ்சொல்லிய காரணத்தால் மனம் வெதும்பிப் பாடம் சொல்வதை நிறுத்தி விட்டார். பின்னர் திருக்கோட்டியூர் நம்பியினால் ஆளவந்தாருக்குத் தோன்றாத அர்த்தம் இராமானுஜருக்குத் தோன்றாது. ஸ்ரீ கிருஷ்ணன் சாந்தீப முனியிடம் பாடம் கேட்டதைப் போல இராமானுஜர் உம்மிடம் சந்தை கேட்கிறார். ஆகவே நீர் தொடர்ந்து சொல்லும் என்று கட்டளையிட அவரும் தொடர்ந்து நடத்தி நிறைவு செய்தார். இவர், தம் குமாரரான சுந்தரத் தோளுடையானை எம்பெருமானாரது சீடராக்கினார். திருமாலையாண்டான் வம்சத்தில் வந்த யமுனாச்சாரியார் என்பவர் வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயருக்கு சிஷ்யராயிருந்தவர்.இவர் அருளிய பல கிரந்தங்களில் பிரமேய ரத்தினம் தத்வ பூஷணம் என்ற இரண்டும் இப்போதும் கிடைக்கின்றன. திருமாலை யாண்டான் வம்சத்தவர்கள் இன்றும் அழகருக்குப் புரோகிதராயிருந்து பல விசேஷ கெளரவங்களைப் பெற்று வருகின்றனர். சித்திரா பெளர்ணமி யன்று மதுரைக்கு அழகர் எழுந்தருளும் மகோத்ஸவத்தில் அழகர் வரு முன்னரே திருமாலை யாண்டான் வம்சத்தினர் பல்லக்கில் எழுந்தருளுவதைக் கண்ட பொது ஜனங்கள் ஆண்டான் பல்லக்கு முன்னே, அழகர் பல்லக்குப் பின்னே என்று கூறுவார்கள்.திருமாலை யாண்டான் உடையவருக்கு திருவாய்மொழிச்சந்தை சொல்லும் பொழுது நீர் ஆளவந்தாரைக் கண்ணாலும் காணாதிருக்க, இப்படி அருளிச் செய்யார் என்று சொல்லக் காரணம் என்ன என்று வினவ, நான் ஆளவந்தாருக்கு ஏகலைவனன்றோ என்று பதில் சொல்லவே திருமாலை யாண்டானும் திருக்கோட்டியூர் நம்பி சொல்லியதை ஒத்திருந்தது. நாம் ஆளவந்தாரிடம் கேளாத அர்த்தமெல்லாமல் இவரிடம் கேட்டோம் என்று அவரை வணங்கினாராம்.வங்கிபுரத்து நம்பி திருமாலை யாண்டானது சிஷ்யனாக, பாஷ்யகாரரடம் ஞானோபதேசம் பெற்றார்.-நாலூராண்டான் என்பவர் ஆளவந்தாரிடம் ஆஸ்ரமித்துத் திருமாலை யாண்டானிடம் ஞான ஜீவனம் பண்ணினார்.-பெரியாண்டான் என்பது திருமலை யாண்டான் புதல்வன் சுந்தரத் தோளுடையான். பெரியாண்டான் திருத்தோரணம் தொடங்கி அழகர் திருவடிகளிலேயே பதினெட்டு வருடங்கள் இரவும் பகலும் தண்டனிட்டுக் கிடப்பார். ஆண்டான் இடக்கிறாரோ பசுக் கடக்கிறதோ, வழி பார்த்துப் போங்கள் என்று சொல்லுமாறு பகவதனுபவம் சலியாமல் பண்ணுவார். கிணற்றில் விழுந்தவனை இரண்டு. பேருமாக எடுத்தாற்போல, பர்ஷ்யகாரரும், எம்பாரும் என்னைக் கடாக்ஷித்தார்கள் என்று பெரியாண்டான் கூறுவார்.அழகர் திருவோலக்கத்தில் பிள்ளை யழகப் பெருமான் என்பவர் பெரியாண்டானைப் பார்த்து ‘பரமபதம் எப்படி இருக்கும்:என்று கேட்க ‘இப்படியே தான் இருக்கும். ஆனால் இங்கிருந்தால் முதுகு கடுக்கும் அங்கு பேனால் அது செய்யாது’ என்றாராம்.ஒரு பாக்கு மரத்தைப் பயிரிட்டு 16 ஆண்டுகள் பாடுபட்டாலும் பெறும் பலன் வெகு சொற்பமே. மிகத் தாழ்வானவருக்குச் சம்ஸாரத்தைப் போக்கி மிகச் சிறந்ததான பரமபதத்தைத் தருவதற்கு த்வயத்தை அருளிச் செய்த ஆச்சாரியரது திருவடிகளில் எப்போதுமே நன்றி யில்லாத ஸம்ஸாரிகளுக்கு எத்தைச் சொல்லி என்ன பயன் விளையப் போகிறது என்று திருமாலை யாண்டான் வெறுத்துக் கூறினார். எதிராஜர் திருமாலை யாண்டானிடம் திருவாய்மொழி பெரிய திருமொழி முதலாயிரம் இயற்பா அனைத்தும் சந்தைகளையும் கேட்டவர்.
அம்புவியில் ஆளவந்தாரடியிணையோன் வாழியே.
ஆரியனாம் அவர் பதத்தை அன்பு செய்தோன் வாழியே.
வெம்பிவரும் வாதியரை வேர் களைந்தோன் வாழியே.
மேதினியில் நாலூர் விளக்க வந்தான் வாழியே.
எம்பெருமானெதிகாசர்க் கீடுரைத்தான் வாழியே.
ஏற்றமுள்ள மாசி மகமிலங்க வந்தோன் வாழியே.
வம்பவிழும் சோலை மலை வாழ வந்தோன் வாழியே.
மாலாதராரியன் தாள் மாநிலத்தில் வாழியே.
வீசு புகழ்ச் சங்காழி விளங்கு புயம் வாழியே.
விண்ணுயர்ந்த மலை யழகர் விரும்புமவன் வாழியே.
மாசி மகம் இப் புவியில் வந்துதித்தோன் வாழியே.
மறைப் பொருளை உடையவர்க்கு வகுத்துரைத்தோன் வாழியே.
காசிப நற் குலத்துதித்த கருணை நிதி வாழியே.
கையாழி சங்கதனால் கதி தருவோன் வாழியே.
தேசு புகழ் ஆளவந்தார் திருவடியோன் வாழியே.
திருமாலை யாண்டான் தாள் செகதலத்தில் வாழியே.
பெரிய திருமலை நம்பி இராமானுஜருக்கு மாதுலராகும் (தாய் மாமன்). இவரது
மூத்த சகோதரி பூதேவி என்னும் காந்திமதிக்கும் ஸ்ரீபெரும்புதூர் கேசவ சோமயாஜாலுவுக்கும் பிறந்த மகனே எம்பெருமானாரான இராமானுஜர். இவரது இளைய சகோதரியான ஸ்ரீ தேவியை மதுரமங்கலம் கமல நயன பட்டருக்கு மணம் செய்து கொடுத்தார்.அவர்களது குமாரர்கள் எம்பார் என்னும் கோவிந்தரும் அவரது தம்பி சிறிய கோவிந்தப் பெருமாளும் ஆவார்கள். இவர் எம்பெரு மானாருக்கு ஒரு வருடகாலம் கீழத்திருப்பதியில் வால்மீகியின் இராமாயணத்தை காலட்சேபம் செய்தார். திருவேங்கடமுடையான் இவரைத் திருத் தகப்பனாராக அபிமானித்தார் என்பர். சைவராக மாற்றப்பட்டுக் காளஹஸ்தியில் உள்ளங்கை கொணர்ந்த நாயனாராக இருந்த மருமகன் கோவிந்தரை மறுபடி ஸ்ரீ வைஷ்ணவராகத் திருத்தியவர் இவர். தம்முடைய குமாரர்களான பிள்ளை திருமலை நம்பியையும், பிள்ளானையும், இரு குமாரத்திகளையும் உத்தாரகரான எம்பெருமானார் திருவடிகளில் அபிமானம் வைக்கச் செய்தார். உடையவரது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்ததே இவரது வாழ்க்கையாகும்.-எம்பெருமானார் தம் சீடர்களுடன் திருப்பதிக்கு யாத்திரை சென்ற பொழுது ஆழ்வார்கள், தரிசிக்காத இடத்திற்குத் தானும் போக விரும்பாமல் அடிவாரத்திலே எழுந்தருளியிருக்கிற ஆழ்வாராதிகளைச் சேவித்துக் கொண்டு திருப்பதியில் விட்டலதேவனையும் மற்றும் முப்பது வைஷ்ணவர்களையும் தம் சீடராகக் கொண்டு வாழ்ந்து வரும் நாளில் திருமலையிலிருந்து அனந்தாழ்வான் முதலிய வைணவர்கள் இதைக் கேள்விப்பட்டு கீழே இறங்கி வந்து எம்பெருமானாரை திரு மலைக்கு எழுந்தருளுமாறு வேண்ட,
அவரும் ஆழ்வார்கள் செல்லாத இடத்திற்கு தாமும் செல்ல விரும்பவில்லை என்று கூற உடனே உடனிருந்த ஏனைய வைணவர்களும் நாங்களும் ‘ஏறோம்’ என்று கூறவே உடையவரும் ஏற ஒருப்பட்டுத் திருமலையில் திருப்பரியட்டப் பாறை யளவிலே ஏறியிருக்கும்பொழுது அவரை எதிர்கொண்டு, திருவேங்கடமுடையானது தீர்த்தப் பிரசாதங்களுடன் திருமலை நம்பியே அழைக்க வந்தார். அவரிடம் வேறு யாரேனும் சிறியவர்களை அனுப்பக் கூடாதா, தாங்களே வர வேண்டுமா என்று உடையவர் கேட்கத் திருமலை நம்பி, என்னை விடச் சிறியவர்கள் யாரையும் காணவில்லை. ஆகவே நானே வந்தேன் என்றார். உடையவர் அம்மலை யழகில் மனமகிழ்ந்து இது பூலோகவைகுந்த மாயிருக்கிறது என்று ஆச்சர்யப்பட்டு திருமஞ்சனம் கண்டருளி, இவ்விடம் விண்ணோர் வெற்பாகையாலே, அமரர் முனிக்கணங்கள் போன்ற நித்ய ஸூரிகள் வாழுமிடம். நாம் இப்போதே இங்கிருந்து இறங்க வேண்டும் என்று கூற பெரிய திருமலைநம்பி திவ்ய தேசங்களில் மூன்று நாளாவது இருக்க வேண்டும் என்று கூறினார். ஆகவே உடையவரும் மூன்று நாட்களும் அமுது செய்யாமல் பகவானை அனுபவித்து, பிரபந்தப் பாடல்களை அனுசந்தித்து மூழ்ந்தார். பின்னர் கீழிறங்கி கீழத்திருப்பதியில் மாதுலரான பெரிய திருமலை நம்பியின் திருமாளிகையில் உணவருந்தி அவரிடம் வால்மீகி இராமாயணம் பிரவசனம் கேட்டவாறு ஒரு வருடகாலம் தங்கி இருந்தார்.
பெரிய திருமலை நம்பியின் ௮வதார ஸ்தலம்: திருமலை(திருப்பதி) அவரது திரு நட்சத்திரம், சித்திரை மாதத்து ஸ்வாதி ஆகும். ஆனால் இவரது வாழித் திருநாமத்தில் வைகாசி ஸ்வாதி என்று வருவதால் நிச்சயிக்கக்கூடவில்லை. இவரது இதர திருநாமங்கள் ஸ்ரீ சைல பூர்ணர், பெரிய திருமலைநம்பி. இவரது குமாரர்கள் பிள்ளை திருமலைநம்பி, அப்புள்ளான் ஆவர், குமாரத்திகள்இருவருண்டு.-திருவாராதனப்பெருமாள்: மலை குனிய நின்ற பெருமாள்.இவர் அருளிய அமலன் ஆதிப்பிரான் தனியன்
“காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி
தேட்டரு முதர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே’
வைகாசி சோதி நாள் வந்துதித்தான் வாழியே.
வண் திருவேங்கட முடையான் வரபுத்ரன் வாழியே.
அய்யன் ஸ்ரீ ஆளவந்தார் அடி தொழுவோன் வாழியே,
அனவரதம் மலை குனியோர்க்கு அடிமை செய்வோன் வாழியே.
மெய்யன் இராமானுசாரியான் விரும்புமவன் வாழியே.
மிக்க திருமலையார்க்கெல்லாம் மேலாவான் வாழியே.
செய்ய தமிழ் வேதத்தின் சிறப்பறிந்தான் வாழியே.
திருமலை நம்பிகள் உபய திருவடிகள் வாழியே.
திருவரங்கப் பெருமாளரையர் எம்பெருமானார் அவதரித்த அதே வருஷத்தில் (கி.பி. 7017) வைகாசி கேட்டையில் யமுனாச்சாரியாருக்கும் ஸ்ரீரங்கநாயககிக்கும் முதல் குமாரராய் அவதரித்தவர். இவரைத் தம் ஆச்சாரியரான மணக்கால் நம்பியிடம் சிஷ்யராக இருந்து வருமாறு பணித்தார் ஆளவந்தார். நம் பெருமாள் ஸ்ரீரங்கநாதன் நியமனத்தாலே காஞ்சியில் தேவப் பெருமாளைத் தமது இசையாலே மயக்கி வரம் பெற்று எதிராஜரை திருவரங்கத்திற்கு அழைத்து வந்தவர் இவர். ஸ்ரீரங்கநாதனுக்கு அரையராய் இருந்த இவர், எம்பெருமானாருக்கு அருளிச் செயல் சந்தையும் சரமோபாயமும் நல் வார்த்தைகளும் உபதேசித்தவர். இவருக்குச் சந்ததி யல்லாமையால் தம் தம்பிகளான தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, சொட்டை நம்பி ஆகியவர்களை எம்பெருமானாருக்கு சிஷ்யர்களாக்கினார்.-ஆகவே எம்பெருமானாருடைய ஆச்சாரியர்களான பெரிய நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி திருமாலை யாண்டான் பெரிய திருமலை நம்பி, திருவரங்கப்பெருமான் அரையர் ஆகிய ஐவரும்,எம்பெருமானாரே எல்லோருக்கும் உத்தாரக ஆச்சாரியார் என்பது தோற்றத் தங்களுடைய தம்பிகளையும் குமாரர்களையும், குமாரத்திகளையும் எம்பெருமானாரிடமே அடைக்கலமாகக் கொடுத்தனர்.-எம்பெருமானார் திருவரங்கப் பெருமாள் அரையருக்கு மனது உகக்கும்படியாக ஆறுமாத காலம் பாலமுதம் பக்குவமாகக் காய்ச்சிக் கொடுத்தும் திருவத்யயன காலத்தில் மஞ்சள் காப்பரைத்து நீராடப் பண்ணுவித்தும் அவரை மகிழ்வித்ததனால் அவரும் ‘வாரீர் எம்பெருமானாரே, உமக்கு சரம புருஷார்த்தம் சொல்கிறோம் என்று தொடங்கி தேவுமற்றறியாத மதுரகவிகளைப் போல நீரும் குருவே மேலான பிரஹ்மம். குருவே மேலான தவம், குருவே மேலான காமம். குருவே மேலான பிராப்யம், குருவே மேலான கல்வி குருவே மேலான பிராபகம். அப் பரம் பொருளையே உபதேஸிப்பதால் குரு அதைக் காட்டிலும் உயர்ந்தவர். தீ மனம் கெடுத்தும்,மருவித் தொழும் மனம் தந்தும், அறியாதன அறிவித்த ஆச்சார்யனே -உபாயோபாயம் என்ற விசுவாசத்துடன் ‘பீதகவாடைப் பெருமானார் பிரம குருவாகி வந்து என்று சொல்வது போல உறங்கும் பெருமாளே உலவும் பெருமாளாக வந்தாரென்றிரும்’ என்று-பஞ்சோபாய நிஷ்டையான் பரம பர்வார்த்த விசேஷத்தைப் பிரசாதித்தருளினார்.திருவரங்கப் பெருமாளரையர் காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாளைச் சேவித்து மிகுந்த பக்தியோடு ‘என் நெஞ்சமே நான்:என்று தொடங்கி தொழுதெழு தொண்டர்கள் தமக்கு பிணி யொழித்து அமரர் பெரு விசும்பருளும் பேரருளாளன் என்று பாலேய் தமிழில் பண்ணார் பாடல் இன்னிசையில் பாடிட பெருமாள் மிக மகிழ்ந்து அவருக்கு முத்துத் தாழ் வடம் போன்ற வெகு மதிகளை வழங்க முற்பட அரையர் தமக்கு இவையெல்லாம் தேவை யில்லை. இராமானுசரை அடியேனுக்குத் தந்தருளு வேண்டும் என்று விண்ணப்பஞ்செய்ய பெருமாளும் முன்னர் எதுவும் தருவோம் என்று வாக்குக் கொடுத்ததை மறுக்க இயலாமல் இராமானுசரை அனுப்ப இசைந்தார். இராமானுசரும் பேரருளாளரைச் சேவித்து விடை கொண்டு, கூரத்தாழ்வாரையும் முதலியாண்டானையும் மடத்துக்குச் சென்று தனது திருவாராதனப் பெருமாளான பேரருளாளனை எடுத்துவரச் சொல்லித் திருக்கச்சி நம்பியிடமும்,மற்றங்குள்ளோரிடமும் விடைபெற்றுக் கொண்டு பெரிய கோயிலுக்கு எழுந்தருளினார். இவ்வாறாக இராமானுசரைக் கோயிலுக்குக் கொண்டு வந்தவர் இவ் வரையரே. இவர் 175 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார். இவரது இதர நாமங்கள் ரங்கார்யர், குடிசொட்டை என்பன.-இவரது இசைப் புலமையும் பகவத் அனுபூதியும் சேர்ந்து திரு அத்யயன உத்சவத்தில் இவர் இசைத்து நாட்டியமாடி நடித்துக் காட்டிய பெருமாள் விபவாதாரத்தில் (இராம கிருஷ்ண அவதாரங்கள்)செய்தருளின. அபதாநங்களைக் கண்டு பெருமாள் மிகவும் மகிழ்ந்து இவருக்குக் ‘கோயிலுடைய பெருமாளரையர் என்ற திருநாமத்தைச் சாத்தினார். உத்ஸவங்களிலெல்லாம் பெருமாள் தோளுக்கினியான் வாகனத்தில் உலா வரும் போது நம் நடையழகுக்கு யீடாகப் பாடிடும் என்று அருளிட இவரும் இசையில் ஏத்திக் கொண்டு வரக் கோயிலுக்கு எழுந்தருளுவார். அதிலிருந்து அடுக்குச் சாத்திக்கொண்டு அந்தந்தத் திருக் கோலத்துடனே உத்சவ காலங்களில் பெருமாளுடன் எழுந்தருளுகிற வைபவம் நடந்து வருகிறது.அரையர் அருளிய திருமாலை, திருப் பள்ளி யெழுச்சித் தமிழ்த்தனியன்கள்.
மற்றொன்றும் வேண்டா மனமே – மதினரங்கர்
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் – உற்ற திருமாலை பாடும் சீர்த் தொண்டரடிப் பொடியெம்
பெருமானை எப்பொழுதும் பேசு(திருமாலை)
மண்டங்குடியென்பர் மாமறையோர் மன்னிய சீர்
தொண்டரடிப்பொடி தொன் நகரம் – வண்டு
திணர்த்த வயல்தென்னரங்கத் தம்மானைப் பள்ளி
உணர்த்தும் பிரான் உதித்த ஊர்”(திருப்பள்ளி)
நாதமுனி குலந்திகழ நன்குதித்தோன் வாழியே,
நற்றமிழின் மறைக்கிசையை நவின்றுரைப்போன் வாழியே.
காதலரங்கேசரிரு கழல் பணிவோன் வாழியே.
கானவர நாவிசையால் களிப்பிப்போன் வாழியே.
ஏதமில் வண் கச்சியனை ஏத்திசைப்போன் வாழியே.
எதிபதியைப் பரிசாக ஏற்று வந்தோன் வாழியே.
தீதில் யமுனைத் துறைவன் சேவடியோன் வாழியே.
திருவரங்கப் பெருமாளரையர் திருவடிகள் வாழியே.
திருக்கச்சி நம்பி சென்னைக்கு அருகிலுள்ள பூவிருந்தவல்லி என்ற ஊரில்
வைசியர் குலத்தில் வீர ராகவருக்கும் கமலைக்கும் நான்காவது குமாரராய் அவதரித்தார். சிலர் இவரை நான்காம் வர்ணத்தில்-(சூத்திரர்) பிறந்தவராகவும் கூறுவர். அக்காலத்திலேயே க்ஷத்திரிய வைஸ்யர்கள் வேதாத்யயனம் முதலியவற்றை விட்டு விட்டதால் நாலாவது வர்ணமாகக் கூறியிருக்கலாம். இவரது இயற்பெயர் கஜேந்திர தாஸர் என்பது. இவர் பார்க்கவரான திருமழிசை யாழ்வாருடைய அருளாலே பிறந்தவராதலால் இவருக்குப் பார்க்கவப் பிரியர் என்றும் பெயரிட்டனர். இவர் ஆளவந்தாரது சிஷ்யர்களில் ஒருவர். ௮வர் அளித்த திருநாமம் பேரருளாள தாஸர் என்பது.-கச்சியில் வாழ்ந்தமையால், திருக்கச்சி நம்பி, காஞ்சிமுனி, காஞ்சி பூர்ணர் என்றழைக்கப்பட்டார். இவர் காஞ்சி வரதராஜப் பெருமாளுக்குத் திருவால வட்டக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்-அப்பெருமான் ஒருவருக்கும் தெரியாமல் இவருடன் பேசிக் கொண்டிருந்தார் என்பது பிரசித்தம். அந்திம காலத்தில் மோட்சம் விரும்பிய நம்பிக்கு, ‘நீர் வீசினீர்’ நான் பேசினேன் இரண்டும் சரியாயிற்று. ஒரு பரம பாகவதரின் அபிமானத்தைப் பெற்றாலே உமக்கு மோட்சம் என்று பெருமான் கூறி விட்டார். அதற்குப் பின் மாறுவேஷத்தில் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் மாடு மேய்க்கும் கைங்கர்யம் செய்து ‘நம் பையல்’ என்று அவரால் அபிமானிக்கப் பெற்று அவ்வபிமானமே காரணமாக மோட்சம் பெற்றார் என்று கூறப்படுகிறது.-இராமானுஜர் இவரிடம் சீடராக வேண்டுமென்று ஆசைப்பட்டார். நம்பி மறுத்து விட்டார். இவர் உண்ட கலத்திலே உண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டார் இராமானுஜர். அதை இராமானுஜரது மனைவி நிறைவேறாமல் செய்து விட்டாள். தேவராஜப் பெருமாளிடமிருந்து ஆறு வாக்கியங்கள் பெற்றுக் கொடுத்து தர்ஸநார்த்தங்களை உறுதிப் படுத்திய மகானுபாவர் இவரே. தேவராஜப் பெருமானைப் பற்றிய எட்டு ஸ்லோகங்கள் கொண்ட தேவராஜாஷ்டகம் என்னும் ஸ்துதி நூல் இவர் அருளிச் செய்தது. இராமானுஜர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இவர் பேரருளாளரிடம் கேட்டு இராமானுஜருக்குச் சொன்ன ஆறு விஷயத்திற்கும் பேரருளாளர் கூறிய பதில் வருமாறு.
1) பரத்வம் நாமே, 2) பேதமே தர்ஸனம், 3) உபாயமும் பிரபத்தியே, 4) அந்திம ஸ்மிருதியும் வேண்டா, 5) ஸரீராவசானத்தாலே மோட்சம், 6) பெரிய நம்பி திருவடிகளை ஆஸ்ரயிப்பதுவே
என்று கூறியவற்றை நம்பி இராமானுஜரிடம் கூறி இதுவோ நீர் நினைத்திருந்தது என்று கேட்க இராமானுஜரும் ஆம் என்ன. இருவர் நினைவும் ஒத்திருந்தபடியை எண்ணி மகிழ்ந்தார். மேலே சொன்ன வாக்கியங்களின் பொருள் ஸ்ரீமானான நானே பரத்வம். உலகிற்கும் எனக்கும் பேதம் உண்டு என்பதே. என் மதம்,
என்னைச் சரணடைவதே என்னைப் பெறுவதற்குக் கண்ணழிவற்ற
உபாயம், அப்படிச் சரணடைந்தவர்களுக்கு அந்திம காலத்தில் என் நினைவு தேவையில்லை. இப்பிறப்பின் இறுதியிலேயே அவர்களுக்கு மோட்சம் உறுதி. பெரியநம்பியே இராமானுஜரால் ஆஸ்ரயிக்கத்தக்கவர் என்பது, இந்த ஆறு வார்த்தைகளையும் இராமானுஜருக்குக் கூறி ‘ராமானுஜமாந்யர்’ (இராமானுசரால் கெளரவிக்கப்பட்டவர்) என்னும் பெயரைப் பெற்றார். இவரிடம் சரண் புகுந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவனுக்குப் பிரபத்தியை அருளிச் செய்தார். அது பொறுக்காத அவனது உறவினர்கள் அவனைப் பிரித்துக் கொண்டு போய் பிராயச்சித்தம் பண்ண முயற்சிக்க, அவன் அவர்களிடமிருந்து தப்பி வந்து நம்பியிடம் சரண் புக, நீர் போகா விட்டால் அவர்கள் என்னைப் பொல்லாங்கு கூறுவார்களே என்று நம்பி கூற,அத்தனையோ அடியேனுக்கு என்று சோகம் பொறுக்காமல் பிராணத் தியாகம் செய்தார் என்பர்.
திருக்கச்சி நம்பி அருளிய திருச்சந்த விருத்தத் தனியன்கள்
திருச்சந்தம் பொழில் தழுவு தாரணியின் துயர் தீர
திருச்சந்த விருத்தம் செய் திருமழிசைப் பரன் வருமூர்
கருச்சந்தும் காரமுகிலும் கமழ் கோங்கு மண நாறும்
திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம்பதியே.
உலகு மழிசையும் உள்ளுணர்ந்து தம்மில்
புலவர் புகழ்க் கோலால் தூக்க – உலகு தன்னை
வைத்தெடுத்த பக்கத்தும் மா நீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது.
மருவாருந் திருமல்லி வாழ வந்தோன் வாழியே.
மாசி மிருசீரிடத்தில் வந்துதிததோன் வாழியே.
அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே.
ஆறுமொழி பூதூரர்க் களித்த பிரான் வாழியே.
திருவாலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே.
தேவராசாட்டகத்தைச் செப்புமவன் வாழியே.
தெருளாரு மாளவந்தார் திருவடியோன் வாழியே.திருக்கச்சி நம்பியிரு திருவடிகள் வாழியே
மாறனேரி நம்பி ஆளவந்தார் சிஷ்யர்களிலே ஒருவர். பஞ்சம குலத்தில் பாண்டிய நாட்டில் புராந்தகம் என்னும் கிராமத்தில் ஆடிமாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆளவந்தாருக்கு ஏற்பட்ட ராஜபிளனயை அவரிடம் பிரார்த்தித்து ஆசார்யப் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டவர் இவர் என்று கூறுவர். இவர் தம் கடைசிக் காலத்தில் ஆளவந்தார் உகந்ததான இந்த தேகத்தை அவைஷ்ணவர்களான என் உறவினரிடத்தில் ஒப்படைக்காமல் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று பெரிய நம்பிகளிடம் பிரார்த்தித்தார். அதன் படியே, இவர் பரமபதித்த பின் பெரிய நம்பி தாமே அவரது அந்திமக் கிரியைகளைச்
செய்தார். பஞ்சமரான அவருக்குப் பிராமணரான நீர் ஈமச்சடங்குகள் செய்தல் தகுமோ என்று கேட்ட இராமானுஜருக்கு அவர் அளித்த பதில் பெரியநம்பி வைபவத்திலேயே கூறப்பட்டுள்ளது.
ஆனிதனில் ஆயில்யம் அவதரித்தான் வாழியே.
ஆளவந்தார் திருவடிகள் ஆஸ்ரயித்தான் வாழியே.
மாநிலம் எதிராசர் மனம் வாழ்வித்தான் வாழியே.
மதிளரங்க நகரமதில் வாழ்ந்தருள்வோன் வாழியே.
தேனமருந் தென்மொழியின் சிறப்பறிந்தோன் வாழியே.
திகழ் ஞான பத்திகளால் சேர்ந்திருப்போன் வாழியே.
வானவரில் ஒருவரிங்கு மகிழ்ந்து வந்தோன் வாழியே.
மாறனேரி நம்பி யிணை மலரடிகள் வாழியே.
தெய்வ வாரி யாண்டான்–வகுளாபரண ஸோமயாஜியார் என்ற ஸ்ரீ வைஷ்ணவர் தெய்வ வாரி யாண்டானை எம்பெருமான் இங்கு வந்து அவதரிக்கக் காரணம் என்ன என்று கேட்க, பாகவதாபசாரம் பொறுக்காமையால் என்றாராம். ஆளவந்தாரது பிரிவை சிறிது காலம் கூடப் பொறுக்க முடியாதவர் இவர். ஒருதரம் மடத்துக்காரியத்தை இவர் பொறுப்பில் விட்டுவிட்டு, ஆளவந்தார் திருவனந்தபுரம் சென்று விட மிகவும் மெலிந்து விடவே உடனிருந்தோர் இவரைத் திருவனந்தபுரத்திற்குக் கொண்டு போகத் தீர்மானத்த போது, அந்த எண்ணத்திலேயே உடல் நலம் தேறி வந்தது. பின்னர் ஆளவந்தாரை நேரில் பார்த்தவுடன் திருமேனி வாட்டம் தீர்ந்தது. ஆளவந்தார் இவரை திருவனந்தபுரம் போய் ஸ்வாமி தரிசனம் செய்து வரச் சொன்ன போது, என்னுடைய திருவனந்தபுரம் இதோ என் எதிரிலேயே இருக்கிறது என்று ஆளவந்தாரைக் காட்டி, திருவனந்தபுரம் போக இசைய வில்லையாம். வனமாமலை யாண்டான் என்னும் ஆளவந்தார் சிஷ்யர் பகவத் பக்தர்கள் பெருமாளுக்கும் பிராட்டிக்கும் கெளஸ்துப மாலை போன்று இனிமை யானவர்கள். அவர்களிடம் அபசாரப்படுவது கெளஸ்துப மாலையில் கரிக்கோடு கிழிப்பதை ஒத்தது என்றாராம்.
ஆளவந்தார், சிஷ்யர் அம்மங்கி யிடம் உடையவர் திருக்கண்ணபுரத்திலிருந்து போய் வர விண்ணப்பித்த போது அம்மங்கி அவரிடம் அக்கினி ஜ்வாலையில் அகப்படாதே கிடீர். அரு நஞ்சு தின்னாதே கிடீர். அஸி மிதியாதே இடர். அபலைகளோடு செறியாதே கிடீர். ஆஸ்திகரோடு சேர்ந்து போருங் கிடீர் என்றாராம். அதன் விரிவாக்கம், அக்னி ஜுவாலையில் அகப்படாதே கிடீர் என்பது பெளத்தர்கள், ஜைனர்கள், அத்வைதிகள், சைவர்கள் முதலானோர் வேதத்துக்குப் புறம்பானவர்கள்.-இவர்களோடு வாதிடும் பொழுது பாம்பு, ௮க்னி போன்றவற்றோடுபழகுவது போல நெருங்காமல் இருக்க வேண்டும் என்பது,-அடுத்து அருநஞ்சு தின்னாதே கிடீர் என்பது ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய நாம ரூபங்களைத் தரித்துக் கொண்டு வைஷ்ணவத்தைக் கெடுப்பவர்களோடு கலந்தால் ஆத்ம நாசத்தை விளைவித்து விடுவார்கள். இலுமிச்சம்பழமும் கற்பூரமும் கலந்து உண்டால் உயிரை முடிப்பதைப் போல இவர்களது உறவு ஆத்ம நாசத்தையே உண்டு பண்ணச் செய்யும் என்பது. அடுத்து அஸீசி மிதியாதே கிடீர் என்பது சரீரத்தை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்தும் சம்சாரிகள், கல், கட்டை போன்றவர்கள். அவர்களை விட்டு விலகச் செல்ல வேண்டும் என்பது. அடுத்து அபலைகளோடு செறியாதே கிடீர் என்பது அனுகூலர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களாக இருந்த போதிலும், கொள்ளத் தக்கவை எவை, தள்ளத் தக்கவை எவை என்ற பாகுபாடு தெரியாத தெளியாத அறிவைப் பெற்றவர்களது உறவை விட வேண்டும் என்பது. அடுத்து ஆஸ்திகரோடு செறிந்து போகுங்கள் என்பது பகவத் பாகவத விஷயங்களை அனுபவிக்கத் தக்க பூர்ணாதிகாரிகள். அவர்களது உறவு அனுபவிக்கத்தக்கது. ஆகையால் அவர்ளோடு நெருங்கிப் பழக வேண்டும் என்பதாகும்.-வைத்த கையிலும் வாங்கிக் கொடுத்த கை தஞ்சம் என்றார் ௮ம்மங்கி. அஞ்சேல் என்று அபய கரம் வைத்துக் காட்டிய பெருமாஞடைய கையைக் காட்டிலும், அவரிடம் உபய விபூதிச் செல்வத்தை வாங்கின கையாகிற எம்பெருமானாருடைய கையே தஞ்சம் என்ற கருத்து விளங்குகிறது.
ஆளவந்தாரின் சிஷ்யர்களாகவும் எம்பெருமானாரின் ஆச்சாரியாராகவும் விளங்கியவர் பெரியநம்பி தொடங்கி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான் பெரிய
திருமலை நம்பி திருவரங்கப் பெருமாளரையார், திருக்கச்சி நம்பி,
மாறனேரி நம்பி முதலிய எழுவர்களில், முன்னர் கூறிய ஐவரே உடையவரது ஆச்சாரியார்களாகவும் விளங்கினார்கள். இவர் பெரியநம்பி திருவடிகளில் ஆஸ்ரயித்த போதே ஸ்வரூப சித்தி உண்டாகியிருக்க, இவர் ஏன் பலர் திருவடிகளிலும் விழுந்து உபதேசம் கேட்க வேண்டும்-ஆளவந்தார் தம் திருவருள் செல்வத்தை அவர் தம் சிஷ்யர்கள் பலர் மூலமாகத் தனது ஆத்ம புத்திரரான இராமானுசரிடம் ஒப்படைக்கச் சொன்னது; ஒரு அரசன் தன் அரசச் செல்வத்தை பல அமைச்சர்களிடத்தே பகிர்ந்து கொடுத்துப்
பின் அரச குமாரர் அவற்றை நிர்ஹிக்கும் பொறுப்புக்கு வந்தவுடன் அந்த ஐஸ்வர்யத்தை அரச குமாரனிடம் ஒப்படைக்கச் சொன்னதாப் போலாகும்; ஆளவந்தாரும் இவர்களிடத்தில் ஒவ்வொரு அர்த்த விசேஷத்தை உபதேஸித்து வைத்து எம்பெருமானார் ஆளவந்தாரிடம் நேரில் உபதேசம் பெற முடியாத இழவைத் தீர்த்தார் என்று கொள்ள வேண்டும். இவ்வாசார்யர்களுக்கு முன்னரே, ஆளவந்தார் -முதன்முதலாக இராமானுசரைக் கண்டவுடனேயே ‘ஆம் முதல்வன் இவன்’ என்று கடாட்சித்து (கிருபை செய்து) நாம் உங்களுக்குச் சொல்லும் பரம ரகஸ்யத்தை இளையாழ்வாருக்குச் சொல்லுங்கள்என்று நியமித்த படியால் சிஷ்யனாக வேணும் ஆச்சார்யனாகவேணும் ௮வரது இலட்சண சம்பந்தம் வேண்டும் என்று தாமாகவே இராமானுசரோடு தொடர்பை பெற்றுக் கொண்டார்கள். ஆகவே முன்புள்ள ஆச்சாரியர்கள் இவருக்கு ஆச்சாரியர்களாகத் திகழ்ந்து
பெருமை பெற்றார்கள். பின்புள்ளவர்கள் இவரது சீடராகத் தோன்றி பெருமை பெற்றார்கள். ஒரு மாலையின் நடுவிலே பதிக்கப் பெற்ற மாணிக்கப் பதக்கம் போலே இருந்து அந்த மாலையை அழகு படுத்துமாப் போலே, இராமானுச முனியாய் விளங்கி பரப்பிரஹ்மம் ஸ்ரீமந் நாராயணனே என்று அறுதி யிட்டுத் தர்ஸனப் பிரவர்த்தனம் பண்ணிக் கொண்டு வந்தார் இராமானுஜர்.-மஹோப நிஷத்தில் ஆரம்பத்தில் நாராயணன் ஒருவன் முதலில் இருந்தான். பிரளய காலத்தில் லீலா விபூதிகள் அழிந்து கிடந்த போது இவன் ஒருவனாயிருந்து இன்புறவில்லை. ௮சத்தாய்க் கிடந்த பக்த சேதனரைக் கண்டு அவர்கள் உய்யும் வழியாக உலகைப் படைத்து இச் சேதனர்களுக்கு சரீர இந்திரியங்களைக் கொடுத்து, அஞ்ஞான இருளைப் போக்கும் சாஸ்திரத்தைக் கொடுத்தும் அவர்கள் இருந்தமையாலே, தானே பலவிதமான அவதாரங்களை எடுத்தும், ஆழ்வார்களையும் ஆச்சாரியர்களையும் அவதரிக்கச் செய்யத் திருஉள்ளங் கொண்டான் ஸ்ரீயப்பதியான ஸர்வேஸ்வரன்.-உயிர்களாகிய பயிர்களைச் செழிப்பிக்க வேண்டித் தண்ணீர்ப் பிரவாகத்தைப் பருகும் காளமேகமாக ஆழ்வாராதிகளையும் அந்நீரைத் தாங்கும் மலையாக நாதமுனிகளையும், அம்மலையில் இருந்து விழும் அருவிகளாக உய்யக் கொண்டார், மணக்கால் நம்பிகளையும், அவ்வருவி நீர் பெருகும் ஆறாக ஆளவந்தாரையும் அவ்வாற்றிலிருந்து வெட்டப்பட்ட கால் வாய்களாக, பெரிய நம்பி, முதலான ஆச்சாரியர்களையும் அவதரிக்கச் செய்தான். எம்பெருமானான ஸர்வேஸ்வரன், பெரிய நம்பி தொடங்கிய வாய்க்கால்களின் மூலம், அந்நீர் தேங்கும் பெரிய ஏரியாக விளங்கினார் இராமானுஜர். ௮வ்வேரியிலிருந்து உயிர்களாகிய பயிர்களுக்கு நீரைப் பாய்ச்சும் மதகுகளாக எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளையும் அவதரிப்பித்தார் என்பது எம்பெருமானாரது பாதுகையான எம்பார் கருத்து. இதுவரை எம்பெருமானார் வரை வந்துள்ள வைணவ தரீசனத்தைச் சுருக்கமாகக் கண்டோம். இனி எம்பெருமானார் தொடக்கமாகக் காண உள்ளோம்.
ஆளவந்தாரது பிரதம சீடர்களில், ஒருவரான பெரிய திருமலை நம்பியிடம், ஆளவந்தார் தனக்குப் பின் இந்த வைஷ்ணவ தர்சனத்தைத் திறம்பட நடத்தக்கூடிய ஆச்சாரியரைக் கண்டு பிடித்து அவரிடம் தர்ஸன் நிர்வாகத்தை ஒப்புவிக்க வேண்டும் என்று கட்டளை
யிட்டிருந்நதையே குறிக்கோளாகக் கொண்டு திருமலையில் வாழ்ந்து வருவாரானார். தம்முடைய இரு சகோதரிகளுக்கும் தகுந்த வரன்களைத் தேடி மூத்தவளான பூதேவியை, ஸ்ரீ பெரும்பூதூரில் வாழ்ந்து வரும் ஸ்ரீ வைஷ்ணவரான கேசவ சோமயாஜி என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அவர்களுக்குப் பிறந்த பிள்ளையே இராமானுஜராகும். உலகிற்கே மங்களமளிக்கும் பிங்கள வருஷத்தில் வியாழக் கிழமை யன்று சிம்ம லக்கனத்தில், மறைமுடிகளின் முடிவை நிலநாட்டுவதற்காகவும், வேதத்திற்குப் புறம்பான செய்திகளைச் சொல்லும் மதங்கள் அழிவதற்காகவும் ஒளி மிகுந்த ஒரு மகா புருஷராய் அவதரித்தார் ஸ்ரீ இராமானுஜர். செய்தி அறிந்த திருமலை நம்பி ஸ்ரீபெரும்புதூருக்கு விரைந்து வந்து அற்புதமான மருமகனை ஆசீர்வதித்து குழந்தையின் ரட்சையின் பொருட்டு பஞ்சாயுதங்கள் கொண்ட ஐம்படைத் தாலியை அணிவித்து இளையாழ்வார் என்ற திருநாமமும் சூட்டினார்.-இளையாழ்வாரும் உரிய காலத்தில் அன்னப் பிரசானம் உபநயனம் முதலான கிரியைகள் எல்லாம் செய்யப் பெற்று வேதத்தையும் கற்றுத் தேர்ந்து, சகல கலைகளும் கற்றுணர்ந்த பண்டிதராக விளங்கினார். உரிய காலத்தில் தஞ்சமாம்பாள் என்ற பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு, காஞ்சியில் வரதராஜப் பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்து வருகிற நாளில், திருப்புட்குழி என்ற இடத்தில் யாதவப் பிரகாசன் என்ற ஒரு அத்வைதிப் பிராமணர் வேதாந்தம் போதிக்கிறார் என்று கேள்விப்பட்டு, அவரிடம் மாணாக்கனாக இருந்து வேதாப்யாசம் செய்து வரும்பொழுது, ஒரு நாள் யாதவர்,ஸர்வம் கல்விதம் பிரஹ்ம (இவ்வுலகனைத்தும் பிரம்மமே) எனும் வேதவாக்கியத்திற்கு அவப் பொருளை உரைத்ததைக் கேட்ட இளையாழ்வார், உண்மைப் பொருளைக் கூறி வேதார்த்த சாரத்தை அவருக்கு அறிவுறுத்தினார்.-இச் சம்பவத்தைத் திருவரங்கத்தில் ஆளவந்தார் கேள்விப் பட்டு, இராமானுஜரைக் காண வேண்டித் தன் சிஷ்யர்களோடு காஞ்சிக்கு வந்து பேரருளாளரையும் பெருந் தேவித் தாயாரையும் வணங்கிப் பின் கோயிலில் சிஷ்யர்களால் சூழப்பட்ட யாதவரையும், அவர்களிடையே ஒளிவீசும் முகமுடைய இளையாழ்வாரையும் கண்டார். இந்த யாதவர் இராமானுஜருக்குச் சிஷ்யராகவே இருக்கத் தக்கவர் என்று எண்ணினார் ஆளவந்தார். ஸ்ரீ வைஷ்ணவர்கள் பல்கிப் பெருகுவதற்கு இளையாழ்வாரைக் காத்தருள்வீர் என்று பெருமாளை வேண்டிக் கொண்டு, அவரிடம் இப்பொழுது
பேசினால் அவரது வேதபாடம் தடைப்படும். இவரே வைஷ்ணவ தர்சனத்தை விளங்க வைக்கும். ஆம் முதல்வன் என்று தீர்மானித்து, அவரிடம் பேசாமலேயே ஸ்ரீரங்கத்திற்குத் திரும்பிவிட்டார். இளையாழ்வாரும் யாதவரிடம் பாடம் படித்து வரும் நிலையில் அந் நாட்டு அரசனுடைய புத்திரி பிசாசத்தால் பீடிக்கப்பட்டு, எவர் செய்யும் மந்திரத்திற்கும் கட்டுப்படாதிருக்கவே, அரசன் யாதவருடைய மந்திரத்திற்குக் கட்டுப்படும் என்று நினைத்து யாதவரை அரண்னைக்கு வரவழைத்தான். தன் அந்தரங்க சிஷ்யர்களோடு சென்ற யாதவரைக் கண்டு சிரித்து அவரை அவமானப்படுத்திய பிரம்மராட்சசன் இளையாழ்வாரைச் சரணடைந்து அரசனது புதல்வியையும் தன் பாபத்தையும்
ஒருங்கே விட்டது. அதி அற்புதமான இந்த நிகழ்ச்சியைக் கண்ட அரசன் இளையாழ்வாரைச் சிலாகித்துப் பரிசளித்தான். அவரும் அதைக் குருயாதவரிடம் அடக்கத்தோடு சமர்ப்பித்தார்.-இந்நிகழ்ச்சியால் இளையாழ்வாரிடம் பொறாமை கொண்ட யாதவர் அவரது கருத்தைப் பரீட்சிக்கும் நோக்கோடு வேதாந்த பாடங்களைப் போதித்து வந்தார். பின்னர் ஒருநாள் இளையாழ்வார் யாதவருக்கு எண்ணை தேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது ‘கப்யாசம் புண்டரீகம்’ என்று பரமாத்மாவின் திருக் கண்களை வர்ணிக்கும் ஸ்லோகத்துக்கும் அவப் பொருள் கூறுவதைக் கேட்டு இளையாழ்வார் துன்பக் கண்ணீர் உருக்க அது யாதவரின் தொடையைச் சுட்டது. யாதவர் சோகத்துக்குக் காரணம் கேட்க, ஆழமான நீரில் முளைத்த தாமரை போன்ற கண்களை உடையவன் என்று பொருள் இருக்க குரங்கின் ஆசனவாய் என்று தாழ்ந்த திருஷ்டாந்தம் சொன்னதாலே வருந்திக் கண்ணீர் வடித்தேன் என்று சொல்லவே, ஆத்திரமடைந்த யாதவர் இனி இங்கே படிக்க வர வேண்டாம் என்றார். இராமானுஜரும் குருவிடம் மன்னிப்புக் கோரினார்.
இதனாலெல்லாம் கோபமடைந்த யாதவர் இளையாழ்வாரை,ஒழித்துக் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தவராய், இளையாழ்வாரையும் கூட்டிக் கொண்டு கங்கா ஸ்நானத்தின் பொருட்டுக் காசியாத்திரை செய்யும் வியாஜ்யத்தோடு அவரைக் கொலை செய்யப் புறப்பட்டார். நல்லொழுக்கமுடையவரான இளையாழ்வாரோடு கூடப் படித்த நண்பரும், அவருடைய சிறிய தாயாரின் பிள்ளையுமான கோவிந்த பட்டர், யாதவரது கெட்ட எண்ணத்தை நடுக்காட்டில் அந்தரங்கமாக இளையாழ்வாருக்கு அறிவித்து, அவரை நிறுத்தித் தான் மட்டும் காசி யாத்தரை செல்லும் யாதவரோடு தொடர்ந்து சென்றார்-நடு இரவிலே நடுக்காட்டிலே அகப்பட்ட இளையாழ்வார் மிக வருந்திய நெஞ்சினராய், பெருந்தேவியோடு விளங்கும் பேரருளாளரைச் சரண் புகுந்தார். கடவுட் தம்பதியரிருவரும் வேட வுருவோடு வந்து அவருக்கு ஆறுதல் சொல்லி, காஞ்சியை எளிதில் அடையலாம் என்று முன்னே வழிகாட்டிச் சென்று, இளையாழ்வாரிடம் வேண்டிப்பெற்ற சாலைக்கிணற்று நீரைத் தம் தேவியோடு கூடப்பருகி மறைந்தனர். விடியற்காலை வேளையில் அத்திகிரியின் புண்யகோடி விமானம் அருகில் தெரிவதைக் கண்டு நீர் பருகியவர்கள் பேரருளாளனும் பெருந்தேவித்தாயாருமே என அறுதியிட்ட இளயாழ்வார் பேரானந்தமும், பேராச்சரியமும் அடைந்தார். அன்றிலிருந்து அவ் வரதன் விரும்பிப் பருகிய சாலைக் கிணற்று நீரைத் தினந்தோறும் தாமே சுமந்து சென்று அபிஷேகத்துக்கு அளித்து மகழ்ந்தார். யாதவரின் மந்திர சக்திக்கு வசப்பட்ட கோவிந்தரும் கங்கையில் நீராடும் பொழுது தமது உள்ளங்கையில் சிவ லிங்கத்தைப் பெற்றவராய், தமது கிராமமான மதுர மங்கலத்துக்குச் சென்று அந்த லிங்கத்தை அங்குள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்து, காளஹஸ்திக்குச் சென்று அங்குள்ள சிவாலய கார்யங்களை மேற் பார்வை பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கி கோயில் பூசை செய்து கொண்டு வாழ்ந்து வருவாராயினார்.காஞ்சி திரும்பிய யாதவரும் அங்கு இளையாழ்வாரைக் கண்டு வியந்து விருத்தாந்தங்களைக் கேட்டு அவரை அழைத்து மயக்கத் திரும்பவும் தம் சிஷ்யர்களோடு சேர்த்துப் பாடம் சொல்லி வந்தார். திரும்பவும் யாதவர் உபநிஷத் வாக்கியத்திற்கு அவப் பொருள் சொல்லவே, அந்த வாக்கியம் சகல கல்யாண குணங்களும் பொருந்திய பிரஹ்மத்தையே சொல்கிறது என்று சரியான பொருளைச் சொல்லி அவருக்கு அறிவுறுத்தி யாதவரிடம் படிப்பதை அடியோடு கைவிட்டார் இளையாழ்வார்.யாதவரிடமிருந்து விடுபட்டு இளையாழ்வர், வரதரது சேவையிலேயே இருக்கிறார் என்று கேள்விப்பட்ட ஆளவந்தார், அவரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வருமாறு தமது சிஷ்யரான பெரிய நம்பியை அனுப்பினார். காஞ்சிக்குச் சென்று பெரிய நம்பியும் ஆளவந்தார் அருளிய ‘ஸ்தோத்திர ரத்னத்தை’ அனுசந்தித்து, இளையாழ்வாரை உகப்பித்து, அவரால் அபிமானிக்கப்பட்டுத் தாமும் உகந்தார். பெரிய நம்பியோடு கூடிய இளையாழ்வாரும் ஆளவந்தாரை சேவிப்பதற்கு ஸ்ரீரங்கம் நோக்கிச் செல்லும்பொழுது வட திருக்காவிரியில் மிகுதியான வைணவர் திருக்கூட்டத்தைக் கண்டார். ஆளவந்தார் திருக்குமாரரான திருவரங்கப்பெருமாளரையர் முதலான அந்த வைணவர்கள் ஆளவந்தார் பரமபதமடைந்ததை விண்ணப்பிக்கக் கேட்ட இளையாழ்வார் மிகவும் மனம் வருந்தினார். ஒருவாறு ஆறுதலடைந்தவராய் அவரது திருமேனியைத் தரிசிக்கும் பொழுது அவரது இடது கையில் மூன்று விரல்கள் மடங்கி யிருப்பதைக் கண்டார்.திருவிரல்கள் மடங்கியிருப்பதற்குக் காரணமான ஆளவந்தாருடைய மூன்று மனக் குறைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட இளையாழ்வார் அவருடைய மனக் குறையைத் தீர்ப்பதற்காக 1) வியாசருடைய பிரஹ்ம ஸூத்திரத்திற்கு பாஷ்யமெழுதி விவரிப்பேன். 2) அவருடைய தகப்பனாரான பராசர மகரிஷி பெயரையும், நம்மாழ்வார் பெயரையும் இருவருக்கு இடுவதன் மூலம் அவர்களுக்கு நன்றி செலுத்துவேன் என்று சபதம் செய்து அவரது திருவடிகளை வணங்கினார். ௮க் கணத்தலேயே ஆளவந்தாரது மூன்று விரல்களும் முன் போல் நிமிர்ந்தன. அதைக் கண்ட அனைவரும் இவரே வைதீக சிந்தாந்தத்தை நிலை நிறுத்துபவர்களுக்குத் தலைவராவார் என்பது உறுதி என்று நிச்சயித்தார்கள்.ஆளவந்தாரை உயிரோடு சேவிக்காத மனக் குறையாலே, அரங்க நகரப்பனை சேவிக்காமலேயே காஞ்சிக்குத் திரும்பின இளையாழ்வார் முன்போல் கோயில் கைங்கர்யங்களைச் செய்து கொண்டு வந்தார், ஒரு சமயம் தான் இனிச் செய்ய வேண்டியது என்ன என்று சிந்திததார். காஞ்சியில் வாழ்பவராய் பரம வைஷ்ணவராய் வரதனுக்கு அந்தரங்கராய் அவருக்குத் திருஆலவட்டக் கைங்கர்யம் செய்து வரும் திருக்கச்சி நம்பிடம் மிகவும் பணிவுடன் ‘நம்பியே நான் நெஞ்சில் கொண்டுள்ள அர்த்தங்களைத் (கருத்துக்களை) தேவப் பெருமாளிடமிருந்து அறிந்து அவை பெருமாள் உகந்தவை தாமா என்பதை எனக்குச் சொல்லுவீர் என்று பிரார்த்தித்தார். அவை என்ன என்பதையும் அதன் தத்வார்த்தத்தையும்,திருக்கச்சிநம்பி வைபவத்திலேயே கண்டோம்.-இளையாழ்வாரும் பெரிய நம்பியை ஆச்சாரியராகக் கொள்வதற்காக, ஸ்ரீரங்கத்துற்குச் செல்கின்றவர். வழியில் மதுராந்தகத்தில் ஸீதையோடு கூடிய ஏரிகாத்த ராமனைச் சேவித்திருக்கையிலே, ஆளவந்தாரின் மற்ற சிஷ்யர்களால் இளையாழ்வாரை ஆட்கொள்ளும்படி நியமிக்கப்பட்டு, மதுராந்ததத்தை அடைந்திருந்த பெரிய நம்பியையும் அங்கேயே தெய்வச் செயலால் சந்தித்து அவருடைய இணையடி வணங்கி, தங்களுக்கு ஏற்பட்ட நியமனத்தை விசாரித்து அறிந்த பின், அந்த மதுராந்தகம் கோயில் மகிழ மரத்தடியிலேயே பெரிய நம்பியை இளையாழ்வார் ஆச்சார்யராக ஆஸ்ரயித்தார். சங்கசக்கர லாஞ்சனம் ஊர்த்வ புண்டர தாரணம் (12 திரு நாமங்கள் அணிதல்)தாஸ்ய நாமம். யாக ஸம்ஸ்காரம், மந்திர ரத்னமாகிய த்வயம் திரு அஷ்டாட்சரம் என்னும் பஞ்ச ஸம்ஸ்காரங்களைப் பெரிய நம்பி இளையாழ்வாருக்குச் செய்தருளினார். இராமானுச முனி என்று அவருக்குத் தாஸ்ய நாமம் வழங்கப்பட்டது. பின்னர் அவ்விடத்திலிருந்து இராமானுஜரும் ஆசார்ய பெரிய நம்பியும் காஞ்சியை அடைந்து வரத ராஜரை வணங்கிய பின் இராமானுஜருடைய இருப்பிடத்தை அடைந்தனர். மிக வுகந்த பெரியநம்பி பிரபந்தத்தில் (திராவிட வேத சாரம்) முதல் இரண்டாயிரமும், வியாசருடைய பிரஹ்ம ஸூத்திரத்தின் பொருளையும் ராமானுஜருக்கு உபதேசித்தார். மனைவியோடு வந்துள்ள அவரை இராமானுசரும் அவருக்கு வேண்டிய கைங்கர்யங்களைச் செய்து ஆராதித்து வந்தார். பின்னர் ஒரு நாள் இராமானுஜர் இல்லாத நேரத்தில் அவரது தேவிக்கும் பெரிய நம்பி தேவிக்கும் மன கிலேசம் உண்டாகவே, இராமானுசர் திரும்பி வரு முன் மனைவியை அழைத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் சென்று விட்டார் பெரியநம்பி. விபரமறிந்த இராமானுஜர் மனைவியைக் கோபித்துத் தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டு துறவறம் மேற் கொண்டார்.-பேரருளாளப் பெருமான் சன்னிதியில் தேவப் பெருமாள் அவருக்கு எதிராஜர் என்ற தாஸ்ய நாமத்தை அளித்து அவரது துறவறத்தை ஏற்றுக் கொண்டார். அதற்குப்பின் எதிகட்கிறைவனான இராமானுஜர் திரி தண்டத்தை உடையவராய் சிகை, யஞ்ஞோபவீதம், காஷாயம் ஆகியவற்றோடுகூடியவராய், மந்திர ரத்னமான த்வயத்தை அனுசந்திப்பவராய் வர்ணாஸ்ரம தர்மப்படி நடப்பவராக வாழ்ந்து வருவாராயினார்,
அக்காஞ்சியிலேயே கூரத்தாழ்வானும் ராமானுஜருடைய மருமக்களான வாத்ஸ்ய குலத் தலைவரான நடதூராழ்வானும் வாதூல குலத் தலைவரான முதலியாண்டானும் இராமானுஐரை ஆஸ்ரயித்தனர். ராமானுஜரான எதிராஜர் அவர்களுக்குப் பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்வித்தார். ஆளவந்தாரது அருள் நோக்கால் சுத்தி யடைந்த யாதவப் பிரகாசரும், எதிராஜர் சிஷ்யராகி கோவிந்த ஜீயர் என்ற தாஸ்ய நாமம் பெற்று, எதிராஜர் பணித்த வண்ணம் சந்யாசிகளின் தர்மத்தை விளக்கும் ‘யதி தர்ம சமுச்சயம்* என்ற நூலை இயற்றினார். அதில் 1) ஸந்யாச விதி, 2) ஸந்யாசம் செய்து கொள்ள வேண்டிய காலம், 3) ஸந்யாசியின் சரீரத்திலுள்ள சிகை முதலிய அடையாளங்களும் சரீரத்திற்கு வெளியிலுள்ள தண்டம் முதலிய அடையாளங்களும், 4) ஸந்யாச ஸ்வீகார க்ரமம், 5) ஸந்யாசி முக்கியமாக அனுஷ்டிக்க வேண்டிய யோகாப்யாசம் முதலியவை,6) ஸந்யாசி இரவும் பகலும் செய்ய வேண்டிய கிரியைகள்,7) ஸந்யாசிக்குரிய சமம், தமம் முதலான ஒழுக்கம், 8) யதிகளுக்குரிய சாதுர் மாஸ்ய விரதம் முதலியவை, 9) ஸந்யாசி ஒரிடத்தில் இருக்கைக்கும் ஸஞ்சரிக்கைக்கும் உரிய தேச காலங்கள், 10) ஸந்யாசிக்கு ௮க்ருத்ய கரணமும், க்ருத்யா கரணமும் நேரிட்டால் செய்ய வேண்டிய பிராயச் சித்தங்கள், 11) ஸந்யாசி சரீர விவேகத்திற்குப்பின் செய்ய வேண்டிய ஸம்ஸ்காரங்கள் என்ற பதினோரு பாவங்களும் விளக்கப்பட்டுள்ளன.-கோபிகள் காமத்தினாலும், கம்ஸன் அச்சத்தினாலும், சிசுபாலன் துவேஷத்தினாலும் வருஷிணி குலத்திலுள்ளவர்கள் ஸம்பந்தத்தினாலும் பாண்டவர்கள் ஸ்நேகத்தினாலும் நாங்கள் பக்தயினாலும் புனிதமடைந்தோம் என்றபடி இராமானுஜருக்குப் பண்ண எண்ணிய துவேஷமே. இறுதியில் அவருக்கு உஜ்ஜிவிதமான நல் வழியைக் காட்டியது. ஒரு சமயம் ஆளவந்தாரது முதல் குமாரரான திருவரங்கப் பெருமாளரையர் காஞ்சிக்கு சென்று வரதனை வணங்கி அவரிடமிருந்து ராமானுஜரை வரமாகப் பெற்று அழைத்துக் கொண்டு ஸ்ரீரங்கத்துக்குப் புறப்பட்டார். அவர்களுடன் கூரத்தாழ்வான் முதலியாண்டான் போன்ற அந்தரங்க சிஷ்யர்களும், உடன் வந்தனர், மதுராந்தகப் பெருமாளை வணங்கிய பின் ஸ்ரீரங்கம் வரும்பொழுது பெரிய பெருமாளான ஸ்ரீரங்கநாதனது ஆக்ஞை (கட்டளை)ப்படியே அவரை எதிர் கொண்டழைக்க பெரிய நம்பி முதலான கோஷ்டிகள் வந்து கோயில் மரியாதைகளைச் செலுத்தி அபிமானம் செய்யப்பட்டவராய் பெரிய பெருமாளையும் பெரிய பிராட்டியாரையும், பரிவாரத் தேவதைகளையும் வணங்கி ஸ்ரீரங்க ஸ்ரீகார்ய நிர்வாஹத்திற்குத் தலைவரானார்.
பெரிய பெருமாளும் இராமானுஜரைத் தம் தாமரைக் கண்களால் குவிர நோக்கி ஜோதி வாய் திறந்து ‘பொங்கோதஞ் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்” என்ற உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் எமது கோயில் நிர்வாஹத்தையும் உமக்கும் உம்முடையார்க்கும் தந்தோம். நம் வீட்டின் கார்யத்தை யெல்லாம் ஆராய்ந்து நடத்தும் என்று திருவாய் மலர்ந்து அருளி உடையவரென்ற தாஸ்ய நாமத்தையும் வழங்கித் திரு விக்ரமன் வீதியில் வடக்கு மாடத் திருவீதியில் கீழ்க்கண்டத்தில் முதல் மனையான சேரன் மடத்திலே உடையவரை வாழப் பண்ணிலனார். அங்கு வாழ ஆரம்பித்த காலத்திலிருந்து சுமார் அறுபத்தைந்து ஆண்டுகளாக திருவரங்கன் செல்வம் முற்றும் திருத்தி வைத்த வரலாற்றைக் காண்போம் ஆழ்வானை தர்ஸன நிர்வாஹத்துக்குத் தமக்கு உதவியாக நியமித்து முதலியாண்டானை உள் துறைக் கைங்கர்யத்திலே நியமித்தார். தாம் திருக்கொட்டார வாசலுக்குத் தென் புறத்தில் உமிக்கட்டில் குறட்டிலே யிருந்து திருவிடையாட்டப் பிரபாவமும், மேல் முகம் கீழ்முகங்களான திருத்தோப்புகளில் விசேஷங்களும் திருக்கொட்டாரத்தில் மரியாதைகளும் அறிவறியாக விசாரித்து, படித்தனம் முதலானதுகளும் திட்டம் பண்ணி நாள் தோறும் கணக்குகளைப் பெருமாளிடம் பெருமாள் பெரிய அவசரம் செய்தருளிய பின்பு, ஏகாந்தமாக ஸந்நிதியிலே விண்ணப்பஞ்செய்து ஸ்ரீ கார்யம் விசாரித்து ஒழுங்கு படுத்தினார். இவரது கண்டிப்பை விரும்பாத விஷமிகள் உபாதைகளை உண்டாக்கியதையும் பொருட்படுத்தாமல், அகளங்க நாட்டாழ்வான் சமர்த்தராகையாலே திருவிடையாட்டம் விசாரிக்கன்ற பணியை அளித்து ஆலிநாடன் திருவீதியில் பெரிய திருமண்டபத்தின் குறட்டின் மேலே மண்டபங் கட்டுவித்தார்.-ஒருநாள் ஆண்டான் ததீயாநத்தோடு நாவல்பழம் அழுது செய்ததினால், அழகிய மணவாளப் பெருமாள் முகம் வாடியிருப்பதைக் கண்டு ஆண்டானைக் கோபித்து, கருடவாகன பண்டிதரைக் கொண்டு பெருமாளுக்குச் சிகிச்சை அளித்துத் தன்வந்திரியைப் பிரதிஷ்டை செய்து அந்தக் கோயில் கார்யத்தைக் கவனிக்க கருட வாஹன பண்டிதருக்குக் கட்டளையிட்டு தினமும் இரவில் திருக்காப்புச் சேர்க்கறதிற்கு முன்பாக குடிநீர் பாலமுது செய்தருளும்படி திட்டம் பண்ணித் திருவரங்கத் திருப்பதி வைகாநஸமாயிருக்கலாகாது என்று முன் போல பாஞ்சராத்திரமாக மாற்றி ஏகாயநருக்கு ஐந்து பேருக்கு தீக்ஷை சாதித்து பாகவத நம்பியார் என்ற பெயரும் வளங்கி, தோதவத்தித் தூய மறையோரான (வெள்ளை வஸ்திரம் தரிப்பவர்) கொடுவாளெடுப்பார் கையிலே பூட்டும் திறவு கோலும், தளையிடுவார் முத்திரையான கருடமுத்திரையும் சாதித்து ஆரியபட்டான் காவலும், பல்லவன் விருப்பரையன் கணக்குமாக நடந்து வர ஏற்பாடு செய்தார்.ஸ்தலத்தார் அனுமானித்த படியே வேளாளனான விழுப்பரையனுக்கு கோயில் கணக்கனுக்குள்ள சடகோப தாஸன் என்ற தாஸ்ய நாமத்தை வழங்கி, ஸ்தல சம்பிரதி என்ற பெயரையும் நாட்டி, அவரவர்களுக்குக் கைங்கர்யங்களும் நிர்ணயம் பண்ணி முன்னர் கொடுவனர், கொடவர், கொடு வாளைடுப்பார், பாடுவார், தளையிடுவார் என்று ஐந்து கொத்திலே பரிஜனங்கள் அடங்கி நடந்து வந்ததைப் பத்துக் கொத்தாகப் பெருக்கி நடத்த வழி வகுத்தார்.-அவை யாவன முதல் கொத்தாக திருப்பதியார் என்பவர் முன்னால் கோயில் சம்பந்தமற்றுத் தன்னுடைய திருவடிகளை ஆஸ்ரயித்த திவ்ய தேசத்து வாசிகளாவார். திருப்பாற்கடல் தாஸர், திருக்குருகைப் பிரான் போன்றவர்களுக்குக் கைங்கர்யம் நிர்ணயித்தார்.-இரண்டாம் கொத்தாக கொடவரில் திருத்தாழ்வரை தாஸர் வம்சரான அஞ்சு திருநாமத்துக்கு, திருக்குருகூர் தாஸர், நாலு கவிப் பெருமாள் தாஸர், ஸடகோபதாஸர். திருக்கலிகன்றி தாஸர், ராமானுஜ தாஸர் என்ற திருநாமம் சாதித்து அவர்களுக்குக் கோயில் கைங்கர்யங்களையும் நிர்ணயம் பண்ணி திருப்பணி கொள்வார் என்று குறிப்பிட்டார். மூன்றாம் கொத்தாக பாகவத நம்பிமாரை பிரதிஷ்டிப்பித்து அவர்களுக்குக் கைங்கர்ய மரியாதை செய்வித்தார், நான்காவதாக கொடுவாளெடுப்பாரில், பெரியபெருமாள் திருவரங்கமாளிகையார் போன்றோருக்கு ஆஸ்ரயணாதிகளைப் பண்ணுவித்து உள்ளூரார் என்று பெயரிட்டார்.அடுத்துப் பாடுவாரான நாதமுனி அரையர்களுக்கும் ஆஸ்ரயணாதிகளைச் சாதித்து கைங்கர்யங்களையும் நிர்ணயித்து விண்ணப்பஞ் செய்வார் என்று குறிப்பிட்டார். ஆறாவதாக திருவரங்க வள்ளலார் தூயமணி வேழம் என்ற தம்முடைய சிஷ்யர்களுக்கு திருமஞ்சனம் முதலான கைங்கர்யங்களை உண்டு பண்ணி திருக்கரகக் கையார் என்று பெயரிட்டார். தளையிடுவாரான சேனைநாதப் பிரஹ்மராயர் முதலானோருக்கு ஆஸ்ரயணாதிகளை சாதித்து அவர்களுக்குப் பூர்வம் அந்தந்த பிரபுக்கள் பேர் கொடுத்துக் களை விளங்கும்படி பண்ணி அவர்களை ஸ்தாநத்தார் என்று குறிப்பிட்டார். அடுத்து ஸ்ரீ பாஷ்யம் முதல் சகல வேதாந்தங்களையும் தினமும் ஸந்நிதியில் திருவாராதனை காலங்களில் விண்ணப்பம் செய்யும்படி தன்னுடைய சிஷ்யர்களான கருட வாகன பண்டிதர்,பெரியநம்பி, ஆழ்வான், கோவிந்தப் பெருமாள் திருவரங்கத்தமுதனார், பிள்ளான், போன்றவர்களை நியமித்து அவர்களைப் பட்டான் கொத்து என்று பெயரிட்டார். ஆரியபட்டாளையும் ஒரு கொத்தாக்கி அவர்கள் கைங்கர்யத்தையும் திட்டம் பண்ணினார்.-புண்டரீக தாஸர் கைங்கர்யத்தையும் ஒரு கொத்தாக்க தாஸன் கொத்து என்றழைத்தார். இவ்வாறு பத்துக் கொத்துக்கும் கைங்கர்யம் நிர்ணயம் பண்ணி தேசாந்திரிகளான ஏகாங்கிகள் நான்கு பேருக்கும் சில கைங்கர்யங்களை நியமித்துத் தங்கப்பிரம்பு 4, வெள்ளிப்பிரம்பு 2, தலைவளைசல் பிரம்பு 8 ஆக எட்டுப் பிரம்புக்கும் திருநாமதாரிகளை நியமித்துத் தேசாந்திரிகளான சாத்தாத முதலிகளுக்கும் கைங்கர்யங்களை நியமித்து திருவரங்கச் செல்வம் சிந்தாமே மங்காமே பொங்கும்படி ஆராய்ந்து கொண்டுவந்தார். திருநகரியிலிருந்து திரு அத்யயன உத்ஸவத்துக்கு ஆழ்வார் வரமுடியாமற்போகவே, தாமே கோயிலில் மங்கை மன்னனைத் தவிர ஏனைய ஆழ்வார்களையும் நாதமுனியையும் பிரதிஷ்டை செய்து பெருமாள் அருளப்பாடு, அரையருக்கு அருளப்பாடு முதலியன சாதிக்கும்படி பண்ணினார்.இவ்வாறு கோயில் கைங்கர்ய பரரையும் அவரவர்க்குரிய பொருத்தமான கைங்கர்யங்களையும் திட்டம் செய்தருளி ஆழ்வார்களையும் பிரதிஷ்டை செய்து அவர்களுக்கு திருநட்சத்திர உபாஸனங்களையும் ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமப் பிரகாரம் நடக்கத் திட்டம் பண்ணி பெருமாளுக்குத் திருவாராதனம் நித்யோத்ஸவ பக்ஷோத்ஸவ, மாஸோத்ஸவ, வருஷோத்ஸவ, மகோத்ஸவங்களையும் விஸ்தாரமாக நடத்தி யருளினார். திருவீதியில் சிறியதாக ஒரு கோசாலை கட்டுவித்து அஞ்சு கிராமத்தை அழித்து வனமாக்கி ஆநிரை காத்த பெருமானைப் பிரதிஷ்டை செய்து பிருந்தாவனத்தைப்போல பசுக்கள் இருக்குமாறு பண்ணினார்.-இவ்வாறு அரங்கனால் அளிக்கப்பட்ட உபய விபூதி சாம்ராஜ்யத்தை பெரிய நம்பியின் அருள் நோக்கால் (கடாட்சம்) கிடைத்ததாக எண்ணி, அவரது திருவடிகளை வணங்கி அவருக்கு வசப்பட்டவராய் விளங்கினார் உடையவர். பின்னர் பெரியநம்பி சொற்படி திருக்கோட்டியூர் நம்பியின் திருவடிகளை வணங்கி, திருமந்திரார்த்தத்தையும், சரம ஸ்லோகார்த்தத்தையும், அவரிடமிருந்து உபதேசம் பெற்று, அவர் ஒருவருக்கும் சொல்லாதே கொள்ளும் என்று
சொன்ன ஆணையையும் மீறி, திருக்கோஷ்டியூரிலேயே பலருக்கும்
திருமந்ரத்தை உபதேசித்தார் இராமானுஜர். திருக்கோஷ்டியூர் நம்பியும் ராமானுஜரது திருஉள்ளத்தில் பொங்கும் கருணையை அப்போதே அறிந்து எதிகட்கிறைவரை ‘எம்பெருமானாரே’ என்று அழைத்துக் கொண்டாடி மிக வுகந்தவராய் இந்தத் தர்ஸனம் இன்று முதல் உமது பெயராலேயே “எம்பெருமானார் தர்ஸனம் என்ற பெயர் பெற்று விளங்கும் என்று கூறினார்.-ஆகவே தான் வைணவம் அது முதல் இராமானுஜர் தர்சனம் அல்லது எப்மெருமானார் தர்ஸனம் என்ற பெயரில் விளங்குகிறது.-மறுபடியும் பெரியநம்பி நியமனப்படி திருவரங்கப் பெருமாளரையரை அணுகி வணங்கி அவரிடமிருந்து நம்மாழ்வார் திருவாய்மொழியையும் அதன் சாரார்த்தத்தையும் மற்ற ஆழ்வார்களின் பிரபந்தங்களையும், ஆளவந்தார் அருளிய ஸ்தோத்ர ரத்னம், சதுஸ்லோகி என்ற இரு ஸ்தோத்ரங்களையும் அவற்றின் பொருளையும் பெற்றார். மறுபடியும் பெரியநம்பி ஏவியபடி திருமாலை யாண்டானை அணுகி அவரிடமிருந்து திருவாய்மொழி, திருமங்கையாழ்வாரது பெரிய திருமொழி, மற்றும் முதலாயிரம், இயற்பா ஆகிய அனைத்துப் பொருளையும், கற்றார். இப்படிக் கற்று வரும் பொழுது சிற்சில இடங்களில் இப்படியும் அர்த்தமாகலாம் என்று எதிராஜர் அவரிடம் கூறினார். அதைக் கேட்டு திருக்கோஷ்டியூர் நம்பியிடமும் பெரிய நம்பியிடமும் ஆளவந்தார் அருளாத அர்த்தங்களை இவர் இப்படி விசுவாமித்ர சிருஷ்டியாகச் சொல்கிறாரே என்று குறைபட இவர் சொன்னவையும் ஆளவந்தார் வேறு உருக்களில் அருளிச் செய்யப்பட்டவையே யாகும். ஆளவந்தார் திருஉள்ளம் உகக்காதது இவர் நெஞ்சில் தோன்றாது” என்று அவர்களால் கொண்டாடப்படவே பட்டார் எதிராஜர்.இவ் வண்ணமாக ரகஸ்யார்த்தங்களோடு கூடிய உபய வேதாந்தங்களையும், ஆசார்யர்களிடமிருந்து கற்று கூரத்தாழ்வான், நடதூராழ்வான், முதலியாண்டான் முதலிய சிஷ்யர்களோடு மிகவுகந்து திருவரங்கத்தில் வாழ்ந்தார் எதிராஜர். அதற்குப்பின் ஆத்ரேய குலத்துதித்த பிராணதார்த்திஹரர் என்னும் கிடம்பியாச்சான், எதிராஜரிடம் சீடனாக வந்து சரணடைந்தார். தனது அத்தைக்கும் இராமானுஜரின் மாமாவான பெரிய திருமலை நம்பிக்கும் பிள்ளையான பிள்ளானை இராமானுஜருக்கு அறிமுகப்படுத்தி, அவருடைய நல்லொழுக்கத்தையும் எதிராஜ பக்தியையும், அவருக்குக் கைங்கர்யம் செய்வதில் உள்ள விருப்பத்தையும் விண்ணப்பித்து இந்த யதிராஜரையே திருவேங்கடமுடையானாக நினைத்து அடைவாயாக என்று திருமலை நம்பி அவனுக்குச் சொன்ன வார்த்தையையும் ஆச்சான் இராமானுஜருக்குக் கூறினார். இளம் வயதினரான அப் பிள்ளானைக் கருணையோடு நோக்கி, அப்போதே கிடாம்பி ஆச்சானுக்கு எல்லா மந்திரங்களையும் அவற்றின் பொருளையும் உபதேசித்து அவரையும் தம் சீடராகக் கொண்டருளினார்.-அப்போது ஒரு சமயம் அவரிடம் விரோதம் கொண்ட ஒருசிலர், அவர் மாதுகரத்துக்கு (உஞ்ச விருத்தி ) வரும் பொழுது விஷங்கலந்த பிட்சையை இடுவதை உணர்ந்த எதிராஜர் மூன்றுதினங்கள் உணவே கொள்ளாமல் உபவாசமிருந்தார். விஷயத்தைக் கேள்விப்பட்ட பெரிய நம்பியும், திருக்கோஷ்டியூர் நம்பியும் பதறியபடியே திருவரங்கம் வந்தார்கள். அவர்களை எதிர் கொண்டழைக்க வந்த எதிராஜர், நடுப் பகலில் காவேரி மணலில் அவர்களைக் கீழே விழுந்து வணங்கா நிற்க, அவரது திருமேனியின் பரிவாலே கிடாம்பி யாச்சான் பதறிக் கோபிக்க, உம்முடைய திருமேனியில் பரிவுடைய இந்த கிடாம்பியாச்சானால் தயாரிக்கப்பட்ட பிட்சையையே நீர் தினந்தோறும் கொள்வீர் என்று நம்பிகளிருவரும், யதிராஜருக்கு நியமித்தனர். அதுமுதல் அவரும் அப்படியே செய்து வந்தார்.-தனது சிறிய தாயாரின் பிள்ளையான கோவிந்த பட்டரின் கருத்தைத் திருத்தித் திரும்பவும் வைணவத்திற்குக் கொண்டு வருவதற்காக பெரிய திருமலை நம்பியிடம் எதிராஜரால் அனுப்பப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் அங்கு சென்று திரும்பி வந்து கோவிந்த பட்டர் உள்ளங்கை கொணர்ந்த நாயனாராயிருந்த நிலை போய்,சிவலிங்க சம்பந்தம் கழியப் பெற்று பெரிய திருமலைநம்பியின் திருவடித் தாமரையில் வண்டு போலாயினார் என்னும் நற்செய்தியை எதிராஜருக்குத் தெரிவித்தனர். அதற்குப்பின் எதிராஜர் வேதார்த்த ஸங்க்ரஹத்தையும், பிரஹ்ம ஸூத்ர வியாக்யானங்களான வேதாந்த சாரங்களையும் கீதோபாஷ்யத்தையும் அருளி, கூரத்தாழ்வான், முதலியாண்டான் முதலான சிஷ்யர்களுக்கு உபதேசித்தார்.ஆதி யந்தமற்ற வேத வாக்கியங்களுக்கு முரண்படாத பொருளை விளக்குவதன் மூலம், வியாசருடைய பிரஹ்ம ஸூத்திரங்களுக்கு உண்மைப் பொருளை விளக்கும் ஸ்ரீ பாஷ்யத்தை அருளிச் செய்து ஆளவந்தாரின் மனோ ரதமான தனது பொறுப்புகளில் முதலாவதை நிறைவேற்றினார்.
அதற்குப்பின் ஒரு பங்குனி உத்திரத் திருநாளில் ஸ்ரீரங்க நாயகியும் ஸ்ரீரங்கநாதனும் சேர்த்தியிலே பேரானந்தத்தோடு திருமஞ்சனம் கண்டருளிய பின்னர், அவர்களைச் சரணமடைந்து அதை விளக்கும் கத்ய த்ரயத்தையும் அருளிச் செய்தார் எதிராஜர், ஸ்ரீ பாஷ்ய கீதோபாஷ்ய சார தீப வேதார்த்த ஸங்க்ரஹங்களால் தத்வ ஹித புருஷார்த்தங்களை அறிந்தவனாய், மூன்று கத்யங்களாலும் ஸ்ரீமன் நாராயணனைச் சரணமடைந்தவனாய், அந்த ஸ்ரீயப்பதிக்கே கைங்கர்யம் செய்யும் அதிகாரிக்கு அந்த லக்ஷிமி பதியை அடையும் வரையில் செய்ய வேண்டிய நித்ய கைங்கர்யங்களை நித்ய கிரந்தம் என்னும் நூலின் மூலம் தெரிவித்தார்.
அதற்குப் பின் யதிராஜர் பல சிஷ்யர்களோடு கூடியவராய், காஞ்சி மார்க்கமாகப் பக்தியோடு பேரருளாளனைச் சேவித்துப் பின் திருவேங்கட மலைக்குச் சென்றார். அங்கு பெரிய திருமலை நம்பி என்றெ ஆச்சாரியரால் எதிர் கொண்டழைக்கப்பட்டு அவரை வணங்கி அவரிடமிருந்து தீர்த்தப் பிரசாதம் பெற்று அவருடைய அருள் நோக்கினால் அலர் மேல் மங்கை யுறை மார்பனை சரணடைந்து, அத் திருமலையிலேயே ஒரு வருட காலம் வாழ்ந்து அத் திருமலை நம்பியிடமிருந்து பலவிதமான அரும் பொருள்கள் நிறைந்த வால்மீகி வழங்கிய ஸ்ரீராமாயணத்தை உபதேசம் பெற்றார். ௮வர் தம்முடைய குமாரர்களான பிள்ளானையும் பிள்ளை திருமலை நம்பியையும் எம்பெருமானாரது சீடர்களாக்கினார்-அவர்கள் இருவரும் எதிராஜரிடமிருந்து எல்லா அர்த்தங்களையும் உபதேசமாகப் பெற்றனர். திருமலை நம்பியின் பிள்ளையான பிள்ளானை திருமலைநம்பி எதிராஜருக்கு அபிமான புத்திரராகத் தத்துக் கொடுத்தார்.-யதிராஜரும் நம்பியால் அளிக்கப் பெற்ற அப்பிள்ளானையும்,தானே யாசித்துப் பெற்ற சிறிய தாயாரின் பிள்ளையான கோவிந்த பட்டரையும் அழைத்துக் கொண்டு காஞ்சி மார்க்கமாகவே ஸ்ரீரங்கத்தை அடைந்தார். அந்த கோவிந்த பட்டர் இல் வாழ்க்கையில் ஈடுபாடின்றி விஷய வைராக்கியம் உள்ளவராய் இருப்பதைக்கண்டு அவருக்கு ஸந்யாச தர்மத்தையும் அவர் வேண்டிக் கொண்டபடி தனது பெயரைச் சுருக்கி எம்பார் என்ற தாஸ்ய நாமத்தையும் வழங்கினார் எம்பெருமானார். ஸ்ரீரங்கநாதரின் அருட் பிரசாதத்தாலே கூரத்தாழ்வானுக்குப் பிள்ளையாகப் பிறந்தார். பிஞ்சாய்ப் பழுத்தவரான பட்டர், அந்தப் பிள்ளைக்கு பராசர மகரிஷி பெயரைச் சூட்டி, அவரால் இயற்றப்பட்ட விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தையும் அரங்கேற்றி ஆளவந்தாரது இரண்டாவது மநோ ரதத்தை நிறைவேற்றினார் எதிராஜர். ஒரு பாசுரத்தின் பொருளைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த இராமானுஜரைக்கண்டு, பிள்ளான் அவர் ஆராய்ந்து கொண்டிருக்கும் பொருள் இது வன்றோ என்று உரைத்தார். தாம் முடிவு கட்டிய பொருளும் பிள்ளான் கூறிய பொருளும் ஒத்திருப்பதைக் கண்ட
எதிராஜரும் மிக்க ஆச்சர்யமடைந்தவராய், நாதமுனிகளின் ஞானவம்சத்தில் பிறந்த பெருமையினால் இவர் இந்தப் பொருளை அறிந்தார் என எண்ணி ‘என் ஞான புத்திரரே’ என்று அணைத்துக் கொண்டார். எதிராஜரான இராமானுஜருக்கு ஞான புத்திரர் என்றும்
அவரது பாதுகை என்றும் புகழ் பெற்றவரான பிள்ளான் நம்மாழ்வாருடைய திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி வியாக்யானம் அருளிச் செய்தார். பிள்ளான் என்ற பெயருடைய அவருக்கு நம்மாழ்வாரின் திருநாமமான திருக்குருகைப்பிரான் என்னும் பெயரை இட்டு அவர் அருளிய ஆறாயிரப்படி வியாக்யானத்தையும் அரங்கேற்றி
ஆளவந்தாரது மநோ ரதத்தை நிறைவேற்றினர். அநந்தரம் எம்பார் திருத் தம்பியார் சிறிய கோவிந்தப் பெருமாளுக்கு ஒரு குமாரர் அவதரித்தருள அதைக் கேட்டு வுகந்து அக்குமாரருக்கு ‘பராங்குச நம்பி’ என்று நம்மாழ்வார் திருநாமத்தைச் சூட்டி ஆளவந்தாரது
மூன்றாவது மநோ ரதத்தையும் நிறைவேற்றினார் இராமானுஜர்.
அதற்குப் பின்னர் எதிராஜருக்கும், யக்ஞமூர்த்தி என்ற அத்வைதிக்கும் விவாதம் நடந்தது. இவ் விவாதத்தில் தோற்றவர்கள் வென்றவர்கள் மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்பது உடன்பாடு.-ஸ்ரீரங்கத்தில் பதினெட்டு நாள் விவாதப் போர் நடந்தது. மனம் சோர்ந்த எதிராஜரது கனவில் அவரது ஆராதன மூர்த்தியான வரதராஜர் தோன்றி அபயமனித்தார். அவரது அருள் பெற்ற எதிராஜர் பதினெட்டாவது நாள் மாயாவதி மதத் தலைவரான யக்ஞமூர்த்தியை வாதத்தில் வென்று, அருளாளப் பெருமாள் அருளால் வென்றமையால், அவருக்கு அப் பெருமானின் திருநாமத்தையும் தமது பெயரையும் சேர்த்து அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்னும் தாஸ்ய நாமத்தை யிட்டார். எதிராஜர் சிஷ்யராகி அவரும் ஞான சாரம்’ ‘பிரமேய சாரம்’ என்ற இரு பிரபந்தங்களை யிட்டருவினார். அவற்றில் ஸச் சிஷ்யனுக்கு (நல்ல சிஷ்யன்) ஸதாசார்யனே பரதேவதை. அவன் திருவடிகளில் கைங்கர்யமே பரம ப்ராப்யம். (பெருந்தனம்) அவன் தான் பகவதவதார விசேஷம் என்ற கருத்துக்களை அருளிச் செய்தார்.
அதற்குப்.பின்னர் எதிராஜர் திக் விஜயம் செய்ய எண்ணி, பல சிஷ்யர்களோடு புறப்பட்டு ஆங்காங்கு சென்று பிற மதத்தினர்-அனைவரையும் வென்று காஷ்மீர தேசத்திலுள்ள ஸரஸ்வதி பீடத்தை அடைந்தார். அங்கு அவருடைய பிரஹ்ம ஸூத்திரப் பாஷ்யத்தை சிரசா வகித்த ஸரஸ்வதி தேவி, இதுவே ஸ்ரீபாஷ்யம்-மிகச் சிறந்த பாஷ்யத்தைச் செய்த நீர் இனி ஸ்ரீ பாஷ்யகாரர் என்றே புகழ் பெறுவீர் என்று கூறி அந்த ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ கோசத்தையும் தனது ஆராதன மூர்த்தியான ஹயக்கிரீவரையும் அவரிடம் ஒப்படைத்தாள். அவற்றையும் ஏற்றுக் கொண்டு தனது திருவாராதனப் பெருமாளான வரதராஜனோடு தினந்தோறும் ஆராதித்துக் கொண்டு, திருவேங்கடமலைக்கு மீண்டும் எழுந்தருளினார்.
பக்தனான தொண்டைமான் சக்கரவர்த்தியின் வசம் சங்கு சக்கரங்களைக் கொடுத்திருப்பதைப் பற்றாகக் கொண்டு ஸ்ரீநிவாசன் சிவனே யொழிய விஷ்ணு அல்ல என்று சைவர்கள் வாதம் புரிய முற்பட, அவர் விஷ்ணுவே என்பதை நிலைநாட்டினார் எதிராஜர்-ஆனால் சைவர்கள் பிடிவாதம் பிடித்தமையால் அனைவரும் கூடிச் சேர்ந்து நிச்சயித்து சங்கு சக்கரங்களையும், சூலத்தையும் கர்ப்பக் கிரகத்தில் வைத்துக் கதவைச் சாத்தி எல்லோரும் ஒன்றாக இருந்து காவல் காத்து, காலையில் ஒன்றாகவே வந்து கதவைத் திறந்து உள்ளே புகுந்து திருவேங்கடமுடையானைக் கண்டனர். சூலத்தை விடுத்துச் சங்கு சக்கரங்களைத் தரித்துக் கொண்டிருந்த ஸ்ரீநிவாசனைக் கண்ட சைவர்கள் உடனே ஓடிவிட்டார்கள். யதிராஜரும் திருமலை நம்பியும் மிக உகந்தனர். திருமலை நம்பியால் பரிபூரணமாகக் கடாட்சிக்கப்பட்ட எதிராஜர், எல்லா சிஷ்யர்களோடும் ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளி, வேதாந்த சித்தாந்தத்தை நிலைநாட்டுவதில் வல்லவரானார். பிற மதத்தவர்கள் அதனால் பொறாமை கொண்டனர்.பிற மதத்தவர்களால் துர்ப்போதனை செய்யப்பட்ட சோழராஜன் சிவனைக் காட்டிலும் மோலனவன் இல்லை என்று ஏட்டில் எழுதிக் கையெழுத்திடுமாறு நல்லவர்கள் அனைவரையும் துன்புறுத்தி வந்தான். அவன் இதற்காக எதிராஜரை அழைத்து வரத் தன் சேவகர்களை அனுப்பினான். சிஷ்யர்கள் மூலம் இச் செய்தி ஸ்ரீரங்கத்தை எட்டியது. இதைச் செவியுற்ற கூரத்தாழ்வான் காஷாயத்தையும் திரிதண்டத்தையும் தரித்தவராய் பெரிய நம்பியோடு கூட ராஜசபைக்குச் சென்றார். நடதூராழ்வான் முதலானோரோடு கூடியவராய் யதிராஜரும் வெள்ளை வஸ்திரம் சாத்திக் கொண்டு -மேற்குத் திக்கை நோக்கிப் புறப்பட்டார். அரங்க நகரப்பனே வழித் துணையாகக் கூடச் சென்றான். ஒரு மலையடியிலே இவரது சிஷ்யரான திருமலை நல்லானின் சிஷ்யர்களான வேடமுதலிகள், மிகவும் தளர்ந்து வந்த எம்பெருமானார் கோஷ்டியை வரவேற்று உபசரித்து குளிர் போக்கி உண்ண தேனும் தினைமாவும் அளித்தனர். பின்னர் பக்கத்திலுள்ள ஒரு ஊரில் உள்ள அந்தணர் இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள கட்டளைவாரி என்ற அந்தணனகத்திலே ‘அமுது செய்யப் பண்ணுவியுங்கள்’ என்று கூறிவிட்டுச் சென்றனர். அவனது பார்யை முன்னரே எதிராஜர் சிஷ்யையாதலால், முதலில் எதிராஜரை அடையாளம் காண மாட்டாது திகைத்தவள் பின்னர், தன் ஆத்மாவை உய்வித்த எதிராஜர் என்று கண்டு, தன் கணவனை எம்பெருமானாரது சிஷ்யனாக்கி, தன் வீட்டில் அவர்கள் சில நாள் தங்கிப் போகுமாறு உபசரித்து, பின்னர் அவருக்கு வேண்டிய காஷாயம் திரி தண்டம் முதலியவற்றையும் சமர்ப்பித்தாள். சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட முறையில் மறுபடியும் ஏற்றுக் கொண்டு எம்பெருமானார், எம்பெருமான்களுக்குத் திருவாராதனம் செய்து வந்தார். இவ்வாறு வழிநடந்து மேல்நாட்டை (மைசூரை) அடைந்தார் எதிராஜர்.அந்த தேசத்து அரசன் விட்டல தேவராயனும், அவனது மகளுக்குப் பிடித்திருந்த பிசாசை ஓட்டிய எதிராஜரது திறமையான பக்தியில் ஈடுபட்டுத் தானும் வைணவனாக மாறி விஷ்ணு வர்த்தனன் என்ற நாமமேற்று அவரது சீடரானான். எதிராஜரை அவனுக்கு அறிமுகம் செய்த தொண்டனூர் நம்பி போன்ற சில அந்தணர் தலைவர்களும் எதிராஜரது சீடர்களானார்கள். அவ் வரசனை வசப்படுத்தி யிருந்த ஜைனர்களும் எதிராசரால் வாதில் தோற்கடிக்கப்பட்டு
அரசனால் தண்டிக்கப்பட்டனர். தொண்டனூர் நம்பிக்கு ‘நம்பி தம்பிரான்’ என்ற திருநாமம் வழங்கப்பட்டது. எம்பெருமானாரது மஹாப் பிரபாவம் எல்லோருக்கும் தெரியலாயிற்று.
இவ்வாறு எம்பெருமானார் சிங்கர் கோவிலில் இருக்கும் பொழுது அவர்கள் கனவில் தோன்றிய திருநாராயணன், யாதவாத்ரியில் பூமிக்கு அடியில் இன்ன அடையாளமுள்ள இடத்தில் நான் புதைந்து இருக்கிறேன். என்னை அங்கு பிரதிஷ்டை செய்வாய்.-ஊர்த்வ புண்டரத்திற்கு (திருநாமம்) வேண்டிய வெள்ளை மண்ணையும் எடுத்துக் கொள்வாய் என்று அவரிடம் கூறி அருளினான்.
அப்போது எதிராஜரும் மிகவும் உகந்தவராய் கல்யாண ஸரஸ்ஸில் -நீராடிப் பரிசுத்தி பெற்றவராய், அவ்வடையாளங்களைக் கொண்டு திருநாரணனோடு கூடிய விமானத்தைக் கண்டுபிடித்து, அக்கோயிலிலே மூலமூர்த்தியான திருநாரணனைப் பிரதிஷ்டை செய்தார்.-வெள்ளை மண்ணையும் சிஷ்யர்களைக் கொண்டு எடுத்துத் தரித்துக் கொண்டு திருநாராயணனின் உத்ஸவ மூர்த்தியான ராமப்பிரியரைத் தேடிக் கொண்டு டில்லிக்குச் சென்றார். அங்கு டில்லி அரசனான சுல்தானின் பெண்ணின் அந்தப் புரத்தில் இருந்த அப்பெருமாளை ‘என் செல்லப் பிள்ளாய் வருக” என்று கூவினார். ஓடி வந்து மடியில் ஏறிய ராமப் பிரியரை அழைத்துக் கொண்டு வந்து திருநாராயணபுரத்தில் உற்சவ மூர்த்தியாகச் சேர்த்து, அந்தச் செல்வப் பிள்ளையான திருநாரணனுக்கு உற்சவம் முதலானவற்றைச் செய்து இன்புற்றார். அப்பெருமானைத் தேடி வந்த சுல்தானின் பெண் அங்கேயே ஒன்றுபட்டு மறைந்தாள். அவளையும் ஆண்டாளைப் போல துலுக்க நாச்சியார் என்று வணங்குகின்றனர்.பெரிய நம்பியும் கூரத்தாழ்வானும், தர்சனத்திற்காக (வைணவத்திற்காக) தர்சனத்தை (கண்களை) இழந்ததைக் கேள்விப்பட்டு மிக வருந்திய எதிராஜர் பெரிய நம்பி பரமபதமடைந்த போதிலும், கூரத்தாழ்வான் க்ஷேமமாயிருப்பதையும், சோழ அரசன் விரைவிலேயே துர் மரணம் அடைந்ததையும் கேள்விப்பட்டு ஸ்ரீரங்கச் செல்வத்திற்கு உபத்திரவம் நீங்கியதை எண்ணி ஆனந்தமடைந்தார்.-அதற்குப் பின்னர் கல்யாண தீர்த்தம் சிறப்படைந்தது. அந் நகரமும் திருநாராயணபுரமாயிற்று. அங்குள்ள ஸ்ரீயப்பதியும் ஸம்பத்குமார் (செல்வப்பிள்ளை) ஆனார். யதிராஜரின் ஜயஸ்தானமாயிற்று அவ்வூர். மேலும் எதிராஜர் தமது திருவடிகளைச் சரண் புகுந்த ஜனங்களின் நன்மைக்காக தமது அர்ச்சா மூர்த்தியை (மூலவரை) அவர்களுக்கு அளித்தார். அதனால் கிரேதா யுகத்தில் நாராயணாத்ரி என்றும் திரேதா யுகத்தில் வேதாத்ரி என்றும் துவாபர யுகத்தில் யாதவாத்ரி என்றும் அழைக்கப்பட்டு வந்த :யாதவாத்ரி, இராமானுஜர் பெயரால் யதுகிரி என்றும் பெயர் பெற்றது.-செல்வப் பிள்ளையையும் யதுகிரி நாச்சியாரோடு கூடிய திருநாராயணனையும் வணங்கி, அங்குள்ள சிஷ்யர்களை (திருநாராயணனை) முறையாகப் பூஜிக்கும்படி நியமித்து விட்டு சில அந்தரங்க சிஷ்யர்களோடு திரும்பிய எதிராஜர் ஸ்ரீரங்கத்திற்குச் சென்று ஸ்ரீரங்கநாதனை ஆனந்தக் கண்ணீரோடு வணங்கினார். குலோத்துங்க சோழன் மனந்திருந்தி உடையவரிடம் மன்னிப்புக் கேட்டு திருவரங்கச் செல்வத்தைத் திருப்பிக் கொடுக்க வாங்கி முதலியாண்டானுக்குத் தான ஸாஸனம் பண்ணுவித்து அந்த விருத்தாந்தத்தை (சம்பவத்தை) ஆர்யபட்டாள் வாசலிலே சிலாசாசனம் செய்தார்.இவ்வாறு ஆண்டானைக் கொண்டு, ஸ்ரீகார்யம் நடத்தி வருகையில் பெரிய நம்பி குமாரருக்கு ஆளவந்தார் மடத்தையும், ஆழ்வானுக்கும் ஆண்டானுக்கும் மனைகளையும் ஸ்ரீ சேநாபதி பட்டையமும் ஸாதித்தருளினார். இவ்வாறு எம்பெருமானார் முதலிகளுடன் வாழ்ந்தருளி நூறு சாதுர்மாஸ்யா நந்தரம் (நூறு ஆண்டுகாலம்] கழித்து ஸதாபிஷேகமும் கண்டருளி எதிராஜன் என்னும் பேர் பெறறு தம் சிஷ்யரான ராமானுஜதாசன் மூலம் தன்னுடைய விக்ரகத்தைப் பண்ணுவித்து தன் சத்தியை அதில் ஆதானம் பண்ணிக் கந்தாடை ஆண்டானைக் கொண்டு ஸ்ரீபெரும்புதாரில் பிரதிஷ்டை செய்தார்.அவதாரங்களெல்லாம் ஒத்திருக்க ராம கிருஷ்ண அவதாரங்களுக்கு முக்யத்வம் உண்டானாற்போல, திவ்ய தேசங்களெல்லாம் ஒத்திருக்க கோயில், திருமலை, பெருமாள் கோயில், திருநாராயண புரத்திற்கு முக்கியத்வம் உண்டாவதைப் போல, ஆச்சார்யர்கள் எல்லோரைக் காட்டிலும் எம்பெருமானாருக்கு முக்கியத்வம் ஏற்பட்டது. பின்னர் அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸ்ரீரங்கத்திற்குத்
திரும்பிச் சென்று ஸ்ரீரங்கநாதரை ஆனந்தக் கண்ணீர் ததும்ப வணங்கினார். பின்னர் அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள்; ஆழ்வார்களின் அருளிச் செயல்களுக்கான திருஅத்யயன உத்ஸவம் ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வார் எழுந்தருள இயலாமையால் தடைப்பட்டு விட்டது என்று அவரிடம் கூறினார்கள். அந்த ஸ்ரீரங்கத்திலேயே நம்மாழ்வார் விக்கிரகம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்வித்து, அவரைக் கொண்டு அரங்கநகரப்பனுக்கு இருபது நாள் அத்யயன உத்ஸவத்தைச் செய்வித்து பிற்காலத்தில் மற்ற ஆழ்வார்களின் பிரபந்தங்களையும், தன் விஷயமான இராமானுஜ நூற்றந்தாதியையும் சேர்த்துத் திருவரங்கன் செவி சாத்துப்படி செய்தார். மற்றைய ஆழ்வார்களுக்கும் ஆண்டாளுக்கும் விக்கரகப் பிரதிஷ்டையும் செய்து வைத்தார். அதைப் போலவே மிகச்சிறந்த திவ்ய தேசங்களிலும் ஆழ்வார்களுடையவும் ஆண்டாளுடையவும் விக்கரகங்களைப் பிரதிஷ்டை செய்து அத்யயன உத்ஸவமும் நடக்கும்படி செய்தார். எம்பெருமாளுக்கு ஏற்பட்டதான பாஞ்சராத்திர ஆகம விதி திருவாராதனம்,ஆளவந்தார் காலத்திற்குப் பின் வைகானஸ ரீதியாக மாறி நடந்ததை மாற்றி உடையவர் முன் போலவே பாஞ்சராத்திர விதிப்படி நடக்கும்படி பண்ணுவித்தார். உடையவர் திருவரங்கப் பெருமாளரையரிடத்திலே திருவாய் மொழியை பண் இசை தாளத்துடன் ஓதி அப்படியே பாடவல்ல பல விண்ணப்பஞ் செய்வாரை(அரையர்களை) ஏற்படுத்தி , அவர்களுக்குத் தனி அலங்காரமும் மான்யங்களும் வழங்கினார். பிள்ளை உறங்கா வல்லி தாஸரைப் பெரிய பெருமாளது அடியாராக்கி, பெருமாளுக்குத் திருமேனிக் காவலராய் நியமித்தார். அவருடைய மருமக்களான வண்டரும்,சுண்டரும் மடத்திற்குத் ததியாராதனத்துக்கு அழுதுபடி முதலானவை நடத்திக் கொண்டு வந்தார்கள்.-உடையவர், திருவரங்கப்பெருமாள் அரையர் சந்நிதியில் ஆளவந்தாரது ஸ்தோத்ரத்திற்கு ஆசார்யன் உபாயம் என்னும் அர்த்தத்தைப் பெற்று லட்சுமண முனி என்ற நாமத்தையும் பெற்றார். உடையவர் கொங்குப் பிராட்டி என்ற பெண்மணிக்கு இருமுறை த்வயத்தை உபதேசித்துத் தன் திருவடி நிலைகளை அருளிச் செய்தார்.-உடையவர் திருவேங்கட யாத்திரைக்கு எழுந்தருளும் வழியில் திருவெள்ளறை , திருக் கோவலூர் ஆகிய கோவில்களைச் சேவித்து அங்கிருந்து புறப்பட்டு அஷ்ட ஸஹஸ்ரநாமம் (எண்ணாயிரம்) குடியைச் சேர்ந்த யக்ஷேசர் (எச்சான்) என்பவர் ரஜோ குணம் மிகுந்தவராய் இருக்கையாலே அவர் வீட்டில் அமுதுண்ண மறுத்து,சாத்வீகையான பருத்திக் கொல்லை யம்மாள் வீட்டில் எழுந்தருளி,அமுது செய்தார். பின்னர் எச்சானையும் அவன் தவறை உணர்ந்து திருந்தும்படி செய்தார்.-உடையவர் தம் தர்சனத்தை நிலை நாட்ட திக்விஜயங்கள் செய்தார். திருமாலிருஞ்சோலை அழகரை மங்களாசாசனம் செய்து, தென் மதுரையில் கூடலழகரையும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரையும், வடபெருங்கோயிலுடையானையும், ரங்கமன்னாரையும் ஆண்டாளையும் மங்களாஸாஸனம் செய்தார். ஆண்டாள் பாரித்தபடியே நூறுதடா நிறைய அக்கார அடிசிலும், நூறுதடா நிறைய வெண்ணையும் சமர்ப்பித்து ஆண்டாளின் அருள் நோக்கையும் அவளால் கோவிலண்ணர் என்று சிறப்பாகச் சொல்லப்படும் சன்மானத்தையும் பெற்றார்.பின்னர் திருப்புளிங்குடி முதலான திவ்ய தேசங்களைச் சேவித்து, திருக்குருகூரில் நம்மாழ்வாரையும், பொலிந்து நின்ற பிரானையும் மங்களாஸாஸனம் செய்தார். ‘மதுரகவிகள்’ என்று திருநாமமாயிருந்த ஆழ்வார் திருவடி நிலைகளுக்கு ‘இராமானுசன்’என்று திருநாமம் ஆக வேண்டும் என்று உடையவர் பிரார்த்தித்ததை ஆழ்வார் அங்கீகரித்தார், உடையவர் திருக்கோளூரில் வைத்த மாநிதிப் பெருமாளைச் சேவிக்கச் சென்றபொழுது அங்குள்ள ஒரு சிறு பெண்ணோடு ஸம்வாதம் செய்து அவளது பிரபந்த அறிவினை மெச்சி அக்குடும்பத்தை ரட்சித்தார். பின்னர் நவ திருப்பதி பெருமாள்களை யெல்லாம் வணங்கி, வானமாமலை, திருக்குறுங்குடி எம்பெருமான்களையும் மங்களாசாசனம் செய்தார். திருக்குறுங்குடி நம்பிக்கு ஆசார்சயராக இருந்து த்வயத்தை உபதேசித்து ‘வைஷ்ணவ நம்பி’ என்ற தாஸ்ய நாமத்தையும் சாத்தி யருளினார். திருவண்பரிசாரம், திருவட்டடாரம், திருவனந்தபுரம் போன்ற குட்ட நாட்டுத் திருப்பதிகளையும் மலை நாட்டுத் திருப்பதிகளையும் மங்களாசாசனம் செய்தார். சோழராஜாவால் இடிக்கப்பட்ட தில்லைச்சித்திரகூடத்திலிருந்து ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்ட கோவிந்த ராஜப்பெருமாளின் உத்சவ மூர்த்தியை வேங்கடமலை அடிவாரத்தில் பிரதிஷ்டை செய்து முறைப்படி ஆராதனைக்கு ஏற்பாடு செய்தார்.நம்மாழ்வார் முதலான ஏனைய ஆழ்வார்களையும், பிரதிஷ்டை செய்த பின் வெற்றி வீரராய் சிஷ்ய கோடிகளோடு திருவரங்கத்திற்குத் திரும்பச் சென்று பின் மற்ற மதங்களைப் பற்றியிருந்த ஜனங்களைத் தன் அடியார்களாக்கி சிஷ்யர்களுக்கு முறைப்படி ஓவ்வொரு கைங்கர்யத்தையும் பிரித்துக் கொடுத்து கவலை நீங்கப் பெற்றவராய் இன்புற்றிருந்தார் எதிராஜர்.உடையவர் தெற்கிலுள்ள திவ்ய தேசத்துப் பெருமான்களை எல்லாம் சேவித்து மங்களாசாசனம் செய்த பின் வடநாட்டிலுள்ள பத்ரிஹாஸ்ரமத்தில் நர நாராயணனையும், சாளக்ராமத்தில் மலை யையும், மற்றும் அயோத்தி, மிதிலை, காசி, ஜகன்னாதம் முதலிய இடங்களில் பெருமாள்களையும், சேவித்து மங்களாசாசனம் செய்தார். வாரங்கல் என்ற பட்டிணத்தில் ‘பாஞ்சாலராயன்’ என்ற பெருமாளை பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீகாகுளத்தில் ஸ்ரீவல்லபன் என்னும் எம்பெருமானுக்கு தெலுங்குராயன் என்று திருநாமம் சாத்தினார். இவ்வாறு உடையவர் வடநாடு தென்னாடு முதலிய எல்லா இடங்களுக்கும் சென்று வைணவத்திற்குச் சேவை செய்த பாங்கினை எல்லாம் ஸ்ரீபிள்ளை லோகம் ஜீயர் அருளிய ‘ஸ்ரீ ராமானுஜார்ய திவ்ய சரிதை’ என்ற மணிப்பிரவான நடையில் எழுதப்பட்ட நூலில் காண்கிறோம்.எம்பெருமானாருக்கு கூரத்தாழ்வான் த்ரிதண்டம் முதலிஆண்டான் பவித்ரம் -பாதுகைகள், எம்பார் பாதச்சாயை (திருவடி நிழல்)அருளாளப்பெருமாள் எம்பெருமானார் ஆத்ம ஸமர். பிள்ளை உறங்கா வில்லி தாசர் (பாஹிசமர்) தோழர். பெரிய நம்பி தொடக்கமான ஐந்து ஆசார்யர்கள் ஐந்து தலைகள். திருக்குருகைப் பிரான் பிள்ளான் புத்திரஸமர் ஆவார்கள். ஆழ்வார்களுடைய அருளிச் செயல்களைக் கொண்டு பாஷ்யகாரர் ஸ்ரீ ஸுத்ர பாஷ்யத்தை அருளிச்செய்து அதைக் கிடாம்பி ஆச்சான் கிடாம்பிப் பெருமாள் முதலானோர் மூலமாக சாரதா பீடத்துக்கு அனுப்பினார். ஸரஸ்வதி தேவி அதைத் தலையில் தரித்து ஸ்ரீ பாஷ்யகாரர் என்று எம்பெருமானாருக்குத் திருநாமம் சாத்தினாள் என்பதை முன்பே கண்டோம். உடையவர் ஒர் ஊமைக்கு தம்முடைய திருமேனியை ரக்ஷகமாகக் காட்டியருள அதைக்கண்ட கூரத்தாழ்வான் தான் ஊமையாய் பிறக்கவில்லையே என்று தம்மை வெறுத்தார். முதலியாண்டான் தன் குமாரனுக்கு இராமானுஜன் என்று திருநாமம் சாத்தினார். கந்தாடையாண்டான் என்று பிரசித்தி பெற்ற அவரை ஆட்கொண்ட வில்லி ஜீயரது சீடனாக்கினார். ஏனைய சீடர்களும் தம் குமாரர்களுக்கு உடையவரது திருநாமம் இட்டனர். அவ்வாறு செய்த ஒரு வைணவ வண்ணானுடைய பிள்ளைக்கும் இராமானுசர் அருள் புரிந்தார். . இவ்வாறு உபய கைங்கர்ய நிர்வாஹகராய் செங்கோல் செலுத்தி உபயவிபூதியிலும் தம்முடைய சிறு முறி செலுத்தி, 74 ஆச்சார்யார்களும் எழுநூறு ஜீயர்களும் பன்னீராமிர ஏகாங்கிகளும் அனேக வைணவர்களும் சேவிக்க திருவரங்கத் திருப்பதியிலே வாழ்ந்து கொண்டிருந்தார்,எம்பெருமானார் திருவடிகளில் சரணமடைந்த முதலிகளான எழுபத்து நாலு ஆச்சார்யர்களாவது, ஆளவந்தார் குமாரர்களில் சொட்டை நம்பி தொடங்கி பெரிய நம்பி குமாரர், திருக்கோஷ்டியூர் நம்பி குமாரர், திருமாலையாண்டான், பெரிய திருமலைநம்பி முதலிய ராமானுசரது ஆச்சார்ய குமாரர்களும், கூரத் தாழ்வான் முதலியாண்டான் முதலான அவரது சிஷ்யர்களின் குமாரர்களுமாக எழுபத்து நாலு சிம்மாசனாதிபதிகளையும் நியமித்தார். அவர்களில் முக்கியமானவராக நால்வரை ஸ்ரீ பாஷ்ய சிம்மாசனாதிபதிகளாகவும் அந்நால்வரிலும் தன் ஞான புத்திரனான பிள்ளானை உபய வேதாந்த பாஷ்ய சிம்மாசனாதிபதியாகவும், ராமானுஜாச்சாரியார் நியமித்தருளினார். அந்த 74 சிம்மாசனாதிபதிகளுடன் எழுநூறு ஸந்யாசிகளுடனும், பன்னீராயிரம் பரம ஏகாந்திகளுடனும், முன்னூறு கொற்றியம்மையார்களுடனும், எண்ணிறந்த ராஜாக்களாலும், மற்றும் பல சாத்தன. சாத்தாத முதலிகளாலும் பிள்ளையுறங்கா வில்லிதாசர் முதலான திருநாம தாரிகளாலும் பொன்னாச்சியார் போன்ற திருநாம தாரி ஸ்த்ரீகளாலும், ஆசர்யமான சிஷ்ய ஸம்விருத்தி பெற்றவராய் விளங்கினார்.
பெரியவர்களான கூரத்தாழ்வான் முதலியாண்டான், தம்பியான எம்பார், ஞான புத்ரரான பிள்ளான் அனைவரையும் தம் அருள் நோக்கால் ஆசிர்வதித்து மூழ்ந்தார். சிஷ்யர்களால்
பிரார்த்தக்கப்பட்டவராய் (உத்ஸவ மூர்த்திகளான] தம் அர்ச்சா விக்கிரங்களை முறையே ஸ்ரீங்கத்திலும், ஸ்ரீ பெரும்புதூரிலும் திரு நாராயணபுரத்திலும் பிரதிஷ்டை செய்து சீடர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தார்-இப்பொழுதும் எனக்கு இடமின்றி விரட்டியதால், நான் எனக்குச் சமயம் வாய்க்கும் பொழுது, உமது மதத்தையும் கலக்குவேன் என்று ஆணையிடுகிறேன் என்று கலி புருஷன் சொன்ன வார்த்தையைக் கேட்டு, ஆதிபுருஷனான ஸ்ரீயப்பதியைச் சரணடைந்து எனது தர்சனம் (மதம்) தடையற்றதாய் வாழக் கடவது என்று அருள் புரியுமாறு பிரார்த்தித்தார் எதிராஜர். தனது அந்திம தசையில் தன் குலதெய்வமான தேவப் பெருமாளையும் ஸரஸ்வதி அளித்த ஹயக்ரீவனையும் தன் ஞான புத்திரரான பிள்ளானுக்கு அளித்தார் மூவுலகிலும் சிறப்புறப் புகழடைந்தவரான எதிராஜர்.இப்படியிருக்கிற உடையவர் திருவடிகளில் நித்ய கைங்கர்யம் பண்ணும் முதலிகள்:- கூரத்தாழ்வானும் முதலியாண்டானும்,நடதூராழ்வானும், பட்டர் வர்க்கமும் ஸ்ரீபாஷ்யத்திற்கு உசாத்துணையாக இருப்பவர்கள். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருவாராதனம் செய்தருளுவார். கிடாம்பிப் பெருமாளும் கிடாம்பியாச்சானும் திருமடைப்பள்ளிக்குக் கடவராயிருப்பர். வடுகநம்பி எண்ணைக் காப்புச் சாத்துவார். கோமடத்துச் சிறியாழ்வான் கலசப்பாளையும் ஸ்ரீபாதாட்சையும் எடுப்பார். அவரது சீடரான பிள்ளை உறங்கா வல்லிதாசர் கருவூலம் (பணப்பற்றுகள்] நோக்குவார். அம்மங்கி பாலமுதம் காய்ச்சுவார். உக்கலாழ்வான் பிரசாதம் எடுப்பார்.-உக்கலம்மாள் தரு ஆலவட்டம் பரிமாறுவார். மாருதிப் பெரியாண்டான் திருக்கைச் செம்பு பிடிப்பார். மாருதிச்சிறியாண்டான் மடத்திற்கு அமுதுபடி கறியமுது, நெய்யமுது முதலானவை நடத்திப் போகுவார். தூயமுனிவேழம் திருமஞ்சனமெடுப்பார். திருவரங்க மாளிகையார் ஸ்ரீ பண்டாரம் நோக்குவார். பிள்ளை உறங்காவல்லிதாசர் சீடர்களான வண்டரும் சுண்டரும் கைக்கு ஆயிரம் பொன்னுக்கு ராஜ சேவகம் பண்ணி மடத்துக்கு திருக்கை வழக்காக்கி யருள்வார்கள். இராமானுச வேளைக்காரர் திருமேனிக்காவலாய் இருப்பார்கள். அகளங்க நாட்டாழ்வான் பிரதிபக்ஷ நிரஸனம் பண்ணுவார்.-இவ்வாறு நூற்றிருபது பிராயங்கள் வரை வாழ்ந்திருந்து திருவரங்கர் செல்வம் முற்றும் திருத்த வைத்த இராமானுஜர்,வாழ்க்கையில் ௮ருசி பிறந்து, எம்பெருமானிடம் என்னைக் காலக் கழிவு செய்யாமல் உன் பொன்னடி சேர்த்து, ஒல்லை வேறே போகவிடாது, எஞ்ஞான்றும் விடாதொழிய வேணும் என்று பிரார்த்திக்க அரங்கனும் இற்றைக்கேழாம் நாள் அப்படியே செய்கிறோம் என்று திருவாய் மலர்ந்தருளினார். பின்பு எதிராஜர் மடத்திலுள்ள அனைத்துக் கொத்திலுண்டானவர்களையும் சித்த மகிழ்ச்சியுடன் அனுப்பி யருளி, சிஷ்ய வர்க்கங்களுக்கு அர்த்த விசேஷங்களை யெல்லாம் மூன்று நாளாக உபதேசித்து, இவ் வர்த்தங்களை யெல்லாம் நீங்களும் விஸ்வசித்து உங்களைப் பற்றினார்க்கும் பரம்பரை பரம்பரையாய் உபதேசியுங்கள் என்று அருளினார்.பின்னர் தாம் இற்றைக்கு நாலாம் நாள் பெரிய பெருமாள் திருவடிகள் ஏறப் போகிறோம் என்பதை எல்லோர் மனமும் கலங்குமாறு கூறவே அவர்கள் நாங்களும் கூட வருவோம் என்று கூற,உடையவர் அப்படிச் செய்தால் அவர்களுக்குத் தம்மோடு சம்பந்தம் இராது என்று சொல்லித் தேற்றித் தரிக்கப் பண்ணினார்.பின்னர் அந்தத் தர்சனத்தைத் தனக்குப் பின்னர் ஏற்று நடத்துமாறு பெரிய பட்டருக்கு (பராசரபட்டர்) கட்டளை இட்டருளி,திருக்குருகைப்பிரான் பிள்ளான் முதலான முதலிகளை பட்டருக்கு இஷ்டமாயிருங்கள் என்று ஆக்ஞாபித்து கோயில் அனைத்துக்கொத்தையும் (ஊழியர்களையும்) அழைப்பித்து (அபராத ஷாமணம்)மன்னிப்பு வேண்டினார். அவர்கள் எவ்வாறு நாங்கள் தரித்திருப்போம் என்று துக்கிக்க அணியரங்கரனிருக்க உங்களுக்கு ஒரு தாழ்வில்லை என்று கூறி எல்லோரும் பட்டரை முன்னிட்டு ஆராய்ந்து போருங்கோள் என்று கூறிப் பட்டரைப் பார்த்து பெரிய பெருமாள் திருவாராதனத்தையும் பெருக்க நடத்திக் கொண்டு நம்முடைய தர்சனத்தையும் நன்றாய் நடத்திக் கொண்டு வாரும் என்று
கூறியருளினார். பின்னரும் அவர்களைப் பார்த்து ஒருவன் பிரபந்நனானால் அவனது ஆத்ம யாத்ரை ஈஸ்வராதீனமாகையாலே அதற்கு வருந்தக் கூடாது. வருந்தினால் ஆத்ம சமர்ப்பணம் பொய்யாகிவிடும். அவனது தேக யாத்திரை கர்மாதீனமாகையாலே அதுக்கும் வருந்தக்கூடாது. வருந்தினால் நாஸ்திகன் என்றாகிவிடும். ஆகவே உபய யாத்திரையிலும் இவனுக்கு அந்வயமில்லை என்று அருளிச் செய்து பின் முதவிகளை நோக்க நீங்கள் அனுசந்திக்க வேண்டியது மூன்று விஷயங்களுண்டு என்று கூறினார். அவை யாவன அனுகூலர், பிரதிகூலர், அனுபயர் என்பதாகும். அவை என்ன என்பதையும் விளக்கி தெளிவுபடுத்தினார்.பின்னர் பட்டரிடம் மேல்நாட்டிலுள்ள வேதாந்ததி யென்ற வித்வானை வாதில் வென்று நம் தர்னத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று ஆணையிட்டு பின்பு திருக் கண்களைச் செம்பளித்தருளி;பரவசமான பொலிவுடன் எம்பார் திருமடியில் திருமுடியும், வடுகநம்பி திருமடியிலே திருவடிகளுமாக கண் வளர்ந்தருளினார். ஆயிரஞ்சுடர்வாய் அரவணையோடே நம்பி மூத்த பிரானைப் போல எம்பெருமானாரான இவரும் கூடி யருளினார்.
பின்பும் அன்பருடன் களித்த சீர் பெரும்புதூர் எதிராசன்
இன்பமுடன் இசைந்தொரு நூற்றிருபதாண் டிங்கிருந்ததன்பின்
அன்பன் ஆழ்வான் ஆண்டான் நற்குமாரர்க்கு அடியாமுடி
புனைந்து மன்பதையை வாழ்வித்தாங்கமருமென வாழ்வித்தருளி
ஆராமஞ் சூழ் அரங்கர் தமை, மலர் மா மகளை மடி யிறைஞ்சித்
தாரீர் சரணந்தனை யென்னத் தந்தோமெனலும் எதிராசர்
பாரோர் பரவும் பாகவதர் பிரிவால் பிரிவில் படர் கூரச்
சீரோர் திருநாடடைந்திருந்த சீடனுடனே சேர்ந்தனராம்
பின்னர் திருக்குருகைப் பிரான் பிள்ளான் (உடையவரதுஞான புத்ரர்) உடையவருக்கு அந்திமக் கிரியைகள் நடத்தினார்.-அவர் திருமேனியை ஆழ்வார் திருமேனியைப் போல கோயிலுக்குள்ளேயே பள்ளிப் படுத்தி வைத்தார்கள்.
இன்னமுத மூட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் – பொன்னஞ்
சிலைசேர் நுதலியர் வேள் சேரலர் கோன், எங்கள்
குலசேகரனென்றே கூறு -எம்பெருமானார் அருளிய பெருமாள் திருமொழித் தனியன்
வாழிபரகாலன் வாழிகலிகன்றி
வாழிகுறையலூர் வாழ்வேந்தன் – வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங் கொள், மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல் -எம்பெருமானார் அருளிய பெரிய திருமொழித் தனியன்
முந்துற்றநெஞ்சே முயற்றித் தரித்துரைத்து வந்தித்து வாயார வாழ்த்தியே – சந்த
முருகூரும் சோலை சூழ் மொய்பூம் – பொருதல் குருகூரன் மாறன் பேர்கூறு -எம்பெருமானார் அருளிய பெரிய திருவந்தாதி தனியன்
சீரார் திருவெழு கூற்றிருக்கை யென்னும் செந்தமிழால்
ஆராவமுதன் குடந்தைப் பிரான் றனடியிணைக்கீழ்
ஏரார் மறைப் பொருளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே
‘சேராமர்சொன்ன வருள்மாரிபாதம் துணை நமக்கே. -திருவெழு கூற்றிருக்கை தனியன்
அழுக்கென்றிவையறிந்தேன் அம்பொன் அரங்கா
ஒழித்தருள்வாய் உள்ளில் வினையை பழிப்பிலா
என்னாரியர்க்காக எம்பெருமானர்க்காக
உன்னாருட்காக உற்று’ -விளாஞ்சோலைப்பிள்ளை அருளிச் செய்தது
சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி.
திருவரையிற் சாத்திய செந்துவராடை வாழி.
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி.
இலங்கிய முந் நூல் வாழி இணைத் தோள்கள் வாழி.
சோராத துய்ய செய முகச்சோதி வாழி.
தூ முறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி.
ஈராறு திருநாம மணிந்த எழில் வாழி.
இனி திருப்போடெழில் ஞான முத்திரை வாழியவே.
அறு சமயச் செடி யதனை யடி யறுத்தான் வாழியவே.
அடர்ந்து வரும் குதிட்டிகளை யறத் துறந்தான் வாழியவே.
செறு கலியச் சிநிதுமறத் தீரத்து விட்டான் வாழியவே.
தென்னரங்கர் செல்வ முற்றும் திருத்தி வைத்தான் வாழியவே.
மறையதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தான் வாழியவே.
மாறனுரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியவே.
அறம் மிகு நற் பெரும்புதூர் அவதரித்தான் வாழியவே.அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியவே.
அத்தகிரி யருளாளரடி பணிந்தோன் வாழியவே.
அருட்கச்சி நம்பியுரை யாறு பெற்றோன் வாழியவே.
பக்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டோன் வாழியவே.
பதின்மர் கலையுட். பொருளைப் பரிந்து கற்றோன் வாழியவே.
சுத்த மகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியவே.
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியவே.
சித்திரையில் லாதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியவே.
சீர் பெரும்புதூர் முனிவன் திருவடிகள் வாழியவே.
எண்டிசை யெண்இளையாழ்வார் எதிராசன் வாழியவே.
எழுபத்து நால்வர்க்கெண்ணான் குரைத்தான் வாழியவே.
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தான் வாழியவே.
பரகால னடிஇணையைப் பரவுமவன் வாழியவே.
தண்டமிழ்நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியவே.
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியவே.
தெண்டிரைசூழ் பூதூரெம்பெருமானார் வாழியவே.
சித்திரையிற் செய்ய திருவாதிரையோன் வாழியவே.
—————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்