Archive for October, 2025

ஸ்ரீ பவிஷ்ய பர்வம்-பகுதி 5–

October 20, 2025

வேட்டை | பவிஷ்ய பர்வம் பகுதி – 81-(ஹம்ஸடிம்பகயோர்ம்ருகயா)-ஹம்சனும் டிம்பகனும் தங்கள் நண்பன் ஜனார்த்தனனை காட்டில் வேட்டைக்கு அழைத்துச் செல்வது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஒரு நாள், ஹம்சன், டிம்பகன் என்ற அந்த வீரர்கள் இருவரும் வேட்டைக்குச் செல்லத் தீர்மானித்துத் தேர்கள், யானைகள், குதிரைகள் துணையுடன், தங்கள் நண்பன் ஜனார்த்தனனையும் காட்டுக்கு அழைத்துச் சென்றனர்.(1) மன்னா, காட்டில் நுழைந்ததும் இளவரசர்கள் இருவரும் புலிகள், சிங்கங்கள், பன்றிகள் பலவற்றைத் தங்கள் கணைகளால் கொல்வதில் ஈடுபட்டனர்.(2) அந்தச் சகோதரர்கள் இருவரும் தங்கள் நாய்களின் துணையுடன் பாம்புகள் பலவற்றையும், காட்டுவிலங்குகள் பிறவற்றையும் கொன்றனர்.

அந்த நேரத்தில் மொத்தக் காட்டிலும், “பெரிய கண்களைக் கொண்ட காட்டுப்பன்றி அதோ வருகிறது. அதோ சிங்கம் போகிறது; அதனை உங்கள் கணைகளால் கொல்லுங்கள். இதோ இவ்வழியில் காட்டெருமை செல்கிறது. அதோ பாம்பைப் பாருங்கள். இதோ உயிருக்கு அஞ்சி ஓடிச்செல்லும் மான்கூட்டத்தைப் பாருங்கள். அதோ எண்ணற்ற முயல்கள் அங்கேயும், இங்கேயும் திரிந்து கொண்டிருக்கின்றன. அவை அனைத்தையும் சூழ்ந்து கொண்டு அவற்றைக் கைப்பற்றுவோம் வாருங்கள். இதோ குட்டிக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த மானைக் கொல்லாதீர்கள், அது பெருந்தகைமையல்ல” என்ற கூக்குரல்களே கேட்டுக் கொண்டிருந்தன.(3-7)

மனித ஆட்சியாளர்களில் முதன்மையான ஹம்சன், டிம்பகன் இருவரும் புலிகள், சிங்கங்கள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் பலவற்றைக் கொன்று, நடுப்பகல் வேளையில் களைப்படைந்தனர்.(8) மன்னா, அவர்கள் ஒருவருக்கொருவர், “நாம் களைத்துவிட்டோம். இனி வேட்டையை நிறுத்துவோம்” என்று சொல்லிவிட்டுப் புஷ்கரத் தடாகத்தை நோக்கிச் சென்றனர்.(9)

தடாகத்தை அடைந்ததும் அதன் கரையில் அவர்கள் அமைதியாக அமர்ந்தனர். அந்தப் புனிதமான இடத்தில் பெரும் முனிவர்கள் பலரும் தொண்டாற்றிக் கொண்டிருந்தனர். இளவரசர்கள் இருவருக்கும் யாரோ சாமரம் வீசுவதைப் போல அங்கே குளிர்ந்த தென்றல் வீசிக் கொண்டிருந்தது.(10) கடின பணிகளால் களைப்படைந்திருந்த அவர்கள் அந்தத் தடாகத்தில் நீராடி, தாமரைத் தண்டுகளையும், மலர்களையும் உண்டு தங்கள் பசியைத் தணித்தனர்.(11) இவ்வாறே ஹம்சன், டிம்பகன், ஜனார்த்தனன் ஆகியோர் அந்தத் தடாகக் கரையில் ஓய்வெடுத்துத் தங்கள் களைப்பில் இருந்து விடுபட்டனர்.(12)

அவர்கள் அந்தத் தடாகத்தின் அருகில் சுகமாக அமர்ந்திருந்த போது, பெரும் முனிவர்களால் ஓதப்படும் வேத மந்திரங்களின் ஒலியைக் கேட்டனர்.(13) நடுப்பகல் வேளையில் முனிவர்கள் ஓதும் வேதவொலியைக் கேட்டு ஈர்க்கப்பட்டதால், அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேள்வியைக் காண அவர்கள் விரும்பினர். மன்னா {ஜனமேஜயா}, விற்களையும், கணைகளையும் வைத்து விட்டு வந்த அவர்கள், பல முனிவர்களுடன் சேர்ந்து வைஷ்ணவ நெருப்பு வேள்வியைச் செய்து கொண்டிருந்த பெரும் முனிவர் கசியபரின் ஆசிரமத்திற்கு நடந்து சென்றனர்” என்றார் {வைசம்பாயனர்}.(14-17)

துர்வாசர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 82-(துர்வாஸோதர்ஷநம்)-ஹம்சனும், டிம்பகனும் துர்வாசரைச் சந்தித்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பக்திமிக்கவர்களான ஜனார்த்தனன், ஹம்சன், டிம்பகன் ஆகியோர், வேள்வி நடைபெறும் அந்த வளாகத்தில் கூடியிருந்த முனிவர்கள் அனைவரையும் வணங்கினர்.(1) அந்த உயரான்மாக்களும், அவர்களது சீடர்களும் தங்கள் விருந்தினர்களுக்குப் பாத்யம், அர்க்கியம் ஆகியவற்றையும், அமர்வதற்கான சிறந்த இடங்களையும் கொடுத்து மதிப்புடன் வரவேற்றனர்.(2) மன்னா {ஜனமேஜயா}, அந்த இளவரசர்கள் இருவரும், பிராமணன் ஜனார்த்தனனும் முனிவர்கள் கொடுத்த வரவேற்பில் நிறைவடைந்தவர்களாகக் கீழே அமர்ந்தனர்.(3)

அன்புக்குரிய மன்னா, அப்போது ஹம்சன் அந்த முனிவர்களிடம், “சிந்தனையாளர்களில் சிறந்தவர்களே, எங்கள் தந்தை {பிரம்மதத்தர்} ராஜசூய வேள்வி செய்யும் விருப்பம் கொண்டிருக்கிறார்.(4) பிராமணர்களே, இந்த வேள்வி நிறைவடைந்ததும், எங்கள் தலைநகரில் நடைபெறப்போகும் எங்கள் தந்தையின் வேள்வியில் கலந்து கொள்ளும் உங்கள் வரவை வேண்டுகிறோம். நாங்கள் மொத்த உலகையும் வென்ற பிறகு, பக்திமானான எங்கள் தந்தையை ராஜசூயம் செய்யத் தூண்டுவோம். நீங்களும், உங்கள் சீடர்களும் வந்து புரோகிதர்களாகச் செயல்பட்டால் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சியடைவோம்.(5,6) நாங்கள் இருவரும் சகோதரர்கள். இவன் எங்கள் நல்ல நண்பன் ஜனார்த்தனன். நாங்கள் மூவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்போம். உலகை வெல்ல நாங்கள் இன்றே புறப்படுகிறோம். மஹாதேவனிடம் நாங்கள் அடைந்த வரங்களால் போரில் எங்களைத் தேவாசுரர்களாலும் எதிர்க்க இயலாது. இதன்காரணமாகப் படைகள் இல்லாமலே கூட நாங்கள் உலகை வென்றுவிடுவோம். வரங்களை, பெரும் தெய்வீக ஆயுதங்களையும் நாங்கள் அடைந்திருப்பதால், எங்களை வெல்ல யாராலும் இயலாது” என்றான் {ஹம்சன்}. செருக்குமிக்க ஹம்சன் இவ்வாறு பேசிவிட்டு அமைதியடைந்தான்.(7-9)

அப்போது முனிவர்கள், “மன்னா {ஹம்சா}, அத்தகைய மகத்தான வேள்விக்கு நீ ஏற்பாடு செய்தால், நிச்சயம் நாங்கள் எங்கள் சீடர்களுடன் கலந்து கொள்வோம். இல்லையென்றாலும், நாங்கள் இந்த ஆசிரமத்தில் அமைதியாக வசிப்பத்திலேயே நிறைவடைந்திருக்கிறோம்” என்றனர் {முனிவர்கள்}”.(10)

வைசம்பாயனர் சொன்னார், “மன்னா {ஜனமேஜயா}, அதன்பிறகு இளவரசர்கள் இருவரும், அந்தப் புஷ்கரத் தடாகத்தின் வடகரையில் அமைந்திருந்த துர்வாசப் பெருமுனிவரின் வசிப்பிடத்திற்குச் சென்றனர்.(11) இருப்பில் தூய்மையை அடையவும், அதன் விளைவாக மனநிறைவில் திளைக்கவும் தங்கள் வாழ்வை நெறிப்படுத்தும் முற்றுந்துறந்த முனிவர்கள் பலர், அந்தப் புனிதத் தலத்தில் வசித்திருந்தனர். அவர்கள், {ஓம் என்ற} பிரம்மமந்திரத்தை ஓதி, பிரம்மசூத்திரம் பயின்று அதன் உண்மைப் பொருளை உணர்வதையே தங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டிருந்தனர்.(12)

அம்முனிவர்கள் அனைவரும் இடைக்கச்சை {கோவணம்} அணிந்தவர்களாகவும், பொருள் பற்றில் இருந்தும், அகங்காரத்தில் இருந்தும் விடுபட்டவர்களாகவும் இருந்தனர். தேவர்களின் உயர்ந்த தலைவனும், அண்ட வெளிப்பாட்டின் உண்மைக் காரணனும், உயிரினங்கள் அனைத்தின் ஆன்மாவாகவும், உயிராகவும் திகழ்பவனும், நீக்கமற நிறைந்திருக்கும் நிலையான தெய்வமுமான பரப்பிரம்மனையே அவர்கள் இடையறாமல் தியானித்து வந்தனர்.

வேதாந்தத்தின் இறுதி இலக்கும், வேதாந்தத்தின் வடிவமுமான தலைவனையே அங்கே துர்வாசர் வழிபட்டு வந்தார். அவர் {துர்வாசர்}, மாசுடைய அனைத்தில் இருந்தும் விடுபட்டவனும், அண்டத்தின் ஆன்ம குருவும், உயிரினங்கள் அனைத்தின் உறைவிடமுமான ருத்ரனின் வெளிப்படாத பிறப்பாகவே அவனை {பரப்ரம்மனை} வழிபட்டு வந்தார்.

ஹம்சர்களும், பரமஹம்சர்களுமாக அங்கே இருந்த முனிவர்கள் யாவரும் துர்வாச முனிவரின் சீடர்களாவர். அவர்கள் தர்க்கப்பூர்வமான வாதங்களை முன் வைப்பதன் மூலம், முற்றான உண்மையின் தன்மையைக் கண்டறிய முயன்று வந்ததால், அவர்களின் இதயங்கள் யாவும் ஆழ்ந்த ஞானத் தீபத்தால் ஒளிபெற்றிருந்தன.

அந்தப் புனிதத்தலத்தை அடைந்த இளவரசர்கள் இருவரும் {ஹம்சனும், டிம்பகனும்}, கடும் பிரம்மச்சரியம் நோற்பவரும், பரமனையே எப்போதும் தியானிப்பவருமான துர்வாச முனிவரை அங்கே சந்தித்தனர். சீற்றமடைந்தால் மொத்த உலகையே சாம்பலாக்கிவிடக் கூடியவர் அந்தத் துர்வாச முனிவர். கோபம் தூண்டப்பட்டால் தேவர்களே அவரைக் காணத் துணிய மாட்டார்கள். உண்மையில் அவர் கோபத்தின் உடல்வடிவம் என்றும், பகுதியளவிலான ருத்ரனின் அவதாரம் என்றும் அறியப்படுகிறார்.(13-19)

பெரும் பரமஹம்சரான துர்வாச முனிவர் காவி உடை தரித்திருந்தார். அவரை அங்கே கண்ட அந்த இளவரசர்கள் இருவரும், பின்வருமாறு எண்ணினர்.(20) {அவர்கள்}, “காவி உடை உடுத்தியிருக்கும் இவன் யார்? இவன் நான்கு வர்ணத்திலும் இல்லாதவனாகத் தெரிகிறான். இவன் கிருஹஸ்தனல்ல {இல்லற ஆசிரமத்தைச் சார்ந்தவன் அல்ல} என்பது நிச்சயம் தெரிகிறது. இவன் எந்த ஆசிரமத்தைச் சேர்ந்தவன்?(21) கிருஹஸ்தர்களே, அறக்கோட்பாடுகளை அறிந்து பின்பற்றுகிறார்கள். உண்மையில், அவர்களே தர்மத்தின் வடிவமாகத் திகழ்பவர்கள். அவர்களே நான்கு வர்ணங்களிலும் காணப்படுகிறார்கள்.(22) கிருஹஸ்தர்களே உயிர்கள் அனைத்தையும் கவனமாகப் பாதுகாத்து தாயைப் போல அவற்றைப் பராமரிப்பவர்கள். மகத்தான இந்த ஆசிரமத்தைக் கைவிட்டு, வேறு எந்த ஆசிரமத்தையும் ஏற்பவன் நிச்சயம் பெரும் மூடனே.(23) அவன் பித்தனாகவோ, முழுமூடனாகவோ, உடல் குறைகளைக் கொண்டவனாகவோ இருக்க வேண்டும். இவன் தியானிப்பவனைப் போல நடித்து வஞ்சித்து வருகிறான்.(24) இந்தச் சாதாரண மனிதன் ஏன் தன் வரம்பை மீறி தியானம் செய்து வருகிறான்? இவ்வாறு நடிப்பதால் நிச்சயம் இவனுக்கு ஆன்ம முன்னேற்றம் சாத்தியமில்லை. பிற ஆசிரமங்கள் மதிப்பற்றவை எனக் கருதுபவனாகவே இவன் இருக்க வேண்டும். புத்தியற்ற இந்த இருபிறப்பாளனை, நாம் கிருஹஸ்த ஆசிரமத்தை ஏற்கச் செய்ய வேண்டும். (25,26) இவனது மூடச்சீடர்களும் தவறாக வழிநடத்தப்பட்டு, மனக்களங்கம் அடைந்தவர்களாக இருக்கிறார்கள். இங்கே அமர்ந்து இவர்களின் ஆன்ம குருவாக நடிக்கும் இந்த மூடன் யார்? இவன் உண்மையான பிராமணன் இல்லை. நாம் இங்கே வந்துவிட்டதால், இந்தப் போலி ஆன்ம குருவை உண்மையான அறப்பாதையில் மீட்டெடுத்த பிறகு, பெரும் நிறைவுடனே நாம் வீடு திரும்ப வேண்டும்” என்று நினைத்தனர் {ஹம்சனும், டிம்பகனும்}.

மன்னா {ஜனமேஜயா}, பெருந்தீயூழினால் மோஹமடைந்த தங்கள் மனங்களில் இவ்வாறு தீர்மானித்த அந்த வீர இளவரசர்கள் இருவரும், பிராமணன் ஜனார்த்தனனுடன் சேர்ந்து கொண்டு, தற்கட்டுப்பாட்டுடன் கூடிய அந்தச் சந்நியாசியை {துர்வாசரை} அணுகினர்.

மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அப்போது அந்த இளவரசர்கள் இருவரும், இம்மையின் புலன்களால் உணரப்பட முடியாதவரும், ஆசிரமத்தின் அனைத்து விதிகளையும், வழிமுறைகளையும் கடுமையாகப் பின்பற்றும் பிற சந்நியாசிகளாலும் புரிந்துகொள்ளப்பட முடியாத பெரும் முனிவருமான துர்வாசரிடம் பெருமிதத்துடன் பேசத் தொடங்கினர்” {என்றார் வைசம்பாயனர்}.(27-30)

சந்நியாச தர்ம நிந்தனை | பவிஷ்ய பர்வம் பகுதி – 83-(ஸந்யாஸதர்மநிந்தா)-சந்நியாச தர்மத்தை நிந்தித்த ஹம்சனும், டிம்பகனும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பிராமணா {துர்வாசா}, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? மெய்யறிவின் சுவடொன்றேனும் உன் இதயத்தில் வசிக்கவில்லை என்றே தெரிகிறது. உன் ஆசிரமமென்ன?(1) கிருஹஸ்த ஆசிரமத்தை நிராகரிப்பதன் மூலம் எதை அடைய நீ விரும்புகிறாய்? வஞ்சகனாகவே நீ தென்படுகிறாய். பற்றறுந்தவன் போல் நடிக்கும் உன் நடிப்பை வேறு எதனால் விளக்கிவிட முடியும்?(2) மூடா, சீடர்களாக நீ கருதும் இவர்கள் அனைவரையும் நீ கெடுத்துக் கொண்டிருக்கிறாய். உண்மையில், நீ அவர்கள் அனைவரையும் நரகத்திற்கே இட்டுச் செல்கிறாய்.(3) 

மூடப் பிராமணா, நிச்சயம் இறுதியில் நீ அழிவையே அடைவாய். உன் பாதச்சுவடுகளைப் பின்பற்றும் இவர்கள் அனைவரும் உன்னையே பின்பற்றுவர். ஐயோ! ஏன் இன்னும் உன்னைப் போன்ற ஒரு வஞ்சகனை எவனும் தண்டிக்கவில்லை? இவை யாவற்றையும் உனக்குக் கற்பித்தவனும் பெரும்பாவியே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பிராமணா, இந்த ஆசிரமத்தைக் கைவிட்டுக் கிருஹஸ்தனாவாயாக. உன் மனத்தைக் கட்டுப்படுத்தி ஐவகை வேள்விகளைச் செய்தால் நீ மறுமையில் இன்புற்றிருப்பாய். கிருஹஸ்த ஆசிரமமே மங்கலத்தை அருளும் உண்மையான பாதையாகும். நீ மகிழ்ச்சியாக வாழ விரும்பினால், நாங்கள் சொல்வதைப் போலச் செயல்படுவாயாக” என்றனர்.

எனினும் பக்திமிக்கப் பிராமணன் ஜனார்த்தனன் இந்தச் சொற்களைக் கேட்டுப் பெரிதும் துன்புற்றான். அவன் சந்நியாசியான துர்வாசரை வெறித்துப் பார்த்து, அவரது பாதங்களை வணங்கிவிட்டுத் தன்னிரு நண்பர்களிடமும், “என் அன்புக்குரிய இளவரசர்களே, உங்கள் புத்தியும், பகுத்தறிவும் மாசடைந்திருக்கின்றன. இவ்வாறு பேசாதீர்! இவ்வாறான கேட்கத்தகாத வாக்கியங்கள் இம்மையிலும், மறுமையிலும் தீங்கிழைப்பவையே. இம்மையில் தன் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் மகிழ்ச்சியாக வசிக்க விரும்பும் எந்தப் பாவிதான் இவ்வாறு பேசுவான்?(4-9)

இந்த உயரான்மா இதோ உங்கள் முன் மரணத்தின் வடிவமாக {காலனாக} நிற்கிறார். உடனடியாக உங்கள் வீழ்ச்சி நிகழப்போகிறதெனத் தெரிகிறது. நீங்கள் இருவரும் இந்தப் பிராமணரின் கோபத்தால் ஏற்கனவே இறந்துவிட்டீர்களென்றே நான் கருதுகிறேன்[1].(10) இங்கே இருக்கும் முனிவர்கள் அனைவரும் தூய இதயம் படைத்த சந்நியாசிகளாவர். ஆழமான ஞானமெனும் தீபத்தால் இவர்களின் இதயங்கள் ஒளியூட்டப்பட்டதாலேயே தாங்கள் திரட்டிய பாவங்களை இவர்கள் சாம்பலாக எரித்திருக்கிறார்கள். இதோ அந்தத் தூய நிலையிலேயே இவர்கள் தங்கள் வாழ்வைப் பரமனின் தொண்டிற்கு அர்ப்பணித்திருக்கிறார்கள்.(11) இந்த உயரான்மாவை இவ்வாறு நிந்திக்கத் துணிபவன் உங்களைத் தவிர வேறு எவன்? உங்கள் முடிவு அருகில் வந்துவிட்டதென நான் நம்புகிறேன்.(12)என் அன்புக்குரிய மன்னர்களே, நீண்ட காலத்திற்கு முன்னர்ப் பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசமென்று அந்தக் காலச் சமூகத்தை நான்கு ஆசிரமங்களாக வகுத்தனர்.(13) அவற்றில் நான்காவதான சந்நியாச ஆசிரமமே தலைச்சிறந்தது. பெரும் நுண்ணறிவுமிக்கவனும், பெரும்பக்திமானுமான ஒருவன் மட்டுமே சந்நியாச ஆசிரமத்தை ஏற்கத் தகுந்தவனாவான்.(14) நீங்கள் இருவரும் ஒருபோதும் பெரியோருக்குக் கீழ்ப்படிந்து, வழிபட்டுத் தொண்டாற்றியதில்லை. பெரும் முனிவர்களின் உதடுகளில் உதிர்ந்த ஆழ்ந்த ஞானத்தையும் நீங்கள் கேட்டதில்லை. நல்ல தொடர்பால் ஈட்டப்பட்ட ஞானத்தை மதிக்காதவன் எவனும் உங்களைப் போலவே பேசியிருப்பான்.(15)

மன்னா {ஹம்சா}, என்னால் இதுபோன்ற அவதூறுகளைக் கேட்க சகிக்க முடியவில்லை. இருப்பினும் நீ என்னுயிர் நண்பனாக இருக்கிறாய். இஃது எனக்கான இக்கட்டான சூழ்நிலை. நான் என்ன செய்வது? இந்தச் சூழ்நிலையில் நான் ஆதரவற்றவனாக இருக்கிறேன்.(16) மன்னா {ஹம்சா}, உன் குருக்களிடம் இருந்து நீ பெற்ற அறிவனைத்தும் இப்போது உன் துன்பத்திற்கான காரணமாகியிருக்கின்றன. அறக்கோட்பாடுகளைப் பின்பற்றுகையில் அடையப்படும் ஞானம், எப்போதும் நல்ல விளைவுகளையே அருளும். எனினும், பலவந்தமாகவோ, அகங்காரத்துடனோ அடையப்படும் ஞானம் பாவங்களிலேயே ஒருவனை ஆழ்த்தும்.(17) நான் உங்களைக் கைவிடலாமா, உயர்ந்த இடத்தில் இருந்து பாறையில் விழலாமா, நஞ்சுண்ணலாமா, பெருங்கடலில் மூழ்கலாமா என்பது தெரியவில்லை.(18) ஒருவேளை உங்கள் முன்னிலையிலேயே நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமோ?” என்றான் {ஜனார்த்தனன்}. இவ்வாறே அந்த ஜனார்த்தனன், அந்த இளவரசர்கள் இருவரும் நிந்திப்பதைத் தடுத்து அழுது கொண்டிருந்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(19)

துர்வாசரின் எச்சரிக்கை | பவிஷ்ய பர்வம் பகுதி – 84-(துர்வாஸஸோ பாஷணம்)சந்நியாச தர்மத்தை நிந்தித்த ஹம்சனும், டிம்பகனும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “துர்வாசர், அவ்விரு இளவரசர்களையும் சாம்பலாக்கி விடுபவரைப் போல, நெருப்புக்கு ஒப்பான தமது ஒற்றைக் கண்ணால் கோபத்துடன் அவர்களைப் பார்த்தார்.(1) மன்னா {ஜனமேஜயா}, உண்மையில் அம்முனிவர், கோபவசத்தில் மொத்த உலகத்தையும் சாம்பலாக்கப் போகிறவரைப் போல அவ்விரு இளவரசர்களையும் வெறித்துப் பார்த்தார்.(2) அன்புக்குரிய மன்னா, தமது மற்றொரு கண்ணால் பக்திமானும், நற்பேறு பெற்ற பிராமணனுமான ஜனார்த்தனனை அவர் பார்த்தார்.

பிறகு அம்முனிவர், அந்த இளவரசர்களிடம், “இங்கிருந்து உங்கள் உறவினர்களிடம் உடனே திரும்பிச் செல்வீராக.(3) தாமதிக்காமல் விரைவாக இவ்விடத்தை விட்டகல்வீராக. உங்கள் சொற்களால் உண்டான கோபத்தை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை.(4) என் பார்வையில் இருந்து அகல்வீராக. நான் விரும்பினால் மொத்த உலகையும் சாம்பலாக்கிவிடுவேன் எனும் போது, மன்னர்களான உங்கள் இருவரைக் குறித்து என்ன சொல்வது? நல்லறிவுள்ள எந்த மனிதன்தான் இத்தகைய துணிச்சலுடன் என்னிடம் பேசத் துணிவான்?(5) மூட இளவரசர்களே, சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணன் வெகுவிரைவில் உங்கள் செருக்கை அழிப்பான் என்ற தகவலை மட்டும் இப்போதைக்கு உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் {துர்வாசர்}.(6)

சந்நியாசிகளின் நற்குருவான துர்வாச முனிவர், இதைச் சொல்லிவிட்டு விலக முற்பட்ட போது ஹம்சன் வழிமறித்தான்.(7) மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, யமனைப் போன்ற கொடூரனான ஹம்சன், துர்வாசரின் கைகளைப் பிடித்து அவரது இடைக்கச்சையை {கௌபீனத்தை / கோவணத்தைக்} கிழித்தான்.(8) இதைக் கண்ட மற்ற சந்நியாசிகள் பீதையடைந்து பத்துத் திக்கிலும் தப்பி ஓடினர்.

பிராமணன் ஜனார்த்தனன், “ஐயோ, இதுவென்ன துன்பம்?” என்று கதறியும், “நீ என்ன செய்கிறாய்?” என்று தன் நண்பனான ஹம்சனிடம் சொல்லியும்,{9} அவனைத் தடுக்கத் தன்னாலான சிறந்த முயற்சியைச் செய்தான்.

துர்வாச முனிவர் ஹம்சனைக் கொல்லும் வல்லமை பெற்றவர் என்றாலும் அமைதியாக,{10} “இழிந்தவனே, அரச குடும்பத்தின் மதிப்பைக் கெடுப்பவனே, சாபத்தால் உன்னை என்னால் கொல்லமுடியும் என்றாலும், நான் துறவி என்பதால் அதைச் செய்யத் தயங்குகிறேன்.{11} யதுவின் வழித்தோன்றலும், சங்கு, சக்கர, கதாதாரியுமான ஜகந்நாதன் உன் செருக்கை விரைவில் அழிப்பான். யாதவர்களில் முதன்மையான அவன், தற்போது உன்னைப் போன்ற அசுரர்களிடம் இருந்து உலகில் நல்லவர்களைக் காப்பதில் ஈடுபட்டு வருகிறான்.{12,13} இளவரசர்களான நீங்கள் இருவரும், பரமனால் கொல்லப்பட்டு விடுதலை அடைவதால் உண்மையில் அதிர்ஷ்டசாலிகளே. உங்கள் நண்பனும், ஆதரவாளனுமான ஜராசந்தன், தீங்கிழைக்கும் இத்தகைய சொற்களை ஒருபோதும் சொல்ல மாட்டான்.{14} அவன் பெரும் பக்திமான். தீங்கிழைக்கும் உங்கள் நடத்தையால் ஜராசந்தன் உங்கள் பகைவனாவான். நீங்கள் செய்த குற்றங்களை அறிந்தும், உங்கள் மீது கொண்ட நட்பின் காரணமாக அவன் அமைதியாக இருந்தால் அவனும் அழிவையே அடைவான். இதில் ஐயமேதுமில்லை” என்றார் {துர்வாசர்}. துர்வாச முனிவர் இதைச் சொல்லிவிட்டு, மீண்டும் ஹம்சனிடம், “இங்கிருந்து செல். உடனே செல்வாயாக” என்று சொன்னார்.{15-17}

பிறகு சந்நியாசிகளில் சிறந்தவரான அவர், {பிராமணன்} ஜனார்த்தனனிடம், “மேன்மைவாய்ந்த பிராமணா, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} உறுதியான பக்தி கொள்வாயாக.{18} இன்றோ, நாளையோ, நாளை மறுநாளோ நீ {சங்கு, சக்கர, கதாதாரியான} பரமனைச் சந்திப்பாய். முனிவனைப் போல எப்போதும் நீ ஒழுக்கத்தில் உறுதியாக இருப்பாய்.(9-19) சாதுக்கள் இம்மையிலோ, மறுமையிலோ ஒருபோதும் அழிவடைவதில்லை. இல்லந்திரும்பி நடந்தவை அனைத்தையும் உன் தந்தைக்கு {மித்ரஸஹருக்குச்} சொல்வாயாக” என்றார் {துர்வாசர்}”.(20)

துவாரகையில் துர்வாசர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 85-(யதீநாம் த்வாரகாகமநம்)-கிருஷ்ணனைச் சந்திக்க துவாரகை சென்ற துர்வாசரும், யதிகளும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, அதன்பிறகு பெருங்கோபமடைந்த ஹம்சனும், டிம்பகனும் அங்கே இருந்த முனிவர்களின் சந்நியாச தண்டங்கள், கமண்டலங்கள், உணவுக்குப் பயன்படும் மரத்தட்டுகள் ஆகியவற்றையும், இன்னும் பிற சாதனங்களையும் நொறுக்கினர். பிறகு அவர்கள் அந்த ஆசிரமத்திலேயே இறைச்சி {மாமிசம்} சமைக்கத் தங்கள் தொண்டர்களுக்கு ஆணையிட்டனர்.(1,2) இறைச்சியை உண்ட பிறகு அவர்கள் தங்கள் தலைநகருக்குத் திரும்பினர். ஜனார்த்தனன், தங்கள் நண்பர்களிடம் கொண்ட அன்பினால் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.(3) ஜனார்த்தனன், தங்கள் அழிவுக்கான நேரம் மிக அருகில் இருப்பதை நிச்சயமாக உணர்ந்து பெருஞ்சோகமடைந்தான்.

அவ்விரு இளவரசர்களும், அவர்களின் படைகளும் புறப்பட்டுச் சென்ற பிறகு துர்வாச முனிவர்,{4} அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓடிய தமது சீடர்கள் அனைவரையும் கூட்டி, “பெரும் முனிவர்களே {யதீஷ்வரர்களே}, புஷ்கரமெனும் இப்புனிதத் தலத்தில் இருந்து துவாரகாபுரிக்குச் செல்வோம்.{5} அங்கே சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணனைச் சந்தித்து நம் தீயூழை {நமக்கு நேர்ந்த இடையூறை} எடுத்துச் சொல்வோம்.{6} நல்லோரை பாதுகாக்கும் தர்மவர்த்தனனான அவன், அறக் கோட்பாடுகளை நிலைநிறுத்துவதில் அர்ப்பணிப்புள்ளவனாவான்.{7} தன்னை உணர்ந்தோரால் வழிபடப்படும் அவனே, ஆதிதேவனும், நீக்கமற நிறைந்திருக்கும் லோககுருவுமாவான். அவன் பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக அவதரித்திருக்கிறான்.(4-8) உலகஞ்சார்ந்த ஆசைகள் அனைத்தில் இருந்தும், போலி அகங்காரத்தில் இருந்தும் விடுபட்டவர்களும், ஆழமான ஞானத்தை விளைவிப்பதில் மனத்தை நிலைநிறுத்தியவர்களுமான நம்மை அந்தப் பிரபுவே பாதுகாப்பான். பிறரின் மனங்களில் அச்சத்தையூட்டும் பாவிகள் அனைவரையும் அவன் அழிப்பான்.(9) விப்ரர்களே {பிராமணர்களே}, இதுவே நமக்கான சிறந்த செயல் திட்டம் என்பதால் தாமதமில்லாமல் நாம் துவாரகை செல்வோம்.{10} முனிவர்களில் சிறந்தவர்களே, ஹம்சனாலும், டிம்பகனாலும் உடைக்கப்பட்ட நமது கமண்டலங்கள் அனைத்தையும், பிற பொருட்களையும் எடுத்துச் சென்று அந்த ஜனார்த்தனனிடம் காட்டுவோம்” என்றார் {துர்வாசர்}.{11}

நுண்ணறிவுமிக்க அந்த முனிவர்களும், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்ல தண்டங்கள், கமண்டலங்கள், காவி வஸ்திரங்கள், இடைக்கச்சைகள், மரவுரிகள், மரத்தட்டுகள் ஆகியவற்றையும்,{12} ஹம்சனாலும், டிம்பகனாலும் நொறுக்கப்பட்ட அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிருஷ்ணனைச் சந்திக்கத் துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(9-13) இவ்வாறே ஐயாயிரம் முனிவர்கள் புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்கட்டுப்பாடுடையவர்களாகவும், மேனிகள் மயிரால் மறைக்கப்பட்டிருந்தாலும் தலைகளை மழித்துக் கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் சிவபெருமானின் அவதாரங்களாகத் திகழ்ந்தனர். அவர்கள் தங்கள் தலைவரும், பெரும் தவசியுமான துர்வாச முனிவரைப் பகல், இரவுகளாகப் பின்தொடர்ந்து சென்று, கிருஷ்ணனால் பாதுகாக்கப்பட்டு வரும் துவாரகையை அடைந்தனர்.(14,15) இராஜேந்திரா {ஜனமேஜயா}, துர்வாச முனிவரால் வழிநடத்தப்பட்ட அந்த முனிவர்கள் தங்கள் பயணத்தின் முடிவில் காலை வேளையில் துவாரகாபுரிக்குள் நுழைந்தனர். முதலில் ஓர் அழகிய தடாகத்தில் நீராடி ஆசமனஞ்செய்தனர் {வலக்குடங்கையால் மந்திரபூர்வமாக நீரை மும்முறை உட்கொண்டனர்}.{16} இவ்வாறு தங்கள் காலைக் கடமைகளை நிறைவேற்றிய அவர்கள், உலக மக்களை ஒடுக்கும் துஷ்டர்கள் அனைவரையும் அழிப்பதெவ்வாறு என்று திட்டமிட்டபடியே சுதர்மம் என்ற சபாமண்டபத்தில் அமர்ந்திருக்கும் கிருஷ்ணனைத் தரிசிக்க மகிழ்ச்சியாகச் சென்றனர்” என்றார் {வைசம்பாயனர்}.(16,17)

துர்வாச வாக்கியம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 86-(ஸ்ரீக்ருஷ்ணம் ப்ரதி துர்வாஸஸோ வாக்யம்)சாத்யகி முதலிய நண்பர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்த கிருஷ்ணனிடம் பேசிய துர்வாசர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, சர்வேஸ்வரனும், விஷ்ணுவும், தாமரை இதழ் கண்களும், கருநிற மேனியும், சுருண்ட கருமுடியும் கொண்டவனும், பீதாம்பரதாரியும், ஆறு செல்வங்கள் நிறைந்தவனும், அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும்,{1} கீர்த்திமானும், ஸ்ரீ பதியும் {லட்சுமி தேவியின் கணவனும்}, நீக்கமற நிறைந்த சாஸ்வத தேவனும், சகல மங்கலங்களும் உடையவனுமான கிருஷ்ணன்,{2} கிரீடத்தால் சிரத்தை அலங்கரித்துக் கொண்டும், கதாயுதம் தரித்துக் கொண்டும் சாத்யகியுடனும், பல இளவரசர்களுடனும் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(1-3) யதுவின் வழித்தோன்றலான அன்புக்குரிய கிருஷ்ணன், சுதர்மமெனும் சபா மண்டபத்தினுள் யுயுதானனுடன் {சாத்யகியுடன்} பந்து விளையாடிக் கொண்டிருந்தான்.(4)

அப்போது தாமரைக் கண்ணனான விஷ்ணு {கிருஷ்ணன்}, சாத்யகியிடம், “நானே முதல் கோலத்தை {புள்ளியை / இலக்கை / வெற்றியை} அடைந்தேன், நீ வெல்லவேண்டுமெனில் மிகக் கடுமையான முயற்சியைச் செய்ய வேண்டும்” என்றான்.(5)

மன்னா {ஜனமேஜயா}, விளையாட்டுக் களத்தின் எல்லையில் வசுதேவர், உத்தவர் உள்ளிட்ட முக்கிய யாதவர்கள் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர்.(6) நீண்ட காலத்திற்கு முன்பு, அழுத்தமான பணிச்சுமை ஏதும் இல்லாத காலங்களில் ராமன் சுக்ரீவனுடன் விளையாடியதைப் போலவே, தலைவனும், வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்பவனுமான கிருஷ்ணனும், தன் நலன்விரும்பிகளான நண்பர்களுடனான விளையாட்டில் மகிழ்ச்சியடைந்தான்.(7) தவறிழைக்காதவனும், விஷ்ணுவுமான கிருஷ்ணன், அந்நாளின் மதிய வேளை வரையில் சாத்யகியுடனான விளையாட்டில் வெற்றியை ஈட்டுவதில் நீண்ட நேரம் இன்புற்றிருந்தான்.(8)

மன்னா {ஜனமேஜயா}, துர்வாச முனிவரின் தலைமையிலான முனிவர்கள் நுழைவதற்கான அனுமதியைப் பெறச் சென்ற காவலர்கள், சுதர்ம சபையின் நுழைவாயிலில் அவர்களை {அந்த முனிவர்களை} மதிப்புடன் அமரச் செய்தாலும் அந்த முனிவர்கள், “நாம் ஏன் காத்திருக்க வேண்டும்?” என நினைத்துத் தாமதமில்லாமல் அரசசபையில் நுழைந்தனர்.(9) துர்வாச முனிவரின் தலைமையில் சென்றவர்களும், நீண்ட காலம் தவம் செய்தவர்களும், தூய இதயம்படைத்தவர்களுமான அந்த முனிவர்கள், விளையாட்டை நிறுத்திவிட்டுக் கையில் பந்துடன் நிற்பவனும், யாதவர்களின் தலைவனுமான கிருஷ்ணனை தரிசித்தனர். அந்த ஹரி, ஒரு கண்ணால் சாத்யகியைக் கவனித்தவாறே, மறு கண்ணால் பந்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கணத்தில் துர்வாச முனிவரின் தலைமையிலான முனிவர்கள் காட்சிக்குள் நுழைந்தனர்.(10-12)

தாமரைக் கண்ணனும், விருஷ்ணி குலத்தைக் காப்பவனுமான கிருஷ்ணனும், சாத்யகி, பலபத்ரன் {பலராமன்}, வசுதேவர், அக்ரூரர், உக்ரசேனர் ஆகியோரும், இன்னும் பிற யாதவர்களும் அந்த முனிவர்களைக் கண்டதும் கவலையடைந்தனர். அவர்கள் ஒருவிதமான அச்சத்துடனேயே தங்களுக்குள், “அஞ்சத்தக்க இம்முனிவர்களின் எதிர்பாரா வரவிற்கான காரணமென்ன?” என்று பேசிக் கொண்டனர்.(13,14)

அப்போது அந்த யாதவர்கள் யாவரும், அற்புதமிக்கவரும், உடைந்த தண்டத்தைக் கொண்டவரும், கிழிந்த கோவணத்துடன் கூடியவரும், உலகத்தையே சாம்பலாக்கக்கூடியவரும், செல்வாக்குமிக்கவருமான அந்தப் பிராமணரை {துர்வாசரை} அணுகினர். ஏதோவொரு முக்கியக் காரியத்தை ஆழமாகச் சிந்தித்தபடியே காணப்பட்டதால் அவர் மனத்துயர் கொண்டவரைப் போல் காட்சியளித்தார். மன்னன் ஹம்சன் அவருக்குப் பெருந்தீங்கிழைத்ததால், அவரது மனத்தின் அடியில் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. உண்மையில் அவர் கிருஷ்ணனைப் பார்த்தபோது, அவரது கண்களில் நெருப்பு வெளிப்பட்டது. யாதவர்களில் முதன்மையானவர்களும் கூட, துர்வாச முனிவரை அந்நிலையில் காண அஞ்சினர்.(15-17)

“இத்தகைய கோபத்தில் இந்த முனிவர் என்ன செய்வார் என்பதை நம்மால் நினைத்தும் பார்க்க முடியாது. இவரிடம் கிருஷ்ணன் என்ன சொல்லப் போகிறான்?” என்று சிந்தித்தவாறே யாதவர்களும் விருஷ்ணிகளும் மதிப்புடன் தங்கள் கைகளைக் கூப்பிப் பணிவுடன், “பிரபுவே, அமர்வீராக” என்றனர்.

அதன்பிறகு துர்வாச முனிவரின் எதிரில் வந்த கிருஷ்ணன், “மேன்மைமிக்கப் பிராமணரே, சுகமாக அமர்வீராக. நான் என்னை உமது கிங்கரனாக {பணியாளனாகக்} கருதுவதால், உமக்குத் தொண்டாற்றவே இங்கே இருக்கிறேன்” என்றான்.(18-20)

துர்வாசர், தமக்குக் கொடுக்கப்பட்ட ஆசனத்தில் விருப்பமில்லாமல் தயக்கத்துடன் அமர்ந்தார். அவரது தலைமையில் வந்த முனிவர்கள் அனைவரும் தங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்தனர். கிருஷ்ணன் அர்க்கியம் முதலிய மங்கலப் பொருட்களை அந்த முனிவர்களுக்குக் கொடுத்தான்.

பிறகு, புலன்களின் தலைவனான கிருஷ்ணன், பின்வருமாறு துர்வாச முனிவரிடம் பேசினான்: “பிராமணரே, எங்கள் நகருக்கு உம்மை அழைத்து வந்த காரணமென்ன? உமது செயல்பாடுகள் அனைத்தும் நற்காரியங்களுக்காகவே அமைந்திருக்கின்றன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நீரும், துறவிகளான உமது சீடர்களும், எங்களைப்போன்ற இல்லறவாசிகளின் காரியங்களை ஒருபோதும் விரும்பமாட்டீர்கள். பொருள்பற்றிலிருந்து விடுபட்டவரான உமக்கு, உலகஞ்சார்ந்த பொருளேதும் விரும்பத்தக்கதல்ல. பயனை விரும்பும் பணியாளர்கள், உலகஞ்சார்ந்த தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக க்ஷத்திரியர்களை அணுகுவர். எனினும், பொருள் விரும்புவோரின் வரவுக்கான காரணமும், உமது வரவுக்கான காரணமும் வேறுபட்டதென நான் நம்புகிறேன். பிராமணரே, உமது வரவின் நோக்கத்தை நான் அறிய விரும்புகிறேன். உமது வரவே, விரைவில் செய்யப்பட வேண்டிய அதிமுக்கிய காரியங்கள் இருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றன. உமது வரவிற்கான நோக்கம் எதுவாக இருந்தாலும், அதை எங்களுக்குத் தெரிவிப்பீராக” என்றான் {கிருஷ்ணன்}.

மன்னா, சக்கரபாணியான ஜனார்த்தனன் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, மூவுலகங்களையும் எரித்து, வழியில் குறுக்கிடும் எதனையும் எரித்துவிடுபவரைப் போலத் தெரியுமளவுக்குத் துர்வாசரின் கோபம் அதிகரித்திருந்தது. உண்மையில், கண்கள் நெருப்பைப் போலச் சிவக்கும் அளவுக்குத் துர்வாசரின் கோபம் அதிகமாக இருந்தது.

இவ்வளவு கோபத்துடனிருந்தாலும் அம்முனிவர் சிரித்தவாறே, “யாதவத் தலைவா, கிருஷ்ணா, நான் வந்த காரணத்தை அறியாதவன் போல் நீ ஏன் பேசுகிறாய்? நீயே விஷ்ணுவின் அவதாரம் என்பதை நானறிவேன் என்றாலும், சாதாரண நரனைப் போல் நடித்து நீ எங்களை வஞ்சிக்கிறாய். தலைவா, நாங்கள் நீண்ட காலம் வாழ்ந்துவருவதால், கடந்த காலத்தில் நடந்தவற்றை அறிந்திருக்கிறோம். அகவீரியத்தினால் மனித அவதாரமேற்றிருக்கும் நீயே தேவர்களின் தலைவன் என்பதை நான் அறிவேன். ஓ! ஜகத்பதியே, நீயே எங்கள் தலைவனும், ஆசானுமாவாய். உன் உண்மையான அடையாளத்தை ஏன் நீ மறைக்கிறாய்?(21-33) தன்னை உணர்ந்த ஆன்மாக்களின் உயிராகவும், ஆன்மாவாகவும் நீயே இருக்கிறாய். பழங்காலத்தில் பிரம்மன் தியானித்த இறுதி இலக்கும், அவன் அடைந்த ஆழ்நிலை ஞானமும் நீயே. உன்னையும் வழிபட்டத்தால் நாங்கள் ஆழ்ந்த ஞானத்தை அடைந்திருக்கிறோம்.(34)

எதிலிருந்து இந்த அண்டம் வெளிப்பட்டதோ அந்த முற்றான உண்மை நீயே. அண்டத்தின் தலைவா, புராணங்களை அறிந்தவர்களால் விராடன் {விராட்புருஷன்} என்று அழைக்கப்படும் அண்ட வடிவாக உன்னைப் பெருக்கிக் கொள்பவன் நீயே. உன் மகிழ்ச்சிக்கான செயல்பாடுகளில் ஈடுபடும் பக்தர்கள் உன் தாமரை பாதங்களை அடைகின்றனர். உன் தாமரைப் பாதங்களைத் தொடர்ந்து நினைவுகூர்ந்து வருவதன் மூலம், இருப்பில் இருந்து விலகி ஆழமான பேரின்ப அருட்கடலில் நாங்கள் மூழ்குகிறோம். உன்னிடம் அன்பும், பக்தியும் கொண்ட பக்தர்கள் உன்னை நேரடியாகவே காண்கின்றனர். மூடர்களால் உன் சச்சிதானந்த உடலின் ஆழ்நிலை இயல்பைப் புரிந்து கொள்ள முடியாது. எனினும் நாங்கள் அந்த மூடர்களைப் போன்றவர்களல்ல.

இவை யாவற்றையும் கருத்தில் கொண்டால் எங்கள் வரவின் காரணத்தை அறிய முடியவில்லை என்ற உன் கூற்றுக் குழப்பத்தை அளிக்கிறது. பரமனே, கேசியைக் கொன்றவனே, காரணங்கள் அனைத்தின் காரணனை அறிந்தோரிடம் இவ்வாறு பேசுவதன் மூலம் நீ என்ன ஈட்டப்போகிறாய்? ஆழமானதும், பிரகாசமானதுமான உன் வடிவம் வேதாந்தத்தில் அமைதியான பிரம்மமாக விளக்கப்பட்டிருக்கிறது. பிரபுவே, பாவமற்றவர்களும், ஆழமான ஆறிவில் ஈர்க்கப்படுவதில் நிறைவடைந்தவர்களுமான யோகிகள் உன்னை எப்போதும் தங்கள் இதயத்தில் கண்டு வருகின்றனர்.(35-40)

வேதங்களில் பரப்பிரம்மன் என்று துதிக்கப்படுபவனும், முற்றான உண்மையுமான உன்னையே நாங்கள் பரமன் என்று அறிகிறோம்.(41) விஷ்ணுவே, “எங்கே விஷ்ணு இருக்கிறானோ அதுவே பரமபதம்” என்ற புகழ்பெற்ற வேத விளக்கத்தின் இலக்காகத் திகழ்பவன் நீயே.(42) பிரபுவே, ஓம் எனும் புனித அக்ஷரத்தின் வித்தாகத் துதிக்கப்படும் பரமாத்மா நீயே. இவை யாவற்றையும் கருத்தில் கொண்டால், எங்கள் வரவின் காரணத்தை அறியவில்லை என்று நீ சொல்ல முடியாது.(43) கோவிந்தா, உன் ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஏதும் உண்டென்றால் நீ அவ்வாறு பேசலாம். எனவே, நாங்கள் இங்கே வந்திருக்கும் காரணத்தை அறியமாட்டாய் என்று நீ சொல்லாதே.(44) கேசவா, யாரிடம் இந்த அண்டம் உண்டானதோ, அண்ட அழிவின் போது யாரிடம் அது கலக்குமோ அந்த உயர்ந்த இயக்குனன் நீயே என்பதை உறுதியாக நம்புகிறேன்.(45)

ஹரியே, புறத்தில் வெளிப்பட்டிருக்கும் அனைத்துக்கும் உண்மை காரணனும், அகத்தில் உயிரினங்கள் அனைத்தின் இதயத்தில் இருப்பவனும் நீயே. நான் உன்னை எந்த வடிவத்தில் தியானித்தாலும் அந்த வடிவத்திலேயே என் இதயத்தில் தோன்றுபவன் நீயே.(46) விபுவே, வாயுவும் விஷ்ணுவின் வெளிப்பாடே என்பதை நான் அறிந்திருக்கிறேன்; வாயு வடிவில் நீ என் இதயத்தில் இருக்கிறாய்.(47) விபுவே, ஆகாயமும் விஷ்ணுவின் வெளிப்பாடே என்பதை நான் அறிந்திருக்கிறேன். அவ்வடிவிலும் நீ என்னுள் இருக்கிறாய்.(48) பூமியும் விஷ்ணுவின் வெளிப்பாடே என்பதால் அவ்வடிவிலும் நீ என்னுள் இருக்கிறாய்.(49) நீரும் உன் சக்தியின் வெளிப்பாடே என்பதால் அவ்வடிவில் என்னுள் நீ நித்தியமாக இருக்கிறாய்.(50) பிரபுவே, பிரகாசமான உன் வடிவை நான் தியானிக்கும்போது அவ்வடிவிலும் என் இதயத்தில் நீ தோன்றுகிறாய்.(51) கேசவா, ஹரியின் வடிவமாக நான் சந்திரனைக் கருதுகிறேன்; நிலவைக் காணும்போதெல்லாம் நான் மகிழ்ச்சியடைகிறேன்.(52) சூரியனை உன் வடிவங்களில் ஒன்றாக நான் கருதும்போது, சூரியனாக நீ எவ்வாறு விரிவடைகிறாய் என்பதை நான் காண்கிறேன்.(53) எனவே, நீயே அனைத்தின் பிறப்பிடமென நான் நம்புகிறேன். எதுவும் உன்னில் இருந்து வேறுபட்டதல்ல. ஜனார்த்தனா, இவை யாவற்றையும் கருத்தில் கொண்டு, “உங்கள் வரவின் காரணமென்ன?” என நீ கேட்கக் கூடாது.(54)

விஷ்ணுவே, நீ அனைத்தையும் அறிந்தவனாக இருந்தாலும், எங்கள் துன்பத்தைத் தணிக்க ஏதும் செய்யாதிருக்கிறாய். பெருந்துன்பத்தில் இருக்கும் நாங்கள், உன் உறைவிடம் நாடி வந்திருக்கிறோம்.(55) கேசவா, நாங்கள் பெரும் மனச்சோர்வில் இருந்தாலும், நீ அலட்சியமாக இருக்கிறாய் என்பதால் பேறில்லா எங்கள் நிலையை நாங்கள் கடிந்து கொள்கிறோம். விஷ்ணுவே, துன்பநிலையிலும் உன் கருணையைப் பெறத் தவறியது எங்கள் கெடுபேறே. ஜனார்த்தனா, சிவனின் வரங்களைப் பெற்ற, செருக்குமிக்க ஹம்சன், டிம்பகன் என்ற க்ஷத்திரியர்கள் இருவரும் பேராணவமடைந்திருக்கிறார்கள். சந்நியாச ஆசிரமத்தைவிடக் கிருஹஸ்த ஆசிரமமே மேன்மையானது என்று சொல்லி அவர்கள் எங்களைப் பயங்கரமாகத் துன்புறுத்துகிறார்கள்.(56-58) நாங்கள் வசிக்கும் ஆசிரமத்தை அழித்து, கொடூரமாகப் பேசி, தங்கள் சொற்களால் எங்களைப் பெரிதும் துன்புறுத்துகிறார்கள்.(59)

பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு எங்கள் ஆசிரமத்தில் அவர்கள் செய்த அடாவடிகளை நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன். உடைந்து நொறுங்கிய இந்த ஆயிரக்கணக்கான தண்டங்களையும், கமண்டலங்களையும், மூங்கிற் கூடைகளையும் காண்பாயாக. இவை யாவும் ஹம்ச டிம்பகர்களால் நொறுக்கப்பட்டவை. இதையுந்தவிர இழிந்தவர்களான அவ்விருவரும் எங்கள் இடைக்கச்சைகளை {கௌபீனங்களை / கோவணங்களைக்} கிழித்தெரிந்தனர். இவை மட்டுமே எங்கள் உரிமையாக இருந்தன. அவர்களால் நொறுக்கப்பட்ட கமண்டலங்கள் இப்போது கபாலங்களை {மண்டை ஓடுகளைப்} போலத் தெரிகின்றன. எங்களைப் பாதுகாப்பது க்ஷத்திரியனான உன் கடமை என்றாலும் இந்நிலையையே நாங்கள் அடைந்திருக்கிறோம். எங்களைக் காப்பதாக நீ சபதம் செய்திருந்தாலும், நீ நீக்கமற நிறைந்தவனாக இருந்தாலும், இந்த முரட்டு இளவரசர்கள் இருவராலும் நாங்கள் துன்புறுத்தப் படுகிறோம்.(60-63)

தலைவா, என் புத்தி குழம்புகிறது. பேறற்றவர்களான நாங்கள் என்ன செய்வது? எங்களுக்குப் பாதுகாப்பை வழங்கக்கூடிய உறைவிடத்தை நாங்கள் வேறு எவரிடம் அடைவோம்?(64) இந்த அயோக்கியர்கள் இருவரும் அடக்கப்படவில்லையெனில் மூவுலகங்களும் சர்வநாசமடையும். இனி பிராமணர்களே இருக்க மாட்டார்கள் எனும்போது, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களைக் குறித்து என்ன சொல்வது?(65) இந்த இளவரசர்கள் இருவரும் சர்வ பலம் பொருந்தியவர்களாகவும், செருக்கில் மிதப்பவர்களாகவும், செல்லுமிடமெல்லாம் தண்டங்களை நீட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள். இந்திரனின் தலைமையிலான தேவர்களாலும் அவர்களை எதிர்க்க இயலாது.(66)

கிருஷ்ணா, பீஷ்மரோ, பாஹ்லீகரோ அவர்களை எதிர்க்க இயன்றவர்களல்ல. வலிமைமிக்க ஜராசந்தனே கூட அவர்கள் சிவனிடம் அடைந்த வரங்களின் வலிமையால் போரிடத் துணியானென்றால் பிறரைக் குறித்து என்ன சொல்வது? அவர்கள் நல்ல நண்பர்களாகவும், ஒற்றுமையாகவும் இருப்பதால் அவர்களுக்கிடையில் உன்னால் வேற்றுமையை உண்டாக்க இயலாது.(67,68) பிரபுவே, அவர்களை வென்று மூவுலகங்களையும் மீட்க இயன்றவன் நீயே. இல்லையென்றால், “நல்லோரைப் பாதுகாப்பேன்” என்ற உன் உறுதிமொழி பொய்யாகும்.(69) இன்னும் அதிகம் சொல்வதில் என்ன பயன்? எங்களைப் பாதுகாப்பதன் மூலம் மூவுலகங்களின் சுமையை அகற்றுவாயாக” என்றார் {துர்வாசர்}. துர்வாச முனிவர் இதைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தார்” என்றார் {வைசம்பாயனர்}.(70)

கிருஷ்ணன் செய்த சபதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 87-(கிருஷ்ணஸ்ய ஹம்ஸடிம்பகவதப்ரதிஜ்ஞா யதிபோஜநம்)-ஹம்சனையும், டிம்பகனையும் கொல்வதாகக் கிருஷ்ணன் செய்த சபதம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “துர்வாச முனிவரின் பேச்சைக் கேட்ட யாதவர்களின் தலைவன் {கிருஷ்ணன்} பெருமூச்சுவிட்டபடியும், பெருங்கவலையுடன் அவரைப் பார்த்தபடியும் பின்வருமாறு பதிலுரைத்தான்.(1)

{கிருஷ்ணன்}, “உங்களுக்கு நேர்ந்தவை அனைத்திற்காகவும் என்னை மன்னிப்பீராக. உங்கள் மனக்குறைகள் தெரியாமல் நான் அலட்சியமாக இருந்துவிட்டேன். உமது கோபத்தைக் கைவிட்டு, தயை கூர்ந்து நான் சொல்வதைக் கேட்பீராக.(2) விப்ரரே, போரில் நான் ஹம்சனையும், டிம்பகனையும் வீழ்த்துவேனென்பது திண்ணம். சங்கரன், இந்திரன், குபேரன், வருணன், யமன் ஆகியோரிடமோ, நான்முகனான பிரம்மனிடமோ அவர்கள் வரங்களைப் பெற்றிருந்தாலுங்கூட, என்னுடைய நண்பர்கள், உறவினர்கள், படைவீரர்கள் ஆகியோரின் துணையுடன் அவ்விரு இளவரசர்களையும் நான் கொல்வேன். அது நிச்சயம் உங்களுக்கு நிறைவைத் தரும்.(3,4) நான் சத்தியத்தைப் பேசுவதால், என் சொற்களை நம்பி உங்கள் கோபத்தைக் கைவிடுவீராக. மிக இழிந்தவர்களான அவ்விரு மன்னர்களையும் கொல்வதன் மூலம், உங்கள் அனைவரையும் நான் நிச்சயம் காப்பேன் என்பதை அறிவீராக.(5)

அவ்விரு பாவிகளும் உங்களுக்குத் தீங்கிழைத்திருக்கின்றனர் என்று நான் அறிகிறேன். அவர்களின் சக்திமிக்கத் தண்டத்தையும், சங்கரனிடம் பெற்ற வரத்தால் உண்டான பலத்தில் அவர்கள் கொண்டிருக்கும் செருக்கையும் நான் கேள்விப் பட்டிருக்கிறேன். ஜராசந்தனுடன் நட்பு பூண்டிருப்பதால் அவர்களை ஒடுக்குவது எளிதல்ல.(6,7) அவர்கள் இல்லாமல் உலகை வெல்ல முடியாது என ஜராசந்தன் நம்புகிறான். அவன், அவர்களுக்காகத் தன் உயிரையும் பணயம் வைப்பான் என்பதில் ஐயமில்லை.(8) பிராமணர்களில் சிறந்தவர்களே, போர் நேரிடுகையில், அவர்கள் நிச்சயம் ஜராசந்தனின் உதவியை நாடுவார்கள். இருப்பினும், அவர்கள் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து நான் கொல்வேன். இதில் நீங்கள் ஐயங்கொள்ள வேண்டியதில்லை. முனிவர்களே, உங்கள் ஆசிரமங்களுக்குத் திரும்பி உங்கள் கடமைகளைச் செய்து கொண்டிருப்பீராக. பலமிக்கவர்களான அவ்விரு போர்வீரர்களையும் விரைவில் நான் வீழ்த்துவேன்” என்றான் {கிருஷ்ணன்}.

இதில் பெரும் நிறைவடைந்த துர்வாசர், “கிருஷ்ணா, மூவுலகின் நன்மைக்காகச் செயல்படும் நீ மகிமையடைவாயாக. கேசவா, அண்டத்தின் தலைவா, உன்னால் சாதிக்க முடியாத காரியம் தான் என்ன இருக்கிறது?(9-12) தேவர்களின் தலைவா, மூவுலகங்களை ஆள்பவனும், அவற்றை அழிப்பவனும் நீயே. அனைவரையும் சமமாகக் கருதுபவனாக நீ இருப்பதால், உனக்கு நண்பனும், பகைவனும் எவனுமில்லை.(13) விஷ்ணுவே, ஹரியே, சக்கரபாணியான கிருஷ்ணா, நான் உன்னை வணங்குகிறேன். நித்திய தூயனும், தூய்மையின் அவதாரமும், தூய்மையில் உயர்ந்தவனும் நீயே.(14) தேவர்களின் தலைவா, உன் அவதாரங்களில் பக்தி கொண்ட பக்தர்களிடம், அன்புடன் இருக்கும் உன்னை அனைவரும் தேடுகின்றனர்.(15) ஜகந்நாதா, உன்னுடைய ஒரு பகுதியாகவே என்னை நான் கருதுகிறேன். நமக்குள் எந்த வேறுபாடும் இல்லை என்பதாலும், சாதுவின் குணம் பொறுப்பதே என்பதாலும் என்னை நீ மன்னிப்பாயாக” என்றார் {துர்வாசர்}.(16)

அப்போது அந்தப் பகவான் {கிருஷ்ணன்}, “விப்ரரே, நீரே பொறுத்தருள வேண்டும். உம்மைப் போன்ற மேன்மையானவர்களைப் பொறுத்துக் கொள்ள எப்போதும் நாங்கள் தயாராக இருக்கிறோம். துறவிகளின் முதன்மையான கோட்பாடு மன்னிப்பதே {பொறுப்பதே / சகிப்பதே} ஆகும். அதுவே அவர்களின் பலமாகவும் அமைகிறது.(17) அஃது ஒருவனிடம் ஆழமான ஞானத்தை விளைவிப்பதைப் போலவே, பொருள் இருப்பில் இருந்து விடுதலை அடையும் நிலைக்கும் அவனை உயர்த்துகிறது. அறம் {தர்மம்}, வாய்மை {சத்தியம்}, ஈகை {தானம்}, புகழ் {கீர்த்தி} ஆகியவையே பொறுமையின் சாரங்களாகத் திகழ்கின்றன. பொறுமையே சொர்க்கத்திற்கான படிக்கட்டுகள் என வேதங்களை அறிந்தோர் சொல்வதால், பிறரை எப்போதும் நீர் மன்னிக்க {பொறுத்துக் கொள்ள} வேண்டும்.(18,19) முனிவர்களில் முதன்மையானவரே, நீங்கள் அனைவரும் பெரும் ஞானம் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். இங்கே வந்திருக்கும் சந்நியாசிகளான உங்கள் அனைவரையும் வழிபடுவதும், உங்களுக்கு உணவளிப்பதும் என் கடமையும், இன்பமுமாகும்” என்றான் {கிருஷ்ணன்}.

“அவ்வாறே ஆகட்டும்” என்று ஏற்ற முனிவர்கள் அனைவரும் கிருஷ்ணனின் வசிப்பிடத்தில் உணவருந்த சம்மதித்தனர். கிருஷ்ணனும் தன் அரண்மனைக்குச் சென்று, இனிமைமிக்க உணவுகளைச் சமைக்க ஆயத்தம் செய்தான். பிறகு அவன் முனிவர்கள் அனைவரையும் அழைத்து, அமர்த்தி, உணவளித்து அவர்களை நிறைவடையச் செய்தான். இந்த விருந்தோம்பலைப் பெற்ற துர்வாச முனிவர், கிருஷ்ணனைப் பெரிதும் துதித்தார்.

ஜனமேஜயா, பிறகு அந்தக் கிருஷ்ணன் நல்ல துணிகளை எடுத்துக் கிழித்து, அவற்றை அந்தத் துறவிகளின் கோவணங்களாக்கிக் கொடுத்தான். அந்த முனிவர்களும், தங்கள் தலைவனிடம் இந்தத் தானத்தைப் பெற்ற மகிழ்ச்சியில் தங்கள் ஆசிரமங்களுக்குத் திரும்பிச் சென்றனர்” என்றார் {வைசம்பாயனர்}.(20-24)

தூதனுப்பல் | பவிஷ்ய பர்வம் பகுதி – 88-(ஹம்ஸடிம்பகயோர்தூதப்ரேஷணம்)-ராஜசூயம் செய்ய நினைத்த ஹம்சனும், டிம்பகனும், ஜனார்த்தனன் என்ற பிராமணனைக் கிருஷ்ணனிடம் தூது அனுப்பியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “சீடர்கள் இல்லந்திரும்பினாலும் துர்வாசர், நாரத முனிவருடன் சேர்ந்து துவாரகையிலேயே தங்கினார். அவர்கள் முற்றான உண்மை குறித்துத் தங்களுக்குள் விவாதம் செய்து காலத்தைக் கடத்தி வந்தனர்.(1) கோவிந்தன் {கிருஷ்ணன்}, முனிவர்கள் வசிப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தான். அதே வேளையில், ஹம்சனும், டிம்பகனும், அரச சபையில் இருந்த தங்கள் தந்தையான மன்னன் பிரம்மதத்தனை அணுகி பின்வருமாறு பேசினர்.(2,3)

{ஹம்சனும், டிம்பகனும்}, “அன்புக்குரிய தந்தையே, மன்னர்களில் முதன்மையானவரே, ராஜஸூய வேள்வி செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்வீராக. இந்த மாதமே அதற்கான மங்கல வேளை வாய்க்கிறது. யஞ்ஜம் இடையூறில்லாமல் நடைபெற நாங்கள் உமக்கு உறுதுணையாக இருப்போம்.(4) நமது குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை, காலாட்படை வீரர்களை அழைத்துக் கொண்டு திசைகள் அனைத்தையும் வெல்ல சகோதரர்களான நாங்கள் இருவரும் ஆவலாக இருக்கிறோம். வேள்விக்குத் தேவையான பொருட்களை உடனே திரட்டத் தொடங்குவீராக” {என்றனர்}.

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, மன்னன் பிரம்மதத்தனும் தன் மகன்களின் முன்மொழிவைத் தயக்கமில்லாமல் ஏற்றுக் கொண்டான். எனினும், அவர்களின் {ஹம்சடிம்பகர்களின்} பிராமண நண்பன் ஜனார்த்தனன், அவர்களின் ஆணவ இயல்பைக் கருத்தில் கொண்டும், இத்தகைய முயற்சி வீணானதே எனத் தீர்மானித்தும் அவர்களிடம், “ஹம்சா, என் சொற்களைக் கவனமாகக் கேட்டுக் கருத்தில் கொண்டு நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். பீஷ்மர், ஜராசந்தன், பாஹ்லீகர் ஆகியோரும், யாதவ வீரர்களும் இருக்கையில் நீங்கள் வெற்றுத் துணிச்சலில் இம்முயற்சியில் இறங்குகிறீர்கள்.(5-9) பீஷ்மர், பெருஞ்சக்திமிக்கவர், பேரனுபவம்வாய்ந்தவர், வாய்மை நிறைந்தவர், தற்கட்டுப்பாடுடன் இருப்பவர். இருபத்தோரு முறை க்ஷத்திரியர்களை அழித்த பரசுராமரையே அவர் ஒரு காலத்தில் வீழ்த்தியிருக்கிறார்.

ஜராசந்தன் போர்க்களத்திற்குள் நுழைந்தால் அவனது பலமும், ஆதிக்கமும் எத்தகையது என்பதை நீங்கள் அறிவீர்கள். விருஷ்ணி குல வீரர்கள் அனைவரும் போர்க்கலையில் திறன்வாய்ந்தவர்களாகவும், ஞானம் கொண்டவர்களாகவும் திகழ்கின்றனர். அவர்களில் பகைவரனைவரையும் வெல்லும் கிருஷ்ணன், இந்தப் பூமியில் எதிர்க்க இயலாத போர்வீரனாகத் திகழ்கிறான்.(10-12) ஜராசந்தனுடன் மீண்டும் மீண்டும் போரிட்டுப் பேரளவில் அவன் அனுபவங்களைத் திரட்டியிருக்கிறான். உண்மையில் எவ்வளவு சக்திமிக்க மன்னனாலும் அவனைப் போர்க்களத்தில் எதிர்த்து நிற்க இயலாது.(13)

வலிமைமிக்கப் பலராமன், தன் ஆற்றலில் செருக்கடைந்து வெறியுடன் இருக்கிறான். அவன் கோபமடைந்தால் மூவுலகங்களையும் மொத்தமாக அழித்துவிடக்கூடியவன்.(14) இஃது என் உறுதியான நம்பிக்கை. வலிமைமிக்கச் சாத்யகியும், போரில் பகைவரனைவரையும் வீழ்த்தும் சக்தியுடன் இருக்கிறான். யாதவர்கள் அனைவரும் கிருஷ்ணனின் கீழ் போரிட எப்போதும் தயாராக இருக்கின்றனர்.(15) உங்களால் துன்புறுத்தப்பட்ட பெரும் முனிவர் துர்வாசர், தமது சீடர்களுடன் துவாரகைக்குச் சென்று கிருஷ்ணனைச் சந்தித்திருக்கிறார்.(16) மன்னர்களில் முதன்மையானவர்களே, இதை நான் எங்கள் வீட்டுக்கு உணவருந்த வந்த ஒரு பிராமணரிடம் இருந்து கேள்விப்பட்டேன். இத்தகைய முக்கியமான சூழலில் சிறந்த செயல்பாட்டை உறுதி செய்ய உங்கள் அமைச்சர்களுடன் அனைத்தையும் விரிவாக விவாதிப்பீராக. அதன் பிறகு தான் நீங்கள் ராஜசூய வேள்வி செய்வது குறித்துச் சிந்திக்க முடியும்” என்றான்.

இதற்கு ஹம்சன், “யார் அந்தப் பீஷ்மன்? அவன் ஒரு பலவீனமான கிழவன். அந்தக் கிழவனுடனா எங்களை ஒப்பிடுகிறாய்? பிராமணர்களில் சிறந்தவனே, கிருஷ்ணனின் தலைமையிலான யாதவர்களும், போதையில் மிதக்கும் பலராமனும் எங்களை எதிர்க்கத் துணிவார்கள் என்று நினைக்கவும் செய்வாயோ? சாத்யகி உள்ளிட்ட யாதவர்களில் எவரும் போர்க்களத்தில் எங்கள் முன்னால் நிச்சயம் நிற்க இயலாது. இதை நீ அறிவாயாக.(17-20) ஒப்பற்ற சக்திவாய்ந்த ஜராசந்தன் எங்கள் நண்பனாகவும், நலன்விரும்பியாகவும் இருக்கிறான். இப்போதே துவாரகைக்குச் சென்று எங்கள் நோக்கங்களை அறிவிக்கும் இந்தச் செய்தியைக் கிருஷ்ணனிடம் சொல்வாயாக.(21)

{செய்தி இதுதான்}, “கேசவா, ராஜசூய யஜ்ஞத்திற்குத் தேவையான சிறந்த பொருள்கள் பலவற்றையும் திரட்டிக் கொண்டு விரைவாக எங்களை அடைவாயாக. உன் செல்வமனைத்தையும், பெருமளவிலான உப்பையும் சேர்த்துக் கொண்டு வருவாயாக. கிருஷ்ணா, தாமதமில்லாமல் என் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவாயாக“.

பிராமணா {ஜனார்த்தனா}, துவாரகைக்கு விரைந்து சென்று, நான் சொன்ன செய்தியை கிருஷ்ணனிடமும், பிற யாதவர்களிடமும் அறிவிப்பாயாக. பிராமணா, என் ஆணையைப் புறக்கணிக்கவோ, என்னைச் சபிக்கவோ நினைக்காதே. நீ என்னிடம் கொண்ட நட்பிற்காக இத்தொண்டை நீ செய்வாயாக” என்றான் {ஹம்சன்}.(22-24)

அன்புக்குரிய ஜனமேஜயா, ஹம்சனால் இவ்வாறு ஆணையிடப்பட்ட அந்தப் பிராமணன் {ஜனார்த்தனன்}, அவர்களுக்குள் இருந்த நட்பைக் கருத்தில் கொண்டு வேறு எந்த வாதத்தையும் முன்வைக்கவில்லை.(25) நித்திய அறத்தைக் கடைப்பிடிக்கும் தர்மாத்மாவான அந்த ஜனார்த்தனன், துவாரகை செல்லத் தயாராகி, “இன்றோ, நாளையோ, நாளை மறுதினமோ நிச்சயம் நான் புறப்படுவேன்” என்று சொல்லிவிட்டுத் தன் பயணத்திற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான்.(26) மஹாத்மாவான அந்த ஜனார்த்தனன் அதிகாலையிலேயே தனியாக வேகமான குதிரையில் ஏறி, சங்கு, சக்கர, கதாதாரியும், காரணங்கள் அனைத்தின் காரணனுமான கிருஷ்ணனைச் சந்திக்கத் துவாரகை நோக்கிச் சென்றான். அவன் மனத்தில், ‘புலன்களின் தலைவனும், நித்தியமான ஸூக்ஷ்ம உடல் கொண்டவனும், அறிவாலும், அருளாலும் நிறைந்தவனுமான ஹரியைத் தரிசிக்கப் போகிறோம்’ என்ற ஒரே நோக்கம் மட்டுமே இருந்தது. இவ்வாறே அவன் சென்று கொண்டிருந்தபோது, அவனது மனம் ஒரு கணமும் விலகாமல் கிருஷ்ணன் மீதே நிலைத்திருந்தது” என்றார் {வைசம்பாயனர்}.(27,28)

துவாரகையை அடைந்த தூதன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 89-(ஜநார்தநாக்யதூதஸ்ய த்வாரவதீப்ரயாணம்)துவாரகைக்குப் பயணிக்கும் போது ஜனார்த்தனன் எண்ணிய எண்ணங்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ராஜேந்திரா, இவ்வாறே அந்தப் பிராமணன் {ஜனார்த்தனன்}, விஷ்ணுவைக் காணும் ஆவலில் குதிரையில் ஏறி புறப்பட்டுச் சென்றான்.(1) கோடை காலத்தில் சூரியனின் வெப்பத்தில் காய்ந்த ஒரு பயணி, தொலைவில் நீரைக் கண்டதும் வேகமாக நடப்பதைப் போலவே கிருஷ்ணனைக் காணும் ஆவலில் அந்தப் பிராமணனும் தன் குதிரையை முடிந்த அளவுக்கு வேகமாகச் செலுத்தினான்.(2,3)

அவன் {ஜனார்த்தனன்}, “ஹம்சன், துவாரகையில் கிருஷ்ணனைக் காணும் வாய்ப்பை எனக்குக் கொடுத்திருப்பதால் என் அன்புக்குரிய நண்பனாகிறான்.(4) துவாரகையில் விஷ்ணுவைக் காணும் என்னைவிடப் பாக்கியசாலி வேறு எவன் இருக்க முடியும்?(5) கிருஷ்ணனைக் காணும் என் பணியை முடித்துத் திரும்பியதும் என்னைக் காணப் போகும் நுண்ணறிவுமிக்க என் அன்னையும் பாக்கியவதியே.(6) வில்லைத் தரித்தவனும், தேவர்களின் தலைவனுமான கிருஷ்ணனின் முகமானது, மலரும் தாமரை மலரின் மகரந்தத்தைப் போன்று பிரகாசிப்பதை நான் காணப்போகிறேன்.(7) நீலோத்பலம் போன்று கரியதும், சங்கு, சக்கரம், கதை, வில், காட்டு மலர் மாலைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்த ஸூக்ஷ்ம மேனியை நான் காணப்போகிறேன்.(8) தலைவர்களின் தலைவனான அந்தத் தாமரைக் கண்ணனை நான் காணும்போது, பேரின்பத்தை உணரப் போகும் என் இதயத்தைப் பீடித்திருந்த இருப்பின் துயரங்கள் அனைத்தும் விலகும்.(9)

மறைமெய்ம்மைசார் யோகியரின் தலைவனான கிருஷ்ணன், தன் மங்கலப் பார்வையை என் மீது செலுத்துவானா? அவன் என்னிடம் மகிழ்ச்சியாகப் பேசுவானா? “மங்கலமாக இருப்பாயாக” என அவன் என்னிடம் சொல்வானா?(10) துவாரகையை அடைந்ததும், மூவுலகங்களையும் படைத்துக் காக்கும் சக்கரபாணியான கிருஷ்ணனை நான் காணப் போகிறேன். அந்தச் சக்கரபாணியின் தாமரை பாதத்தைக் காண என் மனம் ஏங்குகிறது.(11) கௌஸ்துப மணியின் பிரகாசத்தால் ஒளியூட்டப்பட்ட விஷ்ணுவின் மார்பை நான் தியானிக்கிறேன். பயணம் செய்தாலும் என் மனம் கவனம் சிதறாமல் அந்த ஈசுவரனிலேயே நிலைத்திருக்கிறது.(12) 

பட்டுப் பீதாம்பரத்தையும், காட்டு மலர் மாலைகளையும் அணிந்தவனும், அழகிய புன்னகையால் அலங்கரிக்கப்பட்ட முகத்தைக் கொண்டவனுமான கிருஷ்ணனை நான் இன்று மீண்டும் மீண்டும் காண்பேன்.(13) ஹரியின் எழில்மிகு வடிவை நினைக்கும்போதே எனக்கு மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது. நான் பயணிக்கும்போதே கூட, அந்தச் சங்கு, சக்கர, கதாதாரி என் முன்னிலையில் நிற்பதாக உணர்கிறேன்.(14) ஜகத்குருவான கிருஷ்ணன் என் முன்பு நடந்து செல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. “இதோ என் தலைவன்” என்று என் நாவு மீண்டும் மீண்டும் சொற்களை அமைக்கிறது.(15)

“எனக்குக் கப்பம் கொடுப்பாயாக” என்று நான் அவனிடம் சொல்லப் போவதை நினைத்தால் நான் சோகத்தையும், வெட்கத்தையும் அடைகிறேன். ஹம்சனின் இந்தக் கோரிக்கையைத் திமிரின் உச்சமென நான் கருதுகிறேன்.(16) ஹம்சனுக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்றும், அவனது ஆணைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், அவனுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்றும் விஷ்ணுவிடம் நான் சொல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறேன். எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டசாலி நான்?(17)

ஹரியே, விஷ்ணுவே, யதுவின் முதன்மை வழித்தோன்றலே, “நீ ஹம்சனுக்குக் கப்பம் கட்டுவாயாக” என்று நான் சொல்லும்போதே நான் வெட்கமற்ற மூடனாக அறியப்படுவேன்.(18) “மன்னன் ஹம்சனுக்குப் பெருமளவு உப்பைக் கப்பமாகக் கொடுப்பாயாக” என்று ஒருபோதும் சாரங்கபாணியான கிருஷ்ணனிடம் நான் சொல்லக்கூடாது.(19) இருப்பினும் நட்புக்காக அவ்வாறு நான் பேச வேண்டுமே. தூய இதயம்படைத்த ஆன்மாவுக்கு நட்பு துன்பத்தையே தரும்.(20) மறுபுறம் விஷ்ணுவோ எப்போதும் சர்வத்தையும் அறிந்தவன். எனவே, அனைவரின் மனங்களையும் அறிந்த அவன், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியை அடைய வேண்டும் என்றே விரும்புவான்.(21)

இத்தகைய சூழலில் நட்பின் நிர்ப்பந்தத்தில் செயல்படுவதால் நான் குற்றவாளி ஆகமாட்டேன். பேசப் பணிக்கப்பட்ட பயங்கரச் சொற்களைச் சொல்வதிலிருந்து அந்த விஷ்ணுவே என்னைக் காக்க வேண்டும்.(22) கரிய சுருண்ட தலைமயிரையும், சங்கு போன்ற ரேகையுடன் கூடிய கழுத்தையும், ஸ்ரீவத்சமெனும் மச்சத்தால் அலங்கரிக்கப்பட்ட மார்பையும் கொண்டவனும், அண்டத்தைக் காப்பவனுமான விஷ்ணுவை நான் தரிசிக்கப் போகிறேன்.(23) சக்கரபாணியும், யாதவர்களின் தலைவனும், மாணிக்கம் பதித்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அகன்ற தோள்களைக் கொண்டவனும், கௌஸ்துப மணியையும், பிற ரத்தினங்களையும் அணிவதன் மூலம் பிரகாசமாக ஒளிர்பவனும், நீக்கமற நிறைந்தவனுமான கேசவனை நான் தரிசிக்கப் போகிறேன்.(24) 

நினைத்தற்கரிய ஆற்றல்களைப் படைத்தவனும், வெளிப்பட்டிருக்கும் அனைத்தின் உண்மைக் காரணனும், உலகைக் காப்பவனும், பாற்கடலின் பரப்பில் கிடப்பவனுமான நாராயணனை நான் இன்று தரிசிக்கப் போகிறேன்.(25) அவனைக் காண்பதன் மூலம், என் வாழ்வு நிச்சயம் மகிமையடையும்; என் உடல் பிணிகளில் இருந்து விடுபடும். இன்று நான் ஹரியைக் காணும்போது என் வாழ்வின் பயன் நிச்சயம் விளங்கும்.(26) இன்று நான் ஹரியைக் காண்பதன் மூலம், இது வரை நான் செய்து வந்த யஜ்ஞங்களுக்கான பலன்கள் நிச்சயம் கிடைக்கும். அவனைக் காண்பதன் மூலம் இன்று என் கண்கள் உண்மையில் தங்கள் இருப்பின் பயனுக்குச் சாட்சி பகரும்.(27)

பொருந்தாதவையும், பயங்கரமானவையுமான செயல்பாடுகளைச் செய்யுமாறு நான் முன்மொழியப் போகிறேன். எனவே, விஷ்ணு என்னிடம் மனம் நிறைய வேண்டுகிறேன். என்னுடைய கண்கள் இரண்டும் இன்று அந்த ஈசுவரனை உண்மையில் தரிசிக்குமா?(28) இன்று நான் கிருஷ்ணனின் அமுதம் போன்ற எழிலை என் கண்களால் மீண்டும் மீண்டும் பருகப் போகிறேன்.(29) மங்கலமான அவனது கமல பாதங்களின் புழுதியை எடுத்து என் தலையில் பூசிக் கொள்ளப் போகிறேன். அவனது தாமரை பாதத்தின் புழுதியும் தேவலோகத்திற்கான வாயிலைத் திறக்கும் என்பதால் நான் பெரும் நற்பேற்றை அடைந்தவனாவேன்.(30) மேக முழக்கத்தைப் போன்ற கம்பீரமான கிருஷ்ணனின் குரலை நான் இன்று கேட்கப் போகிறேன். ஜகத்பதியும், சக்கரபாணியுமான விஷ்ணுவின் தாமரை பாதங்களை நான் தரிசிக்கப் போகிறேன்.(31)

சந்திரனைப் போன்ற ஹரியின் முகத்தை நான் இன்று காணப் போகிறேன். இந்த மொத்த அண்டமும் ஹரியின் புற வடிவமாகத் திகழ்கிறது. அவ்வாறு நோக்கினால் அவனை நான் எங்கும் பார்க்கிறேன். மிகவும் முறையற்ற வகையில் பேசும் கட்டாயத்தில் இருக்கும் என்னிடம் விஷ்ணு நிறைவடைவானாக. பிரகாசமாக ஆடிக் கொண்டிருக்கும் காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட காதுகளையும், சந்தனம் பூசிய மேனியையும், தோள்வளைகளை அலங்கரிக்கும் ரத்தினங்களின் ஒளியால் அழகூட்டப்பட்ட தோள்களையும், இடது கையில் பாஞ்சஜன்ய சங்கையும் கொண்டவனும், காலை வேளையின் சூரியக் கதிர்களைப் போலப் பொன்னாகப் பிரகாசிப்பவனும், சுதர்சனச் சக்கரத்தின் பிரகாசத்தால் ஒளியூட்டப்படுபவனும், கங்கணங்களாலும், கைவளைகளாலும் அலங்கரிக்கப்பட்ட கைகளைக் கொண்டவனும், பட்டுப் பீதாம்பரம் தரித்தவனும், அகன்ற மார்பைக் கொண்டவனும், தேவர்களின் தலைவனுமான அச்யுதனை நான் எப்போது காணப் போகிறேன்.(32-36)

நேருக்கு நேர் முகமுகமாக ஹரியை நான் இன்று காணப் போவதால், நிச்சயம் நான் பெரும் நல்லூழ் கொண்டவனே. நான் இன்று ஹரியை தரிசிக்கத் தீர்மானித்திருப்பதால் மீண்டும் மீண்டும் என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.(37) பலபத்ரனின் {பலராமனின்} நீட்சியான அனந்தசேஷன் என்ற படுக்கையில் கிடப்பவனும், ஜகந்நாதனுமான கிருஷ்ணனை இன்று நான் காணப் போகிறேன். எப்போதும் வாகை சூடுபவனும், ஜகத்குருவுமான {மொத்த உலகின் குருவுமான} அந்தக் கிருஷ்ணனை நிச்சயம் நான் காண்பேன்.(38)

கரிய நிறம் கொண்டவனும், கௌஸ்துப மணியின் கதிர்களால் ஒளியூட்டப்படுபவனும், அதே ரத்தினத்தால் ஒளியூட்டப்பட்டதும், ஸ்ரீவத்சமெனும் மாயக்குறியுடன் கூடியதுமான அகன்ற மார்பைக் கொண்டவனும், பட்டுப் பீதாம்பரம் உடுத்தியவனும், மகரவடிவ காதுகுண்டலங்களை அணிந்தவனும், தாமரை போன்ற கண்களைக் கொண்டவனும், அற்புத மகுடத்தால் தலை அலங்கரிக்கப்பட்டவனும், பெருங்கரங்கள் இரண்டில் கதாயுதத்தையும், சக்கராயுதத்தையும் தரித்தவனுமான ஹரியின் பிரகாச வடிவம் எனக்குப் புலப்படட்டும்.(39)

நாராயணனைக் காணும் காட்சி என்ற அமுதத்தை இன்று என் கண்களால் நான் பருகப் போகிறேன். இந்த அமுதம், வேத இலக்கியங்களெனும் பெருங்கடலானது, தூய புத்தியெனும் மந்தர மலையின் உதவியையும், உண்மையான விடாமுயற்சி எனும் பெரும்பாம்பு வாசுகியின் உதவியையும் கொண்டு முனிவர்களால் கடையப்பட்டபோது உண்டானதாகும்.(40) இருப்பில் இருந்து விடுபடும் முக்தியை விரும்புவோரின் தியானப் பொருளாக இருப்பவனும், எல்லையற்றவனும், ஆதியில்லாதவனும், அளவற்றவனும், ஸ்தூலமானவனும் {திரளானவனும்}, ஸூக்ஷ்மமானவனும் {நுட்பமானவனும்}, ஏகனும் {ஒருவனும்}, அனேகனும் {பலராக இருப்பவனும்}, மூலனும், அண்டத்தின் பிதாவும், தேவர்களின் முற்றான மகிமையுமான அச்யுதன் என் கண்களின் முன்பும், என் இதயத்திற்குள்ளும் எப்போதும் புலப்படுவானாக” {என்று நினைத்தான் ஜனார்த்தனன்}.(41)

அந்த விப்ரேந்திரன் இவ்வாறு நினைத்தவாறே பெரிதும் நற்பேறு பெற்றவனாகத் தன்னைக் கருதினான். அதன்பிறகு குதிரையைச் செலுத்தியவாறே அவன் துவாரகையின் நுழைவாயிலை அடைந்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(42)

தூதுமொழி | பவிஷ்ய பர்வம் பகுதி – 90-(தூதஸ்ய ஸந்தேஷநிவேதநம்)-ஹம்சனின் செய்தியைக் கிருஷ்ணனிடம் சொன்ன பிராமணன் ஜனார்த்தனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “துவிஜோத்தமனும், கிருஷ்ணனின் பாத கமலங்களில் சரணடைந்தவனுமான ஜனார்த்தனன், வாயில் காப்போனால் வழிநடத்தப்பட்டு, சுதர்மமெனும் சபா மண்டபத்திற்குள் நுழைந்தான். உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருந்தவனும், தேவேசனுமான கிருஷ்ணனையும், உடன் இருந்த பலபத்ரனையும் {பலராமனையும்} அங்கே தரிசித்தான். கிருஷ்ணன் அறக்கோட்பாடுகளின் மொத்த வடிவமாகத் தோன்றினான்.(1,2) சாத்யகியும், நாரதமுனிவரும் கிருஷ்ணனின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தனர். மன்னன் உக்கிரசேனன், துர்வாச முனிவருடன் உரையாடிக் கொண்டிருந்த தலைவனின் {கிருஷ்ணனின்} முன்பு அமர்ந்திருந்தான்.(3) மன்னா, அந்தச் சபையில் கந்தர்வர்கள் பலர் ஆடிக் கொண்டிருந்தனர், அப்சரஸ்கள் பலர் ஆடிக் கொண்டிருந்தனர், சூதர்கள், மாகதர்கள், வந்திகள் ஆகியோர் தலைவனைத் துதித்துக் கொண்டிருந்தனர்.(4) அவர்கள், மதுசூதனனான மாதவனின் மகிமைகளை உரக்கப்பாடிக் கொண்டிருந்தனர். பிராமணர்கள் பலரும் சாம வேத மந்திரங்களை ஓதி தலைவனைப் புகழ்ந்தனர்.(5)

கிருஷ்ணனைத் தன் முன் கண்ட போது, அந்தப் பிராமணனின் உடலில் பரவசத்தின் அடையாளங்கள் வெளிப்பட்டன. அவனது உடலில் மயிர்க்கூச்சம் ஏற்பட்டது. “நான் ஜனார்த்தனன்” என்று அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தன் வணக்கத்தைத் தெரிவித்தான். பலராமனையும் வணங்கிய பிறகு, அவன் கிருஷ்ணனிடம், “தேவேசா, நான் ஹம்ச டிம்பகர்களால் அனுப்பப்பட்ட தூதன்” என்றான். அதற்குக் கிருஷ்ணன், “பிராமணரே, முதலில் இந்த ஆசனத்தில் சுகமாக அமர்வீராக. பிறகு உமது வரவின் காரணத்தை எங்களுக்குச் சொல்வீராக” என்றான். ஜனார்த்தனன், “நன்று” என்று சொல்லி தனக்கு அளிக்கப்பட்ட சிறந்த ஆசனத்தில் அமர்ந்தான்.(6-8)

மன்னா, தலைவன் {கிருஷ்ணன்} இனிய சொற்களால் அந்தப் பிராமணன் ஜனார்த்தனனை வரவேற்று, பிரம்மதத்தன், ஹம்சன், டிம்பகன் ஆகியோரின் நலத்தை விசாரித்தான்.(9) அவன், “விப்ரரே, ஹம்சடிம்பகர்களின் ஒப்பற்ற ஆற்றலையும், உயர்ந்த விருப்பங்களையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். உமது தந்தை நலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறாரா?” என்று கேட்டான்.(10)

ஜனார்த்தனன், “கேசவா, ஜகந்நாதா, மன்னர் பிரம்மதத்தரும்என் தந்தையும் {மித்ரஸஹரும்} நலமாக இருக்கின்றனர். ஹம்சன், டிம்பகன் என்ற சகோதரர்கள் இருவரும் செழிப்புடன் இருக்கின்றனர்.(11)

அப்போது பகவான் {கிருஷ்ணன்}, “துவிஜோத்தமரே, ஹம்சனும், டிம்பகனும் எனக்கு அனுப்பியிருக்கும் செய்தியென்ன? தயக்கமில்லாமல் அனைத்தையும் விரிவாக என்னிடம் சொல்வீராக.(12) பிராமணர்களில் முதன்மையானவரே, அவ்விருவரும் உம்மிடம் சொன்னவை தகுந்தவையாக இருந்தாலும், தகாதவையாக இருந்தாலும் உள்ளபடியே சொல்வீராக. அனைத்தையும் கேட்ட பிறகு, எங்கள் மறுமொழியை நாங்கள் தருகிறோம்.(13) பிராமணரே, தூதராக வந்திருப்பதால் நீர் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. உள்ளபடியே செய்தியைச் சொல்வதுதான ஒரு தூதரின் கடமை, அதற்காக அவர் மீது எந்தப் பழியும் சுமத்தப்படாது.(14) ஜனார்த்தனரே, செய்தி இனிமையானதாகவோ, புண்படுத்துவதாகவோ இருந்தாலும் கவலை வேண்டாம். ஹம்சனும், டிம்பகனும் சொல்லி அனுப்பியது எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்வீராக” என்றான்.(15)

கேசவன் இவ்வாறு பேசியதும், ஜனார்த்தனன், “பகவானே, அறியாமையில் மூழ்கிய சாதாராண மனிதனைப் போல நீ பேசுவதேன்? நேரடியாகவோ, மறைமுகமாகவோ அனைத்தையும் அறிந்தவன் நீ.(16) அச்யுதா, உலகிற்குள் நீ அறியாததேதும் இல்லை. நடைபெறும் அனைத்திற்கும் சாட்சியாக இருந்தாலும் செய்தியைச் சொல்லும்படி என்னை நீ கேட்கிறாய்.(17) ஜகத்பதியே, ஆழமான ஞானத்தில் முன்னேற்றம் கண்டவர்கள், விஷ்ணுவின் அவதாரமாக உன்னைக் காண்கின்றனர். நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மாவைப் போல வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ நடக்கும் அனைத்தையும் நீ காண்கிறாய்.(18) உன் புற சக்தியின் மூலம் நீ அண்டத்தை வெளிப்படுத்தியதால் அண்டம் உன்னுள்ளேயே இருக்கிறது. அண்டத்தில் உள்ள அசைவன, அசையாதனவற்றில் ஏதொன்றையும் நீ அறியாதவனல்ல.(19) ஜகத்பதியே, நீ அனைத்தையும் அறிந்தவன், நீக்கமற நிறைந்தவன். நீ அறியாததேதும் இல்லை. வாழும் உயிர்கள் அனைத்தையும் காப்பவன் நீயே, அண்டத்தை அழிப்பதற்காக ருத்திரனாக விரிவடைபவனும் நீயே.(20)

மாதவா, சத்வ குண அவதாரமான விஷ்ணுவாக அண்டத்தைக் காப்பவன் நீயே. ரஜோ குண அவதாரமான பிரம்மனாக அண்டத்தைப் படைப்பவன் நீயே. நிலை இவ்வாறு இருக்கக் கொண்டு வந்த செய்தியை என்னை நீ சொல்லச் சொல்வது ஏன்?(21) மாதவா, ஆழமான ஞானத்தின் உடல்வடிவமாகவும், இருப்பில் இருக்கும் அனைத்தின் உயிராகவும், ஆன்மாவாகவும் கல்விமான்கள் உன்னையே அறிகின்றனர்.(22) புருஷோத்தமா, ரிஷிகேசா, பேரிலக்கியங்களில் அறிஞர்களாகத் திகழ்பவர்கள், புனித மந்திரங்கள் ஓதப்படுவதற்கான நோக்கம் அல்லது இலக்காக உன்னையே அறிகிறார்கள்.(23) தேவேசா, மாதவா, இவை யாவற்றையும் கருத்தில் கொண்டாலும் பேசும்படி நீ கேட்டுக் கொண்டதால் நான் கொண்டு வந்த செய்தியைச் சொல்கிறேன்.(24)

மன்னர் பிரம்மதத்தர் ராஜஸூய யஜ்ஞத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். அதன் காரணமாகவே ஹம்சனும், டிம்பகனும் என்னை உன்னிடம் அனுப்பி வைத்திருக்கின்றனர்.(25) யாதவர்களிடம் கப்பம் திரட்டவும், உன்னை அவர்களது வேள்விக்கு அழைக்கவும் தான் என்னை அவர்கள் இங்கே விரைந்து அனுப்பினார்கள். கேசவா, அந்த வேள்விக்கான பெருமளவு உப்பை நீ கொடுக்க வேண்டுமென அவர்கள் கோருகிறார்கள்.(26) ஜகத்பதியே, அவர்களின் ஆணையின் பேரில் பெருமளவு செல்வத்தைக் கப்பமாக நேரடியாகப் பெற்றுக் கொள்ளவே என்னை இங்கே அனுப்பி வைத்திருக்கின்றனர். இனி அவர்களின் இரண்டாவது கோரிக்கையைக் கேட்பாயாக.(27) பெருமளவு உப்பை எடுத்துக் கொண்டு தாமதமில்லாமல் திரும்புமாறு அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டனர். கேசவா, இவையே உனக்காக அவர்கள் அனுப்பிய செய்திகள்” என்றான் {ஜனார்த்தனன்}.(28)

மன்னா, அந்த விப்ரேந்திரன் {ஜனார்த்தனன்} இவ்வாறு பேசியதும் கிருஷ்ணன் நீண்ட நேரம் உரக்கச் சிரித்தான். பிறகு அவன் அந்தத் தூதனிடம் பின்வருமாறு பேசினான்,(29) “என் அருமை தூதரே, துவிஜோத்தமரே, மிக நியாயமான என் சொற்களைத் தயை கூர்ந்து கேட்பீராக. மன்னனாக இஃது என் கடமை என்பதால், நான் அவர்களுக்கு மகிழ்ச்சியாகக் கப்பம் கட்டுவேன்.(30) விப்ரரே, நான் அவர்களுக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை திமிரின் உச்சபட்ச வெளிப்பாடாகும். ஐயோ, நல்ல க்ஷத்திரிய குலத்தில் பிறந்த ஹம்சனும், டிம்பகனும் இவ்வளவு ஆணவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(31) எவனும் என்னைக் கப்பங்கட்டச் சொல்வது இதுவே முதல் முறை. இதற்குமுன் என்னிடம் இத்தகைய கோரிக்கையை எவனும் வைத்ததில்லை” என்றான் {கிருஷ்ணன்}.

தூதனிடம் இவ்வாறு பேசிய கிருஷ்ணன், பிறகு யாதவர்களிடம் பின்வருமாறு பேசினான்,(32) “யாதவர்களே, நான் கப்பம் கட்ட வேண்டுமென்ற கோரிக்கை வேடிக்கையானது. மன்னன் பிரம்மதத்தன் ராஜசூய வேள்வி செய்யப் போகிறான், அவனது மகன்களான ஹம்சன், டிம்பகன் இருவரும் அவனுக்கு உதவி செய்கின்றனர். பாவம் நிறைந்தவர்களான அந்த மன்னர்கள், யதுவின் முதன்மை வழித்தோன்றலான கிருஷ்ணன் தங்கள் அடிமையாக உப்பைக் கொண்டு வருவான் என்று நினைக்கின்றனர்.(33,34) யாதவர்களே, போர்க்களத்தில் ஏற்கனவே என்னை வீழ்த்திவிட்டவர்களைப் போல அவர்கள் என்னைக் கப்பங்கட்டும் வாசுதேவனாக்கி இருக்கிறார்கள். இந்தத் தோரணையில் உள்ள எள்ளலைப் பாருங்கள்” என்றான் {கிருஷ்ணன்}.(35)

பலபத்ரன் {பலராமன்} தலைமையிலான முதன்மையான யாதவர்கள் அனைவரும், கிருஷ்ணனின் பேச்சைக் கேட்டதும், ஹம்சடிம்பகர்களின் கோரிக்கையை அறிந்து, எழுந்து நின்று ஆவேசத்துடன் சிரித்தனர்.(36) அந்த யாதவர்கள் அனைவரும், “கிருஷ்ணன் கப்பங்கொடுப்பவன்” என்று சொல்லித் தங்கள் கைகளைத் தட்டியபடியும், ஒருவரையொருவர் உரசியபடியும் உரக்கச் சிரித்தனர்.(37)

மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, யாதவர்களின் ஒலி பூமி முழுவதிலும், ஆகாயம் முழுவதிலும் எதிரொலிக்கும் வகையில் அவர்கள் தங்கள் கைகளைத் தட்டிச் சிரித்தனர். அப்போது அந்த விப்ரன் {ஜனார்த்தனன்}, தன் நண்பன் ஹம்சனை நிந்தித்தவாறே, “ஐயோ, தூதனென்ற பணி எனக்குத் துன்பத்தைத் தருகிறதே” என்று நினைத்தான். இவ்வாறு நினைத்த அவன், சங்கடமடைந்து, கைகளால் தலையைப் பிடித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(38,39)

கிருஷ்ணனின் மறுமொழி | பவிஷ்ய பர்வம் பகுதி – 91-(ஸ்ரீக்ருஷ்ணஸ்ய ப்ரதிஸந்தேஷம்)-ஜனார்த்தனனுக்கு மறுமொழி கூறிய கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “யாதவர்கள் இது போலச் சிரித்துக் கொண்டும், ஏளனம் செய்து கொண்டும் இருந்தபோது, கேசியைக் கொன்றவனான கேசவன் அந்தத் தூதனிடம் {ஜனார்த்தனனிடம்} திரும்பி, “துவிஜரே, உமது நண்பனிடம் திரும்பிச் சென்று என் செய்தியை அவனிடம் சொல்வீராக.(1) விரைவாக வீடு திரும்பி ஹம்சடிம்பகர்களிடம் இதைச் சொல்வீராக: “நான் உங்கள் இருவருக்கும் கொண்டாடப்படும் என் சாரங்கத்தில் இருந்து ஏவப்படும் கணைகளையே கப்பமாகக் கட்டுகிறேன்” {என்று சொல்வீராக}.(2)

சிந்தனைமிக்க அம்மன்னர்கள் இருவருக்கும், என் வாளின் கூர்மையையே நான் கப்பமாகக் கட்டுவேன். அல்லது, என் சக்கரத்தால் அவர்களின் தலைகளைக் கொய்து கப்பமாகக் கட்டுவேன்.(3)

{மேலும் அவர்களிடம்}, “மஹாதேவன் அளித்த வரமே உங்கள் அழிவுக்குக் காரணமாகப் போகிறது. ருத்திரனே உங்களைக் காக்க நேரில் வந்தாலும், முதலில் அவனை வீழ்த்திவிட்டுப் பிறகு உங்கள் இருவரையும் நான் கொல்வேன்.(4) மன்னா, போர்க்களத்தை உன் விருப்பத்திற்கேற்றபடி நீயே தேர்ந்தெடுப்பாயாக. என்னுடைய பெரிய படையுடன் நான் உன்னை அங்கே சந்திப்பேன்.(5) மன்னர்களே, புஷ்கரமோ, பிரயாகையோ, மதுராவோ, அஃது எதுவாக இருந்தாலும் நீங்கள் விரும்பும் இடத்தில் உங்களுடனும், உங்கள் படைவீரர்களுடனும் போரிட நான் தயாராக இருக்கிறேன். ஆஞ்சாதீர்கள். நான் உங்களை அந்தப் போர்க்களத்தில் நிச்சயம் சந்திப்பேன்” {என்றும் சொல்வீராக}.

பிராமணரே, ஜனார்த்தனரே, நட்பின் காரணமாக இந்தச் செய்தியை நீர் உமது நண்பர்களுக்குத் தெரிவிக்கத் தயங்கினால், சாத்யகியை உம்முடன் அழைத்துச் செல்வீராக. அவன் தேவையானவை அனைத்தையும் செய்வான். {சாத்யகியை அழைத்துச் சென்றால்} இவை என் சொற்கள் என்பதை மட்டும் உறுதி செய்தவாறு வெறுமனே செயலேதும் செய்யாமல் நீர் பார்த்துக் கொண்டிருக்கலாம்.(6-8)

விப்ரேந்திரரே, நீர் என்னிடம் கொண்ட மாசற்ற பக்தியை நான் நன்கறிவேன். அருமை ஜனார்த்தனரே, நீர் என்னுடைய கடந்த காலங்களையும், என் பெயர்களையும், என் வடிவங்களையும், என் குணங்களையும் தொடர்ந்து கேட்பதிலும், விவாதிப்பதிலும் ஈடுபட்டால் துன்பம் நிறைந்த இம்மையிலும் எப்போதும் நீர் வாகை சூடுவீர்” என்றான் {கிருஷ்ணன்}”.(9)

ஹம்சமொழி | பவிஷ்ய பர்வம் பகுதி – 92-ஹம்ஸவாக்யம்)சால்வ நகரில் உள்ள ஹம்சடிம்பகரின் சபைக்கு சாத்யகியுடன் திரும்பிச் சென்ற ஜனார்த்தனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அந்த விப்ரனிடம் {ஜனார்த்தனனிடம்} பேசிய பிறகு கிருஷ்ணன் சாத்யகியிடம், “சைநேயா {சிநியின் பேரனே}, இந்த விப்ரருடன் சென்று நான் இப்போது சொன்னவற்றை ஹம்சடிம்பகர்கள் என்ற சகோதரர்கள் இருவரிடமும் மீண்டும் சொல்வாயாக.(1) நாம் போர்க்களத்தில் சந்திக்கும் வகையில் நான் சொன்ன செய்தியை மாற்றமில்லாமல் அவர்களிடம் மீண்டும் சொல்வாயாக. அவர்கள் எதை எதிர்க்கிறார்கள் என்று விளக்கிப் போதுமான எச்சரிக்கையையுயம் அவர்களுக்குக் கொடுப்பாயாக.(2) சாத்யகி, யதுவின் வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, வில்லை எடுத்துக் கொள்வாயாக, உடும்புத் தோலுறைகளைச் சூடிக் கொள்வாயாக. துணைவரெவரும் இல்லாமல் ஒரேயொரு குதிரையை மட்டும் எடுத்துச் செல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(3)

“நன்று” என்று சொன்ன சாத்யகி, துணைவரெவருமின்றி வேகமான குதிரையொன்றில் ஏறினான்.(4) {ஜனார்த்தனன் என்ற அந்தத்} தூதனுக்கு விடைகொடுத்தனுப்பிய கிருஷ்ணன், “ஐயோ, ஹம்சனும், டிம்பகனும் இவ்வளவு ஆணவமிக்கவர்களாக இருக்கிறார்களே. இத்தகைய ஆணவத்தைக் காண்பதரிது” என்றான் {கிருஷ்ணன்}.(5)

மாதவனுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவித்த தூதன் ஜனார்த்தனன், துவாரகையை விட்டகன்று சாத்யகியுடன் சால்வ நகரத்தை நோக்கிப் புறப்பட்டான்.(6) அந்த விப்ரன், அந்நகரை அடைந்து ஹம்ச டிம்பகர்களின் சபா மண்டபத்திற்குள் நுழைந்து சாத்யகிக்கு ஒரு நல்ல ஆசனத்தைக் கொடுத்தான். சாத்யகியின் அருகில் அமர்ந்த பிறகு அவனை அவ்விரு இளவரசர்களுக்கும் அவன் அறிமுகம் செய்து வைத்தான்.(7,8)

{ஜனார்த்தனன்}, “மன்னா, இவன் சாத்யகி. இவன் துவாரகையின் தூதனாக வந்திருக்கிறான். இவன் கிருஷ்ணனின் வலது கையாகச் செயல்படுபவன்” என்றான்.

ஜனார்த்தனனின் சொற்களைக் கேட்ட ஹம்சன் பின்வருமாறு மறுமொழி கூறினான் :(9) “நான் ஏற்கனவே துவாரகையில் யாதவர்களுடனான உன் சந்திப்பைக் குறித்துக் கேள்விப்பட்டேன். இன்று கிருஷ்ணனை நான் முகமுகமாகச் சந்திக்கப் போகிறேன். சாத்யகி நிதானமானவன், வில் தரிப்பதில் சமர்த்தன், வேதங்களை நன்கறிந்தவன், ஆயுதங்கள் அனைத்தையும் கையாள்வதில் தனித்திறன் கொண்டவன் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவன் தானே நம் முன் வந்திருப்பதால் இவனைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.(10,11) சாத்யகி, வசுதேவர், கிருஷ்ணன், பலபத்ரன் {பலராமன்} ஆகியோர் நலமா? உக்கிரசேனரும் பிறரும் செழித்திருக்கின்றனரா?” என்று கேட்டான் {ஹம்சன்}.(12)

சாத்யகி மென்மையாக, “ஆம், அனைவரும் நலம்” என்றான். இந்நேரத்தில் அவனுடைய முகம் கோபத்தில் பொங்கிக் கொண்டிருந்தது.

அப்போது நாநயமிக்கவனான ஹம்சன் ஜனார்த்தனனிடம், “பிராமணா, சக்கரபாணியான கிருஷ்ணனை நீ சந்தித்தாயா? உள்ளபடியே நான் அனுப்பிய செய்தியை நீ அவனிடம் சொன்னாயா? உன்னுடைய துவாரகைப் பயணத்தைக் குறித்த அனைத்தையும் நீ எனக்குச் சொல்வாயாக” என்றான் {ஹம்சன்}”.(13,14)

சாத்யகியின் சீற்றம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 93-(ஸாத்யகிவாக்யம்)-கிருஷ்ணனுடனான தன் சந்திப்பை விவரித்துக் கூரிய ஜனார்த்தனன்; வெகுண்டெழுந்த ஹம்சன்; சாத்யகியின் மறுமொழி.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஹம்சன் பேசியதைக் கேட்டதும், நாராயணனின் அவதாரமான கிருஷ்ணனைப் புகழ்வதில் எப்போதும் ஆவலுடைய தர்மாத்மாவான ஜனார்த்தனன் புன்னகைத்தவாறே பின்வருமாறு மறுமொழி கூறினான்:(1)

{ஜனார்த்தனன்}, “ஆம். ஒரு கையில் சங்கையும், மறுகையில் வெல்லப்பட முடியாத சக்கரத்தையும் கொண்ட கிருஷ்ணனை நான் கண்டேன். அவன் பொன்னாலான கைவளைகளாலும், கௌஸ்துப ரத்தினத்தின் பிரகாசத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தான்.(2) யாதவப் பெரியோராலும், முதன்மையான பல முனிவர்களாலும் தொண்டாற்றப்பட்டவனும், வலிமைமிக்க மன்னர்களாலும் மாகதர்களாலும் துதிக்கப்பட்டவனுமான அந்தக் கிருஷ்ணனை நான் தரிசித்தேன். புதிதாய் துளிர்த்த தளிர்களைப் போன்று மென்மையான சிவந்த உதடுகள், அவனது மயக்கும் புன்னகைக்கு மேலும் மெருகூட்டின.(3) புராதன முனிவர்களாலும், தேவர்களாலும் தியானிக்கப்படும் வடிவம் கொண்டவனும், தொண்டில் ஈடுபடும் பக்திமான்களால் உணரப்படுபவனும், நீலோத்பல மலர் போன்ற கரிய நிறம் கொண்டவனும், பொற்றாமரைக்கு ஒப்பான வயிற்றைக் கொண்டதால் பத்மநாபன் என்ற பெயர் கொண்டவனுமான கிருஷ்ணனை நான் தரிசித்தேன்.(4) பிறப்பற்றவனும், இனிய உரைகளால் யாதவர்களுக்குப் பேரின்பத்தை அருள்பவனும், பெரும் முனிவர்களின் துணையுடன் முக்திக்கு வழிவகுக்கும் வேதங்களின் உண்மை சாரத்தை விளக்கிக் கொண்டிருந்தவனுமான அந்த ஜகத்குருவை நான் மீண்டும் மீண்டும் தரிசித்தேன்.(5)

உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மையளிப்பவனும், அண்டம் முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பவனும், பூமியின் சுமையைக் குறைப்பதற்காக இப்போது அவதரித்திருப்பவனுமான அந்த ஹரியை நான் மீண்டும் மீண்டும் தரிசித்தேன்.(6) யாதவேஷ்வரனும், துதிக்கப்படத்தகுந்தவர்களில் முதன்மையானவனும், ஈசுவரனும், மகிழ்ச்சியுடன் இருப்பதில் ஆவலுள்ள யது குலத்தினருடன் விளையாடிக் கொண்டிருப்பவனுமான கிருஷ்ணனை நான் இன்று கண்டேன்.(7) பீஷ்மகனின் மகளான ராணி ருக்மிணியுடன் துவாரகையில் வசிக்கும் தாமரைக் கண்ணனான அந்த ஹரியை நான் மீண்டும் மீண்டும் கண்டேன். நாராயண வடிவில் அவனே கர்போதகப் பெருங்கடல் பரப்பில் கிடக்கிறான். அவன் பெருஞ்செழிப்புடையவன், பக்தர்களுக்கு அன்பன், பக்தர்களின் உறைவிடம், முற்றுமுழுமங்கல சிவம்.(8) பரவச நிலையில் எனக்குக் கிருஷ்ணனின் தரிசனம் கிடைத்தது. கிருஷ்ணனின் எழிலுடல் அமுதத்தைக் கண்சிமிட்டாமல் நான் பருகினேன். அவனைக் கண்டபோது, “என் வாழ்வின் பயன் சித்தியடைந்தது” என்ற நினைப்பால் என்னையே நான் மறந்திருந்தேன்.(9) நீக்கமற நிறைந்தவனும், நினைத்தற்கரிய ஆற்றல்களைப் படைத்தவனுமான கிருஷ்ணனை நான் துவாரகையில் கண்டேன். உயிரினங்களால் நிறைந்த அண்டத்தைக் காப்பவனும், படைப்பவனும் அவனே. தன் கரத்தில் தாமரை மலரை ஏந்தியிருந்த விபுவான அந்தப் பிரபுவைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஆழ்ந்த பரவசத்தில் நான் மூழ்கினேன்.(10)

கௌஸ்துப மணியால் அலங்கரிக்கப்பட்ட மார்பைக் கொண்ட கிருஷ்ணன் நூற்றுக்கணக்கான சாமரங்களால் வீசப்படும்போது நான் அவனைக் கண்டேன்.(11) அந்த யாதவேஷ்வரன் {யாதவர்களின் தலைவன்}, உங்கள் பெயர்களைச் சொன்ன போது பெரும் அருவருப்பை வெளிப்படுத்தினான். உங்கள் நிலையை அறியும் பேராவலுடன் அவன் இருந்தான்.(12) அவன், “அந்த மூடர்கள் இருவரையும் நான் எப்போது காண்பேன்? அவர்களை என்னிடம் வரச் செய்வது எவ்வாறு?” என்று நினைத்தான். சங்கு தரித்திருந்த அந்தத் தேவேசன் இச்சொற்களால் உங்கள் மீது கொண்ட அருவருப்பை வெளிப்படுத்தினான்.(13) அந்தப் பிரபுவைக் கப்பம் கட்டக் கேட்ட போது, உங்களை ஏளனம் செய்து உரக்கச் சிரிக்கத் தொடங்கினான். அதை நான் என் கண்களால் கண்டேன். அந்நேரத்தில் அவன் பெரும் முனிவர் நாரதருடனும், முனிவர்களிற்சிறந்த துர்வாசருடனும் பேசிக் கொண்டிருந்தான்.(14) பிரம்மசூத்திரங்களைச் சீடர்களுக்கு உபதேசிக்குமாறு துர்வாச முனிவரிடம் கிருஷ்ணன் வலியுறுத்தினான். நான் அந்த ஹரியைக் கண்டபோது பின்வரும் எண்ணம் என் மனத்தில் தொடர்ந்து தோன்றியபடியே இருந்தது.(15) என்னிரு நண்பர்களும் தங்களால் சாதிக்க முடியாத ஒன்றைச் செய்ய முயற்சிக்கிறார்கள் என்றே அப்போது நான் நினைத்தேன். பூமியின் தலைவா, ராஜஸூய வேள்வி செய்யும் முயற்சியை நீங்கள் கைவிட வேண்டும் என்பதே என் ஆலோசனையாக இருந்தது.(16) கப்பம் கட்டுமாறு நீங்கள் கிருஷ்ணனுக்கு அனுப்பிய செய்தியை நான் அவனிடம் சொன்னபோது, அவன் அதற்குப் பதில் உங்களைக் கைப்பற்றிச் சிறையிலடைப்பேன் என்றான். நான் சொன்ன யாவற்றையும் சாத்யகி உன்னிடம் உறுதி செய்வான்” என்றான் {ஜனார்த்தனன்}.(17)

அந்தப் பிராமணன் இச்சொற்களைச் சொல்லிக் கொண்டிருந்தபோது பெருஞ்சினமடைந்த ஹம்சன் பின்வரும் சொற்களில் மறுமொழி கூறினான்: “பிராமணா, நீ என்ன சொல்கிறாய்? மூவுலகையும் வெல்ல எத்தனிக்கும் எங்களிடம் இவ்வாறு பேச எப்படித் துணிந்தாய்?(18) மாயாவியான கிருஷ்ணன் உன்னைத் தன் மாய சக்தியால் வசப்படுத்தியிருக்கிறான். அவன் முன்னிலையில் நின்றதற்கே நீ இவ்வளவு மோஹமடைந்திருக்கிறாய்.(19)

நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கதாயுதம், வில் ஆகியவற்றைத் தரித்தவனும், காட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனுமான விருஷ்ணி குலக் கிருஷ்ணனைக் கண்டதும் நீ மாயையில் மயங்கியிருக்கிறாய். அவனது சபையில், அவனது துதிபாடிகளால் துதிக்கப்படும் அவனது சக்தியையும், பெரும் புகழையும், யாதவ விருஷ்ணிகளின் பெரும் படை பலத்தையும் கேட்டு மயங்கியிருக்கிறாய். அந்தச் சக்கரபாணியைக் கண்டதும் நீ மாயையில் வீழ்ந்திருக்கிறாய்.(20-22) துர்மதி கொண்ட பிராமணா, அந்தப் பாவியின் மாயையில் நீ இன்னும் கட்டுண்டிருக்கிறாய். அவனது மாயை உன்னைப் புத்தியற்ற முற்றான மூடனாக்கியிருக்கிறது.(23) பிராமணா, அந்த மாயையில் நீ அமைதியிழந்து குழம்பியிருக்கிறாய். ஐயோ, நீ என்னை அவனுக்கு இணையாகவாவது சொல்லியிருக்க வேண்டும்.(24)

விப்ரா, நட்பால் மட்டுமே உன் நடத்தையைப் பொறுத்துக் கொள்கிறேன். இல்லையென்றால் இத்தகைய சொற்களை வேறு யாரால் பொறுத்துக் கொள்ள இயலும்?(25) மந்த மதி படைத்த விப்ரா, உன் நட்பை இனியும் நான் விரும்பாததால், உலகில் நீ விரும்பும் வேறு எந்த இடத்திற்காவது சென்று விடுவாயாக.(26) அந்த இடையனை வீழ்த்தி, எண்ணற்ற யாதவர்களைக் கொன்ற பிறகு நான் யஜ்ஞம் செய்வேன். “யாதவர்களை வெல்வோம்” என்பதே எங்கள் முதன்மை தீர்மானமாகும்.(27) விப்ரா, இங்கிருந்து உடனே சென்றுவிடுவாயாக. நீ கடுமொழி பேசும் ஆணவக்காரனாக இருக்கிறாய். என் பாதுகாப்பில் வாழ்ந்து கொண்டே நீ என் பகைவரைப் புகழ்கிறாய்.(28) எத்தனை வகைக் கஷ்டங்களை எதிர் கொண்டாலும் ஒருபோதும் நான் ஒரு விப்ரனை {பிராமணனைக்} கொல்ல மாட்டேன்” என்றான் {ஹம்சன்}.

{அந்தப் பிராமணனிடம்} இதைச் சொன்ன ஹம்சன், சாத்யகியிடம் திரும்பி பின்வருமாறு பேசினான்:(29) “யாதவா, நீ ஏன் இங்கே வந்தாய்? நந்தசுதன் {நந்தனின் மகன்} உன்னிடம் என்ன சொன்னான்? என்ன கப்பம் கொண்டு வந்தாய்?” என்று கேட்டான்.(30)

சாத்யகி, “ஹம்சா, சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணனின் சொற்களைக் கவனமாகக் கேட்பாயாக. அவன் {கிருஷ்ணன்}, “என்னுடைய சாரங்க வில்லைக் கொண்டும், கல்லில் கூராக்கப்பட்ட கணைகளைக் கொண்டும் நான் உனக்குக் கப்பங்கட்டுவேன். ஹம்சா, என் வாளால் உன் தலையைக் கொய்து நான் உனக்குக் கப்பங்கட்டுவேன்” என்று {உன்னிடம் சொல்லுமாறு} சொல்லி அனுப்பினான்.(31,32) துஷ்டா, மன்னர்களில் இழிந்தவனே, இவையே உன்னிடம் கிருஷ்ணன் சொல்லச் சொன்ன சொற்கள். நீ செய்ததைவிடப் பெரிதாக வேறு எவனாலும் தன் ஆணவத்தை வெளிப்படுத்த முடியாது? மனிதர்களில் இழிந்தவனே, ஜகத்பதியிடம் கப்பம்பெற நினைக்கும் எந்த மன்னனின் நாவும் அறுக்கப்பட வேண்டும். திமிருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிறந்த வழிமுறை அதுதான். போர்க்களத்தில் கிருஷ்ணனின் பாஞ்சஜன்ய சங்கின் ஒலியையும், சாரங்கத்தின் நாணொலியையும் கேட்ட எவன்தான் தன்னுயிர் தப்புமென எதிர்பார்ப்பான்? நீ இன்னும் உயிருடன் இருப்பது உன் பாக்கியமே. சிவனிடம் வரம்பெற்றதால் செருக்கில் மிதக்கும் உன்னைத் தவிர வேறு எவனால் கிருஷ்ணனிடம் அவ்வாறு கேட்க இயலும்?

பலபத்ரன் {பலராமன்}, நான் உள்ளிட்ட வலிமைமிக்கப் போர்வீரர்கள் கிருஷ்ணனின் துணைவர்களாக இருக்கிறோம். முதலில் பலராமன், இரண்டாவது நான், மூன்றாவது கிருதவர்மன், நான்காவது நிசடன், ஐந்தாவது பப்ரு, ஆறாவது உத்கலன், ஏழாவது நுண்ணறிவுமிக்கத் தாரணன், எட்டாவது சாரங்கன், ஒன்பதாவது விப்ருது, பத்தாவது விவேகியான உத்தவர் ஆகியோர் அவனுக்குத் துணையாக இருக்கிறோம். நாங்கள் அனைவரும் தடுக்கப்பட முடியாத ஆற்றல் படைத்தவர்கள். போர்க்களத்தில் இந்த ஒப்பற்ற போர்வீரர்கள் அனைவரும் எங்கள் பாதுகாவலனும், சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணனுக்கு முன் நிற்போம் என்பதை அறிவாயாக. அவனது மகன்களான பிரத்யும்னன், சாம்பன் ஆகியோர் இருவரும், பலத்தில் இரட்டையர்களான அஸ்வினி குமாரர்களைப் போன்றவர்களாவர். உண்மையில் அவர்கள் இருவரால் மட்டுமே கூட, சகோதரர்களான உங்கள் இருவரையும் போரில் எளிதாகக் கொன்றுவிட இயலும். என் சொற்களைக் கேட்ட பிறகும் உனக்கு வெற்றியில் நம்பிக்கை இருந்தால் சிவனிடம் பெற்ற விற்களையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு போர்க்களத்தில் நின்று போரிடுவாயாக.(33-42)

மூவுலகங்களையும் காப்பவனும், பகைவருடன் போரிட எங்களைப் போன்ற பணியாள்களைக் கொண்டவனுமான ஜகத்பதியிடமே கப்பம் கேட்டுவிட்டு உயிருடன் இருப்போமென எவனால் நம்ப முடியும்?(43) மூவுலகங்களையும் காப்பவனான கிருஷ்ணன், கொண்டாடப்படும் தன் சாரங்க வில்லில் இருந்து ஏவப்படும் சரங்களால் போர்க்களத்தில் உங்கள் இருவரையும் நிச்சயம் கொல்வான்.(44) புனிதத்தலமான புஷ்கரமோ, கோவர்த்தன மலையோ, மதுராவோ, பிரயாகையோ போர்க்களம் எதுவாக இருந்தாலும் உன் விருப்பப்படி தேர்ந்தெடுத்துத் தாமதமில்லாமல் அங்கே வந்து சேரும்படி அந்த ஜகத்பதி சொல்கிறான். நீ விரும்பிய இடம் எதுவாக இருப்பினும் உன் ஆற்றலை அங்கே வெளிப்படுத்தலாம். மொத்த அண்டத்தையும் காக்கும் சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணனின் அனுமதியில்லாமல் எவனால் ராஜஸூய யஜ்ஞத்தைச் செய்ய முடியும்? நீ பேசியதுபோல் பேசிவிட்டு வேறு எவனால் கவலையில்லாமல் உன்னைப் போல இருக்க முடியும்?(45-47) மூடர்களே, இவ்வாறே நீங்கள் தொடர்ந்தால் மொத்த உலகிற்கும் நீங்கள் கேலிப்பொருளாவீர்கள்” என்றான் {சாத்யகி}. வீரனான சாத்யகி இவ்வாறு பேசிவிட்டு, அவ்விரு இளவரசர்களின் முன்னிலையில் அமைதியாகப் புன்னகைத்து நின்றான்” என்றார் {வைசம்பாயனர்}.(48)

சாத்யகியின் எச்சரிக்கை | பவிஷ்ய பர்வம் பகுதி – 94-(ஸாத்யகிப்ரதிப்ரயாணம்)-ஹம்சனுக்கும் சாத்யகிக்கும் இடையில் நடந்த உரையாடல்; அவர்களை எச்சரித்த சாத்யகி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, சாத்யகியின் வாக்கியங்களைக் கேட்டுக் கொண்டிருந்த ஹம்சனும், டிம்பகனும் பெருங்கோபத்துடன் அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்கிவிடுபவர்களைப் போலத் தங்கள் கண்களைத் திக்குகள் அனைத்திலும் துருதுருவென உருட்டினர். சாத்யகியின் எச்சரிக்கையை நினைத்துத் தங்கள் கைகளைப் பிசைந்தவாறே தங்கள் சிற்றரசர்களிடம் பின்வருமாறு பேசினார்:(1,2) {அவர்கள்}, “நந்தனின் மகன் எங்கே? செருக்குடன் வெறி கொண்டிருக்கும் ராமன் {பலராமன்} எங்கே?” என்றனர். ஹம்சனும், டிம்பகனும் இவ்வாறே சாத்யகியின் முன்னிலையில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.(3) 

பிறகு சாத்யகியிடம், “யதுவின் வழித்தோன்றலே, என்ன மடத்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறாய்? உடனே செல்வாயாக. நீ இங்கே தூதனாக வந்திருக்கிறாய். இல்லையென்றால் நீ சொன்னவற்றுக்காகக் கொல்லத்தக்கவனாகிறாய். பித்தனைப் போலப் பேசும் வெட்கமற்றவன் நீ. மன்னர்களான எங்கள் இருவருக்கும் மொத்த உலகத்தையும் ஆளும் உரிமை இருக்கிறது. எங்களுக்குக் கப்பங்கட்டுவதைத் தவிர்த்துவிட்டு அதைச் சொல்ல எவனும் உயிருடன் இருப்பது எவ்வாறு?(4-6) கோபாலகர்கள், யாதவர்கள் ஆகியோர் அனைவரையும் கைப்பற்றி அவர்கள் உடைமைகள் அனைத்தையும் கப்பமாக்கிக் கொள்ளப் போகிறோம். மனிதர்களில் இழிந்தவனே, உடனே செல்வாயாக.(7)

உன் பேச்சுப் பொறுத்துக்கொள்ளத்தகுந்ததாக இல்லை. இங்கே நீ தூதனாக வந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை. சங்கரன் எங்களுக்கு வரங்களையும், தெய்வீக ஆயுதங்களையும் அருளியிருக்கிறான். அந்த இடையனை வீழ்த்திவிட்டு எங்கள் தந்தையை நாங்கள் ராஜசூய வேள்வி செய்ய வைப்போம்.(8,9) நீ குறிப்பிட்ட யாதவர்கள் அனைவரும் கோழைகளாவர். நான் முதலில் அவர்களை வீழ்த்திய பிறகு கேசவனைக் கொல்வேன்.(10) நாங்கள் எங்கள் பெரும்படையைத் திரட்டி, எங்கள் படைவீரர்களை விற்களும், கணைகளும், கதாயுதங்களும், பராசங்களும், முசலங்களும், பிற ஆயுதங்களும் கொண்டவர்களாக ஆயத்தம் செய்வோம். ஆயிரக்கணக்கான ரதங்களும், அளவற்ற ஆயுதங்களும் எங்களிடம் இருக்கின்றன. எங்களுக்குத் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. படைத்தலைவர்கள் எங்களுக்கு வெற்றியை ஈட்டித் தருவர். எனவே நீ உடனே செல்வாயாக. அஞ்சாதே. நாங்கள் உனக்குத் தீங்கிழைக்க மாட்டோம்.(11-13) நாளையோ, நாளை மறுதினமோ நாங்கள் புஷ்கரத்தில் போரிடுவோம். அங்கே நாங்கள் கேசவனின் பலத்தையும், பலராமன் பலத்தையும், நீ குறிப்பிட்ட யாதவர்களின் பலத்தையும் பார்த்துக் கொள்கிறோம்” என்றார்கள் {ஹம்சனும், டிம்பகனும்}.(14)

சாத்யகி, “ஹம்சா, நாளையோ, நாளை மறுதினமோ உன்னையும், உன் தம்பியையும் நான் கொல்வேன். நான் தூதனாக வந்திராவிட்டால் இன்றே உங்கள் இருவரையும் கொன்றிருப்பேன்.(15) உங்கள் இருவரின் கடுஞ்சொற்களை நான் மன்னித்திருக்க மாட்டேன். சில வேளைகளில் தூதர்கள் பகைவனின் ஏற்கத்தகாத பேச்சைக் கேட்கும் பெரும் துன்பத்திற்கு ஆளாக வேண்டியிருக்கிறது.(16) மன்னர்களில் இழிந்தவர்களே, தூதுப்பணியை நான் மேற்கொள்ள வில்லையெனில், வலிமைமிக்க என் கரங்களின் சக்தியை வெளிப்படுத்தி உங்கள் இருவரையும் கொன்று மகிழ்ந்திருப்பேன்.(17) சங்கு, சக்கர, கதாபாணியும், அழகிய மகுடம் சூட்டப்பட்ட சுருள் முடியையும், பருத்த தோள்களையும், ஒப்பற்ற அழகையும் கொண்டவனும், அண்டத்தின் உண்மைக் காரணனும், அண்டத்தின் வடிவமும், யோகியரில் சிறந்தவர்களால் தியானிக்கப்படுபவனும், தைத்திய தானவர்களைக் கொல்பவனும், தாமரைக் கண்ணனும், சியாமள வண்ணனும், சிங்கம்போல் பலம் பெருந்தியவனும், அண்டத்தைப் படைத்துக் காத்து அழிப்பவனும், ஜகத்குருவுமான கிருஷ்ணன், விரைவில் போர்க்களத்தில் சகோதரர்களான உங்கள் இருவரின் செருக்கை அழிப்பான்” என்றான் {சாத்யகி}. இதைச் சொல்லிவிட்டு அந்த சாத்யகி தன் தேரில் ஏறி புறப்பட்டுச் சென்றான்” என்றார் {வைசம்பாயனர்}.(21)

புஷ்கரஞ்சென்ற கிருஷ்ணன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 95-(ஸ்ரீகிருஷ்ணஸ்ய புஷ்கரம் ப்ரதி கமநம்)-புஷ்கரைக்குச் சென்ற கிருஷ்ணனும், யாதவர்களும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “சிநியின் பேரனான சாய்தகி, துவாரகைக்குத் திரும்பி ஹம்சடிம்பகர்களுடனான தன் சந்திப்பைக் கிருஷ்ணனிடம் விரிவாகக் கூறினான்.(1) அதன்பிறகு ஒரு நல்ல காலை வேளையில் கேசிசூதனனும், கதாதாரியும், சக்கரபாணியுமான கேசவன் தன் படைத்தலைவனிடம் பின்வருமாறு ஆணையிட்டான்.(2)

{கிருஷ்ணன்}, “தேர்கள், யானைகள், குதிரைகள் அனைத்தையும் போருக்கு ஆயத்தம் செய்வாயாக. இசைக்கலைஞர்களை அழைத்து, பேரிகைகளையும், பணவங்களையும் எடுத்து வரச் சொல்வாயாக. பராசங்கள், பரிகங்கள், சூலங்கள் முதலியவற்றுடன் படைவீரர்கள் நல்ல ஆயுதபாணிகளாவதை உறுதி செய்வாயாக. குதிரைகளையும், யானைகளையும், ரதங்களையும் கொடிகளாலும், மதிப்புமிக்க ஆபரணங்களாலும் நன்கு அலங்கரிப்பாயாக” {என்றான்}.

படைத்தலைவன், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு புருஷோத்தமனின் {கிருஷ்ணனின்} ஆணைகளை மேற்கொள்ளப் புறப்பட்டுச் சென்றான். யாதவ வீரர்கள் கவசங்களைத் தரித்துத் தங்கள் விற்களை எடுத்துக் கொண்டு ரதங்களில் ஏறினர்.(3-5) மன்னா {ஜனமேஜயா}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், வில்லைத் தரித்திருந்தவனுமான சாத்யகி, பெருங்கோபத்துடனும், போரிடும் ஆவலுடனும் காணப்பட்டான்.(6) முதன்மையான யாதவர்கள் பிறரும், தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, சிங்கநாதம் செய்தவாறே புறப்படத் தயாராகினர்.(7)

ஹரி {கிருஷ்ணன்}, முறிக்கப்பட முடியாத சாரங்க வில்லை எடுத்துக் கொண்டு, தாருகனால் நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏறி நகரை {துவாரகையை} விட்டுப் புறப்பட்டுச் சென்றான்.(8) அந்நேரத்தில் அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, உடும்புத் தோலுறைகளால் பாதுகாக்கப்பட்ட தன் நான்கு கரங்களிலும் சங்கு, சக்கரம், கதாயுதம், சூலம் ஆகியவற்றையும், கணைகளையும் தரித்திருந்தான். மழை மேகம்போன்ற கருவண்ணனான அவன் மஞ்சள் ஆடைகளை உடுத்தியிருந்தான். தாமரை மலர் மாலையால் அவனது மார்பு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவன் தன் தேரில் அமர்ந்தபோது, குறிப்பிட்ட மந்திரங்களைச் சொல்லி விப்ரர்கள் துதித்தனர்.(9,10) சூதர்களும், மாகதர்களும் கிருஷ்ணனின் தேர் சாலையில் கடந்து செல்லும்போது அவனது நற்குணங்களைச் சொல்லும் பாடல்களைப் பாடித் துதித்தனர். தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்த பிறகு யாதவர்களின் படை வடக்கு நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.(11)

கேசவன், பயங்கர ஒலியை எழுப்பும் தன் பாஞ்சஜன்யத்தை முழக்கினான். அந்தப் பேரொலியைக் கேட்டதும் பகைவரனைவரின் இதயங்களிலும் அச்சம் நுழைந்தது.(12) மன்னா, அந்த முதன்மையான சங்கு, நிலம் முழுவதிலும், ஆகாயம் முழுவதிலும் பரவுமளவுக்குப் பயங்கர ஒலியை வெளியிட்டது.(13) கிருஷ்ணனின் முன்னுதாரணத்தைப் பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான யாதவ வீரர்களும் தங்கள் தங்களுக்குரிய சங்குகளையும், மிருதங்கங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பேரிகைகளையும் முழக்கினர்.(14) உண்மையில் பேரிகைகள் மற்றும் பிற இசைக்கருவிகளின் ஒன்றுபட்ட ஒலி மழைக்கால மேகமுழக்கத்திற்கு ஒப்பாக இருந்தது. இவ்வாறே அந்த யாதவப்படை புண்ணியத்தலமான புஷ்கரையை அடைந்தது.(15) இராஜேந்திரா {ஜனமேஜயா}, அதன்பிறகு அந்த யாதவ வீரர்கள், ஹம்சடிம்பகர்களின் வரவுக்காகப் புஷ்கரத் தடாகக் கரையில் காத்திருந்தனர்.(16) யாதவர்கள், அந்தப் புஷ்கரக் கரையில் முகாமிட்டுத் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்தனர்.(17)

பகவான் கோவிந்தன் அந்தப் புண்ணியத் தடாகத்தின் அழகைப் புகழ்ந்தவாறே தன் கைகளையும், முகத்தையும் கழுவிக் கொண்டு அங்கே வசிக்கும் முனிவர்கள் அனைவருக்கும் தன் வணக்கத்தைத் தெரிவித்தான். பிறகு அவன், ஹம்சடிம்பகர்களின் வரவுக்காக அந்தக் கரையில் அமர்ந்து காத்திருந்தான். அந்நேரத்தில் அந்த விஷ்ணு பிராமணர்கள் ஓதும் வேத மந்திரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(18,19)

போர்க்களமான புஷ்கரம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 96-(உபயஸைந்யயோ꞉ புஷ்கரதீர்தப்ரவேஷம்)புஷ்கரைக்கு வந்த ஹம்சனும், டிம்பகனும்; ஹம்ச டிம்பகர்களின் நண்பனான தானவன் விசக்ரன்; விசக்ரனின் நண்பனான தைத்தியன் ஹிடிம்பன்; இரு படைகளும் போர்க்களம் புகுந்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, அதே வேளையில் ஹம்சனும், டிம்பகனும் தங்கள் விற்களையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு, அலங்காரக் கொடிகளுடன் கூடிய எண்ணற்ற தேர்கள் சூழ புஷ்கரத் தீர்த்தத்திற்கு வந்தனர்.(1) அவ்விரு இளவரசர்களின் முன்பு, மொத்த உலகத்தையும் விழுங்கப் போவதைப் போலத் தோன்றும் இரண்டு பூதங்கள் இருந்தனர். அவர்கள் {அந்தப் பூதங்கள்} மேனியெங்கும் பஸ்மத்தைப் பூசிக்கொண்டு சிங்கங்களைப் போல முழங்கிக் கொண்டிருந்தனர்.(2) மேலும் ருத்ராக்ஷங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்கள் தங்கள் நெற்றிகளில் மூவரி திலகங்களைச் சூடியிருந்தனர். உலகை அழிப்பதற்காக வந்திருக்கும் இரு ருத்திரர்களைப் போல அவர்கள் தெரிந்தனர்.(3) அந்தப் பூதங்கள் இருவரையும் பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான படைவீரர்கள் வந்தனர். ஹம்சடிம்பகர்கள் பத்து அக்ஷௌஹிணி அளவுக்குப் படையைக் கொண்டிருந்தனர்.(4)

மன்னா, ஹம்சடிம்பகர்களின் பழைய நண்பனான விசக்ரன் என்ற தானவனும் அவர்களுடன் வந்தான்.(5) வஜ்ரபாணியான சக்ரனே {இந்திரனே} கூடப் போரில் எதிரில் நிற்க முடியாத அளவுக்கு அந்த விசக்ரன் பெரும்பலம்வாய்ந்த தானவனாக இருந்தான். நீண்டகாலத்திற்கு முன்பு ஒரு காலத்தில் நடைபெற்ற தேவாசுரப் போரில் அந்த விசக்ரன் தேவர்களுக்கு மத்தியில் பேரழிவை ஏற்படுத்தி, தேவமன்னனை {இந்திரனை} வீழ்த்தியிருந்தான். மற்றொரு தருணத்தில் அந்தத் தானவன் {விசக்ரன்} துவாரகையில் விஷ்ணுவுடன் போரிட்டான். அந்தப் போரில் அவன் யாதவர்களைப் பெரிதும் ஒடுக்கினான்.

மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, விசக்ரனும், தண்டங்களுடன் கூடிய பல்லாயிரக்கணக்கான தானவர்கள் பிறரும், விருஷ்ணி குலத்தைப் பழிதீர்ப்பதற்கான இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள ஹம்சடிம்பகர்களுக்குத் துணை புரிய வந்திருந்தனர். ராக்ஷசேஷ்வரனான ஹிடிம்பன், விசக்ரனின் பெரும் நண்பனாவான். உண்மையில் அந்தத் தைத்தியன் {ஹிடிம்பன்} தன்னுயிர் நண்பனுக்காக {விசக்ரனுக்காகத்} தன் உயிரையும் தர சித்தமாக இருந்தான். விசக்ரனுக்கு உதவி செய்வதற்காகப் பாறைகள், சூலங்கள், வாள்கள் ஆகியவற்றைத் தரித்திருந்த பல ராக்ஷசர்களுடன் ஹிடிம்பன் அவனது {விசக்ரனின்} படையில் சேர்ந்தான். மன்னா {ஜனமேஜயா}, பாறைகளையும், தண்டங்களையும் தரித்திருந்த எண்பத்தெட்டாயிரம் ராக்ஷசர்கள் போர்க்களத்தில் ஹிடிம்பனைப் பின்தொடர்ந்து வந்தனர். இந்த ராக்ஷசப் படை ஹம்சடிம்பகர்களின் பெரும்படையுடன் சேர்ந்து மூவுலகங்களையும் அச்சுறுத்தியது.(6-14)

விசக்ரனின் துணையுடனும், கேசவனைக் கொல்லும் நம்பிக்கையுடனும் ஹம்சடிம்பகர்கள் புஷ்கரத் தீர்த்தத்துக்குச் சென்றனர்.(15) மறுபுறம், ஹம்சடிம்பகர்கள் யாதவர்களுடன் போரிடப் போகிறார்கள் என்ற செய்தியைக் கேட்ட ஜராசந்தன், இது பாவம் நிறைந்தது என்று நினைத்தாலும் அவர்களுக்கு உதவி செய்யப் புறப்பட்டான்.(16) மன்னா, இவ்வாறு பல மன்னர்களின் ஆதரவு பெற்ற ஹம்சடிம்பகர்கள், தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் ஆவலுடன் புண்ணியத்தலமான புஷ்கரத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.(17) சிங்கங்களைப் போல உரக்க முழங்கிய அவர்கள், “மன்னர்களே, நானே முதலில் கிருஷ்ணனுடன் போரிடுவேன்” என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டனர்.(18) இவ்வாறு ஆயிரக்கணக்கான மன்னர்கள் கேசவனுடன் போரிடும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். இத்தகைய உணர்வுடனேயே அவர்கள் புஷ்கரத்தை அடைந்தனர்.(19)

மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, கடுந்தவங்களைச் செய்த பெருஞ்சக்திவாய்ந்த முனிவர்கள் பலர் அந்தப் புண்ணியத்தலத்தில் வசித்து வந்தனர். உண்மையில், அந்தப் புஷ்கரம் மூவுலகங்களிலும் உள்ள புண்ணியத்தலங்களில் முதன்மையானது என்று சொல்லப்படுகிறது.(20) புஷ்கரத் தீர்த்தத்தையும், புண்டரீகாக்ஷனான கிருஷ்ணனையும் பார்ப்பதாலோ, தீண்டுவதாலோ மட்டுமே கூட ஒருவன் செய்த பாவங்கள் அனைத்தும் மறையும்.(21) பெரும் முனிவர்கள் அனைவரும், தேவர்களில் முதன்மையானோரும் புஷ்கரத்தையும், புண்டரீகாக்ஷனையும் தொடர்ந்து சேவிக்கின்றனர்.(22) இவ்விரண்டில் கொள்ளும் தொடர்பால் ஒருவனின் பாவங்கள் அனைத்தும் மறைந்துவிடும். ஹம்சடிம்பகர்களின் தலைமையிலான மன்னர்கள் இவ்விரண்டும் இருக்கும் இடத்தை அடைந்தனர்.(23) இவ்வாறே அளவற்ற மஹிமை பொருந்திய ஹரியான விஷ்ணுவையும், பிரம்மனாலும் வழிபடப்படும் புஷ்கரமென்னும் புண்ணியத்தலத்தையும் அடுத்தடுத்து காணும் வாய்ப்பை அவர்கள் அனைவரும் அடைந்தனர்.(24)

மனிதர்களின் முதன்மையான ஆட்சியாளா, நீ புஷ்கரத் தீர்த்தத்தையும், கிருஷ்ணனையும் வணங்குவாயாக. அந்தப் பிரபுவுடன் போரிட அங்கே கூடியிருந்த படைவீரர்கள் அனைவரும் அழிவடைவார்கள் என்பதில் ஐயமில்லை. எண்ணற்ற பேரிகைகள், பணவங்கள், கொம்புகள், மணிகள், பிற இசைக்கருவிகள் ஆகியவற்றின் ஒலியும், ராக்ஷசர்களின் முழக்கமும் கலந்து அங்கே பேராரவார ஒலியை உண்டாக்கின. மன்னா, அந்தப் பெரிய ராக்ஷசப்படை புஷ்கரத்தின் கரையை அடைந்து தேவர்களின் தலைவனான கிருஷ்ணனைக் கண்டது” என்றார் {வைசம்பாயனர்}.(25-27)

கடும்போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 97-(ஸங்குலயுத்தம்)-ஹம்சடிம்பகர்களுக்கும் யாதவர்களுக்கும் இடையில் மூண்ட கடும்போர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, அந்தப் பெரும்போர் தொடங்கியதும் இரு படைகளும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டதைப் போலத் தோன்றியது. இரு தரப்பிலும் எண்ணற்ற கொடிகளும், இரும்பு தண்டங்களும், கதாயுதங்களும், சக்தி ஆயுதங்களும் இருந்தன.(1) இரு படைகளிலும் சூலங்கள், வாள்கள், விற்கள் தரித்த படைவீரர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் பேரிகைகளும், எக்காளங்களும் முழக்கப்பட்டன.(2)

மன்னா {ஜனமேஜயா}, இரு படைகளைச் சேர்ந்த போர்வீரர்களும், போர் தொடங்கியதும் ஒருவரையொருவர் வீழ்த்துவதில் பேரார்வம் கொண்டனர். கணைகள் தங்கள் இலக்கைத் துளைத்த பிறகும் நெடுந்தொலைவைக் கடக்கும் அளவுக்கு அவர்களின் ஊட்டம் பலமிக்கதாக இருந்தது. படைவீரர்களின் வாள்கள், பகைவரின் மார்பைப் பிளந்த பிறகோ, அவர்களின் தலைகளைக் கொய்த பிறகோ வானை நோக்கிப் பறந்து செல்லும் அளவுக்கு வலுவாக வீசப்பட்டன. க்ஷத்திரியர்களால் வீசப்பட்ட இரும்பு பரிகங்கள், தங்கள் பகைவரின் உடல்களைக் கூழாக நசுக்கின. வெற்றிக்கு முயன்று கொண்டிருந்த போர்வீரர்கள் இரக்கமற்ற வகையில் ஒருவரையொருவர் கொன்றனர்.(3-6)

அந்தப் பெரும்போரில் தேர்வீரர்கள் தேர்வீரர்களுடனும், யானை வீரர்கள் யானைவீரர்களுடனும், குதிரைப்படை வீரர்கள் குதிரைப்படை வீரர்களுடனும், காலாட்படை வீரர்கள் காலாட்படை வீரர்களுடனும் போரிட்டனர். அவர்கள் தங்கள் ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கியபடியே போர் நிற்காமல் தொடரும் வேளையில் தங்கள் பகைவரைக் காயப்படுத்தினர். ராக்ஷசர்கள், தங்கள் பகைவரின் படையணிக்குள் பெரும்படுகொலைகளை நிகழ்த்தி மதங்கொண்ட யானைகளைப் போலப் போரிட்டனர். சூலங்கள், போர்க்கோடரிகள், ஈட்டிகள், வாள்கள், கணைகள், சக்தி ஆயுதங்கள் உள்ளிட்ட பலவகை ஆயுதங்களாலும் தாக்கப்பட்ட படைவீரர்கள், தங்கள் ஆயுதங்களைக் கொண்டு தங்களாலான சிறந்த முறையில் எதிர்த்தாக்குதலைத் தொடுத்தனர்.(7-11)

மன்னா {ஜனமேஜயா}, ராக்ஷசர்களும், க்ஷத்திரியர்களும் தங்கள் பகைவரின் மீது கணைத்தாரைகளைப் பொழிந்து முழங்கியவாறே போர்க்களமெங்கும் திரிந்து கொண்டிருந்தனர்.(12) எண்ணற்ற படைவீரர்கள், வாள்களால் தாக்குண்டு தரையில் விழுந்து மாண்டனர். வீரமிக்கப் போர்வீரர்கள் பலரின் தலைகள் பலமிக்கக் கதாயுதங்களின் வீச்சுகளில் நொறுங்கின.(13) பரிதாயுதங்கள் தாங்கிய படைவீரர்கள் பலர் தங்கள் பகைவரின் தோள்களைத் தங்கள் வலிமைமிக்க வீச்சுகளால் முறித்தனர். போரில் கொல்லப்பட்ட சிலர் யமராஷ்டிரத்திற்கு {யமனின் நாட்டுக்குச்} சென்றனர், வேறு சிலர் சுவர்க்கத்திற்குச் சென்றனர்.(14) தேவலோகம் சென்றவர்கள், போர்க்களத்தில் தங்கள் சடலங்கள் கிடக்கும்போதே அப்சரஸ்களை அடைந்தனர். பிறரோ, தங்கள் பகைவரைக் கொன்றே ஆக வேண்டுமென நினைத்துத் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தனர்.(15)

மன்னா {ஜனமேஜயா}, தீடீரென ஆயிரக்கணக்கான சங்குகள், பேரிகைகள் ஆகியவற்றின் முழக்கம், மிருதங்க ஒலியுடன் சேர்ந்து கேட்டது.(16) நடுப்பகல் சூரியனால் உண்டாக்கப்பட்ட அதீத வெப்ப வேளையில் கோரமான பிசாசுகளும், பயங்கரத் தோற்றம் கொண்ட பூதங்களும் கொல்லப்பட்ட போர்வீரர்களின் சதையையும், குருதியையும் உண்ணும் விருப்பத்தில் போர்க்களத்தை அடைந்தன.(17,18) கூரிய வாள்களால் கொய்யப்பட்ட தலைகளுக்குரிய சடலங்கள் போர்க்களம் முழுவதும் விரவிக் கிடந்தன. ஊனுண்ணும் பூதங்கள் அந்தப் போர்க்களத்தைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு சடலங்களை உண்ணத் தொடங்கின.(19) மேலும் கங்கங்கள், காக்கைகள், நரிகள் உள்ளிட்ட எண்ணற்ற ஊனுண்ணும் பறவைகளும், விலங்குகளும் அங்கே வந்து சடலங்களை அலகுகளால் பற்றி, நகங்களால் கிழித்துச் சதைகளை உண்டன.(20)

மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தப் பயங்கரப் போரில் எண்பத்தேழாயிரம் யானைகளும், ஏறக்குறைய முப்பது லட்சம் குதிரைகளும் கொல்லப்பட்டன.(21) தேரோட்டிகளுடன் கூடிய ஒரு லட்சம் தேர்கள் அழிக்கப்பட்டன, ஆயுதங்களுடன் கூடிய முப்பது கோடி காலாட்படை வீரர்கள் அங்கே கொல்லப்பட்டுக் கிடந்தனர்.(22) மன்னா, நடுப்பகல் வேளையில் எண்ணற்ற படைவீரர்கள் காயமடைந்தனர், எண்ணற்ற படைவீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் போர்க்களத்தைவிட்டுத் தப்பித்து ஓடினர். வேறு சிலர், தாகத்தால் பீடிக்கப்பட்டவர்களாகப் புஷ்கரத் தடாகத்திற்குள் நுழைந்தனர்.(23)

கொல்லப்பட்ட போர்வீரர்கள் பலர், பூமியைத் தழுவிக் கிடப்பவர்கள் போல மாண்டு கிடந்தனர். காயமடைந்தவர்களில் சிலர், கொலை செய்யப்படுவதில் இருந்து உயிர்பிழைக்கும் நம்பிக்கையில் இரந்து கொண்டிருந்தனர். போர்வீரர்கள் பலர், தேரில் இருந்து கீழே விழுந்து தலைமுடி கலைந்து கிடந்தனர்.(24) மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, குதிரைப்படை வீரர்கள் பலர் தங்கள் உதடுகளைக் கடித்த நிலையில் தரையில் இறந்து கிடந்தனர். இவ்வாறே பழங்காலத்து தேவாசுரப் போரை நினைவூட்டும் வகையில் அந்தப் புஷ்கரத்தில் கடும்போர் நடந்து கொண்டிருந்தது” என்றார் {வைசம்பாயனர்}.(25)

விசக்ரவதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 98-அசுரன் விசக்ரனைக் கொன்ற கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, எண்ணற்ற படைவீரர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிய அந்தப் பெரும்போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது, கதாயுதத்தையும், கொண்டாடப்படும் சாரங்க வில்லையும் தரித்த கிருஷ்ணனை, விசக்ரன் தாக்கினான்.(1) அந்நேரத்தில் பலபத்ரன் {பலராமன்} ஹம்சனுடனும், சாத்யகி டிம்பகனுடனும், வசுதேவர் ஹிடிம்பனுடனும் போரிட்டுக் கொண்டிருந்தனர்.(2) இராஜேந்திரா {ஜனமேஜயா}, அந்தப் பெரும்போரில் பகைவரிடம் ஒருபோதும் சரணடைய நினையாத முதன்மையான போர்வீரர்கள் இவ்வாறே ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொண்டிருதனர்.(3)

கிருஷ்ணன் காண்போர் வியக்கும் வண்ணம் விசக்ரனைக் கடுமையாகத் தாக்கினான். அதற்குப் பதிலடியாக அந்தத் தானவன் {விசக்ரன்}, அந்தத் தேவதேவேசனுடைய {கிருஷ்ணனுடைய} மார்பின் மீது கணைமாரியைப் பொழிந்தான்.{4} சசியின் கணவனான இந்திரனின் தலைமையிலான தேவர்கள், வானில் இருந்தபடியே இந்த அற்புதப் போரைக் கண்டனர்.{5} அந்தத் தானவனின் கணைகளால் தாக்கப்பட்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, படைப்பின் தொடக்கத்தில் பகவான் விஷ்ணு தன் வாயில் இருந்து எண்ணற்ற ஆத்மாக்களை வெளிப்படுத்தியதைப் போலவே குருதியைக் கக்கினான்.(6)

இதனால் கோபமடைந்த ரிஷிகேசன், ஒரு கணையால் அவனது கொடியை அறுத்தெறிந்து, அவனது நான்கு குதிரைகளையும் மூன்று கணைகளால் கொன்றான். அவன், விசக்ரனின் தேரோட்டியை யமலோகம் அனுப்பிவைத்துவிட்டு பாஞ்சஜன்ய சங்கை முழக்கினான். அதேபோலக் கோபமடைந்த அந்தத் தானவனும் {விசக்ரனும்}, தன்னுடைய பெரிய கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் தேரில் இருந்து திடீரெனக் கீழே குதித்தான். அவன் கிருஷ்ணனின் தலையில் அந்தக் கதாயுதத்தால் பலமாகத் தாக்கி, அவனது கிரீடத்தைக் கீழே தள்ளி, அவனது நெற்றியில் காயமேற்படுத்தினான். தானவன் விசக்ரன் இந்த அருஞ்செயலைச் சாதித்துவிட்டுச் சிங்கம் போல முழங்கினான். வலிமைமிக்கவனான அவன் ஒரு பெரிய கற்பாறையைத் தூக்கி, அதைப் பத்து முறை சுழற்றி கிருஷ்ணனின் மார்பில் வீசினான். கற்பாறை தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்தப் பிரபு, லாகவமாக அதைப் பிடித்துத் தன்னைத் தாக்கியவன் மீதே அதைத் திரும்ப வீசினான். அந்தக் கற்பாறையால் தாக்குண்ட அந்தத் தைத்தியன் {விசக்ரன்} தன் சுயநனவை இழந்து தரையில் விழுந்தான்.(7-12)

சிறிது நேரம் கழித்துச் சுயநனவு மீண்ட அந்தத் தைத்தியன், தன் மேனி முழுவதும் சிவக்கும் வகையில் பெருங்கோபத்தில் எரிந்தான். பிறகு அவன் ஒரு பரிதத்தை {தடியை} எடுத்துக் கொண்டு, ஜனார்த்தனனிடம் பின்வருமாறு பேசினான்:(13) “கோவிந்தா, இந்தப் பரிதத்தால் நான் உன் செருக்கை நொறுக்கப் போகிறேன். தேவாசுரர்களுக்கு இடையில் நடந்த பெரும்போரில் நீ ஏற்கனவே என் ஆற்றலைக் கண்டிருக்கிறாய்.(14) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜனார்த்தனா, நான் அவனேதான், என் கரங்களும் அவையேதான். நீ என் சக்தியை அறிந்தவனாக இருந்தாலும் என்னுடன் போரிடத் துணிந்திருக்கிறாய். நான் உன் மீது வீசப் போகும் இந்தப் பரிதத்தை நீ எவ்வாறு தடுக்கப் போகிறாய் என்பதைப் பார்க்கப் போகிறேன்” என்றான் {விசக்ரன்}. அந்தத் தைத்தியன் {விசக்ரன்} இதைச் சொல்லிவிட்டு, அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சங்கு சக்கரக் கதாதாரியும், லோகேசனுமான கிருஷ்ணன் மீது அந்தப் பரிதத்தை வீசினான்.(15,16)

கிருஷ்ணன், அனைவரும் வியக்கும் வண்ணம் அந்தத் தைத்தியன் ஏவிய பரிகத்தைப் பிடித்தான். அந்த ஹரி, “இதோ நீ இறக்கப் போகிறாய்” என்று சொல்லி, தன் வாளால் அந்தப் பரிதத்தைத் துண்டுகளாக அறுத்தான்.(17) அந்தத் தைத்தியேசன் {விசக்ரன்}, பல கிளைகளைக் கொண்ட ஒரு நெடுமரத்தை வேரோடு பிடுங்கி, எல்லையில்லா சக்தி படைத்த கிருஷ்ணன் மீது அதை வீசினான்.(18) மாதவனோ, பெருமுயற்சியேதும் செய்யாமல் அந்த மரத்தை எள்ளளவு துண்டகளாக எளிதிற் துண்டித்தான். இவ்வாறு சிறிது நேரம் அந்தத் தைத்தியனுடன் போரிட்டு மகிழ்ந்த விஷ்ணு, பிறகு தன் நாண்கயிற்றில் ஒரு சக்திமிக்கக் கணையைப் பொருத்தி ஏவினான்.(19,20)

அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தபோதே அந்தக் கணை அந்தத் தைத்தியனைக் கடுமையாகத் தாக்கி அவனைச் சாம்பலாக எரித்துவிட்டு பகவானின் கைகளுக்கே திரும்பிச் சென்றது.(21) கிருஷ்ணன் விசக்ரனைக் கொன்றதைக் கண்ட பிற தைத்தியர்கள், பத்து திக்குகளிலும் சிதறி ஓடத் தொடங்கினர். உண்மையாக இறுதியில் அவர்கள், இந்நாள்வரை மீண்டும் காணப்படாத வகையில் பெருங்கடலுக்குள் நுழைந்தனர்” என்றார் {வைசம்பாயனர்}.(22)

பலபத்ரன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 99-(ஹம்ஸபலபத்ரயோர்யுத்தம்)பலராமனுக்கும் ஹம்சனுக்கும் இடையில் நடந்த போர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அதன்பிறகு, வில்லாளிகளில் முதன்மையானவனும், தர்மாத்மாவுமான பலதேவன் {பலராமன்}, பத்துக் கணைகளை ஹம்சன் மீது ஏவினான்.(1) ஹம்சன், அவன் மீது ஐந்து கணைகளை ஏவி பதிலடி கொடுத்தாலும், கலப்பைதாரியான பலராமன், தன்னை நோக்கி வரும் கணைகளை மேலும் பத்துக் கணைகளால் தவிடுபொடியாக்கினான். பிறகு அவன் ஹம்சனின் நெற்றியில் ஒரு கணையால் பலமாகத் தாக்கினான்.(2) அந்தக் கணையானது, ஹம்சனை சுயநனவற்றவனாக்கித் தேரில் அமரச் செய்தது. சுயநனவு மீண்ட ஹம்சன், ஒரு கணையோடையை ஏவி, பலராமனுக்கு ஆழமான காயங்களை ஏற்படுத்தி, வானத்தில் பார்வையாளர்களாக நின்றிருந்த தேவர்களை வியப்படையச் செய்தான். அவன் {ஹம்சன்} இந்த அருஞ்செயலைச் செய்துவிட்டுச் சிங்கமுழக்கம் செய்தான்.(3,4)

அந்தக் கணைகளால் புண்பட்ட கலப்பைதாரி {பலராமன்}, குருதியைக் கக்கி பெருமூச்சுவிட்டபடியே பெருஞ்சினங்கொண்டான்.(5) குங்குமத்தால் பூசப்பட்ட உடலைப் போல, அவனது மேனி முழுவதும் குருதியில் நனைந்திருந்தது. நீல அடைகளை உடுத்தியிருந்த அந்த ஹலாயுதன் {பலராமன்}, அன்னம் போல் நளினமாக நடந்த ஹம்சனை ஒரு லட்சம் கணைகளால் மறைத்தான். மன்னா, வண்ணமயமான இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட பலராமனின் கணைகள், ஹம்சனின் தேர், கொடி, வில், சக்கரங்கள், கவசம் ஆகியவற்றை நொறுக்கியது. அந்நிலையில் அவன் {ஹம்சன்} ஒருகணம் திகைப்படைந்து நின்றான்.(6-8)

மன்னா, செருக்கின் மிதப்பில் வெறி கொண்டிருந்தவனும், பகைவனைத் தாக்கும் நேரத்தை அறிந்தவனுமான ஹம்சன், மீண்டும் சுயநனவை அடைந்ததும், ஒரே கணையால் பலராமனின் கொடியை வீழ்த்தினான். பிறகு அவன் நான்கு கணைகளால் ஹலாதரனின் குதிரைகளையும், மேலும் ஒன்றால் அவனது சாரதியையும் கொன்றான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஹலாதரன், அந்தக் கடும்போரில் தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டும், பாம்புகளின் மன்னனான சேஷனைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டும் ஹம்சனை நோக்கி விரைந்தான். அப்போது பலராமன், ஹம்சனின் தேர், கொடிகள், சக்கரம், குதிரைகள் ஆகியவற்றையும், சாரதியையும் தன் கதாயுதத்தால் முற்றாக அழித்தான்.(9-11)

பலராமன் ஹம்சனைத் தாக்க முற்பட்ட போது, அந்த மன்னன், தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, சிதைந்திருந்த தன் தேரில் இருந்து கீழே குதித்தான்.(12) அதன்பிறகு வலிமைமிக்கத் தேர்வீரர்களான ஹம்சனும், பலராமனும் போர்க்களத்தின் தரையில் நின்றபடியே கதாயுத்தம் செய்தனர்.(13) ஒப்பற்ற ஆற்றலைக் கொண்டவர்களான அவ்விருவரும் தங்கள் எதிரியைக் கொல்லும் தீர்மானத்துடன் போரிட்டனர். அன்னம் போன்ற நடையைக் கொண்டிருந்த அவ்விருவரும், வெற்றியை அடைவதற்காக எந்தத் துன்பத்தையும் தாங்கும் உறுதியுடன் இருந்தனர். அந்தக் கதாயுத்தத்தைக் காண அற்புதமாக இருந்தது.(14)

பழங்காலத்து தேவாசுரப் போரில் இந்திரனும், விருத்திராசுரனும் வானில் போரிட்டதைப் போல ஹம்சனும், பலராமனும் கதாயுத்தம் புரிந்தனர். அந்தப் போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது அவர்களின் உடல்கள் குருதியால் மறைக்கப்பட்டன.(15) அந்தப் பெரும்போரில் இருவரும் தங்கள் பகைவன் வெளிப்படுத்தும் அற்புத ஆற்றலை வியந்து பாராட்டினர். அப்போது பலராமன் தன் பகைவனை வலப்புறத்தில் இருந்து தாக்கும் வகையில் தன் கதாயுதத்தைத் திறனுடன் பயன்படுத்தினான்.(16) இராஜேந்திரா {ஜனமேஜயா}, அந்தத் திட்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஹம்சன் வேறொரு உத்தியைக் கையாண்டான். யானைகளைப் போன்று பலமிக்கவர்களான அந்தப் போர் வீரர்கள் இருவரும் தங்கள் கதாயுதங்களால் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கினர்.(17)

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரர்கள் இருவரும் தங்கள் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தியவாறே மீண்டும் மீண்டும் தங்கள் பகைவனின் வலுவான தாக்குதலைத் தடுத்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெரும்போரில், பழங்காலத்து தேவாசுரப் போரை அனைவருக்கும் நினைவுப்படுத்தும் வகையில் அந்தப் போர்வீரர்கள் இருவரும் கடுமையாகப் போரிட்டனர். தேவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், முனிவர்கள் ஆகியோர் பெரும் வியப்படைந்து, “ஐயோ, இத்தகைய அற்புதமான போரை நாங்கள் கேட்டதுமில்லை, கண்டதுமில்லை” என்றனர்.(18-20)

அந்தப் போர்வீரர்கள் இருவரும் தங்கள் பகைவனை வெல்லும் தீர்மானத்துடன் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தனர். சிறிது நேரங்கழித்து அவ்விருவரும் தங்கள் உத்திகளை மாற்றிக் கொண்டனர். ஹம்சன் வலப்புறத்தில் இருந்து பலராமனைத் தாக்கினான். எல்லையில்லா சக்தி கொண்ட ஹலாதரன் இடப்புறத்தில் இருந்து ஹம்சனைத் தாக்கினான்.(21) முதன்மையான போர்வீரர்களான பலராமனும், ஹம்சனும் கடுந்தாக்குதல்களைத் தொடுத்தவாறே தங்கள் முழங்கால்களில் நின்றும் போரிட்டனர்” என்றார் {வைசம்பாயனர்}.(22)

டிம்பகன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 100-(ஸாத்யகிடிம்பகயோர்யுத்தம்)-சாத்யகிக்கும் டிம்பகனுக்கும் இடையில் நடந்த போர்; டிம்பகனின் மகிமை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அதே நேரத்தில் நிகரான சக்தி படைத்தவர்களும், கொண்டாடப்பட்ட க்ஷத்திரியர்களுமான டிம்பகனும், சாத்யகியும் கடும்போர் செய்து கொண்டிருந்தனர்.(1) அவ்விருவரும், முதன்மையான குருக்களிடம் போர்க்கலையினைக் கற்றுக் தேர்ச்சியடைந்தவர்கள் என்பதால், பெருஞ்சீற்றத்துடனும் திறனுடனும் போரிட்டனர். அவ்விருவரும் போரிட்டுக் கொண்டிருந்தபோது சாத்யகி, டிம்பகனின் மார்பு, முகம், வயிறு ஆகியவற்றை நோக்கிப் பத்துக் கணைகளை ஏவினான். பெரும்பலத்தில் பெருஞ்செருக்கு கொண்டிருந்தவனும், க்ஷத்திரியர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுபவனுமான டிம்பகனும் அடுத்தடுத்து சாத்யகியின் மீது ஐயாயிரம் கணைகளை ஏவினான். எனினும், அந்தப் பெரும் விருஷ்ணி வீரன் {சாத்யகி}, உரக்க முழங்கியபடியே அந்தக் கணை மழையை அழித்தான்.(2-4)

அதன்பிறகு, சாத்யகி ஏவிய ஏழு கணைகள் டிம்பகனுக்குப் பெருந்துயரை அளித்தன. இதில் கோபமடைந்த டிம்பகனும், பதிலடியாக ஒரு லட்சம் கணைகளைச் சாத்யகியின் மீது ஏவினான்.(5) அப்போது சாத்யகி ஓர் அர்த்தச்சந்திரக் கணையைத் தன் நாண்கயிற்றில் பொருத்தினான். அந்தக் கணை ஏவப்பட்டபோது, அது டிம்பகனின் வில்லை இரண்டாக அறுத்தது.(6) வலிமைமிக்க வீரனான டிம்பகன், விரைவாக மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, எண்ணெய் பூசிய கணையால் துளைத்து சாத்யகிக்குக் காயத்தை ஏற்படுத்தினான்.(7) மன்னா, அந்தக் கணையால் துளைக்கப்பட்ட சாத்யகி, குருதி கக்கியபோது இளவேனிற்காலப் பலாச மலர்க்குவியலைப் போலக் காட்சியளித்தான்.(8)

இதைக் கண்ட பலராமன், தன் கணைகளால் டிம்பகனின் பெரும் வில்லைத் துண்டுகளாக முறித்தான். டிம்பகன் மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த பிற க்ஷத்திரியர்களின் முன்னிலையில் யாதவத் தலைவன் சாத்யகியின் மீது இடையறாத கணையோடையைப் பொழிந்தான். எனினும் சாத்யகி ஒரே கணையால் அந்தப் பாவி டிம்பகனின் உறுதிமிக்க வில்லை முறித்தான்.

இராஜேந்திரா {ஜனமேஜயா}, டிம்பகன் விரைவாக மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, எண்ணற்றக் கணைகளால் சாத்யகியின் உடலைத் துளைக்கத் தொடங்கினான். இருப்பினும் சாத்யகி அந்த வில்லையும் முறித்தான். இவ்வாறே சாத்யகி, டிம்பகன் எடுக்க எடுக்க நூற்றுப்பத்து விற்களை ஒன்றன்பின் ஒன்றாக முறித்தான். இந்த அருஞ்செயலைச் செய்த பிறகு அவன் சிங்கமுழக்கம் செய்தான்.

சிறிது நேரம் கழிந்ததும், பெரும் போர்வீரர்களான அந்த டிம்பகன், சாத்யகி இருவரும் விற்களின் பயன்பாட்டைக் கைவிட்டு, வாள்களை எடுத்துக் கொண்டு ஒருவரோடு ஒருவர் போரிட்டனர். வாளேந்தலிலும் இருவரும் திறம் பெற்றவர்களாக இருந்தனர். அப்போது, நற்பேறுபெற்றவனான துச்சாசனனின் மகன் {தௌஷாஸநி}[1], சோமதத்தனின் மகனான பூரிஸ்ரவஸ், வலிமைமிக்க அபிமன்யு, நகுலன், டிம்பகன், சாத்யகி ஆகிய அறுவரே வாள்வீரர்களில் முதன்மையானவர்களாக அறியப்பட்டிருந்தனர். மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, அவர்களில் டிம்பகனும், சாத்யகியும் மிகச்சிறந்தவர்களாகக் கருதப்பட்டனர். போரிடும் பேராவல் கொண்டிருந்த அவ்விரு வீரர்களும், தங்கள் வாள்களை எடுத்துக் கொண்டு ஒருவரையொருவர் அணுகினர்.வாட்போரில் முப்பத்திரண்டு உத்திகள் உண்டு. அவை பிராந்தம், உத்பிராந்தம், ஆவித்தம், பிரவித்தம், பாஹுநிஹ்ஸுருதம், ஆகரம், விகரம், பிந்நம், நிர்மர்யாதம், அமாநுஷம், ஸங்கோசிதம், குலசிதம், ஸவ்யஜது, விஜாநு, ஆஹிகம், சித்ரகம், க்ஷிப்தம், குஸும்பம், லம்பநம், துருதம், ஸர்வபாஹு, விநிர்பாஹு, ஸவ்யேதரம் உத்தரம், திரிபாஹு, துங்கபாஹு, ஸவ்யோந்நதம், உதாஸி, பிருஷ்டதம், பிரதிதம் {பிரதிபிருஷ்டதம்}, யௌதிகம், பிரதிதம் {பிரதியௌதிகம்} ஆகியனவாகும். போரின் போது அவ்வீரர்கள் இருவரும் இந்த உத்திகள் அனைத்தையும் பயன்படுத்தினர். புஷ்கரமெனும் அந்தப் புண்ணியத்தலத்தில், தங்கள் பகைவனைக் கொல்லும் தீர்மானத்துடன் அவ்விருவரும் போரிட்டாலும், நீண்டநேரமானதில் அவர்கள் களைப்படைந்ததாகத் தெரிந்தது. வானில் இருந்த தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோர் அவ்விரு போர்வீரர்களும் வெற்றியடையும் நோக்கில் தீவிரமாக முயன்று வருவதைக் கண்டு, “ஐயோ, வலிமைமிக்கவர்களான இவ்விரு வீரர்களின் பொறுமையும், ஆற்றலும் ஒப்பற்றவையாக இருக்கின்றனவே. வாட்போரிலும், விற்போரிலும் இவ்விருவரும் பெரும் திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்களில் ஒருவன் சிவனின் சீடன், மற்றொருவன் துரோணரின் சீடன்.(9-24) அர்ஜுனன், சாத்யகி, ஜகத்பதியான வாசுதேவன் ஆகிய மூவரும் போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாகக் கொண்டாடப்படுகின்றனர்.(26) டிம்பகன், கார்த்திகேயன், சிவன் ஆகிய மூவரும் ஒப்பற்ற ஆற்றல் படைத்த முதன்மையான மஹாரதிகளாக அறியப்படுகின்றனர்” என்றனர்.(26)

தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், யக்ஷர்கள் ஆகியோரும், பெரும் நாகர்களும் இப்படிச் சொன்னவாறே அந்தப் போரைத் தொடர்ந்து கண்டு வந்தனர்” என்றார் {வைசம்பாயனர்}.(27)

ஹிடிம்பன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 101-(ஹிடிம்பேந ஸாகம் வஸுதேவோக்ரஸேநயோர்யுத்தம் பலபத்ரேண ஹிடிம்பபராபவஷ்ச)-ஹிடிம்பனுடன் போரிட்ட வசுதேவரும், உக்ரசேனனும்; ஹிடிம்பனை வீழ்த்திய பலராமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “வசுதேவரும், உக்ரசேனனும் நரைமுடியும், சுருங்கிய தோலும் கொண்ட கிழவர்களாக இருந்தாலும், அவர்களும் மகிழ்ச்சியாக அந்தப் போரில் ஈடுபட்டனர்.(1) ஞானத்திலும், அதன் நடைமுறை பயன்பாட்டிலும் முன்னேற்றம் அடைந்தவர்களான அவர்கள் இருவரும், அரச வகையின் கடமைகளை முழுமையாக அறிந்திருந்தனர். ராக்ஷசனான அந்தத் துராத்மாவிற்கு {ஹிடிம்பனுக்கு} எதிரான போரில் அவர்கள் இருவரும் ஒன்றுகூடிப் போரிட்டனர்.(2) ராக்ஷசேந்திரனும், துராத்மாவுமான ஹிடிம்பன் மீது ஆயிரக்கணக்கான கணைகளை ஏவி அவனை அவர்கள் துன்புறுத்தினர்.(3)

நரமாமிசம் உண்ணும் ராக்ஷசேந்திரனான ஹிடிம்பன், பெரும் பலசாலியாகத் திகழ்ந்தான். அந்தத் துஷ்டாத்மா, நீண்ட கரங்களையும், வலிமைமிக்கத் தாடைகளையும், துருத்தும் வயிற்றையும், கோணலான கண்களையும் கொண்டிருந்தான். அவனது மயிர் செம்பட்டையாகவும், அவனது மூக்கு வல்லூறின் அலகைப் போலவும் இருந்தது. அவன் அச்சந்தரத்தக்க வகையில் பருத்த கரங்களைக் கொண்டிருந்தான். அவனது உடல் மயிர் எப்போதும் சிலிர்த்தபடியே இருந்தது.(4,5) அவனது உடலோ, மலையைப் போன்று பெரிதாக இருந்தது. தடித்த உதடுகளைக் கொண்ட அவனது வாய், நரியின் வாய்க்கு ஒப்பானதாக இருந்தது. பெரும் வயிற்றையும், நீண்ட பற்களையும் கொண்டிருந்த அந்த ராக்ஷசன், மொத்த உலகையும் விழுங்கிவிடத் தயாராக இருப்பவன் போலத் தெரிந்தான்.(6) அவன் உயர்ந்த தோள்களையும், அகன்ற மார்பையும், யானையின் தோற்றத்தை அளிக்கும் நீண்ட தொண்டையையும் கொண்டிருந்தான். அவன், உண்பதற்குப் பெட்டி பெட்டியான இறைச்சிளும், பருகுவதற்குக் குடங்குடமான குருதியும் படைக்கப்பட்டிருந்தன.(7)

மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அவன் யானைகளைச் சுழற்றி வீசி யானைகளையும், குதிரைகளைச் சுழற்றிவீசி குதிரைகளையும், படைவீரர்களை மோதச் செய்து மற்ற படைவீரர்களையும் கொன்றான். அவன் தேர்களை நொறுக்குவதற்குப் பிற தேர்களைக் கையில் எடுத்தான்.(8) அவன், தான் சுவாசிப்பதில் உண்டாகும் காற்றின் மூலம் மனிதர்களைத் தன் வாய்க்குள் உறிஞ்சி இழுத்தான். அந்த ஹிடிம்பன் போரிடுகையில், விருஷ்ணி குலத்தோர் சிலரைக் கொன்று, அந்தப் போர்க்களத்திலேயே அவர்களை உண்டான். உண்மையில் அவன், தன் முன் கண்ட எவனையும் கொன்றான்.(9,10) ராக்ஷசன் ஹிடிம்பன், யது குலத்தோர் மற்றும் விருஷ்ணி குலத்தோர் பலரை உண்டு, அவர்களின் சடலங்களில் எஞ்சியவற்றை {ஆங்காங்கே} வீசி எறிந்தான்.(11)

மன்னா {ஜனமேஜயா}, பிரளய காலத்தில் அண்டத்தை அழிக்கும் கோபம் நிறைந்த ருத்திரனைப் போலவே அந்த ராக்ஷசனும் எண்ணற்ற படைவீரர்களை விழுங்கினான்.(12) விருஷ்ணி குலத்தின் பலசாலி வீரர்கள் பலர், தங்கள் தோழர்கள் எவ்வாறு அந்த ராக்ஷசனின் உணவானார்கள் என்பதைக் கண்டு பீதியடைந்து திக்குகள் அனைத்திலும் தப்பி ஓடினர்.(13) மன்னா {ஜனமேஜயா}, வானரப்படைவீரர்கள் எண்ணற்றோரை உண்ட கும்பகர்ணனைப் போலவே இந்தப் புருஷாதகனும் {மனிதர்களை உண்பவனும்} விருஷ்ணி படையின் பெரும்பகுதியை விழுங்கினான்.(14)

அந்நேரத்தில் வசுதேவரும், உக்ரசேனனும், கோபக்கார சிங்கத்தை அணுகுமிரு கிழட்டு மான்களைப் போலக் கையில் விற்களுடன் அந்த ராக்ஷசன் முன்பு வந்தனர்.{15} அப்போது அந்த ராக்ஷசன், அந்தக் கிழவர்களை விழுங்கிவிடும் எண்ணத்துடன், தன் வாயைத் திறந்து கொண்டு அவர்களைநோக்கி விரைந்து சென்றான்.{16} அவன், அகன்று விரிந்த தன் வாயுடனும், சீற்றமிக்கக் கண்களுடனும் பாதாள லோகத்தில் இருந்து வந்தவனைப் போலத் தெரிந்தான். அவன், தன்னிரு பகைவரை நோக்கி விரைந்தபோது கூட, மனித இறைச்சியை மென்று கொண்டேயிருந்தான். எனினும், அனுபவம் மிகுந்த அந்தக் கிழட்டுப் போர்வீரர்கள் இருவரும், ஹிடிம்பன் தங்களை நெருங்கும் முன்பே விரைவாகத் தங்கள் கணைகளால் அவனது அகன்ற வாயை நிறைத்தனர்.{17,18}(15-18)

கோரமானவனும், பிசாசைப் போன்றவனும், தேவர்களுக்குப் பகைவனுமான அந்த ராக்ஷசன், அந்தக் கணைகள் அனைத்தையும் அப்படியே விழுங்கிவிட்டான். பிறகு அவன், விரிந்த வாயுடன் அந்தக் கிழட்டுப் போர்வீரர்கள் இருவரையும் நோக்கி விரைந்தான்.(19) அந்த ஹிடிம்பன், வசுதேவர் மற்றும் உக்ரசேனனின் கைகளில் இருந்த விற்களைப் பிடுங்கி அவற்றை முறித்தான். ராக்ஷசர்களில் சிறந்தவனும், பாவம் நிறைந்தவனுமான அந்த ராக்ஷசன், தன்னிரு கைகளையும் விரித்து வசுதேவரைக் கைப்பற்ற முனைந்தான்.(20,21)

அப்போது ஹிடிம்பன், “உக்ரசேனா, ஏன் என் முன் நிற்கிறாய்? இப்போதே உங்கள் இருவரையும் நான் தின்றுவிடுவேன்.(22) நீங்கள் என் உணவாக விதிக்கப்பட்டிருப்பதால், நீங்களாகவே விருப்பத்துடன் என் வாய்க்குள் நுழைவீராக. கிழவன் வசுதேவன், தன்னாலியன்ற அளவுக்குப் போரிட்டுக் களைத்திருப்பதாகவும், பசித்திருப்பதாகவும் தெரிகிறது. இவனைக் கிருஷ்ணனின் தந்தையாக விதி படைத்திருக்கிறது. எப்படியும் உங்கள் இருவரையும் நான் விட மாட்டேன். எனவே, போராடாமல் நீங்களாகவே என் வாய்க்குள் நுழைவீராக.(23,24) உங்கள் குருதியைப் பருகும்போது, நான் பெரும் நிறைவடைவேன். அதன்பிறகு, பழுத்த கிழவர்களான உங்கள் சதையை மகிழ்ச்சியாக நான் உண்பேன்” என்றான் {ஹிடிம்பன்}.(25)

அந்த ராக்ஷசேஷ்வரன், இதைச் சொல்லிவிட்டுத் தன் வாயை அகலவிரித்தபடியே வசுதேவரையும், உக்ரசேனனையும் நோக்கி விரைந்தான்.(26) மன்னா, விரைந்து வரும் அந்த ராக்ஷசனைக் கண்ட வசுதேவரும், உக்கிரசேனனும் பீதியடைந்தனர். அவர்கள் தங்கள் ஆயுதங்களை வீசியெறிந்துவிட்டுத் தங்களால் இயன்ற அளவு வேகத்துடன் தப்பி ஓடினர்.(27)

வசுதேவரும், உக்கிரசேனனும் பீதியடைந்து ஓடுவதைக் கண்ட பலராமன், ஹம்சனுடன் போரிடும் நிலையில் கிருஷ்ணனை விட்டுவிட்டு, அங்கிருந்து புறப்பட்டான். தப்பியோடும் வசுதேவர், உக்கிரசேனன் ஆகியோருக்கும், ஹிடிம்பனுக்கும் இடையில் தன்னை நிறுத்திக் கொண்ட அவன் {பலராமன்}, “ராக்ஷசா, இவ்விருவரையும் விட்டுவிட்டு என்னுடன் போரிடுவாயாக. என் பகைவனை வீழ்த்தும் நோக்கத்திலேயே நான் இங்கே வந்திருக்கிறேன். உன்னைக் கொல்வதன் மூலம் நான் உன் பெருந்தீனிக்கான முடிவை ஏற்படுத்துவேன்” என்றான்.

ஹலாயுதனான பலராமனின் இந்த அறைகூவலைக் கேட்ட ஹிடிம்பன், வசுதேவரையும், உக்கிரசேனனையும் விரட்டுவதை நிறுத்திக் கொண்டு, “முதலில் இப்படிக் குறுக்கிடுபவனை நான் உண்ண வேண்டும்” என்று நினைத்தான். இவ்வாறு நினைத்த அந்த ராக்ஷசன், தன் வாயை அகல விரித்தபடியே பலராமனை நோக்கி முன்னேறினான்.(28-32)

பெருஞ்சக்திவாய்ந்த பலராமன், தன் வில்லையும், கணைகளையும் ஒதுக்கிவிட்டு, தன் தோள்களை உள்ளங்கைகளால் தட்டியபடியே அந்த ராக்ஷசனின் வழியில் குறுக்கே நின்றான்.(33) பாவம் நிறைந்தவனும், மற்றொரு யமராஜனைப் போலத் தெரிந்தவனும், ராக்ஷசனுமான அந்த ஹிடிம்பன், தன் முஷ்டியால் பலராமனின் மார்பில் பலமாகத் தாக்கினான்.(34) அந்த ராக்ஷசனால் தாக்கப்பட்ட பலராமன், பெருங்கோபமடைந்து, அவன் மீது பெருந்தாக்குதலைத் தொடுத்தான்.(35) அப்போது பலராமனுக்கும், ஹிடிம்பனுக்கும் இடையில் கடுமையான ஒரு மற்போர் நேரிட்டது. சிங்கம் போன்ற அந்த வீரர்கள் இருவரும், காய்ந்த விறகுகளை முறிக்கையில் உண்டாகும் பிளவொலியைப் போல, வலிமைமிக்கத் தங்கள் முஷ்டி ஒலிகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்திரனின் வஜ்ரத்திற்கு நிகரான வலிமைமிக்கத் தாக்குதல்களால் ஹிடிம்பன் மீண்டும் மீண்டும் பலராமனின் மார்பைத் தாக்கினான். அதற்குப் பதிலடியாகப் பலராமனும், தேவர்களின் பகைவனான ஹிடிம்பனின் மார்பிலும், முகத்திலும் தன் உள்ளங்கைகளால் மிகத் தீவிரமான தாக்ஃகுதலைத் தொடுத்தான்.(36-39) பலராமனால் தாக்கப்பட்ட ராக்ஷசேஷ்வரன் ஹிடிம்பன், நடைமுறையில் சுயநனவிழந்து, முழங்கால் படிந்து விழுந்தான்.(40)

பலராமன், தன்னிரு கைகளாலும் அந்த ராக்ஷசனைப் பிடித்துச் சில காலம் வரை அவனை மீண்டும் மீண்டும் சுழற்றிக் கொண்டேயிருந்தான். பிறர் அனைவரும் சூழ்ந்திருந்து, பார்வையாளர்களாகக் கண்டு கொண்டிருந்த போதே ஹலாதரன் {பலராமன்}, அந்த ராக்ஷசேந்திரனை நான்கு மைல்கள் தொலைவிற்குச் சுழற்றி வீசினான். இவ்வாறே அந்தப் பயங்கர ராக்ஷசன் {ஹிடிம்பன்} பலராமனால் கொல்லப்பட்டான்[1].(41-43) பலபத்ரனால் {பலராமனால்} கொல்லப்பட்ட தங்கள் தலைவனான ஹிடிம்பனின் மரணத்தைக் கண்ட ராக்ஷசர்கள் அனைவரும் பீதியடைந்து திக்குகள் அனைத்திலும் தப்பி ஓடினர்.(44)அவனால் {பலராமனால்} ஹிடிம்பன் கொல்லப்பட்டதும், தினேசன் {சூரியன்} தன் கதிர்களை உள்வாங்கிக் கொண்டு மேற்கில் மறைந்தான். போர்வீரர்களால் தங்கள் பகைவரைக் காணமுடியாத அளவுக்கு இருள் சூழ்ந்தது.(45) மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அண்டத்தின் வாயாகக் கருதப்படுபவனும், உயிரினங்கள் அனைத்தையும் காப்பவனும், ஜகத்குருவுமான சூரியன் சமுத்திரத்திற்குள் நுழைந்ததும், நட்சத்திரங்களின் நாதன் {சந்திரன்}, இரவின் இருளை அகற்றியபடியே வானில் தோன்றினான்.(46) ஹம்சனின் படைத்தலைவர்கள், அந்த இருளின் காரணமாக இரவில் போரை நிறுத்த தீர்மானித்தனர். அவர்கள், “மன்னர்களே, நாளை காலையில், கின்னரர்களின் கீதங்களால் நம்மை ஈர்க்கப் போகும் கோவர்த்தன மலையில் நம் போர் தொடரும்” என்றனர் {ஹம்சடிம்பகர்களின் படைத்தலைவர்கள்}. இதைக் கேட்டதும் அவர்கள் அனைவரும் கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்” என்றார் {வைசம்பாயனர்}.(47)

கிருஷ்ணன் ஹம்சன் போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 102-(ஸ்ரீக்ருஷ்ணஹம்ஸயோர்யுத்தம்)-புஷ்கரத்தில் இருந்து கோவர்த்தன மலைக்குப் பெயர்ந்த போர்; கிருஷ்ணனும் ஹம்சனும் போரிட்டது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மன்னா, சகோதரர்களான ஹம்சன், டிம்பகன் இருவரும் அந்த இரவிலேயே கொண்டாடப்பட்ட மலையான கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(1) இரவு முடிந்து, சூரியன் எழுந்தபோது, கேசிசூதனனான கேசவனும் கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(2) சாத்யகி, பலபத்ரன் {பலராமன்}, சாரணன் ஆகியோரும், பிற யாதவர்களும், கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் இசையால் எதிரொலிக்கப்பட்ட கோவர்த்தன மலைக்குக் கேசவனுடன் சென்றனர்.(3)

மன்னா {ஜனமேஜயா}, அவர்கள் கோவர்த்தன மலையை அடைந்தபோது, எண்ணற்ற படைவீரர்கள் மற்றும் பசுக்களின் ஒலியால் நிறைந்திருக்கும் அந்தச் சுற்றுச்சூழலைக் கண்டனர்.(4) மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, மலையின் வடக்கில் யாதவர்கள் கூடினர். அதன்பிறகு அந்தப் போர், யமுனை நதியின் அருகில் மீண்டும் தொடங்கியது.(5)

போர் தொடங்கியபோது, ஹம்சடிம்பகர்களைக் காயப்படுத்தும் ஏழு கணைகளை வசுதேவர் ஏவினார். சாரணன் அந்தச் சகோதரர்கள் இருவர் மீதும் இருபத்தைந்து கணைகளை ஏவினான். கங்கனோ, பத்துக் கணைகளை ஏவினான்.(6) இவ்வாறே முன்னணி யாதவர்களில் பலர் ஹம்சடிம்பகர்களுடன் போரிட்டனர். உக்கிரசேனன், எழுபத்துமூன்று முட்கணைகளை ஏவினான்.(7) மன்னா, விராடன் முப்பது கணைகளை ஏவினான். சாத்யகி ஏழு கணைகளையும், விப்ருது எட்டுக் கணைகளையும், உத்தவர் பத்துக் கணைகளையும் அந்த மன்னர்கள் {ஹம்சடிம்பகர்கள்} இருவர் மீதும் ஏவினர்.(8) பகைவரைக் காயப்படுத்தும் வகையில், பிரத்யும்னன் முப்பது கணைகளையும், சாம்பன் ஏழு கணைகளையும், அநாதிருஷ்டி அறுபத்தொரு முட்கணைகளையும் ஏவினர்.(9) மன்னா, இவ்வாறு முக்கிய யாதவர்கள் அனைவரும் பேராவலுடனும், உத்வேகத்துடனும் போரிடத் தொடங்கினர். அது, பார்ப்பதற்கு அற்புதமான கடும்போராகத் திகழ்ந்தது.(10)

வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஆதரவாக யாதவர்கள் அனைவரும் ஹம்சடிம்பகர்களுடன் போரிட்டனர்.{11} சகோதரர்களான ஹம்சன், டிம்பகன் இருவரும் தங்கள் கணைத் தாரைகளால் யாதவர்கள் அனைவரையும் ஒடுக்கினர். ஹம்சனும், டிம்பகனும் பிரகாசமான பத்துப் பத்துக் கணைகளை யாதவர்கள் ஒவ்வொருவரின் மீதும் ஏவினர்.{12} அந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட யாதவேஷ்வரர்கள் பலரும், வசந்தகாலத்தில் மலரும் பலாச மரங்களைப் போலத் தோற்றமளிக்கும் வகையில் குருதியைக் கக்கினர்.{13} மன்னா {ஜனமேஜயா}, அப்போது, பெரிதும் ஒடுக்கப்பட்ட யாதவர்கள் போர்க்களத்தைவிட்டுத் தப்பியோடத் தொடங்கினர்.

அந்நேரத்தில், வாசுதேவனும் {வசுதேவரின் மகனான கிருஷ்ணனும்}, பலனும் {ஹலாதரனான / கலப்பைதாரியான பலராமனும்} தங்கள் கைகளில் விற்களுடன் ஹம்சடிம்பகர்களை எதிர்த்தனர்.{14,15} அதன்பிறகு, நீண்ட காலத்திற்கு முன்னர்ச் சக்ரன் {இந்திரன்}, ஸ்கந்தன் {கார்த்திகேயன்} ஆகியோருக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரை அனைவருக்கும் நினைவூட்டும் வகையில், ஓர் அற்புதப் போர் நடைபெற்றது. தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், யக்ஷர்கள், பெரும் நாகர்கள் ஆகியோர்{16} வானில் தேவவிமானங்களில் அமர்ந்தபடியே இந்தப் பெரும்போரைக் கண்டனர். அந்நேரத்தில் ஹம்சடிம்பகர்களைப் பாதுகாக்க மஹாதேவனால் அனுப்பப்பட்ட பூதேஷ்வரர்கள் திடீரெனத் தோன்றினர்.{17}

வாசுதேவன் {கிருஷ்ணன்}, ஹம்சனுடன் போரிட்டது நிகரான இருவருக்கிடையில் நடைபெறும் போரைப் போலத் தோன்றியது. அவர்களின் அருகிலேயே பலராமனும் டிம்பகனும் போரிட்டனர். அந்த நான்கு போர்வீரர்களும், தங்கள் தேர்களில் அமர்ந்தபடியே சங்குகளை முழக்கினர். வாசுதேவன் {கிருஷ்ணன்}, அனைவரின் இதயங்களையும் ஆச்சரியத்தால் நிறைக்கும் வகையில் தன் பாஞ்சஜன்ய சங்கை முழக்கினான்.

பேருடலையும், துருத்தும் வயிறுகளையும் கொண்ட பயங்கரமான அந்தப் பூதங்கள் இருவரும், தங்கள் சூலங்களால் கிருஷ்ணனைத் தாக்கினர். தேவர்களும், கந்தர்வர்களும் அந்தச் சூலங்களால் தாக்கப்பட்டும் புன்னகைத்துக் கொண்டிருந்த கிருஷ்ணனைக் கண்டனர். போர்வீரர்களில் சிறந்தவனான ஜனார்த்தனன், தன் தேரில் இருந்து கீழே குதித்து அந்தப் பூதங்கள் இருவரையும் பிடித்தான். அவர்கள் இருவரையும் நெருப்புப் பந்தத்தைப் போல நூறு முறை சுழற்றி கைலாச மலையை நோக்கி வீசியெறிந்தான்.{18-24} அந்தப் பூதங்கள், கைலாச மலையின் சிகரத்தில் விழுந்தபோது, கிருஷ்ணனின் பேராற்றலை வியந்தனர்.{25} தன்னைப் பாதுகாக்கும் அந்தப் பூதங்களைக் கிருஷ்ணன் தூக்கி வீசுவதைக் கண்டு ஹம்சன், கோபத்தால் கண்கள் சிவந்தான்.{26}

தேவர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தபோதே அவன் {ஹம்சன்}, “கேசவா, நாங்கள் ராஜசூய யஜ்ஞம் செய்வதை ஏன் நீ தடுக்க முனைகிறாய்?{27} நீ விளைவிக்கும் இடையூறுகளின் மத்தியிலும் எங்கள் தந்தை பிரம்மதத்தர் அவ்வேள்வியைச் செய்து முடிப்பார். நீ உன் உயிர் மீது மதிப்புக் கொண்டிருந்தால், நாங்கள் கோரும் கப்பத்தைக் கட்டுவாயாக. நந்தபுத்திரா {நந்தனின் மகனான கிருஷ்ணா}, நீ எங்களுக்குக் கப்பங்கட்ட விரும்பவில்லையெனில், ஒரு கணம் பொறுப்பாயாக. ஒப்பற்றதாக இருக்கும் என் ஆற்றலைக் கண்ட பிறகு, நீ புலனுணர்வை மீண்டும் அடைவாய். அதன் பிறகு, நீ கப்பமும் கட்டுவாயாக, என் தந்தையும் வேள்வியைத் தொடங்குவார். சூலபாணியான மஹாதேவன், தேவர்களின் ஈசுவரனாக {தேவசுவரனாக} இருப்பதைத் போல, நானும் மன்னர்களின் தலைவனாவேன் {ராஜர்களின் ஈசுவரனாவேன் / ராஜேசுவரனாவேன்}. இந்தப் போரில் உன் செருக்கை நான் எப்படி அறுக்கப் போகிறேன் என்பதை நீ காண்பாயாக” என்றான் {ஹம்சன்}.{28-30}(11-30)

மன்னா {ஜனமேஜயா}, இதைச் சொன்ன பிறகு, சாலமரத்தைப் போன்று பெரிதாக இருந்த தன் வில்லை எடுத்துக் கொண்ட ஹம்சன், கிருஷ்ணனின் நெற்றியை நோக்கி ஒரு கணையை ஏவினான். அந்தக் கணை கிருஷ்ணனின் நெற்றியைத் துளைத்தாலும், அஃது அவனது மேனியை எழிலுடன் அலங்கரிப்பதாகவே தெரிந்தது.

அப்போது கிருஷ்ணன், சாத்யகியிடம், “பலமிக்க வீரா, என் தேரைச் செலுத்துவாயாக” என்றான். இதைக் கேட்ட சாத்யகி, தாருகனைத் தனக்குப் பின் இருந்த இருக்கையில் அமர்த்திவிட்டு அந்தத் தலைவனின் தேரைச் செலுத்தத் தொடங்கினான்.(31-33) இராஜேந்திரா {ஜனமேஜயா}, பகைவனைத் தாக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவாறே சாத்யகி தலைவனின் தேரைச் செலுத்திக் கொண்டிருந்தான். ஹம்சனின் கணைகளால் புண்பட்டக் கிருஷ்ணன், கடுங்கணையொன்றைத் தன் நாண்கயிற்றில் பொருத்தியவாறே, பகைவனின் அருகில் செல்லுமாறு சாத்யகிக்கு ஆணையிட்டான்.

பிறகு அந்தத் தலைவன் {கிருஷ்ணன்}, ஹம்சனிடம் பின்வருமாறு பேசினான்:(34,35) “பாவியே, இப்போதே நான் உன்னை இந்தக் கணையால் எரித்து விடுவேன். உனக்குத் திறனிருந்தால் என் முயற்சியை வீணடிப்பாயாக. அதிகம் பேசுவதில் பயனேதும் இல்லை. நீ க்ஷத்திரியன் என்பதால் போரிடும் உன் கடமையை நிறைவேற்றுவாயாக.(36) ஹம்சா, நான் கப்பங்கட்ட வேண்டுமென நீ விரும்பினால், இன்றே போர்க்களத்தில் உன் ஆற்றலை வெளிப்படுத்துவாயாக. மனிதர்களின் ஆட்சியாளனென நீ சொல்லிக் கொண்டாலும், புஷ்கரையில் வசிக்கும் முனிவர்களை நீ துன்புறுத்தியிருக்கிறாய்.(37) மனிதர்களில் இழிந்தவனே, நானே ஜகத்பதி. என் முன்னிலையில் பிராமணர்களைத் துன்புறுத்தும் அளவுக்கு நீ துணிந்திருக்கிறாயா? இவ்வுலகில் என்னிடம் பகை கொள்ளும் துஷ்டர்களைத் தண்டிப்பதன் மூலம் உன்னைப் போன்ற க்ஷத்திரியர்களை நான் அழித்து வருகிறேன். பெரும் முனிவர்களின் சாபத்தைப் பெற்றிருப்பதால் நீ ஏற்கனவே இறந்தவனாவாய். யமனிடம் உன்னைக் கொடுத்துப் பிராமணர்களுக்குப் பாதுகாப்பை நான் அருளப் போகிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணன் இதைச் சொல்லிவிட்டு ஹம்சன் மீது தன் நெருப்புக் கணையை ஏவினான். எனினும் ஹம்சனோ, நீர்க்கணையால் அதற்குப் பதிலடி கொடுத்தான். அப்போது கோவிந்தன், ஹம்சனின் ஆயுதத்திற்கு எதிர்த்தாக்குதல் தொடுக்கும் வகையில் வாயவ்ய ஆயுதத்தை இருப்புக்குள் அழைத்து மஹேந்திர ஆயுதத்தையும் அதனுடன் சேர்த்தான். அதன்பிறகு கிருஷ்ணன் மஹேஷ்வர ஆயுதத்தை இருப்புக்குள் அழைத்தான். அதற்கு ஹம்சன் உடனே ரௌத்ர ஆயுதத்தால் எதிர்த்தான்.

கிருஷ்ணன், கந்தர்வ, ராக்ஷச, பைசாச ஆயுதங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக ஏவினான். இருப்பினும் ஹம்சன் தன்னுடைய பிரம்மாஸ்திரம், கௌபேரமாஸ்திரம், ஆசுராஸ்திரம் உள்ளிட்ட ஆயுதங்களால் அவை அனைத்திற்கும் பதிலடி கொடுத்தான். அதன்பிறகு ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஹம்சனுக்கு எதிராகப் பெருஞ்சக்திவாய்ந்த பிரம்மசிரத்தை ஏவினான்.(38-46) மன்னா {ஜனமேஜயா}, அந்த முதன்மையான ஆயுதத்தைக் கண்ட ஹம்சன் பேரச்சம் கொண்டான். இருப்பினும் அவன் தன்னுடைய ஆயுதத்தால் அதற்கும் பதிலடி கொடுத்தான்.(47) உயிரினங்கள் அனைத்தின் உயிராகவும், ஆன்மாவாகவும் இருப்பவனும், அண்டத்தைப் படைத்துக் காப்பவனும், தேவதேவனுமான ஜனார்த்தனன் தன் கைகளையும், வாயையும் யமுனை நீரில் கழுவி வலிமைமிக்க வைஷ்ணவாஸ்திரத்தை இருப்புக்கு அழைத்தான். பழங்காலத்தில் அசுரர்களிடமிருந்து ராஜ்ஜியத்தை மீட்ட அதே ஆயுதத்தின் துணையால் கிருஷ்ணன் ஹம்சனைக் கொல்ல முயற்சித்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(48,49)

ஹம்ச வதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 103-யமுனையின் மடுவில் ஹம்சனை மூழ்கடித்த கிருஷ்ணன்…வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, மஹாபயங்கரமான அவ்வாயுதம் {வைஷ்ணவாஸ்திரம்} தன்னை அணுகுவதைக் கண்ட மன்னன் ஹம்சன் பீதியில் கிட்டத்தட்ட முடக்கமடைந்தான்.(1) விரைவில் பதற்றம் தணிந்த அவன் தன் தேரில் இருந்து குதித்தான். பிறகு, ரிஷிகேசனான கிருஷ்ணன் ஏற்கனவே காளியனைத் தண்டித்த யமுனை ஆற்றை நோக்கி அவன் ஓடினான்.(2) யமுனையில் இருந்த அந்தப் பெரிய மடுவின் நீர், பாதாளலோகம் வரை ஆழம் கொண்டதாகவும், அஞ்சனத்தைப் போல் கருமையாகவும் இருந்தது.(3)

மலைகளைப் பெயர்த்து பெருங்கடலுக்குள் வீசும்போது ஆர்ப்பரித்த இந்திரனைப்போல அந்த ஹம்சன் பேராரவாரவொலி எழுப்பியவாறே ஓடிச்சென்று அந்த மடுவுக்குள் குதித்தான். தேவர்களும் அடங்கிய இந்த அண்டத்தின் தலைவனான கிருஷ்ணன் இதை அறிந்ததும், காற்றில் குதித்தெழுந்து, பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் சரியாக ஹம்சன் மீதே அந்த மடுவுக்குள் குதித்தான். மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கேசவன், அப்போது தன் கால்களால் வலுவாக மிதித்தே ஹம்சனை யமலோகத்திற்கு அனுப்பிவைத்தான். அல்லது, குறைந்தபட்சம் இதுதான் {கிருஷ்ணன் இவ்வாறு ஹம்சனைக் கொன்றான் என்பதே} பார்வையாளர்கள் சிலரின் கருத்தாக இருந்தது.(4-7)

இராஜேந்திரா {ஜனமேஜயா}, வேறு சிலரோ அந்த ஹம்சன் பாதாள லோகத்திற்கு அழுத்தப்பட்டுப் பெரும்பாம்புகளால் உண்ணப்பட்டான் என்று சொல்கிறார்கள். நிலை எவ்வாறிருப்பினும், அன்றுமுதல் {இன்றுவரை} அவன் திரும்பவில்லை.(8) மன்னா, அதன்பிறகு ஜகந்நாதன் {கிருஷ்ணன்} தன் தேருக்குத் திரும்பினான். ஹம்சன் இறந்த பிறகு, உன் முப்பாட்டனும், தர்மபுத்திரனுமான யுதிஷ்டிர மஹாராஜனே ராஜசூய வேள்வியைச் செய்தான். ஹம்சன் உயிருடன் இருந்திருந்தால், அவனது வேள்வி மண்டபத்திற்கு வந்து அவன் முன்பு எவன் வணங்கியிருப்பான்?(9,10)

பிரபுவே {ஜனமேஜயா}, சிவனிடம் வரம்பெற்றதில் ஹம்சன் செருக்கில் மிதந்து வந்தான். ஆனால், “பகைவரின் செருக்கை அழிக்கும் கிருஷ்ணன் அந்த ஹம்சனைக் கொன்றான். கிருஷ்ணன் ஹம்சனைக் கொன்றே விட்டான்” என்ற செய்தி உலகம் முழுவதும் பரவியது. முக்கியக் கந்தர்வர்கள் தேவலோகத்தில் இரவும் பகலும் இந்த வரிகளையே பாடிக் கொண்டிருந்தனர்.(11,12)

இவ்வாறே லோகநாதனான கிருஷ்ணன், தன் புகழ் எங்கும் பரவும்படி ஹம்சனை யமுனையின் மடுவிற்குள் கொன்றான்” என்றார் {வைசம்பாயனர்}.(13)

டிம்பகன் ஆத்ம தியாகம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 104-அண்ணனின் பிரிவு தாளாமல் தன் நாவைப் பிடுங்கி உயிர்த்தியாகம் செய்த டிம்பகன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “டிம்பகன், பெருஞ்சக்திவாய்ந்த தன் அண்ணன் ஹம்சன் பெரும்போரில் கொல்லப்பட்டான் என்பதைக் கேட்டதும், பலராமனுடன் போர் புரிவதை நிறுத்திவிட்டு யமுனையின் கரைக்குச் சென்றான். கலப்பைதாரியான பலராமன் வேகமாக ஓடி அவனை விரட்டிச் சென்றான்.(1,2) மன்னா {ஜனமேஜயா}, ஹம்சன் குதித்த அதே இடத்தில் டிம்பகனும் யமுனையின் நீரில் குதித்தான். அதன் விளைவாக யமுனையின் நீர் கலங்கியது.(3)

மன்னா, டிம்பகன் நீரைக் கோபத்துடன் அடித்து நீர்ப்பரப்பில் இருந்து மேலும் மேலும் அடியில் மூழ்கிச் சென்றான். மீண்டும் மீண்டும் முயற்சித்தாலும் அவனால் தன் அண்ணனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் நீரில் ஆழ மூழ்கி மீண்டும் பரப்புக்கு வந்தபோது, தன் முன் வாசுதேவனை {கிருஷ்ணனைக்} கண்டான்.

அப்போது டிம்பகன், “இடைப்பயலே, என் அண்ணன் ஹம்சன் எங்கே?” என்று கேட்டான்.

அதற்கு வாசுதேவன், “அருவருக்கத்தக்க மன்னா, யமுனையிடம் இந்தக் கேள்வியைக் கேட்பாயாக” என்றான்.

வாசுதேவனின் மறுமொழியைக் கேட்ட டிம்பகன், தன் அண்ணனிடம் பேரன்பும், பற்றும் கொண்டவன் என்பதால் மேலும் யமுனையாற்றின் நீரில் ஆழமாக மூழ்கித் தேடினான். எங்குத் தேடினும் தன் அண்ணனைக் காணமுடியாமல் அவன் புலம்பத் தொடங்கினான். {டிம்பகன்}, “மன்னர்களில் சிறந்தவரே, நண்பர்கள் எவருமற்றவனான இந்த டிம்பகனை விட்டுவிட்டு எங்குச் சென்றுவிட்டீர்? அண்ணா, என்னை இங்கே தனியாக விட்டுவிட்டு எங்குச் சென்றீர்?” என்று புலம்பினான்.

அண்ணனிடம் பாசமிக்க டிம்பகன், இவ்வாறு அழுது புலம்பி யமுனையில் ஆழமான அந்தத் தடாகத்திலேயே தன்னுயிரை விடத் தீர்மானித்தான். அவன் மீண்டும் மீண்டும் நீரில் மூழ்கி, தன் அண்ணனுக்காகப் புலம்பி அழுவதற்காக வெளியே வந்தான். இறுதியில் வீரமிக்க அந்த டிம்பகன், தன் கைகளாலேயே தன் நாவைப் பிடுங்கி தற்கொலை செய்து கொண்டான். அத்தகைய மரணமே அவன் நரகத்திற்குச் செல்ல வழிவகுத்தது.

ஹம்சடிம்பகர்களின் மரணத்திற்குப் பிறகு தாமரைக் கண்ணனான கிருஷ்ணன் போர்க்களத்திற்குத் திரும்பினான். அந்தப் பெரும்போரின் விளைவில் நிறைவடைந்த வாசுதேவனும், பலபத்ரனும், தங்கள் இளமைக் காலங்களில் இன்புற்றிருந்த கோவர்த்தன மலையில் சிறிது காலம் ஓய்ந்திருந்தனர்” என்றார் {வைசம்பாயனர்}.(4-15)

நந்தனும் யசோதையும் | பவிஷ்ய பர்வம் பகுதி – 105- நந்தகோபரும், யசோதையும், ஆயர்பாடி மக்களும் கோவர்த்தன மலையில் கிருஷ்ணனையும், பலராமனையும் சந்தித்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “யசோதையும், நந்தகோபனும் நீண்ட நாட்களாகக் கிருஷ்ணனைக் காண விரும்பினர். எனவே, அவன் தன் தமையனுடன் {பலராமனுடன்}கோவர்த்தன மலைக்கு வந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டதும் அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். கோபர்கள், கோபிகைகள் ஆகியோர் அனைவரையும் திரட்டிக் கொண்டும், வெண்ணெய், தயிர், சுண்டவைக்கப்பட்ட பால், பாயஸம், காட்டு மலர்கள், மயில் இறகுகளாலான கைவளைகள் ஆகியவற்றையும், இன்னும் பிற பரிசுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டும் அவர்கள் கோவர்த்தன மலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(1-3)

அங்கே அவர்கள் கரிய மான்களின் கண்களையுடைய வாசுதேவனும், அவனது அண்ணன் பலராமனும் ஒரு மரத்தினடியில் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்டனர்.(4) கிருஷ்ணனையும், பலராமனையும் கண்டதும், நந்தனும், யசோதையும் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தனர். அப்போது, கிருஷ்ணனும், பலராமனும், நந்தனையும், யசோதையையும் வணங்கினர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பரிசுப்பொருட்களைக் கொடுத்துப் பாயசத்தையும் ஊட்டினர்.(5)

அப்போது கிருஷ்ணன், “அன்புத் தந்தையே, அன்புத்தாயே விரஜத்தில் {ஆயர்பாடியில்} உள்ள பசுக்கள் அனைத்தும் நலமா? அப்பா, பசுக்கள் இன்னும் பால் தருகின்றனவா? கன்றுகள் அனைத்தும் நலமா?(6) விரஜத்தின் பசும்பால் இன்னும் தூய்மையாகவும், மங்கலமாகவும் இருக்கிறதா? அழகிய பசுக்கள் போதுமான அளவுக்கு உங்களிடம் இருக்கின்றனவா? அன்னையே, குழந்தைகள் பருகப் போதுமான பால் கிடைக்கிறதா?(7) அன்புத் தந்தையே, போதுமான கயிறுகளும், கம்பங்களும் உங்களிடம் இருக்கின்றனவா? பசுக்கள் மேய போதுமான புல்வெளிகள் இருக்கின்றனவா?(8) அப்பா, வண்டிகள் அனைத்திலும் அவை சுமக்கும் பால் பொருட்களின் மணம் இருக்கிறதா? கோபிகையர் பிள்ளைகள் ஈன்று அன்னையராகினரா?(9) தந்தையே, விரஜத்தில் அவர்கள் போதுமான அளவுக்கு உடையாத குடங்களை வைத்திருக்கின்றனரா? பசுக்கள் ஒவ்வொரு நாளும் ஏராளமான பாலைக் கொடுக்கின்றனவா?(10) நமது பசுக்கள் பால், தயிர், வெண்ணை ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்கியிருக்கின்றனவா?” என்று கேட்டான்.(11)

நந்தன், “யதுவின் வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, கேசவா, நமது பசுக்கள் பெரும்பாலும் நல்ல உடல்நலத்துடன், பிணியற்றவையாக இருக்கின்றன. அதுவே அவற்றின் இயல்புநிலை.(12) கேசவா, தேவர்களின் தலைவா, உன் பாதுகாப்பில் நாங்கள் பாதுகாப்புடனும், நிறைவுடனும் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் அனைவரும் நலமாக இருக்கின்றோம். நமது பசுக்கள் அனைத்தும் நலமாக இருக்கின்றன.(13) கேசவா, எனக்கு முழுநிறைவேற்படும் வரை உன்னைக் காண முடியாதது மட்டுமே என் ஒரே கவலை. என் இதயம் அதன் காரணமாக மட்டுமே துன்புறுகிறது” என்றான் {நந்தகோபன்}”.(14)

வைசம்பாயனர், “தன் தந்தை அழுது புலம்புவதைக் கேட்ட கேசவன், “என் உயிர் தந்தையே, அழாதீர். வீட்டுக்குத் திரும்பிச் செல்வீர்” என்றான். பிறகு யசோதையிடம், “அன்புத் தாயே, நீயும் வீட்டுக்குத் திரும்பிச் செல்வாயாக.(15) உங்களைத் துதிப்பவர்கள் சுவர்க்கத்தை அடைவார்கள். உங்களை வணங்குபவர்கள் என்னுயிர் பக்தர்களாவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணன், தன்னை வளர்த்த தாய் தந்தையிடம் இதைச் சொல்லிவிட்டு, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டான். வாசுதேவன், தனது தந்தையையும், தாயையும் தேற்றி அவர்களைத் தழுவிக் கொண்டான். பிறகு யசோதையும், நந்தனும் கோபகோபிகைகளுடன் தங்கள் இல்லத்திற்குத் திரும்பிச் சென்றனர்.(16-18) அப்போது ரிஷிகேசனான கிருஷ்ணன், விருஷ்ணி, யது குலத்தோர் அனைவருடன் துவாரகை திரும்பும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினான்.(19) இந்த விவரிப்புகளைக் கவனத்துடன் படிக்கும் எவருக்கும், கேட்கும் எவருக்கும் நல்ல மகன் கிடைப்பான், இம்மையில் {உயிருடன் இருக்கையில்} ஏராளமான செல்வமும், மறுமையில் {இறந்தபின்} முக்தியும் கிடைக்கும்” என்றார் {வைசம்பாயனர்}.(20)

மீண்டும் துவாரகை | பவிஷ்ய பர்வம் பகுதி – 106-புஷ்கரையில் கிருஷ்ணனைத் துதித்த முனிவர்கள்; துவாரகை திரும்பிய கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, மஹாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணன், பிற யாதவர்களுடன் சேர்ந்து துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான். வழியில் புஷ்கரையில் நின்று அங்கே வசித்து வந்த பெரும் முனிவர்களைச் சந்தித்தான்.(1)

பொறாமையற்றவர்களான அந்தப் பெரும் முனிவர்கள், யதுவின் புகழ்பெற்ற வழித்தோன்றலான கிருஷ்ணனைக் கண்டு, அவனுக்கு அர்க்கியத்தையும், பிற மங்கலப் பொருட்களையும் கொடுத்தனர்.{2} பிறகு அவர்கள், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தையும் அறிந்த ஜகத்பதியான ஜனார்த்தனனிடம், “விஷ்ணுவே, நினைத்தற்கரிய ஆற்றல்படைத்தவன் நீயே.{3} போரில் ஹம்சனையும், டிம்பகனையும் கொன்றவன் நீயே. ஈசுவரனே, தேவர்களின் தலைவனாலும் {இந்திரனாலும்கொல்லப்பட முடியாத ராக்ஷசன் விசக்ரனைக் கொன்றவன் நீயே.{4} உண்மையில் உன்னைத் தவிர வேறு எவனாலும் அவனைக் கொன்றிருக்க முடியாது என நாங்கள் நம்புகிறோம்.

ஹரியே, எங்கள் தினப்படி ஆன்ம அறுவடைக்குத் தேவையான பரிவாரங்கள் அனைத்தும் இனி தடையில்லாமல் எங்களுக்குக் கிடைக்கும்.{5} உண்மையில், உன் தாமரைப் பாதங்களை நினைவுகூர்வதாலேயே நாங்கள் தூய்மை அடைந்து விடுவோம். உன்னைத் தியானிப்பவனின் வாழ்வில் நேரும் துன்பங்கள் அனைத்தையும் அகற்றுபவன் நீயே.{6} தொடர்ந்து நினைவுகூரப்படுவதன் மூலம் உன் தாமரைப் பாதங்கள் பரம புண்ணியத்தை அருள்கின்றன. ஹரியே, தவம் செய்யும் எங்களை நீயே பாதுகாக்கிறாய்.{7}

புனித அக்ஷரமான ஓம் எனும் ஓங்கார வஷட்காரத்தின் உருவகமாக நீயே இருக்கிறாய். யஜ்ஞம் {வேள்வி} நீயே, உயிரினங்கள் அனைத்தின் முப்பாட்டன் நீயே. ஜோதியாகத் திகழும் பிரம்மத்தின் பிறப்பிடமான நீயே பிரம்மனாகவும், ருத்திரனாகவும் இருக்கிறாய். உயிரினங்கள் அனைத்தினுள்ளும் உயிராகவும், ஆன்மாவாகவும் வசிக்கும் பரமாத்மா நீயே. ஜகத்பதியே, வேள்வி செய்வதன் மூலமும், கொடையளிக்கும் ஈகையின் மூலமும் நீயே வழிபடப்படுகிறாய்.{8,9}(2-9) அண்டத்தைப் படைக்கும் பிரம்மம் நீயே. எனவே நாங்கள் உன்னைப் பக்தியுடன் வணங்குகிறோம். தேவா, உன்னிடம் பகை பாராட்டும் அனைவரையும் அழித்து அண்டத்தைக் காப்பாயாக” என்றனர் {முனிவர்கள்}.(10)

ஹரியும், “நன்று. அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான். அங்கே அவன் விருஷ்ணி குலத்தாருடன் பெரும் மகிழ்ச்சியுடன் வசித்திருந்தான்.(11) ஜனமேஜயா, நீ கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேவதேவனான கிருஷ்ணனின் கடந்த காலத்தை உனக்கு விளக்கிச் சொன்னேன். இன்னும் நீ வேறென்ன கேட்க விரும்புகிறாய்?” என்றார் {வைசம்பாயனர்}.(12)

மஹாபாரதப் பலன்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 107-ஒவ்வொரு பர்வத்தின் நிறைவிலும் என்னென்ன கொடைகள் அளிக்கப்பட வேண்டும்; மஹாபாரதம் உரைப்பவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய கொடை; மஹாபாரதம் கேட்பவருக்கும், படிப்பவருக்கும் உண்டான பலன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மதிப்பிற்குரிய ஐயா, கல்விமான்கள் எந்த விதிகளின்படி பாரதத்தைக் கேட்கிறார்கள்? அதன் பலன்கள் என்னென்ன? அது நிறைவடையும்போது வழிபடப்பட வேண்டிய தேவர்கள் யாவர்?{1} ஒவ்வொரு பர்வம் நிறைவடையும்போதும் செய்ய வேண்டிய ஈகைகள் என்னென்ன? அதைச் சொல்பவர் எவ்வாறு இருப்பது உகந்தது? இவை அனைத்தையும் எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.{2}(1,2)

வைசம்பாயனர், “ஓ! மன்னா பாரதம் எவ்வாறு கேட்கப்பட வேண்டும் என்பதையும், அதன் பலன்கள் என்னென்ன என்பதையும் கேட்பாயாக. ஓ! மன்னா, உன் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன் கேட்பாயாக.(3)

தேவலோகத்தில் வாழும் தேவர்கள் பூமிக்கு விளையாட வந்தனர். அவர்கள் தங்கள் பணியை முடித்துவிட்டுத் தங்கள் உலகத்திற்கே திரும்பிச் சென்றனர்.{4} பூமியில் தேவர்களின் பிறப்பையும், ரிஷிகளின் பிறப்பையும் சொல்கிறேன் கவனமாகக் கேட்பாயாக.{5} ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, ருத்திரர்கள், சாத்யர்கள், விஷ்வேதேவர்கள், ஆதித்யர்கள், அஷ்வினி ரெட்டையர்கள், லோகபாலர்கள், மஹாரிஷிகள்,{6} குஹ்யர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், வித்யாதரர்கள், சித்தர்கள், தர்மன், பிரம்மன் {சுயம்பு}, காத்யாயன முனிவர்,{7} மலைகள், ஆறுகள், பெருங்கடல்கள், அப்சரஸ்கள், கோள்கள், வருடங்கள், அயனங்கள், பருவகாலங்கள்,{8} அசைவன, அசையாதன, தேவர்கள், அசுரர்கள் ஆகியோர் அனைவரும் (வரலாறாகத் திகழும் இந்த) பாரதத்தில் அடிக்கடி சொல்லப்படுவது காணப்படுகிறது.{9} அவர்களின் பெயர்களையும், சிறப்புமிக்கச் செயல்களையும் கேட்பதன் மூலம் ஒரு மனிதன் செய்த கொடும்பாவங்களில் இருந்தும் உடனடியாக விடுபடுகிறான்.{10)

இந்த வரலாற்றை {இதிஹாஸத்தை} முறையாகவும், வரிசையாகவும் ஒருவன் கேட்டால், புலன்களைக் கட்டுப்படுத்தி, ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி ஒருவன் இந்தப் பாரதத்தில் தேர்ச்சியடைந்தால், அவன் அந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஈகை புரிய வேண்டும்.{11,12} அவன், மதிப்புடனும், தன் சக்திக்குத் தகுந்த அளவிலும் பல்வேறு ரத்தினங்களையும், மாடுகளில் பால் கறப்பதற்கான பாத்திரங்களையும், நன்கு அலங்கரிக்கப்பட்ட திறன்கொண்ட கன்னிகைகளையும்,{13} பல்வேறு வாகனங்களையும், வீடுகள், நிலங்கள், ஆடைகள், பொன், குதிரைகள், மதங்கொண்ட யானைகளால் சுமக்கப்படும் படுக்கைகள், வாகனங்கள், நன்கு கட்டப்பட்ட தேர்கள் ஆகியவற்றைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.{14,15} சிறந்தவை எவற்றையும், விலைமதிப்புமிக்கப் பொருட்கள் எவற்றையும் அவன் இருபிறப்பாளர்களுக்குக் கொடுக்க வேண்டும். அவன் தன்னையும், தன் மனைவியையும், பிள்ளையும் கூடக் கொடையாக அளிக்கலாம் எனும்போது இன்னும் சொல்ல ஏதுமில்லை.{16} ஒருவன் இந்தக் கொடைகளை மதிப்புடன் கொடுத்தால், அவனால் பாரதத்தில் தேர்ச்சியடையமுடியும். ஒருவன் தன் சக்திக்கு ஏற்றபடி, நல்லோர், தொண்டாற்றுவோர், வாய்மை நிறைந்தோர், எளியோர், தற்கட்டுப்பாடுடையோர், மதிப்புமிக்கோர் ஆகியோரை நிறைவடையச் செய்வதன் மூலம் ஆன்ம சக்திகளை எவ்வாறு அடையலாம் என்பதைக் கேட்பாயாக.{17,18}

இந்தப் பாரதத்தைச் சொல்பவன் தூய நடத்தையும், ஒழுக்கமும் கொண்டவனாக, வெள்ளை ஆடை உடுத்துபவனாக, தற்கட்டுப்பாடு உடையவனாக, தீக்ஷை பெற்றவனாக, சாத்திரங்கள் அனைத்தையும் நன்கறிந்தவனாக, மதிப்புமிக்கவனாக, தீமையற்றவனாக இருக்க வேண்டும். அவன் வாய்மை நிறைந்தவனாகவும் மதிப்புக்குத் தகுந்தவனாகவும், காலம் அறிந்து செயல்படுபவனாகவும் இருக்க வேண்டும்.{19,20}(4-20) அவன் அதைத் விரைவாகவோ, மெதுவாகவோ தெளிவான அசைவுகளுடன் எளிதில் படிக்க வேண்டும்.{21} அவன் படிக்கும்போது சொற்களையும், எழுத்துகளையும் அழுத்தமாக உச்சரிக்க வேண்டும். அவன் குவிந்த மனத்துடனும், நல்ல உடல்நலத்துடனும், உற்சாகத்துடனும் அதைப் படிக்க வேண்டும்.{22} நாராயணனையும், உயிரினங்களில் மேன்மையான நரனையும், கல்வியின் தேவியான சரஸ்வதியையும் வணங்கிவிட்டு ஒருவன் பாரதத்தை உரைக்க வேண்டும் என்பது விதியாகும்.{23}(22,23) ஓ! பாரதக் குலத்தின் பெரும் மன்னா, ஒருவன் விதிமுறைகளைப் பின்பற்றி, தன்னைத் தூய்மை செய்து கொண்டு பாரதம் கேட்டால், அத்தகைய மனிதன் பலன்களை அறுவடை செய்கிறான்.{24} 

அதைத் தொடக்கம் முதல் ஹரிவம்சத்தின் இறுதி வரையில் கேட்ட பிறகு அவன், பிராமணர்களுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து அவர்களை நிறைவடையச் செய்ய வேண்டும்.{25} ஒரு முறை அதைக் கேட்கும் மனிதன், அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைந்து, தேவலோகத்து அப்சரஸ்களால் நிறைந்த ஒரு விமானத்தையும் அடைகிறான். பெரும் மகிழ்ச்சியுடன் அவன் தேவர்களுடன் தியுலோகத்திற்குச் செல்கிறான்.{26} ஒருவன் இருமுறை அதைக் கேட்டால், அதிராத்ர வேள்வி செய்த பலன்களை அடைந்து, ரத்தினங்களால் நிறைந்த தெய்வீகத் விமானங்களைச் செலுத்தி,{27} தெய்வீக மாலைகளையும், ஆடைகளையும் அணிந்து, தெய்வீக நறுமணப்பொருட்களையும் அனுபவித்து, தெய்வீகக் கவசம் தரித்துத் தேவர்களின் நிலத்தில் எப்போதும் வாழ்வான்.{28} அவன் மூன்று முறை கேட்டால், துவாதஷாஹ வேள்வியின் பலன்களை அடைகிறான். மேலும் அவன் சொர்க்கத்தில் பல லக்ஷம் வருடங்கள் தேவனைப் போல வாழ்கிறான்.{29} அவன் அதை நான்கு முறை கேட்டால், வாஜபேய வேள்வி செய்த பலன்களை அடைகிறான். அவன் அதை ஐந்து முறை கேட்டால், இருமடங்கு பலன்களை அடைந்து சொர்க்கத்திற்குச் செல்கிறான்.{30} சூரியனைப் போலவும், எரியும் நெருப்பைப் போலவும் பிரகாசமிக்கத் தேரில் தேவர்களுடன் அமர்ந்து சென்று, தேவலோகத்தில் இந்திரனின் அரண்மனையில் லக்ஷக்கணக்கான ஆண்டுகள் இன்புறுகிறான்.{31}

அவன் அதை ஆறுமுறை கேட்டால், நான்கு மடங்கு பலன்களையும், ஏழுமுறை கேட்டால் அதைவிட மூன்று மடங்கு பலன்களையும் அடைகிறான்.{32} மேலும் விரும்பிய இடமெல்லாம் செல்வதும், கைலாச மலைச் சிகரத்தைப் போலப் பெரியதும், வைடூரியம், பவளம், வைரம் ஆகியவற்றால் அமைந்த இருக்கைகளைக் கொண்டதுமான தேரைச் செலுத்திக் கொண்டு அப்சரஸ்களுடன் சேர்ந்து இரண்டாவது சூரியனைப் போல எங்கும் திரிந்து கொண்டிருப்பான்.{33} அவன் அதை எட்டு முறை கேட்டால் ராஜசூய வேள்வி செய்த பலனை அடைந்து, சந்திரக் கதிர்களைப் போன்றவையும், மனோவேகம் கொண்டவையுமான குதிரைகளால் இழுக்கப்படும் அழகிய தேரைச் செலுத்திக் கொண்டு சந்திரனை விட அழகிய முகங்களைக் கொண்ட அழகிய கன்னிகைகளைக் காண்பான்.{34,35} அவன் அப்சரஸ்களின் மடியில் உறங்கிக் கொண்டே அவர்களுடைய மேகலை மற்றும் பிற ஆபரணங்களின் கிங்கிணி மணியொலியைக் கேட்பான்.{36}

அவன் அதை ஒன்பது முறை கேட்டால் வேள்விகளின் மன்னனான வாஜிமேதத்தின் பலன்களை அடைவான்.{37} மேலும், கந்தர்வர்கள், அப்சரஸ்களால் நிறைந்ததும், பொன்னாலான சாளரங்களைக் கொண்டதும், பொன்தூண்களால் அலங்கரிக்கப்பட்டதும், வைர இருக்கைகளைக் கொண்டதுமான தேரில் அமர்ந்து கொண்டு,{38,39} தெய்வீக மாலைகளையும், ஆடைகளையும் அணிந்து கொண்டும், சந்தனக் குழம்பைப் பூசிக்கொண்டும், தேவர்களின் துணையுடன் தேவலோகத்தில் இன்புற்றிருப்பான்.{40} அதைப் பத்து முறை கேட்டு இருபிறப்பாளரை வணங்குவதன் மூலம் ஒருவன், பாடுவதில் திறம்பெற்ற கந்தர்வர்களாலும், அப்சரஸ்களாலும் நிறைந்ததும், சிறு மணிகளின் வலையால் உண்டாகும் ஒலியைக் கொண்டதும், கொடிகளாலும், முக்கோணக் கொடிகளாலும், ரத்தினம் போன்ற இருக்கைகளாலும், வைர வாயில்களாலும், அலங்கரிக்கப்பட்டும், தங்க வலைகளால் சூழப்பட்டதுமான தேரைச் செலுத்துவான்.{41-43} அவன், சூரியனைப் போன்ற மகுடத்தை அணிந்து, பொன்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, தெய்வீக மாலைகளையும், களிம்புகளையும் தரித்துக் கொண்டு, தேவலோகத்திலேயே திரிந்து வருவான்.{44,45} அவன் தேவர்களின் தயவால் பெருஞ்செழிப்பை அடைவான். இவ்வாறு அவன், தேவர்களின் மன்னனுடைய உலகத்தில், கந்தர்வர்கள், அப்சரஸ்களுடன் சேர்ந்து இருபத்தோராயிரம் ஆண்டுகள் இன்புற்றிருப்பான். அவன் பல்வேறு லோகங்களில் அமரனைப் போல வாழ்ந்திருப்பான்.{46,47}

அதன்பிறகு அவன் படிப்படியாகச் சந்திரலோகத்திலும், சூரிய லோகத்திலும் வாழ்ந்து, சிவலோகம் சென்று பிறகு விஷ்ணு லோகத்தை அடைகிறான்.{48,49} ஓ! மன்னா, இஃது இவ்வாறே நடக்கும்; இதுகுறித்து ஒருவன் விவாதிக்கக்கூடாது. அவனை மதிப்புடன் போற்ற வேண்டும் என என் ஆசான் {வியாசர்} சொல்லியிருக்கிறார்.{50} ஒருவன் தன் மனத்தில் விரும்பும் எதையும், அதை உரைப்பவனுக்குக் கொடுக்க வேண்டும். யானைகள், குதிரைகள், தேர்கள், வாகனங்கள், சுமை இழுக்கும் விலங்குகள், தங்கக் குண்டலங்கள், பொன் கயிறுகள்,{51} பல்வேறு ஆடைகள், நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை அவன் கொடுக்க வேண்டும். அவன் தேவனைப் போல இருக்க வேண்டும், அதன் பிறகு அவன் விஷ்ணுவின் உலகத்தை அடைவான்.{52}

அதன் பிறகு, ஓ! மன்னா, பாரதம் உரைக்கப்படும் ஒவ்வொரு பர்வத்திலும் ஒருவன் பிராமணர்களுக்குக் கொடைகளை அளிக்க வேண்டும். நான் அவற்றைச் சொல்கிறேன்.{53} ஓ! மன்னா, ஓ! பரதனின் வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, ஒரு பிராமணரின் பிறவி {ஜாதி}, நாடு, செல்வம், பெருமை, அறவொழுக்கம் ஆகியவற்றை அறிந்த க்ஷத்திரியன்{54}, முதலில் அவரை ஆசி வழங்கச் செய்து பணியைத் தொடங்க வேண்டும். ஒரு பர்வம் முடிந்த பிறகு அவன் தன் சக்திக்கு ஏற்ற வகையில் அந்த இருபிறப்பாளருக்குக் கொடைகளை வழங்க வேண்டும்.{55} அவன் அதை உரைப்பவருக்கு முதலில் ஆடைகளையும், நறுமணப் பொருட்களையும் கொடுக்கவேண்டும், அதன் பிறகு இனிய பாயஸம் கொடுத்து அவரை ஊக்கப்படுத்த வேண்டும்.{56}

ஆஸ்தீக பர்வம் உரைக்கப்படும் நேரத்தில் அவன் முதலில் பிராமணர்களுக்கு இன்பண்டங்களைக் கொடுத்து ஊக்கப்படுத்தி, பிறகு கொடைகளை அளிக்க வேண்டும்.{57} சபா பர்வம் உரைக்கப்பட்ட பிறகு அவன் பிராமணர்களுக்குக் காய்கறி உணவை அளிக்க வேண்டும்.{58} ஆரண்ய பர்வம் உரைக்கப்படும் போது அவர்களுக்குக் கனிகளும், கிழங்குகளும் கொடுக்க வேண்டும். ஆரண்ய பர்வம் உரைக்கப்படும்போது அவன் பிராமணர்களுக்குக் குடுவை நிறைய நீரும், இன்பண்டமும், காட்டில் விளையும் இனிய கனிகளும், கிழங்குகளும் கொடுத்து உணவும் பரிமாற வேண்டும்.{59,60} விராட பர்வம் உரைக்கப்படும்போது அவன் பல்வேறு ஆடைகளைக் கொடையளிக்க வேண்டும். ஓ! பாரதர்களில் சிறந்தவனே, உத்யோக பர்வம் உரைக்கப்படும்போது,{61} அவன் பிராமணர்களை மாலைகளாலும், களிம்புகளாலும் அலங்கரித்து ஊக்கப்படுத்தி, இனிய பண்டங்களையும் பல்வேறு உணவுகளையும் பரிமாற வேண்டும். ஓ! மன்னா, பீஷ்ம பர்வம் உரைக்கப்படும்போது,{62} அவன் பிராமணர்களுக்குச் சிறந்த வாகனங்களையும், நல்ல சுவைமிக்க உணவையும் அளிக்க வேண்டும். துரோண பர்வம் உரைக்கப்படும்போது, பிராமணர்களுக்கு நிறைவாக அவன் உணவளிக்க வேண்டும், அதன் பிறகு விற்களையும், கணைகளையும், வாள்களையும் அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.{63} கர்ண பர்வம் உரைக்கப்படும்போது, கட்டுப்படுத்தப்பட்ட மனத்துடன் கூடியவனாக அவன் பிராமணர்களுக்கு நன்கு சமைத்த உணவுகளைக் கொடுக்க வேண்டும்.{64}(24-64)

சல்லிய பர்வம் உரைக்கப்படும்போது அவன் மது, வெல்லப்பாகு {மோதகம்}, மற்றும் இனிய உணவுகளைக் கொடுக்க வேண்டும்.{65} கதா பர்வம் {சௌப்திக பர்வம்} உரைக்கப்படும்போது அவன் வாற்கோதுமை உணவை அளிக்க வேண்டும். ஸ்திரீ பர்வம் படிக்கப்படும்போது அவன் பிராமணர்களுக்கு ரத்தினங்களைக் கொடுக்க வேண்டும்.{66} ஐஷிக பர்வம் உரைக்கப்படும்போது அவன் முதலில் நெய்யைக் கொடுக்க வேண்டும், அதன்பிறகு நன்கு சமைத்த உணவைக் கொடுக்க வேண்டும்.{67} சாந்தி பர்வம் உரைக்கப்படும்போது காய்கறி உணவை பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும். ஆஸ்ரமவாசிக பர்வம் உரைக்கப்படும்போது பிராமணர்களுக்குக் காய்கறி உணவைக் கொடுக்க வேண்டும்,{68} அஷ்வமேத பர்வம் உரைக்கப்படும்போது தன் இதயம் விரும்பும் உணவை பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும். மௌசல பர்வம் உரைக்கப்படும்போது மாலைகளையும், களிம்புகளையும் அவன் கொடையளிக்க வேண்டும்.{69}(65-69) மஹாபிரஸ்தான பர்வம் உரைக்கப்படும்போது அவன் சிறந்த அரிசியைக் கொடையளிக்க வேண்டும். ஸ்வர்கபர்வம் முடித்ததும் பிராமணர்களுக்கு ஹவிஸ் அரிசியைக் கொடையளிக்க வேண்டும்.(70)

ஹரிவம்சம் நிறைவடைந்ததும் ஒருவன் ஆயிரம் பிராமணர்களுக்கு உணவளிக்க வேண்டும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பசுவையும், ஒரு பொன் நாணயத்தையும் கொடையாக அளிக்க வேண்டும்.{71} இதைச் செய்ய முடியாதவனாக இருந்தால் அவன் அதில் பாதி அளவு செய்யலாம். ஒவ்வொரு பர்வம் நிறைவடையும்போதும் விவேகமுள்ள ஒரு மனிதன், அதை உரைப்பவருக்கு ஒரு புத்தகத்தையும்,{72} பொன் நாணயத்தையும் கொடையளிக்க வேண்டும். ஹரிவம்ச பர்வம் நிறைவடைந்ததும் அவன் பிராமணர்களுக்குப் பாலும், அரிசியும் {பாயஸம்} கொடையளிக்க வேண்டும்.{73}(65-73)

ஒரு முழுமையான சுலோகத்தையோ, அரை சுலோகத்தையோ, ஒற்றைச் சொல்லையோ, ஒரு சுலோகத்தின் ஓரேயொரு அக்ஷரத்தையோ கவனமாகக் கேட்டாலும் அவன் நிச்சயம் விஷ்ணுவின் அன்புக்குரிய பக்தனாகிறான்.{74} மொத்த ஹரிவம்சத்தையும் கேட்ட பிறகு ஒருவன் அதைச் சொன்னவனையும், அவனது மனைவியையும் முறையாக வணங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் லக்ஷ்மிநாராயணர்களே உண்மையில் வழிபடப்படுகிறார்கள்.{75} அதைச் சொல்பவனை வழிபட்டு, அவனுக்கு நிலமும், உடையும், அற்புதப் பசுவையும் கொடையளிப்பவன் தேவகியின் மகனான கிருஷ்ணனையே வழிபடுகிறான்[1].{76}சாத்திரங்களை நன்கறிந்தவனும், நல்லோரால் மதிக்கப்படுபவனும், வெள்ளாடை உடுத்தியவனும், அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான ஒருவன், ஒவ்வொரு பர்வத்தின் முடிவிலும் தற்கட்டுப்பாட்டுடன் ஸம்ஹிதங்களை முடிக்க வேண்டும்.{77} பிறகு அவற்றைப் பட்டுத்துணியில் மறைத்து ஒரு புனிதமான இடத்தில் அவற்றை வைத்து, மாலைகளாலும், நறுமணப்பொருட்களாலும் அவற்றைத் துதிக்க வேண்டும்.{78} பக்திமான்களால் மெச்சப்படும் இத்தகைய தற்கட்டுப்பாடுடைய மனிதன், மஹாபாரதத்தையும், ஹரிவம்சத்தையும் வழிபட வேண்டும்.{79} அதன்பிறகு அவன் இறைச்சி, பல்வேறு பொருட்கள், பானங்கள், பொன், பசுக்கள், ஆடைகள் ஆகியவற்றை வினியோகிக்க வேண்டும்.{80} தற்கட்டுப்பாடுயை மனிதன் எப்போதும் மூன்று தோலங்களை {முப்பத்துமூன்று கிராம்களைக்} கொண்ட பொன்னைக் {திரிபலம் ஸ்வர்ணம்} கொடுக்க வேண்டும். இயலாத மனிதன் அதில் பாதியோ, கால் பங்கோ கொடுக்க வேண்டும்.{81} அவன் தன் இதயம் விரும்பும் பல்வேறு பொருட்களைப் பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும். உரைப்பவரை அவன் தன் ஆசானைப் போல மதிப்புடன் நடத்த வேண்டும். அதன் பிறகு அவன் தேவர்கள் அனைவரின் பெயரையும், குறிப்பாக நரநாராயணர்களின் பெயரைச் சொல்ல வேண்டும்.{82} அதன்பிறகு பிராமணர்களை மாலைகளாலும், நறுமணப் பொருட்களாலும் அலங்கரித்துப் பல்வேறு கொடைகளைக் கொடுத்து அவர்களை நிறைவடையச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால் அவன் ஒவ்வொரு பர்வத்திலும் அதிராத்ர வேள்வி செய்த பலனை அடைவான்.{83,84}(74-84)

ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, எழுத்துகளையும், சொற்களையும் உரக்கப்படிப்பவனும், இனிய குரலைக் கொண்டவனுமான ஒருவனே உரைப்பவனாகி, பாரதத்தின் எதிர்காலப் பகுதியை {பவிஷ்ய பர்வத்தை} இருபிறப்பாளர்களின் முன்னிலையில் உரைக்க வேண்டும்.{85} முதலில் அவன், அதை உரைப்பவனை நன்கு அலங்கரித்து அவனுக்கு விருந்தளித்த பிறகு, இருபிறப்பாளர்களுக்கு உணவளிக்க வேண்டும். அதன் பிறகு அவன் உரைத்தவனைத் துதிக்க வேண்டும்.{86} உரைப்பவன் நிறைவடைந்தால், ஒருவன் நித்தியமான மிகச் சிறந்த அருளைப் பெறுவான். பிராமணர்கள் நிறைவடைந்தால் தேவர்கள் அனைவரும் தணிவடைகிறார்கள்.{87}(86-87) எனவே, ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, நல்லோர் முதலில் இருபிறப்பாளர்களுக்குத் தங்கள் இதயம் விரும்பும் கொடைகளைக் கொடுத்து நிறைவடையச் செய்ய வேண்டும்.(88) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இவ்வாறே நான் உரைகளை விளக்கிச் சொன்னேன். நான் உன் கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லிவிட்டேன் எனவே நீ இக்காரியத்தில் மதிப்புடன் நடப்பாயாக.{89}

ஓ! பெரும் மன்னா, மிகச் சிறந்த அருளை அடைய விரும்புகிறவன், பாரதப் பாராயணத்தை நிச்சயம் கேட்டு, அதன் நிறைவில் அதற்கான நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.{90} ஒருவன் தினமும் பாரதத்தைக் கேட்டுப் பாராயணம் செய்ய வேண்டும். எவன் பாரதத்தைத் தன் வீட்டில் கொண்டிருக்கிறானோ அவன் வெற்றியை அடைவான்.{91} பாரதம் மிகப் புனிதமானது; பாரதத்தின் பல்வேறு அத்தியாயங்களும் இங்கே விளக்கப்பட்டன. தேவர்களும் இதைப் படிக்கிறார்கள். பாரதம் மிகச் சிறந்த புகலிடமாக இருக்கிறது.{92}(86-92) பாரதம், சாத்திரங்கள் அனைத்திலும் மேன்மையானது. பாரதத்தின் மூலம் ஒருவனால் மோக்ஷத்தை {முக்தியை} அடைய முடியும்.{93} இதையே நான் உனக்குச் சொல்வேன். ஒரு மனிதன் மஹாபாரதத்தையும், பூமி, பசு, சரஸ்வதி, பிராமணர், கேசவன் ஆகியோரின் பெயர்களையும் உரைத்தால் அவன் ஒருபோதும் அழிவடைய {துன்பத்தை அடைய} மாட்டான்.{94}

ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, வேதங்கள், ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றின் தொடக்கம், நடுப்பகுதி, முடிவு ஆகியவற்றில் ஹரி விளக்கப்படுகிறான்.{95} பெரும் நிலையை {பரமகதியை} அடைய விரும்பும் மனிதன் விஷ்ணுவின் மகிமைமிக்கச் செயல்களும், ஸ்ருதிகளும் உரைக்கப்படுவதை நிச்சயம் கேட்க வேண்டும்.{96} பவித்ரமான இந்தப் பெரும் பணியானது அறத்தை விளக்குவதில் முக்கியம்வாய்ந்ததும், அனைத்து குணங்களையும் கொண்டதுமாகும்.{97} தலைமை குணங்களை அடைய விரும்புகிறவன் இதைக் கேட்க வேண்டும். உண்மையற்ற இந்த உலகில் ஹரிவம்சத்தைக் கேட்கும் ஒருவன், விரும்பிய பொருட்கள் அனைத்தையும் அடைவான் எனத் துவைபாயனர் {வியாசர்} சொல்லியிருக்கிறார்.{98} ஹரிவம்சம் முழுமையாக உரைக்கப்படுவதைக் கேட்டு முடித்த ஒருவன், ஆயிரக்கணக்கான அஷ்வமேதங்களையும், நூற்றுக்கணக்கான வாஜபேய வேள்விகளையும் செய்த பலனை அடைகிறான்.{99}

ஓ! விஷ்ணு, பிறப்பும் சிதைவும் அற்றவன் நீயே, தியானிக்கப்படத் தகுந்த ஒரே ஒருவன் நீயே. திரளாகவும், நுட்பமாகவும் இருப்பவன் நீயே, உணர்வைக் கடந்தவன் நீயே. சகுன பிரம்மமாகவும், நிர்குண பிரம்மமாகவும் இருப்பவன் நீயே. யோகிகளால் மட்டுமே தங்கள் ஞானத்தால் உன்னைப் புரிந்து கொள்ள முடியும். மூவுலகங்களின் ஆசானும், படைப்பாளனும் நீயே. உன் புகலிடத்தையே நான் நாடுகிறேன்.{100} பாரதம் உரைக்கப்பட்டதன் முடிவில் அனைவரும் துன்பங்களில் இருந்து விடுபடட்டும், அனைவரும் நலமடையட்டும், அனைவரும் விரும்பிய பொருட்களை அடையட்டும்” என்றார் {வைசம்பாயனர்}.{101}(93-101)

திரிபுரவதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 108-திரிபுரமெனும் அசுரர்களின் ஆகாய நகரங்கள் மூன்றும் சிவனால் அழிக்கப்பட்டது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “பிராமணரே, முக்கண்ணனான மஹாதேவன் மூன்று நகரங்களுக்கு ஒப்பான விமானங்களில் வானில் பயணித்த அசுரர்களின் மகன்களை எவ்வாறு கொன்றான்? இது குறித்து நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(1)

வைசம்பாயனர், “மன்னா, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர்களும், உயிரினங்கள் அனைத்தின் மீதும் வஞ்சங் கொண்டவர்களுமான தைத்தியர்கள் சங்கரனால் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதை விரிவாகக் கேட்பாயாக. பழங்காலத்தில் உயிரினங்கள் அனைத்தையும் எப்போதும் துன்புறுத்த விரும்பும் தைத்தியர்களின் மீது அற்புதமான மூன்று சூலங்களை ஏவி சங்கரன் அவர்களைக் கொன்றான்.(2,3)

மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, ரத்தினங்கள் முதலிய பொருட்களால் உண்டான திரிபுரங்களில் {மூன்று நகரங்களில்} அந்த அசுரர்கள் வசித்து வந்தனர். இவ்வாறே அவர்கள் மேகங்களைப் போல வானில் திரிந்து வந்தனர்.(4) தங்கத்தாலான அந்த மூன்று நகரங்களும், நெடிய மாளிகைகளால் நிறைந்திருந்தன, ஒளிரும் ரத்தினங்களால் அமைக்கப்பட்ட பெரும் வாயில்களால் அவை அலங்கரிக்கப்பட்டிருந்தன. வானில் பறக்கும்போது அவை மிகப் பிரகாசமாகத் தெரிந்தன. இந்த விமானங்கள் தன்னொளி படைத்தவையாக இருந்தன. பெருந்தவத்தின் பலத்தால் உண்டான அவை ஒவ்வொன்றும் கந்தர்வர்களின் நகரத்தைப் போலத் தெரிந்தன.(5,6) அந்நகரங்கள் சக்திமிக்கவையாகவும், பிரகாசமிக்கவையாகவும் இருந்தன. சிறகுகள் படைத்த குதிரைகளால் இழுக்கப்பட்ட அவை, மனத்தின் வேகத்தைவிட அதிகமான வேகத்தில் செல்லக்கூடியவையாக இருந்தன.(7) அந்தக் குதிரைகள் முழுவேகத்துடன் சென்று கனைத்தபோது, அவற்றின் குளம்புகளின் அழுத்தத்தால் வானம் துன்புறுவதைப் போலத் தெரிந்தது.(8)

நெருப்பு போன்ற சக்திமிக்கவர்களும், தவத்தின் பலத்தால் பாவங்களைச் சாம்பலாக எரித்தவர்களும், தம்மை உணர்ந்தவர்களுமான முனிவர்களால் மட்டுமே அந்த அசுரர்களின் இருப்பை உணர முடிந்தது. காற்றைப் போல வேகமாக அவ்வசுரர்கள் பயணித்தபோது, மொத்த அண்டத்தையும் விழுங்கிவிடத் தயாராக இருப்பவர்களைப் போல அவர்கள் தெரிந்தனர்.

கந்தர்வர்களின் நகரங்களைப் போலவே அந்த ஆகாய நகரங்கள் மூன்றிலும் பாடுவதும், இசைப்பதும் எப்போதும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நகரங்கள் உருகிய தங்கத்தின் நிறத்தில் இருந்தன. அவற்றில் அனைத்து வகை ஆயுதங்களும் சேமிக்கப்பட்டிருந்தன. நன்றாக அலங்கரிக்கப்பட்டவையும், அழகில் இந்திரனின் மாளிகைக்கு நிகரானவையுமான உயர்ந்த கட்டடங்கள் பலவும் அந்நகரங்களின் அழகை அதிகரித்துக் கொண்டிருந்தன. கைலாச மலைச் சிகரங்களைப் போலத் தெரிந்த கோபுரங்களைக் கொண்ட மகத்தான மாளிகைகள் பலவற்றால் நிறைந்த அந்த அசுர நகரங்கள், சூரியர்கள் பலரைப் போல வானுக்கு ஒளியூட்டிக் கொண்டிருந்தன.

மன்னா, அந்த அசுர நகரங்கங்களில் எப்போதும் துரிதமான செயல்பாடுகள் இருந்தன. அங்கே வீரமிக்கப் போர்வீரர்கள் சீற்றமிக்கச் சிங்கங்களைப் போல மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டிருந்தனர். அழகிய பெண்களும், ஆண்களும் அங்கே வசித்திருந்ததால் அவை சைத்ரரதமெனும் தெய்வீக வனத்திற்கு ஒப்பானவையாகத் திகழ்ந்தன. மன்னா, திரிபுரம் என்று அறியப்பட்ட இந்த ஆகாய நகரங்கள் நெடிய கொடிகள் பலவற்றாலும், ஒளிரும் பதாகைகள் பலவற்றாலும் அலங்கரிக்கப்பட்டு, வானில் மின்னலைப் போலத் தோன்றிக் கொண்டிருந்தன.

பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அந்நகரங்களில் சூரியநாபன், சந்திரநாபன் போன்ற தைத்தியேந்திரர்கள் வாழ்ந்து வந்தனர். போலிச் செருக்கில் மயங்கியிருந்த அவர்கள், தேவர்களுக்காகவும், பித்ருக்களுக்காகவும் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட பாதையை மறித்துக் கொண்டிருந்தனர். கைகளில் விற்களையும், கணைகளையும் கொண்ட அசுரர்கள், தேவர்களாலும், பித்ருக்களாலும் பயன்படுத்தப்பட்ட நெருப்புப் பாதையைக் கைப்பற்றியபோது, சொர்க்கவாசிகள் விரைந்து சென்று பிரம்மனிடம் சரணடைந்தனர். தங்கள் பயணம் அசுரர்களால் தடுக்கப்படுவதால் துன்புற்ற தேவர்களின் வாய்கள் வறண்டிருந்தன.(9-20)

தேவர்கள் பிரம்மனை அணுகி, பரிதாபமான குரலில், “வேள்வி ஆகுதிகளைக் கொடுப்பவரே, எங்கள் பகைவர்கள், வேள்விக் காணிக்கைகளில் எங்களுக்குரிய பாகங்களை நாங்கள் ஏற்பதைத் தடுத்து எங்களை அச்சுறுத்தி வருகின்றனர்.{21) நயமாகப் பேசுபவர்களில் முதன்மையானவரே, நாங்கள் அசுரர்களைக் கொல்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவீராக. உமது கருணையால் போரில் பகைவரை எங்களால் வீழ்த்த இயலும் என நாங்கள் நம்புகிறோம்” என்றனர்.(22)

வரங்களை அளிக்க விரும்பும் பிரம்மன், தேவர்கள் தணிவடையும் வகையில், “சொர்க்கவாசிகளே, உங்கள் பகைவரை பழிதீர்க்கும் வழிமுறையை நான் சொல்கிறேன் கேட்பீராக. சங்கரனைத் தவிர வேறு எவராலும் இந்த அசுரர்களைக் கொல்ல இயலாது” என்றான்.

பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, பிரம்மனின் சொற்களைக் கேட்ட தேவர்கள் அனைவரும், கவலையெனும் தங்கள் சுமை பெருமளவு குறைந்ததை உணர்ந்தனர். விடைபெற்றுக் கொள்ளும் அனுமதியைப் பெற்றுக் கொண்டு பூமியில் இறங்கி, விந்தியத்திற்கும், சுமேரு மலைகளுக்கும் இடையில் ஓர் இடத்தில் மாய யோகியரைப் போலக் கடுந்தவம் செய்தனர். அவர்கள் சிவனை வழிபட்டபோது பிரம்மசம்ஹிதையின் முக்கிய வரிகளை ஓதினர்.(23-26) அவர்கள், பெண்களின் நினைவேதுமின்றிக் கடுமையான பிரம்மச்சரியம் பயின்றனர். இரவில் அவர்கள் குசப்புல்லாலான விரிப்பில் படுத்தனர். அவர்களின் ஆபரணங்கள் தாமிரத்தாலும், இரும்பாலும் ஆனவையாக இருந்தன.(27)

குருக்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தத் தேவர்கள், காடுகளில் இயற்கையாக இறந்த விலங்குகளைத் திரட்டி, மெல்லிய மான் தோல்களையும், அழகிய புலித்தோல்களையும் உடுத்திக் கொண்டனர். இவ்வாறான உடை உடுத்திக் கொண்ட தேவர்கள், தங்கள் மாய சக்தியின் மூலம் தங்களை மறைத்துக் கொண்டு சிவனின் வசிப்பிடத்திற்குச் சென்றனர்.

அங்கே அவர்கள் சிவனை வணங்கி அவனிடம், “பிரபுவே, சாம்பலில் ஊற்றப்பட்ட நெய்யைப் போல நாங்கள் உன்னிடம் பெற்ற வரங்கள் பயனற்றுப் போகும் வகையில் நீ எங்களுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பிக் கொண்டாய். தேவர்களின் ஆசானான பிரம்மனுடைய அறிவுறுத்தலின் பேரில் நாங்கள் உன்னிடம் உறைவிடம் நாடி வந்திருக்கிறோம். காலம், இடம், சூழ்நிலைகள் ஆகியவற்றைக் {காலதேசவர்த்தமானங்களைக்} கருத்தில் கொண்டு எங்கள் சொற்களைக் கேட்குமாறு நாங்கள் உன்னை வேண்டுகிறோம்” என்றனர்.

தேவர்களின் சொற்களை ஏற்றுக் கொண்டு, எதிர்காலச் செயல்பாட்டைச் சிந்தித்த மஹாதேவன், இந்திரனின் தலைமையிலான தேவர்களுடன் சேர்ந்து அசுரர்களுடன் போரிடுவதற்காகக் கவசம் தரித்துக் கொண்டான். தேவர்கள் அனைவரும் பளபளக்கும் தங்கள் ஆபரணங்களை அகற்றிவிட்டுக் கவசங்களைப் பூண்டனர். அவர்கள் சூரியனின் பாதையில் சென்ற போது, சுடர்மிகும் நெருப்பைப் போலப் பிரகாசித்தனர். போர் தொடங்கியபோது, நெடுமலைகளைப் போலத் தெரியும் போர்வீரர்களான ருத்திரர்கள் அனைவரும், மேலான ஆற்றல் படைத்த தங்கள் பகைவரை சாம்பலாக எரிக்கத் தொடங்கினர். அசுரர்களை அழிக்க விரும்பிய சொர்க்கவாசிகள் அனைவரும், ஒப்பற்ற சக்தி கொண்டவர்களாகவும், விரும்பிய வடிவம் எதனையும் ஏற்கும் வல்லமை படைத்தவர்களாகவும் இருந்தனர். அசுரர்களுடன் போரிடத் தயாராக அவர்கள் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு திரண்டனர்.

குபேரனின் தலைமையிலான தேவர்கள் பலரால் சூழப்பட்ட மஹாதேவன், திரிபுர வாசிகளுடன் போரிடத் தொடங்கினான். போர் தொடர்ந்தபோது, திரிபுரத்தின் அசுரர்கள், சிவனின் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டும், உடல்கள் துளைக்கப்பட்டும், இந்திரனின் வஜ்ரத்தால் தாக்கப்பட்டுச் சிறகுகள் அறுந்து விழும் மலைகளைப் போலப் பூமியில் விழுந்தனர். தேவர்களின் சூலங்கள், சக்தி ஆயுதங்கள், சக்கரங்கள், பராசங்கள், கணைகள் ஆகியவற்றால் அசுரர்கள் பலரின் இதயங்கள் துளைக்கப்பட்டன.(28-41) தேவர்களின் தாக்குதலில் பெருகும் நெருப்பால் எரிக்கப்பட்ட அசுரர்கள், அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களாகப் பீதியடையத் தொடங்கினர். போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது, இருதரப்பிலும் பேரிழப்புகள் இருந்தன. தேவர்கள் தங்கள் மாய சக்திகளை அடிக்கடி பயன்படுத்தியதால், தானவர்களால் அவர்களைப் பார்க்க முடியவில்லை. எனினும், மாலையில் சூரியன் மறைந்ததும் அசுரர்கள் தங்கள் பலத்தை மீண்டும் அடைந்து, தேவர்களுடன் பெருஞ்சீற்றத்துடன் போரிட்டு, அவர்களில் பலர் தரையில் விழுமளவுக்குக் கடுமையான தாக்குதலைத் தொடுத்தனர்.(42,43) இரவில் இடையறாத கணைமாரியைப் பொழிந்த அசுரர்கள், தேவர்களை வீழ்த்திவிட்டு, வானில் முழங்கும் மேகங்களைப் போல எப்போதும் முழங்கிக் கொண்டிருந்தனர்.(44)

போரில் தாங்கள் அடையும் வெற்றியால் உயிர்பெற்ற அசுரர்கள், தங்களுக்குள், “நாம் சக்திமிக்கவர்கள், இந்தப் போரில் வெற்றியடைய நினைத்த தேவர்களை, நாம் ஒற்றுமையுடன் முறியடித்திருக்கிறோம். நமது தடிகள், சூலங்கள், பரிகங்கள் ஆகியவற்றின் தாக்குதலை எவ்வளவு காலம்தான் அவர்களால் தாக்குப்பிடிக்க இயலும்?” என்று பேசிக் கொண்டனர்.

அசுரர்களில் முதன்மையானோரான அவர்கள், தங்கள் ஆன்ம ஆசானான சுக்ராச்சாரியரின் கருணையின் சக்தியாலும், பொறைத்திறத்தாலும் நிறைந்திருந்தனர். வெற்றியடைந்த அசுரர்கள், தங்கள் கைகளில் ஆயுதங்களுடன் போர்க்களத்தில் மகிழ்ச்சியாகத் தெரிந்தனர்.

அப்போது சிவனும், தேவர்கள் பிறரும் தங்கள் தேர்களில் அமர்ந்தபடியே உரக்க முழங்கினர். மேனியின் பிரகாசத்தால் செருக்கடைந்த அசுரர்களை அவர்கள் எரிக்கத் தொடங்கினர். அண்ட அழிவின்போது பெருஞ்சக்திவாய்ந்த சூரியன், கோள்கள் அனைத்தையும் சாம்பலாக எரிப்பதைப் போலவும், பிரளயத்தின் போது அசைவனவற்றையும், அசையாதனவற்றையும் உயிரினங்களின் தலைவனான ருத்திரன் அழிப்பதைப் போலவும் சிவனின் தலைமையிலான தேவர்கள் அசுரர்களை எரித்தனர். வேகமான குதிரைகளால் இழுக்கப்பட்ட சிவனின் தேரானது, மின்னலால் சூழப்பட்ட மேகத்தைப் போல வானத்தில் தெரிந்தது.

பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, மனிதர்களின் ஆட்சியாளா, அந்தத் தேரில் இருந்த கொடியானது, காளைச் சின்னத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வானவில்லால் அலங்கரிக்கப்பட்ட பெரும் மேகத்தைப் போல அது தெரிந்தது. அப்போது, சிவனின் பரம மங்கல குணத்தைப் புகழ்ந்து சித்தர்கள் அவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். சத்தியத்தில் நிலைத்திருக்கும் அமைதிநிறைந்த முனிவர்களும், அமுதம் பருகும் தேவர்களும், கந்தர்வர்களுடனும், அப்சரஸ்களுடனும் சேர்ந்து தங்கள் இனிய குரலால் சிவனைத் துதித்துக் கொண்டிருந்தனர்.

மன்னா, அருகில் அழகாக நின்று கொண்டிருந்த பித்ருக்கள் அந்நேரத்தில் மகிழ்ச்சியாகத் தெரிந்தனர். அப்போது அவர்களின் பகைவர்களான திதியின் மகன்களும் {தைத்தியர்களும்}, தனுவின் மகன்களும் {தானவர்களும்} அனைத்துத் திக்குகளில் இருந்தும் திடீரென எண்ணற்ற கணைகளைப் பொழிந்தனர். உயர்ந்த மாளிகைகளாலும், ஆயிரக்கணக்கான மடுக்களாலும் நிறைந்தவையும், உயிரினங்கள் அனைத்திற்கும் அச்சத்தை ஏற்படுத்துபவையுமான அந்த ஆகாய நகரங்களில் நிலைத்திருந்த அசுரர்கள், தேவர்களின் மீது கணைமாரியைப் பொழிந்து கொண்டிருந்தனர்.

பாரதா {ஜனமேஜயா}, திறம் மிக்கப் போர்வீரர்களான அசுரர்கள், அந்தப் போரில் ஈட்டிகளையும், சூலங்களையும், வாள்களையும் வீசி தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள், பகைவரின் கதாயுதங்களை நொறுக்கத் தங்கள் கதாயுதங்களையும், ஈட்டிகளை நொறுக்கத் தங்கள் ஈட்டிகளையும் பயன்படுத்தினர். அவர்கள் தங்கள் ஆயுதங்களால், பகைவரின் ஆயுதங்களை அழித்தனர், தங்கள் மாயையால் பகைவரின் மாயையை அகற்றினர். ஆயிரக்கணக்கான அசுரர்கள் ஆயிரக்கணக்கான கணைகளையும், சக்திகளையும், கோடரிகளையும், வஜ்ரங்களையும் எடுத்துக் கொண்டு தேவர்கள் மீது அவற்றை ஏவினர். மாயசூலங்களாலும், கணைமாரியாலும் காயமடைந்த தேவர்கள், காலனுடைய கோரப்பற்களின் அருகில் நிற்பவர்களைப் போல அப்போது நம்பிக்கையிழந்தனர். கந்தர்வர்களின் நகரத்திற்கு ஒப்பான மஹாதேவனின் பெரிய தேரும் கூட, பெருஞ்சக்திவாய்ந்த அந்த அசுரர்களுடன் மோதப் போதுமானதல்ல என்று தெரிந்தது.(45-60) சூலங்கள், கணைகள், இரும்புத் தடிகள், பரிகங்கள் உள்ளிட்ட அசுரர்களின் பலவகை ஆயுதங்களால் அனைத்துப் பக்கங்களிலும் இருந்து தாக்கப்பட்டவனும், சசியின் கணவனுமான இந்திரன், துயரத்தில் மூழ்கி அசையாமல் நின்று கொண்டிருந்தான்.(61)

பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, பூமியின் தலைவா, பெரும் முனிவர்களான பிரம்மனின் மகன்களின் குரல் பின்வரும் அறிவிப்பை வானில் இருந்து அறிவித்தது.(62) “மஹாதேவனின் தேர் தடுக்கப்பட முடியாதது, வெல்லப்படமுடியாதது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதைக் கொண்டு அந்தப் பிரபு அசுரர்களை வீழ்த்துவான்” என்றது.(63)

மன்னா, அதே வேளையில் மஹாதேவனின் சிறந்த தேர் வானில் இருந்து, அனைத்து வகை உயிரினங்களும் திரியும் பூமியில் விழுந்தது.(64) அந்த அற்புதத் தேர் பூமியைத் தீண்டியபோது, மலைகள் நடுங்கத் தொடங்கின, மரங்கள் இங்கும் அங்கும் ஆடின, சமுத்திரம் கலங்கியது, பத்துத் திக்குகளிலும் ஒளி குன்றியது.(65) கல்விமான்களான பிராமணர்கள் மங்கல மந்திரங்களை ஓதத் தொடங்கினர். இம்மையில் வெற்றியையும், மறுமையில் முக்தியையும் அடைய விரும்புவோரால் நாடப்படும் பரமனின் விருப்பத்தின் பேரில் அந்நேரத்தில் உயிரினங்கள் அனைத்தின் மத்தியிலும் அமைதி நிலவியது.

பாரதா {ஜனமேஜயா}, மாய யோகியரின் தலைவனான விஷ்ணு அக்காட்சியை ஆய்வு செய்து, தன் ஆற்றலால் மனத்தில் தீர்மானத்தை அடைந்து, ஒரு காளையின் வடிவை ஏற்று[1] மஹாதேவனின் தேரை பூமியில் இருந்து மெதுவாக உயர்த்தினான். அந்நேரத்தில் அவன் {ஹரி} பேரொளி கொண்ட பெரும் பிரகாசத்துடன் இருந்தான். அந்த ஒளி மஹாதேவனின் பிரகாசத்துடனும், விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களான தேவர்களின் பிரகாசத்துடனும், தனிமையான காடுகளில் வசித்தபடியே கடுந்தவம் செய்து பெருஞ்சக்தியடைந்த பெரும் முனிவர்களின் பிரகாசத்துடனும் கலந்தது.(66-70)காளையின் வடிவில் இருந்த ஹரி, தேவர்களின் தலைவன் {இந்திரன்} நின்றிருந்த அற்புதத் தேரைத் தன்னிரு கொம்புகளாலும் எடுத்து பெருங்கடல் கடையப்படுவது போல உரக்க முழங்கினான்.(71) இரு கொம்புகளுடன் கூடிய காளையின் வடிவில் இருந்த விஷ்ணு, பௌர்ணமி நாள் கடலைப் போல உரக்க முழங்கியபடியே வானில் உயர எழுந்தான்.(72) போரிடும் ஆவல் கொண்டவர்களும், பெருஞ்சக்தி வாய்ந்தவர்களுமான அசுரர்கள், இதைக் கண்டு பேரச்சம் அடைந்தனர். அவர்கள் மீண்டும் தங்கள் கவசங்களைப் பூண்டு போரிட வந்தனர்.(73) அந்த அசுரர்கள் அனைவரும் பெருஞ்சக்திவாய்ந்தவர்களாகவும், தங்கள் பலத்தில் வெடித்துவிடுபவர்களைப் போலவும் இருந்தனர். அவர்கள், தேவர்களின் மீது கணைமாரியைப் பொழிந்து மீண்டும் போரிடத் தொடங்கினர்.(74)

அப்போது சிவன், ஒரு நெருப்புக் கணையில் பிரம்மாஸ்திரத்தை ஈர்த்து, திரிபுரம் என்றறியப்பட்ட அந்த மூன்று ஆகாய நகரங்களின் மீதும் அதை ஏவத் தயாரானான்.(75) பரதனின் வழித்தோன்றலே, சிவன் அதை ஏவும் முன், தன் மனத்தால் அதை மூன்று வடிவங்களாகப் பிரித்து, அவை ஒவ்வொன்றிலும் சக்தியையும், வாய்மையையும், பிரம்ம யோகத்தையும் ஈர்த்தான். இதைச் செய்தபிறகு, அந்தக் கணை அசுரர்களின் உயிரை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் அதை ஏவினான். அந்தக் கணை காற்றில் சென்ற போது, தங்கம் போல ஒளிர்ந்து பெருஞ்சக்தியை வெளிப்படுத்தியது.(76,77) மூன்றாகத் தன்னைப் பிரித்துக் கொண்டதும், நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானதும், பெருஞ்சக்தி வாய்ந்ததுமான அந்தக் கணையை ஏவியதன் மூலம் மஹாதேவன் அசுரர்களின் மூன்று நகரங்களையும் சிதறடித்தான்.(78)

பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, மனிதர்களின் ஆட்சியாளா, அந்த மூன்று கணைகளும் அந்த மூன்று நகரங்களைத் தாக்கியபோது, அவை எரியத்தொடங்கி விந்திய மலையின் சிகரங்களைப் போலக் கீழே விழுந்தன.(79) பூமியின் தலைவா, மஹாதேவனின் நெருப்புக் கணைகளால் எரிக்கப்பட்ட அந்த ஆகாய நகரங்கள் மூன்றும் பூமியில் எரிந்து விழுந்தன.(80) இவ்வாறே வைடூரியத்தின் நிறத்தில் இருந்தவையும், மலைச்சிகரங்களைப் போன்று உயர்ந்தவையுமான அந்த நகரங்கள் மூன்றும், மஹாதேவனின் பிரம்மாஸ்திரத்தால் எரிக்கப்பட்டுப் பூமியில் விழுந்தன.(81)

திரிபுரம் அழிக்கப்பட்ட போது, தேவர்கள் அனைவரும் மஹாதேவனிடம், “அனைத்திலும் பெரியவனே, செருக்கில் மிதக்கும் அசுரர்கள் அனைவரையும் அழிப்பாயாக” என்று வேண்டினர்.(82) அந்த முறையீட்டிற்குப் பதில் அளிக்கும் வகையில், சிவனும், பிரம்மனின் தலைமையிலான பெருஞ்சக்திவாய்ந்த தேவர்கள் பிறரும் சேர்ந்து, மாய யோகியரின் தலைவனும், மாய சக்திகள் அனைத்தின் பிறப்பிடமும், அந்நேரத்தில் சிரித்துக் கொண்டிருந்தவனுமான விஷ்ணுவை வேண்டினர்” என்றார் {வைசம்பாயனர்}.(83) 

ஹரிவம்சம் பொருளடக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 109-ஹரிவம்சத்தின் பொருளடக்கம் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இனி, நாம் விவாதித்த ஹரிவம்சத்தின் பொருளடக்கத்தைச் சுருக்கமாக நினைவுகூர்கிறேன்.

{1. ஹரிவம்சபர்வம்}

தொடக்கத்தில் வரும் ஹரிவம்ச பர்வத்தில் அண்டத்தின் அடிப்படை படைப்பு விளக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து பூதங்களின் படைப்பும் விளக்கப்பட்டது.(1) வேனனின் மகன் பிருதுவின் கதை சொல்லப்பட்டது. அதன்பின் வைவஸ்வத மனுவின் குலத்தில் வந்த மனுக்கள் விளக்கப்பட்டனர். துந்துமாரன் கதையும் விளக்கப்பட்டது.(2) காலவரின் தோற்றம், இக்ஷ்வாகு குல விளக்கம், பித்ருக்களுக்கு அளிக்கப்படும் ஆகுதி காணிக்கைகளின் விளக்கம், சோமன் கதை, புதன் கதை ஆகியனவும் சொல்லப்பட்டன.(3)

அடுத்ததாக அமாவசுவின் குலம் விளக்கப்பட்டது, கேட்பவர்களுக்கும், சொல்பவர்களுக்கும் கிடைக்கும் நன்மை விளக்கப்பட்டது. இந்திரன் தன் நிலையில் இருந்து விழுந்து மீண்டும் தன் நிலையை அடைந்தது சொல்லப்பட்டது. அதன்பிறகு க்ஷத்ரவிருத்தனின் வழித்தோன்றல்கள் குறித்து விளக்கப்பட்டது.(4) அடுத்ததாகத் திவோதாசன், திரிசங்கு, யயாதி ஆகிய மன்னர்களைக் குறித்தும், பூரு குலம் குறித்தும் விளக்கப்பட்டது.(5) பிறகு, கிருஷ்ணனின் தோற்றம், சியமந்தக மணியின் கதை, விஷ்ணுவின் அவதாரங்கள் ஆகியன குறித்து விளக்கப்பட்டது.(6)

அடுத்ததாகத் தாரக வதம் விளக்கப்படும் தேவாசுரப் பெரும்போர் விளக்கப்பட்டது. அதன்பிறகு பிரம்ம லோகம் குறித்த விளக்கம், யோக நித்திரையில் இருந்து விஷ்ணு விழித்தெழுதல், பிரம்மனுக்கும் பூமாதேவிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல், தேவர்களின் அவதாரங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

{2. விஷ்ணு பர்வம்}

அடுத்தப் பர்வம் விஷ்ணு பர்வமாகும். நாரத முனிவர் கம்சனுக்கு அளித்த ஆலோசனை, அசுரன் ஸ்வப்னகர்ப்பனின் தொண்டர்களை நித்ராதேவியிடம் விஷ்ணு ஒப்படைப்பது, ஆரியா தேவி துதி, கிருஷ்ணன் பிறப்பு, கோகுலத்திற்கு அவன் மாறுதல், அவன் வண்டியை உதைத்து நொறுக்குதல், பூதனை படுகொலை, யமலார்ஜுன மரங்களை வேரோடு பிடுங்கியது, இடையர்கள் நரிகளைக் கண்டது, கோபர்களும், கோபிகைகளும் பிருந்தாவனத்தில் வசிப்பது ஆகியவை விளக்கப்பட்டன.(7-10)

பிருந்தாவனத்தில் மழைக்காலம், யமுனையாற்றில் கிருஷ்ணன் காளியனைத் தண்டித்தல், தேனுகாசுரன், பிரலம்பாசுரன் ஆகியோரை பலராமன் கொல்வது, கூதிர் காலம், கோவர்த்தன பூஜை தொடக்கம், கோவர்த்தன மலையைக் கிருஷ்ணன் உயர்த்துவது, கோவிந்த பட்டாபிஷேகம், கோபியருடன் இன்புற்றிருப்பது, அரிஷ்டாசுரன் வதம், அக்ரூரரைக் கம்சன் பிருந்தாவனத்திற்கு அனுப்பி வைத்தது ஆகியவை அடுத்தடுத்து விளக்கப்பட்டன.(11-13)

பிறகு, அந்தகன் கம்சனுக்குச் சொன்ன அறிவுரை, கேசி வதம், அக்ரூரர் பிருந்தாவனத்திற்குச் சென்றது, அக்ரூரர் திரும்பிச் சென்றபோது நாகலோகத்தைக் கண்டது, கிருஷ்ணன் கம்சனின் வில்லை முறிப்பது, சாணூரனுக்கும், முஷ்டிகனுக்கும் கம்சன் இட்ட கட்டளை, குவலயபீடம், சாணூரன், முஷ்டிகன், ஆந்திரதேசன் வதம்கிருஷ்ணன் கம்சனைக் கொன்றது, கம்சன் மனைவியரின் ஒப்பாரி, உக்கிரசேனன் மன்னனாக நிறுவப்பட்டது, யாதவர்களைக் கிருஷ்ணன் தேற்றியது ஆகியவையனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக விளக்கப்பட்டன.(14-16)

பின்னர், கிருஷ்ணனின் குருகுல வாசமும், இல்லந்திரும்பிய நிகழ்வும், ஜராசந்தன் மதுரா நகரைத் தாக்கியது, அடுத்தடுத்து ஜராசந்தன் அடைந்த தோல்வி, விகத்ருவின் உரை, கிருஷ்ணனும், பலராமனும் பரசுராமரைச் சந்தித்தது, அவர்கள் கோமந்த மலையில் ஏறியது, ஜராசந்தனின் தாக்குதல், கோமந்த மலை எரிந்தது, கிருஷ்ணனும், பலராமனும் கரவீரபுரம் சென்று சிருகால வாசுதேவனைக் கொன்றது, கிருஷ்ணனும் பலராமனும் மதுரா நகர் திரும்பியது ஆகியன விளக்கப்பட்டன.(17-19)

அதற்கடுத்து, பலராமன் யமுனையாற்றின் போக்கை மாற்றியது, மதுராவில் இருந்து யாதவர்கள் புறப்பட்டது, காலயவனன் வதம் ஆகியன விளக்கப்பட்டன.(20) அதன்பிறகு, துவாராகபுரி நிர்மாணம், ருக்மிணியைக் கடத்தியது, கிருஷ்ணன் ருக்மிணி திருமணம், பலராமன் ருக்மியைக் கொன்றது, பலராமனின் மகிமை, ஆஹ்னிகம் செய்வது குறித்துப் பிரத்யும்னனுக்குப் பலராமன் விளக்கிச் சொல்வது, நரகாசுரன் வதம், பாரிஜாத மரத்தை அபகரித்தது, துவாரகை மீண்டும் கட்டப்பட்டது, அரச சபையைக் கட்டி துவாரகையின் அரியணையில் கிருஷ்ணன் அமர்வது, நாரதர் சொன்ன செய்திகள், விருஷ்ணி குல மகிமை, சத்புரன் வதம், அந்தகாசுரன் வதம், கிருஷ்ணன் பெருங்கடலை அடைந்து இன்புற்றிருந்தது, பீம குல வீரன் மது பானம் அருந்தியது, கிருஷ்ணனின் விருப்பத்தின் பேரில் சாலிக்ய கந்தர்வன் பூமிக்கு வந்தது, பானுவின் மகள் பானுமதி கடத்தப்பட்டது, சம்பராசுர வதம், தன்யனின் கதை, வாசுதேவனின் மகிமை, பானுசுரனுடன் போர் ஆகியன விஷ்ணு பர்வத்தில் விளக்கப்பட்டன.(20-27)

{3. பவிஷ்ய பர்வம்}

அடுத்து வரும் பவிஷ்ய பர்வத்தில், எதிர்கால அரச குலங்கள், கலியுகத்தின் எதிர்கால நிலை, புஷ்கரையின் தோற்றம் ஆகியனவும், பரமாத்மாவின் வராஹ, நரசிம்ம, வாமன அவதாரங்களும் விளக்கப்பட்டன.(28) கிருஷ்ணன் கைலாச மலைக்குச் சென்றது, பௌண்டரக வதம், ஹம்சடிம்பகர்களைக் கொன்றது ஆகியன விளக்கப்பட்டன.(29) அந்தப் பர்வத்தின் இறுதியில் மஹாதேவன் செய்த திரிபுர வதம் விளக்கப்பட்டது. இவ்வாறே ஹரிவம்சத்தின் பொருளடக்கத்தை நான் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். இவற்றைக் கேட்பதன் மூலம் ஒருவன் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான்.(30) குருகுலத்தின் தலைவா, ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ஹரிவம்சத்தைக் கவனமாகக் கேட்கும் எவனும் தன் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி இறுதியில் வைகுண்டத்தை அடைகிறான். இந்த விவரிப்பு ஒருவனுக்குச் செல்வத்தையும், புகழையும், நீண்ட ஆயுளையும், உலகஞ்சார்ந்த இன்பத்தையும், இறுதியில் முக்தியையும் அருளும்” என்றார் {வைசம்பாயனர்}.(31) 

ஹரிவம்சப் பலன்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 110-ஹரிவம்சம் உரைப்பவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய கொடை; ஹரிவம்சம் கேட்பவருக்கும், படிப்பவருக்கும் உண்டான பலன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, ஹரிவம்சத்தைக் கேட்பதன் மூலம் ஒருவன் அடையும் பலன்களையும், அவன் கொடுக்க வேண்டிய கொடைகளையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.{1}

வைசம்பாயனர், “ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, ஒரு மனிதன் ஹரிவம்ச புராணத்தைக் கேட்டால், உடல், சொற்கள், எண்ணம் ஆகியவற்றால் அவன் இழைத்த பாவங்கள் அனைத்தும் உதய சூரியனைக் கண்ட பனி போல மறையும்.{2,3} உண்மையில் ஒரு வைஷ்ணவன், ஹரிவம்சத்தைக் கேட்பதன் மூலம் பதினெட்டு புராணங்களையும் கேட்ட பலன்களை அடைகிறான்.{4} ஒரு பாதியையோ, ஹரிவம்சத்தில் வரும் ஒரு ஸ்லோகத்தின் ஒரு பகுதியையோ மதிப்புடன் கேட்பவர்கள் வைகுண்டத்தை அடைகிறார்கள். கலியுகத்தில் ஜம்பூத்வீபத்தில் இதைக் கேட்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகவே இருக்கும்.{5} 

மகன்களைப் பெற விரும்பும் பெண்கள் விஷ்ணுவின் மகிமைமிக்கச் செயல்களைக் கேட்க வேண்டும்.{6} அதைக் கேட்ட பிறகு, பலன்களை அடைய விரும்பும் மனிதன் அதை உரைப்பவனுக்குத் தன் சக்திக்குத் தகுந்த வகையில் மூன்று நிஷ்கங்கள் {நாற்பத்தெட்டு கிராம்} நிறை கொண்ட பொன்னை அளிக்க வேண்டும்.{7} அவன் அதை ஓதுபவருக்கு தன் நலத்திற்காக கன்று, ஆடை மற்றும் பொன்கொம்புகளுடன் கூடிய ஒரு கபிலப் பசுவைக் கொடுக்க வேண்டும்.{8} ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, காதுகளுக்கும், கைகளுக்குமான ஆபரணங்களை அளித்தால், {குறிப்பாக வாகனங்களை அளித்தால்} அது சிறப்புப் பலன்களைக் கொடுக்கும்.{9} ஓ! மன்னா, நீ பிராமணர்களுக்கு நிலங்களை அளிக்க வேண்டும். அதைப் போன்ற வேறு கொடையேதும் கிடையாது; இருக்கவும் முடியாது.{10}

ஹரிவம்சத்தைக் கேட்பவனோ, உரைப்பவனோ தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, வைஷ்ணவ லோகத்தை {வைகுண்டத்தை} அடைகிறான்.(11) பாரதர்களில் சிறந்தவனே, அத்தகைய மனிதன் தன் குலத்தில் பதினோரு தலைமுறையினரையும் விடுவித்துத் தன் மனைவியையும், பிள்ளைகளையும் விடுவித்துக் கொள்கிறான்.(12) மனிதர்களில் முதன்மையானவனே, ஹரிவம்சத்தைக் கேட்கும்போது, கேட்பவன் தான் கேட்ட சுலோகங்களின் மொத்த எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு அளவுக்கு {எண்ணிக்கையில்} வேள்விகளைச் செய்ய வேண்டும்.(13)

இந்த போதனைகளை நினைவில் கொள்வதால் மட்டுமே கூட ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடலாம். மகனில்லாத மனிதன், இதைக் கேட்பதன் மூலம் மகனையும், வறியவன் செல்வத்தையும் அடைகிறார்கள்.(14) நரமேதம், அஷ்வமேதம் ஆகிய வேள்விகளைச் செய்வதன் மூலம் கிட்டும் பலனை ஒருவன் ஹரிவம்சம் சொல்வதைக் கேட்பதன் மூலமே அடைந்துவிடலாம். ஏனெனில் ஹரிவம்சம் ஹரியின் மகிமைகள் நிறைந்ததாகும்.(15) ஒருவன் பிராமணனைக் கொன்றிருந்தாலும், கருக்கலைப்பு செய்திருந்தாலும், பசுவைக் கொன்றிருந்தாலும், மதுபானம் அருந்தியிருந்தாலும், குருவின் மனைவியுடன் கலவியில் ஈடுபட்டிருந்தாலும்கூட அவன் என்னால் பரிந்துரைக்கப்பட்டபடி ஹரிவம்சத்தைக் கேட்டால் தூய்மையடைவான். இதில் ஐயங்கொள்ள வேண்டியதில்லை.(16) எல்லையற்றதும், அற்புதமானதுமான கிருஷ்ணனின் மகிமைகளை நான் இவ்வாறே உனக்கு விளக்கிச் சொன்னேன். அவற்றைக் கேட்கும் எவரும், படிக்கும் எவரும், உலகில் கிடைப்பதற்கரிய உயர்ந்த நன்மையை விரைவில் அடைவார்கள்” என்றார் {வைசம்பாயனர்}.(17)

பவிஷ்ய பர்வம் முற்றும்

ஹரிவம்சம் முற்றும் 

————————————-—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பவிஷ்ய பர்வம்-பகுதி 4–

October 19, 2025

சிவனின் தொண்டர்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 61-(ஸ்ரீகிருஷ்ண ஸமீபே ஷி²வாக³மநம்)-சிவனின் தொண்டர்கள் குறித்த விவரிப்பு…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “பூதங்களின் முகங்களைக் கொண்டவர்களும், நீண்ட விழிகளுடன் கூடியவர்களும், ஆடிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தவர்களும், விளையாட்டாக ஒருவரையொருவர் அறைகூவி அழைத்தவர்களுமான கண்டாகர்ணன், விரூபாக்ஷன், குண்டதாரன், குமுத்வஹன்,{1} தீர்க்கரோமன், தீர்க்கபுஜன், தீர்க்கபாஹு, நிரஞ்சனன், உருநேத்ரன், ஷதமுகன், ஷதக்ரீவன், ஷதோதரன்,{2} குண்டோதரன், மஹாக்ரீவன், ஸ்தூலஜிஹ்வன், துவிபாஹு, பார்ஷ்வவக்த்ரன், சிம்ஹமுகன்,{3} {திரிபாஹு, பஞ்சபாஹு, தீர்க்காஸ்யன்},{3} வியாக்ர வக்தரன், சிதானனன் ஆகிய கோர ரூபம் கொண்ட அனைவரும் அந்தச் சிவனுடன் இருந்தனர்.{4}

இவர்களைத் தவிர, ஊனுண்ணும், சடலங்களைச் சுமக்கும், குருதியைக் குடிக்கும் எண்ணற்ற பிசாசுகளும் அங்கே இருந்தன.{5} அங்கேயும், இங்கேயும் கிட்டும் சடலங்களைக் கைப்பற்றி உண்ணுந்தொழில் ஒன்றே அவர்களுடையதாகத் தோன்றியது.{6} இந்தப் பிசாசுகள் அனைத்தும் நெடியவையாகவும், பருத்தவையாகவும், குலைந்த வடிவம் கொண்டவையாகவும், நரம்புகள் புடைத்துத் தெரிபவையாகவும் இருந்தன. அவற்றின் சூல நுனிகளில் பல சடலங்கள் தொங்கின.{7} அவற்றில் பலவும் மனிதத் தலைகளை {கபாலங்களை} மாலைகளாக அணிந்திருந்தன, வேறு சில மனிதக் குடல்களால் தங்களை மறைத்திருந்தன.{8}(1-8)

சில டிண்டிமங்களை {உடுக்கைகளை} இசைத்தன, சில திக்குகள் அனைத்தும் எதிரொலிக்கும்படி உரக்கச் சிரித்தன. இந்தப் பிசாசுகளில் கபாலிகர்கள், பைரவர்கள், ஜடிலர்கள், முண்டிகள் ஆகியவை முக்கியமானவையாகத் திகழ்ந்தன.{9} பரமேஷ்வரனை நினைவுகூர்ந்த பெரும் முனிவர்கள் பலரும் வேத மந்திரங்களை ஓதிக் கொண்டே அங்கே வந்தனர். அவர்களில் சிலர் கமண்டலங்களைச் சுமந்து வந்தனர், சிலர் தரையில் குசப்புற்களை விரித்தனர், மேலும் பலர் இடைக்கச்சையை மட்டுமே அணிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் தகுந்த ஜபங்களால் சிவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். இவ்வாறே பெரும் முனிவர்கள் பலரும், பிசாசுகளும், சித்தர்களும், கந்தர்வர்களும் தங்கள் மனைவியரோடு அங்கே வந்தனர்{10-13}.(9-13)

கந்தர்வர்களின் மகள்கள் அனைவரும் திறன்பெற்ற நர்த்தகர்களாகவும், பாடகர்களாகவும் அங்கே ஆடிக்கொண்டிருந்தனர். சங்கரனான சிவனைத் துதிக்கும் வித்யாதரர்களும் அங்கே வந்தனர்.(14) முன்னணியில் அப்சரஸ்கள் ஆடிக் கொண்டிருந்தனர். இவ்வாறே, பிசாசுகள், பூதங்கள், முனிவர்கள், கின்னரர்கள்,{15} பிரமதர்கள் ஆகியோருடன் கூடிய சிவன், விஷ்வேஷ்வரனான விஷ்ணு {கிருஷ்ணன்} தவமியற்றி வரும் இடத்திற்கு வந்தான்.{16} தேவர்களும், லோக பாலர்களும் அங்கே இருந்தனர். சிவன் உமையுடனும், புனித கங்கையுடனும் அங்கே இருந்தான்.{17}(15-17) சர்வலோக பிரபுவான பவன் {சிவன்}, பிரணவ மகத்துவத்தின் அடையாளமாகத் திகழ்ந்தான். தன்னிறைவடைந்தவனும், சடாமுடி தரித்தவனும், ஒப்பற்ற ஆற்றலைக் கொண்டவனுமான அவன் தன் தொண்டர்களின் துணையுடன் ஹரியான விஷ்ணுவைக் காண அங்கே வந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(18) 

விஷ்ணுவின் சிவத்துதி | பவிஷ்ய பர்வம் பகுதி – 62-(ஸ்ரீ விஷ்ணுக்ருதா ஷிவஸ்துதி)-சிவனைத் துதித்த கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “இவ்வாறு பகவான் ருத்திரன்தன் காளை வாகனத்தைச் செலுத்திக் கொண்டும், பூதங்களின் துணையுடனும், எண்ணற்ற பிசாசங்கள், உரகங்கள் ஆகியவற்றுடன் அங்கே வந்தான்.(1) தேவேசனான விஷ்ணு உத்தம தவம் செய்து கொண்டும், விதிப்படி வேள்வி நெருப்பில் புனித ஆகுதிகளைச் செலுத்திக் கொண்டும் இருப்பதை அவன் கண்டான்.(2) தலைவன் கிருஷ்ணன் ஒரு வேட்டியையும், சாதரத்தையும் {துண்டையும்} அணிந்திருந்தான், அவனது முடி சடையாக இருந்தது. கருடன் அவனுக்கு விறகுகளைக் கொண்டு வந்தான், சக்கரம் மலர்களைக் கொண்டு வந்தது, திரிசூலம் குசப்புற்களைக் கொண்டு வந்தது. கதாயுதம் பிற தொண்டுகளைச் செய்து வந்தது. அந்தத் தலைவன் இந்திரன் தலைமையிலான தேவர்களாலும், பெரும் முனிவர்களாலும் சூழப்பட்டிருந்தான்.(3,4)

அப்போது பிரபுவான பகவான் {கிருஷ்ணன்} சர்வபூதங்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஏதோவொன்றைத் தியானித்துக் கொண்டிருந்தான். முக்கண்ணனும், அமைதிமிக்கவனும், மகத்தானவனுமான உமாபதி {சிவன்}, அவனை {கிருஷ்ணனைக்} கண்டு தன் வாகனத்தில் இருந்து கீழே இறங்கினான். பெரும் நிறைவடைந்த தலைவன் சிவன், பூதங்கள், பிசாசங்கள், ராக்ஷசர்கள், குஹ்யகர்கள்,{5,6} முனிவர்கள், விப்ரர்கள் ஆகியோருடன் சேர்ந்து, “தேவா {கிருஷ்ணா}, ஜகந்நாதா, உனக்கு ஜயம் உண்டாகட்டும். ருத்திரனாக விரிவடையும் ஜனார்த்தனா, உனக்கு ஜயம் உண்டாகட்டும்.(5-7) விஷ்ணுவே {நீக்கமற நிறைந்தவனே}, ரிஷிகேசா {புலன்களை வென்றவனே}, நாராயணா, உனக்கு ஜயம் உண்டாகட்டும். பராயணா {தஞ்சம் அளிப்பவனே}, புராணாத்மா {புராதன தேவா}, ஹரேஷ்வர {சிவனுக்குத் தலைவனான} தேவா, உனக்கு ஜயம் உண்டாகட்டும்.(8) ஆதிதேவா, ஜகந்நாதா, உனக்கு ஜயம் உண்டாக்கடும். சங்கரப் பாவனா {சங்கரனின் பிறப்பிடமே, உயிரினங்களைக் காப்பவனே}, உனக்கு ஜயம் உண்டாகட்டும். கௌஸ்துப மணியால் ஒளிரும் அங்கங்களைக் கொண்டவனே, உனக்கு ஜயம் உண்டாகட்டும். பஸ்மவிராஜிதா {சாம்பல் பூசிய உடல் கொண்டவனே} உனக்கு ஜயம் உண்டாகட்டும்.(9) சக்கரகதாபாணியே, உனக்கு ஜயம் உண்டாகட்டும். சூலிந்திரிலோசனா {சூலம் தரித்தவனே, முக்கண்ணனே}, உனக்கு ஜயம் உண்டாகட்டும். மௌக்திகமுத்துக்களால் அங்கங்கள் ஒளிர்பவனே, உனக்கு ஜயம் உண்டாகட்டும். நாகவிபூஷணா {பாம்புகளின் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனே}, உனக்கு ஜயம் உண்டாகட்டும்” {என்றான் சிவன்}.(10)

முனிவர்கள் இந்த வணக்கமொழிகளைச் சொல்லிவிட்டு அந்த ஹரியை வணங்கினர். பகவான் {கிருஷ்ணன்}, செந்நீல வண்ணனும், பொருளின் இயல்பை ஆள்பவனும், பாவங்களை அழிப்பவனும், காளையைக் கொடியாகக் கொண்டவனுமான சங்கரனைக் கண்டபோது இதயம் நிறைவடைந்தவனாக மஹாதேவனைப் பின்வருமாறு துதித்தான்:(11,12)

பகவான் {கிருஷ்ணன்} சொன்னான்: “நஞ்சுண்டு கண்டம் {தொண்டை} நீலமடைந்த நீலகண்டா, படைப்பவனும், பிரகாசம் கொண்டவனும், உபவாசங்களில் சிறந்தவனுமான உன்னை நான் வணங்குகிறேன்.(13) இந்த அண்டத்தில் அனைத்தையும் ஆள்பவனே, கதாதாரியே, ரிஷப ரூபம் கொண்ட மொத்த அண்டத்தையே உடலகாகக் கொண்டவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(14)

பொருள் வடிவமற்றவனே, பிநாகாபாணியே, துன்புற்றவர்களின் உற்ற நண்பனே, மங்கல வடிவம் கொண்ட சிவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(15) தன்னில் நிறைவடைந்தவனாக இருந்தாலும், பொல்லாதவர்களைக் கொல்பவனே, மலைகளில் வசிப்பவனே, முற்றான அமைதியாகவும், பெரும் மங்கலனாகவும் திகழ்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(16)

ஹரனே, ஹரிஹரனே, கோரனே {பயங்கரனே}, அகோரனே {பயங்கரமற்ற மென்மையானவனே}, கோரனுக்கும், அகோரனுக்கும் பிரியனே, உன்னை நான் வணங்குகிறேன்.(17) கால ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டவனே, காலத்தைக் கட்டுப்படுத்துபவனே, இரண்டாம் நிலை படைப்பாளிகளைப் படைப்பவனே, கிரிகளில் வசிப்பவனே, சாந்தமானவனே, மங்கலமான சிவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(18)

பெரு வடிவம் கொண்டவனே, புனிதத்தலங்களை மாசடையச் செய்யும் அசுரர்களை அழிப்பவனே, பரம வசிப்பிடமே, இருப்பில் உள்ள அனைத்தின் மூல வித்தே, எட்டு வடிவங்களில் வெளிப்படுபவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(19) புலித்தோலுடுத்தியவனே, பினாகாபாணியே, திரிசூலந்தரித்தவனே, கட்வாங்கம் கொண்டவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(20)

தேவதேவனே, ஆகாசமூர்த்தியே, ஹரனே, ஹரிரூபனே, பேரொளி படைத்தவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(21) பக்தனே, பக்தனுக்குப் பிரியமானவனே, பக்தர்களுக்கு அருள்பவனே, வான விரிவையே வடிவமாகக் கொண்ட ஜகன்மூர்த்தியே, உன்னை நான் வணங்குகிறேன்.(22)

சந்திரதேவா, சூரியதேவா, பிரதான தேவனே, பூதபதியே உன்னை நான் வணங்குகிறேன்.(23) சடாமுடியுடன் பயங்கர வடிவம் கொண்டவனே, வழக்கத்திற்கு மாறான அலங்காரம் கொண்டவனே, பூதங்களுக்கு {உயிரினங்களுக்கு} நன்மை செய்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(24)

சூரியக்கதிர்களைப் போன்ற பிரகாசமான கேசத்தைக் கொண்டவனே, வில் தரிப்பவர்களில் முதன்மையானவனே, பக்தர்களின் இதயங்களில் உள்ள அச்சங்களை விலக்குபவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(25) பகைவரின் இதயங்களில் அச்சத்தை உண்டாக்கும் ஹரனே, தக்ஷனின் வேள்வியை அழித்தவனே, பகனின் கண்களைப் பறித்தவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(26)

பவனென அறியப்படும் உமாபதியே, கைலாயத்தில் வசிப்பவனே, படைப்பின் ஆதி தேவா, அண்டத்தைப் புறவடிவாகக் கொண்டவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(27) கபாலத்தைக் கைகளில் தாங்கியவனே, பிரம்மனின் ஐந்தாம் தலையைக் கொய்தவனே, முக்கண்களைக் கொண்டதால் திரையம்பகன் என்று அழைக்கப்படும் சிவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(28)

சந்திரசேகரா, வரம் வேண்டுபவருக்கு வரம் அருள்பவனே, வேள்வியில் விறகாகவும், அரிசியாகவும், நெய்யாகவும், குசப்புல்லாகவும் இருப்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(29) எல்லையற்ற சக்தி கொண்டவனே, நாகபாசத்தை ஆயுதமாகக் கொண்டவனே, துதிக்கத்தக்க பல்வேறு வடிவங்களைக் கொண்டவனே, பத்ரபானத்தை விரும்புபவனே, உன்னைநான் வணங்குகிறேன்.(30)

சுடலையில் வசிப்பவனே, ஜயசப்தத்தை விரும்புபவனே, இதுவரை இல்லாத ஆற்றலை வெளிப்படுத்த விரும்புபவனே, பலம், வீரம் ஆகியவற்றின் உடல்வடிவமாகத் திகழ்பவனே,(31) மங்கலப் பொருட்களை விரும்புபவனே, மங்கலமிக்கவனே, மஹாகோரமாக இருந்தாலும் கவர்ச்சிமிக்க மங்கல வடிவைக் கொண்டவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(32)

மணிகளை விரும்புபவனே, உன்னையும், உன் தேரையும் மணிகளால் அலங்கரிப்பவனே, பகைவரை எதிர்க்கும்போது கடும் வடிவை வெளிப்படுத்த விரும்புபவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(33) உடையற்ற வடிவில் நிறைவடைந்து உடையின்றிச் செல்பவனே, உயிரினங்கள் அனைத்தின் உறைவிடமாகத் திகழ்பவனே, எங்கும் இன்பமாக வசிப்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(34) உயிரினங்கள் அனைத்தின் உயிராகவும், ஆன்மாவாகவும் திகழ்பவனே, உன்னை வழிபடுபவர்களுக்கு அனைத்து வகை மாய வளங்களையும் அருள்பவனே, வாமனதேவா, மஹாதேவா, உன்னை நான் வணங்குகிறேன்.(35)

எந்தச் சொற்களால் உன் மகிமைகளை முழுமையாகச் சொல்ல முடியும்? எவனால் உன் மகிமைகளை முழுமையாகச் சொல்ல முடியும்? எவனுடைய நாவால் உன் புகழை முறையாய் விளக்க முடியும்?(36) ஹரனே, பகவானே, என் குற்றங்களைப் பொறுப்பாயாக. நான் உன் பக்தன் என்பதை அறிந்து என்னைக் காப்பாயாக. சர்வபூதேசா, சர்வாத்மனா, உலகில் உள்ள அனைவரின் நன்மைக்காக நீ செயல்படுவாயாக. பக்தர்களிடம் அன்பு கொண்ட நீ அவர்களுக்குப் புகலிடம் அளிப்பாயாக” {என்றான் கிருஷ்ணன்}”.(37,38) 

கிருஷ்ணனைத் துதித்த சிவன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 63-(ஸ்ரீ ஷிவக்ருதா விஷ்ணுஸ்துதி)-கிருஷ்ணனைத் துதித்த சிவன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “காளைக்கொடி கொண்டவனும், சூலபாணியும், சாக்ஷாத் உமாபதியுமான அந்த தேவன், கருடக்கொடி கொண்ட விஷ்ணுவின் கைகளைப் பற்றிக் கொண்டு, தேவர்கள் அனைவரும், பெரும் முனிவர்களும் கேட்கும் வகையில் பின்வருமாறு பேசினான்:(1,2) “தேவதேவேசா, சக்கரபாணியே, ஜனார்த்தனா, என்ன காரணத்திற்காக நீ இங்கே தவம் செய்து கொண்டிருக்கிறாய்? நான் செய்ய வேண்டியதென்ன? உனது பிரார்த்தனை என்ன?(3) நீயே நேரடியாக நித்தியனான விஷ்ணு எனும்போது அனைத்து வகைத் தவங்களின் இலக்காக நீயே இருக்கிறாய். ஜனார்த்தனா, ஜகத்பதியே, மகத்தான மகனை அடையும் விருப்பத்தில் நீ இந்தத் தவத்தைச் செய்கிறாய் என்றால் அத்தகைய மகனை நான் உனக்கு ஏற்கனவே கொடுத்துவிட்டேன் என்று அறிவாயாக. பகவானே அதன் காரணத்தை இப்போது கேட்பாயாக.(4,5)

பூர்வத்தில் கிருத யுகத்தில், ஏதோவொரு காரியத்திற்காக நான் பத்தாயிரம் வருடங்கள் மஹாகோர தவம் இருந்தேன்.(6) தேவேசா, அந்த நேரத்தில் என் மனைவி பவானி {பார்வதி}, தன் தந்தையின் ஆணையின் பேரில் தொடர்ந்து எனக்குத் தொண்டாற்றி வந்தாள்.(7) தேவா, என் தவத்தைக் கண்டு அஞ்சிய இந்திரன், என் கவனத்தைச் சிதறடிக்கக் காமதேவனை அனுப்பினான். காமதேவனும், தன் நண்பன் வசந்தனுடன் என் எதிரில் வந்தான்.(8) ஹரியே, மலர்களைத் திரட்டியும், பிற பணிகளைச் செய்தும் பார்வதி எனக்குத் தொண்டாற்றி வரும்போது என் முன் வந்த காமதேவன், தன் கணையில் குறி பார்த்தான்.(9) தேவேசா, இதைக் கண்ட நான் என் நெற்றியில் இருந்த மூன்றாம் கண்ணில் நெருப்பு வெளிப்படும் அளவுக்குச் சீற்றமடைந்தேன்.(10)

விஷ்ணுவே, அவ்வாறே காமதேவன் சாம்பலாக எரிக்கப்பட்டான். அதன்பிறகுதான் காமன், இந்திரனின் ஆணையின் பேரில் அந்தக் காமன் என் முன் வந்தான் என்பதை அறிந்தேன்.(11) தேவேசா, ஜனார்த்தனா, பிறகு நான் காம தேவன் மேல் கருணை கொண்டேன். இதை அறிந்த பிரம்மன் அவனுக்குப் புதிய உடலை வழங்கும்படி என்னைத் தூண்டினான்.(12) ஜகத்பதியே, அந்தக் காமதேவன் உன் மகனாகப் பிறக்கும் ஏற்பாட்டை நான் செய்திருக்கிறேன். அவன் பிரத்யும்னன் என்ற பெயரில் அழைக்கப்படுவான். இந்த மகனைப் பெற்றுக் கொண்ட பிறகு அவனே காம தேவன் என்பதை நீ அறிவாயாக” என்றான் {சிவன்}.

இதைச் சொன்னபிறகு மஹாதேவனும், உமாதேவியும் தங்கள் கரங்களைக் குவித்துக் கொண்டு, அங்கே கூடியிருந்தவர்களும், தலைவனின் மகிமைகளை அறிய ஆவலுடன் இருந்தவர்களுமான முனிவர்கள் அனைவரிடமும் கிருஷ்ணனின் ஆழமான குண இயல்புகளையும், அவனது உண்மையான அடையாளத்தையும் சொல்லத்தொடங்கினர். குருவின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, மஹாதேவன் கரங்குவிப்பதைக் கண்ட தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், கின்னரர்களும், தேவதேவஷ்வரனும், விஷ்ணுவுமான ஸ்ரீ கிருஷ்ணனின் எதிரில் தங்கள் கைகளைக் கூப்பியபடியே நின்றனர்.(13-17)

அப்போது மஹேஷ்வரன், “சாங்கிய தத்துவத்தைக் கற்றறிந்த ஞானிகள், மஹாதத்வத்தின் மூலக்காரணமாக முற்றான உண்மையையும், இரண்டாம் காரணமாகப் பொருளின் இயல்பையும் {பிரகிருதியையும்} சொல்கின்றனர்.(18) நுட்பமான பொருளியல்பு பிரதானம் என்று அறியப்படுகிறது. அதுவே வெளிப்பட்டிருக்கும் அண்டத்திற்கான உடனடி காரணமாகும். பொருளியல்பு {பிரகிருதி} என்பது, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களைக் கொண்டதாகும். சாங்கிய தத்துவத்தைக் கற்றறிந்த அறிஞர்கள், நீயே பொருளியல்பின் மூலக்காரணன் என்பதை அறிவார்கள். விஷ்ணுவே, உன் சக்தியின் மாற்றமே பொருளியல்பாகும் {பிரகிருதியாகும்}, நீயே பொருள் சக்தியின் தேவனுமாவாய்.(19,20) மகத் தத்துவத்தில் இருந்து போலியான அகங்காரம் உண்டானது. ஜகந்நாதா, படைப்பின் தொடக்கமான பிரதானத்தில் இருந்து வெளிப்பட்டிருக்கும் மஹத் தத்துவத்தின் காரணன் நீயே ஆவாய்.(21)

பிரபுவே, தேவா, அகங்காரத்தில் இருந்து ஐந்து பூதங்களும் உண்டானதைப் போலவே, புலன்நுகர் பொருட்களும், {சுவை, ஒளி [காட்சி], ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய} ஐந்து தன்மாத்திரைகளும் உண்டாகின.(22) ஜகத்பதியே, ஐம்பூதங்களும் உன் சக்தியின் வெளிப்பாடே ஆகும். நீயே அவற்றைக் கட்டுப்படுத்துபவனாக இருக்கிறாய். பிருத்வி {நிலம்}, வாயு {காற்று}, ஆகாசம் {ஆகாயம்}, அப்பு {நீர்}, ஜ்யோதி {ஒளி / நெருப்பு} ஆகியவை பஞ்சபூதங்களாகும்.(23) கண்கள், மூக்கு, தோல், நாக்கு, காதுகள் ஆகியன ஐந்தும் அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} ஆகும். மனம், ஐம்புலன்களையும் அதனதனுக்குரிய பொருள்களுடன் தொடர்புகொள்ளத் தூண்டுவதால் ஆறாவது புலனாக அழைக்கப்படுகிறது.(24) ஜனார்த்தனா, வாக்கு முதலிய ஐந்து செயற்புலன்களும் {வாய், கை, கால், மலவாய், கருவாய் என்ற கர்மேந்திரியங்களும்} இருக்கின்றன. ஒவ்வொருவரின் இதயத்திலும் பரமாத்மா இருப்பதால், நீயே அந்தப் புலன்களை அதனதனுக்குரிய செயல்பாடுகளில் மன இயக்கத்தின் கீழ் ஈடுபடுத்துகிறாய். தேவேசா, ஒவ்வொரு புலனுக்கும் தகுந்த கடமைகளை நீயே பரிந்துரைக்கிறாய்.(25,26)

ரஜஸ் குணத்தில் ஈடுபட்டு நீ அண்டத்தைப் படைக்கிறாய். சத்வ குணத்தில் ஈடுபட்டு அதைப் பராமரிக்கிறாய், தமஸ் குணத்தில் ஈடுபடுவதன் மூலம் அண்ட வெளிப்பாட்டை அழிக்கிறாய். இவ்வாறே அனைத்தையும் கட்டுப்படுத்தும் உயர்ந்தவனாக, சத்வ, ரஜஸ், தமஸ் குணங்கள் என்ற பொருளியல்பின் {பிரகிருதியின்} முக்குணங்களின் மூலம் அண்ட வெளிப்பாட்டை உண்டாக்கி, பராமரித்து, அழிக்கிறாய். மாதவா, பண்பட்ட ஆன்மாக்களின் இதயங்களில் இருந்தபடியே அவர்களை நீ புலன்களில் இன்புற்றிருக்கச் செய்கிறாய். எனவே, நீயே அனைத்து வகை இன்பங்களுக்கும் காரணனாக இருக்கிறாய்.(27-30)

பிரபுவே, பிரம்மாவின் வடிவில் நீயே படைக்கிறாய், விஷ்ணுவின் வடிவில் நீயே பராமரிக்கிறாய், ருத்திரனின் வடிவில் நீயே அழிக்கிறாய். இவ்வாறே முக்குணங்களின் அவதாரங்களாக நீயே வெளிப்பட்டிருக்கிறாய்.(31) பூமி {நிலம்}, அப்பு {நீர்}, அனலம் {நெருப்பு}, வாயு {காற்று}, வானம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எட்டும் உன்னிடமுள்ள தனித்தனி பொருள் சக்திகள் ஆகும்.(32) ஆயிரக்கணக்கான தலைகளும், ஆயிரக்கணக்கான கண்களும், ஆயிரக்கணக்கான கைகளும், கால்களும் கொண்ட அண்ட வடிவில் நீ வெளிப்படுகிறாய். இந்திரனின் தலைமையிலான தேவர்களின் வடிவங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வடிவங்களிலும் நீ வெளிப்படுகிறாய்.(33) ஏழு த்வீபங்களும் {கண்டங்களும்}, ஏழு கடல்களையும் கொண்ட உலகில் நீ நீக்கமற நிறைந்திருக்கிறாய். வெளிப்படாத வடிவில் நீ எங்கும் இருக்கிறாய். எனினும், அண்டத்தின் மேலே பத்து அங்குலத்தில் இருப்பதாக உருவகமாகச் சொல்லப்படுகிறாய்.(34)

வெளிப்பட்டோ, வெளிப்படாமலோ உள்ள பொருள் இயல்புகளின் காரணன் நீயே. ஜனார்த்தனா, உன் புறவடிவம் அண்ட வெளிப்பாட்டைக் கொண்டதாகும்.(35) ஜகந்நாதா, அந்த அண்ட வடிவின் வாயில் இருந்து, வேத கல்வியை முதலாகக் கொண்ட ஆறு தொழிற்கடமைகளில் ஈடுபட்டு உலகத்தைப் பாதுகாக்கும் பிராமணர்கள் தோன்றினார்கள்.(36) க்ஷத்திரியர்கள் உன் தோள்களில் இருந்து உண்டானார்கள், வைசியர்கள் உன் வயிற்றில் இருந்தும், சூத்திரர்கள் உன் கால்களில் இருந்தும் உண்டானார்கள்.(37)

தேவேசா, இவ்வாறே நான்கு வர்ணங்களும் உன் உடலில் இருந்து உண்டானவை. குளிர்ந்த கதிர்களுடன் உயிரினங்கள் அனைத்திற்கும் இன்பத்தை அளிப்பவனான சந்திரன், உன் மனத்தில் இருந்து தோன்றினான். உயிரினங்கள் அனைத்தின் கண்களாகக் கருதப்படுபவனான சூரியன், உன் கண்களில் இருந்து தோன்றினான். அவனுடைய கதிர்களாலேயே மொத்த உலகமும் ஒளியூட்டப்பட்டது. இந்திரனும், அக்னியும் உன் வாயில் இருந்து உண்டானார்கள், வாயு உன் உயிர் மூச்சில் இருந்து உண்டானான்.(38-40) ஜனார்த்தனா, உன் உந்தியில் இருந்து வெளி உண்டானது. கோபதியே, மஹாகோரமான தியுலோகம் உன் தலையில் தோன்றியது.(41) ஜகத்பதியே, உன் கால்களில் இருந்து பூமி வெளிப்பட்டது, உன் காதுகளில் இருந்து திசைகள் உண்டாகின. இவ்வாறே நீயே மொத்த அண்டத்தைப் படைத்து அதில் படர்ந்தூடுருவி நீக்கமற நிறைந்தாய்.(42)

கேசவா, அண்டம் முழுவதும் நீயே நீக்கமற நிறைந்திருப்பதால் {வியாபித்திருப்பதால்} விஷ்ணு என்று அறியப்படுகிறாய்.(43) முக்காலத்தையும் அறிந்தவனே, நீரில் (நாரா) கிடப்பதால் {அயண}, நீ நாராயணன் என்று அறியப்படுகிறாய்.(44) தேவா, உயிரினங்களின் துன்பங்களை அழிப்பதால் {ஹரம் செய்வதால்} நீ ஹரி என்ற பெயரைப் பெற்றாய். பிறருக்கு நன்மை செய்வதால் நீ சங்கரன் என்றும் கொண்டாடப்படுகிறாய்.(45) எப்போதும் பெருகும் பெரியவனாக இருப்பதால் நீ பிரம்மன் என்று குறிப்பிடப்படுகிறாய். மதுவை (புலன்களை) அடக்கியதால் நீ மதுசூதனன் என்று கொண்டாடப்படுகிறாய்.(46) விஷ்ணுவே, கேசவா, புலன்களை {இந்திரியங்களை / ரிஷிகங்களை} நீ வென்றவனானதால் ரிஷிகேசன் என்று அழைக்கப்படுகிறாய்.(47) “க” என்பது பிரம்மனைக் குறிக்கும், “ஈசன்” என்பது உடல்படைத்த ஆன்மாக்களைக் கட்டுப்படுத்துபவனான என்னைக் குறிக்கும். நாங்கள் இருவரும் உன் உடலில் இருந்து உண்டாக்கப்பட்டதால் நீ கேசவன் என்று அறியப்படுகிறாய்.(48) பகவானே, “மா” என்றால் வித்யை {அறிவு} ஆகும். நீ அதன் தலைவனான “தவன்” ஆவாய் என்பதால் நீ மாதவன் என்று அழைக்கப்படுகிறாய். தவன் என்ற சொல் தலைமைத் தன்மையைக் குறிக்கும்.(49) “கௌ” என்பது வேத தீர்மானங்களைக் குறிக்கும். அவற்றை நீ நன்றாக அறிந்தவன் என்பதால் கோவிந்தன் என்றழைக்கப்படுகிறாய்.(50) முனிவர்களில் முதன்மையானவர்கள் மூன்று வேதங்களை “திரி” என்று குறிப்பிடுவார்கள். நீ வேத அறிவைக் கடந்தவனாக இருப்பதால் திரிவிக்கிரமன் என்று அறியப்படுகிறாய்.(51) நீ நுட்பமானவனாக இருப்பதால் வாமனன் என்று அறியப்படுகிறாய். சிந்திப்பவர்களில் நீ முதன்மையானவனாக இருப்பதால் முனி என்று அழைக்கப்படுகிறாய். மனத்தைக் கட்டுப்படுத்தியவன் என்பதால் யதி என்று அழைக்கப்படுகிறாய்.(52) தவங்களைச் செய்வதால் நீ தபஸ்வி என்றழைக்கப்படுகிறாய். பூதங்கள் {உயிரினங்கள்} அனைத்தும் உன்னில் வசிப்பதால் பூதவாசன் என்று அழைக்கப்படுகிறாய்.(53) பூதங்கள் {உயிரினங்கள்} அனைத்திற்கும் நீ ஈசனாகத் திகழ்வதால் ஈசுவரன் என்று அழைக்கப்படுகிறாய். பிரபுவே, வேத மந்திரங்கள் அனைத்திலும் ஓங்காரம் உன்னைப் பிரதிபலிக்கிறது. சந்தஸ்களில் நீ காயத்ரியாக இருக்கிறாய்.(54)

அக்ஷரங்களில் {எழுத்துகளில்} நீ அகரமாக இருக்கிறாய். உண்மையில் எழுத்துகள் அனைத்தின் நித்திய பொருளாக நீயே இருக்கிறாய். ருத்திரர்களில் நீ சங்கரனாகவும், வசுக்களில் நீ பாவகனாகவும் இருக்கிறாய்.(55) மரங்களில் நீ புனித அசுவத மரமாக இருக்கிறாய். உயிரினங்களின் ஆன்ம குருவாகப் பிரம்மனாக இருக்கிறாய். மலைகளில் நீ மேருவாக இருக்கிறாய். தேவ முனிவர்களில் நீ நாரதனாக இருக்கிறாய்.(56) தைத்திய தானவர்களில் நீ பெரும்பக்தனான பிரகலாதனாகவும், சர்ப்பங்களில் நீ வாசுகியாகவும் இருக்கிறாய்.(57) குஹ்யகர்களில் தேவர்களின் கருவூல அதிகாரி குபேரனாக இருக்கிறாய். நீர் வாழ் உயிரினங்களில் அவற்றின் தலைவனான வருணனாக நீ இருக்கிறாய். புனித ஆறான கங்கை உன்னையே பிரதிபலிக்கிறாள்.(58) இருப்பின் தொடக்கமாகவும், நடுப்பகுதியாகவும், முடிவாகவும் நீயே இருக்கிறாய். இந்த அண்டம் உன்னில் இருந்து வெளிப்பட்டிருக்கிறது. முடிவில் அது மீண்டும் உன்னில் கலந்து விடும்.(59)

ஜனார்த்தனா, ஜகத்பதியே, நான் உன்னில் இருந்து வேறுபட்டவனல்ல, நீயும் என்னில் இருந்து வேறுபட்டவனல்ல. நமக்கிடையில் எந்த வேறுபாட்டையும் ஒருபோதும் காணமுடியாது.(60) கோவிந்தா, இவ்வுலகில் துதிக்கப்படும் உன்னுடைய புனிதப் பெயர்கள் அனைத்தும் என் பெயர்களுமாகும். எவருக்கும் வேறு வகையில் சிந்திக்கக் காரணமில்லை.(61) தேவேசா, கோபதியே, உன்னை வழிபடுவதும், என்னை வழிபடுவதும் ஒன்றே. உன்னிடம் பகை கொண்டவர் எனக்கும் பகையாளி என்பதில் ஐயமில்லை.(62) தேவா, நான் உன் விரிவாக இருப்பதால் நானும் உயிரினங்களின் தலைவனாகக் கருதப்படுகிறேன். உன்னைக் கடந்ததோ, உன்னில் காணப்படாததோ ஏதுமில்லை.(63) ஜகத்பதியே, தேவேசா, முக்காலங்களில் இருக்கும் எதுவும் நீயின்றி வேறில்லை. உன்னையன்றி இருப்பில் வேறொன்றும் இல்லை.(64)

பிரபுவே, தேவர்கள் எப்போதும் உன் ஆழ்ந்த குணங்களைத் துதிக்கிறார்கள். நித்தியமான ரிக், யஜூர், சாம வேதங்களாக நீயே இருக்கிறாய்.(65) அனைத்தின் பிறப்பிடமாகத் திகழ்பவனே, இன்னும் வேறு என்ன சொல்ல? ஒரு வகையில் நீ அனைத்துமாக இருக்கிறாய், இருப்பினும் நீ அனைத்தில் இருந்தும் வேறுபட்டவனாகவும் இருக்கிறாய். விஷ்ணுவே, மாதவா, கேசவா, அனைத்து வகையிலும் நான் உன்னை வணங்குகிறேன்.(66) ஈசுவரனே, நான் உன்னை வணங்குகிறேன். ஹரியே நித்தியம் நான் உன்னை வணங்குகிறேன். உந்தியில் தாமரை மலரைக் கொண்டவனே, சர்வாத்மனே உன்னை நான் வணங்குகிறேன்” {என்றான் சிவன்}”.(67) 

கிருஷ்ண ஸ்வரூபம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 64-(மஹாதேவேந கிருஷ்ணஸ்வரூபவர்ணநம்)-கிருஷ்ணனின் ஸ்வரூபத்தை முனிவர்களிடம் விளக்கிச் சொன்ன சிவன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “சிவன், அந்தத் தேவதேவேசனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வாறு சொல்லிவிட்டு முனிவர்களிடம் திரும்பி, “விப்ரர்களே, ஹரியைக் காண வந்திருக்கும் பக்தர்களான நீங்கள் அனைவரும் இவனைக் குறித்த இந்த உண்மையை அறிய வேண்டும்.(1) இந்தத் தேவனே பரம்பொருளாவான். இவனுக்கு இணையாகவோ, மேன்மையாகவோ வேறெவரும் இல்லை. இவனே நீங்கள் செய்யும் தவங்களின் இறுதி இலக்காவான். இந்த உண்மையை நீங்கள் அறிவீராக.(2) விப்ரர்களே, சிதறாத கவனத்துடன் இவனைத் தியானிப்பதையே வழக்கமான பயிற்சியாக நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இவனை அறிந்து கொள்வதே உங்களுக்கு முழுமையை அளிக்கும், அதுவே உங்கள் பரம தனமாகவும் இருக்கும்.(3)

இவனை அறிந்து கொள்வதே உங்கள் பிறப்பின் இறுதி வெற்றியாகவும், உங்கள் தவங்களின் பலனுமாக இருக்கும். உண்மையில் இவனை அறிந்து கொள்வதே உங்கள் புண்ணியங்களின் கொள்ளிடமும், உங்கள் சநாதன தர்மமுமாகும்.(4) இவனே உங்களுக்கு மோட்சத்தை அருள்வான். இவனே எடுத்துக்காட்டாக இருந்து இதை உங்களுக்குக் கற்பிப்பான். இவனே புண்ணியத்தை அருள்வான், இவனே உங்கள் நற்செயல்களில் பலனாகவும் இருப்பான்.(5)

ஆன்ம அறிவியலைக் கற்றறிந்த அறிஞர்கள் இவனையே துதிக்கின்றனர். இவனே மூன்று வேதங்களின் இறுதி இலக்காவான். பிரம்மத்தை அறிந்த பிரம்மவாதிகள் இவனது தாமரைப் பாதங்களை அடைய இவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர்.(6) சாங்கிய தத்துவத்தைப் பின்பற்றி மாயா யோகத்தை நித்தம் பயிலும் கல்விமான்களும் இவனையே துதிக்கின்றனர். வேதங்களை நன்கறிந்த கல்விமான்கள், தன்னை அறிந்து கொண்ட ஆன்மாக்கள் அனைத்தின் இறுதி இலக்காக இவனையே ஏற்கின்றனர்.(7) இது சச்சரவில்லா உண்மை என்பதால், இக்காரியத்தை மேலும் கருத்தில் கொள்ள ஏதுமில்லை. எப்போதும் சத்வ குணத்துடன் இருக்கும் உங்களைப் போன்ற பக்தர்கள் ஹரியையே நித்தம் தியானிக்க வேண்டும்.(8)

நீக்கமற நிறைந்திருக்கும் நாராயணனுக்கு மேலானவன் எவனுமில்லை. விப்ரர்களே, நீங்கள் எப்போதும் ஓங்காரத்தைச் சொல்லி கேசவனைத் தியானிப்பீராக.(9) அவ்வாறு செய்வதால் நீங்கள் உங்கள் வாழ்வின் இறுதி இலக்கை அடைவீர்கள். இதில் ஐயமேதும் இல்லை. ஒரு பக்தன் ஹரியைத் தியானித்தால் இவன் எளிதில் நிறைவடைகிறான்.(10) விப்ரர்களே, விஷ்ணு உங்களிடம் நிறைவடைந்தால், உங்களைப் பொருள் பற்றில் இருந்து விடுவிப்பான். அச்யுதனின் தொடர்பை அடைய நீங்கள் விரும்பினால் இடையறாமல் இவனைத் தியானிப்பீராக.(11)

விஷ்ணுவை உங்கள் ஆன்ம குருவாகக் கருதுவீராக. இவன், பொருள் பற்றின் காரண வேரான உங்கள் அறியாமையை அகற்றுவான். எனவே, முக்குண அவதாரங்களெனப் பிரம்மன், விஷ்ணு, சிவனை ஏற்கும் நீங்கள் எப்போதும் ஹரியை நினைத்துத் துதிக்க வேண்டும்.(12) விப்ரர்களே, தவப்பயிற்சியால் சக்தியூட்டப்பட்ட நீங்கள் எப்போதும் கவனமாக உங்கள் மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் மனமும், புலன்களும் உங்களுக்குக் கட்டுப்படுவதன் மூலம் தூய்மையடைந்துவிட்டால் உங்களிடம் விஷ்ணு நிறைவடைவான்.(13)

விப்ரர்களே, நீங்கள் என்னை நினைத்தால், நான் கேசவனைக் குறித்த ஞானத்தை உங்களுக்குக் கொடுப்பேன். இவனை வழிபடுவதால், தானாகவே நானும் வழிபடப்பட்டவனாவேன்.(14) இவனை அடையும் உபாயங்களை விளக்கிச் சொன்ன என்போதனைகளில் நீங்கள் ஐயமேதும் கொள்ளாதீர். பாவம் நிறைந்த உணர்வுகள் அனைத்தையும் அழிக்கும் இந்தப் பிரபுவே மாயையின் தலைவனாவான். எனவே நீங்கள் அனைவரும் இவனது தாமரைப் பாதங்களை அடைய முயற்சி செய்ய வேண்டும்.(15) விப்ரேந்திரர்களே, உங்கள் நற்புத்தி சுட்டும் வழியில் செயல்படுவீராக, அவ்வாறு செயல்படுவதால் நீங்கள் தூய்மையடைவீர்கள். அவ்வாறே தேவனும் உங்களிடம் நிறைவடைவான்” {என்றான் சிவன்}”.(16)

வைசம்பாயனர் சொன்னார், “மன்னா {ஜனமேஜயா}, சங்கரன் பேசியதைக் கேட்ட அந்தப் புண்ணியச் சீலர்கள் அனைவரும், அவனது போதனைகளை ஏற்றுத் தங்கள் மனங்களில் இருந்த ஐயங்கள் அனைத்திலிருந்தும் தெளிவடைந்தனர்.(17)

அந்த விப்ரர்கள் அனைவரும் கூப்பிய கரங்களுடன் மஹாதேவனிடம் {சிவனிடம்}, “ஹரனே, நீ சொன்னது அனைத்தும் உண்மையே. எங்கள் ஐயங்கள் மறைந்தன. உன் தீர்மானங்களை முழுமையாக நாங்கள் ஏற்கிறோம்.(18) தேவா, இந்தக் காரியத்திற்காகவே உன்னுடைய வசிப்பிடத்திற்கு இன்று நாங்கள் வந்தோம். உங்கள் இருவரையும் சந்தித்ததால், எங்கள் மாயைகள் விலகின.(19) தேவேசா, உன் போதனைகளைப் பின்பற்றுவதிலேயே எங்களுக்கான உண்மையான நன்மை இருக்கிறது. உன்னால் பரிந்துரைக்கப்பட்டபடியே நாங்கள் எப்போதும் ஹரியை நிறைவடையச்செய்ய முயற்சிப்போம்” என்றனர் {முனிவர்கள்}. பகவான் ருத்திரனிடம் இவ்வாறு சொன்ன அந்த முனிவர்கள் அனைவரும் கேசவனின் தாமரைப் பாதங்களில் விழுந்து வணங்கினர்” {என்றார் வைசம்பாயனர்}.(20) 

சிவனின் விஷ்ணுத்துதி | பவிஷ்ய பர்வம் பகுதி – 65-(புநரபி ஷிவக்ருதா விஷ்ணுஸ்துதி)-கிருஷ்ணனைத் துதித்த சிவன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதன்பிறகு முனிவர்கள் ஆச்சரியப்படும் வகையில் ருத்திரன், விஷ்ணுவும், விஷ்வேஷ்வரனுமான ஹரியை மீண்டும் துதிக்கத் தொடங்கினான். முனிவர்களும் குவிந்த கவனத்துடனும், நிறைவுடனும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.(1)

அப்போது மகேஷ்வரன், “நான் நித்தம் தியானிக்கும் பகவனான வாசுதேவனை வணங்குகிறேன். பெரும்பிரகாசம் கொண்ட தேவா, உன் பேரொளியின் பிரதிபலிப்பாலேயே மொத்த அண்டத்திற்கும் ஒளியூட்டுபவன் நீயே.{2} உன் பிரகாசத்தின் பிரதிபலிப்பை மீண்டும் பிரதிபலிக்கும் சந்திரனின் குளிர்ந்த கதிர்களைத் தருபவனும் நீயே.{3} நீக்கமற நிறைந்திருக்கும் விஷ்ணு நீயே. உலகின் ஜடப் பொருள்களை இயக்கம் கொண்டவையாகச் செய்பவன் நீயே.{4} அவற்றின் இதயங்களைத் தூண்டி, அதனதன் தொழில்களிலும், கடமைகளிலும் ஈடுபடுத்தி, அந்தந்த சூழலுக்குத் தகுந்த இன்பத்தை அவற்றுக்கு அளிப்பவனும் நீயே.{5}

அனைத்துமாக இருப்பவன் நீயே, இருப்பினும் அனைத்தில் இருந்தும் வேறுபட்டவன் நீயே. வேதங்களைப் பாதுகாக்கும் பிரம்மனைப் போலவே, வாக்கை உன் வடிவங்களில் ஒன்றாகக் கொண்டவன் நீயே.{6} கைகளில் குசப் புற்களையும், ஆடையையும், வேள்விப் பொருள்கள் பிறவற்றையும் தரித்திருப்பவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.{7}

மொத்த அண்டத்தையும் பாதுகாப்பவன் நீயே, நிர்ணயிக்கப்பட்ட காலம் வந்ததும் உன் கோப வடிவமான பயங்கர முகம் படைத்த ருத்திர வடிவில் அதற்கு ஒரு முடிவை ஏற்படுத்துபவனும் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.{8} பிறப்பற்றவன் நீயே, தேவதேவேசன் நீயே, அண்டத்தின் உண்மைப் படைப்பாளன் நீயே. படைப்பின் போது உயிரினங்கள் அனைத்திற்கும் உயிரூட்டுபவன் நீயே.{9} பிரம்மனின் வடிவில் கோள்களையும், அவற்றில் வசிப்பனவற்றையும் வெளிப்படுத்துபவன் நீயே. தேவதேவேசா, மஹத் தத்துவத்தின் உட்பொருள் திரளாக மாற்றமடைவது உன் சக்தியே. பொருள் இயல்பானவள் {பிரகிருதியானவள் / இயற்கையானவள்} ஐந்து பூதங்களை வெளிப்படுத்தும் வகையில் உன் பார்வையால் அவளைக் கலங்கடிப்பவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.{10}

பக்தர்களின் பாவங்களை அழிப்பவன் நீயே, பூமியின் உண்மை மணம் நீயே. ஜகத்பதியே, அனைத்து வடிவங்களையும் வெளிப்படுத்தும் மூல வடிவம் நீயே. சூரியனைப் போன்று பிரகாசமிக்கவன் நீயே.{11} உயிரினங்கள் அனைத்தையும் பராமரிப்பதற்கான வெப்பத்தையும், ஒளியையும் அளிக்கும் அந்தச் சூரியனை வெளிப்படுத்தியவனும் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.

ஹரியே, வெப்பம், குளிர், இன்பம், துன்பம் ஆகியவற்றை உணரச்செய்யும் காற்றாக இருப்பவன் நீயே.{12} தீண்டல் உணர்வை அந்தக் காற்றே உண்டாக்குகிறது. உன்னை நான் வணங்குகிறேன்.

விஷ்ணுவே, ஆகாயத்தில் உண்டாகும் ஒலி பிரதிபலிப்பது உன்னையே.{13} நுட்பமான ஆன்மாக்கள் அனைத்தும் உன் அங்கங்களாகத் திகழ்வதால் அனைத்து உயிரினங்களின் உயிராகவும், ஆன்மாவாகவும் இருப்பவன் நீயே.{14}

ஜகந்நாதா, மனித வடிவை ஏற்றிருந்தாலும், மொத்த அண்டத்தையும் தாங்கி நீடிக்கச் செய்பவன் நீயே. மாயா சக்தியின் தலைவன் நீயே. மாயையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டவன் நீயே. இருப்பின் பொருள் பற்றில் இருந்து விடுதலை அளிப்பவன் {மோக்ஷம் அருள்பவன்} நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.

இருப்பில் உள்ள அனைத்தின் உண்மைக் காரணன் நீயே, எல்லையற்ற ஆழ்நிலை குணங்களைக் கொண்டவனாக இருந்தாலும், குணமற்றவனாகத் திகழ்பவன் நீயே. சிந்தனைக்கப்பாற்பட்டவன் நீயே. அனைவரின் முயற்சிகளிலும் நோக்கமாகத் திகழ்பவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.

ஹரியே, ஹரனாகத் திகழ்பவன் நீயே.{15,16} படைப்பின் தொடக்கத்தில் பிரம்மனின் இதயத்திற்கு ஞானத்தை ஊட்டியவன் நீயே. பிரம்மத்தை அறிந்தவன் நீயே. பரப்ரம்மன் நீயே. வேள்வியின் வடிவம் நீயே. ஆயிரம் தலைகளையும், வாய்களையும்,{17} கண்களையும் கொண்ட அண்ட வடிவன் நீயே. கோடிக்கணக்கான கதிர்களின் பிரகாசத்தால் அமைந்தவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன். அண்ட வடிவம் நீயே, அண்டத்தைப் படைத்தவன் நீயே. மொத்த அண்டத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் நீயே.{18} அனைத்து உயிரினங்களுக்கும் வசிப்பிடமாக இருப்பவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.

ஹரியே, உடல் படைத்த ஆன்மாக்களின் புலன்களாகத் திகழ்பவன் நீயே. புலன் நுகர் பொருட்களாக இருப்பவனும் நீயே. புலன்களின் தலைவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.{19}

வேத வடிவம் நீயே, வேதங்களைக் காக்கும் ஹயக்ரீவனாக அவதரித்தவன் நீயே. நெருப்பின் வடிவை ஏற்பவன் நீயே. நட்சத்திரங்களையும், கோள்களையும் அதனதன் நிலைகளில் நிலைக்கச் செய்யும் சக்தி நீயே.{20} சூரியன் நீயே, சூரிய புத்திரன் நீயே, சூரியனின் தலைவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.

ஹரியே, குளிர்ந்த கதிர்களைத் தருபவனும், மயக்கம் தருபவனுமான சோமன் நீயே.{21} [வஷட்காரமாக, ஸ்வாஹாவாக, ஸ்வதாவாக இருப்பவன் நீயே]. வேள்வியின் வடிவம் நீயே, வேள்வியின் மூலம் வழிபடப்படுபவன் நீயே, வேள்விப் பொருட்கள் அனைத்தையும் படைத்தவன் நீயே. வேள்விகளில் சொல்லப்படும் புனித மந்திரங்களாக வெளிப்படுபவன் நீயே. வேள்விக்குடம், வேள்விக் கரண்டி மற்றும் வேள்விக்குரிய பிற பொருட்கள் அனைத்துமாக இருப்பவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.(2-22)

ஓம் என்ற புனித எழுத்து, உன்னுடைய சூக்ஷும உடலிலிருந்து வேறுபட்டதல்ல. தவறும் இயல்புடைய, தவறாத இயல்புடைய அனைத்தின் தலைவன் நீயே. வேதமானவன் நீயே, வேத வடிவானவன் நீயே, பகைவரை அழிக்கும் ஆயுதங்களை இருப்புக்கு அழைப்பவன் நீயே, அந்த ஆயுதங்களின் உடல்வடிவம் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.(23) சிறந்த ஆசிகளை அருள்பவன் நீயே, கதாயுதம், கட்கம், சங்கு, சக்கரம், திரிசூலம், கேடயம் ஆகியவற்றைத் தரித்தவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.(24)

சர்வாத்ம குருவே, ஞானத்திற்கும், இன்பத்திற்கும் கொள்ளிடமாகத் திகழ்வதால் புத்திமான்களுக்குப் பிடித்தமானவன் நீயே. அனைத்து உயிரினங்களிலும் பரமாத்மாவாக இருப்பவன் நீயே. பக்தர்களின் பாவங்களை அழிக்கும் விஷ்ணுவே, உன்னை நான் வணங்குகிறேன்.(25) சர்வலோகேசா, இருப்பில் உள்ள அனைத்தையும் படைத்தவனே, முற்றான தூய்மையின் வடிவமாகத் திகழ்பவனே, யஜ்ஞ வராஹனாக அவதரித்தவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(26) விஷ்ணுவே உன்னை வணங்குகிறேன், விஷ்ணுவே உன்னை வணங்குகிறேன், விஷ்ணுவே உன்னை வணங்குகிறேன், ஹரியே உன்னை வணங்குகிறேன், என் தியானப் பொருளாகத் திகழும் வாசுதேவா உன்னை நான் வணங்குகிறேன்.(27) கரிய வண்ணனும், நீக்கமற நிறைந்தவனுமான கிருஷ்ணனை நான் வணங்குகிறேன். கிருஷ்ணனான உன்னை உண்மையில் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். ஜனார்த்தனா, அண்டத்தில் உள்ள நல்லோரைக் காப்பாயாக” {என்றான் சிவன்}.(28)

ஜகந்நாதனை இவ்வாறு துதித்த சிவன், முனிவர்களிடம் திரும்பி, “நீங்கள் கேசவனிடம் சரணடைந்து, இந்தத் துதியை தினமும் சொல்வீராக. அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குபவன் இவனே. இந்தத் தலைவனைச் சரணடைந்தால் நிச்சயம் உங்களைப் பாதுகாப்பான். அனைத்து வகைப் பாவங்களையும் அழிக்கவல்ல இந்தத் துதியைச் சொல்பவன், தன் இதயத்துக்குள் ஹரியின் பேரின்பத்தை அடைவான். இந்தத் துதியைக்[1] கேட்டோ, சொல்லியோ ஹரியை நிறைவடையச் செய்பவர்களால் அடையப்படமுடியாததுதான் ஏது?(29-31) நீங்கள் உங்கள் வாழ்வை வெற்றிகரமானதாக்க விரும்பினால், சிறந்த விரதங்களை நோற்று, பக்தர்களிடம் அன்பு கொண்ட கேசவனை எப்போதும் நினைப்பீராக” {என்றான் சிவன்}.(32)பூதகணங்களுக்கு நன்மை செய்யும் ருத்ரனான பகவான் சங்கரன், இதைச் சொல்லிவிட்டு, உமையுடனும், தன் தொண்டர்களுடனும் அங்கேயே அப்போதே மறைந்தான்.(33) முனிவர்கள் அனைவரும் இதயத்தில் நிறைவடைந்து ஹரியை வணங்கினர். அவர்கள் நாராயணனே பரம தத்துவம் {முற்றான உண்மை} என்பதை உணர்ந்து, தங்கள் வாழ்வு வெற்றியடைந்ததாக {பிறவிக்கடன் தீர்ந்ததாகக்} கருதினர்.(34) மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அங்கே இருந்த தேவர்கள் அனைவரும் புறப்படுவதற்கு முன்னர், ஹரியை வணங்கிவிட்டுத் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.(35)

அதன்பிறகு அந்தப் புண்டரீகாக்ஷன் {தாமரைக் கண் கிருஷ்ணன்}, முன்பு சங்கு, சக்கரம், கதை, கட்கம் {வாள்}, வில், கணைகளுடன் கருடனில் ஏறி வந்ததைப் போலவே, பெரும் முனிவர்களால் நித்தம் தொண்டாற்றப்படும் பதரிகாசிரமத்திற்கு மாலை வேளையில் திரும்பிச் சென்றான்.(36,37) ஈசுவரனான அந்த ஹரி, பதரிகாசிரமத்தை அடைந்ததும் முனிவர்கள் அனைவரையும் வணங்கிவிட்டு, அவர்களால் வழிபடப்பட்டவனாக ஓர் ஆசனத்தில் சுகமாக அமர்ந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(38) 

பௌண்டரகன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 66-(பௌண்ட்ரகவ்ருத்தாந்தராம்பம்)-சபையில் உரையாற்றிய பொண்டரகனின் தற்பெருமை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதேவேளையில், கல்விமானும், வலிமைமிக்கப் போர்வீரனும், விருஷ்ணி குலத்தைப் பகைக்கும் விரதம் கொண்டவனும், கிருஷ்ணனிடம் பொறாமை கொண்டவனும், பலமிக்க மன்னர்களில் முதன்மையானவனுமான பௌண்டரகன், தனக்கு அடங்கிய சிற்றரசர்கள் அனைவரையும் விரைவாக அழைத்துத் தன் சபையில் அவர்களிடம் பின்வருமாறு பேசினான்:(1,2)

{பொண்டரகன்}, “பலமிக்க மன்னர்கள் அனைவரையும் வீழ்த்தி, பிருத்வி முழுவதையும் நான் வென்றேன். விருஷ்ணி குலம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. கிருஷ்ணன் தரும் ஆதரவினால் அவர்கள் கர்வத்துடன் இருக்கின்றனர்.(3) கிருஷ்ணனைப் புகலிடமாகக் கொண்ட அவர்கள் தங்கள் வரிகளைக் கட்ட மறுக்கின்றனர். அகந்தை கொண்ட கிருஷ்ணன், தன் வலிமைமிக்கச் சக்கரத்தின் மீது கொண்ட நம்பிக்கையில் என்னைப் புறக்கணிக்கிறான்.(4) சக்கரம், சங்கு, கதாயுதம், வில், கணைகள் ஆகியவற்றை நம்பி அந்த இடையன் கர்வத்தில் இருக்கிறான். ஆயுதங்களின் பலமே அவனைச் செருக்கில் மிதக்க வைக்கிறது.{5}

உண்மையில், நானே வாசுதேவன் என்றாலும், செருக்கில் மிதக்கும் அந்த இடையன் என் பெயரைக் களவாடிவிட்டான். அவனது சக்கரத்தை வீழ்த்தவல்லதும், அவனது செருக்கை சல்லி, சல்லியாக நொறுக்கவல்லதும், உறுதிமிக்கதுமான சுதர்சன சக்கரம் என்னிடம் இருக்கிறது. மதிப்புமிக்க மன்னர்களே, என் சக்கரம் ஆயிரம் ஆரங்களைக் கொண்டதாகும், அதனால் விரும்பிய வடிவங்கள் பலவற்றையும் ஏற்க முடியும். அது நிச்சயம் அழிவற்றதுமாகும்.{6-8} பயங்கர நாணொலியை எழுப்பும் தெய்வீக வில்லான அற்புத சாரங்கம் என்னிடமும் இருக்கிறது. என்னுடைய பெரிய கதாயுதம் கௌமோதகி என்றழைக்கப்படுகிறது. இரும்பாலான அஃது ஓராயிரம் பாரங்கள்[1] எடை கொண்டதாகும்.(5-10) யமனே அஞ்சக்கூடியதும், கிருஷ்ணனின் வாளை எளிதாக அழிக்கக்கூடியதுமான நந்தக வாள் என்னிடம் உள்ளது.(11) கவசம் பூண்டும், கதாயுதம், வாள், சங்கு, சக்கரம் ஆகியவற்றைக் கொண்டும் போர்க்களத்தில் கிருஷ்ணனை நான் வெல்வேன். இதில் ஐயமேதும் இல்லை.இப்போதிலிருந்து நீங்கள் அனைவரும் என்னைக் கதாயுதம், சக்கரம், சங்கு, வில் ஆகியவற்றைத் தரித்தவன் என்றே {அதாவது கதீ என்றும், சக்ரீ என்றும், சங்கீ என்றும் சாரங்கி என்றும்} அழைக்க வேண்டும்.(12,13) மேலும் நீங்கள் வாசுதேவனென என்னை அழைக்கவேண்டுமேயன்றி யது குலத்தை ஆதரிக்கும் அந்த இடையனை அல்ல. நான் அவனைக் கொல்வதன் மூலம் சச்சரவுகளை அகற்றி உண்மையான வாசுதேவன் ஆவேன்.(14) மஹாத்மாவான நரகன் என் ஆருயிர் நண்பனாவான். போரில் அவனை அந்த இடையன் கொன்று விட்டான். என்னை நீங்கள் வாசுதேவனாக ஏற்காவிட்டால் உங்களைத் தண்டிக்கும் வகையில் பத்தாயிரம் தங்க நாணயங்களையும், பெரும் அளவிலான நெற்குவியல்களையும் எனக்கு வலுக்கட்டாயமாகச் செலுத்த வைப்பேன்” {என்றான் பௌண்டரகன்}.(15)

மன்னா, அந்த ராஜேந்திரன் {பௌண்டரகன்} இந்த மூடச் சொற்களைப் பேசி முடித்ததும், சபையில் இருந்த மன்னர்களில் சிலர் சங்கடத்துடன் கூடியவர்களாக அமைதியாக இருந்தனர். அந்த மன்னர்கள் வலிமைமிக்கவர்களாக இருப்பினும், எப்போது விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்பதை அறிந்தவர்களாகவும் இருந்தனர்.(16,17) மற்ற மன்னர்கள் தங்கள் தலைகளை அசைத்து, “சரிதான், அப்படியே செய்வோம்” என்று சொல்லி பௌண்டரகனைத் துதித்தனர். பெருஞ்செருக்கில் பெருகிய அவர்கள், “நிச்சயம் நாம் கிருஷ்ணனை வீழ்த்துவோம்” என்றனர்” {என்றார் வைசம்பாயனர்}.(18) 

பௌண்டரகனும் நாரதரும் | பவிஷ்ய பர்வம் பகுதி – 67-(பௌண்ட்ரகநாரதஸம்வாதம்)-நாரதரிடம் பேசிய பௌண்டரகன்; பௌண்டரகனை எச்சரித்த நாரதர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதே வேளையில் சர்வலோகங்களில் பயணிக்க வல்ல நாரதர், கைலாச சிகரத்தில் இருந்து, பௌண்டரகனின் நகரத்திற்குச் சென்றார்.(1) அவர் வானத்தில் இருந்து இறங்கி, மன்னனின் {பௌண்டரகனின்} வாயிற்காப்போனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அவனது அரண்மனைக்குள் பிரவேசித்தார்.(2) அர்க்கியம் மற்றும் பிற மங்கலப் பொருட்களுடன் மன்னனால் மதிக்கப்பட்டு, தொண்டாற்றப்பட்ட அவர், அதன்பிறகு அலங்காரத் துணிகளால் மறைக்கப்பட்ட வெண்மையான ஆசனத்தில் அமர்ந்தார்.(3)

அப்போது ஆற்றலில் அதீத செருக்குக் கொண்ட பௌண்டரகன், முதலில் நாரதரின் நலத்தை விசாரித்துவிட்டு, பிறகு பின்வருமாறு பேசினான்:(4) “விப்ரேந்திரரே, நாரதரே, சர்வ காரியங்களிலும் பண்டிதரே, தேவர்கள், சித்தர்கள், கந்தர்வர்களால் பெரிதும் மதிக்கப்படுபவரே, எங்கும் தடையில்லாமல் சர்வலோகங்களுக்கும் செல்லவல்லவரே, பலமிக்கவனும், புகழ்மிக்கவனுமான பௌண்டரகனாகிய நான் வாசுதேவன் என்ற பெயருக்குத் தகாதவனா?(5-7)

சங்கு, சக்கரம், கதாயுதம், வில் ஆகிய அடையாளங்களால் நான் அலங்கரிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய வாளையும், கேடயத்தையும் கொண்டு சிங்கம் போன்ற மன்னர்கள் பலரை நான் வென்றிருக்கிறேன். அனைவரின் வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் நானே கொடுக்கிறேன்.(8) ஒப்பற்ற ராஜ்ய போகம் கொண்டவனாகவும், ஒப்பற்ற ஆற்றலுடன் ஆளும் வலிமைமிக்க மன்னனாகவும் நான் இருக்கிறேன். வெல்லப்படமுடியாதவனான நான் என் குடிமக்களைப் பாதுகாக்க வல்லவனாகவும் இருக்கிறேன்.(9)

இப்போது வாசுதேவன் என்ற பெயரில் ஓர் இடையன் இருக்கிறான். எனினும் அவன் அந்தப் பெயரைக் கொள்வதற்குப் போதுமான ஆற்றலைக் கொண்டவனல்ல என நான் கருதுகிறேன்.(10) விப்ரேந்திரரே, அந்த இடையன் மூடத்தனத்தால் என் பெயரைப் பயன்படுத்துகிறான். இவ்வுலகில் சச்சரவின்றி நானே வாசுதேவனாக இருக்க அந்த யாதவனை நிச்சயம் வீழ்த்துவேன். என் சொற்களைக் குறித்து வைத்துக் கொள்வீராக. விருஷ்ணி குலத்தவர் அனைவரையும் வீழ்த்தி, கிருஷ்ணனின் வசிப்பிடமான துவாரகையை நான் அழிப்பேன். இந்தப் படையெடுப்பில் எனக்குத் துணை புரியும் விருப்பத்தை உறுதி செய்வதற்காக வலிமைமிக்க மன்னர்கள் பலர் இங்கே கூடியிருப்பதை நீர் காணலாம்.(11-13)

என்னிடம் வேகமான குதிரைகள் எண்ணற்றவையும், காற்றைவிட வேகமாகச் செல்லும் ரதங்களும், மதங்கொண்ட யானைகள், ஒட்டகங்கள் ஆகியவை கோடிக்கணக்கிலும் இருக்கின்றன. விப்ரரே, நாரதரே, நீர் செல்லும் இடமெங்கும் என் எண்ணத்தைக் குறித்துச் சொல்வீராக. இந்திரனின் சபையிலும் என்னுடைய ஒப்பற்ற ஆற்றலைச் சொல்லி நீர் துதிப்பீராக. இதுவே எனது வேண்டுகோளாகும். நான் உம்மை வணங்குகிறேன்” {என்றான் பௌண்டரகன்}.(14-16)

அப்போது நாரதர் {பௌண்டரகனிடம்}, “மன்னா, அண்டத்திற்குள் எங்கும் என்னால் செல்ல முடியும் என்பது உண்மைதான். என்னால் நிறைவேற்ற முடியாத பணியென ஏதும் கிடையாது.(17) எனினும், நீ விரும்பியபடி நான் எவ்வாறு பேசத்துணிவேன்? தேவேசனும், சக்கரபாணியும், ஜனார்த்தனனும், விஷ்ணுவுமான அந்தத் தேவன் துஷ்டர்களையும், அவர்களின் உற்றார் உறவினர்களையும் கொல்லும் வரை அவனைத் தவிர வேறு எவனை வாசுதேவனென அழைக்க முடியும்?(18,19) சூரியக் கதிர்களால் ஒளியூட்டப்படும் உலகங்கள் அனைத்தையும் கிருஷ்ணன் ஆளும்வரை, “பௌண்டரகன்தான் வாசுதேவன்” என எவன் சொல்லத் துணிவான்?

உன்னைப் போன்ற மூடனால் மட்டுமே இவ்வாறு பேச முடியும்.(20) அண்டத்திற்குள் எங்கும் திரிய வல்லவனும், சிந்தனைக்கு அப்பாற்பட்டவனும், ஆறு செல்வங்கள்[1] நிறைந்தவனும், பாவங்களை அழிப்பவனும், வில்லும், கதாயுதமும் தரிப்பவனும், நீக்கமற எங்கும் நிறைந்தவனுமான அந்த விஷ்ணு விரைவில் உன் செருக்கை அழிப்பான்.(21) மன்னா, ஆதிதேவனான கிருஷ்ணன் உன் கர்வத்தைக் கலங்கடிப்பான். நீ நினைப்பதும், செய்வதும் அனைத்தும் நகைப்பிற்குரியனவாகும். உன்னுடைய ஆயுதங்களைக் கொண்டு கிருஷ்ணனின் வலிமைமிக்க வில்லையும், வாளையும் அழிக்க இயலாது. உன்னை நீயே நகைப்பிற்குரியவனாக்கிக் கொள்கிறாய்” {என்றார் நாரதர்}”.(22,23) 

துவாரகையைத் தாக்கிய பௌண்டரகன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 68-(பௌண்ட்ரகஸ்ய த்வாரகாவரோதம்)கிருஷ்ணனிடம் செய்தியைச் சொன்ன நாரதர்; துவாரகையை நோக்கிப் படையெடுத்து வந்த பௌண்டரகன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “மன்னா, பௌண்டரகன் தன் பலத்தின் மீது கொண்ட செருக்கில் மிதந்து கொண்டிருந்தான். அந்தச் சபையில் அவன் விப்ரர்களில் சிறந்த நாரத முனிவரிடம் கோபத்துடன் பின்வரும் சொற்களை மறுமொழியாகக் கூறினான்:(1) “முனியே, நீர் என்ன சொல்கிறீர்? நான் மன்னன், என்னைச் சுற்றிலும் எண்ணற்ற துவிஜர்கள் சூழ்ந்திருந்தாலும், அடுத்தவரைச் சபிப்பதில் நீர் மகிழ்ச்சி அடைகிறீர். உம்மை அதிருப்தியடையச் செய்ய அஞ்சுகிறேன் என்பதால் நீர் விரும்பியவாறு எங்கு வேண்டுமானாலும் செல்வீராக” {என்றான் பௌண்டரகன்}.

பௌண்டரகன் இதைச் சொன்னதும், காற்றின் வழியில் பயணிப்பவரான நாரத முனிவர், கிருஷ்ணன் இருக்கும் இடத்திற்குச் சென்றார். நாரதர் சொன்னதைக் கேட்ட கிருஷ்ணன், “துவிஜர்களில் சிறந்தவரே, அவன் முற்றான நிறைவுடன் முழுமூடனாகத் தற்புகழ்ச்சி செய்து கொள்ளட்டும். நாளை நான் அவனது செருக்கை அழிப்பேன்” என்றான்.(2-5)

பதரிகாசிரமப் புனிதத்தலத்தில் அமர்ந்திருந்த கிருஷ்ணன், இதைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தான். அதேவேளையில் வலிமைமிக்கப் பௌண்டரகன், தன் பெரும்படையுடன் துவாரகை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான்.(6) அந்த மன்னனின் பெரிய படையில் ஆயிரக்கணக்கான குதிரைகளும், எண்ணற்ற யானைகளும், கோடிக்கணக்கான ஆயுதங்களைத் தரித்த படைவீரர்களும் இருந்தனர். மன்னன் பௌண்டரகன் வெற்றி அடையும் தீர்மானத்துடன் துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(7) அந்த மன்னனிடம் லட்சக்கணக்கான காலாட்படை வீரர்கள் இருந்தனர். ஏகலவ்யன் உள்ளிட்ட பிற மன்னர்களும் அவனை ஆதரித்தனர்.(8) அந்த மன்னனின் படையில் எட்டாயிரம் தேர்களும், பத்தாயிரம் யானைகளும், ஆயிரம் கோடி காலாட்படை வீரர்களும் இருந்தனர்.(9)

அந்த வீர மன்னன் {பௌண்டரகன்} தன் படைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த போது, உதயகிரியின் மேலிருக்கும் சூரியனைப் போலவே தோன்றினான்.(10) அவன் நடுராத்திரியில் துவாரகாபுரியைத் தாக்க நினைத்தான். அந்த நள்ளிரவில் ஒளியூட்டுவதற்காகக் காலாட்படை வீரர்கள் தீப்பந்தங்களை ஏந்திச் சென்றனர்.(11) இவ்வாறு அந்தப் பௌண்டரகன், ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, கோட்டைகளால் நன்கு பாதுகாக்கப்பட்ட துவாரகையை நோக்கி முன்னேறினான்.(12)

மன்னா {ஜனமேஜயா}, பௌண்டரக மன்னன், கையில் தீப்பந்தத்துடன், ஈட்டிகள், வாள்கள், கதாயுதங்கள், பரிகங்கள், தோமரங்கள், சக்திகள், கணைகள், திரிசூலங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதங்கள் நிரப்பப்பட்ட தேரில் துவாரகையை நோக்கிச் சென்றான். கொடிகள் பலவும், கிங்கிணி மணிகளும் அந்தத் தேருக்கு மேலும் அழகூட்டின. விற்களும், கதாயுதங்களும் அதனதனுக்குரிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. சூரியனையோ, அக்னியையோ போன்று பிரகாசமிக்க அந்தப் பெருந்தேரானது, அண்ட அழிவின் போது முழங்கும் மேகங்களைப் போலவோ, பெரும் பேரிகைகளைப் போலவோ செல்லுமிடமெல்லாம் பேரொலியை எழுப்பிக் கொண்டிருந்தது.(13-16)

பெரும் செல்வாக்குடன் இருந்த மன்னன் பௌண்டரகன், ஜகத்பதியான கிருஷ்ணனையும், அவனை ஆதரிக்கும் விருஷ்ணி குல வீரர்கள் பலரையும் கொல்ல நினைத்தான். அவன் நகரத்தின் வாசலை அடைந்த போது, உறுதிமிக்க மன்னர்கள் பலர் அவனுக்குத் துணையாக இருந்தனர். அங்கேயே அவன் தன் படைமுகாமை அமைத்தான். பிறகு அவன் {பௌண்டரகன்} தன் அமைச்சர்களிடம் பின்வருமாறு பேசினான்:(17,18) “போர் பேரிகைகளை முழக்குவீராக. “யாதவர்களே, எங்கள் மன்னனுக்குரிய கப்பத்தைக் கட்டுவீராக, அல்லது நகரத்தை விட்டு வெளியே வந்து எங்களுடன் போரிடுவீராக. கிருஷ்ணனைப் புகலிடமாகக் கொண்டிருக்கும் யாதவர்கள் அனைவரையும் கொல்லும் விருப்பத்தில் பெருஞ்சக்திவாய்ந்த பௌண்டரக மன்னன் இங்கே போரிட வந்திருக்கிறான்” என்று என் பெயரில் அறிவிப்பீராக” என்றான் {பௌண்டரகன}.(19,20)

இவ்வாறு பௌண்டரகனால் ஆணையிடப்பட்ட அமைச்சர்கள் தங்கள் முகாமை விட்டு வெளியேறி யாதவர்களில் சில ஒற்றர்களைச் சந்தித்தனர். அந்நேரத்தில் எங்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தீப்பந்தங்கள் தென்பட்டன. உண்மையில் அதற்குள் பகைவரிடையே மோதல்கள் வெடித்திருந்தன. தங்கள் ஆயுதங்களைக் கூர்த்தீட்டிய க்ஷத்திரிய மன்னர்கள், சிங்கங்களைப் போல முழங்கிக் கொண்டே, “விருஷ்ணி குல வீரர்கள் எங்கே? ஜகந்நாதன் எங்கே? பெரும் வீரனான சாத்யகி எங்கே? கிருதவர்மன் எங்கே? யாதவர்களின் மகுட ரத்தினமான பலராமன் எங்கே?” என்று கேட்டனர். பௌண்டரகனின் போர்வீரர்கள் கிருஷ்ணனின் வசிப்பிடமான துவாரகையை அணுகும் முன்பே தங்கள் ஆயுதங்களைப் பொழியத் தொடங்கினர்” {என்றார் வைசம்பாயனர்}.(21-25)

ஏகலவ்யன் அறைகூவல் | பவிஷ்ய பர்வம் பகுதி – 69-(யாதவாநாம் யுத்தோத்யோகம்)-யாதவர்களுக்கும், பௌண்டரப் படைகளுக்கும் இடையில் நடந்த போர்; ஏகலவ்யனின் வலிமை; சாத்யகியை அறைகூவியழைத்த ஏகலவ்யன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதேவேளையில் {துவாரகையின்} நகரவாயிலில் முகாமிட்டிருக்கும் பெரும்படையைக் குறித்து யாதவர்கள் அறிந்தனர்.{1} பிரளய காலத்தில் பொங்கும் கடலைப் போலத் தோன்றும் பகைவனின் படையை அவர்கள் கண்டனர்.{2} அப்போது அந்த யாதவர்கள் விரைவாகத் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டும், தீப்பந்தங்களை ஏற்றிக் கொண்டும் எதிர்த்தாக்குதலுக்கான ஆயத்தங்களைச் செய்தனர். சாத்யகி, பலராமன், கிருதவர்மன், நிசடன்,{3} நுண்ணறிவுமிக்க உத்தவர், வலிமைமிக்க உக்கிரசேனன் ஆகியோரும், யாதவப் போர்வீரர்கள் பிறரும் கவசங்களைப் பூண்டு கொண்டு பிற ஆயத்தங்களை ஏற்பாடு செய்தனர்.(1-4) அவர்கள் அனைவரும் வலிமைமிக்கவர்களாகவும், சாதனைகளுடன் கூடிய போர்வீரர்களாகவும், இரவு நேரப்போர் தந்திரங்களை நன்கறிந்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் தங்கள் வாள்களையும், பிற ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, பகைவருடன் போரிட ஆயத்தமாக இருந்தனர்.(5)

வலிமைமிக்க எண்ணற்ற யாதவர்கள், தங்கள் படையின் தேரோட்டிகள், குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை வீரர்களால் ஆதரிக்கப்பட்டவர்களாகவும், முழுமையாக ஆயுதந்தரித்தவர்களாகவும் போரிட ஒன்றுகூடினர்.(6) மனிதர்களில் சிறந்தவர்களும், மஹாத்மாக்களுமான அந்த யாதவர்கள், தங்கள் தீப்பந்தங்களை எடுத்துக் கொண்டு நகரத்தை விட்டு விரைந்து சென்றனர்.(7) அவர்கள் நகரத்தைவிட்டு வெளிவரும்போதே ஒருவருக்கொருவர், “பௌண்டரகன் எங்கே?” என்று கேட்டுக் கொண்டனர். எண்ணற்ற தீப்பந்தங்களால் மொத்த நகரமும் பிரகாசமாக ஒளியூட்டப்பட்டது.(8) அஃது இரவாக இருந்தாலும் கிட்டத்தட்ட பகலைப் போலவே பிரகாசமாக இருந்தது. அதன் பிறகு விருஷ்ணி குலத்தவருக்கும், அவர்களின் பகைவருக்கும் இடையில் போர் உண்டானது.(9)

அந்தப் போர் மிகக் கடுமையானதாகவும், அனைவருக்கும் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது. குதிரை வீரர்கள், குதிரைவீரர்களுடனும், யானை வீரர்கள், யானை வீரர்களுடனும் மோதினர், தேர்கள் தேர்களோடு மோதின. இவ்வாறே அந்தப் போர் தொடர்ந்து கொண்டிருந்தது. இரு படைகளும் கலந்து குழப்பமடைவதற்கு முன்னர் வாள்வீரர்கள் வாள்வீரர்களுடனும், கதாயுத வீரர்கள் பகைவரின் படையைச் சார்ந்த கதாயுத வீரர்களுடனும் போரிட்டனர். இரு தரப்பிலும் இருந்த போர்வீரர்களின் கூச்சல்களும், அறைகூவல்களும் பிரளய காலத்தில் பொங்கும் கடலுக்கு ஒப்பான ஒலியுடன் இருந்தது.(10-12)

பகைப்படைப் போர்வீரர்கள், தங்கள் ஆயுதங்களால் பயங்கரக் காயங்களை ஏற்படுத்தியவாறே ஒருவரோடொருவர் போர் புரிந்தனர். திசைகள் எங்கும், “பெரும் வாளைத் தாங்கிய இவன் எவ்வாறு தரையில் விழுந்து கிடக்கிறான் பார்”, “என்னுடைய வலிமைமிக்கக் கூரிய கணைகளைப் பார்”, “கதாயுதத்தைச் சுழற்றும் இந்த வலிமைமிக்கப் போர்வீரனைப் பார்” என்ற ஒலிகள் கேட்டுக் கொண்டிருந்தன.(13,14) கவசம் தரித்தவர்களும், பாதுகாப்பைத் தரும் பிற கவசங்களையும் அணிந்து கொண்டு அங்கேயும் இங்கேயும் திரிபவர்களும், விற்கள், கணைகள், கதாயுதங்கள், ஈட்டிகள் ஆகியவற்றுடன் கூடியவர்களுமான வலிமைமிக்கப் போர்வீரர்களால் அந்தப் போர்க்களம் நிறைந்திருந்தது.(15) சூலங்களைச் சுழற்றிக் கொண்டு ஓடும் போர்வீரர்கள் அனைத்துத் திசைகளிலும் தென்பட்டனர். தந்தங்களையே ஆயுதங்களாகக் கொண்ட எண்ணற்ற யானைகள் பிளிறிக் கொண்டே அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தன.(16)

வேகமாகச் செல்லக்கூடிய போர்வீரர்கள் சிலர், காற்றைப் போல நகர்ந்து சென்றதால், ஒரே நேரத்தில் பல இடங்களில் போரிடுபவர்களைப் போலத் தோற்றமளித்தனர்.(17) படைவீரர்கள் பலர் தங்கள் பகைவரின் சூலங்களைத் தங்கள் சூலங்கள், கதாயுதங்கள், பரிகங்கள், தோமரங்கள் ஆகியவற்றால் முறித்தனர்.(18) மன்னா, இவ்வாறே அந்தப் போர் உக்கிரமாகத் தொடர்ந்தது. திடீரெனப் போர்க்களத்தில் ஒரு கலவரம் ஏற்பட்டது.(19) எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கான பெரும் விலங்குகள் கதறிக் கொண்டும், அலறிக் கொண்டும் போர்க்களத்திற்குள் நுழைந்தன. சங்கு முழக்கங்களுடன் சேர்ந்த இவ்வொலிகள் பொறுத்துக் கொள்ளமுடியாதவையாகின.(20)

நடுராத்திரியில் அந்தப் பெரும்போருக்கான ஒரு முடிவு ஏற்படப்போவதாகத் தெரியவில்லை. விருஷ்ணி குலத்தவரும், அவர்களின் பகைவருக்கும் இடையில் மங்காத உற்சாகத்துடன் போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது, போர்க்களத்தில் உண்டான ஒலிகள் செவிடாக்குபவையாக இருந்தன. கணக்கிலடங்கா சடலங்கள் தரையில் சிதறிக் கிடந்தன. உண்மையில், வலிமைமிக்கப் போர்வீரர்கள் பலர் தங்கள் பகைவருடன் சேர்ந்து, கேசம் கலைந்தவர்களாகத் தரையில் விழுந்து கிடந்தனர். படைவீரர்கள் பலர் தங்கள் கவசங்கள் சிதறடிக்கப்பட்டுத் துண்டுகளாக வெட்டப்பட்டுக் கிடந்தனர். போர்வீரர்கள் பலர் இவ்வாறு யமராஜனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டபோது, மரணத் தேவனின் பணிச்சுமை அதிகரிப்பதாகத் தெரிந்தது.(21-25)

பெரும் போர்வீரனும், வேடர்களான நிஷாதர்களின் தலைவனுமான ஏகலவ்யன், தன் ஆயிரக்கணக்கான கணைகளால் யாதவர்களைத் துன்புறுத்தியபடியே போர்க்களத்தில் இரண்டாம் யமராஜனைப் போலத் தோற்றமளித்தான். அந்தப் போரில் அவன் தன் கணைமாரியால் விருஷ்ணி குல க்ஷத்திரியர்கள் எண்ணற்றோரைக் கொன்றான்.(26-28) ஏகலவ்யன், தன்னுடைய அர்த்தச்சந்திரக் கணைகள் இருபத்தைந்தால் நிசடனையும், பத்தால் சாரணனையும், ஐந்தால் கிருதவர்மனையும், தொண்ணூறால் உக்கிரசேனனையும், ஏழால் வசுதேவரையும், பத்தால் உத்தவரையும், ஐந்தால் அக்ரூரரையும் துளைத்தான்.(29,30) இவ்வாறே ஏகலவ்யன் ஒருவர் பின் ஒருவராகக் கிட்டத்தட்ட யாதவப் போர்வீரர்கள் அனைவரையும் தன் கணைகளால் துளைத்தான்.

யாதவப் படையை விரட்டிய பிறகு ஏகலவ்யன் பின்வருமாறு அறைகூவல் செய்தான்:(31) “வலிமைமிக்க ஏகலவ்யன் நானே. கையில் கதாயுதத்துடன் கூடிய சாத்யகி இன்று என் கோபத்திலிருந்து எவ்வாறு தப்பப் போகிறான்?” {என்றான் ஏகலவ்யன்}.{32} இவ்வாறே யது குலத்தின் வீரப் போர்வீரர்கள் அனைவரையும் ஏகலவ்யன் அறைகூவியழைத்தான். அப்போது, சிங்கங்களே பீதியடையும் வகையில் அவன் கர்ஜனை செய்து கொண்டிருந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(32,33)

சாத்யகி | பவிஷ்ய பர்வம் பகுதி – 70-(ஸாத்யகிபௌண்ட்ரகயோ꞉ ஸம்வாதம்)-பௌண்டரகன் கட்டளை; யாதவர்களைக் காக்க வந்த சாத்யகி; பௌண்டரகன், சாத்யகி உரையாடல்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “மன்னா, யாதவப் படை வீரர்கள், தங்கள் பகைவர்களால் பெரிதும் துன்புறுத்தப்பட்டு, தங்கள் தீப்பந்தங்கள் அணைந்து போர்க்களத்தைவிட்டுத் தப்பி ஓடினர். இஃது அந்தப் படையின் தலைவர்களுக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. யாதவர்கள் தப்பிச் செல்வதைக் கண்ட பௌண்டரகன்: “அன்புக்குரிய கூட்டாளிகளே, விரைந்து சென்று நம் பகைவரின் நகரத்தைத் தரைமட்டமாக்குவீராக.(1-3) பூமியின் தலைவர்களே, கோடரிகள், கயிறுகள் என உங்கள் கைகளில் இருக்கும் எந்த ஆயுதத்தையும் எடுத்துக் கொண்டு நகரத்தைச் சூழ்வீராக.(4) முதலில் நகரத்தின் சுற்றுச் சுவர் மதில்களை உடைத்து, மாளிகைகள் அனைத்தையும் நொறுக்கி, யாதவர்களின் இளம்பெண்கள் அனைவரையும், அவர்களின் பணிப்பெண்களையும் கடத்திச் செல்வீராக.(5) மதிப்புமிக்க ரத்தினங்கள் அனைத்தையும், நீங்கள் காணும் செல்வம் எதனையும் அபகரித்துச் செல்வீராக” என்று ஆணையிட்டான்.

இதற்கு மறுமொழியாக மன்னர்கள் அனைவரும், “அவ்வாறே செய்கிறோம்” என்று சொல்லிவிட்டு, தங்கள் கோடரிகளால் சுற்றுச்சுவர் மதில்களையும், மாளிகைகளையும் நொறுக்கத் தொடங்கினர்.(6,7) அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் மதில்களின் மீது கற்பாறைகளை வீசியபோது பேராரவார ஒலி உண்டானது.(8) மன்னா, நகரத்தின் கிழக்குப்புறச் சுற்றுச் சுவர் கிட்டத்தட்ட முழுமையாகத் தகர்க்கப்பட்டது. மதில் நொறுங்கிவிழும் ஒலிகளைக் கேட்ட சாத்யகி பெருஞ்சீற்றம் அடைந்தான்.(9)

அவன் {சாத்யகி}, “யதுகுலத் தலைவன் கேசவன், நகரைப் பாதுகாக்கும் பொறுப்பை என் தோள்களில் சுமத்திவிட்டுச் சங்கரனைக் காண கைலாச மலைக்குச் சென்றிருக்கிறான். எனவே, நான் எவ்விலை கொடுத்தேனும் இப்போது நகரைப் பாதுகாக்க வேண்டும்” என்று நினைத்தான். இவ்வாறு நினைத்த சாத்யகி, தன் வில்லை எடுத்துக் கொண்டு, உறுதிமிக்கதும், நன்கு அலங்கரிக்கப்பட்டதும், தாருகனின் மகனால் செலுத்தப்பட்டதுமான தேரில் ஏறினான்.(10-12)

வலிமைமிக்கவனான சாத்யகி, கிருஷ்ணன் சொன்னவற்றை நினைத்துப் பார்த்து காதுகுண்டலங்களாலும், கைவளைகளாலும் தன்னை அலங்கரித்து, கவசம் பூண்டு, விற்கள், கதாயுதங்கள், வாள்கள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டான். பிறகு அவன், நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற பயங்கரமானதும், சிறந்ததுமான தன் வில்லையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு போருக்குப் புறப்பட்டான். சாத்யகி தன் வில்லின் நாண்கயிற்றைச் சுண்டி நாணொலி எழுப்பியது பகைவரின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்தியது.(13,14)

சாத்யகி விரைவாகத் தன் தேரில் ஏறிக் கொண்டு, தீப்பந்தங்களால் ஒளியூட்டப்பட்ட போர்க்களத்திற்குச் சென்றான். போரிடும் ஆவல் கொண்டவனும், கதாயுதம், வில், அம்பறாதூணிகள் ஆகியவற்றைக் கொண்டவனுமான தலைவன் பலராமன் அவனைப் பின்தொடர்ந்து சென்றான். சாத்யகியின் படையைச் சேர்ந்த போர்வீரர்கள், போர்க்களத்தை நோக்கிச் செல்லும்போதே சிங்கங்களைப் போலக் கர்ஜித்தனர்.(15,16) ஆலோசகர்களில் முதன்மையானவரும், வலிமைமிக்கவருமான உத்தவர், மதங்கொண்ட யானையின் மீது ஏறி, போர்வியூகங்களைச் சிந்தித்தபடியே போர்க்களத்தை நோக்கிச் சென்றார். விருஷ்ணி குல வீரர்கள் பலரும் பகைவருடன் போரிடும் ஆவலுடன் புறப்பட்டுச் சென்றனர்.(17,18)

பலமிக்கவனான கிருதவர்மனும், முன்னணி வீரர்கள் பிறரும், கிருஷ்ணன் சொன்னதை நினைவுக்கூர்ந்து தேர்களிலும், யானைகளிலும் ஏறி, தீப்பந்தங்களை ஏந்தி சங்கங்களைப் போலக் கர்ஜித்தபடியே போரிடப் புறப்பட்டுச் சென்றனர். யாதவப் போர்வீரர்களில் முதன்மையானோரான இவர்கள் அனைவரும், பகைவரை எதிர்க்கும் பேராவலில் நகரின் கிழக்கு வாயிலில் ஒன்று கூடினர். மன்னா {ஜனமேஜயா}, படைவீரர்களின் தீப்பந்தங்களால் திசைகள் அனைத்திலும் ஒளியூட்டப்பட்டிருந்த கிழக்கு வாயிலில் படை திரண்ட பிறகு, கவசம் பூண்டவனும், பல்வேறு வகையான ஆயுதங்களைக் கொண்டு சென்றவனுமான சாத்யகி உறுதிமிக்கத் தன் வில்லை எடுத்து, நாண்கயிற்றைக் காதுவரை இழுத்து, காற்றைப் போன்ற வேகம் கொண்ட தெய்வீகக் கணையொன்றை எதிரிகள் மீது ஏவினான்.(19-23)

இதன்விளைவாக ஒடுக்கப்பட்ட எதிரி வீரர்கள் வீழ்வதை உணர்ந்து தங்கள் தலைவனான பௌண்டரகனின் உறவிடம் தேடித் தப்பிச் சென்றனர்.(24) சாத்யகியின் கணை உண்டாக்கிய சூறாவளி, பகைவீரர்கள் தங்கள் தலைவனின் உதவியை நாடும் தேர்வு ஒன்றே இருக்கும் வகையில் அவர்களைச் சிதறடித்தது.(25) அதன்பிறகு, சினி குலத்தைச் சேர்ந்த சாத்யகி நகரின் கிழக்கு வாயிலில் நின்றபடியே மற்றொரு தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்துப் பின்வருமாறு பேசினான்:(26) “நுண்ணறிவுமிக்கப் பௌண்டரகனின் தலைமையிலான மன்னர்களில் முதன்மையானவர்களே, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நான் சாத்யகி. உங்கள் தலைவனுடன் போரிடும் ஆவலில் வில்லுடனும், கணைகளுடனும் நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன். அவனை நான் ஒரே முறை கண்டாலும், அவன் இறக்கும் வரையில் ஓயமாட்டேன். கேசவனின் பணியாளான நான் பௌண்டரகனைக் கொல்லவே இங்கே வந்திருக்கிறேன்.(27,28) கூடியிருக்கும் க்ஷத்திரியர்கள் அனைவரின் முன்னிலையிலும் இந்தப் பாவியின் தலையைக் கொய்து, நாய்களுக்கும், நரிகளுக்கும் அதை உணவாய் அளிப்பேன்.(29) நாங்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் நடு ராத்திரியில் இங்கே வருபவன் கள்வனல்லாமல் வேறு எவன்? பௌண்டரகன் ஒரு மன்னனல்ல அவன் கள்வன். அந்த இழிந்தவனுக்கு உண்மையில் துணிவிருந்தால் அவன் கள்வனைப் போலச் செயல்பட்டிருக்க மாட்டான்.(30,31) ஐயோ, மன்னனாக அழைக்கப்படும் கள்வன் போர்க்களத்தில் என் முகத்திற்கு நேரே ஏன் வரவில்லை? போரிடும் அறைகூவலை அவன் விடுத்திருந்தாலும் என் முன்னால் அவனைக் காணமுடியவில்லை” {என்றான் சாத்யகி}.(32)

சாத்யகி இதைச் சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தான். பிறகு அவன், ஒரு தெய்வீகக் கணையை நாண்கயிற்றில் பொருத்தி அதைக் காதுவரை இழுத்தான்.(33) சாத்யகியின் இந்தச் சொற்களைக் கேட்டதும் பௌண்டரகன், “கோழையான அந்தக் கிருஷ்ணன் எங்கே? பெண்களையும், விலங்குகளையும் கொல்லும் அந்தக் கிருஷ்ணன் எங்கே? பெண்களின் பணியேற்கும் என் பகைவன் எங்கே? என் பெயரைக் களவு செய்த அவன் எங்கே ஒளிந்திருக்கிறான்?(34,35) என்னுடைய நல்ல நண்பனும், மஹாத்மாவுமான நரகனை அவன் கொன்றான். அந்தப் பாவியைப் போரில் கொன்ற பிறகே என் கோபம் தணிவடையும்.(36) பலமிக்க வீரா, என்னுடன் போரிடத் தகாதவனான நீ விரும்பினால் வீட்டுக்குத் திரும்பிச் செல்லலாம். மாறாக நினைத்தால், முன்மாதிரியற்ற என் ஆற்றலைத் தனிப்பட்ட முறையில் உணர்ந்து கொள்ள ஒருக்கணம் காத்திருப்பாயாக.(37) வீழ்த்தப்பட முடியாத என் கணைகளால் நான் உன் சிரத்தை விரைவில் கொய்யப் போகிறேன். உன்னையும், உன் தொண்டர்கள் அனைவரையும் நான் போரில் கொன்ற பிறகு பூமி உன் குருதியைப் பருகுவாள்.(38) சாத்யகி கொல்லப்பட்டான் என்பதை அந்த இடையன் விரைவில் அறிவான். யது குலத்தில் முதன்மையானவனே, செருக்கில் மிதக்கும் அந்த இடையன் நீ கொல்லப்பட்டதும் தானாக வீழ்வான். மஹாத்மாவே, கைலாச மலைக்குப் புறப்படும் முன்னர் நகரைப் பாதுகாக்கும் பொறுப்பை அந்த இடையன் உனக்கு அளித்தான் என்று கேள்விப்பட்டோம். சாத்யகி, உனக்குத் துணிவும், உன் ஆற்றலில் நம்பிக்கையும் இருந்தால் வில்லையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு போருக்கு ஆயத்தமாவாயாக” {என்றான் பௌண்டரகன்}.

பௌண்டரகன் இதைச் சொல்லிவிட்டுப் போருக்கு ஆயத்தமாகும் வகையில் தன் வில்லையும், கணைகளையும் எடுத்துக் கொண்டான்.(39-41)

சாத்யகி பௌண்டரக யுத்தம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 71-(ஸாத்யகிபௌண்ட்ரகயோர்யுத்தம்)-பௌண்டரகனை நிந்தித்த சாத்யகி; பௌண்டரகனுக்கும் சாத்யகிக்கும் இடையில் நடைபெற்ற போர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “விருஷ்ணி குல வீரர்களில் முதன்மையான சாத்யகி, கிருஷ்ணனை நினைவுகூர்ந்து, கோபத்துடன் பின்வரும் சொற்களைச் சொன்னான்:(1) “பௌண்டரகா, மன்னர்களில் இழிந்தவனே, வஞ்சகனால் மட்டுமே நீ சொன்னது போல் வாசுதேவனை விமர்சிக்க முடியும். வாழ விரும்பும் எவன்தான் உன்னைப் போல அந்த ஜகத்பதியை நிந்திப்பான்?(2) நீ செய்வதைப் போலவே சொல்வதால் உன் மரணம் மிக அருகில் இருப்பதை உணர்கிறேன். உன்னைப் போன்ற மனிதனின் நாவை நூறு துண்டுகளாக வெட்ட வேண்டும்.(3) பௌண்டரகா, உன் தலையை உன் உடலில் இருந்து துண்டிப்பேன். உன் தலை உன் உடலில் இருக்கும் வரை வாசுதேவன் என்ற பெயரை நீ பயன்படுத்திக் கொள்ளலாம். விரைவில் இந்த உலகம் போலி வாசுதேவன் அற்றதாகும்.(4,5)

துராத்மாவே, நீக்கமற நிறைந்திருப்பவனும், அனைத்தின் பிறப்பிடமுமான ஜகந்நாதன் மட்டுமே வாசுதேவன் என்ற பெயருக்குத் தகுந்தவன். இதில் ஐயமேதுமில்லை.(6) மன்னர்களில் இழிந்தவனே, நான் இப்போது உன் தலையைக் கொய்யப் போகிறேன். அதுவரையோ, பகவானான கிருஷ்ணன் திரும்பி வரும் வரையோ போர்க்களத்தில் உன் ஆற்றலை வெளிப்படுத்துவாயாக. எஞ்சியிருக்கும் கொஞ்ச காலத்தைப் பயன்படுத்திக் கொள்வாயாக.(7,8) என்னுடைய வாள், கதாயுதம், வில், கணைகள் ஆகியவற்றைக் கொண்டு உன்னுடன் போரிடத் தயாராக இருக்கிறேன். நீ உன் ஆற்றலின் எல்லையைக் காட்டுவாயாக.(9) உண்மையில் எங்கள் நகரத்தில் உன் வரவு, போலி வாசுதேவனை அகற்றி வாழ்வை வெற்றிகரமானதாக்கும் வாய்ப்பை எனக்குத் தந்திருக்கிறது.(10) மன்னர்களில் இழிந்தவனே, நான் உன்னை எள்ளளவு சிறு துண்டுகளாக்கி நாய்களுக்குப் பரிமாறப் போகிறேன்” என்றான் {சாத்யகி}.

சாத்யகி, வாசுதேவன் என்று அழைத்துக் கொள்ளும் பௌண்டரக மன்னனிடம் இதைச் சொல்லிவிட்டு, நாண்கயிற்றில் கணையொன்றைப் பொருத்தித் தன் காது வரை இழுத்து எதிரியை நோக்கி ஏவினான். அந்தக் கணை பௌண்டரகனைத் துளைத்து ஆழமான காயத்தை உண்டாக்கியதால் அவனது கண்களில் இருந்தும் மற்ற அங்கங்களிலிருந்தும் குருதி பெருகியது. விரைவாக மீண்டு, சீற்றமடைந்த பௌண்டரகன், சிங்கம் போல் கர்ஜனை செய்து கொண்டே ஒன்பது, அல்லது பத்து கணைகளை ஏவி சாத்யகியைக் காயப்படுத்தினான்.(11-14) அந்தப் போலி வாசுதேவன், சாத்யகியின் நெற்றியில் காயத்தையும், தன் தொண்டர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும் உண்டாக்கி தன்னுடைய பயங்கரக் கணைமாரியைத் தொடர்ந்து பொழிந்து கொண்டிருந்தான். இதனால் பெரும் ஆளுமைகளில் சிறந்தவனும், விருஷ்ணி குல வீரர்களில் உறுதிமிக்கவனுமான அவன் {சாத்யகி}, தன் தேருக்குப் பின் சென்று மயக்கத்துடன் அமர்ந்தான்.(15-17)

அப்போது பௌண்டரக மன்னன் பத்துக் கணைகளை ஏவி சாத்யகியின் தேரோட்டியைக் காயப்படுத்தி, இருபத்தைந்து கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் காயப்படுத்தினான்.(18) பௌண்டரகனின் கடுந்தாக்குதலின் விளைவாக உண்மையில், அந்தத் தேரோட்டியும், குதிரைகளும், குருதியில் நனைந்து, மயக்கமடைந்தனர்.(19) மன்னா {ஜனமேஜயா}, தேரில் அமர்ந்திருந்த பௌண்டரகன் சிங்கம் போல் கர்ஜித்தான். அந்த ஆரவாரத்தைக் கேட்ட சாத்யகி மீண்டும் சுய நினைவை அடைந்தான்.(20) வலிமைமிக்கச் சாத்யகி, தன் தேரோட்டியும், குதிரைகளும் கடுங்காயம் அடைந்திருப்பதைக் கண்ட கோபத்தில் வெறி கொண்டவனானான்.(21)

அப்போது அவன் {சாத்யகி}, “இனி உன் ஆற்றலின் எல்லையைப் பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு, பௌண்டரகனின் மார்பைக் கணைகளால் துளைத்து அவனுக்குத் துன்பத்தை உண்டாக்கினான்.(22) மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கணைகளால் தைக்கப்பட்ட பௌண்டரகனின் மார்பில் இருந்து சூடான குருதி பாய்ந்ததால் அவனது உடல் திடீரெனத் துடித்தது. அவனுடைய மூச்சுப் பாம்பின் மூச்சு போல ஒலித்தது. சுய நினைவை இழந்த அவன், சூழ்நிலைகளைப் பொருட்படுத்தமால் தன் தேரில் அமர்ந்தான்.(23,24)

அப்போது சாத்யகி, பத்துக் கணைகளால் பௌண்டரகனின் தேரைத் துண்டுகளாக நொறுக்கினான். மேலும் அவன் தன் பல்லத்தைக் கொண்டு அவனது கொடிக்கம்பத்தையும் அறுத்தான்.(25) சாத்யகி, தொடர்ந்து கணைகளை ஏவி பௌண்டரகனின் குதிரைகளைக் காயப்படுத்தி அவனது தேரோட்டியையும் கொன்றான். பிறகே அவன், அந்தக் குதிரைகளைக் கொன்று பௌண்டரகனின் தேரை நொறுக்கினான்.(26,27) மன்னா, அவன் பத்துக் கணைகளால் பௌண்டரகனின் தேர்ச்சக்கரங்களைக் கடுகளவுள்ளவையாக வெட்டிவிட்டு உரக்கச் சிரித்து நின்றான்.(28)

விருஷ்ணி குலத்தின் வலிமைமிக்க வீரனான சாத்யகி, சிங்கத்தைப் போல முழங்கினான். க்ஷத்திரியர்கள் அனைவரும் பார்வையாளர்களாக நின்றிருந்தனர். பிறகு அவன் எழுபது கணைகளால் போலி வாசுதவேனின் முதுகையும், தலையையும், விலாப்புறங்களையும், மார்பையும் துளைத்தான். இவ்வாறு பௌண்டரகன் தன் மொத்த உடலும் கணைகளால் துளைக்கப்பட்டுப் போர்க்களத்தில் ஆதரவற்றவனாக நின்று கொண்டிருந்தான். ஓர் ஈகையாளன் வறுமையடைந்ததும் ஈகையேதும் செய்ய முடியாததைப் போலவே, தற்பெருமை செய்பவனும், கர்வம் கொண்டவனுமான பௌண்டரகன், மறுமொழியேதும் சொல்ல இயலாதவனாக அமைதியாக நின்றிருந்தான். சிறிது நேரம் கடந்ததும், பௌண்டரகன் அமைதி நிலைக்கு மீண்டு அர்த்தச்சந்திரக் கணையொன்றால் கோபத்துடன் சாத்யகியைத் துளைத்தான். சாத்யகி தன்னை நோக்கி விரைந்து வந்த போது அந்தப் போலி வாசுதேவன் அவனை ஏழு கணைகளால் துளைத்தான். இதற்குப் பதிலடியாகச் சாத்யகி ஏவிய சக்திமிக்க ஐந்து கணைகள் பௌண்டரகனின் வில்லை முறித்ததால் அவன் நிறைவுடன் உரத்த கர்ஜனை செய்தான்.(29-34)

பௌண்டரகன் தன் கதாயுதத்தை எடுத்து அதைச் சில முறை சுழற்றி சாத்யகியின் மார்பில் வீசினான்.(35) எனினும் அந்த யது குல வீரன் அந்தக் கதாயுதத்தைத் தன் இடது கையால் பிடித்துக் கொண்டான். இந்த அற்புதச் செயலைச் செய்த பிறகு அவன் பௌண்டரகனைத் தன் கணைகளால் மீண்டும் தாக்கினான்.(36) போலி வாசுதேவன் பத்து சக்தி ஆயுதங்களால் சாத்யகிக்குப் பதிலடி கொடுத்தான். இவ்வாறே போர் தொடர்ந்து கொண்டிருந்தது.(37) சாத்யகி இவ்வாறு சக்தி ஆயுதத்தால் தாக்குண்ட பிறகு, தன் வில்லை வைத்து விட்டு இன்னும் வலிமையான ஒன்றை எடுத்துக் கொண்டான். அதன் பிறகு அந்த முதன்மையான விருஷ்ணி குலப் போர்வீரன், பகைவரின் மத்தியில் பேரழிவை ஏற்படுத்தினான்” {என்றார் வைசம்பாயனர்}.(38)

வீரர்கள் அடைந்த ஆச்சரியம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 72-ஸாத்யகிபௌண்ட்ரகயோர்யுத்தம்)-பௌண்டரகனுக்கும் சாத்யகிக்கும் இடையில் நடைபெற்ற போர்; ஆச்சரியமடைந்த இருதரப்பு வீரர்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “மன்னா {ஜனமேஜயா}, அதன்பிறகு விருஷ்ணி குல நந்தனனான சாத்யகி கோபத்துடன் கதாயுதத்தை எடுத்து வீசி {பௌண்டரக} வாசுதேவனைப் பலமாகத் தாக்கினான்.(1) அதற்குப் பதிலடியாகப் போலி வாசுதேவனும் சாத்யகியைத் தன் கதாயுதத்தால் தாக்கினான். உறுதிமிக்கக் கதாயுதங்களைக் கொண்டிருந்த அந்த வீரர்கள் இருவரும் காட்டில் ஒன்றோடொன்று மோதும் செருக்குமிக்கச் சிங்கங்கள் இரண்டைப் போலத் தோன்றினர். சாத்யகி இடது புறத்தில் இருந்து போலி வாசுதேவனின் மார்பில் தாக்கினான். அதே வேளையில் வாசுதேவனும் வலதுபுறத்தில் இருந்து சாத்யகியைத் தாக்கியதால் இருவரும் தங்கள் பகைவரிடம் இருந்து பலமான அடிகளைப் பெற்றனர்.(2-4)

சாத்யகியின் வலுவான கதாயுதத்தால் தாக்கப்பட்ட வலிமைமிக்கப் பௌண்டரகன் முழங்காலிட்டு விழுந்தான். எனினும் அவன் எழுந்த பிறகு, தன் கதாயுதத்தால் சாத்யகியின் நெற்றியில் தாக்கினான். அதன்விளைவாகச் சாத்யகி கலக்கமடைந்தான். விரைவாக மீண்டெழுந்த சாத்யகி, தன் கதாயுதத்தால் பௌண்டர தேச மன்னனைத் தாக்கி பதிலடி கொடுத்தான்.(5,6)

மரணத் தூதன் போலத் தெரிந்த அந்தப் போலி வாசுதேவன், பெரும் பலம்வாய்ந்த போர்வீரனாகத் திகழ்ந்தான். அவன் சாத்யகியை சாம்பலாக எரித்துவிடுவதைப் போலப் பார்த்து தன் கதாயுதத்தால் அவனைத் தாக்கினான்.(7) சாத்யகி உயிரற்றவனைப் போல நனவிழந்து தரையில் விழும் வகையில் அந்த அடி பலமானதாக இருந்தது.(8) மன்னா, இருப்பினும் சாத்யகி ஒரு கணத்தில் குதித்தெழுந்து, பௌண்டரகன் வீசிய கதாயுதத்தைக் காற்றிலேயே பிடித்தான். இரும்பாலான அந்தப் பெரிய கதாயுதத்தைப் பெரும்பலத்துடன் முறித்து அதை வீசியெறிந்தான். வீரமிக்கச் சாத்யகி இந்த அற்புத சாதனையைச் செய்துவிட்டுச் சிங்கம் போல் முழங்கினான்.(9,10)

கதாயுதத்தை இழந்த போலி வாசுதேவன், இடது கையால் சாத்யகியைப் பிடித்துத் தன்னுடைய வலது கையால் அவனது மார்பில் மீண்டும் மீண்டும் குத்தினான்.(11,12) விருஷ்ணி குலத்தின் சிறந்த வீரன் {சாத்யகி}, தன் கதாயுதத்தைப் போர்க்களத்தில் வீசியெறிந்துவிட்டு போலி வாசுதேவனைப் பலமாக அறைந்தான்.(13) போலி வாசுதேவன் சாத்யகியை அறைந்து பதிலடி கொடுத்தான். இவ்வாறு இருவரும் கடுமையான துவந்த யுத்தம் செய்தனர்.(14) மன்னா, இரு பகைவர்களும் ஒருவரையொருவர் முட்டிகளிலும், முஷ்டிகளிலும், கைகளிலும், தலையிலும் தாக்கிக் கொண்டனர். காட்டில் இரு பனை மரங்கள் மோதும்போது உண்டாகும் உரத்த ஒலிக்கு ஒப்பாகவே இந்தப் போராளிகள் இருவரும் மோதும்போதும் உண்டானது. கொண்டாடப்பட்ட போர்வீரர்களான பௌண்டரகனும், சாத்யகியும் அந்த நள்ளிரவில் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு மற்போர் அரங்கில் விளையாடும் புகழ்பெற்ற மல்லர்களைப் போலப் போரிட்டனர்.(15-18)

அந்தப் போரைப் பார்த்துக் கொண்டிருந்த உக்கிரசேனன் தரப்பு, பௌண்டரகன் தரப்புப் படை வீரர்கள் அனைவரும் சாத்யகி, போலி வாசுதேவனால் கொல்லப்படுவானா, போலி வாசுதேவன் சாத்யகியால் கொல்லப்படுவானா என்று நினைத்து ஆச்சரியப்பட்டனர். அவர்கள், “இந்தப் பெரும் வீரர்கள் இருவரும் இன்று ஒருவரையொருவர் கொன்று தெய்வீக உலகங்களை அடையப் போகிறார்கள், அல்லது களைத்துப் போகும் வரை தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கப் போகிறார்கள்” என்று நினைத்தனர்.(19-21)

பிறகு அவர்கள், “ஐயோ, இந்த வீரர்கள் இருவரின் பலமும், பொறுமையும் எவ்வளவு அற்புதமானவை? மொத்த உலகிலும் இவர்கள் இருவரும் நிச்சயம் பெரும் பலமிக்கவர்களே. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் கூட இவ்வளவு கோரமான யுத்தம் நடந்ததில்லை. இத்தகைய போர் இதற்கு முன்பு கேட்கப்பட்டதுமில்லை, காணப்பட்டதுமில்லை” என்றனர்.(22,23)

மொத்த வானமும் கரிய மேகங்களால் மறைக்கப்பட்ட அந்த நள்ளிரவில் இவ்வாறே இரு படைகளின் வீரர்களும் தாங்கள் கண்டு கொண்டிருந்த துவந்த யுத்தத்தைப் பற்றிப் பேசிக் கொண்டனர்.(24) அதன் பிறகு அந்தப் போர்வீரர்கள் இருவரும் தொடர்ந்து கொஞ்ச நேரம் போரிட்டுக் கொண்டிருந்தனர். சாத்யகி தன் முஷ்டியால் பௌண்டரகனை பத்து முறை தாக்கினான்.(25) பிறகு வலிமைமிக்கப் பௌண்டரகன் தன் முஷ்டியால் சாத்யகியை ஐந்து முறை தாக்கினான். அவர்கள் ஒருவரையொருவர் குத்திய ஒலிகள் மொத்த உலகையும் கலக்கமடையச் செய்தன. எங்கும் இந்த ஒலிகளைக் கேட்ட மக்கள் அதன் காரணத்தை அறிந்து ஆச்சரியமடைந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(26)

ஏகலவ்யனின் படை | பவிஷ்ய பர்வம் பகுதி – 73-(ஏலலவ்யஸைந்யவதம்)-ஏகலவ்யனுக்கும் பலராமனுக்கும் இடையில் நடந்த போர்; பலராமனால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான நிஷாதர்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதேவேளையில் வேடர்களின் மன்னனான {நிஷாதிபதியான} ஏகலவ்யன், தன் வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு கோபத்துடன் பலபத்ரனை {பலராமனை} எதிர்த்து வந்தான்.(1) அவன் பத்துக் கணைகளால் பலராமனைத் தாக்கிவிட்டு, க்ஷத்திரியர்கள் பிறர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மேலும் பத்துக் கணைகளால் அவனது வில்லையும் முறித்தான்.(2) அதற்குப் பதிலடியாக அந்த ஜகத்பதி {பலராமன்} ஏவிய பத்துக் கணைகள், ஏகலவ்யனின் தேரோட்டியைக் காயப்படுத்தியது. அடுத்ததாக அவன் ஏவிய முப்பது கணைகள் அந்தத் தேரின் பெரும்பகுதியை நொறுக்கியது.(3)

வலிமைமிக்க ஏகலவ்யன் பெரும் வில் ஒன்றை எடுத்துக் கொண்டு, பகைவரை அழிக்கும் வலிமைமிக்கக் கணையொன்றை அதன் நாண்கயிற்றில் பொருத்தினான். ஒப்பற்ற வலிமை கொண்ட பலராமன் இதைக் கண்டு மிதிபட்ட பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டபடியே பாம்புக் கணைகள் பத்தை விரைவாக ஏவி தன் பகைவனின் {ஏகலவ்யனின்} வில்லை முறித்தான்.(4-6) வில்லை இழந்த ஏகலவ்யன், ஒரு பயங்கர வாளை விரைவாக எடுத்துக் கொண்டு பலராமனை நோக்கி விரைந்து ஓடினான்.(7) பிரதாபவனும், போர்க்கலைத் திறன் கொண்டவர்களில் முதன்மையானவனுமான பலராமன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஐந்து கணைகளை ஏவி ஏகலவ்யனின் வாளை எள்ளளவு துண்டுகளாக நொறுக்கினான்.(8)

நிஷாதனின் {வேடன் ஹிரண்யதனுசின்} மகனான ஏகலவ்யன், இரும்பாலான மற்றொரு வாளை எடுத்துச் சுழற்றி பலராமனின் தேரோட்டி மீது வீசினான்.(9) எனினும் ஒப்பற்ற யதுகுல வழித்தோன்றல் {பலராமன்}, அந்த வாள் தன் தேரோட்டியை அடையும் முன்பே பத்துக் கணைகளால் அதைத் துண்டுகளாக்கினான்.(10)

அப்போது ஏகலவ்யன் சிறிய கிங்கிணி மணிகளால் அலங்கரிக்கப்பட்ட சக்தி ஆயுதத்தை இருப்புக்கு அழைத்து, பலராமன் மீது ஏவி சிங்கத்தைப் போல முழங்கினான்.(11) பலராமன், அந்தச் சக்தி ஆயுதம் தன்னை நெருங்கும்போதே அதைப் பற்றி, உடனே தன் பகைவனுடைய மார்பின் மீது அதை வீசித் தாக்கினான். உயிரற்றவனைப் போல ஏகலவ்யன் தரையில் மயங்கி விழும் அளவுக்கு அதன் தாக்குதல் வலிமைமிக்கதாக இருந்தது.(12-15)

மன்னா {ஜனமேஜயா}, ஏகலவ்யனின் படையில் நிஷாதர்கள் என்று அறியப்படும் வேடர்கள் எண்பத்தெட்டாயிரம் பேர் படைவீரர்களாக இருந்தனர்.(16) மன்னா, அவர்கள் நெருப்பை நோக்கிப் பாயும் விட்டில் பூச்சிகளைப் போலத் தங்கள் கதாயுதங்களையும், வாள்களையும், சூலங்களையும், விற்களையும், பரிகங்களையும், பராசங்களையும், தோமரங்களையும், கோடரிகளையும், ஈட்டிகளையும் எடுத்துக் கொண்டு, இரண்டாம் ராமச்சந்திரனைப் போலத் தெரிபவனும், யாதவர்களுக்கு மத்தியில் நிற்பவனுமான பலராமனை நோக்கி விரைந்து சென்றனர். அந்த நிஷாதர்கள் பலராமனை அணுகும்போதே அவன் மீது கணைமாரியைப் பொழிந்தபடி சென்றனர்.(17-20)

நெய்யூட்டப்பட்ட நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டிருந்த பலராமனைச் சிலர் தங்கள் கோடரிகளால் தாக்கினர், சிலர் தங்கள் கதாயுதங்களால் அடித்தனர், வேறு சிலர் தங்கள் ஈட்டிகளை அவன் மீது ஏவினர். இவ்வாறு அந்த நிஷாதர்கள் அனைவரும் தங்கள் பகைவனை {பலராமனை} அடுத்தடுத்துத் தாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது சீற்றமடைந்த பலராமன், தன் கலப்பையைப் பயன்படுத்தித் தன்னை நோக்கி நிஷாதர்களை இழுத்துத் தன் முசலத்தால் அவர்களைத் தாக்கினான்.

மன்னா, மலைப்பகுதிகளில் வசிப்பவர்களான அந்த ஆயிரக்கணக்கான நிஷாதர்களும் பலராமனின் முசலத்தால் தாக்கப்பட்டுப் போர்க்களத்தில் மாண்டு விழுந்தனர். பலராமன், அந்த நிஷாதர்கள் அனைவரையும் ஒரே கணத்தில் கொன்றுவிட்டு, சிங்கத்தைப் போல உரக்க கர்ஜித்தான்.

பிணந்தின்னும் பிசாசுகள் எண்ணற்றவை அவ்விரவில் போர்க்களத்தில் வந்து சடலங்களை உண்டன. அவை, இறந்து போன போர்வீரர்களின் மார்பில் இருந்து குருதியைப் பருகி, உண்பதற்காக அவர்களின் உடல்களைத் துண்டுகளாக அறுத்தன” {என்றார் வைசம்பாயனர்}.(21-25)

நால்வரின் கதாயுதப்போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 74-(பௌண்ட்ரகயுத்தம்)-ஏகலவ்யனுக்கும், பலராமனுக்கும் இடையிலும், பௌண்டரகனுக்கும், சாத்யகிக்கும் இடையிலும் நடந்த கதாயுதப் போர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அந்த இரவில் ஊனுண்ணும் பல வகை உயிரினங்கள் போர்க்களத்திற்கு வந்து பயங்கரமாகச் சிரித்தபடியே கொல்லப்பட்ட போர்வீரர்களின் சடலங்களை உண்டன.(1) பச்சை மாமிசம் உண்பவர்களும், சடலங்களில் இருந்து குருதியைப் பருகுபவர்களுமான பிசாசங்களும், ராட்சசர்களும் அங்கிருந்தனர்.(2) மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, காக்கைகள், பருந்துகள், கழுகுகள், வல்லூறுகள், நரிகள் உள்ளிட்ட ஊனுண்ணும் பலவகைப் பறவைகளும், விலங்குகளும் கூட அந்தப் போர்க்களத்திற்கு வந்து, கொல்லப்பட்ட போர்வீரர்களையும், தேரோட்டிகளையும் உண்டு மகிழ்ந்தன. அந்தப் பெரும் விழாவில் அவை பிசாசங்களுடனும், ராட்சசர்களுடனும் சேர்ந்து மெய்மறந்து கூத்தாடின.

போர் தொடர்ந்து கொண்டிருந்த அதே வேளையில், ஏகலவ்யன் நினைவு மீண்டான். அவன் தன் படை வீரர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு பெருஞ்சீற்றம் அடைந்து, தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு பலராமனை நோக்கி ஓடினான்.(3-5) மன்னா, அந்த ஏகலவ்யன் தன் கதாயுதத்தைக் கொண்டு பலராமனின் தோள்களைத் தாக்கினான். அதற்குப் பதிலடியாக, கதாயுதம் தரித்திருந்தவனும், ஆற்றல் செருக்கில் மிதந்து கொண்டிருந்தவனுமான பலராமன், பாவம் நிறைந்த அந்த நிஷத மன்னனை {ஏகலவ்யனை} பலமாகத் தாக்கினான்.

அதன்பிறகு ஏகலவ்யனுக்கும், பலராமனுக்கும் இடையில் பயங்கரமான கதாயுதப்போர் தொடங்கியது. அவர்கள் சீற்றத்துடன் மோதிக் கொண்ட போது, கதாயுதங்கள் மோதும் ஒலிகளால் வானம் நிறைந்திருந்தது.(6-8) அச்சத்தை ஏற்படுத்தும் அந்த ஒலிகள் அண்ட அழிவின் போது பொங்கும் கடலின் ஒலியை ஒத்திருந்தது. இதன் விளைவாகப் பாம்புகளின் மன்னன் அனந்த சேஷனும், திக்பாலர்களும் கலக்கமடைந்தனர்.(9) வானமெங்கும், நிலமெங்கும் அந்த ஆரவார ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.

அதே வேளையில் மன்னன் பௌண்டரகனுக்கும், சாத்யகிக்கும் இடையில் தொடர்ந்து வந்த போரில் அவர்கள் ஒருவரையொருவர் பலமாகத் தாக்கிக் கொண்டிருந்தனர்.(10,11) அந்தப் போரிலும் பயங்கர ஒலிகள் எழுந்தன. ஒருவரை ஒருவர் கொல்வதற்கு முயற்சி செய்த அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் நால்வர் ஏற்படுத்திய ஒலிகளால் மொத்த அண்டமும் உண்மையில் கலக்கமடைந்தது.

அந்தப் பயங்கர இரவானது, அடிவானில் சூரியன் எழுந்து நட்சத்திரங்கள் மறைந்து படிப்படியாக முடிவுக்கு வந்தது. சூரிய பகவான் உதித்ததும் இரவின் இருள் அகன்று சந்திரனின் ஆதிக்கம் குறுகியது. பகல் தொடங்கியதும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த நான்கு வீரர்களின் போர், பழங்காலத்தின் தேவாசுரப் போரை நினைவுப்படுத்தும் வகையில் உக்கிரமடைந்தது” என்றார் {வைசம்பாயனர்}.(12-15)

துவாரகை திரும்பிய கிருஷ்ணன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 75-(துவாரகாயாம் ப்ரத்யாகதஸ்ய ஸ்ரீகிருஷ்ணஸ்ய பௌண்ட்ரகேண ஸஹ யுத்தம்)-பதரிகாசிரமத்தில் இருந்து துவாரகைக்குத் திரும்பி வந்த கிருஷ்ணன்; பௌண்டரகனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த விவாதம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அந்த நாள் தொடங்கியதும் தேவகியின் மகனான பகவான் ஜகந்நாதன்பதரிகாசிரமத்தில் இருந்து துவாரகை திரும்பத் தீர்மானித்தான்.(1) மன்னா {ஜனமேஜயா}, முதலில் அவன் அங்கு வசித்திருந்த முனிவர்கள் அனைவரையும் வணங்கி விடை பெற்றுக் கொண்டு அதன் பிறகு கருடன் மீதேறி துவாரகைக்குப் புறப்பட்டான்.(2) மனிதர்களின் மன்னா, கிருஷ்ணன் துவாரகாபுரியை நெருங்கியபோது, அங்கே நடந்து கொண்டிருக்கும் போரினால் ஏற்படும் பெருங்கலவரத்தின் ஒலியைக் கேட்டான்.(3)

அதைக் கேட்ட கிருஷ்ணன், “இஃதென்ன கலவரம்? போர் ஏதும் நடக்கிறதா? என் அண்ணன் பலராமனின் குரலையும், சாத்யகியின் குரலையும் என்னால் கேட்க முடிகிறது.(4) பௌண்டரகன் துவாரகையைத் தாக்கியிருக்கக் கூடும். தீய மனம் கொண்ட அந்த மன்னனுடன் யாதவர்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். போர் நடப்பதே இந்தக் கலவரத்திற்கான காரணம் என்பது திண்ணம்” என்று நினைத்தான்.(5,6)

இவ்வாறு நினைத்துக் கொண்டிருந்த ஹரி, தன் பாஞ்சஜன்ய சங்கை உரக்க முழக்கி விருஷ்ணி குல வீரர்களை நிறைவடையச் செய்தான்.(7) கேசவனின் சங்கு முழக்கம் வானத்தையும், பூமியையும் நிறைத்தது. ஆழ்நிலை ஒலி அதிர்வைக் கேட்ட யாதவர்களும், விருஷ்ணிகளும் தங்களுக்குள் பேசிக் கொள்ளத் தொடங்கினர்: “கிருஷ்ணன் வந்திருக்கலாம். இவ்வொலி அவனுடைய பாஞ்சஜன்ய சங்கின் ஒலிதான்” {என்றனர்}. மன்னா {ஜனமேஜயா}, யாதவர்களும், விருஷ்ணிகளும் கிருஷ்ணன் வந்துவிட்டதை உணர்ந்து அச்சமற்றவர்களானார்கள். பிறகு அவர்கள் திடீரெனக் கருடனையும், தேவகியின் மகனான கிருஷ்ணனையும் கண்டனர். செய்தி பரவியதும் சூதர்களும், மாகதர்களும் அங்கே வந்தனர்.(8-11) நீக்கமற நிறைந்திருக்கும் அண்டத்தின் தலைவனும், ஈசுவரனும், தாமரைக் கண்களைக் கொண்டவனுமான ஜனார்த்தனனை நோக்கி விரைந்து சென்ற யாதவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(12)

யதுவின் மிகச்சிறந்த வழித்தோன்றலான கிருஷ்ணன், கருடனின் முதுகில் இருந்து இறங்கி, அவனிடம் {கருடனிடம்}, “நீ தேவலோகம் திரும்பலாம்” என்றான். அவன், கருடனை அனுப்பிவிட்டுத் தாருகனிடம், “என் தேரைக் கொண்டு வருவாயாக” என்றான். தாருகன், “ஆணை” என்று மறுமொழி கூறிவிட்டு ஒரே கணத்தில் கிருஷ்ணனின் முன்னிலையில் தேரைக் கொண்டு வந்து, “இதோ உன் தேர். இனி நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்டான். தாருகன் இதைச்சொல்லி வணங்கிவிட்டு கைகளைக் கூப்பியபடியே அந்தத் தலைவனின் முன்னிலையில் நின்றான்.(13-15)

கருடன் சென்றதும் கிருஷ்ணன் தன் தேரில் ஏறி போர்க்களத்தை நோக்கிச் சென்றான்.(16) மன்னா, போர்க்களத்தை நெருங்கிய போது அந்தத் தலைவன் கிருஷ்ணன், தன் பாஞ்சஜன்ய சங்கை முழக்கி, கூடியிருக்கும் போர் வீரர்களுக்குத் தன் வரவை அறிவித்தான்.(17)

போரில் அதியாவல் கொண்ட கிருஷ்ணன் எவ்வாறு போர்க்களத்திற்கு வந்தான் என்பதைக் கண்ட பௌண்டரகன், சாத்யகியுடனான போரில் இருந்து விலகி இவனை {கிருஷ்ணனை} எதிர்க்கத் திரும்பினான்.(18) மன்னா {ஜனமேஜயா}, பௌண்டரகன் புறப்படுவதைக் கண்ட சாத்யகி அவனைத் தடுக்க முயலும் வகையில், “மன்னா, போரை விட்டு விலகாதே. இது முறையான நெறியல்ல.(19) முதலில் நீ என்னை வீழ்த்த வேண்டும். அதன் பிறகே பிறருடன் போரிட நீ செல்ல முடியும். நீ ஒரு க்ஷத்திரியன். போருக்கான ஆவலுடன் நான் நீடிக்கும் வரையில் நீ என்னையே எதிர்க்க வேண்டும். இந்தப் போர்க்களத்தில் நான் உன் செருக்கை எவ்வாறு நொறுக்கப் போகிறேன் என்பதைப் பார்” என்றான். சினியின் பேரனான சாத்யகி இதைச் சொல்லிவிட்டு, பௌண்டரகனின் வழியை அடைத்துக் கொண்டு அவனது முன்னிலையில் நின்றான். அப்போதும் பௌண்டரகன் சாத்யகியைப் புறக்கணித்துவிட்டுக் கிருஷ்ணனை நோக்கியே சென்றான்.(20-22)

கிருஷ்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சாத்யகி தன் கதாயுதத்தால் மீண்டும் பௌண்டரகனைத் தாக்கினான்.(23) பௌண்டரகனுடனான போரில் சாத்யகி தன் கதாயுதத்தைப் பெருந்திறனுடன் தரித்திருப்பதைக் கண்ட கிருஷ்ணன், பெரும் நிறைவடைந்தவனாக அவனைப் பெரிதும் புகழ்ந்தான்.(24) சிறிது நேரம் கடந்ததும் கிருஷ்ணன், சாத்யகியைப் போரில் இருந்து விலகச் செய்யும் வகையில், “அவன் விரும்பியதனைத்தையும் செய்யட்டும். விடுவாயாக” என்றான். வலிமைமிக்கச் சாத்யகி அப்போதுதான் போரில் இருந்து விலகினான்.(25)

அதன்பிறகு மன்னன் பௌண்டரகன், தலைவன் கிருஷ்ணனிடம், “யாதவா, இடையா, எங்கே சென்றிருந்தாய்?(26) கிருஷ்ணா, உன்னுடன் போரிட விரும்பியே நான் இங்கே வந்தேன். பெரும்படையைக் கொண்டிருக்கும் நானே கொண்டாடப்படும் உண்மையான வாசுதேவன். என் படையின் துணையுடன் உன்னைக் கொன்று இவ்வுலகில் சச்சரவுக்கிடமில்லாமல் வாசுதேவனாக இருப்பேன். கோவிந்தா, நீ சக்கரபாணியெனப் புகழ்பெற்றிருந்தாலும் அந்தச் சக்கரம் என் சக்கரத்தால் இப்போது அழிவடையப் போகிறது. மாதவா, “சக்கரத்தைக் கொண்டிருப்பதால் நான் வெல்லப்பட முடியாதவன்” என்ற உன் செருக்கை இனி நீ விடுவாயாக. இன்று க்ஷத்திரியர்கள் அனைவரின் முன்னிலையிலும் நான் உன்னுடைய நன்மதிப்பை அழிப்பேன். ஜனார்த்தனா, உண்மையான சாரங்கபாணியாக என்னை அறிவாயாக. நீயோ ஒரு போலி. சங்கு, சக்கரக் கதாதாரியாக என்னை அறிந்து உன் மாயச் செருக்கைக் கைவிடுவாயாக.(27-31)

உலகின் கல்விமான்களும், செல்வந்தர்கள் அனைவரும் என்னையே சங்கு, சக்கர, கதாதாரியெனக் குறிப்பிடுவார்கள். கடந்த காலத்தில் கம்சனின் மூத்த சேவகர்களையும், {பூதனை போன்ற} சில பெண்களையும், சில குழந்தைகளையும் {கம்சனால் கொல்லப்பட்ட தேவகியின் ஆறு மகன்களையும்}, சில மாடுகளையும் நீ கொன்றிருக்கிறாய். இதற்கே நீ உன் பலத்தில் செருக்கடைந்தாய். நீ என் எதிரில் நின்றால் நான் இன்று உன் செருக்கை அழிப்பேன்.(32,33) கோவிந்தா, நீ போரிட விரும்பினால் உன் ஆயுதங்களை எடுத்துக் கொள்வாயாக” என்றான். பௌண்டரகன் இதைச் சொல்லிவிட்டு தன் வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு கிருஷ்ணனின் முன்னிலையில் நின்றான்.(34)

கிருஷ்ணன், அந்தப் போலி வாசுதேவனின் சொற்களைக் கேட்டுச் சிரித்துவிட்டு, “மன்னா, விரும்பியதேதும் நீ பேசலாம். பசுக்களையும், குழந்தைகள், மற்றும் பெண்களையும் கொன்றவன் என என்னை நீ பழிக்கலாம்.(35,36) மன்னா, நீ உன் சக்கரத்தையும், கதாயுதத்தையும் போலச் சாரங்க வில்லையும் சுதந்திரமாகக் காட்டலாம். நீ விரும்பினால் உன்னை நீ வாசுதேவன் என்றும் அழைத்துக் கொள்ளலாம்.(37) நீ விரும்பினால் என் சங்கு, சக்கரம், கதாயுதத்தைத் தரிப்பவன் என்றும் உன்னை நீ குறிப்பிட்டுக் கொள்ளலாம். எனினும், நீ கேட்க விரும்பினால் நான் உனக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.(38)

பிரபுவே, இவ்வுலகில் நான் இருக்கும்போதே உன்னை என் பெயரால் அழைக்கும் க்ஷத்திரியர்கள் பலர் இருக்கின்றனர்.(39) என் சக்கரம் எல்லையற்ற சக்தியுடன் மஹாகோரமாக அசுரர்களை வதைக்கக் கூடியது. உன் சக்கரம் வடிவத்தில் என்னுடையதைப் போல இருந்தாலும் ஆற்றலில் வேறானது. உன் ஆயுதங்கள் பெயரால் மட்டுமே என்னுடையவை போன்றிருந்தாலும் பலத்தால் அவ்வாறில்லை.(40) மன்னா, உயிரினங்கள் அனைத்தின் உயிரையும் பாதுகாக்கும் இடையன் நான். நல்லோரைக் காத்து, அல்லோரைத் தண்டிப்பவனும் நான்.(41) மன்னர்களில் இழிந்தவனே, உன் பகைவரை வென்ற பிறகு நீ கொக்கரிக்கலாம். கையில் ஆயுதங்களுடன் நான் உன் முன்னிலையில் நிற்கும்போது என்னை வீழ்த்தாமலேயே உன்னால் எவ்வாறு கொக்கரிக்க முடிகிறது?(42) பௌண்டரகா, உனக்குச் சக்தி இருந்தால் என்னைக் கொல்வாயாக. அந்த வீரச் சாதனையைச் செய்த பிறகு உன் இதயம் நிறைவடையுமட்டும் தற்புகழ்ச்சி செய்து கொள்வாயாக. எனினும் இப்போது நான் கையில் வில், கதை, வாள், சக்கரம் ஆகியவற்றுடன் உன் முன்னிலையில் என் தேரில் அமர்ந்திருக்கிறேன்.(43) வேத நெறிகளை நோற்பவனே, தேரில் ஏறி போரிட ஆயத்தமாவாயாக” என்றான் {கிருஷ்ணன்}. இதைச் சொல்லிவிட்டுச் சிங்கத்தைப் போலக் கிருஷ்ணன் முழங்கினான்” என்றார் {வைசம்பாயனர்}.(44)

பௌண்டரகன் வதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 76-(பௌண்ட்ரகவதம்)பௌண்டரகனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த போர்; பௌண்டரகன் கொல்லப்பட்டது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “பரம்பொருளான வாசுதேவன் தன் வில்லை எடுத்துக் கணைகளைப் பொருத்தி அவற்றைப் பௌண்டரகன் மீது ஏவத் தொடங்கினான்.(1) பௌண்டரகன் தன் பங்குக்குப் பத்துக் கணைகளை ஏவி கிருஷ்ணன் மீது எதிர்த் தாக்குதல் தொடுத்தான்.(2) பிறகு அந்தப் போலி வாசுதேவன் தாருகன் மீது இருபத்தைந்து கணைகளையும், குதிரைகள் மீது பத்தையும், யதுவின் சிறந்த வழித்தோன்றலான கிருஷ்ணன் மீது எழுபது கணைகளையும் தொடுத்தான்.(3)

கேசிசூதனனான {கேசியைக் கொன்றவனான} கேசவன், “பௌண்டரகன் பேராணவம் கொண்டவனாக இருக்கிறானே” என்று நினைத்து மெல்லச் சிரித்தான்.(4) கொண்டாடப்படும் சாரங்க வில்லைத் தரித்தவனான அந்தக் கேசவன், கணைகளாலான ஓடையைப் பொழிந்து பௌண்டரகனின் கொடியை அறுத்தான்.(5) பிறகு அவன் பௌண்டரகனுடைய தேரோட்டியின் தலையைக் கொய்து, மேலும் நான்கு கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் கொன்றான். அவன் பௌண்டரகனின் மெய்க்காவலர்களைக் கொன்று தேரை நொறுக்கி, தன் சக்கரத்தால் தேரின் சக்கரத்தை எள்ளளவு துண்டுகளாக்கினான். இவ்வளவையும் செய்துவிட்டுத் தாக்குதலை நிறுத்திப் புன்னகைத்தான்.(6,7)

போலி வாசுதேவனான பௌண்டரகன், தன் வாளை எடுத்துக் கொண்டு நொறுங்கிய தேரில் இருந்து கீழே குதித்துத் தரையில் நின்றபடியே அதை {அந்த வாளைக்} கேசவன் மீது வீசினான்.(8) கேசவன், தன் தேரில் அமைதியாக அமர்ந்திருந்தபடியே அந்த வாளை நூறு துண்டுகளாக்கினான். வலிமைமிக்கப் பௌண்டரகன் ஒரு பரிகத்தை எடுத்துக் கொண்டு, பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த க்ஷத்திரியர்கள் அனைவரின் முன்னிலையில் அதைக் கிருஷ்ணன் மீது வீசினான்.(9,10) மன்னா {ஜனமேஜயா}, ஜகந்நாதன் அலட்டிக் கொள்ளாமல் அந்தப் பரிகத்தைப் பாதியாக முறித்தான். பகைவரைக் கொல்பவனான மன்னன் பௌண்டரகன், அடுத்ததாக ஆயிரம் ஆரங்களைக் கொண்டதும், முப்பது பாரங்கள்[1] எடை கொண்டதும், பிரகாசமிக்கதுமான ஓர் இரும்புச் சக்கரத்தை இருப்புக்கு அழைத்தான். பிறகு அவன் கிருஷ்ணனிடம் பின்வருமாறு பேசினான்.(11,12)பௌண்டரகன், “கோவிந்தா, கர்விகளில் முதன்மையானவனே, உன் சக்கரத்தை அழிக்கக்கூடியதும், பீதியை ஏற்படுத்துவதுமான என் சக்கரத்தைப் பார். விருஷ்ணியின் வழித்தோன்றலே, இப்போது உன் செருக்கை நான் தகர்க்கப் போகிறேன். வெல்லப்பட முடியாத இந்தச் சக்கரத்தை உனக்காவே நான் வரவழைத்தேன். உனக்கு ஆற்றலிருந்தால் என் முயற்சியை வீணடிப்பாயாக” என்றான்.

பெரும்பலவானும், செல்வாக்குள்ள மன்னனுமான பௌண்டரகன் இதைச் சொல்லிவிட்டுத் தன் சக்கரத்தை ஓராயிரம் முறை சுழற்றிக் கிருஷ்ணன் மீது ஏவினான். பலவான்களில் உயர்ந்தவனான கிருஷ்ணன், அந்தச் சக்கரம் காயத்தை ஏற்படுத்தாமல் தன்னைக் கடந்து செல்லும் வகையில், தன் தேரில் இருந்து விரைவாக இறங்கி சிங்கம் போலக் கர்ஜித்தான். முதலில் கிருஷ்ணன், அவனது துணிவையும், வீரத்தையும் கண்டு ஆச்சரியமடைந்து, “ஐயோ, பௌண்டரகனின் உள்ளச் சமநிலையும், பொறையும் {நீடித்து நிற்கும் திறனும்} எவ்வளவு அற்புதமானது” என்று நினைத்தான். இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கும்போதே அந்த ஜகந்நாதன் தன் அற்புதத் தேரில் இருந்து குதித்தான். முயற்சி வீணடிக்கப்பட்ட பௌண்டரகன், பெரும் பாறை ஒன்றை எடுத்துக் கிருஷ்ணன் மீது வீசினான். எனினும் அவன், சிந்தனைக்கு அப்பாற்பட்ட தன்னுடைய அசாத்திய ஆற்றலைப் பயன்படுத்தி அந்தப் பாறையைப் பௌண்டரகன் மீதே திருப்பிவிட்டான்.(13-19) இவ்வாறே அந்த ஹரி நீண்ட நேரம் பௌண்டரகனுடன் போரிட்டுக் கொண்டிருந்தான். இறுதியில் அவன், அசுரர்களின் குருதியைப் பருகும் தன் சக்கரத்தை இருப்புக்கு அழைத்தான்.(20)

தங்கத்தலான அந்தச் சக்கரம், தைத்திய மாமிசத்தால் ஊட்டம் பெற்றதாகவும், அவர்களுடைய {தைத்தியர்களுடைய} மனைவிகளின் கர்ப்பங்களை அழிக்கக்கூடியதாகவும் இருந்தது. சில நேரங்களில் அந்தச் சக்கரம் ஆயிரம் ஆரங்களைக் கொண்டதாகவும், வேறு சில நேரங்களில் நூறாயிரம் {ஒரு லட்சம்} ஆரங்களைக் கொண்டதாகவும் தெரிந்தது. உயர்ந்ததும், செழுமையானதும், தேவர்களால் வழிபடப்படுவதுமான அந்தத் தெய்வீக ஆயுதம், தைத்தியர்களின் இதயங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.(21,22) பாவங்களில் இருந்து பக்தர்களைக் காப்பவனும், சாரங்கபாணியுமான விஷ்ணுவின் நித்தியப் பயன்பாட்டுக்குரிய அந்தச் சக்கரத்தால் அந்தக் கோவிந்தன் பௌண்டரகனைக் கொன்றான்.(23) இறைச்சியுண்ணும் அந்தச் சக்கரம், பௌண்டரகனின் உடலைத் துண்டித்துவிட்டுக் கிருஷ்ணனின் கைகளுக்குத் திரும்பியது.(24) அப்போது பௌண்டரகனின் உயிரற்ற உடல் போர்க்களத்தில் விழுந்தது. பிரதாபவானும், ஹரியுமான பகவான் விஷ்ணு, பொருள்முதல்வாதிகளுக்குப் புரியாத ஆழ்நிலை இயல்பைக் கொண்ட பௌண்டரகனை இவ்வாறு கொன்றுவிட்டு, யாதவர்கள் அனைவராலும் துதிக்கப்பட்டவனாகச் சுதர்மம் என்று அறியப்படும் தன் சபா மண்டபத்திற்குத் திரும்பிச் சென்றான்” என்றார் {வைசம்பாயனர்}.(25)

ஓடி ஒளிந்த ஏகலவ்யன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 77-(ஏகலவ்யநிர்யாணம்)-பலராமனிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் கடல் தாண்டி தனித்தீவில் ஓடி ஒளிந்த ஏகலவ்யன்; யாதவர்களின் சபையில் உரையாற்றிய கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதே வேளையில் போர்க்களத்தில் பலசாலிகளில் சிறந்த பலராமன், ஏகலவ்யனின் மார்பைத் தாக்கி சிங்கம்போலக் கர்ஜித்தான்.(1) அதற்குப் பதிலடியாக ஏகலவ்யனும், பலத்தின் செருக்கில் வெறிக் கொண்டிருந்த வலிமைமிக்கப் பலராமனின் மார்பைத் தன் கதாயுதத்தால் தாக்கினான்.(2) ஏகலவ்யனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட விருஷ்ணி குல பலராமன், அலட்சியமாகத் தன் இரு கைகளாலும் அதைப் பற்றி, அந்த நிஷாத மன்னன் {ஏகலவ்யன்} வெற்றியில் நம்பிக்கை அனைத்தையும் இழந்து, சீற்றமிக்கக் கடுஞ்சுறாக்களின் வசிப்பிடமான பெருங்கடலின் கரைக்குத் தப்பியோடும் வகையில் அவனைப் பலமாகத் தாக்கினான்.(3,4)

ஏகலவ்யன் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடும்போது, பலராமன் அவனைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றான். ஏகலவ்யன் உண்மையில் அஞ்சி எங்கு ஓடினாலும் அங்கெல்லாம் பலராமன் அவனை நெருங்கினான்.(5) மன்னா, இறுதியில் ஏகலவ்யன், பலராமனின் கோபத்தில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கடலுக்குள் புகுந்து, ஐந்து யோஜனைகள் நீந்திச் சென்றான்.(6) ஏகலவ்யன் வசிப்போரெவருமற்ற தீவொன்றை அடைந்து அங்கே வசித்து வந்தான். இவ்வாறே பலராமன் நிஷாதர்களின் மன்னனான ஏகலவ்யனை வென்றான்.(7)

அதன் பிறகு, அந்த ஹலாயுதன், எண்ணற்ற வைரங்களாலும், மதிப்புமிக்க ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த சுதர்மம் என்ற சபையை அடைந்தான். அதே வேளையில் சாத்யகியும் போர்க்களத்தை விட்டு அந்தச் சபா மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான்.(8) மன்னா, பிற யாதவர்கள் அனைவருங்கூடப் போர்க்களத்தை விட்டு வந்து அந்த ராஜசபையின் இருக்கைகளில் அமர்ந்தனர். அந்நேரத்தில் தேவகியின் மகனான பகவான் {கிருஷ்ணன்} அந்த விருஷ்ணிகளின் சபையில் பின்வருமாறு பேசினான்.(9,10)

கிருஷ்ணன், “யாதவர்களில் முதன்மையானவர்களே, நான் கைலாச மலைக்குச் சென்று, செந்நீல வண்ணனான சங்கரனை என் தவத்தால் நிறைவடையச் செய்து, அவனது ஆசியைப் பெற்றேன்.(11) தேவர்கள் அனைவரும், தபோதனர்களான பெரும் முனிவர்கள் அனைவரும் அங்கே இருந்தனர். சங்கரன் என்னைச் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்து, நான் புறப்படும் முன் அழகிய துதிகளை எனக்கு அர்ப்பணித்தான்.(12) நான் பதரிகாசிரமத்தில் இருந்தபோது ஓரிரவில் அசாதரண அனுபவம் ஒன்றை அடைந்தேன். வலிமைமிக்கப் பிசாசங்கள் இரண்டு வேட்டையாடியவாறும் என்னைக் குறித்துப் பேசிக் கொண்டும் என் முன் வந்தன. உண்மையில், அவற்றின் மனங்கள் என்னில் நிலைத்திருந்தன. உண்மையில் பேரான்மாக்களான இந்தப் பிசாசங்கள் இரண்டும் என்னைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தன. அவை பெரும்பணிவுடனும், பக்தியுடனும் என்னை வணங்கின. நான் அவர்களிடம் நிறைவடைந்ததால் தேவலோகத்தில் வசிக்குமாறு அனுப்பி வைத்தேன். அந்த நிகழ்வுக்குப் பிறகு, என் தவத்தால் மஹாதேவனை நிறைவடையச் செய்து இன்று இங்கே திரும்பினேன்” என்றான் {கிருஷ்ணன்}”.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “கிருஷ்ணன் சொன்ன அனைத்தையும் கேட்ட விருஷ்ணி குலத்தோர் அனைவரும், அவனது புகலிடத்தை மீண்டும் அடைந்து, மிகப் பாதுகாப்பாக உணர்ந்து அவனைத் துதித்தனர். அதன் பிறகு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(13-17)

பிறகு ஜகந்நாதன் தன் மாளிகைக்குச் சென்று நடந்தவை அனைத்தையும் ருக்மிணி, சத்யபாமா ஆகியோருக்கு உரைத்தான்.(18) அன்பு மனைவியரான அவ்விருவரும் தங்கள் கணவன் சொன்னதைக் கேட்டுப் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மன்னா, இவ்வாறே கிருஷ்ணனின் கடந்த காலங்கள் அனைத்தையும் உனக்கு விரிவாகச் சொல்லிவிட்டேன்.(19) கிருஷ்ணன் தொடர்ந்து பூமியை ஆண்டு, எண்ணற்ற துஷ்டர்களைக் கொன்று, பூமியின் பாரத்தைக் குறைத்தான். தேவர்களின் தலைவனும், பெரும் முனிவர்களால் வழிபடப்படுபவனுமான அவன் {கிருஷ்ணன்}, நரகாசுரன், பெரும் மன்னன் பௌண்டரகன், ஹயக்ரீவன், நிசும்பன், சுந்தன், உபசுந்தன் உள்ளிட்ட முக்கிய அசுரர்களைக் கொன்று முனிவர்களையும், பிராமணர்களையும் பாதுகாத்தான்.(20,21)

கிருஷ்ணன் எண்ணற்ற பசுக்களையும், அளவில்லா செல்வத்தையும் பிராமணர்களுக்குக் கொடையாகக் கொடுத்தான். அவன் அக்னி ஹோத்ரங்களைச் செய்து, பிராமணர்களுக்கு நல்ல உணவைக் கொடுத்து அவர்களை நிறைவடையச் செய்தான்.(22) அவன் வேதங்கற்றுப் பிரம்மச்சரியம் அனுசரித்து முனிவர்களையும், யஜ்ஞங்களைச் செய்து தேவர்களையும், ஆகுதிகளைக் கொடுத்துப் பித்ருக்களையும் நிறைவடையச் செய்தான்.(23) இவ்வாறே தேவர்களின் தலைவனான கிருஷ்ணன், தன் ராஜ்ஜியத்தைத் தடையில்லாமல் ஆண்டான், பிராமணர்களின் தலைமையிலான குடிமக்கள் அனைவரும் அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(24)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதே வேளையில் போர்க்களத்தில் பலசாலிகளில் சிறந்த பலராமன், ஏகலவ்யனின் மார்பைத் தாக்கி சிங்கம்போலக் கர்ஜித்தான்.(1) அதற்குப் பதிலடியாக ஏகலவ்யனும், பலத்தின் செருக்கில் வெறிக் கொண்டிருந்த வலிமைமிக்கப் பலராமனின் மார்பைத் தன் கதாயுதத்தால் தாக்கினான்.(2) ஏகலவ்யனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட விருஷ்ணி குல பலராமன், அலட்சியமாகத் தன் இரு கைகளாலும் அதைப் பற்றி, அந்த நிஷாத மன்னன் {ஏகலவ்யன்} வெற்றியில் நம்பிக்கை அனைத்தையும் இழந்து, சீற்றமிக்கக் கடுஞ்சுறாக்களின் வசிப்பிடமான பெருங்கடலின் கரைக்குத் தப்பியோடும் வகையில் அவனைப் பலமாகத் தாக்கினான்.(3,4)

ஏகலவ்யன் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடும்போது, பலராமன் அவனைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றான். ஏகலவ்யன் உண்மையில் அஞ்சி எங்கு ஓடினாலும் அங்கெல்லாம் பலராமன் அவனை நெருங்கினான்.(5) மன்னா, இறுதியில் ஏகலவ்யன், பலராமனின் கோபத்தில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கடலுக்குள் புகுந்து, ஐந்து யோஜனைகள் நீந்திச் சென்றான்.(6) ஏகலவ்யன் வசிப்போரெவருமற்ற தீவொன்றை அடைந்து அங்கே வசித்து வந்தான். இவ்வாறே பலராமன் நிஷாதர்களின் மன்னனான ஏகலவ்யனை வென்றான்.(7)

அதன் பிறகு, அந்த ஹலாயுதன், எண்ணற்ற வைரங்களாலும், மதிப்புமிக்க ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த சுதர்மம் என்ற சபையை அடைந்தான். அதே வேளையில் சாத்யகியும் போர்க்களத்தை விட்டு அந்தச் சபா மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான்.(8) மன்னா, பிற யாதவர்கள் அனைவருங்கூடப் போர்க்களத்தை விட்டு வந்து அந்த ராஜசபையின் இருக்கைகளில் அமர்ந்தனர். அந்நேரத்தில் தேவகியின் மகனான பகவான் {கிருஷ்ணன்} அந்த விருஷ்ணிகளின் சபையில் பின்வருமாறு பேசினான்.(9,10)

கிருஷ்ணன், “யாதவர்களில் முதன்மையானவர்களே, நான் கைலாச மலைக்குச் சென்று, செந்நீல வண்ணனான சங்கரனை என் தவத்தால் நிறைவடையச் செய்து, அவனது ஆசியைப் பெற்றேன்.(11) தேவர்கள் அனைவரும், தபோதனர்களான பெரும் முனிவர்கள் அனைவரும் அங்கே இருந்தனர். சங்கரன் என்னைச் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்து, நான் புறப்படும் முன் அழகிய துதிகளை எனக்கு அர்ப்பணித்தான்.(12) நான் பதரிகாசிரமத்தில் இருந்தபோது ஓரிரவில் அசாதரண அனுபவம் ஒன்றை அடைந்தேன். வலிமைமிக்கப் பிசாசங்கள் இரண்டு வேட்டையாடியவாறும் என்னைக் குறித்துப் பேசிக் கொண்டும் என் முன் வந்தன. உண்மையில், அவற்றின் மனங்கள் என்னில் நிலைத்திருந்தன. உண்மையில் பேரான்மாக்களான இந்தப் பிசாசங்கள் இரண்டும் என்னைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தன. அவை பெரும்பணிவுடனும், பக்தியுடனும் என்னை வணங்கின. நான் அவர்களிடம் நிறைவடைந்ததால் தேவலோகத்தில் வசிக்குமாறு அனுப்பி வைத்தேன். அந்த நிகழ்வுக்குப் பிறகு, என் தவத்தால் மஹாதேவனை நிறைவடையச் செய்து இன்று இங்கே திரும்பினேன்” என்றான் {கிருஷ்ணன்}”.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “கிருஷ்ணன் சொன்ன அனைத்தையும் கேட்ட விருஷ்ணி குலத்தோர் அனைவரும், அவனது புகலிடத்தை மீண்டும் அடைந்து, மிகப் பாதுகாப்பாக உணர்ந்து அவனைத் துதித்தனர். அதன் பிறகு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(13-17)

பிறகு ஜகந்நாதன் தன் மாளிகைக்குச் சென்று நடந்தவை அனைத்தையும் ருக்மிணி, சத்யபாமா ஆகியோருக்கு உரைத்தான்.(18) அன்பு மனைவியரான அவ்விருவரும் தங்கள் கணவன் சொன்னதைக் கேட்டுப் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மன்னா, இவ்வாறே கிருஷ்ணனின் கடந்த காலங்கள் அனைத்தையும் உனக்கு விரிவாகச் சொல்லிவிட்டேன்.(19) கிருஷ்ணன் தொடர்ந்து பூமியை ஆண்டு, எண்ணற்ற துஷ்டர்களைக் கொன்று, பூமியின் பாரத்தைக் குறைத்தான். தேவர்களின் தலைவனும், பெரும் முனிவர்களால் வழிபடப்படுபவனுமான அவன் {கிருஷ்ணன்}, நரகாசுரன், பெரும் மன்னன் பௌண்டரகன், ஹயக்ரீவன், நிசும்பன், சுந்தன், உபசுந்தன் உள்ளிட்ட முக்கிய அசுரர்களைக் கொன்று முனிவர்களையும், பிராமணர்களையும் பாதுகாத்தான்.(20,21)

கிருஷ்ணன் எண்ணற்ற பசுக்களையும், அளவில்லா செல்வத்தையும் பிராமணர்களுக்குக் கொடையாகக் கொடுத்தான். அவன் அக்னி ஹோத்ரங்களைச் செய்து, பிராமணர்களுக்கு நல்ல உணவைக் கொடுத்து அவர்களை நிறைவடையச் செய்தான்.(22) அவன் வேதங்கற்றுப் பிரம்மச்சரியம் அனுசரித்து முனிவர்களையும், யஜ்ஞங்களைச் செய்து தேவர்களையும், ஆகுதிகளைக் கொடுத்துப் பித்ருக்களையும் நிறைவடையச் செய்தான்.(23) இவ்வாறே தேவர்களின் தலைவனான கிருஷ்ணன், தன் ராஜ்ஜியத்தைத் தடையில்லாமல் ஆண்டான், பிராமணர்களின் தலைமையிலான குடிமக்கள் அனைவரும் அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(24)

ஹம்சன் டிம்பகன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 78-(வைஷம்பாயநம் ப்ரதி ஜநமேஜயப்ரஷ்நம்)-ஹம்சன், டிம்பகன், விசக்ரன் அறிமுகம்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்},    “தவம் செய்யும் பிராமணர்களில் சிறந்தவரே, சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணனின் கடந்த காலத்தைப் பற்றி மேலும் அதிகமாகக் கேட்க விரும்புகிறேன்.(1) கேசவனைக் குறித்துக் கேட்கையில் ஒருபோதும் எனக்குத் தெவிட்டுவதில்லை. சக்கரபாணியான அந்த ஹரியுடைய புனிதப் பெயர்களின் மகிமையை மேலும், மேலும் கேட்க எவன்தான் விரும்பமாட்டான்? ஹரியின் பெயர்கள், வடிவங்கள், குணங்கள் ஆகியவையும், கடந்த காலத்தைக் குறித்தவையும், புலனுணர்வுக்கு அப்பாற்பட்டவையுமான கதைகளைத் தொடர்ந்து கேட்பதே வாழ்வின் மாறா இலக்காகத் திகழ்கிறது.(2,3)

ஹம்சன், டிம்பகன்[1]ஆகியோரின் கூட்டு முயற்சிகள் உலகத்தை எவ்வாறு பாதித்தன? அவர்களின் செயல்பாடுகள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின என்று அறியப்படுகிறது.(4) விசக்ரன் என்ற தானவனுடனான போர் எவ்வாறு நடந்தது? ஹம்சன், டிம்பகன் ஆகியோரின் நல்ல நண்பன் அவன் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(5) பார்க்கவரின் {பரசுராமரின்} சீடர்களான அந்த இளவரசர்கள் இருவரும் பெரும்பலமிக்கவர்களாகத் திகழ்ந்தனர். அவர்கள், சங்கரனின் ஆசிகளைப் பெற்று, ஆயுதப் பயன்பாட்டில் திறன்மிக்கவர்களாகத் திகழ்ந்தனர் என்றும் சொல்லப்படுகிறது.(6)பிராமணரே, ஜகத்பதியான கேசவன், இவ்விரு மன்னர்களுடன் கடும்போரில் ஈடுபட்டான் என முன்னர் நீர் குறிப்பிட்டிருந்தீர்.(7) அவர்கள் யாருடைய மகன்கள்? ஏன் அவர்கள் கிருஷ்ணனுடன் போரிட்டனர்? மன்னா, உலகை வெல்லும் பேராவல் கொண்ட தானவனான விசக்ரன், திரிசூலம் தரித்த எண்பத்தெட்டாயிரம் தானவ வீரர்களின் ஆதரவைப் பெற்றிருந்தான்.(8,9) தானவனான அந்த விசக்ரனை வெல்ல முடியாது என்றே கருதப்பட்டது. அவன் யாதவர்களுடன் போரிட விரும்பி, அவர்களிடம் சிறு தவறையாவது, குறையையாவது காணத் தொடர்ந்து முயன்று வந்தான். இறுதியில் ஒரு பெரும்போர் நேரிட்டு விசக்ரனைக் கொல்லும் நம்பிக்கையுடன் கிருஷ்ணனே போரில் நுழைந்தபோதும், வெற்றியை அடைய அவன் {விசக்ரன்} சிறந்த முயற்சி செய்திருக்கிறான்” என்றான் {ஜனமேஜயன்}.(10)

பிரம்மதத்தன் மித்ரஸஹர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 79-(ஹம்ஸடிம்பகோத்பத்தி)-மன்னன் பிரம்மதத்தனுக்கும், பிராமணர் மித்ரஸஹருக்கும் இடையில் இருந்த நட்பு; ஹம்சன், டிம்பகன், ஜனார்த்தனன் பிறப்பு…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, சால்வதேசத்தைத் தன் ராஜ்ஜியமாகவும், பிரம்மதத்தன் என்ற பெயரையும் கொண்ட ஓர் உத்தம மன்னன் இருந்தான். மன்னா, அவன் அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்ட தூய இதயம் படைத்தவனாகவும் இருந்தான்.(1) அவன் எப்போதும் தன் மனத்தையும், புலன்களையும் கவனமாகக் கட்டுப்படுத்திக் கொண்டு ஐவகை வேள்விகளை {பஞ்சயஜ்ஞங்களைச்} செய்து வந்தான். வேதங்களில் சொல்லப்படும் பிரம்மத்தைக் குறித்த அறிவியலை நன்கறிந்தவனாகவும் அவன் இருந்தான். எப்போதும் வேள்விகளில் ஈடுபடுபவனாக இருந்ததால் அவனது இருப்பே உயிரினங்கள் அனைத்திற்கும் மங்கலகரமானதாக இருந்தது.(2)

பூமியின் தலைவா {ஜனமேஜயா}, அவனுக்கு உன்னத மனங்கொண்ட அழகிய மனைவியர் இருவர் இருந்தனர். அவர்கள் நல்ல குணங்களைக் கொண்டவர்களாக இருப்பினும் பிள்ளைகள் இல்லாதவர்களாக இருந்தனர்.(3) தேவலோகத்தில் இந்திரன் சசியுடன் இன்புற்றிருந்ததைப் போலவே, பிரம்மதத்தனும் தன் மனைவியர் இருவருடன் பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருந்தான். அவன், பெரும் யோகியும், தொடர்ந்து வேத வேதாங்க கல்வியில் ஈடுபட்டவரும், மித்ரஸஹன் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு பிராமணரைத் தன் நண்பராகக் கொண்டிருந்தான். பிராமணர்களில் மகுட ரத்தினமாகத் திகழ்ந்த அவரும் அந்த மன்னனைப் போலவே பிள்ளையற்றவராக இருந்தார்.(4,5)

ஒரு மகனை அடைய விரும்பிய மன்னன், தன் மனைவியர் இருவரின் துணையுடன் கூடியவனாகப் பத்து வருட காலம் திரிசூலபாணியான சிவனை வழிபட்டான்.(6) மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, பிராமணரான மித்ரஸஹரும் ஒரு மகனை அடையும் நோக்கத்திற்காக வைஷ்ணவ வேள்வி ஒன்றை {வைஷ்ணவ ஸத்ரத்தைச்} செய்தார்.

மன்னன் பிரம்மதத்தனால் வழிபடப்பட்ட செந்நீல வண்ணனான சிவன், அவனது கனவில் தோன்றி, “மன்னா, மங்கலங்கள் அனைத்தையும் நீ அடைவாயாக. நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன். ஒரு வரம் வேண்டுவாயாக” என்று கேட்டான்.(7,8) அந்த மன்னனும் {பிரம்மதத்தனும்} மகிழ்ச்சியாக, “என் அன்புக்குரிய தலைவா, நான் இரண்டு மகன்களை அடைய விரும்புகிறேன்” என்று கேட்டான். காளைச் சின்னக் கொடியைக் கொண்ட சிவன், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி மறைந்தவுடனேயே மன்னன் தன் உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்தான்.

நுண்ணறிவுமிக்க மித்ரஸஹர், கலப்படமற்ற அர்ப்பணிப்புடன் ஐந்தாண்டு காலம் கேசவனை வழிபட்டார். தேவர்களின் தலைவனான அந்த ஜனார்த்தனன், அவரது வழிபாட்டில் நிறைவடைந்து, அவரைப் போலவே நல்லவனாக ஒரு மகனை அருளினான். மன்னா, உரிய காலத்தில் ராணிகள் இருவரும் கருவுற்ற அதே வேளையில் விஷ்ணு அந்தப் பிராமணருடைய மனைவியின் கருவறையில் தன் வீரியத்தை வைத்தான். சிவனின் அருளால் ராணிகள் இருவரும் வலிமைமிக்க இரண்டு மகன்களைப் பெற்றனர்.

மன்னன் பிரம்மதத்தன், தன் இரு மகன்களுக்கும், ஜாதகர்மம் {பெயர்ச்சூட்டுவிழா} முதலிய பரிந்துரைக்கப்பட்ட சடங்குகள் அனைத்தையும் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளுடனும், விதிமுறைகளுடனும் செய்து வைத்து, பிராமணர்களுக்கு ஈகையாகப் பெருஞ்செல்வத்தைக் கொடையளித்தான்.

மன்னா {ஜனமேஜயா}, மித்ரஸஹரும், ஜகந்நாதனே பிள்ளையாகப் பிறந்திருக்கிறானென அனைவருக்கும் தோன்றுவண்ணம் ஒரு மகனைப் பெற்றார். அந்தப் பிராமணர் {மித்ரஸஹர்}, தன் மகனுக்கான தூய்மைச் சடங்குகள் அனைத்தையும் விதிப்படி கடமையுணர்வுடன் செய்தார்.(9-16)

இளவரசர்கள் இருவரும், அந்தப் பிராமணப் பிள்ளையும் ஒரே வயதினராக இருந்தனர். அவர்கள் அனைவரும் வேத கல்வி கற்று, வேதாந்தங்களில் தேர்ச்சியடைந்து, வில்லைப் பயன்படுத்தும் முறையையும், படைக்கலைகள் பிறவற்றையும் கற்றுக் கொண்டனர். இளவரசர்களில் மூத்தவன் பெயர் ஹம்சன் என்பதும், இளையவன் பெயர் டிம்பகன் என்பதும் ஆகும். அந்தப் பிராமணரின் {மித்ரஸஹரின்} மகன் பெயர் ஜனார்த்தனன் ஆகும். அவர்கள் அனைவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(17-19)

வரலாபம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 80-(ஹம்ஸடிம்பகயோர்வரலாபம்)-சிவனை நோக்கித் தவம் செய்த ஹம்சனும், டிம்பகனும்; அவர்கள் அடைந்த வரங்கள்…வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, இளவரசர்களான ஹம்சனும், டிம்பகனும் சிவனின் சக்திமிக்க அவதாரங்களாகத் தோன்றியதால், அவர்கள் பெரும் நுண்ணறிவுமிக்கவர்களாகத் திகழ்ந்தனர். ஒரு காலத்தில் அவர்கள் கடுந்தவஞ்செய்யத் தீர்மானித்தனர்.(1) மன்னா {ஜனமேஜயா}, இதற்காக அவர்கள் இமய பர்வதத்திற்குச் சென்றனர். செந்நீல வண்ணனும், மங்கலம் அருள்பவனும், பக்தர்களின் வாழ்வுத் துயரங்கள் அனைத்தையும் விலக்குபவனும், உமையின் கணவனுமான சிவனை நிறைவடையச் செய்து, பேராற்றலையும், தெய்வீக ஆயுதங்களையும் அடையும் நம்பிக்கையில், தங்கள் மனத்தைக் கவனமாகக் கட்டுப்படுத்திக் கொண்டும், நீரையும், காற்றையும் மட்டுமே ஆகாரமாக உண்டும் அங்கே அவர்கள் தவம் செய்து வந்தனர்.(2,3)

அவர்கள் {ஹம்சனும், டிம்பகனும்}, தங்கள் இதயங்களில் சிவனை வைத்துத் தங்கள் மனங்களை அவனிலேயே நிலைநிறுத்தி வந்தனர். அவர்கள் இவ்வாறே பகலிரவுகள் தொடர்ந்து, அவனுடைய பெயர்களைச் சொல்லி, “தேவர்களின் தலைவனும், அண்டத்தை ஆள்பவனும், பக்தர்களின் பேரன்புக்குரியவனும், சங்கரன், ஹரன், சர்வன், சிவானந்தன், நீலக்ரீவன், உமாபதி, ரிஷபத்வஜன், விரூபாக்ஷன், ஹரியக்ஷன், கிரீசன், ஈசன், வாசுதேவசிவன், அச்யுதன், சதாசிவன், மஹாதேவன் என்றெல்லாம் அழைக்கப்படுபவனும், புனித அக்ஷரமான ஓம் என்பதன் தனி உருவகமும் எவனோ, அவனை நாங்கள் வணங்குகிறோம்” என்றே துதித்தும் வந்தனர். இவ்வாறே அவ்விரு சகோதரர்களின் தவம் தொடர்ந்து வந்தது.(4-7)

மன்னா {ஜனமேஜயா}, படிப்படியாக, அந்த இளவரசர்கள் இருவரும் பொருள் பற்றிலிருந்தும், போலி ஆணவத்தில் இருந்தும் விடுபட்டனர். அவர்கள் மௌன விரதம் இருந்தவாறே, ஐந்து வருடங்கள் தவம் புரிந்தனர். அவர்களின் சுயக்கட்டுப்பாட்டில் நிறைவடைந்த சிவன், புலித்தோலுடுத்தி, சிரத்தில் பிறைமதி தாங்கிய திரிசூலபாணியாக அவர்களின் முன்பு காட்சியளித்தான். பாவங்களை அழிப்பவன் தங்கள் முன் நிற்பதைக் கண்ட அந்தச் சகோதரர்கள் இருவரும், பெருமகிழ்ச்சியடைந்தவர்களாக அவனை மீண்டும் மீண்டும் வணங்கினர்.(8-10)

அப்போது சிவன், “என் அன்புக்குரிய இளவரசர்களே, நீங்கள் இருவரும் மங்கலங்களை அடைவீராக. வேண்டும் வரத்தைக் கேட்பீராக. அதை நான் அருள்வேன்” என்றான்.

மன்னா, இந்தச் சொற்களைக் கேட்ட அந்த இளவரசர்கள் இருவரும் {ஹம்சனும், டிம்பகனும்}, “பிரபுவே, எங்களிடம் நீ நிறைவடைந்தது நிச்சயமென்றால், தேவர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் ஆகியோரால் நாங்கள் வெல்லப்பட முடியாதவர்களாவோமாக. உயிரினங்கள் அனைத்தின் வாழ்வாகவும் {உயிராகவும்}, ஆன்மாவாகவும் இருப்பவனே, இந்த வரத்தையே நாங்கள் பெரிதும் விரும்புகிறோம்.(11,12) சிவனே, சக்திமிக்க தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும் அடைவதையே நாங்கள் இரண்டாம் வரமாக வேண்டுகிறோம். மஹேஷ்வரம், ரௌத்ரம், பிரம்மசிரம் என்ற ஆயுதங்களை நாங்கள் அடைவோமாக.(13) சர்வனே, போர்க்களங்களில் நம்பிக்கையெனும் முற்றான உறுதியை உணர்வதற்காக, துளையா கவசத்தையும், முறியா விற்களையும், நொறுங்கா கோடரிகளையும் நாங்கள் விரும்புகிறோம்.(14) மஹாதேவா, {இருவராக இங்கிருக்கும்} நாங்கள் ஒவ்வொருவரும், உமது பூதகணங்கள் இரண்டைத் துணையாகக் கொள்வோமாக” என்று கேட்டனர்.

சிவன், அதற்கு மறுமொழியாக, “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி, பிருங்கி, ரிடீ, குண்டோதரன், விரூபாக்ஷன் என்ற தன்னுடைய நான்கு பூதகணங்களை அவர்களுக்குத் துணையாகக் கொடுத்தான்.

அப்போது சிவன், “பூதேசர்களே, இவ்விரு இளவரசர்கள் போரில் ஈடுபடும்போதெல்லாம் நீங்கள் இவர்களுக்குத் துணைபுரிவீராக” என்றான். இதைச் சொன்ன சிவன், அங்கேயே அப்போதே மறைந்தான்.(15-17)

அந்தக் காலத்தில் இருந்தே ஹம்சனும், டிம்பகனும் பெருஞ்சக்திமிக்கப் போர்வீரர்களாகவும், அனைத்து வகை ஆயுதப் பயன்பாடுகளையும் முற்றாக அறிந்தவர்களாகவும் திகழ்ந்தனர். அவர்கள் தன்னிகரற்ற வில்லாளிகளாகவும், பெருஞ்செல்வாக்குமிக்க ஆளுமைகளாகவும் வலம் வந்தனர்.(18) கவசந்தரித்தவர்களான அவர்கள் இருவரும், போர்க்களம் புகும்பொழுதெல்லாம், முன்னணி தேவர்களாலும், அசுரர்களாலுங்கூடத் தங்களை வெல்ல முடியாது என்பதை நிரூபித்து வந்தனர்.(19)

அவர்கள், தங்கள் மேனிகளைச் சாம்பலால் {பஸ்மத்தால் / நீறால்} அலங்கரித்துக் கொண்டும், மூவரி திலகத்தைத் தங்கள் நெற்றியில் தரித்துக் கொண்டும், சிவனைப் போற்றும் விழாக்களை அப்போதைக்கப்போது நடத்தி வந்தனர்.(20) அவர்கள் தங்கள் உடல்களை ருத்ராக்ஷங்களால் அலங்கரித்துக் கொண்டும், மான் தோல் உடுத்திக் கொண்டும், “அமைதியில் ஆழ்ந்த அறிஞனான மஹாதேவனையே நாங்கள் வணங்குகிறோம். நமசிவாய” என்று அவனையே {சிவனையே} துதித்துக்கொண்டிருந்தனர். இவ்வாறு அந்த இளவரசர்கள் இருவரும், தலையில் கங்கையைத் தரித்த அந்த மஹாதேவனைப் போலவே நீரில் நனைந்த சடாமுடிகளுடன் தோற்றமளித்தனர்.(21,22) தவம் செய்து முடித்த அந்தப் பெரும் வீரர்கள் இருவரும் வீடுகளுக்குத் திரும்பி, தங்கள் தந்தை {பிரம்மதத்தன்}, தந்தையின் நண்பரான மித்ரஸஹர், தங்கள் அன்னையர் ஆகியோரை வணங்கினர்.(23)

மன்னா {ஜனமேஜயா}, பெரும் நுண்ணறிவுமிக்க ஜனார்த்தனன் இடையறாமல் நீண்டகாலமாகத் தொடர்ந்து சாத்திரங்களைப் பயின்று வந்தான். தர்மாத்மாவான அவன், அனைத்து வகை ஞானங்களிலும் தேர்ச்சியடைந்து, ஐயந்தெளிந்த ஞானியானான்.(24) அவன், தொடர்ச்சியாகத் தன் மனத்தையும், புலன்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் முற்றான உண்மையை {பிரம்மத்தைத்} தியானித்து வந்தான். அவன் {ஜனார்த்தனன்}, புலன்களின் தலைவனும், பீதாம்பரதாரியுமான {மஞ்சற்பட்டாடை உடுத்தியவனுமான} விஷ்ணுவை வழிபடுவதிலேயே ஈடுபட்டுவந்தான்.(25) உரிய காலத்தில் ஹம்சனும், டிம்பகனும் திருமணம் செய்து கொண்ட பிறகே, ஜனார்த்தனுனும் இல்லறவாழ்விற்குள் நுழைந்தான்.(26)

அந்த மூன்று நண்பர்களும் ஐவகை வேள்விகளை {பஞ்சயஜ்ஞங்களைச்} செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அவர்கள் தங்கள் தங்கள் மனைவியருடன் பற்றுமிக்கவர்களாகவும், நன்றியுணர்வுடன் தங்கள் பெரியோருக்கு கடமையாற்றுபவர்களாகவும் திகழ்ந்தனர். மன்னா, அறப்பாதையைப் பின்பற்றுவதே நாகரிக மனிதனுக்கு மிகச் சிறந்த வழி என்பதில் அவர்கள் ஆழமான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர்” என்றார் {வைசம்பாயனர்}.(27)

————————————-—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பவிஷ்ய பர்வம்-பகுதி 3–

October 19, 2025

பலியின் செழிப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 41-(பலிர்விஜயே ஷ்ரிய꞉ ஸ்வயமாகமநகதநம்)-பலியை வந்தடைந்த செழிப்பின் தேவியான ஸ்ரீதேவி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “{அதிதியின் மகன்களான} தேவர்கள் {திதியின் மகன்களான} தைத்தியர்களால் வீழ்த்தப்பட்டனர், அதன்படி தைத்தியர்களே உலகங்களை ஆக்கிரமித்தனர். மயன், சம்பரன் ஆகியோர் பெருஞ்சக்திவாய்ந்த பலியின் வெற்றியை அறிவித்தனர்.{1} அந்த நேரத்தில் திசைகள் தெளிவடைந்தன, பக்திச் செயல்பாடுகள் செழித்தன, அநீதி ஒடுக்கப்பட்டது, சூரியன் தன் பாதையில் முறையாகப் பயணித்தான்.{2}

பிரஹ்லாதன், சம்பரன், மயன், அனுஹ்லாதன் ஆகியோர் கவனமாகத் திசைகள் அனைத்தையும் பாதுகாத்தனர்.{3} மக்கள் நல்வழிகளில் சென்றனர், அதனால் பாவம் மறைந்து அறம் பெருகியது. சித்தர்கள் தவம் பயின்றனர்.{4,5} தர்மம் நான்கு கால்களுடன் செழித்தது, அதர்மம் (பாவம்) ஒற்றைக்காலுடன் நின்றது.(6) மன்னர்கள் தங்கள் குடிமக்களை முறையாகப் பாதுகாத்தனர், அனைத்து வகையினரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைப் பின்பற்றினர்.{7} பலி, அசுரர்கள் அனைவராலும் ஒருமனதாகத் தேவர்களின் அரசில் நிறுவப்பட்டான்.{8|

அவர்கள் {அசுரர்கள்} மகிழ்ச்சி கூச்சலிடத் தொடங்கிய போது வரமளிப்பவளான செழிப்பின் தேவி {ஸ்ரீதேவி}, தன் கையில் தாமரை மலருடன் பலியின் முன்பு தோன்றி,{9} “ஓ! பெருஞ்சக்திவாய்ந்தவர்களில் முதன்மையானவனே, ஓ! பேரொளி படைத்த தைத்திய மன்னன் பலியே, தேவர்களை வீழ்த்தியதால் நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன்.{10} உனக்கு நன்மை நேரட்டும்.{10} போரில் உன் ஆற்றலை வெளிப்படுத்தித் தேவர்களின் மன்னனை நீ வீழ்த்தினாய். அற்புதம் நிறைந்த உன் சக்தியைக் கண்டே நான் உன்னிடம் வந்திருக்கிறேன்.{11} ஓ! தானவர்களில் முதன்மையானவனே, ஹிரண்யகசிபுவின் குலத்தில் பிறந்த நீ அசுரர்களின் மன்னனாக நியமிக்கப்பட்டிருக்கிறாய். எனவே, இத்தகைய அருஞ்செயலை நீ செய்ததில் வியப்பேதுமில்லை.{12} மூவுலகங்கள் அனைத்தையும் அனுபவித்த அந்தத் தைத்திய மன்னனையும் {ஹிரண்யகசிபுவையும்} நீ விஞ்சிவிட்டாய். மேலும் நீ எப்போதும் அறம்சார்ந்தவனாகவும், பக்திமானாகவும் இருக்கிறாய்.{13} எனவே, ஓ! அளவற்ற ஆற்றல் படைத்தவனே, நீயே மூவுலகங்களையும் ஆள்வாயாக” என்றாள் {ஸ்ரீதேவி}.

வரமளிப்பவளும், அழகிய தேவியுமான லக்ஷ்மி இவ்வாறு அந்தத் தைத்திய மன்னனிடம் சொல்லிவிட்டுக் காட்சியில் இருந்து மறைந்தாள்[1]“என்றார் {வைசம்பாயனர்}.(14-18)

கசியபரிடமும், பிரம்மனிடமும் சென்ற தேவர்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 42-(தேவகணை꞉ ஸஹ கஷ்யபாதித்யோர்-ப்ரஹ்மஸதநகமநகதநம்)அதிதியிடம் சென்ற இந்திரன்; தேவர்களை பிரம்மலோகம் அழைத்துச் சென்ற கசியபர்; பிரம்ம சபை வர்ணனை…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! இருபிறப்பாளர்களிலும், முனிவர்களிலும் முதன்மையானவரே, தைத்தியர்களால் {திதியின் மகன்களால்}வெல்லப்பட்ட தேவர்கள் {அதிதியின் மகன்கள்}அதன்பிறகு என்ன செய்தனர்? அவர்கள் தேவலோகத்தை எவ்வாறு மீட்டனர்?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர், “தேவர்களின் மன்னன், அழகிய தெய்வீகக் குரலொன்றை {அசரீரியைக்} கேட்டு, கிழக்கில் அமைந்திருக்கும் மிகச் சிறந்த இடமான அதிதியின் வசிப்பிடத்திற்கு தேவர்களுடன் சென்றான்.(2) புரந்தரன் அங்கே சென்றதும், தான் கேட்ட தெய்வீகச் செய்தியின் ஒவ்வொரு சொல்லையும் அதிதியிடம் சொன்னான்.(3)

அதிதி, “ஓ! குழந்தாய், உன்னாலும், அமரர்கள் அனைவராலும் விரோசனன் மகனான பலியைக் கொல்ல முடியாது. ஆயிரம் தலைகளைக் கொண்ட புருஷனைத் தவிர, வேறு எவனாலும் அவனைக் கொல்ல முடியாது.{4,5} எனினும், உன் தந்தையும், வாய்மை நிறைந்தவருமான கசியபரிடம் தைத்தியனான மஹாபலியின் அழிவைக் குறித்து நான் கேட்கப் போகிறேன்” என்றாள்.{6}(4-6)

அதன்பிறகு சூரர்கள், அதிதியுடன் சேர்ந்து கசியபரிடம் சென்றனர்.{7} அங்கே, தேவர்களின் முதல் ஆசானான அந்தப் பெருந்தவசி, தண்ணீரினால் வெப்பந்தணிந்த ஒளியுடன் கூடிய சூரியனைப் போல அழகாகவும், எரியும் தழலைப் போலப் பிரகாசத்துடனும் இருப்பதைக் கண்டனர்.{8} அவர், தம்முடைய தண்டத்தை வைத்துவிட்டு, மேனியில் மான் தோலுடுத்தி தவம் பயின்று கொண்டிருந்தார்.{9} அவருடைய உடல் மரவுரியாலும், மான்தோலாலும் மறைக்கப்பட்டிருந்தது. மந்திரங்கள் ஓதி தூண்டப்படும்போது அவதரிக்கும் நெருப்பைப் போல அவர் பிரம்ம சக்தியுடன் எரிந்து கொண்டிருந்தார்.{10}

சூரர்கள், அசுரர்கள் ஆகியோரின் தந்தையான தலைவர் மாரீசர் {மரீசியின் மகனான கசியபர்}, பிரம்மவாதிகளில் முதன்மையானவராகவும், சூரியனைப் போன்ற ஒளி கொண்டவராகவும் இருந்தார்.{11} அவர் அனைவரையும் படைத்தவராகவும், குடிமுதல்வர்களில் மிகச் சிறந்த தலைவராகவும் இருந்தார். அவர் தமது பேரனின் மேனியில் மூன்றாவது குடிமுதல்வராகப் பிறந்திருந்தார்.{12}

பிரம்மனின் மனத்தில் பிறந்த மகன்கள் அவரிடம் பேசுவதைப் போலவே அந்த முன்னணி வீர தேவர்களும், அதிதியும் அந்தக் கசியபரை கை கூப்பி வணங்கி,{13} அசரீரியின் மூலம் சொல்லப்பட்ட தெய்வீக செய்தியையும், தைத்தியர்களில் முதன்மையான பலி அமரர்களால் வெல்லப்பட முடியாதவனாக இருப்பதையும் அவரிடம் சொன்னார்கள்.{14}

கசியபர், தம் மகன்களின் சொற்களைக் கேட்டுப் பிரம்மலோகத்திற்குச் செல்ல விரும்பி அவர்களிடம் {தேவர்களிடம்},{15} “ஓ! பாவமற்றவர்களே, வேதம் ஓதும் ஒலியால் நிறைந்திருக்கும் பிரம்மனின் வசிப்பிடத்திற்கு நாம் செல்வோம். நீங்கள் கேள்விப்பட்டதை அங்கே பிரம்மனிடம் உண்மையாகச் சொல்லுங்கள்” என்றார்”.{16}(7-16)

வைசம்பாயனர், “அதன் பிறகு தேவர்களும், அதிதியும் கசியபரைப் பின்தொடர்ந்து தேவரிஷிகளால் நிறைந்திருந்த பிரம்மனின் அரண்மனைக்குச் சென்றனர்.{17} தேவர்கள் அனைவரும் விலைமதிப்பற்ற, மிக அழகிய விமானங்களில் சென்று ஒரு கணத்தில் பிரம்மலோகத்தை அடைந்தனர்.{18} ஆன்மத்திரளாக இருக்கும் நித்தியனான பிரம்மனைக் காணும் விருப்பத்தில் அவர்கள் அங்கே இருந்த பெரிய சபா மண்டபத்திற்குச் சென்றனர்.{19} இனிய சாம மந்திரங்கள் பாடப்படும் அந்த மண்டபத்தைக் கண்டதும் அவர்கள் பெரும் நிறைவையடைந்தனர்.{20} வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் நன்கறிந்தவர்களும், அறச்சடங்குகளைச் செய்பவர்களுமான மஹாரிஷிகள் ஓதும் ரிக் மந்திரங்களை அவர்கள் கேட்டனர். ஓதப்படும் வேத மந்திரங்களின் ஒலி அந்தச் சபையில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.{21} அங்கே வந்து வேதம் ஓதுவதைக் கேட்ட சூரர்கள், தங்களை மேனி தூய்மையடைந்தவர்களாகக் கருதினர். மனப்புலன்கள் குவிந்து, அமைதியை அடைந்து பிரம்மத்தை மனத்தில் நிலைக்கச் செய்த அவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தவர்களாக ஒருவரையொருவர் கண்டனர்[1].(17-27)கசியபரை முன்னிட்டுச் சென்ற சூரர்கள், எல்லாம்வல்ல உலக ஆசானை மீண்டும் தங்கள் மனத்தில் வணங்கினர்.{28} பல்வேறு சாத்திரங்களையும் நன்கறிந்த தேவர்களால் இனிமையான, கம்பீரமான வேத ஒலி மீண்டும் கேட்கப்பட்டது.{29} எப்போதும் நோன்புகளையும், ஒழுங்குமுறைகளையும் பின்பற்றுபவர்களும், ஹோம் செய்வதையும், வேதமோதுவதையும் விரும்புகிறவர்களுமான முன்னணி பிராமணர்களை அங்கே அந்தக் கசியபரின் மகன்கள் கண்டனர்.{30,31} உலகின் பெரும்பாட்டனும், சூரசுரர்களின் {சூர, அசுரர்களின்} ஆசானுமான பிரம்மன், அந்தச் சபையில் அமர்ந்து கொண்டு, தெய்வீக மாயையின் மூலம் படைப்புத் தொழிலை மேற்கொண்டிருந்தான்.{32}

அங்கே தக்ஷனும், குடிமுதல்வர்கள் {பிரஜாபதிகள்} பிறரும், பிரசேதஸ், இருபிறப்பாளர்களில் முதன்மையான புலஹர், மரீசி, பிருகு, அத்ரி, வசிஷ்டர், கௌதமர், நாரதர் ஆகியோர் அவனை வழிபட்டுக் கொண்டிருந்தனர்.{33,34} கல்வி, மனம், வானம், நெருப்பு, நீர், பூமி, ஒலி, தீண்டல், வடிவம், சுவை, மணம் உள்ளிட்ட இந்தப் புலன் நுகர் பொருட்களும், மஹத் கோட்பாடும்,{35} நான்கு வேதங்கள், அறச்சடங்குகள், வேள்விகள், தீர்மானம் {சங்கல்பம்}, உயிர்மூச்சு {பிராணம்} ஆகியவையும்,{36} இன்னும் வேறு பொருள் அனைத்தும் சுயம்புவான அந்தத் தேவன் முன்பு இருந்தன. பொருள் {அர்த்தம்}, அறம் {தர்மம்}, விருப்பத்திற்குரிய பொருள், பொறாமை, இன்பம் {காமம்} ஆகியன அவன் முன்பு இருந்தன.{37} சுக்ரன் {வெள்ளி(Venus)}, பிருஹஸ்பதி {குரு/வியாழன்(Jupiter)}, சம்வர்த்தர், புதன், சனி, ராஹு முதலிய கோள்கள் அனைத்தும்,{38} மருத்துகள், விஷ்வகர்மன், நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் ஆகியோர் பிரம்மனைத் துதித்துக் கொண்டிருந்தனர்.{39} புனித மந்திரமான ஸாவித்ரி, துர்கா, தரணி, வாணி, வாக்கின் ஏழு வடிவங்கள், ஸ்ருதி, காதாங்கள், விதிகள் {சட்டங்கள், நியமங்கள்}, உரைகள்,{40} க்ஷணம், லவம், முஹூர்த்தம், பகல், இரவு, மாதம், ஆறு பருவ காலங்கள், வருடங்கள், நான்கு யுகங்கள், மாலைப் பொழுது,{41} காலச்சக்கரம் ஆகியோரும் இன்னும் பலரும் சுயம்புவான அந்தத் தேவன் {பிரம்மன்} முன்பு இருந்தனர்.{43}

கசியபர், பக்திமான்களான தேவர்களுடன், விருப்பங்கள் அனைத்தையும் அளிக்கவல்ல அந்தத் தெய்வீக சபைக்குள் நுழைந்தார்.{43} பெரும்படைப்பாளியும், நித்தியனுமான பிரம்மன், தன்னெழிலில் எரிந்து கொண்டிருப்பதையும், களைப்பில் இருந்து விடுபட்டவனாகப் பிரம்மரிஷிகளால் தொண்டாற்றப்படுவதையும் கண்டு தேவர்கள் அவனை வணங்கினர்.{44,45} அவர்கள், தங்கள் தலையால் அந்தப் பரமேஷ்டியின் பாதங்களைத் தீண்டி பாவங்கள் விடுபட்டு, அமைதியடைந்த ஆன்மாக்களாகினர்.{46} பெரும்பிரகாசமிக்கப் பிரம்மன், அங்கு வந்திருக்கும் தேவர்களுடன் கசியபரும் இருப்பதைக் கண்டு பேசத் தொடங்கினான்”.{47}(28-47)

பிரம்ம வாக்கியம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 43-(கஷ்யபாதீந்ப்ரதி ப்ரஹ்மவாக்யம் க்ஷிரோதஸ்யோத்தரே தீரே கஷ்யபாதேர்கமநம் தபஷ்சர்யா ச)பதிவின் சுருக்கம்: பிரம்மனின் சொற்கள்; கசியபரும், அதிதியும் வேண்டிய வரம்; பாற்கடலின் வடகரையில் தவமிருந்த தேவர்கள்…

பிரம்மன் {தேவர்களிடம்}, “பெருஞ்சக்திவாய்ந்த தேவர்களே, உங்கள் வரவின் நோக்கத்தை நான் அறிந்தேன். ஓ! முன்னணி சூரர்களே, உங்கள் நோக்கம் நிறைவேறும்.{1} தானவர்களில் {அதிதியின் மகன்களின் வழிதோன்றலில்} முதன்மையான பலியை வெல்லப்போகும் அண்டத்தின் தலைவன், மூவுலகங்களையும் வெல்பவன் மட்டுமல்லாமல், தேவர்களாலும் வழிபடத்தகுந்தவனாக இருக்கிறான்.{2,3}

அண்டத்தின் நித்திய பிறப்பிடமான அவனே உலகங்களின் விதி சமைப்பவன் ஆவான். மக்கள் அவனை எல்லாம்வல்லவன் என்றும், ஹேமகர்பன் என்றும் அழைக்கிறார்கள்.{4} அசுரத்தலைவன் பலியையும், உலகையும் அழிக்கும் பெருந்தலைவனே, அனைத்திற்கும் பிறப்பிடமும், நம்மில் மூத்தவனும் ஆவான்.{5} அண்டத்தின் ஆன்மாவாக இருக்கும் அந்த யோகி, சிந்தனைக்கு அப்பாற்பட்டவன் ஆவான்.{6} தேவர்களும் அந்தப் பரமனை அறியமாட்டார்கள்; ஆனால் தேவர்களையும், நம்மையும், மொத்த அண்டத்தையும் அந்தப் புருஷோத்தமன் அறிவான்.{7} அவன் அருளால் நாம் நலமாக இருக்கிறோம். மக்கள் இவ்வுலகில் அவனுடன் ஐக்கியத்தை நிறுவி கடுந்தவம் செய்கிறார்கள்.{8}

ஓ! தேவர்களே, வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் சிறந்த பகுதியான பாற்கடலின் வடகரையில் அமுதம் இருப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள். அங்கே சென்று தற்கட்டுப்பாட்டுடன் கடந்தவம் பயில்வீராக.{9} அங்கே மிகப் புனிதமானவையும், மழைக்காலத்தில் நீருண்ட மேகங்களின் முழக்கம் போலக் கம்பீரமானவையும், பிரம்மம் தொடர்பானவையுமான தூய சொற்களைக் கேட்பீர்கள்.{10} பாவங்களை அழிக்கவல்ல அந்தத் தெய்வீக வாக்கு, தூய ஆன்மா படைத்த தேவதேவனின் வாக்காகும்.{11} உங்கள் நோன்பு நிறைவடையும்வரை அந்தப் பேரண்ட வாக்கை நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பீர்கள்.{12} ஓ! தேவர்களே, என்னிடம் வந்திருக்கும் உங்களுக்கு வரங்களைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். என்ன வரம் வேண்டும் கேளுங்கள்” என்றான்.{பிரம்மன்}.{13-15}

கசியபரும், அதிதியும் யோகத்துடன் அடையாளங்காணப்படுபவனை {யோகாத்மனான பிரம்மனை} வணங்கி, அவனது பாதங்களைத் தீண்டி, “தலைவன் எங்கள் மகனாகப் பிறக்கட்டும்” என்ற வரத்தைக் கேட்டனர்.

அவர்கள் பெரும் மதிப்புடன் இவ்வாறு சொன்ன போது, பிரம்மன், “அவ்வாறே ஆகட்டும். அவன் தங்கள் தம்பியாகட்டும் என்று தேவர்கள் அவனிடம் வேண்டட்டும், அவனும் ஏற்பான்” என்றான்.{16-18}

இந்த வரத்தை அவனிடம் அடைந்து தங்கள் காரியத்தில் வெற்றியை அடைந்த தேவர்கள் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் சென்றனர்.{19} சூரர்கள், கசியபர், அதிதி ஆகியோர் “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி பிரம்மனின் பாதங்களைத் தீண்டி வடதிசைக்குச் சென்றனர்.{20} தெய்வீக பிரம்மனால் ஆணையிடப்பட்டவாறே அவர்கள் பாற்கடலின் வடகரையைக் குறுகிய காலத்திற்குள் அடைந்தனர்.{21} அந்த முன்னணி தேவர்கள், பல பெருங்கடல்களையும், மலைகள், ஆறுகளையும் கடந்து சென்று சூரியனும், உயிரினங்களும் அற்றதும் இருளால் மறைக்கப்பட்டதுமான அந்தப் பயங்கரப் பகுதியைக் கண்டனர்.{22}

சூரர்களும், கசியபரும் அமுதம் இருந்த இடத்தை அடைந்து, ஆயிரங்கண்களைக் கொண்டவனும், நுண்ணறிவுமிக்க யோகியும், தலைமை சக்திகள் அனைத்தையும் கொண்டவனுமான நாராயணனை நிறைவடையச் செய்யும் நோக்கில் பல வருடங்கள் கடுந்தவங்களைச் செய்தனர்.{23,24} சூரர்கள், பிரம்மசரிய நோன்பையும், மௌன விரதத்தையும் நோற்று, தங்கள் புலன்களையும், அசைவுகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கே கடுந்தவம் இருந்தனர்.{25} தெய்வீகரான கசியபர், தலைவன் நாராயணனை நிறைவடையச் செய்வதற்காக வேத மந்திரத் துதிகள் பலவற்றை ஓதத் தொடங்கினார்” என்றார் {வைசம்பாயனர்}.{26}(1-26))

விஷ்ணுவின் உறுதிமொழி | பவிஷ்ய பர்வம் பகுதி – 44-(கஷ்யபாதிந்ப்ரதி மஹாவிஷ்நோர்வரப்ரதாநகதாவதார꞉)பதிவின் சுருக்கம்: கசியபரும், அதிதியும் வேண்டிய வரம்; விஷ்ணு கொடுத்த உறுதிமொழி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இருபிறப்பாளர்களில் முதன்மையான கசியபரால் ஓதப்படும் மிகச் சிறந்த துதிகளைக் கேட்ட தலைவன் நாராயணன்[1], மேகங்களுடைய முழக்கங்களின் மூலம் கம்பீரமான இனிய குரலில் அந்தப் பெருந் தேவர்களிடம் பேசினான்.{1,2} சொற்கள் வானத்தில் இருந்து கேட்டாலும், எவராலும் தலைவனைக் காணமுடியவில்லை. அந்த ஈஷ்வரன் பெரும் மகிழ்ச்சியுடன் பேசினான்.{3}(1-3)

நமோ(அ)ஸ்து தேவதேவேஷ ஏகஷ்ருங்க வராஹ வ்ருஷார்சிஷ

வ்ருஷஸிந்தோ வ்ருஷாகபே ஸுரவ்ருஷப ஸுரநிர்மித

அநிர்மித பத்ரகபில த்ருவ தர்ம தர்மராஜ வைகுண்ட

த்ரேதாவர்த அநாதிமத்யநிதந தநஞ்ஜய ஷுசிஷ்ரவ꞉

அக்நிஜ வ்ருஷ்ணிஜ அஜ அஜயாம்ருதேஷய ஸநாதந விதாதஸ்த்ரிகாம

த்ரிதாம த்ரிககுத் ககுத்மின் துந்துபே மஹாநாப லோகநாப

பத்மநாப விரிஞ்சே வரிஷ்ட பஹுரூப விரூப விஷ்வரூபாக்ஷயாக்ஷர

ஸத்யாக்ஷர ஹம்ஸாக்ஷர ஹவ்யபுக் கண்டபரஷோ ஷுக்ர

முஞ்ஜகேஷ ஹம்ஸ மஹதக்ஷர ஹ்ருஷீகேஷ ஸூக்ஷ்ம

பரஸூக்ஷ்ம துராஷாட் விஷ்வமூர்தே ஸுராக்ரஜ நீல நிஸ்தமோ

விரஜஸ்தமோரஜ꞉ஸத்த்வதாம ஸர்வலோகப்ரதிஷ்ட

ஷிபிவிஷ்ட ஸுதபஸ்தபோக்ர அக்ர அக்ரஜா தர்மநாப கபஸ்திநாப

தர்மநேம ஸத்யதாம ஸத்யாக்ஷர கபஸ்திநேமே விபாப்மன்

சந்த்ரரத த்வமேவ ஸமுத்ரவாஸா꞉ அஜைகபாத் ஸஹஸ்ரஷீர்ஷ

ஸஹஸ்த்ரஸம்மித மஹாஷீர்ஷ ஸஹஸ்ரத்ருக் ஸஹஸ்ரபாத்

அதோமுக மஹாமுக மஹாபுருஷ புருஷோத்தம ஸஹஸ்ரபாஹோ

ஸஹஸ்ரமூர்தே ஸஹஸ்ராஸ்ய ஸஹஸ்ராக்ஷ ஸஹஸ்ரபுஜ

ஸஹஸ்ரபுவ ஸஹஸ்ரஷஸ்த்வாமாஹுர்வேதா꞉ || 3-68-1

விஷ்வேதேவ விஷ்வஸம்பவ ஸர்வேஷாமேவ தேவாநாம் ஸௌபக

ஆதௌ கதி꞉ விஷ்வம் த்வமாப்யாயந꞉ விஷ்வம் த்வாமாஹு꞉ புஷ்பஹாஸ

பரமவரதஸ்த்வமேவ வௌஷட் ஓங்கார வஷட்காரம் த்வமேகமாஹுரக்ர்யம்

மகபாகப்ராஷிநம் || 3-68-2

ஷததார ஸஹஸ்ரதார பூர்த புவர்த ஸ்வர்த பூர்புவ꞉ஸ்வர்த

த்வமேவ பூதம் புவநம் த்வம் ஸ்வதா த்வமேவ ப்ரஹ்மேஷய

ப்ரஹ்மமய ப்ரஹ்மாதிஸ்த்வமேவ || 3-68-3

த்யௌரஸி ப்ருதிவ்யஸி பூஷாஸி மாதரிஷ்வாஸி தர்மோ(அ)ஸி மகவாஸி

ஹோதா போதா நேதா ஹந்தா மந்தா ஹோம்யஹோதா பராத்பரஸ்த்வம் ஹோம்யஹோதா

த்வமேவ ||3-68- 4

ஆபோ(அ)ஸி விஷ்வவாக் தாத்ரா பரமேண தாம்நா த்வமேவ திக்ப்ய꞉ ஸ்ருக்

ஸ்ருக்பாண்ட த்வம் கண இஷ்டோ(அ)ஸி இஜ்யோ(அ)ஸி ஈட்யோ(அ)ஸி த்வஷ்டா

த்வமஸி ஸமித்தஸ்த்வமேவ கதிர்கதிமதாமஸி மோக்ஷோ(அ)ஸி

யோகோ(அ)ஸி குஹ்யோ(அ)ஸி ஸித்தோ(அ)ஸி தந்யோ(அ)ஸி தாதாஸி பரமோ(அ)ஸி

யஜ்ஞோ(அ)ஸி ஸோமோ(அ)ஸி யூபோ(அ)ஸி தக்ஷிணாஸி தீக்ஷாஸி விஷ்வமஸி ||3-68-5

ஸ்தவிஷ்ட ஸ்தவிர விஷ்வ துராஷாட் ஹிரண்யகர்ப ஹிரண்யநாப

ஹிரண்யநாராயண நாராயணாந்தர ந்ருணாமயந ஆதித்யவர்ண

ஆதித்யதேஜ꞉ மஹாபுருஷ ஸுரோத்தம ஆதிதேவ பத்மநாப

பத்மேஷய பத்மாக்ஷ பத்மகர்ப ஹிரண்யாக்ரகேஷ

ஷுக்லவிஷ்வதேவ விஷ்வதே முக விஷ்வாக்ஷ விஷ்வஸம்பவ

விஷ்வபுக்த்வமேவ || 3-68-6

பூரிவிக்ரம சக்ரக்ரம த்ரிபுவந ஸுவிக்ரம ஸ்வவிக்ரம

ஸ்வர்விக்ரம பப்ரு꞉ ஸுவிபு꞉ ப்ரபாகர꞉ ஷம்பு꞉ ஸ்வயம்பூஷ்ச

பூதாதி꞉ பூதாத்மன் மஹாபூத விஷ்வபுக்த்வமேவ விஷ்வகோப்தாஸி

விஷ்வம்பர பவித்ரமஸி ஹவிர்விஷாரத ஹவி꞉கர்மா அம்ருதேந்தந

ஸுராஸுரகுரோ மஹாதிதேவ ந்ருதேவ ஊர்த்வகர்மன் பூதாத்மன்

அம்ருதேஷ திவ꞉ஸ்ப்ருக் விஷ்வஸ்ய பதே க்ருதாச்யஸி

அநந்தகர்மன் த்ருஹ்யநவம்ஷ ஸ்வவம்ஷ விஷ்வபாஸ்த்வம் த்வமேவ

விஷ்வம் பிபர்ஷி வரார்திநோ நஸ்த்ராயஸ்வேதி || 3-68-7

விஷ்ணு, “ஓ! முன்னணி தேவர்களே, நான் உங்களிடம் நிறைவடைந்தேன். உங்களுக்கு நலம் விளையட்டும். வரங்களை வேண்டுவீராக. அவற்றை நான் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்றான்.(4)

அப்போது கசியபர், “ஓ! அமரர்களே, தலைவன் நம்மிடம் நிறைவடைந்திருப்பதால் நாம் அருளப்பட்டவர்களாக இருக்கிறோம். எங்கள் பரம புகலிடம் நீயே,{5} ஓ! தலைவா, நீ எங்களிடம் நிறைவடைந்து வரங்கொடுக்க விரும்புகிறாயெனில், எனக்கும் அதிதிக்கும் மகனாக உன் உற்றார் உறவினரின் இன்பத்தை எப்போதும் அதிகரித்து வாசவனின் {இந்திரனின்} தம்பியாகப் பிறப்பாயாக” என்றார்”.{6}

வைசம்பாயனர், “தேவர்களின் அன்னையான அதிதியும் வரம் வேண்ட விரும்பி அந்தத் தலைவனிடம்,{7} “நான் உன்னிடம் வரம் வேண்டுகிறேன். தேவர்கள் அனைவரின் நலத்துக்காக நீ என் மகனாகப் பிறப்பாயாக” என்றாள்.{8}(5-8)

தேவர்கள், “ஓ! தலைவா, நீ எங்கள் தம்பியும், தலைவனும், மன்னனும், பாதுகாப்பாளனும் ஆவாயாக. நீ அதிதியின் மகனாகப் பிறந்தால், வாசவனும், தேவர்கள் பிறரும் தேவனின் பெயரைக் கேட்கவல்லவராவோம். எனவே நீ கசியபரின் மகனாகப் பிறப்பாயாக” என்றனர்”.(9)

வைசம்பாயனர், “அப்போது விஷ்ணு தேவர்களிடமும், கசியபரிடமும், “ஓ! தேவர்களே, உங்கள் எதிரிகளால் என் முன்னால் ஒரு கணமும் நிற்க இயலாது.{10} அசுரர்களையும், தேவர்களின் பகைவரான பிறரையும் கொன்று, நான் தேவர்களை மீண்டும் வேள்விக் காணிக்கைகளை ஏற்கச் செய்வேன்.{11} என்னுடைய படைப்பு சக்தியால் நான் தேவர்களை ஹவ்யத்தையும், பித்ருக்களைக் கவ்யத்தையும் உண்ணச் செய்வேன். எனவே, ஓ! தேவர்களே, நீங்கள் வந்த வழியே செல்வீராக.{12,13} தேவர்களின் அன்னையான அதிதியின் விருப்பத்தையும், பெரும் கசியபரின் விருப்பத்தையும் நான் நிறைவடையச் செய்வேன். நீங்கள் அவரவருக்குரிய வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்வீராக. உங்களுக்கு நன்மை நேரட்டும், விரும்பிய நோக்கங்களை நீங்கள் அடைவீராக” என்றான்”.(10-14)

வைசம்பாயனர், “பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணுவால் இவ்வாறு சொல்லப்பட்டதும் தேவர்கள் மகிழ்ச்சியாக அந்தத் தலைவனை வழிபட்டனர்.(15) விஷ்வதேவர்கள், கசியபர், அதிதி, சாத்யர்கள், மருத்துகள், பெருஞ்சக்திவாய்ந்த இந்திரன் ஆகியோர் அந்தத் தேவனை வணங்கிவிட்டு,{16} கிழக்குத் திக்கில் உள்ள கசியபரின் பெருங்குடிலுக்குச் சென்றனர்.

பிரம்மரிஷிகளால் நிறைந்த அந்தக் குடிலை {கசியபாஷ்ரிமத்தை} அடைந்ததும் அவர்கள் வேத கல்வியில் ஈடுபட்டு அதிதியின் கருத்தரிப்புக்காகக் காத்திருந்தனர்.{17} தேவர்களின் அன்னையான அதிதி, பெருஞ்சக்தி வாய்ந்த அண்ட ஆன்மாவான அந்தப் பரமனை ஆயிரம் தேவ வருடங்கள் தன் கருவறையில் கொண்டிருந்தாள்.{18} ஆயிரமாவது வருடம் நிறைவடைந்ததும் தேவர்களைப் பாதுகாப்பவனும், அசுரர்களை அழிப்பவனுமான மகனை அவள் பெற்றெடுத்தாள்.{19} அந்தத் தலைவன் கருவறையில் வாழ்ந்தபோது மூவுலகங்களின் சக்தியை ஈர்த்துத் தேவர்களைக் காத்தான். தேவர்களின் தலைவனும், மூவுலகங்களின் இன்பமும்,{20} தைத்தியர்களின் அச்சமும், தேவர்களின் மகிழ்ச்சிய அதிகரிப்பவனுமான அந்தத் தலைவன் பிறந்தபோது தேவர்கள் அனைவரும் அச்சத்தில் இருந்து விடுபட்டனர்” என்றார் {வைசம்பாயனர்}.(15-21)

வாமன அவதாரம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 45-(வாமநப்ராதுர்பாவ꞉)-வாமனனாகப் பிறந்த விஷ்ணு; இந்திரனின் வேண்டுதல்; பலியின் வேள்விக்கு வாமனானை அழைத்துச் சென்ற பிருஹஸ்பதி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அந்தத் தேவன் பிறந்த போது ஏழு குடிமுதல்வர்கள் {பிரஜாபதிகளும்}, மரீசியும் பிறரும், சப்தரிஷிகளும் அவனை வணங்கினர்.{1} பரத்வாஜர், கசியபர், கௌதமர், விஷ்வாமித்ரர், ஜமதக்னி, வசிஷ்டர், முழுமையாக மேகத்தால் மறைக்கப்படும்போது தோன்றும் சூரியன், தலைவர் அத்ரி ஆகியோர் அங்கே வந்தனர்.{2} மரீசி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது, குடிமுதல்வன் தக்ஷன் ஆகியோர் அவனை வணங்கினர்.{3} ஔர்வர், வசிஷ்டரின் மகனான ஸ்தம்பர், காசியபர், கபீவான், அகபீவான், தத்தோநி, சியவனர்,{4} வாசிஷ்டர்கள் என்ற பெயரைக் கொண்ட வசிஷ்டரின் பிற மகன்களான எழுவர், ஹிரண்யகர்பனின் மகனும், பெருஞ்சக்திவாய்ந்தவருமான ஔர்வஜாதர்,{5} கார்க்கியர், பிருது, அகிரயர், ஜன்யர், வாமனர், தேவபாஹு, யதுதரர், சோமஜர், பர்ஜன்யர்,{6} ஹிரண்யரோமர், வேதசிரஸ், சத்யநேத்ரர் {சப்தநேத்ரர்}, நிம்பர், அதிநிம்பர், சியவனர், சுதாமர், விரஜர்,{7} அதிநாமர், ஸஹிஷ்ணு ஆகியோர் அவனை வணங்கினர்.

பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ஒளிரும் மேனியைக் கொண்ட அப்சரஸ்கள்,{8} நாராயணனின் முன்பு நடனம் புரிந்தனர். கந்தர்வர்கள் வானில் எக்காளமிசைத்தனர்.{9}(1-9) தும்புரு, பிற கந்தர்வர்களுடன் சேர்ந்து பாடத் தொடங்கினான். மஹாஸ்ருதி, சித்திரசிரன், ஊர்ணாயு, அநகன்,{10} கோமாயு, சூர்யவர்சாஸ், சோமவர்சாஸ், யுகபன், திருணபன், கார்ஷ்ணி, நந்தி, சித்திரரதன்,{11} {திரிசிரஸ், திரயோதஸ்}, சாலிஷிரன், பர்ஜன்யன், கலி,{12} நரேந்திரன், ஹாஹா, ஹுஹூ, பெரும்பிரகாசம் கொண்ட கந்தர்வனான ஹம்சன் ஆகியோர் கேசவனின் முன்பு பாடத் தொடங்கினர்.{13}

நீண்ட விழிகளைக் கொண்டவர்களும், மங்கலக் குறிகள் அனைத்தையும் கொண்டவர்களும், பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அழகிய அப்சரஸ்கள் அங்கே நடனமாடத் தொடங்கினர்.{14,15} சுமத்யை, சாருமத்யை, பிரியமுக்கியை, அழகிய அநூகை, ஜாமீ, மிஷ்ரகேசி, அலம்புசை,{16} மரீசி, சூசிகை, வித்யுத்பர்ணை, திலோத்தமை, அத்ரிகை, லக்ஷ்மனை, ரம்பை, {மநோரமை},{17} அழகிய அசிதை, சுபாஹு, சுபாகை, ஊர்வசி, சித்திரலேகை, சுக்ரீவை, சுலோசனை,{18} புண்டரிகாஸுகந்தை,{19} சுரதை, பிரமாதினி, நந்தை, சாரஸ்வதி,{19} மேனகை, ஸஹஜன்யை, பர்ணிகை, புஞ்ஜிகஸ்தலை ஆகியோரும் இன்னும் ஆயிரக்கணக்கான பிற அப்சரஸ்களும் அங்கே நடனம் புரிந்தனர்.{20}

காசியேபர்களும், சூரியப்பிரகாசம் கொண்டவர்களுமான தாதன், ஆர்யமான், மித்ரன், வருணன், அம்சன், பாகன், இந்திரன், விவஸ்வான், பூஷன், துவஷ்டா, சவிதன், விஷ்ணு ஆகிய பனிரெண்டு ஆதித்யர்களும் அந்த உயரான்ம தேவர்களின் தலைவனை வணங்கினர்.{21,22} ஓ! மன்னா {ஜனமேஜயா}, மிருகவியாதன், சர்ப்பன், பெருஞ்சக்திவாய்ந்த நிர்ருதி, அஜைகபாத், அஹிர்புத்நியன், பினாகி, அபராஜிதன், தஹனன், ஈஷ்வரன், கபாலி, ஸ்தாணுபர்கன் ஆகிய ருத்திரர்கள் அங்கே இருந்தனர். அசுவினி இரட்டையரும், அஷ்டவசுக்களும், பெருஞ்சக்திவாய்ந்த மருத்துகளும்,{23-25} விஷ்வேதேவர்களும், சாத்தியர்களும் என அனைவரும் கரங்களைக் கூப்பியபடி அவன் முன்பு நின்றனர்.

சேஷனின் தம்பியான பெரும் வாசுகி,{26} {தக்ஷகன்}, அபுகுஞ்ஜன், திருதராஷ்டிரன், வலாஹன் ஆகியோரும், இன்னும் பெருஞ்சக்திவாய்ந்த, கோபக்கார, பிரகாசமிக்க நாகர்கள் அனைவரும் அவன் முன்பு கைகளைக் கூப்பியபடி நின்றனர். தார்க்ஷன், அரிஷ்டநேமி, பெருஞ்சக்திவாய்ந்த கருடன்,{27,28} அருணன், அருணி ஆகியோர் அனைவரும் கைகளைக் கூப்பியபடி அவன் முன்பு நின்றனர். உலகத்தின் படைப்பாளன் {பிரம்மன்}, பெரும் குடிமுதல்வர்கள் அனைவருடன் அங்கே வந்து பேசினான்.{29}(10-29)

பிரம்மன், “உலகங்கள் அனைத்தும் எவனிடம் இருந்து வெளிப்பட்டனவோ அந்தப் பெருஞ்சக்திவாய்ந்த நித்திய தலைவனான விஷ்ணு இவன்” என்றான்.{30} தலைவன் பிரம்மன் இதைச் சொல்லி, தேவரிஷிகளுடன் சேர்ந்து அந்தத் தேவர்களின் மன்னனை வணங்கிவிட்டு, தேவலோகத்திற்குத் திரும்பிச் சென்றான்.{31}

தலைவன் {விஷ்ணு}, கசியபரின் மகனாகப் பிறந்த போது, பயங்கரநாளின் மேகங்களைப் போலக் குருதிச் சிவப்பான கண்களுடன் குள்ள {வாமன} வடிவில் இருந்தான்.{32} அவனுடைய மார்பில் ஸ்ரீவத்சமெனும் மாயக்குறி இருந்தது. அப்சரஸ்கள் விழிகள் விரிய அவனைக் கண்டனர்.{33} ஒரே நேரத்தில் வானில் எழுந்த ஆயிரஞ்சூரியர்களைப் போல அவன் பிரகாசித்தான்.{34} அந்த அழகிய தலைவன், பூர், புவ லோகங்களையும், பிற லோகங்களையும் ஆதரிப்பவனாக இருந்தான். அவன் உயர்ந்த தோள்களையும், தூய தலைமுடியையும் கொண்டிருந்தான்.{35} அவன் நல்லோரின் புகலிடமாகவும் {கதியாகவும்}, கொடூரர்களுக்கு உறைவிடமேதும் அளிக்காதவனாகவும் இருந்தான். பெரும் யோகிகள் அவனையே மிகச் சிறந்த யோகமாகக் கருதுகின்றனர்.{36} அவன் எட்டு வகைத் தலைமைத்துவ சக்திகளை {அஷ்டகுணங்களைக்} கொண்டிருந்தான். மக்கள் அவனைத் தேவர்களில் முதன்மையானவன் என்று அழைப்பார்கள்.{37} அந்த நித்திய புருஷனின் மூலம் முக்தியை அடைய ஏங்கும் விப்ரர்களும், உலகத்துக்கு அஞ்சுபவர்களும், பிறப்பு இறப்பில் இருந்து விடுபடுகிறார்கள்.{38} அனைத்து ஆசிரமங்களும் {வாழ்வுமுறைகளும்} அவனையே தபம் எனக் கொள்கின்றன. கடுந்தவம் பயின்றும், உணவைக் குறைத்தும் மக்கள் அவனுக்குத் தொண்டாற்றுகின்றனர்.{39}

ஆயிரந்தலைகளையும், சிவந்த கண்களையும் கொண்ட அனந்தனைப் போலச் சேஷனும், நாகலோகத்தைச் சேர்ந்த பிற நாகர்களும் அவனை வழிபடுகின்றனர்.{40} தேவலோகத்தை அடைய விரும்பும் விப்ரர்கள் அவனை யஞ்ஜமாக வழிபடுகின்றனர். எங்கும் இருந்தாலும் அவன் ஒருவனாகவே இருக்கிறான். மிகச் சிறந்த கவியான அவனை வேள்வி காணிக்கைகளை விதிப்பவனாக வேதங்கள் பாடுகின்றன. அறமே அவனது ஒளியாகத் திகழ்கிறது.{41} சூரியனும் சந்திரனும் அவனது கண்களாகவும், ஆகாயம் அவனது உடலாகவும் இருக்கின்றன.

எல்லாம்வல்லவனான அந்தத் தலைவன் தேவர்களில் மிகச் சிறந்த சொற்களில்,{42}(30-42) “அறிந்தும் என் யோக சக்தியின் மூலம் நான் இந்தச் சிறுவனின் நிலையை அடைந்திருக்கிறேன். தேவர்களே, நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? நான் வரமென்ன கொடுக்க வேண்டும்? நீங்கள் வேண்டுவதைச் சுகமாகக் கேட்பீராக” என்றான்.{43}

இந்திரனும், பிற தேவர்களும், அந்த உயரான்ம குள்ளனின் {சிறுவனின் / வாமனனின்} சொற்களைக் கேட்டு, அந்தக் கசியபரின் மகனிடம் கூப்பிய கைகளுடன்,{43} “அனைத்தையும் அறிந்தவனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனுமான தைத்திய மன்னன் பலி, பிரம்மனால் அவனுக்கு அளிக்கப்பட்ட வரத்தினாலும், செய்த தவத்தின் பலனாலும் விளைந்த ஆற்றல், தற்கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் மொத்த அண்டத்தையும் அடைந்திருக்கிறான். அவனை எங்கள் எவராலும் கொல்ல முடியாது. நீ மட்டுமே அவனை வெல்லவல்லவனாக இருக்கிறாய். வேறு எவராலும் அவனை வீழ்த்த முடியாது.{44-47} எனவே, ஓ! தலைவா, தேவர்களின் அச்சங்களை விலக்குபவனும், பக்தர்கள் விரும்புகிறவனும், வரங்களை அளிப்பவனுமான உன்னிடம் நாங்கள் அனைவரும் புகலிடம் நாடுகிறோம்.{48} ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, தேவர்களின் பெரும் மன்னா, ரிஷிகளின் நன்மைக்காகவும், உலகங்கள் அனைத்தின் நன்மைக்காகவும், கசியபர், அதிதி ஆகியோரின் நிறைவுக்காகவும்,{49} பித்ருகள் கவ்யத்தையும், தேவர்கள் ஹவ்யத்தையும் முறையாக உண்ணட்டும்.{50} தேவர்களின் பெரும் மன்னனான மஹேந்திரனிடம் மீட்டளிக்க மூவுலகங்களையும் மீண்டும் அடைவாயாக.{51} அந்தத் தானவன் ஒரு குதிரை வேள்வியைச் செய்து வருகிறான். எனவே, நீ உலகங்களை மீண்டும் அடையும் வழிமுறைகளைக் குறித்துச் சிந்திப்பாயாக” என்றனர்”.{52}(43-52)

வைசம்பாயனர், “தேவர்கள் இவ்வாறு சொன்னதும் குள்ள வடிவில் இருந்த விஷ்ணு, தேவர்களை மகிழ்ச்சியில் நிறைக்கும் வகையில் அவர்களிடம் பேசினான்.(53)

விஷ்ணு, “பேரொளி படைத்த ரிஷியும், அங்கிரசின் மகனும், வேதங்களை நன்கறிந்தவருமான பிருஹஸ்பதி, என்னை அவனது {மஹாபலியின்} வேள்விக்கு அழைத்துச் செல்லட்டும். நான் அவனுடைய வேள்விக்களத்திற்குச் சென்று மூவுலகங்களையும் மீட்பதற்குரிய வழிமுறையைச் சிந்திக்கிறேன்” என்றான்.(54,55)

அதன்பிறகு, பெரும்பிரகாசம் கொண்டவரும், நுண்ணறிவுமிக்கவருமான பிருஹஸ்பதி, எல்லாம்வல்லவனான அந்தக் குள்ளனை {வாமனனை}, பேரறிவுசார்ந்த சக்திகளைக் கொண்ட தைத்திய மன்னன் பலியின் வேள்விக் களத்திற்கு அழைத்துச் சென்றார்.{56} சிறுவனின் வடிவை ஏற்ற அந்தக் குள்ளன் {வாமனன்}, புகைபோன்ற கண்களைக் கொண்டிருந்தான், பளபளக்கும் பூணூலையும், மான்தோலையும் அவன் அணிந்திருந்தான். அவன் {வாமனன்}, ஒரு கையில் குடையையும், மறு கையில் தண்டத்தையும் கொண்டிருந்தான்.{57} சிறுவனாக இருந்தாலும் அவன் முதிய மனிதனைப் போலத் தோற்றமளித்தான்.{58} பிரம்மனாலும், பிற தேவர்களாலும் தியானிக்கப்படுபவனும், குடிமுதல்வர்களின் {பிரஜாபதிகளின்} தலைவனும், சூரர்களில் முதன்மையானவனுமான அவன், தைத்திய மன்னன் விரோசனனுடைய மகனான பலியின் வேள்விக் களத்திற்கு இவ்வாறே சென்றான்.{59,60}(56-60) ஆயுதமும், கவசமும் தரித்த தைத்தியர்களால் உரிய முறையில் வாயில் காக்கப்பட்டாலும் அவன் திடீரென அங்கே நுழைந்தான்.(61) பெருஞ்சக்திவாய்ந்தவனான அந்தக் குள்ளன் {வாமனன்}, மந்திரங்கள் ஓதுவதை நன்கறிந்த புரோஹிதர்களால் முற்றும் சூழப்பட்ட தைத்திய தானவன் மன்னன் பலியின் முன்பு தோன்றினான்.(62) அந்தத் தலைவன், பிரம்மரிஷிகளால் நிறைந்த வேள்விக்களத்தை அடைந்து, யஞ்ஜத்தோடு அடையாளங்காணப்படுபவனாகத் தன்னை விளக்கிக் கொண்டான்.{63} யஞ்ஜமே ஆனவனும், வேள்விச் சடங்குகளின் தலைவனுமான அந்த நித்திய புருஷன், வேள்வியைக் குறித்து விரிவாக விளக்கிவிட்டு, பல்வேறு மேற்கோள்களையும் சொல்லி சுக்ரரையும் {சுக்ராச்சாரியாரையும்}, பிற புரோகிதர்களையும் வென்றான்.{64} அவர்கள் எவராலும் எந்தப் பதிலையும் முன்வைக்க முடியவில்லை. எல்லாம் வல்ல தலைவன், வேதங்களில் விதிக்கப்பட்ட காரணங்களையும், வாதங்களையும் அற்புதம் நிறைந்த வாக்கால் எடுத்து வைத்து, தன்னையே அந்த வேள்வியாகப் பலியிடம் விளக்கிச் சொன்னான்.{65,66}

விரோசனின் மகனான பலி, குள்ளவடிவில் இருந்தவனும், பெரும்பிரகாசம் கொண்டவனுமான அந்தச் சிறுவனின் வாதத்தைக் கேட்டு பெரியோரான ரிஷிகளும், உபாத்யாயர்கள் {ஆசான்களும்} அமைதியடைந்ததைக் கண்டு அதை அற்புதமென நினைத்தான்.{67,68} ஆச்சரியத்தால் நிறைந்த அவன், தலைவணங்கி கைகள் கூப்பியவனாக, “எங்கிருந்து வருகிறீர்? நீர் யார்? நீர் யாருடைய மகன்? இங்கே உமக்கு என்ன தேவை? இத்தகைய நுண்ணறிவுமிக்க, அழகான, நல்ல தோற்றமுடைய, ஆன்மப் பண்பாட்டைக் கொண்ட,{69,70} வேதங்களை நன்கறிந்த அழகிய பிராமணச் சிறுவனை இதற்கு முன்பு ஒருபோதும் நான் கண்டதில்லை. தேவர்கள், ரிஷிகள், நாகர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், ராட்சசர்கள்,{71} பித்ருக்கள், சித்தர்கள், கந்தர்வர்கள் ஆகியோரில் எவரும் இத்தகைய மகனைக் கொண்டிருக்கவில்லை. நீர் யாராக இருந்தாலும் உம்மை நான் வணங்குகிறேன். நான் உமக்குச் செய்ய வேண்டியதென்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்றான் {பலி}.(63-72)

பலியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், உகந்த வழிமுறைகளை அறந்தவனும், எவராலும் உணரமுடியாத இயல்பைக் கொண்டவனுமான அந்தக் குள்ளன், சற்றே புன்னகைத்துப் பேசத் தொடங்கினான்.(73)

பலியின் உறுதிமொழி | பவிஷ்ய பர்வம் பகுதி – 46-(வாமநஸ்ய பலியஜ்ஞே கமநம் த்ரிபாதபூமிலாப꞉ த்ரிவிக்ரமமூர்திதாரணம் ச)மூன்றடி நிலம் கேட்ட வாமனன்; பலியைத் தடுத்த சுக்ரரும், பிரகலாதனும்; கொடையளித்த பலி; வாமனனின் திரிவிக்கிரம விஷ்வரூபம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அப்போது விஷ்ணு {குள்ள வடிவில் இருந்த வாமனன்}, “அசுரர்களின் மன்னனால் {மஹாபலியால்} மேற்கொள்ளப்படும் இந்த வேள்வி அற்புதம் நிறைந்ததாக இருக்கிறது. நன்கு தயாரிக்கப்பட்ட பல்வேறு வகை உணவுப்பொருட்கள் இங்கிருக்கின்றன. ஓ! பெருஞ்சக்திவாய்ந்த தானவ மன்னா, பெரும்படைப்பாளனான பிரம்மன், தேவர்களின் மன்னனான சக்ரன், யமன், வருணன் ஆகியோர் செய்த வேள்விகளை எல்லாம் உன் வேள்வி விஞ்சிவிட்டது.(1-2) பாவங்களை அழிக்க உன்னால் மேற்கொள்ளப்படுவதும், சொர்க்கத்தை அடைய வழிவகுப்பதும், வேள்விகள் அனைத்திலும் சிறந்ததுமான இந்தக் குதிரைவேள்வி, பிரம்மவாதிகளால் அங்கீகரிக்கப்படுபவையும், விருப்பத்திற்கு உரியவையுமான அனைத்துப் பொருள்களாலும் நிறைந்திருக்கிறது.{3,4} 

வேள்விகளில் சிறந்தது அஷ்வமேதமே என ஸ்ருதி சொல்கிறது. பொற்கொம்புகளுடனும், இரும்புவளையங்களுடனும் கூடியதும், மனம் போன்ற வேகமான நடையைக் கொண்டதுமான பன்றியின் வடிவில் இருப்பதும், ஏராளமான தங்கத்தைக் கொண்டதுமான இந்தப் பெரும் வேள்வி அண்டத்தின் பிறப்பிடமாகவும், புனிதம் நிறைந்ததாகவும் இருக்கிறது.{5} இந்த வேள்வியைச் செய்து வேள்வி குதிரையைச் செலுத்தும் மனிதனின் பாவங்கள் அழிகின்றன. வேதங்களை நன்கறிந்த விப்ரர்கள், இந்த வேள்விக் குதிரையை நெருப்பென அழைக்கிறார்கள்.{6} ஆசிரமங்கள் அனைத்திலும் இல்லற ஆசிரரமே {கிருஹாஸ்ரமமே} சிறந்ததாக இருப்பதைப் போலவும், மனிதர்களில் சிறந்தவர்களாகப் பிராமணர்கள் இருப்பதைப் போலவும், அசுரர்களில் முதன்மையானவனாக நீ இப்போது இருப்பதைப் போலவும் வேள்விகளில் சிறந்த இந்தக் குதிரை வேள்வியும் இருக்கிறது” என்றான் {வாமனன்}”.{7}

வைசம்பாயனர், “தைத்திய மன்னன் பலி, குள்ளனின் {வாமனனின்} சொற்களைக் கேட்டுப் பெரும் நிறைவடைந்தான்.{8}(3-8) அப்போது பலி, “ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, நீர் யார்? உமக்கு என்ன வேண்டும்? நான் உமக்கு என்ன கொடுக்க வேண்டும்? உமக்கு நன்மை நேரட்டும். நீ விரும்பிய பொருளை வேண்டினால் அதை நீர் அடைவீர்” என்றான்.(9)

குள்ளன் {வாமனன்}, “ஓ! தானவா, அரசையோ, வாகனங்களையும், ரத்தினங்களையோ, பெண்களையோ நான் வேண்டவில்லை. நீ நிறைவடைந்தால், உன் மனம் அறத்தில் நிலைத்திருந்தால், என் ஆசானின் வேள்வி இல்லத்தைக் கட்டுவதற்காக மூன்று காலடிகளில் மறையும் {அளக்கப்படக்கூடிய} நிலத்தை நான் உன்னிடம் வேண்டுகிறேன். நான் வேண்டும் உயர்ந்த பொருளை எனக்கு அளிப்பாயாக” என்று கேட்டான்.(10,11)

பலி, “ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, மூன்று காலடிகளில் மறையும் {அளக்கப்படும்} நிலத்தால் நிறைவேறும் உமது நோக்கமென்ன? நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அடிகளைக் கொண்ட நிலத்தை வேண்டுவீராக” என்று சொன்னான்.(12)

சுக்கிரர் {மஹாபலியிடம்}, “ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, ஓ! பேரசுரா, இவனுக்குக் கொடையேதும் உறுதியளிக்காதே; இவனை நீ அறியமாட்டாய். இவனே பெருந்தலைவன் ஹரியாவான்.{13} இவன் தன் மாயையின் மூலம் குள்ள வடிவை ஏற்று, உன்னைக் கொண்டு தேவர்களின் மன்னனுக்கு நன்மை விளைவிக்கவே இங்கு வந்திருக்கிறான். எல்லாம் வல்ல தலைவனால் பல்வேறு வடிவங்களை ஏற்க முடியும்” என்றார்.{14}(13,14)

சுக்கிரரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், சிறிது நேரம் தியானித்த பலி, பிறகு தன் மனத்தில் ஒரு தீர்மானத்தை அடைந்து, “இவரைவிடத் தகுதியானவரை என்னால் வேறெங்கு பெற முடியும்” என்று சொல்லி பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தான். பிறகு பொன்னாலான புல்லை எடுத்து அசைவற்றவனாக அங்கே நின்றான்.{15}

பிறகு பலி, “ஓ! தாமரைக் கண்களைக் கொண்ட விப்ரர்களில் முதன்மையானவரே, அமர்வீராக. இதோ கிழக்கு நோக்கி நான் நிற்கிறேன். “கொடுப்பாயாக” என்று சொல்லி என் கொடையை ஏற்பீராக.{16} எந்த நிலங்களை நீர் எடுத்துக் கொள்ளப் போகிறீர். உமது மூன்று காலடியின் பரப்பு எவ்வளவு? அதை நான் கொடுப்பேன். நீரை எடுப்பீராக. உமது ஆசானின் சொற்கள் பொய்க்காதிருக்கட்டும்” என்றான்.{17}(15-17)

சுக்கிரர், “ஓ! தைத்திய மன்னா, இவனுக்குக் கொடையேதும் அளிக்காதே. நிச்சயம் இவன் விஷ்ணுவே என்பதை நான் அறிவேன். அற்புதமான பக்தி இங்கே பொருந்தி அமைவதேன்?” என்றார்.{18}

பலி, “நான் வஞ்சிக்கப்படவில்லை. தலைவன் விஷ்ணுவே என் வேள்விக்கு வந்திருக்கிறான். இந்தத் தேவதேவன் என்னிடம் கேட்பவை எதையும் நான் கொடுப்பேன்.{19} நான் கொடையளிக்க விஷ்ணுவை விடத் தகுந்தவன் வேறு எவன்?” என்று சொன்னான். பலி இதைச் சொல்லிவிட்டு உடனேயே நீரை எடுத்துக் கொண்டான்.{20}(18-20)

குள்ளன் {வாமனன்}, “ஓ! தானவர்களில் பாவமற்ற மன்னா, என் மூன்று காலடிகளில் மறையும் நிலம் எனக்குப் போதுமானதாக இருக்கும். நான் ஏற்கனவே சொன்னது உண்மைதான். அஃது ஒருபோதும் வேறுவகையாகாது” என்றான்”.(21)

வைசம்பாயனர், “பகைவரைக் கொல்பவனும், விரோசனின் மகனும், தைத்தியர்களின் மன்னனுமான பலி, பெரும்பிரகாசமிக்கக் குள்ளனின் சொற்களைக் கேட்டு அவனது மேனியில் ஒரு மான்தோலைப் போர்த்தினான்.{22} பிறகு “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி நீர் நிறைந்த குடுவையொன்றைத் தீண்டினான்.{23} குள்ளனும் {வாமனனும்}, அசுர மன்னனின் அழிவை விரும்பி, அழிவைத் தரும் தன் கைகளை நீட்டினான்.{24} தானவர்களின் மன்னன் கிழக்கு நோக்கி நின்று, அவனிடம் நீரைக் கொடுக்க எத்தனித்தபோது பிரஹ்லாதன் அவனைத் தடுத்தான்.{25}

பெரும் ஞானியான பிரஹ்லாதன், அசுரர்களின் செழிப்பைக் கொள்ளையடிக்க விரும்பும் பெரும் ஹரியின் எதிர்பாராத வடிவைக்கண்டு,{26} “இந்தக் குள்ள பிராமணனுக்கு கொடையேதுமளிக்காதே.{27} இவனே முன்பு உன் பெரும்பாட்டனை {ஹரிண்யகசிபுவைக்} கொன்றவன். பெரும் ஞானியான இந்த விஷ்ணு உன்னைப் பழிதீர்க்கவே வந்திருக்கிறான்” என்றான்.{28}(22-28)

பலி, “இந்தத் தேவனுக்குக் கொடைகளை அளிக்கவல்லவனாக நான் இருப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.{29} அண்டத்தின் தலைவனும், பிரம்மனுக்கும் மேலானவனும், இத்தகைய ஆதரவைக் காட்டுபவனுமான இவனை என் கொடைகளின் இலக்காகவே நான் அடைந்திருக்கிறேன். ஓ! அசுரர்களில் முதன்மையானவரே, வேள்விக்கான தீக்ஷை பெற்றவன் நிச்சயம் கொடைகளை அளிக்க வேண்டும்” என்றான்.{30}

அசுரர்களின் மத்தியில் இவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்ட விரோசனன் மகன் பலி, தலைவன் நாராயணனுக்கு மூன்றடி நிலத்தைக் கொடையாக அளித்தான்.{31}

பிரஹ்லாதன், “ஓ! தானவர்களின் மன்னா, இந்த விப்ரனுக்கு கொடையேதுமளிப்பதாக உறுதியளிக்காதே. இவனை விப்ர இளைஞனாக நான் கருதவில்லை. ஒரு பிராமணன் இவ்வாறு இருக்க மாட்டான்.{32} இவனது வடிவைக் கண்டு நரசிங்கமே மீண்டும் திரும்பிவிட்டதாக உண்மையாகவே நான் நம்புகிறேன்” என்றான்.{33}

பலி, எல்லையற்ற ஆற்றல் கொண்ட பிரஹ்லாதனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அவனை நிந்திக்கும் வகையில்,{34}(29-34) “பிச்சை வேண்டுபவரின் கெடுபேறானது {துரதிர்ஷ்டமானது}, அவனை ஏமாற்றத்துடன் அனுப்பும் அரசனை வந்தடையும்.{35} ஒரு பிராமணனுக்கு உறுதிமொழியளித்த மனிதன், அதை நிறைவேற்றவில்லை என்றால், பாவியான அவன் தன் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுடன் நரகத்தை அடைவான்.{36} வறுமையில் வாட அஞ்சியே நான் இந்த நிலத்தை இவருக்குக் கொடையளிக்கிறேன்; இவரை விட வேறு யார் தகுந்த பிராமணர்? இவரைவிட மேலான எவரும் இல்லாதபோதே நான் இந்த நிலத்தை இவருக்குக் கொடுக்கிறேன்.{37} குள்ள வடிவில் என்னிடம் பிச்சை வேண்டும் இருபிறப்பாளரைக் கண்டு நான் பெரிதும் நிறைவடைகிறேன். எனவே நான் இவருக்குக் கொடையளிக்கப் போகிறேன். என்னைத் தடுக்காதீர்” என்றான்.{38}

மீண்டும் பலி அந்தக் குள்ள பிராமணனிடம், “ஓ! அற்ப புத்தி கொண்டவரே, மூன்று காலடிகளில் மறையும் நிலத்தைக் கொண்டு நீர் என்ன செய்வீர்? பெருங்கடல்களால் சூழப்பட்ட மொத்த உலகையும் நான் உமக்கு அளிப்பேன்” என்றான்.{39,40}

குள்ளன் {வாமனன்}, “ஓ! தானவர்களின் முதன்மையானவனே, நான் மொத்த பூமியை வேண்டவில்லை. மூன்று காலடிகளில் மறையும் நிலத்தில் நான் நிறைவடைகிறேன். இதுவே நான் விரும்புவதும், வேண்டுவதுமாகும்” என்றான்”.{41}(35-41)

வைசம்பாயனர், “தானவ மன்னன் பலி, “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி, அளவற்ற ஆற்றல் படைத்த தலைவன் நாராயணனின் மூன்று காலடிகளில் மறையும் நிலத்தைத் தீண்டச் செய்தான்.{42} அவனுடைய கை நீரில் நுழைந்தபோது, குள்ளனான அந்தத் தலைவன், தான் அவமதிக்கப்பட்டதாகக் கருதி தன் அண்ட வடிவை வெளிப்படுத்தினான்.{43}

பூமி அவன் பாதங்களானது, வானம் அவனது தலையானது, சூரியனும், சந்திரனும் அவனது கண்களாகினர், பிசாசங்கள் அவனுடைய பாதங்களின் விரல்களாகின, குஹ்யர்கள் அவனது கைகளின் விரல்களாகினர்.{44} விஷ்வேதேவர்கள் அவனுடைய தொடைகளில் இருந்தனர், சாத்யர்கள் அவனுடைய கால்மூட்டுகளில் இருந்தனர், யக்ஷர்களும் அப்சரஸ்களும் அவனது நகங்களில் இருந்து வெளிப்பட்டனர்.{45} மின்னல் அவனது பார்வையானது, சூரியனின் கதிர்கள் அவனது தலைமுடியானது, நட்சத்திரங்கள் அவனது மேனியில் உள்ள முடிகளின் துளைகளாகின {ரோம்பாணிகளாகின}, மஹாரிஷிகள் அந்த முடிகளாகினர் {ரோமங்களாகினர்}.{46} அசுவினி ரெட்டையர்கள் அவனது கால்கள் இரண்டாக இருந்தனர், பெருஞ்சக்திவாய்ந்த வாயு அவனது மூக்கானான். திசைகள் அவனது கைகளாகின, துணைத்திசைகள் அவனது காதுகளாகின.{47} சந்திரன் அவனது மகிழ்ச்சியானான் {பிரசாதமானான்}, அறம் அவனது மனமானது {மனோதர்மம்}, வாய்மை அவனது வாக்கானது, ஸரஸ்வதி தேவி அவனது நாவானாள்,{48} பெருந்தேவி அதிதி அவனது கழுத்தானாள், பிரகாசமிக்கச் சூரியன் அவனது தொண்டையானான், சொர்க்கவாசல் அவனது உந்தியானது, மித்ரர்களும், துவஷ்டாவும் அவனது புருவங்கள் இரண்டாகினர்,{49} நெருப்பு {வைஷ்வாநரன்} அவனது முகமானான், பிரஜாபதி அவனது விரைகளானான் {விருஷணங்களானான்}, பிரம்மன் அவனது இதயமானான், கசியபர் அவனது ஆண்குறியானார்.{50} வாசவன் அவனது பின்பகுதியானான் {பிருஷ்டமானான்}, மருத்துகள் அவனது கைமூட்டுகளாகினர். வேதங்கள் அவனது இருப்பாகவும், ஒளி அவனது பிரகாசமாகவும்,{51} ருத்திரன் {மஹாதேவன்} அவனது மார்பாகவும், பெருங்கடல் அவனது பொறுமையாகவும் ஆனார்கள், பெருஞ்சக்திவாய்ந்த கந்தர்வர்களும், நாகர்களும் அவனது வயிறாகினர்,{52} லக்ஷ்மி அவனது புத்தியானாள் {மேதைமையானாள்}, திருதி அவனது காந்தியானாள், கல்வி {வித்யை} அவனது இடையானது, ஆன்மாவின் இருக்கை அவனது நெற்றியானது.{53} ஒளிக்கோள்கள் அனைத்தும் {ஸர்வஜ்யோதிகள்} அவனது தபமாக அமைந்தன, தேவர்களின் மன்னனான சக்ரன் {தேவவ்ராட்} அவனது சக்தியானான், தேவர்கள், வேள்விகளின் இஷ்டி சடங்குகள், இருபிறப்பாளர்களின் பணிகள், விலங்குகள் ஆகியன அவனது மார்பாகவும், இருபுறங்களாகவும் ஆகின.{54,55} பேரசுரர்கள், விஷ்ணுவின் அந்த அண்ட வடிவைக் கண்டு பெருங்கோபத்தால் தூண்டப்பட்டனர். அவர்கள் நெருப்பை நோக்கிச் செல்லும் பூச்சிகளைப் போல அவனை அணுகினர்” என்றார் {வைசம்பாயனர்}.{56}(42-56)

வாமனஸ்தவம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 47-(விஷ்ணோராதேஷாத் பலே꞉ பாதாலப்ரவேஷ꞉ தத்க்ருதவிஷ்ணுஸ்தவ꞉ பலிம் ப்ரதி கருடஸ்ய உக்திப்ரத்யுக்தீ வாமநஸ்தவபலகதநம் ச)-போரில் தைத்தியர்களை அடக்கி பலியைப் பாதாளத்தில் கட்டிப்போட்ட விஷ்ணு; நாரதர் பலிக்குக் கற்பித்த விஷ்ணு துதியான வாமனஸ்தவம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “தானவர்களின் பெயர்கள், வடிவங்கள், சாதனைகள், முக்கிய ஆயுதங்கள் ஆகியவற்றை இனி கேட்பாயாக.{1} விப்ரசித்தி, சிபி, சங்கு, அயசங்கு, அயசிரன், அஷ்வசிரன், பெருஞ்சக்திவாய்ந்த ஹயக்ரீவன்,{2} {வேகவான்}, கேதுமான், உக்ரன், யுயோக்ரன், வியக்ரன், பேரசுரனான புஷ்கரன், புஷ்கலன், ஸ்வஷா, அஷ்வபதி,{3} பிரஹ்லாதன் {பிரஹ்ராதன்}, அஷ்வசிரன், கும்பன், ஸம்ஹ்ராதன், ககநப்ரியன், அனுஹ்ராதன், ஹரிஹரன், வராஹன், ஸம்ஹரன், அருஜன்,{4} விருஷபர்வன், விரூபாக்ஷன், முனீந்திரன், சந்திரலோசனன், நிஷ்பிரபன், சுப்ரபன், நிருத்ரன்,{5} ஏகவக்தரன், மஹாவக்தரன், திவிவக்தரன், சேரஸன் {காலஸம்நிபன்}, சரபன், {சலபன்}, குந்தன் {குணபன்}, குபதன் {குலபன்}, குவதன்,{6} மஹாகர்பன், சங்குகர்ணன், மஹாத்வனி, தீர்கஜிஹ்வன், அர்க்கவதனன், மிருதுசாபன் {மிருதுபாஹு}, மிருதுபிரியன்,{7} வாயு, கரிஷ்டன், நமுசி, சம்பரன், விக்ஷரன், சந்திரஹந்தன், குரோதஹந்தன், குரோதவர்தனன்,{8} காலகன், கலகாக்ஷன், விருத்ரன், குரோதவிமோக்ஷணன், கவிஷ்டன், ஹவிஷ்டன், பிரலம்பன், நரகன், பிருது,{9} சந்திரதாபனன், வாதாபி, கேதுமான், அஸிலோமன், விதோமன் {புலோமன்}, பாஸ்கலன், பிரமதன், மதன்,{10} சிருகாலவவனன், {கராலன்}, கேசி, ஏகாக்ஷன், பாகு, துஹுண்டன், ஸ்ருமலன், ஸ்ருபன் ஆகிய இவர்களும்,{11} பிற தைத்தியர்கள் பலரும் பாதங்களை வைக்க எத்தனித்த பெரும் விஷ்ணுவின் முன் தோன்றினார்கள்.{12}(1-12)

அவர்களில் சிலர் பாசக்கயிறுகளைக் கொண்டிருந்தனர், சிலர் தங்கள் வாயை அகல விரித்துக் கொண்டிருந்தனர், சிலர் கழுதையின் குரலைக் கொண்டிருந்தனர், சிலர் சதாக்னிகளைக் கொண்டிருந்தனர், சிலர் தங்கள் கைகளில் சக்கரங்களைக் கொண்டிருந்தனர், சிலர் வஜ்ரங்களையும்,{13} சிலர் தண்டங்களையும், சிலர் உலக்கைகளையும், சிலர் வாள்களையும், சிலர் பட்டிசங்களையும், சிலர் பரஷ்வதங்களையும், சிலர் பராசங்களையும், சிலர் கதாயுதங்களையும், சிலர் பரிகங்களையும்,{14} சிலர் பெருங்கற்களையும், சிலர் தங்கள் கைகளில் புஷலங்களையும் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் கரங்களில் மரங்களைக் கொண்டிருந்தனர், சிலர் விற்களையும்,{15} சிலர் கதாயுதங்களையும், சிலர் புஷுண்டிகளையும், சிலர் தங்கள் கைகளில் குத்துவாள்களையும் கொண்டிருந்தனர்.{16} பயங்கரம் நிறைந்தவர்களும், பெருஞ்சக்தி வாய்ந்தவர்களுமான தானவர்கள் பல்வேறு வகைகளில் உடைகள் பூண்டு, பல்வேறு ஆயுதங்களையும் தரித்திருந்தனர்.{13-17}

சிலர் ஆமைகளைப் போன்ற வாயைக் கொண்டிருந்தனர். சிலர் நீர்க்கோழிகளைப் போன்றும், சிலர் அன்னங்களைப் போன்றும், சிலர் கழுதைகளைப் போன்றும், சிலர் ஒட்டகங்களைப் போன்றும், சிலர் பன்றிகளைப் போன்றும்,{18} சில பயங்கரத் தானவர்கள் மகரங்களைப் போன்றும் வாய்களைப் படைத்திருந்தனர். முயல்கள், பூனைகள், கிளிகள், பசுக்கள், மான்கள், கருடன், வாள்கள், மயில்கள் போன்ற முகங்களைச் சிலர் கொண்டிருந்தனர்.{19,20} சிலர் குதிரைப் போன்ற வாயைக் கொண்டிருந்தனர், சிலர் யானை போன்ற வாயையும், சிலர் பல்வேறு ஆயுதங்களைப் போன்ற முகங்களையும் கொண்டிருந்தனர்.{21} அவர்கள் யானைத் தோலையும், மான் தோலையும் உடுத்தியிருந்தனர். அவர்களின் மேனிகள் மரவுரியால் மறைக்கப்பட்டிருந்தன. அவர்களில் சிலர் தங்களைப் பொன்னால் அலங்கரித்திருந்தனர். அந்த அசுரர்கள் மகுடங்களையும், குண்டலங்களையும் அணிந்திருந்தனர். அவர்கள் பல்வேறு உடைகளைத் தரித்துக் கொண்டு, பல்வேறு மாலைகளாலும், குழம்புகளாலும் தங்களை அலங்கரித்திருந்தனர்.{22-26} தானவர்கள் அசுரர்களும், எரியும் தங்கள் ஆயுதங்களை ஏந்தியபடியே, பாதத்தை வைக்க எத்தனித்த ரிஷிகேசனை எதிர்த்தனர்.{27}

மூவுலகங்களையும் வெல்ல இருந்த அந்த நேரத்தில் தலைவனின் பிரகாசம் சூரியனைப் போன்றிருந்தது. எல்லாம்வல்லவனான அந்தத் தலைவன், திதியின் மகன்கள் அனைவரையும் தன் உள்ளங்கையால் நொறுக்கிவிட்டு, தன்னுடைய மூன்று காலடிகளால் மூவுலகங்களையும் அடைந்தான். அவன் பெரும் வடிவை எடுத்ததும் முதலில் பூமியை அடைந்தான்;{28} அவன் பூமியை அடைந்ததும் சூரியனும், சந்திரனும் அவனுடைய இதயத்தில் இருந்தனர், அவன் வானத்தை அடைந்தபோது அவர்கள் அவனது இடையில் இருந்தனர், அவன் சொர்க்கத்தை அடைந்தபோது அவர்கள் அவனது கால்மூட்டுகளில் இருந்தனர்.{29}(13-29) ஒப்பற்ற ஆற்றல்படைத்தவனான விஷ்ணுவின் வடிவை இவ்வாறே இருபிறப்பாளர்கள் விளக்குகின்றனர்.{30} அண்டத்தால் துதிக்கப்படும் ஹரி, மூவுலகங்களையும் வென்று, முன்னணி அசுரர்களைக் கொன்றுவிட்டு, பூமியை தேவர்களின் மன்னனான இந்திரனுக்கு அளித்தான். பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு, பூமிக்கடியில் சுதலம் என்றழைக்கப்படும் பகுதியை பலிக்கு ஒதுக்கினான்.{31} அசுரர்களின் முதன்மையான பலி, அந்தப் பகுதியைத் தன் வசிப்பிடமாக அடைந்து நிறைவடைந்தான். அதுமுதல் அசுரர்களின் மன்னனான அவன் ரஸாதலத்தில் வாழ்ந்து வருகிறான்{32}. பெரும்பிரகாசமிக்கப் பலி, அங்கே வாழ்ந்து கொண்டே பெருந்தியானத்தில் ஈடுபட்டான். நுண்ணறிவுமிக்கப் பலி, அண்டத்தால் துதிக்கப்படும் நாராயணனிடம்,{33} “ஓ! தலைவா, நான் இனி என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பாக எனக்கு ஆணையிடுவாயாக” என்றான். அப்போது தேவர்களின் தலைவனான விஷ்ணு, தைத்திய மன்னன் பலியிடம் பேசினான்.{34}(30-34)

விஷ்ணு, “ஓ! பேரசுரா, நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன்; நான் உனக்கு ஒரு வரமளிக்கத் தயாராக இருக்கிறேன்; அதை வேண்டுவாயாக. உனக்கு நன்மை நேரட்டும். விரும்பிய பொருட்களை வேண்டுவாயாக.{35} தேவர்களின் மன்னனான சக்ரனின் {இந்திரனின்} சொற்களுக்கு ஒருபோதும் எந்தச் சூழ்நிலையிலும் கீழ்ப்படியாதிராதே. இஃது உனக்கான என் ஆணையாகும்.{36} நீ கீழ்ப்படியவில்லை எனில், உன் நலத்திற்குக் கேடு நேரும். ஓ! தைத்தியா, நீ அளித்த நீரை நான் என் உள்ளங்கைக் குழியில் ஏற்றதால், எங்கும் தேவர்களிடம் இருந்து உனக்கு அச்சம் நேராது.{37,38} பாதாள லோகத்தில் சுதலம் என்றழைக்கப்படும் பகுதியில் நீயும், உன் தொண்டர்களும், தைத்தியர்கள் அனைவரும் என் தயவில் வாழ்வீராக.{39} என் ஆணையை {சாஸனத்தை} நினைவுகூர்ந்து ஒப்பற்ற ஆற்றல் படைத்த சக்ரனின் சொற்களை ஒருபோதும் அவமதிக்காதே.{40} ஓ! பேரசுரா, தேவர்கள் அனைவரும் உன்னால் வழிபடத்தகுந்தவர்களாவர். நீ விரும்பிய பொருட்கள் அனைத்தையும் அடைவாய்; இம்மையிலும், மறுமையிலும் ஆடைகள் பலவற்றையும் அடைவாய். என் தயவால் எப்போதும் நீ தைத்தியர்களின் தலைவனாக அவர்களை ஆள்வாய். நீ பல்வேறு பொருள்களை அனுபவித்துக் கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்வாய்.{41,42} என்னுடைய ஆணையை நீ மீறினால் பெருஞ்சக்திவாய்ந்த நாகர்கள் தங்கள் தலைகளால் {நாகப் பாசத்தால்} உன்னைக் கட்டுவர்.{43} நீ எப்போதும் மஹேந்திரனையும், பிற தேவர்களையும் வணங்க வேண்டும். தேவர்களின் மன்னனான இந்திரன் என் அண்ணன் ஆவான்; எனவே நீ அவனது ஆணைக்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்றான்{44}.(35-44)

பலி, “ஓ! பெருந்தேவா, ஓ! சங்கு சக்கர, கதாதாரியே, ஓ! தேவர்களின் தேவா, ஓ! தேவாசுரர்களின் ஆசானே, ஓ! தேவர்களின் மன்னா, ஓ! தேவர்களில் முதன்மையானவனே, நான் பாதாள லோகத்தில் வாழும்போது என் நிலை என்னவாக இருக்கும்? நான் எவ்வாறு அங்கே வாழ்வேன்? என் புகழ் எவ்வாறு சிதையாமல் இருக்கும்?” என்று கேட்டான்.(45-46)

தலைவன் {பகவான்}, “ஓ! தானவர்களில் முதன்மையானவனே, ஸ்ரோத்ரியம் இல்லாத சிராத்தம், நோன்புகள் இல்லாத கல்வி, கொடைகள் இல்லாத வேள்வி, ரித்விக்குகள் இல்லாத ஹோமம், மதிப்பில்லாத கொடைகள், தூய்மையற்ற ஹவிஸ் என்ற இந்த ஆறு பாகங்களும் உனக்குச் சொந்தமாகும்.{47} என் பக்தர்களிடம் தீய மனம் கொண்டவர்களின் {பக்தத்வேஷிகளின்} அறம் {புண்ணியம்}, கிரய விக்கிரையத்தில் {கொள்முதல் செய்து விற்பனை செய்வதில்} ஈடுபடுபவர்களின் அறம் {புண்ணியம்}, அக்னிஹோத்ரங்களின் அறம், மதிப்பில்லாமல் ஈகை புரிவோரின் அறம், புரோஹிதராகச் செயல்படுகிறவர்களின் அறம் ஆகியவை, ஓ! தைத்தியர்களின் மன்னா, என் தயவால் உன் பங்காகும்” என்றான்”.{48}(47,48)

வைசம்பாயனர், “அசுரர்களில் முதன்மையான பலி, உயரான விஷ்ணுவின் சொற்களைக் கேட்டு, “அவ்வாறே ஆகட்டும்” என்றான்.{49} அவன், அந்தத் தேவனின் ஆணையை மேற்கொண்டு பாதாள லோகத்தில் நுழைந்தான்.{50}

அதே நேரத்தில் தேவர்களால் துதிக்கப்படும் தெய்வீகனான விஷ்ணு, {அந்த தெய்வீக அரசில்} பிரிவினைகளை {பாகங்களை} உண்டாக்கினான்.{51} அவன், கிழக்குப் பகுதியை ஒப்பற்ற ஆற்றல் படைத்த தேவர்களின் மன்னனுக்கும் {இந்திரனுக்கும்}, தெற்குப் பகுதியைப் பித்ருக்களின் மன்னனான பெரும் யமனுக்கும்,{52} மேற்குப் பகுதியை உயரான்ம வருணனுக்கும், வடக்குப் பகுதியை யக்ஷர்களின் மன்னனான குபேரனுக்கும் கொடுத்தான்;{53} பூமிக்கு அடியில் இருந்த பகுதியை நாகர்களின் மன்னுக்கும், மேலே இருந்த பகுதியை சோமனுக்கும் அளித்தான்.{54} பெருஞ்சக்திவாய்ந்தவனும், தேவர்களின் தலைவனும், மஹாரிஷிகளால் துதிக்கப்படுபவனுமான விஷ்ணு இவ்வாறு மூவுலகங்களையும் பிரித்துக் கொடுத்துவிட்டு தெய்வீக லோகத்திற்குச் சென்றான்.{55} அடக்கப்பட முடியாதவனான அந்தக் குள்ளன் {வாமனன்} புறப்பட்டுச் சென்ற பிறகு, தேவர்கள் அனைவரும், தங்கள் முன் நூறு வேள்விகளைச் செய்தவனை {இந்திரனைக்} கொண்டு மகிழ்ச்சியில் நிறைந்தனர்”.{56}(49-56)

வைசம்பாயனர், “கிருஷ்ணன், விரோசனன் மகனான பலியை ஏழு தலைகளைக் கொண்ட கம்பனன், அஷ்வதரன் முதலிய பாம்புகளால் கட்டிவிட்டுப் புறப்பட்டுச் சென்றான்.{57} தெய்வீக முனிவரான நாரதர், மேற்கண்ட விளைவால் துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்த அவனிடம் தாமாகவே வந்தார்.{58}(57-58) அவன் இவ்வாறு பீடிக்கப்பட்டதைக் கண்டு கருணையில் நிறைந்த அவர் {நாரதர்}, அந்தத் தானவ மன்னனிடம், {மோக்ஷ உபாயங்களைச் சொல்லும் பொருட்டு},{59} “உன்னை விடுவிக்கும் வழிமுறைகளை நான் கண்டடைகிறேன். ஓ! தைத்தியர்களின் மன்னா, தொடக்கமும் முடிவுமற்றவனும், நித்தியனும் சிதைவற்றவனும், தேவர்களின் தேவனுமான வாசுதேவனைத்{60} தூய இதயத்துடன் தியானிப்பாயாக; உன் மனத்தை அவனிடம் அர்ப்பணித்தால் நீ உடனே முக்தியை அடைவாய்” என்றார்.{61}(59-61)

அதன்பிறகு, அந்த விரோசனன் மகன் {பலி}, கைகளைக் கூப்பி நாரதரிடமிருந்து முக்தியை அடைவதற்கான வழிமுறைகளைக் கற்றறிந்தான்.(62) அந்தப் பேரசுரன் பலி, நாரதரால் பாடப்பட்ட தெய்வீகப் பாடலைக் கற்றறிந்து, பூமியை உயர்த்திய பெருந்தேவனின் பெயர்களை ஓதத் தொடங்கினான்.(63) {அவன்} “ஓம், நித்தியனும், எல்லையற்றவனுமான பெருந்தலைவனை வணங்குகிறேன். நீரில் கிடக்கும் பத்மநாபனான தெய்வீக விஷ்ணுவை வணங்குகிறேன்.{64} எழு வடிவங்களைக் கொண்ட சக்திகளுடன் கூடிய உடலை ஏற்று மூவுலகங்களிலும் படர்ந்தூடுருவி இருப்பவன் நீயே. ஓ! தலைவா, காலனின் காலன் நீயே. என்னை நீ விடுவிப்பாயாக {எனக்கு மோக்ஷம் அருள்வாயாக}.{65} வானம் சூரியனும், சந்திரனும் அற்றிருக்கும்போதும், வேள்விகளும், தபங்களும் வீழ்ச்சியடையும் போதும், அண்டத்தை மீண்டும் படைக்க நினைப்பவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ விடுவிப்பாயாக.{66} இருபிறப்பாளரில் முதன்மையான மார்க்கண்டேயர், உன்னில் பிரம்மன், ருத்திரன், இந்திரன், வாயு, அக்னி ஆகியோரையும், ஆறுகள், பாம்புகள், மலைகள் ஆகியனவற்றையும் கண்டார். என்னை நீ விடுவிப்பாயாக {எனக்கு மோக்ஷம் அருள்வாயாக}.{67} முந்தைய கல்பத்தில், உன் வயிற்றுக்குள் நுழைந்த மார்க்கண்டேய முனி, அசைவன, அசையாதன உள்ளிட்ட மொத்த அண்டத்தையும் அங்கே கண்டார். உன் சக்தியால் நீ என்னைக் காப்பாயாக.{68} உன் அறிவால் ஆதரிக்கப்படும் யோக சக்தியை அடைந்து தனியனாக மூவுலகங்களையும் படைத்து மீண்டும் யோகத்தில் ஈடுபடுபவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{69} நீரில் கிடந்த யோகத்துயிலை அனுபவித்து, மீண்டும் படைப்பைச் சிந்திப்பவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{70} வேள்விப் பன்றியின் வடிவை ஏற்று முன்னர்ப் பூமியை உயர்த்தியவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{71} தந்தங்களால் பூமியை உயர்த்திப் பித்ருக்களுக்கான மூன்று பிண்டங்களை விதித்தவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{72} தேவர்கள் ஹிரண்யாக்ஷனுக்குப் பயந்து தப்பித்து ஓடினாலும் அவர்களைக் காத்தவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{73} பெரும் வாயைக் கொண்ட ஒரு வடிவை ஏற்று, போரில் சக்கரத்தால் ஹிரண்யாக்ஷனின் தலையைக் கொய்ந்தவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{74} முன்னர் உன்னுடைய முழக்கத்தால் தைத்தியன் ஹிரண்யகசிபு தலையும், எலும்புகளும் நொறுங்கிக் கொல்லப்பட்டான். உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{75} முற்காலத்தில் பிரம்மனின் கண் எதிரிலேயே அவ்விரு தைத்தியர்களால் வேதங்கள் கொள்ளை போன போதும் அவற்றை மீட்டவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{76} ஹயசிரனின் வடிவை ஏற்று மது கைடபர் என்ற இரு தானவர்களையும் கொன்று பிரம்மனிடம் வேதங்களைத் திருப்பிக் கொடுத்தவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{77} தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், சித்தர்கள், உரகர்கள் ஆகியோரால் உன் எல்லையைக் காண இயலாது. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{78} வேதங்களை விளக்கிச் சொல்லும் அபாந்தரதமன் என்ற பெயரைக் கொண்ட மகனைப் பெற்றவன் நீயே. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{79} ஓ! தலைவா, அக்னிஹோத்ரமும், பிற வேதச் சடங்குகளும், பித்ருக்களை மதித்துச் செய்யப்படும் வேள்விகளும், ஹவிஸ்களும் ஆகிய அனைத்தும் உன் புதிர்களே {ரஹஸ்யங்களே}. உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{80} தீர்க்கதமஸ் ரிஷி, தம்முடைய குருவின் சாபத்தால் குருடாகப் பிறந்தாலும், உன் தயவால் தமது பார்வையை மீண்டும் பெற்றார். உன் சக்தியால் என்னை நீ காப்பாயாக.{81} ராகுவால் பீடிக்கப்படும் யானையான பரிதாபத்திற்குரிய உன் பக்தனை விடுவிப்பாயாக.(82} சிதைவற்றவன் நீயே, நித்தியன் நீயே, பிரம்மத்துக்கும், பக்தர்களுக்கும் அர்ப்பணிப்புள்ளவன் நீயே. தீய வழிகளில் செல்வோரைத் தண்டிப்பவன் நீயே. என்னை நீ காப்பாயாக.{83} சங்கு, சக்கரம், கதாயுதம், அம்பறாதூணி, சாரங்க வில், கருடன் ஆகியோரை நான் வணங்குகிறேன். அவர்கள் என் தளைகளில் இருந்து என்னை விடுவிக்கட்டும்” என்று வேண்டினான்[1].{84}

அப்போது, சங்கு, சக்கரம், கதாயுதம், {பத்மம்}அம்பறாதூணி, சாரங்கும், கருடன் ஆகியோர் தலைவனைத் தணிவடையச் செய்து, பலியை அவனது தளைகளில் இருந்து விடுவிக்கும்படி அவனை வேண்டினர்.{85}(64-85)

அப்போது தணிவடைந்த தலைவன், பாம்புகளை அழிப்பவனும், பறவைகளின் மன்னனுமான கருடனிடம், “பலியைத் தளைகளில் இருந்து விடுவிப்பாயாக” என்றான்.{86} ஒப்பற்ற ஆற்றல் படைத்த கருடன் தன் சிறகுகளை அடித்துப் பாம்புகளால் கட்டப்பட்டிருந்த பலி இருக்கும் பாதாள லோகத்திற்குச் சென்றான்.{87} கருடனின் வரவை அறிந்த பாம்புகள், பேரசுரன் பலியை விடுவித்து, வினதையின் மகன் {கருடன்} மீது கொண்ட அச்சத்தால் போகவதி நகரத்திற்குத் தப்பிச் சென்றனர்.{88} பாம்புகளை உண்பவனான கருடன், செழிப்பை இழந்த பலியிடம் சென்று, தலை குப்புற தியானித்துக் கொண்டிருந்தவனைக் கிருஷ்ணனின் தயவால் நாகபாசங்களில் இருந்து விடுவித்தான்.{89}

கருடன், “ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, ஓ! தானவர்களின் மன்னா, நீ தளைகளில் இருந்து விடுபட்டு, உன் பிள்ளைகளுடனும், நண்பர்களுடனும் பாதாள லோகத்தில் வாழ வேண்டும் என்பது உனக்கு அந்தப் பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு இட்டிருக்கும் ஆணையாகும்.{90} ஓ! தானவா, இவ்விடத்தில் இருந்து ஓர் அங்குலமும் நகர்ந்துவிடாதே. இந்த ஒப்பந்தத்தை நீ முறித்தால் உன் தலை நூறு துண்டுகளாகச் சிதறும்” என்றான்.{91}

பறவைகளின் மன்னனுடைய {கருடனின்} சொற்களைக் கேட்ட அந்தத் தானவன் {பலி}, “நான் அந்தப் பரமனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவேன்.{92} ஓ! பறவைகளின் மன்னா, நான் இங்கே மகிழ்ச்சியாக வாழும் வகையில் தலைவன் எனக்கான வாழ்வாதாரங்களை {ஜீவ்யோபாயங்களை} ஏற்பாடு செய்யட்டும்” என்றான்.{93}

பலியின் சொற்களைக் கேட்ட கருடன், “தலைவன் ஏற்கனவே உன் பராமரிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டான்.{94} புரோஹிதர்கள் {ரித்விக்குகள்} இல்லாமல் செய்யப்படும் வேள்விகளின் காணிக்கைகளிலும், தவ வழிமுறைகளை அறியாத நபர்களின் விதிமுறைகளிலும் உனக்கு உரிமை உண்டு.{95} தேவர்கள் அத்தகைய காணிக்கைகளை ஏற்பதில்லை. அத்தகைய வேள்விக் காணிக்கைகளால் ஊட்டம் பெற்று நீ இங்கே மகிழ்ச்சியாக வாழ்வாயாக” என்றான்”{96}.(92-96)

வைசம்பாயனர், “கசியபரின் மகனும், மூவுலகங்களையும் ஆதரிப்பவனுமான விஷ்ணு, பெருந்தோள்களைக் கொண்ட தானவர்களின் மன்னனுக்கு இந்தச் செய்தியை அனுப்பினான்.{97} பாவங்கள் அனைத்தையும் அழிக்கும் இந்தப் பாடலை மதிப்புடன் ஓதும் மனிதன், அனுபவிக்கும் கொடுமைகள் அழிந்து போகும்.{98} பசுவைக் கொன்றவன், அதன் விளைவால் உண்டாகும் பாவத்தில் இருந்து விடுபடுவான், ஒரு பிராமணனைக் கொன்றவனும் கூடத் தன் பாவங்களில் இருந்து விடுபடுவான். மகனற்ற மனிதன் மகனைப் பெறுவான். {இதை ஓதும்} கன்னிகை, தன் இதயம் விரும்பும் கணவனை அடைவாள்.{99}(97-99) பெண்ணானவள், கருவை ஈனும் வலியில் இருந்து விரைவில் விடுபட்டு ஒரு மகனைப் பெறுவாள். சாங்கிய யோகியான கபிலரும், முக்தியை விரும்பிய பிற ரிஷிகளும், இந்தப் பாடலை ஓதி பாவங்களில் இருந்து விடுபட்டு, மோக்ஷத்தின் இருப்பிடமான ஸ்வேதத்வீபத்திற்குச் சென்றனர். இந்தப் பாடல் {ஸ்தவம்} தெய்வீகப் பொருட்கள் அனைத்தையும் அருளும்.{100,101} உண்மையில், காலையில் விடியலில் எழுந்து தன்னைத் தூய்மை செய்து கொண்டு, கட்டுப்பாடு கொண்ட மனத்துடன் இதைப் படிக்கும் ஒரு மனிதன், தான் விரும்பும் அனைத்துப் பொருள்களையும் அடைகிறான்.{102} தலைவனின் குள்ள அவதாரமானது {வாமன அவதாரமானது}, வேதங்களை நன்கறிந்த விப்ரர்களால் விஷ்ணுவின் மகிமைமிக்கச் செயல்களை விளக்குவது என நினைவுகூரப்படுகிறது.{103} குள்ள அவதாரமெனும் இந்தத் தெய்வீகக் கருப்பொருளின் ஒவ்வொரு பர்வத்தையும் சொல்லும்போது மதிப்புடன் கேட்பவன், தன் பகைவர் அனைவரையும் வென்று, பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணுவைப் போலவே பெருஞ்சக்திவாய்ந்த மன்னனாவான். அவன், மாசற்ற புகழையும், ஏராளமான செல்வங்களையும், இன்பத்திற்குரிய பொருட்களையும் அடைவான்.{104,105} குள்ளன் பிடித்தமானவனாக இருப்பதைப் போலவே அவனும் அனைவரின் அன்புக்குரியவனாவான். அவனுடைய மகன்களும், பேரப்பிள்ளைகளும் பெருகுவார்கள், அவன் நோய்களில் இருந்து விடுபட்டு, அனைத்து சாதனைகளையும் செய்வான்.{106} இதைப் படிப்பவனிடம் தலைவன் ஜனார்த்தனன் நிறைவடைகிறான்; இதனால் அவன் விருப்பத்திற்குரிய அனைத்துப் பொருட்களையும் அடைகிறான். இவ்வாறே கிருஷ்ணத்வைபாயனர் {வியாசர்} சொல்லியிருக்கிறார்” என்றார் {வைசம்பாயனர்}[2].{107}(98-107)

புத்திர பிரார்த்தனை | பவிஷ்ய பர்வம் பகுதி – 48-(கிருஷ்ணம் ப்ரதி ருக்மிண்யா꞉ புத்ரப்ரார்தநாகதநம்)-கிருஷ்ணனிடம் பிள்ளை வரம் வேண்டிய ருக்மிணி; கைலாச மலையில் மஹாதேவனைச் சந்திக்கத் தீர்மானித்த கிருஷ்ணன்; பதரிகாசிரமத்தின் மகிமை…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஒரு காலத்தில் விஷ்ணுவும், தேவதேவனுமான பகவான் ஜனார்த்தனன், சங்கரனைச் சந்திக்கக் கைலாச மலைச் சிகரத்திற்குச் சென்றதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.(1) தத்துவங்களில் சிறந்தவர்களும், தவச் சக்தி கொண்டவர்களுமான நாரதர் உள்ளிட்ட பெரும் தவசிகள் பலரும், செந்நீல வண்ணனான மஹாதேவனை தரிசிக்கச் சென்றனர்.(2) விப்ரரே, அங்கே நீண்ட காலத்திற்கு முன்பு கேசவன் உத்தம தவம் செய்து தேவதேவனான சங்கரனை அர்ச்சித்து வழிபட்டான் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.(3) அங்கே ஆதி தேவர்களான அவ்விருவரும் {ஹரியும், சிவனும்} ஒருவரையொருவர் தரிசித்தனர். இந்திரனின் தலைமையிலான தேவர்களும் அங்கே சென்று சங்கரனையும், ஹரியையும் வழிபட்டனர்.(4)

மஹாதேவர்களான அவ்விருவரும் தனித்தனி வடிவங்களில் தோன்றினாலும் ஒருவரே என்றும், அவர்கள் ஒருவராயிருந்தாலும் பல்வேறு காலங்களுக்குரிய செயல்களைச் செய்வதற்கு வெவ்வேறு வடிவங்களை ஏற்றனர் என்றும், அண்டத்தைப் படைக்கும், காக்கும், அழிக்கும் காரணர்கள் இவ்விருவரே என்றும் சொல்லப்படுகிறது.(5) அவர்கள் பரஸ்பரம் ஒத்துழைத்து ஜகத்தை ஆளுகின்றனர் {என்றும் சொல்லப்படுகிறது}. கைலாச மலையில் அவ்விருவரும் சந்தித்தது எவ்வாறு என்ற கதையை எனக்கு உரைப்பீராக.(6) உயர்ந்த மஹாரிஷிகள் புருஷோத்தமர்களான அவ்விருவரையும் ஒன்றாகக் கண்டபோது என்ன செய்தனர்? இவை அனைத்தையும் எனக்கு விரிவாக உரைப்பீராக.(7) எங்கும் நிறைந்திருப்பவனும் {விஷ்ணுவும்}, எப்போதும் வெல்லும் உயர்ந்தவனும் {ஜிஷ்ணுவும்}, புராதனனுமான கிருஷ்ணன், பாம்புகளை ஆபரணங்களாக அலங்கரித்த சங்கரனை எவ்வாறு கைலாச மலையில் கண்டான் என்பதை எனக்கு விரிவாக உரைப்பீராக” என்று கேட்டான்.(8)

வைசம்பாயனர் சொன்னார், “மனிதர்களில் உத்தமனே, கிருஷ்ணன் எவ்வாறு கைலாச மலைக்குச் சென்றான்? அங்கே ரிஷபவாகனனும், தேவேசனுமான சங்கரனை எவ்வாறு கண்டான்? எவ்வாறு தவம் செய்தான்? அவ்வளவு முனிவர்களும் எவ்வாறு அங்கே சென்றனர்? என அனைத்தையும் சொல்கிறேன். கவனமாகக் கேட்பாயாக.(9,10) பகவானான துவைபாயனரிடம் {வியாசரிடம்} கேட்டது போலவே, கருட வாகனனான கேசவனை நமஸ்கரித்து, என் புத்திக்கு எட்டியதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(11) ஓ! மன்னா, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக. பக்திமானும், கல்விமானுமான ஒருவன், தொண்டு செய்யும் குணம் இல்லாதவர்களிடமும், கொடூரர்களிடமும், தவத்தை ஏற்காதவர்களிடமும், வேத கல்வியில் விருப்பம் இல்லாதவர்களிடமும் இதைச் சொல்லக்கூடாது. இவ்வுரையைக் கேட்பதன் மூலம் ஒருவன் சொர்க்கவாசத்தையும், செல்வத்தையும், தூய்மையான புத்தியையும் அடைவான்.(12,13)

இவ்விருவருக்கும் {விஷ்ணுவுக்கும், சிவனுக்கும்} இடையில் வேற்றுமையில்லை என்பது பக்திமான்கன் அனைவரின் தியான பொருளும், வேதத் தீர்மானமும் ஆகும். இந்த உண்மை உபநிஷதங்கள் பலவற்றில் சொல்லப்பட்டிருக்கிறது. வேதங்களை நன்கறிந்தவர்களும், தபோபலம் கொண்டவர்களும், நாரத முனிவரைப் போன்றவர்களுமான மஹாரிஷிகள் பலரும் விஷ்ணுவுடன் கூடிய சிவனின் அடையாளத்தை தியானிக்கிறார்கள்.(14,15) மங்கல ஆளுமைகளான விஷ்ணுவும், சிவனும் கைலாச மலையில் சந்தித்துக் கொண்ட அந்தக் கொண்டாடத்தக்க நிகழ்வு மிகப் புனிதமானதாகும். ஓ! மன்னா, நரகனைப் போன்ற பேரசுரர்கள் பலர் கொல்லப்பட்டு, மிகச்சிலரே எஞ்சியிருந்தபோது, விருஷ்ணி வழித்தோன்றல்களுடனும், தன் அன்புக்குரிய மனைவியான ருக்மிணி தேவியுடனும் சேர்ந்து ஜகன்னாதன் {கிருஷ்ணன்} பூமியை ஆண்டு வந்தான்.(16-18)

அப்போது ஓரிரவில் அந்த ஜகத்பதி {கிருஷ்ணன்}, தன் ராணியுடன் {ருக்மிணியுடன்} இன்புற்று மகிழ்ச்சியாக உறங்கிக் கொண்டிருந்தான்.(19) பொன்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ருக்மிணி தேவி தன் கணவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மாதவா, தேவேசரே, உம்மிடம் இருந்து ஒரு புத்திரனை அடைய நான் விரும்புகிறேன்.(20) பிரபுவே, அவன் உம்மைப் போலவே அழகிய வடிவம் கொண்டவனாகவும், பெருஞ்சக்திவாய்ந்தவனாகவும் இருக்க வேண்டும். தவச் சக்தியால் பேராற்றல் வாய்ந்தவனாக இருக்க வேண்டும், விருஷ்ணி வம்சத்தின் தலைவனாக அவன் அறியப்பட வேண்டும்.(21) சாத்திரங்கள் அனைத்தையும் கற்றவனாகவும், தன்னை உணர்ந்த ஞானிகளில் முதன்மையானவனாகவும் இருக்க வேண்டும். இக்குணங்களைக் கொண்ட ஒரு புத்திரனை எனக்கு அருள்வீராக.(22) நீரே கொடுப்பவர், படைப்பவர், அனுபவிப்பவர், நீரே ஜகத்பதி. எங்களுக்கு அனைத்தையும் தர வல்லவர் நீரே.(23) ஓ! கேசவரே, தேவேசரே, உமக்குத் தொண்டு புரிகையில் தங்கள் புத்தியை உம்மிலே நிலைக்கச் செய்யும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர் என்று நீர் நன்கறியப்பட்டிருக்கிறீர்.(24) ஓ! ஜனார்த்தனரே, ஜகத்பதியே, என்னை உமது பக்தையாக நீர் கருதினால், என்னிடம் நீர் கருணை கொண்டிருந்தால் பெருஞ்சக்திவாய்ந்த மகனை எனக்குக் கொடுப்பீராக” என்றாள் {ருக்மிணி}”.(25)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ருக்மியின் பகைவனும், யது குலத்தின் மகிமையும், தேவேசனும், யதுக்களின் தலைவனுமான கிருஷ்ணன், தன் மஹிஷியான ருக்மிணி இந்தக் கோரிக்கையை வைத்தபோது, “பாமிநியே {என் அன்புக்குரிய அழகிய பெண்ணே}, உன் கனவு புத்திரனை நான் உனக்குத் தருவேன்.(26,27) தேவி, நீ என் நித்திய பக்தையாக இருக்கிறாய். நம் பகைவரை அழிக்கும் புத்திரனை நான் உனக்குத் தருவேன்.(28)

ஓர் இல்லறத்தான் புத்திரனைக் கொண்டு தன் பகைவரை வெல்லலாம். நரகத்தின் மறுபெயர் புத் ஆகும்துக்கம் மற்றொரு வகை நரகமாகும்.(29) ஒரு புத்திரன் தன் பெற்றோரை புத் எனும் நரகில் இருந்து காக்கிறான். இம்மையிலும், மறுமையிலும் புத்திரனே ஆதாயம் என்பதால் அனைவரும் அவனை விரும்புகின்றனர். என் அன்புக்குரியவளே, புத்திரனைக் கொண்டவனுக்கு அனந்தலோகத்தின் கதவுகள் திறந்திருக்கும்.(30) கணவன் தன் மனைவியின் கருவறைக்குள் புகுந்து தானே புத்திரனாகிறான். அந்நேரத்தில் மனைவி அவனது மாதாவாகிறாள். பத்து மாதங்கள் கழிந்ததும், அவனே புதிய உடலுடன் கருவறையில் இருந்து வெளியே வருகிறான்.(31)

புத்திரவந்தனை {புத்திரனுடன் கூடிய ஒருவனைக்} கண்டு இந்திரனே அச்சமடைகிறான். அவன் {இந்திரன்}, “என் செழிப்பெதனை இவன் பகிரப் போகிறான்?” என்று நினைக்கிறான். புத்திரனற்றவன் மரணத்திற்குப் பிறகு நல்ல உலகங்களை அடைவதில்லை. இருப்பினும் குபுத்திரனை {இழிந்த மகனைப்} பெறுவதை விடப் புத்திரனற்றவனாக இருப்பதே சிறந்தது.(32) இழிந்த மகனைப் பெற்றவன் நரகத்திற்குச் செல்வான், நல்ல மகனைப் பெற்றவன் சுவர்க்கத்திற்குச் செல்வான். எனவே ஒருவன், பணிவுள்ளவனும், கல்விமானும், கடமையுணர்வு கொண்டவனும், கருணையுள்ளவனுமான ஒரு மகனையே எப்போதும் விரும்ப வேண்டும்.(33)

ஒருவன் நல்ல ஞானம் அடையும்போது பணிவையும் அடைகிறான். மகனைப் பெற விரும்பும் ஞானிகள், கல்விமானும், பக்திமானுமான ஒரு மகனையே வேண்டுவார்கள்.(34) எனவே, நான் கல்விமானும், அறமனம் கொண்டவனுமான ஒரு மகனை உனக்குத் தருவேன். அத்தகைய நல்ல மகனை அடைவதற்கு நான் இப்போதே கைலாச மலைக்குச் செல்லப் போகிறேன்.(35) அங்கே நான் அனைத்து உயிரினங்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவனும், நீலலோஹிதனும் {செந்நீல வண்ணனுமான} மஹாதேவனை வழிபட்டு, உனக்காக ஒரு மகனை அவனிடம் பெற்று வருவேன்.(36) நீக்கமற எங்கும் நிறைந்தவனும், அழிவற்றவனும், பிறப்பற்றவனுமான அந்த விரூபாக்ஷனை {சிவனை}, பிரம்மசரியத்துடன் கூடிய என் தவத்தால் நிறைவடையச் செய்து அவனது அருளைப் பெறுவேன்.(37) சங்கரனின் தரிசனத்தைப் பெற இன்றே நான் புறப்படுகிறேன். என் தவத்தில் நிறைவடைந்ததும் நிச்சயம் அவன் எனக்கு ஒரு மகனை அருள்வான்.(38)நான் அங்கே சென்றதும் மஹாதேவனையும், உமாதேவியையும் வணங்கி அவர்களை நிறைவடையச் செய்வேன். {கைலாசம் செல்லும்} வழியில், முனிவர்களால் தொண்டாற்றப்படுவதும், வேள்வி நெருப்பின் புகையாலான மேகங்களை எப்போதும் கொண்டதும், புண்ணியமானதுமான பதரிக்கு {பத்ரிநாத்} முதலில் செல்வேன். அந்தப் புண்ணியத்தலம், கங்கையின் நீரால் எப்போதும் நனைக்கப்படுகிறது, எண்ணற்ற பறவைகளும், சிங்கங்கள், புலிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளும் அங்கே திரிகின்றன.(39,40) அங்கே பதரிப்பழங்கள் {இலந்தைக் கனிகள்} நிறைந்திருக்கின்றன. கிளைவிட்டு கிளை தாவும் குரங்குகளும் எப்போதும் அங்கே காணப்படுகின்றன. வாழை தோப்புகளால் அலங்கரிக்கப்பட்ட பெரும் மரங்கள் பலவும், பழத்தோட்டங்கள் பலவும் அங்கே இருக்கின்றன.(41) வேத கல்வியில் மூழ்கியிருப்பவர்களும், வேதங்களின் தீர்மானத்தை அறிந்தவர்களும், வாதங்களில் வேதச் சான்றுகளைக் குறிப்பிடுபவர்களுமான பெரும் முனிவர்கள் வசிக்கும் இடமாக அது திகழ்கிறது.(42) முற்றான தன்னுணர்வைப் பெற்றவர்களும், “இதுவே தத்துவம், இதுவே உண்மை” என்பதை உறுதியாக நம்புகிறவர்களுமான பல ஆன்மாக்களால் அந்தப் புனிதத்தலம் {பதரிகாசிரமம்} நம்பிக்கையுடன் துதிக்கப்படுகிறது.(43) இதிஹாசங்களையும், புராணங்களையும் நன்கறிந்தவர்களும், இறந்த பின்னர் சுவர்க்கத்தை அடைய விரும்புகிறவர்களுமான மஹாரிஷிகள் அந்தப் புனிதத்தலத்தில் தொண்டாற்றுகின்றனர்.(44) பதரிகாபுரி என்று கொண்டாடப்படும் அந்தப் புனிதத்தலத்திற்கு நான் செல்வேன்” என்று சொல்லிவிட்டு நிறுத்திக் கொண்டான் ஜனார்த்தனன்” {என்றார் வைசம்பாயனர்}.(45) 

நகரப் பாதுகாப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 49-(ஸ்ரீக்ருஷ்ணஸ்ய கைலாஸகமநவிசாரம்)-கைலாசம் செல்ல முடிவெடுத்து சில ஏற்பாடுகளைச் செய்த கிருஷ்ணன்; யாதவர்களுக்கு கிருஷ்ணன் சொன்ன அறிவுரைகள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இரவு கடந்து கிழக்கு அடிவானில் சூரியன் எழுந்தபோது, ஜனார்த்தனன் நெருப்புவேள்வியின் மூலம் தன் காலைச்சடங்குகளைச் செய்து தக்ஷிணைகளைக் கொடுத்தான்.(1) பிராமணர்களுக்குச் செல்வத்தையும், பசுக்களையும் கொடையளித்தான். ஜகத்பதியான கிருஷ்ணன், விப்ரர்களில் தகுதியுடைய துவிஜர்களை நமஸ்கரித்து ஆஸ்தான மண்டபத்திற்குள் பிரவேசித்தான்.(2) அங்கே அவன் ஆசனத்தில் அமர்ந்து விருஷ்ணி குல வீரர்கள் அனைவரையும் அழைத்தான். பலபத்ரன் {பலராமன்}, சிநி புத்திரன் {சாத்யகி}, ஹார்திக்யன் {கிருதவர்மன்}, சுகன், சாரணன்,(3) உக்கிரசேனன், மஹாபுத்திமானும், நீதிகளை அறிந்தவருமான உத்தவர் ஆகியோரையும் அழைத்தான். அவரது வழிநடத்தலின் பேரில் யதுகுலத்தவர் சுகமாக வாழ்ந்து வந்தனர்.(4) உத்தவர் தர்மவானாகவும், யது, விருஷ்ணிகளின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். தேவர்கள் நெறிமுறைகளுடன் கூடியவர்களாக இருந்தாலும் அந்த மஹாத்மாவின் {உத்தவரின்} உத்திகளில் அச்சம் கொண்டவர்களாக இருந்தனர்.(5)

யாதவர்கள் அனைவரும் கூடிய பிறகு, குறிப்பாக எவருடைய ஞானத்தால் கிருஷ்ணன் உலகத்தை ஆண்டானோ அந்த உத்தவரும் வந்த பிறகு கிருஷ்ணன் அவர்களிடம், “ஓ! யாதவர்களே, என் உயிர் உத்தவரே, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பீராக.(6,7) உக்கிரசேனரே, என் குழந்தைப் பருவத்தில் இருந்து துஷ்டர்களைக் கொல்வதைக் கடந்த காலத்தில் இருந்து நீர் கண்டு வருகிறீர். அஃது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.(8) யாதவர்களே, நான் பாலனாக இருந்தபோது பூதனையையும், கேசியையும் கொன்றேன், பசுக்களைப் பாதுகாப்பதற்காகக் கோவர்த்தன கிரியைத் தூக்கினேன்.(9) தேவர்கள் அனைவரின் முன்னிலையில் சக்ரன் எனக்கு அபிஷேகம் செய்து வைத்தான். கம்சனும், இரு மல்லர்களும், சாணூரனும், முஷ்டிகனும் என்னால் கொல்லப்பட்டனர்.(10)

உக்ரசேனர் அபிஷேகம் செய்விக்கப்பட்டார், நான் துவாரகையை நிறுவினேன். அந்தக்காலத்திலும் அசுர மன்னர்கள் பலர் என்னால் கொல்லப்பட்டனர்.(11) யாதவர்களே, உக்ரசேனரே, வீரனான ஜராசந்தனைக் கொல்வதற்கான உத்திகளைப் பீமருக்கு {பீமசேனருக்கு} ஏற்படுத்தி, அந்தக் கொடூரன் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தேன்.(12) கோமந்த மலையில் இருந்து திரும்பும்போது சிருகாலனும்தானவனான நரகனும் என்னால் கொல்லப்பட்டனர்.(13)

க்ஷத்திரியர்களில் முதன்மையானவர்களே இவ்வாறு பூமியின் சுமையை நான் அகற்றினேன். இருப்பினும், நரகாசுரனின் நண்பனான பௌண்டரகன் இன்னும் எஞ்சியிருக்கிறான்.(14) பெருஞ்சக்தி வாய்ந்த போர்வீரர்களின் தலைவனாக இருக்கும் அவன் என்னைப் பகைத்துக் கொண்டிருக்கிறான். துரோணரின் சீடனான அந்தப் பௌண்டரகன், பெருஞ்சக்திவாய்ந்தவனாகவும், பிரம்மாஸ்திரத்தை ஏவவல்லவனாகவும்,(15) போர்க்கலையில் திறன்மிக்கவனாகவும், சாத்திரங்களை அறிந்தவனாகவும், நீதிமானாகவும், ஜமதக்னேயரை {பரசுராமரைப்} போலவே போரில் விருப்பம் கொண்ட மன்னனாகவும் இருக்கிறான்.(16) அவனே என் பெரும் எதிரியாக இருக்கிறான். அவன் எப்போதும் என்னிடம் குறை {நான் செய்யும் தவறைக்} காண காத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்குச் சிறு வாய்ப்புக் கிடைத்தாலும் துவாரகையைத் தாக்குவான். அதன் மூலம் பேரிடர் நேரிடும். புண்டரத்தை ஆட்சி செய்யும் பௌண்டரகனை அரைகுறையாக முயற்சி செய்யும் எவனாலும் வீழ்த்த முடியாது.(17,18)

துவாரகையைப் பாதுகாப்பீர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 50நான் உயிரினங்களின் தலைவனான சங்கரனைக் காண கைலாசம் செல்லும்போது, யாதவர்களை வீழ்த்திவிடும் நம்பிக்கையில் அவன் துவாரகையைத் தாக்க எத்தனித்தால் விற்களையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு நீங்கள் அனைவரும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.(19,20) நான் செல்லும் நோக்கம் நிறைவேறி திரும்பும் வரையில், நகரைக் காக்கும் காரியத்தில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.(21) இங்கே வந்து யாதவர்கள் அனைவரையும் வீழ்த்த அந்த ராஜேந்திரனால் இயலும் என நான் நினைக்கிறேன். எனவே, நீங்கள் கட்கம், பாசம், பரசு ஆகியவற்றுடன் எப்போதும் காவல் காப்பீராக.(22) பகைவன் நம் நகருக்குள் நுழைவதற்கு ஏதுவாக உள்ள வழிகளில் தடைகளை ஏற்படுத்திக் கவனமாகக் காவல் காப்பீராக. எப்போதும் மஹாதுவாரத்தை {பிரதான வாயிலை} அடைத்தே வைத்திருப்பீராக.(23) நகருக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் ஒரேயொரு சாலையை மட்டும் திறந்து வைத்திருப்பீராக. நகரை விட்டு வெளியேற விரும்பும் எவரும் முதலில் மன்னரிடம் அனுமதியைப் பெற வேண்டும்.(24) மன்னரின் அனுமதியின்றி எவரும் நகருக்குள் அனுமதிக்கப்படக்கூடாது. இக்காரியத்தில் காவலர்கள் மிகக் கவனமாகவும், கண்டிப்புடனும் இருக்க வேண்டும். நான் திரும்பும் வரை இந்த ஏற்பாடு அமலில் இருக்கட்டும்.(25) நகருக்கு வெளியே வேட்டையாடச் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். உண்மையில் சின்னச் சின்னக் காரியங்களுக்காக எவரும் நகரை விட்டு வெளியேறக்கூடாது. வந்து போகும் ஒவ்வொருவரின் அடையாளங்களும் கவனமாக உறுதி செய்யப்பட வேண்டும்.(26) நான் திரும்பும் வரை இந்தக் கட்டுப்பாடுகளை நீங்கள் அமல்படுத்த வேண்டும்” என்றான் {கிருஷ்ணன்}. இவ்வாறு யாதவர்களை அறிவுறித்திய கிருஷ்ணன், சாத்யகியிடம் திரும்பி அவனிடம் பேசினான்.(27) 

துவாரகையைப் பாதுகாப்பீர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 50-(துவாரவதீரக்ஷணே யாதவான் ப்ரதி ஸ்ரீக்ருஷ்ணஸ்ய வசநம்)சாத்யகி, உத்தவர், பலராமன் ஆகியோரிடம் துவாரகாபுரியின் பாதுகாப்பை ஒப்படைத்த கிருஷ்ணன்…

ஸ்ரீ பகவான் {கிருஷ்ணன்} சொன்னான்: “ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே, என் அன்புக்குரிய சாத்யகி, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக. கவசத்துடனும், கதாயுதம், வில் மற்றும் கணைகளுடனும் நகரைப் பாதுகாப்பதை உன் தனிப்பொறுப்பாகக் கொள்வாயாக.(1) ஓ! யது வம்சத்தின் பலம்வாய்ந்த வீரா, இஃது எண்ணற்ற க்ஷத்திரியர்களின் வசிப்பிடமாகும். நீ அவர்களின் தலைவன் என்பதால் இரவில் உறக்கத்தையும் கைவிட்டு இந்நகரைப் பாதுகாக்க வேண்டியது உன் கடமையாகும்.(2) இப்போதைக்கு சாத்திரங்களைக் கற்பதிலும், அவற்றின் பொருளை விளக்குவதிலும் இருந்து விலகுவாயாக. சாத்திரங்களின் அடிப்படையில் உன் நண்பர்களுடன் வாதம் செய்வதை இப்போதைக்குக் கைவிடுவாயாக.(3) நீ பலமிக்கவன், திறன்மிக்கப் போர்வீரன், ஞானமுடையவன், தனுர்வேத விற்பன்னன். இந்நகரத்தின் புகழ் கெடாமல் இருக்க உன்னால் ஆனதில் சிறந்ததைச் செய்வாயாக” {என்றான் கிருஷ்ணன்}.(4)

சாத்யகி சொன்னான்: “ஓ! ஜகந்நாதா, ஓ! அன்புக்குரிய ஜனார்த்தனா, என்னால் இயன்றதில் சிறந்ததைச் செய்து நீ சொன்னவற்றைப் பின்பற்றுவேன். உன் ஆணைகளை எப்போதும் என் சிரம் மேற்கொள்வேன் என நான் உறுதியளிக்கிறேன்.(5) ஓ! மாதவா, ஒரு பணியாளனைப் போல நான் பலராமரின் ஆணைகளையும் பின்பற்றுவேன். நீ திரும்பி வரும்வரை நான் இந்நகரைப் பாதுகாப்பேன்.(6) ஓ! கோவிந்தா, ஓ! மாதவா, உன் கருணை எனக்கிருந்தால் பகைவரை அழிக்கும் காரியத்தில் என்னால் இயலாதது ஏதுமில்லை.(7) சக்ரன், யமன், குபேரன், பாசக்கயிற்றைக் கொண்ட வருணன் ஆகியோரே போரிட வந்தாலும் உன் அருளால் அவர்களை என்னால் வீழ்த்த முடியும் எனும்போது, பௌண்டரகனைக் குறித்துச் சொல்வதற்கென்ன இருக்கிறது?(8) ஓ! தலைவா, ஹரியே, நான் விழிப்புடன் இருப்பேன் என்பதில் உறுதிகொண்டு நீ விரும்பிய இடத்திற்குச் சென்று வருவாயாக” {என்றான் சாத்யகி}.

பிறகு, தாமரைக் கண்ணனான கிருஷ்ணன், உத்தவரிடம்,(9) “உத்தவரே, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டு என் ஆணைகளைப் பின்பற்றுவீராக. உமது புத்தி சொல்லும் வழிகளைப் பின்பற்றித் துவாராவதியைக் காப்பீராக.(10) ஓ! மென்மையானவரே, நீரே சிறந்த வழிகளை அறிவீர் என்பதால் விழிப்புடன் இருந்து நமக்கு உதவி செய்வீராக. இது தொடர்பாக மேலும் உமக்குச் சொல்ல நான் நாணுகிறேன்.(11) கற்றறிந்த அறிஞர்களில் நீர் முதன்மையானவர். உம்மைப்போன்ற அறிவாளிகளின் முன்பு தன் கருத்துகளைச் சொல்ல மேதாவி எவனும் துணியமாட்டான்.(12) எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பனவற்றை நன்கறிந்தவர் நீர். எனவே, ஓ! விருஷ்ணி குலத்தைப் பாதுகாப்பவரே, இதற்கு மேலும் உம்மிடம் நான் எதையும் சொல்ல முயலேன்” என்றான் {கிருஷ்ணன்}.(13)

உத்தவர், “கோவிந்தா, பிரபுவே, ஏன் என்னை இவ்வாறு புகழ்கிறாய்? நீ என்னை அதீதமாகப் புகழ்ந்தாலும், இஃது உன் அன்பின் வெளிப்பாடு, பாசத்தின் வெளிப்பாடு என்பதை நான் அறிவேன்.(14) கேசவா, ஜகந்நாதா, நான் இப்போது எவ்வாறு இருக்கிறேனோ, இந்நிலை உன்னருளால் ஏற்பட்டது. உன் கருணையை அடைந்தவனிடம் எதுதான் குறைவாக இருக்கும்?(15) ஜகம் அனைத்தையும் படைத்தவன் நீயே. அவற்றை அழிப்பவனும் நீயே. காரணம், காரியம் ஆகியவையும், பேசுபவன், கேட்பவன் ஆகியோரும், சான்றும் நீயே.(16) பரப்ரம்மத்தை அறிந்த முனிவர்கள், தியானப் பொருளாகவும், தியானமாகவும், தியானிப்பவனாகவும் உன்னையே ஏற்கின்றனர். தேவர்களைப் பகைப்பவரை தண்டிப்பவன் நீயே, பக்திமான்களைக் காப்பவன் நீயே.(17) எங்கள் தலைவனும், பாதுகாவலனும் நீயே. நாங்கள் இன்னும் உயிருடன் இருப்பது உன்னாலே. நம் பகைவர்கள் வீழ்த்தப்பட்டதும் உன்னாலே. நான் உன்னிடம் சொல்லும் ராஜதந்திரங்கள் எவையும் உன்னால் ஈர்க்கப்பட்டு என்னால் சொல்லப்பட்டவை என்பதே என் புரிதலாகும்.(18) வேதங்களின் வடிவமானவன் என்பதால் எங்களை மங்கலப் பாதையில் வழிநடத்தக் கூடியவன் நீயே. எங்கள் செயல்கள் அனைத்தின் இலக்கும் உன் மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என்பது என் உறுதியான நம்பிக்கை.(19) உன் கோட்பாடுகளில் உள்ள சிக்கல்களைப் புரிந்து கொள்வது மிகக் கடினம் என்பது நீதிமான்கள் அனைவரின் கருத்தாகும். ஓ! ஜனார்த்தனா, நான்கு வகை அரசியல் நீதிகள் சாம, தான,(20) பேத, தண்டம் ஆகியவை. ஒருவன் சிரமத்தில் இருந்தாலோ, பிறரை அமைதியடையச் செய்ய விரும்பினாலோ அவன் இந்த நான்கு கோட்பாடுகளைப் பயன்படுத்த வேண்டும். பகைவன் தன்னைவிட பலவீனமாக இருக்கும்போது தண்டக் கோட்பாட்டைப் பயன்படுத்த வேண்டும். பகைவன் தனக்கு இணையானவனாக இருக்கும்போது சாமக் கோட்பாட்டைப் பயன்படுத்த வேண்டும்.(21) ஒரு பகைவன் தன்னை விட பலமிக்கவனாக இருந்தால் தானக் கோட்பாட்டைப் பயன்படுத்த வேண்டும். இந்த மூன்று கோட்பாடுகளையும் பயன்படுத்த இயலாத போது, ஒருவன் பேதக் கோட்பாட்டைப் பயன்படுத்த வேண்டும். அரசியல் நீதியைக் கற்றவர்களின் கருத்து இதுவே ஆகும்.(22) எவனும், அந்தந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கொள்கையைத் தானே தீர்மானிக்க வேண்டும். வேறென்ன சொல்வது? இத்தகைய ஞானங்கள் அனைத்தின் கொள்ளிடம் நீயே” என்றார் {உத்தவர்}”.(23)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, இதைச்சொல்லிவிட்டு உத்தவர் அமைதியடைந்தார். பகவான் விஷ்ணு {கிருஷ்ணன்},(24) இதே போலவே பெரும் வலிமைமிக்க காமபாலனிடமும் {பலராமனிடமும்}, மனிதர்களின் ஆட்சியாளரான மன்னர் உக்கிரசேனரிடமும், ஹார்திக்கியனிடமும் {கிருதவர்மனிடமும்} பேசினான்.(24,25) பிறகு அவன் காமபாலனிடம் {பலராமனிடம்}, “அன்புக்குரிய அண்ணா, காலத்தைக் கடத்தாமல், நகரைப் பாதுகாப்பதே உமது முக்கியக் காரியமாக இருக்க வேண்டும்.(26) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, நகரைப் பாதுகாக்க நீர் விரும்பினால் இவ்வுலகில் நமக்கு எவரால் இடர் விளைவிக்க முடியும்?(27) எப்போதும் கதாதாரியாக இருப்பீராக. விளையாட்டுக்கும், கேளிக்கைகளுக்கும் இது நேரமல்ல.(27) பிரபுவே, நாம் கேலிப்பொருளாகாதிருக்க எப்போதும் துவாரகையின் நலத்தைக் கவனத்தில் கொள்வீராக. உமது கதாயுதத்தை எடுத்துக் கொண்டு நகரைப் பாதுகாக்க வேண்டியவற்றைச் செய்வீராக.(28) இக்காரியத்தில் அனைவரையும் நீர் ஊக்கப்படுத்த வேண்டும். எவரும் உற்சாகமிழக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்வீராக” என்றான் {கிருஷ்ணன்}. இதற்கு ராமனும் {பலராமனும்}, “அவ்வாறே ஆகட்டும்” என்றான்.(29) அந்த ஆணைகளைத் தங்கள் சிரமேற்கொண்டு விருஷ்ணி குலத்தோர் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களுக்குச் சென்ற போது, ஜகந்நாதன் கைலாச மலைக்குப் புறப்பட ஆயத்தமானான்”.(30) 

பதரிகாஷ்ரமம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 51-(ஸ்ரீக்ருஷ்ஸ்ய பதரிகாஷ்ரமகமநம்)-கருடன் மீதேறி பறந்து சென்ற கிருஷ்ணன் பதரிகாசிரமத்தை அடைந்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஜகத்பதியான விஷ்ணு {கிருஷ்ணன்}, பறவைகளின் மன்னனும், தார்க்ஷியனுமான கருடனைத் துரிதமாக வரும்படி மனப்பூர்வமாக அழைத்தான்.(1) ஓ! குருக்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, வேதங்களே வடிவாகக் கருதப்படுபவனும், யோகப் புதிர்களில் தேர்ச்சி பெற்றவனும், சாத்திரங்களை உண்மையாக அறிந்தவனுமான தார்க்ஷியன் பகவான் {கிருஷ்ணன்} முன்பு உடனே வந்தான்.(2) யஜ்ஞத்தை உடலாகவும், புராணங்களை ஆத்மாவாகவும், சாம வேதத்தைத் தன் குதிங்காலாகவும், ரிக் வேதத்தைக் கண்களாகவும் கொண்ட அவனது நிறம் பிங்கள வண்ணமாகவும், அவனது வடிவம் புதிரானதாகவும் இருந்தது.(3) அவனது அலகு தாமிரம் போல் சிவப்பாக இருந்தது. அவன் அமுதத்தை அபகரித்துப் போரில் சக்ரனை {இந்திரனை} வென்றவனாவான். அவனது தலை பெரிதாக இருந்தது. பாம்புகள் அவனுக்குப் பகையாக இருந்தன. அவனது தாமரைக் கண்கள் விஷ்ணுவுக்கு ஒப்பானவையாக இருந்தன.(4) தேவதேவனும், தானவிகளின் {தானவப் பெண்களின்} கர்ப்பங்களை அழிப்பவனுமான தலைவனைச் சுமக்கும் வாகனனாக அவன் இருந்தான். அவன் அசுரர்களை வெல்பவனாகவும், தன் சிறகின் அசைவுகளாலேயே ராக்ஷசர்களை வெல்பவனாகவும் இருந்தான்.(5)

ஒப்பற்ற ஆற்றலைக் கொண்ட அந்தக் கருடன், கேசவன் முன்பு வந்து வணங்கினான். பிறகு அவன், “ஓ! விஷ்ணுவே, ஜகத்பதியே நான் உன்னை வணங்குகிறேன்.(6) ஓ! ஹரியே, தேவதேவா, உன் தாமரைப் பாதங்களுக்கு என் வணக்கம்” என்றான்.

கிருஷ்ணன் கருடன் மீது தன் கைகளை வைத்து, “ஓ! பறவைகளில் சிறந்தவனே,(7) சர்வமங்களனான சங்கரனைக் காண கைலாச மலைக்குச் செல்ல நான் விரும்புகிறேன்” என்றான்.(8)

அந்தத் தார்க்ஷியனும், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி தன் சம்மதத்தைத் தெரிவித்தான். ஜனார்த்தனன் அவனது முதுகில் அமரும்போது, அங்கே கூடியிருந்த யாதவர்களிடம், “நீங்கள் அனைவரும் விழிப்புடன் இருப்பீராக” என்றான்.(9)

ஜகன்னாதனான ஹரி வடகிழக்குத் திசையை நோக்கிச் சென்றான். பேராற்றல் படைத்த தார்க்ஷியன் மூவுலகங்களையும் நடுங்கச் செய்தான்.(10) அந்தப் பறவையானவன், ஜனார்த்தனனைத் தன் முதுகில் ஏற்றிச் சென்ற போது, தன் பாத அசைவுகளால் பெருங்கடலைக் கலங்கடித்தான், தன் சிறகசைவுகளால் உண்டான காற்றினால் மலைகளை நடுங்கச் செய்தான்.(11)

அவர்கள் ஆகாசத்தில் சென்றபோது, கந்தர்வர்களும், தேவர்களும் ஈஷ்வரனான அந்தப் புண்டரிகாக்ஷனை {கிருஷ்ணனை} வணங்கினார்கள்.(12) அவர்கள், “ஓ! ஜகன்னாதா, ஓ! உயர்ந்த தேவா, உனக்கு மகிமை உண்டாகட்டும். ஓ! விஷ்ணுவே, ஓ! ஜகத்பதியே, உனக்கு மகிமை உண்டாகட்டும். ஓ! வெல்லப்பட முடியாத தேவா, ஓ! உயிரினங்கள் அனைத்தின் நன்மையை விரும்புபவனே, நாங்கள் உன்னை வணங்குகிறோம்.(13) தைத்திய தானவர்களைக் கொன்ற உன் நரசிம்ம அவதாரத்தை நாங்கள் வணங்குகிறோம். ஓ! வெல்லப்பட முடியாத ஹரியே, மகிமைகள் அனைத்தும் உனதாகட்டும். யோகிகளின் தியான பொருளும், அவர்களுடைய வாழ்வின் இறுதி இலக்கும் நீயே.(14) ஓ! நாராயணா, ஓ! கிருஷ்ணா, ஓ! ஹரியே, ஓ! ஆதி கர்த்தாவே, ஓ! புராணாத்மனே, ஓ! பிரம்மனின் நித்திய தலைவனே நாங்கள் உன்னை வணங்குகிறோம்.(15) ஓ! அனைத்தையும் கட்டுப்படுத்துபவனே {சகலேஷ்வரா}, நாங்கள் உன்னை வணங்குகிறோம். நிர்க்குணனாக இருந்தாலும் {சற்குணனாக இருந்தாலும்} குணங்களைக் கடந்த எல்லையற்ற நிலையில் இருப்பவன் நீயே. பக்தர்களின் அன்புக்குரியவன் நீயே, அர்ப்பணிப்புடன் கூடிய தொண்டின் நோக்கமாக இருப்பவன் நீயே, ஓ! தானவநாசனா, நாங்கள் உன்னை வணங்குகிறோம்.(16) ஓ! அனைத்தையும் கட்டுப்படுத்துபவனே, புலப்படாத வடிவம் கொண்டவன் நீயே. எங்கள் பணிவான வணக்கத்தை ஏற்றுக் கொள்வாயாக” {என்று வேண்டினர்}.(17) இவ்வாறே தேவர்களும், கந்தர்வர்களும், ரிஷிகளும், சித்தர்களும், சாரணர்களும் அந்த ஜகன்னாதனிடம் வேண்டினார்கள்.(18)

கிருஷ்ணன் அவர்களின் வேண்டுதல்களைக் கேட்டபடியே பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு அண்டத்தின் நன்மைக்காக விஷ்ணு கடுந்தவம் புரிந்த இடத்திற்கு தேவர்களுடனும், ரிஷிகளுடனும் சென்று சேர்ந்தான்.(19,20) அந்தத் தவத்தின் பலத்தால் விஷ்ணு தன்னை நரன் என்றும், நாராயணன் என்றும் இரு வடிவங்களாகப் பிரித்துக் கொண்டான்.(21) ஆறுகளிற்சிறந்த புனித கங்கை அந்தப் புண்ணியத்தலத்தில் வேகமாகப் பாய்ந்து செல்கிறாள்.

பிரம்மராக்ஷசனான விருத்தாசுரனைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபட இந்திரன் அங்கே பத்தாயிரம் வருடங்கள் தவம் செய்தான். அங்கே ஜனார்த்தனனை தியானிப்பதன் மூலமே சித்தர்கள் பலர் முக்தியை அடைகின்றனர்.(22,23) போர்க்களத்தில் அனைவரையும் கதறச்செய்த ராவணனைக் கொன்ற பிறகு சாத்திர போதனைகளைப் பின்பற்றுவதற்கு உதாரணமாக ராமன் அங்கே கடுந்தவம் செய்தான்.(24) ஜகன்னாதனான கேசவன் அந்தப் புண்ணியத்தலத்தில் நித்திய வாசம் செய்து கொண்டிருப்பதால், தேவர்களும், தெய்வீக முனிவர்களும் எளிதில் அங்கே முக்தியை அடைகிறார்கள்.(25) பெரும் முனிகணங்கள் எப்போதும் அங்கே வேள்விகளைச் செய்து வருகிறார்கள். அந்தப்புண்ணியத் தலத்தை நினைப்பதன் மூலமே மனிதர்கள் இம்மைக்குப் பின் மறுமையில் சுவர்க்கத்தை அடையலாம்.(26) ஓ மனிதர்களின் ஆட்சியாளா, சித்தர்கள் அதைச் சுவர்க்கத்தின் வாயிலாகக் கருதுவதால் எப்போதும் அங்கேயே வசித்து வருகின்றனர்.(27) பக்தர்கள் மட்டுமே வசிக்கும் அந்தப் புண்ணியத் தலத்தில் வசித்தால் ஓர் எதிரியும் நண்பனாகிவிடுவான். அங்கே விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் ஒருவன் எளிதில் தேவ நிலையை அடையலாம்.(28)முற்றிலும் பகையற்ற சித்தர்களால் புகழப்படும் புண்ணியத்தலமான அந்தப் பதரிகாசிரமத்திற்குத் தேவர்களுடனும், முனிவர்களுடனும் மாலைப் பொழுதில் கிருஷ்ணன் சென்று சேர்ந்தான். மஹாபுண்ணியம் வாய்ந்த ரிஷிகள் பலர் அங்கே வசித்துக் கொண்டிருப்பதை அவன் கண்டான்.(29,30) தேவர்களுடன் கூடிய கிருஷ்ணன் அந்தப் பதரி தீர்த்தத்திற்கு வந்தபோது, மேற்கு அடிவானில் சூரியன் மறைந்து கொண்டிருந்தான். கூடுகளுக்குத் திரும்பும் பறவைகளின் ஒலி அங்கே சூழ்ந்திருந்தது. பசுக்களில் பால் கறக்கப்பட்டன. பல முனிவர்கள் வேள்வி நெருப்பில் நெய்யைக் காணிக்கையளிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர், எண்ணற்ற சித்தர்கள் பரம்பொருளைத் தியானிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்தப் புனிதத்தலத்தில் வசிப்பவர்களால் விருந்தினர்கள் தொண்டாற்றப்பட்டனர். கண்கள் திரும்பிய இடமெல்லாம் கிட்டிய காட்சி மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. தாமரைக்கண்ணனான கிருஷ்ணன், நெய் விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட அந்த ஆசிரமத்தின் மத்தியில் வந்திறங்கி கருடன் மீதிருந்து இறங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(31-36) 

வரவேற்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 52-(ஸ்ரீக்ருஷ்ணஸ்ய பதரிகாஷ்ரமே ஆதித்யஸ்வீகாரம்)-கிருஷ்ணனை வரவேற்ற பதரிகாசிரமவாசிகள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அக்னிஹோத்ரம் செய்து கொண்டிருந்த முனிகணங்கள் {முனிவர்க்கூட்டம்}, தேவதேவன் {கிருஷ்ணன்} வந்ததைக் கண்டு அவனை வரவேற்க விரைந்து சென்றனர்.(1) இந்த முனிவர்கள் அங்கே {பதரிகாஷ்ரமத்தில்} நீண்ட காலம் வேள்விகளைச் செய்து தியானம் பயின்று வந்தவர்களாவர். அவர்களில் சிலர் சடை தரித்திருந்தனர், வேறு சிலர் முழுமையாக மழித்த தலையுடன் இருந்தனர், வேறு சிலர் நரம்புகள் புடைத்துத் தெரியுமளவுக்கு மெலிந்திருந்தனர்.(2) 

சிலர், உடலைப் பராமரிக்கும் நாட்டத்தைக் கைவிட்டவர்களாகவும், சிலர் வேதாளங்களைப் போலவும் தெரிந்தனர். சிலர் கற்களால் நசுக்கப்பட்ட தானியங்களை உண்டனர், வேறு சிலர் இலைகளை மட்டுமே உண்டு தங்கள் உயிரைத் தாங்கி வந்தனர்.(3) அவர்கள் வேதங்களை முழுமையாக அறிந்தவர்களாகவும், கடும் விரதங்களை மேற்கொண்டு தவமியற்றுபவர்களாகவும் இருந்தனர். விஷ்ணுவின் பக்தர்களான அவர்கள் அனைவரும் எப்போதும் அவனையே நினைத்து வழிபட்டு வந்தனர்.(4)

அந்த முனிவர்களில் பலர் இருப்பில் இருந்து முக்தியடையும் நிலையில் இருந்தனர். பலர் காலம் கடப்பதை அறியாத நிலையில் தியானத்தில் மூழ்கியிருந்தனர். மேலும் பலர் தங்கள் இதயங்களில் விஷ்ணுவை நேரடியாகக் காணும் அளவுக்குத் தவமுழுமையை அடைந்திருந்தனர்.(5) அந்த முனிவர்களில் சிலர் வருடம் ஒருமுறை உண்டனர். வேறு சிலர் நீருக்குள் வசித்திருந்து நீரை மட்டுமே பருகி உயிரைத் தாங்கி வந்தனர். இன்னும் சிலர் ஷ்ருதிஸ்ம்ருதிகளில் பரிந்துரைக்கப்படும் நற்காரியங்களைச் செய்து இந்திரனின் இதயத்தில் அச்சத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தனர்.(6)

ஓ! மன்னா, வசிஷ்டர், வாமதேவர், ரைப்பியர், தூம்ரர், ஜாபாலி, காசியபர், கண்வர், பரத்வாஜர், கௌதமர்,(7) அத்ரி, அஷ்வசிரஸ், பத்ரர், சங்கரர், சங்கநிதி, குணி, பாராசர்யர், பவித்ராக்ஷர், யாஜ்ஞவல்கியர்,(8) கக்ஷீவான், அங்கிராஸ் முனி, தீப்ததபாஸ், அஸிதர், தேவலர், மஹாதபஸ்வியான வால்மீகி ஆகியோர்(9) தங்கள் கைகளைக் கூப்பியபடியே தங்கள் குடில்களில் இருந்து வெளிப்பட்டு ஈஷ்வரனை {கிருஷ்ணனை} தரிசிக்கும் ஆவலுடன் வெளியே வந்தனர்.(10) அவர்கள், பக்திமான்களிடம் கருணை கொண்டவனும், பாவங்களை அழிக்கும் ஹரியும், நீக்கமற நிறைந்திருக்கும் விஷ்ணுவும், ஜனார்த்தனனுமான கிருஷ்ணனைப் பணிந்து வணங்கினர்.(11) அவர்கள், “கிருஷ்ணா, தேவதேவா, கேசவா, பிரணவாத்மாவே, ஜகந்நாதா, ஹரியே, நாங்கள் தலை வணங்கி உன்னை வழிபடுகிறோம்.(12) கிருஷ்ணா, விஷ்ணுவே, ரிஷிகேசா, கேசவா, ஓயாமல் நாங்கள் உம்மை வழிபடுகிறோம்” என்றனர்.

அந்தப் பிராமணர்கள், ஜகத்பதியான கிருஷ்ணனை இவ்வாறு வணங்கிவிட்டு,(13) “ஜகத்பதியே, இதோ அர்க்கியம், இதோ பாத்யம், இதோ சுகமாக அமரும் ஆசனம். தேவா, உன் தரிசனத்தால் நாங்கள் நித்திய அருளை அடைந்தோம். எங்களிடம் நிறைவடைவாயாக.(14) உன்னை மகிழ்விக்க நாங்கள் செய்ய வேண்டியதென்ன? பிரபுவே, நாங்கள் தொண்டு செய்வதெவ்வாறு? ஹரியே, உன் பாத கமலங்களுக்குத் தீங்கேதும் செய்தோமா?” என்று கைகளைக் கூப்பிக் கொண்டு பணிவுடன் கேட்டனர்.(15)

கிருஷ்ணனும், தேவர்களும் அந்த முனிவர்கள் செய்த பூஜையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். பிறகு கிருஷ்ணன், “உன்னத முனிவர்களே, நீங்கள் உத்தம பூஜையைச் செய்தீர்கள். உங்கள் தவங்களின் விளைவால் நீங்கள் அனைவரும் உயர்வடைவீராக” என்றான்.(16)

புராணாத்மாவான அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, இவ்வாறு சொல்லிவிட்டுத் தன் வாகனமானக் கருடனுடன் சேர்ந்து ஓரிரவு மகிழ்ச்சியான மனத்துடன் தங்கினான்.(17) அவ்வாறு தங்கியிருந்தபோது அவன் அங்கே இருந்த முனிவர்களின் வேள்விகள், தவங்கள் ஆகியவற்றையும், அவர்கள் தங்கள் சீடர்களைப் பராமரிப்பது குறித்தும் விசாரித்தான்.(18)

கிருஷ்ணனின் விசாரணைகளுக்கு மறுமொழியாக அவர்கள், “ஜகந்நாதா, உன் கருணையால் அனைத்துச் செயல்களையும் நாங்கள் வெற்றிகரமாகச் செய்து வருகிறோம்” என்றனர்.(19)

பிறகு, பதரிகாசிரமத்தைச் சேர்ந்த முனிவர்கள் அனைவரும் கனிகள், கிழங்குகள், தானியங்கள் ஆகியவற்றைக் கிருஷ்ணனுக்கும், தேவர்களுக்கும் கொடுத்தனர். கிருஷ்ணன் அவர்களின் காணிக்கைகளை ஏற்றுக் கொண்டு அவர்களின் தொண்டில் பெரும் மகிழ்ச்சியடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(20) 

சமாதிநிலை | பவிஷ்ய பர்வம் பகுதி – 53-(ஸ்ரீக்ருஷ்ணஸ்ய ஸமாதி கோலாஹலம்)-தியானத்தில் ஆழ்ந்த கிருஷ்ணனின் சமாதி நிலை; பயங்கரமான பேரொலிகளைக் கேட்ட கிருஷ்ணன்; தியானம் கலைந்தது; கிருஷ்ணன் அடைந்த ஆச்சரியம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “எவனுடைய நோக்கங்களை அறிந்து கொள்வது கடினமோ அந்தப் பிரபுவும், பகவானும், விஷ்ணுவுமான யாதவேஷ்வரன் {யாதவர்களின் ஈஷ்வரன்/ கிருஷ்ணன்}, ஏற்கனவே தான் தவம் செய்து வந்ததும், கங்கையின் வடதீரத்தில் அமைந்திருப்பதுமான இடத்திற்குச் சென்றான். அந்த ஹரி அங்கே இருக்கும் புனிதமான தபோவனத்திற்குள் பிரவேசித்தான்.(1,2) மனோஹரமானதும், மிக அழகானதுமான அவ்விடத்தை அவன் சுற்றிப் பார்த்தான். பிறகு புண்ணியவரதனான அந்தப் பிரபு அந்த ஆசிரமத்திற்குள் அமர்ந்தான்.(3) தாமரைக் கண்ணனான அவன் மெய்மறந்த நிலையில் {சமாதியில்} தன் மனத்தை நிலைக்கச் செய்தான். தேவேஷ்வரனான {தேவர்களின் ஈஷ்வரனான} அந்த ஜகந்நாதன் விவரிக்கமுடியாத பொருளைக் குறித்துத் தியானிக்கத் தொடங்கினான்.(4)

தேவகுருவான அவன், காற்றற்ற இடத்தில் உள்ள விளக்கைப் போல, அலைபாயாத மனத்துடன் தியானத்தில், தன்னிலை இழந்த நிலையில் {சமாதியில்} ஈர்க்கப்பட்டிருந்தபோது, திடீரெனத் திசைகள் அனைத்திலும் மஹாகோரமான ஒலிகள் கேட்டன.(5) “உண்பீர், உண்வீராக. சாரங்கனின் அருளால் மான்கள் அனைத்தையும் கொண்டு வருவீராக.(6) இதோ விஷ்ணு, இதோ கிருஷ்ணன், இதோ ஹரி இங்கே அமர்ந்திருக்கிறான். அச்யுதனே, மாதவனே, கேசவனே, தேவேசா, நாங்கள் உன்னை வணங்குகிறோம்” என்ற ஒலி கேட்டது.(7)

இவ்வாறே அவ்விரவில் பெருங்குழப்பமும், கலவரமும் நேர்ந்தது. மான்களின் மிகப் பெரிய பகைவரான சிங்கங்கள் திடீரென உரக்க முழங்கத் தொடங்கின.(8) ஓ! மன்னா, பிறகு சிங்கங்கள் மான்களை விரட்டும் ஒலிகளும், நாய்கள் குரைக்கும் ஒலிகளும், அச்சமடைந்த மான்கள், கரடிகளின் ஒலிகளும், உறுமும் புலிகள், பிளிறும் யானைகள் ஆகியவற்றின் ஒலிகளும் அனைத்துப் பக்கங்களிலும் கேட்டன. இந்த மொத்த ஒலிகளின் கலவையானது, பெருங்காற்றால் கலங்கிப் பெருகும் சமுத்திரத்தின் பயங்கர ஒலியைப் போன்றிருந்தது.(9,10)

இரவில் நேர்ந்த அந்த ஆரவார ஒலி, மூவுலகில் உள்ள அணைவரையும் உண்மையில் அச்சுறுத்தியது. அந்தக் கலவரத்தின் மூலம் ஹரி தேவனின் சமாதி கலைந்தது. புறநினைவு மீண்ட ஜகத்பதி {எழுந்து நின்று}, “செவிடாகச் செய்யும் இவ்வொலியென்ன?(11,12) என்னைத் துதித்துக் கொண்டே இத்தகைய ஒலியை உண்டாக்குவது யார்? ஐயோ, நாய்கள், மான்கள், இரைதேடும் விலங்குகளிடம் இருந்து தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள ஓடும் பிற விலங்குகள் ஆகியவற்றின் ஒலிகளும் கேட்கின்றனவே. இது மிக ஆச்சரியமானது. இருப்பினும் இவ்வொலிகள் அனைத்தும் சேர்ந்து என்னைத் துதித்து வேண்டுகின்றனவே” என்று நினைத்தான்.(13,14) இவ்வாறு சிந்தித்த ஹரி, கலவரத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கத் திக்குகள் அனைத்திலும் தன் பார்வையைச் செலுத்தினான். பிறகு, கீழே அமர்ந்து அமைதியடைந்தான்.(15)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, கேசவன் அமர்ந்திருந்த இடத்தை நோக்கித் திடீரென மான்கூட்டம் ஒன்று ஓடிவந்தது. நாய்கள் அவற்றை விரட்டி வந்தன.(16) ஓ! மன்னா, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பந்தங்கள் மூட்டப்பட்டதால் இரவின் இருள் விலங்கி அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன.(17) அப்போது அங்கே பூதகணங்கள் தென்பட்டன. கோணல் வாய்களுடன் கூடியவையும், பயங்கரத் தோற்றம் கொண்டவையுமான பிசாசுகள், பச்சை இறைச்சியை உண்டபடியும், குருதியைப் பருகியபடியும் அச்சுறுத்தும் வகையில் மஹாகோரமாக முழங்கின.(18,19) ஓ! மன்னா, எண்ணற்ற மான்கள் ஏற்கனவே கொல்லப்பட்டிருந்தன, அல்லது படுகாயமடைந்து தரையில் கிடந்தன. மேலும் எண்ணற்ற மான்களும், யானைகளும் கணைகளால் துளைக்கப்பட்டு அங்கேயும், இங்கேயும் ஓடிக்கொண்டிருந்தன.(20)

ஓ! பாரதா, ஆயிரக்கணக்கான மான்கள் அந்தத் தேவேசன் அமர்ந்திருந்த இடத்திற்கு ஓடிவந்து அவனைச் சூழ்ந்து கொண்டன என்று நான் என் குருவிடம் இருந்து கேள்விப்பட்டேன். பிறகு சிதைந்த அங்கங்களைக் கொண்ட பிசாசுகள் பலவும் கேசவன் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தன. புத்திரர்களுடன் கூடிய அவை அனைத்தும், காண்பவனுக்கு மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தன. ஓ! ராஜேந்திரா, பிறகு நாய்க்கூட்டமும் அங்கே வந்தது. அப்போது கேசவன், தன்னைச் சூழ்ந்திருக்கும் இந்த உயிரினங்கள் அனைத்தையும் கண்டு பேராச்சரியம் அடைந்தான்.(21-24)

அவன், “என்ன நடக்கிறது? இவ்வுயிரினங்கள் அனைத்தும் ஏன் இங்கே வந்திருக்கின்றன? பக்தியுடன் என்னைத் துதித்தவர்கள் யார்? நான் யாரிடம் நிறைவடைவது?(25) என் அருளால் இன்று முக்தியடையப் போவது யார்?” இவ்வாறு நினைத்தபடியே பகவான் அங்கே அமர்ந்திருந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(26) 

பிசாசுகள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 54-(பிஷாசாகமநம்)-பிசாசுகளின் கூட்டம்; இரண்டு பிசாசுகளுக்கிடையிலான பேச்சு…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},  “அப்போது அச்சந்தரக் கூடியவையும், மஹாகோரமானவையுமான பிசாசுகள் இரண்டு, தங்கள் கூட்டங்களுடன் அங்கே தோன்றின. அவை அனைத்தும் நெடியவையாகவும், கோணலான வாய்களையும், அகன்ற தாடைகளையும், நீண்ட நாவுகளையும் கொண்டவையாக இருந்தன.(1) நீண்ட தலைமுடியையும், அச்சந்தரும் கண்களையும் கொண்ட அவை இறைச்சியை உண்டபடியும், குருதியைப் பருகியபடியும் பயங்கரமாகச் சிரித்தன.(2) அவற்றின் உடல்கள் முழுவதும் உயிரினங்களின் குடல்களால் மறைக்கப்பட்டிருந்தன. அவை பேருடல் படைத்தவையாக இருந்தாலும் அவற்றின் வயிறுகள் மெலிந்திருந்தன. அவை, மண்டையோடுகள் தொங்கும் திரிசூலங்களைத் தரித்திருந்தன.(3)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவற்றில் இரு பிசாசுகள் பல சடலங்களை இழுத்துக் கொண்டிருந்தன. அவை தங்கள் தங்கள் வாழ்க்கைச் சூழலுக்குத் தகுந்த மிக இழிந்த சொற்களைப் பேசிக் கொண்டும், உரக்க சிரித்துக் கொண்டும் இருந்தன.(4) அவை நடந்து சென்ற போது பெரும் மரங்களை உலுக்கி தங்கள் தொடைகளாலும், கால்களாலும் அவற்றை இழுத்தன.(5) அவை தங்கள் பற்களை நறநறவெனக் கடித்துக் கொண்டிருந்தன. அவற்றின் உடல் முழுவதும் எலும்புகளாலும், மஜ்ஜைகளாலும், குருதியாலும் மறைக்கப்பட்டிருந்தது.(6) அவை, “கிருஷ்ணா, கிருஷ்ணா, மாதவா” என்றும், அந்தத் பிரபுவின் பல்வேறு புனிதப் பெயர்களையும் சொல்லிக் கொண்டிருந்தன. அவை, “தலைவன் விஷ்ணுவின் தரிசனம் எப்போது நமக்குக் கிடைக்கும்? இப்போது அவன் எங்கிருக்கிறான்? பிரபுவான ஹரி எங்கே வசிக்கிறான்? அவனது தரிசனத்தை நாம் பெறுவது எவ்வாறு? இந்த ஆசிரமத்தில் எங்கோ இருக்கிறான் என்று கேள்விப்பட்டோமே.(7,8)

இந்திரனின் தம்பியும், மலரும் தாமரை மலர்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், தலைவன் ஹரியை நாம் எங்கே சந்திப்பது? பக்தர்களால் புண்டரீகாக்ஷன் என்றும், அகங்காரமற்றவர்களால் பிரம்மம் என்றும் அழைக்கப்படுபவனுமான விஷ்ணுவைக் காணும் ஆவல் தணியவில்லையே.(9) அண்டத்தின் தலைவனும் {ஜகந்நாதனும்}, அண்ட அழிவின் போது அனைத்தையும் ஈர்த்துக் கொள்பவனும், பிறப்பற்றவனுமான தலைவன் ஹரியை நாம் எவ்வாறு காண்போம்?(10) உயிரினங்கள் அனைத்திற்கும் உறைவிடமாக இருப்பவனும், அண்டத்தில் வெளிப்படும்போது பேராற்றலை வெளிப்படுத்துபவனுமான அந்தத் தலைவனைக் காணும் ஆவல் அதிகரிக்கிறது.(11)

வாழ்வின் மிக அருவருப்பான நிலை என்று உயிரினங்கள் அனைத்தாலும் வெறுக்கப்படும் இந்தப் பிசாசு நிலையை அடைவதற்குக் கடந்த காலத்தில் {முற்பிறவியில்} நாம் என்ன செய்தோம் என்பதை அறிவோமில்லை. நாம் மனித ஊனுண்டு, களங்கமடைந்து அனைவரின் மனங்களிலும் அச்சத்தை உண்டாக்கி வருகிறோம்.(12,13) ஐயோ, நம் முற்பிறவிகளில் பாவச் செயல்கள் பலவற்றை நாம் இழைத்திருக்கிறோம். நம்முடைய இந்த இழிநிலை அதன் விளைவே. இந்த இழிவாழ்விலும் ஏதோ ஒரு மகிழ்ச்சியை நாம் அடைகிறோம்.(14) முற்பிறவி தீச்செயல்களின் விளைவுகள் தீரும்வரை, அனைவராலும் வெறுக்கப்படுவதும், பிறருக்குத் தொல்லை தருவதுமான இந்தப் பிசாசு வடிவம் நீங்காது.(15) முற்பிறவிகள் பலவற்றிலும் செய்த கணக்கற்ற பாவங்களை நாம் சேர்த்திருக்க வேண்டும். இன்றுவரை பாவ விளைவுகள் தீராததன் காரணம் இதுவே.(16)

பல்வேறு உயிரினங்களைக் கொன்று, இந்த நாய்க்கூட்டத்துடனும், நமது படைவீரர்களுடனும் பூமியில் திரிந்து கொண்டிருக்கிறோம். இவ்வுலகத்தில் ஒவ்வொருவரும், எது செய்யப்படவேண்டும், எது தவிர்க்கப்பட வேண்டும் என்பது புரியாத பால பருவத்தில் அறியாமையில் மறைந்திருக்கின்றனர்.(17) அவர்கள் சற்றே வளர்ந்ததும் {யௌவனத்தில் / இளமையில்} அவர்களது புத்தி, புலனின்பத்தின்பால் கொண்ட ஈர்ப்பில் களங்கமடைகிறது. அந்நேரத்தில் அவர்கள், புலன்களை நிறைவடையச் செய்யப் பயன்படும் செல்வத்தை மேலும் மேலும் திரட்டுவதிலேயே எப்போதும் ஈடுபடுகின்றனர்.(18) புலன் நிறைவிலேயே முழுமையாக ஈடுபடும் அவர்கள், உயர்ந்த நன்மைக்காகச் செய்ய வேண்டியதைப் புரிந்து கொள்ள ஒருபோதும் முயல்வதில்லை. புலனின்பத்தில் முழுமையாக ஈர்க்கப்பட்ட மனத்தைக் கொண்டவனால், எது உயர்ந்த நன்மை என்பதையும், எது {நன்மை} இல்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியாது.(19)

அவர்கள் முதிரும்போது தங்களைப் பெருந்துன்பத்துக்குள்ளாக்கும் பல்வேறு பிணிகளின் கொள்ளிடங்களாகத் திகழ்கின்றனர். இருப்பினும் கட்டுப்பாடற்ற தங்கள் புலன்களின் கட்டுப்பாட்டில் உள்ள அவர்களால், தங்களுக்கான உயர்ந்த நன்மையை அடைய எது செய்யப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. இறந்த பிறகு அவர்கள் மலமும், ஜலமும் சூழ்ந்த ஓர் அன்னையின் கருவறைக்குள் மீண்டும் புகுந்து, தொடர்ச்சியாகப் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். அதன்பிறகு அவர்கள் அந்தப் பயங்கரக் கருவறையைவிட்டு வெளியேறி மீண்டும் பிறப்பு, இறப்பு என்ற சுழற்சிக்குள் நுழைகின்றனர்.(20-22)

அவர்கள் வாழ்ந்து வரும்போதும் பிறரைத் துன்புறுத்துவதன் மூலம் மேலும் மேலும் பாவங்களைத் திரட்டுகின்றனர். இவ்வாறே அவர்கள் மூவகைத் துன்பங்களைக் கொண்ட இவ்வுலகில் அறியாமையின் காரணமாகப் பாவச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.(23)

இருப்புக்கான {வாழ்க்கைக்கான} இந்த விளக்கம் பண்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட அனைவருக்கும் பொருந்தும். ஆயுதத்தின் மூலமோ, பிற கருவிகளின் மூலமோ இந்த இருப்பை விலக்குவது சாத்தியமில்லை. உடலை சுயமெனக் கருதுவோர் ஒருபோதும் இந்த இருப்புக்கு முடிவைக் கொண்டு வருவதில்லை.(24,25)

அத்தகைய மனிதர்கள், “நான் என் பகைவனைக் கொன்று, அவனுடைய செல்வங்கள் அனைத்தையும் அபகரிப்பேன். அவனுடைய செல்வத்தைக் கொள்ளையிட்டு அதை என் புலன் நிறைவுக்காகப் பயன்படுத்துவேன். அவன் பலவீனன், நானோ பலமிக்கவன். எனவே நான் பலவந்தமாக அவனது செல்வங்கள் அனைத்தையும் அபகரிப்பேன்” என்று நினைக்கிறார்கள். இத்தகைய எண்ணங்களில் ஈடுபடும் மூடர்களே எப்போதும் பிற உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கிறார்கள்.(26,27)

சங்கு, சக்கர, கதாதரனும், ஆதிதேவனும், புராணாத்மாவும், பிரம்மவாதிகள் அனைவரின் ஆத்மாவாகத் திகழ்பவனுமான ஹரியால் மட்டுமே, துன்பங்கள் அனைத்துக்கும் வேர்க்காரணமான இருப்பு எனும் வியாதிக்கான தீர்வை வழங்க முடியும்.(28) இதையறிந்தே நாம் ஹரியின் தரிசனத்தை வேண்டுகிறோம்” என்றன. அவ்விரு பிசாசுகளும் இவ்வாறு பேசிக்கொண்டே ஹரியின் {கிருஷ்ணனின்} முன்பு தோன்றின” {என்றார் வைசம்பாயனர்}.(29) 

கண்டாகர்ணன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 55-(கண்டாகர்ணக்ருதா விஷ்ணுஸ்தவப்ரார்தநா தஸ்ய ஸமாதிலாபம்)-பிசாசுகளிடம் பேசிய கிருஷ்ணன்; தன் வரலாற்றைச் சொன்ன பிசாசு; பிசாசான கண்டாகர்ணனின் விஷ்ணுஸ்தவப்ரார்த்தனை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},  “பகவான் விஷ்ணு {கிருஷ்ணன்}, இறைச்சி உண்பவர்களும், மஹாகோரமானவர்களும், கைகளில் தீப்பந்தங்களுடன் தன் முன் வந்தவர்களுமான அந்தப் பிசாசுகளைக் கண்டான்.(1) ஆசனத்தில் சுகமாக அமர்ந்திருந்த தேவகியின் மகனை {கிருஷ்ணனை} அந்தப் பிசாசுகள் இருவரும் கண்டனர். அவர்கள் கேசவனிடம் மெல்லச் சென்று பின்வருமாறு பேசினர்:(2,3) “சாதாரண மனிதனைப் போல் தோற்றமளிக்கும் நீ யார்? உன்னுடைய தந்தை யார்? நீ எங்கிருந்து வருகிறாய்? கோர மிருகங்கள் உலவும் இந்த வனத்திற்கு ஏன் வந்தாய்?(4) மனிதர்களற்றதும், சிறுத்தைகள் நிறைந்ததுமான இந்தக் காடு, பிசாசுகள், புலிகள் மற்றும் சீற்றமிக்கப் பிற விலங்குகளின் விளையாட்டுக் களமாகும்.(5) நீ இளைஞனாகத் தெரிகிறாய். உன் அங்கங்கள் யாவும் மிக அழகாக இருக்கின்றன. உண்மையில் நீ இரண்டாம் விஷ்ணுவைப் போலத் தோற்றமளிக்கிறாய். உன் நீண்டவிழிகள் தாமரை மலரைப் போல அழகாக இருக்கின்றன. உன் மேனி நிறம் கருப்பாக இருப்பதால் நீலோத்பல மலரைப் போலவும், ஸ்ரீபதியை {லட்சுமியின் கணவனைப்} போலவும் தெரிகிறாய்.(6) விஷ்ணுவே எங்கள் மீது கருணையுடன் இந்த வடிவில் வந்திருப்பதைப் போலத் தெரிகிறது. இந்த அடர்வனத்தில் தனியாக அமர்ந்து தியானம் பயின்று கொண்டிருக்கும் நீ தேவனா? யக்ஷனா, கந்தர்வனா? கின்னரனா? இந்திரனா? குபேரனா? யமனா? வருணனா?(7,8) ஓ! மதிப்புக்குரியவனே, மனிதனைப் போன்று தோற்றமளிப்பவனே, நாங்கள் உன்னை அறிய விரும்புவதால் எங்களிடம் உண்மையைச் சொல்வாயாக” {என்று கேட்டனர்}.

விஷ்ணு {கிருஷ்ணன்}, அந்தப் பிசாசுகளுக்கு மறுமொழி கூறும் வகையில்: “நான் யதுகுலத்தில் பிறந்த க்ஷத்திரியன். இவ்வுலகின் மக்கள் என்னை இவ்வாறே அறிகின்றனர்.(9,10) எனினும், உண்மையில் மூவுலகங்களையும் காப்பவன் நான். துஷ்டர்கள் அனைவரையும் வதம் செய்வதே என் பணி. இப்போது உமையின் கணவனான மஹாதேவனைக் காணக் கைலாச மலைக்குச் செல்ல விரும்புகிறேன்.(11) இதுவே என் விருத்தாந்தம். இனி நீங்கள் யார் என்பதை எனக்குச் சொல்லுங்கள். பிராமணர்களுக்கான இந்த ஆசிரமத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.(12) இது பதரிகாசிரமம் என்று அறியப்படும் மிகப் புனிதமான தலமாகும். இங்கே பிராமணர்கள் பலர் வசிக்கின்றனர். தீயவர்களுக்கு இங்கே அனுமதியில்லை. இங்கே சித்தர்கள் எப்போதும் வசித்துத் தவம் பயின்று வருகின்றனர். இன்று காண்பது போல இங்கே நாய்க்கூட்டங்களையோ, ஊனுண்ணும் பிசாசுகளையோ நான் என்றும் கண்டதில்லை.(13,14)

இங்கே வேட்டை அனுமதிக்கப்படவில்லை என்பதால் மான்களைக் கொல்லக்கூடாது. முரட்டுக் குணம் கொண்ட நன்றிகெட்டவர்களும், நாத்திகர்களும் இந்தப் புனிதத்தலத்திற்குள் நுழைவதை நினைக்கவும் கூடாது.(15) இந்தப் புனிதத்தலத்தைக் காப்பவன் நான். இதில் ஐயமேதும் இல்லை. என் ஆணையை மீறத் துணிபவர்களை நான் தண்டிப்பேன்.(16) நீங்கள் யார்? எங்கே வாழ்கிறீர்கள்? இவர்கள் யாருடைய படைவீரர்கள்? இந்த நாய்க்கூட்டம் யாருடையது?(17) இங்கே தவம் செய்து வரும் பல முனிவர்களுக்கு இடைஞ்சல் விளைவிப்பீர்கள் என்பதால் உங்களை இந்த வனத்திற்குள் இதற்கு மேலும் அனுமதிக்க முடியாது.(18) என் வாக்கியத்தை மதித்து என் கேள்விகளுக்குப் பதிலளிப்பீராக; மாறாக நடந்தால் என்னுடைய பேராற்றலால் உங்களை நான் தடுப்பேன்” என்றான் {கிருஷ்ணன்}”.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இவ்வாறு கேட்கப்பட்ட பிசாசுகள் தங்கள் கதையைச் சொல்லத் தொடங்கின.(19) மஹாகோரமான இரண்டு பிசாசுகளில் ஒருவன் வலிமைமிக்கவனாகவும், ஒப்பற்ற கர வலிமை கொண்டவனாகவும் இருந்தான். அவனே தன் மனத்தில் இருந்ததை வெளிப்படுத்தத் தொடங்கினான்.(20)

அந்தப் பிசாசானவன், “நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக. ஜகந்நாதனும், பிறப்பற்றவனும், உயர்ந்தவனும், பாவமற்றவனும், தூயவனும், பாவங்களை அழிப்பவனும், ஆதிதேவனும், உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவனும், நித்தியனும், அறிவாலும், அருளாலும் நிறைந்தவனும் ஜகத்பதியுமான விஷ்ணுவை நான் வணங்குகிறேன். எங்களைக் குறித்து நீ அறிய விரும்பினால் என் கதையைக் கேட்பாயாக.(21,22)

நான் கண்டாகர்ணன் என்ற பெயருடைய பிசாசு ஆவேன். என்னைப் பார்ப்பதே மங்கலமற்ற நிலையைக் கொடுக்கும். நான் சிதைந்த முகத்துடன் கூடியவனாகவும், மாமிசம் உண்பவனாகவும் இருக்கிறேன். எனவே இரண்டாம் மிருத்யுவைப் போலக் காணப் பயங்கரனாக இருக்கிறேன்.(23) நான் ருத்ரனின் அன்புக்குரிய நண்பரான தனஸ்யரின் {குபேரனின்} தொண்டனாவேன்[1]. அந்தகனைப் போலத் தெரியும் இவன் என் தம்பியாவான்.(24) நாங்கள் விஷ்ணுவை வழிபடும் நோக்கத்துடன் வேட்டையாடியபடியே இங்கே வந்தோம். இந்தப் படை என்னுடையதே, இந்த நாய்களும் என்னுடையவையே.(25) மஹாசைலமும், பல பூதங்களால் தொண்டாற்றப்படுவதுமான கைலாச மலையில் இருந்து நான் இங்கே வந்தேன். நான் பிசாசு உடலுக்குள் இருக்கும் பெரும்பாவி ஆவேன்.(26)முற்காலத்தில் விஷ்ணுவை அவதூறு செய்யும் வழக்கத்தை நான் கொண்டிருந்தேன். உண்மையில் விஷ்ணுவின் புனிதப்பெயர் காதுகளில் நுழைந்துவிடாதபடிக்கு பெரிய மணிகளை {கண்டங்களை} என் காதுகளில் {கர்ணங்களில்} அணிந்திருந்தேன். இதில் நான் எவ்வளவு தீவிரமாக இருந்தேன் என்பதை இதன்மூலம் நீ அறிந்து கொள்ளலாம்.(27)

ஒரு நாள் நான் கைலாச மலைக்குச் சென்று ரிஷபத்வஜனான சிவனை வழிபட்டேன். அப்போதிலிருந்து அந்த மஹாதேவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.(28) என்னுடைய வழிபாட்டில் நிறைவடைந்த ஹரன் {சிவன்} என்னிடம், “நீ ஒரு வரத்தை என்னிடம் கேட்பாயாக” என்றான். நான் அவனிடம் முக்தியை வேண்டினேன்.(29)

என் வேண்டுகோளைக் கேட்ட அந்தத் திரிலோசனன் {முக்கண்ணன் சிவன்}, “உயிரினங்கள் அனைத்திற்கும் முக்தியை அளிக்கவல்லவன் விஷ்ணுவே என்பதில் ஐயமில்லை.(30) எனவே நீ பதரிகாசிரமத்திற்குச் செல்வாயாக. நரநாராயண ரிஷிகளின் ஆசிரமத்தில் கோவிந்தன் என்று அறியப்படும் அந்த ஜனார்த்தனனை நீ வழிபட்டால், நிச்சயம் அவன் உனக்கு முக்தியை அளிப்பான்” என்றான்.(31)

சூலதாரியான அந்தத் தேவதேவன் {சிவன்} இவ்வாறு சொன்னதும், கருடத்வஜனான கோவிந்தனின் பரம மகிமையை நான் அறிந்து கொண்டேன்.(32) அவனிடம் முக்தியை வேண்டும் விருப்பத்திலேயே நான் இங்கே வந்திருக்கிறேன். உனக்கு விருப்பமிருந்தால் என் கதையைத் தொடர்கிறேன் கேட்பாயாக.(33)

யது விருஷ்ணி குலங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் மேற்குக் கடற்கரையில் துவாராவதி என்ற புகழ்பெற்ற நகரம் இருக்கிறது. அந்த நகரம் அனைத்துப் பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டிருக்கிறது. தற்போது ஹரி அங்கேயே வசித்து வருகிறான்.(34) ஓ! தலைவா, உலகின் நன்மைக்காகத் துவாரகையில் வசித்து வருபவனும், ஹரியும், விஷ்ணுவுமான அந்தப் புருஷோத்தமனைச் சந்திக்கவே எங்கள் தொண்டர்களுடன் நாங்கள் வந்திருக்கிறோம். உயிரினங்கள் அனைத்தின் தலைவனான {சர்வேஸ்வரனான} விஷ்ணுவை இன்று முகத்திற்கு நேராகச் சந்திப்போம் என நாங்கள் நம்புகிறோம்.(35,36) அனைத்தும் வெளிப்பட்டதன் உண்மைக் காரணன் அந்த ஹரியே. அண்டத்தைப் படைத்தவனும், காப்பவனும், அழிப்பவனுமான அவனே அனைத்தையும் கட்டுப்படுத்துகிறான். ஜகத்பதியான அவனே உண்மையில் உயர்ந்த தேவனாவான்.(37)

மொத்த அண்டத்தின் உரிமையாளனும், ஆதி தேவனும், புராதனனும், தூய நல்லியல்பின் வடிவமும், வரங்களை அருள்பவனும், வழிபடத்தகுந்தவனுமான அந்த ஹரியை தரிசிக்கும் நம்பிக்கையுடனே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்.(38) எவனுடைய அருளால் பல்வேறு உயிரினங்களும், கந்தர்வர்களும், பாம்புகளும் வசித்திருக்கும் இவ்வுலகம் இருப்புக்குள் வந்ததோ அந்த ஜனார்த்தனனைக் காணவே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். படைப்பின் உண்மைக் காரணனாக இருப்பினும் அவன் காரணமேதும் இல்லாதவனாகவும், பிறப்பற்றவனாகவும் இருக்கிறான்.(39)

ஒவ்வொரு கல்பத்தின் தொடக்கத்திலும் இந்த அண்டம், முந்தைய கல்பத்தின் முடிவில் கலந்த புருஷோத்தமனின் குடலுக்குள் இருந்து வெளிப்படுகிறது. அண்டம் வெளிப்பட்டதும், நாம் இப்போது காண விரும்பும் பிரபுவால் காக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகிறது.(40) அவனே அண்டம் வெளிப்பட உண்மைக் காரணனும், அண்டத்தைக் காத்து அழிப்பவனும், நித்தியமானவனும், அழிவற்ற ஆதி தேவனும், அண்டத்தின் தலைவனும் ஆவான்.(41)

சுயம்புவான பிரம்மனைப் படைத்தவன் தலைவன் ஹரியே, விஷ்ணு வடிவாக இருக்கும் அண்டத்தைப் பாதுகாப்பவனும் அவனே. யோக ஆசானும், தன் பக்தர்களுக்குத் தூய புத்தியை அருள்பவனுமான அந்த ஹரியை நாங்கள் சந்திப்போம் என நம்புகிறோம். எங்கள் மனங்கள் இப்போது அவனிடமே நிலைத்திருக்கின்றன.(42) அழிவேற்படும் காலத்தில் மூவுலகங்களின் உறைவிடமாகத் திகழும் ஹரி மொத்த அண்ட வெளிப்பாட்டையும் தன் உடலுக்குள் இழுத்துக் கொள்கிறான். பிறகு அவன் ஒரு குழந்தையைப் போலக் கைகளையும், கால்களையும் அசைத்துக் கொண்டு ஆலிலையில் வெளிப்படுகிறான்.(43)

புராதன முனிவரான மார்க்கண்டேயர் அந்தத் தலைவனின் வயிற்றுக்குள் நுழைந்து அவனுடைய அருளால் மொத்த படைப்பையும் அங்கே கண்டார். அவர் மொத்த அண்டத்தையும் வெளியே கண்டதுபோலவே, அந்தத் தலைவனின் வயிற்றுக்குள்ளும் கண்டார்.(44) பழங்காலத்தில் அந்தப் பரமாத்மா மொத்த அண்டத்தையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டு, அந்த அழிவில் உண்டான நீரில் கிடந்திருந்தான். அந்நேரத்தில் ஸ்ரீதேவி கையில் சாமரத்துடன் அவனுக்குத் தொண்டாற்றினாள்.(45)

படைப்பின் தொடக்கத்தில் தலைவனின் நாபியில் இருந்து ஒரு பொற்தாமரை மலர் உதித்தது. அழகிய இதழ்களைக் கொண்ட அந்த அண்டத் தாமரையே அண்டத்தின் ஆன்ம குருவான பிரம்மனின் பிறப்பிடமாகத் திகழ்ந்தது.(46) பழங்காலத்தில் பன்றியின் வடிவை ஏற்ற அந்தப் பரமனைக் காண நாங்கள் ஆவலாக இருக்கிறோம். பெரும் முனிவர்களால் துதிக்கப்பட்ட அவன், புயல் மேகங்களைப் போலக் கர்ஜித்துக் கொண்டு நீருக்குள் இருந்த பூமியைத் தன் தந்தங்களால் காத்தான். பிரபுவும், புராதனனும், புருஷோத்தமனுமான அந்த ஹரியே சாட்சியாகவும், வேள்வியின் வடிவமாகவும், படைப்பைக் காக்கும் வேள்வியின் தலைவனாகவும் இருக்கிறான்.(47,48)

சில பக்தர்கள், இந்திரனின் தலைமையிலான தேவர்களின் பல்வேறு வடிவங்களிலும் விஷ்ணுவைக் கண்டு அந்தப் புறவடிவத்தையே வழிபடுகின்றனர். வேதாந்தத்தால் உறுதிசெய்யப்படும் அத்வைதப் பொருளாலான உடலைக் கொண்ட அந்தத் தேவனைக் காணவே நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்.(49) பல்வேறு வகைகளில் விளக்கப்படுபவனும், ஸ்ருதிகள், ஸ்மிருதிகள், தர்க்கம் தொடர்புடைய கல்விமான்கள் பலரால் பல்வேறு வடிவங்களைக் கொண்டவனாகச் சொல்லப்படுபவனும், புராணங்களை அறிந்தவர்களால் அகத்தில் வசிக்கும் பரமாத்மாவாக அறியப்படுபவனுமான அந்தத் தலைவனைக் காண நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்.(50) வழிபாட்டின் முக்கியப் பொருளாகவும், வரங்களை அளிப்பவர்களில் சிறந்தவனாகவும், அதிகம் நாடப்படுபவனாகவும், பிறப்பற்றவனாகவும், நீக்கமற நிறைந்திருப்பவனாகவும், முற்றான உண்மையாகவுமான அந்த ஜனார்த்தனனை புராதன முனிவர்கள்  துதிக்கின்றனர்.(51)

சரத்தில் கோர்க்கப்படும் முத்துகளைப் போலவே அண்டங்கள் அனைத்தும் அவனையே சார்ந்திருக்கின்றன. அந்த விஷ்ணுவைக் காண நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம். வேறென்ன சொல்ல?(52) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, இப்போது நாங்கள் செல்கிறோம், நீயும் விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக.(53) இப்போது நடு இரவாகிவிட்டது. நான் என் அறச்சடங்குகளைச் செய்யும் நேரமாகிவிட்டது. இன்னும் சொல்வதற்கு வேறேதும் இல்லை” {என்றான் கண்டகர்ணன்}.

சிதைந்த முகத்தைக் கொண்டவனும், அச்சுறுத்தும் தோற்றம் கொண்டவனுமான அந்தப் பிசாசானவன் இவ்வாறு சொல்லிவிட்டு அவனது {கிருஷ்ணனின்} முன்னிலையிலேயே குருதி பருகி, இறைச்சியுமுண்டான்.(54,55) பிறகு அவன், தன் கைகளைக் கழுவிக் கொண்டு, குடல்களால் அமைந்த பெருங்கயிற்றை அருகில் வைத்துக் கொண்டு தான் செய்யும் சாதனைக்குத் தேவையான பொருட்களை எடுத்தான். அவன் குசப்புல்லாலான பாயைத் தரையில் வைத்து, நீர் தெளித்து அதைத் தூய்மை செய்தான். பிறகு அவன் நாய்கள் அனைத்தையும் விரட்டிவிட்டு அமைதியாக அமர்ந்து சமாதியில் தன் மனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டான். பக்தர்களிடம் எப்போதும் அன்புடன் இருக்கும் கேசவனை அவன் முதலில் வணங்கினான். பிறகு பல்வேறு மந்திரங்களை உள்ளடக்கிய பின் வரும் {விஷ்ணுஸ்தவப்ரார்த்தனை என்ற} துதியைக் குவிந்த மனத்துடன் ஓதினான்.(56-58)

சக்கரபாணியான வாசுதேவா, நான் உன்னைப் பணிந்து வணங்குகிறேன். ஓ! கதாதரா, உயிரினங்கள் அனைத்தின் இதயங்களிலும் வசிக்கும் உன்னை நான் வணங்குகிறேன்.(59) ஓம். பேராற்றல்வாய்ந்தவனும், நீக்கமற நிறைந்தவனும், நித்தியமானவனும், ஞானமும் அருளும் நிறைந்தவனுமான நாராயணா நான் உன்னை வணங்குகிறேன். ஓ! கேசவா, என் மனம் உன் மகிமையால் தூய்மையடையட்டும்.(60) ஓ! புலன்களின் தலைவா, நாராயணா, இந்தத் துன்ப நிலையில் இருந்து என்னைக் காப்பாயாக. உன் அருளால் நான் தேவர்களின் தொண்டனாவேனாக.(61) {புலன்நுகர்} பொருள் பற்றில் மீண்டும் நான் சிக்காமல் இருக்க உன் சக்கரத்தால் என்னுடல் துண்டு துண்டாக வெட்டப்படப் பிரார்த்திக்கிறேன்.(62) பொருளற்றவனுக்குக் கற்பக மரம் {கல்பவிருக்ஷம்} நீயே. ஓ! தேவர்களின் தலைவா, தயாளன் நீயே. நான் எங்குப் பிறந்தாலும் என் இதயத்தில் நீ இருக்கப் பிரார்த்திக்கிறேன். ஓ! உயர்ந்த தேவா, நான் உன்னை வணங்குகிறேன். நான் எப்போதும் உன்னைத் துதித்திருப்பேனாக. நான் இறக்கும்போது என் மனம் {புலன்நுகர்} பொருள் பற்றில் மயங்காதிருக்கட்டும். ஓ தேவா, ஒவ்வொரு கணத்திலும் என் மனம் உன்னிலேயே நிலைத்திருக்கட்டும். என் இதயத்தை இவ்வாறே எப்போதும் தூண்டுவாயாக. “இவன் கொடூரன், இவன் பிசாசு, எனவே என் கருணைக்குத் தகாதவன்” என்று ஒருபோதும் நினையாதே. “வீழ்ந்த ஆத்மாவான இவன் என் சேவகன்” என்றே என்னைக் கருதுவாயாக. ஓ! பிரபுவே, பகவானே, நான் உன்னை வணங்குகிறேன். நான் பிறருக்குத் துன்பம் இழைக்காத வகையிலும், என் புலன்கள் வெறும் பொருளில் திருப்தியடையும் இழிநிலையில் ஒருபோதும் வீழாத வகையிலும் என்னிடம் கருணை கொள்வாயாக.(63-68) கேசவா, மரணக் காலத்தில் உன் கருணையால் என் மனம் உன்னில் நிலைத்திருக்கட்டும். பூமி என் மூக்கை ஏற்கட்டும், நீர் என் நாவை ஏற்கட்டும், சூரியன் என் கண்களை ஏற்கட்டும், காற்று என் தோலை ஏற்கட்டும், வானம் என் காதுகளை ஏற்கட்டும், சந்திரன் என் உயிர்க் காற்றையும் {மூச்சையும்}, மனத்தையும் ஏற்கட்டும்.(69,70) ஓ! ஹரியே, தண்ணீர் எப்போதும் என்னைப் பாதுகாக்கட்டும், பூமி எப்போதும் என்னைப் பாதுகாக்கட்டும், சூரியன் எப்போதும் என்னைப் பாதுகாக்கட்டும். விஷ்ணுவே, நீ சூரியனைப் போல வலிமைமிக்கவன். நான் உன்னை வணங்குகிறேன்.(71) ஓ! ஜனார்த்தனா, காற்றும், ஆகாயமும் என்னைத் துன்பத்தில் இருந்து காக்கட்டும். நானாக இருக்கும் என் மனம், {புலன்நுகர்} பொருள் இன்ப நினைவுகளில் திரும்பாமல் பரமாத்மாவில் நிலைத்திருக்கட்டும்.(72) புலன்நுகர் பொருட்களின் இன்ப நினைவுகளில் மனம் சிக்கினால் அஃது ஒருவனின் புண்ணியங்களை மட்டும் அழிக்காமல், பிறருக்கு துன்பத்தையும் விளைவிக்கும்.(73) ஓ! ஜனார்த்தனா, எப்போதும் என் மனத்தைப் பாதுகாப்பாயாக. எப்போதும் என் மனம் களங்கமடையாமல் தூய்மையாக இருக்கட்டும்.(74)

தூய்மையற்ற மனம் ஒருவனை நரகத்திற்கு இட்டுச் செல்லும். மனம் தூய்மையாக இருக்கும்போது, புறப்புலன்கள் தாமாகத் தூய்மையடைகின்றன, மனம் களங்கமடையும்போதோ, புலன்களும் தூய்மையற்ற பணிகளில் ஈடுபடுகின்றன. ஓ! கேசவா, மனக்களங்கத்தைத் தூய்மைப்படுத்தாமல், புறவுடலை மட்டும் கழுவுவதால் எவனும் அடையப்போவதென்ன? தன்னைத் தூய்மையாக்கிக் கொள்ளும் அவனது முயற்சி அற்பமானதே.(75,77) எனவே, ஓ! ஜனார்த்தனா, என் மனத்தைப் பாதுகாப்பாயாக. புலன்கள் வலிமைமிக்கவை என்பதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் எனக்கு உதவி செய்வாயாக.(78) ஓ! ஜகந்நாதா, பிறரை விமர்சிக்க என் சொற்களை அனுமதியாதே. பிறரின் செல்வத்திலும், மனைவிகளிடமும் பற்றுக் கொள்ள என் மனத்தை அனுமதியாதே. ஓ! கேசவா, அனைத்து உயிரினங்களிடமும் என் மனத்தில் கருணை உண்டாக அருள் செய்வாயாக.(79) உன்னிடம் ஓயாத பற்றையும், உயிரினங்கள் அனைத்திடமும் கருணையையும் வளர்ப்பேனாக. இதற்கு மேலும் சொல்லி என்ன பயன்? என் வேண்டுதலைக் கேட்பாயாக.(80) ஓ! தேவேசா, ஜனார்த்தனா, இன்பத்திலும், துன்பத்திலும், கோபத்திலும், உண்ணும்போதும், நடக்கும்போதும், விழித்திருக்கும்போதும், கனவிலும் என் மனம் எப்போதும் உன்னில் இன்புற்றிருக்கட்டும். நான் உன்னை வணங்குகிறேன்” {என்றான் கண்டாகர்ணன்}[2].முன்னர்த் தாழ்ந்த குலத்தில் பிறந்த அந்தப் பயங்கரப் பிசாசானவன் இவ்வாறு சொன்னபடியே சமாதியில் ஆழ்ந்தான். உண்மையில் அவன் தேவனின் பரம பக்தனாகி அவனைச் சரணமடைந்தான். மாமிசமுண்ணும் அந்தப் பிசாசானவன், குடல்களாலான கயிறுகளில் தன் உடலைக் கட்டி, மனத்தைக் கவனமாகக் கட்டுப்படுத்தி அமர்ந்தவாறே, பீதாம்பரம் உடுத்துபவனும், அண்ட வெளிப்பாட்டின் பிறப்பிடமும் {ஜகத்யோனியும்} மங்கலனுமான விஷ்ணுவைத் தியானிக்கத் தொடங்கினான்.(81-84)

ஆதிபுருஷனும், தன்னைப் போல் வேறொருவன் இல்லாதவனும், தூய்மையின் கொள்ளிடமும், அறிவை விளைவிக்கும் பொருளும், அனைத்து உயிரினங்களின் குருவுமான முகுந்தனிடம் {கிருஷ்ணனிடம்} அவன் தன் மனத்தை நிலைநிறுத்தினான்.(85) அவன் தன் மூக்கின் நுனியில் தன் கண்களை நிலைநிறுத்தி, ஓம் எனும் புனித அக்ஷரத்தை ஓதி, காற்றில்லாத இடத்தில் உள்ள விளக்கைப் போல மனத்தில் உறுதியடைந்தான்.(86) ஓம் எனும் பிரணவ வசனத்தையே பிரம்மமாகக் கருதி முழுமையாக விஷ்ணுவில் மனத்தைக் குவித்தான். தியானம் பயின்றதன் மூலம் அவன் தன் அலைபாயாத மனத்தைத் தாமரை போன்ற தன் இதயத்தில் நிலைநிறுத்தினான். பெரும் யோகியும், மாமிசம் உண்பவனுமான அந்தப் பிசாசானவன் {கண்டாகர்ணன்}, தாமரை போன்ற தன் இதயத்தில் அண்டத்தின் தலைவனை நிலைநிறுத்தியபிறகு அமைதியாக அமர்ந்து விஷ்ணுவைத் தியானிக்கத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(87-89) 

விஷ்ணு தரிசனம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 56-(கண்டாகர்ணஸ்ய விஷ்ணுஸாக்ஷாத்காரலாபம்)-கண்டாகர்ணனுக்குத் தரிசனம் தந்த விஷ்ணு; கண்டாகர்ணனின் சிந்தனை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},   “பகவான் விஷ்ணு {கிருஷ்ணன்}, தன்னையே ஆன்மாவாகவும், உயிராகவும் தூய புத்தியில் கருதி, தன்னையே தியானித்துக் கொண்டிருந்த அந்தப் பிசாசைக் கண்டான்.(1) ஹரியின் புனிதப் பெயர்களின் முன் பிரணவத்தை {ஓம் எனும் மந்திரத்தை} இட்டு ஒவ்வொரு பெயராக அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் தன் விருப்பம் நிறைவேற தன் இதயத்தில் பிரார்த்தித்தான். இறுதியில் கண்டாகர்ணன் தன் தியானத்தில் ஹரியைக் கண்டான்.(2)

ஜகந்நாதன் {கிருஷ்ணன்}, “இந்தப் பிசாசானவன் எவ்வாறு இவ்வளவு நல்லவானக இருக்கிறான்” என்று சிந்தித்தான். நீண்ட காலம் இவ்வாறு சிந்தித்துப் பின்வரும் தீர்மானத்தை அடைந்தான்.(3) ‘தனதஸ்யனுடைய {குபேரனுடைய} உபதேசத்தின் பேரில் இவன் என் பெயர்களை, “வாசுதேவா, கிருஷ்ணா, மாதவா,(4) ஜனார்த்தனா, ஹரியே, விஷ்ணுவே, பூதபாவனபாவனா, நராகாரா, ஜகந்நாதா, நாராயாணா, பராயணா” என்ற என்னுடைய பெயர்கள் பலவற்றைச் சொல்லி வருகிறான்.(5) மேலும் இவன் நித்தம் இரவும் பகலும் என் பெயர்களைச் சொல்லிவருகிறான். உறங்கும்போதும், விழித்திருக்கும்போதும், நிற்கும்போதும், உண்ணும்போதும், பருகும்போதும், நடக்கும்போதும், பேசும்போதும் இவன் இந்தப் பெயர்களையே தொடர்ந்து சொல்லிவருகிறான்.(6) மாமிசம் உண்ணும்போதும், குருதி பருகும்போதும் இவன் என் பெயர்களையே சொல்கிறான். எண்ணற்ற உயிரினங்களைக் கொல்லும்போதும், இடையறாமல் மான்களைக் கொல்லும்போதும்,(7) கொலை செய்வது, உண்பது, உறங்குவது என எந்தக் காரியத்தைச் செய்யும்போதும் இவன் என்னையே கர்த்தனாக ஏற்கிறான்.(8) இதன்காரணமாக இவனது பாவச்செயல்கள் செல்லாதவை ஆகின்றன” என்று சிந்தித்தான் அந்த ஜகந்நாதன்.

ஓ! மன்னா, இந்தத் தீர்மானத்தை அடைந்த அந்த ஜகத்பதி, தன் பக்தனான அந்தப் பிசாசிடம் மகிழ்ந்து, அவனுடைய தூய்மையான இதயத்திற்குள் வெளிப்பட்டான்.(9,10) இவ்வாறே அந்தக் கோர பிசாசானவன், பாவங்கள் அனைத்தையும் அழிப்பவனான கேசவனை, பீதாம்பரம் உடுத்தியவனாகத் தன் இதயத்திற்குள் கண்டான். அந்த ஹரியின் நிறம் கருப்பாக இருந்தது, அவனது கண்கள் மலரும் தாமரை மலர்களைப் போல இருந்தன.(11) அந்த விஷ்ணுவின் கரங்கள் சங்கு, சக்கர, கதாயுதம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காட்டு மலர் மாலை அவனது கழுத்தைச் சுற்றிலும் தொங்கிக் கொண்டிருந்தது. தலையில் கிரீடத்துடனும், மார்பில் கௌஸ்துப மணியுடனும், ஸ்ரீவத்சக் குறிகளுடனும் அவன் இருந்தான்.(12)

அவனுடைய நிறம் நீல மேகம் போலக் கருப்பாக மயக்கும் வகையில் இருந்தது. அவன் பிரபஞ்சத்தில் உள்ள அச்சங்கள் அனைத்தையும் விலக்குபவனாகக் கருடனின் முதுகில் அமர்ந்திருந்தான். அவன் நான்கு கைகளைக் கொண்டிருந்தான். அவனது ஒலி மங்கலமானதாக இருந்தது. நீக்கமற நிறைந்த அந்த மங்கலத் தலைவன் அசைவின்றி இருந்தான்.(13) அவன் ஆதியும், அந்தமும் அற்றவனாக இருந்தான். அவன் நிதானனாகவும், நித்தியனாகவும் இருந்தான். முற்றான சத்தியனாகவும், எப்போதும் தூயனாகவும், தூய புத்தியால் புரிந்து கொள்ளப்படக் கூடியவனாகவும், மலத்திலிருந்து {களங்கங்களிலிருந்து} எப்போதும் விடுபட்டவனாகவும் இருந்தான்.(14) இவ்வாறே அவன் {கண்டாகர்ணன்}, தன் இதயத்திற்குள் வெளிப்பட்ட விஷ்ணுவைத் தரிசித்தான். மூடிய கண்களுடன் அமர்ந்திருந்த அவன், தன்னை நற்பேறு பெற்றவனாகக் கருதினான்.(15)

{கண்டாகர்ணன்}, “அந்த ஹரிவிஷ்ணு தன் தரிசனத்தை எனக்கு அருளினான். இவ்வாறே அவனைக் காணமுடியும். நிச்சயம் அவன் என்னிடம் நிறைவடைந்திருக்கிறான்.(16) என் வாழ்வின் இலக்குச் சித்தியடைந்தது {நான் ஜீவமுக்தனானேன் / வாழும்போதே முக்தியடைந்தவன் ஆனேன்}. இதைவிட எனக்கு முக்கியமானது வேறென்ன இருக்க முடியும்? என் அறியாமை அகன்றது. என் இந்திரியங்களும் எனக்கு வசப்பட்டன.(17) நான் என் மனத்தை வென்றதாலேயே ஹரி என்னை நினைத்திருக்கிறான். மூவகை ஆசைகளும் விலகியதால் நான் முழுமையாக நிறைவடைந்திருக்கிறேன்.(18) எனக்குப் பிசாசுகளுடனான உறவு இப்போது முடிந்தது. என் தம்பியும் ஹரி பக்தன் என்பதால், அவனும் உரிய காலத்தில் ஸாயுஜ்ய முக்தியை அடைவான் {இறையுடன் இரண்டறக்கலப்பான்}” {என்று நினைத்தான்}.

இவ்வாறு சிந்தித்த அந்தப் பிசாசானவன் {கண்டாகர்ணன்} தன் உடலில் இருந்து குடல்கயிறுகளை அறுத்துப் பேரின்பக்கடலில் மூழ்குவதற்காகத் தன் உயிர் காற்றை {பிராணனை} விடுவித்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(19-21) 

விஷ்ணுஸ்தவம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 57-(கண்டாகர்ணக்ருதோ விஷ்ணுஸ்தவம்)தன் முன் அமர்ந்திருக்கும் ஜகத்பதியான விஷ்ணுவைக் கண்டு துதித்து விஷ்ணுஸ்தவத் துதியைச் சொன்ன கண்டாகர்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},   “அந்தப் பிசாசானவன் {கண்டாகர்ணன்} தியானத்தில் கண்ட ஜகத்குருவே, இப்போது தன்னெதிரில் ஜனார்த்தனனாக அமர்ந்திருப்பதைக் கண்டான்.(1) அப்போது அந்தப் பிசாசானவன், “இதோ விஷ்ணு. இதே வடிவத்தையே இவன் என் தியானத்தில் வெளிப்படுத்தினான்” என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் சிரித்துக் கூத்தாடினான்.(2)

பிறகு அவன் {கண்டாகர்ணன்}, “சக்கரம், சரங்கள், சாரங்க தனு {வில்}, கதாயுதம் ஆகியவற்றைத் தரித்தவனும், அழகிய கொடியால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்திருப்பவனும், ஆயிரந்தலைகளைக் கொண்டவனும், தேவர்களின் தலைவனும், மூவுலகங்களின் புகலிடமும், அண்டத்தைப் படைத்தவனுமான ஹரி இவனே.(3) எப்போதும் வெல்பவனும் {ஜிஷ்ணுவும்}, அண்டத்தின் தலைவனும் {ஜகந்நாதனும்}, புராணனும், அண்டத்தின் ஆன்மாவும், வெளிப்பட்டிருக்கும் இந்த அண்டத்தின் படைப்பாளனுமான விஷ்ணு இவனே.(4) இதோ ஹரிதேவனின் மார்பில் கௌஸ்துப ரத்தினம் மிளிர்கிறது. முழு நிலவால் ஒளியூட்டப்படும் ராத்திரியைப் போலவே இந்த அண்டமும் இவனால் ஒளியூட்டப்படுகிறது.(5)

{கார்போடகக் கடலில்} ஜலத்தின் அடியிலிருந்து பிருத்வியைத் தன் தந்தங்களில் உயர்த்தி உரிய இடத்தில் நிலைநிறுத்திய வராஹன் இவனே. சாக்ஷாத் ஹரி இவனே.(6) வலிமைமிக்கவனும், தானவர்களின் மன்னனுமான பலியை பலவந்தமாகக் கட்டிப்போட்டு, இந்திரனிடம் மூவுலகங்களையும் திருப்பி அளித்த வாமனன் இவனே. அந்நேரத்தில் பெரும் முனிவர்களால் துதிக்கப்பட்டவன் இந்த ஹரியே.(7) கோரப்பற்களையுடைய நரசிம்மனாக அவதரித்து தானவர்களைக் கொன்று ஓலத்திலிருந்து அண்டத்தை விடுவித்தவன் இந்த ஜனார்த்தனனே.(8) ஆதிகாலத்தில் மந்தர மலையை ஒரு கையில் பிடித்து, பெருங்கடலின் கரையில் தானவர்கள் அனைவரையும் வீழ்த்திய அந்த மஹாவிஷ்ணுவே இப்போது என் முன் இருக்கிறான்.(9) அண்டம் அழிந்ததும் லக்ஷ்மி தேவியுடன் அநந்த சேஷ படுக்கையில் கிடந்து, மது, கைடபன் என்ற வலிமைமிக்க தானவர்கள் இருவரைக் கொன்றவன் இந்த ஹரியே.(10)

அனைத்தின் பிறப்பிடம், ஜகத்பதி, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவன், பிறப்பற்றவன், அனைவரின் ஐயன், அணுவைவிடச் சிறியவன், பெரிதிலும் பெரியவன் என்றெல்லாம் தேவர்களால் துதிக்கப்படுபவன் இந்த விஷ்ணுவே.(11) அழிவிற்குப் பின் மொத்த படைப்பும் எவனில் கரையுமோ, படைப்பின் தொடக்கத்தில் எவனிடமிருந்து அது {மொத்த படைப்பும்} வெளிப்படுமோ அந்த விஷ்ணுவே இப்போது என் முன் இருக்கிறான்.(12) எவனுடைய விருப்பத்தினால் மூவுலகங்களும் தங்கள் கடமைகளில் ஈடுபடுமோ அந்த மங்கலவிஷ்ணுவும் யாதவேஷ்வரனும், புருஷோத்தமனுமான இந்த ஜனார்த்தனனும் ஒருவனே.(13)

மிருகவியாதன் என்ற பெயரில் ருத்ரனின் சீடனாகி, ஆயிரங்கரங்களைக் கொண்ட கார்த்தவீரியார்ஜுனனைப் பெரும்போரில் கொன்று, அவனது யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றையும், படைவீரர்களையும் தம் கோடரியால் அழித்து, குருக்ஷேத்திரம் சென்று தம் முன்னோர்களுக்குச் சிராத்தம் செய்து, இருபத்தோரு முறை உலகை க்ஷத்திரியர்களற்றதாக்கிய அந்தப் பிருகுவம்சத்து ஜமதக்னேயரே {ஜமதக்னியின் மகனான பரசுராமரே} இப்போது என் முன் இருக்கிறார்.(14-16) ரகு குலத்தில், ராமன் என்ற பெயரில் பிறந்து, ஸ்ரீதேவியான சீதையை மணந்து, எப்போதும் தம்பி லக்ஷ்மணனின் துணையுடன் கூடியவனாக, கடலில் பாலம் அமைத்து, தன் கணைகளால் ராக்ஷசாதிபதியை {ராவணனைக்} கொன்று, அந்த ராஜ்ஜியத்தை விபீஷணனுக்கு அளித்து, பத்து அஷ்வமேத யாகங்களைச் செய்த ஜனார்த்தனனே இப்போது என் முன் இருக்கிறான்.(17,18)

வசுதேவன் குலத்தில் பிறந்து, வாசுதேவன் என்று அறியப்பட்டு, கோகுலத்தில் குழந்தைப் பருவத்தைக் கழித்து, எப்போதும் அண்ணன் பலராமனின் துணையுடன் இருந்தவனும் இந்த ஹரியே.(19) குழந்தையாகப் படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கையில் கொல்ல வந்த பூதனையின் நஞ்சு பூசிய முலைப்பால் பருகி அவளது உயிரையும் உறிஞ்சியெடுத்து அமைதியாகப் படுக்கையில் கிடந்தவன் இவனே.(20) சற்றே வளர்ந்ததும், வெண்ணெய்யையும், தயிரையும் எடுத்து மறைந்திருந்து உண்டவன் இவனே. கோபமடைந்த அன்னை யசோதை இவனது இடையில் கயிற்றைக் கட்டினாள்.(21) அன்னையால் உரலில் இறுக்கமாகக் கட்டப்பட்டு, அந்த உரலையும் இழுத்துச் சென்று அர்ஜுன மரங்கள் இரண்டை வேரோடு பிடுங்கிய அந்த தாமோதரன் இவனே. கோகுலத்தில் குழந்தையாக இருந்து, சில வேளைகளில் அசுரர்களைக் கொன்று, சில வேளைகளில் கோபியரின் முலைப்பால் பருகியவன் இந்த ஹரியே.(22) கோபர்களுடன் பிருந்தாவனத்தில் வசித்துவந்த போது சூரியனைப் போன்ற பிரகாசமான குதிரை வடிவத்தில் இருந்த கேசியைக் கொன்றவன் இந்த விஷ்ணுவே.(23) கோபாலர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் நாகமுடியில் நாட்டியமாடி, யமுனை மடுவில் நாக மன்னனை {காளியனை} தண்டித்த அந்த ஜனார்த்தனனே இப்போது என் முன் இருக்கிறான்.(24)

தாலவனக்காட்டில் கோபாலர்கள் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பனை மரத்தின் உச்சியில் இருந்து தானவனை {தேணுகனை} வீசி எறிந்த தலைவனே இப்போது என் முன் இருக்கிறான்.(25) விரஜம் முழுவதையும் மறைத்து இடையறாமல் மேகக்கூட்டங்கள் மழையைப் பொழிந்து கொண்டிருந்தபோது, ஒப்பற்ற பலத்தை வெளிப்படுத்தி ஒரு கையால் கோவர்த்தன மலையை உயர்த்தி, சக்ரனின் பலத்தைப் பரிகசித்து, கோபர்கள், கோபிகைகள் ஆகியோருக்கும், கோகுலத்தின் பசுக்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தவன் இந்த ஹரியே.(26) அக ஆற்றலால் மனித வடிவை ஏற்று, கோபிகைகளின் ஸ்தனங்களுக்கு மத்தியில் கிடந்து, விருப்பத்துடன் அவர்களின் இதழ்களைப் பருகிய அந்தக் காமேஷ்வரனே இப்போது என் முன் இருக்கிறான்.(27) பிருந்தவனத்தின் தனிமையான இடத்தில் இரவில் தாமரை போன்ற முகங்களைக் கொண்ட கோபிகைகளின் இதழமுதமருந்தி, அவர்களின் மார்பில் தன் தலைசாய்த்தவன் இந்தக் கேசவனே.(28)

நாகலோகவாசிகளால் வழிபடப்பட்ட கம்சனின் ஆணையின் பேரில் {பிருந்தாவனம்} சென்று மதுராவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அக்ரூரருக்கு யமுனையின் நீரில் வைகுண்டத்தைக் காட்டிய கிருஷ்ணன் இவனே.(29) மதுராவின் தெருக்களில் பலராமனுடன் நடந்து கொண்டிருந்தபோது, ஆணவம் மிகுந்த வண்ணான் ஒருவனைக் கொன்று அவனிடம் இருந்து உடைகளைப் பறித்து உடுத்திச் சென்றவன் இந்த ஹரியே.(30) மதுராவில் திரிந்தபோது மலர்வியாபாரியால் கொடுக்கப்பட்ட மலர்மாலைகளை அணிந்து கொண்டு, அவன் விரும்பிய வரத்தை அளித்து, குப்ஜை {கூனி} கொடுத்த சந்தனக் குழம்பைப் பெற்றுக் கொண்டு அவளை அழகிய பெண்ணாக்கிய தலைவன் இவனே.(31) கம்சனின் தெய்வீக வில்லை எடுத்து, அதை இரண்டாக முறித்து, பிரளயகால மேகங்களைப் போல முழங்கி நின்றவன் இவனே.(32)

மற்போர் அரங்கின் நுழைவாயிலில் குவலயபீடம் என்ற பெரும் யானையைக் கொன்று, அதன் தந்தங்களைப் பிடுங்கி மற்போர் அரங்கில் தரித்துக் கம்சனை அச்சுறுத்திய கேசவன் இவனே.(33) வலிமைமிக்க மாமல்லன் சாணூரனை கம்சன் முன்னிலையில் கொன்று, யாதவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய அந்த ஹரியே இங்கே இருக்கிறான்.(34) தந்தையிடமும், யாதவர்களிடமும் பகைமை பூண்டிருந்த கம்சனைக் கொன்று, மதுராவின் மன்னராக உக்ரசேனரை நிறுவி, காசியப குலத்தைச் சேர்ந்த சாந்தீபனி முனிவரிடம் குருகுல கல்வி பயிலச் சென்ற ஹரி இவனே.(35) கல்வி நிறைவடைந்ததும், இறந்து போன தன் குருபுத்திரனை மீட்டளித்து, யாதவர்களின் தலைநகரான மதுராவுக்குத் தன் தமையனுடன் திரும்பி வந்த தலைவன் இவனே.(36) நிசும்பனையும், நரகனையும் கொன்று, பூமியின் சுமையைக் குறைத்து, வழியில் பிராமணர்கள், முனிவர்கள், ராஜரிஷிகள் ஆகியோரைக் காத்தவனும், நுண்ணறிவுமிக்க ஜகத்பதியுமான அந்த ஜனார்த்தனன் இவனே.(37)

இதோ என் கண்களுக்கு முன் இருப்பவன் அந்த விஷ்ணுவே. நான் ஸாயுஜ்ய முக்தியை அடைந்திருப்பதால் நிச்சயம் இவனது தரிசனமே என் வாழ்வை மகிமையடையச் செய்திருக்கிறது.(38) சாக்ஷாத் ஹரியை நேரடியாகக் கண்ட எவனும் நிச்சயம் முக்தியடைவான். இப்போது என் முன் இருப்பவன் சாக்ஷாத் அந்த ஹரியே.(39) முற்பிறவிகளில் நான் பெரும்புண்ணியங்களைச் சேர்த்திருப்பதாலேயே இப்போது இவனது தரிசனத்தை அடைகிறேன்.(40) எனக்கிருந்த பொருள் பற்று அழிவடைந்ததால், நானே மிகப் புண்ணிய ஆத்மாவாவேன். நான் இவனுக்கு என்ன கொடுப்பது? இவனிடம் என்ன சொல்வது? ஓ! விஷ்ணுவே, நான் எவ்வாறு உனக்குத் தொண்டாற்ற வேண்டும்? உன்னை நிறைவடையச் செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக” என்றான் {கண்டாகர்ணன்}”.(41)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இவ்வாறு பேசிய அந்தப் பிசாசானவன் உரக்க கதறி அழுதான். பிறகு அவன் சிரித்தபடியே கட்டுப்பாடில்லாமல் மகிழ்ச்சிக் கூத்தாடினான்.(42) கிருஷ்ணனின் முன்னிலையில் அவன், “ஓ! யாதவேஷ்வரா, ஓ! கிருஷ்ணா, ஓ! கேசவா, ஓ! ஹரியே, என் வழிபாடுகளையும் வணக்கத்தையும் ஏற்பாயாக” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஆடத் தொடங்கினான்”.(43) 

முக்தியடைந்த பிசாசு | பவிஷ்ய பர்வம் பகுதி – 58-(கண்டாகர்ணஸ்ய முக்தி)-பிராமண மாமிசத்தை கிருஷ்ணனுக்குப் படைத்த கண்டாகர்ணன்; கிருஷ்ணன் மறுத்தது; கண்டாகர்ணன் முக்தியடைந்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},   “அனைத்தையும் கைவிட்டு  பொருத்தமில்லாமல் சிறிது நேரம் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருந்த அந்தப் பிசாசானவன், அங்கிருந்து சென்று ஒரு பிராமணனின் சடலத்தை அவ்விடத்திற்குக் கொண்டு வந்தான்.(1) அவன் அந்தச் சடலத்தை இரண்டாக வகுந்து, அதில் ஒன்றை சுத்தம் செய்தான். பிறகு அந்த மாமிசத்தை ஓர் அழகிய தட்டில் வைத்து, ஜனார்த்தனன் முன்பு வைத்து, தன் வணக்கத்தைச் செலுத்திப் பணிவுடன் கைக்கூப்பிப் பின்வருவனவற்றைப் பேசினான்:(2,3) “ஓ! ஜகந்நாதா இந்த உணவு உனக்கே என்பதால் இதை ஏற்பாயாக. ஓ! ஜகந்நாதா, ஹரியே, பக்தனால் உனக்கு அளிக்கப்படும் எதையும் நீ ஏற்க வேண்டும்.(4) ஓ! விஷ்ணுவே, நான் உன்னைச் சரணடைந்தேன். நீ வேறு வகையில் நினைக்காதே. பணியாளால் பக்தியுடன் கொடுக்கப்படும் உணவைத் தலைவன் ஏற்க வேண்டும்.(5) பண்பட்ட பிராமணன் ஒருவனின் இந்த உடல் மிகச் சமீபத்தில் கொல்லப்பட்டது என்பதால் உண்பதற்குத் தகுந்தது. சாத்திரங்களின்படி எங்களைப் போன்ற பிசாசுகளுக்கு இது தகுந்த உணவாகும்.(6) எனவே, ஓ! பகவானே, இதில் நீ குறை காணவில்லையெனில் இந்தக் காணிக்கையை ஏற்பாயாக” {என்றான் கண்டாகர்ணன்}.

பிசாசானவன் இதைச் சொல்லிவிட்டு அந்தத் தலைவனுக்கு மனித மாமிசத்தை அளிக்க முயற்சித்தபடியே மீண்டும் உரக்கச் சிரித்தான். கிருஷ்ணன் அந்தப் பிசாசிடம் நிறைவடைந்தவனாகத் தன் மனத்திற்குள் அவனைப் புகழும் வகையில், “ஐயோ, இந்தப் பிசாசானவன் என்னிடம் பேரன்பும், பெரும் பக்தியும் கொண்டிருக்கிறான்” என்று நினைத்தவாறே பின்வருவனவற்றைப் பேசினான்:(7-9) “பச்சை மாமிசம் உண்ணும் பிசாசே, எந்தச் சூழ்நிலையிலும் இத்தகைய இறைச்சியைப் படைப்பது தகாது. இந்தப் பிராமண மாமிசம் உன்னளவில் மிகச் சிறந்ததே என்றாலும் என்னைப் போன்றவர்களால் தீண்டத்தகாதது.(10) அறக் கோட்பாடுகளைப் பின்பற்றுவோருக்கு ஒரு பிராமணன் எப்போதும் வழிபடத் தகுந்தவனாவான். அனைத்து வகைப் பாவச் செயல்களையும் செய்யும் பிசாசுகள் மட்டுமே ஒரு பிராமணனைக் கொல்வார்கள்.(11) எவனும் ஒருபோதும் விப்ரர்களைக் கொல்லக்கூடாது. ஏனெனில் இந்தச் செயல் அவனை நரகத்திற்கே வழிநடத்தும். எனவே, அனைத்து வகைகளிலும் இந்தச் சடலம் என்னால் தீண்டத்தகாதது. இதற்கு முரணான வேறு எதையும் நினைக்க வேண்டியதில்லை.(12) ஓ! மாமிசம் உண்ணும் பிசாசே, களங்கமுள்ள மனத்தைத் தூய்மைப்படுத்தும் உன் பக்தியில் நான் நிறைவடைந்தேன். நீ மங்கலமாக இருப்பாயாக. நீ உன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள முயல்கிறாய் என்ற காரணத்தினாலேயே நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன்.(13) எப்போதும் நீ என் பெயர்களைச் சொல்லி உன் இதயம் தூய்மை அடைந்திருக்கும் காரணத்தாலேயே நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன்” {என்றான் கிருஷ்ணன்}.(14)

இதைச் சொல்லிவிட்டு அந்த விஷ்ணு தன் கைகளை அந்தப் பிசாசின் மீது வைத்து பாவச் செயல்கள் அனைத்தில் இருந்தும் அவனை விடுவித்தான்.(15) கிருஷ்ணன் அவனைத் தொட்ட உடனேயே அவன் காமனைப் போன்ற அழகை அடைந்தான். அவன், சுருள் முடியும், நீண்ட கைகளும், அழகிய கண்களும் கொண்டவனானான்.(16) அவனுடைய விரல்களும், அதிலுள்ள நகங்களும் மிக அழகியவையாக இருந்தன. அவன் தாமரை போன்ற கண்களையும், தாமரையைப் போன்ற மேனி நிறத்தையும் கொண்டிருந்தான், மேலும் தாமரை இதழ்களுக்கு ஒப்பான ஆபரணங்களை அணிந்திருந்தான்.(17) அவன் கேயூரமும் கைவளைகளும் அணிந்திருந்தான். மேலும் மஞ்சள் பட்டாடைகளை உடுத்தியிருந்தான். அவன் இரண்டாம் இந்திரனைப் போலப் பிரகாசமிக்கவனாகவும், புத்திசாலியாகவும் தெரிந்தான்.(18) அவன் ஒரு கந்தர்வனைப் போலத் திறன்மிக்கப் பாடகனானான். மேலும் ஒரு யோகியைப் போல அவன் மாயாசக்திகள் அனைத்தையும் பெற்றிருந்தான். விஷ்ணுவின் தாமரைக் கைகளால் தீண்டப்பட்ட அந்தப் பிசாசாவன் மிக அழகிய தன்மைகளை அடைந்தான். மேனி ஒளியில் அவன் மஹாமுனிவர்களையும் விஞ்சியிருந்தான்.(19,20)

ஓ! மனிதர்களின் ஆட்சியாளர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தப் பிசாசானவன் செய்த கடுந்தவத்தின் விளைவாகவே அவனுக்கு இந்தத் தெய்வீக வடிவம் என்ற வெகுமதி கிடைத்தது.(21) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஜகந்நாதனைச் சரணமடைந்தவன் எவ்வாறு துன்பங்களை அனுபவிப்பான்? அத்தகைய மனிதன் மங்கல அனுபவங்களை மட்டுமே பெறுவான். விஷ்ணுவைத் தொடர்ந்து தியானித்து, அவனது மகிமைகளைத் துதிக்கும் ஒருவனால் அடையப்பட முடியாதது தான் ஏது?

பிறகு அந்தப் பகவான், இரண்டாம் இந்திரனைப் போலத் தன் எதிரே நின்று கொண்டிருக்கும் கண்டாகர்ணனிடம் பேசினான்: “தேவ மன்னனின் {இந்திரனின்} ஆட்சியுள்ளவரை அவனுடைய உலகத்தில் உன் வாசம் உறுதியானதாகும். இனி மகிழ்ச்சியாகச் சென்று அங்கே வசிப்பாயாக.(22-24) இந்திரனின் ஆட்சிக்காலம் முடியும்போது நீ சாயுஜ்ய முக்தியை[1] அடைவாய். இந்திரன் ஆளும்வரை உன் தம்பியும் தேவலோகங்களில் இன்புற்று வாழ்வான்.(25) நீ மங்கலமாக இருப்பாயாக. உன் இதயம் விரும்பும் வரத்தை நீ என்னிடம் கேட்பாயாக. எதையும் கொடுப்பேன், அனைத்தையும் கொடுப்பேன். இதில் ஐயமில்லை” {என்றான் கிருஷ்ணன்}.(26)கண்டாகர்ணன், “ஜனார்த்தனா, கட்டுப்பாடுள்ள மனம் கொண்ட ஒருவன் நமது சந்திப்பையும், உரையாடலையும் நினைவு கூர்ந்தால் உன்னிடம் தளராத பக்தியை அடையட்டும்.(27) ஓ! ஹரியே, அவன் மனத்தூய்மையை அடைந்து களங்கங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு, அவனது இதயத்தில் உள்ள மாசுகள் அனைத்தும் விலகட்டும். இதுவே நான் விரும்பும் வரமாகும்” {என்றான் கண்டாகர்ணன்}.(28)

இதைக் கேட்ட தேவேசன், “அவ்வாறே ஆகட்டும். இப்போதே தேவலோகம் சென்று இந்திரனால் மதிக்கப்படும் விருந்தினன் ஆவாயாக. அவன் உனக்காகக் காத்திருக்கிறான்” என்றான் {கிருஷ்ணன்}.(29)

கிருஷ்ணன் இதைச் சொல்லிவிட்டு, இறந்து கிடந்த அந்தப் பிராமணனுக்கு உயிரளித்தான். உயிர்மீண்டதைக் கண்ட அந்தப் பிராமணன் அந்தத் தலைவனை நல்ல முறையில் துதித்துவிட்டு அவனிடம் விடைபெற்றுச் சென்றான். பிறகு அந்தத் தலைவன், முனிவர்கள் வேள்விகளைச் செய்து கொண்டிருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றான்.(30,31)

முற்பிறவியில் சுவர்க்கவாசியாக இருந்த கண்டாகர்ணன், கிருஷ்ணனின் ஆணையின் பேரில் தேவலோகம் சென்றான். ஓ! மன்னா, உன் மனத்தையும் புலன்களையும் தூய்மைப்படுத்த விரும்பினால் இந்த உரைகளைத் தொடர்ந்து கேட்பாயாக. இந்தப் பிசாசின் கதையைச் சொல்வதால் உன் மனம் நிச்சயம் களங்கங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடையும்” என்றார் {வைசம்பாயனர்}.(32) 

கிருஷ்ணனின் தவம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 59-(கிருஷ்ணதபோவர்ணநம்)-சிவனை நிறைவடையச் செய்யப் பன்னிரெண்டு வருடங்கள் கடுந்தவம் செய்த கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},   “அதன்பிறகு பகவான் விஷ்ணு {கிருஷ்ணன்}, மஹாத்மாவான அந்தப் பிசாசின் {கண்டாகர்ணனின்கதையை முனிவர்களிடம் விரிவாகச் சொன்னான்.(1) இந்நிகழ்வைக் கேட்ட முனிவர்கள் அனைவரும் பேராச்சரியம் அடைந்தனர். அவர்கள், “ஓ! தலைவா, காரணமற்ற உன் கருணையாலேயே அந்தப் பிசாசானவன் முக்தியை அடைந்தான்” என்றனர்.(2)

அன்பு கொண்ட பக்தர்களிடம் பெரும் பற்றுக் கொண்ட அந்த விஷ்ணுவை முனிவர்கள் அனைவரும் மதிப்புடன் வழிபட்டனர். அவனும் அந்த முனிவர்களிடம் நிறைவடைந்தான். அடுத்த நாள் அதிகாலையில் சூரியன் அடிவானில் உதித்த போது, அவன் முனிவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கருடன் மீதேறி கைலாச மலைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(3,4)

அண்ட காரியங்கள் அனைத்தையும் நிர்வகிப்பவர்களும், கடும் நோன்புகளை நோற்பவர்களுமான சித்தர்கள் எங்கிருப்பார்களோ, வைஷ்ரவணன் {குபேரன்}, சங்கரனை எங்கே வழிபட்டுக் கொண்டிருப்பானோ,{5} அன்னங்கள் மகிழ்ச்சியுடன் வசிப்பதும், மானஸம் என்ற பெயரில் அழைக்கப்படுவதுமான பெருந்தடாகம் எங்கிருக்கிறதோ, சிவனின் தொண்டனான பிருங்கீரிடி மனிதர்களின் தலைவனாவதற்காகத் தன் தலைவனை எங்கே வழிபட்டானோ,{6} சிங்கங்கள், பன்றிகள், யானைகள், புலிகள், மான்கள் ஆகியனவும் பகையின்றி ஒற்றுமையுடன் எங்கே வாழுமோ, கங்கையினால் தலைமை தாங்கப்படும் ஆறுகள் எங்கே பாயுமோ,{7,8} அண்டத்தின் தலைவனான சம்பு {சிவன்} பிரம்மனின் தலையை எங்கே கொய்தானோ, உயிரினங்களைத் தண்டிக்கும் தண்டங்கள் எங்கே உண்டாகுமோ,{9} நீலலோஹிதனான {செந்நீல வண்ணனான} சங்கரன் உமையுடன் எங்கே வசிக்கிறானோ, பழங்காலத்தில் முனிவர்களின் வேண்டுகோளின் பேரில் மலைகளின் அரசனான ஹிமவான் தன் மகளை மஹாதேவனுக்கு எங்கே மணமுடித்துக் கொடுத்தானோ,{10} ஹரியானவன் தாமரை மலர்களால் சிவனை வழிபட்டு சுதர்சனச் சக்கரத்தை எங்கே அடைந்தானோ,{11} மதுவை {தேனைப்} பருகிக் கொண்டே சித்தர்களும், கின்னரர்களும் தங்கள் மனைவியருடன் இன்புற்றிருக்கும் மலைக்குகைகள் எங்கிருக்கிறதோ,{11,12} வலிமைமிக்கப் பௌலஸ்தியன் {ராவணன்} தன் வலிமைமிக்கக் கைகளால் எதை உயர்த்தினானோ, அவன் உலக வெற்றிப்பேற்றில் எங்கே நிறைவடைந்தானோ அந்தக் கைலாச மலைக்குக் கிருஷ்ணன் சென்றான். யது குலத்தின் பெருமைமிகு தேவகிநந்தனன் அங்கே மானஸ ஸரோவரின் வடகரையை அடைந்தான்.{13,14}(5-14)

மங்கலமிக்கவனான தலைவன் ஹரி, தவம் செய்யும் நோக்கத்தில் அங்கே வந்திருந்தான். அந்த ஜகந்நாதன் {கிருஷ்ணன்}, அந்தப் புனிதத் தலத்தில் உறுதியான தீர்மானத்துடன் தவம் செய்ய அமரும் முன், சடாமுடி தரித்து, எளிய உடைகளை உடுத்திக் கொண்டான்.{15} தலைவன் ஹரி, பன்னிரெண்டு ஆண்டுகள் கடுந்தவம் செய்யத் தீர்மானித்து வேத வடிவேயான கருடனின் முதுகில் இருந்து இறங்கினான்.{16} ஜகத்பதியான ஹரி, இலைதழைகளை மட்டுமே உண்பவனாகப் பங்குனி மாதத்தில் தவம் செய்யத் தொடங்கி,{17} அதைத் தொடர்ந்து மந்திரங்களை ஓதி, வேதங்களையும் படித்தான்.

ஓ! மன்னா, அண்டத்தின் தலைவன் மனித வடிவை ஏற்ற பிறகும் அவன் தவம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.{18} உண்மையில் பரமாத்மாவின் நோக்கங்களைச் சின்னஞ்சிறு உயிரினங்களால் புரிந்துகொள்ள முடியாது.

கைலாச மலையில் கிருஷ்ணன் தொடர்ந்து தவம் செய்து வந்தபோது, கசியபரின் மகனான கருடன் அவனுக்குத் தேவையான விறகுகளைக் காடுகளில் இருந்து திரட்டி வந்தான்.{19,20}(15-20) {சுதர்சனச்} சக்கரமானவன், ஹரிக்காக மலர்களைத் திரட்டி வந்தான். {பாஞ்சஜன்ய} சங்கானவன் அனைத்துத் திசைகளில் இருந்தும் அவனுக்குப் பாதுகாப்பளித்தான். கட்கமானவன் {நந்தக வாளானவன்} அந்தத் தலைவனுக்குக் குசப்புற்களைக் கொண்டு வந்தான். கௌமோதகி {கதாயுதமானவன்} பல்வேறு வகைகளில் அவனுக்குத் தொண்டாற்றினான்.(21,22) தானவர்களின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்துபவனும், கொண்டாடப்படுபவனும், விற்களில் சிறந்தவனுமான சாரங்க வில்லானவன், பணியாளனாக எப்போதும் தலைவனின் முன்பு நின்றிருந்தான்.(23)

பகவான் விஷ்ணு {கிருஷ்ணன்}, தன் வேள்விகளைச் செய்வதற்காக ஏராளமான விறகுகளை எரித்தான். அவன் ஏராளமான நெய்யையும் பிற உட்பொருள்களையும் {வேள்வித்தீயில்} ஊற்றினான்.{24} உண்மையில் அவன் சிறிய, பெரிய யஜ்ஞங்கள் பலவற்றைச் செய்து முடித்தான். தொடக்கத்தில் தவம் செய்து வந்தபோது கவனமாகத் தன் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு மாதம் ஒரு முறை மட்டுமே உண்டான்.{25} அதன் பிறகு அந்தக் கேசவன், இரு மாதங்களுக்கு ஒருமுறை உண்டான். இறுதியாக அவன் வருடத்திற்கு ஒரு முறை உண்ணும் நிலையை அடைந்தான்{26}.(24-26)

ஜகத்பதியான அந்த ஜனார்த்தனன், இவ்வாறே பதினோரு வருடங்களும், பதினோரு மாதங்களும் தவம் செய்து வந்தான். {பன்னிரெண்டு வருடங்களுக்கு} இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சியிருந்தது. அவன், வேள்வி நெருப்பை மூட்டிவிட்டு சிவனைத் தியானித்தபடியே ஆரண்யக மந்திரங்களையும், {ஓம் என்ற} உத்தம பிரணவத்தையும் சொல்லத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(27,28) 

சிவனின் வருகை | பவிஷ்ய பர்வம் பகுதி – 60-(ஸ்ரீகிருஷ்ணஸமீபே இந்த்ராதிதேவ ஆநாமாகமநம்)-சிவனை நிறைவடையச் செய்ய பன்னிரெண்டு வருடங்கள் கடுந்தவம் செய்த கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “இந்திரன், தன் வாகனமான உத்தம கஜத்தில் {ஐராவதத்தில்} ஏறி சர்வேஷ்வரனான விஷ்ணு தவத்தில் இருப்பதைக் காண அங்கே வந்தான்.(1) அடுத்ததாக யம பகவானும், எருமை வாகனத்தைச் செலுத்திக் கொண்டு, தன் தொண்டர்களுடன் அங்கே வந்தான்.(2) ஹம்சவாகனத்தில் அமர்ந்தவனும், தலைக்கு மேல் வெண்குடை ஏந்தியவனும், தொண்டர்களால் வெண்சாமரம் வீசப்படுபவனுமான வருணனும் அங்கே வந்தான்.(3) கைலாச சிகரத்தில் கேசவன் எவ்வாறு தவம் செய்கிறான் என்பதைக் காண அவனும், ஆதித்யனும் அங்கே வந்தனர்.{4} ஓ! மன்னா {ஜனமேஜயா}, ருத்திரர்கள், வசுகள், சித்தர்கள், பெரும் முனிவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள்,{5} ஆடல் பாடல்களில் திறன் பெற்ற அப்சரஸ்சகள் பலரும், தேவகணங்களும் கேசவனைக் காண கைலாச மலைக்கு வந்தனர்.{6}

பர்வதர், நாரதர் ஆகியோரின் தலைமையிலான பெரும் முனிவர்களும், சர்வ தேவகணங்களும் ஆச்சரியமடைந்தவர்களாக,{7} “இது பேராச்சரியம் வாய்ந்தது. இத்தகைய நிகழ்வேதும் கடந்த காலத்தில் நடந்ததுமில்லை, வருங்காலத்தில் நடக்கப் போவதுமில்லை. அண்டத்தின் ஆன்ம ஆசானும், யோகிகளின் தவப்பொருளுமான கிருஷ்ணன் தவத்தில் ஈடுபட்டு வருகிறான்” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அந்தத் தலைவன் தவம் செய்யும் நோக்கத்தைக் குறித்துத் தேவர்களும், முனிவர்களும் இவ்வாறே தங்களுக்குள் பேசிக்கொண்டனர்{8}.(4-8)

உலகத்திற்கு நன்மையைச் செய்யும் பிரபுவான அந்த ஹரியின் தவக் காலம் நிறைவடைந்ததும், சகலேஷ்வரனான சிவன், தன் மனைவியுடனும் {பார்வதியுடனும்}, தன் தொண்டர்களுடனும் அந்த ஜகத்பதியின் செயல்களைக் காண அங்கே வந்தான்.(9) நண்பனான குபேரனும்குஹ்யர்களும் அவனுடன் {சிவனுடன்} வந்தனர். ஜடாதாரியான அவன் {சிவன்}, எண்ணற்ற பூதங்களாலும், பிசாசுகளாலும் சூழப்பட்டிருந்தான். அவன் ஒரு வில்லையும், கணைகளையும், திரிசூலத்தையும் ஏந்தியிருந்தான். மேலும் அவன் தன் சிரத்தின் அழகை அதிகரிக்கும் பிறை நிலவையும் தரித்திருந்தான்.(10) அவன் ஒரு கரத்தில் கமண்டலத்தையும், குச புற்களையும், மறு கரத்தில் எரி கொள்ளியையும், மூன்றாம் கரத்தில் திந்திமத்தையும் {உடுக்கையையும்}, நான்காம் கரத்தில் திரிசூலத்தையும் ஏந்தியிருந்தான். ருத்ராக்ஷ மாலை அவன் கழுத்தைச் சூழ்ந்திருந்தது. செந்நீல நிறத்தவனும், ஜடாதாரியும், சந்திரசேகரனுமான அந்தச் சிவன், வெண் காளை வாகனனாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருந்தான்(11,12)

உமையின் ஸ்தனங்களில் பார்வையைக் கொண்டிருந்த அவனை அவள் அணைத்து முத்தமிட்டாள். அவனது நெற்றி பிறைமதியால் அலங்கரிக்கப்பட்டு, கங்கையின் நீரால் கழுவப்பட்டது. அந்தத் தலைவனின் பார்வை எப்போதும் தன் மனைவின் மேலே விழுந்திருந்தது.(13) அவனது முகம் சாம்பலால் {பஸ்மத்தால்} பூசப்பட்டிருந்தது. அவனது சடாமுடியானது பெரும்பாம்புகளால் கட்டப்பட்டிருந்தது. அவன் மனிதத்தலை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தான். இவ்வாறே சிவன், ஹரியான கேசவனைக் காண வந்திருந்தான்.(14)

அண்ட வெளிப்பாடுகளும், அவற்றின் உள்ளடக்கமான பூதங்களும் வெளிப்புற ஆற்றலை ஆள்வதால் அவை சிவனின் வடிவங்கள் என்று சொல்லப்படுகின்றன. சாங்கிய தத்துவத்தைக் கற்றறிந்த அறிஞர்களால் அவன் மிகப்பெரியவன் என்றும், இருபத்துநான்கு தத்துவங்களை வெளிப்படுத்தும் ஆற்றலான பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறான். கணாதன் என்றும், மஹாதேவன் என்றும் அழைக்கப்படும் சிவபெருமான் தேவர்களை விரட்டி தக்ஷனை அழித்தவனாவான். தன்னை உணர்ந்த ஆத்மாக்களின் குறிக்கோளாகவும், அனைத்து உயிரினங்களுக்கு நன்மை செய்பவனாகவும் அவனே இருக்கிறான். கடுங்கண்களைக் கொண்ட அந்த மஹாதேவன் நித்தியமானவன்; பழைமையானவன், எல்லையற்றவன், தன்னிறைவடைந்தவன், சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டவன், பேரமைதியில் இருப்பவன். சில சமயங்களில் ஆயிரங்கண்ணனாகவும், சில சமயங்களில் நான்கு கரத்தோனாகவும் அவன் வெளிப்படுகிறான். அவனே மிருத்யுவின் உருவமாகவும், ருத்திரன், ரோதனன் என்றழைக்கப்படும் அண்டத்தின் தலைவனாகவும் திகழ்கிறான்.(15-20)

பூமி, நீர், நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன் ஆகியவற்றை இயக்குபவர்களான எண்மரும் {அஷ்டதிக்பாலர்களும்} மஹாதேவனின் வெளிப்பாடுகளாகவே கருதப்படுகின்றனர்.(21) மஹாயோகத்தின் மஹாதேவனும், செந்நீல வண்ணனும், மஹாதேவன் என்றும், கிரீசன் என்றும் அழைக்கப்படுபவனும், இயற்கையை ஆள்பவனும், உமையின் வடிவமாகத் திகழ்பவனும், கையில் சூலந்தரித்தவனுமான அந்தச் சிவன், ஜகத்பதியான கிருஷ்ணனைத் தரிசிக்கத் தன் பூதகணங்களுடன் சேர்ந்து அங்கே வந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(22) 

————————————-—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பவிஷ்ய பர்வம்-பகுதி 2-

October 19, 2025

பிராணாயாமத்தின் செயல்முறை | பவிஷ்ய பர்வம் பகுதி – 21-(ப்ராணாயாமவர்ணநம்)-பிராணாயாமம் குறித்த விளக்கம்; புற வேள்வியும், அக வேள்வியும்; வேதாந்தக் கருத்தைச் சொன்ன ஆசான்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “புலன்களையும், கோபத்தையும் கட்டுப்படுத்திய மனிதர்கள், சடாமுடியும், மான்தோலும் தரித்து, மூக்குக்கும்[1] புருவங்களுக்கும் இடையில் உள்ள சந்தியில் தங்கள் மனத்தைக் குவிப்பார்கள்.(1) நெற்றியில் உள்ள இந்த இடமே எலும்புகளின் சாரமாகத் திகழ்கிறது; உடல் அழிந்த பிறகும் இஃது அழிவதில்லை. இஃது உயிர் மூச்சான பிராணனால் சூழப்பட்டிருக்கிறது. உயிர் மூச்சானது, காற்று, இருமல், சளி {வாதம், பித்தம், கபம்} ஆகியவற்றை உண்டாக்கியபடி குழாய்களின் வழியே இங்கே செல்கிறது. இந்த இடமே, பிரம்மத்தை உணர்ந்து, துன்பங்கள் அனைத்தில் இருந்து விடுபட வழிவகுக்கிறது.{2} இங்கே மூன்று குழாய்களும், ஐந்து உயிர்மூச்சுகளும் ஐக்கியமாகின்றன. எனவே, யோகிகள் இங்கே தங்கள் மனத்தை நிலைக்கச் செய்து, பெரும்பிரம்மத்தின் இருப்பை உணர முயற்சிக்கின்றனர்.{3} மந்திரங்களின் வித்தாக இருக்கும் ஓம் எனும் மந்திரத்தை உரைத்து வேள்விகளைச் செய்பவர்களும், முழுமையான பேரின்பத்தில் தங்கள் ஆன்மாவை மூழ்கச் செய்பவர்களுமான பிராமணர்கள், உயிர் மூச்சின் ஒற்றை நெருப்பை மட்டுமே வைத்துக் கொண்டு அதை ஐந்தாகப் பிரிக்கிறார்கள்.{4} வேதங்களை நன்கறிந்த முனிவர்கள் இந்த நெருப்பை (பூரகம், கும்பகம், ரேசகம் என்ற) மூன்று தடங்களில் {வழிகளில்} திருப்பி விடுகின்றனர். இவ்வாறு அவர்கள் இதை மூன்றாகப் பிரித்து, பூரகம் முதலிய பிற நடைமுறைகளைப் பயின்று உண்மையான ஆத்ம ஞானத்தை அடைகிறார்கள்{5}.(2-5)ஒரு பெரும் நெருப்பானது, ஆகுதிகள் மூலம் தன்னைப் பரவச் செய்கிறது. ஸ்வதாவின் வடிவில் அது மந்திரங்களுக்கான வெற்றிகரமான பயன்களை உண்டாக்குகிறது[2].(6) எப்போதும் வெல்பவனும், உயிரினங்களைக் கௌரவிப்பவனும், தெய்வீகனுமான தக்ஷன், அனைத்தின் பெரும்பாட்டனும், பிராமணர்களைப் படைத்தவனுமான பிரம்மனுக்குப் பிறக்கிறான்[3].(7) அவன் தண்டீ[4], சர்மீ[5], ஷரீ[6], கட்கீ[7], ஷிகீ[8], மேலும் அவன் தாமரையைப் போன்ற முகம் படைத்தவன். அவன் இயல்பாகவே கவலையற்றவனாகவும், கோபத்தையும், ஆசையையும் கட்டுப்படுத்தியவனாகவும் இருந்தான்.(8) வேதத்துடன் ஐக்கியமடைந்த பிரம்மம், புஷ்கரம் என்று போற்றப்படுகிறது, இந்திரனால் பாடப்பட்ட சாம வேத ஸ்லோகங்கள், பிரம்மவாதிகளால் உரைக்கப்படுகின்றன[9].(9)(உயிர் மூச்சை அடக்கும் பிராணாயாமத்தைப் பயில்பவன், உயிர் மூச்சை இழுத்து விடுவதற்கு ஏற்ற படி, பிரம்மரந்தரமெனும் நெற்றிக்குக் காற்றை இழுக்க வேண்டும்; அதன்பிறகு, அங்கிருந்து அதை இழுத்து புருவங்களின் மத்தியில் நிறுத்த வேண்டும்; அதன் பிறகு அவன் கண்களின் மூலம் அதை இழுத்து மூக்கின் நுனி மீது நிறுத்த வேண்டும். அங்கிருந்து அதை நாக்கின் வேர்ப்பகுதிக்கு இழுக்க வேண்டும். அங்கிருந்து அதை இதயத்திற்கு மாற்ற வேண்டும், அங்கிருந்து பிறப்புறுப்புக்கும், அங்கிருந்து உடலுக்கும், அங்கிருந்து குதத்திற்கும், அங்கிருந்து தொடைகளின் வேர் பகுதிக்கும், அங்கிருந்து தொடைகளின் நடுப்பகுதிக்கும், அங்கிருந்து மூட்டுகளுக்கும், அங்கிருந்து கைகளின் வேர் பகுதிகளுக்கும், அங்கிருந்து ஜங்கத்திற்கும் (தொடைகளின் பாதி), அங்கிருந்து கணுக்கால்களுக்கும், அங்கிருந்து அங்குஸ்தத்திற்கும் {விரல்களுக்கும்}, அங்கிருந்து பாதத்திற்கும் அந்தக் காற்றை மாற்ற வேண்டும். இவ்வாறு பிராண நெருப்பை {உயிர் காற்றை} ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இழுக்கும் அவன், பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, ஆன்மா தூய்மையடைந்து, நிலவும், விண்மீன்களும் நிலைத்திருக்கும் வரை வாழ்வான். ஒருவன் தன் உடலுக்குள் உயிர் மூச்சை நிறுத்துவது ஸ்வதாவாகும். இந்த உடல்சார்ந்த யோகச் செயல்முறையின் மூலம் ஒருவன் தன் உயிர் மூச்சை முழுமையாக அடக்கலாம். இவ்வாறு பிராணாயாமம் பயிலும் ஒருவன், வாயு, இருமல், சளி {வாத, பித்த, கபக்} கோளாறுகள் அனைத்தில் இருந்தும் விடுபடலாம்”)தெளிந்த நெய், பால், வாற்கோதுமை முதலியவை புற வேள்விகளில் அர்ப்பணிக்கப்படுகின்றன, ஆனால் ஆன்ம வேள்வியில் மனத்தில் உண்டாகும் அனைத்தும் மனக்குவிப்பின் மூலம் பரமாத்மா எனும் பீடத்தில் வேட்கப்படுகின்றன.(10) (தன்னலமெனும்) விறகைக் கடைந்து, (தெய்வம் மறையும்) நெருப்பால் எரிக்கப்பட்டு, (உடல் இன்பமெனும்) வன்னி மரத்தில் இருந்து திரட்டப்பட்டவனும், பிரம்மத்தை அறிந்தவனுமான ஒருவன், அங்கே பரமாத்மாவை அழைத்து வருவான்.(11) தாழ்ந்த வேள்வியில் {புற வேள்வியில்} முக்கியத்துவமற்ற பொருள்கள் நெருப்புக்குள் வீசப்படுகின்றன அதனால் உண்டாகும் மாறுபாடுகளின் படி சொர்க்கமோ, இழிந்த இடமோ மனிதர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன; ஆனால் மனோ வேள்வியில் அதுபோல் கிடையாது[10].(12) தாழ்ந்த யஜ்ஞத்தில் பலன்கள் நெருப்புக்கு உடைமையாக்கப்படுகின்றன, ஆனால் ஆத்ம யஜ்ஞத்தில் பிரம்மவாதிகள்[11], {அந்தப் பலன்களை} ஆன்ம பயிற்சிகளுக்கு உடைமையாக்குகின்றனர். பிரம்ம செல்வத்தைச் செலவழித்துச் செய்யப்பட்ட பிரம்ம யஜ்ஞத்தின் போது பிருஹஸ்பதி, ஆறு மாதங்களில் நான்கு வேதங்களையும் அடைந்தான்[12].(14) அவன், தன் குருகுலத்தின் சீடர்களுக்கு, உயர்ந்த, அழகிய எழுத்துகளுடன் கூடிய சரஸ்வதியின் வடிவமான இந்த வேதத்தைப் போதித்து, அதை இசையாக அமைத்தான்.(15) பிராமண என்ற சொல்லின் மூலம் விளக்கப்படும் வேள்வி, பிரம்மனால் குறிப்பிடப்பட்டதுபோல, இரண்டாவது பிரம்ம லோகத்தைப் போலத் தெரியும்[13].(16) வேதமெனும் சொல்லால் பிரம்மனின் வாயில் இருந்து வெளிப்பட்டதும், சான்று குறித்து எந்த ஐயமும் இல்லாததுமான இந்த வேள்வி {பிரம்மயஜ்ஞம்}, அவனால் செய்யப்படுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பல்வேறு பொருள்களின் மூலம் பேசுவது போலச் செழிப்படைகிறது.(17)(சாதாரண) வேள்விகள், விறகு {ஸமித்து}, சந்திரச்செடிகள் {சோமகலஷை}, வேள்விக் கரண்டிகள், பாத்திரங்கள், இரவலர்கள், செல்வம் வேண்டும் மனிதர்கள், வாற்கோதுமை முதலிய பிற பொருள்கள், பாத்திரங்கள் நிறைந்த நீர் ஆகியவற்றால் செய்யப்படுகின்றன.(18) அந்த வேள்விகள், செல்வங்களையும், பொன்னையும் பெரும்பிரம்மத்திற்கு அர்ப்பணித்து, (பிராமணர்களுக்குக் கொடுக்கப்படும்) பசுக்கள், கன்றுகள் ஆகியவற்றுடன் நடத்தப்படுகின்றன.(19) வேதங்களை ஓதுவதுடன் சாம வேத ஸ்லோகங்களை உரைத்து, பிரம்ம ஞானத்தால் நிறைந்த கர்மம் எனும் அங்கத்துடன் தொடர்வது, வழிபாடு எனும் அறிவியலுடன் ஐக்கியமடைகிறது.(20) விறகுகளால் அமைக்கப்பட்ட யஜ்ஞ வடிவில் இருப்பவனும், மருத்துகளுடன் சேர்த்து மனத்தில் நினைக்கப் படுபவனுமான பிரம்மன், பிரம்மத்தில் இருந்து தனியாக உதித்த பொருள்களை நெருப்பில் ஆகுதிகளாகச் செலுத்தி ஆத்மாவிலேயே இயல்பாக நிலைத்திருக்கிறான்.(21)

உயிரினங்கள் அனைத்தின் தலைவனான பிரம்மன், வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளின்படி பிரம்மத்தை மதிக்கும் வகையிலும், தூய புத்தியின் வடிவில் இருக்கும் பிரம்மத்தைத் தீண்டும் வகையிலும் வேள்விகளை வேட்பதில்லை.(22) எல்லாம் வல்லவனான பிரம்மன், வன்னி மரத்தில் உண்டாகும் விறகை நெருப்பில் கடைந்து அக்னிஷ்டோம வேள்வி செய்து தேவர்களை அமைதிப்படுத்தி நிறைவடையச் செய்கிறான்.(22) வேள்வி வேட்கும் நேரத்தில் அந்தக் கூட்டம் சபை உறுப்பினர்களால் அலங்கரிக்கப்படுகிறது, சமஸ, அத்யர்யு புரோகிதர்கள் அதைச் செய்யும்போது இனிய ஸ்லோகங்களை உரைக்கிறார்கள்.(23) ஓ! மன்னா, சூரியனையும், சந்திரனையும் போன்ற பிரகாசமிக்கவர்களும், வேதங்களிலும், அவற்றின் அங்கங்களிலும் தேர்ச்சியடைந்தவர்களுமான தவசிகளால் அந்தப் பெரும் வேள்வி அலங்கரிக்கப்படுகிறது.(25)

வேதங்களை உரக்க உரைப்பதால் அந்த வேள்வி இரண்டாவது பிரம்மலோகம் போலத் தோன்றியது. தேவர்கள் பூமிக்கு இறங்கி வந்தனர். தேவர்களைப் போன்றவர்களும், பணிவுடன் கூடியவர்களும், பிரம்மஞானத்துடன் வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் அறிந்தவர்களுமான பிராமணத் தவசிகளால் அந்தப் பெரும் வேள்வி சொர்க்கத்திலும், பூமியிலும் மதிக்கப்பட்டது.(26,27) பிராமணர்களால் செய்யப்பட்ட அந்தப் பெரும் வேள்வி, வேள்விக் களத்தில் மூட்டப்பட்ட மூன்று நெருப்புகளைப் போல எரிந்து, பிரம்ம லோகத்தைப் போல ஒளிர்ந்தது.{28} அந்தப் பெரும் வேள்வியில் பிரம்மவாதிகள், இந்திரனால் பாடப்பட்ட சாமவேத ஸ்லோகங்களையும், சாத்திரங்களால் அனுமதிக்கப்பட்ட யஜுர் வேத ஸ்லோகங்களையும் உரைத்தனர்.{29} வாய்மை நிறைந்தவர்களும், தற்கட்டுப்பாட்டை உடையவர்களும், பிரமத்துக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களுமான தவ முனிவர்களை மனத்தில் நினைத்தவுடனேயே அவர்கள் அங்கே வந்தனர்.{30}(28-30) பிரம்மனால் பெறப்பட்டவனும், பெரும் இறையியல் அறிஞர்களில் வழிபடத்தகுந்தவனுமான பிருஹஸ்பதி, பல்வேறு வடிவங்களை ஏற்று, அந்த வேள்வியில் ஹோதாவாகவும், பிரம்மனாகவும் செயல்பட்டான்.(31)

அந்த வேள்வி நிறைவடைந்ததும், அந்த வேள்வியைச் செய்தவன் {பிருஹஸ்பதி} அந்தச் செயலுக்கான பலன்களை விஷ்ணுவுக்கு அர்ப்பணித்து, ஆன்ம ஆற்றலின் மூலம் இறுதிக் கருவை அடைந்த அதிதியின் மூலம் பிறந்தான்.(32) பிறப்பும், அறியாமையும், அதன் செயல்பாடும் அற்றவனும், பிரம்ம ஞானத்தை அறிந்தவனுமான அவன் {பிருஹஸ்பதி}, இன்பதுன்பங்களில் இருந்து விலகி இருப்பதும், இந்திரனும், இன்னும் பிற தேவர்களும் வெளிப்பட்டதும், சிதைவில்லா ஆன்ம பயிற்சிகளின் மூலம் அடையக்கூடியதுமான விஷ்ணுவின் பாதத்தை அடைந்தான். புலன்களில் இருந்தும், பற்றுக்குக் காரணமாக அமையும் புலன்நுகர் பொருட்களில் இருந்தும் விடுபட்ட முனிவர்களும் அவனைப் போலவே {விஷ்ணுவின் பாதத்தை} அடைவார்கள்.(33,34)

முற்பிறவி செயல்பாடுகளின் காரணமான ஆசைகளால், பல்வேறு புலன்நுகர் பொருட்களும் உண்டாகி மனத்தை முழுமையாக வெல்கின்றன. எனவே ஒருவன் மிகக் கவனமாக இந்த ஆசைகளை அடக்க வேண்டும்.(35) முனிவர்கள், பல்வேறு புலன்நுகர் பொருள்களை அனுபவித்தாலும், அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் அடங்குவதில்லை. தற்கட்டுப்பாடே உயர்ந்த பண்பாகக் கல்விமான்களால் கருதப்படுகிறது.(36) ஓம் எனும் சொல்லால் பெற்ற போதனையின் மூலம் ஆன்ம ஞானத்தை அடைந்த பிரம்மவாதிகளின் மனம் கல்வியால் பீடிக்கப்படுவதில்லை.(37) வேதங்களை எப்போதும் உரைக்கும் பிராமணர்கள், பக்திமான்களும், தேவர்களும் வாழும் உலகத்தையே சிறந்த லோகம் எனக் கருதுகிறார்கள்.(38) ஓ! பாரதா, ஓ! மன்னா, தேவர்கள் அழிவைச் சந்திக்காமல் வேள்வி காணிக்கைகளால் ஊட்டம் பெற்று விளங்குவதும், வேள்வி செய்பவன், கவலையற்றவனாகத் தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து தன் கர்மத்தின் மூலம் அடையக்கூடியதுமான உலகமே சிறந்தலோகமாகும்.(39) (சாதி {வர்ணம்}, தகுநிலை ஆகியவற்றில்} வேற்றுமை பார்க்கும் மனிதர்கள், பாறை போன்ற இந்த உடலை, முக்தி அடையும் நோக்கத்திற்காகப் பயன்படுத்த முடியாது[14].(40,41) ஓ! மன்னா, கர்மம் செய்வதில் மும்முரமாக இருக்கும் பிராமணர்கள், தங்கள் செயல்களின் பயன்களை அனுபவித்த பிறகு, சொர்க்கத்தில் இருந்து விரட்டப்பட்டு, நிறம் மங்கிய முகங்களுடனும், மாயையால் பீடிக்கப்பட்ட மனங்களுடனும் பூமியில் வாழ்வார்கள்.(42)இனிய பேச்சைக் கொண்டவரும், பாவங்களைப் போக்குபவர்களில் முதன்மையானவரும், அமைதியான வடிவம் கொண்டவருமான ஆசான், பின் வரும் வேதாந்த போதனைகளை இருபிறப்பாளர்களிடம் சொன்னார்.{43} “இந்த உடலையும், புலன்களையும் சுயமாக கருதுவதால் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பகைமை கொள்கிறீர்கள். ஆயிரம் தேவ வருடங்கள் ஆனாலும், உடல்மீது கொண்ட பற்றெனும் இந்தப் பாறையை உடைக்க முக்தியைத் தவிர வேறெதனாலும் முடியாது.{44} மனத்தைக் குவிப்பதன் மூலம், நீங்கள் அனைவரும் ஒரே ஆத்மாவே {சுயமே} என்பதை உணரும்போதும், மனவெறுப்பேதுமின்றி அனைத்து உயிரினங்களுடனும் நீங்கள் நட்பை உண்டாக்கிக் கொள்ளும்போதும், இவ்வுடலே சுயமெனும் உங்கள் தவறான கருத்து அழிவடையும்.{45}(43-45) கோபம், பொறாமையெனும் இரண்டு உணர்வுகளும் வெற்றியடையும் இயல்பின் ஆற்றலைப் பெருகச் செய்யும்; கோபமும், பொறாமையுமற்ற ஆற்றல் பிரம்மத்திடம் அர்ப்பணிப்பைப் பெருகச் செய்யும்.(46) தூய புத்தியைப் பயன்படுத்தி இம்மையிலும், மறுமையிலும் இன்பங்களைவிட்டு விலகும்போதும், பளிங்கு மலை போல இவ்வுடலைப் பெரிதாக்கும் நெருப்பு, நீர், உணவு ஆகியவையும், அவற்றின் செயல்பாடுகளும், சொற்கள், உயிர் காற்று, மனம் ஆகியவையும் அழிவடையும் போதும், மனைவியின் துணைகளும், பிற துணைகளும், மனத்திறன்கள், சாத்திரங்கள், உணர்வுகள் ஆகியவையும் தகரும்போதும், உடல் சார்ந்த பற்றெனும் இந்த மலையைப் பிளக்குமாறு நான் உங்களுக்கு ஆணையிடுவேன். அப்போதுதான் உங்களாலும் அதை {உடல் சார்ந்த பற்றெனும் அந்த மலையைப்} பிளக்க முடியும்” என்று சொன்னார் அந்த ஆசான்” என்றார் {வைசம்பாயனர்}.(47-49)

பிராமணர்களின் கடமைகள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 22-(வர்ணாஷ்ரமதர்மபரிபாலநம்)-ஆசிரமங்கள்; பிராமணர்களின் கடமைகள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இல்லறவாசிகளும், தவத்தில் அர்ப்பணிப்பு உள்ளவர்களுமான அந்த பிராமணர்களால், மலையின் வடிவிலிருந்த தங்கள் ஆசானின் போதனைகளைக் கேட்டாலும் தங்கள் உடல் சார்ந்த பற்றுகளைக் கைவிட முடியவில்லை.(1) எனவே, ஆகுதிகளுடன் கூடிய நெருப்பு வழிபாடு தினமும் பெருகியது, விஷ்ணுவை வழிபடுவதும், ஆசான்களை வழிபடுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறே, ஓ! மன்னா, பிராமணர்களின் ஆன்மாக்களைத் தூய்மை அடையச் செய்வதற்காக அந்தப் பிரம்மவாதிகளால் கர்ம காண்டம் இவ்வுலகில் அறிமுகப்படுத்தப்பட்டது.({2}(1-2)

இந்தப் பூமியில் புண்ணிய மலையின்[1] அருகில், குருக்ஷேத்திரம் என்ற பெயரைக் கொண்டதும், முட்களற்றதும், நெருப்பு மூட்டுவதற்கான மரங்களும், கொப்புகளும் நிறைந்ததுமான ஒரு புனித மாகாணம் இருக்கிறது.{3} இல்லறவாசிகளாக {கிருஹஸ்தர்களாக} இருந்த பிராமணர்கள், தூய இதயத்துடன் கடவுளின் பணிகளைச் செய்தபடியே அங்கே வாழ்ந்து துறவையும், தவங்களையும் பயின்று வந்தனர். யதிகளும் கூட பக்தியை அடையும் பேரார்வத்துடன் அங்கே வாழ்கிறார்கள்.{4} வானப்பிரஸ்த வாழ்வுமுறையைப் பின்பற்றுபவர்களும், அக்னி ஹோத்ரம் செய்பவர்களும், தங்கள் கோபத்தையும், ஆசைகளையும் கட்டுப்படுத்தியவர்களும், மான்தோலும், மரவுரியும் தரித்தவர்களும், வேண்டிப் பெறாத {பிச்சை எடுக்காத} உணவை உண்டு வாழ்பவர்களுமான பிராமணர்களும் அங்கே வாழ விரும்பினர். ஓ! மன்னா, முன்னறிவால் படிப்படியாக அதை அடையும் பிராமணர்கள், பெருங்கவனத்துடன் இவ்வகை வாழ்வு முறையைப் பின்பற்றுகின்றனர்.{5,6}பழங்காலத்தைச் சேர்ந்த பிரம்மவாதி முனிவர்களால் கடைப்பிடிக்கப்பட்ட இந்தப் புனித தொடக்கத்தை அறிந்தவர்கள் நித்திய பண்பை {அறத்தை} அடைகிறார்கள்.{7} ஒருவன், வேதங்களில் முற்றாகத் தேர்ச்சி அடையாமல் ஒருவன், இல்லற வாழ்வுமுறையை {கிருஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றக்கூடாது, மிகக் கடினமான பிரம்மசரிய வாழ்வையும் வாழக்கூடாது, அவன் துறவியின் வாழ்வையும் வாழக்கூடாது, இல்லறவாசியின் கடமைகளையும் கைவிடக்கூடாது. வேதங்களில் தேர்ச்சியடையாமல் துயரங்கள் ஒருபோதும் முடியாது. சாம, யஜுர் வேதங்களை உரைப்பவர்கள் ரிக் வேதத்தை அடைகிறார்கள்.{8,9} இல்லறவாசிகளைப் போல வாழ விரும்பும் பிராமண தவசிகள் {சந்நியாசிகள்}, தங்கள் ஆசான்களிடம் இருந்து வேதாந்த வழிமுறைகளைப் பெற்றுக் கொண்டு அதன் பலன்களை அறுவடை செய்யலாம்.{10}

பக்திமானாக இருக்கும் ஒரு மன்னன், வேதங்களைக் கேட்காதவனையும், வேத சடங்குகளைச் செய்யாதவனையும் ஒரு சூத்திரனாகச் செயல்படும்படி வற்புறுத்த வேண்டும்.{11} மறுபுறம், பிராமணர்களில் வேதங்களை மதிக்காதவர்கள் எவரும் இருப்பதில்லை என்பதாலும், ஒரு மாணவனாகவோ {பிரம்மசாரியாகவோ}, இல்லறவாசியாகவோ {கிருஹஸ்தனாகவோ} இருக்கும் ஒவ்வொரு பிராமணனும் தன் கடமைகளின் விளக்கத்தைக் கேட்கும்போது தன் மனத்தைக் கட்டுப்படுத்தி வேதங்களைப் படித்து, போதனைகளைப் பெறுகிறான் என்பதாலும், எந்த மன்னனும் ஒரு பிராமணனை அவமதிக்கக்கூடாது.{12-14} எனவே, சாத்திரங்களின் அறிவை அடைந்தவனும், அனைத்தையும் கடந்த ஆழ்நிலை அறிவை ஈட்டியவனுமான ஒரு பிராமணன், இவ்வாறே வேதங்களைப் படித்துத் தன் புலன்களை அடக்க வேண்டும்” என்றார் {வைசம்பாயனர்}.{15}(3-15)

தேவாசுரப் போரின் தொடக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 23-(ஈஷபக்திமாஹாத்ம்யம்)-கசியபரையும், அவரது மகன்களையும் வேள்வி செய்யத் தூண்டிய பிரம்மன்; தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் தொடங்கிய போர்; விஷ்ணு கொடுக்கும் சத்வ குணம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “வேதங்களை நன்கு அறிந்தவர்களும், சடங்குகளை {செயல்களைத்} தவிர்த்ததால் பாவங்கள் அண்டாதவர்களும், நாரதரின் தலைமையிலானவர்களுமான ரிஷிகளும், கந்தர்வர்களும், அந்தப் பிராமணர்களின் முன்னிலையில் சூரியனையும், சந்திரனையும் நிறுத்தி அவர்களை வழிபட்டனர். மேலும் அவர்கள் தந்தையைத் துதிக்கும் ஒரு மகனைப் போல எப்போதும் பெரும்பாட்டனை {பிரம்மன்} வழிபட்டனர்.

ஐம்புலன்களையும் அடக்கிய அந்தப் பிராமணர்களின் இனிய சொற்களால் துதிக்கப்பட்டவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் எப்போதும் நன்மையைச் செய்பவனும், அவை நன்றாக இருக்க வேண்டுமென எப்போதும் விரும்புகிறவனுமான தலைவன் பிரம்மன், “(நீங்கள் அந்த வேள்விகளை மேற்கொண்டது) நற்பேற்றினாலேயே” என்றான்.(1-4)

அப்போது எல்லாம்வல்லவனான அந்தத் தலைவன் {பிரம்மன்}, கசியபரிடம், “நீயும், உன் மகன்களும் பூமியில் வேள்விகளைச் செய்வீர்களாக. யக்ஷர்கள், மற்றும் அசுரர்கள் அனைவரும் ஏராளமான கொடைகளுடன் வேள்விகளைச் செய்வார்கள்” என்றான்.{5,6}

பலத்தின் செருக்கில் மிதந்து கொண்டிருந்த தைத்தியர்களும், தேவர்களும், ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, “நாங்களே முதலில் வேள்விகளைச் செய்வோம், நாங்களே வழிபடுவோம்” என்று சொல்லி, ஒருவரோடு ஒருவர் போரிட இருந்தனர்.{7,8}

தவங்களாலும், துறவுகளாலும் பாவம் கழுவப்பட்டவர்களான ரிஷிகளும், வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் நன்கறிந்த பிராமணர்களும் அவர்கள் அனைவரையும் தடுத்தனர். அவ்வாறு தடுக்கப்பட்டாலும், கோகுலத்தில் உள்ள காளைகளைப் போல அவர்கள் ஒருவரோடு ஒருவர் போரிடத் தொடங்கினர்.{9,10}

அவர்கள் வேள்விகளை ஒதுக்கி வைத்துவிட்டு பேராவலுடன் போரிடத் தொடங்கினர். போர் தொடங்கியபோது அவர்கள் தங்கள் உயிர் மூச்சை வெல்லும் விருப்பங்கொண்டு உயிரினங்கள் அனைத்தின் முன்னிலையில் மாண்டனர்.{11} அதன் பிறகு, அந்த அசுரர்களும், சுரர்களும் {தேவர்களும்} தங்கள் புத்தியினாலும், உண்மை ஞானத்தில் விளைந்த பற்றின்மையாலும் புற புலன்களைக் கட்டுப்படுத்தி, சிறகுகளுடன் கூடிய பறவைகளைப் போலத் தங்கள் மனங்களைக் கட்டுப் படுத்தினர்.{12}

அப்போது, மனித கனத்தின் அழுத்தத்தால் மூழ்கும் படகைப் போலவே வேள்விக் களங்களும் உலகம் சார்ந்த நோக்கங்கள் எனும் தழல்களால் கலங்கடிக்கப்பட்டன. முழங்கும் காளைகளைப் போல யோகத்தோற்ற அமைவுகள் உடைக்கப்பட்டு, உயிர் மூச்சுகளால் குழாய்கள் கலங்கடிக்கப்பட்டன.{13,14}

அதன் பிறகு, அறிவுசார் புலங்கள் கலங்கிய {புத்தி கலங்கிய} மதுவும், சத்வ குணத்தை ஒத்தவனான விஷ்ணுவும் ஒரு யுக சுழற்சியைக் கிட்டத்தட்ட புரட்டியதும், அனைத்து, உயிரினங்களுக்கும் அச்சத்தை உண்டாக்கியதுமான ஒரு பயங்கரப் போரில் ஈடுபட்டனர்.{15} அப்போது, தீப்பற்றி எரியும் காட்டைத் தணிக்கும் மேகத்தைப் போல விஷ்ணு மனோசக்திகள் அனைத்தையும் கட்டுப்படுத்தினான். அந்தத் தலைவனின் {விஷ்ணுவின்} பெயரைச் சொல்பவன், தன் மனத்தைக் கட்டுப்படுத்திய பிறகு சத்வ குணத்துடன் தோன்றுகிறான்” என்றார் {வைசம்பாயனர்}[1].{16}(15-16)

மது அசுரன் – விஷ்ணு போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 24-(மோஹவிவேகயோர்யுத்தம்)-இந்திரனைக் கட்டிப்போட்டு விஷ்ணுவை எதிர்த்துச் சென்ற அசுரன் மது; இசையில் மயங்கிய மது; விஷ்ணுவுக்கும் மதுவுக்கும் இடையில் நடைபெற்ற போர்; மது விஷ்ணு எனும் உருவகம்; விஷ்ணுவின் பெருமை; விஷ்ணு துதி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பயங்கர சக்தியும் பேராற்றலும் மிக்கத் தைத்தியன் மது, கூரிய வடங்களைக் கொண்டு அந்த மலையில் மகேந்திரனைக் கட்டிப்போட்டான்.[1](1) இந்திரனின் கௌரவத்தை அடைய விரும்பிய மது, பிரஹ்லாதனுடைய சொற்களின்படியும், உண்மையான புத்தியின் வீழ்ச்சியாலும் திடீரென அவனை {இந்திரனை} வெல்லப்பட முடியாத இரும்பு வடங்களால் கட்டிப்போட்டான்; அதன் பிறகு தன் படைக்குத் தலைமையேற்று வெளியே வந்த அவன் {மது}, காலனால் தூண்டப்பட்டவனாகப் பேராற்றல் வாய்ந்த விஷ்ணுவைப் போருக்கு அழைத்தான்.(2-4)கசியபரின் மகன்கள், தங்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு மதுவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தனர். அவர்கள் பெரும் தண்டங்களை எடுத்துக் கொண்டு போரிடுவதற்காக விரைந்து சென்றனர். பாடும் கலையிலும், ஆடற்கலையிலும் தேர்ந்திருந்த கந்தர்வர்களும், கின்னரர்களும், அனைத்துப் பக்கங்களிலும் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருந்தனர். தந்தி இசைக்கருவிகளின் இனிய இசையால் அவர்கள் போரிட்டுக் கொண்டிருந்த மதுவை {மது அசுரனை} நிறைவடைச் செய்து அவனது கவனத்தைச் சிதறடித்தனர். தானவர்களும், தேவர்களும் ஒருவரையொருவர் கண்ட போது, மது பாடுவதில் தன் மனத்தை நிலைநிறுத்திக் கதறிக் கொண்டிருந்தான். மரத்திற்குள் கமுக்கமாக வாழும் நெருப்பைப் போல விஷ்ணுவும் தன் யோகக் கண்களால் மதுவின் மனத்தைப் புலன் நுகர் பொருட்களில் ஈர்த்து மந்தர மலையில் மறைந்தான். {தீ போல} எரியும் புத்தியைக் கொண்ட ரிஷிகள் சற்றே மனம் வருத்தமுற்றுப் பெரும்பாட்டனைத் தங்கள் முன்னிலையில் கொண்டு ஒரு கணத்தில் மறைந்தனர்.(5-11)

கோபத்தால் தூண்டப்பட்டவனும், {இசை எனும்} போதையால் கண்கள் சுழல்பவனுமான மது, தன் கைகளால் விஷ்ணுவின் நெற்றியைத் தாக்கினாலும் அவன் ஒரேயொரு அடியைக் கூட விட்டு நகரவில்லை.(12) விஷ்ணுவும் தன் விரலின் நுனியால் தைத்தியன் மதுவின் மார்பில் தாக்கியபோது அவன் குருதியைக் கக்கி பூமியில் விழுந்தான். நினைத்தற்கரிய ஆற்றலைக் கொண்டவனும், போரில் திறன்மிக்கவனுமான விஷ்ணு, மற்போருக்கான நேரத்துக்காகக் காத்திருந்தாலும், அந்தத் தைத்தியன் வீழ்ந்தபோதும் அவனைத் தாக்கவில்லை. தரையைத் தன் முழங்காலால் தீண்டித் தன்னைத் தாங்கிக் கொண்ட தைத்தியன் மது இந்திரனின் கொடிக்கம்பத்தைப் போல எழுந்து நின்றான். கோபத்தில் நிறைந்த மனத்தைக் கொண்டவனான அவன், தன் கண்களால் திக்குகள் அனைத்தையும் எரித்தான். அதன் பிறகு அவர்கள், கடுஞ்சொற்களைச் சொல்லி முழங்கி, ஒருவரையொருவர் கொல்லவிரும்பி மற்போரில் ஈடுபட்டனர்.(13-16) அவ்விருவரும் கைகளின் பலத்தையும், போரில் திறத்தையும் கொண்டவர்களாகவும், பெரும் தவசிகளாகவும், வாய்மை நிறைந்தவர்களாகவும் இருந்தனர். அந்தப் பெரும் வீரர்கள் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பாறைகளைச் சிறகுகளாகக் கொண்ட இரு மலைகள் ஒன்றோடு ஒன்று மோதுவதைப் போல அது தெரிந்தது. போர்வெறிக் கொண்ட அவ்விருவரும் நிலத்தில் ஒருவரோடொருவர் போரிட்டனர். இரு யானைகள் தங்கள் தந்தங்களைக் கொண்டு போரிடுவதைப் போலவே அவர்கள் தங்கள் நகங்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கினர்.(17-19)

கோடை காலம் நிறைவடைந்து, மழைக்காலத் தொடக்கத்தில் வேறு கனிமப் பொருட்களுடன் கலந்த தங்கம் மலைகளில் இருந்து வெளியேறுவதைப் போலவே குருதியும் காயங்களில் இருந்து ஏராளமாக வெளியேறிற்று. வெளியேறும் குருதியுடன் கூடிய அவர்கள் தங்கள் கால்களால் பூமியின் பரப்பைக் கிழிக்கத் தொடங்கினர். ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அந்த வீரர்கள் இருவரும், ஊனுண்ண விரும்பும் பறவைகள் தங்கள் சிறகுகளால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போலப் போரிட்டனர். விஷ்ணுவின் மகிமைகள் எனும் வாய்மையையும், ஆன்ம சக்திகள் அனைத்தையும் சித்தர்கள் பாடிக் கொண்டிருப்பதை உயிரினங்கள் கேட்டன[2].நெருப்பு, நீர், நிலம் {பூமி} என்ற பூதங்களால் இந்த உடல் அமைந்திருக்கிறது. அதன் பிறகு நனவுநிலையானது அந்த உடலில் நிறுவப்படுகிறது. நனவுநிலையில் உடலும், புலன்களும் கலந்த பெரும்பிரம்மமே ஜீவன் என்று அழைக்கப்படுகிறது. நுட்பமான அந்தக் காரணம் {ஜீவன்} அழியும்போது, அடிப்படை பூதங்கள் அனைத்தும் அதில் இருக்கத்தான் செய்கின்றன, அதே நுண்சாரப் பொருட்களே பலவடிவங்களில் மீண்டும் தோன்றுகின்றன. நுண்ணாத்மாவானது உடலின் தொடர்பில் இருந்து பிரிந்தாலும், நனவுநிலையாக மூவுலகங்களில் பொருட்கள் அனைத்திலும் படர்ந்தூடுருவி அவற்றை அனுபவிக்கிறது. தீயோரை ஒடுக்குவதற்காகவும், நல்லோரைப் பாதுகாப்பதற்காகவும் யோகமாகவும், தியு லோகத்தின் பாதுகாவலனாகவும் இருக்கும் ஈஷ்வரனானவன், மனிதன், சேஷன், ஆமை என்றும், இன்னும் பல வடிவங்களையும் ஏற்று, பூமியைத் தாங்கும் அனந்தனையும், நான்கு வேதங்களாக இருக்கும் தன்னையும் ஒருசேர ஆதரிக்கிறான். வேதங்களாகப் பிராமணர்களில் இருப்பதைப் போலவே க்ஷத்திரியர்களில் போர்க்கலையாகவும், வைசியர்களில் வணிகமாகவும், சூத்திரர்களில் தொண்டாகவும் தலைவன்  நீடித்திருக்கிறான்.(20-29)

பசுக்களில் வாழும் தலைவன் உங்களுக்கு மத்தியில் பாலைப் பகிர்ந்தளித்து உங்களை நீடித்திருக்கச் செய்கிறான். வேள்விப் பொருட்களில் நிலைத்திருக்கும் அவன் கனிகளால் உங்களையும், ஹவியின் புகையால் பித்ருக்களையும், ஹிவர்பாகத்தால் தேவர்களையும் பாதுகாக்கிறான்.(30) தலைவன், பித்ருக்களுடன் கூடியவனாக நான்கு பூதங்களையும், ஏழு வகை உணவுகளையும் கொண்டு மூவுலகங்களையும் பாதுகாக்கிறான்.(31) வெளிப்பட்டும், வெளிப்படாமலும் இருக்கும் சூரியனும் சந்திரனும், தங்கள் சக்தியின் மூலம் அந்த ஏழுவகை உணவுகளின் வடிவமாகின்றன.(32) மனம், சொற்கள், உயிர்மூச்சுகள் ஆகிய மூன்றும் தொடர்ந்து சூரியனைப் பெருகச் செய்கின்றன; எஞ்சிய நான்கும் சந்திரனைப் பெருகச் செய்கின்றன.(33) மூவகையினராக இருக்கும் பித்ருக்கள் தங்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் உணவுப் பிண்டங்களைக் கெடுக்கின்றனர், எஞ்சிய நால்வகையினர் அவற்றை ஏற்கின்றனர்.(34)

பொன்னானது காதுகுண்டலமாவதைப் போல நீ ஐம்புலன்களில் மறைந்திருக்கிறாய்; நீ அகந்தையிலும் பிற கோட்பாடுகளிலும் வாழ்கிறாய்; நித்தியமானதும், அழிவற்றதுமான பிரம்மத்தில் இருந்து நீ வெளிப்பட்டாய்.(35) நெருப்பும், காற்றும் உன்னிலிருந்தே சக்தியைப் பெறுகின்றன; ஏனெனில், ஆதித்யன் என்றழைக்கப்படும் உன்னிலிருந்த தங்கள் சக்திகளை அவை பெறுகின்றன.(36) யுக முடிவின்போது நீ உன் கதிர்களால் அண்டத்தை விழுங்கிவிடுபவனைப் போல அதை எரிக்கிறாய்; அதன் மூலமே நீ உயர்ந்த ஆன்ம சக்தியை அடைகிறாய்.(37) அமாவாசையிலும் (நிலவு முற்றாகப் புலப்படாதபோதும்), பௌர்ணமியிலும் {நிலவு முழுமையாகப் புலப்படும்போதும்}, சூரியன், சந்திரன், வசுக்கள் ஆகியோரின் மூலம் உதித்த ரிஷிக்களுடன் கமுக்கமாக நீ திரிகிறாய்.(38) ஊட்டத்தைக் கொடுக்கும் வேள்விகளைச் செய்யும் நீ, அறத்திற்குக் கேட்டை விளைவிக்காமல் சொர்க்கத்தைக் கொடுக்கிறாய். அமாவாசை, பௌர்ணமிகளில் நீ மரங்களிலும், மூலிகைகளிலும், செடிகொடிகளிலும், பூமியிலும் சந்திரனைப் போலத் தோன்றுகிறாய். மீண்டும் பிறவியை அடைவதற்காக நீ ஒவ்வொரு பக்ஷத்திலும் பிறப்பை எடுக்கிறாய்.(39,40) ஓ! பூதங்களின் தலைவா, நீயாகவே இருப்பவையும், சென்றவையும், மீண்டும் வருபவையுமான உயிரினங்களின் ஊட்டத்திற்காகவே பூமியில் எவையும் நீடித்திருக்கின்றன.(41) பூமியில் நிலவும் தினசரி கடமைகள் அனைத்தும் நீயே. நீயே யஜ்ஞம், நீயே கர்மன், நீயே மந்திரம், நீயே சொற்கள், நீயே ஆத்மா.(42) சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் சூரியன், தெளிந்த சந்திரன் என்ற இரு வழிகள் இருக்கின்றன. சந்திரன் பித்ரு லோகத்திற்குச் செல்லும் வழியாகவும், சூரியன் தேவலோகத்திற்குச் செல்லும் வழியாகவும் இருக்கின்றன.(43)

உயிரினங்களின் வடிவிலும், அழியும் விதிமுறைகளால் வழிநடத்தப்பட்டும் நீ இந்த அண்டத்தில் இருக்கிறாய்; உன் வடிவில் புலன்களை அழித்து எவருக்கும் புலப்படாதவனாக நீ வாழ்ந்து வருகிறாய். தனியாகப் பிறந்தவன் நீயே; புராதனனும், அண்டப் புருஷனும் நீயே; சிதைவற்றவனும், ஒப்பற்றவனும் நீயே; தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனாக இருந்தாலும் நீ விளையாடிக் கொண்டிருக்கிறாய். சக்தியில் நெருப்பைப் போன்றவன் நீயே; காற்றின் வடிவில் திரிபவன் நீயே. நுட்பமான ஐம்பூதங்களால் எப்போதும் சூழப்பட்டவன் நீயே. மனம் மற்றும் புறப் புலன்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஜீவனாக இருப்பவன் நீயே; முக்திக்கான பணியில் தூய புத்தியாக இருப்பவன் நீயே; தினசரி அழிவுக்கான பணியின் ருத்ரனின் வடிவில் இருப்பவன் நீயே. விஷ்ணுவாக இருந்து அண்டத்தைப் பாதுகாப்பவன் நீயே. பல்வேறு வகையினரும், வர்ணத்தினரும் நீயே; கண்கள் மற்றும் புலன்களின் நனவுநிலை நீயே. தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களும், பாவமற்றவர்களும், தங்கள் செயல்களின் மூலம் பெரும்பிரம்மத்தை அடைந்தவர்களும், நண்பரையும், பகைவரையும் ஒன்றாகக் கருதுபவர்களுமான முனிவர்கள் எப்போதும் உனக்குத் தொண்டு புரிகின்றனர்.(44-48)

பல்வேறு சித்தர்களாலும், முனிவர்களாலும் இவ்வாறு துதிக்கப்பட்ட பெரும் விஷ்ணு, ஹயசிர வடிவை நினைத்தான். வேத வடிவையும், தேவ உடலையும் அந்தத் தலைவன் ஏற்றபோது, சிவன் அவனது தலையிலும், பிரம்மன் அவனது இதயத்திலும் இருந்தனர். சூரியக் கதிர்கள் அவனது குண்டலங்களில் இருந்தன, சந்திரனும், சூரியனும் அவனது இரு விழிகளாகினர். வசுக்கள் அவனது ஜங்கங்கள் {தொடைகள்} இரண்டில் இருந்தனர், சித்தர்களும், தேவர்களும் அவனது மூட்டுகளில் இருந்தனர். வேதங்கள் அவனது சொற்களாகவும், மருத்துகளும், வருணனும் அவனது கால் மூட்டுகளாகவும் இருந்தனர். தேவர்களுக்கும் பேரற்புதமாகத் திகழும் இந்தப் பெரும் வடிவை ஏற்ற தலைவன் ஹரி, கோபத்தில் கண்கள் சிவந்தவனாக, மயக்கத்தின் {மோகத்தின்} அடையாளமாகத் திகழும் அந்த அசுரனைத் தாக்கத் தொடங்கினான். வெள்ளாடை உடுத்திய இளங்காரிகையைப் போன்ற பூமியானவள், மதுவின் கொழுப்பு மற்றும் இறைச்சியால் நிறைந்திருந்தாள்.(49-54) எனவே, ஓ! மன்னா, பூமியானவள் மேதினி என்றழைக்கப்பட்டாள், {இது போன்ற} ஆயிரக்கணக்கான அசுரர்களுக்காகவே அவள் தரணி என்ற பட்டப்பெயரையும் பெற்றாள்” என்றார் {வைசம்பாயனர்}.(55)

மதுவைக் கொன்ற விஷ்ணு | பவிஷ்ய பர்வம் பகுதி – 25-(ஆத்மோபாஸநாதிகதநம்)-மலைகளைக் குறித்த வர்ணனை; ஆறுகளின் உற்பத்தி; மழைக்காலமும் வசந்த காலமும்; யோகம்; விஷ்ணு; மாயை; ஆத்மா…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “புஷ்கரையில் மது வீழ்ந்ததைக் கண்ட அனைத்து உயிரினங்களும் அனைத்துப்புறங்களிலும் பாடியும், ஆடியும் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தன.(1) மலைகளில் முதன்மையான சுபார்ஷ்வம் பல்வேறு தாதுப்பொருட்களால் மறைக்கப்பட்ட தன் தங்கச் சிகரங்களுடன் வானத்தைப் பிளப்பதைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது.(2) தாதுக்களால் எங்கும் மறைக்கப்பட்டிருந்த மலைகள் மின்னலுடன் கூடிய மேகங்களைப் போன்ற உயர்ந்த சிகரங்களுடன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தன.(3) அவற்றின் சிகரங்கள் மண்ணாலும், காற்றில் எழுந்த சாம்பலாலும் மறைக்கப்பட்டருந்ததால் பெரும் மேகங்கள் பலவற்றைப் போல அவை தெரிந்தன.{4} மேகங்களால் மறைக்கப்பட்ட சிகரங்களைக் கொண்டவையும், ஏராளமான தங்கத்தை விளைவிக்கும் தங்கள் சிறகுகளால் {தங்கள் மேலிருந்த} மரங்களைச் சிதறடித்தவையுமான மலைகள் ஆகாயத்தில் நிலைத்திருப்பவை போலத் தெரிந்தன.{5,6} பொன் தாதுக்களால் மறைக்கப்பட்ட சிகரங்களைக் கொண்டவையும், சிறகுகள் படைத்தவையுமான மலைகள், காற்றால் மேலெழுந்து சென்று பறவைகள் அனைத்தையும் அச்சுறுத்தின. பளிங்கு {ஸ்படிகம்}, மரகதம் {சூரியகாந்தம்}, நீலமணி {சந்திரகாந்தம்} ஆகியவற்றால் அந்தப் பொன் மலைகள் மறைக்கப்பட்டிருந்தன.{7}

பெரும் மலையான இமயம், வெண்தாதுக்களால் மறைக்கப்பட்டிருந்தது. அதன் {இமய மலையின்} பொன் சிகரங்களும், சிறகுகளும் சூரியக் கதிர்களால் ஒளியூட்டப்பட்ட போது, பல்வேறு வகைகளிலான ரத்தினங்களை அவை வெளிப்படுத்தின.{8,9} பளிங்கால் {ஸ்படிகத்தால்} நிறைந்ததும், வஜ்ரத்தால் கட்டப்பட்ட நுழைவாயில்கள் இரண்டைக் கொண்டதும், பெரும் மலையுமான மந்தரம், தேவலோகத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.{10} பல்வேறு தாதுக்களால் அலங்கரிக்கப்பட்டதும், நுழைவாயில்களைப் போன்ற உயர்ந்த பல சிகரங்களைக் கொண்டதும், இசைக்கருவிகளை இசைக்கும் கந்தர்வர்கள், பாடும் கின்னரர்கள், பல்வேறு முகபாவங்களையும், உடலசைவுகளையும் செய்யும் தெய்வீக காரிகைகள் ஆகியோரால் மறைக்கப்பட்ட மரங்களுடன் கூடியதுமான கைலாச மலையோ விளையாடிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது.{11,12}

மதுவின் {மது அசுரனின்} பாடல், நடிப்பு, நடனம், விளையாட்டு ஆகியவற்றால் அந்தக் கைலாச மலை காமனைப் போல ஆசையைத் தூண்டிக் கொண்டிருந்தது.(13) சூரியக் கதிர்களால் பீடிக்கப்பட்ட மேகங்களைப் போன்ற சிகரங்களுடன் கூடிய நீல மலையான விந்தியத்தைப் போன்றவனும், பூமியின் வடிவத்தைக் கொண்டவனுமான விஷ்ணு, மேரு மலையில் நிலைத்திருந்து, மேகங்களின் மூலம் பூமியில் மழையைப் பொழிந்தான்.(14,15) எழுந்து வரும் மேகங்களுடன் கூடிய மலைகள் தூய நீரையும், பல்வேறு பாறைகளையும், தாது பொருட்களையும் வெளியிட்டன; ஊற்றுகளின் மூலம் அவை பளிங்கு போன்று தெளிந்த நீரை வெளியிட்டன. மழைக்காலம் முடிவடைந்ததும், மின்னலுடன் கூடிய மேகங்களைப் போன்று மரங்களும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டவையாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. யானைகள் பல்வேறு பொன்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மலர்ந்து தொங்கும் கொடிகள், பறவைகள் நிறைந்த மரங்களால் ஆதரிக்கப்பட்டு, காற்றில் அசைந்து ஆடிக் கொண்டிருந்தன. வசந்த காலத்தில், கரையை மோதும் அலைகளைப் போல வலுவான காற்றால் அசைக்கப்படும் கொடிகள், நீர்த்துளிகளைப் போல மலர்களைப் பொழிந்தன. பூமியானது, கனிகளால் மறைக்கப்பட்ட பெரும் மரங்கள் பலவற்றால் மறைக்கப்பட்டிருக்கிறது. தேனையும், பறவைகளையும் விரும்பும் மரங்கள், காமன் வருவதை முன்னறிவிப்பவைப் போலப் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.

மதுவை அழித்தவனும், தெய்வீகனுமான விஷ்ணு, ஓடைகளுடன் கூடிய ஆற்றைப் படைத்தான். ஓடையானவள், பல ஊற்றுகளையும், ஏராளமான நீரையும், அழகிய இடங்களையும் கொண்டிருந்தாள். அவளது கரையில் அமைந்திருக்கும் புனிதத்தலங்கள் {புஷ்கரங்கள்} அழகுடனும், வனப்புடனும் திகழ்ந்தன. தெளிந்த நீர் நிறைந்தவளாகவும், மலர்களின் நறுமணத்தையும் சுமப்பவளாகவும் அவள் இருந்தாள்.(16-23) “உன்னைத் தவிர வேறேதும் இல்லை” என்ற வேதச் சொற்களால் ஞானமடைந்த அவள் யோகியரின் இதயத்திற்குள் நுழைகிறாள். வேதச் சொற்களால் ஞானமடைந்தும், யோகத்தில் கபில வடிவை (அதாவது மூன்று குணங்களும் சமமாக இருக்கும் நிலையை) ஏற்றும் பாலைத் தருகிறாள் (ஆன்ம அறிவியலை வெளிப்படுத்துகிறாள்).(24,25)

புத்தி சார்ந்த புலங்கள் அனைத்தும் அழிவடையும்போது, தூய நனவு நிலை மட்டுமே எஞ்சுகிறது; அண்டந்தழுவிய மூன்று போக்குகள் (குணங்கள்) நுட்பமானதை {ஆத்மாவை} அறிந்து கொள்வதற்காக மட்டுமே உடலை ஏற்கின்றன. அதன்பிறகு, {ஒரு முகமான} குவிந்த மனத்துடன் கூடிய யோகி, மிக உயர்ந்ததும், அற்புதமானதும், நித்தியமானதும், தூய்மையானதுமான ஆத்மாவைத் துதிக்கிறான். தூய ஞானத்தின் வடிவிலான பிரம்மம், பாலைவனத்து நீரைப் போல நனவில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கடந்து படைப்பு முழுவதிலும் படர்ந்தூடுவுகிறது. நன்கு அமைக்கப்பட்ட அழகிய மாயை அந்தத் தெய்வீக ஆத்மாவை {பிரம்மத்தை} மறைக்கிறது. அவித்யை எனும் அத்திரை விலகும்போதுதான் ஒருவனால் ஆத்மாவைக் காண முடியும். அகங்காரம் கொண்ட நனவுநிலையானது ஒரு மலையைப் போல வெல்லப்பட முடியாததாகும். அஃது அண்டந்தழுவிய மூன்று போக்குகளை, அல்லது குணங்களைச் சார்ந்தே இருக்கிறது. நித்தியமாக அது நிலைத்திருக்கிறது, சித்தர்களாலும் கூட அது தொண்டாற்றப்படுகிறது {சித்தர்களும் குணங்களின் வசப்பட்டவர்களாக இருக்கிறார்கள்}” என்றார் {வைசம்பாயனர்}[1].(26-29)

பிருதுவின் பதவியேற்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 26-(பிருதுராஜ்யாபிஷேககதநாதி)-பிருது அரியணையில் நிறுவப்பட்டது; பெருங்கடலைக் கடையும் திட்டம் உருவானது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “உலகம் முழுவதிலும் அகங்காரமும், அறியாமையும் இவ்வாறு நீடித்திருந்தபோது மக்கள் என்ன செய்தனர்?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர், “ரிஷிகளுடன் கூடிய பிரஜாபதி, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் வேனனின் மகனான பிருதுவை அரியணையில் நிறுவினான்.(2) திரேதா யுகம் தொடங்கிய போது, மக்கள் தங்களுக்குள், “இதுவரை பிறந்தவர்களில் இவனே நமது மிகச் சிறந்த மன்னனாவான்.(3) தலைவன் தன்னிடம் ஒப்படைத்த கடமைகளில் நிறைவடைந்தவனாக நமக்கு வாழ்வாதாரங்களை வழங்கி, பிராமணர்களையும், அனைத்து உயிரினங்களையும் இவன் பாதுகாப்பான்” என்றனர்.(4)

அதே வேளையில், பல்வேறு அறவிதிமுறைகளில் சோர்ந்து போன தேவர்கள், கந்தமாதன மலையின் மேட்டுச் சமவெளியில் ஓய்ந்திருந்தனர்.(5) வசந்த காலம் வந்ததும் தேவர்களும், தானவர்களும் அனைத்துப் புறங்களிலும் நறுமணத்தை நுகர்ந்து பெரிதும் நிறைவடைந்தனர்.{6} அவர்கள், “காற்றில் பரவும் மலர்களின் நறுமணம் இனிமைமிக்கதாக இருப்பதால் பூமிசார்ந்த ஒவ்வொரு பொருளின் மணமும் சிறப்பாகவே இருக்கும்” என்று நினைத்தனர்.{7} அந்த நறுமணத்தை நுகர்ந்ததும் தைத்தியர்கள் தொடக்கத்தில் சற்றே ஆச்சரியமடைந்தனர். அதன் பிறகு பெரும் மகிழ்ச்சி அடைந்த அவர்கள் மிகச் சிறந்த இன்ப நிலையை அடைந்தனர்.{8}(6-8)

அதன் மணத்தால் தூண்டப்பட்ட அவர்கள் அனைவரும் ஒருசேர, “ஒவ்வொரு மலரின் சக்தியும் இவ்வாறே இருக்கிறது; இதன் கனி {பயன்} என்னவென்பதை நாம் அறியோம்.(9) ஊகத்தின் மூலமே பல்வேறு செயல்முறைகளும் கண்டறியப்பட வேண்டும். இந்தப் புத்தியின் சக்தியால் மனிதர்கள் மங்கலச் செயல்களையும், மங்கலமற்ற செயல்களையும் {நன்மை தீமைகளைச்} செய்கிறார்கள்.(10) விரும்பிய வடிவங்களை ஏற்கவல்லதும், சக்திமிக்கதுமான மந்தர மலையைக் கொண்டு, நீரில் மூலிகைகளை இட்டு நாம் அரைப்போம்[1].(11) பெருஞ்சக்தியுடன் நாம் பெருங்கடலைக் கடைந்து, அமுதத்தைப் பருகி, அவித்யை அல்லது அறியாமையை அழிப்பதற்காக ஒருசேர நம்மை ஆயத்தம் செய்து கொள்வோம்.(12) நாம் வழிபடும் பெருஞ்சக்தியான விஷ்ணு, (யோகத்தில்) நமது வழிகாட்டியாக இருப்பான். ரிபுக்களுடன் (ஆசைகளுடன்) நாம் வாழ்ந்து வந்தாலும், அவற்றை வென்று தியுலோகத்தையும், பூர்லோகத்தையும் அனுபவிப்போம்.(13) வேர்கள், இலைகள், கிளைகள், மலர்கள், கனிகள்[2] ஆகியவற்றுடன் நாம் பூமிக்கு அமுதத்தைக் கொண்டு செல்வோம்” என்றனர்.(14)மந்தர மலையைப் பெயர்ப்பதைக் குறித்து இவ்வாறு பேசிய தைத்தியர்கள், கந்தமாதன மலையில் விளைந்த மூலிகைகள் அனைத்தையும் பிரித்தெடுத்தனர். பிறகு, மந்தர மலையைப் பெயர்த்தெடுக்க ஓடி பூமியை நடுங்கச் செய்தனர். தனுவின் குலத்தில் பிறந்த தானவர்களால் மந்தர மலையைப் பெயர்க்க முடியவில்லை. அவர்கள் தங்கள் முழங்கால்கள் நொறுங்கி மலையின் வெற்றிடங்களில் விழுந்தனர்.(15-17)

அதன்பிறகு அவர்கள், தவங்களின் மூலம் தங்கள் பாவங்களைச் சிதறடித்து, உரிய புத்தியின் மூலம் தங்கள் சுயத்தைக் கட்டுப்படுத்தி, ஈஷ்வரனிடம் தலைவணங்கி அவனது புகலிடத்தை நாடினர்.(18) எல்லாம் வல்லவனும், தற்கட்டுப்பாடுடையவனும், உலகங்கள் அனைத்தின் நன்மைக்காக எங்கும் செல்லவல்லவனுமான பிரம்மன், அவர்களின் மனத்தில் உள்ள ஆசையை அறிந்து, புலப்படாத குரலில் {அசரீரியாக},(19,20) “ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், மருத்துகள், தேவர்கள், யக்ஷர்கள், கந்தர்கள், கின்னரர்கள் ஆகியோர் ஒன்றுசேர்ந்து மந்தர மலையைப் பெயர்த்தெடுத்து, இமயத்தின் சாரமாக இருக்கும் மூலிகைகளை அடையட்டும்” என்றான்.(21-23)

கரவலிமையுடன் கூடியவர்களான தைத்தியர்கள், அனைவரின் முன்னிலையில் சொல்லப்பட்ட அந்தச் சொற்களைக் கேட்டு, தேவர்கள், தானவர்களென அனைவராலும் நிறுவப்பட்ட புஷ்கரம் இருக்கும் உப்புநீர் பெருங்கடலின் அருகில் மனத்தாலும், சொற்களாலும் தங்களைப் பலராகப் பெருக்கிக் கொண்டனர். (24,25) அவர்கள், மந்தர மலையை மத்தாக்கி, வாசுகியை வடமாக்கி மூலிகைகளுடன் கூடிய உப்புநீர் பெருங்கடலை ஆயிரக்கணக்கான வருடங்கள் கடைந்தனர். நீர் மற்றும் மூலிகைகளின் கலவையுடன் அமுதமானது பாலின் வடிவில் உண்டானது.(26,27)

அதன் பிறகு, தன்வந்தரி, ஸ்ரீதேவி, தெளிந்த சந்திரன் ஆகியோர் எழுந்தனர், மது, கௌஸ்துப மணி, உச்சைஷ்ரவமெனும் அழகிய குதிரை ஆகியவையும், பாலும் எழுந்தன. பேராசையாலும், கோபத்தாலும் பீடிக்கப்பட்ட அசுரர்கள் அமுதத்தைக் கொள்ளையடித்தனர்.{28,29} அதை எடுப்பதற்காகத் தேவர்கள் ராஹுவிடம், “தைத்தியர்களிலும், தானவர்களிலும் எவரும் அமுதத்தைப் பருகவில்லை” என்று சொன்னார்கள்.{30} அதன்பிறகு ஹரி தன்னுடைய சக்கரத்தால் ராகுவின் தலையை அறுத்தான். பித்ருக்களாலும், முனிவர்களாலும் கூட நிரந்தரமாக அனுபவிக்க முடியாத அமுதம் போன்ற ஞானத்தை இந்திரனின் கைகளில் இருந்து பூமி பறித்துக் கொண்டது.{31} வேத சொற்றொடர்களால் தூண்டப்பட்டும், சீடத்துவத்தை {இந்திரனை குருவாக} ஏற்றுக் கொண்டும் ஞானமெனும் அமுதத்தைப் பூமி அபகரித்துக் கொண்டது” என்றார் {வைசம்பாயனர்}{32}.(28-32).

பலியின் அழிவு | பவிஷ்ய பர்வம் பகுதி – 27-(ஹிரண்யகஷிபோ ராஜஸூயவர்ணநம்)-பலியின் வரம்; விஷ்ணு பெற்ற பிச்சை; இந்திரனின் அரசுரிமை…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “தைத்தியர்கள் விஷ்ணுவின் சக்தியால் கொல்லப்பட்டனர்; ஆனால் அவர்கள் பெருஞ்சக்தியுடன் வளர்ந்தபோது என்ன செய்ய விரும்பினார்கள்?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர், “பெருஞ்சக்திவாய்ந்த தானவர்கள், தங்கள் ஆற்றலின் விளைவால் அரசை {உலகை ஆளும் அரசுரிமையை} வேண்டினர், வாய்மை நிறைந்த சூரர்கள் {தேவர்கள்} கடுந்தவங்களைச் செய்ய விரும்பினார்கள்.(2)

ஜனமேஜயன், “ஹிரண்யகசிபு குலத்தில் பிறந்த பலி, பழங்காலத்தில் தலைமைத்துவ சக்திகளை அடைந்து, கங்கைக்கும், யமுனைக்கும் இடைப்பட்ட நிலத்தில் நீண்ட நாள் நீடித்த வேள்வியை ஏன் செய்தான்?” என்று கேட்டான்.(3)

வைசம்பாயனர், “ஓ! பாரதக் குலத்தில் பிறந்த பெரும் மன்னா {ஜனமேஜயா}, பெருஞ்சக்திமிக்கவனும், தானவர்களில் முதன்மையானவனுமான பலி, கங்கைக்கும், யமுனைக்கும் இடையில் அமைந்த நிலத்தில் ஏராளமான பொன்னுடன் ராஜசூய வேள்வியைச் செய்தான். அஃது அவனுக்குப் பெருந்தவமாக இருந்து. அந்தப் பேரசுரன் யஜ்ஞம் {வேள்வி} செய்ய முனைந்தபோது, துறவையும் நோன்புகளையும் நோற்றுவந்தவர்களும், வேதங்களை நன்கறிந்தவர்களுமான பிராமணர்கள் பலரும், திறன்மிகு யதிகளும், வாலகில்ய முனிவர்களும், அறச்சடங்குகள் பலவற்றைத் தினமும் செய்து வந்த இருபிறப்பாளர்கள் பலரும் ஒரு சேர அங்கே வந்து சேர்ந்தனர். அந்த வேள்வியில் ஆடம்பரக் கொடைகள் வழங்கப்பட்டன. பிராமணர்களுக்கு மத்தியில் நெருப்பைப் போன்றவரான ஆசான் சுக்ரர் {சுக்ராச்சாரியர்}, பலியின் சார்பாகப் புரோஹிதராகச் செயல்படத் தமது மகனுடன் அங்கே வந்து சேர்ந்தார்.

தைத்தியர்களில் ஹிரண்யகசிபுவைப் போன்ற பலி, சரஸ்வதியிடம், “எனக்கு வரமளிப்பதாக நீயே சொல்லியிருக்கிறாய். அதை இப்போது தருவாயாக” என்றான்.(4-10)

குள்ளனின் வடிவில் இருந்த விஷ்ணு, தன்னுடைய மூன்று அடிகளை வைக்கும் நிலத்தை ஹிரண்யகசிபுவின் வழித்தோன்றலிடம் {பலியிடம்} இருந்து பிச்சையாகப் பெற்றான்.(11) அதன்பிறகு நித்தியனான விஷ்ணு, தனது காலடிகள் மூன்றால் மூவுலகங்களையும் அளந்து ஒரு தெய்வீக வடிவை ஏற்றான். தங்கள் அரசை இழந்த தைத்தியர்கள், தங்கள் படைவீரர்கள், பராசங்கள், வாள்கள், தோமரங்கள், தண்டங்கள், கொடிகள், கொடிக்கம்பங்கள், தேர்கள், கவசங்கள், உறைகள், கோடரிகள் ஆகியவற்றுடனும், பிற ஆயுதங்களுடனும் பாதாள லோகத்தில் நுழைந்தனர்.

மறுபுறம், மகிழ்ச்சியால் நிறைந்திருந்த தேவர்கள், விஷ்ணுவுடன் சேர்ந்து உடனே எழுந்து, மூவுலகங்களிலும் தங்கள் அரசுரிமையை நிலைநாட்ட இந்திரனைத் தங்கள் மன்னனாக நிறுவினர். பலி, அமுதம் கொடுத்து அவர்களை {தேவர்களை} நிறைவடையச் செய்தான். பிரம்மன் அந்த அமுதத்தை மஹேந்திரனிடம் கொடுத்தான். இந்தச் செயலால் பலி தன் பாவங்களை அழித்து இறவாதவனாக {தேவனாக} ஆனான்.(12-16)

தேவர்கள் அனைவரிலும் முதல்வன் {இந்திரன்}, பிரம்மனின் கைகளில் இருந்து எழுந்த சங்கை முழக்கினான். அந்த முழக்கம் பகைவருக்கு மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அந்தச் சங்கின் முழக்கத்தைக் கேட்டு மூவுலகத்தினரும் கட்டுப்பட்டு, இந்திரனைத் தங்கள் மன்னனாக அடைந்து பேரமைதியை அனுபவித்தனர். மூவுலகங்களும், நெருப்பாலும், ஒளியாலும் அமைந்த ஆயுதங்கள் தரித்து மந்தர மலைக்கு முன்பாக நின்றன” என்றார் {வைசம்பாயனர்}.(17-19).

தக்ஷ வேள்வியின் அழிவு | பவிஷ்ய பர்வம் பகுதி – 28-(தக்ஷயஜ்ஞவிநாஷம்)-குதிரைவேள்வி செய்த தக்ஷன்; ருத்திரனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் நடந்த போர்; அவிர்ப்பாகம் பெற்ற ருத்திரன்; பௌஷ்கரப் புராணம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! பாரதா, அதன் பிறகு அவர்கள் அனைவரும் அமைதியுடன் வாழ்ந்தனர், செழிப்பான அரசும் நிலைநாட்டப்பட்டது. அந்நேரத்தில் ஆன்ம அறிவியலின் அறிவைப் பொறுத்தவரையில் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லாததால் அவர்கள் ஒன்றாகவே ஆத்ம ஞானத்தை விளைவித்தனர். மறுபுறத்தில் பலர் அழுதனர்; மனிதர்களால் அளிக்கப்படும் வேள்விக் காணிக்கைகளைத் தேவர்கள் ஏற்றனர்.(1,2)

தெய்வீக பிருஹஸ்பதி, தக்ஷ பிராசேதஸிடம் குதிரை வேள்வி செய்யுமாறு அறிவுறுத்திவிட்டு, ரிஷிகள் சூழ அங்கே வந்தார்.{3} தக்ஷன் அனைவருக்கும் தாய்வழி தாத்தன் ஆவான். எனவே, ஆன்ம அறிவற்ற தக்ஷனின் யஜ்ஞத்தில் ருத்திரன் நந்தியுடன் சேர்ந்து தன்னாலான தடைகளை ஏற்படுத்தினான்.{4} ருத்திரன் தானே விரும்பி தன்னை இரண்டாகப் பகுத்துக் கொண்டான். {இதன் மூலம்} பெரும் தர்மாத்மாவான நந்தி புருஷனாகப் பிறந்தான்.{5} வேதங்களில் சிறப்பாகப் பாடப்பட்டுள்ள நித்திய பிரம்மத்தை ருத்திரன் தன் யோக சக்தியின் மூலம் வெளிப்படுத்தினான்.{6}(4-6)

ஸ்வரூபன், அரூபன் {சாப்யரூபன்}, விரூபாக்ஷன், கடோதரன், ஊர்த்வநேர்தன், மஹாகாயன், விகடன், வாமனன்,{7} ஷிகி, ஜடி, திரிலோசனன் {திரையக்ஷன்}, சங்குகர்ணன், சீரதாரி, சர்மி முதலிய பல்வேறு கணங்களும், பாசக்கயிறுகளைத் தரித்தவர்களும், தண்டபாணிகளும் {முத்கரபாணிகளும்},{8} மணிகளைத் தரித்தவர்களும் {ஸகண்டாதாரிகளும், முஞ்ஜமேகலதாரிகளும்}, குண்டலங்களையும், கடகங்களையும் அணிந்தவர்களும் {கடககுண்டலதாரிகளும்},{9} டிண்டிகள், பேரிகைகள், புல்லாங்குழல்கள், மிருதங்கங்கள் ஆகியவற்றைச் சுமந்தவர்களும் சூழ தக்ஷனின் வேள்வியைத் தடுக்க ருத்திரன் விரைந்து சென்றான்.{10}

பூதகணங்கள் தங்கள் கைகளில் சங்கையும், முரஜத்தையும் {முரசையும்}, தாலபலத்தையும் கொண்டிருந்தனர். திரிசூலத்தையும், கடும் ஆயுதங்கள் பிறவற்றையும் தரித்தவனும், வேள்வி செய்பவர்களால் வழிபடப்படுபவனுமான ருத்திரன், அந்த வேள்வியில் எரியும் தழலைப் போல ஒளிர்ந்தான். அழிவை ஏற்படுத்த எரியும் நெருப்பானது {காலாக்னியானது}, அண்டத்தையே விழுங்கிவிடப் போவதாகத் தெரிந்தது.{11,12} யுகமுடிவில் காலாக்னியானது மொத்த அண்டத்தையும் உடனே எரித்துவிடுவதைப் போல, நந்தியும், பிநாகபாணியும் {சிவனும்} அந்தச் சிறந்த வேள்வியை அழிக்க இருந்தனர்.{13} இரவுலாவிகள் {கணங்கள்}, மரவுரி தரித்த முனிவர்களை அச்சுறுத்தும் வகையில் வேள்வியூபங்களைப் பிடுங்க விரைந்து சென்றன.{14} தாமிரக் கண்களைக் கொண்ட பிரமதர்கள், தங்கள் நாவுகளால் வேள்விக் காணிக்கைகளை {ஹவிஸுகளைப்} பருகினர்.{15} யானைகளின் துதிக்கைகளைப் போன்ற நீண்ட நாவுகளைக் கொண்ட பிறர், விலங்குகளை விழுங்கத் தொடங்கினர். சிலர் யூபங்களைப் பிடுங்கி விலங்குகளைத் தாக்கினர்.{16} சிலர் நெருப்புக்குள் நீரை வீசிச் சிரித்தனர்; ஜவா மலர்களைப் போல ஒளிரும் சிவந்த கண்களுடன் கூடிய சிலர் சோமச் சாற்றை அபகரித்துச் சென்றனர். சிலர், தாமரைத் தண்டுகளுக்கு ஒப்பான தங்கள் கைகளால் தர்ப்பை புற்களை வெட்டினர்.{17} சிலர், வேள்விஸ்தம்பங்களை நொறுக்கினர், வேறு சிலர் கலசங்களை வீசி எறிந்தனர். வேள்விக்களத்தை அழகூட்ட நிறுவப்பட்ட பொன்மரங்களை {காஞ்சநாந்விருக்ஷங்களைச்} சிலர் வீழ்த்தினர்.{18} சிலர், கணைகளைக் கொண்டு பொன் பாத்திரங்களை நொறுக்கினர். சிலர் பாத்திரங்களை அழித்தனர், வேறு சிலர் அரணியைப் பிடுங்கினர்.{19} சிலர் வேள்விப் பீடங்களை நொறுக்கினர், சிலர் அரிசிப் பிண்டங்களை உண்டனர், சிலர் தங்கள் நகங்களால் பல்வேறு பொருட்களை அழித்தனர்.{20} இவ்வாறு பகலும், இரவும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட அந்தப் பெரும் வேள்வியானது,பெருங்கடலைப் போல முழங்கத் தொடங்கியது.{21}

மறுபுறம் பெருஞ்சக்திவாய்ந்த மஹாதேவன், சுயம்புவான பிரம்மனால் முன்பு தனக்கு வழங்கப்பட்டதும், கீசக மூங்கிலாலானதுமான வில்லை எடுத்துக் கொண்டு, அதில் கணைகளைப் பொருத்தினான்.{22} பிறகு அவன், தனது முழங்கால்களால் வில்லை வளைத்து அந்தப் பெரும் யஜ்ஞத்தைத் தாக்கினான்.{23} கணைகளால் காயமடைந்த அந்தப் பெரும் வேள்வி வானத்தில் தாவிக் குதித்தது; பிறகு ஒரு மானின் வடிவை ஏற்று உரக்க கதறியபடியே பிரம்மனை அடைந்தது.{24} கணைகளால் முக்கிய அங்கங்கள் பிளக்கப்பட்ட வேள்வியானவன், பூமியில் எங்கும் உறைவிடத்தையோ, அமைதியையோ அடையாதவனாகப் பிரம்மனின் புகலிடத்தை நாடினான்.{25}(7-25)

பிரம்மன், மானின் வடிவில் இருந்த வேள்வியிடம், இனிமையான, மங்கலமான, அடக்கமான, சக்திமிக்க, அழுத்தமான சொற்களில், “ஓ! பெரும் மானே, இவ்வாறே நீ வானத்தில் நிலைத்திருப்பாயாக.{26} பல்வேறு வண்ணங்களையும், வளைந்த முடிச்சுகளையும் கொண்ட கணையால் நீ வீழ்த்தப்பட்டாய். எனவே நீ சோமனுடன் சேர்ந்து கிரகங்களுக்குத் தலைமையாக இருக்கும் நித்தியனான ருத்ரனுடன் வாழ்வாயாக. வானத்தில் இயக்கத்தை அடைந்து நட்சத்திரங்களுடன் சேர்வாயாக.{27,28} ஒளியமைப்புகளில் {ஜோதிகளில்} நீ துருவனாக இருப்பாயாக. உன் காயத்தில் இருந்து வெளியேறுவதும், நீ ஓடிக் கொண்டிருப்பதன் விளைவால் வானத்தில் வழிந்து கொண்டிருப்பதுமான இந்தத் தெய்வீகக் குருதி பல்வேறு வண்ணங்களை ஏற்றுக் கேது லோகமாகக் கொண்டாடப்படட்டும். மழைக்காலத்தில் உயிரினங்களுக்கு அது மழைக்கான அடையாள வடிவமாகட்டும்.{29,30} உயிரினங்கள் அதைக் கண்டு மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ அடையட்டும். புலன்களில் அஃது ஓய்ந்திருப்பதன் காரணமாக வானத்தில் இந்திர வில் {வானவில்} என்ற பெயரில் அழைக்கப்படும்” என்றான் {பிரம்மன்}.{31}

ஓ! மன்னா, மேலும் அவன் {பிரம்மன், மானின் வடிவில் இருந்த வேள்வியிடம்}, “மனிதர்களின் கண்கள் அதை ஆச்சரியத்துடன் பார்க்கும். அஃது அற்புதமானதாக, பல வண்ணங்களைக் கொண்டதாக இருக்கும். மேலும் அது மனத்தால் சரியாக வகுக்கப்பட்டதாக இருக்கும்.{32} பிரம்மத்தை உணரும் இதய வானில் அது பெயரால் மட்டுமே அறியப்படும். அஃது இரவில் புலப்படாது. இந்த அற்புத நிகழ்வு பகலின் முதல் பகுதியிலேயே குறிப்பாகக் காணப்படும்.{33} அது பூமியில் இருந்து மேலே எழுந்து வானில் மறையும். அந்த நேரத்தில் வில் தரித்த ருத்திரனிடம் கொண்ட அச்சத்தில் நூற்றுக்கணக்கான தக்ஷ பிரசேதஸ்கள் ஒரே நேரத்தில் தப்பி ஓடுவார்கள்” என்றான் {பிரம்மன்}.{34}

யுகமுடிவில் தோன்றும் பிரம்மதண்டம் போல எரியும் பினாகையுடன் கூடிய நந்தி மற்ற ருத்திரர்களுடன் சேர்ந்து நின்றான்.{35} பெருந்தோள்களைக் கொண்ட விஷ்ணு, ஒரு கையில் பெரும் வில்லுடனும், மறு கையில் சக்கரத்துடனும் அங்கே நின்றான்.{36} ருத்திரனுடன் போரிட விரும்பும் அனைவருக்கும் முன்பு, மற்றொரு கையில் சங்கு மற்றும் கதாயுதத்துடனும், நான்காவது கையில் வாளுடனும் விஷ்ணு நின்று கொண்டிருந்தான்.{37}(26-37) அதன் பிறகு விஷ்ணு, தன் சாரங்க வில்லையும், உலகில் ஒப்பற்ற சங்கையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு, தன் படைவீரர்களுடன் சேர்ந்து போரக்களத்தின் முகப்பில் நின்றான்.{38} அவன், தன் கையுறைகளையும், கவசங்களையும் அணிந்து கொண்டு சந்திரனுடன் கூடிய பெருங்கடலைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.{39}

பிரகாசமிக்க ஆதித்யர்களும், வசுக்களும் தங்கள் தெய்வீக ஆயுதங்கள் பலவற்றுடன் நாராயணனைச் சுற்றி நின்றனர்.{40} மருத்துகளும், விஷ்வர்களும் ருத்திரனின் பக்கம் நின்றனர். கந்தர்வர்கள், கின்னரர்கள், நாகர்கள், யக்ஷர்கள், பன்னகர்கள் ஆகியோரும்,{41} தண்டக்கோலைப் புறந்தள்ளிய முனிவர்களும் இரு தரப்புக்கும் நன்மையை விரும்பினர். உலகங்கள் அனைத்தின் நன்மையை விரும்பிய அவர்கள், அண்ட அமைதிக்காகத் தலைவனின் பெயரைத் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருந்தனர்.{42}

போர்க்களத்தின் முன்னணியில் நின்ற ருத்திரன், கூரிய கணைகளைக் கொண்டு விஷ்ணுவின் மார்பையும், மூட்டுகளையும் தாக்கினான்.{43} அனைவரின் ஆன்மாவாகவும், பிறப்பிடமாகவும் இருக்கும் விஷ்ணு இதனால் கலக்கமேதும் அடையவில்லை. அவன் ஆறு புலன்களையும் கொண்டிருந்தாலும் அவனது மனம் கோபத்தால் பீடிக்கப்படவில்லை.{44} அப்போது விஷ்ணு, கணைகளைப் பொருத்தி தன் வில்லை வளைத்தான். பிரம்மாயுதத்தைப் போன்ற அந்தக் கணையைக் கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் ருத்திரனின் மார்பில் ஏவினான். வஜ்ரத்தால் மந்தர மலை அசைந்தாலும் அந்தக் கணையால் காயமடைந்த மஹாதேவன் நடுங்கினானில்லை.{45,46} நித்தியனான விஷ்ணு திடீரெனக் குதித்தெழுந்து ருத்திரனின் தொண்டையைப் பற்றினான், அதன் விளைவாகவே அந்தத் தேவன் நீலத்தொண்டை கொண்டவன் {நீலகண்டன்} என்ற பட்டப்பெயரைப் பெற்றான்.{47}(38-47)

விஷ்ணு, “பிறப்பும், இறப்பும் அற்றவன் நீ. என்னைப் பொறுத்துக் கொள்வாயாக. அனைத்து உயிரினங்களுக்கும், சாத்திரங்களுக்கும் ஆசான் நீ. உன்னை நான் அறிவேன்” என்றான்.(48)

ஓ! பரதனின் வழித்தோன்றலே, செயல்கள் அனைத்தின் காரணனாகவும், எல்லையற்ற தன்மையால் பூதங்கள் அனைத்திலும் மிகச்சிறந்தவனாகவும் அந்தத் தலைவனே இருக்கிறான்.{49} அவனே அண்டத்தின் பொருள் காரணனாகவும், அதை விளைவிக்கும் காரணனாகவும் இருக்கிறான், அவன் மிக மங்கலமான பணிகளைச் செய்தவன் ஆவான்.{50} அப்போது வானத்தில் இருந்து, சித்தர்களின் வாயில் வெளிவந்த “ஓ! நித்திய தேவா, உன்னை வணங்குகிறோம்” என்ற மிக அற்புதமான சொற்களை நாங்கள் கேட்டோம்.{51}(49-51)

அதன் பிறகு, கிட்டத்தட்ட அருகில் இருந்த ருத்திரனால் பெறப்பட்டவனும், சக்திவாய்ந்தவனுமான நந்தி, தன் பினாகையை உயர்த்திக் கோபத்துடன் விஷ்ணுவின் தலையில் தாக்கினான்.{52} எல்லாம்வல்லவனான தலைவன் ஹரி, தேவர்களில் முதன்மையான நந்தியைக் கண்டு தன் புன்னகையால் அவனைக் கலங்கடித்தான்.{53} சக்தியில் எரிந்து கொண்டிருப்பவனும், வாழ்வின் உயர்ந்த பொருளைக் கொடுப்பவனும், பொறுமையுடன் கூடியவனுமான விஷ்ணு, ஒரு மலையைப் போல உறுதியாக நின்றான்.{54}

வெல்லப்பட முடியாதவனும், ஒப்பற்றவனும், செயலற்ற ஆன்மாவைக் கொண்டவனும், நித்தியனுமான அந்த ஹரி, காலாக்னியைப் போன்ற சக்தி வாய்ந்தவனாக இருந்தாலும், அமைதிப்படுத்தப்பட்டதால் வேள்விக்காணிக்கைகளில் ஒரு பகுதியை நுண்ணறிவுமிக்க ருத்திரனுக்குப் பங்கிட்டு அளித்தான். தேவர்களில் முதன்மையான விஷ்ணு எப்போதும் வெற்றியாளனாகவும், ஆசைகள் அற்றவனாகவும் இருக்கிறான்,{55,56} அவனால் வேள்வி மீண்டும் நிலைநாட்டப்பட்டது. ஓ! மன்னா, விஷ்ணுவுக்கும், ருத்திரனுக்கும் இடையில் நடந்த அந்தப் பயங்கரப்போரில் கணங்கள் முறையே தாங்கள் சார்ந்த தரப்புகளை விட்டு விலகவில்லை.{57} தக்ஷனின் வேள்வி அழிக்கப்பட்ட நேரத்தில் ஒரு நியாயமான போர் நடந்தது. அந்த நேரத்திலேயே வேள்விகளை அழித்தல் உலகில் அறிமுகப்படுத்தப்பட்டது.{58} ஓ! மன்னா, ஆன்ம ஞானமற்றவனாக இருந்த தக்ஷப்ரஜாபதி, தான் செய்த வேள்வியின் பலனாகப் பரமாத்ம ஞானத்தை அடைந்தான்[1].{59}பெரும் விஷ்ணுவின் இந்தத் தாமரை அவதாரமானது, துவைபாயன ரிஷியால் {வியாசரால்} பௌஷ்கரப் புராணத்தில் பதியப்பட்டும், மஹாரிஷிகளால் மேலும் முறையாக மேம்படுத்தப்பட்டும் இருக்கிறது. இந்தப் புராணத்தைக் கவனத்துடன் கேட்பவன், இம்மையில் {இவ்வுலகில்} தான் விரும்பும் பொருட்கள் அனைத்தையும் அடைகிறான்; மேலும் மறுமையில் துன்பமற்றவனாக மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். தூய்மையடைந்தவனாகவும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனாகவும் இருக்கும் அந்தப் பேரறிவாளன், பிராமணர்கள் அனைவரையும் இந்தத் தெய்வீகக் கருப்பொருளைக் கேட்கச் செய்து, ஆன்மக் கருத்துகள் அனைத்தையும் கற்றுணர்ந்து, தேவலோகத்தில் பெரிதும் மதிக்கப்படுகிறான்” என்றார் {வைசம்பாயனர்}.{60-63}(52-63).

மஹாவராஹசரிதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 29-(வராஹப்ராதுர்பாவவர்ணநம்)-வராக அவதார விளக்கம்; யுக முடிவில் அண்ட அழிவு; விஷ்ணுவின் யோகத்துயில்; நாராயண மந்திரம்; விஷ்ணுவின் மகிமை…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்},[1] “பக்திமான்களான தவசிகள் புராணங்களை உரைக்கும்போது, ஒப்பற்ற சக்திவாய்ந்த விஷ்ணுவின் பன்றி அவதாரம் குறித்து நாங்கள் கேட்டிருந்தாலும்,(1) {அவனது வரலாற்றையும்}, அவனது பணிகளையும், சாதனைகளையும், நோக்கத்தையும் குறித்து ஏதும் அறிந்தோமில்லை.(2) அந்தத் தலைவன் வேள்வியின் வடிவமா? யோகத்தின் வடிவமா? அவனது உடல் பூதங்களாலானதா? மாயையால் ஆனதா? அதன் {அந்த அவதாரத்தின்} தலைமை தேவன் ஹரியா? ஹரனா? அவனது ஆற்றலும், ஒழுக்கமும் எப்படிப்பட்டது? பழங்காலத்தில் அவன் என்ன செய்தான்?(3) ஸ்ருதிகளில் பதியப்பட்டிருக்கும் இந்தப் பன்றி அவதாரத்தைக் குறித்துப் பெரியவர்களும், இருபிறப்பாளர்களுமான இவர்களின் முன்னிலையில் விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)வைசம்பாயனர், “ஓ! மன்னா, அறநூல்களில் கிருஷ்ண துவைபாயனரால் {வியாசரால்} விரிவாக விளக்கப்பட்டிருக்கும் பேரற்புதச் செயல்களைச் செய்த கிருஷ்ணனின் பன்றி அவதாரத்தைக் குறித்து {மஹாவராஹசரிதத்தை} நான் சொல்லப் போகிறேன்.(5) ஓ! ஜனமேஜயா, நாராயணன் எவ்வாறு பன்றியின் வடிவை ஏற்றான் என்பதையும், பகைவரைக் கொல்பவனான அந்த ஹரி, ஸ்ருதியின் புனித மந்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட பன்றியின் வடிவை ஏற்று, பெருங்கடலின் அடியில் மூழ்கியிருந்த பூமியைத் தன் தந்தங்களால் எவ்வாறு உயர்த்தினான் என்பதையும் தூய்மையடைந்தவனாகவும், தற்கட்டுப்பாட்டுடனும் கேட்பாயாக.(6,7) புனிதமிக்க இந்தப் புராணம் வேதங்களைப் போன்றதும், ஸ்ருதிகளால் அலங்கரிக்கப்பட்டதுமாகும். எனவே இதை ஒரு நாத்திகனுக்கு உரைக்கக்கூடாது.(8) இந்த முழுப் புராணத்தின் பொருளையும், இதில் விளக்கப்பட்டுள்ள சாங்கிய, யோக அமைப்புகளையும் அறிந்த மனிதன் ஆன்ம அறிவை அடைந்தவனாவான்.(9)

ஆயிரம் யுகங்கள் கடந்து, பிரம்மனின் ஒரு நாள் முடிவடைந்தபிறகு, அனைத்து வகைத் தீய சகுனங்களும் தோன்றி, பூதங்கள் அனைத்தும், ஹரியையும், ஹரனையும் போன்ற புலப்படாத விருஷாகபியாகி, நெருப்பு, காற்று, சூரியனைப் போல ஹிரண்யரேதஸின் வடிவை ஏற்கும்போது, தன் தழல்களால் உலகை எரிப்பதைப் போல, விஷ்வேதேவர்கள், சாத்யர்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், அசுவினிகள் இருவர், குடிமுதல்வர்கள் {பிரஜாபதிகள்} அனைவர், ரிஷிகள் எழுவர், வசுக்கள், அப்சரஸ்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், தைத்தியர்கள், பிசாசங்கள், நாகர்கள், பலவகைப் பூதங்கள், பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், மிலேச்சர்கள் ஆகியோரையும், நான்கு கால் உயிரினங்களையும், பூமியில் வாழும் தாழ்ந்த விலங்குகள் பிறவற்றையும் {அந்த விருஷாகபி} வாடச் செய்கிறான்[2].(10-15)பிரம்மனுடைய நாளின் இறுதிப் பகுதியில் ஈஷ்வரனின் விருப்பப்படி, இதிஹாசங்கள், உபநிஷத்கள், வேதங்கள், பிற அறிவியல்கள் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்களும், நற்பணிகளில் ஈடுபடுபவர்களுமான முப்பத்துமூன்று தேவர்களும் {முப்பத்து முக்கோடி தேவர்களும்}, அவனது பிரகாசத்தால் முகங்கள் நிறம் மங்கியவர்களாக அங்கங்கள் எரிந்து, அண்டத்தின் பிறப்பிடமான பிரம்மனைத் தங்கள் முன் வைத்துக் கொண்டு, அன்னத்தின் வடிவில் இருந்த பெரும் யோகியான நாராயணனின் முன் தோன்றி அந்த ஹரிக்குள் நுழைந்தனர். இவ்வுலகில் தினமும் தோன்றி மறையும் சூரியனைப் போலத் தேவர்களும் நாராயணனில் தோன்றி மறைகின்றனர். அதை நான் விளக்கப் போகிறேன்.(16-20)

ஒரு கல்பத்தில் முழுமையாக ஆயிரம் வருடங்கள் நிறைவடையும் நேரம் நிஷேஷம் என்று அழைக்கப்படுகிறது. அஃது அழிவுக்கான கருவியாக அமைவதால் அப்போது உலகம் இருப்பதில்லை, எனவே, உயிரினங்களின் பணிகள் அனைத்தும் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன.(21) தேவர்கள், அசுரர்கள், பன்னகர்கள் உள்ளிட்ட உலகங்கள் அனைத்தையும் அழித்த பிறகு உலகத்தின் ஆசானான தலைவன் மட்டுமே தன் சுயத்தில் வாழ்கிறான்.(22) ஒவ்வொரு கல்பத்தின் முடிவிற்குப் பிறகும் தலைவன் உயிரினங்கள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் படைக்கிறான்.(23) தலைவன் வெளிப்படாதவனாகவும், நித்தியனாகவும் இருக்கிறான். மொத்த அண்டமும் அவனில் இருக்கிறது. சூரிய சந்திரக் கதிர்களும், புகையும், நெருப்பும், வேள்விகளும், அறச்சடங்குகளும் இல்லாத போது,(24) பறவைகள் அசைவற்று, விலங்கேதும் நகராத போது, மொத்த உலகும் இருளில் மூழ்கி அனைத்துப் புலப்படாத நிலையை அடையும்போது,(25) செயல்கள் அனைத்தும் இல்லாது போகும்போது, இடியும், நிலநடுக்கமும், பிற தீய சகுனங்களும் மறையும்போது, பகைவர்கள் அழிவடையும்போது,(26) நாராயணனாக இருக்கும் அண்டமானவன், பேராத்மாவான ரிஷிகேசனின் சமநிலையை அடைந்து உறங்க முயற்சிக்கிறான்.(27)

ஆயிரம் தழல்களைப் போன்ற சடாமுடி தரித்தவனும், மஞ்சள் பீதாம்பரம் உடுத்தியவனும், மேகத்துக்கு ஒப்பான வண்ணத்தையும், சிவந்த கண்களையும்,(28) செஞ்சந்தனம் பூசிய மார்பையும் கொண்டவனும், ஸ்ரீவத்சமெனும் மாயக்குறியால் அலங்கரிக்கப்பட்டவனுமான கிருஷ்ணன் {விஷ்ணு}, மின்னலுடன் கூடிய ஒரு மேகத்தைப் போல அங்கே தோன்றுகிறான்.(29) ஆயிரந்தாமரைகளைக் கொண்ட மாலை அவனது கழுத்தை அலங்கரிக்கிறது, அவனது மனைவியான லக்ஷ்மி மட்டுமே அவனுடன் {அவனில் பாதி உடலாக} இருக்கிறாள்.(30) அதன்பிறகு ஒப்பற்ற ஆற்றலைக் கொண்டவனும், அறமேயானவனும், அனைவரின் பெரும்பாட்டனுமான விஷ்ணு, விவரிக்க முடியாத யோகத்துயிலுக்குள் நுழைகிறான்.(31)

தேவர்கள் அனைவரையும் ஆள்பவனான அவன், ஆயிரம் ஆண்டுகள் முடிந்த பிறகு தலைவன் புருஷோத்தமனாக விழித்தெழுகிறான்.(32) அப்போது தலைவன் அண்டத்தைப் படைக்க மீண்டும் நினைக்கிறான். அவன் தன்னுடைய பரமசக்தியைக் கொண்டு பித்ருக்களையும், தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் படைக்கிறான்.(33) அதன் பிறகு தேவர்களின் பணிகளை அவன் நினைக்கிறான். வாக்கின் தேவனான அவன் அதன் பிறகு உலகங்கள் அனைத்தையும் படைக்கிறான்.(34) அந்தத் தலைவனே படைப்பவனாகவும், பாதுகாப்பவனாகவும், அழிப்பவனாகவும் இருக்கிறான்; அவனே விதியை விதிப்பவனாக இருக்கிறான். தற்கட்டுப்பாடாகவும், விதியாகவும் அவனே இருக்கிறான்.(35)

தேவர்களனைவரும் நாராயணனே, செயல்களனைத்தும் நாராயணனே, மதிப்புகளனைத்தும் நாராயணனே, யஜ்ஞமும், ஸ்ருதியும் நாராயணனே.(36) முக்தியாயிருப்பவன் நாராயணனே, அனைவரின் கதியும் நாராயணனே, அறமும், பலமும் நாராயணனே.(37) ஞானமும், தவங்களும் நாராயணனே, வாய்மையெதுவும் நாராயணனே. நாராயணனுக்கும் மேலான தேவன் வேறெவனும் இல்லை; இருக்கவும் முடியாது[3].(38)(இதன் ஸம்ஸ்கிருத மூலம்,

“நாராயணபரா தே³வா நாராயணபரா꞉ க்ரியா꞉ |

நாராயணபரோ யஜ்ஞோ நாராயணபரா ஷ்²ருதி꞉ ||36

நாராயணபரோ மோக்ஷோ நாராயணபரா க³தி꞉ |

நாராயணபரோ த⁴ர்மோ நாராயணபரம் க்ரது꞉ ||37

நாராயணபரம் ஜ்ஞாநம் நாராயணபரம் தப꞉ |

நாராயணபரம் ஸத்யம் நாராயணபரம் பத³ம் |

நாராயணபரோ தே³வோ ந பூ⁴தோ ந ப⁴விஷ்யதி ||38″)

சுயம்புவாக எழுந்த தேவனும், அண்டத்தின் தலைவனும் அவனே; உற்றறியும் ஞானத்திற்குள்ளும், காற்று என்று கருதப்படுவதற்குள்ளும் பிரம்மனாக இருப்பவன் இருக்கிறான். யஜ்ஞம் அவனே.(39) வெளிப்பட்டவனாகவும், வெளிப்படாதவனாகவும் அறியப்படுபவன் அவனே. எல்லாம் வல்லவனும், அனைத்தையும் படைத்தவனும் அவனே.(40) புலன்களால் முடியாததை வெளிப்படுத்துபவன் அவனே. அவனால் வெளிப்படுத்த முடியாததைப் புலன்களால் உணர முடியாது. தேவர்களாலும், குடிமுதல்வர்களாலும், சப்தரிஷிகளாலும் கூட அறிந்து கொள்ள இயலாத எல்லையைக் கொண்டவன் அவனே.(41)

எல்லையற்றவன் என ஸ்ருதியால் சொல்லப்படுபவன் அவனே. தேவர்களாலும் காண முடியாத உயர்ந்த வடிவைக் கொண்டவன் அவனே.(42) அவதாரத்தின்போது அவன் ஏற்கும் வடிவையே அவர்கள் துதிக்கிறார்கள். அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் வடிவில் மட்டுமே தேவர்கள் அவனைப் பார்க்கிறார்கள். அவன் காட்டாத வடிவை எவராலும் தேடிக் காண முடியாது.(43) பூதங்களின் தலைவனும், உயிர் காற்றின் {பிராணவாயுவின்} அசைவும், செரிமானமெனும் நெருப்பும் அவனே. சக்தியையும், தவத்தையும், அமுதத்தையும் பகிர்ந்தளிப்பவன் அவனே.(44) நான்கு ஆசிரமங்களின் சதுர்ஹோத்ரப் பலன்களை அனுபவிப்பவன் அவனே. நான்கு யுகங்களையும், நான்கு பெருங்கடல்களையும் விதிப்பவன் அவனே.(45) பெரும் யோகி அவனே. அண்டத்தை அழித்து, ஆயிரம் வருடங்கள் தன் கருவறையில் கொண்டு, முட்டையைப் பொறிக்கச் செய்பவன் அவனே.(46) எல்லாம் வல்ல இந்தப் பிரஜாபதியே தேவர்கள், அசுரர்கள், பிராமணர்கள், நாகர்கள், அப்சரஸ்கள், மூலிகைகள், அண்டத்தைத் தாங்கும் லோகபாலர்கள், யக்ஷர்கள், குஹ்யர்கள், ராட்சசர்கள் ஆகியோரைப் படைக்கிறான்” என்றார் {வைசம்பாயனர்}.(47).

பூமி உயர்த்தப்பட்டது | பவிஷ்ய பர்வம் பகுதி – 30-(வராஹக்ருதோ தரோத்தாரம்)-மலைகளின் கனம் பொறாமல் நீருக்குள் மறைந்த பூமி; பூமியை மீட்க வராக அவதாரம் எடுத்த விஷ்ணு; பூமியை அவளது நிலையில் மீண்டும் நிறுவியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பிரம்மனின் வடிவில் இருந்து உண்டான இந்த அண்டம் முன்னர் ஒரு பொன் முட்டையின் வடிவில் இருந்ததாக வேத ஸ்ருதி சொல்கிறது.(1) அதன்பிறகு, {ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகு} எல்லாம்வல்ல தலைவன் உலகைப் படைப்பதற்காக, அந்த முட்டையின் மேல்பகுதியை வெட்டினான்.(2) அனைத்துப் பிரிவுகளின் அறிவையும் அறிந்த தலைவன் மீண்டும் அதை எட்டு பகுதிகளாக[1] வகுந்தான்.(3) முட்டையின் பரப்பில் இருந்த ஆகாயத் துளையானது, அறம் சார்ந்த நல்லோருக்கான மிகச்சிறந்த பிரம்ம லோகமாகவும், கீழ்ப்பகுதியின் துளையானது ரஸாதலமாக மாற்றப்பட்டது.(4) தலைவன், அண்டத்திற்கான பொருள் காரணமான அந்த முட்டையை எட்டு வகைத் துளைகளுடன் படைத்தான்;(5) அதன் பிறகு அவன் துளைகளின் வடிவில் இருந்த புலன்களைத் திரள் பூதங்களாகவும், நுட்பமான பூதங்களாகவும் வகுத்தான்.(6) பல்வேறு வண்ணங்களில் இருந்த அந்த முட்டையின் பல்வேறு பொதிகள் பலவண்ண மேகங்களாக மாற்றப்பட்டன. அந்த முட்டையில் இருந்த நீர்மம் {திரவப் பொருள்} பூமியில் தங்கமானது {ஜாதரூபமானது}.(7)ஓ! மன்னா {ஜனமேஜயா}, அண்ட அழிவின்போது உலகம் பெருங்கடல்களால் மறைக்கப்பட்டிருந்ததால் மொத்த அண்டமும் அந்த முட்டையில் ஓடும் சாற்றால் மறைக்கப்பட்டிருந்தது.(8,9) முன்பு தலைவன் தேவலோகத்தைக் கட்டமைத்தபோது, படைக்கப்பட்ட முட்டையில் இருந்து வெளிவந்த நீரானது பொன்மலைகளானது.(10) திக்குகள் அனைத்தும்; வானம், நாகலோகம், பிற இடுக்குள் அனைத்தும் அந்த நீரால் மறைக்கப்பட்டது. அந்த நீர் விழுந்த இடமெங்கும் மலைகள் படைக்கப்பட்டன.(11) மலைகளால் அடர்த்தியாக நிறுவப்பட்டிருந்ததால் பூமியானது கடப்பதற்கரிதானதாக இருந்தது.(12) பல யோஜனைகளுக்கு நீண்டு கிடந்த அந்த மலைகளின் கனத்தால் பூமி நசுங்கியது.(13) நாராயணனேயான அந்தத் தெய்வீக நீரானது பூமியில் பாய்ந்து, தங்கமயமான ஆற்றலானது.(14) அந்த ஆற்றலால் தாக்கப்பட்டு, அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பூமாதேவி பாதாள லோகத்திற்குள் புகுந்தாள்[2].(15) பூமி பாதாளலோகத்திற்குள் புதைந்ததைக் கண்ட மதுசூதனன், அனைத்தின் நன்மைக்காக அவளை உயர்த்துவதில் தன் கவனத்தை அர்ப்பணித்தான்.(16)மங்கலத்தலைவன் {பகவான்}, “என் பலத்தின் கனத்தால் தாக்கப்பட்டவளும், பரிதாபத்திற்குரியவளுமான பூமாதேவியானவள், ஆதரவற்றவளாகத் தூக்கி வீசப்படும் ஒரு பசுவைப் போல ரஸாதலத்திற்குச் செல்கிறாள்” என்றான்.(17)

பூமி, “மூன்று காலடிகளையும், ஒப்பற்ற பலத்தையும் கொண்டவரும் {திரிவிக்ரமனும்}, நான்கு கரங்களைக் கொண்ட பெருஞ்சிங்கமனிதரானவரும் {நரசிங்கமானவரும்}[3], மார்பில் ஸ்ரீவத்சமெனும் மாயக்குறியைக் தரித்தவரும், சாரங்கவில், சக்கரம், வாள், கதாயுதம் ஆகியவற்றை ஏந்தியவருனுமான புருஷோத்தமனை வணங்குகிறேன்.(18) ஆத்மாவைத் தாங்குபவர் நீரே, அண்டத்தையும், பூதங்களையும் நிலைநிறுத்தி உலகைப் பாதுகாப்பவர் நீரே.(19) ஆற்றலையும், பலத்தையும் கொண்டு அனைத்தையும் ஆள்பவர் நீரே, அதன்பிறகே நான் அவற்றைத் தாங்குகிறேன்.(20) {இந்த உலகத்தை நீர் தாங்குவதாலேயே அதை என்னால் தாங்க முடிகிறது. நீர் தாங்காத எதையும் நான் தாங்கவில்லை}[4]. உம்மால் ஆதரிக்கப்படாத பூதமேதும் இல்லை.(21) ஓ! நாராயணரே, ஒவ்வொரு யுகத்திலும் உலக நன்மைக்காக, சுமையில் இருந்து என்னை விடுவிப்பவர் நீரே.(22) உமது ஆற்றலால் தாக்கப்பட்டு நான் ரஸாதலத்திற்குள் புகுந்துவிட்டேன். நான் இப்போது உமது புகலிடத்தை நாடுகிறேன் {உம்மை நான் சரணடைந்தேன்}. என்னைக் காப்பீராக.(23) தானவர்களாலும், தீய ஆன்மா படைத்த ராட்சசர்களாலும் நான் ஒடுக்கப்படும்போதெல்லாம் நித்தியரும், ஸநாதருமான உமது புகலிடத்தையே நாடுகிறேன் {உம்மையே நான் சரணடைகிறேன்}.(24) என் மனம் அச்சத்தால் பீடிக்கப்படும்போதெல்லாம், அகன்ற தோள்களைப் படைத்தவரும், காளையைப் போன்றவருமான உம்மிடமே நூறுமுறை மனத்தால் வேண்டி உமது புகலிடத்தை நாடுகிறேன்” என்றாள்.(25)மங்கலத் தலைவன் {பகவான்}, “ஓ! பூமாதேவி, அஞ்சாதே. தற்கட்டுப்பாட்டுடன் அமைதியை அனுபவிப்பாயாக. உனக்குரிய இடத்திற்கு நீ விரும்பியவாறே உன்னைக் கொண்டு வருவேன்” என்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(26)

வைசம்பாயனர் {மீண்டும் ஜனமேஜயனிடம்}, “அதன்பிறகு அந்தப் பெருந்தலைவன் தன்னுடைய தெய்வீக வடிவங்களை மனத்தில் நினைத்து, “எவ்வடிவை ஏற்று நான் பூமியை உயர்த்த வேண்டும்? {நீரில் மூழ்கியிருக்கும் பூமியை எதைக் கொண்டு நான் உயர்த்த வேண்டும்?}” என்று எண்ணினான்.(27) நீரின் அடியில் மூழ்கியிருக்கும் பூமியை உயர்த்துவது எவ்வாறு என்பதை உறுதி செய்து கொண்ட தலைவன், நீரில் விளையாடும் தன்னுடைய பன்றி வடிவை நினைத்தான்.(28) நிலத்தை நிலைநிறுத்துபவனான ஹரி, பூமியை உயர்த்துவதில் இவ்வாறே தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.(29)

வாங்மயமான {ஆயிரம் பேரொலிகளுடன் கூடிய} அந்தப் பிரம்ம வடிவம் {வராக ரூபம்} எவரும் அடைய முடியாத பத்து யோஜனைகள் அகலமும், நூறு யோஜனைகள் உயரமும் கொண்டிருந்தது.(30) அது {வராக வடிவம்} நிறத்தால் கருநீல மேகம் போல இருந்தது. அதன் குரல் மேக முழக்கத்தைப் போல இருந்தது. அஃது ஒரு பெருமலையைப் போன்ற உடல் பலத்துடனும், எரிந்து கொண்டிருக்கும் வெள்ளி தந்தங்களுடனும் இருந்தது.(31) அந்தத் தந்தங்கள் மின்னலைப் போன்றும், சூரியக் கதிர்களைப் போன்றும் ஒளிமிக்கவையாக இருந்தன. அவனது {அந்த வராகனுடைய} தோள்கள் பருத்தும், அகன்றும் இருந்தன. அவனது நடை செருக்குமிக்க வேங்கையைப் போல இருந்தது.(32) காளையின் அடையாளங்களுடன் கூடிய தோள்பட்டைகள் {காளையின் திமில்களைப் போல} நிமிர்ந்திருந்தன. ஹரி, இவ்வாறு ஒரு பெரும்பன்றியின் வடிவத்தை ஏற்று,(33) பூமியை உயர்த்துவதற்காக ரஸாதலத்திற்குள் நுழைந்தான்.

வேதங்கள் அந்தப் பன்றியின் கால்களாக இருந்தன, வேள்வியூபங்கள் அதன் பற்களாகின, வேள்வியே அதன் கைகளாகின, சித்தி {ஆன்மா} அவனது முகமானது,(34) நெருப்பு அதன் நாவானது, தர்ப்பைப் புல் அதன் மயிரானது, {ஓங்காரமான} பிரம்மமே அதன் தலையானது. பகலையும், இரவையும், கணங்களையும் பகிர்ந்தளிக்கும் அந்தப் பெரும் யோகி, வேதங்களாகவும், அவற்றின் அங்கங்களாகவும் ஸ்ருதிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தான்.(35)

{வேள்விகளின்போது ஆகுதிகளுக்குப் பயன்படுத்தப்படும் நெய் அவனது மூக்கானது. வேள்வி ஆகுதிகளையூற்றும் கரண்டிகள் அவனது நகங்களாகின. சாம வேதம் அவனது குரலானது. அவன் தர்மத்தாலும், வாய்மையாலும் நிறைந்திருந்தான். அந்த மங்கலத் தலைவன் சக்தியாலும், வீரத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தான்.(36) அவனது மூக்கு பெரும் வேள்வி பீடமாக இருந்தது. விலங்கைப் போன்ற கால்மூட்டுகளை அவன் கொண்டிருந்தான். வேள்வி அவனது வடிவமானது. உத்காதம் அவனது எல்லையானது. வேள்விச் செயல் அவனது சின்னமானது. வித்துகளும், மருந்துகளும் அவனிடம் இருந்து அடையப்படும் பேரருள்களாக இருந்தன.(37) வாயு அவனது ஆன்மாவாகவும், மந்திரங்கள் அவனது தீண்டலாகவும் இருந்தன. சோமச்சாற்றைக் குருதியாகக் கொண்ட வீரனாக அவன் இருந்தான். அவனது மணம் ஆகுதிகளுக்கு ஒப்பாக இருந்தது. தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் அளிக்கப்படும் ஆகுதிகள் அவன் செயல்படும் வேகமாக இருந்தன.(38) வேள்வியைச் செய்பவனின் உறவினர்களும் நண்பர்களும் கூடும் பிராங்வம்சம் என்ற அறையாக அவனது உடல் இருந்தது. அவன் ஒளிமிக்கவனாகத் திகழ்ந்தான். பல்வேறு அர்ப்பணிப்புகளால் அவன் வழிபடப்பட்டான். புரோஹிதருக்குக் கொடுக்கப்படும் காணிக்கையாக அவனது இதயம் இருந்தது. அவன் யோகம் பயிலும் பெரும் யோகியாக இருந்தான். வேள்விப் பொருட்கள் நிறைந்தவனாக அவன் பெரியவனாக இருந்தான்.(39) வேதங்களில் உள்ள துணைச் செயல்கள் அவனது உதடுகளை அலங்கரித்தன. அவனது உந்தி பிரவர்ஷிய செயல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மந்திர வகைகள் அவனது பாதைகளாக அமைந்தன. ரகசிய உபநிஷத்துகள் அவனது இருக்கையாகின.(40) அவன் நீரின் நிழலான தன் மனைவி சாயா தேவியுடன் இருந்தான். ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மலைச் சிகரத்தைப் போல அவன் உயரமாக இருந்தான்}[5]. உலகின் ஆசானான அவன், இவ்வாறு ஒரு வேள்விப்பன்றியின் வடிவை ஏற்று ரஸாதலத்திற்குள் நுழைந்தான்.(41)நீர்த்தாரையால் மறைக்கப்பட்டிருந்த பூமியை அவன் {ரஸாதலத்தில் கண்டான்}.(42) அந்தத் தலைவன் உலகின் நன்மைக்காக ரஸாதலத்திற்குள் நுழைந்து, அங்கே மூழ்கியிருந்த பூமியைத் தன் தந்தங்களால் உயர்த்தினான்.(43) அதன்பிறகு அந்தத் தலைவன் {வராகன்}, பூமாதேவியை அவளுக்குரிய இடத்தில் மீண்டும் நிறுவிவிட்டு லோகபாலர்களையும் நிலைநிறுத்தி அவளை விடுவித்தான். தலைவன் விஷ்ணுவால் தாங்கப்பட்டதன் விளைவால் பூமாதேவி அமைதியை அடைந்து அவனை வணங்கினாள்.(44) இவ்வாறு அந்தத் தலைவன் வேள்விப்பன்றியின் வடிவை ஏற்று, அனைவரின் நன்மைக்காகப் பூமாதேவியை உயர்த்தினான்.(45) சூரர்களில் {தேவர்களில்} முதன்மையானவனான அவன், பூமியை ரஸாதலத்தில் இருந்து உயர்த்திவிட்டு, உலகத்தின் பல்வேறு பிரிவுகளை வகுப்பதில் தன் கவனத்தை அர்ப்பணிப்பதில் தன் கண்களைக் கொண்டான்.(46,47) பெருஞ்சிறப்புவாய்ந்தவனும், ஒப்பற்ற ஆற்றல் படைத்தவனுமான அச்யுதன், ஒரு பெரும்பன்றியின் {வராக} வடிவை ஏற்று, உலக நன்மைக்காக ஒற்றைத் தந்தத்தால் பூமியை உயர்த்தினான்” என்றார் {வைசம்பாயனர்}.(48)

மலைகள், ஆறுகளின் படைப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 31-(மஹீவர்ணநம்)-பூமியில் மலைகளையும், ஆறுகளையும் படைத்த வராகன்; அதன் பிறகு தேவர்களையும் அசுரர்களையும் படைக்க நினைத்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பூமியானவள், ஒரு படகைப் போல அந்தப் பரந்த நீரில் மிதந்து கொண்டிருந்தாள். அவளுடைய உடல் கனத்தின் விளைவால் அவள் மூழ்காதிருந்தாள்.(1) அப்போது தலைவன் பூமியில் பிரிவுகளை ஏற்படுத்த நினைத்தான். பிறகு அவன் மலைகளின் உயரத்தையும், ஆறுகளின் போக்குகளையும், அவற்றின் குறைந்த அளவுகளையும் {அவை எவ்வாறு அமைய வேண்டும் என்று} நினைத்தான்.(2,3) அவன், தாமரையின் நான்கு இதழ்களைப் போலப் பூமியை நான்கு கண்டங்களாகப் பிரித்துப் பெருங்கடல்களையும் பிரித்துப் பொன்மலையான மேருவையும் {பூமியின் நடுவில்} படைத்தான்.(4)

அதன்பிறகு அவன் கிழக்குப் பக்கம் சென்ற, நூறு யோஜனைகள் அகலமும், ஆயிரம் யோஜனைகள் உயரமும் கொண்ட உதய மலையைப் படைத்தான். தன் சக்தியின் பயன்களுடனும், உதிக்கும் சூரியனைப் போன்ற பிரகாசத்துடனும் அவன் தங்கச் சிகரங்களைப் படைத்து, அதன் உடலையும், அடித்தளத்தையும் படைத்தான்.(5,6) தாமரைக் கண்ணன், தினமும் மலர்களாலும், கனிகளாலும் மறைக்கப்பட்டதும், பருத்த தண்டுகளுடன் கூடியவையுமான பொன்மரங்களை அங்கே படைத்தான்.(7) அடுத்ததாக அந்தப் பெருந்தெய்வமான விஷ்ணு, நூறு யோஜனைகள் பரப்பும், இருநூறு யோஜனைகள் உயரமும் கொண்ட சௌமனஸ {இனிய உணர்வைக் கொடுக்கும்} மலையைப் படைத்தான்.(8) அங்கே அவன் ஆயிரக்கணக்கான ரத்தினங்களையும், மாலை வேளை மேகங்களைப் போல ஒளிரும் பீடங்களையும் படைத்தான்.(9)

அதன்பிறகு அவன், நூற்றுக்கணக்கான ரத்தினங்களின் வசிப்பிடமும், ஆயிரஞ்சிகரங்களைக் கொண்டதுமான {சஹஸ்ரசிருங்க} மலையைப் படைத்தான். அடர்த்தியாக மரங்களால் மறைக்கப்பட்டிருந்த அஃது அறுபது யோஜனைகள் உயரம் கொண்டதாக இருந்தது.(10) அங்கே தேவதச்சன், உயிரினங்கள் அனைத்தாலும் துதிக்கப்படும் {ஆன்மாவுக்கான} மிகச் சிறந்த இருக்கையை நிறுவினான்.(11) அதன்பிறகு அவன் காடால் மறைக்கப்பட்ட சைசிர {பெருங்குளிர்ச்சியுடன் கூடிய} மலையைப் படைத்தான். கடக்கப்பட முடியாத அதன் குகைகள் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன.(12) அதனில் இருந்து அவன், பனியைப் பிறப்பிடமாகக் கொண்டதும், பறவைகள் நிறைந்ததும், கரைகளால் அலங்கரிக்கப்பட்டதுமான வசுதாரை[1] என்று கொண்டாடப்படும் ஆற்றைப் படைத்தான்.(13) புனித வேள்விகளால் நிறைந்த அந்த ஆறு, கிழக்குத் திசை முழுவதையும் முத்துகளாலும், சங்குகளாலும் நிறைத்தது.(14) அதன் கரைகள், தினமும் அமுதநிகர் கனிகளையும், மலர்களையும் கொடுப்பவையும், ஏராளமான நிழலை அளிப்பவையுமான மரங்கள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(15)கிழக்கில் பிரிவுகளை உண்டாக்கிய தலைவன், பாதித் தங்கம், பாதி வெள்ளியாலான அழகிய மலையைத் தெற்கில் படைத்தான்.(16) ஒரு பக்கம் சூரியப் பிரகாசத்துடனும், மறு பக்கம் சந்திரப் பிரகாசத்துடனும் கூடிய அந்தச் சிறந்த மலை அங்கே பேரழகுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(17) அந்த மலையானது, ஒரே நேரத்தில் சூரிய சந்திரக் கதிர்களுடன் கூடி இருப்பதாகத் தெரிந்தது. அதன்பிறகு அவன் அந்தத் திசையில் பானுமந்தம், வபுஷ்டமம் எனும் பெரும் மலைகளைப் படைத்தான்.(18) அந்த மலைகள் விரும்பிய பலன்களை அனைவருக்கும் வழங்கும் தெய்வீக மரங்களால் நிறைந்திருந்தன. அதன் பிறகு அவன் யானையின் வடிவில் குஞ்சர மலையைப் படைத்தான்.(19) அனைத்துப் புறங்களிலும் பொன்னறைகளைக் கொண்டிருந்த அது பல யோஜனைகள் தொலைவுக்குப் பரந்திருந்தது. அதன் பிறகு அவன் கரடியின் வடிவில் ரிஷப மலையைப் படைத்தான். அது பொன்மயமான சந்தன மரங்களால் மறைக்கப்பட்டு மலர்களுடன் புன்னகைப்பதைப் போலத் தெரிந்தது.

அதன் பிறகு அவன் மலைகளின் தலைவனும், நூறு யோஜனைகள் உயரம் கொண்டதுமான மஹேந்திர மலையைப் படைத்தான். அதில் பொன்மயமான சிகரங்களும், பூத்துக் குலுங்கும் பெரும் மரங்களும் இருந்தன. தலைவன் அந்த மலையைப் பல்வேறு ரத்தினங்களும் நிறைந்திருப்பதாகவும், சூரியனையும், சந்திரனையும் போன்று பிரகாசிப்பதாகவும் படைத்தான். அதன் பிறகு அவன், பூத்துக்குலுங்கும் மரங்கள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்ட மலய மலையைப் படைத்தான்.(23) அதன் பிறகு அவன் பாறைகளின் வலையால் மறைக்கப்பட்ட மைநாக மலையைப் படைத்தான். அவன் அந்தப் பெரும் மலையைத் தென் திசையில் நிறுவினான்.(24) அதன்பிறகு அவன் ஆயிரஞ்சிகரங்களுடன் கூடியதும், பல்வேறு மரஞ்செடிகொடிகளால் மறைக்கப்பட்டதுமான விந்திய மலையைப் படைத்தான்.(25) அதன்பிறகு அவன், பால் போன்று இனிய நீர் நிறைந்ததும், சுழல்களையும், அகன்ற கரைகளையும் கொண்டதுமான பயோதாரை என்று கொண்டாடப்படும் ஆற்றைப் படைத்தான்.(26) அந்த ஆறு தென் திசைக்கு அழகூட்டியது. நாற்றுக்கணக்கான கிளையாறுகளைக் கொண்டதும், புனிதத் தலங்கள் பலவற்றைக் கொண்டதுமான அந்தப் புனித ஆற்றைத் தென் திசையில் நிறுவிவிட்டு தலைவன் மேற்குத் திசைக்குச் சென்றான்.(27)

அங்கே {மேற்கில்} அவன் நூறு யோஜனைகள் உயரம் கொண்டதும், பொன்நிறைந்த அற்புதச் சிகரங்களைக் கொண்டதுமான ஒரு பெருமலையைப் படைத்தான்.(28) பலவண்ணங்களைக் கொண்ட பாறைகள், பொன்மயமான பாறைகள், குகைகள், சால மரங்கள், தால மரங்கள், சூரியனைப் போன்ற ஒளிரும் பிற வகை மரங்கள், தங்கத்தாலான அழகிய பீடங்கள் ஆகியவற்றால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(29) தலைவன், மேற்குப் பிரிவில் {பொன் போல் ஒளிர்பவையும், மங்கலக் காட்சிகளைத் தருபவையுமான} அறுபதாயிரம் மலைகளைப் படைத்தான்.(30) {அவன் அங்கே மேரு மலைக்கு ஒப்பானதும், ஆயிரம் நீரோடைகளைக் கொண்டதும், மங்கலமான புனிதத் தலங்களைக் கொண்டதுமான ஒரு மலையை நிறுவினான்.(31) அந்த மலை அறுபது யோஜனைகள் அகலமும், உயரமும் கொண்டதாக இருந்தது} அவன் தன்னுடைய பன்றி வடிவைச் சொல்வது போல வராகம் என்ற பெயரில் அந்த வைடூர்ய மலையை அங்கே படைத்தான்.(32) அங்கே பொன்மயமான, வெள்ளிமயமான பாறைகள் இருந்தன. அங்கே அவன் தன் சக்கரத்திற்கு ஒப்பான ஆயிரஞ்சிகரங்களைக் கொண்ட சக்ரவந்த மலையை நிலைநிறுத்தினான்.(33,34) மேலும் அவன், சங்குக்கு ஒப்பான கருநீல மரங்களால் மறைக்கப்பட்ட வெள்ளிமயமான சங்க மலையையும் அங்கே படைத்தான்.(35) அந்த மலையின் உச்சியில் தங்கத்தாலும், ரத்தினங்களாலும் உண்டாக்கப்பட்ட பாரிஜாதமெனும் பெரும் மரத்தை நிறுத்தினான்.(36) பிறகு தலைவன் வராகன், ஏராளமான நீரைக் கொண்டதும், புனிதமானதும், கொண்டாடப்படுவதுமான கிருததாரம் என்ற ஆற்றைப் படைத்தான்.(37)

இவ்வாறு மேற்கில் பல பிரிவுகளை உண்டாக்கிய அவன், வடக்கில் தங்கமயமான அழகிய மலைகள் பலவற்றை நிறுவினான். பிறகு அவன் சூரியப்பிரகாசம் கொண்டதும், வானமளவு பெரியதும், பொன்மயமானதுமான சௌம்ய மலையை அங்கே படைத்தான்.(38,39) அந்த இடம் சூரியனில்லாதிருக்கும் போதுகூடத் தன்னொளியால் ஒளியூட்டப்பட்டது.(40) சூரியனின் வெப்பத்தால் ஒளியூட்டப்படும் சந்திரலோகத்தைப் போலவே, அந்த மலையின் பிரகாசத்தால் சூரியன் ஒளிர்வதைப் போலத் தெரிந்தது.(41) நுட்பமான அறிகுறிகளாலேயே சூரியன் வெப்பத்தைக் கொடுப்பது தெரிந்தது. அதன் ஆயிரம் சிகரங்களும் பல்வேறு புனிதத்தலங்களால் நிறைந்திருந்தன. அவன் பிறகு பல்வேறு ரத்தினங்களால் நிறைந்த அஸ்த மலையைப் படைத்தான்.(42)

பிறகு அவன் அழகும், எழிலும் மிக்க மந்தர மலையையும், மலர்களால் மறைக்கப்பட்ட கந்தமாதன மலையையும் படைத்தான்.(43) கந்தமாதன மலையின் உச்சியில் அவன் பொன்மயமானதும், அற்புதம் நிறைந்ததுமான ஜம்பு ஆற்றைப் படைத்தான்.(44) அதன் பிறகு அவன், கிரிம்சஷிகரம், புஷ்கரம், ஷுப்ரம், பாண்டுரம், மேக வண்ணம் கொண்டதும், மலைகளில் முதன்மையானதுமான கைலாசம்,(45) மலைகளின் தலைவனும், தெய்வீகத் தாதுக்களைக் கொண்டதுமான இமயம் ஆகிய மலைகளைப் படைத்தான்.(46) பன்றியின் வடிவை ஏற்றத் தலைவன், ஆயிரம் வாய்களைக் கொண்டதும், அறங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டதும், தெய்வீகமானதுமான மதுதாரை ஆற்றை வடக்குத் திசையில் படைத்தான்.(47) அந்த மலைகள் அனைத்தும் சிறகுகள் படைத்தவையாகவும், விரும்பிய தோற்றங்களை ஏற்க வல்லவையாகவும் திகழ்ந்தன.(48)

அவை அனைத்தையும் பல வண்ணங்களைக் கொண்டவையாக அமைத்த தலைவன் பரமேஷ்டி, இவ்வாறு பூமியில் பல பிரிவுகளை ஏற்படுத்தி, அடுத்ததாகத் தேவர்களையும் அசுரர்களையும் படைக்க நினைத்தான்.(49) உலகத்தை அழிப்பவனும், குருதி சிவப்புக் கண்களைக் கொண்டவனுமான அந்தத் தெய்வீகன், மனித குலத்தின் நன்மைக்காக அனைத்துப் பக்கங்களிலும் அழகிய மலைகள் பலவற்றையும், நீர் நிறைந்த புனித ஆறுகள் பலவற்றையும் படைத்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(50)

வேதங்கள் படைப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 32-(ஹிரண்யகர்பாத்யுத்பத்திகதநம்)-ஹிரண்யகர்பனின் பிறப்பு; காயத்ரி, சாவித்ரி, வேதங்கள் படைக்கப்பட்டது; பிரம்மனின் சந்ததி; தக்ஷன், கசியபர், மனு, தர்மன், சந்திரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இவ்வாறு அண்டத்தைப் படைக்க விரும்பிய தலைவன் சிந்திக்கத் தொடங்கினான். இவ்வாறு அவன் தியானித்துக் கொண்டிருந்த போது அவனுடைய வாயில் இருந்து ஒரு புருஷன் வெளியே வந்தான்.(1)

தலைவனுக்கு முன் வந்த அந்தப் புருஷன், “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அண்டத்தை ஆளும் தலைவன், புன்னகைத்தவாறே,(2) “உன்னை {ஆன்மாவை} இரண்டாகப் பிரித்துக் கொள்வாயாக” என்றான். இதைச் சொல்லிவிட்டு அந்தத் தலைவன் மறைந்தான். ஓ! பாரதா, அந்தத் தலைவன் உடலால் மறைந்தபோது,(3) விளக்கு அணைந்ததைப் போல அவனது இயக்கத்திற்கான எந்தத் தடமும் காணப்படவில்லை. வேதங்களைப் பாடிய ஹிரண்யகர்பன் {அந்தப் புருஷன்}, அவனால் சொல்லப்பட்ட சொற்களை அப்போது தியானிக்கத் தொடங்கினான்.(4) {அந்தப் புருஷன் வேத மந்திரங்களின் புனித உரைகளில் பொன்மயமான கருவறையில் கருத்தரிக்கப்பட்டவன் {ஹிரண்யகர்பன்} என்று புகழப்படுபவன் ஆவான்}.முன்னர் அண்டத்தின் தலைவன் மட்டுமே ஒரே குடிமுதல்வனாக {பிரஜாபதியாக} இருந்ததால் அவன் மட்டுமே வேள்விக் காணிக்கைகளுக்கு உரிமை கொண்டவனாக இருந்தான்.(5)

குடிமுதல்வன், “அந்தப் பெரியவன் {பரமாத்மா}, என்னை {என் ஆன்மாவை} இரண்டாகப் பிரியும்படி கேட்டுக் கொண்டான் என்றாலும், என்னை இரண்டாகப் பிரித்துக் கொள்வதில் எனக்குப் பெரும் ஐயம் ஏழுகிறது.(6) குடிமுதல்வன் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது “ஓம்” என்ற சொல் ஓதப்பட்டது; அதன் ஒலியால் பூமியும், வானமும், சொர்க்கமும் நிறைந்திருந்தன.(7) அந்தப் பிரஜாபதியின் மனம் ஓம் என்பதைப் பயின்று கொண்டிருந்தபோது, அந்தத் தேவதேவனின் இதயத்தில் இருந்து மீண்டும் வஷட்காரம் எழுந்தது.(8) அதன் பிறகு, பூமி, வானம், சொர்க்கம் ஆகியவற்றின் ஆன்மாவாக அமைந்த பூர், புவ, ஸுவ என்ற {ஏழு உலகங்களின் பெயர்களைச் சார்ந்த} முதல் மூன்று பெரும் மந்திரங்கள் எழுந்தன.(9) அதன் பிறகு சந்தங்களின் பிறப்பிடமானதும், இருபத்து நான்கு சொற்களால் அமைந்ததுமான புனித காயத்திரி உண்டாக்கப்பட்டது. அந்தத் தெய்வீக மந்திரத்தை முழுமையாக நினைவு கூர்ந்து சாவித்ரியைப் படைத்தான்.(10) அதன்பிறகு, அந்தத் தலைவன், ரிக், சாம, அதர்வண, யஜுர் என்ற நான்கு வேதங்களையும், அறச்சடங்குகளையும் படைத்தான்.(11)

அதன்பிறகு அவனது மனத்திலிருந்து ஸநர், ஸநகர், ஸநாதனர், வரதர், ஸநந்தனர் ஆகியோர் வெளிப்பட்டனர்.(12) பிறகு எல்லாம் அறிந்த ஸநத்குமாரரும் வெளிப்பட்டார். ருத்திரனுடன் சேர்த்து இந்த ஆறு ரிஷிகளும் பிரம்மனின் மனத்தில் பிறந்த மகன்களாவர்.(13) யோக தந்திரத்தில் இந்த ஆறு ரிஷிகளையும், பிரம்மனையும், கபிலரையும் உயர்ந்தவர்களாக யதிகளும், பிராமணர்களும் சொல்கின்றனர்.(14) சுயம்புவான அந்தத் தேவன் {பிரம்மன் / ஹிரண்யகர்ப்பன்} அதன்பிறகு தன் மனத்தில் இருந்து பிறந்த மரீசி, அத்ரி, புலஸ்த்யர், புலஹர், கிரது, பிருகு, அங்கிரஸ், {பிரஜாபதியான} மனு ஆகிய எட்டு மகன்களையும்,(15) அனைத்து உயிரினங்களின் பித்ருக்கள், தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் ஆகியோரையும், {மஹாரிஷிகள் பிறரையும்} படைத்தான்.(16) ஆயிரம் யுகங்கள் முடிந்து, நிஷேஷ கல்பத்தின் முடிவில் இவர்கள் அனைவரும், இவர்களின் சந்ததிகளும் உலகில் இருந்து மறைகின்றனர்.(17) சந்ததிகளை உண்டாக்கவல்ல இந்தத் தெய்வீக யோகிகள் ஆயிரம் வருடங்கள் கழிந்ததும், மீண்டும் தங்கள் பிறவியை அடைகிறார்கள்.(18) ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒரு குறிப்பிட்ட பணிக்காகத் தேவர்கள் தங்கள் பெயர்களையும், பிறவிகளையும் மாற்றிக் கொள்கிறார்கள்.(19) பிரஜாபதியின் வலது கை கட்டைவிரலில் இருந்து தெய்வீகனான தக்ஷன் பிறந்தான். அவனது மனைவி பிரம்மனின் இடது கை கட்டைவிரலில் இருந்து பிறந்தாள்[1].(20) தக்ஷன், உலகத்தின் அன்னையராக  கொண்டாடப்படும் மகள்களை அவனது மனைவியிடம் பெற்றான். ஓ! மன்னா, அவர்களின் சந்ததியால் மொத்த உலகமும் நிறைந்தது.(21)மனத்தில் சந்ததியைப் பெருக்க நினைத்த தக்ஷன், தன் மகள்களான அதிதி, திதி, காலை, அநாயு, ஸிம்ஹிகை, முனி, பிராதை, குரோதை, ஸுரபி, வினதை, ஸுரஸை, தனு, கத்ரு ஆகியோரை {13 மகள்களை}கசியபருக்கு {திருமணம் செய்து} கொடுத்தான்.(22,23) மேலும் தக்ஷன், தன் மகள்களான அருந்ததி, வஸு, யாமீ, லம்பை, பானு, மருத்வதி, ஸங்கல்பை, ஸாத்யை, விஷ்வை ஆகிய பத்து {10} கன்னிகையரை பிரம்மனின் மகனான மனுவுக்கு {திருமணம் செய்து கொடுத்தான்.(24) பிறகு அவன், குற்றங்குறையற்ற அங்கங்களையும், தாமரை போன்ற கண்களையும், முழு நிலவைப் போன்ற முகங்களையும் கொண்ட தன் மகள்களான கீர்த்தி {புகழ்}, லக்ஷ்மி {செல்வம்}, திருதி, புஷ்டி, புத்தி, மேதை, கிரியை, மதி, லஜ்ஜை {நாணம்} ஆகிய பத்து {10} கன்னிகையரை தர்மனுக்கு {திருமணம் செய்து} கொடுத்தான்.(25,26) அதன் பிறகு அத்ரியின் மகனான ஆத்ரேயன் {சசி / சந்திரன்} நீர் நிறைந்தவனாக {நீரின் ஆன்மாவாகப்} பிறந்தான். கோள்களின் தலைவனும், இருளை விலக்குபவனுமான அவன் ஆயிரங்கதிர்களைக் கொண்டவனாக இருந்தான்.(27,28) தக்ஷப்ரசேதஸ் தன் மகள்களான ரோகிணி முதலிய இருபத்தேழு {27} கன்னிகையரை அவனுக்கு {சந்திரனுக்குக்} கொடுத்தான்.(29)

கசியபர், மனு, தர்மன், சசி {சந்திரன்} ஆகியோரின் சந்ததியை உரைக்கிறேன் கேட்பாயாக.

கசியபர் அதிதியிடம் அர்யமான், வருணன், மித்ரன், பூஷன், தாதா, புரந்தரன்,(30) துவஷ்டா, பகன், அம்ஷன், சவிதன், பர்ஜன்யன் என்ற தேவர்களைப் பெற்றார்.

கசியபர் திதியிடம் இரண்டு மகன்களைப் பெற்றார் என நாம் கேள்விப்படுகிறோம். அவர்கள் ஹிரண்யகசிபுவும், சக்திமிக்க ஹரிண்யாக்ஷனும் ஆவர். அவர்கள் இருவரும் தவத்தில் கசியபரைப் போலவே ஒப்பற்ற ஆற்றலுடன் திகழ்ந்தனர்.(31,32) ஹிரண்யகசிபு, பெருஞ்சக்திவாய்ந்த ஐந்து மகன்களைப் பெற்றான். அவர்கள் பிரஹலாதன், அனுவலம், ஸம்லாதன், அனுராதன் ஆகியோராவர்(33). {அவர்களில் பிரஹலாதன் மூத்த மகன், அநுராதன் ஐந்தாவது மகன்}.(34)பிரஹலாதனுக்கு, விரோசனன், ஜம்பன், குஜம்பன் {ஸுஜம்பன்} என்ற பெயரில் பெருஞ்சக்திவாய்ந்த மூன்று மகன்கள் இருந்தனர்.(35) விரோசனனுக்குப் பலி என்றொரு மகன் இருந்தான், பலிக்கு பாணன் என்ற ஒரு மகன் இருந்தான். பாணனின் மகன், பகை நகரங்களை வெல்பவனான இந்திரதமனனாவான்.(36)

உலகில் பெரும் அசுரர்களாகக் கொண்டாடப்பட்ட எண்ணற்ற அசுரர்களைத் தனு பெற்றாள். அவர்களில் முதலில் பிறந்த விப்ரசித்தி மன்னனானான்.(37)

குரோதை, குரோதவசர்கள் என்றழைக்கப்பட்ட பல மகன்களையும், பேரப்பிள்ளைகளையும் பெற்றிருந்தாள். அவர்கள் அனைவரும் பெரும் பயங்கரர்களாகவும், இரக்கமற்றவர்களாகவும் இருந்தனர்.(38)

சிம்ஹிகை, சூரியனையும், சந்திரனையும் பீடித்த ராகுவைப் பெற்றாள். அவன் சந்திரனை விழுங்கி, சூரியனை அழிக்கிறான்.(39)

காலையின் பிள்ளைகள் காலனைப் போன்றவர்களாகவும், பெரும் பயங்கரர்களாகவும், கருநீல மேகங்களைப் போலப் பிரகாசமிக்கவர்களாகவும், சூரியனைப் போன்று ஒளிரும் கண்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(40)

கத்ருவுக்கு இருந்த மகன்கள் பலரில் ஆயிரம் தலைகளைக் கொண்ட சேஷன், வாசுகி, தக்ஷகன் ஆகியோர் ஏற்றமடைந்தனர்.(41) அவர்கள் அனைவரும் வேதங்களை அறிந்தவர்களாகவும், உயிரினங்களுக்கு நன்மை செய்பவர்களாகவும், வரங்களை அளிப்பவர்களாகவும், விரும்பிய வடிவங்களை ஏற்பவர்களாகவும் இருந்தனர்.(42)

வினதையின் மகன்கள் தார்க்ஷ்யன், அரிஷ்டநேமி, பெருஞ்சக்திவாய்ந்த கருடன், அருணன், அருணி ஆகியோராவர்.

{பெரும்பேறு பெற்றவளான} பிராதை, தெய்வீக முனிவர்களாலும் வழிபடப்பட்டவர்களும், {மங்கலக் குறிகள் அனைத்தையும் கொண்டவர்களுமான} எட்டு அழகிய அப்சரஸ்களைப் பெற்றாள். அவர்கள் அநவத்யை, அநூகை, அநூநை, அருணை, பிரியை, அநூகை, ஸுபகை, பாசி ஆகியோராவர்.(43,44) அலம்புஷை, மிஷ்ரகேஷி, புண்டரீகை, திலோத்தமை, ஸுரூபை, லக்ஷ்மணை, க்ஷேமை, ரம்பை, மநோரமை,(45) அஸிதை, ஸுபாஹை, ஸுவிருத்தை, ஸுமுகீ, ஸுப்ரியை, ஸுகந்தை, ஸுரஸை, பிரமாதினி,(46) காஷ்யை, ஷாரத்வதி ஆகியோர் மௌநேய அப்சரஸ்கள் என்று கொண்டாடப்படுபவர்கள். விஷ்வாவஸு, பரண்யன் ஆகியோர் கந்தர்வர்களாக அறியப்பட்டனர்;(47) மேனகை, ஸஹஜன்யை, பர்ணிகை, புஞ்ஜிகஸ்தலை, கிருதஸ்தலை, கிருதாசி, விஷ்வாசி, ஊர்வசி,(48) அநும்லோசை, பிரம்லோசை, ஆகிய பத்து பேரும் மநோவதியும் கொண்டாடப்பட்ட அப்சரஸ்களாக இருந்தனர்.(49)

பிராமணர்கள், பசுக்கள், ருத்திரர்கள் ஆகியோராலும், மொத்த உலகத்தாலும் விரும்பப்பட்ட அமுதம் பிரஜாபதியின் தீர்மானத்தினால் உண்டானது. அவர்கள் அனைவரும் சுரபியின் சந்ததியினர் என்று புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.(50)

இதுவரை நான் கசியபரின் சந்ததியைச் சொன்னேன், இனி நான் மனுவின் சந்ததியைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(51) ஓ! பாவமற்றவனே நான் அவற்றைச் சுருக்கமாகச் சொல்லப் போகிறேன். விஷ்வை விஷ்வதேவர்களையும் {தேவர்கள் அனைவரையும்}, சாத்யை சாத்யர்களையும் பெற்றனர்.(52) மருத்வதி மருத்துகளைப் பெற்றாள், வஸுவுக்கு வஸுக்கள் பிறந்தனர். பானுவின் மகன்கள் பானுக்களாகவும், முஹூர்த்தையின் மகன்கள் முஹூர்த்தஜர்களாகவும் இருந்தனர்.(53) லம்பை கோஷனைப் பெற்றாள். ஜாமி, நாகவீதியையும், அருந்ததி உலகப் பொருட்கள் அனைத்தையும் பெற்றனர்.(54) ஸங்கல்பை ஸங்கல்பனைப் பெற்றாள், லக்ஷ்மி தர்மனின் மகனும், உலகத்துக்கு மிகவும் பிடித்தமானவனுமான காமனைப் பெற்றாள்.(55) காமன் தன் மனைவியான ரதியிடம், யஷன், ஹர்ஷன் என்ற இரு மகன்களைப் பெற்றான். சோமன் தன் மனைவியான ரோஹிணியிடம் பெருந்தலைவன் வர்சஸைப் பெற்றான்.(56) அவனே {வர்சஸே} சந்திரன் எழுந்தவுடனே அவனைப் பிரகாசிக்கச் செய்கிறான். {ஊர்வசி காதலில் விழுந்த புரூரவஸ் தலைவன் வர்சஸுக்குப் பிறந்தவனாவான்.(57) இவ்வாறே ஆயிரக்கணக்கான மனைவிமாரும், மகன்களும் பிறந்தனர். இதுவே உலகத்தின் {முன்னேற்றத்திற்கும், நிர்வாகத்திற்கும்} வேராகத் திகழ்கிறது.(58) தலைவன் பிரஜாபதி உயிரினங்களின் தகுதிகளுக்குத் தக்கபடி அவற்றின் மத்தியில் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தான்.(59) அதன் பிறகு தலைவன் பத்துத் திக்குகளையும், பூமி, ரிஷிகள், பெருங்கடல்கள், பறவைகள், மரங்கள், மூலிகைகள், நாகங்கள், ஆறுகள், தேவர்கள், அசுரர்கள், வானுலாவிகள், வேள்விகள், மலைகளை ஆகியவற்றையும் படைத்தான்” என்றார் {வைசம்பாயனர்}.(60)

அதிகாரப் பகிர்வு | பவிஷ்ய பர்வம் பகுதி – 33-(லோகாநாமாதிபத்யவ்யவஸ்தாபநம்)-அண்டத்தின் அரசுரிமையில் அமர்த்தப்பட்ட இந்திரன்; பல தேவர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படல்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! பாரதா, தலைவன் {பிரம்மன்}, சூரியனைப் போன்று பிரகாசம் கொண்ட சக்ரனை {இந்திரனை} மூவுலகங்களுக்கும், தேவர்களுக்கும் மன்னனாக நியமித்தான்.(1) வஜ்ரதாரியும், கவசம் தரித்தவனுமான ஜிஷ்ணுவை அதிதி பெற்றெடுத்தாள். நுண்ணறிவுமிக்கவனும், ஸ்மிருதிகளின் புரவலனுமான அவன் அத்வர்யுக்களால் துதிக்கப்படுகிறான்.(2) தலைவன் சக்ரன், அதிதிக்குப் பிறந்ததும் குசப்புல்லால் மறைக்கப்பட்டான் என்பதால் அந்தத் தேவர்களின் மன்னன் கௌசிகன் என்ற பெயரையும் பெற்றான்.(3) பிரம்மன், ஆயிரங்கண் புரந்தரனை மேலான தலைவனாக நியமித்துவிட்டுப் பிற அரசுகளைப் படிப்படியாகப் பகிர்ந்தளித்தான்.(4)

அவன் {பிரம்மன்} சோமனை {சந்திரனை}, யஜ்ஞங்கள், தவம், நட்சத்திரங்கள், கோள்கள், இருபிறப்பாளர்கள், மூலிகைகள் ஆகியவற்றுக்கு மன்னனாக நிறுவினான்.(5) அவன் தக்ஷனைக் குடிமுதல்வர்களின் {பிரஜாபதிகளின்} மன்னனாகவும், வருணனை நீர்நிலைகளின் தலைவனாகவும், அனைத்தையும் அழிப்பவனான வைஷ்வாநரனை பித்ருக்களின் மன்னனாகவும்,(6) வாயுவை மணம், உடலற்ற உயிரினங்கள், ஒலி, ஆகாயம் ஆகியவற்றுக்குத் தலைவனாகவும் நியமித்தான்.(7)

பூதங்கள், பிசாசங்கள், மிருத்யு, பசுக்கள், பேரிடர்கள் {உத்பாதங்கள்}, தீய சகுனங்கள் {கிரஹரோகணங்கள்}, நோய்கள் {வியாதி}, ஏராளமான மழை,(8) பிற இடர்கள், தீய ஆவிகள் ஆகியவற்றின் அரசுரிமையை மஹாதேவனிடம் கொடுத்தான். யக்ஷர்கள், ராட்சசர்கள், குஹ்யர்கள், செல்வகள்,(9) ரத்தினங்கள், செல்வம் ஆகியவற்றின் மன்னனாக அவன் வைஷ்ரவணனை {குபேரனை} நியமித்தான். பற்களைக் கொண்ட விலங்குகள் அனைத்திற்கும் அவன் சேஷனை மன்னனாக நியமித்தான், வாசுகியை நாகர்களுக்கும்,(10) தக்ஷகனை பாம்புகளுக்கும் மன்னர்களாக நியமித்தான். அவன், ஆதித்யர்களில் இளையவனான பர்ஜன்யனை பெருங்கடல்கள், ஆறுகள், மேகங்கள், மழை ஆகியவற்றுக்குத் தலைவனாக நிறுவினான்[1].(11) அவன் சித்திரரதனை கந்தர்வர்களுக்கும், காமனை அப்சரஸ்களுக்கும் மன்னனாக நியமித்தான்.(12) மஹாதேவனின் வாகனமான காளையை {நந்தி தேவனை} அவன் நான்கு கால் விலங்குகள் அனைத்தின் மன்னனாக நியமித்தான்.(13)பெரும் பிரகாசத்தைக் கொண்ட ஹிரண்யாக்ஷன் தைத்தியர்களின் மன்னனாகவும், ஹிரண்யகசிபு இளவரசனாகவும் {யுவராஜனாகவும்} நியமிக்கப்பட்டனர்[2].(14) பெருஞ்சக்திவாய்ந்தவனும், முதலில் பிறந்தவனுமான விப்ரசித்தி தானவர்களுக்கும், அசுரர்களுக்கும் மன்னனாக நியமிக்கப்பட்டான்.[3] மஹாகாலன், பூதகணங்களுக்கும், காலகேயர்களுக்கும் தலைவனாக நியமிக்கப்பட்டான். விருத்திரன், துவஷ்டாவின் மனைவியான அனாயுஷையின் மகன்களுக்கு மன்னனாக்கப்பட்டான்.(15) மேலும் அவன், சிம்ஹிகையின் மகனும், பேரசுரனுமான ராஹுவை, தீய சகுனங்களுக்கும், நிமித்தங்களுக்கும் மன்னனாக்கினான்.(16)ஓ! பாரதா, பிறகு அவன் பருவகாலங்கள் {ருது}, மாதங்கள், யுகங்கள், பக்ஷங்கள், பகல்கள், இரவுகள், திதிகள், பர்வங்கள்,(17) கலைகள், காஷ்டைகள், முஹூர்த்தங்கள், இரண்டு அயணங்கள், யோக சாத்திரம், கணிதம் ஆகியவற்றுக்கு ஸம்வத்ஸரனை (வருடத்தை) மன்னனாக நியமித்தான்.(18) பெருஞ்சக்திவாய்ந்தவனும், அழகிய சிறகுகளைப் படைத்தவனுமான {சுபர்ணனுமான} கருடன், பறவைகள் அனைத்திற்கும், நெடுந்தொலைவுகளைப் பார்ப்பவர்களுக்கும், பாம்புகள் அனைத்திற்கும் {போகிகளுக்கும்} மன்னனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.(19) கருடனின் அண்ணனும், பூஜைகளில் பயன்படுத்தப்படும் செம்மலர்களைப் போன்று ஒளிபொருந்தியவனுமான அருணன், யோகங்கள் அனைத்திற்கும், சாத்யர்களுக்கும் மன்னனாக்கப்பட்டான்.(20)

உயிரினங்களின் தலைவரான கசியபரின் மகனும், பெரும் விரதனை {கிழக்கின் திக்பாலனான} வாசவன் {இந்திரன்} கிழக்குத் திசையின் மன்னனாக நியமித்தான்.(21) நீதி வழங்குபவனும், தலைவன் ஆதித்யனின் மகனும், பெருஞ்சிறப்புவாய்ந்தவனுமான யமன், மஹேந்திரனால் {இந்திரனால்} தெற்கின் மன்னனாக நியமிக்கப்பட்டான்.(22) கசியபருக்குப் பிறந்த மகனும், நீருக்கடியில் இருப்பவனும், அம்புராஜன் என்ற பெயரில் கொண்டாடப்படுபன் {வருணன்}, மேற்கின் மன்னனானான்.(23) புலஸ்தியரின் மகனும், மஹேந்திரனையே போன்றவனுமான குபேரன், வடக்கின் மன்னனாக நியமிக்கப்பட்டான்[4].(24)அண்டத்தைப் படைத்த சுயம்புவானவன், இவ்வாறு அதன் அரசைப் பிரித்து, அவர்களுக்குப் பல்வேறு தெய்வீக உலகங்களையும் ஒதுக்கினான்.(25). சிலரின் உலகங்கள் சூரியனைப் போன்று பிரகாசமிக்கதாகவும், சிலருடையது நெருப்பைப் போன்றதாகவும், சிலருடையது மின்னலைப் போன்றதாகவும், சிலருடையது சந்திரனைப் போன்றதாகவும் இருந்தது.(26) பல்வேறு வண்ணங்களில் இருந்த அந்த உலகங்கள் அனைத்தும், விரும்பியபடி உலவவல்லவையாகவும், பல நூறு யோஜனைகள் பரப்பைக் கொண்டவையாகவும், நல்லோரால் எளிதில் அடையத்தக்கவையாகவும், பாவிகளால் அடையப்படுவதற்கு அரிதானவையாகவும் இருந்தன.(27) பார்ப்பதற்கு அழகாகவும், நட்சத்திரங்களைப் போன்ற ஒளியுடனும் இருந்த உலகங்கள் நல்லோருக்கானவையாக இருந்தன.(28) மிகச் சிறந்த கொடைகளுடன் வேள்விகளைச் செய்பவர்கள், தங்கள் மனைவிமாருக்கு உண்மையாக இருப்பவர்கள், பொறுமைசாலிகள், எளியவர்கள், வாய்மை நிறைந்தவர்கள்,(29) வறியோரிடம் அன்பு காட்டும் பிராமணர்கள், பேராசையில் இருந்தும், ரஜஸ் குணத்தில் இருந்தும் விடுபட்டவர்கள் ஆகியோரும், தவசிகளும், முனிவர்களும் அந்த உலகங்களுக்குச் செல்வார்கள்.(30)

உலகின் பெரும்பாட்டனான பிரஜாபதி {பிரம்மன்} இவ்வாறு தன் மகன்களை ஈடுபடுத்திவிட்டு புஷ்கரை என்றழைக்கப்படும் பிரம்மலோகத்திற்குச் சென்றான்.(31) சுயம்புவால் பாதுகாப்புப் பணிகள் ஒப்படைக்கப்பட்ட தேவர்கள், மஹேந்திரனால் நன்றாகக் கவனிக்கப்பட்டுத் தங்கள் தங்களுக்குரிய உலகங்களில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.(32) தேவர்கள் அனைவரும், பாதுகாப்புப் பணியில் முறையாக ஈடுபடுத்தப்பட்டும், சக்ரனால் தலைமை தாங்கப்பட்டும், வேள்விக் காணிக்கைகளில் தங்கள் பங்கையும், சொர்க்கத்தையும், புகழையும், இன்பத்தையும் அனுபவித்தனர்” என்றார் {வைசம்பாயனர்}.(33)

தேவர்களுடன் போரிட அசுரர்களை ஏவிய மலைகள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 34-தேவாஸுரயுத்தோத்யோக꞉ தத்யுத்தவர்ணநம் ச)-தேவர்களிடம் அசுரர்கள் கோபம் கொள்ளத் தூண்டிய மலைகள்; ஹிரண்யாக்ஷனின் தலைமையிலான அசுரர்கள் தேவர்களை முறியடித்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பூமியை ஆதரிக்கும் {சிறகு படைத்த} மலைகள் ஒரு காலத்தில் தலைவனின் மாயைக்கு வசப்பட்டு அதை {பூமியைக்} கைவிட்டன.(1) அதன்பிறகு கிழக்குத் திசைக்கு வந்து, தடாகத்தில் மூழ்கும் யானைகளைப் போல ஹிரண்யாக்ஷனால் ஆளப்படும் அசுரர்களின் வசிப்பிடத்தில் விழுந்தன.(2)

அதன் பிறகு அவை, தேவலோகத்தின் அரசுரிமை குறித்து அசுரர்களிடம் கேட்கும் வகையில், “உங்களுக்குப் பின் பிறந்தவர்களாக இருப்பினும், தேவர்கள் அரசுரிமையை அடைந்திருக்கின்றனர்; முதலில் பிறந்தவர்களாக இருப்பினும், நீங்கள் மன்னர்களாகவில்லை” என்றன. அசுரர்கள் மிகச்சிறந்த ஆயத்தங்களைச் செய்தனர்.(3)

அவர்கள் பூமியை அடைவதில் தங்கள் மனத்தை நிலைநிறுத்தி, தங்கள் ஒப்பற்ற தீய புத்தியைப் பயன்படுத்தினர். பயங்கர ஆற்றல் படைத்த அசுரர்கள்,(4) சக்கரம், வஜ்ரம், வாள், புசுண்டி, வில், கயிறு, பராசம், சக்தி, முசலம், கதாயுதம், தண்டம் போன்ற பல்வேறு ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர்.(5) கவசம்பூண்ட சிலர் மதங்கொண்ட யானைகளைச் செலுத்தினர். பெருந்தேர்வீரர்கள் சிலர், குதிரைகளால் இழுக்கப்படும் தேர்களைச் செலுத்தினர். சிலர் குதிரைகளைச் செலுத்தினர்,(6) வேறு சிலர், தங்கள் கரங்களின் பலத்தைச் சார்ந்து ஒட்டகங்களை {காண்டமிருகங்களையும்} செலுத்தினர், சிலர் எறுமைகளையும், சிலர் கழுதைகளையும் செலுத்தினர், வேறு சிலர் காலாட்களாகச் சென்றனர்.(7) போரில் விருப்பம் கொண்ட படைவீரர்கள், ஹிரண்யாக்ஷனைச் சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சியாகப் புறப்பட்டுச் சென்றனர்.(8)

போருக்காகத் தைத்தியர்களால் செய்யப்படும் ஆயத்தங்களைக் கேள்விப்பட்ட புரந்தரனின் தலைமையிலான தேவர்களும் மிகச் சிறந்த ஏற்பாடுகளைச் செய்தனர்.(9) அவர்கள் {தேவர்கள்}, தங்கள் நால்வகைப் படையால் சூழப்பட்டவர்களாகக் கவசங்களும், விரலுறைகளும் தரித்துக் கொண்டு, அம்பறாதூணிகளையும், விற்களையும் எடுத்துக் கொண்டனர்.(10) படைக்கு மத்தியில் கடுமையான ஆயுதங்களைத் தரித்து நின்ற தேவர்கள், ஐராவதத்தில் அமர்ந்திருந்த புரந்தரனைப் பின்தொடர்ந்த சென்றனர்.(11)

அப்போது ஹிரண்யாக்ஷன், பேரிகைகளின் முழக்கம், எக்காள ஒலி ஆகியவற்றால் தூண்டப்பட்டுத் தேவர்களின் மன்னனுடன் {இந்திரனுடன்} போரிட்டான்.(12) அவன் கோடரிகள் {பரசுகள்}, {நிஸ்திரிம்சங்கள்}, கதாயுதங்கள், தோமரங்கள், ஷக்திகள், முஸலங்கள், பட்டிசங்கள் ஆகியவற்றால் வாசவனை மறைத்தான்.(13) {அசுரர்கள் பிறர், பெருஞ்சக்திவாய்ந்தவையும், பயங்கர வடிவங்களையும், வேகத்தையும் கொண்டவையுமான கணைகளின் மழையைப் பொழிந்தனர்}.(14) எஞ்சிய தைத்தியர்கள் கூரிய கோடரிகள், இரும்பு வாள்கள், கதாயுதங்கள், க்ஷேபணிகள், முத்கரங்கள் ஆகியவற்றையும்,(15) பெரும் கற்கள், மலைகளைப் போன்று பெரிய கற்பாறைகள், சதாக்னிகள் ஆகியவற்றையும்,(16) {இயந்திரங்களில் இருந்து ஏவப்படும்} பிற ஆயுதங்களையும் கொண்டு வாசவனையும், பிற தேவர்களையும் தாக்கினர்.(17)

புகைபோன்ற தலைமயிரையும், மஞ்சள் தாடியையும் கொண்டவனும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்தவனும், மாலை நேர மேகங்களைப் போன்ற கரிய நிறம் கொண்டவனும், மிகச் சிறந்த மகுடத்தையும்,(18) கருநீல ஆடைகளையும், மஞ்சள் ஆடைகளையும் தரித்தவனும், {தந்தங்களைப் போன்ற கூரிய பற்களைக் கொண்டவனும்}, கால்மூட்டுகள் வரை கைகள் நீண்டவனும், வைடூரியங்களாலான ஆபரணங்களை அணிந்தவனுமான ஹிரண்யாக்ஷன்,(19,20) அண்ட அழிவின் போது தோன்றும் பயங்கரமிக்கக் காலனைப் போல அசுரர்களின் படைக்கு முன்பு நின்று கொண்டிருப்பதைக் கண்ட வாசவனும், தேவர்கள் அனைவரும் கவலையுற்றனர்.(21)

விற்களையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு, போர்க்களத்தில் தங்களுக்கு முன்னால் நிற்கும் புரந்தரனுடன் இருந்த தேவர்கள், அசைந்து வரும் மகேந்திர மலையைப் போல முன்னேறும் ஹிரண்யாக்ஷனைக் கண்டதும் கவலையால் நிறைந்தனர்.(22) {தேவர்கள் போர்க்களத்தில் ஆயிரங்கண்களைக் கொண்ட இந்திரனைத் தங்கள் முன் கொண்டிருந்தனர்}. பொற்கவசங்களின் ஒளியால் ஒளியூட்டப்பட்ட அந்தத் தைத்திய படை,(23) விண்மீன்கள் பொருந்திய கூதிர்கால வானத்தைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் ஒருவரையொருவர் வீழ்த்தினர்;(24) சிலர் துவந்தத்தில் இருந்து விலகி, தங்கள் கரங்கள் நொறுங்கி நின்றனர். சிலரின் அங்கங்கள் கதாயுதங்களால் சிதைந்திருந்தன, சிலர் கணைகளின் காயத்தை மார்பில் தாங்கியிருந்தனர்.(25) சிலர் வீழ்ந்தனர், சிலர் சுழற்றி வீசப்பட்டனர். சிலர் தேர்களை நொறுக்கினர், சிலர் அவற்றால் {தேர்களால்} நசுக்கப்பட்டனர்.(26) போரின் நெருக்கடியில் அசையமுடியாமல் சில தேர்கள் நின்றன. கெடுநாளைப் போன்றதும், தானவர்களைப் போன்ற பெரும் மேகங்களாலும், தெய்வீக ஆயுதங்களின் வடிவில் இருந்த மின்னல்களாலும் மறைக்கப்பட்டதுமான அந்தப் போர், இரு படைகளாலும் ஏவப்பட்ட கணைகளின் மழையில் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது.(27)

பெருஞ்சக்திவாய்ந்த திதியின் மகனும், பேரொளி படைத்தவனுமான ஹரிண்யாக்ஷன் கோபத்தால் தூண்டப்பட்டு, பர்வத்தின் போது {அமாவாசையில் / பௌர்ணமியில்} பெருகும் பெருங்கடலைப் போலத் தன்னைப் பெருக்கிக் கொண்டான்.(28) கோபத்தால் தூண்டப்பட்ட ஹிரண்யாக்ஷனின் வாயில் இருந்து எரியும் கங்குகள் வெளிப்பட்டன. புகையிலும், நெருப்பிலும் நிறைந்த காற்றுத் தேவர்களை எரித்தது.(29) ஓர் உயரமான மலை எழுந்து நிற்பதைப் போல மொத்த வானமும் ஆயுதங்களாலும், விற்களாலும், பரிகங்களாலும் மறைக்கப்பட்டது.(30) ஹிரண்யாக்ஷனின் பல்வேறு ஆயுதங்களால் போரில் தாக்கப்பட்டவர்களும், சிறகு படைத்த கணைகளால் மார்பிலும், தலைகளிலும் காயமடைந்தவர்களுமான தேவர்களால் போர்க்களத்தில் அசையவும் முடியவில்லை(31). போரில் ஹிரண்யாக்ஷனால் முறியடிக்கப்பட்ட தேவர்கள் மிகக் கவனமாக இருந்தாலும் தங்கள் நனவை இழந்தனர். இவ்வாறே தேவர்கள் அனைவரும் ஹிரண்யாக்ஷனால் அச்சுறுத்தப்பட்டனர்.(32) ஆயிரங்கண்களைக் கொண்டவனும், யானையில் அமர்ந்திருந்தவனுமான சக்ரன் {இந்திரன்}, ஹிரண்யாக்ஷனின் ஆயுதங்களால் தாக்கப்பட்டு, அச்சத்தால் போர்க்களத்தில் திரியமுடியாதவனாக இருந்தான். தேவர்கள் அனைவரையும் வென்று, அவர்களின் மன்னனை வீழ்த்திய அந்தத் தானவன், அண்டம் தன் வசப்பட்டதாக நினைத்தான்.(33,34) {மழை நிறைந்த மேகத்தைப் பழிப்பது போல் ஒலி {குரல்} கொண்டவனும், மதங்கொண்ட யானையைப் போன்ற உடல் கொண்டவனும், அகன்ற மார்பைக் கொண்டவனுமான அசுரேந்திரன் (ஹிரண்யாக்ஷன்} தன் வில்லை அசைத்துக் கொண்டிருப்பதைத் தேவர்கள் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்}[1]” என்றார் {வைசம்பாயனர்}.(35)

ஹிரண்யாக்ஷவதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 35-(ஹிரண்யாக்ஷவத)-ஹரிண்யாக்ஷனுக்கும், வராகனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; ஹிரண்ய வதம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “தேவர்கள் இவ்வாறு தாக்கப்பட்டு, அவர்களுடைய மன்னன் {இந்திரன்} அசைவற்றிருந்தபோது, சக்கரபாணி (விஷ்ணு), கதாயுதம் தரித்த ஹிரண்யாக்ஷனை அழிப்பதில் தன் மனத்தை நிலைநிறுத்தினான்.(1) அசுரர்களைக் கொல்பவனான அந்தத் தலைவன் {விஷ்ணு}, ஏற்கனவே சொல்லப்பட்ட பெரும்பன்றியின் வடிவை ஏற்று {வராகனாக} அங்கே வந்தான்.(2) அவன், நிலவு போல ஒளிர்ந்து கொண்டிருந்த தன் சங்கையும், சக்கர மலைக்கு ஒப்பானதும், ஆயிரங்கத்திகளுடன் கூடியதுமான தன் சக்கராயுதத்தையும் எடுத்துக் கொண்டான்.(3)

சிதைவற்ற அந்தத் தலைவனுக்குரிய மஹாதேவன், மஹாபுத்தி, மஹாயோகி, மஹேஷ்வரன் என்பவை போன்ற ரகசிய பெயர்களை அமரர்கள் எப்போதும் ஓதுவார்கள்.(4) அவன், ஆத்ம ஞானத்தை அறிந்தவர்களில் முதன்மையானவன். அவன், பக்திமான்களால் எப்போதும் தொண்டாற்றப்படுபவன். அண்டத்தைப் படைத்தவனான அந்தப் புராதன புருஷன், மூவுலகங்களிலும் கொண்டாடப்படுகிறான்.(5) அவன் தேவர்களில் வைகுண்டனாகவும், போகிகளில் {பாம்புகளில்} அனந்தனாகவும், யோகிகளில் விஷ்ணுவாகவும், வேள்விச் சடங்குகளில் தலைமைத் தேவனாகவும் இருக்கிறான்.(6)  {பூமியில் செய்யப்படும் வேள்விகளில் பெரும் முனிவர்களால் கொடுக்கப்படும்} மூன்று வகை வேள்விக் காணிக்கைகளை அவனுடைய அருளால் தேவர்கள் உண்கிறார்கள்.(7)

{அவனே தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கதியாக இருக்கிறான். அவனே சூரர்களுக்கு {தேவர்களுக்கு} பரகதியாக இருக்கிறான். அவனே புனிதங்களில் மிகப் புனிதனாக இருக்கிறான். சுயம்புவான அவன், தாழ்ச்சி ஏதும் இல்லாத தலைவனாவான்.(8) ஒவ்வொரு யுகத்திலும் அசுரர்கள் பலம்பெறுவதைக் கண்டு, அவர்களைச் சக்கரத்திற்குள் நுழையச் செய்து, அவர்களுக்குத் துன்ப நிலையைக் கொடுக்கிறான்.(9) அப்போது அவன், சங்குகளில் சிறந்த தன் புராதன சங்கை எடுத்துத் தன் வாயால் முழக்கி, பெருஞ்சக்தி வாய்ந்த அந்த அசுரனின் {ஹிரண்யாக்ஷனின்} உயிரை நடுங்கச் செய்தான்.(10)}[1]அசுரர்களுக்கு அச்சத்தை ஊட்டும் அந்தப் பயங்கரச் சங்க முழக்கத்தைக் கேட்டுத் தானவர்கள் அனைத்துப் பக்கங்களிலும் {பத்து திக்குகளிலும்} தப்பி ஓடினர்.(11) அப்போது, செந்நிறக் கண்களைக் கொண்ட அந்தப் பேரசுரன் ஹிரண்யாக்ஷன், கோபத்துடன், “இவன் யார்?” எனக் கேட்டு, பன்றியின் வடிவில் இருந்தவனும், தேவர்களின் துயரங்களை விலக்குபவனும், சக்கராயுத்துடன் அவன் முன்பு நின்றவனுமான நாராயணன் மீது தன் பார்வையைச் செலுத்தினான்.(12)

{புருஷர்களில் சிறந்தவனும், தேவர்களின் துயரத்தை அழிப்பவனுமான தலைவன் தன் முன்னே சங்கு சக்கர பாணியாக வராக வடிவில் நிற்பதை அவ்வசுரன் {ஹிரண்யாக்ஷன்} கண்டான்.(13) அசுரர்களைக் கொல்பவனான அவன் {வராகன்}, சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் மின்னுவதும், மழை தருவதுமான கரு நீல மேகம் போலச் சங்கு, சக்கரத்துடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(14)}[2]அதன் பிறகு ஹிரண்யாக்ஷனும், பிற அசுரர்களும் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு நாராயணனுடன் போரிட்டனர்.(15) அந்த ஹரி, பெருஞ்சக்திவாய்ந்த தைத்தியர்களால் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு தாக்கப்பட்டாலும், ஒரு மலையைப் போலப் போர்க்களத்தில் இருந்து அசையாமல் நின்றான்.(16) அதன் பிறகு பெருஞ்சக்திவாய்ந்த ஹிரண்யாக்ஷன், பன்றி வடிவில் இருந்த வராஹனின் {நாராயணனின்} மார்பில் எரியும் சக்தி ஆயுதத்தை ஏவினான்.(17)

{அந்தச் சக்தி ஆயுதத்தின் ஒளியைக் கண்ட பிரம்மன்} ஆச்சரியத்தால் நிறைந்தான். பெருஞ்சக்திவாய்ந்த அந்தப் பன்றியானவன் {வராகன்}, தன் மீது விழப்போகும் அந்தச் சக்தி ஆயுத்தத்தைக் கண்டு,(18) பெருமுழக்கம் {ஹுங்காரம்} செய்து, அதைத் தரையில் வீழ்த்தினான். {இவ்வாறு அந்தச் சக்தியாயுதம் நொறுக்கப்பட்டதும், பிரம்மன், “நன்று” என்று சொன்னான்}.(19) அதன்பிறகு அந்தத் தலைவன், அசுரனால் தாக்கப்பட்ட போது, சூரியனைப் போன்ற தன் சக்கராயுதத்தைச் சுழற்றி,(20) அந்தத் தானவ மன்னன் மீது ஏவி, {சிறந்த காரணத்திற்காக அவனது தலையை} வீழ்த்தினான். வஜ்ரத்தால் பெயர்க்கப்பட்ட மேரு மலையின் சிகரத்தைப் போல அந்தத் தைத்திய மன்னனின் தலை, சக்கரத்தால் வீழ்த்தப்பட்டுத் தரையில் விழுந்தது.(21) அவன் மரணமடைந்ததும் தைத்தியர்கள் அனைவரும் அச்சத்தால் நிறைந்தவர்களாக அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(22) {சக்கரபாணியும், உலகங்களெங்கும் எதிர்ப்பில்லாதவனும், எதிர்ப்பற்ற, பயங்கரமான சக்கரத்தைத் தரித்தவனுமான அவன் {விஷ்ணு}, யுக முடிவில் தண்டத்துடன் கூடிய காலனைப் போல அந்தப் போர்க்களத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்}[3]” என்றார் {வைசம்பாயனர்}.(23)

வராஹபுராணம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 36-(இந்த்ரதீநாம் மோசநம் தேஷாமாதிபத்யலாபஷ்ச)-தேவர்கள் தங்கள் நிலைகளை அடைந்தது; ஹரியின் ஆணை; வராஹ புராண மகிமை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “{புருஷோத்தமனான} ஹரி, இவ்வாறு அசுரர்கள் அனைவரையும் போரில் முறியடித்து, புரந்தரனையும், தேவர்கள் அனைவரையும் விடுவித்தான்.(1) தேவர்கள் அனைவரும் தங்கள் இயல்பான மனநிலையை மீண்டும் அடைந்து, புரந்தரனை முன்னிட்டுக் கொண்டு நாராயணனை அணுகினர்.(2)

தேவர்கள், “ஓ! தலைவா, {ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே,  விருப்பத்தையும், உன் கரங்களின் பலத்தையும் கொண்ட} உன் தயவால் நாங்கள் காலனின் வாயில் இருந்து விடுபட்டோம்.(3) அதிதியின் மகன்களான நாங்கள் உனக்காக என்ன செய்ய வேண்டும்? நாங்கள் உன் பாதங்களுக்குத் தொண்டாற்ற விரும்புகிறோம்” என்றனர்.(4)

தாமரைக் கண்களைக் கொண்டவனும், தேவர்களின் பகைவரைக் கொன்றவனுமான அந்தத் தலைவன் {ஹரி}, அவர்களின் இந்தச் சொற்களைக் கேட்டு பெரும் நிறைவடைந்து,(5) “நீங்கள் யாவரும் என்னால் உங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறங்கள் பலவற்றைப் பாதுகாப்பீராக.(6) வேள்விக் காணிக்கைகளில் உங்களுக்கு உரிமையுள்ளதால் என்னால் முன்பு நிறுவப்பட்டிருந்த விதிகளைக் கடைப்பிடிப்பீராக” என்றான் {பகவான்}.(7)

துந்துபி போன்ற குரலைக் கொண்ட அந்தத் தலைவன், தேவர்களிடம் இதைச் சொல்லிவிட்டு, மீண்டும் சகர்னிடம் {இந்திரனிடம்}, “நல்லோரிடமும், தீயோரிடமும் பாகுபாடற்ற முறையில் நீ நடந்து கொள்ள வேண்டும். {நல்லோருக்குத் தகுந்த சரியான வழியில் நீ உன் கடமையைச் செய்ய வேண்டும்}.(8) ஓ! தேவர்களின் மன்னா, விரும்பிய பொருட்கள் அனைத்தையும் வழங்கும் உன் உலகுக்குள் தவசிகள் நுழைய நீ எப்போதும் அனுமதிக்க வேண்டும்.(9) {வேள்விகள் செய்யும் எந்தப் பிராமணனும், க்ஷத்திரியனும், வைசியனும், தங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் சொர்க்கத்தைப் போன்ற அற்புதம் நிறைந்த உலகங்களை அடையட்டும்}. தேவர்களை வேள்விகளால் அமைதியடையச் செய்பவர்கள், அதற்குரிய பலன்களை அடையட்டும்.(10) நல்லோரும், அறவோரும் செழித்திருக்கட்டும், பாவிகள் அழிவடையட்டும். பல்வேறு நிலைகளில் {பல்வேறு ஆசிரமங்களைக் கடைப்பிடித்துத்} தொண்டாற்றும் அறம்சார்ந்த மக்கள் சொர்க்கத்தை வெல்லட்டும்.(11) வாய்மை நிறைந்தவர்களும், எளிமையானவர்களும், வீரர்களும், பொறாமையற்றவர்களுமான மனிதர்கள் சொர்க்கத்தின் பலன்களை அனுபவிக்கட்டும்.(12) அவதூறு செய்பவர்களும், காமாந்தகர்களும், பேராசைக்காரர்களும், தீயோரும், {பிராமணர்களுக்குத் தீங்கிழைப்போரும்}, நாத்திகர்களும் நரகம் செல்லட்டும்.(13) ஓ! தேவர்களின் மன்னா, நான் சொன்னவற்றை நீ பின்பற்றினால், நான் இருக்கும் வரை உன்னுடைய பகைவர்களால் உனக்குத் தீங்கிழைக்க முடியாது” என்றான்.(14)

சங்கு, சக்கர, கதாதாரியான அவன் இதைச் சொல்லிவிட்டு மறைந்தான். தேவர்கள் அனைவரும் பேராச்சரியத்தில் நிறைந்தனர்.(15) அவர்கள், வராஹனின் அற்புதமிக்கச் செயல்களைக் கண்டு, அந்த வராஹனை வணங்கிவிட்டுத் தேவலோகம் சென்றனர்” என்றார் {வைசம்பாயனர்}[1].(16){வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிறகு தேவர்கள் தங்கள் தங்கள் உலகங்களின் அதிகாரங்களைக் கைப்பற்றி வாசவனை உலகங்கள் அனைத்தின் தலைவனாக நிறுவினர்.(17) தானவர்களிடம் இருந்து விடுபட்ட பூமாதேவி மீண்டும் தன் இயல்பான நிலையை அடைந்தாள். பூமியின் உறுதியற்ற தன்மைக்குப் பொறுப்பானவை மலைகளே என்பதை அறிந்த புரந்தரன், அந்த மலைகளை அதனதனுக்குரிய இடங்களில் நிறுவி, நூறு கூர்முனைகளைக் கொண்ட தன்னுடைய வஜ்ராயுதத்தால் அவற்றின் சிறகுகளை அறுத்தான்.(18,19) புத்தியுள்ள சக்ரன், (மேனையின் மூலம் இமயத்துக்குப் பிறந்த மகனான) மைநாகத்தைத் தவிர மற்ற மலைகள் அனைத்தின் சிறகுகளையும் அறுத்தான். தேவர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டால் மைநாகமலைக்கு மட்டுமே சிறகுகள் எஞ்சியிருந்தன.(20)

இது புராதன வரலாறுகளில் {புராணங்களில்} விப்ரேந்திரனால் புகழப்படும் பரமாத்மாவான நாராயணனின் வராஹ அவதார விளக்கமாகும்.(21) இதையும், தொடக்கத்தில் இருந்து கேட்கப்பட்டுவருவதும், கிருஷ்ண துவைபாயனரால் {வியாசரால்} சொல்லப்பட்டதுமான புனித ஞானத்தையும், தூய்மையற்றவர்கள், நன்றியற்றவர்கள், கொடூரர்கள் ஆகியோரிடம் சொல்லக்கூடாது.(22) ஓ! மன்னா, இழிந்தவர்கள், தாழ்ந்தவர்கள், ஆசானை வெறுப்பவர்கள், சீடர்களாக இல்லாதவர்கள், நன்றி மறந்தவர்கள் ஆகியோரிடமும் இதைச் சொல்லக்கூடாது.(23) நீண்ட வாழ்நாள், புகழ், நிலம் ஆகியவற்றை விரும்புகிறவர்களும், வெற்றியை விரும்புகிறவர்களும் தேவர்களின் வெற்றியைச் சொல்லும் இதை {வராஹ புராணத்தைக்} கேட்க வேண்டும்.(24)

புராதன வரலாற்றையும், வேதங்களையும் குறித்த இந்தக் கதை {கேட்போருக்கு} மங்கலமும், செழிப்பும் உண்டாவதை உறுதி செய்யும். உயிரினங்கள் அனைத்திற்கும் புனிதமான இந்தக் கதை வெற்றியையும் உறுதி செய்யும்.(25) ஓ! குரு குலத்தவனே, ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இவ்வாறே நான் பரமாத்மாவின் வராஹ அவதாரத்தைக் கோட்பாட்டளவிலும் தொடர்ச்சியாகவும் உனக்குச் சொன்னேன்.(26) தேவர்களுக்காகவும், பித்ருக்களுக்காகவும் புனித வேள்விகளைச் செய்பவர்கள், ஆத்மாவின் ஆத்மாவும், நித்யனுமான விஷ்ணுவுக்காகவே அந்தந்த வேள்விகளைச் செய்கிறார்கள்.(27) ஓ! மன்னா, உலகின் புகலிடமும், தேவர்களின் புகலிடமும், சுயம்புவான பிரம்மனின் புகலிடமும், பிரம்மமேயான வேதங்களின் புகலிடமும், நாராயணனின் நல்லாத்மாவுமான வராஹ அவதாரத்தை வணங்குவோம்” என்றார் வைசம்பாயனர்}[2].(28)

நரசிம்ம அவதாரம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 37-(ந்ருஸிம்ஹாவதாரம்)-அரிய வரங்களைப் பெற்ற ஹிரண்யகசிபு; நரசிங்க அவதாரம்; ஹிரண்யகசிபுவின் அரண்மனை வர்ணனை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! மன்னா, நான் இதுவரை விஷ்ணுவின் வராக அவதாரத்தைக் குறித்து உனக்கு விளக்கிச் சொன்னேன். இனி அந்தத் தலைவன் {விஷ்ணு}, ஹிரண்யகசிபுவைக் கொன்ற நரசிங்க அவதாரத்தைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(1) முன்னர், கிருத யுகத்தில் தைத்திய குலத்தை நிறுவிய மன்னன் ஹிரண்யகசிபு பெருந்தவங்களைச் செய்து வந்தான்.(2) அவன் அசையாமல் இருக்கும் பொருளென ஐயாயிரத்து ஐநூறு {5500} ஆண்டுகள்[1] மௌன விரதம் நோற்று, நீருக்கடியில் வாழ்ந்து வந்தான்.(3) அவனுடைய தற்கட்டுப்பாடு, புலனடக்கம், ஓழுங்குமுறைகள் ஆகியவற்றில் பிரம்மன் பெரும் நிறைவடைந்தான்.(4)தலைவன் பிரம்மன், அன்னங்களால் இழுக்கப்படும் தன்னுடைய வெண் சூரியத் தேரில் அங்கே வந்தான்.(5) {ஆதித்யர்கள், வசுக்கள், சாத்யர்கள், மருத்துகள், தேவகணங்கள், ருத்திரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கின்னர்கள் ஆகியோருடனும்,(6) திசைகள், துணைத்திசைகள், ஆறுகள், பெருங்கடல்கள், நட்சத்திரங்கள், கணங்கள், வானுலாவிகள், பெருங்கோள்கள்,(7) தேவர்கள், பிரம்மரிஷிகள், சித்தர்கள், சப்தரிஷிகள், புனிதப்பணிகளைச் செய்யும் ராஜரிஷிகள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோருடன் பிரம்மன் அங்கே வந்தான்.(8) அசைவனவற்றுக்கும், அசையாதனவற்றுக்கும் ஆசானும், மங்கலத் தலைவனுமான பிரம்மன், தேவகணங்களும், பிரம்மத்தை அறிந்தோரில் சிறந்தோரும் சூழ பின்வரும் சொற்களை அந்தத் தைத்தியனிடம் சொன்னான்.(9)}[2] அவன் அந்தத் தைத்திய மன்னனிடம் {ஹிரண்யகசிபுவிடம்}, “ஓ! உறுதியான நோன்புகள் நோற்றவனே, நீ என்னிடம் பற்றும், ஆர்வமும் கொண்டவனாக இருக்கிறாய். உன்னுடைய தவம், துறவு ஆகியவற்றில் நான் நிறைவடைந்திருக்கிறேன். உனக்கு நன்மை விளையட்டும். நீ விரும்பும் வரத்தை வேண்டுவாயாக” என்று கேட்டான்.(10)

அப்போது தானவத் தலைவன் ஹிரண்யகசிபு, மகிழ்ச்சியான இதயத்துடனும், கூப்பிய கரங்களுடனும்,(11) “ஓ! தலைவா, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்கள், மனிதர்கள், பிசாசங்கள் ஆகியோரில் எவரும் என்னைக் கொல்லாதிருக்கட்டும்.(12) ரிஷிகள் கோபமடைந்து என்னைச் சபிக்காதிருக்கட்டும். {இதுவே என் தவத்திற்குத் தகுந்த வரமென நான் வேண்டுகிறேன்}.(13) ஆயுதம், மலை, மரம் ஆகியவை எவற்றினாலோ, உலர்ந்த, அல்லது ஈரமான பொருட்களாலோ எனக்கு அழிவு நேராதிருக்கட்டும்.(14) என் மரணம் சொர்க்கத்திலோ, பாதாளத்திலோ, வானத்திலோ, பகலிலோ, இரவிலோ நேராதிருக்கட்டும்.(15) தொண்டர்கள், பணியாட்கள், உற்றார் உறவினருடன் கூடிய என்னை உள்ளங்கையின் ஒரே அடியால் எவன் கொல்லவல்லவனோ அவனே எனக்கு மிருத்யுவாகட்டும்.(16) சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு, நீர், வானம், நட்சத்திரங்கள், பத்துத் திக்குகள் ஆகியவற்றின் பணிகளை நானே மேற்கொள்வேனாக. நானே காமனும், குரோதனும், வருணனும், வாசவனும் {இந்திரனும்}, யமனும்,(17) குபேரனும், கிம்புருஷர்களின் மன்னனும் ஆவேனாக. போரில் என் முன்னால் பேராயுதங்கள் உடல்வடிவம் கொண்டு தோன்றட்டும்” என்றான் {ஹிரண்யகசிபு}.(18)

பிரம்மன், “ஓ! மகனே, அற்புதம் நிறைந்த இந்தத் தெய்வீக வரங்களை நான் உனக்குத் தருகிறேன். இந்த வரங்கள் மனிதர்கள் அடைவதற்கு அரிதானவை. நீ விரும்பும்பொருட்கள் அனைத்தையும் என் தயவால் நீ நிச்சயம் அடைவாய்” என்றான்”.(19)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பிரம்மன் இதைச் சொல்லிவிட்டு ஆகாய வழியில் {பிரம்ம ரிஷிகணங்கள் இருந்த} வைராஜ உலகத்திற்குச் சென்றான்.(20) இதன் பிறகு இந்த வரம் அருளப்பட்டதைக் கேள்விப்பட்ட தேவர்களும், நாகர்களும், கந்தர்வர்களும் {முனிவர்களுடன் கூடியவர்களாக} பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்று,(21) “ஓ! தலைவா, இந்த வரத்தால் அந்த அசுரன் எங்களை ஒடுக்கப் போகிறான். அவனது அழிவுக்கு நீர் வழிவகுப்பீராக” என்று கேட்டனர்.(22)

{அனைத்து உயிரினங்களைப் படைத்தவனும், வேள்வி ஹவ்யகவ்யங்களையும், பித்ருக்களுக்கான ஹவ்யகவ்யகளையும் படைத்தவனும், வெளிப்படாதவனும், நித்தியனும்,(23) உயிரினங்களின் தலைவனுமான பிரம்மன்}, உலக உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை விளைவிப்பவையான அவர்களின் சொற்களைக் கேட்டு, {அந்த தேவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் இனிய சொற்களில்},(24) “ஓ! தேவர்களே, அவன் தன்னுடைய தவங்களின் பலன்களை அடைய வேண்டும். அவற்றை அவன் அனுபவித்த பிறகு, தலைவன் விஷ்ணு அவனைக் கொல்வான்” என்றான்.(25) தாமரையில் உதித்த அந்தத் தேவன் {பிரம்மன்} சொன்னதைக் கேட்டு மகிழ்ந்த தேவர்கள், தங்கள் தங்கள் உலகங்களுக்குத் திரும்பிச் சென்றனர்”.(26)

வைசம்பாயனர், “தைத்தியத் தலைவன் ஹிரண்யகசிபு தான் அடைந்த வரத்தால் உண்டான சக்தியில் செருக்கடைந்து உயிரினங்களை ஒடுக்கத் தொடங்கினான்.(27) பெருஞ்சக்திவாய்ந்தவனான அந்தத் தைத்தியன் ஆசிரமங்களில் வாழும் முனிவர்களுக்கும், வாய்மைநிறைந்தவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களுமான பிராமணர்களுக்கும் தீங்கிழைத்தான்.(28) அவன், மூவுலகங்களிலும் இருந்த தேவர்கள் அனைவரையும் வென்று, அவர்கள் அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சொர்க்கத்தில் வாழ்ந்திருந்தான்.(29) விதியால் தூண்டப்பட்டவனும், வரம் கொடுத்த செருக்கில் மிதந்தவனுமான அவன், வேள்விகளில் உள்ள உரிமையைத் தேவர்களிடம் இருந்து பறித்துத் தைத்தியர்களுக்குக் கொடுத்தான். {வேள்விகள் தைத்தியர்களின் பெயர்களிலேயே செய்யப்பட்டன}.(30) அப்போது ஆதித்யர்கள், சாத்யர்கள், விஷ்வர்கள், வசுக்கள், ருத்திரர்கள், {தேவகணங்கள், யக்ஷர்கள்} தேவரிஷிகள்,(31) பிராமணர்கள் ஆகியோர் அனைவரும் பெருஞ்சக்திவாய்ந்தவனும், நித்தியனும், உலகால் துதிக்கப்படுபவனுமான விஷ்ணுவை அடைந்து அவனது புகலிடத்தை நாடினார்கள் {அவனைச் சரணடைந்தார்கள்}.(32)

தேவர்கள் {விஷ்ணுவிடம்}, “ஓ! நாராயணா, {ஐசுவரியங்களைக் கொண்ட தேவா}, தேவர்கள் உன் புகலிடத்தை நாடுகிறார்கள். தைத்தியத் தலைவன் ஹிரண்யகசிபுவைக் கொன்று நீ எங்களைப் பாதுகாப்பாயாக.(33) பாதுகாவலன் நீயே, பேராசான் நீயே, மஹாதேவன் நீயே. {பிரம்மனைப் போன்ற தேவர்களில் நீ எங்கள் பரமத்தலைவனாக இருக்கிறாய்.(34) ஓ! தாமரை இதழ்களைப் போன்று அகன்றிருக்கும் அழகிய விழிகளைக் கொண்டவனே, ஓ! பகைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் தலைவா,} பகைவரை அழித்து நண்பர்களை நிறைவடையச் செய்வாயாக. திதியின் சந்ததியைக் கொன்று எங்களுக்கு உதவுவாயாக.” என்று கேட்டனர்.(35,36)

விஷ்ணு, “தேவர்களே, உங்கள் அச்சத்தைக் கைவிடுங்கள் {பயம் வேண்டாம்}. உங்கள் பாதுகாப்புக்கு நான் உறுதி கூறுகிறேன் {அபயம் தந்தோம்}. நீங்கள் முன்பு போலவே தேவலோகத்தை விரைவில் அடைவீர்கள்.(37) வரத்தின் செருக்கில் மிதந்து கொண்டிருப்பவனும், தேவர்களாலும் கொல்லப்பட முடியாதவனுமான அந்தத் தானவ மன்னனையும், அவனது மக்களையும் நான் விரைவில் கொல்வேன்” என்றான்”.(38)

வைசம்பாயனர், “எல்லாம்வல்லவனான அந்தத் தலைவன், இதைச் சொல்லி தேவர்களை அனுப்பிவிட்டு, ஹிரண்யகசிபுவின் அழிவைச் சிந்தித்தான்.(39) {தலைவன் விஷ்ணு தாமதமேதும் செய்யாமல் இமய மலையின் சாரலுக்குச் சென்று, “எந்த வடிவை ஏற்று அந்த மஹாசுரனை (ஹிரண்யகசிபுவை) கொல்வது?(40) தேவர்களின் பகைவனைக் கொல்வதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று சிந்தித்தான். அதன் பிறகு விஷ்ணு, முன்னர் ஒருபோதும் தோன்றாத ஒரு வடிவை ஏற்றான்.(41) தைத்தியர்களைக் கொல்வதற்கு ஒருபோதும் காணாத நரசிம்ம வடிவை அவன் ஏற்றான். பெருஞ்சக்திவாய்ந்த கரங்களைக் கொண்ட அவன், தன் துணைக்கு ஓங்காரத்தை எடுத்துக் கொண்டான்.(42) தாழ்வில்லாதவனும், பரமதேவனுமான தலைவன் விஷ்ணு, ஓங்காரத்தின் துணையுடன் ஹிரண்யகசிபுவின் அரண்மனைக்குச் சென்றான்.(43) அவன் காந்தியுடன் கூடிய சூரியனைப் போலவும், மற்றொரு சந்திரனைப் போலவும் தெரிந்தான். தலைவனின் பாதியுடல் மனிதனாகவும், மறுபாதி சிங்கத்தின் உடலாகவும் இருந்தது.(44) நரசிங்கத்தின் உடல்வடிவை ஏற்றுக் கொண்ட அவன், தன் கைகளை ஒன்றோடொன்று உரசினான். பாதி சிங்க உடலையும், பாதி மனித உடலையும் ஏற்றுச் சென்ற அவன், மனத்தின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவடையச் செய்வதும், பெரியதும், தெய்வீகமானதும், அழகானதும், மனத்தைக் கொள்ளையிடுவதுமான ஹிரண்யகசிபுவின் சபையைக் கண்டான்}.(45) நூறு யோஜனைகள் நீளமும், அதில் பாதி அளவு {ஐம்பது யோஜனைகள்} அகலமும் கொண்ட அந்தச் சபை பேரழகுடன் திகழ்ந்தது. {வானத்தில் ஐந்து யோஜனை நீளவல்லதாகவும் அஃது இருந்தது}.(46) அங்கே முதுமையோ, கவலையோ, களைப்போ இல்லாதிருந்தது. {அது நடுங்காமல் இருந்தது. அந்த இடம் நற்பேறு பெற்றதாகவும் மங்கலமானதாகவும் இருந்தது. அந்தச் சபா மண்டபம், காந்தியால் சுடர்விடுவதைப் போலத் தெரிந்த அழகிய மங்கல இருக்கைகளைக் கொண்டதாக இருந்தது.(47) விஷ்வகர்மனால் விதிக்கப்பட்ட அந்தச் சபாமண்டபம், உள்ளே நீர்த்தடாகங்களைக் கொண்டிருந்தது. மேலும் அது தெய்வீக ரத்தினங்களாலும் நிறைந்திருந்தது}.[3] அது பல்வேறு மலர்களாலும், சிறந்த இருக்கைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. {மலர்களையும், கனிகளையும் கொண்ட மரங்கள் அந்தச் சபாமண்டபத்தில் இருந்தன}” என்றார் வைசம்பாயனர்.(48)

அந்தச் சபாமண்டபத்தில் நீலம், வெள்ளை, கருப்பு, சிவப்பு நிறங்களில் விரிப்புகளும், மரம் போன்ற தோரணங்களும், நூற்றுக்கணக்கான மலர் தோரணங்களும் இருந்தன.(49) நீருண்ட வெண்மேகம், நீரில் அசைந்து மிதப்பதைப் போன்று அந்தச் சபாமண்டபம் காணப்பட்டது. அந்த அழகிய சபாமண்டபம், ஒளியுடன் மின்னும் தோற்றத்தில் அருளப்பட்ட இருக்கைகளுடன் இருந்தது. அந்தச் சபை காந்தியால் பளபளத்தது.(50) தெய்வீக மணங்கமழும் அந்தச் சபை காண்போர் கண்களைக் கொள்ளைக் கொண்டது. அந்தச் சபாமண்டபத்தை அடைந்தவர்களை இன்பதுன்பங்களும், குளிர்வெப்பமும், பசி, தாகம், களைப்பு ஆகியனவும் பீடிக்கவில்லை.(51) (சபா மண்டபத்தின் சுவர்களில்) பேரொளியுடன் திகழும் அழகிய சித்திரங்கள் பல தீட்டப்பட்டிருந்தன. அந்தச் சபாமண்டபத்தின் தூண்கள் நிரந்தரமாகக் குறைவேதும் ஏற்படாத தெய்வீக ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(52) சந்திரன், சூரியன், அக்னியின் ஒளியைத் தன்னொளியால் விஞ்சிய அந்தச் சபாமண்டபம், சூரியனைப் பழிப்பது போலச் சொர்க்கத்தின் பின்புறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(53) அந்தச் சபா மண்டபம், தெய்வீக விருப்பங்களையும், மனித விருப்பங்கள் அனைத்தையும் நிறைவடையச் செய்வதாக இருந்தது.(54) அந்தச் சபாமண்டபத்தில், மெல்லும் வகையிலும், மெல்லாமல் உண்ணும் வகையிலும் எல்லையற்ற வகைகளில் சுவைமிக்க உணவுகள் இருந்தன. எப்போதும் தெய்வீக மணங்கமழும் மலர்கள் மலர்வதும், கனிகள் கனிவதுமான மரங்கள் அங்கிருந்தன.(55) அங்கே கோடை காலத்தில் குளிர்ந்த நீரும், குளிர் காலத்தில் வெண்ணீரும் இருந்தன. மொட்டுகள், இளந்தளிர்கள், மலர்கள் ஆகியவற்றால் நிறைந்த பெருங்கிளைகளுடன் கூடிய மரங்கள் அங்கிருந்தன.(56)

அங்கே அந்தச் சபாமண்டபத்தில் ஏராளமான செடிகொடிகளால் மறைக்கப்பட்ட தடாகங்களையும், மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகிய ஆறுகளையும் அந்தத் தலைவன் {நரசிங்கம்} கண்டான்.(57) அந்த மிருகேந்திரன் {நரசிம்மம்}, நறுமணமிக்க மலர்களையும், சுவைமிக்கக் கனிகளையும் கொண்ட பல வகை மரங்களை அந்தச் சபாமண்டபத்தில் கண்டான்.(58) அந்தத் தலைவன், நீராடுவதற்கேற்ற நூற்றுக்கணக்கான புனிதத்தலங்களையும், குளிர்ந்த நீரைக் கொண்ட தடாகங்களையும் அங்கே கண்டான்.(59) அந்தத் தடாகங்களிலும், நீராடும் இடங்களிலும் வெண்தாமரைகளும், செந்தாமரைகளும், நீலோத்பல மலர்களும், அல்லி மலர்களும், நூறு இதழ்களைக் கொண்ட தாமரைகளும் இருந்தன.(60) அதில் தார்தராஷ்டிரப் பறவைகளும் (வாத்துகளும்), தேவர்களுக்குப் பிடித்தமான ராஜஹம்சங்களும் (பூநாரைகள்), காதம்பங்களும் (சாம்பல் நிற சிறகுகள் கொண்ட வாத்துகளும்), சக்கரவாகங்களும் (செங்கிளுவைகளும்), ஸாரஸங்களும் (நாரைகளும்), குரர (அன்றில்) பறவைகளும் இருந்தன.(61) எட்டு இதழ்களைக் கொண்ட வெண்தாமரை மலர்களைக் கொண்ட அந்தத் தடாகங்களில் பளிங்கு போன்ற தெளிந்த நீர் நிறைந்திருந்தது. அன்னங்கள் பாடும் ஒலிகளாலும், ஸாரிகப் பறவைகள் கூவும் ஒலிகளாலும் அந்தச் சூழல் நிறைந்திருந்தது.(62)

அங்கே இருந்த மரங்களின் நுனிகளில், நறுமணமிக்க மங்கல மலர்களைக் கொண்ட கொடிகள் நிறைந்திருப்பதைத் தலைவன் கண்டான்.(63) கேதகம் (தாழை), அசோகம், ஸரலம் (தேவதாரு), புந்நாகம், திலகம் (தழுதாரை), அர்ஜுனம் (மருதம்), சூதம் (மா), நீபம் (கடம்பு), நாகபுஷ்பம் (சண்பகம்), கதம்பம், பகுலம் (வகுளம்), தவம் (தாதிரி),(64) பிரியங்கு, பாடலி (பாதிரி), சால்மல்யம், ஹரித்ரகம் (சந்தனம்), சாலம் (குங்கிலியம்), தாலம் (பனை), பிரியாலம், சம்பகம் போன்ற மரங்கள் அங்கே மனத்துக்கு மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருந்தன.(65) இன்னும் பல மரங்கள் அந்தச் சபாமண்டபத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தன. காட்டுத் தீயைப் போன்ற பிரகாசத்துடன் அந்த மரங்களின் வரிசைகள் பளபளத்தன.(66)

அஞ்சனத்தைப் போன்ற கரிய பருத்த தண்டுகள், நல்ல கிளைகள் ஆகியவற்றைக் கொண்ட நெடிய மரங்களும், அசோகம், வஞ்ஜுலகம் (இம்பூறல்) ஆகிய மரங்களும் அங்கே பளபளத்தன.(67) வரணம் (கூவிரம்), வத்ஸநாபம் (கருநாபி), பநஸம் (பலா), சந்தனம், நீலம் (கடம்பு), ஸுமநஸம், பீதம் (குசும்பா), ஆம்லம் (நெல்லி), அஷ்வதம் (பூவரசு), திந்துகம் (தும்பிலி),(68) பிராசீநாமலகம் {லூபிகம்), லோத்ரம், மல்லிகம் (கொகுடி), பத்ரம் (வச்சிரம்), தாரவம், ஆம்ராதகம் (புளிமா), ஜம்பூ (நாவல்), லகுசம் (புளிசக்கை), சைலவாலுகம் (சுக்கம்),(69) ஸர்ஜார்ஜுனம் {வெண்மருது), கந்துரவம், பதங்கம், குடஜம் (குண்டுமுல்லை), சிவந்த குரபகம் (செம்முள்ளி), நீபம் (கடம்பம்), ஆகரு,(70) கதம்பம், தாடிமம் (மாதுளை), பீஜபூரகம் (நார்த்தங்காய்), காலீயகம் {கஸ்தூரி மஞ்சள்), துகூலம், ஹிங்கவம், தைலபர்ணிகம் (சந்தனம்),(71) கர்ஜூரம் (ஈச்சை), நாலிகேரம் (தென்னை), பூகம் (பாக்கு), ஹரீதகி (நெல்லி), மதூகம் (இலுப்பை), ஸப்தபர்ணம் (ஏழிலைப்பாலை), வில்வம், பாராவதம் (தும்பிலி),(72) பநசம் {சீமைப்பலா), தமாலம் (பச்சிலை) ஆகிய மரங்கள் அங்கே இருந்தன. அந்த இடம் அடர்த்தியான இலைகளுடன், மலர்களுடனும், கனிகளுடனும் இருந்த பல வகைக் கொடிகளால் மறைக்கப்பட்டிருந்தது.(73) இவையும் தவிரப் பலவகை மலர்களையும், கனிகளையும் கொண்ட பல்வேறு வகைக் காட்டு மரங்கள் அந்தச் சபாமண்டபத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(74) சகோர பறவைகள் (கௌதாரிகள்), சதபத்ரங்கள், கோகிங்கள் (குயில்கள்), சாரிகப் பறவைகள் (மைனாக்கள்) ஆகியன, மலர்களும், கனிகளும் நிறைந்த அந்தப் பெரும் மரங்களில் அமர்ந்திருந்தன.(75) சிவப்பு, மஞ்சள், செம்பழுப்பு நிறங்களில் உள்ள பறவைகள் அந்த மரங்களின் நுனிகளில் மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்தன” என்றார் {வைசம்பாயனர்}.(76)

ஹிரண்யகசிபுவின் சபா மண்டபம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 37அ-(ஹிரண்யகஷிபுஸபாவர்ணநம்)-ஹரிண்யகசிபுவின் சபா மண்டப வர்ணனை; அங்கிருந்த அப்சரஸ்கள், கந்தர்வர்கள், தைத்தியர்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அந்தச் சபாமண்டபத்தில் தைத்தியேந்திரனான தலைவன் ஹிரண்யகசிபு, நூறு முழம் சுற்றளவைக் கொண்ட ஒரு தெய்வீக அரியணையில் அமர்ந்திருந்தான்.(1) ஓ! மன்னா, சுடர்மிக்கக் காதுகுண்டலங்களை அணிந்த தலைவன் ஹிரண்யகசிபு, சூரியனைப் போன்று பிரகாசிக்கும் தெய்வீகமான அழகிய கூரையைக் கொண்ட அந்தச் சபாமண்டபத்தில் தலைமை தாங்கி நீண்ட காலம் ஆட்சி செய்து கொண்டிருந்தான்.(2) அந்தத் தைத்திய மன்னனைச் சுற்றிலும், புழுதியற்றதும், தெய்வீக நறுமணம் கமழ்வதுமான சுகமான தென்றல் மென்மையாக வீசிக் கொண்டிருந்தது.(3)

அங்கே அப்சரஸ்கள் சூழ தேவர்களும், கந்தர்வர்களும் தெய்வீகத் தாளத்தின் துணையுடன் தெய்வீகப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர்.(4) விஷ்வாசி, பிரம்லோசை என்று புகழப்படும் ஸஹஜன்யை, திவ்யை, ஸௌரபேயை, ஸமீசி, புஞ்ஜிகஷ்தலை,(5) மிஷ்ரகேசி, ரம்யை, சித்திரசேனை, ஷுசிஸ்மிதை, சாருநேத்ரை, கிருதாசி, மேனகை, ஊர்வசி ஆகியோரும்,(6) பாடுவதிலும் ஆடுவதிலும் புகழ்பெற்ற இன்னும் நூற்றுக்கணக்கான அப்சரஸ்களும் மன்னன் ஹிரண்யகசிபுவுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருந்தனர்.(7) அற்புத ஆபரணங்களாலும், ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்டவனும், சுடர்மிக்கக் காதுகுண்டலங்களுடன் கூடியவனுமான ஹிரண்யகசிபு, ஆயிரக்கணக்கான பெண்களால் சூழப்பட்டிருந்தான்.(8)

பெருஞ்சக்திவாய்ந்த கரங்களைக் கொண்ட தலைவன் ஹிரண்யகசிபு, அந்தச் சபாமண்டபத்தில் அமர்ந்திருந்தபோது, ஏற்கனவே வரங்களைப் பெற்ற திதியின் மகன்கள் அனைவரும் அங்கே அமர்ந்திருந்தனர்.(9) விரோசனன் மகனான பலி, பூமியை வென்ற நரகன், பிரஹ்லாதன், விப்ரசித்தி, மஹாசுரனான கவிஷ்டன்,(10) அஹந்தன், குரோதஹந்தன், ஸுமநன், ஸுமதி, கரன், கடோதரன், மஹாபார்ஷ்வன், கிரதநன், பிடரன்,(11) விஷ்வரூபன், ரூபன், விரூபன், மஹாத்யுதி, தசக்ரீவன் {ராவணன்}வாலி, மேகவாஸன், மஹாரவன்,(12) கடாபன், விகடாபன், ஸம்ஹ்ராதன், இந்திரதாபநன் முதலிய தைத்திய, தானவர்கள் அனைவரும் சுடர்மிக்கக் காது குண்டலங்களுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(13) அவர்கள் அனைவரும் மாலைகள் அணிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் சிறந்த பேச்சாளர்களாகவும், தபங்கள் செய்த நல்ல வரலாற்றைக் கொண்டவர்களாகவும், வரங்களைப்பெற்றவர்களாகவும், வீரர்களாகவும், மரணமற்றவர்களாகவும் இருந்தனர்.(14)

தெய்வீக ஆடைகளையுடுத்தியிருந்த இந்தத் தைத்தியர்களும், இன்னும் பிற தானவர்கள் பலரும் தலைவனான ஹிரண்யகசிபுவுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருந்தனர்.(15) மாலைகளையும், ஆபரணங்களையும் அணிந்திருந்த அவர்கள், காணிக்கைகளால் சுடர்விடும் ஆகாய விமானங்கள் பலவற்றில் அந்தச் சபாமண்டபத்திற்கு வந்திருந்தனர்.(16) அவர்கள் விசித்திர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர், அழகிய ஆடைகளை உடுத்தியிருந்தனர், விசித்திர ஆயுதங்களையும், கேடயங்களையும் கொண்டிருந்தனர், விசித்திரமான கொடிக்கம்பங்களையும் வாகனங்களையும் கொண்டிருந்தனர்.(17) அவர்கள் தங்கள் தோள்களில் வானவில்களைப் போலிருந்த மிகச் சிறந்த தோள்வளைகளைப் பூண்டிருந்தனர். திதியின் மகன்களான அந்தத் தைத்தியர்கள் எப்போதும் தைத்திய மன்னனுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருந்தனர்.(18) அந்தத் தெய்வீக சபாமண்டபத்தில் மலைகளுக்கு ஒப்பாகத் திகழ்ந்த அவர்கள் அனைவரும் சூரியனைப் போன்று பளபளக்கும் பொன்மகுடங்களை அணிந்திருந்தனர்.(19)

அந்த மிருகாதிபன் {நரசிங்கன்}, பொன்னாலும் ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அழகிய மேடையைக் கொண்டதும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட வீதிகளைக் கொண்டதும், யானைகளின் தந்தங்களாலான சாளரங்களைக் கொண்டதுமான அந்தச் சபாமண்டபத்தைக் கண்டான்.(20) அந்த மிருகாதிபன் {நரசிங்கன்}, பொன்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், சூரியனைப் போலப் பளபளக்கும் அசுரகணங்களால் தொண்டாற்றப்பட்டவனும், திதியின் மகனுமான அந்த ஹிரண்யகசிபுவைக் கண்டான்” என்றார் {வைசம்பாயனர்}[1].(21)

பிரஹலாதன் மொழிந்தது | பவிஷ்ய பர்வம் பகுதி – 38-(ந்ருஸிம்ஹம் த்ருஷ்ட்வா தாநவாநாம் விஸ்மய꞉ ப்ரஹ்லாதவாக்யம் ச)-நரசிங்கத்தின் தோற்றம்; நரசிம்மனை அடையாளம் கண்ட பிரஹலாதன், ஹிரண்யகசிபுவிடம் பேசியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஹிரண்யகசிபுவும், தானவர்கள் அனைவரும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனை {நரசிம்மனைக்} காலச் சக்கரம் போலவும், சாம்பலால் மறைக்கப்பட்ட நெருப்பைப் போலவும் கண்ட போது,(1) சடாமுடியுடனும், சந்திரனைப் போன்ற பிரகாசத்துடனும் கூடிய அந்தச் சிங்க மனிதனின் {நரசிம்மத்தின்} வடிவ அழகு, பரந்திருக்கும் அந்தப் பெரிய சபா மண்டபத்தில் எங்கும் நிறைந்திருந்தது.(2) 

சங்கையும், குந்தமலரையும், சந்திரனையும் போன்றிருந்த அந்த வடிவத்தைக் கண்ட தானவர்கள், “என்ன அற்புதமான வடிவம் இஃது” என்று ஆச்சரியமடைந்தனர்.(3) அந்த வடிவத்தின் பிரகாசத்தால் சுடப்பட்ட அந்தப் பேரான்மாக்கள் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, காலதர்மத்தின்படி நரசிங்கத்தின் கண்களால் தூண்டப்பட்ட(4) ஹிரண்யகசிபுவின் வீர மகன் பிரஹலாதன், சிங்கத்தின் வடிவில் அங்கே வந்திருப்பது தலைவனே {விஷ்ணுவே} எனத் தன் தெய்வீகப் பார்வையில் கண்டான்.(5) {இதற்கு முன்பு ஏற்கப்படாத தங்க மலையைப் போன்ற உடலைத் தலைவன் ஏற்றிருப்பதைக் கண்ட தானவர்களும், ஹிரண்யகசிபுவும் ஆச்சரியம் அடைந்தனர்.(6)}

அப்போது, பிரஹ்லாதன், “ஓ! பெருந்தோள்களைக் கொண்ட மஹாராஜா, தைத்தியர்களில் மூத்தவரே, {ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே}, நாம் ஒருபோதும் சிங்கமனிதனின் {நரசிங்க} வடிவைக் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை.(7) இந்தத் தெய்வீக வடிவம் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது! பயங்கரம் நிறைந்த இந்த வடிவம் தைத்தியர்களின் அழிவுக்காகவே தோன்றியிருப்பதாக என் மனம் சொல்கிறது(8). தேவர்கள், பெருங்கடல்கள், ஆறுகள், இமயம், {பாரியாத்ரம் மற்றும்} பிற மலை எல்லைகள்,(9) நட்சத்திரங்களுடன் கூடிய சந்திரன், ஆதித்யர்கள், அஷ்வினிகள், வருணன், {தனதம் (செல்வம்), வருணன்}, யமன், சசிபதியான சக்ரன் {இந்திரன்},(10) மருத்துகள், {தேவர்கள்}, ரிஷிகள், நாகர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், பயங்கரர்களான ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும்(11) இவனுடைய {இந்த நரசிம்மனின்} உடலில் இருக்கின்றனர். பிரம்மனும், தலைவன் சிவனும் இவனது நெற்றியில் தோன்றுகின்றனர். படைப்புகளில் அசைவனவும், அசையாதனவும்,(12) நம்மோடு சேர்ந்த தைத்தியர்கள் அனைவரும், {நூற்றுக்கணக்கான ஆகாய விமானங்களுடன் கூடிய} இந்தச் சபாமண்டபமும்,(13) மூன்று உலகங்களும் பளிங்கில் பிரதிபலிக்கும் சந்திரனைப் போல இவனில் தெரிகின்றன.(14) {பிரஜாபதியான மஹாத்மா மனு, கிரஹங்கள், யோகங்கள், பூமி, வானம், உத்பாதங்கள், திருதி (நிறைவு), ஸ்மிருதி, ரஜஸ், சத்வ குணங்கள், தவம், தற்கட்டுப்பாடு,(15) உயரான்ம சனத்குமாரர், விஷ்வதேவர்கள், அப்சரஸ்கள், குரோதம், காமம், ஆணவம், மோஹம், பித்ருக்கள் ஆகியோர் அனைவரும் இந்த நரசிங்கத்தில் காணப்படுகின்றனர்.(16)” என்றான் {பிரஹலாதன்}.

தைத்திய மன்னனின் மகனும், நுண்ணறிவுமிக்கவனுமான பிரஹ்லாதன், இவ்வாறு சொல்லிவிட்டு சற்றே தலைகவிழ்ந்தவாறு, கிழக்குத் திக்கை நோக்கி தியானம் செய்யத் தொடங்கினான்” என்றார் {வைசம்பாயனர்}. (17)}[1]

தைத்திய நரசிம்மப் போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 38அ-(ந்ருஸிம்ஹஸ்யோபரி தைத்யாநாம் ஷஸ்த்ராஸ்த்ரபாத꞉)-ஹிரண்யகசிபு பயன்படுத்தி ஆயுதங்கள்; தானவ தைத்திய படைக்கும் நரசிங்கனுக்கும் இடையில் நடைபெற்ற போர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “தானவர்களின் தலைவனான ஹிரண்யகசிபு, பிரஹ்லாதன் சொன்ன சொற்களைக் கேட்டு தானவகணங்களிடம்,(1) “இதுவரை காணப்படாத உடலைக் கொண்ட இந்த மிருகேந்திரனை {நரசிம்மனைப்} பிடிப்பீராக. உங்களுக்கு ஐயமேதும் ஏற்பட்டால் வனத்தில் திரிபவனான இவனைக் கொல்வீராக” என்றான்.(2)

இந்தச் சொற்களைக் கேட்ட தானவர்கள் அனைவரும் அந்த மிருகேந்திரனைச் சூழ்ந்து கொண்டு அவனை நடுக்கமடையச் செய்வதற்கு முயன்றனர்.(3) பெருஞ்சக்திவாய்ந்த அந்தச் சிங்கமானவன், காலனைப் போன்று வாயைத் திறந்து சிங்கமுழக்கம் செய்து அந்த அழகிய சபாமண்டபத்தைச் சிதறடித்தான்.(4)

சபாமண்டபம் நொறுக்கப்பட்டதைக் கண்ட ஹிரண்யகசிபு, கோபத்தால் எரியும் கண்களுடன் தானே அந்தச் சிங்கத்தை நோக்கி கணைகளை ஏவினான்.(5) ஆயுதங்கள் அனைத்திலும் சிறந்த தண்டமாஸ்த்திரம், பேரச்சத்தை விளைவிக்கும் மிகப் பயங்கரமான காலச்சக்கரம், விஷ்ணு சக்கரம்,(6) தர்மச்சக்கரம், வெல்லப்பட முடியாதது என்ற பெயரைக் கொண்ட மஹாசக்கரம், சக்கரமைந்தரம் {இந்திரச்சக்கரம்}, மிகப் பயங்கரமான ரிஷிசக்கரம்,(7) மூவுலகங்களின் பேரொலியைக் கொண்ட பிதாமஹனின் {பெரும்பாட்டனின்} சக்கரம், விசித்திர மின்னல், உலர்ந்த மின்னல், ஈர மின்னல்,(8) பயங்கரமான சூலம், கங்காலம் என்றழைக்கப்படும் முசலம், பிரம்மசிரம், பிரம்மாஸ்திரம்,(9) ஐஷிகமாஸ்த்திரம் {நாணல் ஆயுதம்}, ஐந்திராஸ்த்திரம் {இந்திரனின் ஆயுதம்}, ஆக்நேயம் {அக்னியின் ஆயுதம்}, சிசிரம் {குளிரச் செய்யும் ஆயுதம்}, வாயவ்யம் {காற்றாயுதம்}, மதனம், காபாலம் {மண்டையோட்டு ஆயுதம்}, கிங்கரம்,(10) சாபிரதிமம், ஒடுக்கப்பட முடியாத சக்தியாஸ்த்திரம், கிரௌஞ்சமாஸ்த்திரம், ஹயஷீரம் {குதிரைத்தலை ஆயுதம்}, சௌம்யாஸ்த்திரம்,(11) கட்டற்ற பைசாசமாஸ்த்திரம், சார்ப்பியமாஸ்த்திரம் {பாம்பு ஆயுதம்}, மோஹனாஸ்த்திரம் {மயக்கமடையச் செய்யும் ஆயுதம்}, ஸோஷணம் {மெலிவடையச் செய்யும் ஆயுதம்}, ஸம்தமனம் {வெப்பமடையச் செய்யும் ஆயுதம்}, விலாபனம் {அழச்செய்யும் ஆயுதம்},(12) ஜிரும்பணம் {கொட்டாவிடச் செய்யும் ஆயுதம்}, பிராபணம், மிகப் பயங்கரமான துவாஷ்ட்ரம், ஸுதாருணம், காலமுத்கரம், பெருஞ்சக்திவாய்ந்த ஆயுதமான க்ஷோபணம்,(13) சம்வர்த்தனம், மோஹனம் {மயக்கமடையச் செய்யும் ஆயுதம்}, மாயாதரம், காந்தர்வமாஸ்த்திரம், வாள்களின் ரத்தினமான நந்தகம்,(14) பிரஸ்வாபனம், பிரமதனம், ஆயுதங்களில் சிறந்த வாருணம், தடையில்லாமல் எங்கும் செல்லவல்ல பாசுபதம்(15) ஆகிய ஆயுதங்கள் அனைத்தையும் யஞ்ஜத்தில் ஊற்றப்படும் ஆகுதிகளைப் போல அந்த நரசிம்மனின் மீது ஹிரண்யகசிபு ஏவினான்.(16)

கோடை காலத்தில் எரியும் கதிர்களால் இமய மலையை மறைக்கும் விவஸ்வானை {சூரியனைப்} போல அந்த அசுரமன்னன் {ஹிரண்யகசிபு}, சுடர்மிக்க ஆயுதங்களால் அந்தச் சிங்கத்தை மறைத்தான்.(17) கோபம் எனும் காற்றால் வீசப்படும் பெருங்கடலாக இருந்த அந்தத் தைத்தியப்படை, பெருங்கடலில் மூழ்கும் மைநாக மலையைப் போல அந்தச் சிங்கத்தை மூழ்கடித்தது.(18) பிராசைகள் {கத்திகள்}, பாசங்கள் {கயிறுகள்}, சூலங்கள், கதாயுதங்கள், முசலங்கள், வஜ்ரங்கள், மின்னல், பாறைகள், பெரும் மரங்கள்,(19) முத்கரங்கள், கூடபாசங்கள், சூலங்கள், ஊகலங்கள் {மர தண்டங்கள்}, மலைகள், சதாக்னிகள், முட்களுடன் கூடிய தண்டங்கள், ஸுதாருணங்கள் {பயங்கரத் தண்டங்கள்}(20) ஆகியன அந்த ஹரியைக் கொல்வதற்காகச் சூழ்ந்திருந்த அனைவராலும் அவன் மீது வீசப்பட்டன. அந்த மஹாத்மாவுக்கு அவற்றினால் சிறு தீங்கும் நேரவில்லை.(21)

மஹேந்திரனின் வஜ்ராயுதத்துக்கு இணையான வேகம் கொண்ட தானவர்கள் பலர், தங்கள் கைகளில் பாசக்கயிறுகளுடனும், தயாராக இருந்த ஆயுதங்களுடனும், மூன்று தலை கொண்ட பன்னக மன்னர்களை {பாம்புகளைப்} போல அந்த நரசிங்கனைச் சூழ்ந்து நின்றனர்.(22) பொன்மாலைகளால் அங்கங்கள் அலங்கரிக்கப்பட்டவர்களும், கரங்களிலும், உடல்களிலும் பல்வேறு வகைக் கங்கணங்களை அணிந்திருந்தவர்களுமான அவர்கள், அகன்று விரிந்த சிறகுகளுடன்கூடிய அன்னப்பறவைகளின் வரிசையைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(23) வாயு தேவனின் காந்தியைக் கொண்ட தானவர்கள் சிலர், கைகளில் கேயூரங்கள் அணிந்தவர்களாக ஒளிமிக்கச் சூரியனுக்கு இணையாக ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(24)

தானவர்களால் ஏவப்பட்ட பேராயுதங்களால் சூழப்பட்டிருந்தவன் {நரசிம்மன்}, ஒருகணம் ஒளிரும் நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டும், மறுகணம் மழை மேகங்களைப் போல இருளடர்ந்தும் இருந்தான்.(25) தைத்திய கணங்களின் படையானது பயங்கர ஆயுதங்களைப் பொழிந்த போது, ஒளிமிக்கவனான அந்தத் தலைவன் {நரசிம்மன்}, இமய மலையைப் போல அசையாமல் இருந்தான்.(26) சுடர்மிக்க நெருப்பைப் போன்ற ஒளியுடைய திதியின் மகன்களில் நரசிம்ம வடிவில் இருந்த தலைவனால் எரிக்கப்பட்டவர்கள், பெருங்காற்றால் பொங்கி அடங்கும் பெருங்கடலின் பேரலைகளைப் போல பேரச்சத்தால் உடல் நடுங்கி நின்றனர்.(27) கோபத்தால் அங்கங்கள் எரிந்த மஹாசுரர்கள், நூற்றுக்கணக்கான விற்களைப் பயன்படுத்திக் காலாக்னியைப் போல ஒளிரும் கணைச் சரங்களைப் பெரும் வேகத்துடன் ஏவினர்” என்றார் {வைசம்பாயனர்}[1].(28)

மாயை விலக்கிய நரசிம்மன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 38ஆ-ந்ருஸிம்ஹக்ருதோ தைத்யமாயாநிராஸ꞉)-போர் வர்ணனை; அசுரர்கள் செய்த மாயைகள்; அவற்றை விலக்கிய நரசிங்கன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “கழுதை போன்றவர்களும், கழுதை முகம் படைத்தவர்களும், மகரங்களையும், நஞ்சுமிக்கப் பாம்புகளையும் போன்றவர்களும், குரங்குகளையும், பன்றிகளையும் போன்ற முகம் கொண்டவர்களும்,(1) இளஞ்சூரியன், தூமகேது, சந்திரன், பிறைச் சந்திரன், சுடர்மிக்க நெருப்பு,(2) அன்னங்கள், சேவல்கள் போன்ற முகத்தைக் கொண்டவர்களும், பிணியால் பீடிக்கப்பட்ட முகங்களையும், அச்சந்தரும் முகங்களையும், ஐந்து முகங்களைக் கொண்டவர்களும், பாம்புகள், காகங்கள், கழுகுகள் போன்ற முகங்களைக் கொண்டவர்களும்,(3) மின்னல் போன்ற நாவுகளைக் கொண்டவர்களும், மூன்று தலைகளைக் கொண்டவர்களும், எரிகொள்ளிகளைப் போன்றும், பெரும் முதலை, நீர்யானை போன்ற முகங்களைக் கொண்டவர்களும், தங்கள் பலத்தில் செருக்கு கொண்டவர்களுமான தானவர்கள்,(4) போரில் கைலாச மலையைப் போல நெடிதுயர்ந்து நின்ற மிருகேந்திரனின் {நரசிம்மனின்} உடலில் கணைகளைப் பொழிந்தனர். எவராலும் கொல்லப்பட முடியாதவனான மிருகேந்திரனுக்கு அந்தக் கணைகள் துன்பத்தைத் தரவில்லை.(5)

இவ்வாறு பாம்புகளைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த கோபக்கார தானவர்கள், மீண்டும் அந்த மிருகேந்திரனின் உடலில் பயங்கரக் கணைகளைப் பொழிந்தனர்.(6) மிருகேந்திரன் மீது அந்தத் தானவர்கள் ஏவிய பயங்கரக் கணைகள் யாவும், மலைகளில் மறைந்து போகும் விட்டில் பூச்சிகளைப் போல வானத்தில் கரைந்தன.(7) கோபமடைந்த தைத்தியர்கள், எங்கும் சுடர்விட்ட தெய்வீக சக்கரங்களை அந்த மிருகேந்திரன் மீது ஏவினர்.(8) சூரியன், சந்திரன், யுக முடிவில் வானில் பளபளக்கும் கோள்கள் ஆகியவற்றைப் போன்ற சுடர்மிக்க அந்தச் சக்கரங்களால் வானம் முற்றாக மறைக்கப்பட்டது.(9) அந்தச் சக்கரங்கள், பயங்கர மேகங்களின் குடலுக்குள் நுழையும் சூரியன், சந்திரன், மற்றும் கோள்களைப் போல அந்த மிருகேந்திரனின் வாய்க்குள் நுழைந்து தங்கள் ஒளியை இழந்தன.(10) பேரான்மாவான மிருகேந்திரன், நெருப்பின் தழல்களைப் போலச் சுடர்விடும் அந்தச் சக்கரங்கள் அனைத்தையும் விழுங்கினான்.(11)

தைத்தியன் ஹிரண்யகசிபு, ஹுதாசனனின் {அக்னியின்} ஒளியைப் போலப் பயங்கரமாகச் சுடர்விடுவதும், வேகமாகச் செல்லவல்லதுமான சக்தி ஆயுதம் ஒன்றை மீண்டும் ஏவினான்.(12) சக்தி ஆயுதங்களில் சிறந்த அந்த ஆயுதம் தன்னை நோக்கி வருவதைக் கண்ட தலைவன் மிருகேந்தரன், பயங்கரமான ஹுங்காரம் செய்தபடியே அதை நொறுக்கினான்.(13) மிருகேந்திரனால் நொறுக்கப்பட்ட அந்தச் சக்தி ஆயுதம், தீப்பொறிகளுடன் வானில் இருந்து விழும் பெரும் எரிகொள்ளியைப் போல ஒளிர்ந்து கொண்டே பூமியில் விழுந்தது.(14) அவன் மீது ஏவப்பட்ட கணைச் சரங்கள், நீலோத்பல மலர்களால் ஆன மாலையைப் போலத் தொலைவில் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(15) அவன் {நரசிங்கன்}, தான் விரும்பியபடியே முழக்கம் செய்து கொண்டும், தன் வீரத்தை வெளிப்படுத்திக் கொண்டும், துரும்புகளைப் பறக்கவிடும் கொடுங்காற்றைப் போல எளிதாக அந்த அசுரர்களின் படையை விரட்டினான்.(16)

அப்போது தைத்தியேந்திரன் {ஹிரண்யகசிபு}, மலைகளைப் போன்று பெரியவையும், மலைச் சிகரங்களைப் போல ஒளிமிக்கவையுமான பாறைகளை வானத்தில் இருந்து மழையாகப் பொழிந்தான்.(17) அந்தப் பாறைகள் அந்தச் சிங்கத்தின் பேருடலில் விழுந்ததும், பத்துத் திக்குகளிலும் சிதறிப் போகும் விட்டில் பூச்சிகளைப் போலச் சிதறின.(18) ஓ! பகைவரை ஒடுக்குபவனே, திதியின் மகன்கள், நீருண்ட மேகங்கள் மழையைப் பொழிந்து மலையை மறைப்பதைப் போலப் பாறைகளால் அந்தச் சிங்கத்தை மறைத்தனர்.(19) பெருங்கடலால் மலையை அசைக்க முடியாததைப் போலவும், பெரும் வேகம் கொண்டவனானாலும் வலிமைமிக்கவர்களில் சிறந்தவனை அசைக்க முடியாததைப் போலவும் உறுதியாக நின்று கொண்டிருந்த அந்தத் தலைவனை அவற்றால் அசைக்க முடியவில்லை.(20)

பாறை மழை அழிக்கப்பட்டபோது, எங்கும் பரவக்கூடியதுமான நீர் மழையானது அங்கே கணைகளைப் போல அடர்த்தியாகப் பொழிந்தது.(21) பெரும் வேகம் கொண்டவையும், நீராலானவையுமான ஆயிரக்கணக்கான கணைகள் திசைகளிலும், துணைத்திசைகளிலும் பரவி வானத்தை மறைத்தன.(22) நீர்மழையாலும், வேகமாக வீசும் காற்றாலும், பெரும் மழையாலும் எவரும் எதையும் அறிய முடியாத நிலை தோன்றியது.(23) வானம், பூமி எங்கிலும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருந்த மழைத்துளிகளால் பூமியில் விழுந்த பிறகும் அவனைத் தீண்ட முடியவில்லை.(24) மழை வெளியே பொழிந்து கொண்டிருந்தது. நீருண்ட மேகங்களால், மிருகேந்திரனின் வடிவில் நின்று கொண்டிருந்த தலைவன் மீது அந்த மாயப் போரில் மழையைப் பொழிய முடியவில்லை.(25)

ஆரவாரமாகப் பொழிந்த பாறை மழை அழிக்கப்பட்டு, நீர் மழையும் வற்றிய பிறகு, நெருப்பைப் போன்றும், காற்றைப் போன்றும் எங்கும் தோன்றும் மாயையைத் தானவர்கள் உண்டாக்கினர்.(26) எரியும் தழல் பொதிகள் சுடர்விட்டுக் கொண்டே வானில் இருந்து பெரும் வேகத்துடன் எங்கும் விழுந்தன.(27) உயரான்மாவும், பேரொளி படைத்தவனுமான தைத்தேந்திரனால் {ஹிரண்யகசிபுவால்} இவ்வாறு உண்டாக்கப்பட்ட அந்நெருப்பால் அளவற்ற பேரொளியைக் கொண்டவனை எரிக்க இயலவில்லை.(28) அளவற்ற ஆற்றலைக் கொண்டவனும், ஆயிரம் கண்களைக் கொண்டவனுமான இந்திரன், நீருண்ட மேகங்களைக் கொண்டு நீராலான பெருமழையைப் பொழியச் செய்து அந்த நெருப்பை அணைத்தான்.(29)

இவ்வாறு மாயை அழிக்கப்பட்டபோது, அந்தத் தானவன் {ஹிரண்யகசிபு}, போர்க்களமெங்கும் பயங்கரமான காரிருளை உண்டாக்கினான்.(30) உலகம் இருளால் சூழப்பட்டு, தைத்தியர்கள் தங்கள் ஆயுதங்களை எடுத்தபோது, நரசிங்கன் தன்னொளியால் சூரியனைப் போல ஒளிர்ந்தான்.(31) திரிகூட மலையில் மூவழிகளில் பாயும் கங்கையைப் போலப் போர்க்களத்தில் நிற்கும் தலைவனின் நெற்றி சுருங்கி மூன்று கோடுகளை வெளிப்படுத்துவதைத் தானவர்கள் கண்டனர்” என்றார் {வைசம்பாயனர்}[1].(32)

ஹிரண்யகசிபுவின் வல்லமை | பவிஷ்ய பர்வம் பகுதி – 38இ-(ஹிரண்யகஷிபோ꞉ பராக்ரம꞉)ஹிரண்யகசிபுவின் ஆற்றல் விளக்கம்; அவனால் நடுக்கமடைந்த ஆறுகள், மலைகள், தேசங்கள் ஆகியவற்றின் பெயர்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மாயைகள் அனைத்தும் அழிக்கப்பட்ட பிறகு, திதியின் மகன்கள் அனைவரும் நொந்து போனவர்களாக ஹிரண்யகசிபுவின் புகலிடத்தை நாடினார்கள்.(1) அப்போது ஹிரண்யகசிபு, எரியும் கோபத்துடனும், மகிமையில் சுழன்று கொண்டும் மேதினியை {பூமியை} நடுங்கச் செய்தான்.(2)

நீர் நிறைந்த பெருங்கடல்கள் அனைத்தும் இதனால் கலக்கமடைந்தன. காடுகளுடனும், காட்டு மரங்களுடன் கூடிய மலைக்ள அனைத்தும் நடுங்கின.(3) அந்தத் தைத்தியேந்திரன் {ஹிரண்யகசிபு} கோபமடைந்த போது, உலகம் இருண்டது. எங்கும் இருள் நிறைந்ததால் எதையும் உணரமுடியாத நிலை உண்டானது.(4) ஆவஹம், பிரவஹம், அசையும் விவஹம், பராவஹம், ஸம்வஹம், பெருஞ்சக்திவாய்ந்த உத்வஹம்,(5) மங்கலமான பரிவஹம் என்ற ஏழு காற்றுகளும் {வாயுக்களும்} வானில் அசைந்து கலக்கமடைந்து அச்சக்குறியீடுகளை வெளியிடத் தொடங்கின.(6) உலகங்கள் அனைத்தின் வீழ்ச்சியில் வெளிப்படும் கோள்கள் மகிழ்ச்சியுடன் வானில் சுகமாக நகர்வது தென்பட்டது.(7) (தேவையான சேர்க்கையில்லாத) யோகமற்ற நட்சத்திரங்களுடன் சந்திரன் கூடினான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, கோள்களுடனும், நட்சத்திரங்கள் அனைத்துடனும் வானம் சுடர்விடத் தொடங்கியது.(8)

நாளின் தலைவனான சூரியன் வானில் ஒளியிழந்திருந்தான். தலையற்ற கரிய பேருடல் ஒன்று வானில் தென்பட்டது.(9) சூரியன் அச்சந்தரும் வகையில் கரிய புகையை வெளியிட்டான். வானில் உள்ள தலைவன் சூரியன் வெப்பமடையத் தொடங்கி, ஒவ்வொரு கணமும் (உலகைச்) சுட்டெரிக்கத் தொடங்கினான்.(10) பிறகு, புகையால் நிறைந்த பயங்கரமான சூரியர்கள் எழுவர் வானில் எழுந்தனர். வானில் சந்திரனுடைய தலைக்கு மேல் கோள்கள் தங்கின.(11) சுக்கிரன் (வெள்ளி), பிருஹஸ்பதி (வியாழன்) ஆகியோர் {ஆகிய கோள்கள்) இடப்பக்கமும், வலப்பக்கமும் தங்கினர். செஞ்சூரியனுக்கு இணையான ஒளி பொருந்திய சனி, லோஹிதாங்கன் (செவ்வுடல் படைத்த செவ்வாய்) ஆகியோர் பின் தொடர்ந்தனர்.(12) யுகத்தை மாற்றுபவையான பயங்கரக்கோள்கள், வானில் ஒன்றாகச் சேர்ந்து நகர்ந்து (மேரு மலையின்) தங்கச் சிகரங்களெனும் கோட்டைகளுக்குள் நுழைந்தன.(13) ஏழு கோள்களால் சூழப்பட்ட சந்திரன், அசைவன, அசையாதனவற்றை அழிக்க (அழிவுக்கு வழிவகுக்க) ரோஹிணியை மதிக்காமல் வேறு நட்சத்திரங்களுடன் சேர்ந்தான்.(14) ராஹுவால் பீடிக்கப்பட்ட சந்திரன் எரிகொள்ளிகளால் வதைக்கப்பட்டான். சந்திரனுக்குள் நுழையும் சுடர்மிக்க எரிகொள்ளிகளின் காட்சி பயங்கரத்தை ஏற்படுத்தியது.(15) தேவர்களின் தலைவன் (இந்திரன்) வானில் இருந்து குருதி மழையைப் பொழிந்தான். வானில் எரிகொள்ளிகள் மின்னலைப் போல மினுமினுத்தன.(16)

மரங்கள் அனைத்தும் பருவமில்லாத காலத்தில் மலரத் தொடங்கி, கனிகளை விளைவித்தன. தைத்தியர்களின் அழிவை வெளிப்படுத்தும் வகையில் செடிகொடிகள் கனிநிறைந்திருந்தன.(17) கனிகள், கனிகளில் விளைந்தன, மலர்கள் மலர்களில் மலர்ந்தன. தேவர்கள் அனைவரின் சிலைகளும் தங்கள் கண் இமைகளைத் திறந்து, மூடி, சிரித்து, உரத்த குரலுடன் கதறி, யுக வீழ்ச்சியைக் குறிக்கும் வகையில் புகைந்து, ஒளிவீசின.(18,19) கிராமங்கள் காடுகளுடன் கலந்தன. அந்த மிருகேந்திரன் {நரசிம்மன்} அணுகியபோது விலங்குகளும், பறவைகளும் பேரச்சம் தரும் ஒலிகளை வெளியிட்டன.(20) ஆறுகள் எதிர் திசைகளில் பாய்ந்தன, உலகத்தில் வீழ்ச்சியை உண்டாக்கும் சூரியன் மதியத்தை அடைந்தபோது, நீராதாரங்கள் புழுதியடைந்தன.(21) செம்புழுதியால் கலந்த திசைகள் ஒளிவீசவில்லை. வழிபாட்டுக்குரிய மூலிகைகள், அனைத்து வகை வழிபாடுகளையும் இழந்தன.(22) காற்றானது, அடித்து, பிளந்து, தள்ளி வேகமாக வீசியது. அப்போது உயிரினங்கள் அனைத்தும் நிழலற்றவையாகின.(23)

உலகில் வீழ்ச்சியை விளைவிக்கும் சூரியன் மதியத்தை அடைந்தபோது, தைத்தியன் ஹரிண்யகசிபுவுடைய வசிப்பிடத்தின் உச்சியில்(24) இருந்த ஆயுதக்கிடங்கிலும், கருவூலத்திலும் தேனீக்கள் தங்கள் கூட்டை அமைத்தன. அதேபோல், ஆயுதக்கிடங்கில் புகையும் தென்பட்டது.(25) பெரும் எரிகொள்ளிகள் விழுவதைக் கண்ட ஹிரண்யகசிபு, தன்னுடைய தலைமை புரோஹிதரான சுக்ரரிடம் பின் வரும் சொற்களைச் சொன்னான்.(26)

ஹிரண்யகசிபு, “ஓ! தலைவரே, இந்தப் பெருங்கொள்ளிகள் விழுவதற்கான பொருளென்ன? இதன் பொருளைக் கேட்க நான் பேராவல் கொண்டுள்ளேன்” என்றான்.(27)

சுக்கிரர், “ஓ! மன்னா, ஓ! மஹாசுரா, இந்தப் பெரும் எரிகொள்ளிகள் பேரச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீழ்வதன் பொருளைச் சொல்கிறேன், என் சொற்களைக் கவனமாகக் கேட்பாயாக. (28) ஓ! மன்னா, எந்த மன்னனின் தேசத்தில் இவை (எரிகொள்ளிகளின் வீழ்ச்சி) காணப்படுமோ, அந்தத் தேசம் காணாமல் போகும், அதன் மன்னன் கொல்லப்படுவான்.(29) அனைத்தும் அழியும்போது உன் புத்தியால் அதை உறுதிசெய்வாயாக. உடனே பேரச்சம் விளையும். இதில் ஐயமேதும் இல்லை” என்றார்.(30)

சுக்கிரர் இவ்வாறே ஹிரண்யகசிபுவிடன் சொன்னார். தைத்தியேந்திரனுக்குத் தன் நல்வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு சுக்கிரர் தன் இல்லம் திரும்பினார். சுக்கிரர் சென்ற பிறகு, அந்தத் தைத்தியேந்திரன் {ஹிரண்யகசிபு} சிறிது நேரம் தியானித்தான்.(31) பெருந்துயர ஆன்மாவைக் கொண்ட அவன், தலைவன் பிரம்மனின் சொற்களை நினைவுகூர்ந்தபடியே சிறிது நேரம் அமர்ந்தான். “அசுரர்களின் அழிவுக்காகவும், தேவர்களின் வெற்றிக்காகவும் பலவகைப்பட்ட பயங்கர எரிகொள்ளிகள், அச்சந்தரும் வகையில் வீழ்வது காணப்படும்.(32) தைத்தியேந்திரர்களின் அழிவுக்காகக் காலத்தால் அமைக்கப்படும் இன்னும் பயங்கர எரிகொள்ளிகளின் வீழ்ச்சிகளும் காணப்படும்” {என்று ஹிரண்யகசிபுவிடம் முன்னர்ச் சொல்லியிருந்தான் பிரம்மன்}.(33)

அப்போது ஹிரண்யகசிபு விரைவாக ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, பெரும் வேகத்துடன் விரைந்து தரணியை {பூமியை} நடுங்கச் செய்தான்.(34) தைத்தியன் ஹிரண்யகசிபு, தன் தமையன் (ஹிரண்யாக்ஷன்) கோபத்தில் உதடுகளைக் கடித்தபடி வராஹனைக் குலுக்கியதைப் போலப் பூமியை நடுங்கச் செய்தான்.(35) பேரான்மாவான அந்தத் தைத்தியேந்திரன் (ஹிரண்யகசிபு) பூமியை நடுங்கச் செய்தபோது, அச்சத்தால் பீதியடைந்த பெரும்பாம்புகள் மலைகளை விட்டுத் தப்பி ஓடின.(36) நான்கு தலை, ஐந்து தலை, ஏழு தலை கொண்ட பெரும்பாம்புகள் தங்கள் வாய்களில் நஞ்சுமிக்கத் தழல்களை வெளியிட்டு நெருப்பைக் கக்கின.(37) வாசுகி, தக்ஷகன், கார்க்கோடகன், தனஞ்சயன், ஏலாபத்திரன், காளியன், வீரியவானான மஹாபத்மன் ஆகியோரும், ஆயிரந்தலைகளையும், பொன்தாலத்தைக் கொடியாகக் கொண்டவனும், பாம்புகளின் தலைவனும், பெரும்நாகனும், எல்லையற்றவனும், உலகைப் பாதுகாப்பவனும், நடுக்கமடையாதவனுமான சேஷனும் கூட (ஹிரண்யகசிபுவால்) நடுக்கத்தை அடைந்தனர்.(38,39) பூமியைச் சுமக்கும் மலைகளும், நீரைத் தாங்கும் பிரகாசமிக்க மலைகளும் கூடக் கோபமடைந்த அந்தத் தைத்தியனால் நடுக்கமடைந்தன.(40)

பாதாளத்தில் பாய்வதும், பாம்புகளின் ஒளியை சுமப்பதும், நடுங்கச் செய்ய அரிதானதுமான மங்கல நீர்நிலையும் திடீரெனக் கோபமடைந்தது. பாகீரதி {கங்கை} ஆறும், சரயுவும், கௌசிகியும்,(41,42) யமுனை, காவேரி, கிருஷ்ணை, வேணை, ஸுவேணை, நற்பேறுபெற்ற ஆறான கோதாவரி,(43) சர்மண்வதி ஆகியனவும், மேகல மலையில் தோன்றும் ஆறும், ரத்தினம் போன்று தூய்மையான நீரைக் கொண்டதும், ஆறுகளின் தலைவனுமான சிந்து,(44) நல்ல பிறப்பிடத்துடன் கூடிய நீரைக் கொண்ட நர்மதை, வேத்ரவதி, பசுக்கொட்டில்கள் பலவற்றால் நிறைந்த கரைகளைக் கொண்ட கோமதி, முழுமையாகப் பாயும் சரஸ்வதி,(45) மஹீ, காலநதி, புனித நீரைக் கொண்ட தமசை, சிதை, செக்ஷுமதி, தேவிகை, மஹாநதி ஆகிய ஆறுகளும்,(46) ரத்தினங்களால் நிறைந்ததும், அனைத்து வகை ரத்தினங்களும் பளபளப்பதுமான ஜம்பூத்வீபம் {நாவலந்தீவு}, பொன்னால் அலங்கரிக்கப்பட்ட சுவர்ணகூடக மலை ஆகியன அனைத்தும் அந்தத் தைத்தியனால் நடுக்கமடைந்தன.(47)

மலைகளாலும், காடுகளாலும் அலங்கரிக்கப்பட்ட லோஹித்யமெனும் பேராறு, கௌசிகாரண்யம் என்ற நகரம், வெள்ளி நிறைந்த திரவிடம் என்ற இடம்,(48) பெரும் நிலமான மாகதம், அங்கம், வங்கம், சுஹ்மம், மல்லம், விதேஹம், மாளவம், காசி, கோசலம்,(49) பொன்னிறம் கொண்ட வைனதேயனின் புவனமும் {கருடனின் நிலமும்} ஹிரண்யகசிபுவால் நடுக்கமடைந்தன. சிகரத்தின் வடிவில் விஷ்வகர்மனால் அமைக்கப்பட்ட கைலாச மலை,(50) குருதியின் நிறத்திலான நீரைக் கொண்டதும், பெரும் வேகத்தில் அசைவதும், லௌஹித்யம் என்ற பெயரைக் கொண்டதுமான பெருங்கடலும், வெண்மேகம் போன்ற வண்ணத்தில் நீரைக் கொண்ட பாற்கடலும்,(51) பாம்புகளாலும், பறவைகளாலும் தொண்டாற்றப்படும் மங்கலமான பொன் பீடங்களையும், நூறு யோஜனை உயரத்தையும் கொண்ட உதய மலை,(52) முழுமையாகப் பொன்னாலானவையும், சூரியனைப் போலப் பிரகாசிப்பவையும், மலரும் சாலம், பனை, தமாலம், கர்ணிகாரம் போன்ற மரங்களைக் கொண்டவையுமான மலைகள்,(53) அனைத்து வகைத் தாதுக்களையும் கொண்ட அயோமுகம் என்ற பெரிய மலை, வெண்மலர்கள் மலர்ந்த தமால மரக்காடுகளின் மணம் நிறைந்ததும், மங்கலமானதுமான மலய மலை ஆகியவையும்,(54) ஸுராஷ்ட்ரம், ஸுபாஹ்லீகம், ஷூரம், ஆபீரம், போஜம், பாண்டியம், வங்கம், கலிங்கம், தாமரலிப்தகம், ஆந்திரம், புண்டரம், வாமுசூடம், கேரளம் ஆகியனவும், தேவகணங்களும், அப்சரஸ்களும்  நடுக்கமடைந்தனர்.(56)

நீண்ட காலத்திற்கு முன்பு படைக்கப்பட்டதும், எவராலும் அடைய முடியாததும், மனத்தைக் கொள்ளை கொள்வதும் சித்தர்கள், சாரணர்களாலும், அப்சரஸ்களாலும் தொண்டாற்றப்படுவதும், விசித்திர பாம்புகள், பறவைகள், மலர்ந்த செடிகொடிகள், மரங்கள் ஆகியவற்றைக் கொண்டதும், பொன்னாலான சிகரங்களைக் கொண்டதுமான அகஸ்திய புவனமும் {அகஸ்தியரின் நிலமும்} அவ்வாறே நடுங்கியது.(57,58) செல்வம் நிறைந்ததும், காண்பதற்கு இனியதும், சந்திரனையும், சூரியனையும் துணையாகக் கொண்டு கடலைப் பிளந்து எழுந்ததும், பெருஞ்சிகரங்களால் ஒளிர்ந்ததும், வானத்தைத் தீண்டுவதும், சூரிய, சந்திர கதிர்களால் ஒளிரும் சிகரங்களைக் கொண்டதும், பெருங்கடலின் நீரால் சூழப்பட்டதுமான புஷ்படக மலையும் அவ்வாறே நடுங்கியது.(59,60) வானில் இருந்து இடிகளை வாங்கிக் கொள்வதும், மலைகளில் சிறந்ததும், நூறு யோஜனை உயரம் கொண்டதும், மங்கலமானதுமான வித்யுத்வான் மலையும் அவ்வாறே நடுங்கியது.(61) 

மங்கலமான ரிஷபர்கள் வாழும் ரிஷப மலையும், அகஸ்திய முனிவரின் வசிப்பிடம் இருக்கும் குஞ்சர மலையும்,(62) வெல்லப்படமுடியாத விஷாகரத்யம் என்ற பெயரைக் கொண்ட நகரமும், நாகர்களின் வசிப்பிடமான போகவதி நகரமும் அந்தத் தைத்தியேந்திரனால் (ஹிரண்யகசிபுவால்) நடுக்கமடைந்தன.(63) மஹாமேக மலை, பாரியாத்ர மலை, சக்ரவான் மலை, வராஹ மலை,(64) மங்கலமானதும், தீய ஆன்மாவான தானவன் நரகன் வாழும் பொன்னகரமான பிராக்ஜோதிஷபுரம்,(65) மேகங்கள் முழங்கும் சிறந்த மலையும், அறுபதாயிரம் மலைகளைக் கொண்டதுமான மேரு மலை,(66) பாலசூரியனைப் போல ஒளிர்வதும், மங்கலமானதும், புனிதமானதும், சொர்க்கத்திற்கே உயர்ந்து செல்வதும், மலைகளின் மன்னனுமான பெரிய மஹேந்திர மலை,(67) ஹேமசிருங்கமெனும் பெரும் மலை, மேகசக மலை, அசைக்க அரிதான கைலாச மலை ஆகியனவும் அந்தத் தானவேந்திரனால் (ஹிரண்யகசிபுவால்) நடுக்கமடைந்தன.(68) 

யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் வாழும் குகைகளைக் கொண்டவையும், மங்கலமானவையும் எப்போதும் மலரும் மரங்களைக் கொண்டவையுமான மலைகள்,(69) பொன்தாமரைகளால் மறைக்கப்பட்ட வைகானச தடாகம், அன்னங்களால் தொண்டாற்றப்படும் மானஸத் தடாகம் ஆகியவையும் அந்த அசுரனால் நடுக்கமடைந்தன.(70) விஷ்ருங்க மலை, ஆறுகளில் சிறந்த குமாரி ஆறு, பனியைப் போன்று வெண்மையான மந்தர மலை,(71) உஷீரபீஜ மலை, மலைகளின் மன்னனான ருத்ரோபாஷ்ட மலை, பிரஜாபதியின் வசிப்பிடமான புஷ்கர மலை,(72) தேவாவிருத மலை, வாலுக மலை, கிரௌஞ்ச மலை, சப்தரிஷி மலை, தூமவர்ண மலை,(73) ஆகிய மலைகள், தேசங்கள், ஜனபதங்கள் {சமூகங்கள்}, ஆறுகள், பெருங்கடல்கள் என அனைத்தும் அந்தத் தானவேந்திரனால் {ஹிரண்யகசிபுவால்} நடுக்கமடைந்தன.(74) பூமியின் மகனான கபிலரும், வியாகிராக்ஷனும் நடுக்கமடைந்தனர். வானுலாவிகளும், பாதாள உலகில் வசிக்கும் இரவுலாவிகளும்,(75) மேகநாதன், அங்குஷாயுதன், பீமவேகன் உள்ளிட்ட பயங்கரப் பூதகணங்களும் அவ்வாறே {அந்த தைத்தியன் ஹிரண்யகசிபுவால்} நடுக்கமடைந்தனர்” என்றார் {வைசம்பாயனர்}[1].(76)

ஹிரண்யகசிபு வதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 39-(ஹிரண்யகஷிபோர்வதோ ப்ரஹ்மக்ருதா ந்ருஸிம்ஹஸ்துதிஷ்ச )-ஹிரண்யகசிபுவைக் கொன்ற நரசிம்மன்; பிரம்மன் சொன்ன நரசிம்ம துதி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஆதித்யர்கள், சாத்யர்கள், விஷ்வர்கள், மருத்துகள், ருத்திரர்கள், தேவர்கள், மஹாத்மாக்கள், பெருஞ்சக்திவாய்ந்த வசுக்கள்,(1) தேவர்கள் ஆகியோர் அனைவரும் உலகின் வீழ்ச்சியால் அச்சமடைந்து, ஒடுக்கப்பட்டவர்களாகச் சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த மிருகேந்திரனிடம் சென்று,(2) “ஓ! தேவா, உலகை அழிப்பவனும், ஒழுக்கங்கொண்டவனும், தீமைகளைச் செய்பவனுமான இந்தத் திதியின் மகனையும் {ஹிரண்யகசிபு}, அசுரர்கள் அனைவரையும் கொல்வாயாக.(3) ஓ! தைத்தியர்களை அழிப்பவனே, இந்தத் தைத்தியர்கள் அனைவரையும் கொல்பவன் நீயே. வேறு யாரும் இல்லை. உலகின் நலத்திற்காகவும், நன்மைக்காகவும் இவர்களை அழிப்பாயாக.(4) உலகங்கள் அனைத்தின் ஆசான் நீயே. பெரும்பாட்டனும் {பிரம்மனும்}, இந்திரனும் நீயே. உண்மையில், கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் உன்னையன்றி வேறு புகலிடம் ஏதும் கிடையாது” என்றனர்.(5)

தொடக்கத்தில் தேவர்களில் பிறந்த அந்தத் தலைவன், இந்தச் சொற்களைக் கேட்டுப் பேரொலியுடன் முழங்கினான்.(6) பேரான்மாவான அந்த மிருகேந்திரன், சிங்க முழக்கம் செய்து தைத்தியேந்திரர்களின் இதயங்களையும், மனங்களையும் உற்சாகமிழக்கச் செய்தான்.(7) குரோதவாச, காலகேய, வேக, வைகதேய, துணிவுமிக்கச் சைம்ஹிகேய கணங்களும்,(8) ஸம்ஹ்ராதீய, மஹாநாத, மஹாவேக, கபில, மஹீபுத்ர, வியாக்ராக்ஷ, க்ஷிதிகம்பன கணங்களும்,(9) வானுலாவிகளும், இரவுலாவிகளும், பாதாளவாசிகளும், மேகநாதன், அங்குஷாயுதன்,(10) ஊர்தவேகன், பீமவேகன், பீமகர்ம, அர்கலோசனட், வஜ்ரீ, ஷூலி, கராலன், ஹிரண்யகசிபு உள்ளிட்ட அசுரர்களும் {நரசிம்மனுடன்} போரிட்டுக் கொண்டிருந்தனர்(11)

அடர்மேக வடிவம் கொண்டவனும், மேக வேகம் கொண்டவனும், மேகமாக முழங்குபவனும், மேகமாக ஒளிர்பவனும்,(12) தேவர்களின் பகைவனும், திதிக்குப் பிறந்தவனும், செருக்குமிக்கவனுமான ஹரிண்ய கசிபு, நரசிம்மனை நோக்கி விரைந்தோடி தன் கூட்டத்தாருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மஹாத்மாவான அந்த மிருகேந்திரனை அடைந்தான்.(13) அப்போது அந்த மிருகேந்திரன் {நரசிம்மன்}, முன்னே சாடி குதித்து, ஓங்காரத்தின் துணையுடன் தன் பெரும் நகங்களால் ஹிரண்யகசிபுவின் உடலைத் துண்டுகளாகக் கிழித்து அந்தப் போரில் அவனைக் கொன்றான்.(14) அந்தத் திதியின் மகன் {ஹிரண்யகசிபு) அழிந்ததும், பூமி {நிலம்}, உலகம், சந்திரன், வானம், சூரியன், திசைகள், ஆறுகள், மலைகள், பெருங்கடல்கள் ஆகியன அனைத்தும் ஒளியூட்டப்பட்டன.(15) அப்போது, தேவர்களும், தவத்தையே செல்வமாகக் கொண்ட ரிஷிகளும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் பல பாடல்களால் அந்த நித்திய தலைவனைத் துதித்து அவனை மகிழ்ச்சியடையச் செய்தனர்.(16)

தேவர்கள், “ஓ! தலைவா, கடந்த காலம், நிகழ் காலம் ஆகியவற்றின் காரணக் காரியங்களை அறிந்த ஞானிகளால், நீ ஏற்றிருக்கும் இந்த நரசிங்க வடிவம் வழிபடப்படும். உலகங்கள் அனைத்திலும் இந்த மிருகேந்திரனை அனைத்து உயிரினங்களும் துதிக்கும்.(17) முனிவர்கள் எப்போதும் உன்னை மிருகேந்திரனான நரசிம்மனாகப் பாடுவார்கள். ஓ! தலைவா, உன் விருப்பத்தால் நாங்கள் எங்கள் இடங்களை மீளப்பெற்றோம்” என்றனர்.(18)

தேவகணங்களால் இவ்வாறு துதிக்கப்பட்ட நரசிம்மன் பெரும் நிறைவடைந்தான். அப்போது பிரம்மனும் நிறைவடைந்து, விஷ்ணு ஸ்தோத்திரத்தைச் சொன்னான்.(19) பிரம்மன், “ஓ! தலைவா, வீழ்ச்சியற்றவன் நீயே, வெளிப்படாதவன் நீயே, கற்பனைக்கெட்டாதவன் நீயே, புதிரானவனும், சிறந்தவனும் நீயே, உயர்ந்தவனும், மாற்றமில்லாதவனும் நீயே, படைப்பாளனற்ற நித்திய படைப்பாளியும் நீயே. சிதைவற்றவன் நீயே.(20) நித்தியனும், நிலைத்தவனுமான புருஷன் நீயே. கோட்பாடுகளின் பொருளில் நிறுவப்படும் சாங்கிய யோகத்தில் நிலைக்கும் புத்தியைக் குறித்து அறிந்த ஞானாத்மா நீயே.(21) வெளிப்பட்டவனும், வெளிப்படாதவனும் நீயே. மொத்த அண்டமூம் நீயே. ஓ! தலைவா, நாங்களும் நீயே. ஆன்மா நீயே, தலைவன் நீயே.(22) நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட உடலைக் கொண்டவன் நீயே, உலகங்கள் அனைத்தின் ஆசானும் தலைவனும் நீயே. ஆயிரக்கணக்கான நான்கு யுகங்களில் உலகங்கள் அனைத்தையும் அழிப்பவனை அழிப்பவன் நீயே.(23) நான்கு வேதங்களும், நான்கு ஹோத்ரங்களும், நான்கு ஆன்மாக்களும் நீயே, நித்தியன் நீயே. அனைத்து உயிரினங்களின் புகலிடம் நீயே. எல்லையற்ற பலமும், வலிமையும் கொண்டவன் நீயே. கபிலர் முதலிய யதிகளின் பரமகதி நீயே.(24) தொடக்கமும், நடுநிலையும், முடிவும் அற்றவன் நீயே. அண்டத்தின் ஆன்மா நீயே. புருஷர்களில் சிறந்தவன் {புருஷோத்தமன்} நீயே. படைப்பவன் நீயே, அழிப்பவன் நீயே. மக்களின் நலத்தில் கவனம் கொண்ட ஒரே ஒருவன் நீயே.(25) பிரம்மனும், ருத்திரனும், பெரும் இந்திரனும், வருணனும், யமனும் நீயே. செயலைச் செய்பவன் நீயே, செய்த செயலில் இருந்து விடுவிப்பவனும் நீயே. வீழ்ச்சியில்லாத உலகத்தலைவன் நீயே.(26)

பரம சித்தியும் {திறனில் உயர்ந்தவனும்}, பரம தேவனும் {தேவர்களில் மேலானவனும்}, பரமமந்திரமும் {மந்திரங்களில் மேன்மையானவனும்}, பரம மனதும் {மனத்தில் மேன்மையானவனும்}, பரம தர்மமும், பரம புகழும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(27) பரம சத்தியமும், பரம ஹவிஸும், பரம பவித்ரமும், பரம மார்க்கமும், பரம ஹோத்ரமும், பரம யஞ்ஜமும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(28) பரம உடலும், பரம வசிப்பிடமும், பரம யோகமும், பரம வாக்கும், பரம ரகசியமும், பரம கதியும், பரம பிரபுவும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(29) முதன்மையானவர்களில் மிக உயர்ந்தவனும், தேவர்களில் மிக உயர்ந்தவனும், தலைவர்களில் மிக உயர்ந்தவனும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(30) முக்கியமானவற்றில் மிக உயர்ந்தவனும், கோட்பாடுகளில் மிக உயர்ந்தவனும், படைப்பாளர்களில் மிக முதன்மையானவனும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(31) ரகசியங்களில் மிக உயர்ந்தவனும், உயர்ந்தவற்றில் மிக உயர்ந்தவனும், உயர்ந்த தவமும், புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே.(32) புகலிடங்கள் அனைத்திலும் மிக உயர்ந்தவன் நீயே, வடிப்பிடங்களில் மிக உயர்ந்தவன் நீயே, தலைமைத்துவங்களில் மிக உயர்ந்தவன் நீயே, புராணங்களில் கொண்டாடப்படும் புருஷர்களில் முதன்மையானவனும் நீயே” என்று துதித்தான் {பிரமம்ன்}.(33)

உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனால் இவ்வாறே பகவான் துதிக்கப்பட்டான். தலைவனான நாராயணனைத் துதித்துவிட்டு தலைவன் பிரம்மன் பிரம்மலோகத்திற்குச் சென்றான்.(34) இசைக்கருவிகள் இசைக்கப்பட, அப்சரஸ்கள் நடனமாட, பாற்கடலின் வடகரைக்கு ஈஷ்வரன் {நரசிங்கனான விஷ்ணு} சென்றான்.(35) கருடனைத் தன் கொடியில் கொண்ட தலைவன், நரசிங்க வடிவை விட்டு அகன்று, (உரிய இடத்தில்) உடலை நிறுவி தன் அசல் வடிவை ஏற்றுச் சென்றான்.(36) இயற்கையின் தலைவனும், வெளிப்படாதவனுமான அந்தத் தலைவன், காந்தியால் ஒளிர்வதும், எட்டுச் சக்கரங்களைக் கொண்டதுமான வாகனத்தில் தன் இடத்திற்குச் சென்றான்.(37) இவ்வாறே நீண்ட காலத்திற்கு முன்பு நரசிம்ம உடலைக் கொண்டவனும், பேரான்மாவுமான தலைவனால் ஹிரண்யகசிபு கொல்லப்பட்டான்” என்றார் {வைசம்பாயனர்}[1].(38)

பலியின் பட்டாபிஷேகம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 40-(வாமநப்ராதுர்பாவே பலேரபிஷேக꞉)-வாமன அவதாரம்; தைத்தியர்களின் மன்னனாக நிறுவப்பட்ட பலி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இவ்வாறே நான் உனக்கு நரசிம்ம அவதாரத்தை விளக்கிச் சொன்னேன். இனி வாமன அவதாரத்தைச் சொல்லப் போகிறேன்.(1) முற்காலத்தில் பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு குள்ள வடிவை ஏற்று, பெருஞ்சக்திவாய்ந்த பலியின் வேள்வியில் மூன்று காலடிகளால் மூவுலகங்களின் அரசை அடைந்தான்.(2) அவன் {பெருங்கடலால் சூழப்பட்டதும், யானைகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டதுமான} பூமியை விடுவித்து, அதைத் தேவர்களின் மன்னனுக்கு அளித்தான்[1]” என்றார் {வைசம்பாயனர்}.(3){ஜனமேஜயன், “ஓ! பிராமணரே, இங்கே எனக்கோர் ஐயம் இருக்கிறது. தலைவன் நாராயணன் எவ்வாறு குள்ள வடிவை ஏற்றான் என்பதை அறிய நான் பேராவல் கொண்டுள்ளேன்.(4) தலைவன் நாராயணன், புராணங்களில் புராதன ஆன்மா எனவும், தாமரை உந்தி படைத்தவன், பெருஞ்சக்திவாய்ந்த தோள்களைக் கொண்டவன், உலகின் உண்மையான இயல்பானவன், அசைக்க முடியாத நித்தியன்,(5) ஆதியும் அந்தமும் இல்லாதவன், மூவுலகங்களின் பிறப்பிடமானவன், தலைவர்களின் தலைவன், தேவர்களின் தலைவன், கரிய மேனி கொண்டவன், உலகத்தால் வணங்கப்படுபவன்,(6) வேள்விகளின் ஹவ்யகவ்யங்கள் அனைத்தையும் சுமந்து செல்பவன், மங்கலமானவன், வேள்விகளின் ஹவ்யகவ்யங்கள் அனைத்தையும் அனுபவிப்பவன், வீழ்ச்சியற்றவன் எனவும் சொல்லப்படுகிறான். அந்தத் தலைவன், தேவர்களின் அன்னையான அதிதியின் கருவறைக்குள் எவ்வாறு நுழைந்தான்? வாசவனையே {இந்திரனையே} படைத்தவன் எவ்வாறு வாசவனின் தம்பியானான்?(7) தலைவர்களுக்கெல்லாம் தலைவனானவன், பிறவியை அடைந்த பிறகு, எவ்வாறு விஷ்ணுவின் நிலையை அடைந்தான்? ஓ! விப்ரரே, அந்தப் பேராத்மாவின் அவதாரத்தைக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(8)

வைசம்பாயனர், “ஓ! மன்னா, மஹாரிஷிகளால் வழிபடப்படும் இந்தத் தெய்வீகக் கதையைக் கேட்பாயாக. பிரம்மனால் சொல்லப்பட்டதும், பிராமணர்களால் ஓதப்படுவதுமான இதைப் புலவர்களும் புராணங்களில் பாடியிருக்கின்றனர்.(9)}

மரீசியின் மகனும், தேவர்களின் தலைவரும், உயிரினங்களின் தலைவருமான {பிரஜாபதியுமான} கசியபர், திதி, அதிதி என்ற இருவரையும் மனைவிகளாகக் கொண்டிருந்தார்.(10) உயரான்மாவான அந்தக் கசியபர், அதிதியிடம் தாதா, ஆர்யமான், மித்ரன், வருணன், அம்சன், பகன்,(11) இந்திரன், விவஷ்வான், பூஷன், பர்ஜன்யன், துவஷ்தன், விஷ்ணு ஆகிய பனிரெண்டு {12} வகைத் தேவர்களைப் பெற்றார்.(12)

அவர் {கசியபர்}, திதியிடம் பெருஞ்சக்திவாய்ந்த ஹிரண்யகசிபுவைப் பெற்றார். பெருஞ்சிறப்புமிக்கத் தைத்தியேந்திரனான ஹிரண்யாக்ஷன் அவனது தமையனாவான்.(13) ஹிரண்யகசிபுவுக்கு, பெருஞ்சக்திவாய்ந்தவர்களான பிரஹ்லாதன், ஹிராதன், சங்கிரதன், ஜம்பன், அநுஹ்ராதன் என்ற ஐந்து மகன்கள் இருந்தனர்.(14) பிரஹ்லாதனின் மகன் விரோசனனும், விரோசனனின் மகன் பலியும் ஆவர். அவர்களின் மகன்களும், பேரர்கள் அனைவரும் பெருஞ்சக்திவாய்ந்தவர்களாக, வீழ்ச்சியற்றவர்களாகவும் இருந்தனர்.(15) {பெரும் மனம் கொண்டவர்களும், மகிமைமிக்கவர்களுமான தைத்தியேந்திரர்களும், தேவர்களின் பகைவர்களும், ஒவ்வொரு நிலத்திலும் ஆயிரக்கணக்கில் கூட்டங்கூட்டமாக இருந்தனர்.(16)}

நரசிங்கத்தால் ஹிரண்யகசிபு கொல்லப்பட்டதைக் கண்ட அந்தத் தைத்தியர்கள், தேவர்களை அழிப்பதற்காகப் பலியைத் தங்கள் இந்திரனாக்கினர் {தலைவனாக்கினர்}.(17) அவன் {பலி} தர்மத்தில் எப்போதும் நிலைப்பவனாகவும், எப்போதும் வாய்மை பேசுபவனாகவும், புலன்களை வென்றவனாகவும், வீரனாகவும், ஞானங்கள் அனைத்திலும் நிபுணனாகவும்,(18) எதிர்காலத்தையும், பின்விளைவுகளையும் நன்கு புரிந்து கொண்டவனாகவும், வீழ்ச்சியற்ற கோட்பாடுகளை உணர்ந்தவனாகவும், மகிமைமிக்கவனாகவும், ஹிரண்யகசிபுவைப் போலவே தேவர்களின் பகைவனாகவும் இருந்தான்.(19) விரோசனனின் மகனான அந்தப் பலியை, தைத்தியர்கள் தங்கள் மன்னனாக நிறுவிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் அவனைத் தைத்தியாதிபதியாக நியமித்து வழிபட்டனர்.(20) {ஹிரண்யகசிபுவின் இடத்தில் தைத்தியர்கள் பெருஞ்சக்தி வாய்ந்தவர்களில் சிறந்தவனான பலியைத் தங்கள் மன்னனாக நிறுவிக்கொண்டனர். பிரம்மனும் இதில் மகிழ்ச்சியடைந்தான்.(21) புனித நீர்நிலைகள் அனைத்தில் இருந்தும் கொண்டு வந்த நீரால் நிரப்பப்பட்ட பொற்குடங்களைக் கொண்டு விரோசனன் மகனான பலியை அந்த அசுர கணங்கள் தங்கள் மன்னனாக அபிஷேகம் செய்தனர்.{22} அந்தத் தானவர்கள், ஜெயம் என்று சொன்னபடியே ஒப்பற்ற வீரத்தைக் கொண்ட பலியை (மன்னனாக்கி) சிம்மாசனத்தில் அமரச்செய்தனர்.(23) தானவர்கள் அனைவரும், பெருஞ்சக்தி வாய்ந்தவர்களில் சிறந்தவனான பலியைத் தங்கள் இந்திரனாக்கி, தங்கள் தலையால் தரையைத் தீண்டி அவனை வணங்கினர்.(24)}[2]அந்தத் தைத்திர்கள், “ஓ! தைத்திய மன்னா {பலியே}, அசைவன, அசையாதன, மூவுலகங்கள் உள்ளிட்ட மொத்த அண்டமும் ஹிரண்யகசிபுவுடைய அதிகாரத்தின் கீழ் இருந்ததை நீ நன்கறிவாய்.(25) ஓ! தேவர்களைக் கொல்பவனே, தேவர்கள் உன்னுடைய பெரும்பாட்டனைக் கொன்றுவிட்டு, மூவுலகங்களையும் களவு செய்து, இந்திரனைத் தங்கள் மன்னனாக நியமித்துக் கொண்டனர்.(26) எனவே, ஓ! தலைவா, நீ எங்கள் உதவியுடன் உன்னுடைய மூதாதையரின் அரசை மீட்பாயாக. உனக்கு நன்மை நேரட்டும், நீ உன் மூதாதையரின் அரசை மீளப் பெறுவாயாக.(27) ஆயிரக்கணக்கான அசுரர்கள் சூழ தேவலோகம் சென்று தேவர்களை வெல்வாயாக. உன் ஆற்றலும், பலமும் எல்லையற்றவை, உன் சிறப்புத் திறமைகளால் நீ உன் பாட்டனையும் விஞ்சியவனாக இருக்கிறாய்” என்றனர் {என்றார் வைசம்பாயனர்}[3].(28)

————————————-—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பவிஷ்ய பர்வம்-பகுதி 1-

October 19, 2025

ஜனமேஜயன் குடும்பம்! | பவிஷ்ய பர்வம் பகுதி – 01-ஜனமேஜயனின் வம்சம் கூறப்படல்…

ஜனமேஜயன் -மனைவி -வபுஷ்டமா -மகள் காசிமன்னனை மணந்தார்
ஜனமேஜயன் -மனைவி -வபுஷ்டமா-இரண்டு மகன்கள் -சந்த்ரபீடனும் சூர்ய பீடனும்
சந்த்ரபீடனுக்கு 100 மகன்கள் -அவர்களில் ஒருவன் சத்யகர்ணன் -அவனுக்கு ஸ்வேதகர்ணன் -அவன் மாலினியை மணந்து அஜபார்ஷன் பிறந்தான்

ஜனமேஜயன், சந்திரபீடன், சத்யகர்ணன், ஸ்வேதகர்ணன், அஜபார்ஷன் என ஐந்து தலைமுறைகளுக்குப் பிறகு சொல்லப்படுவது பவிஷ்ய பர்வம் 

இப்போதோ இன்னும் மூன்று தலைமுறைகளை அதிகமாகச் சொல்கிறார். எனவே மஹாபாரதம் சொல்லப்பட்டதற்கும், இந்த பவிஷ்ய பர்வம் சொல்லப்பட்டதற்கும் இடையில் நிச்சயம் மூன்று தலைமுறை இடைவெளி இருக்க வேண்டும்

சௌனகர் {சௌதியிடம்}, “ஓ! லோமஹர்ஷணர் மகனேஜனமேஜயனின் மகன்கள் யாவர்? பாண்டவர்களின் வம்சம் யாரால் நிறுவப்பட்டது?(1) இந்த வரலாற்றைக் கேட்கும் ஆவலால் நான் பீடிக்கப்பட்டிருக்கிறேன். எனவே, நீ சொன்னவற்றில் உள்ள ஒவ்வொரு தகவலையும் நான் கற்க விரும்புகிறேன்” என்று கேட்டார்.(2)

சௌதி, “பரிக்ஷித்தின் மகனான ஜனமேஜயன், தன் மனைவியான காசியையிடம் {காசியின் இளவரசியான வபுஷ்டமாவிடம்}, மோக்ஷ ஞானம் அறிந்த மன்னர்களான சந்திரபீடன், சூரியபீடன் என்ற இரு மகன்களைப் பெற்றான்[1].(3) நுண்ணறிவுமிக்க வில்லாளிகளாகத் திகழ்ந்த சந்திரபீடனின் நூறு மகன்களும், க்ஷத்திரியர்களுக்குத் தகுந்த பணிகளைச் செய்ததன் மூலம் ஜனமேஜயர்கள் என்ற பட்டப்பெயர்களுடன் பூமியில் புகழை அடைந்தனர்.(4)அவர்களில் மூத்தவனும், நீண்ட கரங்களைக் கொண்டவனும், ஏராளமான கொடைகளுடன் கூடிய வேள்விகள் பலவற்றைச் செய்தவனுமான சத்யகர்ணன்[2], வாரண நகரத்தின் {ஹஸ்தினாபுரத்தின்} அரியணையில் நிறுவப்பட்டான்.(5) சத்யகர்ணனின் மகனும், அறம்சார்ந்தவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான ஸ்வேதகர்ணன், பிள்ளையற்றவனாக இருந்ததால், தன் மனைவியுடன் காடு புகுந்தான்.(6) அழகிய புருவங்களைக் கொண்டவளும், {ஸுசாருவின் மகளும்}, எழில்மிகு யதுகுல இளவரசியுமான மாலினி, கானுலாவியான ஸ்வேதகர்ணனின் மூலம் கருவுற்றாள்.(7) அவள் கருவுற்றதும், குடிமுதல்வனான ஸ்வேதகர்ணன், நன்மையைத் தேடி தன் முப்பாட்டன்களைப் போலக் கான்புகுந்தான்.(8)கருவுற்றிருந்த மாலினி, தன் கணவன் காட்டுக்குள் ஓய்ந்து செல்வதைக் கண்டு, அவனைப் பின்தொடர்ந்து சென்று, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட ஒரு மகனை வழியில் ஈன்றெடுத்தாள்.(9) பழங்காலத்தில் தன் கணவர்களைப் பின்தொடர்ந்து சென்ற திரௌபதியைப் போலவே[3], (சூதாட்டத்தில் தோற்று நாட்டை இழந்து பாண்டவர்கள் கான்புகுந்தபோது, திரௌபதி தன் மகன்களைத் தன் அண்ணன் திருஷ்டத்யும்னனுடன் அனுப்பிவிட்டு, கணவர்களுடன் கான்புகுந்தாள்.)கற்புடையவளும், உன்னதமானவளுமான மாலினியும், புதிதாகப் பிறந்த குழந்தையை விட்டுவிட்டு தன் துணைவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.(10) அன்னையிடம் இருந்து பிரிந்த பச்சிளங்குழந்தை, மலைக்குகையில் அழுது கொண்டிருந்தபோது, அந்தப் பேரிளவரசனிடம் இரக்கங்கொண்ட சில நாரைகள் அங்கே வந்தன[4].(11)சிரவிஷ்டரின் மகன்களான ரிஷிகள் பிப்பலாதரும், கௌசிகரும், அழுது கொண்டிருக்கும் இளவரசனைக் கண்டு, இரக்கம் கொண்டு அவனை எடுத்தனர். பாறையில் தேய்ந்து, குருதியில் நனைந்திருந்த அவனது விலாப்புறங்களை அவர்கள் நீரால் கழுவினர்.(12) அந்த இளவரசனின் விலாப்புறங்கள், ஆட்டுக்கு இருப்பதைப் போன்ற அடர்நீல வண்ணத்தில் வலுவான கட்டமைப்புடன் பருத்திருந்தன. எனவே அவன் அஜபார்ஷன் என்ற பெயரால் அழைக்கப்பட்டான்.(13) இருபிறப்பாளர்களில் முதன்மையானவர்களான அவ்விருவரும் {பிப்பலாதரும், கௌசிகரும்}, அவனுக்கு அஜபார்ஷன் என்ற பெயரைச் சூட்டி, வேமகர் என்ற பெயரைக் கொண்ட ஒரு ரிஷியின் வீட்டில் அவனை வளர்த்து வந்தனர்.(14) வேமகரின் மனைவியானவள், அஜபார்ஷனைத் தன் மகனாக வளர்த்ததால், அவன் வேமகரின் மகனானான், அவ்விரு பிராமணர்களும் {பிப்பலாதரும், கௌசிகரும்} அவனது குடும்ப உறுப்பினர்களானார்கள். அஜபார்ஷனும், பிப்பலாதர், கௌசிகர் ஆகியோரின் மகன்களும், பேரர்களும் ஒன்றாகவே வாழ்ந்தனர். பூரு குலத்தில் பிறந்த இந்த அஜபார்ஷனே பாண்டவ வம்சத்தைத் தழைக்கச் செய்தான்[5].(16)

நுண்ணறிவுமிக்கவனும், நகுஷனின் மகனுமான யயாதி, நீண்ட காலத்திற்கு முன்பு முதுமைப் பரிமாற்றம் செய்து கொண்டபோது, இந்த ஸ்லோகத்தை மகிழ்ச்சியுடன் பாடினான்.(17) {யயாதி}, “பூமியில், சூரிய, சந்திரர்களும், கோள்களும் இல்லாமல் போகலாம், ஒருபோதும் அது {பூமி} பூருக்கள் {பூரு குலத்தவர் / பௌரவர்கள்} அற்றதாகாது” {என்று பாடினான் யயாதி” என்றார் சௌதி}.(18)

ஜனமேஜயன் வேள்வியில் வியாசர்! | பவிஷ்ய பர்வம்-(வியாஸம் ப்ரதி ராஜஸூயவிஷயே ஜநமேஜயப்ரஷ்நம்)-நாக வேள்வி நிறைவடைந்ததும், ராஜசூய வேள்வி செய்ய விரும்பி அதற்கான பொருட்களைத் திரட்டிய ஜனமேஜயன்; வியாசர் அங்கே வந்தது; ஜனமேஜயனின் ஐயங்களைத் தீர்த்தது…

சௌனகர் {சௌதியிடம்}, “வியாசரின் சீடரால் {வைசம்பாயனரால்} மீளுரைக்கப்பட்டதைப் போலவே அனைத்துப் பர்வங்களுடன் ஹரிவம்சத்தை மொத்தமாக எனக்கு உரைத்திருக்கிறாய்.(1) அமுதத்தைப் போன்றதும், பாவங்கள் அனைத்தையும் அழிக்கவல்லதுமான முடிவற்ற ஹரிவம்ச வரலாறு நம்மை நிறைவடையச் செய்யட்டும்.(2) ஓ! பொறுமையுடன் கூடியவனே, இந்த வரலாறு காதுகளுக்கு இனிமையாக இருப்பதால் எங்கள் இதயங்களுக்கு {மனங்களுக்குப்} பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. ஓ! சௌதி, சர்ப்ப யக்ஞம் {நாக வேள்வி} நிறைவடைந்ததும் அற்புதமிக்க இந்த வரலாற்றை {ஹரிவம்சத்தைக்} கேட்ட பிறகு, மன்னன் ஜனமேஜயன் என்ன செய்தான்?” என்று கேட்டார்.(3)

சௌதி, “சர்ப்பயக்ஞத்தின் முடிவில் அற்புதமிக்க இந்த வரலாற்றைக் கேட்ட பிறகு மன்னன் ஜனமேஜயன் செய்தவை அனைத்தையும் நான் உமக்கு விளக்கிச் சொல்கிறேன்.(4) இந்த வேள்வி நிறைவடைந்ததும், பரீக்ஷித்தின் மகனான ஜனமேஜயன் {பாரீக்ஷிதன்} குதிரை வேள்விக்கான {அஷ்வமேத யக்ஞத்துக்கான} பொருட்களைத் திரட்டினான்.(5) பிறகு, ரித்விக்குகள், புரோஹிதர்கள், ஆசான்கள் ஆகியோரை அழைத்த அவன், “நான் குதிரை வேள்வியைச் செய்ய விரும்புகிறேன். இந்தக் குதிரைகளை நீங்கள் அர்ப்பணிப்பீராக” என்றான்.(6)

அற ஆன்மாவும், அனைத்தையும் அறிந்தவர்களில் முதன்மையானவருமான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, தளர்வில்லா ஆற்றலைக் கொண்டவனும், பரீக்ஷத்தின் மகனுமான ஜனமேஜயனின் நோக்கத்தை அறிந்து கொண்டு, அவன் செயலைக் (வேள்வியைக்) காண்பதற்காகத் திடீரென அங்கே வந்தார்.(7) மஹாரிஷியான வேதவியாசர் அங்கே வந்ததைக் கண்ட மன்னன் ஜனமேஜயன், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின் படி அர்க்கியத்தையும், இருக்கையையும், கால்களைக் கழுவிக் கொள்வதற்கான நீரையும் அவருக்குக் கொடுத்தான்.(8) ஓ! சௌனகரே, அவர்கள் இருவரும் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, சபை உறுப்பினர்கள் அனைவரும் வேதக் கருப்பொருகள் பலவற்றைக் குறித்து உரையாடத் தொடங்கினர்.(9)

பாண்டவர்களின் பாட்டனாரும், தன்னுடைய பெரும்பாட்டனாருமான பெரும் முனி வேத வியாசரிடம் மேற்கொண்ட உரையாடல்களின் நிறைவில், மன்னன் ஜனமேஜயன், (10) “ஸ்ருதிகளில் காணப்படும் பல பொருள்கள் நிறைந்திருக்கும் மஹாபாரதக் கதை காதுகளுக்கு இனிமையாக இருந்தது. {தொடர்ந்து பல நாட்கள் கேட்கப்பட்டாலும்} அஃது ஒரு கணத்தில் நிறைவடைந்ததைப் போல இருந்தது.(11) {விஷ்ணுவின்} மகிமைகளைப் பரப்புவதும், பாற்கடலே சங்குக்குள் நிறைந்ததைப் போன்ற புகழைக் கொடுப்பதுமான அவ்வரலாறு உம்மால் அழகாகப் பதியப்பட்டுள்ளது.(12) அமுதத்திலும், சொர்க்கத்தின் அருளிலும் நிறைவடையாத மனிதனைப் போலவே நானும் மஹாபாரதக் கதைகளைக் கேட்டும் நிறைவடைந்தேனில்லை. {நான் இன்னும் கேட்க விரும்புகிறேன்}.(13) ஓ! பிராமணரே, நீர் அனைத்தையும் அறிந்தவர். எனவே, குருக்களின் அழிவுக்கு ராஜசூயந்தான் காரணமா? அவ்வாறு இல்லையா? என்பதை உம்மிடம் வேண்டிக் கேட்கிறேன்.(14)

பெரும்புரட்சி {குருக்ஷேத்ரப் பெரும்போர்} நடந்த காலத்தில் வெல்லப்பட முடியாதவர்களான மன்னர்கள் பலர் மரணமடைந்ததால், ராஜசூய யக்ஞம் போருக்காகவே விதிக்கப்பட்டது என்று எனக்குத் தோன்றுகிறது.(15) சோமனால் {சந்திரனால்} இந்த ராஜசூயம் மேற்கொள்ளப்பட்ட போது, அதைத் தொடர்ந்து {பிருஹஸ்பதியின் மனைவியான} தாரையை மையமாகக் கொண்ட {தாரகாமாயப்} பெரும்போர் நடைபெற்றது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(16) அதன் பிறகு வருணன் இந்தப் பெரும் வேள்வியை மேற்கொண்ட போது, தேவாசுரப் போர் அதைப் பின்தொடர்ந்து வந்தது.(17) அரசமுனியான ஹரிஷ்சந்திரன் இந்த வேள்வியை மேற்கொண்ட போது, க்ஷத்திரியர்கள் பலர் கொல்லப்பட்ட அடீபகப் போர்[1] அதைப் பின்தொடர்ந்து வந்தது.(18) அனைத்திலும் இறுதியாக, வழிபடத்தகுந்தவர்களான பாண்டவர்கள், கடினமான இந்த வேள்வியை மேற்கொண்ட போது, பெரும்பாரத {மஹாபாரதப்} போர் அதைப் பின்தொடர்ந்து வந்தது.(19)ஓ! ஐயா, பெரியவரே, உலக அழிவுக்கு வேராக இருந்த அந்த ராஜசூய யக்ஞத்தை நீங்கள் அனைவரும் ஏன் நிறுத்தவில்லை?(20) இந்த வேள்வியை அதற்குரிய அனைத்துக் கிளைகளுடன் {அங்கங்களுடன்} மேற்கொள்வது மிகக் கடினமானது. வேள்வியின் கிளைகளில் ஒன்று புறக்கணிக்கப்பட்டாலும் அது மக்களின் அழிவுக்கு வழிவகுக்கும்.(21) நீர் எங்கள் மூதாதையரின் பாட்டனாகவும், முதல் தலைவனாகவும், கடந்த காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிந்தவராகவும் இருந்தீர்.(22) நுண்ணறிவுமிக்க அந்த மன்னர்களின் வழிகாட்டியாக நீர் வாழ்ந்து வந்த போது, கவனிக்க ஆளில்லாதவர்களைப் போல அவர்கள் ஏன் அறவழிகளில் இருந்து நழுவி இந்தப் பாவத்தை இழைத்தனர்?” என்று கேட்டான் {ஜனமேஜயன்}”.(23)

வியாசர், “ஓ! மன்னா, உண்மையில் அந்த மன்னர்கள் விதியால் தூண்டப்பட்டவர்களாகவே நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கும், பழக்கவழக்கங்களுக்கும் முரணாகச் செயல்பட்டனர். அவர்கள் எதிர்காலத்தைக் குறித்து என்னிடம் ஏதும் கேட்கவில்லை. நானும் கேட்கப்படாத எதையும் அவர்களுக்குச் சொல்லவில்லை.(24) அதையுந்தவிர, விதியின் பணியை எதிரக்கவல்லவர் எவரும் இல்லை என்பதால், நானும் எதிர்கால விளைவுக்கு எதிர்வினையாற்ற வல்லனல்லன்.(25) எதிர்காலத்தைக் குறித்து நீ கேட்பனவற்றை நான் விளக்கிச் சொல்கிறேன். ஆனால் விதி வலிமைமிக்கதாகும். என் சொற்களைக் கேட்ட பிறகும் கூட உன்னால் அவற்றைச் செயல்படுத்த இயலாது.(26) விதிக்கப்பட்ட விதியை வெல்வது சாத்தியமில்லை என்பதால் அச்சத்தாலோ, ஆசையாலோ உன்னால் மனிதனின் வழிகளில் நிற்க இயலாது {காலத்தால் வகுக்கப்பட்ட பாதையை எந்த வழிமுறைகளினாலும் மீற முடியாது}.(27)

வேள்விகளில் முதன்மையான அஸ்வமேதத்தை {அஸ்வமேத யக்ஞத்தை / குதிரை வேள்வியை} க்ஷத்திரியர்கள் செய்ய வேண்டுமென ஸ்ருதியில் விதிக்கப்பட்டிருக்கிறது.(28) அந்த வேள்வியுடைய மகிமையின் காரணமாக வாசவன் {இந்திரன்} உன்னுடைய அஸ்வமேதத்தைக் களங்கப்படுத்துவான். ஓ! மன்னா, உன்னுடைய ஆண்மையின் காரணமாகவோ, விதியின் விருப்பத்தாலோ நீ வாசவனை எதிர்க்கவல்லவனாக இருந்தாலும் கூட அத்தகைய ஒரு வேள்வியை நீ செய்யாதே.(29) எனினும், விதியானது வல்லமையின் தொகுப்பாக இருப்பதால் நீயோ, சக்ரனோ, தலைமை தாங்கும் புரோகிதர்களோ அதன் மூலம் பாவம் இழைத்தவராக மாட்டீர்.(30) விதி வகுத்த விதியால் பிரம்மன் இந்திர வேள்வியை நிறுத்துவான். காலப்போக்கிலும், விதியின் விருப்பத்திற்கு இணங்கவும், யுக முடிவில் படைப்பு யாவும் முடிவை எட்டும்[2].(31) பிராமணர்கள் வேள்விகளின் பயன்களை விற்பனை செய்வார்கள். எனவே, அசைவன, அசையாதன உள்ளிட்ட இந்த அண்டம் விதியின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதை அறிவாயாக” என்றார் {வியாசர்}.(32)ஜனமேஜயன், “ஓ! மதிப்பிற்குரிய ஐயா, குதிரை வேள்வி நிற்பதற்கு எது காரணமாக அமையும்? அது குறித்து நான் கேட்டதும் அதைத் தவிர்த்து விலகுவேன்” என்றான்.(33)

வியாசர், “ஓ! மன்னா, பிராமணர்களின் சாபமே அதற்குக் காரணமாக அமையும். நீ அதை {சாபத்தை} நிறுத்த முயன்றால் உனக்கு நன்மையே நேரும்.(34) ஓ! பகைவரைக் கொல்பவனே, இனி இந்த உலகம் உள்ளவரை, குதிரை வேள்விக்கான பொருட்களைத் திரட்ட க்ஷத்திரியர்களால் இயலாது. {நீ செய்வதைப் போன்ற குதிரை வேள்வியை உலகம் உள்ளளவும் வேறு யாராலும் செய்ய இயலாது}” என்றார்.(35)

ஜனமேஜயன், “ஒரு பிராமணருடைய கடுஞ்சாபத்தின் சக்தியால் அஸ்வமேதம் நிறுத்தப்படும் என்றாலும் அதன் கருவியாக நான் இருப்பேன். உண்மையில், நான் அச்சத்தாலும், நாணத்தாலும் நிறைகிறேன்.(36) நற்செயல்கள் பலவற்றைச் செய்த என்னைப் போன்ற ஒரு மனிதன், கயிற்றில் கட்டப்பட்ட ஒரு பறவை வானத்தில் பறந்து செல்வதைப் போல இத்தகைய சபிக்கப்பட்ட பணியில் ஈடுபட்டு வாழ்வது எங்ஙனம்?(37) இத்தகைய பணியில் நான் ஈடுபட்டால், தலைமுறை தலைமுறையாகப் பயிலப்படும் சடங்கு என்னால் கெட்டுப் போகும். (மன்னர்களால்) மீண்டும் குதிரை வேள்வி பயிலப்படும் என்று எனக்கு ஆறுதல் சொல்வீராக” என்று கேட்டான்.(38)

வியாசர், “சிறப்பில் {வேள்வியில்} இருந்து உண்டாகும் சிறப்பானது, நிச்சயம் மற்றொரு சிறப்பில் மட்டுமே இருப்பதைப் போல, அஸ்வமேதம் நிறுத்தப்பட்டாலும், தேவர்களிடமும், பிராமணர்களிடமும் அது நிலைத்திருக்கும்.(39) படைவீரனின் வாழ்வை மேற்கொள்ளும் கசியபரின் வழித்தோன்றல்கள் சிலர், கலியுகத்தில் மீண்டும் குதிரை வேள்வியை மீட்டெடுப்பார்கள்[3].(40) ஓ! மன்னா, அண்ட அழிவுக்காலமானது, வெண்கோள் உள்ளிட்ட பல தீய சகுனங்களைக் கொண்டு வருவதைப் போலவே அதே குலத்தில் பிறந்த ஒரு பிராமணன், கலியுகத்தில் ராஜசூய வேள்வியையும் மீட்டெடுப்பான்.(41) இந்த வேள்வி, அதைச் செய்யும் மனிதர்களுக்கு உரிய பயன்களை வழங்கும். அவர்களும், இந்த யுக முடிவின் தொடக்கத்தில் ரிஷிகள் சூழத் திரிவார்கள்.(42) அந்தக் காலத்தில் இருந்து மனிதர்களின் புலன்கள், மாசற்ற நற்செயல்களின் பயன்களைக் கைவிடாது, இம்மையில் அவற்றுடன் பற்றற்றிருக்கும்.(43) அப்போது, நுட்பமானதும், உயர்ந்ததுமான ஓர் அறம், நான்கு வகைகளுக்கான கடமைகளில் {நான்கு ஆசிரமங்களில்} இருந்து நழுவி, ஈகையை மட்டுமே தன் வேராகக் கொண்டு, காலத்தின் விளைவாகப் புகழ்பெறும்.(44) ஓ! ஜனமேஜயா, இந்த யுகத்தின் முடிவில் மனிதர்கள் சிறதளவே தவம் பயின்றாலும், அவர்கள் ஆன்ம சக்திகளை அடைவார்கள். இவ்வாறு அருளப்பட்டவர்களே பக்திச் சடங்குகளைச் செய்வார்கள்” என்றார் {வியாசர்}[4].(45)

கலியுகம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 03-(வியாஸோக்தம் கலியுகபவிஷ்யம்)-கலியுகத்தை வர்ணித்த வியாசர்…

ஜனமேஜயன் {வியாசரிடம்}, “ஓ! அறமறிந்தவனே, உயிரினங்களுக்குக் கேட்டையும், அறத்திற்கு அழிவையும் ஏற்படுத்தும் கலியுகம் தொடங்கப் போகிறது. எனவே, அதன் தன்மைகளைக் குறித்து விளக்குவாயாக” என்றார்.(3)

சௌதி, “தெய்வீகரான வியாசர், இவ்வாறு கேட்கப்பட்டதும், கலியுகத்தில் மனிதர்களின் நிலை குறித்துத் துல்லியமாகச் சிந்தித்து, எதிர்கால யுகத்தை விளக்கத் தொடங்கினார்.(4)

வியாசர், “கலி தொடங்கியதும், குடிமக்களைப் பாதுகாக்க இயலாத மன்னர்கள், காலமேதும் பார்க்காமல் அவர்களிடம் இருந்து கப்பங்களைப் பெற்றுக் கொண்டு தங்களை மட்டுமே பாதுகாத்துக் கொள்வர்.(5) இந்த யுகத்தின் முடிவில் மன்னர்கள் க்ஷத்திரியர்களாகச் செயல்படமாட்டார்கள் {க்ஷத்திரியர்கள் மன்னர்களாக மாட்டார்கள்}, பிராமணர்கள் சூத்திரர்களைப் போன்ற வாழ்வை மேற்கொள்வார்கள் {பிராமணர்கள் சூத்திரர்களிடம் இருந்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுவார்கள்}, சூத்திரர்கள் பிராமணர்களைப் போல நடந்து கொள்வார்கள் {சூத்திரர்கள், பிராமணர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவார்கள்}.(6)

ஓ! ஜனமேஜயா, இந்த யுகத்தின் முடிவில் ஸ்ருதிகளையும், வேதங்களையும் நன்கறிந்த பிராமணர்கள், {க்ஷத்திரியர்களுக்கான} கணைகளை எடுத்துக் கொண்டு, வேள்விகளில் இருந்து ஹவிஸை விலக்குவார்கள் {ஹோமம் செய்ய மாட்டார்கள்}, மக்கள் அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்து உண்பார்கள்[1].(7) இறுதி யுகமான கலி தோன்றும்போது மனிதர்கள் சிற்பிகளாகவும், பொய்யர்களாகவும், இறைச்சியையும், மதுவையும் விரும்புகிறவர்களாகவும், நண்பர்களின் மனைவியரை அறிபவர்களாகவும் இருப்பார்கள்[2].(8) கலியுகத்தில் கள்வர்கள் மன்னரைப் போலவும், மன்னர்கள் கள்வரைப் போலவும் செயல்படுவார்கள், பணியாட்கள் உரிமையில்லாத வருவாயை அனுபவிப்பார்கள்.(9)இறுதி யுகத்தில் செல்வமே உயர்வாகப் பேசப்படும், நல்லோரின் குணம் இகழப்படும், {குணத்தில்} வீழ்ச்சியடைந்தவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.(10) பாவ புண்ணியம் கருதாத கைம்பெண்களும், தவசிகளும், பதினைந்து வயதே உடைய மனிதர்களும் {பதினாறு வயதைக் கடக்காதவர்களும்} வரைமுறையற்ற கலவியின் மூலம் பிள்ளைகளைப் பெறுவார்கள்.(11) அந்த இறுதி யுகத்தில் ஊரார் உணவை விற்பனை செய்வர், பிராமணர்கள் வேதங்களை விற்பனை செய்வர், பெண்கள் தங்கள் மேனிகளை விற்பனை செய்வர்.(12) இந்த யுகத்தில் அனைவரும் வேதங்களைப் படிப்பார்கள், வாஜஸநேயி வேள்விகளைச் செய்வார்கள், சூத்திரர்கள் அனைவரையும் “ஓ! {ஏய்}” என்றழைப்பார்கள்.(13) {யுகம் தாழும்போது பிராமணர்கள், தவப்பயன்களையும், வேள்விப் பயன்களையும் விற்பனை செய்வார்கள், பருவகாலங்கள் முரண்படும்}.(14) புத்தனின் {நல்லோனின்} போதனைகளைப் பின்பற்றும் சூத்திரர்கள் இறைச்சி உண்பதை விலக்குவார்கள். வெண்பற்களையும், கூரிய கவனத்தையும் கொண்ட அவர்கள், தங்கள் தலைகளை மழித்துக் கொண்டு, பட்டாடைகளை உடுத்திக் கொண்டு {சாக்கிய} அறம் பயில்வார்கள்[3].(15)தந்தங்களையும், பற்களையும் கொண்ட விலங்குகள் ஏர்களிலும், வண்டிகளிலும் பூட்டப்படும், மனிதர்கள் குளங்களில் உள்ள நீரைக் கொண்டு உழுவார்கள், மேகங்கள் ஒழுங்கற்ற முறையில் நீரைப் பொழியும்.(16+18) மிலேச்சர்கள் குரு பாஞ்சால மாகாணத்தில் வாழ்வார்கள், அந்த {குரு பாஞ்சால} நாட்டைச் சேர்ந்த மக்கள் முன்னவர்களின் {மிலேச்சர்களின்} மாகாணத்தில் வாழ்வார்கள். யுகத்தின் முடிவில் மனிதர்கள் வீழ்ச்சியடைவார்கள்[4].(17[16-18]) பிராமணர்கள், தவப்பயன்களையும், வேள்விப் பயன்களையும் விற்பார்கள். கள்வர்கள் ஒருவருக்கொருவர் செல்வத்தைக் களவு செய்வார்கள், இழிந்த மனிதர்கள் சொற்ப செல்வத்தை அடைந்து வளமாகத் திகழ்வார்கள்.(19) இந்த இறுதி யுகத்தில் மனிதர்கள் அறச்சடங்குகளைப் புறக்கணிப்பார்கள், நிலப்பகுதிகள் பாலைவனங்கள் நிறைந்ததாக இருக்கும், நகரங்களில் பல சாலைகளின் மூலம் போக்குவரத்து நடைபெறும்.(20) கலியுகத்தில் அனைவரும் வணிகராவர், மகன்கள் தங்கள் மூதாதையரின் {தந்தைமாரின்} கொடைகளை உடனே பிரித்துக் கொள்வார்கள். பேராசையாலும், பொய்மையினாலும் தூண்டப்படும் மக்கள் ஒருவரோடொருவர் போரிட்டுச் செல்வங்களைக் கொள்ளையடிப்பர்.(21) பெண்கள், அழகும், நளினமும், ஆபரணங்களும் இல்லாதவர்களாக மயிரால் மட்டுமே தங்களை அலங்கரித்துக் கொள்வர்.(22)யுகத்தின் முடிவு நெருங்கும்போது, எந்த வித இன்பத்துக்கும் இடமில்லாத இல்லறவாசிக்கு, அவனுடைய மனைவியே இறுதி கதியாக இருப்பாள்[5].(23) தீயவர்களும், ஆரியரல்லாதவரும் {உன்னதரல்லாதவரும்} பெருகும்போது, பொருத்தமில்லாத வகையில் பெண்களின் எண்ணிக்கைப் பெருகி, ஆண்களின் எண்ணிக்கைக் குறையும் போது, அதுவே யுக முடிவுக்கான அறிகுறி என்பதை அறிவாயாக.(24) அப்போது அனைவரும் பிச்சைக்காரர்களாக இருப்பார்கள், எவரும் பிச்சை அளிக்க மாட்டார்கள். மக்கள் எந்த வேறுபாடும் இன்றிப் பிற வர்ணத்தாரிடம் இருந்து கொடைகளை ஏற்பார்கள்.(25) மன்னர்கள், கள்வர்கள், நெருப்பு ஆகியவற்றால் பீடிக்கப்படும் மக்கள் அழிவை அடைவார்கள். இந்த இறுதியுகத்தில் மக்கள் பயிர்களைப் பெற மாட்டார்கள் {விதைத்த விதை பயன்தராது}. இளைஞர்கள் முதுமையை அடைவார்கள். மக்கள் தங்கள் தீய நோக்கத்தின் காரணமாக மகிழ்ச்சியை அடையமாட்டார்கள் {அவர்கள் இன்புறுவது பகல்கனவே}.(26) மழைக்காலத்தில் காற்றானது மேலும், கீழுமாக வீசி புழுதியை {அல்லது கற்களைப்} பொழியும், மக்களிடம் மறுமை குறித்த ஐயங்கள் இருக்கும்.(27) அனைவரும் இயல்பாகவே தீயவர்களாகவும், கடவுளைப் பழிப்பவர்களாகவும், அகங்காரம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பேராசை கொண்ட பிராமணர்கள் ஒருவரையொருவர் பழித்துக் கொள்வார்கள்.(28) க்ஷத்திரியர்கள், வைசியர்களின் வழிகளைப் பின்பற்றி வேளாண்மையிலும், வணிகத்திலும் ஈடுபடுவார்கள். பிராமணர்கள் அறத்தின் கண்ணியத்தைக் கெடுப்பார்கள்.(29)யுக முடிவில் மனிதர்கள் தங்கள் நோன்புகளையும், {உடன்பாடுகளையும்}, உறுதிமொழியையும் பின்பற்றமாட்டார்கள். அவர்கள், தங்கள் மதிப்பைக் கைவிட்டுக் கடன்களை அடைக்காமல் இருப்பார்கள்.(30) மனிதனின் இன்பம் பயனற்றதாகவும், அவனது கோபம் பயனுள்ளதாகவும் இருக்கும். ஆடுகளும், பாலுக்காகவே மதிக்கப்படும்.(31) யுக முடிவில், சாத்திர ஞானமற்ற மனிதர்கள் இயல்பாக இவ்வாறே நடந்து கொள்வார்கள். கல்வியில் செருக்குடைய மனிதர்கள், அற விதிகளை அலட்சியம் செய்வதோடல்லாமல் {தங்களுக்கு ஏற்ற வகையில்} சாத்திரங்களுக்கு விளக்கமுமளிப்பார்கள்.(32) இறுதி யுகத்தின் போது, பெரியோரின் போதனைகள் இல்லாமலேயே அனைத்துக் கிளைகளிலும் தாங்கள் ஞானத்தை அடைந்ததாக அனைவரும்  கருதுவார்கள்.(33)  கவியல்லாதவன் {ஞானியல்லாதவன்} எவனும் இருக்க மாட்டான் {விதிவிலக்கின்றி அனைவரும் தங்களை ஞானியாகவே கருதுவார்கள்}. பிராமணர்கள், தங்கள் அறக்கடமைகளில் இருந்து விலகி கணிகர்களாவார்கள் {சோதிடர்களாவார்கள்}, மன்னர்கள் கள்வர்களாவார்கள்[6].(34)யுக முடிவில், கள்ள உறவில் பிறந்த பெண்களுடன் வசிப்பவர்கள் {குண்டர்கள்}, வஞ்சகர்கள், குடிகாரர்கள் {சுராபானம் அருந்துவோர்} ஆகியோர் பிரம்மவாதிகளாகி குதிரை வேள்விகளைச் செய்வார்கள்.(35) பிராமணர்கள், செல்வமீட்டும் விருப்பத்தில் தகுதியில்லாதவர்களுக்குப் புரோஹிதம் செய்து, விலக்கப்பட்ட உணவை உண்பார்கள்.(36) அனைவரும் “போ {ஏய்}” என்பார்கள் {மதிப்பின்றியே பேசுவார்கள்}, எவரும் வேதங்களைக் கற்க மாட்டார்கள். பெண்கள் ஒரேயொரு சங்கு வளையலை அணிவார்கள், நெல்லின் வடிவிலான ஆபரணத்தையே பயன்படுத்துவார்கள்.(37) யுக முடிவு நெருங்கும் வேளையில், விண்மீன்கள் உரிய கோள்களுடன் சேராது, திக்குகள் முரண்படும், மாலை வேளையின் தோற்றம் எப்போதும் எரிவதைப் போலவே தெரியும்.(38)

மகன், தன் தந்தையைப் பணிகளில் ஈடுபடுத்துவான், மருமகள் மாமியாருக்கு ஆணையிடுவாள். மனிதர்கள், விலங்குகளுடனும், பல்வேறு சாதிப் பெண்களுடனும் கூடி வாழ்வார்கள் {உறவு கொள்வார்கள்}.(39) சீடர்கள், சொற்கணைகளால் ஆசான்களைக் காயப்படுத்துவார்கள், மேலும் வெறிபிடித்த மனிதர்கள் பல காரியங்கள் குறித்துப் பேசுவார்கள்.(40) அக்னிஹோத்ரிகள், முதல் நான்கு ஆகுதிகளைத் தேவர்களுக்குப் படைக்காமல், தங்கள் உணவை உண்பார்கள். மனிதர்கள், தங்கள் விருந்தினர்களுக்கு உணவை அளிக்காமல் தாங்களே உண்பார்கள்.(41) பெண்கள், உறங்கிக் கொண்டிருக்கும் தங்கள் கணவர்களை வஞ்சித்துப் பிறரிடம் செல்வார்கள், ஆண்களும், உறங்கிக் கொண்டிருக்கும் தங்கள் மனைவிகளை விட்டு விட்டு பிற பெண்களிடம் செல்வார்கள்.(42) யுகம் முடியும்போது, பிணிகள், மன வேதனை, பொறாமை ஆகியவை மனிதர்களைப் பீடிக்கும், அவர்கள் தங்கள் செயல்களுக்குத் தீர்வு காண மாட்டார்கள்” என்றார் {வியாசர்}.(43)

கலியுக விளக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 04-(கலியுகவர்ணநம்)-கலியுகத்தை வர்ணித்த வியாசர்…

ஜனமேஜயன் {வியாசரிடம்}, “மொத்த உலகும் இவ்வாறு மாசடையும்போது, மனிதர்கள் எவரால் பாதுகாக்கப்படுவார்கள்? அவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள்? அவர்கள் எதை உண்பார்கள்? அவர்கள் எவ்வாறு இன்புற்றிருப்பார்கள்?(1) அவர்களின் செயல்பாடுகளும், முயற்சிகளும் எவ்வாறு இருக்கும்? அவர்கள் எவ்வளவு காலம் வாழ்வார்கள்? அவர்கள் {மனிதர்கள்} எந்த எல்லையை எட்டியதும் சத்திய யுகத்தை அடைவார்கள்?” என்று கேட்டான்.(2)

வியாசர், “அறம் ஆட்டம்கண்டு, நல்லொழுக்கம் அரிதாகும்போது, அருஞ்செயல்களைச் சாதிக்காத மனிதர்கள் குறுகிய காலமே வாழ்வார்கள்.(3) வாழ்நாள் குறைந்ததும், அவர்களின் வலிமையும் குறையும், அஃது அவர்களின் நிறத்தில் பிறழ்வுகளுக்கு வழிவகுத்து பிணிகளை உண்டாக்கும்.(4) இது மனவருத்தத்தை உண்டாக்கி கடவுளின் நினைவை ஏற்படுத்தும் {உலகம் சார்ந்த நோக்கங்களில் ஏற்படும் அக்கறையின்மையால் அவர்கள் தங்கள் ஆன்மாவை உணரும் நிலையை அடைவார்கள்}. அது மீண்டும் அறத்தை விளைவிக்கும். இந்த எல்லையுடன் அவர்கள் சத்திய யுகத்தை அடைவார்கள்.(5)

சிலர், சொற்களில் மட்டுமே அறத்தைப் பின்பற்றி அக்கறையற்றவர்களாக இருப்பார்கள், மனசாட்சியுடன் கூடிய சிலர் ஆர்வத்துடன் காரணங்களை ஆய்ந்து அறிவார்கள்.(6) ஐயங்களில் இருந்து விடுபட்ட மனங்களைக் கொண்டவர்களும், கல்வியில் செருக்குடையவர்களுமான சில மனிதர்கள், ஊகங்களுக்கும் {அனுமானங்களுக்கும்}, சான்றுகளுக்கும் {ஆதாரங்களுக்கும்} இடையிலான ஒற்றுமையைக் காண்பார்கள்.(7) வேறு சிலர் வேதங்களை ஏற்க மாட்டார்கள். {இந்த யுகத்தில் பெண்கள் பலர், தங்கள் பிறப்புறுப்புகளால் செய்வதைத் தங்கள் வாயால் செய்வார்கள்}.(8) அறியாமை கொண்ட தீய மனிதர்கள், கல்வியில் செருக்குண்டு நாத்திகர்களாவார்கள். {மனிதர்கள் குழப்பம் நிறைந்தவர்கள் ஆவார்கள், மந்த புத்தி கொண்டோர் தங்களை ஞானிகளாகக் கருதுவார்கள்}[1].(9) அவர்கள் செருக்கடைந்தவர்களாகச் சாத்திர ஞானத்தில் இருந்து விலகுவார்கள். அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் பொருள்களில் மதிப்பு கொண்டவர்களாகவும், விவாதங்களை விரும்புகிறவர்களாகவும் இருப்பார்கள்.(10) யுக சுழற்சி ஆட்டங்காணும்போது, சில மனிதர்கள் (விஷ்ணுவின்) இறுதி வகைமையைப் பின்பற்றுவார்கள். கொடைகளுடனும், வாய்மையுடனும் அவர்கள் கருணைச் செயல்கள் பலவற்றைச் செய்வார்கள்[2].(11)அந்தக் காலத்தில் மக்கள் அனைத்து வகைப் பொருட்களையும் உண்பார்கள், கட்டுப்பாடு இல்லாத புலன்களுடன் கூடியவர்களாகவும், சாதனைகளற்றவர்களாகவும், வெட்கம் கெட்டவர்களாகவும் இருப்பார்கள். பாவத்தின் மொத்த அடையாளமாக இதை அறிவாயாக.(12) பிராமணர்களுடைய வாழ்வுத் தேவையின் நித்திய வழிமுறையான இரத்தலை க்ஷத்திரியர்களும், பிற வகையினரும் {வர்ணத்தாரும்} தங்கள் வாழ்வாதாரமாகக் கொள்ளும்போது, பாவம் பீடித்ததன் {யுகம் வீழ்ந்ததன்} அடையாளமாக அதை அறிவாயாக.(13) ஞானத்திற்கும், கல்விக்கும் அழிவைக் கொண்டு வரும் இந்த யுகம், பாவத்தால் நிறைந்ததாக இருக்கும், பிரம்மச்சரிய {பற்றற்ற} வாழ்க்கையைப் பின்பற்றும் மக்கள், குறுகிய காலத்திற்குள் ஆன்மிக முழுமையை அடைவார்கள்.(14)

இறுதி யுகத்தில் பெரும்போர்களும், பெருங்குழப்பங்களும், பெரும் மழைகளும், பேரச்சங்களும் விளையும்; பாவம் நிறைந்த தன்மையின் {யுக வீழ்ச்சியின்} அடையாளங்களாக இவற்றை அறிவாயாக.(15) யுக முடிவில், ராட்சசர்கள், கடுஞ்சொற்களைப் பேசுவதையே நோக்கமாகக் கொண்ட பிராமணர்களாகவும், மன்னர்களாகவும் இருந்து பூமியை அனுபவிப்பார்கள்[3].(16) வேத கல்வி கற்றல், வேள்விகள் வேட்டல், அறநெறிகளைப் பின்பற்றல் ஆகியவற்றில் இருந்து விலகும் மனிதர்கள், செருக்குடையவர்களாகவும், அவதூறு பேசுபவர்களாகவும், அனைத்தையும் உண்பவர்களாகவும், பயனற்ற சடங்குகளைச் செய்பவர்களாகவும்,(17) மூடர்களாகவும், தன்னலம் கொண்டவர்களாகவும், பேராசை கொண்டவர்களாகவும், தகாத உடைகளை உடுத்துபவர்களாகவும், இழிந்தவர்களாகவும், நிலைத்து நீடிக்கும் அறத்தில் {சனாதன தர்மத்தில்} இருந்து வழுவியவர்களாகவும்,(18) பிறரின் செல்வங்களைக் கொள்ளை அடிப்பவர்களாகவும், பிறன் மனைவியரைக் கெடுப்பவராகவும், காமாந்தகராகவும், தீயவர்களாகவும், வஞ்சகர்களாகவும் இருப்பார்கள்.(19) மக்கள் ஒரே {தீய} குணத்துடன் கூடியவர்களாக எங்கும் புகழ்பெறும்போது, {ஆன்மா இல்லை என்று சொல்பவர்களான} பல்வேறு வடிவங்களிலான தவசிகளும் தோன்றுவார்கள்.(20) பிரதான புருஷனை {பரமாத்மாவைச்} சார்ந்தவர்களும், கிருத யுகத்தில் பிறந்தவர்களுமான அனைவரும் சொற்களின் மூலம் {கதைகளின் மூலம் (சொற்பொழிவுகளில்) இந்த யுகத்தில்} மக்களால் வழிபடப்படுவார்கள்[4].(21)மனிதர்கள் தானியங்களையும், உடைகளையும், உணவுப் பொருட்களையும், ஏன் பசுஞ்சாணத்தையும் கூடக் கொள்ளையடிப்பார்கள்.(22) கள்வர்கள், பிற கள்வர்களின் உடைமைகளைக் கொள்ளையடிப்பார்கள், கொலைகாரர்கள், பிற கொலைகாரர்களைக் கொல்வார்கள். கள்வர்கள், பிற கள்வர்களைக் கொல்லும்போது மக்களுக்கு நன்மை விளையும்.(23) உலகம் நலிவடைந்து, ஒடுக்கப்பட்டு, மாலை ஜபங்களில் இருந்து விலகும்போது, அனைத்து வகை மனிதர்களும் ஒரே வகை வாழ்வை வாழும்போது, அவர்கள் வரிகளின் சுமையால் ஒடுக்கப்பட்டுக் காடுகளுக்குள் ஓய்ந்து செல்வார்கள்.(24) மகன்கள் தந்தையை அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுத்துவார்கள், மருமகள் மாமியாரை பணி செய்ய வைப்பாள்[5]. வேள்விகள் வேட்கப்படாமல் நிறுத்தப்படும்போது, சீடர்கள் சொற்கணைகளால் ஆசான்களைத் துன்புறுத்துவார்கள்[6].(25) ராட்சசர்களாலும், பெரும்பசியுடைய விலங்குகள், பூச்சிகள், எலிகள், பாம்புகள் ஆகியவற்றாலும் மனிதர்களுக்குத் தீங்கு விளையும்.(26) ஓ! மன்னா, யுக முடிவின் நெருக்கத்தில், மக்களின் அமைதி, செழிப்பு, உடல்நலம், நண்பர்கள், இலக்கியம் ஆகியவை நலிவடையும்.(27)யுகத்தின் துன்பங்களால் பீடிக்கப்பட்ட மன்னர்கள், தாங்களே தலைவர்களாகவும், கள்வர்களாகவும் இருந்து கொண்டு, பல்வேறு நாடுகளில் வலம் வருவார்கள்.(28) அவர்கள் தங்கள் நண்பர்களுடன் தங்கள் நாடுகளில் பயணித்து, பயனற்றவற்றை விளைவித்து, குறித்த காலத்திற்காகக் காத்திருப்பார்கள்[7].(29) அச்சத்தாலும், பசியாலும் பீடிக்கப்படும் மக்கள், தங்கள் மகன்களைத் தங்கள் தோள்களில் சுமந்தவாறே கௌசிகி ஆற்றைக் கடந்து,(30) அங்கம், வங்கம், கலிங்கம், காஷ்மீரம், மேகலம், ருஷிகாந்தகிரி ஆகிய மாகாணங்களில் உறைவிடம் நாடுவார்கள்.(31) மக்கள், இமயத்தின் சாரல்களிலோ, உப்பு நீராலான பெருங்கடலின் கரைகளிலோ, காடுகளிலோ மிலேச்சர்களுடன் சேர்ந்து வாழ்வார்கள்.(32) அப்போது பூமியானது வெறுமையாகவோ, மனிதர்களால் நிறைந்தோ இருக்காது. காவலர்கள் ஆயுதந்தரித்தவர்களாக இருப்பினும் தங்கள் கடமைகளைச் செய்ய மாட்டார்கள்.(33) மனிதர்கள், மான்களையும், மீன், பறவைகள், இரைதேடும் விலங்குகள், பாம்புகள், பூச்சிகள், காய்கறிகள், கனிகள், கிழங்குகள் ஆகியவற்றையும் உண்டு வாழ்வார்கள்.(34)மனிதர்கள், முனிவர்களைப் போல மரவுரிகளையும், இலைதழைகளையும், மான்தோல்களையும் திரட்டி உடுத்திக் கொள்வார்கள்.(35) மலைக்குகைகளில் வசிக்கும் மனிதர்கள், கிராமங்களிலோ காடுகளிலோ வளரும் நெல்லை அறிந்து கொள்ளவும், உண்ணவும் ஏங்குவார்கள். அவர்கள் செம்மறி ஆடுகளையும், வெள்ளாடுகளையும், கழுதைகளையும், ஒட்டகங்களையும் வளர்ப்பார்கள்.(36) அவர்கள், நீருக்காக ஆற்றங்கரைகளில் வாழ்ந்து கொண்டு, நீரோட்டத்தைத் தடுப்பார்கள். அவர்கள் சமைத்த உணவை விலைக்கு வாங்கவும், விற்பனையும் செய்வார்கள்.(37) மகன்கள், தங்களுக்குரிய பங்குகளை அடைய மூலதனத்தின் மீது {மூலதனத்தையும், வட்டியையும் மறைத்துப்} போரிடுவார்கள். மக்கள், வயதின் ஆதிக்கத்தினால் குழந்தைகளைப் பெறுவார்கள், குழந்தைகளைப் பெறாமலும் இருப்பார்கள், அவர்கள் தங்கள் குடும்பங்களின் நற்குறிகளை {குல அடையாளங்களை} இழந்திருப்பார்கள்.(38) அந்த யுகத்தின் மக்கள், இழிந்தவர்களால் போதிக்கப்படும் இழிந்த நம்பிக்கைகளைப் பின்பற்றுவார்கள் {தர்மங்களில் இழிவான தர்மத்தைப் பின்பற்றுவார்க்ள}.(39) மனிதனின் வாழ்நாள் முப்பது ஆண்டுகளாக இருக்கும். {வலிமை இழந்த மக்கள் மெலிந்தவர்களாகவும், ஆசைகள் மற்றும் உணர்வுகளின் காரணமாகப் பலவீனர்களாகவும் இருப்பார்கள்}.(40) அவர்கள் பிணிகளால் பீடிக்கப்பட்டுப் பலவீனமடைந்து, தங்கள் செல்வத்தை இழப்பார்கள்; அவர்களின் உடலுறுப்புகள் பிணிகளால் பீடிக்கப்படும், அவர்களின் வாழ்நாள் குறைவதன் விளைவாக அவர்கள் துயரால் பீடிக்கப்படுவார்கள்.(41) {உடல்நலக்கேட்டின் விளைவால்} அவர்கள் நேரங்காலம் பார்க்காமல் நல்லோரைச் சந்தித்து, தொண்டாற்றுவதில் ஈடுபடுவார்கள், தங்கள் ஒழுக்கம் அடையும் நலிவினால் அவர்கள் சத்திய யுகத்தை அடைவார்கள் {வாய்மையைப் போற்றுவார்கள்}.(42) விருப்பத்திற்குரிய பொருட்களை அடையாததால் அவர்கள் அறச் சடங்குகளைச் செய்வார்கள்; தங்கள் மக்களின் அழிவில் உண்டாகும் பலவீனத்தின் காரணமாக அடக்குமுறைகள் செய்வதில் இருந்து அவர்கள் ஒடுங்குவார்கள்.(43)

இவ்வாறே அவர்கள், தங்கள் வாழ்வைப் பாதுகாத்துக் கொள்வதற்காகக் கொடைகள் அளித்து, வாய்மை நோற்று, {தொண்டு, ஈகை, வாய்மை, ஆன்மப் பாதுகாப்பு என்ற} நான்கு வகைக் கடமைகளை நிறைவேற்றி நன்மையை அடைவார்கள்(44). புலன்களுடனும், புலன்களுக்குரிய பொருட்களுடனும் உழலும் மக்களில் சிலர், உண்மை ஞானத்தை அடைந்து, “அறமோ, மரணமோ இனிய பயன்களைக் கொண்டவையே” என்று சொல்வார்கள்[8].(45) படிப்படியாக வீழ்ச்சி நடந்ததைப் போலவே வளர்ச்சியும் படிப்படியாக நிகழும். அதன்பிறகு அறம் முழுமையாகப் பின்பற்றப்படும்போது, கிருத யுகம் தொடங்கும்.(46) மாதத்தின் வளர்பிறையில் வளர்ந்து, தேய்பிறையில் தேயும் சந்திரனைப் போலவே நல்லொழுக்கமும் கிருத யுகத்தில் பெருகி, கலியுகத்தில் வீழ்ச்சியடையும். எனினும் காலம் ஒன்றுதான்; இந்த வளர்ச்சி, வீழ்ச்சிகளின் படி அது சத்யம், திரேதம், துவாபரம், கலி என்ற நான்கு நிலைகளைக் கொண்டிருக்கிறது.(47) தேய்பிறையில் இருளில் மூழ்கி, வளர்பிறையில் முழுமையடையும் நிலவைப் போலவே அறமும் சத்யத்தில் பெருகி, கலியுகத்தில் வீழ்ச்சியடையும்.(48)புழுதியால் மறைக்கப்பட்ட மூதாதையர் காலத்துத் தங்கக்கட்டியைப் பொன்னாகக் கருதாமல் தன்னைத் தானே வறியவனாக நினைக்கும் மனிதன், தூய்மையடைந்த தங்கத்தைக் கண்டதும் தன்னைச் செல்வந்தனாகக் கருதுவதைப் போலவே தமோ குணம் நிறைந்த மாயையால் மறைக்கப்பட்ட பரமாத்மாவை ஏதோவொன்றாக அழைக்கும் மனிதர்கள், மாயையில் இருந்து விலகும்போது அதைத் தூய அறிவு என்று அழைப்பார்கள். இவ்வாறே வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது, கல்விமான்களும் அதன் பொருளை விளக்கியிருக்கிறார்கள்[9].(49) சொர்க்கம் முதலியவற்றை நோக்கமாகக் கொண்ட தவங்களின் மூலம் நித்திய பயன்கள் அடையப்படுகின்றன; இந்தப் பயன்கள் குணங்களை விளைவிக்கின்றன, இவ்வாறே செயல்கள் நிறைவேறுகின்றன. உண்மையான இந்தச் செயல்பாடுகளின் மூலம் உடல் கூட விடுதலை அடைவதில்லை.(50) செயல்களின் பயன்கள், பல்வேறு யுகங்களில் நாடு {இடம்}, நேரம் {காலம்}, தகுந்தவர் ஆகியவற்றைப் பின்தொடர்கின்றன; இவ்வாறே அவற்றில் வேறுபாடுகள் தென்படுகின்றன. ரிஷிகள் அவ்வாறே சொல்லியிருக்கின்றனர்.(51) பல்வேறு யுகங்களில், உலகம்சார்ந்த ஆதாயம், இன்பத்திற்குரிய பொருட்கள், தேவ வழிபாடு, வாழ்நாள் காலம் ஆகியவற்றில் வேறுபாடுகள் உண்டாகின்றன.(52) விதியின் இயல்பில் யுகச் சுழற்சி நடைபெறுகிறது என்பதால் ஒரு கணமும் செயல்படாமல் இருக்க முடியாத உலகில் இவ்வாறான எழுச்சியும், சிதைவும் ஏற்படுகின்றன” என்றார் {வியாசர்}”.(53)

ஜனமேஜயன் செய்த குதிரைவேள்வி | பவிஷ்ய பர்வம் பகுதி – 05-(ஜனமேஜயாஷ்வமேத꞉ இந்த்ரஸ்ய காபட்யம் ச)-ஜனமேஜயன் செய்த அஸ்வமேத யக்ஞம்; இந்திரன் அந்த வேள்வியைக் களங்கப்படுத்தியது; ஜனமேஜயன் அடைந்த கோபம்; விஸ்வாவசு ஜனமேஜயனிடம் சொன்ன சமாதானம்…

சௌதி {சௌனகரிடம்}, “அந்த முதன்மையான ரிஷி {வியாசர்}, மன்னன் ஜனமேஜயனை இவ்வாறு தேற்றியபோது, கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் குறித்த அவரது சொற்களை அந்தக் கூட்டத்தில் இருந்த அனைவரும் கேட்டனர்.(1) நிலவின் அமுதக் கதிர்களுக்கு ஒப்பான அந்தப் பெரும் ரிஷியினுடைய சொற்களின் சாறு {சாற்றைப் பருகியது} அவர்களது காதுகளை நிறைவடையச் செய்தது.(2) பல்வேறு வீரர்கள் கொல்லப்பட்டதைச் சொல்வதும், அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை {என்ற புருஷார்த்தங்களைத்} தருவதுமான பாரதப் போரின் அழகிய வரலாற்றைக் கேட்டு அந்தக் கூட்டத்தில்(3) இருந்த சிலர் கண்ணீர் சிந்தினர், வேறு சிலர் தியானத்தில் ஈடுபட்டனர். உள்ளங்கையில் எழுதி வைக்கப்பட்டதைப் போல அந்த வரலாற்றுத் தொடர் அந்த முனிவரால் விளக்கப்பட்டது.(4)

தெய்வீக ரிஷியான வியாசர் அங்கே இருந்த சபை உறுப்பினர்கள் அனைவரையும் வலம் வந்து அவர்களது அனுமதியைப் பெற்றுக்கொண்டு, “நான் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.(5) அதன்பிறகு முன்னணி தவசிகளும், ரிஷிகளில் முதன்மையானவரும், பேசுபவர்களில் சிறந்தவருமான வியாசரைப் பின்தொடர்ந்து சென்றனர்.(6) தெய்வீகரான வியாசரும், ரிஷிகளும் புறப்பட்ட பிறகு, புரோஹிதர்களும், மன்னர்களும் தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே திரும்பிச் சென்றனர்.(7)

மன்னன் ஜனமேஜயன், பயங்கரம் நிறைந்த பன்னகர்களைப் பழிவாங்கிய பிறகு, நஞ்சைக் கைவிடும் பாம்பைப் போலக் கோபத்தைக் கைவிட்டான்.(8) பெரும் முனிவரான ஆஸ்தீகர், எரியும் தலையைக் கொண்ட தக்ஷகனை ஹோம நெருப்பில் இருந்து காத்து, தன்னுடைய ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார்.(9) மன்னன் ஜனமேஜயனும், தன் மக்களால் சூழப்பட்டவனாக ஹஸ்தினாபுர நகரத்திற்குச் சென்று மனநிறைவுடன் கூடிய தன் குடிமக்களை மகிழ்ச்சியுடன் ஆளத் தொடங்கினான்.(10) சில நாட்கள் கழிந்ததும், ஜனமேஜயன், ஏராளமான கொடைகளுடன் கூடிய குதிரைவேள்வியை முறையாகச் செய்தான்.(11)

வழிபடத்தகுந்த பெண்மணியான காசியை வபுஷ்டமா, சாத்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளின் படி தற்கட்டுப்பாட்டுடன் கூடியவளாக ஜனமேஜயன் வேள்வியில் கொல்லப்பட்ட குதிரையிடம் சென்று, அதன் அருகே அமர்ந்தாள்.(12) வாசவன் {இந்திரன்}, முற்றிலும் அழகான அந்தப் பெண்ணின் மீது கொண்ட விருப்பத்தில், கொல்லப்பட்ட அந்தக் குதிரையின் உடலில் நுழைந்து அவளை அறிந்தான்.(13) ஜனமேஜயன் அந்த மாற்றத்தைக் கண்டு, வேள்வியைச் செய்யும் புரோஹிதரிடம், “இந்தக் குதிரைக் கொல்லப்பட வில்லை; உடனே இதைக் கொல்வீராக” என்றான்.(14) விவேகியான அந்தப் புரோஹிதர், இந்திரனின் அம்முயற்சியை அறிந்து கொண்டு, அரச முனியான ஜனமேஜயனிடம் அதைத் தெரிவித்தார், மன்னன் புரந்தரனை {இந்திரனைச்} சபித்தான்[1].(15)ஓ! சௌனகரே, அப்போது அந்த ஜனமேஜயன் {தன் புரோஹிதரிடம்}, “செய்த தவங்கள், குடிமக்களின் பாதுகாப்பு, வேள்வி ஆகியவற்றின் மூலம் நான் பயனேதும் ஈட்டியிருந்தால், அதைக் கொண்டு மெய்யுறுதியுடன் உமக்கொன்றைச் சொல்கிறேன்; கேட்பீராக;(16) தீய மனம் கொண்டவனும், குதிரை வேள்விகளில் மனக்கட்டுப்பாடு ஏதும் கொள்ளாதவனுமான இந்திரனை இன்று முதல் க்ஷத்திரியர்கள் எவரும் வழிபடமாட்டார்கள்” என்றான்.(17)

பிறகும் பெருங்கோபத்தால் தூண்டப்பட்ட மன்னன் ஜனமேஜயன், {தன் வேள்வியில்} தலைமை வகிக்கும் புரோஹிதர்களிடம், “நான் செய்த இந்த வேள்வி இந்திரன் மூலம் பாழடைந்ததால், உங்களிடம் பிராமண சக்தி கிஞ்சிற்றும் இல்லை என்பதை உண்மையில் நான் அறிந்தேன்.(18) எனவே, நீங்கள் என் ஆட்சிப்பகுதிக்குள் வாழக்கூடாது. உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நீங்கள் வேறெங்காவது செல்வீராக” என்றான். இவ்வாறு சொல்லப்பட்டதும் ஜனமேஜயனிடம் கோபமடைந்த பிராமணர்களும் அங்கிருந்து சென்றனர்.(19)

பெரும் பக்திமானான மன்னன் ஜனமேஜயன், பெருங்கோபத்தால் தூண்டப்பட்டவனாகத் தன் அரண்மனைக்குள் சென்று, தன் ராணிகளிடம் ஆணையிடும் வகையில்,(20) “புழுதி படிந்த தன் காலை என் தலையில் வைத்தவளும், கற்பற்றவளுமான வபுஷ்டமாவை என் வீட்டில் இருந்து விரட்டுவீராக.(21) அவள் என் புகழையும், மகிமையையும் அழித்து என் மதிப்பைக் கெடுத்திருக்கிறாள். கைவிடப்பட்ட மலர்மாலையைப் போலவே கற்பற்ற மனைவியான அவளை நான் காணவும் விரும்பவில்லை.(22) இவ்வுலகில் பிறரை விரும்பும் மனைவியுடன் வாழ்பவனால் இனிய உணவை உண்ணவும், தனிமையான இடத்தில் மகிழ்ச்சியாக உறங்கவும் முடியாது. {நாயால் நக்கப்பட்டு} களங்கமடைந்த {வேள்வி} ஹவிஸைப்போல அவனால் அவளிடம் இன்புற முடியாது” என்றான்.(23) சினத்துடன் கூடிய பரீக்ஷித்தின் மகன் இதைச் சொல்லிவிட்டு உரக்க அழுதான். அப்போது கந்தர்வ மன்னனான விஸ்வாவசு அவனிடம் பேசினான்[2].(24)விஸ்வாவசு, “ஓ! மன்னா, நீ முன்னூறு வேள்விகளைச் செய்திருக்கிறாய்; இனியும் உன்னை வாசவன் {இந்திரன்} மன்னிக்க மாட்டான். உன்னால் முறையாக மணக்கப்பட்ட வபுஷ்டமையின் குற்றம் இதிலேதும் இல்லை.(25) அவள் {வபுஷ்டமை} முன்னர் அப்சரஸ் ரம்பையாக இருந்தாள், இப்போது காசியின் மகளாகப் பிறந்திருக்கிறாள். அழகிய காரிகையருள் சிறந்தவளான இவளை மதிப்புமிக்க ரத்தினமாகக் கருதி இவளுடன் இன்புற்றிருப்பாயாக[3].(26) இவளை ஒருபோதும் கைவிடாதே. ஓ! குருக்களில் முதன்மையானவனே, நீ செல்வத்தில் சச்சியின் தலைவனை {இந்திரனைப்} போன்றவன். நீ வேள்விகளைச் செய்ய ஆயத்தமாக இருப்புதைக் கண்ட தேவர்களின் மன்னன், அதில் குற்றங்களை நாடி இங்கே தடங்கலை ஏற்படுத்தியிருக்கிறான். ஓ! மன்னா, வேள்விப் பயன்களை அடைவதில் நீ அவனைக் கடந்து விடுவாய் என்று கருதியே அந்தத் தேவர்களின் மன்னன் {இந்திரன்} இந்த யக்ஞத்திற்குத் தடங்கல்களை ஏற்படுத்தினான்.(28)தடங்கலை ஏற்படுத்த விரும்பிய வாசவன் {இந்திரன்}, குதிரை கொல்லப்பட்டதைக் கண்டு, அதில் குற்றம் கண்டுபிடித்து, இந்த மாயையை இங்கே ஏற்படுத்தியிருக்கிறான்[4].(29) இந்திரன் வபுஷ்டமையை ரம்பை என்று கருதியே அறிந்தான். அதன் விளைவால் உண்டான கோபத்தில் தூண்டப்பட்ட நீயும், முன்னூறு வேள்விகளைச் செய்து கொடுத்த உன் புரோஹிதர்களைச் சபித்து, இந்திரனுக்கு மட்டுமே சொந்தமான பயன்களை இழந்தாய். அந்த ஆசான்கள் உன்னால் விரட்டப்பட்டிருக்கின்றனர்.(30,31) வாசவன் எப்போதும் உன்னைக் கண்டும், பிராமணர்களைக் கண்டும் அஞ்சி நின்றவன். அவன் தன் மாயா சக்தியால் இந்தச் செயலை நிறைவேற்றியதன் மூலம் அந்த இரண்டு அச்சங்களில் இருந்தும் விடுபட்டிருக்கிறான்.(32) வெற்றிகளையே அடைய விரும்பும் பெருஞ்சக்திவாய்ந்த புரந்தரனால், சாதாரண மனிதர்களாலும் செய்ய முடியாத காரியமான தன் மகன்கள், பேரப்பிள்ளைகளின் மனைவிகளை எவ்வாறு கெடுக்க முடியும்?[5](33)இந்திரனிடம் புத்தி, அறம், புலனடக்கம், ஆன்ம ஆற்றல், மகிமை ஆகியவை போதுமான அளவுக்கு இருப்பதைப் போலவே முன்னூறு வேள்விகளைச் செய்த உன்னிடமும் அவை இருக்கின்றன.(34) எனவே, இந்திரனையும், ஆசான்களையும், வபுஷ்டமாவையும் பழிக்காதே, உன்னையும் பழித்துக் கொள்ளாதே. விதியை வெல்வது மிகக் கடினமானது.(35) தேவர்களின் மன்னன், தன்னுடைய ஆன்ம சக்திகளின் மூலம் குதிரைக்குள் புகுந்து உன்னுடைய கோபத்தைத் தூண்டச் செய்தான்; ஆனால் நீ கோபத்தால் தூண்டப்படாதே. மகிழ்ச்சியை விரும்புவோர் எப்போதும் விதியின் வழிகளையே பின்பற்ற வேண்டும்.(36) எதிர் திசையில் இருக்கும் நீரோட்டத்தைக் கடப்பதைப் போலவே கெட்ட விதியைக் கடப்பதும் மிகக் கடினமானதாகும். எனவே முனைப்பில் இருந்து விலகுவாயாக; கவலையைக் களைந்து ரத்தினம் போன்றவளும், பாவமற்றவளுமான உன் மனைவியின் துணையில் இன்புற்றிருப்பாயாக.(37)

ஓ! மன்னா, அப்பாவிகளான சாதாரணப் பெண்கள் ஆண்களிடம் இருந்து பிரிந்தால் அவர்கள் பின்னவர்களை {அந்தப் பெண்கள் ஆண்களைச்} சபிப்பார்கள் {பாவமற்ற பெண்கள் அலட்சியப்படுத்தப்பட்டால், அதிலும் குறிப்பாகக் குற்றமற்ற தெய்வீகப் பெண்கள் அவமதிக்கப்பட்டால், நீயும் பிற பெண்களால் அலட்சியப்படுத்தப்படுவாய்}.(38) சூரியனின் கதிர்களும், நெருப்பின் தழல்களும், வேள்விப் பீடமும், ஆகுதிகளும், மாற்றானை விரும்பாத மனைவியும் பிறரால் தீண்டப்பட்டாலும் ஒருபோதும் களங்கமடைவதில்லை[6].(39) நற்பண்புகளைக் கொண்ட மனைவியர், செழிப்பின் தேவியை {ஸ்ரீதேவியைப்} போல எப்போதும் மதிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுக் கல்விமான்களால் துதிக்கப்படவும் வேண்டும்” என்றான் {விஷ்வாவசு}”.(40)

ரிஷிமொழி கேட்பதன் பலன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 06-(ஏதத்க்ரந்தஷ்ரவணபலம்)-மகிழ்ச்சியாக நாட்டை ஆண்ட ஜனமேஜயன்; ஹரிவம்சம் படிப்பது, கேட்பது, உரைப்பது ஆகியவற்றின் பலன்களைச் சொன்ன சௌதி…

சௌதி {சௌனகரிடம்}, “விஸ்வாவசுவால் இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டவனும், பயனற்ற கவலையால் நிறைந்த மனத்தைக் கொண்டவனுமான ஜனமேஜயன் வபுஷ்டமையிடம் தணிவடைந்து, பாவத்தை விலக்குவதற்காக ஓர் அறச்சடங்கைச் செய்தான்.(1) பக்திமானான ஜனமேஜயன், தன் மன உளைச்சலை விரட்டி, புகழை அடைய விரும்பி, வபுஷ்டமையை மகிழ்வித்துத் தன் நாட்டை ஆண்டான்.(2) அவன், பிராமணர்களை வழிபடுவது, வேள்விகளைச் செய்வது, கொடைகளை அளிப்பது ஆகியவற்றைத் தவிர்க்காமல், வபுஷ்டமாவை வசைபாடாமல் தன் நாட்டைக் கவனித்துக் கொண்டான்.(3) மன்னன் ஜனமேஜயன், பெருந்தவங்களைச் செய்த ரிஷிகள், “விதியின் இயக்கத்தை வெல்ல இயலாது” என்று சொன்னதை உறுதியான இதயத்துடன் தொடர்ந்து தியானித்துத் தன் கோபத்தைக் கைவிட்டான்.(4)

மஹாரிஷியின் {வியாசரின்} இந்தப் பெருஞ்சொற்களைப் படிப்பவன், மனிதர்களால் புகழத்தக்கவனாகி போதுமான அளவுக்கு நீண்ட காலம் வாழ்ந்து, (பிறருக்கு) அடைதற்கரிதான பயன்களை அடைகிறான்.(5) பாவத்தை அழிக்கும் இந்தச் சொற்களைப் படிக்கும் மனிதன், பாவங்களில் இருந்து விடுபட்டு, நூறு வேள்விகளைச் செய்த பலனையும், விருப்பத்திற்குரியவை பலவற்றையும் அடைந்து, நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்கிறான்.(6) 

மலர்களில் இருந்து உண்டாகும் கனிகளை விளைவித்து, அந்தக் கனிகளில் இருந்தே மீண்டும் உதிக்கும் மரத்தைப் போலவே அந்த மஹாரிஷியிடம் இருந்து வெளிப்பட்ட சொற்கள் அவனை {மகாரிஷியின் சொற்களைப் படிப்பவனை} செழிப்படையச் செய்யும்.(7) மகனற்ற மனிதன், வலிமைமிக்க மகன்களையும், உலகில் நிலையிழந்த மனிதன், மீண்டும் தன் நிலையையும் இந்தச் சொற்களின் மூலம் அடைகிறான். பிணிகளில் இருந்தும், தளைகளில் இருந்தும் அவன் விடுபடுகிறான். அவன், சாதனைகளையும், பல மங்கலப்பணிகளையும் செய்வான்.(8)

ரிஷியின் இந்த மங்கலச் சொற்களைக் கேட்பதன் மூலம், கன்னிகையர் தங்கள் இதயம் விரும்பும் கணவர்களை அடைந்து, வலிமைமிக்கவர்களும், சாதனைகளைச் செய்யக்கூடியவர்களும், பகைவரைக் கலங்கடிக்கக் கூடியவர்களுமான மகன்களைப் பெறுவார்கள்.(9) இந்தச் சொற்களைக் கேட்கும் க்ஷத்திரியர்கள் உலகையும், தங்கள் பகைவரையும் வென்று, ஏராளமான செல்வத்தை அடைவார்கள்; வைசியர்கள் போதுமான உடைமைகளை அடைவார்கள்; சூத்திரர்கள் சிறந்த நிலையை அடைவார்கள்.(10)

உமக்குச் சொல்லப்படும் இந்த அத்தியாயத்தைப் பிராமணர்களின் வட்டத்தில் நீர் நினைவுகூர்ந்தால், பொறுமையையும், அமைதியையும் நாடி உலகில் மகிழ்ச்சியாகத் திரிவீர்.(11) இவ்வாறே நான், அற்புதச் செயல்களைச் செய்யும் பெரும் முனிவர்களின் வாழ்க்கையையும், அவர்களின் ஒழுக்கத்தையும் மீண்டும் சொன்னேன். இன்னும் நீர் கேட்கவிரும்புவதென்ன என்பதை எனக்குச் சொல்வீராக. அதை நான் உமக்கு விளக்கிச் சொல்கிறேன்” என்றார் {சௌதி}[1].(12,13)

கடவுளின் இயற்பண்புகள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 07-(புஷ்கரப்ராதுர்பாவ:)கடவுளின் குணங்கள் குறித்து வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்; வைசம்பாயனரின் விடை…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}[1], “ஓ! யோகத்தை அறிந்தவர்களின் தலைவரே, தேவர்களும், ரிஷிகளும் அண்டத்தில் எவ்வாறு பிறந்தனர் என்பதையும், பெருங்கடலின் நீரில் கிடந்து உறங்கும் தாமரை உந்தியோனின் {பத்மநாபனின்} சக்தியையும் எனக்கு விரிவாக விளக்கிச் சொல்வீராக. அவனது மகிமைகளைக் கேட்டு நான் இன்னும் தணிவடையவில்லை.(1,2) புருஷோத்தமன் எவ்வளவு காலம் அங்கே கிடந்தான்? காலத்தின் பிறப்புக்குக் காரணனான அவன் அந்த நேரத்தில் ஏன் உறங்கிக் கொண்டிருந்தான்?(3) தேவர்களின் தெய்வீக மன்னனான அவன் எவ்வளவு காலத்திற்குப் பிறகு விழித்தான்? விழித்தெழுந்ததும் அவன் ஏன் இந்த அண்டத்தைப் படைத்தான்?{4} ஓ! பெரும் முனிவரே, முன்பிருந்த குடிமுதல்வர்கள் யாவர்? அந்த நித்திய புருஷன் ஏன் உலகங்களைப் படைத்தான்?{5}ஓ! முனிவரே, முன்பு அசைவனவும், அசையாதனவும், தேவர்கள், அசுரர்கள், பாம்புகள், ராட்சசர்கள், காற்று, நெருப்பு, வானம், பூமி ஆகியவையும் அழிந்த போது, பெருஞ்சக்திவாய்ந்தவனும், தேவர்களின் ஆசானும், பெரும்பூதங்களின் மன்னனுமான அந்தத் தலைவன், பூதங்கள் அனைத்தும் எதனுள் மூழ்கியிருந்ததோ அந்தப் பரந்து விரிந்த ஒரே பெருங்கடலில் எவ்வாறு உறங்கிக் கிடந்தான்?{6-8}(4-8) ஓ! பிராமணரே, நான் உமது புகலிடத்தை நாடியிருக்கிறேன் என்பதால் நாராயணனின் மகிமைகளை நிச்சயம் நீர் எனக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்.(9) ஓ! மதிப்புமிக்க ஐயா, பக்திமான்களால் புகழத்தக்க அந்தப் பெருந்தேவனின் கடந்த கால, எதிர்கால அவதாரங்களை எனக்கு விளக்கிச் சொல்வீராக” என்று கேட்டான்.(10)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! குரு குலத்தின் பாவமற்ற வழித்தோன்றலே, நாராயணனின் மகிமைபொருந்திய செயல்பாடுகளைக் கேட்கும் ஆவல் கொண்ட நீ உண்மையில் உன் குலத்துக்குத் தகுந்தவனே.(11) ஓ! மன்னா, தாமரை உந்தி படைத்த தேவனின் சக்தி குறித்து ஸ்ருதிகளில் பதியப்பட்டவாறே முதல்வர்களும், புராதனர்களுமான தேவர்களிடம் கேட்ட பிராமணர்களிடம் இருந்து நாங்கள் அறிந்தவற்றை உள்ளபடியே கேட்பாயாக.(12) ஓ! பாரதா, பராசரரின் மகனும், எழில்மிகு ஆசானும், பிருஹஸ்பதியைப் போன்று சக்திவாய்ந்தவருமான துவைபாயனர் {வியாசர்}, மனத்தைக் குவித்து {தியானித்து} தாமரை உந்தி படைத்த தேவனின் சக்தியைக் கண்டு அதை விளக்கிச் சொல்லியிருக்கிறார்.{13} நான் ஏற்கனவே கேட்டதை உள்ளபடியே உனக்கு விளக்கிச் சொல்கிறேன். நான் ரிஷியாக இருந்தாலும் என்னால் அதை முழுமையாக அறிய இயலவில்லை.{14}(13,14) ஓ! மன்னா, அண்டத்தைப் படைத்த படைப்பாளனாலும் முழுமையாக அறிய முடியாத பெரும்புருஷன் நாராயணனை வேறு எவரால் அறிந்து கொள்ள முடியும்?(15)

ஓ! பாவமற்றவனே, அனைத்துடனும் அடையாளங் காணப்படுபவனும், கோட்பாடுகளின் பிறப்பிடமுமான அண்டத்தின் படைப்பாளனாலும், பெரும் ரிஷிகளாலும், தேவர்களாலும் பெரும்புதிராகக் கருதப்படுவதை உண்மையில் நான் கேட்டிருக்கிறேன்.{16} ஆன்ம ஞானத்தை அறிந்தவர்கள் அவனையே தியானிக்கிறார்கள். அவனே கர்மத்தின் திறன்மிகுந்த காரணனாகவும், தேவர்களில் தலைமைத் தேவனாகவும், எவராலும் காணப்படாதவனாகவும் இருக்கிறான்.{17} அவன் தொடக்கமும், முடிவும் அற்றவனாவான். மஹாரிஷிகள் அறிய முனையும் நித்திய உண்மை அவனே ஆவான். தேவர்களின் ஞானமாக இருப்பவனும், வேதங்களை நன்கறிந்தோரால் தூய அறிவாக அறியப்படுபவனும் அவனே.{18} புலன் நுகர் பொருட்களைப் படைப்பவனும், ஹிரண்யகர்ப்பனாக இருந்து பூதங்களையும் படைப்பவனும் அவனே. புத்தியும், மனமும், க்ஷேத்ரக்ஞனும், மகிமையின் கோட்பாடும், புருஷனும், பரமாத்மாவும் அவனே.{19} அனைத்துக்கும் சாட்சியான காலமாகவும், எதனிலும் சார்பற்றவனாகவும் இருப்பவன் அவனே.{20} ஐந்து முக்கிய மூச்சுகளாகவும் {பிரதான வாயுக்களாகவும்}, அவற்றின் செயல்பாட்டுக்குக் காரணனாகவும், உண்மையானவனாகவும், சிதைவற்றவனாகவும் இருப்பவன் அவனே.{21} நம் செயல்பாடுகளுக்குக் காரணனாகவும், நாம் செய்ய வேண்டியதையும், செய்யக்கூடாததையும் வகுப்பவனாகவும் இருப்பவன் அவனே.{22} அவனை நாம் அனைத்து வழிமுறைகளினாலும் நாடவும், {அவனைக் குறித்துப்} பேசவும், {அவனைக் குறித்துக்} கேட்கவும் வேண்டும்.{23} சொர்க்கமாகவும், முக்தியாகவும், பல்வேறு மாற்றங்களாகவும், புதிர் நிறைந்த உலகமாகவும், நமது ஆசானாகவும் இருப்பவன் அவனே. நாராயணனைக் குறித்தே நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன்.{24} ஓ! மன்னா, வாய்மை, பொய்ம்மை, செயல், விளைவு, கடந்தகாலம், எதிர்காலம், அசைவன, அசையாதன, நித்தியமானவை என மூவுலகங்களிலும் இருக்கும் அனைத்தும் தாமரை உந்தி படைத்த தலைவனான அந்தப் பெரும்புருஷனிடமிருந்தே வெளிப்பட்டன” என்றார் {வைசம்பாயனர்}[2].{25}(16-25)

யுகங்களின் கால அளவு | பவிஷ்ய பர்வம் பகுதி – 08-க்ருதாதியுகபரிமாணம்)-யுகங்களின் கால அளவைச் சொன்ன வைசம்பாயனர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! ஜனமேஜயா, சத்திய யுகம் நாலாயிரம் {4000} ஆண்டுகள் கால அளவைக் கொண்டது என்று கல்விமான்கள் விளக்கியிருக்கின்றனர்[1]. தொடக்கத்திலும், முடிவிலும் நேரும் ஒவ்வொரு யுகசந்திப்பு காலமும் நானூறு ஆண்டுகள் என ஒதுக்கப்பட்டிருக்கின்றன.(1) அந்தக் காலத்தில் அறம் நான்கு கால்களையும், பாவம் ஒரு காலையும் கொண்டிருந்தன. மனிதர்கள், தங்கள் கடமைகளை நோற்றவாறே வேள்விகளைச் செய்து வந்தார்கள். அந்த யுகத்தில் பிராமணர்கள் தங்கள் கடமைகளைச் செய்தார்கள், மன்னர்கள் தங்கள் கடமைகளைப் பின்பற்றினார்கள், வைசியர்கள் வேளாண் பணியில் ஈடுபட்டனர். சூத்திரர்கள் (பிறருக்குத்) தொண்டு புரிந்தார்கள்.(2,3) நல்லியல்பின் குணமான {சத்வ குணமான} வாய்மையும், அறமும் தழைத்திருந்தன. மக்கள் நல்லோரைப் பின்பற்றும் வகையில் பிறரின் போதனைகளைப் பெற்றனர்.(4) ஓ! பாரதா, அறம்சார்ந்த மனம் கொண்டவர்களாக இருந்தாலும், இழிந்த பிறப்பைக் கொண்டவர்களாக இருந்தாலும் கிருத யுகத்தில் மனிதர்களின் ஒழுக்கம் இவ்வாறே இருந்தது.(5)திரேதா யுகத்தின் கால அளவு மூவாயிரம் {3000} ஆண்டுகளும், அதன் தொடக்க, முடிவு காலங்கள் {சந்திக்காலங்கள்} முன்னூறு வருடங்களும் ஆகும்.(6) அந்தக் காலத்தில் அறம் மூன்று கால்களையும், பாவம் மூன்று கால்களையும் கொண்டிருந்தன. வாய்மையும், நல்லியல்பின் குணமும் {சத்வ குணமும்} கிருத யுகத்தைப் போலவே தொடர்ந்திருந்தன. மனித குலம், அறச்செயல்களின் பலன்களை விரும்பி கெட்டுப் போனது. அதன்தொடர்ச்சியாக நால்வகையினரின் {நான்கு வர்ணத்தாரின்} அறச்சடங்குகள் சீர்குலைந்து அவர்கள் பலவீனமடைந்தார்கள். இவ்வாறே, ஓ! மன்னா, தேவர்களால் விதிக்கப்பட்டபடி திரேதா யுகத்தின் பணி உனக்கு விளக்கப்பட்டது. இனி துவாபரத்தின் பணியைக் கேட்பாயாக.(7-9)

ஓ! குருக்களில் முதன்மையானவனே {ஜனமேஜயனே}, துவாபரத்தின் கால அளவு இரண்டாயிரம் ஆண்டுகள் நீண்டதாகும், அதன் சந்திக் காலங்கள் இரண்டில் ஒவ்வொன்றும் இருநூறு ஆண்டுகளைக் கொண்டனவாகும்.(10) அந்தக் காலத்தில் பிராமண ஞானிகள் தன்னலங் கொண்டவர்களாகவும், ரஜஸ் குணத்தால் (தன்னை மையப்படுத்தும் போக்கால்) பீடிக்கப்பட்டவர்களாகவும், வஞ்சகர்களாகவும், இழிந்த மனம் படைத்தவர்களாகவும், இயல்பில் பிறழ்வு கொண்டவர்களாகவும் பிறந்தார்கள். அறம் இரண்டு கால்களையும், பாவம் மூன்று கால்களையும் கொண்டிருந்ததால் நித்திய அறத்தின் பாலங்கள் படிப்படியாக வக்கிரமடைந்தன.(11,12) உண்மையான பிராமணத்தன்மை மறைந்தது, கடவுள் மீதான நம்பிக்கை தகர்ந்தது, விரதம், நோன்புகள், அறச்சடங்குகள் ஆகியன கைவிடப்பட்டன.(13)

கலியுகத்தின் கால அளவு ஆயிரமாண்டுகளாகவும், சந்திக்காலங்கள் இரண்டில் ஒவ்வொன்றும் நூறு வருடங்களைக் கொண்டனவாகவும் இருக்கும்.(14) இந்தக்காலத்தில் அறம் ஒற்றைக் காலையும், பாவம் நான்கு கால்களையும் கொண்டிருக்கும். மனிதர்கள் காமம் {ஆசை} நிறைந்தவர்களாகவும், தமஸ் குணத்தால் (ஒழுங்கற்ற போக்கால்) பீடிக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். எவரும் நோன்பு பயிலமாட்டார்கள், எவரும் பக்திமானாக {நல்லோனாக} நடந்து கொள்ள மாட்டார்கள், எவரும் உண்மை பேச மாட்டார்கள். ஒவ்வொரு மனிதனும் நாத்திகனாகவோ, பிரம்மவாதியாகவோ இருப்பான். ஒவ்வொருவனும் தான் என்ற அகந்தை கொண்டவனாகவும், பற்றுணர்வு {பாசம்} அற்றவனாகவும் இருப்பான். விப்ரர்கள் சூத்திரர்களைப் போல நடந்து கொள்வார்கள், சூத்திரர்கள் பிராமணர்களின் குண இயல்புகளைக் கொண்டிருப்பார்கள்.(15-17) கலியுகத்தில் மக்கள் ஆசிரமங்களின் வரம்புகளை மீறி, கண்டபடி கலவி புரிவதன் மூலம் சந்ததிகளைப் பெருக்குவார்கள், அறியக்கூடாத பெண்களை அறிவார்கள்.(18)

இவ்வாறே, ஓ! ஜனமேஜயா, பனிரெண்டாயிரம் {12000} வருடங்கள் ஒரு யுகமாகவும் {யுகசுழற்சியாகவும்}, எழுபத்தோரு யுகங்கள் {யுகசுழற்சிகள்} ஒரு மன்வந்தரமாகவும் அமைகின்றன.(19) ஒரு யுகசுழற்சி நிறைவடையும் நேரத்தில் எவரும் மூன்று வேதங்களில் ஐயங்கொள்ள மாட்டார்கள். பனிரெண்டாயிரம் தேவ வருடங்கள் ஒரு யுகமாக அமைவதாகக் கல்விமான்கள் கருதுகிறார்கள். அத்தகைய ஆயிரம் யுகங்கள் பிரம்மனின் ஒரு நாளாக அமைகின்றன.(20)

ஓ! பாரதா, இந்த நாள் கடந்ததும், பெரும்பூதங்களின் தலைவனான தாமரை உந்தி படைத்த {பத்மநாபப்} பெருந்தேவனானவன், பிராமணர்கள், தைத்தியர்கள், தானவர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், அப்சர்கள், தேவரிஷிகள் {தெய்வீக முனிவர்கள்}, பிரம்மரிஷிகள் {பிராமண முனிவர்கள்}, ராஜரிஷிகள் {அரசமுனிகள்}, ஆகியோரின் உடல்களும், பாம்புகள், மலைகள், ஆறுகள், விலங்குகள், பறவைகள், மான்கள் ஆகியவற்றின் உடல்களும், பிற உயிரினங்களின் உடல்களும் சிதைவடைவதை சாட்சியாகக் காண்பான். அப்போது உலகை அழிக்கும் தன் புத்தியைப் பயன்படுத்தி அண்டத்திற்கு அழிவை ஏற்படுத்தும் வகையில் பயங்கரம் நிறைந்த செயல்களைச் செய்வான்.(21-25) அவன், சூரியனின் வடிவில் உயிரினங்கள் அனைத்தின் பார்வையைப் பறிப்பான், காற்றின் வடிவில் அவற்றின் உயிர் மூச்சுகளைப் பறிப்பான், நெருப்பின் வடிவில் அவன் உலகங்கள் அனைத்தையும் எரிப்பான், மேகத்தின் வடிவில் அவன் சாதகமற்ற பெருமழையை மீண்டும் மீண்டும் பொழிவான்” என்றார் {வைசம்பாயனர்}.(26)

ஒற்றைப் பெருங்கடலாக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 09-(ஏகார்ணவவிதி꞉)-ஒற்றைப் பெருங்கடலில் நாராயணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஏழு வடிவங்களைக் கொண்டவனும், யோகியுமான நாராயணன், நெருப்பின் வடிவை ஏற்று எரியும் தழல்களைக் கொண்டு பெருங்கடல்களை வற்ற செய்வான்.{1} ஆறுகள், பெருங்கடல்களின் வடிவில் உள்ள ஆசைகள் அனைத்தையும், மலைகளின் வடிவில் இருக்கும் அவற்றின் சக்திகளையும் தன் சக்தியால் அழிப்பான்.{2} திரளாகவும் {ஸ்தூலமாகவும்}, நுட்பமாகவும் {சூக்ஷுமமாகவும்} உள்ள இரண்டையும் அவன் அழிப்பான். அந்த இரண்டின் வேராக இருக்கும் பிரம்மத்தில் அனைத்தையும் நிலைநிறுத்தி மீண்டும் அண்டத்தைப் படைப்பதற்காகக் குணங்கள் அனைத்தையும் வற்ற செய்வான்.{3} விளைவுகளை உண்டாக்கும் காரணியான பிரம்மத்தில் இருக்கும் சிறப்பை அவன் உயிரினங்களுக்குக் கொடுப்பான். அந்த நேரத்தில் அவன் இவை அனைத்தையும் அழிப்பான்.{4} ஹரியானவன், காற்றைப் போலச் சக்தி நிறைந்தவனாக இருப்பினும், மொத்த அண்டத்தையும் வென்று, ஐந்து உயிர் மூச்சுகளையும், ஐம்புலன்களையும் மேல்நோக்கி இழுப்பான்.{5}

அதன்பிறகு, தேவர்களின் ஐம்புலன்களும், பிற உயிரினங்களின் ஐம்புலன்களும், அவற்றின் பொருள்களான {புலன்நுகர் பொருட்களான} மணம் {வாசனை}, உடல் முதலியவையும் (தங்கள் இருப்புக்காக) பூமியை அடையும்.{6}(1-6) சுவையின் புலனான நாக்கும், அதன் பொருளான சாறும் நீருக்குச் செல்லும். பார்வையின் புலனான கண்ணும், அதன் பொருளான நிறமும், ஒளியுடல்களிடம் {ஜோதிகளிடம்} செல்லும்.{7} தீண்டலின் புலனான தோலும், அதன் பொருளான தீண்டலும், உயிர் மூச்சும், அதன் பணியும், இயக்கமும் காற்றிடம் செல்லும். மேலும் இவை அனைத்தும் சரடைப் போல இருக்கும் ரிஷிகேசனிடம் நிலைத்திருக்கும்.{8}(7,8) அனைத்தையும் அறிந்தவனான தலைவன், அண்டச் சரடில் உள்ள நுட்பமான திறன்கள் {ஆற்றல்கள்}, புலன்கள், அதன் பொருள்கள் ஆகியவை சீரான நிலையில் தேவர்களிடம் நிறைந்திருக்கும் வகையில் அவை யாவற்றையும் காற்றின் மூலம் ஈர்ப்பான்.{9} அப்போது, நிறம், தீண்டல் முதலியவற்றின் தொடர்பால் உண்டாவதும், அண்டத்தின் காரணமாக இருப்பதுமான பயங்கரம் நிறைந்த சம்வர்த்தக நெருப்பானது, நூறு தழல்களுடன் கூடியதாக மொத்த உலகையும் எரிக்கும்.{10} அந்த நெருப்பானது, மலைகள், மரங்கள், சோலைகள், கொடிகள், கொப்புகள், தெய்வீகத் தேர்கள் {விமானங்கள்}, நகரங்கள், ஆசிரமங்கள் {முனிவர்களின் குடில்கள்}, தெய்வீகக் கட்டடங்கள், பிற வசிப்பிடங்கள் ஆகியவற்றைச் சாம்பலாக்கிய பிறகு, உலகின் ஆசானான ஹரி, செயலெனும் நீரால் அதை {அந்த சம்வர்த்தக நெருப்பை} அணைப்பான்.{11,12}

பிறகு, ஆயிரங்கண்களைக் கொண்டவனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனுமான கிருஷ்ணன், பெரும் மேகத்தின் வடிவை ஏற்றுத் தூய நீரால் பூமியை நிறைவடையச் செய்வான்.{13} உயர்ந்ததும், மங்கலமானதும், புனிதமானதும், இனிமையானதும், அமுதத்தைப் போன்றதுமான நீரால் பூமியானது பெரிதும் அமைதியடைந்திருக்கும் போது,{14} மலைகளும், மரங்களும் நீருக்கடியில் கிடக்கும்போது, மேகங்கள் நீருண்டவையாக இருக்கும்போது,{15} பூமியானது ஒரே பரப்பிலான நீராக {ஒற்றைப் பெருங்கடலாக} மாறி உயிரினங்களேதும் அற்றதாகியிருக்கும்போது,{16} சூரியனும், ஆகாயமும், உயிரினங்களும் இல்லாத நுட்பமான இடத்தில் கிடக்கும் ரிஷிகேசனில் பெரும்பூதங்கள் அனைத்தும் மூழ்கியிருக்கும்.{17}(9-17) இவ்வாறு அளவற்ற புத்தியைக் கொண்ட அந்த நித்திய புருஷன், மொத்த படைப்பையும் வற்ற செய்து, எரித்துக் கலங்கடித்துப் பருகிய பிறகு, தன் புராதன வடிவில் மட்டுமே நீடித்திருப்பான். அனைத்தையும் மறைக்கும் பெருங்கடலில் அந்தப் பெரும் யோகியானவன், யோகத் துயிலில் கிடக்கும்போது, நித்தியமாக நிலைத்திருக்கும் பூதங்கள் அனைத்தும் அந்தத் தூய பிரம்மத்துடன் ஐக்கியமாகிக் கிடக்கும்.{18} வெளிப்படாத புருஷனானவன், அந்த ஒற்றைப் பெருங்கடலில் {ஏகார்ணவத்தில்} ஆயிரம் அயுதா ஆண்டுகள் {அயுதாநாம் ஸஹஸ்ராணி} கிடக்கும்போது, அவனை எவராலும் வெளிப்படையாக உணர முடியாது” என்றார் {வைசம்பாயனர்}{19}.(18,19)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “நீர் விளக்கிய ஒற்றைப் பெருங்கடல் யாது? இந்தப் புருஷன் எவன்? யோகம் யாது? ஒரு யோகியானவன் எவன்?” என்று கேட்டான்.(20)

வைசம்பாயனர், “தலைவன் அனைத்தையும் ஒற்றைப் பெருங்கடலாக {ஏகார்ணவமாக} {எவ்வளவு காலத்தில்} மாற்றுவான் என்பதை எவ்வளவு காலம் காத்திருந்தாலும் எவராலும் புரிந்து கொள்ள முடியாது. அந்த நேரத்தில் தலைவனே அனைத்தையும் அளப்பான், அனைத்தையும் காண்பான், அனைத்தையும் அறிவான்; வேறு எதுவும் {எவருக்கும்} புலப்படாது.{21} தலைவனானவன் {இறைவனானவன்}, வானம், பூமி, காற்று, பூதங்கள் ஆகியவற்றைத் தன் புத்தியால் ஊடுருவியும், தேவர்களின் தலைவனும், மனோ ஆற்றல்களுடன் கூடியவனுமான பிரம்மனைத் தன்னில் மூழ்கச் செய்தும், தன் படைப்பாற்றலைக் கட்டுப்படுத்திக் கொண்டும் தண்ணீரில் உறங்கிக் கொண்டிருப்பான்” என்றார் {வைசம்பாயனர்}.{22}(21,22)

நான் நாராயணன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 10-(ஏகார்ணவே பகவந்மார்கண்டேயஸம்வாத꞉)-நாராயணனின் வயிற்றுக்குள் இருந்து வெளிப்பட்ட மார்க்கண்டேயர்; ஒற்றைப் பெருங்கடலையும், சிறுவனையும் கண்டு கலங்கியது; மார்க்கண்டேயருக்கும் நாராயணனுக்கும் இடையில் நடந்த உரையாடல்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “இவ்வாறு அனைத்தும் ஒற்றைப் பெருங்கடலாக மாற்றப்பட்டதும், பெருஞ்சிறப்புவாய்ந்த தலைவன் ஹரி, பொருள் காரணமாக அமைந்திருந்த அண்டத்திற்கு அழிவை ஏற்படுத்தித் தூய புத்தியாக நிலைத்திருக்கிறான்.{1,2} ரஜஸ் குணத்திற்கு அப்பாற்பட்டவனும், நித்தியனெனக் கல்விமான்களால் சொல்லப்படும் பெரியவனுமான நாராயணன், தன் நனவால் மறைக்கப்பட்டவனாக, ரஜஸ் குணம், பூதங்கள் ஆகியவற்றின் பயனாக இருக்கும் கடக்கப்பட முடியாத பெருங்கடலுக்குள் மூன்று யுகங்கள் உறங்கிக் கிடக்கிறான்.{3,4} தலை, பாதங்கள் முதலியவற்றைக் கொண்ட புருஷனை யோகத்தாலும், வேள்விகளாலும் அடையலாம், ஆனால் மஹாபுருஷன் அவனிடம் இருந்து வேறுபட்டவனாவான். இந்தத் தூய புத்தி அனைத்திலும் கிடக்கிறது.{5}

தலைவன் தன் வாயில் {முகத்தில்} இருந்து பிரம்மனையும், சாமம் ஓதுபவர்களையும், தன் கரங்களில் இருந்து ஹோதாக்களையும், ஆத்வர்யு புரோஹிதர்களையும், படைத்தான்.{6} அதன்பிறகு, மித்ரனையும், வருணனையும், வேதம் ஓதுபவர்களையும், ஸம்பிரஸ்தாரரையும், பிரதிஷ்டாதாரரையும் படைத்தான்.{7} அவன் தன் வயிற்றில் இருந்து பிரதிஹர்தாரரையும், போதாரரையும் படைத்தான். அவன் தன் தொடைகள் இரண்டில் இருந்து அத்யபகரையும், நேஷ்டாரரையும் படைத்தான்.{8} தன் கைகளில் இருந்து அக்நீதரரையும், ஸுப்ரஹ்மண்யரையும், தன் தோள்களில் இருந்து கிராவாரரையும், உந்நேதாரரையும் படைத்தான்.{9} இவ்வாறே தலைவன் திறன்மிக்க இந்தப் பதினாறு வேள்விப் புரோகிதர்களையும் படைத்தான். தலைவன் வேதங்களில் பரமாத்மாவாக அறியப்படுகிறான்.{10} வேள்விகளின் மூலம் ஒருவன் அவனை அடையலாம். வேதங்கள், உபநிஷத்கள், வேள்விகள் ஆகியவையே அவனை அடைவதற்கான வழிமுறைகளாகச் சொல்லப்படுகின்றன.{11} தலைவன் தூய புத்தியின் வடிவில் நிலைத்திருக்கும்போது ஓர் அற்புத நிகழ்வு நடைபெறுகிறது. அதை மார்க்கண்டேயர் கண்டதாக நாம் கேள்விப்படுகிறோம்[1].{12}(1-12)மஹாமுனி மார்க்கண்டேயர், தலைவன் கொடுத்த வரத்தின் மூலமும், தம் சக்தியின் மூலமும் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தார். அவர் களைப்படைந்தபோது {அண்டம் அழிந்தபோது}, அவனது வயிற்றுப் பொந்துக்குள் வாழ்ந்திருந்தார்.{13} அங்கே அவர் பெயர்களை உரைத்து {நாம ஜபம் செய்து}, ஹோமத்தையும், கடுந்தவங்களையும் செய்தார். அதன்பிறகு புனிதப் பயணமாகப் புறப்பட்டு உலகின் புனிதத்தலங்கள், ஆசிரமங்கள், பல்வேறு நாடுகள், நகரங்கள் என அனைத்துக்கும் சென்றார்.{14} இவ்வாறு பயணித்த அவர் படிப்படியாகத் தலைவனின் வாயை விட்டு வெளியே வந்தார்; ஆனால் தேவனின் மாயசக்தியில் மூழ்கிய அவரால் தாம் வெளியே வந்துவிட்டோம் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.{15,16}(13-16)

இவ்வாறு அவனது வாயில் இருந்து வெளியே வந்த மார்க்கண்டேயர், அறியாமை இருளில் அனைத்தும் மறைக்கப்பட்டதும், தூய புத்தியாக இருக்கும் பிரம்மத்தை ஒற்றைப் பெருங்கடலாகக் கண்டார்.{17} அதைக் கண்ட அவர் பேரச்சத்தால் பீடிக்கப்பட்டவராகத் தமது உயிர் குறித்துக் கவலை கொண்டார்.{18} ஆனால் அவர், தூய புத்தியைக் கண்டு நிறைவடைந்து, பேராச்சரியத்தில் நிறைந்தார். குறிப்பாகவோ, மொத்தமாகவோ அனைத்தையும் பகுத்துப் பார்க்க இயலாமல் அச்சத்தால் பீடிக்கப்பட்ட அவர்,{19} “இஃது என் எண்ணமா? மயக்கமா? கனவா? இவையனைத்தும் எனக்கு வேறு ஒளியில் தெரிகின்றனவே, ஒன்றும் உண்மையாகத் தெரியவில்லையே.{20} உண்மையானது, பற்றுகளும், அறியாமையின் துன்பமும் அற்றது. அஃது ஒருபோதும் இத்தகைய மனோ விருப்பத்தில் தோன்றாது. சந்திரனும், சூரியனும், காற்றும், மலைகளும், பூமியும் இல்லாத இந்த இடம் யாது?” என்று நினைத்தார்.{21}

அவர் இவ்வாறு நினைத்தபோது, நீருண்ட மேகம் போல இருந்த அந்தப் பெருங்கடலில், மலை போன்ற புருஷன் உறங்கிக் கிடப்பதைக் கண்டார். அந்தப் புருஷன் தன் சூரியப் பிரகாசத்தால் உலகங்களைப் பீடித்துக் கொண்டிருந்தான்.{22} அவன் தன்னைத் தாங்கிக் கொள்ளும் ஈர்ப்பு விசைக்காக விழித்திருந்து ஒரு பாம்பைப் போல மூச்சுவிட்டுக் கொண்டிருந்தான்.{23}(17-23)

அந்தப் பெரும் முனிவர் மார்க்கண்டேயர், “இவன் யாராக இருக்கக்கூடும்?” என்று ஆவல் கொண்டவராகத் தலைவனை அணுகி படிப்படியாக அவனது வயிற்றுப் பொந்துக்குள் நுழைந்தார்.{24} அங்கே நுழைந்ததும், தாம் கண்டது கனவே என்ற உறுதியான நம்பிக்கையுடன் முன்பு போலவே அங்கே திரியத் தொடங்கினார்.{25} முன்பு மார்க்கண்டேயர் புனிதத் தலங்கள் அனைத்துக்கும் சென்று பூமியின் பரப்பில் திரிந்து வந்ததைப் போலவே இப்போதும் அங்கெல்லாம் சென்றார்.{26} அவர், தேவனின் வயிற்றுப் பொந்துக்குள் ஏராளமான கொடைகளுடன் வேள்விகளைச் செய்தோர் நூற்றுக்கணக்கானோரையும், பிராமணர்களையும், நான்கு ஆசிரமக் கடமைகளை நோற்பவர்களும், நல்ல வழிகளைப் பின்பற்றுபவர்களும், நல்லொழுக்கம் கொண்டவர்களுமான பிற வர்ணத்தாரையும் தமது யோக சக்தியின் மூலம் கண்டார்.{27,28} நுண்ணறிவுமிக்க மார்க்கண்டேயரால் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வருடங்கள் அங்கே பயணித்தாலும் அந்தப் பொந்தின் எல்லையை அடைய முடியவில்லை.{29}(24-29)

பிறகு ஒரு காலத்தில் மீண்டும் மார்க்கண்டேயர் (தலைவனின்) வாயில் இருந்து வெளியே வந்து, ஒரு சிறுவன் ஆலமரத்தின் கிளையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.{30} ஒற்றைப் பெருங்கடலால் சூழப்பட்டிருந்த அந்தக் காட்டின் உட்பகுதி பனியால் மறைக்கப்பட்டிருந்ததால் எதுவும் புலப்படவில்லை; பூமி நால்வகை உயிரினங்கள் அற்றதாக இருந்தது, அனைத்தையும் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது.{31,32} இதைக் கண்ட மார்க்கண்டேயர் ஆவலில் நிறைந்தாலும், ஆயிரஞ்சூரியர்களின் பிரகாசத்தைக் கொண்ட அந்தச் சிறுவனின் அருகே செல்ல இயலவில்லை. தலைவனின் மாயைக்கு அஞ்சிய அவர் தனிமையில் நீரில் நின்றவாறே,{33} “இதை நான் ஏற்கனவே கண்டேனில்லையா?” என்று நினைத்தார். பிறகு அவர், அமைதியானதும், எல்லையற்றதுமான அந்தப் பெருங்கடலுக்குள் இறங்கி, அச்சத்துடன் களைப்படைந்தும் அங்கே ஓய்வெடுக்கத் தொடங்கினார்[2].{34}(30-34)அப்போது அன்னத்தின் வடிவை ஏற்றிருந்த தலைவன் புருஷோத்தமன், தன் யோகசக்தியின் மூலம் சிறுவனாகி, மேக முழக்கம் போன்ற குரலில் பேசத் தொடங்கினான்.(35) தலைவன், “ஓ! மகனே, ஓ! வீரர்களிலும், தவசிகளிலும் முதன்மையானவனே, ஓ! மார்க்கண்டேயா, நீ சிறுவனாக இருக்கிறாய். நீ உழைப்பால் பெரிதும் களைப்படைந்திருக்கிறாய். என் அருகில் வா, அச்சம் வேண்டாம்” என்றான்.(36)

மார்க்கண்டேயர், “பல்லாயிரம் ஆண்டுகள் கொண்ட என் வயதையும், தவத்தையும் அழித்து, பெயர் சொல்லியும் அழைத்து என்னை இவ்வாறு பீடிப்பவன் {துன்புறுத்துபவன்} எவன்?{37} அண்டத்தின் தலைவனான பிரம்மன் நீண்ட வாழ்நாளைக் கொண்டவனாக என்னை நியமித்திருக்கும்போது, தேவர்களில் எவரும் என்னை இவ்வாறு அழைப்பது தகாது.{38} என் தவச் சக்தியால் என்னுடைய தலை அழியா தன்மையை அடைந்துள்ளது. உயிரை விட விரும்பும் எந்த மனிதன் என் பெயரைச் சொல்லி அழைத்து மரணத்தைக் காணும் விருப்பத்தை உணர்ந்தான்?” என்று கேட்டார்”.{39}(37-39)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “பெரும் முனிவர் மார்க்கண்டேயர் கோபத்தில் இவ்வாறு தம்மை வெளிப்படுத்திக் கொண்டபோது, தலைவன் சினத்தில் நிறைந்திருந்த அவரிடம் மீண்டும் பேசினான்.(40)

தலைவன், “ஓ! மகனே, நான் உன் தந்தையும், ஆசானும், புராதன புருஷனும், உனக்கு நீண்ட வாழ்நாளை அருளியவனுமான ரிஷிகேசன் ஆவேன். நீ ஏன் என்னை அணுகாதிருக்கிறாய்?(41) முன்பு உன் தந்தை ஹிரண்யகர்ப்பன், கடுந்தவங்களைச் செய்து ஒரு மகனைப் பெறுவதற்காக என்னைத் துதித்தான்.{42} எல்லையற்ற வாழ்நாளையும், நெருப்பைப் போன்ற பிரகாசத்தையும், பயங்கரத் தலையையும் கொண்ட மஹாரிஷியாக உன்னைப் படைத்து என் விருப்பத்துடன் நான் உன்னை அவனுக்கு அளித்தேன்.{43} நான் யோகத்தில் ஈடுபட்டு, எங்கும் பரந்த பெருங்கடலில் விளையாடிக் கொண்டிருக்கும்போது என் உற்றார் உறவினனைத் தவிர வேறு எவனாலும் என்னைக் காண இயலாது” என்றான்”.{44}(42-44)

வைசம்பாயனர், “தமது பெயரையும், குலத்தையும் கேட்டவரும், நீண்ட ஆயுளைக் கொண்டவரும், உலகால் துதிக்கப்படுபவரும், பெரும் தவசியுமான மார்க்கண்டேயர், மகிழ்ச்சிமிக்க இதயத்துடனும், ஆச்சரியத்தால் விரிந்த விழிகளுடனும், தலைக்கு மேல் தமது கரங்களைக் குவித்துக் குனிந்த தலையுடன் தலைவனை வணங்கினார்.(45,46)

மார்க்கண்டேயர், “ஓ! பாவமற்றவனே, சிறுவனின் வடிவை ஏற்று ஒற்றைப் பெருங்கடலில் கிடக்கும் உன் மாயா சக்தியை உண்மையில் நான் அறிய விரும்புகிறேன்.{47} ஓ! தலைவா, இஃது என்ன வடிவம்? நீ இவ்வுலகில் என்ன பெயரால் அழைக்கப்படுகிறாய்? இங்கே ஒரு பூதமும் இல்லையே. நீயே பெரும்பூதம் என நினைக்கிறேன்” என்றார்.{48}(47,48)

தலைவன், “நானே நாராயணன், பிரம்மமும், உயிரினங்கள் அனைத்தின் பிறப்புக் காரணனனும் நானே. பூதங்கள் அனைத்தையும் படைப்பவன் நானே, அவற்றை அழிப்பவனும் நானே.{49} இந்திரனும், பருவகாலங்களுக்கு மத்தியில் வருடம், யுகங்களின் யுகம், யுகங்களின் சுழற்சி ஆகியவையும் நானே.{50} உயிரினங்கள் மற்றும் தேவர்களின் மொத்தக் கூட்டமும் நானே. பாம்புகளில் சேஷன் நானே, பறவைகளில் கருடன் நானே,{51} ஆயிரம் தலைகளையும், ஆயிரம் கால்களையும் கொண்டவன் நான், நானே ஆதித்யன், நானே வேள்வி புருஷன், நானே வேள்வி, நானே ஆகுதிகளைச் சுமக்கும் அக்னி, என்னை நித்தியனாக அறிவாயாக.{52} உலகில் கடுந்தவங்களைப் பயின்று தங்கள் ஆன்மாக்களைத் தூய்மையடைச் செய்தவர்களும், பல பிறவிகளாக இதைப் பயின்று என் அறிவுப் புலன்களைக் கட்டுப்படுத்தியவர்களுமான இருபிறப்பாளர்களில் நான் பிராமண யதியாக இருக்கிறேன்.{53} தூய ஞானமும், அண்டத்தின் ஆன்மாவும், யோகிகளில் முதன்மையானவனும் நானே. பூதங்கள் அனைத்தையும் அழிப்பவனும், அண்டத்தின் கதியும் நானே.{54} கர்மம் நானே, சக்தி நானே, உயிரினங்களிடம் அறத்தை எடுத்து வைப்பவன் நானே. எனக்கென்று கர்மமேதும் இல்லை.{55} உயிரினங்களின் நித்திய ஆன்மா நானே. பிரகிருதி நானே, புருஷன் நானே, அழிவற்ற நித்தியமான பரமன் நானே.{56} அனைத்து வகைகளையும் பின்பற்றுவோரின் கடமையாகவும், தவமாகவும் இருப்பவன் நானே. பாற்கடலின் தலைமை தேவனான ஹயசிரன் நானே.{57}

வாய்மை நானே, உண்மை நானே, பெரியவன் நானே, பிரஜாபதி நானே. வேள்விகளால் துதிக்கப்படத்தகுந்த பெரும் நிலையாகவும், சாங்கியமாகவும், யோகமாகவும், கல்வியின் தலைவனாகவும் அறியப்படுபவன் நானே.{58} ஒளி, காற்று, பூமி, வானம், நீர், பெருங்கடல், விண்மீன்கள், பத்துத்திக்குகளும் நானே. வருடம், சோமன், இந்திரன், சூரியன்,{59} பாற்கடல், பிற பெருங்கடல்கள், காட்டுத்தீ, சம்வர்த்தக நெருப்பும் நானே. நீராலான ஹவியைப் பருகுபவன் நானே. புராதனனும், பெரியவனும், எதிர்காலமுமான நான், அனைத்தின் பிறப்பிடமாக அறியப்படுகிறேன். இவ்வுலகில் உன்னால் காணப்படும், கேட்கப்படும் யாவும் நானே.{60-62} ஓ! மார்க்கண்டேயா, இந்த அண்டத்தை இதற்கு முன்பே நான் படைத்திருக்கிறேன். இதோ பார், இன்று நான் அதைப் படைக்கப் போகிறேன், மீண்டும் மீண்டும் ஒவ்வொரு யுக சுழற்சியிலும் நான் இதைச் செய்வேன்.{63} இவை யாவற்றையும் புரிந்து கொண்டு, அறத்தையும், என் ஆன்ம சக்திகளையும் அடையும் ஆவலில் என் வயிற்றுப் பொந்துக்குள் மகிழ்ச்சியாகத் திரிவாயாக.{64} பிரம்மனுடன், முனிவர்களும், தேவர்களும் என்னுடலில் வாழ்ந்து வருகிறார்கள். எனவே, என்னை வெளிப்பட்டவனாகவும், வெளிப்படாதவனாகவும், யோகமாகவும், வெற்றிகொள்ளப்படாதவனாகவும் அறிவாயாக.{65} மூவுலகங்களின் பெரும்புதிரான ஓம் எனும் மந்திரமும், வாழ்வின் மூன்று நோக்கங்களை அளிக்கும் என அறியப்படும் புனித காயத்ரி மந்திரமும் நானே” என்றான் {நாராயணன்}”.{66}(49-66)

வைசம்பாயனர், “அண்ட வடிவை ஏற்ற தலைவன் மார்க்கண்டேய ரிஷியைத் தன் வாய் வழியாக வயிற்றுக்குள் நுழையச் செய்ததைப் பெரும் முனிவர் வியாசர் வேதங்களிலும், புராணங்களிலும் விளக்கிச் சொல்லியிருக்கிறார்.{67} முனிவர்களில் முதன்மையான மார்க்கண்டேயர், வெளிப்படாத பரமாத்மாவைத் தனிப்பட்ட முறையில் கண்டு, பராமனந்தத்தில் திளைக்கவும், வயிற்றின் பொந்துக்குள் நுழைந்து அங்கே மகிழ்ச்சியுடன் ஓய்ந்திருந்தார்.{68} நித்திய தலைவனான பரமாத்மா, பல்வேறு வடிவங்களை ஏற்று, சூரியனும், சந்திரனும் அற்ற பெருங்கடலில் திரிந்து படிப்படியாக உலகை உண்டாக்கி, அழிவுக்கான நேரம் வரும்போது அதை அழிக்கிறான்” என்றார் {வைசம்பாயனர்}.{69}(67-69)

பொற்றாமரை மலர்ச்சி | பவிஷ்ய பர்வம் பகுதி – 11-(மஹாபத்மோத்பத்தி꞉)-வசிஷ்டரின் பிறப்பு; ஆகாயம், ஒலி, காற்று ஆகியன படைக்கப்பட்டது; பொற்றாமரை படைப்பு….

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “தலைவன் {நாராயணன்}, பிராமண முனிவரான ஆபவ வசிஷ்டராகப் பிறப்பெடுத்து, தன் உடலெனும் கொள்கலத்தை மறைத்துத் தவம் பயிலத் தொடங்கினான்.(1) அதன் பிறகு, அண்டத்தின் ஆன்மாவும், அளவற்ற சக்திகளைக் கொண்டவருமான பெரும் வசிஷ்டர், ஐம்பூதங்களையும், பிற உயிரினங்களையும் படைக்க நினைத்தார்.{2}(ஆபம் என்பது நீர்நிலைகளைக் குறிக்கும். அவற்றுக்குத் தலைவன் வருணன் என்று அழைக்கப்படுகிறான். அதன் காரணமாவே அவனுடைய மகனாகிய வசிஷ்டருக்கு ஆபவர் என்ற பெயர் ஏற்பட்டது.)அண்டமானது, வானம் இல்லாமல் நுட்பமாகி நீரில் மூழ்கியிருந்தபோது, வசிஷ்டர், தவப் பயிற்சிகளால் அறிவுப்புலன்களைப் பெருகச் செய்து அந்த நீரிலேயே பலகாலத்தைச் செலவழித்தார்.{3} நீரில் வாழ்ந்து வந்த அவர், பெருங்கடலைக் கலங்கடித்து இரண்டாம் அலையுடன் நுட்பமான ஆகாயமாக எழுந்தார்.{4} பிறகு அவர் காற்றால் உண்டாக்கப்பட்ட ஒலியாக அந்த ஆகாயத்தில் தோன்றினார். அந்தப் பெரும் வசிஷ்டர் காற்றைப் போலவே தாமும் வளரத் தொடங்கினார்.{5} பெருகி வந்ததும், பலமிக்கதுமான காற்றால் பெருங்கடல் கலங்கடிக்கப்பட்டபோது அலைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.{6} பெருங்கடலின் நீர் கலங்கடிக்கப்பட்ட போது, பெருஞ்சக்திவாய்ந்த தலைவன், இருள்வழிகளில் நெருப்பைப் போலத் தோன்றினான்.{7}

அந்த நெருப்பானது, பெருங்கடலின் நீரை வற்றச் செய்தது; அதனிலிருந்து வானம் போன்ற துளையொன்று எழுந்தது.{8} அவனது சக்தியில் இருந்து அமுதம் போன்ற தூய நீர் உண்டானது. அதனில் இருந்து ஆகாயமும், அதனில் இருந்து காற்றும், அதனில் இருந்து ஆர்ப்பரிக்கும் அலைகளும் பூமியில் உண்டாகின. பெரும்பூதங்களின் பிறப்பிடமான தலைவன் அதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தான்.{9,10} பல வடிவங்களைக் கொண்ட தலைவன், பூதங்களைக் கண்டு, அண்டத்தின் படைப்பிற்கு அவற்றின் தேவையை அறிந்து, பிரம்மனுக்கான பொருள்களைக் குறித்து நினைக்கத் தொடங்கினான். இவ்வாறே ஒரு யுகத்தின் முடிவிலும், பல யுகங்களின் முடிவுகளிலும் பிரம்மன் தன் பிறப்பை அடைந்தான்.{11,12}

பிரம்மன், ஞானம் கொண்டவன், அவன் யோகிகளில் முதன்மையானவன், அவன் அண்டத்தின் ஆன்மாவைக் காண்பவன், உலகின் இருபிறப்பாளர்களில் அவன் புலனடக்கம் கொண்ட பிராமணன் ஆவான்.{13} யோகத்தை அறிந்த தலைவன் பிரம்மன், வேதங்களையும், அண்டத்தின் நோக்கங்களையும் படைப்பதில் துல்லிய ஆன்ம சக்திகளைக் கொண்டதும், அனைவராலும் வழிபடப்படுவதுமான பிரம்மத்தை ஈடுபடுத்துகிறான்.{14}

அப்போது நித்தியனான ஹரி, உயிரினங்களைப் படைப்பதற்காகப் பெருங்கடலில் கிடந்து, பல்வேறு வழிமுறைகளில் விளையாடி பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.{15} அதன் பிறகு அவன், சூரியப் பிரகாசத்துடன் கூடியதும், ஆயிரம் இதழ்களைக் கொண்டதுமான ஒரு தங்கத் தாமரையைத் தன் உந்தியில் இருந்து படைத்தான்.{16} பெரியவனான அந்த அச்யுதனின் மேனியில் இருந்து உண்டான அந்தத் தாமரையானது, நறுமணத்துடனும், எரியும் தழல்களைப் போன்ற பிரகாசத்துடனும், கூதிர் காலச் சூரியனைப் போலத் தெளிந்த ஒளியுடனும் ஒளிர்ந்து கொண்டிருந்தது” என்றார் {வைசாம்பாயனர்}.(2-17)

புஷ்கரம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 12-(ஸர்வபூதோத்பத்தி꞉)-தாமரையில் பிரம்மனை நிறுவிய நாராயணன்; தாமரையில் வளரும் உறுதியான வேர்களாக மலைகள்….

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “அப்போது, நித்தியனான ஹரி, பெரும்பிரகாசம் கொண்டதும், பூமியின் குணங்களையும், அடையாளங்களையும் கொண்டதும், பல யோஜனைகள் நீளம் பரந்ததுமான அந்தத் தங்கத் தாமரையில் பிரம்மனை வைத்தான்.{1} யோகிகளில் முதன்மையானவனும், உயிரினங்கள் அனைத்தின் மனமாக இருப்பவனும், அவற்றின் படைப்பாளனுமான அவன், அனைத்தையும் நோக்கித் தன் முகத்தைத் திருப்பினான்.{2} புராணங்களை நன்கறிந்த பெரும் முனிவர்கள், நாராயணனின் மேனியில் தோன்றி, பூமியை ஆதரிப்பது இந்தத் தாமரை என்று விளக்குகின்றனர்.{3}(1-3)

அந்தத் தாமரையின் இருப்பிடமாகப் பூமாதேவி இருக்கிறாள், அதனுள் வளரும் உறுதியான வேர்களாக தெய்வீக மலைகள் இருக்கின்றன.{4} இமயம், மேரு, நீலம், நிஷதம், கைலாசம், கிரௌஞ்சம், கந்தமாதனம்,{5} புனிதமான திரிஷிரம், அழகிய மந்தரம், உதயம், கந்தரம், விந்தியம், அஸ்தம் ஆகிய இந்த மலைகள் விருப்பத்திற்குரிய பொருட்களை அளிப்பனவாகவும், தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் ஆகியோரின் ஆசிரமங்களை உள்ளடக்கியவையாகவும் இருக்கின்றன.{6,7} இந்த மலைகளை இடையிடையே கொண்ட நாடானது ஜம்பூத்வீபம் என்றழைக்கப்படுகிறது. வேள்விகளைச் செய்வோர் இங்கே வேள்விகளைச் செய்கின்றனர்.{8} வேள்விகளில் இருந்து வெளியே வருபவையும், அமுத நீரைக் கொண்டவையுமான ஓடைகள், நூற்றுக்கணக்கான புனிதத் தலங்களைக் கொண்ட சரிதாதேவி {ஆறு} ஆகின்றன.{9} அந்தத் தாமரையைச் சுற்றிலும் எண்ணற்ற இழைகளாக அமைந்திருப்பன தாதுக்களின் மலைகள் எனப் பூமியில் அறியப்படுகின்றன{10}.(4-10)

ஓ! மன்னா, அந்தத் தாமரையின் மேல் இதழ்கள், மிலேச்சர்களுக்குச் சொந்தமான மலைப் பாதைகளையும், கடக்கப்பட முடியாத பாதைகளையும் கொண்டவையாக இருக்கின்றன.{11} கீழ் இதழ்கள், பெரும் தைத்தியர்கள், உரகர்கள் ஆகியோருக்குச் சொந்தமான பாதாள லோகத்தைக் கொண்டவையாக இருக்கின்றன.{12} அதற்கும் கீழுள்ள பகுதி உகதம் அல்லது பெருந்துன்பங்களின் சுரங்கம் என்றழைக்கப்படுகிறது. கொடுங்குற்றங்களைச் செய்தவர்கள் அங்கே மூழ்குகிறார்கள்.{13}(11-13) இந்தத் தாமரையின் நுனியில் அமைந்துள்ள பரந்த நீர்ப் பரப்பானது அனைத்துப் பக்கங்களிலும் (நிலத்தைக் கொண்ட) பொருங்கடலாகும்.(14)

இந்தப் பெருந்தாமரையானது, நாராயணனின் இதயத்தைப் போன்றே உண்டாக்கப்பட்டதால் அது புஷ்கரம் என்றழைக்கப்படுகிறது.{15} இதன் காரணமாகவே, இந்தத் தாமரையின் தோற்றத்தை நன்கறிந்த பழங்காலப் புராதன முனிவர்கள் பெரும் வேள்விகளைச் செய்யும்போது, வேள்விக்களத்தில் தாமரையின் வடிவிலான பீடத்தை அமைக்கின்றனர்.{16}

இவ்வகையிலேயே தலைவன், மலைகளையும், ஆறுகளையும், தேவர்களையும், அண்டத்தின் பொருள்களையும் படைப்பவனான பிரம்மனைத் தாமரையில் படைத்தான்.{17} அளவற்ற ஆற்றலைக் கொண்டவனும், சுயம்புவுமான அந்தப் பெருந்தேவன், பிரம்மனைப் படைத்த போது, பெருங்கடலெனும் படுக்கையில் கிடந்து அண்டமெனும் நித்திய தாமரையைப் படைத்தான்” என்றார் {வைசம்பாயனர்}.{18}(15-18)

மதுகைடபர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 13-(மதுகைடபவரப்ரதாநம்)-மது கைடபர்களின் தோற்றமும், அழிவும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஆயிரம் யுகங்களின் சுழற்சிக்குப் பிறகு சத்ய யுகத்தின் தொடக்கத்தில் தாமஸ குணம் (ஒழுங்கற்ற போக்கு) நிலவியது. இந்த நேரத்தில் படைப்புக்குத் தடையாக இருக்கும் பேரசுரன் மது தன் பிறப்பை அடைந்தான்.{1} சில காலம் கழித்து, ரஜஸ குணத்தின் மூலம் மதுவுக்கு உதவி செய்வதற்காகக் கைடபன் என்ற இரண்டாம் அசுரன் படைக்கப்பட்டான்.{2} மது, கைடபன் என்ற பெயர்களைக் கொண்டவர்களும், பல்வேறு வடிவங்களை ஏற்கவல்லவர்களும், முறையே ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களைக் கொண்டவர்களுமான அந்தப் பேரசுரர்கள் இருவரும் ஒற்றைப் பெருங்கடலின் நீரைக் கலங்கடிக்கத் தொடங்கினர்.{3} அவர்கள் கருநீலத்திலும், சிவப்பு நிறத்திலும் ஆடைகள் உடுத்தியிருந்தனர், எரியும் வெண்பற்களைக் கொண்டிருந்தனர், செருக்கில் மிதந்திருந்த அவர்கள் ஒளிரும் கேயூரங்களையும், கங்கணங்களையும் அணிந்திருந்தனர்.{4} 

அவர்கள் பயங்கரமான தாமிரக் கண்களையும், பரந்த மார்பையும், நீண்ட கைகளையும், பெரிய தலைகளையும் கொண்டிருந்தனர். கவசங்களால் மறைக்கப்பட்டிருந்த அந்த அசுரர்கள் இருவரும், அசையாத மலைகள் இரண்டைப் போலத் தெரிந்தனர்.{5} அவர்களுடைய நிறம் நீல மேகங்களைப் போல இருந்தது, அவர்களின் முகங்கள் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் இருந்தன, அவர்களுடைய கரங்களின் ஒளியானது மின்னலுடன் கூடிய தாமிர மேகங்களைப் போலத் தெரிந்தது.{6} அவர்கள் தங்கள் மயிர் மற்றும் பாதங்களின் அசைவாலேயே பெருங்கடலைப் பெருகச் செய்பவர்களைப் போலவும், பகைவரைக் கொல்பவனும், அங்கே கிடப்பவனுமான ஹரியை நடுங்கச் செய்பவர்கள் போலவும் பயங்கரமாகத் தெரிந்தனர்.{7}

அண்டத்தின் வாயாக இருந்த அந்தத் தாமரையில் அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது, யோகிகளில் முதன்மையானவனும், ஒளிரும் உடலுடன் கூடியவனுமான நித்திய பிரம்மனைக் கண்டனர்.{8} அந்தத் தாமரையில், நாராயணனின் ஆணையின் பேரில் உயிரினங்களையும், தேவர்களையும், அண்டத்தையும், மனத்தில் பிறக்கும் முனிவர்களின் மகன்களையும் பிரம்மன் படைப்பதைக் கண்டனர்.{9} அசுரர்களில் சிறந்தவர்களும், கோபத்தால் எரிந்த குருதி சிவப்புடைய கண்களுடன் கூடியவர்களுமான மதுவும், கைடபனும் பிரம்மனுடன் போரிட விரும்பி, அவனிடம்,{10} “கருப்பு மகுடம் அணிந்தவனும், நான்கு முகங்களைக் கொண்டவனுமான நீ யார்? இந்தத் தாமரையில் கவலையில்லாமல் வாழ்ந்து மூடத்தனத்தால் எங்களை நீ அவமதித்து வருகிறாய். வா, எங்களுடன் போரிடுவாயாக. நாங்கள் பெரும் வீரர்களாக இருக்கிறோம். உன்னால் போரில் எங்கள் முன்பு நிற்க இயலாது.{11} நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? உன்னை இங்கே அனுப்பிவைத்தவன் எவன்? உன்னைப் படைத்தவனும், பாதுகாப்பவனும் எவன்? எந்தப் பெயரால் மனிதர்கள் உன்னை அழைக்கின்றனர்?” என்று கேட்டனர்.{12}(1-12)

பிரம்மன், “இவ்வுலகில் அறியப்படாதவனிடம் இருந்து நான் உதித்து, யோகம் பயின்று வருகிறேன். இதை நீங்கள் அறியமாட்டீரா?” என்று கேட்டான்.(13)

மதுவும், கைடபனும், “ஓ! பெரும் முனிவனே, இவ்வுலகில் எங்களைவிடப் பெரியவன் வேறு எவனும் இல்லை. நாங்கள் இந்த அண்டத்தை ரஜஸ், மற்றும் தமஸ் குணங்களால் மறைத்திருக்கிறோம். நாங்களும் அவ்விரு குணங்களால் பீடிக்கப்பட்டிருக்கிறோம்,{14} தவசிகளின் முன்பு துன்பத்தில் தவிப்பவர்களைப் போலவும், பக்திமான்களின் முன்பு வஞ்சகம் நிறைந்தவர்களாகவும் தோன்றுவோம். உயிரினங்களால் அடைய முடியாத எல்லையில் இருப்பவர்களாக எங்களை அறிவாயாக.{15} நாங்கள் உலகைக் கலங்கடிப்பதற்காக ஒவ்வொரு யுகத்திலும் பிறக்கிறோம். செல்வம், விருப்பத்திற்குரிய பொருட்கள், வேள்விகள், அனைத்து வகையான கொடைகள் ஆகியன எங்கள் கட்டுப்பட்டில் இருக்கின்றன.{16} மகிழ்ச்சி, இன்பம், செழிப்பு, முன்னேற்றம், அறம் ஆகியவற்றுக்காக மக்கள் விரும்பும் எதையும் எங்களிடம் இருந்து அவர்கள் பெறலாம்” என்றனர்{17}.(14-17)

பிரம்மன், “என் மனத்தைக் குவித்து யோகிகளில் முதன்மையானவனை உண்மையில் அறிந்து, ஏற்கனவே அறிந்து வைத்திருந்த சத்வ குணத்தில் நான் வாழ்கிறேன்.{18} யோகிகளில் நித்திய சத்வ குணமாக இருப்பவனும், ரஜஸ், தமஸ் குணங்களைப் படைத்தவனும், உயிரினங்கள் பிறப்பதற்குக் காரணனும், சத்வ குணம் நிறைந்த உயிரினங்கள் அனைத்தும் எவனிடம் இருந்து உண்டாகுமோ அந்தத் தலைவனிடம் நீங்கள் போரில் ஈடுபட்டால் அவன் உங்களை வீழ்த்துவான்” என்றான்”{19,20}.(18-20)

வைசம்பாயனர், “அதன்பிறகு, பல யோஜனைகள் நீண்ட படுக்கையில் கிடந்த தாமரை உந்தி படைத்த ரிஷிகேசனை வணங்கி மதுவும், கைடபனும்,(21) “ஓ! புருஷோத்தமா, நீயே இந்த அண்டத்தின் தோற்றத்திற்குக் காரணன் என்பதை நாங்கள் அறிய வந்தோம்; உன்னை வணங்குவதற்குரிய எங்கள் ஒழுக்கமாக இதை அறிவாயாக.(22) ஓ! தலைவா, துல்லிய பார்வையைக் கொண்ட கல்விமான்கள் உன்னை அறிந்து வைத்துள்ள படியே நித்தியமான உண்மையான ஈஷ்வரனாக உன்னைக் காண நாங்களும் விரும்புகிறோம்.{23} ஓ! பகைவரைக் கொல்பவனே, நாங்கள் உன்னிடம் இருந்து வரம்பெற விரும்புகிறோம். ஓ! தலைவா, உன்னைக் காண்பதே நிச்சய வெற்றியைத் தரும். உன்னை நாங்கள் வணங்குகிறோம்” என்றனர்.{24}(23,24)

தலைவன், “ஓ! அசுரர்களில் முதன்மையானவர்களே, நீங்கள் விரும்பும் வரத்தை விரைந்து கேட்பீராக. உங்களுங்கு ஒதுக்கப்பட்ட காலத்தை விட அதிகக் காலம் வாழ விரும்புகிறீர்களா? ஓ! பெருஞ்சக்திவாய்ந்தவர்களான மது கைடபர்களே நீங்கள் முயன்றதை அடைந்துவிட்டீர்கள்.{25} உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவர்களும், பெருஞ்சக்திவாய்ந்தவர்களும், க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றுகிறவர்களாகவும் நீங்கள் இருக்கிறீர்கள். எனவே, என்னால் மட்டுமே நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்ற வரத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்றான்.{26}(25,26)

மதுவும், கைடபனும், “ஓ! தேவர்களின் மன்னா, எவனும் மரணிக்காத இடத்தில் நாங்கள் கொல்லப்பட வேண்டும். (அதன் பிறகு) நாங்கள் உன் மகன்களாக வேண்டும். இதுவே நாங்கள் வேண்டும் வரம்” என்று கேட்டனர்.(27)

தலைவன், “எதிர்கால யுகத்தில் நீங்கள் என் மகன்களாகப் பிறப்பீர்கள். நான் உங்களிடம் வாய்மையைப் பேசுகிறேன், இதில் நீங்கள் ஐயங்கொள்ள வேண்டியதில்லை” என்றான்”[1].(28)வைசம்பாயனர், “அண்டத்தைத் தாங்கும் நித்திய தலைவன், ரஜஸ், தமஸ் குணங்களால் உலகைப் பாதுகாக்கவல்லவர்களான மது, கைடபன் என்ற அந்த அசுரர்களில் முதன்மையானோர் இருவருக்கும் இந்த வரத்தை அளித்துவிட்டு, தன் தொடைகளில் வைத்து அவர்களைக் கொன்றான்” என்றார்.(29)

பிரம்மனின் படைப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 14-(பிரஹ்மணோ மாநஸபுத்ராணாமுத்பத்தி)-பிரம்மனின் மானஸபுத்ரர்கள்; படைப்பு குறித்த விரிவான வர்ணனை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “நீண்ட கைகளைக் கொண்டவனும், பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையானவனுமான பிரம்மன், அந்தத் தாமரையில் அமர்ந்து, தன் கைகளை உயர்த்தியபடி கடுந்தவத்தைச் செய்தான்.{1} தன் சொந்த பிரகாசத்தில் எரிந்து கொண்டிருந்த அந்தப் பெருஞ்சக்திவாய்ந்த யோகியான பிரம்மன், ஆயிரங்கதிர்களைக் கொண்ட சூரியனைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.{2}

நித்தியனும், அழிவற்றவனுமான தலைவன் நாராயணன், பெருஞ்சக்திவாய்ந்த, சிறப்புமிக்க யோக ஆசானாகவும், பிரம்மவாதிகளில் முதன்மையானவரும், சாங்கிய தத்துவத்தை எடுத்துரைப்பவருமான கபிலராகவும் தன் உடலை இரண்டாகப் பகுத்துக் கொண்டு பிரம்மனை அணுகிறான்.{3} அளவற்ற ஆற்றலைக் கொண்டவரும், பெரும் முனிவர்களால் வழிபடப்படுபவரும், பிரம்மவாதிகளில் முதன்மையானவரும், க்ஷத்திரியர்களைப் போன்ற பணிகளில் ஈடுபடுபவரும், பெருஞ்சக்திவாய்ந்த யோகாசாரியரும், சாங்கியத்தை எடுத்துரைப்பவருமான கபிலரும் பிரம்மனின் அருகில் வந்து,{4,5} “ஓ! பிரம்மா, உயிரினங்கள் அனைத்தையும் ஆள்பவனாகவும், அண்டத்தின் ஆன்மாவாகவும் இருக்கும் நீ உயிரினங்களின் பெருக்கத்தில் உறுதியுள்ளவனாகவும், அண்டத்தை ஆதரிப்பவனாகவும், உலகத்தின் ஆசானாகவும், (எனவே) அனைவராலும் வழிபடத்தகுந்தவனாகவும் இருக்கிறாய்” என்றனர்.{6,7}(1-7)

அவர்களின் சொற்களைக் கேட்டு, பிரம்மஞானம் தொடர்பாக ஸ்ருதிகளில் கேட்டதைப் போன்ற மூன்று ஸ்லோகங்களைச் சொல்லி பிரம்மன் மூன்று உலகங்களையும் படைத்தான்.{8} தலைவன் பிரம்மன், மூவுலகங்களில் பூலோகத்தில் வசித்துக் கொண்டு, மனத்தில் பிறந்த நித்திய மகனைப் படைத்தான்.{9} மனத்தில் பிறந்த மகன், தான் பிறந்த உடனேயே பிரம்மனின் முன்பு நின்று, அவனிடம், “ஓ! தலைவா, நான் உனக்கு என்ன உதவி செய்ய வேண்டும்? எனக்கு ஆணையிடுவாயாக” என்றான்.{10}

பிரம்மன், “ஓ! பெரும் மனம் கொண்டவனே, இந்தப் பிராமணர் கபிலரும், வரமளிக்கும் நாராயணனும் உன்னிடம் சொல்வதைச் செய்வாயாக” என்றான்”.{11}(8-11)

வைசம்பாயனர், “பிரம்மன் இதைச் சொன்னதும், மனத்தில் பிறந்த மகன் அவனிடம், “என் தந்தையை விடப் பெரியவன் வேறு எவன்?” என்று கேட்டான். அவன் மீண்டும் ஐயத்தால் பீடிக்கப்பட்டவனாகக் கைகளைக் கூப்பிக் கொண்டு,{12) “நான்உனக்குத் தொண்டு செய்யத் தயாராக இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும். நான் செய்ய வேண்டியதைச் செய்வேன்” என்றான்.{13}

யோகம் மற்றும் சாங்கியத்தின் பேராசிரியர்கள், “சிதைவில்லாத பிரம்மத்தின் பதினெட்டு வடிவங்களையும், நித்தியமான பெரும்பிரம்மத்தையும் நினைவுகூர்வாயாக” என்றனர். மனத்தில் பிறந்த மகன் இச்சொற்களைக் கேட்டுவிட்டு, வடக்கே சென்று ஞானத்தின் மூலம் பிரம்ம அறிவை அடைந்தான்.{14}(12-14)

அதன்பிறகு, உயர்ந்த மனம் கொண்ட தலைவன் பிரம்மன் இரண்டாவதாகப் புவர்லோகத்தைப் படைத்துவிட்டு, மீண்டும் தன் மனத்தில் பிறந்த மகனைப் படைத்தான்.{15} மனத்தில் பிறந்த மகன், பிரம்மனின் ஆணையின்படி, பெரும்பாட்டன்கள், யோகசாங்கிய ஆசான்கள் ஆகியோரின் முன்பு தோன்றி, “நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுவீராக” என்றான்.{16} அதன்பிறகு அவன் அந்த இரண்டு ஆசான்களிடம் போகவதி பகுதிக்குச் சென்று, அவர்களின் அருகில் காத்திருந்து பெரும்லோகத்தை அடைந்தான்.{17}(15-17)

தலைவன் பிரம்மன், மனத்தில் பிறந்த அந்த மகன் புறப்பட்டுச் சென்ற பிறகு, மூன்றாவதாக முக்தியை அடையவல்ல பூர்புவலோகத்தைப் படைத்து, மூன்றாவதாக மனத்தில் பிறந்த மகனைப் படைத்தான்.{18} அதன்பிறகு பிரம்மனால் ஆணையிடப்பட்ட மனத்தில் பிறந்த மகன் அவர்களின் முன்பு தோன்றி அவர்களின் அறத்தையும், இயக்கங்களையும் அறிந்து கொண்டான். இந்த மூவரும் உயரான்ம சம்புவின் மகன்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.{19}(18,19) தலைவன் நாராயணனும், தவசிகளின் தலைவரான கபிலரும் தங்களுடன் அந்த மூன்று மகன்களையும் தங்கள் உலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.(20)

அவர்கள் சென்ற பிறகு எப்போதும் நோன்புகளை நோற்கும் பிரம்மன் மீண்டும் கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினான்.{21} தொடர்ந்து விடாமல் தனியாகத் தவம் செய்து கொண்டிருந்த தலைவன் பிரம்மன், தன்னுடைய பாதி உடலில் இருந்து அழகிய மனைவியைப் படைத்தான்.{22} பிரம்மன், உலகைப் படைக்கவல்லவளும், ஆன்ம சக்தி, பிரகாசம், தற்கட்டுப்பாடு ஆகியவற்றில் தனக்கு இணையானவளுமான அந்த மனைவியுடன் கலவி புரிந்து, தமஸ் குணத்தின் மூலம் ஊடுருவி, குடிமுதல்வர்கள், கடல்கள், ஆறுகள், வேதங்களின் தாயான புனித காயத்ரி மந்திரம், நான்கு வேதங்கள் ஆகியவற்றையும் படைத்தான்.{23,24} உலகின் படைப்பாளனான பெரும்பாட்டன் தன் பணியின் கருவிகளாக அண்டத்தின் தலைவர்களான மகன்களைப் படைத்தான். அந்தப் படைப்பில் இருந்து உலகங்கள் அனைத்தும் வெளிப்பட்டன.{26}(21-26)

அவன், ஆசிரமங்கள் அனைத்தையும் ஆதரிப்போரும், வரங்களை அளிப்போரும், பெருந்தவசிகளுமான விஷ்வேசன், தர்மன் ஆகிய இரு மகன்களை முதலில் படைத்தான், பிறகு,{27} தக்ஷன், மரீசி, அத்ரி, புலஸ்த்யர், புலஹர், கிரது, வஸிஷ்டர், கௌதமர், பிருகு, அங்கிரஸ் ஆகிய முனிவர்களையும், பிறரையும் படைத்தான்.{28} பிரம்மனால் படைக்கப்பட்ட மேற்கண்ட ரிஷிகளின் வழித்தோன்றல்களே அதர்வ வேதத்தின் பெரும் ரிஷிகளாக அறியப்பட்டனர்.{29} அதிதி, திதி, தநு, காலா, அதாயு, ஸிம்ஹிகை, முநி, பிரபோதை, ஸுரஸை, குரோதை, விநதை, கத்ரு ஆகிய பனிரெண்டு மகள்களையும், இருபத்தேழு நட்சத்திரங்களையும் தக்ஷன் பெற்றான்.{30,31} மரீசியின் மகனான கசியபர், தவத்தின் மூலம் சர்வ வல்லமை படைத்தவரானார். தக்ஷன் தன்னுடைய பனிரெண்டு கன்னிகையரை கசியபருக்குக் கொடுக்கச் சம்மதித்தான்.{32} ஓ! ஜனமேஜயா, பெரும் ரிஷியான தக்ஷன், ரோஹிணியையும், அறம் அளிக்கும் நட்சத்திரங்களையும் வசுக்களில் சோமனுக்கு அளித்தான்.{33}(27-33)

ஓ! பரதனின் வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, அறம்சார்ந்தவனான பிரம்மன், தேவர்களில் முதன்மையான தர்மனுக்குத் தான் ஏற்கனவே படைத்து வைத்திருந்த லக்ஷ்மி, கீர்த்தி, ஸாத்யை, எப்போதும் நலம் புரியும் விஷ்வை, மருத்வதி ஆகிய மிகச்சிறந்த ஐந்து கன்னிகையரைக் கொடுத்தான்.{34,35} முடிவில், விரும்பிய வடிவங்களை ஏற்கவல்லவளும், பிரம்மனின் பாதி உடலில் இருந்து படைக்கப்பட்டவளுமான பிரம்மனின் மனைவி, சுரபி என்ற பசுவின் வடிவை ஏற்று அவன் முன்னிலையில் தோன்றினாள்.{36} ஓ! பாரதா, படைப்பின் காரணத்தை அறிந்தவனும், உலகால் துதிக்கப்படுபவனுமான பிரம்மன், பசுக்களைப் படைப்பதற்காக அவளை அறிந்தான்.{37} இதன் மூலம் அவன், மாலைநேர மேகம் போன்ற சிவந்த வண்ணம் கொண்டவர்களும், தங்கள் பயங்கரப் பிரகாசத்தால் அனைத்தையும் எரிக்கவல்லவர்களும், பக்திமான்களும், பேருடல் படைத்தவர்களுமான ஏழு மகன்களைப் பெற்றான்.{38} அவர்கள் பிறந்த உடனேயே அழுது கொண்டே பெரும்பாட்டனிடம் ஓடியதால் அவர்கள் ருத்ரர்கள் என்ற பெயரைப் பெற்றார்கள்.{39} நிர்ருதி, ஸர்பன், அஜன், ஏகபாத், மிருகவ்யாதன், பிநாகி, தஹநன், ஈஷ்வரன்,{40} அஹிர்புத்ந்யன், வெல்லப்பட முடியாத கபாலி, பெருஞ்சக்திவாய்ந்த ஸேநாநி ஆகியோர் பதினோரு ருத்திரர்களாக அறியப்படுகிறார்கள்.{41}(34-41)

சுரபியானவள், காளைகளையும், வேளாண்மையில் வளராத மரங்கள், அவரைகள், மண், ஆடுகள், மிகச் சிறந்த அமுதம், மருத்துவம் சார்ந்த மூலிகைகள் ஆகியவற்றைப் பெற்றாள்.{42} தர்மன், சுரபியிடம் லக்ஷ்மி, காமா ஆகியோரையும், ஸாத்யாவிடம் ஸாத்யாவையும் பெற்றான்.{43} பிரபவன், சிவனன், ஈசானன், சுரபி, ஆரண்யன் (காடு), மருத்தன், விஷ்வாவசு, மஹிஷன், தநூஜன், விஜ்ஞாதன், மநஸன்,{44,45} மத்ஸரன், விபூதி ஆகியோரும் சுரபியின் மகன்களாக அறியப்படுகின்றனர். சாத்யர்களின் உலகில் வழிபடப்படும் சாத்யனும் அதைத் தொடர்ந்து வாசவனும் மலைகளையும், பாம்புகளையும், காளைகளையும் பெற்றனர்.{46,47} தர்மன் சுசாமையிடம் முறையாக, மருதேவன், துருவன், விஷ்வாவசு, தலைவன் சோமன், பர்வதன், யோகேந்திரன், வாயு, நிகிருதி ஆகியோரைப் பெற்றான்.{48} தர்மன் விஷ்வையிடம் விஷ்வதேவர்களைப் பெற்றான் என்று கேள்விப்படுகிறோம். பெருங்கரங்களைக் கொண்ட ஸுதர்மன், பெருஞ்சக்திவாய்ந்த ஷங்கபன், உக்தன், வபுஷ்மான், விஷ்வாவசு, சுபர்வன், பெருஞ்சிறப்புமிக்க விஷ்ணு, ஸ்கும்பு, சூரியனைப் போன்ற பெரும்பிரகாசம் கொண்ட ரிஷியின் மகனான ருரு ஆகியோர் சாக்ஷுஷ மனுவின் சந்ததிகளாகின்றனர்.{49-52} விஷ்வை விஷ்வதேவர்களைப் பெற்றாள். தர்மன் மருதவதியிடம் அக்னி, சாக்ஷன், ஹரி, ஜோதி, சாவித்ரி, மித்ரன், அமிருதன், பெருங்கரங்களைக் கொண்ட சங்ஷேபன், விரஜன், சுக்ரன், விஷ்வாவசு, விபாவசு, அஷ்மந்தன், சித்ரரஷ்மி, நிஜுதி, ஜயோனா அத்புதி, சாரித்ரன், பாஹுபன்னகன், பிறரின் பேராற்றலை வளர்க்கும் பிரஹத்பூதன் ஆகிய மருத்துகளைப் பெற்றான்.{53-56}(42-56)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, கசியபர் அதிதியிடம், இந்திரன், விஷ்ணு, பகன், துவஷ்டா, வருணன், அங்ஷன், அரமன், ரவி, பிஷன், மிதரன், வரங்கொடுக்கும் மனு, இந்திரன் என்ற மிக முக்கியமான பனிரெண்டு ஆதித்யர்களைப் பெற்றார்.{57,58} ஆதித்யன் சரஸ்வதியிடம் ரூபன், பலன் என்ற மிக அழகிய மகன்கள் இருவரைப் பெற்றான். திதி தைத்தியர்களையும், தனு தானவர்களையும் பெற்றனர்.{59} தானவர்கள், சுரவையிடம் ஊர்வனவற்றையும், காலையிடம் காலகேய அசுரர்களையும், ராட்சசர்களையும் பெற்றனர்.{60} ஓ! பரதனின் வழித்தோன்றலே, அனயுஷா நோய்கள் அனைத்தையும், பேரிடர்களையும் பெற்றாள். கோள்களின் அன்னையான சிம்ஹிகை, கந்தர்வர்களைப் பெற்றாள், பிராதை அப்சரஸ்களையும், குரோதை கணங்கள், பிசாசங்கள், யக்ஷர்கள், குஹ்யர்களையும், சுரபி, நான்கு கால்களைக் கொண்ட விலங்குகள் அனைத்தையும் பெற்றனர். விந்தை அருணனையும், கருடனையும் பெற்றாள், கத்ரு பாம்புகள் அனைத்தையும் பெற்றாள்.{61-64}

ஓ! மன்னா, உயரான்ம பிரம்மன் தாமரையில் தோன்றியபோது விஷ்வதேவர்கள் இவ்வோறே தங்களைப் பெருக்கிக் கொண்டனர்.{65} தாமரையின் தோற்றம் குறித்த இந்தப் பழங்கதையைத் துவைபாயனரிடம் {வியாசரிடம்} இருந்து நாம் கேட்டோம். அந்தப் பெரும் ரிஷி தொடக்கம் முதல் முடிவு வரை அதை விவரித்தபோது பெரிதும் உயர்வாக மதித்துப் பேசினார்.{66} முதல் தாமரையின் தோற்றம் குறித்த இந்தக் கதையை எப்போதும் கவனத்துடன் படிக்கும் பெரும் மனிதன், இவ்வுலகில் துன்பம் அற்றவனாக, இம்மையில் பல்வேறு இன்பங்களை அனுபவித்து, மறுமையில் நித்திய அருளைப் பெறுவான்” என்றார் {வைசம்பாயனர்}”.(57-67)

ஜனமேஜயன் கேள்வி | பவிஷ்ய பர்வம் பகுதி – 15-(ஜநமேஜயப்ரஷ்ந꞉)-பிரம்ம ஞானம் குறித்து வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பிராமணரே, பெருமைமிக்கதும், சிறப்புமிக்கதுமான எங்கள் குல {வம்ச} விளக்கத்தை நான் கேட்டேன்.{1}

பல அறங்களையும், பல்வேறு சந்தங்களையும், தொடர்மொழிகளையும், குறுகியதாக இருந்தாலும் இனிய சொற்களையும் கொண்டிருந்தன, வாழ்வின் மூன்று நோக்கங்களைத் தரவல்லவையாகவும் அவை இருந்தன.{2,3}(1-3)

என் முன்னோர்கள், மன்னன் துரியோதனனுடன் உண்டான சச்சரவின் காரணமாகத் தங்கள் போட்டியாளர்களை வெல்வதற்காகவும், தங்கள் குல வழித்தோன்றல்களைக் கொல்வதற்காகவும், பிராமணர்களின் சக்தியையும், போர்வீரர்களின் ஆற்றலையும் அழிக்கத் தகுந்தவற்றைப் பயன்படுத்தவில்லை என நீர் விளக்கிச் சொன்னீர்.{4,5}

அந்தப் பயங்கரப் போரில் கொல்லப்பட்ட மன்னர்களின் வழித்தோன்றல்கள் தங்கள் தங்களுக்குரிய நாடுகளை அடைந்தனர் என்றும், தெய்வீகத் தலைவனின் உத்தரவைப் பின்பற்றுவதற்காகக் குருக்களின் மன்னன் உறுதியாக நிறுவப்பட்டான் என்றும் நீர் விளக்கிச் சொன்னீர்.{6}

ஓ! இருபிறப்பாளரில் முதன்மையானவரே, மூன்று வர்ணங்களின் கடமைகளையும், தெய்வக லோகத்தை ஒருவன் அடையக்கூடிய வழிமுறைகளையும் நீர் முறையாக விளக்கிச் சொன்னீர்; உயிரினங்களின் மீது கொண்ட கருணையால் நான்கு வர்ணங்களின் கடமைகளையும் நீர் பல வழிகளில் விளக்கிச் சொன்னீர்.{7,8}

கர்மத்தின் வீழ்ச்சியில் தெய்வீகம் ஆதிக்கம் செலுத்தும்போது சிலர் பிறப்பின் மூலம் இழிந்த நிலையை அடைகிறார்கள், சிலர் உயர்கிறார்கள் என்பதையும் விளக்கிச் சொன்னீர்.{9}

பணிவுடன் இருப்பதன் பயன்களைப் பல பகுதிகளாகப் பகுத்தும் சொன்னீர். கொடைகளின் பயன்கள், கர்மத்தின் பயன்கள் ஆகியவை தொடர்பாக நீர் சொன்ன சொற்கள் உண்மையில் இனிமையானவை.{10}

ஓ! மதிப்பிற்குரிய ஐயா, ஒரு தேவ நாளுக்குள் கூட {ஒரு வருடத்திற்குள் கூட} பாரதமென்னும் இந்தப் பெரும் வரலாற்றை என்னால் படிக்க முடியவில்லை.{11} ஆனால் ஐயா, பிரம்மத்துடன் ஐக்கியமாவதற்கான ஞானம் குறித்து உம்மிடம் சுருக்கமாகக் கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்” என்று கேட்டான்.{12}(4-12)

பரப்ரம்மம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 16-ஸாங்க்யயோகவிசார꞉)-பிரம்ம ஞானம் குறித்து விளக்கிச் சொன்ன வைசம்பாயனர்.

வைசம்பாயனர் {ஜனமேயஜனிடம்}, “ஓ! மன்னா, உன்னுடைய ஐம்புலன்களையும் {பஞ்சேந்திரியங்களையும்} கட்டுப்படுத்தி, தூய மனத்துடனும், முழு மனத்தின் கவனத்துடனும் நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.{1} எவனைக் கர்மத்தின் மூலம் அடைய முடியாதோ, எவன் பிரம்ம ஞானத்தை அறிந்தவர்கள் முன் தோன்றுவானோ, எவன் செயல்களில் பற்றில்லாதவனோ, எவன் பிரம்மத்துடன் தொடர்புடையவனோ,{2} எவன் அண்டத்தின் வெளிப்படாத காரணனாக {அவ்யக்த காரணனாக} இருக்கிறானோ, எவன் நித்தியனோ, எவன் வடிவத்துடனும், வடிவம் இல்லாமலும் இருக்கிறானோ அவனை நிஷ்கள {பகுபடாத, தூய்மையான} புருஷன் என்று அறிவாயாக. ஆத்மாவில் இருந்து பெறப்படும் அகங்காரம் {தன்முனைப்பு}, இந்தப் புருஷனிலிருந்தே வருகிறது.{3}(1-3) அவன் தெய்வீக வடிவைக் கொண்டிருக்கிறான், அவன் புலன்நுகர் பொருட்களின் தலைவனாக இருக்கிறான், அவன் எண்ணத்திற்கு அப்பாற்பட்டவனாகவும், நித்தியனாகவும், யுகங்களின் பிறப்பிடமாகவும்,{4} காலத்தின் மூன்று வடிவங்களாகவும், பிறப்பில்லாதவனாகவும், எங்கும் நீக்கமற சமமாக நிறைந்தவனாகவும் இருக்கிறான். நாராயணனைக் குறித்த அறிவைக் கொண்டவர்கள், வெளிப்படாதவனில் இருந்து தனித்தவனாக இவனை அறிகிறார்கள்.{5}

அவன் அனைத்தையும் புரிந்து கொள்கிறான், எங்கும் செல்பவனாக இருக்கிறான், எங்கும் தன் தலையைக் கொண்டிருக்கிறான், அனைத்தையும் காண்கிறான், அனைத்தையும் நோக்கித் தன் முகத்தைக் கொண்டிருக்கிறான்.{6} அனைத்தையும் கேட்கிறான், வெளியெங்கும் விரிந்திருக்கிறான். அவன் காரண, காரியங்களுக்குக் காரணனாகவும், வெளிப்பட்டவனாகவும், வெளிப்படாதவனாகவும் இருக்கிறான், அவனுடைய நகர்வை எவராலும் காண முடிவதில்லை.{7}(4-7)

அவன் எண்ணத்திற்கு அப்பாற்பட்டவனாகவும், வடிவமற்றவனாகவும் இருந்தாலும், வடிவத்தை ஏற்றுக் கொண்டு, தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, மரத்தில் நெருப்பைப் போல எங்கும் திரிந்து கொண்டிருக்கிறான்.{8} அவனே பரமேஷ்டி, அவனே பிரஜாபதி, அவனே உலகங்களின் தலைவனாகவும் இருக்கிறான். அவனுடைய இந்தப் பெயர் உண்மையில் பாடப்படுகிறது.{9} வெளிப்படாதவனான அவன், பிரம்மயோகத்தின் மூலம் வெளிப்படுகிறான். அஹங்காரமானது, நாராயணனில் இருந்து உண்டாகும் அறியாமையால் பெறப்படுகிறது.{10}(8-10)

சுயத்தின் நனவுடன் கூடிய இந்தப் புருஷன் பிரம்மமாக நிலைத்திருக்கிறான். அசைவன, அசையாதனவற்றை உள்ளடங்கிய உலகத்தின் தலைவனான அவன் பிரம்மன் என்று அழைக்கப்படுகிறான்.{11} எவன் இந்த அண்டத்தைப் படைத்தானோ, எவன் அனைத்துக்குப் பிறப்பிடமாக இருக்கிறானோ அந்தத் தலைவன், “நான் அனைத்தையும் படைப்பேன்” என்றான்.{12} பிரம்மன் இதைச் சொன்னபோது, இயற்கையில் இருந்து அங்காரத்தின் நனவு உண்டானது, இவ்வாறே மொத்த உலகமும் இருப்புக்குக் கொண்டு வரப்பட்டது.{13} ஆனால், உண்மையான, எல்லாம்வல்ல, குணங்களற்ற பிரம்மமானது, பிரம்மமாகவே நீடித்தது.{14} வெளிப்படாத பிரம்மத்தின் இயல்புத் தன்மைகளான நுட்பமான ஐந்து பூதங்களில் இருந்து வேதங்களும், அவற்றின் பல்வேறு கிளைகளும் வெளிப்பட்டன.{15}(11-15) அனைத்தையும் வெளிப்படுத்தும் பிரம்மத்தால் ஆணையிடப்படும் பிரம்மன், இயற்கையில் இருந்து ஒரு வடிவை ஏற்றுக் கொண்டு நீரைப் படைத்தான்.{16} அதன் பிறகு, ஈஷ்வரனின் ஆணையைப் பின்பற்றும் படைப்பாளர்களின் மத்தியில் ஏழாவது பிரம்மன், முன்பைப் போலவே காற்றைப் படைத்து, அதைத் தாங்கி தாத்ரி என்ற பெயரை ஏற்றான்.{17} முன்பு இந்த அண்டம் காற்றில் இருந்து உண்டாக்கப்பட்டு, நீரின் அடியில் மூழ்கியிருந்த போது, தார்ஜச தேவர்கள் அதை உயர்த்தியதால் மொத்த அண்டமும் வெளிப்பட்டது.{18} ஈஷ்வரன் தன் படைப்பை நிலைக்கச் செய்யப் பூமியை உண்டாக்க விரும்பியபோது, அவன் நீரின் ஒரு பகுதியை திடமான பொருளக மாற்றினான், எஞ்சியவை நீர்மமாகவே இருந்தன; அப்போது மக்கள் பூமியைக் கண்டார்கள்.{19}(16-19)

நீரானது ஒரு திடப் பொருளாக மாற்றப்பட்டதால் பூபுருஷன் எழுந்து பயங்கர ஒலியால் திசைகள் அனைத்தையும் நிறைத்து, “நான் நீருக்கு மேல் வாழ விரும்புகிறேன். நீரானது திடமாக மாற்றப்பட்டதால் நான் பீடிக்கப்பட்டுக் களைத்திருக்கிறேன். எனவே என்னை உயர்த்துவீராக” என்றான்.{20,21} அதன்பிறகு பூமியான பிருத்வி, உயிரினங்கள் அனைத்தையும் ஆதரித்து எங்கும் பரந்து விரிந்தவளாகச் சிறிது இடம்பெற விரும்பி, ஒரு வடிவை ஏற்று, “என்னை உயர்த்துவீராக” என்றாள்.{22} அந்த இனிய சொற்களைக் கேட்ட ஹரி, ஒரு பன்றியின் வடிவை ஏற்று, பெருங்கடலுக்குள் குதித்தான். அவன், நீரில் இருந்து பூமியை உயர்த்தும் மிகக் கடினமான பணியைச் செய்துவிட்டு, எவரும் தன்னைக் காணமுடியாத படி (மனக்குவிப்புடன்) சமாதியில் ஈடுபட்டான்.{23} பன்றியின் வடிவை ஏற்றுப் பூமியை உயர்த்தியவனே பிரகாசமான பிரம்மம் ஆவான். சிலர் அவனை ஆகாயமாக அறிகிறார்கள். அனைத்தையும் படைத்த பிரம்மன், அவனில் இருந்தே உண்டானான்.{24} அனைத்துக்கும் பிறப்பிடமான அந்த ஈஷ்வரன், ஞானத்தின் நுட்பமான மன யோகத்தின் மூலம் பாம்பு, ஆமை ஆகியவற்றின் வடிவில் இன்னும் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிறான்.{25} பூமியின் உட்புறத்தையும், நீரின் உட்புறத்தையும் பிளந்து, சிரித்துக் கொண்டே சூரியனைப் படைத்து அவனை உயரத்தில் நிறுத்தினான்.{26} சூரிய லோகத்தில் இருந்து முழு வெப்பமும் வெளிப்பட்டது, சந்திர லோகத்தில் இருந்து முழு நீரும் வெளிப்பட்டது.{27} நித்திய ஞானத்தில் இருந்து சந்திரன் வெளிப்பட்டதாலும், அவன் பரமஞானம் கொண்டவன் என்பதாலும் அவன் சோமன் என்று அழைக்கப்பட்டான்.{28}(20-28)

சந்திரலோகத்தின் எல்லையில் இருந்து காற்றை (உயிர் மூச்சு) வெளிப்பட்டது. அவன் அனைத்து தோற்றப்பாடுகளின் காரணங்களையும் விளக்கி வேதங்களைக் கவனிக்கத் தொடங்கினான்.(29) அவனது யோகத்தின் மூலமும், பிரம்மத்தில் இருந்து உண்டாகும் அவனது இயல்பின் காரணமாகவும் அவன் தெய்வீகனும், நித்தியனுமான ஒரு புருஷனைப் படைத்தான்.(30) அவனுடைய நீர்ம நிலை நீரானது, திட நிலை பூமியானது; அவனது துளைகள் வானமானது, ஒளியுள்ள பகுதி கண்ணானது.(31) பிரம்மத்தில் இருந்து புருஷனாக வெளிப்படுவதும், பிரகாசத்தால் பெறப்பட்டதுமான மஹத் கோட்பாடு, ஐம்பூதங்களுடன் சேரும்போது உடலை காற்றின் மூலம் கலங்கடிக்கிறது.(32) ஜீவன் அல்லது மனித ஆத்மாவானது, புத்தியில் ஞானம் போல வெளிப்படையாக நிலைத்திருக்கிறது, ஈஷ்வரன் மட்டுமே அதை அறிவான்.(33) உடலில் நித்தியமாக நிலைத்திருக்கும் சுயம் அல்லது நெருப்பானது, ஐம்பூதங்களுடன் சேர்ந்த சூரியனாகிறது (அதாவது பரமாத்மா ஆகிறது).(34)

முற்பிறவி செயல்பாடுகளின் காரணமாக மனித ஆன்மாவானது, (ஆன்மவியலில்) முன்னேற்றத்தையோ, இழிநிலையையோ அடைந்து இன்பத்தையோ, துன்பத்தையோ அனுபவிக்கிறது.(35) புலன்களால் கலக்கமடைந்து, பிரம்மத்தை (அதன் உண்மை வடிவத்தைக்) குறித்த அறியாமையுடன் கூடிய ஒருவன், தன் கர்மத்தின் (செயல்களின்) காரணமாகப் பிறப்பையோ, இறப்பையோ அடைகிறான்.(36) ஒரு மனிதன் பரப்பிரம்மமாகாத வரையில் அவன் இவ்வுலகில் மீண்டும் மீண்டும் பிறவிகளை அடைகிறான்.(37) யோகத்தின் பயனால் தன் புலன்களைக் கட்டுபடுத்திப் பிரம்மத்துடன் ஐக்கியமாகும்போதே அவன் உண்மையான மகிழ்ச்சியை {பேரின்பத்தை} அடைகிறான்.(38) இருப்பினும் அவன் (மாற்றங்களால் அமைந்த) இந்த உலகில் இருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு பிரம்மமாகிறான்; அவன் கோபத்தால் அழிவையோ, புலன் நுகர் பொருட்களில் பற்றையோ அடைவதில்லை.(39)

உயர்ந்த ஆன்ம சக்திகளைக் கொண்டவனும், அனைத்தையும் அறிந்தவனுமான இவன் பூதங்களின் சாரங்களுக்குள் நுழைகிறான். அப்போது அவன் பிறப்பையும், இறப்பையும் அறிகிறான்.{40} பிரம்மத்தின் உண்மை வடிவை அறிந்த மனிதன், கடந்த கால, எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் முக்திக்கான வழிமுறைகளின் ஞானத்தை அடைந்து, மிகச் சிறந்த கதியை எட்டுகிறான்.{41}(40,41) அவன் தன் மனத்தால் அறிவுசார் புலன்கள் அனைத்தையும், பெருங்கடலைக் கலங்கடிக்கும் காற்றைப் போல மனத்தைக் கலங்கடிக்கும் ஆசைகள் அனைத்தையும் வெல்வான்.(42) மனிதனின் ஆன்மாவானது, ஞானக் கண்ணின் (ஆன்ம அறிவின்) மூலம் ஆசைகள் அனைத்தையும் வென்று, மனத்தை மாசுப்படுத்தும் உடலின் தளைகள் அனைத்தில் இருந்து விடுபடும்.(43) நுட்பமான உடலைக் கொண்ட யோகி, ஆன்ம அறிவியலின் மூலம் மறுமையைப் படைக்கவோ, அழிக்கவோ செய்கிறான்; இந்த உலகத்தையே கூட அவனால் படைக்க இயலும்.(44) பரமாத்மாவில் நிலைத்த மனத்தைக் கொண்டவனால், முற்பிறவி செயல்களின் காரணமாக இழிந்த நிலையில் பிறந்தவர்களை விடுவிக்க முடியும்.(45) செயல்பாடுகள் முக்தி {விடுதலை}, மற்றும் இன்பம் ஆகிய இரண்டிற்கும் வழிவகுக்கும். ஆனால், பிரம்மத்தில் தன்னை மூழ்கச் செய்தவனுக்கு உலகம்சார்ந்த இன்பங்களுக்கு வழிவகுக்கும் செயல்கள் ஏதும் இல்லை” என்றார் {வைசம்பாயனர்}.(46)

ஆறுகளின் படைப்பு | பவிஷ்ய பர்வம் பகுதி – 17-(கர்மபலபரிச்சேதாய யோகவர்ணனம்)-ஆறுகள் படைக்கப்பட்டது குறித்தும், ஆசிரமங்களைக் குறித்தும் ஜனமேஜயனுக்கு விளக்கிச் சொன்ன வைசம்பாயனர்…

வைசம்பாயனர் {ஜனமேயஜனிடம்}, “பெருகும் சூரியனால் பூமியின் பரப்பில் உண்டாக்கப்பட்ட துளையில் மைநாக மலை நிலைநிறுத்தப்பட்டது.(1) ஆசையானது பெருங்கடலை நிறைத்ததால் அது பர்வதம் என்றும், நிலை நிறுத்தப்பட்டதால் அஃது அசலம் என்றும் அழைக்கப்பட்டது; எனினும் இயல்பாகவே அது மேரு என்றே அழைக்கப்பட்டது.(2)

பரந்திருக்கும் சுமேரு மலையின் உச்சியில், பிரகாசத்தால் பெறப்பட்டவனும், தலை, கால் முதலியவற்றுடன் வெளிப்பட்டவனும், பெருஞ்செழிப்பைக் கொண்டவனுமான புருஷன் வாழ்கிறான். அவன் இயற்கையின் மூலம் பரமாத்மாவால் படைக்கப்பட்டான்.(3) தலையில் கிடக்கும் பிரம்ம சக்தியானது, அந்தப் புருஷனின் எரியும் ஒளி வடிவை ஏற்றது.(4) அவனுடைய வாயில் இருந்து நான்கு வாய்களுடன் கூடியதும், பிரம்ம அறிவைக் கொண்டோரில் முதன்மையானவர்களும், இருபிறப்பாளர்களில் முதன்மையானவர்களுமான நால்வருடன் கூடியதுமான பிரம்மம் அவனுடைய பிரகாசத்தில் எரிவது போலவும், வெளிப்பட்டது. அவனில் இருந்தே பெரும்பூதங்கள் மீண்டும் இருப்புக்குள் வந்தன.(5,6) அவ்விடத்தில் (மேருவில்) நிலைத்திருந்த பிரம்மத்தால் நீரில் இருந்து பூமி உயர்த்தப்பட்டதால் அவன் புலப்படாதவனாக இருப்பினும் மனிதர்களின் பார்வைக்குள் வந்தான்.(7)

மேருவின் உச்சியாக இருக்கும் பிரம்மலோகமானது, சொர்க்கத்திற்கும் பூமிக்கும் இடையில் அமைந்திருக்கிறது. அது நூறு, அல்லது ஆயிரம் யோஜனைகள் உயரம் கொண்டதாகவும், அதைவிட நான்கு மடங்கு அகலம் கொண்டதாகவும் இருக்கிறது.{8} மேருவின் அளவு கற்பனையானதே என்பதாலும், ஒரு பாலைவனத்தின் பரப்பையோ, ஏரியின் ஆழத்தையோ அளப்பது போல அதை அளந்துவிட முடியாது என்பதாலும், தெய்வீக ஞானத்தைக் கொண்ட எந்த மனிதனாலும் பல்லாயிரம் வருடங்கள் ஆனாலும் அதன் உயரத்தை அளக்க முடியாது.{9} அதன் உயரத்தையும், பரப்பையும் போலவே அதன் சுற்றளவும் எல்லையற்றதே. ஓ! மன்னா, நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட சுமேருவின் பரப்பளவு நூறு யோஜனைகளாகும்.{10}(8-10)

ஆன்ம சாதனை செய்தவர்களும், பிரம்ம ஞானத்தை அறிந்தவர்களுமான சில துறவிகள் இந்த மலையின் இன்னும் பல சிறப்புகளைச் சொல்கிறார்கள்.(11) மருத்துகள், தேவர்கள், ருத்திரர்கள், வசுக்கள், ஆதித்தியர்கள், விஷ்வதேவர்கள் ஆகியோருடன் அவன் லோகபாலர்களைப் பாதுகாக்கிறான்.(12) விஷ்ணுவின் ஆற்றல் எங்கும் சமமாகப் பரவி இருக்கிறது. ஓ! மன்னா, அவன் {புருஷன்}, பிரம்மத்தில் இருந்து பெற்ற தன்னுடைய பிரம்ம உடலில் தெய்வீக விஷ்ணுவுடன் சேர்ந்து, சூரியன் (நெருப்பு), வருணன் (நீர்) ஆகியோரிடம் இருந்து வெளிப்படும் பூமியைப் பாதுகாக்கிறான். (13,14)

வாய்மை நிறைந்த பிராமணர்கள், தாங்கள் செய்யும் பல்வேறு நோன்புகளினாலும், வேத கல்வியில் அவர்கள் அடைந்த தேர்ச்சியாலும் பிரம்மத்தைப் பாடியிருக்கிறார்கள்.(15) மூவுலகங்களும் பிரம்மனில் நிலைத்திருக்கின்றன, பிரம்மம் வெளிப்பட்ட நிலையிலோ, வெளிப்படாத நிலையிலோ அனைத்திலும் படர்ந்தூடுருவி இருக்கிறது.(16) வேதங்களில் தேர்ச்சியடைந்த பிராமணர்கள், வேதங்களால் அனுமதிக்கப்பட்டவையும், ஈஷ்வரனால் சுவாசிக்கப்பட்டவையும், மனத்தைத் தூய்மை செய்து, செயல்களைச் சொல்லாத சொற்களிலும் வஞ்சனையற்ற பிராமணர்களால் பயிலப்படுபவையும், தினம் தோறும் செய்ய வேண்டியவையுமான கட்டாயச் சடங்குகளை நமது நன்மைக்கானவை என்று கருதுகிறார்கள். இந்தச் சடங்குகள் நல்ல செயல்களின் பலனை விளைவித்தாலும் அவை பிரம்மத்தின் ஒரு சிறு பகுதியாகவே அமைகின்றன. இவ்வாறே ஸ்ருதிகள் சொல்கின்றன.{17,18} 

வாய்மை நிறைந்த பிராமணர்கள், அனைவரின் ஆன்மாவான பிரம்மத்தின் மிக நுட்பமான பகுதியே இந்த அண்டம் என்று தீர்மானித்திருக்கிறார்கள். பிராமணர்கள், தாங்கள் அறிவுசார்ந்த தங்கள் பிரிவுகளின் பன்முகத்தன்மையால் வேள்விகளில் பிரம்மன், இந்திரன், மித்திரன், வருணன் முதலிய பெயர்களால் ஒரே பிரம்மத்தையே வழிபடுகிறார்கள். ஒரே பெரும் பிரம்மத்துக்கே விப்ரர்கள் பல்வேறு வழிகளில் பெயர் கொடுத்திருகிகறார்கள்.{19} அண்டத்தின் வடிவம் திரளானது, மனத்தின் வடிவோ நுட்பமானது. தலைவன், இவ்விரண்டு வடிவங்களும் புத்திக்கு மட்டுமே சொந்தமானவை என்பதை நினைவில் கொண்டு முதலில் ஆண், பெண் ஐக்கியத்தைப் படைத்தான்{20}.(17-20)

தெய்வீகத் தலைவன் பிரம்மன், பல்வேறு இன்பங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டுத் தேவியுடனும், தன் தொண்டர்களுடனும் அவற்றை இன்புறுகிறான்.(21) எளிய நாட்டங்களைக் கொண்டவர்களாக இருந்தாலும் எப்போதும் முக்திக்கு வழிவகுக்கும் வழியிலேயே செல்லும் பிரம்மவாதிகளில் பிரம்மனே முதன்மையானவன்.(22) (உமை ஆன்ம அறிவியலாகவும், பரமேஷ்வரன் அதைப் புரிந்து கொள்ளும் நித்திய ஞானமாகவும் இருக்கின்றனர்) அவனது உடலே நீரோடையாகச் சொர்க்கத்தில் இருந்து பாய்கிறது. சோமன் {சந்திரன்} இவ்வோடையிலேயே பிறந்தான்; இதன் மூலமே மஹேஷ்வரன் கணங்களின் தலைவனாக ஆனான்.(23)

இயல்பாகவே மஹேஷ்வரனை, கணங்களின் மன்னனாக நிறுவியபோது பேரொலியை வெளியிட்டதால் ஆறு என்பது {நாதம் என்ற சொல்லில் இருந்து} நதி என்றழைக்கப்பட்டது.(24) அவள் {ஆறு} பிரம்மலோகத்தில் தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொண்டு, தன் வழியில் நின்ற மலைகளைக் கடந்து, பூமியை நோக்கி ஏழு வழிகளில் இறங்கி வந்தாள்; இதன் காரணமாகவே அவள் கங்கை என்று அழைக்கப்பட்டாள்.(25) ஓ! மன்னா, பெருங்கடலில் கலக்கும் முன் கோதாவரியின் வடிவில் தன்னை ஏழாகப் பிரித்துக் கொண்டு, ஜானவியின் வடிவில் மேலும் ஆயிரம் பகுதிகளாகத் தன்னைப் பிரித்துக் கொண்டு பல்வேறு புனிதத்தலங்களுக்குப் பாய்ந்து சென்றாள்.(26)

முதலில் திரள் பூதங்கள் பெரும்பூதங்களில் இருந்து உண்டான பிறகே புத்தியின் செயல்பாடுகள் தொடங்குகின்றன.(27) அவனது தாமரை வாய்கள் நான்கில் இருந்து உண்டான வேதம், அதுமுதலே மனித குலத்திற்கு ஆன்ம போதனைகளின் ஊற்றாகத் திகழ்கிறது.(28) புனித வேள்வியானது அவனது ஞானத்தில் இருந்தும், புத்தியில் இருந்தும் வெளிப்பட்டது; நான்கு புரோகிதர்கள் அதன் நான்கு கால்களாகினர்; பெரும்பாட்டன் பிரம்மன் அதற்குத் தலைவனானான் {வேள்வியின் தலைவனானான்}.(29)

உலகத்தைத் தாங்கும் தர்மத்தின் நான்கு கால்களில் (நான்கு ஆசிரமங்களில்) முதலில் வருவது மாணவ நிலை என்றழைக்கப்படும் பிரம்மசர்யம், மிகப்புனித நிலையான இல்லறவாசி நிலை {கிருஹஸ்தம்} இரண்டாவதாகும்.(30) காட்டில் உள்ள அறத்துறவியின் நிலை {வானப்ரஸ்தம்}, பெரும்பிரம்மத்துடன் ஐக்கியமாகும் {சந்நியாச} நிலை ஆகியன மூன்றாவது, நான்காவது நிலைகளாகும். அறவாழ்வின் இந்நான்கு நிலைகளும் சொர்க்கத்தை அடைவதற்கு வழிவகுப்பவையாகக் கருதப்படுகின்றன.(31) யோகப்பயிற்சியின் மூலமும், வேதாந்தத்தை உண்மையாகப் புரிந்து கொள்வதன் மூலமும் மனிதனின் மனத்திறன்கள் வளர்ச்சியடைகின்றன. நித்திய வேதங்கள் பிரம்மசர்யம் பயில்வதற்காக நிலைத்திருக்கின்றன.(32) பித்ருக்கள் இல்லறவாசிகளின் ஒழுங்கை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றுவதன் மூலம் நிறைவடைகிறார்கள், சுமேரு மலையின் உச்சியில் இருக்கும் ரிஷிகள் யோகத்தின் மூலம் நிறைவடைகிறார்கள்” என்றார் {வைசம்பாயனர்}[1].(33)

மனத்தில் நிலைத்த சிந்தனை | பவிஷ்ய பர்வம் பகுதி – 18-(மநோதாரணவிசாரம்)-அப்சரஸ்கள், கந்தர்வர்கள் ஆகியோரும், சரஸ்வதி தேவியும் மற்றும் பல உயிரினங்களும் படைக்கப்பட்டது; மெய் அறிவியல்களான பிரம்ம யோகம், சாங்கிய யோகம்…

வைசம்பாயனர் {ஜனமேயஜனிடம்}, “பெரும்பாட்டன் {பிரம்மன்}, தூய புத்தியின் வடிவை ஏற்றுத் தன் மனத்திறன்களின் மூலம் மொத்த படைப்பையும் கருதிப்பார்த்து, புறப் பொருட்கள் அனைத்தில் இருந்தும் தன் உள் ஆன்மாவை விலக்கி பிரம்மத்தை அடைவதற்கான செயல்களில் ஈடுபடுகிறான். மனக்குவிப்பில் ஈடுபட்டும், பிரம்மத்துடன் ஐக்கியமடைந்தும் அவன் தன் மனத்தால் சந்ததியைப் படைத்தான்.{1,2} எல்லாம் வல்லவனான பிரம்மன் தன் கண்களின் மூலம் அழகிய அப்சரஸ்களையும், தன் மூக்கின் நுனியில் இருந்து தும்புருவையும், பலவண்ண ஆடைகளை உடுத்தியவர்களும், வேதங்களை ஓதுவதிலும், பாடுவதிலும், ஆடுவதிலும், இசைக்கருவிகளை இசைப்பதிலும் திறன் படைத்தவர்களும், நூற்றுக்கணக்கானவர்களும், ஆயிரக்கணக்கானவர்களுமான கந்தர்வர்கள் பிறரையும் படைத்தான்.{3,4}

எல்லாம் வல்லவனும், சுயம்புவுமான அந்தத் தேவன் {பிரம்மன்}, தன் யோகத்தின் மூலம் தன் எழிலின் அவதாரமாக விளங்குபவளும், மாசற்றவளுமான வேதவாணி {சரஸ்வதி} தேவியைத் தன் மனத்தில் படைத்தான்.{5} அவள் அழகிய கண்களையும், கேசத்தையும், புருவங்களையும், அழகிய முகத்தையும் கொண்டவளாக இருந்தாள். இனிய சொற்களையுடையவளான அந்தத் தேவி, நூறு இதழ்களைக் கொண்ட அழகிய தாமரையில் அமர்ந்தாள்.{6} ஓ! மன்னா, பூதங்களின் ஆன்மாவாகத் திகழும் பிரம்மன், அழகிய அப்சரஸ்களைத் தன் கண்களில் இருந்தும், இசைக்கருவிகளை இசைப்பதில் திறன்மிக்கவர்களும், இனிய குரலைக் கொண்டவர்களுமான கந்தர்வர்களைத் தன் மூக்கில் இருந்தும் படைத்துவிட்டு, பாடும் கலையை முன்வைத்து, பிற பிராமணர்களுக்கான சாமத்தை {சாம வேதத்தைப்} படைத்தான்.{7-9}(1-9)

அவனுடைய இரு கால்களில் இருந்து அசைவனவும், அசையாதனவும், மனிதர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், உரகர்கள், யானைகள், சிங்கங்கள், புலிகள் ஆகியவையும், நூற்றுக்கணக்கான பிற விலங்குகளும், புற்களும், நான்கு கால் விலங்குகளும் படைக்கப்பட்டன.{10,11} பணிகளுடன் {படைப்பு வேலைகளுடன்} சேர்த்துத் தங்கள் கைகளால் உணவை உட்கொள்பவர்களைத் தன் கைகளில் இருந்து அவன் படைத்தான். அனைத்து உயிரினங்களின் மகிழ்ச்சியை நாடிய அந்தப் படைப்பாளன், உயிர் காற்றுகளின் மூலம் சுவாசத்தின் பல்வேறு இயக்கங்களைப் படைத்தான். பிறகு அவன், ஐம்புலன்களையும் தடுத்துப் பேரின்பம் நிறைந்த பரமாத்மாவில் தன் மனத்தை நிலைநிறுத்தி அங்கேயே இருந்தான்.{12,13} அவன் தன் இதயத்தில் இருந்து பசுக்களையும், தன் கைகளில் இருந்து பறவைகளையும் படைத்தான்; அதன் பிறகு அவன் பல்வேறு வடிவங்களைக் கொண்ட நீர்வாழ் உயிரினங்களைப் படைத்தான்.{14}.(10-14)

யோகத் தலைவனும், தெய்வீகனுமான அந்தப் பெரும்பாட்டன், ஒளியில் எரிபவரும், ஆறு புலன்களை ஒடுக்குவதால் உண்டாகும் உண்மை ஞானத்துடன் கூடியவரும், தெய்வீக முனிவருமான அங்கீரஸைத் தன்னிரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளியில் இருந்து தன் யோக சக்தியின் மூலம் படைத்தான். மேலும் அவன், உயர்ந்த பக்திமானும், தெய்வீக முனிவருமான பிருகுவைத் தன் நெற்றியில் இருந்து படைத்தான்.{15,16} பெரும் யோகியான பிரம்மன், சச்சரவுகள் செய்பவரான நாரதரையும், சனத்குமாரரையும் தன் தலையில் இருந்து படைத்தான்.{17}(15-17)

பெரும்பாட்டன், இருபிறப்பாளர்களின் நித்திய மன்னனும், இரவுலாவியுமான சோமனைத் தன் வாரிசாக {யுவராஜனாக} நியமித்தபோது, பெரும்பூதங்களால் பெறப்பட்ட சக்தியுடன் கூடிய சந்திரனும்,{18} விண்மீன்களும், பல்வேறு உயிரினங்களால் {கிரகங்கள் பலவற்றுடனும்} வானத்தை நிறைத்து அங்கே உலவத் தொடங்கின.{19} பிரம்மன், யோகத்தின் மூலமும், மனப்பண்பின் மூலமும் ஆன்ம சக்திகளை அடைந்து, தன் உடலில் இருந்து அசையும் உயிரினங்களையும், அசையாத உயிரினங்களையும் படைத்தான்.{20} பிரம்மன், சூரியன் முதலிய பல்வேறு உலகங்களைப் படைத்து, இரவு பகலை உண்டாக்க பலரையும் நியமித்தான்.{21}

முன்பு சொன்னவை பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுக்கும். எனவே, பிரம்ம யோகமும், சாங்கிய யோகமும், அறிவியலறிஞர்களின் மெய் அறிவியலாக இருக்கின்றன. இது சார்வாகர்களாலும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. {22} இஃது ஒருமைப்படுத்தலுக்கும், பலவகைப்படுத்தலுக்கும் வழிவகுக்கிறது. இது பிறப்பையும், மரணத்தையும் உண்டாக்குகிறது. இதுவே பகுத்துணரும் ஞானமாக அறியப்பட வேண்டும்” என்றார் {வைசம்பாயனர்}.{23}(18-23)

க்ஷத்ர யுக விளக்கம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 19-(கர்மமார்ககதநம்)-பிரம்ம யுகம்; க்ஷத்ரயுகம்; வர்ண வேறுபாடு; தக்ஷனின் படைப்புத் தொழில்…

ஜனமேயஜன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பிராமணரே, பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுப்பதால் பிரம்மம் என்றழைக்கப்படும் முதல் யுகத்தைக் குறித்து நான் கேட்டிருக்கிறேன். ஓ! தலைவரே, இப்போது உகந்தவை அறிந்த ரிஷிகளால் பாடப்பட்டதும், சுருக்கமாகவும், விரிவாகவும் அமைந்த விதிமுறைகளைக் கொண்டதும், வேள்விகளால் அழகூட்டப்பட்டதுமான க்ஷத்ர யுகத்தைக் குறித்துக் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(1,2)

வைசம்பாயனர், “பல்வேறு ஈகைகளாலும், வேள்விகளாலும் போற்றப்பட்டதும், பல்வேறு உயிரினங்களால் அழகூட்டப்பட்டதுமான க்ஷத்ர யுகத்தின் பெருமையை நான் பாடப்போகிறேன்.(3)

நான்கு கரங்களைக் கொண்ட விஷ்ணுவாகத் தன்னை அறியும் தலைவன், இந்தக் கல்பத்தில் வேறுபாடுகளைக் கண்டு, பிரம்மனால் பெறப்பட்ட தக்ஷனாக அவதரித்துப் பல சந்ததிகளை உண்டாக்கினான். அவன், புலன்களிலும், உடலிலும் உள்ள பற்றைக் களைந்ததன் விளைவால், அகத்தில் உள்ள சுயத்தின் {ஆன்மாவின்} ஞானத்தைக் கொண்டிருந்ததாலும் பிராமணர்களுக்கு மத்தியில் புகழ்பெற்றவனாக இருந்தான். கட்டை விரலளவே இருந்த இந்தப் பிராமணர்கள் அனைவரும், முக்திக்கு வழிவகுக்கும் ஒழுங்குமுறைகளையும், அறச் சடங்குகள் பிறவற்றையும் பின்பற்றியதால் சூரிய லோகத்தைக் கடந்து செல்ல வல்லவர்களாகவும், பிற லோகங்கள் அனைத்திலும் திரிய வல்லவர்களாகவும் இருந்தனர். அவர்கள் எப்போதும் வேள்விகள் செய்வதிலும், புலன்களையும், மனப்புலன்களையும் அடக்குவதிலும் மும்முரமாக இருந்தனர். ஈஷ்வர இன்பத்தை ஈட்டுவதற்காக அவர்கள் தங்களை வேதச் சடங்குகளில் ஈடுபடுத்திக் கொண்டனர். அவர்கள் மூன்று வேதங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். பிரம்மசரிய வாழ்வைப் பின்பற்றிய அவர்கள் பிரம்மஞானத்தில் ஐயம்தெளிந்தவர்களாக இருந்தனர். நல்லொழுக்கத்தையும், நிறைந்த புத்தியையும் கொண்டவர்களான இந்தப் பிராமணர்கள், ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு மரணமடைந்தனர்.(4-8)

பிராமணர்களிடம் சத்வ குணமும், க்ஷத்திரியர்களிடம் ரஜஸ் குணமும், வைசியர்களிடம் ரஜஸ்-தமஸ் குணங்களும், சூத்திரர்களிடம் தமஸ் குணமும் நிறைந்திருக்கின்றன.(9) பிராமணர்களின் வண்ணம் வெள்ளையும், க்ஷத்திரியர்களின் வண்ணம் சிவப்பும், வைசியர்களின் வண்ணம் மஞ்சளும், சூத்திரர்களின் வண்ணம் புகை போன்ற கரு நிறமும் ஆகும். சிந்தனை நிறைந்த விஷ்ணுவால் இவ்வாறே அவர்கள் பகுக்கப்பட்டார்கள்.(10) ஓ! மன்னா, இவ்வாறே இவ்வுலகில் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று குணங்களின் அடிப்படையிலும், வண்ணங்களின் அடிப்படையிலும் பகுக்கப்பட்டனர்.(11) பணிகளின் வழிமுறைகளைக் கொண்டு மதிப்பிடப்பட்டாலும், உயர்ந்தவையும், அற்புதமானவையும், வெவ்வேறு வகையிலானவையுமான கடமைகளை நோற்கும் ஒரே அளவைக் கொண்ட மனிதர்கள் அவற்றின் பலன்களைப் பெறுவதற்காக நான்கு வர்ணங்களாகப் பகுக்கப்பட்டனர்.(12) முதல் மூன்று வர்ணத்தினர், வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்யும் உரிமை பெற்றவர்கள். எனவே, ஓ! மன்னா, விஷ்ணுவிடம் நீ கொண்ட நம்பிக்கையின் காரணமாக நீ வேதங்களைப் படிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறாய். இதன் காரணமாகவே பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் என்ற மூன்று வர்ணத்தாரின் பிறப்பும் தலைவனின் {விஷ்ணுவின்} அருளால் நிகழ்கிறது.{13}

விஷ்ணுவின் உண்மை வடிவைக் குறித்த அறிவொளியைக் கொடுக்கும் பணிகளால் சூழப்பட்ட தலைவன் தக்ஷ பிராசேதஸ், தன் யோக சக்தியின் மூலமும், ஞானத்தின் மூலமும் படைப்புத் தொழிலை மேற்கொண்டான்.{14} அதன்பிறகு, கலைகளின் மேன்மைக்காகவும், மூன்று வர்ணங்களுக்கும் தொண்டு செய்வதற்காகவும் சூத்திரர்கள் படைக்கப்பட்டனர்.{15} தொடக்கச் சடங்கைச் செய்வதற்கோ {தீக்ஷை பெறுவதற்கோ}, வேதங்களைப் படிப்பதற்கோ அவர்கள் உரிமை பெற்றவர்கள் அல்லர்.{16} கோல்களின் {அரணிக் கட்டைகளின்} உராய்வினால் நெருப்பு உண்டாவதற்கு முன்பு புகை எழுந்தாலும், அது நடைமுறைக்குப் பயன்படாததைப் போலவே, இவ்வுலகில் பிறவியை எடுத்துத் தங்களைப் பெருக்கிக் கொள்ளும் சூத்திரர்கள், தொடக்கச் சடங்கைப் {தீக்ஷை} பெறாதவர்களாக இருப்பதால் பல்வேறு வேத சடங்குகளையும் செய்ய இயலாதவர்கள் ஆகிறார்கள்.{17}(13-17)

பிறகு தக்ஷன், வேதங்களை ஆதரிப்போரும், வலுவானவர்களும், பேராற்றலும், சக்தியும், பிரகாசமும் கொண்டவர்களான தன் மகன்கள் பிறரைப் பெற்றான்.{18}

தக்ஷன் அவர்களிடம், “ஓ! சக்திமிக்க மகன்களே, உங்கள் வாய்களில் இருந்து உங்கள் அன்னையான பூமாதேவியின் பலத்தை அறிய விரும்புகிறேன். நான் சக்திமிக்கவனாக இருக்கிறேன் என்பதால் என்னால் பூமியின் எல்லையைக் காண முடியவில்லை; நீங்களும் என்னைப் போலவே இருக்க வேண்டும்.{19} உண்மையை உறுதி செய்து கொண்ட பிறகு நான் ஆற்றலையும், பலத்தையும் உயிரினங்களுக்கு மத்தியில் பிரித்துக் கொடுப்பேன். மண்ணின் பரப்பு அதிகமாக இருக்கும் காரணத்தால் என் உயிரினங்கள் தங்களைப் பெருக்கிக் கொள்வார்கள்” என்றான்.{20}

தலைவனுடைய பெரும் படைப்பாற்றலின் சாரத்தைக் கொண்ட பூமாதேவி, தன்னைக் காண விரும்பிய தக்ஷனின் மகன்களிடம் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை.{21} கிருத யுகத்தில், சத்வ குணத்தைக் கொண்ட பிரஜாபதியின் மகன்களுடைய தூய ஆன்மாக்கள், புருஷனால் தூண்டப்படாமல் உயிரினங்கள் அனைத்தின் அன்னையான இயற்கையெனும் பிரக்ருதியைக் கண்டு தூய்மையடையும்போது, வியர்வையின் மூலமும், முட்டைகளின் மூலமும் உண்டாகும் அனைத்தையும் படைத்து, இயற்கையாகவே உயிரினங்களைக் குறைத்தும், பெருக்கியும் படைப்பின் பயன்களைப் பெறுகின்றன” என்றார் {வைசம்பாயனர்}.{22,23}(18-23)

யோகத்தின் பயன்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 20-(ப்ரவ்ருத்திதர்மபலம்)-தக்ஷன் மகள்களைப் பெற்றது; அவர்களை தர்மன், கசியபர், சோமன் ஆகியோருக்குக் கொடுத்தது; யோகத்தின் பயன்கள்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, கல்வியின் அனைத்து வகைகளிலும் பொருளாக இருக்கும் என நான் நினைக்கும் நித்திய பிரம்மனைக் கொண்ட திரேதா யுகத்தைக் குறித்து நான் அறிய விரும்புகிறேன்” என்றான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “புருஷர்களில் முதன்மையான தக்ஷன், ஊக்கமிழந்தவனாக மேரு மலையின் உச்சியில் தன் யோக சக்தியின் மூலம் ஒரு பெண் வடிவை ஏற்றான்.{2} நன்கு அமைந்த தொடைகள், முலைகள், தாமரை போன்ற முகம், கருவிழிகள் ஆகியவற்றுடன் அவன் பேரழகு படைத்த ஒரு காரிகையானான்.{3} தக்ஷ பிராசேதஸ், தன் பாதி உடலால் அந்தக் காரிகையிடம் பத்மங்கள் என்ற பெயரில் கன்னிகையரைப் பெற்றான்.{4} அதன் பிறகு தக்ஷன், தன் ஆண் வடிவின் மூலம் பெண் வடிவைக் கைவிட்டு மிக அழகிய மனித வடிவை ஏற்றான்.{5} ஸ்மிருதிகளால் அங்கீங்கரிக்கப்பட்ட பிரம்மத் திருமணச் சடங்குகளின்படி, அவன் அந்தக் கன்னிகையரை {திருமணம் செய்து} கொடுத்தான்.{6} அவன் அவர்களில் பத்து கன்னிகைகளைத் தர்மனுக்கும், பதிமூவரை கசியபருக்கும், இருபத்தெழுவரை சோமனுக்கும் கொடுத்தான்[1].{7}ஓ! மன்னா, தக்ஷன் தன் மகள்களுக்குத் திருமணம் செய்து கொடுத்த பிறகு, பிரம்மன் வாழ்ந்து வந்த பிரயாகை என்ற புனிதத்தலத்திற்குச் சென்றான்.{8} அங்கே அவன் தன் மனம் சார்ந்த, புத்தி சார்ந்த புலன்களைக் குவித்து, தவம் பயின்று மான் உடன் சேர்ந்து உலகம் முழுவதும் பயணித்தான். அவன், புற்கள், கிழங்குகள், கனிகள் ஆகியவற்றை உண்டு தொடர்ந்து கடுந்தவங்களைச் செய்து வந்தான்.{9} தீங்கிழைக்காத அவனது குணத்தைக் கண்டு அந்த மான் பெரிதும் மகிழ்ந்தது; தொடக்கச் சடங்கு {தீக்ஷை} பெற்றவர்களும், அறப்பணிகளைச் செய்பவர்களும், தவம், துறவு, நோன்பு ஆகியவற்றின் மூலம் பாவம் அழிந்தவர்களுமான பிராமணர்கள் அவனது தவங்களின் பயன்களைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தனர்.{10}(2-10)

யோகத்துக்கும், புத்திசார்ந்த புலங்களுக்கும் இடையில் மோதல் நடக்கும் நேரத்தில் உடல்சார்ந்த துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனும், தன் மனத்தைக் கட்டுப்படுத்தியவனும், காலத்தை அறிந்தவனுமான ஒரு மனிதன், தான் அனைத்தையும் அறிந்தவனாக இருப்பதன் காரணமாக யஜ்ஞம் {வேள்வி} மூலம் அடையப்பட்ட கர்மத்தையும், ஆன்ம பலத்தையும் காண்கிறான்.{11} {இவ்வாறான} துறவிகள், மான்களுடனும், தங்கள் மனைவியருடனும் கூடியவர்களாகக் காய்கறி உணவை உண்டு, கவலை அற்றவர்களாக முதுமையை அடைகிறார்கள்.{12} வேதங்களைக் கற்றறிந்த பிராமணர்கள், மனித உடலிலேயே பெரும் பிரம்மத்தைக் கண்டு, அதை {அந்த உடலை} பிரம்மத்தின் நிலம் அல்லது பிரம்மக்ஷேத்திரம் என்று அழைக்கிறார்கள்.{13}(11-13)

பணிகளில் இருந்து மனம் விலகியவர்களும், கோபத்தையும், ஆசையையும் அடக்கியவர்களும், நித்திய வழியில் செல்ல விரும்பி பூமியில் திரிபவர்களுமான யதிகள் இதையே சொல்கிறார்கள்.{14} {மனிதர்கள்} சமாதி, அல்லது மனக்குவிப்பு அடையும் நேரத்தில் மொத்த படைப்பும் பிரம்மத்தில் மூழ்குகிறது. மேலும் அவர்கள் முற்பிறவியில் செய்த செயல்களின் காரணமாக மீண்டும் அவை உலகில் தோன்றுகின்றன. {மனிதர்கள்} சமாதி அடையும் நேரத்தில் உயிரினங்கள் அனைத்தும் பிரம்மத்தில் கலந்தாலும், அவர்களின் முற்பிறவி செய்ல்பாடுகளின் காரணமாக அவை மீண்டும் பூமியில் தோன்றுகின்றன.{15} சமாதி அடையும் நேரத்தில் உயிரினங்கள் அனைத்தும் வெளிப்படாமல் இருந்தாலும், இயற்கை போக்கின் மூலம் அவை மீண்டும் வெளிப்படுகின்றன. எனவே இயற்கையை வெல்வது மிகக் கடினமானதாகும். காலத்தினுடைய பண்புகளின் காரணமாக உயிரினங்கள் வெளிப்பட்டும், வெளிப்படாமலும் இருக்கின்றன.{16}(14-16) அசைவனவோ, அசையாதனவோ, திரளானவையோ {ஸ்தூலமானவையோ}, நுட்பமானவையோ {ஸூக்ஷ்மமானவையோ} எனப் படைப்பின் ஒவ்வொரு பொருளும் காலத்தின் ஆதிக்கத்தில் யோகத்தை அடையலாம். உயிரற்ற பொருள்களுக்கே இந்த யோகம் சாத்தியமாக இருக்கும்போது ஒவ்வொரு மனிதனும் கடவுளுடன் ஐக்கியமாகும் ஞானத்தை அடைய முயல வேண்டும்.{17}

நித்தியரான கசியபர், காலப்போக்கில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களையும் தக்ஷனின் மகள்களிடம் பெற்றார். ஓ! மன்னா, ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், விச்வதேவர்கள், மருத்துகள், பல தலைகளைக் கொண்ட பாம்புகள், சாத்யர்கள், பன்னகர்கள்,{19} கந்தர்வர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள், கழுகுகள், சிறகுகளுடன் கூடிய கருடன், கின்னரனான ஸுவாஸன்,{20} பசுக்கள், நான்கு கால் உயிரினங்கள், மனிதர்கள், அசைவன, அசையாதன உள்ளிட்ட மொத்த பூமி, மலைகள்,{21} யானைகள், சிங்கங்கள், புலிகள், குதிரைகள், தந்தம் படைத்த விலங்குகள், பன்றிகள், ஓநாய்கள், மான்கள்,{22} நான்கு வெண்தந்தங்களைக் கொண்ட யானைகள், விரும்பிய வடிவை ஏற்கவல்ல உயிரினங்கள் ஆகியவையும் படைக்கப்பட்டன.{23}

நித்திய அறத்தின் நிலமான {சனாதன தர்ம க்ஷேத்திரமான} பாரதவர்ஷத்தில், முந்தைய கல்பத்தில் இருந்ததைப் போலவே முனிவர்கள், அதே வடிவம், அழகு, குணம், சக்தி ஆகியவற்றுடன் பிறந்தனர்.{24} வேதங்களில் தேர்ந்தவர்களும், ஆத்ம அறிவை அடைந்தவர்களுமான பக்திமான்கள், தன் மனத் திறன்களின் மூலம் புற உலகம், அக உலகம் ஆகிய இரண்டையும் படைத்தனர். சொர்க்க லோகத்தில் தேவர்கள் அனைவரும் குடியேறினர்.{25}(17-25)

இல்லறவாசிகளை {கிருஹஸ்தர்களைத்} தவிர, தவங்கள் நோற்பதன் மூலம் ஆன்ம சக்தியை அடைபவர்களும், பிரம்மசரிய வாழ்வைப் பின்பற்றுவதன் மூலம் அதை அடைபவர்கள், ஆசான்களின் மூலம் அதை அடைபவர்களும், சித்தியின் மூலம் யோகத்தை அடைபவர்களும் துன்பம் மிகுந்த செயல்களைச் செய்வது கட்டாயமல்ல.{27,28} மனங்களைக் கட்டுப்படுத்தி, பொறுமையுடனும், மன்னிக்கும் தன்மையுடனும், உறுதியுடனும் உள்ளவர்கள், தங்கள் மனைவியருடன் அறச்சடங்குகளைப் பயின்று தேவலோகத்தில் திரிவார்கள்” என்றார் {வைசம்பாயனர்}.{28}(26-28)

————————————-—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ ஸ்வர்க்காரோஹணிக பர்வம்-

October 19, 2025

யுதிஷ்டிரனின் பகைமை! – ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 1-சொர்க்கத்தில் துரியோதனனைக் கண்ட யுதிஷ்டிரன்; அவனோடு வசிக்க விரும்பாமல் தன் தம்பிகள் இருக்குமிடத்தைக் காட்டுமாறு இந்திரனிடம் வேண்டியது; நாரதர் சொர்க்கத்தில் பகைமை பாராட்டக்கூடாதென்றது; யுதிஷ்டிரனின் மறுமொழி…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “சொர்க்கத்தை அடைந்த பிறகு, முற்காலத்தில் பாண்டவர்கள் மற்றும் திருதராஷ்டிரன் மகன்களான என் பாட்டன்மாரால் முறையாக அடையப்பட்ட உலகங்கள் என்னென்ன?(1) நான் இதைக் கேட்க விரும்புகிறேன். அற்புதச் செயல்களைச் செய்யும் பெரும் முனிவர் வியாசரின் மூலம் கற்பிக்கப்பட்ட நீர் அனைத்தையும் அறிந்திருப்பீர் என நான் நினைக்கிறேன்” என்றான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “யுதிஷ்டிரன் முதலிய உன் பாட்டன்மார்கள், தேவர்களின் இடமான சொர்க்கத்தை அடைந்த பின்னர் என்ன செய்தனர் என்பதை இப்போது கேட்பாயாக.(8) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், சொர்க்கத்திற்கு வந்ததும், பெருஞ்செழிப்புடன் கூடிய துரியோதனன், ஒரு சிறந்த இருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்டான்.(4) சூரியனைப் போன்ற பிரகாசமிக்க அவன், வீரர்களுக்குரிய புகழ் சின்னங்கள் அனைத்தையும் தரித்திருந்தான். அவன், சுடர்மிக்கப் பிரகாசத்துடன் கூடிய தேவர்கள் பலர் மற்றும் அறச்செயல்களைச் செய்யும் சாத்யர்கள் ஆகியோரின் துணையுடன் இருந்தான்.(5) யுதிஷ்டிரன், துரியோதனனையும், அவனது செழிப்பையும் கண்டு, திடீரெனச் சினத்தால் நிறைந்தவனாகப் பார்க்காமல் திரும்பினான்.(6)

அவன் தன் துணைவர்களை உரக்க அழைத்து, “பேராசை மற்றும் சிறுமதியால் களங்கப்பட்ட துரியோதனனுடன் இன்பலோகங்களைப் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை.(7) ஆழ்ந்த காட்டில் பெரிதும் பீடிக்கப்பட்டவர்களான எங்களால் மொத்த உலகிலும் உள்ள நண்பர்களும் உற்றார் உறவினரும்  இவனுக்காகவே கொல்லப்பட்டனர்.(8) அறம் சார்ந்தவளும், களங்கமற்ற குணங்களைக் கொண்டவளும், எங்கள் மனைவியுமான பாஞ்சால இளவரசி திரௌபதி, எங்கள் பெரியோர் அனைவரின் முன்னிலையில் இவனுக்காகவே சபைக்கு மத்தியில் இழுத்துவரப்பட்டாள்.(9) தேவர்களே, நான் சுயோதனனைக் காணவும் விரும்பவில்லை. என்னுடன் பிறந்தோர் எங்கிருக்கின்றனரோ அங்கேயே நான் செல்ல விரும்புகிறேன்” என்றான்.(10)

நாரதர், சிரித்துக் கொண்டே, “ஓ! மன்னர்களின் மன்னா, இஃது இவ்வாறே இருக்கவேண்டும். சொர்க்கத்தில் வசிக்கும்போது பகைமைகள் அனைத்தும் இல்லாமல் போகின்றன.(11) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, மன்னன் துரியோதனனைக் குறித்து இவ்வாறு சொல்லாதே. என் சொற்களைக் கேட்பாயாக.(12) மன்னன் துரியோதனன் இதோ இருக்கிறான். அறவோர், மற்றும் இப்போது சொர்க்கவாசிகளாக இருக்கும் மன்னர்களில் முதன்மையானோர் ஆகியோரால் தேவர்களுடன் சேர்த்து இவனும் வழிபடப்படுகிறான்.(13) போரெனும் தீயில் தன்னுடலையே ஆகுதியாக ஊற்றிய இவன், வீரர்கள் அடையும் கதியை அடைந்திருக்கிறான்.(13) பூமியில் உண்மையில் தேவர்களைப் போலவே இருந்த நீயும், உன்னுடன் பிறந்தோரும் இவனால் எப்போதும் துன்புறுத்தப்பட்டீர்கள்.(14) இருப்பினும் க்ஷத்திரிய நடைமுறைகளை நோற்றதன் மூலம் இவன் {துரியோதனன்} இந்த உலகத்தை அடைந்திருக்கிறான். அச்சம் நிறைந்த சூழ்நிலையில் பூமியின் தலைவனான இவன் அச்சமடையவில்லை.(15) ஓ! மகனே, பகடையாட்டத்தில் உனக்கு இழைக்கப்பட்ட துன்பங்களை நீ மனத்தில் கொள்ளாதே. திரௌபதியின் துன்பங்களை நினைவுகூர்வது உனக்குத் தகுந்ததல்ல.(16) உன் உற்றார் உறவினரால் போர் மற்றும் பிற சூழ்நிலைகளில் உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகளையும் நினைவுகூர்வது உனக்குத் தகுந்ததல்ல.(17) கண்ணியமான தொடர்பு விதிகளின்படி இப்போது நீ துரியோதனனைச் சந்திக்க வேண்டும். ஓ! மனிதர்களின் தலைவா, இது சொர்க்கமாகும். இங்கே பகைமைகள் இருக்க முடியாது” என்றார் {நாரதர்}.(18)

இவ்வாறு நாரதரால் சொல்லப்பட்டாலும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், குரு மன்னனுமான யுதிஷ்டிரன், தன்னுடன் பிறந்தோரைக் குறித்து விசாரிக்கும் வகையில், “வீரர்களுக்காக ஒதுக்கப்படும் இந்த நித்திய உலகங்கள், அறமற்றவனும், பாவம் நிறைந்தவனும், இழிந்தவனும், நண்பர்களுக்கும், மொத்த உலகத்திற்கும் அழிவேற்படுத்தியவனுமான துரியோதனனுடையதென்றால்,(20) மொத்த பூமியில் இருந்தும் குதிரைகள், யானைகள் உள்ளிட்டவையும், மனிதர்களும் எவனுக்காக அழிக்கப்பட்டனரோ, எந்த இழிந்தவனுக்காக எங்கள் தவறுக்குளுக்குச் சிறந்த முறையில் தீர்வு காண நினைத்து கோபத்தால் எரிந்து கொண்டிருந்தோமோ அவனுக்குரியதென்றால்,(21) உயர்ந்த நோன்புகளைக் கொண்டவர்களும், உறுதிமொழிகளை நிலையாக நிறைவேற்றியவர்களும், பேச்சில் வாய்மை நிறைந்தவர்களும், துணிவுக்காப் புகழ்பெற்றவர்களும், என்னுடன் பிறந்தோருமான அந்த உயர் ஆன்ம வீரர்களால் அடையப்பட்ட உலகங்களை நான் காண விரும்புகிறேன். குந்தியின் மகனும், போரில் கலங்கப்பட முடியாதவருமான உயர் ஆன்மக் கர்ணர்,(22,23) ஓ! பிராமணரே {நாரதரே}, திருஷ்டத்யும்னன், சாத்யகி, திருஷ்டத்யும்னன் மகன்கள், க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றும்போது மரணமடைந்த பிற க்ஷத்திரியர்கள் ஆகியோர் எங்கே இருக்கின்றனர்? ஓ! நாரதரே, அவர்களை இங்கே நான் காணவில்லை. ஓ! நாரதரே, விராடர், துருபதர், திருஷ்டகேதுவின் தலைமையிலான பிற க்ஷத்திரியர்கள்,(24,25) பாஞ்சால இளவரசன் சிகண்டி, திரௌபதியின் மகன்கள், போரில் தடுக்கப்பட முடியாத அபிமன்யு ஆகியோரை நான் காண விரும்புகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(26)

நரகம்! – ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 2-தன்னைச் சேர்ந்தவர்களுடன் வசிக்க விரும்பிய யுதிஷ்டிரன்; உறவினர்களைக் காட்ட யுதிஷ்டிரனை நரகத்திற்கு அழைத்துச் சென்ற தேவதூதன்; காணப் பொறாமல் திரும்பிய யுதிஷ்டிரன்; அவர்கள் தன்னைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து தூதனிடம் வர மறுத்தது; தூதன் இந்திரனுக்குச் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், (யுதிஷ்டிரன் தேவர்களிடம்} “தேவர்களே, அளவற்ற ஆற்றலைக் கொண்ட ராதையின் மகன் {கிருஷ்ணன்}, என்னுடன் பிறந்த உயர் ஆன்மாக்கள், யுதாமன்யு, உத்தமௌஜஸ்,(1) போர் நெருப்பில் (ஆகுதிகளாகத்) தங்கள் உடல்களை ஊற்றிய பெரும் வீரர்கள், எனக்காகப் போரில் மரணமடைந்த மன்னர்கள் மற்றும் இளவரசர்களை நான் இங்கே காணவில்லை.(2) புலிகளின் ஆற்றலைக் கொண்ட அந்தப் பெருந்தேர்வீரர்கள் எங்கே? அந்த முதன்மையான மனிதர்கள் இந்த உலகத்தை அடைந்தனரா?(3) தேவர்களே, அந்தப் பெருந்தேர்வீரர்கள் இந்த உலகத்தை அடைந்திருந்தால் மட்டுமே நான் அந்த உயர் ஆன்மாக்களோடு இங்கே வசிப்பேன் என்பதை அறிவீராக.(4)

தேவர்களே, மங்கலமான இந்த நித்திய உலகம் அந்த மன்னர்களால் அடையப்படவில்லையெனில், என் உடன்பிறந்தவர்களும், என் உற்றார் உறவினர்களும் இல்லாத இந்த இடத்தில் நான் வாழ மாட்டேன்.(5) (போருக்குப் பிறகு) நீர்ச்சடங்குகள் செய்த போது, என் தாய் {குந்தி}“கர்ணனுக்கும் நீர்க்காணிக்கைகளைச் செலுத்துவாயாக” என்று சொன்னதைக் கேட்டேன். என் தாயின் அந்தச் சொற்களைக் கேட்டதிலிருந்து நான் துன்பத்தால் எரிந்து வருகிறேன்.(6) தேவர்களே, என் தாயின் பாதங்கள், அளவிட முடியாத ஆன்மாவைக் கொண்ட கர்ணருடைய பாதங்களுக்கிடையிலான ஒற்றுமையை நான் கண்டபோதே, பகையணிகளைப் பீடிப்பவரான அவரின் கீழ் என்னை நான் நிறுத்திக் கொள்ளவில்லையே என நான் அடிக்கடி வருந்தினேன். நாங்களும் கர்ணரும் சேர்ந்திருந்தால், சக்ரனாலும் போரில் எங்களை வீழ்த்த இயலாது[1].(7,8)சூரியனின் பிள்ளையான அவர் {கர்ணர்} எங்கிருக்கிறாரோ அங்கே அவரை நான் காண விரும்புகிறேன். ஐயோ அவருடனான உறவை நாங்கள் அறியாதிருந்தோம். அவரைக் {கர்ணரைக்} கொல்லும்படி அர்ஜுனனை நானே ஏவினேன்.(9) பயங்கர ஆற்றலைக் கொண்டவனும், என் உயிர் மூச்சைவிட எனதன்புக்குரியவனுமான பீமனையும், இந்திரனுக்கு ஒப்பான அர்ஜுனனையும், ஆற்றலில் அந்தகனுக்கு ஒப்பான இரட்டையர்களையும் {நகுல சகாதேவர்களையும்},(10) நான் பார்க்க விரும்புகிறேன். எப்போதும் அறம் ஒழுகிய பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} நான் காண விரும்புகிறேன். நான் இங்கே இருக்க விரும்பவில்லை. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்.(11) தேவர்களில் முதன்மையானவர்களே, என்னுடன் பிறந்தோரிடம் இருந்து நான் துண்டிக்கப்பட்டால் சொர்க்கத்திற்கும் எனக்கும் என்ன இருக்கிறது? என்னுடன் பிறந்தவர்கள் எங்கிருக்கிறார்களோ அதுவே என் சொர்க்கம். என் கருத்தின்படி இது சொர்க்கமல்ல” என்றான்.(12)

தேவர்கள் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, நீ அங்கே செல்ல ஏங்குகிறாயெனில் தாமதமில்லாமல் அங்கே செல்வாயாக. தேவர்கள் தலைவனின் ஆணையின்படி நாங்கள் உனக்கு ஏற்புடையதைச் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்றனர்”.(13)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! பகைவரை எரிப்பவனே, இவ்வாறு சொன்ன தேவர்கள், ஒரு தேவ தூதனை அழைத்து அவனிடம்,(14) “யுதிஷ்டிரனுக்கு அவனுடைய நண்பர்களையும், உற்றார் உறவினர்களையும் காட்டுவாயாக” என்றனர்.(14)

ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, அப்போது குந்தியின் அரச மகனும் {யுதிஷ்டிரனும்}, அந்தத் தேவ தூதனும் சேர்ந்து (யுதிஷ்டிரன் பார்க்க விரும்பிய) அந்த மனிதர்களின் தலைவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றனர்.(15) தேவதூதன் முதலில் சென்றான், மன்னன் அவனுக்குப் பின்னால் அவனைப் பின்தொடர்ந்து சென்றான். அந்தப் பாதை மங்கலமற்றதாகவும், கடினமானதாகவும், பாவச் செயல்களைச் செய்யும் மனிதர்களால் நடக்கப்படுவதாகவும் இருந்தது.(16) அடர்த்தியான இருளில் மூழ்கியிருந்த அது, மயிர் மற்றும் பாசி ஆகியவற்றால் மூடப்பட்ட புல்வெளியைப்போல அமைந்தது. பாவிகளின் துர்நாற்றத்தால் மாசடைந்து, தசை மற்றும் குருதிச் சேறுடன் கூடியதாக,(17) காட்டு ஈக்கள் நிறைந்ததாக, கொட்டும் வண்டுகள் மற்றும் கொசுக்களுடன் கூடியதாகப் பயங்கரக் கரடிகளின் அத்துமீறல்களுடன் கூடியதாக அஃது {அந்தப் பாதை} இருந்தது. அழுகும் சடலங்கள் ஆங்காங்கே கிடந்தன.(18)

எலும்புகளும், மயிர்களும் நிறைந்திருந்த அது புழு பூச்சிகளின் கேடு விளைவிக்கக்கூடிய வாடையுடன் கூடியதாக இருந்தது. சுடர்மிக்க நெருப்பால் வழிநெடுகிலும் சூழ்ந்திருந்தது.(19) இரும்பு அலகுகளைக் கொண்ட காக்கைகள், வேறு பறவைகள் மற்றும் கழுகுகளும், ஊசிகள் போன்ற நீண்ட கூரிய வாய்களைக் கொண்ட தீய பிரேதங்களும் அங்கே மொய்த்தன. மேலும் அது விந்திய மலையைப் போல அடைதற்கரி காடுகளால் நிறைந்திருந்தது.(20) கொழுப்பு மற்றும் குருதி பூசப்பட்டவையும், கரங்கள் மற்றும் தொடைகள் வெட்டப்பட்டவையும், கால் துண்டிக்கப்பட்டவையும், குடல்கள் வெளியே வந்தவையுமான மனித சடலங்கள் அங்கே விரவிக் கிடந்தன.(21) ஏற்பற்ற சடலங்களின் கடுநெடி நிறைந்ததும், பயங்கரமான வேறு நிகழ்வுகள் நிகழ்வதுமான அந்தப் பாதையில் பல்வேறு எண்ணங்களுடன் மன்னன் சென்று கொண்டிருந்தான்.(22)

கொதிக்கும் நீர் நிறைந்ததும், கடப்பதற்கரிதானதுமான ஓர் ஆற்றையும், கூரிய வாள்கள் மற்றும் கத்திகளை இலைகளாகக் கொண்ட மரங்கள் நிறைந்த காடுகளையும் {அஸிபத்ரவனத்தையும்} அங்கே அவன் கண்டான்.(23) அங்கே பெரும் வெப்பத்துடன் கூடிய மென்மையான வெண்மணல்களும், இரும்பினால் செய்யயப்பட்ட பாறைகளும் கற்களும் நிறைந்திருந்தன. அங்கே சுற்றிலும் இரும்பினால் செய்யப்பட்ட பல குடுவைகள் கொதிக்கும் எண்ணையுடன் {எண்ணெயக்குடங்கள்} இருந்தன.(24) அங்கே முட்களுடன் கூடிய குடசால்மலிகங்கள் {முள்ளிலவமரங்கள்} பல இருந்தன, எனவே தீண்டுவதற்குத் துன்பம் நிறைந்ததாக இருந்தது. குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} அங்கே பாவிகளுக்குக் கொடுக்கப்படும் சித்திரவதைகளைக் கண்டான்.(25)

அனைத்து வகைக் குற்றங்களுடன் கூடிய அந்த மங்கலமற்ற உலகத்தைக் கண்ட யுதிஷ்டிரன், அந்தத் தேவதூதனிடம், “இது போன்ற பாதையில் இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும்?(26) என்னுடன் பிறந்தோர் எங்கே இருக்கின்றனர் என்பதைச் சொல்வதே உனக்குத் தகும். தேவர்களுக்குரிய எந்த உலகம் இஃது என்பதையும் நான் அறிய விரும்புகிறேன்” என்றான்.(27)

நீதிமானான யுதிஷ்டிரனின் இந்தச் சொற்களைக் கேட்ட தேவ தூதன், தன் நடையை நிறுத்தி, “இவ்வளவு தொலைவே உமது வழியாகும்.(28) சொர்க்கவாசிகள் உம்மை இவ்வளவு தொலைவே அழைத்துச் சென்று நிற்குமாறே எனக்கு ஆணையிட்டனர். ஓ! மன்னர்களின் மன்னா, உமக்குக் களைப்பாயிருந்தால் நீர் என்னுடன் திரும்பலாம்” என்றான்.(29) எனினும், யுதிஷ்டிரன் தாள முடியாத பெருஞ்சோகத்துடனும், கடும் நெடியால் கலங்கடிக்கப்பட்டவனாகவும் இருந்தான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, திரும்பத் தீர்மானித்து அவன் தன் பாதச்சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கினான்.(30) கவலையாலும், துயரத்தாலும் பீடிக்கப்பட்டு அந்த அற ஆன்ம ஏகாதிபதி திரும்பினான். சரியாக அதே நேரத்தில் சுற்றிலும் பரிதாபகரமான ஒப்பாரியை அவன் கேட்டான்.(31)

“ஓ! தர்மனின் மகனே, ஓ! அரசமுனியே, ஓ! புனிதத் தோற்றம் கொண்டவனே, ஓ! பாண்டுவின் மகனே, எங்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு கணம் நிற்பாயாக.(32) ஓ! வெல்லப்பட முடியாதவனே, நீ வந்த போது, உன் மேனியின் இனிய நறுமணத்தைச் சுமந்தபடி, இனிமையான தென்றால் வீசத் தொடங்கியது. இதனால் எங்களது துயர் பெரிதும் துடைக்கப்பட்டது.(33) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, ஓ! மனிதர்களில் முதல்வனே, உன்னைக் கண்டதும் எங்கள் மகிழ்ச்சி பெருகியது. ஓ! பிருதையின் மகனே, மேலும் சில கணங்கள் நீ இங்கே தங்குவதன் மூலம் அந்த மகிழ்ச்சி இன்னும் நீடிக்கட்டும்.(34) ஓ! பாரதா, கொஞ்ச நேரமாவது நீ இங்கே இருப்பாயாக. ஓ! குரு குலத்தோனே, நீ இங்கிருக்கும் வரை கடுநோவு எங்களைப் பீடிப்பதை நிறுத்திக் கொள்ளும்” என்றனர்.(35)

வலியில் துடித்த மனிதர்களின் பரிதாபகரமான குரல்களில் இவையும், இவைபோன்ற இன்னும் வேறு சொற்களும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன் காதுகளுக்கு மிதந்து வருவதை அந்த உலகத்தில் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} கேட்டான். கருணைமிக்க இதயம் கொண்ட யுதிஷ்டிரன், துன்பத்தில் இருந்தவர்களின் அந்தச் சொற்களைக் கேட்டு ” ஐயோ, எவ்வளவு துன்பம்” என்று உரக்கச் சொன்னான். பிறகு அந்த மன்னன் அசையாமல் நின்றான்.(37) துயரத்தைத் தூண்டியவையும், துன்புறுத்தப்பட்ட மனிதர்களுக்கு உரியவையுமான பேச்சுகள், ஏற்கனவே கேட்கப்பட்ட குரல்களைக் கொண்டவையாகத் தோன்றினாலும் அந்தப் பாண்டுவின் மகனால் அந்தச் சந்தர்ப்பத்தில் அவற்றை அடையாளம் காண முடியவில்லை.(38) குரல்களை அடையாளம் காண முடியாத தர்மனின் மகன் யுதிஷ்டிரன், “நீங்கள் யார்? ஏன் இங்கே இருக்கிறீர்கள்?” என்று விசாரித்தான்.(39)

இவ்வாறு சொல்லப்பட்டதும் அவர்கள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும், “நான் கர்ணன்”, “நான் பீமசேனன்”, “நான் அர்ஜுனன்”,(40) “நான் நகுலன்”, “நான் சகாதேவன்”, “நான் திருஷ்டத்யும்னன்”, “நான் திரௌபதி”, “நாங்கள் திரௌபதியின் மகன்கள்” என்று பதிலளித்தனர். ஓ! மன்னா, இவ்வாறே அந்தக் குரல்கள் பேசின.(41)

ஓ! மன்னா, அந்த இடத்திற்குத் தகுந்த துன்பக் குரல்களில் வெளிவந்த அந்தக் கதறல்களைக் கேட்ட அரசன் யுதிஷ்டிரன், தனக்குள்ளேயே, “என்ன முரண்பட்ட விதியிது?(42) கடும் நெடியும், பெருந்துன்பமும் கொண்ட இந்த உலகத்தில் வசிப்பிடம் ஒதுக்கப்படுவதற்கு, உயர் ஆன்மாக்களான கர்ணர், திரௌபதியின் மகன்கள், கொடியிடையாளான பாஞ்சால இளவரசி {திரௌபதி} ஆகியோரால் இழைக்கப்பட்ட பாவச் செயல்கள் என்னென்ன? அறச்செயல்களைச் செய்த இவர்களால் செய்யப்பட்ட எந்த விதிமீறலையும் நான் உணரவில்லை.(43,44) திருதராஷ்டிரர் மகனான மன்னன் சுயோதனனும் {துரியோதனனும்}, பாவம் நிறைந்த அவனது தொண்டர்களும், இத்தகைய செழிப்பை அடைவதற்கு அவர்கள் செய்த செயலென்ன?(45) பெரும் இந்திரனைப் போலச் செழிப்புடன் கூடிய அவன் இங்கே உயர்வாகத் துதிக்கப்படுகிறான். எந்தச் செயல்களின் விளைவால் இவர்கள் (இந்த உயர் ஆன்மாக்கள்) நரகத்திற்குள் வீழ்ந்தனர்?(46) இவர்கள் அனைவரும், ஒவ்வொரு கடமையையும் அறிந்தவர்களாகவும், வாய்மைக்கும், வேதங்களுக்கும் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றியவர்களாகவும், தங்கள் செயல்பாடுகளில் நீதிமிக்கவர்களாகவும், வேள்விகளைச் செய்பவர்களாகவும், பிராமணர்களுக்குப் பெருங்கொடை அளிப்பவர்களாகவும் இருந்தனர்.(47) நான் உறங்குகிறேனா? விழித்திருக்கிறேனா? நான் சுயநினைவுடன் இருக்கிறானா இல்லையா? அல்லது என் மூளை கலங்கி இவையாவும் என் மன மயக்கத்தால் தெரிகிறதா?” என்று {தனக்குள்ளேயே} கேட்டுக் கொண்டான்.(48)

கவலை மற்றும் துன்பத்தில் மூழ்கி, துயரால் கலங்கிய புலன்களுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன் இத்தகைய சிந்தனைகளிலேயே நீண்ட காலம் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(49) பிறகு தர்மனின் அரசமகன் கடுங்கோபத்தை அடைந்தான். உண்மையில், யுதிஷ்டிரன் தேவர்களையும், தர்மனையும் நிந்தித்தான்.(50) கடும் நெடியால் பீடிக்கப்பட்ட அவன் தேவதூதனிடம், “நீ எவர்களுடைய தூதனோ அவர்களிடம் நீ திரும்பிச் செல்வாயாக.(51) அவர்கள் இருக்கும் இடத்திற்கு நான் வர மாட்டேன் என்றும் இங்கே துன்பத்தில் இருக்கும் என்னுடன் பிறந்தோர் என் துணையின் விளைவால் ஆறுதலடைவதால் நான் இங்கேயே தங்கப் போகிறேன் என்று அவர்களிடம் சொல்வீராக” என்றான்.(52)

நுண்ணறிவுமிக்கப் பாண்டுவின் மகனால் இவ்வாறு சொல்லப்பட்ட தேவதூதன், நூறு வேள்விகளைச் செய்த தேவர்களின் தலைவன் {இந்திரன்} இருக்கும் இடத்திற்குத் திரும்பிச் சென்றான்.(53) அங்கே அவனிடம் யுதிஷ்டிரனின் செயல்களை விளக்கிச் சொன்னான். உண்மையில், ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, அவன் {தேவதூதன்} தர்மனின் மகன் சொன்ன அனைத்தையும் இந்திரனிடம் தெரிவித்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(54)

மூன்றாம் சோதனை! – ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 3-யுதிஷ்டிரனின் உறுதியைக் கண்டு வந்த இந்திரன்; யுதிஷ்டிரனைப் புகழ்ந்த யமன்; தெய்வீக உடல் பெற்று தெய்வீக முனிவர்கள் துதிக்கத் தம்பியரிடம் சென்ற யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! குரு குலத்தோனே பிருதையின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன்அங்கே ஒரு கணம் நிற்பதற்குள் இந்திரனின் தலைமையிலான தேவர்கள் அனைவரும் அந்த இடத்திற்கு வந்தனர்.(1) அறத் தேவன் {தர்மதேவன்}, அந்த ஏகாதிபதியைக் காணத் தன் உடல் கொண்ட வடிவத்துடன் அந்த இடத்திற்கு வந்தான்.(2) ஒளியுடல் பெற்றவர்களும், புனிதமானவர்களும், உன்னதச் செயல்களைச் செய்பவர்களுமான தேவர்கள் அந்த இடத்திற்கு வந்ததும், அந்தப் பகுதியை மூழ்கடித்த இருள் உடனே விலகியது.(3) பாவச் செயல்களைச் செய்தோர் அப்போது மேலும் துன்புறுத்தப்படவில்லை. வைதரணீ ஆறு, முள்ளிலவமரம்,(4) இரும்புக் குடுவைகள், பார்ப்பதற்குப் பயங்கரமான பாறைகளாலான இரும்புத் திரள்களும் காட்சியில் இருந்து மறைந்து போயின. வெறுத்தொதுக்கப்படுவதும், குரு மன்னனால் {யுதிஷ்டிரனால்} பார்க்கப்பட்டதுமான பல்வேறு சடலங்கள் ஒரே நேரத்தில் மறைந்து போயின.(5) ஓ! பாரதா, இனிமையானதும், முற்றிலும் தூய்மையானதும், குளுமையானதும், இனிய நறுமணமிக்கதுமான தென்றல் தேவர்கள் இருப்பதன் விளைவால் அந்த இடத்தில் வீசத் தொடங்கியது.(6) மருத்துகள், இந்திரன், அசுவினி இரட்டையர்களுடன் கூடிய வசுக்கள், சாத்யர்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், சொர்க்கவாசிகள் பிறர்,(7) சித்தர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோர் அனைவரும் பெருஞ்சக்தி கொண்ட தர்மனின் அரசமகன் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.(8)

அப்போது தேவர்களின் தலைவனும், சுடர்மிக்கச் செழிப்புடன் கூடியவனுமான சக்ரன், யுதிஷ்டிரனிடம் அவனுக்கு ஆறுதலளிக்கும் வகையில்,(9) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, வா, ஓ! மனிதர்களின் தலைவா, வருவாயாக. ஓ! பலமிக்கவனே, இந்தத் தோற்ற மயக்கங்கள் முடிந்தன.(10) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உன்னால் வெற்றி அடையப்பட்டது, (இன்பம் நிறைந்த) நித்திய உலகங்களும் உனதாகின. நீ கோபவசப்படாதே. என்னுடைய இந்தச் சொற்களைக் கேட்பாயாக.(11) ஓ! மகனே, ஒவ்வொரு மன்னனாலும் நரகம் நிச்சயம் பார்க்கப்பட வேண்டும். ஓ! மனிதர்களின் தலைவா, நல்லவையும் அல்லவையும் இங்கே அதிகமாக இருக்கின்றன.(12)

முதலில் தன் நற்செயல்களுக்கான கனியை அனுபவிப்பவன் அதற்கடுத்து நரகத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டும். மறுபுறம், முதலில் நரகத்தைத் தாங்கிக் கொண்டவன் அதன் பிறகு சொர்க்கத்தை அனுபவிக்க வேண்டும்.(13) எவன் பாவச் செயல்களை அதிகம் செய்திருக்கிறானோ அவன் சொர்க்கத்தை முதலில் அனுபவிப்பான். ஓ! மன்னா, இதன் காரணமாகவே, உனக்கு நல்லதைச் செய்ய விரும்பிய நான், உன்னை முதலில் நரகத்தைக் காணச் செய்தேன்.(14) நீ பாசாங்கு செய்து துரோணரை அவரது மகன் {அஸ்வத்தாமன்} காரியத்தில் வஞ்சித்தாய். அதன் விளைவாகவே, ஒரு வஞ்சகச் செயலின் மூலம் உனக்கு நரகம் காட்டப்பட்டது.(15) உனக்கு ஏற்பட்டதைப் போலவே, பீமன், அர்ஜுனன், திரௌபதி ஆகிய அனைவருக்கும் ஒரு வஞ்சகச் செயல் மூலம் பாவிகளின் இடம் {நரகம்} காட்டப்பட்டது.(16)

ஓ! மனிதர்களின் தலைவா, வா, அவர்கள் அனைவரும் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைந்தனர்.(17) உன் தரப்பில் இருந்து போரில் கொல்லப்பட்ட மன்னர்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தனர். ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, வா, வந்து அவர்களைக் காண்பாயாக.(18) யாருக்காக நீ வருந்திக் கொண்டிருந்தாயோ அந்த வலிமைமிக்க வில்லாளியும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான கர்ணனும், உயர்ந்த வெற்றியை அடைந்திருக்கிறான்.(19) ஓ! பலமிக்கவனே, மனிதர்களில் முதன்மையான சூரியனின் மகனை {கர்ணனை} இதோ பார். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அவன் தனக்குரிய இடத்தில் இருக்கிறான். ஓ! மனிதர்களின் தலைவா, உன்னுடைய இந்தக் கவலையைக் கொல்வாயாக.(20) உன்னுடன் பிறந்தோரையும், பிறரையும், உன் தரப்பில் இருந்த மன்னர்களையும் இதோ பார். இவர்கள் அனைவரும் தங்களுக்குரிய (இன்ப) உலகங்களை அடைந்திருக்கின்றனர்.(21)

முதலில் கொஞ்சம் துன்பத்தை அனுபவித்த நீ, ஓ! குரு குலத்தின் மகனே, இந்நேரத்தில் இருந்து துயரங்களற்றவனாக, நோய்கள் அனைத்தும் விலகியவனாக என்னுடன் இன்பமாக விளையாடிக் கொண்டிருப்பாய்.(22) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! மன்னா, உன் அறச்செயல்கள் அனைத்தின் மூலம் வென்ற வெகுமதிகளையும், உன் தவங்கள் மற்றும் உன் கொடைகள் அனைத்தின் மூலமாக நீ அடைந்த உலகங்களையும் இனி நீ அனுபவிப்பாயாக.(23) தேவர்கள், கந்தர்வர்கள், தூய உடைகள் மற்றும் சிறந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தெய்வீக அப்சரஸ்கள் உனக்காகக் காத்திருந்து, உன் மகிழ்ச்சிக்காகத் தொண்டாற்றட்டும்.(24) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உன்னால் பயன்படுத்தப்பட்ட வேள்வி வாளால் மேம்படுத்தப்பட்ட சிறப்புகளுடன் நீ செய்த ராஜசூய வேள்வியின் மூலம் உனதாகியிருக்கும் இந்த உலகங்களை இனி நீ அனுபவிப்பாயாக. உன் தவங்களின் உயர்ந்த கனிகளை நீ அனுபவிப்பாயாக.(25)

ஓ! யுதிஷ்டிரா, உன் உலகங்கள் அந்த மன்னர்களின் உலகங்களை விட மிக உயரத்தில் இருக்கின்றன. ஓ! பிருதையின் மகனே, அவை ஹரிச்சந்திரனின் உலகங்களுக்கு இணையானவை. வா, அங்கே அருள்நிலையில் நீ விளையாடிக் கொண்டிருப்பாயாக.(26) அரசமுனியான மாந்தாத்ரி {மாந்தாதா} எங்கே இருக்கிறானோ, மன்னன் பகீரதன் எங்கே இருக்கிறானோ, துஷ்மந்தன் {துஷ்யந்தன்} மகனான பரதன் எங்கிருக்கிறானோ அங்கே நீயும் அருள்நிலையில் விளையாடிக் கொண்டிருப்பாய்.(27) புனிதமானவளும், மூவுலகங்களையும் புனிதப்படுத்துபவளுமான தெய்வீக கங்கை {ஆகாயக் கங்கை} இதோ இருக்கிறாள். இவள் தெய்வீக கங்கை என்றழைக்கப்படுகிறாள். இதில் மூழ்கி நீ உன் சொந்த உலகத்திற்குச் செல்வாயாக[1].(28) இந்த ஓடையில் {கங்கையில்} நீராடும் நீ உன் மனித இயல்பை இழப்பாய். உண்மையில் உன் துயரம் அகன்று, நோய்கள் வெல்லப்பட்டு, பகைமைகள் அனைத்தில் இருந்தும் நீ விடுபடுவாய்” என்றான் {இந்திரன்}.(29)ஓ! குரு மன்னா {யுதிஷ்டிரா}, தேவர்களின் தலைவன் இவ்வாறு யுதிஷ்டிரனிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, உடல் கொண்ட வடிவத்துடன் கூடிய அற தேவன் {தர்மதேவன் யமன்}, தன் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்},(30) “ஓ! மன்னா, ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, ஓ! மகனே, என்னிடம் நீ கொண்டுள்ள அர்ப்பணிப்பிலும், வாக்கில் நீ கொண்டிருக்கும் வாய்மையிலும், நீ கொண்டிருக்கும் பொறுமை மற்றும் தற்கட்டுப்பாட்டிலும் நான் பெரும் நிறைவடைகிறேன்.(31) ஓ! மன்னா, இது நான் உனக்கு வைத்த மூன்றாவது சோதனையாகும். ஓ! பிருதையின் மகனே, நீ உன் இயல்பில் இருந்தோ, அறிவில் இருந்தோ பிறழாதவன்.(32) முன்பு துவைத வனத்தில் அணிக்கட்டைகளை மீட்பதற்காகத் தடாகத்திற்கு வந்தபோது என் கேள்விகளால் நான் உன்னைச் சோதித்தேன். நீ அதை நன்றாகத் தாக்குப்பிடித்தாய்.(33) ஓ! மகனே அதன் பிறகு நாயின் வடிவை ஏற்று, உன்னுடன் பிறந்தோரும், திரௌபதியும் வீழ்ந்தபோது நான் மீண்டும் உன்னைச் சோதித்தேன்.(34)

இஃது உனக்கான மூன்றாவது சோதனையாகும்; உன்னுடன் பிறந்தோருக்காக நீ நரகத்திலேயே வசிப்பதற்கான உன் விருப்பத்தைத் தெரிவித்தாய். ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, நீ தூய்மையடைந்தாய். பாவத்தில் இருந்து தூய்மையடைந்து நீ மகிழ்ச்சியாக இருப்பாயாக.(35) ஓ! பிருதையின் மகனே, ஓ! மன்னா, உன்னுடன் பிறந்தோரும் நரகத்திற்குத் தகுந்தவர்களல்ல. இவையனைத்தும் தேவர்களின் தலைவனால் உண்டாக்கப்பட்ட தோற்ற மயக்கங்களாகும்.(36) ஓ! மகனே, மன்னர்கள் அனைவரும் நிச்சயம் ஒருமுறை நரகத்தைப் பார்க்க வேண்டும். எனவே, நீ சிறிது நேரம் இந்தப் பெருந்துன்பத்திற்கு உட்படுத்தப்பட்டாய்.(37) ஓ! மன்னா, பேச்சில் எப்போதும் வாய்மை நிறைந்தவர்களும், பெருந்துணிவைக் கொண்டவர்களுமான அர்ஜுனனோ, பீமனோ, முதன்மையான மனிதர்களான இரட்டையர்களோ {நகுல சகாதேவர்களோ}, கர்ணனோ நீண்ட கால நரகத்திற்குத் தகுந்தவர்களல்ல.(38) ஓ! யுதிஷ்டிரா, இளவரசி கிருஷ்ணையும் {திரௌபதியும்} கூடப் பாவிகளின் இடத்திற்குத் தகுந்தவளல்ல. வா, ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, வந்து மூவுலகங்களிலும் தன் ஓடையை விரித்திருக்கும் கங்கையைக் காண்பாயாக” என்றான் {யமன்}.(39)

இவ்வாறு சொல்லப்பட்டவனும், அரசமுனியுமான உன் பாட்டன் {யுதிஷ்டிரன்}, தர்மனுடனும், வேறு தேவர்களுடனும் சென்றான்.(40) புனிதமானதும், புனிதப்படுத்துவதும், முனிவர்களால் எப்போதும் துதிக்கப்படுவதுமான தெய்வீக ஆறான கங்கையில் நீராடி அவன் {யுதிஷ்டிரன்} தன் மனித உடலைக் கைவிட்டான்.(41) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தெய்வீக வடிவை ஏற்றதன் விளைவால், தன் பகைமைகள் மற்றும் துன்பங்கள் அனைத்தும் களைந்தவனானான்.(42) பிறகு, தேவர்களால் சூழப்பட்ட குரு மன்னன் யுதிஷ்டிரன், அந்த இடத்தில் இருந்து சென்றான். தர்மனின் துணையுடன் கூடிய அவன், பெரும் முனிவர்களால் புகழப்பட்டான்.(43) உண்மையில் அவன் {யுதிஷ்டிரன்}, (மனித) கோபத்தில் இருந்து விடுபட்டுத் தங்கள் தங்களுக்குரிய நிலைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களும், வீரர்களுமான பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும் இருந்த இடத்தை அடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(44)

அடையாள பவனி! – ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 4-கிருஷ்ணன், கர்ணன் முதலியோரைக் கண்ட யுதிஷ்டிரன்; தங்கள் தங்களுக்குரிய கதியை அடைந்தவர்களை யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக் காட்டிய இந்திரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தேவர்கள், மருத்துகள் மற்றும் முனிவர்களால் இவ்வாறு புகழப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், குரு குலத்தின் முதன்மையானோர் இருந்த இடத்திற்குச் சென்றான்.(1) அவன் கோவிந்தனை {கிருஷ்ணனை} அவனது பிரம்ம வடிவில் கண்டான். ஏற்கனவே தான் கண்டிருந்த வடிவத்திற்கு ஒப்பானதாக இருந்தது அடையாளம் காண துணை புரிந்தது.(2) தன்னுடைய அந்த வடிவில் அவன், பயங்கரமான சக்கரம் போன்ற தெய்வீக ஆயுதங்களால் அலங்கரிக்கப்பட்டு ஒளிபொருந்தியவனாக இருந்தான். மற்ற ஆயுதங்கள் தங்களுக்குரிய உடல் வடிவங்களைப் பெற்று இருந்தன.(3)

அவன் {கிருஷ்ணன்} சுடர்மிக்கப் பிரகாசம் கொண்ட வீரப் பல்குனனால் {அர்ஜுனனால்} துதிக்கப்பட்டான். குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, மதுசூதனனை அவனுடைய சொந்த வடிவில் கண்டான்.(4) தேவர்களால் துதிக்கப்பட்ட அவ்விருவரும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} யுதிஷ்டிரனைக் கண்டு, அவனை உரிய மதிப்புடன் வரவேற்றனர்.(5) மற்றோரிடத்தில், அந்தக் குருக்களைத் திளைக்கச் செய்பவன் {யுதிஷ்டிரன்}, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், காந்தியில் பனிரெண்டு சூரியர்களுக்கு ஒப்பானவனுமான கர்ணனைக் கண்டான்.(6)

மற்றொரு பகுதியில், மருத்துகளுக்கு மத்தியில் சுடர்மிக்க வடிவில் அமர்ந்திருக்கும் பெரும்பலம் கொண்ட பீமசேனனைக் கண்டான்[1].(7) அவன் {பீமன்} உடல் வடிவத்துடன் கூடிய வாயு தேவனின் அருகில் அமர்ந்திருந்தான். உண்மையில், அப்போது தெய்வீக வடிவில் பேரெழிலுடன் திகழ்ந்த அவன் உயர்ந்த வெற்றியை அடைந்திருந்தான்.(8) அந்தக் குருக்களைத் திளைக்கச் செய்பவன் {யுதிஷ்டிரன்}, அஸ்வினிகளுக்குரிய இடத்தில் சுயப் பிரகாசத்தில் சுடர்விடும் நகுலனையும், சகாதேவனையும் கண்டன்.(9)மேலும் அவன், தாமரை மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பாஞ்சால இளவரசியையும் {திரௌபதியையும்} கண்டான். சொர்க்கத்தை அடைந்த அவள், சூரியப்பிரகாசத்துடன் கூடிய வடிவில் அங்கே அமர்ந்து கொண்டிருந்தாள்.(10) மன்னன் யுதிஷ்டிரன் திடீரென அவளைக் {திரௌபதியைக்} கேள்வி கேட்க விரும்பினான். அப்போது தேவர்களின் தலைவனான இந்திரன், அவனிடம் {யுதிஷ்டிரனிடம்},(11) “இவள் ஸ்ரீ {திருமகள்} ஆவாள். ஓ! யுதிஷ்டிரா, மனிதர்களுக்கு மத்தியில் ஏற்புடைய நறுமணத்துடனும், மொத்த உலகத்தையும் மகிழ்ச்சியடையச் செய்யும் வல்லமையுடனும், எந்தத் தாயின் கருவறையில் இருந்தும் வெளிப்படாமல் துருபதன் மகளாக இவள் {திரௌபதி} உனக்காகவே பிறந்தாள்.(12) திரிசூலபாணியால் உன் இன்பத்திற்காகவே இவள் படைக்கப்பட்டாள். துருபதன் குலத்தில் பிறந்த இவள் உங்கள் அனைவராலும் அனுபவிக்கப்பட்டாள்.(13)

ஓ! மன்னா, நெருப்பின் பிரகாசத்தையும் பெருஞ்சக்தியையும், உயர்ந்த அருளையும் கொண்ட இந்த ஐந்து கந்தர்வர்களும், திரௌபதிக்கும் உனக்கும் மகன்களாக இருந்தனர்.(14) பெரும் ஞானம் கொண்டவனும், கந்தர்வர்களின் மன்னனுமான திருதராஷ்டிரனைப் பார். இவனே உன் தந்தையின் {பாண்டுவின்} அண்ணன் என்பதை அறிவாயாக.(15)

நெருப்பின் பிரகாசம் கொண்டவனும், குந்தியின் மகனுமான இவன் {கர்ணன்} உன் அண்ணனாவான். சூரியனின் மகனும், உன் அண்ணனும், மனிதர்களில் முதன்மையானவனுமான இவனே ராதையின் மகனாக {கர்ணனாக} அறியப்பட்டான்.(16) இவன் சூரியனின் துணையுடன் திரிகிறான். இந்த முதன்மையானவனைப் பார். சாத்யர்கள், தேவர்கள், விஷ்வேதேவர்கள், மருத்துகளின் இனக்குழுக்களுக்கு மத்தியில்,(17) ஓ! மன்னர்களின் மன்னா, சாத்யகியைத் தங்களில் முதல்வனாகக் கொண்ட வீரர்களும், போஜர்களில் வலிமைமிக்கவர்களுமான விருஷ்ணி மற்றும் அந்தகக் குலத்தின் வலிமைமிக்கத் தேர்வீரர்களைப் பார்.(18) போரில் வெல்லப்பட முடியாதவனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு} இப்போது சோமனுடன் இருப்பதைப் பார். இரவின் பேரொளிக் கோளின் மென்மையான பிரகாசத்துடன் கூடியவனாக இருக்கும் இவனே வலிமைமிக்க வில்லாளியான அபிமன்யு ஆவான்.(19)

குந்தி மற்றும் மாத்ரியுடன் இப்போது சேர்ந்திருக்கும் வலிமைமிக்க வில்லாளியான பாண்டு இதோ இருக்கிறான். உன் தந்தை {பாண்டு} தன் சிறந்த தேரில் அடிக்கடி என்னிடம் வருவான்.(20) இப்போது வசுக்களின் மத்தியில் இருக்கும் சந்தனுவின் மகனான அரசன் பீஷ்மரைப் பார். இதோ பிருஹஸ்பதியின் அருகில் இருக்கும் இவர் உன் ஆசானான துரோணர் என்பதை அறிவாயாக.(21) ஓ! பாண்டுவின் மகனே, இவர்களும், உன் தரப்பில் இருந்து போரிட்ட பிற வீரர்களும், இப்போது கந்தர்வர்கள், யக்ஷர்கள் மற்றும் வேறு புனிதர்களுடன் நடமாடுகிறார்கள்.(22) ஓ! மன்னா, சிலர் குஹ்யர்களின் நிலையை அடைந்திருக்கின்றனர். தங்கள் உடல்களைக் கைவிட்ட அவர்கள், சொல், எண்ணம் மற்றம் செயலின் மூலம் அடைந்த தகுதியைக் கொண்டு சொர்க்கத்தை வென்றனர்” என்றான் {இந்திரன்}”.(23)

பாரத மகிமை! – ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 5-பீஷ்மர் முதலியோர் ஸ்வர்க்கத்தை அனுபவித்துத் தங்கள் தங்கள் தேவ வடிவில் கலந்ததை ஜனமேஜயனுக்குச் சொன்ன வைசம்பாயனர்; ஆஸ்தீகர் முதலியோரை வழிபட்டு, யாகத்தை முடித்து, ஹஸ்தினாபுரம் வந்து அரசாட்சி செய்த ஜனமேஜயன்; பாரதக் கதையை முடித்து அதன் மகிமையைக் கூறிய சௌதி…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “உயர் ஆன்மாக்களான பீஷ்மர் மற்றும் துரோணர் இருவரும், மன்னன் திருதராஷ்டிரன், விராடன், துருபதன், சங்கன், உத்தரன்,(1) திருஷ்டகேது, ஜயத்சேனன், மன்னன் சத்யஜித், துரியோதனனின் மகன், சுபலனின் மகனான சகுனி,(2) பேராற்றல் கொண்ட கர்ணனின் மகன்கள், மன்னன் ஜெயத்ரதன், கடோத்கசன், நீர் குறிப்பிடாத வேறு சிலர்,(3) சுடர்மிக்க வடிவங்களைக் கொண்ட வேறு வீர மன்னர்கள் ஆகியோர் சொர்க்கத்தில் எவ்வளவு காலம் இருந்தனர்.(4) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அவர்களுடைய இடம் சொர்க்கத்தில் நித்தியமானதா? அவர்களுடைய செயல்கள் {கர்ம பலன்கள்} தீர்ந்ததும் அந்த முதன்மையானவர்கள் அடைந்த கதியென்ன?(5) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான் இதைக் கேட்க விரும்புவதால் உம்மைக் கேட்கிறேன். உமது ஒளிபொருந்திய தவத்தின் மூலம் நீர் அனைத்தையும் காண்பவராவீர்” என்றான் {ஜனமேஜயன்}”.(6)

சௌதி {சௌனகர் தலைமையில் இருந்த முனிவர் கூட்டத்திடம்|} சொன்னார், “இவ்வாறு கேட்கப்பட்ட அந்த மறுபிறப்பாள முனிவர் {வைசம்பாயனர்}, உயர் ஆன்ம வியாசரிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, அந்த மன்னனின் கேள்விக்குப் பதிலளிப்பதில் தம்மை நிறுவிக் கொண்டார்.(7)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மனிதர்களின் மன்னா, ஒவ்வொருவனும் தன் செயல்களின் இறுதியில் தன் சொந்த இயல்புக்குத் திரும்ப இயன்றவனல்ல. உண்மையில் இஃது இவ்வாறு இருந்தாலும், இல்லாவிட்டாலும் உன்னால் கேட்கப்பட்டது நல்ல கேள்வியே.(8) ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இந்தத் தெய்வீகப் புதிரை {தேவரகசியத்தைக்} கேட்பாயாக. ஓ! கௌரவ்யா, வலிமையும், சக்தியும், தெய்வீகப் பார்வையும், பேராற்றலையும் கொண்டவரும், புராதன தவசியும், பராசரர் மகனும், உயர்ந்த நோன்புகளை எப்போதும் நோற்பவரும், செயல்கள் அனைத்துடன் இணைந்த கதியை அறிந்தவருமான வியாசரால் (எங்களுக்கு) இது விளக்கப்பட்டது.(9,10)

வலிமையும், சக்தியும், பெரும்பிரகாசமும் கொண்ட பீஷ்மர், வசுக்களின் நிலையை அடைந்தார். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அஷ்ட வசுக்கள் இப்போது காணப்படுகின்றனர்.(11) துரோணர், அங்கீரஸ வழித்தோன்றல்களில் முதன்மையான பிருஹஸ்பதிக்குள் நுழைந்தார். ஹிருதிகன் மகனான கிருதவர்மன் மருத்துகளுக்குள் நுழைந்தான்.(12) பிரத்யும்னன் சனத்குமாரருக்குள் நுழைந்தான். திருதராஷ்டிரன், அடைதற்கரிதானதும், கருவூலத் தலைவனுக்குரியதுமான உலகத்தை {குபேரலோகத்தை / யக்ஷர்களின் உலகத்தை} அடைந்தான்.(13) புகழ்பெற்றவளான காந்தாரி தன் கணவன் திருதராஷ்டிரன் அடைந்த அதே உலகத்தை அடைந்தாள். பாண்டு தன் இரு மனைவியருடன் பெரும் இந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்றான்.(14) விராடன், துருபதன், மன்னன் திருஷ்டகேது, நிசடன், அக்ரூரர், சாம்பன், பானுகம்பன், விதூரதன்,(15) பூரிஸ்ரவஸ், சலன், மன்னன் பூரி, கம்ஸன், உக்ரஸேனன், வசுதேவர்,(16) மனிதர்களில் முதன்மையான உத்தரன், சங்கன் ஆகிய முதன்மையான மனிதர்கள் அனைவரும் தேவர்களிடம் நுழைந்தார்கள்.(17)

பேராற்றல் கொண்டவனும், வலிமையும், சக்தியும் கொண்டவனும், வர்ச்சஸ் என்ற பெயரைக் கொண்டவனுமான சோமனின் மகன், மனிதர்களில் சிங்கமான பல்குனன் {அர்ஜுனன்} மகனான அபிமன்யுவானான்.(18) க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு இணக்கமான முறையில் வேறு எவராலும் வெளிப்படுத்த முடியாத துணிச்சலுடன் போரிட்ட அந்த வலிய கரங்களைக் கொண்ட அற ஆன்மாவானாவன் சோமனுக்குள் நுழைந்தான்.(19) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, போரில் கொல்லப்பட்ட கர்ணன் சூரியனுக்குள் நுழைந்தான். சகுனி துவாரனுக்குள்ளும், திருஷ்டத்யும்னன் நெருப்பின் தேவனுக்குள்ளும் ஈர்க்கப்பட்டனர்.(20) திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரும் கடும் சக்தி கொண்ட ராட்சசர்களாவர். ஆயுதங்களால் அடைந்த மரணத்தால் புனிதமடைந்தவர்களும், பெருஞ்செழிப்பைக் கொண்டவர்களுமான அந்த உயர் ஆன்மாக்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தனர்.(21) க்ஷத்ரி {விதுரர்}, மன்னன் யுதிஷ்டிரன் ஆகிய இருவரும் அற தேவனுக்குள் நுழைந்தனர். புனிதமானவனும், சிறப்புமிக்கவனுமான அனந்தன் (பலராமனாகப் பிறந்தவன்) பூமிக்குக் கீழுள்ள உலகத்திற்குச் சென்றான்.(22) பெரும்பாட்டனின் {பிரம்மனின்} ஆணையின் பேரிலும், யோகசக்தியின் துணையுடனும் அவன் பூமியை ஆதரித்தான்.

வாசுதேவன் {கிருஷ்ணன்}, நாராயணன் என்றழைக்கப்படும் தேவர்களின் நித்திய தேவனுடைய ஒரு பகுதியாவான். அதன்படியே அவன் நாராயணனுக்குள் நுழைந்தான்.(23) பதினாராயிரம் {16,000} பெண்கள் வாசுதேவனுக்கு மனைவியராக மணந்து கொடுக்கப்பட்டனர். ஓ! ஜனமேஜயா, வேளை வந்தபோது அவர்கள் சரஸ்வதிக்குள் மூழ்கினர்.(24) அங்கே அவர்களது (மனித) உடலைக் கைவிட்ட அவர்கள் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர். பிறகு அவர்கள் அப்சரஸ்களாக மாறி, வாசுதேவனின் முன்னிலையை அடைந்தனர்.(25) வீரர்களும், கடோத்கசன் மற்றும் பெரும் போரில் கொல்லப்பட்ட பிறரைப் போன்ற வலிமைமிக்கத் தேர்வீரர்களில் சிலர் தேவர்கள் மற்றும் சிலர் யக்ஷர்கள் என்ற நிலையை அடைந்தனர்.(26) துரியோதனனின் தரப்பில் போரிட்டவர்கள் ராட்சசர்கள் என்று சொல்லப்படுகின்றனர். ஓ! மன்னா, அவர்கள் அனைவரும் படிப்படியாகச் சிறந்த இன்பலோகங்களை அடைந்தனர்.(27) அந்த மனிதர்களில் முதன்மையான சிலர் இந்திரனின் வசிப்பிடத்திற்கும், வேறு சிலர் பெரும் நுண்ணறிவைக் கொண்ட குபேரனின் வசிப்பிடதிற்கும், இன்னும் சிலர் வருணனின் வசிப்பிடத்திற்கும் சென்றனர்.(28) ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, ஓ! பாரதா, குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பினரின் செயல்கள் குறித்த அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்” {என்றார் வைசம்பாயனர்}”.(29)

சௌதி {சௌனகர் தலைமையில் இருந்த முனிவர் கூட்டத்திடம்|}  சொன்னார், “மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, இதை வேள்விச் சடங்குகளின் இடைவெளிகளில் கேட்ட மன்னன் ஜனமேஜயன் ஆச்சரியத்தில் நிறைந்தான்.(30) பிறகு வேள்விப் புரோகிதர்கள், இன்னும் எஞ்சியிருந்த சடங்குகளை நிறைவடையச் செய்தனர். பாம்புகளை (கொடிய மரணத்தில் இருந்து) காத்த ஆஸ்தீகர் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தார்.(31) மன்னன் ஜனமேஜயன் பிராமணர்கள் அனைவருக்கும் அபரிமிதமான கொடைகளைக் கொடுத்து நிறைவடையச் செய்தான். இவ்வாறு மன்னனால் வழிபடப்பட்ட அவர்கள் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(32) கல்விமான்களான அந்தப் பிராமணர்களுக்கு விடைகொடுத்து அனுப்பிய மன்னன் ஜனமேஜயன், தக்ஷசீலத்தில் இருந்து யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பினான்.(33) மன்னனின் {ஜனமேஜயனின்} பாம்பு வேள்வியில், வியாசரின் ஆணையின் பேரில் வைசம்பாயனர் சொன்ன அனைத்தையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன்.(34)

வரலாறு {இதிஹாஸம்} என்றழைக்கப்படும் இது புனிதமானதும், புனிதப்படுத்துவதும், சிறந்ததுமாகும். ஓ! பிராமணரே {சௌனகரே}, வாய்மைநிறைந்த பேச்சைக் கொண்ட தவசி கிருஷ்ணரால் {வியாசரால்} இது தொகுக்கப்பட்டது.(35) அவர், அனைத்தையும் அறிந்தவரும், விதிகள் அனைத்தையும், அறிந்தவரும், அனைத்துக் கடமைகளின் அறிவைக் கொண்டவரும், பக்தியுடையவரும், புலன்களுக்கு அப்பாற்பட்டவற்றை உணரக்கூடியவரும் {அதீந்திரியரும்}, தூயவரும், தவங்களால் தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்டவரும்,(36) ஆறு உயர்ந்த குணங்களைக் கொண்டவரும், சாங்கிய யோகத்திற்குத் தம்மை அர்ப்பணித்தவரும் ஆவார். அவர் {வியாசர்}, பல்வேறு கதைகளால் தூய்மையடைந்த தெய்வீகப் பார்வையில் அனைத்தையும் கண்டு இதைத் தொகுத்தார்.(37) அவர் பாண்டவர்கள் மற்றும் சக்தி எனும் அபரிமித செல்வத்தைக் கொண்ட பிற க்ஷத்திரியர்களின் புகழை உலகம் முழுவதும் பரப்ப விரும்பி இதைச் செய்தார்.(38)

எந்தக் கல்விமான், செவிப்புலம் கேட்பதற்கு மத்தியில் புனித நாட்களில் இந்த வரலாற்றை உரைப்பானோ அவன், அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்தவனாகச் சொர்க்கத்தை வென்று, பிரம்ம நிலையை அடைவான்.(39) எந்த மனிதன், (தீவில் பிறந்தவரான) கிருஷ்ணரால் {வியாசரால்} தொகுக்கப்பட்ட இந்த வேதத்தை முழுமையாக உரைக்கும்போது, குவிந்த கவனத்துடன் கேட்பானோ, பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} போன்ற கொடும்பாவங்களின் வரிசையில் வரும் அவனுடைய லட்சக்கணக்கான பாவங்களையும் அது கழுவிவிடும்.(40) ஒரு சிராத்தத்தில் இந்த வரலாற்றின் சிறு பகுதியையாவது உரைக்கும் மனிதனின் பித்ருக்கள், வற்றாத உணவு மற்றும் பானத்தை அடைகிறார்கள்[1].(41) ஒருவன் தன் புலன்களைக் கொண்டோ, மனத்தைக் கொண்டோ பகலில் செய்யும் பாவங்கள், மாலையில் மஹாபாரதத்தின் ஒரே ஒரு பகுதியை உரைப்பதன்மூலம் கழுவப்படுகின்றன.(42) ஒரு பிராமணன் இரவில் பெண்களுக்கு மத்தியில் எத்தகைய பாவங்கள் புரிந்தாலும், விடியலில் மஹாபாரதத்தின் ஒரே ஒரு பகுதியை உரைப்பதன் மூலம் கழுப்படுகின்றன.(43) உயர்ந்த குலத்தைச் சேர்ந்த பாரதர்களே {பரதனின் வாரிசுகளே} இதன் தலைப்பாகிறார்கள். எனவே இது பாரதம் என்றழைக்கப்படுகிறது. பாரதர்களையே தலைப்பாகக் கொண்டதும், மேலும் மிக முக்கியமானவற்றைக் கொண்டதுமாக இருப்பதால் இது மஹாபாரதம் என்றழைக்கப்படுகிறது[2].(44) இந்தப் பெரும் ஆய்வின் பொருள் விளக்கங்களை நன்கறிந்த ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அத்தகைய மனிதன் அறம், பொருள் மற்றும் இன்பத்துடன் வாழ்ந்து, வீட்டையும் {மோட்சத்தையும்} அடைகிறான்[3].(45) எது இங்கே தோன்றுமோ அஃது எங்கும் தோன்றும். எது இங்கே தோன்றாதோ அஃது எங்கும் தோன்றாது. இந்த வரலாறு ஜயம் என்ற பெயரில் அறியப்படுகிறது. முக்தியில் {மோட்சத்தில்} விருப்பமுள்ள அனைவராலும் இது கேட்கப்பட வேண்டும்[4].(46)

பிராமணர்கள், மன்னர்கள், கருத்தரித்த பெண்கள் ஆகியோரால் இது படிக்கப்பட வேண்டும். சொர்க்கத்தை அடைய விரும்புபவன் சொர்க்கத்தை அடைவான்; வெற்றியை விரும்புபவன் வெற்றியை அடைவான்.(47) கருத்தரித்த பெண்கள் உயர்ந்த அருளைக் கொண்ட மகனையோ, மகளையோ ஈன்றெடுப்பார்கள். பலமிக்கவரும், திரும்பி வராதவரும், முக்தியின் அவதாரமும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் {வியாசர்}, அற விளைவுகளுக்குத் துணை புரிய விரும்பி பாரதத்தின் சுருக்கத்தைப் படைத்தார்.(48) அறுபது லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட மற்றொரு தொகுப்பையும் அவர் படைத்தார்.(49) இவற்றில் முப்பது லட்சம் ஸ்லோகங்கள் தேவலோகத்தில் வைக்கப்பட்டது. பித்ருக்களின் லோகத்தில் பதினைந்து லட்சம் ஸ்லோகங்கள் இப்போது இருக்கின்றன. அதே வேளையில் பதினைந்து லட்சம் யக்ஷர்களின் உலகில் நடப்பிலுள்ளன.(50) மனிதர்களுக்கு மத்தியில் ஒரு லட்சம் தற்போதிருக்கின்றன. நாரதர் தேவர்களுக்கு மஹாபாரதத்தை உரைத்தார்; அசித தேவலர் பித்ருக்களுக்கும்,(51) சுகர் ராட்சசர்கள் மற்றும் யக்ஷர்களுக்கும், வைசம்பாயனர் மனிதர்களுக்கு மஹாபாரதத்தை உரைத்தனர். இந்த வரலாறு புனிதமானதாகவும், ஆழ்ந்த கருத்துகளை உடையதாகவும், வேதங்களுக்கு நிகரானதாகவும் கருதப்படுகிறது.(52) ஓ! சௌனகரே, ஒரு பிராமணனைத் தன் முன்னிலையில் கொண்டு இந்த வரலாற்றைக் கேட்கும் மனிதன், புகழ் மற்றும் தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையையும் அடைகிறான்.(53) நல்லர்ப்பணிப்புடன் மஹாபாரத உரையைக் கேட்பவன், அதன் மிகச் சிறிய பகுதியைப் புரிந்து கொள்வதன் மூலம் கிட்டும் தகுதியின் விளைவால் உயர்ந்த வெற்றியை அடைகிறான். இந்த வரலாற்றைச் சொல்லும் மனிதனும், அர்ப்பணிப்புடன் கேட்கும் மனிதனும் தங்கள் பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றனர்.(54,55)

பழங்காலத்தில் பெரும் முனிவரான வியாசர் இந்த ஆய்வைத் தொகுத்து, இந்த நான்கு ஸ்லோகங்களுடன் சேர்த்து தம்முடன் தமது மகன் சுகரையும்  படிக்கச் செய்தார்[5].(56) “ஆயிரக்கணக்கான தாய்மாரும், தந்தைமாரும், நூற்றுக்கணக்கான மகன்களும், மனைவியரும் உலகில் எழுவார்கள், அதிலிருந்து செல்வார்கள். வேறு சிலரும் (எழுந்து) அதே போலச் செல்வார்கள்.(57) இன்பந்தரும் ஆயிரக்கணக்கான தருணங்களும், அச்சந்தரும் நூற்றுக்கணக்கான தருணங்களும் நேரலாம். இவை அறியாமையில் இருப்பவனைப் பாதிக்குமேயன்றி ஞானியையல்ல.(58) உயர்த்தப்பட்ட கரங்களுடன் நான் உரக்கக் கதறுகிறேன், கேட்பாரெவரும் இல்லை. அறத்தில் இருந்து செல்வமும், செல்வத்திலிருந்து இன்பமும் நேர்கின்றன. எனவே, அறத்தை ஏன் கடைப்பிடிக்கக்கூடாது?(59) இன்பத்திற்காகவோ, அச்சத்திற்காகவோ, பேராசைக்காகவோ ஒருபோதும் ஒருவன் அறத்தைக் கைவிடக்கூடாது. உண்மையில் உயிரின் நிமித்தமாகவும் ஒருவன் அறத்தை ஒருபோதும் கைவிடக்கூடாது. அறமே நிலையானது. இன்பதுன்பங்கள் நிலையானவையல்ல. ஜீவன் நிலையானவன். எனினும், உடலில் ஜீவன் பொதியப்படுவதற்கான காரணம் {உடலுடன் கூடிய ஜீவன்} அவ்வாறானதல்ல” {என்ற ஸ்லோகங்களை வியாசர் தம்முடன் சேர்ந்து சுகரையும் படிக்கச் செய்தார்}.(60)அந்த மனிதன் விடியலில் எழுந்ததும், {மேற்கண்ட} இந்தப் பாரதச் சாவித்ரியைப் படிப்பானோ[6] அவன் இந்த வரலாற்றை உரைப்பதுடன் தொடர்புடைய வெகுமதிகளை அனைத்தையும் அடைந்து இறுதியாக உயர்ந்த பிரம்மத்தை அடைவான்.(61) புனிதமான பெருங்கடல், இமய மலை ஆகிய இரண்டும் விலைமதிப்புமிக்க ரத்தினங்களின் சுரங்கங்களாகக் கருதப்படுவதைப் போலவே பாரதமும் (விலைமதிப்புமிக்க ரத்தினங்களைக் கொண்ட சுரங்கமாகவே) கருதப்படுகிறது.(62) கல்விமானான மனிதன், (தீவில் பிறந்த) கிருஷ்ணரால் {வியாசரால்} தொகுக்கப்பட்ட இந்த வேதத்தையோ, ஆகமத்தையோ பிறருக்கு உரைப்பதன் மூலம் செல்வத்தை ஈட்டுவான். குவிந்த கவனத்துடன் பாரதம் என்ற இந்த வரலாற்றை உரைக்கும் மனிதன் நிச்சயம் உயர்ந்த வெற்றியை அடைவான்.(63) எனில், புஷ்கரையில் நீர் தெளித்துக் கொண்டு, பாரதம் உரைக்கப்படும் போது கவனமாகக் கேட்கும் மனிதனைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இது தீவில் பிறந்தவரின் உதடுகளில் இருந்து சிந்திய அமுதத்திற்கு ஒப்பானது. இஃது அளக்க முடியாததாகவும், புனிதமானதாகவும், புனிதப்படுத்துவதாகவும், பாவம் போக்குவதாகவும், மங்கலமானதாகவும் இருக்கிறது” {என்றார் சௌதி}.(64)

மஹாபாரத ஸ்ரவணவிதி! – ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 6-மஹாபாரதம் உரைக்கும்போது கேட்பதற்குரிய விதி முறைகள்; மஹாபாரதம் கேட்ட பிறகு கொடுக்கப்பட வேண்டிய சிராத்த காணிக்கைகள்; மஹாபாரதப் பாராயணத்தைக் கேட்ட பிறகு பொதுவாகக் கொடுக்கப்பட வேண்டிய கொடைகள்; பாராயணம் செய்பவருக்குரிய தகுதிகள்; பாராயணம் செய்ய வேண்டிய முறை; ஒவ்வொரு பாராயணத்தின் முடிவிலும் கிட்டும் பலன்கள்; ஒவ்வொரு பர்வத்தின் நிறைவிலும் கொடுக்கப்பட வேண்டிய கொடைகள்; மஹாபாரதத்தின் புண்ணியங்கள்; மஹாபாரதத்தைக் கேட்பதன் மூலம் கொடும்பாவங்களில் இருந்தும் தூய்மையடையலாம் என்பது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! புனிதமானவரே, கல்விமான்கள் எந்தச் சடங்குகளின்படி பாரதத்தைக் கேட்க வேண்டும். (பாரதத்தைக் கேட்பதன் மூலம் அடையப்படும்) கனிகள் பலன்கள் என்னென்ன? பல்வேறு பாரணங்களின் {உண்ணா நோன்பிருந்து உண்ணும்} போது வழிபடப்பட வேண்டிய தேவர்கள் யாவர்?(1) ஓ! புனிதமானவரே, ஒவ்வொரு பர்வத்தின் போதும், அல்லது (பாராயணம் தொடர்கையில் வரும்) புனித நாளின் போதும் ஒருவன் கொடுக்க வேண்டிய கொடைகள் என்னென்ன? பாராயணம் செய்பவரின் தகுதிகள் என்ன? இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக[1]” என்றான்.(2)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! மன்னா, ஓ! பாரதா, அதன் நடைமுறை என்ன என்பதையும், (பாரதம் உரைக்கப்படும்போது) கேட்பவனுக்குக் கிடைக்கும் கனிகள் {பலன்கள்} என்னென்ன என்பதையும் கேட்பாயாக. ஓ! மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, இதையே நீ என்னிடம் கேட்டாய்.(3) ஓ! பூமியின் ஆட்சியாளா, சொர்க்கத்தின் தேவர்கள் விளையாடுவதற்காக {தெய்வசெயல் புரிவதற்காக} இந்த உலகத்திற்கு வந்தனர். தங்கள் பணியை முடித்துக் கொண்டு அவர்கள் மீண்டும் சொர்க்கத்திற்குச் சென்றனர்.(4) நான் உனக்குச் சுருக்கமாகச் சொல்லப் போவதைக் கேட்பாயாக. மஹாபாரதத்தில் முனிவர்களின் பிறப்பு மற்றும் பூமியில் வந்த தேவர்களின் பிறப்பு ஆகியவை காணக்கிடைக்கின்றன.(5) ஓ! பாரதக் குலத்தோனே, பாரதம் என்றழைக்கப்படும் இந்த ஆய்வில் நித்தியமான ருத்திரர்கள், சாத்யர்கள், விஷ்வேதேவர்கள், ஆதித்யர்கள், அஸ்வினிகள் என்றழைக்கப்படும் இரு தேவர்கள், லோகபாலர்கள், பெரும் முனிவர்கள், குஹ்யர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், வித்யாதரர்கள், சித்தர்கள், பல்வேறு தேவர்கள், உடலில் புலப்படும் சுயம்பு, தவசிகள் பலர், மலைகள், குன்றுகள், பெருங்கடல்கள், கடல்கள், ஆறுகள், பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த அப்சரஸ்கள், கோள்கள், வருடங்கள், அயனங்கள் {அரை வருடங்கள்}, பருவ காலங்கள், அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடியதும், தேவர்கள் மற்றும் அசுரர்களுடன் கூடியதுமான மொத்த அண்டமும் ஓரிடத்தில் காணக்கிடைக்கின்றன.(6-9)

ஒரு மனிதன் பயங்கரப் பாவங்களைச் செய்தவனாக இருந்தாலும், இதில் சொல்லப்படும் அவர்களின் {மேற்கண்டவர்களின்} பெயர்கள், சாதனைகள், புகழ் ஆகியவற்றைக் கேட்பதன் மூலம், அவற்றில் இருந்து தூய்மையடைகிறான்.(10) ஓ! பாரதா {ஜனமேஜயா}, குவிந்த ஆன்மாவுடனும், தூய உடலுடனும் இந்த வரலாற்றைத் தொடக்கம் முதல் முடிவு வரை முறையாகக் கேட்ட ஒருவன், (அதில் குறிப்பிடப்படும் முதன்மையான மனிதர்களுக்கு) சிராத்தக் காணிக்கைகளை அளிக்க வேண்டும். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தன் சக்திக்கு தகுந்த படி பிராமணர்களுக்கும் பிராமணர்களுக்கும் அர்ப்பணிப்புடன் கொடைகளை அளிக்க வேண்டும்.(11,12) பல்வேறு வகை ரத்தினங்கள், பசுக்கள், பசுக்களில் பால் கறப்பதற்கான வெண்கலப் பாத்திரங்கள், அனுபவிக்கத்தகுந்த அனைத்து வகைச் சாதனைகளையும் கொண்டவர்களும், அனைத்து வகை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான கன்னிகைள், பல்வேறு வகையான வாகனங்கள், அழகிய மாளிகைகள், நிலங்கள் மற்றும் துணிகள் ஆகியனவும் காணிக்கை அளிக்கப்பட வேண்டும்.(13,14) குதிரைகள், மதப்பெருக்குள்ள யானைகள் உள்ளிட்ட விலங்குகளும், படுக்கைகள், மனிதர்களின் தோள்களில் சுமக்கப்படும் பல்லக்குகள், நன்கு அலங்கரிக்கப்பட்ட தேர்கள் ஆகியவையும் கொடை அளிக்கப்பட வேண்டும்.(15) வீட்டிற்குரிய எந்தப் பொருளிலும் முதன்மையானவையும், பெரும் மதிப்புமிக்கச் செல்வமும் பிராமணர்களுக்குக் கொடையளிக்கப்பட வேண்டும். உண்மையில், ஒருவன் தன்னையும், மனைவிகளையும், பிள்ளைகளையும் கொடையளிக்க வேண்டும்.(16)

பாரதத்தைக் கேட்க விரும்பும் ஒருவன், ஐயுணர்வு இல்லாத இதயத்துடனும், உற்சாகத்துடனும், இன்பமாகவும் அதைக் கேட்க வேண்டும்; உரையைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அவன் தன் சக்திக்குத் தகுந்த வகையில் பெரும் அர்ப்பணிப்புடன் கொடைகளைக் கொடுக்க வேண்டும்[2].(17) வாய்மை மற்றும் நேர்மையில் அர்ப்பணிப்புள்ளவனும், தற்கட்டுப்பாடுடையவனும், (மனம்) தூய்மையானவனும், நம்பிக்கையுடன் கூடியவனும், கோபத்தை அடக்கியவனுமான ஒரு மனிதன், (பாரதம் உரைக்கும் காரியத்தின் மூலம்) வெற்றியை எவ்வாறு அடைகிறான் என்பதைக் கேட்பாயாக.(18) அவன் (உடல் அளவில்) தூய்மையானவனும், நல்லொழுக்கம் ஒழுகுபவனும், வெள்ளுடை உடுத்தியவனும், தன் ஆசைகளை முழுமையாக ஆள்பவனும், குற்றங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனும், கல்வியின் பிரிவுகள் அனைத்தையும் அறிந்தவனும், நம்பிக்கையுடன் கூடியவனும், வன்மத்தில் இருந்து விடுபட்டவனும்,(19) நல்ல குணங்களைக் கொண்டவனும், அருள் நிறைந்தவனும், தற்கட்டுப்பாடுடையவனும், வாய்மைநிறைந்தவனும், ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பவனும், கொடையளிப்பதால் அனைவராலும் விரும்பப்படுபவனும், கௌரவம் கொண்டவனுமான ஒருவனை உரைப்பவனாக {பாராயணம் செய்பவனாக} நியமிக்க வேண்டும்.(20){பாரதம்} உரைப்பவன் {பாராயணம் செய்பவன்}, உடல் கோளாறுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, சுகமாக அமர்ந்து கொண்டு, குவிந்த கவனத்துடனும், போதுமான சக்தியுடனும், எழுத்துகள், சொற்களுக்குள் குழப்பிக் கொள்ளாமல், இனிய பேச்சுடனும், சொற்களுடனும் கூடியவனாக, உணர்வைக் குறிக்கும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உரையை மெதுவாகவோ, வேகமாகவோ சொல்லாமல் எழுத்துகள் அமையும் எட்டு இடங்களில் இருந்து அறுபத்துமூன்று எழுத்துகளையும் முழுமையாகச் சொல்ல வேண்டும்.(21,22) நாராயணனையும், மனிதர்களில் முதன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும்.(23) ஓ! மன்னா, பாரதம் உரைக்கப்படும்போது, கேட்கும் இவ்வகையானவன், நோன்புகளை நோற்று, தொடக்கச் சடங்குகளால் தூய்மையடைந்து மதிப்புமிக்கப் பலன்களை அடைகிறான்.(24)

{உண்ணா நோன்பிருந்து உண்ணும்} முதல் பாரணத்தை எட்டும்போது, கேட்பவன், விரும்பத்தக்க பொருட்களைக் கொடுத்துப் பிராமணர்களை நிறைவடையச் செய்ய வேண்டும். இதைச் செய்வதன் மூலம் ஒருவன் அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான்[3].(25) அவன் தனக்குப் பணிவிடை செய்யக்கூடிய பல்வேறு வகை அப்சரஸ்கள் நிறைந்த ஒரு பெரிய (தெய்வீகத்) தேரை அடைகிறான். மகிழ்ச்சியான இதயத்துடனும், தேவர்களின் துணையுடனும் அவன் (இன்பத்தில்) திளைத்த இதயத்துடன் சொர்க்கத்திற்குச் செல்கிறான்.(26) இரண்டாம் பாரணத்தை எட்டும்போது, கேட்டுக் கொண்டிருப்பவன் அதிராத்ர நோன்பை நோற்றதற்கான பலன்களை அடைகிறான். உண்மையில் அவன் முற்றிலும் விலைமதிப்புமிக்க ரத்தினங்களாலான ஒரு தெய்வீகத் தேரில் உயர்கிறான்.(27) தெய்வீக மலர்மாலைகளையும், ஆடைகளையும் அணிந்து கண்டு, தெய்வீகக் களிம்புளைப் பூசிக் கொண்டு, எப்போதும் தெய்வீக நறுமணத்தைப் பொழிந்தபடியே அவன் சொர்க்கத்தில் உயர்ந்த கௌரவங்களை அடைகிறான்.(28) மூன்றாவது பாரணத்தை எட்டும்போது, அவன் துவாதசாஹ நோன்றை நோற்றதற்கான பலன்களை அடைகிறான். உண்மையில் அவன், ஒரு தேவனைப் போலப் பல வருடங்கள் சொர்க்கத்தில் வசிக்கிறான்.(29)நான்காவது பாரணத்தில் அவன் வாஜபேய வேள்வி செய்ததன் பலன்களை அடைகிறான். ஐந்தாவதில் இதற்கும் இரு மடங்கு பலன்களை அடைகிறான். உதயச் சூரியனையோ, சுடர்மிக்க நெருப்பையோ போன்ற ஒரு தெய்வீகத் தேரில் ஏறி, தேவர்களின் துணையுடன் சொர்க்கத்திற்குச் செல்லும் அவன், இந்திரனின் வசிப்பிடத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் இன்பநிலையில் திளைக்கிறான்.(30,31) ஆறாவது பாரணத்தில் இதனிலும் இரு மடங்கையும், ஏழாவது மும்மடங்கு பலன்களையும் அடைகிறான். (அழகில்) கைலாச மலையின் சிகரத்திற்கு ஒப்பானதும், வைடூரியத்தாலும், வேறு ரத்தினங்களாலும் அமைக்கப்பட்ட பீடங்களைக் கொண்டதும், பல்வேறு வகை அழகிய பொருட்களால் சூழப்பட்டதும், ரத்தினங்கள் மற்றும் பவழங்கள் நிறைந்ததும், செலுத்துபவனின் விருப்பத்திற்கேற்ப நகர்வதும், பணிவிடை செய்வதற்கான அப்சரஸ்கள் நிறைந்ததும், ஒரு தெய்வீவக் தேரில் ஏறும் அவன், இரண்டாவது சூரிய தேவனைப் போல இன்பலோகங்கள் எங்கும் பவனி வருகிறான்.

எட்டாவது பாரணத்தில் அவன் ராஜசூய வேள்வியின் பலன்களை அடைகிறான்.(32-34) உதயச் சந்திரனைப் போன்றதும், சந்திரக்கதிர்களைப் போன்று வெண்மையான குதிரைகள் பூட்டப்பட்டதும், எண்ணத்தின் வேகம் கொண்டதுமான அழகிய தேரில் அவன் ஏறுகிறான்.(35) முதன்மையான அழகைக் கொண்டவர்களும், சந்திரன் போன்ற அழகிய முகங்களைக் கொண்டவர்களுமான பெண்களால் அவன் பணிவிடை செய்யப்படுகிறான். அவர்கள் இடுப்புகளில் வளைந்திருக்கும் மாலைகள் மற்றும் கணுக்கால்களில் வளைந்திருக்கும் நுபுரங்களின் இசையை அவன் கேட்கிறான்.(36) அழகில் விஞ்சிய பெண்களின் மடியில் தலை வைத்து உறங்கி பெரும் புத்துணர்ச்சியுடன் அவன் விழித்தெழுகிறான். ஒன்பதாவது பாரணத்தில், ஓ! பாரதா, அவன் வேள்விகளில் முதன்மையான குதிரை வேள்வியைச் செய்த பலன்களை அடைகிறான்.(37) தங்கத் தூண்களால் ஆதரிக்கப்படும் கூடுகளுடன் கூடியதும், வைடூரியக் கற்களால் அமைக்கப்பட்ட இருக்கையுடன் கூடியதும், அனைத்துப் பக்கங்களில் பசும்பொன்னாலான ஜன்னல்களைக் கொண்டதும், அப்சரஸ்கள், கந்தர்வர்கள் மற்றும் வேறு தேவர்களால் நிறைந்ததுமான தேரில் ஏறி காந்தியில் சுடர்விடுகிறான்.(38) தெய்வீக மாலைகள் மற்றும் ஆடைகள் அணிந்து, தெய்வீகக் களிம்புகள் தரித்துக் கொள்ளும் அவன், தேவர்களைத் துணையாகக் கொண்ட இரண்டாவது தேவனைப் போல அருள்நிலையில் விளையாடுகிறான்.(39,40)

பத்தாவது பாரணத்தை அடைந்து, பிராமணர்களை நிறைவடையச் செய்யும் அவன் எண்ணற்ற கிங்கிணி மணிகளுடன் கூடியதும், கொடிகள் மற்றும் பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டதும், விலைமதிப்புமிக்க ரத்தினங்களாலான இருக்கையைக் கொண்டதும், வைடூரியத்தாலான வளைவுகளைக் கொண்டதும், தங்க வலைப் பின்னல் கொண்டதும், பவளத்தாலான கோபுரங்களைக் கொண்டதும், நன்றாகப் பாடும் கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களால் அலங்கரிக்கப்பட்டதும், அறவோர் வசிக்கத் தகுந்ததுமான தேரை அடைகிறான்.(41-43) நெருப்பின் நிறம் கொண்ட கிரீடத்தால் மகுடந்தரித்து, தங்க ஆபரணத்தால் அலங்கரித்துக் கொள்ளும் அவன், தெய்வீக சந்தனக் குழம்பைத் தன் மேனியில் பூசிக்கொண்டு, தெய்வீக மலர்மாலைகள் அணிந்து கொண்டு, பெருங்காந்தியுடன் கூடியவனாக, தேவர்களின் அருளின் மூலம், தெய்வீக உலகங்கள் அனைத்திலும் திரிந்து, தெய்வீகமான இன்ப நுகர் பொருட்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான்.(44,45)

இவ்வாறாக இருக்கும் அவன் சொர்க்கத்தில் மிக நீண்ட வருடங்கள் உயர்ந்த கௌரவங்களை அடைகிறான். கந்தர்வர்களின் துணையுடன் கூடிய அவன் முழுமையாக இருபத்தோரு வருடங்கள் இந்திரனின் வசிப்பிடத்தில் இந்திரனின் அருளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அவன் ஒவ்வொருநாளும் பேரழகு படைத்த தெய்வீகக் காரிகையருடன் தெய்வீகத் தேர்களையும், வாகனங்களையும் செலுத்திக் கொண்டு தேவர்களின் பல்வேறு உலகங்களின் பவனி வருகிறான். ஓ! மன்னா, அவன் சூரிய தேவன் மற்றும் சந்திரதேவன், சிவன் ஆகியோரின் வசிப்பிடங்களுக்குச் செல்ல இயன்றவனாகிறான். உண்மையில் அவன் விஷ்ணு லோகத்தில் வாழ்வதிலும் வெற்றியடைகிறான். ஓ! ஏகாதிபதி, இஃது இவ்வாறே இருக்கிறது. இதில் எந்த ஐயமும் இல்லை.(46-49) நம்பிக்கையுடன் கேட்கும் மனிதனும் அவ்வாறே ஆகிறான். இதை என் ஆசான் {வியாசர்} சொல்லியிருக்கிறார். இதை உரைப்பவன் விரும்பும் அனைத்துப் பொருட்களும் அவனுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.(50) யானைகள், குதிரைகள், தேர்கள், வாகனங்கள், குறிப்பாக விலங்குகள் மற்றும் அவை இழுக்கும் வண்டிகள், தங்கக் கைவளை, காது வளையங்கள், புனித நூல்கள்,(51) அழகிய ஆடைகள், சிறந்த நறுமணப் பொருட்கள் ஆகியன கொடுக்கப்பட வேண்டும். அவனைத் தேவனாக வழிபடும் ஒருவன் விஷ்ணுலோகத்தை அடைகிறான்.(52)

பாரதம் உரைக்கப்படுகையில், ஒவ்வொரு பர்வத்தையும் அடையும்போது, பிராமணர்களின் பிறப்பு, நாடு, வாய்மை, மகிமை மற்றும் பக்தி ஆகியவற்றை அறிந்து அவர்களுக்கும், அதே போன்றவற்றை அறிந்து கொண்டு க்ஷத்திரியர்களுக்கும் என்னென்ன கொடுக்கப்பட வேண்டும் என்பதை நான் இனி அறிவிக்கப் போகிறேன்[4].(53,54) பிராமணர்களை ஆசி கூறச் செய்து பிறகு உரைக்கும் தொழில் {பாராயணம்} தொடங்கப்பட வேண்டும். ஒரு பர்வம் முடிவடைந்ததும், ஒருவனுடைய சக்திக்குத் தகுந்த வகையில் பிராமணர்கள் வழிபடப்பட வேண்டும்.(55) முதலில் உரைப்பவர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, வெள்ளாடை அணிந்து, சந்தனக் குழம்பைப் பூசிக் கொண்டு, தேன் மற்றும் பாயஸம்[5] உண்டிருக்க வேண்டும்.(56)

ஆஸ்தீக பர்வம்
<1> உரைக்கப்படும்போது, பிராமணர்களுக்குக் கனிகளும், கிழங்குகளும், பாயஸமும், தேனும், தெளிந்த நெய்யும், பாயஸமும் கொடுக்கப்பட வேண்டும்.(57)

சபா பர்வம்
<2> உரைக்கப்படும்போது, ஓ! மன்னா, பிராமணர்கள் உண்பதற்கு அபூபங்கள், பூபங்கள் மற்றும் மோதகங்களுடன் கூடிய ஹவிஷ்யம் கொடுக்கப்பட வேண்டும்[6].(58)ஆரண்யக பர்வம்<3> உரைக்கப்படும்போது, மேன்மையான பிராமணர்கள் உண்பதற்குக் கனிகளும், கிழங்குகளும் கொடுக்கப்பட வேண்டும்.

ஆரண்யப் பர்வத்தை
<4> அடையும்போது, நீர் நிறைந்த நீர்க்குடங்களைக் கொடையளிக்க வேண்டும்.(59) அரிசி, கனிகள், கிழங்குகள், ஏற்புடைய குணம் கொண்ட உணவுகளும் பல மேன்மையான வகைகளைச் சேர்ந்த இனிய உணவும் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.(60)

விராட பர்வம்
<5> உரைக்கப்படும்போது, பல்வேறு வகை ஆடைகள் கொடையளிக்கப்பட வேண்டும். ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா},

உத்யோக பர்வத்தின்
<6> போது, இரு பிறப்பாளர்களை {பிராமணர்களை} நறுமணப் பொருட்களாலும், மாலைகளாலும் அலங்கரித்து ஏற்புடைய குணம் கொண்ட அனைத்து வகை உணவுகளையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

பீஷ்ம பர்வம்
<7> உரைக்கப்படும்போது,  ஓ! மன்னர்களின் மன்னா, அவர்களுக்குச் |{பிராமணர்களுக்குச்} சிறந்த தேர்களையும், வாகனங்களையும் கொடுத்துவிட்டு,(61,62) தூய்மையானதும், நன்கு சமைக்கப்பட்டதும், விரும்பத்தக்க ஒவ்வொரு குணமும் கொண்ட உணவைக் கொடுக்க வேண்டும்.

துரோண பர்வத்தின்
<8> போது, கல்விமான்களான பிராமணர்களுக்கு,(63) ஓ! ஏகாதிபதி மேன்மையான வகை உணவையும், படுக்கைகளையும், வில் மற்றும் நல்ல வாள்களையும் கொடுக்க வேண்டும்.

கர்ண பர்வம்
<9> உரைக்கப்படும்போது, முதன்மையான வகையைச் சார்ந்ததும்,(64) தூய்மையானதும், இல்லறத்தானால் குவிந்த மனத்துடன் நன்கு சமைக்கப்பட்டதுமான உணவை பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

சல்லிய பர்வம்
<10> உரைக்கப்படும்போது, ஓ! மன்னர்களின் மன்னா, பண்டங்களையும், பாயஸத்தையும், கோதுமையால் செய்யப்பட்ட பிண்டங்களையும், இனிய சத்தான உணவு மற்றும் பானங்களையும் கொடுக்க வேண்டும்.

கதா {கதாயுத்த} பர்வத்தின்
<11> போது, முத்கம்[7] கலந்த உணவைக் கொடுத்துப் பிராமணர்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும்.(65,66)ஸ்திரீ பர்வம்<12> உரைக்கப்படும்போது, முதன்மையான பிராமணர்களுக்கு ரத்தினங்களும், விலைமதிப்புமிக்கக் கற்களும் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும்.

ஐஷீக பர்வம்[8]
<13> உரைக்கப்படும்போது, நெய்யில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசி முதலில் கொடுக்கப்பட வேண்டும்(67), அதன் பிறகு தூய்மையானதும், நன்கு சமைக்கப்பட்டதும், விரும்பத்தக்க குணங்கள் அனைத்தையும் கொண்டதுமான உணவைக் கொடுக்க வேண்டும்.

சாந்தி பர்வம்
<14> உரைக்கப்படும்போது, பிராமணர்கள் உண்பதற்கு ஹவிஷ்யம் கொடுக்கப்பட வேண்டும்.(68)

அஸ்வமேதிக பர்வத்தை
<15> அடையும்போது, ஏற்புடைய அனைத்து குணங்களையும் கொண்ட உணவு கொடுக்கப்படவேண்டும்,

ஆஸ்ரமவாஸிக பர்வத்தை
<16> அடையும்போது, பிராமணர்களுக்கு ஹவிஷ்யம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும்.(69)

மௌஸலம்
<17> அடையும்போது, நறுமணப் பொருட்களையும், ஏற்புடைய குணங்களைக் கொண்ட மலர்மாலைகளையும் கொடையளிக்க வேண்டும்.

மஹாப்ரஸ்தானிகத்தின்
<18> போதும், ஏற்புடைய குணங்களைக் கொண்ட அதே வகைக் கொடைகளை அளிக்க வேண்டும்.(70)

ஸ்வர்க்க பர்வத்தை
<19> அடையும்போது, பிராமணர்கள் உண்பதற்கு ஹவிஷ்யம் கொடுக்கப்பட வேண்டும்.

ஹரிவம்சத்தின்
<20> முடிவில் ஓராயிரம் பிராமணர்களுக்கு உணவளிக்கப்பட வேண்டும்.(71) அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பசுவையும், சிறிதளவு பொன்னும் கொடுக்கப்பட வேண்டும். ஓ! மன்னா, இவற்றில் பாதியளவை ஒவ்வொரு ஏழைக்கும் கொடுக்கப்பட வேண்டும்.(72)அனைத்துப் பர்வங்களின் முடிவில் ஞானம் கொண்ட ஓர் இல்லறத்தான், சிறிதளவு பொன்னுடன் ஒரு மஹாபாரதப் பிரதியை அதை உரைத்தவனுக்குக் கொடுக்க வேண்டும்.(73) ஓ! மன்னா, ஹரிவம்ச பர்வம் உரைக்கப்படும்போது, அடுத்தடுத்த பாரணங்களின் போது பிராமணர்கள் பருகுவதற்குப் பாயஸம் கொடுக்கப்பட வேண்டும்.(74) சாத்திரங்களை அறிந்த ஒருவன், அனைத்துப் பர்வங்களையும் முடித்துவிட்டு, தன்னை முறையாகத் தூய்மைப்படுத்தி, வெள்ளுடை உடுத்தி, மலர்மாலைகள் சூடி, ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, ஒரு மங்கலமான இடத்தில் மஹாபாரதப் பிரதியை வைத்து, அதைப் பட்டுத் துணியால் மூடி, நறுமணப் பொருட்கள், மற்றும் மலர் மாலைகளைக் கொண்டு உரிய சடங்குகளின் படி அதை வழிபட வேண்டும்.(75,76) உண்மையில், இந்த ஆய்வின் பல்வேறு பகுதிகளும் ஒருவனால் அர்ப்பணிப்புடனும், குவிந்த மனத்துடனும் வழிபடப்பட வேண்டும். பல்வேறு வகை உணவுகள், மலர்மாலைகள், பானங்கள் மற்றும் அனுபவிக்கத்தகுந்த பல்வேறு மங்கலப் பொருட்கள் ஆகியவற்றையும் காணிக்கையளிக்க வேண்டும்.(77) பொன்னும், வேறு விலைமதிப்புமிக்க உலோகங்களும் தக்ஷிணையாகக் கொடுக்கப்பட வேண்டும். தேவர்கள் அனைவரின் பெயர்களும், நரன் மற்றும் நாராயணனின் பெயர்களும் சொல்லப்பட வேண்டும்.(78) பிறகு, சில முதன்மையான பிராமணர்களின் மேனியை நறுமணப் பொருட்களாலும், மலர்மாலைகளாலும் அலங்கரித்து, அவர்களுக்கு அனுபவிக்கத்தகுந்த பல்வேறு பொருட்களையும், மேன்மையான விலைமதிப்புமிக்கப் பொருட்களையும் கொடுத்து நிறைவடையச் செய்ய வேண்டும்.(79) இதைச் செய்வதன் மூலம் ஒருவன் அதிராத்ர வேள்வி செய்த பலன்களை அடைகிறான் உண்மையில், அடுத்தடுத்த ஒவ்வொரு பர்வத்தின் போதும், வேள்வி செய்வதால் உண்டாகும் புண்ணியங்களை அவன் அடைகிறான்.(80)

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, உரைப்பவர், கல்விமானாகவும், நல்ல குரல் கொண்டவராகவும், எழுத்துகள், சொற்கள் ஆகிய இரண்டையும் தெளிவாக உச்சரிப்பவராகவும் இருக்க வேண்டும். ஓ! பாரதர்களின் தலைவா, அத்தகைய மனிதன் ஒவ்வொருவனும் பாரதம் உரைக்க வேண்டும்.(81) பெரும் எண்ணிக்கையிலான முதன்மையான பிராமணர்களை மகிழ்ச்சியடையச் செய்து, விதிப்படியான கொடைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். ஓ! பாரதர்களின் தலைவா, உரைப்பவரும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு முழுமையாக உண்ணக் கொடுக்கப்பட வேண்டும்.(82) உரைப்பவர் நிறைவடைந்தால், அந்த இல்லறத்தான், சிறந்த மங்கலமான மனநிறைவை அடைகிறான். பிராமணர்கள் நிறைவடையச் செய்யப்பட்டால், தேவர்கள் அனைவரும் நிறைவடைகின்றனர்.(83) அதன்பிறகு, ஓ! பாரதர்களின் தலைவா, அனுபவிக்கத்தகுந்த பல்வேறு மேன்மையான பொருட்களால் பிராமணர்கள் முறையாக மகிழ்ச்சியடையச் செய்யப்பட வேண்டும்.(84)

இவ்வாறே, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, உன் கேள்விகளுக்குப் பதிலாக (இந்தச் சாத்திரங்களை உரைக்கும் வழிமுறைக்கு) உரிய விதிமுறைகளைக் குறிப்பிட்டேன். நீ இவற்றை நம்பிக்கையுடன் கடைப்பிடிக்க வேண்டும்.(85) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பாரதம் உரைக்கப்படுவதைக் கேட்கும்போது, ஒவ்வொரு பாரணத்திலும் ஒருவன் உயர்ந்த நன்மையை அடைய விரும்பி பெருங் கவனத்துடன் கேட்க வேண்டும்.(86) ஒருவன் ஒவ்வொரு நாளும் பாரதத்தைக் கேட்க வேண்டும். ஒருவன் ஒவ்வொரு நாளும் பாரதத்தின் புண்ணியங்களை அறிவிக்க வேண்டும். எவனுடைய வீட்டில் பாரதம் உரைக்கப்படுகிறதோ, அவன் தன்னுடைய கரங்களில் ஜெயம் என்ற பெயரில் அறியப்படும் சாத்திரங்கள் அனைத்தையும் கொண்டிருப்பான்[9].(87) பாரதம் பாவம் போக்குவதும், புனிதமானதுமாகும். பாரதத்தில் பல்வேறு தத்துவங்கள் இருக்கின்றன. பாரதம் தேவர்களாலேயே வழிபடப்படுகிறது. பாரதம் உயர்ந்த இலக்காகும்.(88) ஓ! பாரதர்களின் தலைவா, பாரதம் சாத்திரங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும். ஒருவன் பாரதத்தின் மூலம் முக்தியை {மோட்சத்தை} அடைகிறான். நான் உனக்குச் சொல்லும் இது முற்றான உண்மையாகும்.(89) மஹாபாரதம் என்றழைக்கப்படும் இந்த வரலாற்றின் புண்ணியங்களையும், பூமி, பசு, {வாக்கின் தேவியான} சரஸ்வதி, பிராமணர், கேசவன் ஆகியோரின் புண்ணியங்களையும் அறிவிக்கும் ஒருவன், ஒருபோதும் சோர்வடைய மாட்டான்.(90)ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, வேதம், இராமாயணம், புனித பாரதம் ஆகியவற்றில் தொடக்கம், நடு மற்றும் இறுதியில் ஹரியே பாடப்படுகிறான்.(91) விஷ்ணு மற்றும் நித்திய ஸ்ருதிகள் தொடர்புடைய சிறந்த வாக்கியங்கள் எதில் நேர்கின்றனவோ, {அவை} உயர்ந்த இலக்கை அடைய விரும்பும் மனிதர்களால் கேட்கப்பட வேண்டும்.(92) புனிதப்படுத்துவதான இது, கடமைகள் குறித்த அடையாளங்காட்டும் உயர்ந்த ஆய்வாகும். இஃது அனைத்துப் புண்ணியங்களையும் கொண்டதாகும். செழிப்பை விரும்பும் ஒருவன் இதைக் கேட்க வேண்டும்.(93) உடலால் இழைக்கப்பட்ட பாவங்களும், சொல் மற்றும் மனத்தால் இழைக்கப்பட்ட பாவங்கள் அனைத்தும் சூரிய உதயத்தின் போது இருளைப் போல (பாரதம் கேட்பதன் மூலம்) அழிவை அடைகின்றன.(94) விஷ்ணுவிடம் பக்தி கொண்ட ஒருவன், இந்தப் பதினெட்டுப் புராணங்களைக் கேட்பதன் மூலம் அடையப்படும் புண்ணியத்தை (இதன் மூலம்) அடைகிறான். இதில் ஐயமேதும் இல்லை.(95) (இதைக் கேட்பதன் மூலம்) ஆண்களும் பெண்களும் விஷ்ணுவின் நிலையை நிச்சயம் அடைவார்கள். பிள்ளைகளை விரும்பும் பெண்கள், விஷ்ணுவின் புகழை அறிவிக்கும் இதை நிச்சயம் கேட்க வேண்டும்.(96)

பாரதம் உரைப்பதால் உண்டாகும் பலனை அடைய விரும்பும் ஒருவன், உரைப்பவருக்குத் தன் சக்திக்கேற்றபடி பொன்னாலான வெகுமானத்தைத் தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும்.(97) தன் நன்மையை விரும்பும் ஒருவன், உரைப்பவருக்குத் தங்கக்கவசம் பூண்ட ஒரு கபிலை பசுவையும், துணியால் மறைக்கப்பட்ட அவளது கன்றையும் கொடையளிக்க வேண்டும்.(98) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, தோள்களுக்கும், காதுகளுக்கும் ஆபரணங்கள் கொடுக்கப்பட வேண்டும். இதையும் தவிர, வேறு வகையான செல்வங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.(99) ஓ! மனிதர்களின் மன்னா, உரைப்பவருக்கு நிலக் கொடை அளிக்க வேண்டும். வேறெந்த கொடையும் ஒருபோதும் நிலக் கொடை போல் ஆகாது, அல்லது இருக்காது.(100) (பாரதத்தைக்) கேட்பவன் அல்லது பிறருக்கு உரைக்கும் மனிதன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, விஷ்ணுவின் நிலையை அடைகிறான்.(101) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அத்தகைய மனிதன் ஏழு தலைமுறை மூதாதையரையும், தன்னையும், தன் மனைவி மற்றும் மகன்களையும் மீட்கிறான்.(102) ஓ! மன்னா, பாரதம் உரைப்பதை நிறைவு செய்ததும் ஒருவன் பத்துப் பாகங்களுடன் கூடிய ஹோமம் செய்ய வேண்டும்.

இவ்வாறே, ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, உன் முன்னிலையில் நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன்.(103) இந்தப் பாரதத்தைத் தொடக்கம் முதல் அர்ப்பணிப்புடன் கேட்டு வரும் ஒருவன், பிராமணக் கொலைக் குற்றம் புரிந்தவனாகவோ, ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தியவனாகவோ, மது பருகுபவனாகவோ, அடுத்தவர் உடைமைகளைக் களவு செய்பவனாகவோ, சூத்திர வகையில் பிறந்தவனாகவோ இருப்பினும் அவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான்.(104) இருளை அழிக்கும் நாள் சமைப்பவனைப் போலத் தன் பாவங்கள் அனைத்தையும் அழிக்கும் அத்தகைய மனிதன், விஷ்ணுவைப் போலவே, விஷ்ணுவின் உலகில் இன்பத்தில் திளைப்பான்[10]” {என்றார் வைசம்பாயனர்}.(105)

ஸ்வர்க்காரோஹணிக பர்வம் முற்றும்

முழு மஹாபாரதம் முற்றிற்று

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  மஹாப்ரஸ்தானிக பர்வம்-

October 19, 2025

நெடும்பயணம்! – மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 1-பரிக்ஷித்துக்கு முடிசூட்டி, யுயுத்சுவிடம் நாட்டை ஒப்படைத்த யுதிஷ்டிரன்; நகரவாசிகளிடம் அனுமதி பெற்றுக் கொண்டு தம்பியருடனும், திரௌபதியுடனும் புறப்பட்டது; அக்னியின் சொற்படி காண்டீவத்தையும், அம்பறாதூணியையும் கடலில் போட்ட அர்ஜுனன்…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “விருஷ்ணி மற்றும் அந்தகக் குல வீரர்களுக்கிடையில் இரும்பு உலக்கைகளை {முசலங்களைக்} கொண்டு நடந்த மோதலைக் கேட்டும், கிருஷ்ணன் சொர்க்கத்திற்கு உயர்ந்ததை அறிந்து கொண்டும் பாண்டவர்கள் என்ன செய்தனர்?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விருஷ்ணிகளின் பெரும் படுகொலையைக் குறித்துக் கேட்ட கௌரவ மன்னன் {யுதிஷ்டிரன்} உலகை விட்டுச் செல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். அவன் அர்ஜுனனிடம்,(2) “ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, காலன் (தன் கொதிகலனில்) அனைத்து உயிரினங்களையும் சமைக்கிறான். (எது நம் அனைவரையும் கட்டுகிறதோ அந்தக்) காலப் பாசத்தினாலேயே {கயிறுகளாலேயே} இது நடந்திருக்கிறது என நான் நினைக்கிறேன். இதைக் காண்பதே உனக்கும் தகும்” என்றான்.(3)

அண்ணனால் {யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, “காலன், காலன்” என்ற சொல்லை மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லி, பெரும் நுண்ணறிவைக் கொண்ட தன் அண்ணனின் கருத்தை முழுமையாக ஏற்றான்.(4) அர்ஜுனனின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட பீமசேனனும், இரட்டையர்களும் {நகுல சகாதேவர்களும்}, அர்ஜுனன் சொன்ன சொற்களை முழுமையாக ஏற்றுக் கொண்டனர்.(5) தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதற்காக இவ்வுலகில் இருந்து ஓயத் தீர்மானித்த அவர்கள் யுயுத்சுவைத் தங்கள் முன் கொண்டு வந்தனர். யுதிஷ்டிரன் தன் பெரியதந்தைக்கு {திருதராஷ்டிரனுக்கு} அவரது வைசிய மனைவியின் மூலம் பிறந்த மகனிடம் {யுயுத்சுவிடம்} நாட்டை ஒப்படைத்தான்.(6)

பரிக்ஷித்தை அரியணையில் நிறுவியவனும், பாண்டவர்களில் மூத்த சகோதரனுமான மன்னன் {யுதிஷ்டிரன்}, கவலையால் நிறைந்தவனாக, சுபத்திரையிடம்,(7) “உன்னுடைய மகனின் மகனான இவனே குருக்களின் மன்னனாக இருப்பான்.(8) பரிக்ஷித் ஹஸ்தினாபுரத்தை ஆள்வான், அதே வேளையில் யாதவ இளவரசனான வஜ்ரன் சக்ரப்ரஸ்தத்தை ஆள்வான். இவன் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டும். ஒருபோதும் அநீதியில் உன் இதயத்தை நிலைக்கச் செய்துவிடாதே {அதர்மத்தில் மனத்தைச் செலுத்தாதே}” என்றான்.(9)

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, தன் சகோதரர்களுடன் சேர்ந்து, பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, முதியவரான தங்கள் தாய்மாமனுக்கும் {வசுதேவருக்கும்}, ராமருக்கும் {பலராமருக்கும்}, பிறருக்கும் முறையாக ஆகுதிகளைக் காணிக்கையாக்கினான். பிறகு அவன் இறந்து போன தன் உற்றார் உறவினர் அனைவருக்கும் முறையாகச் சிராத்தங்களைச் செய்தான்.(10,11)

மன்னன், ஹரியைக் கௌரவிப்பதற்காக அவனுடைய பெயரை மீண்டும் மீண்டும் சொல்லி, தீவில் பிறந்தவரான வியாசர், நாரதர், தவச் செல்வத்தைக் கொண்ட மார்க்கண்டேயர், பரத்வாஜ குலத்தின் யாஜ்ஞவல்கியர் ஆகியோருக்கு இனிய உணவு வகைகளைப் படைத்தான்.(12) கிருஷ்ணனைக் கௌரவிப்பதற்காக அவன் பல ரத்தினங்களையும், ஆடைகளையும், துணிமணிகளையும், கிராமங்களையும், குதிரைகளையும், தேர்களையும்,(13) பெண் பணியாட்களையும் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பிராமணர்களில் முதன்மையானோருக்குக் கொடையளித்தான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, குடிமக்களை அழைத்து, கிருபரை ஆசானாக நிறுவி, பரிக்ஷித் அவரது சீடனாக்கப்பட்டான். பிறகு மீண்டும் யுதிஷ்டிரன் தன் குடிமக்களை அழைத்தான்.(14,15) அந்த அரசமுனி தன் நோக்கங்களை அவர்களுக்குத் தெரிவித்தான். குடிமக்களும், மாகாணவாசிகளும் மன்னனின் சொற்களைக் கேட்டு,(16) கவலையால் நிறைந்தவர்களாக அவற்றை அங்கீகரிக்காமல் இருந்தனர். “ஒருபோதும் இது நடக்காது” என்று அவர்கள் மன்னனிடம் சொன்னார்கள்.(17)

காலம் கொண்டுவரும் மாற்றங்களை நன்கறிந்தவனான அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்கவில்லை. அற ஆன்மா கொண்ட அவன் தன் கருத்துகளை அங்கீகரிக்குமாறு மக்களை ஏற்கச் செய்தான்.(18) பிறகு அவன் உலகத்தைவிட்டுச் செல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். அவனது சகோதரர்களும் அதே தீர்மானத்தையே எடுத்திருந்தனர். பிறகு, தர்மனின் மகனும், குருக்களின் மன்னனுமான யுதிஷ்டிரன்,(19) தன் ஆபரணங்களை அகற்றி, மரவுரிகளைத் தரித்தான். பீமன், அர்ஜுனன், இரட்டையர் மற்றும் பெரும்புகழைக் கொண்ட திரௌபதி ஆகியோரும்,(20) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதே போலவே மரவுரிகளையே உடுத்திக் கொண்டனர்.

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அருளை வழங்கவல்ல தொடக்க அறச் சடங்குகளைச் செய்த அந்த முதன்மையான மனிதர்கள் தங்கள் புனித நெருப்புகளை நீருக்குள் விட்டனர். அந்த இளவரசர்களை அந்தத் தோற்றத்தில் கண்ட பெண்கள் உரக்க அழுதனர்.(21,22) முற்காலத்தில் திரௌபதியுடன் சேர்ந்து அறுவராகி, பகடையாட்டத்தில் வீழ்த்தப்பட்டுத் தலைநகரைவிட்டுப் புறப்பட்ட கோலத்திலேயே இப்போதும் அவர்கள் தெரிந்தனர். எனினும், அந்தச் சகோதரர்கள் அனைவரும் ஓய்வில் பெரும் உற்சாகம் கொண்டனர்.(23) யுதிஷ்டிரனின் நோக்கங்களை உறுதி செய்து கொண்டவர்களும், விருஷ்ணிகளின் அழிவைக் கண்டவர்களுமான அவர்களை வேறு எந்தச் செயல்பாட்டாலும் நிறைவடையச் செய்ய இயலாது. ஐந்து சகோதரர்களும், ஆறாவதாகத் திரௌபதியும், ஏழாவதாக ஒரு நாயும் சேர்ந்து(24) தங்கள் பயணத்திற்குப் புறப்பட்டனர். உண்மையில், இவ்வாறே, ஏழு பேர் அடங்கிய அந்தத் தரப்புக்குத் தலைமை தாங்கிய மன்னன் யுதிஷ்டிரன், யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தில் இருந்து சென்றான். குடிமக்களும், அரச குடும்பத்துப் பெண்களும் சிறிது தொலைவுக்கு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(25) எனினும், அவர்களில் எவருக்கும், மன்னனை அவனுடைய கருத்தில் இருந்து பின்வாங்கும்படி கேட்கும் துணிவில்லை. அந்த நகரவாசிகள் திரும்பிவந்தனர்.(26)

கிருபரும், பிறரும் தங்களுக்கு நடுவில் இருந்து யுயுத்சுவைச் சூழ்ந்து நின்றனர். ஓ! குரு குலத்தோனே {ஜனமேஜயனே}, நாகத் தலைவனின் மகளான உலூபி, கங்கையின் நீருக்குள் நுழைந்தாள்[1].(27) இளவரசி சித்திராங்கதை மணிப்புரத்தின் தலைநகருக்குப் புறப்பட்டுச் சென்றாள். பரிக்ஷித்தின் பாட்டிகளான வேறு பெண்கள் அவனைச் சூழ்ந்திருந்தனர்.(28) அதே வேளையில், ஓ! குரு குலத்தோனே அந்த உயர் ஆன்ம பாண்டவர்களும், பெரும்புகழைக் கொண்ட திரௌபதியும், தொடக்க உண்ணாநோன்பை நோற்று, கிழக்கு நோக்கிய முகங்களைக் கொண்டு புறப்பட்டுச் சென்றனர்.(29) யோகத்தில் தங்களை நிறுவி கொண்ட அந்த உயர் ஆன்மாக்கள் துறவறம் நோற்கத் தீர்மானித்து, பல்வேறு நாடுகளைக் கடந்து பல்வேறு ஆறுகளையும், கடல்களையும் அடைந்தனர்.(30) யுதிஷ்டிரன் முன்னே சென்றான், அவனுக்குப் பின்னால் பீமன்; அடுத்து அர்ஜுனன்; அவனுக்கு அடுத்துப் பிறப்பின் வரிசையில் இரட்டையர்கள்;(31) ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, அவர்கள் அனைவருக்கும் பின்னால் பெண்களில் முதன்மையானவளும், பேரழகைக் கொண்டவளும், கரிய நிறத்தவளும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவளுமான திரௌபதி சென்றாள்.(32)பாண்டவர்கள் காட்டுக்குப் புறப்பட்ட போது, ஒரு நாயும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றது. தொடர்ந்து சென்ற அவ்வீரர்கள் செந்நீர் கொண்ட கடலை அடைந்தனர்.(33) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தனஞ்சயன் {அர்ஜுனன்}, பெரும் மதிப்பு மிக்கப் பொருட்களில் ஒருவனுக்குள்ள பேராசையின் மூலம் இயக்கப்பட்டவனாகத் தன்னுடைய தெய்வீக வில்லான காண்டீவத்தையும், வற்றாதவையான தன்னிரு அம்பறாத்தூணிகளையும் கைவிடாமல் இருந்தான்.(34) நெருப்பின் தேவன் தங்களுக்கு முன்னால் ஒரு மலையென நிற்பதைப் பாண்டவர்கள் கண்டனர். அவர்களுடைய வழியை அடைத்த அந்தத் தேவன் உடல் கொண்ட வடிவத்துடன் அங்கே நின்று கொண்டிருந்தான். ஏழு தழல்களைக் கொண்ட அந்தத் தேவன் {நெருப்பின் தேவன்} பாண்டவர்களிடம், “பாண்டுவின் வீர மகன்களே, என்னை நெருப்பின் தேவனாக {அக்னி தேவனாக} அறிவீராக.(36) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, ஓ! பகைவரை எரிப்பவனான பீமசேனா, ஓ! அர்ஜுனா, ஓ! பெருந்துணிவுமிக்க இரட்டையர்களே, நான் சொல்வதைக் கேட்பீராக.(37) குரு குலத்தின் முதன்மையானவர்களே, நானே நெருப்பின் தேவன். அர்ஜுனன் மற்றும் நாராயணனின் பலத்தாலும், என்னாலும் காண்டவக் காடு எரிக்கப்பட்டது.(38) உன் தம்பியான பல்குனன் {அர்ஜுனன்}, உயர்ந்த ஆயுதமான காண்டீவத்தைக் கைவிட்ட பிறகு காட்டுக்குச் செல்லட்டும். இவனுக்கு இனியும் இதற்கான தேவை ஏதும் இல்லை.(39) உயர் ஆன்மக் கிருஷ்ணனுடைய மதிப்புமிக்கச் சக்கரம் (உலகில் இருந்து) மறைந்து போனது. மீண்டும் வேளை வரும்போது அஃது அவனது கைகளுக்குத் திரும்பும்.(40) விற்களில் முதன்மையான இந்தக் காண்டீவம், பார்த்தனின் பயன்பாட்டுக்காக வருணனிடம் இருந்து என்னால் அடையப்பட்டதாகும். அதை நான் வருணனுக்கே கொடுக்க வேண்டும்” என்றான் {அக்னி தேவன்}.(41)

இதன்பேரில், அந்தத் தேவன் சொல்வதைச் செய்யுமாறு சகோதரர்கள் அனைவரும் அர்ஜுனனைத் தூண்டினர். அப்போது அவன் {அர்ஜுனன்} வில்லையும் {காண்டீவத்தையும்}, வற்றாதவையான இரு அம்பறாத்தூணிகளையும் (கடலின்) நீருக்குள் வீசினான்.(42) அதன் பிறகு, ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, நெருப்பின் தேவன் அங்கேயே அப்போதே மறைந்து போனான். பாண்டுவின் வீர மகன்கள் அதன் பிறகு, தெற்கு நோக்கித் தங்கள் முகங்களைத் திருப்பியவர்களாகச் சென்றனர்.(43) அதன் பிறகு, அந்தப் பாரத இளவரசர்கள் உப்புக் கடலின் வடக்குக் கரையில் தென் மேற்காகச் சென்றனர்.(44) பிறகு மேற்கு நோக்கித் திரும்பிய அவர்கள், பெருங்கடலால் மறைக்கப்பட்ட துவாரகா நகரத்தைக் கண்டனர்.(45) அடுத்ததாக அந்த முதன்மையானவர்கள் வடக்கு நோக்கிச் சென்றனர். யோகம் நோற்றுக் கொண்டிருந்த அவர்கள், மொத்த பூமியையும் வலம் வர விரும்பினர்” {என்றார் வைசம்பாயனர்}.(46)

ஒவ்வொருவராக விழுந்தனர்! – மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 2-வரிசையாகச் செல்லும்போது திரௌபதியும் பாண்டவர்களும் ஒவ்வொருவராக விழுவது; அவர்கள் விழக் காரணம் கேட்ட பீமனுக்குப் பதில் சொல்லி வந்த யுதிஷ்டிரன்; நாய் மட்டும் தொடர்ந்து சென்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களைக் கொண்டவர்களும், யோகத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருந்தவர்களுமான அந்த இளவரசர்கள் {பாண்டவர்கள்} வடக்கு நோக்கிச் சென்று மிகப் பெரும் மலையான ஹிமவானை {இமயத்தைக்} கண்டனர்.(1) ஹிமவானைக் கடந்த அவர்கள், மணல் நிறைந்த ஒரு பெரிய பாலைவனத்தைக் கண்டனர். பிறகு அவர்கள், உயர்ந்த சிகரங்கள் கொண்ட மலைகளில் முதன்மையான மேரு மலையைக் கண்டனர்.(2) யோகத்தில் குவிந்திருந்த அந்த வலிமைமிக்கவர்கள் அனைவரும் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, யாஜ்ஞசேனி {திரௌபதி} யோகத்தில் இருந்து வீழ்ந்து பூமியில் விழுந்தாள்.(3)

பெரும்பலம் கொண்ட பீமசேனன் அவளது வீழ்ச்சியைக் கண்டு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம்,(4) “ஓ! பகைவரை எரிப்பவரே, இந்த இளவரசி எந்தப் பாவச் செயலையும் செய்யவில்லை. இந்தக் கிருஷ்ணை பூமியில் விழுந்ததற்கான காரணத்தை எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்குத்} தனிச்சிறப்பளிக்கும் பெரும்பாகுபாடு இவளிடம் {திரௌபதியிடம்} உண்டு. ஓ! மனிதர்களில் சிறந்தவனே, அவ்வொழுக்கத்தின் கனியை {பலனை} அவள் இன்று அடைந்திருக்கிறாள்” என்றான்”.(6)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பாரதக் குலத்தில் முதன்மையான அவன், இதைச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து சென்றான். அற ஆன்மாவையும், பெரும் நுண்ணறிவையும் கொண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன், மனத்தில் மனத்தையே கொண்டு தொடர்ந்து சென்றான்.(7) அப்போது, பெரும் கல்வி கற்றவனான சகாதேவன் பூமியில் விழுந்தான். அவன் கீழே விழுவதைக் கண்ட பீமன் மன்னனிடம்,(8) “ஐயோ, பெரும் பணிவுடன் நம் அனைவருக்கும் தொண்டு செய்துவந்த மாத்ராவதியின் மகன் {சகாதேவன்}, ஏன் பூமியில் விழுந்தான்?” என்று கேட்டான்.(9)

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “அவன் {சகாதேவன்}, ஒருபோதும் ஞானத்தில் தனக்கு இணையானவரென ஒருவரையும் கருதவில்லை. அந்தக் குற்றத்தின் காரணமாகவே இந்த இளவரசன் {சகாதேவன்} விழுந்தான்” என்றான்”.(10)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன மன்னன், சகாதேவனை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றான். உண்மையில், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தன் சகோதரர்களுடனும், நாயுடனும் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்.(11) உற்றார் உறவினரிடம் பேரன்பு கொண்டவனும், துணிச்சல்மிக்கவனுமான நகுலன், கிருஷ்ணை {திரௌபதி} மற்றும் பாண்டவனான சகாதேவன் ஆகிய இருவரும் விழுவதைக் கண்டு கீழே விழுந்தான்.(12) பெரும் மேனியெழில் கொண்ட வீர நகுலன் விழுந்ததும், பீமன் மீண்டும் மன்னனிடம்,(13) “முழுமையான அறவோனும், நம் ஆணைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிந்தவனும், அழகில் ஒப்பற்றவனுமான இந்த நகுலன் கீழே விழுந்துவிட்டான்” என்றான்.(14)

பீமசேனனால் இவ்வாறு கேட்கப்பட்ட யுதிஷ்டிரன், நகுலனைக் குறித்து இந்தச் சொற்களைச் சொன்னான்: “அவன் அற ஆன்மா கொண்டவனாகவும், நுண்ணறிவு மிக்க மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகவும் இருந்தான்.(15) எனினும், மேனியெழில் தனக்கு நிகராக எவரும் இல்லையென அவன் {நகுலன்} நினைத்தான். உண்மையில், அந்த வகையில் அவன் தன்னை அனைவரிலும் மேன்மையானவனாகக் கருதினான்.(16) அதன் காரணமாகவே நகுலன் விழுந்தான். ஓ! விருகோதரா {பீமா}, இதை அறிவாயாக. ஓ! வீரா, ஒரு மனிதனுக்காக விதிக்கப்பட்டதை அவன் அனுபவிக்கவே வேண்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}.(17)

வெண்குதிரைகளைக் கொண்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், பாண்டுவின் மகனுமான அர்ஜுனன், நகுலனும், பிறரும் விழுவதைக் கொண்டு, இதயத்தில் பெரும் துயருடன் கீழே விழுந்தான்.(18) மனிதர்களில் முதன்மையானவனும், சக்ரனின் சக்தியைக் கொண்டவனுமான அவன் {அர்ஜுனன்} கீழே விழுந்தபோது, உண்மையில், வெல்லப்பட முடியாதவனான அந்த வீரன் மரணத் தருவாயில் இருந்தபோது, பீமன் மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்},(19) “இந்த உயர் ஆன்மா எந்தப் பொய்யையும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. உண்மையில், கேலிக்காகக் கூட இவன் பொய்யேதும் பேசியவனல்ல. எந்தத் தீய விளைவின் காரணமாக இவன் பூமியில் விழுந்தான்?” என்று கேட்டான்.(20)

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “அர்ஜுனன், நம் பகைவர்கள் அனைவரையும் ஒரே நாளில் எரித்துவிடுவேன் என்று சொன்னான். தன் வீரத்தில் செருக்குக் கொண்டவனாக இருப்பினும், அதை அவன் {அர்ஜுனன்} நிறைவேற்றவில்லை. அதனால் அவன் வீழ்ந்தான்.(21) இந்தப் பல்குனன், வில்லாளிகள் அனைவரையும் அலட்சியமாகக் கருதினான். செழிப்பில் விருப்பம் இருக்கும் ஒருவன் ஒருபோதும் இத்தகைய மிகையுணர்வுகளில் ஈடுபடக்கூடாது” என்றான்”.(22)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச்சொல்லிவிட்டு மன்னன் தொடர்ந்து சென்றான். பிறகு பீமன் விழுந்தான். கீழே விழுந்த பீமன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம்,(23) “ஓ! மன்னா, பார்ப்பீராக. உமக்கு அன்பான நான் விழுந்துவிட்டேன். என்ன காரணத்தினால் நான் விழுந்தேன்? அதை நீர் அறிந்தால் எனக்குச் சொல்வீராக” என்றான்.(24)

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “நீ அதிகம் உண்டாய், உன் பலம் குறித்துத் தற்பெருமை பேசினாய். ஓ! பார்த்தா {பீமா}, உண்ணும்போது, நீ பிறரின் தேவையை ஒருபோதும் கவனிக்கவில்லை. ஓ! பீமா, அதற்காகவே நீ விழுந்தாய்” என்றான்.(25)

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரன், இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் தொடர்ந்து சென்றான். அவன், நான் மீண்டும் மீண்டும் உன்னிடம் சொன்ன அந்த நாய் மட்டுமே ஒரே துணையாக அவனை {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்து சென்றது” {என்றார் வைசம்பாயனர்}.(26)

ஆரியன் யுதிஷ்டிரன்! – மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 3-சொர்க்கம் செல்வதற்கு யுதிஷ்டிரனைத் தன் தேரில் ஏறச் சொன்ன இந்திரன்; நாயை விட மறுத்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனைப் புகழ்ந்த யமன்; சகோதரர்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல விரும்பிய யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அப்போது, ஆகாயத்தையும், பூமியையும் உரத்த ஒலியால் நிறைந்தபடி ஒரு தேரில் பிருதையின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} வந்த சக்ரன், அவனை அதில் ஏறச் சொன்னான்.(1) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் பூமியில் விழுந்ததைக் கண்டு, அந்த ஆயிரங்கண் தேவனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(2) “என் தம்பிகள் அனைவரும் கீழே விழுந்து விட்டனர். அவர்களும் என்னுடன் வர வேண்டும். ஓ! தேவர்கள் அனைவரின் தலைவா, அவர்கள் அனைவரும் என்னுடன் இல்லாமல் நான் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பவில்லை.(3) ஓ! புரந்தரா, அனைத்து ஆடம்பரங்களுக்கும் தகுந்தவளும், மென்மையானவளுமான இளவரசியும் (திரௌபதியும்) எங்களோடு வர வேண்டும். இதை அனுமதிப்பதே உனக்குத் தகும்” என்றான்.(4)

சக்ரன் {யுதிஷ்டிரனிடம்}“உன் தம்பிகளை நீ சொர்க்கத்தில் காண்பாய். அவர்கள் உனக்கு முன்பே அங்கே சென்றுவிட்டனர். உண்மையில், கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்த்தே அவர்கள் அனைவரையும் அங்கே காண்பாய். ஓ! பாரதர்களின் தலைவா, நீ துயரடையாதே.(5) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அவர்கள் தங்கள் மனித உடல்களைக் களைந்துவிட்டு அங்கே சென்றிருக்கின்றனர். உன்னைப் பொறுத்தவரையில், நீ உன்னுடைய உடலுடனேயே அங்கே செல்ல விதிக்கப்பட்டிருக்கிறது” என்றான்.(6)

யுதிஷ்டிரன் {சக்ரனிடம்}, “ஓ! கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் தலைவா, இந்த நாய் என்னிடம் மிகுந்த அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} இருக்கிறது. இதுவும் என்னுடன் வர வேண்டும். இதனிடம் நான் இதயம் நிறைந்த கருணை கொண்டிருக்கிறேன்” என்றான்.(7)

சக்ரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, இறவாமை, எனக்கு நிகரான நிலை, அனைத்துத் திசைகளிலும் பரந்திருக்கும் செழிப்பு, உயர்ந்த வெற்றி, சொர்க்கத்தின் இன்பங்கள் அனைத்தும் இன்று உன்னால் வெல்லப்பட்டன. இந்த நாயை நீ கைவிடுவாயாக. இதில் எந்தக் கொடுமையும் கிடையாது” என்றான்.(8)

யுதிஷ்டிரன் {சக்ரனிடம்}, “ஓ! ஆயிரங்கண் கொண்டவனே, ஓ! அறவொழுக்கம் கொண்டவனே, அறவொழுக்கம் கொண்ட ஒருவனால் நீதியற்ற ஒரு செயலைச் செய்வது மிகவும் கடினமாகும். என்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட ஒன்றைக் கைவிட்டுச் செழிப்பை அடைய நான் விரும்பவில்லை[1]” என்றான்.(9)இந்திரன் {யுதிஷ்டிரனிடம்}, “நாய்களுடன் இருக்கும் மனிதர்களுக்குச் சொர்க்கத்தில் எவ்விடமும் கிடையாது. தவிர, குரோதவாசர்கள் (என்றழைக்கப்படும் தேவர்கள்) அத்தகைய மனிதர்களின் புண்ணியங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்கின்றனர். ஓ! நீதிமானான மன்னன் யுதிஷ்டிரா, இதைச் சிந்தித்துச் செயல்படுவாயாக. நீ இந்த நாயைக் கைவிடுவாயாக. இதில் கொடுமையேதும் இல்லை” என்றான்.(10)

யுதிஷ்டிரன் {சக்ரனிடம்}, “அர்ப்பணிப்புடன் இருக்கும் ஒருவனைக் கைவிடுவது முடிவிலா பாவத்திற்கு வழிவகுக்கும் எனச் சொல்லப்படுகிறது. இஃது ஒரு பிராமணனைக் கொல்லும் பாவத்திற்கு நிகரானது. எனவே, ஓ! பெரும் இந்திரா, என் மகிழ்ச்சியை விரும்பி நான் இன்று இந்த நாயைக் கைவிட மாட்டேன்.(11) அச்சமடைந்தவனையோ, என்னிடம் அர்ப்பணிப்புள்ளவனையோ, என் பாதுகாப்பை நாடுபவனையோ, ஆதரவற்றவனையோ, துன்பத்தால் பீடிக்கப்பட்டவனையோ, என்னிடம் வந்தவனையோ, தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதில் பலவீனனையோ, உயிரை வேண்டுபவனையோ ஒருபோதும் கைவிடமாட்டேன் என்பது என் உறுதியான நோன்பாகும். இத்தகைய ஒருவனை என் உயிர் போகும் வரை ஒருபோதும் நான் கைவிட மாட்டேன்” என்றான்.(12)

இந்திரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு நாயால் பார்க்கப்படும் வகையில் கொடுக்கப்படும் எந்தக் கொடையும், பரப்பப்படும் எந்த வேள்வியும், வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகள் எதுவும் குரோதவாசர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. எனவே, நீ இந்த நாயைக் கைவிடுவாயாக. இந்த நாயைக் கைவிடுவதன் மூலம் நீ தேவர்களின் உலகை அடைவாய்.(13) ஓ! வீரா {யுதிஷ்டிரா}, உன் தம்பிகள், கிருஷ்ணை {திரௌபதி} ஆகியோரைக் கைவிட்ட நீ உன் சொந்த செயல்களால் இன்பலோகத்தை அடைந்திருக்கிறாய். ஏன் கலக்கமடைகிறாய்? நீ அனைத்தையும் துறந்துவிட்டாய். ஏன் இந்த நாயையைத் துறக்காமலிருக்கிறாய்?” என்று கேட்டான்.(14)

யுதிஷ்டிரன், “இறந்தோருடன் நட்போ, பகையோ கிடையாது என்பது உலகங்கள் அனைத்திலும் நன்கறியப்பட்டது. என் தம்பிகளும், கிருஷ்ணையும் இறந்த போது, என்னால் அவர்களை மீட்க முடியவில்லை. எனவே, நான் அவர்களைக் கைவிட்டேன். எனினும், அவர்கள் உயிரோடு இருந்தவரை அவர்களை நான் ஒருபோதும் கைவிடவில்லை.(15) ஓ! சக்ரா, பாதுகாப்பு நாடி வந்தவனை அச்சுறுத்துவது, பெண்ணைக் கொல்வது, பிராமணனுக்குரியதைக் களவாடுவது, நண்பனுக்குத் தீங்கிழைப்பது என்ற இந்த நான்கும் செயல்களும், அர்ப்பணிப்புடன் இருப்பவனைக் கைவிடுவதற்கு நிகரானவையென நான் நினைக்கிறேன்” என்றான்”.(16)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இந்தச் சொற்களைக் கேட்டு (நாயாக இருந்த) அறத் தேவன் மிகவும் நிறைவடைந்தவனாகப் புகழால் நிறைந்த இனிய குரலில் இந்தச் சொற்களைச் சொன்னான்.(17)

தர்மன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னர்களின் மன்னா, நீ நற்குடியில் பிறந்தவனாகவும், நுண்ணறிவையும், பாண்டுவின் நல்லொழுக்கத்தையும் கொண்டவனாக இருக்கிறாய். ஓ! பாரதா, அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொள்வது இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.(18) ஓ! மகனே, முன்பு துவைத வனத்தில் பேராற்றல் கொண்டவர்களான உன் உடன்பிறந்தோர் இறந்தபோது என்னால் நீ சோதிக்கப்பட்டாய்.(19) உன்னுடன் பிறந்தவர்களான பீமனையும், அர்ஜுனனையும் அலட்சியம் செய்து உன் (மாற்றாந்) தாய்க்கு நன்மை செய்யுஃம விருப்பத்தில் நகுலனின் உயிரை மீட்க நீ விரும்பினாய்[2].(20) தற்போதைய நிகழ்வில் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக நினைத்து, இவனை {நாயைத்} துறப்பதற்குப் பதில் தேவர்களின் தேரையே நீ துறந்துவிட்டாய். எனவே, ஓ! மன்னா, சொர்க்கமேதும் உனக்கு நிகரானதல்ல.(21) எனவே, ஓ! பாரதா, வற்றாத இன்பங்களைக் கொண்ட உலகங்கள் உனதாகின. ஓ! பாரதர்களின் தலைவா, நீ அவற்றை வென்றுவிட்டாய், உன்னுடைய கதி உயர்ந்ததும், தெய்வீகமானதுமாகும்” என்றான் {யமன்}”.(22)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அப்போது தர்மன், சக்ரன், மருத்துகள், அஸ்வினிகள், வேறு தேவர்கள், தெய்வீக முனிவர்கள் ஆகியோர் யுதிஷ்டிரனைத் தேரில் ஏறச் செய்து சொர்க்கத்திற்குச் சென்றனர். வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், தங்கள் விருப்பத்தின் பேரில் எந்த இடத்திற்கும் செல்ல வல்லவர்களுமான அவர்கள் தங்கள் தங்களுக்குரிய தேர்களைச் செலுத்தினார்கள்.(23,24) குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனான மன்னன் யுதிஷ்டிரன், தன் பிரகாசத்தால் மொத்த ஆகாயத்தையும் ஒளிபெறச் செய்து, விரைவாக ஏறி அந்தத் தேரைச் செலுத்தினான்.(25)

பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையானரும், தவம் கொண்டவரும், உலகங்கள் அனைத்தையும் அறிந்தவருமான நாரதர், அப்போது தேவ கூட்டத்திற்கு மத்தியில் இந்தச் சொற்களைச் சொன்னார்:(26)”இங்கே இருக்கும் அரசமுனிகள் அனைவரும், யுதிஷ்டிரனுடைய சாதனைகளால் கடக்கப்பட்ட சாதனைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.(27) இவன் தன் புகழாலும், காந்தியாலும், ஒழுக்கமெனும் செல்வத்தாலும் உலகங்கள் அனைத்தையும் மறைத்து, தன் சொந்த (மனித) உடலுடன் சொர்க்கத்தை அடைந்தான். பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரைத்} தவிர வேறு எவரும் இதை அடைந்ததாக நாம் கேள்விப்பட்டதில்லை[3]” என்றார்.(28)அறம் சார்ந்தவனான அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, நாரதரின் இந்தச் சொற்களைக் கேட்டு, தேவர்களையும், அங்கே இருந்த அரசமுனிகள் யாவரையும் வணங்கி,(29) “மகிழ்ச்சி நிறைந்ததோ, துன்பகரமானதோ, என் தம்பிகள் எந்த உலகத்தை இப்போது அடைந்திருக்கிறார்களோ அங்கேயே நான் செல்ல விரும்புகிறேன். நான் வேறெங்கும் செல்ல விரும்பவில்லை” என்றான்.(30)

மன்னனின் இந்தப் பேச்சைக் கேட்ட தேவர்களின் தலைவன் புரந்தரன், உன்னத அறிவால் நிறைந்த இந்தச் சொற்களைச் சொன்னான்,(31) “ஓ! மன்னர்களின் மன்னா, உன் புண்ணியச் செயல்களால் வெல்லப்பட்ட இந்த இடத்தில் நீ வாழ்வாயாக. நீ ஏன் இன்னும் மனிதப் பற்றுகளைப் பேணி வளர்க்கிறாய்?(32) எந்த மனிதனாலும் ஒருபோதும் அடைய முடியாத பெரும் வெற்றியை நீ அடைந்திருக்கிறாய். ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, உன்னுடன் பிறந்தோரும் இன்பலோகங்களையே வென்றிருக்கின்றனர்.(33) மனிதப் பற்றுகள் இன்னும் உன்னைத் தீண்டிக் கொண்டிருக்கின்றன. இது சொர்க்கம். தேவர்களின் உலகை அடைந்திருக்கும் தெய்வீக முனிவர்களையும், சித்தர்களையும் இதோ பார்” என்றான்.(34)

பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்ட யுதிஷ்டிரன் மீண்டும் தேவர்களின் தலைவனுக்குப் பதிலளிக்கும் வகையில்,(35) “ஓ! தைத்தியர்களை வென்றவனே, அவர்களிடமிருந்து பிரிந்திருக்கும் எங்கும் நான் வசிக்கத் துணியேன். என்னுடன் பிறந்தோர் எங்கே சென்றனரோ அங்கேயே நான் செல்ல விரும்புகிறேன்.(36) பெண்களில் முதன்மையானவளும், போதுமான விகிதங்களில் அங்கங்களைக் கொண்டவளும், கரிய நிறத்தவளும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவளும், அறவொழுக்கம் ஒழுகுபவளுமான திரௌபதி எங்கே சென்றாளோ, அங்கேயே நானும் செல்ல விரும்புகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(37)

மஹாப்ரஸ்தானிக பர்வம் முற்றும்

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ மௌஸல பர்வம்-

October 19, 2025

இரும்பு உலக்கை! – மௌஸலபர்வம் பகுதி – 1-தீய சகுனங்களைக் கண்ட யுதிஷ்டிரன்; பலராமன், கிருஷ்ணன் ஆகியோரின் முக்தியையும், யாதவர்களின் அழிவையும் கேட்டது; துவாரகைக்கு வந்த விஸ்வாமித்ரர், கண்வர் மற்றும் நாரதர்; யது குலத்தை அழிக்கும் இரும்பு உலக்கை; உலக்கையைப் பொடியாக்கிக் கடலில் கொட்டிய யாதவர்கள்…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “(போருக்குப் பிறகு) முப்பத்தாறு ஆண்டுகள் {36} ஆனபோது, குருக்களைத் திளைக்கச் செய்பவனான யுதிஷ்டிரன் வழக்கத்திற்கு மாறான தீய சகுனங்கள் பலவற்றைக் கண்டான்.(1) காற்று, உலர்ந்ததாகவும் {வெப்பமாகவும்}, வலுவானதாகவும், பருக்கைக் கற்களைப் பொழிந்து கொண்டிருப்பதாகவும் அனைத்துப் பக்கங்களில் வீசிக் கொண்டிருந்தது. பறவைகள் இடமிருந்து வலமாக வட்ட கதியில் சுழலத் தொடங்கின.(2) பேராறுகள் எதிர் திசைகளில் ஓடின. அனைத்துப் பக்கங்களிலும் அடிவானமானது எப்போதும் மூடுபனியால் மறைக்கப்பட்டிருந்தது. (சுடர்மிக்க) கரிகளைப் பொழிந்தபடியே எரிகொள்ளிகள் வானத்தில் இருந்து பூமியில் விழுந்தன.(3) ஓ! மன்னா {ஜனமேஜயா}, சூரிய வட்டில் எப்போதும் புழுதியால் மறைக்கப்பட்டதாகவே தெரிந்தது. அஃது உதிக்கும்போது, நாள் சமைக்கும் அந்தப் பெரும் ஒளிக்கோள் காந்தியை இழந்ததாகவும், (மனிதர்களின்) தலையற்ற உடல்களால் கடக்கப்படுவது போலவும் தெரிந்தது.(4) ஒவ்வொரு நாளும் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டை சுற்றிலும் கடுமையான ஒளி வளையங்கள் தென்பட்டன. அந்த வளைகளில் மூன்று நிறங்கள் தெரிந்தன. அவற்றின் முனைகள் கருப்பாகவும், முரடாகவும், நிறத்தில் செஞ்சாம்பல் நிறத்திலும் இருந்தன. ஓ! மன்னா, அச்சத்தையும், ஆபத்தையும் முன்குறிப்பிடுபவையான இவையும், இன்னும் பல தீச்சகுனங்களும் காணப்பட்டு, மனிதர்களின் இதயங்களைக் கவலையால் நிறைத்தன.(6)சிறிது காலத்திற்குப் பிறகு, குரு மன்னன் யுதிஷ்டிரன், இரும்பு உலக்கையின் விளைவால் விருஷ்ணிகளுக்கு ஏற்பட்ட பேரழிவைக் குறித்துக் கேள்விப்பட்டான்.(7) பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, ராமனும் மட்டுமே உயிருடன் தப்பினர் என்பதைக் கேட்டு, தன் தம்பிகளை அழைத்து, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களோடு ஆலோசித்தான்.(8) ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட அவர்கள், பிரம்மதண்டத்தின் தண்டனையால் {பிராமணச் சாபத்தால்} விருஷ்ணிகள் அழிவைச் சந்தித்தனர் என்பதைக் கேட்டுப் பெரிதும் துயரடைந்தனர்.(9) கடல் வற்றிப் போவதைப் போல வாசுதேவனின் {கிருஷ்ணனின்} மரணத்தை அந்த வீரர்களால் நம்ப முடியவில்லை. உண்மையில் அந்தச் சாரங்கபாணியின் அழிவு அவர்களுக்கு நம்ப முடியாததாக இருந்தது.(10) இரும்பு உலக்கை குறித்து அறிந்த பாண்டவர்கள், துன்பம் மற்றும் கவலையால் நிறைந்தனர். உண்மையில், அவர்கள் முற்றிலும் உற்சாகமற்றவர்களாக, வெறுமையான துன்பத்தில் துளைக்கப்பட்டவர்களாகக் கீழே அமர்ந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(11)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “உண்மையில், ஓ! புனிதமானவரே, அந்தகர்களும், விருஷ்ணிகளும், பெருந்தேர்வீரர்களான போஜர்களும், வாசுதேவன் {கிருஷ்ணன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே எவ்வாறு அழிவை அடைந்தனர்?” என்று கேட்டான்.(12)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “(பெரும்போர் முடிந்து) முப்பத்தாறு ஆண்டுகளை {36} அடைந்த போது, விருஷ்ணிகளை ஒரு பேரிடர் மூழ்கடித்தது. காலத்தால் தூண்டப்பட்ட அவர்கள் அனைவரும் இரும்பு உலக்கையின் விளைவால் அழிவைச் சந்தித்தனர்”.(13)

ஜனமேஜயன், “விருஷ்ணிகள், அந்தகர்கள் மற்றும் போஜர்கள் உள்ளிட்ட அந்த வீரர்கள் யாரால் சபிக்கப்பட்டு அழிவை அடைந்தனர்? ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, இதை நீர் எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(14)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஒருநாள், சாம்பனையும் எண்ணிக்கையில் ஒருவனாய் தங்களுக்கு மத்தியில் வைத்திருந்த விருஷ்ணி வீரர்கள், விஷ்வாமித்ரரும், கண்வரும், நாரதரும் துவாரகைக்கு வருவதைக் கண்டனர்.(15) தேவர்களால் தரிக்கப்படும் தண்டக்கோலால் பீடிக்கப்பட்ட அந்த வீரர்கள், சாம்பனைப் பெண் போல வேடமிட வைத்து அந்தத் தவசிகளை அணுகி, அவர்களிடம்,(16) “இவள் அளவிலா சக்தி கொண்டவனும், ஒரு மகனை விரும்புபவனுமான பப்ருவின் மனைவியாவாள். முனிவர்களே, இவள் என்ன பெறுவாள் என்பதை நீங்கள் உறுதியாக அறிவீர்களா?” என்று கேட்டனர்.(17)

இவ்வாறான வஞ்சனை முயற்சிக்கு அந்தத் தவசிகள் என்ன செய்தனர் என்பதைக் கேட்பாயாக,(18) “சாம்பன் என்ற பெயரைக் கொண்டவனும், வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வாரிசுமான இவன், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அழிவுக்கான ஓர் இரும்பு உலக்கையைப் பெறுவான்.(19) தீயவர்களே, கொடூரர்களே, செருக்கால் போதையுண்டிருக்கும் நீங்கள், உங்கள் குலத்தில் ராமனையும் {பலராமனையும்}, ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} தவிர அனைவரையும் இந்த இரும்பு உலக்கையால் அழிப்பீர்கள்.(20) கலப்பையைத் தரிக்கும் அருளப்பட்ட வீரன் {பலராமன்}, தன் உடலைக் கைவிட்டுப் பெருங்காட்டில் நுழைவான், அதே வேளையில் ஜரன் என்ற பெயரைக் கொண்ட ஒரு வேடன் தரையில் கிடக்கும் உயர் ஆன்மக் கிருஷ்ணனைத் துளைப்பான்” என்றனர்.(21)

அந்தத் தீயவர்களால் வஞ்சிக்க முயற்சி செய்யப்பட்ட அந்தத் தவசிகள், கண்கள் சிவந்த கோபத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, இந்தச் சொற்களைச் சொன்னார்கள். இவ்வாறு சொல்லிவிட்டு அவர்கள் கேசவனை {கிருஷ்ணனைக்} காணச் சென்றனர்.(22) நடந்ததை அறிந்த மதுசூதனன் {கிருஷ்ணன்}, விருஷ்ணிகள் அனைவரையும் அழைத்து, அது குறித்து அவர்களுக்குச் சொன்னான். பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், தன் குலத்தின் முடிவை முழுமையாக அறிந்தவனுமான அவன் {கிருஷ்ணன்}, விதிக்கப்பட்டதெதுவோ அது நிச்சயம் நடக்கும் என்று சொன்னான்.(23) ரிஷிகேசன் இவ்வாறு சொல்லிவிட்டு தன் மாளிகைக்குள் நுழைந்தான். அண்டத்தின் தலைவன் வேறுவகையில் விதிக்க விரும்பவில்லை.(24)

அடுத்த நாளில் சாம்பன் உண்மையில் எதன் மூலம் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் குலத்தில் ஒவ்வொருவரும் சாம்பலாக எரிக்கப்படுவார்களோ அதுவேயான ஓர் இரும்பு உலக்கையைப் பெற்றான்.(25) உண்மையில் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அழிவுக்கான அந்தச் சாபத்தின் மூலம் பெரும் யமதூதன் போலத் தெரிந்ததும், கடுமையானதும் ஓர் இரும்பு உலக்கையைச் சாம்பன் பெற்றான். மன்னனுக்கு இந்தச் செய்தி முறையாகத் தெரிவிக்கப்பட்டது.(26) மனத்தில் உள்ள பெரும் துயரத்துடன் மன்னர் (உக்ரசேனர்) அந்த இரும்பு உலக்கையைப் பொடியாக {மாவு போலக்} குறைக்கச் செய்தான். ஓ! மன்னா, அந்தப் பொடியை கடலுக்கள் வீசுவதில் மனிதர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.(27) ஆஹுகன், ஜனார்த்தனன், ராமன், உயர் ஆன்ம பப்ரு ஆகியோரின் ஆணையின் பேரில், அந்த நாள் முதல் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களுக்கு மத்தியில் எவரும் மதுவும், போதையூட்டும் எவ்வகைச் சாரயமும் உற்பத்தி செய்யக்கூடாது, கமுக்கமாக மதுவையும், சாராயத்தையும் உற்பத்தி செய்பவர்கள், தங்கள் உற்றார் உறவினர் அனைவருடன் சேர்த்து உயிரோடு கழுவேற்றப்படுவார்கள் என்று அந்த நகரம் முழுவதும் அறிவிக்கப்பட்டது.(28-30) மன்னனுக்கு அஞ்சியும், களங்கம் கற்பிக்க முடியாத செயல்களைச் செய்யும் ராமனின் {பலராமனின்} ஆணை என்பதை அறிந்தும், குடிமக்கள் அனைவரும் அந்த விதிக்ககுக் கட்டுப்பட்டு, மது மற்றும் சாராய உற்பத்தியைத் தவிர்த்தனர்[1]” {என்றார் வைசம்பாயனர்}.(31)

காந்தாரியின் சொல்! – மௌஸலபர்வம் பகுதி – 2-துவாரகையில் தீய சகுனங்களைக் கண்ட கிருஷ்ணன்; காந்தாரியின் சாபத்தை நினைத்து அதை உண்மையாக்க விரும்பியது; யாதவர்களைத் தீர்த்தயாத்திரை செல்லக் கட்டளையிட்டது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விருஷ்ணிகளும், அந்தகர்களும் (எக்கணமும் நிகழுமென அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பேரிடரைத் தவிர்க்க) இவ்வாறு முயற்சித்தபோது, உடல் வடிவம் கொண்ட காலன் ஒவ்வொருநாளும் அவர்களுடைய இல்லங்களில் திரிந்து கொண்டிருந்தான்.(1) பயங்கரமும், கடுமையும் நிறைந்த மனிதனாக அவன் தெரிந்தான். வழுக்கைத் தலை கொண்ட அவன், நிறத்தில் கறுப்பும் பழுப்பும் கொண்டவனாக இருந்தான். சில வேளைகளில் விருஷ்ணிகள் அவனைத் தங்கள் இல்லங்களுக்குள் உற்று நோக்குபவனாகக் கண்டார்கள்.(2) விருஷ்ணிகளுள் வலிமைமிக்க வில்லாளி அவன் மீது நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகளை ஏவினாலும், அவன் உயிரினங்கள் அனைத்தின் அந்தகனின்றி வேறில்லை என்பதால் எக்கணையும் அவனைத் துளைப்பதில் வெல்லவில்லை.(3)

நாளுக்கு நாள் காற்று பலமாக வீசியது, விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அழிவை முன்னறிவிக்கும் பயங்கரமான பல்வேறு தீய சகுனங்கள் எழுந்தன.(4) வீதிகளில் எலிகளும், சுண்டெலிகளும் மொய்த்துக் கொண்டிருந்தன. எந்த வெளிப்படை காரணமும் இன்றி மண்குடங்கள் பிளவுபட்டவையாக, உடைந்தவையாகத் தெரிந்தன. இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் முடி மற்றும் நகங்களை எலிகளும், சுண்டெலிகளும் தின்றன.(5) சாரிகைகள் {நாகணவாய்ப் பட்சிகள் / பூவைப் பறவைகள்} விருஷ்ணிகளின் வீடுகளுக்குள் அமர்ந்து கொண்டே {சீசீ கூசீ என்ற} குற்றொலிகளை எழுப்பிக் கொண்டிருந்தன. அந்தப் பறவைகளால் உண்டான ஒலி இரவும், பகலும் குறுகிய நேரமும் நிற்கவில்லை.(6)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஸாரஸங்கள், ஆந்தையின் கூவலைப் பின்பற்றுவதும், ஆடுகள் குள்ளநரிகளின் ஊளையைப் பின்பற்றுவதும் கேட்கப்பட்டன.(7) மங்கிய நிறம் கொண்டவையும், சிவந்த நிறக் கால்களைக் கொண்டவையுமான {கபோதங்களெனும்} பறவைகள் பலவும் காலனால் தூண்டப்பட்டு அங்கே தோன்றின. புறாக்கள் எப்போதும் விருஷ்ணிகளின் வீடுகளில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தன.(8) பசுக்களுக்குக் கழுதைகளும், கோவேறு கழுதைகளுக்கு யானைகளும் பிறந்தன. நாய்களுக்குப் பூனைகளும், கீரிப்பிள்ளைக்கு எலியும் பிறந்தன.(9)

பாவச்செயல்களைச் செய்யும் விருஷ்ணிகள் வெக்கமெதையும் உணர்வதாகக் காணப்படவில்லை. அவர்கள் பிராமணர்கள், பித்ருக்கள் மற்றும் தேவர்களிடம் அலட்சியம் காட்டினர்.(10) அவர்கள் தங்கள் ஆசான்களையும், பெரியோர்களையும் அவமதித்துத் தாழ்த்தினர். ராமனும் {பலராமனும்}, ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்} மட்டும் வேறு வகையில் செயல்பட்டனர். மனைவியர் கணவர்களை வஞ்சித்தனர், கணவர்கள் மனைவியரை வஞ்சித்தனர்.(11) நெருப்பு மூட்டப்பட்ட போது அதன் தழல்கள் இடப்புறம் நோக்கி எரிந்தன. சில வேளைகளில் அவை நீல மற்றும் சிவப்பு நிற காந்தியுடன் தழல்களைச் செலுத்தின.(12)

சூரியன் அந்த நகரத்தில் எழும்போதோ, மறையும்போது, மனித வடிவிலான தலைற்ற முண்டங்களால் அது சூழப்பட்டதாகக் காணப்பட்டது.(13) சமையலறைகளில் நன்கு சமைக்கப்பட்ட தூய்மையான உணவை உண்பதற்காகப் படைக்கும்போது அதில் பல்வேறு வகையான எண்ணற்ற புழுக்கள் காணப்பட்டன.(14) கொடைகளைப் பெறும் பிராமணர்கள் அந்த நாளுக்கு அல்லது (அந்த நிகழ்வு நடக்கும்) அந்த நேரத்திற்கு ஆசி கூறும்போது, அல்லது உயர் ஆன்ம மனிதர்கள் அமைதியான ஜபத்தில் ஈடுபடும்போது, எண்ணற்ற மனிதர்கள் ஓடும் ஒலி கேட்கப்படுகிறது.(15) நட்சத்திரக்கூட்டங்கள் மீண்டும் மீண்டும் கோள்களால் தாக்கப்பட்டன. எனினும் யாதவர்களில் ஒருவரும் தன் பிறவிக்கான நட்சத்திரக்கூட்டத்தின் காட்சியைப் பெற முடியவில்லை[1].(16) அவர்களுடைய வீடுகளில் பாஞ்சஜன்யம் முழக்கப்படும்போது, கழுதைகளின் முரண்பட்ட பயங்கரக் குரல் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உரக்கக் கனைத்தது[2].(17)காலத்தின் விபரீதப் போக்கைக் குறிக்கும் அடையாளங்களைக் கண்டு, புதுநிலவு நாள் {அமாவாசை} பதிமூன்றாவது (மற்றும் பதினான்காவது) சந்திர நாளுடன் இணங்குவதைக் கண்டும் யாதவர்களை அழைத்த ரிஷிகேசன் {கிருஷ்ணன்} அவர்களிடம்,(18) “பதினான்காவது சந்திர நாள் {திதி} மீண்டும் ஒருமுறை ராஹுவினால் பதினைந்தாவதாகச் செய்யப்பட்டது. அத்தகைய ஒரு நாள் பாரதர்களின் பெரும்போர் நடந்த காலத்தில் தோன்றியது. அது மீண்டும் நமது அழிவுக்காகத் தோன்றுகிறது” என்றான்.(19). கேசியைக் கொன்றவனான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, காலம் காட்டும் நிமித்தங்களை நினைத்து முப்பத்தாறாம் ஆண்டு வந்ததெனவும், காந்தாரி தன் பிள்ளைகளின் மரணத்திலும், தன் உற்றார் உறவினர் அனைவரையும் இழந்ததிலும் ஏற்பட்ட துயரில் எரிந்து சொன்னது நடக்கப் போகிறது என்பதையும் புரிந்து கொண்டான்.(20,21)

{கிருஷ்ணன், தனக்குள்ளேயே}, ‘போருக்காக இருபடைகளும் அணிவகுக்கப்பட்ட காலத்தில், யுதிஷ்டிரர் கண்ட மிகக் கொடிய தீச்சகுனங்களைப் போலவே தற்போதும் நேர்கிறது’ {என்று நினைத்தான்}. இவ்வாறு சொன்ன வாசுதேவன் {கிருஷ்ணன்}, காந்தாரியின் சொற்களை உண்மையாக்கக் கூடிய நிகழ்வுகளை உண்டாக்க முயற்சி செய்தான். பகைவரைத் தண்டிப்பவனான அவன் ஏதாவது புனித நீர்நிலைக்குப் புனிதப் பயணம் {தீர்த்தயாத்திரை} மேற்கொள்ளுமாறு விருஷ்ணிகளுக்கு ஆணையிட்டான்.(23) பெருங்கடலின் புனித நீரில் நீராட விருஷ்ணிகள் கடற்கரைக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற கேசவனின் ஆணையைத் தூதர்கள் அறிவித்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(24)

யாதவர்களின் அழிவு! – மௌஸலபர்வம் பகுதி – 3-துவாரகை மக்கள் கண்ட தீய கனவுகள்; கிருஷ்ணனின் ஆணைப்படி பிரபாஸம் சென்றது; கிருதவர்மனைக் கொன்ற ஸாத்யகி; பலரால் கொல்லப்பட்ட சாத்யகியும், பிரத்யும்னனும்; கிருஷ்ணன் செய்த படுகொலை; உலக்கைப் பொடிகளால் உண்டான புற்களால் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கொன்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்தக் காலத்தில், விருஷ்ணி பெண்கள், கரிய நிறத்தவளும், வெண்பற்கள் கொண்டவளுமான ஒரு மங்கை, தங்கள் வசிப்பிடத்திற்குள் நுழைந்து, உரக்க நகைத்து, தங்கள் மணிக்கட்டுகளிலிருந்து மங்கலக் கயிறுகளைப் பறித்துக் கொண்டு துவாரகை முழுவதும் ஓடுவதைப் போல ஒவ்வொரு நாள் இரவும் கனவு கண்டனர்.(1) ஆண்களோ, பயங்கரக் கழுகுகள் தங்கள் இல்லங்களுக்கும், நெருப்பறைகளுக்குள்ளும் நுழைந்து தங்களை எடுத்து அவற்றின் கழுத்தில் அணிந்து கொள்வதைப் போலக் கனவு கண்டனர்.(2) ஆபரணங்கள், குடைகள், கொடிமரங்கள், கவசங்கள் ஆகியவற்றைக் கொடிய ராட்சசர்கள் எடுத்துக் கொள்வதும் காணப்பட்டது.(3) அக்னியால் கொடுக்கப்பட்டதும், இரும்பாலானதும், கடினமான வஜ்ரத்தால் அமைந்த குழிசியை {நடு குழியைக்} கொண்டதுமான கிருஷ்ணனின் சக்கரமானது, விருஷ்ணிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆகாயத்தில் உயர்ந்தது.(4)

சூரியப் பிரகாசம் கொண்டதும், முறையாக ஆயத்தம் செய்யப்பட்டதுமான வாசுதேவனின் சிறந்த தேரானது, தாருகன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன்னுடன் பூட்டப்பட்டிருந்த குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டது. (சைப்யம், சுக்ரீவம், மேகபுஷ்பம், வலாகம் என்ற பெயர்களையுடையவையும்) எண்ணிக்கையில் நான்கானவையும், எண்ணத்தின் வேகம் கொண்டவையுமான அந்த முதன்மையான குதிரைகள், பெருங்கடலின் பரப்பின் வழியே தேரை இழுத்துச் சென்று தப்பி ஓடின[1].(5) கருட சின்னத்தையும், பனைமரச் சின்னத்தையும் கொண்டவையான கிருஷ்ணன் மற்றும் பலதேவனுடைய தேர்களில் உள்ளவையும், அவ்விரு வீரர்களால் மதிப்புடன் வழிபடப்படுவையுமான இரு பெரும் கொடிமரங்களும், புனித நீர்நிலைக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ள இருந்த விருஷ்ணிகளையும், அந்தகர்களையும் இரவும் பகலும் அழைத்துக் கொண்டிருந்த அப்சரஸ்களால் இழுத்துச் செல்லப்பட்டன.(6) இந்தச் சகுனங்கள் காணப்படவும், கேட்கப்படவும் நேரிட்டப்போது, மனிதர்களில் முதன்மையானவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான விருஷ்ணிகளும், அந்தகர்களும் தங்கள் மொத்த குடும்பங்களுடன் ஏதோவொரு நீர்நிலைக்குப் புனிதப் பயணம் புறப்பட விரும்பினர்.(7) அவர்கள் பல்வேறு வகை உணவுவகைகளையும், பானவகைகளையும், பல்வேறு வகை மது மற்றும் இறைச்சிகளையும் தயாரித்தனர்.(8) அழகில் சுடர்விட்டவையும், கடுஞ்சக்தி கொண்டவையுமான விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் துருப்புகள், அந்த நகரத்திலிருந்து தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளில் வெளியே புறப்பட்டன.(9) அப்போது தங்கள் மனைவியருடன் பிரபாஸத்திற்குச் சென்ற யாதவர்களில் ஒவ்வொருவரும், தங்களுக்கென ஒதுக்கப்பட்டதும், உணவு மற்றும் பான வகைகள் அபரிமிதமாக இருந்ததுமான (தற்காலிக) வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.(10)கடற்கரையில் அவர்கள் தங்கள் வசிப்பிடத்தை அமைத்திருப்பதைக் கேள்விப்பட்டவரும், யோகத்தை நன்கறிந்தவரும், மனிதர்களில் ஞானியுமான உத்தவர், அங்கே சென்று அவர்களிடம் (புறப்படுவதற்கான) அனுமதியை பெற்றுக் கொண்டார்.(11) உத்தவர் (உலகில் இருந்து) செல்ல விரும்புவதைக் கண்டும், விருஷ்ணிகளின் அழிவு மிக நெருக்கத்தில் இருப்பதை அறிந்தும் கிருஷ்ணன், அவரைத் தடுக்கும் மனநிலை கொள்ளாமல் அவரை வணங்கினான்.(12) அப்போது விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களில் வலிமைமிக்கவர்களும், தங்களுக்கான வேளை வந்தவர்களுமான அந்தத் தேர்வீரர்கள், மொத்த ஆகாயத்தையும் தன் காந்தியால் நிறைத்தபடி பெரும்பயணம் செல்லும் உத்தவரைக் கண்டனர்.(13) விருஷ்ணிகள், உயர் ஆன்ம பிராமணர்களுக்காகச் சமைக்கப்பட்ட உணவை மதுவுடன் கலந்து குரங்குகளுக்குக் கொடுத்தனர்.(14) கடுஞ்சக்தி கொண்ட அந்த வீரர்கள், குடிப்பதையே முக்கிய அம்சமாகக் கொண்ட தங்கள் உயர்ந்த விழாவை பிரபாஸத்தில் தொடங்கினர். நூற்றுக்கணக்கான எக்காளங்களின் முழக்கம் மொத்த களத்திலும் எதிரொலித்தது, தங்கள் தொழிலைச் செய்வதற்காக வந்திருந்தவர்களான நடிகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களால் அது நிறைந்திருந்தது.(15)

கிருஷ்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ராமன் {பலராமன்} கிருதவர்மனுடன் சேர்ந்து குடிக்கத் தொடங்கினான், யுயுதானன் {சாத்யகி}, கதன், பப்ரு ஆகியோரும் அதையே செய்தனர்.(16) அப்போது மதுவால் ஊக்கமடைந்திருந்த யுயுதானன், அந்தச் சபையின் நடுவில் வைத்துக் கிருதவர்மனை கேலி செய்யும் வகையில் அவமதித்து,(17) “ஆயுதந்தரித்த எந்த க்ஷத்திரியன், உறக்கத்தின் அரவணைப்பில் கட்டுண்டவர்களும், அதனால் ஏற்கனவே இறந்தவர்களைப் போன்றவர்களுமான மனிதர்களைக் கொல்வான்? எனவே, ஓ! ஹிருதிகன் மகனே {கிருதவர்மனே}, நீ செய்ததை யாதவர்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்” என்றான்.(18) யுயுதானன் {சாத்யகி} இந்தச் சொற்களைச் சொன்னதும், தேர்வீரர்களில் முதன்மையான பிரத்யும்னன், ஹிருதிகன் மகனிடம் {கிருதவர்மனிடம்} தான் கொண்ட மதிப்பின்மையை வெளிப்படுத்தும் வகையில் அவற்றை {சாத்யகியின் சொற்களை} மெச்சினான்.(19) இதனால் கோபம் மூண்ட கிருதவர்மன், இடது கையால் சாத்யகியைச் சுட்டிக் காட்டியதன் மூலம் அவனை வன்மையாக அவமதித்துச் செய்து, இந்தச் சொற்களைச் சொன்னான்.(20)

{கிருதவர்மன்}, “தன்னைத் தானே வீரன் என்று சொல்லிக் கொள்பவனான நீ, போர்க்களத்தில் (பகை எண்ணங்கள் அனைத்தையும் கைவிட்டு) பிராயத்தில் அமர்ந்திருந்தவனும், கரங்களற்றவனுமான பூரிஸ்ரவஸை கொடூரமாகக் கொன்றதெவ்வாறு?” என்று கேட்டான்.(21)

பகைவீரர்களைக் கொல்பவனான கேசவன் {கிருஷ்ணன்}, அவனுடைய சொற்களைக் கேட்டு, கோபவசப்பட்டவனாக, கிருதவர்மன் மீது தன் கோபப்பார்வையைச் செலுத்தினான்.(22) அப்போது சாத்யகி, மதுசூதனனிடம் {கிருஷ்ணனிடம்}, கொண்டாடப்படும் சியமந்தகம் என்ற ரத்தினத்தை {சியமந்தக மணியை} சத்ரஜித்திடம் இருந்து அபகரிப்பதற்காக, கிருதவர்மன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதைத் தெரிவித்தான்.(23) இந்தக் கதையைக் கேட்ட சத்தியபாமை, கோபவசப்பட்டவளாகக் கேசவனை அணுகி, அவனது மடியில் அமர்ந்து கொண்டு கண்ணீர் சிந்தியபடியே (கிருதவர்மன் மீது) அவனது கோபத்தை அதிகரித்தாள்.(24)

அப்போது சினத்துடன் எழுந்த சாத்யகி, “உறங்கிக் கொண்டிருந்தவர்களான திரௌபதியின் ஐந்து மகன்கள், திருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகியோரைத் துரோணரின் மகனுடைய {அஸ்வத்தாமனின்} துணையுடன் கொன்ற இவனை {கிருதவர்மனை}}அவர்களைப் பின்பற்றிச் செல்லச் செய்வேன் என வாய்மையின் பேரில் நான் ஆணையிடுகிறேன். ஓ! கொடியிடையாளே {சத்யபாமையே}, கிருதவர்மனின் வாழ்வு மற்றும் புகழுக்கான காலம் முடிவுக்கு வந்துவிட்டது” என்றான்.(25-27)இந்தச் சொற்களைச் சொன்ன சாத்யகி, கிருதவர்மனை நோக்கி விரைந்து, கேசவன் {கிருஷ்ணன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே வாளால் அவனது தலையைத் துண்டித்தான்.(28) அந்த அருஞ்செயலைச் செய்த யுயுதானன் {சாத்யகி}, அங்கே இருந்த பிறரையும் தாக்கத் தொடங்கினான். மேலும் தீங்கு செய்வதில் இருந்து அவனைத் தடுப்பதற்காக ரிஷிகேசன் {கிருஷ்ணன்} ஓடினான்.(29) எனினும், ஓ! ஏகாதிபதி, அந்த நேரத்தில் வந்திருந்த கால முரணால் தூண்டப்பட்ட போஜர்கள், அந்தகர்களில் அனைவரும் கூடி சிநியின் மகனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டனர்.(30) வலிமையும், சக்தியும் கொண்ட ஜனார்த்தனன், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கோபத்துடன் சாத்யகியை நோக்கி விரையும் வீரர்களைக் கண்டும், காலத்தின் தன்மையை அறிந்தும் கோபவசப்படாமல் அசையாமல் அப்படியே நின்றான்.(31) விதியால் தூண்டப்பட்டவர்களும், மதுவால் ஊக்கமடைந்தவர்களுமான அவர்கள், தாங்கள் உண்டு கொண்டிருந்த பானைகளால், யுயுதானனை {சாத்யகியைத்} தாக்கத் தொடங்கினர்.(32)

சிநியின் மகன் {சாத்யகி} இவ்வாறு தாக்கப்பட்ட போது, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்} பெருஞ்சினம் கொண்டான். போஜர்களுடனும், அந்தகர்களுடனும் போரிட்டுக் கொண்டிருந்த சாத்யகியை மீட்பதற்காக அவன் விரைந்து ஓடினான்.(33) வலிமைமிக்கக் கரங்களையும், செல்வசக்தியையும் கொண்ட அந்த வீரர்கள் இருவரும் பெருந்துணிவுடன் போரிட்டனர். ஆனால் முரண்பட்டவர்கள் அதிகம் பெருகியிருந்ததால் கிருஷ்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.(34) யதுக்களைத் திளைக்கச் செய்பவன் {கிருஷ்ணன்}, தன் மகனும் {பிரத்யும்னனும்}, சிநியின் மகனும் {சாத்யகியும்} கொல்லப்பட்டதைக் கண்டு கோபமடைந்தவனாக அங்கே வளர்ந்திருந்த ஏரகப்புற்களை[2] கைநிறையப் பிடுங்கி எடுத்தான்.(35) கைநிறைந்தவையாக இருந்த அந்தப் புற்கள், வஜ்ரத்தின் சக்தியோடு கூடியதும், பயங்கரமானதுமான ஓர் இரும்பு உலக்கையாக {முசலமாக} மாறியது. கிருஷ்ணன் அதைக் கொண்டு தன் முன் வந்த அனைவரையும் கொன்றான்.(36)அப்போது, அந்தகர்கள், போஜர்கள், சைனேயர்கள், விருஷ்ணிகள் ஆகியோர் காலத்தால் தூண்டப்பட்டவர்களாக அந்தப் பயங்கரக் கைக்கலப்பில் ஒருவரையொருவர் தாக்கினர்.(37) உண்மையில், ஓ! மன்னா, ஓ! பலமிக்கவனே, அவர்களில் எவர் அந்த ஏரகப் புற்களைக் கோபத்துடன் பிடுங்கி எடுத்தாலும், உடனே அவை அவன் கரங்களில் ஒரு வஜ்ரமாக மாறின.(38) அங்கே காணப்பட்ட ஒவ்வொரு புல்லும் பயங்கரமான இரும்பு உலக்கையாக {முசலங்களாக} மாறின. ஓ! மன்னா {ஜனமேஜயா}, இவை அனைத்தும் பிராமணர்கள் கொடுத்தச் சாபத்தினால் உண்டானவை என்பதை அறிவாயாக.(39) புல்லை ஏவிய எவனும், முற்றிலும் துளைக்கப்பட முடியாத பொருட்களை அஃது எளிதாகத் துளைத்துச் செல்வதைக் கண்டான். உண்மையில் அங்கே இருந்த ஒவ்வொரு புல்லும் வஜ்ரத்தின், சக்தியைக் கொண்ட ஒரு பயங்கரமான உலக்கையானது {முசலமானது}.(40)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, மகன் தந்தையைக் கொன்றான், தந்தை மகனைக் கொன்றான். மதுவினால் ஊக்கமடைந்திருந்த அவர்கள் விரைந்து சென்று ஒருவர்மீது ஒருவர் பாய்ந்தனர்.(41) குகுரர்களும், அந்தகர்களும், சுடர்மிக்க நெருப்பிடம் விரைந்து செல்லும் விட்டில்பூச்சிகளைப் போல அழிவை அடைந்தனர். இவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டபோது, அவர்களில் எவனும் தப்பிச்செல்ல நினைத்தானில்லை.(42) அழிவுக்கான காலம் வந்துவிட்டதை அறிந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, அனைத்தையும் கண்டபடியே அங்கே நின்றான். உண்மையில் அந்த மதுசூதனன், புல்லாலான ஓர் இரும்பு உலக்கையை உயர்த்தியபடியே அங்கே நின்றான்.(43) ஸாம்பன், சாருதேஷ்ணன், பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோர் கொல்லப்பட்டதைக் கண்ட மாதவன் {கிருஷ்ணன்} சினத்தால் நிறைந்தான்.(44)

கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கும் கதனைக் கண்டதும், அவனது கோபம் பெருகுகிறது, சாரங்கம், சக்கரம் மற்றும் கதாயுதத்தைத் தரிப்பவனான அவன் அப்போது விருஷ்ணிகளையும், அந்தகர்களையும் முற்றாக அழித்தான்.(45) ஓ! மன்னா, அப்போது, பகை நகரங்களை வெல்பவனும், வலிமையும், சக்தியும் கொண்டவனுமான பப்ருவும், தாருகனும் கிருஷ்ணனிடம் சொன்னதைக் கேட்பாயாக.(46) {பப்ருவும், தாருகனும்}, “ஓ! புனிதமானவரே, உம்மால் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் கொல்லப்பட்டனர். ராமர் {பலராமர்} இருக்கும் இடத்திற்குத் திரும்புவீராக. அவர் எங்கே சென்றாரோ அங்கேயே நாங்கள் செல்ல விரும்புகிறோம்” என்றனர்”.(47)

பரமெய்திய நாயகன்! – மௌஸலபர்வம் பகுதி – 4-பலராமனைக் கண்டடைந்த கிருஷ்ணன்; தாருகனைப் பாண்டவரிடம் அனுப்பியது; சேஷனாகிக் கடலிற் சென்ற பலராமன்; உடலைக் கைவிட யோகத்தில் கிடந்த கிருஷ்ணன்; கிருஷ்ணனின் பாதங்களைத் தாக்கிய ஜரன்; அவனுக்கு முக்தியளித்துப் பரம்பதமெய்திய கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தாருகன், கேசவன், பப்ரு ஆகியோர் அந்த இடத்தைவிட்டு அகன்று, ராமன் {பலராமன்} இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றனர். அளவற்ற சக்தி கொண்ட அந்த வீரன், பூமியில் தனிமையான ஓர் இடத்தில் மரமொன்றில் சாய்ந்தவாறு சிந்தனையுடன் அமர்ந்திருப்பதை அவர்கள் கண்டனர்.(1) பேரான்மா கொண்ட ராமனைக் கொண்ட கிருஷ்ணன், தாருகனுக்கு ஆணையிடும் வகையில், “குருக்களிடம் சென்று யாதவர்களுடைய படுகொலையைப் பார்த்தனுக்கு அறிவிப்பாயாக. பிராமணர்களின் சாபத்தின் மூலம் யாதவர்களுக்கு நேர்ந்த இந்த முடிவைக் கேட்டு அர்ஜுனன் இங்கே விரைவாக வரட்டும்” என்றான். இவ்வாறு சொல்லப்பட்ட தாருகன், துயரில் புலனுணர்வை இழந்தவனாகக் குருக்களின் (தலைநகரை நோக்கி) தேரில் சென்றான்.(3)

தாருகன் சென்ற பிறகு, தன்னிடம் காத்திருக்கும் பப்ருவைக் கண்ட கேசவன் {கிருஷ்ணன்} அவனிடம் இந்தச் சொற்களில், “பெண்களைப் பாதுகாப்பதற்கு நீ விரைந்து செல்வாயாக. (அவர்களிடம் உள்ள) செல்வத்தால் ஈர்க்கப்படும் கள்வர்கள் அவர்களுக்குத் தீங்கேதும் செய்யாதிருக்கட்டும்” என்றான்.(4)

கேசவனால் இவ்வாறு சொல்லப்பட்ட பப்ரு, மதுவால் இன்னும் கதியற்றவனாகவும், தன் உற்றார் உறவினர்கள் கொல்லப்பட்டதால் மகிழ்ச்சியற்றவனாகவும் அங்கிருந்து சென்றான். அவன் கேசவனின் அருகில் சிறிது நேரம் ஓய்ந்திருந்து, அங்கிருந்து புறப்பட்டபோது, வேடனின் கைகளின் மூலம் ஒரு மரச்சம்மட்டியில் இணைக்கப்பட்டிருந்த இரும்பு உலக்கையானது {முசலமானது}, யாதவக் குலத்தில் எஞ்சியிருந்த ஒரேயொருவனும், பிராமணர்களால் சபிக்கப்பட்டவனுமான அவன் {பப்ரு} மீது திடீரெனப் பாய்ந்து அவனைக் கொன்றது[1].(5) பெருஞ்சக்தி கொண்ட கேசவன், பப்ரு கொல்லப்பட்டதைக் கண்டு தன் அண்ணனிடம், “ஓ! ராமரே {பலராமரே}, பெண்களை உற்றார் உறவினர்களிடம் ஒப்படைக்கும் வரை எனக்காக இங்கே காத்திருப்பீராக” என்றான்.(6)துவாராவதி நகரத்திற்குள் நுழைந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் தந்தையிடம் {வசுதேவரிடம்}, “தனஞ்சயன் {அர்ஜுனன்} வரும்வரை நம் வீட்டுப் பெண்கள் அனைவரையும் பாதுகாப்பீராக.(7) காட்டின் எல்லைப்புறத்தில் ராமர் {பரசுராமர்} எனக்காகக் காத்திருக்கிறார். நான் அவரை இன்று சந்திக்கப் போகிறேன். குரு குலத்தில் முதன்மையான க்ஷத்ரியர்களுக்கு நேர்ந்த பேரழிவை நான் ஏற்கனவே கண்டதைப் போலவே யதுக்களின் பேரழிவையும் கண்டேன்.(8) என்னருகில் யதுக்கள் இல்லாமல் யாதவர்களின் நகரத்தை என்னால் காண இயலாது[2]. காட்டுக்குச் சென்று, ராமரின் {பலராமரின்} துணையுடன் நான் தவம்பயிலப் போகிறேன் என்பதை அறிவீராக” என்றான் {கிருஷ்ணன்}.(9)இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, தன் தந்தையின் பாதத்தைத் தலையால் தீண்டி, விரைவாக அவரது முன்னிலையைவிட்டு அகன்றான். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் பிள்ளைகளிடம் இருந்து கவலையால் உரத்த ஓலம் எழுந்தது.(10) உரக்க ஓலமிட்டு அழுத அந்தப் பெண்மணிகளின் ஒலியைக் கேட்டு, தன் பாதச் சுவடுகளை மீண்டும் பின்பற்றிச் சென்று, அவர்களிடம், “அர்ஜுனன் இங்கே வருவான். மனிதர்களில் முதன்மையான அவன் உங்களைத் துயரில் இருந்து விடுவிப்பான்” என்றான்.(11)பிறகு, காட்டுக்குச் சென்ற கேசவன் {கிருஷ்ணன்}, அங்கே தனிமையான இடத்தில் அமர்ந்திருக்கும் ராமனைக் கண்டான். ராமன் யோகத்தில் நிலைத்திருப்பதையும், அவன் வாயில் இருந்து ஒரு பெரும்பாம்பு வெளியே வந்ததையும் அவன் கண்டான்.(12) அந்தப் பாம்பு வெண் நிறத்தில் இருந்தது. ஆயிரம் தலைகளைக் கொண்டவனும், மலையைப் போன்ற பெருவடிவம் கொண்டவனும், சிவந்த கண்களைக் கொண்டவனுமான அந்த உயர் ஆன்ம நாகன் {பலராமன்}, (இவ்வளவு காலம் தான் வசித்த அந்த) மனித உடலை விட்டகன்று கடலுக்கு வழிவகுக்கும் பாதையில் சென்றான்.(13) சமுத்திரனும், தெய்வீகப் பாம்புகள் பலரும், புனித ஆறுகள் பலவும் அவனைக் கௌரவமாக வரவேற்பதற்காக அங்கே இருந்தனர். அங்கே கார்க்கோடகன், வாசுகி, தக்ஷகன், பிருதுசிரவஸ், வருணன் {அருணன்}, குஞ்சரன்,(14) மிச்ரி, சங்கன், குமுதன், புண்டரீகன், உயர் ஆன்ம திருதராஷ்டிரன், ஹிராதன், கிராதன், கடுஞ்சக்தி கொண்ட சிதிகந்தன் {சிதிப்ருஷ்டன்}, {நிகேது}, சக்ரமந்தன், அதிஷண்டன்,(15) முதன்மையான நாகர்களாக அழைக்கப்படும் துர்முகன், அம்பரீஷன், மற்றும் மன்னன் வருணன் ஆகியோர் அங்கே இருந்தனர். முன் சென்று வரவேற்று, அவனுக்கு அர்க்கியமும், கால் கழுவ நீரும் பல்வேறு சடங்குகளுடன் அளித்து, அந்த வலிமைமிக்க நாகனை வழிபட்டு வணங்கிய அவர்கள் அனைவரும் அவனிடம் வழக்கமான விசாரிப்புகளைச் செய்தனர்.(16)அண்ணன் {பலதேவன்/ பலராமன்} இவ்வாறு (மனிதர்களின்) உலகில் இருந்து சென்றதும், தெய்வீகப் பார்வையைக் கொண்டவனும், அனைத்தின் கதியையும் முழுமையாக அறிந்தவனுமான வாசுதேவன் சிந்தனையிலேயே சில காலம் காட்டில் தனியாகத் திரிந்து கொண்டிருந்தான். பெருஞ்சக்தி கொண்ட அவன் வெறும் பூமியில் அமர்ந்தான்.(17) அதற்கு முன்பு, முற்காலத்தில் காந்தாரி முன்னறிவிக்கும் வகையில் சொன்ன சொற்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தான். (கிருஷ்ணனின் வீட்டில் விருந்தினராக வந்திருந்த) துர்வாசர் உண்டு எஞ்சிய பாயஸத்தை அவனுடைய உடலில் பூசிய போது சொன்ன சொற்களையும் அவன் நினைவுகூர்ந்தான்.(18) விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அழிவையும், அதற்கு முன்பு நடந்த குருக்களின் படுகொலையையும் நினைத்துப் பார்த்த அந்த உயர் ஆன்மா {கிருஷ்ணன்}, (உலகை விட்டு தான் செல்ல வேண்டிய) நேரம் வந்துவிட்டதெனத் தீர்மானித்தான். அப்போது அவன் தன் புலன்களை (யோகத்தில்) அடக்கினான்.(19) அனைத்தையும் குறித்த உண்மையை அறிந்தவனான வாசுதேவனே, பரம தேவனென்றாலும், அனைத்து ஐயங்களையும் விலக்குவதற்காகவும், (மனித இருப்பின் காரியத்தில்) குறிப்பிட்ட விளைவுகளை நிறுவுவதற்காகவும், மூவுலகங்களை ஆதரித்து அத்ரி மகனின் {துர்வாசரின்} சொற்களை உண்மையாக்குவதற்காகவும் அவன் இறக்க விரும்பினான்[3].(20)கிருஷ்ணன், தன்னுடைய புலன்கள், வாக்கு, மனம் ஆகியவை அனைத்தையும் கட்டுப்படுத்தி உயர்ந்த யோகத்தில் {படுத்துக்} கிடந்தான். ஜரன் என்ற பெயரைக் கொண்ட ஒரு கடும் வேடன், மான்களை விரும்பி அங்கே வந்தான்.(21) உயர்ந்த யோகத்தில் பூமியில் நீண்டு கிடந்த கேசவனை மானாக நினைத்து, ஒரு கணையைக் கொண்டு அவனது குதிங்காலில் துளைத்து, தன் இரையைக் கைப்பற்றுவதற்காக அந்த இடத்திற்கு விரைந்து வந்தான்.(22) அங்கே வந்த {வேடன்} ஜரன், யோகத்தில் குவிந்தவனும், பல கைகளைக் கொண்டவனும், மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியிருந்தவனுமான ஒரு மனிதனைக் கண்டான். தன்னைக் குற்றவாளியாக நினைத்து அச்சத்தில் நிறைந்த அவன் கேசவனின் பாதங்களைப் பற்றினான்.(23) அந்த உயர் ஆன்மா அவனுக்கு {ஜரனுக்கு} ஆறுதலளித்த பிறகு, தன் காந்தியால் மொத்த ஆகாயத்தையும் நிறைத்தபடியே மேல்நோக்கி உயர்ந்தான்.(24)

அவன் {கிருஷ்ணன்} சொர்க்கத்தை அடைந்தபோது, வாசவன், அஸ்வினி இரட்டையர்கள், ருத்ரன், ஆதித்யர்கள், வசுக்கள், விஸ்வேதேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், முதன்மையான கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்கள் ஆகியோர் முன் வந்து அவனை வரவேற்றனர்.(25) அப்போது, ஓ! மன்னா, சிறப்புமிக்கவனும், கடுஞ்சக்தி கொண்டவனும், அனைத்தையும் படைத்து அழிப்பவனும், யோக ஆசானுமான நாராயனன், தன் காந்தியால் சொர்க்கத்தை நிறைத்தபடியே, நினைத்தற்கரியதான தன்னுலகை {வைகுண்டத்தை} அடைந்தான்.(26) அப்போது, தேவர்கள், (தெய்வீக) முனிவர்கள், சாரணர்கள், கந்தர்வர்களில் முதன்மையானவர்கள், அழகிய அப்சரஸ்கள், சித்தர்கள் மற்றும் சாத்யர்கள் பலரையும் கிருஷ்ணன் சந்தித்தான். அவர்கள் அனைவரும் பணிவுடன் குனிந்து அவனை வழிபட்டனர்.(27) ஓ! ஏகாதிபதி, தேவர்கள் அனைவரும் அவனை வணங்கினர், முனிவர்களில் முதன்மையானோர் பலரும், அனைவரின் தலைவனான அவனை வழிபட்டனர். கந்தவர்கள் அவனது புகழைப் பாடிக் கொண்டிருந்தனர், இந்திரனும் இன்பமாக அவனைத் துதித்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(28)

துவாரகையில் அர்ஜுனன்! – மௌஸலபர்வம் பகுதி – 5-ஹஸ்தினாபுரம் சென்ற தாருகன்; யாதவர்கள் அழிந்ததை பாண்டவர்களுக்குத் தெரிவித்தது; துவாரகை சென்று கிருஷ்ணனின் மனைவியரைத் தேற்றி வசுதேவரிடம் சென்ற அர்ஜுனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அதேவேளையில் தாருகன், குருக்களிடம் சென்று, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பிருதையின் {குந்தியின்} மகன்களைக் கண்டு, இரும்பு உலக்கைகளைக் கொண்டு விருஷ்ணிகள் எவ்வாறு ஒருவரையொருவர் கொன்றனர் என்பதைச் சொன்னான்.(1) போஜர்கள், அந்தகர்கள் மற்றும் குகுரர்களுடன் சேர்ந்து விருஷ்ணிகள் அனைவரும் கொல்லப்பட்டதைக் கேட்ட பாண்டவர்கள், துயரால் எரிந்து பெருங்கலக்கமடைந்தனர்.(2) கேசவனின் அன்பு நண்பனான அர்ஜுனன், அவர்களிடம் {பாண்டவர்களிடம்} விடைபெற்றுக் கொண்டு, தன் தாய்மானை {வசுதேவரைக்} காணப் புறப்பட்டுச் சென்றான். அவன் அனைத்திற்கும் அழிவு ஏற்படும் என்று சொன்னான்[1].(3)ஓ! பலமிக்க மன்னா {ஜனமேஜயா}, தாருகனோடு சேர்ந்து விருஷ்ணிகளின் நகரத்திற்குச் சென்ற அந்த வீரன், கணவனை இழந்த ஒரு பெண்ணைப் போலத் தெரிந்த துவாரகை நகரத்தைக் கண்டான்.(4) முன்னர், அண்டத்தின் தலைவனையே {கிருஷ்ணனையே} தங்கள் பாதுகாவலனாகக் கொண்டிருந்த அந்தப் பெண்கள், இப்போது தலைவனற்றவர்களாக இருந்தனர். தங்களைப் பாதுகாக்க பார்த்தன் {அர்ஜுனன்} வந்திருப்பதைக் கண்ட அவர்கள் அனைவரும் உரக்க ஓலமிட்டனர்.(5) பதினாறாயிரம் பெண்கள் {16,000} வாசுதேவனை {கிருஷ்ணனைத்} திருமணம் செய்திருந்தனர். உண்மையில், அர்ஜுனன் வருவதைக் கண்ட அவர்கள் அனைவரும் கவலையால் உரக்கக் கதறினர்.(6)

கிருஷ்ணனின் பாதுகாப்பை இழந்த அந்த அழகிகளையும், அவர்களது மகன்களையும் குரு இளவரசன் சந்தித்ததும், பார்வையைத் தடுக்கும் கண்ணீரினால் அவனால் அவர்களைப் பார்க்க முடியவில்லை.(7) துவாரகையெனும் ஆறானது, விருஷ்ணிகளையும், அந்தகர்களையும் அதன் நீராகவும், குதிரைகளை மீன்களாகவும், தேர்களைத் தெப்பங்களாகவும், இசைக்கருவிகளின் ஒலிகளையும், தேர்களின் சடசடப்பொலியையும் அதன் அலைகளாகவும், வீடுகள், மாளிகைகள் மற்றும் பொதுச் சதுக்கங்கள் ஆகியவற்றைத் தடாகங்களாகவும் கொண்டிருந்தது. ரத்தினங்களும், விலைமதிப்புமிக்கக் கற்களும் அதன் பாசிகளாக இருந்தன. வஜ்ரதாலான சுவர்களை {பிரகாரங்களை} அதில் மிதக்கும் மலர் மாலைகளாகக் கொண்டிருந்தது. வீதிகளும், சாலைகளும், பரப்பில் சுழிகளுடன் கூடிய பெரும் நீரோட்டமாக இருந்தன. பெரிய திறந்த வெளிகள் பெரும் ஏரிகளாக இருந்தன. ராமனும் {பலராமனும்}, கிருஷ்ணனும் அதன் இரு பெரும் முதலைகளாக இருந்தனர். இனிமையான அந்த ஆறு இப்போது காலனின் வலைக்குள் கட்டப்பட்ட கடும் வைதரணீ ஆற்றைப் போல அர்ஜுனனுக்குத் தெரிந்தது.(8-10)

உண்மையில், பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசவன் மகன் {அர்ஜுனன்}, விருஷ்ணி வீரர்களை இழந்திருந்த அந்த நகரத்தை இவ்வாறே கண்டான்.(11) அழகை இழந்து, முற்றிலும் மகிழ்ச்சியற்றதாக இருந்த அது, குளிர் காலத் தாமரையைப் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தியது. துவாரகை அளிக்கும் காட்சியைக் கண்டும், கிருஷ்ணனின் எண்ணற்ற மனைவியரைக் கண்டும், கண்ணீரால் குளித்த கண்களுடன் கூடிய அர்ஜுனன் உரக்க ஓலமிட்டபடியே பூமியில் விழுந்தான்.(12) அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சத்ரஜித்தின் மகளான சத்யை {சத்தியபாமா}, ருக்மிணி ஆகியோரும் தனஞ்சயனுக்கு அருகில் கீழே விழுந்து துன்பத்துடன் உரக்க ஓலமிட்டனர்.(13) அவனை எழச் செய்து ஒரு பொன் இருக்கையில் அவனை அமரச் செய்தனர். பெண்கள், அந்த உயர் ஆன்மாவைச் சூழ்ந்து அமர்ந்து, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.(14) கோவிந்தனைப் புகழ்ந்து, அந்தப் பெண்களிடம் பேசிக் கொண்டிருந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அவர்களுக்கு ஆறுதலளித்து, தன் தாய்மானை {வசுதேவரைக்} காணச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(15)

கிருஷ்ணனின் சொற்கள்! – மௌஸலபர்வம் பகுதி – 6-யாதவ அழிவுக்கான காரணத்தை அர்ஜுனனிடம் சொல்லிப் புலம்பிய வசுதேவர்; கிருஷ்ணன் சொன்னதை அர்ஜுனனிடம் சொன்னது; நாட்டையும் ஒப்படைத்துவிட்டு உயிர்விட நிச்சயித்த வசுதேவர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தமது மகன்கள் குறித்த சோகத்தினால் எரிந்து தரையில் கிடந்தவரும், வீரரும், உயர் ஆன்மாவுமான அனகதுந்துபியை {வசுதேவரை} அந்தக் குரு இளவரசன் {அர்ஜுனன்} கண்டான்.(1) ஓ! பாரதா {ஜனமேஜயா}, அகன்ற மார்பையும், வலி கரங்களையும் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தன் மாமனைவிட அதிகம் பீடிக்கப்பட்டுக் கண்ணீரில் குளித்த கண்களுடன், தன் மாமனின் பாதங்களைத் தீண்டினான்.(2) ஓ! பகைவரைக் கொல்பவனே {ஜனமேஜயனே}, வலிய கரங்களைக் கொண்ட அனகதுந்துபி, தமது தங்கை மகனின் தலையை முகர விரும்பினாலும் அதைச் செய்யத் தவறினார்.(3) வலிய கரங்களைக் கொண்டவரும், ஆழமாகப் பீடிக்கப்பட்டவருமான அந்த முதிய மனிதன் {வசுதேவர்}, தமது கரங்களால் பார்த்தனை {அர்ஜுனனை} ஆரத்தழுவிக் கொண்டு, தமது மகன்கள், சகோதரர்கள், பேரப்பிள்ளைகள், மகள்களின் மகன்கள் மற்றும் நண்பர்களை நினைத்து உரக்க அழுதார்.(4)

வசுதேவர், “ஓ! அர்ஜுனா, பூமியின் மன்னர்கள் அனைவரையும், தைத்தியர்களை நூறுமுறையும் அடிபணியச்செய்த அந்த வீரர்களைக் காணாமல் நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். நான் இறப்பது கடினம் என்பதை நான் காண்கிறேன்.(5) ஐயோ, ஓ! பார்த்தா, அர்ஜுனனின் அன்புக்குரிய சீடர்களும், அவனால் பெரிதும் மதிக்கப்பட்டவர்களுமான அந்த இரு வீரர்களின் {சாத்யகி மற்றும் பிருத்யும்னன் ஆகியோரின்} குற்றத்தால் விருஷ்ணிகள் அழிந்தனர்.(6) விருஷ்ணிகளில் முதன்மையான அதிரதர்களாக எந்த இருவர் கருதப்பட்டனரோ, உரையாடல்களின் போது யாவரின் பெயரைக் குறிப்பிட்டால் நீ பெருமைப்படுவாயோ,(7) ஓ! குரு குலத்தின் தலைவா, கிருஷ்ணனின் அன்புக்குரியவர்களாக யாவர் இருந்தனரோ, ஓ! தனஞ்சயா, அந்த இருவரே {சாத்யகி மற்றும் கிருதவர்மன் ஆகியோரே} விருஷ்ணிகளின் அழிவுக்கு முக்கியக் காரணங்களாக இருந்தனர்.(8)

ஓ! அர்ஜுனா நான் சிநியின் மகனையோ {சாத்யகியையோ}, ஹிருதிகளின் மகனையோ {கிருதவர்மனையோ} நான் நிந்திக்கவில்லை. அக்ரூரனையோ, ருக்மிணியின் மகனையோ {பிரத்யும்னனையோ} நான் நிந்திக்கவில்லை. (முனிவர்களின்) சாபமே ஒரே காரணம் என்பதில் ஐயமில்லை.(9) கேசி, கம்சன், செருக்கில் பெருகிய சைத்யன் {சேதி நாட்டு சிசுபாலன்}, நிஷாதர்களின் ஆட்சியாளனுடைய மகனான ஏகலவ்யன், கலிங்கர்கள், மகதர்கள், கந்தாரர்கள், காசியின் மன்னன், பாலைவனத்திற்கு மத்தியில் ஒன்று கூடியிருந்த பல ஆட்சியாளர்கள், கிழக்குக்கும், தெற்குக்கும் உரிய பல வீரர்கள், மலைசார்ந்த பகுதிகளைச் சேர்ந்த பல மன்னர்கள் ஆகியோரை அழிப்பதற்குத் தன் ஆற்றலை வெளிப்படுத்திய அண்டத்தின் தலைவனான மதுசூதனன், ஐயோ, முனிவர்கள் இட்ட சாபத்தின் மூலம் எழும் பேரிடரில் எவ்வாறு அலட்சியமாக இருந்தான்?(10-12)நீயும், நாரதரும், முனிவர்களும், அவனை மங்கா மகிமை கொண்ட, பாவமற்ற நித்திய தேவன் கோவிந்தனாக அறிவீர்கள்.(13) ஐயோ, பலமிக்க விஷ்ணுவேயான அவன், எதிலும் தலையிடாமல், தன் உற்றார் உறவினரின் அழிவைக் கண்டிருக்கிறான். என் மகனே {கிருஷ்ணனே} இவையனைத்தையும் நடக்க அனுமதித்திருக்க வேண்டும்.(14) அவனே அண்டத்தின் தலைவனாக இருந்தான். எனினும், ஓ! பகைவரை எரிப்பவனே, காந்தாரி மற்றும் முனிவர்களின் சொற்களை அவன் பொய்யாக்க விரும்பவில்லை.(15) ஓ! வீரா, அஸ்வத்தாமனால் கொல்லப்பட்ட உன் பேரனை நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் சக்தியின் மூலம் அவன் உயிர்மீட்டான்.(16) எனினும், உன்னுடைய நண்பனான அவன் {கிருஷ்ணன்}, தன் உற்றார் உறவினரைக் காக்க விரும்பவில்லை.

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {அர்ஜுனா}, தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், நண்பர்கள் ஆகியோர் இறந்து கிடப்பதைக் கண்டு, அவன் என்னிடம் இந்தச் சொற்களைச் சொன்னான், “இறுதியில் நம் குலத்திற்கும் அழிவு வந்தது.(17,18) துவாராவதி நகருக்கு பீபத்சு {அர்ஜுனன்} வருவான். விருஷ்ணிகளுக்கு நேரிட்ட பேரழிவை அவனுக்குச் சொல்வீராக.(19) யதுக்களின் அழிவைக் கேட்ட உடனேயே, வலிமையும், சக்தியுமிக்க அந்த வீரன் நிச்சயம் காலந்தாழ்த்தாமல் இங்கே வருவான்.(20) ஓ! தந்தையே, நானே அர்ஜுனன், அர்ஜுனனே நான் என்பதை அறிவீராக. நீர் செய்ய வேண்டியதை அவன் சொல்வான்.(21) பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் எது சிறந்ததோ அதைப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} செய்வான். அவனே உமது ஈமச் சடங்குகளையும் செய்வான்.(22) அர்ஜுனன் சென்றதும், எந்தத் தாமதமும் இல்லாமல், சுவர்கள் {பிரகாரங்கள்}, மாடமாளிகைகளுடன் கூடிய இந்தத் துவாராவதி நகரம், பெருங்கடலால் விழுங்கப்படும்.(23) என்னைப் பொறுத்தவரையில், புனிதமான ஏதோவோரிடத்தில் ஓய்ந்திருந்து, நுண்ணறிவுமிக்க ராமரின் {பலராமரின்} துணையுடன், கடும் நோன்புகளை நோற்றுக் கொண்டு என் காலத்திற்காகக் காத்திருக்கப் போகிறேன்” என்றான்.(24)

நினைத்துப் பார்க்கமுடியாத ஆற்றலைக் கொண்ட ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, பிள்ளைகளுடன் என்னை விட்டுவிட்டு, நான் அறியாத ஏதோவோரிடத்திற்குச் சென்றுவிட்டான்.(25) உன்னுடைய மைத்துனர்களான அந்த உயர் ஆன்மாக்கள் {பலராமன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய} இருவரையும், என் உற்றார் உறவினருக்கு நேர்ந்திருக்கும் இந்தப் பயங்கரப் பேரழிவையும் நினைத்து உணவனைத்தையும் கைவிட்டு, துன்பத்தால் மெலிந்திருக்கிறேன்.(26) நான் உண்ணவும் மாட்டேன், வாழவும் மாட்டேன். ஓ! பாண்டுவின் மகனே நீ என்னைச் சந்தித்தது நற்பேற்றாலேயே. ஓ! பார்த்தா, கிருஷ்ணன் சொன்ன அனைத்தையும் நீ நிறைவேற்றுவாயாக.(27) ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, இந்தப் பெண்கள் அனைவருடனும், இங்கே இருக்கும் இந்தச் செல்வம் அனைத்துடனும் கூடிய இந்த நாடு இப்போது உனதாகும். என்னைப் பொறுத்தவரையில், ஓ! பகைவரைக் கொல்பவனே, எனது அன்புக்குரியதாக இருந்தாலும் என் உயிர்மூச்சைக் கைவிடுவேன்” என்றார் {வசுதேவர்}.(28)

துவாரகை மூழ்கியது! – மௌஸலபர்வம் பகுதி – 7-வசுதேவரைத் தேற்றி யாவரையும் இந்திரப்ரஸ்தம் செல்லச் சொன்ன அர்ஜுனன்; யோகத்தால் உடலை விட்ட வசுதேவர்; வசுதேவர், கிருஷ்ணன் ஆகியோரைத் தகனஞ்செய்த அர்ஜுனன்; கள்வர்களால் கொள்ளையிடப்பட்டது; வஜ்ரனுக்கு முடிசூட்டியது; ருக்மிணி தீக்குளித்தது; ஸத்யபாமை தவம் செய்யச் சென்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பகைவரை எரிப்பவனான பீபத்சு {அர்ஜுனன்} இவ்வாறு தன்னுடைய தாய்மாமனால் {வசுதேவரால்} சொல்லப்பட்டதும், உற்சாகமற்ற இதயத்துடன் கூடியவனாக, அதேபோல உற்சாகமற்றிருந்த வசுதேவரிடம்,(1) “ஓ! மாமா, விருஷ்ணி குலதைச் சேர்ந்த அந்த வீரனையும் {கிருஷ்ணனையும்}, என்னுடைய உற்றார் உறவினரான வேறு சிலரையும் இழந்திருக்கும் இந்தப் பூமியை என்னால் பார்க்க முடியவில்லை.(2) மன்னர் {யுதிஷ்டிரன்}, பீமசேனர், சகாதேவன், நகுலன், எண்ணிக்கையில் ஆறாவதாக யாஜ்ஞசேனி ஆகியோரும் இக்காரியத்தில் என்னைப் போலவே மனம் கொண்டுள்ளனர்.(3) மன்னர் புறப்படுவதற்கான காலமும் வந்துவிட்டது. நாங்கள் புறப்படுவதற்கான நேரமும் மிக அருகில் இருக்கிறது. காலப்போக்கை நன்கு அறிந்தோரில் நீர் முதன்மையானவராக இருக்கிறீர்.(4) எனினும், ஓ! பகைவரைத் தண்டிப்பவரே, விருஷ்ணி குலத்தின் பெண்கள், பிள்ளைகள் மற்றும் முதியோரை முதலில் இந்திரப்ரஸ்தத்திற்கு அனுப்புவீராக” என்றான்.(5)

தன் மாமனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, அடுத்ததாகத் தாருகனிடம் அர்ஜுனன், “தாமதமேதும் இல்லாமல் விருஷ்ணி வீரர்களில் முக்கியத் தலைவர்களை நான் காண விரும்புகிறேன்” என்றான்.(6) இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு (கொல்லப்பட்ட) பெருந்தேர்வீரர்களுக்காக வருந்தி, சுதர்மம் என்றழைக்கப்படும் யாதவர்களின் பெருஞ்சபைக்குள் நுழைந்தான்.(7) அவன் அமர்ந்ததும், பிராமணர்கள் உள்ளிட்ட குடிமக்கள் அனைவரும், நாட்டின் அமைச்சர்கள் அனைவரும் வந்து அங்கே அவனைச் சூழ்ந்து அமர்ந்தனர்.(8)

அப்போது அவர்கள் வருந்தியதைவிட அதிகம் வருந்திய பார்த்தன் {அர்ஜுனன்}, வருத்தத்திலிருந்தவர்களும், உற்சாகமற்றவர்களாக இருந்தவர்களும், உயிரில்லாத இறந்தவர்களைப் போல இருந்தவர்களுமான குடிமக்கள் மற்றும் அதிகாரிகளிடம், அந்தச் சந்தர்ப்பத்திற்குப் பொருந்திய இந்தச் சொற்களைச் சொன்னான்:(9) “விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களில் எஞ்சியிருப்போரை நான் என்னுடன் அழைத்துச் செல்லப் போகிறேன். விரைவில் பெருங்கடல் இந்நகரத்தை {துவாரகையை} விழுங்கப் போகிறது.(10) உங்கள் தேர்களை ஆயத்தம் செய்து, அவற்றில் உங்கள் செல்வங்கள் அனைத்தையும் வைத்துக் கொள்வீராக. (கிருஷ்ணனின் பேரனான {கொள்ளுப்பேரனான}) இந்த வஜ்ரன்[1] சக்ரப்ரஸ்தத்தில் {இந்திரப்ரஸ்தத்தில்} உங்கள் மன்னனாக இருப்பான்.(11) இன்றிலிருந்து ஏழாவது நாள் சூரிய உதயத்தில் நாம் புறப்படுவோம். தாமதமில்லாமல் ஆயத்தமாவீராக” என்றான் {அர்ஜுனன்}.(12)தூய செயல்களைக் கொண்ட பிருதையின் மகனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், பாதுகாப்பை அடையும் ஆவலில் இருந்த அவர்கள் அனைவரும் தங்கள் ஆயத்தங்களை விரைவாகச் செய்தனர்.(13) அர்ஜுனன் அந்த இரவைக் கேசவனின் மாளிகையில் கழித்தான். அவன், திடீரெனப் பெருந்து துன்பத்தில் மூழ்கிக் கலக்கமடைந்தான்.(14) காலை விடிந்ததும், பெருஞ்சக்தியையும், ஆற்றலையும் கொண்ட வசுதேவர் யோகத்தின் துணையுடன் உயர்ந்த கதியை அடைந்தார்.(15) அப்போது வசுதேவரின் மாளிகையில் இருந்து இதயம் பிளக்கும்படி உரக்க அழுது கொண்டிருந்த பெண்களின் ஒலி கேட்கப்பட்டது.(16) அவர்கள் கலைந்த கேசம் கொண்டவர்களாகவும், ஆபரணங்களோ, மலர்மாலைகளோ அற்றவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் கைகளால் மார்பில் அடித்துக் கொண்டு இதயத்தைப் பிளக்கும் ஒப்பாரியில் ஈடுபட்டனர்.(17) பெண்களில் முதன்மையானவர்களான தேவகி, பத்ரை, ரோஹினி, மதிரை ஆகியோர் தங்கள் தலைவனின் உடல் மீது விழுந்தார்கள்.(18) அப்போது பார்த்தன் தன் மாமனின் உடலை, மனிதர்களால் சுமக்கப்படும் ஒரு விலைமதிப்புமிக்க வாகனத்தில் சுமந்து வரச் செய்தான்.(19) அப்போது துன்பத்தால் ஆழமாகப் பீடிக்கப்பட்டவர்களும், இறந்து போன வீரரிடம் பேரன்பு கொண்டவர்களுமான துவாரகையின் குடிமக்களும், மாகாணத்து மக்கள் அனைவரும் அதை {அந்த வாகனத்தைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(20)

அந்த வாகனத்திற்கு முன்பு, அவர் {வசுதேவர்} வாழ்ந்த போது நிறைவு செய்த குதிரை வேள்வியின் முடிவில் தலைக்கு மேல் பிடிக்கப்பட்ட குடைகளும், அவர் தினமும் வழிபட்ட சுடர்மிக்க நெருப்புகளும் சுமந்து செல்லப்பட்டன; அவற்றைக் கவனித்துக் கொண்ட புரோகிதர்களும் முன்சென்றனர்.(21) அந்த வீரரின் உடலானது, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அவர்களது மனைவிகளாலும், அவர்களைச் சூழ்ந்த ஆயிரக்கணக்கான பெண்களாலும், ஆயிரக்கணக்கான மருமகள்களாலும் பின்தொடரப்பட்டது.(22) இறுதிச் சடங்குகள், அவர் வாழ்ந்த போது அவருக்கு ஏற்புடையதாக இருந்த இடத்திலேயே செய்யப்பட்டது.(23) வீரரான அந்தச் சூரன் மகனின் {வசுதேவரின்} நான்கு மனைவிகளும் ஈமச் சிதையில் ஏறித் தங்கள் தலைவனின் உடலுடன் எரிந்தனர். அவர்கள் அனைவரும் அவருக்கு உரிய இன்பலோகங்களையே அவருடன் அடைந்தனர்.(24) பாண்டுவின் மகன் தன் மாமனையும், அவரது நான்கு மனைவியரின் உடல்களையும், நறுமணமிக்கப் பல்வேறு வகை நறுமணப் பொருட்கள் மற்றும் கட்டைகளைப் பயன்படுத்தி எரித்தான்.(25) ஈமச் சிதை எரிந்தபோது, சாமங்கள் ஓதும் தெளிவான ஒலி மற்றும் குடிமக்கள் மற்றும் அந்தச் சடங்கைப் பார்த்துக் கொண்டிருந்தோரின் ஓலம் ஆகியவற்றுடன் மரமும், வேறு எரியும் பொருட்களும் எரியும் உரத்த ஒலியும் எழுந்தது.(26)

அது முடிந்ததும், வஜ்ரனின் தலைமையிலான விருஷ்ணி மற்றும் அந்தகக் குலத்தின் சிறுவர்கள், அந்த உயர் ஆன்ம வீரருக்கு நீர்க்காணிக்கைகளைச் செலுத்தினர்.(27) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஒவ்வொரு கடமையையும் கவனமாகச் செய்த பல்குனன் {அர்ஜுனன்}, இந்தக் கடமையைச் செய்துவிட்டு, அந்த இடத்திற்கு அருகிலேயே இருந்த விருஷ்ணிகள் கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்றான்.(28) சுற்றிலும் கொல்லப்பட்டுக் கிடக்கும் அவர்களைக் கண்ட குரு இளவரசன் பெரிதும் மகிழ்ச்சியற்றவனானான். எனினும், நடந்ததைக் கருத்தில் கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதை அவன் செய்தான்.(29) ஏரகப் புற்களாலானவையும், பிராமணர்களிட்ட சாபத்தின் குணத்தில் பிறந்தவையுமான இரும்பு உலக்கைகளால் {முசலங்களால்} கொல்லப்பட்ட அந்த வீரர்களின் உடல்களுக்கு வயது முதிர்வின் அடிப்படையிலான வரிசையில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.(30)

ராமர் {பலராமர்} மற்றும் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} உடல்களைத் தேடச் செய்த அர்ஜுனன், அச்செயலில் திறம்பெற்ற மனிதர்களைக் கொண்டு அவற்றை எரிக்கச் செய்தான்.(31) அடுத்து இறந்தோருக்குச் செய்யப்படும் சடங்குக்களை முறையாகச் செய்த அந்தப் பாண்டுவின் மகன், ஏழாம் நாளில் தன் தேரில் ஏறி விரைவாகப் புறப்பட்டான்.(32) விருஷ்ணி வீரர்களின் விதவைகள், காளைகள், கோவேறுகழுதைகள் மற்றும் ஓட்டகங்களால் இழுக்கப்பட்ட தேர்களில் அந்த உயர் ஆன்ம பாண்டுவின் மகனை {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(33) அவர்கள் அனைவரும் பெருந்துன்பத்தில் இருந்தனர். விருஷ்ணிகளின் பணியாட்களும், குதிரைவீரர்களும், தேர்வீரர்களும் கூட அந்த ஊர்வலத்தைப் பின்தொடர்ந்தனர். அந்த நாட்டின் குடிமக்களும் அங்கே வசித்தவர்களும், பிருதை மகனின் ஆணையின் பேரில், வீரர்களற்றதும், பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்களை மட்டுமே கொண்டதுமான அந்தக் குதிரைப்படை அணிவகுப்பைச் சூழ்ந்து கொண்டு ஒரே நேரத்தில் புறப்பட்டுச் சென்றனர்.(35)யானைகளின் முதுகுகளில் இருந்து போரிட்ட போர்வீரர்கள் மலைகளைப் போன்று பெரியவையாக இருந்த யானைகளில் சென்றனர். காலாட்படை வீரர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.(36) அந்தக, விருஷ்ணி குலங்களின் பிள்ளைகள் அனைவரும் அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்றனர். பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், செல்வந்தர்களாக இருந்த சூத்திரர்கள் ஆகியோரும், வாசுதேவனின் அந்தப்புரத்தில் அமைந்தவர்களான பதினாறாயிரம் {1600} பெண்களையும், கிருஷ்ணனின் நுண்ணறிவுமிக்கப் பேரனான {கொள்ளுப்பேரனான} வஜ்ரனையும் முன்னிட்டுக் கொண்டு சென்றனர்.(38) போஜ, விருஷ்ணி, அந்தகக் குலத்தைச் சேர்ந்த பிற வீரர்களின் மனைவிகளும், இப்போது தலைவனற்றவர்களாக இருந்தவர்களுமான பெண்கள் லட்சக்கணக்கில் அர்ஜுனனுடன் புறப்பட்டுச் சென்றனர்.(39) தேர்வீரர்களில் முதன்மையானவனும், பகை நகரங்களை வெல்பவனுமான அந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்}, செல்வம் நிறைந்ததும், பெருங்கடலைப் போலத் தெரிந்ததுமான விருஷ்ணிகளின் இந்தப் பெரும் ஊர்வலத்தின் வழியைப் பாதுகாத்துச் சென்றான்.(40) மக்கள் அனைவரும் புறப்பட்டதும், சுறாக்கள் மற்றும் முதலைகளின் இல்லமான பெருங்கடலானது, இன்னும் அனைத்து வகைச் செல்வங்களுடன் நிறைந்திருந்த துவாரகையைத் தன் நீரில் மூழ்கச் செய்தது[2].(41) எந்த நிலப்பகுதி கடக்கப்பட்டதோ அஃது உடனடியாகப் பெருங்கடலின் நீரில் மூழ்கியது.(42) அற்புதம் நிறைந்த இந்தக் காட்சியைக் கண்ட துவாரகாவாசிகள், வேக வேகமாக நடந்து, “விதியின் போக்கு அற்புதம் நிறைந்தது” என்றனர்[3].(43)தனஞ்சயன் {அர்ஜுனன்}, துவாரகையைக் கைவிட்ட பிறகு, இனிமையான காடுகள், மலைகள் மற்றும் இனிமை நிறைந்த ஓடைகளின் ஓரத்தில் விருஷ்ணி பெண்களை ஓய்ந்திருக்கச் செய்து மெதுமெதுவாக அணிவகுத்துச் சென்றான்.(44) ஐந்து நீர்நிலைகளைக் கொண்ட நாட்டை {பஞ்சநதம் / பஞ்சாப்} அடைந்த பலமிக்கத் தனஞ்சயன், அந்நிலத்தின் மத்தியில் தானியங்கள், பசுக்கள் மற்றும் பல விலங்குகள் நிறைந்த ஒரு பெரிய முகாமை அமைத்தான்.(45) ஓ! பாரதா {ஜனமேஜயா}, தலைவர்களற்ற அந்த விதவைகளின் பாதை பிருதையின் மகனால் {அர்ஜுனனால்} மட்டுமே பாதுகாக்கப்படுவதைக் கண்ட கள்வர்கள், (கொள்ளையிடுவதற்காகப்) பேராசை கொண்டனர்.(46) அப்போது, பேராசையில் மூழ்கிய இதயங்களைக் கொண்டவர்களும், இழிந்த பாவிகளும், மங்கலமற்றவர்களாகத் தோன்றுபவர்களுமான ஆபிரர்கள், ஒன்று கூடி தங்களுக்கு ஆலோசனை நடத்தினார்கள்.(47) அவர்கள், “இங்கே ஒரேயொரு வில்லாளியான அர்ஜுனன் மட்டுமே இருக்கிறான். இந்தக் குதிரைப்படை அணிவகுப்பில் பிள்ளைகளும், முதியவர்களும் இருக்கிறார்கள். நம்மை மீறி அவன் அவர்களின் வழியைப் பாதுகாத்து வருகிறான். (விருஷ்ணி) போர்வீரர்கள் சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்” என்றனர்.(48)

ஆயிரம் எண்ணிக்கையில் இருந்தவர்களும், தண்டங்கள் தரித்தவர்களுமான அந்தக் கள்வர்கள் கொள்ளையிட விரும்பி விருஷ்ணிகளை நோக்கி முன்னேறினர்.(49) முரண்பட்ட காலப்போக்கால் தூண்டப்பட்ட அவர்கள், உரத்த சிங்க முழக்கங்களுடனும், கொல்லும் விருப்பத்துடனும் அச்சுறுத்தியவாறு அந்தப் பெருங்கூட்டத்தின் மீது பாய்ந்தனர்.(50) குந்தியின் மகன் {அர்ஜுனன்} பாதையின் வழியே முன்னேறாமல் திடீரென நின்று தன் தொண்டர்களுன் திரும்பி, ஊர்வலத்தைத் தாக்கும் கள்வர்கள் இருக்கும் இடம் நோக்கிச் சென்றான்.(51)

அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட போர்வீரன் {அர்ஜுனன்}, தாக்கிக் கொண்டிருப்பவர்களிடம் சிரித்தவாறே, “இழிந்த பாவிகளே, உங்கள் உயிர்கள் மீது உங்களுக்கு ஆசையிருந்தால் இதைத் தவிர்ப்பீராக. நான் என் கணைகளால் உங்கள் உடல்களைத் துளைத்து உயிரை எடுக்கும்போது இதற்காக வருந்துவீர்கள்” என்றான்.(52)

அந்த வீரனால் இவ்வாறு சொல்லப்பட்டும் அவற்றை அலட்சியம் செய்த அவர்கள், மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்டாலும் அர்ஜுனன் மீது பாய்ந்தனர்.(53) அப்போது அர்ஜுனன், பெரியதும், அழிவற்றதுமான தன் தெய்வீக வில்லுக்கு நாண்பூட்ட முயற்சித்தான்.(54) போர் கடுமையாக இருந்தபோது, பெரும் சிரமத்துடன் அதில் நாண்பூட்டுவதில் வென்றான். அப்போது அவன் தன் தெய்வீக ஆயுதங்களை நினைக்கத் தொடங்கினாலும் அவை மனத்தில் தோன்றவில்லை.(55) போரின் கடுமையையும், தன் ஆயுத வலிமையின் இழப்பையும், தெய்வீக ஆயுதங்கள் தோன்றாமையையும் கண்ட அர்ஜுனன் பெரிதும் வெட்கமடைந்தான்.(56) காலாட்படை, யானை வீரர்கள், தேர்வீரர்கள் உள்ளிட்ட விருஷ்ணி வீரர்களுடன் சேர்ந்து கள்வர்களால் அபகரிக்கப்பட்ட விருஷ்ணி பெண்களையும் மீட்பதில் அவன் தவறினான்.(57) அந்தக் கூட்டம் மிகப் பெரியதாக இருந்தது. கள்வர்கள் அதைப் பல்வேறு முனைகளில் தாக்கினர். அர்ஜுனன் தன்னால் முடிந்த அளவு அதைப் பாதுகாக்க முயன்றாலும், அவனால் வெல்ல முடியவில்லை.(58) போர்வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பெண்களில் முதன்மையான பலர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர், அதேவேளையில் வேறு சிலர் தாங்களே விரும்பி அந்தக் கள்வர்களுடன் சென்றனர்[4].(59)பலமிக்க அர்ஜுனன், விருஷ்ணிகளின் பணியாட்களால் ஆதரிக்கப்பட்டவனாகக் காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் கள்வர்களைத் தாக்கினான்.(60) ஓ! மன்னா {ஜனமேஜயா}, எனினும் விரைவில் அவனது கணைகள் தீர்ந்தன. முற்காலங்களில் அவனது கணைகள் வற்றாதவையாக இருந்தன. எனினும் இப்போது அவை வேறுவகையில் ஆகின.(61) தன் கணைகள் தீர்ந்ததைக் கண்ட அவன் பெருந்துன்பத்தில் ஆழமாகப் பீடிக்கப்பட்டான். அப்போது அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்} தன் வில்லின் முனைகளினால் அந்தக் கள்வர்களைத் தாக்கத் தொடங்கினான்.(62) எனினும், ஓ! ஜனமேஜயா, அந்த மிலேச்சர்கள், பார்த்தன் {அர்ஜுனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே விருஷ்ணிகள் மற்றும் அந்தகப் பெண்களில் முதன்மையானோர் பலரை அபகரித்துப் பின்வாங்கினர்.(63) பலமிக்கத் தனஞ்சயன் இவை யாவற்றையும் விதியின் பணியெனக் கருதினான். கவலையால் நிறைந்த அவன், (தெய்வீக) ஆயுதங்கள் தோன்றாமை, தன் கர வலிமையின் இழப்பு, தன் வில் தனக்குக் கீழ்ப்படியாமை ஆகியவற்றை நினைத்து பெருமூச்சுவிட்டான்.(64,65) அவன், இவை அனைத்தும் விதியின் பணியெனக் கருதியவனாகப் பெரிதும் உற்சாகத்தை இழந்தான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, முன்பு கொண்டிருந்த பலத்தை இப்போது தான் கொண்டிருக்கவில்லை என்று சொல்லி அவன் மேலும் முயற்சி செய்வதை நிறுத்தினான்[5].(66) அந்த உயர் ஆன்மா {அர்ஜுனன்}, இன்னும் அவர்களிடம் எஞ்சி இருந்த செல்வத்தையும் மிச்சமிருந்த விருஷ்ணி பெண்களையும் அழைத்துக் கொண்டு குருக்ஷேத்திரம் வந்து சேர்ந்தான்.(67)இவ்வாறு எஞ்சியிருந்த விருஷ்ணிகளைக் கொண்டு வந்து சேர்த்த அவன் {அர்ஜுனன்}, அவர்களைப் பல்வேறு இடங்களில் நிறுவினான்.(68) கிருதவர்மனின் மகனை, எஞ்சியிருந்த போஜ மன்னனின் பெண்களுடன் சேர்த்து, மார்த்திகாவதம் என்றழைக்கப்படும் நகரத்தில் நிறுவினான்.(69) சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் ஆகியோருடன் எஞ்சியிருந்தவர்களின் வழியைப் பாதுகாத்த அந்தப் பாண்டுவின் மகன், குதிரைகளற்றவர்களாக இருந்த அவர்களை இந்திரப்ரஸ்த நகரத்தில் நிறுவினான்.(70) அற ஆன்மா கொண்ட அர்ஜுனன், யுயுதானனின் {சாத்யகியின்} அன்பு மகனை, முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்களுடன், சரஸ்வதி ஆற்றங்கரையில் நிறுவினான்.(71) இந்திரப்ரஸ்தத்தின் ஆட்சி {கிருஷ்ணனின் கொள்ளுப்பேரனான} வஜ்ரனுக்குக் கொடுக்கப்பட்டது. அக்ரூரின் விதவைகள் காட்டுக்குள் ஓய்ந்து செல்ல விரும்பினார்கள். வஜ்ரன் மீண்டும் மீண்டும் அவர்களைத் தடுத்தாலும் அவர்கள் அவன் சொல்வதைக் கேட்கவில்லை.(72) ருக்மிணி, காந்தார இளவரசி, சைப்யை, ஹைமவதி, ஜாம்பவதி ஆகியோர் ஈமச் சிதையில் ஏறினர்.(73) சத்யபாமை, மற்றும் கிருஷ்ணனின் மனைவிகளான பிறர், காட்டுக்குச் சென்று தவம் பயில்வதில் தங்களை நிலைக்கச் செய்யத் தீர்மானித்தனர்.(74) அவர்கள் கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, ஹரியை தியானித்துக் கொண்ட தங்கள் காலத்தைக் கழித்து வாழத் தொடங்கினர். அவர்கள் இமயத்தைக் கடந்து சென்று கலாபம் என்ற இடத்தில் தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்[6].(75) துவாராவதியில் இருந்து அர்ஜுனனைப் பின்பற்றி வந்த மனிதர்கள், குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வஜ்ரனிடம் ஒப்படைக்கப்பட்டனர்.(76) அந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற செயல்கள் அனைத்தையும் செய்த அர்ஜுனன், கண்ணீரால் குளித்த கண்களுடன், வியாசரின் ஆசிரமத்திற்குள் நுழைந்தான். அங்கே தீவில் பிறந்தவரான அந்த முனிவர் சுகமாக அமர்ந்திருப்பதை அவன் கண்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(77)

வியாசர் சொன்ன கதி! – மௌஸலபர்வம் பகுதி – 8-வியாசரைக் கண்டு துவாரகையின் அழிவைக் கூறிய அர்ஜுனன்; பாண்டவர்களும் சொர்க்கமடைவர் என்று சொன்ன வியாசர்; துவாரகையின் செய்தியை யுதிஷ்டிரனிடம் சொன்ன அர்ஜுனன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “வாய்மை நிறைந்த முனிவரின் {வியாசரின்} ஆசிரமத்திற்குள் நுழைந்த அர்ஜுனன், ஒரு தனிப்பட்ட இடத்தில் சத்யவதியின் மகன் {வியாசர்} அமர்ந்திருப்பதைக் கண்டான்.(1) உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரும், கடமைகள் அனைத்தின் அறிவைக் கொண்டவருமான அந்த முனிவரை அணுகிய அவன், “நான் அர்ஜுனன் வந்திருக்கிறேன்” என்று சொல்லி அவருக்காகக் காத்திருந்தான்.(2)

உயர்ந்த தவங்களுடன் கூடிய சத்யவதியின் மகன் {வியாசர்} “நல்வரவு” என்று பதிலளித்தார். அமைதியான ஆன்மாவைக் கொண்ட அந்தப் பெருமுனிவர், மேலும், “இருக்கையில் அமர்வாயாக” என்று சொன்னார்.(3) பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, பெரிதும் உற்சாசகம் இழந்தவனாகவும், மீண்டும் மீண்டும் பெருமூச்சுகளை விடுபவனாகவும், கவலை நிறைந்தவனாகவும் இருப்பதைக் கண்ட வியாசர், அவனிடம்,(4) “வேறு எவரின் நகங்கள் அல்லது முடியிலிருந்தோ, வேறு எவரின் துணியின் முனையில் இருந்தோ, குடுவையின் {குடத்தின்} வாயிலிருந்தோ உன் மீது நீர் தெளிக்கப்பட்டதா? மாதவிடாய் காலம் முடிவடைவதற்கு முன்பே எந்தப் பெண்ணுடனும் கலவியில் ஈடுபட்டாயா? பிராமணனைக் கொன்றாயா?(5) போரில் வெல்லப்பட்டாயா? நீ செழிப்பை இழந்தவனைப் போலக் காணப்படுகிறாய். நீ எவராலும் வீழ்த்தப்பட்டாயா என்பதை நான் அறியேன். ஓ! பாரதக் குலத்தின் தலைவா {அர்ஜுனா}, நீ ஏன் பெரிதும் நொந்து போன தன்மையுடன் இருக்கிறாய்? ஓ! பிருதையின் மகனே, இவற்றைச் சொல்வதில் உண்மையில் எத்தீங்கும் இல்லையெனில் அனைத்தையும் எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்” என்றார் {வியாசர்}.(6)

அர்ஜுனன் {வியாசரிடம்}, “(புதிதாய் எழுந்த) மேகம் போன்ற நிறத்தைக் கொண்டவனும், இரு தாமரை இதழ்களைப் போன்ற அகன்ற விழிகளைக் கொண்டவனுமான கிருஷ்ணன், ராமருடன் {பலராமருடன்} சேர்ந்து தன் உடலைக் கைவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(7) பிரபாஸத்தில், பிராமணர்களால் இடப்பட்ட சாபத்தில் உண்டான இரும்பு உலக்கைகளின் {முசலங்களின்} மூலம் விருஷ்ணி வீரர்களுக்கு அழிவேற்பட்டது. அந்தப் பேரழிவு பயங்கரமானதாக இருந்தது, ஒரேயொரு வீரன் கூட அதில் தப்பவில்லை.(8) ஓ! பிராமணரே, உயர்ந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களும், சிங்கம் போன்ற செருக்குடையவர்களுமான போஜ, அந்தக, விருஷ்ணி குலத்து வீரர்கள் போரில் ஒருவரையொருவர் கொன்றனர்.(9) இரும்பு கதாயுதங்கள் போலத் தெரியும் கரங்களைக் கொண்டவர்களும், கனத்த தண்டங்கள், ஈட்டிகளின் தாக்குதலையும் தாங்கவல்லவர்களுமான அவர்கள் அனைவரும், ஐயோ, ஏரகப் புற்களினால் கொல்லப்பட்டனர். காலவோட்டத்தின் முரணைக் காண்பீராக.(10)

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட போர்வீரர்கள் ஐநூறாயிரம் {ஐந்து லட்சம் 5.00.000} பேர் இவ்வாறு வீழ்த்தப்பட்டனர். ஒருவரோடொருவர் மோதி அவர்கள் அழிவை அடைந்தனர்.(11) அளவிலா சக்தி கொண்ட யாதவ வீரர்களுக்கு நேர்ந்த இந்தப் பேரழிவையும், சிறப்புமிக்கக் கிருஷ்ணனுக்கு நேர்ந்த அழிவையும் மீண்டும் மீண்டும் நினைத்து மனத்தில் அமைதியைப் பெறத் தவறுகிறேன்.(12) சாரங்கபாணியின் {கிருஷ்ணனின்} மரணம், பெருங்கடல் வற்றியதைப் போல, மலை நகர்ந்ததைப் போல, சொர்க்கம் விழுந்ததைப் போல, நெருப்பு குளிர்ந்ததைப் போல நம்ப முடியாததாக இருக்கிறது.(13) விருஷ்ணி வீரர்களின் துணையை இழந்த நான் இவ்வுலகில் வாழ விரும்பவில்லை.(14)

ஓ! தவங்களையே செல்வமாகக் கொண்டவரே, இதைவிட அதிகத் துன்பம் நிறைந்த மற்றொரு நிகழ்ச்சி நடந்தது. அதை மீண்டும் மீண்டும் நினைத்தே என் இதயம் பிளக்கிறது.(15) ஓ! பிராமணரே, ஐந்து நீர்நிலைகள் உள்ள நாட்டில் {பஞ்சநதத்தில் / பஞ்சாபில்} நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆயிரக்கணக்கான விருஷ்ணி பெண்கள் ஆபிரர்களால் அபகரிக்கப்பட்டனர்.(16) என் வில்லை நான் எடுத்தபோது அதில் நாண்பூட்டவதற்கு இணையானவனாக நான் இல்லை. என் கரங்களில் இருந்த வலிமை அந்தச் சந்தர்ப்பத்தில் மறைந்தவிட்டதாகத் தெரிந்தது.(17) ஓ! பெரும் தவசியே {வியாசரே}, என்னுடைய பல்வேறு வகை ஆயுதங்கள் வெளிப்படத் தவறின. மேலும் என் கணைகள் விரைவில் தீர்ந்த போயின.(18)

அளவிலா ஆன்மா கொண்டவனும், நான்கு கரங்களைக் கொண்டவனும், சங்கு, சக்கரம், கதாயுதம் தரித்தவனும், மஞ்சள் ஆடை உடுத்தியவனும், கரிய நிறத்தவனும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களையும் கொண்டவனை இப்போது என்னால் காணமுடியவில்லை. ஐயோ, கோவிந்தன் {கிருஷ்ணன்} இல்லாமல் என் வாழ்வை துயரில் இழுத்துக் கொண்டு நான் எதற்காக வாழ வேண்டும்?(19) என் தேருக்கு முன் செல்பவனும், பெருங்காந்தியும் மங்காத பலமும் கொண்டவனும், செல்லும் போதே பகை போர்வீரர்களை எரிப்பவனுமான அந்தத் தெய்வீக வடிவத்தை இப்போது என்னால் காண முடியவில்லை.(20) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, முதலில் எவனுடைய சக்தியால் பகை துருப்புகள் அனைத்தையும் எரித்து, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் அதன்பிறகு அவர்களைக் கொன்றேனோ அவனை இப்போது என்னால் காணமுடியாமல் நான் துயரால் நிறைகிறேன் என் தலை கிறுகிறுக்கிறது. உற்சாகமின்மை மற்றும் கவலையால் துளைக்கப்பட்டிருக்கும் நான் என் மனத்தில் அமைதியை அடையத் தவறுகிறேன்.(21,22) வீர ஜனார்த்தனன் இல்லாமல் நான் வாழத் துணியேன். எப்போது விஷ்ணு இந்தப் பூமியை விட்டுச் சென்று விட்டான் என்பதைக் கேட்டேனோ அப்போது என் கண்கள் மங்கின, அனைத்தும் என் பார்வையில் இருந்து மறைந்தன.(23) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, உற்றார், உறவினரும், ஆற்றலும் கொள்ளைபோனவனான எனக்கு இப்போது நன்மையெது என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான் {அர்ஜுனன்}.(24)

வியாசர் {அர்ஜுனனிடம்}, “விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும் பிராமணர்களின் சாபத்தால் எரிக்கப்பட்டனர். ஓ! குருகுலத்தின் தலைவா, அவர்களின் அழிவுக்காக நீ வருந்துவது தகாது.(25) விதிக்கப்பட்டதே நடந்திருக்கிறது. அந்த உயர் ஆன்மப் போர்வீரர்களின் விதி இதுவே. கிருஷ்ணன் இதைக் கலங்கடிக்க முழுவதும் தகுந்தவெனினும், அது நடைபெற வேண்டுமென்றே அவன் அதை அனுபவித்தான்.(26) கோவிந்தன், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்துடன் கூடிய அண்டத்தின் போக்கையே மாற்ற இயன்றவனாக இருந்தான். உயர் ஆன்ம பிராமணர்களின் சாபத்தைக் குறித்துச் சொல்ல வேறென்ன இருக்கிறது?(27) எவன் உன் மீது கொண்ட அன்பின் மூலம் சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்துக் கொண்டு உன் முன்பு செல்வானோ, அவன் நான்கு கரம் கொண்ட புராதன முனிவனான வாசுதேவன் ஆவான்.(28) அகன்ற விழிகளைக் கொண்ட கிருஷ்ணன், பூமியின் கனத்தைக் குறைத்து, தன்னுடைய (மனித) உடலைக் கைவிட்டு, தன்னுடைய உயர்ந்த இருக்கையை {கதியை} அடைந்திருக்கிறான்.(29) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, பீமனையும், இரட்டையர்களையும் {நகுல் சகாதேவனையும்} உதவியாகக் கொண்ட உன்னாலும் தேவர்களின் பெரும்பணி நிறைவேறியிருக்கிறது.(30)

ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே {அர்ஜுனனே}, நீயும், உன் சகோதரர்களும் உங்களுடைய வாழ்வின் பெரும் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டதால் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களென நான் உங்களைக் கருதுகிறேன். நீங்கள் இவ்வுலகத்தில் இருந்து செல்வதற்கான வேளை வந்துவிட்டது. ஓ! பலமிக்கவனே, இதுவே இப்போது உங்களுக்கு நன்மையானது.(31) ஓ! பாரதா, செழிப்பின் நாட்கள் மீறாமல் இருக்கும்போது, புத்தியும், ஆற்றலும், தொலைநோக்குப் பார்வையும் இவ்வாறே எழுகிறது. எதிர்மறையான காலம் வரும்போது இதே உடைமைகள் மறைந்துபோகும்[1].(32) இவை அனைத்தும் காலத்தையே தங்கள் வேராகக் கொண்டுள்ளன. ஓ! தனஞ்சயா, உண்மையில், காலமே அண்டத்தின் வித்தாகும். மேலும், காலமே தன் விருப்பபடி அனைத்தையும் ஈர்க்கிறது[2].(33) ஒருவன் வலிமையடைகிறான், மேலும் வலிமையை இழுந்து பலவீனமாகிறான். ஒருவன் தேர்ந்தவனாகி பிறரை ஆட்சி செய்கிறான், பிறகு அந்நிலையை இழந்து, பிறரின் ஆணைகளுக்குக் கீழ்ப்படியும் ஒரு பணியாளனாகிறான்.(34) உன் ஆயுதங்கள் வெற்றியை அடைந்து தாம் வந்த இடத்திற்கே சென்றுவிட்டன. மேலும் அவற்றுக்கான காலம் வரும்போது அவை மீண்டும் உன் கரங்களில் வரும்.(35) ஓ! பாரதா, நீங்கள் அனைவரும் உயர்ந்த கதியை அடைவதற்கான காலம் வந்துவிட்டது. ஓ! பாரதக் குலத்தின் தலைவா {அர்ஜுனா}, இதுவே உங்கள் அனைவருக்குமான உயர்ந்த நன்மையென நான் கருதுகிறேன்” என்றார் {வியாசர்}”.(36)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அளவிலா சக்தி கொண்ட வியாசரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்டு யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்குத் {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பினான்.(37) அதற்குள் நுழைந்த அந்த வீரன் {அர்ஜுனன்} யுதிஷ்டிரனை அணுகி அவனிடம் விருஷ்ணிகள் குறித்து நடந்தது அனைத்தையும் சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(38)

மௌஸல பர்வம் முற்றும்

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ ஆஸ்ரமவாஸிக பர்வம்-ஸ்ரீ நாரதாகமன உப பர்வம்-

October 19, 2025

மூவரின் மறைவு! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 37-காட்டில் இருந்த திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தி ஆகியோர் சொர்க்கமடைந்ததை ஹஸ்தினாபுரம் வந்து சொன்ன நாரதர்; திருதராஷ்டிரன் ஆணைப்படி சஞ்சயன் இமயமலைக்குச் சென்றதையும் சொன்னது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, பாண்டவர்கள் (தங்கள் தந்தையின் {திருதராஷ்டிரனின்} ஆசிரமத்திலிருந்து) திரும்பிய நாளிலிருந்து இரண்டு வருடம் கழிந்த பிறகு, தெய்வீக முனிவரான நாரதர் யுதிஷ்டிரனிடம் வந்தார்.(1) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட குரு மன்னனும், பேசுபவர்களில் முதன்மையானவனுமான யுதிஷ்டிரன், அவரை முழுமையாக வழிபட்டபிறகு, இருக்கையில் அமரச் செய்தான். முனிவர் சற்று ஓய்ந்திருந்த பிறகு, மன்னன் {யுதிஷ்டிரன்}, அவரிடம்,(2) “நீண்ட காலத்திற்குப் பிறகு புனிதரான நீர் என் சபைக்கு வருவதை நான் காண்கிறேன். ஓ! கல்விமானான பிராமணரே {நாரதரே}, நீர் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறீரா?(3) நீர் சென்று வந்த நாடுகள் என்னென்ன? நான் உமக்குச் செய்ய வேண்டியதென்ன? எனக்கு நீர் சொல்வீராக. மறுபிறப்பாளர்களில் முதன்மையானவராகவும், எங்களது உயர்ந்த புகலிடமாகவும் நீரே இருக்கிறீர்” என்றான்.(4)

நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “நான் நீண்ட காலம் உன்னைக் காணவில்லை. எனவே, அதன் காரணமாகவே நான் என் துறவு ஆசிரமத்தில் இருந்து உன்னிடம் வந்தேன். ஓ! மன்னா, நான் புனித நீர்நிலைகள் பலவற்றையும், புனித ஓடையான கங்கையையும் கண்டு வந்தேன்” என்றார்.(5)

யுதிஷ்டிரன் {நாரதரிடம்}, “கங்கைக் கரையில் வசிக்கும் மக்கள், உயர் ஆன்ம திருதராஷ்டிரர் கடுந்தவங்களைப் பயின்று வருகிறார் என்று சொல்கின்றனர்.(6) நீர் அங்கே அவரைக் கண்டீரா? குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரான அவர் அமைதியாக இருக்கிறாரா? காந்தாரி, பிருதை {குந்தி} மற்றும் சூதனின் மகனான சஞ்சயன் ஆகியோர் அமைதியுடன் இருக்கின்றனரா?(7) உண்மையில், என்னுடைய அரசத் தந்தை எப்படி இருக்கிறார்? ஓ! புனிதமானவரே, நீர் மன்னரைக் கண்டிருந்தால் (அவரது நிலையையும் அறிந்திருந்தால்) அதைக் கேட்க நான் விரும்புகிறேன்” என்றான்.(8)

நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, நான் கேட்டதையும், அந்தத் துறவாசிரமத்தில் நான் கண்டதையும் சொல்கிறேன், அமைதியாகக் கேட்பாயாக.(9) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, ஓ! மன்னா, நீ குருக்ஷேத்திரத்தில் இருந்து திரும்பியதும் உன் தந்தை கங்காத்வாரத்தை நோக்கிச் சென்றார்.(10) நுண்ணறிவுமிக்க அந்த ஏகாதிபதி, தனது (புனித) நெருப்பையும், காந்தாரியையும், தன் மருமகளான குந்தியையும், சூதனான சஞ்சயனையும், யாஜகர்கள் அனைவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.(11) தவங்களையே செல்வமாகக் கொண்ட உன் தந்தை கடுந்தவப்பயிற்சியில் தன்னை நிறுவிக் கொண்டான். அவன் தன் வாயில் சரளைக் கற்களைக் கொண்டு, பேச்சை மொத்தமாகத் தவிர்த்து வாழ்வாதாரத்திற்காகக் காற்றை மட்டுமே உண்டு வந்தான்.(12)

கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்த அவன், காட்டில் உள்ள தவசிகள் அனைவராலும் வழிபடப்பட்டான். ஆறு மாத காலத்தில் அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} வெறும் எலும்புக்கூடாகத் தன்னைக் குறைத்துக் கொண்டான்.(13) காந்தாரி நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தாள், குந்தி ஒரு மாத இடைவெளியில் சிறிதளவு உணவை உண்டாள். ஓ! பாரதா, சஞ்சயன், ஒவ்வொரு ஆறாம் நாளிலும் சிறிது உண்டு வாழ்ந்து வந்தான்.(14) ஓ! ஏகாதிபதி, (குரு மன்னனுக்குரிய) புனித நெருப்பானது, அவனுடன் இருந்த வேள்வித் துணைவர்கள் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை ஊற்றி முறையாக வழிபடப்பட்டது. மன்னன் இந்தச் சடங்கைக் கண்டாலும், காணாவிட்டாலும், இதை அவர்கள் செய்து வந்தனர்.(15) மன்னனுக்கு நிலையான வசிப்பிடம் ஏதும் இருக்கவில்லை. அவன் காட்டிற்குள் திரிபவனாக இருந்தான். ராணிகள் இருவரும், சஞ்சயனும் அவனைப் பின்தொடர்ந்தனர்.(16)

சமமான மற்றும் சமமற்ற நிலத்திலும் சஞ்சயன் வழிகாட்டியாகச் செயல்பட்டான். ஓ! மன்னா, களங்கமற்ற பிருதை {குந்தி}, காந்தாரியின் கண்ணானாள்.(17) ஒரு நாள், அந்த மன்னர்களில் சிறந்தவன், கங்கையின் விளிம்பில் உள்ள ஓரிடத்திற்குச் சென்றான். அப்போது அந்தப் புனித ஓடையில் நீராடி, தன் ஆசிரமத்தை நோக்கி முகத்தைத் திருப்பித் தன் தூய்மைச் சடங்குகளை நிறைவடையச் செய்தான்.(18) காற்று உயர எழுந்தது. கடுமையான காட்டுத்தீ உண்டானது. அது சுற்றிலும் அந்தக் காடு முழுவதையும் எரிக்கத் தொடங்கியது.(19) விலங்குக் கூட்டங்கள் சுற்றிலும் எரிக்கப்பட்ட போது, அந்தப் பகுதியில் வசித்த பாம்புகளும் எரிக்கப்பட்ட போது, காட்டுப் பன்றிகள் அருகில் உள்ள புதர்களுக்கும், நீர்நிலைகளுக்குச் செல்லத் தொடங்கின.(20)

அந்தக் காடு இவ்வாறு அனைத்துப் பக்கங்களிலும் பீடிக்கப்பட்டபோது, அங்கே வசித்த உயிரினங்கள் அனைத்தும் இத்தகைய துன்பத்தை அடைந்தபோது, உணவேதும் உண்ணாத மன்னன் {திருதராஷ்டிரன்}, அசைவதற்கோ, முயற்சி செய்தற்கோ இயலாதவனாக இருந்தான்.(21) மெலிந்து போயிருந்த உன்னுடைய தாய்மார்கள் இருவரும் அசைய முடியாத நிலையில் இருந்தனர். மன்னன் {திருதராஷ்டிரன்}, அனைத்துப் புறங்களில் இருந்தும் தீ தன்னை நோக்கி வருவதைக் கண்டு,(22) திறம்மிக்கத் தேரோட்டிகளில் முதன்மையான சூதன் சஞ்சயனிடம், “ஓ! சஞ்சயா, தீ உன்னை எரிக்காத இடத்திற்குச் செல்வாயாக.(23) எங்களைப் பொறுத்தவரையில், இந்த நெருப்பால் எங்கள் உடல்கள் துன்புற்று அழிவடைந்து உயர்ந்த கதியை அடையப் போகிறோம்” என்றான்.

அவனிடம் {திருதராஷ்டிரனிடம்}, பேசுபவர்களில் முதன்மையான சஞ்சயன்,(24) “ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, புனிதமற்றதாக இருக்கும் இந்தத் தீயால் கொண்டுவரப்படும் மரணம் உமக்குத் துன்பத்தையே தரும். எனினும், இந்தத் தீயில் இருந்து தப்பிக்கும் வழிமுறை எதையும் நான் அறியவில்லை.(25) அடைத்ததாக என்ன செய்யப்பட வேண்டும் என்பதை நீர் குறிப்பிட வேண்டும். இவ்வாறு சஞ்சயனால் சொல்லப்பட்ட மன்னன் மீண்டும்,(26) “நாம் சொந்த விருப்பத்தின் பேரில் வீட்டைவிட்டு வெளியேறியதால் இந்த மரணம் நமக்குத் துன்பத்தைத் தராது. (மரணத்திற்கான வழிமுறையாக) நீர், நிலம், காற்று மற்றும் உணவைத் தவிர்த்தல் ஆகியவை மெச்சப்படுகின்றன. எனவே, ஓ! சஞ்சயா நீ தாமதமில்லாமல் எங்களைவிட்டுச் செல்வயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

குவிந்த மனம் கொண்ட அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, சஞ்சயனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்.(28) அவன் காந்தாரியுடனும், குந்தியுடனும் கிழக்கு நோக்கி அமர்ந்தான். அவனது இந்த மனோநிலையைக் கண்ட சஞ்சயன், அவனை வலம் வந்தான்.(29) நுண்ணறிவைக் கொண்ட சஞ்சயன், “ஓ! பலமிக்கவரே, உமது ஆன்மாவைக் குவிப்பீராக” என்றான். ஒரு முனிவரின் {வியாசரின்} மகனும், பெரும் ஞானம் கொண்டவனுமான மன்னன் {திருதராஷ்டிரன்} தனக்குச் சொல்லப்பட்டவாறே செயல்பட்டான் {சஞ்சயன்}. உயர்ந்த அருளைக் கொண்ட காந்தாரியும், தாயான பிருதையும் கூட அதே மனநிலையில் நீடித்தனர்.(31) அப்போது உன்னுடைய அரசத் தந்தை {திருதராஷ்டிரன்} அந்தக் காட்டு நெரிப்பில் மூழ்கினான். அவனது அமைச்சனான சஞ்சயன், அந்தத் தீயில் இருந்து தப்பிப்பதில் வென்றான்.(32)

கங்கைக் கரையில், தவசிகளுக்கு மத்தியில் நான் அவனைக் கண்டேன். பெரும் சக்தியும், பெரும் நுண்ணறிவும் கொண்ட அவன் {சஞ்சயன்}, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு இமய மலைக்குச் சென்றான்.(33) ஓ! ஏகாதிபதி, இவ்வாறே உயர் ஆன்ம குரு மன்னன் மரணத்தை அடைந்தான். உன்னுடைய இரு தாய்மார்களான காந்தாரியும், குந்தியும் இவ்வாறே மரணத்தைச் சந்தித்தனர்.(34) நான் விருப்பம்போலத் திரிந்து கொண்டிருந்தபோது, ஓ! பாரதா, அந்த மன்னன் மற்றும் அந்த இரு ராணிகளின் உடல்களை நான் கண்டேன்.(35) அந்த ஆசிரமத்திற்கு மன்னன் திருதராஷ்டிரனின் கதியைக் கேட்டு பல தவசிகள் வந்தனர். அவர்கள் தங்களுடைய கதிக்காக ஒருபோதும் வருந்தவில்லை.(36) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, ஓ! பாண்டுவின் மகனே, மன்னனும், இரு ராணிகளும் அங்கே எவ்வாறு எரிந்தனர் என்ற விபரங்களை அனைத்தையும் நான் கேட்டேன்.(37) ஓ! மன்னர்களின் மன்னா, நீ அவர்களுக்காக வருந்தலாகாது. அந்த ஏகாதிபதியும் {திருதராஷ்டிரனும்}, காந்தாரியும், உன் தாயும் தங்கள் விருப்பத்தின் பேரிலையே நெருப்போடான தொடர்பை அடைந்தனர்” என்றார் {நாரதர்}”.(38)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “திருதராஷ்டிரன் இவ்வுலகில் இருந்து சென்றுவிட்டதைக் கேட்ட உயர் ஆன்மப் பாண்டவர்கள் அனைவரும் பெருந்துயரமடைந்தனர்.(39) அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் ஓலமிடும் பேரொலி கேட்டது. குடிமக்களும், அந்த முதிய மன்னனின் கதியைக் கேட்டு உரக்க ஒப்பாரி செய்தனர்.(40) “ஓ!, ஐயோ” என்று பெருங்கவலையில் தன் கரங்களை உயரத் தூக்கி கதறி அழுதான் மன்னன் யுதிஷ்டிரன். அவன் தன் அன்னையை நினைத்து ஒரு குழந்தையைப் போல அழுதான். பீமசேனன் தலைமையிலான அவனது தம்பிகள் அனைவரும் அதையே செய்தனர்.(41) பிருதை {குந்தி} இத்தகைய விதியைச் சந்தித்தால் என்பதைக் கேள்விப்பட்ட அரசக் குடும்பத்துப் பெண்கள், துயரத்தில் உரக்க ஒப்பாரியிட்டனர்.(42) பிள்ளையற்றவனாக இருந்த அந்த முதிய மன்னனும், அவனுடைய விதியைப் பகிர்ந்து கொண்ட ஆதரவற்றவளான காந்தாரியும் எரிந்து இறந்ததைக் கேட்டு மக்கள் அனைவரும் வருந்தினர்.(43) ஓலமிடும் ஒலி சற்று நின்றபோது, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தன் பொறுமையனைத்தையும் அழைத்து, கண்ணீரை நிறுத்திக் கொண்டு இந்தச் சொற்களைச் சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(44)

யுதிஷ்டிரன் புலம்பல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 38-திருதராஷ்டிரன் காந்தாரி மற்றும் குந்தியின் மரணத்தைக் கேட்டுப் புலம்பிய யுதிஷ்டிரன்; காட்டுத் தீயில் எரிய நேர்ந்ததற்கு வருந்தியது…

யுதிஷ்டிரன் {நாரதரிடம்}, “உயர் ஆன்மா கொண்டவரும், கடுந்தவங்களில் ஈடுபட்டவருமான அந்த ஏகாதிபதியின் {திருதராஷ்டிரரின்} உற்றாரான நாம் அனைவரும் உயிரோடு இருக்கையில்,(1) ஓ! மறுபிறப்பாளரே {நாரதரே}, விதி இவ்வாறு நேர்ந்திருப்பதால், மனிதர்களின் கதியை ஊகிப்பது அரிதே. ஐயோ, விசித்திரவீரியரின் மகன் {திருதராஷ்டிரன்} இவ்வாறு எரிந்து இறப்பார் என்று யார் நினைத்தது?(2) அவர் வலிமைமிக்கக் கரங்களையும், பெருஞ்செழிப்பையும் கொண்ட நூறு மகன்களை உடையவராக இருந்தார். அந்த மன்னரே பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொண்டவராக இருந்தார். ஐயோ, அவரே காட்டுத்தியில் எரிந்து இறந்தாரே.(3) ஐயோ, அழகிய மங்கையரின் நற்கரங்களில் உள்ள பனையோலைகளால் முன்பு வீசப்பட்டவர் {திருதராஷ்டிரர்}, இப்போது, காட்டுத்தீயில் எரிந்து மரணமடைந்து கழுகுகளின் சிறகுகளால் வீசப்படுகிறார்.(4)

சூதர்கள் மற்றும் மாகதர்களின் கூட்டத்தால் ஒவ்வொரு காலையிலும் துயிலில் இருந்து எழுப்பப்பட்ட அவர் {திருதராஷ்டிரர்}, என்னுடைய பாவம் நிறைந்த செயல்களால் வெறுந்தரையில் உறங்க வேண்டியிருந்தது.(5) புகழ்பெற்றவளும், பிள்ளைகளை இழந்தவளுமான காந்தாரிக்காக நான் வருந்தவில்லை. தன் கணவனைப் போன்ற அதே நோன்புகளை நோற்று, அவனுடையதாகியிருக்கும் உலகங்களையே தானும் அடைந்திருக்கிறாள்.(6) எனினும், தன் மகன்களின் சுடர்மிக்கப் பெருஞ்செழிப்பைக் கைவிட்டுக் காட்டில் வசிக்க விரும்பிய பிருதைக்காக {குந்திக்காக} நான் வருந்துகிறேன்.(7) நமது அரசுரிமைக்கு ஐயா, நமது ஆற்றலுக்கு ஐயோ!, க்ஷத்திரிய நடைமுறைகளுகு ஐயோ!, உயிரிரோடு இருந்தாலும் உண்மையில் நாம் இறந்தவர்களே.(8)

ஓ! மேன்மையான பிராமணர்களில் முதன்மையானவரே {நாரதரே}, அரசுரிமையைக் கைவிட்டு தன் வசிப்பிடத்தைக் காட்டில் அமைத்துக் கொள்ள விரும்பிய குந்தியின் காலப் போக்கு மிக நுட்பமானது.(9) மற்றும் புரிந்து கொள்ள மிகக் கடினமானது. யுதிஷ்டிரன், பீமன், விஜயன் ஆகியோரின் தாய் ஓர் ஆதரவுமற்ற உயிரினமாவாள். இதை நினைத்து நான் கலக்கமடைந்தேன்.(10), காண்டவத்தில் அர்ஜுனன், நெருப்பின் தேவனை நிறைவடையச் செய்தது வீணே. நன்றி மறந்தவனான அவன் {அக்னி தேவன்} தனக்குச் செய்யப்பட்ட தொண்டை மறந்து தனக்குக்கு நன்மை செய்தவனின் தாயை எரித்துக் கொன்றிருக்கிறான்.(11) ஐயோ, அர்ஜுனனின் தாயை அந்தத் தேவனால் எவ்வாறு எரிக்க முடியும்? பிராமண வேடத்தைப் பூண்டு, முன்பு அர்ஜுனனிடம் உதவி வேண்டி அவன் {அக்னி தேவன்} வந்தான். நெருப்பின் தேவனுக்கு ஐயோ. பார்த்தனுடைய கணைகளின் கொண்டாடத்தக்க வெற்றிக்கு ஐயோ.(12)

ஓ! புனிதமானவரே {நாரதரே}, அந்தப் பூமியின் தலைவன் {திருதராஷ்டிரன்} புனிதமற்றதான நெருப்புடன் கலந்ததன் மூலம் மரணமடைந்தான் என்பது பெரும் துன்பத்தை உண்டாக்கவல்ல மற்றுமொரு நிகழ்வாகத் தோன்றுகிறது. மொத்த பூமியையும் ஆண்டு, தவப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிந்தவரும், குரு குலத்தவருமான அரசமுனியை {திருதராஷ்டிரரை} மரணம் எவ்வாறு ஆட்கொள்ளும்? அந்தப் பெருங்காட்டில் புனித மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட நெருப்புகள் இருக்கின்றன. ஐயோ, புனிதமற்ற நெருப்பின் துணையை அடைந்த என் தந்தை {திருதராஷ்டிரர்} இந்த உலகில் இருந்து சென்றுவிட்டார். அந்தப் பெருங்காட்டில் மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட நெருப்புகள் இருந்தன. ஐயோ, என் தந்தை புனிதமற்ற நெருப்பின் தொடர்பைப் பெற்று இவ்வுலகில் இருந்து சென்றார்.(13,14) பிருதை {குந்தி}, வடிவம் குறைந்து, மெலிந்தவளாக மேனியெங்கும் நரம்புகள் தெரிய, அச்சத்தால் நடுங்கி, உரக்கக் கதறி அழுது, “ஓ! மகனே யுதிஷ்டிரா” என்று சொல்லி, தன்னை அந்தப் பயங்கரத் தீ அணுகுவதற்காகக் காத்திருந்திருப்பாள்.(15) மேலும் என் தாயான அவள் சுற்றிலும் பயங்கரத் தீயால் சூழப்பட்டிருந்தபோது,, “ஓ! பீமா, இந்த ஆபத்தில் இருந்து என்னைக் காப்பாற்றுவாயாக” என்று சொல்லியிருக்க வேண்டும்.(16) அவளுடைய மகன்களுக்கு மத்தியில், சகாதேவனே அவளது அன்புக்குரியவனாவான். ஐயோ, மாத்ரவதியின் அந்த வீரமகன் அவளைக் காப்பாற்றவில்லை[1]” என்றான் {யுதிஷ்டிரன்}.(17)மன்னனின் {யுதிஷ்டிரனின்} இந்தப் புலம்பல்களைக் கேட்டு அங்கே இருந்த அனைவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டு அழத் தொடங்கினர். உண்மையில், அண்ட அழிவுக்காலத்தில் உள்ள உயிரினங்களுக்கு ஒப்பான அளவுக்குப் பாண்டுவின் மகன்கள் ஐவரும் துயரால் பீடிக்கப்பட்டிருந்தனர்.(18) அழுது கொண்டிருந்த அந்த வீரர்களின் புலம்பல் ஒலிகள் அந்த அரண்மனையின் அகன்ற அறைகளை நிறைத்து அங்கிருந்து தப்பித்து ஆகாயத்தையே துளைத்தன” {என்றார் வைசம்பாயனர்}.(19)

தாயாரின் சிராத்தம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 39-திருதராஷ்டிரனை எரித்தது மந்திராக்னி என்பதை விளக்கிய நாரதர்; திருதராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் யுயுத்சுவும், குந்திக்கு யுதிஷ்டிரனும் தர்ப்பணம் ஸ்ராத்தம் முதலியவற்றைச் செய்தது; அதன் பிறகு நகரம் திரும்பி ஆட்சிபுரிந்தது…

நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “மன்னன் {திருதராஷ்டிரன்} புனிதமற்ற நெருப்பால் எரித்துக் கொல்லப்படவில்லை. இதை நான் அங்கேயே கேட்டேன். ஓ! பாரதா, விசித்திரவீரியனின் {விசித்திரவீரியனின் மகனான திருதராஷ்டிரனின்} விதி அவ்வாறானதாக இல்லை.(1) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தவனுமான அந்த முதிய மன்னன் {திருதராஷ்டிரன்}, (கங்காத்வாரத்தில் இருந்து திரும்பிய பிறகு) காட்டுக்குள் தனியாக நுழைந்து, முறையாக வேள்வி நெருப்புகளைத் தூண்டச் செய்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். தனது புனிதச் சடங்குகள் அனைத்தையும் செய்துவிட்டு அவைகள் அனைத்தையும் அவன் புறக்கணித்தான்.(2) பிறகு, ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, அவன் தன்னோடு வைத்திருந்த யாஜக பிராமணர்கள், அந்த நெருப்புகளைக் காட்டின் தனிமையான இடத்தில் வீசிவிட்டு, வேறு குற்றேவல்களை விரும்பி அங்கிருந்து சென்று விட்டனர்.(3)

இவ்வாறு காட்டில் வீசப்பட்ட நெருப்பு வளர்ந்தது. பிறகு அஃது ஒரு பெரிய காட்டுத்தீயானது. கங்கைக் கரையில் வசிக்கும் தவசிகளிடம் நான் கேட்டது இதுவே.(4) ஓ! பாரதர்களின் தலைவா, தன்னுடைய (புனித) நெருப்புடன் சேர்ந்தே, நான் ஏற்கனவே சொன்னது போல அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} கங்கைக் கரையில் மரணமடைந்தான்.(5) ஓ! பாவமற்றவனே, ஓ! யுதிஷ்டிரா, பாகீரதியின் புனிதக் கரைகளில் நான் கண்ட தவசிகள் சொன்னது இதுவே.(6)

ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இவ்வாறு மன்னன் திருதராஷ்டிரன், தன்னுடைய சொந்த புனித நெருப்புடன் கலந்து இவ்வுலகில் இருந்து சென்று தனதாகியிருக்கும் அந்த உயர்ந்த கதியை அடைந்தான்.(7) ஓ! மனிதர்களின் தலைவா, உன் தாயார் {குந்தி}, பெரியோருக்கு ஆற்றிய தொண்டின் மூலம் பெரும் வெற்றியை அடைந்தாள். இதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.(8) ஓ! மன்னர்களின் மன்னா, அவர்களைக் கௌரவிக்கும் வகையில் உன் தம்பிகளுடன் சேர்ந்து நீர்க்கடன்களைச் செய்வதே இப்போது உனக்குத் தகும். எனவே, இறுதியில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படட்டும்” என்றார் {நாரதர்}”.(9)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அப்போது மனிதர்களில் முதன்மையானவனும், பாண்டவர்களின் சுமைகளைத் தாங்குபவனுமான அந்தப் பூமியின் தலைவன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பிகள் மற்றும் குடும்பத்துப் பெண்கள் அனைவரின் துணையுடன் வெளியே சென்றான்.(10) நகர மற்றும் மாகாணவாசிகளும், தங்கள் பற்றுறுதியினால் {விசுவாசத்தினால்} தூண்டப்பட்டவர்களாக வெளியே சென்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒன்றையாடையை மட்டுமே உடுத்திக் கொண்டு கங்கைக் கரையை நோக்கிச் சென்றனர்.(11) பிறகு யுயுத்சுவைத் தங்கள் தலைமையில் கொண்ட மனிதர்களில் முதன்மையானவர்கள் அந்த ஓடைக்குள் மூழ்கி, அந்த உயர் ஆன்ம மன்னனுக்கு நீர்க்காணிக்கைகளைக் கொடுக்கத் தொடங்கினர். மேலும் அவர்கள் அதே போன்ற காணிக்கைகளைக் காந்தாரி மற்றும் பிருதையின் {குந்தியின்} பெயர்களைத் தனித்தனியே சொல்லி அவர்களின் குடும்பங்களையும் குறிப்பிட்டுச் சொல்லி கொடுத்தனர்.(12)

வாழ்வைத் தூய்மையாக்கும் அந்தச் சடங்குகளைச் செய்த பிறகு அவர்கள் திரும்பினாலும் தங்கள் தலைநகருக்குள் திரும்பாமல், அதற்கு வெளியே தங்கள் வசிப்பிடத்தை அமைத்தனர். இறந்தோரைத் தகனம் செய்வது தொடர்பான விதிகளை நன்கறிந்தவர்களும், நம்பிக்கைக்குரியவர்களுமான எண்ணற்ற மக்களை அந்த முதிய மன்னன் {திருதராஷ்டிரன்} எரிந்து இறந்த இடமான கங்கா துவாரத்திற்கு அனுப்பினான்.(13) முன்பே அந்த மனிதர்களுக்கு  வெகுமதிகளை அளித்த மன்னன் {யுதிஷ்டிரன்}, இன்னும் எஞ்சியிருந்த திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தியின் உடல்களுக்குத் தகனச் சடங்குகளைச் செய்யுமாறு அவர்களுக்கு ஆணையிட்டான்.(14) பனிரெண்டாம் நாளில் முறையாகத் தூய்மை செய்து கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, இறந்து போன தன் உறவினர்களுக்கு அபரிமிதமான கொடைகள் அடங்கிய சிராத்தங்களை முறையாகச் செய்தான்.(15)

திருதராஷ்டிரனைக் குறிப்பிட்டு பொன்னாலான, வெள்ளியாலான பல கொடைகளையும், பசுக்கள் மற்றும் விலைமதிப்புமிக்கப் படுக்கை உள்ளிட்ட கொடைகளையும் கொடுத்தான்.(16) பெரும் சக்தி கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, காந்தாரி மற்றும் பிருதையின் பெயர்களைச் சொல்லி பல சிறந்த கொடைகளை அளித்தான்.(17) ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பியதையும், விரும்பியதற்கு அதிகமானவற்றையும் பெற்றான். படுக்கைகள், உணவு, தேர்கள், வாகனங்கள், ரத்தினங்கள், செல்வம் ஆகியவனவும் அபரிமிதமாகக் கொடையளிக்கப்பட்டன.(18)

உண்மையில் மன்னன் {யுதிஷ்டிரன்}, தன்னிரு தாய்மாரையும் குறிப்பிட்டுத் தேர்களையும், வாகனங்களையும், ஆடைகளையும் மறைப்புகளையும், பல்வேறு வகை உணவுகளையும், பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பெண் பணியாட்களையும் கொடையளித்தான்.(19) இவ்வாறு பல்வேறு வகையான கொடைகளை அபரிமிதமாக அளித்த அந்தப் பூமியின் தலைவன், அதன் பிறகு, யானையின் பெயரால் அழைக்கப்படும் தன் தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தான்.(20) மன்னனின் ஆணையின் பேரில் கங்கைக் கரைக்குச் சென்றிருந்த மனிதர்கள் அனைவரும், மன்னன் மற்றும் இரு ராணியரின் உடல்களில் எஞ்சியவற்றை {எலும்புகளைத்} (தகனம் மூலம்) முறையாக அப்புறப்படுத்தினர்.(21)

உடல்களில் எஞ்சியிருந்த அவற்றை {எலும்புகளை} மாலைகள் மற்றும் பல்வேறு வகை நறுமணப்பொருட்களுடன் உரிய முறையில் கௌரவித்து, அவற்றை அப்புறப்படுத்தி {தகனம் செய்து}, தங்கள் பணியை முடித்துவிட்டதை அவர்கள் யுதிஷ்டிரனுக்குத் தெரிவித்தனர்.(22) பெரும் முனிவரான நாரதர், அற ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரனுக்கு ஆறுதலளித்துவிட்டு, தான் விரும்பிய இடத்திற்குச் சென்றுவிட்டார்.(23) இவ்வாறே மன்னன் திருதராஷ்டிரன் நகரத்தில் பதினைந்து வருடங்களையும், காட்டில் மூன்று வருடங்களையும் கழித்து இவ்வுலகில் இருந்து விடைபெற்றுச் சென்றான்.(24)

போரில் தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்த அவன் {யுதிஷ்டிரன்}, தன் உற்றார் உறவினர், நண்பர்கள், பங்காளிகள் மற்றும் தன் சொந்த மக்களைக் கௌரவிக்கும் வகையில் பல கொடைகளை அளித்தான்.(25) மன்னன் யுதிஷ்டிரன், தன் பெரிய தந்தையின் {திருதராஷ்டிரனின்} இறப்புக்குப் பிறகு மிகவும் உற்சாகமற்றவனானான். தன் உற்றார் உறவினரை இழந்த அவன் ஏதோவொருவாறு அரசெனும் சுமையைச் சுமந்தான்.(26) ஒருவன் ஆஸ்ரமவாஸிக பர்வத்தைக் குவிந்த கவனத்துடன் கேட்க வேண்டும், சொல்லப்படுவதைக் கேட்ட பிறகு அவன் பிராமணர்களுக்கு ஹவிஸ்யம் உண்ணக் கொடுத்து, நறுமணப் பொருட்கள் மற்றும் மலர்மாலைகளால் அவர்களைக் கௌரவிக்க வேண்டும்” {என்றார் வைசம்பாயனர்}.(27)

நாரதாகமன உபபர்வம் முற்றும்

ஆஸ்ரமவாஸிக பர்வம் முற்றிற்று

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ ஆஸ்ரமவாஸிக பர்வம்-ஸ்ரீ புத்ர தர்சன உப பர்வம்-

October 19, 2025

காந்தாரியின் வேண்டுதல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 29-திருதராஷ்டிரனுடைய ஆசிரமத்தில் ஒரு மாதம் வசித்த பாண்டவர்கள்; மகன்களை நேரில் காண திருதராஷ்டிரனுக்கு விருப்பமிருப்பதை வியாசரிடம் சொன்ன காந்தாரி; குந்தியின் விருப்பத்தைக் கேட்ட வியாசர்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! கல்விமானான பிராமணரே, குரு குலத்தில் முதன்மையானவனும், பூமியின் தலைவனுமான திருதராஷ்டிரன், தன் மனைவியுடனும் {காந்தாரியுடனும்}, தன் மருமகளான குந்தியுடனும் காட்டில் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட போது, உண்மையில் விதுரன் தன் உடலைவிட்டு யுதிஷ்டிரனுக்குள் நுழைந்த பிறகு, தவம் செய்யும் ஆசிரமத்தில் பாண்டவர்கள் அனைவரும் வசித்து வந்தபோது, உயர்ந்த சக்தியைக் கொண்ட பெருமுனிவர் வியாசர் அந்த முதிர்ந்த மன்னனுக்கு உறுதிமொழி அளித்த பிறகு, அவர் {வியாசர்} சாதித்த அருஞ்செயலென்ன என்பதை எனக்குச் சொல்வீராக.(1-3) மங்கா மகிமை கொண்ட குரு மன்னன் யுதிஷ்டிரன் தன் மக்களுக்களுடன் அந்தக் காட்டில் எத்தனை நாட்கள் தங்கினான்?(4) ஓ! பலமிக்கவரே, தங்கள் மக்கள் மற்றும் மனைவியருடன் கூடிய உயர் ஆன்மப் பாண்டவர்கள் அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தபோது எந்த உணவை உட்கொண்டு வாழ்ந்து வந்தனர்? ஓ! பாவமற்றவரே இதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான் {ஜனமேஜயன்}”.(5)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஏகாதிபதி, பாண்டவர்கள் தங்கள் துருப்புகள் மற்றும் தங்கள் குடும்பத்துப் பெண்மணிகள் ஆகியோருடன் சேர்ந்து குரு மன்னனின் அனுமதியுடன் பல்வேறு வகை உணவுகள் மற்றும் பானங்களைக் கொண்டு தங்களைத் தாங்கிக் கொண்டு அந்தக் காட்டில் பெரும் மகிழ்ச்சியுடன் ஒரு மாத காலத்தைக் கடத்தினர். ஓ! பாவமற்றவனே, அந்தக் காலம் முடியும் தருணத்தில் வியாசர் அங்கே வந்தார்.(6,7) அந்த இளவரசர்கள் வியாசரைச் சுற்றிலும் அமர்ந்து பல்வேறு காரியங்களை விவாதித்துக் கொண்டிருந்தபோது வேறு முனிவர்களும் அந்த இடத்திற்கு வந்தனர்.(8) ஓ! பாரதா, நாரதர், பர்வதர், கடுந்தவங்களைக் கொண்ட தேவலர், விஸ்வாவசு, தும்புரு, சித்திரசேனன் அங்கே இருந்தனர்.(9) கடுந்தவங்களுடன் கூடிய குரு மன்னன் யுதிஷ்டிரன், திருதராஷ்டிரனின் அனுமதியுடன் உரிய சடங்குகளின் படி அவர்களை வழிபட்டான்.(10)

யுதிஷ்டிரனின் அந்த வழிபாட்டை ஏற்றுக் கொண்ட அவர்கள் அனைவரும் (குசப் புற்களாலான) புனித இருக்கைகளிலும், மயிலிறகுகளாலான சிறந்த இருக்கைகளிலும் அமர்ந்தனர்.(11) அவர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, பெரும் நுண்ணறிவைக் கொண்ட குரு மன்னன் {திருதராஷ்டிரன்} பாண்டு மகன்கள் சூழ தன் இருக்கையில் அமர்ந்தான்.(12) காந்தாரி, குந்தி, திரௌபதி, சாத்வத குலத்தவள், அரச குடும்பத்தைச் சார்ந்த வேறு பெண்கள் ஆகியோரும் அமர்ந்தனர்.(13) அப்போது எழுந்த உரையாடல், சிறந்ததாகவும், பக்தி, பழங்கால முனிவர்கள், தேவர்கள் மற்றும் அசுரர்கள் தொடர்புடைய காரியங்களைக் குறிப்பிடுவதாகவும் இருந்தது.(14)

அந்த உரையாடல் நிறைவை எட்டிய போது, நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரும், வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான வியாசர், உயர்வான நிறைவை அடைந்து, அந்தக் குருட்டு மன்னனிடம் மீண்டும், “ஓ! மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரா}, பிள்ளைகளின் நிமித்தமான துயரில் எரிந்து கொண்டிருக்கும் உன் இதயத்தில் உன்னால் பேணி வளர்க்கப்படும் காரியம் என்ன என்பதை நான் அறிவேன். எந்தக் கவலை காந்தாரியின் இதயத்தில் எப்போதும் இருக்கிறதோ,(15-17) எது குந்தியின் இதயத்தில் இருக்கிறதோ, எது திரௌபதியின் இதயத்ததில் பேணி வளர்க்கப்படுகிறதோ, தன் மகனின் இறப்பின் நிமித்தமாகக் கிருஷ்ணனின் தங்கையான சுபத்திரையாலும் எது பேணி வளர்க்கப்படுகிறதோ அந்த எரியும் துயர் அனைத்தையும் நான் அறிவேன். ஓ! மன்னா, உன் வீட்டைச் சார்ந்தவர்களான இந்த இளவரசர்கள் மற்றும் இளவரசிகளுடன் உன் சந்திப்பை கேள்விப்பட்டே,(18,19) ஓ! கௌரவர்களைத் திளைக்கச் செய்பவனே, உன் ஐயங்களை விலக்கும் பொருட்டு நான் இங்கே வந்தேன். தேவர்கள், கந்தர்வர்கள், மற்றும் இந்தப் பெரும் முனிவர்கள் அனைவரும்,(20) நான் இத்தனை வருடங்கள் நீண்டிருக்கும் காலத்தில் அடைந்திருக்கும் தவத்தின் சக்தியை இன்று காணட்டும். எனவே, ஓ! மன்னா, நான் இன்று நிறைவேற்ற வேண்டிய உன் விருப்பமென்ன என்பதை எனக்குச் சொல்வாயாக.(21) நான் உனக்கு ஒரு வரத்தைத் தருமளவு பலம் கொண்டவன். என் தவங்களின் கனியை {பயனைக்} காண்பாயாக” என்றார்.

அளவற்ற புத்தியைக் கொண்ட வியாசரால் இவ்வாறு சொல்லப்பபட்டதும், மன்னன் திருதராஷ்டிரன்,(22) ஒரு கணம் சிந்தத்தவனாகப் பேச ஆயத்தமானான். அவன் {திருதராஷ்டிரன்}, “நான் பெரும் நற்பேறு பெற்றவனாவேன். உன் உதவியைப் பெறும் நல்வாய்ப்பையும் நான் பெற்றிருக்கிறேன். இன்று என் வாழ்வு வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டது.(23) பெரும் பக்திமான்களான உங்கள் அனைவருக்கும், எனக்கும் இடையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறதே. எனக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் உயர்ந்த இன்ப கதியை நான் இன்று அடையப் போகிறேன்.(24) தவங்களைச் செல்வமாகக் கொண்ட தவசிகளும், பிரம்மனுக்கு இணையானவர்களுமான உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் வென்றேனே. உங்கள் அனைவரையும் கண்டதே பாவங்கள் அனைத்தில் இருந்தும் என்னைத் தூய்மையடையச் செய்யும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.(25) பாவமற்றவர்களே, மறுமையில் என் கதி குறித்த எந்த அச்சமும் இனி எனக்கில்லை. என் பிள்ளைகளின் அன்பு நிறைந்தவனாக இருப்பதால் நான் எப்போதும் அவர்களது நினைவுகளையே பேணி வளர்க்கிறேன். எனினும், மிகத் தீய புத்தி கொண்ட தீயவனான என் மகன்{துரியோதனன்} இழைத்த பல்வேறு குற்றச் செயல்களை நினைப்பதால் எப்போதும் என் மனம் வதைக்கப்படுகிறது. பாவம் நிறைந்த புத்தியைக் கொண்ட அவன் அப்பாவிகளான பாண்டவர்களை எப்போதும் துன்புறுத்தினான்.(26,27)

ஐயோ, குதிரைகள், யானைகள் மற்றும் மனிதர்களுடன் கூடிய மொத்த பூமியும் அவனால் அழிக்கப்பட்டது. உயர் ஆன்ம மன்னர்கள், பல்வேறு நாடுகளின் ஆட்சியாளர்கள் பலரும்,(28) என் மகனின் தரப்பை அடைந்து மரணத்திற்கு இரையாகினர். ஐயோ, அன்புக்குரிய தந்தைமார், மனைவியர் மற்றும் தங்கள் உயிர் மூச்சையே கைவிட்ட(29) அந்த வீரர்கள் அனைவரும் இறந்தோரின் மன்னனுடைய {யமனின்} விருந்தினர்களாகிவிட்டனர். ஓ! மறுபிறப்பாளரே, போரில் தங்கள் நண்பனுக்காகக் கொல்லப்பட்ட அந்த மனிதர்கள் அடைந்த கதியென்ன?(30) களத்தில் விழுந்த என் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் அடைந்த கதியென்ன? வலிமைமிக்கவரும், சந்தனுவின் மகனுமான பீஷ்மர், பிராமணர்களில் முதன்மையானவரான துரோணர் ஆகியோர் என் மூடத்தனம் மற்றும், நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவனான பாவம் நிறைந்த என் மகனின் மூலம் படுகொலைக்கு உள்ளானதை நினைத்து என் இதயம் எப்போதும் துன்புறுகிறது.(31,32) பூமியின் அரசுரிமையை அடைய விரும்பிய அவன் செழிப்பில் சுடர்விட்ட குரு குலத்தின் அழிவுக்குக் காரணனானான். இவை யாவற்றையும் நினைத்துப் பார்க்கும் நான் துன்பத்தில் பகலும், இரவும் எரிந்து கொண்டிருக்கிறேன்.(33) துன்பம் மற்றும் துயரத்தால் ஆழமாகப் பீடிக்கப்பட்டிருக்கும் என்னால் மன அமைதியை அடைய முடியவில்லை. உண்மையில், ஓ! தந்தையே, இவை யாவற்றையும் நினைத்துப் பார்க்கும் என் மனத்தில் ஒருபோதும் அமைதி ஏற்படுவதில்லை” என்றான் {திருதராஷ்டிரன்}”.(34)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஜனமேஜயா, அந்த அரசமுனியால் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தப்பட்ட இந்தப் புலம்பல்களைக் கேட்ட காந்தாரிக்குத் துன்பம் புதுப்பிக்கப்பட்டது.(35) குந்தி, துருபதன் மகள் {திரௌபதி}, சுபத்திரை மற்றும் குரு குலத்தைச் சேர்ந்த வேறு ஆண்களும், பெண்களும், மருமகள்களும் அதே போலத் துன்பம் புதுப்பிக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.(36) கட்டப்பட்ட கண்களுடன் கூடிய ராணி காந்தாரி, தன் மாமனாரிடம் {வியாசரிடம்} பேசினாள். தன் மகன்களின் படுகொலையால் ஆழமான துயரில் பீடிக்கப்பட்டிருந்த அவள்,(37) “ஓ! தவசிகளில் முதன்மையானவரே, இந்த மன்னர் {திருதராஷ்டிரர்} தமது மகன்களின் மரணத்திற்கு வருந்தி, மன அமைதியை இழந்து பதினாறு வருடங்கள் கடந்துவிட்டன.(38) ஓ! பெரும் முனிவரே {வியாசரே}, தமது பிள்ளைகளின் படுகொலையின் நிமித்தமான துயரால் பீடிக்கப்பட்டிருக்கும் இந்த மன்னர் எப்போதும் பெருமூச்சு விட்டபடியே இரவில் உறங்காமலிருக்கிறார்.(39) உமது தவ சக்தியின் மூலம் நீர் புதிய உலகங்களையே படைக்கவல்லவராயிருக்கிறீர். இப்போது மறுமையில் இருக்கும் இந்த மன்னரின் பிள்ளைகளை இவருக்குக் காட்டுவதைக் குறித்து வேறென்ன நான் சொல்ல முடியும்?(40)

துருபதன் மகளான இந்தக் கிருஷ்ணையும் {திரௌபதியும்} தன் உற்றார் உறவினர் மற்றும் பிள்ளைகள் அனைவரையும் இழந்திருக்கிறாள். என் மருமகள்களில் எனக்கு மிகவும் அன்புக்குரியவள் இதன் காரணமாக மிகவும் துன்புறுகிறாள்(41) இனிய வாக்கைக் கொண்டவளும், கிருஷ்ணனின் தங்கையுமான சுபத்திரை, தன் மகனை இழந்து ஆழமான துன்பத்தில் எரிந்து கொண்டிருக்கிறாள்.(42) அனைவராலும் மதிக்கப்படுபவளும், பூரிஸ்ரவசின் மனைவியுமான இந்தப் பெண், தன் கணவனை விதி வென்றதால் துன்பத்தில் பீடிக்கப்பட்டு எப்போதும் இதயம் பிளக்கும் அழுகையில் ஈடுபட்டு வருகிறாள்.(43) குரு குலத்தவரும், நுண்ணறிவுமிக்கவருமான பாஹ்லீகர் இவளது மாமனார் ஆவார். ஐயோ, இந்தப் போரில் சோமதத்தரும் தன் தந்தையுடன் சேர்ந்து கொல்லப்பட்டார்[1].(44)ஐயோ, பெரும் நுண்ணறிவையும் பெருஞ்செழிப்பைக் கொண்ட உமது மகனான இந்த மன்னரின் {திருதராஷ்டிரனின்} மகன்களும், போரில் ஒருபோதும் பின்வாங்காத வீரர்களுமான அந்த நூறு பேரும் போரில் கொல்லப்பட்டனர்.(45) அந்த மகன்களின் நூறு மனைவியரும் துன்புறுபவர்களாக, மன்னன் மற்றும் எனது துயரத்தை அதிகரிக்கச் செய்கிறார்கள். ஓ! பெரும் தவசியே {வியாசரே}, அந்தப் பெரும்படுகொலையால் தாக்கப்பட்ட இவர்கள் அனைவரும் என்னைச் சூழ்ந்து திரண்டிருக்கின்றனர்.(46) ஐயோ, ஓ! பலமிக்கவரே, ஐயோ, அந்த உயர் ஆன்ம வீரர்கள், பெருந்தேர் வீரர்கள், என் மாமனார், சோமதத்தர் மற்றும் பிறரின் கதி என்னவானது?(47) ஓ! புனிதமானவரே, எதனால் இந்தப் பூமியின் தலைவரும், நானும், என்னுடைய மருமகளான இந்தக் குந்தியும், எங்கள் துயரில் இருந்து விடுபடுவோமோ அஃது உமது அருளின் மூலம் நடக்கட்டும்” என்றாள் {காந்தாரி}.(48)

காந்தாரி இவ்வாறு சொன்னதும், கடும் நோன்புகள் பலவற்றால் முகம் வற்றியிருந்த குந்தி, சூரியப் பிரகாசத்துடன் கூடியவனும், கமுக்கமாகப் {இரகசியமாகப்} பிறந்தவனுமான தன் மகனை {கர்ணனை} நினைக்கத் தொடங்கினாள்.(49) வரமளிக்கும் முனிவரும், தொலைவில் நடப்பதைக் காணவும், கேட்கவும் இயன்றவருமான வியாசர், அர்ஜுனனின் அரசத் தாய் துன்பத்தால் பீடிக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.(50) அவளிடம் வியாசர், “ஓ! அருளப்பட்டவளே, உன் மனத்தில் என்ன இருக்கிறது என்பதை எனக்குச் சொல்வாயாக. நீ சொல்ல விரும்புவதை எனக்குச் சொல்வாயாக” என்றார்.(51) இதன் பேரில் தன் மாமனாருக்குத் தலைவணங்கிய குந்தி, நாணத்துடன் கடந்த கால நிகழ்வுகள் தொடர்பான சொற்களைச் சொன்னாள்” {என்றார் வைசம்பாயனர்}.(52)

குந்தியின் கவலை! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 30-கர்ணனின் பிறப்பைக் கூறிய குந்தி; கர்ணனைப் பார்க்க விரும்புவதாக வியாசரிடம் சொன்னது; குந்தியின் ஐயத்தைக் காரணத்துடன் போக்கிய வியாஸர்…

குந்தி, “ஓ! புனிதமானவரே {வியாசரே}நீர் என் மாமனாராக இருப்பதால் என்னுடைய தேவர்களுக்குத் தேவராகவும் இருக்கிறீர். உண்மையில், நீர் தெய்வங்களுக்கு தெய்வமாக இருக்கிறீர். நீர் என்னுடைய உண்மையான சொற்களைக் கேட்பீராக.(1) மறுபிறப்பாள வகையைச் சார்ந்தவரும், கோபம் நிறைந்தவரும், துர்வாசர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு தவசி பிச்சை கேட்டு உண்பதற்காக என் தந்தையின் வீட்டிற்கு வந்தார்[1]. புறம் மற்றும் அக ஒழுக்கத்தின் தூய்மையினாலும், அவர் {துர்வாசர்} செய்த பல பிழைகளைக் காண மறுத்ததாலும் நான் அவரை நிறைவடையச் செய்தேன். கோபத்தைத் தூண்டும் வகையில் அவரது நடத்தை இருந்தாலும் நான் அவரிடம் கோபங்கொள்ளவில்லை.(3) கவனத்துடன் தொண்டாற்றப்பட்ட அந்தப் பெருந்தவசி என்னிடம் உயர்வான நிறைவை அடைந்து எனக்கு ஒரு வரம் அருளும் மனநிலையை எட்டினார். அவர் {துர்வாசர்}, “நான் கொடுக்கும் வரத்தை நீ ஏற்க வேண்டும்” என்பதே அவருடைய சொற்களாகும்.(4)அவருடைய {துர்வாசருடைய} சாபத்திற்கு அஞ்சிய நான், “அவ்வாறே ஆகட்டும்” என்றேன். அந்த மறுபிறப்பாள முனிவர், மீண்டும் என்னிடம்,(5) ஓ! அருளப்பட்ட காரிகையே, ஓ! அழகிய முகம் படைத்தவளே, நீ தர்மனுக்கு அன்னையாவாய். நீ அழைக்கும் தேவர்கள் உனக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருப்பார்கள்” என்றார்.(6)

அந்த மறுபிறப்பாளர் {துர்வாசர்} இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு என் பார்வையில் இருந்து மறைந்தார். நான் ஆச்சரியத்தால் நிறைந்தேன். எனினும், அந்த முனிவர் கொடுத்த மந்திரம், எப்போதும் என் மனத்தில் வசித்து வந்தது.(7) ஒரு நாள் நான் என் அறையில் அமர்ந்து கொண்டு உதிக்கும் சூரியனைக் கண்டேன். நாள் சமைப்பவனை என் முன்னே கொண்டு வர விரும்பிய நான் அந்த முனிவர் சொன்ன சொற்களை நினைவுகூர்ந்தேன்.(8) நான் குற்றத்தை உணராமல், சிறுமிக்குரிய தன்மையினால் அந்தத் தேவனை {சூரியனை} அழைத்தேன். எனினும், (என்னால் அழைக்கப்பட்ட) அந்த ஆயிரங்கதிர் தேவன் என் முன்னிலைக்கு வந்தார்.(9) அவர் தம்மை இரண்டாகப் பிரித்துக் கொண்டார். ஒரு பகுதியைக் கொண்டு ஆகாயத்திலும், மற்றொன்றினால் என் முன்னே பூமியிலும் அவர் நின்று கொண்டிருந்தார்.(10)

அவரைக் கண்டு நடுங்கிக் கொண்டிருந்த என்னிடம் அவர் இந்தச் சொற்களில், “என்னிடம் இருந்து ஒரு வரத்தைக் கேட்பாயாக” என்றார். அவருக்குத் தலைவணங்கிய நான், என்னைவிட்டுச் சென்றுவிடுமாறு அவரிடம் கேட்டேன்.(11)

அவர் {சூரிய தேவன்}, “பயனற்ற வருகை என்ற கருத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. உன்னையும், உனக்கு வரமாக இந்த மந்திரத்தை அளித்த பிராமணரையும் {துர்வாசரையும்} நான் எரிக்கப் போகிறேன்” என்றார்.(12)

ஒரு தீமையும் செய்யாத அந்தப் பிராமணரை சூரியனின் சாபத்தில் இருந்து பாதுகாக்க நான் விரும்பினேன். எனவே நான், “ஓ! தேவா, உம்மைப் போன்ற ஒரு மகனை நான் பெறுவேனாக” என்றேன்.(13) அந்த ஆயிரங்கதிர் தேவன் தன் சக்தியால் என்னுள் ஊடுருவி, என்னை முழுமையாகக் கலங்கடித்தார். பிறகு அவர், “நீ ஒரு மகனைப் பெறுவாய்” என்று சொல்லிவிட்டு ஆகாயத்திற்கே திரும்பிச் சென்றார்.(14) நான் என் தந்தையின் கௌரவத்தைக் காக்க விரும்பி, இவ்வாறு உலகிற்குக் கமுக்கமாக {இரகசியமாக} வந்தவனும், கர்ணன் என்ற பெயரைக் கொண்டவனுமான குழந்தையைத் தண்ணீரில் விட்டுவிட்டு அந்தப்புரத்திலேயே தொடர்ந்து வாழ்ந்தேன்.(15) ஓ! மறுபிறப்பாளரே, முனிவர் துர்வாசர் என்னிடம் சொல்லி இருந்ததைப் போலவே, அந்தத் தேவனுடைய அருளின் மூலம் ஐயமில்லாமல் நான் மீண்டும் கன்னிகையானேன்.(16)

அவன் வளர்ந்து வந்தபோது நானே அவனது அன்னை என்பதை அவன் அறிந்திருந்தாலும், மடமை கொண்ட நான் அவனை அங்கீகரிக்க எந்த முயற்சியையும் செய்யவில்லை. ஓ! மறுபிறப்பாள முனிவரே, உமக்கு நன்றாகத் தெரிந்த இஃது என்னை எரித்துக் கொண்டிருக்கிறது.(17) இது பாவம் நிறைந்ததாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் உம்மிடம் உண்மையைச் சொன்னேன். ஓ! புனிதமானவரே, என்னுடைய மகனான அவனைக் {கர்ணனைக்} காண்பதற்கான என் ஏக்கத்தை நிறைவடையச் செய்வதே உமக்குத் தகும்.(18) ஓ! தவசிகளில் முதன்மையானவரே, ஓ! பாவமற்றவரே, இந்த மன்னரின் நெஞ்சில் இருப்பதும், நீர் அறிந்ததுமான அந்த விருப்பம் இன்று கனியட்டும்” என்றாள் {குந்தி}.(19)

குந்தியால் இவ்வாறு சொல்லப்பட்டவரும் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான வியாசர் அவளுக்கு மறுமொழியாக, “நீ அருளப்பட்டிருப்பாயாக. நீ என்னிடம் சொன்ன அனைத்தும் நடக்கக் கூடியவையே.(20) (கர்ணனின் பிறப்பைப் பொறுத்தவரையில்) எக்குற்றமும் உன்னைச் சாராது. நீ கன்னித்தன்மையை அடைந்தாய். தேவர்கள் (யோக) பலம் பொருந்தியவர்களாவர். அவர்களால் மனித உடல்களில் ஊடுருவ முடியும்[2].(21) தேவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களால் எண்ணத்தை மட்டுமே கொண்டு (சந்ததியைப்) பெற இயலும். சொல், பார்வை, தீண்டல், பாலியல் கலவி ஆகியற்றின் மூலமும் அவர்கள் பிள்ளைகளைப் பெறுகின்றனர்.(22) நீ மனித வகையைச் சார்ந்தவளாவாய். (நடந்தவற்றில்) உன்னிடம் குற்றமேதும் இல்லை. ஓ! குந்தி, இதையறிவாயாக. உன் இதயத்தில் உள்ள நோய் அகலட்டும்.(23) வலிமையானவர்களுக்கு அனைத்தும் இனிமையானவை, வலிமையானவர்களுக்கு அனைத்தும் தூய்மையானவை, வலிமையானவர்களுக்கு அனைத்தும் புண்ணியமிக்கவை. வலிமையானவர்களுக்கே அனைத்தும் உரியவை” என்றார் {வியாசர்}.(24)

தேவ அம்சங்கள்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 31-போரில் மாண்டவர்களைக் காட்டப் போவதாகச் சொன்ன வியாசர்; ஒவ்வொருவரும் எவரெவருடைய அம்சமென்பதையும் சொன்னது; அனைவரும் கங்கைக் கரைக்குச் சென்றது…

வியாசர், “ஓ! காந்தாரி, நீ அருளப்பட்டிருப்பாயாக, நீ உன் மகன்கள், சகோதரர்கள், நண்பர்கள், உற்றார், உறவினர் மற்றும் உன் தந்தைமார் ஆகியோரை உறக்கத்தில் இருந்து எழுந்த மனிதர்களைப் போல இவ்விரவில் காணப் போகிறாய்.(1) குந்தி கர்ணனைக் காண்பாள், யது குலத்தவள் {சுபத்திரை} தன் மகன் அபிமன்யுவைக் காண்பாள். திரௌபதி தன் ஐந்து மகன்களையும், தன் தந்தைமாரையும், தன் சகோதரர்களையும் காண்பாள். நீ கேட்பதற்கு முன்பே என் மனத்தில் இருந்த எண்ணமிது. ஓ! காந்தாரி, மன்னனாலும், உன்னாலும், குந்தியாலும் தூண்டபட்டபோது நான் இந்த நோக்கத்தை ஊக்குவித்தேன்.(3) அந்த மனிதர்களில் முதன்மையானவர்களுக்காக நீ வருந்தக்கூடாது. க்ஷத்திரிய நடைமுறைகளில் நிறுவப்பட்ட தங்கள் அர்ப்பணிப்பின் விளைவால் அவர்கள் மரணமடைந்தனர்.(4)

ஓ! குற்றமற்றவளே, தேவர்களின் பணியைச் செய்வதைத் தவிர வேறேதும் முடியாது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே அந்த வீரர்கள் பூமிக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் தேவர்களின் பகுதிகளாவர் {அம்சங்களாவர்}.(5) கந்தர்வர்கள், அப்சரஸ்கள், பிசாசங்கள், குஹ்யர்கள், ராட்சசர்கள், பெரும் புனிதர்கள், (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், தெய்வீக முனிவர்கள்,(6) தேவர்கள், தானவர்கள், களங்கமற்ற குணம் கொண்ட தெய்வீக முனிவர்கள் ஆகியோர் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் மரணமடைந்தனர்[1].(7)நுண்ணறிவுமிக்கவனும், திருதராஷ்டிரன் என்ற பெயரைக் கொண்டவனுமான கந்தர்வர்களின் மன்னனே, மனிதர்களின் உலகில் உன் தலைவனான திருதராஷ்டிரனாகப் பிறப்பெடுத்தான் {அவதரித்தான்} எனக் கேள்விப் படுகிறோம்.(8) மங்கா மகிமை கொண்டவனும், அனைவரைக் காட்டிலும் புகழ்மிக்கவனுமான பாண்டு, மருத்துக்களிலிருந்து உதித்தான் என்பதை அறிவாயாக. க்ஷத்ரி {விதுரன்} மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவரும் அறத் தேவனின் {தர்ம தேவனின்} இரு பகுதிகளாவர் {அவதாரங்களாவர்}.(9) துரியோதனனைக் கலியென்றும், சகுனியை துவாபரனென்றும் அறிவாயாக. ஓ! நற்குணங்களைக் கொண்டவளே, துச்சாசனனும், {அவனைச் சார்ந்த} பிறர் அனைவரும் ராட்சசர்கள் என்பதை அறிவாயாக.(10)

பெரும் வலிமைமிக்கவனும், பகைவரைத் தண்டிப்பவனுமான பீமசேனன் மருத்துக்களில் இருந்து வந்தவனாவான். பிருதையின் மகனான இந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} புராதன முனிவனான நரன் என்பதை அறிவாயாக.(11) ரிஷிகேசன் {கிருஷ்ணன்} நாராயணனாவான், இரட்டையர்கள் அஸ்வினிகளாவர். வெப்பங்கொடுப்பவர்களில் முதன்மையான சூரியன், தன்னுடலை இரண்டாக வகுத்து, ஒரு பகுதியைக் கொண்டு உலகங்களுக்கு வெப்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான், மற்றொரு பகுதியைக் கொண்டு (பூமியில்) கர்ணனாக வாழ்ந்தான். அனைவரையும் மகிழ்ச்சியுறச் செய்தவனும், பாண்டவர்களின் உடைமைகளுக்கு வாரிசும், (ஒன்று கூடி போரிட்ட) ஆறு பெரும் தேர்வீரர்களால் கொல்லப்பட்டவனுமான அர்ஜுனன் மகனாக {அபிமன்யுவாக} சோமன் பிறந்தான். அவன் சுபத்திரையிடம் பிறந்தான். யோக பலத்தின் மூலம் அவன் தன்னைத் தானே இரண்டாக வகுத்துக் கொண்டான்.(12-14) வேள்வித் தீயில் இருந்து திரௌபதியுடன் சேர்ந்து உதித்த திருதஷ்டத்யும்னன், நெருப்பு {அக்னி} தேவனின் மங்கப் பகுதியாவான் {அவதாரமாவான்}. சிகண்டி ஒரு ராட்சசனாவான்.(15)

துரோணர் பிருஹஸ்பதியின் பகுதி என்றும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ருத்தரனின் பகுதியாகப் பிறந்தவன் என்றும் அறிவாயாக. கங்கையின் மைந்தனான பீஷ்மர், மனிதனாகப் பிறந்த வசுக்களில் ஒருவராவார்.(16) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, இவ்வாறே தேவர்கள் மனிதர்களாகப் பிறந்து, தங்கள் பணியை நிறைவற்றிய பின்னர்ச் சொர்க்கத்திற்குத் திரும்பிச் சென்றனர்.(17) மறுமைக்குத் திரும்பிச் சென்ற அவர்கள் அனைவரைக் குறித்தும் உங்கள் இதயங்களில் உள்ள கவலையை நான் இன்று விலக்குவேன்.(18) நீங்கள் அனைவரும் பாகீரதியை {கங்கையை} நோக்கிச் செல்வீராக. அப்போது, போர்க்களத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரையும் காண்பீர்கள்” என்றார் {வியாசர்}”.(19)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அங்கே இருந்தோர் அனைவரும் வியாசரின் சொற்களைக் கேட்டு, சிங்க முழக்கம் செய்து கொண்டே பாகீரதியை நோக்கிச் சென்றனர்.(20) தன் அமைச்சர்களுடன் கூடிய திருதராஷ்டிரனும், பாண்டவர்களும், அங்கே வந்திருந்த முதன்மையான முனிவர்களும் கந்தர்வர்களும், சொல்லப்பட்டது போலவே புறப்பட்டனர்.(21) கங்கைக் கரையை அடைந்த அந்த மனிதக் கடல், தான் விரும்பியவாறு தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டது.(22) பெரும் நுண்ணறிவைக் கொண்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, பாண்டவர்களுடனும், குடும்பத்தின் பெண்கள் மற்றும் முதியவர்களுடனும் ஓர் இனிமையான இடத்தில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.(23) இறந்து போன இளவரசர்களைக் காணப் போகும் இரவின் வருகைக்காக அவர்கள் ஒரு முழு வருடத்தைப் போல அந்த நாளைக் கழித்தனர்.(24) சூரியன் மேற்கின் புனித மலையை அடைந்தபோது, அவர்கள் அனைவரும் அந்தப் புனித ஓடையில் நீராடி தங்கள் மாலை சடங்குகளை முடித்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(25)

ஞானக்கண்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 32-இரவில் கங்கையில் இறங்கிப் போரில் இறந்தவர்களை அழைத்த வியாசர்; தங்கள் தங்கள் ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்களுடன் கங்கையில் தோன்றி கரைக்கு வந்த இரு தரப்பினர்; வியாசர் கொடுத்த ஞானக் கண்ணால் அனைவரையும் நேரில் கண்ட திருதராஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இரவு வந்ததும், அவர்கள் அனைவரும் தங்கள் மாலைச் சடங்குகளை முடித்துக் கொண்டு வியாசரை அணுகினர். அற ஆன்மா கொண்டவனும், தூய்மையான உடலுடனும், ஆன்மாவை நோக்கிச் செலுத்தப்படும் மனத்துடனும் கூடியவனுமான திருதராஷ்டிரன், பாண்டவர்களுடனும், தனக்குத் துணையாக இருந்த முனிவர்களுடனும் சேர்ந்து அங்கே அமர்ந்தான்.(2) அரசக் குடும்பத்தின் பெண்மணிகள் காந்தாரியுடன் சேர்ந்து ஒரு தனிப்பட்ட இடத்தில் அமர்ந்தனர். குடிமக்கள் மற்றும் மாகாணவாசிகள் அனைவரும் தங்கள் வயதின்படியாக வரிசையாக அமர்ந்திருந்தனர்.(3)

அப்போது வலிமையும், சக்தியும் கொண்டவனும், பெரும் தவசியுமான வியாசர் பாகீரதியின் புனித நீரில் நீராடி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், பாண்டவர் தரப்பில் போரிட்டவர்களும், கௌரவர் தரப்பில் போரிட்டவர்களுமான இறந்து போன வீரர்கள் அனைவரையும் அழைத்தார்.(4,5) இதன் பேரில், ஓ! ஜனமேஜயா, செவிடாக்கக்கூடியதும், முன்பு குருக்கள் மற்றும் பாண்டவர்களின் படைகளில் கேட்கப்பட்டதற்கு ஒப்பானதுமான ஆரவாரம் நீருக்குள் இருந்து எழுவது கேட்கப்பட்டது.(6)

அப்போது பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையிலான மன்னர்கள், தங்கள் துருப்பினர் அனைவருடன் பாகீரதியின் நீரில் இருந்து ஆயிரக்கணக்கில் எழுந்தனர்.(7) அங்கே விராடனும், துருபதனும் தங்கள் மகன்கள் மற்றும் படைகளுடன் இருந்தனர். திரௌபதியின் மகன்கள், சுபத்திரையின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன் ஆகியோரும் இருந்தனர்.(8) கர்ணன், துரியோதனன், வலிமைமிக்கத் தேர்வீரனான சகுனி, பெரும் பலம் கொண்டவர்களும், துச்சாசனன் தலைமையிலானவர்களுமான திருதராஷ்டிரனின் வேறு பிள்ளைகளும் அங்கே இருந்தனர்.(9)

ஜராசந்தனின் மகன், பகதத்தன், பெருஞ்சக்தி கொண்ட ஜலசந்தன், பூரிஸ்ரவஸ், சலன், சல்லியன், மற்றும் தம்பியுடன் கூடிய விருஷசேனன் {கர்ணனின் மகன்கள்} ஆகியோரும் அங்கே இருந்தனர்.(10) (துரியோதனன் மகனான) லக்ஷ்மணன், திருஷ்டத்யும்னனின் மகன், சிகண்டியின் பிள்ளைகள் அனைவரும், தம்பியுடன் கூடிய திருஷ்டகேது ஆகியோரும் அங்கே இருந்தனர்.(11) அசலன், விருஷகன், ராட்சசன் அலாயுதன், பாஹ்லீகர், ஸோமதத்தன், மன்னன் சேகிதானன் ஆகியோரும் அங்கே இருந்தனர்.(12)

இவர்களும், எண்ணிக்கையைக் கொண்டு வசதியாகப் பெயர் கூற முடியாத இன்னும் பலரும் அந்தச் சந்தர்ப்பத்தில் தோன்றினர். அவர்கள் அனைவரும் பாகீரதியின் நீரில் இருந்து ஒளியுடல்களுடன் எழுந்தனர்.(13) அந்த மன்னர்கள், போர்க்களத்தில் போரிட்டுக் கொண்டிருந்தபோது உடுத்தியிருந்த உடை, தரித்திருந்த கொடிக்கம்பம் மற்றும் வாகனத்துடன் தோன்றினர்.(14) அவர்கள் அனைவரும் தெய்வீக ஆடை உடுத்தியவர்களாகவும், பிரகாசமான காதுகுண்டலங்களுடன் கூடியவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பகை, செருக்கு, கோபம் மற்றும் பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுபட்டவர்களாக இருந்தனர்.(15)

அவர்களது செயல்களைச் சொன்னவாறே கந்தர்வர்கள் அவர்களது புகழைப் பாடினர், வந்திகள் அவர்களுக்குப் பணிவிடை செய்தனர். தெய்வீக உடுப்புகளை உடுத்தியவர்களும், தெய்வீக மலர்மாலைகளைச் சூடியவர்களுமான அவர்கள் ஒவ்வொருவரும் அப்சரஸ் கூட்டங்களால் பணிவிடை செய்யப்பட்டனர்.(16) அந்த நேரத்தில், சத்யவதியின் மகனாகிய அந்தப் பெருந்தவசி தன் தவங்களின் பலத்தால், திருதராஷ்டிரனுக்கு தெய்வீகப் பார்வையைக் கொடுத்து அவனை நிறைவடையச் செய்தார்.(17) தெய்வீக அறிவும் பலமும் கொண்டவளும், பெரும் புகழைக் கொண்டவளுமான காந்தாரி, தன் பிள்ளைகள் அனைவருடன், போரில் கொல்லப்பட்ட அனைவரையும் கண்டாள்.(18)

அங்கே கூடியிருந்தோர் அனைவரும், நிலைத்த பார்வையுடனும், இதயம் நிறைந்த ஆச்சரியத்துடனும், தங்களுக்கு மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தியதும், நம்பமுடியாததுமான அந்த ஆச்சரியமான நிகழ்வைக் கண்டனர்.(19) அஃது இன்புற்றிருந்த ஆடவர் மற்றும் பெண்களுக்கான உயர்ந்த விழாவாக {உத்ஸவமாகத்} தெரிந்தது. அந்த அற்புதக் காட்சி, திரையில் வரையப்பட்ட படத்தைப் போலத் தெரிந்தது.(20) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அந்தத் தவசியின் அருளால் பெற்ற தெய்வீகப் பார்வையுடன் கூடிய திருதராஷ்டிரன், அந்த வீரர்கள் அனைவரையும் கண்டு இன்பத்தால் நிறைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(21)

சமரசம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 33-போரில் இறந்தவர்களும், உயிரோடு இருந்தவர்களும் ஒருவரையொருவர் சந்தித்து அந்த இரவு முழுவதையும் விளையாட்டாகக் கழித்தது; இந்தப் பர்வத்தைக் கேட்பதாலும், சொல்வதாலும் உண்டாகும் பலன்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அப்போது மனிதர்களில் முதன்மையானவர்களும், கோபமும், பொறாமையும் அற்றவர்களும், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவர்களுமான அவர்கள், மறுபிறப்பாள முனிவர்களால் விதிக்கப்பட்ட உயர்ந்த, மங்கல விதிகளுக்கு இணக்கமான வகையில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர். மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் இருந்த அவர்கள் அனைவரும் சொர்க்கத்தில் திரியும் தேவர்களைப் போலத் தெரிந்தனர்.(1,2) ஓ! மன்னா {ஜனமேஜயா}, மகன் தன் தந்தையையோ, தாயையோ சந்தித்தான், மனைவிமார் தங்கள் கணவர்களையும், சகோதரன், தன் சகோதரனையும், நண்பன் தன் நண்பனையும் சந்தித்தனர்.(3) மகிழ்ச்சியில் நிறைந்திருந்த பாண்டவர்கள், பெரும் வில்லாளியான கர்ணனையும், சுபத்திரையின் மகனையும் {அபிமன்யுவையும்}, திரௌபதியின் மகன்களையும் சந்தித்தனர்.(4) ஓ! ஏகாதிபதி, பாண்டுவின் மகன்கள் மகிழ்ச்சிமிக்க இதயங்களுடன் கர்ணனை அணுகி, அவனோடு இணக்கம் கொண்டனர் {சமரசமாகினர்}.(5)

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, அந்தப் போர்வீரர்கள் அனைவரும் அந்தப் பெருந்தவசியின் அருளால் ஒருவரையொருவர் சந்தித்துத் தங்களுக்குள் இணக்கமாகினர்.(6) பகைமை அனைத்தையும் கைவிட்ட அவர்கள் நட்பு மற்றும் அமைதியை நிறுவினர். இவ்வாறே மனிதர்களில் முதன்மையானவர்களான அந்தக் கௌரவர்கள் அனைவரும், பிற மன்னர்களும், குருக்களுடனும், பிள்ளைகளுடன் கூடிய தங்கள் உற்றார் உறவினருடனும் சேர்ந்தனர். அந்த இரவு முழுவதையும் பெரும் மகிழ்ச்சியில் கடத்தினர்.(7,8) உண்மையில், அந்த க்ஷத்திரிய வீரர்கள் தாங்கள் உணர்ந்த மகிழ்ச்சியின் விளைவால் அந்த இடத்தைச் சொர்க்கமாகவே கருதினர். ஓ! ஏகாதிபதி, அந்தப் போர் வீரர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட அந்த இரவில் துன்பமோ, அச்சமோ, ஐயவுணர்வோ, நிறைவின்மையோ அங்கே இல்லை. தந்தைமார், சகோதரர்கள், கணவர்கள், மகன்கள் ஆகியோரைச் சந்தித்த(9,10) பெண்கள் தங்கள் துயர் அனைத்தையும் கைவிட்டு, மகிழ்ச்சியாரவாரத்தை அடைந்தனர்.

இவ்வாறு ஓரிரவு ஒருவரோடு ஒருவர் விளையாடிய அந்த வீரர்கள், பெண்கள்,(11) ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டு, ஒருவரிடமொருவர் விடைபெற்றுக் கொண்டு தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். உண்மையில் அந்த முதன்மையான தவசி {வியாசர்} போர்வீரர்களின் அந்தக் கூட்டத்திற்கு விடைகொடுத்தனுப்பினார்.(12) (உயிரோடு இருந்த) அவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்ணிமைக்கும் காலத்திற்குள் அந்தப் பெருங்கூட்டம் மறைந்து போனது. அந்த உயர் ஆன்ம மனிதர்கள், தங்கள் தேர்களுடனும், கொடிமரங்களுடனும் புனித ஆறான பாகீரதிக்குள் மூழ்கி, தங்கள் தங்களுக்குரிய வசிப்பிடங்களுக்குச் சென்றனர். சிலர் தேவலோகத்திற்கும், சிலர் பிரம்மலோகத்திற்கும்,(13,14) சிலர் வருண லோகத்திற்கும், சிலர் குபேரலோகத்திற்கும் சென்றனர். அந்த மன்னர்களில் சிலர் சூரியலோகத்திற்குச் சென்றனர்.(15)

ராட்சசர்கள் மற்றும் பிசாசங்களுக்கு மத்தியில் சிலர் உத்தரக் குருக்களின் நாட்டுக்குச் சென்றனர். இனிமை நிறைந்த மனத்துடன் திரிந்த வேறு சிலர் தேவர்களின் தோழமையை அடைந்தனர்.(16) இவ்வாறே அந்த உயர் ஆன்ம மனிதர்கள் அனைவரும் தங்கள் வாகனங்கள், விலங்குகள் மற்றும் தங்கள் தொண்டர்களுடன் மறைந்தனர். அவர்கள் அனைவரும் சென்ற பிறகு, அந்தப் புனித ஓடையின் நீருக்குள் நின்றிருந்தவரும், பேரறமும், சக்தியும் கொண்டவரும், குருக்களுக்கு நன்மை செய்பவரும், பெருந்தவசியுமான வியாசர், விதவைகளாக இருந்த க்ஷத்திரியப் பெண்மணிகளிடம் இந்தச் சொற்களில்,(17,18) “இந்த முதன்மையான பெண்களில், தங்கள் கணவர்கள் அடைந்த உலகத்தை அடைய விரும்புகிறவர்கள், சோம்பலனைத்தையும் கைவிட்டு, புனிதமான பாகீரதிக்குள் விரைவாக மூழ்குவீராக” என்றார்.(19)

அவருடைய இந்தச் சொற்களைக் கேட்ட முதன்மையான பெண்கள், அவற்றில் நம்பிக்கை கொண்டு, தங்கள் மாமனாரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு பாகீரதியின் நீருக்குள் மூழ்கினர்.(20) மனித உடல்களில் இருந்து விடுபட்ட அந்தக் கற்புடைய பெண்கள், ஓ! மன்னா, தங்கள் கணவர்களால் அடையப்பட்ட உலகங்களுக்குத் தங்கள் கணவர்களுடன் சென்றனர்.(21) இவ்வாறே அறவொழுக்கம் கொண்டவர்களும், கணவர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவர்களுமான பெண்கள், பாகீரதியின் நீருக்குள் நுழைந்து, மனிதக்குடியிருப்பில் இருந்து விடுபட்டு, தங்கள் கணவர்களால் அடையப்பட்ட உலகங்களுக்குச் சென்று தங்கள் கணவர்களின் துணையை அடைந்தனர்.(22) தெய்வீக வடிவங்களுடன் கூடியவர்களாக, தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களாக, தெய்வீக உடுப்புகளையும், மலர்மாலைகளையும் அணிந்து கொண்டு, தங்கள் கணவர்கள் அடைந்த வசிப்பிடங்களான அந்த உலகங்களுக்குச் சென்றனர்.(23) சிறந்த ஒழுக்கத்தையும், பல நற்குணங்களையும் கொண்ட அவர்களது கவலைகள் அனைத்தும் களையப்பட்டு, தங்களுக்கு உரிமையானவையும், அனைத்தையும் கொண்டவையுமான அந்த இன்பலோகங்களுக்குச் சிறந்த தேர்களில் செல்பவர்களாக அவர்கள் காணப்பட்டனர்.(24) பக்திக்கடமைகளில் அர்ப்பணிப்புடைய வியாசர், அந்நேரத்தில் வரங்களை அளிப்பவராக மாறி, அங்கே கூடியிருந்த மனிதர்கள் அனைவரின் விருப்பங்களும் கனியும் வரத்தை அளித்தார்.(25) பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள், இறந்தவர்களான புனிதர்களுக்கும், உயிருடன் கூடிய மனிதர்களுக்கும் இடையில் நடந்த இந்தச் சந்திப்பைக் கேள்விப் பட்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.(26)

இந்தக் கதையை முறையாகக் கேட்கும் மனிதன், தனக்குப் பிடித்தமான அனைத்தையும் அடைவான். உண்மையில், இம்மையிலும், மறுமையிலும் உள்ள ஏற்புடைய பொருட்கள் அனைத்தையும் அவன் அடைவான்.(27) கல்வி கற்றவனும், அறிவியல் அறிந்தவனும், அறவோரில் முதன்மையானவனுமான எந்த மனிதன், பிறர் கேட்கும்படி இந்தக் கதையைச் சொல்வானோ அவன் இம்மையில் பெரும்புகழையும், மறுமையில் மங்கல கதியையும், உற்றார் உறவினர் சேர்க்கையையும், விரும்பத்தக்க பொருட்கள் அனைத்தையும் அடைவான். அத்தகைய மனிதன் தன் வாழ்வாதாரத்திற்காகத் துன்பம் நிறைந்த செயல்களில் ஈடுபடாமல், வாழ்வில் அனைத்து வகை மங்கலப் பொருட்களையும் அடைவான். வேத கல்வி மற்றும் தவங்களில் அர்ப்பணிப்புள்ளவனும், பிறர் கேட்க இந்தக் கதையைச் சொல்பவனுமான மனிதன், அறுவடை செய்யப்போகும் வெகுமதிகள் இவையே.(28,29) நல்லொழுக்கம் கொண்டவர்களும், தற்கட்டுப்பாட்டில் அர்ப்பணிப்புள்ளவர்களும், தாங்கள் அளிக்கும் கொடைகளின் மூலம் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைந்தவர்களும், நேர்மை கொண்டவர்களும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவர்களும், பொய்மையில் இருந்தும், பிறருக்கும் தீங்கிழைக்கும் விருப்பத்தில் இருந்தும் விடுபட்டவர்களும், நம்பிக்கையுடன் கூடியவர்களும், சாத்திரங்களையும், நுண்ணறிவையும் நம்புகிறவர்களுமான மனிதர்கள், அற்புதம் நிறைந்த இந்தப் பர்வத்தைக் கேட்டு மறுமையில் நிச்சயம் உயர்ந்த கதியை அடைவார்கள்” {என்றார் வைசம்பாயனர்}”.(30,31)

மாண்டோர் மீள்வரோ! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 34-மாண்டோர் மீள்வதெப்படி என்று கேட்ட ஜனமேஜயன்; காரணத்துடன் விடையளித்த வைசம்பாயனர்…

சௌதி சொன்னார், “பெரும் நுண்ணறிவுமிக்க மன்னன் ஜனமேஜயன், தன் மூதாதையர்கள் மீண்டும் தோன்றி மறைந்த கதையைக் கேட்டு உயர்வான நிறைவையடைந்தான்.(1) இன்பத்தால் நிறைந்த அவன், மீண்டும் வைசம்பாயனரிடம், இறந்தோர் மீண்டும் தோன்றும் காரியத்தைக் குறித்துக் கேட்கும் வகையில், “உடல் அழிந்தவர்கள் அதே வடிவில் மீண்டும் தோன்றுவது எவ்வாறு சாத்தியம்?” என்று கேட்டான்.(2) இவ்வாறு கேட்கப்பட்டவரும், பேசுபவர்களில் முதன்மையானவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான அந்த வியாசரின் சீடர் {வைசம்பாயனர்}, ஜனமேஜயனிடம் இவ்வாறு பதிலளித்தார்.(3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “செயல்கள் (அதன் விளைவுகளை அனுபவிக்காமல், அல்லது தாங்கிக் கொள்ளாமல்) ஒருபோதும் அழிவடைவதில்லை என்பது நிச்சயமானது. ஓ! மன்னா, செயல்களின் மூலமே உடல்கள் பிறக்கின்றன; குணங்களும் பிறக்கின்றன.(4) அடிப்படையான பெரும்பூதங்களுக்கும், அனைத்தின் தலைவனுக்கு உள்ள உறவின் விளைவால் அவை நித்தியமானவையாக இருக்கின்றன. அவை நித்தியமானவற்றுடனே இருக்கின்றன. அதே போலவே, நித்தியமற்றவை அழியும்போது அவை அழிவடைவதில்லை.(5) முயற்சியின்றிச் செய்யப்படும் செயல்கள் உண்மையானவையும், முதன்மையானவையும், உண்மை பயனைக் கொடுப்பவையுமாகும். எனினும், சாதிப்பதற்கு முயற்சி தேவைப்படும் செயல்களுடன் தொடர்புடைய ஆன்மா இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது.(6)

அவ்வாறு (இன்ப துன்பத்துடன்) இணைந்திருந்தாலும், ஒரு கண்ணாடியில் உயிரினங்கள் பிரதிபலிக்கப்படுவதைப் போலவே அவற்றால் அஃது ஒருபோதும் மாற்றமடைவதில்லை என்பது ஒரு குறிப்பிட்ட உள்ளுணர்வாகும். அஃது ஒருபோதும் அழிவடைவதில்லை[1].(7) (நல்ல அல்லது தீய கனிகளை {பலன்களைத்} தாங்கிக் கொள்வதன் மூலமோ, அனுபவிப்பதன் மூலமோ) ஒருவனுடைய செயல்கள் தீராதவரை, அவன் உடலையே சுயமென {ஆத்மாவெனக்} கருதுகிறான். எனினும், செயல்கள் தீர்ந்த மனிதன், உடலை சுயமெனக் கருதமால் சுயத்தை வேறொன்றாக ஏற்றுக் கொள்கிறான்.(8) (அடிப்படை பூதங்கள், புலன்கள் முதலியன உள்ளிட்ட) இருப்பிலுள்ள பல்வேறு பொருட்கள் ஓர் உடலை அடைந்து ஒன்று கலக்கின்றன. (உடலுக்கும், சுயத்திற்கும் இடையில் உள்ள) வேறுபாட்டைப் புரிந்த ஞானம் கொண்ட மனிதர்களுக்கு அந்தப் பொருட்களே நித்தியமானவையாகின்றன[2].(9)குதிரை வேள்வியில், குதிரையைக் கொல்லும் காரியத்தில் இந்த ஸ்ருதி கேட்கப்படுகிறது. உடல்படைத்த உயிரினங்களின் நிச்சய உடைமைகளான உயிர்மூச்சுகள் (மற்றும் புலன்கள் முதலியவை), அவை மறுமைக்குச் செல்லும்போதும் நித்தியமாக நீடித்திருக்கின்றன.(10) ஓ! மன்னா {ஜனமேஜயா}, உனக்கு ஏற்புடையதாக இருந்தால், நான் உனக்கான நன்மையைச் சொல்வேன். நீ வேள்வி செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, தேவ பாதைகள் குறித்துக் கேள்விப்பட்டிருப்பாய்.(11) உன்னுடைய எந்த வேள்விக்குமான ஆயத்தங்கள் செய்யப்பட்ட போது, தேவர்கள் உனக்கு நன்மை செய்ய விரும்பினர். உண்மையில், தேவர்கள் இவ்வாறான மனோநிலையை அடைந்து உன் வேள்விக்கு வந்த போது, கொல்லபட்ட விலங்குகளை (இம்மையில் இருந்து மறுமைக்கு இட்டுச் செல்லும்) பாதையின் தலைவர்களாக அவர்களே இருந்தனர்[3].(12)இந்தக் காரணத்தினாலேயே, நித்தியமானவர்கள் (ஜீவர்கள்), வேள்விகளில் தேவர்களைத் துதிப்பதன் மூலம் சிறந்த கதிகளை அடைவதில் வெல்கிறார்கள். அடிப்படையான ஐந்து பூதங்கள் நித்தியமானவையெனும்போது, ஆன்மாவும் நித்தியமெனும்போது, (உறையில் பொதிந்த ஆன்மாவான) புருஷன் என்றழைக்கப்படுபவனும் அவ்வாறே ஆகிறான்.(13) இஃது இவ்வாறிருக்கும்போது, ஓர் உயிரினம் பல்வேறு வடிவங்களை ஏற்கும் எனக் காண்பவன், பிழையான புரிதலைக் கொண்டவன் என்று கருதப்படுகிறான். பிரிவில் அதீத துயரில் ஈடுபடுபவன் முட்டாளென நான் நினைக்கிறேன்.(14) பிரிவில் தீமையைக் காணும் ஒருவன், சேர்க்கையைக் கைவிட வேண்டும். தனியாக நிற்பதன் மூலம் சேர்க்கைகள் அமையாமல், பிரிவிலேயே உலகத் துன்பங்கள் பிறக்கின்றன என்பதால் கவலைகள் கைவிடப்படுகின்றன[4].(15)உடலுக்கும், சுயத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்பவன் மட்டுமே, பிழையான தீர்மானத்தில் {தவறான நம்பிக்கையில்} இருந்து விடுபடுகிறான், வேறு எவரும் விடுபடுவதில்லை. மற்றொன்றை (சுயத்தை) அறிந்தவன் உயர்ந்த புத்தியை அடைந்து, பிழையில் இருந்து விடுபடுகிறான்[5].(16) உயிரினங்களைப் பொறுத்தவரையில், அவை புலப்படாத நிலையில் இருந்து தோன்றி, மீண்டும் புலப்படாத நிலைக்குள்ளேயே மறைந்து போகின்றன. நான் அவனை அறிவதில்லை. அவனும் என்னை அறிவதில்லை. என்னைப் பொறுத்தவரையில், துறவு இன்னும் எனதாகவில்லை[6].(17) பலமற்றவன் எந்த உடலில் இருந்து தன் செயல்கள் அனைத்தையும் செய்கிறானோ அவன் தன் செயல்களுக்கான கனிகளை இன்புறவோ, பொறுத்துக் கொள்ளவோ செய்கிறான்.(18) அந்தச் செயல் மனச்செயலாக இருந்தால் அதன் விளைவுகளும் மனத்தால் தாங்கவோ, இன்புறவோ கூடியதாக இருக்கும், அஃது உடலைக் கொண்டு செய்யப்படுவதாக இருந்தால், அதன் விளைவுகளும் உடலால் தாங்கவோ, இன்புறவோ கூடியதாக இருக்கும்” {என்றார் வைசம்பாயனர்}.(19)

அவப்ருதஸ்நானம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 35-பரிக்ஷித்தைக் காட்ட வேண்டிய ஜனமேஜயன்; பரிக்ஷித், சமீகர் மற்றும் சிருங்கி ஆகியோரை காட்டிய வியாசர்; வேள்வி முடிவில் நீராடி ஆஸ்தீகரை வணங்கிய ஜனமேஜயன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னன் திருதராஷ்டிரன் ஒருபோதும் தன் மகன்களைக் கண்டதில்லை. ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, அந்த முனிவரின் {வியாசரின்} அருள் மூலம் கண் பார்வையை அடைந்த அவன், தன்னைப் போலவே இருந்த தன் பிள்ளைகளை முதல் முறையாகக் கண்டான்.(1) மனிதர்களில் முதன்மையானவனான அந்தக் குரு ஏகாதிபதி, மன்னர்களின் கடமைகள், வேதங்கள், உபநிஷத்துகள் அனைத்தையும் கற்று, (அவற்றிலிருந்தே) நிச்சய புத்தியையும் அடைந்தான்.(2) பெரும் ஞானம் கொண்ட விதுரன்தன் தவச் சக்தியின் மூலம் உயர்ந்த வெற்றியை அடைந்தான். திருதராஷ்டிரனும், தவசியான வியாசரைச் சந்தித்தன் விளைவால் பெரும் வெற்றியை அடைந்தான்”.(3)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “வியாசர் எனக்கொரு வரம் தர மனம் கொண்டு, என் தந்தை {பரீக்ஷித்} இவ்வுலகில் இருந்து செல்லும்போது எவ்வளவு வயதுடன் இருந்தாரோ, அவர் என்ன உடையை உடுத்துவது வழக்கமோ அதே வடிவத்தில், அதே உடையுடன் அன்பு கூர்ந்து அவரை {பரீக்ஷித்தை} எனக்குக் காட்டினால், நீர் சொன்ன அனைத்தையும் நான் நம்புவேன்.(4) அத்தகைய காட்சி எனக்கு மிக ஏற்புடையதே. உண்மையில், நான் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனாக என்னைக் கருதிக் கொள்வேன். நான் ஒரு குறிபிட்ட தீர்மானத்தை அடைந்திருக்கிறேன். ஓ!, இந்த முதன்மையான முனிவரின் {வியாசரின்} அருளின் மூலம் என் விருப்பம் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்படட்டும்” என்று கேட்டான்”.(5)

சௌதி {லோமஹர்சனரின் முனிக்கூட்டத்திடம்} சொன்னார், “மன்னன் ஜனமேஜயன் இந்தச் சொற்களைச் சொன்ன பிறகு, பெரும் சக்தியும், நுண்ணறிவும் கொண்ட வியாசர், தன் அருளைக் காட்டும் வகையில், (வேறு உலகில் {மறுமையில்} இருந்து) பரிக்ஷித்தைக் கொண்டு வந்தார்.(6) மன்னன் ஜனமேஜயன், பேரழகுடன் கூடியவனும், சொர்க்கத்தில் இருந்து வந்தவனுமான தன் அரசத் தந்தை (இவ்வுலகில் இருந்து செல்லும் காலத்தில்) இருந்த அதே வயது மற்றும் அதே வடிவத்துடன் அவனைக் கண்டான்.(7) உயர் ஆன்ம சமீகர், அவரது மகனான சிருங்கின் ஆகியோரும் அதே போல அங்குக் கொண்டு வரப்பட்டனர். மன்னனின் ஆலோசகர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் அவர்களைக் கண்டனர்.(8) மன்னன் ஜனமேஜயன், தன் வேள்வியில் இறுதி நீராடலைச் செய்து பெரிதும் மகிழ்ந்தான். அவன் புனித நீரைத் தன் மீது ஊற்றிக் கொண்டதைப் போலவே தன் தந்தையின் மீதும் ஊற்றினான்.(9)

இறுதி நீராடலைச் செய்த மன்னன், யாயாவரர்களின் குலத்தில் பிறந்தவரும், ஜரத்காருவின் மகனுமான மறுபிறப்பாளர் ஆஸ்தீகரிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(10) “ஓ! ஆஸ்தீகரே, என் கவலைகள் அனைத்தையும் அகற்றியவரும், என்னுடைய தந்தையுமான இவர் {பரிக்ஷித்}, என்னால் காணப்பட்டதால், என்னுடைய இந்த வேள்வி பல அற்புதம் நிறைந்த நிகழ்வுகள் நிறைந்ததாயிற்று” என்றான்.(11)ஆஸ்தீகர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, தவங்களின் பெரிய கொள்ளிடமும், புராதன முனிவரும், தீவில் பிறந்தவருமான வியாசர் எந்த வேள்வியில் இருக்கிறாரோ, அந்த வேள்வியைச் செய்தவன் நிச்சயம் ஈருலகங்களையும் {இம்மையையும், மறுமையையும்} வெல்வான்.(12) ஓ! பாண்டவர்களின் மகனே, நீ அற்புதம் நிறைந்த ஒரு வரலாற்றைக் கேட்டிருக்கிறாய். பாம்புகள் எரிக்கப்பட்டுச் சாம்பலாகி, உன் தந்தையின் பாதச்சுவடுகளைப் பின்பற்றிச் சென்றன.(13) ஓ! ஏகாதிபதி, தக்ஷகன், உன்னுடைய நேர்மையின் காரணமாகத் துன்பம் நிறைந்த விதியில் இருந்து பெருஞ்சிரமத்துடன் தப்பித்துவிட்டான். முனிவர்கள் அனைவரும் வழிபடப்பட்டனர். உன்னுடைய உயர் ஆன்ம தந்தையால் அடையப்பட்ட கதியையும் நீ கண்டாய்.(14) பாவத்தைத் தூய்மையாக்கும் இந்த வரலாற்றைக் கேட்டதன் மூலம் நீ அபரிமிதமான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டியிருக்கிறாய். இந்த மனிதர்களில் முதன்மையானவனைக் கண்டதன் மூலம் உன் இதயத்தில் உள்ள முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன.(15) அறச் சிறகுகளை ஆதரிப்பவர்கள் எவரோ, நல்லொழுக்கமும், சிறந்த மனநிலையும் கொண்டவர்கள் எவரோ, எவரைக் கண்டால் பாவங்கள் பொடிபடுமோ அவர்களை நாம் அனைவரும் வணங்க வேண்டும்” என்றார் {ஆஸ்தீகர்}”.(16)

சௌதி தொடர்ந்தார், “மறுபிறப்பாளர்களில் முதன்மையான அவரிடம் {ஆஸ்தீகரிடம்} இருந்து இதைக் கேட்ட மன்னன் ஜனமேஜயன், அனைத்து வழியிலும் அந்த முனிவரை மீண்டும் மீண்டும் கௌரவித்து வழிபட்டான்.(17) கடமைகள் அனைத்தையும் அறிந்த அவன், அதன் பிறகு, மங்கா மகிமை கொண்ட முனிவர் வைசம்பாயனரிடம், மன்னன் திருதராஷ்டிரனனுடைய காட்டு வாசத்தின் தொடர்ச்சியைக் கேட்டான்” {என்றார் சௌதி}.(18)

நகரந்திரும்பல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 36-ஆசிரமம் திரும்பியது; வியாசரின் ஆணைப்படி யுதிஷ்டிரனை நகரம் திரும்ப வற்புறுத்திய திருதராஷ்டிரன்; பாண்டவர்கள் சென்றது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}“நண்பர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருடன் கூடிய தன் மகன்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோரைக் கண்ட பிறகு மனிதர்களின் ஆட்சியாளனான திருதராஷ்டிரனும், மன்னன் யுதிஷ்டிரனும் என்ன செய்தனர்?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தன் பிள்ளைகள் மீண்டும் தோன்றி மிக அற்புதமான காட்சியைக் கண்ட அந்த அரசமுனி திருதராஷ்டிரன் துன்பமற்றவனாகி, (பாகீரதியின் கரைகளில் இருந்து) தன் ஆசிரமத்திற்குத் திரும்பினான்.(2) பொதுமக்களும், பெரும் முனிவர்கள் அனைவரும், திருதராஷ்டிரனால் விடை கொடுத்து அனுப்பப்பட்டுத் தாங்கள் விரும்பிய இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(3) மனைவியருடன் கூடிய உயர் ஆன்ம பாண்டவர்கள், ஒரு சிறிய பரிவாரத்துடன், அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.(4)

அப்போது மறுபிறப்பாள முனிவர்களாலும், பிற மக்களாலும் கௌரவிக்கப்படுபவரான சத்தியவதியின் மகன் {வியாசர்} அந்த ஆசிரமத்திற்கு வந்து திருதராஷ்டிரனிடம்,(5) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரா, ஓ! குரு குலத்தின் மகனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. பெரும் ஞானம், புனிதச் செயல்கள், தவச் செல்வம், சிறந்த குருதி, வேதங்கள் மற்றும் அதன் அங்கங்களில் அறிவு, பக்தி, வயது, பெரும் நாநயம் ஆகியவற்றைக் குறித்த பல்வேறு உரையாடல்களை நீ கேட்டிருக்கிறாய்.(6,7) மீண்டும் நீ கவலையில் உன் மனத்தை நிலைக்கச் செய்யாதே. ஞானம் கொண்ட ஒருவன் ஒருபோதும் தீயூழால் கலங்கமாட்டான். தெய்வீக வடிவைக் கொண்ட நாரதரிடமிருந்து தேவ புதிர்கள் {ரகசியங்களை} நீ கேட்டிருக்கிறாய்.(8) உன் பிள்ளைகள் அனைவரும், க்ஷத்திரிய நடைமுறைகளை நோற்றதன் மூலம் ஆயுதங்களால் புனிதப்படுத்தப்பட்ட மங்கல கதியை அடைந்தனர்.(9) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான இந்த யுதிஷ்டிரன், தன் தம்பிகள், மனைவிகள் மற்றும் உற்றார் உறவினருடன் உன் அனுமதிக்காகக் காத்திருக்கிறான்.(10) நீ இவனை அனுப்புவாயாக. அவன் தன் நாட்டுக்குத் திரும்பிச் சென்று அதை ஆளட்டும். இவ்வாறு காட்டில் வசித்தவாறே இவர்கள் ஒரு மாதத்தைக் கடத்திவிட்டனர்.(11) ஓ! மன்னா, அரசுரிமையெனும் நிலை எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். ஓ! குரு குலத்தோனே, ஒரு நாடு பல பகைவர்களைக் கொண்டதாகும்” என்றார் {வியாசர்}.(12)

ஒப்பற்ற சக்தி கொண்ட வியாசரால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், வாக்கை நன்கு அறிந்தவனுமான குரு மன்னன் {திருதராஷ்டிரன்}, யுதிஷ்டிரனை அழைத்து, அவனிடம்,(13) “ஓ! அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, நீ அருளப்பட்டிருப்பாயாக. நீ உன் தம்பிகளுடன் சேர்ந்து நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! மன்னா, உன் கருணையின் மூலம் என்வழியில் இனியும் எந்தத் துன்பமும் நிற்கவில்லை.(14) ஓ! மகனே, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தில் {ஹஸ்தினாபுரத்தில்} இருக்கையில் நான் உன்னோடு இருந்ததைப் போலவே இங்கேயும் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். ஓ! கல்விமானே, உன்னை என் பாதுகாவலனாகக் கொண்டு நான் ஏற்புடைய பொருட்கள் அனைத்தையும் அனுபவிக்கிறேன்.(15) ஒரு தந்தை தன் மகனிடம் இருந்து பெறும் தொண்டுகளனைத்தையும் நான் உன்னிடம் இருந்து பெற்றுவிட்டேன். நான் உன்னிடம் நிறைவுடன் இருக்கிறேன். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உன்னிடம் எனக்குச் சிறு நிறைவின்மையும் இல்லை. ஓ! மகனே, இனியும் எந்தத் தாமதமும் செய்யாமல் நீ செல்வாயாக.(16)

உன்னைச் சந்தித்ததில் இருந்து நான் என் தவங்களை விட்டுவிட்டேன். உன்னைச் சந்தித்தன் விளைவால் மட்டுமே தவங்களுடன் கூடிய என்னுடைய உடலை என்னால் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது[1].(17) மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகளை உண்டு, நான் நோற்கும் நோன்புகளுக்கு இணையானவற்றை நோற்று வரும் உன்னுடைய தாய்மாரான இவர்கள் இருவரும் நீண்ட காலம் உயிரோடு இருக்க மாட்டார்கள்.(18) உன்னை நான் சந்தித்தன் (பலன்) மூலமும், வியாசரின் தவப் பலத்தின் மூலமும் மறுமையில் வசித்தவர்களான என் பிள்ளைகளும், பிறரும் எங்களால் காணப்பட்டனர்.(19) ஓ! பாவமற்றவனே, என் வாழ்வின் நோக்கத்தை நான் எட்டிவிட்டேன். நான் இப்போது கடுந்தவங்களைப் பயில்வதில் என்ன நிறுவிக்கொள்ள நான் விரும்புகிறேன். எனக்கு அனுமதி அளிப்பதே உனக்குத் தகும்.(20) ஈமப்பிண்டம், புகழ், சாதனைகள் மற்றும் நமது மூதாதையரின் குலம் ஆகியவை இப்போதும் உன்னையே சார்ந்திருக்கின்றன. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இன்றோ, நாளையோ நீ புறப்படுவாயாக. ஓ! மகனே {யுதிஷ்டிரா}, தாமதிக்காதே.(21) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மன்னர்களின் கடமைகள் என்னென்ன என்பதை நீ மீண்டும் மீண்டும் கேட்டிருக்கிறாய். இன்னும் நான் வேறு என்ன உனக்குச் சொல்ல முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. ஓ! பெரும்பலம் கொண்டவனே, இனியும், உன்னிடம் இருந்து எந்தத் தேவையும் எனக்கில்லை” என்றான் {திருதராஷ்டிரன்}”.(22)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொன்ன அந்த (முதிய) ஏகாதிபதியிடம், மன்னன் யுதிஷ்டிரன், “ஓ! அறத்தின் ஒவ்வொரு விதியையும் அறிந்தவரே, இவ்வழியில் என்னை நீர் கைவிடுதல் உமக்குத் தகாது. நான் எந்தக் குற்றத்தையும் செய்த குற்றவாளியில்லை.(23) என் சகோதரர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அவர்கள் விருப்பபடி செல்லட்டும். உறுதியான நோன்புகளுடன் நான் உமக்கும், என்னிரு தாய்மாருக்கும் பணிவிடை செய்வேன்” என்று மறுமொழி கூறினான்.(24)

அப்போது காந்தாரி {யுதிஷ்டிரனிடம்} அவனிடம், “ஓ! மகனே, இவ்வாறு வேண்டாம். கேட்பாயாக, குரு குலம் இப்போது உன்னையே சார்ந்திருக்கிறது. என்னுடைய மாமனாரின் ஈமப் பிண்டமும் உன்னையே சார்ந்திருக்கிறது. ஓ! மகனே, நீ செல்வாயாக.(25) நாங்கள் உன்னால் போதுமான அளவுக்குத் தொண்டாற்றப்பட்டு, கௌரவிக்கப்பட்டிருக்கிறோம். மன்னர் {திருதராஷ்டிரர்} சொல்வதையே நீ செய்ய வேண்டும். உண்மையில், ஓ! மகனே, நீ உன் தந்தையின் {திருதராஷ்டிரரின்} ஆணைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்றாள்”.(26)

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், “காந்தாரியால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், அன்புக்கண்ணீரால் குளித்த கண்களைத் துடைத்துக் கொண்டு, புலம்பியபடியே இந்தச் சொற்களைச் சொன்னான்,(27) “மன்னரும், பெரும்புகழைக் கொண்ட காந்தாரியும் என்னைக் கைவிடுகின்றனர். துயரில் நிறைந்திருக்கும் என்னால் எவ்வாறு உங்களை விட்டுச் செல்ல முடியும்?(28) எனினும், ஓ! நீதிமிக்கப் பெண்ணே, அதே வேளையில் நான் உன் தவங்களை ஒருபோதும் தடுக்கத் துணிய மாட்டேன். தவங்களைவிட உயர்ந்தன வேறேதும் இல்லை. தவங்களின் மூலமே ஒருவன் பரமனை அடைகிறான்.(29) ஓ! ராணி, என் இதயம் இனியும் முன்பைப் போல நாட்டை நோக்கித் திரும்பவில்லை. இப்போது என் மனம் முழுமையாகத் தவங்களிலேயே நிலைத்திருக்கிறது.(30) மொத்த பூமியும் இப்போது வெறுமையாக இருக்கிறது. ஓ! மங்கலப் பெண்மணியே, அவள் {பூமாதேவி} இனியும் என்னை நிறைவடையச் செய்யவில்லை. நம் உற்றார் உறவனரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. நமது பலம் முன்பைப்போல இல்லை.(31) பாஞ்சாலர்கள் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றனர். பெயரளவில் மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள். ஓ! மங்கலப் பெண்மணியே, அவற்றை மறுசீரமைப்பதிலும், வளர்ச்சியிலும் துணை செய்யக்கூடிய எவரையும் நான் காணவில்லை.(32) அவர்கள் அனைவரும் போர்க்களத்தில் துரோணரால் எரிக்கப்பட்டுச் சாம்பலாகிவிட்டனர். எஞ்சியிருந்தவர்களும் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமரால்} இரவில் கொல்லப்பட்டனர்.(33) எங்கள் நண்பர்களாக இருந்த சேதிகளும், மத்ஸ்யர்களும் இப்போது {உயிருடன்} இல்லை. வாசுவதேவன் {கிருஷ்ணன்} காத்ததால் விருஷ்ணி இனக்குழு மட்டுமே எஞ்சியிருக்கிறது.(34) விருஷ்ணிகளைக் கண்டு மட்டுமே நான் வாழ விரும்புகிறேன். எனினும், அறம், செல்வம் மற்றும் இன்பத்தை ஈட்டுவதில் எனக்குரிய விருப்பத்தின் காரணமாகவே நான் உயிர்வாழ விரும்புகிறேன். நீ எங்கள் அனைவரின் மீதும் மங்கலப் பார்வையைச் செலுத்துவாயாக. உன்னைப் பார்ப்பதே எங்களுக்குக் கடினமாகும்.(35) மன்னர், மிகக் கடுமையானவையும், தாங்கிக் கொள்ள முடியாதவையுமான தவப்பயிற்சியைத் தொடங்கப் போகிறார்” என்றான் {யுதிஷ்டிரன்}.

இந்தச் சொற்களைக் கேட்டவனும், போரின் தலைவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான சகாதேவன்,(36) கண்ணீரில் குளித்த கண்களுடன் யுதிஷ்டிரனிடம், “ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நான் என் தாயை விட்டுச் செல்லத் துணியேன்.(37) நீர் விரைவாகத் தலைநகரம் திரும்புவீராக. ஓ! பலமிக்கவரே, நான் தவங்களைப் பயில்வேன். இங்கேயே தவங்களின் மூலம் நான் என் உடலை மெலியச் செய்து,(38) மன்னர் மற்றும் என்னுடைய தாய்மார்களான இவர்களின் பாதங்களுக்குத் தொண்டாற்றுவதில் ஈடுபடுவேன்” என்றான்.

அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரனைத் {சகாதேவனைத்} தழுவிய பிறகு குந்தி, “ஓ! மகனே, செல்வாயாக. இவ்வாறு பேசாதே.(39) நான் சொல்வதைச் செய்வாயாக. நீங்கள் அனைவரும் இங்கிருந்து செல்வீராக. அமைதி உங்களுடையதாகட்டும். மகன்களே, மகிழ்ச்சி உங்களுடையதாகட்டும்.(40) நீங்கள் இங்கே தங்கினால் எங்கள் தவங்கள் தடைபடும். நான் உன்னிடம் கொண்டுள்ள பற்றின் காரணமாக உயர்வான என் தவங்களில் இருந்து நான் வீழ்ந்துவிடுவேன்.(41) எனவே, ஓ! மகனே, எங்களை விட்டுச் செல்வாயாக. ஓ! பெரும்பலம் கொண்டவனே, எங்களுக்கிருக்கும் வாழ்நாள் காலம் சிறிதே” என்றாள்.(42) இவற்றாலும், குந்தியின் இன்னும் பல்வேறு பேச்சுகளாலும், சகாதேவன் மற்றும் மன்னன் யுதிஷ்டிரனின் மனங்கள் நன்கு நிலைநிறுத்தப்பட்டன. குருகுலத்தில் முதன்மையான அவர்கள், தங்கள் தாயிடமும், (முதிய) ஏகாதிபதியிடமும் அனுமதியைப பெற்றுக் கொண்டு, பின்னவர்களை வணங்கி, விடைபெற்றுக் கொள்ளத் தொடங்கினர்.(43)

யுதிஷ்டிரன், “மங்கல ஆசிகளால் மகிழ்ச்சியடைந்த நாங்கள் தலைநகரத்திற்குத் திரும்பப் போகிறோம். உண்மையில், ஓ! மன்னா, உமது அனுமதியைப் பெற்றுக் கொண்டு எங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, நாங்கள் இந்த ஆசிரமத்தை விட்டகல்வோம்” என்றான்.(44)

உயர் ஆன்மா கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்ட அரச முனி திருதராஷ்டிரன், யுதிஷ்டிரனை ஆசீர்வதித்து, அவனுக்கு அனுமதி அளித்தான்.(45) பெரும்பலம் கொண்டோர் அனைவரிலும் முதன்மையான பீமனை மன்னன் {திருதராஷ்டிரன்} தேற்றினான். பெருஞ்சக்தி கொண்டவனும், பெரும் நுண்ணறிவுமிக்கவனுமான பீமன், மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} தன் பணிவைக் காட்டினான்.(46) அர்ஜுனனைத் தழுவிக் கொண்டு, மனிதர்களில் முதன்மையானவர்களான இரட்டையர்களையும் கட்டிப் பிடித்து, மீண்டும் மீண்டும் அவர்களுக்கு ஆசிகூறிய குரு மன்னன் அவர்கள் புறப்படுவதற்கான அனுமதியையும் கொடுத்தான்.(47)

அவர்கள் காந்தாரியின் பாதத்தையும் வழிபட்டு அவளிடமும் ஆசிகளைப் பெற்றனர். அப்போது அவர்களுடைய அன்னனையான குந்தி, அவர்களுடைய தலையை முகர்ந்து பார்த்து அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினாள். பிறகு தாயிடம் பால் குடிக்கத் தடை செய்யப்பட்ட கன்றுகளைப் போல அவர்கள் மன்னனை {திருதராஷ்டிரனை} வலம்வந்தனர். உண்மையில் அவர்கள் அவனை நிலைத்த பார்வையுடன் கண்டு மீண்டும் மீண்டும் அவனை வலம் வந்தனர்.(48,49) அப்போது திரௌபதியின் தலைமையிலான அந்தக் கௌரவக் குடும்பத்துப் பெண்கள் அனைவரும், சாத்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளின் படி மாமனாரை வழிபட்டு. அவனிடம் அனுமதி பெற்றுக் கொண்டனர்.(50) காந்தாரி மற்றும் குந்தி ஆகியோர் ஒவ்வொருவரையும் தழுவி அவர்களுக்கு ஆசிகூறி, விடை கொடுத்து அனுப்பினர். அவர்களுடைய மாமியார் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொன்னாள். விடைபெற்றுக் கொண்ட அவர்கள் தங்கள் கணவர்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.(51)

அப்போது அங்கிருந்த தேர்வீரர்கள், “பூட்டுங்கள், பூட்டுங்கள்” என்று சொன்ன உரத்த ஒலியும், ஓட்டகங்கள் மற்றும் குதிரைகளின் ஒலிகளும் கேட்டன.(52) மன்னன் யுதிஷ்டிரன், தன் மனைவிகளோடும், துருப்புகளுடனும், உற்றார் அனைவருடனும் ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(53)

புத்ரதர்சன உப பர்வம் முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்