Archive for the ‘ஸ்ரீ ஹரி வம்சம்’ Category

ஸ்ரீ பவிஷ்ய பர்வம்-பகுதி 5–

October 20, 2025

வேட்டை | பவிஷ்ய பர்வம் பகுதி – 81-(ஹம்ஸடிம்பகயோர்ம்ருகயா)-ஹம்சனும் டிம்பகனும் தங்கள் நண்பன் ஜனார்த்தனனை காட்டில் வேட்டைக்கு அழைத்துச் செல்வது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஒரு நாள், ஹம்சன், டிம்பகன் என்ற அந்த வீரர்கள் இருவரும் வேட்டைக்குச் செல்லத் தீர்மானித்துத் தேர்கள், யானைகள், குதிரைகள் துணையுடன், தங்கள் நண்பன் ஜனார்த்தனனையும் காட்டுக்கு அழைத்துச் சென்றனர்.(1) மன்னா, காட்டில் நுழைந்ததும் இளவரசர்கள் இருவரும் புலிகள், சிங்கங்கள், பன்றிகள் பலவற்றைத் தங்கள் கணைகளால் கொல்வதில் ஈடுபட்டனர்.(2) அந்தச் சகோதரர்கள் இருவரும் தங்கள் நாய்களின் துணையுடன் பாம்புகள் பலவற்றையும், காட்டுவிலங்குகள் பிறவற்றையும் கொன்றனர்.

அந்த நேரத்தில் மொத்தக் காட்டிலும், “பெரிய கண்களைக் கொண்ட காட்டுப்பன்றி அதோ வருகிறது. அதோ சிங்கம் போகிறது; அதனை உங்கள் கணைகளால் கொல்லுங்கள். இதோ இவ்வழியில் காட்டெருமை செல்கிறது. அதோ பாம்பைப் பாருங்கள். இதோ உயிருக்கு அஞ்சி ஓடிச்செல்லும் மான்கூட்டத்தைப் பாருங்கள். அதோ எண்ணற்ற முயல்கள் அங்கேயும், இங்கேயும் திரிந்து கொண்டிருக்கின்றன. அவை அனைத்தையும் சூழ்ந்து கொண்டு அவற்றைக் கைப்பற்றுவோம் வாருங்கள். இதோ குட்டிக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த மானைக் கொல்லாதீர்கள், அது பெருந்தகைமையல்ல” என்ற கூக்குரல்களே கேட்டுக் கொண்டிருந்தன.(3-7)

மனித ஆட்சியாளர்களில் முதன்மையான ஹம்சன், டிம்பகன் இருவரும் புலிகள், சிங்கங்கள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் பலவற்றைக் கொன்று, நடுப்பகல் வேளையில் களைப்படைந்தனர்.(8) மன்னா, அவர்கள் ஒருவருக்கொருவர், “நாம் களைத்துவிட்டோம். இனி வேட்டையை நிறுத்துவோம்” என்று சொல்லிவிட்டுப் புஷ்கரத் தடாகத்தை நோக்கிச் சென்றனர்.(9)

தடாகத்தை அடைந்ததும் அதன் கரையில் அவர்கள் அமைதியாக அமர்ந்தனர். அந்தப் புனிதமான இடத்தில் பெரும் முனிவர்கள் பலரும் தொண்டாற்றிக் கொண்டிருந்தனர். இளவரசர்கள் இருவருக்கும் யாரோ சாமரம் வீசுவதைப் போல அங்கே குளிர்ந்த தென்றல் வீசிக் கொண்டிருந்தது.(10) கடின பணிகளால் களைப்படைந்திருந்த அவர்கள் அந்தத் தடாகத்தில் நீராடி, தாமரைத் தண்டுகளையும், மலர்களையும் உண்டு தங்கள் பசியைத் தணித்தனர்.(11) இவ்வாறே ஹம்சன், டிம்பகன், ஜனார்த்தனன் ஆகியோர் அந்தத் தடாகக் கரையில் ஓய்வெடுத்துத் தங்கள் களைப்பில் இருந்து விடுபட்டனர்.(12)

அவர்கள் அந்தத் தடாகத்தின் அருகில் சுகமாக அமர்ந்திருந்த போது, பெரும் முனிவர்களால் ஓதப்படும் வேத மந்திரங்களின் ஒலியைக் கேட்டனர்.(13) நடுப்பகல் வேளையில் முனிவர்கள் ஓதும் வேதவொலியைக் கேட்டு ஈர்க்கப்பட்டதால், அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேள்வியைக் காண அவர்கள் விரும்பினர். மன்னா {ஜனமேஜயா}, விற்களையும், கணைகளையும் வைத்து விட்டு வந்த அவர்கள், பல முனிவர்களுடன் சேர்ந்து வைஷ்ணவ நெருப்பு வேள்வியைச் செய்து கொண்டிருந்த பெரும் முனிவர் கசியபரின் ஆசிரமத்திற்கு நடந்து சென்றனர்” என்றார் {வைசம்பாயனர்}.(14-17)

துர்வாசர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 82-(துர்வாஸோதர்ஷநம்)-ஹம்சனும், டிம்பகனும் துர்வாசரைச் சந்தித்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பக்திமிக்கவர்களான ஜனார்த்தனன், ஹம்சன், டிம்பகன் ஆகியோர், வேள்வி நடைபெறும் அந்த வளாகத்தில் கூடியிருந்த முனிவர்கள் அனைவரையும் வணங்கினர்.(1) அந்த உயரான்மாக்களும், அவர்களது சீடர்களும் தங்கள் விருந்தினர்களுக்குப் பாத்யம், அர்க்கியம் ஆகியவற்றையும், அமர்வதற்கான சிறந்த இடங்களையும் கொடுத்து மதிப்புடன் வரவேற்றனர்.(2) மன்னா {ஜனமேஜயா}, அந்த இளவரசர்கள் இருவரும், பிராமணன் ஜனார்த்தனனும் முனிவர்கள் கொடுத்த வரவேற்பில் நிறைவடைந்தவர்களாகக் கீழே அமர்ந்தனர்.(3)

அன்புக்குரிய மன்னா, அப்போது ஹம்சன் அந்த முனிவர்களிடம், “சிந்தனையாளர்களில் சிறந்தவர்களே, எங்கள் தந்தை {பிரம்மதத்தர்} ராஜசூய வேள்வி செய்யும் விருப்பம் கொண்டிருக்கிறார்.(4) பிராமணர்களே, இந்த வேள்வி நிறைவடைந்ததும், எங்கள் தலைநகரில் நடைபெறப்போகும் எங்கள் தந்தையின் வேள்வியில் கலந்து கொள்ளும் உங்கள் வரவை வேண்டுகிறோம். நாங்கள் மொத்த உலகையும் வென்ற பிறகு, பக்திமானான எங்கள் தந்தையை ராஜசூயம் செய்யத் தூண்டுவோம். நீங்களும், உங்கள் சீடர்களும் வந்து புரோகிதர்களாகச் செயல்பட்டால் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சியடைவோம்.(5,6) நாங்கள் இருவரும் சகோதரர்கள். இவன் எங்கள் நல்ல நண்பன் ஜனார்த்தனன். நாங்கள் மூவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்போம். உலகை வெல்ல நாங்கள் இன்றே புறப்படுகிறோம். மஹாதேவனிடம் நாங்கள் அடைந்த வரங்களால் போரில் எங்களைத் தேவாசுரர்களாலும் எதிர்க்க இயலாது. இதன்காரணமாகப் படைகள் இல்லாமலே கூட நாங்கள் உலகை வென்றுவிடுவோம். வரங்களை, பெரும் தெய்வீக ஆயுதங்களையும் நாங்கள் அடைந்திருப்பதால், எங்களை வெல்ல யாராலும் இயலாது” என்றான் {ஹம்சன்}. செருக்குமிக்க ஹம்சன் இவ்வாறு பேசிவிட்டு அமைதியடைந்தான்.(7-9)

அப்போது முனிவர்கள், “மன்னா {ஹம்சா}, அத்தகைய மகத்தான வேள்விக்கு நீ ஏற்பாடு செய்தால், நிச்சயம் நாங்கள் எங்கள் சீடர்களுடன் கலந்து கொள்வோம். இல்லையென்றாலும், நாங்கள் இந்த ஆசிரமத்தில் அமைதியாக வசிப்பத்திலேயே நிறைவடைந்திருக்கிறோம்” என்றனர் {முனிவர்கள்}”.(10)

வைசம்பாயனர் சொன்னார், “மன்னா {ஜனமேஜயா}, அதன்பிறகு இளவரசர்கள் இருவரும், அந்தப் புஷ்கரத் தடாகத்தின் வடகரையில் அமைந்திருந்த துர்வாசப் பெருமுனிவரின் வசிப்பிடத்திற்குச் சென்றனர்.(11) இருப்பில் தூய்மையை அடையவும், அதன் விளைவாக மனநிறைவில் திளைக்கவும் தங்கள் வாழ்வை நெறிப்படுத்தும் முற்றுந்துறந்த முனிவர்கள் பலர், அந்தப் புனிதத் தலத்தில் வசித்திருந்தனர். அவர்கள், {ஓம் என்ற} பிரம்மமந்திரத்தை ஓதி, பிரம்மசூத்திரம் பயின்று அதன் உண்மைப் பொருளை உணர்வதையே தங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டிருந்தனர்.(12)

அம்முனிவர்கள் அனைவரும் இடைக்கச்சை {கோவணம்} அணிந்தவர்களாகவும், பொருள் பற்றில் இருந்தும், அகங்காரத்தில் இருந்தும் விடுபட்டவர்களாகவும் இருந்தனர். தேவர்களின் உயர்ந்த தலைவனும், அண்ட வெளிப்பாட்டின் உண்மைக் காரணனும், உயிரினங்கள் அனைத்தின் ஆன்மாவாகவும், உயிராகவும் திகழ்பவனும், நீக்கமற நிறைந்திருக்கும் நிலையான தெய்வமுமான பரப்பிரம்மனையே அவர்கள் இடையறாமல் தியானித்து வந்தனர்.

வேதாந்தத்தின் இறுதி இலக்கும், வேதாந்தத்தின் வடிவமுமான தலைவனையே அங்கே துர்வாசர் வழிபட்டு வந்தார். அவர் {துர்வாசர்}, மாசுடைய அனைத்தில் இருந்தும் விடுபட்டவனும், அண்டத்தின் ஆன்ம குருவும், உயிரினங்கள் அனைத்தின் உறைவிடமுமான ருத்ரனின் வெளிப்படாத பிறப்பாகவே அவனை {பரப்ரம்மனை} வழிபட்டு வந்தார்.

ஹம்சர்களும், பரமஹம்சர்களுமாக அங்கே இருந்த முனிவர்கள் யாவரும் துர்வாச முனிவரின் சீடர்களாவர். அவர்கள் தர்க்கப்பூர்வமான வாதங்களை முன் வைப்பதன் மூலம், முற்றான உண்மையின் தன்மையைக் கண்டறிய முயன்று வந்ததால், அவர்களின் இதயங்கள் யாவும் ஆழ்ந்த ஞானத் தீபத்தால் ஒளிபெற்றிருந்தன.

அந்தப் புனிதத்தலத்தை அடைந்த இளவரசர்கள் இருவரும் {ஹம்சனும், டிம்பகனும்}, கடும் பிரம்மச்சரியம் நோற்பவரும், பரமனையே எப்போதும் தியானிப்பவருமான துர்வாச முனிவரை அங்கே சந்தித்தனர். சீற்றமடைந்தால் மொத்த உலகையே சாம்பலாக்கிவிடக் கூடியவர் அந்தத் துர்வாச முனிவர். கோபம் தூண்டப்பட்டால் தேவர்களே அவரைக் காணத் துணிய மாட்டார்கள். உண்மையில் அவர் கோபத்தின் உடல்வடிவம் என்றும், பகுதியளவிலான ருத்ரனின் அவதாரம் என்றும் அறியப்படுகிறார்.(13-19)

பெரும் பரமஹம்சரான துர்வாச முனிவர் காவி உடை தரித்திருந்தார். அவரை அங்கே கண்ட அந்த இளவரசர்கள் இருவரும், பின்வருமாறு எண்ணினர்.(20) {அவர்கள்}, “காவி உடை உடுத்தியிருக்கும் இவன் யார்? இவன் நான்கு வர்ணத்திலும் இல்லாதவனாகத் தெரிகிறான். இவன் கிருஹஸ்தனல்ல {இல்லற ஆசிரமத்தைச் சார்ந்தவன் அல்ல} என்பது நிச்சயம் தெரிகிறது. இவன் எந்த ஆசிரமத்தைச் சேர்ந்தவன்?(21) கிருஹஸ்தர்களே, அறக்கோட்பாடுகளை அறிந்து பின்பற்றுகிறார்கள். உண்மையில், அவர்களே தர்மத்தின் வடிவமாகத் திகழ்பவர்கள். அவர்களே நான்கு வர்ணங்களிலும் காணப்படுகிறார்கள்.(22) கிருஹஸ்தர்களே உயிர்கள் அனைத்தையும் கவனமாகப் பாதுகாத்து தாயைப் போல அவற்றைப் பராமரிப்பவர்கள். மகத்தான இந்த ஆசிரமத்தைக் கைவிட்டு, வேறு எந்த ஆசிரமத்தையும் ஏற்பவன் நிச்சயம் பெரும் மூடனே.(23) அவன் பித்தனாகவோ, முழுமூடனாகவோ, உடல் குறைகளைக் கொண்டவனாகவோ இருக்க வேண்டும். இவன் தியானிப்பவனைப் போல நடித்து வஞ்சித்து வருகிறான்.(24) இந்தச் சாதாரண மனிதன் ஏன் தன் வரம்பை மீறி தியானம் செய்து வருகிறான்? இவ்வாறு நடிப்பதால் நிச்சயம் இவனுக்கு ஆன்ம முன்னேற்றம் சாத்தியமில்லை. பிற ஆசிரமங்கள் மதிப்பற்றவை எனக் கருதுபவனாகவே இவன் இருக்க வேண்டும். புத்தியற்ற இந்த இருபிறப்பாளனை, நாம் கிருஹஸ்த ஆசிரமத்தை ஏற்கச் செய்ய வேண்டும். (25,26) இவனது மூடச்சீடர்களும் தவறாக வழிநடத்தப்பட்டு, மனக்களங்கம் அடைந்தவர்களாக இருக்கிறார்கள். இங்கே அமர்ந்து இவர்களின் ஆன்ம குருவாக நடிக்கும் இந்த மூடன் யார்? இவன் உண்மையான பிராமணன் இல்லை. நாம் இங்கே வந்துவிட்டதால், இந்தப் போலி ஆன்ம குருவை உண்மையான அறப்பாதையில் மீட்டெடுத்த பிறகு, பெரும் நிறைவுடனே நாம் வீடு திரும்ப வேண்டும்” என்று நினைத்தனர் {ஹம்சனும், டிம்பகனும்}.

மன்னா {ஜனமேஜயா}, பெருந்தீயூழினால் மோஹமடைந்த தங்கள் மனங்களில் இவ்வாறு தீர்மானித்த அந்த வீர இளவரசர்கள் இருவரும், பிராமணன் ஜனார்த்தனனுடன் சேர்ந்து கொண்டு, தற்கட்டுப்பாட்டுடன் கூடிய அந்தச் சந்நியாசியை {துர்வாசரை} அணுகினர்.

மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அப்போது அந்த இளவரசர்கள் இருவரும், இம்மையின் புலன்களால் உணரப்பட முடியாதவரும், ஆசிரமத்தின் அனைத்து விதிகளையும், வழிமுறைகளையும் கடுமையாகப் பின்பற்றும் பிற சந்நியாசிகளாலும் புரிந்துகொள்ளப்பட முடியாத பெரும் முனிவருமான துர்வாசரிடம் பெருமிதத்துடன் பேசத் தொடங்கினர்” {என்றார் வைசம்பாயனர்}.(27-30)

சந்நியாச தர்ம நிந்தனை | பவிஷ்ய பர்வம் பகுதி – 83-(ஸந்யாஸதர்மநிந்தா)-சந்நியாச தர்மத்தை நிந்தித்த ஹம்சனும், டிம்பகனும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பிராமணா {துர்வாசா}, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? மெய்யறிவின் சுவடொன்றேனும் உன் இதயத்தில் வசிக்கவில்லை என்றே தெரிகிறது. உன் ஆசிரமமென்ன?(1) கிருஹஸ்த ஆசிரமத்தை நிராகரிப்பதன் மூலம் எதை அடைய நீ விரும்புகிறாய்? வஞ்சகனாகவே நீ தென்படுகிறாய். பற்றறுந்தவன் போல் நடிக்கும் உன் நடிப்பை வேறு எதனால் விளக்கிவிட முடியும்?(2) மூடா, சீடர்களாக நீ கருதும் இவர்கள் அனைவரையும் நீ கெடுத்துக் கொண்டிருக்கிறாய். உண்மையில், நீ அவர்கள் அனைவரையும் நரகத்திற்கே இட்டுச் செல்கிறாய்.(3) 

மூடப் பிராமணா, நிச்சயம் இறுதியில் நீ அழிவையே அடைவாய். உன் பாதச்சுவடுகளைப் பின்பற்றும் இவர்கள் அனைவரும் உன்னையே பின்பற்றுவர். ஐயோ! ஏன் இன்னும் உன்னைப் போன்ற ஒரு வஞ்சகனை எவனும் தண்டிக்கவில்லை? இவை யாவற்றையும் உனக்குக் கற்பித்தவனும் பெரும்பாவியே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பிராமணா, இந்த ஆசிரமத்தைக் கைவிட்டுக் கிருஹஸ்தனாவாயாக. உன் மனத்தைக் கட்டுப்படுத்தி ஐவகை வேள்விகளைச் செய்தால் நீ மறுமையில் இன்புற்றிருப்பாய். கிருஹஸ்த ஆசிரமமே மங்கலத்தை அருளும் உண்மையான பாதையாகும். நீ மகிழ்ச்சியாக வாழ விரும்பினால், நாங்கள் சொல்வதைப் போலச் செயல்படுவாயாக” என்றனர்.

எனினும் பக்திமிக்கப் பிராமணன் ஜனார்த்தனன் இந்தச் சொற்களைக் கேட்டுப் பெரிதும் துன்புற்றான். அவன் சந்நியாசியான துர்வாசரை வெறித்துப் பார்த்து, அவரது பாதங்களை வணங்கிவிட்டுத் தன்னிரு நண்பர்களிடமும், “என் அன்புக்குரிய இளவரசர்களே, உங்கள் புத்தியும், பகுத்தறிவும் மாசடைந்திருக்கின்றன. இவ்வாறு பேசாதீர்! இவ்வாறான கேட்கத்தகாத வாக்கியங்கள் இம்மையிலும், மறுமையிலும் தீங்கிழைப்பவையே. இம்மையில் தன் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் மகிழ்ச்சியாக வசிக்க விரும்பும் எந்தப் பாவிதான் இவ்வாறு பேசுவான்?(4-9)

இந்த உயரான்மா இதோ உங்கள் முன் மரணத்தின் வடிவமாக {காலனாக} நிற்கிறார். உடனடியாக உங்கள் வீழ்ச்சி நிகழப்போகிறதெனத் தெரிகிறது. நீங்கள் இருவரும் இந்தப் பிராமணரின் கோபத்தால் ஏற்கனவே இறந்துவிட்டீர்களென்றே நான் கருதுகிறேன்[1].(10) இங்கே இருக்கும் முனிவர்கள் அனைவரும் தூய இதயம் படைத்த சந்நியாசிகளாவர். ஆழமான ஞானமெனும் தீபத்தால் இவர்களின் இதயங்கள் ஒளியூட்டப்பட்டதாலேயே தாங்கள் திரட்டிய பாவங்களை இவர்கள் சாம்பலாக எரித்திருக்கிறார்கள். இதோ அந்தத் தூய நிலையிலேயே இவர்கள் தங்கள் வாழ்வைப் பரமனின் தொண்டிற்கு அர்ப்பணித்திருக்கிறார்கள்.(11) இந்த உயரான்மாவை இவ்வாறு நிந்திக்கத் துணிபவன் உங்களைத் தவிர வேறு எவன்? உங்கள் முடிவு அருகில் வந்துவிட்டதென நான் நம்புகிறேன்.(12)என் அன்புக்குரிய மன்னர்களே, நீண்ட காலத்திற்கு முன்னர்ப் பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசமென்று அந்தக் காலச் சமூகத்தை நான்கு ஆசிரமங்களாக வகுத்தனர்.(13) அவற்றில் நான்காவதான சந்நியாச ஆசிரமமே தலைச்சிறந்தது. பெரும் நுண்ணறிவுமிக்கவனும், பெரும்பக்திமானுமான ஒருவன் மட்டுமே சந்நியாச ஆசிரமத்தை ஏற்கத் தகுந்தவனாவான்.(14) நீங்கள் இருவரும் ஒருபோதும் பெரியோருக்குக் கீழ்ப்படிந்து, வழிபட்டுத் தொண்டாற்றியதில்லை. பெரும் முனிவர்களின் உதடுகளில் உதிர்ந்த ஆழ்ந்த ஞானத்தையும் நீங்கள் கேட்டதில்லை. நல்ல தொடர்பால் ஈட்டப்பட்ட ஞானத்தை மதிக்காதவன் எவனும் உங்களைப் போலவே பேசியிருப்பான்.(15)

மன்னா {ஹம்சா}, என்னால் இதுபோன்ற அவதூறுகளைக் கேட்க சகிக்க முடியவில்லை. இருப்பினும் நீ என்னுயிர் நண்பனாக இருக்கிறாய். இஃது எனக்கான இக்கட்டான சூழ்நிலை. நான் என்ன செய்வது? இந்தச் சூழ்நிலையில் நான் ஆதரவற்றவனாக இருக்கிறேன்.(16) மன்னா {ஹம்சா}, உன் குருக்களிடம் இருந்து நீ பெற்ற அறிவனைத்தும் இப்போது உன் துன்பத்திற்கான காரணமாகியிருக்கின்றன. அறக்கோட்பாடுகளைப் பின்பற்றுகையில் அடையப்படும் ஞானம், எப்போதும் நல்ல விளைவுகளையே அருளும். எனினும், பலவந்தமாகவோ, அகங்காரத்துடனோ அடையப்படும் ஞானம் பாவங்களிலேயே ஒருவனை ஆழ்த்தும்.(17) நான் உங்களைக் கைவிடலாமா, உயர்ந்த இடத்தில் இருந்து பாறையில் விழலாமா, நஞ்சுண்ணலாமா, பெருங்கடலில் மூழ்கலாமா என்பது தெரியவில்லை.(18) ஒருவேளை உங்கள் முன்னிலையிலேயே நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமோ?” என்றான் {ஜனார்த்தனன்}. இவ்வாறே அந்த ஜனார்த்தனன், அந்த இளவரசர்கள் இருவரும் நிந்திப்பதைத் தடுத்து அழுது கொண்டிருந்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(19)

துர்வாசரின் எச்சரிக்கை | பவிஷ்ய பர்வம் பகுதி – 84-(துர்வாஸஸோ பாஷணம்)சந்நியாச தர்மத்தை நிந்தித்த ஹம்சனும், டிம்பகனும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “துர்வாசர், அவ்விரு இளவரசர்களையும் சாம்பலாக்கி விடுபவரைப் போல, நெருப்புக்கு ஒப்பான தமது ஒற்றைக் கண்ணால் கோபத்துடன் அவர்களைப் பார்த்தார்.(1) மன்னா {ஜனமேஜயா}, உண்மையில் அம்முனிவர், கோபவசத்தில் மொத்த உலகத்தையும் சாம்பலாக்கப் போகிறவரைப் போல அவ்விரு இளவரசர்களையும் வெறித்துப் பார்த்தார்.(2) அன்புக்குரிய மன்னா, தமது மற்றொரு கண்ணால் பக்திமானும், நற்பேறு பெற்ற பிராமணனுமான ஜனார்த்தனனை அவர் பார்த்தார்.

பிறகு அம்முனிவர், அந்த இளவரசர்களிடம், “இங்கிருந்து உங்கள் உறவினர்களிடம் உடனே திரும்பிச் செல்வீராக.(3) தாமதிக்காமல் விரைவாக இவ்விடத்தை விட்டகல்வீராக. உங்கள் சொற்களால் உண்டான கோபத்தை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை.(4) என் பார்வையில் இருந்து அகல்வீராக. நான் விரும்பினால் மொத்த உலகையும் சாம்பலாக்கிவிடுவேன் எனும் போது, மன்னர்களான உங்கள் இருவரைக் குறித்து என்ன சொல்வது? நல்லறிவுள்ள எந்த மனிதன்தான் இத்தகைய துணிச்சலுடன் என்னிடம் பேசத் துணிவான்?(5) மூட இளவரசர்களே, சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணன் வெகுவிரைவில் உங்கள் செருக்கை அழிப்பான் என்ற தகவலை மட்டும் இப்போதைக்கு உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் {துர்வாசர்}.(6)

சந்நியாசிகளின் நற்குருவான துர்வாச முனிவர், இதைச் சொல்லிவிட்டு விலக முற்பட்ட போது ஹம்சன் வழிமறித்தான்.(7) மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, யமனைப் போன்ற கொடூரனான ஹம்சன், துர்வாசரின் கைகளைப் பிடித்து அவரது இடைக்கச்சையை {கௌபீனத்தை / கோவணத்தைக்} கிழித்தான்.(8) இதைக் கண்ட மற்ற சந்நியாசிகள் பீதையடைந்து பத்துத் திக்கிலும் தப்பி ஓடினர்.

பிராமணன் ஜனார்த்தனன், “ஐயோ, இதுவென்ன துன்பம்?” என்று கதறியும், “நீ என்ன செய்கிறாய்?” என்று தன் நண்பனான ஹம்சனிடம் சொல்லியும்,{9} அவனைத் தடுக்கத் தன்னாலான சிறந்த முயற்சியைச் செய்தான்.

துர்வாச முனிவர் ஹம்சனைக் கொல்லும் வல்லமை பெற்றவர் என்றாலும் அமைதியாக,{10} “இழிந்தவனே, அரச குடும்பத்தின் மதிப்பைக் கெடுப்பவனே, சாபத்தால் உன்னை என்னால் கொல்லமுடியும் என்றாலும், நான் துறவி என்பதால் அதைச் செய்யத் தயங்குகிறேன்.{11} யதுவின் வழித்தோன்றலும், சங்கு, சக்கர, கதாதாரியுமான ஜகந்நாதன் உன் செருக்கை விரைவில் அழிப்பான். யாதவர்களில் முதன்மையான அவன், தற்போது உன்னைப் போன்ற அசுரர்களிடம் இருந்து உலகில் நல்லவர்களைக் காப்பதில் ஈடுபட்டு வருகிறான்.{12,13} இளவரசர்களான நீங்கள் இருவரும், பரமனால் கொல்லப்பட்டு விடுதலை அடைவதால் உண்மையில் அதிர்ஷ்டசாலிகளே. உங்கள் நண்பனும், ஆதரவாளனுமான ஜராசந்தன், தீங்கிழைக்கும் இத்தகைய சொற்களை ஒருபோதும் சொல்ல மாட்டான்.{14} அவன் பெரும் பக்திமான். தீங்கிழைக்கும் உங்கள் நடத்தையால் ஜராசந்தன் உங்கள் பகைவனாவான். நீங்கள் செய்த குற்றங்களை அறிந்தும், உங்கள் மீது கொண்ட நட்பின் காரணமாக அவன் அமைதியாக இருந்தால் அவனும் அழிவையே அடைவான். இதில் ஐயமேதுமில்லை” என்றார் {துர்வாசர்}. துர்வாச முனிவர் இதைச் சொல்லிவிட்டு, மீண்டும் ஹம்சனிடம், “இங்கிருந்து செல். உடனே செல்வாயாக” என்று சொன்னார்.{15-17}

பிறகு சந்நியாசிகளில் சிறந்தவரான அவர், {பிராமணன்} ஜனார்த்தனனிடம், “மேன்மைவாய்ந்த பிராமணா, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} உறுதியான பக்தி கொள்வாயாக.{18} இன்றோ, நாளையோ, நாளை மறுநாளோ நீ {சங்கு, சக்கர, கதாதாரியான} பரமனைச் சந்திப்பாய். முனிவனைப் போல எப்போதும் நீ ஒழுக்கத்தில் உறுதியாக இருப்பாய்.(9-19) சாதுக்கள் இம்மையிலோ, மறுமையிலோ ஒருபோதும் அழிவடைவதில்லை. இல்லந்திரும்பி நடந்தவை அனைத்தையும் உன் தந்தைக்கு {மித்ரஸஹருக்குச்} சொல்வாயாக” என்றார் {துர்வாசர்}”.(20)

துவாரகையில் துர்வாசர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 85-(யதீநாம் த்வாரகாகமநம்)-கிருஷ்ணனைச் சந்திக்க துவாரகை சென்ற துர்வாசரும், யதிகளும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, அதன்பிறகு பெருங்கோபமடைந்த ஹம்சனும், டிம்பகனும் அங்கே இருந்த முனிவர்களின் சந்நியாச தண்டங்கள், கமண்டலங்கள், உணவுக்குப் பயன்படும் மரத்தட்டுகள் ஆகியவற்றையும், இன்னும் பிற சாதனங்களையும் நொறுக்கினர். பிறகு அவர்கள் அந்த ஆசிரமத்திலேயே இறைச்சி {மாமிசம்} சமைக்கத் தங்கள் தொண்டர்களுக்கு ஆணையிட்டனர்.(1,2) இறைச்சியை உண்ட பிறகு அவர்கள் தங்கள் தலைநகருக்குத் திரும்பினர். ஜனார்த்தனன், தங்கள் நண்பர்களிடம் கொண்ட அன்பினால் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.(3) ஜனார்த்தனன், தங்கள் அழிவுக்கான நேரம் மிக அருகில் இருப்பதை நிச்சயமாக உணர்ந்து பெருஞ்சோகமடைந்தான்.

அவ்விரு இளவரசர்களும், அவர்களின் படைகளும் புறப்பட்டுச் சென்ற பிறகு துர்வாச முனிவர்,{4} அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓடிய தமது சீடர்கள் அனைவரையும் கூட்டி, “பெரும் முனிவர்களே {யதீஷ்வரர்களே}, புஷ்கரமெனும் இப்புனிதத் தலத்தில் இருந்து துவாரகாபுரிக்குச் செல்வோம்.{5} அங்கே சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணனைச் சந்தித்து நம் தீயூழை {நமக்கு நேர்ந்த இடையூறை} எடுத்துச் சொல்வோம்.{6} நல்லோரை பாதுகாக்கும் தர்மவர்த்தனனான அவன், அறக் கோட்பாடுகளை நிலைநிறுத்துவதில் அர்ப்பணிப்புள்ளவனாவான்.{7} தன்னை உணர்ந்தோரால் வழிபடப்படும் அவனே, ஆதிதேவனும், நீக்கமற நிறைந்திருக்கும் லோககுருவுமாவான். அவன் பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக அவதரித்திருக்கிறான்.(4-8) உலகஞ்சார்ந்த ஆசைகள் அனைத்தில் இருந்தும், போலி அகங்காரத்தில் இருந்தும் விடுபட்டவர்களும், ஆழமான ஞானத்தை விளைவிப்பதில் மனத்தை நிலைநிறுத்தியவர்களுமான நம்மை அந்தப் பிரபுவே பாதுகாப்பான். பிறரின் மனங்களில் அச்சத்தையூட்டும் பாவிகள் அனைவரையும் அவன் அழிப்பான்.(9) விப்ரர்களே {பிராமணர்களே}, இதுவே நமக்கான சிறந்த செயல் திட்டம் என்பதால் தாமதமில்லாமல் நாம் துவாரகை செல்வோம்.{10} முனிவர்களில் சிறந்தவர்களே, ஹம்சனாலும், டிம்பகனாலும் உடைக்கப்பட்ட நமது கமண்டலங்கள் அனைத்தையும், பிற பொருட்களையும் எடுத்துச் சென்று அந்த ஜனார்த்தனனிடம் காட்டுவோம்” என்றார் {துர்வாசர்}.{11}

நுண்ணறிவுமிக்க அந்த முனிவர்களும், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்ல தண்டங்கள், கமண்டலங்கள், காவி வஸ்திரங்கள், இடைக்கச்சைகள், மரவுரிகள், மரத்தட்டுகள் ஆகியவற்றையும்,{12} ஹம்சனாலும், டிம்பகனாலும் நொறுக்கப்பட்ட அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிருஷ்ணனைச் சந்திக்கத் துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(9-13) இவ்வாறே ஐயாயிரம் முனிவர்கள் புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்கட்டுப்பாடுடையவர்களாகவும், மேனிகள் மயிரால் மறைக்கப்பட்டிருந்தாலும் தலைகளை மழித்துக் கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் சிவபெருமானின் அவதாரங்களாகத் திகழ்ந்தனர். அவர்கள் தங்கள் தலைவரும், பெரும் தவசியுமான துர்வாச முனிவரைப் பகல், இரவுகளாகப் பின்தொடர்ந்து சென்று, கிருஷ்ணனால் பாதுகாக்கப்பட்டு வரும் துவாரகையை அடைந்தனர்.(14,15) இராஜேந்திரா {ஜனமேஜயா}, துர்வாச முனிவரால் வழிநடத்தப்பட்ட அந்த முனிவர்கள் தங்கள் பயணத்தின் முடிவில் காலை வேளையில் துவாரகாபுரிக்குள் நுழைந்தனர். முதலில் ஓர் அழகிய தடாகத்தில் நீராடி ஆசமனஞ்செய்தனர் {வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறை உட்கொண்டனர்}.{16} இவ்வாறு தங்கள் காலைக் கடமைகளை நிறைவேற்றிய அவர்கள், உலக மக்களை ஒடுக்கும் துஷ்டர்கள் அனைவரையும் அழிப்பதெவ்வாறு என்று திட்டமிட்டபடியே சுதர்மம் என்ற சபாமண்டபத்தில் அமர்ந்திருக்கும் கிருஷ்ணனைத் தரிசிக்க மகிழ்ச்சியாகச் சென்றனர்” என்றார் {வைசம்பாயனர்}.(16,17)

துர்வாச வாக்கியம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 86-(ஸ்ரீக்ருஷ்ணம் ப்ரதி துர்வாஸஸோ வாக்யம்)சாத்யகி முதலிய நண்பர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்த கிருஷ்ணனிடம் பேசிய துர்வாசர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, சர்வேஸ்வரனும், விஷ்ணுவும், தாமரை இதழ் கண்களும், கருநிற மேனியும், சுருண்ட கருமுடியும் கொண்டவனும், பீதாம்பரதாரியும், ஆறு செல்வங்கள் நிறைந்தவனும், அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும்,{1} கீர்த்திமானும், ஸ்ரீ பதியும் {லட்சுமி தேவியின் கணவனும்}, நீக்கமற நிறைந்த சாஸ்வத தேவனும், சகல மங்கலங்களும் உடையவனுமான கிருஷ்ணன்,{2} கிரீடத்தால் சிரத்தை அலங்கரித்துக் கொண்டும், கதாயுதம் தரித்துக் கொண்டும் சாத்யகியுடனும், பல இளவரசர்களுடனும் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(1-3) யதுவின் வழித்தோன்றலான அன்புக்குரிய கிருஷ்ணன், சுதர்மமெனும் சபா மண்டபத்தினுள் யுயுதானனுடன் {சாத்யகியுடன்} பந்து விளையாடிக் கொண்டிருந்தான்.(4)

அப்போது தாமரைக் கண்ணனான விஷ்ணு {கிருஷ்ணன்}, சாத்யகியிடம், “நானே முதல் கோலத்தை {புள்ளியை / இலக்கை / வெற்றியை} அடைந்தேன், நீ வெல்லவேண்டுமெனில் மிகக் கடுமையான முயற்சியைச் செய்ய வேண்டும்” என்றான்.(5)

மன்னா {ஜனமேஜயா}, விளையாட்டுக் களத்தின் எல்லையில் வசுதேவர், உத்தவர் உள்ளிட்ட முக்கிய யாதவர்கள் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர்.(6) நீண்ட காலத்திற்கு முன்பு, அழுத்தமான பணிச்சுமை ஏதும் இல்லாத காலங்களில் ராமன் சுக்ரீவனுடன் விளையாடியதைப் போலவே, தலைவனும், வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்பவனுமான கிருஷ்ணனும், தன் நலன்விரும்பிகளான நண்பர்களுடனான விளையாட்டில் மகிழ்ச்சியடைந்தான்.(7) தவறிழைக்காதவனும், விஷ்ணுவுமான கிருஷ்ணன், அந்நாளின் மதிய வேளை வரையில் சாத்யகியுடனான விளையாட்டில் வெற்றியை ஈட்டுவதில் நீண்ட நேரம் இன்புற்றிருந்தான்.(8)

மன்னா {ஜனமேஜயா}, துர்வாச முனிவரின் தலைமையிலான முனிவர்கள் நுழைவதற்கான அனுமதியைப் பெறச் சென்ற காவலர்கள், சுதர்ம சபையின் நுழைவாயிலில் அவர்களை {அந்த முனிவர்களை} மதிப்புடன் அமரச் செய்தாலும் அந்த முனிவர்கள், “நாம் ஏன் காத்திருக்க வேண்டும்?” என நினைத்துத் தாமதமில்லாமல் அரசசபையில் நுழைந்தனர்.(9) துர்வாச முனிவரின் தலைமையில் சென்றவர்களும், நீண்ட காலம் தவம் செய்தவர்களும், தூய இதயம்படைத்தவர்களுமான அந்த முனிவர்கள், விளையாட்டை நிறுத்திவிட்டுக் கையில் பந்துடன் நிற்பவனும், யாதவர்களின் தலைவனுமான கிருஷ்ணனை தரிசித்தனர். அந்த ஹரி, ஒரு கண்ணால் சாத்யகியைக் கவனித்தவாறே, மறு கண்ணால் பந்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கணத்தில் துர்வாச முனிவரின் தலைமையிலான முனிவர்கள் காட்சிக்குள் நுழைந்தனர்.(10-12)

தாமரைக் கண்ணனும், விருஷ்ணி குலத்தைக் காப்பவனுமான கிருஷ்ணனும், சாத்யகி, பலபத்ரன் {பலராமன்}, வசுதேவர், அக்ரூரர், உக்ரசேனர் ஆகியோரும், இன்னும் பிற யாதவர்களும் அந்த முனிவர்களைக் கண்டதும் கவலையடைந்தனர். அவர்கள் ஒருவிதமான அச்சத்துடனேயே தங்களுக்குள், “அஞ்சத்தக்க இம்முனிவர்களின் எதிர்பாரா வரவிற்கான காரணமென்ன?” என்று பேசிக் கொண்டனர்.(13,14)

அப்போது அந்த யாதவர்கள் யாவரும், அற்புதமிக்கவரும், உடைந்த தண்டத்தைக் கொண்டவரும், கிழிந்த கோவணத்துடன் கூடியவரும், உலகத்தையே சாம்பலாக்கக்கூடியவரும், செல்வாக்குமிக்கவருமான அந்தப் பிராமணரை {துர்வாசரை} அணுகினர். ஏதோவொரு முக்கியக் காரியத்தை ஆழமாகச் சிந்தித்தபடியே காணப்பட்டதால் அவர் மனத்துயர் கொண்டவரைப் போல் காட்சியளித்தார். மன்னன் ஹம்சன் அவருக்குப் பெருந்தீங்கிழைத்ததால், அவரது மனத்தின் அடியில் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. உண்மையில் அவர் கிருஷ்ணனைப் பார்த்தபோது, அவரது கண்களில் நெருப்பு வெளிப்பட்டது. யாதவர்களில் முதன்மையானவர்களும் கூட, துர்வாச முனிவரை அந்நிலையில் காண அஞ்சினர்.(15-17)

“இத்தகைய கோபத்தில் இந்த முனிவர் என்ன செய்வார் என்பதை நம்மால் நினைத்தும் பார்க்க முடியாது. இவரிடம் கிருஷ்ணன் என்ன சொல்லப் போகிறான்?” என்று சிந்தித்தவாறே யாதவர்களும் விருஷ்ணிகளும் மதிப்புடன் தங்கள் கைகளைக் கூப்பிப் பணிவுடன், “பிரபுவே, அமர்வீராக” என்றனர்.

அதன்பிறகு துர்வாச முனிவரின் எதிரில் வந்த கிருஷ்ணன், “மேன்மைமிக்கப் பிராமணரே, சுகமாக அமர்வீராக. நான் என்னை உமது கிங்கரனாக {பணியாளனாகக்} கருதுவதால், உமக்குத் தொண்டாற்றவே இங்கே இருக்கிறேன்” என்றான்.(18-20)

துர்வாசர், தமக்குக் கொடுக்கப்பட்ட ஆசனத்தில் விருப்பமில்லாமல் தயக்கத்துடன் அமர்ந்தார். அவரது தலைமையில் வந்த முனிவர்கள் அனைவரும் தங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்தனர். கிருஷ்ணன் அர்க்கியம் முதலிய மங்கலப் பொருட்களை அந்த முனிவர்களுக்குக் கொடுத்தான்.

பிறகு, புலன்களின் தலைவனான கிருஷ்ணன், பின்வருமாறு துர்வாச முனிவரிடம் பேசினான்: “பிராமணரே, எங்கள் நகருக்கு உம்மை அழைத்து வந்த காரணமென்ன? உமது செயல்பாடுகள் அனைத்தும் நற்காரியங்களுக்காகவே அமைந்திருக்கின்றன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நீரும், துறவிகளான உமது சீடர்களும், எங்களைப்போன்ற இல்லறவாசிகளின் காரியங்களை ஒருபோதும் விரும்பமாட்டீர்கள். பொருள்பற்றிலிருந்து விடுபட்டவரான உமக்கு, உலகஞ்சார்ந்த பொருளேதும் விரும்பத்தக்கதல்ல. பயனை விரும்பும் பணியாளர்கள், உலகஞ்சார்ந்த தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக க்ஷத்திரியர்களை அணுகுவர். எனினும், பொருள் விரும்புவோரின் வரவுக்கான காரணமும், உமது வரவுக்கான காரணமும் வேறுபட்டதென நான் நம்புகிறேன். பிராமணரே, உமது வரவின் நோக்கத்தை நான் அறிய விரும்புகிறேன். உமது வரவே, விரைவில் செய்யப்பட வேண்டிய அதிமுக்கிய காரியங்கள் இருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றன. உமது வரவிற்கான நோக்கம் எதுவாக இருந்தாலும், அதை எங்களுக்குத் தெரிவிப்பீராக” என்றான் {கிருஷ்ணன்}.

மன்னா, சக்கரபாணியான ஜனார்த்தனன் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, மூவுலகங்களையும் எரித்து, வழியில் குறுக்கிடும் எதனையும் எரித்துவிடுபவரைப் போலத் தெரியுமளவுக்குத் துர்வாசரின் கோபம் அதிகரித்திருந்தது. உண்மையில், கண்கள் நெருப்பைப் போலச் சிவக்கும் அளவுக்குத் துர்வாசரின் கோபம் அதிகமாக இருந்தது.

இவ்வளவு கோபத்துடனிருந்தாலும் அம்முனிவர் சிரித்தவாறே, “யாதவத் தலைவா, கிருஷ்ணா, நான் வந்த காரணத்தை அறியாதவன் போல் நீ ஏன் பேசுகிறாய்? நீயே விஷ்ணுவின் அவதாரம் என்பதை நானறிவேன் என்றாலும், சாதாரண நரனைப் போல் நடித்து நீ எங்களை வஞ்சிக்கிறாய். தலைவா, நாங்கள் நீண்ட காலம் வாழ்ந்துவருவதால், கடந்த காலத்தில் நடந்தவற்றை அறிந்திருக்கிறோம். அகவீரியத்தினால் மனித அவதாரமேற்றிருக்கும் நீயே தேவர்களின் தலைவன் என்பதை நான் அறிவேன். ஓ! ஜகத்பதியே, நீயே எங்கள் தலைவனும், ஆசானுமாவாய். உன் உண்மையான அடையாளத்தை ஏன் நீ மறைக்கிறாய்?(21-33) தன்னை உணர்ந்த ஆன்மாக்களின் உயிராகவும், ஆன்மாவாகவும் நீயே இருக்கிறாய். பழங்காலத்தில் பிரம்மன் தியானித்த இறுதி இலக்கும், அவன் அடைந்த ஆழ்நிலை ஞானமும் நீயே. உன்னையும் வழிபட்டத்தால் நாங்கள் ஆழ்ந்த ஞானத்தை அடைந்திருக்கிறோம்.(34)

எதிலிருந்து இந்த அண்டம் வெளிப்பட்டதோ அந்த முற்றான உண்மை நீயே. அண்டத்தின் தலைவா, புராணங்களை அறிந்தவர்களால் விராடன் {விராட்புருஷன்} என்று அழைக்கப்படும் அண்ட வடிவாக உன்னைப் பெருக்கிக் கொள்பவன் நீயே. உன் மகிழ்ச்சிக்கான செயல்பாடுகளில் ஈடுபடும் பக்தர்கள் உன் தாமரை பாதங்களை அடைகின்றனர். உன் தாமரைப் பாதங்களைத் தொடர்ந்து நினைவுகூர்ந்து வருவதன் மூலம், இருப்பில் இருந்து விலகி ஆழமான பேரின்ப அருட்கடலில் நாங்கள் மூழ்குகிறோம். உன்னிடம் அன்பும், பக்தியும் கொண்ட பக்தர்கள் உன்னை நேரடியாகவே காண்கின்றனர். மூடர்களால் உன் சச்சிதானந்த உடலின் ஆழ்நிலை இயல்பைப் புரிந்து கொள்ள முடியாது. எனினும் நாங்கள் அந்த மூடர்களைப் போன்றவர்களல்ல.

இவை யாவற்றையும் கருத்தில் கொண்டால் எங்கள் வரவின் காரணத்தை அறிய முடியவில்லை என்ற உன் கூற்றுக் குழப்பத்தை அளிக்கிறது. பரமனே, கேசியைக் கொன்றவனே, காரணங்கள் அனைத்தின் காரணனை அறிந்தோரிடம் இவ்வாறு பேசுவதன் மூலம் நீ என்ன ஈட்டப்போகிறாய்? ஆழமானதும், பிரகாசமானதுமான உன் வடிவம் வேதாந்தத்தில் அமைதியான பிரம்மமாக விளக்கப்பட்டிருக்கிறது. பிரபுவே, பாவமற்றவர்களும், ஆழமான ஆறிவில் ஈர்க்கப்படுவதில் நிறைவடைந்தவர்களுமான யோகிகள் உன்னை எப்போதும் தங்கள் இதயத்தில் கண்டு வருகின்றனர்.(35-40)

வேதங்களில் பரப்பிரம்மன் என்று துதிக்கப்படுபவனும், முற்றான உண்மையுமான உன்னையே நாங்கள் பரமன் என்று அறிகிறோம்.(41) விஷ்ணுவே, “எங்கே விஷ்ணு இருக்கிறானோ அதுவே பரமபதம்” என்ற புகழ்பெற்ற வேத விளக்கத்தின் இலக்காகத் திகழ்பவன் நீயே.(42) பிரபுவே, ஓம் எனும் புனித அக்ஷரத்தின் வித்தாகத் துதிக்கப்படும் பரமாத்மா நீயே. இவை யாவற்றையும் கருத்தில் கொண்டால், எங்கள் வரவின் காரணத்தை அறியவில்லை என்று நீ சொல்ல முடியாது.(43) கோவிந்தா, உன் ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஏதும் உண்டென்றால் நீ அவ்வாறு பேசலாம். எனவே, நாங்கள் இங்கே வந்திருக்கும் காரணத்தை அறியமாட்டாய் என்று நீ சொல்லாதே.(44) கேசவா, யாரிடம் இந்த அண்டம் உண்டானதோ, அண்ட அழிவின் போது யாரிடம் அது கலக்குமோ அந்த உயர்ந்த இயக்குனன் நீயே என்பதை உறுதியாக நம்புகிறேன்.(45)

ஹரியே, புறத்தில் வெளிப்பட்டிருக்கும் அனைத்துக்கும் உண்மை காரணனும், அகத்தில் உயிரினங்கள் அனைத்தின் இதயத்தில் இருப்பவனும் நீயே. நான் உன்னை எந்த வடிவத்தில் தியானித்தாலும் அந்த வடிவத்திலேயே என் இதயத்தில் தோன்றுபவன் நீயே.(46) விபுவே, வாயுவும் விஷ்ணுவின் வெளிப்பாடே என்பதை நான் அறிந்திருக்கிறேன்; வாயு வடிவில் நீ என் இதயத்தில் இருக்கிறாய்.(47) விபுவே, ஆகாயமும் விஷ்ணுவின் வெளிப்பாடே என்பதை நான் அறிந்திருக்கிறேன். அவ்வடிவிலும் நீ என்னுள் இருக்கிறாய்.(48) பூமியும் விஷ்ணுவின் வெளிப்பாடே என்பதால் அவ்வடிவிலும் நீ என்னுள் இருக்கிறாய்.(49) நீரும் உன் சக்தியின் வெளிப்பாடே என்பதால் அவ்வடிவில் என்னுள் நீ நித்தியமாக இருக்கிறாய்.(50) பிரபுவே, பிரகாசமான உன் வடிவை நான் தியானிக்கும்போது அவ்வடிவிலும் என் இதயத்தில் நீ தோன்றுகிறாய்.(51) கேசவா, ஹரியின் வடிவமாக நான் சந்திரனைக் கருதுகிறேன்; நிலவைக் காணும்போதெல்லாம் நான் மகிழ்ச்சியடைகிறேன்.(52) சூரியனை உன் வடிவங்களில் ஒன்றாக நான் கருதும்போது, சூரியனாக நீ எவ்வாறு விரிவடைகிறாய் என்பதை நான் காண்கிறேன்.(53) எனவே, நீயே அனைத்தின் பிறப்பிடமென நான் நம்புகிறேன். எதுவும் உன்னில் இருந்து வேறுபட்டதல்ல. ஜனார்த்தனா, இவை யாவற்றையும் கருத்தில் கொண்டு, “உங்கள் வரவின் காரணமென்ன?” என நீ கேட்கக் கூடாது.(54)

விஷ்ணுவே, நீ அனைத்தையும் அறிந்தவனாக இருந்தாலும், எங்கள் துன்பத்தைத் தணிக்க ஏதும் செய்யாதிருக்கிறாய். பெருந்துன்பத்தில் இருக்கும் நாங்கள், உன் உறைவிடம் நாடி வந்திருக்கிறோம்.(55) கேசவா, நாங்கள் பெரும் மனச்சோர்வில் இருந்தாலும், நீ அலட்சியமாக இருக்கிறாய் என்பதால் பேறில்லா எங்கள் நிலையை நாங்கள் கடிந்து கொள்கிறோம். விஷ்ணுவே, துன்பநிலையிலும் உன் கருணையைப் பெறத் தவறியது எங்கள் கெடுபேறே. ஜனார்த்தனா, சிவனின் வரங்களைப் பெற்ற, செருக்குமிக்க ஹம்சன், டிம்பகன் என்ற க்ஷத்திரியர்கள் இருவரும் பேராணவமடைந்திருக்கிறார்கள். சந்நியாச ஆசிரமத்தைவிடக் கிருஹஸ்த ஆசிரமமே மேன்மையானது என்று சொல்லி அவர்கள் எங்களைப் பயங்கரமாகத் துன்புறுத்துகிறார்கள்.(56-58) நாங்கள் வசிக்கும் ஆசிரமத்தை அழித்து, கொடூரமாகப் பேசி, தங்கள் சொற்களால் எங்களைப் பெரிதும் துன்புறுத்துகிறார்கள்.(59)

பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு எங்கள் ஆசிரமத்தில் அவர்கள் செய்த அடாவடிகளை நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன். உடைந்து நொறுங்கிய இந்த ஆயிரக்கணக்கான தண்டங்களையும், கமண்டலங்களையும், மூங்கிற் கூடைகளையும் காண்பாயாக. இவை யாவும் ஹம்ச டிம்பகர்களால் நொறுக்கப்பட்டவை. இதையுந்தவிர இழிந்தவர்களான அவ்விருவரும் எங்கள் இடைக்கச்சைகளை {கௌபீனங்களை / கோவணங்களைக்} கிழித்தெரிந்தனர். இவை மட்டுமே எங்கள் உரிமையாக இருந்தன. அவர்களால் நொறுக்கப்பட்ட கமண்டலங்கள் இப்போது கபாலங்களை {மண்டை ஓடுகளைப்} போலத் தெரிகின்றன. எங்களைப் பாதுகாப்பது க்ஷத்திரியனான உன் கடமை என்றாலும் இந்நிலையையே நாங்கள் அடைந்திருக்கிறோம். எங்களைக் காப்பதாக நீ சபதம் செய்திருந்தாலும், நீ நீக்கமற நிறைந்தவனாக இருந்தாலும், இந்த முரட்டு இளவரசர்கள் இருவராலும் நாங்கள் துன்புறுத்தப் படுகிறோம்.(60-63)

தலைவா, என் புத்தி குழம்புகிறது. பேறற்றவர்களான நாங்கள் என்ன செய்வது? எங்களுக்குப் பாதுகாப்பை வழங்கக்கூடிய உறைவிடத்தை நாங்கள் வேறு எவரிடம் அடைவோம்?(64) இந்த அயோக்கியர்கள் இருவரும் அடக்கப்படவில்லையெனில் மூவுலகங்களும் சர்வநாசமடையும். இனி பிராமணர்களே இருக்க மாட்டார்கள் எனும்போது, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களைக் குறித்து என்ன சொல்வது?(65) இந்த இளவரசர்கள் இருவரும் சர்வ பலம் பொருந்தியவர்களாகவும், செருக்கில் மிதப்பவர்களாகவும், செல்லுமிடமெல்லாம் தண்டங்களை நீட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள். இந்திரனின் தலைமையிலான தேவர்களாலும் அவர்களை எதிர்க்க இயலாது.(66)

கிருஷ்ணா, பீஷ்மரோ, பாஹ்லீகரோ அவர்களை எதிர்க்க இயன்றவர்களல்ல. வலிமைமிக்க ஜராசந்தனே கூட அவர்கள் சிவனிடம் அடைந்த வரங்களின் வலிமையால் போரிடத் துணியானென்றால் பிறரைக் குறித்து என்ன சொல்வது? அவர்கள் நல்ல நண்பர்களாகவும், ஒற்றுமையாகவும் இருப்பதால் அவர்களுக்கிடையில் உன்னால் வேற்றுமையை உண்டாக்க இயலாது.(67,68) பிரபுவே, அவர்களை வென்று மூவுலகங்களையும் மீட்க இயன்றவன் நீயே. இல்லையென்றால், “நல்லோரைப் பாதுகாப்பேன்” என்ற உன் உறுதிமொழி பொய்யாகும்.(69) இன்னும் அதிகம் சொல்வதில் என்ன பயன்? எங்களைப் பாதுகாப்பதன் மூலம் மூவுலகங்களின் சுமையை அகற்றுவாயாக” என்றார் {துர்வாசர்}. துர்வாச முனிவர் இதைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தார்” என்றார் {வைசம்பாயனர்}.(70)

கிருஷ்ணன் செய்த சபதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 87-(கிருஷ்ணஸ்ய ஹம்ஸடிம்பகவதப்ரதிஜ்ஞா யதிபோஜநம்)-ஹம்சனையும், டிம்பகனையும் கொல்வதாகக் கிருஷ்ணன் செய்த சபதம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “துர்வாச முனிவரின் பேச்சைக் கேட்ட யாதவர்களின் தலைவன் {கிருஷ்ணன்} பெருமூச்சுவிட்டபடியும், பெருங்கவலையுடன் அவரைப் பார்த்தபடியும் பின்வருமாறு பதிலுரைத்தான்.(1)

{கிருஷ்ணன்}, “உங்களுக்கு நேர்ந்தவை அனைத்திற்காகவும் என்னை மன்னிப்பீராக. உங்கள் மனக்குறைகள் தெரியாமல் நான் அலட்சியமாக இருந்துவிட்டேன். உமது கோபத்தைக் கைவிட்டு, தயை கூர்ந்து நான் சொல்வதைக் கேட்பீராக.(2) விப்ரரே, போரில் நான் ஹம்சனையும், டிம்பகனையும் வீழ்த்துவேனென்பது திண்ணம். சங்கரன், இந்திரன், குபேரன், வருணன், யமன் ஆகியோரிடமோ, நான்முகனான பிரம்மனிடமோ அவர்கள் வரங்களைப் பெற்றிருந்தாலுங்கூட, என்னுடைய நண்பர்கள், உறவினர்கள், படைவீரர்கள் ஆகியோரின் துணையுடன் அவ்விரு இளவரசர்களையும் நான் கொல்வேன். அது நிச்சயம் உங்களுக்கு நிறைவைத் தரும்.(3,4) நான் சத்தியத்தைப் பேசுவதால், என் சொற்களை நம்பி உங்கள் கோபத்தைக் கைவிடுவீராக. மிக இழிந்தவர்களான அவ்விரு மன்னர்களையும் கொல்வதன் மூலம், உங்கள் அனைவரையும் நான் நிச்சயம் காப்பேன் என்பதை அறிவீராக.(5)

அவ்விரு பாவிகளும் உங்களுக்குத் தீங்கிழைத்திருக்கின்றனர் என்று நான் அறிகிறேன். அவர்களின் சக்திமிக்கத் தண்டத்தையும், சங்கரனிடம் பெற்ற வரத்தால் உண்டான பலத்தில் அவர்கள் கொண்டிருக்கும் செருக்கையும் நான் கேள்விப் பட்டிருக்கிறேன். ஜராசந்தனுடன் நட்பு பூண்டிருப்பதால் அவர்களை ஒடுக்குவது எளிதல்ல.(6,7) அவர்கள் இல்லாமல் உலகை வெல்ல முடியாது என ஜராசந்தன் நம்புகிறான். அவன், அவர்களுக்காகத் தன் உயிரையும் பணயம் வைப்பான் என்பதில் ஐயமில்லை.(8) பிராமணர்களில் சிறந்தவர்களே, போர் நேரிடுகையில், அவர்கள் நிச்சயம் ஜராசந்தனின் உதவியை நாடுவார்கள். இருப்பினும், அவர்கள் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து நான் கொல்வேன். இதில் நீங்கள் ஐயங்கொள்ள வேண்டியதில்லை. முனிவர்களே, உங்கள் ஆசிரமங்களுக்குத் திரும்பி உங்கள் கடமைகளைச் செய்து கொண்டிருப்பீராக. பலமிக்கவர்களான அவ்விரு போர்வீரர்களையும் விரைவில் நான் வீழ்த்துவேன்” என்றான் {கிருஷ்ணன்}.

இதில் பெரும் நிறைவடைந்த துர்வாசர், “கிருஷ்ணா, மூவுலகின் நன்மைக்காகச் செயல்படும் நீ மகிமையடைவாயாக. கேசவா, அண்டத்தின் தலைவா, உன்னால் சாதிக்க முடியாத காரியம் தான் என்ன இருக்கிறது?(9-12) தேவர்களின் தலைவா, மூவுலகங்களை ஆள்பவனும், அவற்றை அழிப்பவனும் நீயே. அனைவரையும் சமமாகக் கருதுபவனாக நீ இருப்பதால், உனக்கு நண்பனும், பகைவனும் எவனுமில்லை.(13) விஷ்ணுவே, ஹரியே, சக்கரபாணியான கிருஷ்ணா, நான் உன்னை வணங்குகிறேன். நித்திய தூயனும், தூய்மையின் அவதாரமும், தூய்மையில் உயர்ந்தவனும் நீயே.(14) தேவர்களின் தலைவா, உன் அவதாரங்களில் பக்தி கொண்ட பக்தர்களிடம், அன்புடன் இருக்கும் உன்னை அனைவரும் தேடுகின்றனர்.(15) ஜகந்நாதா, உன்னுடைய ஒரு பகுதியாகவே என்னை நான் கருதுகிறேன். நமக்குள் எந்த வேறுபாடும் இல்லை என்பதாலும், சாதுவின் குணம் பொறுப்பதே என்பதாலும் என்னை நீ மன்னிப்பாயாக” என்றார் {துர்வாசர்}.(16)

அப்போது அந்தப் பகவான் {கிருஷ்ணன்}, “விப்ரரே, நீரே பொறுத்தருள வேண்டும். உம்மைப் போன்ற மேன்மையானவர்களைப் பொறுத்துக் கொள்ள எப்போதும் நாங்கள் தயாராக இருக்கிறோம். துறவிகளின் முதன்மையான கோட்பாடு மன்னிப்பதே {பொறுப்பதே / சகிப்பதே} ஆகும். அதுவே அவர்களின் பலமாகவும் அமைகிறது.(17) அஃது ஒருவனிடம் ஆழமான ஞானத்தை விளைவிப்பதைப் போலவே, பொருள் இருப்பில் இருந்து விடுதலை அடையும் நிலைக்கும் அவனை உயர்த்துகிறது. அறம் {தர்மம்}, வாய்மை {சத்தியம்}, ஈகை {தானம்}, புகழ் {கீர்த்தி} ஆகியவையே பொறுமையின் சாரங்களாகத் திகழ்கின்றன. பொறுமையே சொர்க்கத்திற்கான படிக்கட்டுகள் என வேதங்களை அறிந்தோர் சொல்வதால், பிறரை எப்போதும் நீர் மன்னிக்க {பொறுத்துக் கொள்ள} வேண்டும்.(18,19) முனிவர்களில் முதன்மையானவரே, நீங்கள் அனைவரும் பெரும் ஞானம் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். இங்கே வந்திருக்கும் சந்நியாசிகளான உங்கள் அனைவரையும் வழிபடுவதும், உங்களுக்கு உணவளிப்பதும் என் கடமையும், இன்பமுமாகும்” என்றான் {கிருஷ்ணன்}.

“அவ்வாறே ஆகட்டும்” என்று ஏற்ற முனிவர்கள் அனைவரும் கிருஷ்ணனின் வசிப்பிடத்தில் உணவருந்த சம்மதித்தனர். கிருஷ்ணனும் தன் அரண்மனைக்குச் சென்று, இனிமைமிக்க உணவுகளைச் சமைக்க ஆயத்தம் செய்தான். பிறகு அவன் முனிவர்கள் அனைவரையும் அழைத்து, அமர்த்தி, உணவளித்து அவர்களை நிறைவடையச் செய்தான். இந்த விருந்தோம்பலைப் பெற்ற துர்வாச முனிவர், கிருஷ்ணனைப் பெரிதும் துதித்தார்.

ஜனமேஜயா, பிறகு அந்தக் கிருஷ்ணன் நல்ல துணிகளை எடுத்துக் கிழித்து, அவற்றை அந்தத் துறவிகளின் கோவணங்களாக்கிக் கொடுத்தான். அந்த முனிவர்களும், தங்கள் தலைவனிடம் இந்தத் தானத்தைப் பெற்ற மகிழ்ச்சியில் தங்கள் ஆசிரமங்களுக்குத் திரும்பிச் சென்றனர்” என்றார் {வைசம்பாயனர்}.(20-24)

தூதனுப்பல் | பவிஷ்ய பர்வம் பகுதி – 88-(ஹம்ஸடிம்பகயோர்தூதப்ரேஷணம்)-ராஜசூயம் செய்ய நினைத்த ஹம்சனும், டிம்பகனும், ஜனார்த்தனன் என்ற பிராமணனைக் கிருஷ்ணனிடம் தூது அனுப்பியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “சீடர்கள் இல்லந்திரும்பினாலும் துர்வாசர், நாரத முனிவருடன் சேர்ந்து துவாரகையிலேயே தங்கினார். அவர்கள் முற்றான உண்மை குறித்துத் தங்களுக்குள் விவாதம் செய்து காலத்தைக் கடத்தி வந்தனர்.(1) கோவிந்தன் {கிருஷ்ணன்}, முனிவர்கள் வசிப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தான். அதே வேளையில், ஹம்சனும், டிம்பகனும், அரச சபையில் இருந்த தங்கள் தந்தையான மன்னன் பிரம்மதத்தனை அணுகி பின்வருமாறு பேசினர்.(2,3)

{ஹம்சனும், டிம்பகனும்}, “அன்புக்குரிய தந்தையே, மன்னர்களில் முதன்மையானவரே, ராஜஸூய வேள்வி செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்வீராக. இந்த மாதமே அதற்கான மங்கல வேளை வாய்க்கிறது. யஞ்ஜம் இடையூறில்லாமல் நடைபெற நாங்கள் உமக்கு உறுதுணையாக இருப்போம்.(4) நமது குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை, காலாட்படை வீரர்களை அழைத்துக் கொண்டு திசைகள் அனைத்தையும் வெல்ல சகோதரர்களான நாங்கள் இருவரும் ஆவலாக இருக்கிறோம். வேள்விக்குத் தேவையான பொருட்களை உடனே திரட்டத் தொடங்குவீராக” {என்றனர்}.

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, மன்னன் பிரம்மதத்தனும் தன் மகன்களின் முன்மொழிவைத் தயக்கமில்லாமல் ஏற்றுக் கொண்டான். எனினும், அவர்களின் {ஹம்சடிம்பகர்களின்} பிராமண நண்பன் ஜனார்த்தனன், அவர்களின் ஆணவ இயல்பைக் கருத்தில் கொண்டும், இத்தகைய முயற்சி வீணானதே எனத் தீர்மானித்தும் அவர்களிடம், “ஹம்சா, என் சொற்களைக் கவனமாகக் கேட்டுக் கருத்தில் கொண்டு நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். பீஷ்மர், ஜராசந்தன், பாஹ்லீகர் ஆகியோரும், யாதவ வீரர்களும் இருக்கையில் நீங்கள் வெற்றுத் துணிச்சலில் இம்முயற்சியில் இறங்குகிறீர்கள்.(5-9) பீஷ்மர், பெருஞ்சக்திமிக்கவர், பேரனுபவம்வாய்ந்தவர், வாய்மை நிறைந்தவர், தற்கட்டுப்பாடுடன் இருப்பவர். இருபத்தோரு முறை க்ஷத்திரியர்களை அழித்த பரசுராமரையே அவர் ஒரு காலத்தில் வீழ்த்தியிருக்கிறார்.

ஜராசந்தன் போர்க்களத்திற்குள் நுழைந்தால் அவனது பலமும், ஆதிக்கமும் எத்தகையது என்பதை நீங்கள் அறிவீர்கள். விருஷ்ணி குல வீரர்கள் அனைவரும் போர்க்கலையில் திறன்வாய்ந்தவர்களாகவும், ஞானம் கொண்டவர்களாகவும் திகழ்கின்றனர். அவர்களில் பகைவரனைவரையும் வெல்லும் கிருஷ்ணன், இந்தப் பூமியில் எதிர்க்க இயலாத போர்வீரனாகத் திகழ்கிறான்.(10-12) ஜராசந்தனுடன் மீண்டும் மீண்டும் போரிட்டுப் பேரளவில் அவன் அனுபவங்களைத் திரட்டியிருக்கிறான். உண்மையில் எவ்வளவு சக்திமிக்க மன்னனாலும் அவனைப் போர்க்களத்தில் எதிர்த்து நிற்க இயலாது.(13)

வலிமைமிக்கப் பலராமன், தன் ஆற்றலில் செருக்கடைந்து வெறியுடன் இருக்கிறான். அவன் கோபமடைந்தால் மூவுலகங்களையும் மொத்தமாக அழித்துவிடக்கூடியவன்.(14) இஃது என் உறுதியான நம்பிக்கை. வலிமைமிக்கச் சாத்யகியும், போரில் பகைவரனைவரையும் வீழ்த்தும் சக்தியுடன் இருக்கிறான். யாதவர்கள் அனைவரும் கிருஷ்ணனின் கீழ் போரிட எப்போதும் தயாராக இருக்கின்றனர்.(15) உங்களால் துன்புறுத்தப்பட்ட பெரும் முனிவர் துர்வாசர், தமது சீடர்களுடன் துவாரகைக்குச் சென்று கிருஷ்ணனைச் சந்தித்திருக்கிறார்.(16) மன்னர்களில் முதன்மையானவர்களே, இதை நான் எங்கள் வீட்டுக்கு உணவருந்த வந்த ஒரு பிராமணரிடம் இருந்து கேள்விப்பட்டேன். இத்தகைய முக்கியமான சூழலில் சிறந்த செயல்பாட்டை உறுதி செய்ய உங்கள் அமைச்சர்களுடன் அனைத்தையும் விரிவாக விவாதிப்பீராக. அதன் பிறகு தான் நீங்கள் ராஜசூய வேள்வி செய்வது குறித்துச் சிந்திக்க முடியும்” என்றான்.

இதற்கு ஹம்சன், “யார் அந்தப் பீஷ்மன்? அவன் ஒரு பலவீனமான கிழவன். அந்தக் கிழவனுடனா எங்களை ஒப்பிடுகிறாய்? பிராமணர்களில் சிறந்தவனே, கிருஷ்ணனின் தலைமையிலான யாதவர்களும், போதையில் மிதக்கும் பலராமனும் எங்களை எதிர்க்கத் துணிவார்கள் என்று நினைக்கவும் செய்வாயோ? சாத்யகி உள்ளிட்ட யாதவர்களில் எவரும் போர்க்களத்தில் எங்கள் முன்னால் நிச்சயம் நிற்க இயலாது. இதை நீ அறிவாயாக.(17-20) ஒப்பற்ற சக்திவாய்ந்த ஜராசந்தன் எங்கள் நண்பனாகவும், நலன்விரும்பியாகவும் இருக்கிறான். இப்போதே துவாரகைக்குச் சென்று எங்கள் நோக்கங்களை அறிவிக்கும் இந்தச் செய்தியைக் கிருஷ்ணனிடம் சொல்வாயாக.(21)

{செய்தி இதுதான்}, “கேசவா, ராஜசூய யஜ்ஞத்திற்குத் தேவையான சிறந்த பொருள்கள் பலவற்றையும் திரட்டிக் கொண்டு விரைவாக எங்களை அடைவாயாக. உன் செல்வமனைத்தையும், பெருமளவிலான உப்பையும் சேர்த்துக் கொண்டு வருவாயாக. கிருஷ்ணா, தாமதமில்லாமல் என் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவாயாக“.

பிராமணா {ஜனார்த்தனா}, துவாரகைக்கு விரைந்து சென்று, நான் சொன்ன செய்தியை கிருஷ்ணனிடமும், பிற யாதவர்களிடமும் அறிவிப்பாயாக. பிராமணா, என் ஆணையைப் புறக்கணிக்கவோ, என்னைச் சபிக்கவோ நினைக்காதே. நீ என்னிடம் கொண்ட நட்பிற்காக இத்தொண்டை நீ செய்வாயாக” என்றான் {ஹம்சன்}.(22-24)

அன்புக்குரிய ஜனமேஜயா, ஹம்சனால் இவ்வாறு ஆணையிடப்பட்ட அந்தப் பிராமணன் {ஜனார்த்தனன்}, அவர்களுக்குள் இருந்த நட்பைக் கருத்தில் கொண்டு வேறு எந்த வாதத்தையும் முன்வைக்கவில்லை.(25) நித்திய அறத்தைக் கடைப்பிடிக்கும் தர்மாத்மாவான அந்த ஜனார்த்தனன், துவாரகை செல்லத் தயாராகி, “இன்றோ, நாளையோ, நாளை மறுதினமோ நிச்சயம் நான் புறப்படுவேன்” என்று சொல்லிவிட்டுத் தன் பயணத்திற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான்.(26) மஹாத்மாவான அந்த ஜனார்த்தனன் அதிகாலையிலேயே தனியாக வேகமான குதிரையில் ஏறி, சங்கு, சக்கர, கதாதாரியும், காரணங்கள் அனைத்தின் காரணனுமான கிருஷ்ணனைச் சந்திக்கத் துவாரகை நோக்கிச் சென்றான். அவன் மனத்தில், ‘புலன்களின் தலைவனும், நித்தியமான ஸூக்ஷ்ம உடல் கொண்டவனும், அறிவாலும், அருளாலும் நிறைந்தவனுமான ஹரியைத் தரிசிக்கப் போகிறோம்’ என்ற ஒரே நோக்கம் மட்டுமே இருந்தது. இவ்வாறே அவன் சென்று கொண்டிருந்தபோது, அவனது மனம் ஒரு கணமும் விலகாமல் கிருஷ்ணன் மீதே நிலைத்திருந்தது” என்றார் {வைசம்பாயனர்}.(27,28)

துவாரகையை அடைந்த தூதன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 89-(ஜநார்தநாக்யதூதஸ்ய த்வாரவதீப்ரயாணம்)துவாரகைக்குப் பயணிக்கும் போது ஜனார்த்தனன் எண்ணிய எண்ணங்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ராஜேந்திரா, இவ்வாறே அந்தப் பிராமணன் {ஜனார்த்தனன்}, விஷ்ணுவைக் காணும் ஆவலில் குதிரையில் ஏறி புறப்பட்டுச் சென்றான்.(1) கோடை காலத்தில் சூரியனின் வெப்பத்தில் காய்ந்த ஒரு பயணி, தொலைவில் நீரைக் கண்டதும் வேகமாக நடப்பதைப் போலவே கிருஷ்ணனைக் காணும் ஆவலில் அந்தப் பிராமணனும் தன் குதிரையை முடிந்த அளவுக்கு வேகமாகச் செலுத்தினான்.(2,3)

அவன் {ஜனார்த்தனன்}, “ஹம்சன், துவாரகையில் கிருஷ்ணனைக் காணும் வாய்ப்பை எனக்குக் கொடுத்திருப்பதால் என் அன்புக்குரிய நண்பனாகிறான்.(4) துவாரகையில் விஷ்ணுவைக் காணும் என்னைவிடப் பாக்கியசாலி வேறு எவன் இருக்க முடியும்?(5) கிருஷ்ணனைக் காணும் என் பணியை முடித்துத் திரும்பியதும் என்னைக் காணப் போகும் நுண்ணறிவுமிக்க என் அன்னையும் பாக்கியவதியே.(6) வில்லைத் தரித்தவனும், தேவர்களின் தலைவனுமான கிருஷ்ணனின் முகமானது, மலரும் தாமரை மலரின் மகரந்தத்தைப் போன்று பிரகாசிப்பதை நான் காணப்போகிறேன்.(7) நீலோத்பலம் போன்று கரியதும், சங்கு, சக்கரம், கதை, வில், காட்டு மலர் மாலைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்த ஸூக்ஷ்ம மேனியை நான் காணப்போகிறேன்.(8) தலைவர்களின் தலைவனான அந்தத் தாமரைக் கண்ணனை நான் காணும்போது, பேரின்பத்தை உணரப் போகும் என் இதயத்தைப் பீடித்திருந்த இருப்பின் துயரங்கள் அனைத்தும் விலகும்.(9)

மறைமெய்ம்மைசார் யோகியரின் தலைவனான கிருஷ்ணன், தன் மங்கலப் பார்வையை என் மீது செலுத்துவானா? அவன் என்னிடம் மகிழ்ச்சியாகப் பேசுவானா? “மங்கலமாக இருப்பாயாக” என அவன் என்னிடம் சொல்வானா?(10) துவாரகையை அடைந்ததும், மூவுலகங்களையும் படைத்துக் காக்கும் சக்கரபாணியான கிருஷ்ணனை நான் காணப் போகிறேன். அந்தச் சக்கரபாணியின் தாமரை பாதத்தைக் காண என் மனம் ஏங்குகிறது.(11) கௌஸ்துப மணியின் பிரகாசத்தால் ஒளியூட்டப்பட்ட விஷ்ணுவின் மார்பை நான் தியானிக்கிறேன். பயணம் செய்தாலும் என் மனம் கவனம் சிதறாமல் அந்த ஈசுவரனிலேயே நிலைத்திருக்கிறது.(12) 

பட்டுப் பீதாம்பரத்தையும், காட்டு மலர் மாலைகளையும் அணிந்தவனும், அழகிய புன்னகையால் அலங்கரிக்கப்பட்ட முகத்தைக் கொண்டவனுமான கிருஷ்ணனை நான் இன்று மீண்டும் மீண்டும் காண்பேன்.(13) ஹரியின் எழில்மிகு வடிவை நினைக்கும்போதே எனக்கு மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது. நான் பயணிக்கும்போதே கூட, அந்தச் சங்கு, சக்கர, கதாதாரி என் முன்னிலையில் நிற்பதாக உணர்கிறேன்.(14) ஜகத்குருவான கிருஷ்ணன் என் முன்பு நடந்து செல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. “இதோ என் தலைவன்” என்று என் நாவு மீண்டும் மீண்டும் சொற்களை அமைக்கிறது.(15)

“எனக்குக் கப்பம் கொடுப்பாயாக” என்று நான் அவனிடம் சொல்லப் போவதை நினைத்தால் நான் சோகத்தையும், வெட்கத்தையும் அடைகிறேன். ஹம்சனின் இந்தக் கோரிக்கையைத் திமிரின் உச்சமென நான் கருதுகிறேன்.(16) ஹம்சனுக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்றும், அவனது ஆணைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், அவனுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்றும் விஷ்ணுவிடம் நான் சொல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறேன். எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டசாலி நான்?(17)

ஹரியே, விஷ்ணுவே, யதுவின் முதன்மை வழித்தோன்றலே, “நீ ஹம்சனுக்குக் கப்பம் கட்டுவாயாக” என்று நான் சொல்லும்போதே நான் வெட்கமற்ற மூடனாக அறியப்படுவேன்.(18) “மன்னன் ஹம்சனுக்குப் பெருமளவு உப்பைக் கப்பமாகக் கொடுப்பாயாக” என்று ஒருபோதும் சாரங்கபாணியான கிருஷ்ணனிடம் நான் சொல்லக்கூடாது.(19) இருப்பினும் நட்புக்காக அவ்வாறு நான் பேச வேண்டுமே. தூய இதயம்படைத்த ஆன்மாவுக்கு நட்பு துன்பத்தையே தரும்.(20) மறுபுறம் விஷ்ணுவோ எப்போதும் சர்வத்தையும் அறிந்தவன். எனவே, அனைவரின் மனங்களையும் அறிந்த அவன், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியை அடைய வேண்டும் என்றே விரும்புவான்.(21)

இத்தகைய சூழலில் நட்பின் நிர்ப்பந்தத்தில் செயல்படுவதால் நான் குற்றவாளி ஆகமாட்டேன். பேசப் பணிக்கப்பட்ட பயங்கரச் சொற்களைச் சொல்வதிலிருந்து அந்த விஷ்ணுவே என்னைக் காக்க வேண்டும்.(22) கரிய சுருண்ட தலைமயிரையும், சங்கு போன்ற ரேகையுடன் கூடிய கழுத்தையும், ஸ்ரீவத்சமெனும் மச்சத்தால் அலங்கரிக்கப்பட்ட மார்பையும் கொண்டவனும், அண்டத்தைக் காப்பவனுமான விஷ்ணுவை நான் தரிசிக்கப் போகிறேன்.(23) சக்கரபாணியும், யாதவர்களின் தலைவனும், மாணிக்கம் பதித்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அகன்ற தோள்களைக் கொண்டவனும், கௌஸ்துப மணியையும், பிற ரத்தினங்களையும் அணிவதன் மூலம் பிரகாசமாக ஒளிர்பவனும், நீக்கமற நிறைந்தவனுமான கேசவனை நான் தரிசிக்கப் போகிறேன்.(24) 

நினைத்தற்கரிய ஆற்றல்களைப் படைத்தவனும், வெளிப்பட்டிருக்கும் அனைத்தின் உண்மைக் காரணனும், உலகைக் காப்பவனும், பாற்கடலின் பரப்பில் கிடப்பவனுமான நாராயணனை நான் இன்று தரிசிக்கப் போகிறேன்.(25) அவனைக் காண்பதன் மூலம், என் வாழ்வு நிச்சயம் மகிமையடையும்; என் உடல் பிணிகளில் இருந்து விடுபடும். இன்று நான் ஹரியைக் காணும்போது என் வாழ்வின் பயன் நிச்சயம் விளங்கும்.(26) இன்று நான் ஹரியைக் காண்பதன் மூலம், இது வரை நான் செய்து வந்த யஜ்ஞங்களுக்கான பலன்கள் நிச்சயம் கிடைக்கும். அவனைக் காண்பதன் மூலம் இன்று என் கண்கள் உண்மையில் தங்கள் இருப்பின் பயனுக்குச் சாட்சி பகரும்.(27)

பொருந்தாதவையும், பயங்கரமானவையுமான செயல்பாடுகளைச் செய்யுமாறு நான் முன்மொழியப் போகிறேன். எனவே, விஷ்ணு என்னிடம் மனம் நிறைய வேண்டுகிறேன். என்னுடைய கண்கள் இரண்டும் இன்று அந்த ஈசுவரனை உண்மையில் தரிசிக்குமா?(28) இன்று நான் கிருஷ்ணனின் அமுதம் போன்ற எழிலை என் கண்களால் மீண்டும் மீண்டும் பருகப் போகிறேன்.(29) மங்கலமான அவனது கமல பாதங்களின் புழுதியை எடுத்து என் தலையில் பூசிக் கொள்ளப் போகிறேன். அவனது தாமரை பாதத்தின் புழுதியும் தேவலோகத்திற்கான வாயிலைத் திறக்கும் என்பதால் நான் பெரும் நற்பேற்றை அடைந்தவனாவேன்.(30) மேக முழக்கத்தைப் போன்ற கம்பீரமான கிருஷ்ணனின் குரலை நான் இன்று கேட்கப் போகிறேன். ஜகத்பதியும், சக்கரபாணியுமான விஷ்ணுவின் தாமரை பாதங்களை நான் தரிசிக்கப் போகிறேன்.(31)

சந்திரனைப் போன்ற ஹரியின் முகத்தை நான் இன்று காணப் போகிறேன். இந்த மொத்த அண்டமும் ஹரியின் புற வடிவமாகத் திகழ்கிறது. அவ்வாறு நோக்கினால் அவனை நான் எங்கும் பார்க்கிறேன். மிகவும் முறையற்ற வகையில் பேசும் கட்டாயத்தில் இருக்கும் என்னிடம் விஷ்ணு நிறைவடைவானாக. பிரகாசமாக ஆடிக் கொண்டிருக்கும் காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட காதுகளையும், சந்தனம் பூசிய மேனியையும், தோள்வளைகளை அலங்கரிக்கும் ரத்தினங்களின் ஒளியால் அழகூட்டப்பட்ட தோள்களையும், இடது கையில் பாஞ்சஜன்ய சங்கையும் கொண்டவனும், காலை வேளையின் சூரியக் கதிர்களைப் போலப் பொன்னாகப் பிரகாசிப்பவனும், சுதர்சனச் சக்கரத்தின் பிரகாசத்தால் ஒளியூட்டப்படுபவனும், கங்கணங்களாலும், கைவளைகளாலும் அலங்கரிக்கப்பட்ட கைகளைக் கொண்டவனும், பட்டுப் பீதாம்பரம் தரித்தவனும், அகன்ற மார்பைக் கொண்டவனும், தேவர்களின் தலைவனுமான அச்யுதனை நான் எப்போது காணப் போகிறேன்.(32-36)

நேருக்கு நேர் முகமுகமாக ஹரியை நான் இன்று காணப் போவதால், நிச்சயம் நான் பெரும் நல்லூழ் கொண்டவனே. நான் இன்று ஹரியை தரிசிக்கத் தீர்மானித்திருப்பதால் மீண்டும் மீண்டும் என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.(37) பலபத்ரனின் {பலராமனின்} நீட்சியான அனந்தசேஷன் என்ற படுக்கையில் கிடப்பவனும், ஜகந்நாதனுமான கிருஷ்ணனை இன்று நான் காணப் போகிறேன். எப்போதும் வாகை சூடுபவனும், ஜகத்குருவுமான {மொத்த உலகின் குருவுமான} அந்தக் கிருஷ்ணனை நிச்சயம் நான் காண்பேன்.(38)

கரிய நிறம் கொண்டவனும், கௌஸ்துப மணியின் கதிர்களால் ஒளியூட்டப்படுபவனும், அதே ரத்தினத்தால் ஒளியூட்டப்பட்டதும், ஸ்ரீவத்சமெனும் மாயக்குறியுடன் கூடியதுமான அகன்ற மார்பைக் கொண்டவனும், பட்டுப் பீதாம்பரம் உடுத்தியவனும், மகரவடிவ காதுகுண்டலங்களை அணிந்தவனும், தாமரை போன்ற கண்களைக் கொண்டவனும், அற்புத மகுடத்தால் தலை அலங்கரிக்கப்பட்டவனும், பெருங்கரங்கள் இரண்டில் கதாயுதத்தையும், சக்கராயுதத்தையும் தரித்தவனுமான ஹரியின் பிரகாச வடிவம் எனக்குப் புலப்படட்டும்.(39)

நாராயணனைக் காணும் காட்சி என்ற அமுதத்தை இன்று என் கண்களால் நான் பருகப் போகிறேன். இந்த அமுதம், வேத இலக்கியங்களெனும் பெருங்கடலானது, தூய புத்தியெனும் மந்தர மலையின் உதவியையும், உண்மையான விடாமுயற்சி எனும் பெரும்பாம்பு வாசுகியின் உதவியையும் கொண்டு முனிவர்களால் கடையப்பட்டபோது உண்டானதாகும்.(40) இருப்பில் இருந்து விடுபடும் முக்தியை விரும்புவோரின் தியானப் பொருளாக இருப்பவனும், எல்லையற்றவனும், ஆதியில்லாதவனும், அளவற்றவனும், ஸ்தூலமானவனும் {திரளானவனும்}, ஸூக்ஷ்மமானவனும் {நுட்பமானவனும்}, ஏகனும் {ஒருவனும்}, அனேகனும் {பலராக இருப்பவனும்}, மூலனும், அண்டத்தின் பிதாவும், தேவர்களின் முற்றான மகிமையுமான அச்யுதன் என் கண்களின் முன்பும், என் இதயத்திற்குள்ளும் எப்போதும் புலப்படுவானாக” {என்று நினைத்தான் ஜனார்த்தனன்}.(41)

அந்த விப்ரேந்திரன் இவ்வாறு நினைத்தவாறே பெரிதும் நற்பேறு பெற்றவனாகத் தன்னைக் கருதினான். அதன்பிறகு குதிரையைச் செலுத்தியவாறே அவன் துவாரகையின் நுழைவாயிலை அடைந்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(42)

தூதுமொழி | பவிஷ்ய பர்வம் பகுதி – 90-(தூதஸ்ய ஸந்தேஷநிவேதநம்)-ஹம்சனின் செய்தியைக் கிருஷ்ணனிடம் சொன்ன பிராமணன் ஜனார்த்தனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “துவிஜோத்தமனும், கிருஷ்ணனின் பாத கமலங்களில் சரணடைந்தவனுமான ஜனார்த்தனன், வாயில் காப்போனால் வழிநடத்தப்பட்டு, சுதர்மமெனும் சபா மண்டபத்திற்குள் நுழைந்தான். உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருந்தவனும், தேவேசனுமான கிருஷ்ணனையும், உடன் இருந்த பலபத்ரனையும் {பலராமனையும்} அங்கே தரிசித்தான். கிருஷ்ணன் அறக்கோட்பாடுகளின் மொத்த வடிவமாகத் தோன்றினான்.(1,2) சாத்யகியும், நாரதமுனிவரும் கிருஷ்ணனின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தனர். மன்னன் உக்கிரசேனன், துர்வாச முனிவருடன் உரையாடிக் கொண்டிருந்த தலைவனின் {கிருஷ்ணனின்} முன்பு அமர்ந்திருந்தான்.(3) மன்னா, அந்தச் சபையில் கந்தர்வர்கள் பலர் ஆடிக் கொண்டிருந்தனர், அப்சரஸ்கள் பலர் ஆடிக் கொண்டிருந்தனர், சூதர்கள், மாகதர்கள், வந்திகள் ஆகியோர் தலைவனைத் துதித்துக் கொண்டிருந்தனர்.(4) அவர்கள், மதுசூதனனான மாதவனின் மகிமைகளை உரக்கப்பாடிக் கொண்டிருந்தனர். பிராமணர்கள் பலரும் சாம வேத மந்திரங்களை ஓதி தலைவனைப் புகழ்ந்தனர்.(5)

கிருஷ்ணனைத் தன் முன் கண்ட போது, அந்தப் பிராமணனின் உடலில் பரவசத்தின் அடையாளங்கள் வெளிப்பட்டன. அவனது உடலில் மயிர்க்கூச்சம் ஏற்பட்டது. “நான் ஜனார்த்தனன்” என்று அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தன் வணக்கத்தைத் தெரிவித்தான். பலராமனையும் வணங்கிய பிறகு, அவன் கிருஷ்ணனிடம், “தேவேசா, நான் ஹம்ச டிம்பகர்களால் அனுப்பப்பட்ட தூதன்” என்றான். அதற்குக் கிருஷ்ணன், “பிராமணரே, முதலில் இந்த ஆசனத்தில் சுகமாக அமர்வீராக. பிறகு உமது வரவின் காரணத்தை எங்களுக்குச் சொல்வீராக” என்றான். ஜனார்த்தனன், “நன்று” என்று சொல்லி தனக்கு அளிக்கப்பட்ட சிறந்த ஆசனத்தில் அமர்ந்தான்.(6-8)

மன்னா, தலைவன் {கிருஷ்ணன்} இனிய சொற்களால் அந்தப் பிராமணன் ஜனார்த்தனனை வரவேற்று, பிரம்மதத்தன், ஹம்சன், டிம்பகன் ஆகியோரின் நலத்தை விசாரித்தான்.(9) அவன், “விப்ரரே, ஹம்சடிம்பகர்களின் ஒப்பற்ற ஆற்றலையும், உயர்ந்த விருப்பங்களையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். உமது தந்தை நலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறாரா?” என்று கேட்டான்.(10)

ஜனார்த்தனன், “கேசவா, ஜகந்நாதா, மன்னர் பிரம்மதத்தரும்என் தந்தையும் {மித்ரஸஹரும்} நலமாக இருக்கின்றனர். ஹம்சன், டிம்பகன் என்ற சகோதரர்கள் இருவரும் செழிப்புடன் இருக்கின்றனர்.(11)

அப்போது பகவான் {கிருஷ்ணன்}, “துவிஜோத்தமரே, ஹம்சனும், டிம்பகனும் எனக்கு அனுப்பியிருக்கும் செய்தியென்ன? தயக்கமில்லாமல் அனைத்தையும் விரிவாக என்னிடம் சொல்வீராக.(12) பிராமணர்களில் முதன்மையானவரே, அவ்விருவரும் உம்மிடம் சொன்னவை தகுந்தவையாக இருந்தாலும், தகாதவையாக இருந்தாலும் உள்ளபடியே சொல்வீராக. அனைத்தையும் கேட்ட பிறகு, எங்கள் மறுமொழியை நாங்கள் தருகிறோம்.(13) பிராமணரே, தூதராக வந்திருப்பதால் நீர் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. உள்ளபடியே செய்தியைச் சொல்வதுதான ஒரு தூதரின் கடமை, அதற்காக அவர் மீது எந்தப் பழியும் சுமத்தப்படாது.(14) ஜனார்த்தனரே, செய்தி இனிமையானதாகவோ, புண்படுத்துவதாகவோ இருந்தாலும் கவலை வேண்டாம். ஹம்சனும், டிம்பகனும் சொல்லி அனுப்பியது எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்வீராக” என்றான்.(15)

கேசவன் இவ்வாறு பேசியதும், ஜனார்த்தனன், “பகவானே, அறியாமையில் மூழ்கிய சாதாராண மனிதனைப் போல நீ பேசுவதேன்? நேரடியாகவோ, மறைமுகமாகவோ அனைத்தையும் அறிந்தவன் நீ.(16) அச்யுதா, உலகிற்குள் நீ அறியாததேதும் இல்லை. நடைபெறும் அனைத்திற்கும் சாட்சியாக இருந்தாலும் செய்தியைச் சொல்லும்படி என்னை நீ கேட்கிறாய்.(17) ஜகத்பதியே, ஆழமான ஞானத்தில் முன்னேற்றம் கண்டவர்கள், விஷ்ணுவின் அவதாரமாக உன்னைக் காண்கின்றனர். நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மாவைப் போல வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ நடக்கும் அனைத்தையும் நீ காண்கிறாய்.(18) உன் புற சக்தியின் மூலம் நீ அண்டத்தை வெளிப்படுத்தியதால் அண்டம் உன்னுள்ளேயே இருக்கிறது. அண்டத்தில் உள்ள அசைவன, அசையாதனவற்றில் ஏதொன்றையும் நீ அறியாதவனல்ல.(19) ஜகத்பதியே, நீ அனைத்தையும் அறிந்தவன், நீக்கமற நிறைந்தவன். நீ அறியாததேதும் இல்லை. வாழும் உயிர்கள் அனைத்தையும் காப்பவன் நீயே, அண்டத்தை அழிப்பதற்காக ருத்திரனாக விரிவடைபவனும் நீயே.(20)

மாதவா, சத்வ குண அவதாரமான விஷ்ணுவாக அண்டத்தைக் காப்பவன் நீயே. ரஜோ குண அவதாரமான பிரம்மனாக அண்டத்தைப் படைப்பவன் நீயே. நிலை இவ்வாறு இருக்கக் கொண்டு வந்த செய்தியை என்னை நீ சொல்லச் சொல்வது ஏன்?(21) மாதவா, ஆழமான ஞானத்தின் உடல்வடிவமாகவும், இருப்பில் இருக்கும் அனைத்தின் உயிராகவும், ஆன்மாவாகவும் கல்விமான்கள் உன்னையே அறிகின்றனர்.(22) புருஷோத்தமா, ரிஷிகேசா, பேரிலக்கியங்களில் அறிஞர்களாகத் திகழ்பவர்கள், புனித மந்திரங்கள் ஓதப்படுவதற்கான நோக்கம் அல்லது இலக்காக உன்னையே அறிகிறார்கள்.(23) தேவேசா, மாதவா, இவை யாவற்றையும் கருத்தில் கொண்டாலும் பேசும்படி நீ கேட்டுக் கொண்டதால் நான் கொண்டு வந்த செய்தியைச் சொல்கிறேன்.(24)

மன்னர் பிரம்மதத்தர் ராஜஸூய யஜ்ஞத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். அதன் காரணமாகவே ஹம்சனும், டிம்பகனும் என்னை உன்னிடம் அனுப்பி வைத்திருக்கின்றனர்.(25) யாதவர்களிடம் கப்பம் திரட்டவும், உன்னை அவர்களது வேள்விக்கு அழைக்கவும் தான் என்னை அவர்கள் இங்கே விரைந்து அனுப்பினார்கள். கேசவா, அந்த வேள்விக்கான பெருமளவு உப்பை நீ கொடுக்க வேண்டுமென அவர்கள் கோருகிறார்கள்.(26) ஜகத்பதியே, அவர்களின் ஆணையின் பேரில் பெருமளவு செல்வத்தைக் கப்பமாக நேரடியாகப் பெற்றுக் கொள்ளவே என்னை இங்கே அனுப்பி வைத்திருக்கின்றனர். இனி அவர்களின் இரண்டாவது கோரிக்கையைக் கேட்பாயாக.(27) பெருமளவு உப்பை எடுத்துக் கொண்டு தாமதமில்லாமல் திரும்புமாறு அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டனர். கேசவா, இவையே உனக்காக அவர்கள் அனுப்பிய செய்திகள்” என்றான் {ஜனார்த்தனன்}.(28)

மன்னா, அந்த விப்ரேந்திரன் {ஜனார்த்தனன்} இவ்வாறு பேசியதும் கிருஷ்ணன் நீண்ட நேரம் உரக்கச் சிரித்தான். பிறகு அவன் அந்தத் தூதனிடம் பின்வருமாறு பேசினான்,(29) “என் அருமை தூதரே, துவிஜோத்தமரே, மிக நியாயமான என் சொற்களைத் தயை கூர்ந்து கேட்பீராக. மன்னனாக இஃது என் கடமை என்பதால், நான் அவர்களுக்கு மகிழ்ச்சியாகக் கப்பம் கட்டுவேன்.(30) விப்ரரே, நான் அவர்களுக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை திமிரின் உச்சபட்ச வெளிப்பாடாகும். ஐயோ, நல்ல க்ஷத்திரிய குலத்தில் பிறந்த ஹம்சனும், டிம்பகனும் இவ்வளவு ஆணவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(31) எவனும் என்னைக் கப்பங்கட்டச் சொல்வது இதுவே முதல் முறை. இதற்குமுன் என்னிடம் இத்தகைய கோரிக்கையை எவனும் வைத்ததில்லை” என்றான் {கிருஷ்ணன்}.

தூதனிடம் இவ்வாறு பேசிய கிருஷ்ணன், பிறகு யாதவர்களிடம் பின்வருமாறு பேசினான்,(32) “யாதவர்களே, நான் கப்பம் கட்ட வேண்டுமென்ற கோரிக்கை வேடிக்கையானது. மன்னன் பிரம்மதத்தன் ராஜசூய வேள்வி செய்யப் போகிறான், அவனது மகன்களான ஹம்சன், டிம்பகன் இருவரும் அவனுக்கு உதவி செய்கின்றனர். பாவம் நிறைந்தவர்களான அந்த மன்னர்கள், யதுவின் முதன்மை வழித்தோன்றலான கிருஷ்ணன் தங்கள் அடிமையாக உப்பைக் கொண்டு வருவான் என்று நினைக்கின்றனர்.(33,34) யாதவர்களே, போர்க்களத்தில் ஏற்கனவே என்னை வீழ்த்திவிட்டவர்களைப் போல அவர்கள் என்னைக் கப்பங்கட்டும் வாசுதேவனாக்கி இருக்கிறார்கள். இந்தத் தோரணையில் உள்ள எள்ளலைப் பாருங்கள்” என்றான் {கிருஷ்ணன்}.(35)

பலபத்ரன் {பலராமன்} தலைமையிலான முதன்மையான யாதவர்கள் அனைவரும், கிருஷ்ணனின் பேச்சைக் கேட்டதும், ஹம்சடிம்பகர்களின் கோரிக்கையை அறிந்து, எழுந்து நின்று ஆவேசத்துடன் சிரித்தனர்.(36) அந்த யாதவர்கள் அனைவரும், “கிருஷ்ணன் கப்பங்கொடுப்பவன்” என்று சொல்லித் தங்கள் கைகளைத் தட்டியபடியும், ஒருவரையொருவர் உரசியபடியும் உரக்கச் சிரித்தனர்.(37)

மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, யாதவர்களின் ஒலி பூமி முழுவதிலும், ஆகாயம் முழுவதிலும் எதிரொலிக்கும் வகையில் அவர்கள் தங்கள் கைகளைத் தட்டிச் சிரித்தனர். அப்போது அந்த விப்ரன் {ஜனார்த்தனன்}, தன் நண்பன் ஹம்சனை நிந்தித்தவாறே, “ஐயோ, தூதனென்ற பணி எனக்குத் துன்பத்தைத் தருகிறதே” என்று நினைத்தான். இவ்வாறு நினைத்த அவன், சங்கடமடைந்து, கைகளால் தலையைப் பிடித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(38,39)

கிருஷ்ணனின் மறுமொழி | பவிஷ்ய பர்வம் பகுதி – 91-(ஸ்ரீக்ருஷ்ணஸ்ய ப்ரதிஸந்தேஷம்)-ஜனார்த்தனனுக்கு மறுமொழி கூறிய கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “யாதவர்கள் இது போலச் சிரித்துக் கொண்டும், ஏளனம் செய்து கொண்டும் இருந்தபோது, கேசியைக் கொன்றவனான கேசவன் அந்தத் தூதனிடம் {ஜனார்த்தனனிடம்} திரும்பி, “துவிஜரே, உமது நண்பனிடம் திரும்பிச் சென்று என் செய்தியை அவனிடம் சொல்வீராக.(1) விரைவாக வீடு திரும்பி ஹம்சடிம்பகர்களிடம் இதைச் சொல்வீராக: “நான் உங்கள் இருவருக்கும் கொண்டாடப்படும் என் சாரங்கத்தில் இருந்து ஏவப்படும் கணைகளையே கப்பமாகக் கட்டுகிறேன்” {என்று சொல்வீராக}.(2)

சிந்தனைமிக்க அம்மன்னர்கள் இருவருக்கும், என் வாளின் கூர்மையையே நான் கப்பமாகக் கட்டுவேன். அல்லது, என் சக்கரத்தால் அவர்களின் தலைகளைக் கொய்து கப்பமாகக் கட்டுவேன்.(3)

{மேலும் அவர்களிடம்}, “மஹாதேவன் அளித்த வரமே உங்கள் அழிவுக்குக் காரணமாகப் போகிறது. ருத்திரனே உங்களைக் காக்க நேரில் வந்தாலும், முதலில் அவனை வீழ்த்திவிட்டுப் பிறகு உங்கள் இருவரையும் நான் கொல்வேன்.(4) மன்னா, போர்க்களத்தை உன் விருப்பத்திற்கேற்றபடி நீயே தேர்ந்தெடுப்பாயாக. என்னுடைய பெரிய படையுடன் நான் உன்னை அங்கே சந்திப்பேன்.(5) மன்னர்களே, புஷ்கரமோ, பிரயாகையோ, மதுராவோ, அஃது எதுவாக இருந்தாலும் நீங்கள் விரும்பும் இடத்தில் உங்களுடனும், உங்கள் படைவீரர்களுடனும் போரிட நான் தயாராக இருக்கிறேன். ஆஞ்சாதீர்கள். நான் உங்களை அந்தப் போர்க்களத்தில் நிச்சயம் சந்திப்பேன்” {என்றும் சொல்வீராக}.

பிராமணரே, ஜனார்த்தனரே, நட்பின் காரணமாக இந்தச் செய்தியை நீர் உமது நண்பர்களுக்குத் தெரிவிக்கத் தயங்கினால், சாத்யகியை உம்முடன் அழைத்துச் செல்வீராக. அவன் தேவையானவை அனைத்தையும் செய்வான். {சாத்யகியை அழைத்துச் சென்றால்} இவை என் சொற்கள் என்பதை மட்டும் உறுதி செய்தவாறு வெறுமனே செயலேதும் செய்யாமல் நீர் பார்த்துக் கொண்டிருக்கலாம்.(6-8)

விப்ரேந்திரரே, நீர் என்னிடம் கொண்ட மாசற்ற பக்தியை நான் நன்கறிவேன். அருமை ஜனார்த்தனரே, நீர் என்னுடைய கடந்த காலங்களையும், என் பெயர்களையும், என் வடிவங்களையும், என் குணங்களையும் தொடர்ந்து கேட்பதிலும், விவாதிப்பதிலும் ஈடுபட்டால் துன்பம் நிறைந்த இம்மையிலும் எப்போதும் நீர் வாகை சூடுவீர்” என்றான் {கிருஷ்ணன்}”.(9)

ஹம்சமொழி | பவிஷ்ய பர்வம் பகுதி – 92-ஹம்ஸவாக்யம்)சால்வ நகரில் உள்ள ஹம்சடிம்பகரின் சபைக்கு சாத்யகியுடன் திரும்பிச் சென்ற ஜனார்த்தனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அந்த விப்ரனிடம் {ஜனார்த்தனனிடம்} பேசிய பிறகு கிருஷ்ணன் சாத்யகியிடம், “சைநேயா {சிநியின் பேரனே}, இந்த விப்ரருடன் சென்று நான் இப்போது சொன்னவற்றை ஹம்சடிம்பகர்கள் என்ற சகோதரர்கள் இருவரிடமும் மீண்டும் சொல்வாயாக.(1) நாம் போர்க்களத்தில் சந்திக்கும் வகையில் நான் சொன்ன செய்தியை மாற்றமில்லாமல் அவர்களிடம் மீண்டும் சொல்வாயாக. அவர்கள் எதை எதிர்க்கிறார்கள் என்று விளக்கிப் போதுமான எச்சரிக்கையையுயம் அவர்களுக்குக் கொடுப்பாயாக.(2) சாத்யகி, யதுவின் வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, வில்லை எடுத்துக் கொள்வாயாக, உடும்புத் தோலுறைகளைச் சூடிக் கொள்வாயாக. துணைவரெவரும் இல்லாமல் ஒரேயொரு குதிரையை மட்டும் எடுத்துச் செல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(3)

“நன்று” என்று சொன்ன சாத்யகி, துணைவரெவருமின்றி வேகமான குதிரையொன்றில் ஏறினான்.(4) {ஜனார்த்தனன் என்ற அந்தத்} தூதனுக்கு விடைகொடுத்தனுப்பிய கிருஷ்ணன், “ஐயோ, ஹம்சனும், டிம்பகனும் இவ்வளவு ஆணவமிக்கவர்களாக இருக்கிறார்களே. இத்தகைய ஆணவத்தைக் காண்பதரிது” என்றான் {கிருஷ்ணன்}.(5)

மாதவனுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவித்த தூதன் ஜனார்த்தனன், துவாரகையை விட்டகன்று சாத்யகியுடன் சால்வ நகரத்தை நோக்கிப் புறப்பட்டான்.(6) அந்த விப்ரன், அந்நகரை அடைந்து ஹம்ச டிம்பகர்களின் சபா மண்டபத்திற்குள் நுழைந்து சாத்யகிக்கு ஒரு நல்ல ஆசனத்தைக் கொடுத்தான். சாத்யகியின் அருகில் அமர்ந்த பிறகு அவனை அவ்விரு இளவரசர்களுக்கும் அவன் அறிமுகம் செய்து வைத்தான்.(7,8)

{ஜனார்த்தனன்}, “மன்னா, இவன் சாத்யகி. இவன் துவாரகையின் தூதனாக வந்திருக்கிறான். இவன் கிருஷ்ணனின் வலது கையாகச் செயல்படுபவன்” என்றான்.

ஜனார்த்தனனின் சொற்களைக் கேட்ட ஹம்சன் பின்வருமாறு மறுமொழி கூறினான் :(9) “நான் ஏற்கனவே துவாரகையில் யாதவர்களுடனான உன் சந்திப்பைக் குறித்துக் கேள்விப்பட்டேன். இன்று கிருஷ்ணனை நான் முகமுகமாகச் சந்திக்கப் போகிறேன். சாத்யகி நிதானமானவன், வில் தரிப்பதில் சமர்த்தன், வேதங்களை நன்கறிந்தவன், ஆயுதங்கள் அனைத்தையும் கையாள்வதில் தனித்திறன் கொண்டவன் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவன் தானே நம் முன் வந்திருப்பதால் இவனைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.(10,11) சாத்யகி, வசுதேவர், கிருஷ்ணன், பலபத்ரன் {பலராமன்} ஆகியோர் நலமா? உக்கிரசேனரும் பிறரும் செழித்திருக்கின்றனரா?” என்று கேட்டான் {ஹம்சன்}.(12)

சாத்யகி மென்மையாக, “ஆம், அனைவரும் நலம்” என்றான். இந்நேரத்தில் அவனுடைய முகம் கோபத்தில் பொங்கிக் கொண்டிருந்தது.

அப்போது நாநயமிக்கவனான ஹம்சன் ஜனார்த்தனனிடம், “பிராமணா, சக்கரபாணியான கிருஷ்ணனை நீ சந்தித்தாயா? உள்ளபடியே நான் அனுப்பிய செய்தியை நீ அவனிடம் சொன்னாயா? உன்னுடைய துவாரகைப் பயணத்தைக் குறித்த அனைத்தையும் நீ எனக்குச் சொல்வாயாக” என்றான் {ஹம்சன்}”.(13,14)

சாத்யகியின் சீற்றம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 93-(ஸாத்யகிவாக்யம்)-கிருஷ்ணனுடனான தன் சந்திப்பை விவரித்துக் கூரிய ஜனார்த்தனன்; வெகுண்டெழுந்த ஹம்சன்; சாத்யகியின் மறுமொழி.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஹம்சன் பேசியதைக் கேட்டதும், நாராயணனின் அவதாரமான கிருஷ்ணனைப் புகழ்வதில் எப்போதும் ஆவலுடைய தர்மாத்மாவான ஜனார்த்தனன் புன்னகைத்தவாறே பின்வருமாறு மறுமொழி கூறினான்:(1)

{ஜனார்த்தனன்}, “ஆம். ஒரு கையில் சங்கையும், மறுகையில் வெல்லப்பட முடியாத சக்கரத்தையும் கொண்ட கிருஷ்ணனை நான் கண்டேன். அவன் பொன்னாலான கைவளைகளாலும், கௌஸ்துப ரத்தினத்தின் பிரகாசத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தான்.(2) யாதவப் பெரியோராலும், முதன்மையான பல முனிவர்களாலும் தொண்டாற்றப்பட்டவனும், வலிமைமிக்க மன்னர்களாலும் மாகதர்களாலும் துதிக்கப்பட்டவனுமான அந்தக் கிருஷ்ணனை நான் தரிசித்தேன். புதிதாய் துளிர்த்த தளிர்களைப் போன்று மென்மையான சிவந்த உதடுகள், அவனது மயக்கும் புன்னகைக்கு மேலும் மெருகூட்டின.(3) புராதன முனிவர்களாலும், தேவர்களாலும் தியானிக்கப்படும் வடிவம் கொண்டவனும், தொண்டில் ஈடுபடும் பக்திமான்களால் உணரப்படுபவனும், நீலோத்பல மலர் போன்ற கரிய நிறம் கொண்டவனும், பொற்றாமரைக்கு ஒப்பான வயிற்றைக் கொண்டதால் பத்மநாபன் என்ற பெயர் கொண்டவனுமான கிருஷ்ணனை நான் தரிசித்தேன்.(4) பிறப்பற்றவனும், இனிய உரைகளால் யாதவர்களுக்குப் பேரின்பத்தை அருள்பவனும், பெரும் முனிவர்களின் துணையுடன் முக்திக்கு வழிவகுக்கும் வேதங்களின் உண்மை சாரத்தை விளக்கிக் கொண்டிருந்தவனுமான அந்த ஜகத்குருவை நான் மீண்டும் மீண்டும் தரிசித்தேன்.(5)

உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மையளிப்பவனும், அண்டம் முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பவனும், பூமியின் சுமையைக் குறைப்பதற்காக இப்போது அவதரித்திருப்பவனுமான அந்த ஹரியை நான் மீண்டும் மீண்டும் தரிசித்தேன்.(6) யாதவேஷ்வரனும், துதிக்கப்படத்தகுந்தவர்களில் முதன்மையானவனும், ஈசுவரனும், மகிழ்ச்சியுடன் இருப்பதில் ஆவலுள்ள யது குலத்தினருடன் விளையாடிக் கொண்டிருப்பவனுமான கிருஷ்ணனை நான் இன்று கண்டேன்.(7) பீஷ்மகனின் மகளான ராணி ருக்மிணியுடன் துவாரகையில் வசிக்கும் தாமரைக் கண்ணனான அந்த ஹரியை நான் மீண்டும் மீண்டும் கண்டேன். நாராயண வடிவில் அவனே கர்போதகப் பெருங்கடல் பரப்பில் கிடக்கிறான். அவன் பெருஞ்செழிப்புடையவன், பக்தர்களுக்கு அன்பன், பக்தர்களின் உறைவிடம், முற்றுமுழுமங்கல சிவம்.(8) பரவச நிலையில் எனக்குக் கிருஷ்ணனின் தரிசனம் கிடைத்தது. கிருஷ்ணனின் எழிலுடல் அமுதத்தைக் கண்சிமிட்டாமல் நான் பருகினேன். அவனைக் கண்டபோது, “என் வாழ்வின் பயன் சித்தியடைந்தது” என்ற நினைப்பால் என்னையே நான் மறந்திருந்தேன்.(9) நீக்கமற நிறைந்தவனும், நினைத்தற்கரிய ஆற்றல்களைப் படைத்தவனுமான கிருஷ்ணனை நான் துவாரகையில் கண்டேன். உயிரினங்களால் நிறைந்த அண்டத்தைக் காப்பவனும், படைப்பவனும் அவனே. தன் கரத்தில் தாமரை மலரை ஏந்தியிருந்த விபுவான அந்தப் பிரபுவைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஆழ்ந்த பரவசத்தில் நான் மூழ்கினேன்.(10)

கௌஸ்துப மணியால் அலங்கரிக்கப்பட்ட மார்பைக் கொண்ட கிருஷ்ணன் நூற்றுக்கணக்கான சாமரங்களால் வீசப்படும்போது நான் அவனைக் கண்டேன்.(11) அந்த யாதவேஷ்வரன் {யாதவர்களின் தலைவன்}, உங்கள் பெயர்களைச் சொன்ன போது பெரும் அருவருப்பை வெளிப்படுத்தினான். உங்கள் நிலையை அறியும் பேராவலுடன் அவன் இருந்தான்.(12) அவன், “அந்த மூடர்கள் இருவரையும் நான் எப்போது காண்பேன்? அவர்களை என்னிடம் வரச் செய்வது எவ்வாறு?” என்று நினைத்தான். சங்கு தரித்திருந்த அந்தத் தேவேசன் இச்சொற்களால் உங்கள் மீது கொண்ட அருவருப்பை வெளிப்படுத்தினான்.(13) அந்தப் பிரபுவைக் கப்பம் கட்டக் கேட்ட போது, உங்களை ஏளனம் செய்து உரக்கச் சிரிக்கத் தொடங்கினான். அதை நான் என் கண்களால் கண்டேன். அந்நேரத்தில் அவன் பெரும் முனிவர் நாரதருடனும், முனிவர்களிற்சிறந்த துர்வாசருடனும் பேசிக் கொண்டிருந்தான்.(14) பிரம்மசூத்திரங்களைச் சீடர்களுக்கு உபதேசிக்குமாறு துர்வாச முனிவரிடம் கிருஷ்ணன் வலியுறுத்தினான். நான் அந்த ஹரியைக் கண்டபோது பின்வரும் எண்ணம் என் மனத்தில் தொடர்ந்து தோன்றியபடியே இருந்தது.(15) என்னிரு நண்பர்களும் தங்களால் சாதிக்க முடியாத ஒன்றைச் செய்ய முயற்சிக்கிறார்கள் என்றே அப்போது நான் நினைத்தேன். பூமியின் தலைவா, ராஜஸூய வேள்வி செய்யும் முயற்சியை நீங்கள் கைவிட வேண்டும் என்பதே என் ஆலோசனையாக இருந்தது.(16) கப்பம் கட்டுமாறு நீங்கள் கிருஷ்ணனுக்கு அனுப்பிய செய்தியை நான் அவனிடம் சொன்னபோது, அவன் அதற்குப் பதில் உங்களைக் கைப்பற்றிச் சிறையிலடைப்பேன் என்றான். நான் சொன்ன யாவற்றையும் சாத்யகி உன்னிடம் உறுதி செய்வான்” என்றான் {ஜனார்த்தனன்}.(17)

அந்தப் பிராமணன் இச்சொற்களைச் சொல்லிக் கொண்டிருந்தபோது பெருஞ்சினமடைந்த ஹம்சன் பின்வரும் சொற்களில் மறுமொழி கூறினான்: “பிராமணா, நீ என்ன சொல்கிறாய்? மூவுலகையும் வெல்ல எத்தனிக்கும் எங்களிடம் இவ்வாறு பேச எப்படித் துணிந்தாய்?(18) மாயாவியான கிருஷ்ணன் உன்னைத் தன் மாய சக்தியால் வசப்படுத்தியிருக்கிறான். அவன் முன்னிலையில் நின்றதற்கே நீ இவ்வளவு மோஹமடைந்திருக்கிறாய்.(19)

நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கதாயுதம், வில் ஆகியவற்றைத் தரித்தவனும், காட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனுமான விருஷ்ணி குலக் கிருஷ்ணனைக் கண்டதும் நீ மாயையில் மயங்கியிருக்கிறாய். அவனது சபையில், அவனது துதிபாடிகளால் துதிக்கப்படும் அவனது சக்தியையும், பெரும் புகழையும், யாதவ விருஷ்ணிகளின் பெரும் படை பலத்தையும் கேட்டு மயங்கியிருக்கிறாய். அந்தச் சக்கரபாணியைக் கண்டதும் நீ மாயையில் வீழ்ந்திருக்கிறாய்.(20-22) துர்மதி கொண்ட பிராமணா, அந்தப் பாவியின் மாயையில் நீ இன்னும் கட்டுண்டிருக்கிறாய். அவனது மாயை உன்னைப் புத்தியற்ற முற்றான மூடனாக்கியிருக்கிறது.(23) பிராமணா, அந்த மாயையில் நீ அமைதியிழந்து குழம்பியிருக்கிறாய். ஐயோ, நீ என்னை அவனுக்கு இணையாகவாவது சொல்லியிருக்க வேண்டும்.(24)

விப்ரா, நட்பால் மட்டுமே உன் நடத்தையைப் பொறுத்துக் கொள்கிறேன். இல்லையென்றால் இத்தகைய சொற்களை வேறு யாரால் பொறுத்துக் கொள்ள இயலும்?(25) மந்த மதி படைத்த விப்ரா, உன் நட்பை இனியும் நான் விரும்பாததால், உலகில் நீ விரும்பும் வேறு எந்த இடத்திற்காவது சென்று விடுவாயாக.(26) அந்த இடையனை வீழ்த்தி, எண்ணற்ற யாதவர்களைக் கொன்ற பிறகு நான் யஜ்ஞம் செய்வேன். “யாதவர்களை வெல்வோம்” என்பதே எங்கள் முதன்மை தீர்மானமாகும்.(27) விப்ரா, இங்கிருந்து உடனே சென்றுவிடுவாயாக. நீ கடுமொழி பேசும் ஆணவக்காரனாக இருக்கிறாய். என் பாதுகாப்பில் வாழ்ந்து கொண்டே நீ என் பகைவரைப் புகழ்கிறாய்.(28) எத்தனை வகைக் கஷ்டங்களை எதிர் கொண்டாலும் ஒருபோதும் நான் ஒரு விப்ரனை {பிராமணனைக்} கொல்ல மாட்டேன்” என்றான் {ஹம்சன்}.

{அந்தப் பிராமணனிடம்} இதைச் சொன்ன ஹம்சன், சாத்யகியிடம் திரும்பி பின்வருமாறு பேசினான்:(29) “யாதவா, நீ ஏன் இங்கே வந்தாய்? நந்தசுதன் {நந்தனின் மகன்} உன்னிடம் என்ன சொன்னான்? என்ன கப்பம் கொண்டு வந்தாய்?” என்று கேட்டான்.(30)

சாத்யகி, “ஹம்சா, சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணனின் சொற்களைக் கவனமாகக் கேட்பாயாக. அவன் {கிருஷ்ணன்}, “என்னுடைய சாரங்க வில்லைக் கொண்டும், கல்லில் கூராக்கப்பட்ட கணைகளைக் கொண்டும் நான் உனக்குக் கப்பங்கட்டுவேன். ஹம்சா, என் வாளால் உன் தலையைக் கொய்து நான் உனக்குக் கப்பங்கட்டுவேன்” என்று {உன்னிடம் சொல்லுமாறு} சொல்லி அனுப்பினான்.(31,32) துஷ்டா, மன்னர்களில் இழிந்தவனே, இவையே உன்னிடம் கிருஷ்ணன் சொல்லச் சொன்ன சொற்கள். நீ செய்ததைவிடப் பெரிதாக வேறு எவனாலும் தன் ஆணவத்தை வெளிப்படுத்த முடியாது? மனிதர்களில் இழிந்தவனே, ஜகத்பதியிடம் கப்பம்பெற நினைக்கும் எந்த மன்னனின் நாவும் அறுக்கப்பட வேண்டும். திமிருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிறந்த வழிமுறை அதுதான். போர்க்களத்தில் கிருஷ்ணனின் பாஞ்சஜன்ய சங்கின் ஒலியையும், சாரங்கத்தின் நாணொலியையும் கேட்ட எவன்தான் தன்னுயிர் தப்புமென எதிர்பார்ப்பான்? நீ இன்னும் உயிருடன் இருப்பது உன் பாக்கியமே. சிவனிடம் வரம்பெற்றதால் செருக்கில் மிதக்கும் உன்னைத் தவிர வேறு எவனால் கிருஷ்ணனிடம் அவ்வாறு கேட்க இயலும்?

பலபத்ரன் {பலராமன்}, நான் உள்ளிட்ட வலிமைமிக்கப் போர்வீரர்கள் கிருஷ்ணனின் துணைவர்களாக இருக்கிறோம். முதலில் பலராமன், இரண்டாவது நான், மூன்றாவது கிருதவர்மன், நான்காவது நிசடன், ஐந்தாவது பப்ரு, ஆறாவது உத்கலன், ஏழாவது நுண்ணறிவுமிக்கத் தாரணன், எட்டாவது சாரங்கன், ஒன்பதாவது விப்ருது, பத்தாவது விவேகியான உத்தவர் ஆகியோர் அவனுக்குத் துணையாக இருக்கிறோம். நாங்கள் அனைவரும் தடுக்கப்பட முடியாத ஆற்றல் படைத்தவர்கள். போர்க்களத்தில் இந்த ஒப்பற்ற போர்வீரர்கள் அனைவரும் எங்கள் பாதுகாவலனும், சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணனுக்கு முன் நிற்போம் என்பதை அறிவாயாக. அவனது மகன்களான பிரத்யும்னன், சாம்பன் ஆகியோர் இருவரும், பலத்தில் இரட்டையர்களான அஸ்வினி குமாரர்களைப் போன்றவர்களாவர். உண்மையில் அவர்கள் இருவரால் மட்டுமே கூட, சகோதரர்களான உங்கள் இருவரையும் போரில் எளிதாகக் கொன்றுவிட இயலும். என் சொற்களைக் கேட்ட பிறகும் உனக்கு வெற்றியில் நம்பிக்கை இருந்தால் சிவனிடம் பெற்ற விற்களையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு போர்க்களத்தில் நின்று போரிடுவாயாக.(33-42)

மூவுலகங்களையும் காப்பவனும், பகைவருடன் போரிட எங்களைப் போன்ற பணியாள்களைக் கொண்டவனுமான ஜகத்பதியிடமே கப்பம் கேட்டுவிட்டு உயிருடன் இருப்போமென எவனால் நம்ப முடியும்?(43) மூவுலகங்களையும் காப்பவனான கிருஷ்ணன், கொண்டாடப்படும் தன் சாரங்க வில்லில் இருந்து ஏவப்படும் சரங்களால் போர்க்களத்தில் உங்கள் இருவரையும் நிச்சயம் கொல்வான்.(44) புனிதத்தலமான புஷ்கரமோ, கோவர்த்தன மலையோ, மதுராவோ, பிரயாகையோ போர்க்களம் எதுவாக இருந்தாலும் உன் விருப்பப்படி தேர்ந்தெடுத்துத் தாமதமில்லாமல் அங்கே வந்து சேரும்படி அந்த ஜகத்பதி சொல்கிறான். நீ விரும்பிய இடம் எதுவாக இருப்பினும் உன் ஆற்றலை அங்கே வெளிப்படுத்தலாம். மொத்த அண்டத்தையும் காக்கும் சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணனின் அனுமதியில்லாமல் எவனால் ராஜஸூய யஜ்ஞத்தைச் செய்ய முடியும்? நீ பேசியதுபோல் பேசிவிட்டு வேறு எவனால் கவலையில்லாமல் உன்னைப் போல இருக்க முடியும்?(45-47) மூடர்களே, இவ்வாறே நீங்கள் தொடர்ந்தால் மொத்த உலகிற்கும் நீங்கள் கேலிப்பொருளாவீர்கள்” என்றான் {சாத்யகி}. வீரனான சாத்யகி இவ்வாறு பேசிவிட்டு, அவ்விரு இளவரசர்களின் முன்னிலையில் அமைதியாகப் புன்னகைத்து நின்றான்” என்றார் {வைசம்பாயனர்}.(48)

சாத்யகியின் எச்சரிக்கை | பவிஷ்ய பர்வம் பகுதி – 94-(ஸாத்யகிப்ரதிப்ரயாணம்)-ஹம்சனுக்கும் சாத்யகிக்கும் இடையில் நடந்த உரையாடல்; அவர்களை எச்சரித்த சாத்யகி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, சாத்யகியின் வாக்கியங்களைக் கேட்டுக் கொண்டிருந்த ஹம்சனும், டிம்பகனும் பெருங்கோபத்துடன் அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்கிவிடுபவர்களைப் போலத் தங்கள் கண்களைத் திக்குகள் அனைத்திலும் துருதுருவென உருட்டினர். சாத்யகியின் எச்சரிக்கையை நினைத்துத் தங்கள் கைகளைப் பிசைந்தவாறே தங்கள் சிற்றரசர்களிடம் பின்வருமாறு பேசினார்:(1,2) {அவர்கள்}, “நந்தனின் மகன் எங்கே? செருக்குடன் வெறி கொண்டிருக்கும் ராமன் {பலராமன்} எங்கே?” என்றனர். ஹம்சனும், டிம்பகனும் இவ்வாறே சாத்யகியின் முன்னிலையில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.(3) 

பிறகு சாத்யகியிடம், “யதுவின் வழித்தோன்றலே, என்ன மடத்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறாய்? உடனே செல்வாயாக. நீ இங்கே தூதனாக வந்திருக்கிறாய். இல்லையென்றால் நீ சொன்னவற்றுக்காகக் கொல்லத்தக்கவனாகிறாய். பித்தனைப் போலப் பேசும் வெட்கமற்றவன் நீ. மன்னர்களான எங்கள் இருவருக்கும் மொத்த உலகத்தையும் ஆளும் உரிமை இருக்கிறது. எங்களுக்குக் கப்பங்கட்டுவதைத் தவிர்த்துவிட்டு அதைச் சொல்ல எவனும் உயிருடன் இருப்பது எவ்வாறு?(4-6) கோபாலகர்கள், யாதவர்கள் ஆகியோர் அனைவரையும் கைப்பற்றி அவர்கள் உடைமைகள் அனைத்தையும் கப்பமாக்கிக் கொள்ளப் போகிறோம். மனிதர்களில் இழிந்தவனே, உடனே செல்வாயாக.(7)

உன் பேச்சுப் பொறுத்துக்கொள்ளத்தகுந்ததாக இல்லை. இங்கே நீ தூதனாக வந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை. சங்கரன் எங்களுக்கு வரங்களையும், தெய்வீக ஆயுதங்களையும் அருளியிருக்கிறான். அந்த இடையனை வீழ்த்திவிட்டு எங்கள் தந்தையை நாங்கள் ராஜசூய வேள்வி செய்ய வைப்போம்.(8,9) நீ குறிப்பிட்ட யாதவர்கள் அனைவரும் கோழைகளாவர். நான் முதலில் அவர்களை வீழ்த்திய பிறகு கேசவனைக் கொல்வேன்.(10) நாங்கள் எங்கள் பெரும்படையைத் திரட்டி, எங்கள் படைவீரர்களை விற்களும், கணைகளும், கதாயுதங்களும், பராசங்களும், முசலங்களும், பிற ஆயுதங்களும் கொண்டவர்களாக ஆயத்தம் செய்வோம். ஆயிரக்கணக்கான ரதங்களும், அளவற்ற ஆயுதங்களும் எங்களிடம் இருக்கின்றன. எங்களுக்குத் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. படைத்தலைவர்கள் எங்களுக்கு வெற்றியை ஈட்டித் தருவர். எனவே நீ உடனே செல்வாயாக. அஞ்சாதே. நாங்கள் உனக்குத் தீங்கிழைக்க மாட்டோம்.(11-13) நாளையோ, நாளை மறுதினமோ நாங்கள் புஷ்கரத்தில் போரிடுவோம். அங்கே நாங்கள் கேசவனின் பலத்தையும், பலராமன் பலத்தையும், நீ குறிப்பிட்ட யாதவர்களின் பலத்தையும் பார்த்துக் கொள்கிறோம்” என்றார்கள் {ஹம்சனும், டிம்பகனும்}.(14)

சாத்யகி, “ஹம்சா, நாளையோ, நாளை மறுதினமோ உன்னையும், உன் தம்பியையும் நான் கொல்வேன். நான் தூதனாக வந்திராவிட்டால் இன்றே உங்கள் இருவரையும் கொன்றிருப்பேன்.(15) உங்கள் இருவரின் கடுஞ்சொற்களை நான் மன்னித்திருக்க மாட்டேன். சில வேளைகளில் தூதர்கள் பகைவனின் ஏற்கத்தகாத பேச்சைக் கேட்கும் பெரும் துன்பத்திற்கு ஆளாக வேண்டியிருக்கிறது.(16) மன்னர்களில் இழிந்தவர்களே, தூதுப்பணியை நான் மேற்கொள்ள வில்லையெனில், வலிமைமிக்க என் கரங்களின் சக்தியை வெளிப்படுத்தி உங்கள் இருவரையும் கொன்று மகிழ்ந்திருப்பேன்.(17) சங்கு, சக்கர, கதாபாணியும், அழகிய மகுடம் சூட்டப்பட்ட சுருள் முடியையும், பருத்த தோள்களையும், ஒப்பற்ற அழகையும் கொண்டவனும், அண்டத்தின் உண்மைக் காரணனும், அண்டத்தின் வடிவமும், யோகியரில் சிறந்தவர்களால் தியானிக்கப்படுபவனும், தைத்திய தானவர்களைக் கொல்பவனும், தாமரைக் கண்ணனும், சியாமள வண்ணனும், சிங்கம்போல் பலம் பெருந்தியவனும், அண்டத்தைப் படைத்துக் காத்து அழிப்பவனும், ஜகத்குருவுமான கிருஷ்ணன், விரைவில் போர்க்களத்தில் சகோதரர்களான உங்கள் இருவரின் செருக்கை அழிப்பான்” என்றான் {சாத்யகி}. இதைச் சொல்லிவிட்டு அந்த சாத்யகி தன் தேரில் ஏறி புறப்பட்டுச் சென்றான்” என்றார் {வைசம்பாயனர்}.(21)

புஷ்கரஞ்சென்ற கிருஷ்ணன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 95-(ஸ்ரீகிருஷ்ணஸ்ய புஷ்கரம் ப்ரதி கமநம்)-புஷ்கரைக்குச் சென்ற கிருஷ்ணனும், யாதவர்களும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “சிநியின் பேரனான சாய்தகி, துவாரகைக்குத் திரும்பி ஹம்சடிம்பகர்களுடனான தன் சந்திப்பைக் கிருஷ்ணனிடம் விரிவாகக் கூறினான்.(1) அதன்பிறகு ஒரு நல்ல காலை வேளையில் கேசிசூதனனும், கதாதாரியும், சக்கரபாணியுமான கேசவன் தன் படைத்தலைவனிடம் பின்வருமாறு ஆணையிட்டான்.(2)

{கிருஷ்ணன்}, “தேர்கள், யானைகள், குதிரைகள் அனைத்தையும் போருக்கு ஆயத்தம் செய்வாயாக. இசைக்கலைஞர்களை அழைத்து, பேரிகைகளையும், பணவங்களையும் எடுத்து வரச் சொல்வாயாக. பராசங்கள், பரிகங்கள், சூலங்கள் முதலியவற்றுடன் படைவீரர்கள் நல்ல ஆயுதபாணிகளாவதை உறுதி செய்வாயாக. குதிரைகளையும், யானைகளையும், ரதங்களையும் கொடிகளாலும், மதிப்புமிக்க ஆபரணங்களாலும் நன்கு அலங்கரிப்பாயாக” {என்றான்}.

படைத்தலைவன், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு புருஷோத்தமனின் {கிருஷ்ணனின்} ஆணைகளை மேற்கொள்ளப் புறப்பட்டுச் சென்றான். யாதவ வீரர்கள் கவசங்களைத் தரித்துத் தங்கள் விற்களை எடுத்துக் கொண்டு ரதங்களில் ஏறினர்.(3-5) மன்னா {ஜனமேஜயா}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், வில்லைத் தரித்திருந்தவனுமான சாத்யகி, பெருங்கோபத்துடனும், போரிடும் ஆவலுடனும் காணப்பட்டான்.(6) முதன்மையான யாதவர்கள் பிறரும், தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, சிங்கநாதம் செய்தவாறே புறப்படத் தயாராகினர்.(7)

ஹரி {கிருஷ்ணன்}, முறிக்கப்பட முடியாத சாரங்க வில்லை எடுத்துக் கொண்டு, தாருகனால் நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏறி நகரை {துவாரகையை} விட்டுப் புறப்பட்டுச் சென்றான்.(8) அந்நேரத்தில் அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, உடும்புத் தோலுறைகளால் பாதுகாக்கப்பட்ட தன் நான்கு கரங்களிலும் சங்கு, சக்கரம், கதாயுதம், சூலம் ஆகியவற்றையும், கணைகளையும் தரித்திருந்தான். மழை மேகம்போன்ற கருவண்ணனான அவன் மஞ்சள் ஆடைகளை உடுத்தியிருந்தான். தாமரை மலர் மாலையால் அவனது மார்பு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவன் தன் தேரில் அமர்ந்தபோது, குறிப்பிட்ட மந்திரங்களைச் சொல்லி விப்ரர்கள் துதித்தனர்.(9,10) சூதர்களும், மாகதர்களும் கிருஷ்ணனின் தேர் சாலையில் கடந்து செல்லும்போது அவனது நற்குணங்களைச் சொல்லும் பாடல்களைப் பாடித் துதித்தனர். தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்த பிறகு யாதவர்களின் படை வடக்கு நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.(11)

கேசவன், பயங்கர ஒலியை எழுப்பும் தன் பாஞ்சஜன்யத்தை முழக்கினான். அந்தப் பேரொலியைக் கேட்டதும் பகைவரனைவரின் இதயங்களிலும் அச்சம் நுழைந்தது.(12) மன்னா, அந்த முதன்மையான சங்கு, நிலம் முழுவதிலும், ஆகாயம் முழுவதிலும் பரவுமளவுக்குப் பயங்கர ஒலியை வெளியிட்டது.(13) கிருஷ்ணனின் முன்னுதாரணத்தைப் பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான யாதவ வீரர்களும் தங்கள் தங்களுக்குரிய சங்குகளையும், மிருதங்கங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பேரிகைகளையும் முழக்கினர்.(14) உண்மையில் பேரிகைகள் மற்றும் பிற இசைக்கருவிகளின் ஒன்றுபட்ட ஒலி மழைக்கால மேகமுழக்கத்திற்கு ஒப்பாக இருந்தது. இவ்வாறே அந்த யாதவப்படை புண்ணியத்தலமான புஷ்கரையை அடைந்தது.(15) இராஜேந்திரா {ஜனமேஜயா}, அதன்பிறகு அந்த யாதவ வீரர்கள், ஹம்சடிம்பகர்களின் வரவுக்காகப் புஷ்கரத் தடாகக் கரையில் காத்திருந்தனர்.(16) யாதவர்கள், அந்தப் புஷ்கரக் கரையில் முகாமிட்டுத் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்தனர்.(17)

பகவான் கோவிந்தன் அந்தப் புண்ணியத் தடாகத்தின் அழகைப் புகழ்ந்தவாறே தன் கைகளையும், முகத்தையும் கழுவிக் கொண்டு அங்கே வசிக்கும் முனிவர்கள் அனைவருக்கும் தன் வணக்கத்தைத் தெரிவித்தான். பிறகு அவன், ஹம்சடிம்பகர்களின் வரவுக்காக அந்தக் கரையில் அமர்ந்து காத்திருந்தான். அந்நேரத்தில் அந்த விஷ்ணு பிராமணர்கள் ஓதும் வேத மந்திரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(18,19)

போர்க்களமான புஷ்கரம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 96-(உபயஸைந்யயோ꞉ புஷ்கரதீர்தப்ரவேஷம்)புஷ்கரைக்கு வந்த ஹம்சனும், டிம்பகனும்; ஹம்ச டிம்பகர்களின் நண்பனான தானவன் விசக்ரன்; விசக்ரனின் நண்பனான தைத்தியன் ஹிடிம்பன்; இரு படைகளும் போர்க்களம் புகுந்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, அதே வேளையில் ஹம்சனும், டிம்பகனும் தங்கள் விற்களையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு, அலங்காரக் கொடிகளுடன் கூடிய எண்ணற்ற தேர்கள் சூழ புஷ்கரத் தீர்த்தத்திற்கு வந்தனர்.(1) அவ்விரு இளவரசர்களின் முன்பு, மொத்த உலகத்தையும் விழுங்கப் போவதைப் போலத் தோன்றும் இரண்டு பூதங்கள் இருந்தனர். அவர்கள் {அந்தப் பூதங்கள்} மேனியெங்கும் பஸ்மத்தைப் பூசிக்கொண்டு சிங்கங்களைப் போல முழங்கிக் கொண்டிருந்தனர்.(2) மேலும் ருத்ராக்ஷங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்கள் தங்கள் நெற்றிகளில் மூவரி திலகங்களைச் சூடியிருந்தனர். உலகை அழிப்பதற்காக வந்திருக்கும் இரு ருத்திரர்களைப் போல அவர்கள் தெரிந்தனர்.(3) அந்தப் பூதங்கள் இருவரையும் பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான படைவீரர்கள் வந்தனர். ஹம்சடிம்பகர்கள் பத்து அக்ஷௌஹிணி அளவுக்குப் படையைக் கொண்டிருந்தனர்.(4)

மன்னா, ஹம்சடிம்பகர்களின் பழைய நண்பனான விசக்ரன் என்ற தானவனும் அவர்களுடன் வந்தான்.(5) வஜ்ரபாணியான சக்ரனே {இந்திரனே} கூடப் போரில் எதிரில் நிற்க முடியாத அளவுக்கு அந்த விசக்ரன் பெரும்பலம்வாய்ந்த தானவனாக இருந்தான். நீண்டகாலத்திற்கு முன்பு ஒரு காலத்தில் நடைபெற்ற தேவாசுரப் போரில் அந்த விசக்ரன் தேவர்களுக்கு மத்தியில் பேரழிவை ஏற்படுத்தி, தேவமன்னனை {இந்திரனை} வீழ்த்தியிருந்தான். மற்றொரு தருணத்தில் அந்தத் தானவன் {விசக்ரன்} துவாரகையில் விஷ்ணுவுடன் போரிட்டான். அந்தப் போரில் அவன் யாதவர்களைப் பெரிதும் ஒடுக்கினான்.

மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, விசக்ரனும், தண்டங்களுடன் கூடிய பல்லாயிரக்கணக்கான தானவர்கள் பிறரும், விருஷ்ணி குலத்தைப் பழிதீர்ப்பதற்கான இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள ஹம்சடிம்பகர்களுக்குத் துணை புரிய வந்திருந்தனர். ராக்ஷசேஷ்வரனான ஹிடிம்பன், விசக்ரனின் பெரும் நண்பனாவான். உண்மையில் அந்தத் தைத்தியன் {ஹிடிம்பன்} தன்னுயிர் நண்பனுக்காக {விசக்ரனுக்காகத்} தன் உயிரையும் தர சித்தமாக இருந்தான். விசக்ரனுக்கு உதவி செய்வதற்காகப் பாறைகள், சூலங்கள், வாள்கள் ஆகியவற்றைத் தரித்திருந்த பல ராக்ஷசர்களுடன் ஹிடிம்பன் அவனது {விசக்ரனின்} படையில் சேர்ந்தான். மன்னா {ஜனமேஜயா}, பாறைகளையும், தண்டங்களையும் தரித்திருந்த எண்பத்தெட்டாயிரம் ராக்ஷசர்கள் போர்க்களத்தில் ஹிடிம்பனைப் பின்தொடர்ந்து வந்தனர். இந்த ராக்ஷசப் படை ஹம்சடிம்பகர்களின் பெரும்படையுடன் சேர்ந்து மூவுலகங்களையும் அச்சுறுத்தியது.(6-14)

விசக்ரனின் துணையுடனும், கேசவனைக் கொல்லும் நம்பிக்கையுடனும் ஹம்சடிம்பகர்கள் புஷ்கரத் தீர்த்தத்துக்குச் சென்றனர்.(15) மறுபுறம், ஹம்சடிம்பகர்கள் யாதவர்களுடன் போரிடப் போகிறார்கள் என்ற செய்தியைக் கேட்ட ஜராசந்தன், இது பாவம் நிறைந்தது என்று நினைத்தாலும் அவர்களுக்கு உதவி செய்யப் புறப்பட்டான்.(16) மன்னா, இவ்வாறு பல மன்னர்களின் ஆதரவு பெற்ற ஹம்சடிம்பகர்கள், தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் ஆவலுடன் புண்ணியத்தலமான புஷ்கரத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.(17) சிங்கங்களைப் போல உரக்க முழங்கிய அவர்கள், “மன்னர்களே, நானே முதலில் கிருஷ்ணனுடன் போரிடுவேன்” என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டனர்.(18) இவ்வாறு ஆயிரக்கணக்கான மன்னர்கள் கேசவனுடன் போரிடும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். இத்தகைய உணர்வுடனேயே அவர்கள் புஷ்கரத்தை அடைந்தனர்.(19)

மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, கடுந்தவங்களைச் செய்த பெருஞ்சக்திவாய்ந்த முனிவர்கள் பலர் அந்தப் புண்ணியத்தலத்தில் வசித்து வந்தனர். உண்மையில், அந்தப் புஷ்கரம் மூவுலகங்களிலும் உள்ள புண்ணியத்தலங்களில் முதன்மையானது என்று சொல்லப்படுகிறது.(20) புஷ்கரத் தீர்த்தத்தையும், புண்டரீகாக்ஷனான கிருஷ்ணனையும் பார்ப்பதாலோ, தீண்டுவதாலோ மட்டுமே கூட ஒருவன் செய்த பாவங்கள் அனைத்தும் மறையும்.(21) பெரும் முனிவர்கள் அனைவரும், தேவர்களில் முதன்மையானோரும் புஷ்கரத்தையும், புண்டரீகாக்ஷனையும் தொடர்ந்து சேவிக்கின்றனர்.(22) இவ்விரண்டில் கொள்ளும் தொடர்பால் ஒருவனின் பாவங்கள் அனைத்தும் மறைந்துவிடும். ஹம்சடிம்பகர்களின் தலைமையிலான மன்னர்கள் இவ்விரண்டும் இருக்கும் இடத்தை அடைந்தனர்.(23) இவ்வாறே அளவற்ற மஹிமை பொருந்திய ஹரியான விஷ்ணுவையும், பிரம்மனாலும் வழிபடப்படும் புஷ்கரமென்னும் புண்ணியத்தலத்தையும் அடுத்தடுத்து காணும் வாய்ப்பை அவர்கள் அனைவரும் அடைந்தனர்.(24)

மனிதர்களின் முதன்மையான ஆட்சியாளா, நீ புஷ்கரத் தீர்த்தத்தையும், கிருஷ்ணனையும் வணங்குவாயாக. அந்தப் பிரபுவுடன் போரிட அங்கே கூடியிருந்த படைவீரர்கள் அனைவரும் அழிவடைவார்கள் என்பதில் ஐயமில்லை. எண்ணற்ற பேரிகைகள், பணவங்கள், கொம்புகள், மணிகள், பிற இசைக்கருவிகள் ஆகியவற்றின் ஒலியும், ராக்ஷசர்களின் முழக்கமும் கலந்து அங்கே பேராரவார ஒலியை உண்டாக்கின. மன்னா, அந்தப் பெரிய ராக்ஷசப்படை புஷ்கரத்தின் கரையை அடைந்து தேவர்களின் தலைவனான கிருஷ்ணனைக் கண்டது” என்றார் {வைசம்பாயனர்}.(25-27)

கடும்போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 97-(ஸங்குலயுத்தம்)-ஹம்சடிம்பகர்களுக்கும் யாதவர்களுக்கும் இடையில் மூண்ட கடும்போர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, அந்தப் பெரும்போர் தொடங்கியதும் இரு படைகளும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டதைப் போலத் தோன்றியது. இரு தரப்பிலும் எண்ணற்ற கொடிகளும், இரும்பு தண்டங்களும், கதாயுதங்களும், சக்தி ஆயுதங்களும் இருந்தன.(1) இரு படைகளிலும் சூலங்கள், வாள்கள், விற்கள் தரித்த படைவீரர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் பேரிகைகளும், எக்காளங்களும் முழக்கப்பட்டன.(2)

மன்னா {ஜனமேஜயா}, இரு படைகளைச் சேர்ந்த போர்வீரர்களும், போர் தொடங்கியதும் ஒருவரையொருவர் வீழ்த்துவதில் பேரார்வம் கொண்டனர். கணைகள் தங்கள் இலக்கைத் துளைத்த பிறகும் நெடுந்தொலைவைக் கடக்கும் அளவுக்கு அவர்களின் ஊட்டம் பலமிக்கதாக இருந்தது. படைவீரர்களின் வாள்கள், பகைவரின் மார்பைப் பிளந்த பிறகோ, அவர்களின் தலைகளைக் கொய்த பிறகோ வானை நோக்கிப் பறந்து செல்லும் அளவுக்கு வலுவாக வீசப்பட்டன. க்ஷத்திரியர்களால் வீசப்பட்ட இரும்பு பரிகங்கள், தங்கள் பகைவரின் உடல்களைக் கூழாக நசுக்கின. வெற்றிக்கு முயன்று கொண்டிருந்த போர்வீரர்கள் இரக்கமற்ற வகையில் ஒருவரையொருவர் கொன்றனர்.(3-6)

அந்தப் பெரும்போரில் தேர்வீரர்கள் தேர்வீரர்களுடனும், யானை வீரர்கள் யானைவீரர்களுடனும், குதிரைப்படை வீரர்கள் குதிரைப்படை வீரர்களுடனும், காலாட்படை வீரர்கள் காலாட்படை வீரர்களுடனும் போரிட்டனர். அவர்கள் தங்கள் ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கியபடியே போர் நிற்காமல் தொடரும் வேளையில் தங்கள் பகைவரைக் காயப்படுத்தினர். ராக்ஷசர்கள், தங்கள் பகைவரின் படையணிக்குள் பெரும்படுகொலைகளை நிகழ்த்தி மதங்கொண்ட யானைகளைப் போலப் போரிட்டனர். சூலங்கள், போர்க்கோடரிகள், ஈட்டிகள், வாள்கள், கணைகள், சக்தி ஆயுதங்கள் உள்ளிட்ட பலவகை ஆயுதங்களாலும் தாக்கப்பட்ட படைவீரர்கள், தங்கள் ஆயுதங்களைக் கொண்டு தங்களாலான சிறந்த முறையில் எதிர்த்தாக்குதலைத் தொடுத்தனர்.(7-11)

மன்னா {ஜனமேஜயா}, ராக்ஷசர்களும், க்ஷத்திரியர்களும் தங்கள் பகைவரின் மீது கணைத்தாரைகளைப் பொழிந்து முழங்கியவாறே போர்க்களமெங்கும் திரிந்து கொண்டிருந்தனர்.(12) எண்ணற்ற படைவீரர்கள், வாள்களால் தாக்குண்டு தரையில் விழுந்து மாண்டனர். வீரமிக்கப் போர்வீரர்கள் பலரின் தலைகள் பலமிக்கக் கதாயுதங்களின் வீச்சுகளில் நொறுங்கின.(13) பரிதாயுதங்கள் தாங்கிய படைவீரர்கள் பலர் தங்கள் பகைவரின் தோள்களைத் தங்கள் வலிமைமிக்க வீச்சுகளால் முறித்தனர். போரில் கொல்லப்பட்ட சிலர் யமராஷ்டிரத்திற்கு {யமனின் நாட்டுக்குச்} சென்றனர், வேறு சிலர் சுவர்க்கத்திற்குச் சென்றனர்.(14) தேவலோகம் சென்றவர்கள், போர்க்களத்தில் தங்கள் சடலங்கள் கிடக்கும்போதே அப்சரஸ்களை அடைந்தனர். பிறரோ, தங்கள் பகைவரைக் கொன்றே ஆக வேண்டுமென நினைத்துத் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தனர்.(15)

மன்னா {ஜனமேஜயா}, தீடீரென ஆயிரக்கணக்கான சங்குகள், பேரிகைகள் ஆகியவற்றின் முழக்கம், மிருதங்க ஒலியுடன் சேர்ந்து கேட்டது.(16) நடுப்பகல் சூரியனால் உண்டாக்கப்பட்ட அதீத வெப்ப வேளையில் கோரமான பிசாசுகளும், பயங்கரத் தோற்றம் கொண்ட பூதங்களும் கொல்லப்பட்ட போர்வீரர்களின் சதையையும், குருதியையும் உண்ணும் விருப்பத்தில் போர்க்களத்தை அடைந்தன.(17,18) கூரிய வாள்களால் கொய்யப்பட்ட தலைகளுக்குரிய சடலங்கள் போர்க்களம் முழுவதும் விரவிக் கிடந்தன. ஊனுண்ணும் பூதங்கள் அந்தப் போர்க்களத்தைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு சடலங்களை உண்ணத் தொடங்கின.(19) மேலும் கங்கங்கள், காக்கைகள், நரிகள் உள்ளிட்ட எண்ணற்ற ஊனுண்ணும் பறவைகளும், விலங்குகளும் அங்கே வந்து சடலங்களை அலகுகளால் பற்றி, நகங்களால் கிழித்துச் சதைகளை உண்டன.(20)

மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தப் பயங்கரப் போரில் எண்பத்தேழாயிரம் யானைகளும், ஏறக்குறைய முப்பது லட்சம் குதிரைகளும் கொல்லப்பட்டன.(21) தேரோட்டிகளுடன் கூடிய ஒரு லட்சம் தேர்கள் அழிக்கப்பட்டன, ஆயுதங்களுடன் கூடிய முப்பது கோடி காலாட்படை வீரர்கள் அங்கே கொல்லப்பட்டுக் கிடந்தனர்.(22) மன்னா, நடுப்பகல் வேளையில் எண்ணற்ற படைவீரர்கள் காயமடைந்தனர், எண்ணற்ற படைவீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் போர்க்களத்தைவிட்டுத் தப்பித்து ஓடினர். வேறு சிலர், தாகத்தால் பீடிக்கப்பட்டவர்களாகப் புஷ்கரத் தடாகத்திற்குள் நுழைந்தனர்.(23)

கொல்லப்பட்ட போர்வீரர்கள் பலர், பூமியைத் தழுவிக் கிடப்பவர்கள் போல மாண்டு கிடந்தனர். காயமடைந்தவர்களில் சிலர், கொலை செய்யப்படுவதில் இருந்து உயிர்பிழைக்கும் நம்பிக்கையில் இரந்து கொண்டிருந்தனர். போர்வீரர்கள் பலர், தேரில் இருந்து கீழே விழுந்து தலைமுடி கலைந்து கிடந்தனர்.(24) மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, குதிரைப்படை வீரர்கள் பலர் தங்கள் உதடுகளைக் கடித்த நிலையில் தரையில் இறந்து கிடந்தனர். இவ்வாறே பழங்காலத்து தேவாசுரப் போரை நினைவூட்டும் வகையில் அந்தப் புஷ்கரத்தில் கடும்போர் நடந்து கொண்டிருந்தது” என்றார் {வைசம்பாயனர்}.(25)

விசக்ரவதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 98-அசுரன் விசக்ரனைக் கொன்ற கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, எண்ணற்ற படைவீரர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிய அந்தப் பெரும்போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது, கதாயுதத்தையும், கொண்டாடப்படும் சாரங்க வில்லையும் தரித்த கிருஷ்ணனை, விசக்ரன் தாக்கினான்.(1) அந்நேரத்தில் பலபத்ரன் {பலராமன்} ஹம்சனுடனும், சாத்யகி டிம்பகனுடனும், வசுதேவர் ஹிடிம்பனுடனும் போரிட்டுக் கொண்டிருந்தனர்.(2) இராஜேந்திரா {ஜனமேஜயா}, அந்தப் பெரும்போரில் பகைவரிடம் ஒருபோதும் சரணடைய நினையாத முதன்மையான போர்வீரர்கள் இவ்வாறே ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொண்டிருதனர்.(3)

கிருஷ்ணன் காண்போர் வியக்கும் வண்ணம் விசக்ரனைக் கடுமையாகத் தாக்கினான். அதற்குப் பதிலடியாக அந்தத் தானவன் {விசக்ரன்}, அந்தத் தேவதேவேசனுடைய {கிருஷ்ணனுடைய} மார்பின் மீது கணைமாரியைப் பொழிந்தான்.{4} சசியின் கணவனான இந்திரனின் தலைமையிலான தேவர்கள், வானில் இருந்தபடியே இந்த அற்புதப் போரைக் கண்டனர்.{5} அந்தத் தானவனின் கணைகளால் தாக்கப்பட்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, படைப்பின் தொடக்கத்தில் பகவான் விஷ்ணு தன் வாயில் இருந்து எண்ணற்ற ஆத்மாக்களை வெளிப்படுத்தியதைப் போலவே குருதியைக் கக்கினான்.(6)

இதனால் கோபமடைந்த ரிஷிகேசன், ஒரு கணையால் அவனது கொடியை அறுத்தெறிந்து, அவனது நான்கு குதிரைகளையும் மூன்று கணைகளால் கொன்றான். அவன், விசக்ரனின் தேரோட்டியை யமலோகம் அனுப்பிவைத்துவிட்டு பாஞ்சஜன்ய சங்கை முழக்கினான். அதேபோலக் கோபமடைந்த அந்தத் தானவனும் {விசக்ரனும்}, தன்னுடைய பெரிய கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் தேரில் இருந்து திடீரெனக் கீழே குதித்தான். அவன் கிருஷ்ணனின் தலையில் அந்தக் கதாயுதத்தால் பலமாகத் தாக்கி, அவனது கிரீடத்தைக் கீழே தள்ளி, அவனது நெற்றியில் காயமேற்படுத்தினான். தானவன் விசக்ரன் இந்த அருஞ்செயலைச் சாதித்துவிட்டுச் சிங்கம் போல முழங்கினான். வலிமைமிக்கவனான அவன் ஒரு பெரிய கற்பாறையைத் தூக்கி, அதைப் பத்து முறை சுழற்றி கிருஷ்ணனின் மார்பில் வீசினான். கற்பாறை தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்தப் பிரபு, லாகவமாக அதைப் பிடித்துத் தன்னைத் தாக்கியவன் மீதே அதைத் திரும்ப வீசினான். அந்தக் கற்பாறையால் தாக்குண்ட அந்தத் தைத்தியன் {விசக்ரன்} தன் சுயநனவை இழந்து தரையில் விழுந்தான்.(7-12)

சிறிது நேரம் கழித்துச் சுயநனவு மீண்ட அந்தத் தைத்தியன், தன் மேனி முழுவதும் சிவக்கும் வகையில் பெருங்கோபத்தில் எரிந்தான். பிறகு அவன் ஒரு பரிதத்தை {தடியை} எடுத்துக் கொண்டு, ஜனார்த்தனனிடம் பின்வருமாறு பேசினான்:(13) “கோவிந்தா, இந்தப் பரிதத்தால் நான் உன் செருக்கை நொறுக்கப் போகிறேன். தேவாசுரர்களுக்கு இடையில் நடந்த பெரும்போரில் நீ ஏற்கனவே என் ஆற்றலைக் கண்டிருக்கிறாய்.(14) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜனார்த்தனா, நான் அவனேதான், என் கரங்களும் அவையேதான். நீ என் சக்தியை அறிந்தவனாக இருந்தாலும் என்னுடன் போரிடத் துணிந்திருக்கிறாய். நான் உன் மீது வீசப் போகும் இந்தப் பரிதத்தை நீ எவ்வாறு தடுக்கப் போகிறாய் என்பதைப் பார்க்கப் போகிறேன்” என்றான் {விசக்ரன்}. அந்தத் தைத்தியன் {விசக்ரன்} இதைச் சொல்லிவிட்டு, அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சங்கு சக்கரக் கதாதாரியும், லோகேசனுமான கிருஷ்ணன் மீது அந்தப் பரிதத்தை வீசினான்.(15,16)

கிருஷ்ணன், அனைவரும் வியக்கும் வண்ணம் அந்தத் தைத்தியன் ஏவிய பரிகத்தைப் பிடித்தான். அந்த ஹரி, “இதோ நீ இறக்கப் போகிறாய்” என்று சொல்லி, தன் வாளால் அந்தப் பரிதத்தைத் துண்டுகளாக அறுத்தான்.(17) அந்தத் தைத்தியேசன் {விசக்ரன்}, பல கிளைகளைக் கொண்ட ஒரு நெடுமரத்தை வேரோடு பிடுங்கி, எல்லையில்லா சக்தி படைத்த கிருஷ்ணன் மீது அதை வீசினான்.(18) மாதவனோ, பெருமுயற்சியேதும் செய்யாமல் அந்த மரத்தை எள்ளளவு துண்டகளாக எளிதிற் துண்டித்தான். இவ்வாறு சிறிது நேரம் அந்தத் தைத்தியனுடன் போரிட்டு மகிழ்ந்த விஷ்ணு, பிறகு தன் நாண்கயிற்றில் ஒரு சக்திமிக்கக் கணையைப் பொருத்தி ஏவினான்.(19,20)

அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தபோதே அந்தக் கணை அந்தத் தைத்தியனைக் கடுமையாகத் தாக்கி அவனைச் சாம்பலாக எரித்துவிட்டு பகவானின் கைகளுக்கே திரும்பிச் சென்றது.(21) கிருஷ்ணன் விசக்ரனைக் கொன்றதைக் கண்ட பிற தைத்தியர்கள், பத்து திக்குகளிலும் சிதறி ஓடத் தொடங்கினர். உண்மையாக இறுதியில் அவர்கள், இந்நாள்வரை மீண்டும் காணப்படாத வகையில் பெருங்கடலுக்குள் நுழைந்தனர்” என்றார் {வைசம்பாயனர்}.(22)

பலபத்ரன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 99-(ஹம்ஸபலபத்ரயோர்யுத்தம்)பலராமனுக்கும் ஹம்சனுக்கும் இடையில் நடந்த போர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அதன்பிறகு, வில்லாளிகளில் முதன்மையானவனும், தர்மாத்மாவுமான பலதேவன் {பலராமன்}, பத்துக் கணைகளை ஹம்சன் மீது ஏவினான்.(1) ஹம்சன், அவன் மீது ஐந்து கணைகளை ஏவி பதிலடி கொடுத்தாலும், கலப்பைதாரியான பலராமன், தன்னை நோக்கி வரும் கணைகளை மேலும் பத்துக் கணைகளால் தவிடுபொடியாக்கினான். பிறகு அவன் ஹம்சனின் நெற்றியில் ஒரு கணையால் பலமாகத் தாக்கினான்.(2) அந்தக் கணையானது, ஹம்சனை சுயநனவற்றவனாக்கித் தேரில் அமரச் செய்தது. சுயநனவு மீண்ட ஹம்சன், ஒரு கணையோடையை ஏவி, பலராமனுக்கு ஆழமான காயங்களை ஏற்படுத்தி, வானத்தில் பார்வையாளர்களாக நின்றிருந்த தேவர்களை வியப்படையச் செய்தான். அவன் {ஹம்சன்} இந்த அருஞ்செயலைச் செய்துவிட்டுச் சிங்கமுழக்கம் செய்தான்.(3,4)

அந்தக் கணைகளால் புண்பட்ட கலப்பைதாரி {பலராமன்}, குருதியைக் கக்கி பெருமூச்சுவிட்டபடியே பெருஞ்சினங்கொண்டான்.(5) குங்குமத்தால் பூசப்பட்ட உடலைப் போல, அவனது மேனி முழுவதும் குருதியில் நனைந்திருந்தது. நீல அடைகளை உடுத்தியிருந்த அந்த ஹலாயுதன் {பலராமன்}, அன்னம் போல் நளினமாக நடந்த ஹம்சனை ஒரு லட்சம் கணைகளால் மறைத்தான். மன்னா, வண்ணமயமான இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட பலராமனின் கணைகள், ஹம்சனின் தேர், கொடி, வில், சக்கரங்கள், கவசம் ஆகியவற்றை நொறுக்கியது. அந்நிலையில் அவன் {ஹம்சன்} ஒருகணம் திகைப்படைந்து நின்றான்.(6-8)

மன்னா, செருக்கின் மிதப்பில் வெறி கொண்டிருந்தவனும், பகைவனைத் தாக்கும் நேரத்தை அறிந்தவனுமான ஹம்சன், மீண்டும் சுயநனவை அடைந்ததும், ஒரே கணையால் பலராமனின் கொடியை வீழ்த்தினான். பிறகு அவன் நான்கு கணைகளால் ஹலாதரனின் குதிரைகளையும், மேலும் ஒன்றால் அவனது சாரதியையும் கொன்றான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஹலாதரன், அந்தக் கடும்போரில் தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டும், பாம்புகளின் மன்னனான சேஷனைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டும் ஹம்சனை நோக்கி விரைந்தான். அப்போது பலராமன், ஹம்சனின் தேர், கொடிகள், சக்கரம், குதிரைகள் ஆகியவற்றையும், சாரதியையும் தன் கதாயுதத்தால் முற்றாக அழித்தான்.(9-11)

பலராமன் ஹம்சனைத் தாக்க முற்பட்ட போது, அந்த மன்னன், தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, சிதைந்திருந்த தன் தேரில் இருந்து கீழே குதித்தான்.(12) அதன்பிறகு வலிமைமிக்கத் தேர்வீரர்களான ஹம்சனும், பலராமனும் போர்க்களத்தின் தரையில் நின்றபடியே கதாயுத்தம் செய்தனர்.(13) ஒப்பற்ற ஆற்றலைக் கொண்டவர்களான அவ்விருவரும் தங்கள் எதிரியைக் கொல்லும் தீர்மானத்துடன் போரிட்டனர். அன்னம் போன்ற நடையைக் கொண்டிருந்த அவ்விருவரும், வெற்றியை அடைவதற்காக எந்தத் துன்பத்தையும் தாங்கும் உறுதியுடன் இருந்தனர். அந்தக் கதாயுத்தத்தைக் காண அற்புதமாக இருந்தது.(14)

பழங்காலத்து தேவாசுரப் போரில் இந்திரனும், விருத்திராசுரனும் வானில் போரிட்டதைப் போல ஹம்சனும், பலராமனும் கதாயுத்தம் புரிந்தனர். அந்தப் போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது அவர்களின் உடல்கள் குருதியால் மறைக்கப்பட்டன.(15) அந்தப் பெரும்போரில் இருவரும் தங்கள் பகைவன் வெளிப்படுத்தும் அற்புத ஆற்றலை வியந்து பாராட்டினர். அப்போது பலராமன் தன் பகைவனை வலப்புறத்தில் இருந்து தாக்கும் வகையில் தன் கதாயுதத்தைத் திறனுடன் பயன்படுத்தினான்.(16) இராஜேந்திரா {ஜனமேஜயா}, அந்தத் திட்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஹம்சன் வேறொரு உத்தியைக் கையாண்டான். யானைகளைப் போன்று பலமிக்கவர்களான அந்தப் போர் வீரர்கள் இருவரும் தங்கள் கதாயுதங்களால் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கினர்.(17)

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரர்கள் இருவரும் தங்கள் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தியவாறே மீண்டும் மீண்டும் தங்கள் பகைவனின் வலுவான தாக்குதலைத் தடுத்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெரும்போரில், பழங்காலத்து தேவாசுரப் போரை அனைவருக்கும் நினைவுப்படுத்தும் வகையில் அந்தப் போர்வீரர்கள் இருவரும் கடுமையாகப் போரிட்டனர். தேவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், முனிவர்கள் ஆகியோர் பெரும் வியப்படைந்து, “ஐயோ, இத்தகைய அற்புதமான போரை நாங்கள் கேட்டதுமில்லை, கண்டதுமில்லை” என்றனர்.(18-20)

அந்தப் போர்வீரர்கள் இருவரும் தங்கள் பகைவனை வெல்லும் தீர்மானத்துடன் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தனர். சிறிது நேரங்கழித்து அவ்விருவரும் தங்கள் உத்திகளை மாற்றிக் கொண்டனர். ஹம்சன் வலப்புறத்தில் இருந்து பலராமனைத் தாக்கினான். எல்லையில்லா சக்தி கொண்ட ஹலாதரன் இடப்புறத்தில் இருந்து ஹம்சனைத் தாக்கினான்.(21) முதன்மையான போர்வீரர்களான பலராமனும், ஹம்சனும் கடுந்தாக்குதல்களைத் தொடுத்தவாறே தங்கள் முழங்கால்களில் நின்றும் போரிட்டனர்” என்றார் {வைசம்பாயனர்}.(22)

டிம்பகன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 100-(ஸாத்யகிடிம்பகயோர்யுத்தம்)-சாத்யகிக்கும் டிம்பகனுக்கும் இடையில் நடந்த போர்; டிம்பகனின் மகிமை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அதே நேரத்தில் நிகரான சக்தி படைத்தவர்களும், கொண்டாடப்பட்ட க்ஷத்திரியர்களுமான டிம்பகனும், சாத்யகியும் கடும்போர் செய்து கொண்டிருந்தனர்.(1) அவ்விருவரும், முதன்மையான குருக்களிடம் போர்க்கலையினைக் கற்றுக் தேர்ச்சியடைந்தவர்கள் என்பதால், பெருஞ்சீற்றத்துடனும் திறனுடனும் போரிட்டனர். அவ்விருவரும் போரிட்டுக் கொண்டிருந்தபோது சாத்யகி, டிம்பகனின் மார்பு, முகம், வயிறு ஆகியவற்றை நோக்கிப் பத்துக் கணைகளை ஏவினான். பெரும்பலத்தில் பெருஞ்செருக்கு கொண்டிருந்தவனும், க்ஷத்திரியர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுபவனுமான டிம்பகனும் அடுத்தடுத்து சாத்யகியின் மீது ஐயாயிரம் கணைகளை ஏவினான். எனினும், அந்தப் பெரும் விருஷ்ணி வீரன் {சாத்யகி}, உரக்க முழங்கியபடியே அந்தக் கணை மழையை அழித்தான்.(2-4)

அதன்பிறகு, சாத்யகி ஏவிய ஏழு கணைகள் டிம்பகனுக்குப் பெருந்துயரை அளித்தன. இதில் கோபமடைந்த டிம்பகனும், பதிலடியாக ஒரு லட்சம் கணைகளைச் சாத்யகியின் மீது ஏவினான்.(5) அப்போது சாத்யகி ஓர் அர்த்தச்சந்திரக் கணையைத் தன் நாண்கயிற்றில் பொருத்தினான். அந்தக் கணை ஏவப்பட்டபோது, அது டிம்பகனின் வில்லை இரண்டாக அறுத்தது.(6) வலிமைமிக்க வீரனான டிம்பகன், விரைவாக மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, எண்ணெய் பூசிய கணையால் துளைத்து சாத்யகிக்குக் காயத்தை ஏற்படுத்தினான்.(7) மன்னா, அந்தக் கணையால் துளைக்கப்பட்ட சாத்யகி, குருதி கக்கியபோது இளவேனிற்காலப் பலாச மலர்க்குவியலைப் போலக் காட்சியளித்தான்.(8)

இதைக் கண்ட பலராமன், தன் கணைகளால் டிம்பகனின் பெரும் வில்லைத் துண்டுகளாக முறித்தான். டிம்பகன் மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த பிற க்ஷத்திரியர்களின் முன்னிலையில் யாதவத் தலைவன் சாத்யகியின் மீது இடையறாத கணையோடையைப் பொழிந்தான். எனினும் சாத்யகி ஒரே கணையால் அந்தப் பாவி டிம்பகனின் உறுதிமிக்க வில்லை முறித்தான்.

இராஜேந்திரா {ஜனமேஜயா}, டிம்பகன் விரைவாக மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, எண்ணற்றக் கணைகளால் சாத்யகியின் உடலைத் துளைக்கத் தொடங்கினான். இருப்பினும் சாத்யகி அந்த வில்லையும் முறித்தான். இவ்வாறே சாத்யகி, டிம்பகன் எடுக்க எடுக்க நூற்றுப்பத்து விற்களை ஒன்றன்பின் ஒன்றாக முறித்தான். இந்த அருஞ்செயலைச் செய்த பிறகு அவன் சிங்கமுழக்கம் செய்தான்.

சிறிது நேரம் கழிந்ததும், பெரும் போர்வீரர்களான அந்த டிம்பகன், சாத்யகி இருவரும் விற்களின் பயன்பாட்டைக் கைவிட்டு, வாள்களை எடுத்துக் கொண்டு ஒருவரோடு ஒருவர் போரிட்டனர். வாளேந்தலிலும் இருவரும் திறம் பெற்றவர்களாக இருந்தனர். அப்போது, நற்பேறுபெற்றவனான துச்சாசனனின் மகன் {தௌஷாஸநி}[1], சோமதத்தனின் மகனான பூரிஸ்ரவஸ், வலிமைமிக்க அபிமன்யு, நகுலன், டிம்பகன், சாத்யகி ஆகிய அறுவரே வாள்வீரர்களில் முதன்மையானவர்களாக அறியப்பட்டிருந்தனர். மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, அவர்களில் டிம்பகனும், சாத்யகியும் மிகச்சிறந்தவர்களாகக் கருதப்பட்டனர். போரிடும் பேராவல் கொண்டிருந்த அவ்விரு வீரர்களும், தங்கள் வாள்களை எடுத்துக் கொண்டு ஒருவரையொருவர் அணுகினர்.வாட்போரில் முப்பத்திரண்டு உத்திகள் உண்டு. அவை பிராந்தம், உத்பிராந்தம், ஆவித்தம், பிரவித்தம், பாஹுநிஹ்ஸுருதம், ஆகரம், விகரம், பிந்நம், நிர்மர்யாதம், அமாநுஷம், ஸங்கோசிதம், குலசிதம், ஸவ்யஜது, விஜாநு, ஆஹிகம், சித்ரகம், க்ஷிப்தம், குஸும்பம், லம்பநம், துருதம், ஸர்வபாஹு, விநிர்பாஹு, ஸவ்யேதரம் உத்தரம், திரிபாஹு, துங்கபாஹு, ஸவ்யோந்நதம், உதாஸி, பிருஷ்டதம், பிரதிதம் {பிரதிபிருஷ்டதம்}, யௌதிகம், பிரதிதம் {பிரதியௌதிகம்} ஆகியனவாகும். போரின் போது அவ்வீரர்கள் இருவரும் இந்த உத்திகள் அனைத்தையும் பயன்படுத்தினர். புஷ்கரமெனும் அந்தப் புண்ணியத்தலத்தில், தங்கள் பகைவனைக் கொல்லும் தீர்மானத்துடன் அவ்விருவரும் போரிட்டாலும், நீண்டநேரமானதில் அவர்கள் களைப்படைந்ததாகத் தெரிந்தது. வானில் இருந்த தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோர் அவ்விரு போர்வீரர்களும் வெற்றியடையும் நோக்கில் தீவிரமாக முயன்று வருவதைக் கண்டு, “ஐயோ, வலிமைமிக்கவர்களான இவ்விரு வீரர்களின் பொறுமையும், ஆற்றலும் ஒப்பற்றவையாக இருக்கின்றனவே. வாட்போரிலும், விற்போரிலும் இவ்விருவரும் பெரும் திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்களில் ஒருவன் சிவனின் சீடன், மற்றொருவன் துரோணரின் சீடன்.(9-24) அர்ஜுனன், சாத்யகி, ஜகத்பதியான வாசுதேவன் ஆகிய மூவரும் போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாகக் கொண்டாடப்படுகின்றனர்.(26) டிம்பகன், கார்த்திகேயன், சிவன் ஆகிய மூவரும் ஒப்பற்ற ஆற்றல் படைத்த முதன்மையான மஹாரதிகளாக அறியப்படுகின்றனர்” என்றனர்.(26)

தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், யக்ஷர்கள் ஆகியோரும், பெரும் நாகர்களும் இப்படிச் சொன்னவாறே அந்தப் போரைத் தொடர்ந்து கண்டு வந்தனர்” என்றார் {வைசம்பாயனர்}.(27)

ஹிடிம்பன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 101-(ஹிடிம்பேந ஸாகம் வஸுதேவோக்ரஸேநயோர்யுத்தம் பலபத்ரேண ஹிடிம்பபராபவஷ்ச)-ஹிடிம்பனுடன் போரிட்ட வசுதேவரும், உக்ரசேனனும்; ஹிடிம்பனை வீழ்த்திய பலராமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “வசுதேவரும், உக்ரசேனனும் நரைமுடியும், சுருங்கிய தோலும் கொண்ட கிழவர்களாக இருந்தாலும், அவர்களும் மகிழ்ச்சியாக அந்தப் போரில் ஈடுபட்டனர்.(1) ஞானத்திலும், அதன் நடைமுறை பயன்பாட்டிலும் முன்னேற்றம் அடைந்தவர்களான அவர்கள் இருவரும், அரச வகையின் கடமைகளை முழுமையாக அறிந்திருந்தனர். ராக்ஷசனான அந்தத் துராத்மாவிற்கு {ஹிடிம்பனுக்கு} எதிரான போரில் அவர்கள் இருவரும் ஒன்றுகூடிப் போரிட்டனர்.(2) ராக்ஷசேந்திரனும், துராத்மாவுமான ஹிடிம்பன் மீது ஆயிரக்கணக்கான கணைகளை ஏவி அவனை அவர்கள் துன்புறுத்தினர்.(3)

நரமாமிசம் உண்ணும் ராக்ஷசேந்திரனான ஹிடிம்பன், பெரும் பலசாலியாகத் திகழ்ந்தான். அந்தத் துஷ்டாத்மா, நீண்ட கரங்களையும், வலிமைமிக்கத் தாடைகளையும், துருத்தும் வயிற்றையும், கோணலான கண்களையும் கொண்டிருந்தான். அவனது மயிர் செம்பட்டையாகவும், அவனது மூக்கு வல்லூறின் அலகைப் போலவும் இருந்தது. அவன் அச்சந்தரத்தக்க வகையில் பருத்த கரங்களைக் கொண்டிருந்தான். அவனது உடல் மயிர் எப்போதும் சிலிர்த்தபடியே இருந்தது.(4,5) அவனது உடலோ, மலையைப் போன்று பெரிதாக இருந்தது. தடித்த உதடுகளைக் கொண்ட அவனது வாய், நரியின் வாய்க்கு ஒப்பானதாக இருந்தது. பெரும் வயிற்றையும், நீண்ட பற்களையும் கொண்டிருந்த அந்த ராக்ஷசன், மொத்த உலகையும் விழுங்கிவிடத் தயாராக இருப்பவன் போலத் தெரிந்தான்.(6) அவன் உயர்ந்த தோள்களையும், அகன்ற மார்பையும், யானையின் தோற்றத்தை அளிக்கும் நீண்ட தொண்டையையும் கொண்டிருந்தான். அவன், உண்பதற்குப் பெட்டி பெட்டியான இறைச்சிளும், பருகுவதற்குக் குடங்குடமான குருதியும் படைக்கப்பட்டிருந்தன.(7)

மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அவன் யானைகளைச் சுழற்றி வீசி யானைகளையும், குதிரைகளைச் சுழற்றிவீசி குதிரைகளையும், படைவீரர்களை மோதச் செய்து மற்ற படைவீரர்களையும் கொன்றான். அவன் தேர்களை நொறுக்குவதற்குப் பிற தேர்களைக் கையில் எடுத்தான்.(8) அவன், தான் சுவாசிப்பதில் உண்டாகும் காற்றின் மூலம் மனிதர்களைத் தன் வாய்க்குள் உறிஞ்சி இழுத்தான். அந்த ஹிடிம்பன் போரிடுகையில், விருஷ்ணி குலத்தோர் சிலரைக் கொன்று, அந்தப் போர்க்களத்திலேயே அவர்களை உண்டான். உண்மையில் அவன், தன் முன் கண்ட எவனையும் கொன்றான்.(9,10) ராக்ஷசன் ஹிடிம்பன், யது குலத்தோர் மற்றும் விருஷ்ணி குலத்தோர் பலரை உண்டு, அவர்களின் சடலங்களில் எஞ்சியவற்றை {ஆங்காங்கே} வீசி எறிந்தான்.(11)

மன்னா {ஜனமேஜயா}, பிரளய காலத்தில் அண்டத்தை அழிக்கும் கோபம் நிறைந்த ருத்திரனைப் போலவே அந்த ராக்ஷசனும் எண்ணற்ற படைவீரர்களை விழுங்கினான்.(12) விருஷ்ணி குலத்தின் பலசாலி வீரர்கள் பலர், தங்கள் தோழர்கள் எவ்வாறு அந்த ராக்ஷசனின் உணவானார்கள் என்பதைக் கண்டு பீதியடைந்து திக்குகள் அனைத்திலும் தப்பி ஓடினர்.(13) மன்னா {ஜனமேஜயா}, வானரப்படைவீரர்கள் எண்ணற்றோரை உண்ட கும்பகர்ணனைப் போலவே இந்தப் புருஷாதகனும் {மனிதர்களை உண்பவனும்} விருஷ்ணி படையின் பெரும்பகுதியை விழுங்கினான்.(14)

அந்நேரத்தில் வசுதேவரும், உக்ரசேனனும், கோபக்கார சிங்கத்தை அணுகுமிரு கிழட்டு மான்களைப் போலக் கையில் விற்களுடன் அந்த ராக்ஷசன் முன்பு வந்தனர்.{15} அப்போது அந்த ராக்ஷசன், அந்தக் கிழவர்களை விழுங்கிவிடும் எண்ணத்துடன், தன் வாயைத் திறந்து கொண்டு அவர்களைநோக்கி விரைந்து சென்றான்.{16} அவன், அகன்று விரிந்த தன் வாயுடனும், சீற்றமிக்கக் கண்களுடனும் பாதாள லோகத்தில் இருந்து வந்தவனைப் போலத் தெரிந்தான். அவன், தன்னிரு பகைவரை நோக்கி விரைந்தபோது கூட, மனித இறைச்சியை மென்று கொண்டேயிருந்தான். எனினும், அனுபவம் மிகுந்த அந்தக் கிழட்டுப் போர்வீரர்கள் இருவரும், ஹிடிம்பன் தங்களை நெருங்கும் முன்பே விரைவாகத் தங்கள் கணைகளால் அவனது அகன்ற வாயை நிறைத்தனர்.{17,18}(15-18)

கோரமானவனும், பிசாசைப் போன்றவனும், தேவர்களுக்குப் பகைவனுமான அந்த ராக்ஷசன், அந்தக் கணைகள் அனைத்தையும் அப்படியே விழுங்கிவிட்டான். பிறகு அவன், விரிந்த வாயுடன் அந்தக் கிழட்டுப் போர்வீரர்கள் இருவரையும் நோக்கி விரைந்தான்.(19) அந்த ஹிடிம்பன், வசுதேவர் மற்றும் உக்ரசேனனின் கைகளில் இருந்த விற்களைப் பிடுங்கி அவற்றை முறித்தான். ராக்ஷசர்களில் சிறந்தவனும், பாவம் நிறைந்தவனுமான அந்த ராக்ஷசன், தன்னிரு கைகளையும் விரித்து வசுதேவரைக் கைப்பற்ற முனைந்தான்.(20,21)

அப்போது ஹிடிம்பன், “உக்ரசேனா, ஏன் என் முன் நிற்கிறாய்? இப்போதே உங்கள் இருவரையும் நான் தின்றுவிடுவேன்.(22) நீங்கள் என் உணவாக விதிக்கப்பட்டிருப்பதால், நீங்களாகவே விருப்பத்துடன் என் வாய்க்குள் நுழைவீராக. கிழவன் வசுதேவன், தன்னாலியன்ற அளவுக்குப் போரிட்டுக் களைத்திருப்பதாகவும், பசித்திருப்பதாகவும் தெரிகிறது. இவனைக் கிருஷ்ணனின் தந்தையாக விதி படைத்திருக்கிறது. எப்படியும் உங்கள் இருவரையும் நான் விட மாட்டேன். எனவே, போராடாமல் நீங்களாகவே என் வாய்க்குள் நுழைவீராக.(23,24) உங்கள் குருதியைப் பருகும்போது, நான் பெரும் நிறைவடைவேன். அதன்பிறகு, பழுத்த கிழவர்களான உங்கள் சதையை மகிழ்ச்சியாக நான் உண்பேன்” என்றான் {ஹிடிம்பன்}.(25)

அந்த ராக்ஷசேஷ்வரன், இதைச் சொல்லிவிட்டுத் தன் வாயை அகலவிரித்தபடியே வசுதேவரையும், உக்ரசேனனையும் நோக்கி விரைந்தான்.(26) மன்னா, விரைந்து வரும் அந்த ராக்ஷசனைக் கண்ட வசுதேவரும், உக்கிரசேனனும் பீதியடைந்தனர். அவர்கள் தங்கள் ஆயுதங்களை வீசியெறிந்துவிட்டுத் தங்களால் இயன்ற அளவு வேகத்துடன் தப்பி ஓடினர்.(27)

வசுதேவரும், உக்கிரசேனனும் பீதியடைந்து ஓடுவதைக் கண்ட பலராமன், ஹம்சனுடன் போரிடும் நிலையில் கிருஷ்ணனை விட்டுவிட்டு, அங்கிருந்து புறப்பட்டான். தப்பியோடும் வசுதேவர், உக்கிரசேனன் ஆகியோருக்கும், ஹிடிம்பனுக்கும் இடையில் தன்னை நிறுத்திக் கொண்ட அவன் {பலராமன்}, “ராக்ஷசா, இவ்விருவரையும் விட்டுவிட்டு என்னுடன் போரிடுவாயாக. என் பகைவனை வீழ்த்தும் நோக்கத்திலேயே நான் இங்கே வந்திருக்கிறேன். உன்னைக் கொல்வதன் மூலம் நான் உன் பெருந்தீனிக்கான முடிவை ஏற்படுத்துவேன்” என்றான்.

ஹலாயுதனான பலராமனின் இந்த அறைகூவலைக் கேட்ட ஹிடிம்பன், வசுதேவரையும், உக்கிரசேனனையும் விரட்டுவதை நிறுத்திக் கொண்டு, “முதலில் இப்படிக் குறுக்கிடுபவனை நான் உண்ண வேண்டும்” என்று நினைத்தான். இவ்வாறு நினைத்த அந்த ராக்ஷசன், தன் வாயை அகல விரித்தபடியே பலராமனை நோக்கி முன்னேறினான்.(28-32)

பெருஞ்சக்திவாய்ந்த பலராமன், தன் வில்லையும், கணைகளையும் ஒதுக்கிவிட்டு, தன் தோள்களை உள்ளங்கைகளால் தட்டியபடியே அந்த ராக்ஷசனின் வழியில் குறுக்கே நின்றான்.(33) பாவம் நிறைந்தவனும், மற்றொரு யமராஜனைப் போலத் தெரிந்தவனும், ராக்ஷசனுமான அந்த ஹிடிம்பன், தன் முஷ்டியால் பலராமனின் மார்பில் பலமாகத் தாக்கினான்.(34) அந்த ராக்ஷசனால் தாக்கப்பட்ட பலராமன், பெருங்கோபமடைந்து, அவன் மீது பெருந்தாக்குதலைத் தொடுத்தான்.(35) அப்போது பலராமனுக்கும், ஹிடிம்பனுக்கும் இடையில் கடுமையான ஒரு மற்போர் நேரிட்டது. சிங்கம் போன்ற அந்த வீரர்கள் இருவரும், காய்ந்த விறகுகளை முறிக்கையில் உண்டாகும் பிளவொலியைப் போல, வலிமைமிக்கத் தங்கள் முஷ்டி ஒலிகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்திரனின் வஜ்ரத்திற்கு நிகரான வலிமைமிக்கத் தாக்குதல்களால் ஹிடிம்பன் மீண்டும் மீண்டும் பலராமனின் மார்பைத் தாக்கினான். அதற்குப் பதிலடியாகப் பலராமனும், தேவர்களின் பகைவனான ஹிடிம்பனின் மார்பிலும், முகத்திலும் தன் உள்ளங்கைகளால் மிகத் தீவிரமான தாக்ஃகுதலைத் தொடுத்தான்.(36-39) பலராமனால் தாக்கப்பட்ட ராக்ஷசேஷ்வரன் ஹிடிம்பன், நடைமுறையில் சுயநனவிழந்து, முழங்கால் படிந்து விழுந்தான்.(40)

பலராமன், தன்னிரு கைகளாலும் அந்த ராக்ஷசனைப் பிடித்துச் சில காலம் வரை அவனை மீண்டும் மீண்டும் சுழற்றிக் கொண்டேயிருந்தான். பிறர் அனைவரும் சூழ்ந்திருந்து, பார்வையாளர்களாகக் கண்டு கொண்டிருந்த போதே ஹலாதரன் {பலராமன்}, அந்த ராக்ஷசேந்திரனை நான்கு மைல்கள் தொலைவிற்குச் சுழற்றி வீசினான். இவ்வாறே அந்தப் பயங்கர ராக்ஷசன் {ஹிடிம்பன்} பலராமனால் கொல்லப்பட்டான்[1].(41-43) பலபத்ரனால் {பலராமனால்} கொல்லப்பட்ட தங்கள் தலைவனான ஹிடிம்பனின் மரணத்தைக் கண்ட ராக்ஷசர்கள் அனைவரும் பீதியடைந்து திக்குகள் அனைத்திலும் தப்பி ஓடினர்.(44)அவனால் {பலராமனால்} ஹிடிம்பன் கொல்லப்பட்டதும், தினேசன் {சூரியன்} தன் கதிர்களை உள்வாங்கிக் கொண்டு மேற்கில் மறைந்தான். போர்வீரர்களால் தங்கள் பகைவரைக் காணமுடியாத அளவுக்கு இருள் சூழ்ந்தது.(45) மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அண்டத்தின் வாயாகக் கருதப்படுபவனும், உயிரினங்கள் அனைத்தையும் காப்பவனும், ஜகத்குருவுமான சூரியன் சமுத்திரத்திற்குள் நுழைந்ததும், நட்சத்திரங்களின் நாதன் {சந்திரன்}, இரவின் இருளை அகற்றியபடியே வானில் தோன்றினான்.(46) ஹம்சனின் படைத்தலைவர்கள், அந்த இருளின் காரணமாக இரவில் போரை நிறுத்த தீர்மானித்தனர். அவர்கள், “மன்னர்களே, நாளை காலையில், கின்னரர்களின் கீதங்களால் நம்மை ஈர்க்கப் போகும் கோவர்த்தன மலையில் நம் போர் தொடரும்” என்றனர் {ஹம்சடிம்பகர்களின் படைத்தலைவர்கள்}. இதைக் கேட்டதும் அவர்கள் அனைவரும் கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்” என்றார் {வைசம்பாயனர்}.(47)

கிருஷ்ணன் ஹம்சன் போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 102-(ஸ்ரீக்ருஷ்ணஹம்ஸயோர்யுத்தம்)-புஷ்கரத்தில் இருந்து கோவர்த்தன மலைக்குப் பெயர்ந்த போர்; கிருஷ்ணனும் ஹம்சனும் போரிட்டது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, சகோதரர்களான ஹம்சன், டிம்பகன் இருவரும் அந்த இரவிலேயே கொண்டாடப்பட்ட மலையான கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(1) இரவு முடிந்து, சூரியன் எழுந்தபோது, கேசிசூதனனான கேசவனும் கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(2) சாத்யகி, பலபத்ரன் {பலராமன்}, சாரணன் ஆகியோரும், பிற யாதவர்களும், கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் இசையால் எதிரொலிக்கப்பட்ட கோவர்த்தன மலைக்குக் கேசவனுடன் சென்றனர்.(3)

மன்னா {ஜனமேஜயா}, அவர்கள் கோவர்த்தன மலையை அடைந்தபோது, எண்ணற்ற படைவீரர்கள் மற்றும் பசுக்களின் ஒலியால் நிறைந்திருக்கும் அந்தச் சுற்றுச்சூழலைக் கண்டனர்.(4) மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, மலையின் வடக்கில் யாதவர்கள் கூடினர். அதன்பிறகு அந்தப் போர், யமுனை நதியின் அருகில் மீண்டும் தொடங்கியது.(5)

போர் தொடங்கியபோது, ஹம்சடிம்பகர்களைக் காயப்படுத்தும் ஏழு கணைகளை வசுதேவர் ஏவினார். சாரணன் அந்தச் சகோதரர்கள் இருவர் மீதும் இருபத்தைந்து கணைகளை ஏவினான். கங்கனோ, பத்துக் கணைகளை ஏவினான்.(6) இவ்வாறே முன்னணி யாதவர்களில் பலர் ஹம்சடிம்பகர்களுடன் போரிட்டனர். உக்கிரசேனன், எழுபத்துமூன்று முட்கணைகளை ஏவினான்.(7) மன்னா, விராடன் முப்பது கணைகளை ஏவினான். சாத்யகி ஏழு கணைகளையும், விப்ருது எட்டுக் கணைகளையும், உத்தவர் பத்துக் கணைகளையும் அந்த மன்னர்கள் {ஹம்சடிம்பகர்கள்} இருவர் மீதும் ஏவினர்.(8) பகைவரைக் காயப்படுத்தும் வகையில், பிரத்யும்னன் முப்பது கணைகளையும், சாம்பன் ஏழு கணைகளையும், அநாதிருஷ்டி அறுபத்தொரு முட்கணைகளையும் ஏவினர்.(9) மன்னா, இவ்வாறு முக்கிய யாதவர்கள் அனைவரும் பேராவலுடனும், உத்வேகத்துடனும் போரிடத் தொடங்கினர். அது, பார்ப்பதற்கு அற்புதமான கடும்போராகத் திகழ்ந்தது.(10)

வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஆதரவாக யாதவர்கள் அனைவரும் ஹம்சடிம்பகர்களுடன் போரிட்டனர்.{11} சகோதரர்களான ஹம்சன், டிம்பகன் இருவரும் தங்கள் கணைத் தாரைகளால் யாதவர்கள் அனைவரையும் ஒடுக்கினர். ஹம்சனும், டிம்பகனும் பிரகாசமான பத்துப் பத்துக் கணைகளை யாதவர்கள் ஒவ்வொருவரின் மீதும் ஏவினர்.{12} அந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட யாதவேஷ்வரர்கள் பலரும், வசந்தகாலத்தில் மலரும் பலாச மரங்களைப் போலத் தோற்றமளிக்கும் வகையில் குருதியைக் கக்கினர்.{13} மன்னா {ஜனமேஜயா}, அப்போது, பெரிதும் ஒடுக்கப்பட்ட யாதவர்கள் போர்க்களத்தைவிட்டுத் தப்பியோடத் தொடங்கினர்.

அந்நேரத்தில், வாசுதேவனும் {வசுதேவரின் மகனான கிருஷ்ணனும்}, பலனும் {ஹலாதரனான / கலப்பைதாரியான பலராமனும்} தங்கள் கைகளில் விற்களுடன் ஹம்சடிம்பகர்களை எதிர்த்தனர்.{14,15} அதன்பிறகு, நீண்ட காலத்திற்கு முன்னர்ச் சக்ரன் {இந்திரன்}, ஸ்கந்தன் {கார்த்திகேயன்} ஆகியோருக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரை அனைவருக்கும் நினைவூட்டும் வகையில், ஓர் அற்புதப் போர் நடைபெற்றது. தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், யக்ஷர்கள், பெரும் நாகர்கள் ஆகியோர்{16} வானில் தேவவிமானங்களில் அமர்ந்தபடியே இந்தப் பெரும்போரைக் கண்டனர். அந்நேரத்தில் ஹம்சடிம்பகர்களைப் பாதுகாக்க மஹாதேவனால் அனுப்பப்பட்ட பூதேஷ்வரர்கள் திடீரெனத் தோன்றினர்.{17}

வாசுதேவன் {கிருஷ்ணன்}, ஹம்சனுடன் போரிட்டது நிகரான இருவருக்கிடையில் நடைபெறும் போரைப் போலத் தோன்றியது. அவர்களின் அருகிலேயே பலராமனும் டிம்பகனும் போரிட்டனர். அந்த நான்கு போர்வீரர்களும், தங்கள் தேர்களில் அமர்ந்தபடியே சங்குகளை முழக்கினர். வாசுதேவன் {கிருஷ்ணன்}, அனைவரின் இதயங்களையும் ஆச்சரியத்தால் நிறைக்கும் வகையில் தன் பாஞ்சஜன்ய சங்கை முழக்கினான்.

பேருடலையும், துருத்தும் வயிறுகளையும் கொண்ட பயங்கரமான அந்தப் பூதங்கள் இருவரும், தங்கள் சூலங்களால் கிருஷ்ணனைத் தாக்கினர். தேவர்களும், கந்தர்வர்களும் அந்தச் சூலங்களால் தாக்கப்பட்டும் புன்னகைத்துக் கொண்டிருந்த கிருஷ்ணனைக் கண்டனர். போர்வீரர்களில் சிறந்தவனான ஜனார்த்தனன், தன் தேரில் இருந்து கீழே குதித்து அந்தப் பூதங்கள் இருவரையும் பிடித்தான். அவர்கள் இருவரையும் நெருப்புப் பந்தத்தைப் போல நூறு முறை சுழற்றி கைலாச மலையை நோக்கி வீசியெறிந்தான்.{18-24} அந்தப் பூதங்கள், கைலாச மலையின் சிகரத்தில் விழுந்தபோது, கிருஷ்ணனின் பேராற்றலை வியந்தனர்.{25} தன்னைப் பாதுகாக்கும் அந்தப் பூதங்களைக் கிருஷ்ணன் தூக்கி வீசுவதைக் கண்டு ஹம்சன், கோபத்தால் கண்கள் சிவந்தான்.{26}

தேவர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தபோதே அவன் {ஹம்சன்}, “கேசவா, நாங்கள் ராஜசூய யஜ்ஞம் செய்வதை ஏன் நீ தடுக்க முனைகிறாய்?{27} நீ விளைவிக்கும் இடையூறுகளின் மத்தியிலும் எங்கள் தந்தை பிரம்மதத்தர் அவ்வேள்வியைச் செய்து முடிப்பார். நீ உன் உயிர் மீது மதிப்புக் கொண்டிருந்தால், நாங்கள் கோரும் கப்பத்தைக் கட்டுவாயாக. நந்தபுத்திரா {நந்தனின் மகனான கிருஷ்ணா}, நீ எங்களுக்குக் கப்பங்கட்ட விரும்பவில்லையெனில், ஒரு கணம் பொறுப்பாயாக. ஒப்பற்றதாக இருக்கும் என் ஆற்றலைக் கண்ட பிறகு, நீ புலனுணர்வை மீண்டும் அடைவாய். அதன் பிறகு, நீ கப்பமும் கட்டுவாயாக, என் தந்தையும் வேள்வியைத் தொடங்குவார். சூலபாணியான மஹாதேவன், தேவர்களின் ஈசுவரனாக {தேவசுவரனாக} இருப்பதைத் போல, நானும் மன்னர்களின் தலைவனாவேன் {ராஜர்களின் ஈசுவரனாவேன் / ராஜேசுவரனாவேன்}. இந்தப் போரில் உன் செருக்கை நான் எப்படி அறுக்கப் போகிறேன் என்பதை நீ காண்பாயாக” என்றான் {ஹம்சன்}.{28-30}(11-30)

மன்னா {ஜனமேஜயா}, இதைச் சொன்ன பிறகு, சாலமரத்தைப் போன்று பெரிதாக இருந்த தன் வில்லை எடுத்துக் கொண்ட ஹம்சன், கிருஷ்ணனின் நெற்றியை நோக்கி ஒரு கணையை ஏவினான். அந்தக் கணை கிருஷ்ணனின் நெற்றியைத் துளைத்தாலும், அஃது அவனது மேனியை எழிலுடன் அலங்கரிப்பதாகவே தெரிந்தது.

அப்போது கிருஷ்ணன், சாத்யகியிடம், “பலமிக்க வீரா, என் தேரைச் செலுத்துவாயாக” என்றான். இதைக் கேட்ட சாத்யகி, தாருகனைத் தனக்குப் பின் இருந்த இருக்கையில் அமர்த்திவிட்டு அந்தத் தலைவனின் தேரைச் செலுத்தத் தொடங்கினான்.(31-33) இராஜேந்திரா {ஜனமேஜயா}, பகைவனைத் தாக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவாறே சாத்யகி தலைவனின் தேரைச் செலுத்திக் கொண்டிருந்தான். ஹம்சனின் கணைகளால் புண்பட்டக் கிருஷ்ணன், கடுங்கணையொன்றைத் தன் நாண்கயிற்றில் பொருத்தியவாறே, பகைவனின் அருகில் செல்லுமாறு சாத்யகிக்கு ஆணையிட்டான்.

பிறகு அந்தத் தலைவன் {கிருஷ்ணன்}, ஹம்சனிடம் பின்வருமாறு பேசினான்:(34,35) “பாவியே, இப்போதே நான் உன்னை இந்தக் கணையால் எரித்து விடுவேன். உனக்குத் திறனிருந்தால் என் முயற்சியை வீணடிப்பாயாக. அதிகம் பேசுவதில் பயனேதும் இல்லை. நீ க்ஷத்திரியன் என்பதால் போரிடும் உன் கடமையை நிறைவேற்றுவாயாக.(36) ஹம்சா, நான் கப்பங்கட்ட வேண்டுமென நீ விரும்பினால், இன்றே போர்க்களத்தில் உன் ஆற்றலை வெளிப்படுத்துவாயாக. மனிதர்களின் ஆட்சியாளனென நீ சொல்லிக் கொண்டாலும், புஷ்கரையில் வசிக்கும் முனிவர்களை நீ துன்புறுத்தியிருக்கிறாய்.(37) மனிதர்களில் இழிந்தவனே, நானே ஜகத்பதி. என் முன்னிலையில் பிராமணர்களைத் துன்புறுத்தும் அளவுக்கு நீ துணிந்திருக்கிறாயா? இவ்வுலகில் என்னிடம் பகை கொள்ளும் துஷ்டர்களைத் தண்டிப்பதன் மூலம் உன்னைப் போன்ற க்ஷத்திரியர்களை நான் அழித்து வருகிறேன். பெரும் முனிவர்களின் சாபத்தைப் பெற்றிருப்பதால் நீ ஏற்கனவே இறந்தவனாவாய். யமனிடம் உன்னைக் கொடுத்துப் பிராமணர்களுக்குப் பாதுகாப்பை நான் அருளப் போகிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணன் இதைச் சொல்லிவிட்டு ஹம்சன் மீது தன் நெருப்புக் கணையை ஏவினான். எனினும் ஹம்சனோ, நீர்க்கணையால் அதற்குப் பதிலடி கொடுத்தான். அப்போது கோவிந்தன், ஹம்சனின் ஆயுதத்திற்கு எதிர்த்தாக்குதல் தொடுக்கும் வகையில் வாயவ்ய ஆயுதத்தை இருப்புக்குள் அழைத்து மஹேந்திர ஆயுதத்தையும் அதனுடன் சேர்த்தான். அதன்பிறகு கிருஷ்ணன் மஹேஷ்வர ஆயுதத்தை இருப்புக்குள் அழைத்தான். அதற்கு ஹம்சன் உடனே ரௌத்ர ஆயுதத்தால் எதிர்த்தான்.

கிருஷ்ணன், கந்தர்வ, ராக்ஷச, பைசாச ஆயுதங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக ஏவினான். இருப்பினும் ஹம்சன் தன்னுடைய பிரம்மாஸ்திரம், கௌபேரமாஸ்திரம், ஆசுராஸ்திரம் உள்ளிட்ட ஆயுதங்களால் அவை அனைத்திற்கும் பதிலடி கொடுத்தான். அதன்பிறகு ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஹம்சனுக்கு எதிராகப் பெருஞ்சக்திவாய்ந்த பிரம்மசிரத்தை ஏவினான்.(38-46) மன்னா {ஜனமேஜயா}, அந்த முதன்மையான ஆயுதத்தைக் கண்ட ஹம்சன் பேரச்சம் கொண்டான். இருப்பினும் அவன் தன்னுடைய ஆயுதத்தால் அதற்கும் பதிலடி கொடுத்தான்.(47) உயிரினங்கள் அனைத்தின் உயிராகவும், ஆன்மாவாகவும் இருப்பவனும், அண்டத்தைப் படைத்துக் காப்பவனும், தேவதேவனுமான ஜனார்த்தனன் தன் கைகளையும், வாயையும் யமுனை நீரில் கழுவி வலிமைமிக்க வைஷ்ணவாஸ்திரத்தை இருப்புக்கு அழைத்தான். பழங்காலத்தில் அசுரர்களிடமிருந்து ராஜ்ஜியத்தை மீட்ட அதே ஆயுதத்தின் துணையால் கிருஷ்ணன் ஹம்சனைக் கொல்ல முயற்சித்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(48,49)

ஹம்ச வதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 103-யமுனையின் மடுவில் ஹம்சனை மூழ்கடித்த கிருஷ்ணன்…வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, மஹாபயங்கரமான அவ்வாயுதம் {வைஷ்ணவாஸ்திரம்} தன்னை அணுகுவதைக் கண்ட மன்னன் ஹம்சன் பீதியில் கிட்டத்தட்ட முடக்கமடைந்தான்.(1) விரைவில் பதற்றம் தணிந்த அவன் தன் தேரில் இருந்து குதித்தான். பிறகு, ரிஷிகேசனான கிருஷ்ணன் ஏற்கனவே காளியனைத் தண்டித்த யமுனை ஆற்றை நோக்கி அவன் ஓடினான்.(2) யமுனையில் இருந்த அந்தப் பெரிய மடுவின் நீர், பாதாளலோகம் வரை ஆழம் கொண்டதாகவும், அஞ்சனத்தைப் போல் கருமையாகவும் இருந்தது.(3)

மலைகளைப் பெயர்த்து பெருங்கடலுக்குள் வீசும்போது ஆர்ப்பரித்த இந்திரனைப்போல அந்த ஹம்சன் பேராரவாரவொலி எழுப்பியவாறே ஓடிச்சென்று அந்த மடுவுக்குள் குதித்தான். தேவர்களும் அடங்கிய இந்த அண்டத்தின் தலைவனான கிருஷ்ணன் இதை அறிந்ததும், காற்றில் குதித்தெழுந்து, பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் சரியாக ஹம்சன் மீதே அந்த மடுவுக்குள் குதித்தான். மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கேசவன், அப்போது தன் கால்களால் வலுவாக மிதித்தே ஹம்சனை யமலோகத்திற்கு அனுப்பிவைத்தான். அல்லது, குறைந்தபட்சம் இதுதான் {கிருஷ்ணன் இவ்வாறு ஹம்சனைக் கொன்றான் என்பதே} பார்வையாளர்கள் சிலரின் கருத்தாக இருந்தது.(4-7)

இராஜேந்திரா {ஜனமேஜயா}, வேறு சிலரோ அந்த ஹம்சன் பாதாள லோகத்திற்கு அழுத்தப்பட்டுப் பெரும்பாம்புகளால் உண்ணப்பட்டான் என்று சொல்கிறார்கள். நிலை எவ்வாறிருப்பினும், அன்றுமுதல் {இன்றுவரை} அவன் திரும்பவில்லை.(8) மன்னா, அதன்பிறகு ஜகந்நாதன் {கிருஷ்ணன்} தன் தேருக்குத் திரும்பினான். ஹம்சன் இறந்த பிறகு, உன் முப்பாட்டனும், தர்மபுத்திரனுமான யுதிஷ்டிர மஹாராஜனே ராஜசூய வேள்வியைச் செய்தான். ஹம்சன் உயிருடன் இருந்திருந்தால், அவனது வேள்வி மண்டபத்திற்கு வந்து அவன் முன்பு எவன் வணங்கியிருப்பான்?(9,10)

பிரபுவே {ஜனமேஜயா}, சிவனிடம் வரம்பெற்றதில் ஹம்சன் செருக்கில் மிதந்து வந்தான். ஆனால், “பகைவரின் செருக்கை அழிக்கும் கிருஷ்ணன் அந்த ஹம்சனைக் கொன்றான். கிருஷ்ணன் ஹம்சனைக் கொன்றே விட்டான்” என்ற செய்தி உலகம் முழுவதும் பரவியது. முக்கியக் கந்தர்வர்கள் தேவலோகத்தில் இரவும் பகலும் இந்த வரிகளையே பாடிக் கொண்டிருந்தனர்.(11,12)

இவ்வாறே லோகநாதனான கிருஷ்ணன், தன் புகழ் எங்கும் பரவும்படி ஹம்சனை யமுனையின் மடுவிற்குள் கொன்றான்” என்றார் {வைசம்பாயனர்}.(13)

டிம்பகன் ஆத்ம தியாகம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 104-அண்ணனின் பிரிவு தாளாமல் தன் நாவைப் பிடுங்கி உயிர்த்தியாகம் செய்த டிம்பகன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “டிம்பகன், பெருஞ்சக்திவாய்ந்த தன் அண்ணன் ஹம்சன் பெரும்போரில் கொல்லப்பட்டான் என்பதைக் கேட்டதும், பலராமனுடன் போர் புரிவதை நிறுத்திவிட்டு யமுனையின் கரைக்குச் சென்றான். கலப்பைதாரியான பலராமன் வேகமாக ஓடி அவனை விரட்டிச் சென்றான்.(1,2) மன்னா {ஜனமேஜயா}, ஹம்சன் குதித்த அதே இடத்தில் டிம்பகனும் யமுனையின் நீரில் குதித்தான். அதன் விளைவாக யமுனையின் நீர் கலங்கியது.(3)

மன்னா, டிம்பகன் நீரைக் கோபத்துடன் அடித்து நீர்ப்பரப்பில் இருந்து மேலும் மேலும் அடியில் மூழ்கிச் சென்றான். மீண்டும் மீண்டும் முயற்சித்தாலும் அவனால் தன் அண்ணனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் நீரில் ஆழ மூழ்கி மீண்டும் பரப்புக்கு வந்தபோது, தன் முன் வாசுதேவனை {கிருஷ்ணனைக்} கண்டான்.

அப்போது டிம்பகன், “இடைப்பயலே, என் அண்ணன் ஹம்சன் எங்கே?” என்று கேட்டான்.

அதற்கு வாசுதேவன், “அருவருக்கத்தக்க மன்னா, யமுனையிடம் இந்தக் கேள்வியைக் கேட்பாயாக” என்றான்.

வாசுதேவனின் மறுமொழியைக் கேட்ட டிம்பகன், தன் அண்ணனிடம் பேரன்பும், பற்றும் கொண்டவன் என்பதால் மேலும் யமுனையாற்றின் நீரில் ஆழமாக மூழ்கித் தேடினான். எங்குத் தேடினும் தன் அண்ணனைக் காணமுடியாமல் அவன் புலம்பத் தொடங்கினான். {டிம்பகன்}, “மன்னர்களில் சிறந்தவரே, நண்பர்கள் எவருமற்றவனான இந்த டிம்பகனை விட்டுவிட்டு எங்குச் சென்றுவிட்டீர்? அண்ணா, என்னை இங்கே தனியாக விட்டுவிட்டு எங்குச் சென்றீர்?” என்று புலம்பினான்.

அண்ணனிடம் பாசமிக்க டிம்பகன், இவ்வாறு அழுது புலம்பி யமுனையில் ஆழமான அந்தத் தடாகத்திலேயே தன்னுயிரை விடத் தீர்மானித்தான். அவன் மீண்டும் மீண்டும் நீரில் மூழ்கி, தன் அண்ணனுக்காகப் புலம்பி அழுவதற்காக வெளியே வந்தான். இறுதியில் வீரமிக்க அந்த டிம்பகன், தன் கைகளாலேயே தன் நாவைப் பிடுங்கி தற்கொலை செய்து கொண்டான். அத்தகைய மரணமே அவன் நரகத்திற்குச் செல்ல வழிவகுத்தது.

ஹம்சடிம்பகர்களின் மரணத்திற்குப் பிறகு தாமரைக் கண்ணனான கிருஷ்ணன் போர்க்களத்திற்குத் திரும்பினான். அந்தப் பெரும்போரின் விளைவில் நிறைவடைந்த வாசுதேவனும், பலபத்ரனும், தங்கள் இளமைக் காலங்களில் இன்புற்றிருந்த கோவர்த்தன மலையில் சிறிது காலம் ஓய்ந்திருந்தனர்” என்றார் {வைசம்பாயனர்}.(4-15)

நந்தனும் யசோதையும் | பவிஷ்ய பர்வம் பகுதி – 105- நந்தகோபரும், யசோதையும், ஆயர்பாடி மக்களும் கோவர்த்தன மலையில் கிருஷ்ணனையும், பலராமனையும் சந்தித்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “யசோதையும், நந்தகோபனும் நீண்ட நாட்களாகக் கிருஷ்ணனைக் காண விரும்பினர். எனவே, அவன் தன் தமையனுடன் {பலராமனுடன்}கோவர்த்தன மலைக்கு வந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டதும் அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். கோபர்கள், கோபிகைகள் ஆகியோர் அனைவரையும் திரட்டிக் கொண்டும், வெண்ணெய், தயிர், சுண்டவைக்கப்பட்ட பால், பாயஸம், காட்டு மலர்கள், மயில் இறகுகளாலான கைவளைகள் ஆகியவற்றையும், இன்னும் பிற பரிசுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டும் அவர்கள் கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(1-3)

அங்கே அவர்கள் கரிய மான்களின் கண்களையுடைய வாசுதேவனும், அவனது அண்ணன் பலராமனும் ஒரு மரத்தினடியில் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்டனர்.(4) கிருஷ்ணனையும், பலராமனையும் கண்டதும், நந்தனும், யசோதையும் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தனர். அப்போது, கிருஷ்ணனும், பலராமனும், நந்தனையும், யசோதையையும் வணங்கினர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பரிசுப்பொருட்களைக் கொடுத்துப் பாயசத்தையும் ஊட்டினர்.(5)

அப்போது கிருஷ்ணன், “அன்புத் தந்தையே, அன்புத்தாயே விரஜத்தில் {ஆயர்பாடியில்} உள்ள பசுக்கள் அனைத்தும் நலமா? அப்பா, பசுக்கள் இன்னும் பால் தருகின்றனவா? கன்றுகள் அனைத்தும் நலமா?(6) விரஜத்தின் பசும்பால் இன்னும் தூய்மையாகவும், மங்கலமாகவும் இருக்கிறதா? அழகிய பசுக்கள் போதுமான அளவுக்கு உங்களிடம் இருக்கின்றனவா? அன்னையே, குழந்தைகள் பருகப் போதுமான பால் கிடைக்கிறதா?(7) அன்புத் தந்தையே, போதுமான கயிறுகளும், கம்பங்களும் உங்களிடம் இருக்கின்றனவா? பசுக்கள் மேய போதுமான புல்வெளிகள் இருக்கின்றனவா?(8) அப்பா, வண்டிகள் அனைத்திலும் அவை சுமக்கும் பால் பொருட்களின் மணம் இருக்கிறதா? கோபிகையர் பிள்ளைகள் ஈன்று அன்னையராகினரா?(9) தந்தையே, விரஜத்தில் அவர்கள் போதுமான அளவுக்கு உடையாத குடங்களை வைத்திருக்கின்றனரா? பசுக்கள் ஒவ்வொரு நாளும் ஏராளமான பாலைக் கொடுக்கின்றனவா?(10) நமது பசுக்கள் பால், தயிர், வெண்ணை ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்கியிருக்கின்றனவா?” என்று கேட்டான்.(11)

நந்தன், “யதுவின் வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, கேசவா, நமது பசுக்கள் பெரும்பாலும் நல்ல உடல்நலத்துடன், பிணியற்றவையாக இருக்கின்றன. அதுவே அவற்றின் இயல்புநிலை.(12) கேசவா, தேவர்களின் தலைவா, உன் பாதுகாப்பில் நாங்கள் பாதுகாப்புடனும், நிறைவுடனும் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் அனைவரும் நலமாக இருக்கின்றோம். நமது பசுக்கள் அனைத்தும் நலமாக இருக்கின்றன.(13) கேசவா, எனக்கு முழுநிறைவேற்படும் வரை உன்னைக் காண முடியாதது மட்டுமே என் ஒரே கவலை. என் இதயம் அதன் காரணமாக மட்டுமே துன்புறுகிறது” என்றான் {நந்தகோபன்}”.(14)

வைசம்பாயனர், “தன் தந்தை அழுது புலம்புவதைக் கேட்ட கேசவன், “என் உயிர் தந்தையே, அழாதீர். வீட்டுக்குத் திரும்பிச் செல்வீர்” என்றான். பிறகு யசோதையிடம், “அன்புத் தாயே, நீயும் வீட்டுக்குத் திரும்பிச் செல்வாயாக.(15) உங்களைத் துதிப்பவர்கள் சுவர்க்கத்தை அடைவார்கள். உங்களை வணங்குபவர்கள் என்னுயிர் பக்தர்களாவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணன், தன்னை வளர்த்த தாய் தந்தையிடம் இதைச் சொல்லிவிட்டு, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டான். வாசுதேவன், தனது தந்தையையும், தாயையும் தேற்றி அவர்களைத் தழுவிக் கொண்டான். பிறகு யசோதையும், நந்தனும் கோபகோபிகைகளுடன் தங்கள் இல்லத்திற்குத் திரும்பிச் சென்றனர்.(16-18) அப்போது ரிஷிகேசனான கிருஷ்ணன், விருஷ்ணி, யது குலத்தோர் அனைவருடன் துவாரகை திரும்பும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினான்.(19) இந்த விவரிப்புகளைக் கவனத்துடன் படிக்கும் எவருக்கும், கேட்கும் எவருக்கும் நல்ல மகன் கிடைப்பான், இம்மையில் {உயிருடன் இருக்கையில்} ஏராளமான செல்வமும், மறுமையில் {இறந்தபின்} முக்தியும் கிடைக்கும்” என்றார் {வைசம்பாயனர்}.(20)

மீண்டும் துவாரகை | பவிஷ்ய பர்வம் பகுதி – 106-புஷ்கரையில் கிருஷ்ணனைத் துதித்த முனிவர்கள்; துவாரகை திரும்பிய கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, மஹாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணன், பிற யாதவர்களுடன் சேர்ந்து துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான். வழியில் புஷ்கரையில் நின்று அங்கே வசித்து வந்த பெரும் முனிவர்களைச் சந்தித்தான்.(1)

பொறாமையற்றவர்களான அந்தப் பெரும் முனிவர்கள், யதுவின் புகழ்பெற்ற வழித்தோன்றலான கிருஷ்ணனைக் கண்டு, அவனுக்கு அர்க்கியத்தையும், பிற மங்கலப் பொருட்களையும் கொடுத்தனர்.{2} பிறகு அவர்கள், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தையும் அறிந்த ஜகத்பதியான ஜனார்த்தனனிடம், “விஷ்ணுவே, நினைத்தற்கரிய ஆற்றல்படைத்தவன் நீயே.{3} போரில் ஹம்சனையும், டிம்பகனையும் கொன்றவன் நீயே. ஈசுவரனே, தேவர்களின் தலைவனாலும் {இந்திரனாலும்கொல்லப்பட முடியாத ராக்ஷசன் விசக்ரனைக் கொன்றவன் நீயே.{4} உண்மையில் உன்னைத் தவிர வேறு எவனாலும் அவனைக் கொன்றிருக்க முடியாது என நாங்கள் நம்புகிறோம்.

ஹரியே, எங்கள் தினப்படி ஆன்ம அறுவடைக்குத் தேவையான பரிவாரங்கள் அனைத்தும் இனி தடையில்லாமல் எங்களுக்குக் கிடைக்கும்.{5} உண்மையில், உன் தாமரைப் பாதங்களை நினைவுகூர்வதாலேயே நாங்கள் தூய்மை அடைந்து விடுவோம். உன்னைத் தியானிப்பவனின் வாழ்வில் நேரும் துன்பங்கள் அனைத்தையும் அகற்றுபவன் நீயே.{6} தொடர்ந்து நினைவுகூரப்படுவதன் மூலம் உன் தாமரைப் பாதங்கள் பரம புண்ணியத்தை அருள்கின்றன. ஹரியே, தவம் செய்யும் எங்களை நீயே பாதுகாக்கிறாய்.{7}

புனித அக்ஷரமான ஓம் எனும் ஓங்கார வஷட்காரத்தின் உருவகமாக நீயே இருக்கிறாய். யஜ்ஞம் {வேள்வி} நீயே, உயிரினங்கள் அனைத்தின் முப்பாட்டன் நீயே. ஜோதியாகத் திகழும் பிரம்மத்தின் பிறப்பிடமான நீயே பிரம்மனாகவும், ருத்திரனாகவும் இருக்கிறாய். உயிரினங்கள் அனைத்தினுள்ளும் உயிராகவும், ஆன்மாவாகவும் வசிக்கும் பரமாத்மா நீயே. ஜகத்பதியே, வேள்வி செய்வதன் மூலமும், கொடையளிக்கும் ஈகையின் மூலமும் நீயே வழிபடப்படுகிறாய்.{8,9}(2-9) அண்டத்தைப் படைக்கும் பிரம்மம் நீயே. எனவே நாங்கள் உன்னைப் பக்தியுடன் வணங்குகிறோம். தேவா, உன்னிடம் பகை பாராட்டும் அனைவரையும் அழித்து அண்டத்தைக் காப்பாயாக” என்றனர் {முனிவர்கள்}.(10)

ஹரியும், “நன்று. அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான். அங்கே அவன் விருஷ்ணி குலத்தாருடன் பெரும் மகிழ்ச்சியுடன் வசித்திருந்தான்.(11) ஜனமேஜயா, நீ கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேவதேவனான கிருஷ்ணனின் கடந்த காலத்தை உனக்கு விளக்கிச் சொன்னேன். இன்னும் நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்?” என்றார் {வைசம்பாயனர்}.(12)

மஹாபாரதப் பலன்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 107-ஒவ்வொரு பர்வத்தின் நிறைவிலும் என்னென்ன கொடைகள் அளிக்கப்பட வேண்டும்; மஹாபாரதம் உரைப்பவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய கொடை; மஹாபாரதம் கேட்பவருக்கும், படிப்பவருக்கும் உண்டான பலன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மதிப்பிற்குரிய ஐயா, கல்விமான்கள் எந்த விதிகளின்படி பாரதத்தைக் கேட்கிறார்கள்? அதன் பலன்கள் என்னென்ன? அது நிறைவடையும்போது வழிபடப்பட வேண்டிய தேவர்கள் யாவர்?{1} ஒவ்வொரு பர்வம் நிறைவடையும்போதும் செய்ய வேண்டிய ஈகைகள் என்னென்ன? அதைச் சொல்பவர் எவ்வாறு இருப்பது உகந்தது? இவை அனைத்தையும் எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.{2}(1,2)

வைசம்பாயனர், “ஓ! மன்னா பாரதம் எவ்வாறு கேட்கப்பட வேண்டும் என்பதையும், அதன் பலன்கள் என்னென்ன என்பதையும் கேட்பாயாக. ஓ! மன்னா, உன் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன் கேட்பாயாக.(3)

தேவலோகத்தில் வாழும் தேவர்கள் பூமிக்கு விளையாட வந்தனர். அவர்கள் தங்கள் பணியை முடித்துவிட்டுத் தங்கள் உலகத்திற்கே திரும்பிச் சென்றனர்.{4} பூமியில் தேவர்களின் பிறப்பையும், ரிஷிகளின் பிறப்பையும் சொல்கிறேன் கவனமாகக் கேட்பாயாக.{5} ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, ருத்திரர்கள், சாத்யர்கள், விஷ்வேதேவர்கள், ஆதித்யர்கள், அஷ்வினி ரெட்டையர்கள், லோகபாலர்கள், மஹாரிஷிகள்,{6} குஹ்யர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், வித்யாதரர்கள், சித்தர்கள், தர்மன், பிரம்மன் {சுயம்பு}, காத்யாயன முனிவர்,{7} மலைகள், ஆறுகள், பெருங்கடல்கள், அப்சரஸ்கள், கோள்கள், வருடங்கள், அயனங்கள், பருவகாலங்கள்,{8} அசைவன, அசையாதன, தேவர்கள், அசுரர்கள் ஆகியோர் அனைவரும் (வரலாறாகத் திகழும் இந்த) பாரதத்தில் அடிக்கடி சொல்லப்படுவது காணப்படுகிறது.{9} அவர்களின் பெயர்களையும், சிறப்புமிக்கச் செயல்களையும் கேட்பதன் மூலம் ஒரு மனிதன் செய்த கொடும்பாவங்களில் இருந்தும் உடனடியாக விடுபடுகிறான்.{10)

இந்த வரலாற்றை {இதிஹாஸத்தை} முறையாகவும், வரிசையாகவும் ஒருவன் கேட்டால், புலன்களைக் கட்டுப்படுத்தி, ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி ஒருவன் இந்தப் பாரதத்தில் தேர்ச்சியடைந்தால், அவன் அந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஈகை புரிய வேண்டும்.{11,12} அவன், மதிப்புடனும், தன் சக்திக்குத் தகுந்த அளவிலும் பல்வேறு ரத்தினங்களையும், மாடுகளில் பால் கறப்பதற்கான பாத்திரங்களையும், நன்கு அலங்கரிக்கப்பட்ட திறன்கொண்ட கன்னிகைகளையும்,{13} பல்வேறு வாகனங்களையும், வீடுகள், நிலங்கள், ஆடைகள், பொன், குதிரைகள், மதங்கொண்ட யானைகளால் சுமக்கப்படும் படுக்கைகள், வாகனங்கள், நன்கு கட்டப்பட்ட தேர்கள் ஆகியவற்றைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.{14,15} சிறந்தவை எவற்றையும், விலைமதிப்புமிக்கப் பொருட்கள் எவற்றையும் அவன் இருபிறப்பாளர்களுக்குக் கொடுக்க வேண்டும். அவன் தன்னையும், தன் மனைவியையும், பிள்ளையும் கூடக் கொடையாக அளிக்கலாம் எனும்போது இன்னும் சொல்ல ஏதுமில்லை.{16} ஒருவன் இந்தக் கொடைகளை மதிப்புடன் கொடுத்தால், அவனால் பாரதத்தில் தேர்ச்சியடையமுடியும். ஒருவன் தன் சக்திக்கு ஏற்றபடி, நல்லோர், தொண்டாற்றுவோர், வாய்மை நிறைந்தோர், எளியோர், தற்கட்டுப்பாடுடையோர், மதிப்புமிக்கோர் ஆகியோரை நிறைவடையச் செய்வதன் மூலம் ஆன்ம சக்திகளை எவ்வாறு அடையலாம் என்பதைக் கேட்பாயாக.{17,18}

இந்தப் பாரதத்தைச் சொல்பவன் தூய நடத்தையும், ஒழுக்கமும் கொண்டவனாக, வெள்ளை ஆடை உடுத்துபவனாக, தற்கட்டுப்பாடு உடையவனாக, தீக்ஷை பெற்றவனாக, சாத்திரங்கள் அனைத்தையும் நன்கறிந்தவனாக, மதிப்புமிக்கவனாக, தீமையற்றவனாக இருக்க வேண்டும். அவன் வாய்மை நிறைந்தவனாகவும் மதிப்புக்குத் தகுந்தவனாகவும், காலம் அறிந்து செயல்படுபவனாகவும் இருக்க வேண்டும்.{19,20}(4-20) அவன் அதைத் விரைவாகவோ, மெதுவாகவோ தெளிவான அசைவுகளுடன் எளிதில் படிக்க வேண்டும்.{21} அவன் படிக்கும்போது சொற்களையும், எழுத்துகளையும் அழுத்தமாக உச்சரிக்க வேண்டும். அவன் குவிந்த மனத்துடனும், நல்ல உடல்நலத்துடனும், உற்சாகத்துடனும் அதைப் படிக்க வேண்டும்.{22} நாராயணனையும், உயிரினங்களில் மேன்மையான நரனையும், கல்வியின் தேவியான சரஸ்வதியையும் வணங்கிவிட்டு ஒருவன் பாரதத்தை உரைக்க வேண்டும் என்பது விதியாகும்.{23}(22,23) ஓ! பாரதக் குலத்தின் பெரும் மன்னா, ஒருவன் விதிமுறைகளைப் பின்பற்றி, தன்னைத் தூய்மை செய்து கொண்டு பாரதம் கேட்டால், அத்தகைய மனிதன் பலன்களை அறுவடை செய்கிறான்.{24} 

அதைத் தொடக்கம் முதல் ஹரிவம்சத்தின் இறுதி வரையில் கேட்ட பிறகு அவன், பிராமணர்களுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து அவர்களை நிறைவடையச் செய்ய வேண்டும்.{25} ஒரு முறை அதைக் கேட்கும் மனிதன், அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைந்து, தேவலோகத்து அப்சரஸ்களால் நிறைந்த ஒரு விமானத்தையும் அடைகிறான். பெரும் மகிழ்ச்சியுடன் அவன் தேவர்களுடன் தியுலோகத்திற்குச் செல்கிறான்.{26} ஒருவன் இருமுறை அதைக் கேட்டால், அதிராத்ர வேள்வி செய்த பலன்களை அடைந்து, ரத்தினங்களால் நிறைந்த தெய்வீகத் விமானங்களைச் செலுத்தி,{27} தெய்வீக மாலைகளையும், ஆடைகளையும் அணிந்து, தெய்வீக நறுமணப்பொருட்களையும் அனுபவித்து, தெய்வீகக் கவசம் தரித்துத் தேவர்களின் நிலத்தில் எப்போதும் வாழ்வான்.{28} அவன் மூன்று முறை கேட்டால், துவாதஷாஹ வேள்வியின் பலன்களை அடைகிறான். மேலும் அவன் சொர்க்கத்தில் பல லக்ஷம் வருடங்கள் தேவனைப் போல வாழ்கிறான்.{29} அவன் அதை நான்கு முறை கேட்டால், வாஜபேய வேள்வி செய்த பலன்களை அடைகிறான். அவன் அதை ஐந்து முறை கேட்டால், இருமடங்கு பலன்களை அடைந்து சொர்க்கத்திற்குச் செல்கிறான்.{30} சூரியனைப் போலவும், எரியும் நெருப்பைப் போலவும் பிரகாசமிக்கத் தேரில் தேவர்களுடன் அமர்ந்து சென்று, தேவலோகத்தில் இந்திரனின் அரண்மனையில் லக்ஷக்கணக்கான ஆண்டுகள் இன்புறுகிறான்.{31}

அவன் அதை ஆறுமுறை கேட்டால், நான்கு மடங்கு பலன்களையும், ஏழுமுறை கேட்டால் அதைவிட மூன்று மடங்கு பலன்களையும் அடைகிறான்.{32} மேலும் விரும்பிய இடமெல்லாம் செல்வதும், கைலாச மலைச் சிகரத்தைப் போலப் பெரியதும், வைடூரியம், பவளம், வைரம் ஆகியவற்றால் அமைந்த இருக்கைகளைக் கொண்டதுமான தேரைச் செலுத்திக் கொண்டு அப்சரஸ்களுடன் சேர்ந்து இரண்டாவது சூரியனைப் போல எங்கும் திரிந்து கொண்டிருப்பான்.{33} அவன் அதை எட்டு முறை கேட்டால் ராஜசூய வேள்வி செய்த பலனை அடைந்து, சந்திரக் கதிர்களைப் போன்றவையும், மனோவேகம் கொண்டவையுமான குதிரைகளால் இழுக்கப்படும் அழகிய தேரைச் செலுத்திக் கொண்டு சந்திரனை விட அழகிய முகங்களைக் கொண்ட அழகிய கன்னிகைகளைக் காண்பான்.{34,35} அவன் அப்சரஸ்களின் மடியில் உறங்கிக் கொண்டே அவர்களுடைய மேகலை மற்றும் பிற ஆபரணங்களின் கிங்கிணி மணியொலியைக் கேட்பான்.{36}

அவன் அதை ஒன்பது முறை கேட்டால் வேள்விகளின் மன்னனான வாஜிமேதத்தின் பலன்களை அடைவான்.{37} மேலும், கந்தர்வர்கள், அப்சரஸ்களால் நிறைந்ததும், பொன்னாலான சாளரங்களைக் கொண்டதும், பொன்தூண்களால் அலங்கரிக்கப்பட்டதும், வைர இருக்கைகளைக் கொண்டதுமான தேரில் அமர்ந்து கொண்டு,{38,39} தெய்வீக மாலைகளையும், ஆடைகளையும் அணிந்து கொண்டும், சந்தனக் குழம்பைப் பூசிக்கொண்டும், தேவர்களின் துணையுடன் தேவலோகத்தில் இன்புற்றிருப்பான்.{40} அதைப் பத்து முறை கேட்டு இருபிறப்பாளரை வணங்குவதன் மூலம் ஒருவன், பாடுவதில் திறம்பெற்ற கந்தர்வர்களாலும், அப்சரஸ்களாலும் நிறைந்ததும், சிறு மணிகளின் வலையால் உண்டாகும் ஒலியைக் கொண்டதும், கொடிகளாலும், முக்கோணக் கொடிகளாலும், ரத்தினம் போன்ற இருக்கைகளாலும், வைர வாயில்களாலும், அலங்கரிக்கப்பட்டும், தங்க வலைகளால் சூழப்பட்டதுமான தேரைச் செலுத்துவான்.{41-43} அவன், சூரியனைப் போன்ற மகுடத்தை அணிந்து, பொன்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, தெய்வீக மாலைகளையும், களிம்புகளையும் தரித்துக் கொண்டு, தேவலோகத்திலேயே திரிந்து வருவான்.{44,45} அவன் தேவர்களின் தயவால் பெருஞ்செழிப்பை அடைவான். இவ்வாறு அவன், தேவர்களின் மன்னனுடைய உலகத்தில், கந்தர்வர்கள், அப்சரஸ்களுடன் சேர்ந்து இருபத்தோராயிரம் ஆண்டுகள் இன்புற்றிருப்பான். அவன் பல்வேறு லோகங்களில் அமரனைப் போல வாழ்ந்திருப்பான்.{46,47}

அதன்பிறகு அவன் படிப்படியாகச் சந்திரலோகத்திலும், சூரிய லோகத்திலும் வாழ்ந்து, சிவலோகம் சென்று பிறகு விஷ்ணு லோகத்தை அடைகிறான்.{48,49} ஓ! மன்னா, இஃது இவ்வாறே நடக்கும்; இதுகுறித்து ஒருவன் விவாதிக்கக்கூடாது. அவனை மதிப்புடன் போற்ற வேண்டும் என என் ஆசான் {வியாசர்} சொல்லியிருக்கிறார்.{50} ஒருவன் தன் மனத்தில் விரும்பும் எதையும், அதை உரைப்பவனுக்குக் கொடுக்க வேண்டும். யானைகள், குதிரைகள், தேர்கள், வாகனங்கள், சுமை இழுக்கும் விலங்குகள், தங்கக் குண்டலங்கள், பொன் கயிறுகள்,{51} பல்வேறு ஆடைகள், நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை அவன் கொடுக்க வேண்டும். அவன் தேவனைப் போல இருக்க வேண்டும், அதன் பிறகு அவன் விஷ்ணுவின் உலகத்தை அடைவான்.{52}

அதன் பிறகு, ஓ! மன்னா, பாரதம் உரைக்கப்படும் ஒவ்வொரு பர்வத்திலும் ஒருவன் பிராமணர்களுக்குக் கொடைகளை அளிக்க வேண்டும். நான் அவற்றைச் சொல்கிறேன்.{53} ஓ! மன்னா, ஓ! பரதனின் வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, ஒரு பிராமணரின் பிறவி {ஜாதி}, நாடு, செல்வம், பெருமை, அறவொழுக்கம் ஆகியவற்றை அறிந்த க்ஷத்திரியன்{54}, முதலில் அவரை ஆசி வழங்கச் செய்து பணியைத் தொடங்க வேண்டும். ஒரு பர்வம் முடிந்த பிறகு அவன் தன் சக்திக்கு ஏற்ற வகையில் அந்த இருபிறப்பாளருக்குக் கொடைகளை வழங்க வேண்டும்.{55} அவன் அதை உரைப்பவருக்கு முதலில் ஆடைகளையும், நறுமணப் பொருட்களையும் கொடுக்கவேண்டும், அதன் பிறகு இனிய பாயஸம் கொடுத்து அவரை ஊக்கப்படுத்த வேண்டும்.{56}

ஆஸ்தீக பர்வம் உரைக்கப்படும் நேரத்தில் அவன் முதலில் பிராமணர்களுக்கு இன்பண்டங்களைக் கொடுத்து ஊக்கப்படுத்தி, பிறகு கொடைகளை அளிக்க வேண்டும்.{57} சபா பர்வம் உரைக்கப்பட்ட பிறகு அவன் பிராமணர்களுக்குக் காய்கறி உணவை அளிக்க வேண்டும்.{58} ஆரண்ய பர்வம் உரைக்கப்படும் போது அவர்களுக்குக் கனிகளும், கிழங்குகளும் கொடுக்க வேண்டும். ஆரண்ய பர்வம் உரைக்கப்படும்போது அவன் பிராமணர்களுக்குக் குடுவை நிறைய நீரும், இன்பண்டமும், காட்டில் விளையும் இனிய கனிகளும், கிழங்குகளும் கொடுத்து உணவும் பரிமாற வேண்டும்.{59,60} விராட பர்வம் உரைக்கப்படும்போது அவன் பல்வேறு ஆடைகளைக் கொடையளிக்க வேண்டும். ஓ! பாரதர்களில் சிறந்தவனே, உத்யோக பர்வம் உரைக்கப்படும்போது,{61} அவன் பிராமணர்களை மாலைகளாலும், களிம்புகளாலும் அலங்கரித்து ஊக்கப்படுத்தி, இனிய பண்டங்களையும் பல்வேறு உணவுகளையும் பரிமாற வேண்டும். ஓ! மன்னா, பீஷ்ம பர்வம் உரைக்கப்படும்போது,{62} அவன் பிராமணர்களுக்குச் சிறந்த வாகனங்களையும், நல்ல சுவைமிக்க உணவையும் அளிக்க வேண்டும். துரோண பர்வம் உரைக்கப்படும்போது, பிராமணர்களுக்கு நிறைவாக அவன் உணவளிக்க வேண்டும், அதன் பிறகு விற்களையும், கணைகளையும், வாள்களையும் அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.{63} கர்ண பர்வம் உரைக்கப்படும்போது, கட்டுப்படுத்தப்பட்ட மனத்துடன் கூடியவனாக அவன் பிராமணர்களுக்கு நன்கு சமைத்த உணவுகளைக் கொடுக்க வேண்டும்.{64}(24-64)

சல்லிய பர்வம் உரைக்கப்படும்போது அவன் மது, வெல்லப்பாகு {மோதகம்}, மற்றும் இனிய உணவுகளைக் கொடுக்க வேண்டும்.{65} கதா பர்வம் {சௌப்திக பர்வம்} உரைக்கப்படும்போது அவன் வாற்கோதுமை உணவை அளிக்க வேண்டும். ஸ்திரீ பர்வம் படிக்கப்படும்போது அவன் பிராமணர்களுக்கு ரத்தினங்களைக் கொடுக்க வேண்டும்.{66} ஐஷிக பர்வம் உரைக்கப்படும்போது அவன் முதலில் நெய்யைக் கொடுக்க வேண்டும், அதன்பிறகு நன்கு சமைத்த உணவைக் கொடுக்க வேண்டும்.{67} சாந்தி பர்வம் உரைக்கப்படும்போது காய்கறி உணவை பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும். ஆஸ்ரமவாசிக பர்வம் உரைக்கப்படும்போது பிராமணர்களுக்குக் காய்கறி உணவைக் கொடுக்க வேண்டும்,{68} அஷ்வமேத பர்வம் உரைக்கப்படும்போது தன் இதயம் விரும்பும் உணவை பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும். மௌசல பர்வம் உரைக்கப்படும்போது மாலைகளையும், களிம்புகளையும் அவன் கொடையளிக்க வேண்டும்.{69}(65-69) மஹாபிரஸ்தான பர்வம் உரைக்கப்படும்போது அவன் சிறந்த அரிசியைக் கொடையளிக்க வேண்டும். ஸ்வர்கபர்வம் முடித்ததும் பிராமணர்களுக்கு ஹவிஸ் அரிசியைக் கொடையளிக்க வேண்டும்.(70)

ஹரிவம்சம் நிறைவடைந்ததும் ஒருவன் ஆயிரம் பிராமணர்களுக்கு உணவளிக்க வேண்டும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பசுவையும், ஒரு பொன் நாணயத்தையும் கொடையாக அளிக்க வேண்டும்.{71} இதைச் செய்ய முடியாதவனாக இருந்தால் அவன் அதில் பாதி அளவு செய்யலாம். ஒவ்வொரு பர்வம் நிறைவடையும்போதும் விவேகமுள்ள ஒரு மனிதன், அதை உரைப்பவருக்கு ஒரு புத்தகத்தையும்,{72} பொன் நாணயத்தையும் கொடையளிக்க வேண்டும். ஹரிவம்ச பர்வம் நிறைவடைந்ததும் அவன் பிராமணர்களுக்குப் பாலும், அரிசியும் {பாயஸம்} கொடையளிக்க வேண்டும்.{73}(65-73)

ஒரு முழுமையான சுலோகத்தையோ, அரை சுலோகத்தையோ, ஒற்றைச் சொல்லையோ, ஒரு சுலோகத்தின் ஓரேயொரு அக்ஷரத்தையோ கவனமாகக் கேட்டாலும் அவன் நிச்சயம் விஷ்ணுவின் அன்புக்குரிய பக்தனாகிறான்.{74} மொத்த ஹரிவம்சத்தையும் கேட்ட பிறகு ஒருவன் அதைச் சொன்னவனையும், அவனது மனைவியையும் முறையாக வணங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் லக்ஷ்மிநாராயணர்களே உண்மையில் வழிபடப்படுகிறார்கள்.{75} அதைச் சொல்பவனை வழிபட்டு, அவனுக்கு நிலமும், உடையும், அற்புதப் பசுவையும் கொடையளிப்பவன் தேவகியின் மகனான கிருஷ்ணனையே வழிபடுகிறான்[1].{76}சாத்திரங்களை நன்கறிந்தவனும், நல்லோரால் மதிக்கப்படுபவனும், வெள்ளாடை உடுத்தியவனும், அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான ஒருவன், ஒவ்வொரு பர்வத்தின் முடிவிலும் தற்கட்டுப்பாட்டுடன் ஸம்ஹிதங்களை முடிக்க வேண்டும்.{77} பிறகு அவற்றைப் பட்டுத்துணியில் மறைத்து ஒரு புனிதமான இடத்தில் அவற்றை வைத்து, மாலைகளாலும், நறுமணப்பொருட்களாலும் அவற்றைத் துதிக்க வேண்டும்.{78} பக்திமான்களால் மெச்சப்படும் இத்தகைய தற்கட்டுப்பாடுடைய மனிதன், மஹாபாரதத்தையும், ஹரிவம்சத்தையும் வழிபட வேண்டும்.{79} அதன்பிறகு அவன் இறைச்சி, பல்வேறு பொருட்கள், பானங்கள், பொன், பசுக்கள், ஆடைகள் ஆகியவற்றை வினியோகிக்க வேண்டும்.{80} தற்கட்டுப்பாடுயை மனிதன் எப்போதும் மூன்று தோலங்களை {முப்பத்துமூன்று கிராம்களைக்} கொண்ட பொன்னைக் {திரிபலம் ஸ்வர்ணம்} கொடுக்க வேண்டும். இயலாத மனிதன் அதில் பாதியோ, கால் பங்கோ கொடுக்க வேண்டும்.{81} அவன் தன் இதயம் விரும்பும் பல்வேறு பொருட்களைப் பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும். உரைப்பவரை அவன் தன் ஆசானைப் போல மதிப்புடன் நடத்த வேண்டும். அதன் பிறகு அவன் தேவர்கள் அனைவரின் பெயரையும், குறிப்பாக நரநாராயணர்களின் பெயரைச் சொல்ல வேண்டும்.{82} அதன்பிறகு பிராமணர்களை மாலைகளாலும், நறுமணப் பொருட்களாலும் அலங்கரித்துப் பல்வேறு கொடைகளைக் கொடுத்து அவர்களை நிறைவடையச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால் அவன் ஒவ்வொரு பர்வத்திலும் அதிராத்ர வேள்வி செய்த பலனை அடைவான்.{83,84}(74-84)

ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, எழுத்துகளையும், சொற்களையும் உரக்கப்படிப்பவனும், இனிய குரலைக் கொண்டவனுமான ஒருவனே உரைப்பவனாகி, பாரதத்தின் எதிர்காலப் பகுதியை {பவிஷ்ய பர்வத்தை} இருபிறப்பாளர்களின் முன்னிலையில் உரைக்க வேண்டும்.{85} முதலில் அவன், அதை உரைப்பவனை நன்கு அலங்கரித்து அவனுக்கு விருந்தளித்த பிறகு, இருபிறப்பாளர்களுக்கு உணவளிக்க வேண்டும். அதன் பிறகு அவன் உரைத்தவனைத் துதிக்க வேண்டும்.{86} உரைப்பவன் நிறைவடைந்தால், ஒருவன் நித்தியமான மிகச் சிறந்த அருளைப் பெறுவான். பிராமணர்கள் நிறைவடைந்தால் தேவர்கள் அனைவரும் தணிவடைகிறார்கள்.{87}(86-87) எனவே, ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, நல்லோர் முதலில் இருபிறப்பாளர்களுக்குத் தங்கள் இதயம் விரும்பும் கொடைகளைக் கொடுத்து நிறைவடையச் செய்ய வேண்டும்.(88) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இவ்வாறே நான் உரைகளை விளக்கிச் சொன்னேன். நான் உன் கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லிவிட்டேன் எனவே நீ இக்காரியத்தில் மதிப்புடன் நடப்பாயாக.{89}

ஓ! பெரும் மன்னா, மிகச் சிறந்த அருளை அடைய விரும்புகிறவன், பாரதப் பாராயணத்தை நிச்சயம் கேட்டு, அதன் நிறைவில் அதற்கான நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.{90} ஒருவன் தினமும் பாரதத்தைக் கேட்டுப் பாராயணம் செய்ய வேண்டும். எவன் பாரதத்தைத் தன் வீட்டில் கொண்டிருக்கிறானோ அவன் வெற்றியை அடைவான்.{91} பாரதம் மிகப் புனிதமானது; பாரதத்தின் பல்வேறு அத்தியாயங்களும் இங்கே விளக்கப்பட்டன. தேவர்களும் இதைப் படிக்கிறார்கள். பாரதம் மிகச் சிறந்த புகலிடமாக இருக்கிறது.{92}(86-92) பாரதம், சாத்திரங்கள் அனைத்திலும் மேன்மையானது. பாரதத்தின் மூலம் ஒருவனால் மோக்ஷத்தை {முக்தியை} அடைய முடியும்.{93} இதையே நான் உனக்குச் சொல்வேன். ஒரு மனிதன் மஹாபாரதத்தையும், பூமி, பசு, சரஸ்வதி, பிராமணர், கேசவன் ஆகியோரின் பெயர்களையும் உரைத்தால் அவன் ஒருபோதும் அழிவடைய {துன்பத்தை அடைய} மாட்டான்.{94}

ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, வேதங்கள், ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றின் தொடக்கம், நடுப்பகுதி, முடிவு ஆகியவற்றில் ஹரி விளக்கப்படுகிறான்.{95} பெரும் நிலையை {பரமகதியை} அடைய விரும்பும் மனிதன் விஷ்ணுவின் மகிமைமிக்கச் செயல்களும், ஸ்ருதிகளும் உரைக்கப்படுவதை நிச்சயம் கேட்க வேண்டும்.{96} பவித்ரமான இந்தப் பெரும் பணியானது அறத்தை விளக்குவதில் முக்கியம்வாய்ந்ததும், அனைத்து குணங்களையும் கொண்டதுமாகும்.{97} தலைமை குணங்களை அடைய விரும்புகிறவன் இதைக் கேட்க வேண்டும். உண்மையற்ற இந்த உலகில் ஹரிவம்சத்தைக் கேட்கும் ஒருவன், விரும்பிய பொருட்கள் அனைத்தையும் அடைவான் எனத் துவைபாயனர் {வியாசர்} சொல்லியிருக்கிறார்.{98} ஹரிவம்சம் முழுமையாக உரைக்கப்படுவதைக் கேட்டு முடித்த ஒருவன், ஆயிரக்கணக்கான அஷ்வமேதங்களையும், நூற்றுக்கணக்கான வாஜபேய வேள்விகளையும் செய்த பலனை அடைகிறான்.{99}

ஓ! விஷ்ணு, பிறப்பும் சிதைவும் அற்றவன் நீயே, தியானிக்கப்படத் தகுந்த ஒரே ஒருவன் நீயே. திரளாகவும், நுட்பமாகவும் இருப்பவன் நீயே, உணர்வைக் கடந்தவன் நீயே. சகுன பிரம்மமாகவும், நிர்குண பிரம்மமாகவும் இருப்பவன் நீயே. யோகிகளால் மட்டுமே தங்கள் ஞானத்தால் உன்னைப் புரிந்து கொள்ள முடியும். மூவுலகங்களின் ஆசானும், படைப்பாளனும் நீயே. உன் புகலிடத்தையே நான் நாடுகிறேன்.{100} பாரதம் உரைக்கப்பட்டதன் முடிவில் அனைவரும் துன்பங்களில் இருந்து விடுபடட்டும், அனைவரும் நலமடையட்டும், அனைவரும் விரும்பிய பொருட்களை அடையட்டும்” என்றார் {வைசம்பாயனர்}.{101}(93-101)

திரிபுரவதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 108-திரிபுரமெனும் அசுரர்களின் ஆகாய நகரங்கள் மூன்றும் சிவனால் அழிக்கப்பட்டது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “பிராமணரே, முக்கண்ணனான மஹாதேவன் மூன்று நகரங்களுக்கு ஒப்பான விமானங்களில் வானில் பயணித்த அசுரர்களின் மகன்களை எவ்வாறு கொன்றான்? இது குறித்து நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(1)

வைசம்பாயனர், “மன்னா, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர்களும், உயிரினங்கள் அனைத்தின் மீதும் வஞ்சங் கொண்டவர்களுமான தைத்தியர்கள் சங்கரனால் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை விரிவாகக் கேட்பாயாக. பழங்காலத்தில் உயிரினங்கள் அனைத்தையும் எப்போதும் துன்புறுத்த விரும்பும் தைத்தியர்களின் மீது அற்புதமான மூன்று சூலங்களை ஏவி சங்கரன் அவர்களைக் கொன்றான்.(2,3)

மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, ரத்தினங்கள் முதலிய பொருட்களால் உண்டான திரிபுரங்களில் {மூன்று நகரங்களில்} அந்த அசுரர்கள் வசித்து வந்தனர். இவ்வாறே அவர்கள் மேகங்களைப் போல வானில் திரிந்து வந்தனர்.(4) தங்கத்தாலான அந்த மூன்று நகரங்களும், நெடிய மாளிகைகளால் நிறைந்திருந்தன, ஒளிரும் ரத்தினங்களால் அமைக்கப்பட்ட பெரும் வாயில்களால் அவை அலங்கரிக்கப்பட்டிருந்தன. வானில் பறக்கும்போது அவை மிகப் பிரகாசமாகத் தெரிந்தன. இந்த விமானங்கள் தன்னொளி படைத்தவையாக இருந்தன. பெருந்தவத்தின் பலத்தால் உண்டான அவை ஒவ்வொன்றும் கந்தர்வர்களின் நகரத்தைப் போலத் தெரிந்தன.(5,6) அந்நகரங்கள் சக்திமிக்கவையாகவும், பிரகாசமிக்கவையாகவும் இருந்தன. சிறகுகள் படைத்த குதிரைகளால் இழுக்கப்பட்ட அவை, மனத்தின் வேகத்தைவிட அதிகமான வேகத்தில் செல்லக்கூடியவையாக இருந்தன.(7) அந்தக் குதிரைகள் முழுவேகத்துடன் சென்று கனைத்தபோது, அவற்றின் குளம்புகளின் அழுத்தத்தால் வானம் துன்புறுவதைப் போலத் தெரிந்தது.(8)

நெருப்பு போன்ற சக்திமிக்கவர்களும், தவத்தின் பலத்தால் பாவங்களைச் சாம்பலாக எரித்தவர்களும், தம்மை உணர்ந்தவர்களுமான முனிவர்களால் மட்டுமே அந்த அசுரர்களின் இருப்பை உணர முடிந்தது. காற்றைப் போல வேகமாக அவ்வசுரர்கள் பயணித்தபோது, மொத்த அண்டத்தையும் விழுங்கிவிடத் தயாராக இருப்பவர்களைப் போல அவர்கள் தெரிந்தனர்.

கந்தர்வர்களின் நகரங்களைப் போலவே அந்த ஆகாய நகரங்கள் மூன்றிலும் பாடுவதும், இசைப்பதும் எப்போதும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நகரங்கள் உருகிய தங்கத்தின் நிறத்தில் இருந்தன. அவற்றில் அனைத்து வகை ஆயுதங்களும் சேமிக்கப்பட்டிருந்தன. நன்றாக அலங்கரிக்கப்பட்டவையும், அழகில் இந்திரனின் மாளிகைக்கு நிகரானவையுமான உயர்ந்த கட்டடங்கள் பலவும் அந்நகரங்களின் அழகை அதிகரித்துக் கொண்டிருந்தன. கைலாச மலைச் சிகரங்களைப் போலத் தெரிந்த கோபுரங்களைக் கொண்ட மகத்தான மாளிகைகள் பலவற்றால் நிறைந்த அந்த அசுர நகரங்கள், சூரியர்கள் பலரைப் போல வானுக்கு ஒளியூட்டிக் கொண்டிருந்தன.

மன்னா, அந்த அசுர நகரங்கங்களில் எப்போதும் துரிதமான செயல்பாடுகள் இருந்தன. அங்கே வீரமிக்கப் போர்வீரர்கள் சீற்றமிக்கச் சிங்கங்களைப் போல மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டிருந்தனர். அழகிய பெண்களும், ஆண்களும் அங்கே வசித்திருந்ததால் அவை சைத்ரரதமெனும் தெய்வீக வனத்திற்கு ஒப்பானவையாகத் திகழ்ந்தன. மன்னா, திரிபுரம் என்று அறியப்பட்ட இந்த ஆகாய நகரங்கள் நெடிய கொடிகள் பலவற்றாலும், ஒளிரும் பதாகைகள் பலவற்றாலும் அலங்கரிக்கப்பட்டு, வானில் மின்னலைப் போலத் தோன்றிக் கொண்டிருந்தன.

பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அந்நகரங்களில் சூரியநாபன், சந்திரநாபன் போன்ற தைத்தியேந்திரர்கள் வாழ்ந்து வந்தனர். போலிச் செருக்கில் மயங்கியிருந்த அவர்கள், தேவர்களுக்காகவும், பித்ருக்களுக்காகவும் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட பாதையை மறித்துக் கொண்டிருந்தனர். கைகளில் விற்களையும், கணைகளையும் கொண்ட அசுரர்கள், தேவர்களாலும், பித்ருக்களாலும் பயன்படுத்தப்பட்ட நெருப்புப் பாதையைக் கைப்பற்றியபோது, சொர்க்கவாசிகள் விரைந்து சென்று பிரம்மனிடம் சரணடைந்தனர். தங்கள் பயணம் அசுரர்களால் தடுக்கப்படுவதால் துன்புற்ற தேவர்களின் வாய்கள் வறண்டிருந்தன.(9-20)

தேவர்கள் பிரம்மனை அணுகி, பரிதாபமான குரலில், “வேள்வி ஆகுதிகளைக் கொடுப்பவரே, எங்கள் பகைவர்கள், வேள்விக் காணிக்கைகளில் எங்களுக்குரிய பாகங்களை நாங்கள் ஏற்பதைத் தடுத்து எங்களை அச்சுறுத்தி வருகின்றனர்.{21) நயமாகப் பேசுபவர்களில் முதன்மையானவரே, நாங்கள் அசுரர்களைக் கொல்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவீராக. உமது கருணையால் போரில் பகைவரை எங்களால் வீழ்த்த இயலும் என நாங்கள் நம்புகிறோம்” என்றனர்.(22)

வரங்களை அளிக்க விரும்பும் பிரம்மன், தேவர்கள் தணிவடையும் வகையில், “சொர்க்கவாசிகளே, உங்கள் பகைவரை பழிதீர்க்கும் வழிமுறையை நான் சொல்கிறேன் கேட்பீராக. சங்கரனைத் தவிர வேறு எவராலும் இந்த அசுரர்களைக் கொல்ல இயலாது” என்றான்.

பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, பிரம்மனின் சொற்களைக் கேட்ட தேவர்கள் அனைவரும், கவலையெனும் தங்கள் சுமை பெருமளவு குறைந்ததை உணர்ந்தனர். விடைபெற்றுக் கொள்ளும் அனுமதியைப் பெற்றுக் கொண்டு பூமியில் இறங்கி, விந்தியத்திற்கும், சுமேரு மலைகளுக்கும் இடையில் ஓர் இடத்தில் மாய யோகியரைப் போலக் கடுந்தவம் செய்தனர். அவர்கள் சிவனை வழிபட்டபோது பிரம்மசம்ஹிதையின் முக்கிய வரிகளை ஓதினர்.(23-26) அவர்கள், பெண்களின் நினைவேதுமின்றிக் கடுமையான பிரம்மச்சரியம் பயின்றனர். இரவில் அவர்கள் குசப்புல்லாலான விரிப்பில் படுத்தனர். அவர்களின் ஆபரணங்கள் தாமிரத்தாலும், இரும்பாலும் ஆனவையாக இருந்தன.(27)

குருக்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தத் தேவர்கள், காடுகளில் இயற்கையாக இறந்த விலங்குகளைத் திரட்டி, மெல்லிய மான் தோல்களையும், அழகிய புலித்தோல்களையும் உடுத்திக் கொண்டனர். இவ்வாறான உடை உடுத்திக் கொண்ட தேவர்கள், தங்கள் மாய சக்தியின் மூலம் தங்களை மறைத்துக் கொண்டு சிவனின் வசிப்பிடத்திற்குச் சென்றனர்.

அங்கே அவர்கள் சிவனை வணங்கி அவனிடம், “பிரபுவே, சாம்பலில் ஊற்றப்பட்ட நெய்யைப் போல நாங்கள் உன்னிடம் பெற்ற வரங்கள் பயனற்றுப் போகும் வகையில் நீ எங்களுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பிக் கொண்டாய். தேவர்களின் ஆசானான பிரம்மனுடைய அறிவுறுத்தலின் பேரில் நாங்கள் உன்னிடம் உறைவிடம் நாடி வந்திருக்கிறோம். காலம், இடம், சூழ்நிலைகள் ஆகியவற்றைக் {காலதேசவர்த்தமானங்களைக்} கருத்தில் கொண்டு எங்கள் சொற்களைக் கேட்குமாறு நாங்கள் உன்னை வேண்டுகிறோம்” என்றனர்.

தேவர்களின் சொற்களை ஏற்றுக் கொண்டு, எதிர்காலச் செயல்பாட்டைச் சிந்தித்த மஹாதேவன், இந்திரனின் தலைமையிலான தேவர்களுடன் சேர்ந்து அசுரர்களுடன் போரிடுவதற்காகக் கவசம் தரித்துக் கொண்டான். தேவர்கள் அனைவரும் பளபளக்கும் தங்கள் ஆபரணங்களை அகற்றிவிட்டுக் கவசங்களைப் பூண்டனர். அவர்கள் சூரியனின் பாதையில் சென்ற போது, சுடர்மிகும் நெருப்பைப் போலப் பிரகாசித்தனர். போர் தொடங்கியபோது, நெடுமலைகளைப் போலத் தெரியும் போர்வீரர்களான ருத்திரர்கள் அனைவரும், மேலான ஆற்றல் படைத்த தங்கள் பகைவரை சாம்பலாக எரிக்கத் தொடங்கினர். அசுரர்களை அழிக்க விரும்பிய சொர்க்கவாசிகள் அனைவரும், ஒப்பற்ற சக்தி கொண்டவர்களாகவும், விரும்பிய வடிவம் எதனையும் ஏற்கும் வல்லமை படைத்தவர்களாகவும் இருந்தனர். அசுரர்களுடன் போரிடத் தயாராக அவர்கள் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு திரண்டனர்.

குபேரனின் தலைமையிலான தேவர்கள் பலரால் சூழப்பட்ட மஹாதேவன், திரிபுர வாசிகளுடன் போரிடத் தொடங்கினான். போர் தொடர்ந்தபோது, திரிபுரத்தின் அசுரர்கள், சிவனின் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டும், உடல்கள் துளைக்கப்பட்டும், இந்திரனின் வஜ்ரத்தால் தாக்கப்பட்டுச் சிறகுகள் அறுந்து விழும் மலைகளைப் போலப் பூமியில் விழுந்தனர். தேவர்களின் சூலங்கள், சக்தி ஆயுதங்கள், சக்கரங்கள், பராசங்கள், கணைகள் ஆகியவற்றால் அசுரர்கள் பலரின் இதயங்கள் துளைக்கப்பட்டன.(28-41) தேவர்களின் தாக்குதலில் பெருகும் நெருப்பால் எரிக்கப்பட்ட அசுரர்கள், அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களாகப் பீதியடையத் தொடங்கினர். போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது, இருதரப்பிலும் பேரிழப்புகள் இருந்தன. தேவர்கள் தங்கள் மாய சக்திகளை அடிக்கடி பயன்படுத்தியதால், தானவர்களால் அவர்களைப் பார்க்க முடியவில்லை. எனினும், மாலையில் சூரியன் மறைந்ததும் அசுரர்கள் தங்கள் பலத்தை மீண்டும் அடைந்து, தேவர்களுடன் பெருஞ்சீற்றத்துடன் போரிட்டு, அவர்களில் பலர் தரையில் விழுமளவுக்குக் கடுமையான தாக்குதலைத் தொடுத்தனர்.(42,43) இரவில் இடையறாத கணைமாரியைப் பொழிந்த அசுரர்கள், தேவர்களை வீழ்த்திவிட்டு, வானில் முழங்கும் மேகங்களைப் போல எப்போதும் முழங்கிக் கொண்டிருந்தனர்.(44)

போரில் தாங்கள் அடையும் வெற்றியால் உயிர்பெற்ற அசுரர்கள், தங்களுக்குள், “நாம் சக்திமிக்கவர்கள், இந்தப் போரில் வெற்றியடைய நினைத்த தேவர்களை, நாம் ஒற்றுமையுடன் முறியடித்திருக்கிறோம். நமது தடிகள், சூலங்கள், பரிகங்கள் ஆகியவற்றின் தாக்குதலை எவ்வளவு காலம்தான் அவர்களால் தாக்குப்பிடிக்க இயலும்?” என்று பேசிக் கொண்டனர்.

அசுரர்களில் முதன்மையானோரான அவர்கள், தங்கள் ஆன்ம ஆசானான சுக்ராச்சாரியரின் கருணையின் சக்தியாலும், பொறைத்திறத்தாலும் நிறைந்திருந்தனர். வெற்றியடைந்த அசுரர்கள், தங்கள் கைகளில் ஆயுதங்களுடன் போர்க்களத்தில் மகிழ்ச்சியாகத் தெரிந்தனர்.

அப்போது சிவனும், தேவர்கள் பிறரும் தங்கள் தேர்களில் அமர்ந்தபடியே உரக்க முழங்கினர். மேனியின் பிரகாசத்தால் செருக்கடைந்த அசுரர்களை அவர்கள் எரிக்கத் தொடங்கினர். அண்ட அழிவின்போது பெருஞ்சக்திவாய்ந்த சூரியன், கோள்கள் அனைத்தையும் சாம்பலாக எரிப்பதைப் போலவும், பிரளயத்தின் போது அசைவனவற்றையும், அசையாதனவற்றையும் உயிரினங்களின் தலைவனான ருத்திரன் அழிப்பதைப் போலவும் சிவனின் தலைமையிலான தேவர்கள் அசுரர்களை எரித்தனர். வேகமான குதிரைகளால் இழுக்கப்பட்ட சிவனின் தேரானது, மின்னலால் சூழப்பட்ட மேகத்தைப் போல வானத்தில் தெரிந்தது.

பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, மனிதர்களின் ஆட்சியாளா, அந்தத் தேரில் இருந்த கொடியானது, காளைச் சின்னத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வானவில்லால் அலங்கரிக்கப்பட்ட பெரும் மேகத்தைப் போல அது தெரிந்தது. அப்போது, சிவனின் பரம மங்கல குணத்தைப் புகழ்ந்து சித்தர்கள் அவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். சத்தியத்தில் நிலைத்திருக்கும் அமைதிநிறைந்த முனிவர்களும், அமுதம் பருகும் தேவர்களும், கந்தர்வர்களுடனும், அப்சரஸ்களுடனும் சேர்ந்து தங்கள் இனிய குரலால் சிவனைத் துதித்துக் கொண்டிருந்தனர்.

மன்னா, அருகில் அழகாக நின்று கொண்டிருந்த பித்ருக்கள் அந்நேரத்தில் மகிழ்ச்சியாகத் தெரிந்தனர். அப்போது அவர்களின் பகைவர்களான திதியின் மகன்களும் {தைத்தியர்களும்}, தனுவின் மகன்களும் {தானவர்களும்} அனைத்துத் திக்குகளில் இருந்தும் திடீரென எண்ணற்ற கணைகளைப் பொழிந்தனர். உயர்ந்த மாளிகைகளாலும், ஆயிரக்கணக்கான மடுக்களாலும் நிறைந்தவையும், உயிரினங்கள் அனைத்திற்கும் அச்சத்தை ஏற்படுத்துபவையுமான அந்த ஆகாய நகரங்களில் நிலைத்திருந்த அசுரர்கள், தேவர்களின் மீது கணைமாரியைப் பொழிந்து கொண்டிருந்தனர்.

பாரதா {ஜனமேஜயா}, திறம் மிக்கப் போர்வீரர்களான அசுரர்கள், அந்தப் போரில் ஈட்டிகளையும், சூலங்களையும், வாள்களையும் வீசி தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள், பகைவரின் கதாயுதங்களை நொறுக்கத் தங்கள் கதாயுதங்களையும், ஈட்டிகளை நொறுக்கத் தங்கள் ஈட்டிகளையும் பயன்படுத்தினர். அவர்கள் தங்கள் ஆயுதங்களால், பகைவரின் ஆயுதங்களை அழித்தனர், தங்கள் மாயையால் பகைவரின் மாயையை அகற்றினர். ஆயிரக்கணக்கான அசுரர்கள் ஆயிரக்கணக்கான கணைகளையும், சக்திகளையும், கோடரிகளையும், வஜ்ரங்களையும் எடுத்துக் கொண்டு தேவர்கள் மீது அவற்றை ஏவினர். மாயசூலங்களாலும், கணைமாரியாலும் காயமடைந்த தேவர்கள், காலனுடைய கோரப்பற்களின் அருகில் நிற்பவர்களைப் போல அப்போது நம்பிக்கையிழந்தனர். கந்தர்வர்களின் நகரத்திற்கு ஒப்பான மஹாதேவனின் பெரிய தேரும் கூட, பெருஞ்சக்திவாய்ந்த அந்த அசுரர்களுடன் மோதப் போதுமானதல்ல என்று தெரிந்தது.(45-60) சூலங்கள், கணைகள், இரும்புத் தடிகள், பரிகங்கள் உள்ளிட்ட அசுரர்களின் பலவகை ஆயுதங்களால் அனைத்துப் பக்கங்களிலும் இருந்து தாக்கப்பட்டவனும், சசியின் கணவனுமான இந்திரன், துயரத்தில் மூழ்கி அசையாமல் நின்று கொண்டிருந்தான்.(61)

பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, பூமியின் தலைவா, பெரும் முனிவர்களான பிரம்மனின் மகன்களின் குரல் பின்வரும் அறிவிப்பை வானில் இருந்து அறிவித்தது.(62) “மஹாதேவனின் தேர் தடுக்கப்பட முடியாதது, வெல்லப்படமுடியாதது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதைக் கொண்டு அந்தப் பிரபு அசுரர்களை வீழ்த்துவான்” என்றது.(63)

மன்னா, அதே வேளையில் மஹாதேவனின் சிறந்த தேர் வானில் இருந்து, அனைத்து வகை உயிரினங்களும் திரியும் பூமியில் விழுந்தது.(64) அந்த அற்புதத் தேர் பூமியைத் தீண்டியபோது, மலைகள் நடுங்கத் தொடங்கின, மரங்கள் இங்கும் அங்கும் ஆடின, சமுத்திரம் கலங்கியது, பத்துத் திக்குகளிலும் ஒளி குன்றியது.(65) கல்விமான்களான பிராமணர்கள் மங்கல மந்திரங்களை ஓதத் தொடங்கினர். இம்மையில் வெற்றியையும், மறுமையில் முக்தியையும் அடைய விரும்புவோரால் நாடப்படும் பரமனின் விருப்பத்தின் பேரில் அந்நேரத்தில் உயிரினங்கள் அனைத்தின் மத்தியிலும் அமைதி நிலவியது.

பாரதா {ஜனமேஜயா}, மாய யோகியரின் தலைவனான விஷ்ணு அக்காட்சியை ஆய்வு செய்து, தன் ஆற்றலால் மனத்தில் தீர்மானத்தை அடைந்து, ஒரு காளையின் வடிவை ஏற்று[1] மஹாதேவனின் தேரை பூமியில் இருந்து மெதுவாக உயர்த்தினான். அந்நேரத்தில் அவன் {ஹரி} பேரொளி கொண்ட பெரும் பிரகாசத்துடன் இருந்தான். அந்த ஒளி மஹாதேவனின் பிரகாசத்துடனும், விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களான தேவர்களின் பிரகாசத்துடனும், தனிமையான காடுகளில் வசித்தபடியே கடுந்தவம் செய்து பெருஞ்சக்தியடைந்த பெரும் முனிவர்களின் பிரகாசத்துடனும் கலந்தது.(66-70)காளையின் வடிவில் இருந்த ஹரி, தேவர்களின் தலைவன் {இந்திரன்} நின்றிருந்த அற்புதத் தேரைத் தன்னிரு கொம்புகளாலும் எடுத்து பெருங்கடல் கடையப்படுவது போல உரக்க முழங்கினான்.(71) இரு கொம்புகளுடன் கூடிய காளையின் வடிவில் இருந்த விஷ்ணு, பௌர்ணமி நாள் கடலைப் போல உரக்க முழங்கியபடியே வானில் உயர எழுந்தான்.(72) போரிடும் ஆவல் கொண்டவர்களும், பெருஞ்சக்தி வாய்ந்தவர்களுமான அசுரர்கள், இதைக் கண்டு பேரச்சம் அடைந்தனர். அவர்கள் மீண்டும் தங்கள் கவசங்களைப் பூண்டு போரிட வந்தனர்.(73) அந்த அசுரர்கள் அனைவரும் பெருஞ்சக்திவாய்ந்தவர்களாகவும், தங்கள் பலத்தில் வெடித்துவிடுபவர்களைப் போலவும் இருந்தனர். அவர்கள், தேவர்களின் மீது கணைமாரியைப் பொழிந்து மீண்டும் போரிடத் தொடங்கினர்.(74)

அப்போது சிவன், ஒரு நெருப்புக் கணையில் பிரம்மாஸ்திரத்தை ஈர்த்து, திரிபுரம் என்றறியப்பட்ட அந்த மூன்று ஆகாய நகரங்களின் மீதும் அதை ஏவத் தயாரானான்.(75) பரதனின் வழித்தோன்றலே, சிவன் அதை ஏவும் முன், தன் மனத்தால் அதை மூன்று வடிவங்களாகப் பிரித்து, அவை ஒவ்வொன்றிலும் சக்தியையும், வாய்மையையும், பிரம்ம யோகத்தையும் ஈர்த்தான். இதைச் செய்தபிறகு, அந்தக் கணை அசுரர்களின் உயிரை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் அதை ஏவினான். அந்தக் கணை காற்றில் சென்ற போது, தங்கம் போல ஒளிர்ந்து பெருஞ்சக்தியை வெளிப்படுத்தியது.(76,77) மூன்றாகத் தன்னைப் பிரித்துக் கொண்டதும், நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானதும், பெருஞ்சக்தி வாய்ந்ததுமான அந்தக் கணையை ஏவியதன் மூலம் மஹாதேவன் அசுரர்களின் மூன்று நகரங்களையும் சிதறடித்தான்.(78)

பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, மனிதர்களின் ஆட்சியாளா, அந்த மூன்று கணைகளும் அந்த மூன்று நகரங்களைத் தாக்கியபோது, அவை எரியத்தொடங்கி விந்திய மலையின் சிகரங்களைப் போலக் கீழே விழுந்தன.(79) பூமியின் தலைவா, மஹாதேவனின் நெருப்புக் கணைகளால் எரிக்கப்பட்ட அந்த ஆகாய நகரங்கள் மூன்றும் பூமியில் எரிந்து விழுந்தன.(80) இவ்வாறே வைடூரியத்தின் நிறத்தில் இருந்தவையும், மலைச்சிகரங்களைப் போன்று உயர்ந்தவையுமான அந்த நகரங்கள் மூன்றும், மஹாதேவனின் பிரம்மாஸ்திரத்தால் எரிக்கப்பட்டுப் பூமியில் விழுந்தன.(81)

திரிபுரம் அழிக்கப்பட்ட போது, தேவர்கள் அனைவரும் மஹாதேவனிடம், “அனைத்திலும் பெரியவனே, செருக்கில் மிதக்கும் அசுரர்கள் அனைவரையும் அழிப்பாயாக” என்று வேண்டினர்.(82) அந்த முறையீட்டிற்குப் பதில் அளிக்கும் வகையில், சிவனும், பிரம்மனின் தலைமையிலான பெருஞ்சக்திவாய்ந்த தேவர்கள் பிறரும் சேர்ந்து, மாய யோகியரின் தலைவனும், மாய சக்திகள் அனைத்தின் பிறப்பிடமும், அந்நேரத்தில் சிரித்துக் கொண்டிருந்தவனுமான விஷ்ணுவை வேண்டினர்” என்றார் {வைசம்பாயனர்}.(83) 

ஹரிவம்சம் பொருளடக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 109-ஹரிவம்சத்தின் பொருளடக்கம் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இனி, நாம் விவாதித்த ஹரிவம்சத்தின் பொருளடக்கத்தைச் சுருக்கமாக நினைவுகூர்கிறேன்.

{1. ஹரிவம்சபர்வம்}

தொடக்கத்தில் வரும் ஹரிவம்ச பர்வத்தில் அண்டத்தின் அடிப்படை படைப்பு விளக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து பூதங்களின் படைப்பும் விளக்கப்பட்டது.(1) வேனனின் மகன் பிருதுவின் கதை சொல்லப்பட்டது. அதன்பின் வைவஸ்வத மனுவின் குலத்தில் வந்த மனுக்கள் விளக்கப்பட்டனர். துந்துமாரன் கதையும் விளக்கப்பட்டது.(2) காலவரின் தோற்றம், இக்ஷ்வாகு குல விளக்கம், பித்ருக்களுக்கு அளிக்கப்படும் ஆகுதி காணிக்கைகளின் விளக்கம், சோமன் கதை, புதன் கதை ஆகியனவும் சொல்லப்பட்டன.(3)

அடுத்ததாக அமாவசுவின் குலம் விளக்கப்பட்டது, கேட்பவர்களுக்கும், சொல்பவர்களுக்கும் கிடைக்கும் நன்மை விளக்கப்பட்டது. இந்திரன் தன் நிலையில் இருந்து விழுந்து மீண்டும் தன் நிலையை அடைந்தது சொல்லப்பட்டது. அதன்பிறகு க்ஷத்ரவிருத்தனின் வழித்தோன்றல்கள் குறித்து விளக்கப்பட்டது.(4) அடுத்ததாகத் திவோதாசன், திரிசங்கு, யயாதி ஆகிய மன்னர்களைக் குறித்தும், பூரு குலம் குறித்தும் விளக்கப்பட்டது.(5) பிறகு, கிருஷ்ணனின் தோற்றம், சியமந்தக மணியின் கதை, விஷ்ணுவின் அவதாரங்கள் ஆகியன குறித்து விளக்கப்பட்டது.(6)

அடுத்ததாகத் தாரக வதம் விளக்கப்படும் தேவாசுரப் பெரும்போர் விளக்கப்பட்டது. அதன்பிறகு பிரம்ம லோகம் குறித்த விளக்கம், யோக நித்திரையில் இருந்து விஷ்ணு விழித்தெழுதல், பிரம்மனுக்கும் பூமாதேவிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல், தேவர்களின் அவதாரங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

{2. விஷ்ணு பர்வம்}

அடுத்தப் பர்வம் விஷ்ணு பர்வமாகும். நாரத முனிவர் கம்சனுக்கு அளித்த ஆலோசனை, அசுரன் ஸ்வப்னகர்ப்பனின் தொண்டர்களை நித்ராதேவியிடம் விஷ்ணு ஒப்படைப்பது, ஆரியா தேவி துதி, கிருஷ்ணன் பிறப்பு, கோகுலத்திற்கு அவன் மாறுதல், அவன் வண்டியை உதைத்து நொறுக்குதல், பூதனை படுகொலை, யமலார்ஜுன மரங்களை வேரோடு பிடுங்கியது, இடையர்கள் நரிகளைக் கண்டது, கோபர்களும், கோபிகைகளும் பிருந்தாவனத்தில் வசிப்பது ஆகியவை விளக்கப்பட்டன.(7-10)

பிருந்தாவனத்தில் மழைக்காலம், யமுனையாற்றில் கிருஷ்ணன் காளியனைத் தண்டித்தல், தேனுகாசுரன், பிரலம்பாசுரன் ஆகியோரை பலராமன் கொல்வது, கூதிர் காலம், கோவர்த்தன பூஜை தொடக்கம், கோவர்த்தன மலையைக் கிருஷ்ணன் உயர்த்துவது, கோவிந்த பட்டாபிஷேகம், கோபியருடன் இன்புற்றிருப்பது, அரிஷ்டாசுரன் வதம், அக்ரூரரைக் கம்சன் பிருந்தாவனத்திற்கு அனுப்பி வைத்தது ஆகியவை அடுத்தடுத்து விளக்கப்பட்டன.(11-13)

பிறகு, அந்தகன் கம்சனுக்குச் சொன்ன அறிவுரை, கேசி வதம், அக்ரூரர் பிருந்தாவனத்திற்குச் சென்றது, அக்ரூரர் திரும்பிச் சென்றபோது நாகலோகத்தைக் கண்டது, கிருஷ்ணன் கம்சனின் வில்லை முறிப்பது, சாணூரனுக்கும், முஷ்டிகனுக்கும் கம்சன் இட்ட கட்டளை, குவலயபீடம், சாணூரன், முஷ்டிகன், ஆந்திரதேசன் வதம்கிருஷ்ணன் கம்சனைக் கொன்றது, கம்சன் மனைவியரின் ஒப்பாரி, உக்கிரசேனன் மன்னனாக நிறுவப்பட்டது, யாதவர்களைக் கிருஷ்ணன் தேற்றியது ஆகியவையனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக விளக்கப்பட்டன.(14-16)

பின்னர், கிருஷ்ணனின் குருகுல வாசமும், இல்லந்திரும்பிய நிகழ்வும், ஜராசந்தன் மதுரா நகரைத் தாக்கியது, அடுத்தடுத்து ஜராசந்தன் அடைந்த தோல்வி, விகத்ருவின் உரை, கிருஷ்ணனும், பலராமனும் பரசுராமரைச் சந்தித்தது, அவர்கள் கோமந்த மலையில் ஏறியது, ஜராசந்தனின் தாக்குதல், கோமந்த மலை எரிந்தது, கிருஷ்ணனும், பலராமனும் கரவீரபுரம் சென்று சிருகால வாசுதேவனைக் கொன்றது, கிருஷ்ணனும் பலராமனும் மதுரா நகர் திரும்பியது ஆகியன விளக்கப்பட்டன.(17-19)

அதற்கடுத்து, பலராமன் யமுனையாற்றின் போக்கை மாற்றியது, மதுராவில் இருந்து யாதவர்கள் புறப்பட்டது, காலயவனன் வதம் ஆகியன விளக்கப்பட்டன.(20) அதன்பிறகு, துவாராகபுரி நிர்மாணம், ருக்மிணியைக் கடத்தியது, கிருஷ்ணன் ருக்மிணி திருமணம், பலராமன் ருக்மியைக் கொன்றது, பலராமனின் மகிமை, ஆஹ்னிகம் செய்வது குறித்துப் பிரத்யும்னனுக்குப் பலராமன் விளக்கிச் சொல்வது, நரகாசுரன் வதம், பாரிஜாத மரத்தை அபகரித்தது, துவாரகை மீண்டும் கட்டப்பட்டது, அரச சபையைக் கட்டி துவாரகையின் அரியணையில் கிருஷ்ணன் அமர்வது, நாரதர் சொன்ன செய்திகள், விருஷ்ணி குல மகிமை, சத்புரன் வதம், அந்தகாசுரன் வதம், கிருஷ்ணன் பெருங்கடலை அடைந்து இன்புற்றிருந்தது, பீம குல வீரன் மது பானம் அருந்தியது, கிருஷ்ணனின் விருப்பத்தின் பேரில் சாலிக்ய கந்தர்வன் பூமிக்கு வந்தது, பானுவின் மகள் பானுமதி கடத்தப்பட்டது, சம்பராசுர வதம், தன்யனின் கதை, வாசுதேவனின் மகிமை, பானுசுரனுடன் போர் ஆகியன விஷ்ணு பர்வத்தில் விளக்கப்பட்டன.(20-27)

{3. பவிஷ்ய பர்வம்}

அடுத்து வரும் பவிஷ்ய பர்வத்தில், எதிர்கால அரச குலங்கள், கலியுகத்தின் எதிர்கால நிலை, புஷ்கரையின் தோற்றம் ஆகியனவும், பரமாத்மாவின் வராஹ, நரசிம்ம, வாமன அவதாரங்களும் விளக்கப்பட்டன.(28) கிருஷ்ணன் கைலாச மலைக்குச் சென்றது, பௌண்டரக வதம், ஹம்சடிம்பகர்களைக் கொன்றது ஆகியன விளக்கப்பட்டன.(29) அந்தப் பர்வத்தின் இறுதியில் மஹாதேவன் செய்த திரிபுர வதம் விளக்கப்பட்டது. இவ்வாறே ஹரிவம்சத்தின் பொருளடக்கத்தை நான் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். இவற்றைக் கேட்பதன் மூலம் ஒருவன் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(30) குருகுலத்தின் தலைவா, ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ஹரிவம்சத்தைக் கவனமாகக் கேட்கும் எவனும் தன் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி இறுதியில் வைகுண்டத்தை அடைகிறான். இந்த விவரிப்பு ஒருவனுக்குச் செல்வத்தையும், புகழையும், நீண்ட ஆயுளையும், உலகஞ்சார்ந்த இன்பத்தையும், இறுதியில் முக்தியையும் அருளும்” என்றார் {வைசம்பாயனர்}.(31) 

ஹரிவம்சப் பலன்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 110-ஹரிவம்சம் உரைப்பவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய கொடை; ஹரிவம்சம் கேட்பவருக்கும், படிப்பவருக்கும் உண்டான பலன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, ஹரிவம்சத்தைக் கேட்பதன் மூலம் ஒருவன் அடையும் பலன்களையும், அவன் கொடுக்க வேண்டிய கொடைகளையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.{1}

வைசம்பாயனர், “ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, ஒரு மனிதன் ஹரிவம்ச புராணத்தைக் கேட்டால், உடல், சொற்கள், எண்ணம் ஆகியவற்றால் அவன் இழைத்த பாவங்கள் அனைத்தும் உதய சூரியனைக் கண்ட பனி போல மறையும்.{2,3} உண்மையில் ஒரு வைஷ்ணவன், ஹரிவம்சத்தைக் கேட்பதன் மூலம் பதினெட்டு புராணங்களையும் கேட்ட பலன்களை அடைகிறான்.{4} ஒரு பாதியையோ, ஹரிவம்சத்தில் வரும் ஒரு ஸ்லோகத்தின் ஒரு பகுதியையோ மதிப்புடன் கேட்பவர்கள் வைகுண்டத்தை அடைகிறார்கள். கலியுகத்தில் ஜம்பூத்வீபத்தில் இதைக் கேட்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகவே இருக்கும்.{5} 

மகன்களைப் பெற விரும்பும் பெண்கள் விஷ்ணுவின் மகிமைமிக்கச் செயல்களைக் கேட்க வேண்டும்.{6} அதைக் கேட்ட பிறகு, பலன்களை அடைய விரும்பும் மனிதன் அதை உரைப்பவனுக்குத் தன் சக்திக்குத் தகுந்த வகையில் மூன்று நிஷ்கங்கள் {நாற்பத்தெட்டு கிராம்} நிறை கொண்ட பொன்னை அளிக்க வேண்டும்.{7} அவன் அதை ஓதுபவருக்கு தன் நலத்திற்காக கன்று, ஆடை மற்றும் பொன்கொம்புகளுடன் கூடிய ஒரு கபிலப் பசுவைக் கொடுக்க வேண்டும்.{8} ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, காதுகளுக்கும், கைகளுக்குமான ஆபரணங்களை அளித்தால், {குறிப்பாக வாகனங்களை அளித்தால்} அது சிறப்புப் பலன்களைக் கொடுக்கும்.{9} ஓ! மன்னா, நீ பிராமணர்களுக்கு நிலங்களை அளிக்க வேண்டும். அதைப் போன்ற வேறு கொடையேதும் கிடையாது; இருக்கவும் முடியாது.{10}

ஹரிவம்சத்தைக் கேட்பவனோ, உரைப்பவனோ தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, வைஷ்ணவ லோகத்தை {வைகுண்டத்தை} அடைகிறான்.(11) பாரதர்களில் சிறந்தவனே, அத்தகைய மனிதன் தன் குலத்தில் பதினோரு தலைமுறையினரையும் விடுவித்துத் தன் மனைவியையும், பிள்ளைகளையும் விடுவித்துக் கொள்கிறான்.(12) மனிதர்களில் முதன்மையானவனே, ஹரிவம்சத்தைக் கேட்கும்போது, கேட்பவன் தான் கேட்ட சுலோகங்களின் மொத்த எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு அளவுக்கு {எண்ணிக்கையில்} வேள்விகளைச் செய்ய வேண்டும்.(13)

இந்த போதனைகளை நினைவில் கொள்வதால் மட்டுமே கூட ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடலாம். மகனில்லாத மனிதன், இதைக் கேட்பதன் மூலம் மகனையும், வறியவன் செல்வத்தையும் அடைகிறார்கள்.(14) நரமேதம், அஷ்வமேதம் ஆகிய வேள்விகளைச் செய்வதன் மூலம் கிட்டும் பலனை ஒருவன் ஹரிவம்சம் சொல்வதைக் கேட்பதன் மூலமே அடைந்துவிடலாம். ஏனெனில் ஹரிவம்சம் ஹரியின் மகிமைகள் நிறைந்ததாகும்.(15) ஒருவன் பிராமணனைக் கொன்றிருந்தாலும், கருக்கலைப்பு செய்திருந்தாலும், பசுவைக் கொன்றிருந்தாலும், மதுபானம் அருந்தியிருந்தாலும், குருவின் மனைவியுடன் கலவியில் ஈடுபட்டிருந்தாலும்கூட அவன் என்னால் பரிந்துரைக்கப்பட்டபடி ஹரிவம்சத்தைக் கேட்டால் தூய்மையடைவான். இதில் ஐயங்கொள்ள வேண்டியதில்லை.(16) எல்லையற்றதும், அற்புதமானதுமான கிருஷ்ணனின் மகிமைகளை நான் இவ்வாறே உனக்கு விளக்கிச் சொன்னேன். அவற்றைக் கேட்கும் எவரும், படிக்கும் எவரும், உலகில் கிடைப்பதற்கரிய உயர்ந்த நன்மையை விரைவில் அடைவார்கள்” என்றார் {வைசம்பாயனர்}.(17)

பவிஷ்ய பர்வம் முற்றும்

ஹரிவம்சம் முற்றும் 

————————————-—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பவிஷ்ய பர்வம்-பகுதி 4–

October 19, 2025

சிவனின் தொண்டர்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 61-(ஸ்ரீகிருஷ்ண ஸமீபே ஷி²வாக³மநம்)-சிவனின் தொண்டர்கள் குறித்த விவரிப்பு…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “பூதங்களின் முகங்களைக் கொண்டவர்களும், நீண்ட விழிகளுடன் கூடியவர்களும், ஆடிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தவர்களும், விளையாட்டாக ஒருவரையொருவர் அறைகூவி அழைத்தவர்களுமான கண்டாகர்ணன், விரூபாக்ஷன், குண்டதாரன், குமுத்வஹன்,{1} தீர்க்கரோமன், தீர்க்கபுஜன், தீர்க்கபாஹு, நிரஞ்சனன், உருநேத்ரன், ஷதமுகன், ஷதக்ரீவன், ஷதோதரன்,{2} குண்டோதரன், மஹாக்ரீவன், ஸ்தூலஜிஹ்வன், துவிபாஹு, பார்ஷ்வவக்த்ரன், சிம்ஹமுகன்,{3} {திரிபாஹு, பஞ்சபாஹு, தீர்க்காஸ்யன்},{3} வியாக்ர வக்தரன், சிதானனன் ஆகிய கோர ரூபம் கொண்ட அனைவரும் அந்தச் சிவனுடன் இருந்தனர்.{4}

இவர்களைத் தவிர, ஊனுண்ணும், சடலங்களைச் சுமக்கும், குருதியைக் குடிக்கும் எண்ணற்ற பிசாசுகளும் அங்கே இருந்தன.{5} அங்கேயும், இங்கேயும் கிட்டும் சடலங்களைக் கைப்பற்றி உண்ணுந்தொழில் ஒன்றே அவர்களுடையதாகத் தோன்றியது.{6} இந்தப் பிசாசுகள் அனைத்தும் நெடியவையாகவும், பருத்தவையாகவும், குலைந்த வடிவம் கொண்டவையாகவும், நரம்புகள் புடைத்துத் தெரிபவையாகவும் இருந்தன. அவற்றின் சூல நுனிகளில் பல சடலங்கள் தொங்கின.{7} அவற்றில் பலவும் மனிதத் தலைகளை {கபாலங்களை} மாலைகளாக அணிந்திருந்தன, வேறு சில மனிதக் குடல்களால் தங்களை மறைத்திருந்தன.{8}(1-8)

சில டிண்டிமங்களை {உடுக்கைகளை} இசைத்தன, சில திக்குகள் அனைத்தும் எதிரொலிக்கும்படி உரக்கச் சிரித்தன. இந்தப் பிசாசுகளில் கபாலிகர்கள், பைரவர்கள், ஜடிலர்கள், முண்டிகள் ஆகியவை முக்கியமானவையாகத் திகழ்ந்தன.{9} பரமேஷ்வரனை நினைவுகூர்ந்த பெரும் முனிவர்கள் பலரும் வேத மந்திரங்களை ஓதிக் கொண்டே அங்கே வந்தனர். அவர்களில் சிலர் கமண்டலங்களைச் சுமந்து வந்தனர், சிலர் தரையில் குசப்புற்களை விரித்தனர், மேலும் பலர் இடைக்கச்சையை மட்டுமே அணிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் தகுந்த ஜபங்களால் சிவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். இவ்வாறே பெரும் முனிவர்கள் பலரும், பிசாசுகளும், சித்தர்களும், கந்தர்வர்களும் தங்கள் மனைவியரோடு அங்கே வந்தனர்{10-13}.(9-13)

கந்தர்வர்களின் மகள்கள் அனைவரும் திறன்பெற்ற நர்த்தகர்களாகவும், பாடகர்களாகவும் அங்கே ஆடிக்கொண்டிருந்தனர். சங்கரனான சிவனைத் துதிக்கும் வித்யாதரர்களும் அங்கே வந்தனர்.(14) முன்னணியில் அப்சரஸ்கள் ஆடிக் கொண்டிருந்தனர். இவ்வாறே, பிசாசுகள், பூதங்கள், முனிவர்கள், கின்னரர்கள்,{15} பிரமதர்கள் ஆகியோருடன் கூடிய சிவன், விஷ்வேஷ்வரனான விஷ்ணு {கிருஷ்ணன்} தவமியற்றி வரும் இடத்திற்கு வந்தான்.{16} தேவர்களும், லோக பாலர்களும் அங்கே இருந்தனர். சிவன் உமையுடனும், புனித கங்கையுடனும் அங்கே இருந்தான்.{17}(15-17) சர்வலோக பிரபுவான பவன் {சிவன்}, பிரணவ மகத்துவத்தின் அடையாளமாகத் திகழ்ந்தான். தன்னிறைவடைந்தவனும், சடாமுடி தரித்தவனும், ஒப்பற்ற ஆற்றலைக் கொண்டவனுமான அவன் தன் தொண்டர்களின் துணையுடன் ஹரியான விஷ்ணுவைக் காண அங்கே வந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(18) 

விஷ்ணுவின் சிவத்துதி | பவிஷ்ய பர்வம் பகுதி – 62-(ஸ்ரீ விஷ்ணுக்ருதா ஷிவஸ்துதி)-சிவனைத் துதித்த கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “இவ்வாறு பகவான் ருத்திரன்தன் காளை வாகனத்தைச் செலுத்திக் கொண்டும், பூதங்களின் துணையுடனும், எண்ணற்ற பிசாசங்கள், உரகங்கள் ஆகியவற்றுடன் அங்கே வந்தான்.(1) தேவேசனான விஷ்ணு உத்தம தவம் செய்து கொண்டும், விதிப்படி வேள்வி நெருப்பில் புனித ஆகுதிகளைச் செலுத்திக் கொண்டும் இருப்பதை அவன் கண்டான்.(2) தலைவன் கிருஷ்ணன் ஒரு வேட்டியையும், சாதரத்தையும் {துண்டையும்} அணிந்திருந்தான், அவனது முடி சடையாக இருந்தது. கருடன் அவனுக்கு விறகுகளைக் கொண்டு வந்தான், சக்கரம் மலர்களைக் கொண்டு வந்தது, திரிசூலம் குசப்புற்களைக் கொண்டு வந்தது. கதாயுதம் பிற தொண்டுகளைச் செய்து வந்தது. அந்தத் தலைவன் இந்திரன் தலைமையிலான தேவர்களாலும், பெரும் முனிவர்களாலும் சூழப்பட்டிருந்தான்.(3,4)

அப்போது பிரபுவான பகவான் {கிருஷ்ணன்} சர்வபூதங்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஏதோவொன்றைத் தியானித்துக் கொண்டிருந்தான். முக்கண்ணனும், அமைதிமிக்கவனும், மகத்தானவனுமான உமாபதி {சிவன்}, அவனை {கிருஷ்ணனைக்} கண்டு தன் வாகனத்தில் இருந்து கீழே இறங்கினான். பெரும் நிறைவடைந்த தலைவன் சிவன், பூதங்கள், பிசாசங்கள், ராக்ஷசர்கள், குஹ்யகர்கள்,{5,6} முனிவர்கள், விப்ரர்கள் ஆகியோருடன் சேர்ந்து, “தேவா {கிருஷ்ணா}, ஜகந்நாதா, உனக்கு ஜயம் உண்டாகட்டும். ருத்திரனாக விரிவடையும் ஜனார்த்தனா, உனக்கு ஜயம் உண்டாகட்டும்.(5-7) விஷ்ணுவே {நீக்கமற நிறைந்தவனே}, ரிஷிகேசா {புலன்களை வென்றவனே}, நாராயணா, உனக்கு ஜயம் உண்டாகட்டும். பராயணா {தஞ்சம் அளிப்பவனே}, புராணாத்மா {புராதன தேவா}, ஹரேஷ்வர {சிவனுக்குத் தலைவனான} தேவா, உனக்கு ஜயம் உண்டாகட்டும்.(8) ஆதிதேவா, ஜகந்நாதா, உனக்கு ஜயம் உண்டாக்கடும். சங்கரப் பாவனா {சங்கரனின் பிறப்பிடமே, உயிரினங்களைக் காப்பவனே}, உனக்கு ஜயம் உண்டாகட்டும். கௌஸ்துப மணியால் ஒளிரும் அங்கங்களைக் கொண்டவனே, உனக்கு ஜயம் உண்டாகட்டும். பஸ்மவிராஜிதா {சாம்பல் பூசிய உடல் கொண்டவனே} உனக்கு ஜயம் உண்டாகட்டும்.(9) சக்கரகதாபாணியே, உனக்கு ஜயம் உண்டாகட்டும். சூலிந்திரிலோசனா {சூலம் தரித்தவனே, முக்கண்ணனே}, உனக்கு ஜயம் உண்டாகட்டும். மௌக்திகமுத்துக்களால் அங்கங்கள் ஒளிர்பவனே, உனக்கு ஜயம் உண்டாகட்டும். நாகவிபூஷணா {பாம்புகளின் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனே}, உனக்கு ஜயம் உண்டாகட்டும்” {என்றான் சிவன்}.(10)

முனிவர்கள் இந்த வணக்கமொழிகளைச் சொல்லிவிட்டு அந்த ஹரியை வணங்கினர். பகவான் {கிருஷ்ணன்}, செந்நீல வண்ணனும், பொருளின் இயல்பை ஆள்பவனும், பாவங்களை அழிப்பவனும், காளையைக் கொடியாகக் கொண்டவனுமான சங்கரனைக் கண்டபோது இதயம் நிறைவடைந்தவனாக மஹாதேவனைப் பின்வருமாறு துதித்தான்:(11,12)

பகவான் {கிருஷ்ணன்} சொன்னான்: “நஞ்சுண்டு கண்டம் {தொண்டை} நீலமடைந்த நீலகண்டா, படைப்பவனும், பிரகாசம் கொண்டவனும், உபவாசங்களில் சிறந்தவனுமான உன்னை நான் வணங்குகிறேன்.(13) இந்த அண்டத்தில் அனைத்தையும் ஆள்பவனே, கதாதாரியே, ரிஷப ரூபம் கொண்ட மொத்த அண்டத்தையே உடலகாகக் கொண்டவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(14)

பொருள் வடிவமற்றவனே, பிநாகாபாணியே, துன்புற்றவர்களின் உற்ற நண்பனே, மங்கல வடிவம் கொண்ட சிவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(15) தன்னில் நிறைவடைந்தவனாக இருந்தாலும், பொல்லாதவர்களைக் கொல்பவனே, மலைகளில் வசிப்பவனே, முற்றான அமைதியாகவும், பெரும் மங்கலனாகவும் திகழ்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(16)

ஹரனே, ஹரிஹரனே, கோரனே {பயங்கரனே}, அகோரனே {பயங்கரமற்ற மென்மையானவனே}, கோரனுக்கும், அகோரனுக்கும் பிரியனே, உன்னை நான் வணங்குகிறேன்.(17) கால ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டவனே, காலத்தைக் கட்டுப்படுத்துபவனே, இரண்டாம் நிலை படைப்பாளிகளைப் படைப்பவனே, கிரிகளில் வசிப்பவனே, சாந்தமானவனே, மங்கலமான சிவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(18)

பெரு வடிவம் கொண்டவனே, புனிதத்தலங்களை மாசடையச் செய்யும் அசுரர்களை அழிப்பவனே, பரம வசிப்பிடமே, இருப்பில் உள்ள அனைத்தின் மூல வித்தே, எட்டு வடிவங்களில் வெளிப்படுபவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(19) புலித்தோலுடுத்தியவனே, பினாகாபாணியே, திரிசூலந்தரித்தவனே, கட்வாங்கம் கொண்டவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(20)

தேவதேவனே, ஆகாசமூர்த்தியே, ஹரனே, ஹரிரூபனே, பேரொளி படைத்தவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(21) பக்தனே, பக்தனுக்குப் பிரியமானவனே, பக்தர்களுக்கு அருள்பவனே, வான விரிவையே வடிவமாகக் கொண்ட ஜகன்மூர்த்தியே, உன்னை நான் வணங்குகிறேன்.(22)

சந்திரதேவா, சூரியதேவா, பிரதான தேவனே, பூதபதியே உன்னை நான் வணங்குகிறேன்.(23) சடாமுடியுடன் பயங்கர வடிவம் கொண்டவனே, வழக்கத்திற்கு மாறான அலங்காரம் கொண்டவனே, பூதங்களுக்கு {உயிரினங்களுக்கு} நன்மை செய்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(24)

சூரியக்கதிர்களைப் போன்ற பிரகாசமான கேசத்தைக் கொண்டவனே, வில் தரிப்பவர்களில் முதன்மையானவனே, பக்தர்களின் இதயங்களில் உள்ள அச்சங்களை விலக்குபவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(25) பகைவரின் இதயங்களில் அச்சத்தை உண்டாக்கும் ஹரனே, தக்ஷனின் வேள்வியை அழித்தவனே, பகனின் கண்களைப் பறித்தவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(26)

பவனென அறியப்படும் உமாபதியே, கைலாயத்தில் வசிப்பவனே, படைப்பின் ஆதி தேவா, அண்டத்தைப் புறவடிவாகக் கொண்டவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(27) கபாலத்தைக் கைகளில் தாங்கியவனே, பிரம்மனின் ஐந்தாம் தலையைக் கொய்தவனே, முக்கண்களைக் கொண்டதால் திரையம்பகன் என்று அழைக்கப்படும் சிவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(28)

சந்திரசேகரா, வரம் வேண்டுபவருக்கு வரம் அருள்பவனே, வேள்வியில் விறகாகவும், அரிசியாகவும், நெய்யாகவும், குசப்புல்லாகவும் இருப்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(29) எல்லையற்ற சக்தி கொண்டவனே, நாகபாசத்தை ஆயுதமாகக் கொண்டவனே, துதிக்கத்தக்க பல்வேறு வடிவங்களைக் கொண்டவனே, பத்ரபானத்தை விரும்புபவனே, உன்னைநான் வணங்குகிறேன்.(30)

சுடலையில் வசிப்பவனே, ஜயசப்தத்தை விரும்புபவனே, இதுவரை இல்லாத ஆற்றலை வெளிப்படுத்த விரும்புபவனே, பலம், வீரம் ஆகியவற்றின் உடல்வடிவமாகத் திகழ்பவனே,(31) மங்கலப் பொருட்களை விரும்புபவனே, மங்கலமிக்கவனே, மஹாகோரமாக இருந்தாலும் கவர்ச்சிமிக்க மங்கல வடிவைக் கொண்டவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(32)

மணிகளை விரும்புபவனே, உன்னையும், உன் தேரையும் மணிகளால் அலங்கரிப்பவனே, பகைவரை எதிர்க்கும்போது கடும் வடிவை வெளிப்படுத்த விரும்புபவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(33) உடையற்ற வடிவில் நிறைவடைந்து உடையின்றிச் செல்பவனே, உயிரினங்கள் அனைத்தின் உறைவிடமாகத் திகழ்பவனே, எங்கும் இன்பமாக வசிப்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(34) உயிரினங்கள் அனைத்தின் உயிராகவும், ஆன்மாவாகவும் திகழ்பவனே, உன்னை வழிபடுபவர்களுக்கு அனைத்து வகை மாய வளங்களையும் அருள்பவனே, வாமனதேவா, மஹாதேவா, உன்னை நான் வணங்குகிறேன்.(35)

எந்தச் சொற்களால் உன் மகிமைகளை முழுமையாகச் சொல்ல முடியும்? எவனால் உன் மகிமைகளை முழுமையாகச் சொல்ல முடியும்? எவனுடைய நாவால் உன் புகழை முறையாய் விளக்க முடியும்?(36) ஹரனே, பகவானே, என் குற்றங்களைப் பொறுப்பாயாக. நான் உன் பக்தன் என்பதை அறிந்து என்னைக் காப்பாயாக. சர்வபூதேசா, சர்வாத்மனா, உலகில் உள்ள அனைவரின் நன்மைக்காக நீ செயல்படுவாயாக. பக்தர்களிடம் அன்பு கொண்ட நீ அவர்களுக்குப் புகலிடம் அளிப்பாயாக” {என்றான் கிருஷ்ணன்}”.(37,38) 

கிருஷ்ணனைத் துதித்த சிவன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 63-(ஸ்ரீ ஷிவக்ருதா விஷ்ணுஸ்துதி)-கிருஷ்ணனைத் துதித்த சிவன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “காளைக்கொடி கொண்டவனும், சூலபாணியும், சாக்ஷாத் உமாபதியுமான அந்த தேவன், கருடக்கொடி கொண்ட விஷ்ணுவின் கைகளைப் பற்றிக் கொண்டு, தேவர்கள் அனைவரும், பெரும் முனிவர்களும் கேட்கும் வகையில் பின்வருமாறு பேசினான்:(1,2) “தேவதேவேசா, சக்கரபாணியே, ஜனார்த்தனா, என்ன காரணத்திற்காக நீ இங்கே தவம் செய்து கொண்டிருக்கிறாய்? நான் செய்ய வேண்டியதென்ன? உனது பிரார்த்தனை என்ன?(3) நீயே நேரடியாக நித்தியனான விஷ்ணு எனும்போது அனைத்து வகைத் தவங்களின் இலக்காக நீயே இருக்கிறாய். ஜனார்த்தனா, ஜகத்பதியே, மகத்தான மகனை அடையும் விருப்பத்தில் நீ இந்தத் தவத்தைச் செய்கிறாய் என்றால் அத்தகைய மகனை நான் உனக்கு ஏற்கனவே கொடுத்துவிட்டேன் என்று அறிவாயாக. பகவானே அதன் காரணத்தை இப்போது கேட்பாயாக.(4,5)

பூர்வத்தில் கிருத யுகத்தில், ஏதோவொரு காரியத்திற்காக நான் பத்தாயிரம் வருடங்கள் மஹாகோர தவம் இருந்தேன்.(6) தேவேசா, அந்த நேரத்தில் என் மனைவி பவானி {பார்வதி}, தன் தந்தையின் ஆணையின் பேரில் தொடர்ந்து எனக்குத் தொண்டாற்றி வந்தாள்.(7) தேவா, என் தவத்தைக் கண்டு அஞ்சிய இந்திரன், என் கவனத்தைச் சிதறடிக்கக் காமதேவனை அனுப்பினான். காமதேவனும், தன் நண்பன் வசந்தனுடன் என் எதிரில் வந்தான்.(8) ஹரியே, மலர்களைத் திரட்டியும், பிற பணிகளைச் செய்தும் பார்வதி எனக்குத் தொண்டாற்றி வரும்போது என் முன் வந்த காமதேவன், தன் கணையில் குறி பார்த்தான்.(9) தேவேசா, இதைக் கண்ட நான் என் நெற்றியில் இருந்த மூன்றாம் கண்ணில் நெருப்பு வெளிப்படும் அளவுக்குச் சீற்றமடைந்தேன்.(10)

விஷ்ணுவே, அவ்வாறே காமதேவன் சாம்பலாக எரிக்கப்பட்டான். அதன்பிறகுதான் காமன், இந்திரனின் ஆணையின் பேரில் அந்தக் காமன் என் முன் வந்தான் என்பதை அறிந்தேன்.(11) தேவேசா, ஜனார்த்தனா, பிறகு நான் காம தேவன் மேல் கருணை கொண்டேன். இதை அறிந்த பிரம்மன் அவனுக்குப் புதிய உடலை வழங்கும்படி என்னைத் தூண்டினான்.(12) ஜகத்பதியே, அந்தக் காமதேவன் உன் மகனாகப் பிறக்கும் ஏற்பாட்டை நான் செய்திருக்கிறேன். அவன் பிரத்யும்னன் என்ற பெயரில் அழைக்கப்படுவான். இந்த மகனைப் பெற்றுக் கொண்ட பிறகு அவனே காம தேவன் என்பதை நீ அறிவாயாக” என்றான் {சிவன்}.

இதைச் சொன்னபிறகு மஹாதேவனும், உமாதேவியும் தங்கள் கரங்களைக் குவித்துக் கொண்டு, அங்கே கூடியிருந்தவர்களும், தலைவனின் மகிமைகளை அறிய ஆவலுடன் இருந்தவர்களுமான முனிவர்கள் அனைவரிடமும் கிருஷ்ணனின் ஆழமான குண இயல்புகளையும், அவனது உண்மையான அடையாளத்தையும் சொல்லத்தொடங்கினர். குருவின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, மஹாதேவன் கரங்குவிப்பதைக் கண்ட தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், கின்னரர்களும், தேவதேவஷ்வரனும், விஷ்ணுவுமான ஸ்ரீ கிருஷ்ணனின் எதிரில் தங்கள் கைகளைக் கூப்பியபடியே நின்றனர்.(13-17)

அப்போது மஹேஷ்வரன், “சாங்கிய தத்துவத்தைக் கற்றறிந்த ஞானிகள், மஹாதத்வத்தின் மூலக்காரணமாக முற்றான உண்மையையும், இரண்டாம் காரணமாகப் பொருளின் இயல்பையும் {பிரகிருதியையும்} சொல்கின்றனர்.(18) நுட்பமான பொருளியல்பு பிரதானம் என்று அறியப்படுகிறது. அதுவே வெளிப்பட்டிருக்கும் அண்டத்திற்கான உடனடி காரணமாகும். பொருளியல்பு {பிரகிருதி} என்பது, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களைக் கொண்டதாகும். சாங்கிய தத்துவத்தைக் கற்றறிந்த அறிஞர்கள், நீயே பொருளியல்பின் மூலக்காரணன் என்பதை அறிவார்கள். விஷ்ணுவே, உன் சக்தியின் மாற்றமே பொருளியல்பாகும் {பிரகிருதியாகும்}, நீயே பொருள் சக்தியின் தேவனுமாவாய்.(19,20) மகத் தத்துவத்தில் இருந்து போலியான அகங்காரம் உண்டானது. ஜகந்நாதா, படைப்பின் தொடக்கமான பிரதானத்தில் இருந்து வெளிப்பட்டிருக்கும் மஹத் தத்துவத்தின் காரணன் நீயே ஆவாய்.(21)

பிரபுவே, தேவா, அகங்காரத்தில் இருந்து ஐந்து பூதங்களும் உண்டானதைப் போலவே, புலன்நுகர் பொருட்களும், {சுவை, ஒளி [காட்சி], ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய} ஐந்து தன்மாத்திரைகளும் உண்டாகின.(22) ஜகத்பதியே, ஐம்பூதங்களும் உன் சக்தியின் வெளிப்பாடே ஆகும். நீயே அவற்றைக் கட்டுப்படுத்துபவனாக இருக்கிறாய். பிருத்வி {நிலம்}, வாயு {காற்று}, ஆகாசம் {ஆகாயம்}, அப்பு {நீர்}, ஜ்யோதி {ஒளி / நெருப்பு} ஆகியவை பஞ்சபூதங்களாகும்.(23) கண்கள், மூக்கு, தோல், நாக்கு, காதுகள் ஆகியன ஐந்தும் அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} ஆகும். மனம், ஐம்புலன்களையும் அதனதனுக்குரிய பொருள்களுடன் தொடர்புகொள்ளத் தூண்டுவதால் ஆறாவது புலனாக அழைக்கப்படுகிறது.(24) ஜனார்த்தனா, வாக்கு முதலிய ஐந்து செயற்புலன்களும் {வாய், கை, கால், மலவாய், கருவாய் என்ற கர்மேந்திரியங்களும்} இருக்கின்றன. ஒவ்வொருவரின் இதயத்திலும் பரமாத்மா இருப்பதால், நீயே அந்தப் புலன்களை அதனதனுக்குரிய செயல்பாடுகளில் மன இயக்கத்தின் கீழ் ஈடுபடுத்துகிறாய். தேவேசா, ஒவ்வொரு புலனுக்கும் தகுந்த கடமைகளை நீயே பரிந்துரைக்கிறாய்.(25,26)

ரஜஸ் குணத்தில் ஈடுபட்டு நீ அண்டத்தைப் படைக்கிறாய். சத்வ குணத்தில் ஈடுபட்டு அதைப் பராமரிக்கிறாய், தமஸ் குணத்தில் ஈடுபடுவதன் மூலம் அண்ட வெளிப்பாட்டை அழிக்கிறாய். இவ்வாறே அனைத்தையும் கட்டுப்படுத்தும் உயர்ந்தவனாக, சத்வ, ரஜஸ், தமஸ் குணங்கள் என்ற பொருளியல்பின் {பிரகிருதியின்} முக்குணங்களின் மூலம் அண்ட வெளிப்பாட்டை உண்டாக்கி, பராமரித்து, அழிக்கிறாய். மாதவா, பண்பட்ட ஆன்மாக்களின் இதயங்களில் இருந்தபடியே அவர்களை நீ புலன்களில் இன்புற்றிருக்கச் செய்கிறாய். எனவே, நீயே அனைத்து வகை இன்பங்களுக்கும் காரணனாக இருக்கிறாய்.(27-30)

பிரபுவே, பிரம்மாவின் வடிவில் நீயே படைக்கிறாய், விஷ்ணுவின் வடிவில் நீயே பராமரிக்கிறாய், ருத்திரனின் வடிவில் நீயே அழிக்கிறாய். இவ்வாறே முக்குணங்களின் அவதாரங்களாக நீயே வெளிப்பட்டிருக்கிறாய்.(31) பூமி {நிலம்}, அப்பு {நீர்}, அனலம் {நெருப்பு}, வாயு {காற்று}, வானம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எட்டும் உன்னிடமுள்ள தனித்தனி பொருள் சக்திகள் ஆகும்.(32) ஆயிரக்கணக்கான தலைகளும், ஆயிரக்கணக்கான கண்களும், ஆயிரக்கணக்கான கைகளும், கால்களும் கொண்ட அண்ட வடிவில் நீ வெளிப்படுகிறாய். இந்திரனின் தலைமையிலான தேவர்களின் வடிவங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வடிவங்களிலும் நீ வெளிப்படுகிறாய்.(33) ஏழு த்வீபங்களும் {கண்டங்களும்}, ஏழு கடல்களையும் கொண்ட உலகில் நீ நீக்கமற நிறைந்திருக்கிறாய். வெளிப்படாத வடிவில் நீ எங்கும் இருக்கிறாய். எனினும், அண்டத்தின் மேலே பத்து அங்குலத்தில் இருப்பதாக உருவகமாகச் சொல்லப்படுகிறாய்.(34)

வெளிப்பட்டோ, வெளிப்படாமலோ உள்ள பொருள் இயல்புகளின் காரணன் நீயே. ஜனார்த்தனா, உன் புறவடிவம் அண்ட வெளிப்பாட்டைக் கொண்டதாகும்.(35) ஜகந்நாதா, அந்த அண்ட வடிவின் வாயில் இருந்து, வேத கல்வியை முதலாகக் கொண்ட ஆறு தொழிற்கடமைகளில் ஈடுபட்டு உலகத்தைப் பாதுகாக்கும் பிராமணர்கள் தோன்றினார்கள்.(36) க்ஷத்திரியர்கள் உன் தோள்களில் இருந்து உண்டானார்கள், வைசியர்கள் உன் வயிற்றில் இருந்தும், சூத்திரர்கள் உன் கால்களில் இருந்தும் உண்டானார்கள்.(37)

தேவேசா, இவ்வாறே நான்கு வர்ணங்களும் உன் உடலில் இருந்து உண்டானவை. குளிர்ந்த கதிர்களுடன் உயிரினங்கள் அனைத்திற்கும் இன்பத்தை அளிப்பவனான சந்திரன், உன் மனத்தில் இருந்து தோன்றினான். உயிரினங்கள் அனைத்தின் கண்களாகக் கருதப்படுபவனான சூரியன், உன் கண்களில் இருந்து தோன்றினான். அவனுடைய கதிர்களாலேயே மொத்த உலகமும் ஒளியூட்டப்பட்டது. இந்திரனும், அக்னியும் உன் வாயில் இருந்து உண்டானார்கள், வாயு உன் உயிர் மூச்சில் இருந்து உண்டானான்.(38-40) ஜனார்த்தனா, உன் உந்தியில் இருந்து வெளி உண்டானது. கோபதியே, மஹாகோரமான தியுலோகம் உன் தலையில் தோன்றியது.(41) ஜகத்பதியே, உன் கால்களில் இருந்து பூமி வெளிப்பட்டது, உன் காதுகளில் இருந்து திசைகள் உண்டாகின. இவ்வாறே நீயே மொத்த அண்டத்தைப் படைத்து அதில் படர்ந்தூடுருவி நீக்கமற நிறைந்தாய்.(42)

கேசவா, அண்டம் முழுவதும் நீயே நீக்கமற நிறைந்திருப்பதால் {வியாபித்திருப்பதால்} விஷ்ணு என்று அறியப்படுகிறாய்.(43) முக்காலத்தையும் அறிந்தவனே, நீரில் (நாரா) கிடப்பதால் {அயண}, நீ நாராயணன் என்று அறியப்படுகிறாய்.(44) தேவா, உயிரினங்களின் துன்பங்களை அழிப்பதால் {ஹரம் செய்வதால்} நீ ஹரி என்ற பெயரைப் பெற்றாய். பிறருக்கு நன்மை செய்வதால் நீ சங்கரன் என்றும் கொண்டாடப்படுகிறாய்.(45) எப்போதும் பெருகும் பெரியவனாக இருப்பதால் நீ பிரம்மன் என்று குறிப்பிடப்படுகிறாய். மதுவை (புலன்களை) அடக்கியதால் நீ மதுசூதனன் என்று கொண்டாடப்படுகிறாய்.(46) விஷ்ணுவே, கேசவா, புலன்களை {இந்திரியங்களை / ரிஷிகங்களை} நீ வென்றவனானதால் ரிஷிகேசன் என்று அழைக்கப்படுகிறாய்.(47) “க” என்பது பிரம்மனைக் குறிக்கும், “ஈசன்” என்பது உடல்படைத்த ஆன்மாக்களைக் கட்டுப்படுத்துபவனான என்னைக் குறிக்கும். நாங்கள் இருவரும் உன் உடலில் இருந்து உண்டாக்கப்பட்டதால் நீ கேசவன் என்று அறியப்படுகிறாய்.(48) பகவானே, “மா” என்றால் வித்யை {அறிவு} ஆகும். நீ அதன் தலைவனான “தவன்” ஆவாய் என்பதால் நீ மாதவன் என்று அழைக்கப்படுகிறாய். தவன் என்ற சொல் தலைமைத் தன்மையைக் குறிக்கும்.(49) “கௌ” என்பது வேத தீர்மானங்களைக் குறிக்கும். அவற்றை நீ நன்றாக அறிந்தவன் என்பதால் கோவிந்தன் என்றழைக்கப்படுகிறாய்.(50) முனிவர்களில் முதன்மையானவர்கள் மூன்று வேதங்களை “திரி” என்று குறிப்பிடுவார்கள். நீ வேத அறிவைக் கடந்தவனாக இருப்பதால் திரிவிக்கிரமன் என்று அறியப்படுகிறாய்.(51) நீ நுட்பமானவனாக இருப்பதால் வாமனன் என்று அறியப்படுகிறாய். சிந்திப்பவர்களில் நீ முதன்மையானவனாக இருப்பதால் முனி என்று அழைக்கப்படுகிறாய். மனத்தைக் கட்டுப்படுத்தியவன் என்பதால் யதி என்று அழைக்கப்படுகிறாய்.(52) தவங்களைச் செய்வதால் நீ தபஸ்வி என்றழைக்கப்படுகிறாய். பூதங்கள் {உயிரினங்கள்} அனைத்தும் உன்னில் வசிப்பதால் பூதவாசன் என்று அழைக்கப்படுகிறாய்.(53) பூதங்கள் {உயிரினங்கள்} அனைத்திற்கும் நீ ஈசனாகத் திகழ்வதால் ஈசுவரன் என்று அழைக்கப்படுகிறாய். பிரபுவே, வேத மந்திரங்கள் அனைத்திலும் ஓங்காரம் உன்னைப் பிரதிபலிக்கிறது. சந்தஸ்களில் நீ காயத்ரியாக இருக்கிறாய்.(54)

அக்ஷரங்களில் {எழுத்துகளில்} நீ அகரமாக இருக்கிறாய். உண்மையில் எழுத்துகள் அனைத்தின் நித்திய பொருளாக நீயே இருக்கிறாய். ருத்திரர்களில் நீ சங்கரனாகவும், வசுக்களில் நீ பாவகனாகவும் இருக்கிறாய்.(55) மரங்களில் நீ புனித அசுவத மரமாக இருக்கிறாய். உயிரினங்களின் ஆன்ம குருவாகப் பிரம்மனாக இருக்கிறாய். மலைகளில் நீ மேருவாக இருக்கிறாய். தேவ முனிவர்களில் நீ நாரதனாக இருக்கிறாய்.(56) தைத்திய தானவர்களில் நீ பெரும்பக்தனான பிரகலாதனாகவும், சர்ப்பங்களில் நீ வாசுகியாகவும் இருக்கிறாய்.(57) குஹ்யகர்களில் தேவர்களின் கருவூல அதிகாரி குபேரனாக இருக்கிறாய். நீர் வாழ் உயிரினங்களில் அவற்றின் தலைவனான வருணனாக நீ இருக்கிறாய். புனித ஆறான கங்கை உன்னையே பிரதிபலிக்கிறாள்.(58) இருப்பின் தொடக்கமாகவும், நடுப்பகுதியாகவும், முடிவாகவும் நீயே இருக்கிறாய். இந்த அண்டம் உன்னில் இருந்து வெளிப்பட்டிருக்கிறது. முடிவில் அது மீண்டும் உன்னில் கலந்து விடும்.(59)

ஜனார்த்தனா, ஜகத்பதியே, நான் உன்னில் இருந்து வேறுபட்டவனல்ல, நீயும் என்னில் இருந்து வேறுபட்டவனல்ல. நமக்கிடையில் எந்த வேறுபாட்டையும் ஒருபோதும் காணமுடியாது.(60) கோவிந்தா, இவ்வுலகில் துதிக்கப்படும் உன்னுடைய புனிதப் பெயர்கள் அனைத்தும் என் பெயர்களுமாகும். எவருக்கும் வேறு வகையில் சிந்திக்கக் காரணமில்லை.(61) தேவேசா, கோபதியே, உன்னை வழிபடுவதும், என்னை வழிபடுவதும் ஒன்றே. உன்னிடம் பகை கொண்டவர் எனக்கும் பகையாளி என்பதில் ஐயமில்லை.(62) தேவா, நான் உன் விரிவாக இருப்பதால் நானும் உயிரினங்களின் தலைவனாகக் கருதப்படுகிறேன். உன்னைக் கடந்ததோ, உன்னில் காணப்படாததோ ஏதுமில்லை.(63) ஜகத்பதியே, தேவேசா, முக்காலங்களில் இருக்கும் எதுவும் நீயின்றி வேறில்லை. உன்னையன்றி இருப்பில் வேறொன்றும் இல்லை.(64)

பிரபுவே, தேவர்கள் எப்போதும் உன் ஆழ்ந்த குணங்களைத் துதிக்கிறார்கள். நித்தியமான ரிக், யஜூர், சாம வேதங்களாக நீயே இருக்கிறாய்.(65) அனைத்தின் பிறப்பிடமாகத் திகழ்பவனே, இன்னும் வேறு என்ன சொல்ல? ஒரு வகையில் நீ அனைத்துமாக இருக்கிறாய், இருப்பினும் நீ அனைத்தில் இருந்தும் வேறுபட்டவனாகவும் இருக்கிறாய். விஷ்ணுவே, மாதவா, கேசவா, அனைத்து வகையிலும் நான் உன்னை வணங்குகிறேன்.(66) ஈசுவரனே, நான் உன்னை வணங்குகிறேன். ஹரியே நித்தியம் நான் உன்னை வணங்குகிறேன். உந்தியில் தாமரை மலரைக் கொண்டவனே, சர்வாத்மனே உன்னை நான் வணங்குகிறேன்” {என்றான் சிவன்}”.(67) 

கிருஷ்ண ஸ்வரூபம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 64-(மஹாதேவேந கிருஷ்ணஸ்வரூபவர்ணநம்)-கிருஷ்ணனின் ஸ்வரூபத்தை முனிவர்களிடம் விளக்கிச் சொன்ன சிவன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “சிவன், அந்தத் தேவதேவேசனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வாறு சொல்லிவிட்டு முனிவர்களிடம் திரும்பி, “விப்ரர்களே, ஹரியைக் காண வந்திருக்கும் பக்தர்களான நீங்கள் அனைவரும் இவனைக் குறித்த இந்த உண்மையை அறிய வேண்டும்.(1) இந்தத் தேவனே பரம்பொருளாவான். இவனுக்கு இணையாகவோ, மேன்மையாகவோ வேறெவரும் இல்லை. இவனே நீங்கள் செய்யும் தவங்களின் இறுதி இலக்காவான். இந்த உண்மையை நீங்கள் அறிவீராக.(2) விப்ரர்களே, சிதறாத கவனத்துடன் இவனைத் தியானிப்பதையே வழக்கமான பயிற்சியாக நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இவனை அறிந்து கொள்வதே உங்களுக்கு முழுமையை அளிக்கும், அதுவே உங்கள் பரம தனமாகவும் இருக்கும்.(3)

இவனை அறிந்து கொள்வதே உங்கள் பிறப்பின் இறுதி வெற்றியாகவும், உங்கள் தவங்களின் பலனுமாக இருக்கும். உண்மையில் இவனை அறிந்து கொள்வதே உங்கள் புண்ணியங்களின் கொள்ளிடமும், உங்கள் சநாதன தர்மமுமாகும்.(4) இவனே உங்களுக்கு மோட்சத்தை அருள்வான். இவனே எடுத்துக்காட்டாக இருந்து இதை உங்களுக்குக் கற்பிப்பான். இவனே புண்ணியத்தை அருள்வான், இவனே உங்கள் நற்செயல்களில் பலனாகவும் இருப்பான்.(5)

ஆன்ம அறிவியலைக் கற்றறிந்த அறிஞர்கள் இவனையே துதிக்கின்றனர். இவனே மூன்று வேதங்களின் இறுதி இலக்காவான். பிரம்மத்தை அறிந்த பிரம்மவாதிகள் இவனது தாமரைப் பாதங்களை அடைய இவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர்.(6) சாங்கிய தத்துவத்தைப் பின்பற்றி மாயா யோகத்தை நித்தம் பயிலும் கல்விமான்களும் இவனையே துதிக்கின்றனர். வேதங்களை நன்கறிந்த கல்விமான்கள், தன்னை அறிந்து கொண்ட ஆன்மாக்கள் அனைத்தின் இறுதி இலக்காக இவனையே ஏற்கின்றனர்.(7) இது சச்சரவில்லா உண்மை என்பதால், இக்காரியத்தை மேலும் கருத்தில் கொள்ள ஏதுமில்லை. எப்போதும் சத்வ குணத்துடன் இருக்கும் உங்களைப் போன்ற பக்தர்கள் ஹரியையே நித்தம் தியானிக்க வேண்டும்.(8)

நீக்கமற நிறைந்திருக்கும் நாராயணனுக்கு மேலானவன் எவனுமில்லை. விப்ரர்களே, நீங்கள் எப்போதும் ஓங்காரத்தைச் சொல்லி கேசவனைத் தியானிப்பீராக.(9) அவ்வாறு செய்வதால் நீங்கள் உங்கள் வாழ்வின் இறுதி இலக்கை அடைவீர்கள். இதில் ஐயமேதும் இல்லை. ஒரு பக்தன் ஹரியைத் தியானித்தால் இவன் எளிதில் நிறைவடைகிறான்.(10) விப்ரர்களே, விஷ்ணு உங்களிடம் நிறைவடைந்தால், உங்களைப் பொருள் பற்றில் இருந்து விடுவிப்பான். அச்யுதனின் தொடர்பை அடைய நீங்கள் விரும்பினால் இடையறாமல் இவனைத் தியானிப்பீராக.(11)

விஷ்ணுவை உங்கள் ஆன்ம குருவாகக் கருதுவீராக. இவன், பொருள் பற்றின் காரண வேரான உங்கள் அறியாமையை அகற்றுவான். எனவே, முக்குண அவதாரங்களெனப் பிரம்மன், விஷ்ணு, சிவனை ஏற்கும் நீங்கள் எப்போதும் ஹரியை நினைத்துத் துதிக்க வேண்டும்.(12) விப்ரர்களே, தவப்பயிற்சியால் சக்தியூட்டப்பட்ட நீங்கள் எப்போதும் கவனமாக உங்கள் மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் மனமும், புலன்களும் உங்களுக்குக் கட்டுப்படுவதன் மூலம் தூய்மையடைந்துவிட்டால் உங்களிடம் விஷ்ணு நிறைவடைவான்.(13)

விப்ரர்களே, நீங்கள் என்னை நினைத்தால், நான் கேசவனைக் குறித்த ஞானத்தை உங்களுக்குக் கொடுப்பேன். இவனை வழிபடுவதால், தானாகவே நானும் வழிபடப்பட்டவனாவேன்.(14) இவனை அடையும் உபாயங்களை விளக்கிச் சொன்ன என்போதனைகளில் நீங்கள் ஐயமேதும் கொள்ளாதீர். பாவம் நிறைந்த உணர்வுகள் அனைத்தையும் அழிக்கும் இந்தப் பிரபுவே மாயையின் தலைவனாவான். எனவே நீங்கள் அனைவரும் இவனது தாமரைப் பாதங்களை அடைய முயற்சி செய்ய வேண்டும்.(15) விப்ரேந்திரர்களே, உங்கள் நற்புத்தி சுட்டும் வழியில் செயல்படுவீராக, அவ்வாறு செயல்படுவதால் நீங்கள் தூய்மையடைவீர்கள். அவ்வாறே தேவனும் உங்களிடம் நிறைவடைவான்” {என்றான் சிவன்}”.(16)

வைசம்பாயனர் சொன்னார், “மன்னா {ஜனமேஜயா}, சங்கரன் பேசியதைக் கேட்ட அந்தப் புண்ணியச் சீலர்கள் அனைவரும், அவனது போதனைகளை ஏற்றுத் தங்கள் மனங்களில் இருந்த ஐயங்கள் அனைத்திலிருந்தும் தெளிவடைந்தனர்.(17)

அந்த விப்ரர்கள் அனைவரும் கூப்பிய கரங்களுடன் மஹாதேவனிடம் {சிவனிடம்}, “ஹரனே, நீ சொன்னது அனைத்தும் உண்மையே. எங்கள் ஐயங்கள் மறைந்தன. உன் தீர்மானங்களை முழுமையாக நாங்கள் ஏற்கிறோம்.(18) தேவா, இந்தக் காரியத்திற்காகவே உன்னுடைய வசிப்பிடத்திற்கு இன்று நாங்கள் வந்தோம். உங்கள் இருவரையும் சந்தித்ததால், எங்கள் மாயைகள் விலகின.(19) தேவேசா, உன் போதனைகளைப் பின்பற்றுவதிலேயே எங்களுக்கான உண்மையான நன்மை இருக்கிறது. உன்னால் பரிந்துரைக்கப்பட்டபடியே நாங்கள் எப்போதும் ஹரியை நிறைவடையச்செய்ய முயற்சிப்போம்” என்றனர் {முனிவர்கள்}. பகவான் ருத்திரனிடம் இவ்வாறு சொன்ன அந்த முனிவர்கள் அனைவரும் கேசவனின் தாமரைப் பாதங்களில் விழுந்து வணங்கினர்” {என்றார் வைசம்பாயனர்}.(20) 

சிவனின் விஷ்ணுத்துதி | பவிஷ்ய பர்வம் பகுதி – 65-(புநரபி ஷிவக்ருதா விஷ்ணுஸ்துதி)-கிருஷ்ணனைத் துதித்த சிவன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதன்பிறகு முனிவர்கள் ஆச்சரியப்படும் வகையில் ருத்திரன், விஷ்ணுவும், விஷ்வேஷ்வரனுமான ஹரியை மீண்டும் துதிக்கத் தொடங்கினான். முனிவர்களும் குவிந்த கவனத்துடனும், நிறைவுடனும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.(1)

அப்போது மகேஷ்வரன், “நான் நித்தம் தியானிக்கும் பகவனான வாசுதேவனை வணங்குகிறேன். பெரும்பிரகாசம் கொண்ட தேவா, உன் பேரொளியின் பிரதிபலிப்பாலேயே மொத்த அண்டத்திற்கும் ஒளியூட்டுபவன் நீயே.{2} உன் பிரகாசத்தின் பிரதிபலிப்பை மீண்டும் பிரதிபலிக்கும் சந்திரனின் குளிர்ந்த கதிர்களைத் தருபவனும் நீயே.{3} நீக்கமற நிறைந்திருக்கும் விஷ்ணு நீயே. உலகின் ஜடப் பொருள்களை இயக்கம் கொண்டவையாகச் செய்பவன் நீயே.{4} அவற்றின் இதயங்களைத் தூண்டி, அதனதன் தொழில்களிலும், கடமைகளிலும் ஈடுபடுத்தி, அந்தந்த சூழலுக்குத் தகுந்த இன்பத்தை அவற்றுக்கு அளிப்பவனும் நீயே.{5}

அனைத்துமாக இருப்பவன் நீயே, இருப்பினும் அனைத்தில் இருந்தும் வேறுபட்டவன் நீயே. வேதங்களைப் பாதுகாக்கும் பிரம்மனைப் போலவே, வாக்கை உன் வடிவங்களில் ஒன்றாகக் கொண்டவன் நீயே.{6} கைகளில் குசப் புற்களையும், ஆடையையும், வேள்விப் பொருள்கள் பிறவற்றையும் தரித்திருப்பவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.{7}

மொத்த அண்டத்தையும் பாதுகாப்பவன் நீயே, நிர்ணயிக்கப்பட்ட காலம் வந்ததும் உன் கோப வடிவமான பயங்கர முகம் படைத்த ருத்திர வடிவில் அதற்கு ஒரு முடிவை ஏற்படுத்துபவனும் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.{8} பிறப்பற்றவன் நீயே, தேவதேவேசன் நீயே, அண்டத்தின் உண்மைப் படைப்பாளன் நீயே. படைப்பின் போது உயிரினங்கள் அனைத்திற்கும் உயிரூட்டுபவன் நீயே.{9} பிரம்மனின் வடிவில் கோள்களையும், அவற்றில் வசிப்பனவற்றையும் வெளிப்படுத்துபவன் நீயே. தேவதேவேசா, மஹத் தத்துவத்தின் உட்பொருள் திரளாக மாற்றமடைவது உன் சக்தியே. பொருள் இயல்பானவள் {பிரகிருதியானவள் / இயற்கையானவள்} ஐந்து பூதங்களை வெளிப்படுத்தும் வகையில் உன் பார்வையால் அவளைக் கலங்கடிப்பவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.{10}

பக்தர்களின் பாவங்களை அழிப்பவன் நீயே, பூமியின் உண்மை மணம் நீயே. ஜகத்பதியே, அனைத்து வடிவங்களையும் வெளிப்படுத்தும் மூல வடிவம் நீயே. சூரியனைப் போன்று பிரகாசமிக்கவன் நீயே.{11} உயிரினங்கள் அனைத்தையும் பராமரிப்பதற்கான வெப்பத்தையும், ஒளியையும் அளிக்கும் அந்தச் சூரியனை வெளிப்படுத்தியவனும் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.

ஹரியே, வெப்பம், குளிர், இன்பம், துன்பம் ஆகியவற்றை உணரச்செய்யும் காற்றாக இருப்பவன் நீயே.{12} தீண்டல் உணர்வை அந்தக் காற்றே உண்டாக்குகிறது. உன்னை நான் வணங்குகிறேன்.

விஷ்ணுவே, ஆகாயத்தில் உண்டாகும் ஒலி பிரதிபலிப்பது உன்னையே.{13} நுட்பமான ஆன்மாக்கள் அனைத்தும் உன் அங்கங்களாகத் திகழ்வதால் அனைத்து உயிரினங்களின் உயிராகவும், ஆன்மாவாகவும் இருப்பவன் நீயே.{14}

ஜகந்நாதா, மனித வடிவை ஏற்றிருந்தாலும், மொத்த அண்டத்தையும் தாங்கி நீடிக்கச் செய்பவன் நீயே. மாயா சக்தியின் தலைவன் நீயே. மாயையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டவன் நீயே. இருப்பின் பொருள் பற்றில் இருந்து விடுதலை அளிப்பவன் {மோக்ஷம் அருள்பவன்} நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.

இருப்பில் உள்ள அனைத்தின் உண்மைக் காரணன் நீயே, எல்லையற்ற ஆழ்நிலை குணங்களைக் கொண்டவனாக இருந்தாலும், குணமற்றவனாகத் திகழ்பவன் நீயே. சிந்தனைக்கப்பாற்பட்டவன் நீயே. அனைவரின் முயற்சிகளிலும் நோக்கமாகத் திகழ்பவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.

ஹரியே, ஹரனாகத் திகழ்பவன் நீயே.{15,16} படைப்பின் தொடக்கத்தில் பிரம்மனின் இதயத்திற்கு ஞானத்தை ஊட்டியவன் நீயே. பிரம்மத்தை அறிந்தவன் நீயே. பரப்ரம்மன் நீயே. வேள்வியின் வடிவம் நீயே. ஆயிரம் தலைகளையும், வாய்களையும்,{17} கண்களையும் கொண்ட அண்ட வடிவன் நீயே. கோடிக்கணக்கான கதிர்களின் பிரகாசத்தால் அமைந்தவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன். அண்ட வடிவம் நீயே, அண்டத்தைப் படைத்தவன் நீயே. மொத்த அண்டத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் நீயே.{18} அனைத்து உயிரினங்களுக்கும் வசிப்பிடமாக இருப்பவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.

ஹரியே, உடல் படைத்த ஆன்மாக்களின் புலன்களாகத் திகழ்பவன் நீயே. புலன் நுகர் பொருட்களாக இருப்பவனும் நீயே. புலன்களின் தலைவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.{19}

வேத வடிவம் நீயே, வேதங்களைக் காக்கும் ஹயக்ரீவனாக அவதரித்தவன் நீயே. நெருப்பின் வடிவை ஏற்பவன் நீயே. நட்சத்திரங்களையும், கோள்களையும் அதனதன் நிலைகளில் நிலைக்கச் செய்யும் சக்தி நீயே.{20} சூரியன் நீயே, சூரிய புத்திரன் நீயே, சூரியனின் தலைவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.

ஹரியே, குளிர்ந்த கதிர்களைத் தருபவனும், மயக்கம் தருபவனுமான சோமன் நீயே.{21} [வஷட்காரமாக, ஸ்வாஹாவாக, ஸ்வதாவாக இருப்பவன் நீயே]. வேள்வியின் வடிவம் நீயே, வேள்வியின் மூலம் வழிபடப்படுபவன் நீயே, வேள்விப் பொருட்கள் அனைத்தையும் படைத்தவன் நீயே. வேள்விகளில் சொல்லப்படும் புனித மந்திரங்களாக வெளிப்படுபவன் நீயே. வேள்விக்குடம், வேள்விக் கரண்டி மற்றும் வேள்விக்குரிய பிற பொருட்கள் அனைத்துமாக இருப்பவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.(2-22)

ஓம் என்ற புனித எழுத்து, உன்னுடைய சூக்ஷும உடலிலிருந்து வேறுபட்டதல்ல. தவறும் இயல்புடைய, தவறாத இயல்புடைய அனைத்தின் தலைவன் நீயே. வேதமானவன் நீயே, வேத வடிவானவன் நீயே, பகைவரை அழிக்கும் ஆயுதங்களை இருப்புக்கு அழைப்பவன் நீயே, அந்த ஆயுதங்களின் உடல்வடிவம் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.(23) சிறந்த ஆசிகளை அருள்பவன் நீயே, கதாயுதம், கட்கம், சங்கு, சக்கரம், திரிசூலம், கேடயம் ஆகியவற்றைத் தரித்தவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.(24)

சர்வாத்ம குருவே, ஞானத்திற்கும், இன்பத்திற்கும் கொள்ளிடமாகத் திகழ்வதால் புத்திமான்களுக்குப் பிடித்தமானவன் நீயே. அனைத்து உயிரினங்களிலும் பரமாத்மாவாக இருப்பவன் நீயே. பக்தர்களின் பாவங்களை அழிக்கும் விஷ்ணுவே, உன்னை நான் வணங்குகிறேன்.(25) சர்வலோகேசா, இருப்பில் உள்ள அனைத்தையும் படைத்தவனே, முற்றான தூய்மையின் வடிவமாகத் திகழ்பவனே, யஜ்ஞ வராஹனாக அவதரித்தவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(26) விஷ்ணுவே உன்னை வணங்குகிறேன், விஷ்ணுவே உன்னை வணங்குகிறேன், விஷ்ணுவே உன்னை வணங்குகிறேன், ஹரியே உன்னை வணங்குகிறேன், என் தியானப் பொருளாகத் திகழும் வாசுதேவா உன்னை நான் வணங்குகிறேன்.(27) கரிய வண்ணனும், நீக்கமற நிறைந்தவனுமான கிருஷ்ணனை நான் வணங்குகிறேன். கிருஷ்ணனான உன்னை உண்மையில் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். ஜனார்த்தனா, அண்டத்தில் உள்ள நல்லோரைக் காப்பாயாக” {என்றான் சிவன்}.(28)

ஜகந்நாதனை இவ்வாறு துதித்த சிவன், முனிவர்களிடம் திரும்பி, “நீங்கள் கேசவனிடம் சரணடைந்து, இந்தத் துதியை தினமும் சொல்வீராக. அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குபவன் இவனே. இந்தத் தலைவனைச் சரணடைந்தால் நிச்சயம் உங்களைப் பாதுகாப்பான். அனைத்து வகைப் பாவங்களையும் அழிக்கவல்ல இந்தத் துதியைச் சொல்பவன், தன் இதயத்துக்குள் ஹரியின் பேரின்பத்தை அடைவான். இந்தத் துதியைக்[1] கேட்டோ, சொல்லியோ ஹரியை நிறைவடையச் செய்பவர்களால் அடையப்படமுடியாததுதான் ஏது?(29-31) நீங்கள் உங்கள் வாழ்வை வெற்றிகரமானதாக்க விரும்பினால், சிறந்த விரதங்களை நோற்று, பக்தர்களிடம் அன்பு கொண்ட கேசவனை எப்போதும் நினைப்பீராக” {என்றான் சிவன்}.(32)பூதகணங்களுக்கு நன்மை செய்யும் ருத்ரனான பகவான் சங்கரன், இதைச் சொல்லிவிட்டு, உமையுடனும், தன் தொண்டர்களுடனும் அங்கேயே அப்போதே மறைந்தான்.(33) முனிவர்கள் அனைவரும் இதயத்தில் நிறைவடைந்து ஹரியை வணங்கினர். அவர்கள் நாராயணனே பரம தத்துவம் {முற்றான உண்மை} என்பதை உணர்ந்து, தங்கள் வாழ்வு வெற்றியடைந்ததாக {பிறவிக்கடன் தீர்ந்ததாகக்} கருதினர்.(34) மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அங்கே இருந்த தேவர்கள் அனைவரும் புறப்படுவதற்கு முன்னர், ஹரியை வணங்கிவிட்டுத் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.(35)

அதன்பிறகு அந்தப் புண்டரீகாக்ஷன் {தாமரைக் கண் கிருஷ்ணன்}, முன்பு சங்கு, சக்கரம், கதை, கட்கம் {வாள்}, வில், கணைகளுடன் கருடனில் ஏறி வந்ததைப் போலவே, பெரும் முனிவர்களால் நித்தம் தொண்டாற்றப்படும் பதரிகாசிரமத்திற்கு மாலை வேளையில் திரும்பிச் சென்றான்.(36,37) ஈசுவரனான அந்த ஹரி, பதரிகாசிரமத்தை அடைந்ததும் முனிவர்கள் அனைவரையும் வணங்கிவிட்டு, அவர்களால் வழிபடப்பட்டவனாக ஓர் ஆசனத்தில் சுகமாக அமர்ந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(38) 

பௌண்டரகன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 66-(பௌண்ட்ரகவ்ருத்தாந்தராம்பம்)-சபையில் உரையாற்றிய பொண்டரகனின் தற்பெருமை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதேவேளையில், கல்விமானும், வலிமைமிக்கப் போர்வீரனும், விருஷ்ணி குலத்தைப் பகைக்கும் விரதம் கொண்டவனும், கிருஷ்ணனிடம் பொறாமை கொண்டவனும், பலமிக்க மன்னர்களில் முதன்மையானவனுமான பௌண்டரகன், தனக்கு அடங்கிய சிற்றரசர்கள் அனைவரையும் விரைவாக அழைத்துத் தன் சபையில் அவர்களிடம் பின்வருமாறு பேசினான்:(1,2)

{பொண்டரகன்}, “பலமிக்க மன்னர்கள் அனைவரையும் வீழ்த்தி, பிருத்வி முழுவதையும் நான் வென்றேன். விருஷ்ணி குலம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. கிருஷ்ணன் தரும் ஆதரவினால் அவர்கள் கர்வத்துடன் இருக்கின்றனர்.(3) கிருஷ்ணனைப் புகலிடமாகக் கொண்ட அவர்கள் தங்கள் வரிகளைக் கட்ட மறுக்கின்றனர். அகந்தை கொண்ட கிருஷ்ணன், தன் வலிமைமிக்கச் சக்கரத்தின் மீது கொண்ட நம்பிக்கையில் என்னைப் புறக்கணிக்கிறான்.(4) சக்கரம், சங்கு, கதாயுதம், வில், கணைகள் ஆகியவற்றை நம்பி அந்த இடையன் கர்வத்தில் இருக்கிறான். ஆயுதங்களின் பலமே அவனைச் செருக்கில் மிதக்க வைக்கிறது.{5}

உண்மையில், நானே வாசுதேவன் என்றாலும், செருக்கில் மிதக்கும் அந்த இடையன் என் பெயரைக் களவாடிவிட்டான். அவனது சக்கரத்தை வீழ்த்தவல்லதும், அவனது செருக்கை சல்லி, சல்லியாக நொறுக்கவல்லதும், உறுதிமிக்கதுமான சுதர்சன சக்கரம் என்னிடம் இருக்கிறது. மதிப்புமிக்க மன்னர்களே, என் சக்கரம் ஆயிரம் ஆரங்களைக் கொண்டதாகும், அதனால் விரும்பிய வடிவங்கள் பலவற்றையும் ஏற்க முடியும். அது நிச்சயம் அழிவற்றதுமாகும்.{6-8} பயங்கர நாணொலியை எழுப்பும் தெய்வீக வில்லான அற்புத சாரங்கம் என்னிடமும் இருக்கிறது. என்னுடைய பெரிய கதாயுதம் கௌமோதகி என்றழைக்கப்படுகிறது. இரும்பாலான அஃது ஓராயிரம் பாரங்கள்[1] எடை கொண்டதாகும்.(5-10) யமனே அஞ்சக்கூடியதும், கிருஷ்ணனின் வாளை எளிதாக அழிக்கக்கூடியதுமான நந்தக வாள் என்னிடம் உள்ளது.(11) கவசம் பூண்டும், கதாயுதம், வாள், சங்கு, சக்கரம் ஆகியவற்றைக் கொண்டும் போர்க்களத்தில் கிருஷ்ணனை நான் வெல்வேன். இதில் ஐயமேதும் இல்லை.இப்போதிலிருந்து நீங்கள் அனைவரும் என்னைக் கதாயுதம், சக்கரம், சங்கு, வில் ஆகியவற்றைத் தரித்தவன் என்றே {அதாவது கதீ என்றும், சக்ரீ என்றும், சங்கீ என்றும் சாரங்கி என்றும்} அழைக்க வேண்டும்.(12,13) மேலும் நீங்கள் வாசுதேவனென என்னை அழைக்கவேண்டுமேயன்றி யது குலத்தை ஆதரிக்கும் அந்த இடையனை அல்ல. நான் அவனைக் கொல்வதன் மூலம் சச்சரவுகளை அகற்றி உண்மையான வாசுதேவன் ஆவேன்.(14) மஹாத்மாவான நரகன் என் ஆருயிர் நண்பனாவான். போரில் அவனை அந்த இடையன் கொன்று விட்டான். என்னை நீங்கள் வாசுதேவனாக ஏற்காவிட்டால் உங்களைத் தண்டிக்கும் வகையில் பத்தாயிரம் தங்க நாணயங்களையும், பெரும் அளவிலான நெற்குவியல்களையும் எனக்கு வலுக்கட்டாயமாகச் செலுத்த வைப்பேன்” {என்றான் பௌண்டரகன்}.(15)

மன்னா, அந்த ராஜேந்திரன் {பௌண்டரகன்} இந்த மூடச் சொற்களைப் பேசி முடித்ததும், சபையில் இருந்த மன்னர்களில் சிலர் சங்கடத்துடன் கூடியவர்களாக அமைதியாக இருந்தனர். அந்த மன்னர்கள் வலிமைமிக்கவர்களாக இருப்பினும், எப்போது விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்பதை அறிந்தவர்களாகவும் இருந்தனர்.(16,17) மற்ற மன்னர்கள் தங்கள் தலைகளை அசைத்து, “சரிதான், அப்படியே செய்வோம்” என்று சொல்லி பௌண்டரகனைத் துதித்தனர். பெருஞ்செருக்கில் பெருகிய அவர்கள், “நிச்சயம் நாம் கிருஷ்ணனை வீழ்த்துவோம்” என்றனர்” {என்றார் வைசம்பாயனர்}.(18) 

பௌண்டரகனும் நாரதரும் | பவிஷ்ய பர்வம் பகுதி – 67-(பௌண்ட்ரகநாரதஸம்வாதம்)-நாரதரிடம் பேசிய பௌண்டரகன்; பௌண்டரகனை எச்சரித்த நாரதர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதே வேளையில் சர்வலோகங்களில் பயணிக்க வல்ல நாரதர், கைலாச சிகரத்தில் இருந்து, பௌண்டரகனின் நகரத்திற்குச் சென்றார்.(1) அவர் வானத்தில் இருந்து இறங்கி, மன்னனின் {பௌண்டரகனின்} வாயிற்காப்போனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அவனது அரண்மனைக்குள் பிரவேசித்தார்.(2) அர்க்கியம் மற்றும் பிற மங்கலப் பொருட்களுடன் மன்னனால் மதிக்கப்பட்டு, தொண்டாற்றப்பட்ட அவர், அதன்பிறகு அலங்காரத் துணிகளால் மறைக்கப்பட்ட வெண்மையான ஆசனத்தில் அமர்ந்தார்.(3)

அப்போது ஆற்றலில் அதீத செருக்குக் கொண்ட பௌண்டரகன், முதலில் நாரதரின் நலத்தை விசாரித்துவிட்டு, பிறகு பின்வருமாறு பேசினான்:(4) “விப்ரேந்திரரே, நாரதரே, சர்வ காரியங்களிலும் பண்டிதரே, தேவர்கள், சித்தர்கள், கந்தர்வர்களால் பெரிதும் மதிக்கப்படுபவரே, எங்கும் தடையில்லாமல் சர்வலோகங்களுக்கும் செல்லவல்லவரே, பலமிக்கவனும், புகழ்மிக்கவனுமான பௌண்டரகனாகிய நான் வாசுதேவன் என்ற பெயருக்குத் தகாதவனா?(5-7)

சங்கு, சக்கரம், கதாயுதம், வில் ஆகிய அடையாளங்களால் நான் அலங்கரிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய வாளையும், கேடயத்தையும் கொண்டு சிங்கம் போன்ற மன்னர்கள் பலரை நான் வென்றிருக்கிறேன். அனைவரின் வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் நானே கொடுக்கிறேன்.(8) ஒப்பற்ற ராஜ்ய போகம் கொண்டவனாகவும், ஒப்பற்ற ஆற்றலுடன் ஆளும் வலிமைமிக்க மன்னனாகவும் நான் இருக்கிறேன். வெல்லப்படமுடியாதவனான நான் என் குடிமக்களைப் பாதுகாக்க வல்லவனாகவும் இருக்கிறேன்.(9)

இப்போது வாசுதேவன் என்ற பெயரில் ஓர் இடையன் இருக்கிறான். எனினும் அவன் அந்தப் பெயரைக் கொள்வதற்குப் போதுமான ஆற்றலைக் கொண்டவனல்ல என நான் கருதுகிறேன்.(10) விப்ரேந்திரரே, அந்த இடையன் மூடத்தனத்தால் என் பெயரைப் பயன்படுத்துகிறான். இவ்வுலகில் சச்சரவின்றி நானே வாசுதேவனாக இருக்க அந்த யாதவனை நிச்சயம் வீழ்த்துவேன். என் சொற்களைக் குறித்து வைத்துக் கொள்வீராக. விருஷ்ணி குலத்தவர் அனைவரையும் வீழ்த்தி, கிருஷ்ணனின் வசிப்பிடமான துவாரகையை நான் அழிப்பேன். இந்தப் படையெடுப்பில் எனக்குத் துணை புரியும் விருப்பத்தை உறுதி செய்வதற்காக வலிமைமிக்க மன்னர்கள் பலர் இங்கே கூடியிருப்பதை நீர் காணலாம்.(11-13)

என்னிடம் வேகமான குதிரைகள் எண்ணற்றவையும், காற்றைவிட வேகமாகச் செல்லும் ரதங்களும், மதங்கொண்ட யானைகள், ஒட்டகங்கள் ஆகியவை கோடிக்கணக்கிலும் இருக்கின்றன. விப்ரரே, நாரதரே, நீர் செல்லும் இடமெங்கும் என் எண்ணத்தைக் குறித்துச் சொல்வீராக. இந்திரனின் சபையிலும் என்னுடைய ஒப்பற்ற ஆற்றலைச் சொல்லி நீர் துதிப்பீராக. இதுவே எனது வேண்டுகோளாகும். நான் உம்மை வணங்குகிறேன்” {என்றான் பௌண்டரகன்}.(14-16)

அப்போது நாரதர் {பௌண்டரகனிடம்}, “மன்னா, அண்டத்திற்குள் எங்கும் என்னால் செல்ல முடியும் என்பது உண்மைதான். என்னால் நிறைவேற்ற முடியாத பணியென ஏதும் கிடையாது.(17) எனினும், நீ விரும்பியபடி நான் எவ்வாறு பேசத்துணிவேன்? தேவேசனும், சக்கரபாணியும், ஜனார்த்தனனும், விஷ்ணுவுமான அந்தத் தேவன் துஷ்டர்களையும், அவர்களின் உற்றார் உறவினர்களையும் கொல்லும் வரை அவனைத் தவிர வேறு எவனை வாசுதேவனென அழைக்க முடியும்?(18,19) சூரியக் கதிர்களால் ஒளியூட்டப்படும் உலகங்கள் அனைத்தையும் கிருஷ்ணன் ஆளும்வரை, “பௌண்டரகன்தான் வாசுதேவன்” என எவன் சொல்லத் துணிவான்?

உன்னைப் போன்ற மூடனால் மட்டுமே இவ்வாறு பேச முடியும்.(20) அண்டத்திற்குள் எங்கும் திரிய வல்லவனும், சிந்தனைக்கு அப்பாற்பட்டவனும், ஆறு செல்வங்கள்[1] நிறைந்தவனும், பாவங்களை அழிப்பவனும், வில்லும், கதாயுதமும் தரிப்பவனும், நீக்கமற எங்கும் நிறைந்தவனுமான அந்த விஷ்ணு விரைவில் உன் செருக்கை அழிப்பான்.(21) மன்னா, ஆதிதேவனான கிருஷ்ணன் உன் கர்வத்தைக் கலங்கடிப்பான். நீ நினைப்பதும், செய்வதும் அனைத்தும் நகைப்பிற்குரியனவாகும். உன்னுடைய ஆயுதங்களைக் கொண்டு கிருஷ்ணனின் வலிமைமிக்க வில்லையும், வாளையும் அழிக்க இயலாது. உன்னை நீயே நகைப்பிற்குரியவனாக்கிக் கொள்கிறாய்” {என்றார் நாரதர்}”.(22,23) 

துவாரகையைத் தாக்கிய பௌண்டரகன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 68-(பௌண்ட்ரகஸ்ய த்வாரகாவரோதம்)கிருஷ்ணனிடம் செய்தியைச் சொன்ன நாரதர்; துவாரகையை நோக்கிப் படையெடுத்து வந்த பௌண்டரகன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “மன்னா, பௌண்டரகன் தன் பலத்தின் மீது கொண்ட செருக்கில் மிதந்து கொண்டிருந்தான். அந்தச் சபையில் அவன் விப்ரர்களில் சிறந்த நாரத முனிவரிடம் கோபத்துடன் பின்வரும் சொற்களை மறுமொழியாகக் கூறினான்:(1) “முனியே, நீர் என்ன சொல்கிறீர்? நான் மன்னன், என்னைச் சுற்றிலும் எண்ணற்ற துவிஜர்கள் சூழ்ந்திருந்தாலும், அடுத்தவரைச் சபிப்பதில் நீர் மகிழ்ச்சி அடைகிறீர். உம்மை அதிருப்தியடையச் செய்ய அஞ்சுகிறேன் என்பதால் நீர் விரும்பியவாறு எங்கு வேண்டுமானாலும் செல்வீராக” {என்றான் பௌண்டரகன்}.

பௌண்டரகன் இதைச் சொன்னதும், காற்றின் வழியில் பயணிப்பவரான நாரத முனிவர், கிருஷ்ணன் இருக்கும் இடத்திற்குச் சென்றார். நாரதர் சொன்னதைக் கேட்ட கிருஷ்ணன், “துவிஜர்களில் சிறந்தவரே, அவன் முற்றான நிறைவுடன் முழுமூடனாகத் தற்புகழ்ச்சி செய்து கொள்ளட்டும். நாளை நான் அவனது செருக்கை அழிப்பேன்” என்றான்.(2-5)

பதரிகாசிரமப் புனிதத்தலத்தில் அமர்ந்திருந்த கிருஷ்ணன், இதைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தான். அதேவேளையில் வலிமைமிக்கப் பௌண்டரகன், தன் பெரும்படையுடன் துவாரகை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான்.(6) அந்த மன்னனின் பெரிய படையில் ஆயிரக்கணக்கான குதிரைகளும், எண்ணற்ற யானைகளும், கோடிக்கணக்கான ஆயுதங்களைத் தரித்த படைவீரர்களும் இருந்தனர். மன்னன் பௌண்டரகன் வெற்றி அடையும் தீர்மானத்துடன் துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(7) அந்த மன்னனிடம் லட்சக்கணக்கான காலாட்படை வீரர்கள் இருந்தனர். ஏகலவ்யன் உள்ளிட்ட பிற மன்னர்களும் அவனை ஆதரித்தனர்.(8) அந்த மன்னனின் படையில் எட்டாயிரம் தேர்களும், பத்தாயிரம் யானைகளும், ஆயிரம் கோடி காலாட்படை வீரர்களும் இருந்தனர்.(9)

அந்த வீர மன்னன் {பௌண்டரகன்} தன் படைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த போது, உதயகிரியின் மேலிருக்கும் சூரியனைப் போலவே தோன்றினான்.(10) அவன் நடுராத்திரியில் துவாரகாபுரியைத் தாக்க நினைத்தான். அந்த நள்ளிரவில் ஒளியூட்டுவதற்காகக் காலாட்படை வீரர்கள் தீப்பந்தங்களை ஏந்திச் சென்றனர்.(11) இவ்வாறு அந்தப் பௌண்டரகன், ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, கோட்டைகளால் நன்கு பாதுகாக்கப்பட்ட துவாரகையை நோக்கி முன்னேறினான்.(12)

மன்னா {ஜனமேஜயா}, பௌண்டரக மன்னன், கையில் தீப்பந்தத்துடன், ஈட்டிகள், வாள்கள், கதாயுதங்கள், பரிகங்கள், தோமரங்கள், சக்திகள், கணைகள், திரிசூலங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதங்கள் நிரப்பப்பட்ட தேரில் துவாரகையை நோக்கிச் சென்றான். கொடிகள் பலவும், கிங்கிணி மணிகளும் அந்தத் தேருக்கு மேலும் அழகூட்டின. விற்களும், கதாயுதங்களும் அதனதனுக்குரிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. சூரியனையோ, அக்னியையோ போன்று பிரகாசமிக்க அந்தப் பெருந்தேரானது, அண்ட அழிவின் போது முழங்கும் மேகங்களைப் போலவோ, பெரும் பேரிகைகளைப் போலவோ செல்லுமிடமெல்லாம் பேரொலியை எழுப்பிக் கொண்டிருந்தது.(13-16)

பெரும் செல்வாக்குடன் இருந்த மன்னன் பௌண்டரகன், ஜகத்பதியான கிருஷ்ணனையும், அவனை ஆதரிக்கும் விருஷ்ணி குல வீரர்கள் பலரையும் கொல்ல நினைத்தான். அவன் நகரத்தின் வாசலை அடைந்த போது, உறுதிமிக்க மன்னர்கள் பலர் அவனுக்குத் துணையாக இருந்தனர். அங்கேயே அவன் தன் படைமுகாமை அமைத்தான். பிறகு அவன் {பௌண்டரகன்} தன் அமைச்சர்களிடம் பின்வருமாறு பேசினான்:(17,18) “போர் பேரிகைகளை முழக்குவீராக. “யாதவர்களே, எங்கள் மன்னனுக்குரிய கப்பத்தைக் கட்டுவீராக, அல்லது நகரத்தை விட்டு வெளியே வந்து எங்களுடன் போரிடுவீராக. கிருஷ்ணனைப் புகலிடமாகக் கொண்டிருக்கும் யாதவர்கள் அனைவரையும் கொல்லும் விருப்பத்தில் பெருஞ்சக்திவாய்ந்த பௌண்டரக மன்னன் இங்கே போரிட வந்திருக்கிறான்” என்று என் பெயரில் அறிவிப்பீராக” என்றான் {பௌண்டரகன}.(19,20)

இவ்வாறு பௌண்டரகனால் ஆணையிடப்பட்ட அமைச்சர்கள் தங்கள் முகாமை விட்டு வெளியேறி யாதவர்களில் சில ஒற்றர்களைச் சந்தித்தனர். அந்நேரத்தில் எங்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தீப்பந்தங்கள் தென்பட்டன. உண்மையில் அதற்குள் பகைவரிடையே மோதல்கள் வெடித்திருந்தன. தங்கள் ஆயுதங்களைக் கூர்த்தீட்டிய க்ஷத்திரிய மன்னர்கள், சிங்கங்களைப் போல முழங்கிக் கொண்டே, “விருஷ்ணி குல வீரர்கள் எங்கே? ஜகந்நாதன் எங்கே? பெரும் வீரனான சாத்யகி எங்கே? கிருதவர்மன் எங்கே? யாதவர்களின் மகுட ரத்தினமான பலராமன் எங்கே?” என்று கேட்டனர். பௌண்டரகனின் போர்வீரர்கள் கிருஷ்ணனின் வசிப்பிடமான துவாரகையை அணுகும் முன்பே தங்கள் ஆயுதங்களைப் பொழியத் தொடங்கினர்” {என்றார் வைசம்பாயனர்}.(21-25)

ஏகலவ்யன் அறைகூவல் | பவிஷ்ய பர்வம் பகுதி – 69-(யாதவாநாம் யுத்தோத்யோகம்)-யாதவர்களுக்கும், பௌண்டரப் படைகளுக்கும் இடையில் நடந்த போர்; ஏகலவ்யனின் வலிமை; சாத்யகியை அறைகூவியழைத்த ஏகலவ்யன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதேவேளையில் {துவாரகையின்} நகரவாயிலில் முகாமிட்டிருக்கும் பெரும்படையைக் குறித்து யாதவர்கள் அறிந்தனர்.{1} பிரளய காலத்தில் பொங்கும் கடலைப் போலத் தோன்றும் பகைவனின் படையை அவர்கள் கண்டனர்.{2} அப்போது அந்த யாதவர்கள் விரைவாகத் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டும், தீப்பந்தங்களை ஏற்றிக் கொண்டும் எதிர்த்தாக்குதலுக்கான ஆயத்தங்களைச் செய்தனர். சாத்யகி, பலராமன், கிருதவர்மன், நிசடன்,{3} நுண்ணறிவுமிக்க உத்தவர், வலிமைமிக்க உக்கிரசேனன் ஆகியோரும், யாதவப் போர்வீரர்கள் பிறரும் கவசங்களைப் பூண்டு கொண்டு பிற ஆயத்தங்களை ஏற்பாடு செய்தனர்.(1-4) அவர்கள் அனைவரும் வலிமைமிக்கவர்களாகவும், சாதனைகளுடன் கூடிய போர்வீரர்களாகவும், இரவு நேரப்போர் தந்திரங்களை நன்கறிந்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் தங்கள் வாள்களையும், பிற ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, பகைவருடன் போரிட ஆயத்தமாக இருந்தனர்.(5)

வலிமைமிக்க எண்ணற்ற யாதவர்கள், தங்கள் படையின் தேரோட்டிகள், குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை வீரர்களால் ஆதரிக்கப்பட்டவர்களாகவும், முழுமையாக ஆயுதந்தரித்தவர்களாகவும் போரிட ஒன்றுகூடினர்.(6) மனிதர்களில் சிறந்தவர்களும், மஹாத்மாக்களுமான அந்த யாதவர்கள், தங்கள் தீப்பந்தங்களை எடுத்துக் கொண்டு நகரத்தை விட்டு விரைந்து சென்றனர்.(7) அவர்கள் நகரத்தைவிட்டு வெளிவரும்போதே ஒருவருக்கொருவர், “பௌண்டரகன் எங்கே?” என்று கேட்டுக் கொண்டனர். எண்ணற்ற தீப்பந்தங்களால் மொத்த நகரமும் பிரகாசமாக ஒளியூட்டப்பட்டது.(8) அஃது இரவாக இருந்தாலும் கிட்டத்தட்ட பகலைப் போலவே பிரகாசமாக இருந்தது. அதன் பிறகு விருஷ்ணி குலத்தவருக்கும், அவர்களின் பகைவருக்கும் இடையில் போர் உண்டானது.(9)

அந்தப் போர் மிகக் கடுமையானதாகவும், அனைவருக்கும் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது. குதிரை வீரர்கள், குதிரைவீரர்களுடனும், யானை வீரர்கள், யானை வீரர்களுடனும் மோதினர், தேர்கள் தேர்களோடு மோதின. இவ்வாறே அந்தப் போர் தொடர்ந்து கொண்டிருந்தது. இரு படைகளும் கலந்து குழப்பமடைவதற்கு முன்னர் வாள்வீரர்கள் வாள்வீரர்களுடனும், கதாயுத வீரர்கள் பகைவரின் படையைச் சார்ந்த கதாயுத வீரர்களுடனும் போரிட்டனர். இரு தரப்பிலும் இருந்த போர்வீரர்களின் கூச்சல்களும், அறைகூவல்களும் பிரளய காலத்தில் பொங்கும் கடலுக்கு ஒப்பான ஒலியுடன் இருந்தது.(10-12)

பகைப்படைப் போர்வீரர்கள், தங்கள் ஆயுதங்களால் பயங்கரக் காயங்களை ஏற்படுத்தியவாறே ஒருவரோடொருவர் போர் புரிந்தனர். திசைகள் எங்கும், “பெரும் வாளைத் தாங்கிய இவன் எவ்வாறு தரையில் விழுந்து கிடக்கிறான் பார்”, “என்னுடைய வலிமைமிக்கக் கூரிய கணைகளைப் பார்”, “கதாயுதத்தைச் சுழற்றும் இந்த வலிமைமிக்கப் போர்வீரனைப் பார்” என்ற ஒலிகள் கேட்டுக் கொண்டிருந்தன.(13,14) கவசம் தரித்தவர்களும், பாதுகாப்பைத் தரும் பிற கவசங்களையும் அணிந்து கொண்டு அங்கேயும் இங்கேயும் திரிபவர்களும், விற்கள், கணைகள், கதாயுதங்கள், ஈட்டிகள் ஆகியவற்றுடன் கூடியவர்களுமான வலிமைமிக்கப் போர்வீரர்களால் அந்தப் போர்க்களம் நிறைந்திருந்தது.(15) சூலங்களைச் சுழற்றிக் கொண்டு ஓடும் போர்வீரர்கள் அனைத்துத் திசைகளிலும் தென்பட்டனர். தந்தங்களையே ஆயுதங்களாகக் கொண்ட எண்ணற்ற யானைகள் பிளிறிக் கொண்டே அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தன.(16)

வேகமாகச் செல்லக்கூடிய போர்வீரர்கள் சிலர், காற்றைப் போல நகர்ந்து சென்றதால், ஒரே நேரத்தில் பல இடங்களில் போரிடுபவர்களைப் போலத் தோற்றமளித்தனர்.(17) படைவீரர்கள் பலர் தங்கள் பகைவரின் சூலங்களைத் தங்கள் சூலங்கள், கதாயுதங்கள், பரிகங்கள், தோமரங்கள் ஆகியவற்றால் முறித்தனர்.(18) மன்னா, இவ்வாறே அந்தப் போர் உக்கிரமாகத் தொடர்ந்தது. திடீரெனப் போர்க்களத்தில் ஒரு கலவரம் ஏற்பட்டது.(19) எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கான பெரும் விலங்குகள் கதறிக் கொண்டும், அலறிக் கொண்டும் போர்க்களத்திற்குள் நுழைந்தன. சங்கு முழக்கங்களுடன் சேர்ந்த இவ்வொலிகள் பொறுத்துக் கொள்ளமுடியாதவையாகின.(20)

நடுராத்திரியில் அந்தப் பெரும்போருக்கான ஒரு முடிவு ஏற்படப்போவதாகத் தெரியவில்லை. விருஷ்ணி குலத்தவரும், அவர்களின் பகைவருக்கும் இடையில் மங்காத உற்சாகத்துடன் போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது, போர்க்களத்தில் உண்டான ஒலிகள் செவிடாக்குபவையாக இருந்தன. கணக்கிலடங்கா சடலங்கள் தரையில் சிதறிக் கிடந்தன. உண்மையில், வலிமைமிக்கப் போர்வீரர்கள் பலர் தங்கள் பகைவருடன் சேர்ந்து, கேசம் கலைந்தவர்களாகத் தரையில் விழுந்து கிடந்தனர். படைவீரர்கள் பலர் தங்கள் கவசங்கள் சிதறடிக்கப்பட்டுத் துண்டுகளாக வெட்டப்பட்டுக் கிடந்தனர். போர்வீரர்கள் பலர் இவ்வாறு யமராஜனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டபோது, மரணத் தேவனின் பணிச்சுமை அதிகரிப்பதாகத் தெரிந்தது.(21-25)

பெரும் போர்வீரனும், வேடர்களான நிஷாதர்களின் தலைவனுமான ஏகலவ்யன், தன் ஆயிரக்கணக்கான கணைகளால் யாதவர்களைத் துன்புறுத்தியபடியே போர்க்களத்தில் இரண்டாம் யமராஜனைப் போலத் தோற்றமளித்தான். அந்தப் போரில் அவன் தன் கணைமாரியால் விருஷ்ணி குல க்ஷத்திரியர்கள் எண்ணற்றோரைக் கொன்றான்.(26-28) ஏகலவ்யன், தன்னுடைய அர்த்தச்சந்திரக் கணைகள் இருபத்தைந்தால் நிசடனையும், பத்தால் சாரணனையும், ஐந்தால் கிருதவர்மனையும், தொண்ணூறால் உக்கிரசேனனையும், ஏழால் வசுதேவரையும், பத்தால் உத்தவரையும், ஐந்தால் அக்ரூரரையும் துளைத்தான்.(29,30) இவ்வாறே ஏகலவ்யன் ஒருவர் பின் ஒருவராகக் கிட்டத்தட்ட யாதவப் போர்வீரர்கள் அனைவரையும் தன் கணைகளால் துளைத்தான்.

யாதவப் படையை விரட்டிய பிறகு ஏகலவ்யன் பின்வருமாறு அறைகூவல் செய்தான்:(31) “வலிமைமிக்க ஏகலவ்யன் நானே. கையில் கதாயுதத்துடன் கூடிய சாத்யகி இன்று என் கோபத்திலிருந்து எவ்வாறு தப்பப் போகிறான்?” {என்றான் ஏகலவ்யன்}.{32} இவ்வாறே யது குலத்தின் வீரப் போர்வீரர்கள் அனைவரையும் ஏகலவ்யன் அறைகூவியழைத்தான். அப்போது, சிங்கங்களே பீதியடையும் வகையில் அவன் கர்ஜனை செய்து கொண்டிருந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(32,33)

சாத்யகி | பவிஷ்ய பர்வம் பகுதி – 70-(ஸாத்யகிபௌண்ட்ரகயோ꞉ ஸம்வாதம்)-பௌண்டரகன் கட்டளை; யாதவர்களைக் காக்க வந்த சாத்யகி; பௌண்டரகன், சாத்யகி உரையாடல்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “மன்னா, யாதவப் படை வீரர்கள், தங்கள் பகைவர்களால் பெரிதும் துன்புறுத்தப்பட்டு, தங்கள் தீப்பந்தங்கள் அணைந்து போர்க்களத்தைவிட்டுத் தப்பி ஓடினர். இஃது அந்தப் படையின் தலைவர்களுக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. யாதவர்கள் தப்பிச் செல்வதைக் கண்ட பௌண்டரகன்: “அன்புக்குரிய கூட்டாளிகளே, விரைந்து சென்று நம் பகைவரின் நகரத்தைத் தரைமட்டமாக்குவீராக.(1-3) பூமியின் தலைவர்களே, கோடரிகள், கயிறுகள் என உங்கள் கைகளில் இருக்கும் எந்த ஆயுதத்தையும் எடுத்துக் கொண்டு நகரத்தைச் சூழ்வீராக.(4) முதலில் நகரத்தின் சுற்றுச் சுவர் மதில்களை உடைத்து, மாளிகைகள் அனைத்தையும் நொறுக்கி, யாதவர்களின் இளம்பெண்கள் அனைவரையும், அவர்களின் பணிப்பெண்களையும் கடத்திச் செல்வீராக.(5) மதிப்புமிக்க ரத்தினங்கள் அனைத்தையும், நீங்கள் காணும் செல்வம் எதனையும் அபகரித்துச் செல்வீராக” என்று ஆணையிட்டான்.

இதற்கு மறுமொழியாக மன்னர்கள் அனைவரும், “அவ்வாறே செய்கிறோம்” என்று சொல்லிவிட்டு, தங்கள் கோடரிகளால் சுற்றுச்சுவர் மதில்களையும், மாளிகைகளையும் நொறுக்கத் தொடங்கினர்.(6,7) அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் மதில்களின் மீது கற்பாறைகளை வீசியபோது பேராரவார ஒலி உண்டானது.(8) மன்னா, நகரத்தின் கிழக்குப்புறச் சுற்றுச் சுவர் கிட்டத்தட்ட முழுமையாகத் தகர்க்கப்பட்டது. மதில் நொறுங்கிவிழும் ஒலிகளைக் கேட்ட சாத்யகி பெருஞ்சீற்றம் அடைந்தான்.(9)

அவன் {சாத்யகி}, “யதுகுலத் தலைவன் கேசவன், நகரைப் பாதுகாக்கும் பொறுப்பை என் தோள்களில் சுமத்திவிட்டுச் சங்கரனைக் காண கைலாச மலைக்குச் சென்றிருக்கிறான். எனவே, நான் எவ்விலை கொடுத்தேனும் இப்போது நகரைப் பாதுகாக்க வேண்டும்” என்று நினைத்தான். இவ்வாறு நினைத்த சாத்யகி, தன் வில்லை எடுத்துக் கொண்டு, உறுதிமிக்கதும், நன்கு அலங்கரிக்கப்பட்டதும், தாருகனின் மகனால் செலுத்தப்பட்டதுமான தேரில் ஏறினான்.(10-12)

வலிமைமிக்கவனான சாத்யகி, கிருஷ்ணன் சொன்னவற்றை நினைத்துப் பார்த்து காதுகுண்டலங்களாலும், கைவளைகளாலும் தன்னை அலங்கரித்து, கவசம் பூண்டு, விற்கள், கதாயுதங்கள், வாள்கள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டான். பிறகு அவன், நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற பயங்கரமானதும், சிறந்ததுமான தன் வில்லையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு போருக்குப் புறப்பட்டான். சாத்யகி தன் வில்லின் நாண்கயிற்றைச் சுண்டி நாணொலி எழுப்பியது பகைவரின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்தியது.(13,14)

சாத்யகி விரைவாகத் தன் தேரில் ஏறிக் கொண்டு, தீப்பந்தங்களால் ஒளியூட்டப்பட்ட போர்க்களத்திற்குச் சென்றான். போரிடும் ஆவல் கொண்டவனும், கதாயுதம், வில், அம்பறாதூணிகள் ஆகியவற்றைக் கொண்டவனுமான தலைவன் பலராமன் அவனைப் பின்தொடர்ந்து சென்றான். சாத்யகியின் படையைச் சேர்ந்த போர்வீரர்கள், போர்க்களத்தை நோக்கிச் செல்லும்போதே சிங்கங்களைப் போலக் கர்ஜித்தனர்.(15,16) ஆலோசகர்களில் முதன்மையானவரும், வலிமைமிக்கவருமான உத்தவர், மதங்கொண்ட யானையின் மீது ஏறி, போர்வியூகங்களைச் சிந்தித்தபடியே போர்க்களத்தை நோக்கிச் சென்றார். விருஷ்ணி குல வீரர்கள் பலரும் பகைவருடன் போரிடும் ஆவலுடன் புறப்பட்டுச் சென்றனர்.(17,18)

பலமிக்கவனான கிருதவர்மனும், முன்னணி வீரர்கள் பிறரும், கிருஷ்ணன் சொன்னதை நினைவுக்கூர்ந்து தேர்களிலும், யானைகளிலும் ஏறி, தீப்பந்தங்களை ஏந்தி சங்கங்களைப் போலக் கர்ஜித்தபடியே போரிடப் புறப்பட்டுச் சென்றனர். யாதவப் போர்வீரர்களில் முதன்மையானோரான இவர்கள் அனைவரும், பகைவரை எதிர்க்கும் பேராவலில் நகரின் கிழக்கு வாயிலில் ஒன்று கூடினர். மன்னா {ஜனமேஜயா}, படைவீரர்களின் தீப்பந்தங்களால் திசைகள் அனைத்திலும் ஒளியூட்டப்பட்டிருந்த கிழக்கு வாயிலில் படை திரண்ட பிறகு, கவசம் பூண்டவனும், பல்வேறு வகையான ஆயுதங்களைக் கொண்டு சென்றவனுமான சாத்யகி உறுதிமிக்கத் தன் வில்லை எடுத்து, நாண்கயிற்றைக் காதுவரை இழுத்து, காற்றைப் போன்ற வேகம் கொண்ட தெய்வீகக் கணையொன்றை எதிரிகள் மீது ஏவினான்.(19-23)

இதன்விளைவாக ஒடுக்கப்பட்ட எதிரி வீரர்கள் வீழ்வதை உணர்ந்து தங்கள் தலைவனான பௌண்டரகனின் உறவிடம் தேடித் தப்பிச் சென்றனர்.(24) சாத்யகியின் கணை உண்டாக்கிய சூறாவளி, பகைவீரர்கள் தங்கள் தலைவனின் உதவியை நாடும் தேர்வு ஒன்றே இருக்கும் வகையில் அவர்களைச் சிதறடித்தது.(25) அதன்பிறகு, சினி குலத்தைச் சேர்ந்த சாத்யகி நகரின் கிழக்கு வாயிலில் நின்றபடியே மற்றொரு தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்துப் பின்வருமாறு பேசினான்:(26) “நுண்ணறிவுமிக்கப் பௌண்டரகனின் தலைமையிலான மன்னர்களில் முதன்மையானவர்களே, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நான் சாத்யகி. உங்கள் தலைவனுடன் போரிடும் ஆவலில் வில்லுடனும், கணைகளுடனும் நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன். அவனை நான் ஒரே முறை கண்டாலும், அவன் இறக்கும் வரையில் ஓயமாட்டேன். கேசவனின் பணியாளான நான் பௌண்டரகனைக் கொல்லவே இங்கே வந்திருக்கிறேன்.(27,28) கூடியிருக்கும் க்ஷத்திரியர்கள் அனைவரின் முன்னிலையிலும் இந்தப் பாவியின் தலையைக் கொய்து, நாய்களுக்கும், நரிகளுக்கும் அதை உணவாய் அளிப்பேன்.(29) நாங்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் நடு ராத்திரியில் இங்கே வருபவன் கள்வனல்லாமல் வேறு எவன்? பௌண்டரகன் ஒரு மன்னனல்ல அவன் கள்வன். அந்த இழிந்தவனுக்கு உண்மையில் துணிவிருந்தால் அவன் கள்வனைப் போலச் செயல்பட்டிருக்க மாட்டான்.(30,31) ஐயோ, மன்னனாக அழைக்கப்படும் கள்வன் போர்க்களத்தில் என் முகத்திற்கு நேரே ஏன் வரவில்லை? போரிடும் அறைகூவலை அவன் விடுத்திருந்தாலும் என் முன்னால் அவனைக் காணமுடியவில்லை” {என்றான் சாத்யகி}.(32)

சாத்யகி இதைச் சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தான். பிறகு அவன், ஒரு தெய்வீகக் கணையை நாண்கயிற்றில் பொருத்தி அதைக் காதுவரை இழுத்தான்.(33) சாத்யகியின் இந்தச் சொற்களைக் கேட்டதும் பௌண்டரகன், “கோழையான அந்தக் கிருஷ்ணன் எங்கே? பெண்களையும், விலங்குகளையும் கொல்லும் அந்தக் கிருஷ்ணன் எங்கே? பெண்களின் பணியேற்கும் என் பகைவன் எங்கே? என் பெயரைக் களவு செய்த அவன் எங்கே ஒளிந்திருக்கிறான்?(34,35) என்னுடைய நல்ல நண்பனும், மஹாத்மாவுமான நரகனை அவன் கொன்றான். அந்தப் பாவியைப் போரில் கொன்ற பிறகே என் கோபம் தணிவடையும்.(36) பலமிக்க வீரா, என்னுடன் போரிடத் தகாதவனான நீ விரும்பினால் வீட்டுக்குத் திரும்பிச் செல்லலாம். மாறாக நினைத்தால், முன்மாதிரியற்ற என் ஆற்றலைத் தனிப்பட்ட முறையில் உணர்ந்து கொள்ள ஒருக்கணம் காத்திருப்பாயாக.(37) வீழ்த்தப்பட முடியாத என் கணைகளால் நான் உன் சிரத்தை விரைவில் கொய்யப் போகிறேன். உன்னையும், உன் தொண்டர்கள் அனைவரையும் நான் போரில் கொன்ற பிறகு பூமி உன் குருதியைப் பருகுவாள்.(38) சாத்யகி கொல்லப்பட்டான் என்பதை அந்த இடையன் விரைவில் அறிவான். யது குலத்தில் முதன்மையானவனே, செருக்கில் மிதக்கும் அந்த இடையன் நீ கொல்லப்பட்டதும் தானாக வீழ்வான். மஹாத்மாவே, கைலாச மலைக்குப் புறப்படும் முன்னர் நகரைப் பாதுகாக்கும் பொறுப்பை அந்த இடையன் உனக்கு அளித்தான் என்று கேள்விப்பட்டோம். சாத்யகி, உனக்குத் துணிவும், உன் ஆற்றலில் நம்பிக்கையும் இருந்தால் வில்லையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு போருக்கு ஆயத்தமாவாயாக” {என்றான் பௌண்டரகன்}.

பௌண்டரகன் இதைச் சொல்லிவிட்டுப் போருக்கு ஆயத்தமாகும் வகையில் தன் வில்லையும், கணைகளையும் எடுத்துக் கொண்டான்.(39-41)

சாத்யகி பௌண்டரக யுத்தம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 71-(ஸாத்யகிபௌண்ட்ரகயோர்யுத்தம்)-பௌண்டரகனை நிந்தித்த சாத்யகி; பௌண்டரகனுக்கும் சாத்யகிக்கும் இடையில் நடைபெற்ற போர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “விருஷ்ணி குல வீரர்களில் முதன்மையான சாத்யகி, கிருஷ்ணனை நினைவுகூர்ந்து, கோபத்துடன் பின்வரும் சொற்களைச் சொன்னான்:(1) “பௌண்டரகா, மன்னர்களில் இழிந்தவனே, வஞ்சகனால் மட்டுமே நீ சொன்னது போல் வாசுதேவனை விமர்சிக்க முடியும். வாழ விரும்பும் எவன்தான் உன்னைப் போல அந்த ஜகத்பதியை நிந்திப்பான்?(2) நீ செய்வதைப் போலவே சொல்வதால் உன் மரணம் மிக அருகில் இருப்பதை உணர்கிறேன். உன்னைப் போன்ற மனிதனின் நாவை நூறு துண்டுகளாக வெட்ட வேண்டும்.(3) பௌண்டரகா, உன் தலையை உன் உடலில் இருந்து துண்டிப்பேன். உன் தலை உன் உடலில் இருக்கும் வரை வாசுதேவன் என்ற பெயரை நீ பயன்படுத்திக் கொள்ளலாம். விரைவில் இந்த உலகம் போலி வாசுதேவன் அற்றதாகும்.(4,5)

துராத்மாவே, நீக்கமற நிறைந்திருப்பவனும், அனைத்தின் பிறப்பிடமுமான ஜகந்நாதன் மட்டுமே வாசுதேவன் என்ற பெயருக்குத் தகுந்தவன். இதில் ஐயமேதுமில்லை.(6) மன்னர்களில் இழிந்தவனே, நான் இப்போது உன் தலையைக் கொய்யப் போகிறேன். அதுவரையோ, பகவானான கிருஷ்ணன் திரும்பி வரும் வரையோ போர்க்களத்தில் உன் ஆற்றலை வெளிப்படுத்துவாயாக. எஞ்சியிருக்கும் கொஞ்ச காலத்தைப் பயன்படுத்திக் கொள்வாயாக.(7,8) என்னுடைய வாள், கதாயுதம், வில், கணைகள் ஆகியவற்றைக் கொண்டு உன்னுடன் போரிடத் தயாராக இருக்கிறேன். நீ உன் ஆற்றலின் எல்லையைக் காட்டுவாயாக.(9) உண்மையில் எங்கள் நகரத்தில் உன் வரவு, போலி வாசுதேவனை அகற்றி வாழ்வை வெற்றிகரமானதாக்கும் வாய்ப்பை எனக்குத் தந்திருக்கிறது.(10) மன்னர்களில் இழிந்தவனே, நான் உன்னை எள்ளளவு சிறு துண்டுகளாக்கி நாய்களுக்குப் பரிமாறப் போகிறேன்” என்றான் {சாத்யகி}.

சாத்யகி, வாசுதேவன் என்று அழைத்துக் கொள்ளும் பௌண்டரக மன்னனிடம் இதைச் சொல்லிவிட்டு, நாண்கயிற்றில் கணையொன்றைப் பொருத்தித் தன் காது வரை இழுத்து எதிரியை நோக்கி ஏவினான். அந்தக் கணை பௌண்டரகனைத் துளைத்து ஆழமான காயத்தை உண்டாக்கியதால் அவனது கண்களில் இருந்தும் மற்ற அங்கங்களிலிருந்தும் குருதி பெருகியது. விரைவாக மீண்டு, சீற்றமடைந்த பௌண்டரகன், சிங்கம் போல் கர்ஜனை செய்து கொண்டே ஒன்பது, அல்லது பத்து கணைகளை ஏவி சாத்யகியைக் காயப்படுத்தினான்.(11-14) அந்தப் போலி வாசுதேவன், சாத்யகியின் நெற்றியில் காயத்தையும், தன் தொண்டர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும் உண்டாக்கி தன்னுடைய பயங்கரக் கணைமாரியைத் தொடர்ந்து பொழிந்து கொண்டிருந்தான். இதனால் பெரும் ஆளுமைகளில் சிறந்தவனும், விருஷ்ணி குல வீரர்களில் உறுதிமிக்கவனுமான அவன் {சாத்யகி}, தன் தேருக்குப் பின் சென்று மயக்கத்துடன் அமர்ந்தான்.(15-17)

அப்போது பௌண்டரக மன்னன் பத்துக் கணைகளை ஏவி சாத்யகியின் தேரோட்டியைக் காயப்படுத்தி, இருபத்தைந்து கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் காயப்படுத்தினான்.(18) பௌண்டரகனின் கடுந்தாக்குதலின் விளைவாக உண்மையில், அந்தத் தேரோட்டியும், குதிரைகளும், குருதியில் நனைந்து, மயக்கமடைந்தனர்.(19) மன்னா {ஜனமேஜயா}, தேரில் அமர்ந்திருந்த பௌண்டரகன் சிங்கம் போல் கர்ஜித்தான். அந்த ஆரவாரத்தைக் கேட்ட சாத்யகி மீண்டும் சுய நினைவை அடைந்தான்.(20) வலிமைமிக்கச் சாத்யகி, தன் தேரோட்டியும், குதிரைகளும் கடுங்காயம் அடைந்திருப்பதைக் கண்ட கோபத்தில் வெறி கொண்டவனானான்.(21)

அப்போது அவன் {சாத்யகி}, “இனி உன் ஆற்றலின் எல்லையைப் பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு, பௌண்டரகனின் மார்பைக் கணைகளால் துளைத்து அவனுக்குத் துன்பத்தை உண்டாக்கினான்.(22) மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கணைகளால் தைக்கப்பட்ட பௌண்டரகனின் மார்பில் இருந்து சூடான குருதி பாய்ந்ததால் அவனது உடல் திடீரெனத் துடித்தது. அவனுடைய மூச்சுப் பாம்பின் மூச்சு போல ஒலித்தது. சுய நினைவை இழந்த அவன், சூழ்நிலைகளைப் பொருட்படுத்தமால் தன் தேரில் அமர்ந்தான்.(23,24)

அப்போது சாத்யகி, பத்துக் கணைகளால் பௌண்டரகனின் தேரைத் துண்டுகளாக நொறுக்கினான். மேலும் அவன் தன் பல்லத்தைக் கொண்டு அவனது கொடிக்கம்பத்தையும் அறுத்தான்.(25) சாத்யகி, தொடர்ந்து கணைகளை ஏவி பௌண்டரகனின் குதிரைகளைக் காயப்படுத்தி அவனது தேரோட்டியையும் கொன்றான். பிறகே அவன், அந்தக் குதிரைகளைக் கொன்று பௌண்டரகனின் தேரை நொறுக்கினான்.(26,27) மன்னா, அவன் பத்துக் கணைகளால் பௌண்டரகனின் தேர்ச்சக்கரங்களைக் கடுகளவுள்ளவையாக வெட்டிவிட்டு உரக்கச் சிரித்து நின்றான்.(28)

விருஷ்ணி குலத்தின் வலிமைமிக்க வீரனான சாத்யகி, சிங்கத்தைப் போல முழங்கினான். க்ஷத்திரியர்கள் அனைவரும் பார்வையாளர்களாக நின்றிருந்தனர். பிறகு அவன் எழுபது கணைகளால் போலி வாசுதவேனின் முதுகையும், தலையையும், விலாப்புறங்களையும், மார்பையும் துளைத்தான். இவ்வாறு பௌண்டரகன் தன் மொத்த உடலும் கணைகளால் துளைக்கப்பட்டுப் போர்க்களத்தில் ஆதரவற்றவனாக நின்று கொண்டிருந்தான். ஓர் ஈகையாளன் வறுமையடைந்ததும் ஈகையேதும் செய்ய முடியாததைப் போலவே, தற்பெருமை செய்பவனும், கர்வம் கொண்டவனுமான பௌண்டரகன், மறுமொழியேதும் சொல்ல இயலாதவனாக அமைதியாக நின்றிருந்தான். சிறிது நேரம் கடந்ததும், பௌண்டரகன் அமைதி நிலைக்கு மீண்டு அர்த்தச்சந்திரக் கணையொன்றால் கோபத்துடன் சாத்யகியைத் துளைத்தான். சாத்யகி தன்னை நோக்கி விரைந்து வந்த போது அந்தப் போலி வாசுதேவன் அவனை ஏழு கணைகளால் துளைத்தான். இதற்குப் பதிலடியாகச் சாத்யகி ஏவிய சக்திமிக்க ஐந்து கணைகள் பௌண்டரகனின் வில்லை முறித்ததால் அவன் நிறைவுடன் உரத்த கர்ஜனை செய்தான்.(29-34)

பௌண்டரகன் தன் கதாயுதத்தை எடுத்து அதைச் சில முறை சுழற்றி சாத்யகியின் மார்பில் வீசினான்.(35) எனினும் அந்த யது குல வீரன் அந்தக் கதாயுதத்தைத் தன் இடது கையால் பிடித்துக் கொண்டான். இந்த அற்புதச் செயலைச் செய்த பிறகு அவன் பௌண்டரகனைத் தன் கணைகளால் மீண்டும் தாக்கினான்.(36) போலி வாசுதேவன் பத்து சக்தி ஆயுதங்களால் சாத்யகிக்குப் பதிலடி கொடுத்தான். இவ்வாறே போர் தொடர்ந்து கொண்டிருந்தது.(37) சாத்யகி இவ்வாறு சக்தி ஆயுதத்தால் தாக்குண்ட பிறகு, தன் வில்லை வைத்து விட்டு இன்னும் வலிமையான ஒன்றை எடுத்துக் கொண்டான். அதன் பிறகு அந்த முதன்மையான விருஷ்ணி குலப் போர்வீரன், பகைவரின் மத்தியில் பேரழிவை ஏற்படுத்தினான்” {என்றார் வைசம்பாயனர்}.(38)

வீரர்கள் அடைந்த ஆச்சரியம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 72-ஸாத்யகிபௌண்ட்ரகயோர்யுத்தம்)-பௌண்டரகனுக்கும் சாத்யகிக்கும் இடையில் நடைபெற்ற போர்; ஆச்சரியமடைந்த இருதரப்பு வீரர்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “மன்னா {ஜனமேஜயா}, அதன்பிறகு விருஷ்ணி குல நந்தனனான சாத்யகி கோபத்துடன் கதாயுதத்தை எடுத்து வீசி {பௌண்டரக} வாசுதேவனைப் பலமாகத் தாக்கினான்.(1) அதற்குப் பதிலடியாகப் போலி வாசுதேவனும் சாத்யகியைத் தன் கதாயுதத்தால் தாக்கினான். உறுதிமிக்கக் கதாயுதங்களைக் கொண்டிருந்த அந்த வீரர்கள் இருவரும் காட்டில் ஒன்றோடொன்று மோதும் செருக்குமிக்கச் சிங்கங்கள் இரண்டைப் போலத் தோன்றினர். சாத்யகி இடது புறத்தில் இருந்து போலி வாசுதேவனின் மார்பில் தாக்கினான். அதே வேளையில் வாசுதேவனும் வலதுபுறத்தில் இருந்து சாத்யகியைத் தாக்கியதால் இருவரும் தங்கள் பகைவரிடம் இருந்து பலமான அடிகளைப் பெற்றனர்.(2-4)

சாத்யகியின் வலுவான கதாயுதத்தால் தாக்கப்பட்ட வலிமைமிக்கப் பௌண்டரகன் முழங்காலிட்டு விழுந்தான். எனினும் அவன் எழுந்த பிறகு, தன் கதாயுதத்தால் சாத்யகியின் நெற்றியில் தாக்கினான். அதன்விளைவாகச் சாத்யகி கலக்கமடைந்தான். விரைவாக மீண்டெழுந்த சாத்யகி, தன் கதாயுதத்தால் பௌண்டர தேச மன்னனைத் தாக்கி பதிலடி கொடுத்தான்.(5,6)

மரணத் தூதன் போலத் தெரிந்த அந்தப் போலி வாசுதேவன், பெரும் பலம்வாய்ந்த போர்வீரனாகத் திகழ்ந்தான். அவன் சாத்யகியை சாம்பலாக எரித்துவிடுவதைப் போலப் பார்த்து தன் கதாயுதத்தால் அவனைத் தாக்கினான்.(7) சாத்யகி உயிரற்றவனைப் போல நனவிழந்து தரையில் விழும் வகையில் அந்த அடி பலமானதாக இருந்தது.(8) மன்னா, இருப்பினும் சாத்யகி ஒரு கணத்தில் குதித்தெழுந்து, பௌண்டரகன் வீசிய கதாயுதத்தைக் காற்றிலேயே பிடித்தான். இரும்பாலான அந்தப் பெரிய கதாயுதத்தைப் பெரும்பலத்துடன் முறித்து அதை வீசியெறிந்தான். வீரமிக்கச் சாத்யகி இந்த அற்புத சாதனையைச் செய்துவிட்டுச் சிங்கம் போல் முழங்கினான்.(9,10)

கதாயுதத்தை இழந்த போலி வாசுதேவன், இடது கையால் சாத்யகியைப் பிடித்துத் தன்னுடைய வலது கையால் அவனது மார்பில் மீண்டும் மீண்டும் குத்தினான்.(11,12) விருஷ்ணி குலத்தின் சிறந்த வீரன் {சாத்யகி}, தன் கதாயுதத்தைப் போர்க்களத்தில் வீசியெறிந்துவிட்டு போலி வாசுதேவனைப் பலமாக அறைந்தான்.(13) போலி வாசுதேவன் சாத்யகியை அறைந்து பதிலடி கொடுத்தான். இவ்வாறு இருவரும் கடுமையான துவந்த யுத்தம் செய்தனர்.(14) மன்னா, இரு பகைவர்களும் ஒருவரையொருவர் முட்டிகளிலும், முஷ்டிகளிலும், கைகளிலும், தலையிலும் தாக்கிக் கொண்டனர். காட்டில் இரு பனை மரங்கள் மோதும்போது உண்டாகும் உரத்த ஒலிக்கு ஒப்பாகவே இந்தப் போராளிகள் இருவரும் மோதும்போதும் உண்டானது. கொண்டாடப்பட்ட போர்வீரர்களான பௌண்டரகனும், சாத்யகியும் அந்த நள்ளிரவில் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு மற்போர் அரங்கில் விளையாடும் புகழ்பெற்ற மல்லர்களைப் போலப் போரிட்டனர்.(15-18)

அந்தப் போரைப் பார்த்துக் கொண்டிருந்த உக்கிரசேனன் தரப்பு, பௌண்டரகன் தரப்புப் படை வீரர்கள் அனைவரும் சாத்யகி, போலி வாசுதேவனால் கொல்லப்படுவானா, போலி வாசுதேவன் சாத்யகியால் கொல்லப்படுவானா என்று நினைத்து ஆச்சரியப்பட்டனர். அவர்கள், “இந்தப் பெரும் வீரர்கள் இருவரும் இன்று ஒருவரையொருவர் கொன்று தெய்வீக உலகங்களை அடையப் போகிறார்கள், அல்லது களைத்துப் போகும் வரை தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கப் போகிறார்கள்” என்று நினைத்தனர்.(19-21)

பிறகு அவர்கள், “ஐயோ, இந்த வீரர்கள் இருவரின் பலமும், பொறுமையும் எவ்வளவு அற்புதமானவை? மொத்த உலகிலும் இவர்கள் இருவரும் நிச்சயம் பெரும் பலமிக்கவர்களே. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் கூட இவ்வளவு கோரமான யுத்தம் நடந்ததில்லை. இத்தகைய போர் இதற்கு முன்பு கேட்கப்பட்டதுமில்லை, காணப்பட்டதுமில்லை” என்றனர்.(22,23)

மொத்த வானமும் கரிய மேகங்களால் மறைக்கப்பட்ட அந்த நள்ளிரவில் இவ்வாறே இரு படைகளின் வீரர்களும் தாங்கள் கண்டு கொண்டிருந்த துவந்த யுத்தத்தைப் பற்றிப் பேசிக் கொண்டனர்.(24) அதன் பிறகு அந்தப் போர்வீரர்கள் இருவரும் தொடர்ந்து கொஞ்ச நேரம் போரிட்டுக் கொண்டிருந்தனர். சாத்யகி தன் முஷ்டியால் பௌண்டரகனை பத்து முறை தாக்கினான்.(25) பிறகு வலிமைமிக்கப் பௌண்டரகன் தன் முஷ்டியால் சாத்யகியை ஐந்து முறை தாக்கினான். அவர்கள் ஒருவரையொருவர் குத்திய ஒலிகள் மொத்த உலகையும் கலக்கமடையச் செய்தன. எங்கும் இந்த ஒலிகளைக் கேட்ட மக்கள் அதன் காரணத்தை அறிந்து ஆச்சரியமடைந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(26)

ஏகலவ்யனின் படை | பவிஷ்ய பர்வம் பகுதி – 73-(ஏலலவ்யஸைந்யவதம்)-ஏகலவ்யனுக்கும் பலராமனுக்கும் இடையில் நடந்த போர்; பலராமனால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான நிஷாதர்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதேவேளையில் வேடர்களின் மன்னனான {நிஷாதிபதியான} ஏகலவ்யன், தன் வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு கோபத்துடன் பலபத்ரனை {பலராமனை} எதிர்த்து வந்தான்.(1) அவன் பத்துக் கணைகளால் பலராமனைத் தாக்கிவிட்டு, க்ஷத்திரியர்கள் பிறர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மேலும் பத்துக் கணைகளால் அவனது வில்லையும் முறித்தான்.(2) அதற்குப் பதிலடியாக அந்த ஜகத்பதி {பலராமன்} ஏவிய பத்துக் கணைகள், ஏகலவ்யனின் தேரோட்டியைக் காயப்படுத்தியது. அடுத்ததாக அவன் ஏவிய முப்பது கணைகள் அந்தத் தேரின் பெரும்பகுதியை நொறுக்கியது.(3)

வலிமைமிக்க ஏகலவ்யன் பெரும் வில் ஒன்றை எடுத்துக் கொண்டு, பகைவரை அழிக்கும் வலிமைமிக்கக் கணையொன்றை அதன் நாண்கயிற்றில் பொருத்தினான். ஒப்பற்ற வலிமை கொண்ட பலராமன் இதைக் கண்டு மிதிபட்ட பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டபடியே பாம்புக் கணைகள் பத்தை விரைவாக ஏவி தன் பகைவனின் {ஏகலவ்யனின்} வில்லை முறித்தான்.(4-6) வில்லை இழந்த ஏகலவ்யன், ஒரு பயங்கர வாளை விரைவாக எடுத்துக் கொண்டு பலராமனை நோக்கி விரைந்து ஓடினான்.(7) பிரதாபவனும், போர்க்கலைத் திறன் கொண்டவர்களில் முதன்மையானவனுமான பலராமன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஐந்து கணைகளை ஏவி ஏகலவ்யனின் வாளை எள்ளளவு துண்டுகளாக நொறுக்கினான்.(8)

நிஷாதனின் {வேடன் ஹிரண்யதனுசின்} மகனான ஏகலவ்யன், இரும்பாலான மற்றொரு வாளை எடுத்துச் சுழற்றி பலராமனின் தேரோட்டி மீது வீசினான்.(9) எனினும் ஒப்பற்ற யதுகுல வழித்தோன்றல் {பலராமன்}, அந்த வாள் தன் தேரோட்டியை அடையும் முன்பே பத்துக் கணைகளால் அதைத் துண்டுகளாக்கினான்.(10)

அப்போது ஏகலவ்யன் சிறிய கிங்கிணி மணிகளால் அலங்கரிக்கப்பட்ட சக்தி ஆயுதத்தை இருப்புக்கு அழைத்து, பலராமன் மீது ஏவி சிங்கத்தைப் போல முழங்கினான்.(11) பலராமன், அந்தச் சக்தி ஆயுதம் தன்னை நெருங்கும்போதே அதைப் பற்றி, உடனே தன் பகைவனுடைய மார்பின் மீது அதை வீசித் தாக்கினான். உயிரற்றவனைப் போல ஏகலவ்யன் தரையில் மயங்கி விழும் அளவுக்கு அதன் தாக்குதல் வலிமைமிக்கதாக இருந்தது.(12-15)

மன்னா {ஜனமேஜயா}, ஏகலவ்யனின் படையில் நிஷாதர்கள் என்று அறியப்படும் வேடர்கள் எண்பத்தெட்டாயிரம் பேர் படைவீரர்களாக இருந்தனர்.(16) மன்னா, அவர்கள் நெருப்பை நோக்கிப் பாயும் விட்டில் பூச்சிகளைப் போலத் தங்கள் கதாயுதங்களையும், வாள்களையும், சூலங்களையும், விற்களையும், பரிகங்களையும், பராசங்களையும், தோமரங்களையும், கோடரிகளையும், ஈட்டிகளையும் எடுத்துக் கொண்டு, இரண்டாம் ராமச்சந்திரனைப் போலத் தெரிபவனும், யாதவர்களுக்கு மத்தியில் நிற்பவனுமான பலராமனை நோக்கி விரைந்து சென்றனர். அந்த நிஷாதர்கள் பலராமனை அணுகும்போதே அவன் மீது கணைமாரியைப் பொழிந்தபடி சென்றனர்.(17-20)

நெய்யூட்டப்பட்ட நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டிருந்த பலராமனைச் சிலர் தங்கள் கோடரிகளால் தாக்கினர், சிலர் தங்கள் கதாயுதங்களால் அடித்தனர், வேறு சிலர் தங்கள் ஈட்டிகளை அவன் மீது ஏவினர். இவ்வாறு அந்த நிஷாதர்கள் அனைவரும் தங்கள் பகைவனை {பலராமனை} அடுத்தடுத்துத் தாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது சீற்றமடைந்த பலராமன், தன் கலப்பையைப் பயன்படுத்தித் தன்னை நோக்கி நிஷாதர்களை இழுத்துத் தன் முசலத்தால் அவர்களைத் தாக்கினான்.

மன்னா, மலைப்பகுதிகளில் வசிப்பவர்களான அந்த ஆயிரக்கணக்கான நிஷாதர்களும் பலராமனின் முசலத்தால் தாக்கப்பட்டுப் போர்க்களத்தில் மாண்டு விழுந்தனர். பலராமன், அந்த நிஷாதர்கள் அனைவரையும் ஒரே கணத்தில் கொன்றுவிட்டு, சிங்கத்தைப் போல உரக்க கர்ஜித்தான்.

பிணந்தின்னும் பிசாசுகள் எண்ணற்றவை அவ்விரவில் போர்க்களத்தில் வந்து சடலங்களை உண்டன. அவை, இறந்து போன போர்வீரர்களின் மார்பில் இருந்து குருதியைப் பருகி, உண்பதற்காக அவர்களின் உடல்களைத் துண்டுகளாக அறுத்தன” {என்றார் வைசம்பாயனர்}.(21-25)

நால்வரின் கதாயுதப்போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 74-(பௌண்ட்ரகயுத்தம்)-ஏகலவ்யனுக்கும், பலராமனுக்கும் இடையிலும், பௌண்டரகனுக்கும், சாத்யகிக்கும் இடையிலும் நடந்த கதாயுதப் போர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அந்த இரவில் ஊனுண்ணும் பல வகை உயிரினங்கள் போர்க்களத்திற்கு வந்து பயங்கரமாகச் சிரித்தபடியே கொல்லப்பட்ட போர்வீரர்களின் சடலங்களை உண்டன.(1) பச்சை மாமிசம் உண்பவர்களும், சடலங்களில் இருந்து குருதியைப் பருகுபவர்களுமான பிசாசங்களும், ராட்சசர்களும் அங்கிருந்தனர்.(2) மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, காக்கைகள், பருந்துகள், கழுகுகள், வல்லூறுகள், நரிகள் உள்ளிட்ட ஊனுண்ணும் பலவகைப் பறவைகளும், விலங்குகளும் கூட அந்தப் போர்க்களத்திற்கு வந்து, கொல்லப்பட்ட போர்வீரர்களையும், தேரோட்டிகளையும் உண்டு மகிழ்ந்தன. அந்தப் பெரும் விழாவில் அவை பிசாசங்களுடனும், ராட்சசர்களுடனும் சேர்ந்து மெய்மறந்து கூத்தாடின.

போர் தொடர்ந்து கொண்டிருந்த அதே வேளையில், ஏகலவ்யன் நினைவு மீண்டான். அவன் தன் படை வீரர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு பெருஞ்சீற்றம் அடைந்து, தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு பலராமனை நோக்கி ஓடினான்.(3-5) மன்னா, அந்த ஏகலவ்யன் தன் கதாயுதத்தைக் கொண்டு பலராமனின் தோள்களைத் தாக்கினான். அதற்குப் பதிலடியாக, கதாயுதம் தரித்திருந்தவனும், ஆற்றல் செருக்கில் மிதந்து கொண்டிருந்தவனுமான பலராமன், பாவம் நிறைந்த அந்த நிஷத மன்னனை {ஏகலவ்யனை} பலமாகத் தாக்கினான்.

அதன்பிறகு ஏகலவ்யனுக்கும், பலராமனுக்கும் இடையில் பயங்கரமான கதாயுதப்போர் தொடங்கியது. அவர்கள் சீற்றத்துடன் மோதிக் கொண்ட போது, கதாயுதங்கள் மோதும் ஒலிகளால் வானம் நிறைந்திருந்தது.(6-8) அச்சத்தை ஏற்படுத்தும் அந்த ஒலிகள் அண்ட அழிவின் போது பொங்கும் கடலின் ஒலியை ஒத்திருந்தது. இதன் விளைவாகப் பாம்புகளின் மன்னன் அனந்த சேஷனும், திக்பாலர்களும் கலக்கமடைந்தனர்.(9) வானமெங்கும், நிலமெங்கும் அந்த ஆரவார ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.

அதே வேளையில் மன்னன் பௌண்டரகனுக்கும், சாத்யகிக்கும் இடையில் தொடர்ந்து வந்த போரில் அவர்கள் ஒருவரையொருவர் பலமாகத் தாக்கிக் கொண்டிருந்தனர்.(10,11) அந்தப் போரிலும் பயங்கர ஒலிகள் எழுந்தன. ஒருவரை ஒருவர் கொல்வதற்கு முயற்சி செய்த அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் நால்வர் ஏற்படுத்திய ஒலிகளால் மொத்த அண்டமும் உண்மையில் கலக்கமடைந்தது.

அந்தப் பயங்கர இரவானது, அடிவானில் சூரியன் எழுந்து நட்சத்திரங்கள் மறைந்து படிப்படியாக முடிவுக்கு வந்தது. சூரிய பகவான் உதித்ததும் இரவின் இருள் அகன்று சந்திரனின் ஆதிக்கம் குறுகியது. பகல் தொடங்கியதும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த நான்கு வீரர்களின் போர், பழங்காலத்தின் தேவாசுரப் போரை நினைவுப்படுத்தும் வகையில் உக்கிரமடைந்தது” என்றார் {வைசம்பாயனர்}.(12-15)

துவாரகை திரும்பிய கிருஷ்ணன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 75-(துவாரகாயாம் ப்ரத்யாகதஸ்ய ஸ்ரீகிருஷ்ணஸ்ய பௌண்ட்ரகேண ஸஹ யுத்தம்)-பதரிகாசிரமத்தில் இருந்து துவாரகைக்குத் திரும்பி வந்த கிருஷ்ணன்; பௌண்டரகனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த விவாதம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அந்த நாள் தொடங்கியதும் தேவகியின் மகனான பகவான் ஜகந்நாதன்பதரிகாசிரமத்தில் இருந்து துவாரகை திரும்பத் தீர்மானித்தான்.(1) மன்னா {ஜனமேஜயா}, முதலில் அவன் அங்கு வசித்திருந்த முனிவர்கள் அனைவரையும் வணங்கி விடை பெற்றுக் கொண்டு அதன் பிறகு கருடன் மீதேறி துவாரகைக்குப் புறப்பட்டான்.(2) மனிதர்களின் மன்னா, கிருஷ்ணன் துவாரகாபுரியை நெருங்கியபோது, அங்கே நடந்து கொண்டிருக்கும் போரினால் ஏற்படும் பெருங்கலவரத்தின் ஒலியைக் கேட்டான்.(3)

அதைக் கேட்ட கிருஷ்ணன், “இஃதென்ன கலவரம்? போர் ஏதும் நடக்கிறதா? என் அண்ணன் பலராமனின் குரலையும், சாத்யகியின் குரலையும் என்னால் கேட்க முடிகிறது.(4) பௌண்டரகன் துவாரகையைத் தாக்கியிருக்கக் கூடும். தீய மனம் கொண்ட அந்த மன்னனுடன் யாதவர்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். போர் நடப்பதே இந்தக் கலவரத்திற்கான காரணம் என்பது திண்ணம்” என்று நினைத்தான்.(5,6)

இவ்வாறு நினைத்துக் கொண்டிருந்த ஹரி, தன் பாஞ்சஜன்ய சங்கை உரக்க முழக்கி விருஷ்ணி குல வீரர்களை நிறைவடையச் செய்தான்.(7) கேசவனின் சங்கு முழக்கம் வானத்தையும், பூமியையும் நிறைத்தது. ஆழ்நிலை ஒலி அதிர்வைக் கேட்ட யாதவர்களும், விருஷ்ணிகளும் தங்களுக்குள் பேசிக் கொள்ளத் தொடங்கினர்: “கிருஷ்ணன் வந்திருக்கலாம். இவ்வொலி அவனுடைய பாஞ்சஜன்ய சங்கின் ஒலிதான்” {என்றனர்}. மன்னா {ஜனமேஜயா}, யாதவர்களும், விருஷ்ணிகளும் கிருஷ்ணன் வந்துவிட்டதை உணர்ந்து அச்சமற்றவர்களானார்கள். பிறகு அவர்கள் திடீரெனக் கருடனையும், தேவகியின் மகனான கிருஷ்ணனையும் கண்டனர். செய்தி பரவியதும் சூதர்களும், மாகதர்களும் அங்கே வந்தனர்.(8-11) நீக்கமற நிறைந்திருக்கும் அண்டத்தின் தலைவனும், ஈசுவரனும், தாமரைக் கண்களைக் கொண்டவனுமான ஜனார்த்தனனை நோக்கி விரைந்து சென்ற யாதவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(12)

யதுவின் மிகச்சிறந்த வழித்தோன்றலான கிருஷ்ணன், கருடனின் முதுகில் இருந்து இறங்கி, அவனிடம் {கருடனிடம்}, “நீ தேவலோகம் திரும்பலாம்” என்றான். அவன், கருடனை அனுப்பிவிட்டுத் தாருகனிடம், “என் தேரைக் கொண்டு வருவாயாக” என்றான். தாருகன், “ஆணை” என்று மறுமொழி கூறிவிட்டு ஒரே கணத்தில் கிருஷ்ணனின் முன்னிலையில் தேரைக் கொண்டு வந்து, “இதோ உன் தேர். இனி நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்டான். தாருகன் இதைச்சொல்லி வணங்கிவிட்டு கைகளைக் கூப்பியபடியே அந்தத் தலைவனின் முன்னிலையில் நின்றான்.(13-15)

கருடன் சென்றதும் கிருஷ்ணன் தன் தேரில் ஏறி போர்க்களத்தை நோக்கிச் சென்றான்.(16) மன்னா, போர்க்களத்தை நெருங்கிய போது அந்தத் தலைவன் கிருஷ்ணன், தன் பாஞ்சஜன்ய சங்கை முழக்கி, கூடியிருக்கும் போர் வீரர்களுக்குத் தன் வரவை அறிவித்தான்.(17)

போரில் அதியாவல் கொண்ட கிருஷ்ணன் எவ்வாறு போர்க்களத்திற்கு வந்தான் என்பதைக் கண்ட பௌண்டரகன், சாத்யகியுடனான போரில் இருந்து விலகி இவனை {கிருஷ்ணனை} எதிர்க்கத் திரும்பினான்.(18) மன்னா {ஜனமேஜயா}, பௌண்டரகன் புறப்படுவதைக் கண்ட சாத்யகி அவனைத் தடுக்க முயலும் வகையில், “மன்னா, போரை விட்டு விலகாதே. இது முறையான நெறியல்ல.(19) முதலில் நீ என்னை வீழ்த்த வேண்டும். அதன் பிறகே பிறருடன் போரிட நீ செல்ல முடியும். நீ ஒரு க்ஷத்திரியன். போருக்கான ஆவலுடன் நான் நீடிக்கும் வரையில் நீ என்னையே எதிர்க்க வேண்டும். இந்தப் போர்க்களத்தில் நான் உன் செருக்கை எவ்வாறு நொறுக்கப் போகிறேன் என்பதைப் பார்” என்றான். சினியின் பேரனான சாத்யகி இதைச் சொல்லிவிட்டு, பௌண்டரகனின் வழியை அடைத்துக் கொண்டு அவனது முன்னிலையில் நின்றான். அப்போதும் பௌண்டரகன் சாத்யகியைப் புறக்கணித்துவிட்டுக் கிருஷ்ணனை நோக்கியே சென்றான்.(20-22)

கிருஷ்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சாத்யகி தன் கதாயுதத்தால் மீண்டும் பௌண்டரகனைத் தாக்கினான்.(23) பௌண்டரகனுடனான போரில் சாத்யகி தன் கதாயுதத்தைப் பெருந்திறனுடன் தரித்திருப்பதைக் கண்ட கிருஷ்ணன், பெரும் நிறைவடைந்தவனாக அவனைப் பெரிதும் புகழ்ந்தான்.(24) சிறிது நேரம் கடந்ததும் கிருஷ்ணன், சாத்யகியைப் போரில் இருந்து விலகச் செய்யும் வகையில், “அவன் விரும்பியதனைத்தையும் செய்யட்டும். விடுவாயாக” என்றான். வலிமைமிக்கச் சாத்யகி அப்போதுதான் போரில் இருந்து விலகினான்.(25)

அதன்பிறகு மன்னன் பௌண்டரகன், தலைவன் கிருஷ்ணனிடம், “யாதவா, இடையா, எங்கே சென்றிருந்தாய்?(26) கிருஷ்ணா, உன்னுடன் போரிட விரும்பியே நான் இங்கே வந்தேன். பெரும்படையைக் கொண்டிருக்கும் நானே கொண்டாடப்படும் உண்மையான வாசுதேவன். என் படையின் துணையுடன் உன்னைக் கொன்று இவ்வுலகில் சச்சரவுக்கிடமில்லாமல் வாசுதேவனாக இருப்பேன். கோவிந்தா, நீ சக்கரபாணியெனப் புகழ்பெற்றிருந்தாலும் அந்தச் சக்கரம் என் சக்கரத்தால் இப்போது அழிவடையப் போகிறது. மாதவா, “சக்கரத்தைக் கொண்டிருப்பதால் நான் வெல்லப்பட முடியாதவன்” என்ற உன் செருக்கை இனி நீ விடுவாயாக. இன்று க்ஷத்திரியர்கள் அனைவரின் முன்னிலையிலும் நான் உன்னுடைய நன்மதிப்பை அழிப்பேன். ஜனார்த்தனா, உண்மையான சாரங்கபாணியாக என்னை அறிவாயாக. நீயோ ஒரு போலி. சங்கு, சக்கரக் கதாதாரியாக என்னை அறிந்து உன் மாயச் செருக்கைக் கைவிடுவாயாக.(27-31)

உலகின் கல்விமான்களும், செல்வந்தர்கள் அனைவரும் என்னையே சங்கு, சக்கர, கதாதாரியெனக் குறிப்பிடுவார்கள். கடந்த காலத்தில் கம்சனின் மூத்த சேவகர்களையும், {பூதனை போன்ற} சில பெண்களையும், சில குழந்தைகளையும் {கம்சனால் கொல்லப்பட்ட தேவகியின் ஆறு மகன்களையும்}, சில மாடுகளையும் நீ கொன்றிருக்கிறாய். இதற்கே நீ உன் பலத்தில் செருக்கடைந்தாய். நீ என் எதிரில் நின்றால் நான் இன்று உன் செருக்கை அழிப்பேன்.(32,33) கோவிந்தா, நீ போரிட விரும்பினால் உன் ஆயுதங்களை எடுத்துக் கொள்வாயாக” என்றான். பௌண்டரகன் இதைச் சொல்லிவிட்டு தன் வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு கிருஷ்ணனின் முன்னிலையில் நின்றான்.(34)

கிருஷ்ணன், அந்தப் போலி வாசுதேவனின் சொற்களைக் கேட்டுச் சிரித்துவிட்டு, “மன்னா, விரும்பியதேதும் நீ பேசலாம். பசுக்களையும், குழந்தைகள், மற்றும் பெண்களையும் கொன்றவன் என என்னை நீ பழிக்கலாம்.(35,36) மன்னா, நீ உன் சக்கரத்தையும், கதாயுதத்தையும் போலச் சாரங்க வில்லையும் சுதந்திரமாகக் காட்டலாம். நீ விரும்பினால் உன்னை நீ வாசுதேவன் என்றும் அழைத்துக் கொள்ளலாம்.(37) நீ விரும்பினால் என் சங்கு, சக்கரம், கதாயுதத்தைத் தரிப்பவன் என்றும் உன்னை நீ குறிப்பிட்டுக் கொள்ளலாம். எனினும், நீ கேட்க விரும்பினால் நான் உனக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.(38)

பிரபுவே, இவ்வுலகில் நான் இருக்கும்போதே உன்னை என் பெயரால் அழைக்கும் க்ஷத்திரியர்கள் பலர் இருக்கின்றனர்.(39) என் சக்கரம் எல்லையற்ற சக்தியுடன் மஹாகோரமாக அசுரர்களை வதைக்கக் கூடியது. உன் சக்கரம் வடிவத்தில் என்னுடையதைப் போல இருந்தாலும் ஆற்றலில் வேறானது. உன் ஆயுதங்கள் பெயரால் மட்டுமே என்னுடையவை போன்றிருந்தாலும் பலத்தால் அவ்வாறில்லை.(40) மன்னா, உயிரினங்கள் அனைத்தின் உயிரையும் பாதுகாக்கும் இடையன் நான். நல்லோரைக் காத்து, அல்லோரைத் தண்டிப்பவனும் நான்.(41) மன்னர்களில் இழிந்தவனே, உன் பகைவரை வென்ற பிறகு நீ கொக்கரிக்கலாம். கையில் ஆயுதங்களுடன் நான் உன் முன்னிலையில் நிற்கும்போது என்னை வீழ்த்தாமலேயே உன்னால் எவ்வாறு கொக்கரிக்க முடிகிறது?(42) பௌண்டரகா, உனக்குச் சக்தி இருந்தால் என்னைக் கொல்வாயாக. அந்த வீரச் சாதனையைச் செய்த பிறகு உன் இதயம் நிறைவடையுமட்டும் தற்புகழ்ச்சி செய்து கொள்வாயாக. எனினும் இப்போது நான் கையில் வில், கதை, வாள், சக்கரம் ஆகியவற்றுடன் உன் முன்னிலையில் என் தேரில் அமர்ந்திருக்கிறேன்.(43) வேத நெறிகளை நோற்பவனே, தேரில் ஏறி போரிட ஆயத்தமாவாயாக” என்றான் {கிருஷ்ணன்}. இதைச் சொல்லிவிட்டுச் சிங்கத்தைப் போலக் கிருஷ்ணன் முழங்கினான்” என்றார் {வைசம்பாயனர்}.(44)

பௌண்டரகன் வதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 76-(பௌண்ட்ரகவதம்)பௌண்டரகனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த போர்; பௌண்டரகன் கொல்லப்பட்டது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “பரம்பொருளான வாசுதேவன் தன் வில்லை எடுத்துக் கணைகளைப் பொருத்தி அவற்றைப் பௌண்டரகன் மீது ஏவத் தொடங்கினான்.(1) பௌண்டரகன் தன் பங்குக்குப் பத்துக் கணைகளை ஏவி கிருஷ்ணன் மீது எதிர்த் தாக்குதல் தொடுத்தான்.(2) பிறகு அந்தப் போலி வாசுதேவன் தாருகன் மீது இருபத்தைந்து கணைகளையும், குதிரைகள் மீது பத்தையும், யதுவின் சிறந்த வழித்தோன்றலான கிருஷ்ணன் மீது எழுபது கணைகளையும் தொடுத்தான்.(3)

கேசிசூதனனான {கேசியைக் கொன்றவனான} கேசவன், “பௌண்டரகன் பேராணவம் கொண்டவனாக இருக்கிறானே” என்று நினைத்து மெல்லச் சிரித்தான்.(4) கொண்டாடப்படும் சாரங்க வில்லைத் தரித்தவனான அந்தக் கேசவன், கணைகளாலான ஓடையைப் பொழிந்து பௌண்டரகனின் கொடியை அறுத்தான்.(5) பிறகு அவன் பௌண்டரகனுடைய தேரோட்டியின் தலையைக் கொய்து, மேலும் நான்கு கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் கொன்றான். அவன் பௌண்டரகனின் மெய்க்காவலர்களைக் கொன்று தேரை நொறுக்கி, தன் சக்கரத்தால் தேரின் சக்கரத்தை எள்ளளவு துண்டுகளாக்கினான். இவ்வளவையும் செய்துவிட்டுத் தாக்குதலை நிறுத்திப் புன்னகைத்தான்.(6,7)

போலி வாசுதேவனான பௌண்டரகன், தன் வாளை எடுத்துக் கொண்டு நொறுங்கிய தேரில் இருந்து கீழே குதித்துத் தரையில் நின்றபடியே அதை {அந்த வாளைக்} கேசவன் மீது வீசினான்.(8) கேசவன், தன் தேரில் அமைதியாக அமர்ந்திருந்தபடியே அந்த வாளை நூறு துண்டுகளாக்கினான். வலிமைமிக்கப் பௌண்டரகன் ஒரு பரிகத்தை எடுத்துக் கொண்டு, பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த க்ஷத்திரியர்கள் அனைவரின் முன்னிலையில் அதைக் கிருஷ்ணன் மீது வீசினான்.(9,10) மன்னா {ஜனமேஜயா}, ஜகந்நாதன் அலட்டிக் கொள்ளாமல் அந்தப் பரிகத்தைப் பாதியாக முறித்தான். பகைவரைக் கொல்பவனான மன்னன் பௌண்டரகன், அடுத்ததாக ஆயிரம் ஆரங்களைக் கொண்டதும், முப்பது பாரங்கள்[1] எடை கொண்டதும், பிரகாசமிக்கதுமான ஓர் இரும்புச் சக்கரத்தை இருப்புக்கு அழைத்தான். பிறகு அவன் கிருஷ்ணனிடம் பின்வருமாறு பேசினான்.(11,12)பௌண்டரகன், “கோவிந்தா, கர்விகளில் முதன்மையானவனே, உன் சக்கரத்தை அழிக்கக்கூடியதும், பீதியை ஏற்படுத்துவதுமான என் சக்கரத்தைப் பார். விருஷ்ணியின் வழித்தோன்றலே, இப்போது உன் செருக்கை நான் தகர்க்கப் போகிறேன். வெல்லப்பட முடியாத இந்தச் சக்கரத்தை உனக்காவே நான் வரவழைத்தேன். உனக்கு ஆற்றலிருந்தால் என் முயற்சியை வீணடிப்பாயாக” என்றான்.

பெரும்பலவானும், செல்வாக்குள்ள மன்னனுமான பௌண்டரகன் இதைச் சொல்லிவிட்டுத் தன் சக்கரத்தை ஓராயிரம் முறை சுழற்றிக் கிருஷ்ணன் மீது ஏவினான். பலவான்களில் உயர்ந்தவனான கிருஷ்ணன், அந்தச் சக்கரம் காயத்தை ஏற்படுத்தாமல் தன்னைக் கடந்து செல்லும் வகையில், தன் தேரில் இருந்து விரைவாக இறங்கி சிங்கம் போலக் கர்ஜித்தான். முதலில் கிருஷ்ணன், அவனது துணிவையும், வீரத்தையும் கண்டு ஆச்சரியமடைந்து, “ஐயோ, பௌண்டரகனின் உள்ளச் சமநிலையும், பொறையும் {நீடித்து நிற்கும் திறனும்} எவ்வளவு அற்புதமானது” என்று நினைத்தான். இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கும்போதே அந்த ஜகந்நாதன் தன் அற்புதத் தேரில் இருந்து குதித்தான். முயற்சி வீணடிக்கப்பட்ட பௌண்டரகன், பெரும் பாறை ஒன்றை எடுத்துக் கிருஷ்ணன் மீது வீசினான். எனினும் அவன், சிந்தனைக்கு அப்பாற்பட்ட தன்னுடைய அசாத்திய ஆற்றலைப் பயன்படுத்தி அந்தப் பாறையைப் பௌண்டரகன் மீதே திருப்பிவிட்டான்.(13-19) இவ்வாறே அந்த ஹரி நீண்ட நேரம் பௌண்டரகனுடன் போரிட்டுக் கொண்டிருந்தான். இறுதியில் அவன், அசுரர்களின் குருதியைப் பருகும் தன் சக்கரத்தை இருப்புக்கு அழைத்தான்.(20)

தங்கத்தலான அந்தச் சக்கரம், தைத்திய மாமிசத்தால் ஊட்டம் பெற்றதாகவும், அவர்களுடைய {தைத்தியர்களுடைய} மனைவிகளின் கர்ப்பங்களை அழிக்கக்கூடியதாகவும் இருந்தது. சில நேரங்களில் அந்தச் சக்கரம் ஆயிரம் ஆரங்களைக் கொண்டதாகவும், வேறு சில நேரங்களில் நூறாயிரம் {ஒரு லட்சம்} ஆரங்களைக் கொண்டதாகவும் தெரிந்தது. உயர்ந்ததும், செழுமையானதும், தேவர்களால் வழிபடப்படுவதுமான அந்தத் தெய்வீக ஆயுதம், தைத்தியர்களின் இதயங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.(21,22) பாவங்களில் இருந்து பக்தர்களைக் காப்பவனும், சாரங்கபாணியுமான விஷ்ணுவின் நித்தியப் பயன்பாட்டுக்குரிய அந்தச் சக்கரத்தால் அந்தக் கோவிந்தன் பௌண்டரகனைக் கொன்றான்.(23) இறைச்சியுண்ணும் அந்தச் சக்கரம், பௌண்டரகனின் உடலைத் துண்டித்துவிட்டுக் கிருஷ்ணனின் கைகளுக்குத் திரும்பியது.(24) அப்போது பௌண்டரகனின் உயிரற்ற உடல் போர்க்களத்தில் விழுந்தது. பிரதாபவானும், ஹரியுமான பகவான் விஷ்ணு, பொருள்முதல்வாதிகளுக்குப் புரியாத ஆழ்நிலை இயல்பைக் கொண்ட பௌண்டரகனை இவ்வாறு கொன்றுவிட்டு, யாதவர்கள் அனைவராலும் துதிக்கப்பட்டவனாகச் சுதர்மம் என்று அறியப்படும் தன் சபா மண்டபத்திற்குத் திரும்பிச் சென்றான்” என்றார் {வைசம்பாயனர்}.(25)

ஓடி ஒளிந்த ஏகலவ்யன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 77-(ஏகலவ்யநிர்யாணம்)-பலராமனிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் கடல் தாண்டி தனித்தீவில் ஓடி ஒளிந்த ஏகலவ்யன்; யாதவர்களின் சபையில் உரையாற்றிய கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதே வேளையில் போர்க்களத்தில் பலசாலிகளில் சிறந்த பலராமன், ஏகலவ்யனின் மார்பைத் தாக்கி சிங்கம்போலக் கர்ஜித்தான்.(1) அதற்குப் பதிலடியாக ஏகலவ்யனும், பலத்தின் செருக்கில் வெறிக் கொண்டிருந்த வலிமைமிக்கப் பலராமனின் மார்பைத் தன் கதாயுதத்தால் தாக்கினான்.(2) ஏகலவ்யனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட விருஷ்ணி குல பலராமன், அலட்சியமாகத் தன் இரு கைகளாலும் அதைப் பற்றி, அந்த நிஷாத மன்னன் {ஏகலவ்யன்} வெற்றியில் நம்பிக்கை அனைத்தையும் இழந்து, சீற்றமிக்கக் கடுஞ்சுறாக்களின் வசிப்பிடமான பெருங்கடலின் கரைக்குத் தப்பியோடும் வகையில் அவனைப் பலமாகத் தாக்கினான்.(3,4)

ஏகலவ்யன் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடும்போது, பலராமன் அவனைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றான். ஏகலவ்யன் உண்மையில் அஞ்சி எங்கு ஓடினாலும் அங்கெல்லாம் பலராமன் அவனை நெருங்கினான்.(5) மன்னா, இறுதியில் ஏகலவ்யன், பலராமனின் கோபத்தில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கடலுக்குள் புகுந்து, ஐந்து யோஜனைகள் நீந்திச் சென்றான்.(6) ஏகலவ்யன் வசிப்போரெவருமற்ற தீவொன்றை அடைந்து அங்கே வசித்து வந்தான். இவ்வாறே பலராமன் நிஷாதர்களின் மன்னனான ஏகலவ்யனை வென்றான்.(7)

அதன் பிறகு, அந்த ஹலாயுதன், எண்ணற்ற வைரங்களாலும், மதிப்புமிக்க ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த சுதர்மம் என்ற சபையை அடைந்தான். அதே வேளையில் சாத்யகியும் போர்க்களத்தை விட்டு அந்தச் சபா மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான்.(8) மன்னா, பிற யாதவர்கள் அனைவருங்கூடப் போர்க்களத்தை விட்டு வந்து அந்த ராஜசபையின் இருக்கைகளில் அமர்ந்தனர். அந்நேரத்தில் தேவகியின் மகனான பகவான் {கிருஷ்ணன்} அந்த விருஷ்ணிகளின் சபையில் பின்வருமாறு பேசினான்.(9,10)

கிருஷ்ணன், “யாதவர்களில் முதன்மையானவர்களே, நான் கைலாச மலைக்குச் சென்று, செந்நீல வண்ணனான சங்கரனை என் தவத்தால் நிறைவடையச் செய்து, அவனது ஆசியைப் பெற்றேன்.(11) தேவர்கள் அனைவரும், தபோதனர்களான பெரும் முனிவர்கள் அனைவரும் அங்கே இருந்தனர். சங்கரன் என்னைச் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்து, நான் புறப்படும் முன் அழகிய துதிகளை எனக்கு அர்ப்பணித்தான்.(12) நான் பதரிகாசிரமத்தில் இருந்தபோது ஓரிரவில் அசாதரண அனுபவம் ஒன்றை அடைந்தேன். வலிமைமிக்கப் பிசாசங்கள் இரண்டு வேட்டையாடியவாறும் என்னைக் குறித்துப் பேசிக் கொண்டும் என் முன் வந்தன. உண்மையில், அவற்றின் மனங்கள் என்னில் நிலைத்திருந்தன. உண்மையில் பேரான்மாக்களான இந்தப் பிசாசங்கள் இரண்டும் என்னைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தன. அவை பெரும்பணிவுடனும், பக்தியுடனும் என்னை வணங்கின. நான் அவர்களிடம் நிறைவடைந்ததால் தேவலோகத்தில் வசிக்குமாறு அனுப்பி வைத்தேன். அந்த நிகழ்வுக்குப் பிறகு, என் தவத்தால் மஹாதேவனை நிறைவடையச் செய்து இன்று இங்கே திரும்பினேன்” என்றான் {கிருஷ்ணன்}”.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “கிருஷ்ணன் சொன்ன அனைத்தையும் கேட்ட விருஷ்ணி குலத்தோர் அனைவரும், அவனது புகலிடத்தை மீண்டும் அடைந்து, மிகப் பாதுகாப்பாக உணர்ந்து அவனைத் துதித்தனர். அதன் பிறகு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(13-17)

பிறகு ஜகந்நாதன் தன் மாளிகைக்குச் சென்று நடந்தவை அனைத்தையும் ருக்மிணி, சத்யபாமா ஆகியோருக்கு உரைத்தான்.(18) அன்பு மனைவியரான அவ்விருவரும் தங்கள் கணவன் சொன்னதைக் கேட்டுப் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மன்னா, இவ்வாறே கிருஷ்ணனின் கடந்த காலங்கள் அனைத்தையும் உனக்கு விரிவாகச் சொல்லிவிட்டேன்.(19) கிருஷ்ணன் தொடர்ந்து பூமியை ஆண்டு, எண்ணற்ற துஷ்டர்களைக் கொன்று, பூமியின் பாரத்தைக் குறைத்தான். தேவர்களின் தலைவனும், பெரும் முனிவர்களால் வழிபடப்படுபவனுமான அவன் {கிருஷ்ணன்}, நரகாசுரன், பெரும் மன்னன் பௌண்டரகன், ஹயக்ரீவன், நிசும்பன், சுந்தன், உபசுந்தன் உள்ளிட்ட முக்கிய அசுரர்களைக் கொன்று முனிவர்களையும், பிராமணர்களையும் பாதுகாத்தான்.(20,21)

கிருஷ்ணன் எண்ணற்ற பசுக்களையும், அளவில்லா செல்வத்தையும் பிராமணர்களுக்குக் கொடையாகக் கொடுத்தான். அவன் அக்னி ஹோத்ரங்களைச் செய்து, பிராமணர்களுக்கு நல்ல உணவைக் கொடுத்து அவர்களை நிறைவடையச் செய்தான்.(22) அவன் வேதங்கற்றுப் பிரம்மச்சரியம் அனுசரித்து முனிவர்களையும், யஜ்ஞங்களைச் செய்து தேவர்களையும், ஆகுதிகளைக் கொடுத்துப் பித்ருக்களையும் நிறைவடையச் செய்தான்.(23) இவ்வாறே தேவர்களின் தலைவனான கிருஷ்ணன், தன் ராஜ்ஜியத்தைத் தடையில்லாமல் ஆண்டான், பிராமணர்களின் தலைமையிலான குடிமக்கள் அனைவரும் அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(24)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதே வேளையில் போர்க்களத்தில் பலசாலிகளில் சிறந்த பலராமன், ஏகலவ்யனின் மார்பைத் தாக்கி சிங்கம்போலக் கர்ஜித்தான்.(1) அதற்குப் பதிலடியாக ஏகலவ்யனும், பலத்தின் செருக்கில் வெறிக் கொண்டிருந்த வலிமைமிக்கப் பலராமனின் மார்பைத் தன் கதாயுதத்தால் தாக்கினான்.(2) ஏகலவ்யனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட விருஷ்ணி குல பலராமன், அலட்சியமாகத் தன் இரு கைகளாலும் அதைப் பற்றி, அந்த நிஷாத மன்னன் {ஏகலவ்யன்} வெற்றியில் நம்பிக்கை அனைத்தையும் இழந்து, சீற்றமிக்கக் கடுஞ்சுறாக்களின் வசிப்பிடமான பெருங்கடலின் கரைக்குத் தப்பியோடும் வகையில் அவனைப் பலமாகத் தாக்கினான்.(3,4)

ஏகலவ்யன் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடும்போது, பலராமன் அவனைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றான். ஏகலவ்யன் உண்மையில் அஞ்சி எங்கு ஓடினாலும் அங்கெல்லாம் பலராமன் அவனை நெருங்கினான்.(5) மன்னா, இறுதியில் ஏகலவ்யன், பலராமனின் கோபத்தில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கடலுக்குள் புகுந்து, ஐந்து யோஜனைகள் நீந்திச் சென்றான்.(6) ஏகலவ்யன் வசிப்போரெவருமற்ற தீவொன்றை அடைந்து அங்கே வசித்து வந்தான். இவ்வாறே பலராமன் நிஷாதர்களின் மன்னனான ஏகலவ்யனை வென்றான்.(7)

அதன் பிறகு, அந்த ஹலாயுதன், எண்ணற்ற வைரங்களாலும், மதிப்புமிக்க ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த சுதர்மம் என்ற சபையை அடைந்தான். அதே வேளையில் சாத்யகியும் போர்க்களத்தை விட்டு அந்தச் சபா மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான்.(8) மன்னா, பிற யாதவர்கள் அனைவருங்கூடப் போர்க்களத்தை விட்டு வந்து அந்த ராஜசபையின் இருக்கைகளில் அமர்ந்தனர். அந்நேரத்தில் தேவகியின் மகனான பகவான் {கிருஷ்ணன்} அந்த விருஷ்ணிகளின் சபையில் பின்வருமாறு பேசினான்.(9,10)

கிருஷ்ணன், “யாதவர்களில் முதன்மையானவர்களே, நான் கைலாச மலைக்குச் சென்று, செந்நீல வண்ணனான சங்கரனை என் தவத்தால் நிறைவடையச் செய்து, அவனது ஆசியைப் பெற்றேன்.(11) தேவர்கள் அனைவரும், தபோதனர்களான பெரும் முனிவர்கள் அனைவரும் அங்கே இருந்தனர். சங்கரன் என்னைச் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்து, நான் புறப்படும் முன் அழகிய துதிகளை எனக்கு அர்ப்பணித்தான்.(12) நான் பதரிகாசிரமத்தில் இருந்தபோது ஓரிரவில் அசாதரண அனுபவம் ஒன்றை அடைந்தேன். வலிமைமிக்கப் பிசாசங்கள் இரண்டு வேட்டையாடியவாறும் என்னைக் குறித்துப் பேசிக் கொண்டும் என் முன் வந்தன. உண்மையில், அவற்றின் மனங்கள் என்னில் நிலைத்திருந்தன. உண்மையில் பேரான்மாக்களான இந்தப் பிசாசங்கள் இரண்டும் என்னைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தன. அவை பெரும்பணிவுடனும், பக்தியுடனும் என்னை வணங்கின. நான் அவர்களிடம் நிறைவடைந்ததால் தேவலோகத்தில் வசிக்குமாறு அனுப்பி வைத்தேன். அந்த நிகழ்வுக்குப் பிறகு, என் தவத்தால் மஹாதேவனை நிறைவடையச் செய்து இன்று இங்கே திரும்பினேன்” என்றான் {கிருஷ்ணன்}”.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “கிருஷ்ணன் சொன்ன அனைத்தையும் கேட்ட விருஷ்ணி குலத்தோர் அனைவரும், அவனது புகலிடத்தை மீண்டும் அடைந்து, மிகப் பாதுகாப்பாக உணர்ந்து அவனைத் துதித்தனர். அதன் பிறகு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(13-17)

பிறகு ஜகந்நாதன் தன் மாளிகைக்குச் சென்று நடந்தவை அனைத்தையும் ருக்மிணி, சத்யபாமா ஆகியோருக்கு உரைத்தான்.(18) அன்பு மனைவியரான அவ்விருவரும் தங்கள் கணவன் சொன்னதைக் கேட்டுப் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மன்னா, இவ்வாறே கிருஷ்ணனின் கடந்த காலங்கள் அனைத்தையும் உனக்கு விரிவாகச் சொல்லிவிட்டேன்.(19) கிருஷ்ணன் தொடர்ந்து பூமியை ஆண்டு, எண்ணற்ற துஷ்டர்களைக் கொன்று, பூமியின் பாரத்தைக் குறைத்தான். தேவர்களின் தலைவனும், பெரும் முனிவர்களால் வழிபடப்படுபவனுமான அவன் {கிருஷ்ணன்}, நரகாசுரன், பெரும் மன்னன் பௌண்டரகன், ஹயக்ரீவன், நிசும்பன், சுந்தன், உபசுந்தன் உள்ளிட்ட முக்கிய அசுரர்களைக் கொன்று முனிவர்களையும், பிராமணர்களையும் பாதுகாத்தான்.(20,21)

கிருஷ்ணன் எண்ணற்ற பசுக்களையும், அளவில்லா செல்வத்தையும் பிராமணர்களுக்குக் கொடையாகக் கொடுத்தான். அவன் அக்னி ஹோத்ரங்களைச் செய்து, பிராமணர்களுக்கு நல்ல உணவைக் கொடுத்து அவர்களை நிறைவடையச் செய்தான்.(22) அவன் வேதங்கற்றுப் பிரம்மச்சரியம் அனுசரித்து முனிவர்களையும், யஜ்ஞங்களைச் செய்து தேவர்களையும், ஆகுதிகளைக் கொடுத்துப் பித்ருக்களையும் நிறைவடையச் செய்தான்.(23) இவ்வாறே தேவர்களின் தலைவனான கிருஷ்ணன், தன் ராஜ்ஜியத்தைத் தடையில்லாமல் ஆண்டான், பிராமணர்களின் தலைமையிலான குடிமக்கள் அனைவரும் அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(24)

ஹம்சன் டிம்பகன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 78-(வைஷம்பாயநம் ப்ரதி ஜநமேஜயப்ரஷ்நம்)-ஹம்சன், டிம்பகன், விசக்ரன் அறிமுகம்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்},    “தவம் செய்யும் பிராமணர்களில் சிறந்தவரே, சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணனின் கடந்த காலத்தைப் பற்றி மேலும் அதிகமாகக் கேட்க விரும்புகிறேன்.(1) கேசவனைக் குறித்துக் கேட்கையில் ஒருபோதும் எனக்குத் தெவிட்டுவதில்லை. சக்கரபாணியான அந்த ஹரியுடைய புனிதப் பெயர்களின் மகிமையை மேலும், மேலும் கேட்க எவன்தான் விரும்பமாட்டான்? ஹரியின் பெயர்கள், வடிவங்கள், குணங்கள் ஆகியவையும், கடந்த காலத்தைக் குறித்தவையும், புலனுணர்வுக்கு அப்பாற்பட்டவையுமான கதைகளைத் தொடர்ந்து கேட்பதே வாழ்வின் மாறா இலக்காகத் திகழ்கிறது.(2,3)

ஹம்சன், டிம்பகன்[1]ஆகியோரின் கூட்டு முயற்சிகள் உலகத்தை எவ்வாறு பாதித்தன? அவர்களின் செயல்பாடுகள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின என்று அறியப்படுகிறது.(4) விசக்ரன் என்ற தானவனுடனான போர் எவ்வாறு நடந்தது? ஹம்சன், டிம்பகன் ஆகியோரின் நல்ல நண்பன் அவன் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(5) பார்க்கவரின் {பரசுராமரின்} சீடர்களான அந்த இளவரசர்கள் இருவரும் பெரும்பலமிக்கவர்களாகத் திகழ்ந்தனர். அவர்கள், சங்கரனின் ஆசிகளைப் பெற்று, ஆயுதப் பயன்பாட்டில் திறன்மிக்கவர்களாகத் திகழ்ந்தனர் என்றும் சொல்லப்படுகிறது.(6)பிராமணரே, ஜகத்பதியான கேசவன், இவ்விரு மன்னர்களுடன் கடும்போரில் ஈடுபட்டான் என முன்னர் நீர் குறிப்பிட்டிருந்தீர்.(7) அவர்கள் யாருடைய மகன்கள்? ஏன் அவர்கள் கிருஷ்ணனுடன் போரிட்டனர்? மன்னா, உலகை வெல்லும் பேராவல் கொண்ட தானவனான விசக்ரன், திரிசூலம் தரித்த எண்பத்தெட்டாயிரம் தானவ வீரர்களின் ஆதரவைப் பெற்றிருந்தான்.(8,9) தானவனான அந்த விசக்ரனை வெல்ல முடியாது என்றே கருதப்பட்டது. அவன் யாதவர்களுடன் போரிட விரும்பி, அவர்களிடம் சிறு தவறையாவது, குறையையாவது காணத் தொடர்ந்து முயன்று வந்தான். இறுதியில் ஒரு பெரும்போர் நேரிட்டு விசக்ரனைக் கொல்லும் நம்பிக்கையுடன் கிருஷ்ணனே போரில் நுழைந்தபோதும், வெற்றியை அடைய அவன் {விசக்ரன்} சிறந்த முயற்சி செய்திருக்கிறான்” என்றான் {ஜனமேஜயன்}.(10)

பிரம்மதத்தன் மித்ரஸஹர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 79-(ஹம்ஸடிம்பகோத்பத்தி)-மன்னன் பிரம்மதத்தனுக்கும், பிராமணர் மித்ரஸஹருக்கும் இடையில் இருந்த நட்பு; ஹம்சன், டிம்பகன், ஜனார்த்தனன் பிறப்பு…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, சால்வதேசத்தைத் தன் ராஜ்ஜியமாகவும், பிரம்மதத்தன் என்ற பெயரையும் கொண்ட ஓர் உத்தம மன்னன் இருந்தான். மன்னா, அவன் அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்ட தூய இதயம் படைத்தவனாகவும் இருந்தான்.(1) அவன் எப்போதும் தன் மனத்தையும், புலன்களையும் கவனமாகக் கட்டுப்படுத்திக் கொண்டு ஐவகை வேள்விகளை {பஞ்சயஜ்ஞங்களைச்} செய்து வந்தான். வேதங்களில் சொல்லப்படும் பிரம்மத்தைக் குறித்த அறிவியலை நன்கறிந்தவனாகவும் அவன் இருந்தான். எப்போதும் வேள்விகளில் ஈடுபடுபவனாக இருந்ததால் அவனது இருப்பே உயிரினங்கள் அனைத்திற்கும் மங்கலகரமானதாக இருந்தது.(2)

பூமியின் தலைவா {ஜனமேஜயா}, அவனுக்கு உன்னத மனங்கொண்ட அழகிய மனைவியர் இருவர் இருந்தனர். அவர்கள் நல்ல குணங்களைக் கொண்டவர்களாக இருப்பினும் பிள்ளைகள் இல்லாதவர்களாக இருந்தனர்.(3) தேவலோகத்தில் இந்திரன் சசியுடன் இன்புற்றிருந்ததைப் போலவே, பிரம்மதத்தனும் தன் மனைவியர் இருவருடன் பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருந்தான். அவன், பெரும் யோகியும், தொடர்ந்து வேத வேதாங்க கல்வியில் ஈடுபட்டவரும், மித்ரஸஹன் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு பிராமணரைத் தன் நண்பராகக் கொண்டிருந்தான். பிராமணர்களில் மகுட ரத்தினமாகத் திகழ்ந்த அவரும் அந்த மன்னனைப் போலவே பிள்ளையற்றவராக இருந்தார்.(4,5)

ஒரு மகனை அடைய விரும்பிய மன்னன், தன் மனைவியர் இருவரின் துணையுடன் கூடியவனாகப் பத்து வருட காலம் திரிசூலபாணியான சிவனை வழிபட்டான்.(6) மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, பிராமணரான மித்ரஸஹரும் ஒரு மகனை அடையும் நோக்கத்திற்காக வைஷ்ணவ வேள்வி ஒன்றை {வைஷ்ணவ ஸத்ரத்தைச்} செய்தார்.

மன்னன் பிரம்மதத்தனால் வழிபடப்பட்ட செந்நீல வண்ணனான சிவன், அவனது கனவில் தோன்றி, “மன்னா, மங்கலங்கள் அனைத்தையும் நீ அடைவாயாக. நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன். ஒரு வரம் வேண்டுவாயாக” என்று கேட்டான்.(7,8) அந்த மன்னனும் {பிரம்மதத்தனும்} மகிழ்ச்சியாக, “என் அன்புக்குரிய தலைவா, நான் இரண்டு மகன்களை அடைய விரும்புகிறேன்” என்று கேட்டான். காளைச் சின்னக் கொடியைக் கொண்ட சிவன், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி மறைந்தவுடனேயே மன்னன் தன் உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்தான்.

நுண்ணறிவுமிக்க மித்ரஸஹர், கலப்படமற்ற அர்ப்பணிப்புடன் ஐந்தாண்டு காலம் கேசவனை வழிபட்டார். தேவர்களின் தலைவனான அந்த ஜனார்த்தனன், அவரது வழிபாட்டில் நிறைவடைந்து, அவரைப் போலவே நல்லவனாக ஒரு மகனை அருளினான். மன்னா, உரிய காலத்தில் ராணிகள் இருவரும் கருவுற்ற அதே வேளையில் விஷ்ணு அந்தப் பிராமணருடைய மனைவியின் கருவறையில் தன் வீரியத்தை வைத்தான். சிவனின் அருளால் ராணிகள் இருவரும் வலிமைமிக்க இரண்டு மகன்களைப் பெற்றனர்.

மன்னன் பிரம்மதத்தன், தன் இரு மகன்களுக்கும், ஜாதகர்மம் {பெயர்ச்சூட்டுவிழா} முதலிய பரிந்துரைக்கப்பட்ட சடங்குகள் அனைத்தையும் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளுடனும், விதிமுறைகளுடனும் செய்து வைத்து, பிராமணர்களுக்கு ஈகையாகப் பெருஞ்செல்வத்தைக் கொடையளித்தான்.

மன்னா {ஜனமேஜயா}, மித்ரஸஹரும், ஜகந்நாதனே பிள்ளையாகப் பிறந்திருக்கிறானென அனைவருக்கும் தோன்றுவண்ணம் ஒரு மகனைப் பெற்றார். அந்தப் பிராமணர் {மித்ரஸஹர்}, தன் மகனுக்கான தூய்மைச் சடங்குகள் அனைத்தையும் விதிப்படி கடமையுணர்வுடன் செய்தார்.(9-16)

இளவரசர்கள் இருவரும், அந்தப் பிராமணப் பிள்ளையும் ஒரே வயதினராக இருந்தனர். அவர்கள் அனைவரும் வேத கல்வி கற்று, வேதாந்தங்களில் தேர்ச்சியடைந்து, வில்லைப் பயன்படுத்தும் முறையையும், படைக்கலைகள் பிறவற்றையும் கற்றுக் கொண்டனர். இளவரசர்களில் மூத்தவன் பெயர் ஹம்சன் என்பதும், இளையவன் பெயர் டிம்பகன் என்பதும் ஆகும். அந்தப் பிராமணரின் {மித்ரஸஹரின்} மகன் பெயர் ஜனார்த்தனன் ஆகும். அவர்கள் அனைவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(17-19)

வரலாபம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 80-(ஹம்ஸடிம்பகயோர்வரலாபம்)-சிவனை நோக்கித் தவம் செய்த ஹம்சனும், டிம்பகனும்; அவர்கள் அடைந்த வரங்கள்…வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, இளவரசர்களான ஹம்சனும், டிம்பகனும் சிவனின் சக்திமிக்க அவதாரங்களாகத் தோன்றியதால், அவர்கள் பெரும் நுண்ணறிவுமிக்கவர்களாகத் திகழ்ந்தனர். ஒரு காலத்தில் அவர்கள் கடுந்தவஞ்செய்யத் தீர்மானித்தனர்.(1) மன்னா {ஜனமேஜயா}, இதற்காக அவர்கள் இமய பர்வதத்திற்குச் சென்றனர். செந்நீல வண்ணனும், மங்கலம் அருள்பவனும், பக்தர்களின் வாழ்வுத் துயரங்கள் அனைத்தையும் விலக்குபவனும், உமையின் கணவனுமான சிவனை நிறைவடையச் செய்து, பேராற்றலையும், தெய்வீக ஆயுதங்களையும் அடையும் நம்பிக்கையில், தங்கள் மனத்தைக் கவனமாகக் கட்டுப்படுத்திக் கொண்டும், நீரையும், காற்றையும் மட்டுமே ஆகாரமாக உண்டும் அங்கே அவர்கள் தவம் செய்து வந்தனர்.(2,3)

அவர்கள் {ஹம்சனும், டிம்பகனும்}, தங்கள் இதயங்களில் சிவனை வைத்துத் தங்கள் மனங்களை அவனிலேயே நிலைநிறுத்தி வந்தனர். அவர்கள் இவ்வாறே பகலிரவுகள் தொடர்ந்து, அவனுடைய பெயர்களைச் சொல்லி, “தேவர்களின் தலைவனும், அண்டத்தை ஆள்பவனும், பக்தர்களின் பேரன்புக்குரியவனும், சங்கரன், ஹரன், சர்வன், சிவானந்தன், நீலக்ரீவன், உமாபதி, ரிஷபத்வஜன், விரூபாக்ஷன், ஹரியக்ஷன், கிரீசன், ஈசன், வாசுதேவசிவன், அச்யுதன், சதாசிவன், மஹாதேவன் என்றெல்லாம் அழைக்கப்படுபவனும், புனித அக்ஷரமான ஓம் என்பதன் தனி உருவகமும் எவனோ, அவனை நாங்கள் வணங்குகிறோம்” என்றே துதித்தும் வந்தனர். இவ்வாறே அவ்விரு சகோதரர்களின் தவம் தொடர்ந்து வந்தது.(4-7)

மன்னா {ஜனமேஜயா}, படிப்படியாக, அந்த இளவரசர்கள் இருவரும் பொருள் பற்றிலிருந்தும், போலி ஆணவத்தில் இருந்தும் விடுபட்டனர். அவர்கள் மௌன விரதம் இருந்தவாறே, ஐந்து வருடங்கள் தவம் புரிந்தனர். அவர்களின் சுயக்கட்டுப்பாட்டில் நிறைவடைந்த சிவன், புலித்தோலுடுத்தி, சிரத்தில் பிறைமதி தாங்கிய திரிசூலபாணியாக அவர்களின் முன்பு காட்சியளித்தான். பாவங்களை அழிப்பவன் தங்கள் முன் நிற்பதைக் கண்ட அந்தச் சகோதரர்கள் இருவரும், பெருமகிழ்ச்சியடைந்தவர்களாக அவனை மீண்டும் மீண்டும் வணங்கினர்.(8-10)

அப்போது சிவன், “என் அன்புக்குரிய இளவரசர்களே, நீங்கள் இருவரும் மங்கலங்களை அடைவீராக. வேண்டும் வரத்தைக் கேட்பீராக. அதை நான் அருள்வேன்” என்றான்.

மன்னா, இந்தச் சொற்களைக் கேட்ட அந்த இளவரசர்கள் இருவரும் {ஹம்சனும், டிம்பகனும்}, “பிரபுவே, எங்களிடம் நீ நிறைவடைந்தது நிச்சயமென்றால், தேவர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் ஆகியோரால் நாங்கள் வெல்லப்பட முடியாதவர்களாவோமாக. உயிரினங்கள் அனைத்தின் வாழ்வாகவும் {உயிராகவும்}, ஆன்மாவாகவும் இருப்பவனே, இந்த வரத்தையே நாங்கள் பெரிதும் விரும்புகிறோம்.(11,12) சிவனே, சக்திமிக்க தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும் அடைவதையே நாங்கள் இரண்டாம் வரமாக வேண்டுகிறோம். மஹேஷ்வரம், ரௌத்ரம், பிரம்மசிரம் என்ற ஆயுதங்களை நாங்கள் அடைவோமாக.(13) சர்வனே, போர்க்களங்களில் நம்பிக்கையெனும் முற்றான உறுதியை உணர்வதற்காக, துளையா கவசத்தையும், முறியா விற்களையும், நொறுங்கா கோடரிகளையும் நாங்கள் விரும்புகிறோம்.(14) மஹாதேவா, {இருவராக இங்கிருக்கும்} நாங்கள் ஒவ்வொருவரும், உமது பூதகணங்கள் இரண்டைத் துணையாகக் கொள்வோமாக” என்று கேட்டனர்.

சிவன், அதற்கு மறுமொழியாக, “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி, பிருங்கி, ரிடீ, குண்டோதரன், விரூபாக்ஷன் என்ற தன்னுடைய நான்கு பூதகணங்களை அவர்களுக்குத் துணையாகக் கொடுத்தான்.

அப்போது சிவன், “பூதேசர்களே, இவ்விரு இளவரசர்கள் போரில் ஈடுபடும்போதெல்லாம் நீங்கள் இவர்களுக்குத் துணைபுரிவீராக” என்றான். இதைச் சொன்ன சிவன், அங்கேயே அப்போதே மறைந்தான்.(15-17)

அந்தக் காலத்தில் இருந்தே ஹம்சனும், டிம்பகனும் பெருஞ்சக்திமிக்கப் போர்வீரர்களாகவும், அனைத்து வகை ஆயுதப் பயன்பாடுகளையும் முற்றாக அறிந்தவர்களாகவும் திகழ்ந்தனர். அவர்கள் தன்னிகரற்ற வில்லாளிகளாகவும், பெருஞ்செல்வாக்குமிக்க ஆளுமைகளாகவும் வலம் வந்தனர்.(18) கவசந்தரித்தவர்களான அவர்கள் இருவரும், போர்க்களம் புகும்பொழுதெல்லாம், முன்னணி தேவர்களாலும், அசுரர்களாலுங்கூடத் தங்களை வெல்ல முடியாது என்பதை நிரூபித்து வந்தனர்.(19)

அவர்கள், தங்கள் மேனிகளைச் சாம்பலால் {பஸ்மத்தால் / நீறால்} அலங்கரித்துக் கொண்டும், மூவரி திலகத்தைத் தங்கள் நெற்றியில் தரித்துக் கொண்டும், சிவனைப் போற்றும் விழாக்களை அப்போதைக்கப்போது நடத்தி வந்தனர்.(20) அவர்கள் தங்கள் உடல்களை ருத்ராக்ஷங்களால் அலங்கரித்துக் கொண்டும், மான் தோல் உடுத்திக் கொண்டும், “அமைதியில் ஆழ்ந்த அறிஞனான மஹாதேவனையே நாங்கள் வணங்குகிறோம். நமசிவாய” என்று அவனையே {சிவனையே} துதித்துக்கொண்டிருந்தனர். இவ்வாறு அந்த இளவரசர்கள் இருவரும், தலையில் கங்கையைத் தரித்த அந்த மஹாதேவனைப் போலவே நீரில் நனைந்த சடாமுடிகளுடன் தோற்றமளித்தனர்.(21,22) தவம் செய்து முடித்த அந்தப் பெரும் வீரர்கள் இருவரும் வீடுகளுக்குத் திரும்பி, தங்கள் தந்தை {பிரம்மதத்தன்}, தந்தையின் நண்பரான மித்ரஸஹர், தங்கள் அன்னையர் ஆகியோரை வணங்கினர்.(23)

மன்னா {ஜனமேஜயா}, பெரும் நுண்ணறிவுமிக்க ஜனார்த்தனன் இடையறாமல் நீண்டகாலமாகத் தொடர்ந்து சாத்திரங்களைப் பயின்று வந்தான். தர்மாத்மாவான அவன், அனைத்து வகை ஞானங்களிலும் தேர்ச்சியடைந்து, ஐயந்தெளிந்த ஞானியானான்.(24) அவன், தொடர்ச்சியாகத் தன் மனத்தையும், புலன்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் முற்றான உண்மையை {பிரம்மத்தைத்} தியானித்து வந்தான். அவன் {ஜனார்த்தனன்}, புலன்களின் தலைவனும், பீதாம்பரதாரியுமான {மஞ்சற்பட்டாடை உடுத்தியவனுமான} விஷ்ணுவை வழிபடுவதிலேயே ஈடுபட்டுவந்தான்.(25) உரிய காலத்தில் ஹம்சனும், டிம்பகனும் திருமணம் செய்து கொண்ட பிறகே, ஜனார்த்தனுனும் இல்லறவாழ்விற்குள் நுழைந்தான்.(26)

அந்த மூன்று நண்பர்களும் ஐவகை வேள்விகளை {பஞ்சயஜ்ஞங்களைச்} செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அவர்கள் தங்கள் தங்கள் மனைவியருடன் பற்றுமிக்கவர்களாகவும், நன்றியுணர்வுடன் தங்கள் பெரியோருக்கு கடமையாற்றுபவர்களாகவும் திகழ்ந்தனர். மன்னா, அறப்பாதையைப் பின்பற்றுவதே நாகரிக மனிதனுக்கு மிகச் சிறந்த வழி என்பதில் அவர்கள் ஆழமான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர்” என்றார் {வைசம்பாயனர்}.(27)

————————————-—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பவிஷ்ய பர்வம்-பகுதி 3–

October 19, 2025

பலியின் செழிப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 41-(பலிர்விஜயே ஷ்ரிய꞉ ஸ்வயமாகமநகதநம்)-பலியை வந்தடைந்த செழிப்பின் தேவியான ஸ்ரீதேவி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “{அதிதியின் மகன்களான} தேவர்கள் {திதியின் மகன்களான} தைத்தியர்களால் வீழ்த்தப்பட்டனர், அதன்படி தைத்தியர்களே உலகங்களை ஆக்கிரமித்தனர். மயன், சம்பரன் ஆகியோர் பெருஞ்சக்திவாய்ந்த பலியின் வெற்றியை அறிவித்தனர்.{1} அந்த நேரத்தில் திசைகள் தெளிவடைந்தன, பக்திச் செயல்பாடுகள் செழித்தன, அநீதி ஒடுக்கப்பட்டது, சூரியன் தன் பாதையில் முறையாகப் பயணித்தான்.{2}

பிரஹ்லாதன், சம்பரன், மயன், அனுஹ்லாதன் ஆகியோர் கவனமாகத் திசைகள் அனைத்தையும் பாதுகாத்தனர்.{3} மக்கள் நல்வழிகளில் சென்றனர், அதனால் பாவம் மறைந்து அறம் பெருகியது. சித்தர்கள் தவம் பயின்றனர்.{4,5} தர்மம் நான்கு கால்களுடன் செழித்தது, அதர்மம் (பாவம்) ஒற்றைக்காலுடன் நின்றது.(6) மன்னர்கள் தங்கள் குடிமக்களை முறையாகப் பாதுகாத்தனர், அனைத்து வகையினரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைப் பின்பற்றினர்.{7} பலி, அசுரர்கள் அனைவராலும் ஒருமனதாகத் தேவர்களின் அரசில் நிறுவப்பட்டான்.{8|

அவர்கள் {அசுரர்கள்} மகிழ்ச்சி கூச்சலிடத் தொடங்கிய போது வரமளிப்பவளான செழிப்பின் தேவி {ஸ்ரீதேவி}, தன் கையில் தாமரை மலருடன் பலியின் முன்பு தோன்றி,{9} “ஓ! பெருஞ்சக்திவாய்ந்தவர்களில் முதன்மையானவனே, ஓ! பேரொளி படைத்த தைத்திய மன்னன் பலியே, தேவர்களை வீழ்த்தியதால் நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன்.{10} உனக்கு நன்மை நேரட்டும்.{10} போரில் உன் ஆற்றலை வெளிப்படுத்தித் தேவர்களின் மன்னனை நீ வீழ்த்தினாய். அற்புதம் நிறைந்த உன் சக்தியைக் கண்டே நான் உன்னிடம் வந்திருக்கிறேன்.{11} ஓ! தானவர்களில் முதன்மையானவனே, ஹிரண்யகசிபுவின் குலத்தில் பிறந்த நீ அசுரர்களின் மன்னனாக நியமிக்கப்பட்டிருக்கிறாய். எனவே, இத்தகைய அருஞ்செயலை நீ செய்ததில் வியப்பேதுமில்லை.{12} மூவுலகங்கள் அனைத்தையும் அனுபவித்த அந்தத் தைத்திய மன்னனையும் {ஹிரண்யகசிபுவையும்} நீ விஞ்சிவிட்டாய். மேலும் நீ எப்போதும் அறம்சார்ந்தவனாகவும், பக்திமானாகவும் இருக்கிறாய்.{13} எனவே, ஓ! அளவற்ற ஆற்றல் படைத்தவனே, நீயே மூவுலகங்களையும் ஆள்வாயாக” என்றாள் {ஸ்ரீதேவி}.

வரமளிப்பவளும், அழகிய தேவியுமான லக்ஷ்மி இவ்வாறு அந்தத் தைத்திய மன்னனிடம் சொல்லிவிட்டுக் காட்சியில் இருந்து மறைந்தாள்[1]“என்றார் {வைசம்பாயனர்}.(14-18)

கசியபரிடமும், பிரம்மனிடமும் சென்ற தேவர்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 42-(தேவகணை꞉ ஸஹ கஷ்யபாதித்யோர்-ப்ரஹ்மஸதநகமநகதநம்)அதிதியிடம் சென்ற இந்திரன்; தேவர்களை பிரம்மலோகம் அழைத்துச் சென்ற கசியபர்; பிரம்ம சபை வர்ணனை…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! இருபிறப்பாளர்களிலும், முனிவர்களிலும் முதன்மையானவரே, தைத்தியர்களால் {திதியின் மகன்களால்}வெல்லப்பட்ட தேவர்கள் {அதிதியின் மகன்கள்}அதன்பிறகு என்ன செய்தனர்? அவர்கள் தேவலோகத்தை எவ்வாறு மீட்டனர்?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர், “தேவர்களின் மன்னன், அழகிய தெய்வீகக் குரலொன்றை {அசரீரியைக்} கேட்டு, கிழக்கில் அமைந்திருக்கும் மிகச் சிறந்த இடமான அதிதியின் வசிப்பிடத்திற்கு தேவர்களுடன் சென்றான்.(2) புரந்தரன் அங்கே சென்றதும், தான் கேட்ட தெய்வீகச் செய்தியின் ஒவ்வொரு சொல்லையும் அதிதியிடம் சொன்னான்.(3)

அதிதி, “ஓ! குழந்தாய், உன்னாலும், அமரர்கள் அனைவராலும் விரோசனன் மகனான பலியைக் கொல்ல முடியாது. ஆயிரம் தலைகளைக் கொண்ட புருஷனைத் தவிர, வேறு எவனாலும் அவனைக் கொல்ல முடியாது.{4,5} எனினும், உன் தந்தையும், வாய்மை நிறைந்தவருமான கசியபரிடம் தைத்தியனான மஹாபலியின் அழிவைக் குறித்து நான் கேட்கப் போகிறேன்” என்றாள்.{6}(4-6)

அதன்பிறகு சூரர்கள், அதிதியுடன் சேர்ந்து கசியபரிடம் சென்றனர்.{7} அங்கே, தேவர்களின் முதல் ஆசானான அந்தப் பெருந்தவசி, தண்ணீரினால் வெப்பந்தணிந்த ஒளியுடன் கூடிய சூரியனைப் போல அழகாகவும், எரியும் தழலைப் போலப் பிரகாசத்துடனும் இருப்பதைக் கண்டனர்.{8} அவர், தம்முடைய தண்டத்தை வைத்துவிட்டு, மேனியில் மான் தோலுடுத்தி தவம் பயின்று கொண்டிருந்தார்.{9} அவருடைய உடல் மரவுரியாலும், மான்தோலாலும் மறைக்கப்பட்டிருந்தது. மந்திரங்கள் ஓதி தூண்டப்படும்போது அவதரிக்கும் நெருப்பைப் போல அவர் பிரம்ம சக்தியுடன் எரிந்து கொண்டிருந்தார்.{10}

சூரர்கள், அசுரர்கள் ஆகியோரின் தந்தையான தலைவர் மாரீசர் {மரீசியின் மகனான கசியபர்}, பிரம்மவாதிகளில் முதன்மையானவராகவும், சூரியனைப் போன்ற ஒளி கொண்டவராகவும் இருந்தார்.{11} அவர் அனைவரையும் படைத்தவராகவும், குடிமுதல்வர்களில் மிகச் சிறந்த தலைவராகவும் இருந்தார். அவர் தமது பேரனின் மேனியில் மூன்றாவது குடிமுதல்வராகப் பிறந்திருந்தார்.{12}

பிரம்மனின் மனத்தில் பிறந்த மகன்கள் அவரிடம் பேசுவதைப் போலவே அந்த முன்னணி வீர தேவர்களும், அதிதியும் அந்தக் கசியபரை கை கூப்பி வணங்கி,{13} அசரீரியின் மூலம் சொல்லப்பட்ட தெய்வீக செய்தியையும், தைத்தியர்களில் முதன்மையான பலி அமரர்களால் வெல்லப்பட முடியாதவனாக இருப்பதையும் அவரிடம் சொன்னார்கள்.{14}

கசியபர், தம் மகன்களின் சொற்களைக் கேட்டுப் பிரம்மலோகத்திற்குச் செல்ல விரும்பி அவர்களிடம் {தேவர்களிடம்},{15} “ஓ! பாவமற்றவர்களே, வேதம் ஓதும் ஒலியால் நிறைந்திருக்கும் பிரம்மனின் வசிப்பிடத்திற்கு நாம் செல்வோம். நீங்கள் கேள்விப்பட்டதை அங்கே பிரம்மனிடம் உண்மையாகச் சொல்லுங்கள்” என்றார்”.{16}(7-16)

வைசம்பாயனர், “அதன் பிறகு தேவர்களும், அதிதியும் கசியபரைப் பின்தொடர்ந்து தேவரிஷிகளால் நிறைந்திருந்த பிரம்மனின் அரண்மனைக்குச் சென்றனர்.{17} தேவர்கள் அனைவரும் விலைமதிப்பற்ற, மிக அழகிய விமானங்களில் சென்று ஒரு கணத்தில் பிரம்மலோகத்தை அடைந்தனர்.{18} ஆன்மத்திரளாக இருக்கும் நித்தியனான பிரம்மனைக் காணும் விருப்பத்தில் அவர்கள் அங்கே இருந்த பெரிய சபா மண்டபத்திற்குச் சென்றனர்.{19} இனிய சாம மந்திரங்கள் பாடப்படும் அந்த மண்டபத்தைக் கண்டதும் அவர்கள் பெரும் நிறைவையடைந்தனர்.{20} வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் நன்கறிந்தவர்களும், அறச்சடங்குகளைச் செய்பவர்களுமான மஹாரிஷிகள் ஓதும் ரிக் மந்திரங்களை அவர்கள் கேட்டனர். ஓதப்படும் வேத மந்திரங்களின் ஒலி அந்தச் சபையில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.{21} அங்கே வந்து வேதம் ஓதுவதைக் கேட்ட சூரர்கள், தங்களை மேனி தூய்மையடைந்தவர்களாகக் கருதினர். மனப்புலன்கள் குவிந்து, அமைதியை அடைந்து பிரம்மத்தை மனத்தில் நிலைக்கச் செய்த அவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தவர்களாக ஒருவரையொருவர் கண்டனர்[1].(17-27)கசியபரை முன்னிட்டுச் சென்ற சூரர்கள், எல்லாம்வல்ல உலக ஆசானை மீண்டும் தங்கள் மனத்தில் வணங்கினர்.{28} பல்வேறு சாத்திரங்களையும் நன்கறிந்த தேவர்களால் இனிமையான, கம்பீரமான வேத ஒலி மீண்டும் கேட்கப்பட்டது.{29} எப்போதும் நோன்புகளையும், ஒழுங்குமுறைகளையும் பின்பற்றுபவர்களும், ஹோம் செய்வதையும், வேதமோதுவதையும் விரும்புகிறவர்களுமான முன்னணி பிராமணர்களை அங்கே அந்தக் கசியபரின் மகன்கள் கண்டனர்.{30,31} உலகின் பெரும்பாட்டனும், சூரசுரர்களின் {சூர, அசுரர்களின்} ஆசானுமான பிரம்மன், அந்தச் சபையில் அமர்ந்து கொண்டு, தெய்வீக மாயையின் மூலம் படைப்புத் தொழிலை மேற்கொண்டிருந்தான்.{32}

அங்கே தக்ஷனும், குடிமுதல்வர்கள் {பிரஜாபதிகள்} பிறரும், பிரசேதஸ், இருபிறப்பாளர்களில் முதன்மையான புலஹர், மரீசி, பிருகு, அத்ரி, வசிஷ்டர், கௌதமர், நாரதர் ஆகியோர் அவனை வழிபட்டுக் கொண்டிருந்தனர்.{33,34} கல்வி, மனம், வானம், நெருப்பு, நீர், பூமி, ஒலி, தீண்டல், வடிவம், சுவை, மணம் உள்ளிட்ட இந்தப் புலன் நுகர் பொருட்களும், மஹத் கோட்பாடும்,{35} நான்கு வேதங்கள், அறச்சடங்குகள், வேள்விகள், தீர்மானம் {சங்கல்பம்}, உயிர்மூச்சு {பிராணம்} ஆகியவையும்,{36} இன்னும் வேறு பொருள் அனைத்தும் சுயம்புவான அந்தத் தேவன் முன்பு இருந்தன. பொருள் {அர்த்தம்}, அறம் {தர்மம்}, விருப்பத்திற்குரிய பொருள், பொறாமை, இன்பம் {காமம்} ஆகியன அவன் முன்பு இருந்தன.{37} சுக்ரன் {வெள்ளி(Venus)}, பிருஹஸ்பதி {குரு/வியாழன்(Jupiter)}, சம்வர்த்தர், புதன், சனி, ராஹு முதலிய கோள்கள் அனைத்தும்,{38} மருத்துகள், விஷ்வகர்மன், நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் ஆகியோர் பிரம்மனைத் துதித்துக் கொண்டிருந்தனர்.{39} புனித மந்திரமான ஸாவித்ரி, துர்கா, தரணி, வாணி, வாக்கின் ஏழு வடிவங்கள், ஸ்ருதி, காதாங்கள், விதிகள் {சட்டங்கள், நியமங்கள்}, உரைகள்,{40} க்ஷணம், லவம், முஹூர்த்தம், பகல், இரவு, மாதம், ஆறு பருவ காலங்கள், வருடங்கள், நான்கு யுகங்கள், மாலைப் பொழுது,{41} காலச்சக்கரம் ஆகியோரும் இன்னும் பலரும் சுயம்புவான அந்தத் தேவன் {பிரம்மன்} முன்பு இருந்தனர்.{43}

கசியபர், பக்திமான்களான தேவர்களுடன், விருப்பங்கள் அனைத்தையும் அளிக்கவல்ல அந்தத் தெய்வீக சபைக்குள் நுழைந்தார்.{43} பெரும்படைப்பாளியும், நித்தியனுமான பிரம்மன், தன்னெழிலில் எரிந்து கொண்டிருப்பதையும், களைப்பில் இருந்து விடுபட்டவனாகப் பிரம்மரிஷிகளால் தொண்டாற்றப்படுவதையும் கண்டு தேவர்கள் அவனை வணங்கினர்.{44,45} அவர்கள், தங்கள் தலையால் அந்தப் பரமேஷ்டியின் பாதங்களைத் தீண்டி பாவங்கள் விடுபட்டு, அமைதியடைந்த ஆன்மாக்களாகினர்.{46} பெரும்பிரகாசமிக்கப் பிரம்மன், அங்கு வந்திருக்கும் தேவர்களுடன் கசியபரும் இருப்பதைக் கண்டு பேசத் தொடங்கினான்”.{47}(28-47)

பிரம்ம வாக்கியம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 43-(கஷ்யபாதீந்ப்ரதி ப்ரஹ்மவாக்யம் க்ஷிரோதஸ்யோத்தரே தீரே கஷ்யபாதேர்கமநம் தபஷ்சர்யா ச)பதிவின் சுருக்கம்: பிரம்மனின் சொற்கள்; கசியபரும், அதிதியும் வேண்டிய வரம்; பாற்கடலின் வடகரையில் தவமிருந்த தேவர்கள்…

பிரம்மன் {தேவர்களிடம்}, “பெருஞ்சக்திவாய்ந்த தேவர்களே, உங்கள் வரவின் நோக்கத்தை நான் அறிந்தேன். ஓ! முன்னணி சூரர்களே, உங்கள் நோக்கம் நிறைவேறும்.{1} தானவர்களில் {அதிதியின் மகன்களின் வழிதோன்றலில்} முதன்மையான பலியை வெல்லப்போகும் அண்டத்தின் தலைவன், மூவுலகங்களையும் வெல்பவன் மட்டுமல்லாமல், தேவர்களாலும் வழிபடத்தகுந்தவனாக இருக்கிறான்.{2,3}

அண்டத்தின் நித்திய பிறப்பிடமான அவனே உலகங்களின் விதி சமைப்பவன் ஆவான். மக்கள் அவனை எல்லாம்வல்லவன் என்றும், ஹேமகர்பன் என்றும் அழைக்கிறார்கள்.{4} அசுரத்தலைவன் பலியையும், உலகையும் அழிக்கும் பெருந்தலைவனே, அனைத்திற்கும் பிறப்பிடமும், நம்மில் மூத்தவனும் ஆவான்.{5} அண்டத்தின் ஆன்மாவாக இருக்கும் அந்த யோகி, சிந்தனைக்கு அப்பாற்பட்டவன் ஆவான்.{6} தேவர்களும் அந்தப் பரமனை அறியமாட்டார்கள்; ஆனால் தேவர்களையும், நம்மையும், மொத்த அண்டத்தையும் அந்தப் புருஷோத்தமன் அறிவான்.{7} அவன் அருளால் நாம் நலமாக இருக்கிறோம். மக்கள் இவ்வுலகில் அவனுடன் ஐக்கியத்தை நிறுவி கடுந்தவம் செய்கிறார்கள்.{8}

ஓ! தேவர்களே, வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் சிறந்த பகுதியான பாற்கடலின் வடகரையில் அமுதம் இருப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள். அங்கே சென்று தற்கட்டுப்பாட்டுடன் கடந்தவம் பயில்வீராக.{9} அங்கே மிகப் புனிதமானவையும், மழைக்காலத்தில் நீருண்ட மேகங்களின் முழக்கம் போலக் கம்பீரமானவையும், பிரம்மம் தொடர்பானவையுமான தூய சொற்களைக் கேட்பீர்கள்.{10} பாவங்களை அழிக்கவல்ல அந்தத் தெய்வீக வாக்கு, தூய ஆன்மா படைத்த தேவதேவனின் வாக்காகும்.{11} உங்கள் நோன்பு நிறைவடையும்வரை அந்தப் பேரண்ட வாக்கை நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பீர்கள்.{12} ஓ! தேவர்களே, என்னிடம் வந்திருக்கும் உங்களுக்கு வரங்களைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். என்ன வரம் வேண்டும் கேளுங்கள்” என்றான்.{பிரம்மன்}.{13-15}

கசியபரும், அதிதியும் யோகத்துடன் அடையாளங்காணப்படுபவனை {யோகாத்மனான பிரம்மனை} வணங்கி, அவனது பாதங்களைத் தீண்டி, “தலைவன் எங்கள் மகனாகப் பிறக்கட்டும்” என்ற வரத்தைக் கேட்டனர்.

அவர்கள் பெரும் மதிப்புடன் இவ்வாறு சொன்ன போது, பிரம்மன், “அவ்வாறே ஆகட்டும். அவன் தங்கள் தம்பியாகட்டும் என்று தேவர்கள் அவனிடம் வேண்டட்டும், அவனும் ஏற்பான்” என்றான்.{16-18}

இந்த வரத்தை அவனிடம் அடைந்து தங்கள் காரியத்தில் வெற்றியை அடைந்த தேவர்கள் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் சென்றனர்.{19} சூரர்கள், கசியபர், அதிதி ஆகியோர் “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி பிரம்மனின் பாதங்களைத் தீண்டி வடதிசைக்குச் சென்றனர்.{20} தெய்வீக பிரம்மனால் ஆணையிடப்பட்டவாறே அவர்கள் பாற்கடலின் வடகரையைக் குறுகிய காலத்திற்குள் அடைந்தனர்.{21} அந்த முன்னணி தேவர்கள், பல பெருங்கடல்களையும், மலைகள், ஆறுகளையும் கடந்து சென்று சூரியனும், உயிரினங்களும் அற்றதும் இருளால் மறைக்கப்பட்டதுமான அந்தப் பயங்கரப் பகுதியைக் கண்டனர்.{22}

சூரர்களும், கசியபரும் அமுதம் இருந்த இடத்தை அடைந்து, ஆயிரங்கண்களைக் கொண்டவனும், நுண்ணறிவுமிக்க யோகியும், தலைமை சக்திகள் அனைத்தையும் கொண்டவனுமான நாராயணனை நிறைவடையச் செய்யும் நோக்கில் பல வருடங்கள் கடுந்தவங்களைச் செய்தனர்.{23,24} சூரர்கள், பிரம்மசரிய நோன்பையும், மௌன விரதத்தையும் நோற்று, தங்கள் புலன்களையும், அசைவுகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கே கடுந்தவம் இருந்தனர்.{25} தெய்வீகரான கசியபர், தலைவன் நாராயணனை நிறைவடையச் செய்வதற்காக வேத மந்திரத் துதிகள் பலவற்றை ஓதத் தொடங்கினார்” என்றார் {வைசம்பாயனர்}.{26}(1-26))

விஷ்ணுவின் உறுதிமொழி | பவிஷ்ய பர்வம் பகுதி – 44-(கஷ்யபாதிந்ப்ரதி மஹாவிஷ்நோர்வரப்ரதாநகதாவதார꞉)பதிவின் சுருக்கம்: கசியபரும், அதிதியும் வேண்டிய வரம்; விஷ்ணு கொடுத்த உறுதிமொழி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இருபிறப்பாளர்களில் முதன்மையான கசியபரால் ஓதப்படும் மிகச் சிறந்த துதிகளைக் கேட்ட தலைவன் நாராயணன்[1], மேகங்களுடைய முழக்கங்களின் மூலம் கம்பீரமான இனிய குரலில் அந்தப் பெருந் தேவர்களிடம் பேசினான்.{1,2} சொற்கள் வானத்தில் இருந்து கேட்டாலும், எவராலும் தலைவனைக் காணமுடியவில்லை. அந்த ஈஷ்வரன் பெரும் மகிழ்ச்சியுடன் பேசினான்.{3}(1-3)

நமோ(அ)ஸ்து தேவதேவேஷ ஏகஷ்ருங்க வராஹ வ்ருஷார்சிஷ

வ்ருஷஸிந்தோ வ்ருஷாகபே ஸுரவ்ருஷப ஸுரநிர்மித

அநிர்மித பத்ரகபில த்ருவ தர்ம தர்மராஜ வைகுண்ட

த்ரேதாவர்த அநாதிமத்யநிதந தநஞ்ஜய ஷுசிஷ்ரவ꞉

அக்நிஜ வ்ருஷ்ணிஜ அஜ அஜயாம்ருதேஷய ஸநாதந விதாதஸ்த்ரிகாம

த்ரிதாம த்ரிககுத் ககுத்மின் துந்துபே மஹாநாப லோகநாப

பத்மநாப விரிஞ்சே வரிஷ்ட பஹுரூப விரூப விஷ்வரூபாக்ஷயாக்ஷர

ஸத்யாக்ஷர ஹம்ஸாக்ஷர ஹவ்யபுக் கண்டபரஷோ ஷுக்ர

முஞ்ஜகேஷ ஹம்ஸ மஹதக்ஷர ஹ்ருஷீகேஷ ஸூக்ஷ்ம

பரஸூக்ஷ்ம துராஷாட் விஷ்வமூர்தே ஸுராக்ரஜ நீல நிஸ்தமோ

விரஜஸ்தமோரஜ꞉ஸத்த்வதாம ஸர்வலோகப்ரதிஷ்ட

ஷிபிவிஷ்ட ஸுதபஸ்தபோக்ர அக்ர அக்ரஜா தர்மநாப கபஸ்திநாப

தர்மநேம ஸத்யதாம ஸத்யாக்ஷர கபஸ்திநேமே விபாப்மன்

சந்த்ரரத த்வமேவ ஸமுத்ரவாஸா꞉ அஜைகபாத் ஸஹஸ்ரஷீர்ஷ

ஸஹஸ்த்ரஸம்மித மஹாஷீர்ஷ ஸஹஸ்ரத்ருக் ஸஹஸ்ரபாத்

அதோமுக மஹாமுக மஹாபுருஷ புருஷோத்தம ஸஹஸ்ரபாஹோ

ஸஹஸ்ரமூர்தே ஸஹஸ்ராஸ்ய ஸஹஸ்ராக்ஷ ஸஹஸ்ரபுஜ

ஸஹஸ்ரபுவ ஸஹஸ்ரஷஸ்த்வாமாஹுர்வேதா꞉ || 3-68-1

விஷ்வேதேவ விஷ்வஸம்பவ ஸர்வேஷாமேவ தேவாநாம் ஸௌபக

ஆதௌ கதி꞉ விஷ்வம் த்வமாப்யாயந꞉ விஷ்வம் த்வாமாஹு꞉ புஷ்பஹாஸ

பரமவரதஸ்த்வமேவ வௌஷட் ஓங்கார வஷட்காரம் த்வமேகமாஹுரக்ர்யம்

மகபாகப்ராஷிநம் || 3-68-2

ஷததார ஸஹஸ்ரதார பூர்த புவர்த ஸ்வர்த பூர்புவ꞉ஸ்வர்த

த்வமேவ பூதம் புவநம் த்வம் ஸ்வதா த்வமேவ ப்ரஹ்மேஷய

ப்ரஹ்மமய ப்ரஹ்மாதிஸ்த்வமேவ || 3-68-3

த்யௌரஸி ப்ருதிவ்யஸி பூஷாஸி மாதரிஷ்வாஸி தர்மோ(அ)ஸி மகவாஸி

ஹோதா போதா நேதா ஹந்தா மந்தா ஹோம்யஹோதா பராத்பரஸ்த்வம் ஹோம்யஹோதா

த்வமேவ ||3-68- 4

ஆபோ(அ)ஸி விஷ்வவாக் தாத்ரா பரமேண தாம்நா த்வமேவ திக்ப்ய꞉ ஸ்ருக்

ஸ்ருக்பாண்ட த்வம் கண இஷ்டோ(அ)ஸி இஜ்யோ(அ)ஸி ஈட்யோ(அ)ஸி த்வஷ்டா

த்வமஸி ஸமித்தஸ்த்வமேவ கதிர்கதிமதாமஸி மோக்ஷோ(அ)ஸி

யோகோ(அ)ஸி குஹ்யோ(அ)ஸி ஸித்தோ(அ)ஸி தந்யோ(அ)ஸி தாதாஸி பரமோ(அ)ஸி

யஜ்ஞோ(அ)ஸி ஸோமோ(அ)ஸி யூபோ(அ)ஸி தக்ஷிணாஸி தீக்ஷாஸி விஷ்வமஸி ||3-68-5

ஸ்தவிஷ்ட ஸ்தவிர விஷ்வ துராஷாட் ஹிரண்யகர்ப ஹிரண்யநாப

ஹிரண்யநாராயண நாராயணாந்தர ந்ருணாமயந ஆதித்யவர்ண

ஆதித்யதேஜ꞉ மஹாபுருஷ ஸுரோத்தம ஆதிதேவ பத்மநாப

பத்மேஷய பத்மாக்ஷ பத்மகர்ப ஹிரண்யாக்ரகேஷ

ஷுக்லவிஷ்வதேவ விஷ்வதே முக விஷ்வாக்ஷ விஷ்வஸம்பவ

விஷ்வபுக்த்வமேவ || 3-68-6

பூரிவிக்ரம சக்ரக்ரம த்ரிபுவந ஸுவிக்ரம ஸ்வவிக்ரம

ஸ்வர்விக்ரம பப்ரு꞉ ஸுவிபு꞉ ப்ரபாகர꞉ ஷம்பு꞉ ஸ்வயம்பூஷ்ச

பூதாதி꞉ பூதாத்மன் மஹாபூத விஷ்வபுக்த்வமேவ விஷ்வகோப்தாஸி

விஷ்வம்பர பவித்ரமஸி ஹவிர்விஷாரத ஹவி꞉கர்மா அம்ருதேந்தந

ஸுராஸுரகுரோ மஹாதிதேவ ந்ருதேவ ஊர்த்வகர்மன் பூதாத்மன்

அம்ருதேஷ திவ꞉ஸ்ப்ருக் விஷ்வஸ்ய பதே க்ருதாச்யஸி

அநந்தகர்மன் த்ருஹ்யநவம்ஷ ஸ்வவம்ஷ விஷ்வபாஸ்த்வம் த்வமேவ

விஷ்வம் பிபர்ஷி வரார்திநோ நஸ்த்ராயஸ்வேதி || 3-68-7

விஷ்ணு, “ஓ! முன்னணி தேவர்களே, நான் உங்களிடம் நிறைவடைந்தேன். உங்களுக்கு நலம் விளையட்டும். வரங்களை வேண்டுவீராக. அவற்றை நான் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்றான்.(4)

அப்போது கசியபர், “ஓ! அமரர்களே, தலைவன் நம்மிடம் நிறைவடைந்திருப்பதால் நாம் அருளப்பட்டவர்களாக இருக்கிறோம். எங்கள் பரம புகலிடம் நீயே,{5} ஓ! தலைவா, நீ எங்களிடம் நிறைவடைந்து வரங்கொடுக்க விரும்புகிறாயெனில், எனக்கும் அதிதிக்கும் மகனாக உன் உற்றார் உறவினரின் இன்பத்தை எப்போதும் அதிகரித்து வாசவனின் {இந்திரனின்} தம்பியாகப் பிறப்பாயாக” என்றார்”.{6}

வைசம்பாயனர், “தேவர்களின் அன்னையான அதிதியும் வரம் வேண்ட விரும்பி அந்தத் தலைவனிடம்,{7} “நான் உன்னிடம் வரம் வேண்டுகிறேன். தேவர்கள் அனைவரின் நலத்துக்காக நீ என் மகனாகப் பிறப்பாயாக” என்றாள்.{8}(5-8)

தேவர்கள், “ஓ! தலைவா, நீ எங்கள் தம்பியும், தலைவனும், மன்னனும், பாதுகாப்பாளனும் ஆவாயாக. நீ அதிதியின் மகனாகப் பிறந்தால், வாசவனும், தேவர்கள் பிறரும் தேவனின் பெயரைக் கேட்கவல்லவராவோம். எனவே நீ கசியபரின் மகனாகப் பிறப்பாயாக” என்றனர்”.(9)

வைசம்பாயனர், “அப்போது விஷ்ணு தேவர்களிடமும், கசியபரிடமும், “ஓ! தேவர்களே, உங்கள் எதிரிகளால் என் முன்னால் ஒரு கணமும் நிற்க இயலாது.{10} அசுரர்களையும், தேவர்களின் பகைவரான பிறரையும் கொன்று, நான் தேவர்களை மீண்டும் வேள்விக் காணிக்கைகளை ஏற்கச் செய்வேன்.{11} என்னுடைய படைப்பு சக்தியால் நான் தேவர்களை ஹவ்யத்தையும், பித்ருக்களைக் கவ்யத்தையும் உண்ணச் செய்வேன். எனவே, ஓ! தேவர்களே, நீங்கள் வந்த வழியே செல்வீராக.{12,13} தேவர்களின் அன்னையான அதிதியின் விருப்பத்தையும், பெரும் கசியபரின் விருப்பத்தையும் நான் நிறைவடையச் செய்வேன். நீங்கள் அவரவருக்குரிய வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்வீராக. உங்களுக்கு நன்மை நேரட்டும், விரும்பிய நோக்கங்களை நீங்கள் அடைவீராக” என்றான்”.(10-14)

வைசம்பாயனர், “பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணுவால் இவ்வாறு சொல்லப்பட்டதும் தேவர்கள் மகிழ்ச்சியாக அந்தத் தலைவனை வழிபட்டனர்.(15) விஷ்வதேவர்கள், கசியபர், அதிதி, சாத்யர்கள், மருத்துகள், பெருஞ்சக்திவாய்ந்த இந்திரன் ஆகியோர் அந்தத் தேவனை வணங்கிவிட்டு,{16} கிழக்குத் திக்கில் உள்ள கசியபரின் பெருங்குடிலுக்குச் சென்றனர்.

பிரம்மரிஷிகளால் நிறைந்த அந்தக் குடிலை {கசியபாஷ்ரிமத்தை} அடைந்ததும் அவர்கள் வேத கல்வியில் ஈடுபட்டு அதிதியின் கருத்தரிப்புக்காகக் காத்திருந்தனர்.{17} தேவர்களின் அன்னையான அதிதி, பெருஞ்சக்தி வாய்ந்த அண்ட ஆன்மாவான அந்தப் பரமனை ஆயிரம் தேவ வருடங்கள் தன் கருவறையில் கொண்டிருந்தாள்.{18} ஆயிரமாவது வருடம் நிறைவடைந்ததும் தேவர்களைப் பாதுகாப்பவனும், அசுரர்களை அழிப்பவனுமான மகனை அவள் பெற்றெடுத்தாள்.{19} அந்தத் தலைவன் கருவறையில் வாழ்ந்தபோது மூவுலகங்களின் சக்தியை ஈர்த்துத் தேவர்களைக் காத்தான். தேவர்களின் தலைவனும், மூவுலகங்களின் இன்பமும்,{20} தைத்தியர்களின் அச்சமும், தேவர்களின் மகிழ்ச்சிய அதிகரிப்பவனுமான அந்தத் தலைவன் பிறந்தபோது தேவர்கள் அனைவரும் அச்சத்தில் இருந்து விடுபட்டனர்” என்றார் {வைசம்பாயனர்}.(15-21)

வாமன அவதாரம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 45-(வாமநப்ராதுர்பாவ꞉)-வாமனனாகப் பிறந்த விஷ்ணு; இந்திரனின் வேண்டுதல்; பலியின் வேள்விக்கு வாமனானை அழைத்துச் சென்ற பிருஹஸ்பதி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அந்தத் தேவன் பிறந்த போது ஏழு குடிமுதல்வர்கள் {பிரஜாபதிகளும்}, மரீசியும் பிறரும், சப்தரிஷிகளும் அவனை வணங்கினர்.{1} பரத்வாஜர், கசியபர், கௌதமர், விஷ்வாமித்ரர், ஜமதக்னி, வசிஷ்டர், முழுமையாக மேகத்தால் மறைக்கப்படும்போது தோன்றும் சூரியன், தலைவர் அத்ரி ஆகியோர் அங்கே வந்தனர்.{2} மரீசி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது, குடிமுதல்வன் தக்ஷன் ஆகியோர் அவனை வணங்கினர்.{3} ஔர்வர், வசிஷ்டரின் மகனான ஸ்தம்பர், காசியபர், கபீவான், அகபீவான், தத்தோநி, சியவனர்,{4} வாசிஷ்டர்கள் என்ற பெயரைக் கொண்ட வசிஷ்டரின் பிற மகன்களான எழுவர், ஹிரண்யகர்பனின் மகனும், பெருஞ்சக்திவாய்ந்தவருமான ஔர்வஜாதர்,{5} கார்க்கியர், பிருது, அகிரயர், ஜன்யர், வாமனர், தேவபாஹு, யதுதரர், சோமஜர், பர்ஜன்யர்,{6} ஹிரண்யரோமர், வேதசிரஸ், சத்யநேத்ரர் {சப்தநேத்ரர்}, நிம்பர், அதிநிம்பர், சியவனர், சுதாமர், விரஜர்,{7} அதிநாமர், ஸஹிஷ்ணு ஆகியோர் அவனை வணங்கினர்.

பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ஒளிரும் மேனியைக் கொண்ட அப்சரஸ்கள்,{8} நாராயணனின் முன்பு நடனம் புரிந்தனர். கந்தர்வர்கள் வானில் எக்காளமிசைத்தனர்.{9}(1-9) தும்புரு, பிற கந்தர்வர்களுடன் சேர்ந்து பாடத் தொடங்கினான். மஹாஸ்ருதி, சித்திரசிரன், ஊர்ணாயு, அநகன்,{10} கோமாயு, சூர்யவர்சாஸ், சோமவர்சாஸ், யுகபன், திருணபன், கார்ஷ்ணி, நந்தி, சித்திரரதன்,{11} {திரிசிரஸ், திரயோதஸ்}, சாலிஷிரன், பர்ஜன்யன், கலி,{12} நரேந்திரன், ஹாஹா, ஹுஹூ, பெரும்பிரகாசம் கொண்ட கந்தர்வனான ஹம்சன் ஆகியோர் கேசவனின் முன்பு பாடத் தொடங்கினர்.{13}

நீண்ட விழிகளைக் கொண்டவர்களும், மங்கலக் குறிகள் அனைத்தையும் கொண்டவர்களும், பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அழகிய அப்சரஸ்கள் அங்கே நடனமாடத் தொடங்கினர்.{14,15} சுமத்யை, சாருமத்யை, பிரியமுக்கியை, அழகிய அநூகை, ஜாமீ, மிஷ்ரகேசி, அலம்புசை,{16} மரீசி, சூசிகை, வித்யுத்பர்ணை, திலோத்தமை, அத்ரிகை, லக்ஷ்மனை, ரம்பை, {மநோரமை},{17} அழகிய அசிதை, சுபாஹு, சுபாகை, ஊர்வசி, சித்திரலேகை, சுக்ரீவை, சுலோசனை,{18} புண்டரிகாஸுகந்தை,{19} சுரதை, பிரமாதினி, நந்தை, சாரஸ்வதி,{19} மேனகை, ஸஹஜன்யை, பர்ணிகை, புஞ்ஜிகஸ்தலை ஆகியோரும் இன்னும் ஆயிரக்கணக்கான பிற அப்சரஸ்களும் அங்கே நடனம் புரிந்தனர்.{20}

காசியேபர்களும், சூரியப்பிரகாசம் கொண்டவர்களுமான தாதன், ஆர்யமான், மித்ரன், வருணன், அம்சன், பாகன், இந்திரன், விவஸ்வான், பூஷன், துவஷ்டா, சவிதன், விஷ்ணு ஆகிய பனிரெண்டு ஆதித்யர்களும் அந்த உயரான்ம தேவர்களின் தலைவனை வணங்கினர்.{21,22} ஓ! மன்னா {ஜனமேஜயா}, மிருகவியாதன், சர்ப்பன், பெருஞ்சக்திவாய்ந்த நிர்ருதி, அஜைகபாத், அஹிர்புத்நியன், பினாகி, அபராஜிதன், தஹனன், ஈஷ்வரன், கபாலி, ஸ்தாணுபர்கன் ஆகிய ருத்திரர்கள் அங்கே இருந்தனர். அசுவினி இரட்டையரும், அஷ்டவசுக்களும், பெருஞ்சக்திவாய்ந்த மருத்துகளும்,{23-25} விஷ்வேதேவர்களும், சாத்தியர்களும் என அனைவரும் கரங்களைக் கூப்பியபடி அவன் முன்பு நின்றனர்.

சேஷனின் தம்பியான பெரும் வாசுகி,{26} {தக்ஷகன்}, அபுகுஞ்ஜன், திருதராஷ்டிரன், வலாஹன் ஆகியோரும், இன்னும் பெருஞ்சக்திவாய்ந்த, கோபக்கார, பிரகாசமிக்க நாகர்கள் அனைவரும் அவன் முன்பு கைகளைக் கூப்பியபடி நின்றனர். தார்க்ஷன், அரிஷ்டநேமி, பெருஞ்சக்திவாய்ந்த கருடன்,{27,28} அருணன், அருணி ஆகியோர் அனைவரும் கைகளைக் கூப்பியபடி அவன் முன்பு நின்றனர். உலகத்தின் படைப்பாளன் {பிரம்மன்}, பெரும் குடிமுதல்வர்கள் அனைவருடன் அங்கே வந்து பேசினான்.{29}(10-29)

பிரம்மன், “உலகங்கள் அனைத்தும் எவனிடம் இருந்து வெளிப்பட்டனவோ அந்தப் பெருஞ்சக்திவாய்ந்த நித்திய தலைவனான விஷ்ணு இவன்” என்றான்.{30} தலைவன் பிரம்மன் இதைச் சொல்லி, தேவரிஷிகளுடன் சேர்ந்து அந்தத் தேவர்களின் மன்னனை வணங்கிவிட்டு, தேவலோகத்திற்குத் திரும்பிச் சென்றான்.{31}

தலைவன் {விஷ்ணு}, கசியபரின் மகனாகப் பிறந்த போது, பயங்கரநாளின் மேகங்களைப் போலக் குருதிச் சிவப்பான கண்களுடன் குள்ள {வாமன} வடிவில் இருந்தான்.{32} அவனுடைய மார்பில் ஸ்ரீவத்சமெனும் மாயக்குறி இருந்தது. அப்சரஸ்கள் விழிகள் விரிய அவனைக் கண்டனர்.{33} ஒரே நேரத்தில் வானில் எழுந்த ஆயிரஞ்சூரியர்களைப் போல அவன் பிரகாசித்தான்.{34} அந்த அழகிய தலைவன், பூர், புவ லோகங்களையும், பிற லோகங்களையும் ஆதரிப்பவனாக இருந்தான். அவன் உயர்ந்த தோள்களையும், தூய தலைமுடியையும் கொண்டிருந்தான்.{35} அவன் நல்லோரின் புகலிடமாகவும் {கதியாகவும்}, கொடூரர்களுக்கு உறைவிடமேதும் அளிக்காதவனாகவும் இருந்தான். பெரும் யோகிகள் அவனையே மிகச் சிறந்த யோகமாகக் கருதுகின்றனர்.{36} அவன் எட்டு வகைத் தலைமைத்துவ சக்திகளை {அஷ்டகுணங்களைக்} கொண்டிருந்தான். மக்கள் அவனைத் தேவர்களில் முதன்மையானவன் என்று அழைப்பார்கள்.{37} அந்த நித்திய புருஷனின் மூலம் முக்தியை அடைய ஏங்கும் விப்ரர்களும், உலகத்துக்கு அஞ்சுபவர்களும், பிறப்பு இறப்பில் இருந்து விடுபடுகிறார்கள்.{38} அனைத்து ஆசிரமங்களும் {வாழ்வுமுறைகளும்} அவனையே தபம் எனக் கொள்கின்றன. கடுந்தவம் பயின்றும், உணவைக் குறைத்தும் மக்கள் அவனுக்குத் தொண்டாற்றுகின்றனர்.{39}

ஆயிரந்தலைகளையும், சிவந்த கண்களையும் கொண்ட அனந்தனைப் போலச் சேஷனும், நாகலோகத்தைச் சேர்ந்த பிற நாகர்களும் அவனை வழிபடுகின்றனர்.{40} தேவலோகத்தை அடைய விரும்பும் விப்ரர்கள் அவனை யஞ்ஜமாக வழிபடுகின்றனர். எங்கும் இருந்தாலும் அவன் ஒருவனாகவே இருக்கிறான். மிகச் சிறந்த கவியான அவனை வேள்வி காணிக்கைகளை விதிப்பவனாக வேதங்கள் பாடுகின்றன. அறமே அவனது ஒளியாகத் திகழ்கிறது.{41} சூரியனும் சந்திரனும் அவனது கண்களாகவும், ஆகாயம் அவனது உடலாகவும் இருக்கின்றன.

எல்லாம்வல்லவனான அந்தத் தலைவன் தேவர்களில் மிகச் சிறந்த சொற்களில்,{42}(30-42) “அறிந்தும் என் யோக சக்தியின் மூலம் நான் இந்தச் சிறுவனின் நிலையை அடைந்திருக்கிறேன். தேவர்களே, நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? நான் வரமென்ன கொடுக்க வேண்டும்? நீங்கள் வேண்டுவதைச் சுகமாகக் கேட்பீராக” என்றான்.{43}

இந்திரனும், பிற தேவர்களும், அந்த உயரான்ம குள்ளனின் {சிறுவனின் / வாமனனின்} சொற்களைக் கேட்டு, அந்தக் கசியபரின் மகனிடம் கூப்பிய கைகளுடன்,{43} “அனைத்தையும் அறிந்தவனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனுமான தைத்திய மன்னன் பலி, பிரம்மனால் அவனுக்கு அளிக்கப்பட்ட வரத்தினாலும், செய்த தவத்தின் பலனாலும் விளைந்த ஆற்றல், தற்கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் மொத்த அண்டத்தையும் அடைந்திருக்கிறான். அவனை எங்கள் எவராலும் கொல்ல முடியாது. நீ மட்டுமே அவனை வெல்லவல்லவனாக இருக்கிறாய். வேறு எவராலும் அவனை வீழ்த்த முடியாது.{44-47} எனவே, ஓ! தலைவா, தேவர்களின் அச்சங்களை விலக்குபவனும், பக்தர்கள் விரும்புகிறவனும், வரங்களை அளிப்பவனுமான உன்னிடம் நாங்கள் அனைவரும் புகலிடம் நாடுகிறோம்.{48} ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, தேவர்களின் பெரும் மன்னா, ரிஷிகளின் நன்மைக்காகவும், உலகங்கள் அனைத்தின் நன்மைக்காகவும், கசியபர், அதிதி ஆகியோரின் நிறைவுக்காகவும்,{49} பித்ருகள் கவ்யத்தையும், தேவர்கள் ஹவ்யத்தையும் முறையாக உண்ணட்டும்.{50} தேவர்களின் பெரும் மன்னனான மஹேந்திரனிடம் மீட்டளிக்க மூவுலகங்களையும் மீண்டும் அடைவாயாக.{51} அந்தத் தானவன் ஒரு குதிரை வேள்வியைச் செய்து வருகிறான். எனவே, நீ உலகங்களை மீண்டும் அடையும் வழிமுறைகளைக் குறித்துச் சிந்திப்பாயாக” என்றனர்”.{52}(43-52)

வைசம்பாயனர், “தேவர்கள் இவ்வாறு சொன்னதும் குள்ள வடிவில் இருந்த விஷ்ணு, தேவர்களை மகிழ்ச்சியில் நிறைக்கும் வகையில் அவர்களிடம் பேசினான்.(53)

விஷ்ணு, “பேரொளி படைத்த ரிஷியும், அங்கிரசின் மகனும், வேதங்களை நன்கறிந்தவருமான பிருஹஸ்பதி, என்னை அவனது {மஹாபலியின்} வேள்விக்கு அழைத்துச் செல்லட்டும். நான் அவனுடைய வேள்விக்களத்திற்குச் சென்று மூவுலகங்களையும் மீட்பதற்குரிய வழிமுறையைச் சிந்திக்கிறேன்” என்றான்.(54,55)

அதன்பிறகு, பெரும்பிரகாசம் கொண்டவரும், நுண்ணறிவுமிக்கவருமான பிருஹஸ்பதி, எல்லாம்வல்லவனான அந்தக் குள்ளனை {வாமனனை}, பேரறிவுசார்ந்த சக்திகளைக் கொண்ட தைத்திய மன்னன் பலியின் வேள்விக் களத்திற்கு அழைத்துச் சென்றார்.{56} சிறுவனின் வடிவை ஏற்ற அந்தக் குள்ளன் {வாமனன்}, புகைபோன்ற கண்களைக் கொண்டிருந்தான், பளபளக்கும் பூணூலையும், மான்தோலையும் அவன் அணிந்திருந்தான். அவன் {வாமனன்}, ஒரு கையில் குடையையும், மறு கையில் தண்டத்தையும் கொண்டிருந்தான்.{57} சிறுவனாக இருந்தாலும் அவன் முதிய மனிதனைப் போலத் தோற்றமளித்தான்.{58} பிரம்மனாலும், பிற தேவர்களாலும் தியானிக்கப்படுபவனும், குடிமுதல்வர்களின் {பிரஜாபதிகளின்} தலைவனும், சூரர்களில் முதன்மையானவனுமான அவன், தைத்திய மன்னன் விரோசனனுடைய மகனான பலியின் வேள்விக் களத்திற்கு இவ்வாறே சென்றான்.{59,60}(56-60) ஆயுதமும், கவசமும் தரித்த தைத்தியர்களால் உரிய முறையில் வாயில் காக்கப்பட்டாலும் அவன் திடீரென அங்கே நுழைந்தான்.(61) பெருஞ்சக்திவாய்ந்தவனான அந்தக் குள்ளன் {வாமனன்}, மந்திரங்கள் ஓதுவதை நன்கறிந்த புரோஹிதர்களால் முற்றும் சூழப்பட்ட தைத்திய தானவன் மன்னன் பலியின் முன்பு தோன்றினான்.(62) அந்தத் தலைவன், பிரம்மரிஷிகளால் நிறைந்த வேள்விக்களத்தை அடைந்து, யஞ்ஜத்தோடு அடையாளங்காணப்படுபவனாகத் தன்னை விளக்கிக் கொண்டான்.{63} யஞ்ஜமே ஆனவனும், வேள்விச் சடங்குகளின் தலைவனுமான அந்த நித்திய புருஷன், வேள்வியைக் குறித்து விரிவாக விளக்கிவிட்டு, பல்வேறு மேற்கோள்களையும் சொல்லி சுக்ரரையும் {சுக்ராச்சாரியாரையும்}, பிற புரோகிதர்களையும் வென்றான்.{64} அவர்கள் எவராலும் எந்தப் பதிலையும் முன்வைக்க முடியவில்லை. எல்லாம் வல்ல தலைவன், வேதங்களில் விதிக்கப்பட்ட காரணங்களையும், வாதங்களையும் அற்புதம் நிறைந்த வாக்கால் எடுத்து வைத்து, தன்னையே அந்த வேள்வியாகப் பலியிடம் விளக்கிச் சொன்னான்.{65,66}

விரோசனின் மகனான பலி, குள்ளவடிவில் இருந்தவனும், பெரும்பிரகாசம் கொண்டவனுமான அந்தச் சிறுவனின் வாதத்தைக் கேட்டு பெரியோரான ரிஷிகளும், உபாத்யாயர்கள் {ஆசான்களும்} அமைதியடைந்ததைக் கண்டு அதை அற்புதமென நினைத்தான்.{67,68} ஆச்சரியத்தால் நிறைந்த அவன், தலைவணங்கி கைகள் கூப்பியவனாக, “எங்கிருந்து வருகிறீர்? நீர் யார்? நீர் யாருடைய மகன்? இங்கே உமக்கு என்ன தேவை? இத்தகைய நுண்ணறிவுமிக்க, அழகான, நல்ல தோற்றமுடைய, ஆன்மப் பண்பாட்டைக் கொண்ட,{69,70} வேதங்களை நன்கறிந்த அழகிய பிராமணச் சிறுவனை இதற்கு முன்பு ஒருபோதும் நான் கண்டதில்லை. தேவர்கள், ரிஷிகள், நாகர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், ராட்சசர்கள்,{71} பித்ருக்கள், சித்தர்கள், கந்தர்வர்கள் ஆகியோரில் எவரும் இத்தகைய மகனைக் கொண்டிருக்கவில்லை. நீர் யாராக இருந்தாலும் உம்மை நான் வணங்குகிறேன். நான் உமக்குச் செய்ய வேண்டியதென்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்றான் {பலி}.(63-72)

பலியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், உகந்த வழிமுறைகளை அறந்தவனும், எவராலும் உணரமுடியாத இயல்பைக் கொண்டவனுமான அந்தக் குள்ளன், சற்றே புன்னகைத்துப் பேசத் தொடங்கினான்.(73)

பலியின் உறுதிமொழி | பவிஷ்ய பர்வம் பகுதி – 46-(வாமநஸ்ய பலியஜ்ஞே கமநம் த்ரிபாதபூமிலாப꞉ த்ரிவிக்ரமமூர்திதாரணம் ச)மூன்றடி நிலம் கேட்ட வாமனன்; பலியைத் தடுத்த சுக்ரரும், பிரகலாதனும்; கொடையளித்த பலி; வாமனனின் திரிவிக்கிரம விஷ்வரூபம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அப்போது விஷ்ணு {குள்ள வடிவில் இருந்த வாமனன்}, “அசுரர்களின் மன்னனால் {மஹாபலியால்} மேற்கொள்ளப்படும் இந்த வேள்வி அற்புதம் நிறைந்ததாக இருக்கிறது. நன்கு தயாரிக்கப்பட்ட பல்வேறு வகை உணவுப்பொருட்கள் இங்கிருக்கின்றன. ஓ! பெருஞ்சக்திவாய்ந்த தானவ மன்னா, பெரும்படைப்பாளனான பிரம்மன், தேவர்களின் மன்னனான சக்ரன், யமன், வருணன் ஆகியோர் செய்த வேள்விகளை எல்லாம் உன் வேள்வி விஞ்சிவிட்டது.(1-2) பாவங்களை அழிக்க உன்னால் மேற்கொள்ளப்படுவதும், சொர்க்கத்தை அடைய வழிவகுப்பதும், வேள்விகள் அனைத்திலும் சிறந்ததுமான இந்தக் குதிரைவேள்வி, பிரம்மவாதிகளால் அங்கீகரிக்கப்படுபவையும், விருப்பத்திற்கு உரியவையுமான அனைத்துப் பொருள்களாலும் நிறைந்திருக்கிறது.{3,4} 

வேள்விகளில் சிறந்தது அஷ்வமேதமே என ஸ்ருதி சொல்கிறது. பொற்கொம்புகளுடனும், இரும்புவளையங்களுடனும் கூடியதும், மனம் போன்ற வேகமான நடையைக் கொண்டதுமான பன்றியின் வடிவில் இருப்பதும், ஏராளமான தங்கத்தைக் கொண்டதுமான இந்தப் பெரும் வேள்வி அண்டத்தின் பிறப்பிடமாகவும், புனிதம் நிறைந்ததாகவும் இருக்கிறது.{5} இந்த வேள்வியைச் செய்து வேள்வி குதிரையைச் செலுத்தும் மனிதனின் பாவங்கள் அழிகின்றன. வேதங்களை நன்கறிந்த விப்ரர்கள், இந்த வேள்விக் குதிரையை நெருப்பென அழைக்கிறார்கள்.{6} ஆசிரமங்கள் அனைத்திலும் இல்லற ஆசிரரமே {கிருஹாஸ்ரமமே} சிறந்ததாக இருப்பதைப் போலவும், மனிதர்களில் சிறந்தவர்களாகப் பிராமணர்கள் இருப்பதைப் போலவும், அசுரர்களில் முதன்மையானவனாக நீ இப்போது இருப்பதைப் போலவும் வேள்விகளில் சிறந்த இந்தக் குதிரை வேள்வியும் இருக்கிறது” என்றான் {வாமனன்}”.{7}

வைசம்பாயனர், “தைத்திய மன்னன் பலி, குள்ளனின் {வாமனனின்} சொற்களைக் கேட்டுப் பெரும் நிறைவடைந்தான்.{8}(3-8) அப்போது பலி, “ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, நீர் யார்? உமக்கு என்ன வேண்டும்? நான் உமக்கு என்ன கொடுக்க வேண்டும்? உமக்கு நன்மை நேரட்டும். நீ விரும்பிய பொருளை வேண்டினால் அதை நீர் அடைவீர்” என்றான்.(9)

குள்ளன் {வாமனன்}, “ஓ! தானவா, அரசையோ, வாகனங்களையும், ரத்தினங்களையோ, பெண்களையோ நான் வேண்டவில்லை. நீ நிறைவடைந்தால், உன் மனம் அறத்தில் நிலைத்திருந்தால், என் ஆசானின் வேள்வி இல்லத்தைக் கட்டுவதற்காக மூன்று காலடிகளில் மறையும் {அளக்கப்படக்கூடிய} நிலத்தை நான் உன்னிடம் வேண்டுகிறேன். நான் வேண்டும் உயர்ந்த பொருளை எனக்கு அளிப்பாயாக” என்று கேட்டான்.(10,11)

பலி, “ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, மூன்று காலடிகளில் மறையும் {அளக்கப்படும்} நிலத்தால் நிறைவேறும் உமது நோக்கமென்ன? நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அடிகளைக் கொண்ட நிலத்தை வேண்டுவீராக” என்று சொன்னான்.(12)

சுக்கிரர் {மஹாபலியிடம்}, “ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, ஓ! பேரசுரா, இவனுக்குக் கொடையேதும் உறுதியளிக்காதே; இவனை நீ அறியமாட்டாய். இவனே பெருந்தலைவன் ஹரியாவான்.{13} இவன் தன் மாயையின் மூலம் குள்ள வடிவை ஏற்று, உன்னைக் கொண்டு தேவர்களின் மன்னனுக்கு நன்மை விளைவிக்கவே இங்கு வந்திருக்கிறான். எல்லாம் வல்ல தலைவனால் பல்வேறு வடிவங்களை ஏற்க முடியும்” என்றார்.{14}(13,14)

சுக்கிரரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், சிறிது நேரம் தியானித்த பலி, பிறகு தன் மனத்தில் ஒரு தீர்மானத்தை அடைந்து, “இவரைவிடத் தகுதியானவரை என்னால் வேறெங்கு பெற முடியும்” என்று சொல்லி பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தான். பிறகு பொன்னாலான புல்லை எடுத்து அசைவற்றவனாக அங்கே நின்றான்.{15}

பிறகு பலி, “ஓ! தாமரைக் கண்களைக் கொண்ட விப்ரர்களில் முதன்மையானவரே, அமர்வீராக. இதோ கிழக்கு நோக்கி நான் நிற்கிறேன். “கொடுப்பாயாக” என்று சொல்லி என் கொடையை ஏற்பீராக.{16} எந்த நிலங்களை நீர் எடுத்துக் கொள்ளப் போகிறீர். உமது மூன்று காலடியின் பரப்பு எவ்வளவு? அதை நான் கொடுப்பேன். நீரை எடுப்பீராக. உமது ஆசானின் சொற்கள் பொய்க்காதிருக்கட்டும்” என்றான்.{17}(15-17)

சுக்கிரர், “ஓ! தைத்திய மன்னா, இவனுக்குக் கொடையேதும் அளிக்காதே. நிச்சயம் இவன் விஷ்ணுவே என்பதை நான் அறிவேன். அற்புதமான பக்தி இங்கே பொருந்தி அமைவதேன்?” என்றார்.{18}

பலி, “நான் வஞ்சிக்கப்படவில்லை. தலைவன் விஷ்ணுவே என் வேள்விக்கு வந்திருக்கிறான். இந்தத் தேவதேவன் என்னிடம் கேட்பவை எதையும் நான் கொடுப்பேன்.{19} நான் கொடையளிக்க விஷ்ணுவை விடத் தகுந்தவன் வேறு எவன்?” என்று சொன்னான். பலி இதைச் சொல்லிவிட்டு உடனேயே நீரை எடுத்துக் கொண்டான்.{20}(18-20)

குள்ளன் {வாமனன்}, “ஓ! தானவர்களில் பாவமற்ற மன்னா, என் மூன்று காலடிகளில் மறையும் நிலம் எனக்குப் போதுமானதாக இருக்கும். நான் ஏற்கனவே சொன்னது உண்மைதான். அஃது ஒருபோதும் வேறுவகையாகாது” என்றான்”.(21)

வைசம்பாயனர், “பகைவரைக் கொல்பவனும், விரோசனின் மகனும், தைத்தியர்களின் மன்னனுமான பலி, பெரும்பிரகாசமிக்கக் குள்ளனின் சொற்களைக் கேட்டு அவனது மேனியில் ஒரு மான்தோலைப் போர்த்தினான்.{22} பிறகு “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி நீர் நிறைந்த குடுவையொன்றைத் தீண்டினான்.{23} குள்ளனும் {வாமனனும்}, அசுர மன்னனின் அழிவை விரும்பி, அழிவைத் தரும் தன் கைகளை நீட்டினான்.{24} தானவர்களின் மன்னன் கிழக்கு நோக்கி நின்று, அவனிடம் நீரைக் கொடுக்க எத்தனித்தபோது பிரஹ்லாதன் அவனைத் தடுத்தான்.{25}

பெரும் ஞானியான பிரஹ்லாதன், அசுரர்களின் செழிப்பைக் கொள்ளையடிக்க விரும்பும் பெரும் ஹரியின் எதிர்பாராத வடிவைக்கண்டு,{26} “இந்தக் குள்ள பிராமணனுக்கு கொடையேதுமளிக்காதே.{27} இவனே முன்பு உன் பெரும்பாட்டனை {ஹரிண்யகசிபுவைக்} கொன்றவன். பெரும் ஞானியான இந்த விஷ்ணு உன்னைப் பழிதீர்க்கவே வந்திருக்கிறான்” என்றான்.{28}(22-28)

பலி, “இந்தத் தேவனுக்குக் கொடைகளை அளிக்கவல்லவனாக நான் இருப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.{29} அண்டத்தின் தலைவனும், பிரம்மனுக்கும் மேலானவனும், இத்தகைய ஆதரவைக் காட்டுபவனுமான இவனை என் கொடைகளின் இலக்காகவே நான் அடைந்திருக்கிறேன். ஓ! அசுரர்களில் முதன்மையானவரே, வேள்விக்கான தீக்ஷை பெற்றவன் நிச்சயம் கொடைகளை அளிக்க வேண்டும்” என்றான்.{30}

அசுரர்களின் மத்தியில் இவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்ட விரோசனன் மகன் பலி, தலைவன் நாராயணனுக்கு மூன்றடி நிலத்தைக் கொடையாக அளித்தான்.{31}

பிரஹ்லாதன், “ஓ! தானவர்களின் மன்னா, இந்த விப்ரனுக்கு கொடையேதுமளிப்பதாக உறுதியளிக்காதே. இவனை விப்ர இளைஞனாக நான் கருதவில்லை. ஒரு பிராமணன் இவ்வாறு இருக்க மாட்டான்.{32} இவனது வடிவைக் கண்டு நரசிங்கமே மீண்டும் திரும்பிவிட்டதாக உண்மையாகவே நான் நம்புகிறேன்” என்றான்.{33}

பலி, எல்லையற்ற ஆற்றல் கொண்ட பிரஹ்லாதனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அவனை நிந்திக்கும் வகையில்,{34}(29-34) “பிச்சை வேண்டுபவரின் கெடுபேறானது {துரதிர்ஷ்டமானது}, அவனை ஏமாற்றத்துடன் அனுப்பும் அரசனை வந்தடையும்.{35} ஒரு பிராமணனுக்கு உறுதிமொழியளித்த மனிதன், அதை நிறைவேற்றவில்லை என்றால், பாவியான அவன் தன் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுடன் நரகத்தை அடைவான்.{36} வறுமையில் வாட அஞ்சியே நான் இந்த நிலத்தை இவருக்குக் கொடையளிக்கிறேன்; இவரை விட வேறு யார் தகுந்த பிராமணர்? இவரைவிட மேலான எவரும் இல்லாதபோதே நான் இந்த நிலத்தை இவருக்குக் கொடுக்கிறேன்.{37} குள்ள வடிவில் என்னிடம் பிச்சை வேண்டும் இருபிறப்பாளரைக் கண்டு நான் பெரிதும் நிறைவடைகிறேன். எனவே நான் இவருக்குக் கொடையளிக்கப் போகிறேன். என்னைத் தடுக்காதீர்” என்றான்.{38}

மீண்டும் பலி அந்தக் குள்ள பிராமணனிடம், “ஓ! அற்ப புத்தி கொண்டவரே, மூன்று காலடிகளில் மறையும் நிலத்தைக் கொண்டு நீர் என்ன செய்வீர்? பெருங்கடல்களால் சூழப்பட்ட மொத்த உலகையும் நான் உமக்கு அளிப்பேன்” என்றான்.{39,40}

குள்ளன் {வாமனன்}, “ஓ! தானவர்களின் முதன்மையானவனே, நான் மொத்த பூமியை வேண்டவில்லை. மூன்று காலடிகளில் மறையும் நிலத்தில் நான் நிறைவடைகிறேன். இதுவே நான் விரும்புவதும், வேண்டுவதுமாகும்” என்றான்”.{41}(35-41)

வைசம்பாயனர், “தானவ மன்னன் பலி, “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி, அளவற்ற ஆற்றல் படைத்த தலைவன் நாராயணனின் மூன்று காலடிகளில் மறையும் நிலத்தைத் தீண்டச் செய்தான்.{42} அவனுடைய கை நீரில் நுழைந்தபோது, குள்ளனான அந்தத் தலைவன், தான் அவமதிக்கப்பட்டதாகக் கருதி தன் அண்ட வடிவை வெளிப்படுத்தினான்.{43}

பூமி அவன் பாதங்களானது, வானம் அவனது தலையானது, சூரியனும், சந்திரனும் அவனது கண்களாகினர், பிசாசங்கள் அவனுடைய பாதங்களின் விரல்களாகின, குஹ்யர்கள் அவனது கைகளின் விரல்களாகினர்.{44} விஷ்வேதேவர்கள் அவனுடைய தொடைகளில் இருந்தனர், சாத்யர்கள் அவனுடைய கால்மூட்டுகளில் இருந்தனர், யக்ஷர்களும் அப்சரஸ்களும் அவனது நகங்களில் இருந்து வெளிப்பட்டனர்.{45} மின்னல் அவனது பார்வையானது, சூரியனின் கதிர்கள் அவனது தலைமுடியானது, நட்சத்திரங்கள் அவனது மேனியில் உள்ள முடிகளின் துளைகளாகின {ரோம்பாணிகளாகின}, மஹாரிஷிகள் அந்த முடிகளாகினர் {ரோமங்களாகினர்}.{46} அசுவினி ரெட்டையர்கள் அவனது கால்கள் இரண்டாக இருந்தனர், பெருஞ்சக்திவாய்ந்த வாயு அவனது மூக்கானான். திசைகள் அவனது கைகளாகின, துணைத்திசைகள் அவனது காதுகளாகின.{47} சந்திரன் அவனது மகிழ்ச்சியானான் {பிரசாதமானான்}, அறம் அவனது மனமானது {மனோதர்மம்}, வாய்மை அவனது வாக்கானது, ஸரஸ்வதி தேவி அவனது நாவானாள்,{48} பெருந்தேவி அதிதி அவனது கழுத்தானாள், பிரகாசமிக்கச் சூரியன் அவனது தொண்டையானான், சொர்க்கவாசல் அவனது உந்தியானது, மித்ரர்களும், துவஷ்டாவும் அவனது புருவங்கள் இரண்டாகினர்,{49} நெருப்பு {வைஷ்வாநரன்} அவனது முகமானான், பிரஜாபதி அவனது விரைகளானான் {விருஷணங்களானான்}, பிரம்மன் அவனது இதயமானான், கசியபர் அவனது ஆண்குறியானார்.{50} வாசவன் அவனது பின்பகுதியானான் {பிருஷ்டமானான்}, மருத்துகள் அவனது கைமூட்டுகளாகினர். வேதங்கள் அவனது இருப்பாகவும், ஒளி அவனது பிரகாசமாகவும்,{51} ருத்திரன் {மஹாதேவன்} அவனது மார்பாகவும், பெருங்கடல் அவனது பொறுமையாகவும் ஆனார்கள், பெருஞ்சக்திவாய்ந்த கந்தர்வர்களும், நாகர்களும் அவனது வயிறாகினர்,{52} லக்ஷ்மி அவனது புத்தியானாள் {மேதைமையானாள்}, திருதி அவனது காந்தியானாள், கல்வி {வித்யை} அவனது இடையானது, ஆன்மாவின் இருக்கை அவனது நெற்றியானது.{53} ஒளிக்கோள்கள் அனைத்தும் {ஸர்வஜ்யோதிகள்} அவனது தபமாக அமைந்தன, தேவர்களின் மன்னனான சக்ரன் {தேவவ்ராட்} அவனது சக்தியானான், தேவர்கள், வேள்விகளின் இஷ்டி சடங்குகள், இருபிறப்பாளர்களின் பணிகள், விலங்குகள் ஆகியன அவனது மார்பாகவும், இருபுறங்களாகவும் ஆகின.{54,55} பேரசுரர்கள், விஷ்ணுவின் அந்த அண்ட வடிவைக் கண்டு பெருங்கோபத்தால் தூண்டப்பட்டனர். அவர்கள் நெருப்பை நோக்கிச் செல்லும் பூச்சிகளைப் போல அவனை அணுகினர்” என்றார் {வைசம்பாயனர்}.{56}(42-56)

வாமனஸ்தவம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 47-(விஷ்ணோராதேஷாத் பலே꞉ பாதாலப்ரவேஷ꞉ தத்க்ருதவிஷ்ணுஸ்தவ꞉ பலிம் ப்ரதி கருடஸ்ய உக்திப்ரத்யுக்தீ வாமநஸ்தவபலகதநம் ச)-போரில் தைத்தியர்களை அடக்கி பலியைப் பாதாளத்தில் கட்டிப்போட்ட விஷ்ணு; நாரதர் பலிக்குக் கற்பித்த விஷ்ணு துதியான வாமனஸ்தவம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “தானவர்களின் பெயர்கள், வடிவங்கள், சாதனைகள், முக்கிய ஆயுதங்கள் ஆகியவற்றை இனி கேட்பாயாக.{1} விப்ரசித்தி, சிபி, சங்கு, அயசங்கு, அயசிரன், அஷ்வசிரன், பெருஞ்சக்திவாய்ந்த ஹயக்ரீவன்,{2} {வேகவான்}, கேதுமான், உக்ரன், யுயோக்ரன், வியக்ரன், பேரசுரனான புஷ்கரன், புஷ்கலன், ஸ்வஷா, அஷ்வபதி,{3} பிரஹ்லாதன் {பிரஹ்ராதன்}, அஷ்வசிரன், கும்பன், ஸம்ஹ்ராதன், ககநப்ரியன், அனுஹ்ராதன், ஹரிஹரன், வராஹன், ஸம்ஹரன், அருஜன்,{4} விருஷபர்வன், விரூபாக்ஷன், முனீந்திரன், சந்திரலோசனன், நிஷ்பிரபன், சுப்ரபன், நிருத்ரன்,{5} ஏகவக்தரன், மஹாவக்தரன், திவிவக்தரன், சேரஸன் {காலஸம்நிபன்}, சரபன், {சலபன்}, குந்தன் {குணபன்}, குபதன் {குலபன்}, குவதன்,{6} மஹாகர்பன், சங்குகர்ணன், மஹாத்வனி, தீர்கஜிஹ்வன், அர்க்கவதனன், மிருதுசாபன் {மிருதுபாஹு}, மிருதுபிரியன்,{7} வாயு, கரிஷ்டன், நமுசி, சம்பரன், விக்ஷரன், சந்திரஹந்தன், குரோதஹந்தன், குரோதவர்தனன்,{8} காலகன், கலகாக்ஷன், விருத்ரன், குரோதவிமோக்ஷணன், கவிஷ்டன், ஹவிஷ்டன், பிரலம்பன், நரகன், பிருது,{9} சந்திரதாபனன், வாதாபி, கேதுமான், அஸிலோமன், விதோமன் {புலோமன்}, பாஸ்கலன், பிரமதன், மதன்,{10} சிருகாலவவனன், {கராலன்}, கேசி, ஏகாக்ஷன், பாகு, துஹுண்டன், ஸ்ருமலன், ஸ்ருபன் ஆகிய இவர்களும்,{11} பிற தைத்தியர்கள் பலரும் பாதங்களை வைக்க எத்தனித்த பெரும் விஷ்ணுவின் முன் தோன்றினார்கள்.{12}(1-12)

அவர்களில் சிலர் பாசக்கயிறுகளைக் கொண்டிருந்தனர், சிலர் தங்கள் வாயை அகல விரித்துக் கொண்டிருந்தனர், சிலர் கழுதையின் குரலைக் கொண்டிருந்தனர், சிலர் சதாக்னிகளைக் கொண்டிருந்தனர், சிலர் தங்கள் கைகளில் சக்கரங்களைக் கொண்டிருந்தனர், சிலர் வஜ்ரங்களையும்,{13} சிலர் தண்டங்களையும், சிலர் உலக்கைகளையும், சிலர் வாள்களையும், சிலர் பட்டிசங்களையும், சிலர் பரஷ்வதங்களையும், சிலர் பராசங்களையும், சிலர் கதாயுதங்களையும், சிலர் பரிகங்களையும்,{14} சிலர் பெருங்கற்களையும், சிலர் தங்கள் கைகளில் புஷலங்களையும் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் கரங்களில் மரங்களைக் கொண்டிருந்தனர், சிலர் விற்களையும்,{15} சிலர் கதாயுதங்களையும், சிலர் புஷுண்டிகளையும், சிலர் தங்கள் கைகளில் குத்துவாள்களையும் கொண்டிருந்தனர்.{16} பயங்கரம் நிறைந்தவர்களும், பெருஞ்சக்தி வாய்ந்தவர்களுமான தானவர்கள் பல்வேறு வகைகளில் உடைகள் பூண்டு, பல்வேறு ஆயுதங்களையும் தரித்திருந்தனர்.{13-17}

சிலர் ஆமைகளைப் போன்ற வாயைக் கொண்டிருந்தனர். சிலர் நீர்க்கோழிகளைப் போன்றும், சிலர் அன்னங்களைப் போன்றும், சிலர் கழுதைகளைப் போன்றும், சிலர் ஒட்டகங்களைப் போன்றும், சிலர் பன்றிகளைப் போன்றும்,{18} சில பயங்கரத் தானவர்கள் மகரங்களைப் போன்றும் வாய்களைப் படைத்திருந்தனர். முயல்கள், பூனைகள், கிளிகள், பசுக்கள், மான்கள், கருடன், வாள்கள், மயில்கள் போன்ற முகங்களைச் சிலர் கொண்டிருந்தனர்.{19,20} சிலர் குதிரைப் போன்ற வாயைக் கொண்டிருந்தனர், சிலர் யானை போன்ற வாயையும், சிலர் பல்வேறு ஆயுதங்களைப் போன்ற முகங்களையும் கொண்டிருந்தனர்.{21} அவர்கள் யானைத் தோலையும், மான் தோலையும் உடுத்தியிருந்தனர். அவர்களின் மேனிகள் மரவுரியால் மறைக்கப்பட்டிருந்தன. அவர்களில் சிலர் தங்களைப் பொன்னால் அலங்கரித்திருந்தனர். அந்த அசுரர்கள் மகுடங்களையும், குண்டலங்களையும் அணிந்திருந்தனர். அவர்கள் பல்வேறு உடைகளைத் தரித்துக் கொண்டு, பல்வேறு மாலைகளாலும், குழம்புகளாலும் தங்களை அலங்கரித்திருந்தனர்.{22-26} தானவர்கள் அசுரர்களும், எரியும் தங்கள் ஆயுதங்களை ஏந்தியபடியே, பாதத்தை வைக்க எத்தனித்த ரிஷிகேசனை எதிர்த்தனர்.{27}

மூவுலகங்களையும் வெல்ல இருந்த அந்த நேரத்தில் தலைவனின் பிரகாசம் சூரியனைப் போன்றிருந்தது. எல்லாம்வல்லவனான அந்தத் தலைவன், திதியின் மகன்கள் அனைவரையும் தன் உள்ளங்கையால் நொறுக்கிவிட்டு, தன்னுடைய மூன்று காலடிகளால் மூவுலகங்களையும் அடைந்தான். அவன் பெரும் வடிவை எடுத்ததும் முதலில் பூமியை அடைந்தான்;{28} அவன் பூமியை அடைந்ததும் சூரியனும், சந்திரனும் அவனுடைய இதயத்தில் இருந்தனர், அவன் வானத்தை அடைந்தபோது அவர்கள் அவனது இடையில் இருந்தனர், அவன் சொர்க்கத்தை அடைந்தபோது அவர்கள் அவனது கால்மூட்டுகளில் இருந்தனர்.{29}(13-29) ஒப்பற்ற ஆற்றல்படைத்தவனான விஷ்ணுவின் வடிவை இவ்வாறே இருபிறப்பாளர்கள் விளக்குகின்றனர்.{30} அண்டத்தால் துதிக்கப்படும் ஹரி, மூவுலகங்களையும் வென்று, முன்னணி அசுரர்களைக் கொன்றுவிட்டு, பூமியை தேவர்களின் மன்னனான இந்திரனுக்கு அளித்தான். பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு, பூமிக்கடியில் சுதலம் என்றழைக்கப்படும் பகுதியை பலிக்கு ஒதுக்கினான்.{31} அசுரர்களின் முதன்மையான பலி, அந்தப் பகுதியைத் தன் வசிப்பிடமாக அடைந்து நிறைவடைந்தான். அதுமுதல் அசுரர்களின் மன்னனான அவன் ரஸாதலத்தில் வாழ்ந்து வருகிறான்{32}. பெரும்பிரகாசமிக்கப் பலி, அங்கே வாழ்ந்து கொண்டே பெருந்தியானத்தில் ஈடுபட்டான். நுண்ணறிவுமிக்கப் பலி, அண்டத்தால் துதிக்கப்படும் நாராயணனிடம்,{33} “ஓ! தலைவா, நான் இனி என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பாக எனக்கு ஆணையிடுவாயாக” என்றான். அப்போது தேவர்களின் தலைவனான விஷ்ணு, தைத்திய மன்னன் பலியிடம் பேசினான்.{34}(30-34)

விஷ்ணு, “ஓ! பேரசுரா, நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன்; நான் உனக்கு ஒரு வரமளிக்கத் தயாராக இருக்கிறேன்; அதை வேண்டுவாயாக. உனக்கு நன்மை நேரட்டும். விரும்பிய பொருட்களை வேண்டுவாயாக.{35} தேவர்களின் மன்னனான சக்ரனின் {இந்திரனின்} சொற்களுக்கு ஒருபோதும் எந்தச் சூழ்நிலையிலும் கீழ்ப்படியாதிராதே. இஃது உனக்கான என் ஆணையாகும்.{36} நீ கீழ்ப்படியவில்லை எனில், உன் நலத்திற்குக் கேடு நேரும். ஓ! தைத்தியா, நீ அளித்த நீரை நான் என் உள்ளங்கைக் குழியில் ஏற்றதால், எங்கும் தேவர்களிடம் இருந்து உனக்கு அச்சம் நேராது.{37,38} பாதாள லோகத்தில் சுதலம் என்றழைக்கப்படும் பகுதியில் நீயும், உன் தொண்டர்களும், தைத்தியர்கள் அனைவரும் என் தயவில் வாழ்வீராக.{39} என் ஆணையை {சாஸனத்தை} நினைவுகூர்ந்து ஒப்பற்ற ஆற்றல் படைத்த சக்ரனின் சொற்களை ஒருபோதும் அவமதிக்காதே.{40} ஓ! பேரசுரா, தேவர்கள் அனைவரும் உன்னால் வழிபடத்தகுந்தவர்களாவர். நீ விரும்பிய பொருட்கள் அனைத்தையும் அடைவாய்; இம்மையிலும், மறுமையிலும் ஆடைகள் பலவற்றையும் அடைவாய். என் தயவால் எப்போதும் நீ தைத்தியர்களின் தலைவனாக அவர்களை ஆள்வாய். நீ பல்வேறு பொருள்களை அனுபவித்துக் கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்வாய்.{41,42} என்னுடைய ஆணையை நீ மீறினால் பெருஞ்சக்திவாய்ந்த நாகர்கள் தங்கள் தலைகளால் {நாகப் பாசத்தால்} உன்னைக் கட்டுவர்.{43} நீ எப்போதும் மஹேந்திரனையும், பிற தேவர்களையும் வணங்க வேண்டும். தேவர்களின் மன்னனான இந்திரன் என் அண்ணன் ஆவான்; எனவே நீ அவனது ஆணைக்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்றான்{44}.(35-44)

பலி, “ஓ! பெருந்தேவா, ஓ! சங்கு சக்கர, கதாதாரியே, ஓ! தேவர்களின் தேவா, ஓ! தேவாசுரர்களின் ஆசானே, ஓ! தேவர்களின் மன்னா, ஓ! தேவர்களில் முதன்மையானவனே, நான் பாதாள லோகத்தில் வாழும்போது என் நிலை என்னவாக இருக்கும்? நான் எவ்வாறு அங்கே வாழ்வேன்? என் புகழ் எவ்வாறு சிதையாமல் இருக்கும்?” என்று கேட்டான்.(45-46)

தலைவன் {பகவான்}, “ஓ! தானவர்களில் முதன்மையானவனே, ஸ்ரோத்ரியம் இல்லாத சிராத்தம், நோன்புகள் இல்லாத கல்வி, கொடைகள் இல்லாத வேள்வி, ரித்விக்குகள் இல்லாத ஹோமம், மதிப்பில்லாத கொடைகள், தூய்மையற்ற ஹவிஸ் என்ற இந்த ஆறு பாகங்களும் உனக்குச் சொந்தமாகும்.{47} என் பக்தர்களிடம் தீய மனம் கொண்டவர்களின் {பக்தத்வேஷிகளின்} அறம் {புண்ணியம்}, கிரய விக்கிரையத்தில் {கொள்முதல் செய்து விற்பனை செய்வதில்} ஈடுபடுபவர்களின் அறம் {புண்ணியம்}, அக்னிஹோத்ரங்களின் அறம், மதிப்பில்லாமல் ஈகை புரிவோரின் அறம், புரோஹிதராகச் செயல்படுகிறவர்களின் அறம் ஆகியவை, ஓ! தைத்தியர்களின் மன்னா, என் தயவால் உன் பங்காகும்” என்றான்”.{48}(47,48)

வைசம்பாயனர், “அசுரர்களில் முதன்மையான பலி, உயரான விஷ்ணுவின் சொற்களைக் கேட்டு, “அவ்வாறே ஆகட்டும்” என்றான்.{49} அவன், அந்தத் தேவனின் ஆணையை மேற்கொண்டு பாதாள லோகத்தில் நுழைந்தான்.{50}

அதே நேரத்தில் தேவர்களால் துதிக்கப்படும் தெய்வீகனான விஷ்ணு, {அந்த தெய்வீக அரசில்} பிரிவினைகளை {பாகங்களை} உண்டாக்கினான்.{51} அவன், கிழக்குப் பகுதியை ஒப்பற்ற ஆற்றல் படைத்த தேவர்களின் மன்னனுக்கும் {இந்திரனுக்கும்}, தெற்குப் பகுதியைப் பித்ருக்களின் மன்னனான பெரும் யமனுக்கும்,{52} மேற்குப் பகுதியை உயரான்ம வருணனுக்கும், வடக்குப் பகுதியை யக்ஷர்களின் மன்னனான குபேரனுக்கும் கொடுத்தான்;{53} பூமிக்கு அடியில் இருந்த பகுதியை நாகர்களின் மன்னுக்கும், மேலே இருந்த பகுதியை சோமனுக்கும் அளித்தான்.{54} பெருஞ்சக்திவாய்ந்தவனும், தேவர்களின் தலைவனும், மஹாரிஷிகளால் துதிக்கப்படுபவனுமான விஷ்ணு இவ்வாறு மூவுலகங்களையும் பிரித்துக் கொடுத்துவிட்டு தெய்வீக லோகத்திற்குச் சென்றான்.{55} அடக்கப்பட முடியாதவனான அந்தக் குள்ளன் {வாமனன்} புறப்பட்டுச் சென்ற பிறகு, தேவர்கள் அனைவரும், தங்கள் முன் நூறு வேள்விகளைச் செய்தவனை {இந்திரனைக்} கொண்டு மகிழ்ச்சியில் நிறைந்தனர்”.{56}(49-56)

வைசம்பாயனர், “கிருஷ்ணன், விரோசனன் மகனான பலியை ஏழு தலைகளைக் கொண்ட கம்பனன், அஷ்வதரன் முதலிய பாம்புகளால் கட்டிவிட்டுப் புறப்பட்டுச் சென்றான்.{57} தெய்வீக முனிவரான நாரதர், மேற்கண்ட விளைவால் துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்த அவனிடம் தாமாகவே வந்தார்.{58}(57-58) அவன் இவ்வாறு பீடிக்கப்பட்டதைக் கண்டு கருணையில் நிறைந்த அவர் {நாரதர்}, அந்தத் தானவ மன்னனிடம், {மோக்ஷ உபாயங்களைச் சொல்லும் பொருட்டு},{59} “உன்னை விடுவிக்கும் வழிமுறைகளை நான் கண்டடைகிறேன். ஓ! தைத்தியர்களின் மன்னா, தொடக்கமும் முடிவுமற்றவனும், நித்தியனும் சிதைவற்றவனும், தேவர்களின் தேவனுமான வாசுதேவனைத்{60} தூய இதயத்துடன் தியானிப்பாயாக; உன் மனத்தை அவனிடம் அர்ப்பணித்தால் நீ உடனே முக்தியை அடைவாய்” என்றார்.{61}(59-61)

அதன்பிறகு, அந்த விரோசனன் மகன் {பலி}, கைகளைக் கூப்பி நாரதரிடமிருந்து முக்தியை அடைவதற்கான வழிமுறைகளைக் கற்றறிந்தான்.(62) அந்தப் பேரசுரன் பலி, நாரதரால் பாடப்பட்ட தெய்வீகப் பாடலைக் கற்றறிந்து, பூமியை உயர்த்திய பெருந்தேவனின் பெயர்களை ஓதத் தொடங்கினான்.(63) {அவன்} “ஓம், நித்தியனும், எல்லையற்றவனுமான பெருந்தலைவனை வணங்குகிறேன். நீரில் கிடக்கும் பத்மநாபனான தெய்வீக விஷ்ணுவை வணங்குகிறேன்.{64} எழு வடிவங்களைக் கொண்ட சக்திகளுடன் கூடிய உடலை ஏற்று மூவுலகங்களிலும் படர்ந்தூடுருவி இருப்பவன் நீயே. ஓ! தலைவா, காலனின் காலன் நீயே. என்னை நீ விடுவிப்பாயாக {எனக்கு மோக்ஷம் அருள்வாயாக}.{65} வானம் சூரியனும், சந்திரனும் அற்றிருக்கும்போதும், வேள்விகளும், தபங்களும் வீழ்ச்சியடையும் போதும், அண்டத்தை மீண்டும் படைக்க நினைப்பவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ விடுவிப்பாயாக.{66} இருபிறப்பாளரில் முதன்மையான மார்க்கண்டேயர், உன்னில் பிரம்மன், ருத்திரன், இந்திரன், வாயு, அக்னி ஆகியோரையும், ஆறுகள், பாம்புகள், மலைகள் ஆகியனவற்றையும் கண்டார். என்னை நீ விடுவிப்பாயாக {எனக்கு மோக்ஷம் அருள்வாயாக}.{67} முந்தைய கல்பத்தில், உன் வயிற்றுக்குள் நுழைந்த மார்க்கண்டேய முனி, அசைவன, அசையாதன உள்ளிட்ட மொத்த அண்டத்தையும் அங்கே கண்டார். உன் சக்தியால் நீ என்னைக் காப்பாயாக.{68} உன் அறிவால் ஆதரிக்கப்படும் யோக சக்தியை அடைந்து தனியனாக மூவுலகங்களையும் படைத்து மீண்டும் யோகத்தில் ஈடுபடுபவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{69} நீரில் கிடந்த யோகத்துயிலை அனுபவித்து, மீண்டும் படைப்பைச் சிந்திப்பவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{70} வேள்விப் பன்றியின் வடிவை ஏற்று முன்னர்ப் பூமியை உயர்த்தியவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{71} தந்தங்களால் பூமியை உயர்த்திப் பித்ருக்களுக்கான மூன்று பிண்டங்களை விதித்தவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{72} தேவர்கள் ஹிரண்யாக்ஷனுக்குப் பயந்து தப்பித்து ஓடினாலும் அவர்களைக் காத்தவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{73} பெரும் வாயைக் கொண்ட ஒரு வடிவை ஏற்று, போரில் சக்கரத்தால் ஹிரண்யாக்ஷனின் தலையைக் கொய்ந்தவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{74} முன்னர் உன்னுடைய முழக்கத்தால் தைத்தியன் ஹிரண்யகசிபு தலையும், எலும்புகளும் நொறுங்கிக் கொல்லப்பட்டான். உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{75} முற்காலத்தில் பிரம்மனின் கண் எதிரிலேயே அவ்விரு தைத்தியர்களால் வேதங்கள் கொள்ளை போன போதும் அவற்றை மீட்டவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{76} ஹயசிரனின் வடிவை ஏற்று மது கைடபர் என்ற இரு தானவர்களையும் கொன்று பிரம்மனிடம் வேதங்களைத் திருப்பிக் கொடுத்தவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{77} தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், சித்தர்கள், உரகர்கள் ஆகியோரால் உன் எல்லையைக் காண இயலாது. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{78} வேதங்களை விளக்கிச் சொல்லும் அபாந்தரதமன் என்ற பெயரைக் கொண்ட மகனைப் பெற்றவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{79} ஓ! தலைவா, அக்னிஹோத்ரமும், பிற வேதச் சடங்குகளும், பித்ருக்களை மதித்துச் செய்யப்படும் வேள்விகளும், ஹவிஸ்களும் ஆகிய அனைத்தும் உன் புதிர்களே {ரஹஸ்யங்களே}. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{80} தீர்க்கதமஸ் ரிஷி, தம்முடைய குருவின் சாபத்தால் குருடாகப் பிறந்தாலும், உன் தயவால் தமது பார்வையை மீண்டும் பெற்றார். உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{81} ராகுவால் பீடிக்கப்படும் யானையான பரிதாபத்திற்குரிய உன் பக்தனை விடுவிப்பாயாக.(82} சிதைவற்றவன் நீயே, நித்தியன் நீயே, பிரம்மத்துக்கும், பக்தர்களுக்கும் அர்ப்பணிப்புள்ளவன் நீயே. தீய வழிகளில் செல்வோரைத் தண்டிப்பவன் நீயே. என்னை நீ காப்பாயாக.{83} சங்கு, சக்கரம், கதாயுதம், அம்பறாதூணி, சாரங்க வில், கருடன் ஆகியோரை நான் வணங்குகிறேன். அவர்கள் என் தளைகளில் இருந்து என்னை விடுவிக்கட்டும்” என்று வேண்டினான்[1].{84}

அப்போது, சங்கு, சக்கரம், கதாயுதம், {பத்மம்}அம்பறாதூணி, சாரங்கும், கருடன் ஆகியோர் தலைவனைத் தணிவடையச் செய்து, பலியை அவனது தளைகளில் இருந்து விடுவிக்கும்படி அவனை வேண்டினர்.{85}(64-85)

அப்போது தணிவடைந்த தலைவன், பாம்புகளை அழிப்பவனும், பறவைகளின் மன்னனுமான கருடனிடம், “பலியைத் தளைகளில் இருந்து விடுவிப்பாயாக” என்றான்.{86} ஒப்பற்ற ஆற்றல் படைத்த கருடன் தன் சிறகுகளை அடித்துப் பாம்புகளால் கட்டப்பட்டிருந்த பலி இருக்கும் பாதாள லோகத்திற்குச் சென்றான்.{87} கருடனின் வரவை அறிந்த பாம்புகள், பேரசுரன் பலியை விடுவித்து, வினதையின் மகன் {கருடன்} மீது கொண்ட அச்சத்தால் போகவதி நகரத்திற்குத் தப்பிச் சென்றனர்.{88} பாம்புகளை உண்பவனான கருடன், செழிப்பை இழந்த பலியிடம் சென்று, தலை குப்புற தியானித்துக் கொண்டிருந்தவனைக் கிருஷ்ணனின் தயவால் நாகபாசங்களில் இருந்து விடுவித்தான்.{89}

கருடன், “ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, ஓ! தானவர்களின் மன்னா, நீ தளைகளில் இருந்து விடுபட்டு, உன் பிள்ளைகளுடனும், நண்பர்களுடனும் பாதாள லோகத்தில் வாழ வேண்டும் என்பது உனக்கு அந்தப் பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு இட்டிருக்கும் ஆணையாகும்.{90} ஓ! தானவா, இவ்விடத்தில் இருந்து ஓர் அங்குலமும் நகர்ந்துவிடாதே. இந்த ஒப்பந்தத்தை நீ முறித்தால் உன் தலை நூறு துண்டுகளாகச் சிதறும்” என்றான்.{91}

பறவைகளின் மன்னனுடைய {கருடனின்} சொற்களைக் கேட்ட அந்தத் தானவன் {பலி}, “நான் அந்தப் பரமனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவேன்.{92} ஓ! பறவைகளின் மன்னா, நான் இங்கே மகிழ்ச்சியாக வாழும் வகையில் தலைவன் எனக்கான வாழ்வாதாரங்களை {ஜீவ்யோபாயங்களை} ஏற்பாடு செய்யட்டும்” என்றான்.{93}

பலியின் சொற்களைக் கேட்ட கருடன், “தலைவன் ஏற்கனவே உன் பராமரிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டான்.{94} புரோஹிதர்கள் {ரித்விக்குகள்} இல்லாமல் செய்யப்படும் வேள்விகளின் காணிக்கைகளிலும், தவ வழிமுறைகளை அறியாத நபர்களின் விதிமுறைகளிலும் உனக்கு உரிமை உண்டு.{95} தேவர்கள் அத்தகைய காணிக்கைகளை ஏற்பதில்லை. அத்தகைய வேள்விக் காணிக்கைகளால் ஊட்டம் பெற்று நீ இங்கே மகிழ்ச்சியாக வாழ்வாயாக” என்றான்”{96}.(92-96)

வைசம்பாயனர், “கசியபரின் மகனும், மூவுலகங்களையும் ஆதரிப்பவனுமான விஷ்ணு, பெருந்தோள்களைக் கொண்ட தானவர்களின் மன்னனுக்கு இந்தச் செய்தியை அனுப்பினான்.{97} பாவங்கள் அனைத்தையும் அழிக்கும் இந்தப் பாடலை மதிப்புடன் ஓதும் மனிதன், அனுபவிக்கும் கொடுமைகள் அழிந்து போகும்.{98} பசுவைக் கொன்றவன், அதன் விளைவால் உண்டாகும் பாவத்தில் இருந்து விடுபடுவான், ஒரு பிராமணனைக் கொன்றவனும் கூடத் தன் பாவங்களில் இருந்து விடுபடுவான். மகனற்ற மனிதன் மகனைப் பெறுவான். {இதை ஓதும்} கன்னிகை, தன் இதயம் விரும்பும் கணவனை அடைவாள்.{99}(97-99) பெண்ணானவள், கருவை ஈனும் வலியில் இருந்து விரைவில் விடுபட்டு ஒரு மகனைப் பெறுவாள். சாங்கிய யோகியான கபிலரும், முக்தியை விரும்பிய பிற ரிஷிகளும், இந்தப் பாடலை ஓதி பாவங்களில் இருந்து விடுபட்டு, மோக்ஷத்தின் இருப்பிடமான ஸ்வேதத்வீபத்திற்குச் சென்றனர். இந்தப் பாடல் {ஸ்தவம்} தெய்வீகப் பொருட்கள் அனைத்தையும் அருளும்.{100,101} உண்மையில், காலையில் விடியலில் எழுந்து தன்னைத் தூய்மை செய்து கொண்டு, கட்டுப்பாடு கொண்ட மனத்துடன் இதைப் படிக்கும் ஒரு மனிதன், தான் விரும்பும் அனைத்துப் பொருள்களையும் அடைகிறான்.{102} தலைவனின் குள்ள அவதாரமானது {வாமன அவதாரமானது}, வேதங்களை நன்கறிந்த விப்ரர்களால் விஷ்ணுவின் மகிமைமிக்கச் செயல்களை விளக்குவது என நினைவுகூரப்படுகிறது.{103} குள்ள அவதாரமெனும் இந்தத் தெய்வீகக் கருப்பொருளின் ஒவ்வொரு பர்வத்தையும் சொல்லும்போது மதிப்புடன் கேட்பவன், தன் பகைவர் அனைவரையும் வென்று, பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணுவைப் போலவே பெருஞ்சக்திவாய்ந்த மன்னனாவான். அவன், மாசற்ற புகழையும், ஏராளமான செல்வங்களையும், இன்பத்திற்குரிய பொருட்களையும் அடைவான்.{104,105} குள்ளன் பிடித்தமானவனாக இருப்பதைப் போலவே அவனும் அனைவரின் அன்புக்குரியவனாவான். அவனுடைய மகன்களும், பேரப்பிள்ளைகளும் பெருகுவார்கள், அவன் நோய்களில் இருந்து விடுபட்டு, அனைத்து சாதனைகளையும் செய்வான்.{106} இதைப் படிப்பவனிடம் தலைவன் ஜனார்த்தனன் நிறைவடைகிறான்; இதனால் அவன் விருப்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களையும் அடைகிறான். இவ்வாறே கிருஷ்ணத்வைபாயனர் {வியாசர்} சொல்லியிருக்கிறார்” என்றார் {வைசம்பாயனர்}[2].{107}(98-107)

புத்திர பிரார்த்தனை | பவிஷ்ய பர்வம் பகுதி – 48-(கிருஷ்ணம் ப்ரதி ருக்மிண்யா꞉ புத்ரப்ரார்தநாகதநம்)-கிருஷ்ணனிடம் பிள்ளை வரம் வேண்டிய ருக்மிணி; கைலாச மலையில் மஹாதேவனைச் சந்திக்கத் தீர்மானித்த கிருஷ்ணன்; பதரிகாசிரமத்தின் மகிமை…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஒரு காலத்தில் விஷ்ணுவும், தேவதேவனுமான பகவான் ஜனார்த்தனன், சங்கரனைச் சந்திக்கக் கைலாச மலைச் சிகரத்திற்குச் சென்றதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.(1) தத்துவங்களில் சிறந்தவர்களும், தவச் சக்தி கொண்டவர்களுமான நாரதர் உள்ளிட்ட பெரும் தவசிகள் பலரும், செந்நீல வண்ணனான மஹாதேவனை தரிசிக்கச் சென்றனர்.(2) விப்ரரே, அங்கே நீண்ட காலத்திற்கு முன்பு கேசவன் உத்தம தவம் செய்து தேவதேவனான சங்கரனை அர்ச்சித்து வழிபட்டான் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.(3) அங்கே ஆதி தேவர்களான அவ்விருவரும் {ஹரியும், சிவனும்} ஒருவரையொருவர் தரிசித்தனர். இந்திரனின் தலைமையிலான தேவர்களும் அங்கே சென்று சங்கரனையும், ஹரியையும் வழிபட்டனர்.(4)

மஹாதேவர்களான அவ்விருவரும் தனித்தனி வடிவங்களில் தோன்றினாலும் ஒருவரே என்றும், அவர்கள் ஒருவராயிருந்தாலும் பல்வேறு காலங்களுக்குரிய செயல்களைச் செய்வதற்கு வெவ்வேறு வடிவங்களை ஏற்றனர் என்றும், அண்டத்தைப் படைக்கும், காக்கும், அழிக்கும் காரணர்கள் இவ்விருவரே என்றும் சொல்லப்படுகிறது.(5) அவர்கள் பரஸ்பரம் ஒத்துழைத்து ஜகத்தை ஆளுகின்றனர் {என்றும் சொல்லப்படுகிறது}. கைலாச மலையில் அவ்விருவரும் சந்தித்தது எவ்வாறு என்ற கதையை எனக்கு உரைப்பீராக.(6) உயர்ந்த மஹாரிஷிகள் புருஷோத்தமர்களான அவ்விருவரையும் ஒன்றாகக் கண்டபோது என்ன செய்தனர்? இவை அனைத்தையும் எனக்கு விரிவாக உரைப்பீராக.(7) எங்கும் நிறைந்திருப்பவனும் {விஷ்ணுவும்}, எப்போதும் வெல்லும் உயர்ந்தவனும் {ஜிஷ்ணுவும்}, புராதனனுமான கிருஷ்ணன், பாம்புகளை ஆபரணங்களாக அலங்கரித்த சங்கரனை எவ்வாறு கைலாச மலையில் கண்டான் என்பதை எனக்கு விரிவாக உரைப்பீராக” என்று கேட்டான்.(8)

வைசம்பாயனர் சொன்னார், “மனிதர்களில் உத்தமனே, கிருஷ்ணன் எவ்வாறு கைலாச மலைக்குச் சென்றான்? அங்கே ரிஷபவாகனனும், தேவேசனுமான சங்கரனை எவ்வாறு கண்டான்? எவ்வாறு தவம் செய்தான்? அவ்வளவு முனிவர்களும் எவ்வாறு அங்கே சென்றனர்? என அனைத்தையும் சொல்கிறேன். கவனமாகக் கேட்பாயாக.(9,10) பகவானான துவைபாயனரிடம் {வியாசரிடம்} கேட்டது போலவே, கருட வாகனனான கேசவனை நமஸ்கரித்து, என் புத்திக்கு எட்டியதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(11) ஓ! மன்னா, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக. பக்திமானும், கல்விமானுமான ஒருவன், தொண்டு செய்யும் குணம் இல்லாதவர்களிடமும், கொடூரர்களிடமும், தவத்தை ஏற்காதவர்களிடமும், வேத கல்வியில் விருப்பம் இல்லாதவர்களிடமும் இதைச் சொல்லக்கூடாது. இவ்வுரையைக் கேட்பதன் மூலம் ஒருவன் சொர்க்கவாசத்தையும், செல்வத்தையும், தூய்மையான புத்தியையும் அடைவான்.(12,13)

இவ்விருவருக்கும் {விஷ்ணுவுக்கும், சிவனுக்கும்} இடையில் வேற்றுமையில்லை என்பது பக்திமான்கன் அனைவரின் தியான பொருளும், வேதத் தீர்மானமும் ஆகும். இந்த உண்மை உபநிஷதங்கள் பலவற்றில் சொல்லப்பட்டிருக்கிறது. வேதங்களை நன்கறிந்தவர்களும், தபோபலம் கொண்டவர்களும், நாரத முனிவரைப் போன்றவர்களுமான மஹாரிஷிகள் பலரும் விஷ்ணுவுடன் கூடிய சிவனின் அடையாளத்தை தியானிக்கிறார்கள்.(14,15) மங்கல ஆளுமைகளான விஷ்ணுவும், சிவனும் கைலாச மலையில் சந்தித்துக் கொண்ட அந்தக் கொண்டாடத்தக்க நிகழ்வு மிகப் புனிதமானதாகும். ஓ! மன்னா, நரகனைப் போன்ற பேரசுரர்கள் பலர் கொல்லப்பட்டு, மிகச்சிலரே எஞ்சியிருந்தபோது, விருஷ்ணி வழித்தோன்றல்களுடனும், தன் அன்புக்குரிய மனைவியான ருக்மிணி தேவியுடனும் சேர்ந்து ஜகன்னாதன் {கிருஷ்ணன்} பூமியை ஆண்டு வந்தான்.(16-18)

அப்போது ஓரிரவில் அந்த ஜகத்பதி {கிருஷ்ணன்}, தன் ராணியுடன் {ருக்மிணியுடன்} இன்புற்று மகிழ்ச்சியாக உறங்கிக் கொண்டிருந்தான்.(19) பொன்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ருக்மிணி தேவி தன் கணவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மாதவா, தேவேசரே, உம்மிடம் இருந்து ஒரு புத்திரனை அடைய நான் விரும்புகிறேன்.(20) பிரபுவே, அவன் உம்மைப் போலவே அழகிய வடிவம் கொண்டவனாகவும், பெருஞ்சக்திவாய்ந்தவனாகவும் இருக்க வேண்டும். தவச் சக்தியால் பேராற்றல் வாய்ந்தவனாக இருக்க வேண்டும், விருஷ்ணி வம்சத்தின் தலைவனாக அவன் அறியப்பட வேண்டும்.(21) சாத்திரங்கள் அனைத்தையும் கற்றவனாகவும், தன்னை உணர்ந்த ஞானிகளில் முதன்மையானவனாகவும் இருக்க வேண்டும். இக்குணங்களைக் கொண்ட ஒரு புத்திரனை எனக்கு அருள்வீராக.(22) நீரே கொடுப்பவர், படைப்பவர், அனுபவிப்பவர், நீரே ஜகத்பதி. எங்களுக்கு அனைத்தையும் தர வல்லவர் நீரே.(23) ஓ! கேசவரே, தேவேசரே, உமக்குத் தொண்டு புரிகையில் தங்கள் புத்தியை உம்மிலே நிலைக்கச் செய்யும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர் என்று நீர் நன்கறியப்பட்டிருக்கிறீர்.(24) ஓ! ஜனார்த்தனரே, ஜகத்பதியே, என்னை உமது பக்தையாக நீர் கருதினால், என்னிடம் நீர் கருணை கொண்டிருந்தால் பெருஞ்சக்திவாய்ந்த மகனை எனக்குக் கொடுப்பீராக” என்றாள் {ருக்மிணி}”.(25)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ருக்மியின் பகைவனும், யது குலத்தின் மகிமையும், தேவேசனும், யதுக்களின் தலைவனுமான கிருஷ்ணன், தன் மஹிஷியான ருக்மிணி இந்தக் கோரிக்கையை வைத்தபோது, “பாமிநியே {என் அன்புக்குரிய அழகிய பெண்ணே}, உன் கனவு புத்திரனை நான் உனக்குத் தருவேன்.(26,27) தேவி, நீ என் நித்திய பக்தையாக இருக்கிறாய். நம் பகைவரை அழிக்கும் புத்திரனை நான் உனக்குத் தருவேன்.(28)

ஓர் இல்லறத்தான் புத்திரனைக் கொண்டு தன் பகைவரை வெல்லலாம். நரகத்தின் மறுபெயர் புத் ஆகும்துக்கம் மற்றொரு வகை நரகமாகும்.(29) ஒரு புத்திரன் தன் பெற்றோரை புத் எனும் நரகில் இருந்து காக்கிறான். இம்மையிலும், மறுமையிலும் புத்திரனே ஆதாயம் என்பதால் அனைவரும் அவனை விரும்புகின்றனர். என் அன்புக்குரியவளே, புத்திரனைக் கொண்டவனுக்கு அனந்தலோகத்தின் கதவுகள் திறந்திருக்கும்.(30) கணவன் தன் மனைவியின் கருவறைக்குள் புகுந்து தானே புத்திரனாகிறான். அந்நேரத்தில் மனைவி அவனது மாதாவாகிறாள். பத்து மாதங்கள் கழிந்ததும், அவனே புதிய உடலுடன் கருவறையில் இருந்து வெளியே வருகிறான்.(31)

புத்திரவந்தனை {புத்திரனுடன் கூடிய ஒருவனைக்} கண்டு இந்திரனே அச்சமடைகிறான். அவன் {இந்திரன்}, “என் செழிப்பெதனை இவன் பகிரப் போகிறான்?” என்று நினைக்கிறான். புத்திரனற்றவன் மரணத்திற்குப் பிறகு நல்ல உலகங்களை அடைவதில்லை. இருப்பினும் குபுத்திரனை {இழிந்த மகனைப்} பெறுவதை விடப் புத்திரனற்றவனாக இருப்பதே சிறந்தது.(32) இழிந்த மகனைப் பெற்றவன் நரகத்திற்குச் செல்வான், நல்ல மகனைப் பெற்றவன் சுவர்க்கத்திற்குச் செல்வான். எனவே ஒருவன், பணிவுள்ளவனும், கல்விமானும், கடமையுணர்வு கொண்டவனும், கருணையுள்ளவனுமான ஒரு மகனையே எப்போதும் விரும்ப வேண்டும்.(33)

ஒருவன் நல்ல ஞானம் அடையும்போது பணிவையும் அடைகிறான். மகனைப் பெற விரும்பும் ஞானிகள், கல்விமானும், பக்திமானுமான ஒரு மகனையே வேண்டுவார்கள்.(34) எனவே, நான் கல்விமானும், அறமனம் கொண்டவனுமான ஒரு மகனை உனக்குத் தருவேன். அத்தகைய நல்ல மகனை அடைவதற்கு நான் இப்போதே கைலாச மலைக்குச் செல்லப் போகிறேன்.(35) அங்கே நான் அனைத்து உயிரினங்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவனும், நீலலோஹிதனும் {செந்நீல வண்ணனுமான} மஹாதேவனை வழிபட்டு, உனக்காக ஒரு மகனை அவனிடம் பெற்று வருவேன்.(36) நீக்கமற எங்கும் நிறைந்தவனும், அழிவற்றவனும், பிறப்பற்றவனுமான அந்த விரூபாக்ஷனை {சிவனை}, பிரம்மசரியத்துடன் கூடிய என் தவத்தால் நிறைவடையச் செய்து அவனது அருளைப் பெறுவேன்.(37) சங்கரனின் தரிசனத்தைப் பெற இன்றே நான் புறப்படுகிறேன். என் தவத்தில் நிறைவடைந்ததும் நிச்சயம் அவன் எனக்கு ஒரு மகனை அருள்வான்.(38)நான் அங்கே சென்றதும் மஹாதேவனையும், உமாதேவியையும் வணங்கி அவர்களை நிறைவடையச் செய்வேன். {கைலாசம் செல்லும்} வழியில், முனிவர்களால் தொண்டாற்றப்படுவதும், வேள்வி நெருப்பின் புகையாலான மேகங்களை எப்போதும் கொண்டதும், புண்ணியமானதுமான பதரிக்கு {பத்ரிநாத்} முதலில் செல்வேன். அந்தப் புண்ணியத்தலம், கங்கையின் நீரால் எப்போதும் நனைக்கப்படுகிறது, எண்ணற்ற பறவைகளும், சிங்கங்கள், புலிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளும் அங்கே திரிகின்றன.(39,40) அங்கே பதரிப்பழங்கள் {இலந்தைக் கனிகள்} நிறைந்திருக்கின்றன. கிளைவிட்டு கிளை தாவும் குரங்குகளும் எப்போதும் அங்கே காணப்படுகின்றன. வாழை தோப்புகளால் அலங்கரிக்கப்பட்ட பெரும் மரங்கள் பலவும், பழத்தோட்டங்கள் பலவும் அங்கே இருக்கின்றன.(41) வேத கல்வியில் மூழ்கியிருப்பவர்களும், வேதங்களின் தீர்மானத்தை அறிந்தவர்களும், வாதங்களில் வேதச் சான்றுகளைக் குறிப்பிடுபவர்களுமான பெரும் முனிவர்கள் வசிக்கும் இடமாக அது திகழ்கிறது.(42) முற்றான தன்னுணர்வைப் பெற்றவர்களும், “இதுவே தத்துவம், இதுவே உண்மை” என்பதை உறுதியாக நம்புகிறவர்களுமான பல ஆன்மாக்களால் அந்தப் புனிதத்தலம் {பதரிகாசிரமம்} நம்பிக்கையுடன் துதிக்கப்படுகிறது.(43) இதிஹாசங்களையும், புராணங்களையும் நன்கறிந்தவர்களும், இறந்த பின்னர் சுவர்க்கத்தை அடைய விரும்புகிறவர்களுமான மஹாரிஷிகள் அந்தப் புனிதத்தலத்தில் தொண்டாற்றுகின்றனர்.(44) பதரிகாபுரி என்று கொண்டாடப்படும் அந்தப் புனிதத்தலத்திற்கு நான் செல்வேன்” என்று சொல்லிவிட்டு நிறுத்திக் கொண்டான் ஜனார்த்தனன்” {என்றார் வைசம்பாயனர்}.(45) 

நகரப் பாதுகாப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 49-(ஸ்ரீக்ருஷ்ணஸ்ய கைலாஸகமநவிசாரம்)-கைலாசம் செல்ல முடிவெடுத்து சில ஏற்பாடுகளைச் செய்த கிருஷ்ணன்; யாதவர்களுக்கு கிருஷ்ணன் சொன்ன அறிவுரைகள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இரவு கடந்து கிழக்கு அடிவானில் சூரியன் எழுந்தபோது, ஜனார்த்தனன் நெருப்புவேள்வியின் மூலம் தன் காலைச்சடங்குகளைச் செய்து தக்ஷிணைகளைக் கொடுத்தான்.(1) பிராமணர்களுக்குச் செல்வத்தையும், பசுக்களையும் கொடையளித்தான். ஜகத்பதியான கிருஷ்ணன், விப்ரர்களில் தகுதியுடைய துவிஜர்களை நமஸ்கரித்து ஆஸ்தான மண்டபத்திற்குள் பிரவேசித்தான்.(2) அங்கே அவன் ஆசனத்தில் அமர்ந்து விருஷ்ணி குல வீரர்கள் அனைவரையும் அழைத்தான். பலபத்ரன் {பலராமன்}, சிநி புத்திரன் {சாத்யகி}, ஹார்திக்யன் {கிருதவர்மன்}, சுகன், சாரணன்,(3) உக்கிரசேனன், மஹாபுத்திமானும், நீதிகளை அறிந்தவருமான உத்தவர் ஆகியோரையும் அழைத்தான். அவரது வழிநடத்தலின் பேரில் யதுகுலத்தவர் சுகமாக வாழ்ந்து வந்தனர்.(4) உத்தவர் தர்மவானாகவும், யது, விருஷ்ணிகளின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். தேவர்கள் நெறிமுறைகளுடன் கூடியவர்களாக இருந்தாலும் அந்த மஹாத்மாவின் {உத்தவரின்} உத்திகளில் அச்சம் கொண்டவர்களாக இருந்தனர்.(5)

யாதவர்கள் அனைவரும் கூடிய பிறகு, குறிப்பாக எவருடைய ஞானத்தால் கிருஷ்ணன் உலகத்தை ஆண்டானோ அந்த உத்தவரும் வந்த பிறகு கிருஷ்ணன் அவர்களிடம், “ஓ! யாதவர்களே, என் உயிர் உத்தவரே, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பீராக.(6,7) உக்கிரசேனரே, என் குழந்தைப் பருவத்தில் இருந்து துஷ்டர்களைக் கொல்வதைக் கடந்த காலத்தில் இருந்து நீர் கண்டு வருகிறீர். அஃது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.(8) யாதவர்களே, நான் பாலனாக இருந்தபோது பூதனையையும், கேசியையும் கொன்றேன், பசுக்களைப் பாதுகாப்பதற்காகக் கோவர்த்தன கிரியைத் தூக்கினேன்.(9) தேவர்கள் அனைவரின் முன்னிலையில் சக்ரன் எனக்கு அபிஷேகம் செய்து வைத்தான். கம்சனும், இரு மல்லர்களும், சாணூரனும், முஷ்டிகனும் என்னால் கொல்லப்பட்டனர்.(10)

உக்ரசேனர் அபிஷேகம் செய்விக்கப்பட்டார், நான் துவாரகையை நிறுவினேன். அந்தக்காலத்திலும் அசுர மன்னர்கள் பலர் என்னால் கொல்லப்பட்டனர்.(11) யாதவர்களே, உக்ரசேனரே, வீரனான ஜராசந்தனைக் கொல்வதற்கான உத்திகளைப் பீமருக்கு {பீமசேனருக்கு} ஏற்படுத்தி, அந்தக் கொடூரன் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தேன்.(12) கோமந்த மலையில் இருந்து திரும்பும்போது சிருகாலனும்தானவனான நரகனும் என்னால் கொல்லப்பட்டனர்.(13)

க்ஷத்திரியர்களில் முதன்மையானவர்களே இவ்வாறு பூமியின் சுமையை நான் அகற்றினேன். இருப்பினும், நரகாசுரனின் நண்பனான பௌண்டரகன் இன்னும் எஞ்சியிருக்கிறான்.(14) பெருஞ்சக்தி வாய்ந்த போர்வீரர்களின் தலைவனாக இருக்கும் அவன் என்னைப் பகைத்துக் கொண்டிருக்கிறான். துரோணரின் சீடனான அந்தப் பௌண்டரகன், பெருஞ்சக்திவாய்ந்தவனாகவும், பிரம்மாஸ்திரத்தை ஏவவல்லவனாகவும்,(15) போர்க்கலையில் திறன்மிக்கவனாகவும், சாத்திரங்களை அறிந்தவனாகவும், நீதிமானாகவும், ஜமதக்னேயரை {பரசுராமரைப்} போலவே போரில் விருப்பம் கொண்ட மன்னனாகவும் இருக்கிறான்.(16) அவனே என் பெரும் எதிரியாக இருக்கிறான். அவன் எப்போதும் என்னிடம் குறை {நான் செய்யும் தவறைக்} காண காத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்குச் சிறு வாய்ப்புக் கிடைத்தாலும் துவாரகையைத் தாக்குவான். அதன் மூலம் பேரிடர் நேரிடும். புண்டரத்தை ஆட்சி செய்யும் பௌண்டரகனை அரைகுறையாக முயற்சி செய்யும் எவனாலும் வீழ்த்த முடியாது.(17,18)

துவாரகையைப் பாதுகாப்பீர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 50நான் உயிரினங்களின் தலைவனான சங்கரனைக் காண கைலாசம் செல்லும்போது, யாதவர்களை வீழ்த்திவிடும் நம்பிக்கையில் அவன் துவாரகையைத் தாக்க எத்தனித்தால் விற்களையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு நீங்கள் அனைவரும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.(19,20) நான் செல்லும் நோக்கம் நிறைவேறி திரும்பும் வரையில், நகரைக் காக்கும் காரியத்தில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.(21) இங்கே வந்து யாதவர்கள் அனைவரையும் வீழ்த்த அந்த ராஜேந்திரனால் இயலும் என நான் நினைக்கிறேன். எனவே, நீங்கள் கட்கம், பாசம், பரசு ஆகியவற்றுடன் எப்போதும் காவல் காப்பீராக.(22) பகைவன் நம் நகருக்குள் நுழைவதற்கு ஏதுவாக உள்ள வழிகளில் தடைகளை ஏற்படுத்திக் கவனமாகக் காவல் காப்பீராக. எப்போதும் மஹாதுவாரத்தை {பிரதான வாயிலை} அடைத்தே வைத்திருப்பீராக.(23) நகருக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் ஒரேயொரு சாலையை மட்டும் திறந்து வைத்திருப்பீராக. நகரை விட்டு வெளியேற விரும்பும் எவரும் முதலில் மன்னரிடம் அனுமதியைப் பெற வேண்டும்.(24) மன்னரின் அனுமதியின்றி எவரும் நகருக்குள் அனுமதிக்கப்படக்கூடாது. இக்காரியத்தில் காவலர்கள் மிகக் கவனமாகவும், கண்டிப்புடனும் இருக்க வேண்டும். நான் திரும்பும் வரை இந்த ஏற்பாடு அமலில் இருக்கட்டும்.(25) நகருக்கு வெளியே வேட்டையாடச் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். உண்மையில் சின்னச் சின்னக் காரியங்களுக்காக எவரும் நகரை விட்டு வெளியேறக்கூடாது. வந்து போகும் ஒவ்வொருவரின் அடையாளங்களும் கவனமாக உறுதி செய்யப்பட வேண்டும்.(26) நான் திரும்பும் வரை இந்தக் கட்டுப்பாடுகளை நீங்கள் அமல்படுத்த வேண்டும்” என்றான் {கிருஷ்ணன்}. இவ்வாறு யாதவர்களை அறிவுறித்திய கிருஷ்ணன், சாத்யகியிடம் திரும்பி அவனிடம் பேசினான்.(27) 

துவாரகையைப் பாதுகாப்பீர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 50-(துவாரவதீரக்ஷணே யாதவான் ப்ரதி ஸ்ரீக்ருஷ்ணஸ்ய வசநம்)சாத்யகி, உத்தவர், பலராமன் ஆகியோரிடம் துவாரகாபுரியின் பாதுகாப்பை ஒப்படைத்த கிருஷ்ணன்…

ஸ்ரீ பகவான் {கிருஷ்ணன்} சொன்னான்: “ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே, என் அன்புக்குரிய சாத்யகி, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக. கவசத்துடனும், கதாயுதம், வில் மற்றும் கணைகளுடனும் நகரைப் பாதுகாப்பதை உன் தனிப்பொறுப்பாகக் கொள்வாயாக.(1) ஓ! யது வம்சத்தின் பலம்வாய்ந்த வீரா, இஃது எண்ணற்ற க்ஷத்திரியர்களின் வசிப்பிடமாகும். நீ அவர்களின் தலைவன் என்பதால் இரவில் உறக்கத்தையும் கைவிட்டு இந்நகரைப் பாதுகாக்க வேண்டியது உன் கடமையாகும்.(2) இப்போதைக்கு சாத்திரங்களைக் கற்பதிலும், அவற்றின் பொருளை விளக்குவதிலும் இருந்து விலகுவாயாக. சாத்திரங்களின் அடிப்படையில் உன் நண்பர்களுடன் வாதம் செய்வதை இப்போதைக்குக் கைவிடுவாயாக.(3) நீ பலமிக்கவன், திறன்மிக்கப் போர்வீரன், ஞானமுடையவன், தனுர்வேத விற்பன்னன். இந்நகரத்தின் புகழ் கெடாமல் இருக்க உன்னால் ஆனதில் சிறந்ததைச் செய்வாயாக” {என்றான் கிருஷ்ணன்}.(4)

சாத்யகி சொன்னான்: “ஓ! ஜகந்நாதா, ஓ! அன்புக்குரிய ஜனார்த்தனா, என்னால் இயன்றதில் சிறந்ததைச் செய்து நீ சொன்னவற்றைப் பின்பற்றுவேன். உன் ஆணைகளை எப்போதும் என் சிரம் மேற்கொள்வேன் என நான் உறுதியளிக்கிறேன்.(5) ஓ! மாதவா, ஒரு பணியாளனைப் போல நான் பலராமரின் ஆணைகளையும் பின்பற்றுவேன். நீ திரும்பி வரும்வரை நான் இந்நகரைப் பாதுகாப்பேன்.(6) ஓ! கோவிந்தா, ஓ! மாதவா, உன் கருணை எனக்கிருந்தால் பகைவரை அழிக்கும் காரியத்தில் என்னால் இயலாதது ஏதுமில்லை.(7) சக்ரன், யமன், குபேரன், பாசக்கயிற்றைக் கொண்ட வருணன் ஆகியோரே போரிட வந்தாலும் உன் அருளால் அவர்களை என்னால் வீழ்த்த முடியும் எனும்போது, பௌண்டரகனைக் குறித்துச் சொல்வதற்கென்ன இருக்கிறது?(8) ஓ! தலைவா, ஹரியே, நான் விழிப்புடன் இருப்பேன் என்பதில் உறுதிகொண்டு நீ விரும்பிய இடத்திற்குச் சென்று வருவாயாக” {என்றான் சாத்யகி}.

பிறகு, தாமரைக் கண்ணனான கிருஷ்ணன், உத்தவரிடம்,(9) “உத்தவரே, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டு என் ஆணைகளைப் பின்பற்றுவீராக. உமது புத்தி சொல்லும் வழிகளைப் பின்பற்றித் துவாராவதியைக் காப்பீராக.(10) ஓ! மென்மையானவரே, நீரே சிறந்த வழிகளை அறிவீர் என்பதால் விழிப்புடன் இருந்து நமக்கு உதவி செய்வீராக. இது தொடர்பாக மேலும் உமக்குச் சொல்ல நான் நாணுகிறேன்.(11) கற்றறிந்த அறிஞர்களில் நீர் முதன்மையானவர். உம்மைப்போன்ற அறிவாளிகளின் முன்பு தன் கருத்துகளைச் சொல்ல மேதாவி எவனும் துணியமாட்டான்.(12) எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பனவற்றை நன்கறிந்தவர் நீர். எனவே, ஓ! விருஷ்ணி குலத்தைப் பாதுகாப்பவரே, இதற்கு மேலும் உம்மிடம் நான் எதையும் சொல்ல முயலேன்” என்றான் {கிருஷ்ணன்}.(13)

உத்தவர், “கோவிந்தா, பிரபுவே, ஏன் என்னை இவ்வாறு புகழ்கிறாய்? நீ என்னை அதீதமாகப் புகழ்ந்தாலும், இஃது உன் அன்பின் வெளிப்பாடு, பாசத்தின் வெளிப்பாடு என்பதை நான் அறிவேன்.(14) கேசவா, ஜகந்நாதா, நான் இப்போது எவ்வாறு இருக்கிறேனோ, இந்நிலை உன்னருளால் ஏற்பட்டது. உன் கருணையை அடைந்தவனிடம் எதுதான் குறைவாக இருக்கும்?(15) ஜகம் அனைத்தையும் படைத்தவன் நீயே. அவற்றை அழிப்பவனும் நீயே. காரணம், காரியம் ஆகியவையும், பேசுபவன், கேட்பவன் ஆகியோரும், சான்றும் நீயே.(16) பரப்ரம்மத்தை அறிந்த முனிவர்கள், தியானப் பொருளாகவும், தியானமாகவும், தியானிப்பவனாகவும் உன்னையே ஏற்கின்றனர். தேவர்களைப் பகைப்பவரை தண்டிப்பவன் நீயே, பக்திமான்களைக் காப்பவன் நீயே.(17) எங்கள் தலைவனும், பாதுகாவலனும் நீயே. நாங்கள் இன்னும் உயிருடன் இருப்பது உன்னாலே. நம் பகைவர்கள் வீழ்த்தப்பட்டதும் உன்னாலே. நான் உன்னிடம் சொல்லும் ராஜதந்திரங்கள் எவையும் உன்னால் ஈர்க்கப்பட்டு என்னால் சொல்லப்பட்டவை என்பதே என் புரிதலாகும்.(18) வேதங்களின் வடிவமானவன் என்பதால் எங்களை மங்கலப் பாதையில் வழிநடத்தக் கூடியவன் நீயே. எங்கள் செயல்கள் அனைத்தின் இலக்கும் உன் மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என்பது என் உறுதியான நம்பிக்கை.(19) உன் கோட்பாடுகளில் உள்ள சிக்கல்களைப் புரிந்து கொள்வது மிகக் கடினம் என்பது நீதிமான்கள் அனைவரின் கருத்தாகும். ஓ! ஜனார்த்தனா, நான்கு வகை அரசியல் நீதிகள் சாம, தான,(20) பேத, தண்டம் ஆகியவை. ஒருவன் சிரமத்தில் இருந்தாலோ, பிறரை அமைதியடையச் செய்ய விரும்பினாலோ அவன் இந்த நான்கு கோட்பாடுகளைப் பயன்படுத்த வேண்டும். பகைவன் தன்னைவிட பலவீனமாக இருக்கும்போது தண்டக் கோட்பாட்டைப் பயன்படுத்த வேண்டும். பகைவன் தனக்கு இணையானவனாக இருக்கும்போது சாமக் கோட்பாட்டைப் பயன்படுத்த வேண்டும்.(21) ஒரு பகைவன் தன்னை விட பலமிக்கவனாக இருந்தால் தானக் கோட்பாட்டைப் பயன்படுத்த வேண்டும். இந்த மூன்று கோட்பாடுகளையும் பயன்படுத்த இயலாத போது, ஒருவன் பேதக் கோட்பாட்டைப் பயன்படுத்த வேண்டும். அரசியல் நீதியைக் கற்றவர்களின் கருத்து இதுவே ஆகும்.(22) எவனும், அந்தந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கொள்கையைத் தானே தீர்மானிக்க வேண்டும். வேறென்ன சொல்வது? இத்தகைய ஞானங்கள் அனைத்தின் கொள்ளிடம் நீயே” என்றார் {உத்தவர்}”.(23)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, இதைச்சொல்லிவிட்டு உத்தவர் அமைதியடைந்தார். பகவான் விஷ்ணு {கிருஷ்ணன்},(24) இதே போலவே பெரும் வலிமைமிக்க காமபாலனிடமும் {பலராமனிடமும்}, மனிதர்களின் ஆட்சியாளரான மன்னர் உக்கிரசேனரிடமும், ஹார்திக்கியனிடமும் {கிருதவர்மனிடமும்} பேசினான்.(24,25) பிறகு அவன் காமபாலனிடம் {பலராமனிடம்}, “அன்புக்குரிய அண்ணா, காலத்தைக் கடத்தாமல், நகரைப் பாதுகாப்பதே உமது முக்கியக் காரியமாக இருக்க வேண்டும்.(26) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, நகரைப் பாதுகாக்க நீர் விரும்பினால் இவ்வுலகில் நமக்கு எவரால் இடர் விளைவிக்க முடியும்?(27) எப்போதும் கதாதாரியாக இருப்பீராக. விளையாட்டுக்கும், கேளிக்கைகளுக்கும் இது நேரமல்ல.(27) பிரபுவே, நாம் கேலிப்பொருளாகாதிருக்க எப்போதும் துவாரகையின் நலத்தைக் கவனத்தில் கொள்வீராக. உமது கதாயுதத்தை எடுத்துக் கொண்டு நகரைப் பாதுகாக்க வேண்டியவற்றைச் செய்வீராக.(28) இக்காரியத்தில் அனைவரையும் நீர் ஊக்கப்படுத்த வேண்டும். எவரும் உற்சாகமிழக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்வீராக” என்றான் {கிருஷ்ணன்}. இதற்கு ராமனும் {பலராமனும்}, “அவ்வாறே ஆகட்டும்” என்றான்.(29) அந்த ஆணைகளைத் தங்கள் சிரமேற்கொண்டு விருஷ்ணி குலத்தோர் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களுக்குச் சென்ற போது, ஜகந்நாதன் கைலாச மலைக்குப் புறப்பட ஆயத்தமானான்”.(30) 

பதரிகாஷ்ரமம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 51-(ஸ்ரீக்ருஷ்ஸ்ய பதரிகாஷ்ரமகமநம்)-கருடன் மீதேறி பறந்து சென்ற கிருஷ்ணன் பதரிகாசிரமத்தை அடைந்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஜகத்பதியான விஷ்ணு {கிருஷ்ணன்}, பறவைகளின் மன்னனும், தார்க்ஷியனுமான கருடனைத் துரிதமாக வரும்படி மனப்பூர்வமாக அழைத்தான்.(1) ஓ! குருக்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, வேதங்களே வடிவாகக் கருதப்படுபவனும், யோகப் புதிர்களில் தேர்ச்சி பெற்றவனும், சாத்திரங்களை உண்மையாக அறிந்தவனுமான தார்க்ஷியன் பகவான் {கிருஷ்ணன்} முன்பு உடனே வந்தான்.(2) யஜ்ஞத்தை உடலாகவும், புராணங்களை ஆத்மாவாகவும், சாம வேதத்தைத் தன் குதிங்காலாகவும், ரிக் வேதத்தைக் கண்களாகவும் கொண்ட அவனது நிறம் பிங்கள வண்ணமாகவும், அவனது வடிவம் புதிரானதாகவும் இருந்தது.(3) அவனது அலகு தாமிரம் போல் சிவப்பாக இருந்தது. அவன் அமுதத்தை அபகரித்துப் போரில் சக்ரனை {இந்திரனை} வென்றவனாவான். அவனது தலை பெரிதாக இருந்தது. பாம்புகள் அவனுக்குப் பகையாக இருந்தன. அவனது தாமரைக் கண்கள் விஷ்ணுவுக்கு ஒப்பானவையாக இருந்தன.(4) தேவதேவனும், தானவிகளின் {தானவப் பெண்களின்} கர்ப்பங்களை அழிப்பவனுமான தலைவனைச் சுமக்கும் வாகனனாக அவன் இருந்தான். அவன் அசுரர்களை வெல்பவனாகவும், தன் சிறகின் அசைவுகளாலேயே ராக்ஷசர்களை வெல்பவனாகவும் இருந்தான்.(5)

ஒப்பற்ற ஆற்றலைக் கொண்ட அந்தக் கருடன், கேசவன் முன்பு வந்து வணங்கினான். பிறகு அவன், “ஓ! விஷ்ணுவே, ஜகத்பதியே நான் உன்னை வணங்குகிறேன்.(6) ஓ! ஹரியே, தேவதேவா, உன் தாமரைப் பாதங்களுக்கு என் வணக்கம்” என்றான்.

கிருஷ்ணன் கருடன் மீது தன் கைகளை வைத்து, “ஓ! பறவைகளில் சிறந்தவனே,(7) சர்வமங்களனான சங்கரனைக் காண கைலாச மலைக்குச் செல்ல நான் விரும்புகிறேன்” என்றான்.(8)

அந்தத் தார்க்ஷியனும், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி தன் சம்மதத்தைத் தெரிவித்தான். ஜனார்த்தனன் அவனது முதுகில் அமரும்போது, அங்கே கூடியிருந்த யாதவர்களிடம், “நீங்கள் அனைவரும் விழிப்புடன் இருப்பீராக” என்றான்.(9)

ஜகன்னாதனான ஹரி வடகிழக்குத் திசையை நோக்கிச் சென்றான். பேராற்றல் படைத்த தார்க்ஷியன் மூவுலகங்களையும் நடுங்கச் செய்தான்.(10) அந்தப் பறவையானவன், ஜனார்த்தனனைத் தன் முதுகில் ஏற்றிச் சென்ற போது, தன் பாத அசைவுகளால் பெருங்கடலைக் கலங்கடித்தான், தன் சிறகசைவுகளால் உண்டான காற்றினால் மலைகளை நடுங்கச் செய்தான்.(11)

அவர்கள் ஆகாசத்தில் சென்றபோது, கந்தர்வர்களும், தேவர்களும் ஈஷ்வரனான அந்தப் புண்டரிகாக்ஷனை {கிருஷ்ணனை} வணங்கினார்கள்.(12) அவர்கள், “ஓ! ஜகன்னாதா, ஓ! உயர்ந்த தேவா, உனக்கு மகிமை உண்டாகட்டும். ஓ! விஷ்ணுவே, ஓ! ஜகத்பதியே, உனக்கு மகிமை உண்டாகட்டும். ஓ! வெல்லப்பட முடியாத தேவா, ஓ! உயிரினங்கள் அனைத்தின் நன்மையை விரும்புபவனே, நாங்கள் உன்னை வணங்குகிறோம்.(13) தைத்திய தானவர்களைக் கொன்ற உன் நரசிம்ம அவதாரத்தை நாங்கள் வணங்குகிறோம். ஓ! வெல்லப்பட முடியாத ஹரியே, மகிமைகள் அனைத்தும் உனதாகட்டும். யோகிகளின் தியான பொருளும், அவர்களுடைய வாழ்வின் இறுதி இலக்கும் நீயே.(14) ஓ! நாராயணா, ஓ! கிருஷ்ணா, ஓ! ஹரியே, ஓ! ஆதி கர்த்தாவே, ஓ! புராணாத்மனே, ஓ! பிரம்மனின் நித்திய தலைவனே நாங்கள் உன்னை வணங்குகிறோம்.(15) ஓ! அனைத்தையும் கட்டுப்படுத்துபவனே {சகலேஷ்வரா}, நாங்கள் உன்னை வணங்குகிறோம். நிர்க்குணனாக இருந்தாலும் {சற்குணனாக இருந்தாலும்} குணங்களைக் கடந்த எல்லையற்ற நிலையில் இருப்பவன் நீயே. பக்தர்களின் அன்புக்குரியவன் நீயே, அர்ப்பணிப்புடன் கூடிய தொண்டின் நோக்கமாக இருப்பவன் நீயே, ஓ! தானவநாசனா, நாங்கள் உன்னை வணங்குகிறோம்.(16) ஓ! அனைத்தையும் கட்டுப்படுத்துபவனே, புலப்படாத வடிவம் கொண்டவன் நீயே. எங்கள் பணிவான வணக்கத்தை ஏற்றுக் கொள்வாயாக” {என்று வேண்டினர்}.(17) இவ்வாறே தேவர்களும், கந்தர்வர்களும், ரிஷிகளும், சித்தர்களும், சாரணர்களும் அந்த ஜகன்னாதனிடம் வேண்டினார்கள்.(18)

கிருஷ்ணன் அவர்களின் வேண்டுதல்களைக் கேட்டபடியே பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு அண்டத்தின் நன்மைக்காக விஷ்ணு கடுந்தவம் புரிந்த இடத்திற்கு தேவர்களுடனும், ரிஷிகளுடனும் சென்று சேர்ந்தான்.(19,20) அந்தத் தவத்தின் பலத்தால் விஷ்ணு தன்னை நரன் என்றும், நாராயணன் என்றும் இரு வடிவங்களாகப் பிரித்துக் கொண்டான்.(21) ஆறுகளிற்சிறந்த புனித கங்கை அந்தப் புண்ணியத்தலத்தில் வேகமாகப் பாய்ந்து செல்கிறாள்.

பிரம்மராக்ஷசனான விருத்தாசுரனைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபட இந்திரன் அங்கே பத்தாயிரம் வருடங்கள் தவம் செய்தான். அங்கே ஜனார்த்தனனை தியானிப்பதன் மூலமே சித்தர்கள் பலர் முக்தியை அடைகின்றனர்.(22,23) போர்க்களத்தில் அனைவரையும் கதறச்செய்த ராவணனைக் கொன்ற பிறகு சாத்திர போதனைகளைப் பின்பற்றுவதற்கு உதாரணமாக ராமன் அங்கே கடுந்தவம் செய்தான்.(24) ஜகன்னாதனான கேசவன் அந்தப் புண்ணியத்தலத்தில் நித்திய வாசம் செய்து கொண்டிருப்பதால், தேவர்களும், தெய்வீக முனிவர்களும் எளிதில் அங்கே முக்தியை அடைகிறார்கள்.(25) பெரும் முனிகணங்கள் எப்போதும் அங்கே வேள்விகளைச் செய்து வருகிறார்கள். அந்தப்புண்ணியத் தலத்தை நினைப்பதன் மூலமே மனிதர்கள் இம்மைக்குப் பின் மறுமையில் சுவர்க்கத்தை அடையலாம்.(26) ஓ மனிதர்களின் ஆட்சியாளா, சித்தர்கள் அதைச் சுவர்க்கத்தின் வாயிலாகக் கருதுவதால் எப்போதும் அங்கேயே வசித்து வருகின்றனர்.(27) பக்தர்கள் மட்டுமே வசிக்கும் அந்தப் புண்ணியத் தலத்தில் வசித்தால் ஓர் எதிரியும் நண்பனாகிவிடுவான். அங்கே விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் ஒருவன் எளிதில் தேவ நிலையை அடையலாம்.(28)முற்றிலும் பகையற்ற சித்தர்களால் புகழப்படும் புண்ணியத்தலமான அந்தப் பதரிகாசிரமத்திற்குத் தேவர்களுடனும், முனிவர்களுடனும் மாலைப் பொழுதில் கிருஷ்ணன் சென்று சேர்ந்தான். மஹாபுண்ணியம் வாய்ந்த ரிஷிகள் பலர் அங்கே வசித்துக் கொண்டிருப்பதை அவன் கண்டான்.(29,30) தேவர்களுடன் கூடிய கிருஷ்ணன் அந்தப் பதரி தீர்த்தத்திற்கு வந்தபோது, மேற்கு அடிவானில் சூரியன் மறைந்து கொண்டிருந்தான். கூடுகளுக்குத் திரும்பும் பறவைகளின் ஒலி அங்கே சூழ்ந்திருந்தது. பசுக்களில் பால் கறக்கப்பட்டன. பல முனிவர்கள் வேள்வி நெருப்பில் நெய்யைக் காணிக்கையளிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர், எண்ணற்ற சித்தர்கள் பரம்பொருளைத் தியானிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்தப் புனிதத்தலத்தில் வசிப்பவர்களால் விருந்தினர்கள் தொண்டாற்றப்பட்டனர். கண்கள் திரும்பிய இடமெல்லாம் கிட்டிய காட்சி மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. தாமரைக்கண்ணனான கிருஷ்ணன், நெய் விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட அந்த ஆசிரமத்தின் மத்தியில் வந்திறங்கி கருடன் மீதிருந்து இறங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(31-36) 

வரவேற்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 52-(ஸ்ரீக்ருஷ்ணஸ்ய பதரிகாஷ்ரமே ஆதித்யஸ்வீகாரம்)-கிருஷ்ணனை வரவேற்ற பதரிகாசிரமவாசிகள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அக்னிஹோத்ரம் செய்து கொண்டிருந்த முனிகணங்கள் {முனிவர்க்கூட்டம்}, தேவதேவன் {கிருஷ்ணன்} வந்ததைக் கண்டு அவனை வரவேற்க விரைந்து சென்றனர்.(1) இந்த முனிவர்கள் அங்கே {பதரிகாஷ்ரமத்தில்} நீண்ட காலம் வேள்விகளைச் செய்து தியானம் பயின்று வந்தவர்களாவர். அவர்களில் சிலர் சடை தரித்திருந்தனர், வேறு சிலர் முழுமையாக மழித்த தலையுடன் இருந்தனர், வேறு சிலர் நரம்புகள் புடைத்துத் தெரியுமளவுக்கு மெலிந்திருந்தனர்.(2) 

சிலர், உடலைப் பராமரிக்கும் நாட்டத்தைக் கைவிட்டவர்களாகவும், சிலர் வேதாளங்களைப் போலவும் தெரிந்தனர். சிலர் கற்களால் நசுக்கப்பட்ட தானியங்களை உண்டனர், வேறு சிலர் இலைகளை மட்டுமே உண்டு தங்கள் உயிரைத் தாங்கி வந்தனர்.(3) அவர்கள் வேதங்களை முழுமையாக அறிந்தவர்களாகவும், கடும் விரதங்களை மேற்கொண்டு தவமியற்றுபவர்களாகவும் இருந்தனர். விஷ்ணுவின் பக்தர்களான அவர்கள் அனைவரும் எப்போதும் அவனையே நினைத்து வழிபட்டு வந்தனர்.(4)

அந்த முனிவர்களில் பலர் இருப்பில் இருந்து முக்தியடையும் நிலையில் இருந்தனர். பலர் காலம் கடப்பதை அறியாத நிலையில் தியானத்தில் மூழ்கியிருந்தனர். மேலும் பலர் தங்கள் இதயங்களில் விஷ்ணுவை நேரடியாகக் காணும் அளவுக்குத் தவமுழுமையை அடைந்திருந்தனர்.(5) அந்த முனிவர்களில் சிலர் வருடம் ஒருமுறை உண்டனர். வேறு சிலர் நீருக்குள் வசித்திருந்து நீரை மட்டுமே பருகி உயிரைத் தாங்கி வந்தனர். இன்னும் சிலர் ஷ்ருதிஸ்ம்ருதிகளில் பரிந்துரைக்கப்படும் நற்காரியங்களைச் செய்து இந்திரனின் இதயத்தில் அச்சத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தனர்.(6)

ஓ! மன்னா, வசிஷ்டர், வாமதேவர், ரைப்பியர், தூம்ரர், ஜாபாலி, காசியபர், கண்வர், பரத்வாஜர், கௌதமர்,(7) அத்ரி, அஷ்வசிரஸ், பத்ரர், சங்கரர், சங்கநிதி, குணி, பாராசர்யர், பவித்ராக்ஷர், யாஜ்ஞவல்கியர்,(8) கக்ஷீவான், அங்கிராஸ் முனி, தீப்ததபாஸ், அஸிதர், தேவலர், மஹாதபஸ்வியான வால்மீகி ஆகியோர்(9) தங்கள் கைகளைக் கூப்பியபடியே தங்கள் குடில்களில் இருந்து வெளிப்பட்டு ஈஷ்வரனை {கிருஷ்ணனை} தரிசிக்கும் ஆவலுடன் வெளியே வந்தனர்.(10) அவர்கள், பக்திமான்களிடம் கருணை கொண்டவனும், பாவங்களை அழிக்கும் ஹரியும், நீக்கமற நிறைந்திருக்கும் விஷ்ணுவும், ஜனார்த்தனனுமான கிருஷ்ணனைப் பணிந்து வணங்கினர்.(11) அவர்கள், “கிருஷ்ணா, தேவதேவா, கேசவா, பிரணவாத்மாவே, ஜகந்நாதா, ஹரியே, நாங்கள் தலை வணங்கி உன்னை வழிபடுகிறோம்.(12) கிருஷ்ணா, விஷ்ணுவே, ரிஷிகேசா, கேசவா, ஓயாமல் நாங்கள் உம்மை வழிபடுகிறோம்” என்றனர்.

அந்தப் பிராமணர்கள், ஜகத்பதியான கிருஷ்ணனை இவ்வாறு வணங்கிவிட்டு,(13) “ஜகத்பதியே, இதோ அர்க்கியம், இதோ பாத்யம், இதோ சுகமாக அமரும் ஆசனம். தேவா, உன் தரிசனத்தால் நாங்கள் நித்திய அருளை அடைந்தோம். எங்களிடம் நிறைவடைவாயாக.(14) உன்னை மகிழ்விக்க நாங்கள் செய்ய வேண்டியதென்ன? பிரபுவே, நாங்கள் தொண்டு செய்வதெவ்வாறு? ஹரியே, உன் பாத கமலங்களுக்குத் தீங்கேதும் செய்தோமா?” என்று கைகளைக் கூப்பிக் கொண்டு பணிவுடன் கேட்டனர்.(15)

கிருஷ்ணனும், தேவர்களும் அந்த முனிவர்கள் செய்த பூஜையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். பிறகு கிருஷ்ணன், “உன்னத முனிவர்களே, நீங்கள் உத்தம பூஜையைச் செய்தீர்கள். உங்கள் தவங்களின் விளைவால் நீங்கள் அனைவரும் உயர்வடைவீராக” என்றான்.(16)

புராணாத்மாவான அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, இவ்வாறு சொல்லிவிட்டுத் தன் வாகனமானக் கருடனுடன் சேர்ந்து ஓரிரவு மகிழ்ச்சியான மனத்துடன் தங்கினான்.(17) அவ்வாறு தங்கியிருந்தபோது அவன் அங்கே இருந்த முனிவர்களின் வேள்விகள், தவங்கள் ஆகியவற்றையும், அவர்கள் தங்கள் சீடர்களைப் பராமரிப்பது குறித்தும் விசாரித்தான்.(18)

கிருஷ்ணனின் விசாரணைகளுக்கு மறுமொழியாக அவர்கள், “ஜகந்நாதா, உன் கருணையால் அனைத்துச் செயல்களையும் நாங்கள் வெற்றிகரமாகச் செய்து வருகிறோம்” என்றனர்.(19)

பிறகு, பதரிகாசிரமத்தைச் சேர்ந்த முனிவர்கள் அனைவரும் கனிகள், கிழங்குகள், தானியங்கள் ஆகியவற்றைக் கிருஷ்ணனுக்கும், தேவர்களுக்கும் கொடுத்தனர். கிருஷ்ணன் அவர்களின் காணிக்கைகளை ஏற்றுக் கொண்டு அவர்களின் தொண்டில் பெரும் மகிழ்ச்சியடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(20) 

சமாதிநிலை | பவிஷ்ய பர்வம் பகுதி – 53-(ஸ்ரீக்ருஷ்ணஸ்ய ஸமாதி கோலாஹலம்)-தியானத்தில் ஆழ்ந்த கிருஷ்ணனின் சமாதி நிலை; பயங்கரமான பேரொலிகளைக் கேட்ட கிருஷ்ணன்; தியானம் கலைந்தது; கிருஷ்ணன் அடைந்த ஆச்சரியம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “எவனுடைய நோக்கங்களை அறிந்து கொள்வது கடினமோ அந்தப் பிரபுவும், பகவானும், விஷ்ணுவுமான யாதவேஷ்வரன் {யாதவர்களின் ஈஷ்வரன்/ கிருஷ்ணன்}, ஏற்கனவே தான் தவம் செய்து வந்ததும், கங்கையின் வடதீரத்தில் அமைந்திருப்பதுமான இடத்திற்குச் சென்றான். அந்த ஹரி அங்கே இருக்கும் புனிதமான தபோவனத்திற்குள் பிரவேசித்தான்.(1,2) மனோஹரமானதும், மிக அழகானதுமான அவ்விடத்தை அவன் சுற்றிப் பார்த்தான். பிறகு புண்ணியவரதனான அந்தப் பிரபு அந்த ஆசிரமத்திற்குள் அமர்ந்தான்.(3) தாமரைக் கண்ணனான அவன் மெய்மறந்த நிலையில் {சமாதியில்} தன் மனத்தை நிலைக்கச் செய்தான். தேவேஷ்வரனான {தேவர்களின் ஈஷ்வரனான} அந்த ஜகந்நாதன் விவரிக்கமுடியாத பொருளைக் குறித்துத் தியானிக்கத் தொடங்கினான்.(4)

தேவகுருவான அவன், காற்றற்ற இடத்தில் உள்ள விளக்கைப் போல, அலைபாயாத மனத்துடன் தியானத்தில், தன்னிலை இழந்த நிலையில் {சமாதியில்} ஈர்க்கப்பட்டிருந்தபோது, திடீரெனத் திசைகள் அனைத்திலும் மஹாகோரமான ஒலிகள் கேட்டன.(5) “உண்பீர், உண்வீராக. சாரங்கனின் அருளால் மான்கள் அனைத்தையும் கொண்டு வருவீராக.(6) இதோ விஷ்ணு, இதோ கிருஷ்ணன், இதோ ஹரி இங்கே அமர்ந்திருக்கிறான். அச்யுதனே, மாதவனே, கேசவனே, தேவேசா, நாங்கள் உன்னை வணங்குகிறோம்” என்ற ஒலி கேட்டது.(7)

இவ்வாறே அவ்விரவில் பெருங்குழப்பமும், கலவரமும் நேர்ந்தது. மான்களின் மிகப் பெரிய பகைவரான சிங்கங்கள் திடீரென உரக்க முழங்கத் தொடங்கின.(8) ஓ! மன்னா, பிறகு சிங்கங்கள் மான்களை விரட்டும் ஒலிகளும், நாய்கள் குரைக்கும் ஒலிகளும், அச்சமடைந்த மான்கள், கரடிகளின் ஒலிகளும், உறுமும் புலிகள், பிளிறும் யானைகள் ஆகியவற்றின் ஒலிகளும் அனைத்துப் பக்கங்களிலும் கேட்டன. இந்த மொத்த ஒலிகளின் கலவையானது, பெருங்காற்றால் கலங்கிப் பெருகும் சமுத்திரத்தின் பயங்கர ஒலியைப் போன்றிருந்தது.(9,10)

இரவில் நேர்ந்த அந்த ஆரவார ஒலி, மூவுலகில் உள்ள அணைவரையும் உண்மையில் அச்சுறுத்தியது. அந்தக் கலவரத்தின் மூலம் ஹரி தேவனின் சமாதி கலைந்தது. புறநினைவு மீண்ட ஜகத்பதி {எழுந்து நின்று}, “செவிடாகச் செய்யும் இவ்வொலியென்ன?(11,12) என்னைத் துதித்துக் கொண்டே இத்தகைய ஒலியை உண்டாக்குவது யார்? ஐயோ, நாய்கள், மான்கள், இரைதேடும் விலங்குகளிடம் இருந்து தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள ஓடும் பிற விலங்குகள் ஆகியவற்றின் ஒலிகளும் கேட்கின்றனவே. இது மிக ஆச்சரியமானது. இருப்பினும் இவ்வொலிகள் அனைத்தும் சேர்ந்து என்னைத் துதித்து வேண்டுகின்றனவே” என்று நினைத்தான்.(13,14) இவ்வாறு சிந்தித்த ஹரி, கலவரத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கத் திக்குகள் அனைத்திலும் தன் பார்வையைச் செலுத்தினான். பிறகு, கீழே அமர்ந்து அமைதியடைந்தான்.(15)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, கேசவன் அமர்ந்திருந்த இடத்தை நோக்கித் திடீரென மான்கூட்டம் ஒன்று ஓடிவந்தது. நாய்கள் அவற்றை விரட்டி வந்தன.(16) ஓ! மன்னா, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பந்தங்கள் மூட்டப்பட்டதால் இரவின் இருள் விலங்கி அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன.(17) அப்போது அங்கே பூதகணங்கள் தென்பட்டன. கோணல் வாய்களுடன் கூடியவையும், பயங்கரத் தோற்றம் கொண்டவையுமான பிசாசுகள், பச்சை இறைச்சியை உண்டபடியும், குருதியைப் பருகியபடியும் அச்சுறுத்தும் வகையில் மஹாகோரமாக முழங்கின.(18,19) ஓ! மன்னா, எண்ணற்ற மான்கள் ஏற்கனவே கொல்லப்பட்டிருந்தன, அல்லது படுகாயமடைந்து தரையில் கிடந்தன. மேலும் எண்ணற்ற மான்களும், யானைகளும் கணைகளால் துளைக்கப்பட்டு அங்கேயும், இங்கேயும் ஓடிக்கொண்டிருந்தன.(20)

ஓ! பாரதா, ஆயிரக்கணக்கான மான்கள் அந்தத் தேவேசன் அமர்ந்திருந்த இடத்திற்கு ஓடிவந்து அவனைச் சூழ்ந்து கொண்டன என்று நான் என் குருவிடம் இருந்து கேள்விப்பட்டேன். பிறகு சிதைந்த அங்கங்களைக் கொண்ட பிசாசுகள் பலவும் கேசவன் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தன. புத்திரர்களுடன் கூடிய அவை அனைத்தும், காண்பவனுக்கு மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தன. ஓ! ராஜேந்திரா, பிறகு நாய்க்கூட்டமும் அங்கே வந்தது. அப்போது கேசவன், தன்னைச் சூழ்ந்திருக்கும் இந்த உயிரினங்கள் அனைத்தையும் கண்டு பேராச்சரியம் அடைந்தான்.(21-24)

அவன், “என்ன நடக்கிறது? இவ்வுயிரினங்கள் அனைத்தும் ஏன் இங்கே வந்திருக்கின்றன? பக்தியுடன் என்னைத் துதித்தவர்கள் யார்? நான் யாரிடம் நிறைவடைவது?(25) என் அருளால் இன்று முக்தியடையப் போவது யார்?” இவ்வாறு நினைத்தபடியே பகவான் அங்கே அமர்ந்திருந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(26) 

பிசாசுகள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 54-(பிஷாசாகமநம்)-பிசாசுகளின் கூட்டம்; இரண்டு பிசாசுகளுக்கிடையிலான பேச்சு…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},  “அப்போது அச்சந்தரக் கூடியவையும், மஹாகோரமானவையுமான பிசாசுகள் இரண்டு, தங்கள் கூட்டங்களுடன் அங்கே தோன்றின. அவை அனைத்தும் நெடியவையாகவும், கோணலான வாய்களையும், அகன்ற தாடைகளையும், நீண்ட நாவுகளையும் கொண்டவையாக இருந்தன.(1) நீண்ட தலைமுடியையும், அச்சந்தரும் கண்களையும் கொண்ட அவை இறைச்சியை உண்டபடியும், குருதியைப் பருகியபடியும் பயங்கரமாகச் சிரித்தன.(2) அவற்றின் உடல்கள் முழுவதும் உயிரினங்களின் குடல்களால் மறைக்கப்பட்டிருந்தன. அவை பேருடல் படைத்தவையாக இருந்தாலும் அவற்றின் வயிறுகள் மெலிந்திருந்தன. அவை, மண்டையோடுகள் தொங்கும் திரிசூலங்களைத் தரித்திருந்தன.(3)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவற்றில் இரு பிசாசுகள் பல சடலங்களை இழுத்துக் கொண்டிருந்தன. அவை தங்கள் தங்கள் வாழ்க்கைச் சூழலுக்குத் தகுந்த மிக இழிந்த சொற்களைப் பேசிக் கொண்டும், உரக்க சிரித்துக் கொண்டும் இருந்தன.(4) அவை நடந்து சென்ற போது பெரும் மரங்களை உலுக்கி தங்கள் தொடைகளாலும், கால்களாலும் அவற்றை இழுத்தன.(5) அவை தங்கள் பற்களை நறநறவெனக் கடித்துக் கொண்டிருந்தன. அவற்றின் உடல் முழுவதும் எலும்புகளாலும், மஜ்ஜைகளாலும், குருதியாலும் மறைக்கப்பட்டிருந்தது.(6) அவை, “கிருஷ்ணா, கிருஷ்ணா, மாதவா” என்றும், அந்தத் பிரபுவின் பல்வேறு புனிதப் பெயர்களையும் சொல்லிக் கொண்டிருந்தன. அவை, “தலைவன் விஷ்ணுவின் தரிசனம் எப்போது நமக்குக் கிடைக்கும்? இப்போது அவன் எங்கிருக்கிறான்? பிரபுவான ஹரி எங்கே வசிக்கிறான்? அவனது தரிசனத்தை நாம் பெறுவது எவ்வாறு? இந்த ஆசிரமத்தில் எங்கோ இருக்கிறான் என்று கேள்விப்பட்டோமே.(7,8)

இந்திரனின் தம்பியும், மலரும் தாமரை மலர்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், தலைவன் ஹரியை நாம் எங்கே சந்திப்பது? பக்தர்களால் புண்டரீகாக்ஷன் என்றும், அகங்காரமற்றவர்களால் பிரம்மம் என்றும் அழைக்கப்படுபவனுமான விஷ்ணுவைக் காணும் ஆவல் தணியவில்லையே.(9) அண்டத்தின் தலைவனும் {ஜகந்நாதனும்}, அண்ட அழிவின் போது அனைத்தையும் ஈர்த்துக் கொள்பவனும், பிறப்பற்றவனுமான தலைவன் ஹரியை நாம் எவ்வாறு காண்போம்?(10) உயிரினங்கள் அனைத்திற்கும் உறைவிடமாக இருப்பவனும், அண்டத்தில் வெளிப்படும்போது பேராற்றலை வெளிப்படுத்துபவனுமான அந்தத் தலைவனைக் காணும் ஆவல் அதிகரிக்கிறது.(11)

வாழ்வின் மிக அருவருப்பான நிலை என்று உயிரினங்கள் அனைத்தாலும் வெறுக்கப்படும் இந்தப் பிசாசு நிலையை அடைவதற்குக் கடந்த காலத்தில் {முற்பிறவியில்} நாம் என்ன செய்தோம் என்பதை அறிவோமில்லை. நாம் மனித ஊனுண்டு, களங்கமடைந்து அனைவரின் மனங்களிலும் அச்சத்தை உண்டாக்கி வருகிறோம்.(12,13) ஐயோ, நம் முற்பிறவிகளில் பாவச் செயல்கள் பலவற்றை நாம் இழைத்திருக்கிறோம். நம்முடைய இந்த இழிநிலை அதன் விளைவே. இந்த இழிவாழ்விலும் ஏதோ ஒரு மகிழ்ச்சியை நாம் அடைகிறோம்.(14) முற்பிறவி தீச்செயல்களின் விளைவுகள் தீரும்வரை, அனைவராலும் வெறுக்கப்படுவதும், பிறருக்குத் தொல்லை தருவதுமான இந்தப் பிசாசு வடிவம் நீங்காது.(15) முற்பிறவிகள் பலவற்றிலும் செய்த கணக்கற்ற பாவங்களை நாம் சேர்த்திருக்க வேண்டும். இன்றுவரை பாவ விளைவுகள் தீராததன் காரணம் இதுவே.(16)

பல்வேறு உயிரினங்களைக் கொன்று, இந்த நாய்க்கூட்டத்துடனும், நமது படைவீரர்களுடனும் பூமியில் திரிந்து கொண்டிருக்கிறோம். இவ்வுலகத்தில் ஒவ்வொருவரும், எது செய்யப்படவேண்டும், எது தவிர்க்கப்பட வேண்டும் என்பது புரியாத பால பருவத்தில் அறியாமையில் மறைந்திருக்கின்றனர்.(17) அவர்கள் சற்றே வளர்ந்ததும் {யௌவனத்தில் / இளமையில்} அவர்களது புத்தி, புலனின்பத்தின்பால் கொண்ட ஈர்ப்பில் களங்கமடைகிறது. அந்நேரத்தில் அவர்கள், புலன்களை நிறைவடையச் செய்யப் பயன்படும் செல்வத்தை மேலும் மேலும் திரட்டுவதிலேயே எப்போதும் ஈடுபடுகின்றனர்.(18) புலன் நிறைவிலேயே முழுமையாக ஈடுபடும் அவர்கள், உயர்ந்த நன்மைக்காகச் செய்ய வேண்டியதைப் புரிந்து கொள்ள ஒருபோதும் முயல்வதில்லை. புலனின்பத்தில் முழுமையாக ஈர்க்கப்பட்ட மனத்தைக் கொண்டவனால், எது உயர்ந்த நன்மை என்பதையும், எது {நன்மை} இல்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியாது.(19)

அவர்கள் முதிரும்போது தங்களைப் பெருந்துன்பத்துக்குள்ளாக்கும் பல்வேறு பிணிகளின் கொள்ளிடங்களாகத் திகழ்கின்றனர். இருப்பினும் கட்டுப்பாடற்ற தங்கள் புலன்களின் கட்டுப்பாட்டில் உள்ள அவர்களால், தங்களுக்கான உயர்ந்த நன்மையை அடைய எது செய்யப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. இறந்த பிறகு அவர்கள் மலமும், ஜலமும் சூழ்ந்த ஓர் அன்னையின் கருவறைக்குள் மீண்டும் புகுந்து, தொடர்ச்சியாகப் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். அதன்பிறகு அவர்கள் அந்தப் பயங்கரக் கருவறையைவிட்டு வெளியேறி மீண்டும் பிறப்பு, இறப்பு என்ற சுழற்சிக்குள் நுழைகின்றனர்.(20-22)

அவர்கள் வாழ்ந்து வரும்போதும் பிறரைத் துன்புறுத்துவதன் மூலம் மேலும் மேலும் பாவங்களைத் திரட்டுகின்றனர். இவ்வாறே அவர்கள் மூவகைத் துன்பங்களைக் கொண்ட இவ்வுலகில் அறியாமையின் காரணமாகப் பாவச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.(23)

இருப்புக்கான {வாழ்க்கைக்கான} இந்த விளக்கம் பண்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட அனைவருக்கும் பொருந்தும். ஆயுதத்தின் மூலமோ, பிற கருவிகளின் மூலமோ இந்த இருப்பை விலக்குவது சாத்தியமில்லை. உடலை சுயமெனக் கருதுவோர் ஒருபோதும் இந்த இருப்புக்கு முடிவைக் கொண்டு வருவதில்லை.(24,25)

அத்தகைய மனிதர்கள், “நான் என் பகைவனைக் கொன்று, அவனுடைய செல்வங்கள் அனைத்தையும் அபகரிப்பேன். அவனுடைய செல்வத்தைக் கொள்ளையிட்டு அதை என் புலன் நிறைவுக்காகப் பயன்படுத்துவேன். அவன் பலவீனன், நானோ பலமிக்கவன். எனவே நான் பலவந்தமாக அவனது செல்வங்கள் அனைத்தையும் அபகரிப்பேன்” என்று நினைக்கிறார்கள். இத்தகைய எண்ணங்களில் ஈடுபடும் மூடர்களே எப்போதும் பிற உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கிறார்கள்.(26,27)

சங்கு, சக்கர, கதாதரனும், ஆதிதேவனும், புராணாத்மாவும், பிரம்மவாதிகள் அனைவரின் ஆத்மாவாகத் திகழ்பவனுமான ஹரியால் மட்டுமே, துன்பங்கள் அனைத்துக்கும் வேர்க்காரணமான இருப்பு எனும் வியாதிக்கான தீர்வை வழங்க முடியும்.(28) இதையறிந்தே நாம் ஹரியின் தரிசனத்தை வேண்டுகிறோம்” என்றன. அவ்விரு பிசாசுகளும் இவ்வாறு பேசிக்கொண்டே ஹரியின் {கிருஷ்ணனின்} முன்பு தோன்றின” {என்றார் வைசம்பாயனர்}.(29) 

கண்டாகர்ணன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 55-(கண்டாகர்ணக்ருதா விஷ்ணுஸ்தவப்ரார்தநா தஸ்ய ஸமாதிலாபம்)-பிசாசுகளிடம் பேசிய கிருஷ்ணன்; தன் வரலாற்றைச் சொன்ன பிசாசு; பிசாசான கண்டாகர்ணனின் விஷ்ணுஸ்தவப்ரார்த்தனை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},  “பகவான் விஷ்ணு {கிருஷ்ணன்}, இறைச்சி உண்பவர்களும், மஹாகோரமானவர்களும், கைகளில் தீப்பந்தங்களுடன் தன் முன் வந்தவர்களுமான அந்தப் பிசாசுகளைக் கண்டான்.(1) ஆசனத்தில் சுகமாக அமர்ந்திருந்த தேவகியின் மகனை {கிருஷ்ணனை} அந்தப் பிசாசுகள் இருவரும் கண்டனர். அவர்கள் கேசவனிடம் மெல்லச் சென்று பின்வருமாறு பேசினர்:(2,3) “சாதாரண மனிதனைப் போல் தோற்றமளிக்கும் நீ யார்? உன்னுடைய தந்தை யார்? நீ எங்கிருந்து வருகிறாய்? கோர மிருகங்கள் உலவும் இந்த வனத்திற்கு ஏன் வந்தாய்?(4) மனிதர்களற்றதும், சிறுத்தைகள் நிறைந்ததுமான இந்தக் காடு, பிசாசுகள், புலிகள் மற்றும் சீற்றமிக்கப் பிற விலங்குகளின் விளையாட்டுக் களமாகும்.(5) நீ இளைஞனாகத் தெரிகிறாய். உன் அங்கங்கள் யாவும் மிக அழகாக இருக்கின்றன. உண்மையில் நீ இரண்டாம் விஷ்ணுவைப் போலத் தோற்றமளிக்கிறாய். உன் நீண்டவிழிகள் தாமரை மலரைப் போல அழகாக இருக்கின்றன. உன் மேனி நிறம் கருப்பாக இருப்பதால் நீலோத்பல மலரைப் போலவும், ஸ்ரீபதியை {லட்சுமியின் கணவனைப்} போலவும் தெரிகிறாய்.(6) விஷ்ணுவே எங்கள் மீது கருணையுடன் இந்த வடிவில் வந்திருப்பதைப் போலத் தெரிகிறது. இந்த அடர்வனத்தில் தனியாக அமர்ந்து தியானம் பயின்று கொண்டிருக்கும் நீ தேவனா? யக்ஷனா, கந்தர்வனா? கின்னரனா? இந்திரனா? குபேரனா? யமனா? வருணனா?(7,8) ஓ! மதிப்புக்குரியவனே, மனிதனைப் போன்று தோற்றமளிப்பவனே, நாங்கள் உன்னை அறிய விரும்புவதால் எங்களிடம் உண்மையைச் சொல்வாயாக” {என்று கேட்டனர்}.

விஷ்ணு {கிருஷ்ணன்}, அந்தப் பிசாசுகளுக்கு மறுமொழி கூறும் வகையில்: “நான் யதுகுலத்தில் பிறந்த க்ஷத்திரியன். இவ்வுலகின் மக்கள் என்னை இவ்வாறே அறிகின்றனர்.(9,10) எனினும், உண்மையில் மூவுலகங்களையும் காப்பவன் நான். துஷ்டர்கள் அனைவரையும் வதம் செய்வதே என் பணி. இப்போது உமையின் கணவனான மஹாதேவனைக் காணக் கைலாச மலைக்குச் செல்ல விரும்புகிறேன்.(11) இதுவே என் விருத்தாந்தம். இனி நீங்கள் யார் என்பதை எனக்குச் சொல்லுங்கள். பிராமணர்களுக்கான இந்த ஆசிரமத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.(12) இது பதரிகாசிரமம் என்று அறியப்படும் மிகப் புனிதமான தலமாகும். இங்கே பிராமணர்கள் பலர் வசிக்கின்றனர். தீயவர்களுக்கு இங்கே அனுமதியில்லை. இங்கே சித்தர்கள் எப்போதும் வசித்துத் தவம் பயின்று வருகின்றனர். இன்று காண்பது போல இங்கே நாய்க்கூட்டங்களையோ, ஊனுண்ணும் பிசாசுகளையோ நான் என்றும் கண்டதில்லை.(13,14)

இங்கே வேட்டை அனுமதிக்கப்படவில்லை என்பதால் மான்களைக் கொல்லக்கூடாது. முரட்டுக் குணம் கொண்ட நன்றிகெட்டவர்களும், நாத்திகர்களும் இந்தப் புனிதத்தலத்திற்குள் நுழைவதை நினைக்கவும் கூடாது.(15) இந்தப் புனிதத்தலத்தைக் காப்பவன் நான். இதில் ஐயமேதும் இல்லை. என் ஆணையை மீறத் துணிபவர்களை நான் தண்டிப்பேன்.(16) நீங்கள் யார்? எங்கே வாழ்கிறீர்கள்? இவர்கள் யாருடைய படைவீரர்கள்? இந்த நாய்க்கூட்டம் யாருடையது?(17) இங்கே தவம் செய்து வரும் பல முனிவர்களுக்கு இடைஞ்சல் விளைவிப்பீர்கள் என்பதால் உங்களை இந்த வனத்திற்குள் இதற்கு மேலும் அனுமதிக்க முடியாது.(18) என் வாக்கியத்தை மதித்து என் கேள்விகளுக்குப் பதிலளிப்பீராக; மாறாக நடந்தால் என்னுடைய பேராற்றலால் உங்களை நான் தடுப்பேன்” என்றான் {கிருஷ்ணன்}”.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இவ்வாறு கேட்கப்பட்ட பிசாசுகள் தங்கள் கதையைச் சொல்லத் தொடங்கின.(19) மஹாகோரமான இரண்டு பிசாசுகளில் ஒருவன் வலிமைமிக்கவனாகவும், ஒப்பற்ற கர வலிமை கொண்டவனாகவும் இருந்தான். அவனே தன் மனத்தில் இருந்ததை வெளிப்படுத்தத் தொடங்கினான்.(20)

அந்தப் பிசாசானவன், “நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக. ஜகந்நாதனும், பிறப்பற்றவனும், உயர்ந்தவனும், பாவமற்றவனும், தூயவனும், பாவங்களை அழிப்பவனும், ஆதிதேவனும், உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவனும், நித்தியனும், அறிவாலும், அருளாலும் நிறைந்தவனும் ஜகத்பதியுமான விஷ்ணுவை நான் வணங்குகிறேன். எங்களைக் குறித்து நீ அறிய விரும்பினால் என் கதையைக் கேட்பாயாக.(21,22)

நான் கண்டாகர்ணன் என்ற பெயருடைய பிசாசு ஆவேன். என்னைப் பார்ப்பதே மங்கலமற்ற நிலையைக் கொடுக்கும். நான் சிதைந்த முகத்துடன் கூடியவனாகவும், மாமிசம் உண்பவனாகவும் இருக்கிறேன். எனவே இரண்டாம் மிருத்யுவைப் போலக் காணப் பயங்கரனாக இருக்கிறேன்.(23) நான் ருத்ரனின் அன்புக்குரிய நண்பரான தனஸ்யரின் {குபேரனின்} தொண்டனாவேன்[1]. அந்தகனைப் போலத் தெரியும் இவன் என் தம்பியாவான்.(24) நாங்கள் விஷ்ணுவை வழிபடும் நோக்கத்துடன் வேட்டையாடியபடியே இங்கே வந்தோம். இந்தப் படை என்னுடையதே, இந்த நாய்களும் என்னுடையவையே.(25) மஹாசைலமும், பல பூதங்களால் தொண்டாற்றப்படுவதுமான கைலாச மலையில் இருந்து நான் இங்கே வந்தேன். நான் பிசாசு உடலுக்குள் இருக்கும் பெரும்பாவி ஆவேன்.(26)முற்காலத்தில் விஷ்ணுவை அவதூறு செய்யும் வழக்கத்தை நான் கொண்டிருந்தேன். உண்மையில் விஷ்ணுவின் புனிதப்பெயர் காதுகளில் நுழைந்துவிடாதபடிக்கு பெரிய மணிகளை {கண்டங்களை} என் காதுகளில் {கர்ணங்களில்} அணிந்திருந்தேன். இதில் நான் எவ்வளவு தீவிரமாக இருந்தேன் என்பதை இதன்மூலம் நீ அறிந்து கொள்ளலாம்.(27)

ஒரு நாள் நான் கைலாச மலைக்குச் சென்று ரிஷபத்வஜனான சிவனை வழிபட்டேன். அப்போதிலிருந்து அந்த மஹாதேவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.(28) என்னுடைய வழிபாட்டில் நிறைவடைந்த ஹரன் {சிவன்} என்னிடம், “நீ ஒரு வரத்தை என்னிடம் கேட்பாயாக” என்றான். நான் அவனிடம் முக்தியை வேண்டினேன்.(29)

என் வேண்டுகோளைக் கேட்ட அந்தத் திரிலோசனன் {முக்கண்ணன் சிவன்}, “உயிரினங்கள் அனைத்திற்கும் முக்தியை அளிக்கவல்லவன் விஷ்ணுவே என்பதில் ஐயமில்லை.(30) எனவே நீ பதரிகாசிரமத்திற்குச் செல்வாயாக. நரநாராயண ரிஷிகளின் ஆசிரமத்தில் கோவிந்தன் என்று அறியப்படும் அந்த ஜனார்த்தனனை நீ வழிபட்டால், நிச்சயம் அவன் உனக்கு முக்தியை அளிப்பான்” என்றான்.(31)

சூலதாரியான அந்தத் தேவதேவன் {சிவன்} இவ்வாறு சொன்னதும், கருடத்வஜனான கோவிந்தனின் பரம மகிமையை நான் அறிந்து கொண்டேன்.(32) அவனிடம் முக்தியை வேண்டும் விருப்பத்திலேயே நான் இங்கே வந்திருக்கிறேன். உனக்கு விருப்பமிருந்தால் என் கதையைத் தொடர்கிறேன் கேட்பாயாக.(33)

யது விருஷ்ணி குலங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் மேற்குக் கடற்கரையில் துவாராவதி என்ற புகழ்பெற்ற நகரம் இருக்கிறது. அந்த நகரம் அனைத்துப் பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டிருக்கிறது. தற்போது ஹரி அங்கேயே வசித்து வருகிறான்.(34) ஓ! தலைவா, உலகின் நன்மைக்காகத் துவாரகையில் வசித்து வருபவனும், ஹரியும், விஷ்ணுவுமான அந்தப் புருஷோத்தமனைச் சந்திக்கவே எங்கள் தொண்டர்களுடன் நாங்கள் வந்திருக்கிறோம். உயிரினங்கள் அனைத்தின் தலைவனான {சர்வேஸ்வரனான} விஷ்ணுவை இன்று முகத்திற்கு நேராகச் சந்திப்போம் என நாங்கள் நம்புகிறோம்.(35,36) அனைத்தும் வெளிப்பட்டதன் உண்மைக் காரணன் அந்த ஹரியே. அண்டத்தைப் படைத்தவனும், காப்பவனும், அழிப்பவனுமான அவனே அனைத்தையும் கட்டுப்படுத்துகிறான். ஜகத்பதியான அவனே உண்மையில் உயர்ந்த தேவனாவான்.(37)

மொத்த அண்டத்தின் உரிமையாளனும், ஆதி தேவனும், புராதனனும், தூய நல்லியல்பின் வடிவமும், வரங்களை அருள்பவனும், வழிபடத்தகுந்தவனுமான அந்த ஹரியை தரிசிக்கும் நம்பிக்கையுடனே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்.(38) எவனுடைய அருளால் பல்வேறு உயிரினங்களும், கந்தர்வர்களும், பாம்புகளும் வசித்திருக்கும் இவ்வுலகம் இருப்புக்குள் வந்ததோ அந்த ஜனார்த்தனனைக் காணவே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். படைப்பின் உண்மைக் காரணனாக இருப்பினும் அவன் காரணமேதும் இல்லாதவனாகவும், பிறப்பற்றவனாகவும் இருக்கிறான்.(39)

ஒவ்வொரு கல்பத்தின் தொடக்கத்திலும் இந்த அண்டம், முந்தைய கல்பத்தின் முடிவில் கலந்த புருஷோத்தமனின் குடலுக்குள் இருந்து வெளிப்படுகிறது. அண்டம் வெளிப்பட்டதும், நாம் இப்போது காண விரும்பும் பிரபுவால் காக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகிறது.(40) அவனே அண்டம் வெளிப்பட உண்மைக் காரணனும், அண்டத்தைக் காத்து அழிப்பவனும், நித்தியமானவனும், அழிவற்ற ஆதி தேவனும், அண்டத்தின் தலைவனும் ஆவான்.(41)

சுயம்புவான பிரம்மனைப் படைத்தவன் தலைவன் ஹரியே, விஷ்ணு வடிவாக இருக்கும் அண்டத்தைப் பாதுகாப்பவனும் அவனே. யோக ஆசானும், தன் பக்தர்களுக்குத் தூய புத்தியை அருள்பவனுமான அந்த ஹரியை நாங்கள் சந்திப்போம் என நம்புகிறோம். எங்கள் மனங்கள் இப்போது அவனிடமே நிலைத்திருக்கின்றன.(42) அழிவேற்படும் காலத்தில் மூவுலகங்களின் உறைவிடமாகத் திகழும் ஹரி மொத்த அண்ட வெளிப்பாட்டையும் தன் உடலுக்குள் இழுத்துக் கொள்கிறான். பிறகு அவன் ஒரு குழந்தையைப் போலக் கைகளையும், கால்களையும் அசைத்துக் கொண்டு ஆலிலையில் வெளிப்படுகிறான்.(43)

புராதன முனிவரான மார்க்கண்டேயர் அந்தத் தலைவனின் வயிற்றுக்குள் நுழைந்து அவனுடைய அருளால் மொத்த படைப்பையும் அங்கே கண்டார். அவர் மொத்த அண்டத்தையும் வெளியே கண்டதுபோலவே, அந்தத் தலைவனின் வயிற்றுக்குள்ளும் கண்டார்.(44) பழங்காலத்தில் அந்தப் பரமாத்மா மொத்த அண்டத்தையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டு, அந்த அழிவில் உண்டான நீரில் கிடந்திருந்தான். அந்நேரத்தில் ஸ்ரீதேவி கையில் சாமரத்துடன் அவனுக்குத் தொண்டாற்றினாள்.(45)

படைப்பின் தொடக்கத்தில் தலைவனின் நாபியில் இருந்து ஒரு பொற்தாமரை மலர் உதித்தது. அழகிய இதழ்களைக் கொண்ட அந்த அண்டத் தாமரையே அண்டத்தின் ஆன்ம குருவான பிரம்மனின் பிறப்பிடமாகத் திகழ்ந்தது.(46) பழங்காலத்தில் பன்றியின் வடிவை ஏற்ற அந்தப் பரமனைக் காண நாங்கள் ஆவலாக இருக்கிறோம். பெரும் முனிவர்களால் துதிக்கப்பட்ட அவன், புயல் மேகங்களைப் போலக் கர்ஜித்துக் கொண்டு நீருக்குள் இருந்த பூமியைத் தன் தந்தங்களால் காத்தான். பிரபுவும், புராதனனும், புருஷோத்தமனுமான அந்த ஹரியே சாட்சியாகவும், வேள்வியின் வடிவமாகவும், படைப்பைக் காக்கும் வேள்வியின் தலைவனாகவும் இருக்கிறான்.(47,48)

சில பக்தர்கள், இந்திரனின் தலைமையிலான தேவர்களின் பல்வேறு வடிவங்களிலும் விஷ்ணுவைக் கண்டு அந்தப் புறவடிவத்தையே வழிபடுகின்றனர். வேதாந்தத்தால் உறுதிசெய்யப்படும் அத்வைதப் பொருளாலான உடலைக் கொண்ட அந்தத் தேவனைக் காணவே நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்.(49) பல்வேறு வகைகளில் விளக்கப்படுபவனும், ஸ்ருதிகள், ஸ்மிருதிகள், தர்க்கம் தொடர்புடைய கல்விமான்கள் பலரால் பல்வேறு வடிவங்களைக் கொண்டவனாகச் சொல்லப்படுபவனும், புராணங்களை அறிந்தவர்களால் அகத்தில் வசிக்கும் பரமாத்மாவாக அறியப்படுபவனுமான அந்தத் தலைவனைக் காண நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்.(50) வழிபாட்டின் முக்கியப் பொருளாகவும், வரங்களை அளிப்பவர்களில் சிறந்தவனாகவும், அதிகம் நாடப்படுபவனாகவும், பிறப்பற்றவனாகவும், நீக்கமற நிறைந்திருப்பவனாகவும், முற்றான உண்மையாகவுமான அந்த ஜனார்த்தனனை புராதன முனிவர்கள்  துதிக்கின்றனர்.(51)

சரத்தில் கோர்க்கப்படும் முத்துகளைப் போலவே அண்டங்கள் அனைத்தும் அவனையே சார்ந்திருக்கின்றன. அந்த விஷ்ணுவைக் காண நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம். வேறென்ன சொல்ல?(52) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, இப்போது நாங்கள் செல்கிறோம், நீயும் விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக.(53) இப்போது நடு இரவாகிவிட்டது. நான் என் அறச்சடங்குகளைச் செய்யும் நேரமாகிவிட்டது. இன்னும் சொல்வதற்கு வேறேதும் இல்லை” {என்றான் கண்டகர்ணன்}.

சிதைந்த முகத்தைக் கொண்டவனும், அச்சுறுத்தும் தோற்றம் கொண்டவனுமான அந்தப் பிசாசானவன் இவ்வாறு சொல்லிவிட்டு அவனது {கிருஷ்ணனின்} முன்னிலையிலேயே குருதி பருகி, இறைச்சியுமுண்டான்.(54,55) பிறகு அவன், தன் கைகளைக் கழுவிக் கொண்டு, குடல்களால் அமைந்த பெருங்கயிற்றை அருகில் வைத்துக் கொண்டு தான் செய்யும் சாதனைக்குத் தேவையான பொருட்களை எடுத்தான். அவன் குசப்புல்லாலான பாயைத் தரையில் வைத்து, நீர் தெளித்து அதைத் தூய்மை செய்தான். பிறகு அவன் நாய்கள் அனைத்தையும் விரட்டிவிட்டு அமைதியாக அமர்ந்து சமாதியில் தன் மனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டான். பக்தர்களிடம் எப்போதும் அன்புடன் இருக்கும் கேசவனை அவன் முதலில் வணங்கினான். பிறகு பல்வேறு மந்திரங்களை உள்ளடக்கிய பின் வரும் {விஷ்ணுஸ்தவப்ரார்த்தனை என்ற} துதியைக் குவிந்த மனத்துடன் ஓதினான்.(56-58)

சக்கரபாணியான வாசுதேவா, நான் உன்னைப் பணிந்து வணங்குகிறேன். ஓ! கதாதரா, உயிரினங்கள் அனைத்தின் இதயங்களிலும் வசிக்கும் உன்னை நான் வணங்குகிறேன்.(59) ஓம். பேராற்றல்வாய்ந்தவனும், நீக்கமற நிறைந்தவனும், நித்தியமானவனும், ஞானமும் அருளும் நிறைந்தவனுமான நாராயணா நான் உன்னை வணங்குகிறேன். ஓ! கேசவா, என் மனம் உன் மகிமையால் தூய்மையடையட்டும்.(60) ஓ! புலன்களின் தலைவா, நாராயணா, இந்தத் துன்ப நிலையில் இருந்து என்னைக் காப்பாயாக. உன் அருளால் நான் தேவர்களின் தொண்டனாவேனாக.(61) {புலன்நுகர்} பொருள் பற்றில் மீண்டும் நான் சிக்காமல் இருக்க உன் சக்கரத்தால் என்னுடல் துண்டு துண்டாக வெட்டப்படப் பிரார்த்திக்கிறேன்.(62) பொருளற்றவனுக்குக் கற்பக மரம் {கல்பவிருக்ஷம்} நீயே. ஓ! தேவர்களின் தலைவா, தயாளன் நீயே. நான் எங்குப் பிறந்தாலும் என் இதயத்தில் நீ இருக்கப் பிரார்த்திக்கிறேன். ஓ! உயர்ந்த தேவா, நான் உன்னை வணங்குகிறேன். நான் எப்போதும் உன்னைத் துதித்திருப்பேனாக. நான் இறக்கும்போது என் மனம் {புலன்நுகர்} பொருள் பற்றில் மயங்காதிருக்கட்டும். ஓ தேவா, ஒவ்வொரு கணத்திலும் என் மனம் உன்னிலேயே நிலைத்திருக்கட்டும். என் இதயத்தை இவ்வாறே எப்போதும் தூண்டுவாயாக. “இவன் கொடூரன், இவன் பிசாசு, எனவே என் கருணைக்குத் தகாதவன்” என்று ஒருபோதும் நினையாதே. “வீழ்ந்த ஆத்மாவான இவன் என் சேவகன்” என்றே என்னைக் கருதுவாயாக. ஓ! பிரபுவே, பகவானே, நான் உன்னை வணங்குகிறேன். நான் பிறருக்குத் துன்பம் இழைக்காத வகையிலும், என் புலன்கள் வெறும் பொருளில் திருப்தியடையும் இழிநிலையில் ஒருபோதும் வீழாத வகையிலும் என்னிடம் கருணை கொள்வாயாக.(63-68) கேசவா, மரணக் காலத்தில் உன் கருணையால் என் மனம் உன்னில் நிலைத்திருக்கட்டும். பூமி என் மூக்கை ஏற்கட்டும், நீர் என் நாவை ஏற்கட்டும், சூரியன் என் கண்களை ஏற்கட்டும், காற்று என் தோலை ஏற்கட்டும், வானம் என் காதுகளை ஏற்கட்டும், சந்திரன் என் உயிர்க் காற்றையும் {மூச்சையும்}, மனத்தையும் ஏற்கட்டும்.(69,70) ஓ! ஹரியே, தண்ணீர் எப்போதும் என்னைப் பாதுகாக்கட்டும், பூமி எப்போதும் என்னைப் பாதுகாக்கட்டும், சூரியன் எப்போதும் என்னைப் பாதுகாக்கட்டும். விஷ்ணுவே, நீ சூரியனைப் போல வலிமைமிக்கவன். நான் உன்னை வணங்குகிறேன்.(71) ஓ! ஜனார்த்தனா, காற்றும், ஆகாயமும் என்னைத் துன்பத்தில் இருந்து காக்கட்டும். நானாக இருக்கும் என் மனம், {புலன்நுகர்} பொருள் இன்ப நினைவுகளில் திரும்பாமல் பரமாத்மாவில் நிலைத்திருக்கட்டும்.(72) புலன்நுகர் பொருட்களின் இன்ப நினைவுகளில் மனம் சிக்கினால் அஃது ஒருவனின் புண்ணியங்களை மட்டும் அழிக்காமல், பிறருக்கு துன்பத்தையும் விளைவிக்கும்.(73) ஓ! ஜனார்த்தனா, எப்போதும் என் மனத்தைப் பாதுகாப்பாயாக. எப்போதும் என் மனம் களங்கமடையாமல் தூய்மையாக இருக்கட்டும்.(74)

தூய்மையற்ற மனம் ஒருவனை நரகத்திற்கு இட்டுச் செல்லும். மனம் தூய்மையாக இருக்கும்போது, புறப்புலன்கள் தாமாகத் தூய்மையடைகின்றன, மனம் களங்கமடையும்போதோ, புலன்களும் தூய்மையற்ற பணிகளில் ஈடுபடுகின்றன. ஓ! கேசவா, மனக்களங்கத்தைத் தூய்மைப்படுத்தாமல், புறவுடலை மட்டும் கழுவுவதால் எவனும் அடையப்போவதென்ன? தன்னைத் தூய்மையாக்கிக் கொள்ளும் அவனது முயற்சி அற்பமானதே.(75,77) எனவே, ஓ! ஜனார்த்தனா, என் மனத்தைப் பாதுகாப்பாயாக. புலன்கள் வலிமைமிக்கவை என்பதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் எனக்கு உதவி செய்வாயாக.(78) ஓ! ஜகந்நாதா, பிறரை விமர்சிக்க என் சொற்களை அனுமதியாதே. பிறரின் செல்வத்திலும், மனைவிகளிடமும் பற்றுக் கொள்ள என் மனத்தை அனுமதியாதே. ஓ! கேசவா, அனைத்து உயிரினங்களிடமும் என் மனத்தில் கருணை உண்டாக அருள் செய்வாயாக.(79) உன்னிடம் ஓயாத பற்றையும், உயிரினங்கள் அனைத்திடமும் கருணையையும் வளர்ப்பேனாக. இதற்கு மேலும் சொல்லி என்ன பயன்? என் வேண்டுதலைக் கேட்பாயாக.(80) ஓ! தேவேசா, ஜனார்த்தனா, இன்பத்திலும், துன்பத்திலும், கோபத்திலும், உண்ணும்போதும், நடக்கும்போதும், விழித்திருக்கும்போதும், கனவிலும் என் மனம் எப்போதும் உன்னில் இன்புற்றிருக்கட்டும். நான் உன்னை வணங்குகிறேன்” {என்றான் கண்டாகர்ணன்}[2].முன்னர்த் தாழ்ந்த குலத்தில் பிறந்த அந்தப் பயங்கரப் பிசாசானவன் இவ்வாறு சொன்னபடியே சமாதியில் ஆழ்ந்தான். உண்மையில் அவன் தேவனின் பரம பக்தனாகி அவனைச் சரணமடைந்தான். மாமிசமுண்ணும் அந்தப் பிசாசானவன், குடல்களாலான கயிறுகளில் தன் உடலைக் கட்டி, மனத்தைக் கவனமாகக் கட்டுப்படுத்தி அமர்ந்தவாறே, பீதாம்பரம் உடுத்துபவனும், அண்ட வெளிப்பாட்டின் பிறப்பிடமும் {ஜகத்யோனியும்} மங்கலனுமான விஷ்ணுவைத் தியானிக்கத் தொடங்கினான்.(81-84)

ஆதிபுருஷனும், தன்னைப் போல் வேறொருவன் இல்லாதவனும், தூய்மையின் கொள்ளிடமும், அறிவை விளைவிக்கும் பொருளும், அனைத்து உயிரினங்களின் குருவுமான முகுந்தனிடம் {கிருஷ்ணனிடம்} அவன் தன் மனத்தை நிலைநிறுத்தினான்.(85) அவன் தன் மூக்கின் நுனியில் தன் கண்களை நிலைநிறுத்தி, ஓம் எனும் புனித அக்ஷரத்தை ஓதி, காற்றில்லாத இடத்தில் உள்ள விளக்கைப் போல மனத்தில் உறுதியடைந்தான்.(86) ஓம் எனும் பிரணவ வசனத்தையே பிரம்மமாகக் கருதி முழுமையாக விஷ்ணுவில் மனத்தைக் குவித்தான். தியானம் பயின்றதன் மூலம் அவன் தன் அலைபாயாத மனத்தைத் தாமரை போன்ற தன் இதயத்தில் நிலைநிறுத்தினான். பெரும் யோகியும், மாமிசம் உண்பவனுமான அந்தப் பிசாசானவன் {கண்டாகர்ணன்}, தாமரை போன்ற தன் இதயத்தில் அண்டத்தின் தலைவனை நிலைநிறுத்தியபிறகு அமைதியாக அமர்ந்து விஷ்ணுவைத் தியானிக்கத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(87-89) 

விஷ்ணு தரிசனம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 56-(கண்டாகர்ணஸ்ய விஷ்ணுஸாக்ஷாத்காரலாபம்)-கண்டாகர்ணனுக்குத் தரிசனம் தந்த விஷ்ணு; கண்டாகர்ணனின் சிந்தனை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},   “பகவான் விஷ்ணு {கிருஷ்ணன்}, தன்னையே ஆன்மாவாகவும், உயிராகவும் தூய புத்தியில் கருதி, தன்னையே தியானித்துக் கொண்டிருந்த அந்தப் பிசாசைக் கண்டான்.(1) ஹரியின் புனிதப் பெயர்களின் முன் பிரணவத்தை {ஓம் எனும் மந்திரத்தை} இட்டு ஒவ்வொரு பெயராக அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் தன் விருப்பம் நிறைவேற தன் இதயத்தில் பிரார்த்தித்தான். இறுதியில் கண்டாகர்ணன் தன் தியானத்தில் ஹரியைக் கண்டான்.(2)

ஜகந்நாதன் {கிருஷ்ணன்}, “இந்தப் பிசாசானவன் எவ்வாறு இவ்வளவு நல்லவானக இருக்கிறான்” என்று சிந்தித்தான். நீண்ட காலம் இவ்வாறு சிந்தித்துப் பின்வரும் தீர்மானத்தை அடைந்தான்.(3) ‘தனதஸ்யனுடைய {குபேரனுடைய} உபதேசத்தின் பேரில் இவன் என் பெயர்களை, “வாசுதேவா, கிருஷ்ணா, மாதவா,(4) ஜனார்த்தனா, ஹரியே, விஷ்ணுவே, பூதபாவனபாவனா, நராகாரா, ஜகந்நாதா, நாராயாணா, பராயணா” என்ற என்னுடைய பெயர்கள் பலவற்றைச் சொல்லி வருகிறான்.(5) மேலும் இவன் நித்தம் இரவும் பகலும் என் பெயர்களைச் சொல்லிவருகிறான். உறங்கும்போதும், விழித்திருக்கும்போதும், நிற்கும்போதும், உண்ணும்போதும், பருகும்போதும், நடக்கும்போதும், பேசும்போதும் இவன் இந்தப் பெயர்களையே தொடர்ந்து சொல்லிவருகிறான்.(6) மாமிசம் உண்ணும்போதும், குருதி பருகும்போதும் இவன் என் பெயர்களையே சொல்கிறான். எண்ணற்ற உயிரினங்களைக் கொல்லும்போதும், இடையறாமல் மான்களைக் கொல்லும்போதும்,(7) கொலை செய்வது, உண்பது, உறங்குவது என எந்தக் காரியத்தைச் செய்யும்போதும் இவன் என்னையே கர்த்தனாக ஏற்கிறான்.(8) இதன்காரணமாக இவனது பாவச்செயல்கள் செல்லாதவை ஆகின்றன” என்று சிந்தித்தான் அந்த ஜகந்நாதன்.

ஓ! மன்னா, இந்தத் தீர்மானத்தை அடைந்த அந்த ஜகத்பதி, தன் பக்தனான அந்தப் பிசாசிடம் மகிழ்ந்து, அவனுடைய தூய்மையான இதயத்திற்குள் வெளிப்பட்டான்.(9,10) இவ்வாறே அந்தக் கோர பிசாசானவன், பாவங்கள் அனைத்தையும் அழிப்பவனான கேசவனை, பீதாம்பரம் உடுத்தியவனாகத் தன் இதயத்திற்குள் கண்டான். அந்த ஹரியின் நிறம் கருப்பாக இருந்தது, அவனது கண்கள் மலரும் தாமரை மலர்களைப் போல இருந்தன.(11) அந்த விஷ்ணுவின் கரங்கள் சங்கு, சக்கர, கதாயுதம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காட்டு மலர் மாலை அவனது கழுத்தைச் சுற்றிலும் தொங்கிக் கொண்டிருந்தது. தலையில் கிரீடத்துடனும், மார்பில் கௌஸ்துப மணியுடனும், ஸ்ரீவத்சக் குறிகளுடனும் அவன் இருந்தான்.(12)

அவனுடைய நிறம் நீல மேகம் போலக் கருப்பாக மயக்கும் வகையில் இருந்தது. அவன் பிரபஞ்சத்தில் உள்ள அச்சங்கள் அனைத்தையும் விலக்குபவனாகக் கருடனின் முதுகில் அமர்ந்திருந்தான். அவன் நான்கு கைகளைக் கொண்டிருந்தான். அவனது ஒலி மங்கலமானதாக இருந்தது. நீக்கமற நிறைந்த அந்த மங்கலத் தலைவன் அசைவின்றி இருந்தான்.(13) அவன் ஆதியும், அந்தமும் அற்றவனாக இருந்தான். அவன் நிதானனாகவும், நித்தியனாகவும் இருந்தான். முற்றான சத்தியனாகவும், எப்போதும் தூயனாகவும், தூய புத்தியால் புரிந்து கொள்ளப்படக் கூடியவனாகவும், மலத்திலிருந்து {களங்கங்களிலிருந்து} எப்போதும் விடுபட்டவனாகவும் இருந்தான்.(14) இவ்வாறே அவன் {கண்டாகர்ணன்}, தன் இதயத்திற்குள் வெளிப்பட்ட விஷ்ணுவைத் தரிசித்தான். மூடிய கண்களுடன் அமர்ந்திருந்த அவன், தன்னை நற்பேறு பெற்றவனாகக் கருதினான்.(15)

{கண்டாகர்ணன்}, “அந்த ஹரிவிஷ்ணு தன் தரிசனத்தை எனக்கு அருளினான். இவ்வாறே அவனைக் காணமுடியும். நிச்சயம் அவன் என்னிடம் நிறைவடைந்திருக்கிறான்.(16) என் வாழ்வின் இலக்குச் சித்தியடைந்தது {நான் ஜீவமுக்தனானேன் / வாழும்போதே முக்தியடைந்தவன் ஆனேன்}. இதைவிட எனக்கு முக்கியமானது வேறென்ன இருக்க முடியும்? என் அறியாமை அகன்றது. என் இந்திரியங்களும் எனக்கு வசப்பட்டன.(17) நான் என் மனத்தை வென்றதாலேயே ஹரி என்னை நினைத்திருக்கிறான். மூவகை ஆசைகளும் விலகியதால் நான் முழுமையாக நிறைவடைந்திருக்கிறேன்.(18) எனக்குப் பிசாசுகளுடனான உறவு இப்போது முடிந்தது. என் தம்பியும் ஹரி பக்தன் என்பதால், அவனும் உரிய காலத்தில் ஸாயுஜ்ய முக்தியை அடைவான் {இறையுடன் இரண்டறக்கலப்பான்}” {என்று நினைத்தான்}.

இவ்வாறு சிந்தித்த அந்தப் பிசாசானவன் {கண்டாகர்ணன்} தன் உடலில் இருந்து குடல்கயிறுகளை அறுத்துப் பேரின்பக்கடலில் மூழ்குவதற்காகத் தன் உயிர் காற்றை {பிராணனை} விடுவித்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(19-21) 

விஷ்ணுஸ்தவம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 57-(கண்டாகர்ணக்ருதோ விஷ்ணுஸ்தவம்)தன் முன் அமர்ந்திருக்கும் ஜகத்பதியான விஷ்ணுவைக் கண்டு துதித்து விஷ்ணுஸ்தவத் துதியைச் சொன்ன கண்டாகர்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},   “அந்தப் பிசாசானவன் {கண்டாகர்ணன்} தியானத்தில் கண்ட ஜகத்குருவே, இப்போது தன்னெதிரில் ஜனார்த்தனனாக அமர்ந்திருப்பதைக் கண்டான்.(1) அப்போது அந்தப் பிசாசானவன், “இதோ விஷ்ணு. இதே வடிவத்தையே இவன் என் தியானத்தில் வெளிப்படுத்தினான்” என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் சிரித்துக் கூத்தாடினான்.(2)

பிறகு அவன் {கண்டாகர்ணன்}, “சக்கரம், சரங்கள், சாரங்க தனு {வில்}, கதாயுதம் ஆகியவற்றைத் தரித்தவனும், அழகிய கொடியால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்திருப்பவனும், ஆயிரந்தலைகளைக் கொண்டவனும், தேவர்களின் தலைவனும், மூவுலகங்களின் புகலிடமும், அண்டத்தைப் படைத்தவனுமான ஹரி இவனே.(3) எப்போதும் வெல்பவனும் {ஜிஷ்ணுவும்}, அண்டத்தின் தலைவனும் {ஜகந்நாதனும்}, புராணனும், அண்டத்தின் ஆன்மாவும், வெளிப்பட்டிருக்கும் இந்த அண்டத்தின் படைப்பாளனுமான விஷ்ணு இவனே.(4) இதோ ஹரிதேவனின் மார்பில் கௌஸ்துப ரத்தினம் மிளிர்கிறது. முழு நிலவால் ஒளியூட்டப்படும் ராத்திரியைப் போலவே இந்த அண்டமும் இவனால் ஒளியூட்டப்படுகிறது.(5)

{கார்போடகக் கடலில்} ஜலத்தின் அடியிலிருந்து பிருத்வியைத் தன் தந்தங்களில் உயர்த்தி உரிய இடத்தில் நிலைநிறுத்திய வராஹன் இவனே. சாக்ஷாத் ஹரி இவனே.(6) வலிமைமிக்கவனும், தானவர்களின் மன்னனுமான பலியை பலவந்தமாகக் கட்டிப்போட்டு, இந்திரனிடம் மூவுலகங்களையும் திருப்பி அளித்த வாமனன் இவனே. அந்நேரத்தில் பெரும் முனிவர்களால் துதிக்கப்பட்டவன் இந்த ஹரியே.(7) கோரப்பற்களையுடைய நரசிம்மனாக அவதரித்து தானவர்களைக் கொன்று ஓலத்திலிருந்து அண்டத்தை விடுவித்தவன் இந்த ஜனார்த்தனனே.(8) ஆதிகாலத்தில் மந்தர மலையை ஒரு கையில் பிடித்து, பெருங்கடலின் கரையில் தானவர்கள் அனைவரையும் வீழ்த்திய அந்த மஹாவிஷ்ணுவே இப்போது என் முன் இருக்கிறான்.(9) அண்டம் அழிந்ததும் லக்ஷ்மி தேவியுடன் அநந்த சேஷ படுக்கையில் கிடந்து, மது, கைடபன் என்ற வலிமைமிக்க தானவர்கள் இருவரைக் கொன்றவன் இந்த ஹரியே.(10)

அனைத்தின் பிறப்பிடம், ஜகத்பதி, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவன், பிறப்பற்றவன், அனைவரின் ஐயன், அணுவைவிடச் சிறியவன், பெரிதிலும் பெரியவன் என்றெல்லாம் தேவர்களால் துதிக்கப்படுபவன் இந்த விஷ்ணுவே.(11) அழிவிற்குப் பின் மொத்த படைப்பும் எவனில் கரையுமோ, படைப்பின் தொடக்கத்தில் எவனிடமிருந்து அது {மொத்த படைப்பும்} வெளிப்படுமோ அந்த விஷ்ணுவே இப்போது என் முன் இருக்கிறான்.(12) எவனுடைய விருப்பத்தினால் மூவுலகங்களும் தங்கள் கடமைகளில் ஈடுபடுமோ அந்த மங்கலவிஷ்ணுவும் யாதவேஷ்வரனும், புருஷோத்தமனுமான இந்த ஜனார்த்தனனும் ஒருவனே.(13)

மிருகவியாதன் என்ற பெயரில் ருத்ரனின் சீடனாகி, ஆயிரங்கரங்களைக் கொண்ட கார்த்தவீரியார்ஜுனனைப் பெரும்போரில் கொன்று, அவனது யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றையும், படைவீரர்களையும் தம் கோடரியால் அழித்து, குருக்ஷேத்திரம் சென்று தம் முன்னோர்களுக்குச் சிராத்தம் செய்து, இருபத்தோரு முறை உலகை க்ஷத்திரியர்களற்றதாக்கிய அந்தப் பிருகுவம்சத்து ஜமதக்னேயரே {ஜமதக்னியின் மகனான பரசுராமரே} இப்போது என் முன் இருக்கிறார்.(14-16) ரகு குலத்தில், ராமன் என்ற பெயரில் பிறந்து, ஸ்ரீதேவியான சீதையை மணந்து, எப்போதும் தம்பி லக்ஷ்மணனின் துணையுடன் கூடியவனாக, கடலில் பாலம் அமைத்து, தன் கணைகளால் ராக்ஷசாதிபதியை {ராவணனைக்} கொன்று, அந்த ராஜ்ஜியத்தை விபீஷணனுக்கு அளித்து, பத்து அஷ்வமேத யாகங்களைச் செய்த ஜனார்த்தனனே இப்போது என் முன் இருக்கிறான்.(17,18)

வசுதேவன் குலத்தில் பிறந்து, வாசுதேவன் என்று அறியப்பட்டு, கோகுலத்தில் குழந்தைப் பருவத்தைக் கழித்து, எப்போதும் அண்ணன் பலராமனின் துணையுடன் இருந்தவனும் இந்த ஹரியே.(19) குழந்தையாகப் படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கையில் கொல்ல வந்த பூதனையின் நஞ்சு பூசிய முலைப்பால் பருகி அவளது உயிரையும் உறிஞ்சியெடுத்து அமைதியாகப் படுக்கையில் கிடந்தவன் இவனே.(20) சற்றே வளர்ந்ததும், வெண்ணெய்யையும், தயிரையும் எடுத்து மறைந்திருந்து உண்டவன் இவனே. கோபமடைந்த அன்னை யசோதை இவனது இடையில் கயிற்றைக் கட்டினாள்.(21) அன்னையால் உரலில் இறுக்கமாகக் கட்டப்பட்டு, அந்த உரலையும் இழுத்துச் சென்று அர்ஜுன மரங்கள் இரண்டை வேரோடு பிடுங்கிய அந்த தாமோதரன் இவனே. கோகுலத்தில் குழந்தையாக இருந்து, சில வேளைகளில் அசுரர்களைக் கொன்று, சில வேளைகளில் கோபியரின் முலைப்பால் பருகியவன் இந்த ஹரியே.(22) கோபர்களுடன் பிருந்தாவனத்தில் வசித்துவந்த போது சூரியனைப் போன்ற பிரகாசமான குதிரை வடிவத்தில் இருந்த கேசியைக் கொன்றவன் இந்த விஷ்ணுவே.(23) கோபாலர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் நாகமுடியில் நாட்டியமாடி, யமுனை மடுவில் நாக மன்னனை {காளியனை} தண்டித்த அந்த ஜனார்த்தனனே இப்போது என் முன் இருக்கிறான்.(24)

தாலவனக்காட்டில் கோபாலர்கள் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பனை மரத்தின் உச்சியில் இருந்து தானவனை {தேணுகனை} வீசி எறிந்த தலைவனே இப்போது என் முன் இருக்கிறான்.(25) விரஜம் முழுவதையும் மறைத்து இடையறாமல் மேகக்கூட்டங்கள் மழையைப் பொழிந்து கொண்டிருந்தபோது, ஒப்பற்ற பலத்தை வெளிப்படுத்தி ஒரு கையால் கோவர்த்தன மலையை உயர்த்தி, சக்ரனின் பலத்தைப் பரிகசித்து, கோபர்கள், கோபிகைகள் ஆகியோருக்கும், கோகுலத்தின் பசுக்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தவன் இந்த ஹரியே.(26) அக ஆற்றலால் மனித வடிவை ஏற்று, கோபிகைகளின் ஸ்தனங்களுக்கு மத்தியில் கிடந்து, விருப்பத்துடன் அவர்களின் இதழ்களைப் பருகிய அந்தக் காமேஷ்வரனே இப்போது என் முன் இருக்கிறான்.(27) பிருந்தவனத்தின் தனிமையான இடத்தில் இரவில் தாமரை போன்ற முகங்களைக் கொண்ட கோபிகைகளின் இதழமுதமருந்தி, அவர்களின் மார்பில் தன் தலைசாய்த்தவன் இந்தக் கேசவனே.(28)

நாகலோகவாசிகளால் வழிபடப்பட்ட கம்சனின் ஆணையின் பேரில் {பிருந்தாவனம்} சென்று மதுராவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அக்ரூரருக்கு யமுனையின் நீரில் வைகுண்டத்தைக் காட்டிய கிருஷ்ணன் இவனே.(29) மதுராவின் தெருக்களில் பலராமனுடன் நடந்து கொண்டிருந்தபோது, ஆணவம் மிகுந்த வண்ணான் ஒருவனைக் கொன்று அவனிடம் இருந்து உடைகளைப் பறித்து உடுத்திச் சென்றவன் இந்த ஹரியே.(30) மதுராவில் திரிந்தபோது மலர்வியாபாரியால் கொடுக்கப்பட்ட மலர்மாலைகளை அணிந்து கொண்டு, அவன் விரும்பிய வரத்தை அளித்து, குப்ஜை {கூனி} கொடுத்த சந்தனக் குழம்பைப் பெற்றுக் கொண்டு அவளை அழகிய பெண்ணாக்கிய தலைவன் இவனே.(31) கம்சனின் தெய்வீக வில்லை எடுத்து, அதை இரண்டாக முறித்து, பிரளயகால மேகங்களைப் போல முழங்கி நின்றவன் இவனே.(32)

மற்போர் அரங்கின் நுழைவாயிலில் குவலயபீடம் என்ற பெரும் யானையைக் கொன்று, அதன் தந்தங்களைப் பிடுங்கி மற்போர் அரங்கில் தரித்துக் கம்சனை அச்சுறுத்திய கேசவன் இவனே.(33) வலிமைமிக்க மாமல்லன் சாணூரனை கம்சன் முன்னிலையில் கொன்று, யாதவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய அந்த ஹரியே இங்கே இருக்கிறான்.(34) தந்தையிடமும், யாதவர்களிடமும் பகைமை பூண்டிருந்த கம்சனைக் கொன்று, மதுராவின் மன்னராக உக்ரசேனரை நிறுவி, காசியப குலத்தைச் சேர்ந்த சாந்தீபனி முனிவரிடம் குருகுல கல்வி பயிலச் சென்ற ஹரி இவனே.(35) கல்வி நிறைவடைந்ததும், இறந்து போன தன் குருபுத்திரனை மீட்டளித்து, யாதவர்களின் தலைநகரான மதுராவுக்குத் தன் தமையனுடன் திரும்பி வந்த தலைவன் இவனே.(36) நிசும்பனையும், நரகனையும் கொன்று, பூமியின் சுமையைக் குறைத்து, வழியில் பிராமணர்கள், முனிவர்கள், ராஜரிஷிகள் ஆகியோரைக் காத்தவனும், நுண்ணறிவுமிக்க ஜகத்பதியுமான அந்த ஜனார்த்தனன் இவனே.(37)

இதோ என் கண்களுக்கு முன் இருப்பவன் அந்த விஷ்ணுவே. நான் ஸாயுஜ்ய முக்தியை அடைந்திருப்பதால் நிச்சயம் இவனது தரிசனமே என் வாழ்வை மகிமையடையச் செய்திருக்கிறது.(38) சாக்ஷாத் ஹரியை நேரடியாகக் கண்ட எவனும் நிச்சயம் முக்தியடைவான். இப்போது என் முன் இருப்பவன் சாக்ஷாத் அந்த ஹரியே.(39) முற்பிறவிகளில் நான் பெரும்புண்ணியங்களைச் சேர்த்திருப்பதாலேயே இப்போது இவனது தரிசனத்தை அடைகிறேன்.(40) எனக்கிருந்த பொருள் பற்று அழிவடைந்ததால், நானே மிகப் புண்ணிய ஆத்மாவாவேன். நான் இவனுக்கு என்ன கொடுப்பது? இவனிடம் என்ன சொல்வது? ஓ! விஷ்ணுவே, நான் எவ்வாறு உனக்குத் தொண்டாற்ற வேண்டும்? உன்னை நிறைவடையச் செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக” என்றான் {கண்டாகர்ணன்}”.(41)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இவ்வாறு பேசிய அந்தப் பிசாசானவன் உரக்க கதறி அழுதான். பிறகு அவன் சிரித்தபடியே கட்டுப்பாடில்லாமல் மகிழ்ச்சிக் கூத்தாடினான்.(42) கிருஷ்ணனின் முன்னிலையில் அவன், “ஓ! யாதவேஷ்வரா, ஓ! கிருஷ்ணா, ஓ! கேசவா, ஓ! ஹரியே, என் வழிபாடுகளையும் வணக்கத்தையும் ஏற்பாயாக” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஆடத் தொடங்கினான்”.(43) 

முக்தியடைந்த பிசாசு | பவிஷ்ய பர்வம் பகுதி – 58-(கண்டாகர்ணஸ்ய முக்தி)-பிராமண மாமிசத்தை கிருஷ்ணனுக்குப் படைத்த கண்டாகர்ணன்; கிருஷ்ணன் மறுத்தது; கண்டாகர்ணன் முக்தியடைந்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},   “அனைத்தையும் கைவிட்டு  பொருத்தமில்லாமல் சிறிது நேரம் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருந்த அந்தப் பிசாசானவன், அங்கிருந்து சென்று ஒரு பிராமணனின் சடலத்தை அவ்விடத்திற்குக் கொண்டு வந்தான்.(1) அவன் அந்தச் சடலத்தை இரண்டாக வகுந்து, அதில் ஒன்றை சுத்தம் செய்தான். பிறகு அந்த மாமிசத்தை ஓர் அழகிய தட்டில் வைத்து, ஜனார்த்தனன் முன்பு வைத்து, தன் வணக்கத்தைச் செலுத்திப் பணிவுடன் கைக்கூப்பிப் பின்வருவனவற்றைப் பேசினான்:(2,3) “ஓ! ஜகந்நாதா இந்த உணவு உனக்கே என்பதால் இதை ஏற்பாயாக. ஓ! ஜகந்நாதா, ஹரியே, பக்தனால் உனக்கு அளிக்கப்படும் எதையும் நீ ஏற்க வேண்டும்.(4) ஓ! விஷ்ணுவே, நான் உன்னைச் சரணடைந்தேன். நீ வேறு வகையில் நினைக்காதே. பணியாளால் பக்தியுடன் கொடுக்கப்படும் உணவைத் தலைவன் ஏற்க வேண்டும்.(5) பண்பட்ட பிராமணன் ஒருவனின் இந்த உடல் மிகச் சமீபத்தில் கொல்லப்பட்டது என்பதால் உண்பதற்குத் தகுந்தது. சாத்திரங்களின்படி எங்களைப் போன்ற பிசாசுகளுக்கு இது தகுந்த உணவாகும்.(6) எனவே, ஓ! பகவானே, இதில் நீ குறை காணவில்லையெனில் இந்தக் காணிக்கையை ஏற்பாயாக” {என்றான் கண்டாகர்ணன்}.

பிசாசானவன் இதைச் சொல்லிவிட்டு அந்தத் தலைவனுக்கு மனித மாமிசத்தை அளிக்க முயற்சித்தபடியே மீண்டும் உரக்கச் சிரித்தான். கிருஷ்ணன் அந்தப் பிசாசிடம் நிறைவடைந்தவனாகத் தன் மனத்திற்குள் அவனைப் புகழும் வகையில், “ஐயோ, இந்தப் பிசாசானவன் என்னிடம் பேரன்பும், பெரும் பக்தியும் கொண்டிருக்கிறான்” என்று நினைத்தவாறே பின்வருவனவற்றைப் பேசினான்:(7-9) “பச்சை மாமிசம் உண்ணும் பிசாசே, எந்தச் சூழ்நிலையிலும் இத்தகைய இறைச்சியைப் படைப்பது தகாது. இந்தப் பிராமண மாமிசம் உன்னளவில் மிகச் சிறந்ததே என்றாலும் என்னைப் போன்றவர்களால் தீண்டத்தகாதது.(10) அறக் கோட்பாடுகளைப் பின்பற்றுவோருக்கு ஒரு பிராமணன் எப்போதும் வழிபடத் தகுந்தவனாவான். அனைத்து வகைப் பாவச் செயல்களையும் செய்யும் பிசாசுகள் மட்டுமே ஒரு பிராமணனைக் கொல்வார்கள்.(11) எவனும் ஒருபோதும் விப்ரர்களைக் கொல்லக்கூடாது. ஏனெனில் இந்தச் செயல் அவனை நரகத்திற்கே வழிநடத்தும். எனவே, அனைத்து வகைகளிலும் இந்தச் சடலம் என்னால் தீண்டத்தகாதது. இதற்கு முரணான வேறு எதையும் நினைக்க வேண்டியதில்லை.(12) ஓ! மாமிசம் உண்ணும் பிசாசே, களங்கமுள்ள மனத்தைத் தூய்மைப்படுத்தும் உன் பக்தியில் நான் நிறைவடைந்தேன். நீ மங்கலமாக இருப்பாயாக. நீ உன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள முயல்கிறாய் என்ற காரணத்தினாலேயே நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன்.(13) எப்போதும் நீ என் பெயர்களைச் சொல்லி உன் இதயம் தூய்மை அடைந்திருக்கும் காரணத்தாலேயே நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன்” {என்றான் கிருஷ்ணன்}.(14)

இதைச் சொல்லிவிட்டு அந்த விஷ்ணு தன் கைகளை அந்தப் பிசாசின் மீது வைத்து பாவச் செயல்கள் அனைத்தில் இருந்தும் அவனை விடுவித்தான்.(15) கிருஷ்ணன் அவனைத் தொட்ட உடனேயே அவன் காமனைப் போன்ற அழகை அடைந்தான். அவன், சுருள் முடியும், நீண்ட கைகளும், அழகிய கண்களும் கொண்டவனானான்.(16) அவனுடைய விரல்களும், அதிலுள்ள நகங்களும் மிக அழகியவையாக இருந்தன. அவன் தாமரை போன்ற கண்களையும், தாமரையைப் போன்ற மேனி நிறத்தையும் கொண்டிருந்தான், மேலும் தாமரை இதழ்களுக்கு ஒப்பான ஆபரணங்களை அணிந்திருந்தான்.(17) அவன் கேயூரமும் கைவளைகளும் அணிந்திருந்தான். மேலும் மஞ்சள் பட்டாடைகளை உடுத்தியிருந்தான். அவன் இரண்டாம் இந்திரனைப் போலப் பிரகாசமிக்கவனாகவும், புத்திசாலியாகவும் தெரிந்தான்.(18) அவன் ஒரு கந்தர்வனைப் போலத் திறன்மிக்கப் பாடகனானான். மேலும் ஒரு யோகியைப் போல அவன் மாயாசக்திகள் அனைத்தையும் பெற்றிருந்தான். விஷ்ணுவின் தாமரைக் கைகளால் தீண்டப்பட்ட அந்தப் பிசாசாவன் மிக அழகிய தன்மைகளை அடைந்தான். மேனி ஒளியில் அவன் மஹாமுனிவர்களையும் விஞ்சியிருந்தான்.(19,20)

ஓ! மனிதர்களின் ஆட்சியாளர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தப் பிசாசானவன் செய்த கடுந்தவத்தின் விளைவாகவே அவனுக்கு இந்தத் தெய்வீக வடிவம் என்ற வெகுமதி கிடைத்தது.(21) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஜகந்நாதனைச் சரணமடைந்தவன் எவ்வாறு துன்பங்களை அனுபவிப்பான்? அத்தகைய மனிதன் மங்கல அனுபவங்களை மட்டுமே பெறுவான். விஷ்ணுவைத் தொடர்ந்து தியானித்து, அவனது மகிமைகளைத் துதிக்கும் ஒருவனால் அடையப்பட முடியாதது தான் ஏது?

பிறகு அந்தப் பகவான், இரண்டாம் இந்திரனைப் போலத் தன் எதிரே நின்று கொண்டிருக்கும் கண்டாகர்ணனிடம் பேசினான்: “தேவ மன்னனின் {இந்திரனின்} ஆட்சியுள்ளவரை அவனுடைய உலகத்தில் உன் வாசம் உறுதியானதாகும். இனி மகிழ்ச்சியாகச் சென்று அங்கே வசிப்பாயாக.(22-24) இந்திரனின் ஆட்சிக்காலம் முடியும்போது நீ சாயுஜ்ய முக்தியை[1] அடைவாய். இந்திரன் ஆளும்வரை உன் தம்பியும் தேவலோகங்களில் இன்புற்று வாழ்வான்.(25) நீ மங்கலமாக இருப்பாயாக. உன் இதயம் விரும்பும் வரத்தை நீ என்னிடம் கேட்பாயாக. எதையும் கொடுப்பேன், அனைத்தையும் கொடுப்பேன். இதில் ஐயமில்லை” {என்றான் கிருஷ்ணன்}.(26)கண்டாகர்ணன், “ஜனார்த்தனா, கட்டுப்பாடுள்ள மனம் கொண்ட ஒருவன் நமது சந்திப்பையும், உரையாடலையும் நினைவு கூர்ந்தால் உன்னிடம் தளராத பக்தியை அடையட்டும்.(27) ஓ! ஹரியே, அவன் மனத்தூய்மையை அடைந்து களங்கங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு, அவனது இதயத்தில் உள்ள மாசுகள் அனைத்தும் விலகட்டும். இதுவே நான் விரும்பும் வரமாகும்” {என்றான் கண்டாகர்ணன்}.(28)

இதைக் கேட்ட தேவேசன், “அவ்வாறே ஆகட்டும். இப்போதே தேவலோகம் சென்று இந்திரனால் மதிக்கப்படும் விருந்தினன் ஆவாயாக. அவன் உனக்காகக் காத்திருக்கிறான்” என்றான் {கிருஷ்ணன்}.(29)

கிருஷ்ணன் இதைச் சொல்லிவிட்டு, இறந்து கிடந்த அந்தப் பிராமணனுக்கு உயிரளித்தான். உயிர்மீண்டதைக் கண்ட அந்தப் பிராமணன் அந்தத் தலைவனை நல்ல முறையில் துதித்துவிட்டு அவனிடம் விடைபெற்றுச் சென்றான். பிறகு அந்தத் தலைவன், முனிவர்கள் வேள்விகளைச் செய்து கொண்டிருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றான்.(30,31)

முற்பிறவியில் சுவர்க்கவாசியாக இருந்த கண்டாகர்ணன், கிருஷ்ணனின் ஆணையின் பேரில் தேவலோகம் சென்றான். ஓ! மன்னா, உன் மனத்தையும் புலன்களையும் தூய்மைப்படுத்த விரும்பினால் இந்த உரைகளைத் தொடர்ந்து கேட்பாயாக. இந்தப் பிசாசின் கதையைச் சொல்வதால் உன் மனம் நிச்சயம் களங்கங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடையும்” என்றார் {வைசம்பாயனர்}.(32) 

கிருஷ்ணனின் தவம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 59-(கிருஷ்ணதபோவர்ணநம்)-சிவனை நிறைவடையச் செய்யப் பன்னிரெண்டு வருடங்கள் கடுந்தவம் செய்த கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},   “அதன்பிறகு பகவான் விஷ்ணு {கிருஷ்ணன்}, மஹாத்மாவான அந்தப் பிசாசின் {கண்டாகர்ணனின்கதையை முனிவர்களிடம் விரிவாகச் சொன்னான்.(1) இந்நிகழ்வைக் கேட்ட முனிவர்கள் அனைவரும் பேராச்சரியம் அடைந்தனர். அவர்கள், “ஓ! தலைவா, காரணமற்ற உன் கருணையாலேயே அந்தப் பிசாசானவன் முக்தியை அடைந்தான்” என்றனர்.(2)

அன்பு கொண்ட பக்தர்களிடம் பெரும் பற்றுக் கொண்ட அந்த விஷ்ணுவை முனிவர்கள் அனைவரும் மதிப்புடன் வழிபட்டனர். அவனும் அந்த முனிவர்களிடம் நிறைவடைந்தான். அடுத்த நாள் அதிகாலையில் சூரியன் அடிவானில் உதித்த போது, அவன் முனிவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கருடன் மீதேறி கைலாச மலைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(3,4)

அண்ட காரியங்கள் அனைத்தையும் நிர்வகிப்பவர்களும், கடும் நோன்புகளை நோற்பவர்களுமான சித்தர்கள் எங்கிருப்பார்களோ, வைஷ்ரவணன் {குபேரன்}, சங்கரனை எங்கே வழிபட்டுக் கொண்டிருப்பானோ,{5} அன்னங்கள் மகிழ்ச்சியுடன் வசிப்பதும், மானஸம் என்ற பெயரில் அழைக்கப்படுவதுமான பெருந்தடாகம் எங்கிருக்கிறதோ, சிவனின் தொண்டனான பிருங்கீரிடி மனிதர்களின் தலைவனாவதற்காகத் தன் தலைவனை எங்கே வழிபட்டானோ,{6} சிங்கங்கள், பன்றிகள், யானைகள், புலிகள், மான்கள் ஆகியனவும் பகையின்றி ஒற்றுமையுடன் எங்கே வாழுமோ, கங்கையினால் தலைமை தாங்கப்படும் ஆறுகள் எங்கே பாயுமோ,{7,8} அண்டத்தின் தலைவனான சம்பு {சிவன்} பிரம்மனின் தலையை எங்கே கொய்தானோ, உயிரினங்களைத் தண்டிக்கும் தண்டங்கள் எங்கே உண்டாகுமோ,{9} நீலலோஹிதனான {செந்நீல வண்ணனான} சங்கரன் உமையுடன் எங்கே வசிக்கிறானோ, பழங்காலத்தில் முனிவர்களின் வேண்டுகோளின் பேரில் மலைகளின் அரசனான ஹிமவான் தன் மகளை மஹாதேவனுக்கு எங்கே மணமுடித்துக் கொடுத்தானோ,{10} ஹரியானவன் தாமரை மலர்களால் சிவனை வழிபட்டு சுதர்சனச் சக்கரத்தை எங்கே அடைந்தானோ,{11} மதுவை {தேனைப்} பருகிக் கொண்டே சித்தர்களும், கின்னரர்களும் தங்கள் மனைவியருடன் இன்புற்றிருக்கும் மலைக்குகைகள் எங்கிருக்கிறதோ,{11,12} வலிமைமிக்கப் பௌலஸ்தியன் {ராவணன்} தன் வலிமைமிக்கக் கைகளால் எதை உயர்த்தினானோ, அவன் உலக வெற்றிப்பேற்றில் எங்கே நிறைவடைந்தானோ அந்தக் கைலாச மலைக்குக் கிருஷ்ணன் சென்றான். யது குலத்தின் பெருமைமிகு தேவகிநந்தனன் அங்கே மானஸ ஸரோவரின் வடகரையை அடைந்தான்.{13,14}(5-14)

மங்கலமிக்கவனான தலைவன் ஹரி, தவம் செய்யும் நோக்கத்தில் அங்கே வந்திருந்தான். அந்த ஜகந்நாதன் {கிருஷ்ணன்}, அந்தப் புனிதத் தலத்தில் உறுதியான தீர்மானத்துடன் தவம் செய்ய அமரும் முன், சடாமுடி தரித்து, எளிய உடைகளை உடுத்திக் கொண்டான்.{15} தலைவன் ஹரி, பன்னிரெண்டு ஆண்டுகள் கடுந்தவம் செய்யத் தீர்மானித்து வேத வடிவேயான கருடனின் முதுகில் இருந்து இறங்கினான்.{16} ஜகத்பதியான ஹரி, இலைதழைகளை மட்டுமே உண்பவனாகப் பங்குனி மாதத்தில் தவம் செய்யத் தொடங்கி,{17} அதைத் தொடர்ந்து மந்திரங்களை ஓதி, வேதங்களையும் படித்தான்.

ஓ! மன்னா, அண்டத்தின் தலைவன் மனித வடிவை ஏற்ற பிறகும் அவன் தவம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.{18} உண்மையில் பரமாத்மாவின் நோக்கங்களைச் சின்னஞ்சிறு உயிரினங்களால் புரிந்துகொள்ள முடியாது.

கைலாச மலையில் கிருஷ்ணன் தொடர்ந்து தவம் செய்து வந்தபோது, கசியபரின் மகனான கருடன் அவனுக்குத் தேவையான விறகுகளைக் காடுகளில் இருந்து திரட்டி வந்தான்.{19,20}(15-20) {சுதர்சனச்} சக்கரமானவன், ஹரிக்காக மலர்களைத் திரட்டி வந்தான். {பாஞ்சஜன்ய} சங்கானவன் அனைத்துத் திசைகளில் இருந்தும் அவனுக்குப் பாதுகாப்பளித்தான். கட்கமானவன் {நந்தக வாளானவன்} அந்தத் தலைவனுக்குக் குசப்புற்களைக் கொண்டு வந்தான். கௌமோதகி {கதாயுதமானவன்} பல்வேறு வகைகளில் அவனுக்குத் தொண்டாற்றினான்.(21,22) தானவர்களின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்துபவனும், கொண்டாடப்படுபவனும், விற்களில் சிறந்தவனுமான சாரங்க வில்லானவன், பணியாளனாக எப்போதும் தலைவனின் முன்பு நின்றிருந்தான்.(23)

பகவான் விஷ்ணு {கிருஷ்ணன்}, தன் வேள்விகளைச் செய்வதற்காக ஏராளமான விறகுகளை எரித்தான். அவன் ஏராளமான நெய்யையும் பிற உட்பொருள்களையும் {வேள்வித்தீயில்} ஊற்றினான்.{24} உண்மையில் அவன் சிறிய, பெரிய யஜ்ஞங்கள் பலவற்றைச் செய்து முடித்தான். தொடக்கத்தில் தவம் செய்து வந்தபோது கவனமாகத் தன் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு மாதம் ஒரு முறை மட்டுமே உண்டான்.{25} அதன் பிறகு அந்தக் கேசவன், இரு மாதங்களுக்கு ஒருமுறை உண்டான். இறுதியாக அவன் வருடத்திற்கு ஒரு முறை உண்ணும் நிலையை அடைந்தான்{26}.(24-26)

ஜகத்பதியான அந்த ஜனார்த்தனன், இவ்வாறே பதினோரு வருடங்களும், பதினோரு மாதங்களும் தவம் செய்து வந்தான். {பன்னிரெண்டு வருடங்களுக்கு} இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சியிருந்தது. அவன், வேள்வி நெருப்பை மூட்டிவிட்டு சிவனைத் தியானித்தபடியே ஆரண்யக மந்திரங்களையும், {ஓம் என்ற} உத்தம பிரணவத்தையும் சொல்லத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(27,28) 

சிவனின் வருகை | பவிஷ்ய பர்வம் பகுதி – 60-(ஸ்ரீகிருஷ்ணஸமீபே இந்த்ராதிதேவ ஆநாமாகமநம்)-சிவனை நிறைவடையச் செய்ய பன்னிரெண்டு வருடங்கள் கடுந்தவம் செய்த கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “இந்திரன், தன் வாகனமான உத்தம கஜத்தில் {ஐராவதத்தில்} ஏறி சர்வேஷ்வரனான விஷ்ணு தவத்தில் இருப்பதைக் காண அங்கே வந்தான்.(1) அடுத்ததாக யம பகவானும், எருமை வாகனத்தைச் செலுத்திக் கொண்டு, தன் தொண்டர்களுடன் அங்கே வந்தான்.(2) ஹம்சவாகனத்தில் அமர்ந்தவனும், தலைக்கு மேல் வெண்குடை ஏந்தியவனும், தொண்டர்களால் வெண்சாமரம் வீசப்படுபவனுமான வருணனும் அங்கே வந்தான்.(3) கைலாச சிகரத்தில் கேசவன் எவ்வாறு தவம் செய்கிறான் என்பதைக் காண அவனும், ஆதித்யனும் அங்கே வந்தனர்.{4} ஓ! மன்னா {ஜனமேஜயா}, ருத்திரர்கள், வசுகள், சித்தர்கள், பெரும் முனிவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள்,{5} ஆடல் பாடல்களில் திறன் பெற்ற அப்சரஸ்சகள் பலரும், தேவகணங்களும் கேசவனைக் காண கைலாச மலைக்கு வந்தனர்.{6}

பர்வதர், நாரதர் ஆகியோரின் தலைமையிலான பெரும் முனிவர்களும், சர்வ தேவகணங்களும் ஆச்சரியமடைந்தவர்களாக,{7} “இது பேராச்சரியம் வாய்ந்தது. இத்தகைய நிகழ்வேதும் கடந்த காலத்தில் நடந்ததுமில்லை, வருங்காலத்தில் நடக்கப் போவதுமில்லை. அண்டத்தின் ஆன்ம ஆசானும், யோகிகளின் தவப்பொருளுமான கிருஷ்ணன் தவத்தில் ஈடுபட்டு வருகிறான்” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அந்தத் தலைவன் தவம் செய்யும் நோக்கத்தைக் குறித்துத் தேவர்களும், முனிவர்களும் இவ்வாறே தங்களுக்குள் பேசிக்கொண்டனர்{8}.(4-8)

உலகத்திற்கு நன்மையைச் செய்யும் பிரபுவான அந்த ஹரியின் தவக் காலம் நிறைவடைந்ததும், சகலேஷ்வரனான சிவன், தன் மனைவியுடனும் {பார்வதியுடனும்}, தன் தொண்டர்களுடனும் அந்த ஜகத்பதியின் செயல்களைக் காண அங்கே வந்தான்.(9) நண்பனான குபேரனும்குஹ்யர்களும் அவனுடன் {சிவனுடன்} வந்தனர். ஜடாதாரியான அவன் {சிவன்}, எண்ணற்ற பூதங்களாலும், பிசாசுகளாலும் சூழப்பட்டிருந்தான். அவன் ஒரு வில்லையும், கணைகளையும், திரிசூலத்தையும் ஏந்தியிருந்தான். மேலும் அவன் தன் சிரத்தின் அழகை அதிகரிக்கும் பிறை நிலவையும் தரித்திருந்தான்.(10) அவன் ஒரு கரத்தில் கமண்டலத்தையும், குச புற்களையும், மறு கரத்தில் எரி கொள்ளியையும், மூன்றாம் கரத்தில் திந்திமத்தையும் {உடுக்கையையும்}, நான்காம் கரத்தில் திரிசூலத்தையும் ஏந்தியிருந்தான். ருத்ராக்ஷ மாலை அவன் கழுத்தைச் சூழ்ந்திருந்தது. செந்நீல நிறத்தவனும், ஜடாதாரியும், சந்திரசேகரனுமான அந்தச் சிவன், வெண் காளை வாகனனாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருந்தான்(11,12)

உமையின் ஸ்தனங்களில் பார்வையைக் கொண்டிருந்த அவனை அவள் அணைத்து முத்தமிட்டாள். அவனது நெற்றி பிறைமதியால் அலங்கரிக்கப்பட்டு, கங்கையின் நீரால் கழுவப்பட்டது. அந்தத் தலைவனின் பார்வை எப்போதும் தன் மனைவின் மேலே விழுந்திருந்தது.(13) அவனது முகம் சாம்பலால் {பஸ்மத்தால்} பூசப்பட்டிருந்தது. அவனது சடாமுடியானது பெரும்பாம்புகளால் கட்டப்பட்டிருந்தது. அவன் மனிதத்தலை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தான். இவ்வாறே சிவன், ஹரியான கேசவனைக் காண வந்திருந்தான்.(14)

அண்ட வெளிப்பாடுகளும், அவற்றின் உள்ளடக்கமான பூதங்களும் வெளிப்புற ஆற்றலை ஆள்வதால் அவை சிவனின் வடிவங்கள் என்று சொல்லப்படுகின்றன. சாங்கிய தத்துவத்தைக் கற்றறிந்த அறிஞர்களால் அவன் மிகப்பெரியவன் என்றும், இருபத்துநான்கு தத்துவங்களை வெளிப்படுத்தும் ஆற்றலான பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறான். கணாதன் என்றும், மஹாதேவன் என்றும் அழைக்கப்படும் சிவபெருமான் தேவர்களை விரட்டி தக்ஷனை அழித்தவனாவான். தன்னை உணர்ந்த ஆத்மாக்களின் குறிக்கோளாகவும், அனைத்து உயிரினங்களுக்கு நன்மை செய்பவனாகவும் அவனே இருக்கிறான். கடுங்கண்களைக் கொண்ட அந்த மஹாதேவன் நித்தியமானவன்; பழைமையானவன், எல்லையற்றவன், தன்னிறைவடைந்தவன், சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவன், பேரமைதியில் இருப்பவன். சில சமயங்களில் ஆயிரங்கண்ணனாகவும், சில சமயங்களில் நான்கு கரத்தோனாகவும் அவன் வெளிப்படுகிறான். அவனே மிருத்யுவின் உருவமாகவும், ருத்திரன், ரோதனன் என்றழைக்கப்படும் அண்டத்தின் தலைவனாகவும் திகழ்கிறான்.(15-20)

பூமி, நீர், நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன் ஆகியவற்றை இயக்குபவர்களான எண்மரும் {அஷ்டதிக்பாலர்களும்} மஹாதேவனின் வெளிப்பாடுகளாகவே கருதப்படுகின்றனர்.(21) மஹாயோகத்தின் மஹாதேவனும், செந்நீல வண்ணனும், மஹாதேவன் என்றும், கிரீசன் என்றும் அழைக்கப்படுபவனும், இயற்கையை ஆள்பவனும், உமையின் வடிவமாகத் திகழ்பவனும், கையில் சூலந்தரித்தவனுமான அந்தச் சிவன், ஜகத்பதியான கிருஷ்ணனைத் தரிசிக்கத் தன் பூதகணங்களுடன் சேர்ந்து அங்கே வந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(22) 

————————————-—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பவிஷ்ய பர்வம்-பகுதி 2-

October 19, 2025

பிராணாயாமத்தின் செயல்முறை | பவிஷ்ய பர்வம் பகுதி – 21-(ப்ராணாயாமவர்ணநம்)-பிராணாயாமம் குறித்த விளக்கம்; புற வேள்வியும், அக வேள்வியும்; வேதாந்தக் கருத்தைச் சொன்ன ஆசான்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “புலன்களையும், கோபத்தையும் கட்டுப்படுத்திய மனிதர்கள், சடாமுடியும், மான்தோலும் தரித்து, மூக்குக்கும்[1] புருவங்களுக்கும் இடையில் உள்ள சந்தியில் தங்கள் மனத்தைக் குவிப்பார்கள்.(1) நெற்றியில் உள்ள இந்த இடமே எலும்புகளின் சாரமாகத் திகழ்கிறது; உடல் அழிந்த பிறகும் இஃது அழிவதில்லை. இஃது உயிர் மூச்சான பிராணனால் சூழப்பட்டிருக்கிறது. உயிர் மூச்சானது, காற்று, இருமல், சளி {வாதம், பித்தம், கபம்} ஆகியவற்றை உண்டாக்கியபடி குழாய்களின் வழியே இங்கே செல்கிறது. இந்த இடமே, பிரம்மத்தை உணர்ந்து, துன்பங்கள் அனைத்தில் இருந்து விடுபட வழிவகுக்கிறது.{2} இங்கே மூன்று குழாய்களும், ஐந்து உயிர்மூச்சுகளும் ஐக்கியமாகின்றன. எனவே, யோகிகள் இங்கே தங்கள் மனத்தை நிலைக்கச் செய்து, பெரும்பிரம்மத்தின் இருப்பை உணர முயற்சிக்கின்றனர்.{3} மந்திரங்களின் வித்தாக இருக்கும் ஓம் எனும் மந்திரத்தை உரைத்து வேள்விகளைச் செய்பவர்களும், முழுமையான பேரின்பத்தில் தங்கள் ஆன்மாவை மூழ்கச் செய்பவர்களுமான பிராமணர்கள், உயிர் மூச்சின் ஒற்றை நெருப்பை மட்டுமே வைத்துக் கொண்டு அதை ஐந்தாகப் பிரிக்கிறார்கள்.{4} வேதங்களை நன்கறிந்த முனிவர்கள் இந்த நெருப்பை (பூரகம், கும்பகம், ரேசகம் என்ற) மூன்று தடங்களில் {வழிகளில்} திருப்பி விடுகின்றனர். இவ்வாறு அவர்கள் இதை மூன்றாகப் பிரித்து, பூரகம் முதலிய பிற நடைமுறைகளைப் பயின்று உண்மையான ஆத்ம ஞானத்தை அடைகிறார்கள்{5}.(2-5)ஒரு பெரும் நெருப்பானது, ஆகுதிகள் மூலம் தன்னைப் பரவச் செய்கிறது. ஸ்வதாவின் வடிவில் அது மந்திரங்களுக்கான வெற்றிகரமான பயன்களை உண்டாக்குகிறது[2].(6) எப்போதும் வெல்பவனும், உயிரினங்களைக் கௌரவிப்பவனும், தெய்வீகனுமான தக்ஷன், அனைத்தின் பெரும்பாட்டனும், பிராமணர்களைப் படைத்தவனுமான பிரம்மனுக்குப் பிறக்கிறான்[3].(7) அவன் தண்டீ[4], சர்மீ[5], ஷரீ[6], கட்கீ[7], ஷிகீ[8], மேலும் அவன் தாமரையைப் போன்ற முகம் படைத்தவன். அவன் இயல்பாகவே கவலையற்றவனாகவும், கோபத்தையும், ஆசையையும் கட்டுப்படுத்தியவனாகவும் இருந்தான்.(8) வேதத்துடன் ஐக்கியமடைந்த பிரம்மம், புஷ்கரம் என்று போற்றப்படுகிறது, இந்திரனால் பாடப்பட்ட சாம வேத ஸ்லோகங்கள், பிரம்மவாதிகளால் உரைக்கப்படுகின்றன[9].(9)(உயிர் மூச்சை அடக்கும் பிராணாயாமத்தைப் பயில்பவன், உயிர் மூச்சை இழுத்து விடுவதற்கு ஏற்ற படி, பிரம்மரந்தரமெனும் நெற்றிக்குக் காற்றை இழுக்க வேண்டும்; அதன்பிறகு, அங்கிருந்து அதை இழுத்து புருவங்களின் மத்தியில் நிறுத்த வேண்டும்; அதன் பிறகு அவன் கண்களின் மூலம் அதை இழுத்து மூக்கின் நுனி மீது நிறுத்த வேண்டும். அங்கிருந்து அதை நாக்கின் வேர்ப்பகுதிக்கு இழுக்க வேண்டும். அங்கிருந்து அதை இதயத்திற்கு மாற்ற வேண்டும், அங்கிருந்து பிறப்புறுப்புக்கும், அங்கிருந்து உடலுக்கும், அங்கிருந்து குதத்திற்கும், அங்கிருந்து தொடைகளின் வேர் பகுதிக்கும், அங்கிருந்து தொடைகளின் நடுப்பகுதிக்கும், அங்கிருந்து மூட்டுகளுக்கும், அங்கிருந்து கைகளின் வேர் பகுதிகளுக்கும், அங்கிருந்து ஜங்கத்திற்கும் (தொடைகளின் பாதி), அங்கிருந்து கணுக்கால்களுக்கும், அங்கிருந்து அங்குஸ்தத்திற்கும் {விரல்களுக்கும்}, அங்கிருந்து பாதத்திற்கும் அந்தக் காற்றை மாற்ற வேண்டும். இவ்வாறு பிராண நெருப்பை {உயிர் காற்றை} ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இழுக்கும் அவன், பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, ஆன்மா தூய்மையடைந்து, நிலவும், விண்மீன்களும் நிலைத்திருக்கும் வரை வாழ்வான். ஒருவன் தன் உடலுக்குள் உயிர் மூச்சை நிறுத்துவது ஸ்வதாவாகும். இந்த உடல்சார்ந்த யோகச் செயல்முறையின் மூலம் ஒருவன் தன் உயிர் மூச்சை முழுமையாக அடக்கலாம். இவ்வாறு பிராணாயாமம் பயிலும் ஒருவன், வாயு, இருமல், சளி {வாத, பித்த, கபக்} கோளாறுகள் அனைத்தில் இருந்தும் விடுபடலாம்”)தெளிந்த நெய், பால், வாற்கோதுமை முதலியவை புற வேள்விகளில் அர்ப்பணிக்கப்படுகின்றன, ஆனால் ஆன்ம வேள்வியில் மனத்தில் உண்டாகும் அனைத்தும் மனக்குவிப்பின் மூலம் பரமாத்மா எனும் பீடத்தில் வேட்கப்படுகின்றன.(10) (தன்னலமெனும்) விறகைக் கடைந்து, (தெய்வம் மறையும்) நெருப்பால் எரிக்கப்பட்டு, (உடல் இன்பமெனும்) வன்னி மரத்தில் இருந்து திரட்டப்பட்டவனும், பிரம்மத்தை அறிந்தவனுமான ஒருவன், அங்கே பரமாத்மாவை அழைத்து வருவான்.(11) தாழ்ந்த வேள்வியில் {புற வேள்வியில்} முக்கியத்துவமற்ற பொருள்கள் நெருப்புக்குள் வீசப்படுகின்றன அதனால் உண்டாகும் மாறுபாடுகளின் படி சொர்க்கமோ, இழிந்த இடமோ மனிதர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன; ஆனால் மனோ வேள்வியில் அதுபோல் கிடையாது[10].(12) தாழ்ந்த யஜ்ஞத்தில் பலன்கள் நெருப்புக்கு உடைமையாக்கப்படுகின்றன, ஆனால் ஆத்ம யஜ்ஞத்தில் பிரம்மவாதிகள்[11], {அந்தப் பலன்களை} ஆன்ம பயிற்சிகளுக்கு உடைமையாக்குகின்றனர். பிரம்ம செல்வத்தைச் செலவழித்துச் செய்யப்பட்ட பிரம்ம யஜ்ஞத்தின் போது பிருஹஸ்பதி, ஆறு மாதங்களில் நான்கு வேதங்களையும் அடைந்தான்[12].(14) அவன், தன் குருகுலத்தின் சீடர்களுக்கு, உயர்ந்த, அழகிய எழுத்துகளுடன் கூடிய சரஸ்வதியின் வடிவமான இந்த வேதத்தைப் போதித்து, அதை இசையாக அமைத்தான்.(15) பிராமண என்ற சொல்லின் மூலம் விளக்கப்படும் வேள்வி, பிரம்மனால் குறிப்பிடப்பட்டதுபோல, இரண்டாவது பிரம்ம லோகத்தைப் போலத் தெரியும்[13].(16) வேதமெனும் சொல்லால் பிரம்மனின் வாயில் இருந்து வெளிப்பட்டதும், சான்று குறித்து எந்த ஐயமும் இல்லாததுமான இந்த வேள்வி {பிரம்மயஜ்ஞம்}, அவனால் செய்யப்படுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பல்வேறு பொருள்களின் மூலம் பேசுவது போலச் செழிப்படைகிறது.(17)(சாதாரண) வேள்விகள், விறகு {ஸமித்து}, சந்திரச்செடிகள் {சோமகலஷை}, வேள்விக் கரண்டிகள், பாத்திரங்கள், இரவலர்கள், செல்வம் வேண்டும் மனிதர்கள், வாற்கோதுமை முதலிய பிற பொருள்கள், பாத்திரங்கள் நிறைந்த நீர் ஆகியவற்றால் செய்யப்படுகின்றன.(18) அந்த வேள்விகள், செல்வங்களையும், பொன்னையும் பெரும்பிரம்மத்திற்கு அர்ப்பணித்து, (பிராமணர்களுக்குக் கொடுக்கப்படும்) பசுக்கள், கன்றுகள் ஆகியவற்றுடன் நடத்தப்படுகின்றன.(19) வேதங்களை ஓதுவதுடன் சாம வேத ஸ்லோகங்களை உரைத்து, பிரம்ம ஞானத்தால் நிறைந்த கர்மம் எனும் அங்கத்துடன் தொடர்வது, வழிபாடு எனும் அறிவியலுடன் ஐக்கியமடைகிறது.(20) விறகுகளால் அமைக்கப்பட்ட யஜ்ஞ வடிவில் இருப்பவனும், மருத்துகளுடன் சேர்த்து மனத்தில் நினைக்கப் படுபவனுமான பிரம்மன், பிரம்மத்தில் இருந்து தனியாக உதித்த பொருள்களை நெருப்பில் ஆகுதிகளாகச் செலுத்தி ஆத்மாவிலேயே இயல்பாக நிலைத்திருக்கிறான்.(21)

உயிரினங்கள் அனைத்தின் தலைவனான பிரம்மன், வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளின்படி பிரம்மத்தை மதிக்கும் வகையிலும், தூய புத்தியின் வடிவில் இருக்கும் பிரம்மத்தைத் தீண்டும் வகையிலும் வேள்விகளை வேட்பதில்லை.(22) எல்லாம் வல்லவனான பிரம்மன், வன்னி மரத்தில் உண்டாகும் விறகை நெருப்பில் கடைந்து அக்னிஷ்டோம வேள்வி செய்து தேவர்களை அமைதிப்படுத்தி நிறைவடையச் செய்கிறான்.(22) வேள்வி வேட்கும் நேரத்தில் அந்தக் கூட்டம் சபை உறுப்பினர்களால் அலங்கரிக்கப்படுகிறது, சமஸ, அத்யர்யு புரோகிதர்கள் அதைச் செய்யும்போது இனிய ஸ்லோகங்களை உரைக்கிறார்கள்.(23) ஓ! மன்னா, சூரியனையும், சந்திரனையும் போன்ற பிரகாசமிக்கவர்களும், வேதங்களிலும், அவற்றின் அங்கங்களிலும் தேர்ச்சியடைந்தவர்களுமான தவசிகளால் அந்தப் பெரும் வேள்வி அலங்கரிக்கப்படுகிறது.(25)

வேதங்களை உரக்க உரைப்பதால் அந்த வேள்வி இரண்டாவது பிரம்மலோகம் போலத் தோன்றியது. தேவர்கள் பூமிக்கு இறங்கி வந்தனர். தேவர்களைப் போன்றவர்களும், பணிவுடன் கூடியவர்களும், பிரம்மஞானத்துடன் வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் அறிந்தவர்களுமான பிராமணத் தவசிகளால் அந்தப் பெரும் வேள்வி சொர்க்கத்திலும், பூமியிலும் மதிக்கப்பட்டது.(26,27) பிராமணர்களால் செய்யப்பட்ட அந்தப் பெரும் வேள்வி, வேள்விக் களத்தில் மூட்டப்பட்ட மூன்று நெருப்புகளைப் போல எரிந்து, பிரம்ம லோகத்தைப் போல ஒளிர்ந்தது.{28} அந்தப் பெரும் வேள்வியில் பிரம்மவாதிகள், இந்திரனால் பாடப்பட்ட சாமவேத ஸ்லோகங்களையும், சாத்திரங்களால் அனுமதிக்கப்பட்ட யஜுர் வேத ஸ்லோகங்களையும் உரைத்தனர்.{29} வாய்மை நிறைந்தவர்களும், தற்கட்டுப்பாட்டை உடையவர்களும், பிரமத்துக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களுமான தவ முனிவர்களை மனத்தில் நினைத்தவுடனேயே அவர்கள் அங்கே வந்தனர்.{30}(28-30) பிரம்மனால் பெறப்பட்டவனும், பெரும் இறையியல் அறிஞர்களில் வழிபடத்தகுந்தவனுமான பிருஹஸ்பதி, பல்வேறு வடிவங்களை ஏற்று, அந்த வேள்வியில் ஹோதாவாகவும், பிரம்மனாகவும் செயல்பட்டான்.(31)

அந்த வேள்வி நிறைவடைந்ததும், அந்த வேள்வியைச் செய்தவன் {பிருஹஸ்பதி} அந்தச் செயலுக்கான பலன்களை விஷ்ணுவுக்கு அர்ப்பணித்து, ஆன்ம ஆற்றலின் மூலம் இறுதிக் கருவை அடைந்த அதிதியின் மூலம் பிறந்தான்.(32) பிறப்பும், அறியாமையும், அதன் செயல்பாடும் அற்றவனும், பிரம்ம ஞானத்தை அறிந்தவனுமான அவன் {பிருஹஸ்பதி}, இன்பதுன்பங்களில் இருந்து விலகி இருப்பதும், இந்திரனும், இன்னும் பிற தேவர்களும் வெளிப்பட்டதும், சிதைவில்லா ஆன்ம பயிற்சிகளின் மூலம் அடையக்கூடியதுமான விஷ்ணுவின் பாதத்தை அடைந்தான். புலன்களில் இருந்தும், பற்றுக்குக் காரணமாக அமையும் புலன்நுகர் பொருட்களில் இருந்தும் விடுபட்ட முனிவர்களும் அவனைப் போலவே {விஷ்ணுவின் பாதத்தை} அடைவார்கள்.(33,34)

முற்பிறவி செயல்பாடுகளின் காரணமான ஆசைகளால், பல்வேறு புலன்நுகர் பொருட்களும் உண்டாகி மனத்தை முழுமையாக வெல்கின்றன. எனவே ஒருவன் மிகக் கவனமாக இந்த ஆசைகளை அடக்க வேண்டும்.(35) முனிவர்கள், பல்வேறு புலன்நுகர் பொருள்களை அனுபவித்தாலும், அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் அடங்குவதில்லை. தற்கட்டுப்பாடே உயர்ந்த பண்பாகக் கல்விமான்களால் கருதப்படுகிறது.(36) ஓம் எனும் சொல்லால் பெற்ற போதனையின் மூலம் ஆன்ம ஞானத்தை அடைந்த பிரம்மவாதிகளின் மனம் கல்வியால் பீடிக்கப்படுவதில்லை.(37) வேதங்களை எப்போதும் உரைக்கும் பிராமணர்கள், பக்திமான்களும், தேவர்களும் வாழும் உலகத்தையே சிறந்த லோகம் எனக் கருதுகிறார்கள்.(38) ஓ! பாரதா, ஓ! மன்னா, தேவர்கள் அழிவைச் சந்திக்காமல் வேள்வி காணிக்கைகளால் ஊட்டம் பெற்று விளங்குவதும், வேள்வி செய்பவன், கவலையற்றவனாகத் தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து தன் கர்மத்தின் மூலம் அடையக்கூடியதுமான உலகமே சிறந்தலோகமாகும்.(39) (சாதி {வர்ணம்}, தகுநிலை ஆகியவற்றில்} வேற்றுமை பார்க்கும் மனிதர்கள், பாறை போன்ற இந்த உடலை, முக்தி அடையும் நோக்கத்திற்காகப் பயன்படுத்த முடியாது[14].(40,41) ஓ! மன்னா, கர்மம் செய்வதில் மும்முரமாக இருக்கும் பிராமணர்கள், தங்கள் செயல்களின் பயன்களை அனுபவித்த பிறகு, சொர்க்கத்தில் இருந்து விரட்டப்பட்டு, நிறம் மங்கிய முகங்களுடனும், மாயையால் பீடிக்கப்பட்ட மனங்களுடனும் பூமியில் வாழ்வார்கள்.(42)இனிய பேச்சைக் கொண்டவரும், பாவங்களைப் போக்குபவர்களில் முதன்மையானவரும், அமைதியான வடிவம் கொண்டவருமான ஆசான், பின் வரும் வேதாந்த போதனைகளை இருபிறப்பாளர்களிடம் சொன்னார்.{43} “இந்த உடலையும், புலன்களையும் சுயமாக கருதுவதால் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பகைமை கொள்கிறீர்கள். ஆயிரம் தேவ வருடங்கள் ஆனாலும், உடல்மீது கொண்ட பற்றெனும் இந்தப் பாறையை உடைக்க முக்தியைத் தவிர வேறெதனாலும் முடியாது.{44} மனத்தைக் குவிப்பதன் மூலம், நீங்கள் அனைவரும் ஒரே ஆத்மாவே {சுயமே} என்பதை உணரும்போதும், மனவெறுப்பேதுமின்றி அனைத்து உயிரினங்களுடனும் நீங்கள் நட்பை உண்டாக்கிக் கொள்ளும்போதும், இவ்வுடலே சுயமெனும் உங்கள் தவறான கருத்து அழிவடையும்.{45}(43-45) கோபம், பொறாமையெனும் இரண்டு உணர்வுகளும் வெற்றியடையும் இயல்பின் ஆற்றலைப் பெருகச் செய்யும்; கோபமும், பொறாமையுமற்ற ஆற்றல் பிரம்மத்திடம் அர்ப்பணிப்பைப் பெருகச் செய்யும்.(46) தூய புத்தியைப் பயன்படுத்தி இம்மையிலும், மறுமையிலும் இன்பங்களைவிட்டு விலகும்போதும், பளிங்கு மலை போல இவ்வுடலைப் பெரிதாக்கும் நெருப்பு, நீர், உணவு ஆகியவையும், அவற்றின் செயல்பாடுகளும், சொற்கள், உயிர் காற்று, மனம் ஆகியவையும் அழிவடையும் போதும், மனைவியின் துணைகளும், பிற துணைகளும், மனத்திறன்கள், சாத்திரங்கள், உணர்வுகள் ஆகியவையும் தகரும்போதும், உடல் சார்ந்த பற்றெனும் இந்த மலையைப் பிளக்குமாறு நான் உங்களுக்கு ஆணையிடுவேன். அப்போதுதான் உங்களாலும் அதை {உடல் சார்ந்த பற்றெனும் அந்த மலையைப்} பிளக்க முடியும்” என்று சொன்னார் அந்த ஆசான்” என்றார் {வைசம்பாயனர்}.(47-49)

பிராமணர்களின் கடமைகள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 22-(வர்ணாஷ்ரமதர்மபரிபாலநம்)-ஆசிரமங்கள்; பிராமணர்களின் கடமைகள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இல்லறவாசிகளும், தவத்தில் அர்ப்பணிப்பு உள்ளவர்களுமான அந்த பிராமணர்களால், மலையின் வடிவிலிருந்த தங்கள் ஆசானின் போதனைகளைக் கேட்டாலும் தங்கள் உடல் சார்ந்த பற்றுகளைக் கைவிட முடியவில்லை.(1) எனவே, ஆகுதிகளுடன் கூடிய நெருப்பு வழிபாடு தினமும் பெருகியது, விஷ்ணுவை வழிபடுவதும், ஆசான்களை வழிபடுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறே, ஓ! மன்னா, பிராமணர்களின் ஆன்மாக்களைத் தூய்மை அடையச் செய்வதற்காக அந்தப் பிரம்மவாதிகளால் கர்ம காண்டம் இவ்வுலகில் அறிமுகப்படுத்தப்பட்டது.({2}(1-2)

இந்தப் பூமியில் புண்ணிய மலையின்[1] அருகில், குருக்ஷேத்திரம் என்ற பெயரைக் கொண்டதும், முட்களற்றதும், நெருப்பு மூட்டுவதற்கான மரங்களும், கொப்புகளும் நிறைந்ததுமான ஒரு புனித மாகாணம் இருக்கிறது.{3} இல்லறவாசிகளாக {கிருஹஸ்தர்களாக} இருந்த பிராமணர்கள், தூய இதயத்துடன் கடவுளின் பணிகளைச் செய்தபடியே அங்கே வாழ்ந்து துறவையும், தவங்களையும் பயின்று வந்தனர். யதிகளும் கூட பக்தியை அடையும் பேரார்வத்துடன் அங்கே வாழ்கிறார்கள்.{4} வானப்பிரஸ்த வாழ்வுமுறையைப் பின்பற்றுபவர்களும், அக்னி ஹோத்ரம் செய்பவர்களும், தங்கள் கோபத்தையும், ஆசைகளையும் கட்டுப்படுத்தியவர்களும், மான்தோலும், மரவுரியும் தரித்தவர்களும், வேண்டிப் பெறாத {பிச்சை எடுக்காத} உணவை உண்டு வாழ்பவர்களுமான பிராமணர்களும் அங்கே வாழ விரும்பினர். ஓ! மன்னா, முன்னறிவால் படிப்படியாக அதை அடையும் பிராமணர்கள், பெருங்கவனத்துடன் இவ்வகை வாழ்வு முறையைப் பின்பற்றுகின்றனர்.{5,6}பழங்காலத்தைச் சேர்ந்த பிரம்மவாதி முனிவர்களால் கடைப்பிடிக்கப்பட்ட இந்தப் புனித தொடக்கத்தை அறிந்தவர்கள் நித்திய பண்பை {அறத்தை} அடைகிறார்கள்.{7} ஒருவன், வேதங்களில் முற்றாகத் தேர்ச்சி அடையாமல் ஒருவன், இல்லற வாழ்வுமுறையை {கிருஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றக்கூடாது, மிகக் கடினமான பிரம்மசரிய வாழ்வையும் வாழக்கூடாது, அவன் துறவியின் வாழ்வையும் வாழக்கூடாது, இல்லறவாசியின் கடமைகளையும் கைவிடக்கூடாது. வேதங்களில் தேர்ச்சியடையாமல் துயரங்கள் ஒருபோதும் முடியாது. சாம, யஜுர் வேதங்களை உரைப்பவர்கள் ரிக் வேதத்தை அடைகிறார்கள்.{8,9} இல்லறவாசிகளைப் போல வாழ விரும்பும் பிராமண தவசிகள் {சந்நியாசிகள்}, தங்கள் ஆசான்களிடம் இருந்து வேதாந்த வழிமுறைகளைப் பெற்றுக் கொண்டு அதன் பலன்களை அறுவடை செய்யலாம்.{10}

பக்திமானாக இருக்கும் ஒரு மன்னன், வேதங்களைக் கேட்காதவனையும், வேத சடங்குகளைச் செய்யாதவனையும் ஒரு சூத்திரனாகச் செயல்படும்படி வற்புறுத்த வேண்டும்.{11} மறுபுறம், பிராமணர்களில் வேதங்களை மதிக்காதவர்கள் எவரும் இருப்பதில்லை என்பதாலும், ஒரு மாணவனாகவோ {பிரம்மசாரியாகவோ}, இல்லறவாசியாகவோ {கிருஹஸ்தனாகவோ} இருக்கும் ஒவ்வொரு பிராமணனும் தன் கடமைகளின் விளக்கத்தைக் கேட்கும்போது தன் மனத்தைக் கட்டுப்படுத்தி வேதங்களைப் படித்து, போதனைகளைப் பெறுகிறான் என்பதாலும், எந்த மன்னனும் ஒரு பிராமணனை அவமதிக்கக்கூடாது.{12-14} எனவே, சாத்திரங்களின் அறிவை அடைந்தவனும், அனைத்தையும் கடந்த ஆழ்நிலை அறிவை ஈட்டியவனுமான ஒரு பிராமணன், இவ்வாறே வேதங்களைப் படித்துத் தன் புலன்களை அடக்க வேண்டும்” என்றார் {வைசம்பாயனர்}.{15}(3-15)

தேவாசுரப் போரின் தொடக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 23-(ஈஷபக்திமாஹாத்ம்யம்)-கசியபரையும், அவரது மகன்களையும் வேள்வி செய்யத் தூண்டிய பிரம்மன்; தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் தொடங்கிய போர்; விஷ்ணு கொடுக்கும் சத்வ குணம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “வேதங்களை நன்கு அறிந்தவர்களும், சடங்குகளை {செயல்களைத்} தவிர்த்ததால் பாவங்கள் அண்டாதவர்களும், நாரதரின் தலைமையிலானவர்களுமான ரிஷிகளும், கந்தர்வர்களும், அந்தப் பிராமணர்களின் முன்னிலையில் சூரியனையும், சந்திரனையும் நிறுத்தி அவர்களை வழிபட்டனர். மேலும் அவர்கள் தந்தையைத் துதிக்கும் ஒரு மகனைப் போல எப்போதும் பெரும்பாட்டனை {பிரம்மன்} வழிபட்டனர்.

ஐம்புலன்களையும் அடக்கிய அந்தப் பிராமணர்களின் இனிய சொற்களால் துதிக்கப்பட்டவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் எப்போதும் நன்மையைச் செய்பவனும், அவை நன்றாக இருக்க வேண்டுமென எப்போதும் விரும்புகிறவனுமான தலைவன் பிரம்மன், “(நீங்கள் அந்த வேள்விகளை மேற்கொண்டது) நற்பேற்றினாலேயே” என்றான்.(1-4)

அப்போது எல்லாம்வல்லவனான அந்தத் தலைவன் {பிரம்மன்}, கசியபரிடம், “நீயும், உன் மகன்களும் பூமியில் வேள்விகளைச் செய்வீர்களாக. யக்ஷர்கள், மற்றும் அசுரர்கள் அனைவரும் ஏராளமான கொடைகளுடன் வேள்விகளைச் செய்வார்கள்” என்றான்.{5,6}

பலத்தின் செருக்கில் மிதந்து கொண்டிருந்த தைத்தியர்களும், தேவர்களும், ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, “நாங்களே முதலில் வேள்விகளைச் செய்வோம், நாங்களே வழிபடுவோம்” என்று சொல்லி, ஒருவரோடு ஒருவர் போரிட இருந்தனர்.{7,8}

தவங்களாலும், துறவுகளாலும் பாவம் கழுவப்பட்டவர்களான ரிஷிகளும், வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் நன்கறிந்த பிராமணர்களும் அவர்கள் அனைவரையும் தடுத்தனர். அவ்வாறு தடுக்கப்பட்டாலும், கோகுலத்தில் உள்ள காளைகளைப் போல அவர்கள் ஒருவரோடு ஒருவர் போரிடத் தொடங்கினர்.{9,10}

அவர்கள் வேள்விகளை ஒதுக்கி வைத்துவிட்டு பேராவலுடன் போரிடத் தொடங்கினர். போர் தொடங்கியபோது அவர்கள் தங்கள் உயிர் மூச்சை வெல்லும் விருப்பங்கொண்டு உயிரினங்கள் அனைத்தின் முன்னிலையில் மாண்டனர்.{11} அதன் பிறகு, அந்த அசுரர்களும், சுரர்களும் {தேவர்களும்} தங்கள் புத்தியினாலும், உண்மை ஞானத்தில் விளைந்த பற்றின்மையாலும் புற புலன்களைக் கட்டுப்படுத்தி, சிறகுகளுடன் கூடிய பறவைகளைப் போலத் தங்கள் மனங்களைக் கட்டுப் படுத்தினர்.{12}

அப்போது, மனித கனத்தின் அழுத்தத்தால் மூழ்கும் படகைப் போலவே வேள்விக் களங்களும் உலகம் சார்ந்த நோக்கங்கள் எனும் தழல்களால் கலங்கடிக்கப்பட்டன. முழங்கும் காளைகளைப் போல யோகத்தோற்ற அமைவுகள் உடைக்கப்பட்டு, உயிர் மூச்சுகளால் குழாய்கள் கலங்கடிக்கப்பட்டன.{13,14}

அதன் பிறகு, அறிவுசார் புலங்கள் கலங்கிய {புத்தி கலங்கிய} மதுவும், சத்வ குணத்தை ஒத்தவனான விஷ்ணுவும் ஒரு யுக சுழற்சியைக் கிட்டத்தட்ட புரட்டியதும், அனைத்து, உயிரினங்களுக்கும் அச்சத்தை உண்டாக்கியதுமான ஒரு பயங்கரப் போரில் ஈடுபட்டனர்.{15} அப்போது, தீப்பற்றி எரியும் காட்டைத் தணிக்கும் மேகத்தைப் போல விஷ்ணு மனோசக்திகள் அனைத்தையும் கட்டுப்படுத்தினான். அந்தத் தலைவனின் {விஷ்ணுவின்} பெயரைச் சொல்பவன், தன் மனத்தைக் கட்டுப்படுத்திய பிறகு சத்வ குணத்துடன் தோன்றுகிறான்” என்றார் {வைசம்பாயனர்}[1].{16}(15-16)

மது அசுரன் – விஷ்ணு போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 24-(மோஹவிவேகயோர்யுத்தம்)-இந்திரனைக் கட்டிப்போட்டு விஷ்ணுவை எதிர்த்துச் சென்ற அசுரன் மது; இசையில் மயங்கிய மது; விஷ்ணுவுக்கும் மதுவுக்கும் இடையில் நடைபெற்ற போர்; மது விஷ்ணு எனும் உருவகம்; விஷ்ணுவின் பெருமை; விஷ்ணு துதி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பயங்கர சக்தியும் பேராற்றலும் மிக்கத் தைத்தியன் மது, கூரிய வடங்களைக் கொண்டு அந்த மலையில் மகேந்திரனைக் கட்டிப்போட்டான்.[1](1) இந்திரனின் கௌரவத்தை அடைய விரும்பிய மது, பிரஹ்லாதனுடைய சொற்களின்படியும், உண்மையான புத்தியின் வீழ்ச்சியாலும் திடீரென அவனை {இந்திரனை} வெல்லப்பட முடியாத இரும்பு வடங்களால் கட்டிப்போட்டான்; அதன் பிறகு தன் படைக்குத் தலைமையேற்று வெளியே வந்த அவன் {மது}, காலனால் தூண்டப்பட்டவனாகப் பேராற்றல் வாய்ந்த விஷ்ணுவைப் போருக்கு அழைத்தான்.(2-4)கசியபரின் மகன்கள், தங்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு மதுவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தனர். அவர்கள் பெரும் தண்டங்களை எடுத்துக் கொண்டு போரிடுவதற்காக விரைந்து சென்றனர். பாடும் கலையிலும், ஆடற்கலையிலும் தேர்ந்திருந்த கந்தர்வர்களும், கின்னரர்களும், அனைத்துப் பக்கங்களிலும் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருந்தனர். தந்தி இசைக்கருவிகளின் இனிய இசையால் அவர்கள் போரிட்டுக் கொண்டிருந்த மதுவை {மது அசுரனை} நிறைவடைச் செய்து அவனது கவனத்தைச் சிதறடித்தனர். தானவர்களும், தேவர்களும் ஒருவரையொருவர் கண்ட போது, மது பாடுவதில் தன் மனத்தை நிலைநிறுத்திக் கதறிக் கொண்டிருந்தான். மரத்திற்குள் கமுக்கமாக வாழும் நெருப்பைப் போல விஷ்ணுவும் தன் யோகக் கண்களால் மதுவின் மனத்தைப் புலன் நுகர் பொருட்களில் ஈர்த்து மந்தர மலையில் மறைந்தான். {தீ போல} எரியும் புத்தியைக் கொண்ட ரிஷிகள் சற்றே மனம் வருத்தமுற்றுப் பெரும்பாட்டனைத் தங்கள் முன்னிலையில் கொண்டு ஒரு கணத்தில் மறைந்தனர்.(5-11)

கோபத்தால் தூண்டப்பட்டவனும், {இசை எனும்} போதையால் கண்கள் சுழல்பவனுமான மது, தன் கைகளால் விஷ்ணுவின் நெற்றியைத் தாக்கினாலும் அவன் ஒரேயொரு அடியைக் கூட விட்டு நகரவில்லை.(12) விஷ்ணுவும் தன் விரலின் நுனியால் தைத்தியன் மதுவின் மார்பில் தாக்கியபோது அவன் குருதியைக் கக்கி பூமியில் விழுந்தான். நினைத்தற்கரிய ஆற்றலைக் கொண்டவனும், போரில் திறன்மிக்கவனுமான விஷ்ணு, மற்போருக்கான நேரத்துக்காகக் காத்திருந்தாலும், அந்தத் தைத்தியன் வீழ்ந்தபோதும் அவனைத் தாக்கவில்லை. தரையைத் தன் முழங்காலால் தீண்டித் தன்னைத் தாங்கிக் கொண்ட தைத்தியன் மது இந்திரனின் கொடிக்கம்பத்தைப் போல எழுந்து நின்றான். கோபத்தில் நிறைந்த மனத்தைக் கொண்டவனான அவன், தன் கண்களால் திக்குகள் அனைத்தையும் எரித்தான். அதன் பிறகு அவர்கள், கடுஞ்சொற்களைச் சொல்லி முழங்கி, ஒருவரையொருவர் கொல்லவிரும்பி மற்போரில் ஈடுபட்டனர்.(13-16) அவ்விருவரும் கைகளின் பலத்தையும், போரில் திறத்தையும் கொண்டவர்களாகவும், பெரும் தவசிகளாகவும், வாய்மை நிறைந்தவர்களாகவும் இருந்தனர். அந்தப் பெரும் வீரர்கள் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பாறைகளைச் சிறகுகளாகக் கொண்ட இரு மலைகள் ஒன்றோடு ஒன்று மோதுவதைப் போல அது தெரிந்தது. போர்வெறிக் கொண்ட அவ்விருவரும் நிலத்தில் ஒருவரோடொருவர் போரிட்டனர். இரு யானைகள் தங்கள் தந்தங்களைக் கொண்டு போரிடுவதைப் போலவே அவர்கள் தங்கள் நகங்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கினர்.(17-19)

கோடை காலம் நிறைவடைந்து, மழைக்காலத் தொடக்கத்தில் வேறு கனிமப் பொருட்களுடன் கலந்த தங்கம் மலைகளில் இருந்து வெளியேறுவதைப் போலவே குருதியும் காயங்களில் இருந்து ஏராளமாக வெளியேறிற்று. வெளியேறும் குருதியுடன் கூடிய அவர்கள் தங்கள் கால்களால் பூமியின் பரப்பைக் கிழிக்கத் தொடங்கினர். ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அந்த வீரர்கள் இருவரும், ஊனுண்ண விரும்பும் பறவைகள் தங்கள் சிறகுகளால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போலப் போரிட்டனர். விஷ்ணுவின் மகிமைகள் எனும் வாய்மையையும், ஆன்ம சக்திகள் அனைத்தையும் சித்தர்கள் பாடிக் கொண்டிருப்பதை உயிரினங்கள் கேட்டன[2].நெருப்பு, நீர், நிலம் {பூமி} என்ற பூதங்களால் இந்த உடல் அமைந்திருக்கிறது. அதன் பிறகு நனவுநிலையானது அந்த உடலில் நிறுவப்படுகிறது. நனவுநிலையில் உடலும், புலன்களும் கலந்த பெரும்பிரம்மமே ஜீவன் என்று அழைக்கப்படுகிறது. நுட்பமான அந்தக் காரணம் {ஜீவன்} அழியும்போது, அடிப்படை பூதங்கள் அனைத்தும் அதில் இருக்கத்தான் செய்கின்றன, அதே நுண்சாரப் பொருட்களே பலவடிவங்களில் மீண்டும் தோன்றுகின்றன. நுண்ணாத்மாவானது உடலின் தொடர்பில் இருந்து பிரிந்தாலும், நனவுநிலையாக மூவுலகங்களில் பொருட்கள் அனைத்திலும் படர்ந்தூடுருவி அவற்றை அனுபவிக்கிறது. தீயோரை ஒடுக்குவதற்காகவும், நல்லோரைப் பாதுகாப்பதற்காகவும் யோகமாகவும், தியு லோகத்தின் பாதுகாவலனாகவும் இருக்கும் ஈஷ்வரனானவன், மனிதன், சேஷன், ஆமை என்றும், இன்னும் பல வடிவங்களையும் ஏற்று, பூமியைத் தாங்கும் அனந்தனையும், நான்கு வேதங்களாக இருக்கும் தன்னையும் ஒருசேர ஆதரிக்கிறான். வேதங்களாகப் பிராமணர்களில் இருப்பதைப் போலவே க்ஷத்திரியர்களில் போர்க்கலையாகவும், வைசியர்களில் வணிகமாகவும், சூத்திரர்களில் தொண்டாகவும் தலைவன்  நீடித்திருக்கிறான்.(20-29)

பசுக்களில் வாழும் தலைவன் உங்களுக்கு மத்தியில் பாலைப் பகிர்ந்தளித்து உங்களை நீடித்திருக்கச் செய்கிறான். வேள்விப் பொருட்களில் நிலைத்திருக்கும் அவன் கனிகளால் உங்களையும், ஹவியின் புகையால் பித்ருக்களையும், ஹிவர்பாகத்தால் தேவர்களையும் பாதுகாக்கிறான்.(30) தலைவன், பித்ருக்களுடன் கூடியவனாக நான்கு பூதங்களையும், ஏழு வகை உணவுகளையும் கொண்டு மூவுலகங்களையும் பாதுகாக்கிறான்.(31) வெளிப்பட்டும், வெளிப்படாமலும் இருக்கும் சூரியனும் சந்திரனும், தங்கள் சக்தியின் மூலம் அந்த ஏழுவகை உணவுகளின் வடிவமாகின்றன.(32) மனம், சொற்கள், உயிர்மூச்சுகள் ஆகிய மூன்றும் தொடர்ந்து சூரியனைப் பெருகச் செய்கின்றன; எஞ்சிய நான்கும் சந்திரனைப் பெருகச் செய்கின்றன.(33) மூவகையினராக இருக்கும் பித்ருக்கள் தங்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் உணவுப் பிண்டங்களைக் கெடுக்கின்றனர், எஞ்சிய நால்வகையினர் அவற்றை ஏற்கின்றனர்.(34)

பொன்னானது காதுகுண்டலமாவதைப் போல நீ ஐம்புலன்களில் மறைந்திருக்கிறாய்; நீ அகந்தையிலும் பிற கோட்பாடுகளிலும் வாழ்கிறாய்; நித்தியமானதும், அழிவற்றதுமான பிரம்மத்தில் இருந்து நீ வெளிப்பட்டாய்.(35) நெருப்பும், காற்றும் உன்னிலிருந்தே சக்தியைப் பெறுகின்றன; ஏனெனில், ஆதித்யன் என்றழைக்கப்படும் உன்னிலிருந்த தங்கள் சக்திகளை அவை பெறுகின்றன.(36) யுக முடிவின்போது நீ உன் கதிர்களால் அண்டத்தை விழுங்கிவிடுபவனைப் போல அதை எரிக்கிறாய்; அதன் மூலமே நீ உயர்ந்த ஆன்ம சக்தியை அடைகிறாய்.(37) அமாவாசையிலும் (நிலவு முற்றாகப் புலப்படாதபோதும்), பௌர்ணமியிலும் {நிலவு முழுமையாகப் புலப்படும்போதும்}, சூரியன், சந்திரன், வசுக்கள் ஆகியோரின் மூலம் உதித்த ரிஷிக்களுடன் கமுக்கமாக நீ திரிகிறாய்.(38) ஊட்டத்தைக் கொடுக்கும் வேள்விகளைச் செய்யும் நீ, அறத்திற்குக் கேட்டை விளைவிக்காமல் சொர்க்கத்தைக் கொடுக்கிறாய். அமாவாசை, பௌர்ணமிகளில் நீ மரங்களிலும், மூலிகைகளிலும், செடிகொடிகளிலும், பூமியிலும் சந்திரனைப் போலத் தோன்றுகிறாய். மீண்டும் பிறவியை அடைவதற்காக நீ ஒவ்வொரு பக்ஷத்திலும் பிறப்பை எடுக்கிறாய்.(39,40) ஓ! பூதங்களின் தலைவா, நீயாகவே இருப்பவையும், சென்றவையும், மீண்டும் வருபவையுமான உயிரினங்களின் ஊட்டத்திற்காகவே பூமியில் எவையும் நீடித்திருக்கின்றன.(41) பூமியில் நிலவும் தினசரி கடமைகள் அனைத்தும் நீயே. நீயே யஜ்ஞம், நீயே கர்மன், நீயே மந்திரம், நீயே சொற்கள், நீயே ஆத்மா.(42) சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் சூரியன், தெளிந்த சந்திரன் என்ற இரு வழிகள் இருக்கின்றன. சந்திரன் பித்ரு லோகத்திற்குச் செல்லும் வழியாகவும், சூரியன் தேவலோகத்திற்குச் செல்லும் வழியாகவும் இருக்கின்றன.(43)

உயிரினங்களின் வடிவிலும், அழியும் விதிமுறைகளால் வழிநடத்தப்பட்டும் நீ இந்த அண்டத்தில் இருக்கிறாய்; உன் வடிவில் புலன்களை அழித்து எவருக்கும் புலப்படாதவனாக நீ வாழ்ந்து வருகிறாய். தனியாகப் பிறந்தவன் நீயே; புராதனனும், அண்டப் புருஷனும் நீயே; சிதைவற்றவனும், ஒப்பற்றவனும் நீயே; தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனாக இருந்தாலும் நீ விளையாடிக் கொண்டிருக்கிறாய். சக்தியில் நெருப்பைப் போன்றவன் நீயே; காற்றின் வடிவில் திரிபவன் நீயே. நுட்பமான ஐம்பூதங்களால் எப்போதும் சூழப்பட்டவன் நீயே. மனம் மற்றும் புறப் புலன்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஜீவனாக இருப்பவன் நீயே; முக்திக்கான பணியில் தூய புத்தியாக இருப்பவன் நீயே; தினசரி அழிவுக்கான பணியின் ருத்ரனின் வடிவில் இருப்பவன் நீயே. விஷ்ணுவாக இருந்து அண்டத்தைப் பாதுகாப்பவன் நீயே. பல்வேறு வகையினரும், வர்ணத்தினரும் நீயே; கண்கள் மற்றும் புலன்களின் நனவுநிலை நீயே. தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களும், பாவமற்றவர்களும், தங்கள் செயல்களின் மூலம் பெரும்பிரம்மத்தை அடைந்தவர்களும், நண்பரையும், பகைவரையும் ஒன்றாகக் கருதுபவர்களுமான முனிவர்கள் எப்போதும் உனக்குத் தொண்டு புரிகின்றனர்.(44-48)

பல்வேறு சித்தர்களாலும், முனிவர்களாலும் இவ்வாறு துதிக்கப்பட்ட பெரும் விஷ்ணு, ஹயசிர வடிவை நினைத்தான். வேத வடிவையும், தேவ உடலையும் அந்தத் தலைவன் ஏற்றபோது, சிவன் அவனது தலையிலும், பிரம்மன் அவனது இதயத்திலும் இருந்தனர். சூரியக் கதிர்கள் அவனது குண்டலங்களில் இருந்தன, சந்திரனும், சூரியனும் அவனது இரு விழிகளாகினர். வசுக்கள் அவனது ஜங்கங்கள் {தொடைகள்} இரண்டில் இருந்தனர், சித்தர்களும், தேவர்களும் அவனது மூட்டுகளில் இருந்தனர். வேதங்கள் அவனது சொற்களாகவும், மருத்துகளும், வருணனும் அவனது கால் மூட்டுகளாகவும் இருந்தனர். தேவர்களுக்கும் பேரற்புதமாகத் திகழும் இந்தப் பெரும் வடிவை ஏற்ற தலைவன் ஹரி, கோபத்தில் கண்கள் சிவந்தவனாக, மயக்கத்தின் {மோகத்தின்} அடையாளமாகத் திகழும் அந்த அசுரனைத் தாக்கத் தொடங்கினான். வெள்ளாடை உடுத்திய இளங்காரிகையைப் போன்ற பூமியானவள், மதுவின் கொழுப்பு மற்றும் இறைச்சியால் நிறைந்திருந்தாள்.(49-54) எனவே, ஓ! மன்னா, பூமியானவள் மேதினி என்றழைக்கப்பட்டாள், {இது போன்ற} ஆயிரக்கணக்கான அசுரர்களுக்காகவே அவள் தரணி என்ற பட்டப்பெயரையும் பெற்றாள்” என்றார் {வைசம்பாயனர்}.(55)

மதுவைக் கொன்ற விஷ்ணு | பவிஷ்ய பர்வம் பகுதி – 25-(ஆத்மோபாஸநாதிகதநம்)-மலைகளைக் குறித்த வர்ணனை; ஆறுகளின் உற்பத்தி; மழைக்காலமும் வசந்த காலமும்; யோகம்; விஷ்ணு; மாயை; ஆத்மா…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “புஷ்கரையில் மது வீழ்ந்ததைக் கண்ட அனைத்து உயிரினங்களும் அனைத்துப்புறங்களிலும் பாடியும், ஆடியும் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தன.(1) மலைகளில் முதன்மையான சுபார்ஷ்வம் பல்வேறு தாதுப்பொருட்களால் மறைக்கப்பட்ட தன் தங்கச் சிகரங்களுடன் வானத்தைப் பிளப்பதைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது.(2) தாதுக்களால் எங்கும் மறைக்கப்பட்டிருந்த மலைகள் மின்னலுடன் கூடிய மேகங்களைப் போன்ற உயர்ந்த சிகரங்களுடன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தன.(3) அவற்றின் சிகரங்கள் மண்ணாலும், காற்றில் எழுந்த சாம்பலாலும் மறைக்கப்பட்டருந்ததால் பெரும் மேகங்கள் பலவற்றைப் போல அவை தெரிந்தன.{4} மேகங்களால் மறைக்கப்பட்ட சிகரங்களைக் கொண்டவையும், ஏராளமான தங்கத்தை விளைவிக்கும் தங்கள் சிறகுகளால் {தங்கள் மேலிருந்த} மரங்களைச் சிதறடித்தவையுமான மலைகள் ஆகாயத்தில் நிலைத்திருப்பவை போலத் தெரிந்தன.{5,6} பொன் தாதுக்களால் மறைக்கப்பட்ட சிகரங்களைக் கொண்டவையும், சிறகுகள் படைத்தவையுமான மலைகள், காற்றால் மேலெழுந்து சென்று பறவைகள் அனைத்தையும் அச்சுறுத்தின. பளிங்கு {ஸ்படிகம்}, மரகதம் {சூரியகாந்தம்}, நீலமணி {சந்திரகாந்தம்} ஆகியவற்றால் அந்தப் பொன் மலைகள் மறைக்கப்பட்டிருந்தன.{7}

பெரும் மலையான இமயம், வெண்தாதுக்களால் மறைக்கப்பட்டிருந்தது. அதன் {இமய மலையின்} பொன் சிகரங்களும், சிறகுகளும் சூரியக் கதிர்களால் ஒளியூட்டப்பட்ட போது, பல்வேறு வகைகளிலான ரத்தினங்களை அவை வெளிப்படுத்தின.{8,9} பளிங்கால் {ஸ்படிகத்தால்} நிறைந்ததும், வஜ்ரத்தால் கட்டப்பட்ட நுழைவாயில்கள் இரண்டைக் கொண்டதும், பெரும் மலையுமான மந்தரம், தேவலோகத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.{10} பல்வேறு தாதுக்களால் அலங்கரிக்கப்பட்டதும், நுழைவாயில்களைப் போன்ற உயர்ந்த பல சிகரங்களைக் கொண்டதும், இசைக்கருவிகளை இசைக்கும் கந்தர்வர்கள், பாடும் கின்னரர்கள், பல்வேறு முகபாவங்களையும், உடலசைவுகளையும் செய்யும் தெய்வீக காரிகைகள் ஆகியோரால் மறைக்கப்பட்ட மரங்களுடன் கூடியதுமான கைலாச மலையோ விளையாடிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது.{11,12}

மதுவின் {மது அசுரனின்} பாடல், நடிப்பு, நடனம், விளையாட்டு ஆகியவற்றால் அந்தக் கைலாச மலை காமனைப் போல ஆசையைத் தூண்டிக் கொண்டிருந்தது.(13) சூரியக் கதிர்களால் பீடிக்கப்பட்ட மேகங்களைப் போன்ற சிகரங்களுடன் கூடிய நீல மலையான விந்தியத்தைப் போன்றவனும், பூமியின் வடிவத்தைக் கொண்டவனுமான விஷ்ணு, மேரு மலையில் நிலைத்திருந்து, மேகங்களின் மூலம் பூமியில் மழையைப் பொழிந்தான்.(14,15) எழுந்து வரும் மேகங்களுடன் கூடிய மலைகள் தூய நீரையும், பல்வேறு பாறைகளையும், தாது பொருட்களையும் வெளியிட்டன; ஊற்றுகளின் மூலம் அவை பளிங்கு போன்று தெளிந்த நீரை வெளியிட்டன. மழைக்காலம் முடிவடைந்ததும், மின்னலுடன் கூடிய மேகங்களைப் போன்று மரங்களும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டவையாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. யானைகள் பல்வேறு பொன்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மலர்ந்து தொங்கும் கொடிகள், பறவைகள் நிறைந்த மரங்களால் ஆதரிக்கப்பட்டு, காற்றில் அசைந்து ஆடிக் கொண்டிருந்தன. வசந்த காலத்தில், கரையை மோதும் அலைகளைப் போல வலுவான காற்றால் அசைக்கப்படும் கொடிகள், நீர்த்துளிகளைப் போல மலர்களைப் பொழிந்தன. பூமியானது, கனிகளால் மறைக்கப்பட்ட பெரும் மரங்கள் பலவற்றால் மறைக்கப்பட்டிருக்கிறது. தேனையும், பறவைகளையும் விரும்பும் மரங்கள், காமன் வருவதை முன்னறிவிப்பவைப் போலப் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.

மதுவை அழித்தவனும், தெய்வீகனுமான விஷ்ணு, ஓடைகளுடன் கூடிய ஆற்றைப் படைத்தான். ஓடையானவள், பல ஊற்றுகளையும், ஏராளமான நீரையும், அழகிய இடங்களையும் கொண்டிருந்தாள். அவளது கரையில் அமைந்திருக்கும் புனிதத்தலங்கள் {புஷ்கரங்கள்} அழகுடனும், வனப்புடனும் திகழ்ந்தன. தெளிந்த நீர் நிறைந்தவளாகவும், மலர்களின் நறுமணத்தையும் சுமப்பவளாகவும் அவள் இருந்தாள்.(16-23) “உன்னைத் தவிர வேறேதும் இல்லை” என்ற வேதச் சொற்களால் ஞானமடைந்த அவள் யோகியரின் இதயத்திற்குள் நுழைகிறாள். வேதச் சொற்களால் ஞானமடைந்தும், யோகத்தில் கபில வடிவை (அதாவது மூன்று குணங்களும் சமமாக இருக்கும் நிலையை) ஏற்றும் பாலைத் தருகிறாள் (ஆன்ம அறிவியலை வெளிப்படுத்துகிறாள்).(24,25)

புத்தி சார்ந்த புலங்கள் அனைத்தும் அழிவடையும்போது, தூய நனவு நிலை மட்டுமே எஞ்சுகிறது; அண்டந்தழுவிய மூன்று போக்குகள் (குணங்கள்) நுட்பமானதை {ஆத்மாவை} அறிந்து கொள்வதற்காக மட்டுமே உடலை ஏற்கின்றன. அதன்பிறகு, {ஒரு முகமான} குவிந்த மனத்துடன் கூடிய யோகி, மிக உயர்ந்ததும், அற்புதமானதும், நித்தியமானதும், தூய்மையானதுமான ஆத்மாவைத் துதிக்கிறான். தூய ஞானத்தின் வடிவிலான பிரம்மம், பாலைவனத்து நீரைப் போல நனவில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கடந்து படைப்பு முழுவதிலும் படர்ந்தூடுவுகிறது. நன்கு அமைக்கப்பட்ட அழகிய மாயை அந்தத் தெய்வீக ஆத்மாவை {பிரம்மத்தை} மறைக்கிறது. அவித்யை எனும் அத்திரை விலகும்போதுதான் ஒருவனால் ஆத்மாவைக் காண முடியும். அகங்காரம் கொண்ட நனவுநிலையானது ஒரு மலையைப் போல வெல்லப்பட முடியாததாகும். அஃது அண்டந்தழுவிய மூன்று போக்குகளை, அல்லது குணங்களைச் சார்ந்தே இருக்கிறது. நித்தியமாக அது நிலைத்திருக்கிறது, சித்தர்களாலும் கூட அது தொண்டாற்றப்படுகிறது {சித்தர்களும் குணங்களின் வசப்பட்டவர்களாக இருக்கிறார்கள்}” என்றார் {வைசம்பாயனர்}[1].(26-29)

பிருதுவின் பதவியேற்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 26-(பிருதுராஜ்யாபிஷேககதநாதி)-பிருது அரியணையில் நிறுவப்பட்டது; பெருங்கடலைக் கடையும் திட்டம் உருவானது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “உலகம் முழுவதிலும் அகங்காரமும், அறியாமையும் இவ்வாறு நீடித்திருந்தபோது மக்கள் என்ன செய்தனர்?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர், “ரிஷிகளுடன் கூடிய பிரஜாபதி, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் வேனனின் மகனான பிருதுவை அரியணையில் நிறுவினான்.(2) திரேதா யுகம் தொடங்கிய போது, மக்கள் தங்களுக்குள், “இதுவரை பிறந்தவர்களில் இவனே நமது மிகச் சிறந்த மன்னனாவான்.(3) தலைவன் தன்னிடம் ஒப்படைத்த கடமைகளில் நிறைவடைந்தவனாக நமக்கு வாழ்வாதாரங்களை வழங்கி, பிராமணர்களையும், அனைத்து உயிரினங்களையும் இவன் பாதுகாப்பான்” என்றனர்.(4)

அதே வேளையில், பல்வேறு அறவிதிமுறைகளில் சோர்ந்து போன தேவர்கள், கந்தமாதன மலையின் மேட்டுச் சமவெளியில் ஓய்ந்திருந்தனர்.(5) வசந்த காலம் வந்ததும் தேவர்களும், தானவர்களும் அனைத்துப் புறங்களிலும் நறுமணத்தை நுகர்ந்து பெரிதும் நிறைவடைந்தனர்.{6} அவர்கள், “காற்றில் பரவும் மலர்களின் நறுமணம் இனிமைமிக்கதாக இருப்பதால் பூமிசார்ந்த ஒவ்வொரு பொருளின் மணமும் சிறப்பாகவே இருக்கும்” என்று நினைத்தனர்.{7} அந்த நறுமணத்தை நுகர்ந்ததும் தைத்தியர்கள் தொடக்கத்தில் சற்றே ஆச்சரியமடைந்தனர். அதன் பிறகு பெரும் மகிழ்ச்சி அடைந்த அவர்கள் மிகச் சிறந்த இன்ப நிலையை அடைந்தனர்.{8}(6-8)

அதன் மணத்தால் தூண்டப்பட்ட அவர்கள் அனைவரும் ஒருசேர, “ஒவ்வொரு மலரின் சக்தியும் இவ்வாறே இருக்கிறது; இதன் கனி {பயன்} என்னவென்பதை நாம் அறியோம்.(9) ஊகத்தின் மூலமே பல்வேறு செயல்முறைகளும் கண்டறியப்பட வேண்டும். இந்தப் புத்தியின் சக்தியால் மனிதர்கள் மங்கலச் செயல்களையும், மங்கலமற்ற செயல்களையும் {நன்மை தீமைகளைச்} செய்கிறார்கள்.(10) விரும்பிய வடிவங்களை ஏற்கவல்லதும், சக்திமிக்கதுமான மந்தர மலையைக் கொண்டு, நீரில் மூலிகைகளை இட்டு நாம் அரைப்போம்[1].(11) பெருஞ்சக்தியுடன் நாம் பெருங்கடலைக் கடைந்து, அமுதத்தைப் பருகி, அவித்யை அல்லது அறியாமையை அழிப்பதற்காக ஒருசேர நம்மை ஆயத்தம் செய்து கொள்வோம்.(12) நாம் வழிபடும் பெருஞ்சக்தியான விஷ்ணு, (யோகத்தில்) நமது வழிகாட்டியாக இருப்பான். ரிபுக்களுடன் (ஆசைகளுடன்) நாம் வாழ்ந்து வந்தாலும், அவற்றை வென்று தியுலோகத்தையும், பூர்லோகத்தையும் அனுபவிப்போம்.(13) வேர்கள், இலைகள், கிளைகள், மலர்கள், கனிகள்[2] ஆகியவற்றுடன் நாம் பூமிக்கு அமுதத்தைக் கொண்டு செல்வோம்” என்றனர்.(14)மந்தர மலையைப் பெயர்ப்பதைக் குறித்து இவ்வாறு பேசிய தைத்தியர்கள், கந்தமாதன மலையில் விளைந்த மூலிகைகள் அனைத்தையும் பிரித்தெடுத்தனர். பிறகு, மந்தர மலையைப் பெயர்த்தெடுக்க ஓடி பூமியை நடுங்கச் செய்தனர். தனுவின் குலத்தில் பிறந்த தானவர்களால் மந்தர மலையைப் பெயர்க்க முடியவில்லை. அவர்கள் தங்கள் முழங்கால்கள் நொறுங்கி மலையின் வெற்றிடங்களில் விழுந்தனர்.(15-17)

அதன்பிறகு அவர்கள், தவங்களின் மூலம் தங்கள் பாவங்களைச் சிதறடித்து, உரிய புத்தியின் மூலம் தங்கள் சுயத்தைக் கட்டுப்படுத்தி, ஈஷ்வரனிடம் தலைவணங்கி அவனது புகலிடத்தை நாடினர்.(18) எல்லாம் வல்லவனும், தற்கட்டுப்பாடுடையவனும், உலகங்கள் அனைத்தின் நன்மைக்காக எங்கும் செல்லவல்லவனுமான பிரம்மன், அவர்களின் மனத்தில் உள்ள ஆசையை அறிந்து, புலப்படாத குரலில் {அசரீரியாக},(19,20) “ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், மருத்துகள், தேவர்கள், யக்ஷர்கள், கந்தர்கள், கின்னரர்கள் ஆகியோர் ஒன்றுசேர்ந்து மந்தர மலையைப் பெயர்த்தெடுத்து, இமயத்தின் சாரமாக இருக்கும் மூலிகைகளை அடையட்டும்” என்றான்.(21-23)

கரவலிமையுடன் கூடியவர்களான தைத்தியர்கள், அனைவரின் முன்னிலையில் சொல்லப்பட்ட அந்தச் சொற்களைக் கேட்டு, தேவர்கள், தானவர்களென அனைவராலும் நிறுவப்பட்ட புஷ்கரம் இருக்கும் உப்புநீர் பெருங்கடலின் அருகில் மனத்தாலும், சொற்களாலும் தங்களைப் பலராகப் பெருக்கிக் கொண்டனர். (24,25) அவர்கள், மந்தர மலையை மத்தாக்கி, வாசுகியை வடமாக்கி மூலிகைகளுடன் கூடிய உப்புநீர் பெருங்கடலை ஆயிரக்கணக்கான வருடங்கள் கடைந்தனர். நீர் மற்றும் மூலிகைகளின் கலவையுடன் அமுதமானது பாலின் வடிவில் உண்டானது.(26,27)

அதன் பிறகு, தன்வந்தரி, ஸ்ரீதேவி, தெளிந்த சந்திரன் ஆகியோர் எழுந்தனர், மது, கௌஸ்துப மணி, உச்சைஷ்ரவமெனும் அழகிய குதிரை ஆகியவையும், பாலும் எழுந்தன. பேராசையாலும், கோபத்தாலும் பீடிக்கப்பட்ட அசுரர்கள் அமுதத்தைக் கொள்ளையடித்தனர்.{28,29} அதை எடுப்பதற்காகத் தேவர்கள் ராஹுவிடம், “தைத்தியர்களிலும், தானவர்களிலும் எவரும் அமுதத்தைப் பருகவில்லை” என்று சொன்னார்கள்.{30} அதன்பிறகு ஹரி தன்னுடைய சக்கரத்தால் ராகுவின் தலையை அறுத்தான். பித்ருக்களாலும், முனிவர்களாலும் கூட நிரந்தரமாக அனுபவிக்க முடியாத அமுதம் போன்ற ஞானத்தை இந்திரனின் கைகளில் இருந்து பூமி பறித்துக் கொண்டது.{31} வேத சொற்றொடர்களால் தூண்டப்பட்டும், சீடத்துவத்தை {இந்திரனை குருவாக} ஏற்றுக் கொண்டும் ஞானமெனும் அமுதத்தைப் பூமி அபகரித்துக் கொண்டது” என்றார் {வைசம்பாயனர்}{32}.(28-32).

பலியின் அழிவு | பவிஷ்ய பர்வம் பகுதி – 27-(ஹிரண்யகஷிபோ ராஜஸூயவர்ணநம்)-பலியின் வரம்; விஷ்ணு பெற்ற பிச்சை; இந்திரனின் அரசுரிமை…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “தைத்தியர்கள் விஷ்ணுவின் சக்தியால் கொல்லப்பட்டனர்; ஆனால் அவர்கள் பெருஞ்சக்தியுடன் வளர்ந்தபோது என்ன செய்ய விரும்பினார்கள்?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர், “பெருஞ்சக்திவாய்ந்த தானவர்கள், தங்கள் ஆற்றலின் விளைவால் அரசை {உலகை ஆளும் அரசுரிமையை} வேண்டினர், வாய்மை நிறைந்த சூரர்கள் {தேவர்கள்} கடுந்தவங்களைச் செய்ய விரும்பினார்கள்.(2)

ஜனமேஜயன், “ஹிரண்யகசிபு குலத்தில் பிறந்த பலி, பழங்காலத்தில் தலைமைத்துவ சக்திகளை அடைந்து, கங்கைக்கும், யமுனைக்கும் இடைப்பட்ட நிலத்தில் நீண்ட நாள் நீடித்த வேள்வியை ஏன் செய்தான்?” என்று கேட்டான்.(3)

வைசம்பாயனர், “ஓ! பாரதக் குலத்தில் பிறந்த பெரும் மன்னா {ஜனமேஜயா}, பெருஞ்சக்திமிக்கவனும், தானவர்களில் முதன்மையானவனுமான பலி, கங்கைக்கும், யமுனைக்கும் இடையில் அமைந்த நிலத்தில் ஏராளமான பொன்னுடன் ராஜசூய வேள்வியைச் செய்தான். அஃது அவனுக்குப் பெருந்தவமாக இருந்து. அந்தப் பேரசுரன் யஜ்ஞம் {வேள்வி} செய்ய முனைந்தபோது, துறவையும் நோன்புகளையும் நோற்றுவந்தவர்களும், வேதங்களை நன்கறிந்தவர்களுமான பிராமணர்கள் பலரும், திறன்மிகு யதிகளும், வாலகில்ய முனிவர்களும், அறச்சடங்குகள் பலவற்றைத் தினமும் செய்து வந்த இருபிறப்பாளர்கள் பலரும் ஒரு சேர அங்கே வந்து சேர்ந்தனர். அந்த வேள்வியில் ஆடம்பரக் கொடைகள் வழங்கப்பட்டன. பிராமணர்களுக்கு மத்தியில் நெருப்பைப் போன்றவரான ஆசான் சுக்ரர் {சுக்ராச்சாரியர்}, பலியின் சார்பாகப் புரோஹிதராகச் செயல்படத் தமது மகனுடன் அங்கே வந்து சேர்ந்தார்.

தைத்தியர்களில் ஹிரண்யகசிபுவைப் போன்ற பலி, சரஸ்வதியிடம், “எனக்கு வரமளிப்பதாக நீயே சொல்லியிருக்கிறாய். அதை இப்போது தருவாயாக” என்றான்.(4-10)

குள்ளனின் வடிவில் இருந்த விஷ்ணு, தன்னுடைய மூன்று அடிகளை வைக்கும் நிலத்தை ஹிரண்யகசிபுவின் வழித்தோன்றலிடம் {பலியிடம்} இருந்து பிச்சையாகப் பெற்றான்.(11) அதன்பிறகு நித்தியனான விஷ்ணு, தனது காலடிகள் மூன்றால் மூவுலகங்களையும் அளந்து ஒரு தெய்வீக வடிவை ஏற்றான். தங்கள் அரசை இழந்த தைத்தியர்கள், தங்கள் படைவீரர்கள், பராசங்கள், வாள்கள், தோமரங்கள், தண்டங்கள், கொடிகள், கொடிக்கம்பங்கள், தேர்கள், கவசங்கள், உறைகள், கோடரிகள் ஆகியவற்றுடனும், பிற ஆயுதங்களுடனும் பாதாள லோகத்தில் நுழைந்தனர்.

மறுபுறம், மகிழ்ச்சியால் நிறைந்திருந்த தேவர்கள், விஷ்ணுவுடன் சேர்ந்து உடனே எழுந்து, மூவுலகங்களிலும் தங்கள் அரசுரிமையை நிலைநாட்ட இந்திரனைத் தங்கள் மன்னனாக நிறுவினர். பலி, அமுதம் கொடுத்து அவர்களை {தேவர்களை} நிறைவடையச் செய்தான். பிரம்மன் அந்த அமுதத்தை மஹேந்திரனிடம் கொடுத்தான். இந்தச் செயலால் பலி தன் பாவங்களை அழித்து இறவாதவனாக {தேவனாக} ஆனான்.(12-16)

தேவர்கள் அனைவரிலும் முதல்வன் {இந்திரன்}, பிரம்மனின் கைகளில் இருந்து எழுந்த சங்கை முழக்கினான். அந்த முழக்கம் பகைவருக்கு மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அந்தச் சங்கின் முழக்கத்தைக் கேட்டு மூவுலகத்தினரும் கட்டுப்பட்டு, இந்திரனைத் தங்கள் மன்னனாக அடைந்து பேரமைதியை அனுபவித்தனர். மூவுலகங்களும், நெருப்பாலும், ஒளியாலும் அமைந்த ஆயுதங்கள் தரித்து மந்தர மலைக்கு முன்பாக நின்றன” என்றார் {வைசம்பாயனர்}.(17-19).

தக்ஷ வேள்வியின் அழிவு | பவிஷ்ய பர்வம் பகுதி – 28-(தக்ஷயஜ்ஞவிநாஷம்)-குதிரைவேள்வி செய்த தக்ஷன்; ருத்திரனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் நடந்த போர்; அவிர்ப்பாகம் பெற்ற ருத்திரன்; பௌஷ்கரப் புராணம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! பாரதா, அதன் பிறகு அவர்கள் அனைவரும் அமைதியுடன் வாழ்ந்தனர், செழிப்பான அரசும் நிலைநாட்டப்பட்டது. அந்நேரத்தில் ஆன்ம அறிவியலின் அறிவைப் பொறுத்தவரையில் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லாததால் அவர்கள் ஒன்றாகவே ஆத்ம ஞானத்தை விளைவித்தனர். மறுபுறத்தில் பலர் அழுதனர்; மனிதர்களால் அளிக்கப்படும் வேள்விக் காணிக்கைகளைத் தேவர்கள் ஏற்றனர்.(1,2)

தெய்வீக பிருஹஸ்பதி, தக்ஷ பிராசேதஸிடம் குதிரை வேள்வி செய்யுமாறு அறிவுறுத்திவிட்டு, ரிஷிகள் சூழ அங்கே வந்தார்.{3} தக்ஷன் அனைவருக்கும் தாய்வழி தாத்தன் ஆவான். எனவே, ஆன்ம அறிவற்ற தக்ஷனின் யஜ்ஞத்தில் ருத்திரன் நந்தியுடன் சேர்ந்து தன்னாலான தடைகளை ஏற்படுத்தினான்.{4} ருத்திரன் தானே விரும்பி தன்னை இரண்டாகப் பகுத்துக் கொண்டான். {இதன் மூலம்} பெரும் தர்மாத்மாவான நந்தி புருஷனாகப் பிறந்தான்.{5} வேதங்களில் சிறப்பாகப் பாடப்பட்டுள்ள நித்திய பிரம்மத்தை ருத்திரன் தன் யோக சக்தியின் மூலம் வெளிப்படுத்தினான்.{6}(4-6)

ஸ்வரூபன், அரூபன் {சாப்யரூபன்}, விரூபாக்ஷன், கடோதரன், ஊர்த்வநேர்தன், மஹாகாயன், விகடன், வாமனன்,{7} ஷிகி, ஜடி, திரிலோசனன் {திரையக்ஷன்}, சங்குகர்ணன், சீரதாரி, சர்மி முதலிய பல்வேறு கணங்களும், பாசக்கயிறுகளைத் தரித்தவர்களும், தண்டபாணிகளும் {முத்கரபாணிகளும்},{8} மணிகளைத் தரித்தவர்களும் {ஸகண்டாதாரிகளும், முஞ்ஜமேகலதாரிகளும்}, குண்டலங்களையும், கடகங்களையும் அணிந்தவர்களும் {கடககுண்டலதாரிகளும்},{9} டிண்டிகள், பேரிகைகள், புல்லாங்குழல்கள், மிருதங்கங்கள் ஆகியவற்றைச் சுமந்தவர்களும் சூழ தக்ஷனின் வேள்வியைத் தடுக்க ருத்திரன் விரைந்து சென்றான்.{10}

பூதகணங்கள் தங்கள் கைகளில் சங்கையும், முரஜத்தையும் {முரசையும்}, தாலபலத்தையும் கொண்டிருந்தனர். திரிசூலத்தையும், கடும் ஆயுதங்கள் பிறவற்றையும் தரித்தவனும், வேள்வி செய்பவர்களால் வழிபடப்படுபவனுமான ருத்திரன், அந்த வேள்வியில் எரியும் தழலைப் போல ஒளிர்ந்தான். அழிவை ஏற்படுத்த எரியும் நெருப்பானது {காலாக்னியானது}, அண்டத்தையே விழுங்கிவிடப் போவதாகத் தெரிந்தது.{11,12} யுகமுடிவில் காலாக்னியானது மொத்த அண்டத்தையும் உடனே எரித்துவிடுவதைப் போல, நந்தியும், பிநாகபாணியும் {சிவனும்} அந்தச் சிறந்த வேள்வியை அழிக்க இருந்தனர்.{13} இரவுலாவிகள் {கணங்கள்}, மரவுரி தரித்த முனிவர்களை அச்சுறுத்தும் வகையில் வேள்வியூபங்களைப் பிடுங்க விரைந்து சென்றன.{14} தாமிரக் கண்களைக் கொண்ட பிரமதர்கள், தங்கள் நாவுகளால் வேள்விக் காணிக்கைகளை {ஹவிஸுகளைப்} பருகினர்.{15} யானைகளின் துதிக்கைகளைப் போன்ற நீண்ட நாவுகளைக் கொண்ட பிறர், விலங்குகளை விழுங்கத் தொடங்கினர். சிலர் யூபங்களைப் பிடுங்கி விலங்குகளைத் தாக்கினர்.{16} சிலர் நெருப்புக்குள் நீரை வீசிச் சிரித்தனர்; ஜவா மலர்களைப் போல ஒளிரும் சிவந்த கண்களுடன் கூடிய சிலர் சோமச் சாற்றை அபகரித்துச் சென்றனர். சிலர், தாமரைத் தண்டுகளுக்கு ஒப்பான தங்கள் கைகளால் தர்ப்பை புற்களை வெட்டினர்.{17} சிலர், வேள்விஸ்தம்பங்களை நொறுக்கினர், வேறு சிலர் கலசங்களை வீசி எறிந்தனர். வேள்விக்களத்தை அழகூட்ட நிறுவப்பட்ட பொன்மரங்களை {காஞ்சநாந்விருக்ஷங்களைச்} சிலர் வீழ்த்தினர்.{18} சிலர், கணைகளைக் கொண்டு பொன் பாத்திரங்களை நொறுக்கினர். சிலர் பாத்திரங்களை அழித்தனர், வேறு சிலர் அரணியைப் பிடுங்கினர்.{19} சிலர் வேள்விப் பீடங்களை நொறுக்கினர், சிலர் அரிசிப் பிண்டங்களை உண்டனர், சிலர் தங்கள் நகங்களால் பல்வேறு பொருட்களை அழித்தனர்.{20} இவ்வாறு பகலும், இரவும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட அந்தப் பெரும் வேள்வியானது,பெருங்கடலைப் போல முழங்கத் தொடங்கியது.{21}

மறுபுறம் பெருஞ்சக்திவாய்ந்த மஹாதேவன், சுயம்புவான பிரம்மனால் முன்பு தனக்கு வழங்கப்பட்டதும், கீசக மூங்கிலாலானதுமான வில்லை எடுத்துக் கொண்டு, அதில் கணைகளைப் பொருத்தினான்.{22} பிறகு அவன், தனது முழங்கால்களால் வில்லை வளைத்து அந்தப் பெரும் யஜ்ஞத்தைத் தாக்கினான்.{23} கணைகளால் காயமடைந்த அந்தப் பெரும் வேள்வி வானத்தில் தாவிக் குதித்தது; பிறகு ஒரு மானின் வடிவை ஏற்று உரக்க கதறியபடியே பிரம்மனை அடைந்தது.{24} கணைகளால் முக்கிய அங்கங்கள் பிளக்கப்பட்ட வேள்வியானவன், பூமியில் எங்கும் உறைவிடத்தையோ, அமைதியையோ அடையாதவனாகப் பிரம்மனின் புகலிடத்தை நாடினான்.{25}(7-25)

பிரம்மன், மானின் வடிவில் இருந்த வேள்வியிடம், இனிமையான, மங்கலமான, அடக்கமான, சக்திமிக்க, அழுத்தமான சொற்களில், “ஓ! பெரும் மானே, இவ்வாறே நீ வானத்தில் நிலைத்திருப்பாயாக.{26} பல்வேறு வண்ணங்களையும், வளைந்த முடிச்சுகளையும் கொண்ட கணையால் நீ வீழ்த்தப்பட்டாய். எனவே நீ சோமனுடன் சேர்ந்து கிரகங்களுக்குத் தலைமையாக இருக்கும் நித்தியனான ருத்ரனுடன் வாழ்வாயாக. வானத்தில் இயக்கத்தை அடைந்து நட்சத்திரங்களுடன் சேர்வாயாக.{27,28} ஒளியமைப்புகளில் {ஜோதிகளில்} நீ துருவனாக இருப்பாயாக. உன் காயத்தில் இருந்து வெளியேறுவதும், நீ ஓடிக் கொண்டிருப்பதன் விளைவால் வானத்தில் வழிந்து கொண்டிருப்பதுமான இந்தத் தெய்வீகக் குருதி பல்வேறு வண்ணங்களை ஏற்றுக் கேது லோகமாகக் கொண்டாடப்படட்டும். மழைக்காலத்தில் உயிரினங்களுக்கு அது மழைக்கான அடையாள வடிவமாகட்டும்.{29,30} உயிரினங்கள் அதைக் கண்டு மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ அடையட்டும். புலன்களில் அஃது ஓய்ந்திருப்பதன் காரணமாக வானத்தில் இந்திர வில் {வானவில்} என்ற பெயரில் அழைக்கப்படும்” என்றான் {பிரம்மன்}.{31}

ஓ! மன்னா, மேலும் அவன் {பிரம்மன், மானின் வடிவில் இருந்த வேள்வியிடம்}, “மனிதர்களின் கண்கள் அதை ஆச்சரியத்துடன் பார்க்கும். அஃது அற்புதமானதாக, பல வண்ணங்களைக் கொண்டதாக இருக்கும். மேலும் அது மனத்தால் சரியாக வகுக்கப்பட்டதாக இருக்கும்.{32} பிரம்மத்தை உணரும் இதய வானில் அது பெயரால் மட்டுமே அறியப்படும். அஃது இரவில் புலப்படாது. இந்த அற்புத நிகழ்வு பகலின் முதல் பகுதியிலேயே குறிப்பாகக் காணப்படும்.{33} அது பூமியில் இருந்து மேலே எழுந்து வானில் மறையும். அந்த நேரத்தில் வில் தரித்த ருத்திரனிடம் கொண்ட அச்சத்தில் நூற்றுக்கணக்கான தக்ஷ பிரசேதஸ்கள் ஒரே நேரத்தில் தப்பி ஓடுவார்கள்” என்றான் {பிரம்மன்}.{34}

யுகமுடிவில் தோன்றும் பிரம்மதண்டம் போல எரியும் பினாகையுடன் கூடிய நந்தி மற்ற ருத்திரர்களுடன் சேர்ந்து நின்றான்.{35} பெருந்தோள்களைக் கொண்ட விஷ்ணு, ஒரு கையில் பெரும் வில்லுடனும், மறு கையில் சக்கரத்துடனும் அங்கே நின்றான்.{36} ருத்திரனுடன் போரிட விரும்பும் அனைவருக்கும் முன்பு, மற்றொரு கையில் சங்கு மற்றும் கதாயுதத்துடனும், நான்காவது கையில் வாளுடனும் விஷ்ணு நின்று கொண்டிருந்தான்.{37}(26-37) அதன் பிறகு விஷ்ணு, தன் சாரங்க வில்லையும், உலகில் ஒப்பற்ற சங்கையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு, தன் படைவீரர்களுடன் சேர்ந்து போரக்களத்தின் முகப்பில் நின்றான்.{38} அவன், தன் கையுறைகளையும், கவசங்களையும் அணிந்து கொண்டு சந்திரனுடன் கூடிய பெருங்கடலைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.{39}

பிரகாசமிக்க ஆதித்யர்களும், வசுக்களும் தங்கள் தெய்வீக ஆயுதங்கள் பலவற்றுடன் நாராயணனைச் சுற்றி நின்றனர்.{40} மருத்துகளும், விஷ்வர்களும் ருத்திரனின் பக்கம் நின்றனர். கந்தர்வர்கள், கின்னரர்கள், நாகர்கள், யக்ஷர்கள், பன்னகர்கள் ஆகியோரும்,{41} தண்டக்கோலைப் புறந்தள்ளிய முனிவர்களும் இரு தரப்புக்கும் நன்மையை விரும்பினர். உலகங்கள் அனைத்தின் நன்மையை விரும்பிய அவர்கள், அண்ட அமைதிக்காகத் தலைவனின் பெயரைத் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருந்தனர்.{42}

போர்க்களத்தின் முன்னணியில் நின்ற ருத்திரன், கூரிய கணைகளைக் கொண்டு விஷ்ணுவின் மார்பையும், மூட்டுகளையும் தாக்கினான்.{43} அனைவரின் ஆன்மாவாகவும், பிறப்பிடமாகவும் இருக்கும் விஷ்ணு இதனால் கலக்கமேதும் அடையவில்லை. அவன் ஆறு புலன்களையும் கொண்டிருந்தாலும் அவனது மனம் கோபத்தால் பீடிக்கப்படவில்லை.{44} அப்போது விஷ்ணு, கணைகளைப் பொருத்தி தன் வில்லை வளைத்தான். பிரம்மாயுதத்தைப் போன்ற அந்தக் கணையைக் கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் ருத்திரனின் மார்பில் ஏவினான். வஜ்ரத்தால் மந்தர மலை அசைந்தாலும் அந்தக் கணையால் காயமடைந்த மஹாதேவன் நடுங்கினானில்லை.{45,46} நித்தியனான விஷ்ணு திடீரெனக் குதித்தெழுந்து ருத்திரனின் தொண்டையைப் பற்றினான், அதன் விளைவாகவே அந்தத் தேவன் நீலத்தொண்டை கொண்டவன் {நீலகண்டன்} என்ற பட்டப்பெயரைப் பெற்றான்.{47}(38-47)

விஷ்ணு, “பிறப்பும், இறப்பும் அற்றவன் நீ. என்னைப் பொறுத்துக் கொள்வாயாக. அனைத்து உயிரினங்களுக்கும், சாத்திரங்களுக்கும் ஆசான் நீ. உன்னை நான் அறிவேன்” என்றான்.(48)

ஓ! பரதனின் வழித்தோன்றலே, செயல்கள் அனைத்தின் காரணனாகவும், எல்லையற்ற தன்மையால் பூதங்கள் அனைத்திலும் மிகச்சிறந்தவனாகவும் அந்தத் தலைவனே இருக்கிறான்.{49} அவனே அண்டத்தின் பொருள் காரணனாகவும், அதை விளைவிக்கும் காரணனாகவும் இருக்கிறான், அவன் மிக மங்கலமான பணிகளைச் செய்தவன் ஆவான்.{50} அப்போது வானத்தில் இருந்து, சித்தர்களின் வாயில் வெளிவந்த “ஓ! நித்திய தேவா, உன்னை வணங்குகிறோம்” என்ற மிக அற்புதமான சொற்களை நாங்கள் கேட்டோம்.{51}(49-51)

அதன் பிறகு, கிட்டத்தட்ட அருகில் இருந்த ருத்திரனால் பெறப்பட்டவனும், சக்திவாய்ந்தவனுமான நந்தி, தன் பினாகையை உயர்த்திக் கோபத்துடன் விஷ்ணுவின் தலையில் தாக்கினான்.{52} எல்லாம்வல்லவனான தலைவன் ஹரி, தேவர்களில் முதன்மையான நந்தியைக் கண்டு தன் புன்னகையால் அவனைக் கலங்கடித்தான்.{53} சக்தியில் எரிந்து கொண்டிருப்பவனும், வாழ்வின் உயர்ந்த பொருளைக் கொடுப்பவனும், பொறுமையுடன் கூடியவனுமான விஷ்ணு, ஒரு மலையைப் போல உறுதியாக நின்றான்.{54}

வெல்லப்பட முடியாதவனும், ஒப்பற்றவனும், செயலற்ற ஆன்மாவைக் கொண்டவனும், நித்தியனுமான அந்த ஹரி, காலாக்னியைப் போன்ற சக்தி வாய்ந்தவனாக இருந்தாலும், அமைதிப்படுத்தப்பட்டதால் வேள்விக்காணிக்கைகளில் ஒரு பகுதியை நுண்ணறிவுமிக்க ருத்திரனுக்குப் பங்கிட்டு அளித்தான். தேவர்களில் முதன்மையான விஷ்ணு எப்போதும் வெற்றியாளனாகவும், ஆசைகள் அற்றவனாகவும் இருக்கிறான்,{55,56} அவனால் வேள்வி மீண்டும் நிலைநாட்டப்பட்டது. ஓ! மன்னா, விஷ்ணுவுக்கும், ருத்திரனுக்கும் இடையில் நடந்த அந்தப் பயங்கரப்போரில் கணங்கள் முறையே தாங்கள் சார்ந்த தரப்புகளை விட்டு விலகவில்லை.{57} தக்ஷனின் வேள்வி அழிக்கப்பட்ட நேரத்தில் ஒரு நியாயமான போர் நடந்தது. அந்த நேரத்திலேயே வேள்விகளை அழித்தல் உலகில் அறிமுகப்படுத்தப்பட்டது.{58} ஓ! மன்னா, ஆன்ம ஞானமற்றவனாக இருந்த தக்ஷப்ரஜாபதி, தான் செய்த வேள்வியின் பலனாகப் பரமாத்ம ஞானத்தை அடைந்தான்[1].{59}பெரும் விஷ்ணுவின் இந்தத் தாமரை அவதாரமானது, துவைபாயன ரிஷியால் {வியாசரால்} பௌஷ்கரப் புராணத்தில் பதியப்பட்டும், மஹாரிஷிகளால் மேலும் முறையாக மேம்படுத்தப்பட்டும் இருக்கிறது. இந்தப் புராணத்தைக் கவனத்துடன் கேட்பவன், இம்மையில் {இவ்வுலகில்} தான் விரும்பும் பொருட்கள் அனைத்தையும் அடைகிறான்; மேலும் மறுமையில் துன்பமற்றவனாக மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். தூய்மையடைந்தவனாகவும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனாகவும் இருக்கும் அந்தப் பேரறிவாளன், பிராமணர்கள் அனைவரையும் இந்தத் தெய்வீகக் கருப்பொருளைக் கேட்கச் செய்து, ஆன்மக் கருத்துகள் அனைத்தையும் கற்றுணர்ந்து, தேவலோகத்தில் பெரிதும் மதிக்கப்படுகிறான்” என்றார் {வைசம்பாயனர்}.{60-63}(52-63).

மஹாவராஹசரிதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 29-(வராஹப்ராதுர்பாவவர்ணநம்)-வராக அவதார விளக்கம்; யுக முடிவில் அண்ட அழிவு; விஷ்ணுவின் யோகத்துயில்; நாராயண மந்திரம்; விஷ்ணுவின் மகிமை…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்},[1] “பக்திமான்களான தவசிகள் புராணங்களை உரைக்கும்போது, ஒப்பற்ற சக்திவாய்ந்த விஷ்ணுவின் பன்றி அவதாரம் குறித்து நாங்கள் கேட்டிருந்தாலும்,(1) {அவனது வரலாற்றையும்}, அவனது பணிகளையும், சாதனைகளையும், நோக்கத்தையும் குறித்து ஏதும் அறிந்தோமில்லை.(2) அந்தத் தலைவன் வேள்வியின் வடிவமா? யோகத்தின் வடிவமா? அவனது உடல் பூதங்களாலானதா? மாயையால் ஆனதா? அதன் {அந்த அவதாரத்தின்} தலைமை தேவன் ஹரியா? ஹரனா? அவனது ஆற்றலும், ஒழுக்கமும் எப்படிப்பட்டது? பழங்காலத்தில் அவன் என்ன செய்தான்?(3) ஸ்ருதிகளில் பதியப்பட்டிருக்கும் இந்தப் பன்றி அவதாரத்தைக் குறித்துப் பெரியவர்களும், இருபிறப்பாளர்களுமான இவர்களின் முன்னிலையில் விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)வைசம்பாயனர், “ஓ! மன்னா, அறநூல்களில் கிருஷ்ண துவைபாயனரால் {வியாசரால்} விரிவாக விளக்கப்பட்டிருக்கும் பேரற்புதச் செயல்களைச் செய்த கிருஷ்ணனின் பன்றி அவதாரத்தைக் குறித்து {மஹாவராஹசரிதத்தை} நான் சொல்லப் போகிறேன்.(5) ஓ! ஜனமேஜயா, நாராயணன் எவ்வாறு பன்றியின் வடிவை ஏற்றான் என்பதையும், பகைவரைக் கொல்பவனான அந்த ஹரி, ஸ்ருதியின் புனித மந்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட பன்றியின் வடிவை ஏற்று, பெருங்கடலின் அடியில் மூழ்கியிருந்த பூமியைத் தன் தந்தங்களால் எவ்வாறு உயர்த்தினான் என்பதையும் தூய்மையடைந்தவனாகவும், தற்கட்டுப்பாட்டுடனும் கேட்பாயாக.(6,7) புனிதமிக்க இந்தப் புராணம் வேதங்களைப் போன்றதும், ஸ்ருதிகளால் அலங்கரிக்கப்பட்டதுமாகும். எனவே இதை ஒரு நாத்திகனுக்கு உரைக்கக்கூடாது.(8) இந்த முழுப் புராணத்தின் பொருளையும், இதில் விளக்கப்பட்டுள்ள சாங்கிய, யோக அமைப்புகளையும் அறிந்த மனிதன் ஆன்ம அறிவை அடைந்தவனாவான்.(9)

ஆயிரம் யுகங்கள் கடந்து, பிரம்மனின் ஒரு நாள் முடிவடைந்தபிறகு, அனைத்து வகைத் தீய சகுனங்களும் தோன்றி, பூதங்கள் அனைத்தும், ஹரியையும், ஹரனையும் போன்ற புலப்படாத விருஷாகபியாகி, நெருப்பு, காற்று, சூரியனைப் போல ஹிரண்யரேதஸின் வடிவை ஏற்கும்போது, தன் தழல்களால் உலகை எரிப்பதைப் போல, விஷ்வேதேவர்கள், சாத்யர்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், அசுவினிகள் இருவர், குடிமுதல்வர்கள் {பிரஜாபதிகள்} அனைவர், ரிஷிகள் எழுவர், வசுக்கள், அப்சரஸ்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், தைத்தியர்கள், பிசாசங்கள், நாகர்கள், பலவகைப் பூதங்கள், பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், மிலேச்சர்கள் ஆகியோரையும், நான்கு கால் உயிரினங்களையும், பூமியில் வாழும் தாழ்ந்த விலங்குகள் பிறவற்றையும் {அந்த விருஷாகபி} வாடச் செய்கிறான்[2].(10-15)பிரம்மனுடைய நாளின் இறுதிப் பகுதியில் ஈஷ்வரனின் விருப்பப்படி, இதிஹாசங்கள், உபநிஷத்கள், வேதங்கள், பிற அறிவியல்கள் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்களும், நற்பணிகளில் ஈடுபடுபவர்களுமான முப்பத்துமூன்று தேவர்களும் {முப்பத்து முக்கோடி தேவர்களும்}, அவனது பிரகாசத்தால் முகங்கள் நிறம் மங்கியவர்களாக அங்கங்கள் எரிந்து, அண்டத்தின் பிறப்பிடமான பிரம்மனைத் தங்கள் முன் வைத்துக் கொண்டு, அன்னத்தின் வடிவில் இருந்த பெரும் யோகியான நாராயணனின் முன் தோன்றி அந்த ஹரிக்குள் நுழைந்தனர். இவ்வுலகில் தினமும் தோன்றி மறையும் சூரியனைப் போலத் தேவர்களும் நாராயணனில் தோன்றி மறைகின்றனர். அதை நான் விளக்கப் போகிறேன்.(16-20)

ஒரு கல்பத்தில் முழுமையாக ஆயிரம் வருடங்கள் நிறைவடையும் நேரம் நிஷேஷம் என்று அழைக்கப்படுகிறது. அஃது அழிவுக்கான கருவியாக அமைவதால் அப்போது உலகம் இருப்பதில்லை, எனவே, உயிரினங்களின் பணிகள் அனைத்தும் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன.(21) தேவர்கள், அசுரர்கள், பன்னகர்கள் உள்ளிட்ட உலகங்கள் அனைத்தையும் அழித்த பிறகு உலகத்தின் ஆசானான தலைவன் மட்டுமே தன் சுயத்தில் வாழ்கிறான்.(22) ஒவ்வொரு கல்பத்தின் முடிவிற்குப் பிறகும் தலைவன் உயிரினங்கள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் படைக்கிறான்.(23) தலைவன் வெளிப்படாதவனாகவும், நித்தியனாகவும் இருக்கிறான். மொத்த அண்டமும் அவனில் இருக்கிறது. சூரிய சந்திரக் கதிர்களும், புகையும், நெருப்பும், வேள்விகளும், அறச்சடங்குகளும் இல்லாத போது,(24) பறவைகள் அசைவற்று, விலங்கேதும் நகராத போது, மொத்த உலகும் இருளில் மூழ்கி அனைத்துப் புலப்படாத நிலையை அடையும்போது,(25) செயல்கள் அனைத்தும் இல்லாது போகும்போது, இடியும், நிலநடுக்கமும், பிற தீய சகுனங்களும் மறையும்போது, பகைவர்கள் அழிவடையும்போது,(26) நாராயணனாக இருக்கும் அண்டமானவன், பேராத்மாவான ரிஷிகேசனின் சமநிலையை அடைந்து உறங்க முயற்சிக்கிறான்.(27)

ஆயிரம் தழல்களைப் போன்ற சடாமுடி தரித்தவனும், மஞ்சள் பீதாம்பரம் உடுத்தியவனும், மேகத்துக்கு ஒப்பான வண்ணத்தையும், சிவந்த கண்களையும்,(28) செஞ்சந்தனம் பூசிய மார்பையும் கொண்டவனும், ஸ்ரீவத்சமெனும் மாயக்குறியால் அலங்கரிக்கப்பட்டவனுமான கிருஷ்ணன் {விஷ்ணு}, மின்னலுடன் கூடிய ஒரு மேகத்தைப் போல அங்கே தோன்றுகிறான்.(29) ஆயிரந்தாமரைகளைக் கொண்ட மாலை அவனது கழுத்தை அலங்கரிக்கிறது, அவனது மனைவியான லக்ஷ்மி மட்டுமே அவனுடன் {அவனில் பாதி உடலாக} இருக்கிறாள்.(30) அதன்பிறகு ஒப்பற்ற ஆற்றலைக் கொண்டவனும், அறமேயானவனும், அனைவரின் பெரும்பாட்டனுமான விஷ்ணு, விவரிக்க முடியாத யோகத்துயிலுக்குள் நுழைகிறான்.(31)

தேவர்கள் அனைவரையும் ஆள்பவனான அவன், ஆயிரம் ஆண்டுகள் முடிந்த பிறகு தலைவன் புருஷோத்தமனாக விழித்தெழுகிறான்.(32) அப்போது தலைவன் அண்டத்தைப் படைக்க மீண்டும் நினைக்கிறான். அவன் தன்னுடைய பரமசக்தியைக் கொண்டு பித்ருக்களையும், தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் படைக்கிறான்.(33) அதன் பிறகு தேவர்களின் பணிகளை அவன் நினைக்கிறான். வாக்கின் தேவனான அவன் அதன் பிறகு உலகங்கள் அனைத்தையும் படைக்கிறான்.(34) அந்தத் தலைவனே படைப்பவனாகவும், பாதுகாப்பவனாகவும், அழிப்பவனாகவும் இருக்கிறான்; அவனே விதியை விதிப்பவனாக இருக்கிறான். தற்கட்டுப்பாடாகவும், விதியாகவும் அவனே இருக்கிறான்.(35)

தேவர்களனைவரும் நாராயணனே, செயல்களனைத்தும் நாராயணனே, மதிப்புகளனைத்தும் நாராயணனே, யஜ்ஞமும், ஸ்ருதியும் நாராயணனே.(36) முக்தியாயிருப்பவன் நாராயணனே, அனைவரின் கதியும் நாராயணனே, அறமும், பலமும் நாராயணனே.(37) ஞானமும், தவங்களும் நாராயணனே, வாய்மையெதுவும் நாராயணனே. நாராயணனுக்கும் மேலான தேவன் வேறெவனும் இல்லை; இருக்கவும் முடியாது[3].(38)(இதன் ஸம்ஸ்கிருத மூலம்,

“நாராயணபரா தே³வா நாராயணபரா꞉ க்ரியா꞉ |

நாராயணபரோ யஜ்ஞோ நாராயணபரா ஷ்²ருதி꞉ ||36

நாராயணபரோ மோக்ஷோ நாராயணபரா க³தி꞉ |

நாராயணபரோ த⁴ர்மோ நாராயணபரம் க்ரது꞉ ||37

நாராயணபரம் ஜ்ஞாநம் நாராயணபரம் தப꞉ |

நாராயணபரம் ஸத்யம் நாராயணபரம் பத³ம் |

நாராயணபரோ தே³வோ ந பூ⁴தோ ந ப⁴விஷ்யதி ||38″)

சுயம்புவாக எழுந்த தேவனும், அண்டத்தின் தலைவனும் அவனே; உற்றறியும் ஞானத்திற்குள்ளும், காற்று என்று கருதப்படுவதற்குள்ளும் பிரம்மனாக இருப்பவன் இருக்கிறான். யஜ்ஞம் அவனே.(39) வெளிப்பட்டவனாகவும், வெளிப்படாதவனாகவும் அறியப்படுபவன் அவனே. எல்லாம் வல்லவனும், அனைத்தையும் படைத்தவனும் அவனே.(40) புலன்களால் முடியாததை வெளிப்படுத்துபவன் அவனே. அவனால் வெளிப்படுத்த முடியாததைப் புலன்களால் உணர முடியாது. தேவர்களாலும், குடிமுதல்வர்களாலும், சப்தரிஷிகளாலும் கூட அறிந்து கொள்ள இயலாத எல்லையைக் கொண்டவன் அவனே.(41)

எல்லையற்றவன் என ஸ்ருதியால் சொல்லப்படுபவன் அவனே. தேவர்களாலும் காண முடியாத உயர்ந்த வடிவைக் கொண்டவன் அவனே.(42) அவதாரத்தின்போது அவன் ஏற்கும் வடிவையே அவர்கள் துதிக்கிறார்கள். அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் வடிவில் மட்டுமே தேவர்கள் அவனைப் பார்க்கிறார்கள். அவன் காட்டாத வடிவை எவராலும் தேடிக் காண முடியாது.(43) பூதங்களின் தலைவனும், உயிர் காற்றின் {பிராணவாயுவின்} அசைவும், செரிமானமெனும் நெருப்பும் அவனே. சக்தியையும், தவத்தையும், அமுதத்தையும் பகிர்ந்தளிப்பவன் அவனே.(44) நான்கு ஆசிரமங்களின் சதுர்ஹோத்ரப் பலன்களை அனுபவிப்பவன் அவனே. நான்கு யுகங்களையும், நான்கு பெருங்கடல்களையும் விதிப்பவன் அவனே.(45) பெரும் யோகி அவனே. அண்டத்தை அழித்து, ஆயிரம் வருடங்கள் தன் கருவறையில் கொண்டு, முட்டையைப் பொறிக்கச் செய்பவன் அவனே.(46) எல்லாம் வல்ல இந்தப் பிரஜாபதியே தேவர்கள், அசுரர்கள், பிராமணர்கள், நாகர்கள், அப்சரஸ்கள், மூலிகைகள், அண்டத்தைத் தாங்கும் லோகபாலர்கள், யக்ஷர்கள், குஹ்யர்கள், ராட்சசர்கள் ஆகியோரைப் படைக்கிறான்” என்றார் {வைசம்பாயனர்}.(47).

பூமி உயர்த்தப்பட்டது | பவிஷ்ய பர்வம் பகுதி – 30-(வராஹக்ருதோ தரோத்தாரம்)-மலைகளின் கனம் பொறாமல் நீருக்குள் மறைந்த பூமி; பூமியை மீட்க வராக அவதாரம் எடுத்த விஷ்ணு; பூமியை அவளது நிலையில் மீண்டும் நிறுவியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பிரம்மனின் வடிவில் இருந்து உண்டான இந்த அண்டம் முன்னர் ஒரு பொன் முட்டையின் வடிவில் இருந்ததாக வேத ஸ்ருதி சொல்கிறது.(1) அதன்பிறகு, {ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகு} எல்லாம்வல்ல தலைவன் உலகைப் படைப்பதற்காக, அந்த முட்டையின் மேல்பகுதியை வெட்டினான்.(2) அனைத்துப் பிரிவுகளின் அறிவையும் அறிந்த தலைவன் மீண்டும் அதை எட்டு பகுதிகளாக[1] வகுந்தான்.(3) முட்டையின் பரப்பில் இருந்த ஆகாயத் துளையானது, அறம் சார்ந்த நல்லோருக்கான மிகச்சிறந்த பிரம்ம லோகமாகவும், கீழ்ப்பகுதியின் துளையானது ரஸாதலமாக மாற்றப்பட்டது.(4) தலைவன், அண்டத்திற்கான பொருள் காரணமான அந்த முட்டையை எட்டு வகைத் துளைகளுடன் படைத்தான்;(5) அதன் பிறகு அவன் துளைகளின் வடிவில் இருந்த புலன்களைத் திரள் பூதங்களாகவும், நுட்பமான பூதங்களாகவும் வகுத்தான்.(6) பல்வேறு வண்ணங்களில் இருந்த அந்த முட்டையின் பல்வேறு பொதிகள் பலவண்ண மேகங்களாக மாற்றப்பட்டன. அந்த முட்டையில் இருந்த நீர்மம் {திரவப் பொருள்} பூமியில் தங்கமானது {ஜாதரூபமானது}.(7)ஓ! மன்னா {ஜனமேஜயா}, அண்ட அழிவின்போது உலகம் பெருங்கடல்களால் மறைக்கப்பட்டிருந்ததால் மொத்த அண்டமும் அந்த முட்டையில் ஓடும் சாற்றால் மறைக்கப்பட்டிருந்தது.(8,9) முன்பு தலைவன் தேவலோகத்தைக் கட்டமைத்தபோது, படைக்கப்பட்ட முட்டையில் இருந்து வெளிவந்த நீரானது பொன்மலைகளானது.(10) திக்குகள் அனைத்தும்; வானம், நாகலோகம், பிற இடுக்குள் அனைத்தும் அந்த நீரால் மறைக்கப்பட்டது. அந்த நீர் விழுந்த இடமெங்கும் மலைகள் படைக்கப்பட்டன.(11) மலைகளால் அடர்த்தியாக நிறுவப்பட்டிருந்ததால் பூமியானது கடப்பதற்கரிதானதாக இருந்தது.(12) பல யோஜனைகளுக்கு நீண்டு கிடந்த அந்த மலைகளின் கனத்தால் பூமி நசுங்கியது.(13) நாராயணனேயான அந்தத் தெய்வீக நீரானது பூமியில் பாய்ந்து, தங்கமயமான ஆற்றலானது.(14) அந்த ஆற்றலால் தாக்கப்பட்டு, அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பூமாதேவி பாதாள லோகத்திற்குள் புகுந்தாள்[2].(15) பூமி பாதாளலோகத்திற்குள் புதைந்ததைக் கண்ட மதுசூதனன், அனைத்தின் நன்மைக்காக அவளை உயர்த்துவதில் தன் கவனத்தை அர்ப்பணித்தான்.(16)மங்கலத்தலைவன் {பகவான்}, “என் பலத்தின் கனத்தால் தாக்கப்பட்டவளும், பரிதாபத்திற்குரியவளுமான பூமாதேவியானவள், ஆதரவற்றவளாகத் தூக்கி வீசப்படும் ஒரு பசுவைப் போல ரஸாதலத்திற்குச் செல்கிறாள்” என்றான்.(17)

பூமி, “மூன்று காலடிகளையும், ஒப்பற்ற பலத்தையும் கொண்டவரும் {திரிவிக்ரமனும்}, நான்கு கரங்களைக் கொண்ட பெருஞ்சிங்கமனிதரானவரும் {நரசிங்கமானவரும்}[3], மார்பில் ஸ்ரீவத்சமெனும் மாயக்குறியைக் தரித்தவரும், சாரங்கவில், சக்கரம், வாள், கதாயுதம் ஆகியவற்றை ஏந்தியவருனுமான புருஷோத்தமனை வணங்குகிறேன்.(18) ஆத்மாவைத் தாங்குபவர் நீரே, அண்டத்தையும், பூதங்களையும் நிலைநிறுத்தி உலகைப் பாதுகாப்பவர் நீரே.(19) ஆற்றலையும், பலத்தையும் கொண்டு அனைத்தையும் ஆள்பவர் நீரே, அதன்பிறகே நான் அவற்றைத் தாங்குகிறேன்.(20) {இந்த உலகத்தை நீர் தாங்குவதாலேயே அதை என்னால் தாங்க முடிகிறது. நீர் தாங்காத எதையும் நான் தாங்கவில்லை}[4]. உம்மால் ஆதரிக்கப்படாத பூதமேதும் இல்லை.(21) ஓ! நாராயணரே, ஒவ்வொரு யுகத்திலும் உலக நன்மைக்காக, சுமையில் இருந்து என்னை விடுவிப்பவர் நீரே.(22) உமது ஆற்றலால் தாக்கப்பட்டு நான் ரஸாதலத்திற்குள் புகுந்துவிட்டேன். நான் இப்போது உமது புகலிடத்தை நாடுகிறேன் {உம்மை நான் சரணடைந்தேன்}. என்னைக் காப்பீராக.(23) தானவர்களாலும், தீய ஆன்மா படைத்த ராட்சசர்களாலும் நான் ஒடுக்கப்படும்போதெல்லாம் நித்தியரும், ஸநாதருமான உமது புகலிடத்தையே நாடுகிறேன் {உம்மையே நான் சரணடைகிறேன்}.(24) என் மனம் அச்சத்தால் பீடிக்கப்படும்போதெல்லாம், அகன்ற தோள்களைப் படைத்தவரும், காளையைப் போன்றவருமான உம்மிடமே நூறுமுறை மனத்தால் வேண்டி உமது புகலிடத்தை நாடுகிறேன்” என்றாள்.(25)மங்கலத் தலைவன் {பகவான்}, “ஓ! பூமாதேவி, அஞ்சாதே. தற்கட்டுப்பாட்டுடன் அமைதியை அனுபவிப்பாயாக. உனக்குரிய இடத்திற்கு நீ விரும்பியவாறே உன்னைக் கொண்டு வருவேன்” என்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(26)

வைசம்பாயனர் {மீண்டும் ஜனமேஜயனிடம்}, “அதன்பிறகு அந்தப் பெருந்தலைவன் தன்னுடைய தெய்வீக வடிவங்களை மனத்தில் நினைத்து, “எவ்வடிவை ஏற்று நான் பூமியை உயர்த்த வேண்டும்? {நீரில் மூழ்கியிருக்கும் பூமியை எதைக் கொண்டு நான் உயர்த்த வேண்டும்?}” என்று எண்ணினான்.(27) நீரின் அடியில் மூழ்கியிருக்கும் பூமியை உயர்த்துவது எவ்வாறு என்பதை உறுதி செய்து கொண்ட தலைவன், நீரில் விளையாடும் தன்னுடைய பன்றி வடிவை நினைத்தான்.(28) நிலத்தை நிலைநிறுத்துபவனான ஹரி, பூமியை உயர்த்துவதில் இவ்வாறே தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.(29)

வாங்மயமான {ஆயிரம் பேரொலிகளுடன் கூடிய} அந்தப் பிரம்ம வடிவம் {வராக ரூபம்} எவரும் அடைய முடியாத பத்து யோஜனைகள் அகலமும், நூறு யோஜனைகள் உயரமும் கொண்டிருந்தது.(30) அது {வராக வடிவம்} நிறத்தால் கருநீல மேகம் போல இருந்தது. அதன் குரல் மேக முழக்கத்தைப் போல இருந்தது. அஃது ஒரு பெருமலையைப் போன்ற உடல் பலத்துடனும், எரிந்து கொண்டிருக்கும் வெள்ளி தந்தங்களுடனும் இருந்தது.(31) அந்தத் தந்தங்கள் மின்னலைப் போன்றும், சூரியக் கதிர்களைப் போன்றும் ஒளிமிக்கவையாக இருந்தன. அவனது {அந்த வராகனுடைய} தோள்கள் பருத்தும், அகன்றும் இருந்தன. அவனது நடை செருக்குமிக்க வேங்கையைப் போல இருந்தது.(32) காளையின் அடையாளங்களுடன் கூடிய தோள்பட்டைகள் {காளையின் திமில்களைப் போல} நிமிர்ந்திருந்தன. ஹரி, இவ்வாறு ஒரு பெரும்பன்றியின் வடிவத்தை ஏற்று,(33) பூமியை உயர்த்துவதற்காக ரஸாதலத்திற்குள் நுழைந்தான்.

வேதங்கள் அந்தப் பன்றியின் கால்களாக இருந்தன, வேள்வியூபங்கள் அதன் பற்களாகின, வேள்வியே அதன் கைகளாகின, சித்தி {ஆன்மா} அவனது முகமானது,(34) நெருப்பு அதன் நாவானது, தர்ப்பைப் புல் அதன் மயிரானது, {ஓங்காரமான} பிரம்மமே அதன் தலையானது. பகலையும், இரவையும், கணங்களையும் பகிர்ந்தளிக்கும் அந்தப் பெரும் யோகி, வேதங்களாகவும், அவற்றின் அங்கங்களாகவும் ஸ்ருதிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தான்.(35)

{வேள்விகளின்போது ஆகுதிகளுக்குப் பயன்படுத்தப்படும் நெய் அவனது மூக்கானது. வேள்வி ஆகுதிகளையூற்றும் கரண்டிகள் அவனது நகங்களாகின. சாம வேதம் அவனது குரலானது. அவன் தர்மத்தாலும், வாய்மையாலும் நிறைந்திருந்தான். அந்த மங்கலத் தலைவன் சக்தியாலும், வீரத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தான்.(36) அவனது மூக்கு பெரும் வேள்வி பீடமாக இருந்தது. விலங்கைப் போன்ற கால்மூட்டுகளை அவன் கொண்டிருந்தான். வேள்வி அவனது வடிவமானது. உத்காதம் அவனது எல்லையானது. வேள்விச் செயல் அவனது சின்னமானது. வித்துகளும், மருந்துகளும் அவனிடம் இருந்து அடையப்படும் பேரருள்களாக இருந்தன.(37) வாயு அவனது ஆன்மாவாகவும், மந்திரங்கள் அவனது தீண்டலாகவும் இருந்தன. சோமச்சாற்றைக் குருதியாகக் கொண்ட வீரனாக அவன் இருந்தான். அவனது மணம் ஆகுதிகளுக்கு ஒப்பாக இருந்தது. தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் அளிக்கப்படும் ஆகுதிகள் அவன் செயல்படும் வேகமாக இருந்தன.(38) வேள்வியைச் செய்பவனின் உறவினர்களும் நண்பர்களும் கூடும் பிராங்வம்சம் என்ற அறையாக அவனது உடல் இருந்தது. அவன் ஒளிமிக்கவனாகத் திகழ்ந்தான். பல்வேறு அர்ப்பணிப்புகளால் அவன் வழிபடப்பட்டான். புரோஹிதருக்குக் கொடுக்கப்படும் காணிக்கையாக அவனது இதயம் இருந்தது. அவன் யோகம் பயிலும் பெரும் யோகியாக இருந்தான். வேள்விப் பொருட்கள் நிறைந்தவனாக அவன் பெரியவனாக இருந்தான்.(39) வேதங்களில் உள்ள துணைச் செயல்கள் அவனது உதடுகளை அலங்கரித்தன. அவனது உந்தி பிரவர்ஷிய செயல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மந்திர வகைகள் அவனது பாதைகளாக அமைந்தன. ரகசிய உபநிஷத்துகள் அவனது இருக்கையாகின.(40) அவன் நீரின் நிழலான தன் மனைவி சாயா தேவியுடன் இருந்தான். ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மலைச் சிகரத்தைப் போல அவன் உயரமாக இருந்தான்}[5]. உலகின் ஆசானான அவன், இவ்வாறு ஒரு வேள்விப்பன்றியின் வடிவை ஏற்று ரஸாதலத்திற்குள் நுழைந்தான்.(41)நீர்த்தாரையால் மறைக்கப்பட்டிருந்த பூமியை அவன் {ரஸாதலத்தில் கண்டான்}.(42) அந்தத் தலைவன் உலகின் நன்மைக்காக ரஸாதலத்திற்குள் நுழைந்து, அங்கே மூழ்கியிருந்த பூமியைத் தன் தந்தங்களால் உயர்த்தினான்.(43) அதன்பிறகு அந்தத் தலைவன் {வராகன்}, பூமாதேவியை அவளுக்குரிய இடத்தில் மீண்டும் நிறுவிவிட்டு லோகபாலர்களையும் நிலைநிறுத்தி அவளை விடுவித்தான். தலைவன் விஷ்ணுவால் தாங்கப்பட்டதன் விளைவால் பூமாதேவி அமைதியை அடைந்து அவனை வணங்கினாள்.(44) இவ்வாறு அந்தத் தலைவன் வேள்விப்பன்றியின் வடிவை ஏற்று, அனைவரின் நன்மைக்காகப் பூமாதேவியை உயர்த்தினான்.(45) சூரர்களில் {தேவர்களில்} முதன்மையானவனான அவன், பூமியை ரஸாதலத்தில் இருந்து உயர்த்திவிட்டு, உலகத்தின் பல்வேறு பிரிவுகளை வகுப்பதில் தன் கவனத்தை அர்ப்பணிப்பதில் தன் கண்களைக் கொண்டான்.(46,47) பெருஞ்சிறப்புவாய்ந்தவனும், ஒப்பற்ற ஆற்றல் படைத்தவனுமான அச்யுதன், ஒரு பெரும்பன்றியின் {வராக} வடிவை ஏற்று, உலக நன்மைக்காக ஒற்றைத் தந்தத்தால் பூமியை உயர்த்தினான்” என்றார் {வைசம்பாயனர்}.(48)

மலைகள், ஆறுகளின் படைப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 31-(மஹீவர்ணநம்)-பூமியில் மலைகளையும், ஆறுகளையும் படைத்த வராகன்; அதன் பிறகு தேவர்களையும் அசுரர்களையும் படைக்க நினைத்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பூமியானவள், ஒரு படகைப் போல அந்தப் பரந்த நீரில் மிதந்து கொண்டிருந்தாள். அவளுடைய உடல் கனத்தின் விளைவால் அவள் மூழ்காதிருந்தாள்.(1) அப்போது தலைவன் பூமியில் பிரிவுகளை ஏற்படுத்த நினைத்தான். பிறகு அவன் மலைகளின் உயரத்தையும், ஆறுகளின் போக்குகளையும், அவற்றின் குறைந்த அளவுகளையும் {அவை எவ்வாறு அமைய வேண்டும் என்று} நினைத்தான்.(2,3) அவன், தாமரையின் நான்கு இதழ்களைப் போலப் பூமியை நான்கு கண்டங்களாகப் பிரித்துப் பெருங்கடல்களையும் பிரித்துப் பொன்மலையான மேருவையும் {பூமியின் நடுவில்} படைத்தான்.(4)

அதன்பிறகு அவன் கிழக்குப் பக்கம் சென்ற, நூறு யோஜனைகள் அகலமும், ஆயிரம் யோஜனைகள் உயரமும் கொண்ட உதய மலையைப் படைத்தான். தன் சக்தியின் பயன்களுடனும், உதிக்கும் சூரியனைப் போன்ற பிரகாசத்துடனும் அவன் தங்கச் சிகரங்களைப் படைத்து, அதன் உடலையும், அடித்தளத்தையும் படைத்தான்.(5,6) தாமரைக் கண்ணன், தினமும் மலர்களாலும், கனிகளாலும் மறைக்கப்பட்டதும், பருத்த தண்டுகளுடன் கூடியவையுமான பொன்மரங்களை அங்கே படைத்தான்.(7) அடுத்ததாக அந்தப் பெருந்தெய்வமான விஷ்ணு, நூறு யோஜனைகள் பரப்பும், இருநூறு யோஜனைகள் உயரமும் கொண்ட சௌமனஸ {இனிய உணர்வைக் கொடுக்கும்} மலையைப் படைத்தான்.(8) அங்கே அவன் ஆயிரக்கணக்கான ரத்தினங்களையும், மாலை வேளை மேகங்களைப் போல ஒளிரும் பீடங்களையும் படைத்தான்.(9)

அதன்பிறகு அவன், நூற்றுக்கணக்கான ரத்தினங்களின் வசிப்பிடமும், ஆயிரஞ்சிகரங்களைக் கொண்டதுமான {சஹஸ்ரசிருங்க} மலையைப் படைத்தான். அடர்த்தியாக மரங்களால் மறைக்கப்பட்டிருந்த அஃது அறுபது யோஜனைகள் உயரம் கொண்டதாக இருந்தது.(10) அங்கே தேவதச்சன், உயிரினங்கள் அனைத்தாலும் துதிக்கப்படும் {ஆன்மாவுக்கான} மிகச் சிறந்த இருக்கையை நிறுவினான்.(11) அதன்பிறகு அவன் காடால் மறைக்கப்பட்ட சைசிர {பெருங்குளிர்ச்சியுடன் கூடிய} மலையைப் படைத்தான். கடக்கப்பட முடியாத அதன் குகைகள் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன.(12) அதனில் இருந்து அவன், பனியைப் பிறப்பிடமாகக் கொண்டதும், பறவைகள் நிறைந்ததும், கரைகளால் அலங்கரிக்கப்பட்டதுமான வசுதாரை[1] என்று கொண்டாடப்படும் ஆற்றைப் படைத்தான்.(13) புனித வேள்விகளால் நிறைந்த அந்த ஆறு, கிழக்குத் திசை முழுவதையும் முத்துகளாலும், சங்குகளாலும் நிறைத்தது.(14) அதன் கரைகள், தினமும் அமுதநிகர் கனிகளையும், மலர்களையும் கொடுப்பவையும், ஏராளமான நிழலை அளிப்பவையுமான மரங்கள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(15)கிழக்கில் பிரிவுகளை உண்டாக்கிய தலைவன், பாதித் தங்கம், பாதி வெள்ளியாலான அழகிய மலையைத் தெற்கில் படைத்தான்.(16) ஒரு பக்கம் சூரியப் பிரகாசத்துடனும், மறு பக்கம் சந்திரப் பிரகாசத்துடனும் கூடிய அந்தச் சிறந்த மலை அங்கே பேரழகுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(17) அந்த மலையானது, ஒரே நேரத்தில் சூரிய சந்திரக் கதிர்களுடன் கூடி இருப்பதாகத் தெரிந்தது. அதன்பிறகு அவன் அந்தத் திசையில் பானுமந்தம், வபுஷ்டமம் எனும் பெரும் மலைகளைப் படைத்தான்.(18) அந்த மலைகள் விரும்பிய பலன்களை அனைவருக்கும் வழங்கும் தெய்வீக மரங்களால் நிறைந்திருந்தன. அதன் பிறகு அவன் யானையின் வடிவில் குஞ்சர மலையைப் படைத்தான்.(19) அனைத்துப் புறங்களிலும் பொன்னறைகளைக் கொண்டிருந்த அது பல யோஜனைகள் தொலைவுக்குப் பரந்திருந்தது. அதன் பிறகு அவன் கரடியின் வடிவில் ரிஷப மலையைப் படைத்தான். அது பொன்மயமான சந்தன மரங்களால் மறைக்கப்பட்டு மலர்களுடன் புன்னகைப்பதைப் போலத் தெரிந்தது.

அதன் பிறகு அவன் மலைகளின் தலைவனும், நூறு யோஜனைகள் உயரம் கொண்டதுமான மஹேந்திர மலையைப் படைத்தான். அதில் பொன்மயமான சிகரங்களும், பூத்துக் குலுங்கும் பெரும் மரங்களும் இருந்தன. தலைவன் அந்த மலையைப் பல்வேறு ரத்தினங்களும் நிறைந்திருப்பதாகவும், சூரியனையும், சந்திரனையும் போன்று பிரகாசிப்பதாகவும் படைத்தான். அதன் பிறகு அவன், பூத்துக்குலுங்கும் மரங்கள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்ட மலய மலையைப் படைத்தான்.(23) அதன் பிறகு அவன் பாறைகளின் வலையால் மறைக்கப்பட்ட மைநாக மலையைப் படைத்தான். அவன் அந்தப் பெரும் மலையைத் தென் திசையில் நிறுவினான்.(24) அதன்பிறகு அவன் ஆயிரஞ்சிகரங்களுடன் கூடியதும், பல்வேறு மரஞ்செடிகொடிகளால் மறைக்கப்பட்டதுமான விந்திய மலையைப் படைத்தான்.(25) அதன்பிறகு அவன், பால் போன்று இனிய நீர் நிறைந்ததும், சுழல்களையும், அகன்ற கரைகளையும் கொண்டதுமான பயோதாரை என்று கொண்டாடப்படும் ஆற்றைப் படைத்தான்.(26) அந்த ஆறு தென் திசைக்கு அழகூட்டியது. நாற்றுக்கணக்கான கிளையாறுகளைக் கொண்டதும், புனிதத் தலங்கள் பலவற்றைக் கொண்டதுமான அந்தப் புனித ஆற்றைத் தென் திசையில் நிறுவிவிட்டு தலைவன் மேற்குத் திசைக்குச் சென்றான்.(27)

அங்கே {மேற்கில்} அவன் நூறு யோஜனைகள் உயரம் கொண்டதும், பொன்நிறைந்த அற்புதச் சிகரங்களைக் கொண்டதுமான ஒரு பெருமலையைப் படைத்தான்.(28) பலவண்ணங்களைக் கொண்ட பாறைகள், பொன்மயமான பாறைகள், குகைகள், சால மரங்கள், தால மரங்கள், சூரியனைப் போன்ற ஒளிரும் பிற வகை மரங்கள், தங்கத்தாலான அழகிய பீடங்கள் ஆகியவற்றால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(29) தலைவன், மேற்குப் பிரிவில் {பொன் போல் ஒளிர்பவையும், மங்கலக் காட்சிகளைத் தருபவையுமான} அறுபதாயிரம் மலைகளைப் படைத்தான்.(30) {அவன் அங்கே மேரு மலைக்கு ஒப்பானதும், ஆயிரம் நீரோடைகளைக் கொண்டதும், மங்கலமான புனிதத் தலங்களைக் கொண்டதுமான ஒரு மலையை நிறுவினான்.(31) அந்த மலை அறுபது யோஜனைகள் அகலமும், உயரமும் கொண்டதாக இருந்தது} அவன் தன்னுடைய பன்றி வடிவைச் சொல்வது போல வராகம் என்ற பெயரில் அந்த வைடூர்ய மலையை அங்கே படைத்தான்.(32) அங்கே பொன்மயமான, வெள்ளிமயமான பாறைகள் இருந்தன. அங்கே அவன் தன் சக்கரத்திற்கு ஒப்பான ஆயிரஞ்சிகரங்களைக் கொண்ட சக்ரவந்த மலையை நிலைநிறுத்தினான்.(33,34) மேலும் அவன், சங்குக்கு ஒப்பான கருநீல மரங்களால் மறைக்கப்பட்ட வெள்ளிமயமான சங்க மலையையும் அங்கே படைத்தான்.(35) அந்த மலையின் உச்சியில் தங்கத்தாலும், ரத்தினங்களாலும் உண்டாக்கப்பட்ட பாரிஜாதமெனும் பெரும் மரத்தை நிறுத்தினான்.(36) பிறகு தலைவன் வராகன், ஏராளமான நீரைக் கொண்டதும், புனிதமானதும், கொண்டாடப்படுவதுமான கிருததாரம் என்ற ஆற்றைப் படைத்தான்.(37)

இவ்வாறு மேற்கில் பல பிரிவுகளை உண்டாக்கிய அவன், வடக்கில் தங்கமயமான அழகிய மலைகள் பலவற்றை நிறுவினான். பிறகு அவன் சூரியப்பிரகாசம் கொண்டதும், வானமளவு பெரியதும், பொன்மயமானதுமான சௌம்ய மலையை அங்கே படைத்தான்.(38,39) அந்த இடம் சூரியனில்லாதிருக்கும் போதுகூடத் தன்னொளியால் ஒளியூட்டப்பட்டது.(40) சூரியனின் வெப்பத்தால் ஒளியூட்டப்படும் சந்திரலோகத்தைப் போலவே, அந்த மலையின் பிரகாசத்தால் சூரியன் ஒளிர்வதைப் போலத் தெரிந்தது.(41) நுட்பமான அறிகுறிகளாலேயே சூரியன் வெப்பத்தைக் கொடுப்பது தெரிந்தது. அதன் ஆயிரம் சிகரங்களும் பல்வேறு புனிதத்தலங்களால் நிறைந்திருந்தன. அவன் பிறகு பல்வேறு ரத்தினங்களால் நிறைந்த அஸ்த மலையைப் படைத்தான்.(42)

பிறகு அவன் அழகும், எழிலும் மிக்க மந்தர மலையையும், மலர்களால் மறைக்கப்பட்ட கந்தமாதன மலையையும் படைத்தான்.(43) கந்தமாதன மலையின் உச்சியில் அவன் பொன்மயமானதும், அற்புதம் நிறைந்ததுமான ஜம்பு ஆற்றைப் படைத்தான்.(44) அதன் பிறகு அவன், கிரிம்சஷிகரம், புஷ்கரம், ஷுப்ரம், பாண்டுரம், மேக வண்ணம் கொண்டதும், மலைகளில் முதன்மையானதுமான கைலாசம்,(45) மலைகளின் தலைவனும், தெய்வீகத் தாதுக்களைக் கொண்டதுமான இமயம் ஆகிய மலைகளைப் படைத்தான்.(46) பன்றியின் வடிவை ஏற்றத் தலைவன், ஆயிரம் வாய்களைக் கொண்டதும், அறங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டதும், தெய்வீகமானதுமான மதுதாரை ஆற்றை வடக்குத் திசையில் படைத்தான்.(47) அந்த மலைகள் அனைத்தும் சிறகுகள் படைத்தவையாகவும், விரும்பிய தோற்றங்களை ஏற்க வல்லவையாகவும் திகழ்ந்தன.(48)

அவை அனைத்தையும் பல வண்ணங்களைக் கொண்டவையாக அமைத்த தலைவன் பரமேஷ்டி, இவ்வாறு பூமியில் பல பிரிவுகளை ஏற்படுத்தி, அடுத்ததாகத் தேவர்களையும் அசுரர்களையும் படைக்க நினைத்தான்.(49) உலகத்தை அழிப்பவனும், குருதி சிவப்புக் கண்களைக் கொண்டவனுமான அந்தத் தெய்வீகன், மனித குலத்தின் நன்மைக்காக அனைத்துப் பக்கங்களிலும் அழகிய மலைகள் பலவற்றையும், நீர் நிறைந்த புனித ஆறுகள் பலவற்றையும் படைத்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(50)

வேதங்கள் படைப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 32-(ஹிரண்யகர்பாத்யுத்பத்திகதநம்)-ஹிரண்யகர்பனின் பிறப்பு; காயத்ரி, சாவித்ரி, வேதங்கள் படைக்கப்பட்டது; பிரம்மனின் சந்ததி; தக்ஷன், கசியபர், மனு, தர்மன், சந்திரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இவ்வாறு அண்டத்தைப் படைக்க விரும்பிய தலைவன் சிந்திக்கத் தொடங்கினான். இவ்வாறு அவன் தியானித்துக் கொண்டிருந்த போது அவனுடைய வாயில் இருந்து ஒரு புருஷன் வெளியே வந்தான்.(1)

தலைவனுக்கு முன் வந்த அந்தப் புருஷன், “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அண்டத்தை ஆளும் தலைவன், புன்னகைத்தவாறே,(2) “உன்னை {ஆன்மாவை} இரண்டாகப் பிரித்துக் கொள்வாயாக” என்றான். இதைச் சொல்லிவிட்டு அந்தத் தலைவன் மறைந்தான். ஓ! பாரதா, அந்தத் தலைவன் உடலால் மறைந்தபோது,(3) விளக்கு அணைந்ததைப் போல அவனது இயக்கத்திற்கான எந்தத் தடமும் காணப்படவில்லை. வேதங்களைப் பாடிய ஹிரண்யகர்பன் {அந்தப் புருஷன்}, அவனால் சொல்லப்பட்ட சொற்களை அப்போது தியானிக்கத் தொடங்கினான்.(4) {அந்தப் புருஷன் வேத மந்திரங்களின் புனித உரைகளில் பொன்மயமான கருவறையில் கருத்தரிக்கப்பட்டவன் {ஹிரண்யகர்பன்} என்று புகழப்படுபவன் ஆவான்}.முன்னர் அண்டத்தின் தலைவன் மட்டுமே ஒரே குடிமுதல்வனாக {பிரஜாபதியாக} இருந்ததால் அவன் மட்டுமே வேள்விக் காணிக்கைகளுக்கு உரிமை கொண்டவனாக இருந்தான்.(5)

குடிமுதல்வன், “அந்தப் பெரியவன் {பரமாத்மா}, என்னை {என் ஆன்மாவை} இரண்டாகப் பிரியும்படி கேட்டுக் கொண்டான் என்றாலும், என்னை இரண்டாகப் பிரித்துக் கொள்வதில் எனக்குப் பெரும் ஐயம் ஏழுகிறது.(6) குடிமுதல்வன் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது “ஓம்” என்ற சொல் ஓதப்பட்டது; அதன் ஒலியால் பூமியும், வானமும், சொர்க்கமும் நிறைந்திருந்தன.(7) அந்தப் பிரஜாபதியின் மனம் ஓம் என்பதைப் பயின்று கொண்டிருந்தபோது, அந்தத் தேவதேவனின் இதயத்தில் இருந்து மீண்டும் வஷட்காரம் எழுந்தது.(8) அதன் பிறகு, பூமி, வானம், சொர்க்கம் ஆகியவற்றின் ஆன்மாவாக அமைந்த பூர், புவ, ஸுவ என்ற {ஏழு உலகங்களின் பெயர்களைச் சார்ந்த} முதல் மூன்று பெரும் மந்திரங்கள் எழுந்தன.(9) அதன் பிறகு சந்தங்களின் பிறப்பிடமானதும், இருபத்து நான்கு சொற்களால் அமைந்ததுமான புனித காயத்திரி உண்டாக்கப்பட்டது. அந்தத் தெய்வீக மந்திரத்தை முழுமையாக நினைவு கூர்ந்து சாவித்ரியைப் படைத்தான்.(10) அதன்பிறகு, அந்தத் தலைவன், ரிக், சாம, அதர்வண, யஜுர் என்ற நான்கு வேதங்களையும், அறச்சடங்குகளையும் படைத்தான்.(11)

அதன்பிறகு அவனது மனத்திலிருந்து ஸநர், ஸநகர், ஸநாதனர், வரதர், ஸநந்தனர் ஆகியோர் வெளிப்பட்டனர்.(12) பிறகு எல்லாம் அறிந்த ஸநத்குமாரரும் வெளிப்பட்டார். ருத்திரனுடன் சேர்த்து இந்த ஆறு ரிஷிகளும் பிரம்மனின் மனத்தில் பிறந்த மகன்களாவர்.(13) யோக தந்திரத்தில் இந்த ஆறு ரிஷிகளையும், பிரம்மனையும், கபிலரையும் உயர்ந்தவர்களாக யதிகளும், பிராமணர்களும் சொல்கின்றனர்.(14) சுயம்புவான அந்தத் தேவன் {பிரம்மன் / ஹிரண்யகர்ப்பன்} அதன்பிறகு தன் மனத்தில் இருந்து பிறந்த மரீசி, அத்ரி, புலஸ்த்யர், புலஹர், கிரது, பிருகு, அங்கிரஸ், {பிரஜாபதியான} மனு ஆகிய எட்டு மகன்களையும்,(15) அனைத்து உயிரினங்களின் பித்ருக்கள், தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் ஆகியோரையும், {மஹாரிஷிகள் பிறரையும்} படைத்தான்.(16) ஆயிரம் யுகங்கள் முடிந்து, நிஷேஷ கல்பத்தின் முடிவில் இவர்கள் அனைவரும், இவர்களின் சந்ததிகளும் உலகில் இருந்து மறைகின்றனர்.(17) சந்ததிகளை உண்டாக்கவல்ல இந்தத் தெய்வீக யோகிகள் ஆயிரம் வருடங்கள் கழிந்ததும், மீண்டும் தங்கள் பிறவியை அடைகிறார்கள்.(18) ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒரு குறிப்பிட்ட பணிக்காகத் தேவர்கள் தங்கள் பெயர்களையும், பிறவிகளையும் மாற்றிக் கொள்கிறார்கள்.(19) பிரஜாபதியின் வலது கை கட்டைவிரலில் இருந்து தெய்வீகனான தக்ஷன் பிறந்தான். அவனது மனைவி பிரம்மனின் இடது கை கட்டைவிரலில் இருந்து பிறந்தாள்[1].(20) தக்ஷன், உலகத்தின் அன்னையராக  கொண்டாடப்படும் மகள்களை அவனது மனைவியிடம் பெற்றான். ஓ! மன்னா, அவர்களின் சந்ததியால் மொத்த உலகமும் நிறைந்தது.(21)மனத்தில் சந்ததியைப் பெருக்க நினைத்த தக்ஷன், தன் மகள்களான அதிதி, திதி, காலை, அநாயு, ஸிம்ஹிகை, முனி, பிராதை, குரோதை, ஸுரபி, வினதை, ஸுரஸை, தனு, கத்ரு ஆகியோரை {13 மகள்களை}கசியபருக்கு {திருமணம் செய்து} கொடுத்தான்.(22,23) மேலும் தக்ஷன், தன் மகள்களான அருந்ததி, வஸு, யாமீ, லம்பை, பானு, மருத்வதி, ஸங்கல்பை, ஸாத்யை, விஷ்வை ஆகிய பத்து {10} கன்னிகையரை பிரம்மனின் மகனான மனுவுக்கு {திருமணம் செய்து கொடுத்தான்.(24) பிறகு அவன், குற்றங்குறையற்ற அங்கங்களையும், தாமரை போன்ற கண்களையும், முழு நிலவைப் போன்ற முகங்களையும் கொண்ட தன் மகள்களான கீர்த்தி {புகழ்}, லக்ஷ்மி {செல்வம்}, திருதி, புஷ்டி, புத்தி, மேதை, கிரியை, மதி, லஜ்ஜை {நாணம்} ஆகிய பத்து {10} கன்னிகையரை தர்மனுக்கு {திருமணம் செய்து} கொடுத்தான்.(25,26) அதன் பிறகு அத்ரியின் மகனான ஆத்ரேயன் {சசி / சந்திரன்} நீர் நிறைந்தவனாக {நீரின் ஆன்மாவாகப்} பிறந்தான். கோள்களின் தலைவனும், இருளை விலக்குபவனுமான அவன் ஆயிரங்கதிர்களைக் கொண்டவனாக இருந்தான்.(27,28) தக்ஷப்ரசேதஸ் தன் மகள்களான ரோகிணி முதலிய இருபத்தேழு {27} கன்னிகையரை அவனுக்கு {சந்திரனுக்குக்} கொடுத்தான்.(29)

கசியபர், மனு, தர்மன், சசி {சந்திரன்} ஆகியோரின் சந்ததியை உரைக்கிறேன் கேட்பாயாக.

கசியபர் அதிதியிடம் அர்யமான், வருணன், மித்ரன், பூஷன், தாதா, புரந்தரன்,(30) துவஷ்டா, பகன், அம்ஷன், சவிதன், பர்ஜன்யன் என்ற தேவர்களைப் பெற்றார்.

கசியபர் திதியிடம் இரண்டு மகன்களைப் பெற்றார் என நாம் கேள்விப்படுகிறோம். அவர்கள் ஹிரண்யகசிபுவும், சக்திமிக்க ஹரிண்யாக்ஷனும் ஆவர். அவர்கள் இருவரும் தவத்தில் கசியபரைப் போலவே ஒப்பற்ற ஆற்றலுடன் திகழ்ந்தனர்.(31,32) ஹிரண்யகசிபு, பெருஞ்சக்திவாய்ந்த ஐந்து மகன்களைப் பெற்றான். அவர்கள் பிரஹலாதன், அனுவலம், ஸம்லாதன், அனுராதன் ஆகியோராவர்(33). {அவர்களில் பிரஹலாதன் மூத்த மகன், அநுராதன் ஐந்தாவது மகன்}.(34)பிரஹலாதனுக்கு, விரோசனன், ஜம்பன், குஜம்பன் {ஸுஜம்பன்} என்ற பெயரில் பெருஞ்சக்திவாய்ந்த மூன்று மகன்கள் இருந்தனர்.(35) விரோசனனுக்குப் பலி என்றொரு மகன் இருந்தான், பலிக்கு பாணன் என்ற ஒரு மகன் இருந்தான். பாணனின் மகன், பகை நகரங்களை வெல்பவனான இந்திரதமனனாவான்.(36)

உலகில் பெரும் அசுரர்களாகக் கொண்டாடப்பட்ட எண்ணற்ற அசுரர்களைத் தனு பெற்றாள். அவர்களில் முதலில் பிறந்த விப்ரசித்தி மன்னனானான்.(37)

குரோதை, குரோதவசர்கள் என்றழைக்கப்பட்ட பல மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் பெற்றிருந்தாள். அவர்கள் அனைவரும் பெரும் பயங்கரர்களாகவும், இரக்கமற்றவர்களாகவும் இருந்தனர்.(38)

சிம்ஹிகை, சூரியனையும், சந்திரனையும் பீடித்த ராகுவைப் பெற்றாள். அவன் சந்திரனை விழுங்கி, சூரியனை அழிக்கிறான்.(39)

காலையின் பிள்ளைகள் காலனைப் போன்றவர்களாகவும், பெரும் பயங்கரர்களாகவும், கருநீல மேகங்களைப் போலப் பிரகாசமிக்கவர்களாகவும், சூரியனைப் போன்று ஒளிரும் கண்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(40)

கத்ருவுக்கு இருந்த மகன்கள் பலரில் ஆயிரம் தலைகளைக் கொண்ட சேஷன், வாசுகி, தக்ஷகன் ஆகியோர் ஏற்றமடைந்தனர்.(41) அவர்கள் அனைவரும் வேதங்களை அறிந்தவர்களாகவும், உயிரினங்களுக்கு நன்மை செய்பவர்களாகவும், வரங்களை அளிப்பவர்களாகவும், விரும்பிய வடிவங்களை ஏற்பவர்களாகவும் இருந்தனர்.(42)

வினதையின் மகன்கள் தார்க்ஷ்யன், அரிஷ்டநேமி, பெருஞ்சக்திவாய்ந்த கருடன், அருணன், அருணி ஆகியோராவர்.

{பெரும்பேறு பெற்றவளான} பிராதை, தெய்வீக முனிவர்களாலும் வழிபடப்பட்டவர்களும், {மங்கலக் குறிகள் அனைத்தையும் கொண்டவர்களுமான} எட்டு அழகிய அப்சரஸ்களைப் பெற்றாள். அவர்கள் அநவத்யை, அநூகை, அநூநை, அருணை, பிரியை, அநூகை, ஸுபகை, பாசி ஆகியோராவர்.(43,44) அலம்புஷை, மிஷ்ரகேஷி, புண்டரீகை, திலோத்தமை, ஸுரூபை, லக்ஷ்மணை, க்ஷேமை, ரம்பை, மநோரமை,(45) அஸிதை, ஸுபாஹை, ஸுவிருத்தை, ஸுமுகீ, ஸுப்ரியை, ஸுகந்தை, ஸுரஸை, பிரமாதினி,(46) காஷ்யை, ஷாரத்வதி ஆகியோர் மௌநேய அப்சரஸ்கள் என்று கொண்டாடப்படுபவர்கள். விஷ்வாவஸு, பரண்யன் ஆகியோர் கந்தர்வர்களாக அறியப்பட்டனர்;(47) மேனகை, ஸஹஜன்யை, பர்ணிகை, புஞ்ஜிகஸ்தலை, கிருதஸ்தலை, கிருதாசி, விஷ்வாசி, ஊர்வசி,(48) அநும்லோசை, பிரம்லோசை, ஆகிய பத்து பேரும் மநோவதியும் கொண்டாடப்பட்ட அப்சரஸ்களாக இருந்தனர்.(49)

பிராமணர்கள், பசுக்கள், ருத்திரர்கள் ஆகியோராலும், மொத்த உலகத்தாலும் விரும்பப்பட்ட அமுதம் பிரஜாபதியின் தீர்மானத்தினால் உண்டானது. அவர்கள் அனைவரும் சுரபியின் சந்ததியினர் என்று புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.(50)

இதுவரை நான் கசியபரின் சந்ததியைச் சொன்னேன், இனி நான் மனுவின் சந்ததியைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(51) ஓ! பாவமற்றவனே நான் அவற்றைச் சுருக்கமாகச் சொல்லப் போகிறேன். விஷ்வை விஷ்வதேவர்களையும் {தேவர்கள் அனைவரையும்}, சாத்யை சாத்யர்களையும் பெற்றனர்.(52) மருத்வதி மருத்துகளைப் பெற்றாள், வஸுவுக்கு வஸுக்கள் பிறந்தனர். பானுவின் மகன்கள் பானுக்களாகவும், முஹூர்த்தையின் மகன்கள் முஹூர்த்தஜர்களாகவும் இருந்தனர்.(53) லம்பை கோஷனைப் பெற்றாள். ஜாமி, நாகவீதியையும், அருந்ததி உலகப் பொருட்கள் அனைத்தையும் பெற்றனர்.(54) ஸங்கல்பை ஸங்கல்பனைப் பெற்றாள், லக்ஷ்மி தர்மனின் மகனும், உலகத்துக்கு மிகவும் பிடித்தமானவனுமான காமனைப் பெற்றாள்.(55) காமன் தன் மனைவியான ரதியிடம், யஷன், ஹர்ஷன் என்ற இரு மகன்களைப் பெற்றான். சோமன் தன் மனைவியான ரோஹிணியிடம் பெருந்தலைவன் வர்சஸைப் பெற்றான்.(56) அவனே {வர்சஸே} சந்திரன் எழுந்தவுடனே அவனைப் பிரகாசிக்கச் செய்கிறான். {ஊர்வசி காதலில் விழுந்த புரூரவஸ் தலைவன் வர்சஸுக்குப் பிறந்தவனாவான்.(57) இவ்வாறே ஆயிரக்கணக்கான மனைவிமாரும், மகன்களும் பிறந்தனர். இதுவே உலகத்தின் {முன்னேற்றத்திற்கும், நிர்வாகத்திற்கும்} வேராகத் திகழ்கிறது.(58) தலைவன் பிரஜாபதி உயிரினங்களின் தகுதிகளுக்குத் தக்கபடி அவற்றின் மத்தியில் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தான்.(59) அதன் பிறகு தலைவன் பத்துத் திக்குகளையும், பூமி, ரிஷிகள், பெருங்கடல்கள், பறவைகள், மரங்கள், மூலிகைகள், நாகங்கள், ஆறுகள், தேவர்கள், அசுரர்கள், வானுலாவிகள், வேள்விகள், மலைகளை ஆகியவற்றையும் படைத்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(60)

அதிகாரப் பகிர்வு | பவிஷ்ய பர்வம் பகுதி – 33-(லோகாநாமாதிபத்யவ்யவஸ்தாபநம்)-அண்டத்தின் அரசுரிமையில் அமர்த்தப்பட்ட இந்திரன்; பல தேவர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படல்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! பாரதா, தலைவன் {பிரம்மன்}, சூரியனைப் போன்று பிரகாசம் கொண்ட சக்ரனை {இந்திரனை} மூவுலகங்களுக்கும், தேவர்களுக்கும் மன்னனாக நியமித்தான்.(1) வஜ்ரதாரியும், கவசம் தரித்தவனுமான ஜிஷ்ணுவை அதிதி பெற்றெடுத்தாள். நுண்ணறிவுமிக்கவனும், ஸ்மிருதிகளின் புரவலனுமான அவன் அத்வர்யுக்களால் துதிக்கப்படுகிறான்.(2) தலைவன் சக்ரன், அதிதிக்குப் பிறந்ததும் குசப்புல்லால் மறைக்கப்பட்டான் என்பதால் அந்தத் தேவர்களின் மன்னன் கௌசிகன் என்ற பெயரையும் பெற்றான்.(3) பிரம்மன், ஆயிரங்கண் புரந்தரனை மேலான தலைவனாக நியமித்துவிட்டுப் பிற அரசுகளைப் படிப்படியாகப் பகிர்ந்தளித்தான்.(4)

அவன் {பிரம்மன்} சோமனை {சந்திரனை}, யஜ்ஞங்கள், தவம், நட்சத்திரங்கள், கோள்கள், இருபிறப்பாளர்கள், மூலிகைகள் ஆகியவற்றுக்கு மன்னனாக நிறுவினான்.(5) அவன் தக்ஷனைக் குடிமுதல்வர்களின் {பிரஜாபதிகளின்} மன்னனாகவும், வருணனை நீர்நிலைகளின் தலைவனாகவும், அனைத்தையும் அழிப்பவனான வைஷ்வாநரனை பித்ருக்களின் மன்னனாகவும்,(6) வாயுவை மணம், உடலற்ற உயிரினங்கள், ஒலி, ஆகாயம் ஆகியவற்றுக்குத் தலைவனாகவும் நியமித்தான்.(7)

பூதங்கள், பிசாசங்கள், மிருத்யு, பசுக்கள், பேரிடர்கள் {உத்பாதங்கள்}, தீய சகுனங்கள் {கிரஹரோகணங்கள்}, நோய்கள் {வியாதி}, ஏராளமான மழை,(8) பிற இடர்கள், தீய ஆவிகள் ஆகியவற்றின் அரசுரிமையை மஹாதேவனிடம் கொடுத்தான். யக்ஷர்கள், ராட்சசர்கள், குஹ்யர்கள், செல்வகள்,(9) ரத்தினங்கள், செல்வம் ஆகியவற்றின் மன்னனாக அவன் வைஷ்ரவணனை {குபேரனை} நியமித்தான். பற்களைக் கொண்ட விலங்குகள் அனைத்திற்கும் அவன் சேஷனை மன்னனாக நியமித்தான், வாசுகியை நாகர்களுக்கும்,(10) தக்ஷகனை பாம்புகளுக்கும் மன்னர்களாக நியமித்தான். அவன், ஆதித்யர்களில் இளையவனான பர்ஜன்யனை பெருங்கடல்கள், ஆறுகள், மேகங்கள், மழை ஆகியவற்றுக்குத் தலைவனாக நிறுவினான்[1].(11) அவன் சித்திரரதனை கந்தர்வர்களுக்கும், காமனை அப்சரஸ்களுக்கும் மன்னனாக நியமித்தான்.(12) மஹாதேவனின் வாகனமான காளையை {நந்தி தேவனை} அவன் நான்கு கால் விலங்குகள் அனைத்தின் மன்னனாக நியமித்தான்.(13)பெரும் பிரகாசத்தைக் கொண்ட ஹிரண்யாக்ஷன் தைத்தியர்களின் மன்னனாகவும், ஹிரண்யகசிபு இளவரசனாகவும் {யுவராஜனாகவும்} நியமிக்கப்பட்டனர்[2].(14) பெருஞ்சக்திவாய்ந்தவனும், முதலில் பிறந்தவனுமான விப்ரசித்தி தானவர்களுக்கும், அசுரர்களுக்கும் மன்னனாக நியமிக்கப்பட்டான்.[3] மஹாகாலன், பூதகணங்களுக்கும், காலகேயர்களுக்கும் தலைவனாக நியமிக்கப்பட்டான். விருத்திரன், துவஷ்டாவின் மனைவியான அனாயுஷையின் மகன்களுக்கு மன்னனாக்கப்பட்டான்.(15) மேலும் அவன், சிம்ஹிகையின் மகனும், பேரசுரனுமான ராஹுவை, தீய சகுனங்களுக்கும், நிமித்தங்களுக்கும் மன்னனாக்கினான்.(16)ஓ! பாரதா, பிறகு அவன் பருவகாலங்கள் {ருது}, மாதங்கள், யுகங்கள், பக்ஷங்கள், பகல்கள், இரவுகள், திதிகள், பர்வங்கள்,(17) கலைகள், காஷ்டைகள், முஹூர்த்தங்கள், இரண்டு அயணங்கள், யோக சாத்திரம், கணிதம் ஆகியவற்றுக்கு ஸம்வத்ஸரனை (வருடத்தை) மன்னனாக நியமித்தான்.(18) பெருஞ்சக்திவாய்ந்தவனும், அழகிய சிறகுகளைப் படைத்தவனுமான {சுபர்ணனுமான} கருடன், பறவைகள் அனைத்திற்கும், நெடுந்தொலைவுகளைப் பார்ப்பவர்களுக்கும், பாம்புகள் அனைத்திற்கும் {போகிகளுக்கும்} மன்னனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.(19) கருடனின் அண்ணனும், பூஜைகளில் பயன்படுத்தப்படும் செம்மலர்களைப் போன்று ஒளிபொருந்தியவனுமான அருணன், யோகங்கள் அனைத்திற்கும், சாத்யர்களுக்கும் மன்னனாக்கப்பட்டான்.(20)

உயிரினங்களின் தலைவரான கசியபரின் மகனும், பெரும் விரதனை {கிழக்கின் திக்பாலனான} வாசவன் {இந்திரன்} கிழக்குத் திசையின் மன்னனாக நியமித்தான்.(21) நீதி வழங்குபவனும், தலைவன் ஆதித்யனின் மகனும், பெருஞ்சிறப்புவாய்ந்தவனுமான யமன், மஹேந்திரனால் {இந்திரனால்} தெற்கின் மன்னனாக நியமிக்கப்பட்டான்.(22) கசியபருக்குப் பிறந்த மகனும், நீருக்கடியில் இருப்பவனும், அம்புராஜன் என்ற பெயரில் கொண்டாடப்படுபன் {வருணன்}, மேற்கின் மன்னனானான்.(23) புலஸ்தியரின் மகனும், மஹேந்திரனையே போன்றவனுமான குபேரன், வடக்கின் மன்னனாக நியமிக்கப்பட்டான்[4].(24)அண்டத்தைப் படைத்த சுயம்புவானவன், இவ்வாறு அதன் அரசைப் பிரித்து, அவர்களுக்குப் பல்வேறு தெய்வீக உலகங்களையும் ஒதுக்கினான்.(25). சிலரின் உலகங்கள் சூரியனைப் போன்று பிரகாசமிக்கதாகவும், சிலருடையது நெருப்பைப் போன்றதாகவும், சிலருடையது மின்னலைப் போன்றதாகவும், சிலருடையது சந்திரனைப் போன்றதாகவும் இருந்தது.(26) பல்வேறு வண்ணங்களில் இருந்த அந்த உலகங்கள் அனைத்தும், விரும்பியபடி உலவவல்லவையாகவும், பல நூறு யோஜனைகள் பரப்பைக் கொண்டவையாகவும், நல்லோரால் எளிதில் அடையத்தக்கவையாகவும், பாவிகளால் அடையப்படுவதற்கு அரிதானவையாகவும் இருந்தன.(27) பார்ப்பதற்கு அழகாகவும், நட்சத்திரங்களைப் போன்ற ஒளியுடனும் இருந்த உலகங்கள் நல்லோருக்கானவையாக இருந்தன.(28) மிகச் சிறந்த கொடைகளுடன் வேள்விகளைச் செய்பவர்கள், தங்கள் மனைவிமாருக்கு உண்மையாக இருப்பவர்கள், பொறுமைசாலிகள், எளியவர்கள், வாய்மை நிறைந்தவர்கள்,(29) வறியோரிடம் அன்பு காட்டும் பிராமணர்கள், பேராசையில் இருந்தும், ரஜஸ் குணத்தில் இருந்தும் விடுபட்டவர்கள் ஆகியோரும், தவசிகளும், முனிவர்களும் அந்த உலகங்களுக்குச் செல்வார்கள்.(30)

உலகின் பெரும்பாட்டனான பிரஜாபதி {பிரம்மன்} இவ்வாறு தன் மகன்களை ஈடுபடுத்திவிட்டு புஷ்கரை என்றழைக்கப்படும் பிரம்மலோகத்திற்குச் சென்றான்.(31) சுயம்புவால் பாதுகாப்புப் பணிகள் ஒப்படைக்கப்பட்ட தேவர்கள், மஹேந்திரனால் நன்றாகக் கவனிக்கப்பட்டுத் தங்கள் தங்களுக்குரிய உலகங்களில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.(32) தேவர்கள் அனைவரும், பாதுகாப்புப் பணியில் முறையாக ஈடுபடுத்தப்பட்டும், சக்ரனால் தலைமை தாங்கப்பட்டும், வேள்விக் காணிக்கைகளில் தங்கள் பங்கையும், சொர்க்கத்தையும், புகழையும், இன்பத்தையும் அனுபவித்தனர்” என்றார் {வைசம்பாயனர்}.(33)

தேவர்களுடன் போரிட அசுரர்களை ஏவிய மலைகள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 34-தேவாஸுரயுத்தோத்யோக꞉ தத்யுத்தவர்ணநம் ச)-தேவர்களிடம் அசுரர்கள் கோபம் கொள்ளத் தூண்டிய மலைகள்; ஹிரண்யாக்ஷனின் தலைமையிலான அசுரர்கள் தேவர்களை முறியடித்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பூமியை ஆதரிக்கும் {சிறகு படைத்த} மலைகள் ஒரு காலத்தில் தலைவனின் மாயைக்கு வசப்பட்டு அதை {பூமியைக்} கைவிட்டன.(1) அதன்பிறகு கிழக்குத் திசைக்கு வந்து, தடாகத்தில் மூழ்கும் யானைகளைப் போல ஹிரண்யாக்ஷனால் ஆளப்படும் அசுரர்களின் வசிப்பிடத்தில் விழுந்தன.(2)

அதன் பிறகு அவை, தேவலோகத்தின் அரசுரிமை குறித்து அசுரர்களிடம் கேட்கும் வகையில், “உங்களுக்குப் பின் பிறந்தவர்களாக இருப்பினும், தேவர்கள் அரசுரிமையை அடைந்திருக்கின்றனர்; முதலில் பிறந்தவர்களாக இருப்பினும், நீங்கள் மன்னர்களாகவில்லை” என்றன. அசுரர்கள் மிகச்சிறந்த ஆயத்தங்களைச் செய்தனர்.(3)

அவர்கள் பூமியை அடைவதில் தங்கள் மனத்தை நிலைநிறுத்தி, தங்கள் ஒப்பற்ற தீய புத்தியைப் பயன்படுத்தினர். பயங்கர ஆற்றல் படைத்த அசுரர்கள்,(4) சக்கரம், வஜ்ரம், வாள், புசுண்டி, வில், கயிறு, பராசம், சக்தி, முசலம், கதாயுதம், தண்டம் போன்ற பல்வேறு ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர்.(5) கவசம்பூண்ட சிலர் மதங்கொண்ட யானைகளைச் செலுத்தினர். பெருந்தேர்வீரர்கள் சிலர், குதிரைகளால் இழுக்கப்படும் தேர்களைச் செலுத்தினர். சிலர் குதிரைகளைச் செலுத்தினர்,(6) வேறு சிலர், தங்கள் கரங்களின் பலத்தைச் சார்ந்து ஒட்டகங்களை {காண்டமிருகங்களையும்} செலுத்தினர், சிலர் எறுமைகளையும், சிலர் கழுதைகளையும் செலுத்தினர், வேறு சிலர் காலாட்களாகச் சென்றனர்.(7) போரில் விருப்பம் கொண்ட படைவீரர்கள், ஹிரண்யாக்ஷனைச் சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சியாகப் புறப்பட்டுச் சென்றனர்.(8)

போருக்காகத் தைத்தியர்களால் செய்யப்படும் ஆயத்தங்களைக் கேள்விப்பட்ட புரந்தரனின் தலைமையிலான தேவர்களும் மிகச் சிறந்த ஏற்பாடுகளைச் செய்தனர்.(9) அவர்கள் {தேவர்கள்}, தங்கள் நால்வகைப் படையால் சூழப்பட்டவர்களாகக் கவசங்களும், விரலுறைகளும் தரித்துக் கொண்டு, அம்பறாதூணிகளையும், விற்களையும் எடுத்துக் கொண்டனர்.(10) படைக்கு மத்தியில் கடுமையான ஆயுதங்களைத் தரித்து நின்ற தேவர்கள், ஐராவதத்தில் அமர்ந்திருந்த புரந்தரனைப் பின்தொடர்ந்த சென்றனர்.(11)

அப்போது ஹிரண்யாக்ஷன், பேரிகைகளின் முழக்கம், எக்காள ஒலி ஆகியவற்றால் தூண்டப்பட்டுத் தேவர்களின் மன்னனுடன் {இந்திரனுடன்} போரிட்டான்.(12) அவன் கோடரிகள் {பரசுகள்}, {நிஸ்திரிம்சங்கள்}, கதாயுதங்கள், தோமரங்கள், ஷக்திகள், முஸலங்கள், பட்டிசங்கள் ஆகியவற்றால் வாசவனை மறைத்தான்.(13) {அசுரர்கள் பிறர், பெருஞ்சக்திவாய்ந்தவையும், பயங்கர வடிவங்களையும், வேகத்தையும் கொண்டவையுமான கணைகளின் மழையைப் பொழிந்தனர்}.(14) எஞ்சிய தைத்தியர்கள் கூரிய கோடரிகள், இரும்பு வாள்கள், கதாயுதங்கள், க்ஷேபணிகள், முத்கரங்கள் ஆகியவற்றையும்,(15) பெரும் கற்கள், மலைகளைப் போன்று பெரிய கற்பாறைகள், சதாக்னிகள் ஆகியவற்றையும்,(16) {இயந்திரங்களில் இருந்து ஏவப்படும்} பிற ஆயுதங்களையும் கொண்டு வாசவனையும், பிற தேவர்களையும் தாக்கினர்.(17)

புகைபோன்ற தலைமயிரையும், மஞ்சள் தாடியையும் கொண்டவனும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்தவனும், மாலை நேர மேகங்களைப் போன்ற கரிய நிறம் கொண்டவனும், மிகச் சிறந்த மகுடத்தையும்,(18) கருநீல ஆடைகளையும், மஞ்சள் ஆடைகளையும் தரித்தவனும், {தந்தங்களைப் போன்ற கூரிய பற்களைக் கொண்டவனும்}, கால்மூட்டுகள் வரை கைகள் நீண்டவனும், வைடூரியங்களாலான ஆபரணங்களை அணிந்தவனுமான ஹிரண்யாக்ஷன்,(19,20) அண்ட அழிவின் போது தோன்றும் பயங்கரமிக்கக் காலனைப் போல அசுரர்களின் படைக்கு முன்பு நின்று கொண்டிருப்பதைக் கண்ட வாசவனும், தேவர்கள் அனைவரும் கவலையுற்றனர்.(21)

விற்களையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு, போர்க்களத்தில் தங்களுக்கு முன்னால் நிற்கும் புரந்தரனுடன் இருந்த தேவர்கள், அசைந்து வரும் மகேந்திர மலையைப் போல முன்னேறும் ஹிரண்யாக்ஷனைக் கண்டதும் கவலையால் நிறைந்தனர்.(22) {தேவர்கள் போர்க்களத்தில் ஆயிரங்கண்களைக் கொண்ட இந்திரனைத் தங்கள் முன் கொண்டிருந்தனர்}. பொற்கவசங்களின் ஒளியால் ஒளியூட்டப்பட்ட அந்தத் தைத்திய படை,(23) விண்மீன்கள் பொருந்திய கூதிர்கால வானத்தைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் ஒருவரையொருவர் வீழ்த்தினர்;(24) சிலர் துவந்தத்தில் இருந்து விலகி, தங்கள் கரங்கள் நொறுங்கி நின்றனர். சிலரின் அங்கங்கள் கதாயுதங்களால் சிதைந்திருந்தன, சிலர் கணைகளின் காயத்தை மார்பில் தாங்கியிருந்தனர்.(25) சிலர் வீழ்ந்தனர், சிலர் சுழற்றி வீசப்பட்டனர். சிலர் தேர்களை நொறுக்கினர், சிலர் அவற்றால் {தேர்களால்} நசுக்கப்பட்டனர்.(26) போரின் நெருக்கடியில் அசையமுடியாமல் சில தேர்கள் நின்றன. கெடுநாளைப் போன்றதும், தானவர்களைப் போன்ற பெரும் மேகங்களாலும், தெய்வீக ஆயுதங்களின் வடிவில் இருந்த மின்னல்களாலும் மறைக்கப்பட்டதுமான அந்தப் போர், இரு படைகளாலும் ஏவப்பட்ட கணைகளின் மழையில் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது.(27)

பெருஞ்சக்திவாய்ந்த திதியின் மகனும், பேரொளி படைத்தவனுமான ஹரிண்யாக்ஷன் கோபத்தால் தூண்டப்பட்டு, பர்வத்தின் போது {அமாவாசையில் / பௌர்ணமியில்} பெருகும் பெருங்கடலைப் போலத் தன்னைப் பெருக்கிக் கொண்டான்.(28) கோபத்தால் தூண்டப்பட்ட ஹிரண்யாக்ஷனின் வாயில் இருந்து எரியும் கங்குகள் வெளிப்பட்டன. புகையிலும், நெருப்பிலும் நிறைந்த காற்றுத் தேவர்களை எரித்தது.(29) ஓர் உயரமான மலை எழுந்து நிற்பதைப் போல மொத்த வானமும் ஆயுதங்களாலும், விற்களாலும், பரிகங்களாலும் மறைக்கப்பட்டது.(30) ஹிரண்யாக்ஷனின் பல்வேறு ஆயுதங்களால் போரில் தாக்கப்பட்டவர்களும், சிறகு படைத்த கணைகளால் மார்பிலும், தலைகளிலும் காயமடைந்தவர்களுமான தேவர்களால் போர்க்களத்தில் அசையவும் முடியவில்லை(31). போரில் ஹிரண்யாக்ஷனால் முறியடிக்கப்பட்ட தேவர்கள் மிகக் கவனமாக இருந்தாலும் தங்கள் நனவை இழந்தனர். இவ்வாறே தேவர்கள் அனைவரும் ஹிரண்யாக்ஷனால் அச்சுறுத்தப்பட்டனர்.(32) ஆயிரங்கண்களைக் கொண்டவனும், யானையில் அமர்ந்திருந்தவனுமான சக்ரன் {இந்திரன்}, ஹிரண்யாக்ஷனின் ஆயுதங்களால் தாக்கப்பட்டு, அச்சத்தால் போர்க்களத்தில் திரியமுடியாதவனாக இருந்தான். தேவர்கள் அனைவரையும் வென்று, அவர்களின் மன்னனை வீழ்த்திய அந்தத் தானவன், அண்டம் தன் வசப்பட்டதாக நினைத்தான்.(33,34) {மழை நிறைந்த மேகத்தைப் பழிப்பது போல் ஒலி {குரல்} கொண்டவனும், மதங்கொண்ட யானையைப் போன்ற உடல் கொண்டவனும், அகன்ற மார்பைக் கொண்டவனுமான அசுரேந்திரன் (ஹிரண்யாக்ஷன்} தன் வில்லை அசைத்துக் கொண்டிருப்பதைத் தேவர்கள் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்}[1]” என்றார் {வைசம்பாயனர்}.(35)

ஹிரண்யாக்ஷவதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 35-(ஹிரண்யாக்ஷவத)-ஹரிண்யாக்ஷனுக்கும், வராகனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; ஹிரண்ய வதம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “தேவர்கள் இவ்வாறு தாக்கப்பட்டு, அவர்களுடைய மன்னன் {இந்திரன்} அசைவற்றிருந்தபோது, சக்கரபாணி (விஷ்ணு), கதாயுதம் தரித்த ஹிரண்யாக்ஷனை அழிப்பதில் தன் மனத்தை நிலைநிறுத்தினான்.(1) அசுரர்களைக் கொல்பவனான அந்தத் தலைவன் {விஷ்ணு}, ஏற்கனவே சொல்லப்பட்ட பெரும்பன்றியின் வடிவை ஏற்று {வராகனாக} அங்கே வந்தான்.(2) அவன், நிலவு போல ஒளிர்ந்து கொண்டிருந்த தன் சங்கையும், சக்கர மலைக்கு ஒப்பானதும், ஆயிரங்கத்திகளுடன் கூடியதுமான தன் சக்கராயுதத்தையும் எடுத்துக் கொண்டான்.(3)

சிதைவற்ற அந்தத் தலைவனுக்குரிய மஹாதேவன், மஹாபுத்தி, மஹாயோகி, மஹேஷ்வரன் என்பவை போன்ற ரகசிய பெயர்களை அமரர்கள் எப்போதும் ஓதுவார்கள்.(4) அவன், ஆத்ம ஞானத்தை அறிந்தவர்களில் முதன்மையானவன். அவன், பக்திமான்களால் எப்போதும் தொண்டாற்றப்படுபவன். அண்டத்தைப் படைத்தவனான அந்தப் புராதன புருஷன், மூவுலகங்களிலும் கொண்டாடப்படுகிறான்.(5) அவன் தேவர்களில் வைகுண்டனாகவும், போகிகளில் {பாம்புகளில்} அனந்தனாகவும், யோகிகளில் விஷ்ணுவாகவும், வேள்விச் சடங்குகளில் தலைமைத் தேவனாகவும் இருக்கிறான்.(6)  {பூமியில் செய்யப்படும் வேள்விகளில் பெரும் முனிவர்களால் கொடுக்கப்படும்} மூன்று வகை வேள்விக் காணிக்கைகளை அவனுடைய அருளால் தேவர்கள் உண்கிறார்கள்.(7)

{அவனே தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கதியாக இருக்கிறான். அவனே சூரர்களுக்கு {தேவர்களுக்கு} பரகதியாக இருக்கிறான். அவனே புனிதங்களில் மிகப் புனிதனாக இருக்கிறான். சுயம்புவான அவன், தாழ்ச்சி ஏதும் இல்லாத தலைவனாவான்.(8) ஒவ்வொரு யுகத்திலும் அசுரர்கள் பலம்பெறுவதைக் கண்டு, அவர்களைச் சக்கரத்திற்குள் நுழையச் செய்து, அவர்களுக்குத் துன்ப நிலையைக் கொடுக்கிறான்.(9) அப்போது அவன், சங்குகளில் சிறந்த தன் புராதன சங்கை எடுத்துத் தன் வாயால் முழக்கி, பெருஞ்சக்தி வாய்ந்த அந்த அசுரனின் {ஹிரண்யாக்ஷனின்} உயிரை நடுங்கச் செய்தான்.(10)}[1]அசுரர்களுக்கு அச்சத்தை ஊட்டும் அந்தப் பயங்கரச் சங்க முழக்கத்தைக் கேட்டுத் தானவர்கள் அனைத்துப் பக்கங்களிலும் {பத்து திக்குகளிலும்} தப்பி ஓடினர்.(11) அப்போது, செந்நிறக் கண்களைக் கொண்ட அந்தப் பேரசுரன் ஹிரண்யாக்ஷன், கோபத்துடன், “இவன் யார்?” எனக் கேட்டு, பன்றியின் வடிவில் இருந்தவனும், தேவர்களின் துயரங்களை விலக்குபவனும், சக்கராயுத்துடன் அவன் முன்பு நின்றவனுமான நாராயணன் மீது தன் பார்வையைச் செலுத்தினான்.(12)

{புருஷர்களில் சிறந்தவனும், தேவர்களின் துயரத்தை அழிப்பவனுமான தலைவன் தன் முன்னே சங்கு சக்கர பாணியாக வராக வடிவில் நிற்பதை அவ்வசுரன் {ஹிரண்யாக்ஷன்} கண்டான்.(13) அசுரர்களைக் கொல்பவனான அவன் {வராகன்}, சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் மின்னுவதும், மழை தருவதுமான கரு நீல மேகம் போலச் சங்கு, சக்கரத்துடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(14)}[2]அதன் பிறகு ஹிரண்யாக்ஷனும், பிற அசுரர்களும் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு நாராயணனுடன் போரிட்டனர்.(15) அந்த ஹரி, பெருஞ்சக்திவாய்ந்த தைத்தியர்களால் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு தாக்கப்பட்டாலும், ஒரு மலையைப் போலப் போர்க்களத்தில் இருந்து அசையாமல் நின்றான்.(16) அதன் பிறகு பெருஞ்சக்திவாய்ந்த ஹிரண்யாக்ஷன், பன்றி வடிவில் இருந்த வராஹனின் {நாராயணனின்} மார்பில் எரியும் சக்தி ஆயுதத்தை ஏவினான்.(17)

{அந்தச் சக்தி ஆயுதத்தின் ஒளியைக் கண்ட பிரம்மன்} ஆச்சரியத்தால் நிறைந்தான். பெருஞ்சக்திவாய்ந்த அந்தப் பன்றியானவன் {வராகன்}, தன் மீது விழப்போகும் அந்தச் சக்தி ஆயுத்தத்தைக் கண்டு,(18) பெருமுழக்கம் {ஹுங்காரம்} செய்து, அதைத் தரையில் வீழ்த்தினான். {இவ்வாறு அந்தச் சக்தியாயுதம் நொறுக்கப்பட்டதும், பிரம்மன், “நன்று” என்று சொன்னான்}.(19) அதன்பிறகு அந்தத் தலைவன், அசுரனால் தாக்கப்பட்ட போது, சூரியனைப் போன்ற தன் சக்கராயுதத்தைச் சுழற்றி,(20) அந்தத் தானவ மன்னன் மீது ஏவி, {சிறந்த காரணத்திற்காக அவனது தலையை} வீழ்த்தினான். வஜ்ரத்தால் பெயர்க்கப்பட்ட மேரு மலையின் சிகரத்தைப் போல அந்தத் தைத்திய மன்னனின் தலை, சக்கரத்தால் வீழ்த்தப்பட்டுத் தரையில் விழுந்தது.(21) அவன் மரணமடைந்ததும் தைத்தியர்கள் அனைவரும் அச்சத்தால் நிறைந்தவர்களாக அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(22) {சக்கரபாணியும், உலகங்களெங்கும் எதிர்ப்பில்லாதவனும், எதிர்ப்பற்ற, பயங்கரமான சக்கரத்தைத் தரித்தவனுமான அவன் {விஷ்ணு}, யுக முடிவில் தண்டத்துடன் கூடிய காலனைப் போல அந்தப் போர்க்களத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்}[3]” என்றார் {வைசம்பாயனர்}.(23)

வராஹபுராணம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 36-(இந்த்ரதீநாம் மோசநம் தேஷாமாதிபத்யலாபஷ்ச)-தேவர்கள் தங்கள் நிலைகளை அடைந்தது; ஹரியின் ஆணை; வராஹ புராண மகிமை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “{புருஷோத்தமனான} ஹரி, இவ்வாறு அசுரர்கள் அனைவரையும் போரில் முறியடித்து, புரந்தரனையும், தேவர்கள் அனைவரையும் விடுவித்தான்.(1) தேவர்கள் அனைவரும் தங்கள் இயல்பான மனநிலையை மீண்டும் அடைந்து, புரந்தரனை முன்னிட்டுக் கொண்டு நாராயணனை அணுகினர்.(2)

தேவர்கள், “ஓ! தலைவா, {ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே,  விருப்பத்தையும், உன் கரங்களின் பலத்தையும் கொண்ட} உன் தயவால் நாங்கள் காலனின் வாயில் இருந்து விடுபட்டோம்.(3) அதிதியின் மகன்களான நாங்கள் உனக்காக என்ன செய்ய வேண்டும்? நாங்கள் உன் பாதங்களுக்குத் தொண்டாற்ற விரும்புகிறோம்” என்றனர்.(4)

தாமரைக் கண்களைக் கொண்டவனும், தேவர்களின் பகைவரைக் கொன்றவனுமான அந்தத் தலைவன் {ஹரி}, அவர்களின் இந்தச் சொற்களைக் கேட்டு பெரும் நிறைவடைந்து,(5) “நீங்கள் யாவரும் என்னால் உங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறங்கள் பலவற்றைப் பாதுகாப்பீராக.(6) வேள்விக் காணிக்கைகளில் உங்களுக்கு உரிமையுள்ளதால் என்னால் முன்பு நிறுவப்பட்டிருந்த விதிகளைக் கடைப்பிடிப்பீராக” என்றான் {பகவான்}.(7)

துந்துபி போன்ற குரலைக் கொண்ட அந்தத் தலைவன், தேவர்களிடம் இதைச் சொல்லிவிட்டு, மீண்டும் சகர்னிடம் {இந்திரனிடம்}, “நல்லோரிடமும், தீயோரிடமும் பாகுபாடற்ற முறையில் நீ நடந்து கொள்ள வேண்டும். {நல்லோருக்குத் தகுந்த சரியான வழியில் நீ உன் கடமையைச் செய்ய வேண்டும்}.(8) ஓ! தேவர்களின் மன்னா, விரும்பிய பொருட்கள் அனைத்தையும் வழங்கும் உன் உலகுக்குள் தவசிகள் நுழைய நீ எப்போதும் அனுமதிக்க வேண்டும்.(9) {வேள்விகள் செய்யும் எந்தப் பிராமணனும், க்ஷத்திரியனும், வைசியனும், தங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் சொர்க்கத்தைப் போன்ற அற்புதம் நிறைந்த உலகங்களை அடையட்டும்}. தேவர்களை வேள்விகளால் அமைதியடையச் செய்பவர்கள், அதற்குரிய பலன்களை அடையட்டும்.(10) நல்லோரும், அறவோரும் செழித்திருக்கட்டும், பாவிகள் அழிவடையட்டும். பல்வேறு நிலைகளில் {பல்வேறு ஆசிரமங்களைக் கடைப்பிடித்துத்} தொண்டாற்றும் அறம்சார்ந்த மக்கள் சொர்க்கத்தை வெல்லட்டும்.(11) வாய்மை நிறைந்தவர்களும், எளிமையானவர்களும், வீரர்களும், பொறாமையற்றவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்தின் பலன்களை அனுபவிக்கட்டும்.(12) அவதூறு செய்பவர்களும், காமாந்தகர்களும், பேராசைக்காரர்களும், தீயோரும், {பிராமணர்களுக்குத் தீங்கிழைப்போரும்}, நாத்திகர்களும் நரகம் செல்லட்டும்.(13) ஓ! தேவர்களின் மன்னா, நான் சொன்னவற்றை நீ பின்பற்றினால், நான் இருக்கும் வரை உன்னுடைய பகைவர்களால் உனக்குத் தீங்கிழைக்க முடியாது” என்றான்.(14)

சங்கு, சக்கர, கதாதாரியான அவன் இதைச் சொல்லிவிட்டு மறைந்தான். தேவர்கள் அனைவரும் பேராச்சரியத்தில் நிறைந்தனர்.(15) அவர்கள், வராஹனின் அற்புதமிக்கச் செயல்களைக் கண்டு, அந்த வராஹனை வணங்கிவிட்டுத் தேவலோகம் சென்றனர்” என்றார் {வைசம்பாயனர்}[1].(16){வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிறகு தேவர்கள் தங்கள் தங்கள் உலகங்களின் அதிகாரங்களைக் கைப்பற்றி வாசவனை உலகங்கள் அனைத்தின் தலைவனாக நிறுவினர்.(17) தானவர்களிடம் இருந்து விடுபட்ட பூமாதேவி மீண்டும் தன் இயல்பான நிலையை அடைந்தாள். பூமியின் உறுதியற்ற தன்மைக்குப் பொறுப்பானவை மலைகளே என்பதை அறிந்த புரந்தரன், அந்த மலைகளை அதனதனுக்குரிய இடங்களில் நிறுவி, நூறு கூர்முனைகளைக் கொண்ட தன்னுடைய வஜ்ராயுதத்தால் அவற்றின் சிறகுகளை அறுத்தான்.(18,19) புத்தியுள்ள சக்ரன், (மேனையின் மூலம் இமயத்துக்குப் பிறந்த மகனான) மைநாகத்தைத் தவிர மற்ற மலைகள் அனைத்தின் சிறகுகளையும் அறுத்தான். தேவர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டால் மைநாகமலைக்கு மட்டுமே சிறகுகள் எஞ்சியிருந்தன.(20)

இது புராதன வரலாறுகளில் {புராணங்களில்} விப்ரேந்திரனால் புகழப்படும் பரமாத்மாவான நாராயணனின் வராஹ அவதார விளக்கமாகும்.(21) இதையும், தொடக்கத்தில் இருந்து கேட்கப்பட்டுவருவதும், கிருஷ்ண துவைபாயனரால் {வியாசரால்} சொல்லப்பட்டதுமான புனித ஞானத்தையும், தூய்மையற்றவர்கள், நன்றியற்றவர்கள், கொடூரர்கள் ஆகியோரிடம் சொல்லக்கூடாது.(22) ஓ! மன்னா, இழிந்தவர்கள், தாழ்ந்தவர்கள், ஆசானை வெறுப்பவர்கள், சீடர்களாக இல்லாதவர்கள், நன்றி மறந்தவர்கள் ஆகியோரிடமும் இதைச் சொல்லக்கூடாது.(23) நீண்ட வாழ்நாள், புகழ், நிலம் ஆகியவற்றை விரும்புகிறவர்களும், வெற்றியை விரும்புகிறவர்களும் தேவர்களின் வெற்றியைச் சொல்லும் இதை {வராஹ புராணத்தைக்} கேட்க வேண்டும்.(24)

புராதன வரலாற்றையும், வேதங்களையும் குறித்த இந்தக் கதை {கேட்போருக்கு} மங்கலமும், செழிப்பும் உண்டாவதை உறுதி செய்யும். உயிரினங்கள் அனைத்திற்கும் புனிதமான இந்தக் கதை வெற்றியையும் உறுதி செய்யும்.(25) ஓ! குரு குலத்தவனே, ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இவ்வாறே நான் பரமாத்மாவின் வராஹ அவதாரத்தைக் கோட்பாட்டளவிலும் தொடர்ச்சியாகவும் உனக்குச் சொன்னேன்.(26) தேவர்களுக்காகவும், பித்ருக்களுக்காகவும் புனித வேள்விகளைச் செய்பவர்கள், ஆத்மாவின் ஆத்மாவும், நித்யனுமான விஷ்ணுவுக்காகவே அந்தந்த வேள்விகளைச் செய்கிறார்கள்.(27) ஓ! மன்னா, உலகின் புகலிடமும், தேவர்களின் புகலிடமும், சுயம்புவான பிரம்மனின் புகலிடமும், பிரம்மமேயான வேதங்களின் புகலிடமும், நாராயணனின் நல்லாத்மாவுமான வராஹ அவதாரத்தை வணங்குவோம்” என்றார் வைசம்பாயனர்}[2].(28)

நரசிம்ம அவதாரம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 37-(ந்ருஸிம்ஹாவதாரம்)-அரிய வரங்களைப் பெற்ற ஹிரண்யகசிபு; நரசிங்க அவதாரம்; ஹிரண்யகசிபுவின் அரண்மனை வர்ணனை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! மன்னா, நான் இதுவரை விஷ்ணுவின் வராக அவதாரத்தைக் குறித்து உனக்கு விளக்கிச் சொன்னேன். இனி அந்தத் தலைவன் {விஷ்ணு}, ஹிரண்யகசிபுவைக் கொன்ற நரசிங்க அவதாரத்தைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(1) முன்னர், கிருத யுகத்தில் தைத்திய குலத்தை நிறுவிய மன்னன் ஹிரண்யகசிபு பெருந்தவங்களைச் செய்து வந்தான்.(2) அவன் அசையாமல் இருக்கும் பொருளென ஐயாயிரத்து ஐநூறு {5500} ஆண்டுகள்[1] மௌன விரதம் நோற்று, நீருக்கடியில் வாழ்ந்து வந்தான்.(3) அவனுடைய தற்கட்டுப்பாடு, புலனடக்கம், ஓழுங்குமுறைகள் ஆகியவற்றில் பிரம்மன் பெரும் நிறைவடைந்தான்.(4)தலைவன் பிரம்மன், அன்னங்களால் இழுக்கப்படும் தன்னுடைய வெண் சூரியத் தேரில் அங்கே வந்தான்.(5) {ஆதித்யர்கள், வசுக்கள், சாத்யர்கள், மருத்துகள், தேவகணங்கள், ருத்திரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கின்னர்கள் ஆகியோருடனும்,(6) திசைகள், துணைத்திசைகள், ஆறுகள், பெருங்கடல்கள், நட்சத்திரங்கள், கணங்கள், வானுலாவிகள், பெருங்கோள்கள்,(7) தேவர்கள், பிரம்மரிஷிகள், சித்தர்கள், சப்தரிஷிகள், புனிதப்பணிகளைச் செய்யும் ராஜரிஷிகள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோருடன் பிரம்மன் அங்கே வந்தான்.(8) அசைவனவற்றுக்கும், அசையாதனவற்றுக்கும் ஆசானும், மங்கலத் தலைவனுமான பிரம்மன், தேவகணங்களும், பிரம்மத்தை அறிந்தோரில் சிறந்தோரும் சூழ பின்வரும் சொற்களை அந்தத் தைத்தியனிடம் சொன்னான்.(9)}[2] அவன் அந்தத் தைத்திய மன்னனிடம் {ஹிரண்யகசிபுவிடம்}, “ஓ! உறுதியான நோன்புகள் நோற்றவனே, நீ என்னிடம் பற்றும், ஆர்வமும் கொண்டவனாக இருக்கிறாய். உன்னுடைய தவம், துறவு ஆகியவற்றில் நான் நிறைவடைந்திருக்கிறேன். உனக்கு நன்மை விளையட்டும். நீ விரும்பும் வரத்தை வேண்டுவாயாக” என்று கேட்டான்.(10)

அப்போது தானவத் தலைவன் ஹிரண்யகசிபு, மகிழ்ச்சியான இதயத்துடனும், கூப்பிய கரங்களுடனும்,(11) “ஓ! தலைவா, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்கள், மனிதர்கள், பிசாசங்கள் ஆகியோரில் எவரும் என்னைக் கொல்லாதிருக்கட்டும்.(12) ரிஷிகள் கோபமடைந்து என்னைச் சபிக்காதிருக்கட்டும். {இதுவே என் தவத்திற்குத் தகுந்த வரமென நான் வேண்டுகிறேன்}.(13) ஆயுதம், மலை, மரம் ஆகியவை எவற்றினாலோ, உலர்ந்த, அல்லது ஈரமான பொருட்களாலோ எனக்கு அழிவு நேராதிருக்கட்டும்.(14) என் மரணம் சொர்க்கத்திலோ, பாதாளத்திலோ, வானத்திலோ, பகலிலோ, இரவிலோ நேராதிருக்கட்டும்.(15) தொண்டர்கள், பணியாட்கள், உற்றார் உறவினருடன் கூடிய என்னை உள்ளங்கையின் ஒரே அடியால் எவன் கொல்லவல்லவனோ அவனே எனக்கு மிருத்யுவாகட்டும்.(16) சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு, நீர், வானம், நட்சத்திரங்கள், பத்துத் திக்குகள் ஆகியவற்றின் பணிகளை நானே மேற்கொள்வேனாக. நானே காமனும், குரோதனும், வருணனும், வாசவனும் {இந்திரனும்}, யமனும்,(17) குபேரனும், கிம்புருஷர்களின் மன்னனும் ஆவேனாக. போரில் என் முன்னால் பேராயுதங்கள் உடல்வடிவம் கொண்டு தோன்றட்டும்” என்றான் {ஹிரண்யகசிபு}.(18)

பிரம்மன், “ஓ! மகனே, அற்புதம் நிறைந்த இந்தத் தெய்வீக வரங்களை நான் உனக்குத் தருகிறேன். இந்த வரங்கள் மனிதர்கள் அடைவதற்கு அரிதானவை. நீ விரும்பும்பொருட்கள் அனைத்தையும் என் தயவால் நீ நிச்சயம் அடைவாய்” என்றான்”.(19)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பிரம்மன் இதைச் சொல்லிவிட்டு ஆகாய வழியில் {பிரம்ம ரிஷிகணங்கள் இருந்த} வைராஜ உலகத்திற்குச் சென்றான்.(20) இதன் பிறகு இந்த வரம் அருளப்பட்டதைக் கேள்விப்பட்ட தேவர்களும், நாகர்களும், கந்தர்வர்களும் {முனிவர்களுடன் கூடியவர்களாக} பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்று,(21) “ஓ! தலைவா, இந்த வரத்தால் அந்த அசுரன் எங்களை ஒடுக்கப் போகிறான். அவனது அழிவுக்கு நீர் வழிவகுப்பீராக” என்று கேட்டனர்.(22)

{அனைத்து உயிரினங்களைப் படைத்தவனும், வேள்வி ஹவ்யகவ்யங்களையும், பித்ருக்களுக்கான ஹவ்யகவ்யகளையும் படைத்தவனும், வெளிப்படாதவனும், நித்தியனும்,(23) உயிரினங்களின் தலைவனுமான பிரம்மன்}, உலக உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை விளைவிப்பவையான அவர்களின் சொற்களைக் கேட்டு, {அந்த தேவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் இனிய சொற்களில்},(24) “ஓ! தேவர்களே, அவன் தன்னுடைய தவங்களின் பலன்களை அடைய வேண்டும். அவற்றை அவன் அனுபவித்த பிறகு, தலைவன் விஷ்ணு அவனைக் கொல்வான்” என்றான்.(25) தாமரையில் உதித்த அந்தத் தேவன் {பிரம்மன்} சொன்னதைக் கேட்டு மகிழ்ந்த தேவர்கள், தங்கள் தங்கள் உலகங்களுக்குத் திரும்பிச் சென்றனர்”.(26)

வைசம்பாயனர், “தைத்தியத் தலைவன் ஹிரண்யகசிபு தான் அடைந்த வரத்தால் உண்டான சக்தியில் செருக்கடைந்து உயிரினங்களை ஒடுக்கத் தொடங்கினான்.(27) பெருஞ்சக்திவாய்ந்தவனான அந்தத் தைத்தியன் ஆசிரமங்களில் வாழும் முனிவர்களுக்கும், வாய்மைநிறைந்தவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களுமான பிராமணர்களுக்கும் தீங்கிழைத்தான்.(28) அவன், மூவுலகங்களிலும் இருந்த தேவர்கள் அனைவரையும் வென்று, அவர்கள் அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சொர்க்கத்தில் வாழ்ந்திருந்தான்.(29) விதியால் தூண்டப்பட்டவனும், வரம் கொடுத்த செருக்கில் மிதந்தவனுமான அவன், வேள்விகளில் உள்ள உரிமையைத் தேவர்களிடம் இருந்து பறித்துத் தைத்தியர்களுக்குக் கொடுத்தான். {வேள்விகள் தைத்தியர்களின் பெயர்களிலேயே செய்யப்பட்டன}.(30) அப்போது ஆதித்யர்கள், சாத்யர்கள், விஷ்வர்கள், வசுக்கள், ருத்திரர்கள், {தேவகணங்கள், யக்ஷர்கள்} தேவரிஷிகள்,(31) பிராமணர்கள் ஆகியோர் அனைவரும் பெருஞ்சக்திவாய்ந்தவனும், நித்தியனும், உலகால் துதிக்கப்படுபவனுமான விஷ்ணுவை அடைந்து அவனது புகலிடத்தை நாடினார்கள் {அவனைச் சரணடைந்தார்கள்}.(32)

தேவர்கள் {விஷ்ணுவிடம்}, “ஓ! நாராயணா, {ஐசுவரியங்களைக் கொண்ட தேவா}, தேவர்கள் உன் புகலிடத்தை நாடுகிறார்கள். தைத்தியத் தலைவன் ஹிரண்யகசிபுவைக் கொன்று நீ எங்களைப் பாதுகாப்பாயாக.(33) பாதுகாவலன் நீயே, பேராசான் நீயே, மஹாதேவன் நீயே. {பிரம்மனைப் போன்ற தேவர்களில் நீ எங்கள் பரமத்தலைவனாக இருக்கிறாய்.(34) ஓ! தாமரை இதழ்களைப் போன்று அகன்றிருக்கும் அழகிய விழிகளைக் கொண்டவனே, ஓ! பகைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் தலைவா,} பகைவரை அழித்து நண்பர்களை நிறைவடையச் செய்வாயாக. திதியின் சந்ததியைக் கொன்று எங்களுக்கு உதவுவாயாக.” என்று கேட்டனர்.(35,36)

விஷ்ணு, “தேவர்களே, உங்கள் அச்சத்தைக் கைவிடுங்கள் {பயம் வேண்டாம்}. உங்கள் பாதுகாப்புக்கு நான் உறுதி கூறுகிறேன் {அபயம் தந்தோம்}. நீங்கள் முன்பு போலவே தேவலோகத்தை விரைவில் அடைவீர்கள்.(37) வரத்தின் செருக்கில் மிதந்து கொண்டிருப்பவனும், தேவர்களாலும் கொல்லப்பட முடியாதவனுமான அந்தத் தானவ மன்னனையும், அவனது மக்களையும் நான் விரைவில் கொல்வேன்” என்றான்”.(38)

வைசம்பாயனர், “எல்லாம்வல்லவனான அந்தத் தலைவன், இதைச் சொல்லி தேவர்களை அனுப்பிவிட்டு, ஹிரண்யகசிபுவின் அழிவைச் சிந்தித்தான்.(39) {தலைவன் விஷ்ணு தாமதமேதும் செய்யாமல் இமய மலையின் சாரலுக்குச் சென்று, “எந்த வடிவை ஏற்று அந்த மஹாசுரனை (ஹிரண்யகசிபுவை) கொல்வது?(40) தேவர்களின் பகைவனைக் கொல்வதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று சிந்தித்தான். அதன் பிறகு விஷ்ணு, முன்னர் ஒருபோதும் தோன்றாத ஒரு வடிவை ஏற்றான்.(41) தைத்தியர்களைக் கொல்வதற்கு ஒருபோதும் காணாத நரசிம்ம வடிவை அவன் ஏற்றான். பெருஞ்சக்திவாய்ந்த கரங்களைக் கொண்ட அவன், தன் துணைக்கு ஓங்காரத்தை எடுத்துக் கொண்டான்.(42) தாழ்வில்லாதவனும், பரமதேவனுமான தலைவன் விஷ்ணு, ஓங்காரத்தின் துணையுடன் ஹிரண்யகசிபுவின் அரண்மனைக்குச் சென்றான்.(43) அவன் காந்தியுடன் கூடிய சூரியனைப் போலவும், மற்றொரு சந்திரனைப் போலவும் தெரிந்தான். தலைவனின் பாதியுடல் மனிதனாகவும், மறுபாதி சிங்கத்தின் உடலாகவும் இருந்தது.(44) நரசிங்கத்தின் உடல்வடிவை ஏற்றுக் கொண்ட அவன், தன் கைகளை ஒன்றோடொன்று உரசினான். பாதி சிங்க உடலையும், பாதி மனித உடலையும் ஏற்றுச் சென்ற அவன், மனத்தின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவடையச் செய்வதும், பெரியதும், தெய்வீகமானதும், அழகானதும், மனத்தைக் கொள்ளையிடுவதுமான ஹிரண்யகசிபுவின் சபையைக் கண்டான்}.(45) நூறு யோஜனைகள் நீளமும், அதில் பாதி அளவு {ஐம்பது யோஜனைகள்} அகலமும் கொண்ட அந்தச் சபை பேரழகுடன் திகழ்ந்தது. {வானத்தில் ஐந்து யோஜனை நீளவல்லதாகவும் அஃது இருந்தது}.(46) அங்கே முதுமையோ, கவலையோ, களைப்போ இல்லாதிருந்தது. {அது நடுங்காமல் இருந்தது. அந்த இடம் நற்பேறு பெற்றதாகவும் மங்கலமானதாகவும் இருந்தது. அந்தச் சபா மண்டபம், காந்தியால் சுடர்விடுவதைப் போலத் தெரிந்த அழகிய மங்கல இருக்கைகளைக் கொண்டதாக இருந்தது.(47) விஷ்வகர்மனால் விதிக்கப்பட்ட அந்தச் சபாமண்டபம், உள்ளே நீர்த்தடாகங்களைக் கொண்டிருந்தது. மேலும் அது தெய்வீக ரத்தினங்களாலும் நிறைந்திருந்தது}.[3] அது பல்வேறு மலர்களாலும், சிறந்த இருக்கைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. {மலர்களையும், கனிகளையும் கொண்ட மரங்கள் அந்தச் சபாமண்டபத்தில் இருந்தன}” என்றார் வைசம்பாயனர்.(48)

அந்தச் சபாமண்டபத்தில் நீலம், வெள்ளை, கருப்பு, சிவப்பு நிறங்களில் விரிப்புகளும், மரம் போன்ற தோரணங்களும், நூற்றுக்கணக்கான மலர் தோரணங்களும் இருந்தன.(49) நீருண்ட வெண்மேகம், நீரில் அசைந்து மிதப்பதைப் போன்று அந்தச் சபாமண்டபம் காணப்பட்டது. அந்த அழகிய சபாமண்டபம், ஒளியுடன் மின்னும் தோற்றத்தில் அருளப்பட்ட இருக்கைகளுடன் இருந்தது. அந்தச் சபை காந்தியால் பளபளத்தது.(50) தெய்வீக மணங்கமழும் அந்தச் சபை காண்போர் கண்களைக் கொள்ளைக் கொண்டது. அந்தச் சபாமண்டபத்தை அடைந்தவர்களை இன்பதுன்பங்களும், குளிர்வெப்பமும், பசி, தாகம், களைப்பு ஆகியனவும் பீடிக்கவில்லை.(51) (சபா மண்டபத்தின் சுவர்களில்) பேரொளியுடன் திகழும் அழகிய சித்திரங்கள் பல தீட்டப்பட்டிருந்தன. அந்தச் சபாமண்டபத்தின் தூண்கள் நிரந்தரமாகக் குறைவேதும் ஏற்படாத தெய்வீக ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(52) சந்திரன், சூரியன், அக்னியின் ஒளியைத் தன்னொளியால் விஞ்சிய அந்தச் சபாமண்டபம், சூரியனைப் பழிப்பது போலச் சொர்க்கத்தின் பின்புறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(53) அந்தச் சபா மண்டபம், தெய்வீக விருப்பங்களையும், மனித விருப்பங்கள் அனைத்தையும் நிறைவடையச் செய்வதாக இருந்தது.(54) அந்தச் சபாமண்டபத்தில், மெல்லும் வகையிலும், மெல்லாமல் உண்ணும் வகையிலும் எல்லையற்ற வகைகளில் சுவைமிக்க உணவுகள் இருந்தன. எப்போதும் தெய்வீக மணங்கமழும் மலர்கள் மலர்வதும், கனிகள் கனிவதுமான மரங்கள் அங்கிருந்தன.(55) அங்கே கோடை காலத்தில் குளிர்ந்த நீரும், குளிர் காலத்தில் வெண்ணீரும் இருந்தன. மொட்டுகள், இளந்தளிர்கள், மலர்கள் ஆகியவற்றால் நிறைந்த பெருங்கிளைகளுடன் கூடிய மரங்கள் அங்கிருந்தன.(56)

அங்கே அந்தச் சபாமண்டபத்தில் ஏராளமான செடிகொடிகளால் மறைக்கப்பட்ட தடாகங்களையும், மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகிய ஆறுகளையும் அந்தத் தலைவன் {நரசிங்கம்} கண்டான்.(57) அந்த மிருகேந்திரன் {நரசிம்மம்}, நறுமணமிக்க மலர்களையும், சுவைமிக்கக் கனிகளையும் கொண்ட பல வகை மரங்களை அந்தச் சபாமண்டபத்தில் கண்டான்.(58) அந்தத் தலைவன், நீராடுவதற்கேற்ற நூற்றுக்கணக்கான புனிதத்தலங்களையும், குளிர்ந்த நீரைக் கொண்ட தடாகங்களையும் அங்கே கண்டான்.(59) அந்தத் தடாகங்களிலும், நீராடும் இடங்களிலும் வெண்தாமரைகளும், செந்தாமரைகளும், நீலோத்பல மலர்களும், அல்லி மலர்களும், நூறு இதழ்களைக் கொண்ட தாமரைகளும் இருந்தன.(60) அதில் தார்தராஷ்டிரப் பறவைகளும் (வாத்துகளும்), தேவர்களுக்குப் பிடித்தமான ராஜஹம்சங்களும் (பூநாரைகள்), காதம்பங்களும் (சாம்பல் நிற சிறகுகள் கொண்ட வாத்துகளும்), சக்கரவாகங்களும் (செங்கிளுவைகளும்), ஸாரஸங்களும் (நாரைகளும்), குரர (அன்றில்) பறவைகளும் இருந்தன.(61) எட்டு இதழ்களைக் கொண்ட வெண்தாமரை மலர்களைக் கொண்ட அந்தத் தடாகங்களில் பளிங்கு போன்ற தெளிந்த நீர் நிறைந்திருந்தது. அன்னங்கள் பாடும் ஒலிகளாலும், ஸாரிகப் பறவைகள் கூவும் ஒலிகளாலும் அந்தச் சூழல் நிறைந்திருந்தது.(62)

அங்கே இருந்த மரங்களின் நுனிகளில், நறுமணமிக்க மங்கல மலர்களைக் கொண்ட கொடிகள் நிறைந்திருப்பதைத் தலைவன் கண்டான்.(63) கேதகம் (தாழை), அசோகம், ஸரலம் (தேவதாரு), புந்நாகம், திலகம் (தழுதாரை), அர்ஜுனம் (மருதம்), சூதம் (மா), நீபம் (கடம்பு), நாகபுஷ்பம் (சண்பகம்), கதம்பம், பகுலம் (வகுளம்), தவம் (தாதிரி),(64) பிரியங்கு, பாடலி (பாதிரி), சால்மல்யம், ஹரித்ரகம் (சந்தனம்), சாலம் (குங்கிலியம்), தாலம் (பனை), பிரியாலம், சம்பகம் போன்ற மரங்கள் அங்கே மனத்துக்கு மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருந்தன.(65) இன்னும் பல மரங்கள் அந்தச் சபாமண்டபத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தன. காட்டுத் தீயைப் போன்ற பிரகாசத்துடன் அந்த மரங்களின் வரிசைகள் பளபளத்தன.(66)

அஞ்சனத்தைப் போன்ற கரிய பருத்த தண்டுகள், நல்ல கிளைகள் ஆகியவற்றைக் கொண்ட நெடிய மரங்களும், அசோகம், வஞ்ஜுலகம் (இம்பூறல்) ஆகிய மரங்களும் அங்கே பளபளத்தன.(67) வரணம் (கூவிரம்), வத்ஸநாபம் (கருநாபி), பநஸம் (பலா), சந்தனம், நீலம் (கடம்பு), ஸுமநஸம், பீதம் (குசும்பா), ஆம்லம் (நெல்லி), அஷ்வதம் (பூவரசு), திந்துகம் (தும்பிலி),(68) பிராசீநாமலகம் {லூபிகம்), லோத்ரம், மல்லிகம் (கொகுடி), பத்ரம் (வச்சிரம்), தாரவம், ஆம்ராதகம் (புளிமா), ஜம்பூ (நாவல்), லகுசம் (புளிசக்கை), சைலவாலுகம் (சுக்கம்),(69) ஸர்ஜார்ஜுனம் {வெண்மருது), கந்துரவம், பதங்கம், குடஜம் (குண்டுமுல்லை), சிவந்த குரபகம் (செம்முள்ளி), நீபம் (கடம்பம்), ஆகரு,(70) கதம்பம், தாடிமம் (மாதுளை), பீஜபூரகம் (நார்த்தங்காய்), காலீயகம் {கஸ்தூரி மஞ்சள்), துகூலம், ஹிங்கவம், தைலபர்ணிகம் (சந்தனம்),(71) கர்ஜூரம் (ஈச்சை), நாலிகேரம் (தென்னை), பூகம் (பாக்கு), ஹரீதகி (நெல்லி), மதூகம் (இலுப்பை), ஸப்தபர்ணம் (ஏழிலைப்பாலை), வில்வம், பாராவதம் (தும்பிலி),(72) பநசம் {சீமைப்பலா), தமாலம் (பச்சிலை) ஆகிய மரங்கள் அங்கே இருந்தன. அந்த இடம் அடர்த்தியான இலைகளுடன், மலர்களுடனும், கனிகளுடனும் இருந்த பல வகைக் கொடிகளால் மறைக்கப்பட்டிருந்தது.(73) இவையும் தவிரப் பலவகை மலர்களையும், கனிகளையும் கொண்ட பல்வேறு வகைக் காட்டு மரங்கள் அந்தச் சபாமண்டபத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(74) சகோர பறவைகள் (கௌதாரிகள்), சதபத்ரங்கள், கோகிங்கள் (குயில்கள்), சாரிகப் பறவைகள் (மைனாக்கள்) ஆகியன, மலர்களும், கனிகளும் நிறைந்த அந்தப் பெரும் மரங்களில் அமர்ந்திருந்தன.(75) சிவப்பு, மஞ்சள், செம்பழுப்பு நிறங்களில் உள்ள பறவைகள் அந்த மரங்களின் நுனிகளில் மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்தன” என்றார் {வைசம்பாயனர்}.(76)

ஹிரண்யகசிபுவின் சபா மண்டபம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 37அ-(ஹிரண்யகஷிபுஸபாவர்ணநம்)-ஹரிண்யகசிபுவின் சபா மண்டப வர்ணனை; அங்கிருந்த அப்சரஸ்கள், கந்தர்வர்கள், தைத்தியர்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அந்தச் சபாமண்டபத்தில் தைத்தியேந்திரனான தலைவன் ஹிரண்யகசிபு, நூறு முழம் சுற்றளவைக் கொண்ட ஒரு தெய்வீக அரியணையில் அமர்ந்திருந்தான்.(1) ஓ! மன்னா, சுடர்மிக்கக் காதுகுண்டலங்களை அணிந்த தலைவன் ஹிரண்யகசிபு, சூரியனைப் போன்று பிரகாசிக்கும் தெய்வீகமான அழகிய கூரையைக் கொண்ட அந்தச் சபாமண்டபத்தில் தலைமை தாங்கி நீண்ட காலம் ஆட்சி செய்து கொண்டிருந்தான்.(2) அந்தத் தைத்திய மன்னனைச் சுற்றிலும், புழுதியற்றதும், தெய்வீக நறுமணம் கமழ்வதுமான சுகமான தென்றல் மென்மையாக வீசிக் கொண்டிருந்தது.(3)

அங்கே அப்சரஸ்கள் சூழ தேவர்களும், கந்தர்வர்களும் தெய்வீகத் தாளத்தின் துணையுடன் தெய்வீகப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர்.(4) விஷ்வாசி, பிரம்லோசை என்று புகழப்படும் ஸஹஜன்யை, திவ்யை, ஸௌரபேயை, ஸமீசி, புஞ்ஜிகஷ்தலை,(5) மிஷ்ரகேசி, ரம்யை, சித்திரசேனை, ஷுசிஸ்மிதை, சாருநேத்ரை, கிருதாசி, மேனகை, ஊர்வசி ஆகியோரும்,(6) பாடுவதிலும் ஆடுவதிலும் புகழ்பெற்ற இன்னும் நூற்றுக்கணக்கான அப்சரஸ்களும் மன்னன் ஹிரண்யகசிபுவுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருந்தனர்.(7) அற்புத ஆபரணங்களாலும், ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்டவனும், சுடர்மிக்கக் காதுகுண்டலங்களுடன் கூடியவனுமான ஹிரண்யகசிபு, ஆயிரக்கணக்கான பெண்களால் சூழப்பட்டிருந்தான்.(8)

பெருஞ்சக்திவாய்ந்த கரங்களைக் கொண்ட தலைவன் ஹிரண்யகசிபு, அந்தச் சபாமண்டபத்தில் அமர்ந்திருந்தபோது, ஏற்கனவே வரங்களைப் பெற்ற திதியின் மகன்கள் அனைவரும் அங்கே அமர்ந்திருந்தனர்.(9) விரோசனன் மகனான பலி, பூமியை வென்ற நரகன், பிரஹ்லாதன், விப்ரசித்தி, மஹாசுரனான கவிஷ்டன்,(10) அஹந்தன், குரோதஹந்தன், ஸுமநன், ஸுமதி, கரன், கடோதரன், மஹாபார்ஷ்வன், கிரதநன், பிடரன்,(11) விஷ்வரூபன், ரூபன், விரூபன், மஹாத்யுதி, தசக்ரீவன் {ராவணன்}வாலி, மேகவாஸன், மஹாரவன்,(12) கடாபன், விகடாபன், ஸம்ஹ்ராதன், இந்திரதாபநன் முதலிய தைத்திய, தானவர்கள் அனைவரும் சுடர்மிக்கக் காது குண்டலங்களுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(13) அவர்கள் அனைவரும் மாலைகள் அணிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் சிறந்த பேச்சாளர்களாகவும், தபங்கள் செய்த நல்ல வரலாற்றைக் கொண்டவர்களாகவும், வரங்களைப்பெற்றவர்களாகவும், வீரர்களாகவும், மரணமற்றவர்களாகவும் இருந்தனர்.(14)

தெய்வீக ஆடைகளையுடுத்தியிருந்த இந்தத் தைத்தியர்களும், இன்னும் பிற தானவர்கள் பலரும் தலைவனான ஹிரண்யகசிபுவுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருந்தனர்.(15) மாலைகளையும், ஆபரணங்களையும் அணிந்திருந்த அவர்கள், காணிக்கைகளால் சுடர்விடும் ஆகாய விமானங்கள் பலவற்றில் அந்தச் சபாமண்டபத்திற்கு வந்திருந்தனர்.(16) அவர்கள் விசித்திர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர், அழகிய ஆடைகளை உடுத்தியிருந்தனர், விசித்திர ஆயுதங்களையும், கேடயங்களையும் கொண்டிருந்தனர், விசித்திரமான கொடிக்கம்பங்களையும் வாகனங்களையும் கொண்டிருந்தனர்.(17) அவர்கள் தங்கள் தோள்களில் வானவில்களைப் போலிருந்த மிகச் சிறந்த தோள்வளைகளைப் பூண்டிருந்தனர். திதியின் மகன்களான அந்தத் தைத்தியர்கள் எப்போதும் தைத்திய மன்னனுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருந்தனர்.(18) அந்தத் தெய்வீக சபாமண்டபத்தில் மலைகளுக்கு ஒப்பாகத் திகழ்ந்த அவர்கள் அனைவரும் சூரியனைப் போன்று பளபளக்கும் பொன்மகுடங்களை அணிந்திருந்தனர்.(19)

அந்த மிருகாதிபன் {நரசிங்கன்}, பொன்னாலும் ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அழகிய மேடையைக் கொண்டதும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட வீதிகளைக் கொண்டதும், யானைகளின் தந்தங்களாலான சாளரங்களைக் கொண்டதுமான அந்தச் சபாமண்டபத்தைக் கண்டான்.(20) அந்த மிருகாதிபன் {நரசிங்கன்}, பொன்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், சூரியனைப் போலப் பளபளக்கும் அசுரகணங்களால் தொண்டாற்றப்பட்டவனும், திதியின் மகனுமான அந்த ஹிரண்யகசிபுவைக் கண்டான்” என்றார் {வைசம்பாயனர்}[1].(21)

பிரஹலாதன் மொழிந்தது | பவிஷ்ய பர்வம் பகுதி – 38-(ந்ருஸிம்ஹம் த்ருஷ்ட்வா தாநவாநாம் விஸ்மய꞉ ப்ரஹ்லாதவாக்யம் ச)-நரசிங்கத்தின் தோற்றம்; நரசிம்மனை அடையாளம் கண்ட பிரஹலாதன், ஹிரண்யகசிபுவிடம் பேசியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஹிரண்யகசிபுவும், தானவர்கள் அனைவரும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனை {நரசிம்மனைக்} காலச் சக்கரம் போலவும், சாம்பலால் மறைக்கப்பட்ட நெருப்பைப் போலவும் கண்ட போது,(1) சடாமுடியுடனும், சந்திரனைப் போன்ற பிரகாசத்துடனும் கூடிய அந்தச் சிங்க மனிதனின் {நரசிம்மத்தின்} வடிவ அழகு, பரந்திருக்கும் அந்தப் பெரிய சபா மண்டபத்தில் எங்கும் நிறைந்திருந்தது.(2) 

சங்கையும், குந்தமலரையும், சந்திரனையும் போன்றிருந்த அந்த வடிவத்தைக் கண்ட தானவர்கள், “என்ன அற்புதமான வடிவம் இஃது” என்று ஆச்சரியமடைந்தனர்.(3) அந்த வடிவத்தின் பிரகாசத்தால் சுடப்பட்ட அந்தப் பேரான்மாக்கள் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, காலதர்மத்தின்படி நரசிங்கத்தின் கண்களால் தூண்டப்பட்ட(4) ஹிரண்யகசிபுவின் வீர மகன் பிரஹலாதன், சிங்கத்தின் வடிவில் அங்கே வந்திருப்பது தலைவனே {விஷ்ணுவே} எனத் தன் தெய்வீகப் பார்வையில் கண்டான்.(5) {இதற்கு முன்பு ஏற்கப்படாத தங்க மலையைப் போன்ற உடலைத் தலைவன் ஏற்றிருப்பதைக் கண்ட தானவர்களும், ஹிரண்யகசிபுவும் ஆச்சரியம் அடைந்தனர்.(6)}

அப்போது, பிரஹ்லாதன், “ஓ! பெருந்தோள்களைக் கொண்ட மஹாராஜா, தைத்தியர்களில் மூத்தவரே, {ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே}, நாம் ஒருபோதும் சிங்கமனிதனின் {நரசிங்க} வடிவைக் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை.(7) இந்தத் தெய்வீக வடிவம் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது! பயங்கரம் நிறைந்த இந்த வடிவம் தைத்தியர்களின் அழிவுக்காகவே தோன்றியிருப்பதாக என் மனம் சொல்கிறது(8). தேவர்கள், பெருங்கடல்கள், ஆறுகள், இமயம், {பாரியாத்ரம் மற்றும்} பிற மலை எல்லைகள்,(9) நட்சத்திரங்களுடன் கூடிய சந்திரன், ஆதித்யர்கள், அஷ்வினிகள், வருணன், {தனதம் (செல்வம்), வருணன்}, யமன், சசிபதியான சக்ரன் {இந்திரன்},(10) மருத்துகள், {தேவர்கள்}, ரிஷிகள், நாகர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், பயங்கரர்களான ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும்(11) இவனுடைய {இந்த நரசிம்மனின்} உடலில் இருக்கின்றனர். பிரம்மனும், தலைவன் சிவனும் இவனது நெற்றியில் தோன்றுகின்றனர். படைப்புகளில் அசைவனவும், அசையாதனவும்,(12) நம்மோடு சேர்ந்த தைத்தியர்கள் அனைவரும், {நூற்றுக்கணக்கான ஆகாய விமானங்களுடன் கூடிய} இந்தச் சபாமண்டபமும்,(13) மூன்று உலகங்களும் பளிங்கில் பிரதிபலிக்கும் சந்திரனைப் போல இவனில் தெரிகின்றன.(14) {பிரஜாபதியான மஹாத்மா மனு, கிரஹங்கள், யோகங்கள், பூமி, வானம், உத்பாதங்கள், திருதி (நிறைவு), ஸ்மிருதி, ரஜஸ், சத்வ குணங்கள், தவம், தற்கட்டுப்பாடு,(15) உயரான்ம சனத்குமாரர், விஷ்வதேவர்கள், அப்சரஸ்கள், குரோதம், காமம், ஆணவம், மோஹம், பித்ருக்கள் ஆகியோர் அனைவரும் இந்த நரசிங்கத்தில் காணப்படுகின்றனர்.(16)” என்றான் {பிரஹலாதன்}.

தைத்திய மன்னனின் மகனும், நுண்ணறிவுமிக்கவனுமான பிரஹ்லாதன், இவ்வாறு சொல்லிவிட்டு சற்றே தலைகவிழ்ந்தவாறு, கிழக்குத் திக்கை நோக்கி தியானம் செய்யத் தொடங்கினான்” என்றார் {வைசம்பாயனர்}. (17)}[1]

தைத்திய நரசிம்மப் போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 38அ-(ந்ருஸிம்ஹஸ்யோபரி தைத்யாநாம் ஷஸ்த்ராஸ்த்ரபாத꞉)-ஹிரண்யகசிபு பயன்படுத்தி ஆயுதங்கள்; தானவ தைத்திய படைக்கும் நரசிங்கனுக்கும் இடையில் நடைபெற்ற போர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “தானவர்களின் தலைவனான ஹிரண்யகசிபு, பிரஹ்லாதன் சொன்ன சொற்களைக் கேட்டு தானவகணங்களிடம்,(1) “இதுவரை காணப்படாத உடலைக் கொண்ட இந்த மிருகேந்திரனை {நரசிம்மனைப்} பிடிப்பீராக. உங்களுக்கு ஐயமேதும் ஏற்பட்டால் வனத்தில் திரிபவனான இவனைக் கொல்வீராக” என்றான்.(2)

இந்தச் சொற்களைக் கேட்ட தானவர்கள் அனைவரும் அந்த மிருகேந்திரனைச் சூழ்ந்து கொண்டு அவனை நடுக்கமடையச் செய்வதற்கு முயன்றனர்.(3) பெருஞ்சக்திவாய்ந்த அந்தச் சிங்கமானவன், காலனைப் போன்று வாயைத் திறந்து சிங்கமுழக்கம் செய்து அந்த அழகிய சபாமண்டபத்தைச் சிதறடித்தான்.(4)

சபாமண்டபம் நொறுக்கப்பட்டதைக் கண்ட ஹிரண்யகசிபு, கோபத்தால் எரியும் கண்களுடன் தானே அந்தச் சிங்கத்தை நோக்கி கணைகளை ஏவினான்.(5) ஆயுதங்கள் அனைத்திலும் சிறந்த தண்டமாஸ்த்திரம், பேரச்சத்தை விளைவிக்கும் மிகப் பயங்கரமான காலச்சக்கரம், விஷ்ணு சக்கரம்,(6) தர்மச்சக்கரம், வெல்லப்பட முடியாதது என்ற பெயரைக் கொண்ட மஹாசக்கரம், சக்கரமைந்தரம் {இந்திரச்சக்கரம்}, மிகப் பயங்கரமான ரிஷிசக்கரம்,(7) மூவுலகங்களின் பேரொலியைக் கொண்ட பிதாமஹனின் {பெரும்பாட்டனின்} சக்கரம், விசித்திர மின்னல், உலர்ந்த மின்னல், ஈர மின்னல்,(8) பயங்கரமான சூலம், கங்காலம் என்றழைக்கப்படும் முசலம், பிரம்மசிரம், பிரம்மாஸ்திரம்,(9) ஐஷிகமாஸ்த்திரம் {நாணல் ஆயுதம்}, ஐந்திராஸ்த்திரம் {இந்திரனின் ஆயுதம்}, ஆக்நேயம் {அக்னியின் ஆயுதம்}, சிசிரம் {குளிரச் செய்யும் ஆயுதம்}, வாயவ்யம் {காற்றாயுதம்}, மதனம், காபாலம் {மண்டையோட்டு ஆயுதம்}, கிங்கரம்,(10) சாபிரதிமம், ஒடுக்கப்பட முடியாத சக்தியாஸ்த்திரம், கிரௌஞ்சமாஸ்த்திரம், ஹயஷீரம் {குதிரைத்தலை ஆயுதம்}, சௌம்யாஸ்த்திரம்,(11) கட்டற்ற பைசாசமாஸ்த்திரம், சார்ப்பியமாஸ்த்திரம் {பாம்பு ஆயுதம்}, மோஹனாஸ்த்திரம் {மயக்கமடையச் செய்யும் ஆயுதம்}, ஸோஷணம் {மெலிவடையச் செய்யும் ஆயுதம்}, ஸம்தமனம் {வெப்பமடையச் செய்யும் ஆயுதம்}, விலாபனம் {அழச்செய்யும் ஆயுதம்},(12) ஜிரும்பணம் {கொட்டாவிடச் செய்யும் ஆயுதம்}, பிராபணம், மிகப் பயங்கரமான துவாஷ்ட்ரம், ஸுதாருணம், காலமுத்கரம், பெருஞ்சக்திவாய்ந்த ஆயுதமான க்ஷோபணம்,(13) சம்வர்த்தனம், மோஹனம் {மயக்கமடையச் செய்யும் ஆயுதம்}, மாயாதரம், காந்தர்வமாஸ்த்திரம், வாள்களின் ரத்தினமான நந்தகம்,(14) பிரஸ்வாபனம், பிரமதனம், ஆயுதங்களில் சிறந்த வாருணம், தடையில்லாமல் எங்கும் செல்லவல்ல பாசுபதம்(15) ஆகிய ஆயுதங்கள் அனைத்தையும் யஞ்ஜத்தில் ஊற்றப்படும் ஆகுதிகளைப் போல அந்த நரசிம்மனின் மீது ஹிரண்யகசிபு ஏவினான்.(16)

கோடை காலத்தில் எரியும் கதிர்களால் இமய மலையை மறைக்கும் விவஸ்வானை {சூரியனைப்} போல அந்த அசுரமன்னன் {ஹிரண்யகசிபு}, சுடர்மிக்க ஆயுதங்களால் அந்தச் சிங்கத்தை மறைத்தான்.(17) கோபம் எனும் காற்றால் வீசப்படும் பெருங்கடலாக இருந்த அந்தத் தைத்தியப்படை, பெருங்கடலில் மூழ்கும் மைநாக மலையைப் போல அந்தச் சிங்கத்தை மூழ்கடித்தது.(18) பிராசைகள் {கத்திகள்}, பாசங்கள் {கயிறுகள்}, சூலங்கள், கதாயுதங்கள், முசலங்கள், வஜ்ரங்கள், மின்னல், பாறைகள், பெரும் மரங்கள்,(19) முத்கரங்கள், கூடபாசங்கள், சூலங்கள், ஊகலங்கள் {மர தண்டங்கள்}, மலைகள், சதாக்னிகள், முட்களுடன் கூடிய தண்டங்கள், ஸுதாருணங்கள் {பயங்கரத் தண்டங்கள்}(20) ஆகியன அந்த ஹரியைக் கொல்வதற்காகச் சூழ்ந்திருந்த அனைவராலும் அவன் மீது வீசப்பட்டன. அந்த மஹாத்மாவுக்கு அவற்றினால் சிறு தீங்கும் நேரவில்லை.(21)

மஹேந்திரனின் வஜ்ராயுதத்துக்கு இணையான வேகம் கொண்ட தானவர்கள் பலர், தங்கள் கைகளில் பாசக்கயிறுகளுடனும், தயாராக இருந்த ஆயுதங்களுடனும், மூன்று தலை கொண்ட பன்னக மன்னர்களை {பாம்புகளைப்} போல அந்த நரசிங்கனைச் சூழ்ந்து நின்றனர்.(22) பொன்மாலைகளால் அங்கங்கள் அலங்கரிக்கப்பட்டவர்களும், கரங்களிலும், உடல்களிலும் பல்வேறு வகைக் கங்கணங்களை அணிந்திருந்தவர்களுமான அவர்கள், அகன்று விரிந்த சிறகுகளுடன்கூடிய அன்னப்பறவைகளின் வரிசையைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(23) வாயு தேவனின் காந்தியைக் கொண்ட தானவர்கள் சிலர், கைகளில் கேயூரங்கள் அணிந்தவர்களாக ஒளிமிக்கச் சூரியனுக்கு இணையாக ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(24)

தானவர்களால் ஏவப்பட்ட பேராயுதங்களால் சூழப்பட்டிருந்தவன் {நரசிம்மன்}, ஒருகணம் ஒளிரும் நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டும், மறுகணம் மழை மேகங்களைப் போல இருளடர்ந்தும் இருந்தான்.(25) தைத்திய கணங்களின் படையானது பயங்கர ஆயுதங்களைப் பொழிந்த போது, ஒளிமிக்கவனான அந்தத் தலைவன் {நரசிம்மன்}, இமய மலையைப் போல அசையாமல் இருந்தான்.(26) சுடர்மிக்க நெருப்பைப் போன்ற ஒளியுடைய திதியின் மகன்களில் நரசிம்ம வடிவில் இருந்த தலைவனால் எரிக்கப்பட்டவர்கள், பெருங்காற்றால் பொங்கி அடங்கும் பெருங்கடலின் பேரலைகளைப் போல பேரச்சத்தால் உடல் நடுங்கி நின்றனர்.(27) கோபத்தால் அங்கங்கள் எரிந்த மஹாசுரர்கள், நூற்றுக்கணக்கான விற்களைப் பயன்படுத்திக் காலாக்னியைப் போல ஒளிரும் கணைச் சரங்களைப் பெரும் வேகத்துடன் ஏவினர்” என்றார் {வைசம்பாயனர்}[1].(28)

மாயை விலக்கிய நரசிம்மன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 38ஆ-ந்ருஸிம்ஹக்ருதோ தைத்யமாயாநிராஸ꞉)-போர் வர்ணனை; அசுரர்கள் செய்த மாயைகள்; அவற்றை விலக்கிய நரசிங்கன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “கழுதை போன்றவர்களும், கழுதை முகம் படைத்தவர்களும், மகரங்களையும், நஞ்சுமிக்கப் பாம்புகளையும் போன்றவர்களும், குரங்குகளையும், பன்றிகளையும் போன்ற முகம் கொண்டவர்களும்,(1) இளஞ்சூரியன், தூமகேது, சந்திரன், பிறைச் சந்திரன், சுடர்மிக்க நெருப்பு,(2) அன்னங்கள், சேவல்கள் போன்ற முகத்தைக் கொண்டவர்களும், பிணியால் பீடிக்கப்பட்ட முகங்களையும், அச்சந்தரும் முகங்களையும், ஐந்து முகங்களைக் கொண்டவர்களும், பாம்புகள், காகங்கள், கழுகுகள் போன்ற முகங்களைக் கொண்டவர்களும்,(3) மின்னல் போன்ற நாவுகளைக் கொண்டவர்களும், மூன்று தலைகளைக் கொண்டவர்களும், எரிகொள்ளிகளைப் போன்றும், பெரும் முதலை, நீர்யானை போன்ற முகங்களைக் கொண்டவர்களும், தங்கள் பலத்தில் செருக்கு கொண்டவர்களுமான தானவர்கள்,(4) போரில் கைலாச மலையைப் போல நெடிதுயர்ந்து நின்ற மிருகேந்திரனின் {நரசிம்மனின்} உடலில் கணைகளைப் பொழிந்தனர். எவராலும் கொல்லப்பட முடியாதவனான மிருகேந்திரனுக்கு அந்தக் கணைகள் துன்பத்தைத் தரவில்லை.(5)

இவ்வாறு பாம்புகளைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த கோபக்கார தானவர்கள், மீண்டும் அந்த மிருகேந்திரனின் உடலில் பயங்கரக் கணைகளைப் பொழிந்தனர்.(6) மிருகேந்திரன் மீது அந்தத் தானவர்கள் ஏவிய பயங்கரக் கணைகள் யாவும், மலைகளில் மறைந்து போகும் விட்டில் பூச்சிகளைப் போல வானத்தில் கரைந்தன.(7) கோபமடைந்த தைத்தியர்கள், எங்கும் சுடர்விட்ட தெய்வீக சக்கரங்களை அந்த மிருகேந்திரன் மீது ஏவினர்.(8) சூரியன், சந்திரன், யுக முடிவில் வானில் பளபளக்கும் கோள்கள் ஆகியவற்றைப் போன்ற சுடர்மிக்க அந்தச் சக்கரங்களால் வானம் முற்றாக மறைக்கப்பட்டது.(9) அந்தச் சக்கரங்கள், பயங்கர மேகங்களின் குடலுக்குள் நுழையும் சூரியன், சந்திரன், மற்றும் கோள்களைப் போல அந்த மிருகேந்திரனின் வாய்க்குள் நுழைந்து தங்கள் ஒளியை இழந்தன.(10) பேரான்மாவான மிருகேந்திரன், நெருப்பின் தழல்களைப் போலச் சுடர்விடும் அந்தச் சக்கரங்கள் அனைத்தையும் விழுங்கினான்.(11)

தைத்தியன் ஹிரண்யகசிபு, ஹுதாசனனின் {அக்னியின்} ஒளியைப் போலப் பயங்கரமாகச் சுடர்விடுவதும், வேகமாகச் செல்லவல்லதுமான சக்தி ஆயுதம் ஒன்றை மீண்டும் ஏவினான்.(12) சக்தி ஆயுதங்களில் சிறந்த அந்த ஆயுதம் தன்னை நோக்கி வருவதைக் கண்ட தலைவன் மிருகேந்தரன், பயங்கரமான ஹுங்காரம் செய்தபடியே அதை நொறுக்கினான்.(13) மிருகேந்திரனால் நொறுக்கப்பட்ட அந்தச் சக்தி ஆயுதம், தீப்பொறிகளுடன் வானில் இருந்து விழும் பெரும் எரிகொள்ளியைப் போல ஒளிர்ந்து கொண்டே பூமியில் விழுந்தது.(14) அவன் மீது ஏவப்பட்ட கணைச் சரங்கள், நீலோத்பல மலர்களால் ஆன மாலையைப் போலத் தொலைவில் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(15) அவன் {நரசிங்கன்}, தான் விரும்பியபடியே முழக்கம் செய்து கொண்டும், தன் வீரத்தை வெளிப்படுத்திக் கொண்டும், துரும்புகளைப் பறக்கவிடும் கொடுங்காற்றைப் போல எளிதாக அந்த அசுரர்களின் படையை விரட்டினான்.(16)

அப்போது தைத்தியேந்திரன் {ஹிரண்யகசிபு}, மலைகளைப் போன்று பெரியவையும், மலைச் சிகரங்களைப் போல ஒளிமிக்கவையுமான பாறைகளை வானத்தில் இருந்து மழையாகப் பொழிந்தான்.(17) அந்தப் பாறைகள் அந்தச் சிங்கத்தின் பேருடலில் விழுந்ததும், பத்துத் திக்குகளிலும் சிதறிப் போகும் விட்டில் பூச்சிகளைப் போலச் சிதறின.(18) ஓ! பகைவரை ஒடுக்குபவனே, திதியின் மகன்கள், நீருண்ட மேகங்கள் மழையைப் பொழிந்து மலையை மறைப்பதைப் போலப் பாறைகளால் அந்தச் சிங்கத்தை மறைத்தனர்.(19) பெருங்கடலால் மலையை அசைக்க முடியாததைப் போலவும், பெரும் வேகம் கொண்டவனானாலும் வலிமைமிக்கவர்களில் சிறந்தவனை அசைக்க முடியாததைப் போலவும் உறுதியாக நின்று கொண்டிருந்த அந்தத் தலைவனை அவற்றால் அசைக்க முடியவில்லை.(20)

பாறை மழை அழிக்கப்பட்டபோது, எங்கும் பரவக்கூடியதுமான நீர் மழையானது அங்கே கணைகளைப் போல அடர்த்தியாகப் பொழிந்தது.(21) பெரும் வேகம் கொண்டவையும், நீராலானவையுமான ஆயிரக்கணக்கான கணைகள் திசைகளிலும், துணைத்திசைகளிலும் பரவி வானத்தை மறைத்தன.(22) நீர்மழையாலும், வேகமாக வீசும் காற்றாலும், பெரும் மழையாலும் எவரும் எதையும் அறிய முடியாத நிலை தோன்றியது.(23) வானம், பூமி எங்கிலும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருந்த மழைத்துளிகளால் பூமியில் விழுந்த பிறகும் அவனைத் தீண்ட முடியவில்லை.(24) மழை வெளியே பொழிந்து கொண்டிருந்தது. நீருண்ட மேகங்களால், மிருகேந்திரனின் வடிவில் நின்று கொண்டிருந்த தலைவன் மீது அந்த மாயப் போரில் மழையைப் பொழிய முடியவில்லை.(25)

ஆரவாரமாகப் பொழிந்த பாறை மழை அழிக்கப்பட்டு, நீர் மழையும் வற்றிய பிறகு, நெருப்பைப் போன்றும், காற்றைப் போன்றும் எங்கும் தோன்றும் மாயையைத் தானவர்கள் உண்டாக்கினர்.(26) எரியும் தழல் பொதிகள் சுடர்விட்டுக் கொண்டே வானில் இருந்து பெரும் வேகத்துடன் எங்கும் விழுந்தன.(27) உயரான்மாவும், பேரொளி படைத்தவனுமான தைத்தேந்திரனால் {ஹிரண்யகசிபுவால்} இவ்வாறு உண்டாக்கப்பட்ட அந்நெருப்பால் அளவற்ற பேரொளியைக் கொண்டவனை எரிக்க இயலவில்லை.(28) அளவற்ற ஆற்றலைக் கொண்டவனும், ஆயிரம் கண்களைக் கொண்டவனுமான இந்திரன், நீருண்ட மேகங்களைக் கொண்டு நீராலான பெருமழையைப் பொழியச் செய்து அந்த நெருப்பை அணைத்தான்.(29)

இவ்வாறு மாயை அழிக்கப்பட்டபோது, அந்தத் தானவன் {ஹிரண்யகசிபு}, போர்க்களமெங்கும் பயங்கரமான காரிருளை உண்டாக்கினான்.(30) உலகம் இருளால் சூழப்பட்டு, தைத்தியர்கள் தங்கள் ஆயுதங்களை எடுத்தபோது, நரசிங்கன் தன்னொளியால் சூரியனைப் போல ஒளிர்ந்தான்.(31) திரிகூட மலையில் மூவழிகளில் பாயும் கங்கையைப் போலப் போர்க்களத்தில் நிற்கும் தலைவனின் நெற்றி சுருங்கி மூன்று கோடுகளை வெளிப்படுத்துவதைத் தானவர்கள் கண்டனர்” என்றார் {வைசம்பாயனர்}[1].(32)

ஹிரண்யகசிபுவின் வல்லமை | பவிஷ்ய பர்வம் பகுதி – 38இ-(ஹிரண்யகஷிபோ꞉ பராக்ரம꞉)ஹிரண்யகசிபுவின் ஆற்றல் விளக்கம்; அவனால் நடுக்கமடைந்த ஆறுகள், மலைகள், தேசங்கள் ஆகியவற்றின் பெயர்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மாயைகள் அனைத்தும் அழிக்கப்பட்ட பிறகு, திதியின் மகன்கள் அனைவரும் நொந்து போனவர்களாக ஹிரண்யகசிபுவின் புகலிடத்தை நாடினார்கள்.(1) அப்போது ஹிரண்யகசிபு, எரியும் கோபத்துடனும், மகிமையில் சுழன்று கொண்டும் மேதினியை {பூமியை} நடுங்கச் செய்தான்.(2)

நீர் நிறைந்த பெருங்கடல்கள் அனைத்தும் இதனால் கலக்கமடைந்தன. காடுகளுடனும், காட்டு மரங்களுடன் கூடிய மலைக்ள அனைத்தும் நடுங்கின.(3) அந்தத் தைத்தியேந்திரன் {ஹிரண்யகசிபு} கோபமடைந்த போது, உலகம் இருண்டது. எங்கும் இருள் நிறைந்ததால் எதையும் உணரமுடியாத நிலை உண்டானது.(4) ஆவஹம், பிரவஹம், அசையும் விவஹம், பராவஹம், ஸம்வஹம், பெருஞ்சக்திவாய்ந்த உத்வஹம்,(5) மங்கலமான பரிவஹம் என்ற ஏழு காற்றுகளும் {வாயுக்களும்} வானில் அசைந்து கலக்கமடைந்து அச்சக்குறியீடுகளை வெளியிடத் தொடங்கின.(6) உலகங்கள் அனைத்தின் வீழ்ச்சியில் வெளிப்படும் கோள்கள் மகிழ்ச்சியுடன் வானில் சுகமாக நகர்வது தென்பட்டது.(7) (தேவையான சேர்க்கையில்லாத) யோகமற்ற நட்சத்திரங்களுடன் சந்திரன் கூடினான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, கோள்களுடனும், நட்சத்திரங்கள் அனைத்துடனும் வானம் சுடர்விடத் தொடங்கியது.(8)

நாளின் தலைவனான சூரியன் வானில் ஒளியிழந்திருந்தான். தலையற்ற கரிய பேருடல் ஒன்று வானில் தென்பட்டது.(9) சூரியன் அச்சந்தரும் வகையில் கரிய புகையை வெளியிட்டான். வானில் உள்ள தலைவன் சூரியன் வெப்பமடையத் தொடங்கி, ஒவ்வொரு கணமும் (உலகைச்) சுட்டெரிக்கத் தொடங்கினான்.(10) பிறகு, புகையால் நிறைந்த பயங்கரமான சூரியர்கள் எழுவர் வானில் எழுந்தனர். வானில் சந்திரனுடைய தலைக்கு மேல் கோள்கள் தங்கின.(11) சுக்கிரன் (வெள்ளி), பிருஹஸ்பதி (வியாழன்) ஆகியோர் {ஆகிய கோள்கள்) இடப்பக்கமும், வலப்பக்கமும் தங்கினர். செஞ்சூரியனுக்கு இணையான ஒளி பொருந்திய சனி, லோஹிதாங்கன் (செவ்வுடல் படைத்த செவ்வாய்) ஆகியோர் பின் தொடர்ந்தனர்.(12) யுகத்தை மாற்றுபவையான பயங்கரக்கோள்கள், வானில் ஒன்றாகச் சேர்ந்து நகர்ந்து (மேரு மலையின்) தங்கச் சிகரங்களெனும் கோட்டைகளுக்குள் நுழைந்தன.(13) ஏழு கோள்களால் சூழப்பட்ட சந்திரன், அசைவன, அசையாதனவற்றை அழிக்க (அழிவுக்கு வழிவகுக்க) ரோஹிணியை மதிக்காமல் வேறு நட்சத்திரங்களுடன் சேர்ந்தான்.(14) ராஹுவால் பீடிக்கப்பட்ட சந்திரன் எரிகொள்ளிகளால் வதைக்கப்பட்டான். சந்திரனுக்குள் நுழையும் சுடர்மிக்க எரிகொள்ளிகளின் காட்சி பயங்கரத்தை ஏற்படுத்தியது.(15) தேவர்களின் தலைவன் (இந்திரன்) வானில் இருந்து குருதி மழையைப் பொழிந்தான். வானில் எரிகொள்ளிகள் மின்னலைப் போல மினுமினுத்தன.(16)

மரங்கள் அனைத்தும் பருவமில்லாத காலத்தில் மலரத் தொடங்கி, கனிகளை விளைவித்தன. தைத்தியர்களின் அழிவை வெளிப்படுத்தும் வகையில் செடிகொடிகள் கனிநிறைந்திருந்தன.(17) கனிகள், கனிகளில் விளைந்தன, மலர்கள் மலர்களில் மலர்ந்தன. தேவர்கள் அனைவரின் சிலைகளும் தங்கள் கண் இமைகளைத் திறந்து, மூடி, சிரித்து, உரத்த குரலுடன் கதறி, யுக வீழ்ச்சியைக் குறிக்கும் வகையில் புகைந்து, ஒளிவீசின.(18,19) கிராமங்கள் காடுகளுடன் கலந்தன. அந்த மிருகேந்திரன் {நரசிம்மன்} அணுகியபோது விலங்குகளும், பறவைகளும் பேரச்சம் தரும் ஒலிகளை வெளியிட்டன.(20) ஆறுகள் எதிர் திசைகளில் பாய்ந்தன, உலகத்தில் வீழ்ச்சியை உண்டாக்கும் சூரியன் மதியத்தை அடைந்தபோது, நீராதாரங்கள் புழுதியடைந்தன.(21) செம்புழுதியால் கலந்த திசைகள் ஒளிவீசவில்லை. வழிபாட்டுக்குரிய மூலிகைகள், அனைத்து வகை வழிபாடுகளையும் இழந்தன.(22) காற்றானது, அடித்து, பிளந்து, தள்ளி வேகமாக வீசியது. அப்போது உயிரினங்கள் அனைத்தும் நிழலற்றவையாகின.(23)

உலகில் வீழ்ச்சியை விளைவிக்கும் சூரியன் மதியத்தை அடைந்தபோது, தைத்தியன் ஹரிண்யகசிபுவுடைய வசிப்பிடத்தின் உச்சியில்(24) இருந்த ஆயுதக்கிடங்கிலும், கருவூலத்திலும் தேனீக்கள் தங்கள் கூட்டை அமைத்தன. அதேபோல், ஆயுதக்கிடங்கில் புகையும் தென்பட்டது.(25) பெரும் எரிகொள்ளிகள் விழுவதைக் கண்ட ஹிரண்யகசிபு, தன்னுடைய தலைமை புரோஹிதரான சுக்ரரிடம் பின் வரும் சொற்களைச் சொன்னான்.(26)

ஹிரண்யகசிபு, “ஓ! தலைவரே, இந்தப் பெருங்கொள்ளிகள் விழுவதற்கான பொருளென்ன? இதன் பொருளைக் கேட்க நான் பேராவல் கொண்டுள்ளேன்” என்றான்.(27)

சுக்கிரர், “ஓ! மன்னா, ஓ! மஹாசுரா, இந்தப் பெரும் எரிகொள்ளிகள் பேரச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீழ்வதன் பொருளைச் சொல்கிறேன், என் சொற்களைக் கவனமாகக் கேட்பாயாக. (28) ஓ! மன்னா, எந்த மன்னனின் தேசத்தில் இவை (எரிகொள்ளிகளின் வீழ்ச்சி) காணப்படுமோ, அந்தத் தேசம் காணாமல் போகும், அதன் மன்னன் கொல்லப்படுவான்.(29) அனைத்தும் அழியும்போது உன் புத்தியால் அதை உறுதிசெய்வாயாக. உடனே பேரச்சம் விளையும். இதில் ஐயமேதும் இல்லை” என்றார்.(30)

சுக்கிரர் இவ்வாறே ஹிரண்யகசிபுவிடன் சொன்னார். தைத்தியேந்திரனுக்குத் தன் நல்வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு சுக்கிரர் தன் இல்லம் திரும்பினார். சுக்கிரர் சென்ற பிறகு, அந்தத் தைத்தியேந்திரன் {ஹிரண்யகசிபு} சிறிது நேரம் தியானித்தான்.(31) பெருந்துயர ஆன்மாவைக் கொண்ட அவன், தலைவன் பிரம்மனின் சொற்களை நினைவுகூர்ந்தபடியே சிறிது நேரம் அமர்ந்தான். “அசுரர்களின் அழிவுக்காகவும், தேவர்களின் வெற்றிக்காகவும் பலவகைப்பட்ட பயங்கர எரிகொள்ளிகள், அச்சந்தரும் வகையில் வீழ்வது காணப்படும்.(32) தைத்தியேந்திரர்களின் அழிவுக்காகக் காலத்தால் அமைக்கப்படும் இன்னும் பயங்கர எரிகொள்ளிகளின் வீழ்ச்சிகளும் காணப்படும்” {என்று ஹிரண்யகசிபுவிடம் முன்னர்ச் சொல்லியிருந்தான் பிரம்மன்}.(33)

அப்போது ஹிரண்யகசிபு விரைவாக ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, பெரும் வேகத்துடன் விரைந்து தரணியை {பூமியை} நடுங்கச் செய்தான்.(34) தைத்தியன் ஹிரண்யகசிபு, தன் தமையன் (ஹிரண்யாக்ஷன்) கோபத்தில் உதடுகளைக் கடித்தபடி வராஹனைக் குலுக்கியதைப் போலப் பூமியை நடுங்கச் செய்தான்.(35) பேரான்மாவான அந்தத் தைத்தியேந்திரன் (ஹிரண்யகசிபு) பூமியை நடுங்கச் செய்தபோது, அச்சத்தால் பீதியடைந்த பெரும்பாம்புகள் மலைகளை விட்டுத் தப்பி ஓடின.(36) நான்கு தலை, ஐந்து தலை, ஏழு தலை கொண்ட பெரும்பாம்புகள் தங்கள் வாய்களில் நஞ்சுமிக்கத் தழல்களை வெளியிட்டு நெருப்பைக் கக்கின.(37) வாசுகி, தக்ஷகன், கார்க்கோடகன், தனஞ்சயன், ஏலாபத்திரன், காளியன், வீரியவானான மஹாபத்மன் ஆகியோரும், ஆயிரந்தலைகளையும், பொன்தாலத்தைக் கொடியாகக் கொண்டவனும், பாம்புகளின் தலைவனும், பெரும்நாகனும், எல்லையற்றவனும், உலகைப் பாதுகாப்பவனும், நடுக்கமடையாதவனுமான சேஷனும் கூட (ஹிரண்யகசிபுவால்) நடுக்கத்தை அடைந்தனர்.(38,39) பூமியைச் சுமக்கும் மலைகளும், நீரைத் தாங்கும் பிரகாசமிக்க மலைகளும் கூடக் கோபமடைந்த அந்தத் தைத்தியனால் நடுக்கமடைந்தன.(40)

பாதாளத்தில் பாய்வதும், பாம்புகளின் ஒளியை சுமப்பதும், நடுங்கச் செய்ய அரிதானதுமான மங்கல நீர்நிலையும் திடீரெனக் கோபமடைந்தது. பாகீரதி {கங்கை} ஆறும், சரயுவும், கௌசிகியும்,(41,42) யமுனை, காவேரி, கிருஷ்ணை, வேணை, ஸுவேணை, நற்பேறுபெற்ற ஆறான கோதாவரி,(43) சர்மண்வதி ஆகியனவும், மேகல மலையில் தோன்றும் ஆறும், ரத்தினம் போன்று தூய்மையான நீரைக் கொண்டதும், ஆறுகளின் தலைவனுமான சிந்து,(44) நல்ல பிறப்பிடத்துடன் கூடிய நீரைக் கொண்ட நர்மதை, வேத்ரவதி, பசுக்கொட்டில்கள் பலவற்றால் நிறைந்த கரைகளைக் கொண்ட கோமதி, முழுமையாகப் பாயும் சரஸ்வதி,(45) மஹீ, காலநதி, புனித நீரைக் கொண்ட தமசை, சிதை, செக்ஷுமதி, தேவிகை, மஹாநதி ஆகிய ஆறுகளும்,(46) ரத்தினங்களால் நிறைந்ததும், அனைத்து வகை ரத்தினங்களும் பளபளப்பதுமான ஜம்பூத்வீபம் {நாவலந்தீவு}, பொன்னால் அலங்கரிக்கப்பட்ட சுவர்ணகூடக மலை ஆகியன அனைத்தும் அந்தத் தைத்தியனால் நடுக்கமடைந்தன.(47)

மலைகளாலும், காடுகளாலும் அலங்கரிக்கப்பட்ட லோஹித்யமெனும் பேராறு, கௌசிகாரண்யம் என்ற நகரம், வெள்ளி நிறைந்த திரவிடம் என்ற இடம்,(48) பெரும் நிலமான மாகதம், அங்கம், வங்கம், சுஹ்மம், மல்லம், விதேஹம், மாளவம், காசி, கோசலம்,(49) பொன்னிறம் கொண்ட வைனதேயனின் புவனமும் {கருடனின் நிலமும்} ஹிரண்யகசிபுவால் நடுக்கமடைந்தன. சிகரத்தின் வடிவில் விஷ்வகர்மனால் அமைக்கப்பட்ட கைலாச மலை,(50) குருதியின் நிறத்திலான நீரைக் கொண்டதும், பெரும் வேகத்தில் அசைவதும், லௌஹித்யம் என்ற பெயரைக் கொண்டதுமான பெருங்கடலும், வெண்மேகம் போன்ற வண்ணத்தில் நீரைக் கொண்ட பாற்கடலும்,(51) பாம்புகளாலும், பறவைகளாலும் தொண்டாற்றப்படும் மங்கலமான பொன் பீடங்களையும், நூறு யோஜனை உயரத்தையும் கொண்ட உதய மலை,(52) முழுமையாகப் பொன்னாலானவையும், சூரியனைப் போலப் பிரகாசிப்பவையும், மலரும் சாலம், பனை, தமாலம், கர்ணிகாரம் போன்ற மரங்களைக் கொண்டவையுமான மலைகள்,(53) அனைத்து வகைத் தாதுக்களையும் கொண்ட அயோமுகம் என்ற பெரிய மலை, வெண்மலர்கள் மலர்ந்த தமால மரக்காடுகளின் மணம் நிறைந்ததும், மங்கலமானதுமான மலய மலை ஆகியவையும்,(54) ஸுராஷ்ட்ரம், ஸுபாஹ்லீகம், ஷூரம், ஆபீரம், போஜம், பாண்டியம், வங்கம், கலிங்கம், தாமரலிப்தகம், ஆந்திரம், புண்டரம், வாமுசூடம், கேரளம் ஆகியனவும், தேவகணங்களும், அப்சரஸ்களும்  நடுக்கமடைந்தனர்.(56)

நீண்ட காலத்திற்கு முன்பு படைக்கப்பட்டதும், எவராலும் அடைய முடியாததும், மனத்தைக் கொள்ளை கொள்வதும் சித்தர்கள், சாரணர்களாலும், அப்சரஸ்களாலும் தொண்டாற்றப்படுவதும், விசித்திர பாம்புகள், பறவைகள், மலர்ந்த செடிகொடிகள், மரங்கள் ஆகியவற்றைக் கொண்டதும், பொன்னாலான சிகரங்களைக் கொண்டதுமான அகஸ்திய புவனமும் {அகஸ்தியரின் நிலமும்} அவ்வாறே நடுங்கியது.(57,58) செல்வம் நிறைந்ததும், காண்பதற்கு இனியதும், சந்திரனையும், சூரியனையும் துணையாகக் கொண்டு கடலைப் பிளந்து எழுந்ததும், பெருஞ்சிகரங்களால் ஒளிர்ந்ததும், வானத்தைத் தீண்டுவதும், சூரிய, சந்திர கதிர்களால் ஒளிரும் சிகரங்களைக் கொண்டதும், பெருங்கடலின் நீரால் சூழப்பட்டதுமான புஷ்படக மலையும் அவ்வாறே நடுங்கியது.(59,60) வானில் இருந்து இடிகளை வாங்கிக் கொள்வதும், மலைகளில் சிறந்ததும், நூறு யோஜனை உயரம் கொண்டதும், மங்கலமானதுமான வித்யுத்வான் மலையும் அவ்வாறே நடுங்கியது.(61) 

மங்கலமான ரிஷபர்கள் வாழும் ரிஷப மலையும், அகஸ்திய முனிவரின் வசிப்பிடம் இருக்கும் குஞ்சர மலையும்,(62) வெல்லப்படமுடியாத விஷாகரத்யம் என்ற பெயரைக் கொண்ட நகரமும், நாகர்களின் வசிப்பிடமான போகவதி நகரமும் அந்தத் தைத்தியேந்திரனால் (ஹிரண்யகசிபுவால்) நடுக்கமடைந்தன.(63) மஹாமேக மலை, பாரியாத்ர மலை, சக்ரவான் மலை, வராஹ மலை,(64) மங்கலமானதும், தீய ஆன்மாவான தானவன் நரகன் வாழும் பொன்னகரமான பிராக்ஜோதிஷபுரம்,(65) மேகங்கள் முழங்கும் சிறந்த மலையும், அறுபதாயிரம் மலைகளைக் கொண்டதுமான மேரு மலை,(66) பாலசூரியனைப் போல ஒளிர்வதும், மங்கலமானதும், புனிதமானதும், சொர்க்கத்திற்கே உயர்ந்து செல்வதும், மலைகளின் மன்னனுமான பெரிய மஹேந்திர மலை,(67) ஹேமசிருங்கமெனும் பெரும் மலை, மேகசக மலை, அசைக்க அரிதான கைலாச மலை ஆகியனவும் அந்தத் தானவேந்திரனால் (ஹிரண்யகசிபுவால்) நடுக்கமடைந்தன.(68) 

யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் வாழும் குகைகளைக் கொண்டவையும், மங்கலமானவையும் எப்போதும் மலரும் மரங்களைக் கொண்டவையுமான மலைகள்,(69) பொன்தாமரைகளால் மறைக்கப்பட்ட வைகானச தடாகம், அன்னங்களால் தொண்டாற்றப்படும் மானஸத் தடாகம் ஆகியவையும் அந்த அசுரனால் நடுக்கமடைந்தன.(70) விஷ்ருங்க மலை, ஆறுகளில் சிறந்த குமாரி ஆறு, பனியைப் போன்று வெண்மையான மந்தர மலை,(71) உஷீரபீஜ மலை, மலைகளின் மன்னனான ருத்ரோபாஷ்ட மலை, பிரஜாபதியின் வசிப்பிடமான புஷ்கர மலை,(72) தேவாவிருத மலை, வாலுக மலை, கிரௌஞ்ச மலை, சப்தரிஷி மலை, தூமவர்ண மலை,(73) ஆகிய மலைகள், தேசங்கள், ஜனபதங்கள் {சமூகங்கள்}, ஆறுகள், பெருங்கடல்கள் என அனைத்தும் அந்தத் தானவேந்திரனால் {ஹிரண்யகசிபுவால்} நடுக்கமடைந்தன.(74) பூமியின் மகனான கபிலரும், வியாகிராக்ஷனும் நடுக்கமடைந்தனர். வானுலாவிகளும், பாதாள உலகில் வசிக்கும் இரவுலாவிகளும்,(75) மேகநாதன், அங்குஷாயுதன், பீமவேகன் உள்ளிட்ட பயங்கரப் பூதகணங்களும் அவ்வாறே {அந்த தைத்தியன் ஹிரண்யகசிபுவால்} நடுக்கமடைந்தனர்” என்றார் {வைசம்பாயனர்}[1].(76)

ஹிரண்யகசிபு வதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 39-(ஹிரண்யகஷிபோர்வதோ ப்ரஹ்மக்ருதா ந்ருஸிம்ஹஸ்துதிஷ்ச )-ஹிரண்யகசிபுவைக் கொன்ற நரசிம்மன்; பிரம்மன் சொன்ன நரசிம்ம துதி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஆதித்யர்கள், சாத்யர்கள், விஷ்வர்கள், மருத்துகள், ருத்திரர்கள், தேவர்கள், மஹாத்மாக்கள், பெருஞ்சக்திவாய்ந்த வசுக்கள்,(1) தேவர்கள் ஆகியோர் அனைவரும் உலகின் வீழ்ச்சியால் அச்சமடைந்து, ஒடுக்கப்பட்டவர்களாகச் சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த மிருகேந்திரனிடம் சென்று,(2) “ஓ! தேவா, உலகை அழிப்பவனும், ஒழுக்கங்கொண்டவனும், தீமைகளைச் செய்பவனுமான இந்தத் திதியின் மகனையும் {ஹிரண்யகசிபு}, அசுரர்கள் அனைவரையும் கொல்வாயாக.(3) ஓ! தைத்தியர்களை அழிப்பவனே, இந்தத் தைத்தியர்கள் அனைவரையும் கொல்பவன் நீயே. வேறு யாரும் இல்லை. உலகின் நலத்திற்காகவும், நன்மைக்காகவும் இவர்களை அழிப்பாயாக.(4) உலகங்கள் அனைத்தின் ஆசான் நீயே. பெரும்பாட்டனும் {பிரம்மனும்}, இந்திரனும் நீயே. உண்மையில், கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் உன்னையன்றி வேறு புகலிடம் ஏதும் கிடையாது” என்றனர்.(5)

தொடக்கத்தில் தேவர்களில் பிறந்த அந்தத் தலைவன், இந்தச் சொற்களைக் கேட்டுப் பேரொலியுடன் முழங்கினான்.(6) பேரான்மாவான அந்த மிருகேந்திரன், சிங்க முழக்கம் செய்து தைத்தியேந்திரர்களின் இதயங்களையும், மனங்களையும் உற்சாகமிழக்கச் செய்தான்.(7) குரோதவாச, காலகேய, வேக, வைகதேய, துணிவுமிக்கச் சைம்ஹிகேய கணங்களும்,(8) ஸம்ஹ்ராதீய, மஹாநாத, மஹாவேக, கபில, மஹீபுத்ர, வியாக்ராக்ஷ, க்ஷிதிகம்பன கணங்களும்,(9) வானுலாவிகளும், இரவுலாவிகளும், பாதாளவாசிகளும், மேகநாதன், அங்குஷாயுதன்,(10) ஊர்தவேகன், பீமவேகன், பீமகர்ம, அர்கலோசனட், வஜ்ரீ, ஷூலி, கராலன், ஹிரண்யகசிபு உள்ளிட்ட அசுரர்களும் {நரசிம்மனுடன்} போரிட்டுக் கொண்டிருந்தனர்(11)

அடர்மேக வடிவம் கொண்டவனும், மேக வேகம் கொண்டவனும், மேகமாக முழங்குபவனும், மேகமாக ஒளிர்பவனும்,(12) தேவர்களின் பகைவனும், திதிக்குப் பிறந்தவனும், செருக்குமிக்கவனுமான ஹரிண்ய கசிபு, நரசிம்மனை நோக்கி விரைந்தோடி தன் கூட்டத்தாருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மஹாத்மாவான அந்த மிருகேந்திரனை அடைந்தான்.(13) அப்போது அந்த மிருகேந்திரன் {நரசிம்மன்}, முன்னே சாடி குதித்து, ஓங்காரத்தின் துணையுடன் தன் பெரும் நகங்களால் ஹிரண்யகசிபுவின் உடலைத் துண்டுகளாகக் கிழித்து அந்தப் போரில் அவனைக் கொன்றான்.(14) அந்தத் திதியின் மகன் {ஹிரண்யகசிபு) அழிந்ததும், பூமி {நிலம்}, உலகம், சந்திரன், வானம், சூரியன், திசைகள், ஆறுகள், மலைகள், பெருங்கடல்கள் ஆகியன அனைத்தும் ஒளியூட்டப்பட்டன.(15) அப்போது, தேவர்களும், தவத்தையே செல்வமாகக் கொண்ட ரிஷிகளும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் பல பாடல்களால் அந்த நித்திய தலைவனைத் துதித்து அவனை மகிழ்ச்சியடையச் செய்தனர்.(16)

தேவர்கள், “ஓ! தலைவா, கடந்த காலம், நிகழ் காலம் ஆகியவற்றின் காரணக் காரியங்களை அறிந்த ஞானிகளால், நீ ஏற்றிருக்கும் இந்த நரசிங்க வடிவம் வழிபடப்படும். உலகங்கள் அனைத்திலும் இந்த மிருகேந்திரனை அனைத்து உயிரினங்களும் துதிக்கும்.(17) முனிவர்கள் எப்போதும் உன்னை மிருகேந்திரனான நரசிம்மனாகப் பாடுவார்கள். ஓ! தலைவா, உன் விருப்பத்தால் நாங்கள் எங்கள் இடங்களை மீளப்பெற்றோம்” என்றனர்.(18)

தேவகணங்களால் இவ்வாறு துதிக்கப்பட்ட நரசிம்மன் பெரும் நிறைவடைந்தான். அப்போது பிரம்மனும் நிறைவடைந்து, விஷ்ணு ஸ்தோத்திரத்தைச் சொன்னான்.(19) பிரம்மன், “ஓ! தலைவா, வீழ்ச்சியற்றவன் நீயே, வெளிப்படாதவன் நீயே, கற்பனைக்கெட்டாதவன் நீயே, புதிரானவனும், சிறந்தவனும் நீயே, உயர்ந்தவனும், மாற்றமில்லாதவனும் நீயே, படைப்பாளனற்ற நித்திய படைப்பாளியும் நீயே. சிதைவற்றவன் நீயே.(20) நித்தியனும், நிலைத்தவனுமான புருஷன் நீயே. கோட்பாடுகளின் பொருளில் நிறுவப்படும் சாங்கிய யோகத்தில் நிலைக்கும் புத்தியைக் குறித்து அறிந்த ஞானாத்மா நீயே.(21) வெளிப்பட்டவனும், வெளிப்படாதவனும் நீயே. மொத்த அண்டமூம் நீயே. ஓ! தலைவா, நாங்களும் நீயே. ஆன்மா நீயே, தலைவன் நீயே.(22) நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட உடலைக் கொண்டவன் நீயே, உலகங்கள் அனைத்தின் ஆசானும் தலைவனும் நீயே. ஆயிரக்கணக்கான நான்கு யுகங்களில் உலகங்கள் அனைத்தையும் அழிப்பவனை அழிப்பவன் நீயே.(23) நான்கு வேதங்களும், நான்கு ஹோத்ரங்களும், நான்கு ஆன்மாக்களும் நீயே, நித்தியன் நீயே. அனைத்து உயிரினங்களின் புகலிடம் நீயே. எல்லையற்ற பலமும், வலிமையும் கொண்டவன் நீயே. கபிலர் முதலிய யதிகளின் பரமகதி நீயே.(24) தொடக்கமும், நடுநிலையும், முடிவும் அற்றவன் நீயே. அண்டத்தின் ஆன்மா நீயே. புருஷர்களில் சிறந்தவன் {புருஷோத்தமன்} நீயே. படைப்பவன் நீயே, அழிப்பவன் நீயே. மக்களின் நலத்தில் கவனம் கொண்ட ஒரே ஒருவன் நீயே.(25) பிரம்மனும், ருத்திரனும், பெரும் இந்திரனும், வருணனும், யமனும் நீயே. செயலைச் செய்பவன் நீயே, செய்த செயலில் இருந்து விடுவிப்பவனும் நீயே. வீழ்ச்சியில்லாத உலகத்தலைவன் நீயே.(26)

பரம சித்தியும் {திறனில் உயர்ந்தவனும்}, பரம தேவனும் {தேவர்களில் மேலானவனும்}, பரமமந்திரமும் {மந்திரங்களில் மேன்மையானவனும்}, பரம மனதும் {மனத்தில் மேன்மையானவனும்}, பரம தர்மமும், பரம புகழும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(27) பரம சத்தியமும், பரம ஹவிஸும், பரம பவித்ரமும், பரம மார்க்கமும், பரம ஹோத்ரமும், பரம யஞ்ஜமும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(28) பரம உடலும், பரம வசிப்பிடமும், பரம யோகமும், பரம வாக்கும், பரம ரகசியமும், பரம கதியும், பரம பிரபுவும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(29) முதன்மையானவர்களில் மிக உயர்ந்தவனும், தேவர்களில் மிக உயர்ந்தவனும், தலைவர்களில் மிக உயர்ந்தவனும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(30) முக்கியமானவற்றில் மிக உயர்ந்தவனும், கோட்பாடுகளில் மிக உயர்ந்தவனும், படைப்பாளர்களில் மிக முதன்மையானவனும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(31) ரகசியங்களில் மிக உயர்ந்தவனும், உயர்ந்தவற்றில் மிக உயர்ந்தவனும், உயர்ந்த தவமும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(32) புகலிடங்கள் அனைத்திலும் மிக உயர்ந்தவன் நீயே, வடிப்பிடங்களில் மிக உயர்ந்தவன் நீயே, தலைமைத்துவங்களில் மிக உயர்ந்தவன் நீயே, புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே” என்று துதித்தான் {பிரமம்ன்}.(33)

உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனால் இவ்வாறே பகவான் துதிக்கப்பட்டான். தலைவனான நாராயணனைத் துதித்துவிட்டு தலைவன் பிரம்மன் பிரம்மலோகத்திற்குச் சென்றான்.(34) இசைக்கருவிகள் இசைக்கப்பட, அப்சரஸ்கள் நடனமாட, பாற்கடலின் வடகரைக்கு ஈஷ்வரன் {நரசிங்கனான விஷ்ணு} சென்றான்.(35) கருடனைத் தன் கொடியில் கொண்ட தலைவன், நரசிங்க வடிவை விட்டு அகன்று, (உரிய இடத்தில்) உடலை நிறுவி தன் அசல் வடிவை ஏற்றுச் சென்றான்.(36) இயற்கையின் தலைவனும், வெளிப்படாதவனுமான அந்தத் தலைவன், காந்தியால் ஒளிர்வதும், எட்டுச் சக்கரங்களைக் கொண்டதுமான வாகனத்தில் தன் இடத்திற்குச் சென்றான்.(37) இவ்வாறே நீண்ட காலத்திற்கு முன்பு நரசிம்ம உடலைக் கொண்டவனும், பேரான்மாவுமான தலைவனால் ஹிரண்யகசிபு கொல்லப்பட்டான்” என்றார் {வைசம்பாயனர்}[1].(38)

பலியின் பட்டாபிஷேகம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 40-(வாமநப்ராதுர்பாவே பலேரபிஷேக꞉)-வாமன அவதாரம்; தைத்தியர்களின் மன்னனாக நிறுவப்பட்ட பலி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இவ்வாறே நான் உனக்கு நரசிம்ம அவதாரத்தை விளக்கிச் சொன்னேன். இனி வாமன அவதாரத்தைச் சொல்லப் போகிறேன்.(1) முற்காலத்தில் பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு குள்ள வடிவை ஏற்று, பெருஞ்சக்திவாய்ந்த பலியின் வேள்வியில் மூன்று காலடிகளால் மூவுலகங்களின் அரசை அடைந்தான்.(2) அவன் {பெருங்கடலால் சூழப்பட்டதும், யானைகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டதுமான} பூமியை விடுவித்து, அதைத் தேவர்களின் மன்னனுக்கு அளித்தான்[1]” என்றார் {வைசம்பாயனர்}.(3){ஜனமேஜயன், “ஓ! பிராமணரே, இங்கே எனக்கோர் ஐயம் இருக்கிறது. தலைவன் நாராயணன் எவ்வாறு குள்ள வடிவை ஏற்றான் என்பதை அறிய நான் பேராவல் கொண்டுள்ளேன்.(4) தலைவன் நாராயணன், புராணங்களில் புராதன ஆன்மா எனவும், தாமரை உந்தி படைத்தவன், பெருஞ்சக்திவாய்ந்த தோள்களைக் கொண்டவன், உலகின் உண்மையான இயல்பானவன், அசைக்க முடியாத நித்தியன்,(5) ஆதியும் அந்தமும் இல்லாதவன், மூவுலகங்களின் பிறப்பிடமானவன், தலைவர்களின் தலைவன், தேவர்களின் தலைவன், கரிய மேனி கொண்டவன், உலகத்தால் வணங்கப்படுபவன்,(6) வேள்விகளின் ஹவ்யகவ்யங்கள் அனைத்தையும் சுமந்து செல்பவன், மங்கலமானவன், வேள்விகளின் ஹவ்யகவ்யங்கள் அனைத்தையும் அனுபவிப்பவன், வீழ்ச்சியற்றவன் எனவும் சொல்லப்படுகிறான். அந்தத் தலைவன், தேவர்களின் அன்னையான அதிதியின் கருவறைக்குள் எவ்வாறு நுழைந்தான்? வாசவனையே {இந்திரனையே} படைத்தவன் எவ்வாறு வாசவனின் தம்பியானான்?(7) தலைவர்களுக்கெல்லாம் தலைவனானவன், பிறவியை அடைந்த பிறகு, எவ்வாறு விஷ்ணுவின் நிலையை அடைந்தான்? ஓ! விப்ரரே, அந்தப் பேராத்மாவின் அவதாரத்தைக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(8)

வைசம்பாயனர், “ஓ! மன்னா, மஹாரிஷிகளால் வழிபடப்படும் இந்தத் தெய்வீகக் கதையைக் கேட்பாயாக. பிரம்மனால் சொல்லப்பட்டதும், பிராமணர்களால் ஓதப்படுவதுமான இதைப் புலவர்களும் புராணங்களில் பாடியிருக்கின்றனர்.(9)}

மரீசியின் மகனும், தேவர்களின் தலைவரும், உயிரினங்களின் தலைவருமான {பிரஜாபதியுமான} கசியபர், திதி, அதிதி என்ற இருவரையும் மனைவிகளாகக் கொண்டிருந்தார்.(10) உயரான்மாவான அந்தக் கசியபர், அதிதியிடம் தாதா, ஆர்யமான், மித்ரன், வருணன், அம்சன், பகன்,(11) இந்திரன், விவஷ்வான், பூஷன், பர்ஜன்யன், துவஷ்தன், விஷ்ணு ஆகிய பனிரெண்டு {12} வகைத் தேவர்களைப் பெற்றார்.(12)

அவர் {கசியபர்}, திதியிடம் பெருஞ்சக்திவாய்ந்த ஹிரண்யகசிபுவைப் பெற்றார். பெருஞ்சிறப்புமிக்கத் தைத்தியேந்திரனான ஹிரண்யாக்ஷன் அவனது தமையனாவான்.(13) ஹிரண்யகசிபுவுக்கு, பெருஞ்சக்திவாய்ந்தவர்களான பிரஹ்லாதன், ஹிராதன், சங்கிரதன், ஜம்பன், அநுஹ்ராதன் என்ற ஐந்து மகன்கள் இருந்தனர்.(14) பிரஹ்லாதனின் மகன் விரோசனனும், விரோசனனின் மகன் பலியும் ஆவர். அவர்களின் மகன்களும், பேரர்கள் அனைவரும் பெருஞ்சக்திவாய்ந்தவர்களாக, வீழ்ச்சியற்றவர்களாகவும் இருந்தனர்.(15) {பெரும் மனம் கொண்டவர்களும், மகிமைமிக்கவர்களுமான தைத்தியேந்திரர்களும், தேவர்களின் பகைவர்களும், ஒவ்வொரு நிலத்திலும் ஆயிரக்கணக்கில் கூட்டங்கூட்டமாக இருந்தனர்.(16)}

நரசிங்கத்தால் ஹிரண்யகசிபு கொல்லப்பட்டதைக் கண்ட அந்தத் தைத்தியர்கள், தேவர்களை அழிப்பதற்காகப் பலியைத் தங்கள் இந்திரனாக்கினர் {தலைவனாக்கினர்}.(17) அவன் {பலி} தர்மத்தில் எப்போதும் நிலைப்பவனாகவும், எப்போதும் வாய்மை பேசுபவனாகவும், புலன்களை வென்றவனாகவும், வீரனாகவும், ஞானங்கள் அனைத்திலும் நிபுணனாகவும்,(18) எதிர்காலத்தையும், பின்விளைவுகளையும் நன்கு புரிந்து கொண்டவனாகவும், வீழ்ச்சியற்ற கோட்பாடுகளை உணர்ந்தவனாகவும், மகிமைமிக்கவனாகவும், ஹிரண்யகசிபுவைப் போலவே தேவர்களின் பகைவனாகவும் இருந்தான்.(19) விரோசனனின் மகனான அந்தப் பலியை, தைத்தியர்கள் தங்கள் மன்னனாக நிறுவிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் அவனைத் தைத்தியாதிபதியாக நியமித்து வழிபட்டனர்.(20) {ஹிரண்யகசிபுவின் இடத்தில் தைத்தியர்கள் பெருஞ்சக்தி வாய்ந்தவர்களில் சிறந்தவனான பலியைத் தங்கள் மன்னனாக நிறுவிக்கொண்டனர். பிரம்மனும் இதில் மகிழ்ச்சியடைந்தான்.(21) புனித நீர்நிலைகள் அனைத்தில் இருந்தும் கொண்டு வந்த நீரால் நிரப்பப்பட்ட பொற்குடங்களைக் கொண்டு விரோசனன் மகனான பலியை அந்த அசுர கணங்கள் தங்கள் மன்னனாக அபிஷேகம் செய்தனர்.{22} அந்தத் தானவர்கள், ஜெயம் என்று சொன்னபடியே ஒப்பற்ற வீரத்தைக் கொண்ட பலியை (மன்னனாக்கி) சிம்மாசனத்தில் அமரச்செய்தனர்.(23) தானவர்கள் அனைவரும், பெருஞ்சக்தி வாய்ந்தவர்களில் சிறந்தவனான பலியைத் தங்கள் இந்திரனாக்கி, தங்கள் தலையால் தரையைத் தீண்டி அவனை வணங்கினர்.(24)}[2]அந்தத் தைத்திர்கள், “ஓ! தைத்திய மன்னா {பலியே}, அசைவன, அசையாதன, மூவுலகங்கள் உள்ளிட்ட மொத்த அண்டமும் ஹிரண்யகசிபுவுடைய அதிகாரத்தின் கீழ் இருந்ததை நீ நன்கறிவாய்.(25) ஓ! தேவர்களைக் கொல்பவனே, தேவர்கள் உன்னுடைய பெரும்பாட்டனைக் கொன்றுவிட்டு, மூவுலகங்களையும் களவு செய்து, இந்திரனைத் தங்கள் மன்னனாக நியமித்துக் கொண்டனர்.(26) எனவே, ஓ! தலைவா, நீ எங்கள் உதவியுடன் உன்னுடைய மூதாதையரின் அரசை மீட்பாயாக. உனக்கு நன்மை நேரட்டும், நீ உன் மூதாதையரின் அரசை மீளப் பெறுவாயாக.(27) ஆயிரக்கணக்கான அசுரர்கள் சூழ தேவலோகம் சென்று தேவர்களை வெல்வாயாக. உன் ஆற்றலும், பலமும் எல்லையற்றவை, உன் சிறப்புத் திறமைகளால் நீ உன் பாட்டனையும் விஞ்சியவனாக இருக்கிறாய்” என்றனர் {என்றார் வைசம்பாயனர்}[3].(28)

————————————-—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பவிஷ்ய பர்வம்-பகுதி 1-

October 19, 2025

ஜனமேஜயன் குடும்பம்! | பவிஷ்ய பர்வம் பகுதி – 01-ஜனமேஜயனின் வம்சம் கூறப்படல்…

ஜனமேஜயன் -மனைவி -வபுஷ்டமா -மகள் காசிமன்னனை மணந்தார்
ஜனமேஜயன் -மனைவி -வபுஷ்டமா-இரண்டு மகன்கள் -சந்த்ரபீடனும் சூர்ய பீடனும்
சந்த்ரபீடனுக்கு 100 மகன்கள் -அவர்களில் ஒருவன் சத்யகர்ணன் -அவனுக்கு ஸ்வேதகர்ணன் -அவன் மாலினியை மணந்து அஜபார்ஷன் பிறந்தான்

ஜனமேஜயன், சந்திரபீடன், சத்யகர்ணன், ஸ்வேதகர்ணன், அஜபார்ஷன் என ஐந்து தலைமுறைகளுக்குப் பிறகு சொல்லப்படுவது பவிஷ்ய பர்வம் 

இப்போதோ இன்னும் மூன்று தலைமுறைகளை அதிகமாகச் சொல்கிறார். எனவே மஹாபாரதம் சொல்லப்பட்டதற்கும், இந்த பவிஷ்ய பர்வம் சொல்லப்பட்டதற்கும் இடையில் நிச்சயம் மூன்று தலைமுறை இடைவெளி இருக்க வேண்டும்

சௌனகர் {சௌதியிடம்}, “ஓ! லோமஹர்ஷணர் மகனேஜனமேஜயனின் மகன்கள் யாவர்? பாண்டவர்களின் வம்சம் யாரால் நிறுவப்பட்டது?(1) இந்த வரலாற்றைக் கேட்கும் ஆவலால் நான் பீடிக்கப்பட்டிருக்கிறேன். எனவே, நீ சொன்னவற்றில் உள்ள ஒவ்வொரு தகவலையும் நான் கற்க விரும்புகிறேன்” என்று கேட்டார்.(2)

சௌதி, “பரிக்ஷித்தின் மகனான ஜனமேஜயன், தன் மனைவியான காசியையிடம் {காசியின் இளவரசியான வபுஷ்டமாவிடம்}, மோக்ஷ ஞானம் அறிந்த மன்னர்களான சந்திரபீடன், சூரியபீடன் என்ற இரு மகன்களைப் பெற்றான்[1].(3) நுண்ணறிவுமிக்க வில்லாளிகளாகத் திகழ்ந்த சந்திரபீடனின் நூறு மகன்களும், க்ஷத்திரியர்களுக்குத் தகுந்த பணிகளைச் செய்ததன் மூலம் ஜனமேஜயர்கள் என்ற பட்டப்பெயர்களுடன் பூமியில் புகழை அடைந்தனர்.(4)அவர்களில் மூத்தவனும், நீண்ட கரங்களைக் கொண்டவனும், ஏராளமான கொடைகளுடன் கூடிய வேள்விகள் பலவற்றைச் செய்தவனுமான சத்யகர்ணன்[2], வாரண நகரத்தின் {ஹஸ்தினாபுரத்தின்} அரியணையில் நிறுவப்பட்டான்.(5) சத்யகர்ணனின் மகனும், அறம்சார்ந்தவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான ஸ்வேதகர்ணன், பிள்ளையற்றவனாக இருந்ததால், தன் மனைவியுடன் காடு புகுந்தான்.(6) அழகிய புருவங்களைக் கொண்டவளும், {ஸுசாருவின் மகளும்}, எழில்மிகு யதுகுல இளவரசியுமான மாலினி, கானுலாவியான ஸ்வேதகர்ணனின் மூலம் கருவுற்றாள்.(7) அவள் கருவுற்றதும், குடிமுதல்வனான ஸ்வேதகர்ணன், நன்மையைத் தேடி தன் முப்பாட்டன்களைப் போலக் கான்புகுந்தான்.(8)கருவுற்றிருந்த மாலினி, தன் கணவன் காட்டுக்குள் ஓய்ந்து செல்வதைக் கண்டு, அவனைப் பின்தொடர்ந்து சென்று, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட ஒரு மகனை வழியில் ஈன்றெடுத்தாள்.(9) பழங்காலத்தில் தன் கணவர்களைப் பின்தொடர்ந்து சென்ற திரௌபதியைப் போலவே[3], (சூதாட்டத்தில் தோற்று நாட்டை இழந்து பாண்டவர்கள் கான்புகுந்தபோது, திரௌபதி தன் மகன்களைத் தன் அண்ணன் திருஷ்டத்யும்னனுடன் அனுப்பிவிட்டு, கணவர்களுடன் கான்புகுந்தாள்.)கற்புடையவளும், உன்னதமானவளுமான மாலினியும், புதிதாகப் பிறந்த குழந்தையை விட்டுவிட்டு தன் துணைவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.(10) அன்னையிடம் இருந்து பிரிந்த பச்சிளங்குழந்தை, மலைக்குகையில் அழுது கொண்டிருந்தபோது, அந்தப் பேரிளவரசனிடம் இரக்கங்கொண்ட சில நாரைகள் அங்கே வந்தன[4].(11)சிரவிஷ்டரின் மகன்களான ரிஷிகள் பிப்பலாதரும், கௌசிகரும், அழுது கொண்டிருக்கும் இளவரசனைக் கண்டு, இரக்கம் கொண்டு அவனை எடுத்தனர். பாறையில் தேய்ந்து, குருதியில் நனைந்திருந்த அவனது விலாப்புறங்களை அவர்கள் நீரால் கழுவினர்.(12) அந்த இளவரசனின் விலாப்புறங்கள், ஆட்டுக்கு இருப்பதைப் போன்ற அடர்நீல வண்ணத்தில் வலுவான கட்டமைப்புடன் பருத்திருந்தன. எனவே அவன் அஜபார்ஷன் என்ற பெயரால் அழைக்கப்பட்டான்.(13) இருபிறப்பாளர்களில் முதன்மையானவர்களான அவ்விருவரும் {பிப்பலாதரும், கௌசிகரும்}, அவனுக்கு அஜபார்ஷன் என்ற பெயரைச் சூட்டி, வேமகர் என்ற பெயரைக் கொண்ட ஒரு ரிஷியின் வீட்டில் அவனை வளர்த்து வந்தனர்.(14) வேமகரின் மனைவியானவள், அஜபார்ஷனைத் தன் மகனாக வளர்த்ததால், அவன் வேமகரின் மகனானான், அவ்விரு பிராமணர்களும் {பிப்பலாதரும், கௌசிகரும்} அவனது குடும்ப உறுப்பினர்களானார்கள். அஜபார்ஷனும், பிப்பலாதர், கௌசிகர் ஆகியோரின் மகன்களும், பேரர்களும் ஒன்றாகவே வாழ்ந்தனர். பூரு குலத்தில் பிறந்த இந்த அஜபார்ஷனே பாண்டவ வம்சத்தைத் தழைக்கச் செய்தான்[5].(16)

நுண்ணறிவுமிக்கவனும், நகுஷனின் மகனுமான யயாதி, நீண்ட காலத்திற்கு முன்பு முதுமைப் பரிமாற்றம் செய்து கொண்டபோது, இந்த ஸ்லோகத்தை மகிழ்ச்சியுடன் பாடினான்.(17) {யயாதி}, “பூமியில், சூரிய, சந்திரர்களும், கோள்களும் இல்லாமல் போகலாம், ஒருபோதும் அது {பூமி} பூருக்கள் {பூரு குலத்தவர் / பௌரவர்கள்} அற்றதாகாது” {என்று பாடினான் யயாதி” என்றார் சௌதி}.(18)

ஜனமேஜயன் வேள்வியில் வியாசர்! | பவிஷ்ய பர்வம்-(வியாஸம் ப்ரதி ராஜஸூயவிஷயே ஜநமேஜயப்ரஷ்நம்)-நாக வேள்வி நிறைவடைந்ததும், ராஜசூய வேள்வி செய்ய விரும்பி அதற்கான பொருட்களைத் திரட்டிய ஜனமேஜயன்; வியாசர் அங்கே வந்தது; ஜனமேஜயனின் ஐயங்களைத் தீர்த்தது…

சௌனகர் {சௌதியிடம்}, “வியாசரின் சீடரால் {வைசம்பாயனரால்} மீளுரைக்கப்பட்டதைப் போலவே அனைத்துப் பர்வங்களுடன் ஹரிவம்சத்தை மொத்தமாக எனக்கு உரைத்திருக்கிறாய்.(1) அமுதத்தைப் போன்றதும், பாவங்கள் அனைத்தையும் அழிக்கவல்லதுமான முடிவற்ற ஹரிவம்ச வரலாறு நம்மை நிறைவடையச் செய்யட்டும்.(2) ஓ! பொறுமையுடன் கூடியவனே, இந்த வரலாறு காதுகளுக்கு இனிமையாக இருப்பதால் எங்கள் இதயங்களுக்கு {மனங்களுக்குப்} பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. ஓ! சௌதி, சர்ப்ப யக்ஞம் {நாக வேள்வி} நிறைவடைந்ததும் அற்புதமிக்க இந்த வரலாற்றை {ஹரிவம்சத்தைக்} கேட்ட பிறகு, மன்னன் ஜனமேஜயன் என்ன செய்தான்?” என்று கேட்டார்.(3)

சௌதி, “சர்ப்பயக்ஞத்தின் முடிவில் அற்புதமிக்க இந்த வரலாற்றைக் கேட்ட பிறகு மன்னன் ஜனமேஜயன் செய்தவை அனைத்தையும் நான் உமக்கு விளக்கிச் சொல்கிறேன்.(4) இந்த வேள்வி நிறைவடைந்ததும், பரீக்ஷித்தின் மகனான ஜனமேஜயன் {பாரீக்ஷிதன்} குதிரை வேள்விக்கான {அஷ்வமேத யக்ஞத்துக்கான} பொருட்களைத் திரட்டினான்.(5) பிறகு, ரித்விக்குகள், புரோஹிதர்கள், ஆசான்கள் ஆகியோரை அழைத்த அவன், “நான் குதிரை வேள்வியைச் செய்ய விரும்புகிறேன். இந்தக் குதிரைகளை நீங்கள் அர்ப்பணிப்பீராக” என்றான்.(6)

அற ஆன்மாவும், அனைத்தையும் அறிந்தவர்களில் முதன்மையானவருமான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, தளர்வில்லா ஆற்றலைக் கொண்டவனும், பரீக்ஷத்தின் மகனுமான ஜனமேஜயனின் நோக்கத்தை அறிந்து கொண்டு, அவன் செயலைக் (வேள்வியைக்) காண்பதற்காகத் திடீரென அங்கே வந்தார்.(7) மஹாரிஷியான வேதவியாசர் அங்கே வந்ததைக் கண்ட மன்னன் ஜனமேஜயன், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின் படி அர்க்கியத்தையும், இருக்கையையும், கால்களைக் கழுவிக் கொள்வதற்கான நீரையும் அவருக்குக் கொடுத்தான்.(8) ஓ! சௌனகரே, அவர்கள் இருவரும் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, சபை உறுப்பினர்கள் அனைவரும் வேதக் கருப்பொருகள் பலவற்றைக் குறித்து உரையாடத் தொடங்கினர்.(9)

பாண்டவர்களின் பாட்டனாரும், தன்னுடைய பெரும்பாட்டனாருமான பெரும் முனி வேத வியாசரிடம் மேற்கொண்ட உரையாடல்களின் நிறைவில், மன்னன் ஜனமேஜயன், (10) “ஸ்ருதிகளில் காணப்படும் பல பொருள்கள் நிறைந்திருக்கும் மஹாபாரதக் கதை காதுகளுக்கு இனிமையாக இருந்தது. {தொடர்ந்து பல நாட்கள் கேட்கப்பட்டாலும்} அஃது ஒரு கணத்தில் நிறைவடைந்ததைப் போல இருந்தது.(11) {விஷ்ணுவின்} மகிமைகளைப் பரப்புவதும், பாற்கடலே சங்குக்குள் நிறைந்ததைப் போன்ற புகழைக் கொடுப்பதுமான அவ்வரலாறு உம்மால் அழகாகப் பதியப்பட்டுள்ளது.(12) அமுதத்திலும், சொர்க்கத்தின் அருளிலும் நிறைவடையாத மனிதனைப் போலவே நானும் மஹாபாரதக் கதைகளைக் கேட்டும் நிறைவடைந்தேனில்லை. {நான் இன்னும் கேட்க விரும்புகிறேன்}.(13) ஓ! பிராமணரே, நீர் அனைத்தையும் அறிந்தவர். எனவே, குருக்களின் அழிவுக்கு ராஜசூயந்தான் காரணமா? அவ்வாறு இல்லையா? என்பதை உம்மிடம் வேண்டிக் கேட்கிறேன்.(14)

பெரும்புரட்சி {குருக்ஷேத்ரப் பெரும்போர்} நடந்த காலத்தில் வெல்லப்பட முடியாதவர்களான மன்னர்கள் பலர் மரணமடைந்ததால், ராஜசூய யக்ஞம் போருக்காகவே விதிக்கப்பட்டது என்று எனக்குத் தோன்றுகிறது.(15) சோமனால் {சந்திரனால்} இந்த ராஜசூயம் மேற்கொள்ளப்பட்ட போது, அதைத் தொடர்ந்து {பிருஹஸ்பதியின் மனைவியான} தாரையை மையமாகக் கொண்ட {தாரகாமாயப்} பெரும்போர் நடைபெற்றது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(16) அதன் பிறகு வருணன் இந்தப் பெரும் வேள்வியை மேற்கொண்ட போது, தேவாசுரப் போர் அதைப் பின்தொடர்ந்து வந்தது.(17) அரசமுனியான ஹரிஷ்சந்திரன் இந்த வேள்வியை மேற்கொண்ட போது, க்ஷத்திரியர்கள் பலர் கொல்லப்பட்ட அடீபகப் போர்[1] அதைப் பின்தொடர்ந்து வந்தது.(18) அனைத்திலும் இறுதியாக, வழிபடத்தகுந்தவர்களான பாண்டவர்கள், கடினமான இந்த வேள்வியை மேற்கொண்ட போது, பெரும்பாரத {மஹாபாரதப்} போர் அதைப் பின்தொடர்ந்து வந்தது.(19)ஓ! ஐயா, பெரியவரே, உலக அழிவுக்கு வேராக இருந்த அந்த ராஜசூய யக்ஞத்தை நீங்கள் அனைவரும் ஏன் நிறுத்தவில்லை?(20) இந்த வேள்வியை அதற்குரிய அனைத்துக் கிளைகளுடன் {அங்கங்களுடன்} மேற்கொள்வது மிகக் கடினமானது. வேள்வியின் கிளைகளில் ஒன்று புறக்கணிக்கப்பட்டாலும் அது மக்களின் அழிவுக்கு வழிவகுக்கும்.(21) நீர் எங்கள் மூதாதையரின் பாட்டனாகவும், முதல் தலைவனாகவும், கடந்த காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிந்தவராகவும் இருந்தீர்.(22) நுண்ணறிவுமிக்க அந்த மன்னர்களின் வழிகாட்டியாக நீர் வாழ்ந்து வந்த போது, கவனிக்க ஆளில்லாதவர்களைப் போல அவர்கள் ஏன் அறவழிகளில் இருந்து நழுவி இந்தப் பாவத்தை இழைத்தனர்?” என்று கேட்டான் {ஜனமேஜயன்}”.(23)

வியாசர், “ஓ! மன்னா, உண்மையில் அந்த மன்னர்கள் விதியால் தூண்டப்பட்டவர்களாகவே நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கும், பழக்கவழக்கங்களுக்கும் முரணாகச் செயல்பட்டனர். அவர்கள் எதிர்காலத்தைக் குறித்து என்னிடம் ஏதும் கேட்கவில்லை. நானும் கேட்கப்படாத எதையும் அவர்களுக்குச் சொல்லவில்லை.(24) அதையுந்தவிர, விதியின் பணியை எதிரக்கவல்லவர் எவரும் இல்லை என்பதால், நானும் எதிர்கால விளைவுக்கு எதிர்வினையாற்ற வல்லனல்லன்.(25) எதிர்காலத்தைக் குறித்து நீ கேட்பனவற்றை நான் விளக்கிச் சொல்கிறேன். ஆனால் விதி வலிமைமிக்கதாகும். என் சொற்களைக் கேட்ட பிறகும் கூட உன்னால் அவற்றைச் செயல்படுத்த இயலாது.(26) விதிக்கப்பட்ட விதியை வெல்வது சாத்தியமில்லை என்பதால் அச்சத்தாலோ, ஆசையாலோ உன்னால் மனிதனின் வழிகளில் நிற்க இயலாது {காலத்தால் வகுக்கப்பட்ட பாதையை எந்த வழிமுறைகளினாலும் மீற முடியாது}.(27)

வேள்விகளில் முதன்மையான அஸ்வமேதத்தை {அஸ்வமேத யக்ஞத்தை / குதிரை வேள்வியை} க்ஷத்திரியர்கள் செய்ய வேண்டுமென ஸ்ருதியில் விதிக்கப்பட்டிருக்கிறது.(28) அந்த வேள்வியுடைய மகிமையின் காரணமாக வாசவன் {இந்திரன்} உன்னுடைய அஸ்வமேதத்தைக் களங்கப்படுத்துவான். ஓ! மன்னா, உன்னுடைய ஆண்மையின் காரணமாகவோ, விதியின் விருப்பத்தாலோ நீ வாசவனை எதிர்க்கவல்லவனாக இருந்தாலும் கூட அத்தகைய ஒரு வேள்வியை நீ செய்யாதே.(29) எனினும், விதியானது வல்லமையின் தொகுப்பாக இருப்பதால் நீயோ, சக்ரனோ, தலைமை தாங்கும் புரோகிதர்களோ அதன் மூலம் பாவம் இழைத்தவராக மாட்டீர்.(30) விதி வகுத்த விதியால் பிரம்மன் இந்திர வேள்வியை நிறுத்துவான். காலப்போக்கிலும், விதியின் விருப்பத்திற்கு இணங்கவும், யுக முடிவில் படைப்பு யாவும் முடிவை எட்டும்[2].(31) பிராமணர்கள் வேள்விகளின் பயன்களை விற்பனை செய்வார்கள். எனவே, அசைவன, அசையாதன உள்ளிட்ட இந்த அண்டம் விதியின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதை அறிவாயாக” என்றார் {வியாசர்}.(32)ஜனமேஜயன், “ஓ! மதிப்பிற்குரிய ஐயா, குதிரை வேள்வி நிற்பதற்கு எது காரணமாக அமையும்? அது குறித்து நான் கேட்டதும் அதைத் தவிர்த்து விலகுவேன்” என்றான்.(33)

வியாசர், “ஓ! மன்னா, பிராமணர்களின் சாபமே அதற்குக் காரணமாக அமையும். நீ அதை {சாபத்தை} நிறுத்த முயன்றால் உனக்கு நன்மையே நேரும்.(34) ஓ! பகைவரைக் கொல்பவனே, இனி இந்த உலகம் உள்ளவரை, குதிரை வேள்விக்கான பொருட்களைத் திரட்ட க்ஷத்திரியர்களால் இயலாது. {நீ செய்வதைப் போன்ற குதிரை வேள்வியை உலகம் உள்ளளவும் வேறு யாராலும் செய்ய இயலாது}” என்றார்.(35)

ஜனமேஜயன், “ஒரு பிராமணருடைய கடுஞ்சாபத்தின் சக்தியால் அஸ்வமேதம் நிறுத்தப்படும் என்றாலும் அதன் கருவியாக நான் இருப்பேன். உண்மையில், நான் அச்சத்தாலும், நாணத்தாலும் நிறைகிறேன்.(36) நற்செயல்கள் பலவற்றைச் செய்த என்னைப் போன்ற ஒரு மனிதன், கயிற்றில் கட்டப்பட்ட ஒரு பறவை வானத்தில் பறந்து செல்வதைப் போல இத்தகைய சபிக்கப்பட்ட பணியில் ஈடுபட்டு வாழ்வது எங்ஙனம்?(37) இத்தகைய பணியில் நான் ஈடுபட்டால், தலைமுறை தலைமுறையாகப் பயிலப்படும் சடங்கு என்னால் கெட்டுப் போகும். (மன்னர்களால்) மீண்டும் குதிரை வேள்வி பயிலப்படும் என்று எனக்கு ஆறுதல் சொல்வீராக” என்று கேட்டான்.(38)

வியாசர், “சிறப்பில் {வேள்வியில்} இருந்து உண்டாகும் சிறப்பானது, நிச்சயம் மற்றொரு சிறப்பில் மட்டுமே இருப்பதைப் போல, அஸ்வமேதம் நிறுத்தப்பட்டாலும், தேவர்களிடமும், பிராமணர்களிடமும் அது நிலைத்திருக்கும்.(39) படைவீரனின் வாழ்வை மேற்கொள்ளும் கசியபரின் வழித்தோன்றல்கள் சிலர், கலியுகத்தில் மீண்டும் குதிரை வேள்வியை மீட்டெடுப்பார்கள்[3].(40) ஓ! மன்னா, அண்ட அழிவுக்காலமானது, வெண்கோள் உள்ளிட்ட பல தீய சகுனங்களைக் கொண்டு வருவதைப் போலவே அதே குலத்தில் பிறந்த ஒரு பிராமணன், கலியுகத்தில் ராஜசூய வேள்வியையும் மீட்டெடுப்பான்.(41) இந்த வேள்வி, அதைச் செய்யும் மனிதர்களுக்கு உரிய பயன்களை வழங்கும். அவர்களும், இந்த யுக முடிவின் தொடக்கத்தில் ரிஷிகள் சூழத் திரிவார்கள்.(42) அந்தக் காலத்தில் இருந்து மனிதர்களின் புலன்கள், மாசற்ற நற்செயல்களின் பயன்களைக் கைவிடாது, இம்மையில் அவற்றுடன் பற்றற்றிருக்கும்.(43) அப்போது, நுட்பமானதும், உயர்ந்ததுமான ஓர் அறம், நான்கு வகைகளுக்கான கடமைகளில் {நான்கு ஆசிரமங்களில்} இருந்து நழுவி, ஈகையை மட்டுமே தன் வேராகக் கொண்டு, காலத்தின் விளைவாகப் புகழ்பெறும்.(44) ஓ! ஜனமேஜயா, இந்த யுகத்தின் முடிவில் மனிதர்கள் சிறதளவே தவம் பயின்றாலும், அவர்கள் ஆன்ம சக்திகளை அடைவார்கள். இவ்வாறு அருளப்பட்டவர்களே பக்திச் சடங்குகளைச் செய்வார்கள்” என்றார் {வியாசர்}[4].(45)

கலியுகம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 03-(வியாஸோக்தம் கலியுகபவிஷ்யம்)-கலியுகத்தை வர்ணித்த வியாசர்…

ஜனமேஜயன் {வியாசரிடம்}, “ஓ! அறமறிந்தவனே, உயிரினங்களுக்குக் கேட்டையும், அறத்திற்கு அழிவையும் ஏற்படுத்தும் கலியுகம் தொடங்கப் போகிறது. எனவே, அதன் தன்மைகளைக் குறித்து விளக்குவாயாக” என்றார்.(3)

சௌதி, “தெய்வீகரான வியாசர், இவ்வாறு கேட்கப்பட்டதும், கலியுகத்தில் மனிதர்களின் நிலை குறித்துத் துல்லியமாகச் சிந்தித்து, எதிர்கால யுகத்தை விளக்கத் தொடங்கினார்.(4)

வியாசர், “கலி தொடங்கியதும், குடிமக்களைப் பாதுகாக்க இயலாத மன்னர்கள், காலமேதும் பார்க்காமல் அவர்களிடம் இருந்து கப்பங்களைப் பெற்றுக் கொண்டு தங்களை மட்டுமே பாதுகாத்துக் கொள்வர்.(5) இந்த யுகத்தின் முடிவில் மன்னர்கள் க்ஷத்திரியர்களாகச் செயல்படமாட்டார்கள் {க்ஷத்திரியர்கள் மன்னர்களாக மாட்டார்கள்}, பிராமணர்கள் சூத்திரர்களைப் போன்ற வாழ்வை மேற்கொள்வார்கள் {பிராமணர்கள் சூத்திரர்களிடம் இருந்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுவார்கள்}, சூத்திரர்கள் பிராமணர்களைப் போல நடந்து கொள்வார்கள் {சூத்திரர்கள், பிராமணர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவார்கள்}.(6)

ஓ! ஜனமேஜயா, இந்த யுகத்தின் முடிவில் ஸ்ருதிகளையும், வேதங்களையும் நன்கறிந்த பிராமணர்கள், {க்ஷத்திரியர்களுக்கான} கணைகளை எடுத்துக் கொண்டு, வேள்விகளில் இருந்து ஹவிஸை விலக்குவார்கள் {ஹோமம் செய்ய மாட்டார்கள்}, மக்கள் அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்து உண்பார்கள்[1].(7) இறுதி யுகமான கலி தோன்றும்போது மனிதர்கள் சிற்பிகளாகவும், பொய்யர்களாகவும், இறைச்சியையும், மதுவையும் விரும்புகிறவர்களாகவும், நண்பர்களின் மனைவியரை அறிபவர்களாகவும் இருப்பார்கள்[2].(8) கலியுகத்தில் கள்வர்கள் மன்னரைப் போலவும், மன்னர்கள் கள்வரைப் போலவும் செயல்படுவார்கள், பணியாட்கள் உரிமையில்லாத வருவாயை அனுபவிப்பார்கள்.(9)இறுதி யுகத்தில் செல்வமே உயர்வாகப் பேசப்படும், நல்லோரின் குணம் இகழப்படும், {குணத்தில்} வீழ்ச்சியடைந்தவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.(10) பாவ புண்ணியம் கருதாத கைம்பெண்களும், தவசிகளும், பதினைந்து வயதே உடைய மனிதர்களும் {பதினாறு வயதைக் கடக்காதவர்களும்} வரைமுறையற்ற கலவியின் மூலம் பிள்ளைகளைப் பெறுவார்கள்.(11) அந்த இறுதி யுகத்தில் ஊரார் உணவை விற்பனை செய்வர், பிராமணர்கள் வேதங்களை விற்பனை செய்வர், பெண்கள் தங்கள் மேனிகளை விற்பனை செய்வர்.(12) இந்த யுகத்தில் அனைவரும் வேதங்களைப் படிப்பார்கள், வாஜஸநேயி வேள்விகளைச் செய்வார்கள், சூத்திரர்கள் அனைவரையும் “ஓ! {ஏய்}” என்றழைப்பார்கள்.(13) {யுகம் தாழும்போது பிராமணர்கள், தவப்பயன்களையும், வேள்விப் பயன்களையும் விற்பனை செய்வார்கள், பருவகாலங்கள் முரண்படும்}.(14) புத்தனின் {நல்லோனின்} போதனைகளைப் பின்பற்றும் சூத்திரர்கள் இறைச்சி உண்பதை விலக்குவார்கள். வெண்பற்களையும், கூரிய கவனத்தையும் கொண்ட அவர்கள், தங்கள் தலைகளை மழித்துக் கொண்டு, பட்டாடைகளை உடுத்திக் கொண்டு {சாக்கிய} அறம் பயில்வார்கள்[3].(15)தந்தங்களையும், பற்களையும் கொண்ட விலங்குகள் ஏர்களிலும், வண்டிகளிலும் பூட்டப்படும், மனிதர்கள் குளங்களில் உள்ள நீரைக் கொண்டு உழுவார்கள், மேகங்கள் ஒழுங்கற்ற முறையில் நீரைப் பொழியும்.(16+18) மிலேச்சர்கள் குரு பாஞ்சால மாகாணத்தில் வாழ்வார்கள், அந்த {குரு பாஞ்சால} நாட்டைச் சேர்ந்த மக்கள் முன்னவர்களின் {மிலேச்சர்களின்} மாகாணத்தில் வாழ்வார்கள். யுகத்தின் முடிவில் மனிதர்கள் வீழ்ச்சியடைவார்கள்[4].(17[16-18]) பிராமணர்கள், தவப்பயன்களையும், வேள்விப் பயன்களையும் விற்பார்கள். கள்வர்கள் ஒருவருக்கொருவர் செல்வத்தைக் களவு செய்வார்கள், இழிந்த மனிதர்கள் சொற்ப செல்வத்தை அடைந்து வளமாகத் திகழ்வார்கள்.(19) இந்த இறுதி யுகத்தில் மனிதர்கள் அறச்சடங்குகளைப் புறக்கணிப்பார்கள், நிலப்பகுதிகள் பாலைவனங்கள் நிறைந்ததாக இருக்கும், நகரங்களில் பல சாலைகளின் மூலம் போக்குவரத்து நடைபெறும்.(20) கலியுகத்தில் அனைவரும் வணிகராவர், மகன்கள் தங்கள் மூதாதையரின் {தந்தைமாரின்} கொடைகளை உடனே பிரித்துக் கொள்வார்கள். பேராசையாலும், பொய்மையினாலும் தூண்டப்படும் மக்கள் ஒருவரோடொருவர் போரிட்டுச் செல்வங்களைக் கொள்ளையடிப்பர்.(21) பெண்கள், அழகும், நளினமும், ஆபரணங்களும் இல்லாதவர்களாக மயிரால் மட்டுமே தங்களை அலங்கரித்துக் கொள்வர்.(22)யுகத்தின் முடிவு நெருங்கும்போது, எந்த வித இன்பத்துக்கும் இடமில்லாத இல்லறவாசிக்கு, அவனுடைய மனைவியே இறுதி கதியாக இருப்பாள்[5].(23) தீயவர்களும், ஆரியரல்லாதவரும் {உன்னதரல்லாதவரும்} பெருகும்போது, பொருத்தமில்லாத வகையில் பெண்களின் எண்ணிக்கைப் பெருகி, ஆண்களின் எண்ணிக்கைக் குறையும் போது, அதுவே யுக முடிவுக்கான அறிகுறி என்பதை அறிவாயாக.(24) அப்போது அனைவரும் பிச்சைக்காரர்களாக இருப்பார்கள், எவரும் பிச்சை அளிக்க மாட்டார்கள். மக்கள் எந்த வேறுபாடும் இன்றிப் பிற வர்ணத்தாரிடம் இருந்து கொடைகளை ஏற்பார்கள்.(25) மன்னர்கள், கள்வர்கள், நெருப்பு ஆகியவற்றால் பீடிக்கப்படும் மக்கள் அழிவை அடைவார்கள். இந்த இறுதியுகத்தில் மக்கள் பயிர்களைப் பெற மாட்டார்கள் {விதைத்த விதை பயன்தராது}. இளைஞர்கள் முதுமையை அடைவார்கள். மக்கள் தங்கள் தீய நோக்கத்தின் காரணமாக மகிழ்ச்சியை அடையமாட்டார்கள் {அவர்கள் இன்புறுவது பகல்கனவே}.(26) மழைக்காலத்தில் காற்றானது மேலும், கீழுமாக வீசி புழுதியை {அல்லது கற்களைப்} பொழியும், மக்களிடம் மறுமை குறித்த ஐயங்கள் இருக்கும்.(27) அனைவரும் இயல்பாகவே தீயவர்களாகவும், கடவுளைப் பழிப்பவர்களாகவும், அகங்காரம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பேராசை கொண்ட பிராமணர்கள் ஒருவரையொருவர் பழித்துக் கொள்வார்கள்.(28) க்ஷத்திரியர்கள், வைசியர்களின் வழிகளைப் பின்பற்றி வேளாண்மையிலும், வணிகத்திலும் ஈடுபடுவார்கள். பிராமணர்கள் அறத்தின் கண்ணியத்தைக் கெடுப்பார்கள்.(29)யுக முடிவில் மனிதர்கள் தங்கள் நோன்புகளையும், {உடன்பாடுகளையும்}, உறுதிமொழியையும் பின்பற்றமாட்டார்கள். அவர்கள், தங்கள் மதிப்பைக் கைவிட்டுக் கடன்களை அடைக்காமல் இருப்பார்கள்.(30) மனிதனின் இன்பம் பயனற்றதாகவும், அவனது கோபம் பயனுள்ளதாகவும் இருக்கும். ஆடுகளும், பாலுக்காகவே மதிக்கப்படும்.(31) யுக முடிவில், சாத்திர ஞானமற்ற மனிதர்கள் இயல்பாக இவ்வாறே நடந்து கொள்வார்கள். கல்வியில் செருக்குடைய மனிதர்கள், அற விதிகளை அலட்சியம் செய்வதோடல்லாமல் {தங்களுக்கு ஏற்ற வகையில்} சாத்திரங்களுக்கு விளக்கமுமளிப்பார்கள்.(32) இறுதி யுகத்தின் போது, பெரியோரின் போதனைகள் இல்லாமலேயே அனைத்துக் கிளைகளிலும் தாங்கள் ஞானத்தை அடைந்ததாக அனைவரும்  கருதுவார்கள்.(33)  கவியல்லாதவன் {ஞானியல்லாதவன்} எவனும் இருக்க மாட்டான் {விதிவிலக்கின்றி அனைவரும் தங்களை ஞானியாகவே கருதுவார்கள்}. பிராமணர்கள், தங்கள் அறக்கடமைகளில் இருந்து விலகி கணிகர்களாவார்கள் {சோதிடர்களாவார்கள்}, மன்னர்கள் கள்வர்களாவார்கள்[6].(34)யுக முடிவில், கள்ள உறவில் பிறந்த பெண்களுடன் வசிப்பவர்கள் {குண்டர்கள்}, வஞ்சகர்கள், குடிகாரர்கள் {சுராபானம் அருந்துவோர்} ஆகியோர் பிரம்மவாதிகளாகி குதிரை வேள்விகளைச் செய்வார்கள்.(35) பிராமணர்கள், செல்வமீட்டும் விருப்பத்தில் தகுதியில்லாதவர்களுக்குப் புரோஹிதம் செய்து, விலக்கப்பட்ட உணவை உண்பார்கள்.(36) அனைவரும் “போ {ஏய்}” என்பார்கள் {மதிப்பின்றியே பேசுவார்கள்}, எவரும் வேதங்களைக் கற்க மாட்டார்கள். பெண்கள் ஒரேயொரு சங்கு வளையலை அணிவார்கள், நெல்லின் வடிவிலான ஆபரணத்தையே பயன்படுத்துவார்கள்.(37) யுக முடிவு நெருங்கும் வேளையில், விண்மீன்கள் உரிய கோள்களுடன் சேராது, திக்குகள் முரண்படும், மாலை வேளையின் தோற்றம் எப்போதும் எரிவதைப் போலவே தெரியும்.(38)

மகன், தன் தந்தையைப் பணிகளில் ஈடுபடுத்துவான், மருமகள் மாமியாருக்கு ஆணையிடுவாள். மனிதர்கள், விலங்குகளுடனும், பல்வேறு சாதிப் பெண்களுடனும் கூடி வாழ்வார்கள் {உறவு கொள்வார்கள்}.(39) சீடர்கள், சொற்கணைகளால் ஆசான்களைக் காயப்படுத்துவார்கள், மேலும் வெறிபிடித்த மனிதர்கள் பல காரியங்கள் குறித்துப் பேசுவார்கள்.(40) அக்னிஹோத்ரிகள், முதல் நான்கு ஆகுதிகளைத் தேவர்களுக்குப் படைக்காமல், தங்கள் உணவை உண்பார்கள். மனிதர்கள், தங்கள் விருந்தினர்களுக்கு உணவை அளிக்காமல் தாங்களே உண்பார்கள்.(41) பெண்கள், உறங்கிக் கொண்டிருக்கும் தங்கள் கணவர்களை வஞ்சித்துப் பிறரிடம் செல்வார்கள், ஆண்களும், உறங்கிக் கொண்டிருக்கும் தங்கள் மனைவிகளை விட்டு விட்டு பிற பெண்களிடம் செல்வார்கள்.(42) யுகம் முடியும்போது, பிணிகள், மன வேதனை, பொறாமை ஆகியவை மனிதர்களைப் பீடிக்கும், அவர்கள் தங்கள் செயல்களுக்குத் தீர்வு காண மாட்டார்கள்” என்றார் {வியாசர்}.(43)

கலியுக விளக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 04-(கலியுகவர்ணநம்)-கலியுகத்தை வர்ணித்த வியாசர்…

ஜனமேஜயன் {வியாசரிடம்}, “மொத்த உலகும் இவ்வாறு மாசடையும்போது, மனிதர்கள் எவரால் பாதுகாக்கப்படுவார்கள்? அவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள்? அவர்கள் எதை உண்பார்கள்? அவர்கள் எவ்வாறு இன்புற்றிருப்பார்கள்?(1) அவர்களின் செயல்பாடுகளும், முயற்சிகளும் எவ்வாறு இருக்கும்? அவர்கள் எவ்வளவு காலம் வாழ்வார்கள்? அவர்கள் {மனிதர்கள்} எந்த எல்லையை எட்டியதும் சத்திய யுகத்தை அடைவார்கள்?” என்று கேட்டான்.(2)

வியாசர், “அறம் ஆட்டம்கண்டு, நல்லொழுக்கம் அரிதாகும்போது, அருஞ்செயல்களைச் சாதிக்காத மனிதர்கள் குறுகிய காலமே வாழ்வார்கள்.(3) வாழ்நாள் குறைந்ததும், அவர்களின் வலிமையும் குறையும், அஃது அவர்களின் நிறத்தில் பிறழ்வுகளுக்கு வழிவகுத்து பிணிகளை உண்டாக்கும்.(4) இது மனவருத்தத்தை உண்டாக்கி கடவுளின் நினைவை ஏற்படுத்தும் {உலகம் சார்ந்த நோக்கங்களில் ஏற்படும் அக்கறையின்மையால் அவர்கள் தங்கள் ஆன்மாவை உணரும் நிலையை அடைவார்கள்}. அது மீண்டும் அறத்தை விளைவிக்கும். இந்த எல்லையுடன் அவர்கள் சத்திய யுகத்தை அடைவார்கள்.(5)

சிலர், சொற்களில் மட்டுமே அறத்தைப் பின்பற்றி அக்கறையற்றவர்களாக இருப்பார்கள், மனசாட்சியுடன் கூடிய சிலர் ஆர்வத்துடன் காரணங்களை ஆய்ந்து அறிவார்கள்.(6) ஐயங்களில் இருந்து விடுபட்ட மனங்களைக் கொண்டவர்களும், கல்வியில் செருக்குடையவர்களுமான சில மனிதர்கள், ஊகங்களுக்கும் {அனுமானங்களுக்கும்}, சான்றுகளுக்கும் {ஆதாரங்களுக்கும்} இடையிலான ஒற்றுமையைக் காண்பார்கள்.(7) வேறு சிலர் வேதங்களை ஏற்க மாட்டார்கள். {இந்த யுகத்தில் பெண்கள் பலர், தங்கள் பிறப்புறுப்புகளால் செய்வதைத் தங்கள் வாயால் செய்வார்கள்}.(8) அறியாமை கொண்ட தீய மனிதர்கள், கல்வியில் செருக்குண்டு நாத்திகர்களாவார்கள். {மனிதர்கள் குழப்பம் நிறைந்தவர்கள் ஆவார்கள், மந்த புத்தி கொண்டோர் தங்களை ஞானிகளாகக் கருதுவார்கள்}[1].(9) அவர்கள் செருக்கடைந்தவர்களாகச் சாத்திர ஞானத்தில் இருந்து விலகுவார்கள். அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் பொருள்களில் மதிப்பு கொண்டவர்களாகவும், விவாதங்களை விரும்புகிறவர்களாகவும் இருப்பார்கள்.(10) யுக சுழற்சி ஆட்டங்காணும்போது, சில மனிதர்கள் (விஷ்ணுவின்) இறுதி வகைமையைப் பின்பற்றுவார்கள். கொடைகளுடனும், வாய்மையுடனும் அவர்கள் கருணைச் செயல்கள் பலவற்றைச் செய்வார்கள்[2].(11)அந்தக் காலத்தில் மக்கள் அனைத்து வகைப் பொருட்களையும் உண்பார்கள், கட்டுப்பாடு இல்லாத புலன்களுடன் கூடியவர்களாகவும், சாதனைகளற்றவர்களாகவும், வெட்கம் கெட்டவர்களாகவும் இருப்பார்கள். பாவத்தின் மொத்த அடையாளமாக இதை அறிவாயாக.(12) பிராமணர்களுடைய வாழ்வுத் தேவையின் நித்திய வழிமுறையான இரத்தலை க்ஷத்திரியர்களும், பிற வகையினரும் {வர்ணத்தாரும்} தங்கள் வாழ்வாதாரமாகக் கொள்ளும்போது, பாவம் பீடித்ததன் {யுகம் வீழ்ந்ததன்} அடையாளமாக அதை அறிவாயாக.(13) ஞானத்திற்கும், கல்விக்கும் அழிவைக் கொண்டு வரும் இந்த யுகம், பாவத்தால் நிறைந்ததாக இருக்கும், பிரம்மச்சரிய {பற்றற்ற} வாழ்க்கையைப் பின்பற்றும் மக்கள், குறுகிய காலத்திற்குள் ஆன்மிக முழுமையை அடைவார்கள்.(14)

இறுதி யுகத்தில் பெரும்போர்களும், பெருங்குழப்பங்களும், பெரும் மழைகளும், பேரச்சங்களும் விளையும்; பாவம் நிறைந்த தன்மையின் {யுக வீழ்ச்சியின்} அடையாளங்களாக இவற்றை அறிவாயாக.(15) யுக முடிவில், ராட்சசர்கள், கடுஞ்சொற்களைப் பேசுவதையே நோக்கமாகக் கொண்ட பிராமணர்களாகவும், மன்னர்களாகவும் இருந்து பூமியை அனுபவிப்பார்கள்[3].(16) வேத கல்வி கற்றல், வேள்விகள் வேட்டல், அறநெறிகளைப் பின்பற்றல் ஆகியவற்றில் இருந்து விலகும் மனிதர்கள், செருக்குடையவர்களாகவும், அவதூறு பேசுபவர்களாகவும், அனைத்தையும் உண்பவர்களாகவும், பயனற்ற சடங்குகளைச் செய்பவர்களாகவும்,(17) மூடர்களாகவும், தன்னலம் கொண்டவர்களாகவும், பேராசை கொண்டவர்களாகவும், தகாத உடைகளை உடுத்துபவர்களாகவும், இழிந்தவர்களாகவும், நிலைத்து நீடிக்கும் அறத்தில் {சனாதன தர்மத்தில்} இருந்து வழுவியவர்களாகவும்,(18) பிறரின் செல்வங்களைக் கொள்ளை அடிப்பவர்களாகவும், பிறன் மனைவியரைக் கெடுப்பவராகவும், காமாந்தகராகவும், தீயவர்களாகவும், வஞ்சகர்களாகவும் இருப்பார்கள்.(19) மக்கள் ஒரே {தீய} குணத்துடன் கூடியவர்களாக எங்கும் புகழ்பெறும்போது, {ஆன்மா இல்லை என்று சொல்பவர்களான} பல்வேறு வடிவங்களிலான தவசிகளும் தோன்றுவார்கள்.(20) பிரதான புருஷனை {பரமாத்மாவைச்} சார்ந்தவர்களும், கிருத யுகத்தில் பிறந்தவர்களுமான அனைவரும் சொற்களின் மூலம் {கதைகளின் மூலம் (சொற்பொழிவுகளில்) இந்த யுகத்தில்} மக்களால் வழிபடப்படுவார்கள்[4].(21)மனிதர்கள் தானியங்களையும், உடைகளையும், உணவுப் பொருட்களையும், ஏன் பசுஞ்சாணத்தையும் கூடக் கொள்ளையடிப்பார்கள்.(22) கள்வர்கள், பிற கள்வர்களின் உடைமைகளைக் கொள்ளையடிப்பார்கள், கொலைகாரர்கள், பிற கொலைகாரர்களைக் கொல்வார்கள். கள்வர்கள், பிற கள்வர்களைக் கொல்லும்போது மக்களுக்கு நன்மை விளையும்.(23) உலகம் நலிவடைந்து, ஒடுக்கப்பட்டு, மாலை ஜபங்களில் இருந்து விலகும்போது, அனைத்து வகை மனிதர்களும் ஒரே வகை வாழ்வை வாழும்போது, அவர்கள் வரிகளின் சுமையால் ஒடுக்கப்பட்டுக் காடுகளுக்குள் ஓய்ந்து செல்வார்கள்.(24) மகன்கள் தந்தையை அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுத்துவார்கள், மருமகள் மாமியாரை பணி செய்ய வைப்பாள்[5]. வேள்விகள் வேட்கப்படாமல் நிறுத்தப்படும்போது, சீடர்கள் சொற்கணைகளால் ஆசான்களைத் துன்புறுத்துவார்கள்[6].(25) ராட்சசர்களாலும், பெரும்பசியுடைய விலங்குகள், பூச்சிகள், எலிகள், பாம்புகள் ஆகியவற்றாலும் மனிதர்களுக்குத் தீங்கு விளையும்.(26) ஓ! மன்னா, யுக முடிவின் நெருக்கத்தில், மக்களின் அமைதி, செழிப்பு, உடல்நலம், நண்பர்கள், இலக்கியம் ஆகியவை நலிவடையும்.(27)யுகத்தின் துன்பங்களால் பீடிக்கப்பட்ட மன்னர்கள், தாங்களே தலைவர்களாகவும், கள்வர்களாகவும் இருந்து கொண்டு, பல்வேறு நாடுகளில் வலம் வருவார்கள்.(28) அவர்கள் தங்கள் நண்பர்களுடன் தங்கள் நாடுகளில் பயணித்து, பயனற்றவற்றை விளைவித்து, குறித்த காலத்திற்காகக் காத்திருப்பார்கள்[7].(29) அச்சத்தாலும், பசியாலும் பீடிக்கப்படும் மக்கள், தங்கள் மகன்களைத் தங்கள் தோள்களில் சுமந்தவாறே கௌசிகி ஆற்றைக் கடந்து,(30) அங்கம், வங்கம், கலிங்கம், காஷ்மீரம், மேகலம், ருஷிகாந்தகிரி ஆகிய மாகாணங்களில் உறைவிடம் நாடுவார்கள்.(31) மக்கள், இமயத்தின் சாரல்களிலோ, உப்பு நீராலான பெருங்கடலின் கரைகளிலோ, காடுகளிலோ மிலேச்சர்களுடன் சேர்ந்து வாழ்வார்கள்.(32) அப்போது பூமியானது வெறுமையாகவோ, மனிதர்களால் நிறைந்தோ இருக்காது. காவலர்கள் ஆயுதந்தரித்தவர்களாக இருப்பினும் தங்கள் கடமைகளைச் செய்ய மாட்டார்கள்.(33) மனிதர்கள், மான்களையும், மீன், பறவைகள், இரைதேடும் விலங்குகள், பாம்புகள், பூச்சிகள், காய்கறிகள், கனிகள், கிழங்குகள் ஆகியவற்றையும் உண்டு வாழ்வார்கள்.(34)மனிதர்கள், முனிவர்களைப் போல மரவுரிகளையும், இலைதழைகளையும், மான்தோல்களையும் திரட்டி உடுத்திக் கொள்வார்கள்.(35) மலைக்குகைகளில் வசிக்கும் மனிதர்கள், கிராமங்களிலோ காடுகளிலோ வளரும் நெல்லை அறிந்து கொள்ளவும், உண்ணவும் ஏங்குவார்கள். அவர்கள் செம்மறி ஆடுகளையும், வெள்ளாடுகளையும், கழுதைகளையும், ஒட்டகங்களையும் வளர்ப்பார்கள்.(36) அவர்கள், நீருக்காக ஆற்றங்கரைகளில் வாழ்ந்து கொண்டு, நீரோட்டத்தைத் தடுப்பார்கள். அவர்கள் சமைத்த உணவை விலைக்கு வாங்கவும், விற்பனையும் செய்வார்கள்.(37) மகன்கள், தங்களுக்குரிய பங்குகளை அடைய மூலதனத்தின் மீது {மூலதனத்தையும், வட்டியையும் மறைத்துப்} போரிடுவார்கள். மக்கள், வயதின் ஆதிக்கத்தினால் குழந்தைகளைப் பெறுவார்கள், குழந்தைகளைப் பெறாமலும் இருப்பார்கள், அவர்கள் தங்கள் குடும்பங்களின் நற்குறிகளை {குல அடையாளங்களை} இழந்திருப்பார்கள்.(38) அந்த யுகத்தின் மக்கள், இழிந்தவர்களால் போதிக்கப்படும் இழிந்த நம்பிக்கைகளைப் பின்பற்றுவார்கள் {தர்மங்களில் இழிவான தர்மத்தைப் பின்பற்றுவார்க்ள}.(39) மனிதனின் வாழ்நாள் முப்பது ஆண்டுகளாக இருக்கும். {வலிமை இழந்த மக்கள் மெலிந்தவர்களாகவும், ஆசைகள் மற்றும் உணர்வுகளின் காரணமாகப் பலவீனர்களாகவும் இருப்பார்கள்}.(40) அவர்கள் பிணிகளால் பீடிக்கப்பட்டுப் பலவீனமடைந்து, தங்கள் செல்வத்தை இழப்பார்கள்; அவர்களின் உடலுறுப்புகள் பிணிகளால் பீடிக்கப்படும், அவர்களின் வாழ்நாள் குறைவதன் விளைவாக அவர்கள் துயரால் பீடிக்கப்படுவார்கள்.(41) {உடல்நலக்கேட்டின் விளைவால்} அவர்கள் நேரங்காலம் பார்க்காமல் நல்லோரைச் சந்தித்து, தொண்டாற்றுவதில் ஈடுபடுவார்கள், தங்கள் ஒழுக்கம் அடையும் நலிவினால் அவர்கள் சத்திய யுகத்தை அடைவார்கள் {வாய்மையைப் போற்றுவார்கள்}.(42) விருப்பத்திற்குரிய பொருட்களை அடையாததால் அவர்கள் அறச் சடங்குகளைச் செய்வார்கள்; தங்கள் மக்களின் அழிவில் உண்டாகும் பலவீனத்தின் காரணமாக அடக்குமுறைகள் செய்வதில் இருந்து அவர்கள் ஒடுங்குவார்கள்.(43)

இவ்வாறே அவர்கள், தங்கள் வாழ்வைப் பாதுகாத்துக் கொள்வதற்காகக் கொடைகள் அளித்து, வாய்மை நோற்று, {தொண்டு, ஈகை, வாய்மை, ஆன்மப் பாதுகாப்பு என்ற} நான்கு வகைக் கடமைகளை நிறைவேற்றி நன்மையை அடைவார்கள்(44). புலன்களுடனும், புலன்களுக்குரிய பொருட்களுடனும் உழலும் மக்களில் சிலர், உண்மை ஞானத்தை அடைந்து, “அறமோ, மரணமோ இனிய பயன்களைக் கொண்டவையே” என்று சொல்வார்கள்[8].(45) படிப்படியாக வீழ்ச்சி நடந்ததைப் போலவே வளர்ச்சியும் படிப்படியாக நிகழும். அதன்பிறகு அறம் முழுமையாகப் பின்பற்றப்படும்போது, கிருத யுகம் தொடங்கும்.(46) மாதத்தின் வளர்பிறையில் வளர்ந்து, தேய்பிறையில் தேயும் சந்திரனைப் போலவே நல்லொழுக்கமும் கிருத யுகத்தில் பெருகி, கலியுகத்தில் வீழ்ச்சியடையும். எனினும் காலம் ஒன்றுதான்; இந்த வளர்ச்சி, வீழ்ச்சிகளின் படி அது சத்யம், திரேதம், துவாபரம், கலி என்ற நான்கு நிலைகளைக் கொண்டிருக்கிறது.(47) தேய்பிறையில் இருளில் மூழ்கி, வளர்பிறையில் முழுமையடையும் நிலவைப் போலவே அறமும் சத்யத்தில் பெருகி, கலியுகத்தில் வீழ்ச்சியடையும்.(48)புழுதியால் மறைக்கப்பட்ட மூதாதையர் காலத்துத் தங்கக்கட்டியைப் பொன்னாகக் கருதாமல் தன்னைத் தானே வறியவனாக நினைக்கும் மனிதன், தூய்மையடைந்த தங்கத்தைக் கண்டதும் தன்னைச் செல்வந்தனாகக் கருதுவதைப் போலவே தமோ குணம் நிறைந்த மாயையால் மறைக்கப்பட்ட பரமாத்மாவை ஏதோவொன்றாக அழைக்கும் மனிதர்கள், மாயையில் இருந்து விலகும்போது அதைத் தூய அறிவு என்று அழைப்பார்கள். இவ்வாறே வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது, கல்விமான்களும் அதன் பொருளை விளக்கியிருக்கிறார்கள்[9].(49) சொர்க்கம் முதலியவற்றை நோக்கமாகக் கொண்ட தவங்களின் மூலம் நித்திய பயன்கள் அடையப்படுகின்றன; இந்தப் பயன்கள் குணங்களை விளைவிக்கின்றன, இவ்வாறே செயல்கள் நிறைவேறுகின்றன. உண்மையான இந்தச் செயல்பாடுகளின் மூலம் உடல் கூட விடுதலை அடைவதில்லை.(50) செயல்களின் பயன்கள், பல்வேறு யுகங்களில் நாடு {இடம்}, நேரம் {காலம்}, தகுந்தவர் ஆகியவற்றைப் பின்தொடர்கின்றன; இவ்வாறே அவற்றில் வேறுபாடுகள் தென்படுகின்றன. ரிஷிகள் அவ்வாறே சொல்லியிருக்கின்றனர்.(51) பல்வேறு யுகங்களில், உலகம்சார்ந்த ஆதாயம், இன்பத்திற்குரிய பொருட்கள், தேவ வழிபாடு, வாழ்நாள் காலம் ஆகியவற்றில் வேறுபாடுகள் உண்டாகின்றன.(52) விதியின் இயல்பில் யுகச் சுழற்சி நடைபெறுகிறது என்பதால் ஒரு கணமும் செயல்படாமல் இருக்க முடியாத உலகில் இவ்வாறான எழுச்சியும், சிதைவும் ஏற்படுகின்றன” என்றார் {வியாசர்}”.(53)

ஜனமேஜயன் செய்த குதிரைவேள்வி | பவிஷ்ய பர்வம் பகுதி – 05-(ஜனமேஜயாஷ்வமேத꞉ இந்த்ரஸ்ய காபட்யம் ச)-ஜனமேஜயன் செய்த அஸ்வமேத யக்ஞம்; இந்திரன் அந்த வேள்வியைக் களங்கப்படுத்தியது; ஜனமேஜயன் அடைந்த கோபம்; விஸ்வாவசு ஜனமேஜயனிடம் சொன்ன சமாதானம்…

சௌதி {சௌனகரிடம்}, “அந்த முதன்மையான ரிஷி {வியாசர்}, மன்னன் ஜனமேஜயனை இவ்வாறு தேற்றியபோது, கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் குறித்த அவரது சொற்களை அந்தக் கூட்டத்தில் இருந்த அனைவரும் கேட்டனர்.(1) நிலவின் அமுதக் கதிர்களுக்கு ஒப்பான அந்தப் பெரும் ரிஷியினுடைய சொற்களின் சாறு {சாற்றைப் பருகியது} அவர்களது காதுகளை நிறைவடையச் செய்தது.(2) பல்வேறு வீரர்கள் கொல்லப்பட்டதைச் சொல்வதும், அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை {என்ற புருஷார்த்தங்களைத்} தருவதுமான பாரதப் போரின் அழகிய வரலாற்றைக் கேட்டு அந்தக் கூட்டத்தில்(3) இருந்த சிலர் கண்ணீர் சிந்தினர், வேறு சிலர் தியானத்தில் ஈடுபட்டனர். உள்ளங்கையில் எழுதி வைக்கப்பட்டதைப் போல அந்த வரலாற்றுத் தொடர் அந்த முனிவரால் விளக்கப்பட்டது.(4)

தெய்வீக ரிஷியான வியாசர் அங்கே இருந்த சபை உறுப்பினர்கள் அனைவரையும் வலம் வந்து அவர்களது அனுமதியைப் பெற்றுக்கொண்டு, “நான் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.(5) அதன்பிறகு முன்னணி தவசிகளும், ரிஷிகளில் முதன்மையானவரும், பேசுபவர்களில் சிறந்தவருமான வியாசரைப் பின்தொடர்ந்து சென்றனர்.(6) தெய்வீகரான வியாசரும், ரிஷிகளும் புறப்பட்ட பிறகு, புரோஹிதர்களும், மன்னர்களும் தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே திரும்பிச் சென்றனர்.(7)

மன்னன் ஜனமேஜயன், பயங்கரம் நிறைந்த பன்னகர்களைப் பழிவாங்கிய பிறகு, நஞ்சைக் கைவிடும் பாம்பைப் போலக் கோபத்தைக் கைவிட்டான்.(8) பெரும் முனிவரான ஆஸ்தீகர், எரியும் தலையைக் கொண்ட தக்ஷகனை ஹோம நெருப்பில் இருந்து காத்து, தன்னுடைய ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார்.(9) மன்னன் ஜனமேஜயனும், தன் மக்களால் சூழப்பட்டவனாக ஹஸ்தினாபுர நகரத்திற்குச் சென்று மனநிறைவுடன் கூடிய தன் குடிமக்களை மகிழ்ச்சியுடன் ஆளத் தொடங்கினான்.(10) சில நாட்கள் கழிந்ததும், ஜனமேஜயன், ஏராளமான கொடைகளுடன் கூடிய குதிரைவேள்வியை முறையாகச் செய்தான்.(11)

வழிபடத்தகுந்த பெண்மணியான காசியை வபுஷ்டமா, சாத்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளின் படி தற்கட்டுப்பாட்டுடன் கூடியவளாக ஜனமேஜயன் வேள்வியில் கொல்லப்பட்ட குதிரையிடம் சென்று, அதன் அருகே அமர்ந்தாள்.(12) வாசவன் {இந்திரன்}, முற்றிலும் அழகான அந்தப் பெண்ணின் மீது கொண்ட விருப்பத்தில், கொல்லப்பட்ட அந்தக் குதிரையின் உடலில் நுழைந்து அவளை அறிந்தான்.(13) ஜனமேஜயன் அந்த மாற்றத்தைக் கண்டு, வேள்வியைச் செய்யும் புரோஹிதரிடம், “இந்தக் குதிரைக் கொல்லப்பட வில்லை; உடனே இதைக் கொல்வீராக” என்றான்.(14) விவேகியான அந்தப் புரோஹிதர், இந்திரனின் அம்முயற்சியை அறிந்து கொண்டு, அரச முனியான ஜனமேஜயனிடம் அதைத் தெரிவித்தார், மன்னன் புரந்தரனை {இந்திரனைச்} சபித்தான்[1].(15)ஓ! சௌனகரே, அப்போது அந்த ஜனமேஜயன் {தன் புரோஹிதரிடம்}, “செய்த தவங்கள், குடிமக்களின் பாதுகாப்பு, வேள்வி ஆகியவற்றின் மூலம் நான் பயனேதும் ஈட்டியிருந்தால், அதைக் கொண்டு மெய்யுறுதியுடன் உமக்கொன்றைச் சொல்கிறேன்; கேட்பீராக;(16) தீய மனம் கொண்டவனும், குதிரை வேள்விகளில் மனக்கட்டுப்பாடு ஏதும் கொள்ளாதவனுமான இந்திரனை இன்று முதல் க்ஷத்திரியர்கள் எவரும் வழிபடமாட்டார்கள்” என்றான்.(17)

பிறகும் பெருங்கோபத்தால் தூண்டப்பட்ட மன்னன் ஜனமேஜயன், {தன் வேள்வியில்} தலைமை வகிக்கும் புரோஹிதர்களிடம், “நான் செய்த இந்த வேள்வி இந்திரன் மூலம் பாழடைந்ததால், உங்களிடம் பிராமண சக்தி கிஞ்சிற்றும் இல்லை என்பதை உண்மையில் நான் அறிந்தேன்.(18) எனவே, நீங்கள் என் ஆட்சிப்பகுதிக்குள் வாழக்கூடாது. உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நீங்கள் வேறெங்காவது செல்வீராக” என்றான். இவ்வாறு சொல்லப்பட்டதும் ஜனமேஜயனிடம் கோபமடைந்த பிராமணர்களும் அங்கிருந்து சென்றனர்.(19)

பெரும் பக்திமானான மன்னன் ஜனமேஜயன், பெருங்கோபத்தால் தூண்டப்பட்டவனாகத் தன் அரண்மனைக்குள் சென்று, தன் ராணிகளிடம் ஆணையிடும் வகையில்,(20) “புழுதி படிந்த தன் காலை என் தலையில் வைத்தவளும், கற்பற்றவளுமான வபுஷ்டமாவை என் வீட்டில் இருந்து விரட்டுவீராக.(21) அவள் என் புகழையும், மகிமையையும் அழித்து என் மதிப்பைக் கெடுத்திருக்கிறாள். கைவிடப்பட்ட மலர்மாலையைப் போலவே கற்பற்ற மனைவியான அவளை நான் காணவும் விரும்பவில்லை.(22) இவ்வுலகில் பிறரை விரும்பும் மனைவியுடன் வாழ்பவனால் இனிய உணவை உண்ணவும், தனிமையான இடத்தில் மகிழ்ச்சியாக உறங்கவும் முடியாது. {நாயால் நக்கப்பட்டு} களங்கமடைந்த {வேள்வி} ஹவிஸைப்போல அவனால் அவளிடம் இன்புற முடியாது” என்றான்.(23) சினத்துடன் கூடிய பரீக்ஷித்தின் மகன் இதைச் சொல்லிவிட்டு உரக்க அழுதான். அப்போது கந்தர்வ மன்னனான விஸ்வாவசு அவனிடம் பேசினான்[2].(24)விஸ்வாவசு, “ஓ! மன்னா, நீ முன்னூறு வேள்விகளைச் செய்திருக்கிறாய்; இனியும் உன்னை வாசவன் {இந்திரன்} மன்னிக்க மாட்டான். உன்னால் முறையாக மணக்கப்பட்ட வபுஷ்டமையின் குற்றம் இதிலேதும் இல்லை.(25) அவள் {வபுஷ்டமை} முன்னர் அப்சரஸ் ரம்பையாக இருந்தாள், இப்போது காசியின் மகளாகப் பிறந்திருக்கிறாள். அழகிய காரிகையருள் சிறந்தவளான இவளை மதிப்புமிக்க ரத்தினமாகக் கருதி இவளுடன் இன்புற்றிருப்பாயாக[3].(26) இவளை ஒருபோதும் கைவிடாதே. ஓ! குருக்களில் முதன்மையானவனே, நீ செல்வத்தில் சச்சியின் தலைவனை {இந்திரனைப்} போன்றவன். நீ வேள்விகளைச் செய்ய ஆயத்தமாக இருப்புதைக் கண்ட தேவர்களின் மன்னன், அதில் குற்றங்களை நாடி இங்கே தடங்கலை ஏற்படுத்தியிருக்கிறான். ஓ! மன்னா, வேள்விப் பயன்களை அடைவதில் நீ அவனைக் கடந்து விடுவாய் என்று கருதியே அந்தத் தேவர்களின் மன்னன் {இந்திரன்} இந்த யக்ஞத்திற்குத் தடங்கல்களை ஏற்படுத்தினான்.(28)தடங்கலை ஏற்படுத்த விரும்பிய வாசவன் {இந்திரன்}, குதிரை கொல்லப்பட்டதைக் கண்டு, அதில் குற்றம் கண்டுபிடித்து, இந்த மாயையை இங்கே ஏற்படுத்தியிருக்கிறான்[4].(29) இந்திரன் வபுஷ்டமையை ரம்பை என்று கருதியே அறிந்தான். அதன் விளைவால் உண்டான கோபத்தில் தூண்டப்பட்ட நீயும், முன்னூறு வேள்விகளைச் செய்து கொடுத்த உன் புரோஹிதர்களைச் சபித்து, இந்திரனுக்கு மட்டுமே சொந்தமான பயன்களை இழந்தாய். அந்த ஆசான்கள் உன்னால் விரட்டப்பட்டிருக்கின்றனர்.(30,31) வாசவன் எப்போதும் உன்னைக் கண்டும், பிராமணர்களைக் கண்டும் அஞ்சி நின்றவன். அவன் தன் மாயா சக்தியால் இந்தச் செயலை நிறைவேற்றியதன் மூலம் அந்த இரண்டு அச்சங்களில் இருந்தும் விடுபட்டிருக்கிறான்.(32) வெற்றிகளையே அடைய விரும்பும் பெருஞ்சக்திவாய்ந்த புரந்தரனால், சாதாரண மனிதர்களாலும் செய்ய முடியாத காரியமான தன் மகன்கள், பேரப்பிள்ளைகளின் மனைவிகளை எவ்வாறு கெடுக்க முடியும்?[5](33)இந்திரனிடம் புத்தி, அறம், புலனடக்கம், ஆன்ம ஆற்றல், மகிமை ஆகியவை போதுமான அளவுக்கு இருப்பதைப் போலவே முன்னூறு வேள்விகளைச் செய்த உன்னிடமும் அவை இருக்கின்றன.(34) எனவே, இந்திரனையும், ஆசான்களையும், வபுஷ்டமாவையும் பழிக்காதே, உன்னையும் பழித்துக் கொள்ளாதே. விதியை வெல்வது மிகக் கடினமானது.(35) தேவர்களின் மன்னன், தன்னுடைய ஆன்ம சக்திகளின் மூலம் குதிரைக்குள் புகுந்து உன்னுடைய கோபத்தைத் தூண்டச் செய்தான்; ஆனால் நீ கோபத்தால் தூண்டப்படாதே. மகிழ்ச்சியை விரும்புவோர் எப்போதும் விதியின் வழிகளையே பின்பற்ற வேண்டும்.(36) எதிர் திசையில் இருக்கும் நீரோட்டத்தைக் கடப்பதைப் போலவே கெட்ட விதியைக் கடப்பதும் மிகக் கடினமானதாகும். எனவே முனைப்பில் இருந்து விலகுவாயாக; கவலையைக் களைந்து ரத்தினம் போன்றவளும், பாவமற்றவளுமான உன் மனைவியின் துணையில் இன்புற்றிருப்பாயாக.(37)

ஓ! மன்னா, அப்பாவிகளான சாதாரணப் பெண்கள் ஆண்களிடம் இருந்து பிரிந்தால் அவர்கள் பின்னவர்களை {அந்தப் பெண்கள் ஆண்களைச்} சபிப்பார்கள் {பாவமற்ற பெண்கள் அலட்சியப்படுத்தப்பட்டால், அதிலும் குறிப்பாகக் குற்றமற்ற தெய்வீகப் பெண்கள் அவமதிக்கப்பட்டால், நீயும் பிற பெண்களால் அலட்சியப்படுத்தப்படுவாய்}.(38) சூரியனின் கதிர்களும், நெருப்பின் தழல்களும், வேள்விப் பீடமும், ஆகுதிகளும், மாற்றானை விரும்பாத மனைவியும் பிறரால் தீண்டப்பட்டாலும் ஒருபோதும் களங்கமடைவதில்லை[6].(39) நற்பண்புகளைக் கொண்ட மனைவியர், செழிப்பின் தேவியை {ஸ்ரீதேவியைப்} போல எப்போதும் மதிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுக் கல்விமான்களால் துதிக்கப்படவும் வேண்டும்” என்றான் {விஷ்வாவசு}”.(40)

ரிஷிமொழி கேட்பதன் பலன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 06-(ஏதத்க்ரந்தஷ்ரவணபலம்)-மகிழ்ச்சியாக நாட்டை ஆண்ட ஜனமேஜயன்; ஹரிவம்சம் படிப்பது, கேட்பது, உரைப்பது ஆகியவற்றின் பலன்களைச் சொன்ன சௌதி…

சௌதி {சௌனகரிடம்}, “விஸ்வாவசுவால் இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டவனும், பயனற்ற கவலையால் நிறைந்த மனத்தைக் கொண்டவனுமான ஜனமேஜயன் வபுஷ்டமையிடம் தணிவடைந்து, பாவத்தை விலக்குவதற்காக ஓர் அறச்சடங்கைச் செய்தான்.(1) பக்திமானான ஜனமேஜயன், தன் மன உளைச்சலை விரட்டி, புகழை அடைய விரும்பி, வபுஷ்டமையை மகிழ்வித்துத் தன் நாட்டை ஆண்டான்.(2) அவன், பிராமணர்களை வழிபடுவது, வேள்விகளைச் செய்வது, கொடைகளை அளிப்பது ஆகியவற்றைத் தவிர்க்காமல், வபுஷ்டமாவை வசைபாடாமல் தன் நாட்டைக் கவனித்துக் கொண்டான்.(3) மன்னன் ஜனமேஜயன், பெருந்தவங்களைச் செய்த ரிஷிகள், “விதியின் இயக்கத்தை வெல்ல இயலாது” என்று சொன்னதை உறுதியான இதயத்துடன் தொடர்ந்து தியானித்துத் தன் கோபத்தைக் கைவிட்டான்.(4)

மஹாரிஷியின் {வியாசரின்} இந்தப் பெருஞ்சொற்களைப் படிப்பவன், மனிதர்களால் புகழத்தக்கவனாகி போதுமான அளவுக்கு நீண்ட காலம் வாழ்ந்து, (பிறருக்கு) அடைதற்கரிதான பயன்களை அடைகிறான்.(5) பாவத்தை அழிக்கும் இந்தச் சொற்களைப் படிக்கும் மனிதன், பாவங்களில் இருந்து விடுபட்டு, நூறு வேள்விகளைச் செய்த பலனையும், விருப்பத்திற்குரியவை பலவற்றையும் அடைந்து, நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்கிறான்.(6) 

மலர்களில் இருந்து உண்டாகும் கனிகளை விளைவித்து, அந்தக் கனிகளில் இருந்தே மீண்டும் உதிக்கும் மரத்தைப் போலவே அந்த மஹாரிஷியிடம் இருந்து வெளிப்பட்ட சொற்கள் அவனை {மகாரிஷியின் சொற்களைப் படிப்பவனை} செழிப்படையச் செய்யும்.(7) மகனற்ற மனிதன், வலிமைமிக்க மகன்களையும், உலகில் நிலையிழந்த மனிதன், மீண்டும் தன் நிலையையும் இந்தச் சொற்களின் மூலம் அடைகிறான். பிணிகளில் இருந்தும், தளைகளில் இருந்தும் அவன் விடுபடுகிறான். அவன், சாதனைகளையும், பல மங்கலப்பணிகளையும் செய்வான்.(8)

ரிஷியின் இந்த மங்கலச் சொற்களைக் கேட்பதன் மூலம், கன்னிகையர் தங்கள் இதயம் விரும்பும் கணவர்களை அடைந்து, வலிமைமிக்கவர்களும், சாதனைகளைச் செய்யக்கூடியவர்களும், பகைவரைக் கலங்கடிக்கக் கூடியவர்களுமான மகன்களைப் பெறுவார்கள்.(9) இந்தச் சொற்களைக் கேட்கும் க்ஷத்திரியர்கள் உலகையும், தங்கள் பகைவரையும் வென்று, ஏராளமான செல்வத்தை அடைவார்கள்; வைசியர்கள் போதுமான உடைமைகளை அடைவார்கள்; சூத்திரர்கள் சிறந்த நிலையை அடைவார்கள்.(10)

உமக்குச் சொல்லப்படும் இந்த அத்தியாயத்தைப் பிராமணர்களின் வட்டத்தில் நீர் நினைவுகூர்ந்தால், பொறுமையையும், அமைதியையும் நாடி உலகில் மகிழ்ச்சியாகத் திரிவீர்.(11) இவ்வாறே நான், அற்புதச் செயல்களைச் செய்யும் பெரும் முனிவர்களின் வாழ்க்கையையும், அவர்களின் ஒழுக்கத்தையும் மீண்டும் சொன்னேன். இன்னும் நீர் கேட்கவிரும்புவதென்ன என்பதை எனக்குச் சொல்வீராக. அதை நான் உமக்கு விளக்கிச் சொல்கிறேன்” என்றார் {சௌதி}[1].(12,13)

கடவுளின் இயற்பண்புகள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 07-(புஷ்கரப்ராதுர்பாவ:)கடவுளின் குணங்கள் குறித்து வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்; வைசம்பாயனரின் விடை…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}[1], “ஓ! யோகத்தை அறிந்தவர்களின் தலைவரே, தேவர்களும், ரிஷிகளும் அண்டத்தில் எவ்வாறு பிறந்தனர் என்பதையும், பெருங்கடலின் நீரில் கிடந்து உறங்கும் தாமரை உந்தியோனின் {பத்மநாபனின்} சக்தியையும் எனக்கு விரிவாக விளக்கிச் சொல்வீராக. அவனது மகிமைகளைக் கேட்டு நான் இன்னும் தணிவடையவில்லை.(1,2) புருஷோத்தமன் எவ்வளவு காலம் அங்கே கிடந்தான்? காலத்தின் பிறப்புக்குக் காரணனான அவன் அந்த நேரத்தில் ஏன் உறங்கிக் கொண்டிருந்தான்?(3) தேவர்களின் தெய்வீக மன்னனான அவன் எவ்வளவு காலத்திற்குப் பிறகு விழித்தான்? விழித்தெழுந்ததும் அவன் ஏன் இந்த அண்டத்தைப் படைத்தான்?{4} ஓ! பெரும் முனிவரே, முன்பிருந்த குடிமுதல்வர்கள் யாவர்? அந்த நித்திய புருஷன் ஏன் உலகங்களைப் படைத்தான்?{5}ஓ! முனிவரே, முன்பு அசைவனவும், அசையாதனவும், தேவர்கள், அசுரர்கள், பாம்புகள், ராட்சசர்கள், காற்று, நெருப்பு, வானம், பூமி ஆகியவையும் அழிந்த போது, பெருஞ்சக்திவாய்ந்தவனும், தேவர்களின் ஆசானும், பெரும்பூதங்களின் மன்னனுமான அந்தத் தலைவன், பூதங்கள் அனைத்தும் எதனுள் மூழ்கியிருந்ததோ அந்தப் பரந்து விரிந்த ஒரே பெருங்கடலில் எவ்வாறு உறங்கிக் கிடந்தான்?{6-8}(4-8) ஓ! பிராமணரே, நான் உமது புகலிடத்தை நாடியிருக்கிறேன் என்பதால் நாராயணனின் மகிமைகளை நிச்சயம் நீர் எனக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்.(9) ஓ! மதிப்புமிக்க ஐயா, பக்திமான்களால் புகழத்தக்க அந்தப் பெருந்தேவனின் கடந்த கால, எதிர்கால அவதாரங்களை எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.(10)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! குரு குலத்தின் பாவமற்ற வழித்தோன்றலே, நாராயணனின் மகிமைபொருந்திய செயல்பாடுகளைக் கேட்கும் ஆவல் கொண்ட நீ உண்மையில் உன் குலத்துக்குத் தகுந்தவனே.(11) ஓ! மன்னா, தாமரை உந்தி படைத்த தேவனின் சக்தி குறித்து ஸ்ருதிகளில் பதியப்பட்டவாறே முதல்வர்களும், புராதனர்களுமான தேவர்களிடம் கேட்ட பிராமணர்களிடம் இருந்து நாங்கள் அறிந்தவற்றை உள்ளபடியே கேட்பாயாக.(12) ஓ! பாரதா, பராசரரின் மகனும், எழில்மிகு ஆசானும், பிருஹஸ்பதியைப் போன்று சக்திவாய்ந்தவருமான துவைபாயனர் {வியாசர்}, மனத்தைக் குவித்து {தியானித்து} தாமரை உந்தி படைத்த தேவனின் சக்தியைக் கண்டு அதை விளக்கிச் சொல்லியிருக்கிறார்.{13} நான் ஏற்கனவே கேட்டதை உள்ளபடியே உனக்கு விளக்கிச் சொல்கிறேன். நான் ரிஷியாக இருந்தாலும் என்னால் அதை முழுமையாக அறிய இயலவில்லை.{14}(13,14) ஓ! மன்னா, அண்டத்தைப் படைத்த படைப்பாளனாலும் முழுமையாக அறிய முடியாத பெரும்புருஷன் நாராயணனை வேறு எவரால் அறிந்து கொள்ள முடியும்?(15)

ஓ! பாவமற்றவனே, அனைத்துடனும் அடையாளங் காணப்படுபவனும், கோட்பாடுகளின் பிறப்பிடமுமான அண்டத்தின் படைப்பாளனாலும், பெரும் ரிஷிகளாலும், தேவர்களாலும் பெரும்புதிராகக் கருதப்படுவதை உண்மையில் நான் கேட்டிருக்கிறேன்.{16} ஆன்ம ஞானத்தை அறிந்தவர்கள் அவனையே தியானிக்கிறார்கள். அவனே கர்மத்தின் திறன்மிகுந்த காரணனாகவும், தேவர்களில் தலைமைத் தேவனாகவும், எவராலும் காணப்படாதவனாகவும் இருக்கிறான்.{17} அவன் தொடக்கமும், முடிவும் அற்றவனாவான். மஹாரிஷிகள் அறிய முனையும் நித்திய உண்மை அவனே ஆவான். தேவர்களின் ஞானமாக இருப்பவனும், வேதங்களை நன்கறிந்தோரால் தூய அறிவாக அறியப்படுபவனும் அவனே.{18} புலன் நுகர் பொருட்களைப் படைப்பவனும், ஹிரண்யகர்ப்பனாக இருந்து பூதங்களையும் படைப்பவனும் அவனே. புத்தியும், மனமும், க்ஷேத்ரக்ஞனும், மகிமையின் கோட்பாடும், புருஷனும், பரமாத்மாவும் அவனே.{19} அனைத்துக்கும் சாட்சியான காலமாகவும், எதனிலும் சார்பற்றவனாகவும் இருப்பவன் அவனே.{20} ஐந்து முக்கிய மூச்சுகளாகவும் {பிரதான வாயுக்களாகவும்}, அவற்றின் செயல்பாட்டுக்குக் காரணனாகவும், உண்மையானவனாகவும், சிதைவற்றவனாகவும் இருப்பவன் அவனே.{21} நம் செயல்பாடுகளுக்குக் காரணனாகவும், நாம் செய்ய வேண்டியதையும், செய்யக்கூடாததையும் வகுப்பவனாகவும் இருப்பவன் அவனே.{22} அவனை நாம் அனைத்து வழிமுறைகளினாலும் நாடவும், {அவனைக் குறித்துப்} பேசவும், {அவனைக் குறித்துக்} கேட்கவும் வேண்டும்.{23} சொர்க்கமாகவும், முக்தியாகவும், பல்வேறு மாற்றங்களாகவும், புதிர் நிறைந்த உலகமாகவும், நமது ஆசானாகவும் இருப்பவன் அவனே. நாராயணனைக் குறித்தே நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன்.{24} ஓ! மன்னா, வாய்மை, பொய்ம்மை, செயல், விளைவு, கடந்தகாலம், எதிர்காலம், அசைவன, அசையாதன, நித்தியமானவை என மூவுலகங்களிலும் இருக்கும் அனைத்தும் தாமரை உந்தி படைத்த தலைவனான அந்தப் பெரும்புருஷனிடமிருந்தே வெளிப்பட்டன” என்றார் {வைசம்பாயனர்}[2].{25}(16-25)

யுகங்களின் கால அளவு | பவிஷ்ய பர்வம் பகுதி – 08-க்ருதாதியுகபரிமாணம்)-யுகங்களின் கால அளவைச் சொன்ன வைசம்பாயனர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! ஜனமேஜயா, சத்திய யுகம் நாலாயிரம் {4000} ஆண்டுகள் கால அளவைக் கொண்டது என்று கல்விமான்கள் விளக்கியிருக்கின்றனர்[1]. தொடக்கத்திலும், முடிவிலும் நேரும் ஒவ்வொரு யுகசந்திப்பு காலமும் நானூறு ஆண்டுகள் என ஒதுக்கப்பட்டிருக்கின்றன.(1) அந்தக் காலத்தில் அறம் நான்கு கால்களையும், பாவம் ஒரு காலையும் கொண்டிருந்தன. மனிதர்கள், தங்கள் கடமைகளை நோற்றவாறே வேள்விகளைச் செய்து வந்தார்கள். அந்த யுகத்தில் பிராமணர்கள் தங்கள் கடமைகளைச் செய்தார்கள், மன்னர்கள் தங்கள் கடமைகளைப் பின்பற்றினார்கள், வைசியர்கள் வேளாண் பணியில் ஈடுபட்டனர். சூத்திரர்கள் (பிறருக்குத்) தொண்டு புரிந்தார்கள்.(2,3) நல்லியல்பின் குணமான {சத்வ குணமான} வாய்மையும், அறமும் தழைத்திருந்தன. மக்கள் நல்லோரைப் பின்பற்றும் வகையில் பிறரின் போதனைகளைப் பெற்றனர்.(4) ஓ! பாரதா, அறம்சார்ந்த மனம் கொண்டவர்களாக இருந்தாலும், இழிந்த பிறப்பைக் கொண்டவர்களாக இருந்தாலும் கிருத யுகத்தில் மனிதர்களின் ஒழுக்கம் இவ்வாறே இருந்தது.(5)திரேதா யுகத்தின் கால அளவு மூவாயிரம் {3000} ஆண்டுகளும், அதன் தொடக்க, முடிவு காலங்கள் {சந்திக்காலங்கள்} முன்னூறு வருடங்களும் ஆகும்.(6) அந்தக் காலத்தில் அறம் மூன்று கால்களையும், பாவம் மூன்று கால்களையும் கொண்டிருந்தன. வாய்மையும், நல்லியல்பின் குணமும் {சத்வ குணமும்} கிருத யுகத்தைப் போலவே தொடர்ந்திருந்தன. மனித குலம், அறச்செயல்களின் பலன்களை விரும்பி கெட்டுப் போனது. அதன்தொடர்ச்சியாக நால்வகையினரின் {நான்கு வர்ணத்தாரின்} அறச்சடங்குகள் சீர்குலைந்து அவர்கள் பலவீனமடைந்தார்கள். இவ்வாறே, ஓ! மன்னா, தேவர்களால் விதிக்கப்பட்டபடி திரேதா யுகத்தின் பணி உனக்கு விளக்கப்பட்டது. இனி துவாபரத்தின் பணியைக் கேட்பாயாக.(7-9)

ஓ! குருக்களில் முதன்மையானவனே {ஜனமேஜயனே}, துவாபரத்தின் கால அளவு இரண்டாயிரம் ஆண்டுகள் நீண்டதாகும், அதன் சந்திக் காலங்கள் இரண்டில் ஒவ்வொன்றும் இருநூறு ஆண்டுகளைக் கொண்டனவாகும்.(10) அந்தக் காலத்தில் பிராமண ஞானிகள் தன்னலங் கொண்டவர்களாகவும், ரஜஸ் குணத்தால் (தன்னை மையப்படுத்தும் போக்கால்) பீடிக்கப்பட்டவர்களாகவும், வஞ்சகர்களாகவும், இழிந்த மனம் படைத்தவர்களாகவும், இயல்பில் பிறழ்வு கொண்டவர்களாகவும் பிறந்தார்கள். அறம் இரண்டு கால்களையும், பாவம் மூன்று கால்களையும் கொண்டிருந்ததால் நித்திய அறத்தின் பாலங்கள் படிப்படியாக வக்கிரமடைந்தன.(11,12) உண்மையான பிராமணத்தன்மை மறைந்தது, கடவுள் மீதான நம்பிக்கை தகர்ந்தது, விரதம், நோன்புகள், அறச்சடங்குகள் ஆகியன கைவிடப்பட்டன.(13)

கலியுகத்தின் கால அளவு ஆயிரமாண்டுகளாகவும், சந்திக்காலங்கள் இரண்டில் ஒவ்வொன்றும் நூறு வருடங்களைக் கொண்டனவாகவும் இருக்கும்.(14) இந்தக்காலத்தில் அறம் ஒற்றைக் காலையும், பாவம் நான்கு கால்களையும் கொண்டிருக்கும். மனிதர்கள் காமம் {ஆசை} நிறைந்தவர்களாகவும், தமஸ் குணத்தால் (ஒழுங்கற்ற போக்கால்) பீடிக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். எவரும் நோன்பு பயிலமாட்டார்கள், எவரும் பக்திமானாக {நல்லோனாக} நடந்து கொள்ள மாட்டார்கள், எவரும் உண்மை பேச மாட்டார்கள். ஒவ்வொரு மனிதனும் நாத்திகனாகவோ, பிரம்மவாதியாகவோ இருப்பான். ஒவ்வொருவனும் தான் என்ற அகந்தை கொண்டவனாகவும், பற்றுணர்வு {பாசம்} அற்றவனாகவும் இருப்பான். விப்ரர்கள் சூத்திரர்களைப் போல நடந்து கொள்வார்கள், சூத்திரர்கள் பிராமணர்களின் குண இயல்புகளைக் கொண்டிருப்பார்கள்.(15-17) கலியுகத்தில் மக்கள் ஆசிரமங்களின் வரம்புகளை மீறி, கண்டபடி கலவி புரிவதன் மூலம் சந்ததிகளைப் பெருக்குவார்கள், அறியக்கூடாத பெண்களை அறிவார்கள்.(18)

இவ்வாறே, ஓ! ஜனமேஜயா, பனிரெண்டாயிரம் {12000} வருடங்கள் ஒரு யுகமாகவும் {யுகசுழற்சியாகவும்}, எழுபத்தோரு யுகங்கள் {யுகசுழற்சிகள்} ஒரு மன்வந்தரமாகவும் அமைகின்றன.(19) ஒரு யுகசுழற்சி நிறைவடையும் நேரத்தில் எவரும் மூன்று வேதங்களில் ஐயங்கொள்ள மாட்டார்கள். பனிரெண்டாயிரம் தேவ வருடங்கள் ஒரு யுகமாக அமைவதாகக் கல்விமான்கள் கருதுகிறார்கள். அத்தகைய ஆயிரம் யுகங்கள் பிரம்மனின் ஒரு நாளாக அமைகின்றன.(20)

ஓ! பாரதா, இந்த நாள் கடந்ததும், பெரும்பூதங்களின் தலைவனான தாமரை உந்தி படைத்த {பத்மநாபப்} பெருந்தேவனானவன், பிராமணர்கள், தைத்தியர்கள், தானவர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், அப்சர்கள், தேவரிஷிகள் {தெய்வீக முனிவர்கள்}, பிரம்மரிஷிகள் {பிராமண முனிவர்கள்}, ராஜரிஷிகள் {அரசமுனிகள்}, ஆகியோரின் உடல்களும், பாம்புகள், மலைகள், ஆறுகள், விலங்குகள், பறவைகள், மான்கள் ஆகியவற்றின் உடல்களும், பிற உயிரினங்களின் உடல்களும் சிதைவடைவதை சாட்சியாகக் காண்பான். அப்போது உலகை அழிக்கும் தன் புத்தியைப் பயன்படுத்தி அண்டத்திற்கு அழிவை ஏற்படுத்தும் வகையில் பயங்கரம் நிறைந்த செயல்களைச் செய்வான்.(21-25) அவன், சூரியனின் வடிவில் உயிரினங்கள் அனைத்தின் பார்வையைப் பறிப்பான், காற்றின் வடிவில் அவற்றின் உயிர் மூச்சுகளைப் பறிப்பான், நெருப்பின் வடிவில் அவன் உலகங்கள் அனைத்தையும் எரிப்பான், மேகத்தின் வடிவில் அவன் சாதகமற்ற பெருமழையை மீண்டும் மீண்டும் பொழிவான்” என்றார் {வைசம்பாயனர்}.(26)

ஒற்றைப் பெருங்கடலாக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 09-(ஏகார்ணவவிதி꞉)-ஒற்றைப் பெருங்கடலில் நாராயணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஏழு வடிவங்களைக் கொண்டவனும், யோகியுமான நாராயணன், நெருப்பின் வடிவை ஏற்று எரியும் தழல்களைக் கொண்டு பெருங்கடல்களை வற்ற செய்வான்.{1} ஆறுகள், பெருங்கடல்களின் வடிவில் உள்ள ஆசைகள் அனைத்தையும், மலைகளின் வடிவில் இருக்கும் அவற்றின் சக்திகளையும் தன் சக்தியால் அழிப்பான்.{2} திரளாகவும் {ஸ்தூலமாகவும்}, நுட்பமாகவும் {சூக்ஷுமமாகவும்} உள்ள இரண்டையும் அவன் அழிப்பான். அந்த இரண்டின் வேராக இருக்கும் பிரம்மத்தில் அனைத்தையும் நிலைநிறுத்தி மீண்டும் அண்டத்தைப் படைப்பதற்காகக் குணங்கள் அனைத்தையும் வற்ற செய்வான்.{3} விளைவுகளை உண்டாக்கும் காரணியான பிரம்மத்தில் இருக்கும் சிறப்பை அவன் உயிரினங்களுக்குக் கொடுப்பான். அந்த நேரத்தில் அவன் இவை அனைத்தையும் அழிப்பான்.{4} ஹரியானவன், காற்றைப் போலச் சக்தி நிறைந்தவனாக இருப்பினும், மொத்த அண்டத்தையும் வென்று, ஐந்து உயிர் மூச்சுகளையும், ஐம்புலன்களையும் மேல்நோக்கி இழுப்பான்.{5}

அதன்பிறகு, தேவர்களின் ஐம்புலன்களும், பிற உயிரினங்களின் ஐம்புலன்களும், அவற்றின் பொருள்களான {புலன்நுகர் பொருட்களான} மணம் {வாசனை}, உடல் முதலியவையும் (தங்கள் இருப்புக்காக) பூமியை அடையும்.{6}(1-6) சுவையின் புலனான நாக்கும், அதன் பொருளான சாறும் நீருக்குச் செல்லும். பார்வையின் புலனான கண்ணும், அதன் பொருளான நிறமும், ஒளியுடல்களிடம் {ஜோதிகளிடம்} செல்லும்.{7} தீண்டலின் புலனான தோலும், அதன் பொருளான தீண்டலும், உயிர் மூச்சும், அதன் பணியும், இயக்கமும் காற்றிடம் செல்லும். மேலும் இவை அனைத்தும் சரடைப் போல இருக்கும் ரிஷிகேசனிடம் நிலைத்திருக்கும்.{8}(7,8) அனைத்தையும் அறிந்தவனான தலைவன், அண்டச் சரடில் உள்ள நுட்பமான திறன்கள் {ஆற்றல்கள்}, புலன்கள், அதன் பொருள்கள் ஆகியவை சீரான நிலையில் தேவர்களிடம் நிறைந்திருக்கும் வகையில் அவை யாவற்றையும் காற்றின் மூலம் ஈர்ப்பான்.{9} அப்போது, நிறம், தீண்டல் முதலியவற்றின் தொடர்பால் உண்டாவதும், அண்டத்தின் காரணமாக இருப்பதுமான பயங்கரம் நிறைந்த சம்வர்த்தக நெருப்பானது, நூறு தழல்களுடன் கூடியதாக மொத்த உலகையும் எரிக்கும்.{10} அந்த நெருப்பானது, மலைகள், மரங்கள், சோலைகள், கொடிகள், கொப்புகள், தெய்வீகத் தேர்கள் {விமானங்கள்}, நகரங்கள், ஆசிரமங்கள் {முனிவர்களின் குடில்கள்}, தெய்வீகக் கட்டடங்கள், பிற வசிப்பிடங்கள் ஆகியவற்றைச் சாம்பலாக்கிய பிறகு, உலகின் ஆசானான ஹரி, செயலெனும் நீரால் அதை {அந்த சம்வர்த்தக நெருப்பை} அணைப்பான்.{11,12}

பிறகு, ஆயிரங்கண்களைக் கொண்டவனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனுமான கிருஷ்ணன், பெரும் மேகத்தின் வடிவை ஏற்றுத் தூய நீரால் பூமியை நிறைவடையச் செய்வான்.{13} உயர்ந்ததும், மங்கலமானதும், புனிதமானதும், இனிமையானதும், அமுதத்தைப் போன்றதுமான நீரால் பூமியானது பெரிதும் அமைதியடைந்திருக்கும் போது,{14} மலைகளும், மரங்களும் நீருக்கடியில் கிடக்கும்போது, மேகங்கள் நீருண்டவையாக இருக்கும்போது,{15} பூமியானது ஒரே பரப்பிலான நீராக {ஒற்றைப் பெருங்கடலாக} மாறி உயிரினங்களேதும் அற்றதாகியிருக்கும்போது,{16} சூரியனும், ஆகாயமும், உயிரினங்களும் இல்லாத நுட்பமான இடத்தில் கிடக்கும் ரிஷிகேசனில் பெரும்பூதங்கள் அனைத்தும் மூழ்கியிருக்கும்.{17}(9-17) இவ்வாறு அளவற்ற புத்தியைக் கொண்ட அந்த நித்திய புருஷன், மொத்த படைப்பையும் வற்ற செய்து, எரித்துக் கலங்கடித்துப் பருகிய பிறகு, தன் புராதன வடிவில் மட்டுமே நீடித்திருப்பான். அனைத்தையும் மறைக்கும் பெருங்கடலில் அந்தப் பெரும் யோகியானவன், யோகத் துயிலில் கிடக்கும்போது, நித்தியமாக நிலைத்திருக்கும் பூதங்கள் அனைத்தும் அந்தத் தூய பிரம்மத்துடன் ஐக்கியமாகிக் கிடக்கும்.{18} வெளிப்படாத புருஷனானவன், அந்த ஒற்றைப் பெருங்கடலில் {ஏகார்ணவத்தில்} ஆயிரம் அயுதா ஆண்டுகள் {அயுதாநாம் ஸஹஸ்ராணி} கிடக்கும்போது, அவனை எவராலும் வெளிப்படையாக உணர முடியாது” என்றார் {வைசம்பாயனர்}{19}.(18,19)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “நீர் விளக்கிய ஒற்றைப் பெருங்கடல் யாது? இந்தப் புருஷன் எவன்? யோகம் யாது? ஒரு யோகியானவன் எவன்?” என்று கேட்டான்.(20)

வைசம்பாயனர், “தலைவன் அனைத்தையும் ஒற்றைப் பெருங்கடலாக {ஏகார்ணவமாக} {எவ்வளவு காலத்தில்} மாற்றுவான் என்பதை எவ்வளவு காலம் காத்திருந்தாலும் எவராலும் புரிந்து கொள்ள முடியாது. அந்த நேரத்தில் தலைவனே அனைத்தையும் அளப்பான், அனைத்தையும் காண்பான், அனைத்தையும் அறிவான்; வேறு எதுவும் {எவருக்கும்} புலப்படாது.{21} தலைவனானவன் {இறைவனானவன்}, வானம், பூமி, காற்று, பூதங்கள் ஆகியவற்றைத் தன் புத்தியால் ஊடுருவியும், தேவர்களின் தலைவனும், மனோ ஆற்றல்களுடன் கூடியவனுமான பிரம்மனைத் தன்னில் மூழ்கச் செய்தும், தன் படைப்பாற்றலைக் கட்டுப்படுத்திக் கொண்டும் தண்ணீரில் உறங்கிக் கொண்டிருப்பான்” என்றார் {வைசம்பாயனர்}.{22}(21,22)

நான் நாராயணன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 10-(ஏகார்ணவே பகவந்மார்கண்டேயஸம்வாத꞉)-நாராயணனின் வயிற்றுக்குள் இருந்து வெளிப்பட்ட மார்க்கண்டேயர்; ஒற்றைப் பெருங்கடலையும், சிறுவனையும் கண்டு கலங்கியது; மார்க்கண்டேயருக்கும் நாராயணனுக்கும் இடையில் நடந்த உரையாடல்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இவ்வாறு அனைத்தும் ஒற்றைப் பெருங்கடலாக மாற்றப்பட்டதும், பெருஞ்சிறப்புவாய்ந்த தலைவன் ஹரி, பொருள் காரணமாக அமைந்திருந்த அண்டத்திற்கு அழிவை ஏற்படுத்தித் தூய புத்தியாக நிலைத்திருக்கிறான்.{1,2} ரஜஸ் குணத்திற்கு அப்பாற்பட்டவனும், நித்தியனெனக் கல்விமான்களால் சொல்லப்படும் பெரியவனுமான நாராயணன், தன் நனவால் மறைக்கப்பட்டவனாக, ரஜஸ் குணம், பூதங்கள் ஆகியவற்றின் பயனாக இருக்கும் கடக்கப்பட முடியாத பெருங்கடலுக்குள் மூன்று யுகங்கள் உறங்கிக் கிடக்கிறான்.{3,4} தலை, பாதங்கள் முதலியவற்றைக் கொண்ட புருஷனை யோகத்தாலும், வேள்விகளாலும் அடையலாம், ஆனால் மஹாபுருஷன் அவனிடம் இருந்து வேறுபட்டவனாவான். இந்தத் தூய புத்தி அனைத்திலும் கிடக்கிறது.{5}

தலைவன் தன் வாயில் {முகத்தில்} இருந்து பிரம்மனையும், சாமம் ஓதுபவர்களையும், தன் கரங்களில் இருந்து ஹோதாக்களையும், ஆத்வர்யு புரோஹிதர்களையும், படைத்தான்.{6} அதன்பிறகு, மித்ரனையும், வருணனையும், வேதம் ஓதுபவர்களையும், ஸம்பிரஸ்தாரரையும், பிரதிஷ்டாதாரரையும் படைத்தான்.{7} அவன் தன் வயிற்றில் இருந்து பிரதிஹர்தாரரையும், போதாரரையும் படைத்தான். அவன் தன் தொடைகள் இரண்டில் இருந்து அத்யபகரையும், நேஷ்டாரரையும் படைத்தான்.{8} தன் கைகளில் இருந்து அக்நீதரரையும், ஸுப்ரஹ்மண்யரையும், தன் தோள்களில் இருந்து கிராவாரரையும், உந்நேதாரரையும் படைத்தான்.{9} இவ்வாறே தலைவன் திறன்மிக்க இந்தப் பதினாறு வேள்விப் புரோகிதர்களையும் படைத்தான். தலைவன் வேதங்களில் பரமாத்மாவாக அறியப்படுகிறான்.{10} வேள்விகளின் மூலம் ஒருவன் அவனை அடையலாம். வேதங்கள், உபநிஷத்கள், வேள்விகள் ஆகியவையே அவனை அடைவதற்கான வழிமுறைகளாகச் சொல்லப்படுகின்றன.{11} தலைவன் தூய புத்தியின் வடிவில் நிலைத்திருக்கும்போது ஓர் அற்புத நிகழ்வு நடைபெறுகிறது. அதை மார்க்கண்டேயர் கண்டதாக நாம் கேள்விப்படுகிறோம்[1].{12}(1-12)மஹாமுனி மார்க்கண்டேயர், தலைவன் கொடுத்த வரத்தின் மூலமும், தம் சக்தியின் மூலமும் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தார். அவர் களைப்படைந்தபோது {அண்டம் அழிந்தபோது}, அவனது வயிற்றுப் பொந்துக்குள் வாழ்ந்திருந்தார்.{13} அங்கே அவர் பெயர்களை உரைத்து {நாம ஜபம் செய்து}, ஹோமத்தையும், கடுந்தவங்களையும் செய்தார். அதன்பிறகு புனிதப் பயணமாகப் புறப்பட்டு உலகின் புனிதத்தலங்கள், ஆசிரமங்கள், பல்வேறு நாடுகள், நகரங்கள் என அனைத்துக்கும் சென்றார்.{14} இவ்வாறு பயணித்த அவர் படிப்படியாகத் தலைவனின் வாயை விட்டு வெளியே வந்தார்; ஆனால் தேவனின் மாயசக்தியில் மூழ்கிய அவரால் தாம் வெளியே வந்துவிட்டோம் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.{15,16}(13-16)

இவ்வாறு அவனது வாயில் இருந்து வெளியே வந்த மார்க்கண்டேயர், அறியாமை இருளில் அனைத்தும் மறைக்கப்பட்டதும், தூய புத்தியாக இருக்கும் பிரம்மத்தை ஒற்றைப் பெருங்கடலாகக் கண்டார்.{17} அதைக் கண்ட அவர் பேரச்சத்தால் பீடிக்கப்பட்டவராகத் தமது உயிர் குறித்துக் கவலை கொண்டார்.{18} ஆனால் அவர், தூய புத்தியைக் கண்டு நிறைவடைந்து, பேராச்சரியத்தில் நிறைந்தார். குறிப்பாகவோ, மொத்தமாகவோ அனைத்தையும் பகுத்துப் பார்க்க இயலாமல் அச்சத்தால் பீடிக்கப்பட்ட அவர்,{19} “இஃது என் எண்ணமா? மயக்கமா? கனவா? இவையனைத்தும் எனக்கு வேறு ஒளியில் தெரிகின்றனவே, ஒன்றும் உண்மையாகத் தெரியவில்லையே.{20} உண்மையானது, பற்றுகளும், அறியாமையின் துன்பமும் அற்றது. அஃது ஒருபோதும் இத்தகைய மனோ விருப்பத்தில் தோன்றாது. சந்திரனும், சூரியனும், காற்றும், மலைகளும், பூமியும் இல்லாத இந்த இடம் யாது?” என்று நினைத்தார்.{21}

அவர் இவ்வாறு நினைத்தபோது, நீருண்ட மேகம் போல இருந்த அந்தப் பெருங்கடலில், மலை போன்ற புருஷன் உறங்கிக் கிடப்பதைக் கண்டார். அந்தப் புருஷன் தன் சூரியப் பிரகாசத்தால் உலகங்களைப் பீடித்துக் கொண்டிருந்தான்.{22} அவன் தன்னைத் தாங்கிக் கொள்ளும் ஈர்ப்பு விசைக்காக விழித்திருந்து ஒரு பாம்பைப் போல மூச்சுவிட்டுக் கொண்டிருந்தான்.{23}(17-23)

அந்தப் பெரும் முனிவர் மார்க்கண்டேயர், “இவன் யாராக இருக்கக்கூடும்?” என்று ஆவல் கொண்டவராகத் தலைவனை அணுகி படிப்படியாக அவனது வயிற்றுப் பொந்துக்குள் நுழைந்தார்.{24} அங்கே நுழைந்ததும், தாம் கண்டது கனவே என்ற உறுதியான நம்பிக்கையுடன் முன்பு போலவே அங்கே திரியத் தொடங்கினார்.{25} முன்பு மார்க்கண்டேயர் புனிதத் தலங்கள் அனைத்துக்கும் சென்று பூமியின் பரப்பில் திரிந்து வந்ததைப் போலவே இப்போதும் அங்கெல்லாம் சென்றார்.{26} அவர், தேவனின் வயிற்றுப் பொந்துக்குள் ஏராளமான கொடைகளுடன் வேள்விகளைச் செய்தோர் நூற்றுக்கணக்கானோரையும், பிராமணர்களையும், நான்கு ஆசிரமக் கடமைகளை நோற்பவர்களும், நல்ல வழிகளைப் பின்பற்றுபவர்களும், நல்லொழுக்கம் கொண்டவர்களுமான பிற வர்ணத்தாரையும் தமது யோக சக்தியின் மூலம் கண்டார்.{27,28} நுண்ணறிவுமிக்க மார்க்கண்டேயரால் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வருடங்கள் அங்கே பயணித்தாலும் அந்தப் பொந்தின் எல்லையை அடைய முடியவில்லை.{29}(24-29)

பிறகு ஒரு காலத்தில் மீண்டும் மார்க்கண்டேயர் (தலைவனின்) வாயில் இருந்து வெளியே வந்து, ஒரு சிறுவன் ஆலமரத்தின் கிளையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.{30} ஒற்றைப் பெருங்கடலால் சூழப்பட்டிருந்த அந்தக் காட்டின் உட்பகுதி பனியால் மறைக்கப்பட்டிருந்ததால் எதுவும் புலப்படவில்லை; பூமி நால்வகை உயிரினங்கள் அற்றதாக இருந்தது, அனைத்தையும் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது.{31,32} இதைக் கண்ட மார்க்கண்டேயர் ஆவலில் நிறைந்தாலும், ஆயிரஞ்சூரியர்களின் பிரகாசத்தைக் கொண்ட அந்தச் சிறுவனின் அருகே செல்ல இயலவில்லை. தலைவனின் மாயைக்கு அஞ்சிய அவர் தனிமையில் நீரில் நின்றவாறே,{33} “இதை நான் ஏற்கனவே கண்டேனில்லையா?” என்று நினைத்தார். பிறகு அவர், அமைதியானதும், எல்லையற்றதுமான அந்தப் பெருங்கடலுக்குள் இறங்கி, அச்சத்துடன் களைப்படைந்தும் அங்கே ஓய்வெடுக்கத் தொடங்கினார்[2].{34}(30-34)அப்போது அன்னத்தின் வடிவை ஏற்றிருந்த தலைவன் புருஷோத்தமன், தன் யோகசக்தியின் மூலம் சிறுவனாகி, மேக முழக்கம் போன்ற குரலில் பேசத் தொடங்கினான்.(35) தலைவன், “ஓ! மகனே, ஓ! வீரர்களிலும், தவசிகளிலும் முதன்மையானவனே, ஓ! மார்க்கண்டேயா, நீ சிறுவனாக இருக்கிறாய். நீ உழைப்பால் பெரிதும் களைப்படைந்திருக்கிறாய். என் அருகில் வா, அச்சம் வேண்டாம்” என்றான்.(36)

மார்க்கண்டேயர், “பல்லாயிரம் ஆண்டுகள் கொண்ட என் வயதையும், தவத்தையும் அழித்து, பெயர் சொல்லியும் அழைத்து என்னை இவ்வாறு பீடிப்பவன் {துன்புறுத்துபவன்} எவன்?{37} அண்டத்தின் தலைவனான பிரம்மன் நீண்ட வாழ்நாளைக் கொண்டவனாக என்னை நியமித்திருக்கும்போது, தேவர்களில் எவரும் என்னை இவ்வாறு அழைப்பது தகாது.{38} என் தவச் சக்தியால் என்னுடைய தலை அழியா தன்மையை அடைந்துள்ளது. உயிரை விட விரும்பும் எந்த மனிதன் என் பெயரைச் சொல்லி அழைத்து மரணத்தைக் காணும் விருப்பத்தை உணர்ந்தான்?” என்று கேட்டார்”.{39}(37-39)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பெரும் முனிவர் மார்க்கண்டேயர் கோபத்தில் இவ்வாறு தம்மை வெளிப்படுத்திக் கொண்டபோது, தலைவன் சினத்தில் நிறைந்திருந்த அவரிடம் மீண்டும் பேசினான்.(40)

தலைவன், “ஓ! மகனே, நான் உன் தந்தையும், ஆசானும், புராதன புருஷனும், உனக்கு நீண்ட வாழ்நாளை அருளியவனுமான ரிஷிகேசன் ஆவேன். நீ ஏன் என்னை அணுகாதிருக்கிறாய்?(41) முன்பு உன் தந்தை ஹிரண்யகர்ப்பன், கடுந்தவங்களைச் செய்து ஒரு மகனைப் பெறுவதற்காக என்னைத் துதித்தான்.{42} எல்லையற்ற வாழ்நாளையும், நெருப்பைப் போன்ற பிரகாசத்தையும், பயங்கரத் தலையையும் கொண்ட மஹாரிஷியாக உன்னைப் படைத்து என் விருப்பத்துடன் நான் உன்னை அவனுக்கு அளித்தேன்.{43} நான் யோகத்தில் ஈடுபட்டு, எங்கும் பரந்த பெருங்கடலில் விளையாடிக் கொண்டிருக்கும்போது என் உற்றார் உறவினனைத் தவிர வேறு எவனாலும் என்னைக் காண இயலாது” என்றான்”.{44}(42-44)

வைசம்பாயனர், “தமது பெயரையும், குலத்தையும் கேட்டவரும், நீண்ட ஆயுளைக் கொண்டவரும், உலகால் துதிக்கப்படுபவரும், பெரும் தவசியுமான மார்க்கண்டேயர், மகிழ்ச்சிமிக்க இதயத்துடனும், ஆச்சரியத்தால் விரிந்த விழிகளுடனும், தலைக்கு மேல் தமது கரங்களைக் குவித்துக் குனிந்த தலையுடன் தலைவனை வணங்கினார்.(45,46)

மார்க்கண்டேயர், “ஓ! பாவமற்றவனே, சிறுவனின் வடிவை ஏற்று ஒற்றைப் பெருங்கடலில் கிடக்கும் உன் மாயா சக்தியை உண்மையில் நான் அறிய விரும்புகிறேன்.{47} ஓ! தலைவா, இஃது என்ன வடிவம்? நீ இவ்வுலகில் என்ன பெயரால் அழைக்கப்படுகிறாய்? இங்கே ஒரு பூதமும் இல்லையே. நீயே பெரும்பூதம் என நினைக்கிறேன்” என்றார்.{48}(47,48)

தலைவன், “நானே நாராயணன், பிரம்மமும், உயிரினங்கள் அனைத்தின் பிறப்புக் காரணனனும் நானே. பூதங்கள் அனைத்தையும் படைப்பவன் நானே, அவற்றை அழிப்பவனும் நானே.{49} இந்திரனும், பருவகாலங்களுக்கு மத்தியில் வருடம், யுகங்களின் யுகம், யுகங்களின் சுழற்சி ஆகியவையும் நானே.{50} உயிரினங்கள் மற்றும் தேவர்களின் மொத்தக் கூட்டமும் நானே. பாம்புகளில் சேஷன் நானே, பறவைகளில் கருடன் நானே,{51} ஆயிரம் தலைகளையும், ஆயிரம் கால்களையும் கொண்டவன் நான், நானே ஆதித்யன், நானே வேள்வி புருஷன், நானே வேள்வி, நானே ஆகுதிகளைச் சுமக்கும் அக்னி, என்னை நித்தியனாக அறிவாயாக.{52} உலகில் கடுந்தவங்களைப் பயின்று தங்கள் ஆன்மாக்களைத் தூய்மையடைச் செய்தவர்களும், பல பிறவிகளாக இதைப் பயின்று என் அறிவுப் புலன்களைக் கட்டுப்படுத்தியவர்களுமான இருபிறப்பாளர்களில் நான் பிராமண யதியாக இருக்கிறேன்.{53} தூய ஞானமும், அண்டத்தின் ஆன்மாவும், யோகிகளில் முதன்மையானவனும் நானே. பூதங்கள் அனைத்தையும் அழிப்பவனும், அண்டத்தின் கதியும் நானே.{54} கர்மம் நானே, சக்தி நானே, உயிரினங்களிடம் அறத்தை எடுத்து வைப்பவன் நானே. எனக்கென்று கர்மமேதும் இல்லை.{55} உயிரினங்களின் நித்திய ஆன்மா நானே. பிரகிருதி நானே, புருஷன் நானே, அழிவற்ற நித்தியமான பரமன் நானே.{56} அனைத்து வகைகளையும் பின்பற்றுவோரின் கடமையாகவும், தவமாகவும் இருப்பவன் நானே. பாற்கடலின் தலைமை தேவனான ஹயசிரன் நானே.{57}

வாய்மை நானே, உண்மை நானே, பெரியவன் நானே, பிரஜாபதி நானே. வேள்விகளால் துதிக்கப்படத்தகுந்த பெரும் நிலையாகவும், சாங்கியமாகவும், யோகமாகவும், கல்வியின் தலைவனாகவும் அறியப்படுபவன் நானே.{58} ஒளி, காற்று, பூமி, வானம், நீர், பெருங்கடல், விண்மீன்கள், பத்துத்திக்குகளும் நானே. வருடம், சோமன், இந்திரன், சூரியன்,{59} பாற்கடல், பிற பெருங்கடல்கள், காட்டுத்தீ, சம்வர்த்தக நெருப்பும் நானே. நீராலான ஹவியைப் பருகுபவன் நானே. புராதனனும், பெரியவனும், எதிர்காலமுமான நான், அனைத்தின் பிறப்பிடமாக அறியப்படுகிறேன். இவ்வுலகில் உன்னால் காணப்படும், கேட்கப்படும் யாவும் நானே.{60-62} ஓ! மார்க்கண்டேயா, இந்த அண்டத்தை இதற்கு முன்பே நான் படைத்திருக்கிறேன். இதோ பார், இன்று நான் அதைப் படைக்கப் போகிறேன், மீண்டும் மீண்டும் ஒவ்வொரு யுக சுழற்சியிலும் நான் இதைச் செய்வேன்.{63} இவை யாவற்றையும் புரிந்து கொண்டு, அறத்தையும், என் ஆன்ம சக்திகளையும் அடையும் ஆவலில் என் வயிற்றுப் பொந்துக்குள் மகிழ்ச்சியாகத் திரிவாயாக.{64} பிரம்மனுடன், முனிவர்களும், தேவர்களும் என்னுடலில் வாழ்ந்து வருகிறார்கள். எனவே, என்னை வெளிப்பட்டவனாகவும், வெளிப்படாதவனாகவும், யோகமாகவும், வெற்றிகொள்ளப்படாதவனாகவும் அறிவாயாக.{65} மூவுலகங்களின் பெரும்புதிரான ஓம் எனும் மந்திரமும், வாழ்வின் மூன்று நோக்கங்களை அளிக்கும் என அறியப்படும் புனித காயத்ரி மந்திரமும் நானே” என்றான் {நாராயணன்}”.{66}(49-66)

வைசம்பாயனர், “அண்ட வடிவை ஏற்ற தலைவன் மார்க்கண்டேய ரிஷியைத் தன் வாய் வழியாக வயிற்றுக்குள் நுழையச் செய்ததைப் பெரும் முனிவர் வியாசர் வேதங்களிலும், புராணங்களிலும் விளக்கிச் சொல்லியிருக்கிறார்.{67} முனிவர்களில் முதன்மையான மார்க்கண்டேயர், வெளிப்படாத பரமாத்மாவைத் தனிப்பட்ட முறையில் கண்டு, பராமனந்தத்தில் திளைக்கவும், வயிற்றின் பொந்துக்குள் நுழைந்து அங்கே மகிழ்ச்சியுடன் ஓய்ந்திருந்தார்.{68} நித்திய தலைவனான பரமாத்மா, பல்வேறு வடிவங்களை ஏற்று, சூரியனும், சந்திரனும் அற்ற பெருங்கடலில் திரிந்து படிப்படியாக உலகை உண்டாக்கி, அழிவுக்கான நேரம் வரும்போது அதை அழிக்கிறான்” என்றார் {வைசம்பாயனர்}.{69}(67-69)

பொற்றாமரை மலர்ச்சி | பவிஷ்ய பர்வம் பகுதி – 11-(மஹாபத்மோத்பத்தி꞉)-வசிஷ்டரின் பிறப்பு; ஆகாயம், ஒலி, காற்று ஆகியன படைக்கப்பட்டது; பொற்றாமரை படைப்பு….

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “தலைவன் {நாராயணன்}, பிராமண முனிவரான ஆபவ வசிஷ்டராகப் பிறப்பெடுத்து, தன் உடலெனும் கொள்கலத்தை மறைத்துத் தவம் பயிலத் தொடங்கினான்.(1) அதன் பிறகு, அண்டத்தின் ஆன்மாவும், அளவற்ற சக்திகளைக் கொண்டவருமான பெரும் வசிஷ்டர், ஐம்பூதங்களையும், பிற உயிரினங்களையும் படைக்க நினைத்தார்.{2}(ஆபம் என்பது நீர்நிலைகளைக் குறிக்கும். அவற்றுக்குத் தலைவன் வருணன் என்று அழைக்கப்படுகிறான். அதன் காரணமாவே அவனுடைய மகனாகிய வசிஷ்டருக்கு ஆபவர் என்ற பெயர் ஏற்பட்டது.)அண்டமானது, வானம் இல்லாமல் நுட்பமாகி நீரில் மூழ்கியிருந்தபோது, வசிஷ்டர், தவப் பயிற்சிகளால் அறிவுப்புலன்களைப் பெருகச் செய்து அந்த நீரிலேயே பலகாலத்தைச் செலவழித்தார்.{3} நீரில் வாழ்ந்து வந்த அவர், பெருங்கடலைக் கலங்கடித்து இரண்டாம் அலையுடன் நுட்பமான ஆகாயமாக எழுந்தார்.{4} பிறகு அவர் காற்றால் உண்டாக்கப்பட்ட ஒலியாக அந்த ஆகாயத்தில் தோன்றினார். அந்தப் பெரும் வசிஷ்டர் காற்றைப் போலவே தாமும் வளரத் தொடங்கினார்.{5} பெருகி வந்ததும், பலமிக்கதுமான காற்றால் பெருங்கடல் கலங்கடிக்கப்பட்டபோது அலைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.{6} பெருங்கடலின் நீர் கலங்கடிக்கப்பட்ட போது, பெருஞ்சக்திவாய்ந்த தலைவன், இருள்வழிகளில் நெருப்பைப் போலத் தோன்றினான்.{7}

அந்த நெருப்பானது, பெருங்கடலின் நீரை வற்றச் செய்தது; அதனிலிருந்து வானம் போன்ற துளையொன்று எழுந்தது.{8} அவனது சக்தியில் இருந்து அமுதம் போன்ற தூய நீர் உண்டானது. அதனில் இருந்து ஆகாயமும், அதனில் இருந்து காற்றும், அதனில் இருந்து ஆர்ப்பரிக்கும் அலைகளும் பூமியில் உண்டாகின. பெரும்பூதங்களின் பிறப்பிடமான தலைவன் அதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தான்.{9,10} பல வடிவங்களைக் கொண்ட தலைவன், பூதங்களைக் கண்டு, அண்டத்தின் படைப்பிற்கு அவற்றின் தேவையை அறிந்து, பிரம்மனுக்கான பொருள்களைக் குறித்து நினைக்கத் தொடங்கினான். இவ்வாறே ஒரு யுகத்தின் முடிவிலும், பல யுகங்களின் முடிவுகளிலும் பிரம்மன் தன் பிறப்பை அடைந்தான்.{11,12}

பிரம்மன், ஞானம் கொண்டவன், அவன் யோகிகளில் முதன்மையானவன், அவன் அண்டத்தின் ஆன்மாவைக் காண்பவன், உலகின் இருபிறப்பாளர்களில் அவன் புலனடக்கம் கொண்ட பிராமணன் ஆவான்.{13} யோகத்தை அறிந்த தலைவன் பிரம்மன், வேதங்களையும், அண்டத்தின் நோக்கங்களையும் படைப்பதில் துல்லிய ஆன்ம சக்திகளைக் கொண்டதும், அனைவராலும் வழிபடப்படுவதுமான பிரம்மத்தை ஈடுபடுத்துகிறான்.{14}

அப்போது நித்தியனான ஹரி, உயிரினங்களைப் படைப்பதற்காகப் பெருங்கடலில் கிடந்து, பல்வேறு வழிமுறைகளில் விளையாடி பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.{15} அதன் பிறகு அவன், சூரியப் பிரகாசத்துடன் கூடியதும், ஆயிரம் இதழ்களைக் கொண்டதுமான ஒரு தங்கத் தாமரையைத் தன் உந்தியில் இருந்து படைத்தான்.{16} பெரியவனான அந்த அச்யுதனின் மேனியில் இருந்து உண்டான அந்தத் தாமரையானது, நறுமணத்துடனும், எரியும் தழல்களைப் போன்ற பிரகாசத்துடனும், கூதிர் காலச் சூரியனைப் போலத் தெளிந்த ஒளியுடனும் ஒளிர்ந்து கொண்டிருந்தது” என்றார் {வைசாம்பாயனர்}.(2-17)

புஷ்கரம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 12-(ஸர்வபூதோத்பத்தி꞉)-தாமரையில் பிரம்மனை நிறுவிய நாராயணன்; தாமரையில் வளரும் உறுதியான வேர்களாக மலைகள்….

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அப்போது, நித்தியனான ஹரி, பெரும்பிரகாசம் கொண்டதும், பூமியின் குணங்களையும், அடையாளங்களையும் கொண்டதும், பல யோஜனைகள் நீளம் பரந்ததுமான அந்தத் தங்கத் தாமரையில் பிரம்மனை வைத்தான்.{1} யோகிகளில் முதன்மையானவனும், உயிரினங்கள் அனைத்தின் மனமாக இருப்பவனும், அவற்றின் படைப்பாளனுமான அவன், அனைத்தையும் நோக்கித் தன் முகத்தைத் திருப்பினான்.{2} புராணங்களை நன்கறிந்த பெரும் முனிவர்கள், நாராயணனின் மேனியில் தோன்றி, பூமியை ஆதரிப்பது இந்தத் தாமரை என்று விளக்குகின்றனர்.{3}(1-3)

அந்தத் தாமரையின் இருப்பிடமாகப் பூமாதேவி இருக்கிறாள், அதனுள் வளரும் உறுதியான வேர்களாக தெய்வீக மலைகள் இருக்கின்றன.{4} இமயம், மேரு, நீலம், நிஷதம், கைலாசம், கிரௌஞ்சம், கந்தமாதனம்,{5} புனிதமான திரிஷிரம், அழகிய மந்தரம், உதயம், கந்தரம், விந்தியம், அஸ்தம் ஆகிய இந்த மலைகள் விருப்பத்திற்குரிய பொருட்களை அளிப்பனவாகவும், தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் ஆகியோரின் ஆசிரமங்களை உள்ளடக்கியவையாகவும் இருக்கின்றன.{6,7} இந்த மலைகளை இடையிடையே கொண்ட நாடானது ஜம்பூத்வீபம் என்றழைக்கப்படுகிறது. வேள்விகளைச் செய்வோர் இங்கே வேள்விகளைச் செய்கின்றனர்.{8} வேள்விகளில் இருந்து வெளியே வருபவையும், அமுத நீரைக் கொண்டவையுமான ஓடைகள், நூற்றுக்கணக்கான புனிதத் தலங்களைக் கொண்ட சரிதாதேவி {ஆறு} ஆகின்றன.{9} அந்தத் தாமரையைச் சுற்றிலும் எண்ணற்ற இழைகளாக அமைந்திருப்பன தாதுக்களின் மலைகள் எனப் பூமியில் அறியப்படுகின்றன{10}.(4-10)

ஓ! மன்னா, அந்தத் தாமரையின் மேல் இதழ்கள், மிலேச்சர்களுக்குச் சொந்தமான மலைப் பாதைகளையும், கடக்கப்பட முடியாத பாதைகளையும் கொண்டவையாக இருக்கின்றன.{11} கீழ் இதழ்கள், பெரும் தைத்தியர்கள், உரகர்கள் ஆகியோருக்குச் சொந்தமான பாதாள லோகத்தைக் கொண்டவையாக இருக்கின்றன.{12} அதற்கும் கீழுள்ள பகுதி உகதம் அல்லது பெருந்துன்பங்களின் சுரங்கம் என்றழைக்கப்படுகிறது. கொடுங்குற்றங்களைச் செய்தவர்கள் அங்கே மூழ்குகிறார்கள்.{13}(11-13) இந்தத் தாமரையின் நுனியில் அமைந்துள்ள பரந்த நீர்ப் பரப்பானது அனைத்துப் பக்கங்களிலும் (நிலத்தைக் கொண்ட) பொருங்கடலாகும்.(14)

இந்தப் பெருந்தாமரையானது, நாராயணனின் இதயத்தைப் போன்றே உண்டாக்கப்பட்டதால் அது புஷ்கரம் என்றழைக்கப்படுகிறது.{15} இதன் காரணமாகவே, இந்தத் தாமரையின் தோற்றத்தை நன்கறிந்த பழங்காலப் புராதன முனிவர்கள் பெரும் வேள்விகளைச் செய்யும்போது, வேள்விக்களத்தில் தாமரையின் வடிவிலான பீடத்தை அமைக்கின்றனர்.{16}

இவ்வகையிலேயே தலைவன், மலைகளையும், ஆறுகளையும், தேவர்களையும், அண்டத்தின் பொருள்களையும் படைப்பவனான பிரம்மனைத் தாமரையில் படைத்தான்.{17} அளவற்ற ஆற்றலைக் கொண்டவனும், சுயம்புவுமான அந்தப் பெருந்தேவன், பிரம்மனைப் படைத்த போது, பெருங்கடலெனும் படுக்கையில் கிடந்து அண்டமெனும் நித்திய தாமரையைப் படைத்தான்” என்றார் {வைசம்பாயனர்}.{18}(15-18)

மதுகைடபர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 13-(மதுகைடபவரப்ரதாநம்)-மது கைடபர்களின் தோற்றமும், அழிவும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஆயிரம் யுகங்களின் சுழற்சிக்குப் பிறகு சத்ய யுகத்தின் தொடக்கத்தில் தாமஸ குணம் (ஒழுங்கற்ற போக்கு) நிலவியது. இந்த நேரத்தில் படைப்புக்குத் தடையாக இருக்கும் பேரசுரன் மது தன் பிறப்பை அடைந்தான்.{1} சில காலம் கழித்து, ரஜஸ குணத்தின் மூலம் மதுவுக்கு உதவி செய்வதற்காகக் கைடபன் என்ற இரண்டாம் அசுரன் படைக்கப்பட்டான்.{2} மது, கைடபன் என்ற பெயர்களைக் கொண்டவர்களும், பல்வேறு வடிவங்களை ஏற்கவல்லவர்களும், முறையே ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களைக் கொண்டவர்களுமான அந்தப் பேரசுரர்கள் இருவரும் ஒற்றைப் பெருங்கடலின் நீரைக் கலங்கடிக்கத் தொடங்கினர்.{3} அவர்கள் கருநீலத்திலும், சிவப்பு நிறத்திலும் ஆடைகள் உடுத்தியிருந்தனர், எரியும் வெண்பற்களைக் கொண்டிருந்தனர், செருக்கில் மிதந்திருந்த அவர்கள் ஒளிரும் கேயூரங்களையும், கங்கணங்களையும் அணிந்திருந்தனர்.{4} 

அவர்கள் பயங்கரமான தாமிரக் கண்களையும், பரந்த மார்பையும், நீண்ட கைகளையும், பெரிய தலைகளையும் கொண்டிருந்தனர். கவசங்களால் மறைக்கப்பட்டிருந்த அந்த அசுரர்கள் இருவரும், அசையாத மலைகள் இரண்டைப் போலத் தெரிந்தனர்.{5} அவர்களுடைய நிறம் நீல மேகங்களைப் போல இருந்தது, அவர்களின் முகங்கள் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் இருந்தன, அவர்களுடைய கரங்களின் ஒளியானது மின்னலுடன் கூடிய தாமிர மேகங்களைப் போலத் தெரிந்தது.{6} அவர்கள் தங்கள் மயிர் மற்றும் பாதங்களின் அசைவாலேயே பெருங்கடலைப் பெருகச் செய்பவர்களைப் போலவும், பகைவரைக் கொல்பவனும், அங்கே கிடப்பவனுமான ஹரியை நடுங்கச் செய்பவர்கள் போலவும் பயங்கரமாகத் தெரிந்தனர்.{7}

அண்டத்தின் வாயாக இருந்த அந்தத் தாமரையில் அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது, யோகிகளில் முதன்மையானவனும், ஒளிரும் உடலுடன் கூடியவனுமான நித்திய பிரம்மனைக் கண்டனர்.{8} அந்தத் தாமரையில், நாராயணனின் ஆணையின் பேரில் உயிரினங்களையும், தேவர்களையும், அண்டத்தையும், மனத்தில் பிறக்கும் முனிவர்களின் மகன்களையும் பிரம்மன் படைப்பதைக் கண்டனர்.{9} அசுரர்களில் சிறந்தவர்களும், கோபத்தால் எரிந்த குருதி சிவப்புடைய கண்களுடன் கூடியவர்களுமான மதுவும், கைடபனும் பிரம்மனுடன் போரிட விரும்பி, அவனிடம்,{10} “கருப்பு மகுடம் அணிந்தவனும், நான்கு முகங்களைக் கொண்டவனுமான நீ யார்? இந்தத் தாமரையில் கவலையில்லாமல் வாழ்ந்து மூடத்தனத்தால் எங்களை நீ அவமதித்து வருகிறாய். வா, எங்களுடன் போரிடுவாயாக. நாங்கள் பெரும் வீரர்களாக இருக்கிறோம். உன்னால் போரில் எங்கள் முன்பு நிற்க இயலாது.{11} நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? உன்னை இங்கே அனுப்பிவைத்தவன் எவன்? உன்னைப் படைத்தவனும், பாதுகாப்பவனும் எவன்? எந்தப் பெயரால் மனிதர்கள் உன்னை அழைக்கின்றனர்?” என்று கேட்டனர்.{12}(1-12)

பிரம்மன், “இவ்வுலகில் அறியப்படாதவனிடம் இருந்து நான் உதித்து, யோகம் பயின்று வருகிறேன். இதை நீங்கள் அறியமாட்டீரா?” என்று கேட்டான்.(13)

மதுவும், கைடபனும், “ஓ! பெரும் முனிவனே, இவ்வுலகில் எங்களைவிடப் பெரியவன் வேறு எவனும் இல்லை. நாங்கள் இந்த அண்டத்தை ரஜஸ், மற்றும் தமஸ் குணங்களால் மறைத்திருக்கிறோம். நாங்களும் அவ்விரு குணங்களால் பீடிக்கப்பட்டிருக்கிறோம்,{14} தவசிகளின் முன்பு துன்பத்தில் தவிப்பவர்களைப் போலவும், பக்திமான்களின் முன்பு வஞ்சகம் நிறைந்தவர்களாகவும் தோன்றுவோம். உயிரினங்களால் அடைய முடியாத எல்லையில் இருப்பவர்களாக எங்களை அறிவாயாக.{15} நாங்கள் உலகைக் கலங்கடிப்பதற்காக ஒவ்வொரு யுகத்திலும் பிறக்கிறோம். செல்வம், விருப்பத்திற்குரிய பொருட்கள், வேள்விகள், அனைத்து வகையான கொடைகள் ஆகியன எங்கள் கட்டுப்பட்டில் இருக்கின்றன.{16} மகிழ்ச்சி, இன்பம், செழிப்பு, முன்னேற்றம், அறம் ஆகியவற்றுக்காக மக்கள் விரும்பும் எதையும் எங்களிடம் இருந்து அவர்கள் பெறலாம்” என்றனர்{17}.(14-17)

பிரம்மன், “என் மனத்தைக் குவித்து யோகிகளில் முதன்மையானவனை உண்மையில் அறிந்து, ஏற்கனவே அறிந்து வைத்திருந்த சத்வ குணத்தில் நான் வாழ்கிறேன்.{18} யோகிகளில் நித்திய சத்வ குணமாக இருப்பவனும், ரஜஸ், தமஸ் குணங்களைப் படைத்தவனும், உயிரினங்கள் பிறப்பதற்குக் காரணனும், சத்வ குணம் நிறைந்த உயிரினங்கள் அனைத்தும் எவனிடம் இருந்து உண்டாகுமோ அந்தத் தலைவனிடம் நீங்கள் போரில் ஈடுபட்டால் அவன் உங்களை வீழ்த்துவான்” என்றான்”{19,20}.(18-20)

வைசம்பாயனர், “அதன்பிறகு, பல யோஜனைகள் நீண்ட படுக்கையில் கிடந்த தாமரை உந்தி படைத்த ரிஷிகேசனை வணங்கி மதுவும், கைடபனும்,(21) “ஓ! புருஷோத்தமா, நீயே இந்த அண்டத்தின் தோற்றத்திற்குக் காரணன் என்பதை நாங்கள் அறிய வந்தோம்; உன்னை வணங்குவதற்குரிய எங்கள் ஒழுக்கமாக இதை அறிவாயாக.(22) ஓ! தலைவா, துல்லிய பார்வையைக் கொண்ட கல்விமான்கள் உன்னை அறிந்து வைத்துள்ள படியே நித்தியமான உண்மையான ஈஷ்வரனாக உன்னைக் காண நாங்களும் விரும்புகிறோம்.{23} ஓ! பகைவரைக் கொல்பவனே, நாங்கள் உன்னிடம் இருந்து வரம்பெற விரும்புகிறோம். ஓ! தலைவா, உன்னைக் காண்பதே நிச்சய வெற்றியைத் தரும். உன்னை நாங்கள் வணங்குகிறோம்” என்றனர்.{24}(23,24)

தலைவன், “ஓ! அசுரர்களில் முதன்மையானவர்களே, நீங்கள் விரும்பும் வரத்தை விரைந்து கேட்பீராக. உங்களுங்கு ஒதுக்கப்பட்ட காலத்தை விட அதிகக் காலம் வாழ விரும்புகிறீர்களா? ஓ! பெருஞ்சக்திவாய்ந்தவர்களான மது கைடபர்களே நீங்கள் முயன்றதை அடைந்துவிட்டீர்கள்.{25} உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவர்களும், பெருஞ்சக்திவாய்ந்தவர்களும், க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றுகிறவர்களாகவும் நீங்கள் இருக்கிறீர்கள். எனவே, என்னால் மட்டுமே நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்ற வரத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்றான்.{26}(25,26)

மதுவும், கைடபனும், “ஓ! தேவர்களின் மன்னா, எவனும் மரணிக்காத இடத்தில் நாங்கள் கொல்லப்பட வேண்டும். (அதன் பிறகு) நாங்கள் உன் மகன்களாக வேண்டும். இதுவே நாங்கள் வேண்டும் வரம்” என்று கேட்டனர்.(27)

தலைவன், “எதிர்கால யுகத்தில் நீங்கள் என் மகன்களாகப் பிறப்பீர்கள். நான் உங்களிடம் வாய்மையைப் பேசுகிறேன், இதில் நீங்கள் ஐயங்கொள்ள வேண்டியதில்லை” என்றான்”[1].(28)வைசம்பாயனர், “அண்டத்தைத் தாங்கும் நித்திய தலைவன், ரஜஸ், தமஸ் குணங்களால் உலகைப் பாதுகாக்கவல்லவர்களான மது, கைடபன் என்ற அந்த அசுரர்களில் முதன்மையானோர் இருவருக்கும் இந்த வரத்தை அளித்துவிட்டு, தன் தொடைகளில் வைத்து அவர்களைக் கொன்றான்” என்றார்.(29)

பிரம்மனின் படைப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 14-(பிரஹ்மணோ மாநஸபுத்ராணாமுத்பத்தி)-பிரம்மனின் மானஸபுத்ரர்கள்; படைப்பு குறித்த விரிவான வர்ணனை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “நீண்ட கைகளைக் கொண்டவனும், பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையானவனுமான பிரம்மன், அந்தத் தாமரையில் அமர்ந்து, தன் கைகளை உயர்த்தியபடி கடுந்தவத்தைச் செய்தான்.{1} தன் சொந்த பிரகாசத்தில் எரிந்து கொண்டிருந்த அந்தப் பெருஞ்சக்திவாய்ந்த யோகியான பிரம்மன், ஆயிரங்கதிர்களைக் கொண்ட சூரியனைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.{2}

நித்தியனும், அழிவற்றவனுமான தலைவன் நாராயணன், பெருஞ்சக்திவாய்ந்த, சிறப்புமிக்க யோக ஆசானாகவும், பிரம்மவாதிகளில் முதன்மையானவரும், சாங்கிய தத்துவத்தை எடுத்துரைப்பவருமான கபிலராகவும் தன் உடலை இரண்டாகப் பகுத்துக் கொண்டு பிரம்மனை அணுகிறான்.{3} அளவற்ற ஆற்றலைக் கொண்டவரும், பெரும் முனிவர்களால் வழிபடப்படுபவரும், பிரம்மவாதிகளில் முதன்மையானவரும், க்ஷத்திரியர்களைப் போன்ற பணிகளில் ஈடுபடுபவரும், பெருஞ்சக்திவாய்ந்த யோகாசாரியரும், சாங்கியத்தை எடுத்துரைப்பவருமான கபிலரும் பிரம்மனின் அருகில் வந்து,{4,5} “ஓ! பிரம்மா, உயிரினங்கள் அனைத்தையும் ஆள்பவனாகவும், அண்டத்தின் ஆன்மாவாகவும் இருக்கும் நீ உயிரினங்களின் பெருக்கத்தில் உறுதியுள்ளவனாகவும், அண்டத்தை ஆதரிப்பவனாகவும், உலகத்தின் ஆசானாகவும், (எனவே) அனைவராலும் வழிபடத்தகுந்தவனாகவும் இருக்கிறாய்” என்றனர்.{6,7}(1-7)

அவர்களின் சொற்களைக் கேட்டு, பிரம்மஞானம் தொடர்பாக ஸ்ருதிகளில் கேட்டதைப் போன்ற மூன்று ஸ்லோகங்களைச் சொல்லி பிரம்மன் மூன்று உலகங்களையும் படைத்தான்.{8} தலைவன் பிரம்மன், மூவுலகங்களில் பூலோகத்தில் வசித்துக் கொண்டு, மனத்தில் பிறந்த நித்திய மகனைப் படைத்தான்.{9} மனத்தில் பிறந்த மகன், தான் பிறந்த உடனேயே பிரம்மனின் முன்பு நின்று, அவனிடம், “ஓ! தலைவா, நான் உனக்கு என்ன உதவி செய்ய வேண்டும்? எனக்கு ஆணையிடுவாயாக” என்றான்.{10}

பிரம்மன், “ஓ! பெரும் மனம் கொண்டவனே, இந்தப் பிராமணர் கபிலரும், வரமளிக்கும் நாராயணனும் உன்னிடம் சொல்வதைச் செய்வாயாக” என்றான்”.{11}(8-11)

வைசம்பாயனர், “பிரம்மன் இதைச் சொன்னதும், மனத்தில் பிறந்த மகன் அவனிடம், “என் தந்தையை விடப் பெரியவன் வேறு எவன்?” என்று கேட்டான். அவன் மீண்டும் ஐயத்தால் பீடிக்கப்பட்டவனாகக் கைகளைக் கூப்பிக் கொண்டு,{12) “நான்உனக்குத் தொண்டு செய்யத் தயாராக இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும். நான் செய்ய வேண்டியதைச் செய்வேன்” என்றான்.{13}

யோகம் மற்றும் சாங்கியத்தின் பேராசிரியர்கள், “சிதைவில்லாத பிரம்மத்தின் பதினெட்டு வடிவங்களையும், நித்தியமான பெரும்பிரம்மத்தையும் நினைவுகூர்வாயாக” என்றனர். மனத்தில் பிறந்த மகன் இச்சொற்களைக் கேட்டுவிட்டு, வடக்கே சென்று ஞானத்தின் மூலம் பிரம்ம அறிவை அடைந்தான்.{14}(12-14)

அதன்பிறகு, உயர்ந்த மனம் கொண்ட தலைவன் பிரம்மன் இரண்டாவதாகப் புவர்லோகத்தைப் படைத்துவிட்டு, மீண்டும் தன் மனத்தில் பிறந்த மகனைப் படைத்தான்.{15} மனத்தில் பிறந்த மகன், பிரம்மனின் ஆணையின்படி, பெரும்பாட்டன்கள், யோகசாங்கிய ஆசான்கள் ஆகியோரின் முன்பு தோன்றி, “நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுவீராக” என்றான்.{16} அதன்பிறகு அவன் அந்த இரண்டு ஆசான்களிடம் போகவதி பகுதிக்குச் சென்று, அவர்களின் அருகில் காத்திருந்து பெரும்லோகத்தை அடைந்தான்.{17}(15-17)

தலைவன் பிரம்மன், மனத்தில் பிறந்த அந்த மகன் புறப்பட்டுச் சென்ற பிறகு, மூன்றாவதாக முக்தியை அடையவல்ல பூர்புவலோகத்தைப் படைத்து, மூன்றாவதாக மனத்தில் பிறந்த மகனைப் படைத்தான்.{18} அதன்பிறகு பிரம்மனால் ஆணையிடப்பட்ட மனத்தில் பிறந்த மகன் அவர்களின் முன்பு தோன்றி அவர்களின் அறத்தையும், இயக்கங்களையும் அறிந்து கொண்டான். இந்த மூவரும் உயரான்ம சம்புவின் மகன்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.{19}(18,19) தலைவன் நாராயணனும், தவசிகளின் தலைவரான கபிலரும் தங்களுடன் அந்த மூன்று மகன்களையும் தங்கள் உலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.(20)

அவர்கள் சென்ற பிறகு எப்போதும் நோன்புகளை நோற்கும் பிரம்மன் மீண்டும் கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினான்.{21} தொடர்ந்து விடாமல் தனியாகத் தவம் செய்து கொண்டிருந்த தலைவன் பிரம்மன், தன்னுடைய பாதி உடலில் இருந்து அழகிய மனைவியைப் படைத்தான்.{22} பிரம்மன், உலகைப் படைக்கவல்லவளும், ஆன்ம சக்தி, பிரகாசம், தற்கட்டுப்பாடு ஆகியவற்றில் தனக்கு இணையானவளுமான அந்த மனைவியுடன் கலவி புரிந்து, தமஸ் குணத்தின் மூலம் ஊடுருவி, குடிமுதல்வர்கள், கடல்கள், ஆறுகள், வேதங்களின் தாயான புனித காயத்ரி மந்திரம், நான்கு வேதங்கள் ஆகியவற்றையும் படைத்தான்.{23,24} உலகின் படைப்பாளனான பெரும்பாட்டன் தன் பணியின் கருவிகளாக அண்டத்தின் தலைவர்களான மகன்களைப் படைத்தான். அந்தப் படைப்பில் இருந்து உலகங்கள் அனைத்தும் வெளிப்பட்டன.{26}(21-26)

அவன், ஆசிரமங்கள் அனைத்தையும் ஆதரிப்போரும், வரங்களை அளிப்போரும், பெருந்தவசிகளுமான விஷ்வேசன், தர்மன் ஆகிய இரு மகன்களை முதலில் படைத்தான், பிறகு,{27} தக்ஷன், மரீசி, அத்ரி, புலஸ்த்யர், புலஹர், கிரது, வஸிஷ்டர், கௌதமர், பிருகு, அங்கிரஸ் ஆகிய முனிவர்களையும், பிறரையும் படைத்தான்.{28} பிரம்மனால் படைக்கப்பட்ட மேற்கண்ட ரிஷிகளின் வழித்தோன்றல்களே அதர்வ வேதத்தின் பெரும் ரிஷிகளாக அறியப்பட்டனர்.{29} அதிதி, திதி, தநு, காலா, அதாயு, ஸிம்ஹிகை, முநி, பிரபோதை, ஸுரஸை, குரோதை, விநதை, கத்ரு ஆகிய பனிரெண்டு மகள்களையும், இருபத்தேழு நட்சத்திரங்களையும் தக்ஷன் பெற்றான்.{30,31} மரீசியின் மகனான கசியபர், தவத்தின் மூலம் சர்வ வல்லமை படைத்தவரானார். தக்ஷன் தன்னுடைய பனிரெண்டு கன்னிகையரை கசியபருக்குக் கொடுக்கச் சம்மதித்தான்.{32} ஓ! ஜனமேஜயா, பெரும் ரிஷியான தக்ஷன், ரோஹிணியையும், அறம் அளிக்கும் நட்சத்திரங்களையும் வசுக்களில் சோமனுக்கு அளித்தான்.{33}(27-33)

ஓ! பரதனின் வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, அறம்சார்ந்தவனான பிரம்மன், தேவர்களில் முதன்மையான தர்மனுக்குத் தான் ஏற்கனவே படைத்து வைத்திருந்த லக்ஷ்மி, கீர்த்தி, ஸாத்யை, எப்போதும் நலம் புரியும் விஷ்வை, மருத்வதி ஆகிய மிகச்சிறந்த ஐந்து கன்னிகையரைக் கொடுத்தான்.{34,35} முடிவில், விரும்பிய வடிவங்களை ஏற்கவல்லவளும், பிரம்மனின் பாதி உடலில் இருந்து படைக்கப்பட்டவளுமான பிரம்மனின் மனைவி, சுரபி என்ற பசுவின் வடிவை ஏற்று அவன் முன்னிலையில் தோன்றினாள்.{36} ஓ! பாரதா, படைப்பின் காரணத்தை அறிந்தவனும், உலகால் துதிக்கப்படுபவனுமான பிரம்மன், பசுக்களைப் படைப்பதற்காக அவளை அறிந்தான்.{37} இதன் மூலம் அவன், மாலைநேர மேகம் போன்ற சிவந்த வண்ணம் கொண்டவர்களும், தங்கள் பயங்கரப் பிரகாசத்தால் அனைத்தையும் எரிக்கவல்லவர்களும், பக்திமான்களும், பேருடல் படைத்தவர்களுமான ஏழு மகன்களைப் பெற்றான்.{38} அவர்கள் பிறந்த உடனேயே அழுது கொண்டே பெரும்பாட்டனிடம் ஓடியதால் அவர்கள் ருத்ரர்கள் என்ற பெயரைப் பெற்றார்கள்.{39} நிர்ருதி, ஸர்பன், அஜன், ஏகபாத், மிருகவ்யாதன், பிநாகி, தஹநன், ஈஷ்வரன்,{40} அஹிர்புத்ந்யன், வெல்லப்பட முடியாத கபாலி, பெருஞ்சக்திவாய்ந்த ஸேநாநி ஆகியோர் பதினோரு ருத்திரர்களாக அறியப்படுகிறார்கள்.{41}(34-41)

சுரபியானவள், காளைகளையும், வேளாண்மையில் வளராத மரங்கள், அவரைகள், மண், ஆடுகள், மிகச் சிறந்த அமுதம், மருத்துவம் சார்ந்த மூலிகைகள் ஆகியவற்றைப் பெற்றாள்.{42} தர்மன், சுரபியிடம் லக்ஷ்மி, காமா ஆகியோரையும், ஸாத்யாவிடம் ஸாத்யாவையும் பெற்றான்.{43} பிரபவன், சிவனன், ஈசானன், சுரபி, ஆரண்யன் (காடு), மருத்தன், விஷ்வாவசு, மஹிஷன், தநூஜன், விஜ்ஞாதன், மநஸன்,{44,45} மத்ஸரன், விபூதி ஆகியோரும் சுரபியின் மகன்களாக அறியப்படுகின்றனர். சாத்யர்களின் உலகில் வழிபடப்படும் சாத்யனும் அதைத் தொடர்ந்து வாசவனும் மலைகளையும், பாம்புகளையும், காளைகளையும் பெற்றனர்.{46,47} தர்மன் சுசாமையிடம் முறையாக, மருதேவன், துருவன், விஷ்வாவசு, தலைவன் சோமன், பர்வதன், யோகேந்திரன், வாயு, நிகிருதி ஆகியோரைப் பெற்றான்.{48} தர்மன் விஷ்வையிடம் விஷ்வதேவர்களைப் பெற்றான் என்று கேள்விப்படுகிறோம். பெருங்கரங்களைக் கொண்ட ஸுதர்மன், பெருஞ்சக்திவாய்ந்த ஷங்கபன், உக்தன், வபுஷ்மான், விஷ்வாவசு, சுபர்வன், பெருஞ்சிறப்புமிக்க விஷ்ணு, ஸ்கும்பு, சூரியனைப் போன்ற பெரும்பிரகாசம் கொண்ட ரிஷியின் மகனான ருரு ஆகியோர் சாக்ஷுஷ மனுவின் சந்ததிகளாகின்றனர்.{49-52} விஷ்வை விஷ்வதேவர்களைப் பெற்றாள். தர்மன் மருதவதியிடம் அக்னி, சாக்ஷன், ஹரி, ஜோதி, சாவித்ரி, மித்ரன், அமிருதன், பெருங்கரங்களைக் கொண்ட சங்ஷேபன், விரஜன், சுக்ரன், விஷ்வாவசு, விபாவசு, அஷ்மந்தன், சித்ரரஷ்மி, நிஜுதி, ஜயோனா அத்புதி, சாரித்ரன், பாஹுபன்னகன், பிறரின் பேராற்றலை வளர்க்கும் பிரஹத்பூதன் ஆகிய மருத்துகளைப் பெற்றான்.{53-56}(42-56)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, கசியபர் அதிதியிடம், இந்திரன், விஷ்ணு, பகன், துவஷ்டா, வருணன், அங்ஷன், அரமன், ரவி, பிஷன், மிதரன், வரங்கொடுக்கும் மனு, இந்திரன் என்ற மிக முக்கியமான பனிரெண்டு ஆதித்யர்களைப் பெற்றார்.{57,58} ஆதித்யன் சரஸ்வதியிடம் ரூபன், பலன் என்ற மிக அழகிய மகன்கள் இருவரைப் பெற்றான். திதி தைத்தியர்களையும், தனு தானவர்களையும் பெற்றனர்.{59} தானவர்கள், சுரவையிடம் ஊர்வனவற்றையும், காலையிடம் காலகேய அசுரர்களையும், ராட்சசர்களையும் பெற்றனர்.{60} ஓ! பரதனின் வழித்தோன்றலே, அனயுஷா நோய்கள் அனைத்தையும், பேரிடர்களையும் பெற்றாள். கோள்களின் அன்னையான சிம்ஹிகை, கந்தர்வர்களைப் பெற்றாள், பிராதை அப்சரஸ்களையும், குரோதை கணங்கள், பிசாசங்கள், யக்ஷர்கள், குஹ்யர்களையும், சுரபி, நான்கு கால்களைக் கொண்ட விலங்குகள் அனைத்தையும் பெற்றனர். விந்தை அருணனையும், கருடனையும் பெற்றாள், கத்ரு பாம்புகள் அனைத்தையும் பெற்றாள்.{61-64}

ஓ! மன்னா, உயரான்ம பிரம்மன் தாமரையில் தோன்றியபோது விஷ்வதேவர்கள் இவ்வோறே தங்களைப் பெருக்கிக் கொண்டனர்.{65} தாமரையின் தோற்றம் குறித்த இந்தப் பழங்கதையைத் துவைபாயனரிடம் {வியாசரிடம்} இருந்து நாம் கேட்டோம். அந்தப் பெரும் ரிஷி தொடக்கம் முதல் முடிவு வரை அதை விவரித்தபோது பெரிதும் உயர்வாக மதித்துப் பேசினார்.{66} முதல் தாமரையின் தோற்றம் குறித்த இந்தக் கதையை எப்போதும் கவனத்துடன் படிக்கும் பெரும் மனிதன், இவ்வுலகில் துன்பம் அற்றவனாக, இம்மையில் பல்வேறு இன்பங்களை அனுபவித்து, மறுமையில் நித்திய அருளைப் பெறுவான்” என்றார் {வைசம்பாயனர்}”.(57-67)

ஜனமேஜயன் கேள்வி | பவிஷ்ய பர்வம் பகுதி – 15-(ஜநமேஜயப்ரஷ்ந꞉)-பிரம்ம ஞானம் குறித்து வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பிராமணரே, பெருமைமிக்கதும், சிறப்புமிக்கதுமான எங்கள் குல {வம்ச} விளக்கத்தை நான் கேட்டேன்.{1}

பல அறங்களையும், பல்வேறு சந்தங்களையும், தொடர்மொழிகளையும், குறுகியதாக இருந்தாலும் இனிய சொற்களையும் கொண்டிருந்தன, வாழ்வின் மூன்று நோக்கங்களைத் தரவல்லவையாகவும் அவை இருந்தன.{2,3}(1-3)

என் முன்னோர்கள், மன்னன் துரியோதனனுடன் உண்டான சச்சரவின் காரணமாகத் தங்கள் போட்டியாளர்களை வெல்வதற்காகவும், தங்கள் குல வழித்தோன்றல்களைக் கொல்வதற்காகவும், பிராமணர்களின் சக்தியையும், போர்வீரர்களின் ஆற்றலையும் அழிக்கத் தகுந்தவற்றைப் பயன்படுத்தவில்லை என நீர் விளக்கிச் சொன்னீர்.{4,5}

அந்தப் பயங்கரப் போரில் கொல்லப்பட்ட மன்னர்களின் வழித்தோன்றல்கள் தங்கள் தங்களுக்குரிய நாடுகளை அடைந்தனர் என்றும், தெய்வீகத் தலைவனின் உத்தரவைப் பின்பற்றுவதற்காகக் குருக்களின் மன்னன் உறுதியாக நிறுவப்பட்டான் என்றும் நீர் விளக்கிச் சொன்னீர்.{6}

ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, மூன்று வர்ணங்களின் கடமைகளையும், தெய்வக லோகத்தை ஒருவன் அடையக்கூடிய வழிமுறைகளையும் நீர் முறையாக விளக்கிச் சொன்னீர்; உயிரினங்களின் மீது கொண்ட கருணையால் நான்கு வர்ணங்களின் கடமைகளையும் நீர் பல வழிகளில் விளக்கிச் சொன்னீர்.{7,8}

கர்மத்தின் வீழ்ச்சியில் தெய்வீகம் ஆதிக்கம் செலுத்தும்போது சிலர் பிறப்பின் மூலம் இழிந்த நிலையை அடைகிறார்கள், சிலர் உயர்கிறார்கள் என்பதையும் விளக்கிச் சொன்னீர்.{9}

பணிவுடன் இருப்பதன் பயன்களைப் பல பகுதிகளாகப் பகுத்தும் சொன்னீர். கொடைகளின் பயன்கள், கர்மத்தின் பயன்கள் ஆகியவை தொடர்பாக நீர் சொன்ன சொற்கள் உண்மையில் இனிமையானவை.{10}

ஓ! மதிப்பிற்குரிய ஐயா, ஒரு தேவ நாளுக்குள் கூட {ஒரு வருடத்திற்குள் கூட} பாரதமென்னும் இந்தப் பெரும் வரலாற்றை என்னால் படிக்க முடியவில்லை.{11} ஆனால் ஐயா, பிரம்மத்துடன் ஐக்கியமாவதற்கான ஞானம் குறித்து உம்மிடம் சுருக்கமாகக் கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்” என்று கேட்டான்.{12}(4-12)

பரப்ரம்மம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 16-ஸாங்க்யயோகவிசார꞉)-பிரம்ம ஞானம் குறித்து விளக்கிச் சொன்ன வைசம்பாயனர்.

வைசம்பாயனர் {ஜனமேயஜனிடம்}, “ஓ! மன்னா, உன்னுடைய ஐம்புலன்களையும் {பஞ்சேந்திரியங்களையும்} கட்டுப்படுத்தி, தூய மனத்துடனும், முழு மனத்தின் கவனத்துடனும் நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.{1} எவனைக் கர்மத்தின் மூலம் அடைய முடியாதோ, எவன் பிரம்ம ஞானத்தை அறிந்தவர்கள் முன் தோன்றுவானோ, எவன் செயல்களில் பற்றில்லாதவனோ, எவன் பிரம்மத்துடன் தொடர்புடையவனோ,{2} எவன் அண்டத்தின் வெளிப்படாத காரணனாக {அவ்யக்த காரணனாக} இருக்கிறானோ, எவன் நித்தியனோ, எவன் வடிவத்துடனும், வடிவம் இல்லாமலும் இருக்கிறானோ அவனை நிஷ்கள {பகுபடாத, தூய்மையான} புருஷன் என்று அறிவாயாக. ஆத்மாவில் இருந்து பெறப்படும் அகங்காரம் {தன்முனைப்பு}, இந்தப் புருஷனிலிருந்தே வருகிறது.{3}(1-3) அவன் தெய்வீக வடிவைக் கொண்டிருக்கிறான், அவன் புலன்நுகர் பொருட்களின் தலைவனாக இருக்கிறான், அவன் எண்ணத்திற்கு அப்பாற்பட்டவனாகவும், நித்தியனாகவும், யுகங்களின் பிறப்பிடமாகவும்,{4} காலத்தின் மூன்று வடிவங்களாகவும், பிறப்பில்லாதவனாகவும், எங்கும் நீக்கமற சமமாக நிறைந்தவனாகவும் இருக்கிறான். நாராயணனைக் குறித்த அறிவைக் கொண்டவர்கள், வெளிப்படாதவனில் இருந்து தனித்தவனாக இவனை அறிகிறார்கள்.{5}

அவன் அனைத்தையும் புரிந்து கொள்கிறான், எங்கும் செல்பவனாக இருக்கிறான், எங்கும் தன் தலையைக் கொண்டிருக்கிறான், அனைத்தையும் காண்கிறான், அனைத்தையும் நோக்கித் தன் முகத்தைக் கொண்டிருக்கிறான்.{6} அனைத்தையும் கேட்கிறான், வெளியெங்கும் விரிந்திருக்கிறான். அவன் காரண, காரியங்களுக்குக் காரணனாகவும், வெளிப்பட்டவனாகவும், வெளிப்படாதவனாகவும் இருக்கிறான், அவனுடைய நகர்வை எவராலும் காண முடிவதில்லை.{7}(4-7)

அவன் எண்ணத்திற்கு அப்பாற்பட்டவனாகவும், வடிவமற்றவனாகவும் இருந்தாலும், வடிவத்தை ஏற்றுக் கொண்டு, தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, மரத்தில் நெருப்பைப் போல எங்கும் திரிந்து கொண்டிருக்கிறான்.{8} அவனே பரமேஷ்டி, அவனே பிரஜாபதி, அவனே உலகங்களின் தலைவனாகவும் இருக்கிறான். அவனுடைய இந்தப் பெயர் உண்மையில் பாடப்படுகிறது.{9} வெளிப்படாதவனான அவன், பிரம்மயோகத்தின் மூலம் வெளிப்படுகிறான். அஹங்காரமானது, நாராயணனில் இருந்து உண்டாகும் அறியாமையால் பெறப்படுகிறது.{10}(8-10)

சுயத்தின் நனவுடன் கூடிய இந்தப் புருஷன் பிரம்மமாக நிலைத்திருக்கிறான். அசைவன, அசையாதனவற்றை உள்ளடங்கிய உலகத்தின் தலைவனான அவன் பிரம்மன் என்று அழைக்கப்படுகிறான்.{11} எவன் இந்த அண்டத்தைப் படைத்தானோ, எவன் அனைத்துக்குப் பிறப்பிடமாக இருக்கிறானோ அந்தத் தலைவன், “நான் அனைத்தையும் படைப்பேன்” என்றான்.{12} பிரம்மன் இதைச் சொன்னபோது, இயற்கையில் இருந்து அங்காரத்தின் நனவு உண்டானது, இவ்வாறே மொத்த உலகமும் இருப்புக்குக் கொண்டு வரப்பட்டது.{13} ஆனால், உண்மையான, எல்லாம்வல்ல, குணங்களற்ற பிரம்மமானது, பிரம்மமாகவே நீடித்தது.{14} வெளிப்படாத பிரம்மத்தின் இயல்புத் தன்மைகளான நுட்பமான ஐந்து பூதங்களில் இருந்து வேதங்களும், அவற்றின் பல்வேறு கிளைகளும் வெளிப்பட்டன.{15}(11-15) அனைத்தையும் வெளிப்படுத்தும் பிரம்மத்தால் ஆணையிடப்படும் பிரம்மன், இயற்கையில் இருந்து ஒரு வடிவை ஏற்றுக் கொண்டு நீரைப் படைத்தான்.{16} அதன் பிறகு, ஈஷ்வரனின் ஆணையைப் பின்பற்றும் படைப்பாளர்களின் மத்தியில் ஏழாவது பிரம்மன், முன்பைப் போலவே காற்றைப் படைத்து, அதைத் தாங்கி தாத்ரி என்ற பெயரை ஏற்றான்.{17} முன்பு இந்த அண்டம் காற்றில் இருந்து உண்டாக்கப்பட்டு, நீரின் அடியில் மூழ்கியிருந்த போது, தார்ஜச தேவர்கள் அதை உயர்த்தியதால் மொத்த அண்டமும் வெளிப்பட்டது.{18} ஈஷ்வரன் தன் படைப்பை நிலைக்கச் செய்யப் பூமியை உண்டாக்க விரும்பியபோது, அவன் நீரின் ஒரு பகுதியை திடமான பொருளக மாற்றினான், எஞ்சியவை நீர்மமாகவே இருந்தன; அப்போது மக்கள் பூமியைக் கண்டார்கள்.{19}(16-19)

நீரானது ஒரு திடப் பொருளாக மாற்றப்பட்டதால் பூபுருஷன் எழுந்து பயங்கர ஒலியால் திசைகள் அனைத்தையும் நிறைத்து, “நான் நீருக்கு மேல் வாழ விரும்புகிறேன். நீரானது திடமாக மாற்றப்பட்டதால் நான் பீடிக்கப்பட்டுக் களைத்திருக்கிறேன். எனவே என்னை உயர்த்துவீராக” என்றான்.{20,21} அதன்பிறகு பூமியான பிருத்வி, உயிரினங்கள் அனைத்தையும் ஆதரித்து எங்கும் பரந்து விரிந்தவளாகச் சிறிது இடம்பெற விரும்பி, ஒரு வடிவை ஏற்று, “என்னை உயர்த்துவீராக” என்றாள்.{22} அந்த இனிய சொற்களைக் கேட்ட ஹரி, ஒரு பன்றியின் வடிவை ஏற்று, பெருங்கடலுக்குள் குதித்தான். அவன், நீரில் இருந்து பூமியை உயர்த்தும் மிகக் கடினமான பணியைச் செய்துவிட்டு, எவரும் தன்னைக் காணமுடியாத படி (மனக்குவிப்புடன்) சமாதியில் ஈடுபட்டான்.{23} பன்றியின் வடிவை ஏற்றுப் பூமியை உயர்த்தியவனே பிரகாசமான பிரம்மம் ஆவான். சிலர் அவனை ஆகாயமாக அறிகிறார்கள். அனைத்தையும் படைத்த பிரம்மன், அவனில் இருந்தே உண்டானான்.{24} அனைத்துக்கும் பிறப்பிடமான அந்த ஈஷ்வரன், ஞானத்தின் நுட்பமான மன யோகத்தின் மூலம் பாம்பு, ஆமை ஆகியவற்றின் வடிவில் இன்னும் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிறான்.{25} பூமியின் உட்புறத்தையும், நீரின் உட்புறத்தையும் பிளந்து, சிரித்துக் கொண்டே சூரியனைப் படைத்து அவனை உயரத்தில் நிறுத்தினான்.{26} சூரிய லோகத்தில் இருந்து முழு வெப்பமும் வெளிப்பட்டது, சந்திர லோகத்தில் இருந்து முழு நீரும் வெளிப்பட்டது.{27} நித்திய ஞானத்தில் இருந்து சந்திரன் வெளிப்பட்டதாலும், அவன் பரமஞானம் கொண்டவன் என்பதாலும் அவன் சோமன் என்று அழைக்கப்பட்டான்.{28}(20-28)

சந்திரலோகத்தின் எல்லையில் இருந்து காற்றை (உயிர் மூச்சு) வெளிப்பட்டது. அவன் அனைத்து தோற்றப்பாடுகளின் காரணங்களையும் விளக்கி வேதங்களைக் கவனிக்கத் தொடங்கினான்.(29) அவனது யோகத்தின் மூலமும், பிரம்மத்தில் இருந்து உண்டாகும் அவனது இயல்பின் காரணமாகவும் அவன் தெய்வீகனும், நித்தியனுமான ஒரு புருஷனைப் படைத்தான்.(30) அவனுடைய நீர்ம நிலை நீரானது, திட நிலை பூமியானது; அவனது துளைகள் வானமானது, ஒளியுள்ள பகுதி கண்ணானது.(31) பிரம்மத்தில் இருந்து புருஷனாக வெளிப்படுவதும், பிரகாசத்தால் பெறப்பட்டதுமான மஹத் கோட்பாடு, ஐம்பூதங்களுடன் சேரும்போது உடலை காற்றின் மூலம் கலங்கடிக்கிறது.(32) ஜீவன் அல்லது மனித ஆத்மாவானது, புத்தியில் ஞானம் போல வெளிப்படையாக நிலைத்திருக்கிறது, ஈஷ்வரன் மட்டுமே அதை அறிவான்.(33) உடலில் நித்தியமாக நிலைத்திருக்கும் சுயம் அல்லது நெருப்பானது, ஐம்பூதங்களுடன் சேர்ந்த சூரியனாகிறது (அதாவது பரமாத்மா ஆகிறது).(34)

முற்பிறவி செயல்பாடுகளின் காரணமாக மனித ஆன்மாவானது, (ஆன்மவியலில்) முன்னேற்றத்தையோ, இழிநிலையையோ அடைந்து இன்பத்தையோ, துன்பத்தையோ அனுபவிக்கிறது.(35) புலன்களால் கலக்கமடைந்து, பிரம்மத்தை (அதன் உண்மை வடிவத்தைக்) குறித்த அறியாமையுடன் கூடிய ஒருவன், தன் கர்மத்தின் (செயல்களின்) காரணமாகப் பிறப்பையோ, இறப்பையோ அடைகிறான்.(36) ஒரு மனிதன் பரப்பிரம்மமாகாத வரையில் அவன் இவ்வுலகில் மீண்டும் மீண்டும் பிறவிகளை அடைகிறான்.(37) யோகத்தின் பயனால் தன் புலன்களைக் கட்டுபடுத்திப் பிரம்மத்துடன் ஐக்கியமாகும்போதே அவன் உண்மையான மகிழ்ச்சியை {பேரின்பத்தை} அடைகிறான்.(38) இருப்பினும் அவன் (மாற்றங்களால் அமைந்த) இந்த உலகில் இருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு பிரம்மமாகிறான்; அவன் கோபத்தால் அழிவையோ, புலன் நுகர் பொருட்களில் பற்றையோ அடைவதில்லை.(39)

உயர்ந்த ஆன்ம சக்திகளைக் கொண்டவனும், அனைத்தையும் அறிந்தவனுமான இவன் பூதங்களின் சாரங்களுக்குள் நுழைகிறான். அப்போது அவன் பிறப்பையும், இறப்பையும் அறிகிறான்.{40} பிரம்மத்தின் உண்மை வடிவை அறிந்த மனிதன், கடந்த கால, எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் முக்திக்கான வழிமுறைகளின் ஞானத்தை அடைந்து, மிகச் சிறந்த கதியை எட்டுகிறான்.{41}(40,41) அவன் தன் மனத்தால் அறிவுசார் புலன்கள் அனைத்தையும், பெருங்கடலைக் கலங்கடிக்கும் காற்றைப் போல மனத்தைக் கலங்கடிக்கும் ஆசைகள் அனைத்தையும் வெல்வான்.(42) மனிதனின் ஆன்மாவானது, ஞானக் கண்ணின் (ஆன்ம அறிவின்) மூலம் ஆசைகள் அனைத்தையும் வென்று, மனத்தை மாசுப்படுத்தும் உடலின் தளைகள் அனைத்தில் இருந்து விடுபடும்.(43) நுட்பமான உடலைக் கொண்ட யோகி, ஆன்ம அறிவியலின் மூலம் மறுமையைப் படைக்கவோ, அழிக்கவோ செய்கிறான்; இந்த உலகத்தையே கூட அவனால் படைக்க இயலும்.(44) பரமாத்மாவில் நிலைத்த மனத்தைக் கொண்டவனால், முற்பிறவி செயல்களின் காரணமாக இழிந்த நிலையில் பிறந்தவர்களை விடுவிக்க முடியும்.(45) செயல்பாடுகள் முக்தி {விடுதலை}, மற்றும் இன்பம் ஆகிய இரண்டிற்கும் வழிவகுக்கும். ஆனால், பிரம்மத்தில் தன்னை மூழ்கச் செய்தவனுக்கு உலகம்சார்ந்த இன்பங்களுக்கு வழிவகுக்கும் செயல்கள் ஏதும் இல்லை” என்றார் {வைசம்பாயனர்}.(46)

ஆறுகளின் படைப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 17-(கர்மபலபரிச்சேதாய யோகவர்ணனம்)-ஆறுகள் படைக்கப்பட்டது குறித்தும், ஆசிரமங்களைக் குறித்தும் ஜனமேஜயனுக்கு விளக்கிச் சொன்ன வைசம்பாயனர்…

வைசம்பாயனர் {ஜனமேயஜனிடம்}, “பெருகும் சூரியனால் பூமியின் பரப்பில் உண்டாக்கப்பட்ட துளையில் மைநாக மலை நிலைநிறுத்தப்பட்டது.(1) ஆசையானது பெருங்கடலை நிறைத்ததால் அது பர்வதம் என்றும், நிலை நிறுத்தப்பட்டதால் அஃது அசலம் என்றும் அழைக்கப்பட்டது; எனினும் இயல்பாகவே அது மேரு என்றே அழைக்கப்பட்டது.(2)

பரந்திருக்கும் சுமேரு மலையின் உச்சியில், பிரகாசத்தால் பெறப்பட்டவனும், தலை, கால் முதலியவற்றுடன் வெளிப்பட்டவனும், பெருஞ்செழிப்பைக் கொண்டவனுமான புருஷன் வாழ்கிறான். அவன் இயற்கையின் மூலம் பரமாத்மாவால் படைக்கப்பட்டான்.(3) தலையில் கிடக்கும் பிரம்ம சக்தியானது, அந்தப் புருஷனின் எரியும் ஒளி வடிவை ஏற்றது.(4) அவனுடைய வாயில் இருந்து நான்கு வாய்களுடன் கூடியதும், பிரம்ம அறிவைக் கொண்டோரில் முதன்மையானவர்களும், இருபிறப்பாளர்களில் முதன்மையானவர்களுமான நால்வருடன் கூடியதுமான பிரம்மம் அவனுடைய பிரகாசத்தில் எரிவது போலவும், வெளிப்பட்டது. அவனில் இருந்தே பெரும்பூதங்கள் மீண்டும் இருப்புக்குள் வந்தன.(5,6) அவ்விடத்தில் (மேருவில்) நிலைத்திருந்த பிரம்மத்தால் நீரில் இருந்து பூமி உயர்த்தப்பட்டதால் அவன் புலப்படாதவனாக இருப்பினும் மனிதர்களின் பார்வைக்குள் வந்தான்.(7)

மேருவின் உச்சியாக இருக்கும் பிரம்மலோகமானது, சொர்க்கத்திற்கும் பூமிக்கும் இடையில் அமைந்திருக்கிறது. அது நூறு, அல்லது ஆயிரம் யோஜனைகள் உயரம் கொண்டதாகவும், அதைவிட நான்கு மடங்கு அகலம் கொண்டதாகவும் இருக்கிறது.{8} மேருவின் அளவு கற்பனையானதே என்பதாலும், ஒரு பாலைவனத்தின் பரப்பையோ, ஏரியின் ஆழத்தையோ அளப்பது போல அதை அளந்துவிட முடியாது என்பதாலும், தெய்வீக ஞானத்தைக் கொண்ட எந்த மனிதனாலும் பல்லாயிரம் வருடங்கள் ஆனாலும் அதன் உயரத்தை அளக்க முடியாது.{9} அதன் உயரத்தையும், பரப்பையும் போலவே அதன் சுற்றளவும் எல்லையற்றதே. ஓ! மன்னா, நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட சுமேருவின் பரப்பளவு நூறு யோஜனைகளாகும்.{10}(8-10)

ஆன்ம சாதனை செய்தவர்களும், பிரம்ம ஞானத்தை அறிந்தவர்களுமான சில துறவிகள் இந்த மலையின் இன்னும் பல சிறப்புகளைச் சொல்கிறார்கள்.(11) மருத்துகள், தேவர்கள், ருத்திரர்கள், வசுக்கள், ஆதித்தியர்கள், விஷ்வதேவர்கள் ஆகியோருடன் அவன் லோகபாலர்களைப் பாதுகாக்கிறான்.(12) விஷ்ணுவின் ஆற்றல் எங்கும் சமமாகப் பரவி இருக்கிறது. ஓ! மன்னா, அவன் {புருஷன்}, பிரம்மத்தில் இருந்து பெற்ற தன்னுடைய பிரம்ம உடலில் தெய்வீக விஷ்ணுவுடன் சேர்ந்து, சூரியன் (நெருப்பு), வருணன் (நீர்) ஆகியோரிடம் இருந்து வெளிப்படும் பூமியைப் பாதுகாக்கிறான். (13,14)

வாய்மை நிறைந்த பிராமணர்கள், தாங்கள் செய்யும் பல்வேறு நோன்புகளினாலும், வேத கல்வியில் அவர்கள் அடைந்த தேர்ச்சியாலும் பிரம்மத்தைப் பாடியிருக்கிறார்கள்.(15) மூவுலகங்களும் பிரம்மனில் நிலைத்திருக்கின்றன, பிரம்மம் வெளிப்பட்ட நிலையிலோ, வெளிப்படாத நிலையிலோ அனைத்திலும் படர்ந்தூடுருவி இருக்கிறது.(16) வேதங்களில் தேர்ச்சியடைந்த பிராமணர்கள், வேதங்களால் அனுமதிக்கப்பட்டவையும், ஈஷ்வரனால் சுவாசிக்கப்பட்டவையும், மனத்தைத் தூய்மை செய்து, செயல்களைச் சொல்லாத சொற்களிலும் வஞ்சனையற்ற பிராமணர்களால் பயிலப்படுபவையும், தினம் தோறும் செய்ய வேண்டியவையுமான கட்டாயச் சடங்குகளை நமது நன்மைக்கானவை என்று கருதுகிறார்கள். இந்தச் சடங்குகள் நல்ல செயல்களின் பலனை விளைவித்தாலும் அவை பிரம்மத்தின் ஒரு சிறு பகுதியாகவே அமைகின்றன. இவ்வாறே ஸ்ருதிகள் சொல்கின்றன.{17,18} 

வாய்மை நிறைந்த பிராமணர்கள், அனைவரின் ஆன்மாவான பிரம்மத்தின் மிக நுட்பமான பகுதியே இந்த அண்டம் என்று தீர்மானித்திருக்கிறார்கள். பிராமணர்கள், தாங்கள் அறிவுசார்ந்த தங்கள் பிரிவுகளின் பன்முகத்தன்மையால் வேள்விகளில் பிரம்மன், இந்திரன், மித்திரன், வருணன் முதலிய பெயர்களால் ஒரே பிரம்மத்தையே வழிபடுகிறார்கள். ஒரே பெரும் பிரம்மத்துக்கே விப்ரர்கள் பல்வேறு வழிகளில் பெயர் கொடுத்திருகிகறார்கள்.{19} அண்டத்தின் வடிவம் திரளானது, மனத்தின் வடிவோ நுட்பமானது. தலைவன், இவ்விரண்டு வடிவங்களும் புத்திக்கு மட்டுமே சொந்தமானவை என்பதை நினைவில் கொண்டு முதலில் ஆண், பெண் ஐக்கியத்தைப் படைத்தான்{20}.(17-20)

தெய்வீகத் தலைவன் பிரம்மன், பல்வேறு இன்பங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டுத் தேவியுடனும், தன் தொண்டர்களுடனும் அவற்றை இன்புறுகிறான்.(21) எளிய நாட்டங்களைக் கொண்டவர்களாக இருந்தாலும் எப்போதும் முக்திக்கு வழிவகுக்கும் வழியிலேயே செல்லும் பிரம்மவாதிகளில் பிரம்மனே முதன்மையானவன்.(22) (உமை ஆன்ம அறிவியலாகவும், பரமேஷ்வரன் அதைப் புரிந்து கொள்ளும் நித்திய ஞானமாகவும் இருக்கின்றனர்) அவனது உடலே நீரோடையாகச் சொர்க்கத்தில் இருந்து பாய்கிறது. சோமன் {சந்திரன்} இவ்வோடையிலேயே பிறந்தான்; இதன் மூலமே மஹேஷ்வரன் கணங்களின் தலைவனாக ஆனான்.(23)

இயல்பாகவே மஹேஷ்வரனை, கணங்களின் மன்னனாக நிறுவியபோது பேரொலியை வெளியிட்டதால் ஆறு என்பது {நாதம் என்ற சொல்லில் இருந்து} நதி என்றழைக்கப்பட்டது.(24) அவள் {ஆறு} பிரம்மலோகத்தில் தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொண்டு, தன் வழியில் நின்ற மலைகளைக் கடந்து, பூமியை நோக்கி ஏழு வழிகளில் இறங்கி வந்தாள்; இதன் காரணமாகவே அவள் கங்கை என்று அழைக்கப்பட்டாள்.(25) ஓ! மன்னா, பெருங்கடலில் கலக்கும் முன் கோதாவரியின் வடிவில் தன்னை ஏழாகப் பிரித்துக் கொண்டு, ஜானவியின் வடிவில் மேலும் ஆயிரம் பகுதிகளாகத் தன்னைப் பிரித்துக் கொண்டு பல்வேறு புனிதத்தலங்களுக்குப் பாய்ந்து சென்றாள்.(26)

முதலில் திரள் பூதங்கள் பெரும்பூதங்களில் இருந்து உண்டான பிறகே புத்தியின் செயல்பாடுகள் தொடங்குகின்றன.(27) அவனது தாமரை வாய்கள் நான்கில் இருந்து உண்டான வேதம், அதுமுதலே மனித குலத்திற்கு ஆன்ம போதனைகளின் ஊற்றாகத் திகழ்கிறது.(28) புனித வேள்வியானது அவனது ஞானத்தில் இருந்தும், புத்தியில் இருந்தும் வெளிப்பட்டது; நான்கு புரோகிதர்கள் அதன் நான்கு கால்களாகினர்; பெரும்பாட்டன் பிரம்மன் அதற்குத் தலைவனானான் {வேள்வியின் தலைவனானான்}.(29)

உலகத்தைத் தாங்கும் தர்மத்தின் நான்கு கால்களில் (நான்கு ஆசிரமங்களில்) முதலில் வருவது மாணவ நிலை என்றழைக்கப்படும் பிரம்மசர்யம், மிகப்புனித நிலையான இல்லறவாசி நிலை {கிருஹஸ்தம்} இரண்டாவதாகும்.(30) காட்டில் உள்ள அறத்துறவியின் நிலை {வானப்ரஸ்தம்}, பெரும்பிரம்மத்துடன் ஐக்கியமாகும் {சந்நியாச} நிலை ஆகியன மூன்றாவது, நான்காவது நிலைகளாகும். அறவாழ்வின் இந்நான்கு நிலைகளும் சொர்க்கத்தை அடைவதற்கு வழிவகுப்பவையாகக் கருதப்படுகின்றன.(31) யோகப்பயிற்சியின் மூலமும், வேதாந்தத்தை உண்மையாகப் புரிந்து கொள்வதன் மூலமும் மனிதனின் மனத்திறன்கள் வளர்ச்சியடைகின்றன. நித்திய வேதங்கள் பிரம்மசர்யம் பயில்வதற்காக நிலைத்திருக்கின்றன.(32) பித்ருக்கள் இல்லறவாசிகளின் ஒழுங்கை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றுவதன் மூலம் நிறைவடைகிறார்கள், சுமேரு மலையின் உச்சியில் இருக்கும் ரிஷிகள் யோகத்தின் மூலம் நிறைவடைகிறார்கள்” என்றார் {வைசம்பாயனர்}[1].(33)

மனத்தில் நிலைத்த சிந்தனை | பவிஷ்ய பர்வம் பகுதி – 18-(மநோதாரணவிசாரம்)-அப்சரஸ்கள், கந்தர்வர்கள் ஆகியோரும், சரஸ்வதி தேவியும் மற்றும் பல உயிரினங்களும் படைக்கப்பட்டது; மெய் அறிவியல்களான பிரம்ம யோகம், சாங்கிய யோகம்…

வைசம்பாயனர் {ஜனமேயஜனிடம்}, “பெரும்பாட்டன் {பிரம்மன்}, தூய புத்தியின் வடிவை ஏற்றுத் தன் மனத்திறன்களின் மூலம் மொத்த படைப்பையும் கருதிப்பார்த்து, புறப் பொருட்கள் அனைத்தில் இருந்தும் தன் உள் ஆன்மாவை விலக்கி பிரம்மத்தை அடைவதற்கான செயல்களில் ஈடுபடுகிறான். மனக்குவிப்பில் ஈடுபட்டும், பிரம்மத்துடன் ஐக்கியமடைந்தும் அவன் தன் மனத்தால் சந்ததியைப் படைத்தான்.{1,2} எல்லாம் வல்லவனான பிரம்மன் தன் கண்களின் மூலம் அழகிய அப்சரஸ்களையும், தன் மூக்கின் நுனியில் இருந்து தும்புருவையும், பலவண்ண ஆடைகளை உடுத்தியவர்களும், வேதங்களை ஓதுவதிலும், பாடுவதிலும், ஆடுவதிலும், இசைக்கருவிகளை இசைப்பதிலும் திறன் படைத்தவர்களும், நூற்றுக்கணக்கானவர்களும், ஆயிரக்கணக்கானவர்களுமான கந்தர்வர்கள் பிறரையும் படைத்தான்.{3,4}

எல்லாம் வல்லவனும், சுயம்புவுமான அந்தத் தேவன் {பிரம்மன்}, தன் யோகத்தின் மூலம் தன் எழிலின் அவதாரமாக விளங்குபவளும், மாசற்றவளுமான வேதவாணி {சரஸ்வதி} தேவியைத் தன் மனத்தில் படைத்தான்.{5} அவள் அழகிய கண்களையும், கேசத்தையும், புருவங்களையும், அழகிய முகத்தையும் கொண்டவளாக இருந்தாள். இனிய சொற்களையுடையவளான அந்தத் தேவி, நூறு இதழ்களைக் கொண்ட அழகிய தாமரையில் அமர்ந்தாள்.{6} ஓ! மன்னா, பூதங்களின் ஆன்மாவாகத் திகழும் பிரம்மன், அழகிய அப்சரஸ்களைத் தன் கண்களில் இருந்தும், இசைக்கருவிகளை இசைப்பதில் திறன்மிக்கவர்களும், இனிய குரலைக் கொண்டவர்களுமான கந்தர்வர்களைத் தன் மூக்கில் இருந்தும் படைத்துவிட்டு, பாடும் கலையை முன்வைத்து, பிற பிராமணர்களுக்கான சாமத்தை {சாம வேதத்தைப்} படைத்தான்.{7-9}(1-9)

அவனுடைய இரு கால்களில் இருந்து அசைவனவும், அசையாதனவும், மனிதர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், உரகர்கள், யானைகள், சிங்கங்கள், புலிகள் ஆகியவையும், நூற்றுக்கணக்கான பிற விலங்குகளும், புற்களும், நான்கு கால் விலங்குகளும் படைக்கப்பட்டன.{10,11} பணிகளுடன் {படைப்பு வேலைகளுடன்} சேர்த்துத் தங்கள் கைகளால் உணவை உட்கொள்பவர்களைத் தன் கைகளில் இருந்து அவன் படைத்தான். அனைத்து உயிரினங்களின் மகிழ்ச்சியை நாடிய அந்தப் படைப்பாளன், உயிர் காற்றுகளின் மூலம் சுவாசத்தின் பல்வேறு இயக்கங்களைப் படைத்தான். பிறகு அவன், ஐம்புலன்களையும் தடுத்துப் பேரின்பம் நிறைந்த பரமாத்மாவில் தன் மனத்தை நிலைநிறுத்தி அங்கேயே இருந்தான்.{12,13} அவன் தன் இதயத்தில் இருந்து பசுக்களையும், தன் கைகளில் இருந்து பறவைகளையும் படைத்தான்; அதன் பிறகு அவன் பல்வேறு வடிவங்களைக் கொண்ட நீர்வாழ் உயிரினங்களைப் படைத்தான்.{14}.(10-14)

யோகத் தலைவனும், தெய்வீகனுமான அந்தப் பெரும்பாட்டன், ஒளியில் எரிபவரும், ஆறு புலன்களை ஒடுக்குவதால் உண்டாகும் உண்மை ஞானத்துடன் கூடியவரும், தெய்வீக முனிவருமான அங்கீரஸைத் தன்னிரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளியில் இருந்து தன் யோக சக்தியின் மூலம் படைத்தான். மேலும் அவன், உயர்ந்த பக்திமானும், தெய்வீக முனிவருமான பிருகுவைத் தன் நெற்றியில் இருந்து படைத்தான்.{15,16} பெரும் யோகியான பிரம்மன், சச்சரவுகள் செய்பவரான நாரதரையும், சனத்குமாரரையும் தன் தலையில் இருந்து படைத்தான்.{17}(15-17)

பெரும்பாட்டன், இருபிறப்பாளர்களின் நித்திய மன்னனும், இரவுலாவியுமான சோமனைத் தன் வாரிசாக {யுவராஜனாக} நியமித்தபோது, பெரும்பூதங்களால் பெறப்பட்ட சக்தியுடன் கூடிய சந்திரனும்,{18} விண்மீன்களும், பல்வேறு உயிரினங்களால் {கிரகங்கள் பலவற்றுடனும்} வானத்தை நிறைத்து அங்கே உலவத் தொடங்கின.{19} பிரம்மன், யோகத்தின் மூலமும், மனப்பண்பின் மூலமும் ஆன்ம சக்திகளை அடைந்து, தன் உடலில் இருந்து அசையும் உயிரினங்களையும், அசையாத உயிரினங்களையும் படைத்தான்.{20} பிரம்மன், சூரியன் முதலிய பல்வேறு உலகங்களைப் படைத்து, இரவு பகலை உண்டாக்க பலரையும் நியமித்தான்.{21}

முன்பு சொன்னவை பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுக்கும். எனவே, பிரம்ம யோகமும், சாங்கிய யோகமும், அறிவியலறிஞர்களின் மெய் அறிவியலாக இருக்கின்றன. இது சார்வாகர்களாலும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. {22} இஃது ஒருமைப்படுத்தலுக்கும், பலவகைப்படுத்தலுக்கும் வழிவகுக்கிறது. இது பிறப்பையும், மரணத்தையும் உண்டாக்குகிறது. இதுவே பகுத்துணரும் ஞானமாக அறியப்பட வேண்டும்” என்றார் {வைசம்பாயனர்}.{23}(18-23)

க்ஷத்ர யுக விளக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 19-(கர்மமார்ககதநம்)-பிரம்ம யுகம்; க்ஷத்ரயுகம்; வர்ண வேறுபாடு; தக்ஷனின் படைப்புத் தொழில்…

ஜனமேயஜன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பிராமணரே, பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுப்பதால் பிரம்மம் என்றழைக்கப்படும் முதல் யுகத்தைக் குறித்து நான் கேட்டிருக்கிறேன். ஓ! தலைவரே, இப்போது உகந்தவை அறிந்த ரிஷிகளால் பாடப்பட்டதும், சுருக்கமாகவும், விரிவாகவும் அமைந்த விதிமுறைகளைக் கொண்டதும், வேள்விகளால் அழகூட்டப்பட்டதுமான க்ஷத்ர யுகத்தைக் குறித்துக் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(1,2)

வைசம்பாயனர், “பல்வேறு ஈகைகளாலும், வேள்விகளாலும் போற்றப்பட்டதும், பல்வேறு உயிரினங்களால் அழகூட்டப்பட்டதுமான க்ஷத்ர யுகத்தின் பெருமையை நான் பாடப்போகிறேன்.(3)

நான்கு கரங்களைக் கொண்ட விஷ்ணுவாகத் தன்னை அறியும் தலைவன், இந்தக் கல்பத்தில் வேறுபாடுகளைக் கண்டு, பிரம்மனால் பெறப்பட்ட தக்ஷனாக அவதரித்துப் பல சந்ததிகளை உண்டாக்கினான். அவன், புலன்களிலும், உடலிலும் உள்ள பற்றைக் களைந்ததன் விளைவால், அகத்தில் உள்ள சுயத்தின் {ஆன்மாவின்} ஞானத்தைக் கொண்டிருந்ததாலும் பிராமணர்களுக்கு மத்தியில் புகழ்பெற்றவனாக இருந்தான். கட்டை விரலளவே இருந்த இந்தப் பிராமணர்கள் அனைவரும், முக்திக்கு வழிவகுக்கும் ஒழுங்குமுறைகளையும், அறச் சடங்குகள் பிறவற்றையும் பின்பற்றியதால் சூரிய லோகத்தைக் கடந்து செல்ல வல்லவர்களாகவும், பிற லோகங்கள் அனைத்திலும் திரிய வல்லவர்களாகவும் இருந்தனர். அவர்கள் எப்போதும் வேள்விகள் செய்வதிலும், புலன்களையும், மனப்புலன்களையும் அடக்குவதிலும் மும்முரமாக இருந்தனர். ஈஷ்வர இன்பத்தை ஈட்டுவதற்காக அவர்கள் தங்களை வேதச் சடங்குகளில் ஈடுபடுத்திக் கொண்டனர். அவர்கள் மூன்று வேதங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். பிரம்மசரிய வாழ்வைப் பின்பற்றிய அவர்கள் பிரம்மஞானத்தில் ஐயம்தெளிந்தவர்களாக இருந்தனர். நல்லொழுக்கத்தையும், நிறைந்த புத்தியையும் கொண்டவர்களான இந்தப் பிராமணர்கள், ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு மரணமடைந்தனர்.(4-8)

பிராமணர்களிடம் சத்வ குணமும், க்ஷத்திரியர்களிடம் ரஜஸ் குணமும், வைசியர்களிடம் ரஜஸ்-தமஸ் குணங்களும், சூத்திரர்களிடம் தமஸ் குணமும் நிறைந்திருக்கின்றன.(9) பிராமணர்களின் வண்ணம் வெள்ளையும், க்ஷத்திரியர்களின் வண்ணம் சிவப்பும், வைசியர்களின் வண்ணம் மஞ்சளும், சூத்திரர்களின் வண்ணம் புகை போன்ற கரு நிறமும் ஆகும். சிந்தனை நிறைந்த விஷ்ணுவால் இவ்வாறே அவர்கள் பகுக்கப்பட்டார்கள்.(10) ஓ! மன்னா, இவ்வாறே இவ்வுலகில் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று குணங்களின் அடிப்படையிலும், வண்ணங்களின் அடிப்படையிலும் பகுக்கப்பட்டனர்.(11) பணிகளின் வழிமுறைகளைக் கொண்டு மதிப்பிடப்பட்டாலும், உயர்ந்தவையும், அற்புதமானவையும், வெவ்வேறு வகையிலானவையுமான கடமைகளை நோற்கும் ஒரே அளவைக் கொண்ட மனிதர்கள் அவற்றின் பலன்களைப் பெறுவதற்காக நான்கு வர்ணங்களாகப் பகுக்கப்பட்டனர்.(12) முதல் மூன்று வர்ணத்தினர், வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்யும் உரிமை பெற்றவர்கள். எனவே, ஓ! மன்னா, விஷ்ணுவிடம் நீ கொண்ட நம்பிக்கையின் காரணமாக நீ வேதங்களைப் படிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறாய். இதன் காரணமாகவே பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் என்ற மூன்று வர்ணத்தாரின் பிறப்பும் தலைவனின் {விஷ்ணுவின்} அருளால் நிகழ்கிறது.{13}

விஷ்ணுவின் உண்மை வடிவைக் குறித்த அறிவொளியைக் கொடுக்கும் பணிகளால் சூழப்பட்ட தலைவன் தக்ஷ பிராசேதஸ், தன் யோக சக்தியின் மூலமும், ஞானத்தின் மூலமும் படைப்புத் தொழிலை மேற்கொண்டான்.{14} அதன்பிறகு, கலைகளின் மேன்மைக்காகவும், மூன்று வர்ணங்களுக்கும் தொண்டு செய்வதற்காகவும் சூத்திரர்கள் படைக்கப்பட்டனர்.{15} தொடக்கச் சடங்கைச் செய்வதற்கோ {தீக்ஷை பெறுவதற்கோ}, வேதங்களைப் படிப்பதற்கோ அவர்கள் உரிமை பெற்றவர்கள் அல்லர்.{16} கோல்களின் {அரணிக் கட்டைகளின்} உராய்வினால் நெருப்பு உண்டாவதற்கு முன்பு புகை எழுந்தாலும், அது நடைமுறைக்குப் பயன்படாததைப் போலவே, இவ்வுலகில் பிறவியை எடுத்துத் தங்களைப் பெருக்கிக் கொள்ளும் சூத்திரர்கள், தொடக்கச் சடங்கைப் {தீக்ஷை} பெறாதவர்களாக இருப்பதால் பல்வேறு வேத சடங்குகளையும் செய்ய இயலாதவர்கள் ஆகிறார்கள்.{17}(13-17)

பிறகு தக்ஷன், வேதங்களை ஆதரிப்போரும், வலுவானவர்களும், பேராற்றலும், சக்தியும், பிரகாசமும் கொண்டவர்களான தன் மகன்கள் பிறரைப் பெற்றான்.{18}

தக்ஷன் அவர்களிடம், “ஓ! சக்திமிக்க மகன்களே, உங்கள் வாய்களில் இருந்து உங்கள் அன்னையான பூமாதேவியின் பலத்தை அறிய விரும்புகிறேன். நான் சக்திமிக்கவனாக இருக்கிறேன் என்பதால் என்னால் பூமியின் எல்லையைக் காண முடியவில்லை; நீங்களும் என்னைப் போலவே இருக்க வேண்டும்.{19} உண்மையை உறுதி செய்து கொண்ட பிறகு நான் ஆற்றலையும், பலத்தையும் உயிரினங்களுக்கு மத்தியில் பிரித்துக் கொடுப்பேன். மண்ணின் பரப்பு அதிகமாக இருக்கும் காரணத்தால் என் உயிரினங்கள் தங்களைப் பெருக்கிக் கொள்வார்கள்” என்றான்.{20}

தலைவனுடைய பெரும் படைப்பாற்றலின் சாரத்தைக் கொண்ட பூமாதேவி, தன்னைக் காண விரும்பிய தக்ஷனின் மகன்களிடம் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை.{21} கிருத யுகத்தில், சத்வ குணத்தைக் கொண்ட பிரஜாபதியின் மகன்களுடைய தூய ஆன்மாக்கள், புருஷனால் தூண்டப்படாமல் உயிரினங்கள் அனைத்தின் அன்னையான இயற்கையெனும் பிரக்ருதியைக் கண்டு தூய்மையடையும்போது, வியர்வையின் மூலமும், முட்டைகளின் மூலமும் உண்டாகும் அனைத்தையும் படைத்து, இயற்கையாகவே உயிரினங்களைக் குறைத்தும், பெருக்கியும் படைப்பின் பயன்களைப் பெறுகின்றன” என்றார் {வைசம்பாயனர்}.{22,23}(18-23)

யோகத்தின் பயன்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 20-(ப்ரவ்ருத்திதர்மபலம்)-தக்ஷன் மகள்களைப் பெற்றது; அவர்களை தர்மன், கசியபர், சோமன் ஆகியோருக்குக் கொடுத்தது; யோகத்தின் பயன்கள்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, கல்வியின் அனைத்து வகைகளிலும் பொருளாக இருக்கும் என நான் நினைக்கும் நித்திய பிரம்மனைக் கொண்ட திரேதா யுகத்தைக் குறித்து நான் அறிய விரும்புகிறேன்” என்றான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “புருஷர்களில் முதன்மையான தக்ஷன், ஊக்கமிழந்தவனாக மேரு மலையின் உச்சியில் தன் யோக சக்தியின் மூலம் ஒரு பெண் வடிவை ஏற்றான்.{2} நன்கு அமைந்த தொடைகள், முலைகள், தாமரை போன்ற முகம், கருவிழிகள் ஆகியவற்றுடன் அவன் பேரழகு படைத்த ஒரு காரிகையானான்.{3} தக்ஷ பிராசேதஸ், தன் பாதி உடலால் அந்தக் காரிகையிடம் பத்மங்கள் என்ற பெயரில் கன்னிகையரைப் பெற்றான்.{4} அதன் பிறகு தக்ஷன், தன் ஆண் வடிவின் மூலம் பெண் வடிவைக் கைவிட்டு மிக அழகிய மனித வடிவை ஏற்றான்.{5} ஸ்மிருதிகளால் அங்கீங்கரிக்கப்பட்ட பிரம்மத் திருமணச் சடங்குகளின்படி, அவன் அந்தக் கன்னிகையரை {திருமணம் செய்து} கொடுத்தான்.{6} அவன் அவர்களில் பத்து கன்னிகைகளைத் தர்மனுக்கும், பதிமூவரை கசியபருக்கும், இருபத்தெழுவரை சோமனுக்கும் கொடுத்தான்[1].{7}ஓ! மன்னா, தக்ஷன் தன் மகள்களுக்குத் திருமணம் செய்து கொடுத்த பிறகு, பிரம்மன் வாழ்ந்து வந்த பிரயாகை என்ற புனிதத்தலத்திற்குச் சென்றான்.{8} அங்கே அவன் தன் மனம் சார்ந்த, புத்தி சார்ந்த புலன்களைக் குவித்து, தவம் பயின்று மான் உடன் சேர்ந்து உலகம் முழுவதும் பயணித்தான். அவன், புற்கள், கிழங்குகள், கனிகள் ஆகியவற்றை உண்டு தொடர்ந்து கடுந்தவங்களைச் செய்து வந்தான்.{9} தீங்கிழைக்காத அவனது குணத்தைக் கண்டு அந்த மான் பெரிதும் மகிழ்ந்தது; தொடக்கச் சடங்கு {தீக்ஷை} பெற்றவர்களும், அறப்பணிகளைச் செய்பவர்களும், தவம், துறவு, நோன்பு ஆகியவற்றின் மூலம் பாவம் அழிந்தவர்களுமான பிராமணர்கள் அவனது தவங்களின் பயன்களைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தனர்.{10}(2-10)

யோகத்துக்கும், புத்திசார்ந்த புலங்களுக்கும் இடையில் மோதல் நடக்கும் நேரத்தில் உடல்சார்ந்த துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனும், தன் மனத்தைக் கட்டுப்படுத்தியவனும், காலத்தை அறிந்தவனுமான ஒரு மனிதன், தான் அனைத்தையும் அறிந்தவனாக இருப்பதன் காரணமாக யஜ்ஞம் {வேள்வி} மூலம் அடையப்பட்ட கர்மத்தையும், ஆன்ம பலத்தையும் காண்கிறான்.{11} {இவ்வாறான} துறவிகள், மான்களுடனும், தங்கள் மனைவியருடனும் கூடியவர்களாகக் காய்கறி உணவை உண்டு, கவலை அற்றவர்களாக முதுமையை அடைகிறார்கள்.{12} வேதங்களைக் கற்றறிந்த பிராமணர்கள், மனித உடலிலேயே பெரும் பிரம்மத்தைக் கண்டு, அதை {அந்த உடலை} பிரம்மத்தின் நிலம் அல்லது பிரம்மக்ஷேத்திரம் என்று அழைக்கிறார்கள்.{13}(11-13)

பணிகளில் இருந்து மனம் விலகியவர்களும், கோபத்தையும், ஆசையையும் அடக்கியவர்களும், நித்திய வழியில் செல்ல விரும்பி பூமியில் திரிபவர்களுமான யதிகள் இதையே சொல்கிறார்கள்.{14} {மனிதர்கள்} சமாதி, அல்லது மனக்குவிப்பு அடையும் நேரத்தில் மொத்த படைப்பும் பிரம்மத்தில் மூழ்குகிறது. மேலும் அவர்கள் முற்பிறவியில் செய்த செயல்களின் காரணமாக மீண்டும் அவை உலகில் தோன்றுகின்றன. {மனிதர்கள்} சமாதி அடையும் நேரத்தில் உயிரினங்கள் அனைத்தும் பிரம்மத்தில் கலந்தாலும், அவர்களின் முற்பிறவி செய்ல்பாடுகளின் காரணமாக அவை மீண்டும் பூமியில் தோன்றுகின்றன.{15} சமாதி அடையும் நேரத்தில் உயிரினங்கள் அனைத்தும் வெளிப்படாமல் இருந்தாலும், இயற்கை போக்கின் மூலம் அவை மீண்டும் வெளிப்படுகின்றன. எனவே இயற்கையை வெல்வது மிகக் கடினமானதாகும். காலத்தினுடைய பண்புகளின் காரணமாக உயிரினங்கள் வெளிப்பட்டும், வெளிப்படாமலும் இருக்கின்றன.{16}(14-16) அசைவனவோ, அசையாதனவோ, திரளானவையோ {ஸ்தூலமானவையோ}, நுட்பமானவையோ {ஸூக்ஷ்மமானவையோ} எனப் படைப்பின் ஒவ்வொரு பொருளும் காலத்தின் ஆதிக்கத்தில் யோகத்தை அடையலாம். உயிரற்ற பொருள்களுக்கே இந்த யோகம் சாத்தியமாக இருக்கும்போது ஒவ்வொரு மனிதனும் கடவுளுடன் ஐக்கியமாகும் ஞானத்தை அடைய முயல வேண்டும்.{17}

நித்தியரான கசியபர், காலப்போக்கில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களையும் தக்ஷனின் மகள்களிடம் பெற்றார். ஓ! மன்னா, ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், விச்வதேவர்கள், மருத்துகள், பல தலைகளைக் கொண்ட பாம்புகள், சாத்யர்கள், பன்னகர்கள்,{19} கந்தர்வர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள், கழுகுகள், சிறகுகளுடன் கூடிய கருடன், கின்னரனான ஸுவாஸன்,{20} பசுக்கள், நான்கு கால் உயிரினங்கள், மனிதர்கள், அசைவன, அசையாதன உள்ளிட்ட மொத்த பூமி, மலைகள்,{21} யானைகள், சிங்கங்கள், புலிகள், குதிரைகள், தந்தம் படைத்த விலங்குகள், பன்றிகள், ஓநாய்கள், மான்கள்,{22} நான்கு வெண்தந்தங்களைக் கொண்ட யானைகள், விரும்பிய வடிவை ஏற்கவல்ல உயிரினங்கள் ஆகியவையும் படைக்கப்பட்டன.{23}

நித்திய அறத்தின் நிலமான {சனாதன தர்ம க்ஷேத்திரமான} பாரதவர்ஷத்தில், முந்தைய கல்பத்தில் இருந்ததைப் போலவே முனிவர்கள், அதே வடிவம், அழகு, குணம், சக்தி ஆகியவற்றுடன் பிறந்தனர்.{24} வேதங்களில் தேர்ந்தவர்களும், ஆத்ம அறிவை அடைந்தவர்களுமான பக்திமான்கள், தன் மனத் திறன்களின் மூலம் புற உலகம், அக உலகம் ஆகிய இரண்டையும் படைத்தனர். சொர்க்க லோகத்தில் தேவர்கள் அனைவரும் குடியேறினர்.{25}(17-25)

இல்லறவாசிகளை {கிருஹஸ்தர்களைத்} தவிர, தவங்கள் நோற்பதன் மூலம் ஆன்ம சக்தியை அடைபவர்களும், பிரம்மசரிய வாழ்வைப் பின்பற்றுவதன் மூலம் அதை அடைபவர்கள், ஆசான்களின் மூலம் அதை அடைபவர்களும், சித்தியின் மூலம் யோகத்தை அடைபவர்களும் துன்பம் மிகுந்த செயல்களைச் செய்வது கட்டாயமல்ல.{27,28} மனங்களைக் கட்டுப்படுத்தி, பொறுமையுடனும், மன்னிக்கும் தன்மையுடனும், உறுதியுடனும் உள்ளவர்கள், தங்கள் மனைவியருடன் அறச்சடங்குகளைப் பயின்று தேவலோகத்தில் திரிவார்கள்” என்றார் {வைசம்பாயனர்}.{28}(26-28)

————————————-—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ ஆதி பர்வம்-ஸ்ரீ சைத்ரரதப்  பர்வம் – 

October 9, 2025

அமானுஷ்ய பிறப்புகள்! – ஆதிபர்வம் பகுதி 167(சைத்ரரதப் பர்வம் – 01)பிராமணன் வீட்டிற்கு வந்த புதிய விருந்தினர்; திருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதியின் அமானுஷ்ய பிறப்புகளைக் குறித்துச் சொன்னது; திரௌபதிக்கு நடக்க இருக்கும் சுயம்வரத்தைக் குறித்தும் சொன்னது..

{வைசம்பாயனர் தொடர்ந்தார்}, “குடிமக்கள் அனைவரும் தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்ற பிறகு, பாண்டவர்கள் அந்த ஏகச்சக்கர நகரத்தில் முன்பு போலவே தொடர்ந்து வசித்தனர்”.

ஜனமேஜயன், “ஓ பிராமணரே! ராட்சசன் பகனைக் கொன்ற பிறகு, மனிதர்களில் புலியான அந்தப் பாண்டவர்கள் என்ன செய்தார்கள்?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர், “ஓ மன்னா, ராட்சசன் பகனைக் கொன்ற பிறகும், பாண்டவர்கள் அந்த பிராமணரின் வீட்டிலேயே தொடர்ந்து வசித்து, வேதம் படிப்பவர்களாகத் தங்களை ஆக்கிக் கொண்டனர்.(2) சில நாட்களுக்குள், கடும் நோன்புகள் நோற்ற ஒரு பிராமணர் அந்த வீட்டிற்கு வந்து தங்கினார்.(3) அந்த பிராமணர்களில் காளையானவன் விருந்தினர்களை நன்கு உபசரித்து, புதிதாக வந்த பிராமணரையும் தகுதி வாய்ந்த வழிபாடுகள் நடத்தி வரவேற்றுத் தனது இல்லத்தில் தங்கிக் கொள்ள இடம் கொடுத்தான்.(4) அப்போது, மனிதர்களில் காளைகளான பாண்டவர்கள், தங்கள் தாயுடன் அமர்ந்து, புதிய விருந்தினரின் சுவாரசியமான அனுபவங்களைக் கேட்டறிந்தனர்.(5)

அந்த பிராமணர் அவர்களிடம் பல்வேறு நாடுகள், புண்ணியம் நிறைந்த இடங்கள், ஆறுகள், மன்னர்களின் பல அற்புதமான மாநிலங்கள் மற்றும் நகரங்களைப் பற்றியும் விவரித்தார்.(6) இந்த விவரிப்பு முடிந்ததும், ஓ ஜனமேஜயா! அந்த பிராமணர், யக்ஞசேனன் {துருபதன்} மகளான பாஞ்சால இளவரசியின் அற்புதமான சுயம்வரம் குறித்தும்,(7) திருஷ்டத்யும்னன் மற்றும் சிகண்டியின் பிறப்புக் குறித்தும், மற்றும் எந்தவிதப் பெண் தொடர்பும் இல்லாமல் துருபதனின் வேள்வியில் பிறந்த கிருஷ்ணையின் (திரௌபதியின்) பிறப்பைக் குறித்தும் சொல்லத் தொடங்கினார்.(8) அந்த மனிதர்களில் காளைகளான பாண்டவர்கள், அந்தச் சிறப்புவாய்ந்த ஏகாதிபதியின் இயல்புக்குமிக்கக் கதைகளைக் கேட்டுக் கொண்டனர். பிராமணர் விவரிப்பை முடித்ததும், மேலும் விவரங்களை அறிய விரும்பி, அதைக் கேட்டுத் தங்கள் ஆவலைத் தணித்துக் கொண்டனர்.(9)

பாண்டவர்கள், “ஓ பிராமணரே! துருபதனின் மகன் திருஷ்டத்யும்னனின் பிறப்பு வேள்வி நெருப்பிலா நிகழ்ந்தது? வேள்வி மேடையில் கிருஷ்ணையின் இயல்புக்கு மிக்கப் பிறப்பு எப்படி நேர்ந்தது? துருபதனின் மகன் எப்படி எல்லா ஆயுதப் பயிற்சிகளையும் பெரும் வில்லாளியான துரோணரிடம் கற்றான்? ஓ பிராமணரே! துரோணர் மற்றும் துருபதனின் நட்பு, எப்படி? யாருக்காக? என்ன காரணத்திற்காக உடைந்தது?” என்று கேட்டனர்.(10,11)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படிக் கேட்கப்பட்ட அந்த மனிதர்களில் காளையான பிராமணர், திரௌபதியின் பிறப்புக் குறித்து அனைத்து விவரங்களையும் விவரித்தார்”.(12)

அந்தணர் சொன்ன துரோணர் துருபதன் கதை! – ஆதிபர்வம் பகுதி 168-(சைத்ரரதப் பர்வம் – 02)துரோணர் மற்றும் துருபதன் வரலாற்றை சுருக்கமாகச் சொன்ன பிராமணர்; பரசுராமரிடம் இருந்து ஆயுதங்களை அடைந்த துரோணர்; துருபதனை வீழ்த்தி அவனது நாட்டை இரண்டாகப் பிரித்த துரோணர்.

பிராமணர், “கங்கை நதியானது, சமவெளியை அடையும் பகுதியின் அருகில், கடுந்தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்த ஒரு பெரும் முனிவர் இருந்தார். கடும் நோன்புகள் நோற்றுப் பெரும் ஞானம் கொண்ட அவர் பரத்வாஜர் என்ற பெயர் பெற்றிருந்தார்.(1) ஒரு நாள் தனது சுத்திகரிப்பு காரியங்களுக்காகக் கங்கைக்கு வந்த அவர், அப்சரஸ் கிரிடச்சி தனது சுத்திகரிப்பை முடித்துக் கொண்டு கரையில் நின்று கொண்டிருந்ததைக் கண்டார்.(2) அப்போது, மெல்லிய காற்று எழுந்தது. அங்கே நின்று கொண்டிருந்த அப்சரசின் ஆடையை விலக்கியது. ஆடை விலகிய அவளைக் கண்ட முனிவர் காமங்கொண்டார்.(3) இளமையிலிருந்தே தன்னை அடக்கிக் கடுமையான நோன்புகள் நோற்றிருந்தும், அவர் காமனின் ஆளுமையை உணர்ந்தார். அதன்காரணமாக அவரது உயிர்நீர் வெளியே வந்தது. அப்படி அது வெளியே வந்தபோது, அவர் அஃதை ஒரு குடத்தில் (துரோணம்) பிடித்தார்.(4) அப்படிப் பானையில் பாதுகாக்கப்பட்ட அந்த நீரால் அவருக்குத் துரோணர் என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் பிறந்தார். துரோணர் அனைத்து வேதங்களையும், அதன் பல கிளைகளையும் கற்றுத் தேர்ந்தார்.(5)

பரத்வாஜருக்குப் பிருஷதன் என்ற பாஞ்சால மன்னன் நண்பனாக இருந்தான். துரோணர் பிறந்த நேரத்தில், பிருஷதன் துருபதன் என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றான்.(6) பிருஷதனின் மகனான அந்த க்ஷத்திரியக்காளை {துருபதன்}, தினமும் பரத்வாஜரின் ஆசிரமத்திற்குச் சென்று, துரோணருடன் விளையாடவும், கல்வி கற்கவும் செய்தான்.(7) பிருஷதன் இறந்த பிறகு, துருபதன் அரியணை ஏறினான். அவ்வேளையில் (பெரும் பிராமண வீரரான) ராமன் {பரசுராமன்} (தனது ஓய்வை அறிவித்துக் கானகம் புறப்படும் மாலை வேளையில்) தனது செல்வங்களையெல்லாம் கொடுத்துவிடத் தீர்மானித்திருக்கிறார் என்பதைத் துரோணர் கேள்விப்பட்டார்.(8) இதைக் கேட்ட பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கானகத்திற்குள் ஓய்வுக்காகப் புகப் போகும் ராமனிடம் {பரசுராமனிடம்} சென்று, “ஓ பிராமணர்களில் சிறந்தவரே, என்னைத் துரோணன் என்று அறிந்து கொள்ளும். நான் உம்மிடம் செல்வத்தை அடைய வந்திருக்கிறேன்” என்றார்.(9) அதற்கு ராமன், “நான் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். இப்போது என்னிடம் இருப்பதெல்லாம், எனது இந்த உடலும், எனது ஆயுதங்களும் மட்டும்தான். ஓ அந்தணா, எனது உடலோ, எனது ஆயுதங்களோ, இந்த இரண்டில் ஒன்றை நீ என்னிடம் கேட்கலாம்” என்றார்.(10)

அதற்குத் துரோணர், “ஐயா, உமது ஆயுதங்களை (அதன் மர்மங்களுடன்), அதைத் தொடுக்கவும், திரும்பப் பெறவும் உரிய வழிகளுடன் எனக்குத் தருவீராக” என்று கேட்டார்.(11)

பிராமணர் தொடர்ந்தார், “பிருகு குலத்தில் வந்த ராமன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லித் தனது ஆயுதங்களையெல்லாம் துரோணருக்குக் கொடுத்தார். இதனால், துரோணர் வெற்றிமகுடம் சூடியவராகத் தன்னை நினைத்துக் கொண்டார்.(12) பெரும் சக்தி வாய்ந்த ஆயுதங்களையெல்லாம் ராமனிடம் இருந்து பெற்ற துரோணர், பிரம்மாயுதத்தை அழைத்து மிகவும் மகிழ்ந்து, அதைப் பெற்றதால், அனைத்து மனிதர்களிலும் மேன்மையை அடைந்தார்.(13) அந்தப் பெரும் சக்திவாய்ந்த பரத்வாஜரின் மகன், மன்னன் துருபதனிடம் சென்றார். மனிதர்களில் புலியான அந்த ஏகாதிபதியை அணுகிய அவர், “என்னை உனது நண்பனாக அறிந்து கொள்” என்றார்.(14)

இதைக் கேட்ட துருபதன், “தாழ்ந்த பிறப்பு பிறந்தவன், சுத்தமான உயர்ந்த பிறப்பில் வந்தவனிடம் நண்பனாக இருக்க முடியாது, ரதவீரனல்லாதவன், ரதவீரனின் நண்பனாக முடியாது. அப்படியே மன்னனல்லாதவன், ஒரு மன்னனுக்கு நண்பனாக முடியாது. எனவே, (நமது) முந்தைய நட்பை ஏன் (மீட்க) விரும்புகிறீர்?” என்று சொன்னான்.(15)

பிராமணர் தொடர்ந்தார், “பெரும் புத்திசாலித்தனத்தைக் கொடையாகக் கொண்ட துரோணர், இதனால் பெரும் துன்பத்துக்குள்ளாகி, பாஞ்சால மன்னனை அவமதிக்கச் சரியான சந்தர்ப்பத்தை மனத்தில் நிச்சயித்துக் கொண்டு, யானையின் பெயரால் அழைக்கப்படும் குருக்களின் (கௌரவர்களின்) தலைநகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குச்} சென்றார்.(16) அங்கே பீஷ்மர் தனது பேரப்பிள்ளைகளை, பரத்வாஜரின் மகனிடம் {துரோணரிடம்} கல்வி கற்க சீடர்களாக அனுப்பிவைத்தார்.(17) துரோணருக்கு அனைத்து விதமான செல்வங்களையும் பரிசளித்தார். மன்னன் துருபதனை அவமதிக்க விரும்பிய துரோணர், தனது சீடர்கள் அனைவரையும் கூட்டி, “பாவங்களற்றவர்களே, நீங்கள் ஆயுதக்கல்வி கற்ற பிறகு, நான் மனத்தில் நினைத்திருப்பதை எனக்குக் குருதட்சணையாகத் தர வேண்டும்” என்று கேட்டார். அர்ஜுனனும் மற்றவர்களும் தங்கள் குருவிடம், “அப்படியே ஆகட்டும்” என்றனர்.(18,19)

அப்போது, நினைத்த குறியை அடித்து, ஆயுதங்களில் திறமையடைந்த பாண்டவர்களிடம், தனது குருதட்சணையைக் கேட்கும் வகையில்,(20) “பிருஷதனின் மகன் துருபதன், சத்திரவதிக்கு {அஹிசத்திரம்} மன்னனாவான். அவனிடம் இருந்து அவனது நாட்டைப் பறித்து, என்னிடம் கொடுங்கள்” என்று கேட்டார்.(21)

பாண்டவர்கள் போரில் துருபதனை வீழ்த்தி, அவனை அவனது அமைச்சர்களுடன் கைதியாக்கித் துரோணரிடம் கொடுத்தனர்.(22) வீழ்ந்த அந்த ஏகாதிபதியிடம் {துருபதனிடம்}, துரோணர், “ஓ மன்னா, நான் உனது நட்பைக் கோருகிறேன்; மன்னனல்லாதவன் மன்னனின் நட்பை நாடத் தகுதியில்லாதவனாகையால்,(23) ஓ யக்ஞசேனா {துருபதா}, நான் உனது நாட்டை நமக்குள் இரண்டாகப் பிரித்துக் கொள்ளத் தீர்மானிக்கிறேன். நீ பாகீரதிக்கு (கங்கைக்கு) தெற்கே உள்ள நாட்டை ஆண்டுக் கொள்வாயாக. அதே வேளை வடக்கை நான் ஆண்டுக் கொள்கிறேன்” என்றார்”.(24)

பிராமணர் தொடர்ந்தார், “ஞானமுள்ள பரத்வாஜரின் மகனால் இப்படிச் சொல்லப்பட்ட பாஞ்சால மன்னன், பிராமணர்களில் சிறந்தவரான அந்த மனிதர்களில் முதன்மையானவரிடம் {துரோணரிடம்},(25) “ஓ பரத்வாஜரின் உயர் ஆன்ம மகனே, நீ அருளப்பட்டிருப்பாயாக. நான் நமக்குள் நிலைத்த தெய்வீகமான நட்பை விரும்புகிறேன்” என்றான்.(26)

இப்படி ஒருவருக்கொருவர் ஒரு நிரந்தர ஒப்பந்தத்தை தங்களுக்குள் நிறுவிக் கொண்டனர். பிறகு துரோணரும் பாஞ்சால மன்னனும், அவரவர் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே சென்றனர்.(27) ஆனால் இந்த அவமதிப்பு மன்னனின் மனத்திலிருந்து ஒரு நொடிப்பொழுதும் அகலவில்லை. இதயத்தில் துன்பம் கொண்ட அந்த மன்னன் தனது நாட்களை அப்படியே போக்கினான்” {என்றார் ஏகச்சக்கர நகரத்தில் பாண்டவர்கள் வசித்திருந்த பிராமணனின் வீட்டிற்கு விருந்தினராக வந்த அந்தப் பிராமணர்}.(28)

திருஷ்டத்யும்னன் மற்றும் திரௌபதி பிறப்பு! – ஆதிபர்வம் பகுதி 169-(சைத்ரரதப் பர்வம் – 03)துரோணரைக் கொல்லும் மகனை அடைய விரும்பிய துருபதன்; யாஜர் உபயாஜர் ஆகியோரைச் சந்தித்த துருபதன்; வேள்வித்தீயில் இருந்து பிறந்த திருஷ்டத்யும்னனும், திரௌபதியும்; திருஷ்டத்யும்னனுக்கும் குருவான துரோணர்..

பிராமணர் தொடர்ந்தார், “அதன்பிறகு மன்னன் துருபதன், இதயத்தில் துயர் கொண்டு, பிராமணர்களின் ஆசிரமங்களுக்குச் சென்று, வேள்விச் சடங்குகளை நடத்துவதில் நிபுணத்துவம் வாய்ந்த பிராமணர்களைத் தேடினான்.(1) “சாதனைகளைச் செய்யக்கூடிய வாரிசு ஒருவனும் எனக்கில்லையே” என்று நினைத்து எப்போதும் துயரத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுப் பிள்ளைகள் பெறுவதில் ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தான்.(2) அந்த ஏகாதிபதி பெரும் ஏக்கத்துடன் எப்போதும், “ம்…ம்… ச்சீ… ச்சீ…என்ன பிள்ளைகளைப் பெற்று வைத்திருக்கிறேன். என்ன உறவினர்களைக் கொண்டிருக்கிறேன்” என்று நினைத்துக் கொள்வான். எப்போதும் அந்த ஏகாதிபதி துரோணரைப் பழிவாங்குவதை நினைத்தே நிறுத்தாமல் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான்.(3) ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்த மன்னர்களில் சிறந்தவன், கடினமாக முயற்சித்தும், க்ஷத்திரிய பலத்தாலோ, ஆற்றலாலோ, ஒழுக்கத்தாலோ, பயிற்சியாலோ, சாதனைகளாலோ, துரோணரை விஞ்ச ஒரு வழியையும் அடையவில்லை. யமுனை மற்றும் கங்கைக் கரைகளில் திரிந்த அந்த ஏகாதிபதி {துருபதன்}, {கங்கையின் கரையில்} ஒரு பிராமணரின் ஆசிரமத்தை வந்தடைந்தான். அந்த ஆசிரமத்தில் ஸ்நாதகர்[1] அல்லாத எந்த பிராமணரும் இல்லை, )பிரம்மச்சரிய விரதத்தை ஒழுங்காக முடித்தவர்.)கடும் நோன்புகள் நோற்காத எவரும் இல்லை, அறத்தகுதிகளில் உயர்ந்த இடத்தைப் பெறாமல் யாரும் இல்லை.(4-6)

மன்னன் அங்கே யாஜர் மற்றும் உபயாஜர்[2] (இந்த யாஜரும், உபயாஜரும் கன்னிக்குப் பிறந்தவர்கள் என்றும், சூரிய பக்தர்கள் என்றும் பழைய உரை கூறுவதாக கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் காணப்படுகிறது.)என்ற கடும் நோன்புகள் நோற்ற பிராமண முனிவர்கள் இருவரைக் கண்டான். அவர்கள் தங்கள் உயிரை முழுக் கட்டுப்பாட்டுக்குள் நிறுத்திய உயர்ந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.(7) கசியப குலத்தில் உதித்துப் பழம்பெரும் கல்விகளைக் கற்றவர்களாக அவர்கள் இருந்தார்கள். அந்தப் பிராமணர்களில் சிறந்தவர்கள் அந்த மன்னனுக்கு {துருபதனுக்கு} உதவும் தகுதியுடன் இருந்தார்கள்.(8) அந்த மன்னன் {துருபதன்} பெரும் சிரத்தையுடனும், காரியத்தில் கண்ணாகவும், அந்த அருமையான பிரமாணர்களிடம் பேசத் துவங்கினான். அந்த இருவரில் இளையவர் {உபயாஜர்} சாதனைகளில் முதன்மையுடனும் மேன்மையுடனும் இருப்பதை உறுதி செய்து கொண்ட அந்த மன்னன் {துருபதன்}, கடும் நோன்புகள் நோற்ற உபயாஜரைத் தனிமையில் சந்தித்து, அனைத்து வகையிலும் விரும்பக்கூடிய பொருட்களைக் கொடுப்பதாகக் கூறினான்.(9,10)

ஒரு நாள் மன்னன் {துருபதன்}, உபயாஜரின் பாதங்களில் பணிந்து அவரிடம் {உபயாஜரிடம்} மனிதர் விரும்பும் அனைத்துப் பொருளையும் கொடுப்பதாக வாக்குக் கொடுத்து, இனிமையான வார்த்தைகளில் அந்த பிராமணரை வழிபட்டு, “ஓ உபயாஜரே, ஓ பிராமணரே! நீர் ஒரு (அறம் சார்ந்த) வேள்விச் சடங்கு நடத்தி, துரோணரைக் கொல்லும் பிள்ளை எனக்குக் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.(11) அதற்கு நான் பத்தாயிரம் {10000} பசுகளையும்,(12) உமக்கு எவையெல்லாம் ஏற்புடையனவோ அவையெல்லாவற்றையும் தருகிறேன். ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, உண்மையில் நான் உமக்குப் பரிசளிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றான்.(13)

இவ்வாறு அம்மன்னனால் கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த முனிவர் {உபயாஜர்}, “என்னால் (இது போன்ற சடங்குகளைச் செய்ய) முடியாது” என்றார். ஆனால், துருபதன் அந்த மறுமொழியை முடிவாக எடுத்துக் கொள்ளாமல், மறுபடியும் அந்த பிராமணரைச் {உபயாஜரைச்} சேவித்தான்.(14) ஒரு வருடம் முடிந்ததும், பிராமணர்களின் முதன்மையான அந்த உபயாஜர், அந்த ஏகாதிபதி துருபதனை அழைத்து இனிய ஒலியுடன்,(15) “எனது அண்ணன் (யாஜர்), ஒரு நாள் அடர்ந்த கானகத்தின் ஆழத்தில் உலவிக் கொண்டிருந்த போது, கீழே விழுந்து கிடந்த ஒரு கனியை எடுத்தார். அதன் சுத்தத்தைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை.(16) (அவ்வேளையில்) நான் அவரைத் {யாஜரைத்} தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவரது இந்தத் தகுதியற்ற செயலைக் கண்டேன். நிச்சயமாக அவர் சுத்தமற்ற பொருட்களை ஏற்றுக் கொள்வதில் மனவுறுத்தல் அடைவதில்லை.(17) அப்படி அந்தக் (குறிப்பிட்ட) கனியில் பாவத்தைக் காணாத அவரது இயல்பு, மற்ற காரியங்களில் இவர் {யாஜர்} எப்படிப் பாவங்களைப் பகுத்தறிவார் என்பதில் என்னை யங்கொள்ள வைத்தது.(18) அவர் {யாஜர்} தமது ஆசானின் இல்லத்தில் வாழ்ந்து, கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது, அவர் {யாஜர்} எப்போதும் மனிதர்களின் விருந்தில் (சுத்தமற்ற உணவில்) மீந்தவற்றை {பிச்சை} உண்பார்.(19) அவர் எப்போதும் உணவைப் பற்றியே {உயர்வாகப்} பேசிக் கொண்டிருப்பார். அவர் எதையும் விரும்பாமலில்லை. இதையெல்லாம் சொல்வதன் மூலம், நான் எனது தமையன் உலகப் பொருட்களை அடைவதில் நாட்டம் கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்ல வருகிறேன் என்பதை அறிந்து கொள்வாயாக.(20) எனவே, ஓ மன்னா, அவரிடம் செல்வாயாக. அவர் உனக்கு ஆன்மிகக் காரியங்களைச் செய்து கொடுப்பார்” என்றார்.

உபயாஜரின் இந்த வார்தைகளைக் கேட்ட மன்னன் துருபதன், யாஜர் மீது உயர்ந்த கருத்து இல்லையெனினும், அவரது இல்லத்திற்குச் சென்றான். அங்கே (இன்னும்) மரியாதைக்குரியவராக இருந்த யாஜரை வழிபட்ட துருபதன், “ஓ ஆசானே, எனக்கு ஆன்மக் காரியங்களைச் செய்து கொடுப்பீராக. உமக்கு நான் எண்பதாயிரம் பசுக்களை[3] அளிக்கிறேன்! துரோணரிடம் நான் கொண்டுள்ள பகை எனது இதயத்தை எரிக்கிறது; நீர் என் இதயத்தில் எரியும் நெருப்பை அணைக்க வேண்டும்.(21,22) வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையானவராக இருக்கும் துரோணர், பிரம்ம ஆயுதத்திலும் நிபுணத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார். (வலிமை இழந்த) நட்பினால் உண்டான ஒரு போட்டியில் துரோணர் என்னை வென்றார்.(23) பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்ட அந்த உயர் ஆன்மப் பரத்வாஜர் மகன் {துருபதன்}, குரு குலத்தவரின் குருவாவார். இவ்வுலகத்தில் அவரை {துரோணரை} விஞ்ச ஒரு க்ஷத்திரியன் கிடையாது.(24) ஆறு முழு முழம் நீளமுள்ள அவரது {துரோணரது} வில் வல்லமை மிக்கதாக இருக்கிறது. அவரது {துரோணரது} கணைகள் அனைத்து உயிரையும் கொல்லத்தக்கவையாக இருக்கின்றன.(25)

இந்தப் பெரும் வில்லாளி, உயரான்மப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, பிராமணராகப் பழக்கப்பட்டாலும், உலகம் முழுவதும் க்ஷத்திரிய சக்தியை அழிக்கிறார்.(26) உண்மையில், அவரே {துரோணரே} க்ஷத்திரிய குலத்தை அழிக்கப்போகும் இரண்டாவது ஜமதக்னியைப் போன்றவர். அவரது பயங்கர ஆயுதங்களின் முன்னிலையில் எந்த மனிதனும் அவரை விஞ்சமுடியாது.(27) சுடர் விட்டெரியும் தெளிந்த நெய்யை விடுவது போல, அவர் பிரம்ம பலத்துடன் க்ஷத்திரிய பலத்தையும் இணைத்துப் போர்க்களத்தில் நிற்கும் அனைத்து எதிரிகளையும் எரிக்கிறார்.(28) ஆனால் (உமது) பிரம்ம சக்தி, க்ஷத்திரிய பலத்துடன் கூடிய (துரோணரின்) பிரம்ம சக்தியைவிடப் பெரியது. எனவே, நான் வெறும் க்ஷத்திரிய சக்தியை மட்டும் வைத்திருக்கும் குறைந்தவனாக இருக்கிறேன். பிரம்மஞானத்தில் துரோணரைவிட மேன்மையான உம்மை நான் அடைந்து விட்டதால் எனக்குப் பிரம்ம சக்தியும் சேர்ந்து கிடைக்கும்.(29) ஓ யாஜரே, போரில் வெல்லப்படமுடியாதவனும், துரோணரைக் கொல்லக்கூடியவனுமான ஒரு மகனை நீர் வேள்வியின் மூலம் எனக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். நான் உமக்குப் பத்தாயிரம் {10000} பசுக்களைக்[4] கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்” என்று சொன்னான் {துருபதன்}.(3-4-இந்த இரண்டு இடங்களும் முரண்படுகின்றன. கும்பகோணம் பதிப்பு, மன்மதநாததத்தரின் பதிப்பு மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இவ்விடத்தில் {43]ம் அடிக்குறிப்பு} “பத்து கோடி பசுக்களையும் தர சித்தமாயிருக்கிறேன்” என்றிருக்கிறது. இங்கே கங்குலியின் பதிப்பில் பிழையேற்பட்டிருக்க வேண்டும். இது பத்து கோடியாகவே இருக்க வேண்டும்.)

துருபதனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யாஜர், “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார். யாஜர் ஒரு குறிப்பிட்ட வேள்வியைச் செய்வதற்காகப் பல சடங்குகளை மனத்தில் நினைத்துப் பார்த்தார்.(30,31) காரியத்தின் ஆபத்தையும் உணர்ந்த யாஜர், துணைக்காக எதையும் எதிர்பார்க்காத உபயாஜரையும் கேட்டார். பிறகு துரோணரின் அழிவுக்காக ஒரு வேள்வியை நடத்த யாஜர் உறுதியளித்தார்.(32) அப்போது, அந்தப் பெரும் துறவி உபயாஜர், எதன் மூலம் துருபதன் வாரிசை அடைய முடியுமோ, அந்த வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் துருபதனிடம் கேட்டார்.(33) பிறகு அவர் {உபயாஜர்}, “ஓ மன்னா {துருபதா}, நீ விருப்பப்படுவது போல, பெரும் வீரத்துடனும், பெரும் சக்தியுடனும், பெரும் பலத்துடனும் உமக்கு ஒரு பிள்ளை பிறப்பான்” என்றார்.(34)

பிராமணர் தொடர்ந்தார், “மன்னன் துருபதன், துரோணரைக் கொல்லும் மகனை அடையும் ஆசையால் உந்தப்பட்டுத் தனது வெற்றிக்கான அனைத்துப் பொருட்களையும் ஏற்பாடு செய்யத் தொடங்கினான்.(35) (அனைத்தும் முடிந்ததும்) யாஜர், வேள்வி நெருப்பில் தெளிந்த நெய்யை விட்டதும், துருபதனின் ராணியிடம்,(36) “ஓ ராணி, ஓ பிருஷதனின் மருமகளே! இங்கே வா, ஒரு மகனும் ஒரு மகளும் உனக்காக வந்திருக்கின்றனர்” என்று கட்டளையிட்டார்.(36)

இதைக்கேட்ட ராணி, “ஓ பிராமணரே! எனது வாய், குங்குமப்பூவாலும், மற்ற வாசனைப் பொருட்களாலும் நிறைந்திருக்கிறது. எனது உடலும் நறுமணத்தைத் தாங்கி இருக்கிறது. (நீர் தரும் புனித நெய் எனக்கு வாரிசைத் தரும். ஆனால்) நான் ஏற்றுக் கொள்வதற்குத் தகுந்தவளாக இல்லை. எனக்காகச் சிறிது நேரம் காத்திரும். ஓ யாஜரே! அந்த மகிழ்ச்சியான நுகர்வுக்காகக் காத்திருப்பீராக” என்றாள்.(37)

இருப்பினும் யாஜர், “ஓ மங்கையே, நீ வந்தாலும், அல்லது காத்திருந்தாலும், ஏற்கனவே என்னால் படையல் தயாராகிவிட்ட பிறகு, உபயாஜரால் மந்திரங்கள் சொல்லி புனிதமாக்கப்பட்ட பிறகு ஏன் இந்தக் காரியம் நிறைவேறாது? ” என்றார்.(38)

பிராமணர் தொடர்ந்தார், “இதைச் சொன்ன யாஜர், வேள்வி நெருப்பில் புனிதமான நெய்யை ஊற்றினார். அப்போது அந்த நெருப்பின் தழல்களிலிருந்து நெருப்பின் பிரகாசத்தோடும், பார்க்கப் பயங்கரமாகவும் ஒரு தெய்வீகப் பிள்ளை எழுந்தான். தலையில் கிரீடத்துடனும், மார்புக் கவசத்துடனும், கையில் வாளுடனும், வில்லும் அம்பும் தாங்கி, அடிக்கடி பெருமுழக்கம் செய்தபடியே அவன் எழுந்தான்.(39,40) பிறந்த உடனேயே அந்தப் பிள்ளையானவன், ஓர் அற்புதமான தேரில் ஏறிச் சிறிது நேரம் பயணம் செய்து வந்தான். இதைக் கண்ட பாஞ்சாலர்கள், “அற்புதம்! அற்புதம்!” என்று கூச்சலிட்டனர்.(41)

மகிழ்ச்சியால் குதித்துக் கொண்டிருக்கும் பாஞ்சாலர்களின் பாரத்தைப் பூமியானது, பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிப்பது போலத் தெரிந்தது. அப்போது வானத்திலிருந்து ஒரு குரல், “இந்த இளவரசன் துரோணரின் அழிவுக்காகப் பிறந்திருக்கிறான். இவன் பாஞ்சாலர்களின் அச்சங்களைப் போக்கி, அவர்களின் புகழைப் பரப்புவான். இவன் மன்னனின் துயரத்தையும் போக்குவான்” என்றது.(42,43)

அதன் பிறகு, வேள்வி மேடையின் மத்தியில், பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்ட ஒரு மகள், பெரும் நற்பேறுடனும், மிகுந்த அழகுடனும் தோன்றினாள். அவளது கண்கள் கறுமையாகவும் தாமரை இதழ்களைப் போன்றும் இருந்தன.(44)

அவளது நிறம் கரியதாக இருந்தது, கூந்தல் நீல நிறத்துடன் சுருள் சுருளாக இருந்தது. நகங்கள் அழகாக மெருகிட்ட தாமிரம் போல மேடாக இருந்தது. அவளது புருவங்கள் அழகாக இருந்தன. மார்பு பருத்திருந்தது. அவளது தொடைகள் {வாழை போல} வழுவழுப்பாக இருந்தன.(45) உண்மையில், அவள் தேவர்களின் மகளைப் போல இருந்தாள். நீலத் தாமரையை {கருநெய்தலைப்} போல இரண்டு மைல்களின் தொலைவுக்கு அவளது உடல் மணம் வீசியது.(46) அவளது அழகு, பூமியில் ஈடு சொல்லாத அளவுக்கு இருந்தது. அவள் தேவலோக மங்கை போல இருப்பதால், தேவனாலோ, தானவனாலோ, யக்ஷனாலோ (திருமணத்திற்காக) விரும்பப்படுவாள்.(47)

அந்த அழகான இடைகொண்ட அந்தப் பெண் பிறந்த போது, ஓர் அரூப ஒலி, “கரிய நிறம் கொண்ட இந்த மங்கை, பெண்களில் முதன்மையானவளாக இருப்பாள். க்ஷத்திரியர்களின் அழிவுக்கு இவள் காரணமாக இருப்பாள்.(48) இந்தக் கொடியிடையாள், ஒரே நேரத்தில் தேவர்களின் காரியத்தையும் சாதிப்பாள், குருக்களின் {கௌரவர்களின்} அச்சங்களையும் அதிகரிப்பாள்” என்றது.(49)

இந்த வார்த்தைகளைக் கேட்ட பாஞ்சாலர்கள் சிங்க முழக்கம் செய்தனர். பூமியானது, மகிழ்ச்சியால் பித்துப்பிடித்திருந்த அவர்களின் பாரத்தைத் தாங்க முடியாததாக இருந்தது.(50)

அந்தப் பிள்ளையையும், பெண்ணையும் கண்ட பிருஷதனின் மருமகள் {துருபதனின் மனைவி}, அவர்களைப் பெற விரும்பி, யாஜரை அணுகி, “என்னைத் தவிர வேறு யாரையும் இவர்கள் தங்கள் தாயாக அறியாதிருக்கட்டும்” என்றாள்.(51) யாஜர், மன்னனுக்கு நன்மை செய்ய விரும்பி, “அப்படியே ஆகட்டும்” என்றார். பின்னர் அங்கிருந்த பிராமணர்கள் தங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியடைந்து, புதிதாய்ப் பிறந்த இரட்டையர்களுக்குப் பெயர்ச் சூட்டினர்.(52) “மன்னன் துருபதனின் இந்த மகன் அதிகத் தைரியத்துடனும், இயற்கை கவசத்துடனும், ஆயுதங்களுடன் தியம்னனைப் போலப் பிறந்ததால், திருஷ்டத்யும்னன்[5] என்று அழைக்கப்படட்டும் என்றனர்.(53) ( கும்பகோணம் பதிப்பில், “ஸந்தோஷம் நிறைந்த மனத்தோடு கர்வமுள்ளவனாகவும், அதிக கோபமுள்ளவனாகவும் இருப்பதனால் த்ருஷ்டன் என்றும், பராக்கிரமமென்னும் தனமிருப்பதனாலும், கிரீடகுண்டலங்கள் முதலிய தனங்களுடன் பிறந்திருப்பதனாலும் த்யும்னன் என்றும், இந்தத் துருப குமாரன் த்ருஷ்டத்யும்னனென்று பெயருள்ளவனாக இருக்கட்டும்” என்று சொன்னதாக இருக்கிறது.)பிறகு அவர்கள், “இந்தப் பெண் கரிய நிறத்தில் இருப்பதால், கிருஷ்ணை {கருப்பி} என்று அழைக்கப்படட்டும்” என்றனர்.பிராமணர் தொடர்ந்தார், “இப்படியே துருபதனுக்கு வேள்வியில் அந்த இரட்டையர்கள் பிறந்தனர்.(54) பெரும் துரோணர், துருபதனிடம் இருந்து பாதி நாட்டைத் தான் அடைந்ததற்கு ஈடாக, அந்தப் பாஞ்சால இளவளரசனைத் தனது வசிப்பிடத்திற்கு அழைத்து, அவனுக்கு அனைத்து ஆயுதங்களிலும் பயிற்சி கொடுத்தார்.  அந்த உயர் ஆன்ம பரத்வாஜரின் மகன் {துரோணர்}, விதி தவிர்க்க முடியாதது என்று எண்ணி, தனது புகழ் நிலைக்க, இந்தப் பெரும் காரியத்தைச் செய்தார்” {என்றார் அந்தப் பிராமணர்}.(55,56)

பயணப்பட குந்தி ஆயத்தம்! – ஆதிபர்வம் பகுதி 170-(சைத்ரரதப் பர்வம் – 04)ஏகச்சக்கர நகரத்தில் வசிக்கத்தொடங்கி அதிக நாட்கள் ஆனதை யுதிஷ்டிரனிடம் சொன்ன குந்தி; குந்தியின் ஆணைக்கிணங்க பாஞ்சாலம் செல்ல ஏற்றுக் கொண்ட யுதிஷ்டிரன்.

வைசம்பாயனர் சொன்னார், “பிராமணரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட குந்தியின் மகன்கள் {ஆசையெனும்} கணையால் தைக்கப்பட்டவர்கள் போல் இருந்தனர். நிச்சயமாக அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரர்கள் தங்கள் மன அமைதியை இழந்திருந்தனர்.(1) சலிப்படைந்தும், கவனக்குறைவுடனும் இருந்த தனது மகன்களைக் கண்ட உண்மையான குந்தி யுதிஷ்டிரனிடம்,(2) “இந்த பிராமணரின் இல்லத்தில் நாம் பல காலத்திற்கு வாழ்ந்துவிட்டோம். இந்த நகரத்தில், பல அழகான இடங்களைக் கண்டும், சிறப்பானவர்களிடம் பிச்சையெடுத்தும் நமது காலத்தை இனிமையாகக் கழித்துவிட்டோம்.(3) நாட்டின் இந்தப் பகுதியில் உள்ள காடுகளையும் அழகிய தோப்புகள் அனைத்தையும் நாம் மீண்டும் மீண்டும் கண்டுவிட்டோம்.(4)


ஓ எதிரிகளைத் தண்டிப்பவர்களே, நாம் இந்த இடத்திற்கு மிகவும் பழகிவிட்டோம். புதியன எதையும் நாம் இதில் காணவில்லை.(5) ஓ குரு குல வீரர்களே, நீங்கள் இப்போது விரும்பினால் பாஞ்சாலம் செல்லலாம்.  நாம் அந்த நாட்டைக் கண்டதில்லை. அங்கே வாழ்வது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்.(6) ஓ எதிரிகளை அழிப்பவர்களே, பாஞ்சாலனின் நாடானது, அதாவது பிராமணர்களுக்குத் தன்னை அர்ப்பாணித்துள்ள யக்ஞ்சேனனின் நாடு, நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என நினைக்கிறேன்.(7) ஒரே இடத்தில் வாழ்வது நல்லதல்ல என்பது எனது கருத்து. எனவே, ஓ மகனே, நாம் அங்கே செல்வது நமக்கு நன்மை பயக்குமானால், நாம் அங்குச் செல்லலாமே” என்றாள்.(8)

இந்த வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், “எங்களுக்கு நன்மை பயப்பதாக இருப்பினும், அல்லதாக இருப்பினும், உனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது எங்கள் கடமையாகும். இருப்பினும் எனக்கு இளையவர்கள் அதை விரும்புகின்றனரா என்பது தெரியவில்லை. அதை அறிந்து கொள்வாயாக” என்றான்”.(9)

எனக்குக் கணவனைக் கொடு! – ஆதிபர்வம் பகுதி 171-(சைத்ரரதப் பர்வம் – 05)பாஞ்சாலம் செல்லும் வழியில் பாண்டவர்களைச் சந்தித்த வியாசர்; திரௌபதியின் முன்ஜென்ம வரலாற்றைச் சொன்னது…

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பீமசேனன், அர்ஜுனன் மற்றும் இரட்டைர்களிடம் பாஞ்சால பயணத்தைப் பற்றி குந்தி பேசினாள். அவர்களனைவரும், “அப்படியே ஆகட்டும்” என்றனர்.(1) அப்போது, ஓ மன்னா {ஜனமேஜயா}, குந்தி தனது மகன்களுடன் அந்த (தனது வீட்டில் தங்க இடமளித்திருந்த) பிராமணரை வணங்கிவிட்டு, சிறப்புவாய்ந்தவனான துருபதனின் மகிழ்ச்சி நிறைந்த நகரத்தை {காம்பில்யத்தை} நோக்கிப் புறப்பட்டாள்”.(2)

வைசம்பாயனர் சொன்னார், “சிறப்பு மிகுந்த பாண்டவர்கள் மாற்றுருவம் கொண்டு பிராமணரின் இல்லத்தில் தங்கியிருந்தபோது, ஒரு சமயம், சத்தியவதி மைந்தரான வியாசர், அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தார்.(3) எதிரிகளைத் தண்டிப்பவர்களான பாண்டவர்கள், அவர் வருவதைக் கண்டு, எழுந்திருந்து, வரவேற்பதற்கு எட்டெடுத்து வைத்து, மரியாதையுடன் வணங்கி, அவரெதிரில் அமைதியாகக் கரங்கூப்பி நின்றனர்.(4) இப்படிப் பாண்டவர்களால் வழிபடப்பட்ட அந்த முனிவர் மிகுந்த மனநிறைவையடைந்தார். அவர்களை அமரச் சொல்லி, அவர்களிடம் மகிழ்ச்சியாகப் பேசி,(5) “எதிரிகளை அழிப்பவர்களே, நீங்கள் சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி அறம்சார்ந்த வாழ்வு வாழ்கிறீர்களா? நீங்கள் பிராமணர்களை வழிபடுகிறீர்களா? நீங்கள் தகுதியுடையோருக்கு மரியாதை செலுத்துவதில் பின்தங்கி இருக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்” என்று கேட்ட அந்த முனிவர்,(6) அறம் சார்ந்த பல வார்த்தைகளையும், விரும்பத்தக்க பல தலைப்புகளிலும் பேசி, அவர்களிடம்,(7) “ஒரு குறிப்பிட்ட ஆசிரமத்தில் வாழ்ந்த, ஒரு சிறப்பு வாய்ந்த முனிவருக்கு, ஓர் அழகான பெண் இருந்தாள். அவள் மெல்லிடையும், அழகான உதடுகளும், அழகான புருவங்களும், அழகான பெண்ணுக்கு உண்டான அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருந்தாள்.(8) அவள் தனது சொந்தச் (கடந்தபிறவிச்) செயல்களின் பலனாக நற்பேறற்றவளாக இருந்தாள். கற்புடையவளாக, அழகானவளாக இருந்தும், அந்த மங்கை ஒரு கணவனை அடைந்தாளில்லை.(9) துக்கமான இதயத்துடன், ஒரு கணவனை அடைய, அவள் துறவு நோன்பைப் பயில ஆரம்பித்தாள். தனது துறவின் மூலம் சங்கரனை (மஹாதேவனை) மனநிறைவு கொள்ளச் செய்தாள்.(10)

அவர் அவளுக்கு நன்மை செய்ய விரும்பி, அந்தச் சிறப்புவாய்ந்த மங்கையிடம், “நீ அருளப்பட்டிரு! விரும்பிய வரத்தைக் கேள்! நீ விரும்பியதைக் கொடுக்க வந்திருக்கும் சங்கரன் நான்!” என்றார்.(11)

தனக்கு நன்மையைப் பெற விரும்பிய அந்த மாது, அந்தத் தலைமைத் தெய்வத்திடம் திரும்பத் திரும்ப, “அனைத்துத் தகுதிகளையும் கொண்டவரை எனக்குக் கணவராகக் கொடுப்பாயாக” என்று கேட்டாள்.(12)

அப்போது, பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையான அந்த ஈசானன் (மஹாதேவன்), “ஓ அருளப்பட்டவளே, பாரத இளவரசர்களில் ஐவரை நீ கணவர்களாக அடைவாய்” என்றான்.(13)

இப்படிச் சொல்லப்பட்ட அந்த மங்கை, வரம் கொடுத்த அந்தக் கடவுளிடம், “ஓ தலைவா {கடவுளே}, உனது கருணையால் நான் ஒரு கணவரை மட்டுமே அடையவே விரும்புகிறேன்” என்றாள்.(14)

அதற்கு அந்தத் தெய்வம் அருமையான வார்த்தைகளால், “ஓ மாதே, ‘எனக்குக் கணவனைக் கொடு’ என்று முழுமையாக ஐந்து முறை நீ கேட்டாய்.(15) எனவே, வேறு பிறவியில் நீ ஐந்து கணவர்களை அடைவாய்” என்றான்.

பாரதக் குலத்தின் இளவரசர்களே! {பாண்டவர்களே} அந்தத் தெய்வீக அழகுடைய மங்கைதான் துருபதனின் பரம்பரையில் பிறந்திருக்கிறாள். பிருஷதனின் குலத்தில் வந்த அந்தக் களங்கமற்ற கிருஷ்ணை {திரௌபதி}, {பாண்டவர்களாகிய} உங்கள் அனைவருக்கும் மனைவியாக நியமிக்கப்பட்டிருக்கிறாள்.(16) எனவே, பலம் வாய்ந்தவர்களே, பாஞ்சாலர்களின் தலைநகர் சென்று அங்கே வாழ்வீராக. அவளை மனைவியாக அடைந்த பிறகு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை” என்றார்”.(17)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பாண்டவர்களிடம் இப்படிச் சொல்லிவிட்டு, அருள்நிறைந்த அந்தச் சிறப்பு வாய்ந்த பெரும்பாட்டன். அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டார். அந்தப் பெருந்துறவி அவர்களை விட்டகன்று, எங்கிருந்து வந்தாரோ அங்கேயே சென்றார்”.(18)

அங்காரபர்ணனும் {சித்திரரதனும்} அர்ஜுனனும் – ஆதிபர்வம் பகுதி 172-(சைத்ரரதப் பர்வம் – 06)கங்கைக் கரைக்கு வந்த பாண்டவர்கள்; மனைவியருடன் நீராடிக் கொண்டிருந்த கந்தர்வன்; கந்தர்வனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான மோதல்; கந்தர்வனின் மனைவியுடைய வேண்டுதலாலும், யுதிஷ்டிரனின் ஆணையினாலும் ஏவிய ஆயுதத்தைத் திரும்பப் பெற்ற அர்ஜுனன்; நல்ல புரோஹிதரை அடையும்படி பாண்டவர்களை அறிவுறுத்திய கந்தர்வன்…

வைசம்பாயனர் சொன்னார், “வியாசர் சென்ற பிறகு, அந்த மனிதர்களில் காளைகளான பாண்டவர்கள், வந்த பிராமணரை {வியாசரை} வழியனுப்பிவிட்டு, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் தங்கள் தாயைத் {குந்தியைத்} தங்களுக்கு முன்பு விட்டு (பாஞ்சாலம் நோக்கி) முன்னேறிச் சென்றனர்.(1) அந்த எதிரிகளை அழிப்பவர்கள், தங்கள் இலக்கை அடைய வடக்கு நோக்கி இரவும் பகலுமாகப் பயணித்தனர். புருவத்தில் பிறைக் குறித் தாங்கியிருக்கும் சிவனின் புனிதமான நகரத்தை அடையும்வரை பயணித்தனர்.(2) மனிதர்களில் புலிகளான பாண்டுவின் மைந்தர்கள், கங்கையின் கரையை வந்தடைந்தனர். பெரும் தேர் வீரனான தனஞ்சயன் {அர்ஜுனன்} கையில் பந்தத்துடன் முன் நடந்து அவர்களுக்குப் பாதையைக் காட்டி, அவர்களைப் (காட்டு விலங்குகளிடம் இருந்து) பாதுகாத்துச் சென்றான்.(3) அப்போது, அந்தக் கங்கையின் நீரில் தனிமையான அந்தச் சூழ்நிலையில், செருக்குடன் கூடிய ஒரு கந்தர்வன் தனது மனைவியருடன் விளையாடிக் கொண்டிருந்தான்.(4) அந்த ஆற்றை அணுகும் பாண்டவர்களின் பாத அடியோசைகள் அந்தக் கந்தர்வ மன்னனுக்குக் கேட்டது. பாத அடியோசையைக் கேட்ட அந்தப் பெரும்பலம் வாய்ந்த கந்தர்வன் மிகுந்த சினம் கொண்டு,(5) எதிரிகளைத் தண்டிப்பவர்களான பாண்டவர்களைக் கண்டான்.

அவர்கள் {பாண்டவர்கள்} தங்கள் தாயாருடன் {குந்தியுடன்} வருவதைக் கண்டு அவர்களை {பாண்டவர்களை} அணுகித் தனது பயங்கரமான வில்லை வட்டமாக வளைத்து,(6) ” மாலையும் இரவும் சந்திக்கும் சந்திப்பொழுது முழுவதும், முதல் நாற்பது வினாடிகளைத் தவிர்த்து, தங்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் எங்கும் செல்லக்கூடிய யக்ஷர்களும், கந்தர்வர்களும் மற்றும் ராட்சசர்களும் உலாவுவதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது. மீத நேரமனைத்தும் மனிதன் வேலை செய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது.(7,8) எனவே, அந்த நேரத்தில், பயனில் பேராசை கொண்ட மனிதர்கள் எங்கள் அருகில் வந்தால், நாங்கள் இருவரும் (யக்ஷ, கந்தர்வர்கள்) ராட்சசர்களும் அந்த முட்டாள்களைக் {மனிதர்களைக்} கொன்றுவிடுவோம்.(9) எனவே, இந்த நேரத்தில் மன்னர்களையே தலைமையாகக் கொண்டு குளங்களை அணுகினாலும் வேதங்களை அறிந்த மனிதர்கள் அவர்களை மெச்சுவதில்லை.(10) தொலைவில் நிற்பீராக. என் அருகே வராதீர்கள். நாங்கள் பாகீரதியின் நீரில் {கங்கையின்} குளித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறியவில்லையா?(11) சுயபலத்தில் நம்பிக்கையுள்ள நான் கந்தர்வனான அங்காரபர்ணன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நான் பெருமையும், செருக்கும் கொண்டவனும் குபேரனின் நண்பனும் ஆவேன்.(12) இஃது எனது புலனாசைகளைத் தணித்துக் கொள்ள நான் விளையாடும் எனது கானகமாகும். கங்கைக்கரையிலுள்ள இக்கானகம் அங்காரபர்ணம் என்ற எனது பெயர் கொண்டதாகும்.(13) இங்கே தேவர்களோ, கபாலிகர்களோ, கந்தர்வர்களோ, யக்ஷர்களோ கூட வரத் துணிவதில்லை. குபேரனின் கிரீடத்தில் உள்ள பிரகாசமான அணிகலனான என்னை அணுகுவதற்கு எப்படி நீங்கள் துணிந்தீர்கள்?” என்று கேட்டான் {அங்காரபர்ணன்}.(14)

கந்தர்வனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், “மரமண்டையே {மடையனே} பகலாகட்டும், இரவாகட்டும், சந்திப் பொழுதாகட்டும், சமுத்திரத்திலிருந்தும், இமயத்தின் பகுதிகளிலிருந்தும், இந்த நதியிலிருந்தும் மற்றவர்களை யாரால் தடுக்க முடியும்?(15) ஓ விண்ணதிகாரியே, வயிறு காலியாக இருந்தாலும், நிறைந்திருந்தாலும், அஃது இரவானாலும் பகலானாலும், ஆறுகளில் முதன்மையான இந்தக் கங்கைக்கு வருவதற்கென்று குறிப்பிட்ட நேரமெல்லாம் கிடையாது.(16) அதன் காரணமாகப் பலம் வாய்ந்த நாங்கள், உன்னைத் தொந்தரவு செய்வதை மதிக்க மாட்டோம். தீயவனே, போரில் பலவீனமானவர்களே உன்னை வழிபடுவார்கள்.(17) இமயத்தின் பொன் முகடுகளிலிருந்து வெளிவரும் இந்தக் கங்கை, ஏழு நீரோடைகளாகப்[1] பிரிந்து சமுத்திரத்தின் நீரில் கலக்கிறாள்.(18) (கங்கையின் ஏழு பிரிவுகள் 1. வஸ்வோகஸாரை, 2.நளினீ, 3.பாவனீ, 4.ஸீதை, 5.சக்ஷுஸ், 6.சிந்து, 7.அளகநந்தை ஆகியனவாகும்.)கங்கை, யமுனை, சரஸ்வதி, விதஸ்தை, சரயு, கோமதி மற்றும் கண்டகி ஆகிய இந்த ஏழு நீரோடைகளில் {ஆறுகளில்}(19) நீரெடுத்துக் குடிப்பவர்கள், தங்களது அனைத்துப் பாவங்களையும் துடைத்தெறிகிறார்கள்.ஓ கந்தர்வா, இந்தப் புனிதமான கங்கை, அளகநந்தை என்ற தேவலோகப் பகுதியிலிருந்து பாய்கிறது[2].(20) (கும்பகோணம் பதிப்பில் மேற்கண்ட 18 முதல் 20 வரையிலான சுலோகங்கள், “இமயமலையின் பொற்கொடுமுடியிலிருந்து புறப்பட்ட இந்தக் கங்கை ஏழு பிரிவுகளாக {மேற்கண்ட அடிக்குறிப்பு [1]ல் சொல்லப்பட்டுள்ளவாறு} சென்று சமுத்திரஜலத்தைச் சேர்ந்தது. கங்கை, யமுனை, ப்லக்ஷஜாதை, ஸரஸ்வதீ, ரதஸ்தை, ஸரயு, கோமதி கண்டகி இவற்றின் தீர்த்தத்தையும் அப்படியே (முன் சொன்ன) ஏழு நதிகளின் தீர்த்தத்தையும் பருகுபவர்களிடம் பாவங்கள் தங்குவதில்லை” என்றிருக்கிறது.)அது பித்ருகளின் உலகத்தில், பாவிகளால் கடக்க முடியாத வைதரணீ ஆகிறது என்று கிருஷ்ண துவைபாயனரே {வியாசரே} சொல்லியிருக்கிறார். இந்த நற்பேறளிக்கும் தேவலோக ஆறு {கங்கை}, ஒருவனை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் காத்து அவனைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் கூடியது.  அப்படியிருக்கும் போது எங்களைத் தடுக்க நீ ஏன் விரும்புகிறாய்? உனது இந்தச் செயல் நித்திய அறச்செயலுக்கு இசைவாயில்லை.(21,22) அனைத்து ஆபத்துகளிலிருந்தும் விடுதலை அடைய வந்திருக்கும் எங்களை யாரும் தடுக்க முடியாது. உனது வார்த்தைகளைப் புறக்கணித்துப் பாகீரதியின் {கங்கையின்} இந்தப் புனிதமான நீரைத் தொடாமல் இருப்போமா?” என்றான் {அர்ஜுனன்}.(23)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அர்ஜுனனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அங்காரபர்ணன் பெருஞ்சினம் கொண்டு, தனது வில்லை வட்டமாக வளைத்துக் கொடும்பாம்புகளைப் போன்ற அவனது அம்புகளைப் பாண்டவர்கள் மீது ஏவத் தொடங்கினான்.(24) அப்போது, பாண்டுவின் மைந்தனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஒரு கையில் {தோல்} கவசத்துடனும், ஒரு கையில் விளக்கு பந்தத்துடனும் அந்தக் கணைகள் அனைத்தையும் விலக்கி அந்தக் கந்தர்வனிடம்,(25) “ஓ கந்தர்வா, ஆயுதங்களின் நிபணத்துவம் வாய்ந்தவர்களை அச்சுறுத்த எண்ணாதே, அப்படி நீ வீசும் ஆயுதங்கள் நீர்க்குமிழி போல மறைந்து போகும்.(26) ஓ கந்தர்வா, நீ மனிதர்களை விட {ஆற்றலில்} உயர்ந்தவன் என்று நான் கருதுகிறேன். எனவே தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு நான் போரிடுவேன். கபடப் போர் புரிய மாட்டேன்.(27) (நான் உன் மீது இப்போது ஏவப்போகும்) இந்த நெருப்பாலான ஆயுதத்தை, இந்திரனின் மரியாதைக்குரிய குருவான பிருஹஸ்பதி பரத்வாஜருக்குக் கொடுத்தார்,(28) அவரிடம் {பரத்வாஜரிடம்} இருந்து அதை அக்னிவேஸ்யர் {Agnivesya} அடைந்தார். அக்னிவேஸ்யரிடமிருந்தும், பிராமணர்களில் முதன்மையான எனது குரு துரோணர் அடைந்தார். அவர் {துரோணர்} இதை {நெருப்பாலான ஆயுதத்தை} எனக்குக் கொடுத்தார்” என்றான்.(29)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பாண்டவன் {அர்ஜுனன்}, தனது நெருப்பாலான ஆயுதத்தை அந்தக் கந்தர்வன் மீது ஏவினான். அவ்வாயுதம் அந்தக் கந்தர்வனின் தேரை ஒரு நொடிப்பொழுதில் எரித்தது.(30) அந்த ஆயுதத்தின் வல்லமையால் உணர்விழந்த அந்தப் பெரும்பலம் வாய்ந்த கந்தர்வன், அந்த தேரிலிருந்து தலைகீழாக விழுந்தான்.(31) தனஞ்சயன் {அர்ஜுனன்}, மலர்மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவனது தலைமுடியைப் பற்றி, உணர்விழந்து கிடந்த அந்தக் கந்தர்வனைத் தனது சகோதரர்களிடம் இழுத்துச் சென்றான்.(32) இதைக்கண்ட கந்தர்வனின் மனைவியான கும்பீனசி, தனது கணவனை {அங்காரபர்ணனைக்} காக்க விரும்பி, யுதிஷ்டிரனிடம் ஓடி, அவனின் {அங்காரபர்ணனின்} பாதுகாப்பை வேண்டினாள்.(33)

அந்தக் கந்தர்வி {கும்பீனசி}, “ஓ மேன்மைமிக்கவரே, உமது பாதுகாப்பை எனக்கு அருள்வீராக! எனது கணவரை விடுவிப்பீராக! ஓ தலைவா, கும்பீனசி என்ற பெயரைக் கொண்டவளும், இக்கந்தர்வரின் மனைவியுமான நான் உமது பாதுகாப்பைக் கோருகிறேன்” என்று கேட்டாள்.(34)

(இப்படித் துயருற்ற) அவளைக் {கும்பீனசியை} கண்ட யுதிஷ்டிரன், அர்ஜுனனிடம், “ஓ எதிரிகளை அழிப்பவனே, ஓ குழந்தாய், வீரமற்றுப் பெண்ணின் பாதுகாப்பை அடைந்து, புகழை இழந்து, போரில் தோற்றவனை யார்தான் கொல்வார்கள்?” என்று கேட்டான்.(35)

அதற்கு அர்ஜுனன், “ஓ கந்தர்வா, உனது உயிரைப் பெற்றுக்கொண்டு செல்வாயாக. வருந்தாதே. குருக்களின் மன்னர் யுதிஷ்டிரன் உனக்குக் கருணை காட்டச் சொல்லி எனக்கு ஆணையிட்டிருக்கிறார்.” என்றான்.(36)

அதற்கு அந்தக் கந்தர்வன் {அங்காரபர்ணன்}, “நான் உன்னால் வீழ்த்தப்பட்டேன். எனவே, நான் எனது அங்காரபர்ணன் (ஒளிரும் வாகனம் என்ற பொருள் கொண்ட) என்ற எனது பெயரைக் கைவிடுகிறேன். ஓ நண்பா, எனது பலம் ஒடுக்கப்பட்ட பிறகு, செருக்குடன் கூடிய பெயரை வைத்திருக்கக்கூடாது.(37) ஓ அர்ஜுனா, தெய்வீக ஆயுதங்களைத் தாங்கியிருக்கும் உன்னை அடைய நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கந்தர்வர்கள் மட்டுமே அறிந்த மாய சக்திகளை (மாயத்தை உற்பத்தி செய்யும் நுணுக்கம்) நான் உனக்குக் கொடுக்க விரும்புகிறேன்.(38) தோற்றத்தில் வித்தியாசமான அற்புதமான எனது தேர் உனது நெருப்பாயுதத்தால் {ஆக்னேயாஸ்திரத்தால்} எரிக்கப்பட்டது. இதற்கு முன்பு எனது அழகான தேருக்காக அந்தப் பெயரால் அழைக்கப்பட்ட நான் {சித்திரரதன்}, இப்போது எரிந்த அந்தத் தேரின் பெயரையே கொள்ள வேண்டும். (39) மாயையை உற்பத்தி செய்யும் அறிவியலை முன்பு நான் எனது தவத் துறவுகளால் அடைந்தேன். அந்த அறிவியலை நான் எனது உயிரைக் காப்பாற்றிய உனக்கு இன்று அளிக்கிறேன்.(40) ஒருவன் தனது எதிரியை பலத்தால் வென்ற பிறகு, அந்த எதிரி கேட்கும்போது அவனது உயிரைத் திருப்பித் தருபவன், என்ன நற்பேறுக்குத்தான் தகாதவன்?(41)

இந்த அறிவியலுக்குப் பெயர் சாக்ஷுஷி என்பதாகும். இது மனுவால் {Manu} சோமனுக்கும், சோமனால் விஸ்வாவசுக்கும், இறுதியாக விஸ்வாவசுவால் எனக்கும் உரைக்கப்பட்டது.(42) ஒரு சக்தியும் இல்லாத என்னிடம், எனது குரு {விஸ்வாவசு} மூலமாக வந்தடைந்த அந்த அறிவியல், என்னிடம் வந்ததால் கனியற்றிருக்கிறது. நான் அதன் மூலத்தையும், பரிமாற்றங்களையும் விவரித்தேன். இப்போது அதன் ஆற்றலைக் குறித்துக் கேட்பாயாக!(43) ஒருவன், (இதன் துணை கொண்டு) அவன் விரும்பியதைப் பார்க்கலாம். அதேபோல் விரும்பியவாறும் (பொதுவாகவும், குறிப்பாகவும்) பார்க்கலாம்.(44) ஒருவன், ஆறுமாதங்கள் ஒற்றைக் காலில் நின்றால் இந்த அறிவியலை அடையலாம். இருப்பினும் நான் உனக்கு இந்த அறிவியலை எந்தக் கடினமான நோன்பும் நோற்காமல் கொடுக்கிறேன்.(45) ஓ மன்னா, இந்த அறிவாலேயே {கந்தர்வர்களாகிய} நாங்கள் மனிதர்களை விட மேன்மையாக இருக்கிறோம். ஆன்மப் பார்வை கொண்டு எதையும் நாங்கள் பார்க்க முடிவதால் நாங்கள் தேவர்களுக்குச் சமமானவர்களாகவும் இருக்கிறோம்.(46)

ஓ மனிதர்களில் சிறந்தவனே {அர்ஜுனனே}, நான் உனக்கும் உனது சகோதரர்களுக்கும் கந்தர்வர்களின் உலகில் பிறந்த நூறு {100} குதிரைகளைக் கொடுக்க விரும்புகிறேன்.(47) தெய்வீக நிறத்துடன், மனோ வேகம் கொண்ட அக்குதிரைகள் தேவர்களையும் கந்தர்வர்களையும் சுமக்க நியமிக்கப்பட்டிருந்தன. அவை சதையற்று மெலிவாக இருந்தாலும் அவை களைப்படைவதில்லை, எக்காரணம் கொண்டும் துயரடைவதில்லை.(48) பழங்காலத்தில் விருத்திரனைக் கொல்வதற்காகவே வஜ்ராயுதமானது {இடியுடன் கூடிய மின்னலான இந்திரனின் ஆயுதமானது} தேவர்கள் தலைவனால்  உருவாக்கப்பட்டது. ஆனால், அஃது அவன் மீது ஏவப்பட்டபோது, விருத்திராசுரனின் தலைபட்டு அது நூறு துண்டுகளாக உடைந்தது.(49)

அந்தத் துண்டுகளைத் தேவர்கள் மரியாதையுடன் வணங்குகின்றனர். அவை மூவுலகத்திலும், வஜ்ராயுதத்தின் பகுதிகளாக அதன் புகழுக்காக அறியப்படுகிறது.(50) வேள்வித்தீயில் தெளிந்த நெய்யை விடும் பிராமணர்களின் கரங்களும், க்ஷத்திரியர்கள் போர் புரியும் தேர்களும், வைசியர் செய்யும் தானமும், சூத்திரர் செய்யும் தொண்டும் அந்த வஜ்ரத்தின் சிதறிய பாகங்களே.(51) எனவே, க்ஷத்திரியர்களுடைய தேரின் ஒரு பகுதியாகக் குதிரைகள் இருப்பதால், அவை கொல்லத்தக்கவையல்ல என்று நம்பப்படுகிறது. க்ஷத்திரியனின் தேரை அலங்கரிக்கும் குதிரை, வடவனின் வாரிசாகிறது.(52) கந்தர்வர்களின் பகுதியில் பிறந்த இக்குதிரைகள், அதன் முதலாளிகள் விரும்புவது போல எந்நிறத்தையும் எவ்வேகத்தையும் கொள்ளவல்லவையாகும். நான் கொடுக்கும் இந்த எனது குதிரைகள், உங்கள் விருப்பங்களை எப்போதும் நிறைவேற்றும்” என்றான் {அங்காரபர்ணன்}.(53)

கந்தர்வனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், “ஓ கந்தர்வா, ஆபத்துக் காலத்தில் உனது உயிரை அடைந்ததால் நீ இந்த அறிவியலையும், குதிரைகளையும் கொடுப்பதாய் இருந்தால், நான் அவற்றைக் கொடையாகக் கொள்ள மாட்டேன்” என்றான்.(54)

அதற்கு அந்தக் கந்தர்வன், “ஒரு சிறப்பு வாய்ந்த மனிதரைச் சந்திப்பது எப்போதும் மனநிறைவையே உண்டாக்கும். அதுவும் தவிர்த்து நீ எனக்கு என் உயிரை அளித்திருக்கிறாய். உன்னால் மனநிறைவை அடைந்து, நான் இந்த அறிவியலை உனக்குக் கொடுக்கிறேன்.(55) எனினும் அக்கடமை அனைத்தும் ஒரு புறம் சார்ந்ததாக மட்டும் இருக்காது. ஓ பீபத்சு {அர்ஜுனா}, ஓ பாரதக் குலத்தின் காளையே, நான் உனது அற்புதமான தெய்வீக ஆயுதமான நெருப்பாயுதத்தை {அக்னேயாவை} உன்னிடமிருந்து எடுத்துக் கொள்வேன்” என்றான்.(56)

அர்ஜுனன், “நான் உனது குதிரைகளை எனது ஆயுதத்துக்கான பண்டமாற்றாகப் பெற்றுக் கொள்கிறேன். நமது நட்பு நிலைத்திருக்கட்டும். ஓ நண்பா, மனிதர்களாகிய நாங்கள் கந்தர்வர்கள் முன் அச்சத்துடன் நிற்க வேண்டிய அவசியம் என்ன என்பதைச் சொல்வாயாக.(57) எதிரிகளைத் தண்டிப்பவர்களான நாங்கள் அறம் சார்ந்தவர்கள். வேதமறிந்தவர்கள். ஓ கந்தர்வா, இரவு நேரத்தில் பயணம் செய்யும் எங்களை நீங்கள் கண்டிக்கிறீர்கள்” என்று கேட்டான்.(58)

அதற்குக் கந்தர்வன், “மனைவிகளற்றவர்கள் நீங்கள் (கல்வி காலம் நிறைந்த பிறகும்), நீங்கள் எந்தக் குறிப்பிட்ட ஆசிரமத்தையும் (வாழ்க்கை முறையையும்) ஏற்றுக் கொள்ள வில்லை {பிரம்மச்சரியம், இல்லறம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் ஆகிய நான்கு வாழ்க்கைமுறைகள்}. கடைசியாக, நீங்கள் பிராமணரை முன்கொண்டு நடக்கவில்லை. எனவே, பாண்டு மைந்தர்களே, நீங்கள் என்னால் கண்டிக்கப்பட்டீர்கள்.(59) யக்ஷர்களும், ராட்சசர்களும், கந்தர்வர்களும், பிசாசங்களும், உரகங்களும், தானவர்களும் குரு குலத்தவரின் வரலாற்றை அறிந்து வைத்துள்ளனர். அதில் அறிவும் கொண்டுள்ளனர்.(60)

ஓ வீரர்களே, நாரதரிடமிருந்தும், மற்றத் தெய்வீக முனிவர்களிடமிருந்தும் உங்கள் மூதாதையர்களின் நற்செயல்களை நான் அறிந்து வைத்திருக்கிறேன்.(61) கடலைக் கச்சையாக அணிந்திருக்கும் இந்த உலகை நான் சுற்றி வரும்போது உனது குலத்தின் பேராற்றலைக் கண்டிருக்கிறேன்.(62) ஓ அர்ஜுனா, மூன்று உலகங்களில் கொண்டிருக்கும் ஆயுத அறிவுக்காவும், வேத அறிவுக்காகவும் புகழப்படும் பரத்வாஜரின் மகனான உனது குருவையும் {துரோணரையும்} நான் அறிவேன்.(63) ஓ குரு குலத்தின் புலியே, ஓ பிருதையின் {குந்தியின்} மைந்தனே, நான் தர்மன், வாயு, சக்ரன் {இந்திரன்}, அஸ்வினி இரட்டையர்கள், மற்றும் பாண்டுவாகிய குருகுலத்தை என்றும் நிலைக்க வைத்திருக்கும் ஆறு மூலங்களையும் அறிவேன். இவர்கள் உங்கள் குலத்தைத் தழைக்க வைக்கும் தேவர்களும் மனிதர்களும் ஆவர்.(64) நீங்கள் ஐந்து சகோதரர்களும், கல்வி கற்று, உயர்ந்த ஆன்மா கொண்டு, அனைத்து ஆயுதங்களிலும் முதன்மையடைந்த அறம்சார்ந்தவர்கள் என்பதையும்  நான் அறிவேன். உங்கள் நல்ல இதயங்களையும், களங்கமற்ற நடத்தைகளையும் அறிந்தே நான் உங்களைக் கண்டித்தேன்.(65,66)

ஓ குரு குலத்தவனே, பலம் நிறைந்த எந்த மனிதனும் தனது மனைவின் எதிரில் தவறாக நடத்தப்பட்டால் பொறுமையாக இருக்க மாட்டான்.(67) ஓ குந்தியின் மைந்தா {அர்ஜுனா}, குறிப்பாக எங்களில் ஒருவன் {கந்தர்வன்} இருளின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, கரத்தின் பலம் அதிகரிக்கும்போது, அதுவும் அவனது மனைவி அவனுடன் இருக்கும்போது பொறுமையாக இருக்க மாட்டான். ஆகவேதான் நான் கோபம் கொண்டேன்.(68) ஓ நோன்பு நோற்பவர்களில் சிறந்தவர்களே, இருப்பினும் நான் உங்களால் போரில் வீழ்த்தப்பட்டேன். நான் ஏன் இந்த இழிந்த நிலையை அடைந்தேன் என்பதைக் குறித்துக் கேட்பீராக.(69) வாழ்க்கை முறைகளில் பிரம்மச்சரியமே உயர்ந்தது. இப்போது நீங்கள் அந்த அந்த முறையிலேயே இருக்கிறீர்கள். அதனால்தான், ஓ பார்த்தா {அர்ஜுனா}, நான் போரில் உங்களால் வீழ்த்தப்பட்டேன்.(70)

ஓ எதிரிகளைத் தண்டிப்பவர்களே, மணம்புரிந்த எந்த க்ஷத்திரியன் எங்களுடன் இரவில் போரிட்டாலும், அவன் உயிருடன் தப்பவே முடியாது.(71) ஆனால், ஓ பார்த்தா {அர்ஜுனா}, ஒரு பிராமணனால் தூய்மையாக்கப்பட்ட மணம் புரிந்த க்ஷத்திரியன், தனது மாநிலத்தின் புரோகிதரை நன்றாகக் கவனித்துக் கொள்பவன் இரவில் உலவுபவர்களைத் தனது பலத்தால் அழிப்பான்.(72) ஓ தபதியின் மைந்தனே {அர்ஜுனனே}, எனவே மனிதர்கள், எப்போதும் கல்விமான்களான புரோகிதர்களைத் தாங்கள் செய்ய விரும்பும் அனைத்து நற்காரியங்களிலும் நியமித்துக்கொள்ள வேண்டும். வேதங்களை அதன் ஆறு கிளைகளுடன் அறிந்து, சுத்தமாகவும், உண்மையாகவும், அறம்சார்ந்த ஆன்மாவைக் கொண்டு, சுயக்கட்டளை கொண்ட பிராமணன், ஒரு மன்னனுக்குப் புரோகிதனாக இருக்கத் தகுதி வாய்ந்தவன்.(73,74) நீதிகளின் விதிகளை அறிந்த பிராமணனைப் புரோகிதனாக அடைந்த ஓர் ஏகாதிபதி என்றும் வெற்றி வாகை சூடுபவனாக இருந்து, தனது வார்த்தைகளுக்குத் தலைவனாக இருந்து, நன்னடத்தையோடு இருந்து, இறுதியில் சொர்க்கத்தை அடைவான்.(75)

கிடைக்காதது கிடைக்க, தான் கொண்டதைக் காக்க ஒரு மன்னன் எப்போதும் தகுதி வாய்ந்த ஒரு புரோகிதரை அடைய வேண்டும்.(76) தனது வளமையை விரும்பும் ஒருவன், எப்போதும் புரோகிதரின் வழிநடத்துதலோடு செயல்பட்டால், அவன் கடலைக் கச்சையாக அணிந்திருக்கும் முழு உலகத்தையும் அடைவான்.(77) ஓ தபதியின் மைந்தனே {அர்ஜுனனே}, பிராமணன் இல்லாத ஒரு மன்னன், தனது ஆற்றலால் நிலத்தையோ, பிறப்பால் மட்டுமே புகழையோ அடைய முடியாது.(78) எனவே, ஓ குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, பிராமணர்களை அதிகாரத்தில் வைத்திருக்கும் அரசாட்சி நீடித்திருக்கும் என்பதை அறிந்து கொள்வாயாக” என்றான் {சித்ரரதன்}.(79)

சம்வர்ணனும் தபதியும் – ஆதிபர்வம் பகுதி 173-(சைத்ரரதப் பர்வம் – 07)சூரியனின் மகளான தபதியின் வரலாறு; சூரியன் தன் பக்தனான சம்வர்ணனுக்கு தன் மகளைக் கொடுக்க விரும்பியது; தபதியை மலையில் கண்டு காமுற்ற சம்வர்ணன்; பேசிக் கொண்டிருக்கும்போதே மறைந்த தபதி…

அர்ஜுனன், “நீ என்னைத் தபதேயா என்று (ஒரு முறைக்கும் அதிகமாக) அழைத்தாய். எனவே, அந்த வார்த்தையின் பொருளை அறிய நான் விரும்புகிறேன்.(1) ஓ அறம்சார்ந்த கந்தர்வா, குந்தி மைந்தர்களாகிய நாங்கள் நிச்சயமாகக் கௌந்தேயர்களே {குந்தி மைந்தர்களே}. ஆனால் நாங்கள் தபதேயர்கள் என்று அழைக்கப்படக் காரணமான தபதி என்பது யார்?” என்று கேட்டான்”.(2)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படிக் கேட்கப்பட்ட கந்தர்வன், குந்தியின் மைந்தனான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} மூவுலகங்களும் அறிந்த பின்வரும் கதையைச் சொன்னான். கந்தர்வன்,(3) “ஓ பிருதையின் {குந்தியின்} மைந்தா, புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவனே, அந்த அழகான கதையை நான் உங்களுக்கு முழுமையாக உரைப்பேன்.(4) தபதேயா என்று நான் உன்னை அழைத்ததற்கான காரணத்தை விரிவாகச் சொல்லப்போகிறேன். கவனமாகக் கேட்பாயாக.(5) எவன் மொத்த ஆகாயத்தையும் தன்னொளியால் படர்ந்து  ஊடுருவி இருக்கிறானோ அந்த விவஸ்வானுக்கு {சூரியனுக்கு}, தனக்கு இணையான பிரகாசம் கொண்டவளாக தபதி என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள்.(6) தேவன் விவஸ்வானின் மகளான தபதி, சாவித்ரிக்கு இளைய தங்கையாவாள். அவள் தனது தவத்துறவுக்காக மூவுலகங்களாலும் கொண்டாடப்பட்டாள்.(7) தேவர்களிலும், அசுரர்களிலும், யக்ஷர்களிலும், அப்சரஸ்களிலும், கந்தர்வர்களிலும் கூட அவளுக்கு இணையான அழகு கொண்ட பெண் யாரும் இல்லை.(8) அளந்து வைத்த அளவு போலச் சரியான மற்றும் சமச்சீரான வனப்புகளுடைய உடலமைப்புடன், களங்கமற்ற குணம் கொண்டு, கரிய அகலமான கண்களுடன், அழகான ஆடை அணிந்த அந்தப் பெண், கற்புக்கரசியாகவும், சரியான நடத்தையுள்ளவளாகவும் இருந்தாள்.(9) ஓ பாரதா {அர்ஜுனா}, அவளைக் கண்ட சூரியன், அவளுக்கு இணையான அழகுடனும், நடத்தையுடனும், கல்வியுடனும் அவளுக்குக் கணவனாகும் தகுதியுடன் மூவுலகங்களிலும் யாரும் இல்லை என்று நினைத்தான்.(10)

அவள் வயதுக்கு வந்ததும், அவளுக்குச் சரியான கணவனைக் காண முடியாமால் அவளது தந்தை மன நிம்மதி இழந்து, சரியான மனிதரை எப்படித் தேர்ந்தெடுப்பது என்றே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தான்.(11) அந்த நேரத்தில், ஓ குந்தியின் மகனே, ரிக்ஷனின் மகனும், குரு குலத்தின் காளையுமான, பெரும் பலம் வாய்ந்த மன்னன் சம்வர்ணன், அர்க்கியம், பூமாலை, நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை, உறுதிகளுடனும் விரதங்களுடனும், பல்வேறு துறவு நோன்புகளுடனும் சூரியனை வணங்கி வந்தான்.(12,13) உண்மையில் அந்த மகிமைவாய்ந்த சம்வர்ணன், அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் பக்தியுடன் சூரியனை வழிபட்டான்.(14) அறவிதிகளைக் கடைப்பிடித்து வந்த சம்வர்ணன், பூமியில் இணையில்லாத அழகுடன் திகழ்வதைக் கண்ட சூரியன், அவனே தனது மகள் தபதிக்குச் சரியான இணை என்று நினைத்தான்.(15)

ஓ குரு குலத்தவனே {அர்ஜுனா}, தனது மகள் தபதியை அந்த மன்னர்களில் சிறந்தனும், உலகப்புகழ் கொண்ட குலத்தின் கொழுந்துமான சம்வர்ணனுக்கு அளிக்க விவஸ்வான் முடிவு செய்தான்.(16) சூரியன் எப்படி ஆகாயத்தில் தனது பிரகாசத்தைப் பரப்பினானோ, அப்படியே மன்னன் சம்வர்ணனும், அனைத்துப் பகுதிகளையும் தனது நற்சாதனைகளின் பிரகாசத்தால் பிரகாசிக்க வைத்தான்.(17) ஓ பார்த்தா {அர்ஜுனா}, பிராமணர்களைத் தவிர்த்து அனைத்து மனிதர்களும் சம்வரணனை வழிபட்டார்கள்.(18) நற்பேறு அருளப்பட்டவனான மன்னன் சம்வர்ணன், நண்பர்களின் இதயங்களை வெல்வதில் சோமனை {நிலவை} விஞ்சினான். எதிரிகளின் இதயங்களை எரிப்பதில் சூரியனை விஞ்சினான்.(19) ஓ கௌரவா {அர்ஜுனா}, தபனா (சூரியன்} தனது மகள் தபதியை, அனைத்து அறங்களும் சாதனைகளும் கொண்ட மன்னன் சம்வர்ணனுக்கு அளிக்கத் தீர்மானித்தான்.(20)

ஒரு சமயத்தில், ஓ பார்த்தா {அர்ஜுனா}, அழகும், அளவிலா ஆற்றலும் கொண்ட அந்த மன்னன் சம்வர்ணன், மலையின் சாரலில் இருக்கும் அடர்ந்த கானகத்திற்குள் வேட்டைக்காகச் சென்றான்.(21) அவன் மான்களைத் தேடி உலவிக் கொண்டிருக்கும்போது, ஓ பார்த்தா, அம்மன்னனின் அருமையான குதிரை, சோர்வலும், களைப்பாலும், தாகத்தாலும் அந்த மலையிலேயே இறந்தது.(22) அந்தக் குதிரையைக் கைவிட்ட அம்மன்னன், ஓ அர்ஜுனா, அந்த மலையின் சாரலில் நடந்து உலாவினான். அப்படி உலாவும் போது, அந்த ஏகாதிபதி! பெரிய கண்களுடைய ஓர் அழகான மங்கையைக் கண்டான்.(23) அந்த எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தச் சிறப்புமிக்க மன்னன், தனியனாகத் தனியாக இருக்கும் அந்த கன்னிகையைப் பார்த்துக் கொண்டே அசைவில்லாமல் நின்றான்.(24) அந்த இடத்தில் அவ்வளவு அழகோடிருந்தவளைக் கண்ட மன்னன், அவளை ஸ்ரீ {லட்சுமி} என்றே நினைத்தான். அடுத்து அவளைச் சூரியனின் கதிரில் உருவான வடிவம் என்று நினைத்தான்.(25)

நெருப்புக்கு ஒப்பான பிரகாசத்தைக் கொண்ட அவள், அருளுடைமையாலும், இனிமையாலும் நிலவைப் போலவும் இருந்தாள்.(26) அந்த மலையின் சாரலில் நின்று கொண்டிருந்த அந்தக் கரிய கண் படைத்தவள், பொற்சிலையெனப் பிரகாசமாக நின்றாள்.(27) கொடிகளுடனும் செடிகளுடனும் கூடிய அந்தமலையே, இந்த மங்கையின் அழகாலும், அவள் அணிந்து வந்த ஆடையாலும், பொன்மயமாக மாறியதாகத் தோன்றிற்று.(28) அவன், முன்பு கண்டிருந்த பெண்கள் அனைவரையும்  அழகில் குறைவானவர்களாக அறிந்து, தான் அவளைக் கண்டது, தனது கண்கள் செய்த புண்ணியம் என்று நினைத்தான்.(29) அம்மன்னன், தான் பிறந்ததிலிருந்தே இப்படியொரு அழகைக் கண்டதில்லை என்றே நினைத்தான். அந்த மங்கையால், அம்மன்னனின் இதயமும் கண்களும் வெல்லப்பட்டன. கயிற்றால் கட்டப்பட்டவன் போல அவன் அந்த இடத்திலேயே உணர்வுகளற்று வேர் முளைத்து நின்றான்.

இவ்வழகைப் படைத்த படைப்பாளியானவன், நிச்சயம் அசுரர்கள் மற்றும் மனிதர்களின் உலகை நன்றாகக் கடைந்த பிறகே செய்திருக்க வேண்டும் என்று அந்த மன்னன் நினைத்துக் கொண்டான்.(30,31) இப்படிப் பல்வேறு சிந்தனைகளுடன் இருந்த மன்னன் சம்வர்ணன், அந்த மங்கையின் அழகு என்ற செல்வம், மூவுலகங்களிலும் இல்லாதது என்ற தீர்மானத்துக்கு வந்தான்.(32) புனிதமான வழியில் வந்த அந்த ஏகாதிபதி! அந்த அழகான மங்கையைக் கண்டு, காமனின் (மன்மதனின்) கணைகளால் துளைக்கப்பட்டுத் தனது மன அமைதியைத் தொலைத்தான்.(33)

ஆசையெனும் கடுந்தீயால் உந்தப்பட்டுத் தனது இளமையின் ஆரம்பத்திலிருந்த அந்த அப்பாவிப் பெண்ணிடம்,(34) “ஓ வழவழப்பான தொடைகளைக் கொண்டவளே, நீ யார், யாருடையவள்? நீ ஏன் இங்கு இருக்கிறாய்? ஓ இனிமையாகப் புன்னகைப்பவளே, இந்த ஏகாந்தமான கானகத்தில் ஏன் தனிமையில் திரிகிறாய்?(35) களங்கமற்ற சரியான அனைத்துக் குணங்களுடனும், ஆபரணங்கள் போன்ற உனது அங்கங்களை மறைக்க வேறு ஆபரணங்கள் கொண்டு மறைத்திருப்பவளே, உன்னைப் பார்த்தால் அசுரராகவோ, யக்ஷராகவோ, ராட்சசராகவோ, நாகராகவோ, கந்தர்வராகவோ, மனிதப் பிறப்பாகவோ தெரியவில்லை.(36,37) ஓ அற்புதமானவளே, நான் இதுவரை கண்டதிலும், கேட்டதிலும் சிறந்த பெண் நீ தான். உனது அழகை யாருடனும் ஒப்பு நோக்க முடியாது!(38) ஓ அழகான முகம் கொண்டவளே, மதியை {நிலவை} விட இனிமையான முகமும், தாமரை இதழ்களைப் போன்ற அருள் நிறைந்த கண்களுடனும் இருக்கும் உன்னைக் கண்டதால், காமதேவன் என்னைத் துளைத்தெடுக்கிறான்” என்றான்.(39)

மன்னன் சம்வர்ணன் கானகத்திலிருந்த அந்த மங்கையிடம் இப்படிச் சொன்னதும், அம்மங்கை ஆசைத்தீயில் வெந்துகொண்டிருந்த அந்த ஏகாதிபதியிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.(40) அதற்குப் பதிலாக, மேகத்தினூடே இருக்கும் மின்னலைப் போல அந்த அகன்ற கண்களுடைய மங்கை, அந்த ஏகாதிபதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போனாள்.(41) அம்மன்னன் அனிவை இழந்த ஒருவனைப் போல அந்தத் தாமரை இதழ் கண்களைக் கொண்ட பெண்ணை கானகம் முழுவதும் தேடினான்.(42) ஆனால், அவளைக் கண்டுபிடிப்பதில் தோல்வியுற்ற அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் தனக்குள்ளேயே பெரும்புலம்பல் புலம்பித் துயரத்துடன் அங்கேயே அசைவற்று நின்றான்” {என்றான் சித்திரரதன்}.(43)

சம்வர்ணனிடம் பேசிய தபதி! – ஆதிபர்வம் பகுதி 174(சைத்ரரதப் பர்வம் – 08)மியில் விழுந்த சம்வர்ணனைக் கண்டு அங்கே வந்த தபதி; தபதிக்கும், சம்வர்ணனுக்கும் இடையில் நடந்த உரையாடல்…

கந்தர்வன் தொடர்ந்தான், “அந்த மங்கை மறைந்ததும், எதிரிகளைத் தண்டிப்பவனான அவன் {சம்வர்ணன்} காமனால் தாக்குண்டு, உணர்வுகள் இழந்து தரையில் விழுந்தான்.(1) அப்படி அந்த ஏகாதிபதி மயங்கி விழும்போதே, அந்த மங்கை இனிமையான புன்னகையுடனும், அழகான உருண்டு திரண்ட இடுப்புடனும் அவன் முன்பு மறுபடியும் தோன்றி,(2) அந்தக் குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனிடம் இனிமையான குரலில் பேசினாள்.(3) அவள் “எழுவீராக, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, அருளப்பட்டிருப்பீராக; ஓ மன்னர்களில் புலியே, உலகத்தால் கொண்டாடப்படும் உம்மைப் போன்றவர் உணர்வை இழக்கலாகாது” என்றாள்.

அந்த இனிமையான வார்த்தைகளைக் கேட்ட அந்த மன்னன்,(4,5) தனது கண்களைத் திறந்து, உருண்டு திரண்ட இடுப்பைக் கொண்ட அந்தப் பெண்ணைக் கண்டான். விரகத் தாபத்தால் எரிந்த அந்த ஏகாதிபதி அந்தக் கருங்கண் மங்கையிடம், தனது பலவீன உணர்ச்சியை வெளிக்கொணரும் வார்த்தைகளில்,(6) “ஓ கருங்கண் கொண்ட அற்புத மாதே! நீ அருளப்பட்டிருப்பாயாக. உன்னைக் கண்டு ஆசைத் தீயில் நான் எரிந்து கொண்டிருக்கிறேன். என்னை ஏற்றுக் கொள்வாயாக. எனது வாழ்க்கை மறைந்து கொண்டிருக்கிறது. ஓ அகன்ற கண்களைக் கொண்டவளே, தாமரையைப் போன்ற மென்மை கொண்ட உன்னைக் கண்டதும், நான் ஒரு நிமிடமும் நிறுத்தப்படாமல், தொடர்ந்து காமனின் கணைகளால் துளைக்கப்பட்டு வருகிறேன். ஓ இனிமையானவளே, மகிழ்ச்சி ததும்பிய மாதே, நான் காமன் எனும் கொடிய விஷப் பாம்பால் கடிக்கப்பட்டிருக்கிறேன்.(7-9)

ஓ சதைப்பற்றுள்ள பெரும் இடையாளே! என்னிடம் கருணை கொள்வாயாக களங்கமற்ற குணம் கொண்ட அழகானவளே, ஓ தாமரை இதழை அல்லது நிலவைப் போன்ற முகம் கொண்டவளே, பாடும் கின்னரர்களின் குரல் போன்று இனிமையான குரல் கொண்டவளே, இப்போது எனது வாழ்வு உன்னை நம்பியே இருக்கின்றது! ஓ மருட்சியுடையவளே, நீ இல்லாமல், என்னால் வாழ முடியாது!(10,11) ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடையவளே, காமன் தொடர்ச்சியாக என்னைத் துளைக்கிறான்!(12)

ஓ அகன்ற கண்ணுடையாளே, என்னிடம் கருணை கொள்வாயாக. ஓ கருங்கண் மாதே, என்னைக் கைவிட்டுவிடாதே; ஓ அழகானவளே, உனது அன்பைக் கொடுத்து, என்னை இந்தத் துயரத்திலிருந்து மீட்டெடுப்பாயாக.(13) முதல் பார்வையிலேயே நீ எனது இதயத்தைக் கவர்ந்தாய். எனது மனம் ஒரு நிலையில்லாமல் தவிக்கிறது! உன்னைக் கண்ட பிறகு, நான் இன்னொரு பெண்ணின் மீது பார்வையைச் செலுத்த மாட்டேன்.(14) கருணை கொள்வாயாக. நான் உனது சொல்கேட்டுப் பணிந்து நடக்கும் ஓர் அடிமையாவேன்! உனது துதிபாடியுமாவேன்! என்னை ஏற்றுக் கொள்வாயாக!

ஓ அழகிய பெண்ணே, ஓ அகன்ற கண்களைக் கொண்ட கன்னிகையே, நான் உன்னைக் கண்டதும்,(15) காமதேவன் என் இதயத்துக்குள் நுழைந்துவிட்டான். அவன் தன் கணைகளால் என்னைத் துளைத்துக் கொண்டிருக்கிறான். ஓ தாமரைக் கண்ணாளே, ஆசைத்தீ என்னுள் எரிந்து கொண்டிருக்கிறது.(16) அந்த நெருப்பை உனது அன்பெனும் நீரால் {காதலால்} அணைத்துவிடுவாயாக. ஓ அழகான மங்கையே, நீ எனதாகி, கொடும் கணைகளுடன் என்னைத் துளைத்துக் கொண்டிருக்கும் அடக்க முடியாத காமதேவனை அடக்க வழி ஏற்படுத்துவாயாக.(17,18) ஓ அழகான நிறம் கொண்டவளே, கந்தர்வ முறைப்படி என்னை மணந்து கொள்வாயாக. ஓ மெல்லிடையாளே, அனைத்து வகைத் திருமணங்களிலும் கந்தர்வ முறையே சிறந்ததெனச் சொல்லப்படுகிறது” என்றான்”.(19)

அந்தக் கந்தர்வன் தொடர்ந்தான், “அந்த ஏகாதிபதியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தபதி, “ஓ மன்னா, நான் எனக்கு தலைவியில்லை. நான் எனது தந்தையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மங்கையாவேன். நீர் என்னிடம் அன்பு கொண்டிருந்தால், எனது தந்தையிடம் கேட்பீராக.(20) ஓ மன்னா, என்னால் உமது இதயம் களவு போனதாகச் சொல்கிறீர். ஆனால், நீரும், முதல் பார்வையிலேயே எனது இதயத்தைக் களவாடிவிட்டீர்.(21) நான் எனக்கு தலைவியில்லை. பெண்கள் சுதந்திரமற்றவர்கள்; எனவே, ஓ மன்னர்களில் சிறந்தவரே, நான் உம்மை அணுகவில்லை.(22) நீர் உம்மை நம்பி இருக்கும் அனைவரிடமும் அன்பாக இருக்கிறீர். புனிதமான குலத்திலும் பிறந்திருக்கிறீர். உம்மைக் கணவராக அடைய இந்த உலகத்தில் உள்ள எந்தப் பெண்தான் விரும்ப மாட்டாள்?(23) எனவே, சமயம் வாய்க்கும் போது, எனது தந்தையான ஆதித்தியரிடம் {சூரியனிடம்} வழிபாட்டுடனும், நோன்புடனும், உறுதியுடனும் சேர்த்து எனது கரத்தைக் கேட்பீராக.(24) எனது தந்தை என்னை உமக்கு அளித்தால், பிறகு, ஓ மன்னா, நான் உமக்கு எப்போதும் கட்டுப்பட்ட {அடங்கி நடக்கும்} மனைவியாக இருப்பேன்.(25) எனது பெயர் தபதி, நான் சாவித்ரிக்கு இளைய தங்கை, ஓ க்ஷத்திரியர்களில் காளையே, நான் உலகிற்கு ஒளியூட்டும் சூரியனின் மகளாவேன்” என்றாள் {தபதி}.(26)

ஒரு துளி பனிக் கூட வானிலிருந்து விழவில்லை! – ஆதிபர்வம் பகுதி 175-(சைத்ரரதப் பர்வம் – 09)மீண்டும் மறைந்த தபதி; மன்னனிடம் வந்த வசிஷ்டர்; சூரியனிடம் பெண் கேட்ட வசிஷ்டர்; சம்வர்ணனும், தபதியும் திருமணம் செய்து கொண்டது; நாட்டில் பஞ்சமேற்பட்டது; பஞ்சத்தை நீக்கிய வசிஷ்டர்

கந்தர்வன் தொடர்ந்தான், “இதைச் சொன்ன களங்கமற்ற தபதி, வானத்தில் உயர்ந்து சென்றாள். அதன்காரணமாக அந்த ஏகாதிபதி மறுபடியும் பூமியில் விழுந்தான்.(1) அவனது அமைச்சர்களும், தொண்டர்களும் அவனைக் கானகம் முழுவதும் தேடிக் கடைசியாக, அவன் விழுந்து கிடந்த இடத்திற்கு வந்தனர்.(2) அந்தத் தனிமையான இடத்தில் வானிருந்து விழுந்த வானவில்லைப் போலக் கைவிடப்பட்டு விழுந்து கிடந்த அருமையான மன்னனைக் கண்ட அவனது முதல் அமைச்சர் நெருப்பால் சுடப்பட்டது போல் துடித்தார். அந்த அமைச்சர், பாசத்தோடும் மரியாதையோடும், அன்பின் காரணமாக மதி மயங்கி விழுந்து கிடந்த அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனைத் தூக்கினார்.(3-5) வயதைப் போலவே சாதனைகளிலும், ஞானத்திலும் முதிர்ந்த அந்த அமைச்சர், ஏகாதிபதியை நிமிர்த்தியவுடன் நிம்மதியடைந்து, மன்னனிடம், “ஓ பாவங்களற்றவனே! நீ அருளப்பட்டிரு! ஓ மன்னர்களில் புலியே, நீ அஞ்சாதே!” என்று சொல்லி இனிமையாகப் பேசத் தொடங்கினார்.(6,7)

பசியாலும், தாகத்தாலும், களைப்பாலேயுமே அவன் அப்படித் தரையில் விழுந்து கிடைந்ததாக அந்த அமைச்சர் நினைத்தார்.(8) அப்போது அந்த வயது முதிர்ந்தவர், ஏகாதிபதியின் முடிதரித்த தலையில் குளிர்ந்த நீரைத்தெளித்துத் தாமரை இதழ்களைக் கொண்டு அவனை மூர்ச்சை தெளிவித்தார்.(9) மெதுவாகச் சுயநினைவை அடைந்த அந்தப் பெரும்பலம் வாய்ந்த ஏகாதிபதி, தனது அமைச்சர் ஒருவரைத் தவிர மற்ற பணியாட்கள் அனைவரையும் அங்கிருந்து அனுப்பிவிட்டான்.(10) அப்படிப் பணியாட்கள் சென்றதும், மன்னன் மலையின் சாரலில் அமர்ந்தான். தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்ட அம்மன்னன், மலைகளில் முதன்மையான அம்மலையில் அமர்ந்து,(11) தூய்மையடைந்து தனது கரங்களைக் குவித்து, முகத்தை உயர்த்திச் சூரியனை வழிபட்டான்.(12)

எதிரிகளைத் தாக்கும் அந்த மன்னன் சம்வர்ணன், முனிவர்களில் சிறந்த தனது தலைமைப் புரோகிதர் வசிஷ்டரையும் நினைத்தான்.(13) அந்த மன்னன் இரவும் பகலுமாகத் தொடர்ந்து இடைவெளியில்லாமல் அங்கேயே அமர்ந்து தியானித்தான். பனிரெண்டாவது நாளில் பிராமண முனிவர் வசிஷ்டர் அங்கே வந்தார்.(14) தபதியினால் உணர்விழந்த ஏகாதிபதியின் நிலையைத் தனது ஞானப்பார்வையால் உணர்ந்தார் பெரும் முனிவர்.(15) எப்போதும் நோன்பு நோற்கும் ஏகாதிபதிக்கு நன்மை செய்ய விரும்பிய முனிவர்களில் சிறந்த அறம்சார்ந்தவர் அவனிடம் அனைத்து உறுதிகளையும் அளித்துப் பேசினார்.(16) அச்சிறப்புமிகுந்த முனிவர், ஏகாதிபதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மேலே எழும்பி வானத்தில் பிரகாசத்துடன் இருந்த சூரியனிடம் பேசினார்.(17) ஆயிரம் கதிர்கள் கொண்ட சூரியனை, அந்த பிராமணர் அணுகி, மகிழ்ச்சிகரமாக, “நான் தான் வசிஷ்டன்” என்றார்.(18)

அப்போது, பெரும் சக்தி கொண்ட அந்த விவஸ்வான் {சூரியன்}, அந்த முனிவர்களில் சிறந்தவரிடம், “ஓ பெரு முனியே, நீர் வரவேற்கப்படுகிறீர் {உமது வரவு நல்வரவாகட்டும்}, உமது மனத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குச் சொல்வீராக.(19) ஓ பெரும் நற்பேறுபெற்றவரே, நீர் என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர், நாநலமிக்கவர்களில் முதன்மையானவரே, நீர் எவ்வளவு கடுமையான ஒன்றைக் கேட்டாலும் நான் அதை உமக்கு அளிக்கிறேன்!” என்றான்.(20) இப்படிச் சூரியனால் சொல்லப்பட்ட பெரும் ஆன்மத்தகுதி கொண்ட பெரும் முனிவர், அந்த ஒளிக்கடவுளை வணங்கி,(21) “ஓ விபாவசு, இஃது உனது மகளான தபதி, இவள் சாவித்ரியின் இளைய சகோதரி, நான் இவளை சம்வர்ணனுக்காக உன்னிடம் கேட்கிறேன்! அந்த ஏகாதிபதி பெரும் சாதனைகள் செய்தவன், அறம் தவறாத உயர்ந்த ஆன்மா கொண்டவன். ஓ விண்ணதிகாரியே, சம்வர்ணன் உனது மகளுக்குத் தகுதியுடைய கணவனாக இருப்பான்” என்றார்.(22,23)

முனிவரால் இப்படிச் சொல்லப்பட்ட விபாகரன் {சூரியன்}, தனது மகளைச் சம்வர்ணனுக்கு அளிக்கத் தீர்மானித்து, முனிவரை வணங்கி,(24) “சம்வர்ணன் ஏகாதிபதிகளில் சிறந்தவனாவான், நீர் முனிவர்களில் சிறந்தவராவீர், தபதி பெண்களில் சிறந்தவளாவாள். சம்வர்ணனுக்கு அவளை அளிப்பதைத் தவிர, இதில் நாம் செய்ய என்ன இருக்கிறது?”(25) என்று சொன்ன தேவன் தபனன் {சூரியன்}, களங்கமற்ற தனது மகள் தபதியை சம்வர்ணனுக்கு அளிப்பதற்காகச் சிறப்புமிகுந்த வசிஷ்டரிடம் கொடுத்தான்.(26)

பெரும் முனிவர், மங்கை தபதியை ஏற்றுக் கொண்டு, சூரியனிடம் விடைபெற்றுக் கொண்டு, குருகுலத்தின் காளை {சம்வர்ணன்} அமர்ந்திருந்த இடத்திற்குத் திரும்பினார்.(27) காதலால் கட்டுண்டு, தபதியிடம் இதயத்தை நிலைக்கச் செய்து இருந்த அம்மன்னன் சம்வர்ணன், வசிஷ்டருடன் வந்து கொண்டிருந்த அந்தத் தேவமங்கையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தான்.(28) அழகான புருவங்களைக் கொண்ட அந்தத் தபதி, மேகத்திலிருந்து மின்னல் இறங்குவது போல வானத்திலிருந்து சொர்க்கத்தின் பத்துப் புள்ளிகளையும் கிறங்கடித்தபடி இறங்கி வந்தாள்.(29,30) ஏகாதிபதியின் பனிரெண்டு இரவு நோன்பு முடிந்ததும், புனிதமான ஆன்மா கொண்ட சிறப்பு மிகுந்த முனிவர் வசிஷ்டர் அவனை அணுகினார்.(31) இப்படியே மன்னன் சம்வர்ணன், நல்லதைச் செய்யும் தலைவனான விவஸ்வானை, வசிஷ்டரின் (ஆன்ம சக்தியின்) மூலம் வழிபட்டு ஒரு மனைவியை அடைந்தான்.(32)

மனிதர்களில் காளையான சம்வர்ணன், தேவர்களும், கந்தர்வர்களும் வந்து செல்லும் அந்த மலையின் சாரலில் தபதியின் கரங்களை உரிய சடங்குகளுடன் ஏற்றான்.(33) பிறகு அந்த அரச முனி {சம்வர்ணன்}, வசிஷ்டரின் அனுமதியுடன், தன் மனைவியுடன் அம்மலையில் விளையாட விரும்பினான்.(34)  அவன் தன் வசிஷ்டரையே தன் தலைநகரையும், நாட்டையும், காடுகளையும் ஆளச் செய்தான்.(35) பிறகு அந்த மன்னனிடம் விடைபெற்றுக் கொண்ட வசிஷ்டர் அவனை அங்கேயே விட்டு விட்டு சென்றுவிட்டார். அதன்பேரில் அம்மன்னன் ஒரு தேவனைப் போல அம்மலையில் விளையாடத் தொடங்கினான்.(36) அம்மன்னன் தன் மனைவியுடன் அம்மலையிலிருந்த காடுகளிலும், தோப்புகளிலும் பனிரெண்டு (நீண்ட) வருடங்கள் விளையாடிக் கொண்டிருந்தான்.(37)

ஓ பாரதக் குலத்தவனே, அந்தப் பனிரெண்டு வருடகாலத்திற்கும், ஆயிரங்கண்களைக் கொண்டவன் அம்மன்னனின் நாட்டிலும், தலைநகரிலும் மழையைப் பொழியவில்லை.(38) ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, பஞ்சகாலம் வந்தபோது, செடிகள், தானியங்கள், விலங்குகளுடன் சேர்ந்து மக்களும் மடியத் தொடங்கினர்.(39) அந்தப் பயங்கர (பஞ்ச) காலத்தில், வானிலிருந்து ஒரு துளி பனியும் விழவில்லை. அதன் விளைவாக எந்தத் தானியங்களும் அங்கே விளையவில்லை.(40) அதன்பேரில், பசி அச்சத்தால் பீடிக்கப்பட்ட மக்கள், துயரத்துடன் தங்கள் வீடுகளைவிட்டுவிட்டு அனைத்தத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(41) பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட அந்நாட்டின் மக்கள் தங்கள் மனைவியரையும், பிள்ளைகளையும் கைவிட்டு, ஒருவரைக் குறித்து ஒருவர் கவலைகொள்ளாதிருந்தனர்.(42) பசியிலும், பிணியிலும் பீடிக்கப்பட்ட மக்கள்  இறந்து போல எலும்புக்கூடுகளைப் போல ஆகினர். அந்நகரமே பிசாசுகள் நிறைந்த யமலோகம் போல இருந்தது.(43) நாடு அந்நிலையில் இருப்பதைக் கண்டவரும், சிறப்புமிக்க முனிவரும், தவசிகளில் சிறந்தவரும், அறமனம் கொண்டவருமான வசிஷ்டர், அத்தீமைக்குப் பரிகாரம் செய்ய நினைத்தார்.(44) ஓ மன்னா, அவர் பல வருடங்களைத் தன் மனைவியோடு கழித்திருந்த சம்வர்ணனையும், அவனது மனைவியான தபதியையும் அந்நாட்டிற்கும் திரும்ப அழைத்து வந்தார்.(45)

அந்த மன்னர்களில் சிறந்தவன் மீண்டும் தன் தலை நகரை அடைந்தபோது, பழைய நிலைமைகளை மீண்டன, ஆயிரங்கண் கொண்டவனும், அசுரர்களைக் கொல்பவனுமான தேவன் {இந்திரன்}, அபரிமிதமாக மழையைப் பொழிந்து தானியங்களை வளரச் செய்தான்.(46) இவ்வாறு நல்ல மனம் கொண்ட அந்த மன்னர்களில் சிறந்தவன் மீண்டும் நிறுவப்பட்டதும் அந்நாடும் நகரமும் மீண்டும் பெரும் மகிழ்ச்சியை அடைந்தது.(47) அதன்பிறகு அம்மன்னன் தன் மனைவியான தபதியுடன் சேர்ந்து இந்திரனும் சச்சியையும் பல பனிரெண்டு வருட வேள்வியைச் செய்தான்”.(48)

கந்தர்வன் தொடர்ந்தான், “ஓ பார்த்தா,  இதுவே பழங்காலத்தில் விவஸ்வானின் மகளான தபதியின் அருளப்பட்ட வரலாறாகும். அவளைக் காரணமாகக் கொண்டே நீ தபதேயன் ஆனாய்.(49) ஓ அர்ஜுனா, மன்னன் சம்வர்ணன், அந்தத் தபதியிடம், குரு என்ற பெயருடைய மகனைப் பெற்றெடுத்தான். தபதியின் குலத்தில் பிறந்ததாலேயே நீ தபதேயேன் என்று அழைக்கப்படுகிறாய்” {என்றான் கந்தர்வன்}”.(50)-

யார் அந்த வசிஷ்டர்? – ஆதிபர்வம் பகுதி 176-சைத்ரரதப் பர்வம் – 10)-வசிஷ்டரின் மகிமையைச் சொன்ன கந்தர்வன்

வைசம்பாயனர் சொன்னார், கந்தர்வனின் அவ்வார்த்தைகளைக் கேட்டவனும் பாரதக் குலத்தில் சிறந்தவனுமான அர்ஜுனன், முழு மதியைப் போல அர்ப்பணிப்பால் நிறைந்து நின்றான்.(1) குருக்களில் சிறந்தவனா அந்தப் பெரும் வில்லாளி {அர்ஜுனன்}, வசிஷ்டரின் ஆன்ம பலத்தைக் கேட்டு ஆவலால் தூண்டப்பட்டு அந்தக் கந்தர்வனிடம் இவ்வாறு பேசினான்,(2) “வசிஷ்டர் என்று நீர் சொன்ன முனிவரைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். அவரைக் குறித்து முழுமையாக எனக்குச் சொல்வாயாக.(3) ஓ கந்தர்வர் தலைவனே, எங்கள் மூதாதையர்களுக்குப் புரோகிதராக இருந்த அந்தச் சிறப்பு மிகுந்த முனிவர் யார் என்பதையும் சொல்” என்று கேட்டான்.(4)

அதற்கு அந்தக் கந்தர்வன், “வசிஷ்டர், பிரம்மனின் ஆன்ம மகனும் (மனத்தால் பிறந்தவர்) அருந்ததியின் கணவரும் ஆவார். தேவர்களாலும் கட்டுப்படுத்த முடியாத ஆசை மற்றும் கோபத்தைத் தனது ஆன்ம நோன்புகளால் வெற்றிக் கொண்டு, அவை {ஆசையும் கோபமும்} அவரது கால்களைப் பிடித்துவிடும்படி வாழ்வை அமைத்துக் கொண்டவர். விஷ்வாமித்திரர் செய்த குற்றத்தினால் அவரது கோபம் தூண்டப்பட்டாலும், அந்த உயர் ஆன்ம முனிவர் கௌசிகர்களைக் (மன்னன் விஷ்வாமித்திரரின் இனக்குழுவை {குலத்தை}) கொல்லாதிருந்தார்.(5,6)  தனது மகன்களை இழந்து துயருற்ற போதும், தன்னைச் சக்தியற்றவராகக் கருதிக் கொண்டு, தான் அப்படியில்லையென்றாலும், விஷ்வாமித்திரருக்கு அழிவு உண்டாகும்படி எக்காரியத்தையும் செய்யாமல், சமுத்திரம் கலங்கினாலும் கண்டங்கள் கலங்காததுபோல இருந்தார். வசிஷ்டர் தனது பிள்ளைகளை மரணதேவன் பகுதியில் இருந்து மீட்டு யமனை (யம {தர்ம} நீதியை) மீறிச் செயல்படவில்லை. தன்னையே வெற்றிக் கொண்ட சிறப்பு மிகுந்தவரை அடைந்ததால்தான், இக்ஷவாகுவாலும் மற்ற பெரும் ஏகாதிபதிகளாலும் முழு உலகத்தையும் அடைய முடிந்தது. ஓ குருகுல இளவரசனே {அர்ஜுனா}, முனிவர்களில் சிறந்த வசிஷ்டரைப் புரோகிதராக அடைந்ததால்தான், அந்த ஏகாதிபதிகளால் பெரும் வேள்விகளைச் செய்ய முடிந்தது. ஓ பாண்டவர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, மறுபிறப்பாளரான அந்த முனிவர், தேவர்களுக்குப் பிருஹஸ்பதி உதவுவது போல, அந்த ஏகாதிபதிகள் வேள்வி செய்யத் துணை புரிந்தார்.(7-11)

எனவே, இதயத்தில் அறம் நிலைத்த, வேதமறிந்த நல்ல பிராமணனைப் புரோகிதனாக உங்களுக்கு நியமித்துக் கொள்வாயாக.(12) ஓ பார்த்தா {அர்ஜுனா}, பூமியை வெற்றிக் கொண்டு, தனது எல்லையை விரிவுபடுத்திக் கொள்ள விரும்பும் நல்ல குலத்தில் பிறந்த க்ஷத்திரியன், முதலில் நல்ல புரோகிதரை நியமித்துக் கொள்ள வேண்டும். உலகத்தை வெற்றிகொள்ள நினைப்பவன் எவனோ, அவன் ஒரு பிராமணனைத் தன் முன் கொண்டிருக்க வேண்டும்.(13) எனவே, ஓ அர்ஜுனா, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அறிந்து, புலன்களைத் தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கல்விமானான ஒரு தகுதிவாய்ந்த பிராமணரை உங்கள் புரோகிதராக நியமித்துக் கொள்வாயாக” {என்றான் கந்தர்வன்}”.(14)

விஷ்வாமித்திரரை வீழ்த்திய வசிஷ்டர்! – ஆதிபர்வம் பகுதி 177-சைத்ரரதப் பர்வம் – 11)-வசிஷ்டரின் ஆசிரமத்திற்குச் சென்ற விஷ்வாமித்திரர்; வசிஷ்டரின் விருந்தோம்பல்; வசிஷ்டரிடம் அவரது பசுவைக் கேட்ட விஷ்வாமித்திரர்; வசிஷ்டரின் சக்தி; தவம் செய்து பிராமணரான விஷ்வாமித்திரர்..

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இதைக் கேட்ட அர்ஜுனன், “ஓ கந்தர்வா, தெய்வீக ஆசிரமங்களில் வசித்த விஷ்வாமித்திரர், வசிஷ்டர் ஆகிய இருவருக்குமிடையில் எப்போது பகை ஏற்பட்டது? இதைக்குறித்து எங்களுக்கு அனைத்தையும் சொல்வாயாக” என்று கேட்டான்.(1)

அதற்குக் கந்தர்வன் மறுமொழியாக, “ஓ பார்த்தா {அர்ஜுனா}, வசிஷ்டரின் கதை மூவுலகங்களாலும் புராணமாக மதிக்கப்படுகிறது. நான் அதை முழுமையாக உரைக்கும்போது கேட்டுக் கொள்வாயாக.(2) ஓ பாரதக் குலத்தின் காளையே, கன்யாகுப்ஜத்தில், குசிகரின் மகனாகிய உலகப் புகழ் கொண்ட பெரும் மன்னன் காதி என்று ஒருவன் இருந்தான்.(3) அந்த அறம்சார்ந்த காதிக்கு, எதிரிகளை அழிப்பவரான விஷ்வாமித்திரர் என்ற மகன் இருந்தார். அவர் பெரிய படையையும், பல மிருகங்களையும், பல வாகனங்களையும் வைத்திருந்தார்.(4) அடர்ந்த காடுகளின் வழியாக மான் வேட்டைக்காகத் தனது அமைச்சர்களுடன் சேர்ந்து விஷ்வாமித்திரர் உலவுவது வழக்கம்.(5)

ஒரு காலத்தில், மன்னர் விஷ்வாமித்திரர் மான்களை வேட்டையாடிக் கொண்டிருந்த போது, களைப்பாலும், தாகத்தாலும் மிகவும் பலவீனமானார். களைப்படைந்த அந்த ஏகாதிபதி, வசிஷ்டரின் ஆசிரமத்தை வந்தடைந்தார்.(6) அருளப்பட்டவரும், சிறப்புவாய்ந்தவருமான அம்முனிவர் {வசிஷ்டர்}, மன்னர் விஷ்வாமித்திரர் வருவதைக் கண்டு, அந்த மனிதர்களில் சிறந்தவரை {விஷ்வாமித்திரரை} மரியாதையுடன் கவனித்துக் கொண்டார்.(7) ஓ பாரதா {அர்ஜுனா}, அந்த முனிவர் அந்த ஏகாதிபதிக்கு, முகத்தையும், கால்களையும் கழுவிக் கொள்ள நீரும், அர்க்கியாவும், வனத்தில் விளையும் கனிகளையும், தெளிந்த நெய்யையும் கொடுத்து வணங்கினார்.(8) அந்தச் சிறப்புவாய்ந்த முனிவரிடம் {வசிஷ்டரிடம்}, விரும்பியதைக் கொடுக்கும் ஒரு பசு {காமதேனு} இருந்தது. அந்தப் பசுவிடம், “இதைக் கொடு” என்று கேட்டதும், அவரிடம் கேட்டதை உடனே கொடுத்துவிடுவாள்.(9)

அவள் கானகத்தில் விளையும் பல பழங்களையும், தானியங்களையும், பாலையும், ஆறு வகை {சுவைகளில்} ரசங்களையும், அமுதத்தைப் போன்ற பல பொருட்களையும் கொடுத்தாள். ஓ அர்ஜுனா, குடிக்கும் வகையிலும், சாப்பிடும் வகையிலும், நக்கிச் சாப்பிடும் வகையிலும், உறிஞ்சிச் சாப்பிடும் வகையிலும் பல பண்டங்களையும், பல்வேறு மதிப்புமிக்க ரத்தினங்களையும், பல்வேறு ஆடைகளையும் கொடுத்தாள். இந்த விரும்பத்தக்க அனைத்துப் பொருட்களும் கொடுக்கப்பட்டு, அந்த ஏகாதிபதி பெரிதும் வழிபடப்பட்டார். இதனால், தனது அமைச்சர்களுடனும், சேனைகளுடனும் கூடிய அந்த மன்னர், மிகுந்த மனநிறைவையடைந்தார்.(10-12) ஆறு உயர்ந்த {மேலெழுந்த} உறுப்புகளையும், அழகான விலா மற்றும் தொடைகளையும், ஐந்து அகலமான உறுப்புகளையும், தவளையைப் போன்ற கண்களையும், அழகான உருவத்தையும், பருத்த {பால் சுரக்கும்} மடிகளையும், குற்றமற்ற, நேர்த்தியான உயர்ந்த காதுகளையும், அழகான கொம்புகளையும், நன்றாக வளர்ந்த தலையையும் கழுத்தையும் கொண்டிருந்த அந்தப் பசுவைக் கண்டு அந்த ஏகாதிபதி {விஷ்வாமித்திரர்} மிகவும் வியந்தார்.(13,14)

ஓ இளவரசனே {அர்ஜுனா}, அந்தக் காதியின் மகன் {விஷ்வாமித்திரர்}, அனைத்தையும் கண்டு மனநிறைவை அடைந்து, நந்தினி என்ற அந்தப் பசுவை வெகுவாகப் புகழ்ந்து அந்த முனிவரிடம்,(15) “ஓ பிராமணரே! ஓ பெரும் முனிவரே, பத்தாயிரம் பசுக்களைப் பெற்றுக் கொண்டோ, எனது நாட்டைப் பெற்றுக் கொண்டோ, இந்த நந்தினியை எனக்குக் கொடுப்பீராக. {இப்பசுவைக் கொடுத்துவிட்டு} எனது நாட்டை அடைந்து மகிழ்ச்சியடைவீராக” என்றார்.(16)

விஷ்வாமித்திரரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வசிஷ்டர், “ஓ பாவங்களற்றவரே, தேவர்கள், விருந்தினர்கள், பித்ருக்கள் மற்றும் எனது வேள்விகளின் காரியத்திற்காகவே நான் இந்தப் பசுவை என்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறேன். உமது நாட்டையே நீர் கொடுத்தாலும், அதற்கு மாற்றாக நான் நந்தினியைக் கொடுக்க மாட்டேன்” என்றார்.(17)

அதற்கு விஷ்வாமித்திரர், “நானோ க்ஷத்திரியன், நீரோ கல்விக்கும், தவத்திற்கும் உம்மை அர்ப்பணித்திருக்கும் ஒரு பிராமணராவீர். ஆன்மாவைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமைதியான பிராமணர்களுக்குப் பெரிதான சக்தி ஏதாவது இருக்குமா?(18) பத்தாயிரம் பசுக்களை நான் உமக்குக் கொடுக்க முன் வரும்போதும், நான் விரும்பியதை நீர் எனக்குக் கொடுக்காவிட்டால், நான் எனது வர்ணத்தின் பழக்கத்தைக் கைவிடாமல், இப்பசுவைப் பலவந்தமாக எடுத்துச் செல்வேன்” என்றார்.(19)

அதற்கு வசிஷ்டர், “நீர் பெரும்பலம் கொண்ட க்ஷத்திரியனும், பெரும்பலம்வாய்ந்த ஏகாதிபதியும் ஆவீர். அதன் உரிமை குறித்துக் கருதாமல், நீர் விரும்பியதை விரைவாகச் செய்வீராக” என்றார்”.(20)

கந்தர்வன் தொடர்ந்தான், “இப்படி வசிஷ்டரால் சொல்லப்பட்ட விஷ்வாமித்திரர், ஓ பார்த்தா, அப்போது, அன்னத்தைப் போன்றும், நிலவைப் போன்றும் வெண்ணிறம் கொண்ட அந்தப் பசுவான நந்தினியை கசையால் அடித்து, மேலும் பலவாறாகத் துன்புறுத்திப் பலவந்தமாக இழுக்க முயன்றார். ஓ பார்த்தா {அர்ஜுனா}, அந்த அப்பாவி நந்தினி, சிறப்புமிகுந்த வசிஷ்டரை அணுகி தனது முகத்தை உயர்த்திப் பாவமாகப் பார்த்தாள்.(21,22) கடுமையாகத் துன்புறுத்தப்பட்டும், அவள் அந்த முனிவரின் ஆசிரமத்தைவிட்டு அகல மறுத்தாள். அவளது துன்பத்தைக் கண்ட வசிஷ்டர்,(23) “ஓ இனிமையானவளே, நீ தொடர்ந்து அடிபட்டுக் கொண்டிருக்கிறாய். நான் உனது கதறலைக் கேட்கிறேன். ஆனால், ஓ நந்தினி, விஷ்வாமித்திரர் உன்னைப் பலவந்தமாக இழுத்துச் செல்லும்போது, சதா மன்னிக்கும் குணம் கொண்ட ஒரு பிராமணனான நான் இவ்விஷயத்தில் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்”.(24)

கந்தர்வன் தொடர்ந்தான், “அப்போது, ஓ பாரதக் குலத்தின் காளையே, விஷ்வாமித்திரரையும், அவரது படைகளின் காட்சியையும் கண்டு பயந்து போன நந்தினி, அந்த முனிவரை {வசிஷ்டரை} இன்னும் அருகில் சென்று அணுகி,(25) “ஓ சிறப்பானவரே, அப்பாவியான என்னிடம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்? விஷ்வாமித்திரரின் படையினரால் கடுமையாகக் கசைகளால் அடிபடும் என்னைத் தலைவன் இல்லாதவள் {முதலாளி இல்லாதவள்} போலப் பரிதாபகரமாக ஏன் கதறவிடுகிறீர்?” என்று கேட்டாள்.(26)

அழுது கொண்டு, துன்பத்திலிருக்கும் நந்தினியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த முனிவர், தனது பொறுமையை இழக்காமல், தனது மன்னிக்கும் நோன்பிலிருந்தும் விலகாமல்,(27) “ஒரு க்ஷத்திரியனின் பலம் உடலில் இருக்கிறது. ஒரு பிராமணனின் பலம் அவனது மன்னிக்கும் தன்மையிலிருக்கிறது {பொறுமையிலிருக்கிறது}. நான் எனது மன்னிக்கும் தன்மையை விட முடியாத காரணத்தால், ஓ நந்தினி, நீ எதைத் தேர்ந்தெடுக்கிறாயோ அங்கு செல்வாயாக” என்றார்.(28)

அதற்கு நந்தினி, “ஓ சிறப்பு மிகுந்தவரே, நீர் என்னைக் கைவிடுகிறீரா என்ன? நீர் என்னைக் கைவிடாமல், ஓ பிராமணரே! என்னைப் பலவந்தத்தின் காரணமாக எங்கும் அழைத்துச் செல்ல முடியாது” என்றாள்.(29)

வசிஷ்டர், “ஓ அருளப்பட்டவளே, நான் உன்னைக் கைவிடவில்லை! உன்னால் முடியுமென்றால், நீ இங்கேயே இரு! தடிமனான கயிறுகளால் கட்டப்பட்டு, அதனால் பெரிதும் பலவீனமடைந்து, உனது இளம் கன்று இழுத்துச் செல்லப்படுகிறது! அதோ பார்” என்றார்”.(30)

கந்தர்வன் தொடர்ந்தான், “அப்போது, வசிஷ்டரின் பசு, அவ்வார்த்தையைக் கேட்டு, கழுத்தை மேல்நோக்கி அசைத்துத் தனது தலையை உயர்த்திப் பார்த்துப் பயங்கரமாக மாறியது.(31) தொடர்ந்து அடிக்கப்பட்ட அந்தப் பசு, கோபத்தால் கண்கள் சிவக்க, விஷ்வாமித்திரரின் படைகளை எல்லாப் பக்கங்களிலும் தாக்கிற்று.(32) கசையடியால் துன்புறுத்தப்பட்டு அங்கேயும், இங்கேயும் ஓடிக் கண்கள் சிவக்க, அவளுக்குக் கோபம் அதிகமாகியது.(33) கோபத்தால் எரிந்த அந்த நந்தினி, மதிய நேரச் சூரியன் போல உக்கிரமாகக் காணப்பட்டாள். அவள் எரியும் நிலக்கரியாலான பெரும் நெருப்பைத் தனது வாலிலிருந்து மழையெனப் பொழிந்தாள்.(34)

சிறிது நேரம் கழித்து, அவளது வாலிலிருந்து, பல்ஹவர்களின் படையை உற்பத்தி செய்தாள். அவளது {பால் கொடுக்கும்} மடியிலிருந்து திராவிடர்கள் மற்றும் சகர்கள் ஆகியோரின் படையை உற்பத்தி செய்தாள். தனது கருப்பையிலிருந்து யவனர்கள் படையையும், சாணத்திலிருந்து சபரர்களையும்,(35) சிறுநீரிலிருந்து காஞ்சிப் படைகளையும், தனது எல்லாப் புறங்களிலிருந்தும் மற்றச் சபரர்களையும், தனது வாயின் உமிழ்நீரிலிருந்து பௌந்தரர்களையும், கிராதர்களையும், மற்ற யவனர்களையும், சின்ஹலர்களையும் {சிங்களர்களா?}, மிலேச்ச குடிகளான, கசர்கள், சிபுகர்கள், சீனர்கள், ஹூனர்கள், கேரளர்கள் மற்றும் பல மிலேச்சப் படைகளையும் உற்பத்தி செய்தாள்.(36,37) பல்வேறு வகை சீருடைகளில் இருந்த அந்த மிலேச்சர்களின் படைகளிடம், அவர்கள் பிறக்கும்போதே பல்வேறு ஆயுதங்களும் உண்டாயிற்று. இவை யாவும் விஷ்வாமித்திரரின் கண் முன்பே அரங்கேறி, அந்த ஏகாதிபதியின் படைகள் தாக்குதலுக்கு உள்ளாகின. அந்த மிலேச்சர்களின் படை எவ்வளவு பெரியது என்றால், விஷ்வாமித்திரரின் ஒரு சிப்பாயைத் தாக்க அந்த மிலேச்ச படையிலிருந்து அறுவரோ, எழுவரோ பாய்ந்தனர்.(38,39)

ஆயுதங்களின் அடர்த்தியான மழையால் விஷ்வாமித்திரரின் படை சிதுறுண்டு பல திக்குகளுக்கும் ஓடியது. இவை யாவும் விஷ்வாமித்திரரின் கண்ணெதிரிலேயே நடைபெற்றது.(40) ஓ பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, வசிஷ்டருடைய படையினர் கோபத்தால் உந்தப்பட்டு இருந்தாலும், விஷ்வாமித்திரர் படையினரில் ஒருவரின் உயிரையும் எடுக்கமுடியவில்லை.(41) அந்த ஏகாதிபதியின் படையை நந்தினி சாதாரணமாக ஓட விட்டாள். அந்தப் படை இப்படியே எந்தப் பாதுகாப்பையும் காணாமல் இருபத்தியேழு மைல்களுக்கு ஓடின.(42) விஷ்வாமித்திரர் இந்த அற்புதக் காட்சியைக் கண்டு, பிராமண சக்தியை உணர்ந்து, க்ஷத்திரிய சக்தியை வெறுத்து, “ச்சீ… ச்சீ… க்ஷத்திரிய சக்தி சிறுமை கொண்டது. பிராமண சக்தியே உண்மையான சக்தி.(43,44) பலத்தையும், பலவீனத்தையும் ஆராய்ந்து, ஆன்மிகமே உண்மையான பலம் என்பதை உணர்ந்தேன்” என்று சொன்னார். அதன்பிறகு அந்த ஏகாதிபதி {விஷ்வாமித்திரர்}, தனது பெரிய நாட்டைக் கைவிட்டு,(45) அனைத்து இன்பங்களுக்கும் தனது முதுகைக் காட்டி {அனைத்து இன்பங்களையும் துறந்து}, தனது மனத்தை தவத்தில் நிலைக்க வைத்தார். தவத்தில் வெற்றிமுடிசூடி, மூவுலகங்களையும் தனது ஆன்ம நோன்புகளின் வெப்பத்தால் எரித்து,(46) அனைத்து உயிர்களையும் அதனால் துன்பத்துக்குள்ளாக்கினார். இப்படியே அந்த விஷ்வாமித்திரர் பிராமணத் தன்மையை அடைந்தார். இறுதியாக, அந்தக் குசிகனின் மைந்தன் {விஷ்வாமித்திரர்}, இந்திரனுடன் சேர்ந்து (தேவலோகத்தில்) சோம பானம் அருந்தினார்” {என்றான் கந்தர்வன்}.(47)

மன்னன் கல்மாஷபாதன்! – ஆதிபர்வம் பகுதி 178-(சைத்ரரதப் பர்வம் – 12)-வசிஷ்டரின் மகன் சக்திரி; கல்மாஷபாதனுக்குச் சாபம் கொடுத்த சக்திரி; வசிஷ்டரின் மகன்களைக் கொன்று தின்ற கல்மாஷபாதன்; பிள்ளைசோகத்தால் தற்கொலை செய்து கொள்ள முயன்ற வசிஷ்டர்.

கந்தர்வன் தொடர்ந்தான், “ஓ பார்த்தா, இக்ஷவாகு குலத்தில் பிறந்த கல்மாஷபாதன்[1] என்றொரு மன்னன் இவ்வுலகத்தில் ஈடு இணை இல்லாத ஆற்றலைக் கொண்டவனாக இருந்தான்.(1) (கல்மாஷபாதனுக்கு ஸௌதாசன் மற்றும் மித்ரஸஹன் என்ற பெயர்களும் இருந்ததாக கும்பகோணம் பதிப்பு குறிப்பிடுகிறது.)ஒரு நாள் அம்மன்னன், வேட்டையாட விரும்பித் தனது தலைநகரைவிட்டுக் கானகத்திற்குச் சென்று பல மான்களையும், காட்டுப் பன்றிகளையும் (தனது கணைகளால்) துளைத்தான்.(2) அந்த அடர்ந்த கானகத்தில், மன்னன் பல காண்டாமிருகங்களையும் வீழ்த்தினான். இந்த விளையாட்டில் நெடுநேரம் ஈடுபட்டு மிகவும் களைப்படைந்த அவன், கடைசியாகத் தனது துரத்தலைக் கைவிட்டுச் சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்பினான்.(3) சக்தி கொண்ட பெரும் விஷ்வாமித்திரர், சிறிது காலத்திற்கு முன் இந்த ஏகாதிபதியைத் தனது சீடனாக ஏற்க விரும்பினார்.அப்படிப்பட்ட அந்த ஏகாதிபதி! பசியாலும், தாகத்தாலும் களைப்படைந்து கானகத்தில் முன்னேறி வரும்போது, சிறப்பு மிகுந்த வசிஷ்டரின் மகனான, முனிவர்களில் சிறந்தவர் ஒருவர் அதே வழியில் அவனுக்கு எதிர்ப்பட்டார். போரில் எப்போதும் வெற்றிவாகையே சூடிவந்த அந்த மன்னன், வசிஷ்ட குலத்தை வளரச் செய்யும் சக்திரி என்ற பெயர் கொண்ட வசிஷ்டரின் நூறு மகன்களில் மூத்த மகனைக் கண்டான்.(4-6)

அம்மன்னன் அவரைக் கண்டு, “எங்கள் வழியில் இருந்து விலகி நில்லும்” என்றான். முனிவர் அந்த ஏகாதிபதியிடம் இணக்கமான சமாதானமான முறையில் இனிமையாக,(7) “ஓ மன்னா, இஃது எனது வழி. மன்னர்கள் எப்போதும் பிராமணர்களுக்கு வழி உண்டாக்க வேண்டும் என்பதே அற நெறியின் நிலைத்த விதியாகும். இதுவே தர்மம் மற்றும் கடமைக்கான அனைத்து நீதிகளிலும் சுட்டிக்காட்டப்படுகிறது” என்றார்.(8)

இப்படி அந்த இருவரும் மாறிமாறித் தங்கள் பக்கம் உள்ள நியாயத்தைச் சொல்லி, “விலகி நில்லும், விலகி நில்லும்” என்றே சொல்லிக் கொண்டிருந்தனர்.(9) தர்மத்தின் வழியைத் தனது வழியாகக் கொண்ட அந்த முனிவரும் வழிகொடுக்கவில்லை. செருக்கும், சினமும் கொண்ட அந்த அரசனும் வழி கொடுக்கவில்லை.(10) இதனால் அந்த முனிவரின் மீது கோபம் கொண்ட அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், வழியும் கொடுக்காமல், அவரைக் கசையால் அடித்து ராட்சசன் போல நடந்து கொண்டான்.(11) இப்படி அந்த ஏகாதிபதியால் கசையால் அடிக்கப்பட்ட அந்த வசிஷ்டரின் மகனான {சக்திரி} முனிவர்களில் சிறந்தவர், கோபத்தால் தனது உணர்வை இழந்து, விரைவாக அந்த ஏகாதிபதிகளில் முதன்மையானவனை {கல்மாஷபாதனை},(12) “ஓ மன்னர்களில் இழிந்தவனே, நீ ஒரு துறவியிடம் ராட்சசனைப் போல நடந்து கொண்டதால், இந்நாள் முதல் நீ மனித சதையை உண்டு வாழும் ராட்சசனாக மாறுவாய்.(13) மன்னர்களில் இழிந்தவனே, நீ இந்த மனித உருவம் பாதிக்குமாறு உலகம் முழுவதும் சுற்றித் திரிவாய்” என்று சபித்தார். இப்படிச் சக்திரி என்ற அந்தப் பெரும் ஆற்றலைக் கொண்ட முனிவர், மன்னன் கல்மாஷபாதனிடம் பேசினார். (14)

இந்நேரத்தில், அந்த ஏகாதிபதியும், வசிஷ்டரின் மகனும் இருந்த அந்த இடத்திற்கு விஷ்வாமித்திரர் வந்தார். ஏற்கனவே கல்மாஷபாதனைச் சீடனாக ஏற்பதில் விஷ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்கும் இடையில் ஒரு பிணக்கு இருந்தது.(15) ஓ பார்த்தா {அர்ஜுனா}, கடும் விரதங்கள் இருந்த, பெரும் சக்தி கொண்ட விஷ்வாமித்திரர் அவ்விருவரையும் (அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்பதைத் தனது ஆன்மப் பார்வையால் கண்டு) அணுகினார்.(16) ஓ பாரதா {அர்ஜுனா}, விஷ்வாமித்திரர் தனது நன்மையை விரும்பி, அந்த இடத்தில் அவர்கள் இருவருக்கும் தெரியாமல் அரூபமாக இருந்து நடக்கும் சம்பவங்களைக் கவனித்து வந்தார். அந்தச் சாபம் சொல்லப்பட்டவுடன், அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனுக்கு இவர் வசிஷ்டரின் மகன் என்பதும், வசிஷ்டருக்கு இணையான சக்தி கொண்டவர் இவர் என்பதையும் அறிந்து கொண்டான்.(17,18)  சக்திரியால் சபிக்கப்பட்ட அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், அந்த முனிவரைச் சாந்தப்படுத்த எண்ணி அவரிடம் தாழ்மையாக வேண்டத் தொடங்கினான்.(19)

ஓ குருக்களின் தலைவா, விஷ்வாமித்திரர், மன்னனின் மனநிலையை அறிந்து கொண்டு (தான் நினைத்த காரியம் மாறிப் போகுமே என்றெண்ணி) அந்த மன்னனின் உடலில் புகும்படி, ஒரு ராட்சசனை ஏவினார்.(20) கிங்கரன் என்ற பெயர் கொண்ட அந்த ராட்சசன், சக்திரியின் சாபத்திற்குக் கட்டுப்பட்டும், விஷ்வாமித்திரரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டும் அந்த ஏகாதிபதியின் உடலில் இறங்கினான்.(21) ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, ராட்சசனின் கட்டுப்பாட்டுக்குள் ஏகாதிபதி வந்துவிட்டான் என்பதை அறிந்த முனிவர்களில் சிறந்தவரான விஷ்வாமித்திரர், இடத்தை விட்டு அகன்று அங்கிருந்து சென்று விட்டார்.(22) சிறிது நேரம் கழித்து, ஓ பார்த்தா, அந்த ஏகாதிபதி, அந்த ராட்சசனால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி, அவனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் சென்று, தனது உணர்வுகளை இழந்தான்.(23) அந்த நேரத்தில், ஒரு பிராமணர் அம்மன்னனைக் கானகத்தில் கண்டார். மிகுந்த பசியோடு இருந்த அந்த பிராமணர், அந்த மன்னனிடம் இறைச்சியுடன் கூடிய உணவை இரந்து கேட்டார்.(24) நண்பர்களை மகிழ்விக்கும் அரசமுனி கல்மாஷபாதன், பிராமணரிடம், “இங்கேயே இரும், ஓ பிராமணரே, சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன்.(25) நான் அப்படி வரும்போது நீர் விரும்பும் உணவை கொடுக்கிறேன்” என்றான். இப்படிச் சொல்லிவிட்டு ஏகாதிபதி சென்றுவிட்டான்.

ஆனால் பிராமணர் அங்கேயே இருந்தார்.(26) உயர்ந்த எண்ணம் கொண்ட மன்னன் சில மணி நேரங்களுக்குத் தன் விருப்பப்படி மகிழ்ச்சியாக உலவிவிட்டுக் கடைசியாகத் தனது அந்தப்புரத்திற்குள் நுழைந்துவிட்டான்.(27) நடு இரவில் விழித்த அந்த மன்னன், தான் கொடுத்த உறுதிமொழி நினைவுக்கு வந்தவனாக, தனது சமையற்காரனை அழைத்து,(28) கானகத்தில் தங்கியிருக்கும் பிராமணரிடம் தான் கொடுத்த உறுதியைச் சொல்லி, “அங்கே சென்று அவருக்கு உணவும் இறைச்சியும் கொடுத்து உபசரிப்பாயாக” என்றான்”.(29)

கந்தர்வன் தொடர்ந்தான், “இப்படிக் கட்டளையிடப்பட்ட அந்தச் சமையற்காரன் இறைச்சி தேடி வெளியே சென்றான். இறைச்சி கிடைக்காமல் வருத்தப்பட்டு, மன்னனிடம் திரும்பி வந்து, தனது தோல்வியைச் சொன்னான்.(30) ராட்சசனின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த ஏகாதிபதி! எந்த மனவுறுத்தலும் இல்லாமல் மறுபடியும் மறுபடியும், “மனித இறைச்சியை அவருக்கு உணவாகக் கொடுப்பாயாக” என்றான்.(31)

அதற்கு அந்தச் சமையற்காரனும், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, (மன்னனுக்குக் கட்டுப்பட்ட) மரண தண்டனை கொடுப்பவர்களிடம் சென்று மனித இறைச்சியை வாங்கி,(32) அதைக் கழுவி, முறையாகச் சமைத்து, வேக வைத்த அரிசி சோற்றால் அதை மூடி, ஆன்ம நோன்புகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த பிராமணருக்குக் காணிக்கையாகக் கொடுத்தான்.(33) ஆனால், பிராமணர்களில் சிறந்தவர், தனது ஞானப்பார்வையால், அந்த உணவு புனிதமற்றது என்பதைக் கண்டும், உண்ணத் தகுதியற்றது என்பதை அறிந்தும், கோபத்தால் கண்கள் சிவக்க,(34) “மன்னர்களில் இழிந்த இவன் எனக்குப் புனிதமற்ற, உண்ணத் தகுதியற்ற உணவைக் கொடுத்ததால், அந்தப் பாவி, இதே போன்ற உணவை விரும்புபவனாக ஆகட்டும்.(35) சக்திரி சபித்தது போல இவன் மனித இறைச்சியில் விருப்பம் கொண்டு, பாவியாக இந்த உலகம் முழுவதும் சுற்றி, அனைத்து உயிர்களையும் பயமுறுத்திக் கொண்டிருப்பான்” என்று சொன்னார்.(36)

அதற்காரணமாக, அச்சாபம் இரண்டாவது முறையாக அந்த மன்னன் மீது விழுந்து, மிகவும் பலமிக்கச் சாபமாகியது. இதனால், உடனே அந்த மன்னன் ராட்சச மனநிலை கொண்டு, விரைவில் தனது உணர்வுகளை மொத்தமாக இழந்தான்.(37) சிறிது காலம் கழித்து, ஓ பாரதா {அர்ஜுனா}, அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன், தனக்குள் இருக்கும் ராட்சசனால் தனது மொத்த உணர்வுகளையும் இழந்து, தனக்குச் சாபமிட்ட சக்திரியைக் கண்டு,(38) “இந்த இயல்புக்குமிக்கச் சாபத்தை நீர் எனக்கு அளித்தமையால், உம்மைக் கொன்றே நான் மனித இறைச்சியை உண்பதைத் தொடங்கப் போகிறேன்” என்று சொன்னான்.(39) இப்படிச் சொன்ன அந்த மன்னன், ஒரு புலி தனக்குப் பிடித்த இரையை அடித்துத் உண்பது போல உடனடியாக சக்திரியைக் கொன்று தின்றான்.(40)

சக்திரி இப்படிக் கொல்லப்பட்டு உண்ணப்பட்டதைக் கண்ட விசுவாமித்திரர், வசிஷ்டரின் மற்ற மகன்களுக்கு எதிராகவும் அந்த ராட்சசனைத் தொடர்ந்து ஏவிக் கொண்டிருந்தார்.(41) கோபம் கொண்ட சிங்கம், சிறு மிருகங்களை அடித்து உண்பது போல, அந்த ராட்சசன் சக்திரிக்கு இளையவர்களான, சிறப்புவாய்ந்த வசிஷ்டரின் மற்ற மகன்களையும் விழுங்கினான்.(42) தனது மகன்கள் தொடர்ச்சியாக இறந்ததற்குக் காரணம் விஷ்வாமித்திரர்தான் என்பதை அறிந்த வசிஷ்டர், ஒரு பெரும் மலை பூமியைத் தாங்குவது போல, பொறுமையாக அனைத்துத் துயரங்களையும் தாங்கிக் கொண்டார்.(43) புத்திசாலிகளில் மனிதர்களில் முதன்மையான அந்த முனிவர்களில் சிறந்தவர், (கோபம் கொண்டு) குசிக இனத்தை {விஷ்வாமித்திரரின் இனம்} அழிக்க எண்ணாமல், தனது உயிரையே தியாகம் செய்யத் தீர்மானித்தார்.(44) அப்படித் தீர்மானித்த, அந்தச் சிறப்பு வாய்ந்த முனிவர், மேரு மலையின் உச்சியிலிருந்து விழுந்தார். ஆனால் அந்தக் கற்பாறைகள் நிறைந்த தரையானது, பஞ்சுப் பொதி போல அவரைத் தாங்கியது.(45)

ஓ பாண்டுவின் மைந்தனே {அர்ஜுனா}, தான் கீழே விழுந்ததனால் இறக்க வில்லை என்பதை அறிந்த அந்தச் சிறப்புமிகுந்தவர், நெருப்பை வளர்த்து, அதற்குள் இறங்கினார்.(46) ஆனால், அந்த நெருப்பு பிரகாசமாக எரிந்ததே தவிர, அவரைப் பொசுக்கவில்லை. ஓ எதிரிகளை அழிப்பவனே, அந்தச் சுடர்விட்டெரியும் நெருப்பு அவருக்குக் குளிர்ச்சியாக இருந்தது.(47) பிறகும் துன்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து மீளாத அந்தப் பெரும் முனிவர், கடலைக் கண்டு, தனது கழுத்தில் கல்லைக் கட்டிக் கொண்டு, அதன் நீரில் விழுந்தார்.(48) ஆனால், அலைகள் அவரை விரைவாகக் கரையில் சேர்த்தன. இறுதியாக, கடும் நோன்புகள் நோற்ற அந்த பிராமணர் {வசிஷ்டர்} தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் எவ்வகையிலும் வெற்றிபெறாமல், இதயத்தில் துயர் நிறைந்து, தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார்” {என்றான் கந்தர்வன்}.(49)

அஸ்மகன் பிறப்பு! – ஆதிபர்வம் பகுதி 179-(சைத்ரரதப் பர்வம் – 13)தற்கொலை முயற்சிகள் நிறைவேறாததால் மீண்டும் ஆசிரமத்திற்குத் திரும்பிய வசிஷ்டர்; தன் மகனான சக்திரியின் மனைவி அதிருசியந்தி கருவுற்றிருப்பதைக் கண்டு தற்கொலை நினைவை விட்டகன்றது; மருமகளுடன் சென்று கொண்டிருந்த வசிஷ்டரைக் கொல்ல வந்த கல்மாஷபாதன்; கல்மாஷபாதனின் சாபம் தணிந்தது; வசிஷ்டருக்குக் கல்மாஷபாதனின் மனைவியிடம் பிறந்த அஸ்மகன்…

கந்தர்வன் தொடர்ந்தான், “பிள்ளைகள் இல்லாத தனது ஆசிரமத்தைக் கண்ட அந்த முனிவர், மீண்டும் பெரும் துயரம் அடைந்து அந்த இடத்தை விட்டு அகன்றார்.(1) அப்படி அவர் சுற்றித் திரிகையில், ஓ பார்த்தா, மழைக்காலத்தில் பெருகி ஓடிய ஒரு நதி, அதன் கரைகளில் இருந்த கணக்கிலடங்கா மரங்களையும், செடிகளையும் அடித்துச் செல்வதைக் கண்டார்.(2) ஓ குரு குலத்தோனே, இதைக் கண்ட அந்தத் துயரத்திலிருந்த முனிவர், தான் கண்டிப்பாக இதில் மூழ்கிப் போவோம் என்று எண்ணிப் பல கயிறுகளால் தன்னைக் கட்டிக் கொண்டு, தனது துயரத்தை நினைத்து வருந்தி, அந்தப் பெரும் நீரூற்றில் விழுந்தார்.(3,4) ஆனால், ஓ எதிரிகளை அழிப்பவனே {அர்ஜுனா}, அந்த நீரூற்று அவரது கட்டுகளை அறுத்து, அவரைக் கரை ஒதுக்கியது.(5)

அந்த முனிவர் அந்தக் கரையிலிருந்து எழுந்து, தான் கட்டிய கட்டுகளை முழுவதுமாக அவிழ்த்தார். ஆர்ப்பாட்டத்தோடு ஓடிய அந்த நீரோட்டம் அவரது கட்டுகளை அறுத்ததால், அம்முனிவர் {வசிஷ்டர்} விபாசை[1] என்று அந்த ஆற்றை அழைத்தார்.(6) (கட்டை அறுத்தது என்ற பொருளைக் கொண்ட சொல்.)அந்த முனிவர் தான் கொண்ட துயரத்தால், ஓர் இடத்தில் தங்க முடியாதவரானார். அவர் மலைகளின் மேலும், நதிகளோடும், தடாகங்களோடும் திரியத் தொடங்கினார்.(7) அப்படிச் சுற்றித் திரிகையில், கொடூரமான முதலைகள் நிறைந்ததும், பயங்கரமானதுமான (இமயத்திலிருக்கும்) ஹைமாவதி என்ற ஆற்றைக் கண்டு அதில் விழுந்தார்.(8) ஆனால் அந்த ஆறு அந்த பிராமணரை, அணையாத நெருப்புக் குவியலாக நினைத்து, நூறு வெவ்வேறு திசைகளில் பிரிந்து ஓடியது, அது முதல் அந்த ஆறு சதத்ரு[2] என்று அழைக்கப்படுகிறது.(9)(நூறாக ஓடியது என்ற பொருளைக் கொண்ட சொல்)

காய்ந்த நிலத்தில் தன்னைக் கண்ட அந்த முனிவர், “என்னால் சுயமாக மரணிக்க முடியவில்லை” என்று சொல்லி, மீண்டும் தனது ஆசிரமத்திற்குச் சென்றார்.(10) கணக்கிலடங்கா பல மலைகளையும், நாடுகளையும் கடந்து, தனது ஆசிரமத்திற்குள் மறு பிரவேசம் செய்தார். அப்போது அவரது மருமகளான அதிருசியந்தியும் அவரைத் தொடர்ந்தபடி அங்கு வந்தாள்.(11)

அவள் தன்னை நெருங்கும்போது, அவருக்குப் பின்புறத்திலிருந்து பொருள் நிரம்பிய ஆறு அருளையும் (வேதாங்கங்கள்) {சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிடம், கல்பம் ஆகியவற்றைக்} கொண்டு வேதம் ஓதும் அறிவார்ந்த ஒரு குரலைக் கேட்டார்.(12) அந்த ஒலியைக் கேட்ட அந்த முனிவர், “யார் என்னைத் தொடர்ந்து வருவது?” என்று கேட்டார். அதற்கு அவரது மருமகள், “நான் அதிருசியந்தி, சக்திரியின் மனைவி. நான் தவத்திற்கு என்னை அர்ப்பணித்திருந்தாலும், ஆதரவற்றவளாக இருக்கிறேன்” என்றாள்.(13) அவள் சொன்னதைக் கேட்ட வசிஷ்டர், “மகளே, வேதங்களை அதன் அங்கங்களோடு உரைக்கும் சக்திரியின் குரலைப் போன்றே, ஒரு குரலை நான் கேட்கிறேன். அந்தக் குரல் யாருடையது?” என்று கேட்டார்.(14) அதற்கு அதிருசியந்தி, “நான் எனது கருவறையில், உமது மகன் சக்திரியின் குழந்தையைச் சுமந்து வருகிறேன். அவன் பனிரெண்டு வருடங்களாக அங்கு இருக்கிறான். வேதங்களை உரைப்பதாக நீர் கேட்கும் அந்தக் குரல் அந்த முனிவனுடையதே {குழந்தையினுடையதே}” என்றாள்”.(15)

கந்தர்வன் தொடர்ந்தான், “அவரது மருமகளால் இப்படிச் சொல்லப்பட்ட சிறப்பு மிகுந்த வசிஷ்டர், மிகவும் மகிழ்ந்து, “ஓ, (எனது குலம் தழைக்க) ஒரு குழந்தை இருக்கிறது!” என்று சொல்லி, தற்கொலை எண்ணத்திலிருந்து பின்வாங்கினார்.(16) அந்தப் பாவமற்றவர், தனது மருமகளுடன் தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார். அப்படி இருக்கையில், ஒரு நாள் ஒரு தனிமையான கானகத்தில் அந்த முனிவர் கல்மாஷபாதனைக் (ராட்சசனைக்) கண்டார்.(17) ஓ பாரதா, கொடிய ராட்சசனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அந்த மன்னன், அம்முனிவரைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டு எழுந்து, அவரை விழுங்க எண்ணினான்.(18) தீய செயல் புரியும் அந்த ராட்சசனைக் கண்ட அதிருசியந்தி வசிஷ்டரிடம் கவலையும் பயமும் கலந்த குரலில்,(19) “ஓ சிறப்பு மிகுந்தவரே, மரணத்தைப் போன்ற அந்தக் கொடும் ராட்சசன், கையில் தண்டத்துடன் நம்மை நோக்கி வருகிறான்.(20) ஓ சிறப்பு வாய்ந்தவரே, ஓ வேதமறிந்தவரில் முதன்மையானவரே, இவ்வுலகத்தில் உம்மைத் தவிர வேறு எவராலும் இவனை அடக்க முடியாது.(21) ஓ சிறந்தவரே, இந்தப் பயங்கரத் தோற்றம் கொண்ட கொடும்பாவியிடம் இருந்து என்னைக் காப்பாற்றும். நிச்சயமாக அந்த ராட்சசன் நம்மை விழுங்கவே இங்கு வருகிறான்” என்றாள்.(22)

இதைக் கேட்ட வசிஷ்டர், “ஓ மகளே, அஞ்சாதே, எந்த ராட்சசனிடமும் அச்சம் தேவையில்லை. உடனடி ஆபத்தை நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இவன் ஒரு ராட்சசனே இல்லை.(23) இவன் பெரும் சக்தி கொண்டவனும், உலகத்தால் கொண்டாடப்பட்டவனுமான கல்மாஷபாதன் என்ற மன்னனாவான். அப்படிப்பட்டவன் இப்படிப் பயங்கரமான மனிதனாக இந்த வனத்தில் வசிக்கிறான்” என்றார்”.(24)

கந்தர்வன் தொடர்ந்தான், “அவன் முன்னேறி வருவதைக் கண்டவரும், பெரும் சக்தி வாய்ந்தவரும், சிறப்பு மிகுந்தவருமான முனிவர் வசிஷ்டர், ஓ பாரதா {அர்ஜுனா} “ஹும்” என்ற தனது தொண்டை ஒலியால் அவனைத் தடுத்தார்.(25) அந்த முனிவர், அவன் மீது புனிதமான நீரைத் தெளித்து, சில மந்திரங்களைச் சொல்லி, அந்த ஏகாதிபதியை அக்கொடும் சாபத்திலிருந்து மீட்டார்.(26) வசிஷ்டர் மகனின் {சக்திரியின்} சக்தியால் அந்த ஏகாதிபதி பனிரெண்டு வருட காலமாக, கிரகணத்தின்போது ஒரு கிரகத்தால் {ராகுவால்} பீடிக்கப்படும் சூரியனைப் போல பீடிக்கப்பட்டிருந்தான்.(27) ராட்சசனின் பிடியிலிருந்து விடுபட்ட அந்த ஏகாதிபதி அந்தக் கானகத்தில், மாலைநேரத்தில் மேகங்களுக்குப் பின் இருந்து ஒளிரும் சூரியனைப் போலப் பிரகாசமாக இருந்தான்.(28) சுய நினைவை அடைந்த அம்மன்னன், அந்த முனிவர்களில் சிறந்தவரிடம் கூப்பிய கரங்களுடன்,(29) “ஓ சிறப்பு வாய்ந்தவரே, நான் சுதாசனின் மகன், உமது சீடன். ஓ முனிவர்களில் சிறந்தவரே, உமது விருப்பம் என்ன என்பதை எனக்குச் சொல்வீராக. நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.(30)

வசிஷ்டர், “எனது விருப்பம் ஏற்கனவே ஈடேறிவிட்டது. நீ இப்போதே உனது நாட்டுக்குத் திரும்பி, உனது குடிமக்களை {நல்லபடி} ஆள்வாயாக. ஓ மனிதர்களின் தலைவா, இனிமேல் பிராமணர்களை அவமதிக்காதே” என்று பதிலுரைத்தார்.(31)

அதற்கு அந்த ஏகாதிபதி! “ஓ சிறந்தவரே, நான் இனிமேல் மேன்மையான பிராமணர்களை அவமதிக்கமாட்டேன். உமது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, இனி எப்போதும் பிராமணர்களை வழிபடுவேன்.(32) ஆனால், ஓ பிராமணர்களில் சிறந்தவரே, இக்ஷ்வாகு குலத்திற்கு நான் பட்ட கடனை அடைக்க என்ன வழி?(33) இக்ஷ்வாகு {இட்சவாகு} குலம் தழைப்பதற்காக, அழகும், சாதனைகளும், நன்னடத்தையும் கொண்ட ஒரு மகனை எனக்குக் கொடுப்பீராக” என்றான்”.(34)

கந்தர்வன் தொடர்ந்தான், “இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டவரும், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவரும், பிராமணர்களில் சிறந்தவருமான அந்த வசிஷ்டர், “நான் உனக்குக் கொடுக்கிறேன்” என்று அந்தப் பெரும் வில்லாளியான ஏகாதிபதியிடம் சொன்னார்.(35) சில காலம் கழித்து, ஓ மனிதர்களின் இளவரசனே {அர்ஜுனா}, அந்த ஏகாதிபதியை அழைத்துக் கொண்டு, இவ்வுலகத்தில் அயோத்தி என்ற பெயரால் அழைக்கப்படும் அவனது தலைநகரத்திற்குச் சென்றார் வசிஷ்டர்.(36) அந்நாட்டுக் குடிமக்கள் குற்றமற்ற அவர்களை வரவேற்று மகிழ்ந்து, தங்கள் தலைவனை {கல்மாஷபாதனை} தேவர்களின் தலைவனைப் போல வரவேற்றனர்.(37) அந்த ஏகாதிபதி, வசிஷ்டருடன், நற்பேறு பெற்ற அந்த நகருக்குள் வெகு காலத்திற்குப் பிறகு நுழைந்தான்.(38) அயோத்தியின் குடிமக்கள், புரோகிதருடன் சேர்ந்து வரும் தங்கள் மன்னனை, மலைகளுக்குப் பின் உதிக்கும் உதயசூரியனைப் போலக் கண்டனர்.(39) அழகில் அனைவரிலும் மேன்மையான அந்த ஏகாதிபதி, இலையுதிர் காலச் சந்திரன், வானத்தை நிறைப்பதைப் போல, முழு அயோத்தியையும் தனது பிரகாசத்தால் நிறைத்தான்.(40)

அந்த அற்புதமான நகரத்தின் தெருக்களிளெல்லாம் நன்றாக நீர் தெளிக்கப்பட்டு, கூட்டிப் பெருக்கப்பட்டு, வரிசையாக அழகான கொடிகள் ஏற்றப்பட்டுச் சுற்றிலும் தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. இக்காட்சியைக் கண்ட அந்த ஏகாதிபதியின் இதயம் மகிழ்ந்தது. ஓ குரு குல இளவரசனே, அந்நகரமே மகிழ்ச்சியில் நிறைந்து, ஆரோக்கியமான குடிமக்களால் நிரம்பி, தேவர்களின் தலைநகரமாம் அமராவதியைப் போல இருந்தது.(41,42) அந்த அரசமுனி தனது தலைநகருக்குள் நுழைந்ததும், அம்மன்னனின் கட்டளையின் பேரில், அரசி வசிஷ்டரை அணுகினாள்.(43) அந்தப் பெரும் முனிவர் அவளிடம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு, உயர்ந்த {தேவர்களின்} விதிப்படி அவளுடன் கலந்தார்[3].(44)(இது தெய்வீகமாகத் தீண்டுதல்; உடலுறவல்ல என்று கும்பகோணம் பதிப்பில் குறிப்பிடப்படுகிறது.) சிறிது காலத்தில், அந்த அரசி கருவுற்ற பிறகு, அந்த முனிவர் {வசிஷ்டர்}, மன்னனின் மரியாதையான வணக்கங்களை ஏற்றுக் கொண்டு, தனது ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார்.(45) அந்த அரசி அக்கருவைத் தனது கருவறையில் பல காலங்களுக்குச் சுமந்தும், ஒன்றும் பிறக்கவில்லை என்பதை அறிந்த அவள், தனது வயிற்றைக் கற்துண்டால் {துண்டு கல்லால்} கிழித்தாள்.(46) அப்போது (அவள் கருத்தரித்து) பனிரெண்டு வருடங்கள் ஆகியிருந்த போது, பௌதன்யம் {பாண்டவ்யம்}[4] என்ற நகரத்தை உருவாக்கிய மனிதர்களில் காளையான அரச முனி அஸ்மகன் அவளுக்கு மகனாகப் பிறந்தான்” {என்றான் கந்தர்வன்}.(மன்மதநாததத்தரின் பதிப்பில் இது பாண்டவ்யம் என்றும், பிபேக்திப்ராயின் பதிப்பில் போதனம் என்று சொல்லப்படுகிறது.)

பராசரருக்கு வசிஷ்டர் சொன்ன கதை! – ஆதிபர்வம் பகுதி 180-(சைத்ரரதப் பர்வம் – 14)வசிஷ்டரின் பேரனாகப் பராசரர் பிறந்தது; தன் தந்தை கொல்லப்பட்டதைக் கேட்டு உலகத்தை அழிக்க நினைத்த பராசரர்; பராசரருக்கு வசிஷ்டர் சொன்ன கதை; செழிப்புடன் வாழ்ந்த பிராமணர்கள்; ஏழ்மையை அடைந்த க்ஷத்திரியர்கள்; பிராமணர்களிடம் இருந்து செல்வத்தைப் பறித்த க்ஷத்திரியர்கள்; ஒரு பிராமணப் பெண்ணின் தொடையில் இருந்து பிறந்த ஔர்வரின் பிரகாசத்தால் குருட்டுத் தன்மையை அடைந்த க்ஷத்திரியர்கள்..

கந்தர்வன் தொடர்ந்தான், “ஓ பார்த்தா, வசிஷ்டரின் ஆசிரமத்தில் வசித்து வந்த அதிருசியந்தி, சக்திரியின் குலத்தைத் தழைக்க வைக்க ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அந்த மகன் இரண்டாவது சக்திரியைப் போன்றே அனைத்திலும் இருந்தான்.(1) ஓ பாரதர்களில் முதன்மையானவனே, அந்த முனிவர்களில் சிறந்தவரான வசிஷ்டர், தானே தமது பேரனின் பிறப்பிற்குப் பின் செய்யும் சடங்குகளைச் செய்வித்தார்.(2) தற்கொலை எண்ணத்திலிருந்த முனிவர் வசிஷ்டர், குழந்தை இருக்கிறது என்று அறிந்ததும் அதிலிருந்து விலகியதால், பிறந்த அந்தக் குழந்தை பராசரன் {இறந்தவரை உயிர் மீட்பது என்று பொருளாம்} என்று அழைக்கப்பட்டான்.(3) அந்த அறம்சார்ந்த பராசரர், தான் பிறந்த நாளிலிருந்து, வசிஷ்டரையே தனது தந்தையாக அறிந்து, அவரிடம் அப்படியே நடந்து கொண்டார்.(4) ஒரு நாள், ஓ குந்தியின் மகனே, அக்குழந்தை தனது தாய் அதிருசியந்தியின் முன்னிலையில், பிராமண முனிவர்களில் முதன்மையான வசிஷ்டரை “தந்தையே” என்று அழைத்தான்.(5)

அதிருசியந்தி, ‘தந்தையே’ என்று தனது மகன் மிகத் தெளிவாகவும், இனிமையாகவும் பேசியதைக் கண்டு கண்களில் நீர் நிறைந்து,(6) “ஓ குழந்தாய், இஃது உனது தாத்தா. இவரைத் தந்தை என்று அழைக்காதே. ஓ மகனே, ஒரு கானகத்தில் வைத்து, ராட்சசன் ஒருவனால் உனது தந்தை விழுங்கப்பட்டார்.(7) ஓ அப்பாவியே, நீ பெரும் மதிப்பு வைத்திருக்கும் இவர் உனது தந்தையில்லை. இந்த மதிப்பு மிக்கவர் உனது தந்தையின் தந்தையாவார்” என்றாள்.(8)

தனது தாயால் இப்படிச் சொல்லப்பட்டவரும், உண்மை பேசுபவருமான அந்த முனிவர்களில் சிறந்தவர் {பராசரர்}, பெரும் துன்பத்தில் ஆழ்ந்து, விரைவில் கோபமும் அடைந்து, {உலகத்தின்} மொத்தப் படைப்புகளையும் அழிக்கத் தீர்மானித்தார்.(9) ஓ அர்ஜுனா, பிரம்மஞானிகளில் முதன்மையானவரும், மித்ரவருணனின் மகனும், சிறப்பு வாய்ந்த பெரும் துறவியும், நிதர்சன உண்மையை அறிந்தவருமான வசிஷ்டர், உலகத்தை அழிக்க எண்ணம் கொண்டிருக்கும் தமது பேரனிடம், சில விவாதங்களை முன் வைத்து, அத்தீர்மானத்தை அவரது {தமது பேரனின்} மனத்திலிருந்து நீக்கினார்”.(10)

“கந்தர்வன் தொடர்ந்தான், “பிறகு வசிஷ்டர், “கிருதவீர்யன் என்ற பெயரில் கொண்டாடப்பட்ட மன்னன் ஒருவன் இருந்தான். பூமியின் மன்னர்களில் காளையான அவன், வேதமறிந்த பிருகு வம்சத்தவரின் சீடனாக இருந்தான்.(11) ஓ குழந்தாய் {பராசரா}, அந்த மன்னன் சோம வேள்வியை முடித்து, பிராமணர்களுக்கு அரிசி மற்றும் பெரும் செல்வங்களைப் பரிசுகளாகக் கொடுத்து அவர்களை மனநிறைவு கொள்ளச் செய்தான்.(12) அப்போது, அந்த ஏகாதிபதி சொர்க்கத்திற்கு உயர்ந்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அவனது வழித்தோன்றல்களுக்குச் செல்வம் தேவைப்பட்டது.(13) பிருகு குலத்தவர் வளமையாக இருப்பதை அறிந்த அந்த இளவரசர்கள், அந்த பிராமணர்களில் சிறந்தவர்களிடம் பிச்சைக்காரர்கள் வடிவில் சென்றனர்.(14) பிருகு வம்சத்தவரில் சிலர், தங்கள் செல்வங்களை நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்தனர், சிலர் க்ஷத்திரியர்கள் மீது கொண்ட அச்சத்தினால் (வேறு) பிராமணர்களுக்குக் கொடுத்தனர்.(15) பிருகு குலத்தவரில் சிலர் க்ஷத்திரியர்களுக்கு அவர்கள் வேண்டிய அளவுக்குக் கொடுத்தனர்.(16) இருப்பினும், சில க்ஷத்திரியர்கள், ஒரு குறிப்பிட்ட பார்கவரின் இல்லத்தில் நிலத்தைத் தோண்டிப் பெரும் செல்வப்புதையலை அடைந்தனர். அப்புதையல் அங்கிருந்த க்ஷத்திரியக் காளைகளால் கண்டெடுக்கப்பட்டது.(17)

பிருகு குலத்தவரின் வஞ்சகமான இந்த நடத்தையால் கோபம் கொண்ட அந்த க்ஷத்திரியர்கள், அந்த பிராமணர்கள் தங்களிடம் கருணை காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டும் அவர்களை அவமதித்தனர். அந்தப் பெரும் வில்லாளிகள் பிருகு வம்சத்தவரைத் தங்கள் கூரியக் கணைகளால் கொல்லவும் தொடங்கினர். உலகத்தையே சுற்றி வந்த அந்த க்ஷத்திரியர்கள், பெண்களின் கருவறையில் இருக்கும் பிருகு வம்சத்தவரின் கருவைக் கூட கொன்றனர்.(18,19) பிருகு வம்சம் இப்படி அழிக்கப்பட்ட போது, அக்குலத்தின் பெண்கள் பயம் கொண்டு, யாரும் அணுக முடியாத இமயத்தின் மலைகளுக்குச் சென்றனர்.(20)

அவர்களில் அழகான தொடைகளைக் கொண்ட ஒருத்தி, தனது கணவனின் குலத்தைத் தழைக்க வைக்க, தனது தொடைகளில் ஒன்றில் பெரும் சக்தி கொண்ட ஒரு கருவைத் தாங்கினாள்.(21) இதை அறிந்த ஒரு குறிப்பிட்ட பிராமண மங்கையொருத்தி, அச்சத்தினால் பீடிக்கப்பட்டு, க்ஷத்திரியர்களிடம் சென்று உண்மையைச் சொன்னாள்.(22) இதையறிந்த க்ஷத்திரியர்கள் அக்கருவைக் கொல்லச் சென்றனர். அப்பெண் இருந்த இடத்திற்கு வந்த க்ஷத்திரியர்கள், பிரகாசமாக இருந்த அந்தத் தாயாகப் போகிறவளைக் கண்டார்கள்.(23) இதன்பேரில், தொடையிலிருந்த அக்குழந்தை, அவளது தொடையைக் கிழித்துக் கொண்டு, நடுப்பகல் சூரியன் போல வெளியே வந்து,(24) அந்த க்ஷத்திரியர்களின் கண் பார்வையைப் பறித்துத் திகைப்பூட்டினான்.

தங்கள் பார்வையை இழந்த அந்த க்ஷத்திரியர்கள் அணுக இயலாத மலைகளில் சுற்றித் திரிந்தனர். தங்கள் பார்வையை இழந்து துன்பப்பட்ட அந்த இளவரசர்கள், பெரும் துயரடைந்து, தங்கள் பார்வையை மீண்டும் பெறத் தீர்மானித்து, அந்தக் குற்றமற்ற பெண்மணியிடம் தஞ்சமடைந்தனர்.(25) தங்கள் பார்வை போன போது, தங்களை விட்டு ஒரு நெருப்பு வெளியேறியதை உணர்ந்த அந்த க்ஷத்திரியர்கள், துயர் நிரம்பிய இதயங்களுடன் அந்தச் சிறப்பு மிகுந்த பெண்ணிடம்,(26) “ஓ பெண்ணே, கருணை கொள்வாயாக. நாங்கள் எங்கள் பார்வையை மீண்டும் அடைய விரும்புகிறோம். நாங்கள் இனி அப்படிப்பட்ட தீய செயலைச் செய்யாது, எங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறோம்.(27) ஓ அழகானவளே, நீயும் உனது குழந்தையும் எங்களிடம் கருணை காட்டுவீராக. எங்களுக்குப் பார்வையைக் கொடுத்து, மன்னர்களான எங்களுக்கு நன்மையைச் செய்வீராக” என்றனர்”.(28)

ஔர்வரின் கடுந்தவம்! – ஆதிபர்வம் பகுதி 181-(சைத்ரரதப் பர்வம் – 15)அந்தப் பிராமணப் பெண்ணின் சொல்லைக் கேட்டு ஔர்வரைத் தஞ்சமடைந்த க்ஷத்திரியர்கள்; கண்பார்வையைத் திரும்பப் பெற்ற க்ஷத்திரியர்கள்; உலகத்தை அழிக்க தவம் செய்த ஔர்வரைத் தடுத்த அவருடைய பித்ருக்கள்

வசிஷ்டர் தொடர்ந்தார், “இப்படி அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த பிராமணப் பெண், “குழந்தைகளே, நான் உங்கள் பார்வையைப் பறிக்கவில்லை. உங்களிடம் கோபம் கொள்ளவும் இல்லை. இருப்பினும், பிருகு வம்சத்தைச் சேர்ந்த இந்தக் குழந்தை உங்களிடம் கோபமாக இருக்கிறான்.(1) தன் குலம் உங்களால் அழிந்ததை அறிந்த இந்தக் குழந்தையின் கோபத்தினால்தான் உங்கள் பார்வை பறிபோனது என்பதில் சிறு ஐயமும் கிடையாது.(2) குழந்தைகளே, நீங்கள் பிருகு குலத்தின் கருக்களைக்கூட அழித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் இந்தக் குழந்தை எனது தொடைக்குள் நூறு வருடங்கள் இருந்தான்.(3) பிருகு குலத்திற்கு வளமை உண்டாக, ஆறு அங்கங்களுடன் கூடிய வேதமானது, எனது கருவில் இருந்த இவனுக்கு அருளப்பட்டது.(4) பிருகு குலத்தின் இந்தக் கொழுந்து, தனது மூதாதையர்களின் மரணத்திற்குப் பழிவாங்கவே உங்களைக் கொல்ல விரும்புகிறது! இவனது தெய்வீகச் சக்தியால் தான் உங்கள் கண்கள் பறிக்கப்பட்டன.(5) எனவே, ஓ குழந்தைகளே, எனது தொடையிலிருந்து பிறந்த இந்த அற்புதமான குழந்தையிடம் நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் அஞ்சலியின் மூலம் நிறைவடைந்த இவன் உங்களுக்குப் பார்வையை அருளக்கூடும்” என்றாள்”.(6)

வசிஷ்டர் தொடர்ந்தார், “அந்த பிராமணப் பெண்ணின் வார்த்தைகளைக் கேட்ட அந்த இளவரசர்கள், தொடையில் பிறந்த அக்குழந்தையிடம், “நன்மை செய்வாயாக” என்று வேண்டினர். அக்குழந்தையும் அவர்களுக்கு நன்மை செய்ய விரும்பினான்.(7) அந்தப் பிராமண முனிவர்களில் சிறந்தவன், தனது தாயின் தொடையைக் கிழித்துப் பிறந்ததால், இந்த உலகத்தில் ஔர்வன் (தொடையில் பிறந்தவன்) என்று அழைக்கப்பட்டான்[1].(8) (ஊரூஜன் என்றால் தொடையில் பிறந்தவன் என்ற பொருள் என்று கும்பகோணம் பதிப்பு குறிப்பிடுகிறது.)அந்த இளவரசர்கள் தங்கள் பார்வையைப் பெற்றுச் சென்றுவிட்டனர். ஆனால் அந்த பிருகு குலத்தைச் சேர்ந்த முனிவர் ஔர்வர் இவ்வுலகத்தை வெல்ல முடிவு செய்தார்.(9) அந்த பிருகு குலத்தின் கொழுந்து, இறந்த தனது மூதாதையர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த முழு உலகத்தையே அழிப்பதற்காகக் கடும் தவம் இருந்தார்.(10,11) தனது மூதாதையர்களை மனநிறைவு கொள்ளச் செய்ய எண்ணிய அந்த முனிவர், தனது கடும் தவத்தால், தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் பாதிப்படையச் செய்தார்.(12)

தங்கள் குலத்தைச் சேர்ந்த பிள்ளை என்ன செய்கிறான் என்பதை அறிந்த பித்ருக்கள் {ஔர்வரின் மூதாதையர்கள்} அனைவரும் தங்கள் உலகங்களை விட்டு அந்த முனிவரிடம் வந்து,(13) “ஔர்வா, ஓ மகனே, உனது தவம் கடுமையானதாக இருக்கிறது. உனது சக்தியை நாங்கள் கண்டோம். ஓ மகனே, மூன்று உலகங்களுக்கும் நன்மையைச் செய்யக் கருதி உனது கோபத்தைக் கட்டுப்படுத்துவாயாக.(14) ஓ குழந்தாய், ஆன்மாக்களை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருந்த பிருகுக்கள், கொலைகார க்ஷத்திரியர்களின் கரங்களில் அழிவையடைந்தும் பாரபட்சமின்றி இருந்தது எங்கள் இயலாமையில் அல்ல.(15) ஓ குழந்தாய், நாங்கள் எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நீண்ட வாழ்நாட்களால் களைத்துப் போய், க்ஷத்திரியர்களைக் கருவியாகப் பயன்படுத்தி எங்கள் அழிவை நாங்களே விரும்பினோம்.(16)

பிருகுக்கள் நிலத்துக்கடியில் பதுக்கிய செல்வம் என்பது, க்ஷத்திரியர்களின் கோபத்தைத் தூண்டி சச்சரவை உண்டாக்க ஒரு காரணமே ஆகும்.(17) ஓ பிராமணர்களில் சிறந்தவனே, எங்களுக்குத் தேவலோகத்தில் விருப்பம் உண்டானதால், அந்தச் செல்வங்களால் எங்களுக்கு யாது பயன்? தேவலோகத்தின் பொருளாளர் (குபேரன்) எங்களுக்காகப் பெரும் செல்வத்தை வைத்திருக்கிறான்.(18) எங்களை மரணம் வெல்ல முடியாது என்பதை நாங்கள் எப்போது அறிந்தோமோ, அப்போதுதான், ஓ குழந்தாய், நாங்கள் இந்தச் சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்தோம்.(19) தற்கொலை செய்பவர்கள் அருளப்பட்டவர்களின் உலகத்தை அடையவே முடியாது. இதை உணர்ந்த நாங்கள் தற்கொலை எண்ணம் கொள்ளவில்லை.(20) எனவே, எதை நீ செய்ய விரும்புகிறாயோ, அஃது எங்களுக்கு ஏற்புடையதல்ல. எனவே, மொத்த உலகத்தையும் அழிக்கும் இந்தப் பாவகரச் செயலிலிருந்து பின்வாங்குவாயாக.(21) ஓ குழந்தாய், க்ஷத்திரியர்களையோ, ஏழு உலகங்களையோ அழிக்காதே. உனது ஆன்ம சக்திக்குக் களங்கத்தை உண்டாக்கும்வகையில் உனக்குள் இருக்கும் இந்தக் கோபத்தைக் கொல்வாயாக” என்றனர் {பித்ருக்கள்}[2].(22)(மஹாபாரதம் கதைக்குள் கதை சொல்லும் அமைப்புக் கொண்டது என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் எத்தனை கதைகளுக்குள் கதை என்பதைக் இப்போது கவனியுங்கள். நைமிசாரண்யம் என்ற இடத்தில், சௌதி என்பவர் தவசிகள் கூட்டத்திடம் சொல்லும் கதைக்குள்ளே [கதை 1] – வியாசரின் சீடர் வைசம்பாயனர் என்பவர் அர்ஜுனனின் கொள்ளுப் பேரன் ஜனமேஜயனிடம் சொல்லும் மற்றொரு கதைக்குள்ளே [கதை 2]- கந்தர்வன் அர்ஜுனனிடம் சொல்லும் மற்றும் ஒரு கதைக்குள்ளே [கதை 3] – வசிஷ்ட மகரிஷி தனது பேரன் பராசரரிடம் சொல்லும் கதைக்குள் [கதை 4] – பிருகு குல பித்ருக்கள் பிருகு குலத் தோன்றலான ஔர்வன் க்ஷத்திரியர்கள் மீது கொண்ட கோபத்தால் இந்த உலகையே அழிக்க முடிவு எடுத்தபோது விவரிக்கப்படும் காட்சியே மேற்காணும் பகுதியாகும் [கதை 5].)

கோபத்தால் உண்டான வடவாமுகாக்னி! – ஆதிபர்வம் பகுதி 182-(சைத்ரரதப் பர்வம் – 16)பித்ருக்களின் சொற்படி ஔர்வர் தமது கோபத்தைப் பெருங்கடலில் விட்டது…

கந்தர்வன் சொன்னான், “வசிஷ்டர் தனது விவரிப்பைத் தொடர்ந்தார், “ஓ குழந்தாய் {பராசரா}, பித்ருக்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட ஔர்வர், அவர்களுக்கு இப்படி மறு மொழி கூறினார்.”பித்ருக்களே, கோபம் கொண்ட நான் உலகத்தின் அழிவுக்காக செய்த தவம் வீணாகப் போகக்கூடாது.(1) யாருடைய கோபமும், சபதமும் வீணாகப் போவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் எனது தவத்தைச் சாதிக்கவில்லையெனில், காய்ந்த மரத்தை உட்கொள்ளும் நெருப்பைப் போல, எனது கோபமே என்னை எரித்துவிடும்.(2) தகுந்த காரணத்திற்காக ஏற்படும் சீற்றத்தை ஒடுக்கும் மனிதன், வாழ்வின் மூன்று முனைகளை (அறம், பொருள், இன்பம்) சமமாக அடைய முடியாதவன் ஆகிவிடுவான்.(3) மொத்த பூமியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பும் மன்னனால் வெளிப்படுத்தப்படும் கோபத்திற்குத் தகுந்த பயன் இல்லாமல் இல்லை {பயன் இருக்கிறது}. அந்தக் கோபம் தீயவர்களை அடக்கி, நேர்மையானவர்களைக் காக்கப் பயன்படுகிறது.(4)

நான் பிறப்பதற்கு முன், எனது தாயின் தொடைக்குள் இருக்கும்போது, நமது குலத்தவர் க்ஷத்திரியர்களால் அழிக்கப்படும்போது, எனது தாய் மற்றும் நமது குலப் பெண்களின் துக்கம் நிறைந்த அழுகையை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.(5) பித்ருக்களே, அந்த க்ஷத்திரியப் பாவிகள் பிறக்காத குழந்தைகளையும் சேர்த்து பிருகு குலத்தவரைக் கூட்டமாகக் கொன்றொழித்தபோது, கோபமே எனது ஆன்மா முழுவதும் நிறைந்திருந்தது.(6) பிரசவிக்கும் நேரத்தின் அருகிலிருந்த நமது குல கர்ப்பிணித் தாய்மார்களும், எனது தாயும், எனது தந்தையும் மிகவும் அச்சமடைந்து, தங்களைக் காக்க ஒருவரும் இல்லாமல் இருந்தனர்.(7) பிருகு குலத்தின் பெண்கள் ஒரு காப்பாளனையும் காணாத போது, எனது தாய் என்னைத் தனது தொடைகளில் பிடித்து வைத்தாள்.(8) தான் செய்யும் குற்றங்களுக்காகத் தன்னைத் தண்டிப்பவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தால், உலகத்தில் யாரும் குற்றம் புரியமாட்டார்கள்.(9) ஆனால் அவர்கள் {குற்றம் புரிபவர்கள்} தண்டிப்பவன் எவனையும் காணவில்லையென்றால், பாவம் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும்.(10)

காக்கும் அதிகாரமும், பாவங்களைத் தண்டிக்கும் அதிகாரமும் கொண்ட ஒருவன், பாவம் நடப்பதைக் கண்டும் அதைத் தண்டிக்கவில்லை என்றால், அவனே அந்தப் பாவத்தால் களங்கப்படுவான் {அவனே பாவியாவான்}.(11) தான் செய்யும் குற்றங்களுக்காகத் தன்னைத் தண்டிக்க ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தால், உலகத்தில் யாரும் குற்றம் புரியமாட்டார்கள்.(9) ஆனால் அவர்கள் தண்டிப்பவன் எவனையும் காணவில்லையெனில், பாவம் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும்.(10) காக்கவும், பாவங்களைத் தண்டிக்கவும் அதிகாரம் கொண்ட ஒருவன், பாவம் நடப்பதைக் கண்டும் அதைத் தண்டிக்கவில்லையெனில், அவனே அந்தப் பாவத்தால் களங்கப்படுவான் {அவனே பாவியாவான்}.(11)

மன்னர்களுக்கும், பிறருக்கும் என் குலத்தவரைக் காக்கும் அதிகாரம்  இருந்தும்,  வாழ்க்கையின் இன்பங்களைத் தேர்ந்தெடுத்து, கடமைகளைத் தள்ளிப் போட்டு, அவர்களைக் காக்காமல் இருந்தனர். எனவே, நான் அவர்களிடம் கோபம் கொள்ள நியாயம் இருக்கிறது. நானே அநீதியைத் தண்டிக்கவல்ல படைப்பின் தலைவனாவேன். நான் உங்கள் ஆணைக்குக் கீழ்ப்படிய வல்லனல்லேன்.(12,13) இக்குற்றங்களைத் தண்டிக்கவல்லவனாயிருந்தும், நான் அதைச் செய்யாமலிருந்தால், மனிதர்கள் மீண்டும் இதே வகை அழித்தொழிப்புகளையே செய்வார்கள்.(14) எனது கோபத்தீ இவ்வுலகை எரிக்கத் தயாராயிருக்கிறது. அதைத் தடுத்தால், அஃது எனது சக்தியையும், என்னையும் சேர்த்து எரித்துவிடும்.(15) ஆசான்களே, நீங்கள் எப்போதும் உலகத்தின் நன்மையைக் கருதுபவர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே, எனக்கும், உலகத்துக்கும் நன்மை உண்டாகும்படி ஒரு வழியை எனக்குக் காட்டுவீர்களாக.” என்றார் {ஔர்வர்}”.(16)

வசிஷ்டர் தொடர்ந்தார், “அதற்கு அந்தப் பித்ருக்கள், “உலகங்களை எரிக்கக் காத்திருக்கும் உனது கோப நெருப்பை, நீருக்குள் தூக்கி வீசுவாயாக. அஃது உனக்கு நன்மையைத் தரும். நிச்சயமாக, உலகங்கள் (அதன் அடிப்படைத் தேவையாக) நீரை நம்பியே இருக்கின்றன.(17) சாறு {நீர்மை கொண்ட} அனைத்துப் பொருட்களிலும் நீர் இருக்கிறது. உண்மையில் இந்த முழு அண்டமே நீரால் ஆனதுதான். எனவே, ஓ பிராமணர்களில் சிறந்தவனே, உனது கோபத்தின் நெருப்பை நீரில் விடுவாயாக.(18) ஓ பிராமணா, நீ விரும்பினால், அந்தக் கோபத்தின் நெருப்பைப் பெருங்கடலில் விடு, அங்கிருக்கும் நீரை அஃது உட்கொண்டபடி இருக்கட்டும்.(19) ஓ பாவங்களற்றவனே, உனது வார்த்தையும் மெய்யாகும், உலகங்களும், தேவர்களும் அழிய மாட்டார்கள்” என்றனர் {பித்ருக்கள்}”.(20)

வசிஷ்டர் தொடர்ந்தார், “ஓ குழந்தாய் {பராசரா}, அதன் பிறகு ஔர்வர் தமது கோபத்தின் நெருப்பை, வருணனின் வசிப்பிடத்தில் {மேகத்தின் வசிப்பிடமான கடலில்} விட்டார்.(21) பெருங்கடலுக்குள் விடப்பட்ட அந்த நெருப்பு அதன் நீரை உட்கொண்டு, பெரும் குதிரையின் தலை போன்ற வடிவத்தில் இருந்தது. எனவே, அதை வடவாமுகம் {வடவாமுக அக்னி} என்று வேதம் அறிந்தவர்கள் அழைத்தனர்.(22)  அதன் வாயிலிருந்து பெரும் நெருப்புக் கிளம்பி அந்தப் பெருங்கடலின் நீரை உட்கொண்டது. ஓ பராசரா, உயர்ந்த உலகங்களில் உள்ள ஞானமுள்ள மனிதர்களில் முதன்மையானவர்களை நீ அறிந்தவனாக இருக்கிறாய். எனவே அருளப்பட்டவனே, நீ உலகங்களை அழிக்கக்கூடாது” என்றார் {வசிஷ்டர்}.(23)

பராசரரின் ராட்சச வேள்வி! – ஆதிபர்வம் பகுதி 183-(சைத்ரரதப் பர்வம் – 17)-வசிஷ்டரின் சொல் மதித்து உலகத்தை அழிப்பதைக் கைவிட்ட பராசரர்; ராட்சசர் அழிவுக்கான வேள்வியைச் செய்து பல ராட்சசர்களை அழிப்பது; பிறகு அத்ரி, புலஸ்தியர், புலஹர் கிரது ஆகியோரின் சொல் கேட்டு அவ்வேள்வியை நிறுத்தியது…

கந்தர்வன் தொடர்ந்தான், “சிறப்புமிகுந்த வசிஷ்டரால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த பிராமண முனிவர் {பராசரர்} உலகத்தை அழிக்கத் தன்னைத் தூண்டிய கோபத்தை அடக்கிக் கொண்டார்.(1)ஆனால், வேதமறிந்தவர்களில் முதன்மையானவரும், சக்திரியின் மகனும், பெரும் சக்தியைக் கொண்ட முனிவருமான பராசரர், ஒரு பெரும் ராட்சச வேள்வியை நடத்தினார்.(2) (தமது தந்தையான) சக்திரியின் படுகொலையை நினைத்துப் பார்த்த அந்த முனிவர் முதிர்ந்த மற்றும் இளமையான ராட்சசர்களைத் தான் நடத்திய வேள்வியின் மூலமாக எரித்தார்.(3) (தமது பேரனின்) இரண்டாவது உறுதிமொழியில் குறுக்கிடக்கூடாது என்று உறுதியேற்ற வசிஷ்டர், ராட்சசர்களின் படுகொலையைத் தடுத்து நிறுத்தவில்லை.(4) பராசர முனிவர் அவ்வேள்வியில் சுடர்விட்டெரியும் மூன்று நெருப்புகளுக்கு எதிரில் நான்காவது நெருப்பாக அமர்ந்திருந்தார்.(5)

அந்தச் சக்திரியின் மைந்தன் {பராசரர்}, மேகத்தை விட்டு வெளியே வரும் சூரியனைப் போல, பெருமளவு தூய்மையாக்கப்பட்ட நெய் ஊற்றப்பட்டதும், களங்கமற்றதுமான தனது வேள்வியின் மூலம் முழு வானமண்டலத்தையும் ஒளிமயமாக்கினார்.(6) அப்போது, வசிஷ்டரும், பிற முனிவர்களும், தன்னொளின் மூலமே ஒளிரும் இந்த முனிவரை {பராசரரை} இரண்டாவது சூரியன் போலக் கருதினர்.(7) விடுதலையடைந்த ஆன்மாவைக் கொண்ட பெருமுனிவரான அத்ரி, மற்றவர்களால் செய்ய முடியாத மிகக்கடுமையான சாதனையாக அவ்வேள்வியை முடித்து வைக்க எண்ணி, அவ்விடத்திற்கு வந்தார்.(8) ஓ எதிரிகளை அழிப்பவனே {அர்ஜுனனே}, மேலும் ராட்சசர்களைக் காக்க விரும்பிய புலஸ்தியர், புலஹர், பல பெரும் வேள்விகளை நடத்திய கிரது ஆகியோரும் அங்கே வந்தனர்.(9) ஏற்கனவே பல ராட்சசர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட அவர்கள், எதிரிகளை ஒடுக்கும் பராசரரிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள்.(10)

அவர்கள், “ஓ குழந்தாய், இந்த உனது வேள்விக்கு எந்தத் தடையும் இல்லை என்று நம்புகிறோம். உனது தந்தையின் மரணத்தைப் பற்றி அறியாத அப்பாவி ராட்சசர்களையும் கொன்ற இந்தப் படுகொலையை நினைத்து நீ மகிழ்ச்சி கொள்கிறாயா?(11) இவ்வாறு எந்த உயிரினத்தையும் கொல்வது உனக்குத் தகாது. ஓ குழந்தாய், தவத்துக்குத் தன்னை அர்ப்பணிக்கும் பிராமணனின் தொழில் இஃதல்ல.(12) அமைதியே {சாந்தியே} உயர்ந்த அறமாகும். எனவே, ஓ பராசரா, நீ அமைதியை நிலைநிறுத்துவாயாக. ஓ பராசரா, இவ்வளவு உயர்ந்தவனாக இருந்தும், நீ இப்படிப்பட்ட பாவகரக் காரியத்தை எப்படிச் செய்கிறாய்?(13) அறநெறிகளின் விதிகள் அனைத்தையும் அறிந்த சக்திரியை {பராசரரின் தந்தை; வசிஷ்டரின் மூத்த மகன்} மீறி நடப்பது, உனக்குத் தகாது. எந்த உயிரினத்தையும் முற்றாக அழிப்பது உனக்குத் தகாது.(14) ஓ வசிஷ்ட குல வழித்தோன்றலே, உனது தந்தை முன்பு தான் பெற்ற சாபத்தாலேயே அவ்வாறு இறந்தான். சக்திரியின் தனிப்பட்ட பிழையின் காரணமாகவே அவன் வானுலகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டான்.(15)

ஓ முனியே, சக்திரியை விழுங்கும் அளவுக்கு எந்த ராட்சசனுக்கும் சக்தி கிடையாது; அவனே தனது மரணத்தை வரவழைத்துக் கொண்டான்.(16) ஓ பராசரா, விஷ்வாமித்திரரும் இக்காரியத்தில் வெறும் கருவியே. சக்திரி, கல்மாஷபாதன் ஆகிய இருவரும் வானுலகத்திற்கு உயர்ந்து, அங்கே பெரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்.(17) சக்திரிக்கு இளையவர்களான, வசிஷ்டரின் மற்ற மகன்களும் தேவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.(18) ஓ குழந்தாய், வசிஷ்ட மைந்தனின் வாரிசே, அப்பாவி ராட்சசர்களுக்கு அழிவை உண்டாக்கிய வேள்வியை நடத்திய நீயும் இது விஷயத்தில் வெறும் கருவியே. குழந்தாய், நீ அருளப்பட்டிருப்பாயாக! இவ்வேள்வியைக் கைவிடுவாயாக. இஃது ஒரு முடிவுக்கு வரட்டும்” என்றனர் {அப்பெரும் முனிவர்கள்}”.(19,20)

கந்தர்வன் {அர்ஜுனனிடம்} தொடர்ந்தான், “புலஸ்தியராலும், நுண்ணறிவு கொண்டவரான வசிஷ்டராலும் இப்படிச் சொல்லப்பட்ட சக்திரியின் மைந்தனான, அந்தப் பெரும் பலம்வாய்ந்த முனிவர் {பராசரர்}, அவ்வேள்வியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.(21) ராட்சசர்கள் அழிவுக்காக அவ்வேள்வியில் மூட்டப்பட்ட அந்த நெருப்பை, அம்முனிவர் இமயத்துக்கு வடக்கில் உள்ள பெருங்காட்டில் விட்டார்.(22) அந்த நெருப்பு ராட்சசர்களையும், மரங்களையும், கற்களையும் அனைத்துக் காலங்களிலும் அழித்து வருவதை இன்றும் காணலாம்” {என்றான் கந்தர்வன்}.(23)

பிராமணத்தியின் சாபம்! – ஆதிபர்வம் பகுதி 184-(சைத்ரரதப் பர்வம் – 18)கல்மாஷபாதனின் மனைவியிடம் வசிஷ்டர் ஏன் சேர்ந்தார் என்று அர்ஜுனன் கேட்டது; பிராமணத்தியின் சாபம் குறித்து கந்தர்வன் உரைத்தது…

அர்ஜுனன், “ஓ கந்தர்வா, மன்னன் கல்மாஷபாதன், வேதங்கள் அறிந்த மனிதர்களில் முதன்மையானவரான குரு வசிஷ்டரிடம் செல்லுமாறு, தனது ராணிக்கு {மனைவிக்கு}, எதற்காகக் கட்டளையிட்டான்?(1) அறநெறிகள் அனைத்தும் அறிந்த அந்தச் சிறப்புமிகுந்த பெரும் முனிவர் வசிஷ்டரும், தான் சேரத்தகாத ஒரு பெண்ணை ஏன் சேர்ந்தார்?(2) ஓ நண்பா, வசிஷ்டரின் இச்செயல் பாவச்செயல் ஆகாதா? உன்னிடம் தீர்வைப் பெற நான் கொள்ளும் ஐயங்களைக் களைவதே உனக்குத் தகும்” என்று கேட்டான்.(3)

அதற்கு அந்தக் கந்தர்வன், “ஓ ஒடுக்கப்படமுடியாத தனஞ்செயா {அர்ஜுனா}, வசிஷ்டர் மற்றும் நண்பர்களைப் பேணி வளர்ப்பவனான கல்மாஷபாதன் ஆகியோரைக் குறித்து நீ கேட்ட கேள்விகளுக்கு நான் பதிலுரைக்க்கிறேன் கேட்பாயாக.(4) ஓ பாரதர்களில் சிறந்தவனே, மன்னர் கல்மாஷபாதனுக்கு வசிஷ்டரின் சிறப்புமிக்க மைந்தரான சக்திரி இட்ட சாபம் குறித்து நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.(5) அச்சாபத்தின் வசப்பட்டதால், அந்த எதிரிகளை அழிக்கும் மன்னன் கல்மாஷபாதன், கோபத்தில் கண்கள் சுழலத் தனது மனைவியை அழைத்துக் கொண்டு தலைநகரை விட்டு வெளியே சென்றுவிட்டான்.(6) தனது மனைவியுடன் வெளியே சென்ற அவன், தனிமையான காட்டில் திரிந்து கொண்டிருந்தான். ஒரு நாள், சாபத்தின் ஆளுகையில் இருந்த அம்மன்னன் பலவகைப்பட்ட மான்களும், பல விலங்குகளும், பெரும் மரங்களும், செடிகளும், கொடிகளும், நிறைந்த அக்கானகத்தில் உலவிக் கொண்டிருந்தபோது, அவன் மிகவும் பசித்துப் போனான். அந்த ஏகாதிபதி உணவைத் தேடத் தொடங்கினான். பசி வயிற்றைக் கிள்ளக் இறுதியாக, அக்கானகத்தின் ஒரு தனிமையான இடத்தில்,(7-9) ஒரு பிராமணனும் அவனது மனைவியும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டான். அந்த ஏகாதிபதியைக் கண்ட அந்த ஜோடி அச்சத்தால் தங்கள் ஆசை நிறைவேறாமலேயே ஓடிச் சென்றனர்.(10)

ஓடும் அந்த ஜோடியைக் கண்ட அம்மன்னன், அந்த பிராமணனைப் பலவந்தமாகப் பற்றினான். அப்போது அந்த பிராமணத்தி {பிராமணப் பெண்} அகப்பட்ட தனது கணவனைக் கண்டு அந்த ஏகாதிபதியிடம் {கல்மாஷபாதனிடம்},(11) “சிறந்த நோன்புகளைக் கொண்ட ஓ ஏகாதிபதி, நான் சொல்வதைக் கேட்பாயாக! நீ சூரிய குலத்தில் பிறந்தவன் என்பதும், அறநெறிகளைக் காப்பவன் என்பதும், பெரியோரின் தொண்டுக்கு உன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் என்பதும் உலகம் அறிந்தவையாகும்.  நீ பாவம் இழைப்பது உனக்குத் தகாது. ஓ ஒடுக்கப்பட முடியாதவனே, {முனிவர்களின்} சாபத்தால் நீ உனது உணர்வுகளை இழந்திருக்கிறாய். (12,13)  இப்போது எனது காலம் கனிந்திருக்கிறது, எனவே, நான் எனது கணவரோடு இணைந்திருந்தேன். எங்கள் உறவில் நான் இன்னும் நிறைவடையவில்லை.(14) எங்களிடம் கருணை கொள்வாயாக. ஓ மன்னர்களில் சிறந்தவனே, எனது கணவரை விடுவிப்பாயாக” என்று கேட்டாள்.(15)

இருப்பினும் அந்த ஏகாதிபதி {கல்மாஷபாதன்} அவ்வார்த்தைகளைக் கேளாமல், விருப்பப்பட்ட உணவை உண்ணும் புலியொன்றைப் போல அந்த பிராமணனை விழுங்கினான்.(16) இக்காட்சியால் கோபமடைந்த அந்தப் பெண்ணின் கண்ணீர் தரையில் விழுந்து நெருப்பெனத் தகித்து அந்த இடத்தையே எரித்தது.(17) தனது கணவனுக்கு நேர்ந்த பேரிடரால் பெரும் துன்பமடைந்த அந்த பிராமணத்தி கல்மாஷபாதனிடம் கோபத்துடன்,(18) “கொடும் பாவியே, எனது ஆசை நிறைவேறாத சூழ்நிலையில், எனது மூக்கின் அருகிலேயே {முன்னிலையிலேயே} எனக்கு அன்பானவரும், சிறப்புமிக்கவருமான கணவரை நீ விழுங்கியதால், ஓ தீயவனே, உனது மனைவிக்கான காலத்தில் நீ அவளுடன் இணைந்தால், எனது சாபத்தின் சக்தியால் உடனே மரணிப்பாய்.  ஓ பாவியே, மேலும், நீ யாருடைய பிள்ளைகளைத் தின்றாயோ, அந்த முனிவர் வசிஷ்டருடன் கூடி உனது மனைவி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். ஓ மன்னர்களில் இழிந்தவனே, அவனே உனது குலத்தைத் தழைக்கச் செய்வான்” என்று சபித்தாள்.(19-21)

அனைத்து நற்குறிகளையும் கொண்டவளும், அங்கீரஸக் குடும்பத்தைச் சேர்ந்தவளுமான அந்தப் பெண், இவ்வாறு அந்த ஏகாதபதியைச் சபித்துவிட்டு, அந்த ஏகாதபதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே சுடர்மிக்க நெருப்புக்குள் நுழைந்தாள்.(22) ஓ எதிரிகளனைவரையும் தண்டிப்பவனே {அர்ஜுனா}, சிறப்புமிகுந்தவரும், மேன்மையானவருமான அந்த வசிஷ்டர், தனது ஆன்ம சக்தியாலும், தெய்வீகப் பார்வையாலும் இவையாவையும் அறிந்தார்.(23) வெகு காலம் கழித்து, சாபத்திலிருந்து மன்னன் {கல்மாஷபாதன்} விடுபட்டதும், தனது மனைவி மதயந்தியிடம் அவளது காலத்தில் அணுகினான். ஆனால், அந்த மதயந்தி மென்மையாகப் பேசி அவனை அனுப்பிவிட்டாள்.(24) ஆசையின் ஆதிக்கத்தில் இருந்த மன்னன், பழைய சாபத்தை நினைத்துப் பார்த்தான். இருப்பினும், தனது மனைவியின் வார்த்தைகளைக் கேட்ட மன்னர்களில் சிறந்தவன், கடும் அச்சத்துக்குள்ளானான்.(25) பழைய சாபத்தை நினைத்துப் பார்த்து, நடந்த காரியத்திற்காக மிகவும் வருந்தினான். இந்தக் காரணத்திற்காகவே, ஓ மனிதர்களில் சிறந்தவனே, அந்த பிராமணத்தியின் சாபத்தால் பாதிப்படைந்த அந்த ஏகாதிபதி, தனது ராணியிடம் ஒரு மகனைப் பெற வசிஷ்டரை நியமித்தான்” {என்றான் கந்தர்வன்}.(26)

பாண்டவர்களின் புரோகிதரானார் தௌமியர்! – ஆதிபர்வம் பகுதி 185-தகுந்த புரோகிதரை அர்ஜுனன் கேட்க, கந்தர்வன் தௌமியரை நியமிக்கச் சொன்னது; பாண்டவர்கள் உத்கோசகம் சென்று தௌமியரைத் தங்கள் புரோகிதராக நியமித்தது; பாண்டவர்கள் பாஞ்சால இளவரசியின் சுயம்வரத்திற்குச் செல்ல உத்தேசித்தது

அர்ஜுனன், “ஓ கந்தர்வா, நீ அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறாய். எனவே, வேதமறிந்த எந்த பிராமணர் எங்களது புரோகிதராக நியமிக்கப்படத் தகுதி வாய்ந்தவர்” என்று கேட்டான்.(1)

அதற்குக் கந்தர்வன், “இக்கானகத்தில் உத்கோசகம் எனும் புண்ணியத்தலம் இருக்கிறது. தேவலரின் தம்பியான தௌமியர் அங்கே தவத்துறவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் விருப்பப்பட்டால் அவரை உங்கள் புரோகிதராக நியமித்துக் கொள்ளுங்கள்” என்றான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நடந்த காரியம் அனைத்திலும் மனநிறைவு கொண்ட அர்ஜுனன் பிறகு, தனது அக்னேய அஸ்திரத்தை முறையான சடங்குகளுடன் அந்தக் கந்தர்வனுக்குக் கொடுத்தான். அப்போது, அவனிடம் அந்தப் பாண்டவன்,(3) “ஓ கந்தர்வர்களில் சிறந்தவனே, நீ கொடுக்கும் புரவிகள் {குதிரைகள்} தற்சமயத்திற்கு உன்னிடமே இருக்கட்டும். நேரம் வரும்போது, நாங்கள் உன்னிடம் இருந்து அவற்றைப் பெற்றுக் கொள்கிறோம். நீ அருளப்பட்டிருப்பாயாக” என்றான்.(4) அந்தக் கந்தர்வனும், பாண்டவர்களும் ஒருவருக்கொருவர் தங்கள் மரியாதையைச் செலுத்தி வணங்கி, அந்தப் பாகீரதியின் {கங்கையின்} கரையை விட்டு அகன்று, தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்றனர்.(5)

ஓ பாரதா {ஜனமேஜயா}, பாண்டவர்கள் உத்கோசகத்திற்குச் சென்று, அந்தப் புனிதமான ஆசிரமத்திலிருந்த தௌமியரைத் தங்கள் புரோகிதராக நியமித்துக் கொண்டனர்.(6) வேதமறிந்தவர்களில் முதன்மையானவரான அந்தத் தௌமியர், அவர்களுக்குக் காட்டுப் பழங்களையும், கிழங்குகளையும் கொடுத்து வரவேற்று, அவர்களின் புரோகிதராவதற்கு ஏற்றுக் கொண்டார்.(7) பாண்டவர்கள், அந்த பிராமணரைத் தங்கள் புரோகிதராக அடைந்து, தங்கள் தாயுடன் சேர்ந்து அறுவராகச் சேர்ந்து, தங்கள் ஆட்சியுரிமையையும், தங்கள் நாட்டையும், பாஞ்சால மன்னனின் மகளையும் ஏற்கனவே அடைந்துவிட்டதாக நினைத்தனர். அந்தப் பாரதக் குலத்தின் காளைகள், குரு தௌமியரைத் தங்கள் புரோகிதராக அடைந்து, வலிமைமிக்க ஒரு காப்பாளரின் கீழ் தாங்கள் இருப்பதாகவே உணர்ந்தனர்.(8,9)

வேதங்களின் உண்மைப் பொருளையும், அறநெறிகளின் விதிகளையும் அறிந்தவரும், உயர்ந்த ஆன்மா கொண்டவருமான அந்தத் தௌமியர், அறம்சார்ந்த பாண்டவர்களுக்கு ஆன்ம குருவாகி, அவர்களைத் தனது ஆன்மச் சீடர்கள் {எஜமானர்கள்} ஆக்கினார்.(10) புத்திக்கூர்மையுள்ளவர்களும், பலம்பொருந்தியவர்களும், தேவர்களைப் போன்றவர்களும், விடாமுயற்சியுடன் கூடிய வீரர்களும், அறம் சார்ந்தோருமான அந்தப் பாண்டவர்களைக் கண்ட தௌமியர், அவர்கள் தங்கள் அறத் தகுதிகளினாலேயே, தங்கள் அரசுரிமையையும், நாட்டையும் ஏற்கனவே அடைந்துவிட்டதாகக் கருதினார்.(11) அந்த மனிதர்களின் மன்னர்கள், அந்தப் பிராமணரால் வாழ்த்தப்பட்டு, அவரையும் அழைத்துக் கொண்டு, பாஞ்சால இளவரசியின் சுயம்வரத்திற்குச் செல்லத் தீர்மானித்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(12)

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ விஷ்ணு தர்மம் –நான்காம் பாகம் —

June 4, 2023

ப்ரததாதி பலம் ந்ருணாம்। த்ரிபிர் மாைஸஸ் த்ரிர் அவஸ்தாஸ்।
௮௩।௰௨௧
த்ரிவிதாத் பாதகாந் ந்ருப। த்ரீணி நாமாநி ேதவஸ்ய। ௮௩।௰௨௨
ேமாசயந்தி த்ரிவார்ஷிைக:। யதஸ் தேதா வ்ரதம் இதம்। ௮௩।௰௨௨
த்ரிக்ரமம் ஸமுதாஹ்ருதம்। ஸர்வபாபப்ரஸமநம்। ௮௩।௰௨௩
ேகஸவாராதநம் பரம்। ஸ்ருணுஷ்வ ச மஹீபால। ௮௩।௰௨௩
வ்ரதம் விஷ்ணுபதத்ரயம்। ஸர்வபாபப்ரஸமநம்। ௮௪।௰௰௧
யஜ் ஜகாத புரா ஹரி:। ப்ராேசதஸாய தக்ஷாய। ௮௪।௰௰௧
தக்ஷஸ் சாஹ விவஸ்வேத। விவஸ்வாந் அலஸித்ராய। ௮௪।௰௰௨
அலஸித்ேரா அஸிதாய ச। அஸிேதந ஸமாக்யாதம்। ௮௪।௰௰௨
அல்பாயாஸம் மஹாபலம்। தத் இதம் ஸ்ரூயதாம் ஸம்யக்। ௮௪।௰௰௩
வ்ரதம் விஷ்ணுபதத்ரயம்। தக்ஷ: ப்ரஜாபதி: பூர்வம்। ௮௪।௰௰௩
விஷ்ணும் ஆராத்ய ப்ருஷ்டவாந்। பஹுஸஸ் து விபந்நாயாம்।
௮௪।௰௰௪
ஸ்ருஷ்டாவ் அரிநிஸூதந। பகவந் ஸர்வகக்ருத்வம்। ௮௪।௰௰௪
மமாதிஷ்டம் ஸ்வயம்புவா। ப்ரஹ்மணா ேதவேதேவஸ। ௮௪।௰௰௫
தவாேதேஸந ேகஸவ। விபந்நா ச ஜகந்நாத। ௮௪।௰௰௫
மம ஸ்ருஷ்டி: க்ருதா க்ருதா। பூர்வகர்மவிபாேகந। ௮௪।௰௰௬
வ்யாகுலஸ் சாஸ்மி ேசதஸா। யதா ச ேதவ முச்ேயய। ௮௪।௰௰௬
அஸ்மாத் ஸம்ஸாரஸம்கடாத்। விஷயாஸங்கவிஷமாத்। ௮௪।௰௰௭
தந் மமாஜ்ஞாபயாச்யுத। இத்ய் ஏவம் உக்ேதா தேக்ஷண। ௮௪।௰௰௭
ேதவேதேவா ஜநார்தந:। ஆசஷ்ட து:கக்ஷயதம்। ௮௪।௰௰௮
வ்ரதம் விஷ்ணுபதத்ரயம்। ஸர்வாரம்பவிநிஷ்பத்தி । ௮௪।௰௰௮

காரகம் பாபநாஸநம்। ஸம்ஸாேராச்ேசதகம் தீைரர்। ௮௪।௰௰௯
ஆசீர்ணம் ஸ்திரபுத்திபி:। தத் அஹம் தவ ராேஜந்த்ர। ௮௪।௰௰௯
வ்ரதாநாம் உத்தேமாத்தமம்। கதயாமி ஸமாசஷ்ட। ௮௪।௰௧
யதா பூர்வம் மமாஸித:। ஆஷாேட மாஸி பூர்வாஸு। ௮௪।௰௧
ததாஷாடாஸு பார்திவ। ஸமப்யர்ச்ய ஜகந்நாதம்। ௮௪।௰௧௧
அச்யுதம் நியத: ஸுசி:। புஷ்ைபர் ஹ்ருத்ையஸ் ததா தூைபர்।
௮௪।௰௧௧
கந்ைத: ஸாகருசந்தைந:। யதாவிபவதஸ் சாந்ையர்। ௮௪।௰௧௨
அந்ைநர் வாேஸாபிர் ஏவ ச। க்ஷரஸ்ேநஹஸ்திதம் ீ தத்வத்। ௮௪।௰௧௨
ைபஷ்டம் விஷ்ணுபதத்வயம்। ஸமப்யர்ச்ய யதாந்யாயம்। ௮௪।௰௧௩
ேகஸவஸ்யாக்ரேதா ந்யேஸத்। யவாம்ஸ் ச தத்யாத் விப்ராய।
௮௪।௰௧௩
பூகதி: ப்ரீயதாம் இதி। நக்தம் புஞ்ஜதீ ராேஜந்த்ர। ௮௪।௰௧௪
ஹவிஷ்யாந்நம் ஸுஸம்ஸ்க்ருதம்। தேதாத்தராஸ்வ் ஆஷாடாஸு।
௮௪।௰௧௪
ஸ்ராவேண மாஸி மாநவ:। தைதவாப்யர்ச்ய ேகாவிந்தம்। ௮௪।௰௧௫
தத்வத் விஷ்ணுபதத்வயம்। விப்ராய ச யவாந் தத்யாத்। ௮௪।௰௧௫
ப்ரீணயித்வா ச பூகதிம்। நக்தம் பூஞ்ஜதீ ராேஜந்த்ர। ௮௪।௰௧௬
நேரா ேயாஷித் அதாபி வா। ப்ராப்ேத பாத்ரபேத மாஸி। ௮௪।௰௧௬
பூர்வபத்ரபதாஸு ச। தைதவாப்யர்ச்ய ேகாவிந்தம்। ௮௪।௰௧௭
தத்வத் விஷ்ணுபதத்வயம்। விப்ராய ச யவாந் தத்த்வா। ௮௪।௰௧௭
ப்ரீணயித்வா புேவாகதிம்। புஞ்ஜதீ ேகாரஸப்ராயம்। ௮௪।௰௧௮
நேரா ேயாஷித் அதாபி வா। தத்வத் ஆஸ்வயுேஜ தாநம்। ௮௪।௰௧௮

தத்வத் ேகாவிந்தபூஜநம்। பதத்வயஸ்ய பூஜாம் ச। ௮௪।௰௧௯
ப்ரீணநம் ச புேவாகேத:। தைதவ நக்தம் புஞ்ஜதீ । ௮௪।௰௧௯
ேகாரஸம் ெமௗநம் ஆஸ்தித:। ஸ்த்ரீ வா ராேஜந்த்ர பூர்வாஸு।
௮௪।௰௨
ததா பத்ரபதாஸு ைவ। பால்குேந பல்குநீபூர்வா। ௮௪।௰௨
பவதீஹ யதா ந்ருப। த்ரிவிக்ரமம் ததா ேதவம்। ௮௪।௰௨௧
பூர்ேவாக்தவிதிநார்சேயத்। பதத்வயம் ச ேதவஸ்ய। ௮௪।௰௨௧
ஸம்யக் அப்யர்ச்ய பார்திவ। ஹிரண்யம் தக்ஷிணாம் தத்த்வா।
௮௪।௰௨௨
ஸ்வர்கதி: ப்ரீயதாம் இதி। நக்தம் புஞ்ஜதீ ராேஜந்த்ர। ௮௪।௰௨௨
வஹ்நிபாகவிவர்ஜிதம்। ஏஷ ஏேவாத்தராேயாேக। ௮௪।௰௨௩
ைசத்ேர மாேஸ விதி: ஸ்ம்ருத:। ஏதஜ் ஜகாத ேகாவிந்த:। ௮௪।௰௨௩
புரா தக்ஷாய ப்ருச்சேத। ஸர்வபாபஹரம் புண்யம்। ௮௪।௰௨௪
வ்ரதம் விஷ்ணுபதத்ரயம்। யேதாக்தம் ஏதத் ேயா பக்ேதா। ௮௪।௰௨௪
கேராதி ந்ருபஸத்தம। ஸர்வகாமாந் அவாப்ேநாதி। ௮௪।௰௨௫
ேகஸவஸ்ய வேசா யதா। அபுத்ேரா லபேத புத்ரம்। ௮௪।௰௨௫
அபதிர் லபேத பதிம்। ஸமாகமம் ப்ேராஷிைதஸ் ச। ௮௪।௰௨௬
ததா ப்ராப்ேநாதி பாந்தைவ:। த்ரவ்யம் ஐஸ்வர்யம் ஆேராக்யம்।
௮௪।௰௨௬
ெஸௗபாக்யம் சாருரூபதாம்। ப்ராப்நுவந்த்ய் அகிலாந் ஏதாந்। ௮௪।௰௨௭
பூஜயித்வா பதத்ரயம்। யாந் யாந் காமாந் நர: ஸ்த்ரீ வா। ௮௪।௰௨௭
ஹ்ருதேயநாபிவாஞ்சந்தி। தாம்ஸ் தாம்ஸ் சாப்ேநாதி நிஷ்காேமா।

விஷ்ணுேலாகம் ச கச்சதி। பூர்வம் க்ருத்வாபி பாபாநி। ௮௪।௰௨௮
நர: ஸ்த்ரீ வா நராதிப। பதத்ரயவ்ரதம் சீர்த்வா। ௮௪।௰௨௯
முச்யேத ஸர்வகில்பிைஷ:। விஷ்ேணார் ஆராதநார்தாய। ௮௪।௰௨௯
யாநி தாநாநி ஸத்தம। ேதயாநி தாந்ய் அேஸஷாணி। ௮௫।௰௰௧
மமாசŠவ த்விேஜாத்தம। ேயந ைசவ விதாேநந। ௮௫।௰௰௧
தாநம் பும்ஸ: ஸுகாவஹம்। ப்ரீணநாய ச க்ருஷ்ணஸ்ய। ௮௫।௰௰௨
தந் மமாக்யாஹி விஸ்தராத்। க்ருேதாபவாஸ: ஸம்ப்ராஸ்ய।
௮௫।௰௰௨
பஞ்சகவ்யம் நேரஸ்வர। க்ருதக்ஷராபிேஷகம் ீ ச। ௮௫।௰௰௩
க்ருத்வா விஷ்ேணா: ஸமாஹித:। ஸமப்யர்ச்ய ச ேகாவிந்தம்।
௮௫।௰௰௩
புஷ்பாதிபிர் அரிம்தம। உதங்முகீம் அர்சயித்வா। ௮௫।௰௰௪
ததா க்ருஷ்டிம் பயஸ்விநீம்। ஸபுத்ராம் வஸ்த்ரஸம்வதாம் ீ । ௮௫।௰௰௪
ஸிதயஜ்ேஞாபவதிநீ ீம்। ஸ்வர்ணஸ்ருங்கீம் ஸுபாகாராம்। ௮௫।௰௰௫
ஹிரண்ேயாபரிஸம்ஸ்திதாம்। ஹிரண்யம் வாசயித்வாக்ேர। ௮௫।௰௰௫
ப்ராஹ்மணாேயாபபாதேயத்। இமாம் த்வம் ப்ரதிக்ருஹ்ணஷ்வீ ।
௮௫।௰௰௬
ேகாவிந்த: ப்ரீயதாம் இதி। ஸம்யக் உச்சார்ய தம் விப்ரம்। ௮௫।௰௰௬
ேகாவிந்தம் ந்ருப கல்பேயத்। அநுவ்ரேஜச் ச கச்சந்தம்। ௮௫।௰௰௭
பதாந்ய் அஷ்ெடௗ நராதிப। அேநந விதிநா ேதநும்। ௮௫।௰௰௭
ேயா விப்ராய ப்ரயச்சதி। ேகாவிந்தப்ரீணநாத் ராஜந்। ௮௫।௰௰௮
விஷ்ணுேலாகம் ச கச்சதி। ஸப்தாவராம்ஸ் ததா பூர்வாந்। ௮௫।௰௰௮
ஸப்தாத்மாநம் ச மாநவ:। ஸப்தஜந்மக்ருதாத் பாபாந்। ௮௫।௰௰௯

ேமாசயத்ய் அவநீபேத। பேத பேத ச யஜ்ஞஸ்ய। ௮௫।௰௰௯
ேகாஸவஸ்ய ஸ மாநவ:। பலம் ஆப்ேநாதி ராேஜந்த்ர। ௮௫।௰௧
தக்ஷாையவம் ஜெகௗ ஹரி:। ஸர்வகாமஸம்ருத்தஸ்ய। ௮௫।௰௧
ஸர்வகாேலஷு பார்திவ। பவத்ய் அெகௗகாபஹரா। ௮௫।௰௧௧
யாவத் இந்த்ராஸ் சதுர்தஸ। ஸர்ேவஷாம் ஏவ பாபாநாம்। ௮௫।௰௧௧
க்ருதாநாம் அவிஜாநதா। ப்ராயஸ்சித்தம் இதம் ஸஸ்தம்। ௮௫।௰௧௨
அநுதாேபாபவ்ரும்ஹிதம்। இŠவாகுைநஷா ராேஜந்த்ர। ௮௫।௰௧௨
பூர்வம் தத்தா மஹாத்மநா। தத: ஸ ேலாகாந் அமலாந்। ௮௫।௰௧௩
ப்ராப்தவாந் அவநீபதி:। தைதவாந்ையர் மஹீபாைலர்। ௮௫।௰௧௩
த்விஜைவஸ்யாதிபிஸ் ததா। ேலாகா: காமதுகா: ப்ராப்தா। ௮௫।௰௧௪
தத்த்ேவத்ருக்விதிநா ந்ருப। திலேதநும் ப்ரவŠயாமி। ௮௫।௰௧௪
ேகஸவப்ரீணநாய யா। தத்தா பவதி யஸ் சாஸ்யா। ௮௬।௰௰௧
நேரந்த்ர விதிர் உத்தம:। பலம் ஆப்ேநாதி ராேஜந்த்ர। ௮௬।௰௰௧
தத்வத் வா விதிவத் ததா। யாம் தத்த்வா ப்ரஹ்மஹா ேகாக்ந:।
௰௮௬।௧௩௯
பித்ருக்ேநா குருதல்பக:। ஆகாரதாஹீகரத:। ௮௬।௰௰௨
ஸர்வபாபரேதா அபி வா। மஹாபாதகயுக்ேதா ேயா। ௮௬।௰௰௨
யுக்ேதா யஸ் ேசாபபாதைக:। ஸ முச்யேத அகிைல: பாைபர்।
௮௬।௰௰௩
விஷ்ணுேலாகம் ஸ கச்சதி। ஸ்வநுலிப்ேத மஹீப்ருஷ்ேட। ௮௬।௰௰௩
வஸ்த்ராஜிநஸமாவ்ருேத। ேதநும் திலமயம்ீ க்ருத்வா। ௮௬।௰௰௪
ஸர்வரத்ைந: ஸமந்விதாம்। ஸுவர்ணஸ்ருங்கீம் ெரௗப்யகுராம்।
௮௬।௰௰௪

கந்தக்ராணவதீம் ஸுபாம்। ம்ருஷ்டாந்நஜிஹ்வாம் குர்வதீ। ௮௬।௰௰௫
குடாஸ்யாம் ஸூத்ரகம்பலாம்। இக்ஷுபாதாம் தாம்ரப்ருஷ்டாம்।
௮௬।௰௰௫
குர்யாந் முக்தாபேலக்ஷணாம்। ப்ரஸஸ்தபத்ரஸ்ரவணாம்। ௮௬।௰௰௬
பலதந்தவதீம் ஸுபாம்। ஸ்ரக்தாமபுச்சாம் குர்வதீ। ௮௬।௰௰௬
நவநீதஸ்தநாந்விதாம்। பைலர் மேநாஹைரர் பைக்ஷர்। ௮௬।௰௰௭
மணிமுக்தாபலாந்விதாம்। திலத்ேராேணந குர்வதீ। ௮௬।௰௰௭
ஆடேகந து வத்ஸகம்। ஸுபவஸ்த்ரயுகச்சந்நாம்। ௮௬।௰௰௭
சாருச்சத்த்ரஸமந்விதாம்। ஈத்ருக்ஸம்ஸ்தாநஸம்பந்நாம்। ௮௬।௰௰௮
க்ருத்வா ஸ்ராத்தஸமந்வித:। காம்ஸ்ேயாபேதாஹநாம் தத்யாத்।
௮௬।௰௰௮
ேகஸவ: ப்ரீயதாம் இதி। ஸம்யக் உச்சார்ய விதிநா। ௮௬।௰௰௮
தத்த்ைவேதந நராதிப। ஸர்வபாபவிநிர்முக்த:। ௮௬।௰௰௯
பிதரம் ஸபிதாமஹம்। ப்ரபிதாமஹம் ததா பூர்வம்। ௮௬।௰௰௯
புருஷாணாம் சதுஷ்டயம்। ஆத்மாநம் தநயம் ெபௗத்ரம்। ௮௬।௰௧
தததஸ் து சதுஷ்டயம்। தாரயத்ய் அவநீபால। ௮௬।௰௧
திலேதநுப்ரேதா நர:। யஸ் ச க்ருஹ்ணாதி விதிவத்। ௮௬।௰௧
தஸ்யாப்ய் ஏவம்விதாந் குலாந்। சதுர்தஸ ததா ைசவ। ௮௬।௰௧௧
தததஸ் சாநுேமாதகா:। தீயமாநாம் ப்ரபஸ்யந்தி। ௮௬।௰௧௧
திலேதநும் ச ேய நரா:। ேத அப்ய் அேஸஷாகநிர்முக்தா:। ௮௬।௰௧௨
ப்ரயாந்தி பரமாம் கதிம்। ப்ரஸாந்தாய ஸுஸலாய ீ । ௮௬।௰௧௨
ததாமத்ஸரிேண புத:। திலேதநும் நேரா தத்யாத்। ௮௬।௰௧௩
ேவதஸ்நாதாய தர்மிேண। த்ரிராத்ரம் யஸ் திலாஹாரஸ்। ௮௬।௰௧௩

திலேதநும் ப்ரயச்சதி। தத்த்ைவகராத்ரம் ச புநஸ்। ௮௬।௰௧௪
திலாந் அத்தி நேரஸ்வர। தாதுர் விஸுத்தபாபஸ்ய। ௮௬।௰௧௪
தஸ்ய புண்யவேதா ந்ருப। சாந்த்ராயணாத் அப்யதிகம்। ௮௬।௰௧௫
ஸஸ்தம் தத் திலபக்ஷணம்। திலாபாேவ ததா தத்யாத்। ௮௬।௰௧௫
க்ருதேதநும் யதவ்ரத:। கல்பயித்வா யதாந்யாயம்। ௮௭।௰௰௧
திலேதந்வா யதவ்ரத:। ேயந பூப விதாேநந। ௮௭।௰௰௧
தத் இைஹகமநா: ஸ்ருணு। வாஸுேதவம் ஜகந்நாதம்। ௮௭।௰௰௧
புருேஷஸம் அஜம் விதும்। ஸர்வபாபநிஹந்தாரம்। ௮௭।௰௰௨
க்ருதக்ஷராபிேஷசநாத் ீ । ஸம்பூஜ்ய பூர்வவத் புஷ்ப । ௮௭।௰௰௨
கந்ததூபாதிபிர் நர:। அேஹாராத்ேராஷிேதா பூத்வா। ௮௭।௰௰௨
தத்பர: ப்ரயத: ஸுசி:। பரேமஸம் அேதா நாம்நா। ௮௭।௰௰௩
அபிஷ்டூய க்ருதார்சிஷா। கவ்யஸ்ய ஸர்பிஷ: கும்பம்। ௮௭।௰௰௩
புஷ்பமால்யாதிபூஷிதம்। காம்ஸ்ேயாபதாநஸம்யுக்தம்। ௮௭।௰௰௪
ஸிதவஸ்த்ரயுேகந ச। ஹிரண்யகர்பஸஹிதம்। ௮௭।௰௰௪
மணிவித்ருமமுக்திைக:। இக்ஷுயஷ்டிமயாந் பாதாந்। ௮௭।௰௰௪
குராந் ெரௗப்யமயாம்ஸ் ததா। ெஸௗவர்ேண சாக்ஷிணீகுர்யாச்।
௮௭।௰௰௫
ஸ்ருங்ேக சாகருகாஷ்டேஜ। ஸப்ததாந்யமேய பார்ஸ்ேவ। ௮௭।௰௰௫
பத்த்ேரார்ணாநி ச கம்பலம்। குர்யாத் துருஷ்ககர்பூெரௗ। ௮௭।௰௰௬
க்ராணம் பலமயாந் ஸ்தநாந்। மணிரத்நஸுவர்ணாநாம்। ௮௭।௰௰௬
ஸம்யக்கல்பநயா க்ருதாம்। தத்வச் சர்கரயா ஜிஹ்வாம்। ௰௮௭।௧௪௰
குடக்ஷரமயம் ீ முகம்। ெக்ஷௗமஸூத்ேரண லாங்கூலம்। ௮௭।௰௰௭

ேராமாணி ஸிதஸர்ஷைப:। தாம்ரபாத்ரமயம் ப்ருஷ்டம்। ௮௭।௰௰௭
குர்யாச் ச்ரத்தாஸமந்வித:। ஈத்ருக்ஸ்வரூபாம் ஸம்கல்ப்ய। ௮௭।௰௰௭
க்ருதேதநும் நராதிப। தத்வத்கல்பநயா ேதந்வா। ௮௭।௰௰௮
க்ருதவத்ஸம் ப்ரகல்பேயத்। தம் ச விப்ரம் மஹாபாக। ௮௭।௰௰௮
மநைஸவ க்ருதார்சிஷம்। கல்பயித்வா ததஸ் தஸ்ைம। ௮௭।௰௰௯
ப்ரயத: ப்ரதிபாதேயத்। ஏதாம் மேமாபகாராய। ௮௭।௰௰௯
க்ருஹ்ணஷ்வீ த்வம் த்விேஜாத்தம। ப்ரீயதாம் மம ேதேவேஸா।
௮௭।௰௧
க்ருதாக்ருசி: புருேஷாத்தம:। இத்ய் உதாஹ்ருத்ய விப்ராய। ௮௭।௰௧
தத்யாத் ேதநும் நேராத்தம। மணிமுக்தாஸுவர்ணாநாம்। ௮௭।௰௧
ஸம்யக்கல்பநயா க்ருதாம்। தத்த்ைவகராத்ரம் ஸ்தித்வா ச। ௰௮௭।௧௪௧
க்ருதாஹாேரா நராதிப। முச்யேத ஸர்வபாேபப்யஸ்। ௮௭।௰௧௧
ததா தாநபலம் ஸ்ருணு। க்ருதக்ஷரவஹா ீ நத்ேயா। ௮௭।௰௧௧
யத்ர பாயஸகர்தமா:। ேதஷு ேலாேகஷு ேலாேகஸ। ௮௭।௰௧௨
ஸ புண்ேயஷூபஜாயேத। பிதுர் ஊர்த்ேவந ேய ஸப்த। ௮௭।௰௧௨
புருஷா: ஸப்த ேய அப்ய் அத:। தாம்ஸ் ேதஷு ந்ருப ேலாேகஷு।
௮௭।௰௧௩
ஸ நயத்ய் அஸ்தகல்மஷ:। ஸகாமாநாம் இயம் வ்யுஷ்டி:। ௮௭।௰௧௩
கதிதா ந்ருபஸத்தம। விஷ்ணுேலாகம் நரா யாந்தி। ௮௭।௰௧௪
நிஷ்காமா க்ருதேதநுதா:। க்ருதம் அக்நிர் க்ருதம் ேஸாமஸ்। ௮௭।௰௧௪
தந்மயா: ஸர்வேதவதா:। க்ருதம் ப்ரயச்சதா தத்தா। ௮௭।௰௧௫
பவந்த்ய் அகிலேதவதா:। ஜலேதநும் ப்ரவŠயாமி। ௮௭।௰௧௫
ப்ரீயேத தத்தயா யயா। ேதவேதேவா ஹ்ருஷீேகஸ:। ௮௮।௰௰௧

ஸர்ேவஸ: ஸர்வபாவந:। ஜலகும்பம் நரவ்யாக்ர। ௮௮।௰௰௧
ஸுவர்ணரஜதாந்விதம்। ரத்நகர்பம் அேஸைஷஸ் து। ௮௮।௰௰௨
க்ராம்ையர் தாந்ைய: ஸமந்விதம்। ஸிதவஸ்த்ரயுகச்சந்நம்। ௮௮।௰௰௨
தூர்வாபல்லவேஸாபிதம்। குஷ்டம் மாம்ஸம்ீ உஸரம்ீ ச। ௮௮।௰௰௩
வாலகாமலைகர் யுதம்। ப்ரியங்குபாத்ரஸஹிதம்। ௮௮।௰௰௩
ஸிதயஜ்ேஞாபவதிநம் ீ । ஸச்சத்த்ரம் ெஸௗபாநத்கம்। ௮௮।௰௰௪
தர்பவிஸ்தரஸம்ஸ்திதம்। சதுர்பி: ஸம்வ்ருதம் பூப। ௮௮।௰௰௪
திலபாத்ைரஸ் சதுர்திஸம்। ஸ்தகிதம் ததிபாத்ேரண। ௮௮।௰௰௫
க்ருதெக்ஷௗத்ரவதா முேக। உேபாஷித: ஸமப்யர்ச்ய। ௮௮।௰௰௫
வாஸுேதவம் ஜேநஸ்வரம்। புஷ்பதூேபாபஹாைரஸ் து। ௮௮।௰௰௬
யதாவிபவம் ஆத்ருத:। ஸம்கல்ப்ய ஜலேதநும் ச। ௮௮।௰௰௬
கும்பம் ஸமபிபூஜ்ய ச। பூஜேயத் வத்ஸகம் தத்வத்। ௮௮।௰௰௭
க்ருதம் ஜலமயம் புத:। ஏவம் ஸம்பூஜ்ய ேகாவிந்தம்। ௮௮।௰௰௭
ஜலேதநும் ஸவத்ஸகாம்। ஸிதவஸ்த்ரதர: ஸாந்ேதா। ௮௮।௰௰௮
வதராேகா ீ விமத்ஸர:। தத்யாத் விப்ராய ராேஜந்த்ர। ௮௮।௰௰௮
ப்ரீத்யர்தம் ஜலஸாயிந:। ஜலஸாயீ ஜகத்ேயாநி:। ௮௮।௰௰௯
ப்ரீயதாம் மம ேகஸவ:। இதி ேசாச்சார்ய பூநாத। ௮௮।௰௰௯
விப்ராய ப்ரதிபாத்யதாம்। அபக்வாந்நாஸிநா ஸ்ேதயம்। ௮௮।௰௧
அேஹாராத்ரம் அத:பரம்। அேநந விதிநா தத்த்வா। ௮௮।௰௧
ஜலேதநும் ஜநாதிப। ஸர்வாஹ்லாதாந் அவாப்ேநாதி। ௮௮।௰௧௧
ேய திவ்யா ேய ச மாநுஷா:। ஸரீராேராக்யம் ஆபாதா । ௮௮।௰௧௧
ப்ரஸம: ஸார்வகாமிக:। ந்ருணாம் பவதி தத்தாயாம்। ௮௮।௰௧௨

ஜலேதந்வாம் ந ஸம்ஸய:। அத்ராபி ஸ்ரூயேத பூப। ௮௮।௰௧௨
புத்கேலந மஹாத்மநா। ஜாதிஸ்மேரண யத் கீதம்। ௮௮।௰௧௩
இஹாப்ேயத்ய புரா கில। ஸ புத்கல: புரா விப்ேரா। ௮௮।௰௧௩
யமேலாககேதா முநி:। ததர்ஸ யாதநா ேகாரா:। ௮௮।௰௧௪
பாபகர்மக்ருதாம் கில। தீப்தாக்நிதீŠணஸஸ்த்ேராத்தா:। ௮௮।௰௧௪
க்வாதைதலகதாஸ் ததா। உஷ்ணக்ஷாரநதீபாதா। ௮௮।௰௧௫
ைபரவா: புருஷர்ஷப। வ்ரணா: க்ஷாரநிபாேதாக்ரா:। ௮௮।௰௧௫
கும்பபாகமஹாபயா ீ :। தா த்ருஷ்ட்வா யாதநா விப்ரஸ்। ௮௮।௰௧௬
சகார பரமாம் க்ருபாம்। ஆஹ்லாதம் ேத ததா ஜக்மு:। ௮௮।௰௧௬
பாபாஸ் ததநுகம்பிதா:। தம் த்ருஷ்ட்வா நாரகா: ேகசித்। ௮௮।௰௧௭
ேகசித் ததவேலாகிந:। ததா ஸ்வஸ்தம் விேலாக்ையவ। ௮௮।௰௧௭
முநிர் நாரகமண்டலம்। தர்மராஜம் ஸ பப்ரச்ச। ௮௮।௰௧௮
ேதஷாம் ப்ரஸமகாரணம்। தஸ்ைம சாசஷ்ட ராேஜந்த்ர। ௮௮।௰௧௮
ததா ைவவஸ்வேதா யம:। ஆஹ்லாதேஹதும் விப்ராய। ௮௮।௰௧௯
ப்ருச்சேத ப்ருதிவபேத ீ । தவாநுபாவாத் ஏேதஷாம்। ௮௮।௰௧௯
நாரகாணாம் த்விேஜாத்தம்। ஸம்ப்ரவ்ருத்ேதா அயம் ஆஹ்லாத:।
௮௮।௰௨
காரணம் யச் ச்ருணுஷ்வ தத்। த்வயாப்யர்ச்ய ஜகந்நாதம்। ௮௮।௰௨
ஸர்ேவஸம் ஜலஸாயிநம்। ஜலேதநு: புரா தத்தா। ௮௮।௰௨௧
விதிவந் முநிபுங்கவ। அஸ்மாத் து ஜந்மேநா அதீேத। ௮௮।௰௨௧
த்ருதீேய த்விஜ ஜந்மநி। தஸ்ய தாநஸ்ய ேத வ்யுஷ்டிர்। ௮௮।௰௨௨
இயம் ஆஹ்லாததாயிநீ। ேயந த்வம் தபஸா யுக்ேதா। ௮௮।௰௨௨

மாநவாநாம் அேகாசரம்। ஸம்ப்ராப்ேதா அஸி மஹாப்ரஜ்ஞ। ௮௮।௰௨௩
ஸர்வஸாஸ்த்ரவிஸாரத। ேய த்வாம் பஸ்யந்தி ஸ்ருண்வந்தி।
௮௮।௰௨௩
ேய ச த்யாயந்தி பாபிந:। ஸ்ருேணாஷி யாம்ஸ் த்வம் விப்ேரந்த்ர।
௮௮।௰௨௪
யாம்ஸ் ச த்யாயஸி பஸ்யஸி। நிர்வ்ருதி: பரமா ேதஷாம்। ௮௮।௰௨௪
ஸர்வாஹ்லாதப்ரதாயிநீ। ஸத்ேயா பவதி மாத்ர த்வம்। ௮௮।௰௨௫
த்விேஜந்த்ர குரு விஸ்மயம்। ஆஹ்லாதேஹதுஜநநம்। ௮௮।௰௨௫
நாஸ்தி விப்ேரந்த்ர தாத்ருஸம்। ஜலேதநுர் யதா ந்ருணாம்। ௮௮।௰௨௬
ஜந்மாந்ய் ஏேகாநஸப்ததி:। ந தாேகா ந க்லேமா நார்திர்। ௮௮।௰௨௬
ந ேமாேஹா விப்ர ஜாயேத। அபி ஜந்மஸஹஸ்ேரஷு। ௮௮।௰௨௭
ஜலேதநுப்ரதாயிநாம்। ஏகஜந்மக்ருதம் வாஞ்சா। ௮௮।௰௨௭
த்ரிஜந்ேமாத்தம் ஸமாஹ்ருதா। ஸப்தஜந்மக்ருதம் பாபம்। ௮௮।௰௨௮
ஹந்தி தத்தாம்புெகௗர் ந்ருணாம்। ஸ த்வம் கச்ச க்ருஹீத்வார்கம்।
௮௮।௰௨௮
அஸ்மத்ேதா த்விஜஸத்தம। ேயஷாம் ஸமாஸ்ரய: க்ருஷ்ேணா।
௮௮।௰௨௯
ந நியம்யா ஹி ேத மயா। க்ருஷ்ண: ஸம்பூஜிேதா ையஸ் து।
௮௮।௰௨௯
ேய க்ருஷ்ணார்தம் உேபாஷிதா:। ையஸ் ச நித்யம் ஸ்ம்ருத: க்ருஷ்ேணா।
௮௮।௰௩
ந ேத மத்விஷேயாபகா:। நம: க்ருஷ்ணாச்யுதாநந்த। ௮௮।௰௩
வாஸுேதேவத்ய் உதீரிதம்। ையர் பாவபாவிைதர் விப்ர। ௮௮।௰௩௧

ேத மத்விஷேயாபகா:। தாநம் ததத்பிர் ையர் உக்தம்। ௮௮।௰௩௧
அச்யுத: ப்ரீயதாம் இதி। ஸ்ரத்தாபுர:ஸைரர் விப்ர। ௮௮।௰௩௨
ந ேத மத்விஷேயாபகா:। உத்திஷ்டத்பி: ஸ்வபத்பிஸ் ச। ௮௮।௰௩௨
வ்ரஜத்பிஸ் ச ஜநார்தந:। ைய: ஸம்ஸ்ம்ருேதா த்விஜஸ்ேரஷ்ட।
௮௮।௰௩௩
ந ேத மத்விஷேயாபகா:। க்ஷுதஸ்கலிதபத்யாதாவ் ீ । ௮௮।௰௩௩
அஸஹத்பிஸ் ச ேவதநாம்। க்ருஷ்ேணத்ய் உதீரிதம் ையஸ் ச।
௮௮।௰௩௪
ந ேத மத்விஷேயாபகா:। ஸர்வாபாதாஸு ேய க்ருஷ்ணம்। ௮௮।௰௩௪
ஸ்மரந்த்ய் உச்சாரயந்தி ச। தத்பாவபாவிதா விப்ர। ௮௮।௰௩௫
ந ேத மத்விஷேயாபகா:। ஸ ஏவ தாதா ஸர்வஸ்ய। ௮௮।௰௩௫
தந்நிேயாககரா வயம்। ஜநஸம்யமேநாத்யுக்தா:। ௮௮।௰௩௬
ேஸா அஸ்மத்ஸம்யமேநா ஹரி:। இத்தம் நிஸாம்ய வசநம்।
௮௮।௰௩௬
யமஸ்ய வதேதா முநிம்। ஊசுஸ் ேத நாரகா: ஸர்ேவ। ௮௮।௰௩௭
வஹ்நிஸஸ்த்ராஸ்த்ரபரவீ :। நம: க்ருஷ்ணாய ஹரேய। ௮௮।௰௩௭
விஷ்ணேவ ஜிஷ்ணேவ நம:। ஹ்ருஷீேகஸாய ேதவாய। ௮௮।௰௩௮
ஜகத்தாத்ேர அச்யுதாய ச। நம: பங்கஜேநத்ராய। ௮௮।௰௩௮
நம: பங்கஜநாபேய। ஜநார்தநாய ஸ்ரீஸாய। ௮௮।௰௩௯
ஸ்ரீபேத பதவாஸேஸ ீ । ேகாவிந்தாய நேமா நித்யம்। ௮௮।௰௩௯
நமஸ் ேசாததிஸாயிேந। நம: கராலவக்த்ராய। ௮௮।௰௪
ந்ருஸிம்ஹாயாதிநாதிேந। ஸார்ங்கிேண ஸிதகட்காய। ௮௮।௰௪
ஸங்கசக்ரகதாத்ருேத। நேமா வாமநரூபாய। ௮௮।௰௪௧

க்ராந்தேலாகத்ரயாய ச। வராஹரூபாய ததா। ௮௮।௰௪௧
நேமா யஜ்ஞாங்கதாரிேண। வ்யாப்தாேஸஷதிகந்தாய। ௮௮।௰௪௨
ஸாந்தாய பரமாத்மேந। வாஸுேதவ நமஸ் துப்யம்। ௮௮।௰௪௨
நம: ைகடபஸூதந। ேகஸவாய நேமா வ்யாபிந்। ௮௮।௰௪௩
நமஸ் ேத அஸ்து மஹீதர। நேமா அஸ்து வாஸுேதவாேயத்ய்।
௮௮।௰௪௩
ஏவம் உச்சாரிேத தத:। ஸஸ்த்ராணி குண்டதாம் ஜக்முர்। ௮௮।௰௪௪
அநலஸ் சாப்ய் அஸஸமத் ீ । அபஜ்யந்த ச யந்த்ராணி। ௮௮।௰௪௪
ஸமுத்ேபதுர் அேயாமுகா:। ஸம்ஸுஷ்கா: க்ஷாரஸரித:। ௮௮।௰௪௫
பதித: கூடஸால்மலி:। ப்ரகாஸதாமஸதத்த்வம் ீ । ௮௮।௰௪௫
நரகஸ் சாகதஸ் து ஸ:। விவாந் பபஞ்ஜ பவேநா அப்ய்। ௮௮।௰௪௬
அஸிபத்ரவநம் தத:। நிருத்ஸாஹா ஜடதிேயா। ௮௮।௰௪௬
பபூவுர் யமகிம்கரா:। ஆஸந் கந்தாம்புவாஹிந்ய:। ௮௮।௰௪௭
பூயேஸாணிதநிம்நகா:। வெவௗ ஸுகந்தீபவேநா। ௮௮।௰௪௭
மந:ப்ரீதிகரஸ் தத:। ேவணுவணாஸ்வநயுதாந் ீ । ௮௮।௰௪௮
கீதஸப்தாம்ஸ் ச ஸுஸ்ருவு:। தம் தாத்ருஸம் அதாலŠய।
௮௮।௰௪௮
ந்ருப ைவவஸ்வேதா யம:। நரகஸ்ய விபர்யாஸம்। ௮௮।௰௪௯
ஸம்க்ஷுத்தஹ்ருதயஸ் தத:। ததர்ஸ நாரகாந் ஸத்ேயா। ௮௮।௰௪௯
திவ்யஸ்ரகநுேலபநாந்। ஜாஜ்வல்யமாநாம்ஸ் ேதேஜாபிர்। ௮௮।௰௫
அமலாம்பரவாஸஸ:। நேமா நேமா அஸ்து க்ருஷ்ணாய। ௮௮।௰௫
ேகாவிந்தாயாவ்யயாத்மேந। வாஸுேதவாய ேதவாய। ௮௮।௰௫௧
விஷ்ணேவ ப்ரபவிஷ்ணேவ। இத்ய் ஏவம் வாதிநஸ் தத்ர। ௮௮।௰௫௧

ப்ரஜாஸம்யமேநா யம:। க்ஷணபாபசயாம்ஸ் ீ தாம்ஸ் து। ௮௮।௰௫௨
பாத்யார்க்யாதிபிர் அர்சயந்। பூஜயித்வா ச தாந் ஆஹ। ௮௮।௰௫௨
ஸ க்ருஷ்ணாய க்ருதாஞ்ஜலி:। ஸமாஹிதமநா பூத்வா। ௮௮।௰௫௩
தர்மராேஜா நேரஸ்வர। விஷ்ேணார் ேதவாதிேதவஸ்ய। ௮௮।௰௫௩
ஜகத்தாது: ப்ரஜாபேத:। ப்ரணாமம் ேய அபி குர்வந்தி। ௮௮।௰௫௪
ேதஷாம் அபி நேமா நம:। ஸர்வஸ்ய ஸர்வஸம்ஸ்தஸ்ய। ௮௮।௰௫௪
ஸர்வாதாரஸ்ய ேயாகிந:। ேய விஷ்ேணா: ப்ரணதாஸ் ேதப்ேயா।
௮௮।௰௫௫
நம: ஸத்ய: புந: புந:। தஸ்ய யஜ்ஞவராஹஸ்ய। ௮௮।௰௫௫
விஷ்ேணார் அமிதேதஜஸ:। ப்ரணாமம் ேய அபி குர்வந்தி। ௮௮।௰௫௬
ேதஷாம் அபி நேமா நம:। ஏவம் ேத ஸம்ஸ்துதாஸ் ேதந। ௮௮।௰௫௬
தர்மராேஜந நாரகா:। விமாநாநி ஸமாரூடா। ௮௮।௰௫௭
ந்ருத்தகாந்தர்வவந்தி ைவ। புத்கேலா அபி மஹாபுத்திர்। ௮௮।௰௫௭
த்ருஷ்ட்ைவதத் அகிலம் ந்ருப। ஜாதிஸ்மேரா அபவத் பூப। ௮௮।௰௫௮
கண்வேகாத்ேர மஹாமுநி:। ஸம்ஸ்ம்ருத்ய யமவாக்யாநி। ௮௮।௰௫௮
விஷ்ேணார் மாஹாத்ம்யம் ஏவ ச। ஜலேதந்வாஸ் ச மாஹாத்ம்யம்।
௮௮।௰௫௯
ஸம்ஸ்ம்ருத்ையதத் அகாயத। அேஹா துருத்தரா விஷ்ேணார்।
௮௮।௰௫௯
மாேயயம் அதிகஹ்வரீ। யயா ேமாஹிதசித்தஸ் தம்। ௮௮।௰௬
ந ேவத்தி பரேமஸ்வரம்। ஜேவா ீ வாஞ்சதி கீடத்வம்। ௮௮।௰௬
யூகாமத்குணேயாநித:। தஸ்மாச் ச ஸலபாதீநாம்। ௮௮।௰௬௧

ேயாநிம் தஸ்மாச் ச பக்ஷிணாம்। ததஸ் ச பஸுதாம் ப்ராப்ய।
௮௮।௰௬௧
நரத்வம் அபிவாஞ்சதி। விமுக்திேஹதுகீ தந்யா। ௮௮।௰௬௨
நரேயாநி: க்ருதாத்மநாம்। ந ப்ராப்நுவந்தி ஸம்ஸாேர। ௮௮।௰௬௨
விப்ராந்தமநேஸா கதிம்। ஜவா ீ மாநுஷ்யதாம் அந்ேய। ௮௮।௰௬௩
ஜந்மநாம் அயுைதர் அபி। விஷ்ணுமாயாபரீதாஸ் ேத। ௮௮।௰௬௩
ப்ராப்யாபி ந தரந்தி ேய। தத் ஈத்ருக்துர்லபம் ப்ராப்ய। ௰௮௮।௧௪௨
முக்தித்வாரம் அேசதஸ:। பதந்தி பூய: ஸம்ஸாேர। ௮௮।௰௬௪
விஷ்ணுமாயாவிேமாஹிதா:। துஸ்தராபி து ஸாத்யாெஸௗ।
௮௮।௰௬௪
மாயா க்ருஷ்ணஸ்ய ேமாஹநீ। சித்யேத யாமேநாந்யஸ்ேத।
௮௮।௰௬௫
முைதவ ஹி ஜநார்தேந। அஸம்த்யஜ்ய ச கார்ஹஸ்த்யம்। ௮௮।௰௬௫
அதப்த்ைவவ ததா தப:। சிந்தந்தி ைவஷ்ணவம்ீ மாயாம்। ௮௮।௰௬௬
ேகஸவார்பிதமாநஸா:। அவிேராேதந விஷயாம்। ௮௮।௰௬௬
புஞ்ஜந் விஷ்ணுவ்யபாஸ்ரய:। க்ருத்வா மநஸ் தரத்ய் ஏதாம்।
௮௮।௰௬௭
விஷ்ேணார் மாயாம் ஸுதுஸ்தராம்। ஈத்ருக்பஹுபலாம் பக்திம்।
௮௮।௰௬௭
ஸர்வதாதரி ேகஸேவ। மாயயா தஸ்ய ேதவஸ்ய। ௮௮।௰௬௮
ந குர்வந்தி விேமாஹிதா:। முைதேவாக்தம் முதாயாதம்। ௮௮।௰௬௮
முதா தத் விதிேசஷ்டிதம்। முைதவ ஜந்ம தந் நஷ்டம்। ௮௮।௰௬௯
யத்ர நாராதிேதா ஹரி:। ஆராதிேதா ஹி ய: பும்ஸாம்। ௮௮।௰௬௯

ஐஹிகாமுஷ்மிகம் பலம்। ததாதி பகவாந் ேதவ:। ௮௮।௰௭
கஸ் தம் ந ப்ரதிபூஜேயத்। ஸம்வத்ஸராஸ் ததா மாஸா। ௮௮।௰௭
விபலா திவஸாஸ் ச ேத। நராணாம் விஷயாந்தாநாம்। ௮௮।௰௭௧
ேயஷு நாராதிேதா ஹரி:। ேயா ந வித்தர்த்திவிபைவர்। ௮௮।௰௭௧
ந வேஸாபிர் ந பூஷைண:। துஷ்யேத ஹ்ருதேயைநவ। ௮௮।௰௭௨
கஸ் தம் ஈஸம் ந பூஜேயத்। ஜலேதந்வாஸ் ச மாஹாத்ம்யம்।
௮௮।௰௭௨
நிஸாம்யாபத்ருஸம் ீ நரா:। தாம் ந யச்சந்தி ேய ேதஷாம்। ௮௮।௰௭௩
விேவக: குத்ர திஷ்டதி। கர்மபூெமௗ ஹி மாநுஷ்யம்। ௮௮।௰௭௩
ஜந்மநாம் அயுைதர் அபி। ஸ்வர்காபவர்கபலதம்। ௮௮।௰௭௪
கதாசித் ப்ராப்யேத நைர:। ஸம்ப்ராப்ய தந் ந ையர் விஷ்ணுஸ்।
௮௮।௰௭௪
ேதாஷிேதா நாம்புேதநுகா। தத்தா ச ஸம்யக் ேத முஷ்டா। ௮௮।௰௭௫
ஜந்மநி ஸுபஹூநி ேபா:। ஊர்த்வபாஹுர் விெரௗம்ய் ஏஷ। ௮௮।௰௭௫
த்ருஷ்டேலாகத்வேயா அஸ்மி ேபா:। ஆராதயத ேகாவிந்தம்।
௮௮।௰௭௬
ஜலேதநும் ப்ரயச்சத। து:ஸேஹா நாரேகா வஹ்நிர்। ௮௮।௰௭௬
அவிஷஹ்யாஸ் ச யாதநா:। ஜ்ஞாநம் மைமதத் ஆலம்ப்ய। ௮௮।௰௭௭
க்ருஷ்ேண பவத ஸுஸ்திரா:। அேதஸிேக ேதஸிேகா அஹம்।
௮௮।௰௭௭
அத்ர மார்ேக மேயாதிதம்। விம்ருஷ்ய ஸத்யம் இத்ய் ஏதந்। ௮௮।௰௭௮
மந: க்ருஷ்ேண நிேவஸ்யதாம்। ப்ராத: க்ருஷ்ேணதி ேதேவதி।
௮௮।௰௭௮

ேகாவிந்ேததி ச ஜல்பதாம்। மத்யாஹ்ேந சாபராஹ்ேந ச। ௮௮।௰௭௯
ேயா அவஸாத: ஸ உச்யதாம்। அேநகவிஷயாலம்பி। ௮௮।௰௭௯
யச் சித்தம் தஜ் ஜநார்தேந। குருத்வம் ஆலம்பநவத்। ௮௮।௰௮
ஸம்ஸ்ம்ருத: புண்யேதா ஹி ஸ:। முைதவ ஜிஹ்வா க்ருஷ்ேணதி।
௮௮।௰௮
ேகஸேவதி ச வŠயதி। முதா ச சித்தம் தத்காமி। ௮௮।௰௮௧
யதி ஸ்யாத் கிம் அேதா அதிகம்। மேயாக்தம் ஏதத் பஹுேஸா।
௮௮।௰௮௧
விநஷ்ேட து ஸரீரேக। மநுஷ்யத்வம் விநா விஷ்ணுர்। ௮௮।௰௮௨
துர்லேபா ேவா பவிஷ்யதி। ஏதா: புத்கலகாதாஸ் ேத। ௮௮।௰௮௨
யமவாக்யம் தேவாதிதம்। ஜலேதந்வாஸ் ச மாஹாத்ம்யம்। ௮௮।௰௮௩
விஷ்ணுஸம்பூஜநஸ்ய ச। வ்ரதாநி ேஸாபவாஸாநி। ௮௮।௰௮௩
ஸர்வகாமப்ரதாநி ேத। வ்ரதம் அந்யந் மஹாபாக। ௮௮।௰௮௪
ஸர்வகாமப்ரதம் ஸ்ருணு। பவிஷ்யம் சாபரம் பூப। ௮௮।௰௮௪
மைமதச் ச்ேராதும் அர்ஹஸி। யத் ப்ரŠயதி மஹீபால:। ௮௯।௰௰௧
பரிக்ஷித் ஸ்வபுேராஹிதம்। பரீக்ஷித: புேராதாஸ் து। ௮௯।௰௰௧
த்விேஜா ெகௗரமுேகா ந்ருப। பவிஷ்யதி ஸமீகஸ்ய। ௮௯।௰௰௨
ஸிஷ்ய: பரமஸம்மத:। ஸ ச ராஜா ஜகத்தாதுர்। ௮௯।௰௰௨
ேதவேதவஸ்ய ஸார்ங்கிந:। ஸைதவாராதேந யத்நம்। ௮௯।௰௰௩
பக்தியுக்த: கரிஷ்யதி। புேராதஸம் ெகௗரமுகம்। ௮௯।௰௰௩
ப்ரணிபத்ய ஸ பார்திவ:। ப்ரŠயத்ய் ஆராதநார்தாய। ௮௯।௰௰௪
ேதவேதவஸ்ய சக்ரிண:। பகவந் பவபேதா ீ அஹம்। ௮௯।௰௰௪
அபவாய தேதா பவாந்। ஆராதயிதும் இச்சாமி। ௮௯।௰௰௫

ஸர்ேவச்சாபூரகம் ஹரிம்। ஸம்குருஷ்வ மஹாபாக। ௮௯।௰௰௫
ப்ரஸாதம் மம ஸுவ்ரத। க்ருஷ்ணாராதநகாமஸ்ய। ௮௯।௰௰௬
மநேஸா ேதஸிேகா பவ। ஆராதேநந ேயேநேஸா। ௮௯।௰௰௬
ஜகதாம் ஈஸ்வேரஸ்வர:। விஷ்ணுர் ஆராத்யேத பும்பி:। ௮௯।௰௰௭
ஸம்ஸாராப்திபரிக்ஷைத:। தந் மேமாபதிஸ ப்ரஹ்மந்। ௮௯।௰௰௭
ப்ரஸாதப்ரவணம் மந:। க்ருத்வா ஸைதவார்திமதாம்। ௮௯।௰௰௮
ஸரண்யம் ஸரணம் குரு:। ஏவம் ஸ ேதந பூபால। ௮௯।௰௰௮
பூபாேலந ர்ஷிபுங்கவ:। ேகஸவாராதநார்தாய। ௮௯।௰௰௯
ஸம்யக் ப்ருஷ்ட: ப்ரவŠயதி। நமஸ்க்ருத்ய ஜகத்தாத்ேர। ௮௯।௰௰௯
ேதவேதவாய ஸார்ங்கிேந। பரேமஸஸுேரஸாய। ௮௯।௰௧
ஹ்ருஷீேகஸாய ேவதேஸ। வரார்திநாம் அேமாகாய। ௮௯।௰௧
பரஸ்ைம ஹரிேமதேஸ। ஸர்வகல்யாணபூதாய। ௮௯।௰௧௧
ஸங்கசக்ரகதாத்ருேத। வராஸிசர்மாவிதேத। ௮௯।௰௧௧
க்ரூரஸாந்தாத்மமூர்தேய। யத்யத்பூேதாபகாராய। ௮௯।௰௧௨
தத்தத்ரூபவிகாரிேண। பரமாண்வந்தபர்யந்த । ௮௯।௰௧௨
ஸஹஸ்ராம்ஸாணுமூர்தேய। ஜடராந்தாயுதாஸாந்த । ௮௯।௰௧௩
ஸ்திதப்ரஹ்மாண்டதாரிேண। ஸ்ேவதாதிதீர்கஹ்ரஸ்வாதி । ௮௯।௰௧௩
கடிநாதிவிகல்பநா। ேயாகிசிந்த்ேய ஜகத்தாம்நி। ௮௯।௰௧௪
யத்ர நாஸ்த்ய் அகிலாத்மநி। தம் அஜம் ஸாஸ்வதம் நித்யம்।
௮௯।௰௧௪
பரிணாமவிவர்ஜிதம்। ேயாகிபிஸ் சிந்த்யேத மூர்திர்। ௮௯।௰௧௫
யத்ர தத்ராகிலாத்மநி। தத்ர தத்ராத்மேநா நித்யம்। ௮௯।௰௧௫

பரிணாமவிவர்ஜிதம்। ப்ரணம்ய ஜகதாம் ஈஸம்। ௮௯।௰௧௬
அநந்தம் பரத: பரம்। பரம் பராணாம் ஸ்ரஷ்டாரம்। ௮௯।௰௧௬
புராணம் புருஷம் ப்ரபும்। வரம் வேரண்யம் வரதம்। ௮௯।௰௧௭
ஸ்தூலஸூŠமஸ்வரூபிணம்। அேஸஷஜகதாம் மூலம்। ௮௯।௰௧௭
அநாதிநிதநஸ்திதிம்। பராபரஸ்வரூபஸ்தம்। ௮௯।௰௧௮
அவிகாரஸ்வரூபிணம்। யஸ்ேயாபசாரத: ஸ்வர்கம்। ௮௯।௰௧௮
ஸ்வரூபம் வ்யதிரிச்யேத। ஜ்ஞாநஜ்ேஞயஸ்ய முநிபிர்। ௮௯।௰௧௯
ஜ்ஞாநவித்பிர் மஹாத்மபி:। தஸ்ைம பார்திவமுக்யாய। ௮௯।௰௧௯
ரகுவர்யமஹாத்மேந। ஸ்ரூயதாம் ஸ முநிஸ்ேரஷ்ேடா। ௮௯।௰௨
யத் வŠயதி பரீக்ஷிேத। ேதவகீநாம ராேஜந்த்ர। ௮௯।௰௨
ேதவகஸ்யாபவத் ஸுதா। அநபத்யா தபஸ் ேதேப। ௮௯।௰௨௧
புத்ரார்தம் கில பாமிநீ। பார்யா ஸா வஸுேதவஸ்ய। ௮௯।௰௨௧
ஸத்யதர்மபராயணா। ந சாதுஷ்யத ேகாவிந்தஸ்। ௮௯।௰௨௨
ததஸ் தாம் ஆஹ பார்கவ:। கிமர்தம் தப்யேத பத்ேர। ௮௯।௰௨௨
தப: பரமதுஸ்சரம்। ேகா அர்தஸ் தவாபிலஷிேதா। ௮௯।௰௨௩
கந்தும் குத்ர தேவப்ஸிதம்। அபுத்ராஹம் த்விஜஸ்ேரஷ்ட। ௮௯।௰௨௩
பத்யுர் ேம நாஸ்தி ஸம்ததி:। ஸாஹம் ஆராத்ய ேகாவிந்தம்।
௮௯।௰௨௪
புத்ரம் இச்சாமி ேஸாபநம்। தபஸ் தாவத் கரிஷ்யாமி। ௮௯।௰௨௪
பரேமண ஸமாதிநா। யாவத் ஆராதிேதா விஷ்ணுர்। ௮௯।௰௨௫
தாஸ்யத்ய் அபிமதம் மம। ேகாவிந்தாராதேந யத்ேநா। ௮௯।௰௨௫
யதி ேத குலநந்திநி। தத் இதம் வ்ரதம் ஆஸ்தாய। ௮௯।௰௨௬
ேதாஷயாஸு ஜநார்தநம்। ப்ரதேம கார்த்திகஸ்யாஹ்நி। ௮௯।௰௨௬

ஸம்ப்ராப்ேத ேதவகாத்மேஜ। பஞ்சகவ்யஜலஸ்நாத:। ௮௯।௰௨௭
பஞ்சகவ்யக்ருதாஸந:। பாணபுஷ்ைப: ஸமப்யர்ச்ய। ௮௯।௰௨௭
வாஸுேதவம் அஜம் விபும்। தத்த்வா ச சந்தநம் தூபம்। ௮௯।௰௨௮
பரமாந்நம் நிேவதேயத்। க்ருேதந வாசேயத் விப்ரம்। ௮௯।௰௨௮
க்ருஹ்ணயாச் ீ ச தேதா வ்ரதம்। அத்யப்ரப்ருத்ய் அஹம் மாஸம்।
௮௯।௰௨௮
விரத: ப்ராணிநாம் வதாத்। அஸத்யவசநாத் ஸ்ைதந்யாந்। ௮௯।௰௨௯
மதுமாம்ஸாதிபக்ஷணாத்। ஸ்வபந் விபுத்யந் கச்சம்ஸ் ச। ௮௯।௰௨௯
ஸ்மரிஷ்யாம்ய் அஹம் அச்யுதம்। பராபவாதைபஸூந்யம்। ௮௯।௰௩
பரபடாகரம் ீ ததா। ஸச்சாஸ்த்ரேதவதாயஜ்வி । ௮௯।௰௩
நிந்தாம் அந்யஸ்ய வா புவி। ந வŠயாமி ஜகத்ய் அஸ்மிந்।
௮௯।௰௩௧
பஸ்யந் ஸர்வகத ஹரிம்। இத்ய் அந்யச் சாபி ஸக்ேநாதி। ௮௯।௰௩௧
யந் நிர்ேவாடும் யஸஸ்விநி। குர்வதீ நியமம் தஸ்ய। ௮௯।௰௩௨
த்யாேகா தர்மாய யஸ்ய ச। க்ருத்ைவவம் புரேதா விஷ்ேணார்।
௮௯।௰௩௨
நிவ்ருத்திம் பாபத: ஸுேப। ைநேவத்யம் ஸ்வயம் அஸ்நீயாந்।
௮௯।௰௩௩
ெமௗநீநித்யம் உதங்முக:। மார்கஸர்ேஷீ ததா மாஸி। ௮௯।௰௩௩
ஜாதிபுஷ்ைபர் ஜநார்தநம்। ஸமப்யர்ச்ய ஸுேப தூபம்। ௮௯।௰௩௪
சந்தநம் ஸம்நிேவத்ய ச। பரமாந்நம் ச ேதவாய। ௮௯।௰௩௪
விப்ராய ச புநர் க்ருதம்। தத்த்வா தைதவ க்ருஹ்ணயாந் ீ । ௮௯।௰௩௫
நியமம் சாஸ்ய ேராசேத। தைதவ நக்தம் புஞ்ஜதீ । ௮௯।௰௩௫

ைநேவத்யம் குலநந்திநி। ஸர்ேவஷ்வ் ஏவ து மாேஸஷு। ௮௯।௰௩௬
பஞ்சகவ்யாதிகம் ஸமம்। புஷ்பதூேபாபஹாேரஷு। ௮௯।௰௩௬
விேஸேஷா தக்ஷிணாஸு ச। ஸ்நாநப்ராஸநேயா: ஸாம்யம்।
௮௯।௰௩௭
ததா ைவ நக்தேபாஜேந। அர்சேயத் ப்ரதிமாஸம் ச। ௮௯।௰௩௭
ைய: புஷ்ைபஸ் தாநி ேம ஸ்ருணு। ேய ச தூபா: ப்ரதாதவ்யா।
௮௯।௰௩௮
ைநேவத்யாந்நம் ச யத் யதா। பாணஸ்ய ஜாதிகுஸுைமஸ்। ௮௯।௰௩௮
தைதவ ச குருண்டைக:। குந்தாதிமுக்தைக ரக்த । ௮௯।௰௩௯
கரவைரஸ்ீ ச ேதவகி। ஸ்ேவைதஸ் தேதா மாலிகயா। ௮௯।௰௩௯
ததா மல்லிகயா தத:। ததிபிண்ட்யாத ேகதக்யா। ௮௯।௰௪
பத்மரக்ேதாத்பேலந ச। க்ரேமணாப்யர்சிேதா விஷ்ணுர்। ௮௯।௰௪
ததாதி மநேஸப்ஸிதம்। கார்த்திேக மார்கஸீர்ேஷ ச। ௮௯।௰௪
தூப: ெபௗேஷ ச சந்தநம்। மாகபால்குநைசத்ேரஷு। ௮௯।௰௪௧
தத்யாத் விஷ்ேணாஸ் ததாகரும்। ைவஸாகாதிஷு மாேஸஷு।
௮௯।௰௪௧
த்ரிஷு ேதவகி பக்தித:। கர்பூரம் ேதவேதவாய। ௮௯।௰௪௨
குக்குலம் ஸ்ராவணாதிஷு। கார்த்திகாதிஷு மாேஸஷு। ௮௯।௰௪௨
பரமாந்நம் ஸுேப த்ரிஷு। காஸாரம் மாகபூர்ேவஷு। ௮௯।௰௪௩
யவாந்நம் ச ததஸ் த்ரிஷு। க்ருதம் திலாஞ் ஜலகடாந்। ௮௯।௰௪௩
ஹிரண்யம் அதவாஜிநம்। ப்ரதிமாஸம் ததா தத்யாத்। ௮௯।௰௪௪
ப்ராஹ்மணாய ஸுபவ்ரேத। யேதாக்தம் நியமாநாம் ச। ௮௯।௰௪௪
க்ரஹணம் ப்ரதிமாஸிகம்। குர்வஞ் ஜகத்பதிர் விஷ்ணு:। ௮௯।௰௪௫

ப்ரீயதாம் இதி மாநவ:। ேயாஷித் அப்ய் அமலப்ரஜ்ேஞ। ௮௯।௰௪௫
வ்ரதம் ஏதத் யதாவிதி। கேராதி யா ஸா ஸகலாந்। ௮௯।௰௪௬
அவாப்ேநாதி மேநாரதாந்। வ்ரேதநாராதிேதா விஷ்ணுர்। ௮௯।௰௪௬
அேநந ஜகத: பதி:। ததாத்ய் அபிமதாந் காமாந்। ௮௯।௰௪௭
அல்பகாேலந பாமிநி। தந்யம் யஸஸ்யம் ஆயுஷ்யம்। ௮௯।௰௪௭
ெஸௗபாக்யாேராக்யதம் ததா। வ்ரதம் ஏதத் ப்ரியதமம்। ௮௯।௰௪௮
வ்ரேதப்ேயா அவ்யக்தஜந்மந:। வ்ரேதநாேநந ஸுத்தாநாம்। ௮௯।௰௪௮
அப்ேதைநேகந ேகஸவ:। ஸுகத்ருஸ்ேயா ந ஸம்ேதேஹா। ௮௯।௰௪௯
தீேபைநவாக்ரத: ஸ்தித:। காயவாங்மநேஸா ஸுத்திம்। ௮௯।௰௪௯
கேராத்ய் ஏதந் மஹாவ்ரதம்। ஸுத்தாநாம் சாமேலா ேதேவா। ௮௯।௰௫
த்ருஸ்ய ஏவ ஜநார்தந:। தஸ்மிந்ந் ஏகாக்ரசித்தாநாம்। ௮௯।௰௫
ப்ராணிநாம் வரவர்ணிநி। விப்ரா ஏவ ப்ரயத்ேநந। ௮௯।௰௫௧
முக்திபாேஜா விபூதய:। யதா கல்பதரும் ப்ராப்ய। ௮௯।௰௫௧
யத் யத் இச்சதி ேசதஸா। தத் தத் பலம் அவாப்ேநாதி। ௮௯।௰௫௨
ததா ஸம்ப்ராப்ய தம் விபும்। ஸுத்திவ்ரதம் இதம் தஸ்மாந்।
௮௯।௰௫௨
மஹாபாதகநாஸநம்। ஆராதநாய க்ருஷ்ணஸ்ய। ௮௯।௰௫௩
குரு ேதவகி பாவநம்। தஸ்மிம்ஸ் சீர்ேண ஹ்ருஷீேகஸஸ்।
௮௯।௰௫௩
துப்யம் தாஸ்யதி தர்ஸநம்। த்ருஷ்ேட சாபிமதம் யத் ேத। ௮௯।௰௫௪
தத் அேஸஷம் பவிஷ்யதி। ேதவகீபார்கவஸ்ையதச்। ௮௯।௰௫௪
ஸ்ருத்வா வாக்யம் நராதிப। ஸுத்திகாமா சசாராத। ௯௰।௰௰௧
ஸர்வகாமப்ரதம் வ்ரதம்। வ்ரேதநாராதிதஸ் ேதந। ௯௰।௰௰௧

ததா ேதவ்யா ஜநார்தந:। தெதௗ தர்ஸநம் ஈேஸஸ:। ௯௰।௰௰௨
ஸங்கசக்ரகதாதர:। த்ருஷ்ேட தஸ்மிந்ந் அேஸேஷேஸ। ௯௰।௰௰௨
ஜகத்தாதரி ேகஸேவ। க்ருத்வா ப்ரணாமம் ஆேஹதம்। ௯௰।௰௰௩
பக்திநம்ராத ேதவகீ। ஜகதாம் ஈஸ்வேரேஸஸ। ௯௰।௰௰௩
ஜ்ஞாந ஜ்ேஞய பவாவ்யய। ஸமஸ்தேதவதாேதவ। ௯௰।௰௰௪
வாஸுேதவ நேமா அஸ்து ேத। ப்ரதாநபும்ேஸார் அஜேயார்। ௯௰।௰௰௪
ய: காரணம் அகாரணம்। அவிேஸஷ்யம் அஜம் ரூபம்। ௯௰।௰௰௫
தவ தஸ்ைம நேமா அஸ்து ேத। த்வம் ப்ரதாநம் புமாம்ஸ் ைசவ।
௯௰।௰௰௫
காரணாகாரணாத்மக:। ஸத் அஸச் சாகிலம் ேதவ। ௯௰।௰௰௬
ேகேநாக்ேதந தவ ஸ்தவ:। ப்ரஸதீ ேதவ ேதவாநாம்। ௯௰।௰௰௬
அரிஸாதந வாமந। ேலாபாபிபூதா யத் அஹம்। ௯௰।௰௰௭
வரயாமி ப்ரயச்ச தத்। அதிதிஸ் த்வம் மஹாபாேக। ௯௰।௰௰௭
புவம் ப்ராப்தா ஸுராரணி। பர்தா ச ேத கஸ்யேபா அயம்। ௯௰।௰௰௮
ேதயஸ் தவ வேரா மயா। அபுத்ராஸ்மி ந ேம பர்துர்। ௯௰।௰௰௮
அஸ்தி ேகஸவ ஸம்ததி:। ப்ரஸதீ ேதஹி ேம புத்ரம்। ௯௰।௰௰௯
அரிதுர்தாரெபௗருஷம்। பவிஷ்யத்ய் அசிராத் ேதவி। ௯௰।௰௰௯
மதம்ேஸந ஸுதஸ் தவ। ஹந்தவ்யா தாநவாஸ் ேதந। ௯௰।௰௧
ஸத்தர்மபரிபந்திந:। த்வாம் அஹம் ஜகத்தாதாரம்। ௯௰।௰௧
உதாேராருபராக்ரமம்। தாரயிஷ்யாமி கர்ேபண। ௯௰।௰௧௧
கதம் அச்யுத ஸம்ஸ ேம। தேவாதேர அவதாரம் ைவ। ௯௰।௰௧௧
புராபி பலிபந்தேந। குர்வதா வித்ருதா: ஸப்த। ௯௰।௰௧௨

ேலாகாஸ் த்வம் சாத்மமாயயா। ததா ஸாம்ப்ரதம் அப்ய் ஏதாம்ல்।
௯௰।௰௧௨
ேலாகாந் ஸஸ்தாணுஜங்கமாந்। தாரயிஷ்யாம்ய் அதாத்மாநம்।
௯௰।௰௧௩
த்வாம் ச ேதவகி லீலயா। இத்ய் ஏவம் உக்த்வா தாம் ேதவம்ீ ।
௯௰।௰௧௩
ேதவகீம் பகவாந் ப்ரபு:। திேராபபூவ ேகாவிந்ேதா। ௯௰।௰௧௪
பூர்புவ:ப்ரபேவா விபு:। அவாப ச தேதா கர்பம்। ௯௰।௰௧௪
ேதவகீவஸுேதவத:। அஜாயத ச விஸ்ேவஸ:। ௯௰।௰௫௧
ஸ்ேவநாங்ேகந ஜநார்தந:। நீேலாத்பலதலஸ்யாமம்। ௯௰।௰௧௫
தாம்ராயதவிேலாசநம்। சதுர்பாஹும் உதாராங்கம்। ௯௰।௰௧௬
ஸ்ரீவத்ஸாங்கிதவக்ஷஸம்। தம் ஜாதம் ேதவகீேதவம்। ௯௰।௰௧௬
நிதாநம் ஸர்வேதஜஸாம்। ப்ரணிபத்யாபிதுஷ்டாவ। ௯௰।௰௧௭
ஸம்ப்ரஸ்துதபேயாதரா। அபாேலா பாலரூேபண। ௯௰।௰௧௭
ேயேநஸ த்வம் இஹாஸ்தித:। த்வத்ரூபம் ப்ரணிபத்யாஹம்।
௯௰।௰௧௮
யத் ப்ரவமி ீ நிேபாத தத்। நமஸ் ேத ஸர்வபூேதஸ। ௯௰।௰௧௮
நமஸ் ேத மதுஸூதந। நமஸ் ேத புண்டரீகாக்ஷ। ௯௰।௰௧௯
நமஸ் ேத அஸ்து ஜநார்தந। நமஸ் ேத ஸார்ங்கசக்ராஸி । ௯௰।௰௧௯
கதாபரிகபாணேய। உேபந்த்ராயாப்ரேமயாய। ௯௰।௰௨
ஹ்ருஷீேகஸாய ைவ நம:। நேமா அஸ்து ேத அணுரூபாய। ௯௰।௰௨
ப்ருஹத்ரூபாய ைவ நம:। அேஸஷபூதரூபாய। ௯௰।௰௨௧
ததாரூபாய ேத நம:। அநிர்ேதஸ்யவிேஸஷாய। ௯௰।௰௨௧

துப்யம் ஸர்வாத்மேந நம:। ஸர்ேவஸ்வராய ஸர்வாய। ௯௰।௰௨௨
ஸர்வபூதாய ேத நம:। நேமா அஸ்து ேத வாஸுேதவ। ௯௰।௰௨௨
நேமா அஸ்து கமேலக்ஷண। அேஸஷபூதரூபாய। ௯௰।௰௨௩
ததாபூதாய ேத நம:। நேமா அஸ்து ேத அஸ்வரூபாய। ௰௯௰।௧௪௪
ததாரூபாய ேத நம:। அநிர்ேதஸ்யவிேஸஷாய। ௰௯௰।௧௪௪
துப்யம் ஸர்வாத்மேந நம:। நேமா அஸ்து ேத வாஸுேதவ।
௰௯௰।௧௪௪
நமஸ் ேத புஷ்கேரக்ஷண। நேமா அஸ்து ேத ஸதாசிந்த்ய। ௰௯௰।௧௪௪
ேயாகிசிந்த்ய ஜகத்பேத। விஷ்ேணா நேமா அஸ்து ேத க்ருஷ்ண।
௯௰।௰௨௩
நமஸ் ேத புருேஷாத்தம। நேமா நாராயண ஹேர। ௯௰।௰௨௪
நமஸ் ேத அஸ்து ஸதாச்யுத। நேமா நமஸ் ேத ேகாவிந்த। ௯௰।௰௨௪
நமஸ் ேத கருடத்வஜ। ஸ்ரீஸ ஸ்ரீவத்ஸ ேயாகீஸ। ௯௰।௰௨௫
ஸ்ரீகாந்ேதஸ நேமா அஸ்து ேத। நீேலாத்பலதலஸ்யாம। ௯௰।௰௨௫
தம்ஷ்ட்ேராத்த்ருதவஸும்தர। ஹிரண்யாக்ஷரிேபா ேதவ। ௯௰।௰௨௬
நமஸ் ேத யஜ்ஞஸூகர। ந்ருஸிம்ஹ ஜய விஸ்வாத்மந்। ௯௰।௰௨௬
ைதத்ேயார:ஸ்தலதாரக। நேமா நமஸ் ேத அஸ்து ஸதா। ௯௰।௰௨௭
விேக்ஷபத்வஸ்ததாரக। மாயாவாமநரூபாய। ௯௰।௰௨௭
துப்யம் ேதவ நேமா நம:। த்ரிவிக்ரம நமஸ் துப்யம்। ௯௰।௰௨௮
த்ைரேலாக்யக்ராந்தி துர்ஜய। க்ருக்யஜு:ஸாமபூதாய। ௯௰।௰௨௮
ேவதாஹரணகர்மேண। ப்ரணேவாத்கீதவசேஸ। ௯௰।௰௨௯
மஹாஸ்வஸிரேஸ நம:। நி:க்ஷத்ரிேயார்வகரணீ । ௯௰।௰௨௯
விகராலபராக்ரம। ஜாமதக்ந்ய நமஸ் துப்யம்। ௯௰।௰௩

கார்தவர்யாஸுதஸ்கர ீ । ெபௗலஸ்த்யகுலநாஸாய। ௯௰।௰௩
ஸாதுமார்கவிசாரிேண। நலேஸதுக்ருேத துப்யம்। ௯௰।௰௩௧
நேமா ராகவரூபிேண। ஸாம்ப்ரதம் மத்ப்ரஸந்நாய। ௯௰।௰௩௧
ஸம்பூதாய மேமாதேர। ஸ்வமாயாபாலரூபாய। ௯௰।௰௩௨
நம: க்ருஷ்ணாய ைவ ஹேர। யாவந்தி தவ ரூபாணி। ௯௰।௰௩௨
யாவத்யஸ் ச விபூதய:। நமாமி க்ருஷ்ண ஸர்ேவப்யஸ்। ௯௰।௰௩௩
ேதப்யஸ் தாப்யஸ் ச ஸர்வதா। ஸ்வரூபேசஷ்டிதம் யத் ேத।
௯௰।௰௩௩
யத் ேதவத்ேவ விேசஷ்டிதம்। யச் ச திர்யங்மநுஷ்யத்ேவ। ௯௰।௰௩௪
ேசஷ்டிதம் தந் நமாம்ய் அஹம்। பரேமஸ பேரேஸஸ। ௯௰।௰௩௪
திர்யகீஸ நேரஸ்வர। ஸர்ேவஸ்வேரஸ்வேரேஸஸ। ௯௰।௰௩௫
நமஸ் ேத புருேஷாத்தம। ஏவம் ஸ்துதஸ் தயா ேதவ்யா। ௯௰।௰௩௫
ேதவக்யா மதுஸூதந:। பாலரூபீ ஜகாைதவம்। ௯௰।௰௩௬
வஸுேதவஸ்ய ஸ்ருண்வத:। ஸம்யக் ஆராதிேதேநாக்தம்। ௯௰।௰௩௬
யத் ப்ரஸந்ேநந ைவ ஸுேப। தத் க்ருதம் ஸகலம் பூேயா। ௯௰।௰௩௭
யத் வ்ருேணாஷி ததாமி தத்। அவதாேர தைதவாஸ்மிந்। ௯௰।௰௩௭
வர்ஷாணாம் அதிகம் ஸதம்। ஸ்தாஸ்யாமி நரதாம் ப்ராப்ேதா।
௯௰।௰௩௮
துஷ்டைதத்யநிபர்ஹண:। தத் த்வம் வரய பத்ரம் ேத। ௯௰।௰௩௮
வரம் யந் மநேஸச்சஸி। தாஸ்யாம்ய் அஹம் அஸம்திக்தம்।
௯௰।௰௩௯
யத்ய் அபி ஸ்யாத் ஸுதுர்லபம்। யதி ேதவ ப்ரஸந்நஸ் த்வம்।
௯௰।௰௩௯

ப்ரததாஸி மேமப்ஸிதம்। வ்ருேணாமி தத் அஹம் நித்யம்। ௯௰।௰௪
தவ ேகஸவ தர்ஸநம்। தேவத்ருக்ரூபம் ஆேலாக்ய। ௯௰।௰௪
ஹார்தப்ரஸ்ருதேலாசநா। நாலம் விேயாகம் ஸம்ேஸாடும்। ௯௰।௰௪௧
தவாஹம் மதுஸூதந। தாக்ஷாயணீத்வம் அதிதி:। ௯௰।௰௪௧
ஸம்பூதா வஸுதாதேல। நித்யம் ஏவ ஜகத்தாத்ரி। ௯௰।௰௪௨
ப்ரஸாதம் ேத கேராம்ய் அஹம்। ஷஷ்ேட ஷஷ்ேட ததா பேக்ஷ।
௯௰।௰௪௨
திேந அஸ்மிந்ந் ஏவ பாமிநி। த்வம் மாம் த்ரŠயஸ்ய் அஸம்திக்தம்।
௯௰।௰௪௩
ப்ரஸாதஸ் ேத க்ருேதா மயா। அேநைநவ மஹாபாேக। ௯௰।௰௪௩
பாலரூேபண ஸம்வ்ருத:। தவ தர்ஸநம் ஏஷ்யாமி। ௯௰।௰௪௪
யத்ர ேத ஸ்ேநஹவந் மந:। தஸ்மிந் காேல ச ேலாகாஸ் த்வாம்।
௯௰।௰௪௪
பூஜயிஷ்யந்தி ேதவகி। மாம் ச புஷ்பாதிபிர் ேதவி। ௯௰।௰௪௫
தேவாத்ஸங்கவ்யவஸ்திதம்। ஸம்பூஜிேதா அஹம் ேலாகாநாம்।
௯௰।௰௪௫
தஸ்மிந் காேல ஸுேதாஷித:। ப்ரதாஸ்யாமி ஜகத்தாத்ரி। ௯௰।௰௪௬
யதாபிலஷிதம் வரம்। அபுத்ராணாம் வராந் புத்ராந்। ௯௰।௰௪௬
அதநாநாம் ததா தநம்। ஸுபாந் தாராந் அதாராணாம்। ௯௰।௰௪௭
ஸேராகாணாம் அேராகதாம்। ஸுகதிம் கதிகாமாநாம்। ௯௰।௰௪௭
வித்யாம் வித்யார்திநாம் அபி। ப்ரதாஸ்யஸி மஹாபாேக। ௯௰।௰௪௮
மத்ப்ரஸாேதாபவ்ரும்ஹிதா। ப்ரஸாதிதா ஹி மர்த்யாநாம்। ௯௰।௰௪௮

யத் த்வம் தாஸ்யஸி ேஸாபேந। தத் ேதஷாம் மத்ப்ரஸாேதந।
௯௰।௰௪௯
பவிஷ்யதி ந துர்லபம்। த்வாம் அப்யர்ச்ேயாபசாேரண। ௯௰।௰௪௯
ஸ்நாபயித்வா க்ருேதந மாம்। ஸர்வகாமாந் அவாப்ஸ்யந்தி। ௯௰।௰௫
காேல ஷட்பக்ஷஸம்ஜ்ஞிேத। த்வதங்கஸ்தம் ச மாம் பாலம்। ௯௰।௰௫
ஸம்ஸ்மரிஷ்யந்தி பக்தித:। ப்ரதிமாஸம் ச ேத பூஜாம்। ௰௯௰।௧௪௫
அஷ்டம்யாம் ய: கரிஷ்யதி। மம ைசவாகிலாந் காமாந்। ௯௰।௰௫௧
ஸம்ப்ராப்ேநாத்ய் அபகல்மஷ:। ஏவம் பூர்வம் ஹ்ருஷீேகேஸா।
௯௰।௰௫௧
ேதவக்யா: ப்ரதெதௗ வரம்। தஸ்மாத் க்ருஷ்ணாஷ்டமீபும்ஸாம்।
௯௰।௰௫௨
அேஸஷாெகௗகஹாரிண।ீ தஸ்யாம் ஹி பூஜித: க்ருஷ்ேணா।
௯௰।௰௫௨
ேதவகீ ச ஸமாதிநா। பாபாபேநாதம் குருேத। ௯௰।௰௫௩
ததாதி ச மேநாரதாந்। தத் ஏஷ புஷ்டிகாமாநாம்। ௯௰।௰௫௩
ந்ருணாம் புண்யார்திநாம் அபி। உபவாேஸா மஹீபால। ௯௰।௰௫௪
ஸஸ்த: ேகஸவேதாஷத:। ஸ்ராவேண ஸுக்லபேக்ஷ து। ௯௰।௰௫௪
த்வாதஸ்யாம் ப்ரீயேத ந்ருப। ேகாப்ரதாேநந ேகாவிந்ேதா। ௯௧।௰௰௧
யத் பூர்வம் கதிதம் தவ। ெபௗஷஸுக்ேல து தத்வச் ச। ௯௧।௰௰௧
த்வாதஸ்யாம் க்ருதேதநுகாம்। க்ருதார்சி: ப்ரீணநாயாலம்। ௯௧।௰௰௨
ப்ரதத்யாத் பலதாயிநீம்। தைதவ மாகத்வாதஸ்யாம்। ௯௧।௰௰௨
ப்ரதத்தா திலெகௗர் ந்ருப। ேகஸவம் ப்ரீணயத்ய் ஆஸு। ௯௧।௰௰௩
ஸர்வகாமாந் ப்ரயச்சதி। ஜ்ையஷ்ேட மாஸி ஸிேத பேக்ஷ। ௯௧।௰௰௩

த்வாதஸ்யாம் ஜலேதநுகா। தத்தா யதாவத் விதிநா। ௯௧।௰௰௪
ப்ரீணயத்ய் அம்புஸாயிநம்। லவணம் மார்கஸர்ேஷீ து। ௯௧।௰௰௪
க்ருஷ்ணம் அப்யர்ச்ய ேயா நர:। ப்ரயச்சதி த்விஜாக்ர்யாய। ௯௧।௰௰௫
ஸ ஸர்வரஸதாயக:। ஸர்வேபாகமஹாேபாகாந்। ௯௧।௰௰௫
ப்ராஜிஷ்மந்ேதா மேநாரமாந்। ேலாகாந் அவாப்ேநாதி ந்ருப। ௯௧।௰௰௬
ப்ரஸந்ேந கருடத்வேஜ। ெபௗஷமாேஸ து ேயா தத்யாத்। ௯௧।௰௰௬
க்ருதம் விப்ராய பார்திவ। ஸமப்யர்ச்யாச்யுதம் ேஸா அபி। ௯௧।௰௰௭
ஸர்வகாமாந் அவாப்நுயாத்। மாகமாேஸ து ஸம்பூஜ்ய। ௯௧।௰௰௭
மாதவம் ப்ராஹ்மணாய ய:। ப்ரயச்சதி திலாம்ல் ேலாகாந்। ௯௧।௰௰௮
ஸம்ப்ராப்ேநாத்ய் அபிவாஞ்சிதாந்। பால்குேந புண்டரீகாக்ஷம்।
௯௧।௰௰௮
ய: ஸமப்யர்ச்ய யச்சதி। ஸப்ததாந்யம் நரஸ்ேரஷ்ட। ௯௧।௰௰௯
ஸ ஸர்வஸ்ேயஸ்வேரா பேவத்। ைசத்ேர சித்ராணி வஸ்த்ராணி।
௯௧।௰௰௯
ய: ப்ரயச்சதி ேகஸவம்। பூஜயித்வா ஸ ைவ ேபாகாந்। ௯௧।௰௧
விசித்ராம்ல் லபேத நர:। ைவஸாேக விஷ்ணும் அப்யர்ச்ய। ௯௧।௰௧
யவேகாதூமேதா நர:। ேலாகாந் ஐந்த்ராந் ஸமாஸாத்ய। ௯௧।௰௧௧
ேமாதேத விகதஜ்வர:। துர்நிவர்த்யம் அஹம் மந்ேய। ௯௧।௰௧௧
சஞ்சலம் ஹி மேநா யத:। ஜ்ையஷ்ேட அப்யர்ச்ய ஹ்ருஷீேகஸம்।
௰௯௧।௧௪௬
உதகும்பப்ரேதா ஹி ய:। ஸ பராம் நிர்வ்ருதிம் யாதி। ௯௧।௰௧௨
ஸப்த ஜந்மாந்தராணி ைவ। ஆஷாடமாேஸ ச ஹரிம்। ௯௧।௰௧௨
ய: ஸமப்யர்ச்ய யச்சதி। விப்ராய சந்தநம் ேஸா அபி। ௯௧।௰௧௩

பரமாஹ்லாதபாஜநம்। ேயா ந்ருஸிம்ஹம் ஸமப்யர்ச்ய। ௯௧।௰௧௩
ப்ராஹ்மணாய ப்ரயச்சதி। ஸ்ராவேண நவநீதம் து। ௯௧।௰௧௪
ஸ ஸ்வர்கம் ஸுக்ருதீவ்ரேஜத்। சத்த்ரம் ச ேயா பாத்ரபேத। ௯௧।௰௧௪
வாஸுேதவாபிபூஜக:। ப்ரயச்சதி த்விஜாக்ர்யாய। ௯௧।௰௧௫
ஸ ச்சத்த்ராதிபதிர் பேவத்। குடஸர்கரயா யுக்தம்। ௯௧।௰௧௫
ேமாதகம் ச ப்ரயச்சதி। தைதவாஸ்வயுேஜ அப்யர்ச்ய। ௯௧।௰௧௬
ேயா அநந்தம் ேஸா அமேரா பேவத்। நாராயணம் ஸமப்யர்ச்ய।
௯௧।௰௧௬
ய: ப்ரயச்சதி கார்த்திேக। தீபகம் விப்ரேகேஹஷு। ௯௧।௰௧௭
விமாநம் ேஸா அதிேராஹதி। காம்யாந்ய் ஏதாந்ய் அேஸஷாணி।
௯௧।௰௧௭
ய: ஸம்பூஜ்ய ஜகத்பதிம்। தாநாநி யச்சதி நர:। ௯௧।௰௧௮
ஸ ஸம்பூர்ணமேநாரத:। ஸர்வஸ்ேரஷ்ட: ஸமஸ்தாநாம்। ௯௧।௰௧௮
பந்தூநாம் ஆஸ்ரேயா பேவத்। ஏவம் ஸர்வாணி தாநாநி। ௯௧।௰௧௮
ப்ரீணநாயாச்யுதஸ்ய ய:। ப்ரயச்சதி ஸ ஸர்ேவஷாம்। ௯௧।௰௧௯
பலாநாம் புவி பாஜநம்। தஸ்மாந் நேரந்த்ர விப்ேரப்ய:। ௯௧।௰௧௯
ப்ரீணநாய ஜகத்குேரா:। ப்ரயச்ைசதாநி தாநாநி। ௯௧।௰௨
யச் சாந்யத் தயிதம் தவ। யதீச்சஸி புந: ப்ராப்தும்। ௯௧।௰௨
பூதிம் அப்ரம்ஸநீம் ந்ருப। ததாராதய ேகாவிந்தம்। ௯௧।௰௨௧
நாந்யதா ஸ்யுர் விபூதய:। ஏவம் வஸிஷ்ேடந ததா। ௯௧।௰௨௧
மாந்தாதா ந்ருப ேபாதித:। ஸஹ பத்ந்யா மஹீபால:। ௯௧।௰௨௨
பரிேதாஷம் பரம் யெயௗ। ஜகாத ச முதா யுக்த:। ௯௧।௰௨௨
ப்ரணிபத்ய புேராஹிதம்। ஸஹ பத்ந்யா நரஸ்ேரஷ்ட:। ௯௧।௰௨௩

ஸமுத்தாய வராஸநாத்। திக் திக் வ்ருைதவ யாதாநி। ௯௧।௰௨௩
மைமதாநி திநாந்ய் அேஹா। அநாஸஜ்ய மந: க்ருஷ்ேண। ௯௧।௰௨௪
விஷயாஸக்தேசதஸ:। தா நிஸாஸ் ேத ச திவஸாஸ்। ௯௧।௰௨௪
ேத ர்தவஸ் ேத ச வத்ஸரா:। நராணாம் ஸபலா ேயஷு। ௯௧।௰௨௫
சிந்திேதா பகவாந் ஹரி:। சிந்த்யமாந: ஸமஸ்தாநாம்। ௯௧।௰௨௫
பாபாநாம் ஹாணிேதா ஹி ஸ:। ஸமுத்ஸ்ருஜ்யாகிலம் சிந்த்யம்।
௯௧।௰௨௬
ேஸா அச்யுத: கிம் ந சிந்த்யேத। கஷ்டம் முஷ்ேடா அஸ்மி ஸிஷ்ேடஷு।
௯௧।௰௨௬
வித்யமாேநஷு மந்த்ரிஷு। பராங்முகாநாம் ேகாவிந்ேத। ௯௧।௰௨௭
யத் ப்ராப்தம் பரமம் வய:। ஏவம் விநிந்த்ய ேஸா அத்மாநாம்।
௯௧।௰௨௭
மாந்தாதா ப்ருதிவபதி ீ :। சகாராராதேந யத்நம்। ௯௧।௰௨௮
ேதவேதவஸ்ய ஸார்ங்கிதிண:। தம் ஆராத்ய ச விஸ்ேவஸம்।
௯௧।௰௨௮
உேபந்த்ரம் அஸுேரஸ்வர। ப்ராப ஸித்திம் பராம் பூர்வம்। ௯௧।௰௨௯
தக்ஷ: ப்ராேசதேஸா யதா। ததா த்வம் அபி ராேஜந்த்ர। ௯௧।௰௨௯
ஸர்வபாேவந ேகஸவம்। ஸமாராதய ேகாவிந்தம்। ௯௧।௰௩
தம் ஆராத்ய ந ஸததி ீ । ஏவம் ஸ ைதத்யராேஜந்த்ர:। ௯௧।௰௩
ப்ரஹ்ராேதநாவேபாதித:। பலிர் ஆராதேந யத்நம்। ௯௧।௰௩௧
சக்ேர சக்ரப்ருதஸ் ததா। புஷ்ேபாபஹாைரர் தூைபஸ் ச। ௯௧।௰௩௧
ததா ைசவாநுேலபைந:। வாேஸாபிர் பூஷைண: ஸம்யக்। ௯௧।௰௩௨

ப்ராஹ்மணாநாம் ச தர்பைண:। ஜைபர் ேஹாைமர் வ்ரைதஸ் ைசவ।
௯௧।௰௩௨
யேதாக்தம் புருஷர்ஷப। ஸஹ பத்ந்யா தைதவ த்வம்। ௯௧।௰௩௩
ஸமாராதய ேகஸவம்। பகவம்ஸ் சஞ்சலம் சித்தம்। ௯௧।௰௩௩
மநுஷ்யாணாம் அஹர்நிஸம்। விஷயாஸங்கதுர்துஷ்டம்। ௯௨।௰௰௧
பாபாையவ ப்ரவர்தேத। ெமௗேநந வாசிகம் பாபம்। ௯௨।௰௰௧
பும்பிர் ப்ரஹ்மந் நிவர்த்யேத। ஸாரீரம் அப்ய் அகரணாத்। ௯௨।௰௰௨
ஸுநிவர்த்யம் மதம் மம। யத் த்வ் ஏதந் மாநஸம் பாபம்। ௯௨।௰௰௨
மநுஷ்ையஸ் தந் மஹாமேத। துர்நிவர்த்யம் அஹம் மந்ேய।
௯௨।௰௰௩
சஞ்சலம் ஹி மேநா யத:। தத் அஹம் ஸ்ேராதும் இச்சாமி। ௯௨।௰௰௩
மநுஷ்ையர் துர்விசிந்திைத:। யத் ஸ்மர்தவ்யம் ச ஜப்யம் ச। ௯௨।௰௰௪
மாநஸாகப்ரஸாந்தேய। த்வத்யுக்ேதா அயம் அநுப்ரஸ்ந:। ௯௨।௰௰௪
ஸாத்வ் ஏதத் பவேதாதிதம்। சஞ்சலத்வாத் தி சித்தாநாம்। ௯௨।௰௰௫
மாநஸம் பஹு பாதகம்। பூெமௗ த்ருணம் அஸம்க்யாதம்। ௯௨।௰௰௫
யதா ச திவி தாரகா:। ததா பாபம் அஸம்க்ேயயம்। ௯௨।௰௰௬
ேசதஸா க்ரியேத து யத்। பரதாரபரத்ரவ்ய । ௯௨।௰௰௬
பரஹிம்ஸாஸு மாநஸம்। அஹர்நிஸம் மநுஷ்யாணாம்। ௯௨।௰௰௭
ஸாதத்ேயந ப்ரவர்தேத। யத்ய் அஸ்ேயாபஸேமா ராஜந்। ௯௨।௰௰௭
புவி ந க்ரியேத ந்ருபி:। தந் நாஸ்தி நரேகாத்தாேரா। ௯௨।௰௰௮
வர்ஷேகாடீஸைதர் அபி। தத் அஸ்ய ப்ரஸமாயாலம்। ௯௨।௰௰௮
ப்ராயஸ்சித்தம் நராதிப। ஸ்ருணுஷ்வ ேயந சித்ேதாத்தம்। ௯௨।௰௰௯
ஸத்ய: பாபம் வ்யேபாஹதி। ஓம் நேமா வாஸுேதவாய। ௯௨।௰௰௯

புருஷாய மஹாத்மேந। ஹிரண்யேரதேஸ அசிந்த்ய । ௯௨।௰௧
ஸ்வரூபாயாதிேவதேஸ। விஷ்ணேவ ஜிஷ்ணேவ நித்யம்। ௯௨।௰௧
ஸாந்தாயாநகரூபிேண। ஸர்வஸ்தித்யந்தகரண । ௯௨।௰௧௧
வ்ரதிேந பதவாஸேஸ ீ । நாராயணாய விஸ்வாய। ௯௨।௰௧௧
விஸ்ேவஸாேயஸ்வராய ச। நம: கமலகிஞ்ஜல்க । ௯௨।௰௧௨
ஸுவர்ணமுகுடாய ச। ேகஸவாயாதிஸூŠமாய। ௯௨।௰௧௨
ப்ரஹ்மமூர்திமேத நம:। நம: பரமகல்யாண । ௯௨।௰௧௩
கல்யாணாயாத்மேயாநேய। ஜநார்தநாய ேதவாய। ௯௨।௰௧௩
ஸ்ரீதராய ஸுேமதேஸ। மஹாத்மேந வேரண்யாய। ௯௨।௰௧௪
நம: பங்கஜநாபேய। ஸ்ம்ருதமாத்ராககாதாய। ௯௨।௰௧௪
க்ருஷ்ணாயாக்லிஷ்டகர்மேண। நேமா நதாய நம்ேரைஸர்। ௯௨।௰௧௫
அேஸைஷர் வாஸவாதிபி:। நேமா மாயாவிேந துப்யம்। ௯௨।௰௧௫
ஹரேய ஹரிேமதேஸ। ஹிரண்யகர்பகர்பாய। ௯௨।௰௧௬
ஜகத: காரணாத்மேந। ேகாவிந்தாயாதிபூதாய। ௯௨।௰௧௬
ஸ்ராதீநாம் மஹாத்மேந। நேமா பூதாத்மபூதாய। ௯௨।௰௧௭
ஆத்மேந பரமாத்மேந। அச்யுதாய நேமா நித்யம்। ௯௨।௰௧௭
அநந்தாய நேமா நம:। தாேமாதராய ஸுசேய। ௯௨।௰௧௮
யஜ்ேஞஸாய நேமா நம:। நேமா மாயாபடச்சந்ந । ௯௨।௰௧௮
ஜகத்தாம்ேந மஹாத்மேந। ஹ்ருஷீேகஸாய ேசஸாய। ௯௨।௰௧௯
ஸர்வபூதாத்மரூபிேண। தயாலேவ நேமா நித்யம்। ௯௨।௰௧௯
கபிலாய ஸுேமதேஸ। ஸம்ஸாரஸாகேராத்தார । ௯௨।௰௨
ஜ்ஞாநேபாதப்ரதாயிேந। அகுண்டமதேய தாத்ேர। ௯௨।௰௨

ஸர்கஸ்தித்யந்தகர்மணி। கராலெஸௗம்யரூபாய। ௯௨।௰௨௧
ைவகுண்டாய நேமா நம:। யதா ஹி வாஸுேதேவதி। ௯௨।௰௨௧
ப்ேராக்ேத நஸ்யதி பாதகம்। ததா விலயம் அப்ேயது। ௯௨।௰௨௨
மைமதத் துர்விசிந்திதம்। யதா ந விஷ்ணுபக்ேதஷு। ௯௨।௰௨௨
பாபம் ஆப்ேநாதி ஸம்ஸ்திதிம்। ததா விநாஸம் அப்ேயது। ௯௨।௰௨௩
மைமதத் துர்விசிந்திதம்। ஸ்ம்ருதமாத்ேரா யதா விஷ்ணு:। ௯௨।௰௨௩
ஸர்வம் பாபம் வ்யேபாஹதி। ததா ப்ரணாஸம் அப்ேயது। ௯௨।௰௨௪
மைமதத் துர்விசிந்திதம்। யதா ஸர்வத்ரேகா விஷ்ணுஸ்। ௯௨।௰௨௪
தத்ர ஸர்வம் ச ஸம்ஸ்திதம்। உபயாது ததா நாஸம்। ௯௨।௰௨௫
மமாகம் சித்தஸம்பவம்। பாபம் ப்ரணாஸம் மம ஸம்ப்ரயாது।
௯௨।௰௨௫
யந் மாநஸம் யச் ச கேராமி வாசா। ஸாரீரம் அப்ய் ஆசரிதம் ச யந் ேம।
௯௨।௰௨௬
ஸ்ம்ருேத ஜகத்தாதரி வாஸுேதேவ। ப்ரயாந்து ேதாஷா மம நாஸம் ஆஸு।
௯௨।௰௨௬
ராகாதய: காரணகாரேணேஸ। விஜ்ஞாநதீபாமலமார்கத்ருஸ்ேய।
௯௨।௰௨௭
ஸ்ம்ருேத ஜகத்தாதரி வாஸுேதேவ। பவந்து பத்ராணி ஸமஸ்தேதாஷா:।
௯௨।௰௨௭
ப்ரயாந்து நாஸம் ஜகேதா அகிலஸ்ய। மயாத்ய பக்த்யா பரேமஸ்வேரேஸ।
௯௨।௰௨௮
ஸ்ம்ருேத ஜகத்தாதரி வாஸுேதேவ। ேய பூதேல ேய திவி ேய அந்தரிேக்ஷ।
௯௨।௰௨௮

ரஸாதேல ப்ராணிகணாஸ் ச ேகசித்। பவந்து ேத ஸித்தியுேஜா மயாத்ய।
௯௨।௰௨௯
ஸ்ம்ருேத ஜகத்தாதரி வாஸுேதேவ। புஷ்யந்து ைமத்ரீம் விரமந்து ராகாத்।
௯௨।௰௨௯
உஜ்ஜந்து ேலாபம் க்ஷமிேணா பவந்து। ஆப்ரஹ்மவ்ருக்ஷாந்தரகா மயாத்ய।
௯௨।௰௩
ஸ்ம்ருேத ஜகத்தாதரி வாஸுேதேவ। ேய ப்ராணிந: குத்ரசித் அத்ர ஸந்தி।
௯௨।௰௩
ப்ரஹ்மாண்டமத்ேய பரதஸ் ச ேகசித்। ேத யாந்து ஸித்திம் பரமாம் மயாத்ய।
௯௨।௰௩௧
ஸ்ம்ருேத ஜகத்தாதரி வாஸுேதேவ। அஜ்ஞாநிேநா ஜ்ஞாநவிேதா பவந்து।
௯௨।௰௩௧
ப்ரஸாந்திபாஜ: ஸதேதாக்ரசித்தா:। குர்வந்து பக்திம் பரமாம் அநந்ேத।
௯௨।௰௩௨
மத்ஸ்ேதாத்ரதுஷ்டஸ்ய ஹேர: ப்ரஸாதாத்। ஸ்ருண்வந்தி ேய ேம படதஸ்
ததாந்ேய। ௯௨।௰௩௨
பஸ்யந்தி ேய மாம் இதம் ஈரயந்தம்। ேதவாஸுராத்யா மநுஜாஸ் திரஸ்ேசா।
௯௨।௰௩௩
பவந்து ேத அப்ய் அச்யுதேயாகபாஜ:। ேய சாபி மூகா விகேலந்த்ரியத்வாச்।
௯௨।௰௩௩
ஸ்ருண்வந்தி ேநா ைநவ விேலாகயந்தி। பஸ்வாதய: கீடபிபலிகாஸ் ீ ச।
௯௨।௰௩௪
பவந்து ேத அப்ய் அச்யுதேயாகபாஜ:। நாமஸ்வ் அநந்தஸ்ய ச கீர்திேதஷு।
௯௨।௰௩௪

யத் அத்ர புண்யம் ஜகத: ப்ரஸூேத:। ேதநாவிேவேகாபஹதாத்மேபாதா।
௯௨।௰௩௫
பவந்து பும்ஸாம் மதய: ஸுஸலா ீ :। ேய து:கிதாஸ் ேத ஸுகிேநா பவந்து।
௯௨।௰௩௫
த்ேவஷாந்விதா ைமத்ரகுேணாபபந்நா:। ஸத்யார்ஜவாத்யாஸ் த்வ் அந்ருதா
விமாயா। ௯௨।௰௩௬
மத்ஸம்ஸ்தவாராதிதக்ருஷ்ணத்ருஷ்டா:। நஸ்யந்து து:காநி ஜகத்ய் அைபது।
௯௨।௰௩௬
ேலாபாதிேகா ேதாஷகுண: ப்ரஜாப்ய:। யதாத்மநி ப்ராதரி சாத்மேஜ ச।
௯௨।௰௩௭
ததா ஜநஸ்யாஸ்து ஜேந அபி ஹார்தம்। ஸம்ஸாரைவத்ேய
அகிலேதாஷஹாநி । ௯௨।௰௩௭
விசக்ஷேண நிர்வ்ருதிேஹதுபூேத। ஸம்ஸாரபந்தா: ஸிதிலீபவந்து।
௯௨।௰௩௮
ஹ்ருதி ஸ்திேத ஸர்வஜநஸ்ய விஷ்ெணௗ। ஏதத் படந் பார்திவ
ஸர்வபாைபர்। ௯௨।௰௩௮
விமுச்யேத விஷ்ணுபர: ஸைதவ। ப்ராப்ேநாதி ஸித்திம் விபுலம் மஹர்த்திம்।
௯௨।௰௩௯
ந சாப்ய் அநர்ேதஷு மதிம் கேராதி। உத்திஸ்ய ஸத்த்வாநி ச யாநி யாநி।
௯௨।௰௩௯
ஸ்ேதாத்ரம் படந்ேத க்ருபயா மநுஷ்யா:। ஸர்வாணி தாந்ய் அப்ரதிகா பவந்தி।
௯௨।௰௪
ப்ரயாந்தி ஸித்திம் பகவத்ப்ரஸாதாத்। தஸ்மாத் த்வையதத் ஸததம்
நிஸாஸு। ௯௨।௰௪

திேநஷு ைசேவஸ்வர மாதவஸ்ய। ஸம்கீர்தநம் கார்யம் அேஸஷபாப ।
௯௨।௰௪௧
விேமாக்ஷேஹேதார் அபவாய ைசவ। இதி ஸகலஜேநாபகாரகாரீ।
௯௨।௰௪௧
ஹரிசரணாப்ஜவிநிஷ்டஸுத்தபுத்தி:। படதி கலு மஹீப ேயா மநுஷ்ய:।
௯௨।௰௪௨
ஸ லயம் உைபதி ஹெரௗ ஹ்ருதாகிலாக:। இதம் ச ஸ்ருணு பூபால।
௯௨।௰௪௨
நஸ்யேத துர்விசிந்திதம்। ேயேநாபாேயந ைவ பும்ஸாம்। ௯௩।௰௰௧
ேயாஷிதாம் வாப்ய் அஸம்ஸயம்। பரதாரபரத்ரவ்ய । ௯௩।௰௰௧
ஜவஹிம்ஸாதிேக ீ ஸதா। ப்ரவர்தேத ந்ருணாம் சித்தம்। ௯௩।௰௰௨
தத் ஏதத் அபிஸம்ஸ்மேரத்। விஷ்ணேவ விஷ்ணேவ நித்யம்।
௯௩।௰௰௨
விஷ்ணேவ விஷ்ணேவ நம:। ஜிஷ்ணேவ ஜிஷ்ணேவ ஸர்வம்।
௯௩।௰௰௩
ஜிஷ்ணேவ ஜிஷ்ணேவ நம:। நமாமி விஷ்ணும் புத்திஸ்தம்। ௯௩।௰௰௩
அஹம்கார கதம் ஹரிம்। சித்தஸ்தம் ஈஸம் அவ்யக்தம்। ௯௩।௰௰௪
அநந்தம் அபராஜிதம்। விஷ்ணும் ஈட்யம் அேஸேஷஸம்। ௯௩।௰௰௪
அநாதிநிதநம் விபும்। விஷ்ணுஸ் சித்தகேதா யந் ேம। ௯௩।௰௰௪
விஷ்ணுர் புத்திகதஸ் ச யத்। யச் சாஹம்காரேகா விஷ்ணுர்।
௯௩।௰௰௫
யத் விஷ்ணுர் மயி ஸம்ஸ்தித:। கேராதி கர்த்ருபூேதா அெஸௗ।
௯௩।௰௰௫
ஸ்தாவரஸ்ய சரஸ்ய ச। தத் பாபம் நாஸம் ஆயாது। ௯௩।௰௰௬

தஸ்மிந்ந் ஏவ விசிந்திேத। த்யாேதா ஹரதி ய: பாபம்। ௯௩।௰௰௬
ஸ்வப்ேந த்ருஷ்ட: ஸுபாவஹ:। தம் உேபந்த்ரம் அஹம் விஷ்ணும்।
௯௩।௰௰௭
ப்ரணேதா அர்திஹரம் ஹரிம்। ஜகத்ய் அஸ்மிந் நிராதாேர। ௯௩।௰௰௭
மஜ்ஜமாேந தமஸ்ய் அத:। ஹஸ்தாவலம்பதம் விஷ்ணும்। ௯௩।௰௰௮
ப்ரணேதா அஸ்மி பராத்பரம்। ஸர்ேவஸ்வேரஸ்வர விேபா। ௯௩।௰௰௮
பரமாத்மந்ந் அேதாக்ஷஜ। ஹ்ருஷீேகஸ ஹ்ருஷீேகஸ। ௯௩।௰௰௯
ஹ்ருஷீேகஸ நேமா அஸ்து ேத। ந்ருஸிம்ஹாநந்த ேகாவிந்த।
௯௩।௰௰௯
பூதபாவந ேகஸவ। துருக்தம் துஷ்க்ருதம் த்யாதம்। ௯௩।௰௧
ப்ரஸமாக்ர்ய நேமா அஸ்து ேத। யந் மயா சிந்திதம் துஷ்டம்। ௯௩।௰௧
ஸ்வசித்தவஸவர்திநா। நரகாவஹம் அத்யுக்ரம்। ௯௩।௰௧௧
தச் சமம் நய ேகஸவ। ப்ரஹ்மண்யேதவ ேகாவிந்த। ௯௩।௰௧௧
பரமார்த பராயண। ஜகந்நாத ஜகத்தாத:। ௯௩।௰௧௨
பாபம் ப்ரஸமயாச்யுத। யச் சாபராஹ்ேந பூர்வாஹ்ேந। ௯௩।௰௧௨
மத்யாஹ்ேந ச ததா நிஸி। காேயந மநஸா வாசா। ௯௩।௰௧௩
க்ருதம் பாபம் அஜாநதா। ஜாநதா வா ஹ்ருஷீேகஸ। ௯௩।௰௧௩
புண்டரீகாக்ஷ மாதவ। நாமத்ரேயாச்சாரணதஸ்। ௯௩।௰௧௪
தத் ப்ரயாது மம க்ஷயம்। ஸாரீரம் ேம ஹ்ருஷீேகஸ। ௯௩।௰௧௪
புண்டரீகாக்ஷ மாநஸம்। பாபம் ப்ரஸமயாத்ய த்வம்। ௯௩।௰௧௫
வாக்க்ருதம் மம மாதவ। யத் வ்ரஜந் யத் ஸ்வபந் புஞ்ஜந்। ௯௩।௰௧௫
யத் உத்திஷ்டந் யத் ஆஸ்தித:। க்ருதவாம்ஸ் சாபி யச் சாஹம்।
௯௩।௰௧௬

காேயந மநஸா கிரா। மஹத் ஸ்வல்பம் அதிஸ்தூலம்। ௯௩।௰௧௬
குேயாநிநரகாவஹம்। தத் யாது ப்ரஸமம் ஸர்வம்। ௯௩।௰௧௭
வாஸுேதவஸ்ய கீர்தநாத்। பரம் ப்ரஹ்ம பரம் தாம। ௯௩।௰௧௭
பவித்ரம் பரமம் ச யத்। தஸ்மிந் ஸம்கீர்திேத விஷ்ேணா:। ௯௩।௰௧௮
பேத பாபம் ப்ரணஸ்யது। ஸூரேயா யத் ப்ரேவŠயந்தி ஹ்ய்।
௯௩।௰௧௮
அபுநர்பவகாங்க்ஷிண:। மமாகிலம் தஹ த்வம் ஹி। ௯௩।௰௧௯
தத் விஷ்ேணா: பரமம் பதம்। யத் ப்ராப்ய ந நிந்வர்தந்ேத। ௯௩।௰௧௯
கந்தஸ்பர்ஸாதிவர்ஜிதம்। பாபம் ப்ரணாஸயத்வ் அத்ய। ௯௩।௰௨
தத் விஷ்ேணா: பரமம் பதம்। ஸதஸத் யத் ததா வ்யக்தா । ௯௩।௰௨
வ்யக்தரூபம் அஜாஜரம்। ப்ரணமாமி ஜகத்தாம। ௯௩।௰௨௧
தத் விஷ்ேணா: பரமம் பதம்। ஸாரீேர மாநேஸ ைசவ। ௯௩।௰௨௧
பாேப வாக்ேஜ ச பார்திவ। க்ருேத ஸம்யங் நேரா பக்த்யா। ௯௩।௰௨௨
பேடச் ச்ரத்தாஸமந்வித:। முச்யேத ஸர்வபாேபப்ய:। ௯௩।௰௨௨
க்ருஷ்ணநாமப்ரகீர்தநாத்। உச்சார்யமாேந ைசதஸ்மிந்। ௯௩।௰௨௨
ேதவேதவஸ்ய ஸம்ஸ்தேவ। விலயம் பாபம் ஆயாதி। ௯௩।௰௨௩
பாண்டம் ஆமம் இவாம்பஸி। தஸ்மாத் ஸம்சிந்திேத பாேப। ௯௩।௰௨௩
ஸமநந்தரம் ஏவ ேத। ஜப்தவ்யம் ஏதத் பாபஸ்ய। ௯௩।௰௨௪
ப்ரஸமாய மஹீபேத। ஸம்ஸாரார்ணவமக்ேநந। ௯௩।௰௨௪
புருேஷண மஹாமுேந। விஷயாஸக்தசித்ேதந। ௯௪।௰௰௧
யத் கார்யம் தத் வதஸ்வ ேம। ப்ராம்யதாம் ஸம்கேட துர்ேக।
௯௪।௰௰௧

ஸம்ஸாேர விஷையஷிணாம்। ஸ்வகர்மபிர் மநுஷ்யாணாம்।
௯௪।௰௰௨
உபகாரகம் உச்யதாம்। க்ஷீப்ேத மநஸ்ய் அநாயத்ேத। ௯௪।௰௰௨
வ்ருத்ேத ேலாபாதிேக கேண। ஸரணம் யந் மநுஷ்யாணாம்। ௯௪।௰௰௩
தத் ஆசŠவ மஹாமுேந। ஸம்ஸாராணவேபாதாய। ௯௪।௰௰௩
ஹரேய ஹரிேமதேஸ। நமஸ்க்ருத்ய ப்ரவŠயாமி। ௯௪।௰௰௪
நராணாம் உபகாரகம்। ஸம்யக் ஆராதிேதா பக்த்யா। ௯௪।௰௰௪
ேவதபாரகுேரார் குரு:। க்ருஷ்ணத்ைவபாயந: ப்ராஹ। ௯௪।௰௰௫
யச் சிஷ்யாய ஸுமந்தேவ। புரா கில துராசாேரா। ௯௪।௰௰௫
துர்புத்திர் அஜிேதந்த்ரிய:। க்ஷத்ரபந்துர் அபூத் பாப:। ௯௪।௰௰௬
பரமர்மாவகட்டக:। மாதாபித்ேரார் அஸுஸ்ரூஷுர்। ௯௪।௰௰௬
த்ேராக்தா பந்துஜநஸ்ய ச। குருேதவத்விஜாதீநாம்। ௯௪।௰௰௭
நிந்தாஸு ஸதேதாத்யத:। ேமாஷ்டா விஸ்வஸதாம் நித்யம்। ௯௪।௰௰௭
அப்ரீதி: ப்ரீதிம் இச்சதாம்। க்ருஜூநாம் அந்ருஜு: க்ஷுத்ர:। ௯௪।௰௰௮
பரஹிம்ஸாபராயண:। ஸ பாந்தைவ: பரித்யக்தஸ்। ௯௪।௰௰௮
ததாந்ைய: ஸாதுவ்ருத்திபி:। அவ்ருத்திமாந் அவிஸ்வாஸ்ேயா।
௯௪।௰௰௯
ம்ருகயாஜவேநா ீ அபவத்। அஹந்ய் அஹநி சக்ராங்காந்। ௯௪।௰௰௯
ஏணகாதீம்ஸ் ததா ம்ருகாந்। ஹத்வாத்மேபாஷணம் சக்ேர। ௯௪।௰௧
வ்யாதவ்ருத்திரேதா அதம:। ஏதயா தஸ்ய துஷ்டஸ்ய। ௯௪।௰௧
குவ்ருத்த்யா பாபேசதஸ:। ஜகாம ஸுமஹாந் கால:। ௯௪।௰௧௧
குர்வேதா தாரேபாஷணம்। ஏகதா து முநிஸ் ேதந। ௯௪।௰௧௧
நிதாேக விஜேந வேந। ம்ருகயாம் அடதா த்ருஷ்ேடா। ௯௪।௰௧௨

வர்த்மந: ப்ரச்யுத: பதி। க்ஷுத்க்ஷாமகண்ட: ஸுஸ்ராந்த:। ௯௪।௰௧௨
ஸுஷ்கஜிஹ்வாஸ்யதாலுக:। த்ருட்பரீேதா அதிவிப்ராந்த:। ௯௪।௰௧௩
காம்திக்பூேதா அல்பேசதந:। ஸ்வாஸாயாஸஸ்லைதர் அங்ைக:।
௯௪।௰௧௩
க்ருச்ச்ராத் ஆத்மாநம் உத்வஹந்। ஸூர்யாம்ஸுதாபாத் ப்ரகலத் ।
௯௪।௰௧௪
ஸ்ேவதார்த்ரசரேணா ந்ருப। தஸ்மிந் த்ருஷ்ேட ததஸ் தஸ்ய।
௯௪।௰௧௪
க்ஷத்ரபந்ேதார் அஜாயத। காருண்யம் தாருணஸ்யாபி। ௯௪।௰௧௫
வ்யாதவ்ருத்திபரிக்ரஹாத்। தம் உேபத்ய ச பூபால। ௯௪।௰௧௫
க்ஷத்ரபந்து: ஸ தாபஸம்। உவாச விப்ரப்ரவரம்। ௯௪।௰௧௬
விமார்ேக வர்தேத பவாந்। ைநஷ பந்தா த்விஜஸ்ேரஷ்ட। ௯௪।௰௧௬
விபிேநா அயம் மஹாடவி:। மாம் அந்ேவஹி த்வராயுக்ேதா। ௯௪।௰௧௭
மா விபத்திம் ஸேமஷ்யஸி। நிஸாம்ய தத் வச: ஸ்ராந்த:। ௯௪।௰௧௭
க்ஷத்ரபந்ேதார் மஹாநுநி:। அநுவவ்ராஜ ராேஜந்த்ர। ௯௪।௰௧௮
ஜலாஸாஜநிேதாத்யம:। கிம்சித் பூபாகம் ஆஸாத்ய। ௯௪।௰௧௮
ததர்ஸ ச மஹாமுநி:। ஹம்ஸகாரண்டவாகீர்ணம்। ௯௪।௰௧௯
ப்ேராத்புல்லநலிநம் ஸர:। ஸாரஸாபிருதம் ரம்யம்। ௯௪।௰௧௯
ஸூபதீர்தம் அகர்தமம்। பத்ேமாத்பலயுதம் சாரு। ௯௪।௰௨
பூர்ணம் ஸ்வச்ேசந வாரிணா। ஸுஸதவநஷண்ைடஸ் ீ ச। ௯௪।௰௨
ஸமந்தாத் பரிேவஷ்டிதம்। தத்க்ஷணாத் த்ருட்பரீதாநாம்। ௯௪।௰௨௧
சக்ஷுேஷா ஹ்லாதகாரிணம்। த்ருஷ்ட்ைவவ ஸ முநிஸ் தத்ர।
௯௪।௰௨௧

ததாமலஜலம் ஸர:। ஸூர்யாம்ஸுதப்ேதா கர்மார்ேதா। ௯௪।௰௨௨
நிபபாத ததம்பஸி। தத்ராஸ்வாஸ்ய க்ருதாஹ்லாத:। ௯௪।௰௨௨
பெபௗ வாரி நராதிப। உஜ்ஜவயந் ீ முநிவேரா। ௯௪।௰௨௩
ஜிஹ்வாதாலு ஸைந: ஸைந:। ேஸா அபி க்ஷத்ரியதாயாேதா।
௯௪।௰௨௩
முநித்ராணபராயண:। விஹாய ஸஸரம் சாபம்। ௯௪।௰௨௪
உஜ்ஜஹார பிஸாந்ய் அத। தெதௗ ச தஸ்ைம ராேஜந்த்ர। ௯௪।௰௨௪
க்ஷுதிதாய தபஸ்விேந। யெயௗ ச த்ருப்திம் விப்ேரா அபி। ௯௪।௰௨௫
பிஸநாலாம்புபக்ஷணாத்। தம் ஆஸ்வஸ்தம் க்ருதாஹாரம்। ௯௪।௰௨௫
உபவிஷ்டம் ஸுஸதேல ீ । ந்யக்ேராதஸாகாஸம்சந்ேந। ௯௪।௰௨௬
நிஷ்பங்ேக ஸரஸஸ் தேட। ஸம்வாஹயாம் ஆஸ ச தம்। ௯௪।௰௨௬
க்ஷத்ரபந்து: ஸைந: ஸைந:। பாதஜங்ேகாருப்ருஷ்ேடஷு। ௯௪।௰௨௬
ேதந ஸம்வாஹிேதா முநி:। ஜெஹௗ ஸ்ரமம் அமித்ரக்ந। ௯௪।௰௨௭
வாக்யம் ேசதம் உவாச ஹ। கஸ் த்வம் பத்ரமுகாத்ேயஹ। ௯௪।௰௨௭
மம ப்ராணபரிக்ஷேய। ஹஸ்தாவலம்பேதா தாத்ரா। ௯௪।௰௨௮
ஜநிேதா விபிேந வேந। விப்ரஷ்டமார்ேகா மூேடா அஹம்। ௯௪।௰௨௮
க்ஷுத்பிபாஸாஸ்ரமாதுர:। த்ராதஸ் த்வயா மஹாபாக। ௯௪।௰௨௯
கஸ் த்வம் அத்ர வேந அஜேந। க்ஷுத்பிபாஸாஸ்ரமார்தஸ்ய।
௯௪।௰௨௯
யஸ் த்ராணம் விபிேந வேந। கேராதி புருஷவ்யாக்ர। ௯௪।௰௩
தஸ்ய ேலாகா மதுஸ்ச்யுத:। ஸ த்வம் ப்ரூஹி மஹாபாக। ௯௪।௰௩
மமாப்யுத்தாரகாரக:। ேயஷாம் ப்ரக்யாதயஸஸாம்। ௯௪।௰௩௧
ஸமுத்பந்ந: குேல பவாந்। ஹர்யஸ்வஸ்ய குேல ஜாத:। ௯௪।௰௩௧

புத்ரஸ் சித்ரரதஸ்ய ச। விமதிர் நாம நாம்நாஹம்। ௯௪।௰௩௨
ஹந்தும் அப்யாகேதா ம்ருகாந்। பித்ரர்தம் ம்ருகேயயம் ேத। ௯௪।௰௩௨
லŠயார்தம் வா மஹாமேத। ஆஹாரார்தம் உதாேஹா அத்ர।
௯௪।௰௩௩
ம்ருகயா வ்யஸநம் து ேத। வ்ருத்திர் ஏஷா மம ப்ரஹ்மந்। ௯௪।௰௩௩
பரித்யக்தஸ்ய பாந்தைவ:। ப்ருத்ையர் அந்ையஸ் ச நஷ்ேட அர்ேத।
௯௪।௰௩௪
நிர்தநஸ்யாமிஷாஸிந:। கிமர்தம் த்வம் பரித்யக்ேதா। ௯௪।௰௩௪
ப்ருத்யஸ்வஜநபந்துபி:। பாதகீகீகட: க்ஷுத்ைரர்। ௯௪।௰௩௫
உபஜப்த: பேரண வா। இத்ய் உக்த: ேஸா அபவந் ெமௗநீ। ௯௪।௰௩௫
பஸ்யந் ேதாஷம் ந்ருபாத்மநி। அதுஷ்டாம்ஸ் சாத்மேநா ப்ருத்யாந்।
௯௪।௰௩௬
விசிந்த்யாதீவ துர்மநா:। அேவŠய தம் ஸாத்வஸிநம்। ௯௪।௰௩௬
க்ஷத்ரபந்தும் மஹாமுநி:। த்யாத்வா சிரம் அதாபஸ்யத்। ௯௪।௰௩௭
க்ஷத்ரபந்தும் ஸ்வேதாஷிணம்। ஸம்த்யக்தபந்துேலாேக ச। ௯௪।௰௩௭
தஸ்மிந் துர்வ்ருத்தேசதஸி। க்ருபாம் சகார ஸ முநி:। ௯௪।௰௩௮
க்ஷத்ரபந்ெதௗ தயாபர:। உவாச ச முநிர் பூய:। ௯௪।௰௩௮
க்ஷத்ரபந்தும் க்ருபாலுக:। உபகாரிணம் உக்ேரண। ௯௪।௰௩௯
கர்மணா தம் விதூஷிதம்। அபி ஸக்ேநாஷி ஸம்யந்தும்। ௯௪।௰௩௯
அகார்யப்ரஸ்ருதம் மந:। ப்ராணி படாநிவ்ருத்திம் ீ ச। ௯௪।௰௪
கர்தும் க்ேராதாதிஸம்யமம்। அபி ைமத்ரீம் ஜேந கர்தும்। ௯௪।௰௪
ஸக்ேநாஷி த்வம் முைதவ யா। ஐஹிகாமுஷ்மிகீவரீ। ௯௪।௰௪௧
க்ரியமாணா மஹாபலா। ந ஸக்ேநாமி க்ஷமாம் கர்தும்। ௯௪।௰௪௧

ைமத்ரீம் மம ேசதஸி। ப்ராணிநாம் அவதாத் ப்ரஹ்மந்। ௯௪।௰௪௨
நாஸ்தி தாராதிேபாஷணம்। அநாயத்தம் ச ேம சித்தம்। ௯௪।௰௪௨
விஷயாந் ஏவ தாவதி। ததப்ராப்ெதௗ ச ஸர்ேவஷாம்। ௯௪।௰௪௩
க்ேராதாதீநாம் ஸமுத்பவ:। ேஸா அஹம் ந ைமத்ரீம் ந க்ஷாந்திம்।
௯௪।௰௪௩
ந ஹிம்ஸாதிவிவர்ஜநம்। கர்தும் ஸக்ேநாமி யத் கார்யம்। ௯௪।௰௪௪
ததந்யத் உபதிஸ்யதாம்। ேதைநவம் உக்ேதா விப்ேரா அெஸௗ।
௯௪।௰௪௪
தம் உேபŠயம் அமந்யத। ததாப்ய் அதிக்ருபாலுத்வாத்। ௯௪।௰௪௫
க்ஷத்ரபந்தும் அபாஷத। யத்ய் ஏதத் அகிலம் கர்தும்। ௯௪।௰௪௫
ந ஸக்ேநாஷி ப்ரவஹி ீ ேம। ஸ்வல்பம் அந்யந் மேயாக்தம் ஹி।
௯௪।௰௪௬
கரிஷ்யதி பவாந் யதி। அஸக்யம் உக்தம் பவதா। ௯௪।௰௪௬
சஞ்சலத்வாத் தி ேசதஸ:। வாக்ஷரீரவிநிஷ்பாத்யம்। ௯௪।௰௪௭
யச் சக்யம் தத் உதீரய। உத்திஷ்டதா ப்ரஸ்வபதா। ௯௪।௰௪௭
ப்ரஸ்திேதந கமிஷ்யதா। ேகாவிந்ேததி ஸதா வாச்யம்। ௯௪।௰௪௮
க்ஷுதப்ரஸ்கலிதாதிஷு। கார்யம் வர்த்மநி மூடாநாம்। ௯௪।௰௪௮
ேக்ஷமமார்ேக அவதாரணம்। ஹிதம் ச வாச்யம் ப்ருஷ்ேடந। ௯௪।௰௪௯
ஸத்ரூணாம் அபி ஜாநதா। ஏதத் தேவாபகாராய। ௯௪।௰௪௯
பவிஷ்யத்ய் அநுபாலிதம்। யத்ய் அந்யத் உபஸம்ஹர்தும்। ௯௪।௰௫
ந ஸக்ேநாஷி மஹீபேத। இத்ய் உக்த்வா ப்ரயெயௗ விப்ரஸ்। ௯௪।௰௫
ேதந வர்த்மநி தர்ஸிேத। ேஸா அபி தச் சாஸநம் ஸர்வம்। ௯௪।௰௫௧
க்ஷத்ரபந்துஸ் சகார ஹ। ேகாவிந்ேததி க்ஷுேத கச்சந்। ௯௪।௰௫

ப்ரஸ்தாநஸ்கலிதாதிஷு। உதீரயந்ந் அவாபாக்ர்யாம்। ௯௪।௰௫௨
ரதிம் தத்ர ஸைந: ஸைந:। தத: காேலந மஹதா। ௯௪।௰௫௨
க்ஷத்ரபந்துர் மமார ைவ। அஜாயத ச விப்ரஸ்ய। ௯௪।௰௫௩
குேல ஜாதிஸ்மேரா ந்ருப। தஸ்ய ஸம்ஸ்மரேதா ஜாதீ:। ௯௪।௰௫௩
ஸதேஸா அத ஸஹஸ்ரஸ:। நிர்ேவத: ஸுமஹாஞ் ஜஜ்ேஞ।
௯௪।௰௫௪
ஸம்ஸாேர அத்ராதிது:கேத। ஸ சிந்தயாம் ஆஸ ஜகத்। ௯௪।௰௫௪
ஸர்வம் ஏதத் அேசதநம்। அஹம் ஏேகா அத்ர ஸம்ஜ்ஞாவாந்।
௯௪।௰௫௪
ேகாவிந்ேதாதீரிதம் ஹி யத்। யச் சாத்வநி விமூடாநாம்। ௯௪।௰௫௫
க்ருதம் வர்த்மாவதாரணம்। ஹிதம் உக்தம் ச ப்ருஷ்ேடந। ௯௪।௰௫௫
தஸ்ய ஜாதிஸ்ம்ருதி: பலம்। ேஸா அஹம் ஜாதிஸ்மேரா பூய:।
௯௪।௰௫௫
கரிஷ்யாம்ய் அதிஸம்கேட। ததா ஸம்ஸாரசக்ேர அஸ்மிந்। ௯௪।௰௫௬
ேயந ப்ராப்ஸ்யாமி நிர்வ்ருதிம்। யஸ்ேயாச்சாரணமாத்ேரண।
௯௪।௰௫௬
ஜாதா ஜாதிஸ்ம்ருதிர் மம। தம் ஏவாராதயிஷ்யாமி। ௯௪।௰௫௭
ஜகதாம் ஈஸ்வரம் ஹரிம்। யந்மயம் பரமம் ப்ரஹ்ம। ௯௪।௰௫௭
தத் அவ்யக்தம் ச யந்மயம்। யந்மயம் வ்யக்தம் அப்ய் ஏதத்।
௯௪।௰௫௮
பவிஷ்யாமி ஹி தந்மய:। யத்ய் அநாராதிேத விஷ்ெணௗ। ௯௪।௰௫௮
மைமதஜ் ஜந்ம யாஸ்யதி। த்ருவம் பந்தவேதா முக்திர்। ௯௪।௰௫௯
ைநவ ஜாதூபபத்யேத। அேஹா து:கம் அேஹா து:கம்। ௯௪।௰௫௯

அேஹா து:கம் அதீவ ஹி। ஸ்வரூபம் அதிேகாரஸ்ய। ௯௪।௰௬
ஸம்ஸாரஸ்யாதிதுர்லபம்। விண்மூத்ரபூயகலிேல। ௯௪।௰௬
கர்பவாேஸ அதிபடநாத் ீ । அஸுசாவ் அதிபபத்ேஸ ீ । ௯௪।௰௬௧
து:கம் அத்யந்தது:ஸஹம்। து:கம் ச ஜாயமாநாநாம்। ௯௪।௰௬௧
காத்ரபங்காதிபடநாத் ீ । வாேதந ப்ேரர்யமாணாநாம்। ௯௪।௰௬௨
மூர்சாகார்ய் அதிபதிதம் ீ । பாலத்ேவ நிர்விேவகாநாம்। ௯௪।௰௬௨
பூதேதவாத்மஸம்பவம்। ெயௗவேந வார்த்தேக ைசவ। ௯௪।௰௬௩
மரேண சாதிதாருணம்। ஸேதாஷ்ணத்ருஷ்ணாக்ஷுத்ேராக ீ । ௯௪।௰௬௩
ஜ்வராதிபரிவாரித:। ஸர்வைதவ புமாந் ஆஸ்ேத। ௯௪।௰௬௪
யாவஜ் ஜந்மாந்தஸம்ஸ்திதி:। து:காதிஸயபூதம் ஹி। ௯௪।௰௬௪
யத் அந்ேத வாஸுகம் ந்ருணாம்। தஸ்யாநுமாநம் ைநவாஸ்தி।
௯௪।௰௬௫
கார்ேயைணவாநுமீயேத। க்ருஷ்யமாணஸ்ய புருைஷர்। ௯௪।௰௬௫
யத் யமஸ்யாதிது:ஸஹம்। து:கம் தத்ஸம்ஸ்ம்ருதிப்ராப்தம்।
௯௪।௰௬௬
கேராதி மம ேவபதும்। கும்பபாேக ீ தப்தகும்ேப। ௯௪।௰௬௬
மஹாெரௗரவெரௗரேவ। காலஸூத்ேர மஹாயந்த்ேர। ௯௪।௰௬௭
ஸூகேர கூடஸால்மெலௗ। அஸிபத்ரவேந து:கம்। ௯௪।௰௬௭
அப்ரதிஷ்ேட ச யந் மஹத்। விடாலவக்த்ேர ச ததா। ௯௪।௰௬௮
தமஸ்ய் உக்ேர ச து:ஸஹம்। ஸஸ்த்ராக்நியந்த்ரேவேகஷு।
௯௪।௰௬௮
ஸேதாஷ்ணாதிஷு ீ தாருணம்। ததஸ் ச முக்தஸ்ய புநர்। ௯௪।௰௬௯
ேயாநிஸம்க்ரமேணஷு யத்। கர்பஸ்தஸ்ய ச யத் து:கம்। ௯௪।௰௬௯

அதிது:ஸஹம் உல்வணம்। புநஸ் ச ஜாயமாநஸ்ய। ௯௪।௰௭
ஜந்ம ெயௗவநஜம் ச யத்। து:காந்ய் ஏதாந்ய் அஸஹ்யாநி। ௯௪।௰௭
ஸம்ஸாராந்தர்விவர்திபி:। புருைஷர் அநுபூயந்ேத। ௯௪।௰௭௧
ஸுகப்ராந்திவிேமாஹிைத:। ந ைவ ஸுககலா காசித்। ௯௪।௰௭௧
தத்ராஸ்த்ய் அத்யந்தது:கேத। ஸம்ஸாரஸம்கேட தீவ்ேர। ௯௪।௰௭௨
உேபதாநாம் கதாசந। விஷயாஸக்தசித்தாநாம்। ௯௪।௰௭௨
மநுஷ்யாணாம் கதா மதி:। ஸம்ஸாேராத்தாரேண வாஞ்சாம்। ௯௪।௰௭௩
கரிஷ்யதி ஹி சஞ்சலா। ேகாவிந்தநாம்நா ஸததம்। ௯௪।௰௭௩
ஸமுச்சாரணஸம்பவம்। ஜாதிஸ்மரத்வம் ஏதந் ந:। ௯௪।௰௭௪
கிம் வ்ருைதவ ப்ரயாஸ்யதி। ேஸா அஹம் முக்திப்ரதாநார்தம்।
௯௪।௰௭௪
அநந்தம் அஜம் அவ்யயம்। தச்சித்தஸ் தந்மேயா பூத்வா। ௯௪।௰௭௫
ேதாஷயிஷ்யாமி ேகஸவம்। ஆத்மாநம் ஆத்மைநவம் ஸ। ௯௪।௰௭௫
ப்ேராக்த்வா ஜாதிஸ்மேரா த்விஜ:। துஷ்டாவ வாக்பிர் இஷ்டாபி:।
௯௪।௰௭௬
ப்ரணத: புருேஷாத்தமம்। ப்ரணிபத்யாக்ஷரம் விஸ்வம்। ௯௪।௰௭௬
விஸ்வேஹதும் நிரஞ்ஜநம்। யத் ப்ரார்தயாம்ய் அவிகலம்। ௯௪।௰௭௭
ஸகலம் தத் ப்ரயச்சது। கர்தாரம் அக்ருதம் விஷ்ணும்। ௯௪।௰௭௭
ஸர்வகாரணகாரணம்। அேணார் அணயாம்ஸம் ீ அஜம்। ௯௪।௰௭௮
ஸர்வவ்யாபிநம் ஈஸ்வரம்। பராத் பரதரம் யஸ்மாந்। ௯௪।௰௭௮
நாஸ்தி ஸர்ேவஸ்வராத் பரம்। தம் ப்ரணம்யாச்யுதம் ேதவம்।
௯௪।௰௭௯
ப்ரார்தயாமி யத் அஸ்து தத்। ஸர்ேவஸ்வராச்யுதாநந்த। ௯௪।௰௭௯

பரமாத்மஞ் ஜநார்தந। ஸம்ஸாராப்திமஹாேபாத। ௯௪।௰௮
ஸமுத்தர மஹார்ணவாத்। வ்ேயாமாநிலாக்ந்யம்புதராஸ்வரூப।
௯௪।௰௮
தந்மாத்ரஸர்ேவந்த்ரியபுத்திரூப। அந்த:ஸ்திதாத்மந் பரமாத்மரூப।
௯௪।௰௮௧
ப்ரஸதீ ஸர்ேவஸ்வர விஸ்வரூப। தம் ஆதிர் அந்ேதா ஜகேதா அஸ்ய
மத்யம்। ௯௪।௰௮௧
ஆேதஸ் த்வம் ஆதி: ப்ரலயஸ்ய சாந்த:। த்வத்ேதா பவத்ய் ஏதத் அேஸஷம்
ஈஸ। ௯௪।௰௮௨
த்வய்ய் ஏவ சாந்ேத லயம் அப்யுைபதி। ப்ரதீபவர்த்யந்தகேதா அக்நிர் அல்ேபா।
௯௪।௰௮௨
யதாதிகேக்ஷ விததம் ப்ரயாதி। தத்வத் விஸ்ருஷ்ேடர் அமராதிபிந்ைநர்।
௯௪।௰௮௩
விகாஸம் ஆயாஸி விபூதிேபைத:। யதா நதீநாம் பஹேவா அம்புேவகா:।
௯௪।௰௮௩
ஸமந்தேதா அப்திம் பகவந் விஸந்தி। த்வய்ய் அந்தகாேல ஜகத் அச்யுேததம்।
௯௪।௰௮௪
ததா லயம் கச்சதி ஸர்வபூேத। த்வம் ஸர்வம் ஏதத் பஹுைதக ஏவ।
௯௪।௰௮௪
ஜகத்பேத கார்யம் இவாப்யுேபதம்। யத் அஸ்தி யந் நாஸ்தி ச தத் த்வம் ஏவ।
௯௪।௰௮௫
ஹேர த்வதந்யத் பகவந் கிம் அஸ்தி। கிம்த்வ் ஈஸ மாயா பவேதா நிேஜயம்।
௯௪।௰௮௫
ஆவிஷ்க்ருதாவிஷ்க்ருதேலாகஸ்ருஷ்ேட। யயாஹம் ஏேஷா அந்யதேமா
மேமதி। ௯௪।௰௮௬

மதீயம் அஸ்யாபிவதந்தி மூடா:। தயா விமூேடந மயாபநாப।
௯௪।௰௮௬
ந யத் க்ருதம் தத் க்வசித் அஸ்தி கிம்சித்। பூம்யம்பராக்நிஸலிேலஷு ேதவ।
௯௪।௰௮௭
ஜாக்ரத்ஸுஷுப்தாதிஷு து:கிேதந। ந ஸந்தி தாவந்தி ஜலாந்ய் அபட்யீ ।
௯௪।௰௮௭
ஸர்ேவஷு நாதாப்திஷு ஸர்வகாலம்। ஸ்தந்யாநி யாவந்தி மயாதிேகாேர।
௯௪।௰௮௮
பதாநி ீ ஸம்ஸாரமஹாஸமுத்ேர। ஸம்பச் சிலாநாம் ஹிமவந்மேஹந்த்ர ।
௯௪।௰௮௮
ைகலாஸேமர்வாதிஷு ைநவ தாத்ருக்। ேதஹாந்ய் அேநகாந்ய்
அநுக்ருஹ்ணேதா ேம। ௯௪।௰௮௯
ப்ராப்தாஸ்திஸம்பந் மஹதி யேதஸ। த்வய்ய் அர்பிதம் நாத புந: புநர் ேம।
௯௪।௰௮௯
மந: ஸமாக்ஷிப்ய ஸுதுர்தேரா அபி। ராேகா ஹி வஸ்யம் குருேத தேதா
அநு। ௯௪।௰௯
ேலாபாதய: கிம் பகவந் கேராமி। ஏகாக்ரதாமூல்யபேலந லப்யம்।
௯௪।௰௯
பெவௗஷதம் த்வம் பகவந் கிைலக:। மந: பராயத்தம் இதம் பேவ அஸ்மிந்।
௯௪।௰௯௧
ஸம்ஸாரது:காத் கிம் அஹம் கேராமி। ந ஸந்தி ேத ேதவ புவி ப்ரேதஸா।
௯௪।௰௯௧
ந ேயஷு ஜாேதா அஸ்மி ததா விநஷ்ட:। அத்தா மயா ேயஷு ந ஜந்தவஸ் ச।
௯௪।௰௯௨

ஸம்பக்ஷிேதா ையஸ் ச ந ஜந்துஸம்ைக:। ஸிம்ேஹந பூத்வா பஹேவா
மயாத்தா। ௯௪।௰௯௨
வ்யாக்ேரண பூத்வா பஹேவா மயாத்தா:। ததாந்யரூைபர் பஹேவா மயாத்தா:।
௯௪।௰௯௩
ஸம்பக்ஷிேதா அஹம் பஹுபிஸ் ததஸ் ச। உத்க்ராந்திது:காந்ய்
அதிது:ஸஹாநி। ௯௪।௰௯௩
ஸஹஸ்ரேஸா யாந்ய் அநுஸம்ஸ்மராமி। ைத: ஸம்ஸ்ம்ருைதஸ் தத்
க்ஷணம் ஏவ ேதவ। ௯௪।௰௯௪
தடித் யதா ேம ஹ்ருதயம் ப்ரயாதி। ததஸ் ச து:காந்ய் அநிவாரணாநி।
௯௪।௰௯௪
யந்த்ராக்நிஸஸ்த்ெரௗகஸமுத்பவாநி। பவந்தி யாந்ய் அச்யுத நாரகாநாம்।
௯௪।௰௯௫
தாந்ய் ஏவ ேதஷாம் உபமாநமாத்ரம்। து:காந்ய் அஸஹ்யாநி ச கர்பவாேஸ।
௯௪।௰௯௫
விண்மூத்ரமத்ேய அதிநிபடிதஸ்ய ீ । பவந்தி யாநி ச்யவதஸ் ச கர்பாத்।
௯௪।௰௯௬
ேதஷாம் ஸ்வரூபம் கதிதும் ந ஸக்யம்। து:காநி பாேலஷு மஹந்தி நாத।
௯௪।௰௯௬
ெகௗமாரேக ெயௗவநிநஸ் ச பும்ஸ:। ஜ்வராதிஸாராக்ஷிருகாதிகாநி।
௯௪।௰௯௭
ஸமஸ்தது:காலய ஏவ வ்ருத்த:। கேராதி கர்மாச்யுத தத்க்ஷேணந।
௯௪।௰௯௭
பாபம் நர: காயமேநாவேசாபி:। யஸ்யாப்தலைக்ஷர் அபி நாந்தம் ஏதி।
௯௪।௰௯௮

ஸஸ்த்ராதியந்த்ராக்நிநிபடேநஷு ீ । து:காநி யாநீஷ்டவிேயாகஜாநி।
௯௪।௰௯௮
பவந்தி ஸம்ஸாரவிஹாரபாஜாம்। ப்ரத்ேயகஸஸ் ேதஷு நரா விநாஸம்।
௯௪।௰௯௯
இச்சந்த்ய் அஸூநாம் மமதாபிபூதா:। ேஸாகாபிபூதஸ்ய மமாஸ்ரு ேதவ।
௯௪।௰௯௯
யாவத்ப்ரமாணம் ந ஜலம் பேயாதா। தாவத்ப்ரமாணம் ந ஜலம் பேயாதா।
௯௪।௧
முஞ்சந்த்ய் அேநைகர் அபி வர்ஷலைக்ஷ:। மந்ேய தரித்ரீ
பரமாணுஸம்க்யாம்। ௯௪।௧
உைபதி பித்ேரார் கணநாமேஸஷம்। மித்ராண்ய் அமித்ராண்ய் அநுஜவிபந்தூந் ீ ।
௯௪।௧௰௧
ஸம்க்யாதம் ஈேஸா அஸ்மி ந ேதவேதவ। ேஸா அஹம் ப்ருஸார்த:
கருணாம் குரு த்வம்। ௯௪।௧௰௧
ஸம்ஸாரகாத்ேர பதிதஸ்ய விஷ்ேணா। மஹாத்மநாம் ஸம்ஸ்ரயம்
அப்யுேபேதா। ௯௪।௧௰௨
ைநவாவஸதத்ய் ீ அதிதுர்கேதா அபி। பராயணம் ேராகவதாம் ஹி ைவத்ேயா।
௯௪।௧௰௨
மஹாப்திமக்நஸ்ய ச ெநௗர் நரஸ்ய। பாலஸ்ய மாதாபிதெரௗ ஸுேகார ।
௯௪।௧௰௩
ஸம்ஸாரகிந்நஸ்ய ஹேர த்வம் ஏக:। ப்ரஸதீ ஸர்ேவஸ்வர ஸர்வபூத।
௯௪।௧௰௩
ஸர்வஸ்ய ேஹேதா பரமார்தஸார। மாம் உத்தராஸ்மாத் உருது:கபங்காத்।
௯௪।௧௰௪

ஸம்ஸாரகர்தாத் ஸ்வபரிக்ரேஹண। தர்மாத்மநாம் அவிகலாம் த்வயி நாத
பக்திம்। ௯௪।௧௰௪
ஸ்ரத்தாவதாம் ஸததம் உத்வஹதாம் வேரண்ய। கார்யம் கியந் மம
விமூடதிேயா அதமஸ்ய। ௯௪।௧௰௫
பூத்வா க்ருபாலுர் அமலாம் அஜ ேதஹி புத்திம்। ஜ்ஞாத்வா யயாகிலம்
அஸாரம் அஸாரம் ஏவ। ௯௪।௧௰௫
பூேதந்த்ரியாதிகம் அபாரம் அமுக்திமூலம்। மாயாந்தேரயம் அசலாம் தவ
விஸ்வரூப। ௯௪।௧௰௬
ஸம்ேமாஹிதம் ஸகலம் ஏவ ஜகத் யையதத்।
ப்ரஹ்ேமந்த்ரருத்ரமருதஸ்விதிவாகராத்யா। ௯௪।௧௰௬
ஜ்ஞாதும் ந யம் பரமகுஹ்யதமம் ஸமர்தா:। ந த்வாம் அலம் ஸ்துதிபேதஷ்வ்
அஹம் ஈஸிதாரம்। ௯௪।௧௰௭
ஸ்ேதாஷ்யாமி ேமாஹகலுஷால்பமதிர் மநுஷ்ய:। யஸ்மாத் இதம் பவதி யத்ர
ஜகத் தேததம்। ௯௪।௧௰௭
யஸ்மிம்ல் லயம் வ்ரஜதி யஸ் ச ஜகத்ஸ்வரூப:। தம்
ஸர்கஸம்ஸ்திதிவிநாஸநிமித்தபூதம்। ௯௪।௧௰௮
ஸ்ேதாதும் பவந்தம் அலம் ஈஸ ந கஸ்சித் அஸ்தி। மூேடா அயம் அல்பமதிர்
அல்பஸுேசஷ்டிேதா அயம்। ௯௪।௧௰௮
க்லிஷ்டம் மேநா அஸ்ய விஷையர் ந மயி ப்ரஸங்கி। இத்தம் க்ருபாம் குரு
மயி ப்ரணேத கிேலஸ। ௯௪।௧௰௯
த்வாம் ஸ்ேதாதும் அம்புஜபேவா அபி ஹி ேதவ ேநஸ:। யஸ்ேயாதேர ஸகல
ஏவ மஹீத்ரசந்த்ர । ௯௪।௧௰௯
ேதேவந்த்ரருத்ரமருதஸ்விதிவாகராக்நி । பூம்யம்புவாயுககநம் ஜகதாம்
ஸமுஹாம்। ௯௪।௧௧

ஸ்ேதாஷ்யாமி தம் ஸ்துதிபைத: கதைமர் பவந்தம்।
யஸ்யாக்நிருத்ரகமேலாத்பவவாஸவாத்ைய:। ௯௪।௧௧
ஸ்வாம்ஸாவதாரகரேணஷு ஸதாங்க்ரியுக்மம்। அப்யர்ச்யேத வத ஹேர ஸ
கதம் மயாத்ய। ௯௪।௧௧௧
ஸம்பூஜித: பரம் உைபஷ்யஸி ேதாஷம் ஈஸ। ந ஸ்ேதாதும் அச்யுத பவந்தம்
அஹம் ஸமர்ேதா। ௯௪।௧௧௧
ைநவார்சைநர் அலம் அஹம் தவ ேதவ ேயாக்ய:। சித்தம் ச ந த்வயி
ஸமாஹிதம் ஈஸ ேதாைஷர்। ௯௪।௧௧௨
ஆக்ஷிப்யேத கதய கிம் நு கேராமி பாப:। தத் த்வம் ப்ரஸதீ பகவந் குரு மய்ய்
அநாேத। ௯௪।௧௧௨
விஷ்ேணா க்ருபாம் பரமகாருணிக: கில த்வம்। ஸம்ஸாரஸாகரநிமக்நம்
அநந்த தீநம்। ௯௪।௧௧௩
உத்தர்தும் அர்ஹஸி ஹேர புருேஷாத்தேமா அஸி। இத்தம் ேதந நரவ்யாக்ர।
௯௪।௧௧௩
ஸ்துேதா பக்திமதா தத:। ஸம்ஸாரபந்தபேதந ீ । ௯௪।௧௧௪
க்ருஷ்ண: ப்ரத்யக்ஷதாம் யெயௗ। ஸ தம் ப்ரத்யக்ஷம் ஈஸாநம்।
௯௪।௧௧௪
அநந்தம் அபராஜிதம்। ேதவேதவம் உவாேசதம்। ௯௪।௧௧௫
அநாதிநிதநம் ஹரிம்। ஸிரஸா தரணம்ீ கத்வா। ௯௪।௧௧௫
யதவாக்காயமாநஸ:। பராபேரஸ்வரம் விஷ்ணும்। ௯௪।௧௧௬
ஜிஷ்ணும் ஆத்யம் அேநாபமம்। திவ்யாக்ஷரபதாநந்த। ௯௪।௧௧௬
ப்ரஸந்ேநா பகவாந் யதி। தத் ேதவ ேதஹி தீநாய। ௯௪।௧௧௭
மஹ்யம் ஏகம் இமம் வரம்। வரம் வரய மத்தஸ் த்வம்। ௯௪।௧௧௭
யத் ேத மநஸி வர்தேத। வரார்திநாம் த்விஜஸ்ேரஷ்ட। ௯௪।௧௧௮

நாபலம் மம தர்ஸநம்। ஜந்மஸம்பச்சிதா ேதவ। ௯௪।௧௧௮
பாபஸம்பந் மமாகிலா। ப்ரயாது நாஸம் ஈேஸஸ। ௯௪।௧௧௯
த்வத்ப்ரஸாதாத் அேதாக்ஷஜ। பக்திபாவபேரணாத்ய। ௯௪।௧௧௯
மந்மேயந த்விேஜாத்தம। ய: ஸ்துேதா அஸ்மி க்ஷயம் பாபம்। ௯௪।௧௨
ேதைநவாகிலம் ஆகதம்। அஸ்மத்ேதா வரேயஹாத்ய। ௯௪।௧௨
த்விஜவர்யாபரம் வரம்। மயி பக்திமதாம் அத்ர। ௯௪।௧௨௧
ேலாேக கிம்சிந் ந துர்லபம்। தந்ேயா அஸ்மி ஸர்வநாேதந। ௯௪।௧௨௧
யத்க்ருேதா மய்ய் அநுக்ரஹ:। தத் ஏகம் ஏவ த்வத்ேதா அஹம்।
௯௪।௧௨௨
வரம் இச்சாமி ேகஸவ। நிர்தூதஸர்வபாேபப்ேயா। ௯௪।௧௨௨
நாத புண்யக்ஷயாந் மம। த்வத்பரஸ்யாஸ்து ேகாவிந்த। ௯௪।௧௨௩
மா புநர் ேதஹஸம்பவ:। யத் அக்ஷரம் யத் அசலம்। ௯௪।௧௨௩
வ்யாபி ஸூŠமம் ச யத் பரம்। விேஸஷார் அவிேஸஷம் ச।
௯௪।௧௨௪
கச்ேசயம் தத் பதம் தவ। ஏவம் பவிஷ்யதீத்ய் உக்த்வா। ௯௪।௧௨௪
ப்ரஸாதஸுமுகஸ் தத:। பூபால தம் த்விஜஸ்ேரஷ்டம்। ௯௪।௧௨௫
கேதா அந்தர்தாநம் ஈஸ்வர:। தத்ப்ரஸாதாத் த்விஜ: ேஸா அபி।
௯௪।௧௨௫
தந்மயஸ் தத்வ்யபாஸ்ரய:। ப்ரக்ஷணகர்மபந்தஸ் ீ து। ௯௪।௧௨௬
ப்ரயாத: பரமம் பதம்। ஏவம் அக்ஷீணபாேபா அபி। ௯௪।௧௨௬
ஜகதாம் ஈஸ்வேரஸ்வரம்। வ்யபாஸ்ரிேதா ஹரிம் யாதி। ௯௪।௧௨௭
பாபமுக்த: பரம் பதம்। ஏதத் த்வயா நாவ்ரதிேந। ௯௪।௧௨௭
ந சாஸுஸ்ரூஷேவ பரம்। ஆக்ேயயம் ராஜஸார்தூல। ௯௪।௧௨௮

யஸ் ச நார்சயேத ஹரிம்। விஷ்ணுபக்தாய தாந்தாய। ௯௪।௧௨௮
வ்ரதிேந புண்யஸலிேந ீ । கதநீயம் இதம் பூப। ௯௪।௧௨௯
ரஹஸ்யம் பரமம் ஹேர:। பஹுேஸா பவதா ப்ேராக்தம்। ௯௪।௧௨௯
ஸாம்ப்ரதம் ச யத் ஈரிதம்। ஸ்ேராதும் இச்சாமி விப்ேரந்த்ர। ௯௫।௰௰௧
தத் விஷ்ேணா: பரமம் பதம்। யத்ஸ்வரூபம் யதாதாரம்। ௯௫।௰௰௧
யத்ப்ரமாணம் யதாத்மகம்। ஸர்வதாது: பதம் தந் ேம। ௯௫।௰௰௨
ஸ்ேராதும் இச்சா ப்ரவர்தேத। ஸாத்வ் ஏதத் பவதா ப்ருஷ்டம்।
௯௫।௰௰௨
ப்ருஷ்டம் ஆத்மஜ்ஞாநஸமாஸ்ரிதம்। தத் கத்யமாநம் ஏகாக்ர:।
௯௫।௰௰௩
ஸ்ருணு விஷ்ேணா: பரம் பதம்। யத் தத் ப்ரஹ்ம யத: ஸர்வம்।
௯௫।௰௰௩
யத் ஸர்வம் ஸர்வஸம்ஸ்திதி:। அக்ராஹ்யகம் அநிர்ேதஸ்யம்।
௯௫।௰௰௪
தத் ஏவ பகவத்பதம்। தத்ஸ்வரூபம் ச ராேஜந்த்ர। ௯௫।௰௰௪
ஸ்ருணுஷ்ேவஹ ஸமாஹித:। விஷ்ேணா: பதஸ்யாவ்யயஸ்ய।
௯௫।௰௰௫
ப்ரஹ்மேணா கதேதா மம। ப்ரதாநாதிவிேஸஷாந்தம்। ௯௫।௰௰௫
யத் ஏதத் பட்யேத ஜகத்। சராசரஸ்ய தஸ்யாத்யம்। ௯௫।௰௰௬
பரம் ப்ரஹ்ம விலக்ஷணம்। ஜந்மஸ்வப்நாதிரூபாதி । ௯௫।௰௰௬
து:காதிரஹிதம் ச யத்। ேநாபசர்யம் அநிர்ேதஸ்யம்। ௯௫।௰௰௭
ஸ்வப்ரதிஷ்டம் ச தத் பரம்। க்ஷணக்ேலஸாஸ் ீ து ஸம்ஸார ।
௯௫।௰௰௭

விமுக்திபதம் ஆஸ்ரிதா:। ேயாகிநஸ் தத் ப்ரபஸ்யந்தி। ௯௫।௰௰௮
ஸமர்தா ைநவ ேசாதிதும்। தத் ஸர்வம் ஸர்வபாவஸ்தம்। ௯௫।௰௰௮
விேஸேஷண விவர்ஜிதம்। பஸ்யதாம் அப்ய் அநிர்ேதஸ்யம்।
௯௫।௰௰௯
யேதா வாக்விஷேய ந தத்। குர்வந்த்ய் ஆலம்பநத்ேவந। ௯௫।௰௰௯
யத்ப்ராப்த்யர்தம் ச ேதவதா:। ப்ரஹ்ம ப்ரகாஸேத ேதஷாம்। ௯௫।௰௧
தத் வேரைணவ ஸர்வகம்। ப்ரதாநாதிவிேஸஷாந்தம்। ௯௫।௰௧
யத்ைரதத் அகிலம் ஜகத்। தஸ்யாநந்தஸ்ய க: ஸக்த:। ௯௫।௰௧௧
ப்ரமாணம் கதிதும் நர:। ஸூŠமாணாம் தத் பரம் ஸூŠமம்।
௯௫।௰௧௧
ஸ்தூலாநாம் தந் மஹத்தரம்। ஸர்வவ்யாப்ய் அபி ராேஜந்த்ர।
௯௫।௰௧௨
தூரஸ்தம் சாந்திேக ச தத்। பராங்முகாநாம் ேகாவிந்ேத। ௯௫।௰௧௨
விஷயாக்ராந்தேசதஸாம்। ேதஷாம் தத் பரமம் ப்ரஹ்ம। ௯௫।௰௧௩
தூராத் தூரதேர ஸ்திதம்। ந ப்ராப்நுவந்தி கச்சந்ேதா। ௯௫।௰௧௩
யேதா ஜந்மாயுைதர் அபி। ஸம்ஸாராத்வநி ராேஜந்த்ர। ௯௫।௰௧௪
தேதா தூரதேர ஹி தத்। தந்மயத்ேவந ேகாவிந்ேத। ௯௫।௰௧௪
ய நரா ந்யஸ்தேசதஸ:। விஷயத்யாகிநஸ் ேதஷாம்। ௯௫।௰௧௫
விஜ்ேஞயம் ச ததந்திேக। ஸர்வத: பாணிபாதாந்தம்। ௯௫।௰௧௫
ஸர்வேதா அக்ஷிஸிேராமுகம்। ஸர்வத: ஸ்ருதிமல் ேலாேக।
௯௫।௰௧௬
ஸர்வம் ஆவ்ருத்ய திஷ்டதி। ஸர்ேவந்த்ரியகுநாபாஸம்। ௯௫।௰௧௬
ஸர்ேவந்த்ரியவிவர்ஜிதம்। அஸக்தம் ஸர்வப்ருச் ைசநந்। ௯௫।௰௧௭

நிர்குணம் குணேபாக்த்ரு ச। அவிபக்தம் ச பூேதஷு। ௯௫।௰௧௭
விபக்தம் இவ ச ஸ்திதம்। பூதபர்த்ரு ச தஜ் ஜ்ேஞயம்। ௯௫।௰௧௮
க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச। ஜ்ேயாதிஷாம் அபி தஜ் ஜ்ேயாதிஸ்।
௯௫।௰௧௮
தமஸ: பரம் உச்யேத। ஜ்ஞாநம் ஜ்ேஞயம் ஜ்ஞாநகம்யம்। ௯௫।௰௧௯
ஹ்ருதி ஸர்வஸ்ய் அதிஷ்டிதம்। தச் சாத்ேயா ஜகதாம் ஈஸ:।
௯௫।௰௧௯
பேரஸ: பரேமஸ்வர:। பராபரஸ்வரூேபண। ௯௫।௰௨
விஷ்ணு: ஸர்வஹ்ருதி ஸ்தித:। யஜ்ேஞஸம் யஜ்ஞபுருஷம்। ௯௫।௰௨
ேகசித் இச்சந்தி தத்பரம்। ேகசித் விஷ்ணும் ஹரிம் ேகசித்। ௯௫।௰௨௧
ேகசித் ேகஸவஸம்ஜ்ஞிதம்। ேகசித் ேகாவிந்தநாமாநம்। ௯௫।௰௨௧
புண்டரீகாக்ஷம் அச்யுதம்। ேகசிஜ் ஜநார்தநம் த்வ் அந்ேய। ௯௫।௰௨௨
வதந்தி புருேஷாத்தமம்। ேகசித் விரிஞ்சிம் ப்ராஹ்மணம்। ௯௫।௰௨௨
அப்ஜேயாநிம் ததாபேர। ஸர்வம் ஈஸம் அஜம் ருத்ரம்। ௯௫।௰௨௩
ஸூலிநம் சாபேர ந்ருப। வருணம் ேகசித் ஆதித்யம்। ௯௫।௰௨௩
இந்த்ரம் அக்நிம் அதாபேர। யமம் தேநஸம் அபேர। ௯௫।௰௨௪
ேஸாமம் அந்ேய ப்ரஜாபதிம்। ஹிரண்யகர்பம் கபிலம்। ௯௫।௰௨௪
ேக்ஷத்ரஜ்ஞம் காலம் ஈஸ்வரம்। ஸ்வபாவம் அந்தராத்மாநம்।
௯௫।௰௨௫
ஆத்மாநம் புத்திரூபிணம்। வதந்தி நாமபிஸ் சாந்ையர்। ௯௫।௰௨௫
அநாமாநம் அரூபிணம்। ஸ்ரூயதாம் து நரவ்யாக்ர। ௯௫।௰௨௫
ேவதேவதாந்தநிஸ்சய:। யஜ்ேஞேஸா யஜ்ஞபுருேஷா। ௯௫।௰௨௬
புண்டரீகாக்ஷஸம்ஜ்ஞித:। தத் விஷ்ேணா: பரமம் ப்ரஹ்ம। ௯௫।௰௨௬

யேதா நாவர்தேத புந:। ஸ ஏவ ருத்ரஸ் சந்த்ேரா அக்நி:। ௯௫।௰௨௭
ஸூர்ேயா ைவஸ்ரவேணா யம:। ப்ரஹ்மா ப்ரஜாபதி: கால:। ௯௫।௰௨௭
ஸ்வபாேவா புத்திர் ஏவ ச। ேக்ஷத்ரஜ்ஞாக்யஸ் தைதவாந்யா:।
௯௫।௰௨௮
ஸம்ஜ்ஞாபி: ப்ேராச்யேத புைத:। ஸம்ஜ்ஞா து தஸ்ய ைநவாஸ்தி।
௯௫।௰௨௮
ந ரூபம் நாபி கல்பநா। ஸ ஸர்வபூதாநுகத:। ௯௫।௰௨௯
பரமாத்மா ஸநாதந:। ஆக்யாதம் பவதா ப்ரஹ்மந்ந்। ௯௫।௰௨௯
ஏதத் ப்ரஹ்ம ஸநாதநம்। யஸ்மாத் உத்பத்யேத க்ருத்ஸ்நம்।
௯௬।௰௰௧
ஜகத் ஏதச் சராசரம்। கிம்து ெகௗதுகம் அத்ராஸ்தி। ௯௬।௰௰௧
மம பார்கவநந்தந। தத் அஹம் ஸ்ேராதும் இச்சாமி। ௯௬।௰௰௨
த்வத்த: ஸம்ேதஹம் உத்தமம்। யத் ஏதத் பவதாக்யாதம்। ௯௬।௰௰௨
ப்ரஹ்ம ப்ரஹ்மவிதாம் வர। பரிணாேமா ந தஸ்யாஸ்தி। ௯௬।௰௰௩
நிர்குணம் ஸர்வகம் யத:। ஸநாதநாத் ஸர்வகதாத்। ௯௬।௰௰௩
பரிணாமவிவர்ஜிதாத்। கதம் ஸம்ஜாயேத க்ருத்ஸ்நம்। ௯௬।௰௰௪
தஸ்மாத் அபகுணாத் அபி। த்விவிதம் காரணம் பூப। ௯௬।௰௰௪
நிேபாத கதேதா மம। நிமித்தகாரணம் பூர்வம்। ௯௬।௰௰௫
த்விதீயம் பரிணாமி ச। யதா கும்பஸ்ய கரேண। ௯௬।௰௰௫
குலால: ப்ரதமம் ந்ருப। காரணம் பரிணாமாக்யம்। ௯௬।௰௰௬
ம்ருத்த்ரவ்யம் அபரம் ஸ்ம்ருதம்। தர்மாதர்மாதயஸ் தத்வஜ்।
௯௬।௰௰௬
ஜகத்ஸ்ருஷ்ேடர் மஹீபேத। காரணம் பரிணாமாக்யம்। ௯௬।௰௰௭

நிமித்தாக்யம் து தத் பரம்। காரணம் காலககேந। ௯௬।௰௰௭
யதா ஸம்நிதிமாத்ரத:। அவிகாரிதயா ப்ரஹ்ம। ௯௬।௰௰௮
ததா ஸ்ருஷ்ேடர் நேரஸ்வர। அஜ்ஞாநபடலாச்சைநர்। ௯௬।௰௰௮
ஏகேதஸாத்மவ்ருத்திபி:। அநாத்மேவதிபிர் ஜைவர் ீ । ௯௬।௰௰௯
நிஜகர்மநிபந்தைந:। குர்வத்பிர் ந்ருபேத கர்ம। ௯௬।௰௰௯
கர்த்ருத்வம் உபசாரத:। க்ரியேத ஸர்வபூதஸ்ய। ௯௬।௰௧
ஸர்வகஸ்யாவ்யயாத்மந:। யத: ஸம்பந்தவாந் ஏபிர்। ௯௬।௰௧
அேஸைஷ: ப்ராணிபி: ப்ரபு:। கர்த்ருத்வம் உபசாேரண। ௯௬।௰௧௧
ததஸ் தஸ்யாபி பூபேத। ேபதாேபதஸ்வரூேபண। ௯௬।௰௧௧
தத்ர ப்ரஹ்ம வ்யவஸ்திதம்। தேயா: ஸ்வரூபம் ந்ருபேத। ௯௬।௰௧௨
ஸ்ரூயதாம் உபேயார் அபி। அநாதிஸம்பந்தவத்யா। ௯௬।௰௧௨
ேக்ஷத்ரஜ்ஞ: ேக்ஷத்ரவித்யயா। வ்யாப்த: பஸ்யத்ய் அேபேதந।
௯௬।௰௧௩
ப்ரஹ்ம தத் த்ய் ஆத்மநி ஸ்திதம்। பஸ்யத்வ் ஆத்மாநம் அந்யத்ர।
௯௬।௰௧௩
யாவத் ைவ பரமாத்மந:। தாவத் ஸம்ப்ராம்யேத ஜந்துர்। ௯௬।௰௧௪
ேமாஹிேதா நிஜகர்மணா। ஸம்க்ஷநாேஸஷகர்மா ீ து। ௯௬।௰௧௪
பரம் ப்ரஹ்ம ப்ரபஸ்யதி। அேபேதநாத்மந: ஸுத்தம்। ௯௬।௰௧௫
ஸுத்தத்வாத் அக்ஷேயா அக்ஷயம்। ேபதஸ் ச கர்மஜநித:। ௯௬।௰௧௫
ேக்ஷத்ரஜ்ஞபரமாத்மேநா:। ஸம்க்ஷணகர்மபந்தஸ்ய ீ । ௯௬।௰௧௬
ந ேபேதா ப்ரஹ்மணா ஸஹ। உபாஸ்ேயாபாஸ்யகதயா। ௯௬।௰௧௬
ேபேதா ையர் அபி கத்யேத। ெதௗ ஹி ஸுத்த்யர்தம் இச்சந்தி।
௰௯௬।௧௪௭

மலாநாம் தத் உபாஸநம்। பேரா அஸாவ் அபேரணாத்மா। ௰௯௬।௧௪௭
ஸம்த்யக்தமமேதந து। உபாஸ்யேத ததா ேஸா அபி। ௰௯௬।௧௪௭
தத்பாவம் ப்ரதிபத்யேத। கர்மிணாம் கர்மேபேதந। ௰௯௬।௧௪௭
ேபதாத் ஏவாதேயா யத:। கர்மக்ஷயாத் அேஸஷாணாம்। ௯௬।௰௧௭
ேபதாநாம் ஸம்க்ஷயஸ் தத:। அவித்யா து க்ரியா ஸர்வா। ௯௬।௰௧௭
வித்யா ஜ்ஞாநம் ப்ரசக்ஷேத। கர்மணா ஜாயேத ஜந்துர்। ௯௬।௰௧௮
வித்யயா து விமுச்யேத। அத்ைவதம் பரமார்ேதா ஹி। ௯௬।௰௧௮
த்ைவதம் தத்ேபத உச்யேத। உபயம் ப்ரஹ்மேணா ரூபம்। ௯௬।௰௧௯
த்ைவதாத்ைவதவிேபதத:। தேயா: ஸ்வரூபம் வதேதா। ௯௬।௰௧௯
நிேபாத மம பார்திவ। ேதவதிர்யங்மநுஷ்யாக்யஸ்। ௯௬।௰௧௯
தைதவ ந்ருப தாரக:। சதுர்விேதா ஹி ேபேதா ேயா। ௯௬।௰௨
மித்யாஜ்ஞாநநிபந்தந:। அஹம் அந்ேயா அபரஸ் சாயம்। ௯௬।௰௨
அமீசாத்ர ததாபேர। விஜ்ஞாநம் ஏதத் தத் த்ைவதம்। ௯௬।௰௨௧
யத் அந்யச் ச்ரூயதாம் பரம்। மேமத்யஹமிதிப்ரஜ்ஞா । ௯௬।௰௨௧
வியுக்தம் அவிகல்பவத்। அவிகாரம் அநாக்ேயயம்। ௯௬।௰௨௨
அத்ைவதம் அபி பூபேத। அேபேதந தவாக்யாதம்। ௯௬।௰௨௨
யத் ஏதத் ப்ரஹ்ம ஸாஸ்வதம்। ஜ்ஞாநஜ்ேஞையக்யஸத்பாவம்।
௯௬।௰௨௩
தத் ஏவாத்ைவதஸம்ஜ்ஞிதம்। யஸ் ச த்ைவேத ப்ரபஞ்ச: ஸ்யாந்।
௯௬।௰௨௩
நிவர்த்ேயாபயேசதஸ:। மேநாவ்ருத்திமயம் த்ைவதம்। ௯௬।௰௨௪
அத்ைவதம் பரமார்தத:। மநேஸா வ்ருத்தயஸ் தஸ்மாத்। ௯௬।௰௨௪
தர்மாதர்மநிமித்தஜா:। நிேராதவ்யாஸ் தந்நிேராதாத்। ௯௬।௰௨௫

த்ைவதம் ைநேவாபபத்யேத। மேநாத்ருஸ்யம் இதம் த்ைவதம்।
௯௬।௰௨௫
யத் கிம்சித் ஸசராசரம்। மநேஸா ஹ்ய் அமதீபாேவ। ௯௬।௰௨௬
த்ைவதாபாவாத் தத் ஆப்நுயாத்। மேநா ஹி விஷயம் யத்வத்।
௯௬।௰௨௬
ஆதத்ேத தத்வத் ஏவ தத்। பவத்ய் அபாஸ்தவிஷயம்। ௯௬।௰௨௭
க்ராஹிதர்ேம ச ஜாயேத। அக்ராஹி தச் ச வித்ருதம்। ௯௬।௰௨௭
ேயாகிநாம் விஷயம் ப்ரதி। நிேராேத ேயாகஸாமர்த்யாத்। ௯௬।௰௨௮
ப்ரஹ்மக்ராஹ்ய் ஏவ ஜாயேத। க்ராஹ்யம் ச பரமம் ப்ரஹ்ம।
௯௬।௰௨௮
ேயாகிசித்தஸ்ய பார்திவ। ஸமுஜ்ஜிதக்ராஹ்யவ்ருத்திர்। ௯௬।௰௨௯
அமலஸ்ய மலம் மஹத்। க்ஷீணக்ேலஸாஸ் து ஸம்ஸார ।
௯௬।௰௨௯
விமுக்திபதம் ஆஸ்ரிதா:। ேய அபி கர்மாணி குர்வந்தி। ௯௬।௰௩
பகவந்தம் அபாஸ்ரிதா:। க்ரியாேயாகபரா ராஜந்। ௰௯௬।௧௪௮
காமாகாங்க்ஷாவிவர்ஜிதா:। ப்ரஹ்மநிஷ்டா த்யாநபரா। ௰௯௬।௧௪௮
ப்ரஹ்மண்ய் ஏவ வ்யவஸ்திதா:। ேத அபி தத்பாவம் ஆயாந்தி।
௰௯௬।௧௪௮
விமுக்திபதம் ஆஸ்ரிதா:। ேயாகிநஸ் தம் ப்ரபஸ்யந்தி। ௰௯௬।௧௪௮
ஸமர்தா ைநவ ேசாதிதும்। கர்மேணா பாவநா ேயயம்। ௯௬।௰௩
ஸா ப்ரஹ்மபரிபந்திநீ। கர்மபாவநயா துல்யம்। ௯௬।௰௩௧
விஜ்ஞாநம் உபபத்யேத। தாத்ருக் பவேதா விஜ்ஞப்திர்। ௯௬।௰௩௧
யாத்ருஸீ கர்மபாவநா। க்ஷேய தஸ்யா: பரம் ப்ரஹ்ம। ௯௬।௰௩௨

ஸ்வயம் ஏவ ப்ரகாஸேத। ஏவம் ஏதந் மயா பூப। ௯௬।௰௩௨
யதாவத் கதிதம் தவ। த்ைவதாத்ைவதஸ்வரூேபண। ௯௬।௰௩௩
யதா ப்ரஹ்ம வ்யவஸ்திதம்। யதாவத் கர்மநிஷ்டாநாம்। ௯௬।௰௩௩
தத்ப்ராப்தி: கதிதம் ததா। ஸ்வரூபம் ப்ரஹ்மணஸ் ேசாக்தம்।
௰௯௬।௧௪௯
உபயத்ராபி ேத ப்ருதக்। வாஸுேதவமயஸ்யாந்யத்। ௯௬।௰௩௪
கிம் பூய: கதயாமி ேத। ஆக்யாதம் பகவந் ஸம்யக்। ௯௬।௰௩௪
பரம் ப்ரஹ்ம த்வயா மம। விஷ்ணுர் ஏவ ஜகத்தாதா। ௯௭।௰௰௧
ேயாகிநாம் வர்தேத யத:। உபாயஸ் தஸ்ய ய: ப்ராப்ேதா। ௯௭।௰௰௧
விஷ்ேணார் ஈஸஸ்ய பார்கவ। அத்ைவதத்ைவதரூபஸ்ய। ௯௭।௰௰௨
தந் ேம விஸ்தரேதா வத। ேயந ஜந்மஜராம்ருத்யு । ௯௭।௰௰௨
மஹாக்ராஹபவார்ணவம்। த்வத்வாக்யநாவம் ஆருஹ்ய। ௯௭।௰௰௩
முக்திதீரம் அவாப்நுயாம்। தந் மம ப்ரூஹி தத்த்ேவந। ௯௭।௰௰௩
ப்ராப்நுயாம் ேயந தத் பதம்। பந்த: கர்மமேயா ஹ்ய் அத்ர। ௰௯௭।௧௫௰
யதாமுக்திவிகாதக்ருத்। தஸ்யாபகமேந யத்ந:। ௯௭।௰௰௪
கார்ய: ஸம்ஸாரபருணா ீ । ஸுவர்ணாதிமஹாதாந । ௯௭।௰௰௪
புண்யதீர்தாவகாஹைந:। ஸாரீைரஸ் ச ததா க்ேலைஸ:। ௯௭।௰௰௫
ஸாஸ்த்ேராக்ைதஸ் தச்சேமா பேவத்। ேதவதாஸ்துதிஸச்சாஸ்த்ர ।
௯௭।௰௰௫
ஸ்ரவைண: புண்யதர்ஸைந:। குருஸுஸ்ரூஷணாச் ைசவ। ௯௭।௰௰௬
பாபபந்த: ப்ரணஸ்யதி। ப்ரபாகூபதடாகாநி। ௯௭।௰௰௬
ேதவதாயதநாநி ச। காரயந் புருஷவ்யாக்ர। ௯௭।௰௰௭
பாபபந்தாத் ப்ரமுச்யேத। ேயாகிநாம் அத ஸுஸ்ரூஷாம்। ௯௭।௰௰௭

தைதவாவஸதாந் ந்ருப। குர்வந் பூர்தாஸ்ரிதம் சாந்யத்। ௯௭।௰௰௮
பாபபந்தாத் ப்ரமுச்யேத। விஷ்ணு: க்ருஷ்ேணா வாஸுேதேவா।
௯௭।௰௰௮
ேகாவிந்த: புஷ்கேரக்ஷண:। இத்யாதி வ்யாஹரந் நித்யம்। ௯௭।௰௰௯
பாபபந்தாத் ப்ரமுச்யேத। விஸ்ேவா விஸ்ேவஸ்வேரா விஸ்வ ।
௯௭।௰௰௯
விதாதா தாம ஸாஸ்வதம்। விஷ்ணுர் இத்யாதி ச ஜபந்। ௯௭।௰௧
பாபபந்தாத் ப்ரமுச்யேத। பத்மநாேபா ஹ்ருஷீேகஸ:। ௯௭।௰௧
ேகஸேவா மதுஸூதந:। இத்யாதி வ்யாஹரந் நித்யம்। ௯௭।௰௧௧
பாபபந்தாத் ப்ரமுச்யேத। நாராயணஸ் சக்ரதேரா। ௯௭।௰௧௧
விஸ்வரூபஸ் த்ரிவிக்ரம:। இத்யாதி வ்யாஹரந் நித்யம்। ௯௭।௰௧௨
பாபபந்தாத் ப்ரமுச்யேத। விஷ்ெணௗ ப்ரதிஷ்டிதம் விஸ்வம்। ௯௭।௰௧௨
விஷ்ணுர் விஸ்ேவ ப்ரதிஷ்டித:। விஷ்ணுர் விஸ்ேவஸ்வேரா விஸ்வம்।
௯௭।௰௧௩
இதி பாவாத் ப்ரமுச்யேத। ஏவம் ஸம்ஸாந்தபாபஸ்ய। ௯௭।௰௧௩
புண்யவ்ருத்திமேதா ந்ருப। இச்சா ப்ரவர்தேத பூம்ேஸா। ௯௭।௰௧௪
முக்திதாயிஷு கர்மஸு। முக்திதாயநி ீ கர்மாணி। ௯௭।௰௧௪
நிஷ்காேமந க்ருதாநி து। பவந்தி ேதாஷக்ஷயகா:। ௰௯௭।௧௫௧
புண்யபந்தாத் ப்ரமுச்யேத। நித்யைநமித்திகாநீஹ। ௰௯௭।௧௫௧
கர்மாண்ய் உக்தாநி யாநி ைவ। ேதஷாம் நிஷ்காமகாரணாத்। ௯௭।௰௧௫
புண்யபந்த: ப்ரஸாம்யதி। அேநகஜந்மஸம்ஸார । ௯௭।௰௧௫
சிதஸ்யாபி த்ருடாத்மந:। கர்மபந்தஸ்ய ைஸதில்ய । ௯௭।௰௧௬
காரணம் சாபரம் ஸ்ருணு। அஹிம்ஸா நாதிமாநித்வம்। ௯௭।௰௧௬

அதம்பித்வம் அமத்ஸரம்। திதிக்ஷா ஸமதர்ஸித்வம்। ௯௭।௰௧௭
ைமத்ர்யாெதௗ தண்டஸம்யம:। க்ருஜுத்வம் இந்த்ரியஜய:। ௯௭।௰௧௭
ெஸௗசம் ஆசார்யபூஜநம்। புண்யஸ்தவாதிபடநம்। ௯௭।௰௧௮
அைபஸுந்யம் அகத்தநம்। விஷயாந் ப்ரதி ைவராக்யம்। ௯௭।௰௧௮
அநஹம்காரம் ஏவ ச। அகாமித்வம் மந:ஸ்ைதர்யம்। ௯௭।௰௧௯
அத்ேராஹ: ஸர்வஜந்துஷு। அவிவாதஸ் ததா மூைடர்। ௯௭।௰௧௯
அமூைட: ப்ரஸ்நஸத்கதா। விவிக்தேதேஸ அபிரதிர்। ௯௭।௰௨
மஹாஜநவிவர்ஜநம்। ஸத்பி: ஸஹாஸ்ய ஸததம்। ௯௭।௰௨
ேயாகாப்யாேஸா மிேதாக்திதா। ஸ்த்ரீபர்த்ேஸாத்ஸவஸம்லாப ।
௯௭।௰௨௧
விவர்ஜநம் அேவக்ஷணம்। பரேயாஷித்விலாஸாநாம்। ௯௭।௰௨௧
காவ்யாலாபவிவர்ஜநம்। கீதவாதிதந்ருத்ேதஷு। ௯௭।௰௨௨
ம்ருதங்ேகஷ்வ் அபேரஷு ச। அஸக்திர் மநேஸா ெமௗநம்। ௯௭।௰௨௨
ஆத்மதத்த்வாவேலாகநம்। தப: ஸம்ேதாஷ: ஸத்ேயஷு। ௯௭।௰௨௩
ஸ்திதிர் ேலாபவிவர்ஜநம்। ததா பரிக்ரேஹா ராஜந்। ௯௭।௰௨௩
மாயாவ்யாஜவிவர்ஜநம்। அஸ்ருங்மாம்ஸாதிபூதத்வாந்। ௯௭।௰௨௪
நிஜேதஹஜுகுப்ஸநம்। ஸர்வாண்ய் ஏதாநி பூதாநி। ௯௭।௰௨௪
விஷ்ணுர் இத்ய் அசலா மதி:। தத்ைரவாேஸஷபூேதேஸ। ௯௭।௰௨௫
பக்திர் அவ்யபிசாரிண।ீ ஏேத குணா மயாக்யாதா। ௯௭।௰௨௫
மேநாநிர்வ்ருதிகாரகா:। ைஸதில்யேஹதவஸ் ைசேத। ௯௭।௰௨௬
கர்மபந்தஸ்ய பூர்திவ। ஏபி: ஸாந்திம் கேத சித்ேத। ௯௭।௰௨௬
த்யாநாக்ருஷ்ட: ஸ்திேதா ஹரி:। ஸமம் நயதி கர்மாணி। ௯௭।௰௨௭

ஸிதமிஸ்ராஸிதாநி ைவ। பூயஸ் ச ஸ்ருணு ஸாஸ்த்ரார்தம்।
௯௭।௰௨௭
ஸம்ேக்ஷபாத் வதேதா மம। யதா ஸம்ப்ராப்யேத முக்திர்। ௯௭।௰௨௮
மநுேஜந்த்ர முமுக்ஷுபி:। நித்யைநமித்திகாநாம் து। ௯௭।௰௨௮
நிஷ்காமஸ்ய ஹி யா க்ரியா। நிஸித்தாநாம் ஸகாமாநாம்। ௯௭।௰௨௯
தைதவாகரணம் ந்ருப। ஸர்ேவஸ்வேர ச ேகாவிந்ேத। ௯௭।௰௨௯
பக்திர் அவ்யபிசாரிண।ீ ப்ரயச்சதி ந்ருணாம் முக்திம்। ௯௭।௰௩
மா ேத பூத் அத்ர ஸம்ஸய:। ஆக்யாதம் ஏதத் அகிலம்। ௯௭।௰௩
யத் ப்ருஷ்ேடா அஸி மயா த்விஜ। ஜாயேத ஸமகாமாநாம்। ௯௮।௰௰௧
ப்ரஸம: கர்மணாம் யதா। கிம்த்வ் அத்ர பவதா ப்ேராக்தா। ௯௮।௰௰௧
ப்ரஸாந்தி: ஸர்வகர்மணாம்। நாத்யந்தநாஸ: ஸாந்தாநாம்। ௯௮।௰௰௨
உத்பேவா பவிதா புந:। நிஜகாரணம் ஆஸாத்ய। ௯௮।௰௰௨
ஸ்ேதாகஸ்யாக்ேநர் யதா த்ருணம்। தத் ஆசŠவ மஹாபாக।
௯௮।௰௰௨
ப்ரஸாதஸுமுேகா மம। ஸம்க்ஷேயா ேயந பவதி। ௯௮।௰௰௩
மூேலாத்வர்ேதந கர்மணாம்। ந கர்மணாம் க்ஷேயா பூப। ௯௮।௰௰௩
ஜந்மநாம் அயுைதர் அபி। கர்மக்ஷயம் க்ருேத ேயாகாத்। ௯௮।௰௰௪
ேயாகாக்நி: க்ஷபேயத் பரம்। தம் ேயாகம் மம விப்ரர்ேஷ। ௯௮।௰௰௪
ப்ரணதஸ்யாபியாசத:। த்வம் ஆசŠவ க்ஷேயா ேயந। ௯௮।௰௰௫
ஜாயேத அகிலகர்மணாம்। ஹிரண்யகர்ேபா பகவாந்। ௯௮।௰௰௫
அநாதிர் முநிபி: புரா। ப்ருஷ்ட: ப்ேராவாச யம் ேயாகம்। ௯௮।௰௰௬
தம் ஸமாேஸந ேம ஸ்ருணு। அநாதிகாலப்ரஸ்ருதா। ௯௮।௰௰௬
யதா வித்யா மஹீபேத। ததா தத்க்ஷயேஹதுத்வாத்। ௯௮।௰௰௭

ேயாேகா வித்யாமேயா அவ்யய:। தம் பரம்பரயா ஸ்ருத்வா। ௯௮।௰௰௭
முநேயா அத்ர தயாலவ:। ப்ரகாஸயந்தி பூதாநாம்। ௯௮।௰௰௮
உபகாரசிகீர்ஷவ:। ேதவா மஹர்ஷேயா ராஜம்ஸ்। ௯௮।௰௰௮
ததா ராஜர்ஷேயா அகிலா:। ஸ்ேரேயா அர்திந: புரா ஜக்மு:। ௯௮।௰௰௯
ஸரணம் கபிலம் கில। ேத தம் ஊசுர் பவாந் நித்யம்। ௯௮।௰௰௯
தயாலு: ஸர்வஜந்துஷு। ேஸா அஸ்மாந் உத்தர ஸம்மக்நாந்। ௯௮।௰௧
இத: ஸம்ஸாரகர்தமாத்। யச் ச்ேரய: ஸர்வவர்ணாநாம்। ௯௮।௰௧
ஸ்த்ரீணாம் அப்ய் உபகாரகம்। யஸ்மாத் பரதரம் நாந்யச்। ௯௮।௰௧௧
ஸ்ேரயஸ் தத் ப்ரூஹி ந: ப்ரேபா। ஆதாவ் அந்ேத ச மத்ேய ச।
௯௮।௰௧௧
ந்ருணாம் யத் உபகாரகம்। அபி கீடபதம்காநாம்। ௯௮।௰௧௨
தந் ந: ஸ்ேரய: பரம் வத। இத்ய் உக்த: கபில: ஸர்ைவர்। ௯௮।௰௧௨
ேதைவர் ேதவர்ஷிபிஸ் ததா। நாஸ்தி ேயாகாத் பரம் ஸ்ேரய:।
௯௮।௰௧௩
கிம்சித் இத்ய் உக்தவாந் புரா। யதா ஜந்மாயுைத: க்ேலஸா:। ௯௮।௰௧௩
ஸ்ைதர்யம் ேசதஸ்ய் உபாகதா:। தச்சாந்தேய ததா ேயாேகா।
௯௮।௰௧௪
பஹுஜந்மார்ஜிேதா பேவத்। ஸ ஏவாப்யஸதாம் ந்ருணாம்। ௯௮।௰௧௪
தீவ்ரஸம்ேவகிேசதஸாம்। ஆஸந்நதாம் ப்ரயாத்ய் ஆஸு। ௯௮।௰௧௫
விஷ்ணு: ஸம்ந்யஸ்தகர்மணாம்। ப்ராஹ்மணக்ஷத்ரியவிஸாம்।
௯௮।௰௧௫
ஸ்த்ரீஸூத்ரஸ்ய ச பாவநம்। ஸாந்தேய கர்மணாம் நாந்யத்।
௯௮।௰௧௬

ேயாகாத் அஸ்தி ஹி முக்தேய। அப்யஸ்தம் ஜந்மபிர் ைநைக:।
௯௮।௰௧௬
ஸுபஜாதிபேவஷு யத்। ேயாகஸ்வரூபம் தத் ேதஷாம்। ௯௮।௰௧௭
ஸ்த்ரீஸூத்ரத்ேவ வ்யவஸ்திதம்। ேயாகாப்யாேஸா ந்ருணாம் ேயஷாம்।
௯௮।௰௧௭
நாஸ்தி ஜந்மாந்தராஹ்ருத:। ேயாகஸ்ய ப்ராப்தேய ேதஷாம்।
௯௮।௰௧௮
ஸூத்ரைவஸ்யாதிக: க்ரம:। ஸ்த்ரீத்வாச் சூத்ரத்வம் அப்ேயதி।
௯௮।௰௧௮
தேதா ைவஸ்யத்வம் ஆப்நுயாத்। ததஸ் ச க்ஷத்ரிேயா விப்ர:।
௯௮।௰௧௯
க்ரியாஹீநஸ் தேதா பேவத்। அநூசாநஸ் ததா யஜ்வ।ீ ௯௮।௰௧௯
கர்மந்யாஸீ தத: பரம்। தேதா ஜ்ஞாநித்வம் அப்ேயத்ய। ௯௮।௰௨
ேயாகீமுக்திம் க்ரமால் லேபத்। ேயஷாம் து ஜாதிமாத்ேரண। ௯௮।௰௨
ேயாகாப்யாஸஸ் திேராஹித:। ஆஸ்ேத தத்ைரவ முச்யந்ேத।
௯௮।௰௨௧
ஜாதிேஹெதௗ க்ஷயம்கேத। அஸத்கர்ம க்ருதம் பூர்வம்। ௯௮।௰௨௧
அஸஜ்ஜாதிப்ரதாயி யத்। தஸ்மிந் ேயாகாக்நிநா தக்ேத। ௯௮।௰௨௨
தஸ்ய ஜாேதர் பலம் குத:। யதா வாேதரித: கக்ஷம்। ௯௮।௰௨௨
தஹத்ய் ஊர்த்வஸிேகா அநல:। ஸர்வகர்மாணி ேயாகாக்நிர்।
௯௮।௰௨௩
பஸ்மஸாத் குருேத ததா। யதா தக்ததுஷம் பஜம்ீ । ௯௮।௰௨௩
அபஜத்வாந் ீ ந ஜாயேத। ேயாகதக்ைதஸ் ததா க்ேலைஸர்। ௯௮।௰௨௪
நாத்மா ஸம்ஜாயேத புந:। அத்ருஷ்டா த்ருஷ்டதத்த்வாநாம்। ௯௮।௰௨௪

ேயாகிநாம் ேயாகவிச்யுதி:। ேயஷாம் பவதி ேயாகித்வம்। ௯௮।௰௨௫
ப்ராப்நுவந்தீஹ ேத புந:। ஸஜ்ஜாதிப்ராபகம் கர்ம। ௯௮।௰௨௫
க்ருதம் ேதந ததாத்மநா। ஜாதிம் ப்ரயாந்தி விப்ராத்யா। ௯௮।௰௨௬
ேயாககர்மாநுரஞ்ஜிதா:। தத்ராப்ய் அேநகஜந்ேமாத்த । ௯௮।௰௨௬
ேயாகாப்யாஸாநுரஞ்ஜிதா:। ேதைநவாப்யாஸேயாேகந। ௯௮।௰௨௭
ஹ்ரியந்ேத தத்த்வவித்யயா। ைஜகீஷவ்ேயா யதா விப்ேரா। ௯௮।௰௨௭
யதா ைசவாஸிதாதய:। ஹிரண்யநாேபா ராஜந்யஸ்। ௯௮।௰௨௮
ததா ைவ ஜநகாதய:। பூர்வாப்யஸ்ேதந ேயாேகந। ௯௮।௰௨௮
துலாதாராதேயா விஸ:। ஸம்ப்ராப்தா: பரமாம் ஸித்திம்। ௯௮।௰௨௯
ஸூத்ரா: ைபலவகாதய:। ைமத்ேரயீஸுலபா கார்கீ। ௯௮।௰௨௯
ஸாண்டிலீ ச தபஸ்விநீ। ஸ்த்ரீத்ேவ ப்ராப்தா: பராம் ஸித்திம்।
௯௮।௰௩
அந்யஜந்மஸமாதித:। தர்மவ்யாதாதேயா அப்ய் அந்ேய। ௯௮।௰௩
பூர்வாப்யாஸாஜ் ஜுகுப்ஸிேத। வர்ணாவரத்ேவ ஸம்ப்ராப்தா:।
௯௮।௰௩௧
ஸம்ஸித்திம் ஸ்ரவணீததா। பூர்வாப்யஸ்தம் ச தத் ேதஷாம்।
௯௮।௰௩௧
ேயாகஜ்ஞாநம் மஹாத்மநாம்। ஸுப்ேதாத்திதப்ரத்யயவத்। ௯௮।௰௩௨
உபேதஸாதிநா விநா। தஸ்மாத் ேயாக: பரம் ஸ்ேரேயா। ௯௮।௰௩௨
விமுக்திபலேதா ஹி ய:। விமுக்ெதௗ ஸுகம் அத்யந்தம்। ௯௮।௰௩௩
ஸம்ேமாஹஸ் த்வ் இதரத் ஸுகம்। ஏதத் ேத ஸர்வம் ஆக்யாதம்।
௯௮।௰௩௩
மயா மநுஜகுஞ்ஜர। ஸ்ேரய: பரதரம் ேயாகாத்। ௯௮।௰௩௪

கிம்சித் அந்யந் ந வித்யேத। கதிதம் ேயாகமாஹாத்ம்யம்। ௯௮।௰௩௪
பவதா முநிஸத்தம। ஸ்வரூபம் து ந ேம ப்ேராக்தம்। ௯௯।௰௰௧
ஸ்ேராதும் இச்சாமி தத் த்ய் அஹம்। த்ைவவித்யம் ந்ருப ேயாகஸ்ய।
௯௯।௰௰௧
பரம் சாபரம் ஏவ ச। தச் ச்ருணுஷ்வ வதாம்ய் ஏஷ। ௯௯।௰௰௨
வாச்யம் ஸுஸ்ரூஷதாம் ஸதாம்। ேயா தத்யாத் பகவஜ்ஜ்ஞாநம்।
௯௯।௰௰௨
குர்யாத் வா தர்மேதஸநாம்। க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவம்ீ தத்யாந்।
௯௯।௰௰௩
ந தத்துல்யம் கதம்சந। க்ஷயிஷ்ணூந்ய் அபராணஹீ । ௯௯।௰௰௩
தாநாநி மநுஜாதிப। ஏகம் ஏவாக்ஷயம் ஸஸ்தம்। ௯௯।௰௰௪
ஜ்ஞாநதாநம் அநுத்தமம்। தாநாந்ய் ஏகபலாநீஹ। ௯௯।௰௰௪
த்ைரேலாக்ேய தததா ஸதாம்। ஜ்ஞாநம் ப்ரயச்சதா ஸம்யக்।
௯௯।௰௰௫
கிம் ந தத்தம் பேவந் ந்ருப। ஜ்ஞாநாந்ய் அந்யாந்ய் அஸாராணி।
௯௯।௰௰௫
ஸில்பிநீவ நேரஸ்வர। ஏகம் ஏவ பரம் ஜ்ஞாநம்। ௯௯।௰௰௬
யத் ேயாகப்ராப்திகாரகம்। அஹம் வக்தா பவாஞ் ஸ்ேராதா।
௯௯।௰௰௬
வாச்ேயா ேயாேகா விமுக்தித:। ப்ராணிநாம் உபகாராய। ௯௯।௰௰௭
ஸம்பத் ஏஷா குணாதிகா। பேரண ப்ரஹ்மணா ஸார்தம்। ௯௯।௰௰௭
ஏகத்வம் யந் ந்ருபாத்மந:। ஸ ஏவ ேயாேகா விக்யாத:। ௯௯।௰௰௮
கிம் அந்யத் ேயாகலக்ஷணம்। அபரம் ச பரம் ைசவ। ௯௯।௰௰௮

த்ெவௗ ேயாெகௗ ப்ருதிவபேத ீ । தேயா: ஸ்வரூபம் வŠயாமி।
௯௯।௰௰௯
தத் இைஹகமநா: ஸ்ருணு। ஸத்தாமாத்ரம் பரம் ப்ரஹ்ம। ௯௯।௰௰௯
விஷ்ண்வாக்யம் அவிேஸஷணம்। துர்விசிந்த்யம் யத: பூர்வம்।
௯௯।௰௧
தத்ப்ராப்த்யர்தம் அேதாச்யேத। வாதாலீசஞ்சலம் சித்தம்। ௯௯।௰௧
அநாலம்பநம் அஸ்திதி। ஸூŠமத்வாத் ப்ரஹ்மேணா ராஜந்ந்।
௯௯।௰௧௧
அக்ராஹ்ய் அக்ராஹ்யதர்மிண:। ஸம்யக் அப்யஸ்யேதா அஜஸ்ரம்।
௯௯।௰௧௧
உபவ்ரும்ஹிதஸக்திமத்। ஜந்மாந்தரஸைதர் வாபி। ௯௯।௰௧௨
ப்ரஹ்மக்ராஹ்ய் அபிஜாயேத। யத்ய் அந்தராய ேதாேஷண। ௯௯।௰௧௨
நாபகர்ேஷா நராதிப। ேயாகிேநா ேயாகரூடஸ்ய। ௯௯।௰௧௩
தாலாக்ராத் பதநம் யதா। ஜ்ஞாநம் ப்ரயச்சதாம் ஸம்யக்। ௯௯।௰௧௩
கிம் வதது பேவந் ந்ருப। தத் ஆப்ேநாதி பரம் ப்ரஹ்ம। ௰௯௯।௧௫௨
க்ேலேஸந மஹதா ந்ருப। ஜந்மாப்யாஸாந்தேராத்ேதந। ௯௯।௰௧௪
விஜ்ஞாேநந ஸேமதித:। விஷ்ண்வாக்யம் ப்ரஹ்ம துஷ்ப்ராபம்।
௯௯।௰௧௪
விஷயாக்ருஷ்டேசதஸா। மநுஷ்ேயேணதி தத்ப்ராப்தாவ்। ௯௯।௰௧௫
உபாயம் அபரம் ஸ்ருணு। ஸுரூபாம் ப்ரதிமாம் விஷ்ேணா:।
௯௯।௰௧௫
ப்ரஸந்நவதேநக்ஷணாம்। க்ருத்வாத்மந: ப்ரீதிகரீம்। ௯௯।௰௧௬
ஸுவர்ணரஜதாதிபி:। தஸ்யாஸ் ச லக்ஷணம் பூப। ௯௯।௰௧௬

ஸ்ருணுஷ்வ கதேதா மம। யத்த்ரவ்யா யத்ஸ்வரூபா ச। ௯௯।௰௧௭
கர்தவ்யா த்யாநகர்மணி। ஸுவர்ணரூப்யதாம்ைரஸ் து। ௯௯।௰௧௭
ஆரகூடமயம்ீ ததா। ைஸலதாரும்ருதா வாபி। ௯௯।௰௧௮
ேலக்யஜாம் வாபி காரேயத்। கார்யஸ் து விஷ்ணுர் பகவாந்।
௯௯।௰௧௮
ெஸௗம்யரூபஸ் சதுர்புஜ:। ஸலிலாத்மாதேமகாப:। ௯௯।௰௧௯
ஸ்ரீமாஞ் ஸ்ரீவத்ஸபூஷித:। ஆபத்தமகுட: ஸ்ரக்வ।ீ ௯௯।௰௧௯
ஹாரபாரார்பிேதாதர:। ஸ்வேக்ஷண சாருசிபுக:। ௯௯।௰௨
ஸுலலாேடந ஸுப்ருணா। ஸ்ேவாஷ்ேடந ஸுகேபாேலந। ௯௯।௰௨
வதேநந விராஜதா। கண்ேடந ஸுபேலேகந। ௯௯।௰௨௧
வராபரணதாரிணா। நாநாரத்நாநதார்தாப்யாம்। ௯௯।௰௨௧
ஸ்ரவணாப்யாம் அலம்க்ருத:। புஷ்டஸ்லிஷ்டாயதபுஜஸ்। ௯௯।௰௨௨
தநுதாம்ரநகாங்குலி:। மத்ேயந த்ரிவலீபங்க । ௯௯।௰௨௨
பூஷிேதந ச சாருணா। ஸுபாத: ஸூருயுகல:। ௯௯।௰௨௩
ஸுகடீகுல்பஜாநுக:। வாமபார்ஸ்ேவ கதாேதவ।ீ ௯௯।௰௨௩
சக்ரம் ேதவஸ்ய தக்ஷிேண। ஸங்ேகா வாமகேர ேதேயா। ௯௯।௰௨௪
தக்ஷிேண பத்ம ஸுப்ரபம்। ஊர்த்வத்ருஷ்டிம் அேதாத்ருஷ்டிம்।
௯௯।௰௨௪
திர்யக்த்ருஷ்டிம் ந காரேயத்। நிமீலிதாேக்ஷா பகவாந்। ௯௯।௰௨௫
ந ப்ரஸஸ்ேதா ஜநார்தந:। ெஸௗம்யா து த்ருஷ்டி: கர்தவ்யா।
௯௯।௰௨௫
கிம்சித் ப்ரஹஸிேதவ ச। கார்யஸ் சரணவிந்யாஸ:। ௯௯।௰௨௫
ஸர்வத: ஸுப்ரதிஷ்டித:। சரணாந்தரஸம்ஸ்தா ச। ௯௯।௰௨௬

பிப்ரதீரூபம் உத்தமம்। கார்யா வஸும்தரா ேதவ।ீ ௯௯।௰௨௬
தத்பாததலதாரிண।ீ யாத்ருக்விதா வா மநஸ:। ௯௯।௰௨௬
ஸ்ைதர்யலம்ேபாபபாதிகா। ந்ருஸிம்ஹவாமநாதீநாம்। ௯௯।௰௨௭
தாத்ருஸம்ீ காரேயத் புத:। ப்ரஹ்ம தஸ்யாம் ஸமாேராப்ய। ௯௯।௰௨௭
மநஸா தந்மேயா பேவத்। தாம் ஆர்சேயத் தாம் ப்ரணேமத்। ௯௯।௰௨௮
தாம் ஸ்மேரத் தாம் விசிந்தேயத்। தாம் அர்சயம்ஸ் தாம் ப்ரணமம்ஸ்।
௯௯।௰௨௮
தாம் ஸ்மரம்ஸ் தாம் ச சிந்தயந்। விஸத்ய் அபாஸ்தேதாஷஸ் து।
௯௯।௰௨௯
தாம் ஏவ ப்ரஹ்மரூபிணம்ீ । ஸம்கல்பநக்ரியாரூட:। ௯௯।௰௨௯
ஸ்வரூேபண ந்ருபாத்மந:। குர்வதீ பாவநாம் தத்ர। ௯௯।௰௩
தத்பாேவாத்பத்திகாரணாத்। நாந்யத்ர மநஸாேநயா। ௯௯।௰௩
புத்திர் ஈஷத் அபி க்வசித்। யைமஸ் ச நியைமஸ் ைசவ। ௯௯।௰௩
பூதாத்மா ப்ருதிவஸ்வர ீ । மூர்திம் பகவத: ஸம்யக்। ௯௯।௰௩௧
பூஜேயத் தந்மய: ஸதா। யமாம்ஸ் ச நியமாம்ஸ் ைசவ। ௯௯।௰௩௧
ஸ்ேராதும் இச்சாமி பார்கவ। ையர் தூதகல்மேஷா ேயாகீ। ௧௰௰।௰௰௧
முக்திபாக் உபஜாயேத। அஹிம்ஸா ஸத்யம் அஸ்ேதயம்। ௧௰௰।௰௰௧
ப்ரஹ்மசர்யாபரிக்ரெஹௗ। யமாஸ் தைவேத கதிதா। ௧௰௰।௰௰௨
நியமாந் அபி ேம ஸ்ருணு। ஸம்ேதாஷெஸௗசஸ்வாத்யாயாஸ்।
௧௰௰।௰௰௨
தபஸ் ேசஸ்வரபாவநா। நியமா: ெகௗரவஸ்ேரஷ்ட। ௧௰௰।௰௰௩
ேயாகஸம்ஸித்திேஹதவ:। ஏபிர் மூலகுைண: ஸத்பிர்। ௧௰௰।௰௰௩
விஷ்ேணார் பக்திமதஸ் ததா। ஸ்ரத்ததாநஸ்ய சாந்யாநி। ௧௰௰।௰௰௪

ேயாகாங்காநி நிேபாத ேம। மத்யமப்ராணம் அசலம்। ௧௰௰।௰௰௪
ஸுகதாயி ஸுபம் ஸுசி। ேயாகஸம்ஸித்தேய பூப। ௧௰௰।௰௰௫
ேயாகிநாம் ஆஸநம் ஸ்ம்ருதம்। ப்ராணாயாமஸ் த்ரிதா வாேயா:।
௧௰௰।௰௰௫
ப்ராணஸ்ய ஹ்ருதி தாரணம்। கும்பேரசகபூராக்யாஸ்। ௧௰௰।௰௰௬
தஸ்ய ேபதாஸ் த்ரேயா ந்ருப। ஏேத நிேபாத மாத்ராஸ் து।
௧௰௰।௰௰௬
நாலம்பநகுணாந்விதா:। ஸாலம்பநஸ் சதுர்ேதா அந்ேயா। ௧௰௰।௰௰௭
பாஹ்யாந்தர்விஷய: ஸ்ம்ருத:। இந்த்ரியாணாம் ஸ்வவிஷயாத்।
௧௰௰।௰௰௭
புத்தி: ப்ரத்ேயகஸஸ் து யத்। கேராத்ய் ஆஹரணம் ஜ்ேஞய:।
௧௰௰।௰௰௮
ப்ரத்யாஹார: ஸ பண்டிைத:। ஸுேப ஹ்ய் ஏகத்ர விஷேய।
௧௰௰।௰௰௮
ேசதேஸா யச் ச தாரணம்। நிஸ்சலத்வாத் து ஸா ஸத்பிர்।
௧௰௰।௰௰௯
தாரேணத்ய் அபிதீயேத। ெபௗந:புந்ேயந தத்ைரவ। ௧௰௰।௰௰௯
விஷேய ைஸவ தாரணா। த்யாநாக்யா லபேத ராஜந்। ௧௰௰।௰௧
ஸமாதிம் அபி ேம ஸ்ருணு। அர்தமாத்ரம் ச யத் க்ராஹ்ேய। ௧௰௰।௰௧
சித்தம் ஆதாய பார்திவ। அர்தஸ்வரூபவத் பாதி। ௧௰௰।௰௧௧
ஸமாதி: ேஸா அபிதீயேத। கதிதாநி தைவதாநி। ௧௰௰।௰௧௧
ேயாகாங்காநி க்ருைதஸ் து ைய:। உத்கர்ேஷா ஜாயேத வ்யஸ்ைத:।
௧௰௰।௰௧௨

ஸமஸ்ைதர் ேஹயஸம்க்ஷய:। ேயாகாங்காந்ய் அங்கபூதாநி।
௧௰௰।௰௧௨
த்யாநஸ்ையதாந்ய் அேஸஷத:। த்யாநம் அப்ய் அவநீபால। ௧௰௰।௰௧௩
ேயாகஸ்யாங்கத்வம் அர்சதி। த்யாநம் ஏகவ்ரதாநாம் து। ௧௰௰।௰௧௩
குஸலாகுஸேலஷு தத்। அர்ேதஷ்வ் ஆஸக்திம் அப்ேயதி। ௧௰௰।௰௧௪
ஸர்வைதவ நேரஸ்வர। ஸுபாவ்யாவர்திதம் த்யாநம்। ௧௰௰।௰௧௪
அவிேவகஸ்ய ஜாயேத। ஸம்ஸாரது:கதம் ராஜந்ந்। ௧௰௰।௰௧௫
அஸுபாலம்பி தத் யத:। தத் ஏவாக்ருஷ்ய துஷ்ேடப்ேயா। ௧௰௰।௰௧௫
விஷேயப்ய: ஸுபாஸுபம்। ஸர்வஸம்ஸாரகாந்தார । ௧௰௰।௰௧௬
பாரம் அப்ேயதி மாநவ:। து:கதாகப்ரஸமேந। ௧௰௰।௰௧௬
யா சிந்தாஹர்நிஸம் ந்ருணாம்। தத்த்யாநம் அவிஸுத்தார்தம்।
௧௰௰।௰௧௭
ஸுகதாநாம் அபாலேந। கதம் ஸம்ஸாரபந்ேதா அயம்। ௧௰௰।௰௧௭
அஸ்மாந் முக்தி: கதம் த்வ் இதி। மேநாவ்ருத்திர் மநுஷ்யாணாம்।
௧௰௰।௰௧௮
த்யாநம் ஏதச் சுபம் த்விதா। ஸுத்தம் அப்ய் ஏதத் அகிலம்। ௧௰௰।௰௧௮
ேலாபகார்யதயாநயா। ஸுகாபிலாேஷா யந்முக்ெதௗ। ௧௰௰।௰௧௯
பந்துது:காதிபடநாத் ீ । அவாஞ்சிதபலம் ேலாபம்। ௧௰௰।௰௧௯
அேலாபாம்ஸவிவர்ஜிதம்। ஸுபாஸுபபலம் த்யாநம்। ௧௰௰।௰௨
அரக்தம் த்விஷ்டம் இஷ்யேத। த்ருஷ்டாநுமாநாகமிகம்। ௧௰௰।௰௨
த்யாநஸ்யாலம்பநம் த்ரிதா। ந ஹி நிர்விஷயம் த்யாநம்। ௧௰௰।௰௨௧
மூடவ்ருத்திர் இேவஷ்யேத। ப்ராக் ஸ்தூேலஷு பதார்ேதஷு।
௧௰௰।௰௨௧

தத: ஸூŠேமஷு பண்டித:। த்யாநம் குர்வதீ தத்பஸ்சாத்। ௧௰௰।௰௨௨
பரமாெணௗ மஹீபேத। த்யாநாப்யாஸபரஸ்ையவம்। ௧௰௰।௰௨௨
ேஹயாலம்பநபாதேந। தச்சாந்தேய தத்விபக்ஷ । ௧௰௰।௰௨௩
பாவநாம் ஏவ பாவேயத்। தச்சித்தஸ் தந்மேயா ஜ்ஞாநீ। ௧௰௰।௰௨௩
பவத்ய் அஸ்மாந் ந ேதாஷவத்। குர்வதாலம்பநம் ீ காேல। ௧௰௰।௰௨௪
கஸ்மிம்ஸ்சித் அபி பார்திவ। ஆப்ரஹ்மஸ்தம்பபர்யந்த । ௧௰௰।௰௨௪
ஜகதந்தர்வ்யவஸ்திதா:। ப்ராணிந: கர்மஜநித । ௧௰௰।௰௨௫
ஸம்ஸ்காரவஸவர்திந:। யதஸ் தேதா ந ேத த்யாேந। ௧௰௰।௰௨௫
த்யாநிநாம் உபகாரகா:। அவித்யாந்தர்கதா: ஸர்ேவ। ௧௰௰।௰௨௬
ேத ஹி ஸம்ஸாரேகாசரா:। பஸ்சாத் உத்பூதேபாதாஸ் ச। ௧௰௰।௰௨௬
த்யாதா ைநேவாபகாரகா:। ைநஸர்கிேகா ந ைவ ேபாதஸ்। ௧௰௰।௰௨௭
ேதஷாம் அப்ய் அந்யேதா யத:। தஸ்மாத் தத் அமலம் ப்ரஹ்ம।
௧௰௰।௰௨௭
நிஸர்காத் ஏவ ேபாதவத்। த்ேயயம் த்யாநவிதாம் ஸம்யக்। ௧௰௰।௰௨௮
யத் விஷ்ேணா: பரமம் பதம்। ந தத் யஜ்ைஞர் ந தாேநந। ௧௰௰।௰௨௮
ந தேபாபிர் ந தத் வ்ரைத:। பஸ்யந்த்ய் ஏகாக்ரமநேஸா। ௧௰௰।௰௨௯
த்யாேநைநவ ஸநாதநம்। தச் ச விஷ்ேணா: பரம் ரூபம்। ௧௰௰।௰௨௯
அநிர்ேதஸ்யம் அஜம் ஸ்திரம்। யத: ப்ரவர்தேத ஸர்வம்। ௧௰௰।௰௩
லயம் அப்ேயதி யத்ர ச। அநித்ரம் அஜம் அஸ்வப்நம்। ௧௰௰।௰௩
அரூபாநாம ஸாஸ்வதம்। ேயாகிநஸ் தம் ப்ரபஸ்யந்தி। ௧௰௰।௰௩௧
ஜ்ஞாநத்ருஸ்யம் ஸநாதநம்। நிர்தூதபுண்யபாபா ேய। ௧௰௰।௰௩௧
ேத விஸந்த்ய் ஏவம் ஈஸ்வரம்। தச் ச ஸர்வகதம் ப்ரஹ்ம।
௧௰௰।௧௫௩

விஷ்ணு: ஸர்ேவஸ்வேரஸ்வர:। பரமாத்மா பர: ப்ேராக்த:। ௧௰௰।௰௩௨
ஸர்வகாரணகாரணம்। அநந்தஸக்திம் ஈேஸஸம்। ௧௰௰।௰௩௨
ஸ்வப்ரதிஷ்டம் அேநாபமம்। ேயாகிநஸ் தம் ப்ரபஸ்யந்தி। ௧௰௰।௰௩௩
பகவந்தம் ஸநாதநம்। யத்ர ஸர்வம் யத: ஸர்வம்। ௧௰௰।௰௩௩
ய: ஸர்வம் ஸர்வதஸ் ச ய:। ேயாகிநஸ் தம் ப்ரபஸ்யந்தி। ௧௰௰।௰௩௪
பகவந்தம் ஸநாதநம்। ஸர்காதிகாரணம் யஸ்ய। ௧௰௰।௰௩௪
ஸ்வபாவாத் ஏவ ஸக்தய:। ேயாகிநஸ் தம் ப்ரபஸ்யந்தி। ௧௰௰।௰௩௫
பகவந்தம் ஸநாதநம்। நிர்தூதபுண்யபாபா யம்। ௧௰௰।௰௩௫
விஸந்த்ய் அவ்யயம் ஈஸ்வரம்। ேயாகிநஸ் தம் ப்ரபஸ்யந்தி।
௧௰௰।௰௩௬
பகவந்தம் ஸநாதநம்। தத்ர ேயாகவத: ஸம்யக்। ௧௰௰।௰௩௬
புருஷஸ்ய நேரஸ்வர। யத் உக்தம் லக்ஷணம் தந் ேம। ௧௰௰।௰௩௭
கதத: ஸ்ேராதும் அர்ஹஸி। ப்ரஹ்மண்ய் ஏவ ஸ்திதம் சித்தம்।
௧௰௰।௰௩௭
ஸர்வத: ஸம்நிவர்திதம்। நாந்யாலம்பநஸாேபக்ஷம்। ௧௰௰।௰௩௮
ேயாகிந: ஸித்திகாரகம்। ஸம்ஸ்தாநம் அவிகாேரண। ௧௰௰।௰௩௮
ேசதேஸா ப்ரஹ்மஸம்ஸ்திெதௗ। நிவாத இவ தீபஸ்ய। ௧௰௰।௰௩௯
ேயாகிந: ஸித்திலக்ஷணம்। ஏவம் ஏகாக்ரசித்தஸ்ய। ௧௰௰।௰௩௯
புண்யாபுண்யம் அேஸஷத:। ப்ரயாதி ஸம்க்ஷயம் க்ருேத। ௧௰௰।௰௪
ேதஹாரம்பகேர ந்ருப। ேதஹாரம்பகரஸ்யாபி। ௧௰௰।௰௪
கர்மண: ஸம்க்ஷயாவஹ:। ேயா ேயாக: ப்ருதிவபாலீ । ௧௰௰।௰௪௧
ஸ்ருணு தஸ்யாபி லக்ஷணம்। யத் தத் ப்ரஹ்ம பரம் ப்ேராக்தம்।
௧௰௰।௰௪௧

விஷ்ண்வாக்யம் அஜம் அவ்யயம்। ேசதஸ: ப்ரலயஸ் தத்ர। ௧௰௰।௰௪௨
ேயாக இத்ய் அபிதீயேத। ேயாகேஸவாநிேராேதந। ௧௰௰।௰௪௨
ப்ரலீேந தத்ர ேசதஸி। புருஷ: காரநாபாவாத்। ௧௰௰।௰௪௩
ேபதம் ைநவாநுபஸ்யதி। பராத்மேநார் மநுஷ்ேயந்த்ர। ௧௰௰।௰௪௩
விபாேகா ஜ்ஞாநகல்பித:। க்ஷேய தஸ்யாத்மபரேயார்। ௧௰௰।௰௪௪
விபாகாபாக ஏவ ஹி। பரமாத்மாத்மேநார் ேயா அயம்। ௧௰௰।௰௪௪
அவிபாக: பரம்தப। ஸ ஏவ பரேமா ேயாக:। ௧௰௰।௰௪௫
ஸமாஸாத் கதிதஸ் தவ। யதா கமண்டெலௗ பிந்ேந। ௧௰௰।௰௪௫
தத்ேதாயம் ஸலிேல கதம்। வ்ரஜத்ய் ஐக்யம் தைதைவதத்।
௧௰௰।௰௪௬
உபயம் காரணக்ஷயாத்। யதாக்நிர் அக்ெநௗ ஸம்க்ஷிப்த:। ௧௰௰।௰௪௬
ஸமாநத்வம் அநுவ்ரேஜத்। ததாக்யஸ் தந்மேயா பூத்வா। ௧௰௰।௰௪௭
க்ருஹ்யேத ந விேஸஷத:। ஏவம் ப்ரஹ்மாத்மேநார் ேயாகாத்।
௧௰௰।௰௪௭
அகத்வம் உபபந்நேயா:। ந ேபத: கலஸாகாஸ । ௧௰௰।௰௪௮
நபேஸார் இவ ஜாயேத। ப்ரக்ஷீணாேஸஷகர்மா து। ௧௰௰।௰௪௮
யதா ப்ரஹ்மமய: புமாந்। ததா ஸ்வரூபம் அஸ்ேயாக்ேதர்। ௧௰௰।௰௪௯
ேகாசேர ேநாபபத்யேத। கடத்வம்ேஸ கடாகாஸம்। ௧௰௰।௰௪௯
ந பிந்நம் நபேஸா யதா। ப்ரஹ்மணா ேஹயவித்வம்ேஸ। ௧௰௰।௰௫
விஷ்ண்வாக்ேயந புமாம்ஸ் ததா। பிந்ேந த்ருெதௗ யதா வாயுர்।
௧௰௰।௰௫
ைநவாந்ய: ஸஹ வாயுநா। க்ஷணபுண்யாகபந்தஸ் ீ து। ௧௰௰।௰௫௧
ததாத்மா ப்ரஹ்மணா ஸஹ। தத: ஸமஸ்தகல்யாண । ௧௰௰।௰௫௧

ஸமஸ்தஸுகஸம்பதாம்। ஆஹ்லாதம் அந்யம் அதுலம்। ௧௰௰।௰௫௨
கம் அப்ய் ஆப்ேநாதி ஸாஸ்வதம்। ப்ரஹ்மஸ்வரூபஸ்ய ததா ஹ்ய்।
௧௰௰।௰௫௨
ஆத்மேநா நித்யைதவ ஸ:। வ்யுத்தாநகாேல ராேஜந்த்ர। ௧௰௰।௰௫௩
ஆஸ்ேத ேஹயதிேராஹித:। ஆதர்ஸஸ்ய மலாபாவாத்। ௧௰௰।௰௫௩
ைவமல்யம் காஸேத யதா। ஜ்ஞாநாக்நிதக்தேஹயஸ்ய। ௧௰௰।௰௫௪
ேஸா அஹ்லாேதா ஹ்ய் ஆத்மநஸ் ததா। யதா ந க்ரியேத ஜ்ேயாத்ஸ்நா।
௧௰௰।௰௫௪
மலப்ரக்ஷாலநாதிநா। ேதாஷப்ரஹாணம் ந ஜ்ஞாநம்। ௧௰௰।௰௫௫
ஆத்மந: க்ரியேத ததா। யேதாதுபாநகரணாத்। ௧௰௰।௰௫௫
க்ரியேத ந ஜலாம்பரம்। ஸைதவ நீயேத வ்யக்திம்। ௧௰௰।௰௫௬
அஸத: ஸம்பவ: குத:। யதா ேஹயகணத்வம்ஸாத்। ௧௰௰।௰௫௬
அவேபாதாதேயா குணா:। ப்ரகாஸ்யந்ேத ந ஜந்யந்ேத। ௧௰௰।௰௫௭
நித்யா ஏவாத்மேநா ஹிேத। ஜ்ஞாநைவராக்யம் ஐஸ்வர்யம்।
௧௰௰।௰௫௭
தர்மஸ் ச மநுேஜஸ்வர। ஆத்மேநா ப்ரஹ்மபூதஸ்ய। ௧௰௰।௰௫௮
நித்யம் ஏவ சதுஷ்டயம்। ஏதத் அத்ைவதம் ஆக்யாதம்। ௧௰௰।௰௫௮
ஏஷ ேயாகஸ் தேவாதித:। அயம் விஷ்ணுர் இதம் ப்ரஹ்ம।
௧௰௰।௰௫௯
தைததத் ஸத்யம் உத்தமம்। புநஸ் ச ஸ்ரூயதாம் ஏஷ। ௧௰௰।௰௫௯
ஸம்ேக்ஷபாத் கதேதா மம। நாநாத்ைவகத்வவிஜ்ஞாந । ௧௰௰।௰௬
ஸ்வரூபம் அவநீபேத। ஆத்மா ேக்ஷத்ரஜ்ஞஸம்ஜ்ேஞா அயம்।
௧௰௰।௰௬

ஸம்யுக்த: ப்ராக்ருைதர் குைண:। ைதர் ஏவ விகைத: ஸுத்த:।
௧௰௰।௰௬௧
பரமாத்மா நிகத்யேத। த்ேயயம் ப்ரஹ்ம புமாந் த்யாதா। ௧௰௰।௰௬௧
உபாேயா த்யாநஸம்ஜ்ஞித:। யஸ் த்வ் ஏதத் கரேணஷ்வ் ஆஸ்ேத।
௧௰௰।௰௬௨
தத்வர்ேக கா விபாகதா। ஸம்ேக்ஷபாத் அபி பூபால। ௧௰௰।௰௬௨
ஸம்ேக்ஷபந் அபரம் ஸ்ருணு। புத்ராய யத் பிதா ப்ரூயாத்। ௧௰௰।௰௬௩
ஸ்வஸிஷ்யாயாதவா குரு:। ந வாஸுேதவாத் பரம் அஸ்தி கிம்சிந்।
௧௰௰।௰௬௩
ந வாஸுேதவாத் கதிதம் பரம் ச। ஸத்யம் பரம் வாஸுேதேவா அமிதாத்மா।
௧௰௰।௰௬௪
நேமா நேமா வாஸுேதவாய நித்யம்। தஸ்மாத் தம் ஆராதய சிந்தேயஸம்।
௧௰௰।௰௬௪
அப்யர்சயாநந்தம் அதந்த்ரிதாத்மா। ஸம்ஸாரபாரம் பரம் ஈப்ஸமாைநர்।
௧௰௰।௰௬௫
ஆராதநீேயா ஹரிர் ஏக ஏவ। ஆராதிேதா அர்தாந் தநகாங்க்ஷகாநாம்।
௧௰௰।௰௬௫
தர்மார்திநாம் தர்மம் அேஸஷதர்மீ। ததாதி காமாம்ஸ் ச மேநாநிவிஷ்டாந்।
௧௰௰।௰௬௬
ேமாக்ஷார்திநாம் முக்தித ஏவ விஷ்ணு:। மைமதத் கதிதம் ஸம்யக்।
௧௰௰।௰௬௬
ஆத்மவித்யாஸ்ரிதம் முேந। யத் த்வ் அந்யச் ச்ேராதும் இச்சாமி।
௧௰௧।௰௰௧
தத் ப்ரஸந்ேநா வதஸ்வ ேம। ேயயம் முக்திர் பகவதா। ௧௰௧।௰௰௧

ப்ேராக்தா வர்ணக்ரமாந் மம। தத்ேரச்சாமி முேந ஸ்ேராதும்।
௧௰௧।௰௰௨
வர்ணாத் வர்ேணாத்தேராச்ச்ரயம்। ஸூத்ேரா ைவஸ்யத்வம் அப்ேயதி।
௧௰௧।௰௰௨
கதம் ைவஸ்யஸ் ச பார்கவ। க்ஷத்ரியத்வம் த்விஜஸ்ேரஷ்ட।
௧௰௧।௰௰௩
ப்ராஹ்மணத்வம் கதம் தத:। விப்ரத்வாந் முக்திேயாக்யத்வம்।
௧௰௧।௰௰௩
யதா யாதி மஹாமுேந। தத் அஹம் ஸ்ேராதும் இச்சாமி। ௧௰௧।௰௰௪
த்வத்ேதா பார்கவநந்தந। த்வத்யுக்ேதா அயம் அநுப்ரஸ்ந:। ௧௰௧।௰௰௪
குருவர்ய ஸ்ருணுஷ்வ தம்। மேயாச்யமாநம் அகிலம்। ௧௰௧।௰௰௫
வர்ணாநாம் உபகாரகம்। ஸூத்ரதர்மாந் அேஸேஷண। ௧௰௧।௰௰௫
குர்வஞ் ஸூத்ேரா யதாவிதி। ைவஸ்யத்வம் ஏதி ைவஸ்யஸ் ச।
௧௰௧।௰௰௬
க்ஷத்ரியத்வம் ஸ்வகர்மக்ருத்। விப்ரத்வம் க்ஷத்ரிய: ஸம்யக்।
௧௰௧।௰௰௬
த்விஜதர்மபேரா ந்ருப। விப்ரஸ் ச முக்திலாேபந। ௧௰௧।௰௰௭
யுஜ்யேத ஸத்க்ரியாபர:। ஸர்ேவஷாம் ஏவ வர்ணாநாம்। ௧௰௧।௰௰௭
ஸ்வதர்மம் அநுவர்ததாம்। ஸேதாச்ச்ரிதிர் ந்யூநக்ருேதா। ௧௰௧।௰௰௮
ஹாநிஸ் ேசாத்க்ருஷ்டகர்மண:। ேதஷாம் ச ப்ராஹ்மணாதீநாம்।
௧௰௧।௰௰௮
வர்ணதர்மாந் அநுக்ரமாத்। ஸமுச்ச்ரிதிப்ரதாந் ராஜந்। ௧௰௧।௰௰௯
கதேதா ேம நிஸாமய। அநஸூயா தயா க்ஷாந்தி:। ௧௰௧।௰௰௯

ெஸௗசம் மங்கலம் அஸ்ப்ருஹா। அகார்பண்யம் அநாயாஸஸ்।
௧௰௧।௰௧
ததாந்ய: ஸார்வவர்ணிக:। அஷ்டாவ் ஏேத குணா: பும்ஸாம்। ௧௰௧।௰௧
பரத்ேரஹ ச பூதேய। பவந்தி குருஸார்தூல। ௧௰௧।௰௧௧
ப்ருதக்தர்மாம்ஸ் ச ேம ஸ்ருணு। யஜ்ஞாத்யயநதாநாநி। ௧௰௧।௰௧௧
ப்ரஹ்மக்ஷத்ரவிஸாம் ந்ருப। ஸாதாரணாநி ேதஷாம் து। ௧௰௧।௰௧௨
ஜவிகாகர்ம ீ கத்யேத। யாஜநாத்யாபைநர் விப்ரஸ்। ௧௰௧।௰௧௨
ததா ஸஸ்தப்ரதிக்ரைஹ:। ப்ருத்யாதிபரணம் குர்யாத்। ௧௰௧।௰௧௩
யஜ்ஞாம்ஸ் ச விபேவ ஸதி। ப்ருத்யாதிபரேண நாலம்। ௧௰௧।௰௧௩
ஸ்வவ்ருத்த்யா ஹி யதா த்விஜ:। ததா ஜேவத் ீ ஸமாலம்ப்ய।
௧௰௧।௰௧௪
வ்ருத்திம் க்ஷத்ரியைவஸ்யேயா:। ஸம்த்யேஜத ஸமஸ்தாம்ஸ் தாந்।
௧௰௧।௰௧௪
ந குர்யாத் வ்ருத்திஸம்கரம்। ஆபத்காேல அபி விப்ரஸ்ய। ௧௰௧।௰௧௫
ஸூத்ரகர்ம ந ஸஸ்யேத। ப்ரஜாநாம் பாலநம் ஸம்யக்। ௧௰௧।௰௧௫
விதி: ப்ரதமகல்பித:। ராஜந்யஸ்ய மஹீபால। ௧௰௧।௰௧௬
ஸஸ்த்ராஜேவந ீ வா ப்ருதி:। ததுத்பந்ைநர் தைந: குர்யாத்। ௧௰௧।௰௧௬
ஸமஸ்தா: க்ஷத்ரியக்ரியா:। தஸ்யாப்ய் ஆபதி ைவஸ்யஸ்ய।
௧௰௧।௰௧௭
யா வ்ருத்தி: ஸா விதீயேத। வாணிஜ்யம் ைவஸ்யஜாதஸ்ய।
௧௰௧।௰௧௭
பஸூநாம் பாலநம் க்ருஷி:। தத்யாத் யேஜச் ச விதிவத்। ௧௰௧।௰௧௮
ததுத்பந்நதேநந ஸ:। த்விஜாதிஜநஸுஸ்ரூஷாம்। ௧௰௧।௰௧௮

க்ரயவிக்ரயைஜர் தைந:। ஸூத்ேரா யேஜத் பாகயஜ்ைஞர்। ௧௰௧।௰௧௯
தத்யாத் இஷ்டாநி சார்திநாம்। தஸ்ைம ஸுஸ்ரூஷேவ ேதயம்।
௧௰௧।௰௧௯
ஜர்ணவஸ்த்ரம் ீ உபாநெஹௗ। சத்த்ராதிகம் ததா குர்யாத்। ௧௰௧।௰௨
ஸம்யக்தர்ேமாபபாதநம்। சதுர்ணாம் அபி வர்ணாநாம்। ௧௰௧।௰௨
தர்மஸ் ேத கதிேதா மயா। ஸ்ருணுஷ்வ ச மஹீபால। ௧௰௧।௰௨௧
தர்மம் ஆஸ்ரமிணாம் அத:। க்ருேதாபநயந: பூர்வம்। ௧௰௧।௰௨௧
ப்ரஹ்மசாரீ குேரார் க்ருேஹ। குருஸுஸ்ரூஷணம் குர்யாத்।
௧௰௧।௰௨௨
ைபக்ஷாந்நக்ருதேபாஜந:। நிேவத்ய குரேவ ைபக்ஷம்। ௧௰௧।௰௨௨
அத்தவ்யம் ததநுஜ்ஞயா। குேரார் புக்தவத: பஸ்சாந்। ௧௰௧।௰௨௩
நாதிஸ்வாதுமுதாவதா। வஹ்நிஸுஸ்ரூஷணம் க்ருயாத்। ௧௰௧।௰௨௩
ேவதாஹரணம் ஏவ ச। குேரார் அர்ேத ஸதா ேதாயம்। ௧௰௧।௰௨௪
ஸமிதாஹரணம் ததா। புஷ்பாதீநாம் ச குர்வதீ। ௧௰௧।௰௨௪
ஸுப்ேத தஸ்மிஞ் ஸயதீ ச। ஸயேந ச ஸமுத்திஷ்ேடத்। ௧௰௧।௰௨௫
தம் வ்ரஜந்தம் அநுவ்ரேஜத்। ஆஹூதஸ் ச பேடத் ேதந। ௧௰௧।௰௨௫
தந்மநா நாந்யேதாமுக:। வ்ரதாநி சரதா ஸம்யக்। ௧௰௧।௰௨௬
க்ராஹ்ேயா ேவேதா யதாத்மநா। தண்டவத்ப்லவநம் ஸ்நாேந।
௧௰௧।௰௨௬
ஸஸ்தம் நாஸ்யாங்கேஸாதநம்। அதீத்ய ேவதாந் ேவெதௗ வா।
௧௰௧।௰௨௬
ேவதம் வாபி யதாக்ரமம்। அவிப்லுதப்ரஹ்மசர்ேயா। ௧௰௧।௰௨௭

க்ருஹஸ்தாஸ்ரமம் ஆவேஸத்। யேதஷ்டாம் தக்ஷிணாம் தத்த்வா।
௧௰௧।௰௨௭
குரேவ குருநந்தந। தேதா அநுஜ்ஞாம் ஸமாஸாத்ய। ௧௰௧।௰௨௮
க்ருஹஸ்தாஸ்ரமம் ஆவேஸத்। ேதைநவாந்தம் வ்ரேஜத் ப்ராஜ்ஞஸ்।
௧௰௧।௰௨௮
தச்சுஸ்ரூஷணதத்பர:। வாநப்ரஸ்தாஸ்ரமம் தஸ்மாச்। ௧௰௧।௰௨௯
சதுர்தம் வாபி ஸம்ஸ்ரேயத்। யதாக்ரமம் வா குர்வதீ। ௧௰௧।௰௨௯
விதிவத் தாரஸம்க்ரஹம்। ததஸ் த்வ் அேராகிகுலஜாம்। ௧௰௧।௰௨௯
துல்யாம் பத்நீம் ஸமுத்வேஹத்। க்ருஹஸ்தாஸ்ரமவ்ருத்த்யர்தம்।
௧௰௧।௰௩
அவ்யங்காம் விதிநா ந்ருப। ஆக்யாதவர்ணதர்ேமண। ௧௰௧।௰௩
தநம் லப்த்வா மஹீபேத। குர்வதீ ஸ்ரத்தயா யுக்ேதா। ௧௰௧।௰௩௧
நித்யைநமித்திகீ: க்ரியா:। அப்யாகதாதிதீந் பந்தூந்। ௧௰௧।௰௩௧
ப்ருத்யாதீந் ஆதுராம்ஸ் ததா। ேதாஷேயச் சக்திேதா அந்ேநந।
௧௰௧।௰௩௨
வயாம்ஸ்ய் அந்த்யபஸூந் அபி। க்ருதாவ் உபகமஸ் ைசவ। ௧௰௧।௰௩௨
க்ருஹஸ்தஸ்யாபி ஸப்தித:। தர்ேமா தர்மப்ருதாம் ஸ்ேரஷ்ட।
௧௰௧।௰௩௩
யஜ்ேஞாச்சிஷ்டம் ச ேபாஜநம்। ஹவ்ேயந ப்ரீணேயத் ேதவாந்।
௧௰௧।௰௩௩
பித்ருந் கவ்ேயந ஸக்தித:। மநுஷ்யாந் அந்நபாேநந। ௧௰௧।௰௩௪
ஸ்வாத்யாேயந ர்ஷிதர்பணம்। குர்யாச் ச ப்ரீணநம் நித்யம்। ௧௰௧।௰௩௪
பூதாநாம் பலிகர்மணா। ப்ரஜாபதிம் ஸுேதாத்பத்த்யா। ௧௰௧।௰௩௫
ஹார்ேதந ஸகலம் ஜநம்। ஸுேபந கர்மணாத்மாநம்। ௧௰௧।௰௩௫

உபேதேஸந சாத்மஜாந்। அநுஜவிஜநம் ீ வ்ருத்யா। ௧௰௧।௰௩௬
க்ருஹஸ்தஸ் ேதாஷேயத் ஸதா। தைதவாபரமாேநப்ய:। ௧௰௧।௰௩௬
ப்ரேதயம் க்ருஹேமதிநா। அந்நம் பிக்ஷார்திேநா ேய ச। ௧௰௧।௰௩௭
பரிவ்ராட்ப்ரஹ்மசாரிண:। ஏவம் க்ருஹாஸ்ரேம ேதவா:। ௧௰௧।௰௩௭
பிதேரா முநயஸ் ததா। ஸர்வகாமாந் ப்ரயச்சந்தி। ௧௰௧।௰௩௮
மநுஷ்யாஸ் ச ஸுபூஜிதா:। க்ருஹஸ்தஸ் து யதா பஸ்ேயத்।
௧௰௧।௰௩௮
வலீபலிதம் ஆத்மந:। அபத்யஸ்ய ததாபத்யம்। ௧௰௧।௰௩௯
ததாரண்யம் ஸமாஸ்ரேயத்। பித்ருேதவாதிதீநாம் து। ௧௰௧।௰௩௯
ஸ்ம்ருதம் தத்ராபி பூஜநம்। தைதவாரண்யேபாகஸ் ச। ௧௰௧।௰௪
தேபாபிஸ் சாத்மகர்ஷணம்। ப்ரஹ்மசர்யம் மஹீஸய்யா। ௧௰௧।௰௪
ேஹாமஸ் த்ரிஷவணாப்லுதி:। ெமௗநாதிகரணம் ஸஸ்தம்। ௧௰௧।௰௪௧
ஜடாவல்கலதாரணம்। க்ரீஷ்ேம பஞ்சதேபாபிஸ் ச। ௧௰௧।௰௪௧
வர்ஷாஸ்வ் அப்ராவகாஸிைக:। ஜலஸய்யா ச ேஹமந்ேத। ௧௰௧।௰௪௨
பாவ்யம் வநநிேகதைந:। இங்குைதரண்டைதேலந। ௧௰௧।௰௪௨
காத்ராப்யங்காநி ேசஷ்யேத। ஸ்யாமாகநீவாரமயம்। ௧௰௧।௰௪௩
பலமூைலஸ் ச ேபாஜநம்। அப்ரேவஸஸ் ததா க்ராேம। ௧௰௧।௰௪௩
வாநப்ரஸ்தவிதி: ஸ்ம்ருத:। வாநப்ரஸ்தஸ்ய ேத ப்ேராக்தம்। ௧௰௧।௰௪௪
தர்மலக்ஷணம் ஆதித:। ஆஸ்ரமணம் த்வ் அபரம் பிேக்ஷா:। ௧௰௧।௰௪௪
ஸ்ருணுஷ்வ கதேதா மம। க்ராைமகராத்ரிர் வஸதிர்। ௧௰௧।௰௪௫
நகேர பஞ்சராத்ரிகா। ஸர்வஸங்கபரித்யாக:। ௧௰௧।௰௪௫
க்ஷாந்திர் இந்த்ரியஸம்யம:। விகாலைபக்ஷசரணம்। ௧௰௧।௰௪௬

அநாரம்பஸ் ததா ந்ருப। ஆத்மஜ்ஞாநாவேபாேதச்சா। ௧௰௧।௰௪௬
ப்ரஹ்மசர்யம் ஸமாதிநா। ஆத்மாவேலாகநம் ைசவ। ௧௰௧।௰௫௭
பிேக்ஷா: ஸஸ்தாநி பார்திவ। சதுர்தஸ் ைசஷ கதிதஸ்। ௧௰௧।௰௪௭
தவ பிேக்ஷார் மயாஸ்ரம:। க்ரமாத் விமுக்திகாமாநாம்। ௧௰௧।௰௪௮
புருஷாணாம் அயம் விதி:। ஏவம் து வர்ணதர்ேமண। ௧௰௧।௰௪௮
ததா சாஸ்ரமகர்மநா। நிேஜந ஸம்பூஜ்ய ஹரிம்। ௧௰௧।௰௪௯
ஸித்திம் ஆப்ேநாதி மாநவ:। ப்ரஹ்மசாரீ க்ருஹஸ்தஸ் ச। ௧௰௧।௰௪௯
பிக்ஷுர் ைவகாநஸஸ் ததா। குர்வந்ேதா நிஜகர்மாணி। ௧௰௧।௰௫
விஷ்ணும் ஏவ யஜந்தி ேத। யேதா ஹி ேதவதா: ஸர்வா। ௧௰௧।௰௫
ப்ரஹ்மாத்யா: குருநந்தந। அம்ஸபூதா ஜகத்தாதுர்। ௧௰௧।௰௫௧
விஷ்ேணார் அவ்யக்தஜந்மந:। விஸ்ேவ ேதவா யேதா விஷ்ணுர்।
௧௰௧।௰௫௧
விஷ்ணு: பித்ருகேணா யத:। ேதவா யஜ்ஞபுஜஸ் ேசேஸா। ௧௰௧।௰௫௨
யத: பாபஹேரா ஹரி:। விஸ்ேவ பூதாநி பூதாநி। ௧௰௧।௰௫௨
யேதா விஷ்ணுஸ் ததர்ஷய:। தத: ஸர்வாஸ்ரமாணாம் ஹி।
௧௰௧।௰௫௩
பூஜ்ய ஏேகா ஜநார்தந:। ஸர்ேவஸ்வரம் ஸர்வமயம் ஸமஸ்த ।
௧௰௧।௰௫௩
ஸம்ஸாரேஹதுக்ஷயகாரேணஸம்। வரம் வேரண்யம் வரதம் வரிஷ்டம்।
௧௰௧।௰௫௪
விஷ்ணும் க்ரியாவாந் யஜேத மநுஷ்ய:। யஸ்ேயாதேர ஜகத் இதம்
பரமாணுபூதம்। ௧௰௧।௰௫௪

சந்த்ேரந்த்ரருத்ரமருதஸ்விவஸுப்ரேஜைஸ:। ஸர்ைவ: ஸேமதம்
அமிதாத்மதேநாஸ் தம் ஏகம்। ௧௰௧।௰௫௫
அப்யர்ச்ய விஷ்ணும் அபிவாஞ்சிதம் அஸ்த்ய் அலப்யம்। ஆராத்ய யம்
புவநபாவநம் அச்யுதாக்யம்। ௧௰௧।௰௫௫
ஐஸ்வர்யம் ஈப்ஸிதம் அவாப பதி: ஸுராணாம்। த்ைரேலாக்யஸாரம்
அமரார்சிதபாதபத்மம்। ௧௰௧।௰௫௬
ஏகம் தம் ஏவ ஹரிம் அர்சயதார்சநீயம்। யஸ்யாங்க்ரிபத்மகலிதாம்பஸி ேதவ
ைதத்ய । ௧௰௧।௰௫௬
யக்ஷாதிபி: ஸகலபாபம் அேபாஹ்ய ஸித்தி:। ஸம்ப்ராப்யேத
மரணஜந்மஜராபஹந்த்ரீ। ௧௰௧।௰௫௭
விஷ்ேணார் அஜாத் கதய ேகா அப்யதிகஸ் தேதா அஸ்தி।
கமலஜஹரஸூர்யசந்த்ரஸக்ைர:। ௧௰௧।௰௫௭
ஸததம் அபிஷ்டுதம் ஆத்யம் ஈஸிதாரம்। ஸகலபுவநகார்யகாரேநஸம்।
௧௰௧।௰௫௮
புருஷதநும் ப்ரணேதா அஸ்மி வாஸுேதவம்। ஸ்ருதம் பகவேதா ரூபம்।
௧௰௧।௰௫௮
அத்ைவேத யத் த்வேயாதிதம்। விஷ்ேணார் ப்ருகுகுலஸ்ேரஷ்ட।
௧௰௨।௰௰௧
யச் ச த்ைவேத மஹாத்மந:। அவித்யாபிந்நத்ருக்புத்தி:। ௧௰௨।௰௰௧
புருேஷா முநிபுங்கவ। த்ைவதபூேத ஜகத்ய் அஸ்மிந்ந்। ௧௰௨।௰௰௨
அத்ைவதம் பாவேயத் கதம்। க்ேராதேலாபாதேயா ேதாஷா। ௧௰௨।௰௰௨
ேய முக்ேத: பரிபந்திந:। விநிவ்ருத்திரூபா ேயந। ௧௰௨।௰௰௩
ேதஷாம் ேயந வேதர் ஹ தம்। ஸர்ேவஸ்வேரஸ்வேரஸஸ்ய।
௧௰௨।௰௰௩

யச் ச ரூபம் ஹேர: பரம்। தச் சாஹம் ஸ்ேராதும் இச்சாமி।
௧௰௨।௰௰௪
த்வத்ேதா ப்ருகுகுேலாத்வஹ। ஸம்யக் ப்ருஷ்டம் இதம் பூப।
௧௰௨।௰௰௪
பவதா குஹ்யம் உத்தமம்। த்ைவதாத்ைவதகதாலாப । ௧௰௨।௰௰௫
ஸம்பந்தாத் உபகாரகம்। புரா தர்மக்ருேஹ ஜஜ்ேஞ। ௧௰௨।௰௰௫
சதுர்மூர்திர் நேரஸ்வர। ேதவேதேவா ஜகத்தாதா। ௧௰௨।௰௰௬
பரமாத்மா ஜநார்தந:। ஜகத: பாலநார்தாய। ௧௰௨।௰௰௬
துர்வ்ருத்தநிதநாய ச। ஸ்ேவச்சயா பகவாந் விஷ்ணு:। ௧௰௨।௰௰௭
ஸம்பவத்ய் ஏவ பூதேல। ஸ்வர்ேக வாபி பூேலாேக வா। ௧௰௨।௰௰௭
புவர்ேலாேக அதவா விபு:। யத்ர வா ேராசேத தத்ர। ௧௰௨।௰௰௮
சிகீர்ஷுர் ஜகேதா ஹிதம்। துரீயாம்ேஸந தர்மஸ்ய। ௧௰௨।௰௰௮
பகவாந் பூதபாவந:। யதாவதாரம் க்ருதவாம்ஸ்। ௧௰௨।௰௰௯
ததா தச்சரிதம் ஸ்ருணு। நேரா நாராயணஸ் ைசவ। ௧௰௨।௰௰௯
ஹரி: க்ருஷ்ணஸ் தைதவ ச। விஷ்ேணார் அம்ஸாம்ஸகா ஹ்ய் ஏேத।
௧௰௨।௰௧
சத்வாேரா தர்மஸூநவ:। ேதஷாம் நாராயணநெரௗ। ௧௰௨।௰௧
கந்தமாதநபர்வேத। ஆத்மந்ய் ஆத்மாநம் ஆதாய। ௧௰௨।௰௧௧
ேதபேத பரமம் தப:। த்யாயமாநாவ் அெநௗபம்யம்। ௧௰௨।௰௧௧
ஸ்வகாரணம் அகாரணம்। வாஸுேதவம் அநிர்ேதஸ்யம்। ௧௰௨।௰௧௨
அப்ரதர்க்யம் அஜம் பரம்। ேயாகயுக்ெதௗ மஹாெமௗநம்। ௧௰௨।௰௧௨
ஆஸ்திெதௗ குருேதஜெஸௗ। தேயாஸ் தப:ப்ரபாேவண। ௧௰௨।௰௧௨
ந ததாப திவாகர:। வெவௗ சாஸங்கிேதா வாயு:। ௧௰௨।௰௧௩

ஸுகஸ்பர்ேஸா ஹ்ய் அஸர்கர:। ஸிஸிேரா அபவத் அத்யர்தம்।
௧௰௨।௰௧௩
ஜ்வலந்ந் அபி விபாவஸு:। ஸிம்ஹவ்யாக்ராதய: ெஸௗம்யாஸ்।
௧௰௨।௰௧௪
ேசரு: ஸஹ ம்ருைகர் கிெரௗ। தேயார் ெகௗரவபாரார்தா। ௧௰௨।௰௧௪
ப்ருதிவ ீப்ருதிவபேத ீ । சசால பூதராஸ் ேசலுஸ்। ௧௰௨।௰௧௫
சுக்ஷுபுஸ் ச மஹாப்தய:। ேதவாஸ் ச ஸ்ேவஷு திஷ்ண்ேயஷு।
௧௰௨।௰௧௫
நிஷ்ப்ரேபஷு ஹதப்ரபா:। பபூவுர் அவநீபால। ௧௰௨।௰௧௬
பரமம் ேக்ஷாபம் ஆகதா:। ேதவராஜஸ் தத: ஸக்ர:। ௧௰௨।௰௧௬
ஸம்த்ரஸ்தஸ் தபஸஸ் தேயா:। யுேயாஜாப்ஸரஸ: ஸுப்ராஸ்।
௧௰௨।௰௧௭
தேயார் விக்நசிகீர்ஷயா। ரம்ேப திேலாத்தேம குண்ேட। ௧௰௨।௰௧௭
க்ருதாசி லலிதாவதி। உம்ேலாேச ஸுப்ருப்ரம்ேலாேச। ௧௰௨।௰௧௮
ெஸௗரேப அபி மேதாத்தேத। அலம்புேஷ மிஸ்ரேகஸி। ௧௰௨।௰௧௮
புண்டரீேக வரூதிநி। விேலாபநீயம் பிப்ராணா। ௧௰௨।௰௧௯
வபுர் மந்மதேபாதநம்। கந்தமாதநம் ஆஸாத்ய। ௧௰௨।௰௧௯
குருத்வம் வசநம் மம। நரநாராயெணௗ தத்ர। ௧௰௨।௰௧௯
தேபாதீக்ஷாந்விெதௗ த்விெஜௗ। தப்ேயேத தர்மதநெயௗ। ௧௰௨।௰௨
தப: பரமதுஸ்சரம்। தாவ் அஸ்மாகம் வராேராஹா:। ௧௰௨।௰௨
குர்வாெணௗ பரமம் தப:। கர்மாதிஸயது:கார்தி । ௧௰௨।௰௨௧
ப்ரதாவயதிநாஸெகௗ। தத் கச்சத ந ப: ீ கார்யா। ௧௰௨।௰௨௧
பவதீபிர் இதம் வச:। ஸ்மர: ஸஹாேயா பவிதா। ௧௰௨।௰௨௨

வஸந்தஸ் ச வராங்கநா:। ரூபம் ச வ: ஸமாேலாக்ய। ௧௰௨।௰௨௨
மதேநாத்தீபநம் பரம்। கந்தர்பவஸம் அப்ேயதி। ௧௰௨।௰௨௩
விவஸ: ேகா ந மாநவ:। இத்ய் உக்தா ேதவராேஜந। ௧௰௨।௰௨௩
மதேநந ஸமம் ததா। ஜக்முர் அப்ஸரஸ: ஸர்வா। ௧௰௨।௰௨௪
வஸந்தஸ் ச மஹீபேத। கந்தமாதநம் ஆஸாத்ய। ௧௰௨।௰௨௪
பும்ஸ்ேகாகிலகுலாகுலம்। சகார மாதேவா ரம்யம்। ௧௰௨।௰௨௫
ப்ேராத்புல்லவநபாதபம்। ப்ரவெவௗ தக்ஷிண: ஸத்ேயா। ௧௰௨।௰௨௫
மலயாநுகேதா அநில:। ப்ருங்கமாலாருதரைவர்। ௧௰௨।௰௨௬
ரமணயம்ீ அபூத் வநம்। கந்தஸ் ச ஸுரபி: ஸத்ேயா। ௧௰௨।௰௨௬
வநராஜிஸமுத்பவ:। கிம்நேராரகயக்ஷாணாம்। ௧௰௨।௰௨௭
பபூவ க்ராணதர்பண:। வராங்கநாஸ் ச தா: ஸர்வா। ௧௰௨।௰௨௭
நரநாராயணாவ் க்ருஷீ। விேலாபயிதும் ஆரப்தா। ௧௰௨।௰௨௮
வராங்கலலிைத: ஸ்மிைத:। ஜகுர் மேநாஹரம் காஸ்சிந்। ௧௰௨।௰௨௮
நந்ருதுஸ் சாத்ர சாபரா:। அவாதயம்ஸ் தைதவாந்யா। ௧௰௨।௰௨௯
மேநாஹரதரம் ந்ருப। ஹாைவர் பாைவ: ஸ்மிைதஸ் த்ராைஸஸ்।
௧௰௨।௰௨௯
ததாந்யா வல்குபாஷிைத:। தேயா: ேக்ஷாபாய தந்வங்க்யஸ்। ௧௰௨।௰௩
சக்ருர் உத்யமம் அங்கநா:। ததாபி ந தேயா: கஸ்சிந்। ௧௰௨।௰௩
மநஸ: ப்ருதிவபேத ீ । விகாேரா அபவத் அத்யாத்ம । ௧௰௨।௰௩௧
பாரஸம்ப்ராப்தேசதேஸா:। நிவாதஸ்ெதௗ யதா தீபாவ்। ௧௰௨।௰௩௧
அகம்ெபௗ ந்ருப திஷ்டத:। வாஸுேதவார்பேண ஸ்வச்ேச। ௧௰௨।௰௩௨
தைதவ மநஸீ தேயா:। பூர்யமாேணா அபி சாம்ேபாபிர்। ௧௰௨।௰௩௨

புவம் அந்யாம் மேஹாததி:। யதா ந யாதி ந யெயௗ। ௧௰௨।௰௩௩
ததா தந்மாநஸம் க்வசித்। ஸர்வபூதஹிெதௗ ப்ரஹ்ம। ௧௰௨।௰௩௩
வாஸுேதவமயம் பரம்। மந்யமாெநௗ ந ராகஸ்ய। ௧௰௨।௰௩௪
த்ேவஷஸ்ய ச வஸம்கெதௗ। ஸ்மேரா அபி ந ஸஸாகாத। ௧௰௨।௰௩௪
ப்ரேவஷ்டும் ஹ்ருதயம் தேயா:। வித்யாமயம் தீபயுதம்। ௧௰௨।௰௩௫
அந்தகாரம் இவாலயம்। புஷ்ேபாஜ்ஜ்வலாம்ஸ் தருவராந்। ௧௰௨।௰௩௫
வஸந்தம் தக்ஷிணாநிலம்। தாஸ் ைசவாப்ஸரஸ: ஸர்வா:। ௧௰௨।௰௩௬
கந்தர்பம் ச மஹாமுநீ। யச் சாரப்தம் தபஸ் தாப்யாம்। ௧௰௨।௰௩௬
ஆத்மாநம் கந்தமாதநம்। தத்ருஸாேத அகிலம் ரூபம்। ௧௰௨।௰௩௭
ப்ரஹ்மண: புருஷர்ஷப। தாஹாய நாநேலா வஹ்ேநர்। ௧௰௨।௰௩௭
நாப:க்ேலதாய சாம்பஸ:। தத்த்ரவ்யம் ஏவ தத்த்ரவ்ய । ௧௰௨।௰௩௮
விகாராய ந ைவ யத:। தேதா விஜ்ஞாநவிஜ்ஞாத । ௧௰௨।௰௩௮
பரப்ரஹ்மஸ்வரூபேயா:। மதுகந்தர்பேயாஷித்ஸு। ௧௰௨।௰௩௯
விகாேரா நாபவத் தேயா:। தேதா குருதரம் யத்நம்। ௧௰௨।௰௩௯
வஸந்தமதெநௗ ந்ருப। சக்ராேத தாஸ் ச தந்வங்க்யஸ்। ௧௰௨।௰௪
தத்ேக்ஷாபாய புந: புந:। அத நாராயேணா ைதர்ய । ௧௰௨।௰௪
காம்பர்ேயாதார்யமாநஸ ீ :। ஊேரார் உத்பாதயாம் ஆஸ। ௧௰௨।௰௪௧
தாம் வேராருபலாம் ததா। த்ைரேலாக்யஸுந்தரீரத்நம்। ௧௰௨।௰௪௧
அேஸஷம் அவநீபேத। குணலாகவம் அப்ேயதி। ௧௰௨।௰௪௨
யஸ்யா: ஸம்தர்ஸநாத் அநு। தாம் விேலாக்ய மஹீபால। ௧௰௨।௰௪௨
சகம்ேப மாதவாநிலம்। வஸந்ேதா விஸ்மயம் யாத:। ௧௰௨।௰௪௩
ஸம்யாத: ஸம்ஸ்மரம் ஸ்மர:। ரம்பாதிேலாத்தமாத்யாஸ் ச।
௧௰௨।௰௪௩

விலக்ஷா ேதவேயாஷித:। ந ேரஜுர் அவநீபால। ௧௰௨।௰௪௪
தல்லக்ஷஹ்ருதேயக்ஷணா:। தத: காேமா வஸந்தஸ் ச। ௧௰௨।௰௪௪
பார்திவாப்ஸரஸஸ் ச தா:। ப்ரணம்ய பகவந்ெதௗ ெதௗ। ௧௰௨।௰௪௫
துஷ்டுவுர் முநிஸத்தெமௗ। ப்ரஸததுீ ஜகத்தாதா। ௧௰௨।௰௪௫
யஸ்ய ேதவஸ்ய மாயயா। ேமாஹிதா: ஸ்ம விஜாநீேமா। ௧௰௨।௰௪௬
நாந்தரம் வந்த்யநிந்த்யேயா:। ப்ரஸததுீ ஸ ேநா ேதேவா। ௧௰௨।௰௪௬
யஸ்ய ரூபம் இதம் த்விதா। தாம பூதஸ்ய ேலாகாநாம்। ௧௰௨।௰௪௭
அநாேதர் அத்ர திஷ்டதி। நரநாராயெணௗ ேதெவௗ। ௧௰௨।௰௪௭
ஸார்ங்கசக்ராயுதாவ் உெபௗ। ஆஸ்தாம் ப்ரஸாதஸுமுகாவ்।
௧௰௨।௰௪௮
அஸ்மாகம் அபராதிநாம்। நிதாநம் ஸர்வவித்யாநாம்। ௧௰௨।௰௪௮
ஸர்வபாேபந்தநாநல:। நாராயேணா ேநா பகவாந்। ௧௰௨।௰௪௯
ஸர்வபாபம் வ்யேபாஹது। ஸார்ங்கசக்ராயுத: ஸ்ரீமாந்। ௧௰௨।௰௪௯
ஆத்மஜ்ஞாநமேயா அநக:। நர: ஸமஸ்தபாபாநி। ௧௰௨।௰௫
ஹத்வாத்மா ஸர்வேதஹிநாம்। ஜடாகலாபபந்ேதா அயம்। ௧௰௨।௰௫
அநேயார் அக்ஷயாத்மேநா:। ெஸௗம்யா ச த்ருஷ்டி: பாபாநி।
௧௰௨।௰௫௧
ஹந்து ஸர்வாணி ந: ஸுபா। ப்ரஸததுீ நேரா அஸ்மாகம்। ௧௰௨।௰௫௧
ததா நாராயேணா அவ்யய:। அபராத: க்ருேதா அஸ்மாபிர்। ௧௰௨।௰௫௨
யேயார் அவ்யக்தஜந்மேநா:। க்வ மூர்திர் ஐஸ்வர்யகுைணர்।
௧௰௨।௰௫௨
யுக்தா திவ்ையர் மஹாத்மேநா:। க்வ ந: ஸரீரகாணத்ருக் ீ । ௧௰௨।௰௫௩
மிஸ்ரகர்மசிதாநி ைவ। ததாப்ய் அவித்யாதுஷ்ேடந। ௧௰௨।௰௫௩

மநஸா ய: க்ருேதா ஹி வாம்। அஸ்மாபிர் அபராேதா அயம்।
௧௰௨।௰௫௪
க்ஷம்யதாம் ஸுமஹாத்யுதீ। ஸரணம் ச ப்ரபந்நாநாம்। ௧௰௨।௰௫௪
தவாஸ்மீதி ச வாதிநாம்। ப்ரஸாதம் பித்ருஹந்த்ருணாம்। ௧௰௨।௰௫௫
அபி குர்வந்தி ஸாதவ:। ஏஷ ஏவ வேரா அஸ்மாகம்। ௧௰௨।௰௫௫
அவிேவகாஹ்ருேதா மஹாந்। த்ைரேலாக்யவந்த்ெயௗ யந்நாெதௗ।
௧௰௨।௰௫௬
விேலாபயிதும் ஆகதா:। ப்ரஸதீ ேதவ விஜ்ஞாந । ௧௰௨।௰௫௬
கநமூடத்ருஸாம் அபி। பவந்தி ஸந்த: ஸததம்। ௧௰௨।௰௫௭
ஸத்தர்மந்யவதாரகா:। த்ருஷ்ட்ைவதந் ந: ஸமுத்பந்நம்। ௧௰௨।௰௫௭
யதா ஸ்த்ரீரத்நம் ஈத்ருஸம்। த்வயி நாராயேணாத்பந்நா। ௧௰௨।௰௫௮
ஸ்ேரஷ்டா பாரவதீமதி:। ேதந ஸத்ேயந ஸத்யாத்மந்। ௧௰௨।௰௫௮
பரமாத்மந் ஸநாதநம்। நாராயண ப்ரஸேததி ீ । ௧௰௨।௰௫௯
ஸர்வேலாகபராயண। ப்ரஸந்நபுத்ேத ஸாந்தாத்மந்। ௧௰௨।௰௫௯
ப்ரஸந்நவதேநக்ஷண। ப்ரஸதீ ேயாகிநாம் ஈஸ। ௧௰௨।௰௬
நர ஸர்வகதாச்யுத। நமஸ்யாேமா நரம் ேதவம்। ௧௰௨।௰௬
ததா நாராயணம் ஹரிம்। நேமா நராய நம்யாய। ௧௰௨।௰௬௧
நேமா நாராயணாய ச। ப்ரஸந்நாநாம் அநாதாநாம்। ௧௰௨।௰௬௧
அபராதவதாம் ப்ரபு:। ஸம் கேராது நேரா அஸ்மாகம்। ௧௰௨।௰௬௨
ஸம் நாராயண ேதஹி ந:। ஏவம் அப்யர்தித: ஸ்துத்யா। ௧௰௨।௰௬௨
ராகத்ேவஷாதிவர்ஜித:। ப்ராேஹஸ: ஸர்வபூதாநாம்। ௧௰௨।௰௬௩
ஸாத்ேயா நாராயேணா ந்ருப। ஸ்வாகதம் மதேவ காம। ௧௰௨।௰௬௩

பவேதா அப்ஸரஸாம் அபி। யத் கார்யம் ஆகதாநாம் வ। ௧௰௨।௰௬௪
இஹாஸ்மாபிஸ் தத் உச்யதாம்। யூயம் ஸம்ஸித்தேய நூநம்।
௧௰௨।௰௬௪
அஸ்மாகம் வலஸத்ருணா। ஸம்ப்ேரஷிதாஸ் தேதா அஸ்மாகம்।
௧௰௨।௰௬௫
ந்ருத்தேகயாதிதர்ஸிதம்। ந வயம் ந்ருத்தகீேதந। ௧௰௨।௰௬௫
நாங்கேசஷ்டாதிபாஷிைத:। லுப்யாேமா விஷேதா மந்ேய। ௧௰௨।௰௬௬
விஷயா தாருணாத்மகா:। ஸப்தாதிஸங்கதுஷ்டாநி। ௧௰௨।௰௬௬
யதா நாக்ஷாணி ந: ஸுபா:। ததா ந்ருத்தாதேயா பாவா:। ௧௰௨।௰௬௭
கதம் ேலாபப்ரதாயிந:। ேத ஸித்தா: ஸ்ம ந ைவ ஸாத்யா। ௧௰௨।௰௬௭
பவதீநாம் ஸ்மரஸ்ய ச। மாதவஸ்ய ச ஸக்ேரா அபி। ௧௰௨।௰௬௮
ஸ்வாஸ்த்யம் யாத்வ் அவிஸங்கித:। ேயா அெஸௗ பரஸ்மாத் பரம:।
௧௰௨।௰௬௮
புருஷாத் பரேமஸ்வர:। பரமாத்மா ஹ்ருஷீேகஸ:। ௧௰௨।௰௬௯
ஸ்தாவரஸ்ய சரஸ்ய ச। உத்பத்திேஹதுர் அந்ேத ச। ௧௰௨।௰௬௯
யஸ்மிந் ஸர்வம் ப்ரலீயேத। ஸ ஸர்வவாஸிேதவத்வாத்। ௧௰௨।௰௭
வாஸுேதேவத்ய் உதாஹ்ருத:। வயம் அம்ஸாம்ஸகாஸ் தஸ்ய।
௧௰௨।௰௭
சதுர்வ்யூஹஸ்ய மாயிந:। ததாேதஸிதவர்த்மேநா। ௧௰௨।௰௭௧
ஜகத்ேபாதாய ேதஹிந:। தம் ஸர்வபூதம் ஸர்ேவஸம்। ௧௰௨।௰௭௧
ஸர்வத்ர ஸமதர்ஸிந:। பஸ்யந்த: குத்ர ராகாதீந்। ௧௰௨।௰௭௨
கரிஷ்யாேமா விேபதகாந்। வஸந்ேத மயி ேசந்த்ேர ச। ௧௰௨।௰௭௨
பவதீஷு ததா ஸ்மேர। யதா ஸ ஏவ விஸ்வாத்மா। ௧௰௨।௰௭௩

ததா த்ேவஷாதய: கதம்। தந்மயாந்ய் அவிபக்தாநி। ௧௰௨।௰௭௩
யதா ஸர்ேவஷு ஜந்துஷு। ப்ருதிவ்ய் ஆபஸ் ததா ேதேஜா। ௧௰௨।௰௭௪
வாயுர் ஆகாஸம் ஏவ ச। தேதந்த்ரியாண்ய் அஹம்காேரா। ௧௰௨।௰௭௪
புத்திஸ் ச ந ப்ருதக் யத:। ஸமத்ருஷ்டிர் யத: குத்ர। ௧௰௨।௰௭௫
ராகத்ேவெஷௗ ப்ரவர்தத:। ஆத்மா சாயம் அேபேதந। ௧௰௨।௰௭௫
யத: ஸர்ேவஷு ஜந்துஷு। ஸர்ேவஸ்வேரஸ்வேரா விஷ்ணு:।
௧௰௨।௰௭௬
குத்ர ராகாதயஸ் தத:। ப்ரஹ்மாணம் இந்த்ரம் ஈஸாநம்। ௧௰௨।௰௭௬
ஆதித்யாந் மருேதா அகிலாந்। விஸ்ேவேதவாந் க்ருஷீந் ஸாத்யாந்।
௧௰௨।௰௭௭
வஸூந் பித்ருகணாம்ஸ் ததா। யக்ஷராக்ஷஸபூதாதீந்। ௧௰௨।௰௭௭
நாகஸர்பஸரீஸ்ருபாந்। மநுஷ்யபக்ஷிேகாரூப । ௧௰௨।௰௭௮
கஜஸிம்ஹஜேலசராந்। மக்ஷிகாமஸகாதம்ஸாஞ்। ௧௰௨।௰௭௮
ஸலபாந் அலஸாந் க்ருமீந்। குல்மவ்ருக்ஷலதாவல்லி । ௧௰௨।௰௭௯
த்வக்ஸாரத்ருணஜாதிஜாந்। யச் ச கிம்சித் அத்ருஸ்யம் வா।
௧௰௨।௰௭௯
த்ருஸ்யம் வா த்ரிதஸாங்கநா:। மந்யத்வம் ரூபம் ஏகஸ்ய। ௧௰௨।௰௮
தத் ஸர்வம் பரமாத்மந:। ஜாநமாந: கதம் விஷ்ணும்। ௧௰௨।௰௮
ஆத்மாநம் பரமம் ச யத்। ராகத்ேவெஷௗ ததா ேலாபம்। ௧௰௨।௰௮௧
க: குர்யாத் அமராங்கநா:। ஸர்வபூதஸ்திேத விஷ்ெணௗ। ௧௰௨।௰௮௧
ஸர்வேக ஸர்வதாதரி। நிபாத்யதாம் ப்ருதக்பூேத। ௧௰௨।௰௮௨
குத்ர ராகாதிேகா கண:। ஏவம் அஸ்மாஸு யுஷ்மாஸு। ௧௰௨।௰௮௨
ஸர்வபூேதஷு சாபலா:। தந்மயத்ைவகபூேதஷு। ௧௰௨।௰௮௩

ராகாத்யவஸர: குத:। ஸம்யக்த்ருஷ்டிர் இயம் ப்ேராக்தா। ௧௰௨।௰௮௩
ஸமஸ்ைதக்யாவேலாகிநீ। ப்ருதக்விஜ்ஞாநம் அத்ைரவ। ௧௰௨।௰௮௪
ேலாகஸம்வ்யவஹாரவத்। பூேதந்த்ரியாந்த:கரண । ௧௰௨।௰௮௪
ப்ரதாநபுருஷாத்மகம்। ஜகத் யத் ஏதத் அகிலம்। ௧௰௨।௰௮௫
ததா ேபத: கிமாத்மக:। பவந்தி லயம் ஆயாந்தி। ௧௰௨।௰௮௫
ஸமுத்ேர ஸலிேலார்மய:। ந வாரிேபதேதா பிந்நாஸ்। ௧௰௨।௰௮௬
தைதைவக்யாத் இதம் ஜகத்। யதாக்ேநர் அர்சிஷ: பதா ீ :। ௧௰௨।௰௮௬
பிங்கலாருணதூஸரா:। பவந்தி நாக்நிேபேதந। ௧௰௨।௰௮௭
தைததத் ப்ரஹ்மேணா ஜகத்। பவதீபிஸ் ச யத் ேக்ஷாபம்। ௧௰௨।௰௮௭
அஸ்மாகம் ஸ புரம்தர:। காரயத்ய் அஸத் ஏதச் ச। ௧௰௨।௰௮௮
விேவகாதாரேசதஸாம்। பவத்ய: ஸ ச ேதேவந்த்ேரா। ௧௰௨।௰௮௮
ேலாகாஸ் ச ஸஸுராஸுரா:। ஸமுத்ராத்ரிவேநாேபதா। ௧௰௨।௰௮௯
மத்ேதஹாந்தரேகாசரா:। யேதயம் சாருஸர்வாங்கீ। ௧௰௨।௰௮௯
பவதீநாம் மேயாருத:। தர்ஸிதா தர்ஸயிஷ்யாமி। ௧௰௨।௰௯
ததாத்ைரவாகிலம் ஜகத்। ப்ரயாது ஸக்ேரா மா கர்வம்। ௧௰௨।௰௯
இந்த்ரத்வம் கஸ்ய ஸுஸ்திரம்। யூயம் ச மா ஸ்மயம் யாத।
௧௰௨।௰௯௧
ஸந்தி ரூபாந்விதா: ஸ்த்ரிய:। கிம் ஸுரூபம் குரூபம் வா। ௧௰௨।௰௯௧
யதா ேபேதா ந த்ருஸ்யேத। தாரதம்யம் ஸுரூபத்ேவ। ௧௰௨।௰௯௨
ஸததம் பிந்நதர்ஸிநாம்। பவதீநாம் ஸ்மயம் மத்வா। ௧௰௨।௰௯௨
ரூெபௗதார்யகுேணாத்பவம்। மேயயம் தர்ஸிதா தந்வ।ீ ௧௰௨।௰௯௩
ததஸ் தச்சமம் இச்சதா। யஸ்மாந் மதூேரார் உத்பூதா। ௧௰௨।௰௯௩

இயம் இந்தீவேரக்ஷணா। உர்வஸீ நாம கல்யாண।ீ ௧௰௨।௰௯௪
பவிஷ்யதி தேதா அப்ஸரா:। தத் இயம் ேதவராஜாய। ௧௰௨।௰௯௪
நீயதாம் வரவர்ணிநீ। பவத்யஸ் ேதந சாஸ்மாகம்। ௧௰௨।௰௯௫
ப்ேரஷிதா: ப்ரீதிம் இச்சதா। வக்தவ்யஸ் ச ஸஹஸ்ராேக்ஷா।
௧௰௨।௰௯௫
நாஸ்மாகம் ேபாககாரணாத்। தபஸ்சர்யா ந சாப்ராப்ய । ௧௰௨।௰௯௬
பலம் ப்ராப்தும் அபப்ஸிதம் ீ । ஸந்மார்கம் அஸ்ய ஜகேதா। ௧௰௨।௰௯௬
தர்ஸயிஷ்யந் கேராம்ய் அஹம்। தேபா நேரண ஸஹிேதா।
௧௰௨।௰௯௭
ஜகத: பாலேநாத்யத:। யதி கஸ்சித் தவாபாதாம்। ௧௰௨।௰௯௭
கேராதி த்ரிதேஸஸ்வர। தம் அஹம் வாரயிஷ்யாமி। ௧௰௨।௰௯௮
நிர்வ்ருேதா பவ வாஸவ। கர்தாஸி ேசத் த்வம் ஆபாதாம்। ௧௰௨।௰௯௮
அதுஷ்டஸ்ேயஹ கஸ்யசித்। தவாபி ஸாஸ்ைததத் அஹம்।
௧௰௨।௰௯௯
ப்ரவர்திஷ்யாம்ய் அஸம்ஸயம்। ஏதஜ் ஜ்ஞாத்வா ந ஸம்தாபஸ்।
௧௰௨।௰௯௯
த்வயா கார்ேயா ஹி மாம் ப்ரதி। உபகாராய ஜகதாம்। ௧௰௨।௧
அவதீர்ேணா அஸ்மி வாஸவ। யா ேசயம் உர்வஸீ மத்த:। ௧௰௨।௧
ஸமுத்பூதா புரம்தர। த்ேரதாக்நிேஹதுபூேதயம்। ௧௰௨।௧௰௧
ஐலம் ப்ராப்ய பவிஷ்யதி। இத்ய் உக்ேத அப்ஸரஸ: ஸர்வா:।
௧௰௨।௧௰௧
ப்ரணிபத்யாதிவிஸ்மிதா:। ஊசுர் நாராயணம் ேதவம்। ௧௰௩।௰௰௧
தத்தர்ஸநகுதூஹலா:। உக்ேதா பகவதா ேயா அயம்। ௧௰௩।௰௰௧

உபேதேஸா ஹிதார்திநாம்। ப்ேராக்த: ஸ ஸர்ேவா விஜ்ஞாேதா।
௧௰௩।௰௰௨
மாஹாத்ம்யம் விதிதம் ச ேத। யத் த்வ் ஏதத் பவதா ப்ேராக்தம்।
௧௰௩।௰௰௨
ப்ரஸந்ேநநாவ்யயாத்மநா। தர்ஸிேதயம் விஸாலாக்ஷ।ீ ௧௰௩।௰௰௩
தர்ஸயிஷ்யாமி ேவா ஜகத்। தந்நாத ஸர்வபாேவந। ௧௰௩।௰௰௩
ப்ரபந்நாநாம் ஜகத்பேத। தர்ஸயாத்மாநம் அகிலம்। ௧௰௩।௰௰௪
தர்ஸிேதயம் யேதார்வஸீ। யதி ேதவாபராத்ேதஷு। ௧௰௩।௰௰௪
நாஸ்மாஸு குபிதம் தவ। மநஸ் தஜ் ஜகதம் ஈஸ। ௧௰௩।௰௰௫
தர்ஸயாத்மாநம் ஆத்மநா। பஸ்யேதஹாகிலாம்ல் ேலாகாந்।
௧௰௩।௰௰௫
மம ேதேஹ ஸுராங்கநா:। மதும் மதநம் ஆத்மாநம்। ௧௰௩।௰௰௬
யச் சாந்யத் த்ரஷ்டும் இச்சத। இத்ய் உக்த்வா பகவாந் ேதவஸ்।
௧௰௩।௰௰௬
ததா நாராயேணா ந்ருப। உச்ைசர் ஜஹாஸ ஸ்வநவத்। ௧௰௩।௰௰௭
தத்ராபூத் அகிலம் ஜகத்। ப்ரஹ்மா ப்ரஜாபதி: ஸக்ர:। ௧௰௩।௰௰௭
ஸஹ ருத்ைர: பிநாகத்ருக்। ஆதித்யா வஸவ: ஸாத்யா। ௧௰௩।௰௰௮
விஸ்ேவேதவா மஹர்ஷய:। நாஸத்யதஸ்ராவ் அநிலா:। ௧௰௩।௰௰௮
ஸர்ேவ ஸர்ேவ ததாக்நய:। யக்ஷகந்தர்வஸித்தாஸ் ச। ௧௰௩।௰௰௯
பிஸாசா: கிம்நேராரகா:। ஸமஸ்தாப்ஸரேஸா வித்யா:। ௧௰௩।௰௰௯
ஸாங்கா ேவதாஸ் ததுக்தய:। மநுஷ்யா: பஸவ: கீடா:। ௧௰௩।௰௧
பக்ஷிண: பாதபாஸ் ததா। ஸரீஸ்ருபாஸ் ச ேய ஸூŠமா। ௧௰௩।௰௧

யச் சாந்யஜ் ஜவஸம்ஜ்ஞிதம் ீ । ஸமுத்ரா: ஸகலா: ைஸலா:।
௧௰௩।௰௧௧
ஸரித: காநநாநி ச। த்வபாந்ய் ீ அேஸஷாணி ததா। ௧௰௩।௰௧௧
நதா: ஸர்வஸராம்ஸி ச। நகரக்ராமபூர்ணா ச। ௧௰௩।௰௧௨
ேமதிநீேமதிநீபேத। ேதவாங்கநாபிர் ேதவஸ்ய। ௧௰௩।௰௧௨
ேதேஹ த்ருஷ்டம் மஹாத்மந:। நக்ஷத்ரக்ரஹதாராபி:। ௧௰௩।௰௧௨
ஸமேவதம் நபஸ்தலம்। தத்ருஸுஸ் தா: ஸுசார்வங்க்யஸ்।
௧௰௩।௰௧௩
தஸ்யாந்தர் விஸ்வரூபிண:। ேநார்த்வம் ந திர்யங் நாதஸ் ச।
௧௰௩।௰௧௩
யதாந்தஸ் தஸ்ய த்ருஸ்யேத। தம் அநந்தம் அநாதிம் ச। ௧௰௩।௰௧௪
ததஸ் தாஸ் துஷ்டுவு: ப்ரபும்। மதேநந ஸமம் ஸர்வா। ௧௰௩।௰௧௪
மதுநா ச ஸுராங்கநா:। ஸஸாத்வஸா பக்திமத்ய:। ௧௰௩।௰௧௫
பரம் விஸ்மயம் ஆகதா:। பஸ்யாம நாதிம் தவ ேதவ நாந்தம்।
௧௰௩।௰௧௫
ந மத்யம் அவ்யாக்ருதரூபபாரம்। பராயணம் த்வா ஜகதாம் அநந்தம்।
௧௰௩।௰௧௬
நதா: ஸ்ம நாராயணம் ஆத்மபூதம்। மஹீதிவம் வாயுஜலாக்நயஸ் த்வம்।
௧௰௩।௰௧௬
ஸப்தாதிரூபஸ் ச பராபராத்மந்। த்வத்ேதா பவத்ய் அச்யுத ஸர்வம் ஏதத்।
௧௰௩।௰௧௭
அேபதரூேபா அஸி விேபா த்வம் ஏபி:। த்ரஷ்டாஸி ரூபஸ்ய ரஸஸ்ய
ேவத்தா। ௧௰௩।௰௧௭
ஸ்ேராதா ச ஸப்தஸ்ய ஹேர த்வம் ஏக:। ஸ்ப்ரஷ்டா பவாந் ஸ்ப்ரஸவேதா
அகிலஸ்ய। ௧௰௩।௰௧௮

க்ராதாஸி கந்தஸ்ய ப்ருதக்ஷரீரீ। ஸுேரஷு ஸர்ேவஷு ந ேஸா அஸ்தி
கஸ்சிந்। ௧௰௩।௰௧௮
மநுஷ்யேலாேக ச ந ேஸா அஸ்தி கஸ்சித்। பஸ்வாதிவர்ேக ச ந ேஸா
அஸ்தி கஸ்சித்। ௧௰௩।௰௧௯
ேயா நாம்ஸபூதஸ் தவ ேதவேதவ। ப்ரஹ்மாத்யுேபந்த்ரப்ரமுகாநி
ெஸௗம்ேயஷ்வ்। ௧௰௩।௰௧௯
இந்த்ராக்நிரூபாணி ச வர்யவத்ஸு ீ । ருத்ராந்தகாதீநி ச ெரௗத்ரவத்ஸு।
௧௰௩।௰௨
ரூேபஷு ரூபாணி தேவாத்தமாநி। ஸமுத்ரரூபம் தவ ைதர்யவத்ஸு।
௧௰௩।௰௨
ேதஜஸ்விரூேபஷு ரவிஸ் ததாக்நி:। க்ஷமாதேநஷு க்ஷிதிரூபம் அக்ர்யம்।
௧௰௩।௰௨௧
ரூபம் தவாக்ர்யம் பலவத்ஸு வாயு:। மநுஷ்யரூபம் தவ ராஜேஸஷு।
௧௰௩।௰௨௧
மூேடஷு ஸர்ேவஸ்வர பாதேபா அஸி। தர்பாந்விேதஷ்வ் அச்யுத தாநவஸ்
த்வம்। ௧௰௩।௰௨௨
ஸநத்ஸுஜாதஸ் ச விேவகவத்ஸு। ரஸஸ்வரூேபண ஜேல ஸ்திேதா அஸி।
௧௰௩।௰௨௨
கந்தஸ்வரூேபா பவேதா தரித்ர்யம்। த்ருஸ்யஸ்வரூபஸ் ச ஹுதாஸேந
த்வம்। ௧௰௩।௰௨௩
ஸ்பர்ஸஸ்வரூேபா பகவாந் ஸமீேர। ஸப்தாத்மகம் ேத நபஸி ஸ்வரூபம்।
௧௰௩।௰௨௩
மந்தவ்யரூேபா மநஸி ப்ரேபா த்வம்। ேபாதவ்யரூபஸ் ச விேபா த்வம் ஏக:।
௧௰௩।௰௨௪

ஸர்வத்ர ஸர்ேவஸ்வர ஸர்வபூத:। பஸ்யாம ேத நாபிஸேராஜமத்ேய।
௧௰௩।௰௨௪
ப்ரஹ்மாணம் ஏதம் ச ஹரம் ப்ருகூட்யம்। தத்ராஸ்விெநௗ கர்ணகெதௗ
ஸமஸ்தாண்। ௧௰௩।௰௨௫
அவஸ்திதாந் பாஹுஷு ேலாகபாலாந்। க்ராேண அநிலம் ேநத்ரகெதௗ
ரவந்தூீ । ௧௰௩।௰௨௫
ஜிஹ்வா ச ேத நாத ஸரஸ்வதீயம்। பாெதௗ தரித்ரீம் ஜடரம் ஸமஸ்தாம்ல்।
௧௰௩।௰௨௬
ேலாகாந் ஹ்ருஷீேகஸ விேலாகயாம:। ஜங்ேக வியத் பாதகராங்குலீஷு।
௧௰௩।௰௨௬
பிஸாசரேக்ஷாரகஸித்தஸங்காந்। பும்ஸ்த்ேவ ப்ரஜாநாம் பதிர் ஓஷ்டயுக்ேம।
௧௰௩।௰௨௭
ப்ரதிஷ்டிதாஸ் ேத க்ரதவ: ஸமஸ்தா:। ஸர்ேவஷ்டயஸ் ேத தஸேநஷு
ேதவ। ௧௰௩।௰௨௭
தம்ஷ்ட்ருஆஸு வித்யா பவதஸ் சதஸ்ர:। ேராமஸ்வ் அேஸஷாஸ் தவ
ேதவஸங்கா। ௧௰௩।௰௨௮
வித்யாதரா நாத கராங்க்ரிேரகா:। ஸாங்கா: ஸமஸ்தாஸ் தவ ேதவ ேவதா:।
௧௰௩।௰௨௮
ஸமாஸ்திதா பஹுஷு ஸம்திபூதா:। வராஹரூபம் தரணத்ருதஸ் ீ ேத।
௧௰௩।௰௨௮
ந்ருஸிம்ஹரூபம் ச ஸடாகராலம்। பஸ்யாம ேத வாஜிஸிரஸ் தேதாச்ைசஸ்।
௧௰௩।௰௨௯
த்ரிவிக்ரேம யஸ் ச தவாப்ரேமய:। அமீஸமுத்ராஸ் தவ ேதவ ேதேஹ।
௧௰௩।௰௨௯

ேமர்வாதய: ைஸலவராஸ் தவாமீ। இமாஸ் ச கங்காப்ரமுகா: ஸ்ரவத்ேயா।
௧௰௩।௰௩
த்வபாந்ய் ீ அேஸஷாணி வநாநி ைசவ। ஸ்துவந்தி ைசேத முநயஸ் தேவஸ।
௧௰௩।௰௩
ேதேஹ ஸ்திதாஸ் த்வந்மஹிமாநம் அக்ர்யம்। த்வாம் ஈஸிதாரம் ஜகதாம்
அநந்தம்। ௧௰௩।௰௩௧
யஜ்ேஞஸம் அர்சந்தி ச யஜ்விேநா அமீ। த்வத்ேதா ந ெஸௗம்யம் ஜகதீஹ
கிம்சித்। ௧௰௩।௰௩௧
த்வத்ேதா ந ெரௗத்ரம் ச ஸமஸ்தமூர்ேத। த்வத்ேதா ந ஸதம்ீ ந ச
ேகஸேவாஷ்ணம்। ௧௰௩।௰௩௨
ஸர்வஸ்வரூபாதிஸயீ த்வம் ஏக:। ப்ரஸதீ ஸர்ேவஸ்வர ஸர்வபூத।
௧௰௩।௰௩௨
ஸநாதநாத்மந் பரேமஸ்வேரஸ। த்வந்மாயயா ேமாஹிதமாநஸாபிர்।
௧௰௩।௰௩௩
யத் ேத அபராத்தம் தத் இதம் க்ஷமஸ்வ। கிம் வாபராத்தம் தவ ேதவ
மூைடர்। ௧௰௩।௰௩௩
யந் மாயயா ேநா ஹ்ருதயம் ததாபி। பாபாவஸம் கிம் ப்ரணதார்திஹாரிந்।
௧௰௩।௰௩௪
மேநா ஹி ேநா விங்கலதாம் உைபதி। ந ேத அபராத்தம் யதி வாபராத்தம்।
௧௰௩।௰௩௪
அஸ்மாபிர் உந்மார்கவிவர்தநீபி:। தத் க்ஷம்யதாம் ஸ்ருஷ்டிகரஸ் தைவவ।
௧௰௩।௰௩௫
ேதவாபராதம் ஸ்ருஜேதா விேவகாந்। நேமா நமஸ் ேத ேகாவிந்த।
௧௰௩।௰௩௫
நாராயண ஜநார்தந। த்வந்நாமஸ்மரணாத் பாபம்। ௧௰௩।௰௩௬

அேஸஷம் ந: ப்ரணஸ்யது। தேதா அநந்த நமஸ் துப்யம்। ௧௰௩।௰௩௬
விஸ்வாத்மந் விஸ்வபாவந। த்வந்நாமஸ்மரணாத் பாபம்। ௧௰௩।௧௫௫
அேஸஷம் ந: ப்ரணஸ்யது। நேமா நமஸ் ேத ைவகுண்ட। ௧௰௩।௧௫௫
ஸ்ரீவத்ஸாங்காப்ஜேலாசந। வேரண்ய யஜ்ஞபுருஷ। ௧௰௩।௧௫௫
ப்ரஜாபாலக வாமந। நேமா அஸ்து ேத அப்ஜநாபாய। ௧௰௩।௧௫௫
ப்ரஜாபதிக்ருேத ஹேர। த்வந்நாமஸ்மரணாத் பாபம்। ௧௰௩।௰௩௭
அேஸஷம் ந: ப்ரணஸ்யது। ஸம்ஸாரார்ணவேபாதாய। ௧௰௩।௰௩௭
நமஸ் துப்யம் அேதாக்ஷஜ। த்வந்நாமஸ்மரணாத் பாபம்। ௧௰௩।௰௩௮
அேஸஷம் ந: ப்ரணஸ்யது। நம: பரஸ்ைம ஸ்ரீஸாய। ௧௰௩।௰௩௮
வாஸுேதவாய ேவதேஸ। ஸ்ேவச்சயா குணேபாக்த்ருத்ேவ।
௧௰௩।௰௩௯
ஸர்காந்தஸ்திதிகாரிேண। உபஸம்ஹார விஸ்வாத்மந்। ௧௰௩।௰௩௯
ரூபம் ஏதத் ஸமந்தத:। வர்தமாநம் ந ேநா த்ரஷ்டும்। ௧௰௩।௰௪
ஸமர்தம் சக்ஷுர் ஈஸ்வர। ப்ரலயாக்நிஸஹஸ்ரஸ்ய। ௧௰௩।௰௪
ஸமா தீப்திஸ் தவாச்யுத। ப்ரமாேணந திேஸா பூமிர்। ௧௰௩।௰௪௧
ககநம் ச ஸமாவ்ருதம்। ந வித்ம: க்வ நு வர்தாேமா। ௧௰௩।௰௪௧
பவாந் ைநேவாபலŠயேத। ஸர்வம் ஜகத் இைஹகஸ்தம்। ௧௰௩।௰௪௨
பிண்டிதம் லக்ஷயாமேஹ। கிம் வர்ணயாேமா ரூபம் ேத। ௧௰௩।௰௪௨
கிம் ப்ரமாணம் இதம் ஹேர। மாஹாத்ம்யம் கிம்து ேத ேதவ।
௧௰௩।௰௪௩
ஜிஹ்வாயா யந் ந ேகாசரம்। வக்த்ராணாம் அயுேதநாபி। ௧௰௩।௰௪௩
புத்தீநாம் அயுதாயுைத:। குணாநாம் வர்ணநம் நாத। ௧௰௩।௰௪௪
தவ வக்தும் ந ஸக்யேத। தத் ஏதத் தர்ஸிதம் ரூபம்। ௧௰௩।௰௪௪

ப்ரஸாத: பரம: க்ருத:। சந்தேதா ஜகதாம் ஈஸ। ௧௰௩।௰௪௫
தத் ஏதத் உபஸம்ஹர। இத்ய் ஏவம் ஸம்ஸ்துதஸ் தாபிர்। ௧௰௩।௰௪௫
அப்ஸேராபிர் ஜநார்தந:। திவ்யஜ்ஞாேநாபபந்நாநாம்। ௧௰௩।௰௪௬
தாஸாம் ப்ரத்யக்ஷம் ஈஸ்வர:। விேவஸ ஸர்வபூதாநி। ௧௰௩।௰௪௬
ஸ்ைவர் அம்ைஸர் பூதபாவந:। தம் த்ருஷ்ட்வா ஸர்வபூேதஷு।
௧௰௩।௰௪௬
லீயமாநம் அேதாக்ஷஜம்। விஸ்மயம் பரமம் ஜக்மு:। ௧௰௩।௰௪௭
ஸமஸ்தா ேதவேயாஷித:। ஸ ச ஸர்ேவஸ்வர: ைஸலாந்। ௧௰௩।௰௪௭
பாதபாந் ஸாகராந் புவம்। ஜலம் அக்நிம் ததா வாயும்। ௧௰௩।௰௪௮
ஆகாஸம் ச விேவஸ ஹ। காேல திŠவ் அத ஸர்வாத்மா।
௧௰௩।௰௪௮
மநுஷ்யாத்மந்ய் அதாபி ச। ஆத்மரூப: ஸ்தித: ஸ்ேவந। ௧௰௩।௰௪௯
மஹிம்நா பாவயஞ் ஜகத்। ேதவதாநவரக்ஷாம்ஸி। ௧௰௩।௰௪௯
யக்ஷவித்யாதேராரகாந்। மநுஷ்யபஸுகீடாதீந்। ௧௰௩।௰௫
ம்ருகபŠயந்தரிக்ஷகாந்। ேய அந்தரிேக்ஷ ததா பூெமௗ। ௧௰௩।௰௫
திவி ேய ேய ஜலாஸ்ரயா:। தாந் ப்ரவிஸ்ய ஸ விஸ்வாத்மா।
௧௰௩।௰௫௧
புநஸ் தத் ரூபம் ஆஸ்தித:। நேரண ஸார்சம் யத் தாபிர்। ௧௰௩।௰௫௧
த்ருஷ்டபூர்வம் அரிம்தம। தா: பரம் விஸ்மயம் கத்வா। ௧௰௩।௰௫௧
ஸர்வாஸ் த்ரிதஸேயாஷித:। ப்ரேணமு: ஸாத்யஸா: பாண்டு ।
௧௰௩।௰௫௨
வதநா ந்ருபஸத்தம। நாராயேணா அபி பகவாந்। ௧௰௩।௰௫௨
ஆஹ தாஸ் த்ரிதஸாங்கநா:। நீயதாம் உர்வஸீ பத்ரா। ௧௰௩।௰௫௩

யத்ராஸ்ேத த்ரிதேஸஸ்வர:। பவதீநாம் ஹிதார்தாய। ௧௰௩।௰௫௩
ஸர்வபூேதஷ்வ் அஸாவ் இதி। ஜ்ஞாநம் உத்பாதிதம் பூேயா।
௧௰௩।௰௫௪
லயம் பூேதஷு குர்வதா। தத் கச்சத ஸமஸ்ேதா அயம்। ௧௰௩।௰௫௪
பூதக்ராேமா மதம்ஸக:। அஹம் அப்ய் ஆத்மபூதஸ்ய। ௧௰௩।௰௫௫
வாஸுேதவஸ்ய ேயாகிந:। யஸ்மாத் பரதரம் நாஸ்தி। ௧௰௩।௰௫௫
ேயா அநந்த: பரிபட்யேத। தம் அஜம் ஸர்வபூேதஸம்। ௧௰௩।௰௫௬
ஜாநீத பரமம் பதம்। அஹம் பவத்ேயா ேதவாஸ் ச। ௧௰௩।௰௫௬
மநுஷ்யா: பஸவஸ் ச ேய। ஏதத் ஸர்வம் அநந்தஸ்ய। ௧௰௩।௰௫௭
ேதவேதவஸ்ய விஸ்த்ருதி:। ஏதஜ் ஜ்ஞாத்வா ஸமம் ஸர்கம்।
௧௰௩।௰௫௮
ஸேதவாஸுரமாநுஷம்। ஸபஸ்வாதிகணம் ைசவ। ௧௰௩।௰௫௮
த்ரஷ்டவ்யம் த்ரிதஸாங்கநா:। இத்ய் உக்தஸ் ேதந ேதேவந।
௧௰௩।௰௫௮
ஸமஸ்தாஸ் தா: ஸுரஸ்த்ரிய:। ப்ரணம்ய ெதௗ ஸமதநா:।
௧௰௩।௰௫௯
ஸவஸந்தாஸ் ச பார்திவ। ஆதாய ேசார்வஸம்ீ பூேயா। ௧௰௩।௰௫௯
ேதவராஜம் உபாகதா:। ஆசக்யுஸ் ச யதாவ்ருத்தம்। ௧௰௩।௰௬
ேதவராஜாய தத் ததா। ததா த்வம் அபி ராேஜந்த்ர। ௧௰௩।௰௬
ஸர்வபூேதஷு ேகஸவம்। சிந்தயந் ஸமதாம் கச்ச। ௧௰௩।௰௬௧
ஸமைதவ ஹி முக்தேய। ஜாநந்ந் ஏவம் அேஸேஷஷு। ௧௰௩।௰௬௧
பூேதஷு பரேமஸ்வரம்। வாஸுேதவம் கதம் ேதாஷாம்ல்। ௧௰௩।௰௬௨
ேலாபாதீந் ந ப்ரஹாஸ்யஸி। ஸர்வபூதாநி ேகாவிந்தாத்। ௧௰௩।௰௬௨

யதா நாந்யாநி பூபேத। ததா ைவராதேயா பாவா:। ௧௰௩।௰௬௩
க்ரியதாம் குத்ர பார்திவ। இஹ பஸ்யஞ் ஜகத் ஸர்வம்। ௧௰௩।௰௬௩
வாஸுேதவாத்மகம் ந்ருப। ஏதத் ஏவ ஹி க்ருஷ்ேணந। ௧௰௩।௰௬௪
ரூபம் ஆவிஷ்க்ருதம் ததா। பரமஸ்மாத் அபி மஹத்। ௧௰௩।௰௬௪
ரூபம் யத் கதிதம் தவ। ஜந்மாதிபாவரஹிதம்। ௧௰௩।௰௬௫
தத் விஷ்ேணா: பரமம் பதம்। ஸம்ேக்ஷேபண ச பூபால। ௧௰௩।௰௬௫
ஸ்ரூயதாம் யத் வதாமி ேத। யந் மெதௗ புருஷ: க்ருத்வா।
௧௰௩।௰௬௬
பரம் நிர்வாணம் க்ருச்சதி। ஸர்வம் விஷ்ணு: ஸமஸ்ெதௗ ஹி।
௧௰௩।௰௬௬
பாவாபாெவௗ ச தந்மெயௗ। ஸதஸத் ஸர்வம் ஈேஸேஸா।
௧௰௩।௰௬௭
வாஸுேதவ: பரம் பதம்। பவஜலதிகதாநாம் த்வந்த்வவாதாஹதாநாம்।
௧௰௩।௰௬௭
ஸுததுஹித்ருகலத்ரத்ராணபாரார்திதாநாம்। விஷமவிஷயேதாேய மஜ்ஜதாம்
அப்லவாநாம்। ௧௰௩।௰௬௮
பவதி ஸரணம் ஏேகா விஷ்ணுேபாேதா நராணாம்। இத்ய் உக்தம் தவ
தர்மஜ்ஞ। ௧௰௩।௰௬௮
விஷ்ேணார் மாஹாத்ம்யம் உத்தமம்। ஸ்வரூபம் ச ஜகத்தாதுர்।
௧௰௪।௰௰௧
ஆராதநவிநிஸ்சய:। ஆராதிதாத் பலம் யச் ச। ௧௰௪।௰௰௧
ேகஸவாத் ப்ராப்யேத நைர:। கதிதஸ் ச மஹாபாக। ௧௰௪।௰௰௨
தாநாநாம் விஸ்தராத் விதி:। ேயாகத்ைவதம் ச கதிதம்। ௧௰௪।௰௰௨
அத்ைவதம் த்ைவதம் ஏவ ச। அத்ைவதபாவேநாபாேயா। ௧௰௪।௰௰௩

விஸ்தராச் ச தேவாதித:। ஸம்ேக்ஷபவிஸ்தராப்யாம் ச। ௧௰௪।௰௰௩
ஸர்வம் ஏதத் தேவாதிதம்। ேதவேதவஸ்ய மாஹாத்ம்யம்। ௧௰௪।௰௰௪
ஸர்வகஸ்யாவ்யயாத்மந:। ஸ ஏஷ ஸர்வப்ரவர:। ௧௰௪।௰௰௪
ஸர்வபூதஸ் ச மாதவ:। ஸர்வம் அத்ர ச ஸர்வஸ்மிந்ந்। ௧௰௪।௰௰௫
ஏஷ ஏவ ப்ரதிஷ்டித:। த்ரியுகம் புண்டரீகாக்ஷம்। ௧௰௪।௰௰௫
அபவர்கமஹாஹ்ரதம்। ஸமுத்பத்ய பராஹ்லாதம்। ௧௰௪।௰௰௬
அநந்தம் ப்ரதிபத்யேத। ஸ்ருதம் ஏதந் மயா பூர்வம்। ௧௰௪।௰௰௬
விஸ்தேரண த்வேயாதிதம்। யத் த்வ் ஏதத் த்ரியுேகத்ய் உக்தம்।
௧௰௪।௰௰௭
தஸ்ய நிர்வசநம் வத। சதுர்யுேகந காலஸ்ய। ௧௰௪।௰௰௭
பரிஸம்க்யா யதா த்விஜ। த்ரியுேகந ததா விஷ்ேணா:। ௧௰௪।௰௰௮
க்ரியேத கிம் விேஸஷணம்। க்ருதம் த்ேரதா த்வாபரம் ச। ௧௰௪।௰௰௮
கலிஸ் ேசதி சதுர்யுகம்। யதா ஜகதி விக்யாதம்। ௧௰௪।௰௰௯
ததா த்ரியுகதா குத:। ஸாது ப்ருஷ்ேடா அஸ்மி பூபால। ௧௰௪।௰௰௯
பவதா த்ரியுகாஸ்ரிதம்। விேஸஷணம் அநந்தஸ்ய। ௧௰௪।௰௧
கததஸ் தந் நிஸாமய। காஷ்டா பார்திவ விஜ்ேஞயா। ௧௰௪।௰௧
நிேமஷா தஸ பஞ்ச ச। காஷ்டாத்ரிம்ஸத் கலா ஜ்ேஞயா। ௧௰௪।௰௧௧
முஹூர்தம் தாவதீ: கலா:। த்ரிம்ஸந்முஹூர்தா பூபால। ௧௰௪।௰௧௧
ததாேஹாராத்ரம் உச்யேத। தத்ஸம்க்யாைதர் அேஹாராத்ைரர்।
௧௰௪।௰௧௨
மாஸ: பார்திவஸத்தம। அயநம் தக்ஷிணம் மாஸா:। ௧௰௪।௰௧௨
ஷண் மாஸாஸ் ச தேதாத்தரம்। அயநத்விதயாக்யஸ் ச। ௧௰௪।௰௧௩

கால: ஸம்வத்ஸர: ஸ்ம்ருத:। தக்ஷிணம் த்வ் அயநம் ராத்ரிர்।
௧௰௪।௰௧௩
ேதவாநாம் உத்தரம் திநம்। ஸம்வத்ஸேரண ேதவாநாம்। ௧௰௪।௰௧௪
அேஹாராத்ரம் இேஹாச்யேத। ஸதத்ரேயண வர்ஷாணாம்। ௧௰௪।௰௧௪
ஷஷ்ட்யா ச ப்ருதிவபேத ீ । மநுஷ்யஸம்க்யயா வர்ஷம்। ௧௰௪।௰௧௫
ேதவாநாம் அபி கண்யேத। இதி திவ்ேயந மாேநந। ௧௰௪।௰௧௫
சதுர்யுகவிகல்பநாம்। கத்யமாநாம் மயா ராஜந்। ௧௰௪।௰௧௬
யதாவச் ச்ேராதும் அர்ஹஸி। சத்வாரி து ஸஹஸ்ராணி। ௧௰௪।௰௧௬
வர்ஷாணாம் க்ருதம் உச்யேத। தஸ்ய தாவச்சதீஸம்த்யா। ௧௰௪।௰௧௭
ஸம்த்யாம்ஸஸ் ச ததாவித:। த்ேரதா த்ரீணி ஸஹஸ்ராணி।
௧௰௪।௰௧௭
திவ்யாப்தாநாம் நரர்ஷப। தஸ்ய தாவச்சதீஸம்த்யா। ௧௰௪।௰௧௮
ஸம்த்யாம்ஸஸ் ச ததாவித:। த்வாபரம் த்ேவ ஸஹஸ்ேர து।
௧௰௪।௰௧௮
வர்ஷாணாம் அபிதீயேத। தஸ்ய தாவச்சதீஸம்த்யா। ௧௰௪।௰௧௯
ஸம்த்யாம்ஸஸ் ச ததாவித:। கலி: ஸஹஸ்ரம் ஏகம் து। ௧௰௪।௰௧௯
திவ்யாப்தாநாம் நரர்ஷப। தஸ்ய தாவச்சதீஸம்த்யா। ௧௰௪।௰௨
ஸம்த்யாம்ஸஸ் ச ததாவித:। க்ருதம் நாமயுகம் பூர்வம்। ௧௰௪।௰௨
யத்ர தர்ம: ஸநாதந:। க்ருதம் ஏவ ச கர்தவ்யம்। ௧௰௪।௰௨௧
தஸ்மிந் காேல ந்ருேபப்ஸிதம்। ந தத்ர தர்மா: ஸதந்தி ீ । ௧௰௪।௰௨௧
ந ச க்ஷயந்தி ீ ைவ ப்ரஜா:। தத: க்ருதயுகம் நாம। ௧௰௪।௰௨௨
குணத: ப்ேராச்யேத யுகம்। ேதவதாநவகந்தர்வா। ௧௰௪।௰௨௨
யக்ஷராக்ஷஸபந்நகா:। நாஸந் க்ருதயுேக ராஜந்। ௧௰௪।௰௨௩

ந ததா க்ரயவிக்ரய:। ந ஸாமயஜுர்ருக்வர்ணா:। ௧௰௪।௰௨௩
க்ரியா நாஸச்ீ ச மாநவ।ீ நாபிஸம்தாய ச பலம்। ௧௰௪।௰௨௪
கஸ்சித் தர்ேம ப்ரவர்தேத। ந தஸ்மிந் யுகஸம்ஸர்ேக। ௧௰௪।௰௨௪
வ்யாதேயா ேநந்த்ரியக்ஷய:। நாஸூயா நாபி ருதிதம்। ௧௰௪।௰௨௫
ந தர்ேபா நாபி ைபஸுநம்। ந விக்ரஹ: குதஸ் தந்த்ரீ। ௧௰௪।௰௨௫
ந த்ேவேஷா நாபி தம்பநம்। ந பயம் நாபி ஸம்தாேபா। ௧௰௪।௰௨௬
ந ேசர்ஷ்யா நாபி மத்ஸர:। தத: பரமகம் ப்ரஹ்ம। ௧௰௪।௰௨௬
யா கதிர் ேயாகிநாம் பரா। ஆத்மா ச ஸர்வபூதாநாம்। ௧௰௪।௰௨௭
ஸுக்ேலா நாராயணஸ் ததா। தஸ்மிந்ந் ஆத்மநி ேலாகாநாம்।
௧௰௪।௰௨௭
ஸர்வேலாகமேய அச்யுேத। ஸ்ேவச்சயா ெஸௗக்ல்யம் ஆபந்ேந।
௧௰௪।௰௨௮
ஸர்வம் பவதி நிர்மலம்। ப்ராஹ்மணா: க்ஷத்ரியா ைவஸ்யா:।
௧௰௪।௰௨௮
ஸூத்ராஸ் ச க்ருதலக்ஷணா:। க்ருேத யுேக பவந்தீஹ। ௧௰௪।௰௨௯
ஸ்வகர்மநிரதா: ப்ரஜா:। ஸ்வம் ஆஸ்ரமம் ஸ்வம் ஆசாரம்।
௧௰௪।௰௨௯
ஸம்யக்ஜ்ஞாநஸமந்விதம்। ஜகத் பவதி ராேஜந்த்ர। ௧௰௪।௰௩
ஸத்யப்ராயம் தேபாரதம்। ஏகேவதஸமாயுக்தா। ௧௰௪।௰௩
ஏகமந்த்ரவிதிக்ரியா:। ப்ருதக்தர்மாஸ் த்வ் ஏகேவதா। ௧௰௪।௰௩௧
தர்மம் ஏகம் அநுவ்ரதா:। சதுராஸ்ரமயுக்ேதந। ௧௰௪।௰௩௧
கர்மணா காலேயாகிநா। அகாமபலஸம்ேயாகாத்। ௧௰௪।௰௩௨
ப்ராப்நுவந்தி பராம் கதிம்। ஆத்மேயாகஸமாயுக்ேதா। ௧௰௪।௰௩௨

தர்ேமா அயம் க்ருதலக்ஷண:। க்ருேத யுேக சதுஷ்பாதஸ்। ௧௰௪।௰௩௩
சதுர்வர்ண்யஸ்ய ஸாஸ்வத:। ஏதத் க்ருதயுகம் நாம। ௧௰௪।௰௩௩
த்ைரகுண்யபரிவர்ஜிதம்। த்ேரதாம் அபி நிேபாத த்வம்। ௧௰௪।௰௩௪
யாத்ருக்ரூபம் ப்ரவர்தேத। பாேதந ஹ்ரஸேத தர்ேமா। ௧௰௪।௰௩௪
ரக்ததாம் யாதி சாச்யுத:। ஸத்யப்ரவ்ருத்தாஸ் ச நரா:। ௧௰௪।௰௩௫
க்ரியாதர்மபராயணா:। தேதா யஜ்ஞா: ப்ரவர்தந்ேத। ௧௰௪।௰௩௫
தர்மாஸ் ச விவிதா: க்ரியா:। த்ேரதாயாம் பாவஸம்கல்பா:। ௧௰௪।௰௩௬
க்ரியாதாநபேலாதயா:। ப்ரசரந்தி தேதா வர்ணாஸ்। ௧௰௪।௰௩௬
தேபாதாநபராயணா:। ஸ்வகர்மஸ்தா: க்ரியாவந்த:। ௧௰௪।௰௩௭
ஸமத்வாத் ரஜஸாந்விதா:। த்வாபேர அபி யுேக தர்ேமா। ௧௰௪।௰௩௭
த்விபாேகாந: ப்ரவர்தேத। விஷ்ணு: பதத்வம் ீ அப்ேயதி। ௧௰௪।௰௩௮
சதுர்தா ேவத ஏவ ச। தேதா அந்ேய ச சதுர்ேவதாஸ்। ௧௰௪।௰௩௮
த்ரிேவதாஸ் ச ததாபேர। த்விேவதாஸ் ைசகேவதாஸ் ச। ௧௰௪।௰௩௯
அந்ருசஸ் ச ததாபேர। ஏவம் ஸாஸ்த்ேரஷு பிந்ேநஷு। ௧௰௪।௰௩௯
பஹுதா நீயேத க்ரியா। தேபாதாநப்ரவ்ருத்தா ச। ௧௰௪।௰௪
ராஜஸீ பவதி ப்ரஜா। அல்பாயுேஷா நரா ேவத:। ௧௰௪।௰௪
ஸுமஹாம்ஸ் ேசதி துஸ்தர:। கேராதி பஹுதா ேவதாந்। ௧௰௪।௰௪௧
வ்யாஸரூபீ ததா ஹரி:। ஸத்த்வஸ்ய சாப்ய் அவிஜ்ஞாநாத்।
௧௰௪।௰௪௧
ஸத்த்ேவ கஸ்சித் வ்யவஸ்தித:। ஸத்த்வாத் ப்ரச்யவமாநாநாம்।
௧௰௪।௰௪௨
வ்யாதேயா பஹேவா அபவந்। காமாஸ் ேசாபத்ரவாஸ் ைசவ।
௧௰௪।௰௪௨

ததா ைதவதகாரிதா:। ையர் அர்த்யமாநா: ஸுப்ருஸம்। ௧௰௪।௰௪௩
தபஸ் தப்யந்தி மாநவா:। தநகாமா: ஸ்வர்ககாமா। ௧௰௪।௰௪௩
யஜ்ஞாம்ஸ் தந்வந்தி சாபேர। ஏவம் த்வாபரம் ஆஸாத்ய। ௧௰௪।௰௪௪
ப்ரஜா: க்ஷயந்த்ய் ீ அதர்மத:। பாேதைநேகந ராேஜந்த்ர। ௧௰௪।௰௪௪
தர்ம: கலியுேக அபி ஹி। தாமஸம் யுகம் ஆஸாத்ய। ௧௰௪।௰௪௫
க்ருஷ்ேணா பவதி ேகஸவ:। வ்ரதாசாரா: ப்ரஸாம்யந்தி। ௧௰௪।௰௪௫
தர்மயஜ்ஞக்ரியாஸ் ததா। ஈதேயா வ்யாதயஸ் தந்த்ரீ। ௧௰௪।௰௪௬
ேதாஷா: க்ேராதாதயஸ் ததா। உபத்ரவாஸ் ச வர்தந்ேத। ௧௰௪।௰௪௬
மநஸ்தாபாஸ் ச ஸம்கதா:। யுேகஷ்வ் ஆவர்தமாேநஷு। ௧௰௪।௰௪௬
ேலாேகா வ்யாவர்தேத புந:। ேலாேக க்ஷீேண க்ஷயம் யாந்தி।
௧௰௪।௰௪௭
பாவா ேலாகப்ரவர்தகா:। யுகத்வயக்ருதாந் தர்மாந்। ௧௰௪।௰௪௭
ப்ரார்தநா ந ச குர்வேத। ஏதத் கலியுகம் பூப। ௧௰௪।௰௪௭
யத்ர ஜாேதா அஸி பார்திவ। நாத்ராவதாரம் குருேத। ௧௰௪।௰௪௮
க்ருஷ்ணாம்ேஸந ஸ்வரூபிணா। க்ருதாதிஷு ஜகத் பாதி। ௧௰௪।௰௪௮
ைதத்ேயப்ேயா ரூபத்ருத் தரி:। கெலௗ த்வ் அந்யம் ஸமாவிஸ்ய।
௧௰௪।௰௪௯
பூர்ேவாத்பந்நம் பிபர்தி தம்। ப்ரத்யக்ரரூபத்ருக் ேதேவா। ௧௰௪।௰௪௯
த்ருஸ்யேத ந கெலௗ ஹரி:। க்ருதாதிஷ்வ் ஏவ ேதைநஷ। ௧௰௪।௰௫
த்ரியுக: பரிபட்யேத। கேலர் அந்ேத ச ஸம்ப்ராப்ேத। ௧௰௪।௰௫
கல்கிநம் ப்ரஹ்மவாதிநம்। அநுப்ரவிஸ்ய குருேத। ௧௰௪।௰௫௧
வாஸுேதேவா ஜகத்ஸ்திதிம்। பூர்ேவாத்பந்ேநஷு பூேதஷு। ௧௰௪।௰௫௧
ேதஷு ேதஷு கெலௗ ப்ரபு:। க்ருத்வா ப்ரேவஸம் குருேத। ௧௰௪।௰௫௨

யத் அபிப்ேரதம் அச்யுத:। ஸ்ேவச்சாஸுக்ேல ஜகச் சுக்லம்। ௧௰௪।௰௫௨
ரக்ேத ரக்தம் ச ஜாயேத। பேதீ ச பததாம் ீ அஸ்மிந்। ௧௰௪।௰௫௩
க்ருஷ்ேண சாத்ராஸிதம் ந்ருப। ஏஷ ஏவ ஜகத்ேதேவா। ௧௰௪।௰௫௩
ஜகத்ஸ்ரஷ்டா ஜகத்குரு:। யத்ரூப ஏவ ேதேவா அயம்। ௧௰௪।௰௫௪
தத்ரூபம் ஜாயேத ஜகத்। சதுர்யுகம் ந: கதிதம்। ௧௰௪।௰௫௪
ஸம்ேக்ஷபாத் பவதாகிலம்। கலிம் விஸ்தரேதா ப்ரூஹி। ௧௰௫।௰௰௧
யத்ர ஜாேதா அஸ்மி பார்கவ। பகவத்ய் அமேல விஷ்ெணௗ।
௧௰௫।௰௰௧
க்ரீடயா க்ருஷ்ணதாம் கேத। கிமாஹாரா: கிமாசாரா। ௧௰௫।௰௰௨
பவிஷ்யந்தி ப்ரஜாஸ் ததா। ப்ராஹ்மணா: க்ஷத்ரியா ைவஸ்யா:।
௧௰௫।௰௰௨
ஸூத்ராஸ் ச த்விஜ கீத்ருஸா:। பவிஷ்யந்தி கெலௗ ப்ராப்ேத।
௧௰௫।௰௰௩
தந் மமாசŠவ விஸ்தராத்। தப: பரம் க்ருதயுேக। ௧௰௫।௰௰௩
த்ேரதாயாம் யஜ்ஞ ஏவ ஹி। ப்ரதாநம் த்வாபேர தாநம்। ௧௰௫।௰௰௪
ஸத்யம் ஏவ கெலௗ யுேக। க்ருேத யுேக மந:ஸுத்திர்। ௧௰௫।௰௰௪
அஸ்த்ய் ஏவாயத்நதஸ் தப:। தேபா நிஷ்பாத்யேத பூப। ௧௰௫।௰௰௫
ேயாகஸம்ஸாதநம் பரம்। ராகாதிேதாஷதுஷ்ேடந। ௧௰௫।௰௰௫
மநஸா யத் தேபா ந்ருப। க்ரியேத க்ேலஸநாஸாய। ௧௰௫।௰௰௬
தத் தேபா ந விமுக்தேய। த்ேரதாயாம் து க்ரியாயஜ்ஞாந்। ௧௰௫।௰௰௬
மேநாயஜ்ஞாம்ஸ் தேதா நரா:। விதந்வேத ஸ்தூலதர:। ௧௰௫।௰௰௭
பந்தா தர்மஸ்ய ஸ ப்ரேபா। த்வாபேர நாதிவித்வத்தா। ௧௰௫।௰௰௭
யதா த்ேரதாயுேக அபவத்। தத: ஸ்தூலதர: பந்தா। ௧௰௫।௰௰௮

தாநாத்மா க்ரியேத நைர:। ந வித்வத்தா ந ஸுத்தார்ேதா। ௧௰௫।௰௰௮
ந ஸுத்திர் மநஸ: கெலௗ। யேதா அத: ஸத்யம் ஏைவகம்।
௧௰௫।௰௰௯
ஏகாந்ேதேநாபகாரகம்। யதா ஸத்யம் ததா க்ஷாந்திர்। ௧௰௫।௰௰௯
அஹிம்ஸா ச கெலௗ யுேக। பேராபதாபாத் விரதிர்। ௧௰௫।௰௧
நராணாம் உபகாரிகா। தஸ்மிந் ேகாேர யுேக ப்ராப்ேத। ௧௰௫।௰௧
க்ருஷ்ேண க்ருஷ்ணத்வம் ஆகேத। யாத்ருக்ரூபம் ஜகத் இதம்।
௧௰௫।௰௧௧
பவதீஹ ஸ்ருணுஷ்வ தத்। ராஜாேநா ப்ராஹ்மணா ைவஸ்யா:।
௧௰௫।௰௧௧
ஸூத்ராஸ் ச மநுேஜஸ்வர। வ்யாஜதர்மபராஸ் ைசவ। ௧௰௫।௰௧௨
தர்மைவதம்ஸிகா ஜநா:। ஸத்யம் ஸம்க்ஷிப்யேத ேலாேக। ௧௰௫।௰௧௨
நைர: பண்டிதமாநிபி:। ஸத்யஹாந்யா ததஸ் ேதஷாம்। ௧௰௫।௰௧௩
ஸ்வல்பம் ஆயுர் பவிஷ்யதி। ஆயுஷ: ப்ரக்ஷயாத் வித்யாம்।
௧௰௫।௰௧௩
ந ஸŠயந்த்ய் உபஸிக்ஷிதும்। வித்யாஹீநாந் அபுத்தீம்ஸ் தாம்ல்।
௧௰௫।௰௧௪
ேலாேபா அப்ய் அபிபவிஷ்யதி। ேலாபக்ேராதபரா மூடா:। ௧௰௫।௰௧௪
காமவஸ்யாஸ் ச மாநவா:। பத்தைவரா பவிஷ்யந்தி। ௧௰௫।௰௧௫
பரஸ்பரவேதப்ஸவ:। ப்ராஹ்மணா: க்ஷத்ரியா ைவஸ்யா:। ௧௰௫।௰௧௫
ஸம்கீர்யந்த: பரஸ்பரம்। ஸூத்ரதுல்யா பவிஷ்யந்தி। ௧௰௫।௰௧௬
தப:ஸத்யவிநாக்ருதா:। அந்த்யா மத்யா பவிஷ்யந்தி। ௧௰௫।௰௧௬
மத்யாஸ் சாந்தாவஸாயிந:। ஈத்ருேஸா பவிதா ேலாக:। ௧௰௫।௰௧௭

க்ருஷ்ேண க்ருஷ்ணத்வம் ஆகேத। வஸ்த்ராணாம் ப்ரவரா ஸாண।ீ
௧௰௫।௰௧௭
தாந்யாநாம் ேகாரதூஷக:। பார்யாமித்ராஸ் ச புருஷா। ௧௰௫।௰௧௮
பவிஷ்யந்தி கெலௗ யுேக। மத்ஸ்யாமிேஷண ஜவந்ேதா ீ । ௧௰௫।௰௧௮
துஹந்தஸ் சாப்ய் அஜாவிகா:। ேகாஷு நஷ்டாஸு புருஷா।
௧௰௫।௰௧௯
பவிஷ்யந்தி ததா ந்ருப। ஸரித்தீேரஷு குத்தாைலர்। ௧௰௫।௰௧௯
வாபயிஷ்யந்தி ெசௗஷதீ:। தாஸ் சாப்ய் அல்பபலாஸ் ேதஷாம்।
௧௰௫।௰௨
பவிஷ்யந்தி யுகக்ஷேய। அநிஷ்க்ராந்தாஸ் து ஸம்பந்தா:। ௧௰௫।௰௨
ஸ்வேகாத்ராத் புருஷர்ஷப। அநிஷ்க்ராந்தாநி ஸ்ராத்தாநி। ௧௰௫।௰௨௧
பவிஷ்யந்தி ச ேகஹத:। ந வ்ரதாநி சரிஷ்யந்தி। ௧௰௫।௰௨௧
ப்ராஹ்மணா ேவதநிந்தகா:। ந யŠயந்தி ந ேஹாஷ்யந்தி। ௧௰௫।௰௨௨
ேஹதுவாதவிகூலிந:। ப்ராயஸ: க்ருபணாநாம் ச। ௧௰௫।௰௨௨
ததா பந்திமதாம் அபி। விதவாநாம் ச வித்தாநி। ௧௰௫।௰௨௩
ஹரிஷ்யந்தி பலாந்விதா:। அந்யாேயாபாத்தவித்ேதஷு। ௧௰௫।௰௨௩
கரிஷ்யந்தி நரா: ஸ்ப்ருஹாம்। ேவஸ்யாலாவண்யபாேவஷு।
௧௰௫।௰௨௪
ஸ்ப்ருஹாம் ேயாஷித் கரிஷ்யதி। கந்யாம் ந யாசிதா கஸ்சிந்।
௧௰௫।௰௨௪
ந ச கந்யாப்ரேதா நர:। கந்யா வரஸ் ச ச்சந்ேதந। ௧௰௫।௰௨௫
க்ருஹீஷ்யந்தி பரஸ்பரம்। பார்யா ந பதிஸுஸ்ரூஷாம்। ௧௰௫।௰௨௫
ததா காசித் கரிஷ்யதி। நரா ேதவத்விஜாம்ஸ் த்யக்த்வா। ௧௰௫।௰௨௬

பவிஷ்யந்த்ய் அந்யேதாமுகா:। யஜ்ஞபாகபுேஜா ேதவா। ௧௰௫।௰௨௬
ேய ேவதபடிதா த்விஜா:। ப்ரஹ்மாத்யாஸ் தாந் பரித்யஜ்ய। ௧௰௫।௰௨௭
நரா: காலபலாத்க்ருதா:। ேஹதுவாதபரா ேதவாந்। ௧௰௫।௰௨௭
கரிஷ்யந்த்ய் அபராம்ஸ் ததா। ேய யவாந்நா ஜநபதா। ௧௰௫।௰௨௭
ேகாதூமாந்நாஸ் தைதவ ச। தாந் ேதஸாந் ஸம்ஸ்ரயிஷ்யந்தி।
௧௰௫।௰௨௮
நரா: கலியுேக ந்ருப। ந ஸ்ராத்ைதஸ் ச பித்ரும்ஸ் சாபி। ௧௰௫।௰௨௮
தர்பயிஷ்யந்தி மாநவா:। பஹு மம்ஸ்யந்தி ேத ஸ்நாநம்। ௧௰௫।௰௨௯
நாபி ெஸௗசபரா நரா:। ந விஷ்ணுபக்திப்ரவணம்। ௧௰௫।௰௨௯
நராணாம் ந்ருப மாநஸம்। பவிதா து யுேக ப்ராப்ேத। ௧௰௫।௰௩
க்ருஷ்ேண கார்ஷ்ண்ேயாபலக்ஷிேத। விநிந்தாம் ப்ரதேம பாேத।
௧௰௫।௰௩
கரிஷ்யந்தி ஹேரர் நரா:। யுகாந்ேத து ஹேரர் நாம। ௧௰௫।௰௩௧
ைநவ கஸ்சித் க்ருஹீஷ்யதி। தந்யாஸ் ேத புருஷவ்யாக்ர। ௧௰௫।௰௩௧
பாபாம்ேபாதாவ் அபாபிந:। ேய நாமாபி கெலௗ விஷ்ேணார்।
௧௰௫।௰௩௨
க்ருஹீஷ்யந்த்ய் அக்ஷயாத்மந:। த்யாயந் ஹரிம் க்ருதயுேக।
௧௰௫।௰௩௨
த்ேரதாத்வாபரேயார் யஜந்। யத் ஆப்ேநாதி கெலௗ நாம்நா। ௧௰௫।௰௩௩
தத் ஏவ பரிகீர்தயந்। ஹரிர் ஹரதி பாபாநி। ௧௰௫।௰௩௩
நாம பக்த்யா யதீரிதம்। வாஸுேதேவதி ந ஜநஸ்। ௧௰௫।௰௩௪
தத் ஏேவாச்சாரயிஷ்யதி। பஹுபாஷண்டஸம்கீர்ேண। ௧௰௫।௰௩௪

ஜகத்ய் அஸ்மிந் கெலௗ யுேக। க்ருஷ்ணாேயதி நேமா அஸ்த்வ் அத்ர।
௧௰௫।௰௩௫
ஸுக்ருதீயதி வŠயதி। ேஹதுவாதபைலர் ேமாஹம்। ௧௰௫।௰௩௫
குஹைகஸ் ச ஜேந ததா। பாஷண்டிந: கரிஷ்யந்தி। ௧௰௫।௰௩௬
சாதுராஸ்ரம்யதூஷகா:। பாஷண்டபூதம் அத்யர்தம்। ௧௰௫।௰௩௬
ஜகத் ஏதத் அஸத்க்ருதம்। பவிஷ்யதி ததா பூப। ௧௰௫।௰௩௭
வ்ருதாப்ரவ்ரஜிேதாத்கடம்। ந து த்விஜாதிஸுஸ்ரூஷாம்। ௧௰௫।௰௩௭
ந ஸ்வதர்மாநுபாலநம்। கரிஷ்யந்தி ததா ஸூத்ரா:। ௧௰௫।௰௩௮
ப்ரவ்ரஜ்யாலிங்கிேநா வ்ருதா। உத்ேகாசா: ெஸௗகதாஸ் ைசவ।
௧௰௫।௰௩௮
மஹாயாநரதாஸ் ததா। பவிஷ்யந்த்ய் அத பாஷண்டா:। ௧௰௫।௰௩௯
காபிலா பிக்ஷவஸ் ததா। வ்ருத்தா: ஸ்ராவகநிர்க்ரந்தா:। ௧௰௫।௰௩௯
ஸித்தபுத்ராஸ் ததாபேர। பவிஷ்யந்தி துராத்மாந:। ௧௰௫।௰௪
ஸூத்ரா: கலியுேக ந்ருப। நி:ெஸௗசா வக்ரமதய:। ௧௰௫।௰௪
பரபாகாந்நேபாஜநா:। பவிஷ்யந்தி துராத்மாந:। ௧௰௫।௰௪௧
ஸூத்ரா: ப்ரவ்ரஜிதாஸ் ததா। ஏேத சாந்ேய ச பஹவ:। ௧௰௫।௰௪௧
பாஷண்டா: புருஷர்ஷப। ப்ராஹ்மணா: க்ஷத்ரியா ைவஸ்யா।
௧௰௫।௰௪௨
பவிஷ்யந்தி ததா பேர। ராஜஸுல்கஹரா: க்ஷுத்ரா। ௧௰௫।௰௪௨
க்ருஹஸ்தபரிேமாஷகா:। முநிேவஷாக்ருதிச்சந்நா। ௧௰௫।௰௪௩
வாணிஜ்யம் உபஜவிகா ீ :। ந த்விஜாந் ந கெலௗ ேதவாந்। ௧௰௫।௰௪௩
பூஜயிஷ்யந்தி மாநவா:। ம்ேலச்சபாஷாநிபந்ைதஸ் து। ௧௰௫।௰௪௪
ேஹதுவாைதர் விகூலிதா:। ஏவம் ேதஷ்வ் அதிதுஷ்ேடஷு। ௧௰௫।௰௪௪

விமார்கபதிவர்திந:। பவிஷ்யந்த்ய் அபேர துஷ்டாஸ்। ௧௰௫।௰௪௫
ேதஷாம் மார்காநுயாயிந:। அஸம்ஸ்க்ருேதாக்திவக்தாேரா। ௧௰௫।௰௪௫
ேவதஸாஸ்த்ரவிநிந்தகா:। ஜகதுந்மார்ககர்தாேரா। ௧௰௫।௰௪௬
பவிஷ்யந்தி ததா நரா:। தச்சீலவர்திபிர் பூப। ௧௰௫।௰௪௬
மநுஷ்ைய: பரிபூரிேத। ஜகத்ய் அத்ர ததா ந்ருணாம்। ௧௰௫।௰௪௭
ஸ்வல்பம் ஆயுர் பவிஷ்யதி। பரமாயுஸ் ச பவிதா। ௧௰௫।௰௪௭
ததா வர்ஷாணி ேஷாடஸ। தத: ப்ராணாந் ப்ரஹாஸ்யந்தி। ௧௰௫।௰௪௮
க்ருஷ்ேண க்ருஷ்ணத்வம் ஆகேத। பஞ்சேம வாத ஷஷ்ேட வா।
௧௰௫।௰௪௮
வர்ேஷ கந்யா ப்ரஸூயேத। ஸப்தவர்ஷாஷ்டவர்ஷா வா। ௧௰௫।௰௪௯
ப்ரஜாஸ்யந்தி நராஸ் ததா। அல்பத்ரவ்யா வ்ருதாலிங்கா। ௧௰௫।௰௪௯
ஹிம்ஸாரதிபராயணா:। ஹர்தாேரா ந து தாதாேரா। ௧௰௫।௰௫
பவிஷ்யந்தி கெலௗ நரா:। ஸுக்லாதாநபரா: க்ஷுத்ரா:। ௧௰௫।௰௫
பரபாகாஸிேநா த்விஜா:। ைவஸ்யாஸ் ததா து ராஜாேநா। ௧௰௫।௰௫௧
ந து க்ஷத்ரியவம்ஸஜா:। ஸூத்ரா பிக்ஷவதா விப்ரா:। ௧௰௫।௰௫௧
ஸுஸ்ரூஷாவிபணாஸ்ரிதா:। பவிஷ்யந்தி ந்ருபஸ்ேரஷ்ட। ௧௰௫।௰௫௨
க்ருஷ்ேண க்ருஷ்ணத்வம் ஆகேத। ந ஸிஷ்ேயா ந குரு: கஸ்சிந்।
௧௰௫।௰௫௨
ந புத்ேரா ந பிதா ததா। ந பார்யா ந பதிர் பூப। ௧௰௫।௰௫௩
பவிதா தத்ர ஸம்குேல। ஏதத் காலஸ்வரூபம் ேத। ௧௰௫।௰௫௩
ஸதாநீக மேயாதிதம்। விஷ்ணுபக்தாந் நரஸ்ேரஷ்ட। ௧௰௫।௰௫௪
ந நராந் பாதேத கலி:। ேய அஹர்நிஸம் ஜகத்தாதுர்। ௧௰௫।௰௫௪
வாஸுேதவஸ்ய கீர்தநம்। குர்வந்தி தாந் நரவ்யாக்ர। ௧௰௫।௰௫௫

ந கலிர் பாதேத நராந்। ேய தந்மநஸ்காஸ் திஷ்டந்தி। ௧௰௫।௰௫௫
ப்ரயாந்த: ஸம்ஸ்திதாஸ் ததா। ஸ்வபந்தஸ் ச நரவ்யாக்ர।
௧௰௫।௰௫௬
தாந் கலிர் ந ப்ரபாதேத। ஸர்வத்ர பகவாந் விஷ்ணுர்। ௧௰௫।௰௫௬
ேகாவிந்த: ேகஸேவா ஹரி:। யஸ்ய பாேவா ந தம் பூப। ௧௰௫।௰௫௭
கதாசித் பாதேத கலி:। ந கெலௗ கலிேசஷ்ேடா அெஸௗ। ௧௰௫।௰௫௭
மூேடஷு ந ஸ முஹ்யேத। பகவத்ய் அச்யுேத நித்யம்। ௧௰௫।௰௫௮
ேயந பாவ: ஸமர்பித:। கலிப்ரபாேவா துஷ்ேடாக்தி:। ௧௰௫।௰௫௮
பாஷண்டாநாம் தேதாக்தய:। ந க்ராமந்ேத மநஸ் தஸ்ய। ௧௰௫।௰௫௯
யஸ்ய ேசதஸி ேகஸவ:। கெலௗ க்ருதயுகம் தஸ்ய। ௧௰௫।௰௫௯
கலிஸ் தஸ்ய க்ருேத யுேக। யஸ்ய ேசதஸி ேகாவிந்ேதா। ௧௰௫।௰௬
ஹ்ருதேய யஸ்ய நாச்யுத:। அநிஷ்ட்வாபி மஹாயஜ்ைஞர்। ௧௰௫।௰௬
அக்ருத்வாபி பித்ருஸ்வதாம்। க்ருஷ்ணம் அப்யர்ச்ய யத் பக்த்யா।
௧௰௫।௰௬௧
ைநநம் ஸ்ேவாமரணம் தேபத்। யஸ்யாக்ரதஸ் ததா ப்ருஷ்ேட।
௧௰௫।௰௬௧
கச்சதஸ் திஷ்டேதா அபி வா। ேகாவிந்ேத நியதம் ேசத:। ௧௰௫।௰௬௨
க்ருதக்ருத்ய: ஸைதவ ஸ:। ஏதத் விதித்வா பூபால। ௧௰௫।௰௬௨
ஸர்ேவ ஸர்ேவஸ்வேர ஹெரௗ। தந்மநா பவ தச்சித்தஸ்। ௧௰௫।௰௬௩
தந்மநா நாவஸததி ீ । பரமார்தம் அேஸஷஸ்ய। ௧௰௫।௰௬௩
ஜகத: ப்ரபவாவ்யயம்। ஸரண்யம் ஸரணம் கச்சந்। ௧௰௫।௰௬௪
ேகாவிந்தம் நாவஸததி ீ । கலிகல்மஷகக்ஷாக்நிம்। ௧௰௫।௰௬௪
நிர்வாணம் பதம் அவ்யயம்। ஸர்வகாரணம் அவ்யக்தம்। ௧௰௫।௰௬௫

விஷ்ணும் த்யாயந் ந ஸததி ீ । யத்ர ஸர்வமேய த்யாேத। ௧௰௫।௰௬௫
த்ேயயம் அந்யந் ந வித்யேத। யத்ரார்சிேத அர்சநீயஸ் ச। ௧௰௫।௰௬௬
ஜாயேத தம் நமாம்ய் அஹம்। ஜகத்ஸ்ரஷ்டாரம் இேஸஸம்।
௧௰௫।௰௬௬
அநாதிம் பரத: பரம்। ஸர்வாஸ்பதம் ஸர்வபூதம்। ௧௰௫।௰௬௭
கச்சந் ஸர்வாத்மநா ஹரிம்। ஹரத்ய் அகம் அேஸஷம் ேயா।
௧௰௫।௰௬௭
ஹரிர் இத்ய் அபிஸம்ஸ்துத:। அேஸஷாகஹரம் விஷ்ணும்।
௧௰௫।௰௬௮
ஹரிவர்ணம் ஹரிம் நம:। யத்கீர்தநாத் அக: ஸுத்த:। ௧௰௫।௰௬௮
ஸ்ம்ருேத யத்ராஸுசி: ஸுசி:। தம் ஆத்மநி ஸ்திதம் பூப। ௧௰௫।௰௬௯
புண்டரீேகக்ஷணம் நம:। அபவித்ர: பவித்ேரா வா। ௧௰௫।௰௬௯
ஸர்வாவஸ்தகேதா அபி வா। ய: ஸ்மேரத் புண்டரீகாக்ஷம்। ௧௰௫।௰௭
ஸ பாஹ்யாப்யந்தர: ஸுசி:। யத்ய் அப்ய் உபஹத: பாைபர்। ௧௰௫।௰௭
யதி வாத்யந்ததுஷ்க்ருைத:। ததாபி ஸம்ஸ்மரந் விஷ்ணும்। ௧௰௫।௰௭௧
ஸ பாஹ்யாப்யந்தர: ஸுசி:। கலாவ் அத்ராதிேதாஷாட்ேய। ௧௰௫।௰௭௧
விஷயாஸக்தமாநஸ:। க்ருத்வாபி பாபம் ேகாவிந்தம்। ௧௰௫।௰௭௨
த்யாயந் பாைபர் விமுச்யேத। தத் த்யாநம் யத்ர ேகாவிந்த:।
௧௰௫।௰௭௨
ஸா கதா யத்ர ேகஸவ:। தத் கர்ம யத் ததர்தீயம்। ௧௰௫।௰௭௩
கிம் அந்ையர் பஹுபாஷிைத:। ைநதத் பிதா தநூஜாய। ௧௰௫।௰௭௩
ந ஸிஷ்யாய குருர் ந்ருப। பரமார்தபதம் ப்ரூயாத்। ௧௰௫।௰௭௪
யத் ஏதத் ேத மேயாதிதம்। ஸம்ஸாேர ப்ரமதா லப்யம்। ௧௰௫।௰௭௪

புத்ரதாரதநம் வஸு। ஸுஹ்ருதஸ் ச ததிவாந்ேய। ௧௰௫।௰௭௫
ேநாபேதேஸா ந்ருேபத்ருஸ:। கிம் புத்ரதாைரர் வித்ைதர் வா।
௧௰௫।௰௭௫
ந மித்ேர ேக்ஷத்ரபாந்தைவ:। உபேதஷ்டா பேரா பந்துர்। ௧௰௫।௰௭௬
ஈத்ருேஸா ேயா விமுக்தேய। ேயா ைநகாக்ரமநா விஷ்ணாவ்।
௧௰௫।௰௭௬
இதி ஜ்ஞாத்வாபி பார்திவ। ஸ நூநம் அச்யுதஸ்ையவ। ௧௰௫।௰௭௭
நாநுக்ராஹ்ேயா அத்ர பாபக்ருத்। த்விவிேதா பூதஸர்ேகா அயம்।
௧௰௫।௰௭௭
ைதவ ஆஸுர ஏவ ச। விஷ்ணுபக்திபேரா ைதேவா। ௧௰௫।௰௭௮
விபரீதஸ் ததாஸுர:। உபேதஸப்ரதாேநந। ௧௰௫।௰௭௮
ஸம்பூதித்ரய ஆஸுர:। ைநவ விஷ்ணுபேரா பூப। ௧௰௫।௰௭௯
பவத்ய் அக்ஷீணகல்மஷ:। உபேதேஸஷு ேஸா அத்யந்தம்।
௧௰௫।௰௭௯
ஸம்ரம்பீ யுக்திேயாஜிதம்। ேஹதுவாதாஸ்ரிேதா மூேடா। ௧௰௫।௰௮
ததாத்ய் உத்தரம் அக்ஷயம்। ஸ்நாதஸ்ய ேதவகார்ேயஷு। ௧௰௫।௰௮
ததாபத்ஸு கதாஸு ச। ஆஸுரஸ்யாபி தந்மாத்ரா। ௧௰௫।௰௮௧
ஜாயேத ந்ருபேத மதி:। இதி மத்வாதிஸத்பாவம்। ௧௰௫।௰௮௧
ரஹஸ்யம் பரம் ஈரிதம்। த்வயாச்யுதாந் மதிர் பூப। ௧௰௫।௰௮௨
நாபேநயா கதம்சந। அப்ராப்ய வாஞ்சதி ரதிம்। ௧௰௫।௰௮௨
ஸர்வைதவ ந்ருணாம் மந:। இைஹவாச்யுதஸம்ஸர்கி। ௧௰௫।௰௮௩
யதி தத் கிம் ப்ரஹீயேத। தத் அலம் தவ ராஜ்ேயந। ௧௰௫।௰௮௩
பலேகாஸாதிபிஸ் ததா। சிந்திைதர் அச்யுதஸ் சிந்த்ேயா। ௧௰௫।௰௮௪

யத்பாவி ந ததந்யதா। ஏதத் பவித்ரம் ஆேராக்யம்। ௧௰௫।௰௮௪
தந்யம் து:ஸ்வப்நநாஸநம்। ஸுகப்ரீதிகரம் ந்ருணாம்। ௧௰௫।௰௮௫
பததாம் நிர்வ்ருதிப்ரதம்। ேயஷாம் க்ருேஹஷு லிகிதம்। ௧௰௫।௰௮௫
ஏதத் ஸ்தாஸ்யதி நித்யதா। ந தத்க்ருஹாணி ைதேவாத்தா।
௧௰௫।௰௮௬
பாதிஷ்யந்ேத ஹ்ய் உபத்ரவா:। கிம் தீர்ைத: கிம் ப்ரதாைநர் வா।
௧௰௫।௰௮௬
கிம் யஜ்ைஞ: கிம் உேபாஷிைத:। அஹந்ய் அஹந்ய் ஏதத் ஏவ।
௧௰௫।௰௮௭
தந்மயத்ேவந ஸ்ருண்வத:। ய ததாதி திலப்ரஸ்தம்। ௧௰௫।௰௮௭
ஸுவர்ணஸ்ய ச மாஸகம்। ஸ்ருேணாதி ஸ்ேலாகம் ஏகம் ச।
௧௰௫।௰௮௮
தர்மஸ்யாஸ்ய ஸமம் ஹி தத்। அத்யாயபாரணம் சாஸ்ய।
௧௰௫।௰௮௮
ேகாப்ரதாநாஹ் விஸிஷ்யேத। ஸ்ருண்வம்ஸ் சாஸ்ய தஸாத்யாயாந்।
௧௰௫।௰௮௯
ஸத்ய: பாைப: ப்ரமுச்யேத। ராத்ர்யா யத் ஏந: குருேத। ௧௰௫।௰௮௯
திவேஸந ச மாநவ:। ஸ்ேராதும் வாஞ்சா ஸமஸ்தம் தத்। ௧௰௫।௰௯
பார்திவஸ்ய வ்யேபாஹதி। கபிலாநாம் ஸேத தத்ேத। ௧௰௫।௰௯
யத் பேவஜ் ஜ்ேயஷ்டபுஷ்கேர। நேரந்த்ர விஷ்ணுதர்மாணாம்।
௧௰௫।௰௯௧
ததாவாப்ேநாதி பாரேண। ப்ரவ்ருத்ெதௗ ச நிவ்ருத்ெதௗ ச। ௧௰௫।௰௯௧
தர்மம் தர்மப்ருதாம் வர। நாஸ்த்ய் அந்யத் விஷ்ணுதமாணாம்।
௧௰௫।௰௯௨

ஸத்ருஸம் ஸாஸ்த்ரம் உத்தமம்। ைமத்ரீம் கேராதி பூேதஷு।
௧௰௫।௰௯௨
பக்திம் அத்யந்தம் அச்யுேத। ஸ்ருத்வா தர்மாந் இமாந் ேவத்தி।
௧௰௫।௰௯௩
அேபேதநாத்மேநா ஜகத்। படந்ந் அநுதிநம் தர்மாந்। ௧௰௫।௰௯௩
ஏதாஞ் ஸ்ருண்வம்ஸ் ததாபி வா। பக்த்யா மதிமதாம் ஸ்ேரஷ்ட।
௧௰௫।௰௯௪
ஸர்வபாைப: ப்ரமுச்யேத। ேநாபஸர்ேகா ந சாநர்ேதா। ௧௰௫।௰௯௪
ந ெசௗராக்நிபயம் க்ருேஹ। தஸ்மிந் பவதி பூபால। ௧௰௫।௰௯௫
யத்ைரதத் புஸ்தகம் ஸ்திதம்। ந கர்பஹாரிணீபதிர் ீ । ௧௰௫।௰௯௫
ந ச பாலக்ரஹா க்ருேஹ। யத்ைரதத் பூபேத தத்ர। ௧௰௫।௰௯௬
ந பிஸாசாதிகாத் பயம்। ஸ்ருண்வந் விப்ேரா ேவதவித் ஸ்யாத்।
௧௰௫।௰௯௬
க்ஷத்ரிய: ப்ருதிவபதி ீ :। க்ருத்திம் ப்ரயாதி ைவஸ்யஸ் ச। ௧௰௫।௰௯௭
ஸூத்ரஸ் சாேராக்யம் க்ருச்சதி। யஸ் ைசதாந் நியதாந் தர்மாந்।
௧௰௫।௰௯௭
பேடச் ச்ரத்தாஸமந்வித:। விஷ்ெணௗ மந: ஸமாேவஸ்ய। ௧௰௫।௰௯௮
ஸர்வத்ர ஸமதர்ஸந:। தஸ்ய பாபம் ததா ேராகாந்। ௧௰௫।௰௯௮
து:ஸ்வப்நாத்யாபிசாருகாந்। யச் சாந்யத் துரிதம் கிம்சித்। ௧௰௫।௰௯௯
தத் ஸர்வம் ஹந்தி ேகஸவ:। ேஹமந்ேத ய இமாந் தர்மாஞ்।
௧௰௫।௰௯௯
ஸ்ருேணாதி வஸுதாதிப। ஸ்ரத்தாஸமந்வித: ஸம்யக்। ௧௰௫।௧
ேஸா அக்நிஷ்ேடாமபலம் லேபத்। ஸிஸிேர ச நரவ்யாக்ர। ௧௰௫।௧
ய: ஸ்ருேணாதி யதாவிதி। புண்டரீகஸ்ய யஜ்ஞஸ்ய। ௧௰௫।௧௰௧

ஸ ப்ராப்ேநாதி பலம் நர:। மதுமாதவஸம்ஜ்ேஞ து। ௧௰௫।௧௰௧
ய: ஸ்ருேணாதி நரஸ் த்வ் இமாந்। ேஸா அஸ்வேமதக்ரேதார் பூப।
௧௰௫।௧௰௨
ப்ராப்ேநாத்ய் அவிகலம் பலம்। ஸ்ருண்வந்ந் ஏதாந் நிதாேக ச।
௧௰௫।௧௰௨
தர்மாந் தர்மப்ருதாம் வர। வாஜேபயஸ்ய யஜ்ஞஸ்ய। ௧௰௫।௧௰௩
பலம் ப்ராப்ேநாத்ய் அஸம்ஸயம்। வர்ஷாஸு ேசமாந் ேயா தர்மாந்।
௧௰௫।௧௰௩
ஸம்ஸ்ருண்வந் வஸுதாதிப। ராஜஸூயக்ரேதா: புண்யம்। ௧௰௫।௧௰௪
அகிலம் ஸமவாப்நுயாத்। ஸரத்காேல ச ஸம்ஸ்ருண்வந்। ௧௰௫।௧௰௪
தர்மாந் ஏதாந் நரர்ஷப। ப்ராப்ேநாதி ேகாஸவபலம்। ௧௰௫।௧௰௫
ஸம்யக் ஸ்ரத்தாஸமந்வித:। க்ருதுஷ்வ் ஏேதஷ்வ் ஏதத் ஏவ।
௧௰௫।௧௰௫
படதாம் அபி பார்திவ। பலம் பவதி துஷ்ேடஷு। ௧௰௫।௧௰௬
க்ரேஹஷ்வ் ஏேத ஸுபப்ரதா:। கபிலாநாம் ஸதஸ்ேயாக்தம்।
௧௰௫।௧௰௬
யத் பலம் ஜ்ேயஷ்டபுஷ்கேர। பூேயா பூயஸ் தத் ஆப்ேநாதி। ௧௰௫।௧௰௭
பாரேண பாரேண கேத। பக்த்யா படதி யஸ் ைசதாந்। ௧௰௫।௧௰௭
ேதவஸ்ய புரேதா ஹேர:। ேஸா அர்சயத்ய் அவநீபால। ௧௰௫।௧௰௮
ஜ்ஞாநயஜ்ேஞந ேகஸவம்। ஸர்வாபாதாஸ் ததா பாபம்। ௧௰௫।௧௰௮
அகிலம் மநுேஜஸ்வர। விஷ்ணுதர்மா வ்யேபாஹந்தி। ௧௰௫।௧௰௯
ஸம்ஸ்ம்ருதா: படிதா: ஸ்ருதா:। ஏதத் ேத ஸர்வம் ஆக்யாதம்।
௧௰௫।௧௰௯

ரஹஸ்யம் பரமம் ஹேர:। நாத: பரதரம் கிம்சிச்। ௧௰௫।௧௧
ஸ்ராவ்யம் ஸ்ருதிஸுகாவஹம்। அத்ேராக்தவிதியுக்தஸ்ய। ௧௰௫।௧௧
புருஷஸ்ய விபஸ்சித:। ந துர்லபம் நரவ்யாக்ர। ௧௰௫।௧௧௧
பரமம் ப்ரஹ்ம ஸாஸ்வதம்। ௧௰௫।௧௧௧

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸுவ்ன பகவான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ விஷ்ணு தர்மம் –மூன்றாம் பாகம் —

June 3, 2023

ஸ்ருத்வா தஸ்ய து ேதவர்ேஷர்। வாக்யம் வாக்யவிஸாரத:।
௬௮।௰௰௬
ப்ேராவாச பகவாந் விஷ்ணுர்। நாரதம் ஜகேதா கதி:। ௬௮।௰௰௬
ஹந்த ேத கதயிஷ்யாமி। முேந திவ்யாம் அநுஸ்ம்ருதிம்। ௬௮।௰௰௭
மரேண யாம் அநுஸ்ம்ருத்ய। ப்ராப்ேநாதி பரமாம் கதிம்। ௬௮।௰௰௭
ஓம்காரம் ஆதித: க்ருத்வா। மாம் அநுஸ்ம்ருத்ய மந்மநா:। ௬௮।௰௰௮
ஏகாக்ரப்ரயேதா பூத்வா। இதம் மந்த்ரம் உதீரேயத்। ௬௮।௰௰௮
அவ்யக்தம் ஸாஸ்வதம் ேதவம்। அநந்தம் புருேஷாத்தமம்। ௬௮।௰௰௯
ப்ரபத்ேய ப்ராஞ்ஜலிர் விஷ்ணும்। அச்யுதம் பரேமஸ்வரம்। ௬௮।௰௰௯
புராணம் பரமம் விஷ்ணும்। அத்புதம் ேலாகபாவநம்। ௬௮।௰௧
ப்ரபத்ேய புண்டரீகாக்ஷம்। ஈஸம் பக்தாநுகம்பிநம்। ௬௮।௰௧
ேலாகநாதம் ப்ரபந்ேநா அஸ்மி। அக்ஷரம் பரமம் பதம்। ௬௮।௰௧௧
பகவந்தம் ப்ரபந்ேநா அஸ்மி। பூதபவ்யபவத்ப்ரபும்। ௬௮।௰௧௧
ஸ்ரஷ்டாரம் ஸர்வபூதாநாம்। அநந்தபலெபௗருஷம்। ௬௮।௰௧௨
பத்மநாபம் ஹ்ருஷீேகஸம்। பபத்ேய ஸத்யம் அவ்யயம்। ௬௮।௰௧௨
ஹிரண்யகர்பம் பூகர்பம்। அம்ருதம் விஸ்வேதாமுகம்। ௬௮।௰௧௩
ஆபாஸ்வரம் அநாத்யந்தம்। ப்ரபத்ேய பாஸ்கரத்யுதிம்। ௬௮।௰௧௩
ஸஹஸ்ரஸிரஸம் ேதவம்। ைவகுண்டம் தார்Šயவாஹநம்।
௬௮।௰௧௪
ப்ரபத்ேய ஸூŠமம் அசலம்। வேரண்யம் அபயப்ரதம்। ௬௮।௰௧௪
நாராயணம் நரம் ஹம்ஸம்। ேயாகாத்மாநம் ஸநாதநம்। ௬௮।௰௧௫
ஸரண்யம் ஸர்வேலாகாநாம்। ப்ரபத்ேய த்ருவம் ஈஸ்வரம்। ௬௮।௰௧௫
ய: ப்ரபு: ஸர்வேலாகாநாம்। ேயந ஸர்வம் இதம் ததம்। ௬௮।௰௧௬

சராசரகுருர் ேதவ:। ஸ ேநா விஷ்ணு: ப்ரஸததுீ । ௰௬௮।௰௧௬௧௧௰
யஸ்மாஜ் ஜாத: புரா ப்ரஹ்மா। பத்மேயாநி: பிதாமஹ:। ௬௮।௰௧௭
ப்ரஸததுீ ஸ ேநா விஷ்ணு:। பிதா மாதா பிதாமஹ:। ௬௮।௰௧௭
ய: புரா ப்ரலேய ப்ராப்ேத। நஷ்ேட ேலாேக சராசேர। ௬௮।௰௧௮
ஏகஸ் திஷ்டதி ேயாகாத்மா। ஸ ேநா விஷ்ணு: ப்ரஸததுீ । ௬௮।௰௧௮
சதுர்பிஸ் ச சதுர்பிஸ் ச। த்வாப்யாம் பஞ்சபிர் ஏவ ச। ௰௬௮।௧௰௯
ஹூயேத ச புநர் த்வாப்யாம்। ஸ ேநா விஷ்ணு: ப்ரஸததுீ ।
௰௬௮।௧௰௯
பர்ஜந்ய: ப்ருதிவ ீஸஸ்யம்। காேலா தர்ம: க்ரியா பலம்। ௬௮।௰௧௯
குணாகர: ஸ ேநா பப்ருர்। வாஸுேதவ: ப்ரஸததுீ । ௬௮।௰௧௯
ேயாகாவாஸ நமஸ் துப்யம்। ஸர்வாவாஸ வரப்ரத। ௬௮।௰௨
யஜ்ஞகர்ப மஹாபாக। பஞ்சயஜ்ஞ நேமா அஸ்து ேத। ௬௮।௰௨
சதுர்மூர்ேத ஜகத்தாம। லŠம்யாவாஸ வரப்ரத। ௬௮।௰௨௧
ஸர்வாவாஸ நமஸ் ேத அஸ்து। ஸாக்ஷிபூத ஜகத்பேத। ௬௮।௰௨௧
அேஜய கண்டபரேஸா। விஸ்வமூர்ேத வ்ருஷாகேப। ௬௮।௰௨௨
த்ரிகர்ேத பஞ்சகாலஜ்ஞ। நமஸ் ேத ஜ்ஞாநஸாகர। ௬௮।௰௨௨
அவ்யக்தாத் அண்டம் உத்பந்நம்। அவ்யக்தாத்ய: பர: ப்ரபு:। ௬௮।௰௨௩
யஸ்மாத் பரதரம் நாஸ்தி। தம் அஸ்மி ஸரணம் கத:। ௬௮।௰௨௩
சிந்தயந்ேதா ஹி யம் நித்யம்। ப்ரஹ்ேமஸாநாதய: ப்ரபும்। ௬௮।௰௨௪
நிஸ்சயம் நாதிகச்சந்தி। தம் அஸ்மி ஸரணம் கத:। ௬௮।௰௨௪
ஜிேதந்த்ரியா மஹாத்மாேநா। ஜ்ஞாநத்யாநபராயணா:। ௬௮।௰௨௫
யம் ப்ராப்ய ந நிவர்தந்ேத। தம் அஸ்மி ஸரணம் கத:। ௬௮।௰௨௫

ஏகாம்ேஸந ஜகத் ஸர்வம்। ேயா அவஷ்டப்ய விபு: ஸ்தித:। ௬௮।௰௨௬
அக்ராஹ்ேயா நிர்குண: ஸாஸ்தா। தம் அஸ்மி ஸரணம் கத:।
௬௮।௰௨௬
திவாகரஸ்ய ெஸௗம்யம் ஹி। மத்ேய ஜ்ேயாதிர் அவஸ்திதம்।
௬௮।௰௨௭
ேக்ஷத்ரஜ்ஞம் இதி யம் ப்ராஹு:। ஸ மஹாத்மா ப்ரஸததுீ । ௬௮।௰௨௭
அவ்யக்தம் அநவஸ்தாேநா। துர்விஜ்ேஞய: ஸநாதந:। ௬௮।௰௨௮
ஆஸ்தித: ப்ரக்ருதிம் புங்க்ேத। ஸ மஹாத்மா ப்ரஸததுீ । ௬௮।௰௨௮
ேக்ஷத்ரஜ்ஞ: பஞ்சதா புங்க்ேத। ப்ரக்ருதிம் பஹுபிர் குைண:।
௬௮।௰௨௯
மேநாகுணாம்ஸ் ச ேயா புங்க்ேத। ஸ மஹாத்மா ப்ரஸததுீ ।
௬௮।௰௨௯
ஸாம்க்யா ேயாகாஸ் ச ேய சாந்ேய। ஸித்தாஸ் ைசவ மஹர்ஷய:।
௬௮।௰௩
யம் விதித்வா விமுச்யந்ேத। ஸ மஹாத்மா ப்ரஸததுீ । ௬௮।௰௩
நமஸ் ேத ஸர்வேதாபத்ர। ஸர்வேதா அக்ஷிஸிேராமுக। ௬௮।௰௩௧
நிர்விகார நமஸ் ேத அஸ்து। ஸாக்ஷிபூத ஹ்ருதி ஸ்தித। ௬௮।௰௩௧
அதீந்த்ரிய நமஸ் துப்யம்। லிங்ேகப்யஸ் த்வம் ப்ரமீயேஸ। ௬௮।௰௩௧
ேய து த்வாம் நாபிஜாநந்தி। ஸம்ஸாேர ஸம்ஸரந்தி ேத। ௬௮।௰௩௨
ராகத்ேவஷவிநிர்முக்தம்। ேலாபேமாஹவிவர்ஜிதம்। ௬௮।௰௩௨
அஸரீரம் ஸரீரஸ்தம்। ஸமம் ஸர்ேவஷு ேதஹிஷு। ௬௮।௰௩௨
அவ்யக்தம் புத்த்யஹம்காெரௗ। மஹாபூேதந்த்ரியாணி ச। ௬௮।௰௩௩
த்வயி தாநி ந ேதஷு த்வம்। ேதஷு த்வம் தாநி ந த்வயி। ௬௮।௰௩௩

ஸ்ரஷ்டா ேபாக்தாஸி கூடஸ்ேதா। குணாநாம் ப்ரபுர் ஈஸ்வர:।
௬௮।௰௩௪
அகர்தா ேஹதுரஹித:। ப்ரபு: ஸ்வாத்மந்ய் அவஸ்தித:। ௬௮।௰௩௪
நமஸ் ேத புண்டரீகாக்ஷ। புநர் ஏவ நேமா அஸ்து ேத। ௬௮।௰௩௫
ஈஸ்வேரா அஸி ஜகந்நாத। கிம் அத: பரம் உச்யேத। ௬௮।௰௩௫
பக்தாநாம் யத் திதம் ேதவ। தத் த்யாய த்ரிதேஸஸ்வர। ௬௮।௰௩௫
மா ேம பூேதஷு ஸம்ேயாக:। புநர் பவது ஜந்மநி। ௬௮।௰௩௬
அஹம்காேரண புத்த்யா வா। ததா ஸத்த்வாதிபிர் குைண:। ௬௮।௰௩௬
மா ேம தர்ேமா ஹ்ய் அதர்ேமா வா। புநர் பவது ஜந்மநி। ௬௮।௰௩௭
விஷையர் இந்த்ரிையர் வாபி। மா ேம பூயாத் ஸமாகம:। ௬௮।௰௩௭
ப்ருதிவம்ீ யாது ேம க்ராணம்। யாது ேம ரஸநா ஜலம்। ௬௮।௰௩௮
சக்ஷுர் ஹுதாஸநம் யாது। ஸ்பர்ேஸா ேம யாது மாருதம்।
௬௮।௰௩௮
ஸப்ேதா ஹ்ய் ஆகாஸம் அப்ேயது। மேநா ைவகாரிகம் ததா।
௬௮।௰௩௯
அஹம்காரஸ் ச ேம புத்திம்। த்வயி புத்தி: ஸேமது ச। ௬௮।௰௩௯
விேயாக: ஸர்வகரைணர்। குைணர் பூைதஸ் ச ேம பேவத்। ௬௮।௰௪
ஸத்த்வம் ரஜஸ் தமஸ் ைசவ। ப்ரக்ருதிம் ப்ரவிஸந்து ேம। ௬௮।௰௪
நிஷ்ேகவலம் பதம் ைசவ। ப்ரயாமி பரமம் தவ। ௬௮।௰௪௧
ஏகீபாவஸ் த்வையவாஸ்து। மா ேம ஜந்ம பேவத் புந:। ௬௮।௰௪௧
நேமா பகவேத தஸ்ைம। விஷ்ணேவ ப்ரபவிஷ்ணேவ। ௬௮।௰௪௨
த்வந்மநஸ் த்வத்கதப்ருஆணஸ்। த்வத்பக்தஸ் த்வத்பராயண:।
௬௮।௰௪௨

த்வாம் ஏவாநுஸ்மேர ேதவ। மரேண ப்ரத்யுபஸ்திேத। ௬௮।௰௪௨
பூர்வேதஹக்ருதா ேய ேம। வ்யாதயஸ் ேத விஸந்து மாம்। ௬௮।௰௪௩
ஆர்தயந்து ச து:காநி। ப்ரவிமுஞ்சாமி யத் க்ருணம்। ௬௮।௰௪௩
உபதிஷ்டந்து ேம ேராகா। ேய மயா பூர்வஸம்சிதா:। ௬௮।௰௪௪
அந்ருேணா கந்தும் இச்சாமி। தத் விஷ்ேணா: பரமம் பதம்। ௬௮।௰௪௪
அஹம் பகவதஸ் தஸ்ய। மம சாெஸௗ ஸுேரஸ்வர:। ௬௮।௰௪௫
தஸ்யாஹம் ந ப்ரணஸ்யாமி। ஸ ச ேம ந ப்ரணஸ்யதி। ௬௮।௰௪௫
நேமா பகவேத தஸ்ைம। ேயந ஸர்வம் இதம் ததம்। ௬௮।௰௪௬
தம் ஏவ ச ப்ரபந்ேநா அஸ்மி। மம ேயா யஸ்ய சாப்ய் அஹம்।
௬௮।௰௪௬
இமாம் அநுஸ்ம்ருதிம் நித்யம்। ைவஷ்ணவம்ீ பாபநாஸநீம்। ௬௮।௰௪௭
ஸ்வபஞ் ஜாக்ரத் பேடத் யஸ் து। த்ரிஸம்த்யம் வாபி ய: ஸ்மேரத்।
௬௮।௰௪௭
மரேண சாப்ய் அநுப்ராப்ேத। யஸ் த்வ் இமாம் ஸமநுஸ்மேரத்।
௬௮।௰௪௮
அபி பாபஸமாசார:। ேஸா அபி யாதி பராம் கதிம்। ௬௮।௰௪௮
அர்சயந்ந் அபி ேயா ேதவம்। க்ருேஹ வாபி பலிம் தேதத்। ௬௮।௰௪௯
ஜுஹ்வத் அக்நிம் ஸ்மேரத் வாபி। லபேத ஸ பராம் கதிம்। ௬௮।௰௪௯
ெபௗர்ணமாஸ்யாம் அமாவாஸ்யாம்। த்வாதஸ்யாம் ச விேஸஷத:।
௬௮।௰௫
ஸ்ராவேயச் ச்ரத்ததாநம்ஸ் து। ேய சாந்ேய மாம் உபாஸ்ரிதா:।
௬௮।௰௫
நம இத்ய் ஏவ ேயா ப்ரூயாந்। மத்பக்த: ஸ்ரத்தயாந்வித:। ௬௮।௰௫௧

தஸ்ய ஸ்யுர் அக்ஷயா ேலாகா:। ஸ்வபாகஸ்யாபி நாரத। ௬௮।௰௫௧
கிம் புநர் ேய யஜந்ேத மாம்। ஸாதேவா விதிபூர்வகம்। ௬௮।௰௫௨
த்யாயந்தி ச யதாந்யாயம்। ேத யாந்தி பரமாம் கதிம்। ௬௮।௰௫௨
அஸ்வேமதஸஹஸ்ராணாம்। ய: ஸஹஸ்ரம் ஸமாசேரத்। ௬௮।௰௫௩
நாெஸௗ தத் பதம் ஆப்ேநாதி। மத்பக்ைதர் யத் அவாப்யேத।
௬௮।௰௫௩
இஷ்டம் தத்தம் தேபா அதீதம்। வ்ரதாநி நியமாஸ் ச ேய। ௬௮।௰௫௪
ஸர்வம் ஏதத் விநாஸாந்தம்। ஜ்ஞாநஸ்யாந்ேதா ந வித்யேத।
௬௮।௰௫௪
தஸ்மாத் ப்ரேதயம் ஸாதுப்ேயா। தர்ம்யம் ஸத்த்வாபயம்கரம்।
௬௮।௰௫௫
தாநாதீந்ய் அந்தவந்தீஹ। மத்பக்ேதா நாந்தம் அஸ்நுேத। ௬௮।௰௫௫
ேயா தத்யாத் பகவஜ்ஜ்ஞாநம்। குர்யாத் வா தர்மேதஸநாம்।
௬௮।௰௫௬
க்ருத்ஸ்நாம் வா ப்ருதிவம்ீ தத்யாந்। ந து துல்யம் கதம்சந।
௬௮।௰௫௬
காந்தாரவநதுர்ேகஷு। க்ருச்ச்ேரஷ்வ் ஆபத்ஸு ஸம்ப்ரேம। ௬௮।௰௫௭
தஸ்யுபி: ஸம்நிருத்தஸ் ச। நாமபிர் மாம் ப்ரகீர்தேயத்। ௬௮।௰௫௭
வராேஹா ரக்ஷது ஜேல। விஷேமஷு ச வாமந:। ௬௮।௰௫௮
ராேமா ராமஸ் ச ராமஸ் ச। த்ராயந்தாம் தஸ்யுேதாஷத:। ௰௬௮।௧௧௧
அடவ்யாம் நாரஸிம்ஹஸ் து। ஸர்வத: பாது ேகஸவ:। ௬௮।௰௫௮
பத்த: பரிகரஸ் ேதந। ேமாக்ஷாய கமநம் ப்ரதி। ௬௮।௰௫௯
ஸக்ருத் உச்சாரிதம் ேயந। ஹரிர் இத்ய் அக்ஷரத்வயம்। ௬௮।௰௫௯

ஜந்மாந்தரஸஹஸ்ராணி। தேபாஜ்ஞாநஸமாதிபி:। ௰௬௮।௧௧௨
நராணாம் க்ஷீணபாபாநாம்। க்ருஷ்ேண பக்தி: ப்ரஜாயேத। ௰௬௮।௧௧௨
கத்வா கத்வா நிவர்தேந। சந்த்ரஸூர்யாதேயா க்ரஹா:। ௰௬௮।௧௧௨
அத்யாபி ந நிவர்தந்ேத। த்வாதஸாக்ஷரசிந்தகா:। ௰௬௮।௧௧௨
ந வாஸுேதவாத் பரம் அஸ்தி மங்கலம்। ந வாஸுேதவாத் பரமம் பவித்ரம்।
௰௬௮।௧௧௨
ந வாஸுேதவாத் பரம் அஸ்தி ைதவதம்। ந வாஸுேதவம் ப்ரணிபத்ய ஸததி ீ ।
௰௬௮।௧௧௨
தஸ்மாந் மாம் ஏவ ேதவர்ேஷ। த்யாயஸ்வாதந்த்ரித: ஸதா। ௬௮।௰௬
அவாப்ஸ்யஸி தத: ஸித்திம்। பதம் த்ரŠயஸி ச த்ருவம்। ௬௮।௰௬
ஏவம் ஸ ேதவேதேவந। நாரத: ப்ரதிேபாதித:। ௬௮।௰௬௧
சகார ேகஸேவ பக்திம்। தஸ்மாத் த்வம் குரு பூபேத। ௬௮।௰௬௧
ய: பேடத் பரயா பக்த்யா। ஸ கச்ேசத் விஷ்ணுஸாம்யதாம்।
௰௬௮।௧௧௩
ஏதத் புண்யம் பாபஹரம்। தந்யம் து:ஸ்வப்நநாஸநம்। ௰௬௮।௧௧௩
பாபம் ப்ரணஸ்யேத ேயந। புண்யம் ேயந விவர்தேத। ௬௯।௰௰௧
யஜ் ஜபந் ஸுகதிம் யாதி। ஸ்ருண்வம்ஸ் ச மம தத் வத। ௬௯।௰௰௧
கஸ்சித் ஆஸத்ீ த்விஜத்ேராக்தா। பிஸுந: க்ஷத்ரியாதம:। ௬௯।௰௰௨
பரபடாருசிர் ீ துஷ்ட:। ஸ்வபாவாத் ஏவ நிர்க்ருண:। ௬௯।௰௰௨
பரிபூதா: ஸதா ேதந। பித்ருேதவத்விஜாதய:। ௬௯।௰௰௩
பரதாேரஷு ைசவாஸ்ய। பபூவாபிரதம் மந:। ௬௯।௰௰௩
ஸ த்வ் ஆயுஷி பரிக்ஷீேண। ஜஜ்ேஞ ேகாேரா நிஸாசர:। ௬௯।௰௰௪
ேதந ைவ கர்மேதாேஷண। ஸ்ேவந பாபக்ருதாம் வர:। ௬௯।௰௰௪

க்ரூைரர் ஏவ தேதா வ்ருத்திம்। ராக்ஷஸத்ேவ விேஸஷத:। ௬௯।௰௰௫
சகார கர்மபி: பாப:। ஸர்வப்ராணிவிஹிம்ஸக:। ௬௯।௰௰௫
தஸ்ய பாபரதஸ்ையவம்। ஜக்முர் வர்ஷஸதாநி ைவ। ௬௯।௰௰௬
ேதந ைவ கர்மேதாேஷண। நாந்யா வ்ருத்திர் அேராசத। ௬௯।௰௰௬
யத் யத் பஸ்யதி ஸத்த்வம் ஸ। தத் தத் ஆதாய ராக்ஷஸ:। ௬௯।௰௰௭
சகாத புருஷவ்யாக்ர। பாஹுேகாசரம் ஆகதம்। ௬௯।௰௰௭
ஏவம் தஸ்யாதிதுஷ்டஸ்ய। குர்வத: ப்ராணிநாம் வதம்। ௬௯।௰௰௮
ஜகாம ஸுமஹாந் கால:। பரிணாமம் ததா வய:। ௬௯।௰௰௮
ஸ ததர்ஸ தபஸ்யந்தம்। தாபஸம் ஸம்ஸ்ரிதவ்ரதம்। ௬௯।௰௰௯
ஊர்த்வபாஹும் மஹாபாகம்। க்ருதரக்ஷம் ஸமந்தத:। ௬௯।௰௰௯
தம் த்ருஷ்ட்வா ஸ து துர்புத்திர்। ப்ராஹ்மணம் ராக்ஷஸாதம:।
௬௯।௰௧
ஸமப்யதாவத் ேவேகந। ஸமாதாதும் சிகாதிஷு:। ௬௯।௰௧
ேதந ரக்ஷா ச யா திக்ஷு। ப்ராஹ்மேணநாபவத் க்ருதா। ௬௯।௰௧௧
தயா நிரஸ்தம் தத் ரேக்ஷா। நிபபாதாவிதூரத:। ௬௯।௰௧௧
பகவந் கீத்ருஸம்ீ ரக்ஷாம்। ஸ சகார த்விேஜாத்தம:। ௬௯।௰௧௨
யயா நிர்தூதவர்ேயா ீ அெஸௗ। நிரஸ்ேதா ரஜநீசர:। ௬௯।௰௧௨
ஏகாக்ரசித்ேதா ேகாவிந்ேத। தஜ் ஜபம்ஸ் தத்பராயண:। ௬௯।௰௧௩
தபஸ் சசார விப்ேரா அெஸௗ। ப்ரவிஷ்ேடா விஷ்ணுபஞ்ஜரம்।
௬௯।௰௧௩
விஷ்ணுபஞ்ஜரம் இச்சாமி। ஸ்ேராதும் தர்மப்ருதாம் வர। ௬௯।௰௧௪
ஸதா ஸர்வபேயப்யஸ் து। ரக்ஷா யா பரமாபவத்। ௬௯।௰௧௪
த்ரிபுரம் ஜக்நுஷ: பூர்வம்। ப்ரஹ்மணா விஷ்ணுபஞ்ஜர:। ௬௯।௰௧௫

ஸம்கரஸ்ய குருஸ்ேரஷ்ட। ரக்ஷணாய நிரூபித:। ௬௯।௰௧௫
வாகீேஸந து ஸக்ரஸ்ய। பலம் ஹந்தும் ப்ரயாஸ்யத:। ௬௯।௰௧௬
தஸ்ய ரூபம் ப்ரவŠயாமி। தந் நிேபாத மஹீபேத। ௬௯।௰௧௬
விஷ்ணு: ப்ராச்யாம் ஸ்திதஸ் சக்ரீ। விஷ்ணுர் தக்ஷிணேதா கதீ।
௬௯।௰௧௭
ப்ரதீச்யாம் ஸார்ங்கத்ருக் விஷ்ணுர்। விஷ்ணு: கட்கீமேமாத்தேர।
௬௯।௰௧௭
ஹ்ருஷீேகேஸா விேகாேணஷு। தச்சித்ேரஷு ஜநார்தந:। ௬௯।௰௧௮
க்ேராடரூபீஹரிர் பூெமௗ। நரஸிம்ேஹா அம்பேர மம। ௬௯।௰௧௮
க்ஷுராந்தம் அமலம் சக்ரம்। ப்ரமத்ய் ஏதத் ஸுதர்ஸநம்। ௬௯।௰௧௯
அஸ்யாம்ஸுமாலா து:ப்ேரக்ஷா। ஹந்து ப்ேரதநிஸாசராந்। ௬௯।௰௧௯
கதா ேசயம் ஸஹஸ்ரார்சிர்। உத்வமத்பாவேகால்வணா। ௬௯।௰௨
ரேக்ஷாபூதபிஸாசாநாம்। டாகிணநாம் ீ ச நாஸநீ। ௬௯।௰௨
ஸார்ங்கவிஸ்பூர்ஜிதம் ைசவ। வாஸுேதவஸ்ய மத்ரிபூந்। ௬௯।௰௨௧
திர்யங்மநுஷ்யகூஷ்மாண்ட । ப்ேரதாதீந் ஹந்த்வ் அேஸஷத:।
௬௯।௰௨௧
கட்கதாராஜ்வலஜ்ஜ்ேயாத்ஸ்நா । நிர்தூதா ேய ஸமாஹதா:। ௬௯।௰௨௨
ேத யாந்து ெஸௗம்யதம் ஸத்ேயா। கருேடேநவ பந்நகா:। ௬௯।௰௨௨
ேய கூஷ்மாண்டாஸ் ததா யக்ஷா। ேய ைதத்யா ேய நிஸாசரா:।
௬௯।௰௨௩
ப்ேரதா விநாயகா: க்ரூரா। மநுஷ்யா ஜம்பகா: ககா:। ௬௯।௰௨௩
ஸிம்ஹாதேயா ேய பஸேவா। தந்தஸூகாஸ் ச பந்நகா:। ௬௯।௰௨௪

ஸர்ேவ பவந்து ேத ெஸௗம்யா:। க்ருஷ்ணஸங்கரவாஹதா:।
௬௯।௰௨௪
சித்தவ்ருத்திஹரா ேய ேம। ேய ஜநா: ஸ்ம்ருதிஹாரகா:। ௬௯।௰௨௫
பெலௗஜஸாம் ச ஹர்தாரஸ்। சாயாவிப்ரம்ஸகாஸ் ச ேய। ௬௯।௰௨௫
ேய ேசாபேபாகஹர்தாேரா। ேய ச லக்ஷணநாஸகா:। ௬௯।௰௨௬
கூஷ்மாண்டாஸ் ேத ப்ரணஸ்யந்து। விஷ்ணுசக்ரரயாஹதா:।
௬௯।௰௨௬
புத்திஸ்வாஸ்த்யம் மந:ஸ்வாஸ்த்யம்। ஸ்வாஸ்த்யம் ஐந்த்ரியகம் ததா।
௬௯।௰௨௭
மமாஸ்து ேதவேதவஸ்ய। வாஸுேதவஸ்ய கீர்தநாத்। ௬௯।௰௨௭
ப்ருஷ்ேட புரஸ்தாந் மம தக்ஷிேணாத்தேர। விேகாணகஸ் சாஸ்து ஜநார்தேநா
ஹரி:। ௬௯।௰௨௮
தத் ஈட்யம் ஈஸாநம் அநந்தம் ஈஸ்வரம்। ஜநார்தநம் ப்ரணிபதிேதா ந ஸததி ீ ।
௬௯।௰௨௮
யதா பரம் ப்ரஹ்ம ஹரிஸ் ததா பரம்। ஜகத்ஸ்வரூபஸ் ச ஸ ஏவ ேகஸவ:।
௬௯।௰௨௯
க்ருேதந ேதநாச்யுதநாமகீர்தநாத்। ப்ரணாஸம் ஏது த்ரிவிதம் மமாஸுபம்।
௬௯।௰௨௯
இத்ய் அஸாவ் ஆத்மரக்ஷார்தம்। ந்யஸ்தவாந் விஷ்ணுபஞ்ஜரம்।
௭௰।௰௰௧
ேதநாஸாத்ய: ஸ துஷ்டாநாம்। பபூவ ந்ருப ரக்ஷஸாம்। ௭௰।௰௰௧
ஏதயாரக்ஷயா ரேக்ஷா। நிர்தூதம் புவி பாதிதம்। ௭௰।௰௰௨
ஜப்யாவஸாேந விப்ேரா அெஸௗ। ததர்ஸ விகெதௗஜஸம்। ௭௰।௰௰௨
த்ருஷ்ட்வா ச க்ருபயாவிஷ்ட:। ஸமாஸ்வாஸ்ய நிஸாசரம்। ௭௰।௰௰௩

பப்ரச்சாகமேந ேஹதும்। தம் சாசஷ்ட யதாததம்। ௭௰।௰௰௩
கதயித்வா ச தத் ஸர்வம்। ராக்ஷஸ: புநர் அப்ரவத்ீ। ௭௰।௰௰௩
ப்ரஸதீ விப்ரவர்ய த்வம்। நிர்விண்ணஸ்யாதிபாபிந:। ௭௰।௰௰௪
பாபப்ரஸமநாயாலம்। உபேதஸம் ப்ரயச்ச ேம। ௭௰।௰௰௪
பஹூநி பாபாநி மயா। க்ருதாநி பஹேவா ஹதா:। ௭௰।௰௰௫
க்ருதா: ஸ்த்ரியஸ் ச ேம பஹ்வ்ேயா। விதவா ஹதபுத்ரிகா:।
௭௰।௰௰௫
அநாகஸாம் ச ஸத்த்வாநாம்। அேநகாநாம் க்ஷய: க்ருத:। ௭௰।௰௰௫
ேஸா அஹம் இச்சாமி விப்ரர்ேஷ। ப்ரஸாதாத் தவ ஸுவ்ரத।
௭௰।௰௰௬
பாபஸ்யாஸ்ய க்ஷயம் கர்தும்। குரு ேம தர்மேதஸநாம்। ௭௰।௰௰௬
கதம் க்ரூரஸ்வபாவஸ்ய। ஸதஸ் தவ நிஸாசர। ௭௰।௰௰௭
ஸஹைஸவ ஸமாயாதா। ஜிஜ்ஞாஸா தர்மவர்த்மநி। ௭௰।௰௰௭
த்வாம் அத்தும் ஆகத: க்ஷிப்ேதா। ரக்ஷயா க்ருதயா த்வயா। ௭௰।௰௰௮
தத்ஸம்ஸ்பர்ஸாச் ச ேம ப்ரஹ்மந்। ஸாத்வ் ஏதந் மநஸி ஸ்திதம்।
௭௰।௰௰௮
கா ஸா ரக்ஷா ந தாம் ேவத்மி। ேவத்மி நாஸ்யா: பராயணம்।
௭௰।௰௰௯
கிம்த்வ் அஸ்யா: ஸம்கம் ஆஸாத்ய। நிர்ேவதம் ப்ராபிதம் பரம்।
௭௰।௰௰௯
ஸ க்ருபாம் குரு தர்மஜ்ஞ। மய்ய் அநுக்ேராஸம் ஆவஹ। ௭௰।௰௧
யதா பாபாபேநாேதா ேம। பவத்ய் ஆர்ய ததா குரு। ௭௰।௰௧
இத்ய் ஏவம் உக்த: ஸ முநி:। ஸதயஸ் ேதந ரக்ஷஸா। ௭௰।௰௧௧

ப்ரத்யுவாச மஹாபாக। விம்ருஸ்ய ஸுசிரம் ததா। ௭௰।௰௧௧
யத் த்வம் ஆத்ேதாபேதஸார்தம்। நிர்விண்ண: ஸ்ேவந கர்மணா।
௭௰।௰௧௨
யுக்தம் ஏதந் ந பாபாநாம்। நிவ்ருத்ேதர் உபகாரகம்। ௭௰।௰௧௨
கரிஷ்ேய யாதுதாநாநாம்। ந த்வ் அஹம் தர்மேதஸநாம்। ௭௰।௰௧௩
தாம்ஸ் த்வம் ப்ருச்ச த்விஜாந் ெஸௗம்ய। ேய ைவ ப்ரவசேந ரதா:।
௭௰।௰௧௩
ஏவம் உக்த்வா யெயௗ விப்ரஸ்। சிந்தாம் ஆப ச ராக்ஷஸ:। ௭௰।௰௧௪
கதம் பாபாபேநாத: ஸ்யாத்। இத்ய் அெஸௗ வ்யாகுேலந்த்ரிய:।
௭௰।௰௧௪
ந ததா காதேத ஸத்த்வாந்। க்ஷுதா ஸம்படிேதா ீ அபி ஸந்। ௭௰।௰௧௫
ஷஷ்ேட ஷஷ்ேட ததா காேல। ஜந்தும் ஏகம் அபக்ஷயத்। ௭௰।௰௧௫
ஸ கதாசித் க்ஷுதாவிஷ்ட:। பர்யடந் விபிேந வேந। ௭௰।௰௧௬
ததர்ஸாத பலாஹாரம்। அக்ரத: ெகௗஸிகம் த்விஜம்। ௭௰।௰௧௬
தம் ஜக்ராஹ ச பக்ஷார்தம்। ஷஷ்ேட காேல புபுக்ஷித:। ௭௰।௰௧௭
குேரார் அர்ேத பலாஹாரம்। ஆகதம் ப்ரஹ்மசாரிணம்। ௭௰।௰௧௭
க்ருஹீேதா ரக்ஷஸா ேதந। ஸ ததா முநிதாரக:। ௭௰।௰௧௮
நிராேஸா ஜவிேத ீ ப்ராஹ। ஸாமபூர்வம் நிஸாசரம்। ௭௰।௰௧௮
ேபா பத்ரமுக யத்கார்யம்। க்ருஹீேதா அஹம் இஹ த்வயா।
௭௰।௰௧௯
தத் ப்ரவஹி ீ யதாதத்த்வம்। அயம் அஸ்ம்ய் அநுஸாதி மாம்।
௭௰।௰௧௯
ஷஷ்ேட காேல மமாஹார:। க்ஷுதிதஸ்ய த்வம் ஆகத:। ௭௰।௰௨

நி:ஸூகஸ்யாதிபாபஸ்ய। நிர்க்ருணஸ்ய த்விஜத்ருஹ:। ௭௰।௰௨
யத்ய் அவஸ்யம் த்வயாத்யாஹம்। பக்ஷணேயா ீ நிஸாசர। ௭௰।௰௨௧
ஆயாஸ்யாமி தத் அத்ையவ। நிேவத்ய குரேவ பலம்। ௭௰।௰௨௧
குருமூேல தத் ஆகத்ய। யத் பலக்ரஹணம் க்ருதம்। ௭௰।௰௨௨
மமாத்ர நிஷ்டாம் ப்ராப்தஸ்ய। தத் பாபாய நிேவதிதம்। ௭௰।௰௨௨
ஸ த்வம் முஹூர்தமாத்ரம் மாம்। அத்ைரவ ப்ரதிபாலய। ௭௰।௰௨௩
நிேவத்ய குரேவ யாவத்। இஹாகச்சாம்ய் அஹம் பலம்। ௭௰।௰௨௩
ஷஷ்ேட காேல ந ேம ப்ரஹ்மந்। கஸ்சித் க்ரஹணம் ஆகத:। ௭௰।௰௨௪
ப்ரமுச்யேத நிேபாைததத்। இதி ேம பாபஜவிகாம் ீ । ௭௰।௰௨௪
ஏக ஏவாத்ர ேமாக்ஷஸ்ய। தவ ேஹது: ஸ்ருணுஷ்வ தம்। ௭௰।௰௨௫
முஞ்சாம்ய் அஹம் அஸம்திக்தம்। யதி தத் குருேத பவாந்। ௭௰।௰௨௫
குேரார் யந் ந விேராதாய। யந் ந தர்ேமாபேராதகம்। ௭௰।௰௨௬
தத் கரிஷ்யாம்ய் அஹம் ரேக்ஷா। யந் ந வ்ரதஹரம் மம। ௭௰।௰௨௬
மயா நிஸர்கேதா ப்ரஹ்மஞ்। ஜாதிேதாஷாத் விேஸஷத:। ௭௰।௰௨௭
நிர்விேவேகந பாேபந। பாபம் கர்ம ஸதா க்ருதம்। ௭௰।௰௨௭
ஆ பால்யாந் மம பாேபஷு। ந புண்ேயஷு ரதம் மந:। ௭௰।௰௨௮
தத்பாபஸம்சயாந் ேமாக்ஷம்। ப்ராப்நுயாம் ேயந தத் வத। ௭௰।௰௨௮
யாநி பாபாநி கர்மாணி। பாலத்வாச் சரிதாநி ேம। ௭௰।௰௨௯
துஷ்டாம் ேயாநிம் இமாம் ப்ராப்ய। தந்முக்திம் கதய த்விஜ। ௭௰।௰௨௯
யத்ய் ஏதத் த்விஜபுத்ர த்வம்। மமாக்யாஸ்யஸ்ய் அேஸஷத:। ௭௰।௰௩
தத் க்ஷுதார்தாத் ஸமார்தஸ் த்வம்। நியதம் ேமாக்ஷம் ஆப்ஸ்யஸி।
௭௰।௰௩

ந ைசதத் பாபஸேலா ீ அஹம்। அத்ய த்வாம் க்ஷுத்பிபாஸித:।
௭௰।௰௩௧
ஷஷ்ேட காேல ந்ருஸம்ஸாத்மா। பக்ஷயிஷ்யாமி நிர்க்ருண:। ௭௰।௰௩௧
ஏவம் உக்ேதா முநிஸுதஸ்। ேதந ேகாேரண ரக்ஷஸா। ௭௰।௰௩௨
சிந்தாம் அவாப மஹதீம்। அஸக்தஸ் தத் உதீரிதும்। ௭௰।௰௩௨
விம்ருஸ்ய ஸுசிரம் விப்ர:। ஸரணம் ஜாதேவதஸம்। ௭௰।௰௩௩
ஜகாம ஜ்ஞாநதாநாய। ஸம்ஸயம் பரமம் கத:। ௭௰।௰௩௩
யதி ஸுஸ்ரூஷிேதா வஹ்நிர்। குேரா: ஸுஸ்ரூஷணாத் அநு।
௭௰।௰௩௪
வ்ரதாநி வா ஸுசீர்ணாநி। ஸப்தார்சி: பாது மாம் தத:। ௭௰।௰௩௪
ந மாதரம் ந பிதரம்। ெகௗரேவண யதா குரும்। ௭௰।௰௩௫
யதாஹம் அவகச்சாமி। ததா மாம் பாது பாவக:। ௭௰।௰௩௫
யதா குரும் ந மநஸா। கர்மணா வசஸாபி வா। ௭௰।௰௩௬
அவஜாநாம்ய் அஹம் ேதந। பாது ஸத்ேயந பாவக:। ௭௰।௰௩௬
இத்ய் ஏவம் ஸபதாந் ஸத்யாந்। குர்வதஸ் தஸ்ய தத் புந:। ௭௰।௰௩௭
ஸப்தார்சிஷா ஸமாதிஷ்டா। ப்ராதுராஸத்ீ ஸரஸ்வதீ। ௭௰।௰௩௭
ஸா ேசாவாச த்விஜஸுதம்। ராக்ஷஸக்ரஹணாகுலம்। ௭௰।௰௩௭
மா ைபர் த்விஜஸுதாஹம் த்வாம்। ேமாக்ஷயாம்ய் அதிஸம்கடாத்।
௭௰।௰௩௮
யத் அஸ்ய ரக்ஷஸ: ஸ்ேரேயா। ஜிஹ்வாக்ேர அஹம் ஸ்திதா தவ।
௭௰।௰௩௯
தத் ஸர்வம் கதயிஷ்யாமி। தேதா ேமாக்ஷம் அவாப்ஸ்யஸி। ௭௰।௰௩௯
அத்ருஸ்யா ரக்ஷஸா ேதந। ப்ேராக்த்ேவத்தம் தம் ஸரஸ்வதீ। ௭௰।௰௪

அதர்ஸநம் இதா ேஸா அபி। த்விஜ: ப்ராஹ நிஸாசரம்। ௭௰।௰௪
ஸ்ரூயதாம் தவ யச் ச்ேரயஸ்। ததாந்ேயஷாம் ச பாபிநாம்। ௭௰।௰௪௧
ஸமஸ்தபாபஸுத்த்யர்தம்। புண்ேயாபசயதம் ச யத்। ௭௰।௰௪௧
ப்ராதர் உத்தாய ஸததம்। மத்யாஹ்ேந அஹ்ந: க்ஷேய அபி வா।
௭௰।௰௪௨
அயம் ஸஸ்த: ஸதா ஜாப:। ஸர்வபாேபாபஸாந்தித:। ௭௰।௰௪௨
ஹரிம் க்ருஷ்ணம் ஹ்ருஷீேகஸம்। வாஸுேதவம் ஜநார்தநம்।
௭௰।௰௪௩
ப்ரணேதா அஸ்மி ஜகந்நாதம்। ஸ ேம பாபம் வ்யேபாஹது। ௭௰।௰௪௩
விஸ்ேவஸ்வரம் அஜம் விஷ்ணும்। அப்ரேமயபராக்ரமம்। ௭௰।௰௪௪
ப்ரணேதா அஸ்மி ப்ரஜாபாலம்। ஸ ேம பாபம் வ்யேபாஹது। ௭௰।௰௪௪
விஷ்ணும் அச்யுதம் ஈஸாநம்। அநந்தம் அபராஜிதம்। ௭௰।௰௪௫
ப்ரணேதா அஸ்மி மஹாத்மாநம்। ஸ ேம பாபம் வ்யேபாஹது।
௭௰।௰௪௫
சராசரகுரும் நாதம்। ேகாவிந்தம் ேஸஷஸாயிநம்। ௭௰।௰௪௬
ப்ரணேதா அஸ்மி பரம் ேதவம்। ஸ ேம பாபம் வ்யேபாஹது।
௭௰।௰௪௬
ேகாவர்தநதரம் தீரம்। ேகாப்ராஹ்மணஹிேத ஸ்திதம்। ௭௰।௰௪௭
ப்ரணேதா அஸ்மி கதாபாணிம்। ஸ ேம பாபம் வ்யேபாஹது। ௭௰।௰௪௭
ஸங்கிநம் சக்ரிணம் ஸாந்தம்। ஸார்ங்கிணம் ஸ்ரக்தரம் பரம்।
௭௰।௰௪௮
ப்ரணேதா அஸ்மி பதிம் லŠம்யா:। ஸ ேம பாபம் வ்யேபாஹது।
௭௰।௰௪௮
தாேமாதரம் உதாராக்ஷம்। புண்டரீகாக்ஷம் அவ்யயம்। ௭௰।௰௪௯

ப்ரணேதா அஸ்மி ஸ்துதம் ஸ்துத்ைய:। ஸ ேம பாபம் வ்யேபாஹது।
௭௰।௰௪௯
நாராயணம் நரம் ெஸௗரிம்। மாதவம் மதுஸூதநம்। ௭௰।௰௫
ப்ரணேதா அஸ்மி தராதாரம்। ஸ ேம பாபம் வ்யேபாஹது। ௭௰।௰௫
ேகஸவம் ேகஸிஹந்தாரம்। கம்ஸாரிஷ்டநிஸூதநம்। ௭௰।௰௫௧
ப்ரணேதா அஸ்மி சதுர்பாஹும்। ஸ ேம பாபம் வ்யேபாஹது।
௭௰।௰௫௧
ஸ்ரீவத்ஸவக்ஷஸம் ஸ்ரீஸம்। ஸ்ரீதரம் ஸ்ரீநிேகதநம்। ௭௰।௰௫௨
ப்ரணேதா அஸ்மி ஸ்ரிய: காந்தம்। ஸ ேம பாபம் வ்யேபாஹது।
௭௰।௰௫௨
யம் ஈஸம் ஸர்வபூதாநாம்। த்யாயந்தி யதேயா அக்ஷரம்। ௭௰।௰௫௩
வாஸுேதவம் அநிர்ேதஸ்யம்। தம் அஸ்மி ஸரணம் கத:। ௭௰।௰௫௩
ஸமஸ்தாலம்பேநப்ேயா அயம்। ஸம்ஹ்ருத்ய மநேஸா கதிம்।
௭௰।௰௫௪
த்யாயந்தி வாஸுேதவாக்யம்। தம் அஸ்மி ஸரணம் கத:। ௭௰।௰௫௪
ஸர்வகம் ஸர்வபூதம் ச। ஸர்வஸ்யாதாதம் ஈஸ்வரம்। ௭௰।௰௫௫
வாஸுேதவம் பரம் ப்ரஹ்ம। தம் அஸ்மி ஸரணம் கத:। ௭௰।௰௫௫
பரமாத்மாநம் அவ்யக்தம்। யம் ப்ரயாந்தி ஸுேமதஸ:। ௭௰।௰௫௬
கர்மக்ஷேய அக்ஷயம் ேதவம்। தம் அஸ்மி ஸரணம் கத:। ௭௰।௰௫௬
புண்யபாபவிநிர்முக்தா। யம் ப்ரவிஸ்ய புநர்பவம்। ௭௰।௰௫௭
ந ேயாகிந: ப்ராப்நுவந்தி। தம் அஸ்மி ஸரணம் கத:। ௭௰।௰௫௭
ப்ரஹ்மா பூத்வா ஜகத் ஸர்வம்। ஸேதவாஸுரமாநுஷம்। ௭௰।௰௫௮

ய: ஸ்ருஜத்ய் அச்யுேதா ேதவஸ்। தம் அஸ்மி ஸரணம் கத:।
௭௰।௰௫௮
ப்ரஹ்மத்ேவ யஸ்ய வக்த்ேரப்யஸ்। சதுர்ேவதமயம் வபு:। ௭௰।௰௫௯
ஸூதம் ப்ரேபா புரா ஜஜ்ேஞ। தம் அஸ்மி ஸரணம் கத:। ௭௰।௰௫௯
ப்ரஹ்மரூபதரம் ேதவம்। ஜகத்ேயாநிம் ஜநார்தநம்। ௭௰।௰௬
ஸ்ரஷ்ட்ருத்ேவ ஸம்ஸ்திதம் ஸ்ருஷ்ெடௗ। ப்ரணேதா அஸ்மி ஸநாதநம்।
௭௰।௰௬
ய: பாதி ஸ்ருஷ்டம் ச விபு:। ஸ்திதாவ் அஸுரஸூதந:। ௭௰।௰௬௧
தம் ஆதிபுருஷம் விஷ்ணும்। ப்ரணேதா அஸ்மி ஸநாதநம்। ௭௰।௰௬௧
த்ருதா மஹீஹதா ைதத்யா:। பரித்ராதாஸ் ததாமரா:। ௭௰।௰௬௨
ேயந தம் விஷ்ணும் ஆத்ேயஸம்। ப்ரணேதா அஸ்மி ஸநாதநம்।
௭௰।௰௬௨
யஜ்ைஞர் யஜந்தி யம் விப்ரா। யஜ்ேஞஸம் யஜ்ஞபாவநம்। ௭௰।௰௬௩
தம் யஜ்ஞபுருஷம் விஷ்ணும்। ப்ரணேதா அஸ்மி ஸநாதநம்।
௭௰।௰௬௩
வர்ணாஸ்ரமாந் ஸ்திதாவ் ஆத்ேயா। ய: ஸ்தாபயதி வர்த்மநி।
௭௰।௰௬௪
தம் ஆதிபுருஷம் விஷ்ணும்। ப்ரணேதா அஸ்மி ஸநாதநம்। ௭௰।௰௬௪
கல்பாந்ேத ருத்ரரூேபா ய:। ஸம்ஹரத்ய் அகிலம் ஜகத்। ௭௰।௰௬௫
தம் ஆதிபுருஷம் விஷ்ணும்। ப்ரணேதா அஸ்மி ஜநார்தநம்। ௭௰।௰௬௫
பாதாலவதீீபூராதீம்ஸ்। ததா ேலாகாந் பிபர்தி ய:। ௭௰।௰௬௬
தம் அந்தபுருஷம் விஷ்ணும்। ப்ரணேதா அஸ்மி ஜநார்தநம்। ௭௰।௰௬௬
ஸம்பக்ஷயித்வா ஸகலம்। யதா ஸ்ருஷ்டம் இதம் ஜகத்। ௭௰।௰௬௭

ேயா ந்ருத்யத்ய் அதிெரௗத்ராத்மா। ப்ரணேதா அஸ்மி ஜநார்தநம்।
௭௰।௰௬௭
ஸுராஸுரா: பித்ருகணா। யக்ஷகந்தர்வராக்ஷஸா:। ௭௰।௰௬௮
யஸ்யாம்ஸபூதா ேதவஸ்ய। ஸர்வகம் தம் நமாம்ய் அஹம்।
௭௰।௰௬௮
ஸமஸ்தேதவா: ஸகலா। மாநுஷாணாம் ச ஜாதய:। ௭௰।௰௬௯
யஸ்யாம்ஸபூதா ேதவஸ்ய। ஸர்வகம் தம் நமாம்ய் அஹம்।
௭௰।௰௬௯
வ்ருக்ஷகுல்மாதேயா யஸ்ய। ததா பஸும்ருகாதய:। ௭௰।௰௭
ஏகாம்ஸபூதா ேதவஸ்ய। ஸர்வகம் தம் நமாம்ய் அஹம்। ௭௰।௰௭
யஸ்மாந் நாந்யத் பரம் கிம்சித்। யஸ்மிந் ஸர்வம் மஹாத்மநி।
௭௰।௰௭௧
ய: ஸர்வம் அவ்யேயா அநந்த:। ஸர்வகம் தம் நமாம்ய் அஹம்।
௭௰।௰௭௧
யதா ஸர்ேவஷு பூேதஷு। ஸ்தாவேரஷு சேரஷு ச। ௭௰।௰௭௨
விஷ்ணுர் ஏவ ததா பாபம்। மமாேஸஷம் ப்ரணஸ்யது। ௭௰।௰௭௨
யதா விஷ்ணுமயம் ஸர்வம்। யத் ஸர்ேவந்த்ரியேகாசரம்। ௭௰।௰௭௩
யச் ச ஜ்ஞாநபரிச்ேசத்யம்। பாபம் நஸ்யது ேம ததா। ௭௰।௰௭௩
ப்ரவ்ருத்தம் ச நிவ்ருத்தம் ச। கர்ம விஷ்ணுமயம் யதா। ௭௰।௰௭௪
அேநகஜந்மகர்ேமாத்தம்। பாபம் நஸ்யது ேம ததா। ௭௰।௰௭௪
யந் நிஸாயாம் ததா ப்ராதர்। யச் ச மத்யாபராஹ்ணேயா:। ௭௰।௰௭௫
ஸம்த்யேயாஸ் ச க்ருதம் பாபம்। கர்மணா மநஸா கிரா। ௭௰।௰௭௫
திஷ்டதா வ்ரஜதா யச் ச। ஸய்யாஸநகேதந ச। ௭௰।௰௭௬

க்ருதம் யத் அஸுபம் கர்ம। காேயந மநஸா கிரா। ௭௰।௰௭௬
அஜ்ஞாநேதா ஜ்ஞாநேதா வா। வாஸுேதவஸ்ய கீர்தநாத்। ௭௰।௰௭௭
தத் ஸர்வம் விலயம் யாது। ேதாயஸ்தம் லவணம் யதா। ௭௰।௰௭௭
பரதாரபரத்ரவ்ய । வாஞ்சாத்ேராேஹாத்பவம் ச யத்। ௭௰।௰௭௮
பரிபேடாத்பவம் ீ நிந்தாம்। குர்வேதா யந் மஹாத்மநாம்। ௭௰।௰௭௮
யச் ச ேபாஜ்ேய ததா ேபேய। யச் ச கண்டூயநாதிஷு। ௭௰।௰௭௯
தத் யாது விலயம் ேதாேய। யதா லவணபாஜநம்। ௭௰।௰௭௯
யத் பால்ேய யச் ச ெகௗமாேர। யத் பாபம் ெயௗவேந மம। ௭௰।௰௮
வய:பரிணெதௗ யச் ச। யச் ச ஜந்மாந்தேரஷு ேம। ௭௰।௰௮
தந் நாராயணேகாவிந்த । ஹரிக்ருஷ்ேணஸகீர்தநாத்। ௭௰।௰௮௧
ப்ரயாது விலயம் ேதாேய। யதா லவணபாஜநம்। ௭௰।௰௮௧
விஷ்ணேவ வாஸுேதவாய। ஹரேய ேகஸவாய ச। ௭௰।௰௮௨
ஜநார்தநாய க்ருஷ்ணாய। நேமா பூேயா நேமா நம:। ௭௰।௰௮௨
இதம் ஸாரஸ்வதம் ஸ்ேதாத்ரம்। அேஸஷாகவிநாஸநம்। ௭௰।௰௮௩
படதாம் ஸ்ருண்வதாம் ைசவ। ஸர்வபாபவிநாஸநம்। ௭௰।௰௮௩
இதம் ய: ப்ராதர் உத்தாய। ப்ரணிபத்ய ஜநார்தநம்। ௭௰।௰௮௪
ஜபத்ய் ஏகமநா: பாபம்। ஸமஸ்தம் ஸ வ்யேபாஹதி। ௭௰।௰௮௪
யஸ் து ஸம்வத்ஸரம் பூர்ணம்। ஸாயம் ப்ராத: ஸமாஹித:।
௭௰।௰௮௫
ஜபத்ய் ஏதந் நர: புண்யம்। க்ருத்வா மநஸி ேகஸவம்। ௭௰।௰௮௫
ஸாரீரம் மாநஸம் வாக்ஜம்। ஜ்ஞாநேதா அஜ்ஞாநேதா அபி வா।
௭௰।௰௮௬
க்ருதம் ேதந து யத் பாபம்। ஸப்த ஜந்மாந்தராணி ைவ। ௭௰।௰௮௬

மஹாபாதகம் அல்பம் வா। ததா யச் ேசாபபாதகம்। ௭௰।௰௮௭
ஸகலம் நாஸயத்ய் ஏதத்। ததாந்யத் புண்யம் க்ருச்சதி। ௭௰।௰௮௭
விப்ராய ஸுவிஸிஷ்டாய। திலபாத்ராணி ேஷாடஸ। ௭௰।௰௮௮
அஹந்ய் அஹநி ேயா தத்யாத்। படத்ய் ஏதச் ச தத் ஸமம்। ௭௰।௰௮௮
அவிப்லுதமதிஸ் சாந்ேத। ஸம்ப்ராப்ய ஸ்மரணம் ஹேர:। ௭௰।௰௮௯
விஷ்ணுேலாகம் அவாப்ேநாதி। ஸத்யம் ஏதந் மேயாதிதம்। ௭௰।௰௮௯
யைதநம் படதி நித்யம்। ஸ்தவம் ஸாரஸ்வதம் புமாந்। ௰௭௰।௧௧௪
அபி பாபஸமாயுக்ேதா। ேமாக்ஷம் ப்ராப்ேநாத்ய் அஸாவ் அபி।
௰௭௰।௧௧௪
யைததத் ஸத்யம் உக்தம் ேம। நாத்ரால்பம் அபி ைவ ம்ருஷா।
௭௰।௰௯
ராக்ஷஸக்ரஸ்தஸர்வாங்கம்। ததா மாம் ஏஷ முஞ்சது। ௭௰।௰௯
ஏவம் உச்சாரிேத முக்த:। ஸ ததா ேதந ரக்ஷஸா। ௭௰।௰௯௧
அகாேமந த்விேஜா பூயஸ்। தம் ஆஹ ரஜநீசரம்। ௭௰।௰௯௧
ஏதத் பத்ரமுகாக்யாதம்। தவ பாதகநாஸநம்। ௭௰।௰௯௨
விஷ்ேணா: ஸாரஸ்வதம் ஸ்ேதாத்ரம்। யஜ் ஜகாத ஸரஸ்வதீ।
௭௰।௰௯௨
ஹுதாஸேநந ப்ரஹிதா। மம ஜிஹ்வாக்ரஸம்ஸ்திதா। ௭௰।௰௯௩
ஜகாேதமம் ஸ்தவம் விஷ்ேணா:। ஸர்வபாபப்ரஸாந்திதம்। ௭௰।௰௯௩
அேநைநவ ஜகந்நாதம்। த்வம் ஆராதய ேகஸவம்। ௭௰।௰௯௪
தத: பாபாபேநாதம் து। ஸ்துேத ப்ராப்ஸ்யஸி ேகஸேவ। ௭௰।௰௯௪
அஹர்நிஸம் ஹ்ருஷீேகஸம்। ஸ்தேவநாேநந ராக்ஷஸ। ௭௰।௰௯௫

ஸ்ெதௗஹி பக்திம் பராம் க்ருத்வா। தத: பாபாத் விேமாŠயேஸ।
௭௰।௰௯௫
ஸ்துேதா ஹி ஸர்வபாபாநி। நாஸயிஷ்யத்ய் அஸம்ஸயம்।
௭௰।௰௯௬
பக்த்யா ராக்ஷஸஸார்தூல। ஸர்வபாபஹேரா ஹரி:। ௭௰।௰௯௬
தத: ப்ரணம்ய தம் விப்ரம்। ப்ரஸாத்ய ச நிஸாசர:। ௭௰।௰௯௭
ஸாலக்ராமம் மஹாராஜ। தைதவ தபேஸ யெயௗ। ௭௰।௰௯௭
தத்ராஹர்நிஸம் ஏைவதஜ்। ஜபஞ் ஜப்யம் நராதிப। ௭௰।௰௯௮
ேதவக்ரியாரதிர் பூத்வா। தபஸ் ேதேப ஸ ராக்ஷஸ:। ௭௰।௰௯௮
ஆராத்ய ச ஜகந்நாதம்। ஸ தத்ர புருேஷாத்தமம்। ௭௰।௰௯௯
ஸர்வபாபவிநிர்முக்ேதா। விஷ்ணுேலாகம் அவாப்தவாந்। ௭௰।௰௯௯
ததா த்வம் அபி ராஜர்ேஷ। ஸர்வபாபப்ரஸாந்திதம்। ௭௰।௧
ஆராதய ஹ்ருஷீேகஸம்। ஜபந் ஸாரஸ்வதம் ஸ்தவம்। ௭௰।௧
ய ஏதத் பரமம் ஸ்ேதாத்ரம்। வாஸுேதவஸ்ய மாநவ:। ௭௰।௧௰௧
படிஷ்யதி ஸ ஸர்ேவப்ய:। பாேபப்ேயா ேமாக்ஷம் ஆப்ஸ்யதி। ௭௰।௧௰௧
ப்ரஹ்மந்ந் அஸாேர ஸம்ஸாேர। ேராகாதிவ்யாப்தமாநஸ:। ௭௧।௰௰௧
ஸப்தாதிலுப்த: புருஷ:। கிம் குர்வந் நாவஸததி ீ । ௭௧।௰௰௧
ஸ்ேவ மஹிம்நி ஸ்திதம் ேதவம்। அப்ரேமயம் அஜம் விபும்। ௭௧।௰௰௨
ேஸாகேமாஹவிநிர்முக்தம்। விஷ்ணும் த்யாயந் ந ஸததி ீ । ௭௧।௰௰௨
அப்ராணசிதிகம் ப்ரஹ்ம। ேவதாந்ேதஷு ப்ரகாஸிதம்। ௭௧।௰௰௩
ஆத்யம் புருஷம் ஈஸாநம்। விஷ்ணும் த்யாயந் ந ஸததி ீ । ௭௧।௰௰௩
அஸநாத்ையர் அஸம்ஸ்ப்ருஷ்டம்। ேஸவிதம் ேயாகிபி: ஸதா।
௭௧।௰௰௪

ஸர்வேதாஷவிநிர்முக்தம்। விஷ்ணும் த்யாயந் ந ஸததி ீ । ௭௧।௰௰௪
தாமத்ரயவிநிர்முக்தம்। ஸுப்ரபாதம் ஸுநிர்மலம்। ௭௧।௰௰௫
நிஷ்கலம் ஸாஸ்வதம் ேதவம்। விஷ்ணும் த்யாயந் ந ஸததி ீ ।
௭௧।௰௰௫
க்ஷராக்ஷரவிநிர்முக்தம்। ஜந்மம்ருத்யுவிவர்ஜிதம்। ௭௧।௰௰௬
அபயம் ஸத்யஸம்கல்பம்। விஷ்ணும் த்யாயந் ந ஸததி ீ । ௭௧।௰௰௬
அம்ருதம் ஸாதநம் ஸாத்யம்। யம் பஸ்யந்தி மநீஷிண:। ௭௧।௰௰௭
ஜ்ேஞயாக்யம் பரமாத்மாநம்। விஷ்ணும் த்யாயந் ந ஸததி ீ । ௭௧।௰௰௭
அதுலம் ஸுகதர்மாணம்। வ்ேயாமேதஹம் ஸநாதநம்।
௰௭௧।௰௰௮௧௧௫
தர்மாதர்மவிநிர்முக்தம்। விஷ்ணும் த்யாயந் ந ஸததி ீ ।
௰௭௧।௰௰௮௧௧௫
வ்யாஸாத்ையர் முநிபி: ஸர்ைவர்। த்யாநேயாகபராயைண:। ௭௧।௰௰௯
அர்சிதம் பாவகுஸுைமர்। விஷ்ணும் த்யாயந் ந ஸததி ீ । ௭௧।௰௰௯
விஷ்ண்வஷ்டகம் இதம் புண்யம்। ேயாகிநாம் ப்ரீதிவர்தநம்। ௭௧।௰௧
ய: பேடத் பரயா ப்ரீத்யா। ஸ கச்ேசத் விஷ்ணுஸாத்ம்யதாம்। ௭௧।௰௧
ஏதத் புண்யம் பாபஹரம்। தந்யம் து:ஸ்வப்நநாஸநம்। ௭௧।௰௧௧
படதாம் ஸ்ருண்வதாம் ைசவ। விஷ்ேணார் மாஹாத்ம்யம் உத்தமம்।
௭௧।௰௧௧
குர்வந் பக்திம் ஹ்ருஷீேகேஸ। மாநேவா ப்ருகுநந்தந। ௭௨।௰௰௧
நிர்வாணம் ஸமவாப்ேநாதி। யாத்ருஸம் தத் வதஸ்வ ேம। ௭௨।௰௰௧
த்ருஸ்யந்ேத புருஷா பக்திம்। உத்வஹந்ேதா ஜநார்தேந। ௭௨।௰௰௨
ததாப்ய் அேநகேதஹார்தி । மநஸ்தாபாதுரா முேந। ௭௨।௰௰௨

ஸ்ம்ருதமாத்ர: ஸுேரந்த்ரஸ்ய। ேயா அர்திஹா மதுஸூதந:। ௭௨।௰௰௩
தஸ்யாபி கர்மாபிரதா। து:கபாஜ: கதம் நரா:। ௭௨।௰௰௩
ைகஸ் ச தாைநர் ஜகத்ஸ்வாமீ। ஸ்வாமீநாராயேணா ந்ருணாம்।
௭௨।௰௰௪
உபகாராய பக்தாநாம்। ஜாயேத ஸ மஹாமுேந। ௭௨।௰௰௪
த்வத்யுக்ேதா அயம் அநுப்ரஸ்ேநா। மஹாராஜ ஸ்ருணுஷ்வ தம்।
௭௨।௰௰௫
யதா ப்ருஷ்டம் இதம் ஸம்யக்। கத்யமாநம் யதாகிலம்। ௭௨।௰௰௫
ப்ருதிவம்ீ ரத்நஸம்பூர்ணாம்। ய: க்ருஷ்ணாய ப்ரயச்சதி। ௭௨।௰௰௬
தஸ்யாப்ய் அந்யமநஸ்கஸ்ய। ஸுலேபா ந ஜநார்தந:। ௭௨।௰௰௬
நாராத்யேத அச்யுேதா தாைநர்। ந ேஹாைமர் பாவவர்ஜிைத:।
௭௨।௰௰௭
ஐகாத்ம்யம் புருைஷர் யாதி। தந்மையர் ஏவ மாதவ:। ௭௨।௰௰௭
ஸ்ரூயேத ச புராக்யாேதா। ராேஜாபரிசேரா வஸு:। ௭௨।௰௰௮
இயாஜ ஸுபஹூந் யஜ்ஞாஞ்। ஸ்ரத்தாபூேதந ேசதஸா। ௭௨।௰௰௮
ஸ விப்ரஸாபாத் ராஜர்ஷி:। கஸ்மிம்ஸ்சித் காரணாந்தேர। ௭௨।௰௰௯
ஆகாஸசாரீ ஸஹஸா। ப்ரவிேவஸ ரஸாதலம்। ௭௨।௰௰௯
ரஸாதலம் அநுப்ராப்தஸ்। ததாபி ஜகத: ப்ரபும்। ௭௨।௰௧
துஷ்டாவ தந்மேயா பூத்வா। திவ்ையர் மந்த்ைரர் ஜநார்தநம்। ௭௨।௰௧
ேதவாநாம் ஏஷ யஜ்ஞாம்ைஸர்। யஜ்வ ீபக்ஷவிவர்தந:। ௭௨।௰௧௧
ேசதிராட் இதி ைதத்யாநாம்। மதிர் ஆஸத்ீ ரஸாதேல। ௭௨।௰௧௧
அேநந விவிைதர் யஜ்ைஞஸ்। தர்பிதஸ் த்ரிதேஸஸ்வர:। ௭௨।௰௧௨

ஜகாந ைதத்யாந் வத்ேயா அயம்। ப்ராப்ேதா அஸ்மத்ேகாசரம் ரிபு:।
௭௨।௰௧௨
இதி ஸம்மந்த்ர்ய ேத ைதத்யாஸ்। ேசதிராஜஜிகாம்ஸவ:। ௭௨।௰௧௩
தத்ஸமீபம் அநுப்ராப்தா। க்ருஹீதவிவிதாயுதா:। ௭௨।௰௧௩
பரமாமர்ஷஸம்யுக்தாஸ்। ததஸ் ேத ேசதிபுங்கவம்। ௭௨।௰௧௪
ஹந்தும் ந ேஸகு: ஸஸ்த்ைரஸ் து। யத்நவந்ேதா அபி பார்திவம்।
௭௨।௰௧௪
ஸ சாபி வஸுர் ஆஸநீ :। ேகஸவார்பிதமாநஸ:। ௭௨।௰௧௫
ஜஜாப மந்த்ரம் ஓம்காரம்। ப்ரணவம் த்வாதஸாக்ஷரம்। ௭௨।௰௧௫
ததர்ஸ ச ஸ விஸ்ேவஸம்। த்யாநாவஸ்திதமாநஸ:। ௭௨।௰௧௬
க்ருத்வாந்யவிஷயத்யாகி। சித்தம் அத்யந்தநிஸ்சலம்। ௭௨।௰௧௬
ப்ராக் ஈஸம் அக்ஷரம் த்யாநம்। ஜ்ஞாநம் ஜ்ேஞயம் ஜகத்குரும்।
௭௨।௰௧௭
ஸம்சிந்த்ய வாஸுேதவாக்யம்। அநிர்ேதஸ்யம் பராயணம்। ௭௨।௰௧௭
தேதா அந்தர்யாமிருேபண। ப்ராக்ருேதந ச ஸம்ஸ்திதம்। ௭௨।௰௧௮
ப்ரஹ்மவிஷ்ணுஸிவாநாம் ச। ஸ்வரூைப: ஸம்ஸ்திதம் த்ரிதா।
௭௨।௰௧௮
புநஸ் ச ேதவகந்தர்வ । ஸித்தாதிமநுஜாதிஷு। ௭௨।௰௧௯
ஸ்தாவராந்ேதஷு பூேதஷு। ஸர்ேவஷ்வ் ஏவ ஸமாஸ்திதம்।
௭௨।௰௧௯
திŠவ் அம்பரதராபூப்ருத் । ேதாயவாய்வநலாதிஷு। ௭௨।௰௨
த்ருஸ்யாத்ருஸ்ேயஷு ைசேவஸம்। சிந்தயாம் ஆஸ பார்திவ:।
௭௨।௰௨

ஸர்வத்ர த்ருஷ்ட்வா தம் ேதவம்। ஆத்மந்ய் அபி ச ஸர்வகம்।
௭௨।௰௨௧
ஸர்வம் ச தந்மயம் த்ருஷ்ட்வா। விரராம ஸமாதித:। ௭௨।௰௨௧
இந்த்ரியாணந்த்ரியார்ேதஷு ீ । பூர்வவத் ஸ நராதிப:। ௭௨।௰௨௨
விநிேவஸ்ய தேதா அபஸ்யத்। அஸுராந் உத்யதாயுதாந்। ௭௨।௰௨௨
தாந் ஸ த்ருஷ்ட்வா க்ருஹீதார்க்ய। ஏைககஸ்ையவ பார்திவ:।
௭௨।௰௨௩
பாத்யபூர்ேவண விதிநா। பூஜயாம் ஆஸ பக்திமாந்। ௭௨।௰௨௩
ப்ரஸாதம் குரு பத்ரம் ேவா। பகவாஞ் ஜகத: பதி:। ௭௨।௰௨௪
வாஸுேதேவா பவாந் ப்ராப்ேதா। மமாநுக்ரஹகாம்யயா। ௭௨।௰௨௪
இத்ய் ஏவம் ேசதிராேஜா அஸாவ்। ஏைககஸ்ய ச தாநவாந்। ௭௨।௰௨௫
பூஜயாம் ஆஸ பாத்யாதி। நிேவத்ய வசஸா ததா। ௭௨।௰௨௫
ேத அபி தம் ேசதிராஜாநம்। பப்ரச்சுர் அஸுராஸ் ததா। ௭௨।௰௨௬
க்வ வாஸுேதேவா அத்ர வயம்। ப்ராப்தா தாக்ஷாயணஸுதா ீ :।
௭௨।௰௨௬
இத்ய் ஏவம் வதேதா ைதத்யாந்। ஸ ஜகாத புநர் வஸு:। ௭௨।௰௨௭
ப்ரணாமநம்ேரா ராேஜந்த்ர। ஸர்வதர்ஸீ மஹாமதி:। ௭௨।௰௨௭
வாஸுேதேவா ஜகத் ஸர்வம்। யச் ேசங்கம் யச் ச ேநங்கதி। ௭௨।௰௨௮
ப்ரஹ்மாதிஷு த்ருணாந்ேதஷு। ஸ ஏைவேகா ஜகத்குரு:। ௭௨।௰௨௮
அஹம் பவந்ேதா ேதவாத்யா। மநுஷ்யா: பஸவஸ் ச ேய। ௭௨।௰௨௯
ேத அபி ேதவா ஜகத்தாதுர்। வ்யதிரிக்தா ந ேகஸவாத்। ௭௨।௰௨௯
ேதைநவ மாயா விததா। ைவஷ்ணவ ீபிந்நதர்ஸநீ। ௭௨।௰௩
தயா ஸ்வாங்ேகஷு ேதேவா அெஸௗ। ப்ரதர்ஸயதி ஸர்வஸ:। ௭௨।௰௩

தத் யூயம் அஹம் அந்ேய ச। யச் ச ஸ்தாவரஜங்கமம்। ௭௨।௰௩௧
வாஸுேதவாத்மகம் ஸர்வம்। இதி மத்வா நேமா அஸ்து வ:। ௭௨।௰௩௧
இத்ய் உக்தாஸ் ேதந ேத ைதத்யா। ந ஸக்தா மநுேஜஸ்வரம்।
௭௨।௰௩௨
யத்நவந்ேதா அபி தம் ஹந்தும்। ப்ரயயு: ஸ்வாந் அதாலயாந்। ௭௨।௰௩௨
தத: புேராஹிதம் ஸர்ேவ। காவ்யம் நீதிவிஸாரதம்। ௭௨।௰௩௩
ஸேமத்ய ேத யதாவ்ருத்தம்। ஸர்வம் அஸ்ைம ந்யேவதயந்। ௭௨।௰௩௩
அஸ்மாகம் அத்யந்தரிபுர்। அயம் ப்ராப்ேதா ரஸாதலம்। ௭௨।௰௩௪
ேதவாநாம் உபக்ருத் ப்ரஹ்மந்। யஜ்வா ேசதிபதிர் வஸு:। ௭௨।௰௩௪
அஸ்மத்பக்ஷக்ஷயாையஷ। ேதவாநாம் பக்ஷவர்தந:। ௭௨।௰௩௫
தத்ர யத் ப்ரதிபத்தவ்யம்। தந் ேநா ப்ரூஹி மஹாமேத। ௭௨।௰௩௫
ஸ்வேகாசரம் அரி: ப்ராப்த:। ஸத்ருபேக்ஷாபகாரக:। ௭௨।௰௩௬
ந ஹந்தவ்ய இதீதம் ேகா। நீதிமாந் ப்ரவதிஷ்யதி। ௭௨।௰௩௬
தஸ்மாத் ப்ரக்ருஹ்ய திவ்யாநி। ஸர்வாஸ்த்ராண்ய் அமரார்தநா:।
௭௨।௰௩௭
நிபாதயத தம் கத்வா। ேசதிராஜம் ஸ்வேகாசேர। ௭௨।௰௩௭
ஸர்வம் ஏதந் மஹாபாக। தஸ்மிந்ந் அஸ்மாபிர் உத்யைத:। ௭௨।௰௩௮
க்ருதம் ந ஸகிேதா ஹந்தும்। நிர்யத்ேநா அபி ஹி பார்திவ:। ௭௨।௰௩௮
கிம் தத் ேயாகபலம் தஸ்ய। கிம் வா ஜபபலம் முேந। ௭௨।௰௩௯
தபேஸா வா முநிஸ்ேரஷ்ட। விஸ்தராத் தத் வதஸ்வ ந:। ௭௨।௰௩௯
நித்யம் ஸம்சிந்தயத்ய் ஏஷ। ேயாகயுக்ேதா ஜநார்தநம்। ௭௨।௰௪
ஸாஸ்ய ரக்ஷா பரா மந்ேய। ேகா ஹிநஸ்த்ய் அச்யுதாஸ்ரயம்।
௭௨।௰௪

கீர்தித: ஸம்ஸ்ம்ருேதா த்யாத:। பூஜித: ஸம்ஸ்துதஸ் ததா। ௭௨।௰௪௧
ஐஹிகாமுஷ்மிகீம் ரக்ஷாம்। கேராதி பகவாந் ஹரி:। ௭௨।௰௪௧
யத் துர்லபம் யத் அப்ராப்யம்। மநேஸா யந் ந ேகாசேர। ௭௨।௰௪௨
தத் அப்ய் அப்ரார்திதம் த்யாேதா। ததாதி மதுஸூதந:। ௭௨।௰௪௨
ஸரீராேராக்யம் அர்தாம்ஸ் ச। ேபாகாம்ஸ் ைசவாநுஷங்கிகாந்।
௭௨।௰௪௩
ததாதி த்யாயதாம் நித்யம்। அபவர்கப்ரேதா ஹரி:। ௭௨।௰௪௩
யத் இதம் ேசதிராஜாநம்। ஹந்தும் இச்சத தாநவா:। ௭௨।௰௪௪
தத் அஸ்ய ேகஸவாச் சித்தம்। உபாேயநாபநீயதாம்। ௭௨।௰௪௪
ததஸ் ேத தத்வச: ஸ்ருத்வா। தாநவா: குருபுங்கவ। ௭௨।௰௪௫
ப்ரஹ்மரூபப்ரதிச்சந்நா। ஜக்முர் யத்ர ஸ்திேதா வஸு:। ௭௨।௰௪௫
தத்ருஸுஸ் ேத மஹாத்மாநம்। ப்ரணதம் ேசதிபுங்கவம்। ௭௨।௰௪௬
க்ருதபூஜம் ஜகத்தாதுர்। வாஸுேதவஸ்ய பார்திவம்। ௭௨।௰௪௬
ஸம்ஸ்துதாவ் உத்யதம் ஸாந்தம்। ஸர்வத்ர ஸமதர்ஸிநம்। ௭௨।௰௪௭
க்ருஷ்ணார்பிதமேநாவ்ருத்திம்। ஜாநுப்யாம் அவநிம்கதம்। ௭௨।௰௪௭
தத: ஸம்ஸ்ருண்வதாம் ேதஷாம்। துஷ்டாவ மதுஸூதநம்। ௭௨।௰௪௮
தந்நாமஸ்மரேணாத்பூத । புலகஸ் ேசதிபுங்கவ:। ௭௨।௰௪௮
ஜகாத யம் ஸ ராஜர்ஷி:। ஸ்தவம் க்ருஷ்ணஸ்ய ெஸௗநக। ௭௨।௰௪௯
ஸ்ருண்வதாம் தாநேவந்த்ராணாம்। தந் ேம பாபஹரம் வத। ௭௨।௰௪௯
ஸ்ருணு யத் ேதவேதவஸ்ய। விஷ்ேணார் அத்புதகர்மண:। ௭௨।௰௫
ஸ்ேதாத்ரம் ஜகாத ராஜாெஸௗ। ரஸாதலதலம் கத:। ௭௨।௰௫
ஸ்ெதௗமி ேதவம் அஜம் நித்யம்। பரிணாமவிவர்ஜிதம்। ௭௨।௰௫௧

அவ்ருத்திக்ஷயம் ஈஸாநம்। அச்யுதம் பரத: பரம்। ௭௨।௰௫௧
கல்பநாக்ருதநாமாநம்। அநிர்ேதஸ்யம் அஜம் விபும்। ௭௨।௰௫௨
மூலேஹதும் அேஹதும் த்வாம்। வாஸுேதவம் நமாம்ய் அஹம்।
௭௨।௰௫௨
பரமார்தபைரர் ஈஸஸ்। சிந்த்யேத ய: ப்ரஜாகைர:। ௭௨।௰௫௩
தம் வாஸுேதவம் ஈேஸஸம்। நமாம்ய் அத்ய குணம் பரம்। ௭௨।௰௫௩
யஸ்மாத் இதம் யத்ர ேசதம்। இதம் ேயா விஸ்வம் அவ்யயம்।
௭௨।௰௫௪
தம் வாஸுேதவம் அமலம்। நமாமி பரேமஸ்வரம்। ௭௨।௰௫௪
ஜ்ேஞயம் ஜ்ஞாதாரம் அஜரம்। ேபாக்தாரம் ப்ரக்ருேத: ப்ரபும்। ௭௨।௰௫௫
புருஷஸ்வரூபிணம் ேதவம்। நேதா அஸ்மி புருஷம் பரம்। ௭௨।௰௫௫
ப்ரதாநாதிவிேஸஷாந்த । ஸ்வரூபம் அஜம் அவ்யயம்। ௭௨।௰௫௬
ஸ்தூலஸூŠமமயம் ஸர்வம் । வ்யாபிநம் தம் நமாம்ய் அஹம்।
௭௨।௰௫௬
ஸ்ரஷ்டா பாலயிதா சாந்ேத। யஸ் ச ஸம்ஹாரகாரக:। ௭௨।௰௫௭
த்ரயமயம் ீ தம் த்ரிகுணம்। நேதா அஸ்மி புருேஷாத்தமம்। ௭௨।௰௫௭
ஆப்ரஹ்மஸ்தாவராந்ேத ச। ேயா ஜகத்ய் அத்ர ஸம்ஸ்தித:। ௭௨।௰௫௮
வ்யக்தரூபீ ச தம் ேதவம்। நேதா அஹம் விஷ்ணும் அவ்யயம்।
௭௨।௰௫௮
நேமா நேமா அஸ்து ேத ேதவ। ஜகதாம் ஈஸ்வேரஸ்வர। ௭௨।௰௫௯
பரமார்த பராசிந்த்ய। விதாத: பரேமஸ்வர। ௭௨।௰௫௯
த்வம் ஆதிர் அந்ேதா மத்யம் ச। ஜகேதா அஸ்ய ஜகத்பேத। ௭௨।௰௬
ஜகத் த்வயி ஜகச் ச த்வம்। ஜகத் த்வத்ேதா ஜகந்மய। ௭௨।௰௬

தவாக்நிர் ஆஸம் வஸுதாங்க்ரியுக்மம்। நப: ஸிரஸ் சந்த்ரரவ ீச ேநத்ேர।
௭௨।௰௬௧
ஸமஸ்தேலாகா ஜடரம் புஜாஸ் ச। திஸஸ் சதஸ்ேரா பகவந் நமஸ் ேத।
௭௨।௰௬௧
யத் பூகதம் யத் ககநாந்தராேல। யத் வா நபஸ்ய் அகிலேலாககம் ச।
௭௨।௰௬௨
யத் ஸ்தூலம் ஸூŠமம் பரதஸ் தேதா அபி। யத் அஸ்தி யந் நாஸ்தி ச தத்
த்வம் ஈஸ। ௭௨।௰௬௨
ேவதாஸ் ச ேவத்யம் ச பகவாந் அநந்ேதா। ேவதாந்தேவத்யஸ் ச
ஸமஸ்தேஹேதா। ௭௨।௰௬௩
வதந்தி தத் த்வா முநய: பேரஸம்। த்வயி ப்ரஸந்ேந பரமார்தத்ருஸ்ேய।
௭௨।௰௬௩
நேமா ஹ்ருஷீேகஸ தவாப்ரேமய। நமஸ் ச துப்யம் பரமார்தஸார।
௭௨।௰௬௪
விஷ்ேணா நமஸ் ேத அஸ்து பராபேரஸ। க்ருஷ்ணாச்யுதாநந்த ஜகந்நிவாஸ।
௭௨।௰௬௪
நேமா அஸ்து துப்யம் பரேமஸ்வராய। நமஸ் ததாந்த:காரணஸ்திதாய।
௭௨।௰௬௫
ப்ரதாநபூதாய நமஸ் ச துப்யம்। வ்யக்தஸ்வரூேபண ச ஸம்ஸ்திதாய।
௭௨।௰௬௫
ஸம்ஹ்ருத்ய விஸ்வம் ஜலஸாயிேந நேமா। நமஸ் ச ேத ைகடபஸூதநாய।
௭௨।௰௬௬
ஸ்வநாபிபத்ேமாதரஸாயிேந ச। ப்ரஹ்மஸ்வரூேபாபநதாய ைசவ।
௭௨।௰௬௬

ஸ்ரஷ்ட்ேர நம: பாலயித்ேர ஸ்திெதௗ ச। ஸர்ேவஸ துப்யம்
புருேஷாத்தமாய। ௭௨।௰௬௭
ருத்ராய சாந்ேத க்ஷயேஹதேவ ேத। நேதா அஸ்மி ஸம்ஹாரகராய
விஷ்ேணா। ௭௨।௰௬௭
ஜய ப்ரபந்நார்திஹராப்ரேமய। ஜயாக்நிவஸ்வஸ்விமய ப்ரேஜஸ।
௭௨।௰௬௮
ருத்ேரந்த்ரசந்த்ரஸ்துத ேதவேதவ। ஜயாமராணாம் அரிஸாதநாய।
௭௨।௰௬௮
ஜிதம் த்வயா ஸர்வக ஸர்வஸாரம்। ஸர்வாத்மபூதாகில ேவதேவத்ய।
௭௨।௰௬௯
ஜிதம் ஜிதாக்ஷாமலசித்தத்ருஸ்ய। சராசராதார தராதேரட்ய। ௭௨।௰௬௯
யஜ்ஞாஸ்ரேயா யஜ்ஞபுமாந் அேஸஷ। ேதேவஸ மர்த்யாஸுரயஜ்ஞேபாக்த:।
௭௨।௰௭
த்வம் ஈட்யமாேநா அபிமதம் ததாஸி। தராதேரஸாச்யுத வாஸுேதவ।
௭௨।௰௭
நமஸ் ேத ேதவேதவ த்வம்। யதா பாஸ்ய் அகிலம் ஜகத்। ௭௨।௰௭௧
ஸ்திெதௗ ததா ஸமஸ்ேதப்ேயா। ேதாேஷப்ேயா மாம் ஸமுத்தர।
௭௨।௰௭௧
க்ருஷ்ணாச்யுத ஹ்ருஷீேகஸ। ஸர்வபூேதஸ ேகஸவ। ௭௨।௰௭௨
மஹாத்மம்ஸ் த்ராஹி மாம் பக்தம்। வாஸுேதவ ப்ரஸதீ ேம।
௭௨।௰௭௨
இதி ஸ்ேதாத்ராவஸாேந தம்। ேசதிராஜம் தேதா அஸுரா:। ௭௨।௰௭௩
ஜஹஸு: ஸதலாேக்ஷபம்। ப்ேராசுஸ் ச த்விஜரூபிண:। ௭௨।௰௭௩
ப்ராஜ்ஞ: கில ப்ரஜாபாலஸ்। ேசதிராட் ஸம்ஸ்ருேதா புவி। ௭௨।௰௭௪

தஸ் அஸ்ய ஜ்ஞாநம் அகிலம்। விபரீதார்தம் ஈத்ருஸம்। ௭௨।௰௭௪
க்வ வாஸுேதவ: க்வ பவாந்। இமாம் அந்த்யாம் தஸாம் கத:।
௭௨।௰௭௫
ேயா பவாந் விப்ரஸாேபந। ரஸாதலதலாஸ்ரய:। ௭௨।௰௭௫
பவிஷ்யதி ஸ்ம்ருேதா ேதவஸ்। த்ராதா கில தவாச்யுத:। ௭௨।௰௭௬
ேயா அஸாவ் ஆப்யாய்யேத விப்ைரர்। அத்வேரஷு ஹவி:ஸ்ரைவ:।
௭௨।௰௭௬
ேயா அந்யத்ரஸ் த்ராணகாேமா வா। யஜ்ஞபாகம் அபப்ஸேத ீ । ௭௨।௰௭௭
ஸ த்ராதா தவ ேகாவிந்ேதா। பவிஷ்யத்ய் அதிவிஸ்மய:। ௭௨।௰௭௭
யதா த்வம் பகவத்பக்ேதா। விப்ரஸாபாந் நிபாதித:। ௭௨।௰௭௮
ததா ஸ வாஸுேதவஸ் ேத। க்வ கேதா அல்பஸ்ருேதா அவ்யய:।
௭௨।௰௭௮
ந வாஸுேதேவா ந ஹரிர்। ந ேகாவிந்ேதா ந ேகஸவ:। ௭௨।௰௭௯
ஸாபம் ததத்ஸு விப்ேரஷு। பரித்ராணபேரா பேவத்। ௭௨।௰௭௯
ஸ த்வம் ஆர்தப்ரலாேபப்ேயா। விரமாத்ய யதீச்சஸி। ௭௨।௰௮
குபுத்திம் ஏதாம் ஸம்த்யஜ்ய। ஸ்வெபௗருஷபேரா பவ। ௭௨।௰௮
ந வயம் புண்டரீகாக்ஷம்। நாநந்தம் நாச்யுதம் ஹரிம்। ௭௨।௰௮௧
ஸம்ஸ்ரிதா ந ச ஸதாம ீ :। ஸ்வெபௗருஷம் உபாஸ்ரிதா:। ௭௨।௰௮௧
யத்ய் அஸ்மத்வசநம் வரீ। ந ேமாேஹந விஸங்கேஸ। ௭௨।௰௮௨
ததாஸ்ரயஸ்வ ஸ்வம் வர்யம் ீ । பரித்யஜ்ய விமூடதாம்। ௭௨।௰௮௨
இத்ய் உதீரிதம் ஆகர்ண்ய। ஸ ேதஷாம் ேசதிபுங்கவ:। ௭௨।௰௮௩
அஜ்ஞாநபடலச்சந்நாந்। ஹ்ருதேயந ஸுேஸாச தாந்। ௭௨।௰௮௩

உவாச ேசதிராேஜா ைவ ஹ்ருதேய க்ருதமத்ஸர:। அேஹா ேமாேஹா அயம்
ஏேதஷாம்। ௰௭௨।௧௧௬
அஹம்காரஸமுத்பவ:। ேயந ஸர்ேவஸ்வேர விஷ்ணாவ்। ௭௨।௰௮௪
ஏேதஷாம் ஆவ்ருதா மதி:। ப்ரகாஸம் ச ஸ தாந் ஆஹ। ௭௨।௰௮௪
தாநவாந் ப்ரீதிபூர்வகம்। பாபதஸ் தத்பரித்ராணம்। ௭௨।௰௮௫
சிகீர்ஷுர் வஸுதாதிப:। ைமவம் ேபா பகவத்பக்திம்। ௭௨।௰௮௫
குருத்வம் த்விஜஸத்தமா:। ஸம்ஸாராப்ெதௗ மநுஷ்யாணாம்।
௭௨।௰௮௬
ஏக: ேபாேதா ஜநார்தந:। யூயம் வயம் தைதவாந்ேய। ௭௨।௰௮௬
தஸ்ய ஸர்ேவ விபூதய:। ப்ரஹ்மாதிஸ்தாவராந்தம் ஹி। ௭௨।௰௮௭
தஸ்ய ேதவஸ்ய விஸ்த்ருதி:। ஸுகது:கமேயா ந்ருணாம்। ௭௨।௰௮௭
விபாக: கர்மணாம் ச ய:। ஸம்ஸுத்திேஹது: ஸ்வச்சந்தாத்। ௭௨।௰௮௮
ேஸா அபி விப்ரா: ப்ரவர்தேத। பரீக்ஷாம் ச ஜகந்நாத:। ௭௨।௰௮௮
கேராத்ய் அத்ருடேசதஸாம்। நராணாம் அர்தவித்வம்ஸ । ௭௨।௰௮௯
நிகாேஸஷு ஜநார்தந:। அல்பயத்ேநந சாயாந்தி। ௭௨।௰௮௯
விமுக்திம் ேகஸவாஸ்ரயாத்। தத்விகாதாய ஸக்ராத்யா। ௭௨।௰௯
யதந்ேத விக்நேஹதுபி:। யதா ஜநார்தேந பக்திம்। ௭௨।௰௯
வஹந் ஸததி ீ மாநவ:। நிர்விண்ணேசதா: ைஸதில்யம்। ௭௨।௰௯௧
மநஸ: குருேத ததா। ேதவாநாம் மஹதீஸங்கா। ௭௨।௰௯௧
பக்தியுக்தா ஜநார்தேந। முக்திபாேஜா பவிஷ்யந்தீத்ய்। ௭௨।௰௯௨
அதஸ் ேத பரிபந்திந:। ப்ராேயா பவந்தி ேகாவிந்ேத। ௭௨।௰௯௨
பக்திவ்யாகாதேஹதவ:। விக்நாஸ் சித்தவிகாதா ஹி। ௭௨।௰௯௩
விமுக்திபரிபந்திந:। ஸத்யம் ஸேதந விக்நாநாம்। ௭௨।௰௯௩

ஸஹஸ்ேரண ததா தப:। விக்நாயுேதந ேகாவிந்ேத। ௭௨।௰௯௪
ந்ருணாம் பக்திர் நிவார்யேத। ஸ்வம் சாபி கர்ம புருஷ:। ௭௨।௰௯௪
ஸுபாஸுபம் உபாகதம்। புங்க்ேத கிம் அத்ர ேதவஸ்ய। ௭௨।௰௯௫
கர்ஹ்யேத ேயந ேகஸவ:। மர்யாதாம் ச க்ருதாம் ேதந। ௭௨।௰௯௫
ேயா பிநத்தி ஸ மாநவ:। ந விஷ்ணுபக்ேதா மந்தவ்ய:। ௭௨।௰௯௬
ஸாது தர்மார்சேநா ஹரி:। ந புஷ்ைபர் ந ச தூேபந। ௭௨।௰௯௬
ேநாபஹாராநுேலபைந:। ேதாஷம் ப்ரயாதி ேகாவிந்த:। ௭௨।௰௯௭
ஸ்வகர்மாப்யர்சிேதா யதா। ப்ராஹ்மணா ேதவேதேவந। ௭௨।௰௯௭
முகாத் ஸ்ருஷ்டா மஹாத்மநா। ேதவாநாம் அபி ஸம்பூஜ்ய।
௭௨।௰௯௮
பூமிேதவா த்விேஜாத்தமா:। அநுவ்ருத்தி: ஸதா கார்யா। ௭௨।௰௯௮
ேதஷாம் வர்ைணர் அநுவ்ரைத:। ேத பூஜ்யாஸ் ேத நமஸ்கார்யாஸ்।
௭௨।௰௯௮
ேதாஷணயாஸ்ீ ச யத்நத:। ேதஷு துஷ்ேடஷ்வ் அேஸஷாணாம்।
௭௨।௰௯௯
ேதவாநாம் ப்ரீதிர் உத்தமா। ேதஷாம் மயா யத் அஜ்ஞாநாஜ்।
௭௨।௰௯௯
ஜ்ஞாநாத் வா க்ருதம் அப்ரியம்। ேதநாபி துஷ்ட ஏவாஹம்। ௭௨।௧
விஷ்ேணார் அம்ஸா த்விேஜாத்தமா:। க்ரியாவாந் மம ேபாேதா அயம்।
௭௨।௧
பூதலாத் ேயா ரஸாதேல। பதிதஸ்யாதிபேமீ அஸ்மிந்। ௭௨।௧௰௧
துருத்தாேர பவார்ணேவ। ரஸாதலதேலாத்தாரம்। ௭௨।௧௰௧

ந ஹி வாஞ்சாம்ய் அஹம் த்விஜா:। ஸம்ஸாரகர்தாத் உத்தாரம்।
௭௨।௧௰௨
வ்ருேணாம்ய் ஆராதநாத் தேர:। யதாஹம் நாபிவாஞ்சாமி। ௭௨।௧௰௨
ேபாகாந் ஆராத்ய ேகஸவம்। ேதந ஸத்ேயந விஷ்ணுர் ேம। ௭௨।௧௰௩
ஸர்வேதாஷாந் வ்யேபாஹது। யதா ந மாதா ந பிதா। ௭௨।௧௰௩
நாத்மா ந ஸுஹ்ருத: ஸுதா:। க்ருஷ்ணாலாபாத் ப்ரியதராஸ்।
௭௨।௧௰௪
ததா மாம் பாது ேகஸவ:। யதா விஷ்ணுமயம் ஸர்வம்। ௭௨।௧௰௪
ஏதத் பஸ்யாம்ய் அஹம் ஜகத்। ததா மம மேநாேதாஷாந்। ௭௨।௧௰௫
அேஸஷாந் ஸ வ்யேபாஹது। ஜாதா விஷ்ணுவிேலாேமஷு।
௭௨।௧௰௫
பவத்ஸ்வ் அபி தயா மம। யதா ேதநாத்ய ஸத்ேயந। ௭௨।௧௰௬
பவந்த: ஸந்து தந்மயா:। யதா நாஹம் பவத்த்ேவஷாந்। ௭௨।௧௰௬
ந ஸம்ஹர்ஷாத் ப்ரவம்ய்ீ அஹம்। க்ருபையவ ததா ஸர்ேவ।
௭௨।௧௰௭
பவந்த: ஸந்து தந்மயா:। ேயா ேயா ந பக்ேதா ேகாவிந்ேத। ௭௨।௧௰௭
தத்ர தத்ர க்ருபா யதா। மமாரிவர்ேக அபி ததா। ௭௨।௧௰௮
பக்திர் ேவா அஸ்து ஜநார்தேந। ஏவம் உச்சாரிேத ேதஷாம்। ௭௨।௧௰௮
ைதத்யாநாம் தத்க்ஷணாத் ததா। தஸ்மிந் ராஜந்ய் அபூந் ைமத்ரீ।
௭௨।௧௰௯
ததாந்ேயஷு ச ஜந்துஷு। ேதவேதேவ அப்ய் அபூத் பக்திர்। ௭௨।௧௰௯
பாேவா நஷ்டஸ் ததாஸுர:। ஸ்வரூபதாரிணஸ் ைசநம்। ௭௨।௧௧
ப்ரணம்யாஸுரபுங்கவா:। ப்ரத்யூசு: பார்திவம் விஷ்ணு । ௭௨।௧௧

பக்தம் ஸத்ப்ரஹ்மசாரிணம்। ேசதிபூபால பத்ரம் ேத। ௭௨।௧௧
பவேதா அதுலவிக்ரம। ஸம்ஸாேர த்வத்ஸைம: ஸங்க:। ௭௨।௧௧௧
புண்யபாஜாம் ப்ரவர்தேத। வயம் ஸ்வஜாதிேதாேஷண। ௭௨।௧௧௧
ேதவபக்ஷவிேராதிந:। பவந்தம் ஆகதா ஹந்தும்। ௭௨।௧௧௨
ேதவப்ரீணநதத்பரம்। யதா ந ஸக்திேதா ஹந்தும்। ௭௨।௧௧௨
அஸ்மாபிஸ் த்வம் நிராயுத:। விஷ்ணுத்யாநமஹாரக்ஷா । ௭௨।௧௧௩
கக்ஷாந்தரகத: ப்ரேபா। த்யாஜயத்பிஸ் ததா பக்திம்। ௭௨।௧௧௩
ேகஸவாத் இதி தர்ஸிதம்। ைவபல்யம் அதிபுண்ேயஷு। ௭௨।௧௧௪
விஷ்ணுஸுஸ்ரூஷணா ந்ருணாம்। ஸ த்வம் ேதவாதிேதவஸ்ய।
௭௨।௧௧௪
விஷ்ேணார் அமிதேதஜஸ:। அநுக்ராஹ்ேயா யதா ேதயம்। ௭௨।௧௧௫
அச்யுேத நிஸ்சலா மதி:। திஷ்ட்யா க்ேராதாபிபூதாநாம்। ௭௨।௧௧௫
அஸ்மாகம் த்வந்நிவர்ஹேண। மதிர் ஜாதா யத: ப்ராப்தா। ௭௨।௧௧௬
த்வத்ஸங்காத் துர்லபா மதி:। குருஷ்வ ச ப்ரஸாதம் த்வம்। ௭௨।௧௧௬
ப்ரணதாநாம் நேரஸ்வர। ஸத்ராவ் அபி க்ருபாஸலம் ீ । ௭௨।௧௧௭
யந் ேநா துஷ்டம் அபூந் மந:। திஸாம் ைவமல்யம் விமலம்। ௭௨।௧௧௭
சக்ஷுஷஸ் ேசாபபாதிதம்। பவதா துஷ்டதாம் ஏதாம்। ௭௨।௧௧௮
ஆஸுரீம் அபமார்ஜதா। துஷ்டா: ஸ்ம வர்ஷபூகாநி। ௭௨।௧௧௮
யத் யாதாநி வ்ருைதவ ந:। விஷயாக்ஷிப்தசித்தாநாம்। ௭௨।௧௧௯
க்ருஷ்ேண பக்திம் அகுர்வதாம்। கர்மபூெமௗ மநுஷ்யாணாம்। ௭௨।௧௧௯
தத் ஏவ விபலம் திநம்। யத் அச்யுதகதாலாப । ௭௨।௧௨
த்யாநார்சாரஹிதம் கதம்। இத்ய் உக்த்வா ேத அஸுரா பூய:। ௭௨।௧௨

ப்ரஸாத்ய ச ததா வஸும்। விஷ்ெணௗ பக்திபரா யாதாஸ்। ௭௨।௧௨௧
தீவ்ரஸம்ேயாகிேநா அலயந்। ஸ சாபி ேசதிராட் தஸ்மாத்। ௭௨।௧௨௧
ேதவேதேவந சக்ரிணா। பாதாலாத் உத்த்ருத: பஸ்சாத்। ௭௨।௧௨௨
ஸம்ஸாரகஹநாத் அபி। இத்ய் ஏதத் ஸர்வம் ஆக்யாதம்। ௭௨।௧௨௨
யந் மாம் த்வம் பரிப்ருச்சஸி। யதாவஸதந்தி ீ நரா। ௭௨।௧௨௩
பக்திமந்ேதா அபி ேகஸேவ। த்ருடா ஜநார்தேந பக்திர்। ௭௨।௧௨௩
யைதவாவ்யபிசாரிண।ீ ததா கியத் ஸ்வர்கஸுகம்। ௭௨।௧௨௪
ைஸவ நிர்வாணேஹதுகீ। இத்ய் ஏதத் அஸுைர: ஸார்தம்। ௭௨।௧௨௪
ஸம்வாதம் ய: புரா வேஸா:। படிஷ்யத்ய் அகிலம் பக்த்யா। ௭௨।௧௨௫
ஸ தல்ேலாகம் உைபஷ்யதி। ஜகத்ப்ரபும் ேதவேதவம்। ௭௨।௧௨௫
அேஸேஷஸம் ஜநார்தநம்। ப்ரணிபத்யாஹம் ஏதம் த்வாம்। ௭௩।௰௰௧
யத் ப்ருச்சாமி தத் உச்யதாம்। ையர் உபாைய: ப்ரதாைநர் வா।
௭௩।௰௰௧
நராணாம் அமரார்சித:। ப்ரீதிமாந் புண்டரீகாேக்ஷா। ௭௩।௰௰௨
பவத்ய் ஆசŠவ தந் மம। ேய ஸ்வதர்ேம ஸ்திதா வர்ணா। ௭௩।௰௰௨
விப்ராத்யா: குருநந்தந। விதர்ேமஷு ந வர்தந்ேத। ௭௩।௰௰௩
ப்ரீதிமாம்ஸ் ேதஷு ேகஸவ:। ப்ரஹ்மசாரிக்ருஹஸ்தாத்யா। ௭௩।௰௰௩
ந ச்யவந்த்ய் ஆஸ்ரமாச் ச ேய। ஸ்வதர்மேதா ஹரிஸ் ேதஷாம்।
௭௩।௰௰௪
ப்ரீதிமாந் ஏவ ஸர்வதா। ேய ந தம்ேபந வர்தந்ேத। ௭௩।௰௰௪
நரா பூேதஷ்வ் அேலாலுபா:। த்யக்தக்ராம்யாதிஸம்காஸ் ச। ௭௩।௰௰௫
ேதஷு ப்ரீதி: பரா ஹேர:। தாதாேரா நாபஹர்தார:। ௭௩।௰௰௫
பரஸ்வாநாம் அமாயிந:। ேய நராஸ் ேதஷு ேகாவிந்த:। ௭௩।௰௰௬

புத்ேரஷ்வ் இவ ஸதா ஹித:। ேயஷாம் நராணாம் ந மதிர்। ௭௩।௰௰௬
ஜிஹ்வா வாஸத்யம் உஜ்ஜதி। ேத ப்ரியா வாஸுேதவஸ்ய। ௭௩।௰௰௭
ேய ச த்விஜபராயணா:। கர்மணா மநஸா வாசா। ௭௩।௰௰௭
ேய ந ஹிம்ஸாநுவர்திந:। ேத நரா வாஸுேதவஸ்ய। ௭௩।௰௰௮
ப்ரியா: பாண்டுகுேலாத்வஹ। ஸர்வேதேவஷு ேய விஷ்ணும்।
௭௩।௰௰௮
ஸர்வபூேதஷ்வ் அவஸ்திதம்। மந்யந்ேத வாஸுேதவஸ்ய। ௭௩।௰௰௯
ேத ப்ரியா: புத்ரவத் ஸதா। ப்ரஹ்மாத்யம் ஸ்தாவராந்தம் ச। ௭௩।௰௰௯
பூதக்ராமம் ஜநார்தநாத்। ேய ச பஸ்யந்த்ய் அேபேதந। ௭௩।௰௧
ேத விஷ்ேணா: ஸததம் ப்ரியா:। ேதவேவதத்விஜாதீநாம்। ௭௩।௰௧
நிந்தாயாம் ேய ந மாநவா:। ப்ரீதிபாேஜா பவந்தீஷ்டாஸ்। ௭௩।௰௧௧
ேத ஸதா ஸார்ங்கதந்விந:। ப்ரியாணாம் அத ஸர்ேவஷாம்। ௭௩।௰௧௧
ேதவேதவஸ்ய ஸ ப்ரிய:। ஆபத்ஸ்வ் அபி ஸதா யஸ்ய। ௭௩।௰௧௨
பக்திர் அவ்யபிசாரிண।ீ தஸ்மாத் ப்ரியத்வம் க்ருஷ்ணஸ்ய। ௭௩।௰௧௨
வாஞ்சதா நிஜதர்மைஜ:। குைணர் ஆத்மா ஸதா ேயாஜ்ேயா। ௭௩।௰௧௩
ந தூேர குணிேநா ஹரி:। ேயஷாம் ந க்ருத்தி: பாரக்ேய। ௭௩।௰௧௩
தாேர த்ரவ்ேய ச ேசதஸ:। ஹிம்ஸாயாம் ச மநுஷ்யாணாம்। ௭௩।௰௧௪
ேத க்ருஷ்ேணநாவேலாகிதா:। ேவதா: ப்ரமாணம் ஸ்ம்ருதேயா।
௭௩।௰௧௪
ேயஷாம் ஸந்மார்கேஸவிநாம்। பேராபகாரஸக்தாநாம்। ௭௩।௰௧௫
ேத க்ருஷ்ேணநாவேலாகிதா:। கலிகல்மஷேதாேஷண। ௭௩।௰௧௫
ேயஷாம் ேநாபஹதா மதி:। பாஷண்டாநுகதா ைநவ। ௭௩।௰௧௬

ேத க்ருஷ்ேணநாவேலாகிதா:। ேயஷாம் க்ேலேஸா குேரார் அர்ேத।
௭௩।௰௧௬
ேதவவிப்ேராத்பேவா அபி வா। ந விவித்ஸாஸமுத்பூதஸ்। ௭௩।௰௧௭
ேத க்ருஷ்ேணநாவேலாகிதா:। ஸ்வபந்த: ஸம்ஸ்திதா யாந்தஸ்।
௭௩।௰௧௭
திஷ்டந்தஸ் ச ஜநார்தநம்। ேய சிந்தயந்த்ய் அவிரதம்। ௭௩।௰௧௮
ேத க்ருஷ்ேணநாவேலாகிதா:। யதாத்மநி ததாபத்ேய। ௭௩।௰௧௮
ேயஷாம் அத்ேராஹிணீமதி:। ஸமஸ்தஸத்த்வஜாேதஷு। ௭௩।௰௧௯
ேத க்ருஷ்ேணநாவேலாகிதா:। ேதவபூஜாம் அநுதிநம்। ௭௩।௰௧௯
குருவிப்ரார்தஸத்க்ரியாம்। ேய குர்வந்தி நரா வித்தி। ௭௩।௰௨
ேத க்ருஷ்ேணநாவேலாகிதா:। ஸுவர்ணம் ரத்நம் அதவா। ௭௩।௰௨
பாரக்யம் விஜேந வேந। விேலாக்ய ைநதி ேயா ேலாபம்। ௭௩।௰௨௧
தம் அைவஹி ஹேர: ப்ரியம்। ேதவாந் பித்ரும்ஸ் ததாபந்நாந்।
௭௩।௰௨௧
அதிதீஞ் ஜாமேயா அத்வகாந்। ேயா பிபர்தி விஜாநீஹி। ௭௩।௰௨௨
தம் நரம் பகவத்ப்ரியம்। ந க்ேராதம் ஏதி க்ருத்ேதப்ய:। ௭௩।௰௨௨
ஸஹேத ேயா நிராக்ரியாம்। தம் விஜாநீஹி பர்தவ்யம்। ௭௩।௰௨௩
ேதவேதவஸ்ய ஸார்ங்கிந:। பரேலாகப்ரதீகார । ௭௩।௰௨௩
கரணாய ஸேதாத்யமம்। குர்வந்ந் ஆலŠயதாம் ஏதி। ௭௩।௰௨௪
ேகஸேவநாவேலாகித:। நாத்மஸம்ஸ்தவம் அந்ேயஷாம்। ௭௩।௰௨௪
ந நிந்தாம் சார்தலிப்ஸயா। கேராதி புருஷவ்யாக்ர। ௭௩।௰௨௫
யஸ்ய நாராயேணா ஹ்ருதி। ஸர்வபூததயாம் ஸத்யம்। ௭௩।௰௨௫
அக்ேராதம் தர்மஸலதாம் ீ । பஜந்ேத புருஷா ேதேவ। ௭௩।௰௨௬

ேகாவிந்ேத ஹ்ருதேய ஸ்திேத। ந கெலௗ ந பரத்ரவ்ேய। ௭௩।௰௨௬
பரதாராஸ்ரிதா மதி:। நராணாம் ஜாயேத ராஜந்। ௭௩।௰௨௭
ேகாவிந்ேத ஹ்ருதயஸ்திேத। க்ஷமாம் கேராதி க்ருத்ேதஷு। ௭௩।௰௨௭
தயாம் மூேடஷு மாநவ:। முதம் ச தர்மஸேலஷு ீ । ௭௩।௰௨௮
ேகாவிந்ேத ஹ்ருதேய ஸ்திேத। யதா பிேபத்ய் அதர்மாேதர்। ௭௩।௰௨௮
தர்மாதீம்ஸ் ச யேதச்சதி। ததா குருவரஸ்ேரஷ்ட। ௭௩।௰௨௯
நர: க்ருஷ்ேணந வக்ஷித ீ :। புத்ரதாரக்ருஹேக்ஷத்ர । ௭௩।௰௨௯
த்ரவ்யாேதர் மமதாம் நர:। நாயாஸ்யதி ஜகந்நாேத। ௭௩।௰௩
ஹ்ருஷீேகேஸ பராங்முேக। கெலௗ க்ருதயுகம் ேதஷாம்। ௭௩।௰௩
க்ேலஸாஸ் ேதஷாம் ஸுகாதிகா:। ேயஷாம் ஸரீரக்ரஹேண।
௭௩।௰௩௧
ஹரிஸுஸ்ரூஷேண மதி:। யதா ேநச்சதி பாபாநி। ௭௩।௰௩௧
யதா புண்யாநி வாஞ்சதி। ஜ்ேஞயஸ் ததா மநுஷ்ேயண। ௭௩।௰௩௨
ஹ்ருதேய அஸ்ய ஹரி: ஸ்தித:। பரமார்ேத மதி: பும்ஸாம்। ௭௩।௰௩௨
அஸாேர து பவார்ணேவ। கதம் பவதி ராேஜந்த்ர। ௭௩।௰௩௩
விஷ்வக்ேஸந பராங்முேக। ஸ்ரத்ததாேநா தயாஸலீ :। ௭௩।௰௩௩
ஸமேலாஷ்டாஸ்மகாஞ்சந:। பரார்ேத மாநவ: க்ருஷ்ேண। ௭௩।௰௩௪
ப்ரஸந்ேந ந்ருப ஜாயேத। வஹேதா அபி ஸதா க்ருஷ்ேண। ௭௩।௰௩௪
பக்திம் அவ்யபிசாரிணம்ீ । பாணிஷ்வ் அஸமத்ருக்புத்ேத:। ௭௩।௰௩௫
ஸுலேபா ைநவ ேகஸவ:। ேய தாம்பிகா பிந்நவ்ருத்தா। ௭௩।௰௩௫
ேய ச தர்மத்வேஜாச்ச்ரயா:। துர்லேபா பகவாந் ேதவஸ்। ௭௩।௰௩௬
ேதஷாம் ஸுயததாம் அபி। காமேலாபாஸ்ரிதம் ேயஷாம்। ௭௩।௰௩௬

சித்தம் க்ேராதாதிதூஷிதம்। ேதஷாம் ஜந்மஸஹஸ்ேர அபி। ௭௩।௰௩௭
ந மதி: ேகஸவாஸ்ரயா। ேஹயாம் க்ருஷ்ணாஸ்ரயாம் வ்ருத்திம்।
௭௩।௰௩௭
மந்யந்ேத ேஹதுஸம்ஸ்ரிதா:। அவிேயாபஹதஜ்ஞாநா। ௭௩।௰௩௮
ேய அஜ்ஞாேந ஜ்ஞாநமாநிந:। ேவதவாதவிேராேதந। ௭௩।௰௩௮
கூடயுக்திம் அபாஸ்ரிதா:। ேய ேகஸவஸ் தத்த்ருதேய। ௭௩।௰௩௯
ந கதாசித் ப்ரியாதிதி:। மாநுஷம் தம் மநுஷ்யத்ேவ। ௭௩।௰௩௯
மந்யமாநா: குபுத்தய:। கர்மாணி ேய அஸ்ய நிந்தந்தி। ௭௩।௰௪
ந ேதஷாம் நிஷ்க்ருதிர் ந்ருணாம்। ேகசித் வதந்தி தம் ேதவம்। ௭௩।௰௪
மநுஷ்யம் சால்பேமதஸ:। திர்யக்த்வம் சாபேர விஷ்ணும்। ௭௩।௰௪௧
மாயயா தஸ்ய ேமாஹிதா:। ேதவத்வம் அபி க்ருஷ்ணஸ்ய। ௭௩।௰௪௧
யஸ்ய நிந்தா மஹாத்மந:। ஸ்துதிம் தஸ்ய கதம் ஸக்தா:। ௭௩।௰௪௨
கர்தும் ஈஸஸ்ய மாநவா:। வ்யாபித்வம் ஸாஸ்வதத்வம் ச। ௭௩।௰௪௨
ஜந்மபாவவிவர்ஜிதம்। யதாஸ்ய ப்ேராச்யேத காஸ்ய। ௭௩।௰௪௩
ஸ்துதிர் அர்ேத ததா ஸ்திெதௗ। ஸர்ேவஸ்வேரஸ்வர: க்ருஷ்ண:।
௭௩।௰௪௩
ப்ேராச்யேத யதி பண்டித:। ததாபி ஸ்வல்பம் ஏேவாக்தம்। ௭௩।௰௪௪
பூதார்ேத கதமா ஸ்துதி:। ஆப்ரஹ்மஸ்தம்பபர்யந்ேத। ௭௩।௰௪௪
ஸம்ஸாேர யஸ்ய ஸம்ஸ்திதி:। நிந்தாபி தஸ்ய ந ந்ருபி:। ௭௩।௰௪௫
கர்தும் ஈஸஸ்ய ஸக்யேத। யதா காணாஸ் ச கூண்டாஸ் ச।
௭௩।௰௪௫
மூேடா துர்புத்திர் ஆதுர:। ஸர்வகத்வாத் ஸ ஏைவகஸ்। ௭௩।௰௪௬
ததாெஸௗ நிந்த்யேத கதம்। ஸ்ரஷ்டா பாலயிதா ஹர்தா। ௭௩।௰௪௬

ஜகேதா அஸ்ய ஜகச் ச ஸ:। யஷ்டா யாஜயிதா யாஜ்ய:। ௭௩।௰௪௭
ஸ ஏவ பகவாந் ஹரி:। தாதா தாநம் ததாதாதா। ௭௩।௰௪௭
கர்தா கார்யம் ததா க்ரியா:। ஹந்தா காதயிதா ஹிம்ஸ்ேயா। ௭௩।௰௪௮
ஹார்யம் ஹர்தா ச ய: ஸ்வயம்। ஸர்வகாரணபூதஸ்ய। ௭௩।௰௪௮
தஸ்ேயஸஸ்ய மஹாத்மந:। க: கேராதி ஸ்துதிம் விஷ்ேணார்।
௭௩।௰௪௯
நிந்தாம் வா ப்ருதிவபேத ீ । தஸ்மாத் ஸர்ேவஸ்வேரா விஷ்ணுர்।
௭௩।௰௪௯
ந ஸ்ேதாதும் ந ச நிந்திதும்। ஸக்யேத ஸர்வபூதத்வாச்। ௭௩।௰௫
ேசாக்ஷாேசாக்ஷஸ்வரூபிணா। ஸ்துேத: பாதாத் யேதா நாந்யத்।
௭௩।௰௫
உத்க்ருஷ்டம் உபலப்யேத। தஸ்யாப்ய் உச்சாரேணேநேஸா। ௭௩।௰௫௧
ந ஸ்ேதாதும் ஸக்யேத ஹரி:। பூதார்தவாதஸ்துதேய। ௭௩।௰௫௧
ந நிந்தாைய விதீயேத। யேதா அத: ஸர்வபூதஸ்ய। ௭௩।௰௫௨
கா நிந்தா தஸ்ய கா ஸ்துதி:। ேயந ஸர்வாத்மநா தத்ர। ௭௩।௰௫௨
ஹ்ருதயம் ஸம்நிேவஸிதம்। அபி ெமௗநவதஸ் தஸ்ய। ௭௩।௰௫௩
ஸுலேபா அயம் ஜநார்தந:। தஸ்மாத் த்வம் குருஸார்தூல। ௭௩।௰௫௩
ஸ்வதர்மபரிபாலநம்। குரு விஷ்ணும் ச ஹ்ருதேய। ௭௩।௰௫௪
ஸர்வவ்யாபிநம் ஈஸ்வரம்। தந்மநா பவ தத்பக்தஸ்। ௭௩।௰௫௪
தத்யாஜீதம் நமஸ்குரு। விஷ்ேணார் ஏவம் ப்ரியத்வம் த்வம்।
௭௩।௰௫௫
ஆஸு யாஸ்யஸி பார்திவ। யம் ஸ்துவந் ஸ்தவ்யதாம் ஏதி।
௭௩।௰௫௫

வந்த்யமாநஸ் ச வந்த்யதாம்। தம் ஈஸ்வேரஸ்வரம் விஷ்ணும்।
௭௩।௰௫௬
ஹ்ருதேய ஸம்நிேவஸய। ஸம்பூஜ்ய யம் பூஜ்யதேமா। ௭௩।௰௫௬
பவத்ய் அத்ர ஜகத்த்ரேய। தம் ஈஸ்வேரஸ்வரம் விஷ்ணும்। ௭௩।௰௫௭
ஹ்ருதேய குரு பார்திவ। ஸ்வவர்ணகர்மாபிரத:। ௭௩।௰௫௭
குரு சித்ேத ஜநார்தநம்। ஏஷ ஸாஸ்த்ரார்தஸத்பாவ:। ௭௩।௰௫௮
கிம் உக்ைதர் பஹுவிஸ்தைர:। யஸ்மிந் ப்ரஸந்நசித்தஸ் த்வம்।
௭௩।௰௫௮
யஸ்மிந் ேகாபம் உைபஷி ச। தாவ் உபாவ் அபி தத்பூெதௗ। ௭௩।௰௫௯
சிந்தயந் ஸித்திம் ஏஷ்யஸி। யத்ர யத்ர ஸ்திதம் ேசத:। ௭௩।௰௫௯
ப்ரீத்யா ஸ்ேநேஹந வா தவ। தம் தம் சிந்தய ேகாவிந்தம்। ௭௩।௰௬
மநஸ: ஸ்ைதர்யகாரணாத்। ஸ்வபந் விபுத்த்யந்ந் உத்திஷ்டந்। ௭௩।௰௬
ஸ்திேதா புஞ்ஜந் பிபந் வ்ரஜந்। ஸர்வகம் ஸர்வகர்தாரம்। ௭௩।௰௬௧
விஷ்ணும் ஸர்வத்ர சிந்தய। யதாக்நிஸம்காத் கநகம்। ௭௩।௰௬௧
அபேதாஷம் ப்ரஜாயேத। ஸம்ஸ்லிஷ்டம் வாஸுேதேவந। ௭௩।௰௬௨
மநுஷ்யாணாம் ததா மந:। யஜ்விேநா யம் நமஸ்யந்தி। ௭௩।௰௬௨
யம் நமஸ்யந்தி ேதவதா:। ேயாகிேநா யம் நமஸ்யந்தி। ௭௩।௰௬௩
தம் நமஸ்யம் நமாம்ய் அஹம்। பூயஸ் ச ஸ்ருணு ராேஜந்த்ர।
௭௩।௰௬௩
யஜ் ஜகாத ஜநார்தந:। நாகபர்யங்கஸயேந। ௭௪।௰௰௧
ப்ருஷ்ட: க்ஷீராப்திகந்யயா। புரா ஸயாநம் ேகாவிந்தம்। ௭௪।௰௰௧
ப்ராவ்ருட்காேல மேஹாதெதௗ। ேஸஷேபாகிமஹாேபாேக। ௭௪।௰௰௨
வச்யம்புகணஸதேல ீ ீ । வக்ஷ:ஸ்தலஸ்திதா ேதவ।ீ ௭௪।௰௰௨

ஜகந்மாதா ஜகத்பதிம்। அநந்யாஸக்தத்ருஷ்டிம் ச। ௭௪।௰௰௩
கிம் அப்ய் ஏகாக்ரமாநஸம்। ஸ்ரீவத்ஸவ்க்ஷஸம் லŠமீ:। ௰௭௪।௧௧௭
கரஸம்வாஹநாத்ருதா। ேயாகநித்ராவஸாநஸ்தம்। ௭௪।௰௰௩
அச்யுதம் ஜகத: பதிம்। பப்ரச்ச புண்டரீகாக்ஷம்। ௭௪।௰௰௪
புண்டரீககரா ஹரிம்। ஸ்ருஷ்டம் ஜகத் இதம் ஸர்வம்। ௭௪।௰௰௪
பஹுஸஸ் ேசாபஸம்ஹ்ருதம்। த்வயா ஜகத்பேத சாத்ர। ௭௪।௰௰௫
கிம் கஸ்சித் தயிதஸ் தவ। ேதவாந் மநுஷ்யாந் கந்தர்வாந்। ௭௪।௰௰௫
யக்ஷவித்யாதராஸுராந்। ஸ்ருஷ்ட்வா ஸ்ருஷ்டாந் நிர்க்ருணத்வாத்।
௭௪।௰௰௬
உபஸம்ஹரேத பவாந்। கஸ்சித் ஏேதஷு பூேதஷு। ௭௪।௰௰௬
ேதவாதிஷு தவாச்யுத। த்ேவேஷா அஸ்தி ப்ரீதிர் அதவா। ௭௪।௰௰௭
ஸம: ஸர்வத்ர வா பவாந்। ஸேமா அஸ்மி ஸர்வபூேதஷு। ௭௪।௰௰௭
ந ேம த்ேவஷ்ேயா அஸ்தி ந ப்ரிய:। ததாபி குணக்ருஹ்ேயா அஹம்।
௭௪।௰௰௮
ப்ரத்ேயகஹ்ருதயஸ்தித:। அந்தராத்மநி ஸர்வஸ்ய। ௭௪।௰௰௮
ேலாகஸ்யாஹம் அவஸ்தித:। புண்யாபுண்யக்ருெதௗ ேதஷு।
௭௪।௰௰௯
ப்ரீதித்ேவெஷௗ ஸுேப மம। புண்யம் ப்ரீத்யநுபாேவந। ௭௪।௰௰௯
ஸாது புத்திஷு வர்தேத। த்ேவஷாநுபாேவநாபுண்யம்। ௭௪।௰௧
பலதம் ேதஷு பாமிநி। ஸ்ரூயதாம் ச மஹாபாேக। ௭௪।௰௧
நேரஷு ஸுபசாரிஷு। ஸததம் ேயஷு ேம ப்ரீதிஸ்। ௭௪।௰௧௧
ததாப்ரீதிர் வராநேந। ப்ரலேயாத்பத்திதத்த்வஜ்ஞா। ௭௪।௰௧௧
ஆத்மஜ்ஞாநபராஸ் ச ேய। ஏேத ஸ்வகர்மணா பத்ேர। ௭௪।௰௧௨

மம ப்ரீதிபதம் கதா:। வாங்மந:காயிகீம் ஹிம்ஸாம்। ௭௪।௰௧௨
ேய ந குர்வந்தி குத்ரசித்। ஸர்வைமத்ரா நரா லŠமி। ௭௪।௰௧௩
தயிதாஸ் ேத ஸதா மம। ஸ்வகீயத்ரவ்யஸம்துஷ்டா। ௭௪।௰௧௩
நிவ்ருத்தாஸ் ெசௗர்யகர்மண:। ஸத்யஸலதயாயுக்தா ீ । ௭௪।௰௧௪
நரா மம ஸதா ப்ரியா:। மாத்ருஸ்வஸ்ருஸுதாதுல்யாந்। ௭௪।௰௧௪
பரதாராம்ஸ் ச ேய நரா:। மந்யந்ேத ேத ச ேம லŠமி। ௭௪।௰௧௫
த்ருடம் ப்ரியதமா: ஸதா। ந காமாந் ந ச ஸம்ரம்பாந்। ௭௪।௰௧௫
ந த்ேவஷாத் ேய ச பாமிநி। ஸம்த்யஜந்தி ஸ்வகம் கர்ம। ௭௪।௰௧௬
ேத அதீவ தயிதா மம। விஸ்வாஸ்யா: ஸர்வபூதாநாம்। ௭௪।௰௧௬
அஹிம்ஸ்ராஸ் ச தயாலவ:। த்யக்தாந்ருதகதா ேதவி। ௭௪।௰௧௭
மநுஷ்யா தயிதா மம। தர்மலப்தாம்ஸ் து ேய ேபாகாந்। ௭௪।௰௧௭
புஞ்ஜேத நாதிகீகடா:। பரேலாகாவிேராேதந। ௭௪।௰௧௮
ேத மமாதிப்ரியா நரா:। ந ேலாேப ந ச கார்பண்ேய। ௭௪।௰௧௮
ந ஸ்ேதேய ந ச மத்ஸேர। ேயஷாம் மதிர் மநுஷ்யாணாம்। ௭௪।௰௧௯
ேத அதீவ தயிதா மம। தர்மலப்ேதஷு தாேரஷு। ௭௪।௰௧௯
க்ருதுகாலாபிகாமிந:। க்ருஹஸ்தகர்மாபிரதா। ௭௪।௰௨
நராஸ் ேத தயிதா மம। பரரந்த்ேரஷு ஜாத்யந்தா:। ௭௪।௰௨
பரதாேரஷ்வ் அபும்ஸகா:। பராபவாேத ேய மூகா। ௭௪।௰௨௧
தயிதாஸ் ேத நரா மம। பராபவாதம் நிந்தாம் ச। ௭௪।௰௨௧
பரமர்மாவகட்டநம்। ேய ந குர்வந்தி புருஷாஸ்। ௭௪।௰௨௨
ேத ேதவி மம வல்லபா:। ஸத்யாம் ஸ்லŠணாம் நிராபாதாம்।
௭௪।௰௨௨
மதுராம் ப்ரீதிதாயிநீம்। ேய வாசம் ஈரயந்தி ஸ்ம। ௭௪।௰௨௩

ேத மநுஷ்யா மம ப்ரியா:। ேய ப்ராஹ்மணார்ேத ஸம்த்யஜ்ய।
௭௪।௰௨௩
ஸத்ய: ஸ்வம் அபி ஜவிதம் ீ । யதந்ேத பரயா பக்த்யா। ௭௪।௰௨௪
ேத ேதவி தயிதா மம। ஸாக்ஷாத் ேதவம் இவாயாந்தம்। ௭௪।௰௨௪
யா பதிம் நித்யம் அர்சதி। பாதெஸௗசாதிபிர் நாரீ। ௭௪।௰௨௫
தஸ்யா நாஹம் ஸுதுர்லப:। பூர்ணசந்த்ரம் இேவாத்யதம்। ௭௪।௰௨௫
பர்தாரம் யா க்ருஹாகதம்। ஹ்ருஷ்டா பஸ்யதி தாம் வித்தி।
௭௪।௰௨௬
தயிதாம் ேயாஷிதம் மம। ேத பக்தா ேய ஸதா விப்ராந்। ௭௪।௰௨௬
பூஜயந்த்ய் அப்திஸம்பேவ। யதாவிபவேதா பக்த்யா। ௭௪।௰௨௭
ஸ்வகர்மாபிரதா நரா:। ஸ்ருதிஸ்ம்ருத்யுதிதம் தர்மம்। ௭௪।௰௨௭
மநஸாபி ந ேய நரா:। ஸமுல்லங்க்ய ப்ரவர்தந்ேத। ௭௪।௰௨௮
ேத பக்தா மம பாமிநி। ப்ரஹ்மரூபதரஸ்யாஸ்யாந்। ௭௪।௰௨௮
மம ேவதா விநி:ஸ்ருதா:। மந்வாதிரூபிணஸ் ைசவ। ௭௪।௰௨௯
ஸமஸ்தா: ஸ்ம்ருதய: ஸ்ம்ருதா:। ஸ்ருதி: ஸ்ம்ருதிர் மைமவாஜ்ஞா।
௭௪।௰௨௯
தாம் உல்லங்க்ய யேஜச் சுேப। ஸர்வஸ்ேவநாபி மாம் ேதவி। ௭௪।௰௩
நாப்ேநாத்ய் ஆஜ்ஞாவிகாதக்ருத்। ய: ஸ்வதர்மாந் ந சலதி। ௭௪।௰௩
ஹிம்ஸாெதௗ ேயா ந ஸஜ்யேத। வஹதஸ் தஸ்ய மத்பக்திம்।
௭௪।௰௩௧
ஸைதவாஹம் ந துர்லப:। ஏதத் ேதவி மயாக்யாதம்। ௭௪।௰௩௧
யத் ப்ருஷ்ேடா அஹம் இஹ த்வயா। ப்ரியாணாம் மம ஸர்ேவஷாம்।
௭௪।௰௩௨

ஸ்ருணு ேயா அதிதரம் ப்ரிய:। ப்ராஹ்மண: க்ஷத்ரிேயா ைவஸ்ய:।
௭௪।௰௩௨
ஸூத்ரஸ் ச வரவர்ணிநி। ஸ்வதர்மாத் அசலந் ேதவி। ௭௪।௰௩௩
தயாவாந் ஸர்வஜந்துஷு। ஸத்யவாச் ெசௗசஸம்பந்ேநா। ௭௪।௰௩௩
ந த்ேராஹீந ச மத்ஸரீ। வாங்மந:கர்மபி: ஸாந்ேதா। ௭௪।௰௩௪
தயித: ஸததம் மம। ஏவம் ஸ்ரீர் ேதவேதேவந। ௭௪।௰௩௪
ப்ராக் உக்தா ஹரிேமதஸா। தவாபி ஹி நரஸ்ேரஷ்ட। ௭௪।௰௩௫
யதாவத் கதிதம் மயா। ஸம்வாதம் ஏதத் ேதவஸ்ய। ௭௪।௰௩௫
ஸஹ லŠம்யா ஜகத்பேத:। ய: ஸ்ருேணாதி ஸ பாேபப்ய:। ௭௪।௰௩௬
ஸமஸ்ேதப்ய: ப்ரமுச்யேத। பூேயா அகிலம் ஜகத்தாதுர்। ௭௪।௰௩௬
வாஸுேதவஸ்ய பார்கவ। ஸம்யகாராதநாயாலம்। ௭௫।௰௰௧
க்ரியாேயாகம் ப்ரவஹி ீ ேம। யத் பலம் ேகஸவஸ்யார்சாம்। ௭௫।௰௰௧
ப்ரதிஷ்டாப்ய லேபந் நர:। யச் ச ேதவகுலம் விஷ்ேணா:। ௭௫।௰௰௨
காரயித்வா பலம் லேபத்। யத் தீபதூபபுஷ்பாணாம்। ௭௫।௰௰௨
கந்தாநாம் ச நிேவதேந। த்வஜாதிதாேந யத் புண்யம்। ௭௫।௰௰௩
யத் புண்யம் கீதவாதிேத। ததா பவித்ரபடேந। ௭௫।௰௰௩
ஜயஸப்தாத்யுதீரேண। ஸம்மார்ஜநாெதௗ யத் புண்யம்। ௭௫।௰௰௪
நமஸ்காேர ப்ரதக்ஷிேண। ஸர்ணஸ்புடிதஸம்ஸ்கார ீ । ௭௫।௰௰௪
கரேண சாபி யத் பலம்। தந் ேம விஸ்தரத: ஸர்வம்। ௭௫।௰௰௫
பகவந் வக்தும் அர்ஹஸி। ையஸ் ேசாபவாைஸர் பகவாந்। ௭௫।௰௰௫
நைரர் ஆராத்யேத ஹரி:। ேதஷாம் பலம் ச யத் க்ருத்ஸ்நம்।
௭௫।௰௰௬

தந் மமாசŠவ விஸ்தராத்। ஸம்ேக்ஷபாத் பூர்வம் ஏைவதத்।
௭௫।௰௰௬
பவத: கதிதம் மயா। விஸ்தேரண மஹாராஜ। ௭௫।௰௰௭
ஸ்ரூயதாம் ப்ருவேதா மம। அதிதிர் நாம ேதவாநாம்। ௭௫।௰௰௭
மாதா பரமதுஸ்சரம்। தபஸ் சசார வர்ஷாணாம்। ௭௫।௰௰௮
ஸஹஸ்ரம் ப்ருதிவபேத ீ । ஆராதநாய க்ருஷ்ணஸ்ய। ௭௫।௰௰௮
வாக்யதா வாயுேபாஜநா। ைதத்ையர் நிராக்ருதாந் த்ருஷ்ட்வா।
௭௫।௰௰௯
தநயாந் குருநந்தந। வ்ருதாபுத்ராஹம் அஸ்மீதி। ௭௫।௰௰௯
நிர்ேவதாத் ப்ரணதா ஹரிம்। துஷ்டாவ வாக்பிர் இஷ்டாபி:। ௭௫।௰௧
பரமார்தாவேபாதிநீ। ஸரண்யம் ஸரணம் விஷ்ணும்। ௭௫।௰௧
ப்ரணதா பக்தவத்ஸலம்। ேதவைதத்யந்ருபஸ்வாப । ௰௭௫।௧௧௮
வ்ேயாமவாய்வாதிரூபிணம்। நம: ஸ்ம்ருதார்திநாஸாய। ௭௫।௰௧
நம: புஷ்கரமாலிேந। நம: பரமகல்யாண । ௭௫।௰௧௧
கல்யாணாயாதிேவதேஸ। நம: பங்கஜேநத்ராய। ௭௫।௰௧௧
நம: பங்கஜநாபேய। நம: பங்கஜஸம்பூதி । ௭௫।௰௧௨
ஸம்பவாயாத்மேயாநேய। ஸ்ரிய: காந்தாய தாந்தாய। ௭௫।௰௧௨
தாந்தத்ருஸ்யாய சக்ரிேண। நம: ஸங்காஸிஹஸ்தாய। ௭௫।௰௧௩
நம: கநகேரதேஸ। ததாத்மஜ்ஞாநவிஜ்ஞாந । ௭௫।௰௧௩
ேயாகசித்தாத்மேயாகிேந। நிர்குணாய விேஸஷாய। ௭௫।௰௧௪
ஹரேய ப்ரஹ்மரூபிேண। ஜகத் ப்ரதிஷ்டிதம் யத்ர। ௭௫।௰௧௪
ஜகதா ேயா ந த்ருஸ்யேத। நம: ஸ்தூலாதிஸூŠமாய। ௭௫।௰௧௫
தஸ்ைம ேதவாய ஸங்கிேந। யம் ந பஸ்யந்தி பஸ்யந்ேதா। ௭௫।௰௧௫

ஜகத் அப்ய் அகிலம் நரா:। அபஸ்யத்பிர் ஜகத் யச் ச। ௭௫।௰௧௬
த்ருஸ்யேத ஸ்வஹ்ருதி ஸ்தித:। பஹிர்ஜ்ேயாதிஷி லŠேயா ேயா।
௭௫।௰௧௬
லŠயேத ஜ்ேயாதிஷ: பர:। யஸ்மிந்ந் ஏதத் யதஸ் ைசதத்।
௰௭௫।௧௧௯
யஸ் ைசதத் அகிலம் ஜகத்। தஸ்ைம ஸமஸ்தஜகதாம்। ௭௫।௰௧௭
ஆதாராய நேமா நம:। ஆத்ய: ப்ரஜாபதிபதிர்। ௭௫।௰௧௭
ய: பித்ருணாம் பர: பதி:। பதி: ஸுராணாம் யஸ் தஸ்ைம। ௭௫।௰௧௮
நம: க்ருஷ்ணாய ேவதேஸ। ய: ப்ரவ்ருத்ைதர் நிவ்ருத்ைதஸ் ச।
௭௫।௰௧௮
கர்மபிர் விபுர் இஜ்யேத। ஸ்வர்காபவர்கபலேதா। ௭௫।௰௧௯
நமஸ் தஸ்ைம கதாத்ருேத। யஸ் சிந்த்யமாேநா மநஸா। ௭௫।௰௧௯
ஸத்ய: பாபம் வ்யேபாஹதி। நமஸ் தஸ்ைம விஸுத்தாய। ௭௫।௰௨
பரஸ்ைம ஹரிேமதேஸ। யம் ப்ரவிஸ்யாகிலாதாரம்। ௭௫।௰௨
ஈஸாநம் அஜம் அவ்யயம்। ந புநர் ஜந்மமரேண। ௭௫।௰௨௧
ப்ராப்நுவந்தி நமாமி தம்। ேயா யஜ்ேஞ யஜ்ஞபரைமர்। ௭௫।௰௨௧
இஜ்யேத யஜ்ஞஸம்ஸ்திதி:। தம் யஜ்ஞபுருஷம் விஷ்ணும்। ௭௫।௰௨௨
நமாமி ப்ரபும் ஈஸ்வரம்। கீயேத ஸர்வேவேதஷு। ௭௫।௰௨௨
ேவதவித்பிர் விதாம் கதி:। யஸ் தஸ்ைம ேவதேவத்யாய। ௭௫।௰௨௩
விஷ்ணேவ ஜிஷ்ணேவ நம:। யேதா விஸ்வம் ஸமுத்பூதம்। ௭௫।௰௨௩
யஸ்மிம்ஸ் ச லயம் ஏஷ்யதி। விஸ்ேவாத்பவப்ரதிஷ்டாய। ௭௫।௰௨௪
நமஸ் தஸ்ைம மஹாத்மேந। ப்ரஹ்மாதிஸ்தம்பபர்யந்தம்। ௭௫।௰௨௪
விநா ேயந ததாம் இமாம்। மாயாம் நாலம் ஸமுத்தர்தும்। ௭௫।௰௨௫

தம் உேபந்த்ரம் நமாம்ய் அஹம்। யம் ஆராத்ய விஸுத்ேதந।
௭௫।௰௨௫
மநஸா கர்மணா கிரா। ஹரத்ய் அவித்யாம் அகிலாம்। ௰௭௫।௧௨௰
தம் உேபந்த்ரம் நமாம்ய் அஹம்। விஷாதேதாஷேராஷாத்ையர்।
௰௭௫।௧௨௰
ேயா அஜஸ்ரம் ஸுகது:கைஜ:। ந்ருத்யத்ய் அகிலபூதஸ்தஸ்।
௰௭௫।௧௨௰
தம் உேபந்த்ரம் நமாம்ய் அஹம்। ேயா அந்நேதாயஸ்வரூபஸ்ேதா।
௰௭௫।௧௨௰
பிபர்த்ய் அகிலம் ஈஸ்வர:। விஸ்வம் விஸ்வபதிம் விஷ்ணும்।
௭௫।௰௨௬
தம் நமாமி ப்ரஜாபதிம்। மூர்தம் தேமா அஸுரமயம்। ௭௫।௰௨௬
தத்வதாத் விநிஹந்தி ய:। ராத்ரிஜம் ஸூர்யரூபீ ச। ௭௫।௰௨௭
தம் உேபந்த்ரம் நமாம்ய் அஹம்। கபிலாதிஸ்வரூபஸ்ேதா। ௭௫।௰௨௭
யஸ் சாஜ்ஞாநமயம் தம:। ஹந்தி ஜ்ஞாநப்ரதாேநந। ௭௫।௰௨௮
தம் உேபந்த்ரம் நமாம்ய் அஹம்। யஸ்யாக்ஷிணீசந்த்ரஸூர்ெயௗ।
௭௫।௰௨௮
ஸர்வேலாகஸுபாஸுபம்। பஸ்ேயேத கர்ம ஸததம்। ௭௫।௰௨௯
தம் உேபந்த்ரம் நமாம்ய் அஹம்। யஸ்மிந் ஸர்ேவஸ்வேர ஸர்வம்।
௭௫।௰௨௯
ஸத்யம் ஏதந் மேயாதிதம்। நாந்ருதம் தம் அஜம் விஷ்ணும்। ௭௫।௰௩
நமாமி ப்ரபவாவ்யயம்। யைததத் ஸத்யம் உக்தம் ேம। ௭௫।௰௩
பூயஸ் சாேதா ஜநார்தந:। ஸத்ேயந ேதந ஸகலா:। ௭௫।௰௩௧
பூர்யந்தாம் ேம மேநாரதா:। ஏவம் ஸ்துேதா அத பகவாந்। ௭௫।௰௩௧

வாஸுேதவ உவாச தாம்। அத்ருஸ்ய: ஸர்வபூதாநாம்। ௭௫।௰௩௨
தஸ்யா: ஸம்தர்ஸேந ஸ்தித:। மேநாரதாம்ஸ் த்வம் அதிேத।
௭௫।௰௩௨
யாந் இச்சஸ்ய் அபிபூரிதாந்। தாம்ஸ் தாந் ப்ராப்ஸ்யஸி தர்மஜ்ேஞ।
௭௫।௰௩௩
மத்ப்ரஸாதாத் அஸம்ஸயம்। ஸ்ருணுஷ்வ ச மஹாபாேக। ௭௫।௰௩௩
வரம் யஸ் ேத ஹ்ருதி ஸ்தித:। தம் ப்ரயச்சாமி நியதம்। ௭௫।௰௩௪
மாத்ர கார்யா விசாரணா। மத்தர்ஸநம் ஹி விபலம்। ௰௭௫।௧௨௨
ந கதாசித் பவிஷ்யதி। யதி ேதவ ப்ரஸந்நஸ் த்வம்। ௭௫।௰௩௪
பக்தாயா பக்தவத்ஸல। த்ைரேலாக்யாதிபதி: புத்ரஸ்। ௭௫।௰௩௫
தத் அஸ்து மம வாஸவ:। ஹ்ருதராஜ்ேயா ஹ்ருதஸ் சாஸ்ய।
௭௫।௰௩௫
யஜ்ஞபாேகா மஹாஸுைர:। த்வயி ப்ரஸந்ேந வரத। ௭௫।௰௩௬
தம் ப்ராப்ேநாது ஸுேதா மம। ஹ்ருதம் ராஜ்யம் ந து:காய। ௭௫।௰௩௬
மம புத்ரஸ்ய ேகஸவ। ஸபத்நாத் ஆயதிப்ரம்ேஸா। ௭௫।௰௩௭
பாதாம் ந: குருேத ஹ்ருதி। க்ருத: ப்ரஸாேதா ஹி மயா। ௭௫।௰௩௭
தவ ேதவி யேதப்ஸித:। ஸ்வாம்ேஸந ைசவ ேத கர்ேப। ௭௫।௰௩௮
ஸம்பவிஷ்யாமி கஸ்யபாத்। தவ கர்பஸமுத்பூத:। ௭௫।௰௩௮
ஸுதஸ் ேத ேய ஸுராரய:। தாந் அஹம் நிஹநிஷ்யாமி। ௭௫।௰௩௯
நிர்வ்ருதா பவ நந்திநி। ப்ரஸதீ ேதவேதேவஸ। ௭௫।௰௩௯
நமஸ் ேத விஸ்வபாவந। நாஹம் த்வாம் உதேரேணஸ। ௭௫।௰௪
ேவாடும் ஸŠயாமி ேகஸவ। யஸ்மிந் ப்ரதிஷ்டிதம் விஸ்வம்।
௭௫।௰௪

ேயா விஸ்வம் ஸ்வயம் ஈஸ்வர। தத் அஹம் ேநாதேரண த்வாம்।
௭௫।௰௪௧
ேவாடும் ஸŠயாமி துர்தரம்। ஸத்யம் ஆத்த மஹாபாேக। ௭௫।௰௪௧
மயி ஸர்வம் இதம் ஜகத்। ப்ரதிஷ்டிதம் ந மாம் ஸக்தா। ௭௫।௰௪௨
ேவாடும் ேஸந்த்ரா திெவௗகஸ:। கிந்த்வ் அஹம் ஸகலாம்ல் ேலாகாந்।
௭௫।௰௪௨
ஸேதவாஸுரமாநுஷாந்। ஜங்கமாஜங்கமம் ஸர்வம்। ௭௫।௰௪௩
த்வாம் ச ேதவி ஸகாஸ்யபாம்। தாரயிஷ்யாமி பத்ரம் ேத। ௭௫।௰௪௩
தவ கர்பஸேயா அதிேத। ந ேத க்லாநிர் ந ேத ேகேதா। ௭௫।௰௪௩
கர்பஸ்ேத பவிதா மயி। தாக்ஷாயணி ப்ரஸாதம் ேத। ௭௫।௰௪௪
கேராம்ய் அந்ைய: ஸுதுர்லபம்। கர்பஸ்ேத மயி புத்ராணாம்। ௭௫।௰௪௪
தவ ேயா அரிர் பவிஷ்யதி। ேதஜஸஸ் தஸ்ய ஹாநிம் ச। ௭௫।௰௪௫
கரிஷ்ேய மா வ்யதாம் க்ருதா:। ஏவம் உக்த்வா தத: ஸத்ேயா।
௭௫।௰௪௫
கேதா அந்தர்தாநம் ஈஸ்வர:। ஸாபி காேலந தம் கர்பம்। ௭௫।௰௪௬
அவாப குருஸத்தம। கர்பஸ்திேத தத: க்ருஷ்ேண। ௭௫।௰௪௬
சசால ஸகலா க்ஷிதி:। சகம்பிேர மஹாைஸலா। ௭௫।௰௪௭
ஜக்மு: ேக்ஷாபம் அதாப்தய:। யேதா யேதா அதிதிர் யாந்தீ। ௭௫।௰௪௭
ததாதி லலிதம் பதம்। ததஸ் தத: க்ஷிதி: ேகதாந்। ௭௫।௰௪௮
நநாம வஸுதாதிப। ைதத்யாநாம் அபி ஸர்ேவஷாம்। ௭௫।௰௪௮
கர்பஸ்ேத மதுஸூதேந। பபூவ ேதஜேஸா ஹாநிர்। ௭௫।௰௪௯
யேதாக்தம் பரேமஷ்டிநா। நிஸ்ேதஜேஸா அஸுராந் த்ருஷ்ட்வா।
௭௫।௰௪௯

ஸமஸ்தாந் அஸுேரஸ்வர:। ப்ரஹ்ராதம் அத பப்ரச்ச। ௭௬।௰௰௧
பலிர் ஆத்மபிதாமஹம்। தாத நிஸ்ேதஜேஸா ைதத்யா। ௭௬।௰௰௧
நிர்தக்தா இவ வஹ்நிநா। கிம் ஏேத ஸஹைஸவாத்ய। ௭௬।௰௰௨
ப்ரஹ்மதண்டஹதா இவ। துரிஷ்டம் கிம் நு ைதத்யாநாம்। ௭௬।௰௰௨
கிம் க்ருத்யா ைவரிநிர்மிதா। நாஸாையஷாம் ஸமுத்பூதா। ௭௬।௰௰௩
ேயந நிஸ்ேதஜேஸா அஸுரா:। இத்ய் ஆஸுரவரஸ் ேதந। ௭௬।௰௰௩
ப்ருஷ்ட: ெபௗத்ேரண பார்திவ। சிரம் த்யாத்வா ஜகாேததம்। ௭௬।௰௰௪
அஸுேரந்த்ரம் ததா பலிம்। சலந்தி கிரேயா பூமிர்। ௭௬।௰௰௪
ஜஹாதி ஸஹஜாம் த்ருதிம்। ஸத்ய: ஸமுத்ரா: க்ஷுபிதா। ௭௬।௰௰௫
ைதத்யா நிஸ்ேதஜஸ: க்ருதா:। ஸூர்யாதேயா யதா பூர்வம்।
௭௬।௰௰௫
ததா கச்சந்தி ந க்ரஹா:। ேதவாநாம் ச பரா லŠமீ:। ௭௬।௰௰௬
காரைணர் அநுமீயேத। மஹத் ஏதந் மஹாபாேஹா। ௭௬।௰௰௬
காரணம் தாநேவஸ்வர। ந ஹ்ய் அல்பம் இதி மந்தவ்யம்। ௭௬।௰௰௭
த்வயா கார்யம் ஸுரார்தந। இத்ய் உக்த்வா தாநவபதிம்। ௭௬।௰௰௭
ப்ரஹ்ராத: ேஸா அஸுேராத்தம:। அத்யந்தபக்ேதா ேதேவஸம்।
௭௬।௰௰௮
ஜகாம மநஸா ஹரிம்। ஸ த்யாநபதகம் க்ருத்வா। ௭௬।௰௰௮
ப்ரஹ்ராத: ஸ்வம் மேநா அஸுர:। விசாரயாம் ஆஸ தேதா। ௭௬।௰௰௯
யேதா ேதேவா ஜநார்தந:। ஸ ததர்ேஸாதேர அதித்யா:। ௭௬।௰௰௯
ப்ரஹ்ராேதா வாமநாக்ருதிம்। அந்த:ஸ்தாந் பிப்ரதம் ஸப்த। ௭௬।௰௧
ேலாகாந் ஆதிப்ரஜாபதிம்। தத் அந்தஸ் ச வஸூந் ருத்ராந்। ௭௬।௰௧

அஸ்விெநௗ மருதஸ் ததா। ஸாத்யாந் விஸ்ேவ ததாதித்யாந்।
௭௬।௰௧௧
கந்தர்ேவாரகராக்ஷஸாந்। விேராசநம் ஸதநயம்। ௭௬।௰௧௧
பலிம் சாஸுரநாயகம்। ஜம்பம் குஜம்பம் நரகம்। ௭௬।௰௧௨
பாணம் அந்யாம்ஸ் ததாஸுராந்। ஆத்மாநம் உர்வககநம் ீ । ௭௬।௰௧௨
வாயும் அம்ேபா ஹுதாஸநம்। ஸமுத்ராத்ரித்ருமஸரித் । ௭௬।௰௧௩
ஸராம்ஸி பஸேவா ம்ருகாந்। வேயாமநுஷ்யாந் அகிலாம்ஸ்।
௭௬।௰௧௩
தைதவ ச ஸரீஸ்ருபாந்। ஸமஸ்தேலாகஸ்ரஷ்டாரம்। ௭௬।௰௧௪
ப்ரஹ்மாணம் பவம் ஏவ ச। க்ரஹநக்ஷத்ரதாராஸ் ச। ௭௬।௰௧௪
தக்ஷாத்யாம்ஸ் ச ப்ரஜாபதீந்। ஸம்பஸ்யந் விஸ்மயாவிஷ்ட:।
௭௬।௰௧௫
ப்ரக்ருதிஸ்த: க்ஷணாத் புந:। ப்ரஹ்ராத: ப்ராஹ ைதத்ேயந்த்ரம்।
௭௬।௰௧௫
பலிம் ைவேராசநிம் ததா। வத்ஸ ஜ்ஞாதம் மயா ஸர்வம்। ௭௬।௰௧௬
யதர்தம் பவதாம் இயம்। ேதஜேஸா ஹாநிர் உத்பந்நா। ௭௬।௰௧௭
தச் ச்ருணு த்வம் அேஸஷத:। ேதவேதேவா ஜகத்ேயாநிர்। ௭௬।௰௧௭
அேயாநிர் ஜகதாதிக்ருத்। அநாதிர் ஆதிர் விஸ்வஸ்ய। ௭௬।௰௧௮
வேரண்ேயா வரேதா ஹரி:। பராபராணாம் பரம:। ௭௬।௰௧௮
பர: பரவதாம் அபி। ப்ரபு: ப்ரமாணம் மாநாநாம்। ௭௬।௰௧௯
ஸப்தேலாககுேரார் குரு:। ஸ்திதிம் கர்தும் ஜகந்நாத:। ௭௬।௰௧௯
ேஸா அதித்யா கர்பதாம் கத:। ப்ரபு: ப்ரபூணாம் பரம: பராணாம்।
௰௭௬।௧௨௩

அநாதிமத்ேயா பகவாந் அநந்த:। த்ைரேலாக்யம் அம்ேஸந ஸநாதம் ஏஷ।
௭௬।௰௨
கர்தும் மஹாத்மாதிதிேஜா அவதீர்ண:। ந யஸ்ய ருத்ேரா ந ச பத்மேயாநிர்।
௭௬।௰௨
ேநந்த்ேரா ந ஸூர்ேயந்துமரீசிமிஸ்ரா:। ஜாநந்தி ைதத்யாதிப யத் ஸ்வரூபம்।
௭௬।௰௨௧
ஸ வாஸுேதவ: கலயாவதீர்ண:। ேயா அெஸௗ கலாம்ேஸந ந்ருஸிம்ஹரூப।ீ
௭௬।௰௨௧
ஜகாந பூர்வம் பிதரம் அேஸஷ:। ய: ஸர்வேயாகீஸமேநாநிவாஸ:।
௭௬।௰௨௨
ஸ வாஸுேதவ: கலயாவதீர்ண:। யம் அக்ஷரம் ேவதவிேதா விதித்வா।
௭௬।௰௨௨
விஸந்தி தம் ஜ்ஞாநவிதூதபாபா:। யஸ்மிந் ப்ரவிஷ்டா ந புநர் பவந்தி।
௭௬।௰௨௩
தம் வாஸுேதவம் ப்ரணமாமி ேதவம்। பூதாந்ய் அேஸஷாணி யேதா பவந்தி।
௭௬।௰௨௩
யேதார்மயஸ் ேதாயநிேதர் அஜஸ்ரம்। லயம் ச யஸ்மிந் ப்ரலேய ப்ரயாந்தி।
௭௬।௰௨௪
தம் வாஸுேதவம் ப்ரணமாம்ய் அசிந்த்யம்। ந யஸ்ய ரூபம் ந பலம்
ப்ரபாேவா। ௭௬।௰௨௪
ந ச ஸ்வபாவ: பரமஸ்ய பும்ஸ:। விஜ்ஞாயேத ஸர்வபிதாமஹாத்ையஸ்।
௭௬।௰௨௫
தம் வாஸுேதவம் ப்ரணமாம்ய் அசிந்த்யம்। ரூபஸ்ய சக்ஷுர் க்ரஹேண த்வக்
ஏஷா। ௭௬।௰௨௫

ஸ்பர்ஸக்ரஹீத்ரீ ரஸநா ரஸஸ்ய। ஸ்ேராத்ரம் ச ஸப்தக்ரஹேண நராணாம்।
௭௬।௰௨௬
க்ராணம் ச கந்தக்ரஹேண நியுக்தம்। ந க்ராணசக்ஷு:ஸ்ரவணாதிபிர் ய:।
௭௬।௰௨௬
ஸர்ேவஸ்வேரா ேவதிதும் அவ்யயாத்மா। ஸக்யஸ் தம் ஈட்யம் மநைஸவ
ேதவம்। ௭௬।௰௨௭
க்ராஹ்யம் நேதா அஹம் ஹரிம் ஈஸிதாரம்।
ேயைநகதம்ஷ்ட்ராக்ரஸமுத்த்ருேதயம்। ௭௬।௰௨௭
தராசலா தாரயதீஹ ஸர்வம்। க்ரஸ்த்வா ஸ ேஸேத ஸகலம் ஜகத் யஸ்।
௭௬।௰௨௮
தம் ஈட்யம் ஈஸம் ப்ரணேதா அஸ்மி விஷ்ணும்। அம்ஸாவதீர்ேணந ச ேயந
கர்ேப। ௭௬।௰௨௮
ஹ்ருதாநி ேதஜாம்ஸி மஹாஸுராணாம்। நமாமி தம் ேதவம் அநந்தம் ஈஸம்।
௭௬।௰௨௯
அேஸஷஸம்ஸாரதேரா: குடாரம்। ேதேவா ஜகத்ேயாநிர் அயம் மஹாத்மா।
௭௬।௰௨௯
ஸ ேஷாடஸாம்ேஸந மஹாஸுேரந்த்ர। ஸுேரந்த்ரமாதுர் ஜடரம்
ப்ரவிஷ்ேடா। ௭௬।௰௩
ஹ்ருதாநி வஸ் ேதந பேல வபூம்ஷி। தாத ேகா அயம் ஹரிர் நாம।
௭௬।௰௩
யேதா ந பயம் ஆகதம்। ஸந்தி ேம ஸதேஸா ைதத்யா। ௭௬।௰௩௧
வாஸுேதவபலாதிகா:। விப்ரசித்தி: ஸிபி: ஸங்குர்। ௭௬।௰௩௧
அய:ஸங்குஸ் தைதவ ச। அய:ஸிரா அஸ்வஸிரா। ௭௬।௰௩௨
பங்ககாேரா மஹாஹநு:। ப்ரதாபீ ப்ரகஸ: ஸம்பு:। ௭௬।௰௩௨
குர்குராக்ஷஸ் ச துர்ஜய:। ஏேத சாந்ேய ச ேம ஸந்தி। ௭௬।௰௩௩

ைதேதயா தாநவாஸ் ததா। மஹாபலா மஹாவர்யா ீ । ௭௬।௰௩௩
பூபாரதரணக்ஷமா:। ேயஷாம் ஏைககஸ: க்ருஷ்ேணா। ௭௬।௰௩௪
ந வர்யார்ேதந ீ ஸம்மித:। ெபௗத்ரஸ்ையதத் வச: ஸ்ருத்வா। ௭௬।௰௩௪
ப்ரஹ்ராேதா ைதத்யபுங்கவ:। திக் திக் இத்ய் ஆஹ ஸ பலிம்।
௭௬।௰௩௫
ைவகுண்டாேக்ஷபவாதிநம்। விநாஸம் உபயாஸ்யந்தி। ௭௬।௰௩௫
மந்ேய ைதேதயதாநவா:। ேயஷாம் த்வம் ஈத்ருேஸா ராஜா। ௭௬।௰௩௬
துர்புத்திர் அவிேவகவாந்। ேதவேதவம் மஹாபாகம்। ௭௬।௰௩௬
வாஸுேதவம் அஜம் விபும்। த்வாம் க்ருேத பாபஸம்கல்பம்। ௭௬।௰௩௭
ேகா அந்ய ஏவம் வதிஷ்யதி। ய ஏேத பவதா ப்ேராக்தா:। ௭௬।௰௩௭
ஸமஸ்தா ைதத்யதாநவா:। ஸப்ரஹ்மகாஸ் ததா ேதவா:। ௭௬।௰௩௮
ஸ்தாவராந்தாஸ் ச பூதய:। த்வம் சாஹம் ச ஜகச் ேசதம்। ௭௬।௰௩௮
ஸாத்ரித்ருமநதீநதம்। ஸமுத்ரத்வபேலாகாஸ் ீ ச। ௭௬।௰௩௯
யச் ேசங்கம் யச் ச ேநங்கதி। யஸ்யாதிவந்த்யவந்த்யஸ்ய। ௭௬।௰௩௯
வ்யாபிந: பரமாத்மந:। ஏகாம்ஸாம்ஸகலாஜந்ம। ௭௬।௰௪
கஸ் தம் ஏவம் ப்ரவŠயதி। க்ருேத விநாஸாபிமுகம்। ௭௬।௰௪
த்வாம் ஏகம் அவிேவகிநம்। துர்புத்திம் அஜிதாத்மாநம்। ௭௬।௰௪௧
வ்ருத்தாநாம் ஸாஸநாதிகம்। ேஸாச்ேயா அஹம் யஸ்ய ைவ ேகேஹ।
௭௬।௰௪௧
ஜாதஸ் தவ பிதாதம:। யஸ்ய த்வம் ஈத்ருஸ: புத்ேரா। ௭௬।௰௪௨
ேதவேதவாவமந்யக:। திஷ்டத்வ் அேநகஸம்ஸார । ௭௬।௰௪௨
ஸம்ஹ்ருதாகவிநாஸநீ। க்ருஷ்ேண பக்திர் அஹம் தாவத்। ௭௬।௰௪௩
அேவŠேயா பவேதா ந கிம்। ந ேம ப்ரியதர: க்ருஷ்ணாத்। ௭௬।௰௪௩

அபி ேதேஹா அயம் ஆத்மந:। இதி ஜாநாத்ய் அயம் ேலாேகா।
௭௬।௰௪௪
பவாம்ஸ் ச திதிஜாதம:। ஜாநந்ந் அபி ப்ரியதரம்। ௭௬।௰௪௪
ப்ராேணப்ேயா அபி ஹரிம் மம। நிந்தாம் கேராஷி ச கதம்। ௭௬।௰௪௫
அகுர்வந் ெகௗரவம் மம। விேராசநஸ் தவ குருர்। ௭௬।௰௪௫
குருஸ் தஸ்யாப்ய் அஹம் பேல। மமாபி ஸர்வஜகதாம்। ௭௬।௰௪௬
குருர் நாராயேணா குரு:। நிந்தாம் கேராஷி தஸ்மிம்ஸ் த்வம்।
௭௬।௰௪௬
க்ருஷ்ேண குருகுேரார் குெரௗ। யஸ்மாத் தஸ்மாத் இைஹஸ்வர்யாத்।
௭௬।௰௪௭
அசிராத் ப்ரம்ஸம் ஏஷ்யஸி। மா ேதேவா மா ஜகந்நாேதா। ௭௬।௰௪௭
பேல மாெஸௗ ஜநார்தந:। பவத்வ் அஹம் அேவŠயஸ் ேத।
௭௬।௰௪௮
ப்ரீதிமாந் அத்ர ேம குரு:। ஏதாவந்மாத்ரம் அப்ய் அத்ர। ௭௬।௰௪௮
நிந்ததா ஜகேதா குரும்। நாேபக்ஷிதா வயம் யஸ்மாத்। ௭௬।௰௪௯
தஸ்மாச் சாபம் ததாமி ேத। யதா ேம ஸிரஸஸ் ேசதாத்। ௭௬।௰௪௯
இதம் குருதரம் பேல। த்வேயாக்தம் அச்யுதாேக்ஷபி। ௭௬।௰௫
ராஜ்யப்ரஷ்டஸ் ததா பத। யதா ந க்ருஷ்ணாத் அபரம்। ௭௬।௰௫
பரித்ராணம் பவார்ணேவ। ததாசிேரண பஸ்ேயயம்। ௭௬।௰௫௧
பவந்தம் ராஜ்யவிச்யுதம்। இதி ைதத்யபதி: ஸ்ருத்வா। ௭௬।௰௫௧
குேரார் வசநம் அப்ரியம்। ப்ரஸாதயாம் ஆஸ குரும்। ௭௬।௰௫௨
ப்ரணிபத்ய புண: புந:। ப்ரஸதீ தாத மா ேகாபம்। ௭௬।௰௫௨
குரு ேமாஹஹேத மயி। பலாவேலபமத்ேதந। ௭௬।௰௫௩

மையதத் வாக்யம் ஈரிதம்। ேமாேஹாபஹதவிஜ்ஞாந:। ௭௬।௰௫௩
பாேபா அஹம் திதிேஜாத்தம। யச் சப்ேதா அஸ்மி துராசாரஸ்।
௭௬।௰௫௪
தத் ஸாது பவதா க்ருதம்। ராஜ்யப்ரம்ஸம் வஸுப்ரம்ஸம்। ௭௬।௰௫௪
ஸம்ப்ராப்ஸ்யாமீதி ந த்வ் அஹம்। விஷண்ேணா அஸ்மி யதா தாத।
௭௬।௰௫௫
தைவவாவிநேய க்ருேத। த்ைரேலாக்யராஜ்யம் ஐஸ்வர்யம்। ௭௬।௰௫௫
அந்யத் வா நாதிதுர்லபம்। ஸம்ஸாேர துர்லபாஸ் தாத। ௭௬।௰௫௬
குரேவா ேய பவத்விதா:। தத் ப்ரஸதீ ந ேம ேகாபம்। ௭௬।௰௫௬
கர்தும் அர்ஹஸி ைதத்யப। த்வத்ேகாபேஹதுதுஷ்ேடா அஹம்।
௭௬।௰௫௭
பரிதப்ேய ந ஸாபத:। வத்ஸ ேகாேபந ேமாேஹா ேம। ௭௬।௰௫௭
ஜநிதஸ் ேதந ேத மயா। ஸாேபா தத்ேதா விேவகஸ் ச। ௭௬।௰௫௮
ேமாேஹநாபஹ்ருேதா மம। யதி ேமாேஹந ேம ஜ்ஞாநம்। ௭௬।௰௫௮
நாக்ஷிப்தம் ஸ்யாந் மஹாஸுர। தத் கதம் ஸர்வகம் ஜ்ஞாநந்।
௭௬।௰௫௯
ஹரிம் கம்சிச் சாபாம்ய் அஹம்। ேயா அயம் ஸாேபா மயா தத்ேதா।
௭௬।௰௫௯
பவேதா அஸுரபுங்கவ। பாவ்யம் ஏேதந நூநம் ேத। ௭௬।௰௬
தஸ்மாத் த்வம் மா விஷீததா:। அத்யப்ரப்ருதி ேதேவேஸ। ௭௬।௰௬
பகவத்ய் அச்யுேத ஹெரௗ। பேவதா பக்திமாந் ஈஸ:। ௭௬।௰௬௧
ஸ ேத த்ராதா பவிஷ்யதி। ஸாபம் ப்ராப்ய ச மாம் வரீ। ௭௬।௰௬௧
ஸம்ஸ்மேரதா: ஸ்ம்ருதஸ் த்வயா। ததா ததா யதிஷ்யாமி। ௭௬।௰௬௨

ஸ்ேரயஸா ேயாŠயேத யதா। ஏவம் உக்த்வா ஸ ைதத்ேயந்த்ேரா।
௭௬।௰௬௨
விரராம மஹாமதி:। அஜாயத ஸ ேகாவிந்ேதா। ௭௬।௰௬௩
பகவாந் வாமநாக்ருதி:। அவதீர்ேண ஜகந்நாேத। ௭௬।௰௬௩
தஸ்மிந் ஸர்வம் அஸஸமத் ீ । யத் ஆஸுரம் அபூத் து:கம்। ௭௬।௰௬௪
ேதவாநாம் அதிேதஸ் ததா। வவுர் வாதா: ஸுகஸ்பர்ஸா। ௭௬।௰௬௪
நீரஜஸ்கம் அபூந் நப:। தர்ேம ச ஸர்வபூதாநாம்। ௭௬।௰௬௫
ததா மதிர் அஜாயத। ேநாத்ேவகஸ் சாப்ய் அபூத் ேதேஹ। ௭௬।௰௬௫
மநுஜாநாம் ஜேநஸ்வர। ததா ஹி ஸர்வபூதாநாம்। ௭௬।௰௬௬
பூம்யம்பரதிெவௗகஸாம்। தம் ஜாதமாத்ரம் பகவாந்। ௭௬।௰௬௬
ப்ரஹ்மா ேலாகபிதாமஹ:। ஜாதகர்மாதிகா: க்ருத்வா। ௭௬।௰௬௭
க்ரியாஸ் துஷ்டாவ பார்திவ। ஜயாத்ேயஸ ஜயாேஜய। ௭௬।௰௬௭
ஜய ஸர்வாத்மகாத்மக। ஜய ஜந்மஜராேபத। ௭௬।௰௬௮
ஜயாநந்த ஜயாச்யுத। ஜயாஜித ஜயாேஸஷ। ௭௬।௰௬௮
ஜயாவ்யக்த ஸ்திேத ஜய। பரமார்தார்த ஸர்வஜ்ஞ। ௭௬।௰௬௯
ஜ்ஞாந ஜ்ேஞயாத்மநி:ஸ்ருத। ஜயாேஸஷஜகத்ஸாக்ஷிஞ்। ௭௬।௰௬௯
ஜய கர்தர் ஜகத்குேரா:। ஜகேதா ஜகதந்ேத அந்த। ௭௬।௰௭
ஸ்திெதௗ பாலயிதா ஜய। ஜயாகில ஜயாேஸஷ। ௭௬।௰௭
ஜயாகிலஹ்ருதி ஸ்தித। ஜயாதிமத்யாந்தமய। ௭௬।௰௭௧
ஸர்வஜ்ஞாநமேயாத்தம। முமுக்ஷுபிர் அநிர்ேதஸ்ய। ௭௬।௰௭௧
ஸ்வயம்த்ருஷ்ட ஜேயஸ்வர। ேயாகிபிர் முக்திபலத। ௭௬।௰௭௨
தமாதிகுணபூஷைண:। ஜயாதிஸூŠம துர்ஜ்ேஞய। ௭௬।௰௭௨

ஜகத் ஸ்தூல ஜகந்மய। ஜய ஸ்தூலாதிஸூŠம த்வம்। ௭௬।௰௭௩
ஜயாதீந்த்ரிய ேஸந்த்ரிய। ஜய ஸ்வமாயாேயாகஸ்த। ௭௬।௰௭௩
ேஸஷேபாகஸயாக்ஷர। ஜையகதம்ஷ்ட்ராப்ராந்தாந்த। ௭௬।௰௭௪
ஸமுத்த்ருதவஸும்தர। ந்ருேகஸரிஞ் ஜயாராதி । ௭௬।௰௭௪
வக்ஷ:ஸ்தலவிதாரண। ஸாம்ப்ரதம் ஜய விஸ்வாத்மந்। ௭௬।௰௭௫
மாயாவாமந ேகஸவ। நிஜமாயாபடச்சந்ந। ௭௬।௰௭௫
ஜகத்தாதர் ஜநார்தந। ஜயாசிந்த்ய ஜயாேநக । ௭௬।௰௭௬
ஸ்வரூைபகவித ப்ரேபா। வர்தஸ்வ வர்திதாேநக । ௭௬।௰௭௬
விகாரப்ரக்ருேத ஹேர। த்வய்ய் ஏஷா ஜகதாம் ஈஸ। ௭௬।௰௭௭
ஸம்ஸ்திதா தர்மபத்ததி:। ந த்வாம் அஹம் ந ேசஸாேநா। ௭௬।௰௭௭
ேநந்த்ராத்யாஸ் த்ரிதஸா ஹேர। ஜ்ஞாதும் ஈஸா ந முநய:। ௭௬।௰௭௮
ஸநகாத்யா ந ேயாகிந:। த்வந்மாயாபடஸம்வேதீ । ௭௬।௰௭௮
ஜகத்ய் அத்ர ஜகத்பேத। கஸ் த்வாம் ேவத்ஸ்யதி ஸர்ேவஸம்।
௭௬।௰௭௯
த்வத்ப்ரஸாதம் விநா நர:। த்வம் ஏவாராதிேதா யஸ்ய। ௭௬।௰௭௯
ப்ரஸாதஸுமுக: ப்ரேபா। ஸ ஏவ ேகவலம் ேதவ। ௭௬।௰௮
ேவத்தி த்வாம் ேநதேரா ஜந:। தத் ஈஸ்வேரஸ்வேரஸாந। ௭௬।௰௮
விேபா வர்தஸ்வ பாவந। ப்ரபாவாயாஸ்ய விஸ்வஸ்ய। ௭௬।௰௮௧
விஸ்வாத்மந் ப்ருதுேலாசந। ஏவம் ஸ்துேதா ஹ்ருஷீேகஸ:। ௭௬।௰௮௧
ஸ ததா வாமநாக்ருதி:। ப்ரஹஸ்ய பாவகம்பரம்ீ । ௭௬।௰௮௨
உவாசாப்ஜஸமுத்பவம்। ஸ்துேதா அஹம் பவதா பூர்வம்। ௭௬।௰௮௨
இந்த்ராத்ைய: கஸ்யேபந ச। மயா ச வ: ப்ரதிஜ்ஞாதம்। ௭௬।௰௮௩
இந்த்ரஸ்ய புவநத்ரயம்। பூயஸ் சாஹம் ஸ்துேதா அதித்யா। ௭௬।௰௮௩

தஸ்யாஸ் சாபி ப்ரதிஸ்ருதம்। யதா ஸக்ராய தாஸ்யாமி। ௭௬।௰௮௪
த்ைரேலாக்யம் ஹதகண்டகம்। ேஸா அஹம் ததா கரிஷ்யாமி।
௭௬।௰௮௪
யேதந்த்ேரா ஜகத: பதி:। பவிஷ்யதி ஸஹஸ்ராக்ஷ:। ௭௬।௰௮௫
ஸத்யம் ஏதத் ப்ரவமி ீ ேத। தத: க்ருஷ்ணாஜிநம் ப்ரஹ்மா। ௭௬।௰௮௫
ஹ்ருஷீேகஸாய தத்தவாந்। யஜ்ேஞாபவதம்ீ பகவாந்। ௭௬।௰௮௬
தெதௗ தஸ்ைம ப்ருஹஸ்பதி:। ஆஷாடம் அததத் தண்டம்। ௭௬।௰௮௬
மரீசிர் ப்ரஹ்மண: ஸுத:। கமண்டலும் வஸிஷ்டஸ் ச। ௭௬।௰௮௭
ெகௗஸ்யம் ேவதம் அதாங்கிரா:। அக்ஷஸூத்ரம் ச புலஹ:। ௭௬।௰௮௭
புலஸ்த்ய: ஸிதவாஸஸீ। உபதஸ்துஸ் ச தம் ேவதா:। ௭௬।௰௮௭
ப்ரணவஸ்வரபூஷணா:। ஸாஸ்த்ராண்ய் அேஸஷாணி ததா।
௭௬।௰௮௮
ஸாம்க்யேயாேகாக்தயஸ் ச யா:। ஸ வாமேநா ஜடீ தண்டீ। ௭௬।௰௮௮
சத்த்ரீ த்ருதகமண்டலு:। ஸர்வேதவமேயா பூப। ௭௬।௰௮௯
பேலர் அத்வரம் அப்யயாத்। யத்ர யத்ர பதம் பூப। ௭௬।௰௮௯
பூபாேக வாமேநா தெதௗ। ததாதி பூமிர் விவரம்। ௭௬।௰௯
தத்ர தத்ராதிபடிதா ீ । ஸ வாமேநா ஜடகதிர்। ௭௬।௰௯
ம்ருது கச்சந் ஸபர்வதாம்। ஸாப்தித்வபவத ீ ீம் ஸர்வாம்। ௭௬।௰௯௧
சாலயாம் ஆஸ ேமதிநீம்। தத: ஸம்ஸயம் ஆபந்நா:। ௭௬।௰௯௧
ஸர்ேவ ைதேதயதாநவா:। ஸபர்வதவநாம் உர்வம்ீ । ௰௭௬।௧௨௪
த்ருஷ்ட்வா ஸம்க்ஷுபிதாம் பலி:। பப்ரச்ேசாஸநஸம் ஸுக்ரம்।
௭௭।௰௰௧
ப்ரணிபத்ய க்ருதாஞ்ஜலி:। ஆசார்ய ேக்ஷாபம் ஆயாதி। ௭௭।௰௰௧

ஸாப்திபூப்ருத்தரா மஹீ। கஸ்மாச் ச நாஸுராந் பாகாந்। ௭௭।௰௰௨
ப்ரதிக்ருஹ்ணந்தி வஹ்நய:। இதி ப்ருஷ்ேடா அத பலிநா। ௭௭।௰௰௨
காவ்ேயா ேவதவிதாம் வர:। உவாச ைதத்யாதிபதிம்। ௭௭।௰௰௩
சிரம் த்யாத்வா மஹாமதி:। அவதீர்ேணா ஜகத்ேயாநி:। ௭௭।௰௰௩
கஸ்யபஸ்ய க்ருேஹ ஹரி:। வாமேநேநஹ ரூேபண। ௭௭।௰௰௪
பரமாத்மா ஸநாதந:। ஸ நூநம் யஜ்ஞம் ஆயாதி। ௭௭।௰௰௪
தவ தாநவபுங்கவ। தத்பதந்யாஸவிேக்ஷாபாத்। ௭௭।௰௰௫
இயம் ப்ரசலிதா மஹீ। கம்பந்ேத கிரயஸ் சாமீ। ௭௭।௰௰௫
க்ஷுபிதா மகராலயா:। ைநநம் பூதபதிம் பூமி:। ௭௭।௰௰௬
ஸமர்தா ேவாடும் ஈஸ்வரம்। ஸேதவாஸுரகந்தர்வ । ௭௭।௰௰௬
யக்ஷராக்ஷஸபந்நகா। அேநைநவ த்ருதா பூமிர்। ௭௭।௰௰௭
ஆேபா அக்நி: பவேநா நப:। தாரயத்ய் அகிலாந் ேதவ । ௭௭।௰௰௭
மநுஷ்யாதீந் மஹாஸுர। இயம் அஸ்ய ஜகத்தாதுர்। ௭௭।௰௰௭
மாயா க்ருஷ்ணஸ்ய கஹ்வரீ। தார்யதாரகபாேவந। ௭௭।௰௰௮
யயா ஸம்பிண்டிதம் ஜகத்। தத்ஸம்நிதாநாத் அஸுரா। ௭௭।௰௰௮
ந பாகார்ஹா: ஸுரத்விஷ:। புஞ்ஜேத சாஸுராந் பாகாந்। ௭௭।௰௰௯
அமீேத ந தவாக்நய:। ஸுக்ரஸ்ய வசநம் ஸ்ருத்வா। ௭௭।௰௰௯
ஹ்ருஷ்டேராமாப்ரவத்ீ பலி:। தந்ேயா அஹம் க்ருதபுண்யஸ் ச।
௰௭௭।௧௨௫
யந் ேம யஜ்ஞபதி: ஸ்வயம்। யஜ்ஞம் அப்யாகேதா ப்ரஹ்மந்। ௭௭।௰௧
மத்த: ேகா அந்ேயா அதிக: புமாந்। யம் ேயாகிந: ஸேதாத்யுக்தா:।
௭௭।௰௧

பரமாத்மாநம் அவ்யயம்। த்ரஷ்டும் இச்சந்தி ேதேவா அெஸௗ।
௭௭।௰௧௧
மதத்வரம் உைபஷ்யதி। ேஹாதா பாகப்ரேதா யஸ்ய। ௭௭।௰௧௧
யம் உத்காதா ச காயதி। தம் அத்வேரஸ்வரம் விஷ்ணும்। ௭௭।௰௧௨
மத்த: ேகா அந்ய உைபஷ்யதி। ஸர்ேவஸ்வேரஸ்வேர விஷ்ெணௗ।
௭௭।௰௧௨
மமாத்வரம் உபாகேத। யந் மயா சார்ய கர்தவ்யம்। ௭௭।௰௧௩
தந் மமாேதஷ்டும் அர்ஹஸி। யஜ்ஞபாகபுேஜா ேதவா। ௭௭।௰௧௩
ேவதப்ராமாண்யேதா அஸுர। த்வயா து தாநவா ைதத்யா। ௭௭।௰௧௪
யஜ்ஞபாகபுஜ: க்ருதா:। அயம் ச ேதவ: ஸத்த்வஸ்த:। ௭௭।௰௧௪
கேராதி ஸ்திதிபாலநம்। நிஸ்ருஷ்ேடஸ் சாயம் அந்ேத ச। ௭௭।௰௧௫
ஸ்வயம் அத்தி ப்ரஜா: ப்ரபு:। த்வயாநுபந்தீபவிதா। ௭௭।௰௧௫
நூநம் விஷ்ணு: ஸ்திெதௗ ஸ்தித:। விதித்ைவதந் மஹாபாக।
௭௭।௰௧௬
குரு யத் ேத மேநாகதம்। த்வயாஸ்ய ைதத்யாதிபேத। ௭௭।௰௧௬
ஸ்வல்பேக அபி ஹி வஸ்துநி। ப்ரதிஜ்ஞா ைநவ ேவாடவ்யா।
௭௭।௰௧௭
வாச்யம் ஸாம ததாபலம்। க்ருதக்ருத்யஸ்ய ேதவஸ்ய। ௭௭।௰௧௭
ேதவார்தம் ைசவ குர்வத:। நாலம் தாதும் தநம் ேதேவத்ய்। ௰௭௭।௧௨௬
ஏவம் வாச்யம் து யாசத:। க்ருஷ்ணஸ்ய ேதவபூத்யர்தம்। ௭௭।௰௧௮
ப்ரவ்ருத்தஸ்ய மஹாஸுர। ப்ரஹ்மந் கதம் அஹம் ப்ரூயாம்।
௭௭।௰௧௮
அந்ேயநாபி ஹி யாசித:। நாஸ்தீதி கிமு ேதேவந। ௭௭।௰௧௯

ஸம்ஸாராெகௗகஹாரிணா। வ்ரேதாபவாைஸர் விவிைதர்। ௭௭।௰௧௯
ய: ப்ரதிக்ராஹ்யேத ஹரி:। ஸ ேசத் வŠயதி ேதஹீதி। ௭௭।௰௨
ேகாவிந்த: கிம் அேதா அதிகம்। யதர்தம் உபஹாராட்யா। ௭௭।௰௨
தமெஸௗசகுணாந்விைத:। யஜ்ஞா: க்ரியந்ேத ேதேவஸ:। ௭௭।௰௨௧
ஸ மாம் ேதஹீதி வŠயதி। தத் ஸாது ஸுக்ருதம் கர்ம। ௭௭।௰௨௧
தப: ஸுசரிதம் ச ந:। யந் மயா தத்தம் ஈேஸஸ:। ௭௭।௰௨௨
ஸ்வயம் ஆதாஸ்யேத ஹரி:। நாஸ்தீத்ய் அஹம் குேரா வŠேய।
௭௭।௰௨௨
தம் அப்ய் ஆகதம் ஈஸ்வரம்। யதி தத் வஞ்ச்யேத ப்ராப்ேத। ௭௭।௰௨௩
நூநம் அஸ்மத்வித: பைல:। யஜ்ேஞ அஸ்மிந் யதி யஜ்ேஞேஸா।
௭௭।௰௨௩
யாசேத மாம் ஜநார்தந:। நிஜமூர்தாநம் அப்ய் அத்ய। ௭௭।௰௨௪
தத் தாஸ்யாம்ய் அவிசாரிதம்। நாஸ்தீதி யந் மயா ேநாக்தம்। ௭௭।௰௨௪
அந்ேயஷாம் அபி யாசதாம்। வŠயாமி கதம் ஆயாேத। ௭௭।௰௨௫
தத் அநப்யஸ்தம் அச்யுேத। ஸ்லாக்ய ஏவ ஹி தீராணாம்। ௭௭।௰௨௫
தாநாத் ஆபத்ஸமாகம:। நாபாதாகாரி யத் தாநம்। ௭௭।௰௨௬
தத் அங்கமலவத் கதம்। மத்ராஜ்ேய நாஸுகீகஸ்சிந்। ௭௭।௰௨௬
ந தரித்ேரா ந சாதுர:। நாத்ருஷிேதா ந ேசாத்விக்ேநா। ௭௭।௰௨௭
ந ஸ்ரகாதிவிவர்ஜித:। ஹ்ருஷ்டதுஷ்ட: ஸுகந்தீச। ௭௭।௰௨௭
த்ருப்த: ஸர்வஸுகாந்வித:। ஜந: ஸர்ேவா மஹாபாக। ௭௭।௰௨௮
கிமுதாஹம் ஸதா ஸுகீ। ஏதத் விஸிஷ்டபாத்ேராத்தம்। ௭௭।௰௨௮
தாநபஜபலம் ீ மம। விதிதம் ப்ருகுஸார்தூல। ௭௭।௰௨௯
மையதத் த்வத்ப்ரஸாதத:। ஏதத் விஜாநேதா தாந । ௭௭।௰௨௯

பஜம்ீ பததி ேசத் குேரா। ஜநார்தேந மஹாபாத்ேர। ௭௭।௰௩
கிம் ந ப்ராப்தம் தேதா மயா। மத்ேதா தாநம் அவாப்ேயேஸா। ௭௭।௰௩
யதி புஷ்ணாதி ேதவதா:। உபேபாகாந்வயகுணம்। ௭௭।௰௩௧
தாநம் ஸ்லாக்யதரம் தத:। மத்ப்ரஸாதபேரா நூநம்। ௭௭।௰௩௧
யஜ்ேஞநாராதிேதா ஹரி:। ேதநாப்ேயதி ந ஸம்ேதேஹா। ௭௭।௰௩௨
தர்ஸநாத் உபகாரக்ருத்। அத ேகாேபந வாப்ேயதி। ௭௭।௰௩௨
ேதவபாேகாபேராதிநம்। மாம் நிஹந்தும் அேதா அபி ஸ்யாத்। ௭௭।௰௩௩
வத: ஸ்லாக்யதேரா அச்யுதாத்। யந்மயம் ஸர்வம் ஏேவதம்। ௭௭।௰௩௩
நாப்ராப்ய யஸ்ய வித்யேத। ஸ மாம் யாசிதும் அப்ேயதி। ௭௭।௰௩௪
நாநுக்ரஹம் க்ருேத ஹரி:। ய: ஸ்ருஜத்ய் ஆத்மபூ: ஸர்வம்। ௭௭।௰௩௪
ேசதைஸவாபஹந்தி ச। ஸ மாம் ஹந்தும் ஹ்ருஷீேகஸ:। ௭௭।௰௩௫
கதம் யத்நம் கரிஷ்யதி। ஏதத் விதித்வா து குேரா। ௭௭।௰௩௫
தாநவிக்நபேரண ேம। ைநவ பாவ்யம் ஜகந்நாேத। ௭௭।௰௩௬
ேகாவிந்ேத ஸமுபஸ்திேத। இத்ய் ஏவம் வததஸ் தஸ்ய। ௭௭।௰௩௬
ப்ராப்தஸ் தத்ர ஜகபதி:। ஸர்வேதவமேயா அசிந்த்ேயா। ௭௭।௰௩௭
மாயாவாமநரூபத்ருக்। தம் த்ருஷ்ட்வா யஜ்ஞவாடாந்த: । ௭௭।௰௩௭
ப்ரவிஷ்டம் அஸுரா: ப்ரபும்। ஜக்மு: ப்ரபாவத: ேக்ஷாபம்। ௭௭।௰௩௮
ேதஜஸா தஸ்ய நிஷ்ப்ரபா:। ேஜபுஸ் ச முநயஸ் தத்ர। ௭௭।௰௩௮
ேய ஸேமதா மஹாத்வேர। பலிஸ் ைசவாகிலம் ஜந்ம। ௭௭।௰௩௯
ேமேந ஸபலம் ஆத்மந:। தத: ஸம்ேக்ஷாபம் ஆபந்ேநா। ௭௭।௰௩௯
ந கஸ்சித் கிம்சித் உக்தவாந்। ப்ரத்ேயேகா ேதவேதேவஸம்। ௭௭।௰௪
பூஜயாம் ஆஸ ேசதஸா। அதாஸுரபதிம் ப்ரஹ்வம்। ௭௭।௰௪

த்ருஷ்ட்வா முநிவராம்ஸ் ச தாந்। ேதவேதவபதி: ஸாக்ஷாத்। ௭௭।௰௪௧
விஷ்ணுர் வாமநரூபத்ருக்। துஷ்டாவ யஜ்ஞம் வஹ்நிம்ஸ் ச।
௭௭।௰௪௧
யஜமாநம் அத ர்த்விஜ:। யஜ்ஞகராதிகாரஸ்தாந்। ௭௭।௰௪௨
ஸதஸ்யாந் த்ரவ்யஸம்பதம்। தத: ப்ரஸந்நம் அகிலம்। ௭௭।௰௪௨
வாமநம் ப்ரதி தத்க்ஷணாத்। யஜ்ஞவாடஸ்திதம் வரம்ீ । ௭௭।௰௪௩
ஸாது ஸாத்வ் இத்ய் உதீரயந்। ஸ சார்கம் ஆதாய பலி:। ௭௭।௰௪௩
ப்ேராத்பூதபுலகஸ் ததா। பூஜயாம் ஆஸ ேகாவிந்தம்। ௭௭।௰௪௪
ப்ராஹ ேசதம் வேசா அஸுர:। ஸுவர்ணரத்நஸம்காதம்। ௭௭।௰௪௪
கஜாஸ்வம் அமிதம் ததா। ஸ்த்ரிேயா வஸ்த்ராண்ய் அலம்காராந்।
௭௭।௰௪௫
காேவா க்ராமாம்ஸ் ச புஷ்கலாந்। ஸர்வஸ்வம் ஸகலாம் உர்வம்ீ ।
௭௭।௰௪௫
பவேதா வா யத் ஈப்ஸிதம்। தத் ததாமி வ்ருணுஷ்வ த்வம்। ௭௭।௰௪௬
மமார்தீஸததம் ப்ரிய:। இத்ய் உக்ேதா ைதத்யபதிநா। ௭௭।௰௪௬
ப்ரீதிகர்வாந்விதம் வச:। ப்ராஹ ஸஸ்மிதகம்பரம்ீ । ௭௭।௰௪௭
பகவாந் வாமநாக்ருதி:। மமாக்நிஸரணார்தாய। ௭௭।௰௪௭
ேதஹி ராஜந் பதத்ரயம்। ஸுவர்ணக்ராமரத்நாதி। ௭௭।௰௪௮
தத் அர்திப்ய: ப்ரதீயதாம்। த்ரிபி: ப்ரேயாஜநம் கிம் ேத। ௭௭।௰௪௮
பைத: பதவதாம் வர। ஸதம் ஸதஸஹஸ்ரம் வா। ௭௭।௰௪௯
பதாநாம் மார்கதாம் பவாந்। ஏதாவதா ைதத்யபேத। ௭௭।௰௪௯
க்ருதக்ருத்ேயா அஸ்மி மார்கதாம்। அந்ேயஷாம் அர்திநாம் வித்தம்।
௭௭।௰௫

இச்சயா தாஸ்யேத பவாந்। ஏதச் ச்ருத்வா து கதிதம்। ௭௭।௰௫
வாமநஸ்ய மஹாத்மந:। வாசயாம் ஆஸ தத் தஸ்ைம। ௭௭।௰௫௧
வாமநாய பதத்ரயம்। பாெணௗ து பதிேத ேதாேய। ௭௭।௰௫௧
வாமேநா பூதபாவந:। ஸர்வேதவமயம் ரூபம்। ௭௭।௰௫௨
தர்ஸயாம் ஆஸ தத்க்ஷணாத்। சந்த்ரஸூர்ெயௗ ச நயேந। ௭௭।௰௫௨
த்ெயௗ: ஸிரஸ் சரெணௗ க்ஷிதி:। பாதாங்குல்ய: பிஸாசாஸ் ச।
௭௭।௰௫௩
ஹஸ்தாங்குல்யஸ் ச குஹ்யகா:। விஸ்ேவேதவாஸ் ச ஜாநுஸ்தா।
௭௭।௰௫௩
ஜங்ேக ஸாத்யா: ஸுேராத்தமா:। யக்ஷா நேகஷு ஸம்பூதா। ௭௭।௰௫௪
ேரகாஸ்வ் அப்ஸரஸ: ஸ்திதா:। த்ருஷ்டிர் திஷ்ணாந்ய் அேஸஷாணி।
௭௭।௰௫௪
ேகஸா: ஸூர்யாம்ஸவ: ப்ரேபா। தாரகா ேராமகூபாணி। ௭௭।௰௫௫
ேராமாணி ச மஹர்ஷய:। பாஹேவா விதிஸஸ் தஸ்ய। ௭௭।௰௫௫
திஸ: ஸ்ேராத்ரம் மஹாத்மந:। அஸ்விெநௗ ஸ்ரவெணௗ தஸ்ய।
௭௭।௰௫௬
நாஸா வாயுர் மஹாபல:। ப்ரஸாதஸ் சந்த்ரமா ேதேவா। ௭௭।௰௫௬
மேநா தர்ம: ஸமாஸ்ரித:। ஸத்யம் அஸ்யாபவத் வாண।ீ ௭௭।௰௫௭
ஜிஹ்வா ேதவ ீஸரஸ்வதீ। க்ரீவாதிதிர் ேதவமாதா। ௭௭।௰௫௭
வித்யாஸ் தத்வலயஸ் ததா। ஸ்வர்கத்வாரம் அபூந் ைமத்ரம்।
௭௭।௰௫௮
த்வஷ்டா பூஷா ச ைவ ப்ருெவௗ। முகம் ைவஸ்வாநரஸ் சாஸ்ய।
௭௭।௰௫௮
வ்ருஷெணௗ து ப்ரஜாபதி:। ஹ்ருதயம் ச பரம் ப்ரஹ்ம। ௭௭।௰௫௯

பும்ஸ்த்வம் ைவ கஸ்யேபா முநி:। ப்ருஷ்ேட அஸ்ய வஸேவா ேதவா।
௭௭।௰௫௯
மருத: ஸர்வஸம்திஷு। ஸர்வஸூக்தாநி தஸநா। ௭௭।௰௬
ஜ்ேயாதீம்ஷி விமலப்ரபா:। வக்ஷ:ஸ்தேல ததா ருத்ேரா। ௭௭।௰௬
ைதர்ேய சாஸ்ய மஹார்ணவ:। உதேர சாஸ்ய கந்தர்வா। ௭௭।௰௬௧
மருதஸ் ச மஹாபலா:। லŠமீர் ேமதா த்ருதி: காந்தி:। ௭௭।௰௬௧
ஸர்வவித்யாஸ் ச ைவ கடி:। ஸர்வஜ்ேயாதீம்ஷி யாநீஹ। ௭௭।௰௬௧
தபஸ் ச பரமம் மஹத்। தஸ்ய ேதவாதிேதவஸ்ய। ௭௭।௰௬௨
ேதஜ: ப்ேராத்பூதம் உத்தமம்। ஸ்தெநௗ குெக்ஷௗ ச ேவதாஸ் ச।
௭௭।௰௬௨
ஜாநூ சாஸ்ய மஹாமகா:। இஷ்டய: பஸுபந்தாஸ் ச। ௭௭।௰௬௩
த்விஜாநாம் ேசஷ்டிதாநி ச। தஸ்ய ேதவமயம் ரூபம்। ௭௭।௰௬௩
த்ருஷ்ட்வா விஷ்ேணார் மஹாபலா:। உபஸர்பந்தி ைதேதயா:।
௭௭।௰௬௪
பதம்கா இவ பாவகம்। ப்ரமத்ய ஸர்வாந் அஸுராந்। ௭௭।௰௬௪
பாதஹஸ்ததைலர் விபு:। க்ருத்வா ரூபம் மஹாகாயம்। ௭௭।௰௬௫
ஸ ஜஹாராஸு ேமதிநீம்। தஸ்ய விக்ரமேதா புமிம்। ௭௭।௰௬௫
சந்த்ராதித்ெயௗ ஸ்தநாந்தேர। நேபா விக்ரமமாணஸ்ய। ௭௭।௰௬௬
ஸக்திேதேஸ ஸ்திதாவ் உெபௗ। பரம் விக்ரமமாணஸ்ய। ௭௭।௰௬௬
ஜாநுமூேல ப்ரபாகெரௗ। விஷ்ேணார் ஆஸ்தாம் மஹீபால। ௭௭।௰௬௭
ேதவபாலநகர்மணி। ஜித்வா ேலாகத்ரயம் க்ருத்ஸ்நம்। ௭௭।௰௬௭
ஹத்வா சாஸுரபுங்கவாந்। புரம்தராய த்ைரேலாக்யம்। ௭௭।௰௬௮
தெதௗ விஷ்ணுர் உருக்ரம:। ஸுதலம் நாம பாதாலம்। ௭௭।௰௬௮

அதஸ்தாத் வஸுதாதலாத்। பேலர் தத்தம் பகவதா। ௭௭।௰௬௯
விஷ்ணுநா ப்ரபவிஷ்ணுநா। அத ைதத்ேயஸ்வரம் ப்ராஹ। ௭௭।௰௬௯
விஷ்ணு: ஸர்ேவஸ்வேரஸ்வர:। யத் த்வயா ஸலிலம் தத்தம்। ௭௭।௰௭
க்ருஹீதம் பாணிநா மயா। கல்பப்ரமாணம் தஸ்மாத் ேத। ௭௭।௰௭௧
பவிஷ்யத்ய் ஆயுர் உத்தமம்। ைவவஸ்வேத ததாதீேத। ௭௭।௰௭௧
பேல மந்வந்தேர தத:। ஸாவர்ணேக ச ஸம்ப்ராப்ேத। ௭௭।௰௭௨
பவாந் இந்த்ேரா பவிஷ்யதி। ஸாம்ப்ரதம் ேதவராஜாய। ௭௭।௰௭௨
த்ைரேலாக்யம் அகிலம் மயா। தத்தம் சதுர்யுகாநாம் ைவ। ௭௭।௰௭௩
ஸாதிகா ஹ்ய் ஏகஸப்ததி:। நியந்தவ்யா மயா ஸர்ேவ। ௭௭।௰௭௩
ேய தஸ்ய பரிபந்திந:। ேதநாஹம் பரயா பக்த்யா। ௭௭।௰௭௪
பூர்வம் ஆராதிேதா பேல। ஸுதலம் நாம பாதாலம்। ௭௭।௰௭௪
தம் ஆஸாத்ய மேநாரமம்। வஸாஸுர மமாேதஸம்। ௭௭।௰௭௫
யதாவத் பரிபாலயந்। தத்ர திவ்யவேநாேபேத। ௭௭।௰௭௫
ப்ராஸாதஸதஸம்குேல। ப்ேராத்புல்லபத்மஸரஸி। ௭௭।௰௭௬
ஸ்ரவச்சுத்தஸரித்வேர। ஸுகந்திதூபஸம்பாேத। ௭௭।௰௭௬
வராபரணபூஷித:। ஸ்ரக்சந்தநாதிதிக்தாங்ேகா। ௭௭।௰௭௭
ந்ருத்யகீதமேநாரைம:। உபபுஞ்ஜந் மஹாேபாகாந்। ௭௭।௰௭௭
விவிதாந் தாநேவஸ்வர। மமாஜ்ஞயா காலம் இமம்। ௭௭।௰௭௮
திஷ்ட ஸ்த்ரீஸதஸம்வ்ருத:। யாவத் ஸுைரஸ் ச விப்ைரஸ் ச।
௭௭।௰௭௮
ந விேராதம் கரிஷ்யஸி। தாவத் ஏதாந் மஹாேபாகாந்। ௭௭।௰௭௯
அவாப்ஸ்யஸ்ய் அஸுேராத்தம। யதா ச ேதவவிப்ராணாம்। ௭௭।௰௭௯

விருத்தாந்ய் ஆசரிஷ்யஸி। பந்திஷ்யந்தி ததா பாஸா। ௭௭।௰௮
வாருணாஸ் த்வாம் அஸம்ஸயம்। ஏதத் விதித்வா பவதா। ௭௭।௰௮
மயாஜ்ஞப்தம் அேஸஷத:। ந விேராத: ஸுைர: கார்ேயா। ௭௭।௰௮௧
விப்ைரர் வா ைதத்யஸத்தம। இத்ய் ஏவம் உக்ேதா ேதேவந। ௭௭।௰௮௧
விஷ்ணுநா ப்ரபவிஷ்ணுநா। பலி: ப்ராஹ மஹாராஜ। ௭௭।௰௮௨
ப்ரணிபத்ய க்ருதாஞ்ஜலி:। தத்ராஸேதா ேம பாதாேல। ௭௭।௰௮௨
பகவந் பவதாஜ்ஞயா। கிம் பவிஷ்யத்ய் உபாதாநம்। ௭௭।௰௮௩
உபேபாேகாபபாதகம்। ஆப்யாயிேதா ேயந ேதவ। ௭௭।௰௮௩
ஸ்மேரயம் த்வாம் அஹம் ஸதா। தாநாந்ய் அவிதிதத்தாநி। ௰௭௭।௧௨௭
ஸ்ராத்தாந்ய் அஸ்ேராத்ரியாணி ச। ஹுதாந்ய் அஸ்ரத்தயா யாநி।
௭௭।௰௮௪
தாநி தாஸ்யந்தி ேத பலம்। அதக்ஷிணாஸ் ததா யஜ்ஞா:। ௭௭।௰௮௪
க்ரியாஸ் சாவிதிநா க்ருதா:। பலாநி தவ தாஸ்யந்தி। ௭௭।௰௮௫
அதீதாந்ய் அவ்ரதாநி ச। பேலர் வரம் இதம் தத்த்வா। ௭௭।௰௮௫
ஸக்ராய த்ரிவிதம் ததா। வ்யாபிநா ேதந ரூேபண। ௭௭।௰௮௬
ஜகாமாதர்ஸநம் ஹரி:। ஸஸாஸ ச யதா பூர்வம்। ௭௭।௰௮௬
இந்த்ரஸ் த்ைரேலாக்யம் ஊர்ஜிதம்। ஸிேஷவ ச பராந் காமாந்।
௭௭।௰௮௭
பலி: பாதாலம் ஆஸ்ரித:। இத்ய் ஏதத் ேதவேதவஸ்ய। ௭௭।௰௮௭
விஷ்ேணார் மாஹாத்ம்யம் உத்தமம்। வாமநஸ்ய பேடத் யஸ் து।
௭௭।௰௮௮
ஸர்வபாைப: ப்ரமுச்யேத। பலிப்ரஹ்ராதஸம்வாதம்। ௭௭।௰௮௮
மந்த்ரிதம் பலிஸுக்ரேயா:। பலிவிஷ்ண்ேவாஸ் ச கதிதம்। ௭௭।௰௮௯

ய: ஸ்மரிஷ்யதி மாநவ:। நாதேயா வ்யாதேயா வாஸ்ய। ௭௭।௰௮௯
ந ச ேமாஹாகுலம் மந:। பவிஷ்யதி குருஸ்ேரஷ்ட। ௭௭।௰௯
பும்ஸஸ் தஸ்ய கதாசந। ச்யுதராஜ்ேயா நிஜம் ராஜ்யம்। ௭௭।௰௯
இஷ்டப்ராப்திம் விேயாகவாந்। அவாப்ேநாதி மஹாபாக। ௭௭।௰௯௧
நர: ஸ்ருத்வா கதாம் இமாம்। பாதாேல நிவஸந் வரஸ்ீ । ௭௭।௰௯௧
ததா ைவேராசநிர் பலி:। காேமாபேபாகஸம்ப்ராப்த்யா। ௭௮।௰௰௧
முதம் ப்ராப பராம் விபு:। அலம்புஷா மிஸ்ரேகஸீ। ௭௮।௰௰௧
புண்டரீகாத வாமநா। க்ருதாசீேமநகா ரம்பா। ௭௮।௰௰௨
நந்ருதுஸ் தஸ்ய ஸம்நிெதௗ। ப்ரஜகுர் ேதவகந்தர்வா। ௭௮।௰௰௨
விஸ்வாவஸுபுேராகமா:। துஷ்டுவுஸ் ச மஹாபாக। ௭௮।௰௰௩
பலிம் ஸித்தா: ஸசாரணா:। தஸ்மிந் ஸம்கீதகீதா து। ௭௮।௰௰௩
வணாேவணுரவாகுேல ீ । ஸ்ரகாதிபூஷிேதா ைதத்ய:। ௭௮।௰௰௪
பெபௗ பாநம் அநுத்தமம்। ஸர்காரஸவமாத்விகாம்। ௭௮।௰௰௪
புஷ்பாஸவபலாஸவம்। திவ்யா: ப்ரஸந்நாஸ் ச ஸுராஸ்। ௭௮।௰௰௫
ததர்ஹாணி மதூநி ச। பராவதம்ஸாந் மதுராம்ல்। ௭௮।௰௰௫
லவணாம்ஸ் திக்தகாண் கடூந்। கஷாயாம்ஸ் ச மஹாராஜ। ௭௮।௰௰௬
ஸும்ருஷ்டாந்ய் அபராணி ச। ஸுஹ்ருட்ஸுஜநஸம்பந்தி । ௭௮।௰௰௬
ப்ருத்யவர்கஸமந்வித:। புபுேஜ பாதாலகதஸ்। ௭௮।௰௰௭
ததா ைவேராசநிர் பலி:। ப்ராஸாதா: காஞ்சநா: ஸர்ேவ। ௭௮।௰௰௭
ஸுவர்ணமணிமண்டிதா:। ஸ்பாடிகாமலேஸாபாநா। ௭௮।௰௰௮
முக்தாஹாரஸேதாஜ்ஜ்வலா:। ேதஷு ஸர்ேவஷு ைதேதயா।
௭௮।௰௰௮

பேல: ஸம்பந்திபாந்தவா:। ந்ருத்யவாத்யாதிமுதிதா। ௭௮।௰௰௯
புபுஜுர் விஷயாந் ப்ரியாந்। பலிஸ் ச பகவாந் ைதத்ேயா। ௭௮।௰௰௯
ைதத்ேயாரகஸைதர் வ்ருத:। உபகீயமாேநா புபுேஜ। ௭௮।௰௧
யேதஷ்டம் விஷயாந் ப்ரியாந்। பத்நீவிந்த்யாவலீ நாம। ௭௮।௰௧
தஸ்ய ைதத்யபேதர் அபூத்। ஸர்வலக்ஷணஸம்பூர்ணா। ௭௮।௰௧௧
ஸ்ரீர் இவாப்ஜம் விநாபரா। ந ேதவ ீநாபி கந்தர்வ।ீ ௭௮।௰௧௧
நாப்ஸரா ந ச மாநுஷீ। தஸ்யா ரூேபண ஸத்ருஸீ। ௭௮।௰௧௨
பபூவ மநுேஜஸ்வர। ஸா து பநாயதஸ்ேராண ீ ।ீ ௭௮।௰௧௨
ம்ருத்வங்கீமதுரஸ்வரா। கேநாந்நதகுசா ஸுப்ரூ:। ௭௮।௰௧௩
ஸஸ்மிதாயதேலாசநா। ம்ருத்வல்பபாணிபாதாப்ஜா। ௭௮।௰௧௩
ஸுமத்யா கஜகாமிநீ। ஸுேகஸீ ஸுமுகீஸ்யாமா। ௭௮।௰௧௪
ஸர்ைவர் ேயாஷித்குைணர் யுதா। தநயா ேமருஸாவர்ேணர்। ௭௮।௰௧௪
ெதௗஹித்ரீ ம்ருகேமாகிந:। வபுஷா ரூபஸம்பதா। ௭௮।௰௧௫
ெபௗதநா ம்ருகேலாசநா। பத்நீஸஹஸ்ரத்விதேய। ௰௭௮।௧௨௮
ப்ரதாநா தஸ்ய ஸாபவத்। தயா து ரமதஸ் தஸ்ய। ௭௮।௰௧௫
ரமணேயீ ரஸாதேல। ஸக்திர் ஆஸத்ீ அநுதிநம்। ௭௮।௰௧௬
விேவகப்ரதிேலாமிநீ। கதாசித் ரமதஸ் தஸ்ய। ௭௮।௰௧௬
ைதத்யராஜஸ்ய பார்திவ। தீŠணாம்ஸுர் மத்யமாம் வதீீம்। ௭௮।௰௧௭
யெயௗ ைவஷுவதீம் ரவி:। யதா யதா ச விஷுவம்। ௭௮।௰௧௭
பாஸ்கர: ப்ரதிபத்யேத। ததா ததா ஹேரஸ் சக்ரம்। ௭௮।௰௧௮
பாதாேல பரிவர்தேத। ஸ்ரவந்தி ேயாஷிதாம் கர்பாஸ்। ௭௮।௰௧௮
தஸ்ய தாராம்ஸுதாபிதா:। ஸஹஸா ைதத்யபத்நீநாம்। ௭௮।௰௧௯

யாஸு பும்ஸாம் ஸமுத்பவ:। நிஸ்ேதஜேஸா ைதத்யபடா। ௭௮।௰௧௯
பவந்தி ச மஹீபேத। தத் த்ருஷ்ட்வா ஸஹஸாயாந்தம்। ௭௮।௰௧௯
ஆதித்யஸதேதஜஸம்। ஜ்வாலாமாலாஸுது:ப்ேரŠயம்। ௭௮।௰௨
விஷ்ணுசக்ரம் ஸுதர்ஸநம்। ஹாஹாக்ருதம் அபூத் ஸர்வம்। ௭௮।௰௨
பாதாலம் அரிஸூதந। ேஜபுர் ேய முநயஸ் தத்ர। ௭௮।௰௨
ஸார்கபாத்ரா மேஹாரகா:। பபூவு: ப்ரணதாஸ் சாந்ேய। ௭௮।௰௨௧
ஸித்தகந்தர்வசாரணா:। ைவக்லவ்யம் சாகதா: ஸர்வா:। ௭௮।௰௨௧
ஸ்த்ரிய: பரபுரம்ஜய। தத் த்ருஷ்ட்வா வ்யாகுலீபூதம்। ௭௮।௰௨௧
பாதாலம் அஸுராஸ் தத:। ேய தஸ்து: ெபௗருஷபராஸ்। ௭௮।௰௨௨
ேத ஹதா: ஸதேநமிநா। ப்ராம்யதா ேதந சக்ேரண। ௭௮।௰௨௨
ஸப்தேலாகவிசாரிணா। ஸமஸ்தஜகதாதார । ௭௮।௰௨௩
கரமுக்ேதந ேவகிநா। தந் நிஷூதிதைதத்ெயௗகம்। ௭௮।௰௨௩
ைதத்யஸ்த்ரீகர்பஹாநிதம்। ஸ்ருத்வா சக்ரம் மஹாசக்ேரா। ௭௮।௰௨௪
நிஸ்சக்ராம க்ருஹாத் பலி:। ஆ: கிம் ஏதத் இதீத்ய் உக்த்வா। ௭௮।௰௨௪
ஸ து மத்யமேஹாத்தத:। விமலம் கட்கம் ஆதாய। ௭௮।௰௨௫
ஸதசந்த்ரம் ச பாநுமத்। நிர்யாந்தம் அத ேவேகந। ௭௮।௰௨௫
தம் உதாரபராக்ரமம்। வித்யாவலீ நாம ஸுபா। ௭௮।௰௨௬
ததார தயிதம் பதிம்। உவாச ச பரிஷ்வஜ்ய। ௭௮।௰௨௬
க்ேராததாம்ேரக்ஷணம் பலிம்। கல்யாணீகுணேதாஷஜ்ஞா। ௭௮।௰௨௭
ப்ரணயாந் ம்ருதுபாஷிண।ீ ைதத்யராஜ ந ேகாபஸ்ய। ௭௮।௰௨௭
வஸம் ஆகந்தும் அர்ஹஸி। விம்ருஸ்ய தஜ்ஜ்ஞ: ஸாமாதீந்।
௭௮।௰௨௮
ப்ரயுஞ்ஜதீ பலாபலம்। கிம் ஏதத் கஸ்ய வா குத்ர। ௭௮।௰௨௮

ிம்நிமித்தம் இஹாகதம்। சக்ரம் இத்தம் விசார்ய த்வம்। ௭௮।௰௨௯
க்ேராதம் யாஹி ப்ரஸாம்ய வா। ஏதத் கில ஜகத்தாதுஸ்। ௭௮।௰௨௯
சக்ரம் விஷ்ேணா: ஸுதர்ஸநம்। ப்ரதிஷண்மாஸம் அப்ேயதி। ௭௮।௰௩
ைதத்யகர்பவிநாஸநம்। புங்கர்பாந் நிகிலாந் ஏதத்। ௭௮।௰௩
தாநவாநாம் மஹாஸுர। விநாஸயத்ய் அநந்தராம்। ௭௮।௰௩௧
ஸர்வதுஷ்டநிபர்ஹணம்। கேராதி து:கம் அதுலம்। ௭௮।௰௩௧
காதநாத் ப்ரதிபக்ஷஜம்। புருஷாணாம் ந ஸர்வத்ர। ௭௮।௰௩௨
ஸம்ஸ்திதா ஜகத: பேத:। மயி த்வயி ததாந்யத்ர। ௭௮।௰௩௨
யதா விஷ்ணுர் வ்யவஸ்தித:। தஸ்ையதச் சக்ரம் ஆயாந்தம்। ௭௮।௰௩௩
புருஷ: ேகா ந பூஜேயத்। யஸ்யாதிேக்ஷபஜா ராஜம்ஸ்। ௭௮।௰௩௩
தவ த்ைரேலாக்யவிச்யுதி:। தஸ்ய சக்ரம் ஜகந்மூர்ேத:। ௭௮।௰௩௪
ஸமுைபஷி ருஷா கதம்। ஸத்ருேஸ புருேஷ க்ேராதம்। ௭௮।௰௩௪
நர: குர்வதீ ைதத்யப। ந து ஸர்ேவஸ்வேர விஷ்ெணௗ। ௭௮।௰௩௫
யத்ர ஸர்வம் ப்ரதிஷ்டிதம்। தத் ப்ரஸதீ மஹாபாக। ௭௮।௰௩௫
ஸமுைபஹி ஜகத்பதிம்। ஸரண்யம் ஸரணம் விஷ்ணும்। ௭௮।௰௩௬
யம் ப்ரணம்ய ந ஸததி ீ । யஸ்மிந் ப்ரஸந்ேந த்ைரேலாக்யம்।
௭௮।௰௩௬
த்வத்த: ப்ராப்த: ஸசீபதி:। ப்ரஷ்டஸ் ச யததிேக்ஷபாத்। ௭௮।௰௩௭
தம் த்வம் ஸரணம் ஆவ்ரஜ। யத்ர ஸர்ேவஸ்வேர ஸர்வம்। ௭௮।௰௩௭
ஸர்வபூேத ஜகத் ஸ்திதம்। தஸ்ய சக்ரம் உைபஹி த்வம்। ௭௮।௰௩௮
விநயாத் அஸுராதிப। ஸர்வகாரணபூதஸ்ய। ௭௮।௰௩௮
ேதவேதவஸ்ய சக்ரிண:। கஸ் சக்ரம் அதிவர்ேதத। ௭௮।௰௩௯

மர்த்யதர்மா மஹாஸுர। சக்ரம் அத்ர ஜகத்தாது:। ௭௮।௰௩௯
கேராதி ஸ்திதிபாலநம்। விபக்ஷாஸுரஸம்பூதி । ௭௮।௰௪
கர்பவிஸ்ரம்ஸநாத் ப்ரேபா। ப்ரஸாத்ய சக்ரநாமாநம்। ௭௮।௰௪
ேகாவிந்தம் ஜகேதா குரும்। ஸ்ேரயேஸ ஸர்வதர்மஜ்ஞ। ௭௮।௰௪௧
ஸரணம் வ்ரஜ ேகஸவம்। ஸம்ஸ்மரஸ்வ ச ைதத்ேயந்த்ர। ௭௮।௰௪௧
ப்ரஹ்ராதம் ஸ்வபிதாமஹம்। ப்ரஷ்டராஜ்ேயந பவதா। ௭௮।௰௪௨
ஸ்மர்தவ்ேயா அஹம் இதி ப்ரேபா। ஸ வ்யாஜஹார பகவாம்ஸ்।
௭௮।௰௪௨
தவாநுக்ரஹகாம்யயா। ஸம்ஸ்மர்யதாம் மஹாபாக। ௭௮।௰௪௩
ஸர்வதர்மப்ருதாம் வர:। விஷ்ணுபக்ேதா மஹாபாஹு:। ௭௮।௰௪௩
ஸ ேத ஸ்ேரேயா அபிதாஸ்யதி। ஏதத் வசநம் ஆகர்ண்ய। ௭௮।௰௪௩
ததா ைவேராசநிர் பலி:। யெயௗ ததார்கம் ஆதாய। ௭௮।௰௪௪
விஷ்ேணாஸ் சக்ரஸ்ய பூஜக:। ஸ ததர்ஸ ஸமாயாந்தம்। ௭௮।௰௪௪
அநந்தகரஸங்கிநம்। சக்ரம் அக்ஷயசக்ரஸ்ய। ௭௮।௰௪௫
விஸ்வஸ்ய பரிபாலகம்। ஸஸ்மார ச பலி: ஸர்வம்। ௭௮।௰௪௫
ப்ரஹ்ராதவசநம் ந்ருப। ஜகாத யச் ச ேகாவிந்த:। ௭௮।௰௪௬
ப்ரஸாதஸுமுக: ப்ரபு:। பக்திநம்ரஸ் தேதா பூத்வா। ௭௮।௰௪௬
பூதபவ்யபவத்ப்ரேபா:। துஷ்டாவ வாஸுேதவஸ்ய। ௭௮।௰௪௭
சக்ரம் அவ்யக்தமூர்திந:। ஜ்வாலாமாலாகராலாந்தம்। ௭௮।௰௪௭
உத்யதிந்துஸமப்ரபம்। மத்யாஹ்நார்கஸமாபாஸம்। ௭௮।௰௪௮
ேதஜஸ: பிண்டஸம்ஸ்திதம்। தம் த்ருஷ்ட்வா ேதஜஸா ராஸிம்।
௭௮।௰௪௮
உபஸம்கம்ய சா விபும்। உவாச ைதத்யஸார்தூல:। ௭௮।௰௪௯

ப்ரணிபத்ய க்ருதாஞ்ஜலி:। அநந்தஸ்யாப்ரேமயஸ்ய। ௭௮।௰௪௯
விஸ்வமூர்ேதர் மஹாத்மந:। நமாமி சக்ரிணஸ் சக்ரம்। ௭௮।௰௫
கரஸங்கி ஸுதர்ஸநம்। ஸஹஸ்ரம் இவ ஸூர்யாணாம்। ௭௮।௰௫
ஸம்காதம் வித்யுதாம் இவ। காலாக்நிம் இவ யச் சக்ரம்। ௭௮।௰௫௧
தத் விஷ்ேணா: ப்ரணமாம்ய் அஹம்। துஷ்டராஹுகலச்ேசத ।
௭௮।௰௫௧
ேஸாணிதாருணதாரகம்। தந் நமாமி ஹேரஸ் சக்ரம்। ௭௮।௰௫௨
ஸதேநமி ஸுதர்ஸநம்। யஸ்யாரேகஷு ஸக்ராத்யா। ௭௮।௰௫௨
ேலாகபாலா வ்யவஸ்திதா:। ததந்தர் வஸேவா ருத்ராஸ்। ௭௮।௰௫௩
தைதவ மருதாம் கணா:। தாராயாம் த்வாதஸாதித்யா:। ௭௮।௰௫௩
ஸமஸ்தாஸ் ச ஹுதாஸநா:। தாராஜாேல அப்தய: ஸர்ேவ। ௭௮।௰௫௪
நாபிமத்ேய ப்ரஜாபதி:। ஸமஸ்தேநமிஷ்வ் அகிலா। ௭௮।௰௫௪
யஸ்ய வித்யா: ப்ரதிஷ்டிதா:। யஸ்ய ரூபம் அநிர்ேதஸ்யம்। ௭௮।௰௫௫
அபி ேயாகிபிர் உத்தைம:। யத் ப்ரமத் ஸுரஸங்காநாம்। ௭௮।௰௫௫
ேதஜஸ: பரிப்ரும்ஹணம்। ைதத்ெயௗஜஸாம் ச நாஸாய। ௭௮।௰௫௬
தந் நமாமி ஸுதர்ஸநம்। ப்ரமந் மதமஹாேவக । ௭௮।௰௫௬
விப்ராந்தாகிலேகசரம்। தந் நமாமி ஹேரஸ் சக்ரம்। ௰௭௮।௧௨௯
அநந்தாரம் ஸுதர்ஸநம்। நக்ஷத்ரவத்வஹ்நிகண । ௰௭௮।௧௨௯
வ்யாப்தம் க்ருத்ஸ்நம் நபஸ்தலம்। தந் நமாமி ஹேரஸ் சக்ரம்।
௰௭௮।௧௩௰
கரஸங்கி ஸுதர்ஸநம்। ஸ்வபாவேதஜஸா யுக்தம்। ௰௭௮।௧௩௰
யத் அர்காக்நிமயம் மஹத்। விேஸஷேதா ஹேரர் கத்வா। ௭௮।௰௫௭

ஸர்வேதவமயம் கரம்। துர்வ்ருத்தைதத்யமதநம்। ௭௮।௰௫௭
ஜகத: பரிபாலகம்। தந் நமாமி ஹேரஸ் சக்ரம்। ௭௮।௰௫௮
ைதத்யசக்ரஹரம் பரம்। கேராது ேம ஸதா ஸர்ம। ௭௮।௰௫௮
தர்மதாம் ச ப்ரயாது ேம। ப்ரஸாதஸுமுேக க்ருஷ்ேண। ௭௮।௰௫௯
தஸ்ய சக்ரம் ஸுதர்ஸநம்। ஸ்வபாவேதஜஸா யுக்தம்। ௭௮।௰௫௯
மத்யாஹ்நார்கஸமப்ரபம்। ப்ரஸதீ ஸம்யுேக அரிணாம்। ௰௭௮।௧௩௧
ஸுதர்ஸநஸுதர்ஸநம்। வித்யுஜ்ஜ்வாலாமஹாகக்ஷம்। ௭௮।௰௬
தஹாந்தர் மம யத் தம:। ஜஹி ேநா விஷயக்ராஹி। ௭௮।௰௬
மேநா க்ரஹவிேசஷ்டிதம்। விஸ்ேபாடயாகிலாம் மாயாம்। ௭௮।௰௬௧
குருஷ்வ விமலாம் மதிம்। ஏவம் ஸம்ஸ்தூயமாநம் தத்। ௭௮।௰௬௧
வஹ்நிபிண்ேடாபமம் மஹத்। பபூவ ப்ரகடம் சக்ரம்। ௭௮।௰௬௨
ைதத்யசக்ர்பேதஸ் ததா। ததர்ஸ ஸ மஹாபாஹு:। ௭௮।௰௬௨
ப்ரபாமண்டலதுர்த்ருஸம்। அக்நிஜ்வாலாகதம் தாம்ரம்। ௭௮।௰௬௩
தப்தசக்ரம் இவாபரம்। ப்ரமதஸ் தஸ்ய சக்ரஸ்ய। ௭௮।௰௬௩
நாபிமத்ேய மஹீபேத। த்ைரேலாக்யம் அகிலம் ைதத்ேயா। ௭௮।௰௬௪
த்ருஷ்டவாந் பூர்புவாதிகம்। ேமர்வாதீந் அகிலாஞ் ைஸலாந்। ௭௮।௰௬௪
கங்காத்யா: ஸரிதஸ் ததா। க்ஷீராப்திப்ரமுகாம்ஸ் சாப்தீந்। ௭௮।௰௬௫
த்வபாஞ்ீ ஜம்ப்வாதிஸம்ஜ்ஞிதாந்। ைவமாநிகாந் ஸகந்தர்வாந்।
௭௮।௰௬௫
ஸூர்யாதீம்ஸ் ச ததா க்ரஹாந்। நக்ஷத்ரதாரகாகாஸம்। ௭௮।௰௬௬
ஸக்ராதீம்ஸ் ச திெவௗகஸ:। ருத்ராதித்யாம்ஸ் ச மருதாம்।
௭௮।௰௬௬
ஸாத்யாநாம் ச மஹீபேத। ஸம்நிதாநம் நிரீŠயாெஸௗ। ௭௮।௰௬௭

ைதத்யாநாம் விஸ்மிேதா அபவத்। தத: ப்ரணம்யார்திஹரம் ஸுராணாம்।
௭௮।௰௬௭
அபாரஸாரம் பரமாயுதம் ஹேர:। நேமா நமஸ் ேத அஸ்த்வ் இதி ைதத்யராஜ:।
௭௮।௰௬௮
ப்ேராவாச பூேயா அபி நேமா நமஸ் ேத। யந் ேநா அஸுபம் ேசதஸி
வாயுேவக। ௭௮।௰௬௮
யந் ேநா அஸுபம் வாசி ஹுதாஸேநாத்த। யச் சாஸுபம் காயக்ருதம்
ஹேரஸ் தத்। ௭௮।௰௬௯
வராயுதம் த்வம் ப்ரஸமம் நயாஸு। ப்ரஸதீ ஸத்காரக்ருதம் மமாகம்।
௭௮।௰௬௯
ப்ரயாது ேத நாஸம் அநந்தவர்யீ । ஸதாம் ச ஸந்மார்கவதாம் மநாம்ஸி।
௭௮।௰௭
ஸ்திரீபவந்த்வ் அச்யுதபாதயுக்ேம। ஏவம் ஸ்துேத ததஸ் தஸ்மிந்।
௭௮।௰௭
விஷ்ணுசக்ேர ஸுதர்ஸேந। புஷ்பவ்ருஷ்டிர் பேலர் மூர்த்நி। ௭௯।௰௰௧
நிபபாதாந்தரிக்ஷத:। பரிஹ்ருத்ய ச ைதத்ேயந்த்ரம்। ௭௯।௰௰௧
யெயௗ சக்ரம் யேதச்சயா। ப்ரமத் ஏவ ச ைதத்யாநாம்। ௭௯।௰௰௧
யெயௗ தத்பயம் ஆவஹத்। ததஸ் தத் அத்புதம் த்ருஷ்ட்வா।
௰௭௯।௧௩௨
சக்ரஸ்யாகமநம் ஹேர:। பூர்வவத்ஸ்மரணம் ப்ராப்ய। ௭௯।௰௰௨
ஸஸ்மார ஸ்வபிதாமஹம்। கச்சதா பூர்வம் ஆர்ேயண। ௭௯।௰௰௨
ஸ்மர்தவ்ேயா அஹம் இதீரிதம்। தம் ஸ்மரிஷ்யாமி ைதத்ேயந்த்ரம்।
௭௯।௰௰௩
ஸ ந: ஸ்ேரேயா அபிதாஸ்யதி। இத்ய் ஏதத் அதிஸம்ஸ்ம்ருத்ய।
௭௯।௰௰௩

பலிர் ஆத்மபிதாமஹம்। ஸஸ்மார ைதத்யாதிபதிம்। ௭௯।௰௰௪
ப்ரஹ்ராதம் பகவத்ப்ரியம்। ஸம்ஸ்ம்ருதஸ் ச ஸ பாதாலம்। ௭௯।௰௰௪
ஆஜகாம மஹாமதி:। சக்ேராத்யதகர: ஸாக்ஷாத்। ௭௯।௰௰௫
பகவாந் இவ ேகஸவ:। தம் ஆகதம் அேதாத்தாய। ௭௯।௰௰௫
யதாவத் ஸ மஹாமதி:। அபிவாத்ய பலிர் பக்த்யா। ௭௯।௰௰௬
நிேவத்யார்கம் அபாஷத। தாதாம்ஹ்ரிதர்ஸநாத் அத்ய। ௭௯।௰௰௬
பாவிேதா அஸ்ம்ய் அபகல்மஷ:। திவஸ் ச்யுேதா அப்ய் அஹம் மந்ேய।
௭௯।௰௰௭
ஸக்ராத் ஆத்மாநம் உத்தமம்। த்ைரேலாக்யஹரணாத் உக்ரம்।
௭௯।௰௰௭
யத் து:கம் ஹ்ருதேய மம। தச் சாந்தம் பாதஸம்பர்கம்। ௭௯।௰௰௮
உேபத்ய பவேதா மம। இதி ஸம்ஸ்தூய தத்த்வா ச। ௭௯।௰௰௮
வராஸநம் உதாரதீ:। பர்யுபாஸத ராேஜந்த்ேரா। ௭௯।௰௰௯
ைதத்யாநாம் ஸ்வபிதாமஹம்। தம் உபாஸநம்ீ அநக:। ௭௯।௰௰௯
ப்ரஹ்ராேதா ைதத்யபுங்கவ:। ப்ரத்யுவாச மஹாத்மாநம்। ௭௯।௰௧
பலிம் ைவேராசநிம் ந்ருப। பேல ப்ரூஹி யதர்தம் ேத। ௭௯।௰௧
ஸ்ம்ருேதா அஹம் அரிஸூதந। தேவாபகாரேண வித்தி। ௭௯।௰௧௧
தர்ேம மாம் ஸதேதாத்யதம்। தாேதநாஹம் புரா ஜ்ஞப்ேதா। ௭௯।௰௧௧
ப்ரஷ்டராஜ்ேயந ேத பேல। ஸம்ஸ்மர்தவ்ேயா அஸ்ம்ய் அஸம்திக்தம்।
௭௯।௰௧௨
ஸ்ேரேயா வŠயாம்ய் அஹம் ததா। ேஸா அஹம் ராஜ்யபரிப்ரஷ்ேடா।
௭௯।௰௧௨
விஷயாஸக்திஹ்ருஷித:। இந்த்ரிையர் அவஸஸ் தாத। ௭௯।௰௧௩

யத் கார்யம் தத் ப்ரஸாதி மாம்। யதி மத் வசநம் தாத। ௭௯।௰௧௩
ஸ்ரத்ததாஸி ஹிதம் பேல। தம் ேதவேதவம் அநகம்। ௭௯।௰௧௪
ப்ரயாஹி ஸரணம் ஹரிம்। ஸப்தாதிஷ்வ் அநுரக்தாநி। ௭௯।௰௧௪
தவாக்ஷாண்ய் அஸுராதிப। ஸப்தாதயஸ் ச ேகாவிந்ேத। ௭௯।௰௧௫
ஸந்த்ய் ஏவ வ்யவஹாரத:। கீதைகர் கீயதாம் விஷ்ணுர்। ௭௯।௰௧௫
மேநாஹாரிபிர் ஆத்மந:। அந்யாலம்பநதஸ் சித்தம்। ௭௯।௰௧௬
ஆக்ருஷ்யாதத்ஸ்வ ேகஸேவ। கந்தாந் உதாராந் பக்ஷாம்ஸ் ச।
௭௯।௰௧௬
ஸ்ரேஜா வாஸாம்ஸி சாஸுர। ப்ரயச்ச ேதவேதவாய। ௭௯।௰௧௭
தச்ேசஷாண்ய் உபயுஞ்ஜ ச। யத்ர யத்ர ச ேத ப்ரீதிர்। ௭௯।௰௧௭
விஷேய திதிேஜஸ்வர। தத் தம் அச்யுதம் உத்திஸ்ய। ௭௯।௰௧௮
விப்ேரப்ய: ப்ரதிபாதய। ஸர்வபூேதஷு ேகாவிந்ேதா। ௭௯।௰௧௮
பஹுரூேபா வ்யவஸ்தித:। இதி மத்வா மஹாபாேஹா। ௭௯।௰௧௯
ஸர்வபூதஹிேதா பவ। ஆத்மாநம் அச்யுதம் வித்தி। ௭௯।௰௧௯
ஸத்ரும் ச ரிபும் ஆத்மந:। இதிஜ்ஞாநவத: ேகாபஸ்। ௭௯।௰௨
தவ குத்ர பவிஷ்யதி। ஸப்தாதேயா ேய விஷயா। ௭௯।௰௨
விஷயீ யஸ் ச புருஷ:। தத் அேஸஷம் விஜாநீஹி। ௭௯।௰௨௧
ஸ்வரூபம் பரமாத்மந:। பரமாத்மா ச பகவாந்। ௭௯।௰௨௧
விஷ்வக்ேஸேநா ஜநார்தந:। தத்பக்திமாந் பாகவேதா। ௭௯।௰௨௨
நால்பபுண்ேயா ஹி ஜாயேத। பகவச்சாஸநாலம்ப।ீ ௭௯।௰௨௨
பகவச்சாஸநப்ரிய:। பகவத்பக்திம் ஆஸ்தாய। ௭௯।௰௨௩
வத்ஸ பாகவேதா பவ। பகவாந் பூதக்ருத் பவ்ேயா। ௭௯।௰௨௩

பூதாநாம் ப்ரபேவா ஹி ய:। பாேவந தம் பஜஸ்ேவஸம்। ௭௯।௰௨௪
பவபங்ககரம் ஹரிம்। பஜஸ்வ பாேவந விபும்। ௭௯।௰௨௪
பகவந்தம் மேஹஸ்வரம்। தேதா பாகவேதா பூத்வா। ௭௯।௰௨௫
பவபந்தாத் விேமாŠயேஸ। ஸர்வபூேத மநஸ் தஸ்மிந்। ௭௯।௰௨௫
ஸமாதாய மஹாமேத। ப்ராப்ஸ்யேஸ பரமாஹ்லாத । ௭௯।௰௨௬
காரிணம்ீ பரமாம் கதிம்। யத்ராநந்தபரம் ஜ்ஞாநம்। ௭௯।௰௨௬
ஸர்வது:கவிவர்ஜிதம்। தத்ர சித்தம் ஸமாேவஷ்டும்। ௰௭௯।௧௩௩
ந ஸக்ேநாதி பவாந் யதி। ததப்யாஸபரஸ் தஸ்மிந்। ௭௯।௰௨௭
குரு ேயாகம் திவாநிஸம்। தத்ராப்ய் அஸாமர்த்யவத:। ௭௯।௰௨௭
க்ரியாேயாேகா மஹாத்மநா। ப்ரஹ்மணா ய: ஸமாக்யாதஸ்।
௭௯।௰௨௮
தந்மநா: ஸததம் பவ। கேராஷி யாநி கர்மாணி। ௭௯।௰௨௮
தாநி ேதேவ ஜகத்பெதௗ। ஸமர்பயஸ்வ பத்ரம் ேத। ௭௯।௰௨௯
தத: கர்ம ப்ரஹாஸ்யஸி। க்ஷணகர்மா ீ மஹாபாேஹா। ௭௯।௰௨௯
ஸுபாஸுபவிவர்ஜித:। லயம் அப்ேயதி ேகாவிந்ேத। ௭௯।௰௩
தத் ப்ரஹ்ம பரமம் மஹத்। ேபாக்தும் இச்சஸி ைதத்ேயந்த்ர। ௭௯।௰௩
கர்மணாம் அத ேசத் பலம்। ததஸ் தம் அர்சேயேஸஸம்। ௭௯।௰௩௧
தத: கர்மபேலாதய:। ேயா அர்தம் இச்சதி ைதத்ேயந்த்ர। ௭௯।௰௩௧
ஸ ஸமாராத்ய ேகஸவம்। நி:ஸம்ஸயம் அவாப்ேநாதி। ௭௯।௰௩௨
துந்துமாேரா யதா ந்ருப:। அத்ரிேகஹஸமுத்பூதம்। ௭௯।௰௩௨
தத்தாத்ேரயஸ்வரூபிணம்। ராஜ்யம் ஆராத்ய ேகாவிந்தம்। ௭௯।௰௩௩
கார்தவர்யஸ்ீ ததாப்தவாந்। தர்மம் க்ருஷ்ணப்ரஸாேதந। ௭௯।௰௩௩
முத்கேலா ஜாஜலி: குணி:। ப்ராபுர் அந்ேய ததா காமாந்। ௭௯।௰௩௪

நேரந்த்ரா நஹுஷாதய:। ஜநக: ஸுத்வேஜா நாம। ௭௯।௰௩௪
ஜநக: ஸமிதித்வஜ:। தர்மத்வஜஸ் ததா முக்திம்। ௭௯।௰௩௫
ேகஸவாராதநாத் கத:। ததாந்ேய முநேயா ைதத்ய। ௭௯।௰௩௫
ராஜாநஸ் ச ஸஹஸ்ரஸ:। ப்ராபுர் முக்திம் மஹாபாகா:। ௭௯।௰௩௬
க்ருத்வா பக்திம் ஜநார்தேந। யதா ஹி ஜ்வலிேதா வஹ்நிஸ்।
௭௯।௰௩௬
தேமாஹாநிம் ததர்திநாம்। ஸதஹாநிம் ீ ததாந்ேயஷாம்। ௭௯।௰௩௭
ஸ்ேவதம் ஸ்ேவதாபிலாஷிணாம்। கேராதி க்ஷுதிதாநாம் ச। ௭௯।௰௩௭
ேபாஜ்யபாகம் தேதாத்கடம்। தைதவ காமாந் பூேதஸ:। ௭௯।௰௩௮
ஸ ததாதி யேதப்ஸிதாந்। தத் ஏதத் அகிலம் ஜ்ஞாத்வா। ௭௯।௰௩௮
யத் தேவஷ்டம் ஸ்ருணுஷ்வ தத்। கல்பத்ருமாத் இவ ஹேரர்।
௭௯।௰௩௯
யத் ேத மநஸி வர்தேத। ஏதத் ப்ரஹ்ராதவசநம்। ௭௯।௰௩௯
நிஸாம்ய திதிேஜஸ்வர:। ப்ரத்யுவாச மஹாபாகம்। ௭௯।௰௪
ப்ரணிபத்ய பிதாமஹம்। ஸம்ப்ராப்தஸ்யாம்ருதஸ்ேயவ। ௭௯।௰௪
தவ வாக்யஸ்ய நாஸ்தி ேம। த்ருப்திர் ஏதத் அஹம் தாத। ௭௯।௰௪௧
ஸ்ேராதும் இச்சாமி விஸ்தராத்। அக்ஷீணகர்மா புருேஷா। ௭௯।௰௪௧
மரேண ஸமுபஸ்திேத। கீத்ருஸம் ேலாகம் ஆயாதி। ௭௯।௰௪௨
ய: ஸம்ஸ்மரதி ேகஸவம்। யதா ச வாஸுேதவஸ்ய। ௭௯।௰௪௨
ஸ்மரணம் தாத மாநைவ:। முமூர்ஷுபி: ப்ரகர்தவ்யம்। ௭௯।௰௪௩
தந் மமாசŠவ விஸ்தராத்। கிம் ஜப்யம் கீத்ருஸம் ரூபம்। ௭௯।௰௪௩
ஸ்மர்தவ்யம் ச ஹேரஸ் ததா। கதம் த்ேயயம் ச வித்வத்பிஸ்।
௭௯।௰௪௪

தத் ஆசŠவ யதாததம்। ஸாது வத்ஸ த்வயா ப்ரஸ்ந:। ௭௯।௰௪௪
ஸுகுஹ்ேயா அயம் உதாஹ்ருத:। தபஸாம் தாத ஸர்ேவஷாம்।
௭௯।௰௪௫
தேபா நாநஸநாத் பரம்। கத்யேத ச மஹாபாேஹா। ௭௯।௰௪௫
ஸம்வாேதா அயம் புராதந:। பகீரதஸ்ய ராஜர்ேஷர்। ௭௯।௰௪௬
ப்ரஹ்மணஸ் ச ப்ரஜாபேத:। அதீத்யாமரேலாகம் ச। ௭௯।௰௪௬
கவாம் ேலாகம் ச மாநத। க்ருஷிேலாகம் ச ேயா அகச்சத்। ௭௯।௰௪௭
பகீரத இதி ஸ்ருத:। தம் த்ருஷ்ட்வா ஸ வச: ப்ராஹ। ௭௯।௰௪௭
ப்ரஹ்மா ேலாகபிதாமஹ:। கதம் பகீரதாகாஸ் த்வம்। ௭௯।௰௪௮
இமம் ேதஸம் துராஸதம்। ந ஹி ேதவா ந கந்தர்வா। ௭௯।௰௪௮
ந மநுஷ்யா பகீரத। ஆயாந்த்ய் அதப்ததபஸ:। ௭௯।௰௪௯
கதம் ைவ த்வம் இஹாகத:। நி:ஸங்கம் அந்நம் அததம் ப்ராஹ்மேணப்ய:।
௭௯।௰௪௯
ஸதம் ஸஹஸ்ராணி ஸைதவ தாயம்। ப்ராஹ்மணம் வ்ரதம் நித்யம்
ஆஸ்தாய வித்வந்। ௭௯।௰௫
ந த்வ் ஏவாஹம் தஸ்ய பலாத் இஹாகாம்। தைஸகராத்ராந் தஸ
பஞ்சராத்ராந்। ௭௯।௰௫
ஏகாதைஸகாதஸகாம்ஸ் தைதவ। ஜ்ேயாதிஷ்ேடாமாநாம் ச ஸதம் யத்
இஷ்டம்। ௭௯।௰௫௧
பேலந ேதநாபி ந சாகேதா அஹம்। யச் சாவஸம் ஜாஹ்நவதீீரநித்ய:।
௭௯।௰௫௧
ஸதம் ஸமாஸ் தப்யமாநஸ் தேபா அஹம்। ப்ரதாய
தத்ராஸ்வதரீஸஹஸ்ரம்। ௭௯।௰௫௨

பேலந தஸ்யாபி ந சாகேதா அஹம்। தஸ ேதநுஸஹஸ்ராணி।
௭௯।௰௫௨
மணிரத்நவிபூஷிதா:। தஸார்புதாநி சாஸ்வாநாம்। ௭௯।௰௫௩
அயுதாநி ச விம்ஸதி:। புஷ்கேரஷு த்விஜாதிப்ய:। ௭௯।௰௫௩
ப்ராதாம் காஸ் ச ஸஹஸ்ரஸ:। ஸுவர்ணசந்த்ேராத்தமதாரிணநாம் ீ ।
௭௯।௰௫௩
கந்ேயாத்தமாநாம் அததம் ஸ்ரக்விணநாம் ீ । ஷஷ்டிம் ஸஹஸ்ராணி
விபூஷிதாநாம்। ௭௯।௰௫௪
ஜாம்பூநைதர் ஆபரைணர் ந ேதந। தஸார்புதாந்ய் அததம் ேகாஸேவ யாஸ்
த்வ்। ௭௯।௰௫௪
ஏைககேஸா தஸ கா ேலாகநாத। ஸமாநவத்ஸா: பயஸா ஸமந்விதா:।
௭௯।௰௫௫
ஸுவர்ணகாம்ஸ்ேயாபதுஹா ந ேதந। அஹந்ய் அஹநி விப்ேரஷு।
௭௯।௰௫௫
ஏைககம் த்ரிம்ஸேதா அததம்। க்ருஷ்டீநாம் க்ஷீரதாத்ரீணாம்।
௭௯।௰௫௬
ேராஹிணநாம் ீ ஸதாநி ச। ேதாக்த்ரீணாம் ைவ கவாம் ைசவ।
௭௯।௰௫௬
ப்ரயுதாநி தைஸவ து। ப்ராதாம் தஸகுணம் ப்ரஹ்மந்। ௭௯।௰௫௭
ந ச ேதநாஹம் ஆகத:। ேகாடீஸ் ச காஞ்சநஸ்யாஷ்ெடௗ। ௭௯।௰௫௭
ப்ராதாம் ப்ரஹ்மந் தஸ த்வ் அஹம்। ஏைககஸ்மிந் க்ரெதௗ ேதந।
௭௯।௰௫௮
பேலநாஹம் ந சாகத:। வாஜிநாம் ஸ்யாமகர்ணாநாம்। ௭௯।௰௫௮
ஹரிதாநாம் பிதாமஹ। ப்ராதாம் ேஹமஸ்ரஜாம் ப்ரஹ்மந்।
௭௯।௰௫௯

ேகாடீர் தஸ ச ஸப்த ச। ஈஷாதந்தாந் மஹாகாயாந்। ௭௯।௰௫௯
காஞ்சநஸ்ரக்விபூஷிதாந்। பத்நீவத: ஸஹஸ்ராணி। ௭௯।௰௬
ப்ராயச்சம் தஸ ஸப்த ச। அலம்க்ருதாநாம் ேதேவஸ। ௭௯।௰௬
திவ்ைய: கநகபூஷைண:। ரதாநாம் காஞ்சநாங்காநாம்। ௭௯।௰௬௧
ஸஹஸ்ராண்ய் அததம் தஸ। ஸப்த சாந்யாநி யுக்தாநாம்। ௭௯।௰௬௧
வாஜிபி: ஸமலம்க்ருைத:। தக்ஷிணாவயவா: ேகசித்। ௭௯।௰௬௧
ேதைவர் ேய ஸம்ப்ரகீர்திதா:। வாஜேபேயஷு தஸஸு। ௭௯।௰௬௨
ப்ராதாம் ேதநாபி நாகத:। ஸக்ரதுல்யப்ரபாவாநாம்। ௭௯।௰௬௨
ஈஜ்யயா விக்ரேமண ச। ஸஹஸ்ரம் நிஷ்ககண்டாநாம்। ௭௯।௰௬௩
ப்ரததந் தக்ஷிணாம் அஹம்। விஜித்ய ந்ருபதீந் ஸர்வாந்। ௭௯।௰௬௩
மைகர் இஷ்ட்வா பிதாமஹ। அஷ்டாப்ேயா ராஜஸூேயப்ேயா।
௭௯।௰௬௪
ந ச ேதநாஹம் ஆகத:। ஸ்ேராதஸ் ச யாவத் கங்காயாம்। ௭௯।௰௬௪
சிந்நம் ஆஸஜ்ீ ஜகத்பேத। தக்ஷிணாபி: ப்ரவ்ருத்தாபிர்। ௭௯।௰௬௫
மம நாகம் ச தத்க்ருேத। வாஜிநாம் ச ஸஹஸ்ேர த்ேவ। ௭௯।௰௬௫
ஸுவர்ணமணிபூஷிேத। வாரணாநாம் ஸதம் சாஹம்। ௭௯।௰௬௬
ஏைககஸ்ய த்ரிதாததம்। வரம் க்ராமஸதம் சாஹம்। ௭௯।௰௬௬
ஏைககஸ்ய த்ரிதாததம்। தபஸ்வ ீநியதாஹார:। ௭௯।௰௬௬
ஸமம் ஆஸ்தாய வாக்யத:। தீர்ககாலம் ஹிமவதி। ௭௯।௰௬௭
கங்காயாஸ் ச துருத்ஸஹாம்। மூர்த்நா தாராம் மஹாேதவ:।
௭௯।௰௬௭
ஸிரஸா யாம் அதாரயத்। ந ேதநாப்ய் அஹம் ஆகச்சம்। ௭௯।௰௬௮

பேலேநஹ பிதாமஹ। ஸம்யாேக்ஷைபர் அயஜம் ேதவேதவ।
௭௯।௰௬௮
ததா க்ரதூநாம் அயுைதஸ் சாபி யத்த:। த்ரேயாதஸத்வாதஸாைஹஸ் ச
ேதவ। ௭௯।௰௬௯
ஸபுண்டரீைகர் ந ச ேதஷாம் பேலந। அஷ்ெடௗ ஸஹஸ்ராணி ககுத்மிநாம்
அஹம்। ௭௯।௰௬௯
ஸுக்லர்ஷபாணாம் அதம் ப்ராஹ்மேணப்ய:। பத்நீஸ் ைசஷாம் அததம்
நிஷ்ககண்டீஸ்। ௭௯।௰௭
ேதஷாம் பேலேநஹ ந சாகேதா அஸ்மி। ஹிரண்யரத்நரசிதாந்।
௭௯।௰௭
அததம் ரத்நபர்வதாந்। தநதாந்யஸஹஸ்ராம்ஸ் ச। ௭௯।௰௭௧
க்ராமாஞ் ஸதஸஹஸ்ரஸ:। ஸதம் ஸதாநாம் க்ருஷ்டீநாம்। ௭௯।௰௭௧
அததம் சாப்ய் அதந்த்ரித:। இஷ்ட்வாேநைகர் மஹாயஜ்ைஞர்।
௭௯।௰௭௨
ப்ராஹ்மேணப்ேயா தேநந ச। ஏகாதஸாைஹர் அயஜம் ஸுதக்ஷிைணர்।
௭௯।௰௭௨
த்விர் த்வாதஸாைஹர் அஸ்வேமைதஸ் ச ேதவ। ப்ருஹத்பிர்
த்வாதஸாைஹஸ் ச। ௭௯।௰௭௩
அஸ்வேமைத: பிதாமஹ। அர்காயைண: ேஷாடஸபிஸ் ச ப்ரஹ்மம்ஸ்।
௰௭௯।௧௩௫
ேதஷாம் பேலேநஹ ந சாகேதா அஸ்மி। நிஷ்க்ராமகம் சாப்ய் அததம்
ேயாஜநாநாம்। ௭௯।௰௭௩
த்விர் விஸ்தீர்ணம் காஞ்சநபாதபாநாம்। வநம் சூதாநாம் ரத்நவிபூஷிதாநாம்।
௭௯।௰௭௪

ந ைசவ ேதஷாம் ஆகேதா அஹம் பேலந। துராயணம் து வ்ரதம்
அப்ரத்ருஷ்யம்। ௭௯।௰௭௪
அக்ேராதேநா அகரவம் த்ரிம்ஸேதா அப்தாந்। ஸதம் கவாம் அஷ்ட ஸதாநி
சாஹம்। ௭௯।௰௭௫
திேந திேந ப்ராததம் ப்ராஹ்மேணப்ய:। பயஸ்விநீநாம் அத ேராஹிணநாம் ீ ।
௭௯।௰௭௫
தைதவ சாப்ய் அநடுஹாம் ேலாகநாத। ப்ராதாம் நித்யம் ப்ராஹ்மேணப்ய:
ஸுேரஸ। ௭௯।௰௭௬
ேநஹாகதஸ் ேதந பேலந சாஹம்। த்ரிம்ஸதம் விதிவத் வஹ்நீந்।
௭௯।௰௭௬
அயஜம் யச் ச நித்யஸ:। அஷ்டாபி: ஸர்வேமைதஸ் ச। ௭௯।௰௭௭
ந்ருேமைதர் த்விகுைணஸ் ததா। தஸபிர் விஸ்வஜித்பிஸ் ச।
௭௯।௰௭௭
ஸ்ேதாைபர் அஷ்டாதேஸாத்தைர:। ந ைசவ ேதஷாம் ேதேவஸ।
௭௯।௰௭௮
பேலநாஹம் இஹாகமம்। ஸரவ்யாம் பாஹுதாயாம் ச। ௭௯।௰௭௮
கயாயாம் அத ைநமிேஷ। கவாம் ஸதாநாம் அயுதம்। ௭௯।௰௭௯
அததம் ந ச ேதந ைவ। உத்க்ராந்திகாேல ேகாவிந்தம்। ௭௯।௰௭௯
ஸ்மரந்ந் அநஸநஸ்தித:। த்யக்தவாந் அஸ்மி யத் ேதஹம்। ௭௯।௰௮
ேதேநத்ருக் ப்ராப்தவாந் பலம்। ஏவம் ஏதத் இதீத்ய் ஆஹ। ௭௯।௰௮
ப்ரஹ்மா ேலாகபிதாமஹ:। பகீரதம் மஹீபாலம்। ௭௯।௰௮௧
புண்யேலாகநிவாஸிநம்। தத் ஏதத் உக்தம் தபஸாம்। ௭௯।௰௮௧
ஸமஸ்தாநாம் மஹாமேத। குைணர் அநஸநம் ப்ரஹ்மா। ௭௯।௰௮௨
ப்ரதாநதரம் அப்ரவத்ீ। த்யஜத்ய் அநஸநஸ்ேதா ஹி। ௭௯।௰௮௨

ப்ராணாந் ய: ஸம்ஸ்மரந் ஹரிம்। ஸ யாதி விஷ்ணுஸாேலாக்யம்।
௭௯।௰௮௩
யாவத் இந்த்ராஸ் சதுர்தஸ। அதீதாநாகதாநீஹ। ௭௯।௰௮௩
குலாநி புருஷர்ஷப। புநாத்ய் அநஸநம் குர்வந்। ௭௯।௰௮௪
ஸப்த ஸப்த ச ஸப்த ச। ஸ்ேலாகாஸ் சாத்ர மஹாபாேஹா।
௭௯।௰௮௪
ஸ்ரூயந்ேத யாந் பகீரத:। ஜகாத ப்ரஹ்மேணா ேலாகம்। ௭௯।௰௮௫
உேபத: ப்ருதிவபதி ீ :। ப்ரஹ்ம ப்ரஹ்மமயம் விஷ்ேணார்। ௭௯।௰௮௫
ய: பதம் பரமாத்மந:। ஸம்ஸ்மரம்ஸ் த்யஜதி ப்ராணாந்। ௭௯।௰௮௬
ஸ விஷ்ணும் ப்ரவிஸத்ய் அஜம்। ய: க்ஷீணகர்மா ேபாேகந।
௭௯।௰௮௬
தபஸா வாபி ஸம்ஸ்மரந்। கேராதி காலம் காேலந। ௭௯।௰௮௭
ந பரிச்ேசத்யேத ஹி ஸ:। அக்ஷீணகர்மா மரேண। ௭௯।௰௮௭
ஸம்ஸ்மரந் ேதவம் அச்யுதம்। யதா த்வம் ஏவ ேதவாநாம்। ௭௯।௰௮௮
ேலாேக ேபாகாந் உபாஸ்நுேத। க்ஷுதிேத அபி குேல கஸ்சிஜ்।
௭௯।௰௮௮
ஜாேயயம் கர்மண: க்ஷேய। மநுஷ்ேயா ேயந ஸர்ேவஸம்। ௭௯।௰௮௯
சிந்தேயயம் ஸதா ஹரிம்। தச்சிந்தயாதுநாேஸஷ । ௭௯।௰௮௯
புண்யபாபவிவர்ஜித:। மரேண தந்மநஸ் தத்ர। ௭௯।௰௯
லயம் ஏத்ய தம் ஆப்நுயாத்। கர்மபூெமௗ ஸமஸ்தாநாம்। ௭௯।௰௯
கர்மணாம் உத்தேமாத்தமம்। யத் அந்தகாேல புருைஷ:। ௭௯।௰௯௧
ஸ்மர்யேத புருேஷாத்தம:। இத்ய் ஏதாந் ஆஹ ராஜர்ஷி:। ௭௯।௰௯௧

ஸ்ேலாகாந் ஆத்ேயா பகீரத:। விஷ்ணுஸம்ஸ்மரணாத் ப்ராப்ய।
௭௯।௰௯௨
ேலாகாந் அநஸேந ம்ருத:। ஏவம் அத்யந்தஸஸ்தாநாம்। ௭௯।௰௯௨
கர்மணாம் அஸுேரஸ்வர। நாந்யத் உத்க்ருஷ்டம் உத்திஷ்டம்।
௭௯।௰௯௩
தஜ்ஜ்ைஞர் அநஸநாத் பரம்। தஸ்யாஹம் லக்ஷணம் வŠேய।
௭௯।௰௯௩
யச் ச ஜப்யம் முமூர்ஷுபி:। யாத்ருக்ரூபஸ் ச பகவாம்ஸ்। ௭௯।௰௯௪
சிந்தநீேயா ஜநார்தந:। ஆஸந்நம் ஆத்மந: காலம்। ௭௯।௰௯௪
ஜ்ஞாத்வா ப்ராஜ்ேஞா மஹாஸுர। நிர்தூதமலேதாஷஸ் ச। ௭௯।௰௯௫
ஸ்நாேதா நியதமாநஸ:। ஸமப்யர்ச்ய ஹ்ருஷீேகஸம்। ௭௯।௰௯௫
புஷ்பதூபாதிபிஸ் தத:। ப்ரணிபாைத: ஸ்தைவ: புண்ையர்। ௭௯।௰௯௬
த்யாநேயாைகஸ் ச பூஜேயத்। தத்த்வா தாநம் ச விப்ேரப்ேயா।
௭௯।௰௯௬
விகலாதிப்ய ஏவ ச। ஸபாப்ரபாப்ராஹ்மெணௗக । ௭௯।௰௯௭
ேதெவௗகாத்யுபேயாகி ச। பந்துபுத்ரகலத்ெரௗக । ௭௯।௰௯௭
ேக்ஷத்ரதாந்யதநாதிஷு। மித்ரவர்ேக ச ைதத்ேயந்த்ர। ௭௯।௰௯௮
மமத்வம் விநிவர்தேயத்। மித்ராந் அமித்ராந் மத்யஸ்தாந்। ௭௯।௰௯௮
பராந் ஸ்வாம்ஸ் ச புந: புந:। அப்யர்தேநாபசாேரண। ௭௯।௰௯௯
க்ஷாமேயத் குக்ருதம் ஸ்வகம்। ததஸ் ச ப்ரயத: குர்யாத்। ௭௯।௰௯௯
உத்ஸர்கம் ஸர்வகர்மணாம்। ஸுபாஸுபாநாம் ைதத்ேயந்த்ர। ௭௯।௧
வாக்யம் ேசதம் உதாஹேரத்। பரித்யஜாம்ய் அஹம் ேபாகாம்ஸ்।
௭௯।௧

த்யஜாமி ஸுஹ்ருேதா அகிலாந்। ேபாஜநாதி மேயாத்ஸ்ருஷ்டம்।
௭௯।௧௰௧
உத்ஸ்ருஷ்டம் அநுேலபநம்। ஸ்ரக்பூஷணாதிகம் ேகயம்। ௭௯।௧௰௧
தாநம் ஆதாநம் ஏவ ச। ேஹாமாதய: பதார்தா ேய। ௭௯।௧௰௨
யாஸ் ச நித்யக்ரியா மம। ைநமித்திகாஸ் ததா காம்யா। ௭௯।௧௰௨
வர்ணதர்மாஸ் தேதாஜ்ஜிதா:। குணதர்மாதேயா தர்மா। ௭௯।௧௰௩
யாஸ் ச காஸ்சிந் மம க்ரியா:। பத்ப்யாம் கராப்யாம் விஹரந்।
௭௯।௧௰௩
குர்வந் வா கர்ம ந த்வ் அஹம்। கரிஷ்ேய ப்ராணிநாம் படாம் ீ ।
௭௯।௧௰௪
ப்ராணிந: ஸந்து நிர்பயா:। நபஸி ப்ராணிேநா ேய து। ௭௯।௧௰௪
ேய ஜேல ேய ச பூதேல। க்ஷிேதர் அந்தரகா ேய ச। ௭௯।௧௰௫
ேய ச பாஷாணஸம்புேட। ேய தாந்யாதிஷு வஸ்த்ேரஷு। ௭௯।௧௰௫
ஸயேநஷ்வ் ஆஸேநஷு ச। ேத ஸ்வபந்து விபுத்யந்து। ௭௯।௧௰௬
ஸுகம் மத்ேதா பயம் விநா। ந ேம அஸ்தி பாந்தவ: கஸ்சித்।
௭௯।௧௰௬
விஷ்ணும் முக்த்வா ஜகத்குரும்। மித்ரபேக்ஷ ச ேம விஷ்ணுர்।
௭௯।௧௰௭
அதஸ் ேசார்த்வம் ததாக்ரத:। பார்ஸ்வேதா மூர்த்நி ப்ருஷ்ேட ச।
௭௯।௧௰௭
ஹ்ருதேய வாசி சக்ஷுஷி। ஸ்ேராத்ராதிஷு ச ஸர்ேவஷு। ௭௯।௧௰௮
மம விஷ்ணு: ப்ரதிஷ்டித:। இதி ஸர்வம் ஸமுத்ஸ்ருஜ்ய। ௭௯।௧௰௮
த்யாத்வா ஸர்வத்ர சாச்யுதம்। வாஸுேதேவத்ய் அவிரதம்। ௭௯।௧௰௯

நாம ேதவஸ்ய கீர்தயந்। தக்ஷிணாக்ேரஷு தர்ேபஷு। ௭௯।௧௰௯
ஸயதீ ப்ராச்சிராஸ் தத:। உதச்சிரா வா ைதத்ேயந்த்ர। ௭௯।௧௧
சிந்தயஞ் ஜகத: பதிம்। விஷ்ணும் ஜிஷ்ணும் ஹ்ருஷீேகஸம்। ௭௯।௧௧
ேகஸவம் மதுஸூதநம்। நாராயணம் நரம் க்ருஷ்ணம்। ௭௯।௧௧௧
வாஸுேதவம் ஜநார்தநம்। வாராஹம் யஜ்ஞபுருஷம்। ௭௯।௧௧௧
புண்டரீகாக்ஷம் அச்யுதம்। வாமநம் ஸ்ரீதரம் ஸ்ரீஸம்। ௭௯।௧௧௨
ந்ருஸிம்ஹம் அபராஜிதம்। பத்மநாபம் அஜம் ெஸௗரிம்। ௭௯।௧௧௨
தாேமாதரம் அேதாக்ஷஜம்। ஸர்ேவஸ்வேரஸ்வரம் ஸுத்தம்। ௭௯।௧௧௩
அநந்தம் ராமம் ஈஸ்வரம்। சக்ரிணம் கதிநம் ஸார்ங்கிம்। ௭௯।௧௧௩
ஸங்கிநம் கருடத்வஜம்। கிரீடெகௗஸ்துபதரம்। ௭௯।௧௧௪
ப்ரணமாம்ய் அஹம் அவ்யயம்। அஹம் அத்ர ஜகந்நாேத। ௭௯।௧௧௪
மயி சாஸ்து ஜநார்தந:। ஆவேயார் அந்தரம் மாஸ்து। ௭௯।௧௧௫
ஸமீரநபேஸார் இவ। அயம் விஷ்ணுர் அயம் ெஸௗரிர்। ௭௯।௧௧௫
அயம் க்ருஷ்ண: புேரா மம। நீேலாத்பலதலஸ்யாம:। ௭௯।௧௧௬
பத்மபத்த்ேராபேமக்ஷண:। ஏஷ பஸ்யது மாம் ஈஸ:। ௭௯।௧௧௬
பஸ்யாம்ய் அஹம் அேதாக்ஷஜம்। யேதா ந வ்யதிரிக்ேதா அஹம்।
௭௯।௧௧௭
யந்மேயா அஹம் யதாஸ்ரய:। இத்தம் ஜபந்ந் ஏகமநா:। ௭௯।௧௧௭
ஸ்மரந் ஸர்ேவஸ்வரம் ஹரிம்। ஆஸநீ : ஸுகது:ேகஷு। ௭௯।௧௧௮
ஸேமா மித்ராஹிேதஷு ச। ஓம் நேமா வாஸுேதவாேயத்ய்।
௭௯।௧௧௮
ஏதத் வா ஸததம் வதந்। யத் ேவாதீரயிதும் நாம। ௭௯।௧௧௯
ஸமர்தஸ் தத் உதீரயந்। த்யாேயத ேதவேதவஸ்ய। ௭௯।௧௧௯

ரூபம் விஷ்ேணார் மேநாரமம்। ப்ரஸாந்தேநத்ரப்ரூவக்த்ரம்। ௭௯।௧௧௯
ஸங்கசக்ரகதாதரம்। ஸ்ரீவத்ஸவக்ஷஸம் ைசவ। ௭௯।௧௨
சதுர்பாஹும் கிரீடிநம்। பதாம்பரதரம் ீ விஷ்ணும்। ௭௯।௧௨
சாருேகயூரதாரிணம்। சிந்தேயச் ச ததா ரூபம்। ௭௯।௧௨௧
மந: க்ருத்ைவகநிஸ்சயம்। யாத்ருேஸ வா மந: ஸ்ைதர்யம்। ௭௯।௧௨௧
ரூேப பத்நாதி சக்ரிண:। தத் ஏவ சிந்தயந் நாம। ௭௯।௧௨௨
வாஸுேதேவதி கீர்தேயத்। இத்தம் ஜபந் ஸ்மரந் ேவத்தம்। ௭௯।௧௨௨
ஸ்வரூபம் பரமாத்மந:। ஆ ப்ராேணாபரமாத் வரஸ்ீ । ௭௯।௧௨௩
தச்சித்தஸ் தத்பராயண:। நிர்விகல்ேபந மநஸா। ௭௯।௧௨௩
ய: ஸ்மேரத் புருேஷாத்தமம்। ஸர்வபாதகயுக்ேதா அபி। ௭௯।௧௨௪
புருஷ: புருஷர்ஷப। ப்ரயாதி ேதவேதேவேஸ। ௭௯।௧௨௪
லயம் ஈட்யதேம அச்யுேத। யதாக்நிஸ் த்ருணஜாலாநி। ௭௯।௧௨௪
தஹத்ய் அநிலஸம்கத:। ததாநஸநஸம்கல்ப:। ௭௯।௧௨௫
பும்ஸாம் பாபம் அஸம்ஸயம்। விஷ்ேணா: ஸம்ஸ்மரேண ப்ராப்ய।
௭௯।௧௨௫
ேலாகம் அநஸேந ம்ருத:। ஏவம் அத்யந்தஸஸ்தாநாம்। ௰௭௯।௧௩௬
கர்மணாம் அஸுேரஸ்வர। நாஸ்தி ஸத்யாத் பேரா தர்ேமா।
௰௭௯।௧௩௬
நாஸ்த்ய் அதர்ம ததாந்ருதாத்। நாஸ்தி வித்யாஸமம் சக்ஷுஸ்।
௭௯।௧௨௬
தேபா நாநஸநாத் பரம்। நாஸ்தி ஜ்ஞாநஸமம் தாநம்। ௭௯।௧௨௬
ந ஸம்ேதாஷஸமம் ஸுகம்। ந ைசேவர்ஷ்யாஸமம் து:கம்। ௭௯।௧௨௭
தேபா நாநஸநாத் பரம்। நாஸ்த்ய் அேராகஸமம் தந்யம்। ௭௯।௧௨௭

நாஸ்தி கங்காஸமா ஸரித்। நாஸ்தி விஷ்ணுஸமம் த்ேயயம்।
௭௯।௧௨௮
தேபா நாநஸநாத் பரம்। உத்க்ராந்திகாேல பூதாநாம்। ௭௯।௧௨௮
முஹ்யந்ேத சித்தவ்ருத்தய:। ஜராவ்யாதிவிதீநாநாம்। ௭௯।௧௨௯
கிமு வ்யாத்யாதிேதாஷத:। அத்யந்தவயஸா வ்ருத்த்யா। ௭௯।௧௨௯
வ்யாதிநா சாதிபடிதீ :। யதி ஸ்தாதும் ந ஸக்ேநாதி। ௭௯।௧௩
க்ஷிதிஸ்ேத தர்பஸம்ஸ்தேர। தத் கிம் அந்ேயா அப்ய் உபாேயா அஸ்தி।
௭௯।௧௩
ந வாநஸநகர்மணி। விபல்யம் ேயந நாப்ேநாதி। ௭௯।௧௩௧
தந் ேம ப்ரூஹி பிதாமஹ। நாத்ர பூமிர் ந ச குஸா:। ௭௯।௧௩௧
ஸம்ஸ்தரஸ் ச ந காரணம்। சித்தஸ்யாலம்பநீபூேதா। ௭௯।௧௩௨
விஷ்ணுர் ஏவாத்ர காரணம்। புஞ்ஜந்ந் அபுஞ்ஜந் கச்சம்ஸ் ச। ௭௯।௧௩௨
ஸ்வபம்ஸ் திஷ்டந்ந் அதாபி வா। உத்க்ராந்திகாேல ேகாவிந்தம்।
௭௯।௧௩௩
ஸம்ஸ்மரம்ஸ் தந்மேயா பேவத்। கிம் ஜைப: கிம் புவா க்ருத்யம்।
௭௯।௧௩௩
கிம் குைஸர் ைதத்யஸத்தம। ததாபி குர்வேதா யஸ்ய। ௭௯।௧௩௪
ஹ்ருதேய ந ஜநார்தந:। தஸ்மாத் ப்ரதாநமந்த்ேராக்தம்। ௭௯।௧௩௪
வாஸுேதவஸ்ய கீர்தநம்। தந்மயத்ேவந ைதத்ேயந்த்ர। ௭௯।௧௩௫
தஸ்ேயாபாயஸ் ச விஸ்தர:। இத்ய் ஏதத் கதிதம் ஸர்வம்। ௭௯।௧௩௫
ப்ருஷ்ேடா அஹம் யத் த்வயா பேல। உத்க்ராந்திகாேல ஸ்மரணம்।
௭௯।௧௩௬
கிம் பூய: கதயாமி ேத। க்ரியாேயாகஸ் த்வயா பூர்வம்। ௭௯।௧௩௬

மேமாக்ேதா ய: பிதாமஹ। தம் அஹம் ஸ்ேராதும் இச்சாமி। ௮௰।௰௰௧
பலம் சாஸ்ய யதாததம்। ேதவார்சாம் ேதவதாகாேர। ௮௰।௰௰௧
தந்மயத்ேவந பூஜயம்। யதாவச் ேசதேஸா பூமிம்। ௮௰।௰௰௨
கேராதி நியேதா ஹி ஸ:। தபஸா ப்ரஹ்மசர்ேயண। ௮௰।௰௰௨
புண்யஸ்வாத்யாயஸம்ஸ்தைவ:। க்ரியாேயாக: ஸ வித்வத்பிர்।
௮௰।௰௰௩
ேயாகிநாம் ஸமுதாஹ்ருத:। தத்ராஹம் ஸ்ேராதும் இச்சாமி।
௮௰।௰௰௩
க்ரியாேயாகஸ்திேதா நர:। யத் பலம் ஸமவாப்ேநாதி। ௮௰।௰௰௪
காரயித்வா ஹேரர் க்ருஹம்। ேதவார்சாம் காரயித்வா வா। ௮௰।௰௰௪
யத் புண்யம் புருேஷா அஸ்நுேத। ஸம்பூஜயித்வா விதிவத்। ௮௰।௰௰௫
அநுலிப்ய ச யத் பலம்। காநி மால்யாநி ஸஸ்தாநி। ௮௰।௰௰௫
காநி நார்ஹந்தி ேகஸேவ। ேக தூபா: க்ருஷ்ணதயிதா:। ௮௰।௰௰௬
ேக வர்ஜ்யாஸ் ச ஜகத்பேத:। உபஹாேர பலம் கீம் ஸ்யாத்। ௮௰।௰௰௬
கிம் பலம் கீதவாதிேத। க்ருதக்ஷராதிநா ீ யச் ச। ௮௰।௰௰௭
ஸ்நாபிேத ேகஸேவ பலம்। யச் ேசாபேலபேந தாத। ௮௰।௰௰௭
பலம் அப்யுக்ஷிேத ச யத்। வாஸுேதவக்ருேஹ ஸர்வம்। ௮௰।௰௰௮
தத் அேஸஷம் வதஸ்வ ேம। ஸாது வத்ஸ யத் ஏதத் த்வம்।
௮௰।௰௰௮
வாஸுேதவஸ்ய ப்ருச்சஸி। ஸுஸ்ரூஷணவிெதௗ புண்யம்।
௮௰।௰௰௯
தத் இைஹகமநா: ஸ்ருணு। ப்ரஹ்மணா கில ேதவாநாம்। ௮௰।௰௰௯

க்ருஷீணாம் ச மஹாத்மநாம்। ஸுஸ்ரூஷணபலம் விஷ்ேணா:।
௮௰।௰௧
ப்ேராக்தம் ைதத்யபேத புரா। ேதப்ய: ஸகாஸாந் மநுநா। ௮௰।௰௧
ப்ராப்தம் ஸ்வாேராசிேஷண து। ஸ்வாேராசிஷ: ஸ்வபுத்ராய। ௮௰।௰௧௧
தத்தவாந் க்ருதசக்ஷுேஷ। க்ருதசக்ஷுஸ் ச பர்கேவ। ௮௰।௰௧௧
ஸுக்ரஸ் தஸ்மாத் அவாப ச। மமாக்யாதம் ச ஸுக்ேரண। ௮௰।௰௧௨
யதாவத் ஸுமஹாத்மநா। ஸுஸ்ரூஷேவ மஹாபாக। ௮௰।௰௧௨
ைதத்யாசார்ேயண தீமதா। தத் ஏதச் ச்ரூயதாம் தாத। ௮௰।௰௧௩
க்ரியாேயாகாஸ்ரிதம் பலம்। ஜ்ஞாநேயாகஸ் து ஸம்ேயாகஸ்।
௮௰।௰௧௩
சித்தஸ்ையவாத்மநா து ய:। யஸ் து பாஹ்யார்தஸாேபக்ஷ:। ௮௰।௰௧௪
ஸ க்ரியாேயாக உச்யேத। பரமம் காரணம் ேயாேகா। ௮௰।௰௧௪
விமுக்ேதர் திதிேகஸ்வர। க்ரியாேயாகஸ் ச ேயாகஸ்ய। ௮௰।௰௧௫
பரமம் தாத ஸாதநம்। யத் த்வ் ஏதத் பவதா ப்ருஷ்டம்। ௮௰।௰௧௫
பலம் அந்விச்சதா பலம்। ேதவாலயாதிகரேண। ௮௰।௰௧௬
தத் இைஹகமநா: ஸ்ருணு। யஸ் து ேதவாலயம் விஷ்ேணார்।
௮௰।௰௧௬
தார்வம் ைஸலமயம் ததா। காரேயந் ம்ருந்மயம் வாபி। ௮௰।௰௧௭
ஸ்ருணு தஸ்ய பேல பலம்। அஹந்ய் அஹநி யஜ்ேஞந। ௮௰।௰௧௭
யஜேதா யந் மஹாபலம்। ப்ராப்ேநாதி தத் பலம் விஷ்ேணார்।
௮௰।௰௧௮
ய: காரயதி மந்திரம்। குலாநாம் ஸதம் ஆகாமி। ௮௰।௰௧௮
ஸமதீதம் ததா ஸதம்। காரயந் பகவத்தாம। ௮௰।௰௧௯

நயத்ய் அச்யுதேலாகதாம்। ஸப்தஜந்மக்ருதம் பாபம்। ௮௰।௰௧௯
ஸ்வல்பம் வா யதி வா பஹு। விஷ்ேணார் ஆலயவிந்யாஸ ।
௮௰।௰௨
ப்ராரம்பாத் ஏவ நஸ்யதி। ஸப்தேலாகமேயா விஷ்ணுஸ்। ௮௰।௰௨
தஸ்ய ய: குருேத க்ருஹம்। ப்ரதிஷ்டாம் ஸமவாப்ேநாதி। ௮௰।௰௨௧
ஸ நர: ஸப்தெலௗகிகீம்। ப்ரஸஸ்தேதஸபூபாேக। ௮௰।௰௨௧
ய: ஸஸ்தம் பவநம் ஹேர:। காரயத்ய் அக்ஷயாம்ல் ேலாகாந்।
௮௰।௰௨௨
ஸ நர: ப்ரதிபத்யேத। இஷ்டகாசயவிந்யாேஸா। ௮௰।௰௨௨
யாவந்த்ய் க்ருக்ஷாணி திஷ்டதி। தாவத்வர்ஷஸஹஸ்ராணி।
௮௰।௰௨௩
தத்கர்துர் திவி ஸம்ஸ்திதி:। ப்ரதிமாம் லக்ஷணவதீம்। ௮௰।௰௨௩
ய: காரயதி மாநவ:। ேகஸவஸ்ய ஸ தல்ேலாகம்। ௮௰।௰௨௪
அக்ஷயம் ப்ரதிபத்யேத। ஷஷ்டிம் வர்ஷஸஹஸ்ராணாம்। ௮௰।௰௨௪
ஸஹஸ்ராணி ஸ ேமாதேத। ஸ்வர்ெகௗகஸாம் நிவாேஸஷு।
௮௰।௰௨௫
ப்ரத்ேயகம் அரிஸூதந। ப்ரதிஷ்டாப்ய ஹேரர் அர்சாம்। ௮௰।௰௨௫
ஸுப்ரஸஸ்ேத நிேவஸேந। புருஷ: க்ருதக்ருத்யத்வாந்। ௮௰।௰௨௬
ைநநம் ஸ்ேவாமரணம் தேபத்। ேய பவிஷ்யந்தி ேய அதீதா।
௮௰।௰௨௬
ஆகல்பாத் புருஷா: குேல। தாம்ஸ் தாரயதி ஸம்ஸ்தாப்ய। ௮௰।௰௨௭
ேதவஸ்ய ப்ரதிமாம் ஹேர:। அநுஸஸ்தா: கில புரா। ௮௰।௰௨௭
யேமந யமகிம்கரா:। பாேஸாத்யதாயுதா ைதத்ய। ௮௰।௰௨௮

ப்ரஜாஸம்யமேந ரதா:। விஹரத்வம் யதாந்யாயம்। ௮௰।௰௨௮
நிேயாேகா ேம அநுபால்யதாம்। நாஜ்ஞாபங்கம் கரிஷ்யந்தி। ௮௰।௰௨௯
பவதாம் ஜந்தவ: க்வசித்। ேகவலம் ேய ஜகத்தாதும்। ௮௰।௰௨௯
அநந்தம் ஸமுபாஸ்ரிதா:। பவத்பி: பரிஹர்தவ்யாஸ்। ௮௰।௰௩
ேதஷாம் நாஸ்த்ய் அத்ர ஸம்ஸ்திதி:। ேய து பாகவதா ேலாேக।
௮௰।௰௩
தச்சித்தாஸ் தத்பராயணா:। பூஜயந்தி ஸதா விஷ்ணும்। ௮௰।௰௩௧
ேத வஸ் த்யாஜ்யா: ஸுதூரத:। யஸ் திஷ்டந் ப்ரஸ்வபந் கச்சம்ஸ்।
௮௰।௰௩௧
தத்திஷ்டந் ஸ்கலிேத க்ஷுேத। ஸம்கீர்தயதி ேகாவிந்தம்। ௮௰।௰௩௨
ேத வஸ் த்யாஜ்யா: ஸுதூரத:। நித்யைநமித்திைகர் ேதவம்। ௮௰।௰௩௨
ேய யஜந்தி ஜநார்தநம்। நாவேலாக்ய பவத்பிஸ் ேத। ௮௰।௰௩௩
தத்ேதேஜா ஹந்தி ேவா கதிம்। ேய தூபபுஷ்பவாேஸாபிர்। ௮௰।௰௩௩
பூஷைணஸ் சாபி வல்லைப:। அர்சயந்தி ந ேத க்ராஹ்யா। ௮௰।௰௩௪
நரா: க்ருஷ்ணாஸ்ரேயாத்ததா:। உபேலபநகர்தார:। ௮௰।௰௩௪
ஸம்மார்ஜநபராஸ் ச ேய। க்ருஷ்ணாலேய பரித்யாஜ்யம்। ௮௰।௰௩௫
ேதஷாம் த்ரிபுருஷம் குலம்। ேயந சாயதநம் விஷ்ேணா:। ௮௰।௰௩௫
காரிதம் தத்குேலாத்பவம்। பும்ஸாம் ஸதம் நாவேலாக்யம்। ௮௰।௰௩௬
பவத்பிர் துஷ்டசக்ஷுஷா। ேயநார்சா பகவத்பக்த்யா। ௮௰।௰௩௬
வாஸுேதவஸ்ய காரிதா। நராயுதம் தத்குலஜம்। ௮௰।௰௩௭
பவதாம் ஸாஸநாதிகம்। பவதாம் ப்ரமதாம் அத்ர। ௮௰।௰௩௭
விஷ்ணுஸம்ஸ்ரயமுத்ரயா। விநாஜ்ஞாபங்கக்ருந் ைநவ। ௮௰।௰௩௮
பவிஷ்யதி நர: க்வசித்। வத்ஸ ைவவஸ்வதஸ்ையதா:। ௮௰।௰௩௮

ஸ்ருத்வா காதா மரீசிநா। புருகுத்ஸாய கதிதா:। ௮௰।௰௩௯
பார்திேவந்த்ராய தீமேத। ஏதாம் மஹாபலாம் ேயா அர்சாம்। ௮௰।௰௩௯
விஷ்ேணாஹ் காரயேத நர:। தவாக்யாதம் மஹாபாேஹா। ௮௰।௰௪
க்ருஹகாரயிதுஸ் ச யத்। யஜ்ஞா நராணாம் பாெபௗக । ௮௰।௰௪
க்ஷாலகா: ஸர்வகாமதா:। தைதேவஜ்ேயா ஜகத்தாது:। ௮௰।௰௪௧
ஸர்வயஜ்ஞமேயா ஹரி:। ஸ்தாபிதாம் ப்ரதிமாம் விஷ்ேணா:।
௮௰।௰௪௧
ஸம்யக் ஸம்பூஜ்ய மாநவ:। யம் யம் ப்ரார்தயேத காமம்। ௮௧।௰௰௧
தம் தம் ஆப்ேநாத்ய் அஸம்ஸயம்। ய: ஸ்நாபயதி ேதவஸ்ய।
௮௧।௰௰௧
க்ருேதந ப்ரதிமாம் ஹேர:। ப்ரஸ்ேத ப்ரஸ்ேத த்விஜாக்ர்யாணாம்।
௮௧।௰௰௨
ஸ ததாதி கவாம் ஸதம்। கவாம் ஸதஸ்ய விப்ராணாம்। ௮௧।௰௰௨
யத் தத்தஸ்ய பேவத் பலம்। க்ருதப்ரஸ்ேதந தத் விஷ்ேணார்।
௮௧।௰௰௩
லேபத் ஸ்நாேநாபேயாகிநா। பூரித்யும்ேநந ஸம்ப்ராப்தா। ௮௧।௰௰௩
ஸப்தத்வபாீ வஸும்தரா। க்ருதாடேகந ேகாவிந்த । ௮௧।௰௰௪
ப்ரதிமாஸ்நாபநாத் கில। ப்ரதிமாஸம் ஸிதாஷ்டம்யாம்। ௮௧।௰௰௪
க்ருேதந ஜகத: பதிம்। ஸ்நாபயித்வா ஸமஸ்ேதப்ய:। ௮௧।௰௰௫
பாேபப்ேயா விப்ரமுச்யேத। த்வாதஸ்யாம் பஞ்சதஸ்யாம் ச। ௮௧।௰௰௫
கவ்ேயந ஹவிஷா ஹேர:। ஸ்நாபநம் ைதத்யஸார்தூல। ௮௧।௰௰௬
மஹாபாதகநாஸநம்। ஜ்ஞாநேதா அஜ்ஞாநேதா வாபி। ௮௧।௰௰௬
யத் பாபம் குருேத நர:। தத் க்ஷாலயதி ஸம்த்யாயாம்। ௮௧।௰௰௭

க்ருேதந ஸ்நாபயந் ஹரிம்। ஸர்வயஜ்ஞமேயா விஷ்ணுர்। ௮௧।௰௰௭
ஹவ்யாநாம் பரமம் க்ருதம்। தேயார் அேஸஷபாபாநாம்। ௮௧।௰௰௮
க்ஷாலக: ஸம்கேமா அஸுர। ேயஷு க்ஷரவஹா ீ நத்ேயா। ௮௧।௰௰௮
ஹ்ரதா: பாயஸகர்தமா:। தாம்ல் ேலாகாந் புருஷா யாந்தி। ௮௧।௰௰௯
க்ஷீரஸ்நாநகரா ஹேர:। ஆஹ்லாதம் நிர்வ்ருதிம் ஸ்வாஸ்த்யம்।
௮௧।௰௰௯
ஆேராக்யம் சாருரூபதாம்। ஸப்த ஜந்மாந்ய் அவாப்ேநாதி। ௮௧।௰௧
க்ஷீரஸ்நாநகேரா ஹேர:। தத்யாதீநாம் விகாராணாம்। ௮௧।௰௧
க்ஷீரத: ஸம்பேவா யதா। தைதவாேஸஷகாமாநாம்। ௮௧।௰௧௧
க்ஷீரஸ்நாபநேதா ஹேர:। யதா ச விமலம் ஜ்ஞாநம்। ௮௧।௰௧௧
யதா நிர்வ்ருதிகாரகம்। ததாஸ்ய நிர்மலம் ஜ்ஞாநம்। ௮௧।௰௧௨
பவத்ய் அதிபலப்ரதம்। க்ரஹாநுகூலதாம் புஷ்டிம்। ௮௧।௰௧௨
ப்ரியத்வம் சாகிேல ஜேந। கேராதி பகவாந் விஷ்ணு:। ௮௧।௰௧௩
க்ஷீரஸ்நாபநேதாஷித:। ஸர்ேவா அஸ்ய ஸ்நிக்ததாம் ஏதி। ௮௧।௰௧௩
த்ருஷ்டமாத்ர: ப்ரஸததி ீ । க்ருதக்ஷீேரண ேதேவேஸ। ௮௧।௰௧௪
ஸ்நாபிேத மதுஸூதேந। அத்ராப்ய் உதாஹரந்தீமம்। ௮௧।௰௧௪
ஸம்வாதம் ேகஸவாஸ்ரிதம்। ஸாண்டில்யா ஸஹ ைகேகய்யா:।
௮௧।௰௧௫
ஸுமநாயா: ஸுராலேய। ஸ்வர்ேக அதிேஸாபநாம் த்ருஷ்ட்வா।
௮௧।௰௧௫
ைகேகயம்ீ பதிநா ஸஹ। ப்ராஹ்மணீஸாண்டிலீ நாம। ௮௧।௰௧௬
பர்யப்ருச்சத விஸ்மிதா। ஸதஸ: ஸந்தி ைகேகயி। ௮௧।௰௧௬
ேதவா: ஸ்வர்கநிவாஸிந:। ேதவபத்ந்யஸ் தைதைவதா:। ௮௧।௰௧௭

ஸித்தா: ஸித்தாங்கநாஸ் ததா। ந ேதஷாம் ஈத்ருேஸா கந்ேதா।
௮௧।௰௧௭
ந காந்திர் ந ஸுரூபதா। ந வாஸஸாம் ச ேஸாேபயம்। ௮௧।௰௧௮
யதா ேத பதிநா ஸஹ। ைநவாபரணஜாதாநி। ௮௧।௰௧௮
ேதஷாம் ப்ராஜந்தி ைவ ததா। யதா தவ யதா பத்யுஸ்। ௮௧।௰௧௯
தவ ஸ்வர்கநிவாஸிந:। ஸ்வஸ்ததா ேசதஸஸ் ேசயம்। ௮௧।௰௧௯
யுவேயார் அதிரிச்யேத। ஸக்ராத்யாநாம் அபஸாநாம் ீ । ௮௧।௰௨
க்ஷயாதிஸயவர்ஜித:। தப:ப்ரபாேவா தாநம் வா। ௮௧।௰௨
கர்ம வா ேஹாமஸம்ஜ்ஞிதம்। யுவேயார் யந் மமாசŠவ। ௮௧।௰௨௧
தத் ஸர்வம் வரவர்ணிநி। யஜ்ைஞர் யஜ்ேஞஸ்வேரா விஷ்ணுர்।
௮௧।௰௨௧
ஆவாப்யாம் யத் து ேதாஷித:। ஸ்வர்கப்ராப்திர் இயம் தஸ்ய।
௮௧।௰௨௨
கர்மண: பலம் உத்தமம்। ஸுரூபதாம் மந:ப்ரீதி। ௮௧।௰௨௨
பஸ்யதாம் சாருேவஷதாம்। யத் ப்ருச்சஸி மஹாபாேக। ௮௧।௰௨௩
தத் அப்ய் ஏஷா வதாமி ேத। தீர்ேதாதைகஸ் ததா ஸ்நாைந:। ௮௧।௰௨௩
ஸ்நாபிேதா அயம் ஜநார்தந:। ேதந காந்திர் அதீத்ையதாந்। ௮௧।௰௨௪
ேதவாம்ஸ் த்ரிபுவேநஸ்வராந்। மந:ப்ரஸாத: ெஸௗம்யத்வம்। ௮௧।௰௨௪
ஸாரீரா யா ச நிர்வ்ருதி:। யத் ப்ரியத்வம் ச ஸர்வஸ்ய। ௮௧।௰௨௫
தத் க்ருதஸ்நாநஜம் பலம்। யாந்ய் அபஷ்டாநி ீ வாஸாம்ஸி। ௮௧।௰௨௫
யச் சாபஷ்டம் ீ விபூஷணம்। ரத்நாநி யாந்ய் அபஷ்டாநி ீ । ௮௧।௰௨௬
யத் ப்ரியம் சாநுேலபநம்। ேய தூபா யாநி மால்யாநி। ௮௧।௰௨௬
தயிதாந்ய் அபவம்ஸ் ததா। மம பர்துஸ் தைதவாஸ்ய। ௮௧।௰௨௭

மம ராஜ்யம் ப்ரஸாஸத:। தாநி ஸர்வாணி ஸர்வஜ்ேஞ। ௮௧।௰௨௭
ஸர்வகர்தரி ேகஸேவ। தத்தாநி தத்ஸமுத்ேதா அயம்। ௮௧।௰௨௮
கந்தபூஷாத்மேகா குண:। ஆஹாரா தயிதா ேய ச। ௮௧।௰௨௮
பவித்ராஸ் ச நிேவதிதா:। ேத ேலாககர்த்ேர Šருணாய। ௮௧।௰௨௯
த்ருப்திஸ் தத்குணஸம்பவா। ஸ்வர்ககாேமந ேம பர்த்ரா। ௮௧।௰௨௯
மயா ச ஸுபதர்ஸேந। க்ருதம் ஏதத் அேதா நாபூத்। ௮௧।௰௩
ஆவேயார் பவஸம்க்ஷய:। ேய த்வ் அகாமாம் நரா: ஸம்யக்। ௮௧।௰௩
ஏதத் குர்வந்தி ேஸாபேந। ேதஷாம் ததாதி விஸ்ேவேஸா। ௮௧।௰௩௧
பகவாந் முக்திம் அச்யுத:। ஏவம் அப்யர்ச்ய ேகாவிந்தம்। ௮௧।௰௩௧
ஸர்வபூேதஸ்வேரஸ்வரம்। ப்ராப்ேநாத்ய் அபிமதாந் காமாந்। ௮௧।௰௩௨
ைதத்யாஹ ஸுமநா யதா। சந்தநாகருகர்பூர । ௮௧।௰௩௨
குங்குேமாஸரபத்மைக ீ :। அநுலிப்ேதா ஹரிர் பக்த்யா। ௮௧।௰௩௩
வராந் ேபாகாந் ப்ரயச்சதி। காேலயகம் துங்ககம் ச। ௮௧।௰௩௩
பத்மசந்தநம் ஏவ ச। ந்ருணாம் பவந்தி ேராகாய। ௮௧।௰௩௪
தத்தாநி புருேஷாத்தேம। தஸ்மாத் ஏபிர் ந ேகாவிந்த:। ௮௧।௰௩௪
பூஜநீேயா மஹாஸுர। யாந்ய் ஆத்மந: ஸேதஷ்டாநி। ௮௧।௰௩௫
தாநி ஸஸ்தாந்ய் உபாகுரு। தைதவ ஸுபகந்தா ேய। ௮௧।௰௩௫
தூபாஸ் ேத ஜகத: பேத:। வாஸுேதவஸ்ய தர்மஜ்ைஞர்। ௮௧।௰௩௬
நிேவத்யா தாநேவஸ்வர। ந ஸல்லகீஜம் நாெக்ஷௗலம்। ௮௧।௰௩௬
ந ஸுக்தாஸவஸம்ப்ருதம்। தத்யாத் க்ருஷ்ணாய தர்மஜ்ேஞா।
௮௧।௰௩௭
தூபாந் ஆராதேநாத்யத:। மாலதீமல்லிகா ைசவ। ௮௧।௰௩௭
யூதிகாதாதிமுக்தகா। பாடலா கரவரஸ்ீ ச। ௮௧।௰௩௮

ஜவா பாரந்திர் ஏவ ச। குப்ஜகஸ் தகரஸ் ைசவ। ௮௧।௰௩௮
கர்ணிகார: குரண்டக:। சம்பேகா ேராதக: குந்ேதா। ௮௧।௰௩௯
பாேணா வர்வரமாலிகா:। அேஸாகதிலகா ேராத்ராஸ்। ௮௧।௰௩௯
ததா ைசவாடரூஷக:। அமீபுஷ்பப்ரகாராஸ் து। ௮௧।௰௪
ஸஸ்தா: ேகஸவபூஜேந। பில்வபத்ரம் ஸமீபத்ரம்। ௮௧।௰௪
பத்ரம் ப்ருங்காரகஸ்ய ச। தமாலபத்ரம் ச பேல। ௮௧।௰௪௧
ஸைதவ பகவத்ப்ரியம்। துலஸகாலதுலஸ ீ ீ । ௮௧।௰௪௧
பத்ரம் ப்ருங்கரஜஸ்ய ச। ேகதகீபத்ரபுஷ்பம் ச। ௮௧।௰௪௨
ஸத்யஸ் துஷ்டிகரம் ஹேர:। பத்மாந்ய் அம்புஸமுத்தாநாம்। ௮௧।௰௪௨
ரக்தநீேல தேதாத்பேல। ஸிேதாத்பலம் ச க்ருஷ்ணஸ்ய। ௮௧।௰௪௩
தயிதாநி ஸதாஸுர। நார்கம் ேநாந்மத்தகம் காம்சித்। ௮௧।௰௪௩
தைதவ கிரிகர்ணிகாம்। ந கண்டகாரிகாபுஷ்பம்। ௮௧।௰௪௪
அச்யுதாய நிேவதேயத்। ெகௗடஜம் ஸால்மலீபுஷ்பம்। ௮௧।௰௪௪
ைஸரீஷம் ச ஜநார்தேந। நிேவதிேத பயம் ேராகம்। ௮௧।௰௪௫
நி:ஸ்வதாம் ச ப்ரயச்சதி। ேயஷாம் ந ப்ரதிேஷேதா அஸ்தி। ௮௧।௰௪௫
கந்தவர்ணாந்விதாநி ச। தாநி புஷ்பாணி ேதயாநி। ௮௧।௰௪௬
விஷ்ணேவ ப்ரபவிஷ்ணேவ। ஸுகந்ைதஸ் ச ஸுராமாம்ஸீ ।
௮௧।௰௪௬
கர்பூராகருசந்தைந:। ததாந்ையஸ் ச ஸுைபர் த்ரவ்ையர்। ௮௧।௰௪௭
அர்சேயஜ் ஜகத: பதிம்। துகூலபடுெகௗேஸய । ௮௧।௰௪௭
வார்க்ஷகர்பாஸிகாதிபி:। வாேஸாபி: பூஜேயத் விஷ்ணும்। ௮௧।௰௪௮

ைதேதேயந்த்ராத்மந: ப்ரிைய:। பŠயாணி யாந்ய் அபஷ்டாநி ீ ।
௮௧।௰௪௮
ேபாஜ்யாந்ய் அபிமதாநி ச। பலம் ச வல்லபம் யத் ஸ்யாத்। ௮௧।௰௪௯
தத் தத் ேதயம் ஜநார்தேந। ஸுவர்ணமணிமுக்தாதி। ௮௧।௰௪௯
யச் சாந்யத் அதிவல்லபம்। தத் தத் ேதவாதிேதவாய। ௮௧।௰௫
ேகஸவாய நிேவதேயத்। ஆத்மாநம் ேகஸவம் மத்வா। ௮௧।௰௫
யத் யத் தஸ்ையவ ேராசேத। தத் தத் அவ்யக்தரூபாய। ௮௧।௰௫௧
ேகஸவாய நிேவதேயத்। சக்ரவர்தீமஹாவர்ேயா ீ । ௮௧।௰௫௧
மாந்தாதா யுவநாஸ்வஜ:। ஸஸாஸ ஸ மஹாபாஹு:। ௮௨।௰௰௧
ஸப்தத்வபாம்ீ வஸும்தராம்। அகாயந்த ச யா காதா। ௮௨।௰௰௧
ேய புராணவிேதா ஜநா:। மாந்தாதரி மஹாபாேஹா। ௮௨।௰௰௨
ெயௗவநாஸ்ேவ ஸமாஸ்ரிதா:। யாவத் ஸூர்ய உேததி ஸ்ம।
௮௨।௰௰௨
யாவச் ச ப்ரதிதிஷ்டதி। ஸர்வம் தத் ெயௗவநாஸ்வஸ்ய। ௮௨।௰௰௩
மாந்தாது: ேக்ஷத்ரம் உச்யேத। ஸ ெயௗவநகத: ஸம்ராட்। ௮௨।௰௰௩
ஸப்தத்வபவத ீ ீம் மஹீம்। ஸஸாஸ தர்ேமண புரா। ௮௨।௰௰௪
சக்ரவர்தீமஹாபல:। நாந்யாயக்ருந் ந சாஸக்ேதா। ௮௨।௰௰௪
ந தரித்ேரா ந கீகட:। தஸ்யாபூத் புருேஷா ராஜ்ேய। ௮௨।௰௰௫
ஸம்யக்தர்மாநுஸாஸிந:। சதஸ்ேரா கதயஸ் தஸ்ய। ௮௨।௰௰௫
ெயௗவநாஸ்வஸ்ய தீமத:। பபூவுர் அப்ரதிஹதா। ௮௨।௰௰௬
ஹதாராதிபலஸ்ய ைவ। தஸ்ய பக்திர் அதீவாபூந்। ௮௨।௰௰௬
நிஸர்காத் ஏவ பூபேத:। வாஸுேதேவ ஜகத்தாம்நி। ௮௨।௰௰௭
ஸர்வகாரணகாரேண। தஸ்ய ர்த்திம் மஹிமாநம் ச। ௮௨।௰௰௭

விேலாக்ய ப்ருதிவபேத ீ :। ந ேகவலம் ஜநஸ்யாபூத்। ௮௨।௰௰௮
தஸ்யாப்ய் அத்யந்தவிஸ்மய:। ஸ சிந்தயாம் ஆஸ ந்ருப:। ௮௨।௰௰௮
ஸம்ருத்த்யா விஸ்மிதஸ் தயா। கதம் ஸ்யாத் ஸம்பத் ஏஷா ேம।
௮௨।௰௰௯
புநர் அப்ய் அந்யஜந்மநி। ஏவம் ஸுபஹுேஸா ராஜா। ௮௨।௰௰௯
ைதத்ேயந்த்ர ஸுமஹாபல:। சிந்தயந்ந் அபி தந்மூலம்। ௮௨।௰௧
ந சாஸந்ீ நிஸ்சயாந்வித:। யதா ந நிஸ்சயம் ராஜா। ௮௨।௰௧
ஸ யெயௗ யுவநாஸ்வஜ:। ததா பப்ரச்ச தர்மஜ்ஞாந்। ௮௨।௰௧௧
ஸ விப்ராந் ஸமுபாகதாந்। வஸிஷ்டப்ரமுகாந் வத்ஸ। ௮௨।௰௧௧
விவிக்தாந்த:புரஸ்தித:। ப்ரணிபத்ய மஹாபாஹுர்। ௮௨।௰௧௨
க்ருஹீதாஸநஸத்க்ரியாந்। யதி ஸாநுக்ரஹா புத்திர்। ௮௨।௰௧௨
பவதாம் மயி ஸத்தமா:। தத் அஹம் ப்ரஷ்டும் இச்சாமி। ௮௨।௰௧௩
கிம்சித் தத் வக்தும் அர்ஹத। ஸேமத்யாகிலவிஜ்ஞாநம்। ௮௨।௰௧௩
ஸம்யக்ெதௗதாந்தராத்மபி:। பவத்பிர் யத்ய் அஹம் ந ஸ்யாம்।
௮௨।௰௧௪
விமலஸ் தந் மஹாத்புதம்। யத் யதா தந் மயா ப்ருஷ்டா। ௮௨।௰௧௪
பவந்ேதா மத்ப்ரஸாதிதா:। வக்தும் அர்ஹந்தி வித்வாம்ஸ:। ௮௨।௰௧௫
ஸர்வஸ்ையேவாபகாரிண:। யஸ் ேத மநஸி ஸம்ேதஹஸ்। ௮௨।௰௧௫
தம் ப்ருச்சாத்ய மஹீபேத। கதிஷ்யாேமா யதாந்யாயம்। ௮௨।௰௧௬
யத் ேத ஸாம்ஸயிகம் ஹ்ருதி। வயம் ஹி நரஸார்தூல। ௮௨।௰௧௬
பவதா பரிேதாஷிதா:। ஸம்யக் ப்ரஜா: பாலயதா। ௮௨।௰௧௭
ஸப்தத்வேபீ மஹீதேல। ஸுதுஷ்ேடா ப்ராஹ்மேணா அஸ்நீயாச்।
௮௨।௰௧௭

ிந்த்யாத் வா தர்மஸம்ஸயம்। ஹிதம் ேவாபதிேஸத் தர்மம்।
௮௨।௰௧௮
அஹிதாத் வா நிவர்தேயத்। விவக்ஷும் அத பூபாலம்। ௮௨।௰௧௮
பார்யா தஸ்ையவ தீமத:। ப்ரணாமபூர்வம் ஆேஹதம்। ௮௨।௰௧௯
விநயாத் ப்ரணயாந்விதம்। ந ஸ்த்ரீணாம் அவநீபால। ௮௨।௰௧௯
வக்தும் ஈத்ருக் இேஹஸ்யேத। ததாபி பூபேத வŠேய। ௮௨।௰௨
ஸம்பத் ஈத்ருக் ஸுதுர்லபா। பூேயா அபி ஸம்ஸயம் ப்ரஷ்டும்।
௮௨।௰௨
அலம் ஈஸ பவாந் க்ருஷீந்। ந த்வ் அஹம் புருஷவ்யாக்ர। ௮௨।௰௨௧
ஸதாந்த:புரசாரிண।ீ ஸ ப்ரஸாதம் யதி பவாந்। ௮௨।௰௨௧
கேராதி மம பார்திவ। தந் மதீயம் க்ருஷீந் ப்ரஷ்டும்। ௮௨।௰௨௨
ஸம்ஸயம் பார்திவார்ஹஸி। ப்ரூஹி ஸுப்ரு மதம் யத் ேத।
௮௨।௰௨௨
ப்ரஷ்டவ்யா யந் மயா த்விஜா:। பூேயா அஹம் ஆத்மஸம்ேதஹம்।
௮௨।௰௨௩
ப்ரŠயாம்ய் ஏதாந் த்விேஜாத்தமாந்। ஸ்ரூயந்ேத ப்ருதிவபாலீ ।
௮௨।௰௨௩
ந்ருப ேய ச புராதநா:। ேதஷாம் ந ஸம்பத் பூபால। ௮௨।௰௨௪
யதா தவ கிலாபவத்। தத் ஈத்ருக்ஸம்பதாம் தாம। ௮௨।௰௨௪
த்வம் அேஸஷக்ஷிதீஸ்வர:। ேயந கர்மவிபாேகந। ௮௨।௰௨௫
தத் வதந்து மஹர்ஷய:। அஹம் ச பவேதா பார்யா। ௮௨।௰௨௫
ஸர்வஸமந்திந ீ ீபுவி। விதிநா ேகந தபஸா। ௮௨।௰௨௬
நியுக்தா பவேதா க்ருேஹ। அதீவ கர்மணா ேயந। ௮௨।௰௨௬

தத்விஜ்ஞாேந குதூஹலம்। தாரதம்யதேயஸித்வம்। ௮௨।௰௨௬
அந்ேயஷ்வ் அபி ஹி வித்யேத। நிரஸ்தாதிஸயத்ேவந। ௮௨।௰௨௭
நூநம் நால்ேபந கர்மணா। தத் அந்யஜந்மசரிதம்। ௮௨।௰௨௭
நரநாத நிஜம் பவாந்। முநீந் ப்ருச்சது யா சாஹம்। ௮௨।௰௨௮
யந் மயா ச புரா க்ருதம்। ஸ தேதாக்தஸ் தயா ராஜா। ௮௨।௰௨௮
பத்ந்யா விஸ்மிதமாநஸ:। முநீநாம் புரேதா பார்யாம்। ௮௨।௰௨௯
ப்ரஸம்ஸந் வாக்யம் அப்ரவத்ீ। ஸாது ேதவி மதம் யந் ேம। ௮௨।௰௨௯
த்வயா தத் இதம் ஈரிதம்। ஸத்யம் முநிவச: பும்ஸாம்। ௮௨।௰௩
அர்தம் ைவ க்ருஹிணீயதா। மமாப்ய் ஏதத் அபிப்ேரதம்। ௮௨।௰௩
இமாந் ப்ரஷ்டும் மஹாமுநீந்। யத் த்வயாபிஹிதம் பத்ேர। ௮௨।௰௩௧
மத்ஸ்வபாவாநுயாதயா। ேஸா அஹம் ஏதந் மஹாபாேக। ௮௨।௰௩௧
ப்ரŠயாம்ய் ஏதாந் மஹாமுநீந்। ைநஷாம் அவிதிதம் கிம்சித்।
௮௨।௰௩௨
த்ரிஷு ேலாேகஷு வித்யேத। ஏவம் உக்த்வா ப்ரியாம் பார்யாம்।
௮௨।௰௩௨
ப்ரணிபத்ய ச தாந் க்ருஷீந்। யதாவத் ஏதத் அகிலம்। ௮௨।௰௩௩
பப்ரச்சாஸுரஸத்தம। பகவந்ேதா மமாேஸஷம்। ௮௨।௰௩௩
ப்ரஸாதாஹ்ருதேசதஸ:। கதயந்து யதாவ்ருத்தம்। ௮௨।௰௩௪
யந் மயா ஸுக்ருதம் க்ருதம்। ேகா அஹம் ஆஸம் புரா விப்ரா:।
௮௨।௰௩௪
கிம் ச கர்ம மயா க்ருதம்। கிம் வாநயா ஸுசார்வங்க்யா। ௮௨।௰௩௫
மம பத்ந்யா க்ருதம் த்விஜா:। ேயநாவேயார் இயம் ஸ்பதிர் ீ । ௮௨।௰௩௫
மர்த்யேலாேக ஸுதுர்லபா। சத்வாரஸ் சாப்ரதிஹதா। ௮௨।௰௩௬

கதேயா மம கச்சத:। அேஸஷா பூப்ருேதா வஸ்யா:। ௮௨।௰௩௬
ேகாஸஸ்யாந்ேதா ந வித்யேத। பலம் ைசவாப்ரதிஹதம்। ௮௨।௰௩௭
ஸரீராேராக்யம் உத்தமம்। அதிபாதி ச ேம காந்த்யா। ௮௨।௰௩௭
பார்ேயயம் அகிலம் ஜகத்। மமாபி வபுஷஸ் ேதேஜா। ௮௨।௰௩௮
ந கஸ்சித் ஸஹேத த்விஜா:। ேஸா அஹம் இச்சாமி விஜ்ஞாதும்।
௮௨।௰௩௮
தைதேவயம் அநிந்திதா। நிஜாநுஷ்டாநம் அகிலம்। ௮௨।௰௩௯
யஸ்யாேஸஷம் இதம் பலம்। இதி ப்ரஷ்டா நேரந்த்ேரண। ௮௨।௰௩௯
ஸமஸ்தாஸ் ேத தேபாதநா:। வஸிஷ்டம் ேசாதயாம் ஆஸு:। ௮௨।௰௪
கத்யதாம் இதி பூப்ருத:। ேசாதித: ேஸா அபி தர்மஜ்ைஞர்। ௮௨।௰௪
ைமத்ராவருணிர் ஆத்மவாந்। ேயாகம் ஆஸ்தாய ஸுசிரம்। ௮௨।௰௪௧
யதாவத் யதமாநஸ:। ஜ்ஞாதவாந் ந்ருபேதஸ் தஸ்ய। ௮௨।௰௪௧
பூர்வேதஹவிேசஷ்டிதம்। ஸ தம் ஆஹ முநிர் பூபம்। ௮௨।௰௪௧
விதிதார்ேதா மஹாஸுர। மாந்தாதாரம் மஹாபுத்திம்। ௮௨।௰௪௨
ஸபத்நீகம் இதம் வச:। ஸ்ருணு பூபால ஸகலம்। ௮௨।௰௪௨
யஸ்ேயதம் கர்மண: பலம்। தவ ராஜ்யாதிகம் ஸுப்ரூர்। ௮௨।௰௪௩
ேயயம் சாஸந்ீ மஹீபேத। த்வம் ஆஸீ: ஸூத்ரஜாதீய:। ௮௨।௰௪௩
பரஹிம்ஸாபராயண:। வாக்க்ரூேரா தண்டபாருஷ்ேயா। ௮௨।௰௪௪
நி:ஸ்ேநஹ: ஸர்வஜந்துஷு। தேதயம் பவேதா பார்யா। ௮௨।௰௪௪
பூர்வம் அப்ய் ஆயேதக்ஷணா। த்ேவஷ்யா பபூவ தச்சித்தா। ௮௨।௰௪௫
தவ ஸுஸ்ரூஷேண ரதா। பதிவ்ரதா மஹாபாகா। ௮௨।௰௪௫
பர்த்ஸ்யமாநாப்ய் அநிஷ்டுரா। த்வத்வாக்யாத் அநு ஸர்ேவஷு।
௮௨।௰௪௬

வரகர்மஸு ீ ேசாத்யதா। ைநஷ்டுர்யாத் அஸஹாயஸ்ய। ௮௨।௰௪௬
த்யஜ்யமாநஸ்ய பந்துபி:। க்ஷயம் ஜகாம ேயா அர்ேதா அபூத்।
௮௨।௰௪௭
ஸம்சித: ப்ரபிதாமைஹ:। தஸ்மிந் க்ஷீேண க்ருஷிபரஸ்। ௮௨।௰௪௭
த்வம் ஆஸீ: ப்ருதிவபேத ீ । ஸாபி கர்மவிபாேகந। ௮௨।௰௪௮
க்ருஷிர் விபலதாம் கதா। தேதா நி:ஸ்வம் பரிக்ஷீணம்। ௮௨।௰௪௮
பேரஷாம் ப்ருத்யதாம் கதம்। தத்யாஜ ஸாத்வ ீேவயம் த்வாம்।
௮௨।௰௪௯
த்யஜ்யமாநாபி பார்திவ। அநயா ச ஸமம் ஸாத்வ்யா। ௮௨।௰௪௯
விஷ்ேணார் ஆவஸேத த்வயா। க்ருதம் ஸுஸ்ரூஷணம் வரீ। ௮௨।௰௫
பரிவ்ராட்ப்ரஹ்மசாரிணாம்। பக்ேநஹ: ஸர்வகாேமப்யஸ்। ௮௨।௰௫
தந்மயஸ் த்வம் ததர்பண:। அநந்யகதிர் ஏகஸ்தஸ்। ௮௨।௰௫௧
தஸ்மிந்ந் ஆயதேந ஹேர:। தத்வ்ருத்திலிப்ஸு: ஸுஸ்ரூஷாம்।
௮௨।௰௫௧
ஜநரஞ்ஜநேஹதுக:। க்ருதவாந் ேயாகிநாம் வரீ। ௮௨।௰௫௨
க்ருஷ்ணஸ்ய ஜகத: பேத:। வாஸுேதவாஜிேர நித்யம்। ௮௨।௰௫௨
க்ருதம் ஸம்மார்ஜநம் த்வயா। தைதவாப்யுக்ஷணம் வரீ। ௮௨।௰௫௩
நித்யம் ைசவாநுேலபநம்। பத்ந்யாநயா ச தர்மஜ்ஞ। ௮௨।௰௫௩
யஷ்மச்சித்தாநுவ்ருத்தயா। அஹந்ய் அஹநி தத் கர்ம। ௮௨।௰௫௩
யுவேயார் ந்ருப குர்வேதா:। தத்ர ைசதந்மயத்ேவந। ௮௨।௰௫௪
பாபஹாநிர் அஜாயத। விஷ்ேணா: கார்யம் மயா கார்யம்। ௮௨।௰௫௪
ேயாகிஸுஸ்ரூஷணம் ததா। ந ப்ரபாதம் ப்ரபாதம் து। ௮௨।௰௫௫
சிந்ேதயம் அபவந் நிஸி। ஏவம் ஆயதநம் ரம்யம்। ௮௨।௰௫௫

இத்ய் ஏவம் ச ஸுகாவஹம்। ஸ்ைதர்யம் ந ைசவம் ஏதத் ஸ்யாத்।
௮௨।௰௫௬
இத்ய் ஆஸத்ீ ேத மந: ஸதா। ேயாகிநாம் ஸுகதம் த்வ் ஏவம்।
௮௨।௰௫௬
கர்ைமவம் ைநவம் இத்ய் அபி। தவ சித்தம் அபூத் தத்ர। ௮௨।௰௫௭
ேயாகிகர்மண்ய் அஹர்நிஸம்। ஏவம் தந்மநஸஸ் தத்ர। ௮௨।௰௫௭
க்ருேதாத்ேயாகஸ்ய பார்திவ। ப்ருத்யாவஸாயிந: ஸம்யக்। ௮௨।௰௫௮
யேதாக்தாதிககாரிண:। ஸ்மரத: புண்டரீகாக்ஷம்। ௮௨।௰௫௮
கார்ேயணாதித்ருடாத்மந:। நி:ேஸஷம் உபஸாந்தம் தத்। ௮௨।௰௫௯
பாபம் ேயாகிநிேஷவணாத்। தேதா அதிகம் புரஸ் தஸ்மாத்। ௮௨।௰௫௯
ஆதராத் அநுேலபநம்। ஸம்மார்ஜநம் ச பஹுஸ:। ௮௨।௰௬
ஸபத்நிேகந ேத க்ருதம்। தத்ராகதஸ் ச ெஸௗவரீ:। ௮௨।௰௬
புருஜிந் நாம பூபதி:। மஹாைஸந்யபரீவார:। ௮௨।௰௬௧
ப்ரபூதகஜவாஹந:। ஸர்வஸம்பதுேபதம் தம்। ௮௨।௰௬௧
ஸர்வாபரணபூஷிதம்। வ்ருதம் பார்யாஸஹஸ்ேரண। ௮௨।௰௬௨
த்ருஷ்ட்வா ஸ்ரக்சந்தேநாஜ்ஜ்வலம்। ஸ்ப்ருஹா க்ருதா த்வயா தத்ர।
௮௨।௰௬௨
சாருெமௗலிநி பார்திேவ। ஸர்வகாமப்ரதம் கர்ம। ௮௨।௰௬௨
ேதவேதவஸ்ய குர்வதா। ேதைநதத் அகிலம் ராஜ்யம்। ௮௨।௰௬௩
அேஸஷத்வபவத் ீ தவ। ேதஜஸ் ைசவாதிகம் யத் ேத। ௮௨।௰௬௩
தைததச் ச்ருணு பார்திவ। ேயாகப்ரபாேவாபலப்தம்। ௮௨।௰௬௪
கதயாம்ய் அகிலம் தவ। தத்ைரவாவஸேத தீப:। ௮௨।௰௬௪
ப்ரஸாந்த: ஸ்ேநஹஸம்க்ஷயாத்। நிஜேபாஜநைதேலந। ௮௨।௰௬௫

புந: ப்ரஜ்வாலிதஸ் த்வயா। அநயா ேசாத்தரீயாந்த । ௮௨।௰௬௫
சீரவர்த்யுபவ்ரும்ஹித:। தவ பத்ந்யா ஸ ஜஜ்வால। ௮௨।௰௬௬
காந்திர் அஸ்யாஸ் தேதா அதிகா। தவாப்ய் அகிலபூபால । ௮௨।௰௬௬
மந:ேக்ஷாபகரம் தத:। ேதேஜா நேரந்த்ர ந ஸ்யாச் ச। ௮௨।௰௬௭
கிம் ஆராத்ய ஜநார்தநம்। ஏவம் நேரந்த்ர ஸூத்ரத்வாத்। ௮௨।௰௬௭
விஷ்ணுகர்மபராயண:। தந்மயத்ேவந ஸம்ப்ராப்ேதா। ௮௨।௰௬௮
மஹிமாநம் அநுத்தமம்। கிம் புநர் ேயா நேரா பக்த்யா। ௮௨।௰௬௮
விஷ்ணுஸுஸ்ரூஷணாத்ருத:। கேராதி ஸததம் பூஜாம்। ௮௨।௰௬௯
நிஷ்காேமா நாந்யமாநஸ:। ஸ த்வம் க்ருத்திம் இமாம் லப்த்வா।
௮௨।௰௬௯
ஸர்வேலாேகஸ்வேரஸ்வரம்। பூஜயாச்யுதம் ஈேஸஸம்। ௮௨।௰௭
தம் ஆராத்ய ந ஸததி ீ । புஷ்ைபர் தூைபஸ் ததா கந்ைதர்। ௮௨।௰௭
தீபவஸ்த்ராநுேலபைந:। ஆராதயாச்யுதம் தத்வத்। ௮௨।௰௭௧
ேவஸ்மஸம்மார்ஜநாதிபி:। யத் யத் இஷ்டதமம் கிம்சித்। ௮௨।௰௭௧
யத் யத் அத்யந்ததுர்லபம்। தத் தத் தாத்த்வா ஜகத்தாத்ேர। ௮௨।௰௭௨
ைவகுண்டாய ந ஸததி ீ । ஸுகந்தாகருகர்பூர । ௮௨।௰௭௨
சந்தநாேக்ஷாதகும்குைம:। வாேஸாபிர் விவிைதர் தூைப:। ௮௨।௰௭௩
புஷ்பஸ்ரக்சாமைரர் த்வைஜ:। அந்ேநாபஹாைரர் விவிைதர்। ௮௨।௰௭௩
க்ருதக்ஷராபிேஷசைந ீ :। கீதவாதிதந்ருத்யாத்ையஸ்। ௮௨।௰௭௪
ேதாஷயஸ்வாச்யுதம் ந்ருப। புண்யராத்ரிஷு ேகாவிந்தம்। ௮௨।௰௭௪
ந்ருத்யகீதரேவாஜ்ஜ்வைல:। பூப ஜாகரைணர் பக்த்யா। ௮௨।௰௭௫

ேதாஷயாச்யுதம் அவ்யயம்। ஏவம் ஸம்ேதாஷ்யேத பக்த்யா।
௮௨।௰௭௫
பகவாந் பவபங்கக்ருத்। பூப பாகவைதர் பூத । ௮௨।௰௭௬
பவ்யக்ருத் ேகஸேவா நைர:। ேயஷாம் ந வித்தம் ைதர் பக்த்யா।
௮௨।௰௭௬
மார்ஜநாத்யுபேலபைந:। ேதாஷிேதா பகவாந் விஷ்ணுர்। ௮௨।௰௭௭
ததாத்ய் அபிமதம் பலம்। ேதவகர்மாஸமர்தாணாம்। ௮௨।௰௭௭
ப்ராணிநாம் ஸ்ம்ருதிஸம்ஸ்தைவ:। ேதாஷிேதா அபிமதாந் காமாந்।
௮௨।௰௭௮
ப்ரயச்சதி ஜநார்தந:। ைநஷ வித்ைதர் ந ரத்ெநௗைக:। ௮௨।௰௭௮
புஷ்பதூபாநுேலபைந:। ஸத்பாேவைநவ ேகாவிந்தஸ்। ௮௨।௰௭௯
ேதாஷம் ஆயாதி ஸம்ஸ்ம்ருத:। த்வையகாக்ரமநஸ்ேகந। ௮௨।௰௭௯
க்ருஹஸம்மார்ஜநாதிகம்। க்ருத்வால்பம் ஈத்ருஸம் ப்ராப்தம்। ௮௨।௰௮
ராஜ்யம் அத்யந்ததுர்லபம்। ப்ராப்ேதாபகரேணா யஸ் த்வம்। ௮௨।௰௮
ஏகாக்ரமதிர் அச்யுதம்। ேதாஷயிஷ்யஸி ேநந்த்ேரா அபி। ௮௨।௰௮௧
பவிதா ேதந ேத ஸம:। தஸ்மாத் த்வம் அநயா ேதவ்யா। ௮௨।௰௮௧
ஸஹாத்யந்தவிநீதயா। ேகஸவாராதேந யத்நம்। ௮௨।௰௮௨
குரு தர்மப்ருதாம் வர। தத: ப்ராப்ஸ்யஸி பக்த்ையவ। ௮௨।௰௮௨
யத் தேபாபி: ஸுதுர்லபம்। ஏதந் முேநர் வஸிஷ்டஸ்ய। ௰௮௨।௧௩௭
நிஸாம்ய வசநம் ந்ருப:। பார்யாஸஹாய: ஸ ததா। ௮௩।௰௰௧
ஸம்ப்ரஹ்ருஷ்டதநூருஹ:। க்ருதகார்யம் இவாத்மாநம்। ௮௩।௰௰௧
மந்யமாேநா அஸுேராத்தம। உவாச ப்ரணேதா பூத்வா। ௮௩।௰௰௨
மாந்தாதா வாருணிம் வச:। யதாமரத்வம் ஸம்ப்ராப்ய। ௮௩।௰௰௨

யதா வா ப்ரஹ்ம ஸாஸ்வதம்। பரம் நிர்வாணம் ஆப்ேநாதி। ௮௩।௰௰௩
ததாஹம் வசஸா தவ। க்ருதக்ருத்ய: ஸுகீ சாஸ்மி। ௮௩।௰௰௩
நிர்வ்ருதிம் பரமாம் கத:। அஜ்ஞாநதமஸாசந்ேந। ௮௩।௰௰௪
யத் ப்ரதீபஸ் த்வையதித:। அஹம் ஏஷா ச தந்வங்கீ। ௮௩।௰௰௪
விபூதிப்ரம்ஸபருெகௗ ீ । ஆட்யாவ் ஆபாதிெதௗ ப்ரஹ்மந்ந்। ௮௩।௰௰௫
இஹாத்ய வசஸா தவ। ஸம்பதாம் கதிதம் பஜம்ீ । ௮௩।௰௰௫
ஆவேயார் பவதா முேந। ததுப்தாவ் உத்யதாவ் ஆவாம்। ௮௩।௰௰௬
விஜாநீஹி த்விேஜாத்தம। ந ரத்ைநர் ந ச வித்ெதௗைகர்। ௮௩।௰௰௬
ந ச புஷ்பாநுேலபைந:। ஆராத்யேத ஜகந்நாேதா। ௮௩।௰௰௭
பாவஸூந்ையர் ஜநார்தந:। பாஹ்யார்தநிரேபைக்ஷஸ் ச। ௮௩।௰௰௭
மநைஸவ மேநாகதி:। நி:ஸ்ைவர் ஆராத்யேத ேதேவா। ௮௩।௰௰௮
விஷ்ணு: ஸர்ேவஸ்வேரஸ்வர:। ஸர்வம் ஏதந் மயா ஜ்ஞாதம்।
௮௩।௰௰௮
யத் த்வம் ஆத்த மஹாமுேந। யத் த்வாம் ப்ருச்சாமி தந் ேம த்வம்।
௮௩।௰௰௯
ப்ரஸாதஸுமுேகா வத। காநி வ்ரதாநி ையர் ேதேவா। ௮௩।௰௰௯
நைர: ஸ்த்ரீபிஸ் ச ேகஸவ:। ேதாஷம் ஆராதிேதா அப்ேயதி। ௮௩।௰௧
ைகஸ் ச தாைநர் மஹாமுேந। ரஹஸ்யாநி ச ேதவஸ்ய। ௮௩।௰௧
ப்ரீதேய யாநி சக்ரிண:। தாந்ய் அேஸஷாணி ேம ப்ரூஹி। ௮௩।௰௧௧
க்ருஷ்ணாராதநகாங்க்ஷிண:। ஸ்ருணு பூபால ையர் விஷ்ணுர்।
௮௩।௰௧௧
நைரர் ஆராத்யேத வ்ரைத:। நாரீபிஸ் சாதிேகாேர அஸ்மிந்। ௮௩।௰௧௨
பதிதாபிர் பவார்ணேவ। ஸமப்யர்ச்ய ஜகந்நாதம்। ௮௩।௰௧௨

வாஸுேதவம் ஸமாதிநா। ஏகம் அஸ்நாதி ேயா பக்தம்। ௮௩।௰௧௩
த்விதீயம் ப்ராஹ்மணாத்மகம்। கேராதி ேகஸவப்ரீத்ைய। ௮௩।௰௧௩
கார்த்திகம் மாஸம் ஆத்மவாந்। பூர்ேவ வயஸி யத் ேதந। ௮௩।௰௧௩
ஜ்ஞாநேதா அஜ்ஞாநேதா அபி வா। பாபம் ஆசரிதம் தஸ்மாந்।
௮௩।௰௧௪
முச்யேத நாத்ர ஸம்ஸய:। அேநைநவ விதாேநந। ௮௩।௰௧௪
மார்கஸர்ேஷீ அபி மாதவம்। ஸமப்யர்ச்ையகபக்தம் ைவ। ௮௩।௰௧௫
வர்ணிப்ேயா ய: ப்ரயச்சதி। பகவத்ப்ரீணநார்தாய। ௮௩।௰௧௫
பலம் தஸ்ய ஸ்ருணுஷ்வ ேம। மத்ேய வயஸி யத் பாபம்। ௮௩।௰௧௫
ேயாஷிதா புருேஷண வா। க்ருதம் தஸ்மாச் ச ேதேநாக்ேதா।
௮௩।௰௧௬
விேமாக்ஷ: பரமாத்மநா। ததா ைசைவகபக்தம் ைவ। ௮௩।௰௧௬
வர்ணாக்ேரப்ய: ப்ரயச்சதி। புண்டரீகாக்ஷம் அப்யர்ச்ய। ௮௩।௰௧௭
ெபௗஷமாேஸ மஹீபேத। தத்ப்ரீணநாய யத் பாபம்। ௮௩।௰௧௭
வார்த்திேக ேதந ைவ க்ருதம்। ஸ தஸ்மாந் முச்யேத ராஜந்।
௮௩।௰௧௮
புமாந் ேயாஷித் அதாபி வா। த்ைரமாஸிகவ்ரதம் இதம்। ௮௩।௰௧௮
ய: கேராதி நேரஸ்வர। ஸ விஷ்ணுப்ரீணநாத் பாைபர்। ௮௩।௰௧௯
லகுபிர் விப்ரமுச்யேத। த்விதீேய வத்ஸேர ராஜந்। ௮௩।௰௧௯
முச்யேத ேசாபபாதைக:। தத்வத் த்ருதீேய அபி க்ருதம்। ௮௩।௰௨
மஹாபாதகநாஸநம்। வ்ரதம் ஏதந் நைர: ஸ்த்ரீபிஸ்। ௮௩।௰௨
த்ரிபிர் மாைஸர் அநுஷ்டிதம்। த்ரிபி: ஸம்வத்ஸைரர் ஏவ। ௮௩।௰௨௧

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸுவ்ன பகவான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ விஷ்ணு தர்மம் –இரண்டாம் பாகம் —

June 3, 2023

பரிஷ்வஜ்ய மஹாபாஹும்। ஸமாஸ்வாஸ்ய ச பால்குநம்। ௩௬।௰௰௧
ப்ர்வாச பகவாந் ேதவ:। ப்ரஹ்ருஷ்ேடநாந்தராத்மநா। ௰௩௬।௩௭
யஸ் த்வாம் ேவத்தி ஸ மாம் ேவத்தி। யஸ் த்வாம் அநு ஸ மாம் அநு।
௩௬।௰௰௨
அேபேதநாத்மநா ேவத்மீ। த்வாம் அஹம் பாண்டுநந்தந। ௩௬।௰௰௨
மமாம்ஸத்வம் மஹாபாேஹா। ஜகத: பாலேநச்சயா। ௩௬।௰௰௩
புேவா பாராவதாரார்தம்। ப்ருதக் பார்த மயா க்ருதம்। ௩௬।௰௰௩

ேதவைதத்ேயாரகா யக்ஷா। கந்தர்வா: கிம்நராப்ஸரா:। ௩௬।௰௰௪
ராக்ஷஸாஸ் ச பிஸாசாஸ் ச। பஸுபக்ஷிஸரீஸ்ருபா:। ௩௬।௰௰௪
வ்ருக்ஷகுல்மாதய: ைஸலா:। ஸர்வபூதாநி சார்ஜுந। ௩௬।௰௰௫
மைமவாம்ஸாநி பூதாநி। வித்தி ஸர்வாண்ய் அரிம்தம। ௩௬।௰௰௫
பகவந் ஸர்வபூதாத்மந்। ஸர்வபூேதஷு ைவ பவாந்। ௩௬।௰௰௬
பரமாத்மஸ்வரூேபண। ஸ்திதம் ேவத்மி தத் அவ்யயம்। ௩௬।௰௰௬
ேக்ஷத்ேரஷு ேயஷு ேயஷு த்வம்। சிந்தநீேயா மயாச்யுத। ௩௬।௰௰௭
ேசதஸ: ப்ரணிதாநார்தம்। தந் மமாக்யாதும் அர்ஹஸி। ௩௬।௰௰௭
யத்ர யத்ர ச யந் நாம। ப்ரீதேய பவத: ஸ்துெதௗ। ௩௬।௰௰௮
ப்ரஸாதஸுமுேகா நாத। தந் மமாேஸஷேதா வத। ௩௬।௰௰௮
ஸர்வக: ஸர்வபூேதா அஹம்। ந ஹி கிம்சித் மயா விநா। ௩௬।௰௰௯
சராசேர ஜகத்ய் அஸ்மிந்। வித்யேத குருஸத்தம। ௩௬।௰௰௯
ததாபி ேயஷு ஸ்தாேநஷு। சிந்தநீேயா அஹம் அர்ஜுந। ௩௬।௰௧
ஸ்ேதாதவ்ேயா நாமபிர் ையஸ் து। ஸ்ரூயதாம் தத் வதாமி ேத।
௩௬।௰௧
புஷ்கேர புண்டரீகாக்ஷம்। கயாயாம் ச கதாதரம்। ௩௬।௰௧௧
ேலாஹதண்ேட ததா விஷ்ணும்। ஸ்துவம்ஸ் தரதி துஷ்க்ருதம்।
௩௬।௰௧௧
Šவாமாச்ேய குமாரம்। ேநபாேல ேலாகபாவநம்। ௰௩௬।௩௮
ராகவம் சித்ரகூேட து। ப்ரபாேஸ ைதத்யஸூதநம்। ௩௬।௰௧௨
வ்ருந்தாவேந ச ேகாவிந்தம்। மா ஸ்துவந் புண்யபாக் பேவத்।
௩௬।௰௧௨
மந்ேதாதபாேந ைவகுண்டம்। மாஹந்த்ேர சாச்யுதம் விபும்। ௰௩௬।௩௯

ஜயம் ஜயந்த்யாம் தத்வச் ச। ஜயந்தம் ஹஸ்திநாபுேர। ௩௬।௰௧௩
வாராஹம் கர்தமாேல து। காஸ்மீேர சக்ரபாணிநம்। ௩௬।௰௧௩
ஜநார்தநம் ச குப்ஜாம்ேர। மதுராயாம் ச ேகஸவம்। ௩௬।௰௧௪
குப்ஜேக ஸ்ரீதரம் தத்வத்। கங்காத்வாேர ஸுேராத்தமம்। ௩௬।௰௧௪
ஸாலக்ராேம மஹாேயாகிம்। ஹரிம் ேகாவர்தநாசேல। ௩௬।௰௧௫
பிண்டாரேக சதுர்பாஹும்। ஸங்ேகாத்தாேர ச ஸங்கிநம்। ௩௬।௰௧௫
வாமநம் ச குருேக்ஷத்ேர। யமுநாயாம் த்ரிவிக்ரமம்। ௩௬।௰௧௬
வநமாலம் ச கிஷ்கிந்தாயாம்। ேதவம் ைரவதேக த்விஜ। ௰௩௬।௪௰
காஸஜேல ீ மஹாேயாகம்। ேதவம் சாமிதேதஜஸம்। ௰௩௬।௪௰
ைவஸாகயூேப அஜிதம்। விரஜாயாம் விப்ரக்ஷயம்। ௰௩௬।௪௰
விஸ்ேவஸ்வரம் ததா ேஸாேண। கபிலம் பூர்வஸாகேர। ௩௬।௰௧௬
ஸ்ேவதத்வபபதிம் ீ சாபி। கங்காஸாகரஸம்கேம। ௩௬।௰௧௭
பூதரம் ேதவிகாநத்யாம்। ப்ரயாேக ைசவ மாதவம்। ௩௬।௰௧௭
நரநாராயணாக்யம் ச। ததா பதரிகாஸ்ரேம। ௩௬।௰௧௮
ஸமுத்ேர தக்ஷிேண ஸ்தவ்யம்। பத்மநாேபதி பால்குந। ௩௬।௰௧௮
த்வாரகாயாம் ததா க்ருஷ்ணம்। ஸ்துவம்ஸ் தரதி துர்கதிம்। ௩௬।௰௧௯
ராமம் நாம மேஹந்த்ராத்ெரௗ। ஹ்ருஷீேகஸம் ததார்புேத। ௩௬।௰௧௯
அஸ்வதீர்ேத ஹயக்ரீவம்। விஸ்வரூபம் ஹிமாசேல। ௩௬।௰௨
ந்ருஸிம்ஹம் க்ருதெஸௗேச ச। விபாஸாயாம் த்விஜப்ரியம்। ௩௬।௰௨
ைநமிேஷ யஜ்ஞபுருஷம்। ஜம்பூமார்ேக ததாச்யுதம்। ௩௬।௰௨௧
அநந்தம் ைஸந்தவாரண்ேய। தண்டேக ஸாங்கதாரிணம்। ௩௬।௰௨௧
உத்பலாவர்தேக ெஸௗரிம்। நர்மதாயாம் ஸ்ரிய: பதிம்। ௩௬।௰௨௨

தாேமாதரம் ைரவதேக। நந்தாயாம் ஜலஸாயிநம்। ௩௬।௰௨௨
ஸர்வேயாேகஸ்வரம் ைசவ। ஸிந்துஸாகரஸம்கேம। ௩௬।௰௨௩
ஸஹ்யாத்ெரௗ ேதவேதேவஸம்। ைவகுண்டம் மாகேத வேந।
௩௬।௰௨௩
ஸர்வபாபஹரம் விந்த்ேய। உட்ேரஷு புருேஷாத்தமம்। ௩௬।௰௨௪
ஹ்ருதேய சாபி ெகௗந்ேதய। பரமாத்மாநம் ஆத்மந:। ௩௬।௰௨௪
வேட வேட ைவஸ்ரவணம்। சத்வேர சத்வேர ஸிவம்। ௩௬।௰௨௫
பர்வேத பர்வேத ராமம்। ஸர்வத்ர மதுஸூதநம்। ௩௬।௰௨௫
நரம் பூெமௗ ததா வ்ேயாம்நி। ெகௗந்ேதய கருடத்வஜம்। ௩௬।௰௨௬
வாஸுேதவம் ச ஸர்வத்ர। ஸம்ஸ்மரஞ் ஜ்ேயாதிஷாம் பதிம்।
௩௬।௰௨௬
அர்சயந் ப்ரணமம்ஸ் து த்வம்। ஸம்ஸ்மரம்ஸ் ச தநம்ஜய। ௩௬।௰௨௭
ஏேதஷ்வ் ஏதாநி நாமாநி। நர: பாைப: ப்ரமுச்யேத। ௩௬।௰௨௭
ஸ்தாேநஷ்வ் ஏேதஷு மந்நாம்நாம்। ஏேதஷாம் ப்ரீணநம் நர:।
௩௬।௰௨௮
த்விஜாநாம் ப்ரீணநம் க்ருத்வா। ஸ்வர்கேலாேக அபிஜாயேத।
௩௬।௰௨௮
நாமாந்ய் ஏதாநி ெகௗந்ேதய। ஸ்தாநாந்ய் ஏதாநி சாத்மவாந்।
௩௬।௰௨௯
ஜயம் ைவ பஞ்சபஞ்சாஸத்। த்ரிஸந்த்யம் மத்பராயண:। ௩௬।௰௨௯
த்ரீணி ஜந்மாநி யத் பாபம்। அவஸ்தாத்ரிதேய க்ருதம்। ௩௬।௰௩
தத் க்ஷாலயத்ய் அஸம்திக்தம்। ஜாயேத ச ஸதாம் குேல। ௩௬।௰௩
த்விஷ்காலம் வா ஜபந்ந் ஏவ। திவாராத்ெரௗ ச யத் க்ருதம்। ௩௬।௰௩௧

தஸ்மாத் விமுச்யேத பாபாத்। ஸத்பாவபரேமா நர:। ௩௬।௰௩௧
ஜப்தாந்ய் ஏதாநி ெகௗந்ேதய। ஸக்ருச்ச்ரத்தாஸமந்விதம்। ௩௬।௰௩௨
ேமாசயந்ேத நரம் பாபாத்। யத் தத்ைரவ திேந க்ருதம்। ௩௬।௰௩௨
தந்யம் யஸஸ்யம் ஆயுஷ்யம்। ஜயம் குரு குேலாத்வஹ। ௩௬।௰௩௩
க்ரஹாநுகூலதாம் ைசவ। கேராத்ய் ஆஸு ந ஸம்ஸய:। ௩௬।௰௩௩
உேபாஷிேதா மத்பரம:। ஸ்தாேநஷ்வ் ஏேதஷு மாநவ:। ௩௬।௰௩௪
க்ருதாயதநவாஸஸ் ச। ப்ராப்ேநாத்ய் அபிமதம் பலம்। ௩௬।௰௩௪
உத்க்ராந்திர் அப்ய் அேஸேஷஷு। ஸ்தாேநஷ்வ் ஏேதஷு ஸஸ்யேத।
௩௬।௰௩௫
அந்யஸ்தாநாச் சதகுணம்। ஏேதஷ்வ் அநஸநாதிகம்। ௩௬।௰௩௫
யஸ் து மத்பரம: காலம்। கேராத்ய் ஏேதஷு மாநவ:। ௩௬।௰௩௬
ேதவாநாம் அபி பூஜ்ேயா அெஸௗ। மம ேலாேக மஹீயேத। ௩௬।௰௩௬
யந் ந தாபாய ைவ பும்ஸாம்। பவத்ய் ஆமுஷ்மிகம் க்ருதம்। ௩௭।௰௰௧
தாபாய யச் ச பவதி। தத் ஆசŠவ மஹாமுேந। ௩௭।௰௰௧
உபவாஸப்ரபாவம் ச। க்ருஷ்ணாராதநகாங்க்ஷிண:। ௩௭।௰௰௨
கதேயஹ மம ப்ரஹ்மந்। ந ச த்ருப்யாமி கத்யேத। ௩௭।௰௰௨
ஸ்ரூயதாம் தால்ப்ய யத் ப்ருஷ்டா:। ெகௗதுகாத் பவதா வயம்।
௩௭।௰௰௩
ஆமுஷ்மிகம் ந தாபாய। யச் ச தாபாய ஜாயேத। ௩௭।௰௰௩
உேபாஷிதப்ரபாவம் ச। க்ருஷ்ணாராதநகாங்க்ஷிண:। ௩௭।௰௰௪
கதயாமி யதாவ்ருத்தம்। பூர்வம் ஏவ மஹாமேத। ௩௭।௰௰௪
ைவதிஸம் நாம நகரம்। ப்ரக்யாதம் இஹ ஸத்தம। ௩௭।௰௰௫
தத்ர ைவஸ்ேயா அபவத் பூர்வம்। வரபத்ர ீ இதி ஸ்ருத:। ௩௭।௰௰௫

பார்யாஜாமாத்ருதுஹித்ரு । புத்ரெபௗத்ரஸ்நுஷாந்வித:। ௩௭।௰௰௬
ப்ரபூதப்ருத்யவர்கஸ் ச। பஹுவ்யாபாரகாரக:। ௩௭।௰௰௬
புத்ரெபௗத்ராதிபரண । வ்யாஸக்தமதிர் ஏவ ச। ௩௭।௰௰௭
பரேலாகம் ப்ரதி மதிஸ்। தஸ்ய சாத்யந்ததுர்முகா। ௩௭।௰௰௭
சகாராநுதிநம் ேஸா அத। ந்யாயாந்யாையர் தநார்ஜநம்। ௩௭।௰௰௮
ஸர்வத்ராந்யத்ர நி:ஸ்ேநஹ:। பரஸ்ேவ சாதிதர்ஷுல:। ௩௭।௰௰௮
ந ஜுேஹாத்ய் உதிேத காேல। ந ததாத்ய் அதித்ருஷ்ணயா। ௩௭।௰௰௯
பபூவ ேசாத்யமஸ் தஸ்ய। புத்ராதிபரேண பர:। ௩௭।௰௰௯
நித்யைநமித்திகாநாம் ச। ஹாநிம் சக்ேர ஸ்வகர்மணாம்। ௩௭।௰௧
த்ருஷ்ணாபிபூேதா விப்ரர்ேஷ। ஸ்வவர்கபரணாத்ருத:। ௩௭।௰௧
காேலந கச்சதா ேஸா அத। ம்ருேதா விந்த்யாடவதேட ீ । ௩௭।௰௧௧
யாதநாேதஹப்ருத் ப்ேரேதா। க்ரீஷ்மகாேல அபவந் முேந। ௩௭।௰௧௧
தம் ததர்ஸ மஹாபாேகா। திவ்யஜ்ஞாநஸமந்வித:। ௩௭।௰௧௨
ேவதேவதாந்தவித் வித்வாந்। பிபேதா ீ நாம ைவ த்விஜ:। ௩௭।௰௧௨
பாஸ்கரஸ்யாம்ஸுபிர் தீப்ைதர்। தஹ்யந்தம் அநிவாரைண:। ௩௭।௰௧௩
ப்ரதப்தவாலுகாமத்ேய। த்ருஷா சாத்யந்தபடிதம் ீ । ௩௭।௰௧௩
க்ஷுத்க்ஷாமகண்டம் ஸுஷ்காஸ்யம்। ஸ்தப்ேதாத்வ்ருத்தவிேலாசநம்।
௩௭।௰௧௪
நிஷ்க்ராந்தஜிஹ்வம் அங்ேகஷு। விஸ்ேபாைட: ஸர்வதஸ் சிதம்।
௩௭।௰௧௪
நிஸ்வாஸாயாஸேகேதந। விரலாஸ்யம் அநாதரம்। ௩௭।௰௧௫
ஸ்ராந்தம் மக்ஷிகயாகீர்ணம்। துர்தக்தம் சாதிதாருணம்। ௰௩௭।௪௧
நிேஜந கர்மணா பத்தம்। அஸமர்தம் பலாயேந। ௩௭।௰௧௫

தம் தாத்ருஸம் அேதா த்ருஷ்ட்வா। கார்தேபேயா மஹாமுநி:।
௩௭।௰௧௬
பிபதீ : ப்ராஹ விப்ரர்ஷி:। காருண்யஸ்திமிதம் வச:। ௩௭।௰௧௬
ஜாநந்ந் அபி ததா ப்ராப்தம்। ததநுஷ்டாநஜம் பலம்। ௩௭।௰௧௭
ஜந்ேதாஸ் தஸ்ேயாபகாராய। ஸர்வேதா ஹ்லாதயந்ந் இவ। ௩௭।௰௧௭
அத: ஸூர்யாம்ஸுபிஸ் தப்ைதர்। பஹுபிர் யாநபாம்ஸுபி:। ௩௭।௰௧௮
உபர்ய் அர்ககைரர் உக்ைரஸ்। த்ருஷா சார்தஸ் ததா க்ஷுதா। ௩௭।௰௧௮
அந்ையஸ் ததாதிபிர் ேகாைரர்। அவிஷஹ்ையர் அவாரைண:।
௩௭।௰௧௯
கதேயஹ யதாதத்த்வம்। ஏகாகீ தஹ்யேஸ கதம்। ௩௭।௰௧௯
தஸ்ையதத் வசநம் ஸ்ருத்வா। பிபதஸ்ய ீ ஸேவதநம்। ௩௭।௰௨
யாதநாஸ்த உவாேசதம்। க்ருச்ச்ராத் உச்ச்வாஸ்ய மஸ்தகம்। ௩௭।௰௨
ப்ரஹ்மந் நாேலாசிதம் பூர்வம்। கதம் அந்ேத பவிஷ்யதி। ௩௭।௰௨௧
அஸாஸ்வேத ஸாஸ்வததீஸ்। ேதந தஹ்யாமி துர்மதி:। ௩௭।௰௨௧
தநாபணக்ருஹேக்ஷத்ர । புத்ரதாரஹிேத ரத:। ௩௭।௰௨௨
நாத்மேநா அஹம் ஹிதாரம்ப।ீ ேதந தஹ்யாமி துர்மதி:। ௩௭।௰௨௨
இதம் கரிஷ்ேய க்ருத்ேவதம்। கரிஷ்யாம்ய் அபரம் த்வ் இதம்।
௩௭।௰௨௩
இதீச்சாஸதஸேரா அஹம்। ேதந தஹ்யாமி துர்மதி:। ௩௭।௰௨௩
ஜுேஹாமி யதி தந் நாஸ்தி। ததாமி யதி ஸததி ீ । ௩௭।௰௨௪
குடும்பம் இதி மூேடா அஹம்। ேதந தஹ்யாமி துர்மதி:। ௩௭।௰௨௪
ஸேதாஷ்ணவர்ஷாபிபவம் ீ । ேலாபாத் ேஸாட்:அம் மயாஸுபம்।
௩௭।௰௨௫

தத் ஏவ ஹி ந தர்மார்தம்। ேதந தஹ்யாமி துர்மதி:। ௩௭।௰௨௫
பித்ருேதவமநுஷ்யாணாம்। அதத்த்வாேபாஷிதா ஹி ேய। ௩௭।௰௨௬
ேத அந்யத்ர க்வாபி வர்தந்ேத। தஹ்யாம்ய் ஏேகா அத்ர துர்மதி:।
௩௭।௰௨௬
புத்ரப்ருத்யகலத்ேரஷு। மம த்வ் ஆத்ருதமாநஸ:। ௩௭।௰௨௭
க்ருத்வா கர்மாண்ய் அஸாதூநி। தஹ்யாம்ய் ஏேகா அத்ர துர்மதி:।
௩௭।௰௨௭
ம்ருேத மயி தேந தஸ்மிந்ந்। அந்யாேயாபார்ஜிேத மயா। ௩௭।௰௨௮
நூநம் மேமதி வர்தந்ேத। தஹ்யாம்ய் ஏேகா அத்ர துர்மதி:। ௩௭।௰௨௮
ந ஹி ந: பூஜிதா ேகஹாந்। நிர்கதா த்விஜஸத்தமா:। ௩௭।௰௨௯
ஸ்வவர்கஹிதகாமஸ்ய। ேதந தஹ்யாம்ய் அஹர்நிஸம்। ௩௭।௰௨௯
யந் ேம ந பூஜிதா ேதவா:। குடும்பம் ேபாஷீதம் பரம்। ௩௭।௰௩
ஏகாகீேதந தஹ்யாமி। ேய புஷ்டாஸ் ேத அந்யேதா கதா:। ௩௭।௰௩
நித்யைநமித்திகம் கர்ம। க்ருேத ேயஷாம் ந ம க்ருதம்। ௩௭।௰௩௧
ஏகாகீேதந தஹ்யாமி। ைதர் மந்ேய க்வாபி ரம்யேத। ௩௭।௰௩௧
யந் ேம பரிஜநஸ்யார்ேத। க்ருதம் கர்ம ஸுபாஸுபம்। ௩௭।௰௩௨
ஏகாகீேதந தஹ்யாமி। கதாஸ் ேத பலேபாகிந:। ௩௭।௰௩௨
தாரா: புத்ராஸ் ச ப்ருத்யாஸ் ச। பாபவ்யாப்த்யா மையதிதா:। ௩௭।௰௩௩
ஏகாகீேதந தஹ்யாமி। கதாஸ் ேத பலேபாகிந:। ௩௭।௰௩௩
புத்ரதாராதிப்ருத்யார்ேத। மயாந்யாயார்தஸம்சயா:। ௩௭।௰௩௪
க்ருதாஸ் ேதநாத்ர தஹ்யாமி। புஞ்ஜேத அப்ய் அந்யேதா கதா:।
௩௭।௰௩௪
க்ருதம் பாபம் மயா புக்தம்। அந்ையஸ் தத்கர்மஸம்சிதம்। ௩௭।௰௩௫

தஹ்யாம்ய் ஏேகா அஹம் அத்யந்தம்। த்யக்தஸ் ைத: பலேபாகிபி:।
௩௭।௰௩௫
யந் மமத்வாபிபூேதந। மயா தநம் உபார்ஜிதம்। ௩௭।௰௩௬
அந்யஸ்ய ேத அத்ய கஸ்யாபி। ேகவலம் மம துஷ்க்ருதம்। ௩௭।௰௩௬
அந்தர்து:ேகந தக்ேதா அந்தர்। பஹிர் தஹ்யாமி பாநுநா। ௩௭।௰௩௭
நாந்தர்து:கம் ந வா பாநு:। பாபம் ஏவ த்விதா ஸ்திதம்। ௩௭।௰௩௭
கம்சித் கர்மஸமுத்தாரம்। பஸ்யஸ்ய் அஸுகஸாகராத்। ௩௭।௰௩௮
மம ேயநாஹம் ஆஹ்லாதம்। ஆப்நுயாம் முநிஸத்தம। ௩௭।௰௩௮
அல்பகாலிகம் உத்தாரம்। தவ பஸ்யாம்ய் அஸம்ஸயம்। ௩௭।௰௩௯
ப்ரக்ஷீணப்ராயம் ஏதத் ேத। ஸுக்ருதம் சாஸ்தி ேத பரம்। ௩௭।௰௩௯
அதீேத தஸேம ஜந்மந்ய்। அச்யுதாராதேநச்சயா। ௩௭।௰௪
ஸுகர்மஜயதாம் பத்ர। த்வாதஸம்ீ த்வம் உேபாஷித:। ௩௭।௰௪
தவ தஸ்யா: ப்ரபாேவண। பாபம் அத்யந்ததுர்ஜயம்। ௩௭।௰௪௧
அல்ைபர் அேஹாபி: ஸம்க்ஷணம் ீ । நவபாத்ேர யதா ஜலம்। ௩௭।௰௪௧
யத் அந்ய: க்ஷபேயத் வர்ைஷஸ்। தத் திைநர் பவத: க்ஷயம்। ௩௭।௰௪௨
கதம் பாபம் அயம் தஸ்யா:। ப்ரபாேவா அத்யந்ததுர்லப:। ௩௭।௰௪௨
ஸமம் பாபஸ்ய குருேத। ஜயம் ஸுக்ருதகர்மண:। ௩௭।௰௪௩
ஸத்கர்மஜயதா ஹ்ய் ஏஷா। தேதா ைவ த்வாதஸீ ஸ்ம்ருதா।
௩௭।௰௪௩
யச் ைசதத் ேவதநார்ேதந। பவதா பரிேதவிதம்। ௩௭।௰௪௪
தத் ததா நாத்ர ஸம்ேதேஹா। மமதா பாபேஹதுகீ। ௩௭।௰௪௪
பாபம் அத்ர க்ருதம் ப்ேரத்ய। பத்ர தாபாய ஜாயேத। ௩௭।௰௪௫

ஆஹ்லாதாய ததா புண்யம்। இஹ புண்யக்ருதாம் ந்ருணாம்।
௩௭।௰௪௫
வரபத்ரம் ீ ஸமாஸ்வாஸ்ய। யயாவ் இத்தம் மஹாமுநி:। ௩௭।௰௪௬
ேஸா அப்ய் அல்ேபைநவ காேலந। தேதா ேமாக்ஷம் அவாப்தவாந்।
௩௭।௰௪௬
ஏவம் தால்ப்ய பேர ேலாேக। யத் அத்ராஸுக்ருதம் க்ருதம்। ௩௭।௰௪௭
தத் தாபாய ஸுகாேயாக்தம்। யத் அத்ைரவ ஸுபம் க்ருதம்। ௩௭।௰௪௭
உபவாஸப்ரபாவஸ் ச। கதிதஸ் ேத மஹாமுேந। ௩௭।௰௪௮
ேயநால்ைபர் ஏவ திவைஸர்। பூரி பாபம் க்ஷயம் கதம்। ௩௭।௰௪௮
தஸ்மாந் நேரண புண்யாய। பதிதவ்யம் ந பாதேக। ௩௭।௰௪௯
உபவாஸாஸ் ச கர்தவ்யா:। ஸைதவாத்மஹிைதஷிணா। ௩௭।௰௪௯
ஸம்ஸாராஸாரதாம் ஜ்ஞாத்வா। விஷயாம்ஸ் சாதிதர்ஷுலாந்।
௩௮।௰௰௧
கர்தவ்யம் யந் மஹாபாக। புருேஷண தத் உச்யதாம்। ௩௮।௰௰௧
ஸம்ஸாராஸாரதாம் ஜ்ஞாத்வா। விஷயாம்ஸ் சாதிதர்ஷுலாந்।
௩௮।௰௰௨
க்ருத்திஸ் ேதஷ்வ் ஏவ ஸம்த்யாஜ்யா। தத்த்யாேகா குணவாந் ந்ருணாம்।
௩௮।௰௰௨
ேயஷாம் அப்தஸஹஸ்ராணாம்। ஸஹஸ்ைரர் அபி ேநா நர:।
௩௮।௰௰௩
ேபாகாத் த்ருப்திம் ஸமாப்ேநாதி। கஸ் ைதர் ேபாைகர் விரஜ்யேத।
௩௮।௰௰௩
யாவேதா வாஞ்சேத ேபாகாந்। அஹந்ய் அஹநி மாநவ:। ௩௮।௰௰௪

ேதஷாம் ஸஹஸ்ரபாேக அபி। தால்ப்ய ப்ராப்திம் ந விந்ததி।
௩௮।௰௰௪
அத ேசத் தந் அவாப்ேநாதி। ஸஹஸ்ரகுணிதாந் நர:। ௩௮।௰௰௫
ததாப்ய் அத்ருப்த ஏவாந்தம்। அந்தகாேல கமிஷ்யதி। ௩௮।௰௰௫
த்ருப்தேய ேய ந ஸம்ப்ராப்தா:। ப்ராப்யந்ேத ேய ந வாஞ்சிதா:।
௩௮।௰௰௬
புத்திமாந் இந்த்ரியார்ேதஷு। ேதஷ்வ் அஸங்கீஸதா பேவத்।
௩௮।௰௰௬
ேயஷாம் த்ருப்திர் ந ேபாேகந। த்யாகஸ் ைசேவாபகாரக:। ௩௮।௰௰௭
உேபாஷிதவிதாேநந। ேபாகாந்த்யாகஸ் தேதா வர:। ௩௮।௰௰௭
க்ருச்ச்ரசாந்த்ராயணாதீநி। நைரஸ் தஸ்மாந் முமுக்ஷுபி:। ௩௮।௰௰௮
நிஷ்காைமர் தால்ப்ய கார்யாணி। பலாய ச பேலப்ஸுபி:। ௩௮।௰௰௮
அத்ராப்ய் உதாஹரந்தீமம்। முநேயா முநிஸத்தம। ௩௮।௰௰௯
தஸ்ராப்யாம் ஸஹ ஸம்வாதம்। ஐலஸ்ய ச மஹாத்மந:। ௩௮।௰௰௯
ஐல: புரூரவா: பூர்வம்। பபூவ மநுேஜஸ்வர:। ௩௮।௰௧
சகேம யம் மஹாபாகம்। உர்வஸீ ஸுரஸுந்தரீ। ௩௮।௰௧
ஸம்த்யஜ்ய த்ரிதஸாவாஸம்। ரூெபௗதார்யகுணாந்விதம்। ௩௮।௰௧௧
ேபேஜ தம் உர்வஸீ தால்ப்ய। புதஸ்ய தநயம் ந்ருபம்। ௩௮।௰௧௧
நாஸத்யதஸ்ெரௗ ரூேபண। ேதவாநாம் அதிெகௗ தத:। ௩௮।௰௧௨
உர்வஸேலாபநம் ீ தஸ்ய। ரூபம் த்ரஷ்டும் ஸமுத்ஸுெகௗ। ௩௮।௰௧௨
ப்ரதிஷ்டாநம் புரம் தஸ்ய। புதபுத்ரஸ்ய தீமத:। ௩௮।௰௧௩
ஜக்மது: ஸுமஹாபாெகௗ। தஸ்ய த்வாஸ்தம் அேதாசது:। ௩௮।௰௧௩

க்ஷத்ேதா அஸ்மத்வசநாத் ஐலம்। ப்ரூஹி த்வம் வஸுதாதிபம்।
௩௮।௰௧௪
த்ரஷ்டும் தவாஸ்விெநௗ ப்ராப்ெதௗ। ரூபஸம்பத்குணம் ண்ர்ப।
௩௮।௰௧௪
தேதஹ்ய் அத்ர மஹாபாக। இஹாஸ்மாந் ஸம்ப்ரேவஸய। ௩௮।௰௧௪
ஆஸ்சர்யபூதம் ேலாேகஷு। உர்வஸேலாபநம் ீ வபு:। ௩௮।௰௧௫
தத் ெகௗதுகம் ந குருேத। கஸ்ய பார்திவபுங்கவ। ௩௮।௰௧௫
ஆவாம் ஸமாகெதௗ தஸ்மாத்। த்வாம் த்ரஷ்டும் மநுேஜாத்தம।
௰௩௮।௪௨
த்வாஸ்தஸ் தேததி தாவ் ஆஹ। ப்ரவிேவஸ ச ஸத்வரம்। ௩௮।௰௧௬
ஆசசேக்ஷ ச தத் ராஜ்ேஞ। நாஸத்யவசநம் த்விஜ। ௩௮।௰௧௬
தச் ச்ருத்வா வசநம் ராஜா। த்வாஸ்தம் ஆஹ முஹூர்தகம்। ௩௮।௰௧௭
விலம்ப்யதாம் மஹாபாெகௗ। ெதௗ ப்ரூஹி வசநாந் மம। ௩௮।௰௧௭
வ்யாயாமைதலஸம்ஸர்க । மலிேநா ந விபூஷித:। ௩௮।௰௧௮
ப்ரஸாதநம் ச க்ருத்வாஹம்। நிஷ்க்ரமாமி த்வராந்வித:। ௩௮।௰௧௮
நிஷ்க்ரம்ய ஸ தேதா த்வாஸ்ேதா। யேதாக்தம் பூப்ருதகிலம்।
௩௮।௰௧௯
ஸமாசஷ்ட தேதா தால்ப்ய। ெதௗ ச பூயஸ் தம் ஊசது:। ௩௮।௰௧௯
அப்ரஸாதிதம் ஏவாஸு। பவந்தம் வஸுதாதிப। ௩௮।௰௨
பஸ்யாவஸ் தவ பூேயா அபி। த்வாம் த்ரŠயாவ: ப்ரஸாதிதம்।
௩௮।௰௨
இத்ய் உக்ேதா நிர்கதஸ் தூர்ணம்। பவநாத் அவநீபதி:। ௩௮।௰௨௧
ைதலாப்யக்ததநுர் தால்ப்ய। வ்யாயாமபரிதாநத்ருக்। ௩௮।௰௨௧

ஸ ப்ரணாமம் தேயா: க்ருத்வா। கிம்சிந் நதஸிரா ந்ருப:। ௩௮।௰௨௨
ப்ேராவாச யந் மயா கார்யம்। பவேதாஸ் தத் இேஹாச்யதாம்।
௩௮।௰௨௨
ஸப்தத்வபவத ீ ீப்ருத்வ।ீ புத்ரதாரபலம் தநம்। ௩௮।௰௨௩
யச் சாந்யத் அபி தத் ஸர்வம்। யுவேயார் ேம நிேவதிதம்। ௩௮।௰௨௩
இத்ய் உதாஹ்ருதம் ஆகர்ண்ய। ந்ருபேதர் அஸ்விநாவ் அபி। ௩௮।௰௨௪
அங்ேகாபாங்காதிகம் ஸர்வம்। ஸநைகஸ் தாவ் அபஸ்யதாம்।
௩௮।௰௨௪
ஸிேராலலாடபாஹும் ஸ । நயநாதிவிேலாகநம்। ௩௮।௰௨௫
க்ருத்வா ச தம் மஹீபாலம்। ஊசதுஸ் தாவ் இதம் ஸுெரௗ।
௩௮।௰௨௫
ப்ரவிஸ்ய ஸ்நாஹி பூபால। யதார்ைதஸ் ச விபூஷைண:। ௩௮।௰௨௬
விபூஷிதம் து பூயஸ் த்வாம்। த்ரŠயாேவா அவாம் நேரஸ்வர।
௩௮।௰௨௬
தேததி ேசாக்த்வா ஸ ந்ருப:। ப்ரவிேவஸ மஹாமுேந। ௩௮।௰௨௭
சக்ேர ச ஸகலம் ஸம்யக்। ஸ்நாத்வா ேதஹப்ரஸாதநம்। ௩௮।௰௨௭
ஸ்நாேதா அநுலிப்த: ஸ்ரக்தாரீ। ஸுவஸ்த்ர: ஸுவிபூஷித:। ௩௮।௰௨௮
நாஸத்யதஸ்ரேயா: பார்ஸ்வம்। இயாய வஸுதாதிப:। ௩௮।௰௨௮
பூேயா அபி ெதௗ யதா பூர்வம்। அங்ேகாபாங்கவிேலாகநம்। ௩௮।௰௨௯
சக்ரதுர் ந்ருபேதஸ் தஸ்ய। ஸ்மிதபிந்ெநௗஷ்டஸம்புெடௗ। ௩௮।௰௨௯
ெதௗ ஸஹாெஸௗ ஸமாலŠய। ஸ ததா வஸுதாதிப:। ௩௮।௰௩
ஹாஸஸ்ய காரணம் ேதவ । பிஷெஜௗ தாவ் அப்ருச்சத। ௩௮।௰௩
ப்ருச்சந்தம் ந தேதா தால்ப்ய। ந்ருபதிம் ஹாஸ்யகாரணம்। ௩௮।௰௩௧

யத் ஊசதுர் மஹாபாெகௗ। தச் ச்ருணுஷ்வ வதாமி ேத। ௩௮।௰௩௧
ஸ்ருணு பூபால ஸகலம்। ஹாஸகாரணம் ஆவேயா:। ௩௮।௰௩௨
யுஷ்மத்தர்ஸநஸம்பூதம்। க்ஷணாபசயேஹதுகம்। ௩௮।௰௩௨
அஸ்நாதஸ்யாபவத் பூப। யாத்ருஸீ ேத ஸுரூபதா। ௩௮।௰௩௩
ஸாம்ப்ரதம் தாத்ருஸீ ேநயம்। பூஷிதஸ்யாபி பூஷைண:। ௩௮।௰௩௩
ஸ்நாத: ஸ்ரக்தாமதாரீ த்வம்। ஸ்வநுலிப்த: ஸுபூஷித:। ௩௮।௰௩௪
ததாப்ய் அஸ்நாத ஏவ ப்ராச்। ேஸாபேநா அபூந் ந ஸாம்ப்ரதம்।
௩௮।௰௩௪
கிம்து தத்காரணம் ேயந। வ்யாயாமமலிநாம்பர:। ௩௮।௰௩௫
ேஸாபேநா அஹம் அபூத் பூர்வம்। இதாநீம் ந விபூஷித:। ௩௮।௰௩௫
திவ்ேயந சக்ஷுஷா பூப। காலஸ்யாஸ்ய ச தஸ்ய ச। ௩௮।௰௩௬
வய:பரிணதிம் ஸூŠமாம்। பஸ்யாேவா அபசயப்ரதாம்। ௩௮।௰௩௬
யதா ஹி நாடிகா பூர்ணா। கலத்ய் அவிரதம் ந்ருப। ௩௮।௰௩௭
ந்ருணாம் பரிணதஸ் தத்வச்। ஸரீரக்ரஹணாத் அநு। ௩௮।௰௩௭
ஜந்மேதா அநந்தரம் பால்யம்। ெபௗகண்டத்வம் தத: பரம்। ௩௮।௰௩௮
ெயௗவநம் மத்யேதஹித்வம்। வார்த்தகம் ச ஜரா ந்ருணாம்। ௩௮।௰௩௮
ஸ்தூலத்ருஷ்ட்யா து பஸ்யந்தி। ந து ேத ஸூŠமதர்ஸிந:।
௩௮।௰௩௮
நிேமஷஸதபாகஸ்ய। ஸஹஸ்ராம்ஸ: க்ஷேணா ந்ருப। ௩௮।௰௩௯
தஸ்யாப்ய் அயுதபாகாம்ேஸா। பவத்ய் அபசேயா ந்ருணாம்। ௩௮।௰௩௯
ஸூŠமாதிஸூŠமாபசய।ீ பவத்ய் ஏஷ புமாந் ந்ருப। ௩௮।௰௪
பரிணாமம் க்ரமாத் யாதி। த்ருப்திம் வாரி பிபந்ந் இவ। ௩௮।௰௪
தத் அஹர் ஜாதபால்யஸ்ய। பாலஸ்யாபசேயா ஹி ஸ:। ௩௮।௰௪௧

ப்ரதிக்ஷணாம்ஸயா வ்ருத்திர்। பாலத்வம் ஹீயேத தயா। ௩௮।௰௪௧
ெபௗகண்ேட ெயௗவேந ைசவ। வார்த்தேக ச மஹாமேத। ௩௮।௰௪௨
ஹாநிக்ரம: ஸ ஏேவாக்ேதா। ேயா பால்ேய கதிதஸ் தவ। ௩௮।௰௪௨
காந்திர் யா ந்ருப பாலஸ்ய। ேபாகண்டஸ்ய ஹி ஸா குத:। ௩௮।௰௪௩
தத்காந்திெஸௗகுமார்யாத்ைய:। ஸூந்யம் ஏவ ஹி ெயௗவநம்।
௩௮।௰௪௩
காந்த்யாதிஸம்பேதா ஹாநி:। பரமா ந்ருப வார்த்தேக। ௩௮।௰௪௪
தத்ராப்ய் அநுக்ஷணம் ஹாநிர்। ஹாநிர் ஆ ம்ருத்யுேதா ந்ருப।
௩௮।௰௪௪
ஏவம் ப்ரதிக்ஷணாம்ஸாம்ேஸா। ந்ருணாம் அபசயப்ரத:। ௩௮।௰௪௫
குர்வத: கிமு காலஸ் ேத। மஹாஸ்நாநப்ரஸாதநம்। ௩௮।௰௪௫
அஸ்மத்த்ருஷ்ேடா பவாந் யாவத்। ப்ரவிஷ்ேடா நிஜமந்திரம்।
௩௮।௰௪௬
தாவத் தாநிம் அநுப்ராப்த:। கிமு யாமார்தஸம்ஸ்தித:। ௩௮।௰௪௬
யாத்ருேஸா அத்ய பவாம்ஸ் தாத்ருக்। த்வம் ந ரூபீ நேரஸ்வர।
௩௮।௰௪௭
பரஸ்வ: ஸஸ்தநம் ைநவ। சதுர்ேத அஹ்நி ச தந்மய:। ௩௮।௰௪௭
ஏவம் ஸமஸ்தபூதாநி। ஸ்தாவராணி சராணி ச। ௩௮।௰௪௮
ப்ரதிக்ஷணாம்ஸாபசயம்। ப்ராப்நுவந்தி மஹீதேல। ௩௮।௰௪௮
தஸ்மாந் ந ெகௗதுகம் கார்யம்। பவதா து நேரஸ்வர। ௩௮।௰௪௯
யத் ேத ரூபம் அபூத் பூர்வம்। அப்ரஸாதிதேஸாபநம்। ௩௮।௰௪௯
ராஜா புரூரவா பூய:। ஸ்ருத்வா வாக்யம் இதம் தேயா:। ௩௮।௰௫
சிந்தயித்வா வச: ப்ராஹ। ஸம்ேவேகாத்கம்பிமாநஸ:। ௩௮।௰௫

அேஹா பவத்ப்யாம் கதிதம்। அநவஸ்திதஸம்ஸ்திதம்। ௩௮।௰௫௧
ஸ்வரூபம் ஜகேதா ேதெவௗ। ேயந த்ரஸ்ேதா அஸ்மி ஸாம்ப்ரதம்।
௩௮।௰௫௧
அஜ்ஞாநதிமிராந்தாநாம்। மத்விதாநாம் பவத்விதா:। ௩௮।௰௫௨
ப்ரதீபபூதா: ஸம்ேதேஹா। வித்யேத நாத்ர கஸ்சந। ௩௮।௰௫௨
ஸதாபசயேதாேஷண। துஷ்டகாைய: ஸுேராத்தெமௗ। ௩௮।௰௫௩
யத் கார்யம் புருைஷஸ் தச் ச। கத்யதாம் ஹிதகாம்யயா। ௩௮।௰௫௩
அதிமூேடா அத்ருேவ காேய। ஸதாபசயதர்மிணி। ௩௮।௰௫௪
நரஸ் ததுபேபாக்யாநி। த்ருவாணி பரிமார்கதி। ௩௮।௰௫௪
ஆஸநம் ஸயநம் யாநம்। பரிதாநம் க்ருஹாதிகம்। ௩௮।௰௫௫
வாஞ்சத்ய் அேஹா அதிேமாேஹந। ஸுஸ்திரம் ஸ்வயம் அஸ்திர:।
௩௮।௰௫௫
மூேடா அத்ருவம் த்ருவமதி:। கிம் ஆத்மாநம் ந புத்யேத।
௰௩௮।௰௫௬௪௩
பால்யாத் ெபௗகண்டதாம் கத்வா। ய: புநர் ெயௗவநம் கத:। ௩௮।௰௫௬
புவ: ைஸலம் ஸமாரூட:। ஸமாரூடஸ் தேதா த்ருமம்। ௩௮।௰௫௭
ஆேராஹணம் ஸ கிம் அந்யத்। க்ருக்ஷபதீ : கரிஷ்யதி। ௩௮।௰௫௭
பால்யாத் ெபௗகண்டதாம் யாேதா। ெயௗவநாத் வ்ருத்ததாம் கத:।
௩௮।௰௫௮
வேயா அவஸ்தா தத: காந்யா। யத் ேபாகாய ஸ்திேரச்சக:। ௩௮।௰௫௮
தஸ்மாத் ஏதந் மநுஷ்ேயண। விசார்யாத்மஹிைதஷிணா। ௩௮।௰௫௯
ஸ்ேரயஸ்ய் ஆமுஷ்மிேக யத்ந:। கர்தவ்ேயா அஹர்நிஸம் ந்ருப।
௩௮।௰௫௯

ேபாேகஷ்வ் அஸக்தி: ஸததம்। தைதவாத்மாவேலாகநம்। ௩௮।௰௬
ஸ்ேரய: பரம் மநுஷ்யாணாம்। கபில: ப்ராஹ பார்திவ:। ௩௮।௰௬
ஸர்வத்ர ஸமதர்ஸித்வம்। நிர்மமத்வம் அஸங்கிதா। ௩௮।௰௬௧
ஸ்ேரய: பரம் மநுஷ்யாணாம்। ப்ராஹ பஞ்சஸிேகா முநி:। ௩௮।௰௬௧
ஆகர்பஜந்மபால்யாதி । வேயா அவஸ்தாதிேவதநம்। ௩௮।௰௬௨
ஸ்ேரய: பரம் மநுஷ்யாணாம்। அங்காரிஷ்ேடா அப்ரவந்ீ ந்ருப:।
௩௮।௰௬௨
அத்யாத்மிகாதிது:காநாம்। அத்யந்தாதிப்ரதிக்ரியா। ௩௮।௰௬௩
ஸ்ேரய: பரம் மநுஷ்யாணாம்। ஜநேகா ஹ்ய் ஆஹ ேமாக்ஷவித்।
௩௮।௰௬௩
அபிந்நேயார் ேபதகர:। ப்ரத்யேயா ய: பராத்மேநா:। ௩௮।௰௬௪
ஹிரண்யகர்பஸ் தச்சாந்திம்। ஸ்ேரய: பரமம் அப்ரவத்ீ। ௩௮।௰௬௪
கர்தவ்யம் இதி யத் கர்ம। க்ருக்யஜு:ஸாமஸம்ஜ்ஞிதம்। ௩௮।௰௬௫
க்ரியேத தத் பரம் ஸ்ேரேயா। ைஜகீஷவ்ேயா அப்ரவந்ீ முநி:।
௩௮।௰௬௫
ஹாநிம் ஸர்வவிதித்ஸாநாம்। ஆத்மந: ஸுகேஹதுகீம்। ௩௮।௰௬௬
ஸ்ேரய: பரம் மநுஷ்யாணாம்। ேதவேலா அப்ய் ஆஹ தத்த்வவித்।
௩௮।௰௬௬
யத் யத் த்யஜதி காமாநாம்। தத் ஸுகஸ்யாபிபூர்யேத। ௩௮।௰௬௭
ஏதத் ஏவ பரம் ஸ்ேரேயா। விஜ்ஞாநம் ஹிதகாமிநாம்। ௩௮।௰௬௭
காமாநுஸாரீ புருஷ:। காமாந் அநு விநஸ்யதி। ௩௮।௰௬௮
அஸ்ேரயஸம் பரம் ைசதத்। யத் பூபாலாதிகாமிதா। ௩௮।௰௬௮
ஏவம் விஜ்ஞாததத்த்வார்த:। ஸநேகா ேயாகிநாம் வர:। ௩௮।௰௬௯

நேரந்த்ர ப்ராஹ விப்ராணாம்। பரமார்தபரம்பரம்। ௩௮।௰௬௯
க்ரியாகலாபபலதம்। க்ருக்யஜு:ஸாமஸம்ஜ்ஞிதம்। ௩௮।௰௭
அமுஷ்மிந் மத்யமம் ஸ்ேரய:। ப்ராஹு: ஸப்த ர்ஷேயா ந்ருப। ௩௮।௰௭
இைஹவ பலதம் காம்யம்। கர்ம யத் க்ரியேத நைர:। ௩௮।௰௭௧
தத் ஆஹுர் அபரம் ஸ்ேரேயா। க்ருசீகச்யவநாதய:। ௩௮।௰௭௧
த்ேவ கர்மணீநரஸ்ேரஷ்ட। ப்ரஹ்மணா ஸமுதாஹ்ருேத। ௩௮।௰௭௨
ப்ரவ்ருத்தாக்யம் நிவ்ருத்தம் ச। ஸ்வர்கமுக்திபேல ஹி ேத। ௩௮।௰௭௨
ப்ரவ்ருத்தம் அபி ேமாக்ஷாய। கர்ம பார்திவ ஜாயேத। ௩௮।௰௭௩
கர்ம ஸ்வரூபேதா ப்ரஷ்டம்। அநாகாங்Šய பலம் க்ருதம்। ௩௮।௰௭௩
ஸாமாந்யம் சாபரம் ஸ்ேரய:। ஸர்வவர்ணாஸ்ரேமஷு யத்। ௩௮।௰௭௪
தச் ச்ருணுஷ்வ மஹீபால। வதேதா மம தத்த்வத:। ௩௮।௰௭௪
ஸத்யம் வக்தவ்யம் நித்யம் ைமத்ேரண பாவ்யம்। கார்யம் ச த்யாஜ்யம்
நித்யம் ஆயாஸகாரி। ௩௮।௰௭௫
ேலாேக அமுஷ்மிந் யத் திதம் ச ததாஸ்மிம்ஸ்। தஸ்மிந்ந் ஆத்மா
ேயாஜநீேயா அநுதீைர:। ௩௮।௰௭௫
தீர்தஸ்நாைந: ேஸாபவாைஸர் அஜஸ்ரம்। பாத்ேர தாைநர் ேஹாமஜாைபஸ்
ச நித்யம்। ௩௮।௰௭௬
ஸுத்திர் ேநேயா ேதவதாப்யர்சைநஸ் ச। ஸுத்ேதா அப்ய் ஆத்மா
ஸங்கேதாஷாத் அஸுத்த:। ௩௮।௰௭௬
ஸுத்தம் வஸ்த்ரம் ஸங்கேதாஷாத் அஸுத்தம்। பூய: ஸுத்திம்
ேஸாத்யமாநம் பர்யாதி। ௩௮।௰௭௭
ஏதஜ் ஜ்ஞாத்வா ந ப்ரமாேதா மநுஷ்ைய:। ஸுத்ேத ஹ்ய் ஆத்மந்ய்
ஆத்மவித்பிர் விேதய:। ௩௮।௰௭௭

இத்ய் உக்த்வா ெதௗ நேரந்த்ரம் ெதௗ। ேதந சார்க்யாதிநா ப்ருதக்।
௩௮।௰௭௮
ஸம்யக் ஸம்பூஜிெதௗ யாெதௗ। நாக ப்ருஷ்டம் அதாஸ்விெநௗ।
௩௮।௰௭௮
ஸ சாப்ய் அநித்யதாம் ஏவம்। அவகம்ய நேரஸ்வர:। ௩௮।௰௭௯
நிஷ்காேமா அநுதிநம் ஏவ। அவகம்ய நேரஸ்வர:। ௩௮।௰௭௯
நிஷ்காேமா அநுதிநம் யஜ்ைஞர்। இயாஜ புருேஷாத்தமம்। ௩௮।௰௭௯
ேபாகாஸங்கி மேநா தால்ப்ய। யதாஸத்ீ தஸ்ய பூபேத:। ௩௮।௰௮
தத் ஏவ பகவத்த்யாந । பரம் சக்ேர மஹாமுேந। ௩௮।௰௮
தத்யாஜார்ேதஷு மமதாம்। அஹம்காரம் ததாத்மநி। ௩௮।௰௮௧
ஸமதாம் ஸர்வபூேதஷு। ஸம்ப்ராப ப்ருதிவபதி ீ :। ௩௮।௰௮௧
யஸ்யாத்மந்ய் அபி விப்ரர்ேஷ। நாஹம்மாேநா அஸ்தி குத்ரசித்।
௩௮।௰௮௨
மதாவேலேபா பூபாெதௗ। தஸ்ய ஸ்யாத் இதி கா கதா। ௩௮।௰௮௨
ஏவம் தால்ப்ய மநுஷ்ேயண। ஸமதாம் அநுதிஷ்டதா। ௩௮।௰௮௩
ஸர்வேபாேகஷு ஸம்த்யாஜ்ேயா। த்ேயயஸ் ச புருேஷாத்தம:।
௩௮।௰௮௩
குத்ர திஷ்டதி ேகாவிந்ேதா। பாஹ்யநிவ்ருதேசதஸி। ௩௮।௰௮௪
தஸ்மாந் நி:ஸங்கசித்ேதந। ஸக்யஸ் சிந்தயிதும் ஹரி:। ௩௮।௰௮௪
ப்ரீதித்ேவஷாதயஸ் த்யக்த்வா। மஹர்ேஷ யஸ்ய ேசதஸா।
௩௮।௰௮௫
ப்ரியாதிதிஸ் தத்த்ருதேய। விஷ்ணுர் ேமாக்ஷபலப்ரத:। ௩௮।௰௮௫
கார்யாரம்ேபஷு ஸர்ேவஷு। து:ஸ்வப்ேநஷு ச ஸத்தம। ௩௯।௰௰௧

அமங்கல்ேயஷு ஸர்ேவஷு। யஜ் ஜப்தவ்யம் தத் உச்யதாம்। ௩௯।௰௰௧
ேயநாரம்பாஸ் ச ஸித்ஹ்யந்தி। து:ஸ்வப்நம் ேசாபஸாம்யதி।
௩௯।௰௰௨
அமங்கலாநாம் ஸர்ேவஷாம்। ப்ரதிகாதஸ் ச ஜாயேத। ௩௯।௰௰௨
ஜநார்தநம் பூதபதிம் ஜகத்குரும்। ஸ்மரந் மநுஷ்ய: ஸததம் மஹாமுேந।
௩௯।௰௰௩
துஷ்டாந்ய் அேஸஷாண்ய் அபஹந்தி ஸாதயத்ய்। அேஸஷகார்யாணி ததா
யதீச்சதி। ௩௯।௰௰௩
ஸ்ருணுஷ்வ சாந்யத் வதேதா மமாகிலம்। வதாமி யத் ேத த்விஜவர்ய
மங்கலம்। ௩௯।௰௰௪
ஸர்வார்தஸித்திம் ப்ரததாதி ய: ஸதா। நிஹந்த்ய் அேஸஷாணி ச பாதகாநி।
௩௯।௰௰௪
ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகச் சராசரம்। ஜகச் ச ேயா ேயா ஜகதஸ் ச ேஹது:।
௩௯।௰௰௫
ஜகச் ச பாத்ய் அத்தி ச ய: ஸ ஸர்வதா। மமாஸ்து மங்கல்யவிவ்ருத்தேய
ஹரி:। ௩௯।௰௰௫
வ்ேயாமாம்புவாய்வக்நிமஹீஸ்வரூைபர்। விஸ்தாரவாந் ேயா அணுதேரா
அணுபாகாத்। ௩௯।௰௰௬
ஸ ஸ்தூலஸூŠம: ஸதேதஸ்வேரஸ்வேரா। யஸ்மாத் பரஸ்தாத் புருஷாத்
அநந்தாத்। ௩௯।௰௰௬
அநாதிமத்யாத் அகிலம் ந கிம்சித்। ஸ ேஹதுேஹது: பரேமஸ்வேரஸ்வேரா।
௩௯।௰௰௭
ஹிரண்யகர்பாச்யுதருத்ரரூப।ீ ஸ்ருஜத்ய் அேஸஷம் பரிபாதி ஹந்தி।
௩௯।௰௰௮

குணாஸ்ரயீ ேயா பகவாந் ஸ ஸர்வதா। பர: ஸுராணாம் பரேமா
அஸுராணாம்। ௩௯।௰௰௮
பேரா முநீநாம் பரேமா யதீநாம்। பர: ஸமஸ்தஸ்ய ச ய: ஸ ேதேவா।
௩௯।௰௰௯
த்யாேதா யதீநாம் அபகல்மைஷர் ேயா। ததாதி முக்திம் பரேமஸ்வேரஸ்வர:।
௩௯।௰௧
மேநாபிர் ஆத்ய: புருஷ: ஸ ஸர்வதா। ஸுேரந்த்ரைவவஸ்வதவித்தபாம்புப ।
௩௯।௰௧
ஸ்வரூபரூபீ பரிபாதி ேயா ஜகத்। ஸ ஸுத்தஸத்த்வ: பரேமஸ்வேரஸ்வேரா।
௩௯।௰௧௧
யந்நாமகீர்தநேதா விமுச்யேத। அேநகஜந்மார்ஜிதபாபஸம்சைய:।
௩௯।௰௧௨
பாேபந்தநாக்நி: ஸ ஸைதவ நிர்மேலா। ேயேநாத்த்ருேதயம் தரணீ
ரஸாதலாத்। ௩௯।௰௧௨
அேஸஷஸத்த்வஸ்திதிகாரணாத் இதம்। பிபர்தி விஸ்வம் ஜகத: ஸ
மூலவாந்। ௩௯।௰௧௩
பாேதஷு ேவதா ஜடேர சராசரம்। ேராமஸ்வ் அேஸஷா முநேயா முேக மகா:।
௩௯।௰௧௪
யஸ்ேயஸ்வேரஸஸ்ய ஸ ஸர்வதா ப்ரபுர்। ஸமஸ்தயஜ்ஞாங்கமயம் வபுர்
விேபார்। ௩௯।௰௧௪
யஸ்யாங்கம் ஈேஸஸ்வரஸம்ஸ்துதஸ்ய। வராஹரூேபா பகவாந் ஸ
ஸர்வதா। ௩௯।௰௧௫
விேக்ஷாப்ய ஸர்ேவாததிேதாயஸம்பதம்। ததார தாத்ரீம் ஜகதஸ் ச
ேயாத்பவ:। ௩௯।௰௧௬

யஜ்ேஞஸ்வேரா யஜ்ஞபுமாந் ஸ ஸர்வதா।
பாதாலமூேலஸ்வரேபாகிஸம்ஹெதௗ। ௩௯।௰௧௬
விந்யஸ்ய பாெதௗ ப்ருதிவம்ீ ச பிப்ரத:। யஸ்ேயாபமாநம் ந பபூவ ேஸா
அச்யுேதா। ௩௯।௰௧௭
விகர்கரம் யஸ்ய ச ப்ரும்ஹேதா முஹு:। ஸநந்தநாத்ையர்
ஜநேலாகஸம்ஸ்திைத:। ௩௯।௰௧௮
ஸ்ருதம் ஜேயத்யுக்திபைர: ஸ ஸர்வதா। ஏகார்ணவாத் யஸ்ய மஹீயேஸா
மஹீம்। ௩௯।௰௧௮
ஆதாய ேவேகந ஸமுத்பதிஷ்யத:। நுதம் வபுர் ேயாகிவைர: ஸ ஸர்வதா।
௩௯।௰௧௯
ஹேதா ஹிரண்யாக்ஷமஹாஸுர: புரா। புராணபும்ஸா பரேமண ேயந।
௩௯।௰௨
வராஹரூப: ஸ பதி: ப்ரஜாபேதர்। தம்ஷ்ட்ராகராலம் ஸுரபதிநாஸநம் ீ ।
௩௯।௰௨
க்ருத்வா வபுர் திவ்யந்ருஸிம்ஹரூபிணம்। த்ராதம் ஜகத் ேயந ஸ ஸர்வதா
ப்ரபுர்। ௩௯।௰௨௧
ைதத்ேயந்த்ரவக்ஷ:ஸ்தலதாரதாருைண:। கேராருைஹ: ஸத்ருருஜாநுகாரிபி:।
௩௯।௰௨௨
சிச்ேசத ேலாகஸ்ய பயாநி சாவ்யேயா। தந்தாந்ததீப்தித்யுதிநிர்மலாணி।
௩௯।௰௨௨
சகார ஸர்வாணி திஸம் முகாநி। நிநாதவித்ராஸிததாநேவா ஹ்ய் அெஸௗ।
௩௯।௰௨௩
யந்நாமஸம்கீர்தநேதா மஹாபயாத்। விேமாக்ஷம் ஆப்ேநாதி ந ஸம்ஸயம்
நர:। ௩௯।௰௨௪

ஸமஸ்தேலாகார்திஹேரா ந்ருேகஸரீ। ஸடாகலாபப்ரமணாநிலஹதா:।
௩௯।௰௨௪
ஸ்புடந்தி யஸ்யாம்புதரா: ஸமந்தத:। ஸ திவ்யஸிம்ஹ:
ஸ்புரிதாகுேலக்ஷேணா। ௩௯।௰௨௫
யதீக்ஷணஜ்ேயாதிஷி ரஸ்மிமண்டலம்। ப்ரலீநம் ஏவ ந ரராஜ பாஸ்வத:।
௩௯।௰௨௬
குத: ஸஸாங்கஸ்ய ஸ ஸிம்ஹரூபத்ருங்। த்ரவந்தி ைதத்யா: ப்ரணமந்தி
ேதவதா। ௩௯।௰௨௬
நஸ்யந்தி ரக்ஷாம்ஸ்ய் அபயாந்தி சாரய:। யத்கீர்தநாத் ேஸா
அத்புதரூபேகஸரீ। ௩௯।௰௨௭
அேஸஷேதேவஸநேரஸ்வேரஸ்வைர:। ஸதா ஸ்துதம் யச் சரிதம்
மஹாத்புதம்। ௩௯।௰௨௮
ஸ ஸர்வேலாகார்திஹேரா மஹாஹரிர்। க்ருக்காரிதம் ேயா
யஜுஷாதிஸாந்திமத்। ௩௯।௰௨௮
ஸாமத்வநித்வஸ்தஸமஸ்தபாதகம்। சக்ேர ஜகத் வாமநக: ஸ ஸர்வதா।
௩௯।௰௨௯
யத்பாதவிந்யாஸபவித்ரதாம் மஹீ। யெயௗ வியத் க்ருக்யஜுஷாம் உதீரணாத்।
௩௯।௰௩
ஸ வாமேநா திவ்யஸரீரத்ருக் ஸதா। யஸ்மிந் ப்ரயாேத ஸுரபூப்ருேதா
அத்வரம்। ௩௯।௰௩
நநாம ேகதாத் அவநி: ஸஸாகரா। ஸ வாமந: ஸர்வஜகந்மய: ஸதா।
௩௯।௰௩௧
மஹாத்யுெதௗ ைதத்யபேதர் மஹாத்வரம்। யஸ்மிந் ப்ரவிஷ்ேட க்ஷுபிதம்
மஹாஸுைர:। ௩௯।௰௩௨

ஸ வாமேநா அந்தஸ்திதஸப்தேலாகத்ருங்। ஸமஸ்தேதேவஷ்டிமயம்
மஹாத்யுதிர்। ௩௯।௰௩௨
ததார ேயா ரூபம் அதீந்த்ரியம் ப்ரபு:। த்ரிவிக்ரமாக்ராந்தஜகத்த்ரய: ஸதா।
௩௯।௰௩௩
ஸங்ைக: ஸுராணாம் திவி பூதேல ஸ்திைதஸ்। ததா மநுஷ்ையர் ககேந ஸ
ஸர்வதா। ௩௯।௰௩௪
ஸ்துத: க்ரமாத் ய: ப்ரதேத ஸ ஸர்வதா। க்ராந்த்வா தரித்ரீம் ககநம் ததா
திவம்। ௩௯।௰௩௪
மருத்பேதர் ய: ப்ரதெதௗ த்ரிவிஷ்டபம்। ஸ ேதவேதேவா
புவேநஸ்வேரஸ்வேரா। ௩௯।௰௩௫
அநுக்ரஹம் சாபி பேலர் அநுத்தமம்। சகார யஸ் ேசந்த்ரபேதாபலக்ஷணம்।
௩௯।௰௩௬
ஸுராம்ஸ் ச யஜ்ஞஸ்ய புஜ: ஸ ஸர்வதா। ரஸாதலாத் ேயந புரா
ஸமாஹ்ருதா:। ௩௯।௰௩௬
ஸமஸ்தேவதா வரவாஜிரூபிணா। ஸ ைகடபாரிர் மதுஸூதேநா மஹாந்।
௩௯।௰௩௭
நி:க்ஷத்ரியாம் யஸ் ச சகார ேமதிநீம்। அேநகேஸா பாஹுவநம் ததாசிநத்।
௩௯।௰௩௮
ய: கார்தவர்யஸ்ய ீ ஸ பார்கேவாத்தேமா। நிஹத்ய வாலிம் ச கபஸ்வரம் ீ ஹி
ேயா। ௩௯।௰௩௮
நிபத்ய ேஸதும் ஜலெதௗ தஸாநநம்। ஜகாந சாந்யாந் ரஜநீசராந் அெஸௗ।
௩௯।௰௩௯
சிேக்ஷப பால: ஸகடம் பபஞ்ஜ ேயா। யமலார்ஜுெநௗ கம்ஸம் அரிம் ஜகாந।
௩௯।௰௪

மமர்த சாணூரமுகம் ஸ ஸர்வதா। ப்ராத: ஸஹஸ்ராம்ஸுமரீசிநிர்மலம்।
௩௯।௰௪
கேரண பிப்ரத் பகவாந் ஸுதர்ஸநம்। ெகௗேமாதகீம் சாபி கதாம் அநுத்தமாம்।
௩௯।௰௪௧
ஹிேமந்துகுந்தஸ்படிகாப்ரேகாமலம்। முகாநிலாபூரிதம் ஈஸ்வேரஸ்வர:।
௩௯।௰௪௨
மத்யாஹ்நகாேல ச ஸ ஸங்கம் உத்தமம்। ததாபராஹ்ேந
ப்ரவிகாஸிபங்கஜம்। ௩௯।௰௪௨
வக்ஷ:ஸ்தேலந ஸ்ரியம் உத்வஹத் விபு:।
விஸ்தாரிபத்ேமாத்பலபத்ரேலாசேநா। ௩௯।௰௪௩
ஸர்ேவஷு காேலஷு ஸமஸ்தேதேஸஷ்வ்। அேஸஷகார்ேயஷு
தேதஸ்வேரஸ்வர:। ௩௯।௰௪௪
ஸர்ைவ: ஸ்வரூைபர் பகவாந் அநாதிமாந்। ஏதத் படந் தால்ப்ய
ஸமஸ்தபாைபர்। ௩௯।௰௪௪
விமுச்யேத விஷ்ணுபேரா மநுஷ்ய:। ஸித்யந்தி கார்யாணி ததாஸ்ய
ஸர்வாண்ய்। ௩௯।௰௪௫
அர்தாந் அவாப்ேநாதி ததா யேதஷ்டம்। து:ஸ்வப்நம் ப்ரஸமம் உைபதி
பட்யமாேந। ௩௯।௰௪௫
ஸ்ேதாத்ேர அஸ்மிஞ் ஸ்ரவணவிெதௗ ஸேதாத்திதஸ்ய। ப்ராரம்ேபா த்ருதம்
உபயாதி ஸித்திம் ஈஸ:। ௩௯।௰௪௬
பாபாநி க்ஷபயதி சாஸ்ய வாஸுேதவ:। மங்கல்யம் பரமம் இதம்
ஸதார்தஸித்திம்। ௩௯।௰௪௬
நிர்விக்ந த்வ் அதிகபலம் ஸதா ததாதி। கிம் ேலாேக தத் இஹ பரத்ர சாஸ்தி
பும்ஸாம்। ௩௯।௰௪௭

யத் விஷ்ணுப்ரவணதியா ந தால்ப்ய ஸாத்யம்। ேதேவந்த்ரஸ் த்ரிபுவநம்
அர்தம் ஏகபிங்க:। ௩௯।௰௪௭
ஸர்வர்த்திம் த்ரிபுவநகாம் ச கார்தவர்யீ :। ைவேதஹ: பரமபதம் ப்ரஸாத்ய
விஷ்ணும்। ௩௯।௰௪௮
ஸம்ப்ராப்த: ஸகலபலப்ரேதா ஹி விஷ்ணு:। ஸர்வாரம்ேபஷு தால்ப்ையதத்।
௩௯।௰௪௮
து:ஸ்வப்ேநஷு ச பண்டித:। ஜேபத் ஏகமதிர் விஷ்ெணௗ। ௩௯।௰௪௯
ததாமங்கல்யதர்ஸேந। ஸமம் ப்ரயாந்தி துஷ்டாநி। ௩௯।௰௪௯
க்ரஹபடாஸ்ீ ச தாருணா:। கர்மாரம்பாஸ் ச ஸித்யந்தி। ௩௯।௰௫
புண்யம் ஆப்ேநாதி ேசாத்தமம்। ஹரிர் ததாதி பத்ராணி। ௩௯।௰௫
மங்கல்யஸ்துதிஸம்ஸ்துத:। கேராத்ய் அகிலரூைபஸ் ச। ௩௯।௰௫௧
ரக்ஷாம் அக்ஷதஸக்தித்ருக்। குர்வதீ கிம் புமாந் ஸ்தாநம்। ௩௯।௰௫௧
க: புமாந் ப்ரஹ்மேணா பலம்। ப்ரஹ்மணஸ் ச கதம் ேபேதா। ௪௰।௰௰௧
ஜ்ேஞேயா அபிந்நபலப்ரத:। ஸ்வகர்மணா தநம் லப்த்வா। ௪௰।௰௰௧
நித்யைநமித்திகா: க்ரியா:। குர்வதீ ஸுத்திம் ஆஸ்தாய। ௪௰।௰௰௨
ஸ்ேவச்சயா ச ததா பர:। த்யக்த்வா ராகாதிகாந் ேதாஷாந்। ௪௰।௰௰௨
ஸம: ஸர்வத்ர ைவ பேவத்। ஸர்வத்ர ைமத்ரீம் குர்வதீ। ௪௰।௰௰௩
தத்யாத் இஷ்டாநி சார்திநாம்। குர்யாத் தீேநஷு கருணாம்। ௪௰।௰௰௩
து:ஸலாந் ீ பரிவர்ஜேயத்। முதிதாம் தர்மஸேலஷு ீ । ௪௰।௰௰௪
பாவநாம் முநிஸத்தம। ஏகத்ர வா ஜகந்நாேத। ௪௰।௰௰௪
பாவநாம் புருேஷாத்தேம। நி:ேஸஷார்தமலாேபதாம்। ௪௰।௰௰௫
ஸுத்தாம் குர்வதீ பண்டித:। ஸரீரபாஹ்யதாம் ஸஸ்வத்। ௪௰।௰௰௫
திம்ஸாம் குர்வதீ ந க்வசித்। நிந்தாவமாநம் அந்ேயஷாம்। ௪௰।௰௰௬

யச் சாந்யத் உபகாதகம்। ஸரீரவாங்மந:ஸுத்திம்। ௪௰।௰௰௬
குர்வதீ ச ஸதாத்மந:। பூதாநாம் உபகாரஸ் ச। ௪௰।௰௰௭
தேபாபிஸ் சாத்மகர்ஷணம்। ஏஷ தர்ம: ஸமாேஸந। ௪௰।௰௰௭
தால்ப்யாக்யாேதா மயா தவ। அதர்மஸ் சாயம் ஏேவாக்ேதா। ௪௰।௰௰௮
விபரீேதா மநீஷிபி:। ஏேத யத்ர குணா: பூர்வம்। ௪௰।௰௰௮
கதிதா ஜ்ஞாநஸம்யுதா:। ப்ரஹ்மண: ஸாஸ்ரய: ஸுத்த। ௪௰।௰௰௯
உபசாராத் தத் ஏவ ஸ:। ஏகஸ்ையவ ஸதஸ் தஸ்ய। ௪௰।௰௰௯
ப்ரஹ்மேணா த்விஜஸத்தம। நாம்நாம் பஹுத்வம் ேலாகாநாம்।
௪௰।௰௧
உபகாரகரம் ஸ்ருணு। நிமித்தஸக்தேயா நாம்ேநா। ௪௰।௰௧
ேபததஸ் ததுதீரணாத்। விபிந்நாந்ய் ஏவ ஸாத்யந்ேத। ௪௰।௰௧௧
பலாநி குருநந்தந। யச்சக்தி நாம தத் தஸ்ய। ௪௰।௰௧௧
தத் தஸ்மிந்ந் ஏவ வஸ்துநி। ஸாதகம் புருஷவ்யாக்ர। ௪௰।௰௧௨
ெஸௗம்யக்ரூேரஷு வஸ்துஷு। வாஸுேதவாச்யுதாநந்த । ௪௰।௰௧௨
ஸத்யாஜ்யபுருேஷாத்தைம:। பரமாத்ேமஸ்வராத்ையஸ் ச। ௪௰।௰௧௩
ஸ்துேதா நாமபிர் அவ்யய:। நிமித்தபாவம் பகவாந்। ௪௰।௰௧௩
விமுக்ேதர் யாத்ய் அேதாக்ஷஜ:। ததாந்யகார்யஸம்ஸித்ெதௗ। ௪௰।௰௧௪
யத் யத் தத் தந் நிஸாமய। தநக்ருத் தர்மக்ருத் தர்மீ। ௪௰।௰௧௪
தர்மாத்மா விஸ்வக்ருச் சுசி:। ஸுசிஷத் விஷ்ணுர் அப்ஜாக்ஷ:।
௪௰।௰௧௫
புஷ்கராேக்ஷா ஹ்ய் அேதாக்ஷய:। ஸுசிஸ்ரவா: ஸிபிவிஷ்ேடா।
௪௰।௰௧௫
யஜ்ேஞேஸா யஜ்ஞபாவந:। நாம்நாம் இத்ய் ஏவம் ஆதீநாம்। ௪௰।௰௧௫

ஸமுச்சாரணேதா நர:। தர்மம் மஹாந்தம் ஆப்ேநாதி। ௪௰।௰௧௬
பாபபந்தக்ஷயம் ததா। ததார்தப்ராப்தேய ப்ரஹ்மந்। ௪௰।௰௧௬
ேதவநாமாநி ேம ஸ்ருணு। ேயஷாம் ஸமுச்சாரணேதா। ௪௰।௰௧௭
வித்தம் ஆப்ேநாதி பக்திமாந்। ஸ்ரீத: ஸ்ரீஸ: ஸ்ரீநிவாஸ:। ௪௰।௰௧௭
ஸ்ரீதர: ஸ்ரீநிேகதந:। ஸ்ரிய: பதி: ஸ்ரீபரம:। ௪௰।௰௧௮
ஸ்ரீமாஞ் ஸ்ரீவத்ஸலாஞ்ச்சந:। ந்ருஸிம்ேஹா துஷ்டதாமேநா। ௪௰।௰௧௮
ஜேயா விஷ்ணுஸ் த்ரிவிக்ரம:। ஸ்துத: ப்ரயச்சேத சார்தம்। ௪௰।௰௧௯
ஏவம் ஆதிபிர் அச்யுத:। காம்ய: காமப்ரத: காந்த:। ௪௰।௰௧௯
காமபாலஸ் ததா ஹரி:। ஆநந்ேதா மாதவஸ் ைசவ। ௪௰।௰௨
காமஸம்ஸித்தேய ந்ருப। ராம: பரஸுராமஸ் ச। ௪௰।௰௨
ந்ருஸிம்ேஹா விஷ்ணுர் ஏவ ச। விக்ரமஸ் ைசவம் ஆதீநி। ௪௰।௰௨௧
ஜப்யாந்ய் அரிஜிகீஷுபி:। வித்யாம் அப்யஸதா நித்யம்। ௪௰।௰௨௧
ஜப்தவ்ய: புருேஷாத்தம:। தாேமாதரம் பந்தகேதா। ௪௰।௰௨௨
நித்யம் ஏவ ஜபந் நர:। ேகஸவம் புண்டரீகாக்ஷம்। ௪௰।௰௨௨
புஷ்கராக்ஷம் ததா ஜேபத்। ேநத்ரபாதாஸு ஸர்வாஸு। ௪௰।௰௨௩
ஹ்ருஷீேகஸம் பேயஷு ச। அச்யுதம் சாம்ருதம் ைசவ। ௪௰।௰௨௩
ஜேபத் ஔஷதகர்மணி। ப்ராஜிஷ்ணும் அக்நிஹாெநௗ ச। ௪௰।௰௨௪
ஜேபத் ஆலம்பேந ஸ்திதம்। ஸம்க்ராமாபிமுகம் கச்சந்। ௪௰।௰௨௪
ஸம்ஸ்மேரத் அபராஜிதம்। பாதாலநரஸிம்ஹம் ச। ௪௰।௰௨௫
ஜலப்ரதரேண ஸ்மேரத்। சக்ரிணம் கதிநம் ைசவ। ௪௰।௰௨௫
ஸார்ங்கிநம் கட்கிநம் ததா। ேக்ஷமார்ேத ப்ரஸவந் ராஜந்। ௪௰।௰௨௬
திக்ஷு ப்ராச்யாதிஷு ஸ்மேரத்। அஜிதம் சாதிகம் ைசவ। ௪௰।௰௨௬

ஸர்வம் ஸர்வஸ்வரம் ததா। ஸம்ஸ்மேரத் புருேஷா பக்த்யா।
௪௰।௰௨௭
வ்யவஹாேரஷு ஸர்வதா। நாராயணம் ஸர்வகாலம்। ௪௰।௰௨௭
க்ஷுதப்ரஸ்கலிதாதிஷு। க்ரஹநக்ஷத்ரபடாஸு ீ । ௪௰।௰௨௮
ேதவபாதாடவஷு ீ ச। அஸ்யுைவரிநிேராேதஷு। ௪௰।௰௨௮
வ்யாக்ரஸிம்ஹாதிஸம்கேட। அந்தகாேர ச தீவ்ேர ச। ௪௰।௰௨௯
நரஸிம்ஹம் அநுஸ்மேரத்। தரத்ய் அகிலதுர்காணி। ௪௰।௰௨௯
தாபார்ேதா ஜலஸாயிநம்। கருடத்வஜாநுஸ்மரணாத்। ௪௰।௰௨௯
ஆபத்ப்ேயா முச்யேத நர:। ஜ்வரதுஷ்டஸிேராேராக । ௪௰।௰௩
விஷவர்யம் ீ ப்ரஸாம்யதி। ஸ்நாேந ேதவார்சேந ேஹாேம।
௰௪௰।௰௩௰௪௪
ப்ரணிபாேத ப்ரதக்ஷிேண। கீர்தேயத் பகவந்நாம। ௪௰।௰௩௧
வாஸுேதேவதி தத்பர:। ஸ்தகேந வித்ததாந்யாேதர்। ௪௰।௰௩௧
அபத்யாேந ச துஷ்டேஜ। குர்வதீ தந்மநா பூத்வா। ௪௰।௰௩௨
அநந்தாச்யுதகீர்தநம்। நாராயணம் ஸார்ங்கதரம்। ௪௰।௰௩௨
ஸ்ரீதரம் புருேஷாத்தமம்। வாமநம் கட்கிநம் ைசவ। ௪௰।௰௩௩
து:ஸ்வப்ேநஷு ச ஸம்ஸ்மேரத்। ஏகார்ணவாஹிபர்யங்க । ௪௰।௰௩௩
ஸாயிநம் ச நர: ஸ்மேரத்। வாய்வக்நீக்ருஹதாஹாய। ௪௰।௰௩௪
ப்ரவ்ருத்தாவ் உபலŠய ச। வித்யார்தீேமாஹவிப்ராந்தி । ௪௰।௰௩௪
ேவகாகூர்ணிதமாநஸ:। மநுஷ்ேயா முநிஸார்தூல। ௪௰।௰௩௫
ஸதாஸ்வஸிரஸம் ஸ்மேரத்। பலபத்ரம் ஸம்ருத்த்யர்தீ। ௪௰।௰௩௫
ஸரகர்மணி ீ கீர்தேயத்। ஜகத்ஸூதிம் அபத்யார்தீ। ௪௰।௰௩௬
ஸ்துவந் பக்த்யா ந ஸததி ீ । ஜப்தவ்யம் ஸுப்ரஜாக்யம் து। ௪௰।௰௩௬

ேதவேதவஸ்ய ஸத்தம। தம்பத்ேயார் ஆத்மஸம்பந்ேத। ௪௰।௰௩௭
விவாஹாக்ேய புந: புந:। ஸ்ரீஸம் ஸர்வாப்யுதயிேக। ௪௰।௰௩௭
கர்மணி ஸம்ப்ரகீர்தேயத்। அரிஷ்டாந்ேதஷ்வ் அேஸேஷஷு। ௪௰।௰௩௮
விேஸாகம் ச ஸதா ஜேபத்। மருத்ப்ரதாபாக்நிஜல । ௪௰।௰௩௮
பந்தநாதிஷு ம்ருத்யுஷு। ஸ்வாதந்த்ர்யபரதந்த்ேரஷு। ௪௰।௰௩௯
வாஸுேதவம் ஜேபத் புத:। ஸர்வார்தஸக்தியுக்தஸ்ய। ௪௰।௰௩௯
ேதவேதவஸ்ய சக்ரிண:। யத் வாபிேராசேத நாம। ௪௰।௰௪
தத் ஸர்வார்ேதஷு கீர்தேயத்। ஸர்வார்தஸித்திம் ஆப்ேநாதி। ௪௰।௰௪
நாம்நாம் ஏகார்ததா யத:। ஸர்வாண்ய் ஏதாநி நாமாநி। ௪௰।௰௪௧
பரஸ்ய ப்ரஹ்மேணா அநக। ஏவம் ஏதாநி நாமாநி। ௪௰।௰௪௧
ேதவேதவஸ்ய கீர்தேயத்। யம் யம் காமம் அபித்யாேயத்। ௪௰।௰௪௨
தம் தம் ஆப்ேநாத்ய் அஸம்ஸயம்। ஸர்வாந் காமாந் அவாப்ேநாதி।
௪௰।௰௪௨
ஸமாராத்ய ஜகத்குரும்। தந்மயத்ேவந ேகாவிந்தம்। ௪௰।௰௪௨
இத்ய் ஏதத் தால்ப்ய நாந்யதா। தந்மேயா வாஞ்சிதாந் காமாந்।
௪௰।௰௪௩
யத் அவாப்ேநாதி மாநவ:। நிமித்தஸக்தி: ஸா தஸ்ய। ௪௰।௰௪௩
ந ேபேதா தால்ப்ய மாநஸ:। வாங்மந:காயிகம் த்ேவஷம்। ௪௰।௰௪௪
யச் ச குர்வந் ப்ரயாத்ய் அத:। ஸ்வரூபஸக்தி: ஸா தஸ்ய। ௪௰।௰௪௪
மதிேபதக்ருதம் ந தத்। ஸ ஸாக்ேதா நிர்குண: ஸுத்ேதா। ௪௰।௰௪௫
ப்ரஹ்மபூேதா ஜகத்குரு:। கர்மபிர் நாமபிர் ஜேவா ீ । ௪௰।௰௪௫
த்ருஸ்யேத தால்ப்ய ைநகதா। யதா ச கங்காஸலிலம்। ௪௰।௰௪௬
ஸிதம் அத்யந்தநிர்மலம்। ஏகஸ்வரூபம் அத்யாத்மம்। ௪௰।௰௪௬

புண்யாபுண்யவிேபதிபி:। ப்ராந்திஜ்ஞாநாந்விைதர் மிஸ்ரம்। ௪௰।௰௪௭
ஸிதாஸிதவிேசஷ்டிைத:। த்ருஸ்யேத ைநகதா தால்ப்ய। ௪௰।௰௪௭
ப்ராணிபிர் பிந்நபுத்திபி:। தாபார்தாஸ் தாபஸமநம்। ௪௰।௰௪௭
அதிப்ரீத்யதிஸதலம் ீ । கபேதாஷாந்விைதர் நாதி । ௪௰।௰௪௮
ப்ரீதியுக்ைதர் நிரம்ஸுபி:। ஸ்த்ரீேயாக்யம் ஏதந் ேநதீதி। ௪௰।௰௪௮
ப்ரீத்யப்ரீதிஸமந்விைத:। மத்யஸ்தபுத்த்யா ைசவாந்ேய। ௪௰।௰௪௯
நாதிஸதாதிதாபிபி ீ :। பவித்ரம் இத்ய் ஏதத் இதி। ௪௰।௰௪௯
புண்யபுத்த்யா ததாபைர:। ம்ருஷ்டம் ஏதத் இதீத்ய் அந்ையர்। ௪௰।௰௫
மத்ஸ்யாட்யம் இதி சாபைர:। துல்யபுத்த்யாபி ைசவாந்ையர்। ௪௰।௰௫
ேஹயபுத்த்யா ததாபைர:। நாதிேவகாதிேவகம் ச। ௪௰।௰௫௧
ஹ்ருஷ்ேடாத்விக்ைநஸ் ததாபைர:। கிம் ஏேதேநதி ைசவாந்ைய:।
௪௰।௰௫௧
பரதாராபிலாஷிபி:। தால்ப்ய ஸம்த்ருஸ்யேத சாந்ையர்। ௪௰।௰௫௨
ஜந்துபிர் பாயகாதைர:। தத் ஏவ பூயம் பஸ்யந்தி। ௪௰।௰௫௨
ப்ேரதாத்யா ஹ்ருதிபாபிந:। ஏைதஸ் சாந்ையஸ் ச பஹுபிர்। ௪௰।௰௫௨
விேஸைஷர் பஹுஜந்துபி:। விேஸஷவத் கர்மேபதாத்। ௪௰।௰௫௩
ஏகம் ஏவ ஹி த்ருஸ்யேத। ைநேத கங்காம்பேஸா ேபதா:। ௪௰।௰௫௩
ப்ரீத்யப்ரீதிப்ரதாயிந:। ப்ராணிநாம் ேசதேஸா ேபதாத்। ௪௰।௰௫௪
தால்ப்ையேத கர்மேயாநய:। ஸமஸ்தகர்மணா தால்ப்ய। ௪௰।௰௫௪
ஸம்க்ஷேய பயம் ஏத்ய் அெஸௗ। விேஸஷகாரணாபாவாத்। ௪௰।௰௫௫
விேஸஷாபாவ ஏவ ஹி। விஷ்ண்வாக்யம் ஏவம் தத் ப்ரஹ்ம।
௪௰।௰௫௫

ஸுத்தம் அத்யந்தநிர்மலம்। அேபதம் பஹுதா பிந்நம்। ௪௰।௰௫௬
த்ருஸ்யேத கர்மேபதிபி:। ேயாகிபிர் த்ருஸ்யேத ஸுத்தம்। ௪௰।௰௫௬
ராகாத்யுபஸமாமைல:। ராகிபிர் விஷயாகாரம்। ௪௰।௰௫௭
தத் ஏவ ப்ரஹ்ம த்ருஸ்யேத। கர்மமார்காஸ்ரிைத: கர்ம । ௪௰।௰௫௭
ேபாக்த்ருத்ேவ ச தேதஷ்யேத। கிம் அப்ய் அஸ்தீதி ைசவாந்ையர்।
௪௰।௰௫௮
அவிேவகிபிர் உச்யேத। ஸர்வம் ஏதத் தத் ஏேவதி। ௪௰।௰௫௮
வதந்த்ய் அத்ைவதவாதிந:। ப்ரத்யக்ஷம் த்ருஸ்யம் ஏேவதி। ௪௰।௰௫௯
வதந்த்ய் அந்ேய துருக்திபி:। வதந்த்ய் அந்ேய தத் ஏவாஹம்।
௪௰।௰௫௯
நாஸ்தீத்ய் அந்ேய வதந்தி தத்। திர்யங்மநுஷ்யேதவாக்யம்। ௪௰।௰௬
தத் அந்ையர் அபிதீயேத। வந்த்யபுத்த்யா து தத் ைகஸ்சித்। ௪௰।௰௬
த்ேயயபுத்த்யா ததாபைர:। கம்யபுத்த்யா ததாந்ையஸ் ச। ௪௰।௰௬௧
லப்யபுத்த்யா ச ஜந்துபி:। க்ருஹ்யேத தத் பரம் ப்ரஹ்ம। ௪௰।௰௬௧
ரிபுபுத்த்யா ததாபைர:। ஆத்மபுத்ரஸுஹ்ருத்பர்த்ரு । ௪௰।௰௬௨
பரபுத்த்யா ததாபைர:। பரபுத்த்யா ச ைநகதா। ௰௪௰।௪௫
ப்ராணிபி: கர்மைவஷம்ய । பிந்நபுத்திபிர் அவ்யயம்। ௪௰।௰௬௩
தத் ப்ரஹ்ம க்ருஹ்யேத தால்ப்ய। பரமார்தம் நிேபாத ேம। ௪௰।௰௬௩
பூேதந்த்ரியாந்த:கரண । ப்ரதாநபுருஷாத்மகம்। ௪௰।௰௬௪
அபரம் ப்ரஹ்மேணா ரூபம்। பரம் தால்ப்ய நிஸாமய। ௪௰।௰௬௪
அேஹயம் அக்ஷரம் ஸுத்தம்। அஸம்பூதிநிரஞ்ஜநம்। ௪௰।௰௬௫
விஷ்ண்வாக்யம் பரமம் ப்ரஹ்ம। யத் ைவ பஸ்யந்தி ஸூரய:।
௪௰।௰௬௫

யைததத் பவதா ப்ேராக்தம்। தர்மார்தாேதஸ் து ஸாதநம்। ௪௧।௰௰௧
பத்நீந்ருணாம் முநிஸ்ேரஷ்ட। ேயாஷிதஸ் ச ததா நர:। ௪௧।௰௰௧
தச் ச்ேராதும் இச்ேச விப்ரர்ேஷ। விதவா ஸ்த்ரீ ந ஜாயேத। ௪௧।௰௰௨
உேபாஷீேதந ேயநாக்ர்யா। பத்ந்யா ச ரஹிேதா நர:। ௪௧।௰௰௨
அஸூந்யஸயநா நாம। த்விதீயாம் ஸ்ருணு தாம் மம। ௪௧।௰௰௩
யாம் உேபாஷ்ய ந ைவதவ்யம்। ப்ரயாதி ஸ்த்ரீ த்விேஜாத்தம।
௪௧।௰௰௩
பத்நீவியுக்தஸ் ச நேரா। ந கதாசித் ப்ரஜாயேத। ௪௧।௰௰௪
ேஸேத ஜகத்பதி: க்ருஷ்ண:। ஸ்ரியா ஸார்தம் யதா த்விஜ। ௪௧।௰௰௪
அஸூந்யஸயநா நாம। ததா க்ராஹ்யா ஹி ஸா திதி:। ௪௧।௰௰௫
க்ருஷ்ணபக்ஷத்விதீயாயாம்। ஸ்ராவேண த்விஜஸத்தம। ௪௧।௰௰௫
இதம் உச்சாரேயந் நாம। ப்ரணம்ய ஜகத: பதிம்। ௪௧।௰௰௬
ஸ்ரீவத்ஸதாரிணம் ஸ்ரீஸம்। பக்த்யாப்யர்ச்ய ஸ்ரியா ஸஹ। ௪௧।௰௰௬
ஸ்ரீவத்ஸதாரிஞ் ஸ்ரீகாந்த। ஸ்ரீதாம ஸ்ரீபேத அச்யுத। ௪௧।௰௰௭
கார்ஹஸ்த்யம் மா ப்ரணாஸம் ேம। யாது தர்மார்தகாமதம்। ௪௧।௰௰௭
அக்நேயா மா ப்ரணஸ்யந்து। மா ப்ரணஸ்யந்து ேதவதா:। ௪௧।௰௰௮
பிதேரா மா ப்ரணஸ்யந்து। மத்ேதா தாம்பத்யேபதத:। ௪௧।௰௰௮
லŠம்யா ப்ரயுஜ்யேத ேதவ। ந கதாசித் யதா பவாந்। ௪௧।௰௰௯
ததா கலத்ரஸம்பந்ேதா। ேதவ மா ேம விபித்யதாம்। ௪௧।௰௰௯
லŠம்யா ந ஸூந்யம் வரத। யதா ேத ஸயநம் ஸதா। ௪௧।௰௧
ஸய்யா மமாப்ய் அஸூந்யாஸ்து। தைதவ மதுஸூதந। ௪௧।௰௧
ஏவம் ப்ரஸாத்ய பூஜாம் ச। க்ருத்வா லŠம்யாஸ் ததா ஹேர:।
௪௧।௰௧௧

பலாநி தத்யாச் சய்யாயாம்। அபஷ்டாநி ீ ஜகத்பேத:। ௪௧।௰௧௧
நக்தம் ப்ரணம்யாயதேந। ஹவிர் புஞ்ஜதீ வாக்யத:। ௪௧।௰௧௨
ப்ராஹ்மணாய த்விதீேய அஹ்நி। ஸக்த்யா தத்யாச் ச தக்ஷிணாம்।
௪௧।௰௧௨
ஏவம் கேராதி ய: ஸம்யக்। நேரா மாஸசதுஷ்டயம்। ௪௧।௰௧௩
தஸ்ய ஜந்மத்ரயம் தால்ப்ய। க்ருஹபங்ேகா ந ஜாயேத। ௪௧।௰௧௩
அஸூந்யஸயநஸ் சாெஸௗ। தர்மகர்மார்தஸாதக:। ௪௧।௰௧௪
பவத்ய் அவ்யாஹைதஸ்வர்ய:। புருேஷா நாத்ர ஸம்ஸய:। ௪௧।௰௧௪
நாரீ ச தால்ப்ய தர்மஜ்ஞா। வ்ரதம் ஏதத் யதாவிதி। ௪௧।௰௧௫
யா கேராதி ந ஸா ேஸாச்யா। பந்துவர்கஸ்ய ஜாயேத। ௪௧।௰௧௫
ைவதவ்யம் துர்பகத்வம் வா। பர்த்ருத்யாகம் ச ஸத்தம। ௪௧।௰௧௬
நாப்ேநாதி ஜந்மத்ரிதயம்। ஏதச் சீர்த்வா பதிவ்ரதா। ௪௧।௰௧௬
உபவாஸாஸ்ரிதம் ஸம்யக்। ேலாகத்வயபலப்ரதம்। ௪௨।௰௰௧
கதிதம் பவதா ஸர்வம்। யத் ப்ருஷ்ேடா அஸி மயா த்விஜ। ௪௨।௰௰௧
அந்யத் இச்சாம்ய் அஹம் ஸ்ேராதும்। தத் பவாந் ப்ரப்ரவதுீ ேம।
௪௨।௰௰௨
ஸம்ஸாரேஹதும் முக்திம் ச। ஸம்ஸாராந் முநிஸத்தம। ௪௨।௰௰௨
அவித்யாப்ரபவம் கர்ம। ேஹதுபூதம் த்விேஜாத்தம। ௪௨।௰௰௩
ஸம்ஸாரஸ்யாஸ்ய தந்முக்தி:। ஸம்ேக்ஷபாச் ச்ரூயதாம் மம।
௪௨।௰௰௩
ஸ்வஜாதிவிஹிதம் கர்ம। ேலாபத்ேவஷவிவர்ஜிதம்। ௪௨।௰௰௪
குர்வத: க்ஷயேத ீ பூர்வம்। மந்யுபந்தஸ் ச ேநஷ்யேத। ௪௨।௰௰௪
அபூர்வஸம்பவாபவாத்। க்ஷயம் யாத்ய் ஆதிகர்மணி। ௪௨।௰௰௫

தால்ப்ய ஸம்ஸாரவிச்ேசத:। காரணாபாவஸம்பவ:। ௪௨।௰௰௫
பவத்ய் அஸம்ஸயம் சாந்யச்। ஸ்ரூயதாம் அத்ர காரணம்। ௪௨।௰௰௬
ஸம்ஸாராந் முச்யேத தால்ப்ய। ஸமாஸாத் வதேதா மம। ௪௨।௰௰௬
க்ருஹீதகர்மணா ேயந। பும்ஸாம் ஜாதிர் த்விேஜாத்தம। ௰௪௨।௰௰௭௪௬
தத்ப்ராயஸ்சித்தபூதம் ைவ। ஸ்ருணு கர்மக்ஷயாவஹம்। ௪௨।௰௰௭
ப்ராஹ்மணக்ஷத்ரியவிஸாம்। ஸூத்ராந்த்யாநாம் ச ஸத்தம। ௪௨।௰௰௮
ஸ்வஜாதிவிஹிதம் கர்ம। ராகத்ேவஷாதிவர்ஜிதம்। ௪௨।௰௰௮
ஜாதிப்ரதஸ்ய க்ஷயதம்। தத் ஏவாத்யஸ்ய கர்மண:। ௪௨।௰௰௯
ஜ்ஞாநகாரணபாவம் ச। தத் ஏவ ப்ரதிபத்யேத। ௪௨।௰௰௯
புமாம்ஸ் சாதிகதஜ்ஞாேநா। ேபதம் நாப்ேநாதி ஸத்தம। ௪௨।௰௧
ப்ரஹ்மணா விஷ்ணுஸம்ஜ்ேஞந। பரேமணாவ்யயாத்மநா। ௪௨।௰௧
ஏதத் ேத கதிதம் தால்ப்ய। ஸம்ஸாரஸ்ய ஸமாஸத:। ௪௨।௰௧௧
காரணம் பவமுக்திஸ் ச। ஜாயேத ேயாகிேநா யதா। ௪௨।௰௧௧
இதி தால்ப்ய: புலஸ்த்ேயந। யதாவத் ப்ரதிேபாதித:। ௪௩।௰௰௧
ஆராதயாம் ஆஸ ஹரிம்। ேலேப காமாம்ஸ் ச வாஞ்சிதாந்। ௪௩।௰௰௧
ததா த்வம் அபி ைதத்ேயந்த்ர। ேகஸவாராதநம் குரு। ௪௩।௰௰௨
ஆராத்ய தம் ஜகந்நாதம்। ந கஸ்சித் அவஸததி ீ । ௪௩।௰௰௨
இதி ஸுக்ரவச: ஸ்ருத்வா। ப்ரஹ்லாேதா மதுஸூதநம்। ௪௩।௰௰௩
ஆராத்ய ப்ராப்தவாந் க்ருத்ஸ்நம்। த்ைரேலாைகஸ்வர்யம் ஊர்ஜிதம்।
௪௩।௰௰௩
ஏதந் மேயாக்தம் ஸகலம்। தவ பூமிப ப்ருச்சத:। ௪௩।௰௰௪
அநாராத்யாச்யுதம் ேதவம்। க: காமாந் ப்ராப்நுேத நர:। ௪௩।௰௰௪

அம்பரீேஸா நரபதிர்। விஷ்ேணார் மாஹாத்ம்யம் உத்தமம்। ௪௩।௰௰௫
ஸ்ருத்வா பபூவ ஸததம்। ேகஸவார்பிதமாநஸ:। ௪௩।௰௰௫
ஏவம் த்வம் அபி ெகௗரவ்ய। யதி முக்திம் அபஷ்யஸி ீ । ௪௩।௰௰௬
ேபாகாந் வா விலுபாந் ேதவாத்। தஸ்மாத் ஆராதயாச்யுதம்। ௪௩।௰௰௬
ததாதி வாஞ்சிதாந் காமாந்। ஸகாைமர் அர்சிேதா ஹரி:। ௪௩।௰௰௭
முக்திம் ததாதி ேகாவிந்ேதா। நிஷ்காைமர் அபிபூஜித:। ௪௩।௰௰௭
பகவாந் அவதீர்ேணா அபூந்। மர்த்யேலாகம் ஜநார்தந:। ௪௩।௰௰௮
பாராவதரணார்தாய। புேவா பூதபதிர் ஹரி:। ௪௩।௰௰௮
மாநுஷத்ேவ ச ேகாவிந்ேதா। மம பூர்வபிதாமைஹ:। ௪௩।௰௰௯
சகார ப்ரீதிம் அதுலாம்। ஸாமாந்யபுருேஷா யதா। ௪௩।௰௰௯
ஸாரத்யம் க்ருதவாம்ஸ் ைசவ। ேதஷாம் ஸர்ேவஸ்வேரா ஹரி:।
௪௩।௰௧
நிஸ்தீர்ேணா ேயந பஷ்ெமௗேகா ீ । குருைஸந்யமேஹாததி:। ௪௩।௰௧
உபகாரீ மஹாபாக:। ஸ ேதஷாம் ஸர்வவஸ்துஷு। ௪௩।௰௧௧
ேகஸவ: பாண்டுபுத்ராணாம்। ஸுதாநாம் ஜநேகா யதா। ௪௩।௰௧௧
தந்யாஸ் ேத க்ருதபுண்யாஸ் ச। மம பாண்டுஸுதா மதா:। ௪௩।௰௧௨
விவிஸுர் ேய பரிஷ்வங்ேக। ேகாவிந்தபுஜபஞ்ஜரம்। ௪௩।௰௧௨
ராஜ்யேஹேதார் அரீஞ் ஜக்நுர்। அகஸ்மாத் பாண்டுநந்தநா:। ௪௩।௰௧௩
ஸப்தேலாைககநாேதந। ேய அபவந்ந் ஏகஸாயிந:। ௪௩।௰௧௩
ஆத்மாநம் அவகச்சாமி। பகவந் தூதகல்மஷம்। ௪௩।௰௧௪
ஜாதம் நிர்தூதபாேப அஸ்மிந்। குேல விஷ்ணுபரிக்ரேஹ। ௪௩।௰௧௪
ஏவம் ேதவவரஸ் ேதஷாம்। ப்ரஸாதஸுமுேகா ஹரி:। ௪௩।௰௧௫

ப்ருச்சதாம் கச்சித் ஆசஷ்ேட। கிம்சித் குஹ்யம் மஹாத்மநாம்।
௪௩।௰௧௫
குஹ்யம் ஜநார்தநம் யாம்ஸ் து। தர்மபுத்ேரா யுதிஷ்டிர:। ௪௩।௰௧௬
பப்ரச்ச தர்மாந் அகிலாம்ஸ்। தந் மமாக்யாதும் அர்ஹஸி। ௪௩।௰௧௬
தர்மார்தகாமேமாேக்ஷஷு। யத் குஹ்யம் மதுஸூதந:। ௪௩।௰௧௭
ேதஷாம் அேவாசத் பகவாஞ்। ஸ்ேராதும் இச்சாமி தத் த்வ் அஹம்।
௪௩।௰௧௭
பஹூநி தர்மகுஹ்யாநி। தர்மபுத்ராய ேகஸவ:। ௪௩।௰௧௮
புரா ப்ேராவாச ராேஜந்த்ர। ப்ரஸாதஸுமுேகா ஹரி:। ௪௩।௰௧௮
ஸரதல்பகதாத் பஷ்மாத் ீ । தர்மாஞ் ஸ்ருத்வா யுதிஷ்டிர:। ௪௩।௰௧௯
ப்ருஷ்டவாந் யஜ் ஜகந்நாதம்। தந் ேம நிகதத: ஸ்ருணு। ௪௩।௰௧௯
பஞ்சேமநாஸ்வேமேதந। யதா ஸ்நாேதா யுதிஷ்டிர:। ௪௪।௰௰௧
ததா நாராயணம் ேதவம்। ப்ரஸ்நம் ஏதம் அப்ருச்சத। ௪௪।௰௰௧
பகவந் ைவஷ்ணவா தர்மா:। கிம்பலா: கிம்பராயணா:। ௪௪।௰௰௨
கிம் க்ருத்யம் அதிக்ருத்ையேத। பவேதாத்பாதிதா: புரா। ௪௪।௰௰௨
யதி ேத பாண்டுஷு ஸ்ேநேஹா। வித்யேத மதுஸூதந। ௪௪।௰௰௩
ஸ்ேராதவ்யாஸ் ேசந் மயா தர்மாஸ்। ததஸ் தாந் கதயாகிலாந்।
௪௪।௰௰௩
பவித்ராஸ் ைசவ ேய தர்மா:। ஸர்வபாபப்ரணாஸநா:। ௪௪।௰௰௪
தவ வக்த்ரச்யுதா ேதவ। ஸர்வதர்ேமஷ்வ் அநுத்தமா:। ௪௪।௰௰௪
யாஞ் ஸ்ருத்வா ப்ரஹ்மஹா ேகாக்ந:। பித்ருக்ேநா குருதல்பக:।
௪௪।௰௰௫
ஸுராேபா வா க்ருதக்நஸ் ச। முச்யேத ஸர்வகில்பிைஷ:। ௪௪।௰௰௫

ஏதந் ேம கதிதம் ஸர்வம்। ஸபாமத்ேய அரிஸூதந। ௪௪।௰௰௬
வஸிஷ்டாத்ையர் மஹாபாைகர்। முநிபிர் பாவிதாத்மபி:। ௪௪।௰௰௬
தேதா அஹம் தவ ேதேவஸ। பாதமூலம் உபாகத:। ௪௪।௰௰௭
தர்மாந் கதய தாந் ேதவ। யத்ய் அஹம் பவத: ப்ரிய:। ௪௪।௰௰௭
ஸ்ருதா ேம மாநவா தர்மா। வாஸிஷ்டாஸ் ச மஹாமேத। ௪௪।௰௰௮
பராஸரக்ருதாஸ் ைசவ। ததாத்ேரயஸ்ய தீமத:। ௪௪।௰௰௮
ஸ்ருதா கார்க்யஸ்ய ஸங்கஸ்ய। லிகிதஸ்ய யமஸ்ய ச। ௪௪।௰௰௯
ஜாபாேலஸ் ச மஹாபாேஹா। முேநர் த்ைவபாயநஸ்ய ச। ௪௪।௰௰௯
உமாமேஹஸ்வராஸ் ைசவ। ஜாதிதர்மாஸ் ச பாவநா:। ௪௪।௰௧
குேணஸ் ச குணபாேஹாஸ் ச। காஸ்யேபயாஸ் தைதவ ச। ௪௪।௰௧
பஹ்வாயநக்ருதாஸ் ைசவ। ஸாகுேநயாஸ் தைதவ ச। ௪௪।௰௧௧
அகஸ்த்யகீதா ெமௗத்கல்யா:। ஸாண்டில்யா: ெஸௗரபாஸ் ததா।
௪௪।௰௧௧
ப்ருேகார் அங்கிரஸஸ் ைசவ। கஸ்யேபாத்தாலகாஸ் ததா। ௪௪।௰௧௨
ெஸௗமந்தூக்ராயணாக்ராஸ் ச। ைபலஸ்ய ச மஹாத்மந:। ௪௪।௰௧௨
ைவஸம்பாயநகீதாஸ் ச। பிஸங்கமக்ருதாஸ் ச ேய। ௪௪।௰௧௩
ஐந்த்ராஸ் ச வாருணாஸ் ைசவ। ெகௗேபரா வாத்ஸ்யெபௗணகா:।
௪௪।௰௧௩
ஆபஸ்தம்பா: ஸ்ருதா தர்மாஸ்। ததா ேகாபாலகஸ்ய ச। ௪௪।௰௧௪
ப்ருக்வங்கிர:க்ருதாஸ் ைசவ। ெஸௗர்யா ஹாரீதகாஸ் ததா। ௪௪।௰௧௪
யாஜ்ஞவல்க்யக்ருதாஸ் ைசவ। ததா ஸப்தர்ஷயஸ் ச ேய। ௪௪।௰௧௪
ஏதாஸ் சாந்யாஸ் ச விவிதா:। ஸ்ருதா ேம தர்மஸம்ஹிதா:। ௪௪।௰௧௫
பகவஞ் ஸ்ேராதும் இச்சாமி। தவ வக்த்ராத் விநி:ஸ்ருதாந்। ௪௪।௰௧௫

ஏவம் உக்த: ஸ பார்ேதந। ப்ரத்யுவாச ஜநார்தந:। ௪௪।௰௧௬
பஹுமாநாச் ச ப்ரீத்யா ச। தர்மபுத்ரம் யுதிஷ்டிரம்। ௪௪।௰௧௬
இஷ்டஸ் த்வம் ஹி மஹாபாேஹா। ஸதா மம யுதிஷ்டிர। ௪௪।௰௧௭
பரமார்தம் தவ ப்ரூயாம்। கிம் புநர் தர்மஸம்ஹிதாம்। ௪௪।௰௧௭
பரமஜ்ஞாநிபி: ஸித்ைதர்। யுஞ்ஜத்பிர் அபி நித்யஸ:। ௪௪।௰௧௮
ப்ரஸாந்தஸ்ேயவ தீபஸ்ய। கதிர் மம துரத்யயா। ௪௪।௰௧௮
ஸர்வேவதமயம் ப்ரஹ்ம। பவித்ரம் க்ருஷிபி: ஸ்துதம்। ௪௪।௰௧௯
கதயிஷ்யாமி ேத ராஜந்। தர்மம் தர்மப்ருதாம் வர। ௪௪।௰௧௯
ஏவம் உக்ேத து க்ருஷ்ேணந। க்ருஷேயா அமிதேதஜஸ:। ௪௪।௰௨
ஸமாஜக்மு: ஸபாமத்ேய। ஸ்ேராதுகாமா ஹேரர் கிரம்। ௪௪।௰௨
ேதவகந்தர்வக்ருஷேயா। குஹ்யகாஸ் ச மஹாயஸா:। ௰௪௪।௪௭
வாலகில்யா மஹாத்மாேநா। முநய: ஸம்மிதவ்ரதா:। ௰௪௪।௪௭
பாவநாந் ஸர்வதர்ேமப்ேயா। ரஹஸ்யாந் த்விஜஸத்தம। ௰௪௪।௪௭
ைவஷ்ணவாந் அகிலாந் தர்மாந்। ய: பேடத் பாபநாஸநாந்। ௪௪।௰௨௧
பேவயுர் அக்ஷயாஸ் தஸ்ய। ேலாகா: ஸத்புண்யபாகிந:। ௪௪।௰௨௧
க்ருஷ்ணத்ருஷ்டிஹதம் சாஸ்ய। கில்பிஷம் ஸம்ப்ரணஸ்யதி।
௪௪।௰௨௨
ைவஷ்ணவஸ்ய ச யஜ்ஞஸ்ய। பலம் ப்ராப்ேநாதி மாநவ:। ௪௪।௰௨௨
ெகௗதூஹலஸமாவிஷ்ட:। பப்ரச்ேசதம் யுதிஷ்டிர:। ௪௫।௰௰௧
யமேலாகஸ்ய சாத்வாநம்। அந்தரம் மாநுஷஸ்ய ச। ௪௫।௰௰௧
கீத்ருஸம் கிம்ப்ரமாணம் வா। கதம் வாந்தம் ஜநார்தந। ௪௫।௰௰௨
தரந்தி புருஷா: க்ருஷ்ண। ேகேநாபாேயந ஸம்ஸேம। ௪௫।௰௰௨

தஸ்ய தத் வசநம் ஸ்ருத்வா। விஸ்மிேதா மதுஸூதந:। ௪௫।௰௰௩
ப்ரத்யுவாச மஹாத்மாநம்। தர்மபுத்ரம் யுதிஷ்டிரம்। ௪௫।௰௰௩
ஸாது ஸாதுர் அயம் ப்ரஸ்ந:। ஸ்ரூயதாம் ேபா யுதிஷ்டிர। ௪௫।௰௰௪
ஷடஸதிஸஹஸ்ராணி ீ । ேயாஜநாநாம் நராதிப। ௪௫।௰௰௪
யமேலாகஸ்ய சாத்வாநம்। அந்தரம் மாநுஷஸ்ய ச। ௪௫।௰௰௫
தாம்ரபாத்ரம் இவாதப்தம்। ஸூலவ்யாமிஸ்ரகண்டகம்। ௪௫।௰௰௫
த்வாதஸாதித்யஸம்காஸம்। ைபரவம் துரதிக்ரமம்। ௪௫।௰௰௬
ந தத்ர வ்ருக்ஷா ந ச்சாயா। பாநீயம் ேகதநாநி ச। ௪௫।௰௰௬
யத்ர விஸ்ரமேத ஸ்ராந்த:। புருேஷா அத்வாநேகா ந்ருப। ௪௫।௰௰௭
யாம்ையர் தூைதர் நீயமாேநா। யமஸ்யாஜ்ஞாகைரர் பலாத்। ௪௫।௰௰௭
அவஸ்யம் ச மஹாராஜ। ஸ கந்தவ்ேயா மஹாபத:। ௪௫।௰௰௮
நைர: ஸ்த்ரீபிஸ் ததா திர்ைய:। ப்ருதிவ்யாம் ஜவஸம்ஜ்ஞைக ீ :।
௪௫।௰௰௮
ஏகவிம்ஸச் ச நரகா। யமஸ்ய விஷேய ஸ்ம்ருதா:। ௪௫।௰௰௯
ேய து துஷ்க்ருதகர்மாணஸ்। ேத பதந்தி ப்ருதக் ப்ருதக்। ௪௫।௰௰௯
நரேகா ெரௗரேவா நாம। மஹாெரௗரவ ஏவ ச। ௪௫।௰௧
க்ஷுரதாரா மஹாெரௗத்ர:। ஸூகரஸ் தால ஏவ ச। ௪௫।௰௧
வஜ்ரகும்ேபா மஹாேகார:। ஸால்மேலா அத விேமாஹந:। ௪௫।௰௧௧
கீடாத: க்ருமிபக்ஷஸ் ச। ஸால்மலிஸ் ச மஹாத்ரும:। ௪௫।௰௧௧
ததா பூயவஹ: பாபா। ருதிராந்ேதா மஹத்தம:। ௪௫।௰௧௨
அக்நிஜ்வாேலா மஹாநாத:। ஸம்தாம்ஸ: ஸுநேபாஜந:। ௪௫।௰௧௨
ததா ைவதரணீேசாஷ்ணா। அஸிபத்த்ரவநம் ததா। ௪௫।௰௧௨
விஷ்ேணாஸ் தத் வசநம் ஸ்ருத்வா। பபாத புவி பாண்டவ:। ௪௫।௰௧௩

ஸ ஸம்ஜ்ஞஸ் ச முஹூர்ேதந। பூய: ேகஸவம் அப்ரவத்ீ। ௪௫।௰௧௩
பதஸ்ீ சாஸ்மி மஹாபாேஹா। ஸ்ருத்வா மார்கஸ்ய விஸ்தரம்।
௪௫।௰௧௪
ேகேநாபாேயந தம் மார்கம்। தரந்தி புருஷா: ஸுகம்। ௪௫।௰௧௪
ப்ராஹ்மேணப்ய: ப்ரதாநாநி। நாநாரூபாணி பார்திவ। ௪௫।௰௧௫
ேயா தத்யாச் ச்ரத்தயா யுக்த:। ஸுகம் யாதி மஹாபதம்। ௪௫।௰௧௫
உபாநஹப்ரதா யாந்தி। ஸுகம் சாயாஸு ச்சத்த்ரதா:। ௪௫।௰௧௬
ந ேதஷாம் அஸுபம் கிம்சிச்। ஸூலாதி ந ச கண்டகா:। ௪௫।௰௧௬
உபாநெஹௗ ேயா ததாதி। பாத்ரபூேத த்விேஜாத்தேம। ௪௫।௰௧௭
அஸ்வதர்ய: ப்ரதாதாரம்। உபதிஷ்டந்தி தம் நரம்। ௪௫।௰௧௭
வித்ருஷ்ணாஸ் சாம்புதாதாரஸ்। தர்பிதாஸ் சாந்நதாஸ் ததா।
௪௫।௰௧௮
ஔப்ராவ்ருதா வஸ்த்ரதாஸ் ச। நக்நா ைவ யாந்த்ய் அவஸ்த்ரதா:।
௪௫।௰௧௮
ஹிரண்யதா: ஸுகம் யாந்தி। புருஷா: ஸ்வாப்யலம்க்ருதா:। ௪௫।௰௧௯
ேகாப்ரதா யாந்தி ச ஸுகம்। விமுக்தா: ஸர்வகில்பிைஷ:। ௪௫।௰௧௯
பூமிதா: ஸுகம் அதந்ேத। ஸர்வகாைம: ஸுதர்பிதா:। ௪௫।௰௨
யாந்தி ைசவாபரிக்லிஷ்டா। நரா: ஸய்யாஸநப்ரதா:। ௪௫।௰௨
தத: ஸுகதரம் யாந்தி। விமாேநஷு க்ருஹப்ரதா:। ௪௫।௰௨௧
க்ஷீரப்ரதா ஹி திவ்யாபி:। ஸஸர்பிபிஸ் தைதவ ச। ௪௫।௰௨௧
ேகாப்ரதாதா லேபத் த்ருப்திம்। தஸ்மிந் ேதேஸ ஸுதுர்லபாம்।
௪௫।௰௨௨
ஆராமேராபீ ச்சாயாஸு। ஸதலாஸு ீ ஸுகம் வ்ரேஜத்। ௪௫।௰௨௨

ஸுகந்திகந்திேநா யாந்தி। கந்தமால்யப்ரதா நர:। ௪௫।௰௨௩
அதத்ததாநா கச்சந்தி। பத்ப்யாம் யாேநந யாநதா:। ௪௫।௰௨௩
தீபப்ரதா: ஸுகம் யாந்தி। தீபயந்தஸ் ச தத்பதம்। ௪௫।௰௨௩
விமாைநர் ஹம்ஸயுக்ைதஸ் து। யாந்தி மாேஸாபவாஸிந:। ௪௫।௰௨௪
சக்ரவாகப்ரயுக்ேதந। பஞ்சராத்ேராபவாஸிந:। ௪௫।௰௨௪
தேதா பர்ஹிணயுக்ேதந। ஷட்ராத்ரம் உபவாஸிந:। ௪௫।௰௨௪
த்ரிராத்ரம் ஏகபக்ேதந। க்ஷபேயத் யஸ் து பாண்டவ। ௪௫।௰௨௫
அநந்தரம் ச ேயா அஸ்நீயாத்। தஸ்ய ேலாகா யதா மம। ௪௫।௰௨௫
பநீயம் பரேலாேகஷு। பாவநம் பரமம் ஸ்ம்ருதம்। ௪௫।௰௨௬
பாநீயஸ்ய ப்ரதாேநந। த்ருப்திர் பவதி ஸாஸ்வதீ। ௪௫।௰௨௬
பாநீயஸ்ய குணா திவ்யா:। ப்ேரதேலாேக ஸுகாவஹா:। ௪௫।௰௨௬
தத்ர புண்ேயாதகா நாம। நதீேதஷாம் ப்ரவர்தேத। ௪௫।௰௨௭
ஸதலம் ீ ஸலிலம் தத்ர। பிபந்தி ஹ்ய் அம்ருேதாபமம்। ௪௫।௰௨௭
ேய ச துஷ்க்ருதகர்மாண:। பூயம் ேதஷாம் ப்ரவர்தேத। ௪௫।௰௨௮
ஏஷா நதீமஹாராஜ। ஸர்வகாமதுகா ஸுபா। ௪௫।௰௨௮
அத்வநி கிந்நகாத்ரஸ் து। த்விேஜா ய: க்ஷுத்த்ருஷ்ணாந்வித:।
௪௫।௰௨௯
ப்ருச்சந் ஸதாந்நதாதாரம்। அப்ேயதி க்ருஹம் ஆஸயா। ௪௫।௰௨௯
தம் பூஜய ப்ரயத்ேநந। ேஸா அதிதிர் ப்ராஹ்மண: ஸ்ம்ருத:। ௪௫।௰௨௯
பிதேரா ேதவதாஸ் ைசவ। க்ருஷயஸ் ச தேபாதநா:। ௰௪௫।௫௰
பூஜிதா: பூஜிேத தஸ்மிந்। நிராேஸ து நிராஸகா:। ௰௪௫।௫௰
தம் ஏவ கச்சந்தம் அநுவ்ரஜந்தி। ேதவாஸ் ச ஸர்ேவ பிதரஸ் தைதவ।
௪௫।௰௩

தஸ்மிந் த்விேஜ பூஜிேத பூஜிதாஸ் ேத। கேத நிராேஸ ப்ரதியாந்தி நாஸம்।
௪௫।௰௩
அஹந்ய் அஹநி தாதவ்யம்। ப்ராஹ்மேணப்ேயா யுதிஷ்டிர। ௰௪௫।௫௧
ஆகமிஷ்யதி யத் பாத்ரம்। தத் பாத்ரம் தாரயிஷ்யதி। ௰௪௫।௫௧
ந ததா ஹவிேஷா ேஹாைமர்। ந புஷ்ைபர் நாநுேலபைந:। ௪௬।௰௰௧
அக்ெநௗ வா ஸுஹுேத ராஜந்। யதா ஹ்ய் அதிதிபூஜேந। ௪௬।௰௰௧
கபிலாயாம் து தத்தாயாம்। யத் பலம் ஜ்ேயஷ்டபுஷ்கேர। ௪௬।௰௰௨
தத் பலம் பாண்டவஸ்ேரஷ்ட। விப்ராணாம் பாதெஸௗசேந। ௪௬।௰௰௨
த்விஜபாேதாதகக்லிந்நா। யாவத் திஷ்டதி ேமதிநீ। ௪௬।௰௰௩
தாவத் புஷ்கரபாத்ேரஷு। பிபந்தி பிதேரா ஜலம்। ௪௬।௰௰௩
ேதவமால்யாபநயநம்। த்விேஜாச்சிஷ்டாபமார்ஜநம்। ௪௬।௰௰௪
ஸ்ராந்தஸம்வாஹநம் ைசவ। தீநஸ்ய பரிபாலநம்। ௪௬।௰௰௪
ஏைககம் பாண்டவஸ்ேரஷ்ட। ேகாப்ரதாநாத் விஸிஷ்யேத। ௪௬।௰௰௪
பாதெஸௗசம் ததாப்யங்கம்। தீபம் அந்நம் ப்ரதிஸ்ரயம்। ௪௬।௰௰௫
ததந்தி ேய மஹாராஜ। ேநாபஸர்பந்தி ேத யமம்। ௪௬।௰௰௫
ஸ்வாகேதநாக்நய: ப்ரீதா। ஆஸேநந ஸதக்ரது:। ௪௬।௰௰௬
பிதர: பாதெஸௗேசந। அந்நாத்ேயந ப்ரஜாபதி:। ௪௬।௰௰௬
அபயஸ்ய ப்ரதாேநந। பேவத் ப்ரீதிர் மமாதுலா। ௰௪௬।௫௨
ேயஷாம் தடாகாநி பஹூதகாநி। ப்ரபாஸ் ச கூபாஸ் ச ப்ரதிஸ்ரயாஸ் ச।
௪௬।௰௰௭
அந்நப்ரதாநம் மதுரா ச வாண।ீ யமஸ்ய ேத நிர்வசநா பவந்தி।
௪௬।௰௰௭
ஸவ்ருஷம் ேகாஸதம் ேதந। தத்தம் பவதி ஸாஸ்வதம்। ௪௬।௰௰௮

பாபம் கர்ம ச யத் கிம்சித்। ப்ரஹ்மஹத்யாஸமம் பேவத்। ௪௬।௰௰௯
ேஸாசேயத் கபிலாம் தத்த்வா। ஏதத் ைவ நாத்ர ஸம்ஸய:। ௪௬।௰௰௯
ப்ராஸாதா யத்ர ெஸௗவர்ணா। வேஸார்தாரா ச ஸ்யந்தேத। ௪௬।௰௧
கந்தர்வாப்ஸரேஸா யத்ர। தத்ர கச்சந்தி ேகாப்ரதா:। ௪௬।௰௧
ப்ரயச்சேத ய: கபிலாம் ஸவத்ஸாம்। காம்ஸ்ேயாபேதாஹாம்
கநகாக்ரஸ்ருங்கீம்। ௪௬।௰௧௧
யாந் யாந் ஹி காமாந் அபிவாஞ்சேத அெஸௗ। தாம்ஸ் தாந் அவாப்ேநாத்ய்
அமலாம்ஸ் ச ேலாகாந்। ௪௬।௰௧௧
யாவத் வத்ஸஸ்ய த்ெவௗ பாெதௗ। ஸிரஸ் ைசவ ப்ரத்ருஸ்யேத।
௪௬।௰௧௨
தாவத் ெகௗ: ப்ருதிவ ீஜ்ேஞயா। யாவத் கர்பம் ந முஞ்சதி। ௪௬।௰௧௨
தஸ்மிந் காேல ப்ரதாதவ்யா। விதிநா யா மேயாதிதா। ௪௬।௰௧௨
அந்தரிக்ஷகேதா வத்ேஸா। யாவத் ேயாந்யாம் ப்ரத்ருஸ்யேத।
௪௬।௰௧௩
தாவத் ெகௗ: ப்ருதிவ ீஜ்ேஞயா। யாவத் கர்பம் ந முஞ்சதி। ௪௬।௰௧௩
யாவந்தி தஸ்ய ேராமாணி। தாவத்வர்ஷாணி மாநவ:। ௪௬।௰௧௪
ஹம்ஸயுக்ேதந யாேநந। யுக்ேதநாப்ஸரஸாம் கைண:। ௰௪௬।௫௩
கந்தர்வாப்ஸரேஸாத்கீைத:। ஸ்வர்கேலாேக மஹீயேத। ௪௬।௰௧௪
திலேதநும் ப்ரவŠயாமி। யஸ் சாஸ்யா விதிர் உத்தம:। ௪௬।௰௧௫
ஸுவர்ணநாபிம் ய: க்ருத்வா। ஸுகூரம் க்ருஷ்ணமார்கணாம்।
௪௬।௰௧௫
குதபப்ரஸ்தரஸ்தாம் து। திலாம் க்ருத்வா ப்ரயத்நத:। ௪௬।௰௧௬

திைல: ப்ரஸ்தாதி தாம் தத்யாத்। ஸர்வரத்ைநர் அலம்க்ருதாம்।
௪௬।௰௧௬
ஸஸமுத்ரத்ருமா ைசவ। ஸைஸலவநகாநநா। ௪௬।௰௧௭
சதுரந்தா பேவத் தத்தா। ப்ருதிவ ீநாத்ர ஸம்ஸய:। ௪௬।௰௧௭
க்ருஷ்ணாஜிேந திலாம் க்ருத்வா। க்ருஷ்ணாம் வா யதி ேவதராம்।
௪௬।௰௧௮
ராஜேதஷு து பாத்ேரஷு। ேகாேணஷு மதுஸர்பிஷீ। ௰௪௬।௫௪
ப்ரீயதாம் தர்மராேஜதி। யத் வா மநஸி வர்தேத। ௪௬।௰௧௮
யாவஜ் ஜவக்ருதம் ீ பாபம்। ேதந தாேநந பூயேத। ௪௬।௰௧௮
தநம் ப்ராப்ேநாதி புண்ேயந। ெமௗேநநாஜ்ஞாம் ப்ரயச்சதி। ௪௭।௰௰௧
உபேபாகம் து தாேநந। ஜவிதம் ீ ப்ரஹ்மசர்யயா। ௪௭।௰௰௧
அஹிம்ஸயா பரம் ரூபம்। தீக்ஷயா குலஜந்ம ச। ௪௭।௰௰௨
பலமூலாஸநாத் ராஜ்யம்। ஸ்வர்க: பர்ணாஸேநா பேவத்। ௪௭।௰௰௨
பேயாபக்ஷ திவம் யாந்தி। ஸ்நாேநந த்ரவிணாதிகா:। ௪௭।௰௰௩
ஸாகம் ஸாதயேதா ராஜ்யம்। நாகப்ருஷ்டம் அநாஸநாத்। ௪௭।௰௰௩
ஸ்தண்டிேல ச ஸயாநஸ்ய। க்ருஹாணி ஸயநாநி ச। ௪௭।௰௰௪
சீரவல்கலதாரிணாம்। வஸ்த்ராண்ய் ஆபரணாநி ச। ௪௭।௰௰௪
ஸயநாஸநயாநாநி। ேய கதா ஹி தேபாவநம்। ௪௭।௰௰௫
அக்நிப்ரேவஸீ நியதம்। ப்ரஹ்மேலாேக மஹீயேத। ௪௭।௰௰௫
ரஸாநாம் ப்ரதிஸம்ஹாராத்। ெஸௗபாக்யம் அபிஜாயேத। ௪௭।௰௰௬
ஆமிஷப்ரதிேஷதாத் து। பவத்ய் ஆயுஷ்மதீப்ரஜா। ௪௭।௰௰௬
உதவாஸம் வேஸத் யஸ் து। நாகாநாம் அதிேபா பேவத்। ௪௭।௰௰௭
ஸத்யவாதீநரஸ்ேரஷ்ட। ேதவைதஹ் ஸஹ ேமாதேத। ௪௭।௰௰௭

கீர்திர் பவதி தாேநந। ஆேராக்யம் சாப்ய் அஹிம்ஸயா। ௪௭।௰௰௮
த்விஜஸுஸ்ரூஷயா ராஜ்யம்। த்விஜத்வம் சாபி புஷ்கலம்। ௰௪௭।௫௫
த்விஜஸுஸ்ரூஷயா ராஜ்யம்। திவ்யரூபம் அவாப்நுேத। ௪௭।௰௰௮
அந்நபாநப்ரதாேநந। காமேபாைகஸ் து த்ருப்யேத। ௪௭।௰௰௯
தீபாேலாகப்ரதாேநந। சக்ஷுஷ்மாஞ் ஜாயேத நர:। ௪௭।௰௰௯
கந்தமால்யப்ரதாேநந। துஷ்டிர் பவதி புஷ்கலா। ௪௭।௰௧
ேகஸஸ்மஸ்ரூந் தாரயேதா ஹ்ய்। அக்ரா பவதி ஸம்ததி:। ௪௭।௰௧
வாெக்ஷௗசம் மநஸ: ெஸௗசம்। யச் ச ெஸௗசம் ஜலாஸ்ரயம்।
௪௭।௰௧௧
த்ரிபி: ெஸௗைசர் உேபேதா ய:। ஸ ஸ்வர்கீநாத்ர ஸம்ஸய:।
௪௭।௰௧௧
தாம்ராயஸாநாம் பண்டாநாம்। தாதா ரத்நாதிேபா பேவத்। ௪௭।௰௧௨
லபேத து பரம் ஸ்தாநம்। பலவாந் புஷ்யேத ஸதா। ௪௭।௰௧௨
தாந்யம் க்ரேமணார்ஜிதவித்தஸம்சயம்। விப்ேர ஸுஸேலீ ேத ப்ரயச்சேத ய:।
௪௮।௰௰௧
வஸும்தரா தஸ்ய பேவத் ஸுதுஷ்டா। தாரா வஸூநாம் ப்ரதிமுஞ்சதீஹ।
௪௮।௰௰௧
புஷ்ேபாபேபாகம் ச பேலாபேபாகம்। ய: பாதபம் ஸ்பர்ஸயேத த்விஜாய।
௪௮।௰௰௨
ஸ ஸ்ரீஸம்ருத்தம் பஹுரத்நபூர்ணம்। லபத்ய் அதிஷ்டாநவரம் ஸம்ருத்தம்।
௪௮।௰௰௨
இந்தநாநி ச ேயா தத்யாத்। த்விேஜப்ய: ஸிஸிராகேம। ௪௮।௰௰௩
காயாக்நிதீப்திம் ெஸௗபாக்யம்। ஐஸ்வர்யம் சாதிகச்சதி। ௪௮।௰௰௩

சத்த்ரப்ரதாேநந க்ருஹம் வரிஷ்டம்। ரதம் தேதாபாநஹஸம்ப்ரதாநாத்।
௪௮।௰௰௪
துர்யப்ரதாேநந கவாம் தைதவ। ேலாகாந் அவாப்ேநாதி புரம்தரஸ்ய।
௪௮।௰௰௪
ஸ்வர்கீயம் அப்ய் ஆஹ ஹிரண்யதாநம்। ததா வரிஷ்டம் கநகப்ரதாநம்।
௪௮।௰௰௪
ைநேவஸிகம் ஸர்வகுேணாபபந்நம்। ப்ரயச்சேத ய: புருேஷா த்விஜாய।
௪௮।௰௰௫
ஸ்வாத்யாயசாரித்ரகுணாந்விதாய। தஸ்யாபி ேலாகா: ப்ரவரா பவந்தி।
௪௮।௰௰௫
ேயா ப்ரஹ்மேதயாம் ப்ரததாதி கந்யாம்। பூமிப்ரதாநம் ச கேராதி விப்ேர।
௪௮।௰௰௬
ஹிரண்யதாநம் ச ததா விஸிஷ்டம்। ஸ ஸக்ேரா ேலாகம் லபேத துராபம்।
௪௮।௰௰௬
ஸுசித்ரவஸ்த்ராபரேணாபதாநம்। தத்யாந் நேரா ய: ஸயநம் த்விஜாய।
௪௮।௰௰௭
ரூபாந்விதாம் தக்ஷவதீம் மேநாஜ்ஞாம்। பார்யாம் அயத்ேநாபசிதாம் லேபத்
ஸ:। ௪௮।௰௰௭
லவணஸ்ய து தாதாரஸ்। திலாநாம் ஸர்பிஷஸ் ததா। ௪௮।௰௰௮
ேதஜஸ்விேநா அபிஜாயந்ேத। ேபாகிநஷ் சிரஜவிந ீ :। ௪௮।௰௰௮
ஸ்வர்ேக அப்ஸேராபி: ஸஹ புக்தேபாகஸ்। ததஸ் ச்யுத: ஸலவத ீ ீம் ஸ
பார்யாம்। ௰௪௮।௫௬
ரூபாந்விதாம் தக்ஷவதீம் ஸுரக்தாம்। ஸுேகந தர்ேமண ததாபி காேல।
௰௪௮।௫௬

தஸ்ையவ ஸார்தம் ஸுரேலாகம் ஏதி। தஸ்ையவ சாந்யத் புநர் ஏதி ஜந்ம।
௰௪௮।௫௬
கீத்ருக்விதாஸ்வ் அவஸ்தாஸு। தத்தம் தாநம் ஜநார்தந। ௪௯।௰௰௧
இஹேலாேகஷ்வ் அநுபேவத்। புருஷஸ் தத் ப்ரவஹி ீ ேம। ௪௯।௰௰௧
கர்பஸ்தாஸ்யாதவா பால்ேய। ெயௗவேந வார்த்தேக அபி வா।
௪௯।௰௰௨
அவஸ்தாம் க்ருஷ்ண கதய। பரம் ெகௗதூஹலம் ஹி ேம। ௪௯।௰௰௨
வ்ருதாஜந்மாநி சத்வாரி। வ்ருதாதாநாநி ேஷாடஸ। ௪௯।௰௰௩
அபுத்ராணாம் வ்ருதா ஜந்ம। ேய ச தர்மபஹிஷ்க்ருதா:। ௪௯।௰௰௩
பரபாகம் ச ேய அஸ்நந்தி। பரதாரரதாஸ் ச ேய। ௪௯।௰௰௩
பர்ய் அஸ்தாநம் வ்ருதா தாநம்। ஸேதாஷம் பரிகீர்திதம்। ௪௯।௰௰௪
ஆரூடபதிேத ைசவ। அந்யாேயாபார்ஜிதம் ச யத்। ௪௯।௰௰௪
வ்யர்தம் சாப்ராஹ்மேண தாநம்। பதிேத தஸ்கேர ததா। ௪௯।௰௰௫
குேராஸ் சாப்ரீதிஜநேக। க்ருதக்ேந க்ராமயாஜேக। ௪௯।௰௰௫
ப்ரஹ்மபந்ெதௗ ச யத் தத்தம்। யத் தத்தம் வ்ருஷலீபெதௗ। ௪௯।௰௰௬
ேவதவிக்ரயிேண ைசவ। யஸ்ய ேசாபபதிர் க்ருேஹ। ௪௯।௰௰௬
ஸ்த்ரீநிர்ஜிேதஷு யத் தத்தம்। வ்யாலக்ராேஹ தைதவ ச। ௪௯।௰௰௭
பரிசாரேக ச யத் தத்தம்। வ்ருதாதாநாநி ேஷாடஸ। ௪௯।௰௰௭
தேமாவ்ருதஸ் து ேயா தத்யாத்। பயாத் க்ேராதாத் தைதவ ச।
௪௯।௰௰௮
வ்ருதா தாநம் து தத் ஸர்வம்। புங்க்ேத கர்பஸ்த ஏவ து। ௪௯।௰௰௮
ேஸர்ஷ்யாமந்யுமநாஸ் ைசவ। தம்பார்தம் சார்தகாரணாத்। ௪௯।௰௰௯
ேயா ததாதி த்விஜாதிப்ய:। ஸ பாலத்ேவ தத் அஸ்நுேத। ௪௯।௰௰௯

ய: ஸுத்தி: ப்ரயேதா பூத்வா। ப்ரஸந்நமாநேஸந்த்ரிய:। ௰௪௯।௫௮
ப்ரததாதி த்விஜாதிப்ேயா। ெயௗவநஸ்தஸ் தத் அஸ்நுேத। ௰௪௯।௫௮
ேதேஸ ேதேஸ ச பாத்ேர ச। ேயா ததாதி த்விஜாதிஷு। ௪௯।௰௧
மநஸா பரிதுஷ்ேடந। ெயௗவநஸ்தஸ் தத் அஸ்நுேத। ௪௯।௰௧
தஸ்மாத் ஸர்வாஸ்வ் அவஸ்தாஸு। ஸர்வதாநாநி பார்திவ। ௪௯।௰௧௧
தாதவ்யாநி த்விஜாதிப்ய:। ஸ்வர்கமர்கம் அபப்ஸதா ீ । ௪௯।௰௧௧
த்ைரேலாக்ய க்ருஷ்ண பூதாநாம்। ஸர்வேலாகாத்மேகா ஹ்ய் அஸி।
௫௰।௰௰௧
ந்ருணாம் யதுவரஸ்ேரஷ்ட। துஷ்யேஸ ேகந கர்மணா। ௫௰।௰௰௧
ப்ராஹ்மைண: பூஜிைதர் நித்யம்। பூஜிேதா அஹம் ந ஸம்ஸய:।
௫௰।௰௰௨
நிர்பர்த்ஸிைதஸ் ச நிர்பக்நஸ்। தஸ்யாஹம் ஸர்வகர்மஸு।
௫௰।௰௰௨
விப்ராபரா கதிர் மஹ்யம்। யஸ் தாந் பூஜயேத ந்ருப। ௫௰।௰௰௩
தம் அஹம் ேதந ரூேபண। ப்ரபஸ்யாமி யுதிஷ்டிர। ௫௰।௰௰௩
காணா: குப்ஜாஸ் ச கஞ்ஜாஸ் ச। தரித்ரா வ்யாதிதாஸ் ச ேய।
௫௰।௰௰௪
நாவமந்ேயத் த்விஜாந் ப்ராஜ்ேஞா। மம ரூபம் ஹிதம் ததா। ௫௰।௰௰௪
பஹேவா அபி ந ஜாநந்ேத। நரா ஜ்ஞாநபஹிஷ்க்ருதா:। ௫௰।௰௰௫
யதாஹம் த்விஜரூேபண। சராமி ப்ருதிவதேல ீ । ௫௰।௰௰௫
ேய ேகசித் ஸாகராந்தாயாம்। ப்ருதிவ்யாம் கீர்திதா த்விஜா:। ௫௰।௰௰௬
தத் ரூபம் ஹி பரம் மஹ்யம்। ேயா அர்சேயத் அர்சேயத் து ஸ:।
௫௰।௰௰௬

தத்ரூபாந் க்நந்தி ேய விப்ராந்। விகர்மஸு ச யுஞ்ஜந்தி। ௫௰।௰௰௭
அப்ேரஷேண ப்ேரஷயந்ேதா। தாஸத்வம் காரயந்தி ஹி। ௫௰।௰௰௭
ம்ருதாம்ஸ் தாந் கரபத்த்ேரந। யமதூதா மஹாபலா:। ௫௰।௰௰௮
நிக்ருந்தந்தி யதா காஷ்டம்। ஸூத்ரமார்ேகண ஸில்பிந:। ௫௰।௰௰௮
ேய ைசவாஸ்லŠணயா வாசா। தர்ஜயந்தி நராதமா:। ௫௰।௰௰௯
வதந்தி க்ேராதநி:ஸ்பர்ஸம்। பாேதநாபிஹநந்தி ச। ௫௰।௰௰௯
ம்ருதாம்ஸ் தாந் யமேலாேகஷு। நிஹத்ய தரணதேல ீ । ௫௰।௰௧
உர: பாேதந சாக்ரம்ய। க்ேராதஸம்ரக்தேலாசந:। ௫௰।௰௧
அக்நிவர்ைணஸ் ச ஸம்தம்ைஸர்। ஜிஹ்வாம் உத்தரேத யம:। ௫௰।௰௧
பாபாஸ் ச நாரேக வஹ்ெநௗ। தாஸ்யந்ேத யமகிம்கைர:। ௰௫௰।௫௯
ேய து விப்ராந் நிரீக்ஷந்தி। பாபா: பாேபந சக்ஷுஷா। ௫௰।௰௧௧
அப்ரஹ்மண்யா: ஸ்ருேதர் பாஹ்யா। நித்யம் ப்ரஹ்மத்விேஷா நரா:।
௫௰।௰௧௧
ேதஷாம் ேகாரா மஹாகாயா। வஜ்ரதுண்டா பயாநகா:। ௫௰।௰௧௨
உத்தரந்தி முஹூர்ேதந। சக்ஷு: காகா யமாஜ்ஞயா। ௫௰।௰௧௨
யஸ் தாடயதி விப்ராம்ஸ் து। க்ஷதம் குர்யாத் ஸேஸாணிதம்।
௫௰।௰௧௩
அஸ்திபங்கம் ச ய: குர்யாத்। ப்ராைணர் வாபி விேயாஜேயத்।
௫௰।௰௧௩
ப்ரஹ்மக்ந: ேஸா அநுபூர்ேவண। நரேக வஸுதாதிப। ௫௰।௰௧௪
கீைலர் விநிஹத: பாேபா। மீராயாம் பச்யேத ப்ருஸம்। ௫௰।௰௧௪
ஸுபஹூநி ஸஹஸ்ராணி। வர்ஷாணாம் க்ேலஸபாக் பேவத்।
௫௰।௰௧௫

ரவாந் முஞ்சதி துர்புத்திர்। ந தஸ்ைம நிஷ்க்ருதி: ஸ்ம்ருதா। ௫௰।௰௧௫
தஸ்மாத் விப்ரா நரஸ்ேரஷ்ட। நமஸ்கார்யாஸ் ச நித்யஸ:। ௫௰।௰௧௬
அந்நபாநப்ரதாைநஸ் து। பூஜார்ஹா: ஸததம் த்விஜா:। ௫௰।௰௧௬
ஆமந்த்ரயித்வா ேயா விப்ராந்। கந்ைதர் மால்ையஸ் ச மாநவ:।
௫௰।௰௧௭
தர்பேயச் ச்ரத்தயா யுக்த:। ஸ மாம் அர்சயேத ஸதா। ௫௰।௰௧௭
ஸ மாம் ப்ரஸாதேயச் ைசவ। ஸ ச மாம் பரிேதாஷேயத்। ௫௰।௰௧௭
தேபாதமாந்விேதஷ்வ் ஏவ। நித்யம் பூஜாம் ப்ரேயாஜேயத்। ௰௫௰।௬௰
ேய ப்ராஹ்மணா: ேஸா அஹம் அஸம்ஸயம் ந்ருப। ேதஷ்வ் அர்சிேதஷ்வ்
அர்சிேதா அஹம் யதாவத்। ௫௰।௰௧௮
ேதஷ்வ் ஏவ துஷ்ேடஷ்வ் அஹம் ஏவ துஷ்ேடா। ைவரம் ச ைதர் யஸ்ய
மமாபி ைவரம்। ௫௰।௰௧௮
ஸுகந்திதூபாதிபிர் அப்யர்ச்ய விப்ரம்। தம் அச்யுதம் நார்சயேத ஸைதவ।
௰௫௰।௬௧௰௰௧
ேயா பக்ஷேதாயாதிபிர் அந்நபாைநர்। அநுேலபாசமநப்ரதாைந:।
௰௫௰।௬௧௰௰௩
ய: பூஜேயத் ேபாஜயித்வா த்விஜாக்ர்யாந்। ஸம்பூஜயித்வா பரிேதாஷேயச் ச।
௰௫௰।௬௧௰௰௫
அர்க்யாதிநா ேய அபிபூஜ்ய। பூஜயந்தி ஸதாச்யுதம்। ௰௫௰।௬௧௰௰௭
ேதைநவ மாம் ஏவ ஸதா। பூஜயந்தி ந ஸம்ஸய:। ௰௫௰।௬௧௰௰௮
விரூபாஸ் ச ஸுரூபாஸ் ச। விஜநாந் நிஷ்கலாந் அபி।
௰௫௰।௬௧௰௰௯
க்ருபயா பாவிதாத்மாேநா। ேய அர்சயந்தி த்விேஜாத்தமாந்।
௰௫௰।௬௧௰௧௰

அநஸூயா ஹிதாத்மாேநா। விப்ராந் ஆராதேத க்வசித்। ௰௫௰।௬௧௰௧௧
அஸம்ஸயம் ஸதா பக்த்யா। மாம் ஏவார்சயேத ஹி ஸ:।
௰௫௰।௬௧௰௧௨
தத: பவித்ரம் அதுலம்। ந புண்யம் அதிகம் தத:। ௰௫௰।௬௧௰௧௩
யஸ் சந்தைந: ஸாகருகந்தமால்ையர்। அப்யர்சேயத் தாருமயம்ீ மமார்சாம்।
௫௰।௰௧௯
நாெஸௗ மமார்சாம் அர்சயேத அர்சயந் ைவ। விப்ரார்சநாத் அர்சித ஏவ
சாஹம்। ௫௰।௰௧௯
விப்ரப்ரஸாதாந் மத ஏவ சாஹம்। விப்ரப்ரஸாதாத் அஸுராஞ் ஜயாமி।
௫௰।௰௨
விப்ரப்ரஸாதாத் புருேஷாத்தமத்வம்। விப்ரப்ரஸாதாத் அஜிேதா அஸ்மி
நித்யம்। ௫௰।௰௨
ஸாயம் ப்ராதஸ் ச ய: ஸம்த்யாம்। உபாஸ்ேத அஸ்கந்நமாநஸ:।
௫௧।௰௰௧
ஜபந் ஹி பாவநீம் ேதவம்ீ । காயத்ரீம் ேவதமாதரம்। ௫௧।௰௰௧
ஸ தயா பாவிேதா ேதவ்யா। ப்ராஹ்மண: பூதகில்பிஷ:। ௫௧।௰௰௨
ந ஸேதத் ீ ப்ரதிக்ருஹ்ணாந:। ப்ருதிவம்ீ து ஸஸாகராம்। ௫௧।௰௰௨
ேய சாந்ேய தாருணா: ேகசித்। க்ரஹா: ஸூர்யாதேயா திவி। ௫௧।௰௰௩
ேத சாஸ்ய ெஸௗம்யா ஜாயந்ேத। ஸிவா: ஸிவதமாஹ் ஸதா।
௫௧।௰௰௩
யத்ரதத்ரகதம் ைசநம்। தாருணா: பிஸிதாஸநா:। ௫௧।௰௰௪
ேகாரரூபா மஹாகாயா। ந கர்ஷந்தி த்விேஜாத்தமம்। ௫௧।௰௰௪
யாவந்தஸ் ச ப்ருதிவ்யாம் ஹி। சீர்ணேவதவ்ரதா த்விஜா:। ௫௧।௰௰௫
அசீர்ணவ்ரதேவதா வா। விகர்மபதம் ஆஸ்ரிதா:। ௫௧।௰௰௫

ேதஷாம் து பாவநார்தம் ஹி। நித்யம் ஏவ யுதிஷ்டிர। ௫௧।௰௰௬
த்ேவ ஸம்த்ேய ஹ்ய் உபதிஷ்ேடத। தத் அஸ்கந்நம் மஹாவ்ரதம்।
௫௧।௰௰௬
நாஸ்தி கிம்சிந் நரவ்யாக்ர। துஷ்க்ருதம் ப்ராஹ்மணஸ்ய து। ௫௧।௰௰௭
யத்ர ஸ்தித: ஸதாத்யாத்ேம। த்ேவ ஸம்த்ேய ஹ்ய் உபதிஷ்டதி।
௫௧।௰௰௭
பூர்ணாஹுதிம் வா ப்ராப்ேநாதி। ஜுஹுேத ச த்ரேயா அக்நய:।
௫௧।௰௰௮
தஹந்தி துஷ்க்ருதம் தஸ்ய। அக்நேயா நாத்ர ஸம்ஸய:। ௫௧।௰௰௮
ஏவம் ஸர்வஸ்ய விப்ரஸ்ய। கில்பிஷம் நிர்தஹாம்ய் அஹம்।
௫௧।௰௰௯
உேப ஸம்த்ேய ஹ்ய் உபாஸிநஸ்। தஸ்மாத் ஸர்வஸுசிர் த்விஜ:।
௫௧।௰௰௯
ைதேவ பித்ர்ேய ச யத்ேநந। நிேயாக்தவ்ேயா அஜுகுப்ஸித:। ௫௧।௰௧
ஜுகுப்ஸிதஸ் து தச் ச்ராத்தம்। தஹத்ய் அக்நிர் இேவந்தநம்। ௫௧।௰௧
புராணம் மாநவா தர்மா:। ஸாங்ேகா ேவதஸ் சிகித்ஸிதம்। ௫௨।௰௰௧
ஆஜ்ஞாஸித்தாநி சத்வாரி। ந ஹந்தவ்யாநி ேஹதுபி:। ௫௨।௰௰௧
ஹத்வா ஹ்ய் ஏதாநி ஸம்மூட:। கல்பம் தமஸி பச்யேத। ௫௨।௰௰௧
ந ப்ராஹ்மணம் பரீேக்ஷத। ஸ்ராத்தகாேல ஹ்ய் உபஸ்திேத।
௫௨।௰௰௨
ஸுமஹாந் பரிவாேதா ஹி। ப்ராஹ்மணாநாம் பரீக்ஷேண। ௫௨।௰௰௨
காணா: குண்டாஸ் ச ஷண்டாஸ் ச। தரித்ரா வ்யாதிதாஸ் ததா।
௫௨।௰௰௩

ஸர்ேவ ஸ்ராத்ேத நிேயாக்தவ்யா। மிஸ்ரிதா ேவதபாரைக:। ௫௨।௰௰௩
அக்ஷயம் து பேவச் ச்ராத்தம்। ஏதத் தர்மவிேதா விது:। ௫௨।௰௰௩
ப்ராஹ்மேணா ஹி மஹத் பூதம்। ஜந்மநா ஸஹ ஜாயேத। ௫௨।௰௰௪
ேலாகா ேலாேகஸ்வராஸ் சாபி। ஸர்ேவ ப்ராஹ்மணபூஜகா:। ௫௨।௰௰௪
ப்ராஹ்மணா: குபிதா ஹந்யுர்। பஸ்ம குர்யுஸ் ச ேதஜஸா। ௫௨।௰௰௫
ேலாகாந் அந்யாந் ஸ்ருேஜயுஸ் ச। ேலாகபாலாம்ஸ் ததாபராந்।
௫௨।௰௰௫
ப்ராஹ்மணா ஹி மஹாத்மாேநா। விரஜா: ஸ்வர்கஸம்க்ரமா:।
௫௨।௰௰௬
ப்ராஹ்மணாநாம் பரீவாதாத்। அஸுரா: ஸலிேலஸயா:। ௫௨।௰௰௬
அேபய: ஸாகேரா ையஸ் து। க்ருத: ேகாபாந் மஹாத்மபி:। ௫௨।௰௰௭
ேயஷாம் ேகாபாக்நிர் அத்யாபி। தண்டேக ேநாபஸாம்யதி। ௫௨।௰௰௭
ஏேத ஸ்வர்கஸ்ய ேநதாேரா। பூமிேதவா: ஸநாதநா:। ௫௨।௰௰௮
ஏபிஸ் சாதிக்ருத: பந்தா। ேதவயாந: ஸ உச்யேத। ௫௨।௰௰௮
ேத பூஜ்யாஸ் ேத நமஸ்கார்யாஸ்। ேதஷு ஸர்வம் ப்ரதிஷ்டிதம்।
௫௨।௰௰௯
ேத ைவ ேலாகாந் இமாந் ஸர்வாந்। தாரயந்தி பரஸ்பரம்। ௫௨।௰௰௯
ப்ரமாணம் ஸர்வேலாகாநாம்। நியதா ப்ரஹ்மசாரிண:। ௫௨।௰௧
தாந் அபாஸ்ரித்ய திஷ்டந்ேத। த்ரேயா ேலாகா: ஸநாதநா:। ௫௨।௰௧
கூடஸ்வாத்யாயதபேஸா। ப்ராஹ்மணா: ஸம்ஸிதவ்ரதா:। ௫௨।௰௧௧
வித்யாஸ்நாதா வ்ரதஸ்நாதா। அநபாஸ்ரித்யஜவிந ீ :। ௫௨।௰௧௧
ஆஸவிஷா ீ இவ க்ருத்தா। உபசர்யா ஹி ப்ராஹ்மணா:। ௫௨।௰௧௨
தபஸா தீப்யமாநாஸ் ேத। தேஹயு: ஸாகராந் அபி। ௫௨।௰௧௨

ப்ராஹ்மேணஷு ச துஷ்ேடஷு। துஷ்யந்ேத ஸர்வேதவதா:। ௫௨।௰௧௩
ப்ராஹ்மணாநாம் நமஸ்காைர:। ஸூர்ேயா திவி விராஜேத। ௫௨।௰௧௩
ப்ராஹ்மணாநாம் பரீவாதாத்। பேதயுர் அபி ேதவதா:। ௫௨।௰௧௩
துரி ேய நாவஸதந்தி ீ । ப்ரணேதீ யஜ்ஞவஹ்நய:। ௫௨।௰௧௪
ேபாஜநாச்சாதைநர் தாைநஸ்। தாரயந்தி தேபாதநா:। ௫௨।௰௧௪
ேத கதி: ஸர்வபூதாநாம்। அத்யாத்மகதிசிந்தகா:। ௫௨।௰௧௫
ஆதிமத்யாவஸாநாநாம்। ஜ்ஞாநாநாம் சிந்நஸாம்ஸயா:। ௫௨।௰௧௫
பராபரவிேஸஷஜ்ஞா। ேநதார: பரமாம் கதிம்। ௫௨।௰௧௬
அவத்யா ப்ராஹ்மணாஸ் தஸ்மாத்। பாேபஷ்வ் அபி ரதா: ஸதா।
௫௨।௰௧௬
யஸ் ச ஸர்வம் இதம் ஹந்யாத்। ப்ராஹ்மணம் வாபி தத்ஸமம்।
௫௨।௰௧௭
ேஸா அக்நி: ேஸா அர்ேகா மஹாேதஜா। விஷம் பவதி ேகாபித:।
௫௨।௰௧௮
பூதாநாம் அக்ரபுக் விப்ேரா। வர்ணஸ்ேரஷ்ட: பிதா குரு:। ௫௨।௰௧௮
ந ஸ்கந்தேத ந வ்யதேத। ந ச நஸ்யதி கர்ஹிசித்। ௫௨।௰௧௯
வரிஷ்டம் அக்நிேஹாத்ராத் தி। ப்ராஹ்மணஸ்ய முேக ஹுதம்।
௫௨।௰௧௯
அவித்ேயா வா ஸவித்ேயா வா। ப்ராஹ்மேணா மம ைதவதம்।
௫௨।௰௨
ப்ரணதஸ்ீ சாப்ரணதஸ்ீ ச। யதாக்நிர் ைதவதம் மஹத்। ௫௨।௰௨
ஏவம் வித்வாந் அவித்வாந் வா। ப்ராஹ்மேணா ைதவதம் மஹத்।
௰௫௨।௬௩
ஸ்மஸாேநஷ்வ் அபி ேதஜஸ்வ।ீ பாவேகா ைநவ துஷ்யதி। ௫௨।௰௨க

ஹவ்யகவ்யவ்யேபேதா அபி। ப்ராஹ்மேணா ைநவ துஷ்யதி।
௫௨।௰௨௧
ஸர்வதா ப்ராஹ்மணா: பூஜ்யா:। ஸர்வதா ைதவதம் மஹத்। ௫௨।௰௨௨
தஸ்மாத் ஸர்வப்ரயத்ேநந। ரேக்ஷத் ஆபத்ஸு ப்ராஹ்மணாந்।
௫௨।௰௨௨
ஸக்ேரா அபி ஹி த்விேஜந்த்ராணாம்। பிேபதி விபுதாதிப:। ௫௨।௰௨௨
தாநம் ேதவா: ப்ரஸம்ஸந்தி। இதி தர்மவிேதா விது:। ௫௩।௰௰௧
நாநாதாநவிதிம் தஸ்மாச்। ஸ்ருணுஷ்வ ஸுஸமாஹித:। ௫௩।௰௰௧
ஹிரண்யதாநம் ேகாதாநம்। ப்ருதிவதாநம் ீ ஏவ ச। ௫௩।௰௰௨
ஏதாநி ைவ பவித்ராணி। தாரயந்தி பரத்ர ச। ௫௩।௰௰௨
யத் யத் இஷ்டதமம் ேலாேக। யச் சாஸ்தி தயிதம் க்ருேஹ।
௫௩।௰௰௩
தத் தத் குணவேத ேதயம்। தத் ஏவாக்ஷயம் இச்சதா। ௫௩।௰௰௩
ஸுவர்ணதாநம் ேகாதாநம்। ப்ருதிவதாநம் ீ ஏவ ச। ௫௩।௰௰௪
ஏதத் ப்ரயச்சமாேநா ைவ। ஸர்வபாைப: ப்ரமுச்யேத। ௫௩।௰௰௪
யத் ததாஸி விஸிஷ்ேடப்ேயா। யச் சாஸ்நாஸி திேந திேந। ௫௩।௰௰௫
தத் ேத வித்தம் அஹம் மந்ேய। ேஸஷம் கஸ்யாபி ரக்ஷஸி।
௫௩।௰௰௫
துல்யநாமாநி ஸஸ்தாநி। த்ரீணி துல்யபலாநி ச। ௫௩।௰௰௬
நித்யம் ேதயாநி ராேஜந்த்ர। காவ: ப்ருத்வ ீஸரஸ்வதீ। ௫௩।௰௰௬
தத்வஜ் ஜலம் அமித்ரக்ந। தத் துல்யபலநாமத:। ௫௩।௰௰௭
தத்த்வா த்ருப்திம் அவாப்ேநாதி। யத்ரதத்ராபிஜாயேத। ௫௩।௰௰௭

ஸம்கல்பவிஹிேதா ேயா அர்ேதா। ப்ராஹ்மேணப்ய: ப்ரதீயேத।
௫௩।௰௰௮
அர்திப்ேயா ஹ்ய் அர்தேஹதுப்ேயா। மநஸ்வ ீேதந ஜாயேத।
௫௩।௰௰௮
ஸதேத ீ த்விஜமுக்யாய। ேயா அர்திேந ந ப்ரயச்சதி। ௫௩।௰௰௯
அமர்ேத ஸதி துர்புத்திர்। நரகாேயாபபத்யேத। ௫௩।௰௰௯
ேதநேவா அநடுஹஸ் ைசவ। சத்த்ரம் வஸ்த்ரம் உபாநெஹௗ। ௫௩।௰௧
ேதயாநி யாசமாேநப்ய:। பாநம் அந்நம் தைதவ ச। ௫௩।௰௧
ஏவம் தாநம் ஸமுத்திஷ்டம்। வ்யுஷ்டிமத் தாரகம் பரம்। ௫௩।௰௧
ஏஷ ேத விஹிேதா யஜ்ஞ:। ஸ்ரத்தாபூத: ஸதக்ஷிண:। ௫௩।௰௧௧
விஸிஷ்ட: ஸ ச யஜ்ேஞஷு। தததாம் அநஸூயயா। ௫௩।௰௧௧
தாநவித்பி: க்ருத: பந்தா। ேயந யாந்தி மநீஷிண:। ௫௩।௰௧௨
ையர் தாைநஸ் தர்பயிஷ்யந்தி। ஸ்ரத்தாபூைதர் த்விேஜாத்தமாந்।
௫௩।௰௧௨
யதா ஹி ஸுக்ருேத ேக்ஷத்ேர। பலம் விந்ததி ேக்ஷத்ரிக:। ௫௩।௰௧௩
ஏவம் தத்த்வா ப்ராஹ்மேணப்ேயா। தாதா பலம் உபாஸ்நுேத।
௫௩।௰௧௩
ப்ராஹ்மணாஸ் ைசவ வித்யந்ேத। ஸத்யவந்ேதா பஹுஸ்ருதா:।
௫௩।௰௧௪
ந ததாதி ச தாநாநி। ேமாகம் தஸ்ய தநார்ஜநம்। ௫௩।௰௧௪
உத்தாேயாத்தாய ேபாத்தவ்யம்। கிம் அத்ய ஸுக்ருதம் மயா।
௫௩।௰௧௫
தத்தம் வா தாபிதம் வாபி। ேவாத்ஸாஹ்யம் அபி வா க்ருதம்।
௫௩।௰௧௫

உத்தாேயாத்தாய தாதவ்யம்। ப்ராஹ்மேணப்ேயா யுதிஷ்டிர। ௫௩।௰௧௬
ஆகமிஷ்யதி யத் பாத்ரம்। தத் பாத்ரம் தாரயிஷ்யதி। ௫௩।௰௧௬
யச் ச ேவதமயம் பாத்ரம்। யச் ச பாத்ரம் தேபாமயம்। ௫௩।௰௧௭
அஸம்கீர்ணம் ச யத் பாத்ரம்। தத் பாத்ரம் தாரயிஷ்யதி। ௫௩।௰௧௭
அத்யாயம் தபேஸா வŠேய। தந் ேம நிகதத: ஸ்ருணு। ௫௪।௰௰௧
தபேஸா ஹி பரம் நாஸ்தி। தபஸா விந்தேத பலம்। ௫௪।௰௰௧
க்ருஷயஸ் தப ஆஸ்தாய। ேமாதந்ேத ைதவைத: ஸஹ। ௫௪।௰௰௨
தபஸா ப்ராப்யேத ஸ்வர்கம்। தபஸா ப்ராப்யேத யஸ:। ௫௪।௰௰௨
ஆயு:ப்ரகர்ஷம் ேபாகாம்ஸ் ச। தபஸா விந்தேத நர:। ௫௪।௰௰௩
ஜ்ஞாநம் விஜ்ஞாநம் ஆஸ்திக்யம்। ெஸௗபாக்யம் ரூபம் உத்தமம்।
௫௪।௰௰௩
தபஸா லப்யேத ஸர்வம்। மநஸா யத் யத் இச்சதி। ௫௪।௰௰௪
நாதப்ததபேஸா யாந்தி। ப்ரஹ்மேலாகம் கதாசந। ௫௪।௰௰௪
யத் கார்யம் கிம்சித் ஆஸ்தாய। புருஷஸ் தப்யேத தப:। ௫௪।௰௰௫
ஸர்வம் தத் ஸமவாப்ேநாதி। பரத்ேரஹ ச மாநவ:। ௫௪।௰௰௫
ஸுராப: பாரதாரீ ச। ப்ரூணஹா குருதல்பக:। ௫௪।௰௰௬
தபஸா தரேத ஸர்வம்। ஸர்வதஸ் ச விமுச்யேத। ௫௪।௰௰௬
அபி ஸர்ேவஸ்வர: ஸ்தாணுர்। விஷ்ணுஸ் ைசவ ஸநாதந:। ௫௪।௰௰௭
ப்ரஹ்மா ஹுதாஸந: ஸக்ரஸ்। தபஸ்யந்தி ஸநாதநா:। ௫௪।௰௰௭
ஷடஸதிஸஹஸ்ராணி ீ । முநீநாம் ஊர்த்வேரதஸாம்। ௫௪।௰௰௮
தபஸா திவி ேமாதந்ேத। ஸேமதா ைதவைத: ஸஹ। ௫௪।௰௰௮
தபஸா ப்ராப்யேத ராஜ்யம்। ஸக்ர: ஸர்வஸுேரஸ்வர:। ௫௪।௰௰௯

தபஸா பாலயந் ஸர்வம்। அஹந்ய் அஹநி வ்ருத்ரஹா। ௫௪।௰௰௯
ஸூர்யாசந்த்ரமெஸௗ ேதெவௗ। ஸர்வேலாகஹிேத ரெதௗ। ௫௪।௰௧
தபைஸவ ப்ரகாேஸேத। நக்ஷத்ராணி க்ரஹாஸ் ததா। ௫௪।௰௧
ந சாஸ்தி தத் ஸுகம் ேலாேக। யத் விநா தபஸா கில। ௫௪।௰௧௧
தபைஸவ ஸுகம் ஸர்வம்। இதி தர்மவிேதா விது:। ௫௪।௰௧௧
விஸ்வாமித்ரஸ் ச தபஸா। ப்ராஹ்மணத்வம் உபாகத:। ௰௫௪।௬௪
ஸர்வம் ச தபஸாப்ேயதி। ஸர்வம் ச ஸுகம் அஸ்நுேத। ௫௪।௰௧௨
தபஸ் தப்யதி ேயா அரண்ேய। முநிர் மூலபலாஸந:। ௫௪।௰௧௨
க்ருசம் ஏகாம் அபி படந்। ஸ யாதி பரமாம் கதிம்। ௫௪।௰௧௨
தஸ்மாத் தப: ஸமாஸ்தாய। ப்ரார்தேயத் யத் அபப்ஸிதம் ீ । ௰௫௪।௬௫
ஸத்யம் ஏவ பரம் ப்ரஹ்ம। ஸத்யம் ஏவ பரம் தப:। ௫௫।௰௰௧
ஸத்யம் ஏவ பேரா யஜ்ஞ:। ஸத்யம் ஏவ பரம் ஸ்ருதம்। ௫௫।௰௰௧
ஸத்யம் ேதேவஷு ஜாகர்தி। முக்தி: ஸத்யதேரா: பலம்। ௫௫।௰௰௧
தேபா யஸஸ் ச புண்யம் ச। பித்ருேதவர்ஷிபூஜநம்। ௫௫।௰௰௨
ஆத்ேயா விதிஸ் ச வித்யா ச। ஸர்வம் ஸத்ேய ப்ரதிஷ்டிதம்।
௫௫।௰௰௨
ஸத்யம் யஜ்ஞஸ் ததா ேவதா। மந்த்ரா ேதவ ீஸரஸ்வதீ। ௫௫।௰௰௩
வ்ரதசர்யா ததா ஸத்யம்। ஓம்கார: ஸத்யம் ஏவ ச। ௫௫।௰௰௩
ஸத்ேயந வாயுர் அப்ேயதி। ஸத்ேயந தபேத ரவி:। ௫௫।௰௰௪
ஸத்ேயந சாக்நிர் தஹதி। ஸ்வர்கம் ஸத்ேயந கச்சதி। ௫௫।௰௰௪
ஸத்ேயந சாப: க்ஷிபதி। பர்ஜந்ய: ப்ருதிவதேல ீ । ௫௫।௰௰௪
பாரணம் ஸர்வேவதாநாம்। ஸர்வதீர்தாவகஹநஹ்। ௫௫।௰௰௫

ஸத்யம் ச வதேதா ேலாேக। தத் ஸமம் ஸ்யாந் ந ஸம்ஸய:।
௫௫।௰௰௫
அஸ்வேமதஸஹஸ்ரம் ச। ஸத்யம் ச துலயா த்ருதம்। ௫௫।௰௰௬
அஸ்வேமதஸஹஸ்ராத் தி। ஸத்யம் ஏதத் விஸிஷ்யேத। ௫௫।௰௰௬
முநய: ஸத்யநிரதா। முநய: ஸத்யவிக்ரமா:। ௰௫௫।௬௬
முநய: ஸத்யப்ரபதா:। பராம் ஸித்திம் இேதா கதா:। ௰௫௫।௬௬
ஸத்ேயந ேதவா: ப்ரீயந்ேத। பிதேரா ப்ராஹ்மணாஸ் ததா। ௫௫।௰௰௭
ஸத்யம் ஆஹு: பரம் தர்மம்। தஸ்மாத் ஸத்யம் ந ேலாபேயத்।
௫௫।௰௰௭
முநய: ஸத்யநிரதாஸ்। தஸ்மாத் ஸத்யம் விஸிஷ்யேத। ௫௫।௰௰௮
ஸ்வர்ேக ஸத்யபரா நித்யம்। ேமாதந்ேத ேதவதா இவ। ௫௫।௰௰௮
அப்ஸேராகணஸம்கீர்ைணர்। விமாைநர் உபயாந்தி ேத। ௫௫।௰௰௯
வக்தவ்யம் ஹி ஸதா ஸத்யம்। ந ஸத்யாத் வித்யேத பரம்।
௫௫।௰௰௯
ஏதத் ப்ரமாணம் ய: குர்யாத்। ஸர்வயஜ்ஞபலம் லேபத்। ௰௫௫।௬௭
அகாேத விமேல ஸுத்ேத। ஸத்யதீர்ேத ஹ்ரேத ஸுேப। ௫௫।௰௧
ஸ்நாதவ்யம் மநஸா யுக்ைத:। ஸ்நாநம் தத் பரமம் ஸ்ம்ருதம்।
௫௫।௰௧
ஆத்மார்ேத ச பரார்ேத வா। புத்ரார்ேத வாபி பார்திவ। ௫௫।௰௧௧
ேய அந்ருதம் நாபிபாஷந்ேத। ேத நரா: ஸ்வர்ககாமிந:। ௫௫।௰௧௧
அபி ேசதம் புரா கீதம்। தர்மவித்பிர் யுதிஷ்டிர। ௫௫।௰௧௨
ய: ஸத்யவாதீபுருேஷா। நாந்ருதம் பரிபாஷேத। ௫௫।௰௧௨

ஸம்ப்ராப்ய விரஜாம்ல் ேலாகாந்। உஷித்வா ஸாஸ்வதீ: ஸமா:।
௫௫।௰௧௩
ஸுசீநாம் ஸ்ரீமதாம் ேகேஹ। ஜாயேத ஸுமஹாமதி:। ௫௫।௰௧௩
வித்யாேராக்யஸுைகஸ்வர்ையர்। யுக்ேதா ேயாகபேரா பேவத்।
௰௫௫।௬௮
ஆதித்யசந்த்ராவ் அநலாநிெலௗ ச। த்ெயௗர் பூமிர் ஆேபா ஹ்ருதயம் யமஸ்
ச। ௫௫।௰௧௪
அஹஸ் ச ராத்ரிஸ் ச உேப ச ஸம்த்ேய। தர்மஸ் ச ஜாநாதி நரஸ்ய
வ்ருத்தம்। ௫௫।௰௧௪
தஸ்மாந் ந வாச்யம் அந்ருதம் ஹி ஸத்பிர்। ஏவம்விைதர் தர்மவிேதா
வதந்தி। ௫௫।௰௧௫
ஸத்யம் வதம்ஸ் ேதஜஸா தீப்யமாேநா। ந ஹீயேத தர்மயேஸா
அர்தகாைம:। ௫௫।௰௧௫
ஏஷ வாணக்ருேதா ீ தர்ேமா। ைவதிேகா தர்மநிஸ்சேய। ௫௫।௰௧௬
ஏவம் ஏதத் யதாந்யாயம்। ஸத்யாத்யாேய ப்ரகீர்திதம்। ௫௫।௰௧௬
தத் ப்ரமாணம் புத: குர்யாந்। ந ஸத்யாத் வித்யேத பரம்। ௫௫।௰௧௬
ஸர்ேவஷாம் ஏவ வர்ணாநாம்। ப்ரவŠயாமி யுதிஷ்டிர। ௫௬।௰௰௧
உேபாஷிைதஸ் ச ெகௗந்ேதய। யத் ப்ரேயாஜ்யம் யதாவிதி। ௫௬।௰௰௧
பலம் யத் உபவாஸஸ்ய। தந் நிேபாத ச பாண்டவ। ௫௬।௰௰௨
அவாப்ேநாதி யதா காமாந்। உபவாஸபராயண:। ௫௬।௰௰௨
மையேத ந்ருபேத காம்யா। விஹிதா ஹிதம் இச்சதா। ௫௬।௰௰௩
உபவாஸா மநுஷ்யாணாம்। மய்ய் ஏவார்பிதேசதஸாம்। ௫௬।௰௰௩
பஞ்சமீம் ைசவ ஷஷ்டீம் ச। ெபௗர்ணமாஸம்ீ ச பாண்டவ। ௫௬।௰௰௪

உேபாஷ்ய ரூபவாந் தந்ய:। ஸுபகஸ் ைசவ ஜாயேத। ௫௬।௰௰௪
அஷ்டமீம் ைசவ ெகௗந்ேதய। ஸுக்லபேக்ஷ சதுர்தஸம்ீ । ௫௬।௰௰௫
உேபாஷ்ய வ்யாதிரஹிேதா। வர்யவாம்ஸ் ீ ைசவ ஜாயேத। ௫௬।௰௰௫
மார்கஸர்ஷம் ீ து ேயா மாஸம்। நித்யம் ஏகாஸேநா பேவத்।
௫௬।௰௰௬
க்ருஷிபாகீபேவத் ராஜந்। பஹுபுத்ரஸ் ச ஜாயேத। ௫௬।௰௰௬
ெபௗஷமாேஸ து ராேஜந்த்ர। பக்ேதைநேகந ய: க்ஷேபத்। ௫௬।௰௰௭
ஸுபேகா தர்ஸநீயஸ் ச। ஜ்ஞாநபாகீ ச ஜாயேத। ௫௬।௰௰௭
பித்ருந் உத்திஸ்ய மாகம் து। ய: க்ஷேபத் ஏகேபாஜநம்। ௫௬।௰௰௮
மாேஸந புருஷவ்யாக்ர। ேஸா அநந்த்யம் பலம் அஸ்நுேத। ௫௬।௰௰௮
பகைதவதமாஸம் து। ய: க்ஷேபத் ஏகேபாஜநம்। ௫௬।௰௰௯
ஸ்த்ரீஷு வல்லபதாம் யாதி। வஸ்யாஸ் சாஸ்ய பவந்தி தா:।
௫௬।௰௰௯
ைசத்ரம் து புருஷவ்யாக்ர। ய: க்ஷேபத் ஏகேபாஜநம்। ௫௬।௰௧
மாேஸந புருஷவ்யாக்ர। ெமௗநந் து பலம் அஸ்நுேத । ௰௫௬।௬௯
பகைதவதமாஸம் து। ய: க்ஷேபத் ஏகேபாஜந:। ௰௫௬।௬௯
ஸ்த்ரீஷு வல்லபதாம் யாதி। வஸ்யாஸ் சாஸ்ய பவந்தி தா:।
௰௫௬।௬௯
ைசத்ரம் து புருஷவ்யாக்ர। ய: க்ஷேபத் ஏகேபாஜந:। ௰௫௬।௬௯
ஸுவர்ணமணிமுக்தாட்ேய। குேல மஹதி ஜாயேத। ௰௫௬।௰௧௰௬௯
நிஸ்தேரத் ஏகபக்ேதந। ைவஸாகம் ேயா நராதிப। ௰௫௬।௰௧௧௬௯
நேரா வா யதி வா நாரீ। ஜ்ஞாதீநாம் ஸ்ேரஷ்டதாம் வ்ரேஜத்।
௫௬।௰௧௧

ஜ்ேயஷ்டமாஸம் அபாநீயம்। ஏகபக்ேதந ய: க்ஷேபத்। ௫௬।௰௧௨
ஐஸ்வர்யம் புருஷவ்யாக்ர। ஸ்த்ரீபாகீேசாபஜாயேத। ௫௬।௰௧௨
ஆஷாடம் பரதஸ்ேரஷ்ட। ஏகபக்ேதந ய: க்ஷேபத்। ௫௬।௰௧௩
ஸூரஸ் ச பஹுதாந்யஸ் ச। பஹுபுத்ரஸ் ச ஜாயேத। ௫௬।௰௧௩
ஸ்ராவணம் து நரவ்யாக்ர। பக்ேதைநேகந ய: க்ஷேபத்। ௫௬।௰௧௪
யத்ர யத்ேராபபத்ேயத। தத்ர ஸ்யாஜ் ஜ்ஞாதிவர்தந:। ௫௬।௰௧௪
மாஸம் பாத்ரபதம் ராஜந்ந்। ஏகபக்ேதந ய: க்ஷேபத்। ௫௬।௰௧௫
தநாட்ேயா வர்யவாம்ஸ் ீ ைசவ। ஐஸ்வர்யம் ப்ரதிபத்யேத। ௫௬।௰௧௫
ய: க்ஷேபத் ஏகபக்ேதந। மாஸம் ஆஸ்வயுஜம் நர:। ௫௬।௰௧௬
தநவாந் வாஹநாட்யஸ் ச। பஹுபுத்ரஸ் ச ஜாயேத। ௫௬।௰௧௬
கார்த்திகம் து நேரா மாஸம்। நித்யம் ஏகாஸேநா பேவத்। ௫௬।௰௧௭
ஸூரஸ் ச பஹுபார்யஸ் ச। கீர்திமாம்ஸ் ைசவ ஜாயேத। ௫௬।௰௧௭
ஏேத மாஸா நரஸ்ேரஷ்ட। ஏகபக்ேதந கீர்திதா:। ௫௬।௰௧௮
திதீநாம் நியமாம்ஸ் ைசவ। தாஞ் ஸ்ருணுஷ்வ நராதிப। ௫௬।௰௧௮
பேக்ஷ பேக்ஷ சதுர்தம் து। பக்தம் ய: க்ஷபேயந் நர:। ௫௬।௰௧௯
விபுலம் தநம் ஆப்ேநாதி। பகவாந் அக்நிர் அப்ரவத்ீ। ௫௬।௰௧௯
மாேஸ மாேஸ சதுர்தம் து। பக்தம் ஏகம் து ய: க்ஷேபத்। ௫௬।௰௨
க்ருஷிபாகீயேஸாபாகீ। ேதஜஸ்வ ீசாபி ஜாயேத। ௫௬।௰௨
பேக்ஷ பேக்ஷ த்ரிராத்ரம் து। ய: க்ஷேபந் நரபுங்கவ। ௫௬।௰௨௧
கேண ேகாேஷ புேர க்ராேம। மாஹாத்ம்யம் ப்ரதிபத்யேத। ௫௬।௰௨௧
மாேஸ மாேஸ த்ரிராத்ரம் து। பக்ேதைநேகந ய: க்ஷேபத்। ௫௬।௰௨௨
கணாதிபத்யம் லபேத। நி:ஸபத்நம் அகண்டகம்। ௫௬।௰௨௨

யஸ் து ஸாயம் ததா கல்யம்। புங்க்ேத ைநவாந்தரா பிேபத்।
௫௬।௰௨௩
அஹிம்ஸாநிரேதா நித்யம்। ஜுஹ்வாேநா ஜாதேவதஸம்। ௫௬।௰௨௩
ஷட்பிர் ஏவ து வர்ைஷஸ் து। ஸித்யேத நாத்ர ஸம்ஸய:। ௫௬।௰௨௪
அக்நிஷ்ேடாமஸ்ய யஜ்ஞஸ்ய। பலம் ப்ராப்ேநாதி மாநவ:। ௫௬।௰௨௪
அஷ்டேமந து பக்ேதந। ராஜந் ஸம்வத்ஸரம் நேயத்। ௫௬।௰௨௫
கவாமயஸ்ய யஜ்ஞஸ்ய। பலம் ப்ராப்ேநாதி மாநவ:। ௫௬।௰௨௫
ஹம்ஸஸாரஸயுக்ேதந। விமாேநந ஸ கச்சதி। ௫௬।௰௨௬
பூர்ணம் வர்ஷஸஹஸ்ரம் து। ஸ்வர்கேலாேக மஹீயேத। ௫௬।௰௨௬
ஆர்ேதா வா வ்யாதிேதா வாபி। கச்ேசத் அநஸநம் து ய:। ௫௬।௰௨௭
பேத பேத யஜ்ஞபலம்। தஸ்ய மந்நாமகீர்தநாத்। ௫௬।௰௨௭
திவ்யக்ருக்ஷப்ரயுக்ேதந। விமாேநந ஸ கச்சதி। ௫௬।௰௨௮
ஸதம் அப்ஸரஸாம் ைசவ। ரமயந்தீஹ தம் நரம்। ௫௬।௰௨௮
ஸஹஸ்ரஸதஸம்யுக்ேத। விமாேந ஸூர்யவர்சேஸ। ௫௬।௰௨௯
ஆரூடஸ்த்ரீஸதாகீர்ேண। விஹரந் ஸுகம் ஏதேத। ௫௬।௰௨௯
ந க்ருத்ேதா வ்யாதிேதா நார்த:। ப்ரஸந்நமநேஸந்த்ரிய:। ௫௬।௰௩
கச்ேசத் அநஸநம் யஸ் து। தஸ்யாபி ஸ்ருணு யத் பலம்। ௫௬।௰௩
ஸதம் வர்ஷஸஹஸ்ராணாம்। ஸ்வர்கேலாேக மஹீயேத। ௫௬।௰௩௧
ஸ்வஸ்த: ஸபலஸம்கல்ப:। ஸுகீவிகதகல்மஷ:। ௫௬।௰௩௧
ஸ்த்ரீஸஹஸ்ரஸமாகீர்ேண। ஸுப்ரேப ஸுகம் ஏதேத। ௫௬।௰௩௧
யாவந்தி ேராமகூபாநி। தஸ்ய காத்ேரஷு பாரத। ௫௬।௰௩௨
தாவத்வர்ஷஸஹஸ்ராணி। திவ்யாநி திவி ேமாதேத। ௫௬।௰௩௨

நாஸ்தி ேவதாத் பரம் ஸாஸ்த்ரம்। நாஸ்தி மாத்ருஸேமா குரு:।
௫௬।௰௩௩
ந தர்மாத் பரேமா லாபஸ்। தேபா நாநஸநாத் பரம்। ௫௬।௰௩௩
ப்ராஹ்மேணப்ய: பரம் நாஸ்தி। திவி ேசஹ ச பாவநம்। ௫௬।௰௩௪
உபவாைஸஸ் ததா துல்யம்। தேபா ஹ்ய் அந்யந் ந வித்யேத।
௫௬।௰௩௪
உேபாஷ்ய விதிவத் ேதவாஸ்। த்ரிதிவம் ப்ரதிேபதிேர। ௫௬।௰௩௫
முநயஸ் ச பராம் ஸித்திம்। உபவாைஸர் அவாப்நுவந்। ௫௬।௰௩௫
திவ்யம் வர்ஷஸஹஸ்ரம் து। விஸ்வாமித்ேரண தீமதா। ௫௬।௰௩௬
க்ஷாந்தம் ஏேகந பக்ேதந। ேயந விப்ரத்வம் ஆகத:। ௫௬।௰௩௬
ச்யவேநா ஜமதக்நிஸ் ச। வஸிஷ்ேடா ெகௗதேமா ப்ருகு:। ௫௬।௰௩௭
ஸர்ேவ ஹ்ய் ஏேத திவம் ப்ராப்தா:। க்ஷமாவந்ேதா பஹுஸ்ருதா:।
௫௬।௰௩௭
விதிநாேநந ராேஜந்த்ர। ேயா மயா பரிகீர்தித:। ௫௬।௰௩௭
பேடத ேயா ைவ ஸ்ருணுயாச் ச பக்த்யா। ந வித்யேத தஸ்ய நரஸ்ய பாபம்।
௫௬।௰௩௮
உபத்ரைவர் முச்யேத ஸர்வாங்கிைகர்। ந சாபி பாைபர் அபிபூயேத நர:।
௫௬।௰௩௮
ப்ராஹ்மணத்வம் ஸுதுஷ்ப்ராபம்। நிஸர்காத் ப்ராஹ்மேணா பேவத்।
௫௭।௰௰௧
க்ஷத்ரிேயா வாதவா ைவஸ்ேயா। நிஸர்காத் ஏவ ஜாயேத। ௫௭।௰௰௧
துஷ்க்ருேதந து துஷ்டாத்மா। ஸ்தாநாத் ப்ரஸ்யதி மாநவ:। ௫௭।௰௰௨
ஸ்ேரஷ்டம் ஸ்தாநம் ஸமாஸாத்ய। தஸ்மாத் ரேக்ஷத பண்டித:।
௫௭।௰௰௨

யஸ் து விப்ரத்வம் உத்ஸ்ருஜ்ய। க்ஷத்ரியத்வம் நிேஷவேத। ௫௭।௰௰௩
ப்ராஹ்மண்யாத் ஸ பரிப்ரஷ்ட:। க்ஷத்ரேயாந்யாம் ப்ரஸூயேத।
௫௭।௰௰௩
ைவஸ்யகர்மாணி வா குர்வந்। ைவஸ்யேயாெநௗ ப்ரஜாயேத।
௫௭।௰௰௪
ஸூத்ரகர்மாணி குர்வாண:। ஸூத்ரத்வம் உபபத்யேத। ௫௭।௰௰௪
ஸ தத்ர துர்கதிம் ப்ராப்ய। ஸ்தாநாத் ப்ரஷ்ேடா யுதிஷ்டிர। ௫௭।௰௰௫
ஸூத்ரேயாநிம் அநுப்ராப்ேதா। யதி தர்மம் ந ேஸவேத। ௫௭।௰௰௫
மாநுஷ்யாத் ஸ பரிப்ரஷ்டஸ்। திர்யக்ேயாெநௗ ப்ரஜாயேத। ௫௭।௰௰௬
அதர்மேஸவநாந் மூடஸ்। தேமாபஹதேசதந:। ௫௭।௰௰௬
ஜாத்யந்தரஸஹஸ்ராணி। தத்ைரவ பரிவர்தேத। ௫௭।௰௰௭
தஸ்மாத் ப்ராப்ய ஸுபம் ஸ்தாநம்। ப்ரமாதாந் ந து நாஸேயத்।
௫௭।௰௰௭
ஸூத்ராந்ேநநாவேஸேஷண। ேயா ம்ரிேயஜ் ஜடேர த்விஜ:। ௫௭।௰௰௮
ஆஹிதாக்நிஸ் ததா யஜ்வா। ஸ ஸூத்ரகதிபாக் பேவத்। ௫௭।௰௰௮
க்ஷத்ராந்ேநநாவேஸேஷண। க்ஷத்ரத்வம் உபபத்யேத। ௫௭।௰௰௯
ைவஸ்யாந்ேநநாவேஸேஷண। ைவஸ்யத்வம் உபபத்யேத। ௫௭।௰௰௯
தாம் ேயாநிம் லபேத விப்ேரா। புக்த்வாந்நம் யஸ்ய ைவ ம்ருத:।
௫௭।௰௰௯
ப்ராஹ்மணத்வம் ஸுபம் ப்ராப்ய। துர்லபம் ேயா அவமந்யேத। ௫௭।௰௧
ேபாஜ்யாேபாஜ்யம் ந ஜாநாதி। ஸ பேவத் க்ஷத்ரிேயா த்விஜ:। ௫௭।௰௧
கர்மணா ேயந ேமதாவ।ீ ஸூத்ேரா ைவஸ்ேயா அபிஜாயேத। ௫௭।௰௧௧
தத் ேத வŠயாமி நிகிலம்। ேயந வர்ேணாத்தேமா பேவத்। ௫௭।௰௧௧

ஸூத்ரகர்ம யேதாத்திஷ்டம்। ஸூத்ேரா பூத்வா ஸமாசேரத்। ௫௭।௰௧௨
யதாவத் பரிசர்யாம் து। த்ரிஷு வர்ேணஷு நித்யதா। ௫௭।௰௧௨
குருேத அவிமநா யஸ் து। ஸ ஸூத்ேரா ைவஸ்யதாம் வ்ரேஜத்।
௫௭।௰௧௨
க்ஷத்ரியத்வம் யதா ைவஸ்யஸ்। தத் வŠயாம்ய் அநுபூர்வஸ:।
௫௭।௰௧௩
ெசௗக்ஷ: பாபஜநத்ேவஷ்டா। ேஸஷாந்நக்ருதேபாஜந:। ௫௭।௰௧௩
அக்நிேஹாத்ரம் உபாதாய। ஜுஹ்வாநஸ் ச யதாவிதி। ௫௭।௰௧௪
ஸ ைவஸ்ய: க்ஷத்ரியகுேல। ஜாயேத நாத்ர ஸம்ஸய:। ௫௭।௰௧௪
க்ஷத்ரிேயா ப்ரஹ்மேயாந்யாம் து। ஜாயேத ஸ்ருணு தத் யதா।
௫௭।௰௧௫
ததாதி யஜேத யஜ்ைஞர்। விதிவச் சாப்ததக்ஷிைண:। ௫௭।௰௧௫
அதீேத ஸ்வர்கம் அந்விச்சம்ஸ்। த்ேரதாக்நிஸரண: ஸதா। ௫௭।௰௧௫
ஆர்தஹஸ்தப்ரேதா நித்யம்। ப்ரஜா தர்ேமண பாலயந்। ௫௭।௰௧௬
க்ருதுகாேல து ஸ்வாம் பார்யாம்। அபிகச்சந் விதாநத:। ௫௭।௰௧௬
ஸர்வாதித்யம் த்ரிவர்கஸ்ய। தீயதாம் புஜ்யதாம் இதி। ௫௭।௰௧௭
ஸூத்ராணாம் யாசகாநாம் ச। நித்யம் ஸித்திம் இதி ப்ருவந்। ௫௭।௰௧௭
ேகாப்ராஹ்மணஸ்ய சார்தாய। ரேண சாபிமுேகா ஹத:। ௫௭।௰௧௮
த்ேரதாக்நிமந்த்ரபூதாத்மா। க்ஷத்ரிேயா ப்ராஹ்மேணா பேவத்।
௫௭।௰௧௮
விதிஜ்ஞ: க்ஷத்ரியகுேல। யாஜக: ஸ து ஜாயேத। ௫௭।௰௧௮
ப்ராப்யேத அவிகல: ஸ்வர்ேகா। வர்ைண: ஸத்பதம் ஆஸ்திைத:।
௫௭।௰௧௯

ப்ராஹ்மணத்வம் ஸுதுஷ்ப்ராபம்। க்ருச்ச்ேரணாஸாத்யேத நைர:।
௫௭।௰௧௯
தஸ்மாத் ஸர்வப்ரயத்ேநந। ரேக்ஷத் ப்ராஹ்மண்யம் உத்தமம்।
௫௭।௰௧௯
ஸுவர்ணம் பரமம் தாநம்। ஸுவர்ணம் தக்ஷிணா பரா। ௫௮।௰௰௧
ஏதத் பவித்ரம் பரமம்। ஏதத் ஸ்வஸ்த்யயநம் மஹத்। ௫௮।௰௰௧
தஸ பூர்வாபராந் வம்ஸாந்। ஆத்மாநம் ச விஸாம்யேத। ௫௮।௰௰௨
அபி பாபஸதம் க்ருத்வா। தத்த்வா விப்ேரஷு தாரேயத்। ௫௮।௰௰௨
ஸுவர்ணம் ேய ப்ரயச்சந்தி। நரா: ஸுத்ேதந ேசதஸா। ௫௮।௰௰௩
ேதவதாஸ் ேத ப்ரயச்சந்தி। ஸமஸ்தா இதி ந: ஸ்ருதம்। ௫௮।௰௰௩
அக்நிர் ஹி ேதவதா: ஸர்வா:। ஸுவர்ணம் ச ஹுதாஸந:। ௫௮।௰௰௪
தஸ்மாத் ஸுவர்ணம் தததா। தத்தா: ஸர்வாஸ் ச ேதவதா:। ௫௮।௰௰௪
அக்ந்யபாேவ ச குர்வந்தி। வஹ்நிஸ்தாேநஷு காஞ்சநம்। ௫௮।௰௰௫
ஸர்வேவதப்ரமாணஜ்ஞா। ேவதஸ்ருதிநிதர்ஸநாத்। ௫௮।௰௰௫
ேய த்வ் ஏநம் ஜ்வாலயித்வாக்நிம்। ஆதித்ேயாதயநம் ப்ரதி। ௫௮।௰௰௬
தத்யுர் ைவ வ்ரதம் உத்திஸ்ய। ஸர்வாந் காமாந் அவாப்நுயு:।
௫௮।௰௰௬
ஸுவர்ணத: ஸ்வர்கேலாேக। காமாந் இஷ்டாந் உபாஸ்நுேத।
௫௮।௰௰௭
விரஜாம்பரஸம்வதீ:। பரியாதி யதஸ் தத:। ௫௮।௰௰௭
விமாேநநார்கவர்ேணந। பாஸ்வேரண விராஜதா। ௫௮।௰௰௮
அப்ஸேராகணஸம்கீர்ேண। பாஸ்வதா ஸ்ேவந ேதஜஸா। ௫௮।௰௰௮
ஹம்ஸபர்ஹிணயுக்ேதந। காமேகந நேராத்தம:। ௫௮।௰௰௯

திவ்யகந்தவஹ: ஸ்வர்ேக। பரிகச்ேசத் இதஸ் தத:। ௫௮।௰௰௯
தஸ்மாத் ஸ்வஸக்த்யா தாதவ்யம்। காஞ்சநம் மாநைவர் புவி।
௫௮।௰௧
ந ஹ்ய் அத: பரமம் ேலாேக। ஸத்ய: பாபவிேமாசநம்। ௫௮।௰௧
ஸுவர்ணஸ்ய து ஸுத்தஸ்ய। ஸுவர்ணம் ய: ப்ரயச்சதி। ௫௮।௰௧௧
பஹூந்ய் அப்தஸஹஸ்ராணி। ஸ்வர்கேலாேக மஹீயேத। ௫௮।௰௧௧
ேலாகாம்ஸ் து ஸ்ருஜதா பூர்வம்। காவ: ஸ்ருஷ்டா: ஸ்வயம்புவா।
௫௯।௰௰௧
ப்ரீத்யர்தம் ஸர்வபூதாநாம்। தஸ்மாத் தா மாதர: ஸ்ம்ருதா:। ௫௯।௰௰௧
தாஸ் து தத்த்வா ெஸௗரேபய:ீ। ஸ்வர்கேலாேக மஹீயேத। ௫௯।௰௰௨
தஸ்மாத் தா வர்ணயிஷ்யாமி। தாநம் சாஸாம் யதாவிதி। ௫௯।௰௰௨
யாத்ருஸீ விதிநா ேயந। தாதவ்யா யாத்ருஸாய ச। ௫௯।௰௰௩
த்விஜாய ேபாஷணார்தம் து। ேஹாமேதநுக்ருேத ந ைவ। ௫௯।௰௰௩
ப்ரதமா ெகௗரகபிலா। த்விதீயா ெகௗரபிங்கலா। ௰௫௯।௭௰
த்ருதீயா ரக்தகபிலா। சதுர்தீநீலபிங்கலா। ௰௫௯।௭௰
பஞ்சமீஸுக்லபிங்காக்ஷீ। ஷஷ்டீ து ஸுக்லபிங்கலா। ௰௫௯।௭௰
ஸப்தமீசித்ரபிங்காக்ஷீ। அஷ்டமீபப்ருேராஹிண।ீ ௰௫௯।௭௰
நவமீஸ்ேவதபிங்காக்ஷீ। தஸமீஸ்ேவதபிங்கலா। ௰௫௯।௭௰
தாத்ருஸா ேய அப்ய் அநட்வாஹ:। கபிலாஸ் ேத ப்ரகீர்திதா:।
௰௫௯।௭௰
ப்ராஹ்மேணா வாஹேயத் தாம்ஸ் து। நாந்ேயா வர்ண: கதாசந।
௰௫௯।௭௰

ேதநும் தத்த்வா ஸுவ்ரதாம் ேஸாபதாநாம்। கல்யாணவத்ஸாம் ச பயஸ்விநீம்
ச। ௫௯।௰௰௪
யாவந்தி ேராமாணி பவந்தி ேதந்வா। துஹ்ேயத காமாந் ந்ருப வர்ஷாணி
தாவத்। ௫௯।௰௰௪
ப்ரயச்சேத ய: கபிலாம் ஸவத்ஸாம்। காம்ஸ்ேயாபேதாஹாம்
கநகாக்ரஸ்ருங்கீம்। ௫௯।௰௰௫
ைதஸ் ைதர் குைண: காம்துகா ஹி பூத்வா। நரம் ப்ரதாதாரம் உைபதி ஸா
ெகௗ:। ௫௯।௰௰௫
ேகாஸஹஸ்ரம் து ேயா தத்யாத்। ஸர்வகாைமர் அலம்க்ருதம்।
௫௯।௰௰௬
பராம் வ்ருத்திம் ஸ்ரியம் ப்ராப்ய। ஸ்வர்கேலாேக மஹீயேத।
௫௯।௰௰௬
தஸ ேசாபயத: ப்ேரத்ய। மாதாமஹபிதாமைஹ:। ௫௯।௰௰௭
கச்ேசத் ஸுக்ருதிநாம் ேலாகாந்। காேவா தத்த்வா யதாவிதி। ௫௯।௰௰௭
தாயாதலப்ைதர் அர்ைதர் ேயா। கவா: க்ரீத்வா ப்ரயச்சதி। ௫௯।௰௰௮
தஸ்யாபி சாக்ஷயா ேலாகா। பவந்தீஹ பரத்ர ச। ௫௯।௰௰௮
ேயா த்யூேதந தநம் ஜித்வா। க்ரீத்வா காவ: ப்ரயச்சதி। ௫௯।௰௰௯
ஸ கச்ேசத் விரஜாம்ல் ேலாகாந்। ேகாப்ரதாநபலார்ஜிதாந்। ௫௯।௰௰௯
ப்ரதிக்ருஹ்ய து ேயா தத்யாத்। காவ: ஸுத்ேதந ேசதஸா। ௫௯।௰௧
ஸ கத்வா துர்கமம் ஸ்தாநம்। அமைர: ஸஹ ேமாதேத। ௫௯।௰௧
யஸ் சாத்மவிக்ரயம் க்ருத்வா। காேவா தத்யாத் யதாவிதி। ௫௯।௰௧௧
ஸ கத்வா விரஜாம்ல் ேலாகாந்। ஸுகம் வஸதி ேதவவத்। ௫௯।௰௧௧
ஸம்க்ராேம யஸ் தநும் த்யக்த்வா। காவ: க்ரீத்வா ப்ரயச்சதி।
௫௯।௰௧௨

ேதஹவிக்ரயமூல்யஸ் தா:। ஸாஸ்வதா: காமேதாஹநா:। ௫௯।௰௧௨
ரூபாந்விதா: ஸலவேயாபபந்நா ீ :। ஸர்வா: ப்ரஸஸ்தா ஹி ஸுகந்தவத்ய:।
௫௯।௰௧௩
யதா ஹி கங்கா ஸரிதாம் வரிஷ்டா। ததார்ஜுநீநாம் கபிலா வரிஷ்டா।
௫௯।௰௧௩
அந்தர்ஜாதா: ஸுக்ரயஜ்ஞாநலப்தா:। ப்ராணாம்ஸ் த்யக்த்வா ேஸாதகா:
ேஸாத்வஹாஸ் ச। ௫௯।௰௧௪
க்ருச்ச்ேராத்ஸ்ருஷ்டா: ேபாஷணாயாப்யுேபதா। த்வாைரர் ஏைதர்
ேகாவிேஸஷா வரிஷ்டா:। ௫௯।௰௧௪
திஸ்ேரா ராத்ர்யஸ் சாப்ய் உேபாஷ்ேயஹ தாதா। த்ருப்தா கா ைவ
தர்பிேதப்ய: ப்ரயச்ேசத்। ௫௯।௰௧௫
வத்ைஸ: பதா ீ : ேஸாபதாநாஸ் த்ர்யஹம் ச। தத்த்வா கா ைவ ேகாரைஸர்
வர்திதவ்யம்। ௫௯।௰௧௫
ேலாேக ஜ்ேயஷ்டா ேலாகவ்ருத்தாந்தவ்ருத்தா। ேவைதர் கீதா:
ேஸாமநிஷ்யந்தபூதா:। ௫௯।௰௧௬
ெஸௗம்யா: புண்யா: காமதா: ப்ராணதாஸ் ச। காேவா தத்த்வா ஸர்வதா
ஸந்தி ஸந்த:। ௫௯।௰௧௬
ந ைசவாஸாம் தாநமாத்ரம் ப்ரஸஸ்தம்। பாத்ரம் காேலா ேகாவிேஸேஷா
விதிஸ் ச। ௫௯।௰௧௭
த்ருஷ்ட்வா காவ: பாவகாதித்யபூதா:। ஸ்வாத்யாயாட்ேய பாத்ரவர்ேய
விஸிஷ்ேட। ௫௯।௰௧௭
ைவதாநஸ்தம் ஸத்யவாக்யம் க்ருதஜ்ஞம்। ேகாஷு க்ஷாந்தம் ேகாஸரண்யம்
ஸுவ்ருத்தம்। ௫௯।௰௧௮
ஸஸ்தம் பாத்ரம் ேகாப்ரதாநஸ்ய பூேமஸ்। ததா ஸுவர்ணஸ்ய ச
ஸர்வகாலம்। ௫௯।௰௧௮

பிக்ஷாதாநம் சாதிகம் ஸம்ப்ரஸஸ்தம்। பாேதாதாநம் சாந்நதாநம் ததா ச।
௰௫௯।௭௧
பிக்ஷேத பஹுப்ருத்யாய। ஸ்ேராத்ரியாயாஹிதாக்நேய। ௫௯।௰௧௯
தாதவ்யா ெகௗ: ப்ரயத்ேநந। ஏகாப்ய் அதிபலா ஹி ஸா। ௫௯।௰௧௯
தாம் ேசத் விக்ரீணேத ராஜந்। வசஸா கலுஷீக்ருதாம்। ௫௯।௰௨
நாெஸௗ ப்ரஸஸ்யேத விப்ேரா। ப்ராஹ்மேணா ைநவ ஸ ஸ்ம்ருத:।
௫௯।௰௨
தஸ்யாதர்மப்ரவ்ருத்தஸ்ய। லுப்தஸ்யாந்ருதவாதிந:। ௫௯।௰௨௧
ஹவ்யகவ்யவ்யேபதஸ்ய। ந ேதயா ெகௗ: கதம்சந। ௫௯।௰௨௧
ஜர்ணாம் ீ ைசேவாபபுக்தாம் ச। ஜரத்கூபம் இவாபலாம்। ௫௯।௰௨௨
தம: ப்ரவிஸேத தாதா। த்விஜம் க்ேலேஸந ேயாஜயந்। ௫௯।௰௨௨
துஷ்டா: க்ருஸாஸ் ைசவ பாலயதீஸ் ச। ைநதாத்ருஸா தாநேயாக்யா பவந்தி।
௫௯।௰௨௩
க்ேலைஸர் விப்ரம் ேயா அபைல: ஸம்யுநக்தி। கச்ேசத் ஸ திர்யக்
விபலாம்ஸ் ச ேலாகாந்। ௫௯।௰௨௩
அநட்வாஹம் ஸுவ்ரதம் ேயா ததாதி। ஹலஸ்ய ேவாடாரம் அநந்தவர்யம் ீ ।
௫௯।௰௨௪
யுகம்தரம் பலவந்தம் யுவாநம்। ப்ராப்ேநாதி ேலாகாந் தஸேதநுதஸ்ய।
௫௯।௰௨௪
ப்ரயச்சேத ய: புருேஷா த்விஜாய। ஸ்வாத்யாயசாரித்ரகுணாந்விதாய।
௫௯।௰௨௫
பேலந யுக்தம் வ்ருஷபம் து நீலம்। ஷடாங்கவம் ப்ரீதிகரம் ஸுரூபம்।
௫௯।௰௨௫
யுவாநம் பலிநம் ஸ்யாமம்। ஸேதந ஸஹ யூதபம்। ௫௯।௰௨௬

கேவந்த்ரம் ப்ராஹ்மேணந்த்ராய। பூரிஸ்ருங்கம் அலம்க்ருதம்।
௫௯।௰௨௬
வ்ருஷபம் ேய ப்ரயச்சந்தி। ஸ்ேராத்ரியாயாஹிதாக்நேய। ௫௯।௰௨௭
ேத கத்வா தத்கவாம் ேலாகம்। ேதவேலாகாந் மஹத்தரம்। ௰௫௯।௭௨
தத்ர ஸ்தித்வா து ஸுசிரம்। ஸர்வகாைம: ஸுதர்பிதா:। ௰௫௯।௭௨
ஐஸ்வர்ேய ேத அபிஜாயந்ேத। ஜாயமாநா: புந: புந:। ௫௯।௰௨௭
ஸதக்ஷிணாம் காஞ்சநரூப்யஸ்ருங்கீம்। காம்ஸ்ேயாபேதாஹாம்
கநேகாத்தரீயாம்। ௫௯।௰௨௮
ேதநும் திலாநாம் கநேகாத்தரீயாம்। ேலாகா வஸூநாம் அசலா பவந்தி।
௫௯।௰௨௮
திலாலாேப து ேயா தத்யாத்। க்ருதேதநும் யதவ்ரத:। ௫௯।௰௨௯
ஸ துர்காத் தாரிேதா ேதந்வா। ப்ரஹ்மேலாேக மஹீயேத। ௫௯।௰௨௯
க்ருதாலாேப து ேயா தத்யாஜ்। ஜலேதநும் யதவ்ரத:। ௫௯।௰௩
ஸ ஸர்வம் தரேத துர்கம்। ஜலம் திவ்யம் ஸமஸ்நுேத। ௫௯।௰௩
ப்ராஹ்மணாஸ் ைசவ காவஸ் ச। குலம் ஏகம் த்விதாக்ருதம்।
௫௯।௰௩௧
ஏகத்ர மந்த்ராஸ் திஷ்டந்தி। ஹவிர் ஏகத்ர திஷ்டதி। ௫௯।௰௩௧
உபகம்ய து ேயா தத்யாத்। காவ: ஸுத்ேதந ேசதஸா। ௫௯।௰௩௨
யாவந்தி தாஸாம் ேராமாணி। தாவத் ஸ்வர்ேக மஹீயேத। ௫௯।௰௩௨
ஸ்ருணு த்வம் ேம கவாம் ேலாகா। யாத்ருஸா யத்ர வா ஸ்திதா:।
௫௯।௰௩௩
மேநாஜ்ஞா ரமணயாஸ்ீ ச। ஸர்வகாமதுகா: ஸதா। ௫௯।௰௩௩
புண்யா: பாபஹராஸ் ைசவ। கவாம் ேலாகா ந ஸம்ஸய:। ௫௯।௰௩௪

அத்யந்தஸுகிநஸ் தத்ர। ஸர்வபாபவிவர்ஜிதா:। ௫௯।௰௩௪
ப்ரேமாதந்ேத மஹாஸ்தாேந। நரா விகதகல்மஷா:। ௫௯।௰௩௫
ேத வ்ரஜந்ேத விமாேநஷு। க்ரஹா திவி கதா இவ। ௫௯।௰௩௫
ஏவம் ையர் தத்தஸத்காரா:। ஸுரப்யஸ் சார்சிதா: ஸதா। ௫௯।௰௩௬
காமரூபா மஹாத்மாந:। பூதா விகதகில்பிஷா:। ௫௯।௰௩௬
துல்யப்ரபாவா ேதைவஸ் ேத। ேமாதந்ேத அப்ஸரஸாம் கைண:।
௫௯।௰௩௭
கந்தர்ைவர் உபகீயந்ேத। ேகாஸரண்யா ந ஸம்ஸய:। ௫௯।௰௩௭
ப்ரஹ்மண்யா: ஸாதுவ்ருத்தாஸ் ச। தயாவந்ேதா அநுகம்பிந:।
௫௯।௰௩௮
க்ருணிந: ஸுபகர்மாேணா। ேமாதந்ேத ேத அமைர: ஸஹ। ௫௯।௰௩௮
யைதவ ஸலிேல மத்ஸ்ய:। ஸலிேலந ஸேஹாஹ்யேத। ௫௯।௰௩௯
ேகாபி: பாபக்ருதம் கர்ம। த்ருடம் ஏவ மேயாஹ்யேத। ௫௯।௰௩௯
மாதர: ஸர்வபூதாநாம்। ப்ரஜாஸம்ரக்ஷேண ஸ்ம்ருதா:। ௫௯।௰௪
ப்ரஹ்மணா ேலாகஸாேரண। காவ: பாபபயாபஹா:। ௫௯।௰௪
தாஸு தத்தாஸு ராேஜந்த்ர। கிம் ந தத்தம் பேவத் இஹ। ௫௯।௰௪௧
க்ருஸாய து விேஸேஷண। வ்ருத்திக்லாநாய ஸதேத ீ । ௫௯।௰௪௧
பூதாேநந ஸமம் தாநம்। ந பூதம் ந பவிஷ்யதி। ௬௰।௰௰௧
இதி தர்மவித: ப்ராஹுஸ்। தந் ேம நிகதத: ஸ்ருணு। ௬௰।௰௰௧
ஷஷ்டிம் வர்ஷஸஹஸ்ராணி। ஸ்வர்ேக வஸதி பூமித:। ௬௰।௰௰௨
ஆச்ேசத்தா சாநுமந்தா ச। தாந்ய் ஏவ நரேக வேஸத்। ௬௰।௰௰௨
அதிதாநம் து ஸர்ேவஷாம்। பூமிதாநம் இேஹாச்யேத। ௬௰।௰௰௩
அசலா ஹ்ய் அக்ஷயா பூமி:। ஸர்வாந் காமாந் ப்ரயச்சதி। ௬௰।௰௰௩

பூமித: ஸ்வர்கம் ஆருஹ்ய। ஸாஸ்வதீர் ஏததி ஸமா:। ௬௰।௰௰௪
புநஸ் ச ஜந்ம ஸம்ப்ராப்ய। பேவத் பூமிபதிர் த்ருவம்। ௬௰।௰௰௪
யதா பூமி: ஸதா ேதவ।ீ தாதாரம் குருேத பதிம்। ௬௰।௰௰௫
ஏவம் ஸதக்ஷிணா தத்தா। குருேத ெகௗர் ஜநாதிபம்। ௬௰।௰௰௫
அபி பாபக்ருதம் ப்ராப்ய। ப்ரதிக்ருஹ்ணதீ பூமிதம்। ௬௰।௰௰௬
மஹீம் ததந் பவித்ரீ ஸ்யாத்। புண்யா ஹி ஜகதீயத:। ௬௰।௰௰௬
நாம ைவ ப்ரியதத்ேததி। குஹ்யம் ஏதத் ஸநாதநம்। ௬௰।௰௰௭
தத் அஸ்யா: ஸததம் ப்ரீத்ைய। கீர்தநீயம் ப்ரயச்சதா। ௬௰।௰௰௭
யத் கிம்சித் குருேத பாபம்। புருேஷா வ்ருத்திகர்ஷித:। ௬௰।௰௰௮
அபி ேகாசர்மமாத்ேரண। பூமிதாேநந ஸுத்யதி। ௬௰।௰௰௮
ஸுவர்ணம் ரஜதம் தாம்ரம்। மணிமுக்தாவஸூநி ச। ௬௰।௰௰௯
ஸர்வாந் ஏதாந் மஹாப்ராஜ்ஞ। ததாதி வஸுதாம் ததந்। ௬௰।௰௰௯
தேபா யஜ்ஞா: ஸ்ருதம் ஸலம் ீ । அேலாப: ஸத்யவாதிதா। ௬௰।௰௧
குருைதவதபூஜா ச। நாதிக்ரமந்தி பூமிதம்। ௬௰।௰௧
பர்துர் நி:ஸ்ேரயேஸ யுக்தாஸ்। த்யக்தாத்மாேநா ரேண ஹதா:।
௬௰।௰௧௧
ப்ரஹ்மேலாககதா: ஸந்ேதா। நாதிக்ராமந்தி பூமிதம்। ௬௰।௰௧௧
பலக்ருஷ்டாம் மஹீம் தத்த்வா। ேஸாதகாம் ஸபலாந்விதாம்।
௬௰।௰௧௨
ேஸாதகம் வாபி ஸரணம்। ப்ராப்ேநாதி மம ஸம்பதம்। ௬௰।௰௧௨
ரத்ேநாபகீக்ருணாம் வஸுதாம்। ேயா ததாதி த்விஜாதேய। ௬௰।௰௧௩
முக்த: ஸ கலுைஷ: ஸர்ைவ:। ஸ்வர்கேலாேக மஹீயேத। ௬௰।௰௧௩

இக்ஷுபி: ஸம்ததாம் பூமிம்। யவேகாதூமஸாட்பலாம்। ௬௰।௰௧௪
ேய ப்ரயச்சந்தி விப்ேரப்ேயா। ேநாபஸர்பந்தி ேத யமம்। ௬௰।௰௧௪
ஸர்வகாமதுகாம் ேதநும்। ஸர்வஸஸ்யஸமுத்பவாம்। ௬௰।௰௧௫
ேயா ததாதி த்விேஜந்த்ராய। ப்ரஹ்மேலாகம் ஸ கச்சதி। ௬௰।௰௧௫
பூமிதாநம் நர: குர்வந்। முச்யேத மஹேதா பயாத்। ௬௰।௰௧௬
ந பூேயா பூமிதாநாத் தி। தாநம் அந்யத் விஸிஷ்யேத। ௬௰।௰௧௬
புண்யாம் ஸர்வரஸாம் பூமிம்। ேயா ததாதி நரர்ஷப। ௬௰।௰௧௭
ந தஸ்ய ேலாகா: க்ஷயந்ேத ீ । பூமிதஸ்ய மஹாத்மந:। ௬௰।௰௧௭
யதா ஜநித்ரீ புஷ்ணாதி। க்ஷீேரண ஸ்வஸுதம் ந்ருப। ௬௰।௰௧௮
ஏவம் ஸர்வகுணா பூமிர்। தாதாரம் அநுபுஷ்யதி। ௬௰।௰௧௮
அக்நிஷ்ேடாமாதிபிர் யஜ்ைஞர்। இஷ்ட்வா விபுலதக்ஷிைண:।
௬௰।௰௧௯
ந தத் பலம் அவாப்ேநாதி। யத் தத்த்வா வஸுதாம் ந்ருப। ௬௰।௰௧௯
ம்ருத்ேயார் ஹி கிம்கரா தண்டா ஹ்ய்। அக்நிதாபா: ஸுதாருணா:।
௬௰।௰௨
ேகாராஸ் ச வாருணா: பாஸா। ேநாபஸர்பந்தி பூமிதம்। ௬௰।௰௨
பிதர: பித்ருேலாகஸ்தா। ேதவேலாேக திெவௗகஸ:। ௬௰।௰௨௧
ஸம்தர்பயந்தி தாதாரம்। பூேம: ப்ரபவதாம் வர। ௬௰।௰௨௧
க்ருஸாய க்ருஸப்ருத்யாய। வ்ருத்திக்ஷீணாய ஸதேத ீ । ௬௰।௰௨௨
பூமிம் வ்ருத்திகாரீம் தத்த்வா। ஸத்த்ரீ பவதி மாநவ:। ௬௰।௰௨௨
ஸிம்ஹாஸநம் ததா ச்சத்த்ரம்। வராஸ்வா வரவாரணா:। ௬௰।௰௨௩
பூமிதாநஸ்ய புஷ்பாணி। பலம் ஸ்வர்கம் தைதவ ச। ௬௰।௰௨௩
ஆதித்யா இவ தீப்யந்ேத। ேதஜஸா திவி மாநவா:। ௬௰।௰௨௪

ேய ப்ரயச்சந்தி வஸுதாம்। ப்ராஹ்மணாயாஹிதாக்நேய। ௬௰।௰௨௪
யதா பஜாநி ீ ேராஹந்தி। ப்ரகீர்ணாநி மஹீதேல। ௬௰।௰௨௫
ததா காமாதிேராஹந்தி। பூமிதாநகுணார்ஜிதா:। ௬௰।௰௨௫
ஆஸ்ேபாடயந்தி பிதர:। ப்ரவல்கந்தி பிதாமஹா:। ௬௰।௰௨௬
பூமிேதா ந: குேல ஜாத:। ஸ ந: ஸம்தாரயிஷ்யதி। ௬௰।௰௨௬
ஆதித்யா வஸேவா ருத்ரா ஹ்ய்। அஸ்விெநௗ வஸுபி: ஸஹ।
௬௰।௰௨௭
ஸூலபாணிஸ் ச பகவாந்। அபிநந்தந்தி பூமிதம்। ௬௰।௰௨௭
ஸ ந: குலஸ்ய புருஷ:। ஸ ேநா பந்து: ஸ ேநா கதி:। ௬௰।௰௨௮
ஸ தாதா ஸ ச விக்ராந்ேதா। ேயா ததாதி வஸும்தராம்। ௬௰।௰௨௮
தாதாரம் அநுக்ருஹ்ணாதி। யதா தத்ேதந ேராசேத। ௬௰।௰௨௯
பூர்வதத்தாம் ஹரந் பூமிம்। நரகாேயாபபத்யேத। ௬௰।௰௨௯
விந்த்யாடவஷ்வ்ீ அேதாயாஸு। ஸுஷ்கேகாடரவாஸிந:। ௬௰।௰௩
க்ருஷ்ணஸர்பா ஹி ஜாயந்ேத। ேய ஹரந்தி வஸும்தராம்। ௬௰।௰௩
பதந்த்ய் அஸ்ரூணி ருததாம்। தீநாநாம் அவஸததாம் ீ । ௬௰।௰௩௧
ப்ராஹ்மணாநாம் ஹ்ருதம் ேக்ஷத்ரம்। ஹந்யாத் த்ரிபுருஷம் குலம்।
௬௰।௰௩௧
ஸாதுப்ேயா பூமிம் ஆக்ஷிப்ய। ந பூதிம் விந்தேத க்வசித்। ௬௰।௰௩௨
தத்த்வா ஹி பூமிம் ஸாதுப்ேயா। விந்தேத பூதிம் உத்தமாம்। ௬௰।௰௩௨
பூர்வதத்தாம் த்விஜாதிப்ேயா। யத்நாத் ரக்ஷ யுதிஷ்டிர। ௬௰।௰௩௩
மஹீம் மஹீப்ருதாம் ஸ்ேரஷ்ட। தாநாச் ச்ேரேயா அநுபாலநம்।
௬௰।௰௩௩
யத்ைரஷ: பட்யேத ஸ்ராத்ேத। பூமிதாநஸ்ய ஸம்ஸ்தவ:। ௬௰।௰௩௪

ந தத்ர ரக்ஷஸாம் பாேகா। நாஸுராணாம் கதம்சந। ௬௰।௰௩௪
அக்ஷயம் து பேவச் ச்ராத்தம்। பித்ருணாம் நாத்ர ஸம்ஸய:। ௬௰।௰௩௫
தஸ்மாத் விஸ்ராவேயத் ஏநம்। ஸ்ராத்ேதஷு ப்ராஹ்மணாந் ஸதா।
௬௰।௰௩௫
ஏவம் ஏதத் யேதாத்திஷ்டம்। பித்ருணாம் தத்தம் அக்ஷயம்। ௬௰।௰௩௬
பூமிதாநம் மஹாராஜ। ஸர்வபாபாபஹம் ஸுபம்। ௬௰।௰௩௬
அக்நிஷ்ேடாமாதிபிர் யஜ்ைஞர்। இஷ்ட்வா விபுலதக்ஷிைண:। ௬௧।௰௰௧
ந தத் பலம் அவாப்ேநாதி। ஸம்க்ராேம யத் அவாப்நுயாத்। ௬௧।௰௰௧
இதி யஜ்ஞவித: ப்ராஹுர்। யஜ்ஞகர்மவிஸாரதா:। ௬௧।௰௰௨
தஸ்மாத் தத் ேத ப்ரவŠயாமி। யத் பலம் ஸஸ்த்ரஜவிநாம் ீ ।
௬௧।௰௰௨
தர்மலாேபா அர்தலாபஸ் ச। யேஸாலாபஸ் தைதவ ச। ௬௧।௰௰௩
ய: ஸூேரா வத்யேத யுத்ேத। விம்ருதந் பரவாஹிநீம்। ௬௧।௰௰௩
தஸ்ய தர்மார்தகாமாஸ் ச। யஜ்ஞாஸ் ைசவாப்ததக்ஷிணா:। ௬௧।௰௰௩
பரம் ஹ்ய் அபிமுகம் ஹத்வா। தத்யாநம் ேயா அதிேராஹதி।
௬௧।௰௰௪
விஷ்ணுக்ராந்தம் ஸ யஜத। ஏவம் யுத்யந் ரணாஜிேர। ௬௧।௰௰௪
அஸ்வேமதாந் அவாப்ேநாதி। சதுரஸ் ேதந கர்மணா। ௬௧।௰௰௪
யஸ் து ஸஸ்த்ரம் அநுத்ஸ்ருஜ்ய। வர்யவாந் ீ வாஹிநீமுேக।
௬௧।௰௰௫
ஸம்முேகா வர்தேத ஸூர:। ஸ ஸ்வர்காந் ந விவர்தேத। ௬௧।௰௰௫
ராஜாநம் ராஜபுத்ரம் வா। ேஸநாபதிம் அதாபி வா। ௬௧।௰௰௬

ஹந்யாத் க்ஷத்ேரண ய: ஸூரஸ்। தஸ்ய ேலாேகா அக்ஷேயா த்ருவ:।
௬௧।௰௰௬
யாவந்தி தஸ்ய ஸஸ்த்ராணி। பிந்தந்தி த்வசம் ஆஹேவ। ௬௧।௰௰௭
தாவேதா லபேத ேலாகாந்। ஸர்வகாமதுேகா அக்ஷயாந்। ௬௧।௰௰௭
வராஸநம் ீ வரஸய்யா ீ । வரஸ்தாநஸ்திதி ீ : ஸ்திரா। ௬௧।௰௰௮
கவார்ேத ப்ராஹ்மணார்ேத வா। ஸ்வாம்யர்ேத து க்ருதம் ச ைய:।
௬௧।௰௰௮
ேத கச்சந்த்ய் அமலம் ஸ்தாநம்। யதா ஸுக்ருதிநஸ் ததா। ௬௧।௰௰௮
அபக்நம் ய: பரம் ஹந்யாத்। பக்நம் ச பரிரக்ஷதி। ௬௧।௰௰௯
யஸ்மிந் ஸ்திேத பலாயந்தி। ேஸா அபி ப்ராப்ேநாதி ஸ்வர்கதிம்।
௬௧।௰௰௯
ஊர்த்வம் திர்யக் ச யஸ் சார்வாக்। ப்ராணாந் ஸம்த்யஜேத யுதி।
௬௧।௰௧
ஹதாஸ்வஸ் ச பேதத் யுத்ேத। ஸ ஸ்வர்காந் ந நிவர்தேத। ௬௧।௰௧
யஸ்ய சிஹ்நீக்ருதம் காத்ரம்। ஸரஸக்த்ய்ருஷ்டிேதாமைர:। ௬௧।௰௧௧
ேதவகந்யாஸ் து தம் வரம்ீ । ரமயந்தி ரமந்தி ச। ௬௧।௰௧௧
வராப்ஸர:ஸஹஸ்ராணி। ஸூரம் ஆேயாதேந ஹதம்। ௬௧।௰௧௨
த்வரிதாந்ய் அபிதாவந்தி। மம பர்தா மேமதி ச। ௬௧।௰௧௨
ஹதஸ்யாபிமுகஸ்யாெஜௗ। பதிதஸ்யாநிவர்திந:। ௬௧।௰௧௩
ஹ்ரியேத யத் பைரர் த்ரவ்யம்। நரேமதபலம் து தத்। ௬௧।௰௧௩
பூேயா கதிம் ப்ரவŠயாமி। ரேண ேய அபிமுகா ஹதா:। ௬௧।௰௧௪
ஸக்யம் த்வ் இஹ ஸம்ருத்ைதஸ் து। யஷ்டும் க்ரதுஸைதர் நைர:।
௬௧।௰௧௫

ஆத்மேதஹம் து விப்ரார்ேத। த்யக்தும் யுத்ேத ஸுதுஷ்கரம்।
௬௧।௰௧௫
யாம் யஜ்ஞஸம்ைகஸ் தபஸா ச விப்ரா:। ஸ்வர்ைகஷிணஸ் தத்ர சைய:
ப்ரயாந்தி। ௬௧।௰௧௬
க்ஷேணந தாம் ஏவ கதிம் ப்ரயாந்தி। மஹாஹேவ ஸ்வாம் தநும்
ஸம்த்யஜந்த:। ௬௧।௰௧௬
ஸர்வாம்ஸ் ச ேவதாந் ஸஹ ஷட்பிர் அங்ைக:। ஸாம்க்யம் ச ேயாகம் ச
வேந ச வாஸம்। ௬௧।௰௧௭
ஏதாந் குணாந் ஏக ஏவாதிேஸேத। ஸம்க்ராமதாம்ந்ய் ஆத்மதநும் த்யேஜத் ய:।
௬௧।௰௧௭
இமாம் கிரம் சித்ரபதாம் ஸுபாக்ஷராம்। ஸுபாஷிதாம் வ்ருதபிதாம்
திெவௗகஸாம்। ௬௧।௰௧௮
சமூமுேக ய: ஸ்மரேத த்ருடஸ்ம்ருதிர்। ந ஹந்யேத ஹந்தி ச ேஸா அரேண
ரிபூந்। ௬௧।௰௧௮
ஏஷ புண்யதம: ஸ்வர்க்ய:। ஸுயஜ்ஞ: ஸர்வேதாமுக:। ௬௧।௰௧௯
ஸர்ேவஷாம் ஏவ வர்ணாநாம்। க்ஷத்ரியஸ்ய விேஸஷத:। ௬௧।௰௧௯
பூயஸ் ைசவ ப்ரவŠயாமி। பஷ்மவாக்யம் ீ அநுத்தமம்। ௬௧।௰௨
யாத்ருஸாய ப்ரஹர்தவ்யம்। யாத்ருஸம் பரிவர்ஜேயத்। ௬௧।௰௨
ஆததாயிநம் ஆயாந்தம்। அபி ேவதாந்தகம் ரேண। ௬௧।௰௨௧
ஜிகாம்ஸந்தம் ஜிகாம்ஸயாந் ீ । ந ேதந ப்ரஹ்மஹா பேவத்। ௬௧।௰௨௧
ஹதாஸ்வஸ் ச ந ஹந்தவ்ய:। பாநீயம் யஸ் ச யாசேத। ௬௧।௰௨௨
வ்யாதிேதா துர்பலஸ் ைசவ। ரதஹீநஸ் தைதவ ச। ௬௧।௰௨௨
பக்நதந்வாச்சிநகுண:। ப்ராேணப்ஸு: க்ருபணம் ப்ருவந்। ௬௧।௰௨௩

விமுக்தேகேஸா தாேவத் ேயா। யஸ் ேசாந்மத்தாக்ருதிர் பேவத்।
௬௧।௰௨௩
பர்ணஸாகாத்ருணக்ராஹீ। தவாஸ்மீதி ச ேயா வேதத்। ௬௧।௰௨௪
ப்ராஹ்மேணா அஸ்மீதி யஸ் சாஹ। பாேலா வ்ருத்ேதா நபும்ஸக:।
௬௧।௰௨௪
தஸ்மாத் ஏதாந் பரிஹேரத்। யேதாத்திஷ்டாந் ரணாஜிேர। ௬௧।௰௨௫
ஹேதா ந ஹந்யேத ஸத்பிர்। ஹதா ஏவ ஹி பரவீ :। ௬௧।௰௨௫
அமாம்ஸபக்ஷேண ராஜந்। ேயா தர்ம: குருபுங்கவ। ௬௨।௰௰௧
தந் ேம ஸ்ருணு யதாதத்யம்। யஸ் சாஸ்ய விதிர் உத்தம:। ௬௨।௰௰௧
மாஸி மாஸ்ய் அஸ்வேமேதந। ேயா யேஜத ஸதம் ஸமா:। ௬௨।௰௰௨
ந ச காததி ேயா மாம்ஸம்। ஸமம் ஏதத் யுதிஷ்டிர। ௬௨।௰௰௨
ஸதா யஜதி ஸத்த்ேரண। ஸதா தாநம் ப்ரயச்சதி। ௬௨।௰௰௩
ஸதா தபஸ்வ ீபவதி। மதுமாம்ஸவிவர்ஜநாத்। ௬௨।௰௰௩
ஸர்வேவதா ந தத் குர்யு:। ஸர்வதாநாநி ைசவ ஹி। ௬௨।௰௰௪
ேயா மாம்ஸரஸம் ஆஸ்வாத்ய। ஸர்வமாம்ஸாநி வர்ஜேயத்।
௬௨।௰௰௪
துஷ்கரம் ஹி ரஸஜ்ேஞந। மாம்ஸஸ்ய பரிவர்ஜநம்। ௬௨।௰௰௫
சதுர்வ்ரதம் இதம் ஸ்ேரஷ்டம்। ப்ராணிநாம் ம்ருத்யுபருணாம் ீ ।
௬௨।௰௰௫
ததா பவதி ேலாேக அஸ்மிந்। ப்ராணிநாம் ஜவிைதஷிணாம் ீ ।
௬௨।௰௰௬
விஸ்வாஸ்யஸ் ேசாபகம்யஸ் ச। ந ஹி ஹிம்ஸாருதிர் யதா।
௬௨।௰௰௬

துஷ்டராம்ஸ் தரேத ம॥॥ஆம்। மாம்ஸஸ்ய பரிவர்ஜநாத்। ௰௬௨।௭௪
ப்ராணா யதாத்மேநா அபஷ்டா ீ । பூதாநாம் அபி ேத ததா। ௬௨।௰௰௭
ஆத்ெமௗபம்ேயந கந்தவ்யம்। புத்திமத்பிர் மஹாத்மபி:। ௬௨।௰௰௭
அஹிம்ஸா பரேமா தர்ம:। ஸத்யம் ஏவ ச பாண்டவ। ௬௨।௰௰௮
அஹிம்ஸா ைசவ ஸத்யம் ச। தர்ேமா ஹி பரம: ஸ்ம்ருத:। ௬௨।௰௰௮
ந ஹி மாம்ஸம் த்ருணாத் காஷ்டாத்। உபலாத் வாபி ஜாயேத।
௬௨।௰௰௯
ஜவாத் ீ உத்பத்யேத மாம்ஸம்। தஸ்மாத் கர்ஹந்தி தத் புதா:।
௰௬௨।௭௫
யதி ைவ காதேகா ந ஸ்யாந்। ந ததா காதேகா பேவத்। ௬௨।௰௰௯
ேலாபாத் வா புத்திேமாஹாத் வா। ேயா மாம்ஸாந்ய் அத்தி மாநவ:।
௬௨।௰௧
நிர்க்ருண: ஸ ஹி மந்தவ்ய:। ஸத்தர்மபரிவர்ஜித:। ௬௨।௰௧
ஸ்வமாம்ஸம் பரமாம்ேஸந। ேயா வர்தயிதும் இச்சதி। ௬௨।௰௧௧
உத்விக்நவாேஸ வஸதி। யத்ரதத்ராபிஜாயேத। ௬௨।௰௧௧
தேநந க்ராயேகா ஹந்தி। உபேபாேகந காதக:। ௬௨।௰௧௨
காதேகா வதபந்தாப்யாம்। இத்ய் ஏஷ த்ரிவிேதா வத:। ௬௨।௰௧௨
பக்ஷயித்வா து ேயா மாம்ஸம்। பஸ்சாத் அபி நிவர்தேத। ௬௨।௰௧௩
தஸ்யாபி ஸுமஹாந் தர்ேமா। ய: பாபாத் விநிவர்தேத। ௬௨।௰௧௩
வரம் ஏகஸ்ய ஸத்த்வஸ்ய। தத்யாத் அக்ஷயதக்ஷிணாம்। ௰௬௨।௭௬
ந து விப்ரஸஹஸ்ரஸ்ய। ேகாஸஹஸ்ரம் ஸகாஞ்சநம்। ௰௬௨।௭௬
ேயா தத்யாத் காஞ்சநம் ேமரும்। க்ருத்ஸ்நாம் வாபி வஸும்தராம்।
௰௬௨।௭௬

அபக்ஷணம் ச மாம்ஸஸ்ய। ந து துல்யம் யுதிஷ்டிர। ௰௬௨।௭௬
இதம் அந்யத் ப்ரவŠயாமி। புராணம் க்ருஷிநிர்மிதம்। ௬௨।௰௧௩
ஸ்ரூயேத ச புராகல்ேப ஹ்ய்। க்ருஷீணாம் வ்ரீஹய: பஸு:।
௬௨।௰௧௪
யஜந்ேத ேயந ைவ யஜ்ஞாந்। க்ருஷய: புண்யகர்மிண:। ௬௨।௰௧௪
க்ருஷிபி: ஸம்ஸயம் ப்ருஷ்ேடா। வஸூ ராஜா தத: புரா। ௬௨।௰௧௫
அபŠயம் பŠயம் இதி ைவ। மாம்ஸம் ஆஹ நராதிப। ௬௨।௰௧௫
ஆகாஸாந் ேமதிநீம் ப்ராப்தஸ்। தத: ஸ ப்ருதிவபதி ீ :। ௬௨।௰௧௬
ஏதத் ஏவ புநஸ் ேசாக்த்வா। விேவஸ தரணதலம் ீ । ௬௨।௰௧௬
ெகௗமுதம் து விேஸேஷண। ஸுக்லபேக்ஷ நராதிப। ௬௨।௰௧௭
வர்ஜேயத் ஸர்வமாம்ஸாநி। தர்ேமா ஹ்ய் அத்ர விதீயேத। ௬௨।௰௧௭
சதுேரா வார்ஷிகாந் மாஸாந்। ேயா மாம்ஸம் பரிவர்ஜேயத்। ௬௨।௰௧௮
சத்வாரி பத்ராண்ய் ஆப்ேநாதி। கீர்திர் ஆயுர் யேஸா பலம்। ௬௨।௰௧௮
அப்ய் ஏகம் இஹ ேயா மாஸம்। ஸர்வமாம்ஸாநி வர்ஜேயத்।
௬௨।௰௧௯
அதீத்ய ஸர்வது:காநி। ஸுகம் ஜேவந் ீ நிராமய:। ௬௨।௰௧௯
ேயா ஹி வர்ஷஸதம் பூர்ணம்। தபஸ் தப்ேயத் ஸுதாருணம்।
௬௨।௰௨
அப்ய் ஏகம் வர்ஜேயந் மாஸம்। மாம்ஸம் ஏதத் ஸமம் மதம்। ௬௨।௰௨
ேயா வர்ஜயதி மாம்ஸாநி। மாஸம் பக்ஷம் அதாபி வா। ௬௨।௰௨௧
ஸ ைவ ஹிம்ஸாநிவ்ருத்தஸ் து। ப்ரஹ்மேலாேக மஹீயேத।
௬௨।௰௨௧
ஸர்வகாலம் து மாம்ஸாநி। வர்ஜிதாநி மஹர்ஷிபி:। ௬௨।௰௨௨

மந்வா க்ஷுேபண ஸ்ேவேதந। தைதேவŠவாகுநாபி ச। ௬௨।௰௨௨
ப்ருகுணா நலராமாப்யாம்। திலீபரகுெபௗரைவ:। ௬௨।௰௨௩
ஆயுஷா ைசவ கார்க்ேயண। ஜநைகஸ் சக்ரவர்திபி:। ௬௨।௰௨௩
துந்துமாராம்பரீஷாப்யாம்। நஹுேஷண ச தீமதா। ௬௨।௰௨௪
காதிநா புருகுத்ேஸந। குருணா புருணா ததா। ௬௨।௰௨௪
முசுகுந்ேதந மாந்தாத்ரா। ஸகேரண மஹாத்மநா। ௬௨।௰௨௫
ஸிபிநா சாஸ்வபதிநா। வரேஸநாதிபிஸ் ீ ததா। ௬௨।௰௨௫
ஸம்ஜேயநாத பஷ்ேமண ீ । புஷ்கேரணாத பாண்டுநா। ௬௨।௰௨௬
ஸுவர்ணஷ்டீவிநா ைசவ। துஷ்வந்தந்ருகேராஹிைத:। ௬௨।௰௨௬
ஏைதஸ் சாந்ையஸ் ச பஹுபி:। ஸர்ைவர் மாம்ஸம் ந பக்ஷிதம்।
௬௨।௰௨௭
ஸரத்ெகௗமுதிகம் மாஸம்। தத: ஸ்வர்கம் கதா ந்ருபா:। ௬௨।௰௨௭
ஸர்வகாமஸம்ருத்தாஸ் ேத। வஸந்தி திவி ஸம்ஸ்திதா:। ௬௨।௰௨௭
ப்ரஹ்மேலாேக ச பூஜ்யந்ேத। ஜ்வலமாநா: ஸ்ரியாவ்ருதா:। ௬௨।௰௨௮
உபாஸ்யமாநா காந்தர்ைவ:। ஸ்த்ரீஸஹஸ்ரஸமந்விதா:। ௬௨।௰௨௮
தத் ஏவம் உத்தமம் தர்மம்। அஹிம்ஸாலக்ஷணம் ஸுபந்। ௬௨।௰௨௯
ேய ரக்ஷந்தி மஹாத்மாேநா। நாகப்ருஷ்ேட வஸந்தி ேத। ௬௨।௰௨௯
மது மாம்ஸம் ச ேய நித்யம்। வர்ஜயந்தீஹ மாநவா:। ௬௨।௰௩
ஜந்மப்ரப்ருதி மத்யம் ச। ஸர்ேவ ேத முநய: ஸ்ம்ருதா:। ௬௨।௰௩
ஆபந்நஸ் சாபேதா முச்ேயத்। பத்ேதா முச்ேயத பந்தநாத்। ௬௨।௰௩௧
வ்யாதிேதா முச்யேத ேராகாத்। து:காந் முச்ேயத து:கித:। ௬௨।௰௩௧
யஸ் ைசநம் படேத நித்யம்। ப்ரயத்நாத் பரதர்ஷப। ௬௨।௰௩௨
ேகாரம் ஸம்தரேத துர்கம்। ஸ்வர்கவாஸம் ச விந்ததி। ௬௨।௰௩௨

திர்யக்ேயாநிம் ந கச்ேசச் ச। ரூபவாம்ஸ் ைசவ ஜாயேத। ௬௨।௰௩௨
ஏதத் ேத கதிதம் ராஜந்। மாம்ஸஸ்ய பரிவர்ஜநம்। ௬௨।௰௩௩
ப்ரவ்ருத்ெதௗ ச நிவ்ருத்ெதௗ ச। ப்ரமாணம் க்ருஷிஸத்தைம:।
௬௨।௰௩௩
ேகாப்ராஹ்மணஹிதார்தாய। சாதுர்வர்ண்யஹிதாய ச। ௬௩।௰௰௧
அஸிஷ்டநிக்ரஹார்தாய। ஸிஷ்டாநாம் ரக்ஷணாய ச। ௬௩।௰௰௧
யுதிஷ்டிரஸ்ய ராஜர்ேஷர்। ஏவம் நாராயேணா அப்ரவத்ீ। ௬௩।௰௰௧
பஞ்ச ரூபாணி ராஜாேநா। தாரயந்த்ய் அமிெதௗஜஸ:। ௬௩।௰௰௨
அக்ேநர் இந்த்ரஸ்ய ேஸாமஸ்ய। யமஸ்ய வருணஸ்ய ச। ௬௩।௰௰௨
தாந் ந ஹிம்ேஸந் ந சாக்ேராேஸந்। நாக்ஷிேபந் நாப்ரியம் வேதத்।
௬௩।௰௰௩
ேதவா மாநுஷரூேபண। சரந்தி ப்ருதிவம்ீ இமாம்। ௬௩।௰௰௩
இந்த்ராத் ப்ரபுத்வம் ஜ்வலநாத் ப்ரதாபம்। க்ெரௗர்யம் யமாத் ைவஸ்ரவணாத்
ப்ரபாவம்। ௬௩।௰௰௪
ஸத்த்வஸ்திதிம் ராமஜநார்தநாபாம்। ஆதாய ராஜ்ஞ: க்ரியேத ஸரீரம்।
௬௩।௰௰௪
ந சாபி ராஜா மந்தவ்ேயா। மநுஷ்ேயா அயம் இதி ப்ரேபா। ௬௩।௰௰௫
மஹதீேதவதா ஹ்ய் ஏஷா। நரரூேபண திஷ்டதி। ௬௩।௰௰௫
ஸ்வயம் இந்த்ேரா நேரா பூத்வா। ப்ருதிவம்ீ அநுஸாஸதி। ௬௩।௰௰௬
ந ஹி பாலயிதும் ஸக்ேதா। மநுஷ்ய: ப்ருதிவம்ீ இமாம்। ௬௩।௰௰௬
யத் ப்ரஜாபாலைந: புண்யம்। ப்ராப்நுவந்தீஹ பார்திவா:। ௬௩।௰௰௭
ந தத் க்ரதுஸஹஸ்ேரண। ப்ராப்நுவந்தி த்விேஜாத்தமா:। ௬௩।௰௰௭
அதீதஹுததப்தஸ்ய। கர்மண: ஸுக்ருதஸ்ய ச। ௬௩।௰௰௮

ஷஷ்டம் லபதி பாகம் து। ப்ரஜா தர்ேமண பாலயந்। ௬௩।௰௰௮
க்ராமாதிபத்யம் நகராதிபத்யம்। ேதஸாதிபத்யம் ப்ருதிவபதித்வம் ீ ।
௬௩।௰௰௯
ந ப்ராப்நுவந்தீஹ மநுஷ்யமாத்ரா। ேய ேதவதாநாம் ந பவந்தி பாகா:।
௬௩।௰௰௯
ந தத் அஸ்தி வ்ரதம் ேலாேக। யத் ராஜ்ஞஸ் சரிேதாபமம்। ௬௩।௰௧
ந தத் ேவதரஹஸ்யம் வா। யத் ராஜ்ஞ: பலேதா அதிகம்। ௬௩।௰௧
ஏவம்வ்ருத்தாஸ் து ராஜாேநா। ேதவபாகா ந மாநுஷா:। ௬௩।௰௧
சதுர்ேவத்யம் ஹுதச॥ந। ேயா ஹிம்ேஸத நராதிப:। ௰௬௩।௭௭
தண்டஸ்ையேத பயாத் பதா ீ । ந காதந்தி பரஸ்பரம்। ௰௬௩।௭௭
ஜ॥தண்டபயாத் ேக॥।। ந துர்வந்தி ஹி பாதகம்। ௰௬௩।௭௭
யமதண்டபயாத் அந்ேய। ந துர்வந்தி பரஸ்பரம்। ௰௬௩।௭௭
நாபேதா ீ யஜேத காம்ஸ்சந் । நாபேதா ீ தண்டம் இச்சதி। ௰௬௩।௭௭
ய ஏவ ேதவா ஹந்தாரஸ்। தாம்ல் ேலாேகா அர்சயேத ப்ருஸம்।
௬௩।௰௧௧
ஹந்தா ஸக்ரஸ் ச ருத்ரஸ் ச। ஹந்தா ைவஸ்ரவேணா யம:।
௬௩।௰௧௧
வருேணா வாயுர் ஆதித்ய:। பர்ஜந்ேயா அக்நிர் ப்ருஹஸ்பதி:। ௬௩।௰௧௧
ஏதாந் ேதவாந் நமஸ்யந்தி। ப்ரதாபப்ரணதா ஜநா:। ௬௩।௰௧௨
ந ப்ரஹ்மாணம் ந தாதாரம்। ந பூஷாணம் கதம்சந। ௬௩।௰௧௨
தண்டக்ரஸ்தம் ஜகத் ஸர்வம்। வஸ்யத்வம் அநுகச்சதி। ௬௩।௰௧௩
நாயம் க்லீபஸ்ய ேலாேகா அஸ்தி। ந பர: பார்திேவாத்தம। ௬௩।௰௧௩
ந ஹி பஸ்யாமி ஜவந்தம் ீ । ராஜந் கம்சித் அஹிம்ஸயா। ௬௩।௰௧௪

உதேக ஜந்தேவா நித்யம்। ப்ருதிவ்யாம் ச பேலஷு ச। ௬௩।௰௧௪
ந ஹத்வா லிப்யேத ராஜா। ப்ரஜா தர்ேமண பாலயந்। ௬௩।௰௧௪
யதி தண்ேடா ந வித்ேயத। துர்விநீதாஸ் தேதா நரா:। ௬௩।௰௧௫
ஹந்யு: பஸூந் மநுஷ்யாம்ஸ் ச। யாஜ்ஞியாநி ஹவிம்ஷி ச।
௬௩।௰௧௫
வ்ருகவத் க்ஷபேயயுஸ் ச। ேயா யஸ்ய பலவத்தர:। ௰௬௩।௭௮
தஸ்மாத் ப்ராணிஹிேத தண்ேட। ஹிம்ஸாேதாேஷா ந பாதேத।
௰௬௩।௭௯
ைநேவாஸ்த்ரா ந பலீவர்தா। நாஸ்வாஸ்வதரகர்தபா:। ௬௩।௰௧௬
யுக்தா வேஹயுர் யாநாநி। தண்டஸ் ேசந் ேநாத்யேதா பேவத்।
௬௩।௰௧௬
ஸத்யம் கிைலதத் யத் உவாச ஸக்ேரா। தண்ட: ப்ரஜா ரக்ஷதி ஸாதுவ்ருத்த:।
௬௩।௰௧௭
யஸ்யாக்நய: ப்ரதிமாஸஸ்ய பதா ீ :। ஸம்தர்ஜிதா தண்டபயாஜ் ஜ்வலந்தி।
௬௩।௰௧௭
யத்ர ஸ்யாேமா ேலாஹிதாேக்ஷா। தண்டஸ் சரதி பாபஹா। ௬௩।௰௧௮
ப்ரஜாஸ் தத்ர ந முஹ்யந்ேத। ேநதா ேசத் ஸாது பஸ்யதி। ௬௩।௰௧௮
தண்டநீெதௗ ஸுநீதாயாம்। ஸர்ேவ ஸித்யந்த்ய் உபக்ரமா:। ௬௩।௰௧௯
தண்டஸ் ேசந் ந ப்ரவர்ேதத। விநஸ்ேயயுர் இமா: ப்ரஜா:। ௬௩।௰௧௯
வ்ருகவத் பக்ஷேயயுஸ் ச। ேயா யஸ்ய பலவத்தர:। ௬௩।௰௨
காகாத்யாஸ் ச புேராதாஸம்। ஸ்வா ைசவாவலிேஹத் தவி:। ௬௩।௰௨
ஸ்வாம்யம் ச ந ஸ்யாத் கஸ்மிம்ஸ்சித்। ப்ரவர்ேததாதேராத்தரம்।
௬௩।௰௨௧
சாதுர்வர்ண்யவிேமாக்ஷாய। துர்விநீதபயாய ச। ௬௩।௰௨௧

தண்ேடந நியேதா ேலாேகா। தர்மஸ்தாநம் ச ரக்ஷதி। ௬௩।௰௨௨
ஸர்ேவா தண்டஜிேதா ேலாேகா। துர்லேபா ஹி ஸுசிர் ஜந:।
௬௩।௰௨௨
தண்டஸ்ய ஹி பயாத் பதா ீ । நராஸ் திஷ்டந்தி ஸாஸேந। ௬௩।௰௨௩
தி அபி ேபாகாய கல்பந்ேத। தண்ேடேநாபரிபடிதா ீ :। ௬௩।௰௨௩
குருர் ஆத்மவதாம் ஸாஸ்தா। ஸாஸ்தா ராஜா துராத்மநாம்। ௬௩।௰௨௪
இஹப்ரச்சந்நபாபாநாம்। ஸாஸ்தா ைவவஸ்வேதா யம:। ௬௩।௰௨௪
பாபாநாம் அத மூடாநாம்। பரத்ரவ்யாபஹாரிணாம்। ௬௩।௰௨௫
பரதாரரதா ேய ச। ேய ச பாதகஸம்ஜ்ஞிதா:। ௬௩।௰௨௫
ேதஷாம் து ஸாஸநார்தாய। மையதத் ஸமுதாஹ்ருதம்। ௬௩।௰௨௫
ப்ராஹ்மண்யம் துஷ்கரம் ஜ்ஞாத்வா। தஸ்ய தண்டம் நிபாதேயத்।
௬௩।௰௨௬
கர்மாநுரூேபா தண்ட: ஸ்யாத்। ேகாஹிரண்யாதிேகா பேவத்।
௬௩।௰௨௬
அவத்ேயா ப்ராஹ்மேணா ராஜந்। ஸ்த்ரீ வ்ருத்ேதா பால ஏவ ச।
௬௩।௰௨௬
யஸ் சேரத் அஸுபம் கர்ம। பாபம் ராஜவிகர்ஹிதம்। ௬௩।௰௨௭
பாதேகஷு ச வர்ேதத। நிக்ரஹம் தஸ்ய காரேயத்। ௬௩।௰௨௭
ஸிரேஸா முண்டநம் க்ருத்வா। ேகாமேயநாநுேலபேயத்। ௬௩।௰௨௮
கரயாேநந நகரம்। டிண்டிேமந து ப்ராமேயத்। ௬௩।௰௨௮
ராஜநிர்திஷ்டதண்டஸ்ய। ப்ராயஸ்சித்தம் ந வித்யேத। ௬௩।௰௨௮
ஏஷ ேத கதிேதா தண்ேடா। ப்ராஹ்மணஸ்ய யுதிஷ்டிர। ௬௩।௰௨௯

க்ஷத்ரியஸ்ய து ேயா தண்டஸ்। தம் வŠயாம்ய் அநுபூர்வஸ:।
௬௩।௰௨௯
பரத்ரவ்யாதிஹரேண। பரதாராபிமர்தேந। ௬௩।௰௩
பாதேகஷு ச ஸர்ேவஷு। ேயா ஹி வர்ேதத க்ஷத்ரிய:। ௬௩।௰௩
தஸ்ய தண்டம் ப்ரவŠயாமி। தந் ேம நிகதத: ஸ்ருணு। ௬௩।௰௩
ஹஸ்தபாதபரிச்ேசதம்। கர்ணநாஸாவகர்தநம்। ௬௩।௰௩௧
ஸர்வஸ்வஹரணம் க்ருத்வா। பரராஷ்ட்ராய ப்ேரஸேயத்। ௬௩।௰௩௧
ராஜ்யம் காங்ேக்ஷத ேயா மூேடா। ராஜபத்நீம் அதாபி வா। ௬௩।௰௩௨
ஸைரஸ் து ராஜா வித்ேயத। ஸக்திசக்ரகதாதிபி:। ௬௩।௰௩௨
க்ஷத்ரியஸ்ய து துஷ்டஸ்ய। தண்ட ஏஷ விதீயேத। ௬௩।௰௩௩
ைவஸ்யஸ்யாபி ச ேயா தண்டஸ்। தம் ப்ரவŠயாமி பாரத।
௬௩।௰௩௩
பாதேகஷ்வ் ஏவ க்ரூேரஷு। யஸ் து ைவஸ்ய: ப்ரவர்தேத। ௬௩।௰௩௪
பரதாேர பரத்ரவ்ேய। தஸ்ய நிக்ரஹம் ஆதிேஸத்। ௬௩।௰௩௪
ஸூலாயாம் ேபதநம் தஸ்ய। வ்ருக்ஷஸாகாவலம்பநம்। ௬௩।௰௩௫
ஏதத் ைவஸ்யஸ்ய நிர்திஷ்டம்। ஸூத்ரஸ்யாப்ய் அநுபூர்வஸ:।
௬௩।௰௩௫
ஸூேல ஸூத்ரஸ்ய ேயா துஷ்டஸ்। தஸ்ையகஸ்ய வத: ஸ்ம்ருத:।
௬௩।௰௩௬
குஞ்ஜேரணாபிமர்ேதத। மீநீயாம் அத பாசேயத்। ௬௩।௰௩௬
ஏதச் சூத்ரஸ்ய நிர்திஷ்டம்। நாந்ேயா தண்ேடா விதீயேத। ௬௩।௰௩௬
ைநகஸ்யார்ேத குலம் ஹந்யாந்। ந ராஷ்ட்ரம் ந ச க்ராமகம்।
௬௩।௰௩௭

தநேலாபாந் ந ேமாக்தவ்ேயா। ராகாத் வா ஸாஸநம் விநா। ௰௬௩।௮௰
ஏகம் ஸுஸிஷ்டிதம் க்ருத்வா। ேஸஷம் ேகாஸம் ப்ரேவஸேயத்।
௬௩।௰௩௭
யுதிஷ்டிரஸ்ய ராஜர்ேஷர்। ஏவம் நாராயேணா அப்ரவத்ீ। ௬௩।௰௩௮
ஸமாேஸந யதாந்யாயம்। தண்டநீதிம் அநுத்தமாம்। ௬௩।௰௩௮
உத்தமாதமகார்ேயஷு। ஸேமஷு விஷேமஷு ச। ௬௩।௰௩௯
ராஜதர்மாம்ஸ் து பஸ்ேயத। விஷ்ணுநா ஸமுதாஹ்ருதாந்। ௬௩।௰௩௯
ஏதாந் தர்மாஞ் ஜகந்நாத:। பாண்டுபுத்ராய ப்ருச்சேத। ௬௪।௰௰௧
ஜகாத புருஷவ்யாக்ர। கிம் அந்யச் ச்ேராதும் இச்சஸி। ௬௪।௰௰௧
பகவந் வஹதாம் பக்திம்। ேதவேதேவ ஜநார்தேந। ௬௪।௰௰௨
யத் பலம் கதிதம் தஜ்ஜ்ைஞஸ்। தந் ேம விஸ்தரேதா வத। ௬௪।௰௰௨
யத் பலம் வஹதாம் பக்திம்। அச்யுேத பவதி ப்ரேபா। ௬௪।௰௰௩
ந தத் வர்ணயிதும் ஸக்யம்। ஹரி: ஸர்ேவப்ஸிதப்ரத:। ௬௪।௰௰௩
யாத்ருக் ஸத்த்வம் மநுஷ்யாணாம்। தாத்ருக் ஆராத்ய ேகஸவம்।
௬௪।௰௰௪
பலம் இச்சந்தி தாத்ருச் ச। லப்யேத ைதர் நேரஸ்வர। ௬௪।௰௰௪
முக்திகாமா நரா முக்திம்। ஸ்வர்கம் ேதவத்வம் ஈப்ஸவ:। ௬௪।௰௰௫
கந்தர்வயக்ஷஸித்தாநாம்। வ்ருண்வந்த்ய் அந்ேய ஸேலாகதாம்।
௬௪।௰௰௫
வர்ேஷஷ்வ் அபப்ஸேவா ீ விஷ்ணும்। பாதாேலஷு ததாபேர।
௬௪।௰௰௬
ேபாகாந் அபப்ஸேவா ீ விஷ்ணும்। ேதாஷயண்தி நராதிப। ௬௪।௰௰௬
ததாபேர நைரஸ்வர்யம்। ஆேராக்யம் குணவத் புவி। ௬௪।௰௰௭

ப்ரார்தயந்த்ய் அச்யுதம் ேதவம்। ஆராத்ய ஜகேதா கதிம்। ௬௪।௰௰௭
தர்ேமாபேதஸாத் அசலாம்। வஹந் பக்திம் ஜநார்தேந। ௬௪।௰௰௮
ஸஸரீேரா கத: ஸ்வர்கம்। தர்மபுத்ேரா யுதிஷ்டிர:। ௬௪।௰௰௮
தைதவ ஜநக: க்ருஷ்ேண। விநிேவஸ்ய ஸ்வமாநஸம்। ௬௪।௰௰௯
அவாப பரமாம் ஸித்திம்। வஸு: ப்ராயாத் த்ரிபிஷ்டபம்। ௬௪।௰௰௯
அந்ேய ச ேய ேய முநேயா। ேய ேய ச வஸுதாதிபா:। ௬௪।௰௧
அவாபுர் அதுலாந் காமாம்ஸ்। ேத ேத ஸம்ேதாஷ்ய ேகஸவம்।
௬௪।௰௧
அநாராத்ய ஜகந்நாதம்। ஸர்வபாபஹரம் ஹரிம்। ௬௪।௰௧௧
ஸத்கதி: ேகந ஸம்ப்ராப்தா। ேபாகாஸ் சாபி மேநாரமா:। ௬௪।௰௧௧
த்ெரௗணிப்ரஹ்மாஸ்த்ரநிர்தக்தஸ்। தவ ராஜந் பிதாமஹ:। ௬௪।௰௧௨
விஷ்ேணா: கார்யமநுஷ்யஸ்ய। தர்ஸநாத் உத்தித: புந:। ௬௪।௰௧௨
நாமஸம்கீர்தநாத் யஸ்ய। பாபம் அந்ையர் உபத்ரைவ:। ௬௪।௰௧௩
ஸமம் விநாஸம் ஆயாதி। ேதவ: ேகா அப்யதிகஸ் தத:। ௬௪।௰௧௩
ராஷ்ட்ரஸ்ய ஸரணம் ராஜா। பிதெரௗ பாலகஸ்ய ச। ௬௪।௰௧௪
தர்ம: ஸமஸ்தமர்த்யாநாம்। ஸர்வஸ்ய ஸரணம் ஹரி:। ௬௪।௰௧௪
முக்திேஹதும் அநாத்யந்தம்। அஜம் அக்ஷயம் அச்யுதம்। ௬௪।௰௧௫
நமஸ்யந் ஸர்வேலாகஸ்ய। நமஸ்ேயா ஜாயேத நர:। ௬௪।௰௧௫
ந ஹி தஸ்ய குணா: ஸர்ேவ। ஸர்ைவர் முநிகைணர் அபி। ௬௪।௰௧௬
வக்தும் ஸக்யா வியுக்தஸ்ய। ஸத்த்வாத்ையர் அகிைலர் குைண:।
௬௪।௰௧௬
ஸ்ருதம் மயா யதா பூர்வம்। ஆர்யேகா ேம யுதிஷ்டிர:। ௬௪।௰௧௭
ஸஸரீேரா கத: ஸ்வர்கம்। ஜிதம் ஆத்மீயகர்மபி:। ௬௪।௰௧௭

யத் த்வ் ஏதத் பகவாந் ஆஹ। ஸ யதா பாண்துபூர்வஜ:। ௬௪।௰௧௮
தர்ேமாபேதஸாத் ேகாவிந்தம்। ஆராதயத தத் வத। ௬௪।௰௧௮
புரா ஸாஸதி தர்மஜ்ேஞ। தர்மபுத்ேர யுதிஷ்டிேர। ௬௪।௰௧௯
தஸ்ையவ ைவஸ்வேதவாந்ேத। சண்டாேலா அப்யாகமத் கில।
௬௪।௰௧௯
ஸமுேபத்ய க்ருஹம் தஸ்ய। தர்மபுத்ரஸ்ய விஸ்மித:। ௬௪।௰௨
உவாச ஸ்வபேசா த்வா:ஸ்தம்। ப்ரஸ்ரயாவநதஸ்தித:। ௬௪।௰௨
கஸ்ையதத் பவநம் திவ்யம்। மணிரத்நவிபூஷிதம்। ௬௪।௰௨௧
ஸுத்தஸ்படிகேஸாபாநம்। மணிகாஞ்சநேதாரணம்। ௬௪।௰௨௧
அஷ்டாஸதிஸஹஸ்ராணி ீ । ப்ராஹ்மணாநாம் திேந திேந। ௬௪।௰௨௨
யுதிஷ்டிரம் க்ருேத பூபம்। புஞ்ஜேத கஸ்ய ேவஸ்மநி। ௬௪।௰௨௨
கதம் ஏதந் ந ஜாநீேஷ। சந்த்ரபிம்பம் இவாபரம்। ௬௪।௰௨௩
யுதிஷ்டிரஸ்ய பவநம்। ேதவராஜக்ருேஹாபமம்। ௬௪।௰௨௩
அபலஸ்ய பலம் ராஜா। பாலஸ்ய ருதிதம் பலம்। ௬௪।௰௨௪
பலம் மூர்கஸ்ய ைவ ெமௗநம்। தஸ்கரஸ்யாந்ருதம் பலம்। ௬௪।௰௨௪
கச்ச ஜல்ப ஸ்வராஜாநம்। ப்ரதீஹார வேசா மம। ௬௪।௰௨௫
து:கார்த: கார்யவாந் ராஜம்ஸ்। சண்டாேலா த்வாரி திஷ்டதி। ௬௪।௰௨௫
ேகநாபி ேஹதுமாத்ேரண। பவந்தம் துஷ்டம் ஆகத:। ௰௬௪।௮௧
இத்ய் உக்ேதா தர்மராஜஸ்ய। ப்ரதீஹாேரா யேதாதிதம்। ௬௪।௰௨௬
நிேவதயாம் ஆஸ ததா। தர்மராேஜா அப்ரவத்ீ இதம்। ௬௪।௰௨௬
கிம் ரூபம் கீத்ருஸம் ஸலம் ீ । ேகா அஸ்யார்த: கிம் ப்ரேயாஜநம்।
௬௪।௰௨௭

ப்ரூஹி த்வா:ஸ்த யதாவந் ேம। நரஸ் திஷ்டதி கீத்ருஸ:। ௬௪।௰௨௭
காகேகாகிலக்ருஷ்ணாங்ேகா। பக்நநாஸாருேணக்ஷண:। ௬௪।௰௨௮
யவமத்ய: க்ருஸக்ரீேவா। வக்ரபாேதா மஹாஹநு:। ௬௪।௰௨௮
ப்ரூஹி கச்ச துராசாரம்। சண்டாலம் பாபகர்மிணம்। ௬௪।௰௨௯
ேதவகார்யஸ்ய ேவலாயாம்। துதஸ் த்வம் ப்ரத்யுபஸ்தித:। ௬௪।௰௨௯
சண்டாலபதிெதௗ த்ருஷ்ட்வா। நர: பஸ்ேயத பாஸ்கரம்। ௬௪।௰௩
ஸ்நாதஸ் த்வ் ஏதாவ் அதாேலாக்ய। ஸைசலஸ்நாநம் அர்ஹதி।
௬௪।௰௩
இத்ய் ஆஜ்ஞப்ேத தேதாக்தஸ் து। சண்டாலஸ் ேதந ைவ தத:।
௬௪।௰௩௧
ப்ரத்யுவாச ப்ரதீஹாரம்। ஈஷந் மந்யுபரிப்லுத:। ௬௪।௰௩௧
கிம் ேதவகார்ேயண நராதிபஸ்ய। க்ருத்வா ஹி மந்யும் விஷயஸ்திதாநாம்।
௬௪।௰௩௨
தத் ேதவகார்யம் ஸ ச யஜ்ஞேஹாேமா। யத் அஸ்ருபாதா ந பதந்தி
ராஷ்ட்ேர। ௬௪।௰௩௨
இதம் வசநம் அவ்யக்ரம்। ப்ரதீஹார த்வரா மம। ௰௬௪।௮௨
நிேவதய ஸ்வராேஜந்த்ரம்। யேதஷ்டம் ஸ கேராது ைவ। ௰௬௪।௮௨
இத்ய் உக்த: ஸத்வரம் கத்வா। தர்மராஜம் ததா ததம் । ௰௬௪।௮௨
கதயாம் ஆஸ தத் ஸர்வம்। சாண்டாேலந யத் ஈரிதம்। ௰௬௪।௮௨
ஸுேஸாபநம் இதம் வாக்யம்। ந பேவத் அந்த்யஜாதிஷு। ௰௬௪।௮௨
சிந்தயித்வா தேதா ராஜா। நிர்ஜகாம யுதிஷ்டிர:। ௰௬௪।௮௨
இத்ய் ஏதத் வசநம் ஸ்ருத்வா। நிர்ஜகாம யுதிஷ்டிர:। ௬௪।௰௩௩
ப்ரத்யுவாச ச சண்டாலம்। ஈஷந் ேகாபஸமந்வித:। ௬௪।௰௩௩

குதஸ் ேத பயம் உத்பந்நம்। ேயந த்வம் க்ருஹம் ஆகத:। ௬௪।௰௩௪
ஆவாதாகாரணம் ஸர்வம்। யதாவத் கதயஸ்வ ேம। ௬௪।௰௩௪
தத் அஹம் ேத ப்ரதிஜ்ஞாய। சண்டகர்மகரக்ஷணம்। ௬௪।௰௩௫
அபாஸ்ய ேதவகார்யார்தம்। ப்ரவிஸ்யாம்ய் அந்தரம் புந:। ௬௪।௰௩௫
ந புஞ்ஜேத ப்ராஹ்மணா ேம। ஸர்வாஸ் ேசாத்விஜேத ஜந:।
௬௪।௰௩௬
ப்ராணிஹிம்ஸா ச ேநா வ்ருத்திர்। ேதவ புஷ்ணாதி ேம அந்ருதம்।
௬௪।௰௩௬
அேநகஜந்மஸாஹஸ்ரீம்। ப்ராப்ய ஸம்ஸாரபத்ததிம்। ௬௪।௰௩௭
மாநுஷ்ேய குத்ஸிதாம் ஜாதிம்। ஆபந்ேநா முஷிேதா அஸ்மி ேபா:।
௬௪।௰௩௭
கர்மபூமிம் இமாம் ராஜந்। ப்ரார்தயந்தி திெவௗகஸ:। ௬௪।௰௩௮
தாம் ஸம்ப்ராப்ய வ்ருதாஜந்மா। முஷ்ேடா அஸ்மி குருஸத்தம।
௬௪।௰௩௮
து:ேக து:காதிகாந் பஸ்ேயத்। ஸுேக பஸ்ேயத் ஸுகாதிகாந்।
௬௪।௰௩௯
ஆத்மாநம் ேஸாகஹர்ஷாப்யாம்। ஸத்ருப்யாம் இவ நார்பேயத்।
௬௪।௰௩௯
ேஸா அஹம் இச்சாமி விஜ்ஞாதும்। அதிதுஷ்க்ருதகர்மக்ருத்। ௬௪।௰௪
வக்தும் அர்ஹஸி தர்மஜ்ஞ। க: பாபிஷ்டதேரா மயா। ௬௪।௰௪
அத்வாநம் உபரி ஸ்ராந்தம்। ப்ராஹ்மணம் க்ருஹம் ஆகதம்। ௬௪।௰௪௧
அநர்சயித்வா ேயா புங்க்ேத। ஸ பாபிஷ்டதரஸ் த்வயா। ௬௪।௰௪௧
மாதரம் பிதரம் ைசவ। விகலம் ேநத்ரதுர்பலம்। ௬௪।௰௪௨

ேயா நாப்யுத்தரேத புத்ர:। ஸ பாபிஷ்டதரஸ் த்வயா। ௬௪।௰௪௨
ேகாதநஸ்ய த்ருஷார்தஸ்ய। ஜலார்தம் பரிதாவத:। ௬௪।௰௪௩
விக்நம் ஆசரேத யஸ் து। ஸ பாபிஷ்டதரஸ் த்வயா। ௬௪।௰௪௩
விவாஹயித்வா ய: கந்யாம்। குலஜாம் ஸலமண்டநாம் ீ । ௬௪।௰௪௪
விநா த்யஜதி ேதாேஷண। ஸ பாபிஷ்டதரஸ் த்வயா। ௬௪।௰௪௪
ஆஸாகாரஸ் த்வ் அதாதா ேயா। தாதுஸ் ச ப்ரதிேஷதக:। ௬௪।௰௪௫
தத்தம் ச ய: கீர்தயதி। ஸ பாபிஷ்டதரஸ் த்வயா। ௬௪।௰௪௫
பஹுப்ருத்ையர் தரித்ைரஸ் ச। தநம் ஸந்தம் த்விேஜாத்தைம:।
௬௪।௰௪௬
யாசிேதா ந ப்ரயச்ேசத் ய:। ஸ பாபிஷ்டதரஸ் த்வயா। ௬௪।௰௪௬
ப்ராஹ்மண: க்ஷத்ரிேயா வாபி। ைவஸ்ய: ஸூத்ேரா அபி வா நர:।
௬௪।௰௪௭
ஸ்வதர்மம் ஸம்த்யேஜத் யஸ் து। ஸ பாபிஷ்டதரஸ் த்வயா।
௬௪।௰௪௭
க்ருதார்ேதா அஹம் கமிஷ்யாமி। யேஸாதர்மம் அவாப்நுஹி।
௬௪।௰௪௮
துஷ்ேடா அஸ்ம்ய் அஹம் ஸ்வயா ேயாந்யா। மத்த: ப்ேராக்தாஸ்
த்வயாதமா:। ௬௪।௰௪௮
ேதவதாநாம் க்ருஷீணாம் ச। பித்ருணாம் ச க்ருதம் மயா। ௬௪।௰௪௯
ஸாம்ப்ரதம் ேதஸகாேலா அயம்। த்வம் ஏவாத்ர பவாதிதி:। ௬௪।௰௪௯
சண்டாேலா அஹம் மஹாராஜ। பதிேதா ேலாகவர்ஜித:। ௬௪।௰௫
கதம் நிஹீேநா வர்ேணப்ேயா। ேபாŠயாமி பவேதா க்ருேஹ।
௬௪।௰௫
சண்டாேலா பவ பாேபா வா। ஸத்ருர் வா பித்ருகாதக:। ௬௪।௰௫௧

ேதஸகாலாப்யுேபதம் த்வாம்। பரணயம்ீ ஹி ேவத்ம்ய் அஹம்।
௬௪।௰௫௧
தஸஸூநாஸமம் சக்ரம்। தஸசக்ரஸேமா த்வஜ:। ௬௪।௰௫௨
தஸத்வஜஸமா ேவஸ்யா। தஸேவஸ்யாஸேமா ந்ருப:। ௬௪।௰௫௨
தஸ ஸூநாஸஹஸ்ராணி। குருேத ேயா ஹி ெஸௗநிக:। ௬௪।௰௫௩
ேதந துல்ய: ஸ்ம்ருேதா ராஜா। ேகாரஸ் தஸ்ய ப்ரதிக்ரஹ:। ௬௪।௰௫௩
நாநாேகாத்ராதிசரணா। புஞ்ஜேத ப்ராஹ்மணா மம। ௬௪।௰௫௪
ந ேத வதந்தி வாக்துஷ்டம்। யைததத் கீர்திதம் த்வயா। ௬௪।௰௫௪
ேலாபாத்மாேநா ந ஜாநீயுர்। ப்ராஹ்மணா ராஜகில்பிஷம்। ௬௪।௰௫௫
வரம் ஸ்வமாம்ஸம் அத்தவ்யம்। ந து ராஜப்ரதிக்ரஹம்। ௬௪।௰௫௫
ராஜகில்பிஷதக்தாநாம்। ப்ராஹ்மணாநாம் யுதிஷ்டிர। ௬௪।௰௫௬
சிந்நாநாம் இவ பஜாநாம் ீ । புநர்ஜந்ம ந வித்யேத। ௬௪।௰௫௬
ராஜப்ரதிக்ரேஹா ேகாேரா। மத்வாஸ்வாேதா விேஷாபம:। ௬௪।௰௫௭
புேதந ப்ரதிஹர்தவ்ய:। ஸ்வமாம்ஸஸ்ேயவ பக்ஷணம்। ௬௪।௰௫௭
அதீத்ய சதுேரா ேவதாந்। ஸர்வஸாஸ்த்ரார்ததத்த்வவித்। ௬௪।௰௫௮
நேரந்த்ரபவேந புங்க்த்வா। விஷ்டாயாம் ஜாயேத க்ருமி:। ௬௪।௰௫௮
நிந்தேஸ ஸர்வராஜாேநா। ந சாத்மாநம் ப்ரஸம்ஸஸி। ௬௪।௰௫௯
ைதர்யவாந் ஆத்மேநா அநிந்த்ேயா। நாஸ்வாஸார்தம் ச ப்ருச்சஸி।
௰௬௪।௮௪
விமுக்தக்ேராதஹர்ஸஸ் ச। ேகா அப்ய் அத்ர ப்ரதிபாஸி ந:।
௰௬௪।௮௪
அநிந்த்ேயா நிந்த்யரூேபண। மஹாத்மா த்வம் ஹி ேம மத:।
௰௬௪।௮௪

ேகா பவாந் ப்ரூஹி ஸத்யம் ேம। கிமர்தம் இஹ சாகத:। ௰௬௪।௮௪
பவாந் உேபந்த்ர: ஸக்ேரா வா। ஸர்ேவா வா த்வம் பிநாகத்ருக்।
௰௬௪।௮௪
அதவா நிந்த்யரூேபண। பிதா நஸ் த்வம் இஹாகத:। ௬௪।௰௫௯
ஜ்ஞாேதா அஸ்மி ப்ருதிவபாலீ । துஷ்டஸ் ச தவ தர்ஸநாத்। ௬௪।௰௬
நந்தந்து பூமிபாகாஸ் ேத। ேயஷு த்வம் ப்ருதிவபதி ீ :। ௬௪।௰௬
நிர்ஜித்ய பரைஸந்யாநி। க்ஷிதிம் தர்ேமண பாலய। ௬௪।௰௬௧
ஸ்வல்பம் அப்ய் அஸ்து ேத ேவலாம்। மா ேகாவிந்ேதாஜ்ஜிதம் மந:।
௬௪।௰௬௧
கிம் ேம ராஜ்ேயந ேபாஸ் தாத। விஷையர் ஜவிேதந ீ வா। ௬௪।௰௬௨
ேயா அஹம் ஸூநாஸஹஸ்ைரஸ் து। தஸபி: பரிேவஷ்டித:।
௬௪।௰௬௨
மா விஷாதம் நரஸ்ேரஷ்ட। ஸமுைபஹி யுதிஷ்டிர। ௬௪।௰௬௩
யஜ்ேஞஸ்வரம் யஜ்ஞமூர்திம்। த்வம் ச விஷ்ணும் ஸமாஸ்ரித:।
௬௪।௰௬௩
ேயஷாம் ந விஷேய விப்ரா। யஜ்ைஞர் யஜ்ஞபதிம் ஹரிம்। ௬௪।௰௬௪
யஜந்தி பூபுஜஸ் ேதஷாம்। ஏதத் ஸூேநாதிதம் பலம்। ௬௪।௰௬௪
ேயஷாம் பாஷண்டஸம்கீர்ணம்। ந ராஷ்ட்ரம் ப்ராஹ்மேணாத்கடம்।
௬௪।௰௬௫
ேத து ஸூநாஸஹஸ்ராணாம்। தஸாநாம் பாகிேநா ந்ருபா:।
௬௪।௰௬௫
ேயஷாம் ந யஜ்ஞபுருஷ:। காரணம் புருேஷாத்தம:। ௬௪।௰௬௬
ேத து பாபஸமாசாரா:। ஸூநாபாெபௗகபாகிந:। ௬௪।௰௬௬

த்வம் து மத்ப்ரபவஸ் தாத। விஷ்ணுபக்தஸ் தைதவ ச। ௬௪।௰௬௭
இஷ்டிர் ைவஸ்வாநரீ பாபம்। உபஹம்ஸ்யதி ேத அகிலம்। ௬௪।௰௬௭
அவஸ்யம் விஷேய கஸ்சித்। ப்ராஹ்மண: ஸம்ஸ்ரிதவ்ரத:।
௬௪।௰௬௮
இஷ்டிம் ைவஸ்வாநரீம் க்ல்ப்தாம்। நிர்வேபத் அப்தபர்யேய।
௬௪।௰௬௮
தஸ்ய ஷட்பாகமாத்ேரண। த்வம் பாபம் நிர்தஹிஷ்யஸி। ௬௪।௰௬௮
ஸ த்வம் வரய பத்ரம் ேத। வரம் யந் மநேஸச்சஸி। ௬௪।௰௬௯
ஸம்யக் ஸ்ரத்தாஸமாசாராத்। அஹம் ஆராதிதஸ் த்வயா। ௬௪।௰௬௯
அத பாதகபதஸ்ீ த்வம்। ஸர்வபாேவந பாரத। ௬௪।௰௭
விமுக்தாந்யஸமாரம்ேபா। நாராயணபேரா பவ। ௬௪।௰௭
பர: பராணாம் ஆத்ேயா அெஸௗ। ஜ்ேஞேயா த்ேயேயா ஜநார்தந:।
௬௪।௰௭௧
ததர்தம் அபி கர்மாணி। குர்வந் பாபம் வ்யேபாஹதி। ௬௪।௰௭௧
ேலாபாதிவ்யாப்தஹ்ருதேயா। யத் பாபம் குருேத நர:। ௬௪।௰௭௨
விலயம் யாதி தத் ஸர்வம்। அச்யுேத ஹ்ருதேய ஸ்திேத। ௬௪।௰௭௨
ஸமாயாலம் ஜலம் வஹ்ேநஸ்। தமேஸா பாஸ்கராதய:। ௬௪।௰௭௩
க்ஷாந்தி: கேலர் அெகௗகஸ்ய। நாமஸம்கீர்தநம் ஹேர:। ௬௪।௰௭௩
ப்ரஸந்ேநா யதி ேம தாத। வரார்ேஹா யதி சாப்ய் அஹம்। ௬௪।௰௭௪
வரம் தத் ஏகம் ஏைவதம்। ப்ராப்தும் இச்சாம்ய் அஹம் பித:। ௬௪।௰௭௪
ஜாக்ரத்ஸ்வப்நஸுஷுப்ேதஷு। ேயாகஸ்தஸ்ய ஸதா மம। ௬௪।௰௭௫
யா காசிந் மநேஸா வ்ருத்தி:। ஸா பவத்வ் அச்யுதாஸ்ரயா। ௬௪।௰௭௫
யா யா ஜாேயத ேம புத்திர்। யாவஜ் ஜவாம்ய் ீ அஹம் பித:। ௬௪।௰௭௬

ஸா ஸா சிநத்து ஸம்ேதஹாந்। க்ருஷ்ணாப்ெதௗ பரிபந்திந:।
௬௪।௰௭௬
யதா ேகாவிந்தம் ஆராத்ய। ஸஸரீர: ஸுராலயம்। ௬௪।௰௭௭
ப்ராப்நுயாம் இதி ேம தாத। ப்ரயச்ச ப்ரவரம் வரம்। ௬௪।௰௭௭
ஏவம் ஏதத் அேஸஷம் ேத। மத்ப்ரஸாதாத் பவிஷ்யதி। ௬௪।௰௭௮
நாஸ்தி ேகாவிந்தபக்தாநாம்। வாஞ்சிதம் புவி துர்லபம்। ௬௪।௰௭௮
இதி தர்ேமாபேதேஸந। ஸர்வேதவவரம் ஹரிம்। ௬௪।௰௭௯
ஆராத்ய பாண்டேவா யாத:। ஸஸரீர: ஸுராலயம்। ௬௪।௰௭௯
பூயஸ் ச ஸ்ருணு ராேஜந்த்ர। ஜநேகந மஹாத்மநா। ௬௫।௰௰௧
யத் கீதம் வஹதா பக்திம்। ஜ்ஞாநம் ஆஸாத்ய ேகஸேவ। ௬௫।௰௰௧
ஸர்வத்ர ஸமத்ருஷ்டிம் தம்। ஜநகம் மிதிேலஸ்வரம்। ௬௫।௰௰௨
பஸ்யந்தம் அச்யுதமயம்। ஸர்வம் ச ஸசராசரம்। ௬௫।௰௰௨
த்விஜரூபம் ஸமாஸ்தாய। ேதவேதேவா ஜநார்தந:। ௬௫।௰௰௩
உபதஸ்ேத மஹாபாகம்। ப்ரத்யுவாச ச பார்திவம்। ௬௫।௰௰௩
ராஜஞ் ஜநக பத்ரம் ேத। யத் ப்ரவமி ீ நிேபாத தத்। ௬௫।௰௰௪
குருஷ்வ ச மஹாபுத்ேத। யதி ஸாது மதம் தவ। ௬௫।௰௰௪
ப்ருதிவம்ீ ப்ருதிவபாலீ :। பாலயித்வா பிதா தவ। ௬௫।௰௰௫
ஸ்வர்கம் கதஸ் ததா ப்ராதா। ஸம்யக் ஸத்யத்வேஜா ந்ருப:।
௬௫।௰௰௫
த்வம் புநர் நிரபமாந ீ :। ஸர்வத்ர ஸமதர்ஸந:। ௬௫।௰௰௬
ரிபுமித்ராதிவர்ேகஷு। கதம் ஏதத் பவிஷ்யதி। ௬௫।௰௰௬
மித்ேரஷு மித்ரவந் ந த்வம்। நாஹிேதஷ்வ் அரிவத் பவாந்। ௬௫।௰௰௭
மத்யஸ்தபாக் ந ைசவ த்வம்। தேதாதாஸநவ்ருத்திஷு ீ । ௬௫।௰௰௭

ஸப்தாதேயா ேய விஸயாஸ்। ேத ைவராக்யபலா ந்ருப। ௬௫।௰௰௮
நீத்யா விஹீநஸ் து பவாந்। கதம் ராஜ்யம் கரிஷ்யதி। ௬௫।௰௰௮
ஸர்ைவர் நீதிம் ஸமாஸ்தாய। யதா ேத ப்ரபிதாமைஹ:। ௬௫।௰௰௯
க்ருதம் ராஜ்யம் ததா பூப। குரு மாதிஜேடா பவ। ௬௫।௰௰௯
தவ ப்ரஜ்ஞா மதா ஹ்ய் ஏஷா। மம ேமாேஹா மஹீபேத। ௬௫।௰௧
த்ரிவர்கஸாதநம் ப்ரஜ்ஞா। ந தர்மாதிவிேராதிநீ। ௬௫।௰௧
ஸம்யக் ஆஹ பவாந் விப்ர। வாச்யம் ஏவம் பவத்விைத:। ௬௫।௰௧௧
மமாபி ஸ்ரூயதாம் வாக்யம்। பவேதா யதி ேராசேத। ௬௫।௰௧௧
யதா ஸர்வகேதா விஷ்ணு:। பரமாத்மா ப்ரஜாபதி:। ௬௫।௰௧௨
ததா மித்ராதிமத்யஸ்த । ஸம்ஜ்ஞா ேகஷு நிபாத்யதாம்। ௬௫।௰௧௨
பிதா மாதா ததா ப்ராதா। யதா நாந்யஜ் ஜநார்தநாத்। ௬௫।௰௧௩
பித்ருமாத்ருமயம்ீ ஸம்ஜ்ஞாம்। ததா குத்ர கேராம்ய் அஹம்।
௬௫।௰௧௩
ேஸா அஹம் ப்ரவமி ீ யத் வாக்யம்। தந் நிேபாத த்விேஜாத்தம।
௬௫।௰௧௪
அேநகரூபரூேபா அயம்। விஷ்ணுர் ஏவாகிலம் ஜகத்। ௬௫।௰௧௪
விஷ்ணு: பிதா ேம ஜகத: ப்ரதிஷ்டா। விஷ்ணுர் மாதா விஷ்ணுர் ஏவாக்ரேஜா
ேம। ௬௫।௰௧௫
விஷ்ணுர் கதிர் விஷ்ணுமயஸ் ததாஸ்மி। விஷ்ெணௗ ஸ்திேதா அஸ்ம்ய்
அக்ஷகதஸ் ச விஷ்ணு:। ௬௫।௰௧௫
ேயா ேம மமத்ேவாபகத: ஸ விஷ்ணுர்। யஸ் சாரிபூேதா மம ேஸா அபி
விஷ்ணு:। ௬௫।௰௧௬

திவம் வியத் பூ: ககுபஸ் ச விஷ்ணுர்। பூதாநி விஷ்ணுர் புவநாநி விஷ்ணு:।
௬௫।௰௧௬
பஸ்யாமி விஷ்ணும் ந பரம் தேதா அந்யச்। ஸ்ருேணாமி விஷ்ணும் ந பரம்
தேதா அந்யத்। ௬௫।௰௧௭
ஸ்ப்ருஸாமி விஷ்ணும் ந பரம் தேதா அந்யஜ்। ஜிக்ராமி விஷ்ணும் ந பரம்
தேதா அந்யத்। ௬௫।௰௧௭
ரஸாமி விஷ்ணும் ந பரம் தேதா அந்யந்। மந்ேய ச விஷ்ணும் ந பரம் தேதா
அந்யத்। ௬௫।௰௧௮
ஜிக்ராமி விஷ்ணும் ந பரம் தேதா அந்யச்। நமாமி விஷ்ணும் ந பரம் தேதா
அந்யத்। ௰௬௫।௮௫
புத்யாமி விஷ்ணும் ந பரம் தேதா அந்யத்। ஸர்வம் ஹி விஷ்ணுர் ந பரம்
தேதா அந்யத்। ௬௫।௰௧௮
விஷ்ணு: ஸமஸ்தம் ந பரம் தேதா அஸ்தி। விஷ்ணு: ஸமஸ்தம் ந பரம் ச
ேதவ:। ௬௫।௰௧௯
விஷ்ணு: ஸ்தாரீயாந் ந பரம் தேதா அஸ்தி। விஷ்ணுர் லகீயாந் ந பரம் தேதா
அஸ்தி। ௰௬௫।௮௬
விஷ்ணுர் கரீயாந் ந பரம் தேதா அந்யத்। யதா ந விஷ்ணுவ்யதிரிக்தம்
அந்யச்। ௬௫।௰௧௯
ஸ்ருேணாமி பஸ்யாமி ததா ஸ்ப்ருஸாமி। ஸத்ேயந ேதேநாபஸமம்
ப்ரயாந்து। ௬௫।௰௨
ேதாஷா விமுக்ேத: பரிபந்திேநா ேய। ந ேம அஸ்தி பந்துர் ந ச ேம அஸ்தி
ஸத்ருர்। ௬௫।௰௨
ந பூதவர்ேகா ந ஜேநா மதந்ய:। த்வம் சாஹம் அந்ேய ச ஸரீரேபைதர்।
௬௫।௰௨௧

விபிந்நம் ஈஸஸ்ய ஹேர: ஸ்வரூபம்। மூர்தாமூர்திவிேஸஷம் து।
௬௫।௰௨௧
பஸ்யதஸ் தந்மயம் த்விஜ। க்ேராதஹர்ஷாதேயா பாவா:। ௬௫।௰௨௨
ஸ்தாஸ்யந்தி ஹ்ருதேய கதம்। ஸ த்வம் ப்ரஸதீ ேமாேஹா அயம்।
௬௫।௰௨௨
அத ேசந் மம ஸுவ்ரத। ததாபி மா ருஷம் கார்ஷீர்। ௬௫।௰௨௩
அசிகித்ஸ்யா ஹி ேமாஹிதா:। பஹுரூபஸ் தேதா ரூபம்। ௬௫।௰௨௩
ஸங்கசக்ரகதாதரம்। தர்ஸயாம் ஆஸ ஸுப்ரீேதா। ௬௫।௰௨௪
ஜநகாய ஜநார்தந:। ததஸ் தத்தர்ஸநாத் பூபம்। ௬௫।௰௨௪
ஸிரஸா ப்ரணதம் ப்ரபு:। ஆத்ய: ப்ரஜாபதிபதி:। ௬௫।௰௨௫
ப்ரத்யுவாசாச்யுேதா ஹரி:। வரம் வரய பூபால। ௬௫।௰௨௫
பரிதுஷ்ேடா அஸ்மி ேத அநக। மய்ய் அர்பிதமேநாபுத்ேத:। ௬௫।௰௨௬
ஸைதவாஹம் ந துர்லப:। யதி ேதவ ப்ரஸந்ேநா அஸி। ௬௫।௰௨௬
ஸம்யக் ஆராதிேதா மயா। தத் வ்ருேணாமி வரம் பக்திஸ்। ௬௫।௰௨௭
த்வய்ய் ஏவாஸ்து ஸதா மம। ஏவம் பவிஷ்யதீத்ய் உக்த்வா।
௬௫।௰௨௭
கேதா அந்தர்தாநம் ஈஸ்வர:। ேஸா அபி ேலேப லயம் விஷ்ெணௗ।
௬௫।௰௨௮
பக்த்யா ேயாகிஸுதுர்லபம்। இதி க்ருஷ்ேண நரவ்யாக்ர। ௬௫।௰௨௮
குர்வந் பக்திம் நர: ஸதா। ப்ராப்ேநாதி புருஷவ்யாக்ர। ௬௫।௰௨௯
முக்திம் சாப்ய் அதிதுர்லபாம்। ஜகத்தாதுர் அநந்தஸ்ய। ௬௫।௰௨௯
வாஸுேதவஸ்ய பார்கவ। மமாவதாராந் அகிலாஞ்। ௬௬।௰௰௧

ஸ்ேராதும் இச்சா ப்ரவர்தேத। யதா யதா ஹி க்ருஷ்ணஸ்ய।
௬௬।௰௰௧
கேதயம் கத்யேத த்வயா। ஜாயேத மநஸ: ப்ரீதிர்। ௬௬।௰௰௨
உத்பூதபுலகஸ் ததா। மந:ப்ரீதிர் அநாயாஸாத்। ௬௬।௰௰௨
அபுண்யசயஸம்க்ஷய:। ப்ராப்யேத புருைஷர் ப்ரஹ்மஞ்। ௬௬।௰௰௩
ஸ்ருண்வத்பிர் பகவத்கதாம்। ஸ குருஷ்வாமலமேத। ௬௬।௰௰௩
ப்ரஸாதப்ரவணம் மந:। அவதாராந் ஸுேரஸஸ்ய। ௬௬।௰௰௪
விஷ்ேணார் இச்சாமி ேவதிதும்। ஜகத்குரும் ஜகத்ேயாநிம்। ௬௬।௰௰௪
அநந்தம் உதேகஸயம்। நாராயணம் புராகல்ேப। ௬௬।௰௰௫
ப்ருஷ்டவாந் கமேலாத்பவ:। விநிர்ஜக்முர் முேகப்யஸ் து। ௬௬।௰௰௫
ப்ரஹ்மேணா வ்யக்தஜந்மந:। ஓம்காரப்ரவணா ேவதா। ௬௬।௰௰௬
ஜக்முஸ் ேத ச ரஸாதலம்। ஏகார்ணேவ ஜகத்ய் அஸ்மிந்। ௬௬।௰௰௬
ப்ரஹ்மண்ய் அமிதேதஜஸி। க்ருஷ்ணநாபிஹ்ரேதாத்பூத । ௬௬।௰௰௭
கமேலாதரஸாயிநி। ேபாகிஸய்யாஸய: க்ருஷ்ேணா। ௬௬।௰௰௭
த்விதீயாம் தநும் ஆத்மந:। க்ருத்வா மீநமயம்ீ ஸத்ய:। ௬௬।௰௰௮
ப்ரவிேவஸ ரஸாதலம்। ேவதமூர்திஸ் தேதா ேவதாந்। ௬௬।௰௰௮
ஆநிந்ேய ப்ரஹ்மேணா அந்திகம்। மதுைகடபாப்யாம் ச புநர்।
௬௬।௰௰௯
ேபாகிஸய்யாகேதா ஹரி:। ஹ்ருதாந் ஹயஸிரா பூத்வா। ௬௬।௰௰௯
ேவதாந் ஆஹ்ருதவாந் ரஸாத்। ஆஹ்ருேதஷ்வ் அத ேவேதஷு।
௬௬।௰௰௯
ேதவேதவம் பிதாமஹ:। துஷ்டாவ ப்ரணேதா பக்த்யா। ௬௬।௰௧
தஸ்ய சாவிர் பெபௗ ஹரி:। அதாமரகுரும் விஷ்ணும்। ௬௬।௰௧

அநந்தம் அஜம் அவ்யயம்। உவாச ப்ரகடீபூதம்। ௬௬।௰௧௧
ப்ரணிபத்யாப்ஜஸம்பவ:। நம: ஸூŠமாதிஸூŠமாய। ௬௬।௰௧௧
நமஸ் துப்யம் த்ரிமூர்தேய। பஹுரூபாதிமத்யாந்த। ௬௬।௰௧௨
பரிணாமவிவர்ஜித। ஜகதீஸஸ்ய ஸர்வஸ்ய। ௬௬।௰௧௨
ஜகத: ஸர்வகாமத। அஹம் ஆத்மபேவா ேதவ। ௬௬।௰௧௩
த்வயாத்யேக்ஷா நிரூபித:। ேஸா அஹம் இச்சாமி தம் ஜ்ஞாதும்।
௬௬।௰௧௩
ஆத்மாநம் ப்ரபவாவ்யயம்। விஸ்வஸ்ய ச விரூபஸ்ய। ௬௬।௰௧௪
ஸ்தாவரஸ்ய சரஸ்ய ச। யதி ேத அநுக்ரஹக்ருதா। ௬௬।௰௧௪
மயி புத்திர் ஜநார்தந। தந் மாம் பக்த இதி ஜ்ஞாத்வா। ௬௬।௰௧௫
கதயாத்மாநம் அச்யுத। கதயாமி தவாத்மாநம்। ௬௬।௰௧௫
அநாக்யாேகாதரம் பரம்। ந வாசாம் விஷேய ேயா அஸாவ்।
௬௬।௰௧௬
அவிேஸஷணலக்ஷண:। ப்ரஸாதஸுமுக: ேஸா அஹம்। ௬௬।௰௧௬
இமம் யச்சாமி ேத வரம்। அநாக்யாதஸ்வரூபம் மாம்। ௬௬।௰௧௭
பவாஞ் ஜ்ஞாஸ்யதி ேயாகத:। பக்ேதா மாம் தத்த்வேதா ேவத்தி।
௬௬।௰௧௭
மயி பக்திஸ் ச ேத பரா। மஜ்ஜிஜ்ஞாஸா பரா ப்ரஹ்மம்ஸ்। ௬௬।௰௧௮
ேதந ஜாதா மதிஸ் தவ। ஏவம் உக்தஸ் தேதா ப்ரஹ்மா। ௬௬।௰௧௮
விஷ்ணுநா ப்ரபவிஷ்ணுநா। விஷ்ேணா: ஸ்வரூபம் ஜிஜ்ஞாஸுர்।
௬௬।௰௧௯
யுேயாஜாத்மாநம் ஆத்மநா। ஸ ததர்ஸாதிஸூŠமம் ச। ௬௬।௰௧௯
ஸூŠமஜ்ேயாதிஷ்ய் அஜம் விபும்। நியுதார்தார்தமாத்ேரண। ௬௬।௰௨

வ்யாப்தாேஸஷசராசரம்। ஆத்மாநம் இந்த்ரருத்ரார்க । ௬௬।௰௨
சந்த்ராஸ்விவஸுமாருதாந்। காதீந்ய் அத ச ஸப்தாதீந்। ௬௬।௰௨௧
தத்ருேஸ ச ஸ தந்மயாந்। ேய வ்யக்தா ேய ததாவ்யக்தா। ௬௬।௰௨௧
பாவா ேய சாபி ெபௗருஷா:। தாம்ஸ் ச தத்ராதிஸூŠேமா அபி।
௬௬।௰௨௨
த்ருஷ்டவாந் அகிலாந் விபு:। தத: ப்ரணம்ய ேதேவஸம்। ௬௬।௰௨௨
அஜம் ஆர்திஹரம் ஹரிம்। பிதாமஹ: ப்ரஹ்வதநுர்। ௬௬।௰௨௩
வாக்யம் ஏதத் உவாச ஹ। ஜ்ஞாதம் ஸ்வரூபம் அஜ்ஞாத । ௬௬।௰௨௩
ஸ்வரூப பகவம்ஸ் தவ। மயா ந யத் வாக்விஷேய। ௬௬।௰௨௪
தத்ரஸ்தம் சாகிலம் ஜகத்। தந்ேயா அஸ்ம்ய் அநுக்ருஹீேதா அஸ்மி।
௬௬।௰௨௪
ஸ்வரூபம் யந் மயா தவ। பகவஞ் ஜ்ஞாதம் அஜ்ஞாதம்। ௬௬।௰௨௫
அநந்தாஜ நேமா அஸ்து ேத। யதி ப்ரஸாதம் ேதவ த்வம்। ௬௬।௰௨௫
ப்ரகேராஷி மமாபரம்। பரமம் சாவதாேரஷு। ௬௬।௰௨௬
யத் ரூபம் தத் வதஸ்வ ேம। ேகஷு ேகஷு மயா ஜ்ேஞய:।
௬௬।௰௨௬
ஸ்தாேநஷு த்வம் அேதாக்ஷஜ। ஸம்பூதேயா மமாசŠவ। ௬௬।௰௨௭
யா பவிஷ்யந்தி ேத புவி। ேதவேலாேக ந்ருேலாேக வா। ௬௬।௰௨௭
பாதாேல ேக அந்யேதா அபி வா। ஸம்பூதேயா யாஸ் து பவாந்।
௬௬।௰௨௮
கரிஷ்யதி வதஸ்வ தா:। த்வம் கர்தா ஸர்வபூதாநாம்। ௬௬।௰௨௮
ஸம்ஹர்தா ேசஸ்வேரஸ்வர:। தவாபி கர்தா நாந்ேயா அஸ்தி।
௬௬।௰௨௯

ஸ்ேவச்சயா க்ரீடேத பவாந்। அஹம் ேவத்மி பவந்தம் ஹி।
௬௬।௰௨௯
ந தவாந்ேயா அஸ்தி ேவதிதா। யந் மாம் த்வம் ப்ருச்சஸி ப்ரஹ்மந்।
௬௬।௰௨௯
அவதாராஸ்ரிதம் பரம்। தத் ேத ஸம்யக் ப்ரவŠயாமி। ௬௬।௰௩
நிேபாத மம ஸுவ்ரத। மம ப்ரக்ருத்யா ஸம்ேயாக:। ௬௬।௰௩
ஸ்ேவச்சயா ஸம்ப்ரவர்தேத। ேதேவஷு ந்ருஷு திர்யக்ஷு। ௬௬।௰௩௧
ஸ்தாவேரஷு சேரஷு ச। மமாவதாரா: கார்யார்தம்। ௬௬।௰௩௧
ஜகதஸ் ேசாபகாரிண:। யதா யதா ஹி தர்மஸ்ய। ௬௬।௰௩௧
க்லாநி: ஸமுபஜாயேத। அப்யுத்தாநம் அதர்மஸ்ய। ௬௬।௰௩௨
ததாத்மாங்கம் ஸ்ருஜாம்ய் அஹம்। பரித்ராணாய ஸாதூநாம்।
௬௬।௰௩௨
விநாஸாய ச துஷ்க்ருதாம்। தர்மஸம்ஸ்தாபநார்தாய। ௬௬।௰௩௩
ஸம்பவாமி யுேக யுேக। பூர்ேவாத்பந்ேநஷு பூேதஷு। ௬௬।௰௩௩
ந்ருேதவாதிஷு சாப்ய் அஹம்। அநுப்ரவிஸ்ய தர்மஸ்ய। ௬௬।௰௩௪
கேராமி பரிபாலநம்। ப்ரவிஸ்ய ச ததா பூர்வம்। ௬௬।௰௩௪
தநும் தர்மப்ருதாம் வர। ஜகேதா அஸ்ய ஜகத்ஸ்ருஷ்டிம்। ௬௬।௰௩௫
கேராமி ஸ்திதிபாலநம்। ேதவத்ேவ ேதவிகா ேசஷ்டா। ௬௬।௰௩௫
திர்யக்த்ேவ மம தாமஸீ। இச்சயா மாநுஷத்ேவ ச। ௬௬।௰௩௬
விசராமி ந்ருேசஷ்டயா। ப்ரதிக்ஷணம் ச பூேதஷு। ௬௬।௰௩௬
ஸ்ருஜாமி ஜகத: ஸ்திதிம்। கேராமி வித்யமாேநஷு। ௬௬।௰௩௭
தர்மஸம்ஸ்தாபேநஷு ச। யத் ைவ தர்ேமாபகாராய। ௬௬।௰௩௭
யச் ச துஷ்டநிவர்ஹணம்। சரிதம் மாநுஷாதீநாம்। ௬௬।௰௩௮

தத் ைவ ஜாநீஹி மத்க்ருதம்। யச் ச ப்ருச்சஸி மாம் ப்ரஹ்மந்।
௬௬।௰௩௮
கா: கா: ஸம்பூதயஸ் தவ। தா: ஸ்ருணுஷ்வ ஸமாேஸந। ௬௬।௰௩௯
யா பவிஷ்யந்தி ஸாம்ப்ரதம்। மத்ஸ்ேயந பூத்வா பாதாலாத்।
௬௬।௰௩௯
தவ ேவதா: ஸமுத்த்ருதா:। மதுைகடபாப்யாம் ச ஹ்ருதா। ௬௬।௰௪
தத்தாஸ்வஸிரஸா மயா। த்வம் அப்ய் அத்ர மஹாபாக। ௬௬।௰௪
மதம்ஸ: கமேலாதராத்। மந்நாபிஸம்பவாஜ் ஜாத:। ௬௬।௰௪௧
ப்ரஜாஸ்ருஷ்டிகர: பர:। ஏகார்ணவம் ச யத் இதம்। ௬௬।௰௪௧
ப்ரஹ்மந் பஸ்யஸ்ய் அேஸஷத:। அஸ்மிந் வஸுமதீம் ேதவம்ீ ।
௬௬।௰௪௨
மக்நாம் பாதாலம் ஆகதாம்। ேவதபாேதா யூபதம்ஷ்ட்ர:। ௬௬।௰௪௨
க்ரதுதந்தஸ் சிதீமுக:। அக்நிஜிஹ்ேவா தர்பேராமா। ௬௬।௰௪௩
ப்ரஹ்மஸர்ேஷா ீ மஹாதபா:। அேஹாராத்ேரக்ஷணதேரா। ௬௬।௰௪௩
ேவதாங்கஸ்ருதிபூஷண:। ஆஜ்யநாஸ: ஸ்ருவஸ்துண்ட:। ௬௬।௰௪௪
ஸாமேகாஷஸ்வேரா மஹாந்। ப்ராக்வம்ஸகாேயா த்யுதிமாந்।
௬௬।௰௪௪
நாநாதீக்ஷாபிர் ஆசித:। தக்ஷிணாஹ்ருதேயா ேயாகீ। ௬௬।௰௪௫
மஹாஸத்த்ரமேயா மஹாந்। உபகர்ேமஷ்டிருசிர:। ௬௬।௰௪௫
ப்ரவர்காவர்தபூஷண:। நாநாச்சந்ேதாகதிபேதா। ௬௬।௰௪௬
ப்ரஹ்ேமாக்திகர்மவிக்ரம:। பூத்வா யஜ்ஞவராேஹா அஹம்।
௬௬।௰௪௬
இதி ப்ரஹ்மந் ரஸாதலாத்। ப்ருதிவம்ீ உத்தரிஷ்யாமி। ௬௬।௰௪௭

ஸ்தாபையஷ்யாமி ச ஸ்திெதௗ। பர்வதாநாம் நதீநாம் ச। ௬௬।௰௪௭
த்வபாத ீ ீநாம் ச யா ஸ்திதி:। தாம் ச தத்வத் கரிஷ்யாமி। ௬௬।௰௪௮
ைஸலாதீநாம் அநுக்ரமாத்। ஹிரண்யாக்ஷம் ச துர்வ்ருத்தம்।
௬௬।௰௪௮
கஸ்யபஸ்யாத்மஸம்பவம்। ேதைநவ காதயிஷ்யாமி। ௬௬।௰௪௯
ரூேபணாஹம் ப்ரஜாபேத। உத்பாத்ய ப்ருதிவம்ீ ஸம்யக்। ௬௬।௰௪௯
ஸ்தாபயித்வா யதா புரா। ஸ்ருஷ்டிம் தத: கரிஷ்யாமி। ௬௬।௰௫
த்வாம் ஆவிஸ்ய ப்ரஜாபதிம்। ஜாநாஸி காபிலம் ரூபம்। ௬௬।௰௫
ப்ரதமம் ெபௗருஷம் மம। ஸர்வவித்யாப்ரேணதாரம்। ௰௬௬।௮௮
த்வயா ேவேதஷு தர்ஸிதம்। ரவிமண்டலமத்யஸ்தம்। ௰௬௬।௮௮
அக்ேநர் யத் பரமம் பதம்। தத உத்ஸ்ருஜ்ய ரூபாணி। ௰௬௬।௮௮
அமராதிவிேபதத:। வ்யாபயிஷ்யாமி ேலாகாம்ஸ் து। ௬௬।௰௫௧
பூேலாகாதீம் அேஸஷத:। ஸ்ருஷ்டம் ஜகத் இதம் ேதவ । ௬௬।௰௫௧
மாநுஷ்யாதிவிேஸஷணம்। ஹிரண்யகஸிபுர் ைதத்யஸ்। ௬௬।௰௫௨
தாபயிஷ்யதி விக்ரமாத்। வ்யம்ஸயித்வா வராம்ஸ் தஸ்ய। ௬௬।௰௫௨
ைதஸ் ைதர் ேஹதுபிர் ஆத்மவாந்। ந்ருஸிம்ஹரூபம் க்ருத்வாஹம்।
௬௬।௰௫௩
காதயிஷ்யாமி தம் ரிபும்। க்ஷராப்ெதௗ ீ கூர்மரூேபா அஹம்।
௬௬।௰௫௩
ேதவாநாம் கமேலாத்பவ। மந்தரம் தாரயிஷ்யாமி। ௬௬।௰௫௪
ப்ருஷ்ேடநாம்ருதமந்தேந। ஹரிஷ்யதி ச ேதவாநாம்। ௬௬।௰௫௪
யஜ்ஞபாகாந் யதா பலி:। ததாஹம் வாமேநா பூத்வா। ௬௬।௰௫௫
கத்வா தஸ்ய மஹாத்வரம்। வஞ்சயித்வாஸுரபதிம்। ௬௬।௰௫௫

கரிஷ்யாமி த்ரிபிஷ்டபம்। பலிம் சாபி கரிஷ்யாமி। ௬௬।௰௫௬
பாதாலதலவாஸிநம்। அத்ேரர் தத்த்வா வரம் ைசவ। ௬௬।௰௫௬
தஸ்ய புத்ரத்வம் ஆகத:। தத்தாத்ேரேயா பவிஷ்யாமி। ௬௬।௰௫௭
நிஹம்ஸ்யாமி ததாஸுராந்। ஸத்த்வாநாம் உபகாராய। ௬௬।௰௫௭
ப்ரதாநபுருஷாந்தரம்। தர்ஸயிஷ்யாமி ேலாேகஷு। ௬௬।௰௫௮
காபிலம் ரூபம் ஆஸ்தித:। கார்தவர்யாதிபிஸ் ீ சாந்ையஸ்। ௬௬।௰௫௮
சதுர்தஸபிர் அந்விதா:। பவிஷ்யந்தி மதம்ேஸந। ௬௬।௰௫௯
த்ேரதாயாம் சக்ரவர்திந:। ததஸ் ச பார்கேவா ராேமா। ௬௬।௰௫௯
க்ருஹீதபரஸுர் த்விஜ:। பூத்வா க்ஷத்ரியஹீநாம் ச। ௬௬।௰௬
கரிஷ்யாமி வஸும்தராம்। புநஸ் ச ராகேவா ராேமா। ௬௬।௰௬
பூத்வா தஸரதாத்மஜ:। பத்த்வா மேஹாததிம் கர்தா। ௬௬।௰௬௧
ராக்ஷஸாநாம் குலக்ஷயம்। உத்தீர்ய ச பரம் பாரம்। ௬௬।௰௬௧
லங்காம் ஆஸாத்ய துர்ஜயாம்। நிஹத்ய ராவணம் வரம்ீ । ௰௬௬।௮௯
வரதாேநந தர்பிதம்। மாயாவிநாம் மஹாவர்யம் ீ । ௰௬௬।௮௯
ரக்ஷஸாம் வநஸாயிநாம்। லŠமணாநுசேரா ராம:। ௰௬௬।௮௯
கரிஷ்யாமி குலக்ஷயம்। அஷ்டாவிம்ஸதிேம ப்ராப்ேத। ௰௬௬।௮௯
த்வாபேர கம்ஸம் உச்ச்ரிதம்। ேகஸிநம் ேதநுகம் ைசவ। ௬௬।௰௬௨
ஸகுநிம் பூதநாம் ததா। அரிஷ்டம் ச ஹநிஷ்யாமி। ௬௬।௰௬௨
முரும் நரகம் ஏவ ச। நிஸும்பம் ஸஹயக்ரீவண்। ௬௬।௰௬௨
ததாந்யாம்ஸ் சாஸுேரஸ்வராந்। ஹநிஷ்யாமி ஸுதுர்வ்ருத்தாம்ல்।
௬௬।௰௬௩
ேலாகாநாம் ஹிதகாம்யயா। ப்ரவர்ஷதி ஸ ேதேவந்த்ேர। ௬௬।௰௬௩

மேஹாபங்கவிேராதிேத। ேகாவர்தநம் கிரிவரம்। ௬௬।௰௬௪
தாரயிஷ்யாமி பாஹுநா। பாராக்ராந்தாம் இமாம் உர்வம்ீ । ௬௬।௰௬௪
தநம்ஜயஸஹாயவாந்। காதயித்வாகிலாந் பூபாம்ல்। ௬௬।௰௬௫
லக்வம்ீ கர்தாஸ்மி ஸத்தம। ப்ராப்ேத கலியுேக க்ருத்ஸ்நம்।
௬௬।௰௬௫
உபஸம்ஹ்ருத்ய ைவ குலம்। த்வாரகாம் ப்லாவயிஷ்யாமி।
௬௬।௰௬௬
உத்ஸ்ரŠயாமி மநுஷ்யதாம்। த்விதீேயா ேயா மமாம்ஸஸ் து।
௬௬।௰௬௬
ராேமா அநந்த: ஸ லாங்கலீ। ேஸா அபி ஸம்த்யஜ்ய வஸுதாம்।
௬௬।௰௬௭
ரஸாதலம் உேபஷ்யதி। தத: கலியுேக ேகாேர। ௬௬।௰௬௭
ஸம்ப்ராப்ேத அப்ஜஸமுத்பவ। ஸுத்ேதாதநஸுேதா புத்ேதா।
௬௬।௰௬௮
பவிஷ்யாமி விமத்ஸர:। ெபௗத்தம் தர்மம் உபாஸ்ரித்ய। ௬௬।௰௬௮
கரிஷ்ேய தர்மேதஸநாம்। நராணாம் அத நாரீணாம்। ௬௬।௰௬௯
தயாம் பூேதஷு தர்ஸயந்। ரக்தாம்பரா ஹ்ய் ஆஞ்ஜிதாக்ஷா:।
௬௬।௰௬௯
ப்ரஸாந்தமநஸஸ் தத:। ஸூத்ரா தர்மம் ப்ரவŠயந்தி। ௬௬।௰௭
மயி புத்தத்வம் ஆகேத। ஏடூகசிஹ்நா ப்ருதிவ।ீ ௬௬।௰௭
ந ேதவக்ருஹபூஷிதா। பவித்ரீ ப்ராயேஸா ப்ரஹ்மந்। ௬௬।௰௭௧
மயி புத்தத்வம் ஆகேத। ஸ்கந்ததர்ஸநமாத்ரம் ஹி। ௬௬।௰௭௧
பஸ்யந்த: ஸகலம் ஜகத்। ஸூத்ரா: ஸூத்ேரஷு தாஸ்யந்தி।
௬௬।௰௭௨

மயி புத்தத்வம் ஆகேத। அல்பாயுஷஸ் தேதா மர்த்யா। ௬௬।௰௭௨
ேமாேஹாபஹதேசதஸ:। நரகார்ஹாணி கர்மாணி। ௬௬।௰௭௩
கரிஷ்யந்தி ப்ரஜாபேத। ஸ்வாத்யாேயஷ்வ் அவஸதந்ேதா ீ । ௬௬।௰௭௩
ப்ராஹ்மணா: ெஸௗசவர்ஜிதா:। அந்த்யப்ரதிக்ரஹாதாநம்। ௬௬।௰௭௪
கரிஷ்யந்த்ய் அல்பேமதஸ:। ந ஸ்ேராஷ்யந்தி பிது: புத்ரா:। ௬௬।௰௭௪
ஸ்வஸ்ரூஸ்வஸுரேயா: ஸ்நுஷா:। ந பார்யா பர்துர் ஈஸஸ்ய।
௬௬।௰௭௫
ந ப்ருத்யா விநயஸ்திதா:। வர்ணஸம்கரதாம் ப்ராப்ேத। ௬௬।௰௭௫
ேலாேக அஸ்மிந் தஸ்யுதாம் கேத। ப்ராஹ்மணாதிஷு வர்ேணஷு।
௬௬।௰௭௬
பவிஷ்யத்ய் அதேராத்தரம்। தர்மகஞ்சுகஸம்வதாீ । ௬௬।௰௭௬
விதர்மருசயஸ் ததா। மாநுஷாந் பக்ஷயிஷ்யந்தி। ௬௬।௰௭௭
ம்ேலச்சா: பார்திவரூபிண:। தத: கலியுகஸ்யாந்ேத। ௬௬।௰௭௭
ேவேதா வாஜஸேநயக:। தஸ பஞ்ச ச ைவ ஸாகா:। ௬௬।௰௭௮
ப்ரமாேணந பவிஷ்யதி। தேதா அஹம் ஸம்பவிஷ்யாமி। ௬௬।௰௭௮
ப்ராஹ்மேணா ஹரிபிங்கல:। கல்கீவிஷ்ணுயஸ:புத்ேரா। ௬௬।௰௭௯
யாஜ்ஞவல்க்யபுேராஹித:। ம்ேலச்சாந் உத்ஸாதயிஷ்யாமி। ௬௬।௰௭௯
க்ருஹீதாஸ்த்ர: குஸாயுத:। ஸ்தாபயிஷ்யாமி மர்யாதாஸ்। ௬௬।௰௮
சாதுர்வர்ண்ேய யேதாதிதா:। ததாஸ்ரேமஷு ஸர்ேவஷு। ௬௬।௰௮
ப்ரஹ்மசாரிவ்ரதாதிகா:। ஸ்தாபயித்வா தத: ஸர்வா:। ௬௬।௰௮௧
ப்ரஜா: ஸத்தர்மவர்த்மநி। கல்கிரூபம் பரித்யஜ்ய। ௬௬।௰௮௧
திவம் ஏஷ்யாம்ய் அஹம் புந:। தத: க்ருதயுகம் பூய:। ௬௬।௰௮௧

பூர்வவத் ஸம்ப்ரவர்த்ஸ்யேத। வர்ணாஸ்ரமாஸ் ச தர்ேமஷு।
௬௬।௰௮௨
த்ேவஷு ஸ்தாஸ்யந்தி ஸத்தம। ஏவம் ஸர்ேவஷு கல்ேபஷு।
௬௬।௰௮௨
ஸர்வமந்வந்தேரஷு ச। மமாவதாரா: ஸதேஸா। ௬௬।௰௮௩
ேய பவந்தி ஜகத்திதா:। ஸம்கர்ஷணாத்மஜஸ் ைசவ। ௬௬।௰௮௩
கல்பாந்ேத ச ரஸாதலாத்। ஸமுத்பத்ஸ்ேயத் ததா ருத்ர:। ௬௬।௰௮௪
காலாக்நிர் இதி ய: ஸ்ருத:। தத: க்ஷயம் கரிஷ்யாமி। ௬௬।௰௮௪
ஜகத் ஸ்தாவரஜங்கமம்। பூயஸ் ைசவ ஹி ஸ்வப்ஸ்யாமி।
௬௬।௰௮௫
ஜகத்ய் ஏகார்ணேவ ஸ்திேத। த்வத்ரூபீ ச தேதா பூத்வா। ௬௬।௰௮௫
ஜகத் ஸ்ரŠயாம்ய் அஹம் புந:। ஏதத் ஸம்ேக்ஷபேதா ப்ரஹ்மந்।
௬௬।௰௮௫
மயாக்யாதம் யதாததம்। அம்ஸாவதரணம் ஸர்வம்। ௬௬।௰௮௬
மத்த: ஸம்ேக்ஷபத: ஸ்ருணு। யத் த்ருஸ்யம் யச் ச ைவ ஸ்ப்ருஸ்யம்।
௬௬।௰௮௬
யத் க்ேரயம் ரஸ்யேத ச யத்। யச் ச்ரவ்யம் யச் ச மந்தவ்யம்।
௬௬।௰௮௭
ேபாதவ்யம் சாஹம் அம்ஸக:। யத் து புத்ேத: பரதரம்। ௬௬।௰௮௭
அநாக்ேயயம் அேநாபமம்। தத் அஹம் ப்ரஹ்ம நிர்த்வந்த்வம்।
௬௬।௰௮௮
யத் ைவ பஸ்யந்தி ஸூரய:। இதம் ஜந்மரஹஸ்யம் ேம। ௬௬।௰௮௮
ேயா நர: கீர்தயிஷ்யதி। ஸுலேபா அஹம் பவிஷ்யாமி। ௬௬।௰௮௯
தஸ்ய ஜந்மநி ஜந்மநி। படந்ந் ஏதத் ப்ரஹ்மஹா து। ௬௬।௰௮௯

ஸுராேபா குருதல்பக:। ஸ்ேதயீ க்ருதக்ேநா ேகாக்நஸ் ச। ௬௬।௰௯
ஸர்வபாைப: ப்ரமுச்யேத। கர்பிணீஜநேயத் புத்ரம்। ௬௬।௰௯
கந்யா விந்ததி ஸத்பதிம்। லபந்ேத அபிமதாந் காமாந்। ௬௬।௰௯௧
நராஸ் தாம்ஸ் தாந் யேதப்ஸிதாந்। இதி ேதவாதிேதேவந। ௬௬।௰௯௧
ப்ரஹ்மேணா வ்யக்தஜந்மந:। ரஹஸ்யம் இதம் ஆக்யாதம்। ௬௬।௰௯௨
தவாபி கதிதம் மயா। விஷ்ணு: ஸர்வகேதா அநந்த:। ௬௬।௰௯௨
ஸர்வம் தத்ர ப்ரதிஷ்டிதம்। ஸ ச ஸர்வம் இதம் ராஜந்। ௬௬।௰௯௩
ந தேதா வித்யேத பரம்। ஏதத் பவித்ரம் படிதம்। ௬௬।௰௯௩
ததா து:ஸ்வப்நநாஸநம்। ஜாதிஸ்மரத்வம் ப்ரஜ்ஞாம் ச। ௬௬।௰௯௪
ததாதி படதாம் ந்ருணாம்। மயா ஹி ேதவேதவஸ்ய। ௬௬।௰௯௪
விஷ்ேணார் அமிதேதஜஸ:। ஸ்ருதா: ஸம்பூதய: ஸர்வா। ௬௭।௰௰௧
கததஸ் தவ ஸுவ்ரத। யதி ப்ரஸந்ேநா பகவாந்। ௬௭।௰௰௧
அநுக்ராஹ்ேயா அஸ்மி வா யதி। தத் அஹம் ஸ்ேராதும் இச்சாமி।
௬௭।௰௰௨
ந்ருணாம் து:ஸ்வப்நநாஸநம்। ஸ்வப்நா ஹி ஸுமஹாபாக। ௬௭।௰௰௨
த்ருஸ்யந்ேத ேய ஸுபாஸுபா:। பலாநி ேத ப்ரயச்சந்தி। ௬௭।௰௰௩
தத்குணாந்ய் ஏவ பார்கவ। யத் யத் புண்யம் பவித்ரம் ச। ௬௭।௰௰௩
ந்ருணாம் அதிஸுபப்ரதம்। து:ஸ்வப்ேநாபஸமாயாலம்। ௬௭।௰௰௪
தந் ேம விஸ்தரேதா வத। இதம் ஏவ மஹாராஜ। ௬௭।௰௰௪
ப்ருஷ்டவாம்ஸ் ேத பிதாமஹ:। பஷ்மம் ீ தர்மப்ருதாம் ஸ்ேரஷ்டம்।
௬௭।௰௰௫
தர்மபுத்ேரா யுதிஷ்டிர:। ேதவவ்ரதம் மஹாப்ராஜ்ஞம்। ௬௭।௰௰௫

ஸர்வஸாஸ்த்ரவிஸாரதம்। விநேயேநாபஸம்கம்ய। ௬௭।௰௰௬
பர்யப்ருச்சத் யுதிஷ்டிர:। து:ஸ்வப்நதர்ஸநம் ேகாரம்। ௬௭।௰௰௬
அேவŠய பரதர்ஷப। ப்ரயத: கிம் ஜேபஜ் ஜப்யம்। ௬௭।௰௰௭
விபுத்த: கிம் அநுஸ்மேரத்। பிதாமஹ மஹாபுத்ேத। ௬௭।௰௰௭
புத்ேதர் ேபேதா மஹாந் அயம்। தத் அஹம் ஸ்ேராதும் இச்சாமி।
௬௭।௰௰௮
ப்ரூஹி ேம வததாம் வர। ஸ்ருணு ராஜந் மஹாபாேஹா। ௬௭।௰௰௮
வர்தயிஷ்யாமி ேத அகிலம்। து:ஸ்வப்நதர்ஸேந ஜப்யம்। ௬௭।௰௰௯
யத் ைவ நித்யம் ஸமாஹிைத:। அத்ராப்ய் உதாஹரந்தீமம்। ௬௭।௰௰௯
இதிஹாஸம் புராதநம்। கேஜந்த்ரேமாக்ஷணம் புண்யம்। ௬௭।௰௧
க்ருஷ்ணஸ்யாக்லிஷ்டகர்மண:। ஸர்வரத்நமய: ஸ்ரீமாம்ஸ்। ௬௭।௰௧
த்ரிகூேடா நாம பர்வத:। ஸுத: பர்வதராஜஸ்ய। ௬௭।௰௧௧
ஸுேமேரார் பாஸ்கரத்யுேத:। க்ஷீேராதஜலவச்யக்ைரர் ீ । ௬௭।௰௧௧
ெதௗதாமலஸிலாதல:। உத்தித: ஸாகரம் பித்த்வா। ௬௭।௰௧௨
ேதவர்ஷிகணேஸவித:। அப்ஸேராபி: ஸமாகீர்ண:। ௬௭।௰௧௨
ஸ்ரீமாந் ப்ரஸ்ரவணாகுல:। கந்தர்ைவ: கிம்நைரர் யைக்ஷ:। ௬௭।௰௧௩
ஸித்தசாரணபந்நைக:। வித்யாதைர: ஸபத்நிைக:। ௬௭।௰௧௩
ஸம்யைதஸ் ச தபஸ்விபி:। ம்ருைகர் த்வைபர் ீ த்விைஜஸ் ைசவ।
௰௬௭।௯௨
வ்ருத: ெஸௗவர்ணராஜைத:। பும்நாைக: கர்ணிகாைரஸ் ச। ௬௭।௰௧௪
புஷ்பிைதர் உபேஸாபித:। சூதநீபகதம்ைபஸ் ச। ௬௭।௰௧௪
சந்தநாகருசம்பைக:। ஸாைலஸ் தாைலஸ் தமாைலஸ் ச। ௬௭।௰௧௫

குடைஜஸ் சார்ஜுைநஸ் ததா। ஏவம் பஹுவிைதர் வ்ருைக்ஷ:।
௬௭।௰௧௫
ஸர்வத: ஸமலம்க்ருத:। நாநாதாதூஜ்ஜ்வைல: ஸ்ருங்ைக:। ௬௭।௰௧௬
ப்ரஸ்ரவத்பி: ஸமந்தத:। ம்ருைக: ஸாகாம்ருைக: ஸிம்ைஹர்।
௬௭।௰௧௬
மாதம்ைகஸ் ச ஸதாமைத:। ஜவம்ஜ ீ வகஸம்குஷ்டம் ீ । ௬௭।௰௧௭
சேகாரஸிகிநாதிதம்। தஸ்ையகம் காஞ்சநம் ஸ்ருங்கம்। ௬௭।௰௧௭
ேஸவேத யத் திவாதர:। நாநாபுஷ்பஸமாகீர்ணம்। ௬௭।௰௧௮
நாநாகந்தஸமாகுலம்। த்விதீயம் ராஜதம் ஸ்ருங்கம்। ௬௭।௰௧௮
ேஸவேத யந் நிஸாகர:। பாண்டுராம்புதஸம்காஸம்। ௬௭।௰௧௯
துஷாரசயஸம்நிபம்। வஜ்ேரந்த்ரநீலைவடூர்ய । ௬௭।௰௧௯
ேதேஜாபிர் பாஸயந் நப:। த்ருதீயம் ப்ரஹ்மஸதநம்। ௬௭।௰௨
ப்ரக்ருஷ்டம் ஸ்ருங்கம் உத்தமம்। ந தத் க்ருதக்நா: பஸ்யந்தி। ௬௭।௰௨
ந ந்ருஸம்ஸா ந நாஸ்திகா:। நாதப்ததபஸ: ைஸலம்। ௬௭।௰௨௧
தம் ைவ பஸ்யந்தி மாநவா:। தஸ்ய ஸாநுமத: ப்ருஷ்ேட। ௬௭।௰௨௧
ஸர: காஞ்சநபங்கஜம்। காரண்டவஸமாகீர்ணம்। ௬௭।௰௨௨
ராஜஹம்ேஸாபேஸாபிதம்। மத்தப்ரமரஸம்குஷ்டம்। ௬௭।௰௨௨
புல்லபங்கஜேஸாபிதம்। குமுேதாத்பலகல்ஹார । ௬௭।௰௨௩
புண்டரீேகாபேஸாபிதம்। உத்பைல: ஸதபத்த்ைரஸ் ச। ௬௭।௰௨௩
காஞ்சைந: ஸமலம்க்ருதம்। பத்த்ைரர் மணிதலப்ரக்ைய:। ௬௭।௰௨௪
புஷ்ைப: காஞ்சநஸம்நிைப:। குல்ைம: கீசகேவணூநாம்। ௬௭।௰௨௪
ஸமந்தாத் பரிவாரிதம்। தஸ்மிந் ஸரஸி துஷ்டாத்மா। ௬௭।௰௨௪

விரூேபா அந்தர்ஜலாஸய:। ஆஸத்ீ க்ராேஹா கேஜந்த்ராணாம்।
௬௭।௰௨௫
துராதர்ேஷா மஹாபல:। அத தந்ேதாஜ்ஜ்வலமுக:। ௬௭।௰௨௫
கதாசித் கஜயூதப:। ஆஜகாமாஸிதாப்ராப:। ௬௭।௰௨௬
கேரணுபரிவாரித:। மதஸ்ராவ ீமஹாெரௗத்ர:। ௬௭।௰௨௬
பாதசாரீவ பர்வத:। வாஸயந் மதகந்ேதந। ௬௭।௰௨௭
கிரிம் ஐராவேதாபம:। ஸ கேஜா அஞ்ஜநஸம்காேஸா। ௬௭।௰௨௭
மதாச் சலிதமாநஸ:। கந்தஹஸ்தீதி விக்யாத:। ௬௭।௰௨௮
ஸர: ஸமபிகம்ய தத்। த்ருஷித: ஸ ஜலம் ப்ராப்ய। ௰௬௭।௯௪
குஸுமாகரஸதலம் ீ । அபிபத் ஸஹஸா ராஜந்। ௰௬௭।௯௪
கேரணுபரிவாரித:। ஸலீலம் பங்கஜவேந। ௰௬௭।௯௪
யூதமத்யகேதா அவ்ரஜத்। க்ருஹீதஸ் ேதந ெரௗத்ேரண। ௬௭।௰௨௮
க்ராேஹணாவ்யக்தமூர்திநா। பஸ்யந்தீநாம் கேரணூநாம்। ௬௭।௰௨௯
க்ேராஸந்தீநாம் ச தாருணம்। க்ரியேத பங்கஜவேந। ௬௭।௰௨௯
க்ராேஹணாதிபலீயஸா। கஜஸ் சாகர்ஷேத தீரம்। ௰௬௭।௯௫
க்ராஹஸ் சாகர்ஷேத ஜலம்। தேயார் த்வந்த்வ மஹாயுத்தம்।
௰௬௭।௯௬
திவ்யவர்ஷஸஹஸ்ரிகம்। வாருைண: ஸம்யத: பாைஸர்। ௰௬௭।௯௬
நி:ப்ரயத்நகதி: க்ருத:। ேவஷ்ட்யமாந: ஸுேகாைரஸ் து। ௬௭।௰௩
பாைஸர் நாேகா த்ருைடஸ் ததா। விஸ்புர்ஜ்ய ச யதாஸக்தி। ௬௭।௰௩
விக்ருஸ்ய ச மஹாரவாந்। வ்யதித: ஸம்நிருத்ஸாேஹா। ௬௭।௰௩௧
க்ருஹீேதா ேகாரகர்மணா। பரமாபதம் ஆபந்ேநா। ௬௭।௰௩௧
மநஸாசிந்தயத் தரிம்। ஸ து நாகவர: ஸ்ரீமாந்। ௬௭।௰௩௨

நாராயணபராயண:। தம் ஏவ பரமம் ேதவம்। ௬௭।௰௩௨
கத: ஸர்வாத்மநா ததா। ஏகாக்ரம் சிந்தயாம் ஆஸ। ௬௭।௰௩௩
விஸுத்ேதநாந்தராத்மநா। ஜந்மஜந்மாந்தராப்யாஸாத்। ௬௭।௰௩௩
பக்திமாந் கருடத்வேஜ। ஆத்யம் ேதவம் மஹாத்மாநம்। ௬௭।௰௩௪
பூஜயாம் ஆஸ ேகஸவம்। நவேமகப்ரதீகாஸம்। ௬௭।௰௩௪
ஸங்கசக்ரகதாதரம்। ஸஹஸ்ரஸுபநாமாநம்। ௬௭।௰௩௫
ஆதிேதவம் அஜம் பரம்। திக்பாஹும் ஸர்வமூர்தாநம்। ௬௭।௰௩௫
பூபாதம் ககேநாதரம்। ஆதித்யசந்த்ரநயநம்। ௰௬௭।௯௮
ஸமக்ரம் ேலாகஸாக்ஷிணம்। பகவந்தம் ப்ரஸந்ேநா அஹம்।
௰௬௭।௯௮
விஷ்ணும் அப்ரதிெமௗஜஸம்। ப்ரக்ருஹ்ய புஷ்கராக்ேரண। ௰௬௭।௯௯
காஞ்சநம் கமேலாத்தமம்। ஆபத்விேமாக்ஷம் அந்விச்சந்। ௬௭।௰௩௬
கஜ: ஸ்ேதாத்ரம் உைதரயத்। ஓம் நேமா மூலப்ரக்ருதேய। ௬௭।௰௩௬
அஜிதாய மஹாத்மேந। அநாஸ்ரிதாய ேதவாய। ௰௬௭।௧௰௰௰௰௧
நி:ஸ்ப்ருஹாய நேமா நம:। நம ஆத்யாய பஜாய ீ । ௰௬௭।௧௰௰௰௰௨
ஸிவாய ச ப்ரஸாந்தாய। ஆர்ேஷயாய ப்ரவர்திேந। ௰௬௭।௧௰௰௰௰௩
நிஸ்சலாய யஸஸ்விேந। அநந்தராய ைசகாய। ௰௬௭।௧௰௰௰௰௪
ஸநாதநாய பூர்வாய। அவ்யக்தாய நேமா நம:। ௰௬௭।௧௰௰௰௰௫
புராணாய நேமா நம:। நேமா குஹ்யாய கூடாய। ௰௬௭।௧௰௰௰௰௬
குணாயாகுணவர்திேந। அதர்க்யாயாப்ரேமயாய। ௰௬௭।௧௰௰௰௰௮
அநந்தாய நேமா நம:। நேமா ேதவாதிேதவாய। ௰௬௭।௧௰௰௰௧௰
அப்ரபாய நேமா நம:। நேமா ஜகத்ப்ரஸ்திதாய। ௰௬௭।௧௰௰௰௧௨

ேகாவிந்தாய நேமா நம:। நேமா அஸ்து பத்மநாபாய। ௰௬௭।௧௰௰௰௧௩
ஸாம்க்யேயாேகாத்பவாய ச। விஸ்ேவஸ்வராய ேதவாய।
௰௬௭।௧௰௰௰௧௪
ஸிவாய ஹரேய நம:। நேமா அஸ்து தஸ்ைம ேதவாய।
௰௬௭।௧௰௰௰௧௫
நிர்குணாய குணாத்மேந। நாராயணாய விஸ்வாய। ௰௬௭।௧௰௰௰௧௬
ேதவாநாம் பரமாத்மேந। நேமா நம: காரணவாமநாய। ௰௬௭।௧௰௰௰௧௭
நாராயணாயாமிதவிக்ரமாய। ஸ்ரீஸார்ங்கசக்ராஸிகதாதராய। ௬௭।௰௩௭
நேமா அஸ்து தஸ்ைம புருேஷாத்தமாய। ஆத்யாய ேவதநிலயாய
மேஹாதராய। ௬௭।௰௩௭
ஸிம்ஹாய ைதத்யநிதநாய சதுர்புஜாய।
ப்ரஹ்ேமந்த்ரருத்ரமுநிசாரணஸம்ஸ்துதாய। ௬௭।௰௩௮
ேதேவாத்தமாய வரதாய நேமா அச்யுதாய।
நாேகந்த்ரேபாகஸயநாஸநஸுப்ரியாய। ௬௭।௰௩௮
ேகாக்ஷரேஹமஸுகந ீ ீலகேநாபமாய। பதாம்பராய ீ மதுைகடபநாஸநாய।
௬௭।௰௩௯
விஸ்வாய சாருமுகுடாய நேமா அக்ஷராய। பக்திப்ரியாய
வரதீப்தஸுதர்ஸநாய। ௰௬௭।௧௰௧
நாபிப்ரஜாதகமலஸ்தசதுர்முகாய। க்ஷீேராதகார்ணவநிேகதயேஸாதநாய।
௬௭।௰௪
நாநாவிசித்ரமுகுடாங்கதபூஷணாய। ஸர்ேவஸ்வராய வரதாய நேமா வராய।
௬௭।௰௪
விஸ்வாத்மேந பரமகாரணகாரணாய। புல்லாரவிந்தவிமலாயதேலாசநாய।
௬௭।௰௪௧

ேதேவந்த்ரதாநவபரீக்ஷிதெபௗருஷாய। ேயாேகஸ்வராய விஜயாய நேமா
வராய। ௬௭।௰௪௧
ேலாகாயநாய த்ரிதஸாயநாய। ப்ரஹ்மாயநாயாத்மபவாயநாய।
௬௭।௰௪௨
தர்மாயநாையகஜலாயநாய। மஹாவராஹாய ஸதா நேதா அஸ்மி।
௬௭।௰௪௨
அசிந்த்யம் அவ்யக்தம் அநந்தரூபம்। நாராயணம் காரணம் ஆதிேதவம்।
௬௭।௰௪௩
யுகாந்தேஸஷம் புருஷம் புராணம்। தம் வாஸுேதவம் ஸரணம் ப்ரபத்ேய।
௬௭।௰௪௩
ேயாேகஸ்வரம் சாருவிசித்ரெமௗலிம்। ஆஜ்ேஞயெமௗக்யம் ப்ரக்ருேத:
பரஸ்தம்। ௰௬௭।௧௰௪
ேக்ஷத்ரஜ்ஞம் ஆத்மப்ரபவம் வேரண்யம்। தம் வாஸுேதவம் ஸரணம்
ப்ரபத்ேய। ௰௬௭।௧௰௪
அத்ருஸ்யம் அச்ேசத்யம் அநாதிமத்யம்। மஹர்ஷேயா ப்ரஹ்மவித:
ஸுேரஸம்। ௬௭।௰௪௪
வதந்தி யம் ைவ புருஷம் ஸநாதநம்। தம் வாஸுேதவம் ஸரணம் ப்ரபத்ேய।
௬௭।௰௪௪
யத் அக்ஷரம் ப்ரஹ்ம வதந்தி ஸர்வகம்। நிஸாம்ய யம் ம்ருத்யுமுகாத்
ப்ரமுச்யேத। ௬௭।௰௪௫
தம் ஈஸ்வரம் த்ருப்தம் அேநாபைமர் குைண:। பராயணம் விஷ்ணும் உைபமி
ஸாஸ்வதம்। ௬௭।௰௪௫
கார்யம் க்ரியாகாரணம் அப்ரேமயம்। ஹிரண்யநாபம் வரபத்மநாபம்।
௬௭।௰௪௬

மஹாபலம் ேவதநிதிம் ஸுேராத்தமம்। வ்ரஜாமி விஷ்ணும் ஸரணம்
ஜநார்தநம்। ௬௭।௰௪௬
விசித்ரேகயூரமஹார்ஹநிஷ்கம்। ரத்ேநாத்தமாலம்க்ருதஸர்வகாத்ரம்।
௬௭।௰௪௭
பதாம்பரம் ீ காஞ்சநபக்திசித்ரம்। மாலாதரம் ேகஸவம் அப்யுைபமி।
௬௭।௰௪௭
பேவாத்பவம் ேவதவிதாம் வரிஷ்டம்। ேயாகாத்மாநம் ஸாம்க்யவிதாம்
வரிஷ்டம்। ௬௭।௰௪௮
ஆதித்யசந்த்ராஸ்விவஸுப்ரபாவம்। ப்ரபும் ப்ரபத்ேய அச்யுதம் ஆத்மபூதம்।
௬௭।௰௪௮
ஸ்ரீவத்ஸாங்கம் மஹாேதவம்। ேவதகுஹ்யம் அநுத்தமம்। ௬௭।௰௪௯
ப்ரபத்ேய ஸூŠமம் அசலம்। பக்தாநாம் அபயப்ரதம்। ௬௭।௰௪௯
ப்ரபவம் ஸர்வேலாகாநாம்। நிர்குணம் பரேமஸ்வரம்। ௬௭।௰௫
ப்ரபத்ேய முக்தஸம்காநாம்। யதீநாம் பரமாம் கதிம்। ௬௭।௰௫
பகவந்தம் ஸுராத்யக்ஷம்। அக்ஷரம் புஷ்கேரக்ஷணம்। ௬௭।௰௫௧
ஸரண்யம் ஸரணம் பக்த்யா। ப்ரபத்ேய ப்ராஹ்மணப்ரியம்। ௬௭।௰௫௧
த்ரிவிக்ரமம் த்ரிேலாேகஸம்। ஆத்யம் ஏகம் அநாமயம்। ௬௭।௰௫௨
பூதாத்மாநம் மஹாத்மாநம்। ப்ரபத்ேய மதுஸூதநம்। ௬௭।௰௫௨
ஆதிேதவம் அஜம் ஸம்பும்। வ்யக்தாவ்யக்தம் ஜநார்தநம்। ௰௬௭।௧௰௫
ேக்ஷத்ரஜ்ஞம் புருஷம் யஜ்ஞம்। த்ரிகுணாதீதம் அவ்யயம்। ௬௭।௰௫௩
நாராயணம் அணயாம்ஸம் ீ । ப்ரபத்ேய பரேமஸ்வரம்। ௬௭।௰௫௩
ஏகாய ேலாகத்ரயாய। பரத: பரமாத்மேந। ௬௭।௰௫௪
நம: ஸஹஸ்ரஸிரேஸ। அநந்தாய மஹாத்மேந। ௬௭।௰௫௪

வேரண்யம் அநகம் ேதவம்। க்ருஷேயா ேவதபாரகா:। ௬௭।௰௫௫
கீர்தயந்தி ச யம் ஸர்ேவ। தம் ப்ரபத்ேய ஸநாதநம்। ௬௭।௰௫௫
நமஸ் ேத புண்டரீகாக்ஷ। பக்தாநாம் அபயப்ரத। ௬௭।௰௫௬
ஸுப்ரஹ்மண்ய நமஸ் ேத அஸ்து। த்ராஹி மாம் ஸரணாகதம்।
௬௭।௰௫௬
பக்திம் தஸ்யாநுஸம்சிந்த்ய। நாகஸ்யாேமாகஸம்ஸ்தவம்। ௬௭।௰௫௭
ப்ரீதிமாந் அபவத் ராஜஞ்। ஸங்கசக்ரகதாதர:। ௬௭।௰௫௭
ஸாம்நித்யம் கல்பயாம் ஆஸ। தஸ்மிந் ஸரஸி மாதவ:। ௬௭।௰௫௭
க்ராஹக்ரஸ்தம் கஜம் தம் ச। ஸம்க்ருஹ்ய ஸலிலாஸயாத்।
௬௭।௰௫௮
உஜ்ஜஹாராப்ரேமயாத்மா। தரைஸவாரிஸூதந:। ௬௭।௰௫௮
ஸ்தலஸ்தம் தாரயாம் ஆஸ। க்ராஹம் சக்ேரண மாதவ:। ௬௭।௰௫௯
ேமாக்ஷயாம் ஆஸ ச கஜம்। பாேஸப்ய: ஸரணாகதம்। ௬௭।௰௫௯
ஸ ஹி ேதவலஸாேபந। ஹூஹூ கந்தர்வஸத்தம:। ௬௭।௰௬
கஜத்வம் அகமத் க்ருஷ்ணாந்। ேமாக்ஷம் ப்ராப்ய திவம் கத:। ௬௭।௰௬
ஸாபாத் விமுக்த: ஸத்யஸ் ச। கேஜா கந்தர்வதாம் கத:। ௬௭।௰௬
க்ராேஹா அபி யக்ஷதாம் யாேதா। ய: க்ருஷ்ேணந நிபாதித:।
௬௭।௰௬௧
தஸ்யாபி ஸாபேமாேக்ஷா அெஸௗ। ைஜகீஷவ்யக்ருேதா அபவத்।
௬௭।௰௬௧
ப்ரீதிமாம்ஸ் த்ராதி ேகாவிந்த:। ஸத்ய: ஸம்ஸாரஸாகராத்। ௬௭।௰௬௨
க்ருத்ேதா அபி நிக்நந் ேதவத்வம்। அராதீநாம் ப்ரயச்சதி। ௬௭।௰௬௨

ெதௗ ச ஸ்வம் ஸ்வம் வபு: ப்ராப்ய। ப்ரணிபத்ய ஜநார்தநம்।
௬௭।௰௬௩
கந்தர்வராட் ததா யக்ஷ:। பராம் நிர்வ்ருதிம் ஆகெதௗ। ௬௭।௰௬௩
இதம் ைசவ மஹாபாேஹா। ேதவேதேவா அப்யபாஷத। ௬௭।௰௬௪
த்ருஷ்ட்வா முக்ெதௗ கஜக்ரெஹௗ। பகவாந் மதுஸூதந:। ௬௭।௰௬௪
ேயா க்ராஹம் நாகராஜம் ச। மாம் ைசவ ப்ரணிதாநவாந்। ௬௭।௰௬௫
ஸ்மரிஷ்யதி ஸரஸ் ேசதம்। யுவேயார் ேமாக்ஷணம் ததா। ௬௭।௰௬௫
குல்மம் கீசகேவணூநாம்। தம் ச ைஸலவரம் ததா। ௬௭।௰௬௬
அஸ்வத்தம் பாஸ்கரம் கங்காம்। ைநமிஷாரண்யம் ஏவ ச। ௬௭।௰௬௬
ஸம்ஸ்மரிஷ்யந்தி ேய மர்த்யா:। ஸம்யக் ஸ்ேராஷ்யந்தி வாபி ேய।
௬௭।௰௬௭
ந ேத து:ஸ்வப்நபாபஸ்ய। ேபாக்தாேரா மத்பரிக்ரஹாத்। ௬௭।௰௬௭
ஸர்வபாைப: ப்ரேமாŠயந்ேத। கல்யாணாநாம் ச பாகிந:। ௬௭।௰௬௮
பவிஷ்யந்தி ததா புண்யாம்। கதிம் யாஸ்யந்தி மாநவா:। ௬௭।௰௬௮
து:ஸ்வப்நம் ச ந்ருணாம் ேதஷாம்। ஸுஸ்வப்நம் ச பவிஷ்யதி।
௬௭।௰௬௮
ெகௗர்மம் மாத்ஸ்யம் ச வாராஹம்। வாமநம் தார்Šயம் ஏவ ச।
௬௭।௰௬௯
நாரஸிம்ஹம் ததா ரூபம்। ஸ்ருஷ்டிஸம்ஹாரகாரகம்। ௬௭।௰௬௯
ஏதாநி ப்ராதர் உத்தாய। ஸம்ஸ்மரிஷ்யந்தி ேய நரா:। ௬௭।௰௭
ஸர்வபாபவிநிர்முக்தாஸ்। ேத யாந்தி பரமாம் கதிம்। ௬௭।௰௭
ஏவம் உக்த்வா து ராேஜந்த்ர। ேதவேதேவா ஜநார்தந:। ௬௭।௰௭௧
அஸ்ப்ருஸத் கஜகந்தர்வம்। க்ராஹயக்ஷம் ச தம் ததா। ௬௭।௰௭௧

ேதந ஸ்ப்ருஷ்டாவ் உெபௗ ஸத்ேயா। திவ்யமால்யாம்பராந்விெதௗ।
௬௭।௰௭௨
விமாேந அபிமேத ப்ராப்ய। ஜக்மதுஸ் த்ரிதஸாலயம்। ௬௭।௰௭௨
தேதா ேதவபதி: க்ருஷ்ேணா। ேமாக்ஷயித்வா கேஜாத்தமம்। ௬௭।௰௭௩
க்ருஷிபி: ஸ்தூயமாேநா ஹி। குஹ்ையர் ேவதபதாக்ஷைர:। ௬௭।௰௭௩
கத: ஸ பகவாந் விஷ்ணுர்। துர்விஜ்ேஞயகதி: ப்ரபு:। ௬௭।௰௭௩
கேஜந்த்ரேமாக்ஷணம் த்ருஷ்ட்வா। ஸர்ேவ ேசந்த்ரபுேராகமா:।
௬௭।௰௭௪
ப்ரஹ்மாணம் அக்ரத: க்ருத்வா। ஸர்ேவ ப்ராஞ்ஜலேயா அபவந்।
௬௭।௰௭௪
வவந்திேர மஹாத்மாநம்। ப்ரபும் நாராயணம் ஹரிம்। ௰௬௭।௧௰௭
விஸ்மேயாத்புல்லநயநா:। ப்ரஜாபதிபுர:ஸரா:। ௰௬௭।௧௰௭
ய இதம் ஸ்ருணுயாந் நித்யம்। ப்ராதர் உத்தாய மாநவ:। ௰௬௭।௧௰௭
ப்ராப்நுயாத் பரமாம் ஸித்திம்। து:ஸ்வப்நஸ் தஸ்ய நஸ்யதி।
௰௬௭।௧௰௭
கேஜந்த்ரேமாக்ஷணம் புண்யம்। ஸர்வபாபப்ரேமாசநம்। ௬௭।௰௭௫
ஸ்ராவேயத் ப்ராதர் உத்தாய। ஸர்வபாைப: ப்ரமுச்யேத। ௬௭।௰௭௫
ஸ்ரத்தயா ஹி குருஸ்ேரஷ்ட। ஸ்ம்ருேதந கதிேதந ச। ௬௭।௰௭௬
கேஜந்த்ரேமாக்ஷேணேநஹ। தீர்கம் ஆயுர் அவாப்நுயாத்। ௬௭।௰௭௬
மயா ேத கதிதம் திவ்யம்। பவித்ரம் பாபநாஸநம்। ௬௭।௰௭௭
கீர்தயஸ்வ மஹாபாேஹா। மஹாது:ஸ்வப்நநாஸநம்। ௬௭।௰௭௭
கீர்த்யமாநம் ச விப்ேரப்ய:। ஸ்ருணு பக்த்யா யேதாதிதம்। ௰௬௭।௧௰௮
கேஜந்த்ரேமாக்ஷணம் ஸ்ருத்வா। குந்தீபுத்ேரா யுதிஷ்டிர:। ௬௭।௰௭௮

பஷ்மாத் ீ பகீரதீபுத்ராத்। பூஜயாம் ஆஸ ேகஸவம்। ௬௭।௰௭௮
ேய சாபி பாண்டுபுத்ரஸ்ய। ஸமீபஸ்தா த்விேஜாத்தமா:। ௬௭।௰௭௯
ேத அபி பஷ்மஸ்ய ீ பார்ஸ்வஸ்தம்। வாஸுேதவம் ப்ரேணமிேர।
௬௭।௰௭௯
வரம் வேரண்யம் வரபத்மநாபம்। நாராயணம் ப்ரஹ்மநிதிம் ஸுேரஸம்।
௬௭।௰௮
தம் ேதவகுஹ்யம் புருஷம் புராணம்। வவந்திேர ப்ரஹ்மவிதாம் வரிஷ்டம்।
௬௭।௰௮
ஏதத் புண்யம் மஹாராஜ। நராணாம் பாபகர்மணாம்। ௬௭।௰௮௧
து:ஸ்வப்நதர்ஸேந ேகாேர। ஸ்ருத்வா பாபாத் ப்ரமுச்யேத। ௬௭।௰௮௧
பக்திமாந் புண்டரீகாேக்ஷ। கேஜா து:காத் விேமாசித:। ௬௭।௰௮௧
ததா த்வம் அபி ராேஜந்த்ர। ப்ரபத்ய ஸரணம் ஹரிம்। ௬௭।௰௮௨
விமுக்த: ஸர்வபாேபப்ய:। ப்ராப்ஸ்யேஸ பரமாம் கதிம்। ௬௭।௰௮௨
மஹாமேத மஹாப்ராஜ்ஞ। ஸர்வஸாஸ்த்ரவிஸாரத। ௬௮।௰௰௧
அக்ஷீணகர்மபந்தஸ் து। புருேஷா த்விஜஸத்தம। ௬௮।௰௰௧
மரேண யஜ் ஜபஞ் ஜப்யம்। யச் ச பாவம் அநுஸ்மரந்। ௬௮।௰௰௨
பரம் பதம் அவாப்ேநாதி। தந் ேம வத மஹாமுேந। ௬௮।௰௰௨
ஸ்ரீவத்ஸாங்கம் ஜகத்பஜம்ீ । அநந்தம் ேலாகபாவநம்। ௬௮।௰௰௩
புரா நாராயணம் ேதவம்। நாரத: பர்யப்ருச்சத। ௬௮।௰௰௩
பகவந் பூதபவ்ேயஸ। ஸ்ரத்ததாைநர் ஜிேதந்த்ரிைய:। ௬௮।௰௰௪
கதம் பக்ைதர் விசிந்த்ேயா அஸி। மரேண ப்ரத்யுபஸ்திேத। ௬௮।௰௰௪
கிம் வா ஜப்யம் ஜேபந் நித்யம்। கல்யம் உத்தாய மாநவ:। ௬௮।௰௰௫
ஸ்வபந் விபுத்யந் த்யாயம்ஸ் ச। தந் ேம ப்ரூஹி ஸநாதந। ௬௮।௰௰௫

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸுவ்ன பகவான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ விஷ்ணு தர்மம் –முதல் பாகம் —

June 3, 2023

நாராயணம் நமஸ்க்ருத்ய। நரம் ஸைவ நரோத்தமம்।
தேவம்ீ ஸரஸ்வதீம் ஸைவ। ததோ ஜயம் உதீரயேத்।
த்வை பாயந ஒவ்ஷ்ட புடநி:ஸ்ருதம் அப்ரேமயம்। புண்யம் பவித்ரம் அத பாப ஹரம் ஸுபம் ச।
யோ பாரதம் ஸமதிகச்சதி வாச்யமாநம்। கிம் தஸ்ய புஷ்கர ஜலைர் அபிஷே சநேந।
நமோ வ்யாஸாய குரவே । ஸர்வஜ்ஞாய மஹர்ஷேய।
பாராஸர்யாய ஸாந்தாய। நமோ நாராயணாய தே ।
க்ருதாபிஷேகம் தநயம்। ராஜ்ஞ: பாரீக்ஷிதஸ்ய ஹ। ௧।௰௰௧
த்ரஷ்டும் அப்யாயயு: ப்ரீத்யா। ெஸௗநகாத்யா மஹர்ஷய:। ௧।௰௰௧
தாந் ஆகதாந் ஸ ராஜர்ஷி:। பாத்யார்க்யாதிபிர் அர்சிதாந்। ௧।௰௰௨
ஸுகோபவிஷ்டாந் விஸ்ராந்தாந்। க்ருத ஸம்ப்ரஸ்ந ஸத் கதாந்। ௧।௰௰௨
தத்கதாபி: க்ருதாஹ்லாத:। ப்ரணிபத்ய க்ருதாஞ்ஜலி:। ௧।௰௰௩
ஸதாநீகோ அத பப்ரச்ச। நாராயண கதாம் பராம்। ௧।௰௰௩
யம் ஆஸ்ரித்ய ஜகந்நாதம்। மம பூர்வ பிதாமஹா:। ௧।௰௰௪
விபக்ஷாபஹ்ருதம் ராஜ்யம்। அவாபு: புருேஷாத்தமா:। ௧।௰௰௪
த்ெரௗணி ப்ரஹ்மாஸ்த்ர நிர்தக்ேதா। மம ேயந பிதாமஹ:। ௧।௰௰௫
பரீக்ஷித் ப்ராண ஸம்ேயாகம்। ேதவேதேவந லம்பித:। ௧।௰௰௫
தஸ்ய ேதவஸ்ய மாஹாத்ம்யம்। ேதவர்ஷி ஸித்தமநுைஜ:। ௧।௰௰௬
ஸ்ருதம் ஸுபஹுேஸா மயா। ஸ்துதஸ் யாஸேஷ ஜந்மந:। ௧।௰௰௬
க: ஸ்ேதாதும் ஈஸஸ் தம் அஜம்। யஸ்ைய தத் ஸசராசரம்। ௧।௰௰௭
அவ்யயஸ் யாப்ரேமயஸ்ய। ப்ரஹ்மாண்டம் உதரே ஸயம்। ௧।௰௰௭
ருத்ர: க்ராேத உத்பவோ யஸ்ய। ப்ரஸாதாச் ச பிதாமஹ:। ௧।௰௰௮

தஸ்ய ேதவஸ்ய க: ஸக்த:। ப்ரவக்தும் வா விபூதய:। ௧।௰௰௮
ேஸா அஹம் இச்சாமி ேதவஸ்ய। தஸ்ய ஸர்வாத்மந: ப்ரேபா:।
௧।௰௰௯
ஸ்ேராதும் ஆராதநம் ேயந। நிஸ்தேரயம் பவார்ணவம்। ௧।௰௰௯
ேகேநாபாேயந மந்த்ைரர் வா। ரஹஸ்ைய: பரிசர்யயா। ௧।௰௧
தாைநர் வ்ரேதாபவாைஸர் வா। ஜப்ையர் ேஹாைமர் அதாபி வா।
௧।௰௧
ஆராதித: ஸமஸ்தாநாம்। க்ேலஸாநாம் ஹாநிேதா ஹரி:। ௧।௰௧௧
ஸக்ய: ஸமாராதயிதும்। தந் ந: ஸம்ஸத ஸத்தமா:। ௧।௰௧௧
வித்யாநாம் அபி ஸா வித்யா। ஸ்ருதாநாம் அபி தச் ச்ருதம்। ௧।௰௧௨
ரஹஸ்யாநாம் ரஹஸ்யம் தத்। ேயந விஷ்ணு: ப்ரஸததி ீ । ௧।௰௧௨
மந்த்ராணாம் பரேமா மந்த்ேரா। வ்ரதாநாம் தந் மஹாவ்ரதம்। ௧।௰௧௩
உேபாஷிதம் ஹி தச் ச்ேரஷ்டம்। ேயந துஷ்யதி ேகஸவ:। ௧।௰௧௩
ஸா ஜிஹ்வா யா ஹரிம் ஸ்ெதௗதி। தச் சித்தம் யத் ததர்பணம்।
௧।௰௧௪
தாவ் ஏவ ேகவெலௗ ஸ்லாக்ெயௗ। ெயௗ தத்பூஜாகெரௗ கெரௗ।
௧।௰௧௪
ஸுஜந்ம ேதஹம் அத்யந்தம்। தத் ஏவாேஸஷஜந்மஸு। ௧।௰௧௫
யத் ஏவ புலேகாத்பாஸி। விஷ்ேணார் நாமாபிகீர்தநாத்। ௧।௰௧௫
ஸா ஹாநிஸ் தந் மஹச் சித்ரம்। ஸா சாந்தஜடமூகதா। ௧।௰௧௬
யந் முஹூர்தம் க்ஷணம் வாபி। வாஸுேதேவா ந சிந்த்யேத। ௧।௰௧௬
நூநம் தத் கண்டஸாலூகம்। அதவா ப்ரதிஜிஹ்விகா। ௧।௰௧௭

ேராேகா வாந்ேயா ந ஸா ஜிஹ்வா। யா ந வக்தி ஹேரர் குணாந்।
௧।௰௧௭
ஸந்த்ய் அேநகா பிலாஸ் தத்வச்। ஸ்ேராத்ரம் அப்ய் அல்பேமதஸாம்।
௧।௰௧௮
தத்த்வாவதாநம் யச் சப்ேத। விைநவ ஹரிஸம்ஸ்துதிம்। ௧।௰௧௮
தர்மார்தகாமஸம்ப்ராப்ெதௗ। புருஷாணாம் விேசஷ்டிதம்। ௧।௰௧௯
ஜந்மந்ய் அவிபலா ைஸகா। யா ேகாவிந்தாஸ்ரயா க்ரியா। ௧।௰௧௯
துர்கஸம்ஸாரகாந்தாரம்। அபாரம் அபிதாவதாம்। ௧।௰௨
ஏக: க்ருஷ்ணநமஸ்காேரா। முக்திதீரஸ்ய ேதஸிக:। ௧।௰௨
ஸர்வரத்நமேயா ேமரு:। ஸர்வாஸ்சர்யமயம் நப:। ௧।௰௨௧
ஸர்வதீர்தமயீ கங்கா। ஸர்வேதவமேயா ஹரி:। ௧।௰௨௧
ஏவம் ஆதிகுேணா ேபாக:। க்ருஷ்ணஸ்யாத்புதகர்மண:। ௧।௰௨௨
ஸ்ருேதா ேம பஹுேஸா ஸித்ைத:। கீயமாநஸ் ததாபைர:। ௧।௰௨௨
ேஸா அஹம் இச்சாமி தம் ேதவம்। ஸர்வேலாகபராயணம்। ௧।௰௨௩
நாராயணம் அேஸஷஸ்ய। ஜகேதா ஹ்ருத்ய் அவஸ்திதம்। ௧।௰௨௩
ஆராதயிதும் ஈஸாநம்। அநந்தம் அமிெதௗஜஸம்। ௧।௰௨௪
ஸம்கரம் ஜகத: ப்ராணம்। ஸ்ம்ருதமாத்ராகஹாரிணம்। ௧।௰௨௪
தந் மமாத்ய முநிஸ்ேரஷ்டா:। ப்ரஸாதயிதும் இச்சத:। ௧।௰௨௫
உபேதஸப்ரதாேநந। ப்ரஸாதம் கர்தும் அர்ஹத। ௧।௰௨௫
தஸ்ையதத் வசநம் ஸ்ருத்வா। பக்திம் உத்வஹேதா ஹேர:। ௧।௰௨௬
பரிேதாஷம் பரம் ஜக்முர்। முநய: ஸர்வ ஏவ ேத। ௧।௰௨௬
ஸர்ேவ ச ேத முநிஸ்ேரஷ்டா। ப்ருகுஸ்ேரஷ்டம் ச ெஸௗநகம்।
௧।௰௨௭

யதார்தம் பகவம்ஸ் தஸ்ைம। கத்யதாம் இத்ய் அேசாதயந்। ௧।௰௨௭
ஸர்வஜ்ஞாநநிதி: ஸ்பதஸ்ீ । த்வம் அத்ர ப்ருகுநந்தந। ௧।௰௨௮
த்ைரேலாக்யஸர்வஸம்ேதஹ । தேமாதீபஸ் தேபாதந। ௧।௰௨௮
ஏவம் உக்ேதா முநிவைர:। ப்ரீத்யா தஸ்ய ச பூபேத:। ௧।௰௨௯
பக்த்யா ச ேதவேதவஸ்ய। ப்ரவணக்ருதமாநஸ ீ :। ௧।௰௨௯
க்ருத்ேவாத்தரீயபர்யங்கம்। ஸிதிலம் பகவாந் அத। ௧।௰௩
ப்ரத்யுவாச மஹாபாக:। ெஸௗநகஸ் தம் மஹீபதிம்। ௧।௰௩
யத் ப்ருச்சஸி மஹீபால। க்ருஷ்ணஸ்யாராதநம் ப்ரதி। ௧।௰௩௧
வ்ரேதாபவாஸஜப்யாதி। தத் இைஹகமநா: ஸ்ருணு। ௧।௰௩௧
அநாதிமத் பரம் ப்ரஹ்ம। ஸர்வேஹயவிவர்ஜிதம்। ௧।௰௩௨
வ்யாபி யத் ஸர்வபூேதஷு। ஸ்திதம் ஸதஸத: பரம்। ௧।௰௩௨
ப்ரதாநபும்ேஸார் அஜேயார்। யத: ேக்ஷாப: ப்ரவர்தேத। ௧।௰௩௩
நித்யேயார் வ்யாபிேநாஸ் ைசவ। ஜகதாெதௗ மஹாத்மேநா:। ௧।௰௩௩
தத்ேக்ஷாபகத்வாத் ப்ரஹ்மாண்ட । ஸ்ருஷ்டிேஹதுர் நிரஞ்ஜந:।
௧।௰௩௪
அேஹதுர் அபி ஸர்வாத்மந:। ஜாயேத பரேமஸ்வர:। ௧।௰௩௪
ப்ரதாநபுருஷத்வம் ச। தைதேவஸ்வரலீலயா। ௧।௰௩௫
ஸமுைபதி ததஸ் ைசவ। ப்ரஹ்மத்வம் சந்தத: ப்ரபு:। ௧।௰௩௫
தத: ஸ்திெதௗ பாலயிதா। விஷ்ணுத்வம் ஜகத: க்ஷேய। ௧।௰௩௬
ருத்ரத்வம் ச ஜகந்நாத:। ஸ்ேவச்சயா குருேத அவ்யய:। ௧।௰௩௬
தத் ஏகம் அக்ஷரம் தாம। பரம் ஸதஸேதார் மஹத்। ௧।௰௩௭
ேபதாேபதஸ்வரூபஸ்தம்। ப்ரணிபத்ய பரம் பதம்। ௧।௰௩௭

ப்ரவŠயாமி யதா பூர்வம்। மத்பித்ரா கதிதம் மம। ௧।௰௩௮
தஸ்யாபி கில தத்பித்ரா। தஸ்ைம சாஹ கிேலாஸநா:। ௧।௰௩௮
ேதநாபி ப்ருகும் ஆராத்ய। ப்ராப்தம் ஆராதநம் ஹேர:। ௧।௰௩௯
ஸகாஸாத் ப்ரஹ்மண: ப்ராப்தம்। ப்ருகுணாபி மஹாத்மநா। ௧।௰௩௯
மரீசிமிஸ்ைரஸ் ச புரா। பரம் ஏதந் மஹர்ஷிபி:। ௧।௰௪
ப்ராப்தம் ஸகாஸாத் ேதவஸ்ய। ப்ரஹ்மேணா வ்யக்தஜந்மந:। ௧।௰௪
ேயாகம் ப்ரஹ்மா பரம் ப்ராஹ। மஹர்ஷீணாம் யதா ப்ரபு:। ௧।௰௪௧
ஸமஸ்தவ்ருத்திஸம்ேராதாத்। ைகவல்யப்ரதிபாதகம்। ௧।௰௪௧
ததா ஜகத்பதிர் ப்ரஹ்மா। ப்ரணிபத்ய மஹர்ஷிபி:। ௧।௰௪௨
ஸர்ைவ: கிேலாக்ேதா பகவாந்। ஆத்மேயாநி: ப்ரஜாஹிதம்। ௧।௰௪௨
ேயா ேயாேகா பவதா ப்ேராக்ேதா। மேநாவ்ருத்திநிேராதஜ:। ௧।௰௪௩
ப்ராப்தும் ஸக்ய: ஸ த்வ் அேநைக:। ஜந்மபிர் ஜகத: பேத। ௧।௰௪௩
விஷயா துர்ஜயா ந்ருணாம்। இந்த்ரியாகர்ஷணா: ப்ரேபா। ௧।௰௪௪
வ்ருத்தயஸ் ேசதஸஸ் சாபி। சபலா சாதிதுர்தரா:। ௧।௰௪௪
ராகாதய: கதம் ேஜதும்। ஸக்யா வர்ஷஸைதர் அபி। ௧।௰௪௫
ந ேயாகேயாக்யம் ஹி மேநா। பவத்ய் ஏபிர் அநிர்ஜிைத:। ௧।௰௪௫
அல்பாயுஷஸ் ச புருஷா। ப்ரஹ்மந் க்ருதயுேக அப்ய் அமீ। ௧।௰௪௬
த்ேரதாயாம் த்வாபேர ைசவ। கிமு ப்ராப்ேத கெலௗ யுேக। ௧।௰௪௬
பகவம்ஸ் த்வம் உபாயஜ்ஞ:। ப்ரஸந்ேநா வக்தும் அர்ஹஸி। ௧।௰௪௭
அநாயாேஸந ேயேநமம்। உத்தேரம பவார்ணவம்। ௧।௰௪௭
து:காம்புமக்நா: புருஷா:। ப்ராப்ய ப்ரஹ்ம மஹாப்லவம்। ௧।௰௪௮
உத்தேரயுர் பவாம்ேபாதிம்। ததா த்வம் அநுசிந்தய। ௧।௰௪௮

ஏவம் உக்தஸ் ததா ப்ரஹ்மா। க்ரியாேயாகம் மஹாத்மநாம்। ௧।௰௪௯
ேதஷாம் க்ருஷீணாம் ஆசஷ்ட। நராணாம் ஹிதகாம்யயா। ௧।௰௪௯
ஆராதயத விஸ்ேவஸம்। நாராயணம் அதந்த்ரிதா:। ௧।௰௫
பாஹ்யாலம்பநஸாேபக்ஷாஸ்। தம் அஜம் ஜகத: பதிம்। ௧।௰௫
இஜ்யாபூஜாநமஸ்கார । ஸுஸ்ரூஷாபிர் அஹர்நிஸம்। ௧।௰௫௧
வ்ரேதாபவாைஸர் விவிைதர்। ப்ராஹ்மணாநாம் ச தர்பைண:। ௧।௰௫௧
ைதஸ் ைதஸ் சாபிமைத: காைமர்। ேய ச ேசதஸி துஷ்டிதா:। ௧।௰௫௨
அபரிச்ேசத்யமாஹாத்ம்யம்। ஆராதயத ேகஸவம்। ௧।௰௫௨
தந்நிஷ்டாஸ் தத்கததியஸ்। தத்கர்மாணஸ் ததாஸ்ரயா:। ௧।௰௫௩
தத்த்ருஷ்டயஸ் தந்மநஸ:। ஸர்வஸ்மிந் ஸ இதி ஸ்தித:। ௧।௰௫௩
ஸமஸ்தாந்ய் அத கர்மாணி। தத்ர ஸர்வாத்மநாத்மநி। ௧।௰௫௪
ஸம்ந்யஸ்யத்வம் ஸ வ: கர்தா। ஸமஸ்தாவரணக்ஷயம்। ௧।௰௫௪
ஏதத் தத் அக்ஷரம் ப்ரஹ்ம। ப்ரதாநபுருஷாவ் உெபௗ। ௧।௰௫௫
யேதா யஸ்மிந் யதா ேசாெபௗ। ஸர்வவ்யாபிந்ய் அவஸ்திெதௗ।
௧।௰௫௫
பர: பராணாம் பரம:। ஸ ஏக: புருேஷாத்தம:। ௧।௰௫௬
யஸ்யாபிந்நம் இதம் ஸர்வம்। யச் ேசங்கம் யச் ச ேநங்கதி। ௧।௰௫௬
தம் ஆராத்ய ஜகந்நாதம்। ேமாக்ஷகாரணம் அவ்யக்தம்। ௧।௰௫௭
அசிந்த்யம் அபரிக்ரஹம்। க்ரியாேயாேகந முச்யேத। ௧।௰௫௭
இதி ேத ப்ரஹ்மண: ஸ்ருத்வா। ரஹஸ்யம் க்ருஷிஸத்தமா:। ௧।௰௫௮
நராணாம் உபகாராய। ேயாகஸாஸ்த்ராணி சக்ரிேர। ௧।௰௫௮
க்ரியாேயாகபராணஹீ । முக்திகார்யாண்ய் அேநகஸ:। ௧।௰௫௮
ஆராத்யேத ஜகந்நாேதா। யதநுஷ்டாநதத்பைர:। ௧।௰௫௯

பரமாத்மா ஹ்ருஷீேகஸ:। ஸர்ேவஸ: ஸர்வபாவந:। ௧।௰௫௯
தாநி ேத ந்ருபஸார்தூல। ஸர்வபாபஹராண்ய் அஹம்। ௧।௰௬
வŠயாமி ஸ்ரூயதாம் அந்யத்। ரஹஸ்யம் இதம் உத்தமம்। ௧।௰௬
ஸம்ஸாரார்ணவமக்நாநாம்। விஷயாக்ராந்தேசதஸாம்। ௧।௰௬௧
உத்தாரம் இச்சதாம் தஸ்மாத்। ப்ருஸம் யந் நாந்தைரர் அபி। ௧।௰௬௧
விஷ்ணுேபாதம் விநா நாந்யத்। கிம்சித் அஸ்தி பராயணம்। ௧।௰௬௧
உத்திஷ்டம்ஸ் சிந்தய ஹரிம்। வ்ரஜம்ஸ் சிந்தய ேகஸவம்। ௧।௰௬௨
புஞ்ஜம்ஸ் சிந்தய ேகாவிந்தம்। ஸ்வபம்ஸ் சிந்தய மாதவம்। ௧।௰௬௨
ஏவம் ஏகாக்ரசித்தஸ் த்வம்। ஸம்ஸ்ரிேதா மதுஸூதநம்। ௧।௰௬௩
ஜந்மம்ருத்யுஜராக்ராஹம்। ஸம்ஸாராம்பஸ் தரிஷ்யஸி। ௧।௰௬௩
அநந்தம் ஈட்யம் புருஷம் புராணம்। ஜகத்விதாதாரம் அஜம் ஜநித்ர்யம்।
௧।௰௬௪
ஸமாஸ்ரிதா ேய ஹரிம் ஈஸிதாரம்। ேதஷாம் பேவா நாஸ்தி ஹி
முக்திபாஜாம்। ௧।௰௬௪
ஸ்ரூயதாம் குருஸார்தூல। ஸம்வாேதா அயம் அநுத்தம:। ௨।௰௰௧
அம்பரீஷஸ்ய ராஜர்ேஷ:। ஸஹ ேதேவந சக்ரிணா। ௨।௰௰௧
அம்பரீேஷா மஹீபால:। பாலயந்ந் ஏவ ேமதிநீம்। ௨।௰௰௨
உத்விக்ந ஏவ த்வந்த்வாந்தம்। அபப்ஸு ீ : புருஷர்ஷப:। ௨।௰௰௨
ேதவேதவாத் ஸ ேகாவிந்தாத்। அபப்ஸுர் ீ த்வந்த்வஸம்க்ஷயம்।
௨।௰௰௩
தபஸ் ேதேப நிராஹாேரா। க்ருணந் ப்ரஹ்ம ஸநாதநம்। ௨।௰௰௩
தஸ்ய காேலந மஹதா। பக்திம் உத்வஹத: பராம்। ௨।௰௰௪
துேதாஷ பகவாந் விஷ்ணு:। ஸர்வேலாகபதி: ப்ரபு:। ௨।௰௰௪

ஸ ரூபம் ஐந்த்ரம் ஆஸ்தாய। தம் உவாச மஹீபதிம்। ௨।௰௰௫
ேமககம்பரநிர்ேகாேஷா ீ । வாரேணந்த்ரகதிஸ் ததா। ௨।௰௰௫
ராஜர்ேஷ வத யத் கார்யம்। தவ ேசதஸ்ய் அவஸ்திதம்। ௨।௰௰௬
வரேதா அஹம் அநுப்ராப்ேதா। வரம் வரய ஸுவ்ரத। ௨।௰௰௬
ஏவம் உக்தஸ் தேதா ராஜா। விேலாக்ய ச புரம்தரம்। ௨।௰௰௭
ப்ரத்யுவாசார்க்யம் உத்யம்ய। ஸ்வாகதம் ேத அஸ்த்வ் இதி ப்ரேபா।
௨।௰௰௭
நாஹம் ஆராதயாமி த்வாம்। தவ பத்ேதா அயம் அஞ்ஜலி:। ௨।௰௰௮
வரார்திநாம் த்வம் வரத:। ப்ரயச்சாபிமதாந் வராந்। ௨।௰௰௮
வரார்தாய த்வயாந்ையஸ் ச। க்ரியேத ந்ருபேத தப:। ௨।௰௰௯
ஸ கிம் அர்தம் த்வம் அஸ்மத்ேதா। ந க்ருஹ்ணாஸ்ய் அபிவாம்சிதம்।
௨।௰௰௯
ந வரார்தம் அயம் யத்நஸ்। த்வத்ேதா ேதவபேத மம। ௨।௰௧
விஷ்ேணார் ஆராதநார்தாய। வித்தி மாம் த்வம் க்ருேதாத்யமம்। ௨।௰௧
அஹம் ஹி ஸர்வேதவாநாம்। த்ைரேலாக்யஸ்ய தேதஸ்வர:। ௨।௰௧௧
பாலயந்தி மைமவாஜ்ஞாம்। ஆதித்யாத்யா: ஸதா ஸுரா:। ௨।௰௧௧
ஆதித்யா வஸேவா ருத்ரா। நாஸத்ெயௗ மருதாம் கணா:। ௨।௰௧௨
ப்ரஜாநாம் பதய: ஸாத்யா। விஸ்ேவேதவா மஹர்ஷய:। ௨।௰௧௨
குர்வந்த்ய் ஏேத மைமவாஜ்ஞாம்। ஸித்தகந்தர்வபந்நகா:। ௨।௰௧௩
மத்ேதா ஹி ேகா அந்ேயா வரத:। ப்ரதிக்ருஹ்ணஷ்வீ வாஞ்சிதம்।
௨।௰௧௩
த்வம் இந்த்ர: ஸத்யம் ஏைவதத்। ேதவஸ் த்ரிபுவேநஸ்வர:। ௨।௰௧

த்வயாபி ப்ராப்தம் ஐஸ்வர்யம்। யதஸ் தம் ேதாஷயாம்ய் அஹம்।
௨।௰௧௪
த்ைரேலாக்யம் தவ ேதேவஸ। வேஸ யஸ்ய மஹாத்மந:।
௰௰௨।௰௧௫௧
ஸப்ேதாதேர ஸயா ேலாகாஸ்। தம் ஈஸம் ேதாஷயாம்ய் அஹம்।
௨।௰௧௫
யஸ்ய த்வம் அமைர: ஸர்ைவ:। ஸமேவதா: ஸுேரஸ்வர। ௨।௰௧௬
ேதஹப்ராப்ேதா அந்தரஸ்ேதா ைவ। தம் நமாமி ஜநார்தநம்। ௨।௰௧௬
நிேமேஷா ப்ரஹ்மேணா ராத்ரிர்। உந்ேமேஷா யஸ்ய வாஸர:। ௨।௰௧௭
தம் ஈட்யம் ஈஸம் அஜரம்। ப்ரணேதா அஸ்மி ஜநார்தநம்। ௨।௰௧௭
ேயா ஹர்தா ஜகேதா ேதவ:। கர்தா பாலாயிதா ச ய:। ௨।௰௧௮
த்ரயஸ்யாஸ்ய ச ேயா ேயாநிஸ்। தம் விஷ்ணும் ேதாஷயாம்ய் அஹம்।
௨।௰௧௮
ஹிரண்யகஸிபு: பூர்வம்। ஹிரண்யாக்ஷஸ் ச ேத ரிபு:। ௨।௰௧௯
தவாநுகம்பயா ேயந। ஹெதௗ ைதத்ெயௗ நேதா அஸ்மி தம்। ௨।௰௧௯
பலிநாபஹ்ருதம் ஸக்ர। தத்தம் ேயந புரா தவ। ௨।௰௨
த்ைரேலாக்யராஜ்யம் தம் பத்த்வா। தம் நமாமி ஜநார்தநம்। ௨।௰௨
ப்ரஸதீ ஸக்ர கச்ச த்வம்। அஹம் அப்ய் அத்ர ஸம்ஸ்தித:। ௨।௰௨௧
தபஸ் தப்ஸ்ேய ஜகந்நாதம்। த்ரஷ்டும் நாராயணம் ஹரிம்। ௨।௰௨௧
ஏவம் உக்தஸ் ததஸ் ேதந। ஸக்ரரூபீ ஜநார்தந:। ௨।௰௨௨
புநர் அப்ய் ஆஹ தம் ேகாபாத்। பார்திவம் தபஸி ஸ்திதம்। ௨।௰௨௨
யதி மத்வசநாத் அத்ய। ந பவாம்ஸ் த்யŠயேத தப:। ௨।௰௨௩
வஜ்ரம் ேத ப்ரஹரிஷ்யாமி। புத்யஸ்ைவதத் யதீச்சஸி। ௨।௰௨௩

நாப்ய் அல்பம் அபராதம் ேத। கேராமி த்ரிதேஸஸ்வர। ௨।௰௨௪
ததாபி வதேயாக்யம் மாம்। மந்யேஸ ேசத் க்ஷிபாயுதம்। ௨।௰௨௪
ஸ்ரூயேத கில ேகாவிந்ேத। பக்திம் உத்வஹதாம் ந்ருணாம்। ௨।௰௨௫
ஸம்ஸாரார்ணாவபதாநாம் ீ । த்ரிதஸா: பரிபந்திந:। ௨।௰௨௫
தாபேஸா அஹம் க்வ நி:ஸங்க:। க்வ ச ேகாபஸ் தேவத்ருஸ:।
௨।௰௨௬
விஜ்ஞாதம் ஏதத் ேகாவிந்த । பக்திவிக்ேநாபபாதிதம்। ௨।௰௨௬
பவந்தி பஹேவா விக்நா। நேர ஸ்ேரய:பராயேண। ௨।௰௨௭
ேகாவிந்தபக்த்யப்யதிகம்। ஸ்ேரயஸ் சாந்யந் ந வித்யேத। ௨।௰௨௭
ஸ த்வம் ப்ரஹர வா மா வா। மயி வஜ்ரம் புரம்தர। ௨।௰௨௮
நாஹம் உத்ஸ்ருஜ்ய ேகாவிந்தம்। அந்யம் ஆராதயாமி ேபா:। ௨।௰௨௮
ந சாபி வஜ்ரம் வஜ்ரீ வா। த்வம் ச நாந்ேய ஸுராஸுரா:। ௨।௰௨௯
ஸக்தா நிஹந்தும் ஈஸாேந। ஹ்ருதயஸ்ேத ஜநார்தேந। ௨।௰௨௯
கிம் ச ேநா பஹுேநாக்ேதந। நாஹம் வŠயாம்ய் அத: பரம்। ௨।௰௩
யேதப்ஸிதம் குருஷ்வ த்வம்। கரிஷ்ேய அஹம் அபப்ஸிதம் ீ । ௨।௰௩
ஏவம் உக்த்வா ஸுரபதிம்। பார்திவ: ஸ புநஸ் தப:। ௨।௰௩௧
சசார ெமௗநம் ஆஸ்தாய। ேதநாதுஷ்யத ேகஸவ:। ௨।௰௩௧
ஸம்தர்ஸயாம் ஆஸ தத:। ஸ்வம் வபு: ைகடபார்தந:। ௨।௰௩௨
சதுர்புஜம் உதாராங்கம்। ஸங்கசக்ரகதாதரம்। ௨।௰௩௨
கிரீடஸ்ரக்தரம் ஸ்பஷ்டம்। நீேலாத்பலதலச்சவிம்। ௨।௰௩௩
ஐராவதஸ் ச கருடஸ்। தத்க்ஷணாத் ஸமத்ருஸ்யத। ௨।௰௩௩
ஸ ச ராஜவேரா ேதவம்। பதவாஸஸம் ீ அச்யுதம்। ௨।௰௩௪
விேலாக்ய பக்திஸிரஸா। ஸஹைஸவ மஹீம் யெயௗ। ௨।௰௩௪

ப்ரத்யுவாச ச பூபால:। ப்ரணிபத்ய க்ருதாஞ்ஜலி:। ௨।௰௩௫
ேராமாஞ்சிததநு: ஸ்ேதாத்ரம்। பத்மநாபம் தேதா அஸ்துவத்। ௨।௰௩௫
ஆதிேதவ ஜயாேஜய। ஜய ஸர்காதிகாரக। ௨।௰௩௬
ஜயாஸ்பஷ்டப்ரகாஸாண்ட। ப்ருஹந்மூர்ேத ஜயாக்ஷர। ௨।௰௩௬
ஜய ஸர்வகதாசிந்த்ய। ஜய ஜந்மஜராபஹ। ௨।௰௩௭
ஜய வ்யாபிஞ் ஜயாேபத। ஸர்வபூேதஷ்வ் அவஸ்தித। ௨।௰௩௭
ஜய யஜ்ஞபேத நாத। ஹவ்யகவ்யாஸநாவ்யய। ௨।௰௩௮
ஜய விஜ்ஞாதஸித்தாந்த। மாயாேமாஹக ேகஸவ। ௨।௰௩௮
ேலாகஸ்தித்யர்தம் அநக। வராஹ ஜய பூதர। ௨।௰௩௯
ந்ருஸிம்ஹ ஜய ேதவாரி । வக்ஷ:ஸ்தலவிதாரண। ௨।௰௩௯
ேதவாநாம் அரிபதாநாம் ீ । ஆர்திநாஸந வாமந। ௨।௰௪
ஜய க்ராந்தஸமஸ்ேதார்வ ீ। நப:ஸ்வர்ேலாகபாவந। ௨।௰௪
ஜிதம் ேத ஜகதாம் ஈஸ। ஜிதம் ேத ஸர்வ ஸர்வத। ௰௰௨।௨
ஜிதம் ேத ஸர்வபூேதஸ। ேயாகித்ேயய நேமா அஸ்து ேத। ௨।௰௪௧
நேமா அஸ்த்வ் அவ்யபேதஸ்யாய। நம: ஸூŠமஸ்வரூபிேண।
௨।௰௪௨
நமஸ் த்ரிமூர்தேய துப்யம்। விஸ்வமூர்ேத நேமா அஸ்து ேத। ௨।௰௪௨
ப்ரஹ்மாத்ையஸ் சிந்த்யேத ரூபம்। யத் தத் ஸதஸத: பரம்। ௨।௰௪௩
விேஸைஷர் அவிேஸஷ்யாய। தஸ்ைம துப்யம் நேமா நம:। ௨।௰௪௩
புருஷாக்யம் தேதா ரூபம்। நிர்குணம் குணேபாக்த்ரு ச। ௨।௰௪௪
ப்ரக்ருேத: பரத: ஸூŠமம்। தந் நமஸ்யாமி ேத ஹேர। ௨।௰௪௪
அவ்யக்தாதிவிேஸஷாந்தம்। அதிஸூŠமதமம் மஹத்। ௨।௰௪௫

ப்ராக்ருதம் தவ தத் ரூபம்। தஸ்ைம ேதவ நமாம்ய் அஹம்। ௨।௰௪௫
ரூைபர் நாநாவிைதர் யஸ் ச। தத்ரூபாந்தரேகாசரம்। ௨।௰௪௬
லீலயா வ்யவஹாரஸ் ேத। தஸ்ைம ேதவாத்மேந நம:। ௨।௰௪௬
ப்ரஸதீ விஷ்ேணா ேகாவிந்த। ஸங்கசக்ரகதாதர। ௨।௰௪௭
தராதராரவிந்தாக்ஷ। வாஸுேதவ மேஹஸ்வர। ௨।௰௪௭
இத்தம் ஸ்துேதா ஜகந்நாத:। ப்ேராக்தவாந் இதி ேகஸவ:। ௨।௰௪௮
அம்பரீஷம் ப்ருதிவஸம் ீ । ஜகத் ஸம்நாதயந் கிரா। ௨।௰௪௮
அம்பரீஷ ப்ரஸந்ேநா அஸ்மி। பக்த்யா ஸ்ேதாத்ேரண சாநக। ௨।௰௪௯
வரம் வ்ருணஷ்வீ தர்மஜ்ஞ। யத் ேத மநஸி வர்தேத। ௨।௰௪௯
ஏஷ ஏவ வர: ஸ்லாக்ேயா। யத் த்ருஷ்ேடா அஸி ஜகத்பேத। ௨।௰௫
த்வத்தர்ஸநம் அபுண்யாநாம்। ஸ்வப்ேநஷ்வ் அபி ஹி துர்லபம்। ௨।௰௫
பால்யாத் ப்ரப்ருதி யா ேதவ। த்வயி பக்திர் மமாச்யுத। ௨।௰௫௧
ேவத்தி தாம் பகவாந் ஏவ। ஹ்ருதிஸ்த: ஸர்வேதஹிநாம்। ௨।௰௫௧
த்வத்ப்ரஸாதாந் மேமஸாந। ராஜ்யம் அவ்யாஹதம் புவி। ௨।௰௫௨
ேகாஸதண்ெடௗ ததாதீவ। ஸரீராேராக்யம் உத்தமம்। ௨।௰௫௨
ஸ்த்ரிேயா அந்நபாநஸாமர்த்யா। ஹாநி: ஸ்வல்பாபி நாஸ்தி ேம।
௨।௰௫௩
பலம் நாகஸஹஸ்ரஸ்ய। தாரயாம்ய் அரிஸூதந। ௨।௰௫௩
ஸம்ததிர் நிப்ருதா ப்ருத்யா। ஸாநுராகாஸ் ச ேம ஜநா:। ௨।௰௫௪
தர்மஹாநிஸ் ச ேதேவஸ। ந ஹி ேம பாலேந புவ:। ௨।௰௫௪
யத் யத் இச்சாம்ய் அஹம் தத் தத்। ஸர்வம் அஸ்தி ஜகத்பேத।
௨।௰௫௫
ஏேதைநவாநுமாேநந। ப்ரஸந்ேநா பகவாந் இதி। ௨।௰௫௫

ஜ்ஞாதம் மயா ஹி ேகாவிந்ேத। நாப்ரஸந்ேந விபூதய:। ௨।௰௫௬
ஏவம் ஸர்வஸுகாஹ்லாத । மத்யஸ்ேதா அபி ச ேகஸவ। ௨।௰௫௬
புநராவ்ருத்திது:காநாம்। த்ராஸாத் உத்விக்நமாநஸ:। ௨।௰௫௭
மயி ப்ரஸாதாபிமுகம்। மநஸ் ேத யதி ேகஸவ। ௨।௰௫௭
தந் மாம் அகாேத ஸம்ஸாேர। மக்நம் உத்தர்தும் அர்ஹஸி। ௨।௰௫௭
ஸுகாநி தாநி ைநவாந்ேத। ேயஷாம் து:கம் ந தத் ஸுகம்। ௨।௰௫௮
யத் அந்ேத து:கம் ஆகாமி। கிம்பாகஸ்ையவ பக்ஷணம்। ௨।௰௫௮
ஸ ப்ரஸாதம் குரு குேரா। ஜகதாம் த்வம் ஜநார்தந। ௨।௰௫௯
ஜ்ஞாநதாேநந ேயேநமாம்। வாகுராந் நிஸ்தேரமஹி। ௨।௰௫௯
இத்ய் உக்தஸ் தஸ்ய ேகாவிந்த:। கதயாம் ஆஸ ேயாகவித்। ௨।௰௬
ேயாகம் நிர்பஜம்ீ அத்யந்த । து:கஸம்ேயாகேபஷஜம்। ௨।௰௬
உபதிஷ்ேட தேதா ேயாேக। ப்ரணிபத்யாச்யுதம் ந்ருப:। ௨।௰௬௧
புந: ப்ராஹ மஹாபாஹுர்। விநயாவநத: ஸ்தித:। ௨।௰௬௧
ேதவேதவ த்வயா ேயாேகா। ய: ப்ேராக்ேதா மதுஸூதந। ௨।௰௬௨
ைநஷ ப்ராப்ேயா மயா நாந்ையர்। மாநைவர் அஜிேதந்த்ரிைய:।
௨।௰௬௨
விஷயா துர்ஜயா: பும்பிர்। இந்த்ரியாகர்ஷிண: ஸதா। ௨।௰௬௩
இந்த்ரியாணாம் ஜயம் ேதஷு। க: ஸக்தாநாம் கரிஷ்யதி। ௨।௰௬௩
அஹம் மேமதி சாக்யாதி। துர்ஜயம் சஞ்சலம் மந:। ௨।௰௬௪
ராகாதய: கதம் ேஜதும்। ஸக்யா ஜந்மாந்தைரர் அபி। ௨।௰௬௪
ேஸா அஹம் இச்சாமி ேதேவஸ। த்வத்ப்ரஸாதாத் அநிர்ஜிைத:।
௨।௰௬௫

ராகாதிபிர் அமர்த்யத்வம்। ப்ராப்தும் ப்ரக்ஷீணகல்மஷ:। ௨।௰௬௫
யத்ய் ஏவம் முக்திகாமஸ் த்வம்। நரநாத ஸ்ருணுஷ்வ தத்। ௨।௰௬௬
க்ரியாேயாகம் ஸமஸ்தாநாம்। க்ேலஸாநாம் ஹாநிகாரகம்। ௨।௰௬௬
மந்மநா பவ மத்பக்ேதா। மத்யாஜீமாம் நமஸ்குரு। ௨।௰௬௭
மாம் ஏைவஷ்யஸி யுக்த்ைவவம்। ஆத்மாநம் மத்பராயண:। ௨।௰௬௭
மத்பாவநா மத்யஜநா। மத்பக்தா மத்பராயணா:। ௨।௰௬௮
மம பூஜாபராஸ் ைசவ। மயி யாந்தி லயம் நரா:। ௨।௰௬௮
ஸர்வபூேதஷு மாம் பஸ்ய। ஸமவஸ்திதம் ஈஸ்வரம்। ௨।௰௬௯
கர்தாஸி ேகந ைவரத்வம்। ஏவம் ேதாஷாந் ப்ரஹாஸ்யஸி। ௨।௰௬௯
ஜங்கமாஜங்கேம ஜ்ஞாேத। மய்ய் ஆத்மநி ததா தவ। ௨।௰௭
ராகேலாபாதிநாேஸந। பவித்ரீ க்ருதக்ருத்யதா। ௨।௰௭
பக்த்யாதிப்ரவணஸ்யாபி। சஞ்சலத்வாந் மேநா யதி। ௨।௰௭௧
மய்ய் அநாஸாதவத் பூப। குரு மத்ரூபிணம்ீ தநும்। ௨।௰௭௧
ஸுவர்ணரஜதாத்ையஸ் த்வம்। ைஸலம்ருத்தாருேலகஜாம்। ௨।௰௭௨
பூஜாமஹர்ைஹர் விவிைத:। ஸம்பூஜய ச பார்திவ। ௨।௰௭௨
தஸ்யாம் சித்தம் ஸமாேவஸ்ய। த்யாஜயாந்யாந் வ்யபாஸ்ரயாந்।
௨।௰௭௩
பூஜிதா ைஸவ ேத பக்த்யா। த்யாதா ைசேவாபகாரிண।ீ ௨।௰௭௩
கச்சம்ஸ் திஷ்டந் ஸ்வபந் புஞ்ஜம்ஸ்। தாம் ஏவாக்ேர ச ப்ருஷ்டத:।
௨।௰௭௪
உபர்ய் அதஸ் ததா பார்ஸ்ேவ। சிந்தயாந்தஸ் ததாத்மந:। ௨।௰௭௪
ஸ்நாைநஸ் தீர்ேதாதைகர் ஹ்ருத்ைய:। புஷ்பகந்தாநுேலபைந:।
௨।௰௭௫

வாேஸாபிர் பூஷைணர் பŠையர்। கீதவாத்ையர் மேநாஹைர:।
௨।௰௭௫
யச் ச யச் ச ந்ருேபஷ்டம் ேத। கிம்சித் ேபாஜ்யாதி ேதந தாம்। ௨।௰௭௬
பக்திநம்ேரா நரஸ்ேரஷ்ட। ப்ரீணயார்சாம் க்ருதாம் மம। ௨।௰௭௬
ராேகணாக்ருஷ்யேத ேசேதா। கந்தர்வாபிமுகம் யதி। ௨।௰௭௭
மயி புத்திம் ஸமாேவஸ்ய। காேயதா மம தாம் கதாம்। ௨।௰௭௭
கதாயாம் ரமேத ேசேதா। யதி தத்பாவநா மம। ௨।௰௭௮
ஸ்ேராதவ்யா ப்ரீதியுக்ேதந। அவதாேரஷு யா கதா। ௨।௰௭௮
ஏவம் மய்ய் அர்பிதமநாஸ்। ேசதேஸா ேய வ்யபாஸ்ரயா:। ௨।௰௭௯
ேஹயாஸ் தாந் அகிலாந் பூப। பரித்யŠயஸ்ய் அபர்ீ பவ। ௨।௰௭௯
அக்ஷீணராகேதாேஷா அபி। மத்க்ரியா பரம: பரம்। ௨।௰௮
பதம் ஆப்ஸ்யஸி மா ைபஸ் த்வம்। மய்ய் அர்பிதமநா பவ। ௨।௰௮
மயி ஸம்ந்யஸ்ய ஸர்வம் த்வம்। ஆத்மாநம் யத் தவாஸ்தி ச।
௨।௰௮௧
மதர்தம் குரு கர்மாணி। மா ச தர்மவ்யதிக்ரமம்। ௨।௰௮௧
ராஜ்யம் குரு நரஸ்ேரஷ்ட। நிேவத்ய ப்ருதிவம்ீ மம। ௨।௰௮௨
தத்வ்யாகாதபரா ேய ச। ஜஹி தாந் அவநீபேத। ௨।௰௮௨
ஏேதைநேவாபேதேஸந। வ்யாக்யாதம் அகிலம் தவ। ௨।௰௮௩
க்ரியாேயாகம் ஸமாஸ்தாய। மய்ய் அர்பிதமநா பவ। ௨।௰௮௩
மத்திதாய ஜகந்நாத। க்ரியாேயாகாஸ்ரிதம் மம। ௨।௰௮௪
விஸ்தேரேணதம் ஆக்யாஹி। ப்ரஸந்நஸ் த்வம் ஹி து:கஹா।
௨।௰௮௪

த்வாம் க்ருேதந ஹி ேநா வக்தும்। ஸமர்ேதா அந்ேயா ஜகத்குேரா।
௨।௰௮௫
குஹ்யம் ஏதத் பவித்ரம் ச। தத் ஆசŠய ப்ரஸதீ ேம। ௨।௰௮௫
ஆக்யாஸ்யத்ய் ஏதத் அகிலம்। வஸிஷ்டஸ் ேத புேராஹித:। ௨।௰௮௬
மத்ப்ரஸாதாத் அவிகலம்। ஸ ச ேவத்ஸ்யத்ய் அேஸஷத:। ௨।௰௮௬
இத்ய் உக்த்வாந்தர்தேத ேதவ:। ஸர்வேலாேகஸ்வேரா ஹரி:। ௨।௰௮௭
ஸ ச ராஜா வநாத் பூேயா। நிஜம் அப்யாகமத் புரம்। ௨।௰௮௭
ராஜ்யஸ்தஸ் து மஹீபால:। ப்ரணிபத்ய புேராஹிதம்। ௩।௰௰௧
வஸிஷ்டம் பரிபப்ரச்ச। விஷ்ேணார் ஆராதநம் ப்ரதி। ௩।௰௰௧
ேதவேதேவந பகவந்ந்। ஆதிஷ்ேடா அஸி மஹாத்மநா। ௩।௰௰௨
க்ரியாேயாகாஸ்ரிதம் ஸர்வம்। வ்யாக்யாஸ்யதி பவாந் கில। ௩।௰௰௨
ஸ த்வாம் ப்ருச்சாம்ய் அஹம் ஸர்வம்। க்ரியாேயாேகந ேகஸவம்।
௩।௰௰௩
ஸம்ேதாஷயிதும் ஈஸாநம்। யதா ஸŠயாமி தத் வத। ௩।௰௰௩
ேதவப்ரஸாதாத் அகிலா। மமாபி ஸ்ம்ருதிர் ஆகதா। ௩।௰௰௪
ஜ்ஞாநம் ஏதத் அேஸஷம் ேத। கதயாமி நிேபாத தத்। ௩।௰௰௪
பக்திமாந் அபவத் ைதத்ேயா। ஹிரண்யகஸிேபா: ஸுத:। ௩।௰௰௫
நாராயேண மஹாப்ரஜ்ஞ:। ஸர்வேலாகபராயேண। ௩।௰௰௫
ஸ பப்ரச்ச ப்ருகுஸ்ேரஷ்டம்। ஸுக்ரம் ஆத்மபுேராஹிதம்। ௩।௰௰௫
பகவந் ந்ருஸிம்ஹரூபஸ்ய। விஷ்ேணாஸ் தாதம் ஜிகாம்ஸத:।
௩।௰௰௬
த்ருஷ்டம் ேதேஹ மயா ஸர்வம்। த்ைரேலாக்யம் பூர்புவாதிகம்।
௩।௰௰௬

ப்ரஹ்மா ப்ரஜாபதிஸ் ேசந்த்ேரா। ருத்ைர: பஸுபதி: ஸஹ। ௩।௰௰௭
வஸேவா அஷ்ெடௗ ததாதித்யா। த்வாதஸாஹ:க்ஷபா மஹீ। ௩।௰௰௭
திேஸா நபஸ் தாரெகௗகம்। நக்ஷத்ரக்ரஹஸம்குலம்। ௩।௰௰௮
அஸ்விெநௗ மருத: ஸாத்யா। விஸ்ேவேதவாஸ் தத ர்ஷய:। ௩।௰௰௮
வர்ஷாசலாஸ் ததா நத்ய:। ஸப்த ஸப்த குலாசலா:। ௩।௰௰௯
ஸமுத்ரா: ஸப்த க்ருதவ:। காந்தாராணி வநாநி ச। ௩।௰௰௯
நகரக்ராமதருபி:। ஸமாேவதம் ச பூதலம்। ௩।௰௰௯
ஏதச் சாந்யச் ச யத் கிம்சித்। ேதவர்ஷிபித்ருமாநவம்। ௩।௰௧
ஸதிர்யகூர்த்வபாதாலம்। தஸ்ய த்ருஷ்டம் தெநௗ மயா। ௩।௰௧
ேஸா அஹம் தம் அஜரம் ேதவம்। துஷ்டைதத்யநிவர்ஹணம்। ௩।௰௧௧
ஆராதயிதும் இச்சாமி। பகவம்ஸ் த்வதநுஜ்ஞயா। ௩।௰௧௧
அநுக்ராஹ்ேயா அஸ்மி யதி ேத। மமாயம் பக்திமாந் இதி। ௩।௰௧௨
தந் மேமாபதிஸாத்ய த்வம்। மஹத் ஆராதநம் ஹேர:। ௩।௰௧௨
அநுக்ராஹ்ேயா அஸி ேதவஸ்ய। நூநம் அவ்யக்தஜந்மந:। ௩।௰௧௩
ஆராதநாய ைதத்ேயந்த்ர। யத் ேத தத்ப்ரவணம் மந:। ௩।௰௧௩
யதி ேதவபதிம் விஷ்ணும்। ஆராதயிதும் இச்சஸி। ௩।௰௧௪
பகவந்தம் அநாத்யந்தம்। பவ பாகவேதா அஸுர। ௩।௰௧௪
ந ஹ்ய் அபாகவைதர் விஷ்ணுர்। ஜ்ஞாதும் ஸ்ேதாதும் ச தத்த்வத:।
௩।௰௧௫
த்ரஷ்டும் வா ஸக்யேத மர்த்ைய:। ப்ரேவஷ்டும் குத ஏவ ஹி। ௩।௰௧௫
ஜந்மபிர் பஹுபி: பூதா। நராஸ் தத்கதேசதஸ:। ௩।௰௧௬
பவந்தி ைவ பாகவதாஸ்। ேத விஷ்ணும் ப்ரவிஸந்தி ச। ௩।௰௧௬
அேநகஜந்மஸம்ஸார । சிேத பாபஸமுச்சேய। ௩।௰௧

நாக்ஷீேண ஜாயேத பும்ஸாம்। ேகாவிந்தாபிமுகீமதி:। ௩।௰௧௭
ப்ரத்ேவஷம் யாதி ேகாவிந்ேத। த்விஜாந் ேவதாம்ஸ் ச நிந்ததி। ௩।௰௧௮
ேயா நரஸ் தம் விஜாநீயாத்। அஸுராம்ஸஸமுத்பவம்। ௩।௰௧௮
பாஷண்ேடஷு ரதி: பும்ஸாம்। ேஹதுவாதாநுகூலதா। ௩।௰௧௯
ஜாயேத விஷ்ணுமாயாம்ப: । பதிதாநாம் துராத்மநாம்। ௩।௰௧௯
யதா பாபக்ஷய: பும்ஸாம்। ததா ேவதத்விஜாதிஷு। ௩।௰௨
விஷ்ெணௗ ச யஜ்ஞபுருேஷ। ஸ்ரத்தா பவதி ேத யதா। ௩।௰௨
யதா ஸ்வல்பாவேஸஷஸ் து। நராணாம் பாபஸம்சய:। ௩।௰௨௧
பவந்தி ேத பாகவதாஸ்। ததா ைதத்யபேத நரா:। ௩।௰௨௧
ப்ராம்யதாம் அத்ர ஸம்ஸாேர। நராணாம் கர்மதுர்கேம। ௩।௰௨௨
ஹஸ்தாவலம்பேதா ஹ்ய் ஏேகா। பக்திப்ரீேதா ஜநார்தந:। ௩।௰௨௨
ஸ த்வம் பாகவேதா பூத்வா। ஸர்வபாபஹரம் ஹரிம்। ௩।௰௨௩
ஆராதய பரம் பக்த்யா। ப்ரீதிம் ஏஷ்யதி ேகஸவ:। ௩।௰௨௩
கிம்லக்ஷணா பாகவதா। பவந்தி புருஷா குேரா। ௩।௰௨௪
யச் ச பாகவைத: கார்யம்। தந் ேம கதய பார்கவ। ௩।௰௨௪
கர்மணா மநஸா வாசா। ப்ராணிநாம் ேயா ந ஹிம்ஸக:। ௩।௰௨௫
பாவபக்தஸ் ச ேகாவிந்ேத। ைதத்ய பாகவேதா ஹி ஸ:। ௩।௰௨௫
ேயா ப்ராஹ்மணாம்ஸ் ச ேவதாம்ஸ் ச। நித்யம் ஏந்வாநுமம்ஸ்யதி।
௩।௰௨௬
ந ச த்ேராக்தா பரம் வாேத। ைதத்ய பாகவேதா ஹி ஸ:। ௩।௰௨௬
ஸர்வாந் ேதவாந் ஹரிம் ேவத்தி। ஸர்வேலாகாம்ஸ் ச ேகஸவம்।
௩।௰௨௭

ேதப்யஸ் ச நாந்யம் ஆத்மாநம்। ைதத்ய பாகவேதா ஹி ஸ:। ௩।௰௨௭
ேதவம் மநுஷ்யம் அந்யம் வா। பஸுபக்ஷிபிபலிகாந் ீ । ௩।௰௨௮
தருபாஷாணகஷ்டாதி। பூம்யம்ேபாககநம் திஸ:। ௩।௰௨௮
ஆத்மாநம் வாபி ேதேவஸாந்। நாதிரிக்தம் ஜநார்தநாத்। ௩।௰௨௯
ேயா பேஜத விஜாநீஷ்வ। தம் ைவ பாகவதம் நரம்। ௩।௰௨௯
ஸர்வம் பகவேதா பாேவா। யத் பூதம் பவஸம்ஸ்திதம்। ௩।௰௩
இதி ேயா ைவ விஜாநாதி। ஸ து பாகவேதா நர:। ௩।௰௩
பவபதிம்ீ ஹரத்ய் ஏஷ। பக்திபாேவந பாவித:। ௩।௰௩௧
பகவாந் இதி பாேவா ய:। ஸ து பாகவேதா நர:। ௩।௰௩௧
பாவம் ந குருேத யஸ் து। ஸர்வபூேதஷு பாபகம்। ௩।௰௩௨
கர்மணா மநஸா வாசா। ஸ து பாகவேதா நர:। ௩।௰௩௨
பாஹ்யார்தநிரேபேக்ஷா ேயா। பக்ேதா பகவத: க்ரியாம்। ௩।௰௩௩
பாேவந நிஷ்பாதயதி। ஜ்ேஞேயா பாகவதஸ் து ஸ:। ௩।௰௩௩
நாரேயா யஸ்ய ந ஸ்நிக்தா। ந ேசாதாஸீ ந வ்ருத்தய:। ௩।௰௩௪
பஸ்யத: ஸர்வம் ஏேவதம்। விஷ்ணும் பாகவேதா ஹி ஸ:। ௩।௰௩௪
ஸுதப்ேதேநஹ தபஸா। யஜ்ைஞர் வா பஹுதக்ஷிைண:। ௩।௰௩௫
தாம் கதிம் ந நரா யாந்தி। யாம் ைவ பாகவதா கதா:। ௩।௰௩௫
ேயாகச்யுைதர் பாகவைதர்। ேதவராஜ: ஸதக்ரது:। ௩।௰௩௬
அர்வாங் நிரீŠயேத யஜ்ஞீ। கிமு ேய ேயாகபாரகா:। ௩।௰௩௬
யஜ்ஞநிஷ்பத்தேய ேவதா। யஜ்ேஞா யஜ்ஞபேத: க்ருேத। ௩।௰௩௭
தத்ேதாஷணாய பாேவந। தஸ்மாத் பாகவேதா பவ। ௩।௰௩௭
ேயந ஸர்வாத்மநா விஷ்ெணௗ। பக்த்யா பாேவா நிேவஸித:। ௩।௰௩௮

ைதத்ேயஸ்வர க்ருதார்தத்வாச்। ஸ்லாக்ேயா பாகவேதா ஹி ஸ:।
௩।௰௩௮
அபி ந: ஸ குேல தந்ேயா। ஜாயேத குலபாவந:। ௩।௰௩௯
பகவாந் பக்திபாேவந। ேயந விஷ்ணுர் உபாஸித:। ௩।௰௩௯
ய: காரயதி ேதவார்சாம்। ஹ்ருதயாலம்பநம் ஹேர:। ௩।௰௪
ஸ நேரா விஷ்ணுஸாேலாக்யம்। உைபதி தூதகல்மஷ:। ௩।௰௪
யஸ் ச ேதவாலயம் பக்த்யா। விஷ்ேணா: காரயதி ஸ்வயம்। ௩।௰௪௧
ஸ ஸப்தபுருஷாம்ல் ேலாகாந்। விஷ்ேணார் நயதி மாநவ:। ௩।௰௪௧
யாவந்த்ய் அப்தாநி ேதவார்சா। ஹேரஸ் திஷ்டதி மந்திேர। ௩।௰௪௨
தாவத்வர்ஷஸஹஸ்ராணி। விஷ்ணுேலாேக ஸ ேமாதேத। ௩।௰௪௨
ேதவார்சா லக்ஷேணாேபதா। தத்க்ருஹம் ஸததம் திவி। ௩।௰௪௩
நிஷ்காமம் ச மேநா யஸ்ய। ஸ யாத்ய் அக்ஷரஸாத்ம்யதாம்। ௩।௰௪௩
புஷ்பாண்ய் அதிஸுகந்தீநி। மேநாஜ்ஞாநி ச ய: புமாந்। ௩।௰௪௪
ப்ரயச்சதி ஹ்ருஷீேகேஸ। தத்பாவகதமாநஸ:। ௩।௰௪௪
தூபாம்ஸ் ச விவிதாம்ஸ் தாம்ஸ் தாந்। கந்தாட்யம் சாநுேலபநம்।
௩।௰௪௫
தீபாவல்யுபஹாராம்ஸ் ச। யச் சாபஷ்டம் ீ அதாத்மந:। ௩।௰௪௫
நர: ேஸா அநுதிநம் யஜ்ஞம்। கேராத்ய் ஆராதநம் ஹேர:। ௩।௰௪௬
யஜ்ேஞேஸா பகவாந் விஷ்ணுர்। மைகர் அபி ஹி ேதாஷ்யேத।
௩।௰௪௬
பஹூபகரணா யஜ்ஞா। நாநாஸம்பாரவிஸ்தரா:। ௩।௰௪௭
ப்ராப்யந்ேத ேத தநயுைதர்। மநுஷ்ையர் நால்பஸம்சைய:। ௩।௰௪௭
பக்த்யா ச புருைஷ: பூஜா। க்ருதா தூர்வாங்குைரர் அபி। ௩।௰௪௮

ஹேரர் ததாதி ஹி பலம்। ஸர்வயஜ்ைஞ: ஸுதுர்லபம்। ௩।௰௪௮
யாநி புஷ்பாணி ஹ்ருத்யாநி। தூபகந்தாநுேலபநம்। ௩।௰௪௯
தயிதம் பூஷணம் யச் ச। ேய ச ெகௗேஸயவாஸஸீ। ௩।௰௪௯
யாநி சாப்யவஹாராணி। பŠயாணி ச பலாநி ச। ௩।௰௫
ப்ரயச்ச தாநி ேகாவிந்ேத। பேவதாஸ் ைசவ தந்மநா:। ௩।௰௫
ஆத்யந்தம் யஜ்ஞபுருஷம்। யதாஸக்த்யா ப்ரஸாதய। ௩।௰௫௧
ஆராத்ய யாதி தம் ேதவம்। தஸ்மிந்ந் ஏவ நேரா லயம்। ௩।௰௫௧
புண்ையஸ் தீர்ேதாதைகர் கந்ைதர்। மதுநா ஸர்பிஷா ததா। ௩।௰௫௨
க்ஷீேரண ஸ்நாபேயத் ஈஸம்। அச்யுதம் ஜகத: பதிம்। ௩।௰௫௨
ததிக்ஷீரஹ்ரதாந் புண்யாம்ஸ்। தேதா ேலாகாந் மதுச்யுத:। ௩।௰௫௩
ப்ரயாஸ்யஸ்ய் அஸுரஸ்ேரஷ்ட। நிர்வ்ருதிம் சாபி ஸாஸ்வதீம்।
௩।௰௫௩
ஸ்ேதாத்ைரர் கீைதஸ் ததா வாத்ையர்। ப்ராஹ்மணாநாம் ச தர்பைண:।
௩।௰௫௪
மநஸஸ் ைசகதாேயாகாத்। ஆராதய ஜநார்தநம்। ௩।௰௫௪
ஆராத்ய தம் விேதஹாநாம்। புருஷா: ஸப்தஸப்ததி:। ௩।௰௫௫
ைஹஹயா: பஞ்சபஞ்சாஸத்। அம்ருதத்வம் உபாகதா:। ௩।௰௫௫
ஸ த்வம் ஏபி: ப்ரகாைரஸ் தம்। உபவாைஸஸ் ச ேகஸவம்। ௩।௰௫௬
ேதாஷயாத்ேயா ஹி துஷ்ேடா அெஸௗ। விஷ்ணுர் த்வந்த்வப்ரஸாந்தித:।
௩।௰௫௬
உபவாைஸர் ஹ்ருஷீேகஸ:। கதம் துஷ்யதி பார்கவ। ௪।௰௰௧
பரிஹாராம்ஸ் ததாசŠவ। ேய த்யாஜ்யாஸ் ேசாபவாஸிநாம்। ௪।௰௰௧
யத் யத் கார்யம் யதா ைசவ। ேகஸவாராதேந நைர:। ௪।௰௰௨

தத் ஸர்வம் விஸ்தராத் ப்ரஹ்மந்। யதாவத் வக்தும் அர்ஹஸி।
௪।௰௰௨
ஸ்ம்ருத: ஸம்பூஜிேதா தூப । புஷ்பாத்ையர் தயிைதர் ஹரி:। ௪।௰௰௩
ேபாகிநாம் உபகாராய। கிம் புநஸ் ேசாபவாஸிநாம்। ௪।௰௰௩
உபாவ்ருத்தஸ் து பாேபப்ேயா। யஸ் து வாேஸா குைண: ஸஹ।
௪।௰௰௪
உபவாஸ: ஸ விஜ்ேஞய:। ஸர்வேபாகவிவர்ஜித:। ௪।௰௰௪
ஏகராத்ரம் த்விராத்ரம் வா। த்ரிராத்ரம் அதவாபரம்। ௪।௰௰௫
உபவாஸீ ஹரிம் யஸ் து। பக்த்யா த்யாயதி மாநவ:। ௪।௰௰௫
தந்நாமஜாபீ தத்கர்ம । ரதிஸ் தத்கதமாநஸ:। ௪।௰௰௬
நிஷ்காேமா ைதத்ய ஸ ப்ரஹ்ம। பரம் ஆப்ேநாத்ய் அஸம்ஸயம்।
௪।௰௰௬
யம் ச காமம் அபித்யாயந்। ேகஸவார்பிதமாநஸ:। ௪।௰௰௭
உேபாஷ்யதி தம் ஆப்ேநாதி। ப்ரஸந்ேந கருடத்வேஜ। ௪।௰௰௭
கத்யேத ச புரா விப்ர:। புலஸ்த்ேயா ப்ரஹ்மவாதிநா। ௪।௰௰௮
தால்ப்ேயந ப்ருஷ்ேடா அகதயத்। யைததத் அரிஸூதந। ௪।௰௰௮
ப்ராஹ்மைண: க்ஷத்ரிையர் ைவஸ்ைய:। ஸூத்ைர: ஸ்த்ரீபிஸ் ததா முேந।
௪।௰௰௯
ஸம்ஸாரகர்தபங்கஸ்ைத:। ஸுகதி: ப்ராப்யேத கதம்। ௪।௰௰௯
அநாராத்ய ஜகந்நாதம்। ஸர்வதாதாரம் அச்யுதம்। ௪।௰௧
நிர்வ்யலீேகந சித்ேதந। க: ப்ரயாஸ்யதி ஸத்கதிம்। ௪।௰௧
விஷயக்ராஹி ைவ யஸ்ய। ந சித்தம் ேகஸவார்பிதம்। ௪।௰௧௧
ஸ கதம் பாபபங்காங்கீ। நேரா யாஸ்யதி ஸத்கதிம்। ௪।௰௧௧

யதி ஸம்ஸாரது:கார்த:। ஸுகதிம் கந்தும் இச்சஸி। ௪।௰௧௨
ததாராதய ஸர்ேவஸம்। ஜகத்தாதாரம் அச்யுதம்। ௪।௰௧௨
புஷ்ைப: ஸுகந்ைதர் ஹ்ருத்ையஸ் ச। தூைப: ஸாகருசந்தைந:।
௪।௰௧௩
வாேஸாபிர் பூஷைணர் பŠையர்। உபவாஸபராயண:। ௪।௰௧௩
யதி ஸம்ஸாரநிர்ேவதாத்। அபிவாஞ்சஸி ஸத்கதிம்। ௪।௰௧௪
ததாராதய ேகாவிந்தம்। யச் ேசஷ்டம் தவ ேசதஸி। ௪।௰௧௪
புஷ்பாணி யதி ேத ந ஸ்யு:। ஸஸ்தம் பாதபபல்லைவ:। ௪।௰௧௫
தூர்வாங்குைரர் அபி ப்ரஹ்மம்ஸ்। ததபாேவ அர்சயாச்யுதம்। ௪।௰௧௫
ஸுகந்திபுஷ்பதீபாத்ையர்। ய: குர்யாத் ேகஸவாலேய। ௰௰௪।௩
ஸர்வதீர்தபலம் தஸ்ய। ஸம்பேவத் ேகஸவார்சயா। ௰௰௪।௩
ஸபாஹ்யாப்யந்தரம் யஸ் து। மார்ஜேயத் அச்யுதாலயம்। ௰௰௪।௩
ஸபாஹ்யாப்யந்தரம் தஸ்ய। காேயா நிஷ்கல்மேஷா பேவத்। ௰௰௪।௩
புஷ்பபத்ராம்புபிர் தூைபர்। யதாவிபவம் அச்யுத:। ௪।௰௧௬
பூஜிதஸ் துஷ்டிம் அதுலாம்। பக்த்யாயாத்ய் ஏகேசதஸாம்। ௪।௰௧௬
ய: ஸதாயதேந விஷ்ேணா:। குருேத மார்ஜநக்ரியாம்। ௪।௰௧௭
ஸ பாம்ஸுபூேமர் ேதஹாச் ச। ஸர்வபாபம் வ்யேபாஹதி। ௪।௰௧௭
யாவந்த்ய: பாம்ஸுகணிகா। மார்ஜ்யந்ேத ேகஸவாலேய। ௪।௰௧௮
திநாநி திவி தாவந்தி। திஷ்டத்ய் அஸ்தமேலா நர:। ௪।௰௧௮
அஹந்ய் அஹநி யத் பாபம்। குருேத த்விஜஸத்தம। ௪।௰௧௯
ேகாசர்மமாத்ரம் ஸம்மார்ஜ்ய। ஹந்தி தத் ேகஸவாலேய। ௪।௰௧௯
யஸ் ேசாபேலபநம் குர்யாத்। விஷ்ேணார் ஆயதேந நர:। ௪।௰௨

ேஸா அபி ேலாகம் ஸமாஸாத்ய। ேமாதேத ச ஸதக்ரேதா:। ௪।௰௨
ம்ருதா தாதுவிகாைரர் வா। வர்ணைகர் ேகாமேயந வா। ௪।௰௨௧
உபேலபநக்ருத் யாதி। விமாநம் மணிசித்ரிதம்। ௪।௰௨௧
உதகாப்யுக்ஷணம் விஷ்ேணார்। ய: கேராதி ததா க்ருேஹ। ௪।௰௨௨
ேஸா அபி கச்சதி யத்ராஸ்ேத। பகவாந் யாதஸாம் பதி:। ௪।௰௨௨
புஷ்பப்ரகரம் அத்யர்தம்। ஸுகந்தம் ேகஸவாலேய। ௪।௰௨௩
உபலிப்ேத நேரா தத்த்வா। ந துர்கதிம் அவாப்நுயாத்। ௪।௰௨௩
விமாநம் அதிவித்ேயாதி। ஸர்வரத்நமயம் திவி। ௪।௰௨௪
ஸமாப்ேநாதி நேரா தத்த்வா। தீபகம் ேகஸவாலேய। ௪।௰௨௪
யஸ் து ஸம்வத்ஸரம் பூர்ணம்। திலபாத்ரப்ரேதா நர:। ௪।௰௨௫
த்வஜம் து விஷ்ணேவ தத்யாத்। ஸமம் ஏதத் பலம் த்விஜ। ௪।௰௨௫
விதுந்வந் ஹந்தி வாேதந। தாதுர் அஜ்ஞாநத: க்ருதம்। ௪।௰௨௬
பாபம் ேகதுர் க்ருேஹ விஷ்ேணார்। திவாராத்ரம் அஸம்ஸயம்।
௪।௰௨௬
கீதவாத்யாதிபிர் ேதவம்। ய உபாஸ்ேத ஜநார்தநம்। ௪।௰௨௭
காந்தர்ைவர் கீதந்ருத்ைய: ஸ। விமாநஸ்ேதா நிேஷவ்யேத। ௪।௰௨௭
ஜாதிஸ்மரத்வம் ேமதாம் ச। தைதேவாபரேம ஸ்ம்ருதிம்। ௪।௰௨௮
ப்ராப்ேநாதி விஷ்ண்வாயதேந। புண்யாக்யாநகதாகர:। ௪।௰௨௮
உேபாஷித: பூஜிேதா வா। த்ருஷ்ேடா வா நமிேதா அபி வா। ௰௰௪।௪
ப்ரதம்ப ஹரேத பாபம்। ேகா ந ேஸேவத் தரிம் தத:। ௰௰௪।௪
ேவதவாதக்ரியாயஜ்ஞ । ஸ்நாநதீர்தபலம் பரம்। ௰௰௪।௪
அஷ்டாங்கப்ரணிபாேதந। ப்ரணிபத்ய ஹரிம் லேபத்। ௰௰௪।௪
ப்ரகம்ய ஹ்ருதா ஸிரஸா। பாதபத்ேம மஹீதேல। ௰௰௪।௪

நிஷ்கல்மேஷா பேவத் ஸத்ேயா। ந நாடீ பாதபாம்ஸுநா। ௰௰௪।௪
ஏகஸ்ய க்ருஷ்ணஸ்ய க்ராஜத: ப்ரணாேமா। தஸாஸ்வேமதாவப்ருேதந
துல்ய:। ௰௰௪।௪
தஸாஸ்வேமைத: புநர் ஏதி ஜந்ம। க்ருஷ்ணப்ரணாமீந புநர்பவாய।
௰௰௪।௪
ஏவம் ேதேவஸ்வேரா பக்த்யா। ேயந விஷ்ணுர் உபாஸித:। ௪।௰௨௯
ஸ ப்ராப்ேநாதி கதிம் ஸ்லாக்யாம்। யாம் யாம் இச்சதி ேசதஸா।
௪।௰௨௯
ேதவத்வம் மநுைஜ: ைகஸ்சித்। கந்தர்வத்வம் ததாபைர:। ௪।௰௩
வித்யாதரத்வம் அபைரர்। ஆராத்யாப்தம் ஜநார்தநம்। ௪।௰௩
ஸக்ர: க்ரதுஸேதேநஸம்। ஆராத்ய கருடத்வஜம்। ௪।௰௩௧
ேதேவந்த்ரத்வம் கதஸ் தஸ்மாந்। நாந்ய: பூஜ்யதம: க்வசித்। ௪।௰௩௧
ேதேவப்ேயா அபி ஹி பூஜ்யஸ் து। ஸ்வகுருர் ப்ரஹ்மசாரிண:।
௪।௰௩௨
தஸ்யாபி யஜ்ஞபுருேஷா। விஷ்ணு: பூஜ்ேயா த்விேஜாத்தம। ௪।௰௩௨
ஸ்த்ரியஸ் ச பர்தாரம் க்ருேத। பூஜ்யம் அந்யந் ந ைதவதம்। ௪।௰௩௩
பர்துர் க்ருஹஸ்தஸ்ய ஸத:। பூஜ்ேயா யஜ்ஞபதிர் ஹரி:। ௪।௰௩௩
ைவகாநஸாநாம் ஆராத்யஸ்। தேபாபிர் மதுஸூதந:। ௪।௰௩௪
த்ேயய: பரிவ்ராஜகாநாம்। வாஸுேதேவா மஹாத்மநாம்। ௪।௰௩௪
ஏவம் ஸர்வாஸ்ரமாணாம் ஹி। வாஸுேதவ: பராயணம்। ௪।௰௩௫
ஸர்ேவஷாம் ைசவ வர்ணாநாம்। தம் ஆராத்யாப்நுயாத் கதிம்। ௪।௰௩௫
ஸ்ருணுஷ்வ கதத: காம்யாம்। உபவாஸாம்ஸ் ததாபராந்। ௪।௰௩௬
தத் தம் ஆஸ்ரித்ய யாந் காமாந்। குர்வேதப்ஸிதம் ீ ஆத்மந:। ௪।௰௩௬

ஏகாதஸ்யாம் ஸுக்லபேக்ஷ। பால்குேந மாஸி ேயா நர:। ௪।௰௩௭
ஜேபத் க்ருஷ்ேணதி ேதவஸ்ய। நாம பக்த்யா புந:புந:। ௪।௰௩௭
ேதவார்சேந சாஷ்டஸதம்। க்ருத்ைவதத் து ஜேபச் சுசி:। ௪।௰௩௮
ப்ராத: ப்ரஸ்தாநகாேல ச। உத்தாேந ஸ்கலிேத க்ஷுேத। ௪।௰௩௮
பாஷண்டபதிதாம்ஸ் ைசவ। தைதவாந்த்யாவஸாயிந:। ௪।௰௩௯
நாலேபத ததா க்ருஷ்ணம்। அர்சேயச் ச்ரத்தயாந்வித:। ௪।௰௩௯
இதம் ேசாதாஹேரத் க்ருஷ்ேண। மந: ஸம்தாய தத்பர:। ௪।௰௩௯
க்ருஷ்ண க்ருஷ்ண க்ருபாலுஸ் த்வம்। அகதீநாம் கதிர் பவ। ௪।௰௪
ஸம்ஸாராந்தர்நிமக்நாநாம்। ப்ரஸதீ மதுஸூதந। ௪।௰௪
ஏவம் ப்ரஸாத்ேயாபாவாஸம்। க்ருத்வா நியதமாநஸ:। ௪।௰௪௧
பூர்வாஹ்ந ஏவ சாந்ேயத்யுர்। கவ்யம் ஸம்ப்ராஸ்ய ைவ ஸக்ருத்।
௪।௰௪௧
ஸ்நாேதா அர்சயித்வா க்ருஷ்ேணதி। புநர் நாம ப்ரகீர்தேயத்। ௪।௰௪௧
வாரிதாராத்ரயம் ைசவ। விக்ஷிேபத் ேதவபாதேயா:। ௪।௰௪௨
ைசத்ரைவஸாகேயாஸ் ைசவ। தத்வஜ் ஜ்ேயஷ்ேட து பூஜேயத்।
௪।௰௪௨
மர்த்யேலாேக கதிம் ஸ்ேரஷ்டாம்। தால்ப்ய ப்ராப்ேநாதி ைவ நர:।
௪।௰௪௩
உத்க்ராந்திகாேல க்ருஷ்ணஸ்ய। ஸ்மரணம் ச ததாப்நுேத। ௪।௰௪௩
ஆஷாேட ஸ்ராவேண ைசவ। மாேஸ பாத்ரபேத ததா। ௪।௰௪௪
தைதவாஸ்வயுேஜ ேதவம்। அேநந விதிநா நர:। ௪।௰௪௪
உேபாஷ்ய ஸம்பூஜ்ய ததா। ேகஸேவதி ச கீர்தேயத்। ௪।௰௪௫
ேகாமூத்ரப்ராஸநாத் பூர்வம்। ஸ்வர்கேலாககதிம் வ்ரேஜத்। ௪।௰௪௫

ஆராதிதஸ்ய ஜகதாம்। ஈஸ்வரஸ்யாவ்யாயாத்மந:। ௪।௰௪௬
உத்க்ராந்திகாேல ஸ்மரணம்। ேகஸவஸ்ய ததாப்நுயாத்। ௪।௰௪௬
க்ஷீரஸ்ய ப்ராஸநம் யஸ் து। விதிம் ேசமம் யேதாதிதம்। ௪।௰௪௭
கார்த்திகாதி யதாந்யாயம்। குர்யாந் மாஸசதுஷ்டயம்। ௪।௰௪௭
ேதைநவ விதிநா ப்ரஹ்மந்। விஷ்ேணார் நாம ப்ரகீர்தேயத்। ௪।௰௪௮
ஸ யாதி விஷ்ணுஸாேலாக்யம்। விஷ்ணும் ஸ்மரதி ச க்ஷேய।
௪।௰௪௮
ப்ரதிமாஸம் த்விஜாதிப்ேயா। தத்யாத் தாநம் யேதச்சயா। ௪।௰௪௯
சாதுர்மாஸ்ேய ச ஸம்பூர்ேண। புண்யம் ஸ்ரவணகீர்தநம்। ௪।௰௪௯
கதாம் வா வாஸுேதவஸ்ய। தத்கீதீர் வாபி காரேயத்। ௪।௰௫
ஏவம் ஏதாம் கதிம் ஸ்ேரஷ்டாம்। ேதவநாமாநுகீர்தநாத்। ௪।௰௫
கதிதம் பாரணம் யத் ேத। கார்ஷ்ணம் மாஸசதுஷ்டயம்। ௪।௰௫௧
ஆதிபத்யம் ததா ேபாகாம்ஸ்। ேதந ப்ராப்ேநாதி மாநுஷாந்। ௪।௰௫௧
த்விதீேயந ததா ேபாகாந்। ஐந்த்ராந் ப்ராப்ேநாதி மாநவ:। ௪।௰௫௨
விஷ்ேணார் ேலாகம் த்ருதீேயந। பாரேணந ததாப்நுயாத்। ௪।௰௫௨
ஏவம் ஏதத் ஸமாக்யாதம்। கதிப்ராபகம் உத்தமம்। ௪।௰௫௩
விதாநம் த்விஜஸார்தூல। க்ருஷ்ணதுஷ்டிப்ரதம் ந்ருணாம்। ௪।௰௫௩
ஸுகதித்வாதஸம்ீ ஏதாம்। ஸ்ரத்ததாநஸ் து ேயா நர:। ௪।௰௫௪
உேபாஷ்ய ச ததா நாரீ। ப்ராப்ேநாதி த்ரிவிதாம் கதிம்। ௪।௰௫௪
ஏஷா தந்யா பாபஹரா। திதிர் நித்யம் உபாஸிதா। ௪।௰௫௫
ஆராதநாய ஸிஷ்ைடஷா। ேதவேதவஸ்ய சக்ரிண:। ௪।௰௫௫
பஞ்சதஸ்யாம் ச ஸுக்லஸ்ய। பால்குநஸ்ையவ ஸத்தம। ௫।௰௰

பாஷண்டபதிதாம்ஸ் ைசவ। தைதவாந்த்யாவஸாயிந:। ௫।௰௰௧
நாஸ்திகாந் பிந்நவ்ருத்தீம்ஸ் ச। பாபிநஸ் சாப்ய் அநாலபந்। ௫।௰௰௨
நாராயேண கதமநா:। புருேஷா நியேதந்த்ரிய:। ௫।௰௰௨
திஷ்டந் வ்ரஜந் ப்ரஸ்கலிேத। க்ஷுேத வாபி ஜநார்தநம்। ௫।௰௰௩
கீர்தேயத் தத்க்ரியாகாேல। ஸப்தக்ருத்வ: ப்ரகீர்தேயத்। ௫।௰௰௩
லŠம்யா ஸமந்விதம் ேதவம்। அர்சேயச் ச ஜநார்தநம்। ௫।௰௰௪
ஸம்த்யாவ்யுபரேம ேசந்து । ஸ்வரூபம் ஹரிம் ஈஸ்வரம்। ௫।௰௰௪
ராத்ரிம் ச லŠமீம் ஸம்சிந்த்ய। ஸம்யக் அர்க்ேயந பூஜேயத்।
௫।௰௰௫
நக்தம் ச புஞ்ஜதீ நரஸ்। ைதலக்ஷாரவிவர்ஜிதம்। ௫।௰௰௫
தைதவ ைசத்ரைவஸாக । ஜ்ேயஷ்ேடஷு முநிஸத்தம। ௫।௰௰௬
அர்சயதீ யதாப்ேராக்தம்। ப்ராப்ேத ப்ராப்ேத து தத்திேந। ௫।௰௰௬
நிஷ்பாதிதம் பேவத் ஏகம்। பாரணம் தால்ப்ய பக்தித:। ௫।௰௰௭
த்விதீயம் சாபி வŠயாமி। பாரணம் த்விஜஸத்தம। ௫।௰௰௭
ஆஷாேட ஸ்ராவேண மாஸி। ப்ராப்ேத பாத்ரபேத ததா। ௫।௰௰௮
தைதவாஸ்வயுேஜ அப்யர்ச்ய। ஸ்ரீதரம் ச ஸ்ரியா ஸஹ। ௫।௰௰௮
ஸம்யக் சந்த்ரமேஸ தத்த்வா। புஞ்ஜதார்க்யம் ீ யதாவிதி। ௫।௰௰௯
த்விதீயம் ஏதத் ஆக்யாதம்। த்ருதீயம் பாரணம் ஸ்ருணு। ௫।௰௰௯
கார்த்திகாதிஷு மாேஸஷு। தைதவாப்யர்ச்ய ேகஸவம்। ௫।௰௧
பூத்யா ஸமந்விதம் தத்யாச்। ஸஸாங்காயார்ஹநம் நிஸி। ௫।௰௧
புஞ்ஜதீ ச ததா ப்ேராக்தம்। த்ருதீயம் இதி பாரணம்। ௫।௰௧௧
ப்ரதிபூஜாஸு தத்யாச் ச। ப்ராஹ்மேணப்யஸ் ச தக்ஷிணாம்। ௫।௰௧௧
ப்ரதிமாஸம் ச வŠயாமி। ப்ராஸநம் காயேஸாதநம்। ௫।௰௧௨

சதுர: ப்ரதமாந் மாஸாந்। பஞ்சகவ்யம் உதாஹ்ருதம்। ௫।௰௧௨
குேஸாதகம் தைதவாந்யத்। உக்தம் மாஸசதுஷ்டயம்। ௫।௰௧௩
ஸூர்யாம்ஸுதப்தம் தத்வச் ச। ஜலம் மாஸசதுஷ்டயம்। ௫।௰௧௩
கீதவாத்யாதிகம் பாட்யம்। ததா க்ருஷ்ணஸ்ய வா கதாந்। ௫।௰௧௪
காரியதீ ச ேதவஸ்ய। பாரேண பாரேண கேத। ௫।௰௧௪
ஏவம் ஸம்பூஜ்ய விதிவத்। ஸபத்நீகம் ஜநார்தநம்। ௫।௰௧௫
நாப்ேநாதீஷ்தவிேயாகாதீந்। புமாந் ேயாஷித் அதாபி வா। ௫।௰௧௫
ஜநார்தநம் ஸலŠமீகம்। அர்சேயத் ப்ரதமம் தத:। ௫।௰௧௬
ஸஸ்ரீகம் ஸ்ரீதரம் பக்த்யா। த்ருதீேய பூதிேகஸெவௗ। ௫।௰௧௬
யாவந்த்ய் ஏதத்விதாேநந। பாரேணநார்சதி ப்ரபும்। ௫।௰௧௭
தாவந்தி ஜந்மாந்ய் அஸுகம்। நாப்ேநாதீஷ்டவிேயாகஜம்। ௫।௰௧௭
ேதவஸ்ய ச ப்ரஸாேதந। மரேண ப்ராப்ய தத்ஸ்ம்ருதிம்। ௰௰௫।௰௧௮௬
குேல ஸதாம் ஸ்பததேந ீ । ேபாகபுஜ் ஜாயேத நர:। ௫।௰௧௮
நாரிம் ப்ராப்ேநாதி ந வ்யாதிம்। நரகம் ச ந பஸ்யதி। ௰௰௫।௫
துர்கமம் யமமார்கம் ச। ேநக்ஷேத த்விஜஸத்தம। ௰௰௫।௫
ஸ்ேராதும் இச்சாம்ய் அஹம் தாத। யமமார்கம் ஸுதுர்கமம்। ௫।௰௧௯
யதா ஸுேகந ஸம்யாந்தி। மாநவாஸ் தத் வதஸ்வ ேம। ௫।௰௧௯
ப்ரதிமாஸம் து நாமாநி। க்ருஷ்ணஸ்ையதாநி த்வாதஸ। ௫।௰௨
க்ருேதாபவாஸ: ஸுஸ்நாத:। பூஜயித்வா ஜநார்தநம்। ௫।௰௨
உச்சாரயந் நேரா அப்ேயதி। ஸுஸுேகைநவ தத்பதம்। ௫।௰௨
தேதா விப்ராய ைவ தத்யாத்। உதகும்பம் ஸதக்ஷிணம்। ௫।௰௨௧
உபாநத்வஸ்த்ரயுக்மம் ச। சத்த்ரம் கநகம் ஏவ ச। ௫।௰௨௧

யத் ைவ மாஸகதம் நாம। தத்ப்ரீதிஸ் சாபி ஸம்வேதத்। ௫।௰௨௨
ஸம்வத்ஸராந்ேத அப்ய் அதவா। ப்ரதிமாஸம் த்விஜாந் புத:। ௫।௰௨௨
வாசேயத் உதகும்பாத்ையர்। தாைந: ஸர்வாந் அநுக்ரமாத்। ௫।௰௨௨
ேகஸவம் மார்கஸர்ேஷீ து। ெபௗேஷ நாராயணம் ததா। ௫।௰௨௩
மாதவம் மாகமாேஸ து। ேகாவிந்தம் பால்குேந ததா। ௫।௰௨௩
விஷ்ணும் ைசத்ேர அத ைவஸாேக। தைதவ மதுஸூதநம்। ௫।௰௨௪
ஜ்ேயஷ்ேட த்ரிவிக்ரமம் ேதவம்। ஆஷாேட வாமநம் ததா। ௫।௰௨௪
ஸ்ராவேண ஸ்ரீதரம் ைசவ। ஹ்ருஷீேகேஸதி சாபரம்। ௫।௰௨௫
நாம பாத்ரபேத மாஸி। கீயேத புண்யகாங்க்ஷிபி:। ௫।௰௨௫
பத்மநாபம் சாஸ்வயுேஜ। தாேமாதரம் அத: பரம்। ௫।௰௨௬
கார்த்திேக ேதவேதேவஸம்। ஸ்துவம்ஸ் தரதி துர்கதிம்। ௫।௰௨௬
இஹ ைவ ஸ்வஸ்ததாம் ப்ராப்ய। மரேண ஸ்மரணம் தத:। ௫।௰௨௭
யாம்யக்ேலஸம் அஸம்ப்ராப்ய। ஸ்வர்கேலாேக மஹீயேத। ௫।௰௨௭
தேதா மாநுஷ்யம் ஆஸாத்ய। நிராதங்ேகா கதஜ்வர:। ௫।௰௨௮
தநதாந்யவதி ஸ்பேதீ । ஜந்ம ஸாதுகுேல அர்ஹதி। ௫।௰௨௮
உபவாஸவ்ரதாநீஹ। ேகஸவாராதநம் ப்ரதி। ௬।௰௰௧
மமாசŠவ மஹாபாக। பரம் ெகௗதூஹலம் ஹி ேம। ௬।௰௰௧
காமாந் யாந் யாந் நேரா பக்ேதா। மநேஸச்சதி ேகஸவாத்। ௬।௰௰௨
வ்ரேதாபவாஸநாத் ப்ரீதஸ்। தாம்ஸ் தாந் விஷ்ணு: ப்ரயச்சதி।
௬।௰௰௨
ரத்நபர்வதம் ஆருஹ்ய। யதா ரத்நம் மஹாமுேந। ௬।௰௰௩
ஸத்த்வாநுரூபம் அதத்ேத। ததா க்ருத்ஸ்நாந் மேநாரதாந்। ௬।௰௰௩

மார்கஸர்ஷம் ீ து ேயா மாஸம்। ஏகபக்ேதந ய: க்ஷேபத்। ௬।௰௰௪
குர்வந் ைவ விஷ்ணுஸுஸ்ரூஷாம்। ஸ ேதேஸ ஜாயேத ஸுேப।
௬।௰௰௪
ெபௗஷமாஸம் ததா தால்ப்ய। ஏகபக்ேதந ய: க்ஷேபத்। ௬।௰௰௫
ஸுஸ்ரூஷணபர: ெஸௗேரர்। ந ேராகீஸ ச ஜாயேத। ௬।௰௰௫
மாகமாஸம் த்விஜஸ்ேரஷ்ட। ஏகபக்ேதந ய: க்ஷேபத்। ௬।௰௰௬
விஷ்ணுஸுஸ்ரூஷணபர:। ஸ குேல ஜாயேத ஸதாம்। ௬।௰௰௬
க்ஷபேயத் ஏகபக்ேதந। ஸுஸ்ரூஷுர் யஸ் ச பால்குநம்। ௬।௰௰௭
ெஸௗபாக்யம் ஸ்வஜநாநாம் ஸ। ஸர்ேவஷாம் ஏதி ேஸாந்நதிம்।
௬।௰௰௭
ைசத்ரம் விஷ்ணுபேரா மாஸம்। ஏகபக்ேதந ய: க்ஷேபத்। ௬।௰௰௮
ஸுவர்ணமணிமுக்தாட்யம்। ஸ கார்ஹஸ்த்யம் அவாப்நுயாத்।
௬।௰௰௮
ய: க்ஷேபத் ஏகபக்ேதந। ைவஸாகம் பூஜயந் ஹரிம்। ௬।௰௰௯
நேரா வா யதி வா நாரீ। ஜ்ஞாதீநாம் ஸ்ேரஷ்டதாம் வ்ரேஜத்। ௬।௰௰௯
க்ருஷ்ணார்பிதமநா ஜ்ேயஷ்டம்। ஏகபக்ேதந ய: க்ஷேபத்। ௬।௰௧
ஐஸ்வர்யம் அதுலம் ஸ்ேரஷ்டம்। புமாந் ஸ்த்ரீ வாபிஜாயேத। ௬।௰௧
ஆஷாடம் ஏகபக்ேதந। ேயா நேயத் விஷ்ணுதந்மநா:। ௬।௰௧௧
பஹுதாந்ேயா பஹுதேநா। பஹுபுத்ரஸ் ச ஜாயேத। ௬।௰௧௧
க்ஷபேயத் ஏகபக்ேதந। ஸ்ராவணம் விஷ்ணுதத்பர:। ௬।௰௧௨
தநதாந்யஹிரண்யாட்ேய। குேல ஸ ஜ்ஞாதிவர்தந:। ௬।௰௧௨
ஏகாஹாேரா பாத்ரபதம்। யஸ் ச க்ருஷ்ணபராயண:। ௬।௰௧௩
தநாட்யம் ஸ்பதம்ீ அசலம்। ஐஸ்வர்யம் ப்ரதிபத்யேத। ௬।௰௧௩

நயம்ஸ் சாஸ்வயுஜம் விஷ்ணும்। பூஜேயத் ஏகேபாஜந:। ௬।௰௧௪
தநவாந் வாஹநாட்யஸ் ச। பஹுபுத்ரஸ் ச ஜாயேத। ௬।௰௧௪
கார்த்திேக ைசகதா புங்க்ேத। யஸ் ச விஷ்ணுபேரா நர:। ௬।௰௧௫
ஸூரஸ் ச க்ருதவித்யஸ் ச। பஹுபுத்ரஸ் ச ஜாயேத। ௬।௰௧௫
யஸ் து ஸம்வத்ஸரம் பூர்ணம்। ஏகபக்ேதா பேவந் நர:। ௬।௰௧௬
அஹிம்ஸ: ஸர்வபூேதஷு। வாஸுேதவபராயண:। ௬।௰௧௬
நேமா அஸ்து வாஸுேதவாேயத்ய்। அஹஸ் சாஷ்டஸதம் ஜேபத்।
௬।௰௧௭
அதிராத்ரஸ்ய யஜ்ஞஸ்ய। தத: பலம் அவாப்நுயாத்। ௬।௰௧௭
தஸ வர்ஷஸஹஸ்ராணி। ஸ்வர்கேலாேக மஹீயேத। ௬।௰௧௮
தத்க்ஷயாத் இஹ சாகத்ய। மாஹாத்ம்யம் ப்ரதிபத்யேத। ௬।௰௧௮
ப்ராஹ்மண: க்ஷத்ரிேயா ைவஸ்ய:। ஸ்த்ரீ ஸூத்ேரா வா யேதாதிதாந்।
௬।௰௧௯
உபவாஸாந் இமாந் குர்வந்। பலாந்ய் ஏதாந்ய் அவாப்நுயாத்। ௬।௰௧௯
ஜகத்பதிம் ஜகத்ேயாநிம்। ஜகந்நிஷ்டம் ஜகத்குரும்। ௬।௰௨
ஜயம் ஸரணம் அப்ேயத்ய। ந ஜைந: ேஸாச்யேத ஜந:। ௬।௰௨
யஸ்ய நாம்நி ஸ்ம்ருேத மர்த்ய:। ஸமுத்க்ராந்ேதர் அநந்தரம்। ௬।௰௨௧
ப்ராப்ேநாதி ஸாஸ்வதம் ஸ்தாநம்। தத: பூஜ்யதேரா ஹி ஸ:। ௬।௰௨௧
நாதிர் ந மத்யம் ைநவாந்ேதா। யஸ்ய ேதவஸ்ய வித்யேத। ௬।௰௨௨
அநாதித்வாத் அமத்யத்வாத்। அநந்தத்வாச் ச ேஸா அவ்யய:। ௬।௰௨௨
பராபரம் ஸுக்ருதவதாம் பராம் கதிம்। ஸ்வயம்புவம் ப்ரபவந் நிதாநம்
அவ்யயம்। ௬।௰௨௩

ஸநாதநம் யத் அம்ருதம் அச்யுதம் த்ருவம்। ப்ரவிஸ்ய தம் ஹரிம் அமரத்வம்
அஸ்நுேத। ௬।௰௨௩
ஸ்ருணு தால்ப்ய பரம் காம்யம்। வ்ரதம் ஸம்ததிதம் ந்ருணாம்।
௭।௰௰௧
யம் உேபாஷ்ய ந விச்ேசத:। பித்ருபிண்டஸ்ய ஜாயேத। ௭।௰௰௧
க்ருஷ்ணாஷ்டம்யாம் ைசத்ரமாேஸ। ஸ்நாேதா நியதமாநஸ:। ௭।௰௰௨
க்ருஷ்ணம் அப்யர்ச்ய பூஜாம் ச। ேதவக்யா: குருேத து ய:। ௭।௰௰௨
நிராஹாேரா ஜபந் நாம। க்ருஷ்ணஸ்ய ஜகத: பேத:। ௭।௰௰௩
உபவிஷ்ேடா ஜபஸ்நாந । க்ஷுதப்ரஸ்கலிதாதிஷு। ௭।௰௰௩
பூஜாயாம் சாபி க்ருஷ்ணஸ்ய। ஸப்த வாராந் ப்ரகீர்தேயத்। ௭।௰௰௪
பாஷண்டிேநா விகர்மஸ்தாந்। நாலேபச் ைசவ நாஸ்திகாந்। ௭।௰௰௪
ப்ரபாேத து புந: ஸ்நாேதா। தத்த்வா விப்ராய தக்ஷிணாம்। ௭।௰௰௫
புஞ்ஜதீ க்ருதபூஜஸ் து। க்ருஷ்ணஸ்ையவ ஜகத்பேத:। ௭।௰௰௫
ைவஸாகஜ்ேயஷ்டேயாஸ் ைசவ। பாரணம் ஹி த்ரிமாஸிகம்।
௭।௰௰௬
உேபாஷ்ய ேதவேதேவஸம்। க்ருேதந ஸ்நாபேயத் தரிம்। ௭।௰௰௬
ஆஷாேட ஸ்ராவேண ைசவ। மாேஸ பாத்ரபேத ததா। ௭।௰௰௭
உேபாஷிேத த்விதீயம் ைவ। பாரணம் பூர்வவத் து தத்। ௭।௰௰௭
தைதவாஸ்வயுஜம் சாதிம்। க்ருத்வா மாஸத்ரயம் புத:। ௭।௰௰௮
உேபாஷ்ய ஸ்நாபேயத் ேதவம்। ஹவிஷா பாரேண கேத। ௭।௰௰௮
ெபௗேஷ மாேக பால்குேந ச। நரஸ் தத்வத் உேபாஷித:। ௭।௰௰௯
சதுர்ேத பாரேண பூர்ேண। க்ருேதந ஸ்நாபேயத் தரிம்। ௭।௰௰௯
ஏவம் க்ருேதாபவாஸஸ்ய। புருஷஸ்ய ததா ஸ்த்ரிய:। ௭।௰௧

ந ஸம்தேத: பரிச்ேசத:। கதாசித் அபிஜாயேத। ௭।௰௧
க்ருஷ்ணாஷ்டமீம் இமாம் யஸ் து। நேரா ேயாஷித் அதாபி வா।
௭।௰௧௧
உேபாஷ்யதீஹ ஸாஹ்லாதம்। ந்ருேலாேக ப்ராப்ய நிர்வ்ருத்திம்।
௭।௰௧௧
புத்ரெபௗத்ரஸம்ருத்திம் ச। ம்ருத: ஸ்வர்ேக மஹீயேத। ௭।௰௧௨
இத்ய் ஏதத் கதிதம் தால்ப்ய। மயா க்ருஷ்ணாஷ்டம்ஈவ்ரதம்। ௭।௰௧௨
ப்ராவ்ருட்காேல து நியமாஞ்। ஸ்ருணு காம்யாந் இமாந் மம। ௭।௰௧௩
ப்ராவ்ருட்காேல யதா ேஸேத। வாஸுேதவ: பேயாநிெதௗ। ௭।௰௧௪
ேபாகிேபாேக நிஜாம் மாயாம்। ேயாகநித்ராம் ச மாநயந்। ௭।௰௧௪
விஸிஷ்டா ந ப்ரவர்தந்ேத। ததா யஜ்ஞாதிகா: க்ரியா:। ௭।௰௧௫
ேதவாநாம் ஸா பேவத் ராத்ரிர்। தக்ஷிணாயநஸம்ஜ்ஞிதா। ௭।௰௧௫
யதா ஸ்வபிதி ேகாவிந்ேதா। யஸ் து மாஸம் சதுஷ்டயம்। ௭।௰௧௬
அத:ஸாயீ ப்ரஹ்மசாரீ। ேகஸவார்பிதமாநஸ:। ௭।௰௧௬
நேமா நேமா அஸ்து க்ருஷ்ணாய। ேகஸவாய நேமா நம:। ௭।௰௧௭
நேமா அஸ்து நரஸிம்ஹாய। விஷ்ணேவ ச நேமா நம:। ௭।௰௧௭
இதி ப்ராதஸ் ததா ஸாயம்। ஜேபத் ேதவக்ரியாபர:। ௭।௰௧௮
ஸமயத்ய் அதிதுஷ்பாரம்। துரிதம் ஜந்மஸம்சிதம்। ௭।௰௧௮
மது மாம்ஸம் ச ேயா மாஸாஞ்। சதுரஸ் தாந் நிரஸ்யதி। ௭।௰௧௯
ேதவக்ரியாரதிர் விஷ்ேணார்। அநுஸ்மரணதத்பர:। ௭।௰௧௯
ேஸா அபி ஸ்வர்கம் ஸமப்ேயதி। ச்யுதஸ் தஸ்மாத் து ஜாயேத।
௭।௰௨
அேராகீ தநதாந்யாட்ய:। குலஸம்ததிமாந் நர:। ௭।௰௨

ஸமஸ்தமந்திராணாம் ச। ய: ஸுப்ேத மதுஸூதேந। ௭।௰௨௧
நிர்வ்ருத்திம் குருேத ேஸா அபி। ேதேவா ைவமாநிேகா பேவத்।
௭।௰௨௧
அேநைநவ விதாேநந। நேரா விஷ்ணுக்ரியாபர:। ௭।௰௨௨
ஏகாஹாேரா பேவத் யஸ் து। ஸர்வபாைப: ப்ரமுச்யேத। ௭।௰௨௨
ஸுப்ேத ச ஸர்வேலாேகேஸ। நக்தேபாஜீபேவத் து ய:। ௭।௰௨௩
ஸர்வபாபவிநிர்முக்த:। ஸ்வர்கேலாேக அமேரா பேவத்। ௭।௰௨௩
ஸஸ்தம் த்வ் அநந்தரம் பும்ஸாம்। ததஸ் ைசேவகேபாஜநம்। ௭।௰௨௪
நக்தேபாஜநதுல்யம் து। ேநாபவாஸபலம் க்வசித்। ௭।௰௨௪
ைதலாபங்கம் ச ேயா மாஸாம்ஸ்। சதுரஸ் தாந் நிரஸ்யதி। ௭।௰௨௫
ேஸா அப்ய் அங்கலாவண்யகுணம்। ஆேராக்யம் ச நேரா லேபத்।
௭।௰௨௫
யஸ் த்வ் ஏதாநி ஸமஸ்தாநி। மாஸாந் ஏதாந் நரஸ் சேரத்। ௭।௰௨௬
ஸ விஷ்ணுேலாகம் ஆஸாத்ய। விஷ்ேணார் அநுசேரா பேவத்।
௭।௰௨௬
சதுர்பி: பாரணம் மாைஸர்। நிஷ்பாத்யம் ஹரிதத்பைர:। ௭।௰௨௭
ப்ராஹ்மணாந் ேபாஜேயத் தத்யாத்। ததஸ் ேதப்யஸ் ச தக்ஷிணாம்।
௭।௰௨௭
பூஜேயச் ச ஜகந்நாதம்। ஸர்வபாபஹரம் ஹரிம்। ௭।௰௨௮
ப்ரீயஸ்வ ேதவ ேகாவிந்ேதத்ய்। ஏவம் ைசவ ப்ரஸாதேயத்। ௭।௰௨௮
இதி தால்ப்ய ஸமாக்யாதம்। சாதுர்மாஸ்ேய ஹி யத் வ்ரதம்। ௭।௰௨௯
ேதவேதவஸ்ய ஸுப்தஸ்ய। த்வாதஸம்ீ ஸ்ருணு சாபராம்। ௭।௰௨௯
யஸ்யாம் அநந்தஸ்மரணாத்। அநந்தபலபாக் பேவத்। ௭।௰௨௯

மாஸி ப்ேராஷ்டபேத ஸுக்ேல। த்வாதஸ்யாம் ஜலஸாயிநம்। ௮।௰௰௧
ப்ரணம்யாநந்தம் அப்யர்ச்ய। புஷ்பதூபாதிபி: ஸுசி:। ௮।௰௰௧
பாஷண்டாதிபிர் ஆலாபம்। அகுர்வந் நியதாத்மவாந்। ௮।௰௰௨
விப்ராய தக்ஷிணாம் தத்த்வா। நக்தம் புங்க்ேத து ேயா நர:। ௮।௰௰௨
திஷ்டந் வ்ரஜந் ஸ்வபம்ஸ் ைசவ। க்ஷுதப்ரஸ்கலிதாதிஷு। ௮।௰௰௩
அநந்தநாமஸ்மரணம்। குர்வந்ந் உச்சாரணம் ததா। ௮।௰௰௩
அேநைநவ விதாேநந। மாஸாந் த்வாதஸ ைவ க்ரமாத்। ௮।௰௰௪
உேபாஷ்ய பாரேண பூர்ேண। ஸமப்யர்ச்ய ஜகத்குரும்। ௮।௰௰௪
கீதவாத்ேயந ஹ்ருத்ேயந। ப்ரீணயந் வ்யுஷ்டிம் அஸ்நுேத। ௮।௰௰௪
அநந்தம் கீதவாத்ேயந। யத: பலம் உதாஹ்ருதம்। ௮।௰௰௫
ேதநாநந்தம் ஸமப்யர்ச்ய। தத் ஏவ லபேத பலம்। ௮।௰௰௫
ஏவம் ய: புருஷ: குர்யாத்। அநந்தாராதநம் ஸுசி:। ௮।௰௰௬
நாரீ வா ஸ்வர்கம் அப்ேயத்ய। ேஸா அநந்தபலம் அஸ்நுேத। ௮।௰௰௬
ஏவம் தால்ப்ய ஹ்ருஷீேகேஸா। நைரர் பக்த்யா யதாவிதி। ௮।௰௰௭
பலம் ததாத்ய் அஸுலபம்। ஸலிேலநாபி பூஜித:। ௮।௰௰௭
ந விஷ்ணுர் வித்ததாேநந। புஷ்ைபர் வா ந பைலஸ் ததா। ௮।௰௰௮
ஆராத்யேத ஸுஸுத்ேதந। ஹ்ருதேயைநவ ேகவலம்। ௮।௰௰௮
ராகாத்யேபதம் ஹ்ருதயம்। வாக் துஷ்டா நாந்ருதாதிநா। ௮।௰௰௯
ஹிம்ஸாதிரஹித: காய:। ேகஸவாராதநத்ரயம்। ௮।௰௰௯
ராகாதிதூஷிேத சித்ேத। நாஸ்பதீமதுஸூதந:। ௮।௰௧
கேராதி ந ரதிம் ஹம்ஸ:। கதாசித் கர்தமாம்பஸி। ௮।௰௧
ந ேயாக்யா ேகஸவஸ்துத்ைய। வாக் துஷ்டா சாந்ருதாதிநா। ௮।௰௧௧

தமேஸா நாஸநாயாலம்। ேநந்ேதார் ேலகா கநாவ்ருதா। ௮।௰௧௧
ஹிம்ஸாதிதூஷித: காய:। ேகஸவாராதேந குத:। ௮।௰௧௨
ஜநசித்தப்ரஸாதாய। ந நபஸ் திமிராவ்ருதம்। ௮।௰௧௨
தஸ்மாச் ச்ரத்தஸ்வ பாேவந। ஸத்யபாேவந ச த்விஜ। ௮।௰௧௩
அஹிம்ஸேகந ேகாவிந்ேதா। நிஸர்காத் ஏவ ேதாஷித:। ௮।௰௧௩
ஸர்வஸ்வம் அபி க்ருஷ்ணாய। ேயா தத்யாத் குடிலாஸய:। ௮।௰௧௪
ஸ ைநவாராதயத்ய் ஏநம்। ஸத்பாேவநார்சயாச்யுதம்। ௮।௰௧௪
ராகாத்யேபதம் ஹ்ருதயம்। குரு த்வம் ேகஸவார்பிதம்। ௮।௰௧௫
தத: ப்ராப்ஸ்யஸி து:ப்ராப்யம்। அயத்ேநைநவ ேகஸவம்। ௮।௰௧௫
பகவந் கதித: ஸம்யக்। காம்ேயா அயம் ேகஸவம் ப்ரதி। ௮।௰௧௬
ஆராதநவிதி: ஸர்ேவா। பூய: ப்ருச்சாமி தத் வத। ௮।௰௧௬
குேல ஜந்ம ததாேராக்யம்। தநர்த்திஸ் ேசஹ துர்லபா। ௮।௰௧௭
த்ரிதயம் ப்ராப்யேத ேயந। தந் ேம வத மஹாமுேந। ௮।௰௧௭
மாதாமஹம் காண்வம் உதாரவர்யம் ீ । மஹர்ஷிம் அப்யர்ச்ய குலப்ரஸூதிம்।
௮।௰௧௮
பப்ரச்ச பும்ஸாம் அத ேயாஷிதாம் ச। துஷ்வந்தபுத்ேரா பரத: ப்ரணம்ய।
௮।௰௧௮
யதாவத் ஆசஷ்ட தேதா மஹாத்மா। ஸ ராஜவர்யாய யதா குேலஷு।
௮।௰௧௯
ப்ரயாந்தி ஸூதிம் புருஷா: ஸ்த்ரியஸ் ச। யதா ச ஸம்யக் ஸுகிேநா பவந்தி।
௮।௰௧௯
ெபௗேஷ ஸிேத த்வாதஸேம அஹ்நி ஸார்ேக। ததார்க்ஷேயாேக ஜகத:
ப்ரஸூதிம்। ௮।௰௨

ஸம்பூஜ்ய விஷ்ணும் விதிேநாபவாஸீ। ஸ்ரக்கந்ததூபாந்நவேராபஹாைர:।
௮।௰௨
க்ருஹ்ணதீ மாஸம் ப்ரதிமாஸபூஜாம்। தாநாதியுக்தம் வ்ரதம் அப்தம் ஏகம்।
௮।௰௨௧
தத்யாச் ச தாநம் த்விஜபுங்கேவப்யஸ்। தத் உச்யமாநம் விநிேபாத பூப।
௮।௰௨௧
க்ருதம் திலாந் வ்ரீஹியவம் ஹிரண்யம்। யவாந்நம் அம்ப:கரகாந்நபாநம்।
௮।௰௨௨
சத்த்ரம் பேயா அந்நம் குடபாணிதாட்யம்। ஸ்ரக்சந்தநம் வஸ்த்ரம்
அநுக்ரேமண। ௮।௰௨௨
மாேஸ ச மாேஸ விதிேநாதிேதந। தஸ்யாம் திெதௗ ேலாககுரும் ப்ரபூஜ்ய।
௮।௰௨௩
அஸ்நீத யாந்ய் ஆத்மவிஸுத்திேஹேதா:। ஸம்ப்ராஸநாநீஹ நிேபாத தாநி।
௮।௰௨௩
ேகாமூத்ரம் அம்ேபா க்ருதம் ஆமஸாகம்। தூர்வா ததி வ்ரீஹியவாம்ஸ்
திலாம்ஸ் ச। ௮।௰௨௪
ஸூர்யாம்ஸுதப்தம் ஜலம் அம்பு தார்பம்। க்ஷரம்ீ ச
மாஸக்ரமேஸாபயுஞ்ஜ்யாத்। ௮।௰௨௪
குேல ப்ரதாேந தநதாந்யபூர்ேண। விேவகவத்ய் அஸ்தஸமஸ்தது:ேக।
௮।௰௨௫
ப்ராப்ேநாதி ஜந்மாவிகேலந்த்ரியஸ் ச। பவத்ய் அேராேகா மதிமாந் ஸுகீ ச।
௮।௰௨௫
தஸ்மாத் த்வம் அப்ய் ஏதத் அேமாகவித் ேயா। நாராயணாராதநம் அப்ரமத்த:।
௮।௰௨௬

குருஷ்வ விஷ்ணும் பகவந்தம் ஈஸம்। ஆராத்ய காமாந் அகிலாந் உைபதி।
௮।௰௨௬
யதா ச ஸுக்லத்வாதஸ்யாம்। நக்ஷத்ரம் ஸ்ரவணம் பேவத்। ௯।௰௰௧
ததா ஸா து மஹாபுண்யா। த்வாதஸீ விஜயா ஸ்ம்ருதா। ௯।௰௰௧
தஸ்யாம் ஸ்நாத: ஸர்வதீர்ைத:। ஸ்நாேதா பவதி மாநவ:। ௯।௰௰௨
ஸம்பூஜ்ய வர்ஷபூஜாயா:। ஸகலம் பலம் அஸ்நுேத। ௯।௰௰௨
ஏகம் ஜப்த்வா ஸஹஸ்ரஸ்ய। ஜப்தஸ்யாப்ேநாதி யத் பலம்। ௯।௰௰௩
தாநம் ஸஹஸ்ரகுணிதம்। ததா ைவ விப்ர ேபாஜநம்। ௯।௰௰௩
யத் ேக்ஷமம் அபி ைவ தஸ்யாம்। ஸஹஸ்ரம் ஸ்ராவேண து தத்।
௰௰௯।௭
அந்யஸ்யாம் ஏவ தித்யாம்। ஸுபாயாம் ஸ்ராவணம் யதா। ௰௰௯।௭
ேஹாமஸ் தேதாபவாஸஸ் ச। ஸஹஸ்ராக்யபலப்ரத:। ௯।௰௰௩
ேராஹிண்யாஸ் ச யதா க்ருஷ்ண । பேக்ஷ அஷ்டம்யாம் த்விேஜாத்தம।
௧௰।௰௰௧
ஜயந்தீநாம ஸா ப்ேராக்தா। ஸர்வபாபஹரா திதி:। ௧௰।௰௰௧
யத் பால்ேய யச் ச ெகௗமாேர। ெயௗவேந வார்த்திேக ச யத்।
௧௰।௰௰௨
ஸப்தஜந்மக்ருதம் பாபம்। ஸ்வல்பம் வா யதி வா பஹு। ௧௰।௰௰௨
தத் க்ஷாலயதி ேகாவிந்தம்। தஸ்யாம் அப்யர்ச்ய பக்தித:। ௧௰।௰௰௩
ேஹாமஜப்யாதிதாநாநாம்। பலம் ச ஸதஸம்மிதம்। ௧௰।௰௰௩
ஸம்ப்ராப்ேநாதி ந ஸம்ேதேஹா। யச் சாந்யந் மநேஸச்சதி। ௧௰।௰௰௪
உபவாஸஸ் ச தத்ேராக்ேதா। மஹாபாதகநாஸந:। ௧௰।௰௰௪
ஏகதஸ்யாம் ஸுக்லபேக்ஷ। யதா ர்க்ஷம் ைவ புநர்வஸு:। ௧௧।௰௰௧

நாம்நா ஸாதிஜயாக்யாதா। திதீநாம் உத்தமா திதி:। ௧௧।௰௰௧
ேயா ததாதி திலப்ரஸ்தம்। த்ருஷ்காலம் வத்ஸரம் நர:। ௧௧।௰௰௨
உபவாஸம் ச தஸ்யாம் ய:। கேராத்ய் ஏதத் ஸமம் ஸ்ம்ருதம்।
௧௧।௰௰௨
தஸ்யாம் ஜகத்பதிர் ேதவ:। ஸர்வ: ஸர்ேவஸ்வேரா ஹரி:। ௧௧।௰௰௩
ப்ரத்யக்ஷதாம் ப்ரயாத்ய் அல்பம்। ததாநந்தபலம் ஸ்ம்ருதம்। ௧௧।௰௰௩
ஸகேரண ககுத்ஸ்ேதந। தும்துமாேரண காதிநா। ௧௧।௰௰௪
தஸ்யாம் ஆராதித: க்ருஷ்ேணா। தத்தவாந் நிகிலாம் புவம்। ௧௧।௰௰௪
அயேந ேசாத்தேர ப்ராப்ேத। ய: ஸ்நாபயதி ேகஸவம்। ௧௨।௰௰௧
க்ருதப்ரஸ்ேதந பாபம் ஸ:। ஸகலம் ைவ வ்யேபாஹதி। ௧௨।௰௰௧
கபிலாம் விப்ரமுக்யாய। ததாத்ய் அநுதிநம் ஹி ய:। ௧௨।௰௰௨
க்ருதஸ்நாநம் ச ேதவஸ்ய। தஸ்மிந் காேல ஸமம் ஹி தத்। ௧௨।௰௰௨
ஸ்நாப்யமாநம் ச பஸ்யதி। ேய க்ருேதேநாத்தராயேண। ௧௨।௰௰௩
ேத யாந்தி விஷ்ணுஸாேலாக்யம்। ஸர்வபாபவிவர்ஜிதா:।
௰௧௨।௰௰௩௰௧௩।௮
ைமத்ேரயீ ப்ராஹ்மணீபூர்வம்। யாஜ்ஞவல்க்யம் அப்ருச்சத। ௧௩।௰௰௧
ப்ரணிபத்ய மஹாபாகம்। ேயாேகஸ்வரம் அகல்மஷம்। ௧௩।௰௰௧
பாபப்ரஸமநாயாலம்। யத் புண்யஸ்ேயாபவ்ரும்ஹகம்। ௧௩।௰௰௨
மேநாரதப்ரதம் யச் ச। தத் வ்ரதம் கத்யதாம் மம। ௧௩।௰௰௨
காநி தாநாநி ஸஸ்தாநி। ஸ்நாநாநி ச யதவ்ரத। ௧௩।௰௰௩
ப்ரஸஸ்தாஸ் திதய: காஸ் ச। ப்ராஸநாநி ச ஸம்ஸ ேம। ௧௩।௰௰௩
ஸர்வதாநாநி ஸஸ்தாநி। யாந்ய் உத்திஸ்ய ஜநார்தநம்। ௧௩।௰௰௪
தீயந்ேத விப்ரமுக்ேயப்ய:। ஸ்ரத்தாபூேதந ேசதஸா। ௧௩।௰௰௪

தா ஏவ திதய: ஸஸ்தா। யாஸ்வ் அப்யர்ச்ய ஜநார்தநம்। ௧௩।௰௰௫
க்ரியந்ேத ஸ்ரதயா ஸம்யக்। உபவாஸவ்ரதா: ஸதா। ௧௩।௰௰௫
ப்ராப்யேத விவிைதர் யஜ்ைஞர்। யத் பலம் ஸாத்வஸாதுபி:। ௧௩।௰௰௬
உபவாைஸஸ் தத் ஆப்ேநாதி। ஸமப்யர்ச்ய ஜநார்தநம்। ௧௩।௰௰௬
மேநாரதாநாம் ஸம்ப்ராப்தி । காரகம் பாபநாஸநம்। ௧௩।௰௰௭
ஸ்ரூயதாம் மம தர்மஜ்ேஞ। வ்ரதாநாம் உத்தமம் வ்ரதம்। ௧௩।௰௰௭
யத் க்ருத்வா ந ஜேடா நாந்ேதா। பதிேரா ந ச து:கித:। ௧௩।௰௰௮
ந ைசேவஷ்டவிேயாகார்திம்। கஸ்சித் ப்ராப்ேநாதி மாநவ:। ௧௩।௰௰௮
ந சாப்ரிேயா அஸ்ய ேலாகஸ்ய। ந தரித்ேரா ந துர்கதி:। ௧௩।௰௰௯
ஸப்த ஜந்மாநி பவதி। ஸர்வபாைப: ப்ரமுச்யேத। ௧௩।௰௰௯
விஷ்ணுவ்ரதம் இதம் க்யாதம்। பாஷிதம் விஷ்ணுநா ஸ்வயம்। ௧௩।௰௧
ெபௗஷஸுக்லத்விதீயாதி। க்ருத்வா திநசதுஷ்டயம்। ௧௩।௰௧௧
ஷண்மாஸபாரணப்ராயம்। க்ருஹ்ணயாத் ீ பரமம் வ்ரதம்। ௧௩।௰௧௧
பூர்வம் ஸித்தார்தைக: ஸ்நாநம்। தத: க்ருஷ்ணதிைல: ஸ்ம்ருதம்।
௧௩।௰௧௨
வசயா ச த்ருதீேய அஹ்நி। ஸர்ெவௗஷத்யா தத: பரம்। ௧௩।௰௧௨
நாம்நா க்ருஷ்ணாச்யுதாக்ேயந। ததாநந்ேதந பூஜேயத்। ௧௩।௰௧௩
தைதவ ச சதுர்ேத அஹ்நி। ஹ்ருஷீேகேஸந ேகஸவம்। ௧௩।௰௧௩
ேதவம் அப்யர்ச்ய புஷ்ைபஸ் ச। பத்த்ைரர் தூபாநுேலபைந:। ௧௩।௰௧௩
உத்கச்சதஸ் ச பாேலந்ேதார்। தத்யாத் அர்க்யம் ஸமாஹித:। ௧௩।௰௧௪
புஷ்ைப: பத்த்ைர: பைலஸ் ைசவ। ஸர்வதாந்ையஸ் ச பக்தித:।
௧௩।௰௧௪
திநக்ரேமண ைசதாநி। சந்த்ரநாமாநி கீர்தேயத்। ௧௩।௰௧௫

ஸஸிசந்த்ரஸஸாங்ேகந்து । ஸம்ஜ்ஞாநி ப்ரஹ்மவாதிநி। ௧௩।௰௧௫
நக்தம் புஞ்ஜதீ மதிமாந்। யாவத் திஷ்டதி சந்த்ரமா:। ௧௩।௰௧௬
அஸ்தம்கேத ந புஞ்ஜதீ । வ்ரதபங்கபயாச் சுேப। ௧௩।௰௧௬
ஏவம் ஸர்ேவஷு மாேஸஷு। ஜ்ேயஷ்டாந்ேதஷு யஸஸ்விநி।
௧௩।௰௧௭
கர்தவ்யம் ைவ வ்ரதஸ்ேரஷ்டம்। த்விதீயாதிசதுர்திநம்। ௧௩।௰௧௭
விப்ராய தக்ஷிணாம் தத்யாத்। பஞ்சம்யாம் ச ஸ்வஸக்தித:। ௧௩।௰௧௮
ஏவம் ஸமாபேயந் மாைஸ:। ஷட்பி: ப்ரதமபாரணம்। ௧௩।௰௧௮
பாரணந்ேத ச ேதவஸ்ய। ப்ரீணநம் பக்தித: ஸுேப। ௧௩।௰௧௯
யதாஸக்த்யா து கர்தவ்யம்। வித்தஸாட்யம் விவர்ஜேயத்। ௧௩।௰௧௯
ஆஷாடாதித்விதீயம் து। ஷண்மாேஸந தேபாதேந। ௧௩।௰௨
பாரணம் ைவ ஸமாக்யாதம்। வ்ரதஸ்யாஸ்ய ஸுபப்ரதம்। ௧௩।௰௨
வ்ரதம் ஏதத் திலீேபந। துஷ்வந்ேதந யயாதிநா। ௧௩।௰௨௧
ததாந்ைய: ப்ருதிவபாைலர் ீ । உபவாஸவிதாநத:। ௧௩।௰௨௧
சரிதம் முநிமுக்ையஸ் ச। க்ருசீகச்யவநாதிபி:। ௧௩।௰௨௧
ஸுரம்பயா ஸுைகேகய்யா। ஸாண்டில்யா தூம்ரபிங்கயா। ௧௩।௰௨௨
ஸுேதஷ்ணயாதவா ரிண்யா। மதிமத்யா க்ருதாஸயா। ௧௩।௰௨௨
ஸாவித்ர்யா ெபௗர்ணமாஸ்யா ச। ைவரிண்யா ச ஸுபத்ரயா।
௧௩।௰௨௩
ப்ராஹ்மணக்ஷத்ரியவிஸாம்। இதி ஸ்த்ரீபிர் அநுஷ்டிதம்। ௧௩।௰௨௩
உர்வஸ்யா ரம்பயா ைசவ। ெஸௗரேபய்யா ததா வ்ரதம்। ௧௩।௰௨௪
வராப்ஸேராபிர் தர்மஜ்ேஞ। சரிதம் தர்மவாம்சயா। ௧௩।௰௨௪

ப்ரதேம பாதபூஜா ஸ்யாத்। த்விதீேய நாபிபூஜநம்। ௧௩।௰௨௫
த்ருதீேய வக்ஷஸ: பூஜா। சதுர்ேத ஸிரேஸா ஹேர:। ௧௩।௰௨௫
ஏதச் சீர்த்வா ஸமஸ்ேதப்ய:। பாேபப்ய: ஸ்ரத்தயாந்வித:। ௧௩।௰௨௬
முச்யேத ஸகலாம்ஸ் ைசவ। ஸம்ப்ராப்ேநாதி மேநாரதாந்। ௧௩।௰௨௬
வ்ரதாநாம் உத்தமம் ஹ்ய் ஏதத்। ஸ்வயம் ேதேவந பாஷிதம்।
௧௩।௰௨௭
பாபப்ரஸமநம் ஸஸ்தம்। மேநாரதபலப்ரதம்। ௧௩।௰௨௭
யம் ச காமம் அபித்யாயந்। க்ரியேத நியதவ்ரைத:। ௧௩।௰௨௮
வ்ரதம் ஏதந் மஹாபாேக। தம் து பூரயேத ந்ருணாம்। ௧௩।௰௨௮
மேநாரதாந் பூரயதி। ஸர்வபாபம் வ்யேபாஹதி। ௧௩।௰௨௯
அவ்யாஹேதந்த்ரியத்வம் ச। ஸப்த ஜந்மாநி யச்சதி। ௧௩।௰௨௯
மாேக ஸ்நாதஸ்ய யத் புண்யம்। ப்ரயாேக பாபநாஸநம்। ௧௩।௰௩
ஸகலம் தத் அவாப்ேநாதி। ஸ்ருத்வா விஷ்ணுவ்ரதம் த்வ் இதம்।
௧௩।௰௩
ஸாக்ஷாத் பகவதா ப்ேராக்தம்। பரமம் பாபநாஸநம்। ௰௧௩।௯
ஸுக்லபேக்ஷ து ெபௗஷஸ்ய। ஸம்ப்ராப்தித்வாதஸம்ீ ஸ்ருணு।
௧௪।௰௰௧
யாம் உேபாஷ்ய ஸமாப்ேநாதி। ஸர்வாந் ஏவ மேநாரதாந்। ௧௪।௰௰௧
பாஷண்டாதிபிர் ஆலாபம்। அகுர்வந் விஷ்ணுதத்பர:। ௧௪।௰௰௨
பூஜேயத் ப்ரணேதா ேதவம்। ஏகாக்ரமதிர் அச்யுதம்। ௧௪।௰௰௨
ெபௗஷாதிபாரணம் மாைஸ:। ஷட்பிர் ஜ்ேயஷ்டாந்தகம் ஸ்ம்ருதம்।
௧௪।௰௰௩
ப்ரதேம புண்டரீகாக்ஷம்। நாம ேதவஸ்ய கீயேத। ௧௪।௰௰௩

த்விதீேய மாதவாக்யம் து। விஸ்வரூபம் து பால்குேந। ௧௪।௰௰௪
புருேஷாத்தமாக்யம் ச தத:। பஞ்சேம சாச்யுேததி ச। ௧௪।௰௰௪
ஷஷ்ேட ஜேயதி ேதவஸ்ய। குஹ்யம் நாம ப்ரகீர்த்யேத। ௧௪।௰௰௫
பூர்ேவஷு ஷட்ஸு மாேஸஷு। ஸ்நாநப்ராஸநேயாஸ் திலா:।
௧௪।௰௰௫
ஆஷாடாதிஷு மாேஸஷு। பஞ்சகவ்யம் உதாஹ்ருதம்। ௧௪।௰௰௬
ஸ்நாேந ச ப்ராஸேந ைசவ। ப்ரஸஸ்தம் பாபநாஸநம்। ௧௪।௰௰௬
ப்ரதிமாஸம் ச ேதவஸ்ய। க்ருத்வா பூஜாம் யதாவிதி। ௧௪।௰௰௭
விப்ராய தக்ஷிணாம் தத்யாச்। ஸ்ரத்ததாந: ஸ்வஸக்தித:। ௧௪।௰௰௭
பாரணாந்ேத ச ேதவஸ்ய। ப்ரீணநம் பக்திபூர்வகம்। ௧௪।௰௰௮
க்ருவதீ ஸக்த்யா ேகாவிந்ேத। ஸத்பாவாப்யர்சேநா யத:। ௧௪।௰௰௮
நக்தம் புஞ்ஜதீ ச ததஸ்। ைதலக்ஷாரவிவர்ஜிதம்। ௧௪।௰௰௯
ஏகாதஸ்யாம் உஷித்ைவவம்। த்வாதஸ்யாம் அதவா திேந। ௧௪।௰௰௯
ஏதாம் உஷித்வா தர்மஜ்ேஞ। ப்ரீணநம் ேதவதத்பர:। ௧௪।௰௧
ஸர்வகாமாந் அவாப்ேநாதி। ஸர்வபாைப: ப்ரமுச்யேத। ௧௪।௰௧
யத: ஸர்வம் அவாப்ேநாதி। யத் யத் இச்சதி ேசதஸா। ௧௪।௰௧௧
தேதா ேலாேகஷு விக்யாதா। ஸம்ப்ராப்தித்வாதஸதி ீ ைவ। ௧௪।௰௧௧
க்ருதாபிலஷிதா ஹ்ய் ஏஷா। ப்ராரப்தா தர்மதத்பைர:। ௧௪।௰௧௨
பூரயத்ய் அகிலாந் காமாந்। ஸம்ஸ்ருதா ச திேந திேந। ௧௪।௰௧௨
தஸ்மிந்ந் ஏவ திேந புண்ேய। ேகாவிந்தத்வாதஸம்ீ ஸ்ருணு। ௧௫।௰௰௧
யஸ்யாம் ஸம்யக் அநுஷ்டாநாத்। ப்ராப்ேநாத்ய் அபிமதம் பலம்।
௧௫।௰௰௧

ெபௗஷமாேஸ ஸிேத பேக்ஷ। த்வாதஸ்யாம் ஸமுேபாஷித:।
௧௫।௰௰௨
ஸம்யக் ஸம்பூஜ்ய ேகாவிந்தம்। நாம்நா ேதவம் அேதாக்ஷஜம்।
௧௫।௰௰௨
புஷ்பதூேபாபஹாராத்ையர்। உபவாைஸ: ஸமாஹித:। ௧௫।௰௰௨
ேகாவிந்ேததி ஜபந் நாம। புநஸ் தத்கதமாநஸ:। ௧௫।௰௰௩
விப்ராய தக்ஷிணாம் தத்யாத்। யதாஸக்தி தேபாதேந। ௧௫।௰௰௩
ஸ்வபந் விபுத்த: ஸ்கலிேதா। ேகாவிந்ேததி ச கீர்தேயத்। ௧௫।௰௰௪
பாஷண்டாதிவிகர்மஸ்ைதர்। ஆலாபம் ச விவர்ஜேயத்। ௧௫।௰௰௪
ேகாமூத்ரம் ேகாமயம் வாபி। ததி க்ஷீரம் அதாபி வா। ௧௫।௰௰௫
ேகாேதஹத: ஸமுத்பந்நம்। ஸம்ப்ராஸ்நீதாத்மஸுத்தேய। ௧௫।௰௰௫
த்விதீேய அஹ்நி புந: ஸ்நாதஸ்। தைதவாப்யர்ச்ய தம் ப்ரபும்।
௧௫।௰௰௬
ேதைநவ நாம்நா ஸம்ஸ்தூய। தத்த்வா விப்ராய தக்ஷிணாம்।
௧௫।௰௰௬
தேதா புஞ்ஜதீ ேகாேதஹ । ஸம்பூேதந ஸமந்விதம்। ௧௫।௰௰௬
ஏவம் ஏவாகிலாந் மாஸாந்। உேபாஷ்ய ப்ரயத: ஸுசி:। ௧௫।௰௰௭
தத்யாத் கவாஹ்நிகம் பக்த்யா। ப்ரதிமாஸம் ஸ்வஸக்தித:। ௧௫।௰௰௭
பாரிேத ச புநர் வர்ேஷ। யதாஸக்தி கவாஹ்நிகம்। ௧௫।௰௰௮
தத்த்வா பரகேவ பூய:। ஸ்ருணு யத் பலம் அஸ்நுேத। ௧௫।௰௰௮
ஸுவர்ணஸ்ருங்கா: பஞ்ச கா:। ஷஷ்டம் ச வ்ருஷபம் நர:। ௧௫।௰௰௯
ப்ரதிமாஸம் த்விஜாக்ேரப்ேயா। யத் தத்த்வா பலம் அஸ்நுேத।
௧௫।௰௰௯

தத் ஆப்ேநாத்ய் அகிலம் ஸம்யக்। வ்ரதம் ஏதத் உேபாஷித:। ௧௫।௰௧
தம் ச ேலாகம் அவாப்ேநாதி। ேகாவிந்ேதா யத்ர திஷ்டதி। ௧௫।௰௧
ேகாவிந்தத்வாதஸம்ீ ஏதாம்। உேபாஷ்ய திவி தாரகா:। ௧௫।௰௧௧
வித்ேயாதமாநா த்ருஸ்யந்ேத। ேலாைகர் அத்யாபி ேஸாபேந।
௧௫।௰௧௧
உபவாஸவ்ரதாநாம் து। ைவகல்யம் யந் மஹாமுேந। ௧௬।௰௰௧
தாநகர்மக்ருதம் தஸ்ய। விபாேகா வத யாத்ருஸ:। ௧௬।௰௰௧
யஜ்ஞாநாம் உபவாஸாநாம்। வ்ரதாநாம் ச யதவ்ரேத। ௧௬।௰௰௨
ைவகல்யாத் பலைவகல்யம்। யாத்ருஸம் தச் ச்ருணுஷ்வ ேம।
௧௬।௰௰௨
உபவாஸாதிநா ராஜ்யம்। ஸம்ப்ராப்யம் ேத ததா வஸு। ௧௬।௰௰௩
ப்ரஷ்ைடஸ்வர்யா நிர்தநாஸ் ச। பவந்தி புருஷா: புந:। ௧௬।௰௰௩
ரூபம் தேதாத்தமம் ப்ராப்ய। வ்ரதைவகல்யேதாஷத:। ௧௬।௰௰௪
காணா: குண்டாஸ் ச பூயஸ் ேத। பவந்த்ய் அந்தாஸ் ச மாநவா:।
௧௬।௰௰௪
உபவாஸாந் நர: பத்நீம்। நாரீ ப்ராப்ய ததா பதிம்। ௧௬।௰௰௫
விேயாகம் வ்ரதைவகல்யாத்। உபயம் தத் அவாப்நுேத। ௧௬।௰௰௫
ேய த்ரவ்ேய ஸத்ய் அதாதாரஸ்। ததாந்ேயநாஹிதாக்நய:। ௧௬।௰௰௬
குேல ச ஸதி து:ஸலா ீ । ெதௗஷ்குலா: ஸலிநஸ் ீ ச ேய। ௧௬।௰௰௬
வஸ்த்ராநுேலபைநர் ஹீநா। பூஷைணஸ் சாதிரூபிண:। ௧௬।௰௰௭
விரூபரூபாஸ் ச ததா। ப்ரஸாதநகுணாந்விதா:। ௧௬।௰௰௭
ேத ஸர்ேவ வ்ரதைவகல்யாத்। பலைவகல்யம் ஆகதா:। ௧௬।௰௰௮

குணிேநா அபி ஹி ேதாேஷண। ஸம்யுக்தா: ஸம்பவந்தி ேத।
௧௬।௰௰௮
தஸ்மாந் ந வ்ரதைவகல்யம்। யஜ்ஞைவகல்யம் ஏவ வா। ௧௬।௰௰௯
உபவாேஸ ச கர்தவ்யம்। ைவகல்யாத் விகலம் பலம்। ௧௬।௰௰௯
கதம்சித் யதி ைவகல்யம்। உபவாஸாதிேக பேவத்। ௧௬।௰௧
கிம் தத்ர வத கர்தவ்யம்। அச்சித்ரம் ேயந ஜாயேத। ௧௬।௰௧
அகண்டத்வாதஸம்ீ ஏதாம்। அேஸேஷஷ்வ் ஏவ கர்மஸு। ௧௬।௰௧௧
ைவகல்யப்ரஸமாயாலம்। ஸ்ருணுஷ்வ கதேதா மம। ௧௬।௰௧௧
மார்கஸர்ேஷீ ஸிேத பேக்ஷ। த்வாதஸ்யாம் நியத: ஸுசி:। ௧௬।௰௧௨
க்ருேதாபவாேஸா ேதேவஸம்। ஸமப்யர்ச்ய ஜநார்தநம்। ௧௬।௰௧௨
பஞ்சகவ்யஜலஸ்நாத:। பஞ்சகவ்யக்ருதாஸந:। ௧௬।௰௧௩
யவவ்ரீஹிப்ருதம் பாத்ரம்। தத்யாத் விப்ராய பக்தித:। ௧௬।௰௧௩
இதம் ேசாச்சாரேயத் பக்த்யா। ேதவஸ்ய புரேதா ஹேர:। ௧௬।௰௧௩
ஸப்த ஜந்மாநி யத் கிம்சித்। மயா கண்டவ்ரதம் க்ருதம்। ௧௬।௰௧௪
பகவம்ஸ் த்வத்ப்ரஸாேதந। தத் அகண்டம் இஹாஸ்து ேம। ௧௬।௰௧௪
யதாகண்டம் ஜகத் ஸர்வம்। த்வம் ஏவ புருேஷாத்தம। ௧௬।௰௧௫
ததாகிலாந்ய் அகண்டாநி। வ்ரதாநி மம ஸந்து ைவ। ௧௬।௰௧௫
ஏவம் ஏவாநுமாஸம் ைவ। சாதுர்மாஸ்யவிதி: ஸ்ம்ருத:। ௧௬।௰௧௬
சதுர்பிர் ஏவ மாைஸஸ் து। பாரணம் ப்ரதமம் ஸ்ம்ருதம்। ௧௬।௰௧௭
ப்ரீணநம் ச ஹேர: குர்யாத்। பாரிேத பாரேண தத:। ௧௬।௰௧௭
ைசத்ராதிஷு ச மாேஸஷு। சதுர்ஷ்வ் அந்யம் து பாரணம்। ௧௬।௰௧௮
தத்ராபி ஸக்துபாத்ராணி। தத்யாச் ச்ரத்தாஸமந்வித:। ௧௬।௰௧௮
ஸ்ராவணாதிஷு மாேஸஷு। கார்த்திகாந்ேதஷு பாரணம்। ௧௬।௰௧௯

யத்நாத் து க்ருதபாத்ராணி। தத்யாத் விப்ராய பக்தித:। ௧௬।௰௧௯
ஏவம் ஸம்யக் யதாந்யாயம்। அகண்டத்வாதஸம்ீ நர:। ௧௬।௰௨
யத் உேபாஷ்யத்ய் அகண்டம் ஸ। வ்ரதஸ்ய பலம் அஸ்நுேத। ௧௬।௰௨
ஸப்த ஜந்மஸு ைவகல்யம்। யத் வ்ரதஸ்ய க்வசித் க்ருதம்। ௧௬।௰௨௧
கேராத்ய் அவிகலம் ஸர்வம்। அகண்டத்வாதஸவ்ரதம் ீ । ௧௬।௰௨௧
தஸ்மாத் ஏஷாதியத்ேநந। நைர: ஸ்த்ரீபிஸ் ச ஸுவ்ரேத। ௧௬।௰௨௨
அகண்டத்வாதஸீ ஸம்யக்। உேபாஷ்யா பலகாம்க்ஷிபி:। ௧௬।௰௨௨
ஏவம் புரா யாஜ்ஞவல்க்ய:। ப்ருஷ்ட: பத்ந்யா மஹாமுநி:। ௧௭।௰௰௧
ஆசஷ்ட புண்யபலதம்। உபவாஸவிதிம் பரம்। ௧௭।௰௰௧
ததா த்வம் அபி விப்ரர்ேஷ। ேகஸவாராதேந ரத:। ௧௭।௰௰௨
வ்ரேதாபவாஸபரேமா। பேவதா நாந்யமாநஸ:। ௧௭।௰௰௨
புநஸ் ைசதந் மஹாபாக। ஸ்ரூயதாம் கதேதா மம। ௧௭।௰௰௩
ப்ேராக்தம் நேரண ேதவாநாம்। திதிமாஹாத்ம்யம் உத்தமம்। ௧௭।௰௰௩
விஜயாதிஜயா ைசவ। ஜயந்தீபாபநாஸநீ। ௧௭।௰௰௪
தேதாத்தராயணம் ஸஸ்தம்। ஸர்வதா ேகஸவார்சேந। ௧௭।௰௰௪
யத் அந்யகாேல வர்ேஷண। ேகஸவால் லப்யேத பலம்। ௧௭।௰௰௫
ஸக்ருத் ஏவார்சிேத க்ருஷ்ேண। தத் ஏதாஸ்வ் அபி லப்யேத।
௧௭।௰௰௫
விஜயாதிஜயா ைசவ। ஜயந்தீபாபநாஸநீ। ௧௭।௰௰௬
தேதாத்தராயணம் ைசவ। யச் சஸ்தம் ேகஸவார்சேந। ௧௭।௰௰௬
தத் ஸர்வம் கதேயஹாத்ய। திதிமாஹாத்ம்யம் உத்தமம்। ௧௭।௰௰௭
யத்ர ஸம்பூஜித: க்ருஷ்ண:। ஸர்வபாபம் வ்யேபாஹதி। ௧௭।௰௰௭

ஏகாதஸ்யாம் ஸிேத பேக்ஷ। புஷ்யர்க்ஷம் யத்ர ஸத்தம। ௧௭।௰௰௮
திெதௗ பவதி ஸா ப்ேராக்தா। விஷ்ணுநா பாபநாஸநீ। ௧௭।௰௰௮
தஸ்யாம் ஸம்பூஜ்ய ேகாவிந்தம்। ஜகதாம் ஈஸ்வேரஸ்வரம்। ௧௭।௰௰௯
ஸப்தஜந்மக்ருதாத் பாபாந்। முச்யேத நாத்ர ஸம்ஸய:। ௧௭।௰௰௯
யஸ் ேசாபவாஸம் குருேத। தஸ்யாம் ஸ்நாேதா த்விேஜாத்தம।
௧௭।௰௧
ஸர்வபாபவிநிர்முக்ேதா। விஷ்ணுேலாேக மஹீயேத। ௧௭।௰௧
தாநம் யத் தீயேத கிம்சித்। ஸமுத்திஸ்ய ஜநார்தநம்। ௧௭।௰௧௧
ேஹாேமா வா க்ரியேத தஸ்யாம்। அக்ஷயம் லபேத பலம்। ௧௭।௰௧௧
ஏகா க்ருக் ேதவபுரேதா। ஜப்தா ஸ்ரத்தாவதா ததா। ௧௭।௰௧௨
க்ருக்ேவதஸ்ய ஸமஸ்தஸ்ய। ஜபதா யச்சேத பலம்। ௧௭।௰௧௨
ஸாமேவதபலம் ஸாம। யஜுர்ேவதபலம் யஜு:। ௧௭।௰௧௩
ஜப்தம் ஏகம் முநிஸ்ேரஷ்ட। ததாத்ய் அத்ர ந ஸம்ஸய:। ௧௭।௰௧௩
தாரகா திவி ராஜந்ேத। த்ேயாதமாநா த்விேஜாத்தம। ௧௭।௰௧௪
ஸமப்யர்ச்ய திதாவ் அஸ்யாம்। ேதவேதவம் ஜநார்தநம்। ௧௭।௰௧௪
யத: பாபம் அேஸஷம் ைவ। நாஸயத்ய் அத்ர ேகஸவ:। ௧௭।௰௧௫
புஷ்யர்ைக்ஷகாதஸீ ப்ரஹ்மம்ஸ்। ேதேநாக்தா பாபநாஸநீ। ௧௭।௰௧௫
ததாந்யத் அபி தர்மஜ்ஞ। ஸ்ரூயதாம் கதேதா மம। ௧௮।௰௰௧
பதத்வயம் ஜகத்தாதுர்। ேதவேதவஸ்ய ஸார்ங்கிண:। ௧௮।௰௰௧
ஸம்வத்ஸர: பாதபடம்ீ । தத்ர ந்யஸ்தம் பதத்வயம்। ௧௮।௰௰௨
வாஸுேதேவந விப்ேரந்த்ர। பூதாநாம் ஹிதகாம்யயா। ௧௮।௰௰௨
வாமம் அஸ்ய பதம் ப்ரஹ்மந்। உத்தராயணஸம்ஜ்ஞிதம்। ௧௮।௰௰௩

ேதவாத்ைய: ஸகைலர் வந்த்யம்। தக்ஷிணம் தக்ஷிணாயநம்। ௧௮।௰௰௩
தஸ்மிந் ய: ப்ரயத: ஸம்யக்। ேதவேதவஸ்ய மாநவ:। ௧௮।௰௰௪
கேராத்ய் ஆராதநம் தஸ்ய। ேதாஷம் ஆயாதி ேகஸவ:। ௧௮।௰௰௪
கதம் ஆராதநம் தஸ்ய। ேதவேதவஸ்ய ஸார்ங்கிண:। ௧௮।௰௰௫
க்ரியேத முநிஸார்தூல। தந் மமாக்யாதும் அர்ஹஸி। ௧௮।௰௰௫
உத்தேர த்வ் அயேந தால்ப்ய। ஸ்நாேதா நியதமாநஸ:। ௧௮।௰௰௬
க்ருதக்ஷராதிநா ீ ேதவம்। ஸ்நாபேயத் தரணதரம் ீ । ௧௮।௰௰௬
சாருவஸ்த்ேராபஹாைரஸ் ச। புஷ்பதூபாநுேலபைந:। ௧௮।௰௰௭
ஸமப்யர்ச்ய தத: ஸம்யக்। ப்ராஹ்மணாநாம் ச தர்பைண:। ௧௮।௰௰௭
பதத்வயவ்ரதம் ஸம்யக்। க்ருஹ்ணயாத் ீ விஷ்ணுதத்பர:। ௧௮।௰௰௭
ஸ்நாேதா நாராயணம் வŠேய। புஞ்ஜந் நாராயணம் ததா। ௧௮।௰௰௮
புங்க்த்வா நாராயணம் சாஹம்। கச்சந் நாராயணம் தத:। ௧௮।௰௰௮
ஸ்வபந் விபுத்த: ப்ரணமந்। ேஹாமம் குர்வம்ஸ் ததார்சநம்। ௧௮।௰௰௯
நாராயணஸ்யாநுதிநம்। கரிஷ்ேய நாமகீர்தநம்। ௧௮।௰௰௯
யாவத் அத்யதிநாத் ப்ராப்தம்। க்ரமேஸா தக்ஷிணாயநம்। ௧௮।௰௧
ஸ்கலிேத அஹம் க்ஷுேத ைசவ। ேவதநார்ேதா அதவா ஸதா। ௧௮।௰௧
தாவந் நாராயணம் வŠேய। ஸர்வம் ஏேவாத்தராயணம்। ௧௮।௰௧
யாவஜ் ஜவவதம் ீ கிம்சித்। ஜ்ஞாநேதா அஜ்ஞாநேதா அபி வா। ௧௮।௰௧௧
கரிஷ்ேய அஹம் ததா ைசவ। கீர்தயிஷ்யாமி தம் ப்ரபும்। ௧௮।௰௧௧
யதா ததாந்ருதம் கிம்சித்। அத வŠயாமி துர்வச:। ௧௮।௰௧௨
அஜ்ஞாநாத் அதவா ஜ்ஞாநாத்। கீர்தயிஷ்யாமி தம் ப்ரபும்। ௧௮।௰௧௨
ஷண்மாஸம் ஏஷ ேம ஜாேபா। நாராயணமய: பர:। ௧௮।௰௧௩

தம் ஸ்மரந் மரேண யாதி। யாம் கதிம் ஸாஸ்து ேம கதி:। ௧௮।௰௧௩
ஷண்மாஸாப்யந்தேர ம்ருத்யுர்। யத்ய் அகஸ்மாத் பேவந் மம।
௧௮।௰௧௪
தந் மயா வாஸுேதவாய। ஸ்வயம் ஆத்மா நிேவதித:। ௧௮।௰௧௪
பரமார்தமயம் ப்ரஹ்ம। வாஸுேதவமயம் பரம்। ௧௮।௰௧௫
யம் அந்ேத ஸம்ஸ்மரந் யாதி। ஸ ேம விஷ்ணு: பரா கதி:। ௧௮।௰௧௫
யதா ப்ராதஸ் ததா ஸாயம்। மத்யாஹ்ேந வா ம்ரிேய ஹ்ய் அஹம்।
௧௮।௰௧௬
ஷண்மாஸாப்யந்தேர ந்யாஸ:। க்ருேதா வ்ரதமேயா மயா। ௧௮।௰௧௬
ததா குரு ஜகந்நாத। ஸர்வேலாகபராயண। ௧௮।௰௧௭
நாராயண யதா நாந்யம்। த்வத்ேதா யாமி ம்ருேத கதிம்। ௧௮।௰௧௭
ஏவம் உச்சார்ய ஷண்மாஸ । பாரணம் ப்ரவரம் வ்ரதம்। ௧௮।௰௧௮
தாவந் நிஷ்பாதேயத் யாவத்। ஸம்ப்ராப்தம் தக்ஷிணாயநம்। ௧௮।௰௧௮
ததஸ் ச ப்ரீணநம் குர்யாத்। யதாஸக்த்யா ஜகத்குேரா:। ௧௮।௰௧௯
ேபாஜேயத் ப்ராஹ்மணாந் ஸம்யக்। தத்யாத் ேதப்யஸ் ச தக்ஷிணாம்।
௧௮।௰௧௯
ஏவம் வ்ரதம் இதம் தால்ப்ய। ய: பாரயதி மாநவ:। ௧௮।௰௨
நாரீ வா ஸர்வபாேபப்ய:। ஷண்மாஸாத் விப்ர முச்யேத। ௧௮।௰௨
ஷண்மாஸாப்யந்தேர சாஸ்ய। மரணம் யதி ஜாயேத। ௧௮।௰௨௧
ப்ராப்ேநாத்ய் அநஸநஸ்ேயாக்தம்। யத் பலம் தத் அஸம்ஸயம்।
௧௮।௰௨௧
பதத்வயம் ச க்ருஷ்ணஸ்ய। ஸம்யக் ேதந ததார்சிதம்। ௧௮।௰௨௨
ஹேரர் நாம ஜபந் பக்த்யா। ஸ புரா ந ஜேநஸ்வர। ௰௧௮।௧௰

பகவாந் உஜ்ஜெகௗ விஷ்ணு:। புரா கார்க்யாய ப்ருச்சேத। ௧௮।௰௨௨
பால்குநாமலபக்ஷஸ்ய। ஏகாதஸ்யாம் உேபாஷித:। ௧௯।௰௰௧
நேரா வா யதி வா நாரீ। ஸமப்யர்ச்ய ஜகத்குரும்। ௧௯।௰௰௧
ஹேரர் நாம ஜேபத் பக்த்யா। ஸப்த வாராந் நேரஸ்வர। ௧௯।௰௰௨
உத்திஷ்டந் ப்ரஸ்வபம்ஸ் ைசவ। ஹரிம் ஏவாநுகீர்தேயத்। ௧௯।௰௰௨
தேதா அந்யதிவேஸ ப்ராப்ேத। த்வாதஸ்யாம் ப்ரயேதா ஹரிம்।
௧௯।௰௰௩
ஸ்நாத்வா ஸம்யக் தம் அப்யர்ச்ய। தத்யாத் விப்ராய தக்ஷிணாம்।
௧௯।௰௰௩
ஹரிம் உத்திஸ்ய ைசவாக்ெநௗ। க்ருதேஹாமக்ருதக்ரிய:। ௧௯।௰௰௪
ப்ரணிபத்ய ஜகந்நாதம்। இதி வாணம்ீ உதீரேயத்। ௧௯।௰௰௪
பாதாலஸம்ஸ்தா வஸுதா। யம் ப்ரஸாத்ய மேநாரதாந்। ௧௯।௰௰௫
அவாப வாஸுேதேவா அெஸௗ। ப்ரததாது மேநாரதாந்। ௧௯।௰௰௫
யம் அப்யர்ச்யாதிதி: ப்ராப்தா। ஸகலாம்ஸ் ச மேநாரதாந்। ௧௯।௰௰௬
புத்ராம்ஸ் ைசேவப்ஸிதாந் ேதவ:। ப்ரததாது மேநாரதாந்। ௧௯।௰௰௬
ப்ரஷ்டராஜ்யஸ் ச ேதேவந்த்ேரா। யம் அப்யர்ச்ய ஜகத்பதிம்। ௧௯।௰௰௭
மேநாரதாந் அவாபாக்ர்யாந்। ஸ ததாது மேநாரதாந்। ௧௯।௰௰௭
ஏவம் அப்யர்ச்ய பூஜாம் ச। நிஷ்பாத்ய ஹரேய தத:। ௧௯।௰௰௮
புஞ்ஜதீ ப்ரயத: ஸம்யக்। ஹவிஷ்யம் மநுஜர்ஷப। ௧௯।௰௰௮
பால்குநம் ைசத்ரைவஸாெகௗ। ஜ்ேயஷ்டமாஸம் ச பார்திவ।
௧௯।௰௰௯
சதுர்பி: பாரணம் மாைஸர்। ஏபிர் நிஷ்பாதிதம் பேவத்। ௧௯।௰௰௯
ரக்தபுஷ்ைபஸ் து சதுேரா। மாஸாந் குர்வதீ சார்சநம்। ௧௯।௰௧

தேஹச் ச குக்குலம் ப்ராஸ்ய। ேகாஸ்ருங்கக்ஷாலநம் ஜலம்। ௧௯।௰௧
ஹவிஷ்யாந்நம் ச ைநேவத்யம்। ஆத்மநஸ் ைசவ ேபாஜநம்। ௧௯।௰௧௧
ததஸ் ச ஸ்ரூயதாம் அந்யத்। ஆஷாடாெதௗ து யா க்ரியா। ௧௯।௰௧௧
ஜாதீபுஷ்பாணி தூபஸ் ச। ஸஸ்த: ஸர்ஜரேஸா ந்ருப। ௧௯।௰௧௨
ப்ராஸ்ய தர்ேபாதகம் சாத்ர। ஸால்யந்நம் ச நிேவதநம்। ௧௯।௰௧௨
ஸ்வயம் தத் ஏவ சாஸ்நீயாச்। ேஸஷம் பூர்வவத் ஆசேரத்। ௧௯।௰௧௩
கார்த்திகாதிஷு மாேஸஷு। ேகாமூத்ரம் காயேஸாதநம்। ௧௯।௰௧௩
ஸுகந்தம் ேசச்சயா தூபம்। பூஜாப்ருங்காரேகண ச। ௧௯।௰௧௪
காஸாரம் சாத்ர ைநேவத்யம்। அஸ்நீயாத் தச் ச ைவ ஸ்வயம்।
௧௯।௰௧௪
ப்ரதிமாஸம் ச விப்ராய। தாதவ்யா தக்ஷிணா ததா। ௧௯।௰௧௫
ப்ரீணநம் ேசச்சயா விஷ்ேணா:। பாரேண பாரேண கேத। ௧௯।௰௧௫
யதாஸக்தி யதாப்ரீதி। வித்தஸாட்யம் விவர்ஜேயத்। ௧௯।௰௧௬
ஸத்பாேவைநவ ேகாவிந்த:। பூஜித: ப்ரீயேத யத:। ௧௯।௰௧௬
பாரணாந்ேத யதாஸக்த்யா। ஸ்நாபித: பூஜிேதா ஹரி:। ௧௯।௰௧௭
ப்ரீணிதஸ் ேசப்ஸிதாந் காமாந்। ததாத்ய் அவ்யாஹதாந் ந்ருப।
௧௯।௰௧௭
ஏஷா தந்யா பாபஹரா। த்வாதஸீ பலம் இச்சதாம்। ௧௯।௰௧௮
யதாபிலஷிதாந் காமாந்। ததாதி மநுேஜஸ்வர। ௧௯।௰௧௮
பூரயத்ய் அகிலாந் பக்த்யா। யதஸ் ைசஷா மேநாரதாந்। ௧௯।௰௧௯
மேநாரதத்வாதஸயம் ீ । தேதா ேலாேகஷு விஸ்ருதா। ௧௯।௰௧௯
உேபாஷ்ையதாம் த்ரிபுவநம்। ப்ராப்தம் இந்த்ேரண ைவ புரா। ௧௯।௰௨
அதித்யா ேசப்ஸிதா: புத்ரா। தநம் ேசாஸநஸா ந்ருப। ௧௯।௰௨

ெதௗம்ேயந சாப்ய் அத்யயநம்। அந்ையஸ் சாபிமதம் பலம்। ௧௯।௰௨௧
ராஜர்ஷிபிஸ் ததா விப்ைர:। ஸ்த்ரீபி: ஸூத்ைரஸ் ச பூபேத। ௧௯।௰௨௧
யம் யம் காமம் அபித்யாேயத்। வ்ரதம் ஏதத் உேபாஷித:।
௰௧௯।௰௨௨௧௧
தம் தம் ஆப்ேநாத்ய் அஸம்திக்தம்। விஷ்ேணார் ஆராதேநாத்யத:।
௰௧௯।௰௨௨௧௧
அபுத்ேரா லபேத புத்ரம்। அதேநா லபேத தநம்। ௧௯।௰௨௩
ேராகாபிபூதஸ் சாேராக்யம்। கந்யா ப்ராப்ேநாதி ஸத்பதிம்। ௧௯।௰௨௩
ஸமாகமம் ப்ரவஸிைதர்। உேபாஷ்ையதாம் அவாப்நுேத। ௧௯।௰௨௪
ஸர்வாந் காமாந் அவாப்ேநாதி। ம்ருத: ஸ்வர்ேக ச ேமாதேத।
௧௯।௰௨௪
நாபுத்ேரா நாதேநா ேநஷ்ட । விேயாகீந ச நிர்குண:। ௧௯।௰௨௫
உேபாஷ்ையதத் வ்ரதம் மர்த்ய:। ஸ்த்ரீ ஜேநா வாபி ஜாயேத।
௧௯।௰௨௫
ய ஏவ வ்ரதஸம்சீர்ேணா। விஷ்ணுேலாேக மஹீயேத। ௰௧௯।௧௨
ஸ்வர்கேலாேக ஸஹஸ்ராணி। வர்ஷாணாம் மநுஜாதிப। ௧௯।௰௨௬
ேபாகாந் அபிமதாந் புக்த்வா। ஸ்வர்கேலாேக அபிகாங்க்ஷிதாந்।
௧௯।௰௨௬
இஹ புண்யவதாம் ந்ருணாம்। தநிநாம் ஸாதுஸலிநாம் ீ । ௧௯।௰௨௭
க்ருேஹஷு ஜாயேத ராஜந்। ஸர்வவ்யாதிவிவர்ஜித:। ௧௯।௰௨௭
அேஸாகபூர்ணிமாம் சாந்யாம்। ஸ்ருணுஸ்வ வதேதா மம। ௨௰।௰௰௧
யாம் உேபாஷ்ய நர: ேஸாகம்। நாப்ேநாதி ஸ்த்ரீ ததாபி வா। ௨௰।௰௰௧
பால்குநாமலபக்ஷஸ்ய। பூர்ணிமாஸ்யாம் நேரஸ்வர। ௨௰।௰௰௨

ம்ருஜ்ஜேலந நர: ஸ்நாத்வா। தத்த்வா ஸிரஸி ைவ ம்ருதம்। ௨௰।௰௰௨
ம்ருத்ப்ராஸநம் ததா க்ருத்வா। க்ருத்வா ச ஸ்தண்டிலம் ம்ருதா।
௨௰।௰௰௩
புஷ்ைப: பத்ைரஸ் ததாப்யர்ச்ய। பூதரம் நாந்யமாநஸ:। ௨௰।௰௰௩
தரணம்ீ ச ததா ேதவம்ீ । அேஸாேகத்ய் அபிதீயேத। ௨௰।௰௰௩
யதா விேஸாகாம் தரணம்ீ । க்ருதவாம்ஸ் த்வம் ஜநார்தந:। ௨௰।௰௰௪
ததா மாம் ஸர்வபாேபப்ேயா। ேமாசயாேஸஷதாரிணி। ௨௰।௰௰௪
யதா ஸமஸ்தபூதாநாம்। தாரணம் த்வய்ய் அவஸ்திதம்। ௨௰।௰௰௫
ததா விேஸாகம் குரு மாம்। ஸகேலச்சாவிபூதிபி:। ௨௰।௰௰௫
த்யாதமாத்ேர யதா விஷ்ெணௗ। ஸ்வாஸ்த்யம் யாதாஸி ேமதிநி।
௨௰।௰௰௬
ததா மந: ஸ்வஸ்ததாம் ேம। குரு த்வம் பூததாரிணி। ௨௰।௰௰௬
ஏவம் ஸ்துத்வா ததாப்யர்ச்ய। சந்த்ராயார்க்யம் நிேவத்ய ச। ௨௰।௰௰௭
உேபாஷிதவ்யம் நக்தம் வா। ேபாக்தவ்யம் ைதலவர்ஜிதம்। ௨௰।௰௰௭
அேநைநவ ப்ரகாேரண। சத்வார: பால்குநாதய:। ௨௰।௰௰௮
உேபாஷ்யா ந்ருபேத மாஸா:। ப்ரதமம் தத் து பாரணம்। ௨௰।௰௰௮
ஆஷாடாதிஷு மாேஸஷு। தத்வத் ஸ்நாநம் ம்ருதம்புநா। ௨௰।௰௰௯
தத் ஏவ ப்ராஸநம் பூஜா। தைதேவந்ேதாஸ் ததார்ஹணம்। ௨௰।௰௰௯
சதுர்ஷ்வ் அந்ேயஷு ைசேவாக்தம்। ததா ைவ கார்த்திகாதிஷு। ௨௰।௰௧
பாரணம் த்ரிதயம் ைசவ। சாதுர்மாஸிகம் உச்யேத। ௨௰।௰௧
ப்ரதமம் தரணீநாம। ஸ்துத்ைய மாஸசதுஷ்டயம்। ௨௰।௰௧௧
த்விதீேய ேமதிநீவாச்யா। த்ருதீேய ச வஸும்தரா। ௨௰।௰௧௧
பாரேண பாரேண வஸ்த்ர । பூஜயா பூஜேயந் ந்ருப। ௨௰।௰௧௨

தரணம்ீ ேதவேதவம் ச। க்ருதஸ்நாேநந ேகஸவம்। ௨௰।௰௧௨
வஸ்த்ராபாேவ து ஸூத்ேரண। பூஜேயத் தரணம்ீ ததா। ௨௰।௰௧௩
க்ருதாபாேவ ததா க்ஷீரம்। ஸஸ்தம் வா ஸலிலம் ஹேர:। ௨௰।௰௧௩
பாதாலமூலகதயா। சீர்ணம் ஏதந் மஹாவ்ரதம்। ௨௰।௰௧௪
தரண்யா ேகஸவப்ரீத்ைய। தத: ப்ராப்தா ஸமுந்நதி:। ௨௰।௰௧௪
ேதேவந ேசாக்தா தரண।ீ வராஹவபுஷா ததா। ௨௰।௰௧௫
உபவாஸப்ரஸந்ேநந। ஸமுத்த்ருத்ய ரஸாதலாத்। ௨௰।௰௧௫
வ்ரேதநாேநந கல்யாணி। ப்ரணேதா ய: கரிஷ்யதி। ௨௰।௰௧௬
தஸ்ய ப்ரஸாதம் அப்ய் அஹம்। கேராமி தவ ேமதிநி। ௰௨௰।௧௩
தைதவ குருேத பூஜாம்। பக்த்யா மம ஸுேபா ஜந:। ௰௨௰।௧௩
தைதவ தவ கல்யாணி। ப்ரணேதா ய: கரிஷ்யதி। ௰௨௰।௧௩
வ்ரதம் ஏதத் உபாஸ்ரித்ய। பாரணம் ச யதாவிதி। ௨௰।௰௧௬
ஸர்வபாபவிநிர்முக்த:। ஸப்த ஜந்மாந்தராண்ய் அெஸௗ। ௨௰।௰௧௭
விேஸாக: ஸர்வகல்யாண । பாஜேநா மதிமாஞ் ஜந:। ௨௰।௰௧௭
ஸர்வத்ர பூஜ்ய: ஸததம்। ஸர்ேவஷாம் அபராஜித:। ௨௰।௰௧௮
யதாஹம் ஏவம் வஸுேத। பவிதா நிர்வ்ருேத: பதம்। ௨௰।௰௧௮
ததா த்வம் அபி கல்யாணி। பவிஷ்யஸி ந ஸம்ஸய:। ௰௨௰।௧௪
ஏவம் ஏதந் மஹாபுண்யம்। ஸர்வபாேபாபஸாந்திதம்। ௨௰।௰௧௯
விேஸாகாக்யம் வ்ரதம் தந்யம்। தத் குருஷ்வ மஹீபேத। ௨௰।௰௧௯
ஸ்த்ரீணாம் தர்மம் த்விஜஸ்ேரஷ்ட। உபவாஸம் பவந் மம। ௨௧।௰௰௧
கதேயஹ யதாதத்த்வம்। உபவாஸவிதிஸ் ச ய:। ௨௧।௰௰௧
ெகௗமாரேக க்ருஹஸ்தாயா। விதவாயாஸ் ச ஸத்தம। ௨௧।௰௰௨

தர்மம் ப்ரப்ரூஹ்ய் அேஸேஷண। பகவந் ப்ரீதிகாரகம்। ௨௧।௰௰௨
ஸ்ரூயதாம் அகிலம் ப்ரஹ்மந்। யத்ய் ஏதத் அநுப்ருச்சஸி। ௨௧।௰௰௩
உபகாராய ச ஸ்த்ரீணாம்। த்ரிஷு ேலாேகஷ்வ் அநுத்தமம்। ௨௧।௰௰௩
ப்ரஸ்நம் ஏதத் புரா ேதவ।ீ ைஸலராஜஸுதா பதிம்। ௨௧।௰௰௪
பப்ரச்ச ஸங்கரம் ப்ரஹ்மந்। ைகலாஸஸிகேர ஸ்திதம்। ௨௧।௰௰௪
குமாரிகாபிர் ேதேவஸ। க்ருஹஸ்தாபிஸ் ச ேகஸவ:। ௨௧।௰௰௫
விதவாபிஸ் ததா ஸ்த்ரீபி:। கதம் ஆராத்யேத வத। ௨௧।௰௰௫
ஸாது ஸாத்வி த்வயா ப்ருஷ்டம்। ஏதந் நாராயணாஸ்ரிதம்। ௨௧।௰௰௬
உபவாஸாதி யத் தத்த்வம்। ஸ்ரூயதாம் அஸ்ய ேயா விதி:। ௨௧।௰௰௬
ேயாக்யம் பதிம் ஸமாஸாத்ய। நாரீ தர்மம் அவாப்நுேத। ௨௧।௰௰௭
து:ஸேலீ அபி ஹி காமார்ேத। நாரீ ப்ராப்ேநாதி பர்தரி। ௨௧।௰௰௭
அநாராத்ய ஜகந்நாதம்। ஸர்வேலாேகஸ்வரம் ஹரிம்। ௨௧।௰௰௮
கதம் ஆப்ேநாதி ைவ நாரீ। பதிம் ஸலகுணாந்விதம் ீ । ௨௧।௰௰௮
ஸுகலத்ரப்ரதம் தஸ்மாத்। வ்ரதம் அச்யுததுஷ்டிதம்। ௨௧।௰௰௯
கர்தவ்யம் லக்ஷணம் தஸ்ய। ஸ்ரூயதாம் வரவர்ணிநி। ௨௧।௰௰௯
யச் சீர்த்வா ஸர்வநாரீணாம்। ஸ்ேரஷ்டம் ஆப்ேநாத்ய் அஸம்ஸயம்।
௨௧।௰௧
ஐஹிகம் ச ஸுகம் ப்ராப்ய। ஸ்வர்ேக புங்க்ேத ஸுகாந்ய் அபி। ௨௧।௰௧
அநுஜ்ஞாம் ப்ராப்ய பித்ருேதா। மாத்ருதஸ் ச குமாரிகா। ௨௧।௰௧௧
பூஜேயச் ச ஜகந்நாதம்। பக்த்யா பாபஹரம் ஹரிம்। ௨௧।௰௧௧
த்ரிஷூத்தேரஷு ஸ்வ்ருேக்ஷஷு। பதிகாமா குமாரிகா। ௨௧।௰௧௨
மாதவாக்யம் து ைவ நாம। ஜேபந் நித்யம் அதந்த்ரிதா। ௨௧।௰௧௨

ப்ரியங்குணா ரக்தபுஷ்ைபர்। பந்தூககுஸுைமஸ் ததா। ௨௧।௰௧௩
ஸமப்யர்ச்ய தேதா தத்யாத்। ரக்தம் ஏவாநுேலபநம்। ௨௧।௰௧௩
ஸர்ெவௗஷத்யா ஸ்வயம் ஸ்நாத்வா। ஸமப்யர்ச்ய ஜகத்பதிம்।
௨௧।௰௧௪
நேமா அஸ்து மாதவாேயதி। ேஹாமேயந் மதுஸர்பிஷீ। ௨௧।௰௧௪
ஸ ேதவம் உத்தராேயாேக। ஸமப்யர்ச்ய ஜநார்தநம்। ௨௧।௰௧௫
ேஸாபநம் பதிம் ஆப்ேநாதி। ப்ேரத்ய ஸ்வர்கம் ச கச்சதி। ௨௧।௰௧௫
அதிபால்ேய ச யத் கிம்சித்। தயா பாபம் அநுஷ்டிதம்। ௨௧।௰௧௬
தஸ்மாச் ச முச்யேத ேதவி। ஸுகிநீைசவ ஜாயேத। ௨௧।௰௧௬
அப்ேதைநேகந தந்வங்கி। தூதபாபா யத் இச்சதி। ௨௧।௰௧௭
தத் ஏவ ப்ராப்நுயாத் பத்ேர। நாராயணபராயணா। ௨௧।௰௧௭
ஷண்மாஸம் ப்ரீணநம் கார்யம்। பக்த்யா ஸக்த்யா ச ைவ ஹேர:।
௨௧।௰௧௮
பாரணாந்ேத மஹாபேக। ததா ப்ராஹ்மணதர்பணம்। ௨௧।௰௧௮
கார்ஹஸ்த்ேய அவஸ்திதா நாரீ। பக்த்யா ஸம்பூஜேயத் பதிம்।
௨௨।௰௰௧
ஸ ஏவ ேதவதா தஸ்யா:। பூஜ்ய: பூஜ்யதரஸ் ச ஸ:। ௨௨।௰௰௧
தஸ்மிம்ஸ் துஷ்ேட பேரா தர்மஸ்। தஸ்ையவ பரிசர்யயா। ௨௨।௰௰௨
ேதாஷம் ஆயாதி ஸர்வாத்மா। பரமாத்மா ஜநார்தந:। ௨௨।௰௰௨
ைநவ தஸ்யா: ப்ருதக் யஜ்ேஞா। ந ஸ்ராத்தம் நாப்ய் உேபாஷிதம்।
௨௨।௰௰௩
பர்த்ருஸுஸ்ரூஷேணைநவ। ப்ராப்ேநாதி ஸ்த்ரீ யேதப்ஸிதம்।
௨௨।௰௰௩

ேதைநவ ஸாப்ய் அநுஜ்ஞாதா। தஸ்ய ஸுஸ்ரூஷணாத் அநு।
௨௨।௰௰௪
ேதாஷேயஜ் ஜகதாம் ஈஸம்। அநந்தம் அபராஜிதம்। ௨௨।௰௰௪
வ்ரைதர் நாநாவிைதர் ேதவி। ஐஹிகாமுஷ்மிகாப்தேய। ௨௨।௰௰௫
விஷ்ணுவ்ரதாதிபிர் திவ்ையஸ்। ததா தாைநர் மேநா அநுைக:।
௨௨।௰௰௫
க்ருதக்ஷராபிேஷைகஸ் ீ ச। ப்ராஹ்மணாநாம் ச தர்பைண:। ௨௨।௰௰௬
மேநாஜ்ைஞர் விவிைதர் தூைப:। புஷ்பவஸ்த்ராநுேலபைந:। ௨௨।௰௰௬
கீதவாத்ையஸ் ததா ஹ்ருத்ையர்। உபவாைஸஸ் ச பாமிநி। ௨௨।௰௰௭
ஏவம் ஆராத்ய ேகாவிந்தம்। அநுஜ்ஞாதா யதாவிதி। ௨௨।௰௰௭
பதிநா ஸகலாந் காமாந்। அவாப்ேநாதி ந ஸம்ஸய:। ௨௨।௰௰௭
பதிநா த்வ் அநநுஜ்ஞாதா। கிம்சித் புண்யம் கேராதி யா। ௨௨।௰௰௮
விபலம் தத் அேஸஷம் ைவ। தஸ்யா: ைஸலவராத்மேஜ। ௨௨।௰௰௮
ந ச ப்ரஸாதம் குருேத। பகவாந் மதுஸூதந:। ௨௨।௰௰௯
நாநுஜ்ஞாதா து யா நாரீ। பதிநார்சதி ேகஸவம்। ௨௨।௰௰௯
யா து பர்த்ருபரா நாரீ। நாராயணம் அதந்த்ரிதா। ௨௨।௰௧
பக்த்யா ஸம்பூஜேயத் ேதவம்। ேதாஷம் ஆயாதி ேகஸவ:। ௨௨।௰௧
யா து பர்த்ரா பரித்யக்தா। ததா யா ம்ருதபர்த்ருகா। ௨௨।௰௧௧
பாஷண்டாநுகேதா வாபி। யஸ்யா பர்தா மேஹஸ்வர। ௨௨।௰௧௧
ப்ராேயா ததாதி நாநுஜ்ஞாம்। விஷ்ேணார் ஆராதேந ததா। ௨௨।௰௧௨
கதம் ஆராதநம் கார்யம்। விஷ்ேணாஸ் தத் வத ஸம்கர। ௨௨।௰௧௨
யா து பர்த்ரா பரித்யக்தா। ஸா ஸம்பூஜ்ய நிஜம் பதிம்। ௨௨।௰௧௩
மநஸா தந்மநஸ்கா ச। தஸ்ையவ ஹிதகாரிண।ீ ௨௨।௰௧௩

ந நிந்தாகரணீதஸ்ய। ஸ்ேரேயா அபித்யாயிநீததா। ௨௨।௰௧௪
தஸ்ையவ ஸர்வகாேலஷு। ஸர்வகல்யாணம் இச்சதி। ௨௨।௰௧௪
ஆராதேயஜ் ஜகந்நாதம்। ஸர்வதாதாரம் அச்யுதம்। ௨௨।௰௧௫
க்ருேதாபவாஸா புஷ்பாதி। நிேவத்ய ஸகலம் தத:। ௨௨।௰௧௫
பர்துர் மேநாரதாவாப்திம்। ப்ரார்தேயத் ப்ரதமம் வரம்। ௨௨।௰௧௬
ஸ்வயம் யதாபிலஷிதம்। ப்ரார்தேயத் தம் வரம் தத:। ௨௨।௰௧௬
ஏவம் பர்த்ருபரித்யக்தா। ேயாஷித் ஆராதநம் ஹேர:। ௨௨।௰௧௭
குர்வாணா ஸகலாந் காமாந்। அவாப்ேநாதி ந ஸம்ஸய:। ௨௨।௰௧௭
பர்தா கேராதி யச் சஸ்யா:। கிம்சித் புண்யம் அஹர்நிஸம்। ௨௨।௰௧௮
தஸ்ய புண்யஸ்ய ஸம்பூர்ணம்। அர்தம் ப்ராப்ேநாதி ஸா ஸுேப।
௨௨।௰௧௮
யத் து ஸா குருேத புண்யம்। விநா ேதாேஷண ேயாஜ்ஜிதா। ௨௨।௰௧௯
தத் தஸ்யா: ஸகலம் ேதவி। தஸ்யார்தம் ந லேபத் பதி:। ௨௨।௰௧௯
பர்தர்ய் ஏவம் ப்ரவஸிேத। த்யக்தா ச பதிநா ஸுேப। ௨௨।௰௨
குர்வதாராதநம் ீ நாரீ। உபவாஸாதிநா ஹேர:। ௨௨।௰௨
ஏதத் தேவாக்தம் யத் ப்ருஷ்டம்। த்வயாஹம் கிரிநந்திநி। ௨௨।௰௨௧
விதவாநாம் அேதா தர்மம்। ஸ்ரூயதாம் விஷ்ணுதுஷ்டிதம்। ௨௨।௰௨௧
ம்ருேத பர்தரி ஸாத்வ ீஸ்த்ரீ। ப்ரஹ்மசர்யவ்ரேதாதிதா। ௨௨।௰௨௨
ஸ்நாதா ப்ரதிதிநம் தத்யாத்। ஸ்வபர்த்ருஸலிலாஞ்ஜலிம்। ௨௨।௰௨௨
குர்யாத் யாநுதிநம் பக்த்யா। ேதவாநாம் அபி பூஜநம்। ௨௨।௰௨௩
அதிேதஸ் தர்பணம் தத்வத்। அக்நிேஹாத்ரம் அமந்த்ரகம்। ௨௨।௰௨௩
பூர்ததர்மாஸ்ரிதம் சாந்யத்। குர்யாந் நித்யம் அதந்த்ரிதா। ௨௨।௰௨௪

நித்யகர்ம க்ருேத சாஸ்யா। ேநஷ்டம் கர்ம விதீயேத। ௨௨।௰௨௪
விஷ்ேணார் ஆராதநம் ைசவ। குர்யாந் நித்யம் உேபாஷிதா। ௨௨।௰௨௫
தாநாதி விப்ரமுக்ேயப்ேயா। தத்யாத் புண்யவிவ்ருத்தேய। ௨௨।௰௨௫
உபவாஸாம்ஸ் ச விவிதாந்। குர்யாச் சாஸ்த்ேராதிதாந் ஸுேப।
௨௨।௰௨௫
ேலாகாந்தரஸ்தம் பர்தாரம்। ஆத்மாநம் ச வராநேந। ௨௨।௰௨௬
தாரயத்ய் உபயம் நாரீ। ேயத்தம் தர்மபராயணா। ௨௨।௰௨௬
புத்ைரஸ்வர்யஸ்திதா நாரீ। உபவாஸாதிநா ஹரிம்। ௨௨।௰௨௭
யா ேதாஷயதி ஸித்திம் ஸா। புத்ேரப்ேயா அபி ப்ரயச்சதி। ௨௨।௰௨௭
ஸுபாம்ல் ேலாகாம்ஸ் ததா பர்துர்। ஆத்மநஸ் ச யேதப்ஸிதாந்।
௨௨।௰௨௮
ஸகலம் பூரயத்ய் அஸ்தம்। பாபம் நயதி சாகிலம்। ௨௨।௰௨௮
ஆத்மநஸ் ைசவ பர்துஸ் ச। நாரீ பரமிகாம் கதிம்। ௨௨।௰௨௯
ததாத்ய் ஆராத்ய ேகாவிந்தம்। ஸபுத்ரா விதவா ச யா। ௨௨।௰௨௯
தஸ்மாத் ஏபிர் விதாைநஸ் து। ஸர்வகாலம் து ேயாஷித:। ௨௨।௰௩
ேகஸவாராதநம் கார்யம்। ேலாகத்வயபலப்ரதம்। ௨௨।௰௩
ேய நரா ம்ருதபத்நிகாஸ்। ைதர் அப்ய் ஏதத் அேஸஷத:। ௨௨।௰௩௧
பூர்ததர்மாஸ்ரிதம் கார்யம்। நித்யகர்ம ச ேகவலம்। ௨௨।௰௩௧
புத்ைரஸ்வர்யஸ்திைத: ஸம்யக்। ப்ரஹ்மசர்யகுணாந்விைத:। ௨௨।௰௩௨
விஷ்ேணார் ஆராதநம் கார்யம்। தீர்தஸ்ைதர் அதவா க்ருேஹ।
௨௨।௰௩௨
ப்ராஹ்மண: க்ஷத்ரிேயா ைவஸ்ய:। ஸ்த்ரீ ஸூத்ரஸ் ச வராநேந।
௨௨।௰௩௩

அநாராத்ய ஹ்ருஷீேகஸம்। நாப்ேநாதி பரமாம் கதிம்। ௨௨।௰௩௩
ஐஸ்வர்யம் ஸம்ததிம் ஸ்ேரஷ்டாம்। ஆேராக்யம் த்ரவ்யஸம்பதம்।
௨௨।௰௩௪
ததாதி பகவாந் விஷ்ணுர்। கதிம் அக்ர்யாம் ஸுேதாஷித:। ௨௨।௰௩௪
ஏவம் ைஸலஸுதா ப்ேராக்தா। ஸ்வயம் ேதேவந ஸம்புநா। ௨௨।௰௩௫
ப்ருஷ்ேடந ஸம்யக் கதிதம்। பவேதா அபி மஹாமுேந। ௨௨।௰௩௫
ஸர்வவர்ைணஸ் ததா ஸ்த்ரீபிர்। அந்ையர் அபி ஜைநர் ஹரி:।
௨௨।௰௩௬
ஆராதநீேயா நாதுஷ்ேட। விஷ்ெணௗ ஸம்ப்ராப்யேத கதி:। ௨௨।௰௩௬
ந துர்கதிம் ெரௗரவாதீந்। நரகாம்ஸ் ச ந கச்சதி। ௨௨।௰௩௭
யம் ஆராத்ேயஸ்வரம் வந்த்யம்। கஸ் தம் விஷ்ணும் ந பூஜேயத்।
௨௨।௰௩௭
தஸ்மாத் அமுஷ்மிகாந் க்ேலஸாந்। நரேக யாஸ் ச யாதநா:। ௨௨।௰௩௮
ஸைதேவாத்விஜதா தால்ப்ய। ஸமாராத்ேயா ஜநார்தந:। ௨௨।௰௩௮
பகவந் யாதநா ேகாரா:। ஸ்ரூயந்ேத நரேகஷு யா:। ௨௩।௰௰௧
தாஸாம் ஸ்வரூபம் அத்யுக்ரம்। யதாவத் வக்தும் அர்ஹஸி। ௨௩।௰௰௧
ஸ்ருணு தால்ப்யாதிேகாராணாம்। யாதநாநாம் மேயாதிதம்। ௨௩।௰௰௨
ஸ்வரூபம் நாரைகர் யத் து। நரேகஷ்வ் அநுபூயேத। ௨௩।௰௰௨
ேயாஜநாநாம் ஸஹஸ்ராணி। ெரௗரேவா நரேகா த்விஜ। ௨௩।௰௰௩
அங்காரபூர்ணமத்ேயா அெஸௗ। ஜ்வாலாமாலாபரிஷ்க்ருத:। ௨௩।௰௰௩
தந்மத்ேய பதிேதா யாதி। ேயாஜநாநி ஸஹஸ்ரஸ:। ௨௩।௰௰௪
ஸத்யஹாந்யாந்ருதீயாதி। தத்ர பாபரதிர் நர:। ௨௩।௰௰௪
ெரௗரவாத் த்விகுணஸ் ைசவ। மஹாெரௗவரஸம்ஜ்ஞித:। ௨௩।௰௰௫

தப்ததாம்ரபுடாங்கார । ஜ்வலத்பாவகஸம்வ்ருத:। ௨௩।௰௰௫
பேராபதாபிநஸ் தத்ர। பதந்தி நரேக நரா:। ௨௩।௰௰௬
நாஸ்சர்யம் த்விஜஸார்தூல। வர்ஷலக்ஷயுதாநி ச। ௨௩।௰௰௬
காலஸூத்ேரண ச்சித்யந்ேத। சக்ராரூடாஸ் ச மாநவா:। ௨௩।௰௰௭
காலாங்குலிஸ்ேதந ஸதா। ஆபாததலமஸ்தகாத்। ௨௩।௰௰௭
காலஸூத்ர இதி க்யாேதா। ேகார: ஸ நரேகாத்தம:। ௨௩।௰௰௮
தத்ராபி வஞ்சகா யாந்தி। ேய ைசேவாத்ேகாசஜவிந ீ :। ௨௩।௰௰௮
தப்தகும்பஸ் தைதவாந்ேயா। நரேகா ப்ருஸதாருண:। ௨௩।௰௰௯
ைதலகும்ேபஷு பச்யந்ேத। தத்ராப்ய் அக்நிப்ருேதஷு ேத। ௨௩।௰௰௯
ேதவேவதத்விஜாதீநாம்। ேய நிந்தாம் குர்வேத ஸதா। ௨௩।௰௧
ஸம்ஸ்ருண்வந்தி ச ேய மூடா। ேய ச மத்ஸரிேணா அதமா:। ௨௩।௰௧
கரம்பவாலுகாகும்ப । ஸம்ஜ்ஞம் ச நரகம் ஸ்ருணு। ௨௩।௰௧௧
பரதாரரதா ேய து। பதந்தி நரேக அதமா:। ௨௩।௰௧௧
ஹ்ருதம் ையஸ் ச ஜலம் ேத அபி। தஸ்மிந் யாந்தி நராதமா:।
௨௩।௰௧௨
ேகாநிபாேநஷு விக்நாநி। மூடா ேய சாபி குர்வேத। ௨௩।௰௧௨
கரம்பவாலுகாகும்ப । நரேக ேத பதந்தி ைவ। ௨௩।௰௧௨
அந்ேத தமஸி துஷ்பாேர। ஸதார்திபரிகம்பிதா ீ :। ௨௩।௰௧௩
ப்ராம்யந்ேத மாநவா காத்ைர:। ஸமஸ்ைத: ஸ்புடிதாஸ்திபி:। ௨௩।௰௧௩
ேகாவத: ஸ்த்ரீவத: பாைப:। க்ருதம் ையஸ் ச கவாந்ருதம்। ௨௩।௰௧௪
ேத தத்ராதிமஹாபேமீ । பதந்தி நரேக நரா:। ௨௩।௰௧௪
உத்பாட்யேத ததா ஜிஹ்வா। ஸம்தம்ைஸர் ப்ருஸதாருைண:।
௨௩।௰௧௫

ஆக்ரிஸகாநாம் துஷ்டாநாம்। ஸைதவாபத்தபாஷிணாம்। ௨௩।௰௧௫
கரபத்ைரஸ் ச பாட்யந்ேத। யமஸ்ய புருைஷஸ் ததா। ௨௩।௰௧௬
பரதாரபரத்ரவ்ய । ஹிம்ஸகா: புருஷாதமா:। ௨௩।௰௧௬
ஆயஸம்ீ ச ஸிலாம் தப்தாம்। அேஸஷாங்ைகஸ் ததா நரா:। ௨௩।௰௧௭
பரதாரரதா ஏவம்। ஸமாலிங்கந்தி பாபிந:। ௨௩।௰௧௭
ஸர்வாங்ைகர் விக்ருைதர் ரக்தம்। உத்கிரந்ேதா அதிபடிதா ீ :। ௨௩।௰௧௮
யந்த்ேரஷ்வ் அந்ேயஷு பட்யந்ேத ீ । ஜந்துபடாகரா ீ நரா:। ௨௩।௰௧௮
வ்ருைக: ஸம்பŠயேத ப்ருஷ்டம்। நராணாம் பாபகாரிணாம்।
௨௩।௰௧௯
ஜநஸ்ய ப்ருஷ்டமாம்ஸம் ையர்। பக்ஷிதம் பாபகாரிபி:। ௨௩।௰௧௯
அஸிபத்ரவைநர் ேகாைரஸ்। சித்யந்ேத பாபகர்மிண:। ௨௩।௰௨
ஸத்பாவப்ரவணா ையஸ் து। பக்நா விஸ்ரம்பிேநா ஜநா:। ௨௩।௰௨
அேயாமுைக: கைகர் பக்நா:। கண்டகண்டம் ததாபைர:। ௨௩।௰௨௧
வ்ரஜந்தி பாபகர்மாண:। ஸ்வஸ்ருகாைலஸ் ததாபைர:। ௨௩।௰௨௧
ஸூஷாயாம் அபி தாஸ்யந்ேத। ஜ்வலதக்நிசயாவ்ருதா:। ௨௩।௰௨௨
பாஷாணேபஷ்யம் பிஷ்யந்ேத। ததாந்ேய பாபகர்மிண:। ௨௩।௰௨௨
ேதவதாதிதிப்ருத்யாணாம்। அதத்த்வா புஞ்ஜேத து ேய। ௨௩।௰௨௩
ம்ருஷாகதாஸ் ததாைவக்யம்। த்ரபுஷா ஸஸேகந ீ ச। ௨௩।௰௨௩
ப்ரயாந்தி புருஷாஸ் ைதைல:। க்வாத்யந்ேத அந்ேய புந: புந:। ௨௩।௰௨௩
வர்ணதர்மபரித்யாேக। ைநக்யம் ேய புருஷா கதா:। ௨௩।௰௨௪
ேத அபி பாபஸமாசாரா। வர்ணஸம்கரகாரிண:। ௨௩।௰௨௪
ஸ்வரூபம் நாரகஸ்யாக்ேந:। ஸ்ருணுஷ்வ கதயாமி ேத। ௨௩।௰௨௫

முக்தஸ் தேதா அந்யவஹ்நிஸ்த:। ேஸேத ஸம்ப்ராப்ய நிர்வ்ருதிம்।
௨௩।௰௨௫
ஸஸ்த்ரதாராஸ் தைதைவதா। ம்ருணாலப்ரஸ்தரம் நர:। ௨௩।௰௨௬
மந்யேத நாரைக: ஸஸ்த்ைரர்। விக்ஷேதா த்விஜஸத்தம। ௨௩।௰௨௬
ஹிமகண்டசயாசந்ேநா। நிவாதம் மந்யேத நர:। ௨௩।௰௨௭
விமுக்ேதா நாரகாச் சீதாத்। ப்ரகாஸம் தமஸஸ் தம:। ௨௩।௰௨௭
ப்ேராதா குேதஷு பிந்நாங்கா। ஆர்தா ராவவிராவிண:। ௨௩।௰௨௮
ஸூேலஷு ேலாேஹஷ்வ் அபேர। த்ரிஸூேலஷு ததாபேர। ௨௩।௰௨௮
யாஜ்ேயாபாத்யாயதாம்பத்ய । ஸுஹ்ருந்மித்ரஸுதாதிஷு। ௨௩।௰௨௯
க்ருேதா ேபேதா துராசாைரர்। ையர் அலீேகாக்திபாஷிபி:। ௨௩।௰௨௯
ஆயஸா: கண்டகாஸ் தீŠணா। நரேக கூடஸால்மெலௗ। ௨௩।௰௩
ேதஷு ப்ேராதா துராத்மாந:। பரதாரபுேஜா நரா:। ௨௩।௰௩
க்ருமிகீடஜெலௗகாதி । தீŠணதம்ஷ்ட்ராஸ்யவிக்ஷதா:। ௨௩।௰௩௧
ப்ராம்யந்ேத சாந்ததாமிஸ்ேர। வ்ருதாமாம்ஸாஸிேநா ஹி ேய।
௨௩।௰௩௧
ஏதாம்ஸ் சாந்யாம்ஸ் ச நரகாஞ்। ஸதேஸா அத ஸஹஸ்ரஸ:।
௨௩।௰௩௨
கர்மாந்தரம் ஜேநா புங்க்ேத। பரிணாமாம்ஸ் ச ேசதஸ:। ௨௩।௰௩௨
யாத்ருக் கர்ம மநுஷ்யாணாம்। தாத்ருக் விஷயரூபவத்। ௨௩।௰௩௩
பரிணாமம் மேநா யாதி। ஸுபாஸுபமயம் த்விஜ। ௨௩।௰௩௩
அதீவபஷணாந் ீ இத்தம்। ஸஸ்த்ராக்நிபயதாந் நர:। ௨௪।௰௰௧
கதம் ந கச்ேசந் நரகாந்। ஏதந் ேம வக்தும் அர்ஹஸி। ௨௪।௰௰௧
அேஹா அதிகஷ்டபாபாநாம்। விபாேகா நரகஸ்திைத:। ௨௪।௰௰௨

புருைஷர் புஜ்யேத ப்ரஹ்மம்ஸ்। தந்ேமாக்ஷம் வத ஸத்தம। ௨௪।௰௰௨
புண்யஸ்ய கர்மண: பாக:। புண்ய ஏவ த்விேஜாத்தம। ௨௪।௰௰௩
ேசதஸ: பரிணாேமாத்த:। ஸ்வர்கஸ்ைதர் புஜ்யேத நைர:। ௨௪।௰௰௩
தைதவ பாக: பாபாநாம்। புருைஷர் நரகஸ்திைத:। ௨௪।௰௰௪
புஜ்யேத தாவத் அகிலம்। யாவத் பாபம் க்ஷயம் கதம்। ௨௪।௰௰௪
யதா து பாபஸ்ய ஜய:। க்ஷயேத ீ ஸுக்ருதம் ததா। ௨௪।௰௰௫
ஸுபஸ்ய கர்மேணா வ்ருத்ெதௗ। க்ஷயம் ஆயாத்ய் அேஸாபநம்।
௨௪।௰௰௫
ஜேய யேதத புருஷஸ்। தஸ்மாத் ஸுக்ருதகர்மண:। ௨௪।௰௰௬
பாபம் கர்ம விநா ைநவ। நரகப்ராப்திர் இஷ்யேத। ௨௪।௰௰௬
ஜயாய த்வாதஸீ ஸஸ்தா। ந்ருணாம் ஸுக்ருதகர்மணாம்। ௨௪।௰௰௭
யாம் உேபாஷ்ய த்விஜஸ்ேரஷ்ட। ந யாதி நரகம் நர:। ௨௪।௰௰௭
பால்குநாமலபக்ஷஸ்ய। ஏகாதஸ்யாம் உேபாஷித:। ௨௪।௰௰௮
த்வாதஸ்யாம் து த்விஜஸ்ேரஷ்ட। பூஜேயந் மதுஸூதநம்। ௨௪।௰௰௮
ஏகாதஸ்யாம் ஸமுத்திஷ்டம்। விஷ்ேணார் நாமாநுகீர்தநம்। ௨௪।௰௰௯
பூஜாயாம் வாஸுேதவஸ்ய। குர்வதீ ஸுஸமாஹித:। ௨௪।௰௰௯
நேமா நாராயணாேயதி। வாச்யம் ச ஸ்வபதா நிஸி। ௰௨௪।௰௧௰௧௫
க்ேராத: ப்ரபஞ்ச ஈர்ஷ்யா ச। தம்ேபா ேலாபஸ் ச வர்ஜித:। ௨௪।௰௧
காேமா த்ேராேஹா மதஸ் சாபி। மாநமாத்ஸர்யம் ஏவ ச। ௨௪।௰௧௧
ஸர்வம் ஏதத் பரித்யஜ்ய। விஷ்ணுபக்ேதந ேசதஸா। ௨௪।௰௧௧
அஸாரதாம் ச ேலாேக அஸ்மிந்। ஸம்ஸாேர பாவேயந் மதிம்।
௨௪।௰௧௨

காமம் க்ேராதம் ச ேலாபம் ச। தம்பம் ஈர்ஷ்யாம் ச வர்ஜேயத்।
௰௨௪।௧௫
மாநத்ேராஹாதிேதாஷாம்ஸ் ச। ஸர்வாந் தநமேதாத்பூதாந்। ௰௨௪।௧௫
பாவேயத் விஷ்ணுபக்தாம்ஸ் ச। ஸம்ஸாராஸாரதாம் ததா। ௰௨௪।௧௫
ஏவம் பாவிதசித்ேதந। ப்ராணிநாம் ஹிதம் இச்சதா। ௰௨௪।௧௫
தைதவ குர்யாத் த்வாதஸ்யாம்। நாம்நாம் உச்சாரணம் த்விஜ।
௨௪।௰௧௨
யவபாத்ராணி பூர்வம் து। தத்யாந் மாஸசதுஷ்டயம்। ௨௪।௰௧௩
ஆஷாடாதித்விதீயம் து। பாரணம் யந் மஹாமேத। ௨௪।௰௧௩
தத்ராபி க்ருதபாத்ராணி। தத்யாச் ச்ரத்தாஸமந்வித:। ௨௪।௰௧௩
கார்த்திகாதிஷு மாேஸஷு। மாகந்ேதஷு ததா திலாந்। ௨௪।௰௧௪
விப்ராய தத்யாத் பாத்ரஸ்தாந்। ப்ரதிமாஸம் உேபாஷித:। ௨௪।௰௧௪
நாமத்ரயம் அேஸேஷஷு। மாஸி மாஸி திநத்வயம்। ௨௪।௰௧௫
தைதேவாச்சாரேயத் தத்யாத்। த்வாதஸ்யாம் ச யவாதிகம்। ௨௪।௰௧௫
ப்ரணம்ய ச ஹ்ருஷீேகஸம்। க்ருதபூஜ: ப்ரஸாதேயத்। ௨௪।௰௧௫
விஷ்ேணா நமஸ் ேத ஜகத: ப்ரஸூேத। ஓம் வாஸுேதவாய நேமா நமஸ்
ேத। ௨௪।௰௧௬
நாராயண த்வாம் ப்ரணேதா அஸ்ம்ய் அசிந்த்ய। ஜேயா அஸ்து ேம
ஸாஸ்வதபுண்யராேஸ:। ௨௪।௰௧௬
ப்ரஸதீ புண்யம் ஜயம் ஏது விஷ்ேணா। ஓம் வாஸுேதவ ர்த்திம் உைபது
புண்யம்। ௨௪।௰௧௭
நாராயேணாம் பூதிம் உைபது புண்யம்। ப்ரயாது சாேஸஷம் அகம் விநாஸம்।
௨௪।௰௧௭

விஷ்ேணா புண்ேயாத்பேவா ேம அஸ்து। வாஸுேதவாஸ்து ேம ஸுபம்।
௨௪।௰௧௮
நாராயணாஸ்து தர்ேமா ேம। ஜஹி பாபம் அேஸஷத:। ௨௪।௰௧௮
அேநகஜந்மஜநிதம்। பால்யெயௗவநவார்த்திேக। ௨௪।௰௧௯
புண்யம் விவ்ருத்திம் ஆயாது। யாது பாபம் து ஸம்க்ஷயம்। ௨௪।௰௧௯
ஆகாஸாதிஷு ஸப்தாெதௗ। ஸ்ேராத்ராெதௗ மஹதாதிஷு। ௨௪।௰௨
ப்ரக்ருெதௗ புருேஷ ைசவ। ப்ரஹ்மண்ய் அபி ச ஸ ப்ரபு:। ௨௪।௰௨
யைதக ஏவ ஸர்வாத்மா। வாஸுேதேவா வ்யவஸ்தித:। ௨௪।௰௨
ேதந ஸத்ேயந ேம பாபம்। நரகார்திப்ரதம் க்ஷயம்। ௨௪।௰௨௧
ப்ரயாது ஸுக்ருதஸ்யாஸ்து। மமாநுதிவஸம் ஜய:। ௨௪।௰௨௧
பாபஸ்ய ஹாநி: புண்யம் ச। வ்ருத்திம் அப்ேயத்ய் அநுத்தமாம்।
௨௪।௰௨௧
ஏவம் உச்சார்ய விப்ராய। தத்த்வா யத் கதிதம் தவ। ௨௪।௰௨௨
புஞ்ஜதீ க்ருதக்ருத்யஸ் து। பாரேண பாரேண கேத। ௨௪।௰௨௨
பாரணாந்ேத ச ேதவஸ்ய। ப்ரீணநம் ஸக்திேதா த்விஜ। ௨௪।௰௨௩
குர்வதாகிலபாஷண்ைடர் ீ । ஆலாபம் ச விவர்ஜேயத்। ௨௪।௰௨௩
இத்ய் ஏதத் கதிதம் தால்ப்ய। ஸுக்ருதஸ்ய ஜயாவஹா। ௨௪।௰௨௪
த்வாதஸீ நரகம் ம்ருத்ேயா। யாம் உேபாஷ்ய ந பஸ்யதி। ௨௪।௰௨௪
நாக்நேயா ந ச ஸஸ்த்ராணி। ந ச ேலாஹமூகா: ககா:। ௨௪।௰௨௫
நாரகாஸ் தம் ப்ரபாதந்ேத। மதிர் யஸ்ய ஜநார்தேந। ௨௪।௰௨௫
நாேமாச்சாரணமாத்ேரண। விஷ்ேணா: க்ஷீேணா அகஸம்சய:।
௨௪।௰௨௬
பவத்ய் அபாஸ்தபாபஸ்ய। நரேக கமநம் குத:। ௨௪।௰௨௬

நேமா நாராயண ஹேர। வாஸுேதேவதி கீர்தேயத்। ௨௪।௰௨௭
ந யாதி நரகம் மர்த்ய:। ஸம்க்ஷீணாேஸஷபாதக:। ௨௪।௰௨௭
தஸ்மாத் பாஷண்டிஸம்ஸர்கம்। அகுர்வந் த்வாதஸம்ீ இமாம்।
௨௪।௰௨௮
உேபாஷ்ய புண்ேயாபசய।ீ ந யாதி நரகம் நர:। ௨௪।௰௨௮
பாஷண்டிபிர் அஸம்ஸ்பர்ஸம்। அஸம்பாஷணம் ஏவ ச। ௨௫।௰௰௧
விஷ்ேணார் ஆராதநபைரர்। நைர: கார்யம் உேபாஷிைத:। ௨௫।௰௰௧
கிம் ப்ரூஹி லக்ஷணம் ேதஷாம்। யாத்ருஸாந் வர்ஜேயத் வ்ரதீ।
௨௫।௰௰௨
கதம்சித் யதி ஸம்லாப । தர்ஸநஸ்பர்ஸநாதிகம்। ௨௫।௰௰௨
உேபாஷிதாநாம் பாஷண்ைடர்। நராணாம் விப்ர ஜாயேத। ௨௫।௰௰௩
கிம் தத்ர வத கர்தவ்யம்। ேயநாகண்டம் வ்ரதம் பேவத்। ௨௫।௰௰௩
ஸ்ருதிஸ்ம்ருத்யுதிதம் தர்மம்। வர்ணாஸ்ரமவிபாகஜம்। ௨௫।௰௰௪
உல்லங்க்ய ேய ப்ரவர்தந்ேத। ஸ்ேவச்சயா கூடயுக்திபி:। ௨௫।௰௰௪
விகர்மாபிரதா மூடா। யுக்திப்ராகல்ப்யதுர்மதா:। ௨௫।௰௰௫
பாஷண்டிநஸ் ேத து:ஸலா ீ । நரகார்ஹா நராதமா:। ௨௫।௰௰௫
தாம்ஸ் து பாஷண்டிந: பாபாந்। விகர்மஸ்தாம்ஸ் ச மாநவாந்।
௨௫।௰௰௬
ைவடாலவ்ரதிகாம்ஸ் ைசவ। நித்யம் ஏவ து நாலேபத்। ௨௫।௰௰௬
ஸம்பாஷ்ையதாஞ் ஸுசிஷதம்। சிந்தேயத் அச்யுதம் புத:। ௨௫।௰௰௭
இதம் ேசாதாஹேரத் ஸம்யக்। க்ருத்வா தத்ப்ரவணம் மந:। ௨௫।௰௰௭
ஸாரீரம் அந்த:கரேணாபகாதம்। வாசஸ் ச விஷ்ணுர் பகவாந் அேஸஷம்।
௨௫।௰௰௮

ஸமம் நயத்வ் அஸ்து மேமஹ ஸர்ம। பாபாத் அநந்ேத ஹ்ருதி
ஸம்நிவிஷ்ேட। ௨௫।௰௰௮
அந்த:ஸுத்திம் பஹி:ஸுத்திம்। ஸுத்ேதா அந்தர் மம ேயா அச்யுத:।
௨௫।௰௰௯
ஸ கேராத்வ் அமேல தஸ்மிஞ்। ஸுசிர் ஏவாஸ்மி ஸர்வதா।
௨௫।௰௰௯
பாஹ்ேயாபகாதாத் அநேகா। ேபாத்தா ச பகவாந் அஜ:। ௨௫।௰௧
ஸுத்திம் நயத்வ் அநந்தாத்மா। விஷ்ணுஸ் ேசதஸி ஸம்ஸ்தித:।
௨௫।௰௧
ஏதத் ஸம்பாஷ்ய ஜப்தவ்யம்। பாஷண்டிபிர் உேபாஷிைத:। ௨௫।௰௧௧
நம: ஸுசிஷேதத்ய் உக்த்வா। ஸூர்யம் பஸ்ேயத வக்ஷிைத ீ :।
௨௫।௰௧௧
ஸ்ரூயேத ச புரா மர்த்யா:। ஸ்ேவச்சயா ஸ்வர்ககாமிந:। ௨௫।௰௧௨
பபூவுர் அநகா: ஸர்ேவ। ஸ்வதர்மபரிபாலநாத்। ௨௫।௰௧௨
ேதவாஸ் ச பலிேநா மர்த்ையர்। வர்ணகர்மண்ய் அநுவ்ரைத:।
௨௫।௰௧௩
யஜ்ஞாத்யயநதாேநஷு। வர்தமாைநஸ் ச மாநைவ:। ௨௫।௰௧௩
ைதேதயாஸ் ச பராபாவம்। அதுஷ்டாவ் அஸுரா யயு:। ௨௫।௰௧௪
ததஸ் ச ஷண்ேடா மர்கஸ் ச। ைதத்ேயந்த்ராணாம் புேராஹிெதௗ।
௨௫।௰௧௪
சக்ரது: கர்ம ேதவாநாம்। விநாஸாயாதிபஷணம் ீ । ௨௫।௰௧௪
தத்ேராத்பந்ேநா அதிக்ருஷ்ணாங்கஸ்। தம:ப்ராேயா அதிதாருண:।
௨௫।௰௧௫
தம்பாதார: ஸாட்யஸாேரா। நித்ராப்ரக்ருதிர் உல்வண:। ௨௫।௰௧௫

மஹாேமாஹ இதி க்யாத:। க்ருத்யரூேபா விபஷணீ :। ௨௫।௰௧௬
சதுர்தா ஸ விபக்தஸ் ச। தாபாம் அத்ர மஹீயேத। ௨௫।௰௧௬
ேவதேதவத்விஜாதீநாம்। ஏகாம்ேஸந ஸ நிந்தநம்। ௨௫।௰௧௭
கேராத்ய் அந்ேயந ந ரதிம்। ேயாககர்மஸு விந்ததி। ௨௫।௰௧௭
விகர்மண்ய் அபேரணாபி। ஸம்ேயாஜயதி மாநவாந்। ௨௫।௰௧௮
ஜ்ஞாநாபஹாரம் அந்ேயந। கேராதி த்விஜஸத்தம। ௨௫।௰௧௮
ஜ்ஞாநபுத்த்யா ததாஜ்ஞாநம்। க்ருஹ்ணாத்ய் அஜ்ஞாநேமாஹித:।
௨௫।௰௧௯
ேவதவாதவிேராேதந। யா கதா ஸாஸ்ய ேராசேத। ௨௫।௰௧௯
ஏவம் ஸ து மஹாேமாஹ:। ஷண்டமர்ேகாபபாதித:। ௨௫।௰௨
தம்பாதிதூஷிேதா அதர்ம । ஸ்வரூேபா அதிபயம்கர। ௨௫।௰௨
ஸ ேலாகாந் விவிேதாபாையர்। ேலாேகஷ்வ் ஏவ வ்யவஸ்தித:।
௨௫।௰௨௧
ேமாஹாபிபவநி:ஸாராண்। கேராதி த்விஜஸத்தம। ௨௫।௰௨௧
தந்ேமாஹிதாநாம் அசிராத்। விேவேகா யாதி ஸம்க்ஷயம்। ௨௫।௰௨௨
க்ஷீணஜ்ஞாநா விகர்மாணி। குர்வந்த்ய் அஹரேஹா த்விஜ। ௨௫।௰௨௨
நிஜவர்ணாத்மகம் தர்மம்। பரித்யஜ்ய விேமாஹிதா:। ௨௫।௰௨௩
தர்மபுத்த்யா தத: பாபம்। குர்வந்த்ய் அஜ்ஞாநதுர்மதா:। ௨௫।௰௨௩
ஜ்ஞாநாவேலபஸ் தத்ைரவ। ததஸ் ேதஷாம் ப்ரஜாயேத। ௨௫।௰௨௪
ஸுஹ்ருத்பிர் வார்யமாணாஸ் ேத। பண்டிைதஸ் ச தயாலுபி:।
௨௫।௰௨௪
ப்ரயச்சந்த்ய் உத்தரம் ம்ஊடா:। கூடயுக்திஸமந்விதம்। ௨௫।௰௨௪
ததஸ் ேத ஸ்வயம் ஆத்மாநம்। அந்யம் சால்பமதிம் நரம்। ௨௫।௰௨௫

விகர்மணா ேயாஜயந்தஸ்। ச்யவயந்தி ஸ்வதர்மத:। ௨௫।௰௨௫
பாஷண்டிேநா துராசாரா:। பராந்நகுணவாதிந:। ௨௫।௰௨௬
அஸம்ஸ்க்ருதாந்நேபாக்தாேரா। வ்ராத்யா: ஸம்ஸ்காரவர்ஜிதா:।
௨௫।௰௨௬
பாஷண்டா: பாபஸம்கல்பா। தாம்பிகா: ஸடபுத்தய:। ௨௫।௰௨௭
வர்ணஸம்கரகர்தாேரா। மாயாவ்யாேஜாபஜவிந ீ :। ௨௫।௰௨௭
நி:ெஸௗசா வக்ரமதேயா। நாந்யதஸ்தீதிவாதிந:। ௨௫।௰௨௭
ஏவம்விதாஸ் ேத ஸந்மார்காத்। ேவதப்ேராக்தாத் பஹி:ஸ்திதா:।
௨௫।௰௨௮
க்ரியாகலாபம் நிந்தந்த। க்ருக்யஜு:ஸாமஸம்ஜ்ஞிதம்। ௨௫।௰௨௮
ஆத்மாநம் ச பராம்ஸ் ைசவ। குர்வந்தி நரகஸ்திதாந்। ௨௫।௰௨௮
ேதஷாம் தர்ஸநஸம்பாஷ । ஸ்பர்ஸநாநி நைர: ஸதா। ௨௫।௰௨௯
பரித்யாஜ்யாநி த்ருஷ்ேட ச। ப்ேராக்த: ஸம்பாஷேண ச ய:। ௨௫।௰௨௯
ஸம்ஸ்பர்ேஸ ச புத: ஸ்நாத்வா। ஸுசி: ஸுசிஷதம் ஸ்மேரத்।
௨௫।௰௨௯
பவத்ய் அத: ஸைதைவஷாம்। ஆலாபஸ்பர்௧ஸநம் த்யேஜத்। ௨௫।௰௩
புண்யகாேமா மஹாபாக:। கிம் புநர் யத் உேபாஷித:। ௨௫।௰௩
யேதா ஹி நிந்திேத கர்மண்ய்। அப்யாேஸா ரதிர் ஏவ ச। ௨௫।௰௩௧
பாஷண்டிநாம் அேஸஷாணாம்। அப்ரீதிர் ேவதகர்மணி। ௨௫।௰௩௧
ேத ஹ்ய் அேதாகாமிந: ப்ேராக்தா। ஆஸுரம் பாவம் ஆஸ்ரிதா:।
௨௫।௰௩௧
அப்ராப்திர் ந ததா து:கம்। ஐஸ்வர்யாேதர் த்விேஜாத்தம। ௨௬।௰௰௧
யதா மேநாரைதர் லப்ைதர்। விச்யுதிர் தர்மஹாநிஜா। ௨௬।௰௰௧

ஐஸ்வர்யாத் வித்தேதா வாபி। ஸம்தேதர் ேதவேலாகத:। ௨௬।௰௰௨
அபஷ்டாத் ீ அந்யேதா வாபி। பதாத் ேயந ந விச்யுதிம்। ௨௬।௰௰௨
ப்ராப்ேநாதி புருேஷா ப்ரஹ்மந்। நாரீ வாபுண்யஸம்க்ஷயாத்। ௨௬।௰௰௩
தந் மமாசŠவ விப்ரர்ேஷ। து:கம் ஏப்ேயா ஹி விச்யுதி:। ௨௬।௰௰௩
ஸத்யம் ஏதந் மஹாபாக। து:கம் ப்ராப்தஸ்ய ஸம்க்ஷய:। ௨௬।௰௰௪
ஐஸ்வர்யாத் அத வித்தஸ்ய। பந்துவர்கஸுகஸ்ய வா। ௨௬।௰௰௪
தத் ஏதச் ச்ரூயதாம் தால்ப்ய। யதா ேநஷ்டாத் பரிச்யுதி:। ௨௬।௰௰௫
ஸர்காேதர் ஜாயேத ஸம்யக்। உபவாஸவதாம் ஸதாம்। ௨௬।௰௰௫
த்வாதஸர்க்ஷாணி விப்ரர்ேஷ। ப்ரதிமாஸம் து யாநி ைவ। ௨௬।௰௰௬
தந்நாமாந்ய் அச்யுதம் ேதஷு। ஸம்யக் ஸம்பூஜேயத் புத:। ௨௬।௰௰௬
புஷ்ைபர் தூைபஸ் ததாம்ேபாபிர்। அபஷ்ைடர் ீ அபைரஸ் ததா।
௨௬।௰௰௭
ஆதித: க்ருத்திகாம் க்ருத்வா। கார்த்திேக முநிபுங்கவ। ௨௬।௰௰௭
ைநேவத்யம் க்ருஸரம் பூர்வம்। அந்நம் மாஸசதுஷ்டயம்। ௨௬।௰௰௮
நிேவதேயத் கார்த்திகாதி। ஸம்யாவம் ச தத: பரம்। ௨௬।௰௰௮
ஆஷாடாெதௗ ச ேதவாய। பாயஸம் ைவ நிேவதேயத்। ௨௬।௰௰௯
ேதைநவாந்ேநந விப்ரர்ேஷ। ப்ராஹ்மணாந் ேபாஜேயத் புத:। ௨௬।௰௰௯
பஞ்சகவ்யஜலஸ்நாதஸ்। தஸ்ையவ ப்ராஸநாச் சுசி:। ௨௬।௰௧
ைநேவத்யம் ஸ்வயம் அஸ்நீயாந்। நக்தம் ஸம்பூஜிேத அச்யுேத।
௨௬।௰௧
ஏவம் ஸம்வத்ஸரஸ்யாந்ேத। தத: ஸுப்ேதாத்திேத அச்யுேத।
௨௬।௰௧௧
ஸம்யக் ஸம்பூஜ்ய விப்ரர்ேஷ। தம் ஏவ புருேஷாத்தமம்। ௨௬।௰௧௧

ப்ரணம்ய ப்ரார்தேயத் வித்வாஞ்। ஸுசி: ஸ்நாேதா யதாவிதி। ௨௬।௰௧௧
நேமா நமஸ் ேத அச்யுத ஸம்க்ஷேயா அஸ்து। பாபஸ்ய வ்ருத்திம்
ஸமுைபது புண்யம்। ௨௬।௰௧௨
ஐஸ்வர்யவித்தாதி ஸதாக்ஷயம் ேம। அக்ஷயா ச ேம ஸம்ததிர்
அச்யுதாஸ்து। ௨௬।௰௧௨
யதாச்யுதஸ் த்வம் பரத: பரஸ்மாத்। ஸ ப்ரஹ்மபூதாத் பரத: பராத்மந்।
௨௬।௰௧௩
ததாச்யுதம் ேம குரு வாஞ்சிதம் யந்। மயா பதம் பாபஹராப்ரேமய।
௨௬।௰௧௩
அச்யுதாநந்த ேகாவிந்த। ப்ரஸதீ யத் அபப்ஸிதம் ீ । ௨௬।௰௧௪
தத் அக்ஷயம் அேமயாத்மந்। குருஷ்வ புருேஷாத்தம। ௨௬।௰௧௪
ஏவம் அந்ேத ஸமப்யர்ச்ய। ப்ரார்தயித்வா ததாஸிஷ:। ௨௬।௰௧௫
யதாவந் முநிஸார்தூல। ச்யுதிம் நாப்ேநாதி மாநவ:। ௨௬।௰௧௫
ஸம்தேத: ஸ்வர்கவித்தாேதர்। ஐஸ்வர்யஸ்ய ததா முேந। ௨௬।௰௧௬
யத் வாபிமதம் அத்யந்தம்। தேதா ந ச்யவேத நர:। ௨௬।௰௧௬
தஸ்மாத் ஸர்வப்ரயத்ேநந। மாஸநக்ஷத்ரபூஜேந। ௨௬।௰௧௭
யேததாக்ஷயகாமஸ் து। ஸைதவ முநிபுங்கவ। ௨௬।௰௧௭
அத்ராபி ஸ்ரூயேத ஸித்தா। காசித் ஸ்வர்ேக மஹாவ்ரதா। ௨௭।௰௰௧
நாரீ தேபாதநா பூத்வா। ப்ரக்யாதா ஸாம்பராயண।ீ ௨௭।௰௰௧
ஸமஸ்தஸம்ேதஹஹரா। ஸதா ஸ்வர்ெகௗகஸாம் ஹி ஸா।
௨௭।௰௰௧
கஸ்யசித் த்வ் அத காலஸ்ய। ேதவராஜ: ஸதக்ரது:। ௨௭।௰௰௨
பூர்ேவந்த்ரசரிதம் ப்ரஹ்மந்। பப்ரச்ேசதம் ப்ருஹஸ்பதிம்। ௨௭।௰௰௨

பூர்ேவந்த்ரா பரத: பூர்ேவ। ேய பபூவு: ஸுேரஸ்வரா:। ௨௭।௰௰௩
ேதஷாம் சரிதம் இச்சாமி। ஸ்ேராதும் ஆங்கிரஸாம் வர। ௨௭।௰௰௩
ஏவம் உக்தஸ் ததா ேதந। ேதேவந்த்ேரணாமலத்யுதி:। ௨௭।௰௰௪
ப்ராஹ தர்மப்ருதாம் ஸ்ேரஷ்ட:। பரமர்ஷிர் ப்ருஹஸ்பதி:। ௨௭।௰௰௪
நாஹம் சிரந்தநாந் ேவத்மி। ேதவராஜ ஸுேரஸ்வராந்। ௨௭।௰௰௫
ஆத்மந: ஸமகாலீநம்। மாம் அைவஹி ஸுேரஸ்வர। ௨௭।௰௰௫
தத: பப்ரச்ச ேதேவந்த்ர:। ேகா அஸ்மாபிர் முநிபுங்கவ। ௨௭।௰௰௬
ப்ரஷ்டவ்ேயா அத்ர மஹாபாக। க்ருதாதிவஸதிர் திவி। ௨௭।௰௰௬
ப்ருஹஸ்பதிஸ் சிரம் த்யாத்வா। புநர் ஆஹ ஸசீபதிம்। ௨௭।௰௰௭
தபஸ்விநீம் மஹாபாகாம்। ஸ்ம்ருத்வாெஸௗ ஸாம்பராயணம்ீ ।
௨௭।௰௰௭
ந ேதவா ந ச கந்தர்வா। ந சாந்ேய சிரஸம்ஸ்திதா:। ௨௭।௰௰௮
சிரந்தநாநாம் சரிேதஷ்வ்। அபிஜ்ஞா த்ரிதேஸஸ்வர। ௨௭।௰௰௮
ஏைகவ சிரகாலஜ்ஞா। தர்மஜ்ஞா ஸக்ர ேகவலம்। ௨௭।௰௰௯
ஜாநாத்ய் அகிலேதேவந்த்ர । சரிதம் ஸாம்பராயண।ீ ௨௭।௰௰௯
இத்ய் உக்தஸ் ேதந ேதேவந்த்ர:। ெகௗதூஹலஸமந்வித:। ௨௭।௰௧
யெயௗ யத்ர மஹாபாகா। தாபஸீ ஸாம்பராயண।ீ ௨௭।௰௧
ஸா ெதௗ த்ருஷ்ட்வா ஸமாயாெதௗ। ேதவராஜப்ருஹஸ்பதீ। ௨௭।௰௧௧
ஸம்யக் அர்க்ேயந ஸம்பூஜ்ய। ப்ரணிபத்ய ஸுபவ்ரதா। ௨௭।௰௧௧
நேமா அஸ்து ேதவராஜாய। தைதவாங்கிரேஸ நம:। ௨௭।௰௧௨
யத் வாம் கார்யம் மஹாபாெகௗ। ஸகலம் தத் இேஹாச்யதாம்।
௨௭।௰௧௨
ஆவாம் அப்யாகெதௗ ப்ரஷ்டும்। த்வாம் அத்ராதிவிேவகிநீம்। ௨௭।௰௧௩

யச் ச கார்யம் மஹாபாேக। தத் ப்ருஷ்டா கதேயஹ ெநௗ। ௨௭।௰௧௩
யதி ஸ்மரஸி கல்யாணி। பூர்ேவந்த்ரசரிதாநி ெநௗ। ௨௭।௰௧௪
ததாக்யாஹி மஹாபாேக। ேதேவந்த்ரஸ்ய குதூஹலாத்। ௨௭।௰௧௪
யதி ஸக்யம் மயா கர்தும்। தத் கரிஷ்ேய விம்ருஷ்யது। ௰௨௭।௧௬
ேயா ைவ பூர்வ: ஸுேரந்த்ரஸ்ய। ததஸ் ச ப்ரதேமா ஹி ய:। ௨௭।௰௧௫
தஸ்மாத் பூர்வதேரா யஸ் ச। தஸ்யாபி ப்ரதமாஸ் ச ேய। ௨௭।௰௧௫
ேதஷாம் பூர்வதரா ேய ச। ேவத்மி தாந் அகிலாந் அஹம்। ௨௭।௰௧௬
ேதஷாம் ச சரிதம் க்ருத்ஸ்நம்। ஜாநாம்ய் ஆங்கிரஸாம் வர। ௨௭।௰௧௬
மந்வந்தராண்ய் அேநகாநி। ஸ்ருஷ்டிம் ச த்ரிதிெவௗகஸாம்। ௨௭।௰௧௭
ஸப்தர்ஷீந் ஸுபஹூந் ேதவ। மநூநாம் ச ஸுதாந் ந்ருப। ௨௭।௰௧௭
தத் ப்ருச்ச த்வம் வதாம்ய் ஏஷா। பூர்ேவந்த்ரசரிதம் முேந। ௨௭।௰௧௭
ஏவம் உக்ேத ததஸ் தாப்யாம்। ப்ருஷ்டா ஸா ஸாம்பராயண।ீ
௨௭।௰௧௮
யதாவத் ஆசஷ்ட தேயா:। பூர்ேவந்த்ரசரிதம் த்விஜ। ௨௭।௰௧௮
ஸ்வாயம்புேவ யஸ் து மெநௗ। மெநௗ ஸ்வாேராசிேஷ து ய:।
௨௭।௰௧௯
உத்தேம தாமேஸ ைசவ। ைரவேத சாக்ஷுேஷ ததா। ௨௭।௰௧௯
ேயா ேயா பபூவ ேதேவந்த்ரஸ்। தஸ்ய தஸ்ய தபஸ்விநீ। ௨௭।௰௨
தேயார் ஜகாத சரிதம்। யதாவச் சாம்பராயண।ீ ௨௭।௰௨
தத: ெகௗதூஹலபேரா। ேதவராட் தாம் தபஸ்விநீம்। ௨௭।௰௨௧
உவாச ஜாநாஸி கதம்। த்வம் ஏதச் சாம்பராயணி। ௨௭।௰௨௧
ஸர்வ ஏவ ஹி ேதேவந்த்ரா:। ஸ்வர்கஸ்தா ேய மநீஷிண:। ௨௭।௰௨௨
பபூவுர் ஏதச் சரிதம்। ஏேதஷாம் ேவத்மி ேதந ைவ। ௨௭।௰௨௨

கிம் க்ருதம் வத தர்மஜ்ேஞ। த்வயா ேயேநயம் அக்ஷயா। ௨௭।௰௨௩
ஸ்வர்ேலாேக வஸதி: ப்ராப்தா। யதா நாந்ேயந ேகநசித்। ௨௭।௰௨௩
அேஹா ஸர்வவ்ரதாநாம் தத்। உேபாஷிதம் மஹத் வ்ரதம்। ௨௭।௰௨௪
ப்ரதாநதரம் அத்யர்தம்। ஸ்வர்கஸம்வாஸதம் மதம்। ௨௭।௰௨௪
சரிதம் ச மயா ேதஷாம்। ஸ்ருதம் த்ருஷ்டம் தைதவ ச। ௰௨௭।௧௭
ஏவம் உக்தா ததஸ் ேதந। ேதேவந்த்ேரண யஸஸ்விநீ। ௨௭।௰௨௫
ப்ரத்யுவாச மஹாபாகா। யதாவச் சாம்பராயண।ீ ௨௭।௰௨௫
மாஸர்ேக்ஷஷ்வ் அச்யுேதா ேதவ:। ப்ரதிமாஸம் ஸுேரஸ்வர।
௨௭।௰௨௬
யேதாக்தவ்ரதயா ஸம்யக்। ஸப்த வர்ஷாணி பூஜித:। ௨௭।௰௨௬
தஸ்ேயயம் கர்மேணா வ்யுஷ்டிர்। அச்யுதாராதநஸ்ய ேம। ௨௭।௰௨௭
ேதவேலாகாத் அபிமதா। ேதவராஜ யத் அச்யுதி:। ௨௭।௰௨௭
ஸ்வர்கம் த்ரவ்யமையஸ்வர்யம்। ஸம்ததிம் வாபி ேயா அச்யுதாம்।
௨௭।௰௨௮
நேரா வாஞ்சதி ேதேநத்தம்। ேதாஷணேயா ீ அச்யுத: ப்ரபு:। ௨௭।௰௨௮
ஏதத் ேத பூர்வேதேவந்த்ர । சரிதம் ஸகலம் மயா। ௨௭।௰௨௯
ஸ்வர்கவாஸாக்ஷயத்வம் ச। மாஸர்க்ஷாச்யுதபூஜநாத்। ௨௭।௰௨௯
யதாவத் கதிதம் ேதவ। ப்ருச்சதஸ் த்ரிதேஸஸ்வர। ௨௭।௰௩
தர்மார்தகாமேமாக்ஷாம்ஸ் து। வாஞ்சதாம் விபுதாதிப। ௨௭।௰௩
விஷ்ேணார் ஆராதநாந் நாந்யத்। பரமம் ஸித்திகாரணம்। ௨௭।௰௩
தஸ்யாஸ் தத் வசநம் ஸ்ருத்வா। ேதவராஜப்ருஹஸ்பதீ। ௨௭।௰௩௧
தாம் தேதத்ய் ஊசது: ஸாத்வம்ீ । ேசரதுஸ் சாபி தத் வ்ரதம்। ௨௭।௰௩௧

தஸ்மாத் தால்ப்ய ப்ரயத்ேநந। ப்ரதிமாஸம் ஸமாஹித:। ௨௭।௰௩௨
மாஸர்க்ஷாச்யுதபூஜாயாம்। பேவதாஸ் தந்மநா: ஸதா। ௨௭।௰௩௨
பகவந் ப்ராணிந: ஸர்ேவ। விஷேராகாத்யுபத்ரைவ:। ௨௮।௰௰௧
துஷ்டக்ரேஹாபகாைதஸ் ச। ஸர்வகாலம் உபத்ருதா:। ௨௮।௰௰௧
ஆபிசாருகக்ருத்யாபி:। ஸ்பர்ஷேராைகஸ் ச தாருைண:। ௨௮।௰௰௨
ஸதா ஸம்பட்யமாநாஸ் ீ ேத। திஷ்டந்தி முநிஸத்தம। ௨௮।௰௰௨
ேயந கர்மவிபாேகந। விஷேராகாத்யுபத்ரவா:। ௨௮।௰௰௩
ந பவந்தி ந்ருணாம் தந் ேம। யதாவத் வக்தும் அர்ஹஸி। ௨௮।௰௰௩
வ்ரேதாபவாைஸர் ையர் விஷ்ணுர்। நாந்யஜந்மநி பூஜித:। ௨௮।௰௰௪
ேத நரா முநிஸார்தூல। க்ரஹேராகாதிபாகிந:। ௨௮।௰௰௪
ையர் ந தத்ப்ரவணம் சித்தம்। ஸர்வைதவ நைர: க்ருதம்। ௨௮।௰௰௫
விஷக்ரஹஜ்வராணாம் ேத। மநுஷ்யா தால்ப்ய பாஜநா:। ௨௮।௰௰௫
ஆேராக்யம் பரமாம் க்ருத்திம்। மநஸா யத் யத் இச்சதி। ௨௮।௰௰௬
தத் தத் ஆப்ேநாத்ய் அஸம்திக்தம்। பரத்ராச்யுதேதாஷக்ருத்। ௨௮।௰௰௬
நாதீந் ப்ராப்ேநாதி ந வ்யாதீந்। ந விஷக்ரஹபந்தநம்। ௨௮।௰௰௭
க்ருத்யாஸ்பர்ஸபயம் வாபி। ேதாஷிேத மதுஸூதேந। ௨௮।௰௰௭
ஸர்வதுஷ்டஸமஸ் தஸ்ய। ெஸௗம்யாஸ் தஸ்ய ஸதா க்ரஹா:।
௨௮।௰௰௮
ேதவாநாம் அப்ரத்ருஷ்ேயா அெஸௗ। துஷ்ேடா யஸ்ய ஜநார்தந:।
௨௮।௰௰௮
ய: ஸம: ஸர்வபூேதஷு। யதாத்மநி ததாபேர। ௨௮।௰௰௯
உபவாதாதிநா ேதந। ேதாஷ்யேத மதுஸூதந:। ௨௮।௰௰௯
ேதாஷிேத தத்ர ஜாயந்ேத। நரா: பூக்ருணமேநாரதா:। ௨௮।௰

அேராகா: ஸுகிேநா ேபாக । ேபாக்தாேரா முநிஸத்தம। ௨௮।௰௧
ந ேதஷாம் ஸத்ரேவா ைநவ। ஸ்பர்ஸேராகாபிசாருகா:। ௨௮।௰௧௧
க்ரஹேராகாதிகம் வாபி। பாபகார்யம் ந ஜாயேத। ௨௮।௰௧௧
அவ்யாஹதாநி க்ருஷ்ணஸ்ய। சக்ராதீந்ய் ஆத்மயுதாநி தம்। ௨௮।௰௧௨
ரக்ஷந்தி ஸகலாபத்ப்ேயா। ேயந விஷ்ணுர் உபாஸித:। ௨௮।௰௧௨
அநாராதிதேகாவிந்தா। ேய நரா து:கபாகிந:। ௨௮।௰௧௩
ேதஷாம் து:காபிபூதாநாம்। கர்தவ்யம் யத் தயாலுபி:। ௨௮।௰௧௩
பஸ்யத்பி: ஸர்வபூதஸ்தம்। வாஸுேதவம் மஹாமுேந। ௨௮।௰௧௪
ஸமத்ருஷ்டிபிர் ஈேஸஸம்। தந் மம ப்ரூஹ்ய் அேஸஷத:। ௨௮।௰௧௪
குஸமூலஸ்திேதா ப்ரஹ்மா। குஸமத்ேய ஜநார்தந:। ௰௨௮।௧௮।௰௰௨
குஸாக்ேர ஸம்கரம் வித்யாத்। த்ரேயா ேதவா வ்யவஸ்திதா:।
௰௨௮।௧௮।௰௰௩
க்ருஹீத்வா ச ஸ மூலாக்ராந்। குஸாஞ் ஸுத்தாந் உபஸ்ப்ருேஸத்।
௰௨௮।௧௮।௰௰௪
மார்ஜேயத் ஸர்வகாத்ராணி। குஸாக்ைரர் தால்ப்ய ஸாந்திக்ருத்।
௰௨௮।௧௮।௰௰௫
ஸரீேர யஸ்ய திஷ்டந்தி। குஸஸ்தஜலபிந்தவ:। ௰௨௮।௧௮।௰௰௬
நஸ்யந்தி தஸ்ய பாபாநி। கருேடைநவ பந்நகா:। ௰௨௮।௧௮।௰௰௭
விஷ்ணுபக்தா விேஸேஷண। ॥॥சித்கதமாநஸ:। ௰௨௮।௧௮।௰௰௮
ேராகக்ரஹவிஷார்தாநாம்। குர்யாச் சாந்திம் இமாம் ஸுபாம்।
௰௨௮।௧௮।௰௰௯
நாரஸிம்ஹம் ஸமப்யர்ச்ய। ஸுெசௗ ேதேஸ குஸாஸேந।
௰௨௮।௧௮।௰௧௰

மந்த்ைரர் ஏைதர் யதா லிங்கம்। குர்யாத் திக்பந்தம் ஆத்மந:।
௰௨௮।௧௮।௰௧௧
வாராஹம் நாரஸிம்ஹம் ச। வாமநம் விஷ்ணும் ஏவ ச।
௰௨௮।௧௮।௰௧௨
த்யாத்வா ஸமாஹிேதா பூத்வா। திக்ஷு நாமாநி விந்யாேஸத்।
௰௨௮।௧௮।௰௧௩
பூர்ேவ நாராயண: பாது। வாரிஜாக்ஷஸ் து தக்ஷிேண। ௰௨௮।௧௮।௰௧௪
ப்ரத்யும்ந: பஸ்சிமஸ்யாம் து। வாஸுேதவஸ் தேதாத்தேர।
௰௨௮।௧௮।௰௧௫
ஈஸாந்யாம் அவதாத் விஷ்ணுர்। ஆக்ேநய்யாம் ச ஜநார்தந:।
௰௨௮।௧௮।௰௧௬
ைநர்ருத்யாம் பத்மநாபஸ் ச। வாயவ்யாம் ைசவ மாதவ:।
௰௨௮।௧௮।௰௧௭
ஊர்த்வம் ேகாவர்தநதேரா। அதராயாம் த்ரிவிக்ரம:। ௰௨௮।௧௮।௰௧௮
ஏதாப்ேயா தஸதிக்ப்யஸ் து। ஸர்வத: பாது ேகஸவ:। ௰௨௮।௧௮।௰௧௯
அங்குஷ்டாக்ேர து ேகாவிந்தம்। தர்ஜந்யாம்ஸ் து மஹீதரம்।
௰௨௮।௧௮।௰௨௰
மத்யமாயாம் ஹ்ருஷீேகஸம்। அநாமிக்யாம் த்ரிவிக்ரமம்।
௰௨௮।௧௮।௰௨௧
கணிஷ்டாயாம் ந்யேஸத் விஷ்ணும்। கரமத்ேய து மாதவம்।
௰௨௮।௧௮।௰௨௨
ஏவம் ந்யாஸம் புரா க்ருத்வா। பஸ்சாத் அங்ேகஷு விந்யேஸத்।
௰௨௮।௧௮।௰௨௩
ஸிகாயாம் ேகஸவம் ந்யஸ்ய। மூர்த்நி நாராயணம் ந்யேஸத்।
௰௨௮।௧௮।௰௨௪

சக்ஷுர்மத்ேய ந்யேஸத் விஷ்ணும்। கர்ணேயார் மதுஸூதநம்।
௰௨௮।௧௮।௰௨௫
த்ரிவிக்ரமம் கபாலஸ்தம்। வாமநம் கர்ணமூலேயா:। ௰௨௮।௧௮।௰௨௬
தாேமாதரம் தந்தவக்த்ெரௗ। வாராஹம் சிபுேக ந்யேஸத்।
௰௨௮।௧௮।௰௨௭
உத்தேராஷ்ேட ஹ்ருஷீேகஸம்। பத்மநாபம் ததாதேர। ௰௨௮।௧௮।௰௨௮
ஜிஹ்வாயாம் வாஸுேதவம் ச। தால்வேக கருடத்வஜம்।
௰௨௮।௧௮।௰௨௯
ைவகுண்டம் கந்டமத்யஸ்தம்। அநந்தம் நாஸிேகாபரி। ௰௨௮।௧௮।௰௩௰
தக்ஷிேண து புேஜ விப்ர। விந்யேஸத் புருேஷாத்தமம்। ௰௨௮।௧௮।௰௩௧
வாமபுேஜ மஹாபாகம்। ராகவம் ஹ்ருதி விந்யேஸத்। ௰௨௮।௧௮।௰௩௨
பதாம்பரம் ீ ஸர்வதெநௗ। ஹரிம் நாெபௗ து விந்யேஸத்।
௰௨௮।௧௮।௰௩௩
கேர து தக்ஷிேண விப்ர। தத: ஸம்கர்ஷணம் ந்யேஸத்।
௰௨௮।௧௮।௰௩௪
வாேம விப்ர ஹரிம் வித்யாத்। கடிமத்ேய அபராஜிதம்।
௰௨௮।௧௮।௰௩௫
ப்ருஷ்ேட க்ஷிதிதரம் வித்யாத்। அச்யுதம் ஸ்கந்தேயார் அபி।
௰௨௮।௧௮।௰௩௬
மாதவம் பாஹு குெக்ஷௗ து। தக்ஷிேண ேயாகஸாயிநம்।
௰௨௮।௧௮।௰௩௭
ஸ்வயம்புவம் ேமட்ரமத்ேய। ஊருப்யாம் து கதாதரம்। ௰௨௮।௧௮।௰௩௮
சக்ரிணம் ஜாநுமத்ேய து। ஜங்கேயார் அச்யுதம் ந்யேஸத்।
௰௨௮।௧௮।௰௩௯

குல்பேயார் நரஸிம்ஹம் ச। பாதப்ருஷ்ேட அமிெதௗஜஸம்।
௰௨௮।௧௮।௰௪௰
ஸ்ரீதரம் சாங்குலீஷு ஸ்யாத்। பத்மாக்ஷம் ஸர்வஸந்திஷு।
௰௨௮।௧௮।௰௪௧
ேராமகூேப குடாேகஸம்। க்ருஷ்ணம் ரக்தாஸ்திமஜ்ஜாஸு।
௰௨௮।௧௮।௰௪௨
மேநாபுத்த்ேயார் அஹம்காேரஷ்வ்। ஏவம் சித்ேத ஜநார்தநம்।
௰௨௮।௧௮।௰௪௩
நேகஷு மாதவம் ைசவ। ந்யேஸத் பாததேல அச்யுதம்।
௰௨௮।௧௮।௰௪௪
ஏவம் ந்யாஸவிதிம் க்ருத்வா। ஸாக்ஷாந் நாராயேணா பேவத்।
௰௨௮।௧௮।௰௪௫
தநுர் விஷ்ணுமயீ தஸ்ய। யாவத் கிம்சிந் ந பாஷேத। ௰௨௮।௧௮।௰௪௬
ஏவம் ந்யாஸம் தத: க்ருத்வா। யத் கார்யம் ஸ்ருணு தத் த்விஜ।
௰௨௮।௧௮।௰௪௭
பாதமூேல து ேதவஸ்ய। ஸங்கம் தத்ைரவ விந்யேஸத்।
௰௨௮।௧௮।௰௪௮
வநமாலாம் து விந்யஸ்ய। ஸர்வேதவாபிபூஜிதாம்। ௰௨௮।௧௮।௰௪௯
கதாம் வக்ஷ:ஸ்தேல ைசவ। சக்ரம் ைசவ து ப்ருஷ்டத:।
௰௨௮।௧௮।௰௫௰
ஸ்ரீவத்ஸாங்கம் ஸிேரா ந்யஸ்ய। பஞ்சாங்ககவசம் ந்யேஸத்।
௰௨௮।௧௮।௰௫௧
ஆபாதாமஸ்தேக ைசவ। விந்யேஸத் புருேஷாத்தமம்। ௰௨௮।௧௮।௰௫௨
ஓம் அபாமார்ஜநேகா ந்யாஸ:। ஸர்வவ்யாதிவிநாஸந:।
௰௨௮।௧௮।௰௫௩

விஷ்ணுர் ஊர்த்வம் அேதா ரேக்ஷத்। ைவகுண்ேடா விதிேஸா திஸ:।
௰௨௮।௧௮।௰௫௪
பாது மாம் ஸர்வேதா ராேமா। தந்வ ீசக்ரீ ச ேகஸவ:।
௰௨௮।௧௮।௰௫௫
பூஜாகாேல து ேதவஸ்ய। ஜபகாேல தைதவ ச। ௰௨௮।௧௮।௰௫௯
ேஹாமாரம்ேபஷு ஸர்ேவஷு। த்ரிஸம்த்யாஸு ச நித்யஸ:।
௰௨௮।௧௮।௰௬௰
ஆயுர் ஆேராக்யம் ஐஸ்வர்யம்। ஜ்ஞாநம் வித்தம் பலம் பேவத்।
௰௨௮।௧௮।௰௬௧
யத் யத் ஸுககரம் ப்ேராக்தம்। தத் ஸர்வம் ப்ராப்நுயாந் நர:।
௰௨௮।௧௮।௰௬௨
அபயம் ஸர்வபூேதப்ேயா। விஷ்ணுேலாகம் ச கச்சதி। ௰௨௮।௧௮।௰௬௩
அத த்யாநம் ப்ரவŠயாமி। ஸர்வபாபப்ரணாஸநம்। ௰௨௮।௧௮।௰௭௭
வாராஹரூபிணம் ேதவம்। ஸம்ஸ்மரத்ய் அபராஜிதம்। ௰௨௮।௧௮।௰௭௮
ப்ருஹத்தநும் ப்ருஹத்காத்ரம்। ப்ருஹத்தம்ஷ்ட்ரஸுேஸாபநம்।
௰௨௮।௧௮।௰௭௯
ஸமஸ்தேவதேவதாங்கம்। யுக்தாங்கம் பூஷைணர் யுதம்।
௰௨௮।௧௮।௰௮௰
உத்த்ருத்ய பூமிம் பாதாலாத்। ஹஸ்தாப்யாம் உபக்ருஹ்ணதாம்।
௰௨௮।௧௮।௰௮௧
ஆலிங்க்ய பூமிம் ஸிரஸி। மூர்த்நி ஜிக்ரந்தம் ஆஸ்திதம்।
௰௨௮।௧௮।௰௮௨
ரத்நைவடூர்யமுக்யாபிர்। முக்தாபிர் உபேஸாபிதம்। ௰௨௮।௧௮।௰௮௩
பதாம்பரதரம் ீ ேதவம்। ஸுக்லமால்யாநுேலபநம்। ௰௨௮।௧௮।௰௮௪

த்ரயஸ்த்ரிம்ஸேகாடிேதைவ:। ஸ்தூயமாநம் முதாநிஸம்।
௰௨௮।௧௮।௰௮௫
ந்ருத்யத்பிர் அப்ஸேராபிஸ் ச। கீயமாநம் ச கிந்நைர:। ௰௨௮।௧௮।௰௮௬
இத்தம் த்யாத்வா மஹாத்மாநம்। ஜேபந் நித்யம் மஹாத்மந:।
௰௨௮।௧௮।௰௮௭
ஸுவர்ணமண்டபாந்தஸ்தம்। பத்மம் த்யாேயத் ஸேகஸரம்।
௰௨௮।௧௮।௰௮௮
ஸகர்ணிகதைலர் இஷ்ைடர்। அஷ்டபி: பரிேஸாபிதம்।
௰௨௮।௧௮।௰௮௯
கரம் கரஹிதம் ேதவம்। பூர்ணசந்த்ராப்தஸுப்ரபம்। ௰௨௮।௧௮।௰௯௰
தடித்ஸமஸடாேஸாபி। கண்டநாேலாபேஸாபிதம்। ௰௨௮।௧௮।௰௯௧
ஸ்ரீவத்ஸாங்கிதவக்ஷ:ஸ்தம்। தீŠணதம்ஷ்ட்ரம் த்ரிேலாசநம்।
௰௨௮।௧௮।௰௯௨
ஜவாகுஸுமஸம்காஸம்। ரக்தஹஸ்ததலாந்விதம்। ௰௨௮।௧௮।௰௯௩
பதவஸ்த்ரபரீதாநம் ீ । ஸுக்லயஸ்த்ேராத்தரீயகம்। ௰௨௮।௧௮।௰௯௪
கரம் கரஹிதம் ேதவம்। பூர்ணசந்த்ராப்தஸுப்ரபம்। ௰௨௮।௧௮।௰௯௫
கடிஸூத்ேரண ைஹேமந। நூபுேரண விராஜிதம்। ௰௨௮।௧௮।௰௯௬
வநமாலாதிேஸாபாட்யம்। முக்தாஹாேராபேஸாபிதம்।
௰௨௮।௧௮।௰௯௭
அேநகஸூர்யஸம்காஸம்। முகுடாேடாபமஸ்தகம்। ௰௨௮।௧௮।௰௯௮
ஸங்கசக்ரக்ருஹீதாப்யாம்। உத்பாஹுப்யாம் விராஜிதம்।
௰௨௮।௧௮।௰௯௯
பங்கஜாபம் சதுர்ஹஸ்தம்। தத்பத்ராபஸுேலாசநம்। ௰௨௮।௧௮।௧௰௰

ப்ராத: ஸூர்யஸமப்ரக்ய । குண்டலாப்யாம் விராஜிதம்।
௰௨௮।௧௮।௧௰௧
ேகயூரகாந்திஸஸ்யர்த்தி । முக்திகாரத்நேஸாபிதம்। ௰௨௮।௧௮।௧௰௨
ஜாநூபரிந்யஸ்தஹஸ்தம்। வரரத்நநகாங்குரம்। ௰௨௮।௧௮।௧௰௩
ஜங்காபரணஸஸ்யர்த்தி । விஸ்புர்யத்கங்கநத்விஷம்। ௰௨௮।௧௮।௧௰௪
முக்தாபலாப்தஸமஹத் । தந்தபங்க்திவிராஜிதம்। ௰௨௮।௧௮।௧௰௫
சம்பகாமுகுலப்ரக்ய । ஸுநாஸாமுகபங்கஜம்। ௰௨௮।௧௮।௧௰௬
அதிரக்ெதௗஷ்டவதநம்। வ்யாத்தாஸ்யம் அதிபஷணம் ீ । ௰௨௮।௧௮।௧௰௭
வாமாங்கஸ்தம் ஸிவபக்த । ஸாந்திதாம் ஸுநிதம்பிநீம்।
௰௨௮।௧௮।௧௰௮
அர்ஹணயாம் ீ ஸுஜாேதாரும்। ஸுநாஸாம் ஸுபலக்ஷணாம்।
௰௨௮।௧௮।௧௰௯
ஸுப்ரூம் ஸுேகஸம்ீ ஸுஸ்ேராணம்ீ । ஸுஸுபாம் ஸுத்விஜாநநாம்।
௰௨௮।௧௮।௧௧௰
ஸுப்ரதிஷ்டாம் ஸுவதநாம்। சதுர்ஹஸ்தாம் விசிந்தேயத்।
௰௨௮।௧௮।௧௧௧
துகூேல ைசவ சார்வங்கீம்। ஹாரிணம்ீ ஸர்வகாமதாம்।
௰௨௮।௧௮।௧௧௨
தப்தகஞ்சநஸம்காஸாம்। ஸர்வாபரணபூஷிதாம்। ௰௨௮।௧௮।௧௧௩
ஸுவர்ணகலஸப்ரக்ய । பேநாந்நதபேயாதராம் ீ । ௰௨௮।௧௮।௧௧௪
க்ருஹீதபத்மயுகலம்। உத்பாஹுப்யாம் ததாந்யேயா:। ௰௨௮।௧௮।௧௧௫
க்ருஹீதமாதுலங்காக்யம்। ஜாம்புநதகராந் ததா। ௰௨௮।௧௮।௧௧௬
ஏவம் ேதவம்ீ ந்ருஸிம்ஹஸ்ய। வாமாங்ேகாபரி ஸம்ஸ்மேரத்।
௰௨௮।௧௮।௧௧௭

அதிவிமலஸுகாத்ரம் ெரௗப்யபாத்ரஸ்தம் அந்நம்। ஸுலலிதததிகண்டம்
பாணிநா தக்ஷிேணந। ௰௨௮।௧௮।௧௧௮
கலஸம் அம்ருதபூர்ணம் ஸவ்யஹஸ்ேத ததாநம்। தததிஸகலது:கம் வாமநம்
பாவேயத் ய:। ௰௨௮।௧௮।௧௨௰
அந்யா பாஸ்கரஸப்ரபாபிர் அகிைலர் பாபிர் திேஸா பாஸயந்।
பமாக்ஷஸ்புரதட்டஹாஸவிலஸாத்தம்ஷ்ட்ராக்ரத ீ ீப்தாநந:। ௰௨௮।௧௮।௧௨௨
ேதார்பிஸ் சக்ரதெரௗ கதாப்ஜமுகுெலௗ த்ராஸாம்ஸ் ச பாஸாங்குெஸௗ।
பிப்ரத்பிங்கஸிேரா அருேஹாத்ததஸடஸ் சக்ரவிதாேநா ஹரி:।
௰௨௮।௧௮।௧௨௪
மேநாபூதாநீந்த்ரியாணி। குணா: ஸத்த்வம் ரஜஸ் தம:। ௰௨௮।௧௮।௧௩௯
த்ைரேலாக்யஸ்ேயஸ்வரம் ஸர்வம்। அஹம்காேர ப்ரதிஷ்டிதா:।
௰௨௮।௧௮।௧௪௰
ஓம் நம: பரமார்தாய। புருஷாய மஹாத்மேந। ௨௮।௰௧௫
அரூபபஹுரூபாய। வ்யாபிேந பரமாத்மேந। ௨௮।௰௧௫
நமஸ் ேத ேதவேதவாய। ஸுரஸூர நேமா அஸ்து ேத। ௰௨௮।௧௯
ேலாகாத்யக்ஷ ஜகத்பூஜ்ய। பரமாத்மந் நமஸ் ேத । ௰௨௮।௧௯
நிஷ்கல்மஷாய ஸுத்தாய। ஸர்வபாபஹராய ச। ௨௮।௰௧௫
நமஸ்க்ருத்வா ப்ரவŠயாமி। யத் தத் ஸித்யது ேம வச:।
௰௨௮।௰௧௬௨௰௨௧
வராஹநரஸிம்ஹாய। வாமநாய மஹாத்மேந। ௨௮।௰௧௭
ேகாவிந்தபத்மநாபாய। வாமேதவாய பூபேத। ௰௨௮।௨௰।௰௰௧
நாராயணாய ேதவாய। அநந்தாய மஹாத்மேந। ௰௨௮।௨௰।௰௰௩
கருடத்வஜாய க்ருஷ்ணாய। பதாம்பரதராய ீ ச। ௰௨௮।௨௰।௰௰௫

ேயாகீஸ்வராய ஸித்தாய। குஹ்யாய பரமாத்மேந। ௰௨௮।௨௰।௰௰௭
ஜநார்தநாய க்ருஷ்ணாய। உேபந்த்ரஸ்ரீதராய ச। ௰௨௮।௨௰।௰௰௯
பக்தப்ரியாய விதேய। விஷ்வக்ேஸநாய ஸார்ங்கிேந। ௰௨௮।௨௰।௰௧௧
ஹிரண்யகர்பபதேய। ஹிரண்யகஸிபுச்சிேத। ௰௨௮।௨௰।௰௧௩
சக்ரஹஸ்தாய ஸூலாய। தர்ஜந்யபத்ராய தீமேத। ௰௨௮।௨௰।௰௧௫
ஆதித்யாய உேபந்த்ராய। பூதாநாம் ஜவநாய ீ ச। ௰௨௮।௨௰।௰௧௭
வாஸுேதவாய வந்த்யாய। வரதாய மஹாத்மேந। ௰௨௮।௨௰।௰௧௯
விஷூவ்ருச்ச்ரவேஸ தஸ்ைம। க்ஷராம்புநிசிஸாயிேந ீ । ௰௨௮।௨௰।௰௨௧
அேதாக்ஷஜாய பத்ராய। ஸ்ரீதராயாதிமூர்தேய। ௰௨௮।௨௰।௰௨௩
விஸ்ேவஸத்வாரமூர்திஸ் ச। ம்ருத்யுராேயாஹிேதா அஸ்தி ஸ:।
௰௨௮।௨௰।௰௨௫
நாநாராகாம்ஸ் ச தக்ஷாம்ஸ் ச। விகடாய மஹாபதீ ீ। ௰௨௮।௨௰।௰௨௭
ஜாதுபதிம் வ்யக்ரஹஸ்தம்। வரரத்நநகாகரம்। ௰௨௮।௨௰।௰௨௮
நாராயணாய விஸ்வாய। விஸ்ேவஸாயாம்பராய ச। ௰௨௮।௨௰।௰௩௨
தாேமாதராய ேதவாய। அநந்தாய மஹாத்மேந। ௰௨௮।௨௰।௰௩௪
த்ரிவிக்ரமாய ராமாய। ைவகுண்டாய நராய ச। ௨௮।௰௧௭
நமஸ்க்ருத்வா ப்ரவŠயாமி। யத் தத் ஸித்யது ேம வச:। ௨௮।௰௧௮
வராஹநரஸிம்ேஹஸ। வாமேநஸ த்ரிவிக்ரம। ௨௮।௰௧௯
ஹயக்ரீேவஸ ஸர்ேவஸ। ஹ்ருஷீேகஸ ஹராஸுபம்। ௨௮।௰௧௯
அபராஜிதசக்ராத்ையஸ்। சதுர்பி: பரமாயுைத:। ௨௮।௰௨
அகண்டிதப்ரபாைவஸ் த்வம்। ஸர்வதுஷ்டஹேரா பவ। ௨௮।௰௨
ஹராமுகஸ்ய துரிதம்। துஷ்க்ருதம் துருேபாஷிதம்। ௨௮।௰௨௧
ம்ருத்யுபந்தார்திபயதம்। துரிஷ்டஸ்ய ச யத் பலம்। ௨௮।௰௨௧

பராபத்யாநஸஹிதம்। ப்ரயுக்தம் சாபிசாருக। ௨௮।௰௨௨
கரஸ்பர்ஸமஹாேயாக । ப்ரேயாகஜரயாஜர। ௨௮।௰௨௨
ஓம் நேமா வாஸுேதவாய। நம: Šருணாய ஸார்ங்கிேண। ௨௮।௰௨௩
நம: புஷ்கரேநத்ராய। ேகஸவாயாதிசக்ரிேண। ௨௮।௰௨௩
நம: கமலகிஞ்ஜல்க । பதநிர்மலவாஸேஸ ீ । ௨௮।௰௨௪
மஹாஹவரிபுஸ்கந்த । க்ருஷ்டசக்ராய சக்ரிேண। ௨௮।௰௨௪
தம்ஷ்ட்ேராத்த்ருதக்ஷிதித்ருேத। த்ரயமூர்திமேத ீ நம:। ௨௮।௰௨௫
மஹாயஜ்ஞவராஹாய। ேஸஷேபாேகாருஸாயிேந। ௨௮।௰௨௫
தப்தஹாடகேகஸாந்த। ஜ்வலத்பாவகேலாசந। ௨௮।௰௨௬
வஜ்ராதிகநகஸ்பர்ஸ। திவ்யஸிம்ஹ நேமா அஸ்து ேத। ௨௮।௰௨௬
கபில ேஹமாஸ்வஸர்ஷீ । அதிரிக்தவிேலாசந। ௰௨௮।௨௨
வித்யுத்ஸ்புரிததம்ஷ்ட்ராக்ர। திவ்யஸிம்ஹ நேமா அஸ்து ேத।
௰௨௮।௨௨
காஸ்யபாயாதிஹ்ரஸ்வாய। க்ருக்யஜு:ஸாமபூஷித। ௨௮।௰௨௭
துப்யம் வாமநரூபாய। ஸ்ருஜேத காம் நேமா நம:। ௨௮।௰௨௭
வராஹாேஸஷதுஷ்டாநி। ஸர்வபாபஹராணி ைவ। ௨௮।௰௨௮
மர்த மர்த மஹாதம்ஷ்ட்ர। மர்த மர்த ச தத்பலம்। ௨௮।௰௨௮
நரஸிம்ஹ கராலாஸ்ய। தந்தப்ராந்தாநேலாஜ்ஜ்வல। ௨௮।௰௨௯
பஞ்ஜ பஞ்ஜ நிநாேதந। துஷ்டாந்ய் அஸ்யார்திநாஸந। ௨௮।௰௨௯
க்ருக்யஜு:ஸாமகர்பாபிர்। வாக்பிர் வாமநரூபத்ருக்। ௨௮।௰௩
ப்ரஸமம் ஸர்வது:காநி। நயத்வ் அஸ்ய ஜநார்தந:। ௨௮।௰௩
ஏகாஹிகம் த்வ்யாஹிகம் ச। ததா த்ரிதிவஸம் ஜ்வரம்। ௨௮।௰௩௧

சாதுர்தகம் ததாத்யுக்ரம்। தைதவ ஸததஜ்வரம்। ௨௮।௰௩௧
ேதாேஷாத்தம் ஸம்நிபாேதாத்தம்। தைதவாகந்துகம் ஜ்வரம்। ௨௮।௰௩௨
ஸமம் நயாஸு ேகாவிந்த। சித்த்வா ச்சித்த்வா து ேவதநாம்। ௨௮।௰௩௨
ேநத்ரது:கம் ஸிேராது:கம்। து:கம் ேசாதரஸம்பவம்। ௨௮।௰௩௩
அநுச்ச்வாஸம் அதிஸ்வாஸம்। பரிதாபம் ஸேவபதும்। ௨௮।௰௩௩
குதக்ராணாம்ஹ்ரிேராகாம்ஸ் ச। குஷ்டேராகம் ததா க்ஷயம்। ௨௮।௰௩௪
காமலாதீம்ஸ் ததா ேராகாந்। ப்ரேமஹாம்ஸ் சாதிதாருணாந்। ௨௮।௰௩௪
பகம்தராதிஸாராம்ஸ் ச। முகேராகம் ஸவல்குலிம்। ௨௮।௰௩௫
அஸ்மரீமூத்ரக்ருச்ச்ராம்ஸ் ச। ேராகாந் அந்யாம்ஸ் ச தாருணாந்।
௨௮।௰௩௫
ேய வாதப்ரபவா ேராகா। ேய ச பித்தஸமுத்பவா:। ௨௮।௰௩௬
கேபாத்பவாஸ் ச ேய ேகசித்। ேய சாந்ேய ஸாம்நிபாதிகா:। ௨௮।௰௩௬
ஆகந்தவஸ் ச ேய ேராகா। லூதாவிஸ்ேபாடகாதய:। ௨௮।௰௩௭
ேத ஸர்ேவ ப்ரஸமம் யாந்து। வாஸுேதவாபமார்ஜிதா:। ௨௮।௰௩௭
விலயம் யாந்து ேத ஸர்ேவ। விஷ்ேணார் உச்சாரேணந ச। ௨௮।௰௩௮
க்ஷயம் கச்சந்து சாேஸஷாஸ்। ேத சக்ராபிஹதா ஹேர:। ௨௮।௰௩௮
அச்யுதாநந்தேகாவிந்த । நாேமாச்சாரணபஷிதா ீ :। ௨௮।௰௩௯
நஸ்யந்து ஸகலா ேராகா:। ஸத்யம் ஸத்யம் வதாம்ய் அஹம்।
௨௮।௰௩௯
ஸ்தாவரம் ஜங்கமம் வாபி। க்ருத்ரிமம் வாபி யத் விஷம்। ௨௮।௰௪
தந்ேதாத்பவம் நகபவம்। ஆகாஸப்ரபவம் விஷம்। ௨௮।௰௪
லூதாதிப்ரபவம் யச் ச। விஷம் அத்யந்தது:கதம்। ௨௮।௰௪௧
ஸமம் நயது தத் ஸர்வம்। கீர்திேதா அஸ்ய ஜநார்தந:। ௨௮।௰௪௧

க்ரஹாந் ப்ேரதக்ரஹாம்ஸ் ைசவ। ததா ைவ டாகிநீக்ரஹாந்।
௨௮।௰௪௨
ேவதாலாம்ஸ் ச பிஸாசாம்ஸ் ச। கந்தர்வாந் யக்ஷராக்ஷஸாந்।
௨௮।௰௪௨
ஸகுநீபூதநாத்யாம்ஸ் ச। ததா ைவநாயகக்ரஹாந்। ௨௮।௰௪௩
முகமண்டிநிகாம் க்ரூராம்। ேரவதீம் வ்ருத்தேரவதீம்। ௨௮।௰௪௩
வ்ருத்திகாக்யாந் க்ரஹாம்ஸ் ேசாக்ராம்ஸ்। ததா மாத்ருக்ரஹாந் அபி।
௨௮।௰௪௪
பாலஸ்ய விஷ்ேணா: சரிதம்। ஹந்து பாலக்ரஹாந் இமாந்। ௨௮।௰௪௪
வ்ருத்தாநாம் ேய க்ரஹா: ேகசித்। ேய ச பாலக்ரஹா: க்வசித்।
௨௮।௰௪௫
நரஸிம்ஹஸ்ய ேத த்ருஷ்ட்யா। தக்தா ேய சாபி ெயௗவேந।
௨௮।௰௪௫
ஸடாகராலவதேநா। நரஸிம்ேஹா மஹாரவ:। ௨௮।௰௪௬
க்ரஹாந் அேஸஷாந் நி:ேஸஷாந்। கேராது ஜகேதா ஹிதம்। ௨௮।௰௪௬
நரஸிம்ஹ மஹாஸிம்ஹ। ஜ்வாலாமாேலாஜ்ஜ்வலாநந। ௨௮।௰௪௭
க்ரஹாந் அேஸஷாந் ஸர்ேவஸ। காத காதாக்நிேலாசந। ௨௮।௰௪௭
ேய ேராகா ேய மேஹாத்பாதா। யத் விஷம் ேய மஹாக்ரஹா:।
௨௮।௰௪௮
யாநி ச க்ரூரபூதாநி। க்ரஹபடாஸ்ீ ச தாருணா:। ௨௮।௰௪௮
ஸஸ்த்ரக்ஷேதஷு ேய ேதாஷா। ஜ்வாலாகர்தபகாதய:। ௨௮।௰௪௮
யாநி சார்யாணி பூதாநி। ப்ராணிபடாகராணி ீ ைவ। ௰௨௮।௨௩
தாநி ஸர்வாணி ஸர்வாத்மந்। பரமாத்மஞ் ஜநார்தந। ௨௮।௰௪௯

கிம்சித் ரூபம் ஸமாஸ்தாய। வாஸுேதவ விநாஸய। ௨௮।௰௪௯
க்ஷிப்த்வா ஸுதர்ஸநம் சக்ரம்। ஜ்வாலாமாலாவிபஷணம் ீ । ௨௮।௰௫
ஸர்வதுஷ்ேடாபஸமநம்। குரு ேதவவராச்யுத। ௨௮।௰௫
ஸுதர்ஸந மஹாசக்ர। ேகாவிந்தஸ்ய கராயுத। ௰௨௮।௨௪।௰௰௧
ஜ்வலத்பாவகஸம்காஸ। ஸூர்யேகாடிஸமப்ரப। ௰௨௮।௨௪।௰௰௨
த்ைரேலாக்யரக்ஷகர்த்ரு த்வம்। த்வம் துஷ்டதாநவதாரண।
௰௨௮।௨௪।௰௰௩
தீŠணதார மஹாேவக। சிந்தி ச்சிந்தி மஹாஜ்வரம்। ௰௨௮।௨௪।௰௰௪
சிந்தி ச்சிந்தி மஹாவ்யாதிம்। சிந்தி ச்சிந்தி மஹாக்ரஹாந்।
௰௨௮।௨௪।௰௰௫
சிந்தி வாதம் ச தூதம் ச। சிந்தி ேகாரம் மஹாவிஷம்। ௰௨௮।௨௪।௰௰௬
ருஜதாகம் ச ஸூலம் ச। நிமிஷஜ்வாலகர்தபம்। ௰௨௮।௨௪।௰௰௭
ஸுதர்ஸந மஹாஜ்வால। சிந்தி ச்சிந்தி மமாரய:। ௨௮।௰௫௧
ஸர்வதுஷ்டாநி ரக்ஷாம்ஸி। க்ஷபயாதிவிபஷணீ । ௨௮।௰௫௧
ஹாம் ஹாம் ஹூம் ஹூம் பட்காேரண। டத்வேயந ஹதத்விஷ:।
௰௨௮।௨௫।௰௰௧
ஸுதர்ஸநஸ்ய மந்த்ேரண। க்ரஹா யாந்தி திேஸா திஸ:।
௰௨௮।௨௫।௰௰௨
த்ைரேலாக்யஸ்யாபயம் கர்தும்। ஆஜ்ஞாபய ஜநார்தந।
௰௨௮।௨௫।௰௰௯
ஸர்வதுஷ்டாநி ரக்ஷாம்ஸி। க்ஷயம் யாந்தி விபஷயா ீ । ௰௨௮।௨௫।௰௧௰
ப்ராச்யாம் ப்ரதீச்யாம் ச திஸி। தக்ஷிேணாத்தரதஸ் ததா। ௨௮।௰௫௨
ரக்ஷாம் கேராது ஸர்வாத்மா। நரஸிம்ஹ: ஸ்வகர்ஜிைத:। ௨௮।௰௫௨

பூம்யந்தரிேக்ஷ ச ததா। ப்ருஷ்டத: பார்ஸ்வேதா அக்ரத:। ௨௮।௰௫௩
வ்யாக்ரஸிம்ஹவராேஹஷு। அந்திேசாரபேயஷு ச । ௰௨௮।௨௬
ரக்ஷாம் கேராது பகவாந்। பஹுரூபீ ஜநார்தந:। ௨௮।௰௫௩
யதா விஷ்ணுக்ரு ஜகத் ஸர்வம்। ஸேதவாஸுரமாநவம்। ௨௮।௰௫௪
ேதந ஸத்ேயந துஷ்டாநி। ஸமம் அஸ்ய வ்ரஜந்து ைவ। ௨௮।௰௫௪
யதா விஷ்ெணௗ ஸ்ம்ருேத ஸம்யக்। ஸம்க்ஷயம் யாதி பாதகம்।
௨௮।௰௫௫
ஸத்ேயந ேதந ஸகலம்। துஷ்டம் அஸ்ய ப்ரஸாம்யது। ௨௮।௰௫௫
பரமாத்மா யதா விஷ்ணுர்। ேவதாந்ேதஷ்வ் அபிதீயேத। ௨௮।௰௫௬
ேதந ஸத்ேயந ஸகலம்। துஷ்டம் அஸ்ய ப்ரஸாம்யது। ௨௮।௰௫௬
யதா யஜ்ேஞஷ்வேரா விஷ்ணுர்। ேவேதஷ்வ் அபி து கீயேத।
௨௮।௰௫௭
ேதந ஸத்ேயந ஸகலம்। யந் மேயாக்தம் ததாஸ்து தத்। ௨௮।௰௫௭
யதா யஜ்ேஞஸ்வேரா விஷ்ணுர்। யஜ்ஞாந்ேத அபி கீயேத। ௰௨௮।௨௭
ேதந ஸத்ேயந ஸகலம்। யந் மேயாக்தம் ததாஸ்து தத்। ௰௨௮।௨௭
ஸாந்திர் அஸ்து ஸிவம் சாஸ்து। ப்ரஸாம்யத்வ் அஸுகம் ச யத்।
௨௮।௰௫௮
வாஸுேதவஸரீேராத்ைத:। குைஸர் நிர்மார்ஜிதம் மயா। ௨௮।௰௫௮
அபாமார்ஜதி ேகாவிந்ேதா। நேரா நாராயணஸ் ததா। ௨௮।௰௫௯
தவாஸ்து ஸர்வது:காநாம்। ப்ரஸேமா வசநாத் தேர:। ௨௮।௰௫௯
இதம் ஸாஸ்த்ரம் பேடத் யஸ் து। ஸப்தாஹந் நியத: ஸுசி:।
௰௨௮।௨௮

ஸாந்திம் ஸமஸ்தேராகாஸ் ேத। க்ரஹா: ஸர்ேவ விஷாநி ச।
௨௮।௰௬
பூதாநி ச ப்ரயாந்த்வ் ஈேஸ। ஸம்ஸ்ம்ருேத மதுஸூதேந। ௨௮।௰௬
ஏதத் ஸமஸ்தேராேகஷு। பூதக்ரஹபேயஷு ச। ௨௮।௰௬௧
அபமார்ஜநகம் ஸஸ்தம்। விஷ்ணுநாமாபிமந்த்ரிதம்। ௨௮।௰௬௧
ஏேத குஸா விஷ்ணுஸரீரஸம்பவா। ஜநார்தேநா அஹம் ஸ்வயம் ஏவ
சாகத:। ௨௮।௰௬௨
ஹதம் மயா துஷ்டம் அேஸஷம் அஸ்ய। ஸ்வஸ்ேதா பவத்ய் ஏஷ வேசா
யதா ஹேர:। ௨௮।௰௬௨
ஸாந்திர் அஸ்து ஸிவம் சாஸ்து। துஷ்டம் அஸ்ய ப்ரஸாம்யது।
௨௮।௰௬௩
யத் அஸ்ய துரிதம் கிம்சித்। தத் க்ஷிப்தம் லவணார்ணேவ। ௨௮।௰௬௩
ஸ்வாஸ்த்யம் அஸ்ய ஸைதவாஸ்து। ஹ்ருஷீேகஸஸ்ய கீர்தநாத்।
௨௮।௰௬௪
யத ஏவாகதம் பாபம்। தத்ைரவ ப்ரதிகச்சது। ௨௮।௰௬௪
ஏதத் ேராகாதிபடாஸு ீ । ஜந்தூநாம் ஹிதம் இச்சதா। ௨௮।௰௬௫
விஷ்ணுபக்ேதந கர்தவ்யம்। அபமார்ஜநகம் பரம்। ௨௮।௰௬௫
அேநந ஸர்வதுஷ்டாநி। ப்ரஸமம் யாந்த்ய் அஸம்ஸயம்। ௨௮।௰௬௬
ஸர்வபூதஹிதார்தாய। குர்யாத் தஸ்மாத் ஸைதவ ஹி। ௨௮।௰௬௬
ஸர்வாபராதஸமநம்। அபாமார்ஜநகம் பரம்। ௰௨௮।௨௯।௰௰௧
ஏதத் ஸ்ேதாத்ரம் இதம் புண்யம்। பேடத் ஆயுஷ்யவர்தநம்।
௰௨௮।௨௯।௰௰௨
விநாஸாய ச ேராகாணாம்। அவம்ருத்யுக்ஷயாய ச। ௰௨௮।௨௯।௰௰௩

வ்யாக்ராபஸ்மாரகுஷ்டாதி। பிஸாேசாரகராக்ஷஸா:। ௰௨௮।௨௯।௰௰௪
தஸ்ய பார்ஸ்வம் ந கச்சந்தி। ஸ்ேதாத்ரம் ஏதத் யதா பேடத்।
௰௨௮।௨௯।௰௰௫
ஸ்மரஞ் ஜபந்ந் இதம் ஸ்ேதாத்ரம்। ஸர்வவ்யாதிவிநாஸநம்।
௰௨௮।௨௯।௰௰௬
படதாம் ஸ்ருண்வதாம் நித்யம்। விஷ்ணுேலாகம் ஸ கச்சதி।
௰௨௮।௨௯।௰௰௭
ஸுரூபதா மநுஷ்யாணாம்। ஸ்த்ரீணாம் ச த்விஜஸத்தம। ௨௯।௰௰௧
கர்மணா ஜாயேத ேயந। தந் மமாக்யாதும் அர்ஹஸி। ௨௯।௰௰௧
ஸுரூபாணாம் ஸுகாத்ராணாம்। ஸுேவஷாணாம் ததா முேந।
௨௯।௰௰௨
ந்யூநம் ததாதிகம் வாபி। கிம்சித் அங்கம் ப்ரஜாயேத। ௨௯।௰௰௨
ஸமஸ்ைத: ேஸாபைநர் அங்ைகர்। நரா: ேகசித் ததா த்விஜ। ௨௯।௰௰௩
காணா: குப்ஜாஸ் ச ஜாயந்ேத। த்ருடிதஸ்ரவணாஸ் ததா। ௨௯।௰௰௩
நராணாம் ேயாஷிதாம் ைசவ। ஸமஸ்தாங்க்ஸுரூபதா। ௨௯।௰௰௪
கர்மணா ேயந பவதி। தத் ஸர்வம் கதயாமல। ௨௯।௰௰௪
லாவண்யகதிவாக்யாநி। ஸதி ரூேப மஹாமேத। ௨௯।௰௰௫
ப்ரயாந்தி சாருதாம் ரூபம்। ேதேநாக்த: பரேமா குண:। ௨௯।௰௰௫
வாக்யலாவண்யஸம்ஸ்கார । விலாஸலலிதா கதி:। ௨௯।௰௰௬
விடம்பநா குரூபாணாம்। ஸ்த்ரீபும்ஸாம் அபிஜாயேத। ௨௯।௰௰௬
ரூபகாரணபூதாய। யேதத மதிமாம்ஸ் தத:। ௨௯।௰௰௭
கர்மணா தந் மமாசŠவ। கர்ம யச் சாருரூபதம்। ௨௯।௰௰௭

ஸம்யக் ப்ருஷ்டம் த்வயா ஹீதம்। உபவாஸாஸ்ரிதம் த்விஜ।
௨௯।௰௰௮
கதயாமி யதா ப்ேராக்தம்। வஸிஷ்ேடந மஹாத்மநா। ௨௯।௰௰௮
வஸிஷ்டம் க்ருஷிம் ஆஸநம்ீ । ஸப்தர்ஷிப்ரவரம் பதிம்। ௨௯।௰௰௯
பப்ரச்சாருந்ததீப்ரஸ்நம்। யத் ஏதத் பவதா வயம்। ௨௯।௰௰௯
தஸ்யா: ஸ பரிப்ருச்சந்த்யா। ஜகாத முநிஸத்தம:। ௨௯।௰௧
யத் தச் ச்ருணுஷ்வ தர்மஜ்ஞ। மேமஹ வதேதா அகிலம்। ௨௯।௰௧
ஸ்ரூயதாம் மம யத் ப்ருஷ்டஸ்। த்வயாஹம் ப்ரஹ்மவாதிநி।
௨௯।௰௧௧
ஸுரூபதா ந்ருணாம் ேயந। ேயாஷிதாம் ேசாபஜாயேத। ௨௯।௰௧௧
அநப்யர்ச்ய யதாந்யாயம்। அநாராத்ய ச ேகஸவம்। ௨௯।௰௧௨
ரூபாதிகா குணா: ேகந। ப்ராப்யந்ேத அந்ேயந கர்மணா। ௨௯।௰௧௨
தஸ்மாத் ஆராதநீேயா ைவ। விஷ்ணுர் ஏவ யஸஸ்விநி। ௨௯।௰௧௩
பரத்ர ப்ராப்துகாேமந। ரூபஸம்பத்ஸுதாதிகம்। ௨௯।௰௧௩
யஸ் து வாஞ்சதி தர்மஜ்ேஞ। ரூபம் ஸர்வாங்கேஸாபநம்। ௨௯।௰௧௪
நக்ஷத்ரபுருஷஸ் ேதந। ஸம்பூஜ்ய: புருேஷாத்தம:। ௨௯।௰௧௪
நக்ஷத்ராங்கம் யதாஹார:। ஸமுேபாஷ்யதி ேயா ஹரிம்। ௨௯।௰௧௫
ஸுரூைபர் அகிலாங்ைகஸ் ச। ரூபவாந் அபிஜாயேத। ௨௯।௰௧௫
ேயாஷிதா ச பரம் ரூபம்। இச்சந்த்யா ஜகத: பதி:। ௨௯।௰௧௬
ஸ ஏவாராதநீேயா அத்ர। நக்ஷத்ராங்ேகா ஜநார்தந:। ௨௯।௰௧௬
நக்ஷத்ரரூபீ பகவாந்। பூஜ்யேத புருேஷாத்தம:। ௨௯।௰௧௭
முேந ேயந விதாேநந। தந் மமாக்யாதும் அர்ஹஸி। ௨௯।௰௧௭
ைசத்ரமாஸம் ஸமாரப்ய। விஷ்ேணா: பாதாதிபூஜநம்। ௨௯।௰௧௮

யதா குர்வதீ ரூபார்தீ। தந் நிஸாமய தத்த்வத:। ௨௯।௰௧௮
நக்ஷத்ரம் ஏகம் ஏகம் ைவ। ஸ்நாத: ஸம்யக் உேபாஷித:। ௨௯।௰௧௯
நக்ஷத்ரபுருஷஸ்யாங்கம்। பூஜேயத் ஸாத்வ ீசக்ரிண:। ௨௯।௰௧௯
மூேல பாெதௗ ததா ஜங்ேக। ேராஹிணஷ்வ்ீ அர்சேயச் சுேப। ௨௯।௰௨
ஜாநுநீசாஸ்விநீேயாக। ஆஷாேட ேசாருஸம்ஜ்ஞிேத। ௨௯।௰௨
பால்குநீத்விதேய குஹ்யம்। க்ருத்திகாஸு ததா கடிம்। ௨௯।௰௨௧
பார்ஸ்ேவ பத்ரபதாயுக்ேம। த்ேவ குக்ஷீேரவதீஷு ச। ௨௯।௰௨௧
அநுராத உர: ப்ருஷ்டம்। ஸ்ரவிஷ்டாஸ்வ் அபிபூஜேயத்। ௨௯।௰௨௨
புஜயுக்மம் விஸாகாஸு। ஹஸ்ேத ைசவ கரத்வயம்। ௨௯।௰௨௨
புநர்வஸாவ் அங்குலீம்ஸ் ச। ஆஸ்ேலஷாஸு ததா நகாந்। ௨௯।௰௨௩
ஜ்ேயஷ்டாயாம் பூஜேயத் க்ரீவம்। ஸ்ரவேண ஸ்ரவேண ததா।
௨௯।௰௨௩
புஷ்ேய முகம் ததா ஸ்வாெதௗ। தஸநாந் அபிபூஜேயத்। ௨௯।௰௨௪
ஹந்ெவௗ ஸதபிஷாேயாேக। மகாேயாேக ச நாஸிகாம்। ௨௯।௰௨௪
ம்ருேகாத்தமாங்ேக நயேந। பூஜேயத் பக்தித: ஸுேப। ௨௯।௰௨௫
சித்ராேயாேக லலாடம் ச। பரண்யாம் ச ததா ஸிர:। ௨௯।௰௨௫
ஸம்பூஜநீயா வித்வத்பிஸ்। சாத்ராஸு ச ஸிேராருஹா:। ௨௯।௰௨௫
நக்ஷத்ரேயாேகஷ்வ் ஏேதஷு। பூஜிேதா ஜகத: பதி:। ௨௯।௰௨௬
நக்ஷத்ரபுருஷாக்ேயா அயம்। யதாவத் புருேஷாத்தம:। ௨௯।௰௨௬
பாபாபஹாரம் குருேத। ஸம்யச் ச்ரத்தாவதாம் ஸதாம்। ௨௯।௰௨௭
அங்ேகாபாங்காநி ைசவாஸ்ய। பாபாதீநி யஸஸ்விநி। ௨௯।௰௨௭
ஸுரூபாந்ய் அபிஜாயந்ேத। ஸப்த ஜந்மாந்தராணி ைவ। ௨௯।௰௨௮

ஸர்வாணி ைசவ பத்ராணி। ஸரீராேராக்யம் உத்தமம்। ௨௯।௰௨௮
ஸம்ததிம் மநஸ: ப்ரீதிம்। ரூபம் சாதீவேஸாபநம்। ௨௯।௰௨௯
வாங்மாதூர்யம் ததா காந்திம்। யச் சாந்யத் அபிவாஞ்சிதம்। ௨௯।௰௨௯
ததாதி நக்ஷத்ரபுமாந்। பூஜிதஸ் ச ஜநார்தந:। ௨௯।௰௩
உேபாஷ்ய ஸம்யக் ஏேதஷு। க்ரேமண ர்ேக்ஷஷு ேஸாபேந। ௨௯।௰௩
ஸம்பூஜநீேயா பகவாந்। நக்ஷத்ராங்ேகா ஜநார்தந:। ௨௯।௰௩௧
கந்தபுஷ்பாதிஸம்யுக்தம்। பூஜயித்வா யதாவிதி। ௰௨௯।௩௰
ஜாநுப்யாம் தரணம்ீ கத்வா। இதம் ேசாதாஹேரத் தத:। ௰௨௯।௩௰
ஸ்வரூபம் ஆேராக்யம் அதீவ வர்சஸம்। ஸுஸம்ததிம் த்வ் அஸ்திதபக்திம்
அச்யுதாம்। ௰௨௯।௩௰
அபி ஸர்வம் ஏதம் ப்ேராதம்। ஸூத்ேர மணிகணா இவ। ௰௨௯।௩௰
ஏகபுருஷ மஹாபுருஷ। க்ருக்ஷபுருஷ நேமா அஸ்து ேத। ௰௨௯।௩௰
ப்ரதிநக்ஷத்ரேயாேக ச। ேபாஜநீயா த்விேஜாத்தமா:। ௨௯।௰௩௧
நக்ஷத்ரஜ்ஞாய விப்ராய। தத்யாத் தாநம் ச ஸக்தித:। ௨௯।௰௩௨
பாரிேத ச புநர் தத்யாத்। ஸ்த்ரீபூம்ஸாம் சாருஹாஸிநி। ௨௯।௰௩௨
சத்த்ேராபாநத்யுகம் ைசவ। ஸப்ததாந்யம் ஸகாஞ்சநம்। ௨௯।௰௩௩
க்ருதபாத்ரம் ச தர்மஜ்ேஞ। யச் சாந்யத் அதிவல்லபம்। ௨௯।௰௩௩
ஸ்த்ரீ வா ஸாத்வ ீஸதா விஷ்ேணார்। ஆராதநபராயணா। ௨௯।௰௩௪
அேநைநவ விதாேநந। ஸம்பூஜ்ையதத் அவாப்நுயாத்। ௨௯।௰௩௪
ஸர்வகாமாந் அவாப்ேநாதி। ஸமாராத்ய ஜநார்தநம்। ௩௰।௰௰௧
ப்ரகாைரர் பஹுபிர் ப்ரஹ்மந்। யாந் யாந் இச்சதி ேசதஸா। ௩௰।௰௰௧
ந்ருணாம் ஸ்த்ரீணாம் ச விப்ரர்ேஷ। நாந்யச் ேசாகஸ்ய காரணம்।
௩௰।௰௰௨

அபத்யாத் அதிகம் கிம்சித்। வித்யேத ஹ்ய் அத்ர ஜந்மநி। ௩௰।௰௰௨
அபுத்ரதா மஹத் து:கம்। அதிது:கம் குபுத்ரதா। ௩௰।௰௰௩
அபுத்ர: ஸர்வது:காநாம்। ேஹதுபூேதா மேதா மம। ௩௰।௰௰௩
தந்யாஸ் ேத ேய ஸுதம் ப்ராப்ய। ஸர்வது:கவிவர்ஜிதம்। ௩௰।௰௰௪
ஸஸ்தம் ப்ரஸாந்தம் பலிநம்। பராம் நிர்வ்ருதிம் ஆகதா:। ௩௰।௰௰௪
ஸ்வகர்மநிரதம் நித்யம்। ேதவத்விஜபராயணம்। ௩௰।௰௰௫
ஸாஸ்த்ரஜ்ஞம் தர்மதத்த்வஜ்ஞம்। தீநாநாதஜநாஸ்ரயம்। ௩௰।௰௰௫
விநிர்ஜிதாரிம் ஸர்வஸ்ய। மேநாஹ்ருதயநந்தநம்। ௩௰।௰௰௬
ேதவாநுகூலதாயுக்தம்। யுக்தம் ஸம்யக் குேணந ச। ௩௰।௰௰௬
மித்ரஸ்வஜநஸம்மாந । லப்தநிர்வாணம் உத்தமம்। ௩௰।௰௰௭
ய: ப்ராப்ேநாதி ஸுதம் தஸ்மாந்। நாந்ேயா தந்யதேரா புவி। ௩௰।௰௰௭
ேஸா அஹம் இச்சாமி தச் ச்ேராதும்। த்வத்த: கர்ம மஹாமுேந।
௩௰।௰௰௮
ேயேநத்ருக்லக்ஷண: புத்ர:। ப்ராப்யேத புவி மாநைவ:। ௩௰।௰௰௮
ஏவம் ஏதந் மஹாபாக। பித்ேரா: புத்ரஸமுத்பவம்। ௩௰।௰௰௯
து:கம் ப்ரயாத்ய் உபஸமம்। ேதந ேயேநஹ ேகநசித்। ௩௰।௰௰௯
அத்ராபி ஸ்ரூயதாம் வ்ருத்தம்। யத் பூர்வம் அபவந் முேந। ௩௰।௰௧
உத்பத்ெதௗ கார்தவர்யஸ்ய ீ । ைஹஹயஸ்ய மஹாத்மந:। ௩௰।௰௧
க்ருதவர்ேயா ீ மஹீபாேலா। ைஹஹயாநாம் அபூத் புரா। ௩௰।௰௧௧
தஸ்ய ஸலதநா ீ நாம। பபூவ வரவர்ணிநீ। ௩௰।௰௧௧
பத்நீஸஹஸ்ரப்ரவரா। மஹிஷீஸலமண்டநா ீ । ௩௰।௰௧௧
ஸா த்வ் அபுத்ரா மஹாபாகா। ைமத்ேரயம்ீ பர்யப்ருச்சத। ௩௰।௰௧௨

குணவத்புத்ரலாபாய। க்ருதாஸநபரிக்ரஹாம்। ௩௰।௰௧௨
தயா ச ப்ருஷ்டா ைவ ஸம்யக்। ைமத்ேரயீ ப்ரஹ்மவாதிநீ। ௩௰।௰௧௩
கதயாம் ஆஸ பரமம்। நாம்நாநந்தவ்ரதம் வ்ரதம்। ௩௰।௰௧௩
ஸர்வகாமபலாவாப்தி । காரகம் பாபநாஸநம்। ௩௰।௰௧௪
தஸ்யா: ஸா புத்ரலாபாய। ராஜபுத்ராஸ் தபஸ்விநீ। ௩௰।௰௧௪
ேயா அயம் இச்ேசந் நர: காமம்। நாரீ வா வரவர்ணிநி। ௩௰।௰௧௫
ஸ தம் ஸமாராத்ய விபும்। ஸமாப்ேநாதி ஜநார்தநம்। ௩௰।௰௧௫
மார்கஸர்ேஷீ ம்ருகஸிேரா। பருீ யஸ்மிந் திேந பேவத்। ௩௰।௰௧௬
தஸ்மிந் ஸம்ப்ராஸ்ய ேகாமூத்ரம்। ஸ்நாேதா நியதமாநஸ:। ௩௰।௰௧௬
புஷ்ைபர் தூைபஸ் ததா கந்ைதர்। உபஹாைர: ஸ்வஸக்தித:। ௩௰।௰௧௭
வாமபாதம் அநந்தஸ்ய। பூஜேயத் வரவர்ணிநி। ௩௰।௰௧௭
அநந்த: ஸர்வகாமாநாம்। அநந்தம் பகவாந் பலம்। ௩௰।௰௧௮
ததாத்வ் அநந்தம் ச புநஸ்। தத் ஏவாஸ்த்வ் அந்யஜந்மநி। ௩௰।௰௧௮
அநந்தபுண்ேயாபசயம்। கேராத்ய் ஏதந் மஹாவ்ரதம்। ௩௰।௰௧௯
யதாபிலஷிதாவாப்திம்। குர்வந் மா க்ஷயம் ஏது ச। ௩௰।௰௧௯
இத்ய் உச்சார்யாபிபூஜ்ையநம்। யதாவத் விதிநா நர:। ௩௰।௰௨
ஸமாஹிதமநா பூத்வா। ப்ரணிபாதபுர:ஸரம்। ௩௰।௰௨
விப்ராய தக்ஷிணாம் தத்யாத்। அநந்த: ப்ரீயதாம் இதி। ௩௰।௰௨௧
ஸமுச்சார்ய தேதா நக்தம்। புஞ்ஜயாத் ீ ைதலவர்ஜிதம்। ௩௰।௰௨௧
ததஸ் ச ெபௗேஷ புஷ்யர்ேக்ஷ। தைதவ பகவத்கடிம்। ௩௰।௰௨௨
வாமாம் அப்யர்சேயத் க்ருத்வா। ேகாமூத்ரப்ராஸநம் புத:। ௩௰।௰௨௨
அநந்த: ஸர்வகாமாநாம்। இதி ேசாச்சாரேயத் புத:। ௩௰।௰௨௩

புஞ்ஜதீ ச ததா விப்ரம்। வாசயித்வா யதாவிதி। ௩௰।௰௨௩
மாேக மகாஸு தத்வச் ச। பாஹும் ேதவஸ்ய பூஜேயத்। ௩௰।௰௨௪
ஸ்கந்தம் ச பல்குநீேயாேக। பால்குேந மாஸி பாமிநி। ௩௰।௰௨௪
சதுர்ஷ்வ் ஏேதஷு ேகாமூத்ர । ப்ராஸநம் ந்ருபநந்திநி। ௩௰।௰௨௫
ப்ராஹ்மணாய ததா தத்யாத்। திலாந் கநகம் ஏவ ச। ௰௩௰।௰௨௫௩௧
ேதவஸ்ய தக்ஷிணஸ்கந்தம்। ைசத்ேர சித்ராஸு பூஜேயத்। ௩௰।௰௨௬
தைதவ ப்ராஸநம் சாத்ர। பஞ்சகவ்யம் உதாஹ்ருதம்। ௩௰।௰௨௬
விப்ேர வாசநேக தத்யாத்। யாவந் மாஸசதுஷ்டயம்। ௩௰।௰௨௭
ைவஸாேக ச விஸாகாஸு। பாஹும் ஸம்பூஜ்ய தக்ஷிணம்। ௩௰।௰௨௭
தைதேவாக்தயவாந் தத்யாத்। தத்வந் நக்தம் புஜிக்ரியா। ௩௰।௰௨௮
கடிபூஜாம் ச ஜ்ேயஷ்டாஸு। ஜ்ேயஷ்டமூேல ஸுபவ்ரேத। ௩௰।௰௨௮
ஆஷாடாஸு ததாஷாேட। குர்யாத் பாதார்சநம் ஸுேப। ௩௰।௰௨௯
பதத்வயம் ச ஸ்ரவேண। ஸ்ராவேண ஸுப்ரு பூஜேயத்। ௩௰।௰௨௯
க்ருதம் விப்ராய தாதவ்யம்। ப்ராஸநீயம் ததா ததி। ௩௰।௰௩
கார்த்திகாந்ேதஷு மாேஸஷு। ப்ராஸநம் தாநம் ஏவ ச। ௩௰।௰௩
ஏதத் ஏவ ஸமாக்யாதம்। ேதவம் தத்வச் ச பூஜேயத்। ௰௩௰।௰௩௰௩௨
குஹ்யம் ப்ேராஷ்டபதாேயாேக। மாஸி பாத்ரபேத அர்சேயத்। ௩௰।௰௩௧
தத்வத் ஆஸ்வயுேஜ பூஜ்யம்। ஹ்ருதயம் சாஸ்விநீஷு ைவ। ௩௰।௰௩௧
குர்யாத் ஸமாஹிதமநா:। ஸ்நாநப்ராஸநெஸௗசவாந்। ௩௰।௰௩௨
அநந்தஸிரஸ: பூஜாம்। கார்த்திேக க்ருத்திகாஸு ச। ௩௰।௰௩௨
யஸ்மிந் யஸ்மிந் திேந பூஜா। தத்ர தத்ர ததா திேந। ௩௰।௰௩௩
நாமாநந்தஸ்ய ஜப்தவ்யம்। க்ஷுதப்ரஸ்கலிதாதிஷு। ௩௰।௰௩௩

க்ருேதநாநந்தம் உத்திஸ்ய। பூர்வமாஸசதுஷ்டயம்। ௩௰।௰௩௪
குர்வதீ ேஹாமம் ைசத்ராெதௗ। ஸாலிநா குலநந்திநி। ௩௰।௰௩௪
க்ஷீேரண ஸ்ராவணாெதௗ து। ேஹாமம் மாஸசதுஷ்டயம்। ௩௰।௰௩௫
ஸஸ்தம் து ஸர்வமாேஸஷு। ஹவிஷ்யாந்நம் ச ேபாஜநம்।
௩௰।௰௩௫
ஏவம் த்வாதஸபிர் மாைஸ:। பாரணம் த்ரிதயம் ஸுேப। ௩௰।௰௩௬
பாரிேத ஸமவாப்ேநாதி। ஸர்வாந் ஏவ மேநாரதாந்। ௩௰।௰௩௬
புத்ரார்திபிர் வித்தகாைமர்। ப்ருத்யதாராந் அபப்ஸுபி ீ :। ௩௰।௰௩௭
ப்ரார்தயத்பிஸ் ச கர்தவ்யம்। ஆேராக்யபலஸம்பதம்। ௩௰।௰௩௭
ஏதத் வ்ரதம் மஹாபாேக। புண்யம் ஸ்வஸ்த்யயநப்ரதம்। ௩௰।௰௩௮
அநந்தவ்ரதஸம்ஜ்ஞம் ைவ। ஸர்வபாபப்ரணாஸநம்। ௩௰।௰௩௮
தத் குருஷ்ைவவ ேதவி த்வம்। வ்ரதம் ஸலதேந ீ வரம்। ௩௰।௰௩௯
விஸிஷ்டம் ஸர்வேலாகஸ்ய। யதி புத்ரம் அபப்ஸஸி ீ । ௩௰।௰௩௯
இதி ஸலதநா ீ ஸ்ருத்வா। ைமத்ேரயவசநம் ீ ஸுபம்। ௩௰।௰௪
சசாைரதத் வ்ரதவரம்। ஸுஸமாஹிதமாநஸா। ௩௰।௰௪
புத்ரார்திந்யாஸ் ததஸ் தஸ்யா। வ்ரேதநாேநந ஸுவ்ரத। ௩௰।௰௪௧
விஷ்ணுஸ் துேதாஷ துஷ்ேட ச। விஷ்ெணௗ ஸா ஸுஷுேவ ஸுதம்।
௩௰।௰௪௧
தஸ்ய ைவ ஜாதமாத்ரஸ்ய। ப்ரவவாவ் அநில: ஸிவ:। ௩௰।௰௪௨
நீரஜஸ்கம் அபூத் வ்ேயாம। முதம் ப்ராபாகிலம் ஜகத்। ௩௰।௰௪௨
ேதவதுந்துபேயா ேநது:। புஷ்பவ்ருஷ்டி: பபாத ச। ௩௰।௰௪௩
ப்ரஜகுர் திவி கந்தர்வா। நந்ருதுஸ் சாப்ஸேராகணா:। ௩௰।௰௪௩
தர்ேம மந: ஸமஸ்தஸ்ய। தால்ப்ய ேலாகஸ்ய சாபவத்। ௩௰।௰௪௩

தஸ்ய நாம பிதா சக்ேர। தநயஸ்யார்ஜுேநதி ைவ। ௩௰।௰௪௪
க்ருதவர்யஸுதத்வாச் ீ ச। கார்தவர்ேயா ீ பபூவ ஸ:। ௩௰।௰௪௪
ேதநாபி பகவாந் விஷ்ணுர்। தத்தாத்ேரயஸ்வரூபவாந்। ௩௰।௰௪௫
ஆராதிேதா அதிமஹதா। தபஸா தால்ப்ய பூப்ருதா। ௩௰।௰௪௫
தஸ்ய துஷ்ேடா ஜகந்நாதஸ்। சக்ரவர்தித்வம் உத்தமம்। ௩௰।௰௪௬
தெதௗ ெஸௗர்யபேல சாதி । ஸகலாந்ய் ஆயுதாநி ச। ௩௰।௰௪௬
ஸ ச வவ்ேர வரம் ேதவ। வதஸ் த்வத்ேதா பேவத் இதி। ௩௰।௰௪௭
புராநுஸ்மரணம் ஜ்ஞாநம்। பதாநாம் ீ சார்திநாஸநம்। ௩௰।௰௪௭
ஸ்மரணாத் உபகாரித்வம்। ஜகேதா அஸ்ய ஜகத்பேத। ௩௰।௰௪௭
தம் ஆஹ ேதவேதேவஸ:। புண்டரீகநிேபக்ஷண:। ௩௰।௰௪௮
ஸர்வம் ஏதந் மஹாபாக। தவ பூப பவிஷ்யதி। ௩௰।௰௪௮
யஸ் ச ப்ரபாேத ராத்ெரௗ ச। த்வாம் நர: கீர்தயிஷ்யதி। ௩௰।௰௪௯
நேமா அஸ்து கார்தவர்யாேயத்ய் ீ । அபிதாஸ்யதி ைசவ ய:। ௩௰।௰௪௯
திலப்ரஸ்தப்ரதாநஸ்ய। ஸ நர: புண்யம் ஆப்ஸ்யதி। ௩௰।௰௪௯
அநஷ்டத்ரவ்யதா ைசவ। தவ நாமாபிகீர்தைந:। ௩௰।௰௫
பவிஷ்யதி மஹீபாேலத்ய்। உக்த்வா தம் ப்ரயெயௗ ஹரி:। ௩௰।௰௫
ஸ சாபி வரம் ஆஸாத்ய। ப்ரஸந்நாத் கருடத்வஜாத்। ௩௰।௰௫௧
பாலயாம் ஆஸ பூபால:। ஸப்தத்வபாம்ீ வஸும்தராம்। ௩௰।௰௫௧
ேதேநஷ்டம் விவிைதர் யஜ்ைஞ:। ஸமாப்தவரதக்ஷிைண:। ௩௰।௰௫௨
ஜித்வாரிவர்கம் அகிலம்। தர்மத: பாலிதா: ப்ரஜா:। ௩௰।௰௫௨
அநந்தவ்ரதமாஹாத்ம்யாத்। ஆஸாத்ய தநயம் ச தம்। ௩௰।௰௫௩

பித்ேரா: புத்ேராத்பவம் து:கம்। நாஸத்ீ ஸ்வல்பம் அபி த்விஜ।
௩௰।௰௫௩
ஏவம் ஏதத் ஸமாக்யாதம்। அநந்தாக்யம் வ்ரதம் தவ। ௩௰।௰௫௪
யச் சீர்த்வா ராஜபத்நீஸா। கார்தவர்யம் ீ அஸூயத। ௩௰।௰௫௪
யஸ் ைசதச் ச்ருணுயாஜ் ஜந்ம। கார்தவர்யஸ்ய ீ மாநவ:। ௩௰।௰௫௫
ஸ்த்ரீ வா து:கம் அபத்ேயாத்தம்। ஸப்த ஜந்மாநி நாஸ்நுேத।
௩௰।௰௫௫
ரூபஸம்பத் ஸமாக்யாதா। ஸ்த்ரீபும்ஸாம் ஜாயேத ஸுபா। ௩௧।௰௰௧
ஸமுேபாஷ்ய ஜகந்நாதம்। நக்ஷத்ரபுருஷம் ஹரிம்। ௩௧।௰௰௧
வாேஸா அதிேஸாபநம் சாரு । வஸ்த்ராத்யாபரேணாஜ்ஜ்வலம்।
௩௧।௰௰௨
க்ருஹம் ஸர்வகுேணாேபதம்। அேஸேஷாபஸ்கராந்விதம்। ௩௧।௰௰௨
கர்மணா ேயந விப்ரர்ேஷ। ேதாஷிேதா மதுஸூதந:। ௩௧।௰௰௩
ததாதி பகவாந் கர்ம। தந் ேநா விஸ்தரேதா வத। ௩௧।௰௰௩
யந் மாம் ப்ருச்சஸி தால்ப்ய த்வம்। க்ருேஹாபஸ்கரபூஷணம்।
௩௧।௰௰௪
நராணாம் ஜாயேத ேயந। தத் ஸர்வம் கதயாமி ேத। ௩௧।௰௰௪
நந்தா பத்ரா ஜயா ரிக்தா। பூர்ணா ச த்விஜஸத்தம। ௩௧।௰௰௫
திதேயா ைவ ஸமாக்யாதா:। ப்ரதிபத்க்ரமஸம்ஜ்ஞயா। ௩௧।௰௰௫
பஞ்சமீதஸமீைசவ। ததா பஞ்சதஸீ திதி:। ௩௧।௰௰௬
பூர்ணா ஏதா: ஸமாக்யாதாஷ்। திதேயா முநிஸத்தம। ௩௧।௰௰௬
ம்ருதா தாதுவிகாைரர் வா। வர்ணைகர் ேகாமேயந வா। ௩௧।௰௰௭
விஷ்ேணார் ஆயதேந தாஸு। ய: கேராத்ய் உபேலபநம்। ௩௧।௰௰௭

ப்ரவாதாவாதகுணவத்। வர்ஷாஸ்வ் அதிமேநாரமம்। ௩௧।௰௰௮
அநுலிப்தம் ஸுபாகாரம்। ஸுக்ருஹம் லபேத முேந। ௩௧।௰௰௮
பூர்ணம் தாந்யஹிரண்யாத்ையர்। மணிமுக்தாபேலாஜ்ஜ்வலம்।
௩௧।௰௰௯
ப்ரத்யாஸந்நஜலாேபாகம்। க்ருஹம் ஆப்ேநாதி ேஸாபநம்। ௩௧।௰௰௯
ஸாம்நதஸ்வஜநாநாம் யத்। ஸர்ேவஷாம் உத்தேமாத்தமம்। ௩௧।௰௧
தத் ஆப்ேநாதி க்ருஹம் ப்ரஹ்மந்ந்। அநுேலபநக்ருந் நர:। ௩௧।௰௧
ேயநாநுலிப்ேத திஷ்டந்தி। விஷ்ண்வாயதநபூதேல। ௩௧।௰௧௧
ப்ராஹ்மணக்ஷத்ரியவிஸ:। ஸூத்ரா: ஸாத்வ்யஸ் ததா ஸ்த்ரிய:।
௩௧।௰௧௧
தஸ்ய பூண்யபலம் தால்ப்ய। ஸ்ரூயதாம் யத் ப்ரஜாயேத। ௩௧।௰௧௧
அப்ஸேராகணஸம்கீர்ணம்। முக்தாஹாரகேணாஜ்ஜ்வலம்। ௩௧।௰௧௨
ஸ்ேரஷ்டம் ஸர்வவிமாநாநாம்। ஸ்வர்ேக திஷ்ண்யம் அவாப்நுேத।
௩௧।௰௧௨
யாவத்யஸ் திதேயா லிப்தம்। திவ்யாப்தாம்ஸ் தாவேதா த்விஜ।
௩௧।௰௧௩
தஸ்மிந் விமாேந ஸ நர:। ஸ்த்ரீ வா திஷ்டதி ஸத்தம। ௩௧।௰௧௩
ஸுகந்தகந்தஸத்வஸ்த்ர । ஸர்வபூஷணபூஷித:। ௩௧।௰௧௪
கந்தர்வாப்ஸரஸாம் ஸம்ைப:। பூஜ்யமாந: ஸ திஷ்டதி। ௩௧।௰௧௪
லிப்தம் ச யாவேதா ஹஸ்தாந்। விஷ்ேணார் ஆயதநம் த்விஜ।
௩௧।௰௧௫
தாவத்ேயாஜநவிஸ்தீர்ண । ஸ்வர்கஸ்தாநாதிேபா ஹி ஸ:। ௩௧।௰௧௫
பூஜ்யமாந: ஸுரகைண:। ஸேதாஷ்ணாதிவிவர்ஜித ீ :। ௩௧।௰௧௬

மேநாஜ்ஞகாத்ேரா விப்ேரந்த்ரஸ்। திஷ்டத்ய் அஸ்தாகஸம்ஹதி:।
௩௧।௰௧௬
ச்யுதஸ் தஸ்மாத் இஹாகம்ய। விஸிஷ்ேட ஜாயேத குேல। ௩௧।௰௧௭
தேதா அஸ்ய ஸத்க்ருஹவரம்। மர்த்யேலாேக அபிஜாயேத। ௩௧।௰௧௭
ந தத்ர தாவத் தாரித்ர்யம்। ேநாபஸர்கா ந வா கலி:। ௩௧।௰௧௮
ந சாபி ம்ருதநிஷ்க்ராந்திர்। யாவஜ் ஜவத்ய் ீ அெஸௗ த்விஜ। ௩௧।௰௧௮
விஷ்ணு: ஸமஸ்தபூதாநி। ஸஸர்ைஜதாநி யாநி ைவ। ௩௧।௰௧௯
ேதஷாம் மத்ேய ஜகத்தாதுர்। அதீேவஷ்டா வஸும்தரா। ௩௧।௰௧௯
க்ருேத ஸம்மார்ஜேந தஸ்யாஸ்। தைதேவாபரிேலபேந। ௩௧।௰௨
ப்ரயாதி பரமம் ேதாஷம்। ைவஷ்ணவயம்ீ மஹீயத:। ௩௧।௰௨
ப்ரஹ்மந் ேயந விதாேநந। ேதவாகாேராபேலபலம்। ௩௧।௰௨௧
கர்தவ்யம் புருைஷ: ஸம்யக்। ஸ்த்ரீபிர் வா தத் உதீரய। ௩௧।௰௨௧
ரிக்தாயாஸ் து திேதர் மத்ேய। குர்யாத் ஸம்கல்பம் ஆத்மந:। ௩௧।௰௨௨
உபேலபநக்ருத் விப்ேரா। விஷ்ேணார் ஆயதேந புவி। ௩௧।௰௨௨
த்விதீேய அஹ்நி தேதா ேதவம்। ப்ரணம்ய யதமாநஸ:। ௩௧।௰௨௩
தரணபிதரம் ீ விஷ்ணும்। இதம் வாக்யம் உதீரேயத்। ௩௧।௰௨௩
த்வம் ஸர்வபூதப்ரபேவா ஜகத்பேத। த்வய்ய் ஏதத் ஈேஸஸ ஜகத் ப்ரதிஷ்டிதம்।
௩௧।௰௨௪
த்வம் ஏவ பூதாநி யதஸ் தேதா அஹம்। த்வாம் பூஜயாம்ய் அத்ய
மஹீஸ்வரூபம்। ௩௧।௰௨௪
த்வம் மஹீஜகதாம் நாத। ஸர்வநாத நேமா அஸ்து ேத। ௩௧।௰௨௫
ஸுஸ்ரூஷித: ப்ரஸேதஸ ீ । புேவா ேலபநகர்மணா। ௩௧।௰௨௫
இத்ய் உச்சார்ய க்ஷிெதௗ க்ஷிப்த்வா। ப்ரதமம் தாரநீதேல। ௩௧।௰௨௬

புஷ்பாணி வா த்விஜஸ்ேரஷ்ட। ய: கேராத்ய் அநுேலபநம்। ௩௧।௰௨௬
ந தஸ்ய ஜாயேத பங்ேகா। கார்ஹஸ்த்யஸ்ய கதாசந। ௩௧।௰௨௬
யா ச நாரீ கேராத்ய் ஏவம்। யதாவத் அநுேலபநம்। ௩௧।௰௨௭
நாப்ேநாதி ஸா ச ைவதவ்யம்। க்ருஹபங்கம் கதாசந। ௩௧।௰௨௭
க்ருத்ேவாபேலபநம் பூய:। ப்ரணிபத்ய ஜநார்தநம்। ௩௧।௰௨௮
ஸ்நாேதா விஷ்ணும் ஸமப்யர்ச்ய। இதம் வாக்யம் உதீரேயத்।
௩௧।௰௨௮
ப்ரஸதீ பூதராநந்த। மயா யத் உபேலபநம்। ௩௧।௰௨௯
க்ருதம் ேதந ஸமஸ்தம் ேம। நாஸம் அப்ேயது பாதகம்। ௩௧।௰௨௯
ஏவம் ஸம்பூஜ்ய புஞ்ஜயாத் ீ । அபராஹ்ேந த்விேஜாத்தம। ௩௧।௰௩
ஸ்வநுலிப்ேத மஹாபாேக। புக்த்வா லிம்ேபச் ச தத் புந:। ௩௧।௰௩
பேக்ஷ பேக்ஷ த்ரிராத்ரம் து। ய: கேராத்ய் உபேலபநம்। ௩௧।௰௩௧
ஸர்வபாபவிநிர்முக்த:। ஸ்வர்கம் கச்சத்ய் அஸம்ஸயம்। ௩௧।௰௩௧
தத்க்ஷயாத் ஸ்வர்ேகேலாேக து। ஜாேதா க்ருஹவரம் யதா। ௩௧।௰௩௨
ஸமாப்ேநாதி யதாக்யாதம்। தத் ஸர்வம் தவ ஸத்தம। ௩௧।௰௩௨
ஸர்வாபரணஸம்பூர்ணம்। ஸர்ேவாபஸ்கரதாந்யவத்। ௩௧।௰௩௩
ேகாமஹிஷ்யாதிஸம்ேபாகம்। க்ருஹம் ஆப்ேநாதி மாநவ:। ௩௧।௰௩௩
தஸ்மாத் அபப்ஸதா ீ ஸம்யக்। கார்ஹஸ்த்யம் அவிகண்டிதம்।
௩௧।௰௩௪
விஷ்ேணார் ஆயதேந கார்யம்। ஸர்வைதேவாபேலபநம்। ௩௧।௰௩௪
ஸப்தத்வபவத ீ ீம் க்ருத்ஸ்நாம்। யேதந்த்ரஸ் த்ரிதிவம் ததா। ௰௩௧।௩௩
அல்ேபாபேலபநாத் யஸ்ய। மாந்தாதா ஸகலாம் மஹீம்। ௩௧।௰௩௫
அவாப விஷ்ண்வாயதநம்। ேநாபலிம்ேபத ேகா ஹி தத்। ௩௧।௰௩௫

தீபம் ப்ரயச்சதி நேரா। விஷ்ேணார் ஆயதேந ஹி ய:। ௩௨।௰௰௧
ஸதக்ஷிணஸ்ய யஜ்ஞஸ்ய। பலம் ப்ராப்ேநாத்ய் அஸம்ஸயம்।
௩௨।௰௰௧
கார்த்திேக து விேஸேஷண। ெகௗமுேத மாஸி தீபகம்। ௩௨।௰௰௨
தத்த்வா யத் பலம் ஆப்ேநாதி। தால்ப்ய தத் ேகந லப்யேத। ௩௨।௰௰௨
தால்ப்யாந்யத் அபி வŠயாமி। புராவ்ருத்தம் இதம் ஸ்ருணு।
௩௨।௰௰௩
விதர்பராஜதநயா। லலிதா யத் உவாச ஹ। ௩௨।௰௰௩
விதர்பராட் சித்ரரேதா। பபூவாஸ்த்ரவிஸாரத:। ௩௨।௰௰௪
தஸ்ய புத்ரஸதம் ராஜ்ேஞா। ஜஜ்ேஞ பஞ்சதேஸாத்தரம்। ௩௨।௰௰௪
ஏைகவ கந்யா தால்ப்யாஸல்ீ । லலிதா நாமநாமத:। ௩௨।௰௰௫
ஸர்வலக்ஷணஸம்பூர்ணா। ப்ராத்ருணாம் பிதுர் ஏவ ச। ௩௨।௰௰௫
ஸமஸ்தப்ருத்யவர்கஸ்ய। மாத்ருணாம் ஸ்வஜநஸ்ய ச। ௩௨।௰௰௬
தைதவ ெபௗரவர்கஸ்ய। யஸ் சாந்ேயா தத்ருேஸ ஸுபாம்। ௩௨।௰௰௬
தஸ்ய தஸ்யாதிசார்வங்கீ। பபூேவஷ்டா த்விேஜாத்தம। ௩௨।௰௰௬
தாம் தெதௗ காஸிராஜாய। ஸ பிதா சாருவர்மேந। ௩௨।௰௰௭
உபேயேம ச தாம் ஸுப்ரூம்। சாருவர்மா மஹீபதி:। ௩௨।௰௰௭
ஸதாந்ய் அந்யாநி பார்யாணாம்। த்ரீண்ய் ஆஸம்ஸ் சாருவர்மண:।
௩௨।௰௰௮
தாஸாம் மத்ேய அக்ரமஹிஷீ। லலிதா தஸ்ய சாபவத்। ௩௨।௰௰௮
ஸா ச நித்யம் ஜகத்தாதுர்। ேதவேதவஸ்ய சக்ரிண:। ௩௨।௰௰௯
தீபவர்திபரா தத்வத்। ைதலஸ்யாஹரேணாத்யதா। ௩௨।௰௰௯
விஷ்ேணார் ஆயதேந தஸ்யா:। ஸஹஸ்ரம் த்விஜஸத்தம। ௩௨।௰௧

தீபாநாம் ைவ ப்ரஜஜ்வால। திவாராத்ரம் அதந்த்ரிதம்। ௩௨।௰௧
தஸ்யா த்யுதிபராபூதாஸ்। தஸ்யா லாவண்யநிர்ஜிதா:। ௩௨।௰௧௧
ஸர்வா: ஸபத்ந்ேயா லலிதாம்। பப்ரச்சுர் இதம் ஆதித:। ௩௨।௰௧௧
லலிேத வத பத்ரம் ேத। பத்ரம் ேத லலிேத வத। ௩௨।௰௧௨
ெகௗதூஹலபரா: ஸர்வா। யத் ப்ருச்சாமஸ் தத் உச்யதாம்। ௩௨।௰௧௨
விஷேய ஸதி வக்தவ்யம்। யந் மயா தத் இேஹாச்யதாம்। ௩௨।௰௧௩
நாஹம் மத்ஸரிணீபத்ரா। ந ச ராகாதிதூஷிதா। ௩௨।௰௧௩
பவத்ேயா மம ஸர்வாஸாம்। பவதீநாம் அஹம் ததா। ௩௨।௰௧௪
அப்ருதக்பர்த்ருஸாமந்யா। ேதவேலாகாபிகாமுகா:। ௩௨।௰௧௪
பூர்வம் யூயம் அஹம் ைசவ। பவதீநாம் ஸதர்மிண।ீ ௰௩௨।௩௪
ந ததா புஷ்பதூேபஷு। ந ததா த்விஜபூஜேந। ௩௨।௰௧௫
ப்ரயத்நம் தவ பஸ்யாேமா। விஷ்ேணார் ஆயதேந ஸுேப। ௩௨।௰௧௫
யதாஹநி ததா ராத்ெரௗ। யதா ராத்ெரௗ ததாஹநி। ௩௨।௰௧௬
தவ தீபப்ரதாநாய। யதா ஸுப்ரு ஸேதாத்யம:। ௩௨।௰௧௬
தத் ஏதத் கதயாஸ்மாகம்। லலிேத ெகௗதுகம் பரம்। ௩௨।௰௧௭
மந்யாேமா தீபதாநஸ்ய। பவத்யா விதிதம் பலம்। ௩௨।௰௧௭
ஏவம் உக்தா ததஸ் தாபிர்। லலிதா லலிதம் வச:। ௩௨।௰௧௮
வ்யாஜஹார ஸபத்நீஸ் தா। ந கிம்சித் அபி பாமிநீ। ௩௨।௰௧௮
புந: புநஸ் ச ஸா தாபிர்। பஹுேஷா தால்ப்ய ேசாதிதா। ௩௨।௰௧௯
தாக்ஷிண்யஸாரா லலிதா। கதாயாம் ஆஸ பாமிநீ। ௩௨।௰௧௯
ெகௗதுகம் பவதீநாம் ேசத்। அதீவால்ேப அபி வஸ்துநி। ௩௨।௰௨
தத் ஏஷா கதயாம்ய் ஏதத்। யத் வ்ருத்தம் மம ேஸாபநா:। ௩௨।௰௨

ெஸௗவரராஜஸ்ய ீ புரா। ைமத்ேரேயா அபூத் புேராஹித:। ௩௨।௰௨௧
ேதந சாயதநம் விஷ்ேணா:। காரிதம் ேதவிகாதேட। ௩௨।௰௨௧
அஹந்ய் அஹநி ஸுஸ்ரூஷாம்। புஷ்பதூேபாபேலபைந:। ௩௨।௰௨௨
தீபதாநாதிபிஸ் ைசவ। சக்ேர தத்ர ஸ ைவ த்விஜ:। ௩௨।௰௨௨
கார்த்திேக தீபேகா ப்ரஹ்மந்। ப்ரதத்தஸ் ேதந ைவ ததா। ௩௨।௰௨௩
ஆஸந்ீ நிர்வாணபூயிஷ்ேடா। ேதவார்சாபுரேதா நிஸி। ௩௨।௰௨௩
ேதவதாயதேந சாஸம்। தத்ராஹம் அபி மூஷிகா। ௩௨।௰௨௪
ப்ரதீபவர்திஹரேண। க்ருதபுத்திர் வராநநா:। ௩௨।௰௨௪
க்ருஹீதா ச மயா வர்திர்। வ்ருஷதம்ேஸா நநாத ச। ௩௨।௰௨௫
நஷ்டா சாஹம் ததா தஸ்ய। மார்ஜாரஸ்ய பயாதுரா। ௩௨।௰௨௫
வர்திப்ராந்ேதந நஸ்யந்த்யா। ஸ தீப: ப்ேரரிேதா மயா। ௩௨।௰௨௬
ஜஜ்வால பூர்வவத் தீப்த்யா। தஸ்மிந்ந் ஆயதேந புந:। ௩௨।௰௨௬
ம்ருதாஹம் ச தேதா ஜாதா। ைவதர்பீ ராஜகந்யகா। ௩௨।௰௨௭
ஜாதிஸ்மரா காந்திமதீ। பவதீநாம் ஸமா குைண:। ௩௨।௰௨௭
ஏஷ ப்ரபாேவா தீபஸ்ய। கார்த்திேக மாஸி ேஸாபநா:। ௩௨।௰௨௮
தத்தஸ்ய விஷ்ண்வாயதேந। யஸ்ேயயம் வ்யுஷ்டிர் உத்தமா।
௩௨।௰௨௮
அஸம்கல்பிதம் அப்ய் அஸ்ய। ப்ேரரணம் யத் க்ருதம் மயா। ௩௨।௰௨௯
விஷ்ண்வாயதநதீபஸ்ய। யஸ்ேயதம் புஜ்யேத பலம்। ௩௨।௰௨௯
ேலாபாபிபூதா ஹர்தும் தம்। ப்ரதீபம் அஹம் ஆகதா। ௩௨।௰௩
அவேஸைநவ தத்வர்த்யா। ப்ேரரணம் தத்ர ேம க்ருதம்। ௩௨।௰௩
தேதா ஜாதிஸ்ம்ருதிர் ஜந்ம। மாநுஷ்யம் ேஸாபநம் வபு:। ௩௨।௰௩௧

வஸ்ய: பதி: ப்ருதிவஸீ :। கிம் புநர் தீபதாயிநாம்। ௩௨।௰௩௧
ஏதஸ்மாத் காரணாத் தீபாந்। அஹம் ஏதாந் அஹர்நிஸம்। ௩௨।௰௩௨
ப்ரயச்சாமி ஹேரர் தாம்நி। ஜ்ஞாதம் அஸ்ய ஹி யத் பலம்। ௩௨।௰௩௨
பவதீநாம் இதம் ஸத்யம்। மேயாக்தம் ேகஸவாலேய। ௩௨।௰௩௩
மூஷிகத்வாத் அஹம் ேயந। கர்மணா ஸித்திம் ஆகதா। ௩௨।௰௩௩
ஏஷ ப்ரபாேவா தீபஸ்ய। கார்த்திேக மாஸி ஸத்தம। ௩௨।௰௩௪
விஷ்ண்வாயதநதத்தஸ்ய। ஜகாத லலிதா யதா। ௩௨।௰௩௪
திேந திேந ஜகந்நாத। ேகஸேவதி ஸமாஹித:। ௩௨।௰௩௫
ததாதி கார்த்திேக யஸ் து। விஷ்ண்வாயதநதீபகம்। ௩௨।௰௩௫
ஜாதிஸ்மரத்வம் ப்ரஜ்ஞாம் ச। ப்ராகாஸ்யம் ஸர்வவஸ்துஷு।
௩௨।௰௩௬
அவ்யாஹேதந்த்ரியத்வம் ச। ஸம்ப்ராப்ேநாதி ந ஸம்ஸய:। ௩௨।௰௩௬
ேஸஷகாேல ச சக்ஷுஷ்மாந்। ேமதாவ ீதீபேதா நர:। ௩௨।௰௩௭
ஜாயேத நரகம் வாபி। தம:ஸம்ஜ்ஞம் ந பஸ்யதி। ௩௨।௰௩௭
ஏகாதஸம்ீ த்வாதஸம்ீ வா। ப்ரதிபக்ஷம் ச ேயா நர:। ௩௨।௰௩௮
தீபம் ததாதி க்ருஷ்ணாய। தஸ்யாபி ஸ்ருணு யத் பலம்। ௩௨।௰௩௮
ஸுவர்ணமணிமுக்தாட்யம்। மேநாஜ்ஞம் அதிேஸாபநம்। ௩௨।௰௩௯
தீபமாலாகுலம் திவ்யம்। விமாநம் ேஸா அதிேராஹதி। ௩௨।௰௩௯
தஸ்மாத் ஆயதேந விஷ்ேணார்। தத்யாத் தீபம் த்விேஜாத்தம। ௩௨।௰௪
தாம்ஸ் ச தத்தாந் ந ஹிம்ேஸத। ந ச ைதலவிேயாஜிதாந்। ௩௨।௰௪
குர்வதீ தீபஹர்தா து। மூேகா அந்ேதா ஜாயேத யத:। ௩௨।௰௪
ஜாயேத நரகம் சாபி। தப:ஸம்ஜ்ஞம் ஸ பஸ்யதி। ௰௩௨।௩௫

அந்ேத தாமஸி துஷ்பாேர। நரேக பதிதாந் கில। ௩௨।௰௪௧
விக்ேராஸமாநாந் க்ஷுத்க்ஷாமாஞ்। ஜகாத யமகிம்கர:। ௩௨।௰௪௧
விலாைபர் அலம் அத்ராபி। கிம் ேவா விலபிேத பலம்। ௩௨।௰௪௨
யதா ப்ரமாதிபி: பூர்வம்। ஆத்மாத்யந்தம் உேபக்ஷித:। ௩௨।௰௪௨
பூர்வம் ஆேலாசிதம் ைநதத்। கிம் அப்ய் அந்ேத பவிஷ்யதி। ௩௨।௰௪௩
இதாநீம் யாதநாேபாக:। கிம் விலாப: கரிஷ்யதி। ௩௨।௰௪௩
ேதேஹா திநாநி ஸ்வல்பாநி। விஷயாஸ் சாதிதுர்தரா:। ௩௨।௰௪௪
ஏதத் ேகா ந விஜாநாதி। ேயந யூயம் ப்ரமாதிந:। ௩௨।௰௪௪
ஜந்துஜந்மஸஹஸ்ேரப்ய। ஏதஸ்மிந் மாநுஷ்ேயா யதி। ௩௨।௰௪௫
தத்ராப்ய் அதிவிமூடத்வாத்। கிம் ேபாகாந் அபிதாவதி। ௩௨।௰௪௫
விருத்தவிஷயாஸ்வாத । முதிைதர் ஹஸிதம் ச யத்। ௩௨।௰௪௬
பவத்பிர் ஆகதம் து:கம்। விலாபபரிணாமிகம்। ௩௨।௰௪௬
அத்யகாலிகயா புத்த்யா। யத் ஆகாமி ந சிந்திதம்। ௩௨।௰௪௭
பரிதாபாய தஜ் ஜாதம்। து:கம் கர்மவிபாகஜம்। ௩௨।௰௪௭
ஸ்வல்பம் ஆயுர் மநுஷ்யாணாம்। ததந்ேத பரதந்த்ரதா। ௩௨।௰௪௮
புஜ்யேத ச க்ருதம் பூர்வம்। ஏதத் கிம் ேவா ந சிந்திதம்। ௩௨।௰௪௮
யத் அபூத் பரதாேரஷு। ப்ரீதேய அங்ககுசாதிகம்। ௩௨।௰௪௯
யாதநாது:கரூபாய। நரேக ச தத் ஆகதம்। ௩௨।௰௪௯
பரதாரமேநாஹாரி। யத் பவத்பிர் அகீயத। ௩௨।௰௫
ஹா மாத இத்யாதி ருதம்। தத் இதாநீம் விலப்யேத। ௩௨।௰௫
ஸம்திக்தபரேலாகாநாம்। ஐஹிேக நிஹதாத்மநாம்। ௩௨।௰௫௧
ம்ருதாநாம் ஸ்வக்ருதம் கர்ம। பஸ்சாத்தாபாய ேகவலம்। ௩௨।௰௫௧

முஹூர்தார்தஸுகாஸ்வாத । லுப்தாநாம் அக்ருதாத்மநாம்। ௩௨।௰௫௨
அேநகவர்ஷேகாடிஷு। து:கதம் கர்ம ஜாயேத। ௩௨।௰௫௨
ஹா மாதஸ் தாத தாேததி। பவத்பி: கிம் விலப்யேத। ௩௨।௰௫௩
ஸுபாஸுபம் நிஜம் கர்ம। தத் அத்ய ஹ்ய் அத்ர புஜ்யேத। ௩௨।௰௫௩
புத்ரதாரக்ருஹேக்ஷத்ர । ஹிதாய ஸதேதாத்யதா:। ௩௨।௰௫௪
ந குர்வத்நி கதம் மூடா:। ஸ்வல்பம் அப்ய் ஆத்மேநா ஹிதம்।
௩௨।௰௫௪
வஞ்சிேதா அெஸௗ மயா லப்தம்। இதம் அஸ்மாத் உபாயத:।
௩௨।௰௫௫
ந ேவத்தி கஸ்சித் ஆத்மார்தம்। ேவத்தி ப்ரக்ரமேதா நர:। ௩௨।௰௫௬
ந ேவத்தி ஸூர்யசந்த்ராதீந்। காலம் ஆத்மாநம் ஏவ ச। ௩௨।௰௫௭
ஸாக்ஷிபூதாந் அேஸஷஸ்ய। ஸுபஸ்ேயஹாஸுபஸ்ய ச। ௩௨।௰௫௭
ஜந்மாந்ய் அந்யாநி ஜாயந்ேத। புத்ரதாராதிேதஹிநாம்। ௩௨।௰௫௮
ததர்தம் யத் க்ருதம் கர்ம। தஸ்ய ஜந்மஸதாநி தத்। ௩௨।௰௫௮
அேஹா ேமாஹஸ்ய மாஹாத்ம்யம்। மமத்வம் நரேகஷ்வ் அபி।
௩௨।௰௫௯
க்ரந்தேத மாதரம் தாதம்। பட்யமாேநா ீ அபி யத் ஸ்வயம்। ௩௨।௰௫௯
ஏவம் ஆக்ருஷ்டசித்தாநாம்। விஷயாஸ்வாததர்ஷுைல:। ௩௨।௰௬
ந்ருணாம் ந ஜாயேத புத்தி:। பரமார்தாவேலாகிநீ। ௩௨।௰௬
ததா ச விஷயாஸக்திம்। கேராத்ய் அவிரதம் மந:। ௩௨।௰௬
ேகா அதிபாேரா ஹேரர் நாம்நி। ஜிஹ்வாயா: பரிகீர்தேந। ௩௨।௰௬௧
வர்திைதேல அல்பெமௗல்ேய அபி। யத் அக்நிர் லப்யேத முதா।
௩௨।௰௬௨

அேதா அதிகதேரா ேலாப:। ேகா வஸ் சித்ேத அபவத் ததா। ௩௨।௰௬௨
ேயேநயம் ேதஷு ஹஸ்ேதஷு। ஸ்வாதந்த்ர்ேய ஸதி தீபக:। ௩௨।௰௬௩
மஹாபேலா விஷ்ணுக்ருேஹ। ந தத்ேதா நரகாபஹ:। ௩௨।௰௬௩
ந ேவா விலபிேத கிம்சித்। இதாநீம் த்ருஸ்யேத பலம்। ௩௨।௰௬௪
அஸ்வாதந்த்ர்ேய விலபதாம்। ஸ்வாதந்த்ர்ேய அதிப்ரமாதிநாம்।
௩௨।௰௬௪
அவஸ்யம்பாதிந: ப்ராணா। ேபாக்தா ஜேவா ீ ஹ்ய் அஹர்நிஸம்।
௩௨।௰௬௫
தத்தம் ச லபேத ேபாக்தா। ஸமேய விஷயாந் இதி। ௩௨।௰௬௫
ஏதத் ஸ்வாதந்த்ர்யவத்பிர் ேவா। யுக்தம் ஆஸத்ீ பரீக்ஷிதும்।
௩௨।௰௬௬
இதாநீம் கிம் விலாேபந। ஸஹத்வம் யத் உபாகதம்। ௩௨।௰௬௬
யத்ய் ஏதத் அநபஷ்டம் ீ ேவா। யத் து:கம் ஸமுபஸ்திதம்। ௩௨।௰௬௭
தத் பூேயா அபி மதி: பாேப। ந கர்தவ்யா கதம்சந। ௩௨।௰௬௭
க்ருேத அபி பாபேக கர்மண்ய்। அஜ்ஞாநாத் அகநாஸநம்। ௩௨।௰௬௮
கர்தவ்யம் அவ்யவஸ்திதம்। ஸ்மரத்பிர் மதுஸூதநம்। ௩௨।௰௬௮
நாரகாஸ் தத்வச: ஸ்ருத்வா। தாம் ஊசுர் அதிது:கிதா:। ௩௨।௰௬௯
க்ஷுத்க்ஷாமகண்டாஸ் த்ருஷயா। பரிஸ்புடிததாலுகா:। ௩௨।௰௬௯
ேபா ேபா ஸாேதா க்ருதம் கர்ம। யத் அஸ்மாபிஸ் தத் உச்யதாம்।
௩௨।௰௭
நரகஸ்ைதர் விபாேகா அயம்। புஜ்யேத யஸ்ய தாருண:। ௩௨।௰௭
யுஷ்மாபிர் ெயௗவேநாந்மாத । முதிைதர் அவிேவகிபி:। ௩௨।௰௭௧
த்யூேதாத்ேயாதாய ேகாவிந்த । க்ருஹாத் தீப: புரா ஹ்ருத:। ௩௨।௰௭௧

ேதநாஸ்மிந் நரேக ேகாேர। க்ஷுத்த்ருஷ்ணாபரிபடிதா ீ :। ௩௨।௰௭௨
பவந்த: பதிதாஸ் தீவ்ர । ஸீதவாதவிதாரிதா:। ௩௨।௰௭௨
ஏதத் ேத தீபதாநஸ்ய। ப்ரதீபஹரணஸ்ய ச। ௩௨।௰௭௩
புண்யம் பாபம் ச கதிதம்। ேகஸவாயதேந த்விஜ। ௩௨।௰௭௩
ஸர்வத்ைரவ ஹி தீபஸ்ய। ப்ரதாநம் த்விஜ ஸஸ்யேத। ௩௨।௰௭௪
விேஸேஷண ஜகத்தாது:। ேகஸவஸ்ய நிேவஸேந। ௩௨।௰௭௪
ேய அந்தா மூகா நி:ஸ்ருதா நிர்விேவகா। ஹீநாஸ் ைதஸ் ைத: ஸாதைநர்
விப்ரவர்ய। ௩௨।௰௭௫
ைதஸ் ைதர் தீபா: ஸாதுேலாகப்ரதத்தா। ேதவாகாராத் அந்யேதா விப்ரணதாீ :।
௩௨।௰௭௫
ஆஹ்லாதம் சக்ஷுஷ: ப்ரீதிம்। கேராதி மநஸஸ் ததா। ௩௩।௰௰௧
ேகஷாம்சித் தர்ஸநம் ப்ரஹ்மந்। மநுஷ்யாணாம் அஹர்நிஸம்।
௩௩।௰௰௧
உத்ேவஜநீயா பூதாநாம்। அநிமித்தம் ததாபேர। ௩௩।௰௰௨
வதந்ேத விப்ரியம் ைநவ। ப்ரீதிம் குர்வந்தி மாநவா:। ௩௩।௰௰௨
ஏதத் யஸ்ய பலம் ப்ரஹ்மந்। தாநஸ்ய தபேஸா அதவா। ௩௩।௰௰௩
உபவாஸஸ்ய வா தந் ேம। யதாவத் வக்தும் அர்ஹஸி। ௩௩।௰௰௩
அப்ரீதிதஸ்ய விப்ரர்ேஷ। விபாேகா யஸ்ய கர்மண:। ௩௩।௰௰௪
மநுஷ்யாணாம் அேஸஷம் ைவ। தந் மமாசŠவ ஸத்தம। ௩௩।௰௰௪
ேதவப்ராஹ்மணேவேதஷு। யஜ்ேஞஷு ச நராதைம:। ௩௩।௰௰௫
ையர் ஜுகுப்ஸா க்ருதா தால்ப்ய। மநஸாப்ய் அதிமாநிபி:। ௩௩।௰௰௫
ேதஷாம் ஸம்தர்ஸநாத் ஸர்ேவா। ந ஸுகம் விந்தேத த்விஜ।
௩௩।௰௰௬

வதந்த்ய் அப்ய் அநுகூலாநி। ந ேதஷு ப்ரீயேத ஜந:। ௩௩।௰௰௬
ஸ்பர்ஸாத் உத்விஜேத ேலாக:। கடு ேதஷாம் ச தர்ஸநம்। ௩௩।௰௰௭
ஸம்பாஷணம் ச நிந்தா ைவ। க்ருதா ேவதத்விஜாதிேக। ௩௩।௰௰௭
தஸ்மாந் ந நிந்தாம் ேவதாெதௗ। ந ஜுகுப்ஸாம் ச பண்டித:। ௩௩।௰௰௮
யஜ்ஞாெதௗ ச நர: குர்யாத்। ய இச்ேசச் ச்ேரய ஆத்மந:। ௩௩।௰௰௮
ையஸ் து ப்ரீதி: ஸமஸ்ேதஷு। ேவதேதவத்விஜாதிஷு। ௩௩।௰௰௯
யஜ்ஞாதிேக ைசவ க்ருதா। தால்ப்ய தத்தர்ஸநம் ந்ருணாம்। ௩௩।௰௰௯
ஆஹ்லாதஸ் சக்ஷுஷ: ப்ரீதிர்। மநேஸா நிர்வ்ருதி: பரா। ௩௩।௰௧
ஸம்பாஷேண ததாஹ்லாத:। ஸர்வேலாகஸ்ய ஜாயேத। ௩௩।௰௧
ஸ்துதா: ப்ரஸஸ்தா: ஸம்ப்ரீத்யா। பூஜிதா பஹுமாநத:। ௩௩।௰௧௧
ஸ்ேரய: பரம் ப்ரயச்சந்தி। ேதவா ேவதா மகா த்விஜா:। ௩௩।௰௧௧
ேலாகத்வேய அபி சாப்ரீதிம்। பஸுபுத்ரதநக்ஷயம்। ௩௩।௰௧௨
குர்வந்தி த்விஜஸார்தூல। ஏத ஏவ விநிந்திதா:। ௩௩।௰௧௨
ஏத ஏவ ஸமாக்யாதா:। ஸ்தவாதிக்ரஹேண குணாஹ்। ௩௩।௰௧௩
நிந்தாயா: ஸ்ரவேண ேதாஷ। ஏேதஷாம் ஏவம் ஏவ ஹி। ௩௩।௰௧௩
தஸ்மாத் ஸ்தவ்யா: ப்ரஸம்ஸ்யாஸ் ச। ேதவா ேவதா த்விஜாதய:।
௩௩।௰௧௪
யஜ்ஞாஸ் ச மநஸாப்ய் ஏஷாம்। ந நிந்தாம் ஆசேரத் புத:। ௩௩।௰௧௪
அநாயாேஸந பகவந்। தாேநநாந்ேயந ேகநசித்। ௩௪।௰௰௧
பாபம் ப்ரஸமம் ஆயாதி। ேயந தத் வக்தும் அர்ஹஸி। ௩௪।௰௰௧
ஸ்ருணு தால்ப்ய மஹாபுண்யாம்। த்வாதஸம்ீ பாபநாஸநீம்। ௩௪।௰௰௨
யாம் உேபாஷ்ய பரம் புண்யம்। ப்ராப்நுேத ஸ்ரத்தயாந்வித:। ௩௪।௰௰௨

மாகமாேஸ து ஸம்ப்ராப்த। ஆஷாடார்க்ஷம் பேவத் யதி। ௩௪।௰௰௩
மூலம் வா க்ருஷ்ணபக்ஷஸ்ய। த்வாதஸ்யாம் நியதஸ் ததா। ௩௪।௰௰௩
க்ருஹ்ணயாத் ீ புண்யபலதம்। விதாநம் தஸ்ய ேம ஸ்ருணு। ௩௪।௰௰௪
ேதவேதவம் ஸமப்யர்ச்ய। ஸுஸ்நாத: ப்ரயத: ஸுசி:। ௩௪।௰௰௪
க்ருஷ்ணநாம்நா ச ஸம்ஸ்தூய। ஏகாதஸ்யாம் மஹாமேத। ௩௪।௰௰௫
உேபாஷிேதா த்விதீேய அஹ்நி। புந: ஸம்பூஜ்ய ேகஸவம்। ௩௪।௰௰௫
ஸம்ஸ்தூய நாம்நா ச தத:। க்ருஷ்ணாக்ேயந புந: புந:। ௩௪।௰௰௬
தத்யாத் திலாம்ஸ் து விப்ராய। க்ருஷ்ேணா ேம ப்ரீயதாம் இதி।
௩௪।௰௰௬
ஸ்நாநப்ராஸநேயா: ஸஸ்தாஸ்। ததா க்ருஷ்ணதிலா முேந। ௩௪।௰௰௬
திலப்ரேராேஹ ஜாயந்ேத। யாவத்ஸம்க்யாஸ் திலா த்விஜ। ௩௪।௰௰௭
தாவத்வர்ஷஸஹஸ்ராணி। ஸ்வர்கேலாேக மஹீயேத। ௩௪।௰௰௭
ஜாதஸ் ேசஹாப்ய் அேராேகா அெஸௗ। நேரா ஜந்மநி ஜந்மநி।
௩௪।௰௰௮
நாந்ேதா ந பதிரஸ் ேசஹ। ந குஷ்டீ ந ஜுகுப்ஸித:। ௩௪।௰௰௮
பவத்ய் ஏதாம் உஷித்வா து। திலாக்யாம் த்வாதஸம்ீ நர:। ௩௪।௰௰௮
விஷ்ேணா: ப்ரீணநம் அத்ேராக்தம்। ஸமாப்ேத வர்ஷபாரேண।
௩௪।௰௰௯
பூஜாம் ச குர்யாத் விப்ராய। பூேயா தத்யாத் ததா திலாந்। ௩௪।௰௰௯
அேநந தால்ப்ய விதிநா। திலதாநாத் அஸம்ஸயம்। ௩௪।௰௧
முச்யேத பாதைக: ஸர்ைவர்। நிராயாேஸந மாநவ:। ௩௪।௰௧
உத்ப்ருதபுலக: ஸர்வாந்। நிராயாேஸந மாநவ:। ௰௩௪।௩௬
தாநவிதிஸ் ததா ஸ்ரத்தா। ஸர்வபாதகஸாந்தேய। ௩௪।௰௧௧

நார்த: ப்ரபூேதா நாயாஸ:। ஸாரீேரா முநிஸத்தம। ௩௪।௰௧௧
அநந்தஸ்யாப்ரேமயஸ்ய। வ்யாபிந: பரமாத்மந:। ௩௫।௰௰௧
நாம்நாம் நக்ஷத்ரேபேதந। திதிேபேதந வா த்விஜ। ௩௫।௰௰௧
தாநேபேதந சாக்யாேதா। விபிந்நபலதஸ் த்வயா। ௩௫।௰௰௨
விேஸஷ: ேக்ஷத்ரேபேதந। கத்யதாம் யதி வித்யேத। ௩௫।௰௰௨
யத ர்க்ஷதிதிேபேதந। ேதஷாம் ஏவ புந: புந:। ௩௫।௰௰௩
விேஸஷ: கதிேதா நாம்நாம்। விேஸஷபலதாயக:। ௩௫।௰௰௩
ததா ேக்ஷத்ரவிேஸேஷண। ேபதம் நாமக்ருதம் வத। ௩௫।௰௰௩
ஸ்ருணு தால்ப்ய யதாக்யாதம்। அர்ஜுநாய மஹாத்மேந। ௩௫।௰௰௪
ப்ரணிபாதப்ரஸந்ேநந। விஷ்ணுநா ப்ரபவிஷ்ணுநா। ௩௫।௰௰௪
க்ருேத பாராவதரேண। நிவ்ருத்ேத பாரேத ரேண। ௩௫।௰௰௫
ஆகம்ய ஸிபிரம் விஷ்ணூ। ரதஸ்த: ப்ராஹ பால்குநம்। ௩௫।௰௰௫
இஷுதீகாண்டிவம் ைசவ। ஸமாதாய த்வராந்வித:। ௩௫।௰௰௬
அவதீர்ய ரதாத் வரீ। தூேர திஷ்ட்:அ தநம்ஜய। ௩௫।௰௰௬
அவேராŠயாம்ய் அஹம் பஸ்சாத்। அவதீர்ேண ததஸ் த்வயி।
௩௫।௰௰௭
ஏதத் குரு மஹாபாேஹா। மா விலம்பஸ்வ பால்குந। ௩௫।௰௰௭
ஏவம் உக்தஸ் ததா சக்ேர। வாக்யம் பார்ேதா கதாத்ருத:। ௩௫।௰௰௮
அவாேராஹத் தத: பஸ்சாத்। ஸ்வயம் ஏவ ஜநார்தந:। ௩௫।௰௰௮
அவதீர்ேண ஜகந்நாேத। ஸ்வஸமுத்ேதந வஹ்நிநா। ௩௫।௰௰௯
ஜஜ்வால ஸ ரத: ஸத்ேயா। பஸ்மீபூதஸ் ச தத்க்ஷணாத்। ௩௫।௰௰௯
ேஸாபஸ்கரபதாேகா அத। ஸத்வஜ: ஸஹ வாஜிபி:। ௩௫।௰௰௯
ஸச்சத்த்ேரா வஹ்நிநா ஸத்ேயா। ரேதா பஸ்மலவக்ருத ீ :। ௩௫।௰௧

வஹ்நிநா ச யதா காஷ்டம்। ஸத்ேயா பஸ்மலவக்ருதம் ீ । ௩௫।௰௧
தத் அத்புதம் மஹத் த்ருஷ்ட்வா। பார்த: பப்ரச்ச ேகஸவம்। ௩௫।௰௧௧
ஹ்ருஷ்டேராமா த்விஜஸ்ேரஷ்ட। பயவிஸ்மயகத்கத:। ௩௫।௰௧௧
ஆஸ்சர்யம் புருஷவ்யாக்ர। கிம் ஏதந் மதுஸூதந। ௩௫।௰௧௨
விநாக்நிநா ரேதா அயம் ேம। தக்தஸ் த்ருணசேயா யதா। ௩௫।௰௧௨
பஷ்மத்ேராணக்ருபாத ீ ீநாம்। கர்ணாதீநாம் ச பால்குந। ௩௫।௰௧௩
தக்ேதா அஸ்த்ைரர் விவிைதர் ஏஷ। பூர்வம் ஏவ ரதஸ் தவ। ௩௫।௰௧௩
மததிஷ்டிதத்வாத் ெகௗந்ேதய। ந ஸர்ேணா ீ அயம் ததாபவத்। ௩௫।௰௧௪
ப்ரத்யஹந் நிஸி சக்ேரண। மயா ந்யஸ்ேதந ரக்ஷித:। ௩௫।௰௧௪
ேஸா அயம் தக்ேதா மஹாபாேஹா। த்வய்ய் அத்ய க்ருதகர்மணி।
௩௫।௰௧௫
மயாவதாரிேத சக்ேர। மா பார்த குரு விஸ்மயம்। ௩௫।௰௧௫
கம் பவந்தம் அஹம் வித்யாம்। அதிமாநுஷேசஷ்டிதம்। ௩௫।௰௧௬
கர்மணாத்யத்புேதநாக்நிர்। தூேமைநேவஹ ஸூசித:। ௩௫।௰௧௬
பூர்வம் ஏவ யதாக்யாதம்। ரணாரம்ேப தவார்ஜுந। ௩௫।௰௧௭
காேலா அஸ்மி ேலாகநாஸாய। ப்ரவ்ருத்ேதா அஹம் யதாதுநா।
௩௫।௰௧௭
தந் மயா ஸாதிதம் கார்யம்। த்ரிதஸாநாம் ததா புவ:। ௩௫।௰௧௮
பாராவதரணார்தாய। மம ஜந்ம மஹீதேல। ௩௫।௰௧௮
ஏவம் உக்ேதா அர்ஜுந: ஸம்யக்। ப்ரணிபத்ய ஜநார்தநம்। ௩௫।௰௧௯
துஷ்டாவ வாக்பிர் இஷ்டாபிர்। உத்பூதபுலகஸ் தத:। ௩௫।௰௧௯
நேமா அஸ்து ேத சக்ரதேராக்ரரூப। நேமா அஸ்து ேத ஸார்ங்கதராருணாக்ஷ।
௩௫।௰௨

நேமா அஸ்து ேத அப்யுத்யதகட்க ெரௗத்ர। நேமா அஸ்து
விப்ராந்தகதாந்தகாரிந்। ௩௫।௰௨
பேயந ஸந்ேநா அஸ்மி ஸேவபேதந। நாங்காநி ேம ேதவ வஸம் ப்ரயாந்தி।
௩௫।௰௨௧
வாச: ஸமுச்சாரயத: ஸ்கலந்தி। ேகஸா ஹ்ருஷீேகஸ ஸமுச்ச்வஸந்தி।
௩௫।௰௨௧
காேலா பவாந் காலகராலகர்மா। ேயைநதத் ஏவம் க்ஷயம் அக்ஷயாத்மந்।
௩௫।௰௨௨
க்ஷத்ரம் ஸமுத்பூதருஷா ஸமஸ்தம்। நீதம் புேவா பாரவிேரசநாய।
௩௫।௰௨௨
ப்ரஸதீ கர்தர் ஜய ேலாகநாத। ப்ரஸதீ ஸர்வஸ்ய ச பாலநாய।
௩௫।௰௨௩
ஸ்திெதௗ ஸமஸ்தஸ்ய ச காலரூப। க்ருேதாத்யேமஸாந ஜயாவ்யயாத்மந்।
௩௫।௰௨௩
ந ேம த்ருக் ஏஷா தவ ரூபம் ஏதத்। த்ரஷ்டும் ஸமர்தா க்ஷுபிேதா அஸ்மி
சாந்த:। ௩௫।௰௨௪
பூர்வஸ்வபாவஸ்திதவிக்ரேஹா அபி। ஸம்லŠயேஸ அத்யந்தம்
அெஸௗம்யரூப। ௩௫।௰௨௪
ஸ்மராமி ரூபம் தவ விஸ்வரூபம்। யத் தர்ஸிதம் பூர்வம் அபூந் மைமவ।
௩௫।௰௨௫
யஸ்மிந் மயா விஸ்வம் அேஸஷம் ஆஸத்ீ । த்ருஷ்டம்
ஸயேக்ஷாரகேதவைதத்யம்। ௩௫।௰௨௫
ஸா ேம ஸ்ம்ருதிர் தர்ஸநபாஷநாதி । ப்ரகுர்வேதா நாத கதா ப்ரணாஸம்।
௩௫।௰௨௬

காேலா அஹம் அஸ்மீத்ய் உதிேத த்வயா து। ஸமாகேதயம் புநர் அப்ய்
அநந்த। ௩௫।௰௨௬
கர்தா பவாந் காரணம் அப்ய் அேஸஷம்। கார்யம் ச நிஷ்காரண கர்த்ருரூப।
௩௫।௰௨௭
ஆெதௗ ஸ்திெதௗ ஸம்ஹரேண ச ேதவ। விஸ்வஸ்ய விஸ்வம் ஸ்வயம்
ஏவ ச த்வம்। ௩௫।௰௨௭
ப்ரஹ்மா பவாந் விஸ்வஸ்ருக் ஆதிகாேல। விஸ்வஸ்ய ரூேபா அஸி ததா
விஸ்ருஷ்ெடௗ। ௩௫।௰௨௮
விஷ்ணு: ஸ்திெதௗ பாலநபத்தகேக்ஷா। ருத்ேரா பவாந் ஸம்ஹரேண
ப்ரஜாநாம்। ௩௫।௰௨௮
ஏபிஸ் த்ரிபிர் நாத விபூதிேபைதர்। யஸ் சிந்த்யேத காரணம் ஆத்மேநா அபி।
௩௫।௰௨௯
ேவதாந்தேவேதாதிதம் அஸ்தி விஷ்ேணா:। பதம் த்ருவம் தத் பரமம் த்வம்
ஏவ। ௩௫।௰௨௯
யந் நிர்குணம் ஸர்வவிகல்பஹீநம்। அநந்தம் அஸ்தூலம் அரூபகந்தம்।
௩௫।௰௩
பரம் பதம் ேவதவிேதா வதந்தி। த்வம் ஏவ தச் சப்தரஸாதிஹீநம்।
௩௫।௰௩
யதா ஹி மூேல விடபீ மஹாத்ரும:। ப்ரதிஷ்டிதஸ்கந்தவேராக்ரஸாக:।
௩௫।௰௩௧
ததா ஸமஸ்தாமரமர்த்யதிர்யக் । வ்ேயாமாதிஸப்தாதிமயம் த்வயதம்ீ ।
௩௫।௰௩௧
முஞ்சாமி யாவத் பரமாயுதாநி। ைவரிஷ்வ் அநந்தாஹவதுர்மேதஷு।
௩௫।௰௩௨

த்ருஷ்ட்வா ஹி தாவத் ஸஹஸா பதந்ேதா। நூநம் தைவவாச்யுத ஸ
ப்ரபாவ:। ௩௫।௰௩௨
ஹதா ஹதாஸ் ேத பவேதா த்ருைஸவ। மயா புந: ேகஸவ ஸஸ்த்ரபூைக:।
௩௫।௰௩௩
காஹ் கர்ணபஷ்மப்ரமுகாந் ீ விேஜதும்। யுஷ்மத்ப்ரஸாேதந விநா ஸமர்த:।
௩௫।௰௩௩
த்ரிஸூலபாணிர் மம ய: புரஸ்தாந்। நிஷூதயந் ைவரிபலம் ஜகாம।
௩௫।௰௩௪
ஜ்ஞாதம் மயா ஸாம்ப்ரதம் ஏதத் ஈஸ। தவ ப்ரஸாதஸ்ய ஹி ஸா விபூதி:।
௩௫।௰௩௪
யேமந்த்ரவித்ேதஸஜேலஸவஹ்நி । ஸூர்யாத்மேகா யஸ் ச மமாஸ்த்ரபூக:।
௩௫।௰௩௫
நாஸாய நாபூத் பதிேதா அபி காேய। த்வத்ஸம்நிதாநஸ்ய ஹி ேஸா
அநுபாவ:। ௩௫।௰௩௫
பால்ேய பவாந் யாநி சகார ேதவ। கர்மாண்ய் அஸஹ்யாநி ஸுராஸுராணாம்।
௩௫।௰௩௬
ைதர் ஏவ ஜாநீம ந யத் பரம் த்வாம்। ேதாஷ: ஸ நிர்ேதாேஷா மநுஷ்யதாயா:।
௩௫।௰௩௬
தாேலாச்ச்ரிதாக்ரம் குருபாரஸாரம்। ஆயாமவிஸ்தாரவத் அத்யஜாத:।
௩௫।௰௩௭
பாதாக்ரவிேக்ஷபவிபிந்நபாண்டம்। சிேக்ஷப ேகா அந்ய: ஸகடம் யதா த்வம்।
௩௫।௰௩௭
அந்ேயந ேகநாச்யுத பூதநாயா:। ப்ராைண: ஸமம் பதம்ீ அஸ்ருக்விமிஸ்ரம்।
௩௫।௰௩௮

த்வயா யதா ஸ்தந்யம் அதீவபால்ேய। ேகாஷ்ேட ச பக்ெநௗ யமலார்ஜுெநௗ
ெதௗ। ௩௫।௰௩௮
விஷாநேலாஷ்ணாம்புநிபாதபமம்ீ । ஆஸ்ேபாட்ய ேகா வா புவி மநுேஷா
அந்ய:। ௩௫।௰௩௯
நநர்த பாதாப்ஜநிபடிதஸ்ய ீ । பணம் ஸமாருஹ்ய ச காலியஸ்ய।
௩௫।௰௩௯
ஸுேரஸஸம்ேதஸவிேராதவத்ஸு। வர்ஷத்ஸு ேமேகஷு கவாந் நிமித்தம்।
௩௫।௰௪
திநாநி ஸப்தாஸ்தி ச கஸ்ய ஸக்திர்। ேகாவர்தநம் தாரயிதும் கேரண।
௩௫।௰௪
ப்ரலம்பசாணூரமுகாந் நிஹத்ய। கம்ஸாஸுரம் யஸ்ய பிேபதி ஸக்ர:।
௩௫।௰௪௧
தம் அஷ்டவர்ேஷா நிஜகாந ேகா அந்ேயா। நிராேயாேதா நாத மநுஷ்யஜந்மா।
௩௫।௰௪௧
பாணார்தம் அப்யுத்யதம் உக்ரஸூலம்। நிர்ஜித்ய ஸம்க்ேய த்ரிபுராரிம் ஏக:।
௩௫।௰௪௨
ஸகார்த்திேகயஜ்வரம் அஸ்த்ரபாஹும்। கேராதி ேகா பாணம் அநச்யுேதா
அந்ய:। ௩௫।௰௪௨
க: பாரிஜாதம் ஸுரஸுந்தரீணாம்। ஸேதாபேபாக்யம் விஜிேதந்த்ரைஸந்ய:।
௩௫।௰௪௩
ஸ்வர்காந் மஹீம் உச்ச்ரிதவர்யைதர்ய ீ :। ஸமாநயாம் ஆஸ யதா ப்ரேபா
த்வம்। ௩௫।௰௪௩
ஹத்வா ஹயக்ரீவம் உதாரவர்யம் ீ । நிஸும்பஸும்ெபௗ நரகம் ச ேகா அந்ய:।
௩௫।௰௪௪

ஜக்ராஹ கந்யாபுரம் ஆத்மேநா அர்தம்। ப்ராக்ஜ்ேயாதிஷாக்ேய நகேர
மஹாத்மந்। ௩௫।௰௪௪
ஸ்திெதௗ ஸ்திதஸ் த்வம் பரிபாஸி விஸ்வம்। ைதஸ் ைதர் உபாையர்
அவிநீதபைத ீ :। ௩௫।௰௪௫
ைமத்ரீ ந ேயஷாம் விநயாய தாம்ஸ் தாந்। ஸர்வாந் பவாந் ஸம்ஹரேத
அவ்யயாத்மந்। ௩௫।௰௪௫
ஹிதாய ேதஷாம் கபிலாதிரூபிணா। த்வயாநுஸஸ்தா பஹேவா அநுஜவா ீ :।
௩௫।௰௪௬
ேயஷாம் ந ைமத்ரீ ஹ்ருதி ேத ந ேநயா। விஸ்ேவாபகாரீ வத ஏவ ேதஷாம்।
௩௫।௰௪௬
இத்தம் பவாந் துஷ்டவேதந நூநம்। விஸ்ேவாபகாராய விேபா ப்ரவ்ருத்த:।
௩௫।௰௪௭
ஸ்திெதௗ ஸ்திதம் பாலநம் ஏவ விஷ்ணு:। கேராதி ஹந்த்ய் அந்தகேதா
அந்தருத்ர:। ௩௫।௰௪௭
ஏதாநி சாந்யாநி ச துஷ்கராணி। த்ருஷ்டாநி கர்மாணி ததாபி ஸத்யம்।
௩௫।௰௪௮
மந்யாமேஹ த்வாம் ஜகத: ப்ரஸூதிம்। கிம் குர்ம மாயா தவ ேமாஹநீயம்।
௩௫।௰௪௮
த்வம் ஸர்வம் ஏதத் த்வயி ஸர்வம் ஏதத்। த்வத்தஸ் தைததத் தவ ைசதத்
ஈஸ। ௩௫।௰௪௯
ஏதத் ஸ்வரூபம் தவ ஸர்வபூதம்। விபூதிேபைதர் பஹுபி: ஸ்திதஸ்ய।
௩௫।௰௪௯
ப்ரஸதீ க்ருஷ்ணாச்யுத வாஸுேதவ। ஜநார்தநாநந்த ந்ருஸிம்ஹ விஷ்ேணா।
௩௫।௰௫

மநுஷ்யஸாமாந்யதியா யதீஸ। த்ருஷ்ேடா மயா தத் க்ஷமஸ்வாதிேதவ।
௩௫।௰௫
ந ேவத்மி ஸத்பாவம் அஹம் தவாத்ய। ஸத்பாவபூதஸ்ய சராசரஸ்ய।
௩௫।௰௫௧
ேயா ைவ பவாந் ேகா அபி நேதா அஸ்மி தஸ்ைம। மநுஷ்யரூபாய
சதுர்புஜாய। ௩௫।௰௫௧
ேதவேதவ ஜகந்நாத। ஸர்வபாபஹேரா பவ। ௩௫।௰௫௨
ேஹதுமாத்ரஸ் த்வ் அஹம் தத்ர। த்வையதத் உபஸம்ஹ்ருதம்।
௩௫।௰௫௨
ப்ரஸேதஸ ீ ஹ்ருஷீேகஸ। அெக்ஷௗஹிண்யா தஸாஷ்ட ச।
௩௫।௰௫௩
த்வயா க்ரஸ்தா புேவா பூத்ைய। ேஹதுபூதா ஹி மத்விதா:। ௩௫।௰௫௩
வயம் அந்ேய ச ேகாவிந்த। நரா: க்ரீடநகாஸ் தவ। ௩௫।௰௫௪
மத்விைத: கரைணர் ேதவ। கேராஷி ஸ்திதிபாலநம்। ௩௫।௰௫௪
யத் அத்ர ஸத் அஸத் வாபி। கிம்சித் உச்சாரிதம் மயா। ௩௫।௰௫௫
பக்திமாந் இதி தத் ஸர்வம்। க்ஷந்தவ்யம் மம ேகஸவ। ௩௫।௰௫௫
ஏவம் ஸ்துதஸ் தத: ப்ராஹ। ப்ரீதிமாம்ஸ் தம் ஜநார்தந:। ௩௬।௰௰௧

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸுவ்ன பகவான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்