கர்ணரைக் காணும்போதெல்லாம் அமைதியடைந்தேன்! – சாந்திபர்வம் பகுதி – 01-யுதிஷ்டிரனைத் தேடி வந்த முனிவர்கள்; யுதிஷ்டிரனின் நலம் விசாரித்த நாரதர்; நாரதரிடம் தன் மனக்குறைகள் அனைத்தையும் சொன்ன யுதிஷ்டிரன்; கர்ணன் தங்கள் அண்ணன் என்பதைத் தான் அறிய வந்த சூழ்நிலையை நாரதருக்கு எடுத்துச் சொன்னது; கர்ணனின் பாதங்களும், குந்தியின் பாதங்களும் ஒன்றுபோல் இருப்பது தனக்கு ஏற்கனவே ஐயத்தை ஏற்படுத்தியதைச் சொன்னது; இந்தக் காரியத்தில் நாரதர் அறிந்த அனைத்தையும் தனக்குச் சொல்லுமாறு வேண்டிக் கேட்ட யுதிஷ்டிரன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் நீர்க்காணிக்கைகளை அளித்த பாண்டுவின் மகன்கள், விதுரன், திருதராஷ்டிரன் மற்றும் பாரதக் குலப் பெண்கள் ஆகியோரனைவரும்,(1) (அந்தப் புனிதமான ஓடையின் கரையிலேயே) வசித்தனர். பாண்டுவின் உயரான்ம மகன்கள் {தீட்டிலிருந்து} தூய்மையடைவதற்காக ஒரு மாத காலத்தை, குரு நகருக்கு {குருஜாங்கலத் தலைநகரான ஹஸ்தினாபுரத்திற்கு} வெளியே கடத்த விரும்பினர்.(2) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் நீர்ச்சடங்குகளைச் செய்த பிறகு, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட உயரான்ம தவசியர் பலரும், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் பலரும் அந்த ஏகாதிபதியை {யுதிஷ்டிரனைக்} காண அங்கே வந்தனர்.(3) அவர்களில் தீவில் பிறந்தவர் {துவைபாயனரான} (வியாசர்), நாரதர், பெரும் முனிவரான தேவலர், தேவஸ்தானர் மற்றும் கண்வர் ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் சிறந்த சீடர்களையும் தங்களுடன் அழைத்து வந்திருந்தனர்.(4)
ஞானம் கொண்டவர்களும், வேதங்களை அறிந்தவர்களும், இல்லறவாழ்வை நோற்பவர்களுமான மறுபிறப்பாளர்கள் {பிராணர்கள்}, அல்லது ஸ்நாதக வகையைச்[1] சேர்ந்தோர் பலரும் குரு மன்னனை {யுதிஷ்டிரனைக்} காண அங்கே வந்தனர்.(5) அந்த உயரான்மாக்கள் வந்து கொண்டிருந்தபோது, அவர்கள் (யுதிஷ்டிரனால்) முறையாக வழிபடப்பட்டார்கள். பிறகு அந்தப் பெரும் முனிவர்கள் விலைமதிப்புமிக்கத் தரைவிரிப்புகளில் அமர்ந்தனர்.(6) அவர்கள், (தூய்மையற்ற அந்தத் துக்கக் காலத்திற்கு) தகுந்த வகையில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வழிபாட்டை ஏற்றுக் கொண்டு, முறையான வரிசையில் மன்னனைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்.(7) துயரில் கலங்கிய இதயத்துடன் பாகீரதியின் புனிதமான கரையில் வசித்து வந்த மன்னர்களின் மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} ஆயிரக்கணக்கான பிராமணர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு அவனுக்கு ஆறுதலளித்தனர்.(8)அப்போது, நாரதர், முதலில் அங்கு வந்திருந்தவர்களும், தீவில் பிறந்தவரை {துவைபாயனரான வியாரசரைத்} தங்களில் முதன்மையானவராகக் கொண்டவர்களுமான முனிவர்களைக் கரங்கூப்பி வணங்கிய பிறகு, சரியான நேரத்தில், தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் பேசினார்.(9) அவர் {நாரதர்}, “ஓ! யுதிஷ்டிரா, உன் கரங்களின் வலிமையாலும், மாதவனின் {கிருஷ்ணனின்} அருளாலும், உன்னால் மொத்த பூமியும் நேர்மையாக {அறவழியில்} வெல்லப்பட்டிருக்கிறது.(10) இந்தப் பயங்கரப் போரில் இருந்து நீ உயிருடன் தப்பியது நற்பேற்றாலேயே. ஓ! பாண்டுவின் மகனே, க்ஷத்திரியக் கடமைகளை நோற்கும் உனக்கு, இதனால் மகிழ்ச்சியில்லையா?(11) ஓ!மன்னா, உன் எதிரிகள் அனைவரையும் கொன்ற பிறகு, உன் நண்பர்களை நிறைவு செய்ய வேண்டாமா? இந்தச் செழிப்பை அடைந்த பிறகும், உன்னைத் துயரம் பீடிக்காதிருக்கும் என நான் நம்புகிறேன்” என்றார்.(12)
யுதிஷ்டிரன் {நாரதரிடம்}, “உண்மையில், கிருஷ்ணனுடைய கரவலிமையின் மீது கொண்ட என் நம்பிக்கை, பிராமணர்களின் அருள், பீமன் மற்றும் அர்ஜுனனின் வலிமை ஆகியவற்றாலேயே இந்த மொத்த பூமியும் என்னால் வெல்லப்பட்டது.(13) எனினும், பேராசையின் காரணமாக உறவினர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திவிட்டேன் என்ற கனமான துயரம் என் இதயத்தில் எப்போதும் இருக்கிறது. சுபத்திரையின் அன்புக்குரிய மகன் {அபிமன்யு}, திரௌபதியின் மகன்கள் ஆகியோரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்த இந்த வெற்றியானது, எனக்குத் தோல்வியின் ஒளியிலேயே புலப்படுகிறது.(14,15) விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தவளும், என் கொழுந்தியாளுமான சுபத்திரை என்னிடம் என்ன கேட்பாள்? மதுசூதனன் {கிருஷ்ணன்} இங்கிருந்து துவாரகைக்குச் செல்லும்போது, அங்கு வசிக்கும் மக்கள் அவனிடம் என்ன கேட்பார்கள்?(16) எங்களுக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்து வருபவளான இந்தத் திரௌபதி, மகன்கள் மற்றும் உறவினர்களை இழந்தவளாக நிற்பது எனக்குப் பெரும் வலியைத் தருகிறது.(17) ஓ! புனித நாரதரே, மேலும் வேறொன்றையும் நான் உமக்குச் சொல்கிறேன். குந்தி, மிக முக்கியமான காரியத்தின் ஆலோசனைகளைத் தனக்குள்ளேயே கமுக்கமாக வைத்துக் கொண்டதில் என் துயரம் மிகப் பெரிதானதாக இருக்கிறது.(18)
பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்டவரும், இவ்வுலகின் தேர்வீரர்களில் ஒப்பற்றவரும், சிங்கத்தின் நடையையும், செருக்கையும் கொண்டவரும், பெரும் நுண்ணறிவையும், கருணையையும் கொண்டவரும், பெரிதான தயாள குணத்தைக் கொண்டவரும், உயர்ந்த நோன்புகளை நோற்றவரும்,(19) தார்தராஷ்டிரர்களின் புகலிடமாக இருந்தவரும், தமது கௌரவத்தில் உணர்வுமிக்கவராக இருந்தவரும், ஆற்றலில் தடுக்கப்பட முடியாதவரும், தம் காயங்கள் அனைத்திற்கும் பழிதீர்க்கத் தயாராக இருந்தவரும், (போரில்) எப்போதும் கோபம் நிறைந்தவராக இருந்தவரும், மீண்டும் மீண்டும் மோதல்களில் எங்களை வீழ்த்தியவரும்,(20) ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் வேகம் கொண்டவரும், அற்புதமான வீரத்தைக் கொண்டவருமான அந்த வீரர் (கர்ணர்), குந்திக்கு இரகசியத்தில் பிறந்த மகனும், அதன் காரணமாக எங்கள் உடன்பிறந்த சகோதரனுமாவார்.(21) இறந்தோருக்கான நீர்த்தர்ப்பணங்களை நாங்கள் செய்து கொண்டிருந்தபோது, குந்தி அவரைச் சூரியனின் மகன் என்றாள். அனைத்து அறத்தையும் கொண்ட அவர் குழந்தைப் பருவத்திலேயே நீரில் விடப்பட்டிருக்கிறார்.(22) குந்தி, எடை குறைந்த பொருட்களால் தயாரிக்கப்பட்ட கூடையில் இட்டு, அவரைக் கங்கையின் ஓடையில் விட்டிருக்கிறாள். ராதைக்குப் பிறந்த சூதப் பிள்ளை என்று இவ்வுலகத்தில் எவர் கருதப்பட்டாரோ,(23) அவர் உண்மையில் குந்தியின் மூத்த மகனும், அதனால் எங்கள் உடன் பிறந்த அண்ணனுமாவார். ஐயோ, நாட்டின் மீது கொண்ட பேராசையால், அறியாமையில் நான் என் அண்ணனைக் {கர்ணரைக்} கொன்றுவிட்டேன். பஞ்சுக் குவியலை எரிக்கும் நெருப்பைப் போல இதுவே {இந்த நினைப்பே} என் அங்கங்களை எரிக்கிறது.(24)
வெண்குதிரைகளைக் கொண்டவனான அர்ஜுனனும், அவரைத் தன் அண்ணனாக அறிய மாட்டான், நானோ, பீமனோ, இரட்டையர்களோ கூட அவ்வாறு அவரை {கர்ணரை} அறியவில்லை. எனினும், சிறந்த வில்லைக் கொண்டவரான அவர் எங்களை (அவரது தம்பிகளாக) அறிந்திருந்தார்.(25) ஒரு சந்தர்ப்பத்தில் பிருதை {குந்தி} அவரிடம் {கர்ணரிடம்} சென்று, எங்கள் நலனை வேண்டி, “நீ என் மகன்” என்று சொன்னதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்.(26) எனினும், அந்தச் சிறப்புமிக்க வீரர், பிருதையின் விருப்பங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அதற்கடுத்து அவர், தமது தாயாரிடம் {குந்தியிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னார் என நாங்கள் கேள்விப்படுகிறோம்.(27) அவர் {கர்ணர் குந்தியிடம்}, “போரில் என்னால் துரியோதனனைக் கைவிடமுடியாது. அப்படி நான் செய்தால், அது மதிப்பற்ற, கொடூரமான, நன்றியற்ற செயலாகும்.(28) உன் விருப்பங்களுக்கு நான் சம்மதித்து யுதிஷ்டிரனுடன் அமைதியை ஏற்படுத்திக் கொண்டால், வெண்குதிரைகள் கொண்ட அர்ஜுனனுக்கு நான் அஞ்சிவிட்டதாக மக்கள் பேசுவார்கள்.(29) கேசவனோடு {கிருஷ்ணனோடு} கூடிய அர்ஜுனனைப் போரில் வென்ற பிறகு, நான் தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} அமைதியை ஏற்படுத்திக் கொள்வேன்” என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னார் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம்.(30)
இப்படிச் சொல்லப்பட்ட பிருதை {குந்தி}, அகன்ற மார்பைக் கொண்ட தன் மகனிடம் {கர்ணரிடம்} மீண்டும், “பல்குனனுடன் {அர்ஜுனனோடு} போரிடு, ஆனால் என் மற்ற நான்கு மகன்களையும் விட்டுவிடுவாயாக” என்று கேட்டிருக்கிறாள்[2]. அதற்கு நுண்ணறிவைக் கொண்ட அந்தக் கர்ணர், தன் கரங்களைக் கூப்பித் தன் தாயாரிடம் நடுங்கியவாறே, “உன் மற்ற நான்கு மகன்களையும் நான் என் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தாலும், நிச்சயம் அவர்களைக் கொல்லமாட்டேன். ஓ! தேவி, நீ எப்போதும் ஐந்து மகன்களைக் கொண்டிருப்பாய் என்பதில் ஐயமில்லை. கர்ணன் கொல்லப்பட்டால் அர்ஜுனனோடு ஐவரையும், அர்ஜுனன் கொல்லப்பட்டால் என்னோடு சேர்த்து ஐவரையும் நீ கொண்டிருப்பாய்” என்றிருக்கிறான்.(33) தன் பிள்ளைகளுக்கு நன்மையை வேண்டிய அவனது தாய் {குந்தி}, மீண்டும் அவனிடம், “செல், ஓ! கர்ணா, நீ எப்போதும் யாருக்கு நன்மையை விரும்புவாயோ அந்த உன் சகோதரர்களுக்கு நன்மையைச் செய்வாயாக” என்றிருக்கிறாள்.(34) இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அவனிடம் விடைபெற்றுக் கொண்டு தன் வசிப்பிடத்திற்குத் திரும்பியிருக்கிறாள் {குந்தி}.அந்த வீரர் {கர்ணர்}, உடன் பிறந்த தம்பியால் கொல்லப்படும் அண்ணனாக அர்ஜுனனால் கொல்லப்பட்டிருக்கிறார்.(35) ஓ! தலைவரே {நாரதரே}, பிருதையோ {குந்தியோ}, அவரோ {கர்ணரோ} இந்த இரகசியத்தை ஒருபோதும் வெளியிட்டதில்லை. எனவே, பெரும் வில்லாளியான அவர், போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டார்.(36) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, அதன் பின்பே அவர் என் உடன் பிறந்த அண்ணன் என்பதை நான் அறிய வந்தேன். உண்மையில் பிருதையின் வார்த்தைகளுக்குப் பின்பே, கர்ணர் எங்கள் அனைவருக்கும் மூத்த சகோதரர் என்பதை நான் அறிய வந்தேன்.(37) என் அண்ணனைக் கொல்ல நானே காரணமாக இருந்ததால், என் இதயம் அதிகமாக எரிகிறது. எனக்கு உதவி செய்யக் கர்ணர், அர்ஜுனன் ஆகிய இருவரையும் நான் கொண்டிருந்தால், என்னால் வாசுதேவனையே {கிருஷ்ணனையே} வெல்ல முடியும்.(38) தீய ஆன்மா கொண்ட திருதராஷ்டிரர் மகன்களால் சபைக்கு மத்தியில் நான் கொடுமையை அனுபவித்தபோது, திடீரென என் கோபம் தூண்டப்பட்டாலும், கர்ணரைக் கண்டதும் நான் அமைதியடைந்துவிட்டேன்.(39) எங்களுக்கிடையில் பகடையாட்டம் நடந்தபோது, துரியோதனனுக்கு ஏற்புடையதைச் செய்யும் விருப்பத்தில் கர்ணரே கொடுமை நிறைந்த கடும் வார்த்தைகளைப் பேசியபோதும், அவரை {கர்ணரைக்} கண்டதும் என் கோபம் தணிவடைந்தது. {அப்போது} கர்ணரின் பாதங்கள் எங்கள் தாயாரான குந்தியின் பாதங்களுக்கு ஒப்பாக இருப்பதாக எனக்குத் தெரிந்தது.(40,41) அவருக்கும், எங்கள் தாயாருக்கும் இடையில் உள்ள அந்த ஒற்றுமைக்கான காரணத்தைக் காணும் விருப்பத்தில் நான் நீண்ட நேரம் சிந்தித்திருக்கிறேன்.(42) இவ்வாறு நன்கு முயற்சி செய்தும் என்னால் அக்காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.(42)
உண்மையில், போர்க்காலத்தில் ஏன் அவரது தேர்ச்சக்கரங்களைப் பூமி விழுங்கியது? என் அண்ணன் ஏன் சபிக்கப்பட்டார்? இவை அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(42) ஓ! புனிதமானவரே {நாரதரே}, உம்மிடம் இருந்து அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன். கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தையும், இவ்வுலகில் உள்ள அனைத்தையும் நீர் அறிந்திருக்கிறீர்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(43)
கர்ணன் அடைந்த பிராமணச் சாபம்! – சாந்திபர்வம் பகுதி – 02-துரோணரிடம் சீடனாக இருந்த கர்ணன்; துரோணரிடம் பிரம்மாஸ்திரம் வேண்டியது; துரோணர் மறுத்தது; பிரம்மாஸ்திரம் வேண்டி பரசுராமரிடம் தன் பிறப்பில் பொய்யுரைத்த கர்ணன்; கர்ணனுக்கு நேர்ந்த பிராமணச் சாபம்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பேசுபவர்களில் முதன்மையானவரான தவசி நாரதர், இவ்வாறு கேட்கப்பட்டதும், சூதன் மகன் என்று நம்பப்பட்டவன் {கர்ணன்} (முன் நாட்களில்) எவ்வாறு சபிக்கப்பட்டான் என்பது குறித்த அனைத்தையும் சொல்லத் தொடங்கினார்.(1)
நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. போரில் கர்ணனையும், அர்ஜுனனையும் எதனாலும் தடுக்க முடியாது.(2) ஓ! பாவமற்றவனே, நான் உனக்கு என்ன சொல்லப்போகிறேனோ, அதைத் தேவர்களும் அறியார்கள். ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, முன் நாட்களில் என்ன நடந்தது என்பதைக் குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(3) ஆயுதங்களின் மூலம் க்ஷத்திரியர்கள் அனைவரும் துடைத்தழிக்கப்பட்டு அவர்கள் எவ்வாறு அருள் உலகங்களை அடைய வேண்டும் என்பதே {அப்போது} கேள்வியாக இருந்தது. இதற்காகவே குந்தியின் கன்னிப்பருவத்தில், போரைத் தூண்ட வல்ல ஒரு பிள்ளை அவளிடம் கருத்தரிக்கப்பட்டான்.(4) பெரும் சக்தி கொண்ட அந்தப் பிள்ளை, சூத நிலையை அடைய வேண்டியிருந்தது {சாரதியின் பிள்ளை என்ற நிலையை அடைய வேண்டியிருந்தது}. அதற்கடுத்து அவன் {கர்ணன்}, அங்கீரச குலக்கொழுந்துகளில் முதன்மையான உன் ஆசானிடமே (துரோணரிடம்) ஆயுத அறிவியலை அடைந்தான்.(5)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பீமசேனனின் வலிமையையும், ஆயுதப்பயன்பாட்டில் அர்ஜுனனின் வேகத்தையும், உன் நுண்ணறிவையும், இரட்டையர்களின் {நகுல சகாதேவர்களின்} பணிவையும், இளமைக் காலம் முதலே வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் காண்டீவதாரி {அர்ஜுனன்} ஆகியோருக்குள் ஏற்பட்ட நட்பையும், மக்கள் உங்கள் அனைவரிடமும் கொண்டுள்ள அன்பையும் கண்டு அந்த இளைஞன் {கர்ணன்} பொறாமையில் எரிந்தான்.(6,7) இளமைப் பருவத்திலேயே தற்செயலாகவும், அவனது சொந்த இயல்பின் காரணமாகவும், உங்கள் அனைவரிடமும் அவன் கொண்ட வெறுப்பின் காரணமாகவும் அவன் மன்னன் துரியோதனனுடன் நட்பு பூண்டான்.(8)
தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஆயுத அறிவியலில் அனைவருக்கும் மேம்பட்டவனாக இருப்பதைக் கண்ட கர்ணன், ஒரு நாள் துரோணரைத் தனிமையில் அணுகி, அவரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(9) “நான் அர்ஜுனனுடன் போரிட விரும்புவதால், பிரம்ம ஆயுதத்தை, அதன் மந்திரங்கள் அனைத்துடனும், அதைத் திரும்பப் பெறும் சக்தியுடனும் நான் அறிய விரும்புகிறேன்.(10) உமது சீடர்கள் ஒவ்வொருவரிடம் நீர் கொண்டிருக்கும் அன்பும், உமது சொந்த மகனிடம் {அஸ்வத்தாமரிடம்} நீர் கொண்டிருக்கும் அன்பும் இணையானதே என்பதில் ஐயமில்லை. ஆயுத அறிவியலை அறிந்த திறன்மிக்கவர்கள் அனைவரும், உமது அருளின் மூலம் என்னை ஆயுதங்களில் சாதித்தவனாகக் கருத வேண்டும் என நான் வேண்டுகிறேன்” என்று கேட்டான்.(11)
இவ்வாறு சொல்லப்பட்ட துரோணர், பல்குனன் {அர்ஜுனன்} மீது கொண்ட அன்பினாலும், கர்ணனின் தீய குணம் குறித்து தாம் அறிந்திருந்ததாலும், அவனிடம்,(12) “முறையாக நோன்புகள் அனைத்தையும் நோற்ற ஒரு பிராமணனையோ, கடுந்தவங்களை இயற்றிய ஒரு க்ஷத்திரியனையோ தவிரப் பிரம்மாயுதத்தை வேறு எவராலும் அறிய முடியாது” என்றார்.(13)
துரோணர் இவ்வாறு பதிலளித்ததும், கர்ணன் அவரை வழிபட்டு விடைபெற்றுக் கொண்டு, அப்போது மஹேந்திர மலைகளில் வசித்து வந்த ராமரிடம் {பரசுராமரிடம்} தாமதமில்லாமல் சென்றான்.(14) அந்த ராமரை அணுகி, தலைவணங்கி, அவரிடம் {பரசுராமரிடம்}, “நான் பிருகு குலத்தைச் சேர்ந்த ஒரு பிராமணனாவேன்” என்றான். இஃது அவனுக்குக் கௌரவத்தைப் பெற்றுத் தந்தது.(15) அவனது பிறப்பையும் {குலத்தையும்}, குடும்பத்தையும் இவ்வாறு அறிந்த ராமர், அவனை அன்புடன் வரவேற்கும் வகையில், “நீ வரவேற்கப்படுகிறாய் {உனக்கு நல்வரவு}” என்று சொன்னார். இதன் காரணமாகக் கர்ணன் பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.(16) சொர்க்கத்திற்கு ஒப்பான அந்த மகேந்திர மலையில் வசித்துவந்தபோது, கர்ணன், பல கந்தர்வர்களையும், யக்ஷர்களையும், தேவர்களையும் சந்தித்து அவர்களோடு {நட்புடன்} ஒன்றுகலந்தான்.(17) அங்கே {மஹேந்திர மலையில்} வசித்த அவன் {கர்ணன்}, அனைத்து ஆயுதங்களையும் முறையாக அடைந்து, தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் ராட்சசர்களுக்கு மிகவும் பிடித்தமானவனாக ஆனான்.(18)
ஒருநாள், அவன் அந்த ஆசிரமத்திற்கு அருகே இருந்த கடற்கரையில் திரிந்து கொண்டிருந்தான். உண்மையில் அந்தச் சூரியனின் மகன் {கர்ணன்}, கையில் வில்லுடனும், வாளுடனும் தனியொருவனாகவே உலவித் திரிந்தான்.(19) ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, இவ்வாறு அவன் உலவிக் கொண்டிருந்த போது, அக்னிஹோத்திரச் சடங்கை தினமும் செய்பவரும், பிரம்மத்தை ஓதுபவருமான ஒரு குறிப்பிட்ட மனிதரின் ஹோமத்திற்குரிய மாட்டைத் தனது கவனக்குறைவினாலும், விருப்பமில்லாமலும் {அறியாமையால்} கொன்றுவிட்டான்.(20) கவனக்குறைவினால் செய்துவிட்ட அந்தச் செயலை அவன் அந்தப் பிராமணரிடம் தெரிவித்தான். உண்மையில், {அதன்} உரிமையாளரை மனநிறைவு கொள்ளச்செய்யும் நோக்கில் மீண்டும் மீண்டும் கர்ணன்,(21) “ஓ! புனிதமானவரே, விருப்பமில்லாமலே {அறியாமையால்} இந்த உமது மாட்டை நான் கொன்றுவிட்டேன். இந்தச் செயலை மன்னிப்பீராக” என்று சொன்னான்.(22)
கோபத்தில் நிறைந்த அந்தப் பிராமணர், அவனை நிந்திக்கும் வகையில் இந்த வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! தீய நடத்தை கொண்டவனே, நீ கொல்லப்படத் தகுந்தவனாவாய். ஓ! தீய ஆன்மா {தீய புத்தி} கொண்டவனே, இந்தச் செயலின் கனி உனதாகட்டும்.(23) ஓ! பாவி, எவனை நீ எப்போதும் அறைகூவியழைப்பாயோ எவனுக்காக இந்தநாள் வரை நீ முயற்சி செய்து கொண்டிருக்கிறாயோ, அவனோடு போரிடுகையில் உனது தேர்ச்சக்கரத்தை பூமி விழுங்கட்டும்.(24) அந்தச்சக்கரம் இவ்வாறு பூமியால் விழுங்கப்பட்டதும், திகைப்படைந்திருக்கும் உனது தலையை அந்தப் பகைவன் வெட்டுவான். ஓ! மனிதர்களில் இழிவானவனே, என்னைவிட்டுச் செல்வாயாக.(25) கவனக்குறைவால் என்னுடைய இந்த மாடு உன்னால் எவ்வாறு கொல்லப்பட்டதோ, அவ்வாறே நீ கவனக்குறைவுடன் இருக்கும்போது உன்னுடைய தலையை அவன் கொய்வான்” என்று சபித்தார்.(26)
கர்ணன் இவ்வாறு சபிக்கப்பட்டாலும், அந்தப் பிராமணர்களில் முதன்மையானவருக்குப் பசுக்களையும், செல்வத்தையும், ரத்தினங்களையும் காணிக்கையாக்கி அவரை நிறைவு கொள்ளச் செய்ய முயன்றான். எனினும் அவர், மீண்டும் அவனிடம்,(27) “உலகங்கள் அனைத்தாலும் என்னால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைப் பொய்யாக்க முடியாது. எனவே, நீ செல்வாயாக, அல்லது இருப்பாயாக, அல்லது நீ விரும்பிய எதையும் செய்வாயாக” என்று பதிலளித்தார்.(28) அந்தப் பிராமணரால் இவ்வாறு சொல்லப்பட்ட கர்ணன், உற்சாகம் குறைந்தவனாகத் தன் தலையைத் தொங்கப்போட்டவாறு, மருட்சியுடன் {அச்சத்துடன்} ராமரிடம் {பரசுராமரிடம்} திரும்பி, அக்காரியம் குறித்துச் சிந்திக்கலானான்” என்றார் {நாரதர்}.(29)
தொடையைத் துளைத்த புழு! – சாந்திபர்வம் பகுதி – 03-கர்ணனின் மடியில் தலை வைத்து உறங்கிய பரசுராமர்; கர்ணனின் தொடையைத் துளைத்த புழு; குருதியில் நனைந்து விழித்தெழுந்த பரசுராமர்; பரசுராமரின் கோபத்தால் அப்புழு உயிரை விட்டது; புழுவிலிருந்து வெளிப்பட்ட ராட்சசன்; கர்ணனைச் சபித்த பரசுராமர்; தன் நகரத்திற்குத் திரும்பிய கர்ணன்…
நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “கர்ணனின் கரவலிமை, (பரசுராமரிடம்) அவன் கொண்டிருந்த அன்பு, தற்கட்டுப்பாடு, தன ஆசானுக்கு அவன் செய்த தொண்டுகள் ஆகியவற்றில் அந்தப் பிருகு குலத்தின் புலி {பரசுராமர்} நிறைவு கொண்டார்.(1) தவநேன்புகளை நோற்றவரான ராமர் {பரசுராமர்}, தவம் நோற்ற தன் சீடனுக்கு உரிய வடிவிலான பிரம்ம ஆயுதத்தை, அதன் மந்திரங்களுடனும், அதைத் திரும்ப அழைக்கும் மந்திரங்களுடனும் உற்சாகமாகப் போதித்தார்.(2) அவ்வாயுதத்தைக் குறித்த அறிவை அடைந்த கர்ணன், பிருகுவின் {பிருகு முனிவரின் வாரிசான பரசுராமரின்} ஓய்வில்லத்தில் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான். அற்புத ஆற்றலைக் கொண்ட அவன் {கர்ணன்}, பெரும் ஆவலுடன் தன்னை அந்த ஆயுத அறிவியலுக்கு அர்ப்பணித்துக் கொண்டான்.(3)
ஒரு நாள், பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான ராமர், தம் ஓய்வில்லத்தின் அருகிலேயே கர்ணனுடன் உலவிக் கொண்டிருந்தபோது, தாம் நோற்று வந்த நோன்புகளின் விளைவால் மிகவும் பலவீனமாகத் தம்மை உணர்ந்தார்.(4) களைப்படைந்திருந்த அந்த ஜமதக்னியின் மகன் {ராமர்}, நம்பிக்கையின் விளைவால் அடையப்பட்ட அன்பின் காரணமாகக் கர்ணனின் மடியில் தலை வைத்து நன்றாக உறங்கினார்.(5) அவனது ஆசான் இவ்வாறு அவனுடைய மடியில் (தலைவைத்து) உறங்கிக் கொண்டிருந்தபோது, கடித்தால் பெரும் வலியைத் தரக்கூடியதும், சளி, கொழுப்பு, சதை மற்றும் குருதியை உண்டு வாழக்கூடியதுமான ஒரு பயங்கரமான புழுவானது கர்ணனின் அருகில் வந்தது.(6) குருதி குடிக்கும் அந்தப் புழுவானது, கர்ணனின் தொடையை அணுகி, அதைத் துளைக்கத் தொடங்கியது. (விழித்தெழப் போகும்) தன் ஆசானிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகக் கர்ணன் அந்த விலங்கைத் தூக்கி வீசவோ, கொல்லவோ இல்லை.(7) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் புழுவால் தன் அங்கம் துளைக்கப்பட்டாலும், தன் ஆசான் விழித்துவிடப் போகிறார் என்பதால் அது தன் விருப்பப்படிச் செய்யுமாறு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.(8) வலியானது தாங்கிக் கொள்ள முடியாததாக இருப்பினும், வீரக் கர்ணன் அதைப் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு, கொஞ்சமும் நடுங்கிவிடாதவாறும், வலியின் எந்த அடையாளத்தையும வெளிக்காட்டாமலும், பிருகுவின் மகனை {பரசுராமரைத்} தன் மடியில் தொடர்ந்து தாங்கினான்.(9)
இறுதியில், குருதியானது பெரும் சக்தி கொண்ட ராமரின் உடலைத் தீண்டிய போது, விழித்தெழுந்த அவர், அச்சத்தால் இவ்வார்த்தைகளைச் சொன்னார்,(9) “ஐயோ, நான் தூய்மையற்றவனாக்கப்பட்டேன். நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அச்சமனைத்தையும் விட்டு, இக்காரியத்தில் உண்மை என்ன என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றார்.(11) அப்போது கர்ணன் புழு கடித்துக் கொண்டிருப்பதை அவருக்குத் தெரிவித்தான். பன்றியின் வடிவத்திற்கு ஒப்பான அந்தப் புழுவை ராமர் கண்டார்.(12) அஃது எட்டு கால்களையும், மிகக்கூரிய பற்களையும் கொண்டிருந்தது. மேலும் அஃது ஊசிகளைப் போன்ற முனை கொண்ட தடித்த மயிரால் மறைக்கப்பட்டிருந்தது. அளர்க்கம் என்ற பெயரால் அழைக்கப்படும் அதன் அங்கங்கள் (அச்சத்தால்) சுருங்கிப் போயிருந்தன.(13) ராமர் {பரசுராமர்} தமது கண்களை அதன் மேல் செலுத்தியதும், அந்தப் புழுவானது தான் உறிஞ்சிய குருதியிலேயே உருகி உயிரைவிட்டது. இவையாவும் ஆச்சரியமானவையாகத் தெரிந்தன.(14) அப்போது, கரிய நிறம் கொண்டவனும், சிவந்த கழுத்தைக் கொண்டவனும், விருப்பப்படி எவ்வடிவையும் ஏற்கவல்லவனும், பயங்கர வடிவத்தைக் கொண்டவனுமான ஒரு ராட்சசன் ஆகாய மேகங்களில் நின்று கொண்டிருந்தான்.(15)
தன் நோக்கம் நிறைவேறிய அந்த ராட்சசன், கூப்பிய கரங்களுடன் ராமரிடம் {பரசுராமரிடம்}, “ஓ! தவசிகளில் சிறந்தவரே, இந்நரகில் இருந்து என்னை நீர் மீட்டீர். எனக்கு நன்மையைச் செய்திருக்கும் உம்மை நான் துதிக்கிறேன், நீர் அருளப்பட்டிருப்பீராக” என்றான்.(17)
பெரும் சக்தியையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்டவரான அந்த ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, அவனிடம் {ராட்சசனிடம்}, “யார் நீ? ஏன் நீ நரகில் வீழ்ந்தாய்? இவையனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டார்.(18)
அதற்கு அவன் {ராட்சசன் பரசுராமரிடம்}, “முற்காலத்தில் நான், தம்சன் என்ற பெயரைக் கொண்ட பெரும் அசுரனாக இருந்தேன். ஓ! ஐயா, கிருத யுகத்தில்*, நான் பிருகுவின் வயதைக் கொண்டவனாக இருந்தேன்.(19) அந்தத் தவசியின் {பிருகுவின்} அன்புக்குரிய மனைவியை நான் அபகரித்துச் சென்றேன். அவரது {பிருகுவின்} சாபத்தின் மூலமாக நான் புழுவின் வடிவில் கீழே விழுந்தேன்.(20)
கோபங்கொண்ட உமது அந்த மூதாதை {பிருகு}, “ஓ! இழிந்தவனே, சிறு நீர் மற்றும் சளியை உண்டு, நீ நரக வாழ்வை நோற்பாயாக” என்று சொன்னார். நான் அவரிடம் {பிருகுவிடம்}, “ஓ! பிராமணரே, எப்போது எனது சாபத்திற்கு ஒரு முடிவு ஏற்படும்?” என்று கேட்டான். அதற்கு அவர் {பிருகு} என்னிடம், “என் குலத்தின் ராமன் {பரசுராமன்} மூலமாக இந்தச் சாபத்திற்கு முடிவேற்படும்” என்றார்.(22) இதன் காரணமாகவே நான், தூய்மையற்ற ஆன்மா கொண்டவனைப் போல இத்தகு வாழ்வின் போக்கை அடைந்தேன். ஓ! அறவோரே, எனினும் அந்தப் பாவகரமான வாழ்வில் இருந்து நான் உம்மால் மீட்கப்பட்டு விட்டேன்” என்றான்.(23) இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பேரசுரன், ராமருக்குத் தலைவணங்கிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டான்.
பிறகு கோபம் நிறைந்தவரான ராமர், அந்தக் கர்ணனிடம்,(24) “ஓ! மூடா, இத்தகு வலியை ஒரு பிராமணனால் தாங்கிக் கொள்ள முடியாது. உன் பொறுமையானது ஒரு க்ஷத்திரியனைப் போல இருக்கிறது. அச்சமில்லாமல் எனக்கு உண்மையைச் சொல்வாயாக” என்று கேட்டார்.(25) இவ்வாறு கேட்கப்பட்ட கர்ணன், சாபத்திற்கு அஞ்சியும், அவரை நிறைவு செய்ய வேண்டியும், இந்த வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! பிருகு குலத்தவரே, பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களின் கலப்பில் உண்டான குலத்தில் பிறந்த ஒரு சூதனாக என்னை அறிந்து கொள்வீராக.(26) மக்கள் என்னை ராதையின் மகனான கர்ணன் என்றழைக்கிறார்கள். ஓ! பிருகு குலத்தவரே, ஆயுதங்களை அடையும் விருப்பத்துடன் இவ்வாறு செயல்பட்ட அடியேனிடம் நிறைவு கொள்வீராக.(27) வேதங்கள் மற்றும் பிற அங்கங்களை அறிந்த ஒரு மதிப்புக்குரிய ஆசான் ஒருவனுக்குத் தந்தையுமாவார் என்பதில் ஐயமில்லை. இதன் காரணமாகவே நான் என்னை உமது குலத்தைச் சேர்ந்தவனாக அறிமுகம் செய்து கொண்டேன்” என்றான்.(28)
அந்த முதன்மையான பிருகு குலத்தவர் {பரசுராமர்}, கோபத்தால் நிறைந்திருந்தாலும், உற்சாகமற்றவனாக, நடுங்கிக் கொண்டிருப்பவனாகக் கரங்களைக் கூப்பி, பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த கர்ணனிடம் புன்னகையுடன் {எரிச்சலுடன்}, “ஓ! இழிந்தவனே, ஆயுதங்கள் மீது கொண்ட பேராசையின் காரணமாக நீ பொய்யுரைத்ததால், இந்தப் பிரம்மாயுதம் உன் நினைவில் தங்காது[1].(30) நீ பிராமணனாக இல்லாததால், உனக்குச் சமமான ஒரு போர்வீரனுடன் நீ போரிட்டுக் கொண்டிருக்கும்போது, மரணம் உன்னை நெருங்கும்வரை இஃது உன்னிடம் தங்காது[2].(31) செல்வாயாக, பொய் நடத்தை கொண்டோருக்கான இடம் இஃதல்ல. இந்தப் பூமியில், உனக்கு இணையான எந்த க்ஷத்திரியனும் இருக்க மாட்டான்” என்றார்.(32)ராமரால் {பரசுராமரால்} இவ்வாறு சொல்லப்பட்ட கர்ணன், முறையாக அவரிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றான். பிறகு துரியோதனனின் முன்னிலைக்கு வந்த அவன் {கர்ணன்}, “நான் ஆயுதங்கள் அனைத்தையும் திரட்டிவிட்டேன்” என்று சொன்னான்”.(33)
பானுமதியின் சுயம்வரம்! – சாந்திபர்வம் பகுதி – 04-சுயம்வரத்திற்காகக் கலிங்கத் தலைநகர் ராஜபுரத்திற்குச் சென்ற துரியோதனன்; துரியோதனனைக் கடந்து சென்ற இளவரசி பானுமதி; பலவந்தமாக அந்த இளவரசியைத் தூக்கிச் சென்ற துரியோதனன்; எதிர்த்த மன்னர்கள்; துரியோதனனுக்குத் துணையாக நின்ற கர்ணன்; வெற்றியுடன் ஹஸ்தினாபுரம் திரும்பிய துரியோதனனும், கர்ணனும்..
நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வாறு பிருகு குலத்தைச் சேர்ந்த அவரிடம் {பரசுராமரிடம்} ஆயுதங்களை அடைந்த கர்ணன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, துரியோதனன் துணையுடன் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான்.(1) ஓ! ஏகாதிபதி, ஒரு சமயத்தில், கலிங்க நாட்டை ஆண்ட சித்திராங்கதனின் தலைநகரத்தில்[1] நடந்த சுயம்வரத்திற்குப் பல மன்னர்கள் சென்றனர்.(2) ஓ! பாரதரா, பெருஞ்செல்வச் செழிப்பில் திளைத்த அந்நகரம் ராஜபுரம் என்ற பெயரில் அறியப்பட்டிருந்தது. அந்தக் கன்னிகையின்[2] கரத்தை அடைவதற்காக நூற்றுக்கணக்கான ஆட்சியாளர்கள் அங்கே சென்றனர்.(3) பல்வேறு மன்னர்கள் அங்குக் கூடுவதைக் கேட்ட துரியோதனனும், கர்ணனின் துணையுடன் தனது தங்கத்தேரில் அங்கே சென்றான்.(4)ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, சுயம்வரவிழா தொடங்கியபோது, அந்தக் கன்னிகையின் {பானுமதியின்} கரத்திற்காகப் பல்வேறு ஆட்சியாளர்கள் அங்கே வந்திருந்தனர். அவர்களில் சிசுபாலன், ஜராசந்தன்[3], பீஷ்மகன், வக்ரன், கபோதரோமன், நீலன், உறுதியும் ஆற்றலும் கொண்டவனான ருக்மி,(6) பெண்களின் நாட்டை ஆட்சி செய்த ஸ்ருகாலன்[4], அசோகன் {விசோகன்}, சததந்வன், போஜர்களின் வீர ஆட்சியாளன்[5] ஆகியோரும் இருந்தனர்.(7) இவர்களைத் தவிர்த்து, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தெற்கு நாடுகளில் வசித்த பலர், மிலேச்ச இனக்குழுக்களைச் சேர்ந்த (ஆயுத) ஆசான்கள் பலர், கிழக்கு மற்றும் வடக்கைச் சேர்ந்த பல ஆட்சியாளர்கள் ஆகியோரும் அங்கே வந்திருந்தனர்.(8) அவர்கள் அனைவரும் பசும்பொன்னின் காந்தியைக் கொண்ட தங்க அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். பிரகாசமான உடல்களைக் கொண்ட அவர்கள் கடும் வலிமையைக் கொண்ட புலிகளைப் போல இருந்தனர்.(9)அந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் ஆசனங்களில் அமர்ந்ததும் அந்தக் கன்னிகை {பானுமதி}, தனது செவிலியின் துணையுடனும், அலிகளின் பாதுகாவலுடனும் அரங்கினுள் நுழைந்தாள்.(10) (அவ்வாறு, அவள் {அரங்கை} வலம் வருகையில்) அவளுக்கு மன்னர்களின் பெயர்கள் சொல்லப்பட்டபோது, அழகிய நிறம் கொண்டவளான அந்தக் கன்னிகை, பிறரைக் கடந்து வந்ததைப் போலவே திருதராஷ்டிரன் மகனையும் {துரியோதனனையும்} கடந்து சென்றாள்.(11) எனினும், குருகுலத்தின் துரியோதனனால் இந்தப் புறக்கணிப்பை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மன்னர்கள் அனைவரையும் அவமதிக்கும் வகையில் அவன் {துரியோதனன்}, அந்தக் கன்னிகையை நிற்குமாறு ஆணையிட்டான்.(12) மன்னன் துரியோதனன், சக்தி எனும் செருக்கில் போதை கொண்டும், பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோரை நம்பியும், அந்தக் கன்னிகையைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு {அங்கிருந்து} அவளைப் பலவந்தமாகக் கடத்திச் சென்றான்.(13) ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான கர்ணன், வாளைத் தரித்துக் கொண்டும், கவசத்தைப் பூண்டு கொண்டும், தன் விரல்களில் தோலுரைகளைப் பூட்டிக் கொண்டும், துரியோதனனின் பின்புறத்தில் தன் தேரைச் செலுத்திக் கொண்டு சென்றான்.(14)
போரிடும் விருப்பத்தால் தூண்டப்பட்ட மன்னர்கள் அனைவருக்கும் மத்தியில் பேராரவாரம் எழுந்தது. “கவசத்தைப் பூட்டிக் கொள்வீராக”, “தேர்களை ஆயத்தம் செய்வீராக” (இவையே அங்கே கேட்கப்பட்ட ஒலிகளாகும்).(15) கோபத்தால் நிறைந்த அவர்கள், இரண்டு மலைகளின் மீது மழையைப் பொழியும் மேகத்திரள்களைப் போலக் கர்ணன் மற்றும் துரியோதனன் மீது தங்கள் கணைமாரியைப் பொழிந்து, அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(16) இவ்வாறு அவர்கள் பின்தொடர்ந்து சென்றபோது, கர்ணன் அவர்களது விற்களையும், கணைகளையும் ஒரே கணையால் தரையில் வீழ்த்தினான்.(17) அவர்களில் சிலர் விற்களற்றவர்களாகவும், சிலர் கையில் வில்லுடனும் விரைந்தனர். சிலர் தங்கள் கணைகளை ஏவும் தருவாயிலும், சிலர் ஈட்டிகள் மற்றும் கதாயுதங்களைத் தரித்துக் கொண்டும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(18)
பெருங்கரநளினத்தைக் கொண்டவனும், தாக்குபவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான கர்ணன், அவர்கள் அனைவரையும் பீடித்தான். அவன், மன்னர்கள் பலரையும், தங்கள் சாரதிகளை இழக்கச் செய்தான். இவ்வாறே அந்தப் பூமியின் தலைவர்களை அவன் வென்றான்.(19) பிறகு அவர்கள், தங்கள் குதிரைகளின் கடிவாளங்களைத் தாங்களே எடுத்துக் கொண்டு, “ஓடு, ஓடு” என்று சொல்லி, உற்சாகமற்ற இதயங்களுடன் போரில் இருந்து திரும்பினார்கள்.(20) கர்ணனால் பாதுகாக்கப்பட்ட துரியோதனனும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} அந்தக் கன்னிகையை {பானுமதியைக்} கொண்டு வந்தான்” என்றார் {நாரதர்}.(21)
ஜராசந்தனின் நட்பு! – சாந்திபர்வம் பகுதி – 05-கர்ணனை எதிர்த்த ஜராசந்தன்; ஜராசந்தனைப் பிளக்க ஆயத்தமான கர்ணன்; கர்ணனின் தோழமையை வேண்டி அவனுக்கு மாலினி என்ற நகரத்தைக் கொடுத்த ஜராசந்தன்; கர்ணனின் மரணத்துக்கான காரணங்கள்…
நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “மகதர்களின் ஆட்சியாளனான மன்னன் ஜராசந்தன், கர்ணனின் வலிமை குறித்த புகழைக் கேட்டு அவனோடு தனிப்போரில் ஈடுபட அவனை அறைகூவி அழைத்தான்.(1) தெய்வீக ஆயுதங்களை அறிந்தவர்களான அவர்கள் இருவருக்கிடையில் ஒரு கடும்போர் நடந்தது. அதில் அவர்கள் பல்வேறு வகை ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கினர்.(2) இறுதியாக அவர்களது கணைகள் தீர்ந்து, விற்களும், வாள்களும் உடைந்து, அவர்கள் இருவரும் தேரற்றவர்கள் ஆன பிறகு, வலிமைமிக்கவர்களான அவர்கள் வெறுங்கரங்களால் போரிடத் தொடங்கினர். தன் எதிராளியுடன் வெறுங்கரங்களால் தனிப்போரில் {மற்போரில்} ஈடுபட்ட கர்ணன், ஜரையால் ஒருங்கிணைக்கப்பட்ட அவனது {ஜராசந்தனின்} உடலை இரண்டாகப் பிளக்கஆயத்தமானான்[1].(4)அப்போது அந்த (மகத) மன்னன் {ஜராசந்தன்}, பெரும் வலியை உணர்ந்து, பகைமைக்கான விருப்பம் அனைத்தையும் கைவிட்டு, கர்ணனிடம், “நான் நிறைவடைந்தேன்” என்று சொன்னான்.(5) பிறகு நட்பின் நிமித்தம் அவன் {ஜராசந்தன்} மாலினி என்ற நகரத்தை கர்ணனுக்கு அளித்தான். அதற்கு முன்புவரை, எதிரிகள் அனைவரையும் அடக்குபவனான அந்த மனிதர்களில் புலி (கர்ணன்) அங்கத்திற்கு (அங்க நாட்டிற்கு) மட்டுமே மன்னனாக இருந்தான். ஆனால் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பகைவரின் படையைக் கலங்கடிப்பவனா அவன் {கர்ணன்}, நீ அறிந்திருப்பதைப் போலவே, துரியோதனனின் விருப்பத்திற்கு ஏற்றபடி, சம்பையிலிருந்தும்[2] ஆளத் தொடங்கினான்.(7)இவ்வாறு கர்ணன் தன் கரங்களின் ஆற்றலால் பூமியில் புகழ்பெற்றவனாகத் திகழ்ந்தான். தேவர்களின் தலைவன் {இந்திரன்}, உன் நன்மைக்காக அவனது (இயற்கை) கவசத்தையும், காது குண்டலங்களையும் கேட்ட போது,(8) தெய்வீக மாயையால் திகைப்படைந்த அவன், தன் மதிப்புமிக்க உடைமைகளான அவற்றை {இந்திரனிடம்} கொடுத்துவிட்டான்.(9) காதுகுண்டலங்களை இழந்தவனும், இயற்கைக் கவசத்தை இழந்தவனுமான அவன் {கர்ணன்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வைத்து அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(10)
பிராமணனின் சாபம், சிறப்புமிக்க ராமரின் சாபம், குந்திக்கு அளித்திருந்த வரம், இந்திரனால் அவனிடம் எற்படுத்தப்பட்ட மாயை,(11) ரதர்கள் மற்றும் அதிரதர்களைக் கணக்கெடுக்கும்போது, பீஷ்மரால் அரைத் தேர்வீரன் என்று சொல்லப்பட்டதால் உண்டான மனத்தளர்ச்சி, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} கொள்கை மூலமாகச் சல்லியனால் (சல்லியனின் கூரிய பேச்சுகளால்) தன் சக்திக்கு உண்டான அழிவு,(12) இறுதியாக, ருத்திரன், இந்திரன், யமன், வருணன், குபேரன், துரோணர், சிறப்புமிக்கக் கிருபர் ஆகியோரிடம் அர்ஜுனன் அடைந்திருந்த தெய்வீக ஆயுதங்கள் ஆகியவற்றாலேயே(13) சூரியப்பிரகாசம் கொண்ட அந்த விகர்த்தனன் மகனை {கர்ணனை} அந்தக் காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} கொல்ல முடிந்தது.(14) இவ்வாறு உன் அண்ணன் {கர்ணன்}, பலரால் சபிக்கவும் வஞ்சிக்கவும் பட்டான். எனினும், அந்த மனிதர்களில் புலி {கர்ணன்} போரில் வீழ்ந்துவிட்டதால், இனியும் நீ அவனுக்காக வருந்தலாகாது” என்றார் {நாரதர்}”.(15)
பெண்களைச் சபித்த யுதிஷ்டிரன்! – சாந்திபர்வம் பகுதி – 06-யுதிஷ்டிரின் சோகத்தைக் கண்டு அவனைத் தேற்றிய குந்தி; குந்தியின் பிழையால் உலகத்தின் பெண்கள் அனைவரையும் சபித்த யுதிஷ்டிரன்; உறவினர்களின் மரணத்தை எண்ணி மனத்தளர்ச்சியடைந்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தெய்வீக முனிவரான நாரதர் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தார். அரசமுனியான யுதிஷ்டிரன், துயரால் நிறைந்து, தியானத்தில் மூழ்கினான்.(1) உற்சாகமற்று, கவலையில் மூழ்கி, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு, கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்த(2) அவ்வீரனை {யுதிஷ்டிரனைக்} கண்ட குந்தி, தானே துயரில் மூழ்கியவளாக, கவலையில் கிட்டத்தட்ட தன் உணர்வுகளை இழந்தவளாக, அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தவையும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையுமான இந்த இனிய வார்த்தைகளைக் கொண்டு அவனிடம் பேசினாள்:(3) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, நீ இத்தகு கவலையில் மூழ்குவது உனக்குத் தகாது. ஓ! பெரும் ஞானியே, இந்த உன் கவலையைக் கொன்று, நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.(4) கர்ணனை, உன்னுடனான சகோதரத்துவத்தை ஏற்கும்படி செய்யக் கடந்த காலங்களில் நான் முயற்சி செய்தேன். ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவனே, தேவன் சூரியனும் அதையே செய்தார்.(5)
அந்தத் தேவன் {சூரியன்}, நலன் விரும்பும் ஒரு நண்பன், ஒருவனுக்கான நன்மையை விரும்பி சொல்லக்கூடியவை அனைத்தையும் கர்ணனிடம் கனவிலும், மீண்டும் ஒரு முறை என் முன்னிலையிலும் சொன்னார்.(6) சூரியனாலோ, என்னாலோ, துன்புறுத்தியோ {பாசத்தாலோ}, காரணங்களாலோ {உண்மைகளாலோ}, அவனைத் தணிப்பதிலோ, உன்னோடு அவனை ஒன்றிணைக்கச் செய்வதிலோ வெற்றி பெற முடியவில்லை[1].(7) அவன், காலத்தின் ஆளுகைக்கு உட்பட்டு, உன்னுடனான பகைமையை வெளிக்காட்டுவதில் உறுதியடைந்தான். உங்கள் அனைவருக்கும் தீங்கிழைப்பதிலேயே அவன் முனைந்து கொண்டிருந்ததால், நான் என் முயற்சியைக் கைவிட்டேன்” என்றாள்.(8)இவ்வாறு தன் தாயால் சொல்லப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், கண்ணீர் நிறைந்த கண்களுடனும், துயரால் கலக்கமடைந்த இதயத்துடனும், இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(9) “உன் ஆலோசனைகளை நீ மறைத்ததன் விளைவால், இந்தப் பெருந்துன்பம் என்னை அடைந்தது” {என்று சொன்னான்}. பெருஞ்சக்தியைக் கொண்டவனும் நீதிமானுமான அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, “இதுமுதல் எந்தப் பெண்ணும் இரகசியம் காப்பதில் வெல்லமாட்டாள்” என்று சொல்லி உலகத்தின் பெண்கள் அனைவரையும் சபித்தான்.(10) பிறகு அந்த மன்னன், தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை நினைவுகூர்ந்து துயராலும், கவலையாலும் நிறைந்தான்.(11) கவலையால் பீடிக்கப்பட்டவனும், புகையால் மறைக்கப்பட்ட நெருப்புக்கு ஒப்பானவனுமான அந்த நுண்ணறிவு கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்} இவ்வாறு மனத்தளர்ச்சியை அடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(12)
காட்டுக்குச் செல்லப்போகிறேன்! – சாந்திபர்வம் பகுதி – 07-உறவினர்களின் அழிவை எண்ணி மனம்வருந்திய யுதிஷ்டிரன்; தந்தையும், தாயும் என்ன நினைப்பில் துன்பப்பட்டுப் பிள்ளைகளை வளர்க்கின்றனர் என்பதைச் சொல்வது; அப்படிப்பட்ட பிள்ளைகளைக் கொன்றதால் அவர்களின் பெற்றோர் கைவிடப்பட்டு அவல நிலையை அடைந்ததைச் சொல்வது; இந்தப் பாங்களுக்குத் தானே காரணமென்பதால் காட்டுக்குச் செல்லப்போவதாகச் சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அற ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன் கலங்கிய இதயத்துடன், சோகத்தில் எரிந்து, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனுக்காகத் துயருறத் தொடங்கினான்.(1) மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்ட அவன், அர்ஜுனனிடம், “ஓ! அர்ஜுனா, நாம் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் நகரங்களில் பிச்சையெடுத்து வாழ்ந்திருந்தாலும், நம் உறவினர்களை இழந்த இந்தப் பரிதாப நிலையை அடைந்திருக்கமாட்டோம்.(2,3) நம் எதிரிகளான குருக்கள் செழிப்பையீட்டியிருக்கும் அதே வேளையில் நாம் நம் வாழ்வின் பொருட்கள் அனைத்தையும் இழந்திருக்கிறோம். {நம்மை நாமே கொன்று} தற்கொலை செய்து கொண்ட குற்றம் நமதாயிருக்கும்போது அறத்தின் எக்கனிகள் நமதாயிருக்கக்கூடும்[1]?(4) இந்தப் பேரிடரில் நாம் மூழ்கியிருப்பதால், க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு ஐயோ, வலிமை மற்றும் வீரத்திற்கு ஐயோ.(5)மன்னிக்கும் தன்மை, தற்கட்டுப்பாடு, தூய்மை, காட்டில் வாழும் துறவியரால் நோற்கப்படும் துறவு, பணிவு, தீங்கிழையாமை, அனைத்து சந்தர்ப்பங்களிலும் உண்மைநிறைந்த பேச்சு ஆகியனவே அருளப்பட்டவையாகும் {அறங்களாகும்}.(6) எனினும் நாம், செருக்காலும், ஆணவத்தாலும் நிறைந்து, பேராசை மற்றும் மடமையின் மூலமும், அரசுரிமையின் இனிமைகளை அனுபவிக்கும் விருப்பத்தினாலும் இந்த அவலநிலையில் விழுந்துவிட்டும்.(7) உலகின் அரசுரிமையை அடைய விரும்பிய நம் உறவினர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டதை நாம் கண்டது, மூவுலகங்களின் அரசுரிமையைக் கொடுத்தாலும் எவனாலும் நம்மை மகிழ்விக்க முடியாது என்ற அளவுக்குத் துயரமானதாகும்.(8) ஐயோ, பூமியின் நிமித்தமாக, நம்மால் கொல்லத்தகாத பூமியின் தலைவர்களைக் கொன்று, நண்பர்களை இழந்து, வாழ்வின் நோக்கத்தை இழந்து இருப்பின் சுமையை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம்.(9) இறைச்சித்துண்டிற்காகச் சண்டையிடும் நாய்க்கூட்டத்துக்கு நேர்வது போன்று நம்மை இந்தப் பேரழிவு மூழ்கடித்தது. அந்த இறைச்சித் துண்டு இனியும் நமது விருப்பத்திற்குரியதல்ல. மறுபுறம், அதை வீசியெறிந்துவிடலாம்.(10)
மொத்த உலகத்திற்காகவோ, தங்கமலைகளுக்காகவோ, இந்த உலகத்தில் உள்ள குதிரைகள் மற்றும் பசுக்கள் அனைத்தின் நிமித்தமாகவோ கூட இப்போது கொல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கக்கூடாது.(11) பொறாமையில் நிறைந்தவர்களும், உலகப் பொருட்கள் அனைத்திலும் பேராவல் கொண்டவர்களும், கோபம் மற்றும் இன்பத்திற்கு வசப்பட்டவர்களுமான அவர்கள் அனைவரும், மரணமெனும் நெடுஞ்சாலையில் நடந்து, யமலோகத்தை அடைந்துவிட்டனர்.(12) தவம், பிரம்மச்சரியம், உண்மை, துறவு ஆகியவற்றைப் பயிலும் தந்தைமார், அனைத்து வகையான செழிப்புடன் கூடிய மகன்களை அடைய விரும்புகின்றனர்.(13) அதேபோலவே, உண்ணாநோன்புகள், வேள்விகள், விரதங்கள், புனிதச் சடங்குகள், மங்கல காரியங்கள் ஆகியவற்றின் மூலம் தாய்மாரும் கருத்தரிக்கின்றனர். பிறகு அவர்கள் அந்தக் கருவைப் பத்து மாதங்கள் சுமக்கின்றனர்.(14) கனியின் எதிர்பார்பார்ப்பில் பேரிடரில் தங்கள் காலத்தைக் கடத்தும் அவர்கள், தங்களுக்குள், “இந்தக் கருவை பாதுகாப்பாக ஈன்றெடுப்போமா? பிறப்புக்குப் பிறகு இவை வாழுமா? வலிமையில் வளர்ந்து இவர்கள் பூமியில் மரியாதைக்குரியவர்களாக இருப்பார்களா? இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் இவர்களால் நமக்கு இன்பத்தை அளிக்க முடியுமா?” என்று கேட்டுக் கொள்கின்றனர்.(15)
{அப்படிப்பட்ட அந்தப் பெற்றோர்}, ஐயோ, வயதால் இளைமை நிரம்பியவர்களும், காது குண்டலங்களுடன் பிரகாசமாக இருந்தவர்களுமான தங்கள் மகன்கள் கொல்லப்பட்டு, தங்கள் எதிர்பார்ப்புகள் கனியற்றுப் போன அவர்கள் {இப்போது} கைவிடப்பட்ட நிலையை அடைந்திருக்கின்றனர்.(16) இவ்வுலகத்தில் இன்பத்தை அனுபவிக்காமல், தங்கள் தந்தைமாருக்கும், தேவர்களுக்கும் தாங்கள் பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் அவர்கள் {அந்தப் பிள்ளைகள்} யமலோகம் சென்றுவிட்டனர்.(17) ஐயோ, ஓ! தாயே, அந்த மன்னர்களின் வலிமை மற்றும் செல்வத்தின் கனிகளை அறுவடை செய்ய அவர்களின் பெற்றோர் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்[2].(18) அவர்கள் எப்போதும் பொறாமை நிறைந்தவர்களாகவும், உலகப் பொருட்களில் பேராவல் கொண்டவர்களாகவும், கோபம் மற்றும் இன்பத்தின் வசப்பட்டவர்களாகவும் இருந்தனர். இதன் காரணமாக அவர்களால் வெற்றியின் கனிகளை எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும் அனுபவிக்க முடியாமல் போனது.(19) (இந்தப் போரில்) பாஞ்சாலர்கள் மற்றும் குருக்களில் வீழ்ந்து தொலைந்தவர்கள், அல்லது கொல்லப்பட்டவர்கள் அனைவரும், அவர்களது அந்தச் செயலால் அருள் உலகங்களை அடைந்திருக்கூடும் என்று நான் நினைக்கிறேன்[3].(20)உலகத்தின் அழிவுக்குக் காரணமாக நாம் கருதப்படுகிறோம். எனினும், உண்மையில் இந்தக் குற்றம் திருதராஷ்டிரரின் மகன்களின் மீதே சுமத்தப்பட வேண்டும்.(21) துரியோதனன் எப்போதும் தன் இதயத்தை வஞ்சனையிலேயே நிலைக்கச் செய்திருந்தான். எப்போதும் கெடுநோக்கை வளர்த்த அவன் {துரியோதனன்}, வஞ்சனைக்கே அடிமையாக இருந்தான். நாம் அவனுக்கு ஒருபோதும் தீங்கிழைக்காமல் இருந்த போதும், அவன் நம்மிடம் பொய் நடத்தையுடனே நடந்து கொண்டான்.(22) நாமும் நமது நோக்கை அடையவில்லை, அவர்களும் அவர்களுடைய நோக்கை அடையவில்லை. நாமும் அவர்களை வெல்லவில்லை, அவர்களும் நம்மை வெல்லவில்லை. தார்தராஷ்டிரர்கள் இந்தப் பூமியை அனுபவிக்கவில்லை, பெண்களையும், இசையையும் அனுபவிக்கவில்லை.(23) அவர்கள், தங்கள் மந்திரிகள், நண்பர்கள் மற்றும் சாத்திரங்களைக் கற்றோரின் ஆலோசனைகளைக் கேட்கவில்லை. உண்மையில், அவர்களால், தங்கள் விலைமதிப்புமிக்க ரத்தினங்களையும், நன்கு நிறைக்கப்பட்ட கருவூலத்தையும், பரந்த ஆட்சிப் பகுதிகளையும் அனுபவிக்க முடியவில்லை.(24) தங்கள் வெறுப்பால் நம்மை எரித்த அவர்களால் இன்பத்தையோ, அமைதியையோ அடையமுடியவில்லை. நம் செல்வாக்குப் பெருகுவதைக் கண்ட துரியோதனன் நிறமற்றவனாக, வாடிப்போனவனாக, மெலிவடைந்தான்.(25)
பாசம் நிறைந்த ஒரு தந்தையாக, திருதராஷ்டிரர் தம் மகனின் தீய கொள்கைகளைப் பொறுத்து வந்தார்.(26) விதுரர் மற்றும் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} ஆகியோரை அலட்சியம் செய்து, ஆசைகளாலேயே ஆளப்பட்டவனும், பேராசை கொண்டவனுமான தமது தீய மகனைத் {துரியோதனனைத்} தடுக்காமல் புறக்கணித்ததன் விளைவாக மன்னரும் என்னைப் போலவே அழிவைச் சந்தித்தார் என்பதில் ஐயமில்லை.(27) சுயோதனன், தன் உடன்பிறந்த தம்பிகள் கொல்லப்படக் காரணமாக அமைந்தும், எப்போதும் பாவம் நிறைந்த இதயத்துடனேயே இருந்து, நம் மீது கொண்ட வெறுப்பால் எரிந்து, இந்த முதிர்ந்த தம்பதியரைத் துயரில் எரியவிட்டுவிட்டான். உயர் பிறப்புக் கொண்ட வேறு எந்த உறவினன், போரின் மீது கொண்ட விருப்பத்தால், கிருஷ்ணனின் முன்னிலையில், அத்தகு வார்த்தைகளை உறவினர்களிடம் பேச முடியும்?(29) சுற்றிலும் இருக்கும் அனைத்தையும் தம் சொந்த சக்தியால் எரிக்கும் சூரியர்களைப் போல, நாமும், துரியோதனனின் குற்றத்தின் மூலம் அழிவின்மையை இழந்துவிட்டோம்[4].(30)தீய ஆன்மா கொண்டவனும், பொல்லாதவனும், பகைமையின் வடிவமுமான அவனே நமது தீய நட்சத்திரமானான். ஐயோ, அந்தத் துரியோதனனின் செயல்களால் மட்டுமே நமது குலம் நிர்மூலமாக்கப்பட்டது.(31) கொல்லத்தகாதவர்களைக் கொன்று நாம் உலகத்தின் நிந்தனையை அடைந்தோம்.(32) மன்னர் திருதராஷ்டிரர், தீய ஆன்மா கொண்டவனும், பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவனும், குலத்தை அழிப்பவனுமான அந்த இளவரசனை {துரியோதனனை} அரசுரிமையில் நிறுவியதால், இன்று இந்தத் துயரத்தை அடைந்திருக்கிறார்.(33) வீரர்களான நம் எதிரிகள் கொல்லப்பட்டனர். நாம் பாவம் இழைத்துவிட்டோம். அவனது உடைமைகளும், நாடும் தொலைந்து போயின. அவர்களைக் கொன்று நமது கோபம் தணிவடைந்திருக்கிறது. ஆனால் துயரமான என்னைத் திகைப்படையச் செய்கிறது.(34) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, இழைக்கப்பட்ட பாவமானது, அனைத்தையும் துறந்து தீர்த்தங்களுக்குப் பயணிப்பது, சாத்திரங்களைத் தொடர்ந்து தியானிப்பது போன்ற மங்கலச் செயல்களால் நிவர்த்திச் செய்யப்படுகிறது. இவை யாவற்றிலும், துறவை பயில்பவன், புதிய பாவங்களை இழைப்பதில்லை என்று நம்பப்படுகிறது.(35)
நிலைத்த ஆன்மாவுடன் துறவை பயில்பவன், பிறப்பு மற்றும் இறப்பிலிருந்து தப்பித்து, சரியான சாலையை அடைந்து, பிரம்மத்தை அடைகிறான் என்று சுருதிகள் அறிவிக்கின்றன.(36) எனவே, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, ஓ! எதிரிகளை எரிப்பவனே, நான் உங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் அலட்சியம் செய்து, எண்ணங்களை வெளியிடாப் பேசா நோன்பைப் பின்பற்றி, அறிவு சுட்டிக் காட்டும் பாதையில் நடக்கப் போகிறேன்[5].(37) ஓ! எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, சுருதிகள் இதையே சொல்கின்றன. இப்பூமியில் பற்றுக் கொண்ட ஒருவன், எந்த வகை அறத் தகுதியையும் {புண்ணியத்தையும்} ஒரு போதும் அடைவதில்லை என்பதை நானும் கண்டுவருகிறேன்.(38) இந்தப் பூமியின் பொருட்களை அடையும் என் விருப்பத்தின் மூலம், நான் பாவத்தை இழைத்திருக்கிறேன். எது, பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைக் கொண்டு வருகிறது எனச் சுருதிகள் அறிவிக்கின்றனவோ, அந்தப் பாவத்தையே, இந்தப் பூமியின் பொருட்கள் மீது கொண்ட விருப்பத்தால் நானும் இழைத்திருக்கிறேன். எனவே, நான் என் மொத்த நாட்டையும், இந்தப் பூமியின் பொருட்களையும் கைவிட்டு, இவ்வுலகப் பற்றில் இருந்து தப்பி, துன்பத்தில் இருந்து விடுபட்டு, எப்பொருளிலும் விருப்பமில்லாதவனாகக் காட்டுக்குச் செல்லப் போகிறேன்.(40) அமைதி மீட்கப்பட்டதும், முட்கள் அனைத்தும் களையப்பட்டதுமான இந்தப் பூமியை நீ ஆள்வாயாக[6]. ஓ! குருகுலத்தில் சிறந்தவனே {அர்ஜுனா}, எனக்கு நாட்டிற்கான, அல்லது இன்பத்திற்கான எந்தத் தேவையும் இல்லை” என்றான் {யுதிஷ்டிரன்}.(41) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இந்த வார்த்தைகளைச் சொல்லி நிறுத்திக் கொண்டான். பிறகு அவனது தம்பியான அர்ஜுனன் பின்வரும் வார்த்தைகளை அவனிடம் பேசினான்” {என்றார் வைசம்பாயனர்}.(42)
பெருஞ்சீற்றமடைந்த அர்ஜுனன்! – சாந்திபர்வம் பகுதி – 08-துறவறத்தை ஏற்கப்போவதாகச் சொன்ன யுதிஷ்டிரனை நிந்தித்த அர்ஜுனன்; செல்வத்தின் பெருமை, தேவர்களின் நடைமுறை, மன்னர்களின் கடமை ஆகியவற்றைச் சொன்னது; குதிரைவேள்வி செய்யுமாறு யுதிஷ்டிரனை வற்புறுத்தியது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கூரிய பேச்சு, ஆற்றல் மற்றும் சக்தியைக் கொண்ட அர்ஜுனன், அவமதிப்பை மன்னிக்க விரும்பாத ஒரு மனிதனைப் போல, தன் கடைவாயை நாவால் நனைத்துக் கொண்டு, பெருஞ்சீற்றத்தை வெளிக்காட்டியபடியே, முக்கியத்துவம் வாய்ந்த இந்த வார்த்தைகளைப் புன்னகையுடன் சொன்னான்:(1,2)
{அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம்}, “ஓ! இஃது எவ்வளவு வலிநிறைந்ததாக இருக்கிறது? எவ்வளவு துயரைத் தருவதாக இருக்கிறது? மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனையைச் செய்துவிட்டு, இந்தப் பெருஞ்செழிப்பைக் கைவிட நினைப்பதால், உமது இதயத்தில் உள்ள இந்தப் பெருங்கலக்கத்தைக் கண்டு நான் வருந்துகிறேன்.(3) உமது எதிரிகளைக் கொன்று, உமது {க்ஷத்திரிய} வகைக்கான கடமையை நோற்றதன் மூலம், பூமியின் அரசுரிமையை அடைந்த பிறகு, உமது இதயத்தின் நிலையின்மையால், நீர் அடைந்த அனைத்தையும் ஏன் நீர் கைவிட வேண்டும்?(4) ஓர் அலியோ, எதிலும் தாமதம் செய்பவனோ இந்தப் பூமியில் அரசுரிமையை எங்கேயாவது, எப்போதாவது அடைந்திருக்கிறானா? பிறகு, சினத்தால் உணர்வை இழந்த நீர், ஏன் பூமியின் மன்னர்கள் அனைவரையும் கொன்றீர்?(5)
பிச்சையெடுத்து வாழும் ஒருவனால் எப்போதும் தன் எந்தச் செயலாலும், பூமியில் நல்ல பொருட்களை அனுபவிக்க முடியாது. செழிப்பை இழந்து, எந்த வளமும் அற்றவனான அவனால் ஒருபோதும் பூமியில் புகழை வெல்லவோ, மகன்கள் மற்றும் விலங்குகளை அடையவோ முடியாது.(6) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பெருகும் இந்த நாட்டைக் கைவிட்டு, நீர் துறவியின் அற்ப வாழ்வை வாழ்ந்தால், இந்த உலகம் உம்மைப் பற்றி என்ன சொல்லும்?(7) பூமியின் நல்ல பொருட்கள் அனைத்தையும் கைவிட்டு, செழிப்பை இழந்து, வளமற்ற இழிந்த மனிதனைப் போலப் பிச்சையெடுத்து வாழும் வாழ்வை நோற்கப் போவதாக நீர் ஏன் சொல்கிறீர்?(8) நீர் மன்னர்களின் இந்தக் குலத்தில் பிறந்திருக்கிறீர். படையெடுத்து மொத்த பூமியையும் வென்ற பிறகு, அறம், பொருள் சம்பந்தமான அனைத்தையும் கைவிட்டுக் காட்டில் வாழ விரும்புவது உமது மடமையே.(9) (நீர் காட்டுக்கு ஓய்ந்து சென்றால்), நீர் இல்லாத போது, வஞ்சகர்கள் வேள்விகளை அழிப்பார்கள். அந்தப் பாவம் நிச்சயம் உம்மைக் களங்கப்படுத்தும்.(20)
மன்னன் நகுஷன் {நஹுஷன்} ஏழ்மை நிலையில் தீய செயல்கள் பலவற்றைச் செய்துவிட்டு, அந்நிலை நிந்திக்கத்தக்கது என்று கதறி, ஏழ்மையானது தனித்து ஒதுங்கி துறவியாக வாழ்பவர்களுக்கானதே என்று சொன்னான்[1].(11) நாளைக்கென்று எந்த ஏற்பாட்டையும் செய்து கொள்ளாதது, முனிவர்களுக்குத் தகுந்த நடைமுறையாகும். இதை நீர் நன்கறிவீர். எனினும், அரச அறம் என்று சொல்லப்படுவது முற்றிலும் செல்வத்தை நம்பியே இருக்கிறது.(12) மற்றொருவனிடம் இருந்து செல்வத்தைத் திருடும் ஒருவன், அவனிடம் இருந்து அறத்தையும் சேர்த்தே திருடுகிறான்[2]. எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நம்மைக் கொள்ளையிட்ட ஒரு செயலை நம்மில் எவரால் மன்னிக்க முடியும்?(13) ஏழையானவன் அருகில் இருந்தாலும், பொய்யாகக் குற்றஞ்சாட்டப்படுகிறான்[3]. ஏழ்மை என்பது பாவம் நிறைந்த ஒரு நிலையாகும். எனவே, ஏழ்மையைப் புகழ்வது உமக்குத் தகாது.(14) ஓ! மன்னா, {அறம் வழுவி} வீழ்ந்து விட்ட ஒரு மனிதன், ஏழையைப் போலவே வருந்துகிறான். வீழ்ந்துவிட்ட ஒரு மனிதனுக்கும், ஓர் ஏழைக்கும் இடையில் என்னால் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை.(15)தகுதிவாய்ந்த அனைத்து வகைச் செயல்களும், மலையில் இருந்து பாய்வது போல, பெருஞ்செல்வத்தில் இருந்தே உண்டாகின்றன.(16) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, செல்வத்திலிருந்தே அனைத்து அறச்செயல்களும், அனைத்து இன்பங்களும், சொர்க்கமும் எழுகின்றன. செல்வம் இல்லாமல் ஒரு மனிதனால், தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ளும் வழிமுறைகளையே கூடக் கண்டறிய முடியாது.(17) கோடை காலத்தில் நீர் வற்றிய ஆழமற்ற ஓடைகளைப் போல, சிறுமதி கொண்டோன் ஒருவன், தன் செயல்களால், தனது செல்வத்தை இழக்கும் நிலையை அடைகிறான்.(18)
செல்வம் கொண்டவனே நண்பர்களைக் கொண்டவனாவான். செல்வம் கொண்டவன் உறவினர்களையும் கொண்டவனாவான். செல்வம் கொண்டவனே உண்மையான மனிதனாக இவ்வுலகில் கருதப்படுகிறான். செல்வம் கொண்டவன் எவனோ, அவனே கல்விமானாகவும் கருதப்படுகிறான்.(19) செல்வமற்ற ஒருவன் எந்தக் குறிப்பிட்ட நோக்கத்தையாவது அடைய விரும்பினால், அவன் தோல்வியையே சந்திக்கிறான். யானைகள், காட்டு யானைகளைக் கைப்பற்றுவதைப் போல, செல்வமே, செல்வத்தைப் பெருக வைக்கவும் செய்கிறது.(20)
ஓ! மன்னா {யுதிஷ்டிரரே} அறச்செயல்கள், இன்பங்கள், மகிழ்ச்சி, துணிவு, கோபம், கல்வி, கௌரவம் ஆகிய அனைத்தும் செல்வத்தில் இருந்தே உண்டாகின்றன.(21) செல்வத்தாலேயே ஒருவன் குடும்பக் கௌரவத்தையும் அடைகிறான். செல்வத்தாலேயே ஒருவனின் அறத்தகுதிகள் பெருகுகின்றன. ஓ! மனிதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, செல்வமில்லாதவனுக்கு இவ்வுலகமோ, மறு உலகமோ கிடையாது.(22) மலையிலிருந்து ஊற்றெடுக்கும் ஆறுகளைப் போல, செல்வத்தில் இருந்தே அறச்செயல்கள் ஊற்றெடுப்பதால், செல்வமில்லாத மனிதன் அறச்செயல்களைச் செய்வதில் வெல்வதில்லை.(23) குதிரைகள், பசுக்கள், பணியாட்கள் மற்றும் விருந்தினர்கள் ஆகியவற்றில் (ஆகியவற்றைக் கொள்வதில்) மெலிந்தவனே உண்மையில் மெலிந்தவனாவான், அங்கங்களால் மட்டுமே மெலிந்தவன் அவ்வாறாகமாட்டான்.(24)
ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, தேவர்கள் மற்றும் தானவர்களின் நடைமுறைகளைக் கண்டு உண்மையைத் தீர்மானித்துக் கொள்வீராக. ஓ! மன்னா, தேவர்கள், தங்கள் உறவினர்களை (அசுரர்களைக்) கொல்வதைத் தவிர வேறு எதையாவது எப்போதும் விரும்புகிறார்களா?(25) அடுத்தவரின் செல்வத்தை அடைவது அறமாகக் கருதப்படவில்லையெனில், ஓ! ஏகாதிபதி, மன்னர்களால் எவ்வாறு இந்தப் பூமியில் அறம்பயில முடியும்? கல்விமான்கள், வேதங்களில் இருந்து {பின்வரும்} இந்தத் தீர்மானங்களையே விதித்திருக்கின்றனர்.(26) மன்னர்கள், தினமும் மூன்று வேதங்களையும் உரைத்து, செல்வத்தை அடைய முனைந்து, அவ்வாறு அடையப்பட்ட செல்வத்தைக் கொண்டு கவனமாக வேள்விகளைச் செய்து வாழ வேண்டும் என்று அக்கல்விமான்கள் விதித்திருக்கின்றனர்.(27) தேவர்கள், உறவினர்களுடன் {அசுரர்களுடன்} கொண்ட பகையின் மூலமே சொர்க்கத்தில் தங்கள் பாதங்களைப் பதித்தனர். தேவர்களே தங்கள் செழிப்பை உறவினர்களுடன் {தானவர்களுடன்} கொண்ட பகையால் அடைந்தார்கள் என்றால், அத்தகு பகையில் என்ன தவறு இருக்க முடியும்?(28) தேவர்கள் இவ்வாறு செயல்படுவதையே நீர் காணலாம். வேதங்களின் அழிவில்லா விதிகளும் அஃதை அங்கீகரிக்கின்றன. கற்பது, போதிப்பது, வேள்வி செய்வது, பிறரின் வேள்விகளில் உதவி செய்வது ஆகிய இவையே நமது முக்கியக் கடமைகளாகும். பிறரிடம் இருந்து மன்னர்கள் அடையும் செல்வம்தான், அவர்களது செழிப்பின் ஆதாரங்களாகின்றன. பிறருக்கு எந்தத் தீங்கையும் செய்யாமல் ஈட்டப்பட்ட செல்வத்தை நாம் ஒருபோதும் கண்டதில்லை.(29,30)
இவ்வாறே மன்னர்கள் இந்தப் பூமியைக் கைப்பற்றுகின்றனர். கைப்பற்றிய பிறகு, மகன்கள் தங்கள் தந்தைமாரின் செல்வத்தை {தங்கள் செல்வமாகவே} சொல்வதைப் போல, அவர்கள் அதைத் தங்களுக்குச் சொந்தமானது என்று சொல்கின்றனர். சொர்க்கத்திற்குச் சென்றிருக்கும் அரச முனிகள், இதையே மன்னர்களின் கடமையாக அறிவித்திருக்கின்றனர்.(31) பெருகும் கடலின் அனைத்துத் திசைகளிலும் நீர் பாய்வதைப் போல, செல்வமானது, மன்னர்களின் கருவூலங்களில் இருந்து அனைத்துத் திசைகளிலும் பாய்கிறது.(32) இந்தப் பூமியானவள், முன்பு மன்னன் திலீபனுக்கும், நகுஷனுக்கும், அம்பரீஷனுக்கும், மாந்தாதாவுக்கும் சொந்தமானவளாக இருந்தாள். இப்போது அவள் உம்முடையவளாகியிருக்கிறாள்.(33)
எனவே, அனைத்து வகைக் கொடைகளை அபரிமிதமாகக் கொண்டதும், பூமியின் உற்பத்தியில் ஒரு பெருங்குவியலைத் தேவையாகக் கொண்டதுமான ஒரு பெரும் வேள்வி உமக்காகக் காத்திருக்கிறது. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் அந்த வேள்வியைச் செய்யவில்லையெனில், இந்த நாட்டின் பாவங்கள் அனைத்தும் உமதேயாகும்.(34) அபரிமிதமான கொடைகளுடன் கூடிய ஒரு குதிரை வேள்வியை {அஸ்வமேத யாகத்தைச்} செய்த ஒரு மன்னனின் குடிமக்கள் அனைவரும், அவ்வேள்வியின் முடிவில் தூய்மையடைந்தவர்களாக, புனிதமடைந்தவர்களாக ஆகிறார்கள்.(35) அண்ட வடிவிலான மகாதேவனே, அனைத்து வகை இறைச்சிகளும் ஆகுதிகளாகத் தேவைப்படும் {ஸர்வமேதம் என்றழைக்கப்படும்} ஒரு பெரும் வேள்வியில், அனைத்து உயிரினங்களையும், அதன் பிறகு தன்னையும் வேள்விக் காணிக்கையாக அஃதில் ஊற்றினான்.(36) இந்த மங்கலகரமான பாதையே அழிவில்லாததாகும். இதன் கனிகள் ஒருபோதும் அழிவடைவதில்லை. இந்தப் பெரும்பாதையே தாசரதம் {அழிவில்லாத பாதை} என்றழைக்கப்படுகிறது. ஓ! மன்னா, இதைக் கைவிட்டுவிட்டு, நீர் எந்தப் பாதையை அடையப் போகிறீர்?” என்று கேட்டான் {அர்ஜுனன்}.(37)
துறவின் நடைமுறை! – சாந்திபர்வம் பகுதி – 09-துறவில் தனக்கிருக்கும் உறுதியை வெளிக்காட்டிய யுதிஷ்டிரன்; துறவின் தன்மைகளையும், உலக இயல்புகளையும் எடுத்துரைத்தது…
யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, “ஓ! அர்ஜுனா, சிறிது நேரம் உன் கவனத்தைக் குவித்து, உன் மனத்தையும், கேட்கும் திறனையும் உனக்குள் இருக்கும் ஆன்மாவில் நிலைக்கச் செய்வாயாக. நீ என் வார்த்தைகளை அத்தகு மனநிலையில் கேட்டால், அவை உன் ஏற்பைப் பெறும்.(1) உலக இன்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, நல்லோர் செல்லும் பாதையில் நான் செல்லப் போகிறேன். உனக்காக நான், நீ பரிந்துரைக்கும் பாதையில் செல்ல மாட்டேன்.(2) எந்த மங்கலப்பாதையில் ஒருவன் தனியாக நடக்க வேண்டும் என்று நீ கேட்டால், நான் உனக்கு அதைச் சொல்வேன். நீ என்னிடம் கேட்க விரும்பவில்லை எனினும், உன்னால் கேட்கப்படாதபோதும் நான் அஃதை உனக்குச் சொல்வேன்.(3) இன்பங்களையும், உலக மனிதர்களின் நடைமுறைகளையும் கைவிட்டு, கடுந்தவங்களைச் செய்து, கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, காட்டில் வசிக்கும் விலங்குகளுடன் நான் திரியப் போகிறேன்.(4) முறையான நேரங்களில் நெருப்பில் காணிக்கைகளை {ஆகுதிகளை} ஊற்றி, காலையிலும், மாலையிலும் தூய்மைச் சடங்குகளைச் செய்து, தோல்களால் என்னை மறைத்துக் கொண்டு, என் தலையில் சடாமுடி தரித்துக் கொண்டு, குறைவாக உட்கொள்ளும் உணவுமுறையால் என்னை நானே மெலியச் செய்து கொள்ளப் போகிறேன்.(5)
குளிர், காற்று, வெப்பம், பசி, தாகம், களைப்பு ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டு, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள நோன்புகளால் நான் என் உடலை மெலியச் செய்யப் போகிறேன்.(6) காட்டில் வசித்து, இதயத்துக்கும், காதுக்கும் இனிமையாக இருக்கும் மகிழ்ச்சிகரமான பறவைகள் மற்றும் விலங்குகளின் ஒலிகளை நான் தினமும் கேட்கப்போகிறேன்.(7) காட்டில் மலர்களால் கனக்கும் மரங்கள், செடிகொடிகள் மற்றும் அங்கே வளரும் பல்வேறு வகை அழகிய பொருட்களின் நறுமணத்தை நான் நுகரப் போகிறேன.(8) காட்டில் நான் சிறந்த பல ஆசிரமங்களையும் காணப் போகிறேன். எந்த ஓர் உயிரினத்திற்கும் சிறு தீங்கையும் இழைக்காமல் இருக்கப் போகிறேன் என்று சொல்லும்போது, கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிப்போரைக் குறித்துச் சொல்லும் தேவை என்ன?[1](9) ஓய்ந்த வாழ்வை நோற்று, சிந்தனைக்கு {தியானத்திற்கு} என்னை அர்ப்பணித்துக் கொண்டு, கனிந்த மற்றும் கனியாத கனிகளை உண்டு, காட்டுக் கனிகளையும், ஊற்றின் தண்ணீரையும் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் காணிக்கையளித்தும், நன்றியுடன் கூடிய பாடல்கள் பாடியும் அவர்களை நான் நிறைவு செய்வேன்.(10)காட்டு வாழ்வின் தவ விதிமுறைகளை இவ்வழிகளில் நோற்று, என் உடல் அழிவதற்காகப் பொறுமையாகக் காத்திருந்து என் நாட்களை நான் கடத்தப் போகிறேன்.(11) அல்லது, தனியாக வாழ்ந்து, எண்ணங்களை வெளியிடாமல் பேசா நோன்பிருந்து, என் தலையை முற்றாக மழித்துக் கொண்டு, ஒரே ஒரு மரத்திடம் மட்டுமே ஒவ்வொரு நாளும் இரந்து என் உணவை நான் அடையப் போகிறேன்[2].(12) என் உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக் கொண்டு, கைவிடப்பட்ட வீடுகளை உறைவிடமாகக் கொண்டோ, மரத்தடிகளில் கிடந்தோ, அன்புக்குரிய அல்லது வெறுப்புக்குரிய அனைத்துப் பொருட்களைக் கைவிட்ட நிலையில் நான் வாழப்போகிறேன்.(13) துன்பத்திலோ, இன்பத்திலோ ஈடுபடாமல், நிந்தனையையும், பாராட்டையும், நம்பிக்கையையும், பாசத்தையும் சமமாகக் கருதி, முரண்பட்ட இரட்டைகளைக் கடந்து, உலகப் பொருட்கள் அனைத்தையும் கைவிட்ட நிலையில் நான் வாழப்போகிறேன்.(14) எவரிடமும் உரையாடாமல், வெளிப்படையாக ஒரு குருட்டு, செவிட்டு மூடனின் வடிவத்தை ஏற்றுக் கொண்டு, என் ஆன்மாவிலேயே இன்புற்று, உள்ள நிறைவுடன் நான் வாழப் போகிறேன்.(15)அசையும் மற்றும் அசையாத நால்வகை உயிரினங்களுக்கும் சிறு தீங்கையும் செய்யாமல், தங்கள் கடமைகளில் மனநிறைவுடன் இருக்கும் அல்லது உணர்வுகளின் ஆணைகளைப் பின்பற்றும் உயிரினங்கள் அனைத்திடமும் சமமாக நடந்து கொள்ளப் போகிறேன்.(16) நான் எவரிடமும் ஏளனமோ, முகச் சுளிப்போ செய்ய மாட்டேன். என் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு, எப்போதும் மகிழ்வான முகத்துடன் நான் இருக்கப் போகிறேன்.(17) எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்று நான் சந்திக்கும் யாரிடமும் கேட்காமல், நாட்டையோ, திசையையோ கருத்தில் கொள்ளாமல் நான் பயணித்துக் கொண்டே இருக்கப் போகிறேன்.(18) நான் எங்கே செல்லப்போகிறேன் என்பதைக் கருத்தில் கொள்ளாமலும், திரும்பிப் பாராமலும் நான் செல்லப் போகிறேன். ஆசை, கோபம் ஆகியவற்றைக் கைவிட்டு, என் பார்வையை உள்நோக்கிச் செலுத்தி, ஆன்மா மற்றும் உடலின் செருக்கைக் கைவிட்டுவிட்டு நான் செல்லப் போகிறேன்.(19) இயற்கை எப்போதும் முன்பே நடக்கிறது. எனவே, உணவும், நீரும் ஏதோ ஒரு வகையில் கிடைக்கும். அத்தகு வாழ்வுமுறையின் வழியில் நிற்கும் முரண்பட்ட இரட்டைகளைக் குறித்து நான் சிந்திக்கப் போவதில்லை.(20)
(நான் செல்லும்) முதல் வீட்டில் சிறு அளவு தூய உணவும் கிட்டவில்லையெனில், நான் வேறு வீடுகளுக்குச் சென்று அஃதை அடைவேன். அப்படி வலம் வந்தும் அது கிட்டவில்லையெனில், என் ஆவலை நிறைவு செய்ய அடுத்தடுத்து ஏழு வீடுகளுக்குச் செல்வேன்.(21) பரபரப்பான சாலைகளைத் தவிர்த்து, வீடுகளில் புகை அடங்கியதும், அடுப்பங்கரையில் நெருப்புத் தணிந்ததும், வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் உண்டு முடிந்ததும், பிச்சைக்காரர்களும், உறவினர்களும் திரிவது நின்றதும்,(22) பிச்சையெடுக்கும் கணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, இரண்டு, மூன்று, அல்லது அதிகபட்சம் ஐந்து வீடுகளில் நான் பிச்சை கேட்பேன். ஆசையின் பற்றுகளை அறுத்து நான் இவ்வுலகில் திரியப் போகிறேன்.(23) வெற்றி மற்றும் தோல்வியில் சமமான நிலையைத் தக்க வைத்துக் கொண்டு பெரும் தவத் தகுதியை நான் ஈட்டப் போகிறேன். உயிரில் ஆசை கொண்டவனைப் போலவோ, சாகப்போகிறவனைப் போலவோ நான் நடந்து கொள்ள மாட்டேன்.(24) உயிர் வாழும் விருப்பம், அல்லது மரணத்தில் வெறுப்பு ஆகிய எதையும் நான் வெளிக்காட்ட மாட்டேன். ஒருவன் என் ஒரு கரத்தை வெட்டினாலும், மற்றொருவன் என் மற்றொரு கரத்தை சந்தனக் குளம்பினால் பூசினாலும், அவர்களில் எவருக்கும் நான் நன்மையையோ, தீமையையோ விரும்பமாட்டேன்.(25)
ஒருவனது வாழ்வில் செய்யக்கூடிய செழிப்புக்கு உகந்த செயல்கள் அனைத்தையும் தள்ளி, கண்களைத் திறக்கவும், மூடவும் செய்யும் வேலைகளை மட்டுமே செய்து, உயிரைத் தாங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கும் மட்டுமே உணவையும், நீரையும் நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன்.(26) செயலில் ஒருபோதும் பற்றுக் கொள்ளாமல், எப்போதும் புலன்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, என் ஆசைகள் அனைத்தையும் கைவிட்டு, அசுத்தங்கள் அனைத்தில் இருந்தும் என் ஆன்மாவை நான் தூய்மையடையச் செய்யப் போகிறேன்.(27) பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, கட்டுகள் அனைத்தையும் அறுத்து, காற்றைப் போல நான் சுதந்திரமாக வாழப் போகிறேன்.(28) பற்றில் இருந்து விடுபடும் எனக்கு, என்றும் நிலைத்திருக்கும் துறவே வாழ்வாக இருக்கப் போகிறது. ஆசையாலும், அறியாமையாலும் நான் பெரும்பாவங்களை இழைத்துவிட்டேன்.(29)
மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட வகையினர், மங்கல மற்றும் மங்கலமற்ற செயல்கள் ஆகிய இரண்டையும் இங்கே செய்து, காரணம் மற்றும் விளைவுகளின் அடிப்படையிலான உறவுகளாகத் தங்கள் மனைவியர், பிள்ளைகள், உறவினர்கள் ஆகியோர் அனைவரையும் கட்டிக் காத்து வருகின்றனர்[3].(30) அவர்களது வாழ்வின் காலம் முடிந்ததும், தங்கள் பலவீனமான உடல்களைக் கைவிட்டு, தங்கள் பாவம் நிறைந்த செயல்களின் விளைவுகளை அவர்கள் ஏற்கின்றனர். தன் செயல்களின் விளைவால் வந்த சுமையை அந்தச் செயலைச் செய்தவனே சுமக்கிறான்.(31) இவ்வாறே, செயல்களுடன் கூடிய உயிரினங்கள், தேர்ச்சக்கரத்தைப் போல, இந்த வாழ்வெனும் சக்கரத்தைத் தொடர்ச்சியாகச் சுழற்றி, இங்கே வந்து தங்கள் சக உயிரினங்களைச் சந்திக்கின்றன.(32)அழிவற்றதாகத் தெரிவதும், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிவற்றால் பீடிக்கப்படுவதுமான மாயை நிறைந்த இவ்வுலகம் சார்ந்த வாழ்வு முறையைக் கைவிடுபவன், நிச்சயம் மகிழ்ச்சியையே அடைகிறான்.(33) மேலும், தேவர்கள் சொர்க்கத்தில் இருந்தும், பெரும் முனிவர்கள் தங்கள் மதிப்பிற்குரிய நிலைகளிலிருந்தும் விழுவார்கள் எனில், காரணங்களின் (மற்றும் காரியங்களின்) உண்மைகளை அறிந்த எவன் சொர்க்கத்தின் செழிப்பை அடைய விரும்புவான்?(34) முக்கியத்துவமற்ற மன்னர்கள், ஆட்சித்திறனின் பல்வேறு வழிகள் சம்பந்தமான (ஒப்பந்தம், கொடை என்ற பெயர்களில் அறியப்படும்) பல்வேறு செயல்களைச் செய்து, ஏதாவது சதியின் மூலம் பெரும் மன்னர்களைக் கொல்கின்றனர்.(35) இச்சூழ்நிலைகளைச் சிந்தித்ததினாலேயே இந்த ஞான அமுதம் என்னிடம் வந்திருக்கிறது. இஃதை அடைந்த நான், நிலையானதும், அழிவற்றதும், மாற்றமில்லாததுமான ஓர் இடத்தை (எனக்காக) விரும்புகிறேன்.(36) இத்தகு ஞானத்திலேயே எப்போதும் (என்னை ஈடுபடுத்திக் கொண்டு), இவ்வழியிலேயே எப்போதும் செயல்பட்டு, வாழ்வெனும் இந்த அச்சமற்ற பாதையில் சென்று, பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் மற்றும் வலிக்கு ஆட்படும் இந்த உடலில் இருந்து விடுபடப் போகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(37)
ஓர் அலிக்குக் கீழ்ப்படிந்து ஆதரவற்றவர்களானோம்! – சாந்திபர்வம் பகுதி – 10-க்ஷத்திரியனுக்குத் துறவு தகாது என யுதிஷ்டிரனுக்கு எடுத்துரைத்துக் கண்டித்த பீமசேனன்; தன் வகைக்கான கடமைகளே ஒருவன் செய்யத்தக்கது என்று சொன்னது; துறவே வெற்றியைத் தரும் என்றால் மரங்களும், மலைகளும் சொர்க்கத்தை அடைந்திருக்க வேண்டும் என்று யுதிஷ்டிரனிடம் சொன்ன பீமசேனன்…
பீமசேனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, மூடனும், அறிவற்றவனுமான ஒருவன் மீண்டும் மீண்டும் குருட்டுப் பாடமாக வேதம் ஓதுவதால் உண்மையைக் காணாததைப் போலவே, உமது புரிதலும் இருக்கிறது.(1) ஓ! பாரதக் குலத்தின் காளையே, மன்னர்களின் கடமைகளை நிந்தித்துக் கொண்டு, சோம்பேறியின் வாழ்வை நீர் நோற்றால், இந்தத் தார்தராஷ்டிரர்களின் அழிவானது தேவையே இல்லாததாகும்.(2) மன்னிக்கும் இயல்பு, கருணை, இரக்கம், தீங்கிழையாமை ஆகியவை க்ஷத்திரியக் கடமைகளின் பாதையில் நடப்போர் எவரிடமும் காணப்படவில்லையா?(3) இதுவே உமது நோக்கம் என்பதை நாங்கள் அறிந்திருந்தால், நாங்கள் ஒருபோதும் ஆயுதமெடுத்திருக்க மாட்டோம்; ஓருயிரையும் கொன்றிருக்க மாட்டோம்.(4) இந்த உடல் அழியும்வரை நாங்கள் பிச்சைக்காரர்களாகவே வாழ்ந்திருப்போம். பூமியின் ஆட்சியாளர்களுக்கிடையிலான இந்தப் பயங்கரப் போரும் ஒருபோதும் நடந்திருக்காது.(5)
நாம் காணும் அனைத்தும் பலவான்களின் உணவே என்று கல்விமான்கள் சொல்கின்றனர். உண்மையில், அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றைக் கொண்ட இவ்வுலகமானது, பலவானின் இன்பநுகர் பொருளாகும்.(6) க்ஷத்திரியக்கடமைகளை அறிந்த ஞானியர், பூமியின் அரசுரிமையை எடுக்க முனையும் ஒரு மனிதனின் வழியில் தடையாக இருக்கக்கூடியவன் கொல்லத்தக்கவன் என்று சொல்கிறார்கள்.(7) அந்தக் குற்றத்தைச் செய்து, நமது நாட்டின் எதிரிகளாக நின்றோர் அனைவரும் நம்மால் கொல்லப்பட்டனர். ஓ! யுதிஷ்டிரரே, அவர்களைக் கொன்ற பிறகு, இந்தப் பூமியை நேர்மையாக ஆட்சி செய்வீராக.(8)
(நாட்டை மறுக்கும்) இந்த நமது செயலானது, ஒரு மனிதன் கிணற்றைத் தோண்டி விட்டு, நீரை அடையும் முன்னர், தன் பணியை நிறுத்திவிட்டு, சேறு பூசப்பட்டு வெளியே வருவதைப் போன்றதாகும்.(9) அல்லது, இந்தச் செயல்பாடானது, ஒரு மனிதன், நெடுமரத்தில் ஏறி தேனையும் எடுத்துவிட்டு, அதைச் சுவைப்பதற்கு முன் இறப்பதைப் போன்றதாகும்.(10) அல்லது, அது நீண்ட பயணத்திற்குப் புறப்பட்ட ஒரு மனிதன், சேருமிடத்தை அடையாமல் துயருடன் திரும்பி வருவதைப் போன்றதாகும்.(11) அல்லது, ஓ! குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, அது தன் எதிரிகள் அனைவரையும் கொன்ற ஒரு மனிதன், இறுதியில் தன் கையாலேயே இறப்பதை {தற்கொலை செய்து கொள்வதைப்} போன்றதாகும்.(12) அல்லது, அது பசியால் துன்பப்படும் ஒரு மனிதன், உணவை அடைந்துவிட்டு, உண்ண மறுப்பதைப் போன்றதோ, ஆசையின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு மனிதன், தன் ஆசைக்குகந்த பெண்ணை அடைந்தும், அவளைச் சந்திக்க மறுப்பதைப் போன்றதோ ஆகும்.(13)
ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, ஓ! மன்னா, நீர் எங்கள் மூத்த அண்ணன் ஆனதன் விளைவால், மந்தமான புரிதல் {மந்தபுத்தி} கொண்ட உம்மைப் பின்தொடர்ந்து நாங்கள் நிந்திக்கத்தக்கவர்கள் ஆகிவிட்டோம்.(14) நாங்கள் வலிய கரங்களைக் கொண்டிருக்கிறோம்; நாங்கள் அறிவுடனும், பெருஞ்சக்தியுடனும் இருக்கிறோம். இருப்பினும், ஓர் அலியின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து ஏதோ முற்றிலும் ஆதரவற்றவர்களைப் போன்று இருக்கிறோம்.(15) ஆதரவற்ற மனிதர்கள் அனைவருக்கும் நாங்கள் புகலிடமாக இருக்கிறோம். இருப்பினும், மக்கள் எங்களை இவ்வாறு பார்க்கும்போது, எங்கள் நோக்கங்களை அடைவதில் நாங்கள் முற்றிலும் சக்தியற்றவர்கள் என்று அவர்கள் ஏன் சொல்லமாட்டார்கள்? நான் சொல்லும் இவற்றை நினைத்துப் பாரும்.(16)
முதுமையை அடைந்த, அல்லது எதிரிகளிடம் தோல்வியுற்ற மன்னர்கள் துயர்நிறைந்த காலங்களில் மட்டுமே துறவை (துறவு வாழ்வைப்) பின்பற்ற வேண்டும் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது.(17) எனவேதான், ஞானியர், துறவை க்ஷத்திரியனின் கடமையாக மெச்சுவதில்லை. மறுபுறம், தெளிவான பார்வையைக் கொண்ட அவர்கள், (ஒரு க்ஷத்திரியன்) அந்த வாழ்வு முறையை {துறவு வாழ்வைப்} பின்பற்றுவது அறத்தை இழப்பது என்றே கருதுகின்றனர்.(18) அந்த வகையில் {க்ஷத்திரிய வகையில்} பிறந்தவர்களும், அந்த வகையின் நடைமுறைகளுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், அவற்றையே தங்கள் புகலிடமாகக் கொண்டவர்களால் எவ்வாறு அந்தக் கடமைகளை நிந்திக்க முடியும்?(19) செழிப்பு, செல்வம் ஆகியவற்றை இழந்தவர்களும், நம்பிக்கையற்றவர்களுமான மனிதர்கள் மட்டுமே, (துறவு வாழ்வைப் பின்பற்றும் ஒரு க்ஷத்திரியனின் ஒழுங்குமுறை குறித்து) வேதங்களில் சொல்லப்பட்டுள்ள இந்த ஆணைகளை உண்மையென அறிவிக்கிறார்கள். எனினும் உண்மையில் அஃது ஒரு போதும் க்ஷத்திரியன் செய்வதற்கு உகந்ததல்ல.(20)
ஆற்றலினால் தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ளத் தகுந்தவனும், தன் சொந்த முயற்சிகளால் தன்னைத் தாங்கிக் கொள்ளக்கூடியவனுமான ஒருவன், துறவு வாழ்வின் போலி வெளிப்பாடுகளால், வாழமுடியாமல் உண்மையில் வீழ்ந்தே போகிறான்.(21) தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், தேவர்கள், முனிவர்கள், விருந்தினர்கள், பித்ருக்கள் ஆகியோரை ஆதரிக்க இயலாத மனிதனே காட்டில் வாழும் தனிமையான வாழ்வில் மகிழ்ச்சியடைய முடியும்.(22) (காட்டு வாழ்வை வாழும்) மான், பன்றிகள், பறவைகள் ஆகியன சொர்க்கத்தை அடைய முடியாததைப் போலவே, காட்டு வாழ்வை வாழ்பவர்களும், ஆற்றலற்றவர்களுமான க்ஷத்திரியர்களும் சொர்க்கத்தை அடைய முடியாது.(23) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, துறவின் மூலம் யாராவது வெற்றியடைய முடியுமென்றால், இந்த மலைகளும், மரங்களும் நிச்சயம் அஃதை அடைந்திருக்கும்.(24) அவை யாருக்கும் தீங்கிழைப்பதில்லை. மேலும் அவை அனைத்தும் உலகக் காரியங்களில் இருந்து விலகி, பிரம்மச்சாரிகளைப் போல இருக்கின்றன.(25)
ஒருவனின் வெற்றியானது, மற்றவர்களின் வாழ்வைச் சாராமல், அவனது சொந்த வாழ்வைச் சார்ந்தே அமையும் என்றால், (க்ஷத்திரிய வகையில் பிறந்த ஒருவராக) நீர் செயல்பாட்டையே தேர்ந்தெடுக்க வேண்டும். செயலற்றவனால் ஒருபோதும் வெல்ல முடியாது.(26) தன் வயிற்றை மட்டும் நிறைத்துக் கொள்பவர்கள் வெற்றியை அடைய முடியும் என்றால், நீர் வாழ் உயிரினங்கள் அனைத்தும் தங்களைத் தவிர வேறு யாரையும் ஆதரிக்க வேண்டிய தேவை இல்லாததால் அவை வெற்றியை அடைந்து விடும்.(27) இந்த உலகமானது, தன் இயல்புக்கு ஏற்ற செயல்களில் ஈடுபட்டுவரும் உயிரினங்களுடன் சேர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பதைப் பாரும். எனவே, ஒருவன் செயலிலேயே ஈடுபட வேண்டும். செயல்பாடு அற்றவனால் ஒருபோதும் வெற்றியை அடைய முடியாது” என்றான் {பீமசேனன்}.(28)-
இல்லறமே நல்லறம்! – சாந்திபர்வம் பகுதி – 11-செயல்ளைச் செய்வதே க்ஷத்திரிய அறம் என்று யுதிஷ்டிரனுக்குச் சொன்ன அர்ஜுனன்; ஒரு பறவைக்கும், முனிவர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்னது; இல்லறமே நல்லறம் என்றது…
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, இது சம்பந்தமாகக் குறிப்பிட்ட சில தவசிகளுக்கும், சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழைய வரலாறுகளில் தென்படுகிறது.(1) நற்குடியில் பிறந்தோரும், சிறுமதி கொண்டோரும், ஆண்மைக்கான அடையாளமான மீசை இல்லாதவர்களுமான குறிப்பிட்ட சில பிராமண இளைஞர்கள், தங்கள் வீடுகளைக் கைவிட்டு, காட்டு வாழ்வை வாழ்வதற்காகக் காடுகளுக்கு வந்தனர்.(2) அபரிமிதமான வளங்களைக் கொண்ட அந்த இளைஞர்கள், அதையே {காட்டு வாழ்வையே} அறமெனக் கருதி, பிரம்மச்சாரிகளாக வாழ விரும்பி தங்கள் சகோதரர்களையும், தந்தைமாரையும் கைவிட்டனர். ஒரு சமயம், இந்திரன் அவர்களிடம் கருணை கொண்டான்.(3) தங்கப் பறவையின் வடிவத்தை ஏற்ற அந்தப் புனிதமான சக்ரன், அவர்களிடம், “வேள்வியில் எஞ்சியவற்றை உண்போர் செய்யும் செயலே, மனிதர்கள் செய்யக்கூடிய செயல்களிலேயே மிகக் கடினமான செயல்களாகவும்[1].(4) அத்தகு செயலே உயர்ந்த தகுதிகளை {புண்ணியங்களைக்} கொண்டதாகும். அத்தகு மனிதர்களின் வாழ்வே அனைத்து புகழுக்கும் தகுந்ததாகும். வாழ்வின் நோக்கத்தை அடையும் அம்மனிதர்கள் அறத்திற்கு அர்ப்பணிப்புடன் உயர்ந்த கதியை அடைகின்றனர்” என்றான் { பறவை வடிவில் இருந்த இந்திரன்}.(5)அவ்வார்த்தைகளைக் கேட்ட முனிவர்கள், “இதோ, இந்தப் பறவையானவன் வேள்விகளில் எஞ்சியவற்றை உண்டு வாழ்வோரைப் புகழ்கிறது. நாம் அப்படி எஞ்சியவற்றில் வாழ்வதால் இதை நம்மிடம் சொல்கிறான்” என்றனர்[2].(6)அப்போது அந்தப் பறவை, “நான் உங்களைப் புகழவில்லை. நீங்கள் புழுதியால் கறைபடிந்தவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் {இறைச்சிக்} கழிவை[3] உண்டு வாழும் தீயவர்கள். நீங்கள் வேள்வியில் எஞ்சியதை உண்டு வாழும் மனிதர்களல்லர்” என்றது.(7)முனிவர்கள், “நாங்கள் எங்கள் வாழ்வுமுறையை உயர்வாக அருளப்பட்ட வாழ்வுமுறையாகக் கருதுகிறோம். ஓ! பறவையே, எங்களுக்கான நன்மை எது என்பதை எங்களுக்குச் சொல்வாயாக. உன் வார்த்தைகளில் நாங்கள் பெரும் நம்பிக்கை கொள்கிறோம்” என்றனர்.(8)
அந்தப் பறவை, “{உள்ளொன்றும் புறமொன்றும் சொல்லி} நீங்கள் உங்களுக்கு எதிரான நிலையை எடுத்து உங்களுக்குள் கொண்டுள்ள நம்பிக்கையை எனக்கு மறுக்காதிருந்தால், நான் உங்களுக்கு உண்மையான, நன்மையான வார்த்தைகளைச் சொல்வேன்” என்றது.(9)
முனிவர்கள், “ஓ! ஐயா, வேறுபட்ட பாதைகள் அனைத்தையும் நீ அறிந்திருப்பதால், நாங்கள் உன் வார்த்தைகளைக் கேட்போம். ஓ! அற ஆன்மா கொண்டோனே, நாங்கள் உன் ஆணைகளுக்குக் கீழ்ப்படிய விரும்புகிறோம். இப்போது எங்களுக்குக் கற்பிப்பாயாக” என்றனர்.(10)
அதற்கு அந்தப் பறவை, “நான்கு கால்களைக் கொண்ட உயிரினங்களில் பசுவே முதன்மையானது. உலோகங்களில் தங்கம் முதன்மையானது. வார்த்தைகளில் மந்திரங்கள் முதன்மையானவை. இரு கால் கொண்ட உயிரினங்களில் பிராமணர்கள் முதன்மையானவர்கள்.(11) ஒரு பிராமணனின் வாழ்வில், பிறப்பு தொடங்கி, அதற்கடுத்து வரும் காலம் மற்றும் இறப்பு ஆகியவற்றுக்குத் தொடர்புடையன மற்றும் சுடலையில் செய்ய வேண்டியது வரை உள்ள சடங்குகள் அனைத்தையும் இந்த மந்திரங்கள் முறைப்படுத்துகின்றன.(12) இந்த வேதச் சடங்குகளே அவனது சொர்க்கமும், பாதையும், முதன்மையான வேள்வியுமாகும்[4]. இது வேறுவகையானால், (சொர்க்கத்தைத் தேடும் மனிதர்களின்) செயல்கள் மந்திரங்கள் மூலம் வெற்றிபெறுவதை என்னால் எவ்வாறு காண இயலும்?(13) எவன் இவ்வுலகில் தன் ஆன்மாவை ஒரு குறிப்பிட்ட வகைத் தேவனாக உறுதியாகக் கருதுகிறானோ, அவன், அந்தக் குறிப்பிட்ட தேவனின் இயல்பின்படியே முரணற்ற வெற்றியை அடைகிறான்[5]. அரைமாதங்களால் அளக்கப்படும் பருவகாலங்கள் சூரியன், சந்திரன், அல்லது நட்சத்திரங்களுக்கு வழிகாட்டுகின்றன[6].(14) வெற்றியடையும் நிலையைச் சார்ந்திருக்கும் இந்த மூவகை வெற்றிகளை அனைத்துயிரினங்களும் விரும்புகின்றன. மிக மேன்மையானதும், புனிதமானதுமான இல்லறம், வெற்றியின் (வெற்றியை அறுவடை செய்யும்) களம் என்றழைக்கப்படுகிறது.(15)நிந்திக்கத்தக்க செயல்பாட்டைக் கொண்ட மனிதர்கள் எப்பாதையில் செல்கின்றனர்? சிறுமதியைக் கொண்ட அவர்கள், செல்வத்தை இழந்து பாவத்தையே ஈட்டுகிறார்கள்.(16) அந்தச் சிறு மதி கொண்டோர் தேவர்களின் அழிவில்லா பாதைகளையும், முனிவர்களின் பாதைகளையும், பிரம்ம பாதைகளையும் கைவிட்டு வாழ்வதால், அவர்கள் சுருதிகள் அங்கீகரிக்காத பாதைகளையே அடைகின்றனர்[7].(17) “வேள்விசெய்பவனே, நீ மதிப்புமிக்கப் பொருட்களைக் கொடையாக அளித்து வேள்வியைச் செய்வாயாக. மகன்கள், விலங்குகள் மற்றும் விலங்குகளால் கிடைக்கப்பெறும் மகிழ்ச்சியை நான் உனக்குத் தருவேன்” என்றொரு விதி மந்திரங்களில் சொல்லப்படுகிறது. விதித்த விதியின்படி வாழ்வதே தவசிகளின் உயர்ந்த தவம் என்று சொல்லப்படுகிறது. எனவே, நீங்கள் கொடைகளின் வடிவில் அதுபோன்ற வேள்விகளையும், அதுபோன்ற நோன்புகளையும் செய்ய வேண்டும்.(18) தேவர்களை வழிபடுவது, வேதங்களைக் கற்பது, பித்ருக்களை நிறைவு கொள்ளச்செய்வது, ஆசானிடம் மரியாதையுடன் தொண்டாற்றுவது என்ற இந்த அழிவில்லா கடமைகளை முறையாகச் செய்வதே தவங்களில் கடுமையானதாக அழைக்கப்படுகிறது.(19) இவ்வளவு கடினமான தவங்களைச் செய்தே தேவர்கள் உயர்ந்த மகிமையையும், சக்தியையும் அடைந்தார்கள். எனவே, இல்லறத்தின் கடமைகளுடைய கனத்த சுமையைச் சுமக்கும்படியே நான் உங்களுக்குச் சொல்கிறேன்.(20)தவங்களே அனைத்திலும் முதன்மையானவை, அவையே அனைத்துயிர்களுக்கும் வேர் போன்றவை என்பதில் ஐயமில்லை. எனினும், எதைச் சார்ந்து அனைத்தும் இருக்கிறதோ, அந்த இல்லற வாழ்வை நோற்று அந்தத் தவம் அடையப்பட {சாதிக்கப்பட} வேண்டும்.(21) காலையும், மாலையும் உறவினர்களுக்கு முறையாக உணவளித்து, அந்த விருந்தில் எஞ்சியதை உண்போர், அடைவதற்கு மிகக் கடினமான உயர்ந்த கதியை அடைகின்றனர்.(22,23) விருந்தினர்கள், தேவர்கள், முனிவர்கள் மற்றும் உறவினர்களின் பசியாற்றிய பிறகு உண்பவர்களே, {நான் முன்னர்ச் சொன்னதைப் போல} விருந்தில் {வேள்வியில்} எஞ்சியவற்றை உண்பவர்கள் {விகஸாசிகள்} என்று அழைக்கப்படுகிறார்கள்.(24) எனவே, தங்கள் கடமைகளை முறையாக நோற்பவர்களும், அற்புத நோன்புகளைப் பயின்று உண்மை நிறைந்த பேச்சுடன் இருப்பவர்களும், தங்கள் நம்பிக்கையில் அதிகப் பலமடைந்தவர்களாக இவ்வுலகில் பெரும் மரியாதைக்கு உரியவர்கள் என்ற நிலையை அடைகிறார்கள்.(25) அடைவதற்கரிதான சாதனைகளைச் செய்யும் அவர்கள், செருக்கில் இருந்து விடுபட்டுச் சொர்க்கத்தை அடைந்து, இந்திரலோகத்தில் முடிவிலா காலம் வாழ்கிறார்கள்” என்றது {என்றான் பறவை வடிவில் இருந்த இந்திரன்}”.(26)
அர்ஜுனன் தொடர்ந்தான், “நன்மையானவையும், நீதி நிறைந்தவையுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தவசிகள், “அஃதில் {துறவில்} ஏதும் இல்லை” என்று சொல்லித் தங்கள் துறவறத்தைக் கைவிட்டு, இல்லற வாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.(27) எனவே, ஓ! அறமறிந்தவரே, ஓ! ஏகாதிபதி, அழிவில்லா ஞானத்தை உமது துணைக்கழைத்துக் கொண்டு, இப்போது எதிரிகளற்றதாயிருக்கும் இந்தப் பரந்த உலகை ஆட்சி செய்வீராக” {என்றான் அர்ஜுனன்}”.(28}
நகுலனின் ஞானம்! – சாந்திபர்வம் பகுதி – 12-துறவைக் காட்டிலும் செயலே மேன்மையானது என யுதிஷ்டிரனிடம் சொன்ன நகுலன்; நான்கு வாழ்வுமுறைகளிலும் இல்லறமே மேன்மையானது எனச் சொன்னது; இல்லத்தைக் கைவிட்டுக் காட்டில் திரிவதாலேயே ஒருவன் துறவியாகிவிட மாட்டன் என்று சொன்னது; மன்னர்களின் கடமை இல்லறம் நோற்று வேள்விகளை ஆதரிப்பதே என்பதை அழுத்தமாகச் சொன்ன நகுலன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, வலிமைமிக்கக் கரங்கள், அகன்ற மார்பு ஆகியவற்றைக் கொண்டவனும், அளவாகப் பேசுபவனும், பெரும் ஞானம் கொண்டவனும், தாமிரத்திற்கு ஒப்பான நிறத்தில் முகத்தைக் கொண்டவனுமான நகுலன், அர்ஜுனனின் வார்த்தைகளைக் கேட்டு, நீதிமான்கள் அனைவரிலும் முதன்மையான மன்னனைப் {யுதிஷ்டிரனைப்} பார்த்து, தன் அண்ணனின் இதயத்தை (அறிவால்) முற்றுகையிட்டபடியே இவ்வார்த்தைகளைப் பேசினான்.(1,2)
நகுலன் {யுதிஷ்டிரனிடம்}, “விசாகயூபம் என்ற இடத்தில் தேவர்கள் தங்கள் நெருப்புகளை {யாக அக்னிகளை} நிறுவியுள்ளனர். எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, தேவர்களே தங்கள் செயல்பாடுகளின் கனிகளைச் சார்ந்தே இருக்கின்றனர் என்பதை அறிவீராக.(3) ஓ! மன்னா, நம்பிக்கையற்றோர் அனைவரின் வாழ்வையும் (மழையால்) ஆதரிக்கும் பித்ருக்கள், (படைப்பாளனால் வேதங்களில் அறிவிக்கப்பட்ட) விதிகளை நோற்றபடியே செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.(4) (செயல்களை மனத்தில் ஆழப் பதியச் செய்யும்) வேதங்களின் தீர்மானங்களை மறுப்போரை ஒளிவுமறைவற்ற நாத்திகர்களாக அறிவீராக. ஓ! பாரதரே, வேதங்களைக் கற்ற மனிதன், தன் செயல்பாடுகள் அனைத்திலும் அதன் தீர்மானங்களைப் பின்பற்றி,(5) தேவர்களின் வழியில் உயர்ந்த சொர்க்கலோகத்தை அடைகின்றனர். மேலும் இது (இந்த இல்லற வாழ்வானது), வேத உண்மைகளை அறிந்தவர்கள் அனைவராலும் (பிற) வாழ்க்கை முறைகள் அனைத்திலும் மேன்மையானதாகச் சொல்லப்பட்டுள்ளது.(6)
ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நீதியுடன் தன்னால் அடையப்பட்ட செல்வத்தை, வேதங்களை நன்கறிந்த பிராமணர்களுக்குத் தானமளிப்பவனே,(7) ஓ! ஏகாதிபதி, தன் ஆன்மாவைக் கட்டுப்படுத்திய உண்மையான துறவியாகக் கருதப்படுகிறான்.(8) எனினும், பெரும் இன்பத்தின் ஊற்றை (இல்லற வாழ்வுமுறையை) அலட்சியம் செய்பவன், தன்னையே துறக்கும்[1] அடுத்த வாழ்வுமுறைக்குக் குதித்து, இருளின் தன்மையிலான {தமோகுணத்திலான} துறவையே கைக்கொள்கிறான்.(9) எவன் வீடற்றவனாக இருக்கிறானோ, எவன் இவ்வுலகத்தில் (பிச்சையெடுப்பவனாகத்) திரிகிறானோ, எவன் தன் உறைவிடத்தை மரத்தடியில் கொண்டுள்ளானோ, எவன் எண்ணங்களை வெளியிடாமல் அமைதி காக்கும் பேசா நோன்பை (மௌன விரதத்தை) நோற்கிறானோ, எவன் தன் புலன்களின் செயல்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறானோ, அவனே பிச்சாடன {பிச்சையெடுத்து வாழும் துறவு} வாழ்வை நோற்கும் ஒரு துறவியாவான்[2].(10)எந்தப் பிராமணர், கோபம் மற்றும் இன்பம் ஆகியவற்றையும், குறிப்பாக வஞ்சனையையும் அலட்சியம் செய்து, எப்போதும் தன் நேரத்தை வேத கல்வியில் ஈடுபடுத்திக் கொள்கிறானோ, அவனே பிச்சாடன நோன்பை நோற்கும் ஒரு துறவியாவான்[3].(11) ஒரு காலத்தில் நான்கு வாழ்வு முறைகளும் தராசில் எடைகாண நிறுத்திப் பார்க்கப்பட்டன. ஓ! மன்னா, தராசின் ஒரு பக்கத்தில் இல்லறத்தை வைத்தபோது, அதைச் சரியாக நிறுத்த, மறுபக்கத்தில் மற்ற மூன்று வாழ்வுமுறைகளையும் வைக்க வேண்டியிருந்தது என்று ஞானியர் சொல்கின்றனர்.(12) ஓ! பார்த்தரே, ஓ பாரதரே, மேலும், சொர்க்கமும், இன்பமும் இல்லறத்தில் மட்டுமே இருக்கிறது என்பதைக் கண்டதால், அதுவே {இல்லறமே} பெரும் முனிவர்களும், உலக வழிகளை அறிந்த மனிதர்கள் அனைவரின் புகலிடமாக இருப்பவர்களும் நோற்கும் வழியானது.(13) எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, இந்த வாழ்வுமுறையில் வாழ்ந்து, அதையே தன் கடமையாக எண்ணி, கனியின் மீது கொண்ட விருப்பம் அனைத்தையும் எவன் கைவிடுகிறானோ, அவனே உண்மையான துறவியாவான். இல்லறத்தையும், சுற்றத்தையும் கைவிட்டு மூட புத்தியுடன் காட்டுக்குச் செல்லும் மனிதன் துறவியாகமாட்டான்.(14) மேலும், போலியாக அறப்போர்வைக்குள் இருக்கும் ஒருவன் (காட்டில் வாழ்ந்தாலும்) தன் ஆசைகளை மறக்க முடியாமல், தன் கழுத்தைச் சுற்றி இரக்கமற்றவனான யமனின் பயங்கரத் தளையால் கட்டப்படுகிறான்.(15)பகட்டால் செய்யப்படும் செயல்கள் கனியை விளைவிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. ஓ! ஏகாதிபதி, மறுபுறம் துறவெண்ணத்துடன் செய்யப்படும் அந்தச் செயல்கள், அபரிமிதமான கனிகளைக் கொண்டு வருகிறது.(16) அமைதி, தற்கட்டுப்பாடு, மனோவுறுதி, உண்மை, தூய்மை, எளிமை, வேள்விகள், விடாமுயற்சி, நீதி ஆகியவையே எப்போதும் முனிவர்களால் நல்லறங்களாகக் கருதப்படுகின்றன.(17) இல்லறத்தில் பித்ருக்கள், தேவர்கள் மற்றும் விருந்தினர்களுக்காகவே செயல்கள் செய்யப்படுகின்றன. ஓ! ஏகாதிபதி, இந்த வாழ்வு முறையில் மட்டுமே மூவகைக் குறிக்கோள்களும் அடையப்படுகின்றன[4].(18) அனைத்துச் செயல்களையும் கட்டுப்பாடில்லாமல் செய்யும் வாழ்வுமுறையைக் கடுமையாகப் பின்பற்றும் ஒரு துறவி, இம்மையிலோ மறுமையிலோ அழிவைச் சந்திப்பதில்லை.(19) அனைத்துயிரினங்களின் பாவமற்ற தலைவனான அற ஆன்மா {பரமாத்மா}, உயிரினங்கள், அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளால் தன்னைத் துதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவற்றை உண்டாக்கினான்.(20)தூய்மையாக இருக்கும் மரங்கள், செடி, கொடிகள், விலங்குகள் ஆகியனவும், தெளிந்த நெய்யும், வேள்வியின் உட்பொருளாகவே உண்டாக்கப்பட்டன.(21) இல்லறம் நோற்பவன், தடைகள் நிறைந்த வேள்வியைச் செய்ய வேண்டும். இதன் காரணமாகவே, அவ்வாழ்வு முறை மிகக் கடினமானதும், அடைதற்கரியதுமாகும்.(22) ஓ! ஏகாதிபதி, எனவே, செல்வம், தானியம் மற்றும் விலங்குகளைக் கொண்டவர்களும் இல்லறம் நோற்பவர்களுமான மனிதர்கள், வேள்விகளைச் செய்யவில்லையெனில் அழிவில்லா பாவத்தையே ஈட்டுவார்கள்.(23) முனிவர்களில் சிலர் வேத கல்வியையே வேள்வியாகக் கருதுகின்றனர்; சிலர் தங்கள் மனங்களில் செய்யும் தியானத்தையே பெரும் வேள்வியாகக் கருதுகின்றனர்.(24) ஓ! ஏகாதிபதி, குவிந்த மனநிலையைக் கொண்ட இந்தப் பாதையில் நடப்பதன் விளைவால் பிரம்மனுக்கு இணையான நிலையை அடையும் இது போன்ற மறுபிறப்பாள மனிதனின் தோழமையைத் தேவர்களே நாடுகின்றனர்.(25)
உமது எதிரிகளிடம் இருந்து நீர் அடைந்த பல்வேறு வகையான செல்வங்களை வேள்வியில் செலவிட மறுத்தால், நீர் நம்பிக்கையில்லாதவர் என்பதை மட்டுமே வெளிக்காட்டுகிறீர்.(26) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இல்லறம் நோற்கும் ஒரு மன்னன், தன் செல்வத்தை ராஜசூயம், அஸ்வமேதம் மற்றும் பிற வகை வேள்விகளைத் தவிர்த்து வேறு வழியில் தனது செல்வத்தைத் துறப்பதை ஒரு போதும் நான் கண்டதில்லை.(27) ஓ! ஐயா, தேவர்களின் தலைவனான சக்ரனைப் போல, பிராமணர்களால் புகழப்படும் பிற வேள்விகளைச் செய்வீராக.(28) எவனுடைய அலட்சியத்தின் விளைவாகக் கள்வர்களால் குடிமக்கள் கொள்ளையடிக்கப் படுகின்றனரோ, தன்னை ஆட்சி செய்ய அழைப்போருக்கு எவன் பாதுகாப்பை வழங்கவில்லையோ, அந்த மன்னன், கலியின் வடிவமானவன் என்று சொல்லப்படுகிறான்.(29) குதிரைகள், பசுக்கள், பெண் பணியாட்கள், இழைகளால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், கிராமங்கள், ஊர்கள், களங்கள் வீடுகள் ஆகியவற்றைப் பிராமணர்களுக்குக் கொடாமலும், உறவினர்களிடம் நட்புணர்வில்லாமலும் நாம் காட்டுச் சென்றோமானால், நாமும் அரச வகையைச் சேர்ந்த கலிகளே ஆவோம்.(30,31)
(பிறருக்குப்) பாதுகாப்பை வழங்காத, ஈகைபயிலாத அரச வகையினர் பாவத்தையே இழைக்கின்றனர். மறுமையில் அவர்களுக்குத் துயரே அல்லாமல் அருளில்லை.(32) ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, பெரும் வேள்விகளையும், இறந்து போன உமது மூதாதையருக்கான சடங்குகளைச் செய்யாமல், புனித நீர்நிலைகளில் நீராடாமல், காட்டில் திரியும் வாழ்வை நீர் கைக்கொண்டால்,(33) திரளில் இருந்து பிரியும் சிறு மேகமானது காற்றால் அலைக்கழிக்கப்படுவதைப் போல நீரும் அழிவையே அடைவீர். இம்மையிலும், மறுமையிலும் {அறம் வழுவி} வீழ்ந்து, பிசாசங்களின் வகையில் நீர் பிறப்பை எடுக்க வேண்டியிருக்கும்.(34) வெறுமனே இல்லத்தைக் கைவிட்டுக் காட்டில் வசிப்பதால் மட்டும் அல்ல; அக மற்றும் புறப்பற்றுகள் அனைத்தையும் கைவிடும் மனிதனே உண்மையான துறவியாகிறான்.(35)
எந்தத் தடங்கலும் இல்லாத இந்த விதிமுறைகளை நோற்று வாழும் ஒரு பிராமணன், இம்மையிலோ, மறுமையிலோ வீழ்வதில்லை.(36) பழங்காலத்தவரால் மதிக்கப்படும், மனிதர்களில் சிறந்தோரால் பயிலப்படும் கடமைகளான ஒருவனுடைய சொந்த கடமைகளை நோற்றால், ஓ! பார்த்தரே, தைத்தியப்படையைக் கொன்ற சக்ரனைப் போலச் செழிப்பில் பெருகியவர்களான தன் எதிரிகளைப் போரில் கொன்றபிறகும் எவனாவது வருந்துவானா?(37) க்ஷத்திரியக் கடமைகளை நோற்று, உமது ஆற்றலின் துணை கொண்டு உலகத்தை அடக்கிய நீர், ஓ! ஏகாதிபதி, வேதங்களை அறிந்தோருக்கு கொடைகளை அளித்த பிறகு, சொர்க்கத்தை விட உயர்ந்த உலகங்களுக்குச் செல்லலாம். ஓ! பார்த்தரே, வருந்துவது உமக்குத் தகாது” {என்றான் நகுலன்}.(38)
எனது என்ற மரணமும், எனதற்ற பிரம்மமும்! – சாந்திபர்வம் பகுதி – 13-மிருத்யு மற்றும் பிரம்மம் குறித்து யுதிஷ்டிரனுக்கு எடுத்துரைத்த சகாதேவன்; இவ்விரண்டும் கலந்த ஆத்மாவானது அழிவற்றதானாலும், அழிவையுடையதானாலும் செயலே ஒருவனுக்குச் சிறந்தது என்று சொன்னது; தன் வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்ளுமாறு யுதிஷ்டிரனிடம் வேண்டிய சகாதேவன்…
சகாதேவன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதரே, புறப்பொருட்கள் அனைத்தையும் கைவிடுவதால் மட்டுமே ஒருவன் வெற்றியை அடைந்துவிடுவதில்லை. அகப்பற்றுகளைக் {மனப்பற்றுகளைக்} கைவிட்டாலும் கூட வெற்றியை அடைவது ஐயத்திற்கிடமானதே.(1) மனத்தின் அகத்தில் ஆசைகளைக் கொண்டு, புறப்பொருட்களைக் கைவிடுபவனின் அறத்தகுதியும், மகிழ்ச்சியும் நமது எதிரிகளுடைய பங்காக இருக்கட்டும்.(2) மறுபுறம், அகப்பற்றையும் கைவிட்டு, பூமியை ஆள்பவனுடைய அறத்தகுதியும், மகிழ்ச்சியும், நமது நண்பர்களின் பங்காக இருக்கட்டும்.(3) மம (எனது) என்ற ஈரெழுத்துகளைக் கொண்ட வார்த்தையானது மிருத்யுவாகும்; அதே வேளையில் அதன் எதிர்ச்சொல்லான நமம (எனதில்லை) என்று மூன்று எழுத்துகளைக் கொண்ட வார்த்தையானது அழிவில்லா பிரம்மமாகும்[1].(4) ஓ! மன்னா, பிரம்மமும், மிருத்யுவும் கண்ணுக்குப் புலனாகாதவகையில் அனைத்து ஆன்மாவுக்குள்ளும் நுழைந்து, அனைத்துயிரினங்களையும் செயல்பட வைக்கின்றன என்பதில் ஐயமில்லை.(5)ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, {பிரம்மமும் மிருத்யுவும் கலந்த} இதுவே ஆன்மா என்றழைக்கப்படுமானால், இஃது அழிவடையக்கூடியதில்லை. இவ்வாறெனில் உடல்களை அழிப்பதால் ஒருவன் கொலைக்குற்றத்திற்கு ஆளாகமாட்டான்.(6) மறுபுறம், ஒருவனின் ஆன்மாவும், உடலும் ஒன்றாகப் பிறந்தோ, இறந்தோ போகின்றன என்றால், உடல் அழியும்போது, ஆன்மாவும் அழிவை அடைகிறது. அவ்வாறெனில், (சாத்திரங்களில் பரிந்துரைக்கப்படும்) சடங்குகள் மற்றும் செயல்களும் பயனற்றனவாகிவிடும்.(7) எனவே, நுண்ணறிவு கொண்ட ஒரு மனிதன், ஆன்மாவின் அழியாத் தன்மை குறித்த ஐயங்கள் அனைத்தையும் விலக்கிவிட்டு, பழங்காலத்தில் பெரியோர்களால் நடக்கப்பட்ட பாதையையே பின்பற்ற வேண்டும்.(8) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த பூமியையும் அடைந்த ஒரு மனிதன், அவளை {பூமியை} அனுபவிக்காமல் போவானெனில் அவனது வாழ்வு நிச்சயம் பயனற்றதே.(9) காட்டுக் கனிகளையும், கிழங்குகளையும் உண்டு காட்டில் வாழ்ந்தாலும், உலகப்பொருட்களின் மீது கொண்ட பற்றை விடாத ஒரு மனிதனைப் பொறுத்தவரை, ஓ! மன்னா, அவன் மிருத்யுவின் கோரப்பற்களுக்கிடையில் வாழ்பவனே ஆவான்.(10)
ஓ! பாரதரே, உயிரினங்கள் அனைத்தின் இதயங்களும், அவற்றின் வெளித்தோற்றங்களும், உமது சொந்த வெளிப்பாடுகளேயன்றி வேறில்லை என்பதைக் காண்பீராக. அனைத்துயிரையும் தங்களைப் போலவே காண்பவர்கள் (அழிவின்) பேரச்சத்திலிருந்து விடுபடுகிறார்கள்[2].(11) நீர் எனது தந்தையும், {தாயும்}, பாதுகாவலரும், தமையனும், மூத்தவரும், ஆசானுமாவீர். எனவே, துன்பத்தில் பீடிக்கப்பட்டுச் சோகத்தில் நான் சொல்லும் தொடர்பற்ற வார்த்தைகளை மன்னிப்பதே உமக்குத் தகும் {பொறுத்தருள்வீராக}.(12) ஓ! பூமியின் தலைவரே, ஓ! பாரதர்களில் சிறந்தவரே, நான் சொல்வது உண்மையோ, பொய்யோ, இவற்றை உம்மிடம் கொண்ட பெருமதிப்பாலேயே நான் உம்மிடம் சொல்கிறேன்” என்றான் {சகாதேவன்}”.(13)
பித்தனாகாதீர், ஆட்சிசெய்வீராக! – சாந்திபர்வம் பகுதி – 14-யுதிஷ்டிரனைச் சமாதானப்படுத்திய திரௌபதி; தண்ட நீதி மற்றும் மன்னரின் சிறப்பைச் சொன்னது; தார்தராஷ்டிரர்கள் நியாயமாகவே கொல்லப்பட்டதாகச் சொன்னது; ஆட்சிப்பொறுப்பை ஏற்கும்படி யுதிஷ்டிரனிடம் சொன்ன திரௌபதி…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குந்தியின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், வேதங்களில் உள்ள இந்த உண்மைகளைச் சொல்லிக் கொண்டிருந்த தன் தம்பிகள் சொல்வதைப் பேச்சற்றவனாகக் கேட்டுக் கொண்டிருந்தபோது,(1) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெண்களில் முதன்மையானவளும், அகன்ற கண்களைக் கொண்டவளும், பேரழகியும், உன்னதப் பிறப்பைக் கொண்டவளுமான திரௌபதி, பல சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் ஒப்பானவர்களான தன் தம்பியருக்கு மத்தியில் யானை மந்தையின் தலைமையானையைப் போல அமர்ந்திருந்த அந்த மன்னர்களில் காளையிடம் {யுதிஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னாள்.(2,3)
தன் கணவர்கள் அனைவரிடமும், குறிப்பாக யுதிஷ்டிரனிடம் எப்போதும் அன்பை எதிர்பார்த்தவளான அவள் {திரௌபதி}, அம்மன்னனால் எப்போதும் அக்கறையுடனும், பாசத்துடனும் நடத்தப்பட்டாள். கடமைகளை அறிந்தவளும், அவற்றை நடைமுறையில் நோற்பவளும், பெரிய இடைகளை {பின்புறத்தைக்} கொண்டவளுமான அந்த மங்கை, தன் தலைவனின் {யுதிஷ்டிரனின்} மீது கண்களைச் செலுத்தி, ஆறுதலளிக்கும் இனிய வார்த்தைகளில் அவனது கவனத்தை {திருப்ப} விரும்பி, பின்வருமாறு சொன்னாள்.(5)
திரௌபதி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, சாதகப் பறவைகளைப் போல விழிகள் வற்ற உமது தம்பியர் அழுதாலும், நீர் அவர்களை மகிழ்விக்கவில்லை.(6) ஓ! ஏகாதிபதி, (ஆற்றலில்) மதங்கொண்ட யானைகளுக்கு ஒப்பானவர்களும், எப்போதும் துன்பக் கோப்பையையே அருந்திய வீரர்களுமான இந்த உமது தம்பிகளை முறையான வார்த்தைகளால் மகிழ்ச்சியடைச் செய்வீராக.(7)
ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, துவைதத் தடாகத்தில் குளிர், காற்று மற்றும் சூரியனால் துன்புற்ற உமது தம்பிகள், உம்முடனிருந்தபோது, “வெற்றியடையும் விருப்பத்துடன் போரிட விரைந்து, துரியோதனனைக் கொன்று, அனைத்து விருப்பங்களையும் அருளவல்ல இந்தப் பூமியை நாம் அனுபவிப்போம். எதிரிகளைத் தண்டிப்பவர்களே, பெரும் தேர்வீரர்களை அவர்களது தேரை இழக்கச் செய்து, பெரும் யானைகளைக் கொன்று, தேர்வீரர்கள், குதிரை வீரர்கள் மற்றும் குதிரைகளின் உடல்களால் போர்க்களத்தை விரவிக் கிடக்கச் செய்து, பல்வேறு வகைகளிலான அபரிமிதமான கொடைகளால் பெரும் வேள்விகளை நீங்கள் செய்யப் போகிறீர்கள். நாடுகடத்தப்பட்டு காட்டில் வாழ்வதால் ஏற்படும் இந்தத் துன்பங்கள், இறுதியில் மகிழ்ச்சியிலேயே முடிவடையும்” என்று அவர்களிடம் நீர் சொல்லவில்லையா?(8-11)
ஓ! அறம்பயில்வோர் அனைவரிலும் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ஓ! வீரரே, அப்போது உமது தம்பிகளிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன நீர், இப்போது எங்கள் இதயங்களைத் துயரில் ஆழ்த்துவதேன்?(12) ஓர் அலியால் செல்வத்தை அனுபவிக்க முடியாது. (நீரற்ற) சேற்றில் மீன்கள் இல்லாததைப் போலவே, ஓர் அலியால் பிள்ளைகளைப் பெற முடியாது[1].(13) தண்டிக்கும் கோலில்லா {தண்டம் இல்லாத} க்ஷத்திரியன் ஒருவனால் ஒருபோதும் ஒளிர முடியாது. தண்டிக்கும் கோலில்லா க்ஷத்திரியன் ஒருவனால் ஒருபோதும் பூமியை அனுபவிக்க முடியாது. தண்டிக்கும் கோலில்லா மன்னன் ஒருவனின் குடிமக்கள் ஒருபோதும் மகிழ்ச்சியை அடைய முடியாது.(14) ஓ! மன்னர்களில் சிறந்தவரே, அனைத்துயிரினங்களிடமும் நட்பு, ஈகை, வேத கல்வி, தவங்கள் ஆகிய இவை ஒரு பிராமணனின் கடமைகளேயன்றி ஒரு மன்னனுக்குரியவையல்ல.(15) தீயோரைத் தடுப்பது, நேர்மையானவர்களைப் பாதுகாப்பது, போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதிருப்பது ஆகிய இவையே மன்னர்களுக்குரிய உயரிய கடமைகளாகும்[2].(16)மன்னிக்கும் தன்மையும் {பொறுமையும்} கோபமும், கொடுப்பதும் எடுப்பதும், பயங்கரமும் அச்சமற்றதன்மையும், தண்டனையும் வெகுமதியும் எவனிடம் இருக்கிறதோ, அவனே கடமைகளை அறிந்தவன் என்று சொல்லப்படுகிறது.(17) கல்வியாலோ, கொடையாலோ, துறவாலோ நீர் இந்தப் பூமியை அடையவில்லை.(18) ஓ! வீரரே, வலிமை அனைத்தையும் கொண்டு உம்மீது வெடித்துச் சிதற இருந்ததும், யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவை நிறைந்திருந்ததும், மூவகைப் பலங்களைக் கொண்டிருந்ததும்,[3] துரோணர், கர்ணன், அஸ்வத்தாமர், கிருபர் ஆகியோரால் பாதுகாக்கப்பட்டதுமான எதிரியின் படையானது, உம்மால் வீழ்த்தப்பட்டு, கொல்லப்பட்டது. இதன் காரணமாகவே நான் உம்மை இந்தப் பூமியை அனுபவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.(19,20)ஓ! பலமிக்கவரே {யுதிஷ்டிரரே}, ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களில் புலியே, மக்கள் தொகை அதிகம் கொண்ட மாவட்டங்கள் {ஊர்கள்} நிறைந்ததும், ஜம்பு என்றழைக்கப்பபடுவதுமான பகுதியை (முன்னர்) நீர் வலிமையுடன் அடக்கி ஆண்டீர்.(21) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, மகாமேருவுக்கு மேற்கில் அமைந்திருப்பதும், ஜம்புத்வீபத்திற்கு இணையானதுமான கிரௌஞ்சத்வீபம் என்ற பகுதியையும் நீர் வலிமையுடன் அடக்கி ஆண்டீர்.(22) ஓ! மன்னா, மகாமேருவின் கிழக்கில் இருப்பதும், கிரௌஞ்சத்வீபத்திற்கு இணையானதுமான சாகத்வீபமும் உம்மால் வலிமையுடன் அடக்கி ஆளப்பட்டது.(23) ஓ! மனிதர்களில் புலியே, மகாமேருவுக்கு வடக்கில் இருப்பதும், சாகத்வீபத்துக்கு இணையானதுமான பத்ராஸ்வம் என்ற பகுதியையும் நீர் அடக்கி ஆண்டீர்.(24) ஓ! வீரரே, பல ஊர்கள் அமைந்த தீவுகளும், பெருங்கடலில் உள்ள தீவுகளும் உம்மால் அடக்கி ஆளப்பட்டன.(25)
ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, இத்தகு அளவிலா சாதனைகளை அடைந்து, (அவற்றின் மூலம்) பிராமணர்களால் புகழப்பட்டும், உமது ஆன்மா நிறைவடையாததேன்?(26) ஓ! பாரதரே, வலிமையில் பெருகியவர்களும், (ஆற்றலில்) காளைகளுக்கோ, மதங்கொண்ட யானைகளுக்கோ ஒப்பானவர்களுமான இந்த உமது தம்பிகளைக் கண்டும், அவர்களிடம் இனிமை நிறைந்த சொற்களை ஏன் நீர் பேச மறுக்கிறீர்?(27) நீங்கள் அனைவரும் தேவர்களைப் போன்றவர்களாவீர். நீங்கள் அனைவரும் எதிர்களைத் தடுக்கவல்லவர்களாவீர். நீங்கள் அனைவரும் உங்கள் எதிரிகளை எரிக்கவல்லவர்களாவீர். உங்களில் ஒருவர் மட்டுமே எனது கணவராகியிருந்தாலும், என் மகிழ்ச்சி மிகப் பெரியதாகவே இருந்திருக்கும்.(28) ஓ! மனிதர்களில் புலியே, உடற்கட்டை ஈர்க்கும் ஐந்து புலன்களைப் போல நீங்கள் அனைவரும் என் கணவர்களாயிருக்கும்போது நான் என்ன சொல்வேன்?(29) பேரறிவும், பெரும் முன்னறிதிறனும் கொண்ட என் மாமியாரின் {குந்தியின்} வார்த்தைகளைப் பொய்க்க முடியாது. என்னிடம் பேசும்போது, அவள் {குந்தி}, “ஓ! பாஞ்சால இளவரசி {திரௌபதி}, ஓ! சிறந்த பெண்ணே, யுதிஷ்டிரன் உன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பான்” என்றாள்.(30)
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, சுறுசுறுப்பையும், ஆற்றலையும் கொண்ட ஆயிரக்கணக்கான மன்னர்களைக் கொன்ற பிறகு, அந்தச் சாதனையை வீணாகச் செய்யும் உமது மடமையை நான் காண்கிறேன்.(31) யாவருடைய அண்ணன் பித்தராகிறாரோ, அவர்களும் அவரைத் தொடர்ந்து பித்தராகிறார்கள். ஓ! மன்னா, உமது பித்தால், பாண்டவர்கள் அனைவரும் பித்தர்களாகப்போகிறார்கள்.(32) ஓ! ஏகாதிபதி, இந்த உமது தம்பியர் புலனுணர்வு கொண்டவர்களாக இருப்பின், அவர்கள் உம்மை நாத்திகர்கள் அனைவரோடும் சேர்த்து (ஒரு சிறையில்) அடைத்து வைத்து, பூமியின் அரசாட்சியை அவர்களே எடுத்துக் கொண்டிருப்பார்கள். அறிவு மங்கிய நிலையில் இவ்வழியில் செயல்படும் மனிதன் ஒருபோதும் செழிப்பை வெல்வதில்லை.(33) பித்துப் பாதையில் நடக்கும் மனிதன், சாம்பிராணி மற்றும் அஞ்சனம் ஆகியவற்றின் துணை கொண்டும், மூக்கின் மூலம் செலுத்தப்படும் மருந்துகள் மற்றும் பிற மருந்துகளின் துணைகொண்டும் மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.(34) ஓ! பாரதர்களில் சிறந்தவரே, பிள்ளைகளை இழந்தவளான நான் இன்னும் வாழ விரும்புவதால், நான் பெண்கள் அனைவரிலும் இழிந்தவளாவேன்.(35)
என்னாலும், (உமது நோக்கத்தில் இருந்து உம்மை விலகச் செய்ய) இவ்வாறு முயன்றுவரும் உமது சகோதரர்களாலும் சொல்லப்படும் வார்த்தைகளை நீர் அலட்சியம் செய்யாதீர். உண்மையில், மொத்த உலகத்தையும் கைவிடுவதால், நீர் கேட்டையும், உமக்கு ஆபத்தையும் வரவேற்கிறீர்.(36) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பூமியின் தலைவர்கள் அனைவராலும் மதிக்கப்படும் சிறந்த மன்னர்களான மாந்தாதா மற்றும் அம்பரீஷன் ஆகிய இருவரைப் போல நீர் இப்போது பிரகாசிக்கிறீர்.(37) உமது குடிகளை நீதியுடன் பாதுகாத்து, மலைகள், காடுகள் மற்றும் தீவுகளுடன் கூடிய பூமாதேவியை நீர் ஆட்சி செய்வீராக. ஓ! மன்னா, உற்சாகமிழக்காதீர்.(38) பல்வேறு வேள்விகளில் தேவர்களைத் துதிப்பீராக. உமது எதிரிகளுடன் போரிடுவீராக. ஓ! மன்னர்களில் சிறந்தவரே, செல்வம், துணிகள் மற்றும் பிற இன்பநுகர் பொருட்களைப் பிராமணர்களுக்குக் கொடையளிப்பீராக” என்றாள் {திரௌபதி}”.(39)
செங்கோல் சிறப்பு! – சாந்திபர்வம் பகுதி – 15-செங்கோலின் சிறப்பை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன அர்ஜுனன்; தண்ட முறைகளின் அவசியம்; ஆன்மாவின் கொல்லப்பட முடியாத நிலை ஆகியவற்றை எடுத்துரைத்து யுதிஷ்டிரனை அரசாளும்படி சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “யக்ஞசேனன் மகளின் {திரௌபதியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், மங்கா புகழையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட தன் அண்ணனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} முறையான மதிப்பளித்து மீண்டும் பேசினான்.(1)
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “தண்டக்கோலே (தண்டக்கோலைத் தரித்தவனே), தன் குடிகள் அனைத்தையும் ஆட்சி செய்து, அவர்களைப் பாதுகாக்கிறது {றான்}. அனைத்தும் உறங்கும்போது தண்டக்கோல் விழித்திருக்கிறது. இதன் காரணமாகவே, அந்தத் தண்டக் கோலை {செங்கோலை} ஞானியர் நீதிமிக்கது என்கின்றன.(2) தண்டக்கோலே நீதியையும், பொருளையும் பாதுகாக்கிறது. ஓ! மன்னா, அதுவே இன்பத்தையும் பாதுகாக்கிறது. இதன் காரணமாகவே, அந்தத் தண்டக்கோல் வாழ்வின் மூன்று நோக்கங்களோடு அடையாளங்காணப்படுகிறது.(3) தானியம், செல்வம் ஆகிய இரண்டும் தண்டக்கோலால் பாதுகாக்கப்படுகின்றன. ஓ! கல்வியறிவு கொண்டவரே, இஃதை அறிந்து, தண்டக்கோலை எடுத்துக் கொண்டு, உலகின் போக்கைக் கண்காணிப்பீராக.(4) ஒருவகைப் பாவிகள், மன்னனின் கரங்களில் இருக்கும் தண்டக்கோலிடம் கொண்ட அச்சத்தால் பாவத்தில் இருந்து விலகுகிறார்கள். மற்றொரு வகையினர் யமனின் தண்டத்தில் கொண்ட அச்சத்தாலும், மற்றொரு வகையினர் மறுமையில் கொண்ட அச்சத்தாலும் அதே போன்ற பாவச் செயல்களில் இருந்து விலகுகின்றனர்.(5) மேலும் வேறு வகையினர் சமூகத்திடம் கொண்ட அச்சத்தால் பாவச் செயல்களில் இருந்து விலகுகின்றனர். ஓ! மன்னா, இவ்வாறே இவ்வுலகின் போக்கில் உள்ள அனைத்தும் தண்டக்கோலைச் சார்ந்தே இருக்கின்றன.(6)
தண்டக்கோலால் மட்டுமே ஒருவரையொருவர் விழுங்கி விடுவதில் இருந்து தடுக்கப்படும் ஒருவகையினரும் இருக்கின்றனர். தண்டக்கோல் மக்களைப் பாதுகாக்கவில்லையெனில், அவர்கள் நரக இருளில் மூழ்குவார்கள்.(7) தண்டக்கோலானது, அடங்காதவர்களைத் தடுக்கவும், தீயவர்களைத் தண்டிக்கவும் பயன்படுவதாலேயே ஞானியரால் அவ்வாறு பெயரிடப்பட்டது.(8) பிராமணர்களுக்கு வாய்ச்சொல்லாலும்; க்ஷத்திரியர்களுக்கு, அவர்களின் உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு உணவைக் கொடுத்தும்; வைசியர்களுக்கு அபராதமளித்தும், உடைமைகளைப் பறிமுதல் செய்தும் தண்டனை அளிக்க வேண்டும். சூத்திரர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடையாது[1].(9) மனிதர்களை (தங்கள் கடமைகளில்) விழிப்புணர்வுடன் வைத்திருப்பதற்காகவும், உடைமைகளைப் பாதுகாப்பதற்காகவும், தண்டம் என்ற பெயரில் இவ்வுலகில் விதிகள் (தண்டனை சட்டங்கள்) நிறுவப்பட்டுள்ளன.(10)எங்கே தண்டமானது, கரிய நிறத்துடனும், சிவந்த கண்களுடனும் (ஒவ்வொரு குற்றவாளியையும்) பற்றத் தயாராக நற்கிறதோ, எங்கே மன்னன் நீதிப் பார்வையுடன் இருக்கிறானோ, அங்கே குடிமக்கள் ஒருபோதும் தங்களை மறக்காமல் இருக்கிறார்கள் {தன்னிலை இழக்காது விழிப்புணர்வுடன் இருக்கின்றனர்}.(11) பிரம்மச்சாரி, இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, காட்டுத்துறவி {வானப்பிரஸ்தன்} மற்றும் அறத்தவசி {ஸந்யாசி} ஆகியோர் அனைவரும் தங்கங்கள் தங்கள் வாழ்வுமுறைகளைத் தண்டத்தில் கொண்ட அச்சத்தின் மூலமே நோற்கின்றனர்.(12) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அச்சமில்லாதவன் ஒருபோதும் வேள்வியைச் செய்வதில்லை. அச்சமில்லாதவன் ஒருபோதும் கொடை கொடுப்பதில்லை. அச்சமில்லாத மனிதன் ஒருபோதும், எந்தச் செயலையோ, ஒப்பந்தத்தையோ பின்பற்ற விரும்புவதில்லை.(13) மற்றவர்களின் முக்கிய அங்கங்களைப் பிளக்காமல், அரிய சாதனைகளை அடையாமல், (மீனைக் கொல்லும்) மீனவனைப் போல உயிரினங்களைக் கொல்லாமல், எந்த மனிதனாலும் பெருஞ்செழிப்பை அடைய முடியாது[2].(14) கொலை செய்யாமல் ஒரு மனிதனால், இவ்வுலகில் புகழையோ, செல்வத்தையோ, குடிமக்களையோ அடைய முடியாது. இந்திரனே கூட, விருத்திரனைக் கொன்றதால்தான் மஹேந்திரனானான்.(15)தேவர்களில் பிறரைக் கொன்றவர்களே, மனிதர்களால் அதிகமாகத் துதிக்கப்படுகிறார். ருத்திரன், ஸ்கந்தன், சக்ரன், அக்னி, வருணன் ஆகியோர் அனைவரும் கொலைகாரர்களாவர்.(16) ஓ! பாரதரே, காலன், மிருத்யு, வாயு, குபேரன், சூரியன், வசுக்கள், மருத்துக்கள், சத்தியஸ்கள், விஸ்வதேவர்கள் ஆகியோர் அனைவரும் கூடக் கொலைகாரர்களே[3].(17) இந்தத் தேவர்களின் ஆற்றலால் பணிவடைந்து மக்கள் அனைவரும் அவர்களைத் வணங்குகிறார்களேயன்றி பிரம்மனையோ, தாத்ரியையோ, பூஷனையோ ஒருபோதும் வழங்குவதில்லை.(18) தேவர்களில் அனைத்துயிர்களையும் சமமாக மதித்து, சுயக்கட்டுப்பாடு மற்றும் அமைதியுடன் இருக்கும் தேவர்களை ஒரு சிலரே தங்கள் செயல்களாலும் உன்னத மன நிலைப்பாட்டாலும் வணங்குகின்றனர்.(19) பிறருக்குத் தீங்கிழைக்கும் செயலெதையும் செய்யாத ஓருயிரினத்தையும் நான் இவ்வுலகில் காணவில்லை. விலங்குகள், விலங்குகளைச் சார்ந்தும், பலசாலிகள் பலவீனர்களைச் சார்ந்தும் வாழ்கிறார்கள்.(20)கீரிப்பிள்ளை பூனையை விழுங்குகிறது; பூமையானது கீரிப்பிள்ளையை விழுங்குகிறது; நாய் பூனையை விழுங்குகிறது; மேலும் அந்த நாயும் சிறுத்தையால் விழுங்கப்படுகிறது.(21) மேலும் காலன் வரும்போது அனைத்துப் பொருட்களும் அவனால் விழுங்கப்படுகின்றன என்பதையும் காண்பீராக. அசைவதும், அசையாததுமான இவ்வண்டமே வாழும் உயிரினங்களின் உணவாகிறது.(22) இதுவே தேவர்களால் விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஒரு ஞானி இதில் திகைப்படைவதில்லை. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் எவ்வாறு பிறந்தீரோ அவ்வாறாவதே உமக்குத் தகுந்தது.(23) (க்ஷத்திரிய) மடையர்கள் மட்டுமே, கோபத்தையும், இன்பத்தையும் விலக்கி, காடுகளைப் புகலிடமாக அடைகின்றனர். தவசிகளே கூட உயிரினங்களைக் கொல்லாமல் தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்ள முடியாது.(24) நீரிலும், பூமியிலும், கனிகளிலும் எண்ணற்ற உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றை ஒருவன் கொல்லவில்லை என்பது உண்மையில்லை. ஒருவனுடைய வாழ்வைத் தாங்கிக் கொள்வதை விட உயர்ந்த கடமை வேறென்ன இருக்க முடியும்?[4](25)அடையாளம் காண முடியாத அளவும் பல உயிரினங்கள் மிக நுண்ணியவையாக இருக்கின்றன. கண்ணிமைப்பதால் மட்டுமே கூட அவை அழிக்கப்படுகின்றன.(26) கோபம் மற்றும் செருக்கைக் கைவிட்டு, தவசியின் வாழ்வுமுறையை நோற்கும் மனிதர்கள், கிராமங்களையும், நகரங்களையும் விட்டு வனத்திற்குச் செல்கின்றனர். அங்கே சென்றதும் அம்மனிதர்கள் திகைப்படைந்து மீண்டும் இல்லற வாழ்வையே நோற்கின்றனர்.(27) (இல்லறத்தை நோற்கும்) பலர் மண்ணை உழுது, மூலிகைகளைப் பறித்து, மரங்களை வெட்டி, பறவைகள் மற்றும் விலங்குகளையும் கொன்று வாழும் பலர் வேள்விகளைச் செய்து இறுதியில் சொர்க்கத்தை அடைகிறார்கள்.(28) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, உயிரினங்கள் அனைத்தின் செயல்களும், தண்டமுறை கொள்கை முறையாகப் பயன்படுத்தப்படும் போது மட்டுமே வெற்றியால் மகுடம் சூட்டப்படுகின்றன என்பதில் நான் எந்த ஐயமும் கொள்ளவில்லை.(29) இவ்வுலகில் இருந்து தண்டமுறை {தண்டிக்கும் சட்டம்} நீக்கப்பட்டால் விரைவில் உயிரினங்கள் அனைத்தும் அழிந்துவிடும். நீரில் உள்ள மீன்களைப் போல, வலிமையான விலங்குகள், பலவீனமானவற்றை உணவாகக் கொள்கின்றன.(30)
அணைந்துவிட்ட நெருப்புகளே கூட ஊதப்படும்போது அச்சத்தால் மீண்டும் சூடர்விடுகின்றன. இது பலம் அல்லது தண்டனையின் மீது கொண்ட அச்சத்தாலேயே விளைகிறது.(31) தீமையிலிருந்து நன்மையை வேறுபடுத்திப் பார்க்க இவ்வுலகில் தண்டமில்லையென்றால், மொத்த உலகும் இருளில் மூழ்கி, அனைத்துப் பொருட்களும் குழப்பத்தை அடைந்திருக்கும்.(32) விதிகளை மீறுபவர்களும், நாத்திகர்களும், வேதங்களை ஏளனம் செய்பவர்களும் தண்டத்தால் பீடிக்கப்பட்டால், விரைவில் அவர்கள் விதிகளையும், வரைமுறைகளையும் கடைப்பிடிக்கத் தொடங்குகிறார்கள்.(33)இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் தண்டமுறையால் ஒழுங்கமைக்கப்படுகிறார்கள். தண்டத்தில் கொண்ட அச்சத்தால் ஒரு மனிதன் விதிகளையும், வரைமுறைகளையும் பின்பற்றுகிறான்.(34) தண்டமானது, நால்வகையினரின் அறம், பொருள் மற்றும் இன்பத்தைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களை நல்லோராக, பணிவுள்ளோராக மாற்றவும் படைப்பாளனால் விதிக்கப்பட்டிருக்கிறது.(35)
தண்டத்தால் அச்சத்தைத் தூண்டமுடியவில்லையெனில், அண்டங்காக்கைகளும், இரைதேடும் விலங்குகளும், பிற உயிரினங்கள் அனைத்தையும், மனிதர்களையும், வேள்விக்குத் தேவையான தெளிந்த நெய்யையும் உண்டிருக்கும்.(36) தண்டமுறை எவரையும், ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், ஒருவரும் வேதங்களைக் கற்க மாட்டார்கள், ஒருவரும், காரம்பசுவில் பால் கறக்க மாட்டார்கள், ஒரு கன்னிகையும் திருமணம் செய்துகொள்ள மாட்டாள்[5].(37) தண்டமுறையானது ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், அனைத்துப் பக்கங்களிலும் குழப்பமும் அழிவும் நேர்ந்து, அனைத்து வேலிகளும் அகற்றப்பட்டு, உடைமை என்ற கருத்தே காணாமல் போயிருக்கும்.(38) தண்டமுறையானது ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வருடாந்தர வேள்விகளை ஒருபோதும் மக்களால் முறையாகச் செய்ய முடியாது.(39) தண்டமுறையானது ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், எந்த வாழ்வுமுறையைச் சேர்ந்தவரும், (சாத்திரங்களில்) அறிவிக்கப்பட்டிருக்கும் அவனது வாழ்வுமுறைக்கான கடமைகளை நோற்க முடியாது, அவன் ஒருபோதும் அறிவை அடையவும் முடியாது.(40)ஒட்டகங்களோ, காளைகளோ, குதிரைகளோ, கோவேறு கழுதைகளோ, கழுதைகளோ தேரில் பூட்டப்பட்டாலும் தண்டமுறையானது ஆதரிக்கவோ, பாதுகாக்கவோ இல்லையெனில், அவை அந்தத் தேர்களையும், வண்டிகளையும் இழுக்காது.(41) தண்டனையைச் சார்ந்த அனைத்துயிரினங்களும் இருக்கின்றன. எனவே, கல்விமான்கள் தண்டனையே அனைத்திற்கும் வேராக இருக்கிறது என்று சொல்கின்றனர். மனிதர்கள் விரும்பும் சொர்க்கமும், இந்த உலகமும் கூட அந்தத் தண்டத்திலேயே இருக்கிறது.(42) எங்கே எதிரிகளை அழிக்கும் தண்டமுறை நன்றாகப் பயன்படுத்தப்படுகிறதோ, அங்கே பாவமோ, வஞ்சனையோ, எந்தத் தீமையோ காணப்படாது.(43) தண்டக் கோல் உயர்த்தப்படவில்லையெனில், நாயும் வேள்வி நெய்யை நக்கும். முதல் (வேள்விக்) கொடையைக் காகங்கள் எடுத்துச் சென்றுவிடும்.(44) நியாயமான முறையிலேயோ, நியாயமற்ற முறையிலேயோ, இப்போது இந்த நாடு நமதாகியிருக்கிறது. எனவே, நீர் அதை அனுபவித்து வேள்விகளைச் செய்வீராக.(45)
தங்கள் அன்பு மனைவியருடன் (மற்றும் பிள்ளைகளுடன்) வாழும் நற்பேறு பெற்ற மனிதர்கள், நல்ல உணவை உண்டு, சிறந்த ஆடைகளை உடுத்தி, மகிழ்ச்சிகரமாக அறத்தை அடைகின்றனர்.(46) நமது செயல்கள் அனைத்தும் செல்வத்தைச் சார்ந்தே இருக்கின்றன என்பதிலும், அந்தச் செல்வமானது தண்டமுறையைச் சார்ந்திருக்கிறது என்பதிலும் ஐயமில்லை எனவே, தண்டமுறையின் முக்கியத்துவத்தைக் காண்பீராக.(47) உலகத்தின் உறவுகளைப் பராமரிக்க மட்டுமே கடமைகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. தீங்கிழையாமை மற்றும் நல்ல நோக்கங்களால் தூண்டப்பட்ட தீங்கிழைப்பு ஆகிய இரண்டு காரியங்கள் இருக்கின்றன. இவை இரண்டில் எதனால் அறத்தை அடையமுடியுமோ அதுவே மேன்மையானதாகும்.(48) எந்தச் செயலும் முற்றாகத் தகுதி நிறைவுற்றதுமல்ல; அதே போல எதுவும் முற்றான தீமையும் அல்ல. செயல்கள் அனைத்திலும் நல்லது, அல்லது ஆகிய இரண்டும் காணப்படுகின்றன.(49) விதை நீக்கலுக்கு உட்படுத்தப்படும் விலங்குகளின் கொம்புகளும் வெட்டப்படுகின்றன. பிறகு அவை பளு சுமப்பதற்காகக் {மூக்கணாங்கயிற்றால்} கட்டப்படவும் தண்டிக்கப்படவும் {அடிக்கப்படவும்} செய்யப்படுகின்றன.(50)
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, உறுதிப்பாடில்லாத போலியான, நிந்தனைகளால் அழுகுகின்ற, வலிநிறைந்த இவ்வுலகில், மேலே குறிப்பிட்ட விதிகள் மற்றும் உறவுகளைப் பின்பற்றிப் பழங்காலத்து மனிதர்களின் பழக்க வழங்கங்களைப் பயில்வீராக.(51) வேள்விகளைச் செய்வீராக, கொடையளிப்பீராக, உமது குடிகளைக் காப்பீராக, அறம்பயில்வீராக. ஓ! குந்தியின் மகனே, உமது எதிரிகளைக் கொன்று உமது நண்பர்களைக் காப்பீராக.(52) ஓ! மன்னா, எதிரிகளைக் கொல்லும்போது உற்சாகத்தை இழக்காதீர். ஓ! பாரதரே, அதைச் செய்பவன் ஒரு போதும் சிறு பாவத்தையும் ஈட்டமாட்டான்.(53) தன்னை எதிர்த்து வருவதும், ஆயுதந்தரித்ததுமான படையை ஆயுதத்தை எடுத்து, கொல்லும் ஒருவனுக்கு கருவைக் கொன்ற பாவம் நேராது. ஏனெனில், முன்னேறி வரும் எதிரியே, கொல்பவனின் கோபத்தைத் தூண்டுகிறான்.(54) ஒவ்வொரு உயிரினத்திற்குள்ளும் இருக்கும் ஆன்மாவானது கொல்லப்பட முடியாததாகும். ஆன்மாவைக் கொல்ல முடியாது எனும்போது, ஒருவன் மற்றொருவனால் எவ்வாறு கொல்லப்பட முடியும்?(55) புதிய வீட்டிற்குள் நுழையும் ஒரு மனிதனைப் போலவே உயிரினங்கள் அடுத்தடுத்த உடல்களில் நுழைகின்றன.(56) சிதைந்த வடிவங்களைக் கைவிடும் ஓர் உயிரினம் புதிய வடிங்களை அடைகிறது. உண்மையைக் காண இயலும் மக்கள் இந்த மாற்றத்தையே மரணமாகக் கருதுகிறார்கள்” என்றான் {அர்ஜுனன்}”.(57)
திரௌபதியுடைய குழலின் நிலை! – சாந்திபர்வம் பகுதி – 16-கடந்த கால அவமதிப்புகளை யுதிஷ்டிரனுக்கு நினைவூட்டிய பீமன்; உடல், மனம் ஆகியவற்றின் தன்மைகளையும், நோய்களையும் விவரிப்பது; உடலுக்கு மனமும், மனத்திற்கு உடலும் தீர்வாக இருப்பதைச் சொல்லி பழைய அவமதிப்புகளை நினைத்துப்பார்த்தால் செய்யப்பட்ட படுகொலைகள் அனைத்தும் நியாயமானவையே எனச் சொன்னது..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அர்ஜுனன் பேசி முடித்ததும், பெரும் கோபமும் சக்தியும் கொண்டவனான பீமசேனன், தன் பொறுமை அனைத்தையும் திரட்டிக் கொண்டு, தன் அண்ணனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(1) “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நீர் கடமைகள் அனைத்தையும் அறிந்தவராவீர். நீர் அறியாதது ஏதுமில்லை. நாங்கள் எப்போதும் உமது நடத்தையையே பின்பற்றி நடக்கவே விரும்புகிறோம், ஆனால், ஐயோ, எங்களால் இதைச் செய்ய முடியாது.(2) “நான் எதுவும் சொல்ல மாட்டேன். நான் எதுவும் சொல்லமாட்டேன்” என்பதே எனது மனத்தின் விருப்பம். எனினும், பெருந்துயரால் உந்தப்பட்டு எதையாவது சொல்லும் கட்டாய நிலையை நான் அடைந்திருக்கிறேன். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {யுதிஷ்டிரரே}, என் வார்த்தைகளைக் கேட்பீராக. உமது அறிவு மயக்கத்தால், அனைத்தும் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது, நாங்களும் உற்சாகமற்றவர்களாவும், பலவீனர்களாகவும் ஆக்கப்படுகிறோம்.(4) உலகின் ஆட்சியாளராக, ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவராக இருக்கும் நீர் உற்சாகமற்றதன் விளைவால் எவ்வாறு ஒரு கோழையைப் போல அறிவு மயக்கத்தை அடைந்தீர்?(5)
உலகத்தின் நேர்மையான வழியையும், நேர்மையற்ற வழிகளையும் நீர் அறிந்திருக்கிறீர். ஓ! பலமிக்கவரே, தற்காலத்திற்கோ, எதிர்காலத்திற்கோ சொந்தமானது ஏதுமில்லை என்பதையும் நீர் அறிந்திருக்கிறீர்.(6) ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, அரசுரிமையை நீர் ஏற்க வேண்டிய காரணங்களை உமக்குச் சொல்கிறேன். சிதறாத கவனத்தோடு கேட்பீராக.(7) உடல் சார்ந்த, மனம் சார்ந்த இரண்டு வகை நோய்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் மற்றதிலிருந்தே உதிக்கிறது. அவற்றில் ஏதும் தனித்திருப்பதைக் காண முடியாது. மனநோய்கள் உடல் சார்ந்தவற்றில் இருந்தே உதிக்கின்றன என்பதில் ஐயமில்லை. அதேபோல உடல் நோய்களும் மனம் சார்ந்தவற்றில் இருந்தே உதிக்கின்றன. இதுவே உண்மை.(9) கடந்த கால உடல் துயரம் அல்லதும் மனத்துயரின் காரணமாக வருந்துபவன், அந்தத் துயரத்தால் துயரத்தையே அறுவடை செய்து, இரு மடங்கு துயரை அடைகிறான்.(10)
குளிர், வெப்பம், காற்று, ஆகிய மூன்றும் உடலின் தன்மைகளாகும்[1]. அவை இணக்கத்துடன் ஒத்திசைந்திருப்பது உடல் நலத்தின் அடையாளமாகும்.(11) இம்மூன்றில் ஒன்று மற்றவைகளுக்கு விஞ்சியிருந்தால், அதற்குத் தீர்வுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. குளிர் வெப்பத்தால் தடுக்கப்படுகிறது, வெப்பமும் குளிரால் தடுக்கப்படுகிறது.(12) நற்குணம், ஆசை, இருள் ஆகிய இம்மூன்றும் மனத்தின் தன்மைகளாகும். இம்மூன்றும் இணக்கத்துடன் ஒத்திசைந்திருப்பதே (மன) நலத்திற்கான அடையாளமாகும்.(13) இம்மூன்றில் ஒன்று மற்றவைகளுக்கு விஞ்சியிருந்தால், அதற்குத் தீர்வுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. துன்பம் இன்பத்தால் தடுக்கப்படுகிறது, இன்பமும் துன்பத்தால் தடுக்கப்படுகிறது.(14) தற்காலத்தில் இன்பமாக வாழும் ஒருவன், கடந்த காலத் துன்பங்களை நினைத்துப் பார்க்க விரும்புகிறான். தற்போது துன்பத்தில் வாழும் மற்றொருவன், தனது கடந்த கால அருளை நினைத்துப் பார்க்க விரும்புகிறான்.(15)எனினும், துயரத்தின் போது கவலையாகவோ, அருளின் போது மகிழ்ச்சியாகவோ நீர் ஒருபோதும் இருந்ததில்லை. எனவே, அருட்காலத்தில் கவலையடையவோ, துன்பகாலத்தில் மகிழ்ச்சியடையவோ நீர் உமது நினைவுத்திறனைப் பயன்படுத்தக் கூடாது. விதியே அனைத்திலும் வலிமைமிக்கதாகத் தெரிகிறது. அல்லது, இவ்வாறு பாதிப்படைந்திருப்பதன் விளைவால் உண்டான உமது இயல்பாக இஃது இருக்குமானால்,(16-17) சொற்ப ஆடையுடுத்தியிருந்த கிருஷ்ணை {திரௌபதி}, தனது மாதவிடாய் காலத்தில் சபைக்கு இழுத்து வரப்பட்டதைக் கண்டதை நினைக்க இயலாதவராக நீர் எவ்வாறு இருக்கிறீர்[2].(18) நாம் (குரு) நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதையும், நாம் நாடு கடந்து, மான்தோலுடுத்தி (காட்டுக்குள்) இருந்ததையும், அந்த நமது காட்டு வாழ்வையும் நீர் ஏன் நினைக்கவில்லை.(19) ஜடாசுரன் ஏற்படுத்திய துன்பங்களையும், சித்திரசேனனுடனான போரையும், சிந்து மன்னனின் {ஜெயத்ரதனின்} கரங்களில் அடைந்த துயரத்தையும் நீர் ஏன் மறந்துவிட்டீர்?(20) தலைமறைவாக வாழ்ந்த காலத்தில் இளவரசி திரௌபதி கீசகனால் உதைக்கப்பட்டதை நீர் ஏன் மறந்தீர்?(21)-ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {யுதிஷ்டிரரே}, பீஷ்மருடனும், துரோணருடனும் நீர் போரிட்டதைப் போன்ற கடுமையான போரே இப்போது உம் முன்னிலையில் இருக்கிறது. இதனுடன் நீர் உமது மனத்தைக் கொண்டே போரிட வேண்டும்.(22) உண்மையில், இப்போது உம்முன்னிலையில் இருக்கும் போரில், கணைகள், நண்பர்கள், உறவினர்கள் சொந்தங்கள் ஆகியவற்றுக்கான தேவையில்லை, ஆனால் அதில் நீர் உமது மனத்தால் மட்டுமே போரிட வேண்டும்.(23) இந்தப் போரில் நீர் வெல்வதற்கு முன்பே உமது உயிர்மூச்சைவிட்டுவிட்டால், பிறகு மற்றொரு உடலை அடைந்து நீர் இதே எதிரிகளுடன் நீர் போரிட வேண்டியிருக்கும்[3].(24) எனவே, ஓ! பாரதரே, அந்தப் போரை இன்றே போரிட்டு, உடல் குறித்த அக்கறையில்லாமல் உமது செயல்பாடுகளின் மூலம் உமது மனத்தின் எதிரிகளை அடையாளம் கண்டு அவற்றை வெல்வீராக. அந்தப் போரை உம்மால் வெல்ல முடியவில்லையெனில், உமது நிலை என்னவாகும்? மறுபுறம், ஓ! ஏகாதிபதி, அதை நீர் வென்றால், வாழ்வில் உயர்ந்த கதியை அடைவீர்.(26)இதில் உமது அறிவைச் செலுத்தி, உயிரினங்களின் சரியான மற்றும் தவறான பாதைகளை உறுதி செய்து கொண்டு, உமக்கு முன்னால் உமது தந்தையர் ஏற்று நடந்த பாதையைப் பின்பற்றி, உமது நாட்டை முறையாக ஆள்வீராக.(27) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பாவி துரியோதனனும், அவனது தொண்டர்கள் அனைவரும் கொல்லப்பட்டது நற்பேற்றாலேயே. திரௌபதியின் குழல்களின் நிலையை நீர் அடைந்ததும் நற்பேற்றினாலேயே[4].(28) முறையான சடங்குகளுடனும், அபரிமிதமான கொடைகளுடன் ஒரு குதிரை வேள்வியைச் செய்வீராக. ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே, நாங்களும், பெரும் சக்தி கொண்டவனான வாசுதேவனும் {கிருஷ்ணனும்} உமது பணியாட்களாவோம்” என்றான் {பீமன்}.(29)
அனைத்தும் அறிவில் நிலைத்திருக்கின்றன! – சாந்திபர்வம் பகுதி – 17-துறவே சிறந்ததெனப் பீமனுக்குச் சொன்ன யுதிஷ்டிரன்; பசியை வெல்ல வேண்டும்; ஆசை மற்றும் இன்பங்களைத் துறக்க வேண்டும் என்று சொன்னது; பண்பட்ட அறிவிலேயே அனைத்தும் நிலைத்திருக்கின்றன என்று சொன்ன யுதிஷ்டிரன்…
யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “ஓ! பீமா, நிறைவின்மை, அலட்சியம், பூமிசார்ந்த பொருட்களில் பற்று, அமைதியின்மை, வலிமை, மடமை, போலிச் செருக்கு {வறட்டு பெருமை}, கவலை ஆகிய இந்தப் பாவங்களால் பீடிக்கப்பட்டு, நீ அரசுரிமையில் நாட்டங்கொள்கிறாய். ஆசையில் இருந்து விடுபட்டு, இன்பம் மற்றும் துன்பம் ஆகியவற்றைக் கடந்து, அமைதியை அடைந்து, மகிழ்ச்சியடைய {சுகமாக இருக்க} முயல்வாயாக.(1,2) கட்டற்ற இந்தப் பூமியை எந்த ஒப்பற்ற ஏகாதிபதி ஆட்சி செய்வானோ, அவனும் ஒரே வயிற்றைத் தான் கொண்டிருப்பான். பிறகு ஏன் நீ இந்த வாழ்வுமுறையைப் புகழ்கிறாய்?(3) ஓ! பாரதர்களில் காளையே {பீமா}, ஒருவனுடைய ஆசைகள் ஒரு நாளிலோ, பல மாதங்களிலோ நிறைவடையாது. உண்மையில், நிறைவடைய இயலா ஆசையானது, ஒருவனுடைய மொத்த வாழ்நாளிலும் கூட நிறைவையடையாது.(4) நெருப்பில் விறகு ஊட்டப்படும்போது அது சுடர்விட்டு எரிகிறது; ஊட்டப்படாதபோதோ அணைந்துவிடுகிறது. எனவே, உன் வயிற்றில் நெருப்பு எரியும்போது {பசிக்கும்போது}, சொற்ப உணவே அளித்து {உணவைக் குறைத்து} அஃதை அணைப்பாயாக.(5) ஞானமற்றவனே தன் வயிற்றுக்கு அதிக உணவைத் தேடுகிறான். முதலில் உனது வயிற்றை வெல்வாயாக. (பிறகு உன்னால் இந்தப் பூமியையே வெல்ல இயலும்). உனது நிரந்தர நன்மைக்கான பூமியை, அப்போது உன்னால் வெல்ல முடியும்[1].(6)உலகம் சார்ந்த ஆசைகள், இன்பங்கள் மற்றும் செழிப்பை நீ புகழ்கிறாய். எனினும், அனைத்து இன்பங்களையும் துறந்தவர்கள், தவங்களால் தங்கள் உடல்களைக் குறைத்துக் கொண்டு பேரின்பம் நிறந்த உலகங்களை அடைகின்றனர்.(7) நாட்டை அடைந்து அதைப் பராமரிப்பதில் நியாயமான மற்றும் நியாயமில்லா இரண்டு வழிகளும் பின்பற்றப்படுகின்றன. அவற்றிற்கான ஆசை உன்னுள் இருக்கிறது[2]. எனினும், உன் பெருஞ்சுமைகளில் இருந்து உன்னை விடுவித்துக் கொண்டு நீ துறவை பின்பற்றுவாயாக.(8) ஒரு புலியானது, தன் வயிற்றை நிரப்புவதற்காகப் பல விலங்குகளைக் கொல்கிறது. பலமற்ற பிற விலங்குகள், உயிர்வாழும் ஆசையால் உந்தப்பட்டு, புலியின் இரையாக வாழ்கின்றன.(9) உலகம் சார்ந்த பொருட்களை ஏற்கும் மன்னர்கள் துறவை பயின்றால், அவர்களால் ஒருபோதும் மனநிறைவை அடைய முடியாது. அவர்களின் புத்தியின்மையைப் பார்.(10) எனினும், மரத்தின் இலைகளை உண்டு வாழ்பவர்களோ, தானியங்களில் உமி நீக்க இரு கற்களை மட்டுமே, அல்லது தங்கள் பற்களை மட்டுமே பயன்படுத்துபவர்களோ, நீரை மட்டுமே உட்கொண்டு வாழ்பவர்களோ, காற்றை மட்டுமே உட்கொண்டு வாழ்பவர்களோ, நரகத்தை வெல்கிறார்கள் {நரகை அடையாமல் சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள்} என்பது உண்மைச் செய்தியாகும்.(11) கட்டற்ற இந்தப் பரந்த உலகை ஆள்பவனான மன்னனும், தங்கத்தையும், கூழாங்கற்களையும் சமமாகக் கருதும் ஒரு மனிதனு ஆகிய இவர்கள் இருவருக்குள், பின்னவனே {துறவியே} தன் வாழ்வின் நோக்கத்தையடைந்ததாகச் சொல்லப்படுகிறானேயன்றி முன்னவன் {மன்னன்} அல்ல.(12)எனவே, நீ இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தைத் தரும் நிரந்தர புகலிடத்தைச் சார்ந்தவனாகி, செயலை நிறுத்தி, ஆசைகளில் கொண்டுள்ள பற்றைத் துறப்பாயாக.(13) ஆசையையும், இன்பத்தையும் கைவிட்டவர்கள் ஒருபோதும் வருந்த வேண்டியதில்லை[3]. எனினும், நீ இன்பங்களுக்காக வருந்துகிறாய். ஆசையையும், இன்பத்தையும் விலக்கினால், பொய் பேச்சில் இருந்து விடுபடுவதில் நீ வெல்லலாம்[4].(14) பித்ருக்களின் பாதை மற்றும் தேவர்களின் பாதை என நன்கறியப்பட்ட இருபாதைகள் (நமக்காக) இருக்கின்றன. வேள்விகளைச் செய்வோர் பித்ரு பாதையில் செல்கின்றனர், அதே வேளையில், விடுதலை {முக்தியை} வேண்டுவோர், தேவ பாதையில் செல்கின்றனர்[5].(15) தவங்கள், பிரம்மச்சரியம், (வேத) கல்வி, ஆகியவற்றின் மூலம் தங்கள் உடல்களைத் துறக்கும் பெரும் முனிவர்கள், காலனின் சக்திக்கும் மேலான உலகங்களுக்குச் செல்கின்றனர்.(16)உலகம் சார்ந்த இன்பங்கள் கட்டுகளின் {பற்றின்} தன்மையைக் கொண்டனவாகும். அவை செயல்பாடு என்றும் அழைக்கப்படுகின்றன. (பற்று மற்றும் செயல்பாடு ஆகிய) அவ்விரு பாவங்களில் இருந்து விடுபடும் ஒருவனே உயர்ந்த கதியை அடைகிறான்[6].(17) முரண்பட்ட இரட்டைகளிலிருந்து {த்வந்துவங்களில் இருந்து} விடுபட்டவனும், ஆசை மற்றும் இன்பங்களில் இருந்து விடுபட்டவனும், மோக்ஷதர்மத்தை நோற்பவனுமான ஜனகனால் (பழங்காலத்தில்) பாடப்பட்ட ஒரு வரியில் இக்குறிப்பிருக்கிறது.(18) (அவ்வாறு இவ்வாறு அமைந்திருக்கிறது:) “என் செல்வங்கள் ஏராளம், இருப்பினும் என்னிடம் ஒன்றுமில்லை. மேலும், மொத்த மிதிலையும் எரித்துச் சாம்பாலக்கப்பட்டாலும், என்னுடையது ஏதும் எரிக்கப்படவில்லை” {என்றிருக்கிறது}.(19)மலையின் உச்சியில் இருக்கும் ஒரு மனிதன், சமவெளியில் இருக்கும் மனிதர்களைக் கீழ் நோக்கிப் பார்ப்பதைப் போல, அறிவு மாளிகையின் உச்சத்தை அடைந்த ஒருவன், துன்பப்பட்ட சொல்லாத {துன்பப்படத்தகாத} பொருட்களுக்காக மக்கள் துன்புற்றுக் கொண்டிருப்பதைக் காண்கிறான்.(20) {கண்களுக்குப்} புலப்படும் பொருட்களில் தன் கண்களைச் செலுத்தி, அவற்றை உண்மையில் காணும் ஒருவனே கண்களையும், அறிவையும் கொண்டவன் என்று சொல்லப்படுகிறான்[7]. அறிவு என்றழைக்கப்படும் புலமானது, அறியப்படாத, புரிந்து கொள்ளமுடியாத பொருட்களைக் குறித்து அது கொடுக்கும் அறிவாலும், புரிதலாலுமே அவ்வாறு அழைக்கப்படுகிறது.(21) தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், பிரம்ம நிலையை அடைந்தவர்களுமான கல்விமான்களின் வார்த்தைகளை அறிந்த ஒருவன், உயர்ந்த பெருமைகளை அடைவதில் வெல்கிறான்.(22) ஒருவன், முடிவிலா வேற்றுமைகளைக் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் ஒன்றெனவும், ஒரே சாற்றின் பல்வேறு வெளிப்பாடுகளே அவை {அவ்வுயிரினங்கள்} எனவும் காணும்போது, அவன் பிரம்மத்தை அடைந்தவனாகச் சொல்லப்படுகிறான்[8].(23) இந்த உயர்ந்த பண்பட்ட நிலைய அடைபவர்களே, மிக உயர்ந்த, அருள்நிறைந்த கதியை அடைகிறார்களேயன்றி, அறிவற்றவர்களோ, குறுகிய ஆன்மா கொண்டவர்களோ, சிற்றறிவு கொண்டவர்களோ, தவங்களற்றவர்களோ அல்ல {அந்நிலையை அடைவதில்லை}. உண்மையில், அனைத்தும் (பண்பட்ட) அறிவிலேயே {புத்தியிலேயே} நிலைத்திருக்கின்றன” என்றான் {யுதிஷ்டிரன்}”.(24)
ஜனகனின் மனைவி! – சாந்திபர்வம் பகுதி – 18-ஜனகனின் மனைவியான சுநைனா, சந்நியாசம் செல்ல விரும்பிய ஜனகனிடம் கேட்ட கேள்விகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன அர்ஜுனன்
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “யுதிஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தபோது, மன்னனின் அப்பேச்சால் பீடிக்கப்பட்ட அர்ஜுனன், சோகத்தாலும், துயராலும் எரிந்து மீண்டும் தன் அண்ணனிடம்,(1) “ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, விதேஹர்களின் ஆட்சியாளனுக்கும் {ஜனகனுக்கும்}, அவனது ராணிக்குமிடையில் {சுநைனாவுக்கும் இடையில்} நடைபெற்ற உரையாடல் அடங்கிய இந்தப் பழைய வரலாற்றை மக்கள் உரைக்கின்றனர்.(2) விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்} தன் நாட்டைத் துறந்து, பிச்சாடன வாழ்வை நோற்கத் தீர்மானித்த போது, அவனுடைய மனைவி துயரால் பீடிக்கப்பட்டுச் சொன்ன வார்த்தைகளின் குறிப்பு அவ்வரலாற்றில் இருக்கிறது.(3) மன்னன் ஜனகன், தனது செல்வம், பிள்ளைகள், மனைவியர், பல்வேறு வகை உடைமைகள், அறத்தகுதியையும், நெருப்பையும் அடைய நிறுவப்பட்ட வழி ஆகியவற்றைத் துறந்து, தன் தலையைச் சிரைத்துக் கொண்டான் (பிச்சைக்காரத் தோற்றத்தை {துறவியின் வடிவை} ஏற்றுக் கொண்டான்). அவனது துணைவியானவள் {சுநைனா}, செல்வத்தை இழந்தவனாக, பிச்சைக்கார நோன்பை நோற்பதில் நிறுவப்பட்டவனாக, எந்த வகைத் தீங்கையும் பிறருக்கு இழைப்பதில் இருந்து விலகும் தீர்மானத்துடன் கூடியவனாக, அனைத்து வகைப் போலித்தனங்களையும் கைவிட்டவனாக, தண்டில் இருந்து விழுந்தவையும், (வயலின் பிளவுகளில் இருக்கும் தானியங்களைப் பொறுக்கிப் பெறப்பட்ட) கைநிறைந்தவையுமான தானியங்களை உண்டு வாழத் தயாராக இருப்பவனாகவும் அவனைக் கண்டாள்.(5)
தன் தலைவனுடன் யாருமற்ற வேளையில் அவனை {ஜனகனை} அணுகிய ராணி {சுநைனா}, பெரும் மனோ பலத்துடனும், அச்சமற்ற வகையிலும், கோபத்துடனும், அறிவு நிறைந்த இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னாள்:(6) “செல்வமும், தானியமும் நிறைந்த உமது நட்டைக் கைவிட்டு, பிச்சைக்கார வாழ்வை ஏன் நோற்கிறீர்? கைநிறைந்தவையும், வீழ்ந்தவையுமான {உதிர்ந்தவையுமான} தானியங்கள் உமக்குப் போதுமானவையல்ல.(7) ஓ! மன்னா, உமது பெரும் நாட்டைக் கைவிட்டு, கைப்பிடி தானியதை விரும்புகிறீராதலால், உமது தீர்மானமும், உமது செயல்களும் பொருந்தவில்லை.(8) ஓ! மன்னா, இந்தக் கைப்பிடி தானியத்தைக் கொண்டு, உம்மால் உமது விருந்தினர்களையும், தேவர்களையும், முனிவர்களையும், பித்ருக்களையும் நிறைவு செய்ய முடியுமா? எனவே, இந்த உமது முயற்சி புதைமிதியற்றதாகும் {வீணானதாகும்}.(9) ஐயோ, தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகியோர் அனைவராலும் கைவிடப்பட்டு, செயல்பாடு அனைத்தையும் கைவிட்டுத் திரியும் பிச்சாடன வாழ்வை நோற்கப் போகிறீர்.(10)
முன்பு நீர் மூன்று வேதங்களை அறிந்த ஆயிரக்கணக்கான பிராமணர்களையும், இன்னும் பலரையும் ஆதரித்து வந்தீர். இன்று உமது உணவுக்காக அவர்களிடம் நீர் எவ்வாறு பிச்சை எடுப்பீர்?(11) இந்தச் சுடர்மிகு செழிப்பைக் கைவிட்டு, ஒரு நாயைப் போல (உணவுக்காகச்) சுற்றிலும் கண்களைச் சுழல விடப்போகிறீர். இப்போது இந்த உமது தாய் உம்மால் மகனற்றவளானால், உமது மனைவியான கோசல இளவரசியோ ஒரு விதவையானாள் {சுநைனா ஆகிய நானோ இப்போது கணவனற்ற விதவையானேன்}.(12) இந்த ஆதரவற்ற க்ஷத்திரியர்கள், கனியையும், அறத்தகுதியையும் எதிர்பார்த்து, தங்கள் நம்பிக்கைகள் அனைத்தையும் உம் மேல் கொண்டு உமக்காகக் காத்திருக்கின்றனர்.(13) ஓ! மன்னா, அவர்களது அந்த நம்பிக்கைகளைக் கொன்றுவிட்டு, நீர் எந்த உலகத்திற்குச் செல்லப் போகிறீர்? அதிலும் குறிப்பாக விடுதலை {முக்தியானது} ஐயம் நிறைந்தது, உயிரினங்கள் அனைத்தும் செயல்பாடுகளைச் சார்ந்தே இருக்கின்றன எனும்போது நீர் எங்குச் செல்லப் போகிறீர்?[1](14) நீர் மணந்து கொண்ட மனைவியைக் கைவிட்டு வாழ விரும்புவதால், பாவம் நிறைந்த உமக்கு இம்மையோ மறுமையோ கிடையாது[2].(15)உண்மையில், பல்வேறு வகையான மாலைகள், நறுமணப்பொருட்கள், ஆபரணங்கள், ஆடைகள் ஆகியவற்றைத் தவிர்த்து, நீர் ஏன் பிச்சாடனராகத் திரியப் போகிறீர்?(16) அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு பரந்த புனிதமான தடாகத்தைப் போல இருந்துவிட்டு, (அனைவருக்கும் உறைவிடத்தைத் தரும்) புகழத்தக்க ஒரு பெரும் மரமாக இருந்துவிட்டு, எவ்வாறு உம்மால் மற்றவர்களுக்காகக் காத்திருக்கவும், அவர்களை வழிபடவும் முடியும்?(17) ஒரு யானையானது தனது வேலைகள் அனைத்தையும் தவிர்த்தால், கூட்டமாக வரும் ஊனுண்ணும் விலங்குகளும், எண்ணற்ற புழுக்களும் அஃதை உண்டுவிடும். அவ்வாறிருக்கையில், சக்தியற்றவரான உம்மைக் குறித்து என்ன சொல்வது?[3](18) மண்குடத்தையும், மூன்றுதலை கொண்ட தண்டத்தையும் பரிந்துரைப்பதும், தன் ஆடைகளையே கைவிடச் சொல்வதும்,(19) அனைத்தையும் துறந்த பிறகு கைப்பிடி தானியத்தை மட்டுமே ஏற்க அனுமதிப்பதுமான இந்த வாழ்வுமுறையில் உமது இதயம் எவ்வாறு நிலைக்கலாம்? மேலும், நாடும், கைப்பிடி தானியமும் ஒன்றேயென நீர் சொல்வீரானால், முன்னதை {நாட்டை} நீர் ஏன் கைவிடவேண்டும்?[4](20)மேலும், கைப்பிடி தானியமானது பற்றுக்கான பொருள் ஆகுமென்றால், (அனைத்தையும் கைவிட்ட) உமது உண்மை தீர்மானம் தரையில் விழுந்துவிடும். அனைத்தையும் கைவிடும் உமது தீர்மானத்தின்படி நீர் செயல்பட்டால், உமக்கு நான் யார்? எனக்கு நீர் யார்? நீர் என்னிடம் கொண்டுள்ள அருள் என்னவாக இருக்க முடியும்?(21) நீர் அருளைக் கொள்ள விரும்பினால், இந்தப் பூமியை ஆள்வீராக. வறுமை நிறைந்த ஏழையாக, நண்பர்களால் கைவிடப்பட்டவர்களாக இருப்பவர்கள், மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் துறவை பின்பற்றலாம்.(22) அரண்மனை போன்ற மாளிகைகளையும், படுக்கைகளையும், வாகனங்களையும், ஆடைகளையும், ஆபரணங்களையும் கைவிடுவதாக நடிக்கும் மனிதர்கள் உண்மையில் முறையற்றே செயல்படுகிறார்கள்.(23) ஒருவன் எப்போதும் பிறரால் கொடுக்கப்படும் கொடைகளை ஏற்கிறான்; மற்றொருவன் எப்போதும் கொடைகளை அளிக்கிறான். இந்த இருவருக்குள்ளும் உள்ள வேறுபாடுகளை நீர் அறிவீர். உண்மையில் இவர்கள் இருவரில் எவர் மேன்மையாக மதிக்கப்பட வேண்டும்?(24) எப்போதும் கொடைகளை ஏற்பவர்களுக்கோ, செருக்குடையவனுக்கோ ஒரு கொடை கொடுக்கப்படுமாயின், அந்தக் கொடையானது காட்டு நெருப்பில் ஊற்றப்பட்ட தெளிந்த நெய்யைப் போல வீணாகவே ஆகும்.(25)
ஓ! மன்னா {ஜனகரே}, தனக்குள் வீசப்படும் அனைத்தையும் எரிக்காமல் அடங்காத நெருப்பைப் போல, நன்கொடையைப் பெறாமல் ஒருபோதும் ஒரு பிச்சைக்காரன் {யாசகன்} அமைதியடையமாட்டான்.(26) இவ்வுலகில், ஈகையாளன் ஒருவனால் கொடுக்கப்படும் உணவே, நிச்சயம் பக்திமான்களை ஆதரிக்கும். எனவே, ஒரு மன்னன் (உணவைக்) கொடுக்கவில்லையெனில், முக்தியை விரும்பும் பக்திமான்கள் எங்கே செல்வார்கள்?(27) (தங்கள் இல்லங்களில்) உணவைக் கொண்டிருப்போர் இல்லறவாசிகளாவர். அவர்களே பிச்சைக்காரர்களை {சந்நியாசிகளை} ஆதரிக்கிறார்கள். உணவிலிருந்தே உயிர் பாய்கிறது. எனவே, உணவைக் கொடுப்பவன், உயிரைக் கொடுப்பவனாவான்.(28) இல்லற வாழ்வை நோற்போரிடம் இருந்து வெளியேறும் துறவிகள் {பிச்சைக்காரர்கள்}, அவர்கள் எங்கிருந்து {எவர்களிடமிருந்து} வந்தனரோ அவர்களைச் சார்ந்தே இருக்கிறார்கள். தன்னடக்கம் கொண்ட மனிதர்கள் இதைச் செய்வதால் புகழையும், பலத்தையும் அடைந்து இன்புறுகிறார்கள்.(29) தன் உடைமைகளை மட்டுமே துறப்பதாலோ, பிச்சையேற்கும் வாழ்வை நோற்க ஆயத்தமடைவதாலோ ஒருவன் துறவி என்றழைக்கப்பட மாட்டான். உண்மையான மனநிலையுடன் தன் உடைமைளையும், இவ்வுலக இன்பங்களையும் துறப்பவனே உண்மையான துறவியாகக் கருதத்தக்கவனாவான்.(30) வெளிப்பார்வையில் பற்றுடன் இருப்பதாகத் தெரிந்தாலும், இதயத்தில் பற்றற்றவனாகவும், உலகத்தில் இருந்து தனித்து நிற்பவனாகவும், பற்றுகள் அனைத்தையும் உடைத்தெறிந்தவனாகவும், நண்பனையும், எதிரியையும் சமமாகக் கருதுபவனாகவும் இருக்கும் மனிதனே உண்மையில் துறவியாகக் கருதத்தக்கவனாவான்.(31)
பல்வேறு பற்றுகளில் கட்டப்பட்டவர்களாக, வீணாகப் போகும் செல்வத்தைத் தேடுபவர்களாக இருந்தாலும், தங்கள் தலைகளைச் சிரைத்துக் கொண்டு, காவியுடை உடுத்திக் கொண்டு துறவியாகத் திரியும் மனிதர்களை நாம் காணலாம்.(32) மூன்று வேதங்களையும், தங்கள் வழக்கமான தொழில்களையும், பிள்ளைகளையும் கைவிட்டு மூன்று தலை தண்டத்தை எடுத்துக் கொண்டு, காவி உடை உடுத்திக் கொண்டு, துறவு வாழ்வைப் பின்பற்றுபவர்களான அவர்கள் உண்மையில் சிறுமதி கொண்ட மனிதர்களே.(33) ஓ! மன்னா {ஜனகரே}, கோபத்தையும், பிற குற்றங்களையும் கைவிடாத அவர்கள், வாழ்வாதாரத்தை ஈட்டும் விருப்பத்தால் மட்டுமே காவி உடை உடுத்தியவர்கள் என்பதை அறிவீராக. முற்றாக மழிக்கப்பட்ட தலைகளுடன் அறக்கொடியை நிறுவும் அவர்கள், இதை (வாழ்வாதாரத்தை அடைவதை) மட்டுமே தங்கள் வாழ்வின் நோக்கமாகக் கொண்டவர்களாவர்.(34) எனவே, ஓ !மன்னா {ஜனகரே}, சடாமுடி தரித்தோ, முற்றாக மழிக்கப்பட்ட தலைகளுடனோ, மரவுரி தரித்தோ, தோலாடை தரித்தோ, காவி உடை தரித்தோ இருக்கும் உண்மையான பக்திமான்களை ஆதரித்து, உமது ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மறுமையில் அருள் உலகங்களை வெல்வீராக.(35) தன் புனித நெருப்பைப் பராமரிப்பவனும், விலங்குகளையும், தக்ஷிணைகளையும் கொடுத்து வேள்விகள் செய்பவனும், பகலும் இரவும் ஈகையில் ஈடுபடுபவனுமான ஒருவனை {ஒரு நல்ல மன்னனை} விட மேம்பட்ட அறவோன் வேறு எவன் இருக்க முடியும்?” என்று கேட்டாள் {ஜனகனின் மனைவி சுநைனா}”.(36)
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மன்னன் ஜனகன் இவ்வுலகில் உண்மையறிந்த மனிதனாகக் கருதப்படுகிறான். அவனே கூட (கடமையை உறுதி செய்யும்) இக்காரியத்தில் திகைப்படைந்தான். {அவனைப் போலவே} நீர் திகைப்படையாதீர்.(37) இவ்வாறே இல்லறத்தின் கடமைகளை ஈகையாளர்கள் நோற்கின்றனர். அனைத்து வகைகளிலான தீங்குகளையும் தவிர்த்து, ஆசை மற்றும் கோபத்தைக் கைவிட்டு,(38) அனைத்து உயிரினங்களையும் காப்பதில் ஈடுபட்டு, பெரியோரையும், வயதால் முதிர்ந்தோரையும் பேணியபிறகு, இறுதியாக நாம் அடைய விரும்பும் அருள் உலகங்களை அடைவதில் வெல்வோம்.(39) தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தையும் முறையாக நிறைவு கொள்ளச் செய்து, பிராமணர்களை வழிபட்டு, பேச்சில் உண்மையுடன் நாம் நிச்சயம் விரும்பத்தக்க அருள் உலகங்களை அடைவோம்” {என்றான் அர்ஜுனன்}.(40)
விவாத அறிவில் சாதிக்கும் மூடர்கள்! – சாந்திபர்வம் பகுதி – 19-அர்ஜுனன் ஆயுதங்களையும் போரையும் மட்டுமே அறிந்தவன் என்றும், அவனால் தவத்துறவுகளின் உண்மையை உணர முடியாது என்றும் அவனிடம் சொன்ன யுதிஷ்டிரன்; முக்தியை அடைய யோகமே சிறந்த வழிமுறை; சாத்திரங்கள் அறிந்தவர்களும் முற்பிறவி வினையால் உண்மையை அறிந்து கொள்வதில்லை; பற்றைத் துறந்து, ஆன்மாவைத் தன்னை நோக்கித் திருப்பினால் முக்தி அடையலாம் என்றது…
யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, “பிரம்மத்தை அடைய வழிகோலும் வேதங்களையும், சாத்திரங்களையும் நான் அறிவேன். செயல்பாடு, துறவு ஆகிய இரண்டு வகை விளக்கங்களும் வேதங்களில் இருக்கின்றன.(1) அறிவை அடிப்படையாகக் கொண்ட சாத்திரங்களின் தீர்மானங்கள் குழப்பத்தை ஏற்படுத்துபவையாகவே இருக்கின்றன. எனினும், உண்மையில் நான் மந்திரங்களை முறையாக அறிந்திருக்கிறேன்.(2) நீ ஆயுதங்களை மட்டுமே அறிந்தவனாக, வீரர்களின் நடைமுறைகளை நோற்கிறாய். சாத்திரங்களின் உண்மைப்பொருளை நீ புரிந்து கொள்ள இயலாதவனாக இருக்கிறாய்.(3) நீ உண்மையில் கடமையை அறிந்தவனாக இருந்தால், சாத்திரங்களின் உண்மைப் பொருளையும், அறத்தின் உண்மைகளையும் தெளிவாக அறிந்த ஒருவனைப் போல என்னிடம் பேசியிருப்பாய்.(4) எனினும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, சகோதரப்பாசத்தால் தூண்டப்பட்டு, முறையான தகுந்த வார்த்தைகளை நீ பேசியிருக்கிறாய். ஓ! அர்ஜுனா, நான் உன்னிடம் நிறைவடைந்தேன்.(5)
போரோடு தொடர்புடைய கடமைகள் அனைத்திலும், பல்வேறு செயல்களின் திறனைப் பொறுத்தவரையிலும் மூவுலகங்களிலும் உனக்கு இணையானவன் எவனும் இல்லை.(6) எனவே, பிறரால் ஊடுருவிப் பார்க்கமுடியாத நுணக்கங்களைக் கொண்ட அக்காரியங்களுடன் தொடர்புடைய நுணுக்கங்களைக் {போர் நுணுக்கங்களைக்} குறித்து நீ பேசலாம். எனினும், என் நுண்ணறிவில் ஐயங்கொள்வது உனக்குத் தகாது.(7) நீ போரறிவியலை அறிந்தவனே, ஆனால் ஒருபோதும் பெரியோருக்காகக் காத்திருந்தவனில்லை. அக்காரியத்தைக் குறித்து விரிவாகக் கற்ற பெரியோரின் தீர்மானங்களை நீ அறியமாட்டாய். தவம், துறவு, பிரம்ம அறிவு ஆகியவற்றில் முதலை விட இரண்டாவது மேன்மையானது, இரண்டாவதை விட மூன்றாவது மேன்மையானது.(8,9) எனினும், செல்வத்தை விட மேன்மையானது ஏதுமில்லை என நீ நினைப்பது பிழையே. செல்வமானது, அவ்வொளியில் {அவ்வாறு மேன்மையானதாக} உனக்குத் தோன்றாதவாறு உன்னை என்னால் நம்ப வைக்க முடியும்.(10)
அறவோர் அனைவரும் தவத்துறவுகளிலும், வேதகல்வியிலும் அர்ப்பணிப்புடன் இருப்பதைக் காணலாம். அழியாத உலகங்கள் பலவற்றைக் கொண்ட முனிவர்களும் கூட, தவத்தகுதிகளை {புண்ணியங்களைக்} கொண்டிருக்கின்றனர்.(11) ஆன்ம அமைதி கொண்டவர்களும், எதிரிகளற்றோரும், வனங்களில் வசிப்போருமான வேறு சிலர் {சில ஆரியர்கள்}, தவங்கள் மற்றும் வேத கல்வியின் மூலம் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர்.(12) உலகம் சார்ந்த உடைமைகளில் உள்ள ஆசையைத் தவிர்த்து, மடமையில் பிறக்கும் இருளை {அறியாமையை} விலக்கி, வடக்கு நோக்கி (ஒளிப்பாதைகளில் சென்று) துறவிகளுக்காக ஒதுக்கப்படும் உலகங்களை அடைகின்றனர்.(13) தெற்கில் கிடப்பதும், ஒளி உலகங்களுக்கு வழிகோலுவதுமான பாதையானது, செயலில் அர்ப்பணிப்பு கொண்டோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பிறப்புக்கும், இறப்புக்கும் உடன்படும் மனிதர்கள் அதையே {தென்திசையில் இருக்கும் யமலோகத்தையே} அடைகின்றனர்.(14) எனினும், முக்தியில் விருப்பம் கொண்டோர் தங்கள் கண்களுக்கு முன்பு வைத்திருக்கும் {சொல்லையும், மனத்தையும் கடந்த} எல்லையானது விவரிக்க முடியாததாகும். அதை அடைவதற்கு யோகமே சிறந்த வழிமுறையாகும். அதை (உனக்கு) விளக்கிச் சொல்வது எளிதானதல்ல.(15)
கல்விமான்கள், எது உண்மையல்ல என்பதைக் கண்டுபிடிக்கும் விருப்பத்தில் சாத்திரங்களை நினைவுகூர்ந்து வாழ்கின்றனர். எனினும், பெரும்பாலும் அவர்கள் இதில் வழி தவறி, தாங்கள் தேடும் பொருளானது, இதிலிருக்கிறது, அதிலிருக்கிறது என்று நம்புகின்றனர்.(16) வேதங்கள், ஆரண்யகங்கள் மற்றும் பிற சாத்திரங்களில் இருந்து பலவற்றைத் திரட்டினாலும், வேரறுந்த வாழை மரத்தில் கடினமான மரப்பகுதியை {அதன் சாரத்தைக்} காண முடியாத மனிதர்களைப் போல, அவர்கள் உண்மையைக் காணத் தவறுகின்றனர்.(17) ஆன்மாவின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கையில்லாத சிலர், அதை {அந்த ஆன்மாவை}, ஆசை மற்றும் வெறுப்பு (மற்றும் பிற) தன்மைகளை {குணங்களைக்} கொண்டதாகவும், ஐம்பூதங்களாலான இந்த உடற்கட்டுக்குள் இருப்பதாகவும் கருதுகின்றனர்[1].(18) கண்ணால் காணப்பட இயலாத, வார்த்தைகளால் சொல்லப்பட இயலாத, மிக நுணுக்கமான அது {ஆன்மா}, செயலின் வேரைத் தன் முன்னிலையில் கொண்டு, உயிரினங்களுக்கு மத்தியில் (மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும்) வட்டத்தில் சுழன்று வருகிறது[2].(19) ஒருவன், தனது மனத்தின் ஆசைகள் அனைத்தையும் கைவிட்டு, அனைத்து வகை அருளையும் ஊற்றெடுக்கச் செய்யும் ஆன்மாவைத் தன்னை நோக்கித் திரும்பச் செய்தால், அவன் முற்றிலும் விடுதலையடைந்தவனாகப் பேரின்பத்தை அடைவான்.(20)நல்லோரால் பின்பற்றப்படுவதும், ஞானிகளால் அடையப்படுவதுமான அத்தகு பாதை இருக்கும்போது, ஓ! அர்ஜுனா, அனைத்து வகைப் பேரிடரும் நிறைந்த செல்வத்தை நீ ஏன் மெச்சுகிறாய்?(21) ஓ! பாரதா, சாத்திரங்களை அறிந்தவர்களும், கொடைகள், வேள்விகள், செயல்பாடு ஆகியவற்றில் எப்போதும் ஈடுபடுபவர்களுமான பழங்காலத்து மனிதர்களும், {உன்னைப் போன்றே} இந்தக் கருத்தையே கொண்டிருந்தனர்.(22) ஓ! பாரதா, முறைப்படி விவாதிக்கும் அறிவியலில் {தர்க்க சாஸ்திரத்தில்} சாதிக்கும் சில மூடர்கள், தங்கள் முற்பிறவி குற்றங்களுடைய வலிமையின் விளைவால், ஆன்மாவின் இருப்பை மறுக்கின்றனர். இறுதி விடுதலையை {முக்தியைக்} குறித்த இந்த உண்மையை அவர்களை ஏற்கச் செய்தல் மிகக் கடினமானதாகும்[3].(23) அந்தத் தீய மனிதர்கள், பெரும் கல்வியறிவைக் கொண்டவர்களாயிருப்பினும், பூமி முழுவதும் பயணித்து, சபைகளில் உரையாற்றி, விடுதலை {முக்தி} குறித்த உண்மைக் கோட்பாட்டை மறுக்கின்றனர்.(24) ஓ! பார்த்தா, நாம் புரிந்து கொள்ள முடியாத ஒன்றை, வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்? உண்மையில், அதைப் போலவே (அந்த மனிதர்களால் சாத்திரங்களின் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ள முடியாததைப் போலவே), சாத்திரங்களை ஆழமாகப் புரிந்து கொண்ட ஞானியரையும், பக்திமான்களையும் அவர்களால் அறிந்து கொள்ள முடியாது.(25) ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, உண்மையை அறிந்த மனிதர்கள், தவத்தினாலும், நுண்ணறிவினாலும் பிரம்மத்தை அடைந்து, துறவினால் பேரின்பத்தை அடைகின்றனர்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(26)
வேள்வியும், செல்வமும்! – சாந்திபர்வம் பகுதி – 20-செல்வம் ஏன் உயர்வானது என யுதிஷ்டிரனுக்கு விளக்கிய முனிவர் தேவஸ்தானர்; வேள்விகளின் அவசியத்தைச் சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “யுதிஷ்டிரன் நிறுத்திய பிறகு, நாநயமிக்கப் பெருந்துறவி தேவஸ்தானர், அறிவு நிறைந்த இவ்வார்த்தைகளை மன்னனிடம் சொன்னார்.(1)தேவஸ்தானர் {யுதிஷ்டிரனிடம்}, “செல்வத்தைவிட மேன்மையானது ஏதுமில்லை என்று பல்குனன் {அர்ஜுனன்} உன்னிடம் சொன்னான். அக்காரியம் குறித்தே நானும் உன்னிடம் உரையாடப் போகிறேன். சிதறாத கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக.(2) ஓ! அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, நீ நியாயமாக இந்தப் பூமியை வென்றிருக்கிறாய். ஓ! மன்னா, அவளை {பூமியை} வென்ற பிறகு, காரணமேதுமில்லாமல் அவளைக் கைவிடுவது உனக்குத் தகாது.(3) வேதங்களில் நான்கு வகை வாழ்வுமுறைகள் குறிப்பிடப்படுகின்றன. ஓ! மன்னா, நீ ஒன்றன்பின் ஒன்றாக முறையாக அவற்றைக் கடந்து செல்ல வேண்டும்.(4) எனவே, அபரிமிதமான கொடைகளுடன் பெரும் வேள்விகளையே நீ தற்போது செய்ய வேண்டும். முனிவர்களிலேயே கூட, சிலர் வேத கல்வி சொல்லும் வேள்வியில் ஈடுபடுகின்றனர், சிலர் அது சொல்லும் அறிவில் ஈடுபடுகின்றனர்.(5)
ஓ! பாரதா, எனவே, தவசிகளே கூடச் செயல்பாட்டுக்கு {கர்மத்திற்கு} அடிமையாக இருக்கிறார்கள் என்பதை நீ அறிய வேண்டும். எனினும், வைகானசர்கள் {வானப்ரஸ்தர்கள்} ’செல்வத்தைத் தேடாதவனே, தேடுபவனைக் காட்டிலும் மேன்மையானவன்’ என்று அறமுரைப்பதாகச் சொல்லப்படுகிறது[1]. அந்தக் கட்டளையைப் பின்பற்றுபவன் குற்றங்கள் இழைக்கக்கூடும் என்றே நான் நினைக்கிறேன்.(6,7) வேத விதிகளின் பொருட்டு, (வேள்விகளைச் செய்வதற்காக) மனிதர்கள் பல்வேறு பொருட்களை ஒன்றாகத் திரட்டுகின்றனர். தன் அறிவால் களங்கப்பட்டவன், செல்வத்தைத் தகுந்தோருக்கு அளிக்காமல், தகாதவர்களுக்கு அளிப்பதால், அவன் கருவைக் கொன்ற குற்றத்தை இழைக்கிறான் என்பதை அறியாதிருக்கிறான்[2].(8) தகுந்தவர்களுக்கும், தகாதவர்களுக்கும் இடையில் வேறுபாட்டைக் கண்டு, முறையாக ஈகைக் கடமையாற்றுவது எளிதானதல்ல. விதிசமைக்கும் உயர்ந்தவன் {பிரம்மன்}, வேள்விக்காகவே செல்வத்தைப் படைத்தான். செல்வத்தைக் கவனிக்கவும், வேள்வியைச் செய்யவும் அவன் மனிதர்களையும் படைத்தான். இதன் காரணமாக ஒருவனுடைய மொத்த செல்வத்தையும் வேள்விக்குப் பயன்படுத்தலாம். இயற்கையின் விளைவாக இன்பமே அதைப் பின்தொடரும்.(10)பெரும் சக்தி படைத்த இந்திரன், மதிப்புமிக்க அபரிமிதமான கொடைகளுடன் கூடிய பல்வேறு வேள்விகளைச் செய்தே தேவர்கள் அனைவரையும் விஞ்சினான். அவன், அந்த வழிமுறையிலேயே அவர்களின் தலைமைப் பதவியை அடைந்து சொர்க்கத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான். எனவே, அனைத்தும் வேள்விகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்.(11) மான் தோல் உடுத்தியவனான உயர் ஆன்ம மஹாதேவன், சர்வம் என்றழைக்கப்படும் வேள்வியில் {சர்வமேத யாகத்தில்} தன்னையே காணிக்கையாக {ஆகுதியாக} ஊற்றி, தேவர்களில் முதல்வனாகி, அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தையும் விஞ்சி, அச்சாதனையால் அவர்களைவிட மேன்மையடைந்து, பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(12) அவிக்ஷித்தின் மகனான மன்னன் மருத்தன், {வேள்விகளில் கொடுக்கப்படும்} அபரிமிதமான செல்வத்தால் தேவர்கள் தலைவனான சக்ரனையே {இந்திரனையே} வென்றான். அவன் செய்த பெரும் வேள்வியில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் அனைத்தும் தங்கத்தாலானவையாக இருந்தன, ஸ்ரீயும் {லட்சுமியும் உடல் கொண்டவளாக} நேரடியாக அங்கே வந்தாள்.(13) மாமன்னன் ஹரிச்சந்திரன், வேள்விகளைச் செய்து, பெரும் தகுதியையும், பெரும் மகிழ்ச்சியையும் ஈட்டினான் என்பதை நீ கேட்டிருக்கிறாய். மனிதனாக இருப்பினும் அவன் தனது செல்வத்தால் சக்ரனையே {இந்திரனையே} வென்றான். வேள்வியில் அனைத்தும் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இவையே காரணங்கள்” {என்றார் தேவஸ்தானர்}.(14)
தேவஸ்தானர் அறிவுரை! – சாந்திபர்வம் பகுதி – 21-ஆட்சியேற்று அறம்பயில வேண்டியதன் அவசியத்தைச் சொல்லி யுதிஷ்டிரனை அறிவுறுத்திய முனிவர் தேவஸ்தானர்…
தேவஸ்தானர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக இந்திரனால் கேட்கப்பட்டு, பிருஹஸ்பதியால் அவனுக்கு அளிக்கப்பட்ட உரை ஒரு பழைய வரலாற்றில் தென்படுகிறது.(1) பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “மனநிறைவே உயர்ந்த சொர்க்கம், மனநிறைவே உயர் அருள். மனநிறைவை விட உயர்ந்தது ஏதுமில்லை. மனநிறைவே உயர்ந்த நிலையில் நிற்கிறது.(2) ஆமையானது தனது அங்கங்கள் அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்வதைப் போல ஒருவன் தனது ஆசைகள் அனைத்தையும் அடக்கிக் கொள்ளும்போது, அவனது ஆன்மாவின் இயற்கையான பிரகாசம் வெளிப்படுகிறது.(3) ஒருவன் எந்த உயிரினத்திடமும் அச்சங்கொள்ளாத போது, எந்த உயிரினமும் அவனிடம் அச்சங்கொள்ளாத போது, அவன் ஆசையையும், வெறுப்பையும் வெல்லும்போது, தனது ஆன்மாவைக் காண்கிறான் எனச் சொல்லப்படுகிறது.(4) செயல், சொல், மனம் ஆகியவற்றால் ஒருவன் எவருக்கும் தீங்கிழைக்க நினைக்காத போது, அவன் பிரம்மத்தை அடைவதாகச் சொல்லப்படுகிறது” என்றார்.(5)
ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இவ்வாறு உயிரினங்கள் எந்த அறத்தைப் பின்பற்றினாலும், அவை அதற்குரிய கனிகளை {பலன்களை} அடைகின்றன. ஓ! பாரதா, இதைக் கருத்தில் கொண்டு விழிப்படைவாயாக[1].(6) சிலர் அமைதியைப் புகழ்கின்றனர், சிலர் விடாமுயற்சியையும், சிலர் அமைதி மற்றும் விடாமுயற்சி ஆகிய இரண்டையும் புகழ்கின்றனர். சிலர் வேள்வியைப் புகழ்கின்றனர்[2]; வேறு சிலர் துறவைப் புகழ்கின்றனர். சிலர் கொடைகளையும், வேறு சிலர் அதை ஏற்பதையும் புகழ்கின்றனர்.(7,8) சிலர், (எதிரிகளைக்) கொன்று, வெட்டி, துளைத்து அடையப்படும் அரசுரிமையையும், குடிமக்களைப் பேணுவதையும் புகழ்கிறார்கள்.(9) சிலர் தங்கள் நாட்களை ஓய்வில் கழிப்பதைப் புகழ்கிறார்கள். இவையனைத்தையும் கண்காணித்த கல்விமான்கள்,(10) எந்த உயிரினத்துக்கும் தீங்கிழைக்காமல் இருக்கும் அறமே நல்லோரால் மெச்சத்தகுந்தது என்று தீர்மானிக்கின்றனர்[3].தான்தோன்றியான {சுயம்புவான} மனுவால் சொல்லப்படுவது போல, தீங்கிழையாமை, உண்மை நிறைந்த பேச்சு, நீதி, கருணை, தன்னடக்கம்,(11) தன் மனைவியரிடம் (வாரிசுகளை) உண்டாக்கல், இனிமை, பணிவு, பொறுமை ஆகியவற்றைப் பயில்வதே அனைத்து அறங்களிலும் சிறந்ததாகும். எனவே, ஓ! குந்தியின் மகனே, இந்த அறத்தையே நீ கவனமாக நோற்பாயாக.(12) அரசக் கடமைகளின் உண்மைகளை அறிந்த க்ஷத்திரியன் எவனோ, அரசுரிமையே ஏற்று, அனைத்து நேரங்களிலும் தன் ஆன்மாவைக் கட்டுபடுத்தி, அன்புக்குரியவை, அல்லாதவை ஆகியவற்றைச் சமமாகக் கருதி, வேள்வி விருந்துகளில் எஞ்சியவற்றை உண்டு,(13) தீயோரை அடக்கி, நல்லோரை பேணிக் காத்து, அறத்தின் பாதையில் தன் குடிமக்களை நடைபோடச் செய்து, தானும் அவ்வழியிலேயே நடந்து,(14) தன் மகுடத்தைத் தன் மகனிடம் ஒப்படைத்த பிறகு, காட்டுக்குச் சென்று, காட்டின் பொருட்களை உண்டு, அங்கேயே வாழ்ந்து, வேத விதிகளின்படி சோம்பலனைத்தையும் களைந்த க்ஷத்திரியன் எவனோ,(15) நன்கறியப்பட்ட மன்னர்களின் கடமைகள் அனைத்துக்கும் கீழ்ப்படியும் க்ஷத்திரியன் எவனோ, அவன் இம்மையிலும், மறுமையிலும் அற்புதக் கனிகளை அடைவான் என்பது உறுதியாகும்.
நீ எதைக் குறித்துப் பேசுகிறாயோ அந்த இறுதி விடுதலை {முக்தி} அடைவதற்கரியதாகும். அதைத் தொடர்வதில் பல தடைகள் ஏற்படும்.(16) அத்தகு கடமைகளைப் பின்பற்றி, ஈகையும், தவமும் பயின்று, இரக்க குணத்துடன் கூடி, ஆசை மற்றும் கோபத்தில் இருந்து விடுபட்டு,(17) நேர்மையாகத் தங்கள் குடிமக்களை ஆட்சி செய்து, பசுக்கள் மற்றும் பிராமணர்களுக்காகப் போரிடுபவர்கள் மறுமையில் உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(18) ஓ! எதிரிகளை எரிப்பவனே {யுதிஷ்டிரனே}, இதற்காகவே ருத்திரர்களும், வசுக்களும், ஆதித்தியர்களும், சத்யசுகளும், மன்னர்க்கூட்டமும் இவ்வறத்தைப் பின்பற்றுகின்றனர். அறத்தால் மனத்தில் ஆழப்பதிந்திருக்கும் கடமைகளை எந்த அலட்சியமும் இல்லாமல் பயில்வோர், தங்களுடைய அந்தச் செயல்களின் மூலமே சொர்க்கத்தை அடைகிறார்கள்” என்றார் {தேவஸ்தானர்}.(19)
நோயிலிருந்து விடுபடுவீராக! – சாந்திபர்வம் பகுதி – 22-யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் கூறி, க்ஷத்திரியக்கடமைகளையும், பிராமணக் கடமைகளையும் அவனுக்கு நினைவுறுத்தி, வேள்விகளைச் செய்யுமாறு சொன்ன அர்ஜுனன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அதன் பிறகு அர்ஜுனன், மங்கா புகழ் கொண்டவனும், உற்சாகமற்ற இதயம் கொண்டவனும், தன் அண்ணனுமான மன்னன் யுதிஷ்டிரனிடம், இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(1) “ஓ! அனைத்து வகைக் கடமைகளையும் அறிந்தவரே, க்ஷத்திரியக் கடமைகளைப் பயின்று, அடைவதற்கரிதான ஆட்சியுரிமையை அடைந்து, உமது எதிரிகள் அனைவரையும் வென்ற பிறகும், நேர் என் துன்பத்தில் எரிகிறீர்?(2) ஓ! மன்னா, க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரை, போரில் மரணமானது, பல்வேறு வேள்விகளைச் செய்வதை விடத் தகுதி வாய்ந்ததாக {புண்ணியம் நிறைந்ததாகக்} கருதப்படுகிறது. க்ஷத்திரியக்கடமைகள் சொல்லப்பட்டிருக்கும் விதிகளில் இஃது அறிவிக்கப்பட்டிருக்கிறது.(3) தவங்கள், துறவு ஆகியவை பிராமணர்களின் கடமைகளாகும். இவையே ({க்ஷத்திரிய மற்றும் பிராமண} இரு வகைகளையும் பீடித்திருக்கும்) மறுமை குறித்த விதியாகும். உண்மையில், ஓ! பலமிக்கவரே, க்ஷத்திரியர்களுக்குப் போர்க்கள மரணமே விதிக்கப்பட்டிருக்கிறது.(4) க்ஷத்திரியர்களின் கடமைகள் மிகவும் கடுமையானவையும், ஆயுதங்களோடு எப்போதும் தொடர்புடையவையும் ஆகும். ஓ! பாரதர்களின் தலைவரே, நேரம் வரும்போது அவர்கள் போர்க்களத்தில் ஆயுதங்கள் மூலம் மரணமடைய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(5)
ஓ! மன்னா, க்ஷத்திரியர்கள் பிராமணர்களில் இருந்தே உதித்தவர்கள் என்பதால், ஒரு பிராமணன் க்ஷத்திரியக் கடமைகளை நோற்று வாழ்ந்தாலும், அது நிந்திக்கத்தக்கதல்ல.(6) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, துறவோ, வேள்வியோ, தவங்களோ, பிறரின் செல்வத்தைச் சார்ந்திருப்பதோ க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்படவில்லை.(7) ஓ! பாரதக் குலத்தின் காளையே, நீர் கடைமைகள் அனைத்தையும் அறிந்த அற ஆன்மாவாவீர். அனைத்துச் செயல்களிலும் திறன்மிக்கவரும், ஞானியுமான மன்னன்னுமாவீர். இவ்வுலகில் சரியானது மற்றும் தவறானதுக்கிடையில் உம்மால் வேறுபாட்டைக் காணமுடியவில்லை.(8) துக்கத்தால் உண்டான மனத்தளர்வைக் கைவிட்டு, செயல்பாட்டில் பலமான விருப்பம் கொள்வீராக. குறிப்பாக க்ஷத்திரியனின் இதயமானது வஜ்ரத்தைப் போன்று கடுமையானதாகும்.(9) க்ஷத்திரியக் கடமைகளைப் பயின்று உமது எதிரிகளை வென்ற பிறகு, முட்களற்ற பேரரசை அடைந்த நீர், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, உமது ஆன்மாவை வென்று வேள்விகளைச் செய்வதிலும், ஈகை பயில்வதிலும் ஈடுபடுவீராக.(10)
இந்திரன், பிராமணனாக இருப்பினும், தன் செயல்பாடுகளாக ஒரு க்ஷத்திரியனாகி, எண்ணிக்கையில் எண்ணுற்று பத்து {810} மடங்கு இருந்த பாவிகளான தன் சொந்தங்களுடன் போரிட்டான்.(11) ஓ! ஏகாதிபதி, அவனது அந்தச் செயல்கள் புகழத்தக்கனவும், பாராட்டுக்குத் தகுந்தனவும் ஆகும். நாம் கேள்விப்படுவதன்படியே அவன் தேவர்களின் தலைமைப் பதவியையும் அதன் மூலமே அடைந்தான்.(12) எனவே, ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, அந்த இந்திரன் செய்ததைப் போலவே அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்து, உமது நோயிலிருந்து விடுபடுவீராக.(13) ஓ! க்ஷத்திரியர்களில் காளையே கடந்த காலத்திற்காக இவ்வாறு வருந்தாதீர். கொல்லப்பட்டவர்கள் ஆயுதங்களால் தூய்மையடைந்து, க்ஷத்திரிய அறத்தின் விதிகளுக்கு ஏற்புடைய உயர்ந்த கதியை அடைந்திருக்கிறார்கள்.(14) எது நடந்ததோ அதுவே நடப்பதற்கு விதிக்கப்பட்டிருந்தது. ஓ! மனிதர்களில் புலியே, விதியானது தடுக்கப்பட இயலாததாகும்” என்றான் {அர்ஜுனன்}”.(15)
சங்கர், லிகிதர் மற்றும் சுத்யும்னன்! – சாந்திபர்வம் பகுதி – 23-திஷ்டிரனிடம் அர்ஜுனனின் வார்த்தைகளை ஆதரித்துப் பேசிய வியாசர்; மன்னர்களின் செங்கோலின் சிறப்பைச் சொல்வதற்காகச் சங்கர், லிகிதர் என்ற இரு தவசிகள் மற்றும் மன்னன் சுத்யும்னன் ஆகியோரின் கதையைச் சொன்னது; குற்றத்திற்கான தண்டனை வழங்கும் மன்னன் நன்னிலை அடைவான் என்றது
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சுருட்டை முடி கொண்ட அர்ஜுனனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், குந்திக்குப் பிறந்த அந்தக் குரு மன்னன் {யுதிஷ்டிரன்} பேச்சற்றவனாக அமைதியாக இருந்தான். பிறகு தீவில் பிறந்தவர் (வியாசர்) இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(1)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! இனிய யுதிஷ்டிரா, அர்ஜுனனின் வார்த்தைகள் உண்மையானவை. சாத்திரங்கள் தீர்மானிக்கும் உயர்ந்த அறமானது இல்லறக் கடமைகளைச் சார்ந்தே இருக்கிறது. நீ அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனாவாய். உனக்காகப் பரிந்துரைக்கப்படும் (இல்லறக்) கடமைகளை முறையாக நோற்பாயாக. இல்லறக் கடமைகளைத் துறந்து காட்டுக்குள் ஓயும் வாழ்வானது உனக்காக விதிக்கப்படவில்லை.(3) தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்கள் ஆகியோர் அனைவரும் (தங்கள் வாழ்வாதாரத்தை அடைய) இல்லற வாழ்வை வாழ்வும் மனிதனைச் சார்ந்தே இருக்கின்றனர்.(4) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, பறவைகள், விலங்குகள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் ஆகியனவும் இல்லற வாழ்வு வாழும் மனிதர்களாலேயே தாங்கப்படுகின்றன. எனவே, அவ்வாழ்வு முறைக்குச் சொந்தமானவனே (பிறர் அனைவரிலும்) மேன்மையானவன் ஆவான்.(5)
நால்வகை வாழ்வு முறைகளிலும், இல்லற வாழ்வே மிகக் கடினமானதாகும். ஓ! பாரத்தா, புலனடக்கம் இல்லா மனிதர்கள் பயில்வதற்குக் கடினமான அந்த வாழ்வு முறையையே நீ நோற்பாயாக.(6) நீ வேதங்கள் அனைத்திலும் நல்ல அறிவைக் கொண்டிருக்கிறாய். பெரும் தவத் தகுதியையும் ஈட்டியிருக்கிறாய். எனவே, உன் மூதாதையரின் நாட்டுச் சுமையை ஓர் எருதைப் போலச் சுமப்பதே உனக்குத் தகுந்ததாகும்.(7) வெற்றியடைவதற்காகத் தவங்கள், வேள்விகள், மன்னிக்கும் தன்மை {பொறுமை}, கல்வி, துறவு, புலனடக்கம், மனநிறைவு, தனிமையில் வாழ்தல், ஆழ்ந்த தியானம், (பிரம்ம) அறிவு ஆகியற்றை, தங்கள் சிறப்பான முயற்சியால் பிராமணர்களே நோற்க வேண்டும்.(8)
நான் இப்போது உனக்கு க்ஷத்திரியர்களின் கடமைகளைச் சொல்லப் போகிறேன். அவை நீ அறியாதனவல்ல. வேள்வி, கல்வி, முயற்சி {உழைப்பு}, குறிக்கோள்[1],(9) “தண்டக்கோல் {செங்கோல்} தரித்தல், கடுமை, குடிகளைக் காத்தல், வேதங்களில் அறிவு, அனைத்து வகை நோன்புகளையும் பயிலல், நன்னடத்தை, செல்வமீட்டல், தகுந்த மனிதர்களுக்குக் கொடையளித்தல் ஆகியவை,(10) அரச வகையைச் சேர்ந்தவர்களால் அடையப்பட்டு, நன்றாகச் செய்யப்பட்டால், அவை அவர்களை இம்மையிலும், மறுமையிலும் பாதுகாக்கும் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(11) ஓ! குந்தியின் மகனே, இவற்றில் தண்டக்கோலை {செங்கோலைத்} தரித்தலே முதன்மையானதாகச் சொல்லப்படுகிறது. ஒரு க்ஷத்திரியனுக்குள் பலமும், அந்தப் பலத்திற்குள் தண்டமும் எப்போதும் வசித்திருக்க வேண்டும்.(12) ஓ! மன்னா, நான் சொல்லும் இந்தக் கடமைகள் க்ஷத்திரியர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையும், அவர்களது வெற்றியில் பெரும் பங்காற்றுபவையுமாகும். இது தொடர்பாகப் பிருஹஸ்பதி ஒரு வரியைப் பாடியிருக்கிறார்.(13) “எலியை விழுங்கும் பாம்பைப் போல, அமைதியை விரும்பும் ஒரு மன்னனையும், இல்லறத்தில் மிகுந்த பற்றைக் கொண்ட ஒரு பிராமணனையும் பூமி விழுங்கிவிடும்” என்று பாடியிருக்கிறார்.(14) அரசமுனியான சுத்யும்னன், தண்டக்கோலை {செங்கோலை} மட்டுமே தரித்து, பிரசேதசின் மகனான தக்ஷனைப் போல உயர்ந்த வெற்றியை அடைந்தான் என நாம் கேள்விப்படுகிறோம்” என்றார் {வியாசர்}.(15)யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! புனிதமானவரே, பூமியின் தலைவனான சுத்யும்னன் எந்தச் செயல்களால் அந்த உயர்ந்த வெற்றியை அடைந்தான்? அம்மன்னனின் வரலாற்றை நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(16)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக இந்தப் பழைய வரலாறு சொல்லப்படுகிறது. கடும் நோன்புகளை நோற்பவர்களாகச் சங்கன் மற்றும் லிகிதன் என இரு சகோதரர்கள் இருந்தனர்.(17) அந்த இரு சகோதரர்களும், அழகிய இரு வசிப்பிடங்களைத் தனித்தனியே கொண்டிருந்தனர். பாஹுதை என்றழைக்கப்படும் ஓடையின் கரையில் அமைந்திருந்த அந்த வசிப்பிடங்கள், மலர்கள் மற்றும் கனிகளை எப்போதும் சுமந்திருக்கும் மரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(18) ஒரு சமயம், லிகிதர் என்பவர், தமது சகோதரரான சங்கரின் வசிப்பிடத்திற்கு வந்தார். அந்நேரத்தில் ஏதோ காரியத்திற்காகச் சங்கர் தமது ஆசிரமத்தை விட்டு வெளியே சென்றிருந்தார்.(19) தமது சகோதரரின் ஆசிரமத்திற்கு வந்த லிகிதர் கனிந்த பல கனிகளைப் பறித்தார்.(20) அவற்றை அடைந்த அந்த மறுபிறப்பாள {பிராமண} லிகிதர், மனசாட்சியின் எந்த ஐயவுணர்வும் இன்றி அவற்றை உண்டார். அப்படி அவர் உண்டு கொண்டிருந்தபோது, சங்கர் தமது ஓய்வில்லத்திற்கு வந்தார்.(21)
அவ்வாறு உண்டுகொண்டிருக்கும் தமது சகோதரனைக் கண்ட சங்கர், அவனிடம், “இக்கனிகளை எங்கே நீ அடைந்தாய்? எக்காரணத்திற்காக இவற்றை உண்கிறாய்?” என்று கேட்டார்.(22) தமது அண்ணனை அணுகி, அவரை வணங்கிய லிகிதர், சிரித்துக் கொண்டே அவரிடம், “நான் இவற்றை இந்த ஓய்வில்லத்திலேயே அடைந்தேன்” என்றார்.(23) பெரும் சினத்தில் நிறைந்த சங்கர் அவரிடம், “இக்கனிகளை எடுத்ததால் நீ திருட்டுக் குற்றத்தை இழைத்திருக்கிறாய்.(24) செல்வாயாக, மன்னனிடம் சென்று, நீ செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வாயாக. அவனிடம் {மன்னனிடம்}, “ஓ! மன்னர்களில் சிறந்தவனே, எனக்குக் கொடுக்கப்படாததை அடைந்து குற்றத்தை இழைத்துவிட்டேன்.(25) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, என்னைக் கள்வனாக அறிந்து கொண்டு, உன் வகைக்கான கடமையை நோற்று, கள்வனுக்கான தண்டனையை எனக்கு வழங்குவாயாக” எனச் சொல்” என்றார் {சங்கர்}.(26)
இவ்வாறு சொல்லப்பட்டவரும், கடும் நோன்புகளைக் கொண்டவருமான லிகிதர், தமது அண்ணனின் ஆணையின் பேரில் மன்னன் சுத்யும்னனிடம் சென்றார்.(27) மன்னன் சுத்யும்னன், லிகிதர் வந்திருக்கிறார் என்பதை வாயில்காப்போரிடம் இருந்த கேட்டு, (அந்தத் தவசியை) வரவேற்பதற்காகத் தன் அமைச்சர்களுடன் சென்றான்.(28) அவரைச் சந்தித்த அம்மன்னன், கடைமைகளை அறிந்த மனிர்கள் அனைவரிலும் முதன்மையான அவரிடம், “ஓ! மரியாதைக்குரியவரே, உமது வருகையின் காரணத்தைச் சொல்வீராக. அஃது ஏற்கனவே நிறைவடைந்ததாகக் கருதுவீராக” என்றான்.(29) இவ்வாறு கேட்கப்பட்ட அந்த மறுபிறப்பாள தவசி {லிகிதர்}, அந்தச் சுத்யும்னனிடம், “நீ அதை நிறைவேற்றுவாய் என்று முயலில் உறுதியளிப்பாயாக. நான் சொன்ன பிறகு, அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதே உனக்குத் தகும்.(30) ஓ! மனிதர்களில் காளையே, என் அண்ணனால் எனக்குக் கொடுக்கப்படாத சில கனிகளை நான் உண்டேன். ஓ! ஏகாதிபதி, அதற்காக எந்தத் தாமதமும் இல்லாமல் என்னைத் தண்டிப்பாயாக” என்றார்.(31)
சுத்யும்னன் {தவசி லிகிதரிடம்}, “மன்னன் தண்டக்கோலைத் தரிக்கத் தகுந்தவன் என்று கருதப்பட்டால், ஓ! பிராமணர்களில் காளையே, மன்னிப்பு வழங்குவதற்கும் அவன் தகுந்தவனே.(32) ஓ! உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரே, உமது செயலால் தூய்மையடைந்த நீர், மன்னிக்கப்பட்டதாகக் கருதுவீராக. {எனவே}, உமது வேறு விருப்பங்களை இப்போது எனக்குச் சொல்வீராக. அந்த உமது ஆணைகளை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்” என்று பதிலுரைத்தான்”.(33)
வியாசர் தொடர்ந்தார், “மறுபிறப்பாள தவசியான லிகிதர், அந்த உயர் ஆன்ம மன்னனால் இவ்வாறு கௌரவிக்கப்பட்டாலும், வேறு எந்த உதவியையும் அவனிடம் கேட்கவில்லை {தமது கோரிக்கையிலேயே உறுதியாக இருந்தார்}.(34) பிறகு அந்தப் பூமியின் ஆட்சியாளன் {சுத்யும்னன்}, அந்த உயர் ஆன்ம லிகிதரின் இரு கரங்களையும் அறுத்தான். பின்னவர் {லிகிதர்} அந்தத் தண்டனையை ஏற்று, அங்கிருந்து சென்றார்.(35) தமது அண்ணன் சங்கரிடம் திரும்பிய லிகிதர், பெரும் துன்பத்துடன், “(செய்த குற்றத்திற்காக) முறையாகத் தண்டிக்கப்பட்ட இந்த இழிந்தவனை இப்போது மன்னிப்பதே உமக்குத் தகும்” என்றார்.(36)
சங்கர் {லிகிதரிடம்}, “ஓ! கடமைகளை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, நான் உன்னிடம் கோபங்கொள்ளவுமில்லை, நீ எனக்குத் தீங்கிழைக்கவும் இல்லை. எனினும், உன் அறம் தவறியது. அந்த அவலநிலையில் இருந்து நான் உன்னை மீட்டேன்.(37) பாஹுதை ஆற்றுக்குத் தாமதமின்றிச் சென்று, தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள் ஆகியோருக்கு முறையாக நீர்க்காணிக்கை செலுத்தி {தர்ப்பணஞ்செய்து} அவர்களை நிறைவு கொள்ளச் செய்து, இனி ஒருபோதும் உன் இதயத்தைப் பாவத்தில் நிலைக்கச் செய்யாதிருப்பாயாக[2]” என்றார்.(38)
சங்கரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட லிகிதர், அந்தப் புனித ஓடையில் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, நீர்க்கடனைச் செலுத்த தொடங்கினார்.(39) அப்போது, அவரது {லிகிதரின்} தோள்களின் நுனிப்பகுதியில் இரு தாமரைகளுக்கு ஒப்பான இரு கரங்கள் தோன்றின. ஆச்சரியத்தில் நிறைந்த அவர் {லிகிதர்}, தமது தமையனிடம் {சங்கரிடம்} வந்து, தன்னிரு கரங்களையும் அவருக்குக் காட்டினார்.(40) சங்கர் அவரிடம் {லிகிதரிடம்}, “இவையாவும் என் தவங்களின் மூலம் அடையப்பட்டன. இதில் ஆச்சரியங்கொள்ளாதே. முன்னறிவே இங்கே கருவியாக இருக்கிறது” என்றார்.(41)
லிகிதர் {சங்கரிடம்}, “ஓ! பெரும் காந்தி கொண்டவரே, ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, உமது தவங்களின் சக்தி இத்தகையதாக இருக்கையில், முதலிலேயே என்னை ஏன் நீர் தூய்மையாக்கவில்லை?” என்று கேட்டார்.(42)
சங்கர் {லிகிதரிடம்}, “நான் வேறு வகையில் செயல்படக்கூடாது. நான் தண்டிப்பவனல்ல. (உன்னைத் தண்டித்த) ஆட்சியாளனும், நீயும், பித்ருக்களுடன் சேர்ந்து தூய்மையடைந்தீர்கள்” என்றார்”.(43)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாண்டுவின் மூத்த மகனே {யுதிஷ்டிரா}, அம்மன்னன் {சுத்யும்னன்}, தன் செயலால் மேன்மையடைந்து, தலைவன் தக்ஷனைப் போலவே உயர்ந்த வெற்றியை அடைந்தான்.(44) குடிகளை ஆள்வதே க்ஷத்திரியர்களின் கடமையாகும். ஓ! ஏகாதிபதி, வேறு எதுவும் அவர்களுக்குத் தவறான பாதையாகவே கருதப்படும். உன் இதயத்தைத் துயரில் நிலைகொள்ளச் செய்யாதே.(45) கடமையை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் சிறந்தவனே, உன் சகோதரனின் இந்த நல்ல வார்த்தைகளைக் கேட்பாயாக. ஓ! மன்னா, தண்டக்கோல் {செங்கோல்} தரிப்பதே மன்னர்களின் கடமையாகும்; தலையை மழித்துக் கொள்வது அவர்களுக்கான கடமையல்ல” {என்றார் வியாசர்}”.(46)
மன்னன் ஹயக்ரீவன்! – சாந்திபர்வம் பகுதி – 24-மன்னனின் கடமைகளை யுதிஷ்டிரனுக்கு எடுத்துச் சொன்ன வியாசர்; ஹயக்ரீவனின் கதையைச் சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும் தவசியான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, மீண்டும் குந்தியின் மகனான அஜாதசத்ருவிடம் {யுதிஷ்டிரனிடம்},(1) “ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதர்களின் தலைவனான யுதிஷ்டிரா, அபரிமிதமான சக்தி கொண்டவர்களும், பெரும் தேர்வீரர்களுமான உனது தம்பியர் காடுகளில் வசித்திருந்தபோது பேணி வளர்த்த விருப்பங்களை அடையட்டும். ஓ! பிருதையின் மகனே, நகுஷனின் மகனான (மற்றொரு) யயாதியைப் போல இந்தப் பூமியை நீ ஆட்சி செய்வாயாக.(2,3) முன்பு காட்டில் வசித்துத் தவம் செய்து கொண்டிருந்தபோது பேரிடர் உங்களுடையதாக இருந்தது. ஓ! மனிதர்களில் புலியே, அந்தப் பேரிடர் முடிந்துவிட்டது. எனவே, சிலகாலம் இன்புற்றிருப்பாயாக.(4) ஓ! பாரதா, சிலகாலத்திற்கு, அறத்தகுதி, செல்வம் மற்றும் இன்பத்தை உன் தம்பிகளோடு சேர்ந்து ஈட்டிபிறகு நீ காட்டுக்கு ஓயச் செல்லலாம்.(5)
ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, உன்னிடம் இரந்து கேட்பவர்கள், பித்ருக்கள் மற்றும் தேவர்களுக்கு நீ பட்டிருக்கும் கடனிலிருந்து முதலில் விடுபடுவாயாக. ஓ! குந்தியின் மகனே, பிறகு நீ பிற வாழ்வுமறைகள் அனைத்தையும் பயிலலாம்.(6) ஓ! குருகுலத்தின் மகனே, சர்வமேதம் மற்றும் அஸ்வமேதம் ஆகிய வேள்விகளை நீ செய்வாயாக. ஓ! ஏகாதிபதி, நீ மறுமையில் உயர்ந்த கதியை அடைவாய்.(7) ஓ! பாண்டுவின் மகனே, (பிராமணர்களுக்குப்) பெருங்கொடை அளிக்கும் பெரும் வேள்விகளில் உன் தம்பிகளையும் நிறுவச் செய்து பெரும் புகழை அடைவாயாக.(8) ஓ! மனிதர்களில் புலியே, குருக்களில் சிறந்தவனே, ஒரு பழமொழி இருக்கிறது. ஓ! மன்னா, அதன்படி நடந்தால் நீ அறத்தின்கண் பிறழமாட்டாய் என்பதால் அதைக் கேட்பாயாக.(9) ஓ! யுதிஷ்டிரா, ஓ! மனிதர்களின் மன்னா, போரிட்டு வெற்றியடைந்து நாட்டைப் பெற்றவனுடைய அறத்தை அறமறிந்தோர் தீர்மானித்திருக்கின்றனர்[1].(10)ஒரு மன்னன், இடம் மற்றும் நேரம் ஆகிய கருதுகோள்களால் வழிநடத்தப்பட்டு, சாத்திரங்களைச் சார்ந்து ஒரு புரிதலை அடைந்து, பெரும் எண்ணிக்கையிலான கொள்ளையர்களைத் தண்டித்தாலும்கூட அவன் பாவமிழைத்தவனாக மாட்டான்[2].(11) எந்த மன்னன், ஆறில் ஒரு பங்கை {16%} வரியாகப் பெற்றும், தன் நாட்டைக் காக்காமல் இருக்கிறானோ, அவன் தன் நாட்டின் {நாட்டு மக்களின்} பாவங்களில் நான்கில் ஒரு பங்கை {25%} அடைகிறான்.(12) எதன் மூலம் ஒரு மன்னன் அறத்தின் கண் பிறழமாட்டேன் என்பதையும் கேட்பாயாக. சாத்திரங்களை மீறுவதால் ஒருவன் பாவமிழைக்கிறான். அதே வேளையில் அதற்குக்கீழ்ப்படிபவன் அச்சமில்லாமல் வாழ்கிறான்.(13) எந்த மன்னன், சாத்திரங்களின் அடிப்படையிலான அறிவால் வழிநடத்தப்பட்டு, காமம் மற்றும் கோபத்தை அலட்சியம் செய்து, தன் குடிமக்கள் அனைவரிடமும் ஒரு தந்தையைப் போல வேறுபாடில்லாமல் நடந்து கொள்வானோ, அவன் ஒருபோதும் பாவமிழைக்கமாட்டான்.(14) ஓ! பெருங்காந்தி கொண்டவனே, ஒரு மன்னன் விதியால் பீடிக்கப்பட்டு, ஒரு செயலை நிறைவேற்றுவதில் தவறுவானென்றால், அத்தகு தோல்வியானது மீறல் என்று அழைக்கப்படாது.(15)பலம், கொள்கை ஆகியவற்றால் அந்த மன்னன் தன் எதிரிகளை அடக்க வேண்டும். அவன் தன் நாட்டில் பாவம் இழைக்க அனுமதிக்காமல், அறம் பயில வழிவகைச் செய்ய வேண்டும்.(16) ஓ! யுதிஷ்டிரா, துணிச்சல்மிக்க மனிதர்கள், தங்கள் நடைமுறைகளில் மரியாதைக்குரியவர்களாக இருப்போர், தங்கள் செயல்களில் நல்லோனாக இருப்போர், கல்வியறிவு படைத்தோர், வேத உரைகள் மற்றும் சடங்குகளை அறிந்த பிராமணர்கள், ஆகியோர் பாதுகாக்கப்பட வேண்டும்.(17) பொருத்தமானவற்றைத் தீர்மானிப்பதிலும், அறச்செயல்களை நிறைவேற்றுவதிலும், பெருக் கல்வியறிவு படைத்தோர் மட்டுமே ஈடுபடுத்தப்பட வேண்டும். மதிநுட்பம் நிறைந்த ஒரு மன்னன், எவ்வளவுதான் சாதித்தவனாக இருப்பினும் ஒரே ஒரு தனிமனிதன் மீது ஒரு போதும் நம்பிக்கை வைக்க மாட்டான்.(18) தன் குடிகளைப் பாதுகாக்காதவனும், அடங்காத ஆசைகளைக் கொண்டவனும், போலித் தன்மை நிறைந்தவனும், அகந்தை மற்றும் கெட்ட நோக்கம் கொண்டவனுமான ஒரு மன்னன், பாவம் இழைத்தவனாகக் கொடுங்கோன்மைக்கான நிந்தனையை ஈட்டுகிறான்.(19) ஓ! ஏகாதிபதி, ஒரு மன்னனின் குடிமக்கள், பாதுகாப்பை அடையாமல், தேவர்களால் பீடிக்கப்பட்டு, கள்வர்களால் வீழ்த்தப்பட்டால், அந்தப் பாவம் அனைத்தும் மன்னனையே களங்கப்படுத்தும்.(20)
ஓ! யுதிஷ்டிரா, ஆழ்ந்து ஆய்வு செய்து, நல்லறிவுரை வழங்கவல்ல மனிதர்களோடு ஆலோசித்த பிறகு, முழு இதயத்தோடு செய்யப்படும் ஒரு செயலில் எந்தப் பாவமும் சேராது.(21) விதியின் மூலமாக நமது பணிகள் தோல்வியோ, வெற்றியோ அடையலாம். எனினும், முயற்சி செய்யும் மன்னனை பாவம் தீண்டாது.(22) ஓ! மன்னர்களில் புலியே, ஹயக்ரீவன் என்ற பெயரில் இருந்த ஒரு பழங்கால மன்னனுக்கு என்ன நடந்தது என்ற கதையை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(23) ஓ! பாண்டுவின் மகனே, களங்கமில்லா செயல்பாடுகளைக் கொண்ட வீர ஹயக்ரீவன், போரில் பெரும் எண்ணிக்கையிலான தன் எதிரிகளைக் கொன்ற பிறகு, தன் தரப்பில் ஒரு தொண்டனும் இல்லாத நிலையில் கொல்லப்பட்டு வீழ்ந்த கதையை உனக்குச் சொல்கிறேன்.(24) தன் எதிரிகளைத் தடுக்க என்ன செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்து, மனிதர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய முதன்மையான வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றிய ஹயக்ரீவன், அவன் செய்த போர்களால் பெரும் புகழை அடைந்து இப்போது சொர்க்கத்தில் பேரருளை அடைந்து இன்புற்று இருக்கிறான்.(25)
(மன்னர்களுக்கான) கடமைகளை எப்போதும் கவனமாகச் செய்து வந்த அந்த உயர் ஆன்ம ஹயக்ரீவன், கள்வர்களின் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டும், அவர்களோடு துணிச்சலாகப் போரிட்டு, போர்க்களத்தில் தன் உயிரை விட்டு, தன் வாழ்வின் நோக்கத்தை அடைந்து இப்போது சொர்க்கத்தின் பேரருளில் இன்புற்றிருக்கிறான்.(26) வில்லே அவனது (வேள்வி) கம்பாகவும் {ஸ்தம்பமாகவும்}, வில்லின் நாண்கயிறே, தனது பலிகளைக் கட்டும் கயிறாகவும் இருந்தன. கணைகள் சிறு கரண்டியாகவும், வாளானது பெரிய கரண்டியாகவும், குருதியே அவன் ஊற்றிய தெளிந்த நெய்யாகவும் இருந்தன. தேரானது வேள்விப்பீடமாகவும், போரில் அவன் உணர்ந்த கோபமே நெருப்பாகவும், அவனது வாகனத்தில் பூட்டப்பட்ட நான்கு முதன்மையான குதிரைகளே, நான்கு ஹோத்ரிகளாகவும் இருந்தன.(27) அந்த வேள்வி நெருப்பில் தன் எதிரிகளைக் காணிக்கையாக ஊற்றிய பிறகு, வேள்வியின் முடிவில் தன் உயிரையே அதில் ஊற்றியவனும், மன்னர்களில் சீற்றமிக்கச் சிங்கமுமான அந்த ஹயக்ரீவன், பாவங்களில் இருந்து விடுபட்டு, இப்போது, தேவர்களின் உலகங்களில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(28) கொள்கையாலும், நுண்ணறிவாலும் தன் நாட்டைப் பாதுகாத்தவனும், செருக்கற்றவனும், பெரும் மனோபலம் கொண்டவனும், வேள்விகளைச் செய்வதைப் பழக்கமாகக் கொண்டவனுமான அந்த உயர் ஆன்ம ஹயக்ரீவன், தன் புகழை உலகமனைத்திலும் நிறைத்து இப்போது தேவர்களின் உலகில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(29)
வேள்விகள் செய்வதைச் சார்ந்த தகுதியையும், மனித காரியங்களில் தொடர்புடைய அனைத்து வகைத் தகுதிகளையும் {புண்ணியங்களையும்} அடைந்த அவன், தண்டக்கோலை {செங்கோலைத்} தரித்து, செருக்கில்லா வீரத்துடன் இந்தப் பூமியை ஆட்சி செய்தான். அதன் காரணமாக, உயர்ந்த நல்லான்மாவான ஹயக்ரீவன் தேவர்களின் உலகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(30) கல்வியறிவைக் கொண்டவனும், துறவை பயின்றவனும், நம்பிக்கையால் தூண்டப்பட்டவனும், நன்றியுணர்வு நிறைந்தவனும், பல்வேறு வேள்விகளைச் செய்தவனுமான அந்த மன்னன் {ஹயக்ரீவன்}, மனிதர்களின் இவ்வுலகை விட்டு, நல்லோருக்கும் ஞானியருக்கும், ஏற்புடைய பழக்க வழக்கங்களைக் கொண்டோருக்கும், போரில் தங்கள் உயிரைவிடத் தயாராக இருப்பவர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதிகளை வென்றான்.(31) வேதங்களையும், பிற சாத்திரங்களையும் நன்கு அறிந்து, தன் நாட்டை முறையாக ஆண்டு, நால்வகையினரையும் முறையாகத் தங்கள் கடமைகளை நோற்கச் செய்த அந்த உயர் ஆன்ம ஹயக்ரீவன் இப்போது தேவர்களின் உலகில் விளையாடிக் கொண்டிருக்கிறான். அம்மன்னன், பல போர்களை வென்று, தன் குடிமக்களைப் பேணிக் காத்து, வேள்விகளின் சோமச்சாற்றைப் பருகி, முதன்மையான பிராமணர்களைக் கொடைகளால் நிறைவு செய்து, தன் ஆளுகையின் கீழ் இருந்தோரிடம் தண்டக்கோலை {செங்கோலை} நீதியுடன் செலுத்தி, இறுதியாகப் போரில் தன் உயிரை விட்டு இப்போது சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான்.(32) அவனது வாழ்வு அனைத்துப் பாராட்டுக்கும் தகுந்ததாகும். அனைத்து பாராட்டுக்கும் தகுந்த அதைக் கல்விமான்களும் நீதிமான்களும் பாராட்டுகின்றனர். சொர்க்கத்தை வென்று, வீரர்களுக்காக ஒதுக்கப்படும் பகுதிகளை அடைந்த அந்த உயர் ஆன்ம ஏகாதிபதி, இவ்வாறே தனது நற்செயல்களால் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டான்” என்றார் {வியாசர்}.(33)
காலத்தின் வலிமை! – சாந்திபர்வம் பகுதி – 25-பெண்களின் நிலை கண்டு தன் மனம் அமைதியடையவில்லை என வியாசரிடம் சொன்ன யுதிஷ்டிரன்; காலமே அனைத்திற்கும் காரணம், காலமே வலிமைமிக்கது, காலம் ஒன்றே சாதிக்கும் வழிமுறை என்று யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; இன்பதுன்பங்கள் ஏற்படும் வகையை உணர்த்தி, எவன் மகிழ்ச்சியடைவான் என்பதைச் சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தீவில் பிறந்த முனிவரின் {வியாசரின்} வார்த்தைகளைக் கேட்டும், கோபமாக இருக்கும் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டும், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், வியாசரை வணங்கி, பின்வரும் பதிலை அளித்தான்.(1)யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “பூமி சார்ந்த இந்த அரசுரிமை, (அதைத் தொடர்ந்த) பல்வேறு இன்பங்கள் ஆகியன என் இதயத்திற்கு எந்த மகிழ்சியையும் அளிக்கத் தவறுகின்றன. மறுபுறம், (என் சொந்தங்களை இழந்ததன் விளைவால் உண்டான) இந்தக் கடும் துயரம் இதயத்தையின் மையத்தையே உண்கிறது.(2) ஓ! தவசியே, வீரக் கணவர்களையும், பிள்ளைகளையும் இழந்த இந்தப் பெண்களின் ஒப்பாரியைக் கேட்டு, நான் அமைதியை அடைவதில் தவறுகிறேன்” என்றான்”.(3)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்டவரும், யோகத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், பெரும் ஞானம் கொண்டவரும், வேதங்களை உள்ளார்ந்த பொருளுடன் அறிந்தவரும், அறவோருமான வியாசர், (பின்வரும் வார்த்தைகளை) யுதிஷ்டிரனிடம் சொன்னார்.(4)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “தன் செயல்களாலோ, வேள்விகள் மற்றும் வழிபாட்டாலோ எந்த மனிதனும் எதையும் அடைந்துவிட முடியாது. எந்த மனிதனும் தனது சக மனிதனுக்கு எதையும் தந்துவிட முடியாது. மனிதன் அனைத்தையும் காலத்தின் மூலமே அடைகிறான். விதிசமைக்கும் உயர்ந்தவன் {பிரம்மன்}, கால ஓட்டத்தையே அதை அடையும் வழிமுறையாக அமைத்திருக்கிறான்.(5) காலம் சாதகமாக இல்லாவிட்டால், வெறும் புத்தி, அல்லது சாத்திரங்களால் மட்டுமே மனிதன் பூமி சார்ந்த எந்த உடைமையையும் அடைந்துவிட முடியாது. சில வேளைகளில் அறியாமை கொண்ட மூடனே கூடச் செல்வமடைவதில் வெல்கிறான். அனைத்து செயல்களின் நிறைவுக்கும் காலமே பயனைத் தரும் வழிமுறையாக இருக்கிறது.(6) ஆபத்துக் காலங்களில், அறிவியலோ, மந்திரங்களோ, மருந்துகளோ எந்தக் கனியையும் விளைவிக்காது. எனினும் வளம் நிறைந்த காலங்களில் அதே பொருட்களே, சரியாகச் செயல்படுத்தப்பட்டு, எதிர்பார்க்கும் பலனையும், வெற்றியையும் தருகிறது.(7)
காலத்தாலேயே காற்றுப் பலமாக வீசுகிறது; காலத்தாலேயே மேகங்கள் மழைநிறைந்தவையாகின்றன; காலத்தாலேயே பல்வேறு வகைத் தாமரைகளால் குளங்கள் அலங்கரிக்கப்படுகின்றன; காலத்தாலேயே காட்டிலுள்ள மரங்கள் மலர்களால் நிறைகின்றன.(8) காலத்தாலேயே இரவுகள் இருளாகவோ {தேய்பிறையாகவோ}, ஒளியாகவோ {வளர்பிறையாகவோ} ஆகின்றன. காலத்தாலேயே நிலவும் முழுமையடைகிறது. அதற்கான காலம் வரவில்லையெனில், மரங்கள் மலர்களையோ, கனிகளையோ தாங்குவதில்லை. அதற்கான காலம் வரவில்லையெனில், ஆற்றின் ஓடைகள் கடுமையடைவதில்லை.(9) பறவைகள், பாம்புகள், மான்கள், யானைகள் மற்றும் பிற விலங்குகள் ஆகியனவும் அவற்றுக்கான காலம் வரவில்லையெனில் ஒருபோதும் தூண்டப்படுவதில்லை. அதற்கான காலம் வரவில்லையெனில் பெண்கள் கருத்தரிப்பதில்லை. காலத்தாலேயே குளிர், கோடை மற்றும் மழைக்காலங்கள் நேர்கின்றன.(10) அதற்கான காலம் வரவில்லையெனில் ஒருவரும் பிறப்பதுமில்லை, எவரும் இறப்பதுமில்லை. காலம் வரவில்லையெனில், குழந்தை, பேசும் சக்தியை அடைவதில்லை. காலம் வரவில்லையெனில் எவனும் இளமையடைவதில்லை. காலத்தாலேயே, தூவப்படும் விதைகள் முளைக்கின்றன.(11) காலம் வரவில்லையெனில், அடிவானுக்கு மேலே சூரியன் தோன்றாது, அல்லது அதற்கான காலம் வரவில்லையெனில், அஸ்த மலைகளையும் அவன் அடையமாட்டான். அதற்கான காலம் வரவில்லையெனில், நிலவானது தேயவோ வளரவோ செய்யாது, பெருங்கடலிலும் உயரமான அலைகள் உயர்ந்த அடங்காது.(12)
ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பழங்கதையில், மன்னன் சேனஜித்தனின் துயரம் சொல்லப்படுகிறது.(13) காலத்தில் தடுக்கப்பட முடியாத போக்கு, இறந்து பிறக்கும் அனைத்து உயிரினங்களையும் பாதிக்கிறது. பூமி சார்ந்த அனைத்துப் பொருட்களும் காலத்தாலேயே கனிகின்றன, அல்லது அழிகின்றன.(14) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சிலர், சில மனிதர்களைக் கொல்கிறார்கள், மேலும் அந்தக் கொலையாளிகளும், பிறரால் கொல்லப்படுகிறார்கள். இதுவே உலகின் மொழியாகும். எனினும், உண்மையில், எவரும் எவரையும் கொல்வதில்லை.(15) சிலர், மனிதர்கள் (தங்கள் சக மனிதர்களைக்) கொல்வதாக நினைக்கின்றனர். உண்மையோ, அனைத்து உயிரினங்களின் பிறப்பும், அழிவும், விதிக்கப்பட்ட படியே அவற்றின் இயல்பின் விளைவாலேயே ஏற்படுகின்றன.(16) ஒருவனுடைய செல்வம் இழக்கப்படும்போதோ, ஒருவனுடைய மனைவி, அல்லது மகன், அல்லது தந்தை இறக்கும்போதோ, “ஐயோ, இஃது என்ன துயரம்” என்று சொல்லி, ஒருவன் அழுது கொண்டே இருந்தால், அந்தத் துயரம் அதிகரிக்கவே செய்யும்.(17)
மூடனைப் போல நீ ஏன் துயரில் ஈடுபடுகிறாய்? துயரப்படுபவர்களுக்காக நீ ஏன் வருந்துகிறாய்[1]? அச்சமானது அச்சத்தையே கொடுப்பதைப் போல, துயரத்தில் ஈடுபடுவதால் அஃது அதிகரிப்பதைப் பார்.(18) இந்த உடலானது எனதில்லை. இவ்வுலகில் உள்ள எதுவும் எனதில்லை. அல்லது, இவ்வுலகில் உள்ள பொருட்கள் எந்த அளவுக்குப் பிறருக்குச் சொந்தமோ அதே அளவுக்கே எனக்கும் சொந்தமாகும். இதைக் காணும் ஞானியர், இதில் மயக்கமடைவதில்லை.(19) கவலை அடைவதற்கு ஆயிரங்காரணங்களும், மகிழ்ச்சி அடைவத்றகு நூறு காரணங்களும் உண்டு. அறியாமை கொண்டோரையே இவை தினமும் பாதிக்கச் செய்கின்றனவேயொழிய ஞானியரையல்ல.(20) இவையே, காலத்தின் ஓட்டத்தில், பற்று, அல்லது வெறுப்பின் பொருட்களாகி, (சக்கரத்தைப் போலச்) சுழலும் அருளாகவோ, துயரமாகவோ பாதிக்கப்படும் உயிரினங்களுக்குத் தோன்றுகின்றன.(21)இவ்வுலகில் கவலை மட்டுமே உண்டு, மகிழ்ச்சியில்லை. இதன்காரணமாகவே கவலை மட்டுமே உணரப்படுகிறது. உண்மையில், ஆசை என்றழைக்கப்படும் துன்பத்தில் இருந்தே இந்தக் கவலை உதிக்கிறது, கவலை என்றழைக்கப்படும் துன்பத்தில் இருந்தே மகிழ்ச்சி உதிக்கிறது.(22) இன்பத்திற்குப் பிறகு கவலையும், அதன் பிறகு இன்பமும் நேர்கின்றன. ஒருவன் எப்போதுமே கவலையையோ, எப்போதுமே மகிழ்ச்சியையோ அடைவதில்லை.(23) மகிழ்ச்சி எப்போதுமே கவலையிலேயே முடிவடைகிறது, சில வேளைகளில் அது கவலையில் இருந்தும் உண்டாகிறது. எனவே, அழிவில்லா {நிலையான} மகிழ்ச்சியை விரும்புபவன், {மகிழ்ச்சி, கவலை ஆகிய} அந்த இரண்டையுமே கைவிட வேண்டும்.(24) இன்பம் தீர்ந்ததும் கவலை எழுகிறது, கவலை தீர்ந்ததும் மகிழ்ச்சி எழுகிறது எனும்போது ஒருவன், (பாம்பால் கடிபட்ட) ஒருவனுடைய உடலின் அங்கத்தைக் கைவிடுவதைப் போல, அவன் எதனில் இருந்து கவலையையோ, கவலையால் வளர்க்கப்படும் இதய எரிச்சலையோ, தன் கவலையின் வேரையோ அடைகிறானோ அதைக் கைவிட வேண்டும்.(25)
இன்பமோ, துன்பமோ, ஏற்புடையதோ, ஏற்பில்லாததோ எது வந்தாலும், அது பாதிக்கப்படாத இதயத்துடன் தாங்கிக் கொள்ளப்பட வேண்டும்.(26) ஓ! இனியவனே, உன் மனைவியர், பிள்ளைகள் ஆகியோருக்கு ஏற்புடையதைச் செய்வதில் இருந்து நீ சிறிதளவேகூட விலகினாலும், யார் எவருடையவர்? ஏன் அப்படி? எதற்காக? என்பதை நீ அப்போது அறிந்து கொள்வாய்.(27) பெரும் மூடர்களும், தங்கள் ஆன்மாவைக் கட்டுப்படுத்தியவர்களும் இங்கேயே மகிழ்ச்சியை அடைகிறார்கள். எனினும், இடைப்பட்ட நிலையை அடைபவர்களே இங்கே துன்பத்தை அடைகிறார்கள்.(28) ஓ! யுதிஷ்டிரா, பெரும் ஞானியும், இவ்வுலகில் எது நல்லது, அல்லது தீயது என்பதையும், கடமைகளையும், இன்பதுன்பங்களையும் அறிந்தவனுமான சேனஜித் இதையே சொன்னான்.(29) அடுத்தவரின் துயருக்காக வருந்துபவன் ஒருபோதும் மகிழ்ச்சியடைய முடியாது. துயருக்கு ஓர் எல்லையே கிடையாது, துயரம் மகிழ்ச்சியிலிருந்தே எழுகிறது.(30) இன்பம், துன்பம், செழிப்பு, ஆபத்து, ஈட்டல், இழப்பு, மரணம், வாழ்வு ஆகியன அதற்குரிய காலங்களில் உயிரினங்கள் அனைத்திற்காகவும் காத்திருக்கின்றன. அமைதியான ஆன்மா கொண்ட ஞானியர் இதன் காரணமாகவே மகிழ்ச்சியில் திளைக்கவோ, கவலையில் தளரவோ மாட்டார்கள்.(31)
போரில் ஈடுபடுவதே வேள்வி என ஒரு மன்னனுக்குச் சொல்லப்படுகிறது; தண்ட அறிவியலை {தண்டநீதியை} உரிய முறையில் நோற்பதே அவனது யோகமாகும்; தக்ஷிணையின் வடிவில் வேள்விகளில் கொடுக்கப்படும் செல்வக் கொடையே அவனது துறைவாகும். இவை அனைத்தும் ஒருவனைப் புனிதப்படுத்தும் செயல்பாடுகளாகக் கருதப்பட வேண்டும்.(32) நுண்ணறிவுடனும், கொள்கையுடனும் நாட்டை ஆட்சி செய்து, செருக்கைக் கைவிட்டு, வேள்விகளைச் செய்து, அனைத்தையும், அனைத்து மனிதர்களையும் அன்புடனும் பாரபட்சமின்றியும் காணும் ஓர் உயர் ஆன்ம மன்னன், தன் இறப்புக்குப் பிறகு, தேவர்களின் உலகில் விளையாடுவான்.(33) போர்களை வென்று, தன் நாட்டைக் காத்து, சோமச்சாற்றைப் பருகி, தன் குடிமக்களை முன்னேறச் செய்து, தண்டக்கோலை நீதியுடன் தரித்து, இறுதியாகப் போரில் தன்னுடலைக் கைவிடும் ஒரு மன்னன் சொர்க்கத்தில் இன்பத்தை அனுபவிக்கிறான்.(334) வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்கள் அனைத்தையும் முறையாககப் பயின்று, முறையாக நாட்டைக் காத்து, நான்வகை மனிதர்களையும் தங்கள் வகைக்குரிய கடமைகளைச் செய்யச் செய்யும் ஒரு மன்னன், புனிதமடைந்தவனாக இறுதியில் சொர்க்கத்தில் விளையாடுகிறான்.(35) எவனுடைய நடத்தையானது, அவனது இறப்பிற்குப் பிறகு, நகர மற்றும் நாட்டுவாசிகளாலும், அவனது அமைச்சர்கள் மற்றும் நண்பர்களாலும் கொண்டாடப்படுகிறதோ அவனே மன்னர்களில் சிறந்தவனாவான்” என்றார் {வியாசர்}”.(36)
செல்வத்தின் களங்கங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 26-தேவர்களால் பிராமணர்களாகக் கருதப்படுபவர்கள் யார்? அறவோர் யார்? சூரியனின் தென் பாதை மற்றும் வட பாதை; வடபாதையின் சிறப்பு; மனநிறைவின் உயர்வு; பிரம்மம் மற்றும் பிரம்ம நிலை; செல்வத்தின் தூண்டல்; செல்வத்தின் பயனற்ற நிலை; ஈகையறம் ஏன் கடினமானது? செல்வத்தின் களங்கங்கள் ஆகியவற்றை அர்ஜுனனுக்குச் சொல்லும் யுதிஷ்டிரன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இது தொடர்பாக உயர் ஆன்ம யுதிஷ்டிரன், அறிவு நிறைந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொன்னான்:(1) {அவன்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, செல்வத்தைவிட மேன்மையானது ஏதுமில்லை என்றும், ஓர் ஏழையால் சொர்க்கத்தையோ, மகிழ்ச்சியையோ, தனது விருப்பங்களையோ அடைய முடியாது என்றும் நீ நினைக்கிறாய்.(2) எனினும், இஃது உண்மையல்ல. வேத கல்வியின் வடிவிலான வேள்வியின் மூலமாக வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மனிதர்கள் பலர் உண்மையில் காணப்படுகிறார்கள். தவத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட பல முனிவர்கள் அழிவில்லா (அருள்) உலகங்களை அடைவதும் காணப்படுகிறது.(3) ஓ! தனஞ்சயா, முனிவர்களின் நடைமுறையை எப்போதும் நோற்று, பிரம்மச்சரியத்தைக் கைக்கொண்டு, அனைத்துக் கடமைகளை அறிவோரே தேவர்களால் பிராமணர்களாகக் கருதப்படுகிறார்கள்.(4) ஓ! தனஞ்சயா, வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருக்கும் முனிவர்களையும், உண்மை ஞானத்தை அடைவதில் அர்ப்பணிப்புடன் இருப்போரையும் உண்மையில் அறவோராக எப்போதும் நீ கருதவேண்டும்.(5)
ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உண்மை ஞானத்தை அடைவதில் அர்ப்பணிப்பு கொண்டோரைச் சார்ந்தே நமது செயல்கள் அனைத்தும் இருக்கின்றன[1]. ஓ! பலமிக்கவனே, இதுவே வைகானஸர்களின் {வானப்ரஸ்தர்களின்} கருத்து என்று நாம் அறிகிறோம்.(6) ஓ! பாரதா, அஜர்கள், பிருஸ்னிகள், ஸிகதர்கள், அருணர்கள், கேதவர்கள் ஆகியோர் அனைவரும் வேதகல்வியின் தகுதியின் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டனர்.(7) ஓ! தனஞ்சயா, வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள போர், வேத கல்வி, வேள்விகள், புலனடக்கம் போன்ற கடுமையான செயல்களைச் செய்வதால்,(8) ஒருவன் சூரியனின் தென் பாதையின் மூலமாகச் சொர்க்கத்துக்குச் செல்கிறான். (வேதத்தின் படியான) செயல்களைச் செய்வோர் அந்தப் பகுதிகளுக்கே செல்வார்கள் என்று நான் முன்பு சொல்லியிருக்கிறேன்.(9) எனினும், வடபாதையில், யோக தவங்களில் அர்ப்பணிப்புடையோர் பயணிப்பதை நீ காண்பாய். அழிவில்லாத பிரகாசமான அந்த உலகங்களுக்குச் செல்லும் அந்தப் பாதையே யோகம் செய்யும் மனிதர்களுக்குச் சொந்தமானதாகும்.(10)
இவை இரண்டிலும், வட பாதையே புராணங்களை அறிந்தோரால் மெச்சப்படுகிறது. மனநிறைவின் மூலமே ஒருவர் சொர்க்கத்தை அடைகிறான் என்பதை நீ அறிய வேண்டும். மனநிறைவிலிருந்தே பேரின்பம் உதிக்கிறது.(11) மனநிறைவைவிட உயர்ந்தது ஏதுமில்லை. கோபம் மற்றும் இன்பத்தைக் கட்டுப்படுத்திய ஒரு யோகிக்கு, மனநிறைவே உயர்ந்த புகழும், வெற்றியுமாகும்.(12) இது தொடர்பாக யயாதியின் பழைய உரையாடல் ஒன்று சொல்லப்படுகிறது. இந்த உரையைக் கேட்கும் ஒருவன், தன் அவையங்கள் அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்ளும் ஓர் ஆமையைப் போலத் தன் விருப்பங்கள் அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்வான்.(13) ஒருவன் எதனிடமும், எதனாலும் அச்சமடையாதபோதும், ஒருவன் எந்த ஆசையும், வெறுப்பும் கொள்ளாதபோதும், அவன் பிரம்ம நிலையை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(14) ஒருவன் எந்த உயிரினத்திற்கும் செயலாலோ, சிந்தையாலோ, சொல்லாலோ தீங்கிழையாதிருக்கும்போது, அவன் பிரம்மத்தை அடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.(15)
ஒருவன் செருக்கையும், மடமையையும் கட்டுப்படுத்தி, பற்றுகள் அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டால், ஒளிபொருந்திய ஆன்மா கொண்ட அந்தப் பக்திமான், தனி இருப்பை அழித்த நிலையான முக்தியை அடையத் தகுந்தவனாகிறான்.(16) ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, இப்போது நான் உனக்குச் சொல்லப் போவதை, குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. சிலர் அறத்தையும், சிலர் நன்னடத்தையையும், சிலர் செல்வத்தையும் விரும்புகின்றனர்.(17) ஒருவன் (அறத்தை அடையும் வழிமுறையாக) செல்வத்தை விரும்பலாம். எனினும், அத்தகு விருப்பத்தையும் கைவிடுவதே அவனுக்குச் சிறந்ததாகும்[2]. செல்வத்துடன் பல களங்கங்கள் இணைந்திருக்கின்றன, அதன் விளைவாக அந்தச் செல்வத்தால் செய்யப்படும் அறச்செயல்களிலும் அவை இணைந்தேயிருக்கின்றன.(18) இதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். இதை நீயும் காண்பதே உனக்குத் தகும். செல்வத்தை விரும்பும் ஒருவன், எந்த வழிமுறையிலேனும் கைவிட வேண்டியவற்றைக் கைவிடுவதற்கு மிகவும் கடினமானதாகக் காண்கிறான்.(19) வளங்களுக்கு மத்தியில் இருப்போர் நற்செயல் செய்வது அரிதே. பிறருக்குத் தீங்கிழைக்காமல் செல்வத்தை ஒருபோதும் அடைய முடியாது என்றும், அஃதை ஈட்டுபோது, அஃது எண்ணற்ற தொல்லைகளையே கொண்டு வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.(20)பாவங்களுக்கு வருந்தும் அச்சத்தைச் சிறிதளவும் கொள்ளாத குறுகிய இதயம் படைத்தவன், சிறு செல்வத்திலும் மயக்கமுற்று, தன் செயல்களின் மூலம் பிராமணனைக் கொன்ற பாவத்தை {பிரம்மஹத்தியை} இழைக்கிறோம் என்பதையும் முற்றிலும் அறியாமல் பிறருக்குத் தீங்கிழைக்கும் செயல்களைச் செய்கிறான்.(21) அடைவதற்கரிதான செல்வத்தை அடைந்த ஒருவன், அதில் ஒரு பகுதியைத் தனது பணியாட்களுக்குக் கொடுக்கும்போது, கொள்ளையர்களால் களவாடப்படுபவன் உணர்வதற்கு இணையான துன்பத்தை அடைகிறான். மறுபுறம், ஒருவன் தன் செல்வத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பானானால், அவன் மக்களின் கண்டனத்தையே தன் பங்காகக் கொள்கிறான்.(22) எனினும், செல்வமில்லாத ஒருவனோ, ஒரு போதும் நிந்தனைக்கான பொருளாவதில்லை. பற்றுகள் அனைத்திலிருந்தும் விலகிய ஒருவன், பிச்சையெடுத்து அடையும் சிறிதளவைக் கொண்டு தன் உயிரைத் தாங்கிக் கொண்டு அனைத்து வகையிலும் அவன் மகிழ்ச்சியை அடைகிறான். செல்வத்தை அடைவதாலோ எவராலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.(23) பழங்காலச் சாத்திரங்களை அறிந்தோரால் இது தொடர்பாக வேள்விகளுக்குச் சம்பந்தமான குறிப்பிட்ட வரிகள் சொல்லப்படுகின்றன.(24) செல்வமானது படைப்பாளனால் வேள்விகளின் நிமித்தமாகப் படைக்கப்பட்டது, அந்தச் செல்வத்தைக் காக்கவும், வேள்விகளைச் செய்வதற்காகவும் தான் மனிதன் படைக்கப்பட்டான். இதன் காரணமாகச் செல்வமனைத்தும் வேள்விகளுக்கே செலவிடப்பட வேண்டும். ஒருவனுடைய இன்ப நிறைவுக்கான ஆசைக்காக அது செலவிடப்படுவது முறையாகாது.(25)
அவ்வாறெனில், படைப்பாளன் வேள்வியின் நிமித்தமாகவே மனிதர்களுக்குச் செல்வத்தைக் கொடுக்கிறான். ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, செல்வந்தர்கள் அனைவரிலும் நீயே முதன்மையானவன் என்பதை நீ அறிவாயாக.(26) செல்வமானது, இப்பூமியில் உள்ள யாருக்கும் சொந்தமானதல்ல என்று இதன் காரணமாகவே ஞானியர் சொல்கின்றனர். ஒருவன் அதைக் கொண்டு வேள்விகளைச் செய்து, நம்பிக்கை மிகுந்த இதயத்துடன் அதைக் கொடையாக அளிக்க வேண்டும்.(27) ஒருவன் தான் அடைந்ததை (தானமாகச்) செலவிடவேண்டுமேயொழிய, வீணாக்கவோ, தன் இன்ப நுகர்ச்சிக்காகவோ செலவிடக்கூடாது. எதில் செலவிட வேண்டும் என்ற இத்தகு முறையான பொருட்கள் இருக்கும்போது, செல்வத்தைக் குவிப்பதில் என்ன பயன் இருக்கிறது?(28) தங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து தவறிய மனிதர்களுக்கு, (செல்வத்தைக்) கொடையளிக்கும் சிறுமதியாளர்கள், அதன் பிறகு நூறாண்டுகள், கழிவுகளிலும் புழுதியிலும் உழல வேண்டியிருக்கும்.(29) மனிதர்கள், தகுந்தவர்களையும், தகாதவர்களையும் பகுத்தறியும் இயலாமையினாலேயே, தகாதவர்களுக்குக் கொடுத்துத் தகுந்தவர்களுக்குக் கொடுக்காமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக ஈகை எனும் அறமே கூடப் பயில்வதற்கு மிகக் கடினமானதாகிறது.(30) செல்வம் அடையப்பட்டாலும், தகாதவனுக்குக் கொடையளிப்பது, தகுந்தவருக்குக் கொடாமலிருப்பது ஆகிய இந்த இரு களங்கங்களைக் கொண்டதாகவே அஃது இருக்கிறது” என்றான் {யுதிஷ்டிரன்}[3].(31)
சாகப் போகிறேன்! – சாந்திபர்வம் பகுதி – 27-அபிமன்யு, பீஷ்மர், துரோணர், கர்ணன் ஆகியோரின் படுகொலைகளுக்காக வருந்திய யுதிஷ்டிரன்; திரௌபதியின் துயருக்காக வருந்தியது; அனைத்துக்கும் காரணமான தான் இருந்த இடத்திலேயே அமர்ந்து, உணவில்லாமல் சாகப் போவதாகச் சொன்னது; அது நடக்காது என்று சொல்லி, சோம்பலை அகற்றிச் செயல்படுமாறு யுதிஷ்டிரனைத் தூண்டிய வியாசர்..
யுதிஷ்டிரன், “இளம் வயதிலேயே அபிமன்யுவும், திரௌபதி, திருஷ்டத்யும்னன், விராடர், மன்னர் துருபதர்,(1) அனைத்துக் கடமைகளையும் அறிந்த திருஷ்டத்யும்னன், அரசன் திருஷ்டகேது, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பிற மன்னர்கள் ஆகியோருடைய மகன்களும் போரில் வீழ்ந்த துயரமானது,(2) உறவினர்களைக் கொன்றவனும், இழிந்தவனுமான என்னைவிட்டு அகலவில்லை. உண்மையில், நான் நாட்டின் மீது இயல்பற்ற பேராசை கொண்டவனும், என் சொந்த குலத்தையே அழித்தவனுமாவேன்.(3)
எவருடைய மார்பிலும், அங்கங்களிலும் உருண்டு விளையாடினேனோ, ஐயோ, அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, அரசுரிமையின் மீது நான் கொண்ட ஆசையினால் போரில் என்னால் கொல்லப்பட்டார்.(4) மனிதர்களில் சிங்கமான எங்கள் பாட்டன் {பீஷ்மர்}, சிகண்டியால் தாக்கப்பட்டு, சக்தியில் வஜ்ரத்துக்கு ஒப்பான பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளின் விளைவால் நடுங்கிச் சுழன்று கொண்டிருப்பதையும், நெடும் வடிவம் கொண்ட அவரது அங்கங்கள் முழுவதும் சுடர்மிக்கக் கணைகளால் துளைக்கப்பட்டிருப்பதையும், அந்த முதிர்ந்த சிங்கம் பலவீனமடைவதையும் நான் கண்டபோது, ஆழமான வலியை என் இதயம் உணர்ந்தது.(5,6) பகைவரின் தேர்களைப் பீடிப்பவரான அவர் {பீஷ்மர்}, கிழக்கு நோக்கித் திரும்பி தன் வாகனத்தின் தட்டில் பலமற்று ஒரு மலைச்சிகரத்தைப் போல வீழ்ந்தபோது, என் புலன்கள் திகைப்படைந்தன.(7)
{மன்னன்} குருவால் புனிதமடைந்த களத்தில் {குருக்ஷேத்திரத்தில்}, பிருகு குலத்தின் ராமரை {பரசுராமரை} எதிர்த்து, கையில் வில் மற்றும் கணையுடன், பல நாட்கள் கடும்போரிட்டவர் எவரோ அந்தக் குரு குலக் கொழுந்து {பீஷ்மர்},(8) மணப்பெண்களின் நிமித்தமாகத் தனித்தேரில் வாரணாசிக்குச் சென்று, அங்கே திரண்டிருந்த உலகின் க்ஷத்திரியர்களைப் போருக்கு அறைகூவி அழைத்தவர் எவரோ அந்தக் கங்கையின் மைந்தர், (9) தடுக்கப்பட முடியாதவரும், மன்னர்களில் முதன்மையானவருமான உக்ராயுதரை தன் ஆயுதங்களில் சக்தியால் எரித்தவர் எவரோ, ஐயோ, அந்த வீரரைப் போரில் நான் கொல்லச் செய்தேன்.(10) பாஞ்சால இளவரசன் சிகண்டியே தன்னை அழிக்கப் போகிறவன் என்பதை நன்றாக அறிந்தும், அந்த வீரர் தன் கணைகளால் அவ்விளவரசனைக் கொல்லவில்லை. ஐயோ, அத்தகு மகத்தான போர்வீரர் அர்ஜுனனால் கொல்லப்பட்டார்.(11) ஓ! தவசிகளில் சிறந்தவரே {வியாசரே}, குருதியில் மறைக்கப்பட்டுப் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் பாட்டனை நான் கண்ட போது, கடும் நோயானது எனது இதயத்தைப் பீடித்தது.(12) நாங்கள் பிள்ளைகளாய் இருந்தபோது எங்களைப் பாதுகாத்து வளர்த்தவர் எவரோ, ஐயோ அவர், நாட்டின் மீது பேராசை கொண்டவனும், மதிப்பு மிக்கப் பெரியோரைக் கொன்றவனும், முற்றான மூடனும், பாவியுமான என்னால், சில நாட்களே நீடிக்கபோகும் அரசுரிமைக்காகக் கொல்லப்பட்டார்.(13)
எங்கள் ஆசானும், பெரும் வில்லாளியும், மன்னர்கள் அனைவராலும் புகழப்படுபவருமான துரோணரை நான் அணுகி, அவரது மகனைக் {அஸ்வத்தாமனைக்} குறித்துப் போலியாகப் பேசினேன் {பொய்யுரைத்தேன்}.(14) நான் செய்த அச்செயலின் நினைவு என் அங்கமனைத்தையும் எரிக்கிறது. ஆசான் {துரோணர்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, என் மகன் உயிருடன் இருக்கிறானா என்று உண்மையைச் சொல்வாயாக” என்று என்னிடம் கேட்டார்.(15) அந்தப் பிராமணர் {துரோணர்}, உண்மையை எதிர்பார்த்தே, பிறர் அனைவரையும் விட்டுவட்டு என்னிடம் கேட்டார். யானை என்ற சொல்லை அமைதியாக {ஒலி குறைவாகச்} சொல்லி நான் அவரிடம் போலியாக {பொய் நடத்தை} நடந்து கொண்டேன்.(16) நாட்டின் மீது அதிகப் பேராசை கொண்டவனும், மதிப்புமிக்க என் பெரியோர்களைக் கொன்றவனும், பாவம் நிறைந்தவனுமான நான், உண்மையில் அஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட யானை கொல்லப்பட்டிருக்கையில், (நான் அணிந்திருந்ததாக நம்பப்பட்ட) உண்மையெனும் ஆடையைத் தூக்கி வீசிவிட்டு, அஸ்வத்தாமனே கொல்லப்பட்டான் என்று என் ஆசானிடம் சொன்னேன். போரில் இவ்வாறே நான் என் ஆசானிடம் நடந்து கொண்டேன்.(17)
இத்தகு இகழச்சியானச் செயல்களைச் செய்த நான், (மறுமையில்) எந்த உலகங்களை அடைவேன்? போரில் பின்வாங்காதவரும், பயங்கரமான போர்வீரருமான என் அண்ணன் கர்ணரையும் நான் போரில் கொல்லச் செய்தேன். என்னை விட இங்கே வேறு எந்தப் பாவி இருக்கிறான்?(18) மலைகளில் பிறந்த சிங்கத்திற்கு ஒப்பானவனும், இளம் வயதினனுமான அபிமன்யுவை துரோணரால் பாதுகாக்கப்பட்ட {பத்ம} வியூகத்திற்குள் ஊடுருவும்படி பேராசையின் காரணமாகவே சொன்னேன்.(19) நான் கருவைக் கொன்ற குற்றவாளியைப் போன்றவனாவேன். நான் பாவம் நிறைந்தவனாக இருப்பதாலேயே, அர்ஜுனன், அல்லது தாமரை கண்களைக் கொண்ட கிருஷ்ணன் ஆகியோரின் முகங்களை அப்போதிலிருந்தே என்னால் {நேராகப்} பார்க்க முடியவில்லை.(20)
ஐந்து மலைகளை இழந்த பூமியைப் போல, தன் ஐந்து மகன்களை இழந்த திரௌபதிக்காகவும் நான் துயரமடைகிறேன். நான் ஒரு பெரும் குற்றவாளி, பெரும் பாவி மற்றும் இந்தப் பூமியை அழித்தவனுமாவேன். இப்போது நான் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் இருந்து எழாமல், (பட்டினி கிடந்து) என் உடலை பலவீனமடையச் செய்து நான் சாகப் போகிறேன்.(22) என் ஆசானைக் கொன்றவனான என்னைப் பிராய நோன்பு நோற்று அமர்ந்திருக்கும் ஒருவனாக அறிவீராக. குலத்தை அழித்தவனான நான், எந்த வகை உயிரினமாகவும் மீண்டும் பிறக்காதிருக்க இதைச் செய்தே ஆக வேண்டும்[1].(23) ஓ! பெரும் தவசியே {வியாசரே}, உணவு மற்றும் நீர் அனைத்தையும் கைவிட்டு, இவ்விடத்தில் இருந்து நகராமல் பெரும் அன்புக்குரிய என் உயிர்மூச்சை நான் வற்றச் செய்யப் போகிறேன்.(24) இதற்கு எனக்கு அனுமதியளித்து, நீங்கள் விரும்பும் இடத்திற்குச் செல்ல வேண்டுமென நான் உம்மைப் பணிவுடன் வேண்டுகிறேன். அனைவரும் எனக்கு அனுமதியளிப்பீராக. நான் இந்த என் உடலை விடப் போகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(25)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தவசிகளில் சிறந்தவரான வியாசர், தன் உறவுகளின் நிமித்தமான கவலையில் திகைத்து இத்தகு வார்த்தைகளைச் சொல்லும் அந்தப் பிருதையின் மகனை {யுதிஷ்டிரனைத்} தடுக்கும் வகையில், “இது நடக்காது” என்று முதலில் சொல்லிவிட்டுப் பின்வருமாறு பேசினார்.(26)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, இத்தகு கடுந்துயரில் ஈடுபடுவது உனக்குத் தகாது. நான் ஏற்கனவே சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். ஓ! பலமிக்கவனே, இவையனைத்தும் விதியே.(27) பிறக்கும் உயிரினங்கள் அனைத்தும், (பல்வேறு பொருட்கள் மற்றும் சக்திகளின்) ஒருங்கிணைப்பையே முதலில் வெளிக்காட்டுகின்றன என்பதில் ஐயமில்லை. எனினும், இறுதியில் அழிவே அவற்றுக்கு நேர்கிறது. நீரில் உள்ள குமிழிகளைப் போல அவை எழுந்து மறைகின்றன.(28) ஒன்றாகத் திரளும் பொருட்கள் அனைத்தும் நொறுங்கி விழும் என்பதும், எழும் அனைத்துப் பொருட்களும் விழ வேண்டும் என்பது நிச்சயமானதாகும். கூட்டம் இறுதியில் அழிவடையும், பிறப்பும் இறப்பிலேயே முடிவடையும்.(29) தற்காலிகமாக ஏற்கத்தக்கதாக இருப்பினும் சோம்பல், பேரிடரில் முடிகிறது, தற்காலிக வலியைக் கொண்டதாகினும் திறனுடன் கூடிய முயற்சியானது மகிழ்ச்சியிலேயே முடிகிறது. வளம், செழிப்பு, பணிவு, மனநிறைவு மற்றும் புகழ் ஆகியன முயற்சி மற்றும் திறனிலேயே வசிக்கின்றவே ஒழிய சோம்பலில் அல்ல.(30)
நண்பர்கள் மகிழ்ச்சி அளிக்கவும், எதிரிகள் பேரிடரால் பீடிக்கவும் தகுந்தோரல்ல. அதேபோல், ஞானம் செல்வத்தைக் கொண்டு வராது, செல்வமும் மகிழ்ச்சியைக் கொண்டுவராது.(31) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, செயலில் ஈடுபடுவதற்காகவே நீ படைப்பாளனால் உண்டாக்கப்பட்டிருக்கிறாய். செயலில் இருந்தே வெற்றி எழுகிறது. ஓ! மன்னா, செயலைத் தவிர்க்க நீ தகுந்தவனல்ல” என்றார் {வியாசர்}”.(32)
காலமெனும் பெருங்கடல்! – சாந்திபர்வம் பகுதி – 28-ஞானியான அஸ்மருக்கும், மன்னன் ஜனகனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்; மனத்தின் வீண் செருக்கு, வளமை, வறுமை, மனக்கவலைக்கான காரணம், முதுமை, மரணம், காலத்தின் போக்கு ஆகியவற்றைக் குறித்து ஜனகனிடம் உரையாடிய அஸ்மர்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு வியாசர், தன் உறவினர்களின் படுகொலையின் நிமித்தமாகக் கவலையில் எரிந்து, தன் உயிர் மூச்சை விடத் தீர்மானித்திருந்த பாண்டுவின் மூத்த மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} துயரை அகற்ற முயன்றார்.(1)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே, இது தொடர்பாகப் பழங்கதையில் அஸ்மரின் உரையாடல் என்ற பெயரில் ஓர் உரையாடல் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா அதைக் கேட்பாயாக.(2) ஓ! மன்னா, விதேஹர்களின் ஆட்சியாளனான ஜனகன், கவலையாலும், துயராலும் நிறைந்து, தன் ஐயங்களைத் தீர்க்க அஸ்மர் என்ற பெயருடைய ஒரு பிராமண ஞானியிடம் கேள்விகள் கேட்டான்.(3)
ஜனகன் {அஸ்மரிடம்}, “உறவினர்களையும், செல்வத்தையும் அடையும்போதும், அவை அழிவடையும்போதும், தன் நலத்தை விரும்பும் ஒரு மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(4)
அஸ்மர் {ஜனகனிடம்}, “ஒரு மனிதனின் உடல் உண்டான பிறகு, இன்பங்களும், துன்பங்களும் அதைப் பற்றுகின்றன.(5) இவற்றில் ஏதாவதொன்று அம்மனிதனைப் பற்றும் வாய்ப்பு இருந்தாலும், அவனை எது பற்றுகிறதோ, ஒன்று திரண்டிருக்கும் மேகங்களை விரட்டும் காற்றைப் போல அதுவே விரைவாக அம்மனிதனிடம் உள்ள அறிவைக் களவாடிவிடும்.(6) (வளமையான காலங்களில்) ஒரு மனிதன், “நான் உயர்பிறப்பாளன் {நற்பிறவி கொண்டவன்}”, “நான் விரும்புவதை என்னால் செய்ய முடியும்”, “நான் சாதாரண மனிதன் கிடையாது” என்பது போலச் சிந்திக்கிறான். அவனது மனமானது வீண் செருக்கான இம்மூன்றில் ஊறுகிறது. {இவ்வாறு மூன்று வகைகளில் வீண்செருக்கு கொள்கிறது}.(7) பூமி சார்ந்த இன்பங்கள் அனைத்திற்கும் அடிமையாகும் அவன், தன் முன்னோர்களால் சேமிக்கப்பட்ட செல்வத்தை வீணாக்கத் தொடங்குகிறான். காலப்போக்கில் வறிய நிலையை அடையும் அவன், பிறருக்குச் சொந்தமானவற்றை அபகரிப்பதை மெச்சத்தகுந்ததாகவே கருதுகிறான்.(8) ஒரு மன்னன், சட்டங்களையும், விதிகளையும் மீறி அடுத்தவர் பொருளைக் களவாடும் அந்தத் தீயவனை, மானைத் தன் கணைகளால் துளைக்கும் வேடனைப் போலத் தண்டிக்கிறான்.(9) அத்தகு மனிதர்கள், (வழக்கமாக மனிதர்கள் வாழும்) நூறு வருடங்களை அடையாமலே, இருபது, அல்லது முப்பது வயதிற்கு மேல் வாழாமல் போகிறார்கள் {அதற்குள் இறந்து விடுகிறார்கள்}.(10) அனைத்து உயிரினங்களின் நடத்தையையும் கவனமாகக் காணும் ஒரு மன்னன், தன் நுண்ணறிவைப் பயன்படுத்தி, தன் குடிமக்களின் பெருந்துயரங்களைத் தணிக்கத் தகுந்த தீர்வுகளைச் செய்ய வேண்டும்.(11)
மனக் கவலை அனைத்திற்கும், மனத்தின் மயக்கம் மற்றும் துயரடைதல் ஆகிய இரண்டும் காரணங்களாகின்றன. மூன்றாவதாக வேறேதும் காரணமில்லை.(12) பல்வேறு வகைத் துயரங்களும், பூமி சார்ந்த இன்பங்களில் மனிதன் கொள்ளும் பற்றிலிருந்தே எழுகின்றன.(13) முதுமை, மரணம் ஆகியன இரண்டு ஓநாய்களைப் போல, பலமான, அல்லது பலமற்ற, குட்டையான, அல்லது நெடிய உயிரினங்கள் அனைத்தையும் விழுங்குகின்றன.(14) எந்த மனிதனாலும், ஏன் கடலை கச்சையாக அணிந்த மொத்த பூமியையும் அடக்கியாண்டவனாலும் கூட முதுமை மற்றும் மரணத்தில் இருந்து தப்ப முடியாது.(15) உயிரினங்களுக்கு ஏற்படும் இன்பமோ, துன்பமோ எந்தவித எழுச்சியும், தளர்ச்சியும் கொள்ளாமல் அனுபவிக்கப்படவோ, தாங்கிக் கொள்ளவோ படவேண்டும். அவற்றில் இருந்து தப்பும் வழிமுறை ஏதும் இல்லை.(16) ஓ! மன்னா {ஜனகனே}, வாழ்வின் தீமைகள் இளமையிலோ, நடு வயதிலோ, முதுமையிலோ ஒருவனை வந்தடைகின்றன. ஆசைப்பட்டவற்றை (அருள்களை) அடையமுடியவில்லையெனினும், இவற்றை ஒருபோதும் தவிர்க்க முடியாது[1].(17)ஏற்புடையவற்றின் இல்லாமையும், ஏற்பில்லாதவற்றின் இருப்பும், நன்மையும், தீமையும், அருளும், துயரும் விதியையே பின்பற்றி வருகின்றன.(18) அதேபோல, உயிரினங்களின் பிறப்பும், அவற்றின் இறப்பும், ஈட்டலும், இழப்பும் ஆகிய அனைத்தும் முன்பே தீர்மானிக்கப்பட்டவையாகும்.(19) மணம், நிறம், சுவை, தீண்டல் ஆகியன இயல்பாக எழுவதைப் போலவே, இன்பமும், துன்பமும், ஏற்கனவே விதிக்கப்பட்டவற்றில் இருந்து எழுகின்றன.(20) இருக்கைகள், படுக்கைகள், வாகனங்கள், செழிப்பு, பானம், உணவு ஆகியன காலப்போக்கில் உயிரினங்களை அணுகுகின்றன[2].(21) மருத்துவர்களும் நோய்வாய்ப்படுகிறார்கள். பலமானவர்களும் பலமிழக்கிறார்கள். செழிப்பை அனுபவிப்போர், அவை அனைத்தையும் இழந்து, வறுமையை அடைகிறார்கள்.(22) உயர்ந்த பிறப்பு {நற்குடி பிறப்பு}, உடல் நலம், அழகு, செழிப்பு, இன்ப நுகர் பொருட்கள் ஆகியன அனைத்தும் விதியின் மூலமே பெறப்படுகின்றன.(23) வறியோர் விரும்பவில்லையெனினும் பல பிள்ளைகளைப் பெறுகிறார்கள். செல்வந்தர்கள் பிள்ளை இல்லாமலும் இருக்கிறார்கள். விதியின் போக்கு ஆச்சரியம் நிறைந்ததாகும்.(24)நோய், நெருப்பு, ஆயுதங்கள், பசி, நஞ்சு, காய்ச்சல், மரணம், உயர்ந்த இடங்களில் இருந்து வீழ்தல் போன்றவற்றால் உண்டாகும் தீமைகள், பிறப்பை அடையும் விதியின்படியே ஒரு மனிதனை அடைகின்றன. பாவம் செய்யாத சிலர் பல்வேறு தீமைகளில் துன்புறும்போது, பாவிகளோ துயரின் சுமையைத் தாங்காமல் இருக்கும் நிலை இவ்வுலகில் காணப்படுகிறது.(25,26) செல்வத்தில் இன்புறும் சிலர் இளமையில் அழிகின்றனர்; சில வறிவர்கள், முதுமையின் சுமையைத் தாங்கிக் கொண்டு நூறு வருடங்களுக்குத் தங்கள் இருப்பை நீட்டிக்கின்றனர்.(27) இழிந்த குலத்தில் பிறந்த ஒருவன் நீண்ட வாழ்நாளோடு இருக்கிறான், அதே வேளையில் உன்னதக் குலத்தில் பிறந்தவன் ஒரு பூச்சியைப் போல விரைவில் அழிந்து போகிறான்.(28) இவ்வுலகில், செல்வச்சூழலில் இருக்கும் மனிதர்களுக்குப் பசிப்பதில்லை, அதே வேளையில் வறியவர்களோ மரத்துண்டுகளையும் செரிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.(29)
தீய ஆன்மா கொண்ட மனிதன், விதியால் உந்தப்பட்டுத் தன் நிலையில் நிறைவில்லாமல், “நான் இதைச் செய்கிறேன்” என்று சொல்லி, எந்தப் பாவத்தை இழைத்தாலும், அது தனது நன்மைக்கானதே என்று கருதுகிறான்.(30) வேட்டை, பகடை, பெண்கள், மது, பூசல்கள் ஆகியன ஞானியரால் நிந்திக்கப்படுகின்றன. எனினும், சாத்திரங்களில் பரந்த அறிவைக் கொண்ட பல மனிதர்கள் கூட, அவற்றுக்கு அடிமையாக இருப்பது காணப்படுகிறது.(31) உயிரினங்கள் பொருட்களை ஆசைப்பட்டாலும், படாவிட்டாலும் காலத்தின் போக்கில் அவை அவற்றை அடைகின்றன. வேறு எந்தத் தடத்தையும் {காரணத்தையும்} காணமுடியாது.(32) காற்று, வெளி {வானம்}, நெருப்பு, நிலவு, சூரியன், பகல், இரவு (ஆகாயத்தின்) ஒளிக்கோள்கள், ஆறுகள், மலைகள் ஆகியவற்றை எவன் படைக்கிறான்? எவன் அவற்றைத் தாங்கி வருகிறான்?(33)
குளிர், வெப்பம், மழை ஆகியன காலப்போக்கின் விளைவால் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து வருகின்றன. ஓ! மனிதர்களில் காளையே {ஜனக மன்னா}, அதுபோலவே, மனித குலத்திலும் இன்பமும், துன்பமும் {மாறி மாறி} வருகின்றன.(34) முதுமையால் துன்புறும், அல்லது மரணத்தால் பற்றப்படும் மனிதனை மருந்துகளாலோ, மந்திரங்களாலோ காப்பாற்ற முடியாது.(35) பெருங்கடலில் மிதக்கும் இரு மரத்துண்டுகள் ஒன்றோடொன்று சேர்ந்து மீண்டும் (காலப்போக்கில்) பிரிவதைப் போலவே உயிரினங்களும் ஒன்றாகச் சேர்ந்து, மீண்டும் (காலம் வரும்போது) பிரிவை அடைகின்றன.(36) (செல்வச் சூழலில்) பாடல் மற்றும் ஆடல்களிலும், பெண்களின் துணையிலும் இன்புற்று இருப்பவனிடமும், பிறர் கொடுக்கும் உணவை உண்டு வாழும் ஆதரவற்ற மனிதனிடமும் {வேறுபாடின்றி} காலம் சமமாகவே {ஒரே விதத்திலேயே} செயல்படுகிறது.(37)
தாய் என்றும், தந்தை, மகன் மற்றும் மனைவி என்றும் இவ்வுலகில் ஆயிரம் உறவுகள் சொல்லப்படுகின்றன. எனினும் உண்மையில், அவர்கள் யாருடையவர்கள்? நாமும் யாருடையவர்கள்?(38) எவரும் எவருக்கும் சொந்தமாகவோ, எவரும் வேறு எவருக்கும் சொந்தமாகவோ முடியாது. மனைவியர், சொந்தங்கள், மற்றும் நலன்விரும்பிகளோடு நாம் இணைவது, சாலையோர விடுதியில் பயணிகளைச் சந்திப்பதைப் போன்றதாகும்.(39) “நான் எங்கிருக்கிறேன்?”, “நான் எங்குச் செல்லப்போகிறேன்?”, “நான் யார்?”, “நான் எவ்வாறு இங்கே வந்தேன்?”, “எதற்காக, யாருக்காக நான் வருந்த வேண்டும்?” என்பது போன்ற கேள்விகளைச் சிந்திக்கும் ஒருவன் அமைதியை அடைகிறான்.(40) வாழ்வும், அதன் சுற்றுச்சூழலும் ஒரு சக்கரத்தைப் போலத் தொடர்ந்து சுழல்கின்றன, அன்புக்குரியோரின் தோழமை தோன்றி மறையக்கூடியது {சிறிது காலம் நீடிக்கக்கூடியதே}. சகோதரன், தாயார், தந்தையார், நண்பன் ஆகியோர் விடுதியில் உள்ள பயணிகளைப் போன்றோராவர்.(41) {எனவே, அவர்களின் இழப்புக்காக வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை}.
ஞானம் கொண்ட மனிதர்கள், காணப்படாத அடுத்த உலகத்தைத் தங்கள் ஊன்கண்களாலேயே காண்கிறார்கள். அறிவை விரும்பும் ஒருவன், சாத்திரங்களை அலட்சியம் செய்யாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.(42) அறிவைக் கொண்ட ஒருவன், பித்ருக்கள், தேவர்கள் ஆகியோர் சம்பந்தமாக விதிக்கப்பட்டிருக்கும் சடங்குகளைச் செய்து, அறக்கடமைகள் அனைத்தையும் பயின்று, வேள்விகளைச் செய்து, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை நீதியுடன் பின்தொடர வேண்டும்.(43) ஐயோ, பெரும் ஆழம் கொண்டதும், முதுமை மற்றும் மரணம் என்றழைக்கப்படும் பெரும் முதலைகள் நிறைந்ததுமான காலமெனும் பெருங்கடலில் இவ்வுலகம் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்பதை எவரும் புரிந்து கொள்வதில்லை.(44)
மருத்துவ அறிவியலைக் கவனமாகக் கற்றிருந்தாலும் பல மருத்துவர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நோயினால் பீடிக்கப்படுவது காணப்படுகிறது.(45) பெருங்கடலானது கரைகளைக் கடக்க முடியாததைப் போலவே, கசப்பானவையும், பிசுபிசுப்பவையுமான பல்வேறு வகை மருந்துகளை உட்கொண்டாலும் இவர்கள் மரணத்தை விஞ்சுவதில் வெல்வதில்லை.(46) வேதியியலை நன்கறிந்த மனிதர்கள், நியாயமாக {விதிதவறாமல்} வழங்கப்படும் வேதியியல் சேர்மங்களைத்[3] தாக்குப் பிடிக்கமுடியாமல் யானைகளால் முறிக்கப்படும் மரங்களைப் போல முதுமையால் நொறுங்கி வீழ்வதும் காணப்படுகிறது.(47) அதேபோலவே, வேத கல்வியில் அர்ப்பணிப்பு மிக்கோரும், தவத்தகுதி கொண்டவர்களுமான மனிதர்களும் கூட, ஈகை பயின்று, அடிக்கடி வேள்விகளைச் செய்தாலும் முதுமை மற்றும் மரணத்தில் இருந்து தப்புவதில் வெல்வதில்லை.(48) பிறப்பை அடைந்திருக்கும் அனைத்து உயிரினங்களைப் பொறுத்தவரையில், ஒரு முறை கடந்து போகும் வருடங்களோ, மாதங்களோ, அரைத்திங்களோ {பக்ஷங்களோ}, பகல்களோ, இரவுகளோ மறுபடி திரும்புவதில்லை.(49) நிலையில்லாத இருப்பைக் கொண்ட மனிதன், விரும்பினாலும், விருப்பாவிட்டாலும், அனைத்து உயிரினங்களாலும் நடக்கப்படும் தவரிக்கப்பட முடியாத, அகன்ற பாதையை அடைய காலப்போக்கால் பலவந்தமாக இழுக்கப்படுகிறான்[4].(50)உடலானது உயிரினங்களில் இருந்து உதிக்கிறதோ, உயிரினங்கள் உடலில் இருந்து உதிக்கின்றனவோ, மனைவியர் மற்றும் பிற நண்பர்களுடனான ஒருவனின் உறவு விடுதியில் உள்ள பயணிகளைப் போன்றதே ஆகும்[5].(51) எவனாலும் எவனுடனும் நீடித்த தோழமையைப் பெற முடியாது. எவனாலும் தன் சொந்த உடலுடனேயே அத்தகு தோழமையைக் கொள்ள முடியாது. அவ்வாறிருக்கையில் வேறு எவரிடும் எவ்வாறு அவன் தோழமையை {உறவை} அடைவான்?(52) ஓ! மன்னா {ஜனகா}, இன்று உன் தந்தை எங்கே? உன் பாட்டன்கள் எங்கே? ஓ! பாவமற்றவனே, நீ இன்று அவர்களைக் காணவில்லை, அவர்களும் உன்னைக் காணவில்லை.(53) எந்த மனிதனாலும் சொர்க்கத்தையோ, நரகத்தையோ பார்க்க முடியாது. எனினும், சாத்திரங்களே அறவோரின் கண்களாகும். ஓ! மன்னா, சாத்திரங்களின் படி உன் நடத்தையை அமைத்துக் கொள்வாயாக.(54)ஒருவன் தூய்மையான இதயத்துடன் முதலில் பிரம்மச்சரிய நோன்பை நோற்று, பிறகு பிள்ளைகளைப் பெற்று, பிறகு பித்ருக்கள், தேவர்கள் மற்றும் மனிதர்களுக்குத் தான் பட்ட கடனைச் செலுத்துவதற்காக வேள்விகளைச் செய்ய வேண்டும்.(55) முதலில் ஒருவன், பிரம்மச்சரிய நோன்பை நோற்று, வேள்விகளைச் செய்து, பிள்ளைகளைப் பெறுவதில் ஈடுபட்டு, அறிவையே கண்களாகக் கொண்டு, இதயத் துயரம் அனைத்தையும் கைவிட்டு, சொர்க்கத்திலும், இவ்வுலகத்திலும், தன் சொந்த ஆன்மாவிலும் கவனம் செலுத்த வேண்டும்[6].(56) சொர்க்கம், பூமி ஆகியவற்றை நியாயமாக அடைய அறம்பயில முனைந்து, சாத்திரங்களில் (மன்னனின் பங்காக) விதிக்கப்பட்ட உலகப் பொருட்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும் மன்னன், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் மற்றும் உலகங்கள் அனைத்தின் மத்தியிலும் பரவும் புகழை வெல்கிறான்” என்றார் {அஸ்மர்}.(57)தெளிந்த அறிவைக் கொண்ட விதேஹர்களின் ஆட்சியாளன் {மன்னன் ஜனகன்}, அறிவு நிறைந்த இந்த வார்த்தைகளைக் கேட்டு, துயரில் இருந்து விடுபட்டு, அஸ்மரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு தன் வசிப்பிடத்தை நோக்கிச் சென்றான்.(58) ஓ! மங்கா புகழ் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, உன் துயரங்களைக் கைவிட்டு எழுவாயாக. நீ சக்ரனுக்கே {இந்திரனுக்கே} இணையானவனாவாய். உன் ஆன்மாவில் இன்புற்றிருப்பாயாக. க்ஷத்திரியக் கடமைகளின் நடைமுறையின்படியே இந்தப் பூமி உன்னால் வெல்லப்பட்டது. ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, அதை அனுபவிப்பாயாக. என் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதே” என்றார் {வியாசர்}”.(59)
நாரதர் சிருஞ்சயன் உரையாடல்! – சாந்திபர்வம் பகுதி – 29-யுதிஷ்டிரன் அமைதியடையாததைக் கண்ட அர்ஜுனன், கிருஷ்ணனிடம் அவனைத் தேற்றச் சொன்னது; சிருஞ்சயனிடம் நாரதர் உரைத்ததை யுதிஷ்டிரனுக்குச் சொன்னது; மருத்தன், சஹோத்ரன், அங்க மன்னன் பிருஹத்ரதன், சிபி, துஷ்யந்தன், தசரதராமன், பகீரதன், திலீபன், மாந்தாதா, யயாதி, அம்பரீஷன், சசபிந்து, கயன், ரந்திதேவன், சகரன், பிருது ஆகிய பதினாறு மன்னர்களின் கதைகளைச் சுருக்கமாகச் சொன்ன நாரதர்..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னர்களில் முதன்மையானவனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன், பேச்சற்றவனாக அமைதியாக இருந்த போது, பாண்டுவின் மகனான அர்ஜுனன், கிருஷ்ணனிடம் பின்வருமாறு பேசினான்.(1)
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “எதிரிகளை எரிப்பவரான இந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரர்}, உறவினர்களின் (அவர்கள் கொல்லப்பட்டதன்) நிமித்தமாகத் துயரில் எரிகிறார். ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவரைத் தேற்றுவாயாக.(2) ஓ! ஜனார்த்தனா, மீண்டும் நாங்கள் அனைவரும் பேராபத்தில் விழுகிறோம். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அவரது துயரை அகற்றுவதே உனக்குத் தகும்” என்றான்”.(3)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்ம அர்ஜுனனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், தாமரைக் கண்ணையும், மங்கா மகிமை கொண்டவனுமான கோவிந்தன் அம்மன்னனை நோக்கி தன் முகத்தைத் திருப்பினான்.(4) கேசவன் எவ்வழியிலும் யுதிஷ்டிரனால் அலட்சியம் செய்யத்தக்கவனல்ல. தொடக்கக் காலத்திலிருந்தே அர்ஜுனனை விடக் கோவிந்தனே யுதிஷ்டிரனுக்கு அன்புக்குரியவனாக இருந்தான்.(5) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான சௌரி {கிருஷ்ணன்}, சந்தனக்குழம்பால் அலங்கரிக்கப்பட்டவையும், சலவைக்கல்லாலான தூணைப் போலத் தெரிந்தவையுமான மன்னனின் கரங்களைப் பற்றிக் கொண்டு (கேட்பவர் அனைவரின் இதயங்களையும்) மகிழ்விக்கும் வகையில் பேசத் தொடங்கினான்.(6) அழகான பற்களாலும், கண்களாலும் அலங்கரிக்கப்பட்ட அவனது முகமானது, சூரிய உதயத்தின் போது முற்றாக மலர்ந்த தாமரையைப் போல மிகப் பிரகாசமாக ஒளிர்ந்தது.(7)
வாசுதேவன், “ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, உமது உடலை மெலியச் செய்யும் இத்தகு துயரில் ஈடுபடாதீர். இந்தப் போரில் கொல்லப்பட்டவர்களை எக்காரியத்தாலும் திரும்ப அடைய முடியாது.(8) ஓ! மன்னா, இந்தப் பெரும்போரில் வீழ்ந்த க்ஷத்திரியர்கள், ஒருவன் விழித்தெழும்போது மறைந்து போகும் கனவில் அடையப்படும் பொருட்களைப் போன்றவர்களாவர்[1].(9) அவர்கள் அனைவரும், வீரர்களும், போர்க்கள ரத்தினங்களுமாவர். அவர்கள் தங்கள் எதிரிகளை முகமுகமாக நோக்கி விரைந்த போதே வீழ்த்தப்பட்டார்கள். அவர்களில் எவரும், முதுகில் காயங்களுடனோ, தப்பி ஓடும்போதோ கொல்லப்படவில்லை.(10) அவர்கள் அனைவரும் இந்தப் போரில் வீரர்களுடன் மோதி, ஆயுதங்களால் புனிதமடைந்து தங்கள் உயிர்மூச்சுகளை விட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டனர். அவர்களுக்காக வருந்துவது உமக்குத் தகாது.(11) க்ஷத்திரியக் கடமைகளுக்கு அர்ப்பணிப்புடனும், துணிவுடனும், வேதங்களையும் அதன் அங்கங்களையும் சரியாக அறிந்தும் அவர்கள் அனைவரும் வீரர்களால் அடையப்படும் அருள்நிலையை அடைந்துவிட்டனர். உயர் ஆன்மா கொண்டவர்களும், இவ்வுலகில் இருந்து சென்றுவிட்டவர்களுமான பழங்காலத்தின் பூமியின் தலைவர்களைக் குறித்துக் கேட்ட பிறகு அவர்களுக்காக வருந்துவது உமக்குத் தகாது.(12) சிருஞ்சயன் தன் மகனின் {சுவர்ணஷ்டீவினின்} மரணத்தின் நிமித்தமாக ஆழமான துயரில் பீடிக்கப்பட்டிருந்தபோது, அவனுக்கு முன்னிலையில் நடந்த நாரதரின் பழைய உரையாடல் இது தொடர்பானதே.(13)(நாரதர் சொன்னார்), “ஓ! சிருஞ்சயா, இன்பத்திற்கும் துன்பத்திற்கு ஆட்படுபவர்களான, நானும், நீயும், அனைத்து உயிரினங்களும் இறக்கவே போகிறோம். பிறகு கவலைக்கான காரணம் என்ன?(14) (சில) பழங்காலத்து மன்னர்களின் பேரருள் நிலையைச் சொல்கிறேன் கேட்பாயாக. குவிந்த கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! மன்னா, பிறகு நீ உன் துயரைக் கைவிடலாம்.(15) உயர் ஆன்மா கொண்ட அந்தப் பூமியின் தலைவர்களுடைய கதையைக் கேட்டு உன் சோகத்தைத் தணிப்பாயாக. ஓ!, அவர்களின் கதையை விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(16) பழங்காலத்தைச் சேர்ந்த அந்த மன்னர்களின் இனிமைநிறைந்த அழகிய வரலாற்றைக் கேட்பதால், தீய நட்சத்திரங்கள் {தீக்கோள்களின் வினைகள்} தணிவடையச் செய்து அமைதிப்படுத்தப்பட்டு, ஒருவனின் வாழ்நாள் {ஆயுள்} அதிகரிக்கப்படும்.(17)
ஓ! சிருஞ்சயா, அவிக்ஷித்தின் மகனான மருத்தன்[2] என்ற பெயருடைய மன்னன் ஒருவன் இருந்தான். அவனும் மரணத்திற்கு இரையாக வேண்டியிருந்தது. இந்திரன், வருணன், பிருஹஸ்பதி ஆகியோரின் தலைமையிலான தேவர்கள், அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியால் செய்யப்பட்ட விஸ்வஸ்ரீஜ்[3] என்றழைக்கப்படும் வேள்விக்கு வந்தனர். அம்மன்னன் {மருத்தன்}, தேவர்களின் தலைவனான சக்ரனை {இந்திரனை} போருக்கு அறைகூவியழைத்து அவனை வென்றான்.(18,19) கல்விமானான பிருஹஸ்பதி, இந்திரனுக்கு நன்மை செய்ய விரும்பி, மருத்தனின் வேள்வியை நடத்திக் கொடுக்க மறுத்தார். அதன் பேரில், பிருஹஸ்பதியின் தம்பியான சம்வர்த்தர் மன்னனின் வேண்டுகோளை ஏற்றார்[4].(20) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {சிருஞ்சயா}, அம்மன்னனின் {மருத்தனின்} ஆட்சியின் போது, உழாமலேயே பூமியானது பயிர்களை விளைவித்தது; பல்வேறு ஆபரணங்களால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(21) அம்மன்னனின் வேள்வியில், விஸ்வேதேவர்கள் அவை உறுப்பினர்களாக அமர்ந்திருந்தனர், மருத்தர்கள் (உணவு மற்றும் கொடைகளை) விநியோகிப்பவர்களாகச் செயல்பட்டனர், உயர் ஆன்ம சத்யஸ்களும் அங்கே இருந்தனர்.(22) மருத்தனின் அந்த வேள்வியில் மருத்தர்கள் சோமத்தைக் குடித்தனர். மன்னன் {மருத்தன்} அளித்த வேள்விக் கொடைகள், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோரால் கொடுக்கப்பட்டதைவிட (மதிப்பில்) விஞ்சியதாக இருந்தன.(23) ஓ! சிருஞ்சயா, அறத்தகுதி, அறிவு, துறவு, செல்வம் ஆகியவற்றால் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அந்த மன்னனே {மருத்தனே} மரணத்துக்கு இரையானான்; எனவே, உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக} வருந்தாதே.(24)அதிதியின் மகனாகச் சுஹோத்ரன்[5] என்ற பெயரில் மற்றுமொரு மன்னன் இருந்தான். ஓ! சிருஞ்சயா, அவனும் மரணத்திற்கு இரையானதாகவே நாம் கேட்கிறோம். அவனது ஆட்சி காலத்தில், மகவத் {இந்திரன்}, அவனது நாட்டில் ஒரு முழு வருடத்திற்குத் தங்க மழை பொழிந்தான்.(25) அந்த மன்னனைத் தன் தலைவனாக அடைந்த பூமியானவள், (ஏற்கனவே இருந்தது போலப் பெயரில் மட்டுமே அல்லாமல்) உண்மையிலேயே வசுமதியானாள்[6]. அம்மன்னனின் ஆட்சியின் போது இந்திரன் தங்க மழை பொழிந்ததால் ஆறுகளின் ஆமைகள், நண்டுகள், முதலைகள், சுறாக்கள், கடற்பன்றிகள் ஆகினவனவும் தங்கமயமாகின.(26,27) அதிதியின் மகன் {சுஹோத்ரன்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அந்தத் தங்க மீன்கள், சுறாக்கள் மற்றும் ஆமைகளைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தான்.(28) சுஹோத்ரன், பூமியை மறைத்த அந்தப் பரந்த செல்வமான தங்கத்தைத் திரட்டி குருஜாங்கலத்தில் ஒரு வேள்வியைச் செய்து, பிராமணர்களுக்கு அதைக் கொடையாக அளித்தான்.(29) ஓ! சிருஞ்சய, அறத்தகுதி, அறிவு, துறவு, செல்வம் ஆகிய நான்கு பண்புகளிலும் உன்னை விட விஞ்சியிருந்தவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அந்த மன்னனே {சுஹோத்ரனே} மரணத்திற்கு இரையானான்; (எனவே இறந்து போன) உன் மகனுக்காக வருந்தாதே.(30) உன் மகன், வேள்வி எதையும் செய்யவில்லை, ஒருபோதும் கொடையளித்ததில்லை. இதை அறிந்து கொண்டு, துயரத்தில் வீழாமல் உன் மனத்தை அமைதியடையச் செய்வாயாக.ஓ! சிருஞ்சயா, அங்கர்களின் மன்னனான பிருஹத்ரதனும்[7] மரணத்திற்கு இரையானதாக நாம் கேள்விப்படுகிறோம்.(31) அவன் நூறாயிரம் குதிரைகளைக் கொடையாக அளித்தான். அவன் செய்த வேள்வியில் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நூறாயிரம் கன்னிகையரையும் கொடையாக அளித்தான்.(32) அவனால் செய்யப்பட்ட மற்றொரு வேள்வியில், நற்குலத்தில் பிறந்த நூறாயிரம் யானைகளையும் கொடையாகக் கொடுத்தான்.(33) தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் லட்சம் காளைகளுடன் அவற்றுடன் சேர்த்து ஆயிரக்கணக்கான பசுக்களையும் அவன் வேள்விக் கொடைகளாகக் கொடுத்தான்.(34) அந்த அங்க மன்னன் {பிருஹத்ரதன்}, விஷ்ணுபதம் என்றழைக்கப்படும் மலையில் வைத்து தன் வேள்வியைச் செய்து கொண்டிருந்தபோது,(35) இந்திரன் தான் குடித்த சோமத்தாலும், பிராமணர்கள் தாங்கள் பெற்ற கொடைகளாலும் போதையுண்டார்கள். ஓ! ஏகாதிபதி, இந்த மன்னனால் பழங்காலத்தில் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வேள்விகளில்,(36) அவன் அளித்த கொடைகள் தேவர்கள், கந்தர்கள் மற்றும் மனிதர்களை விஞ்சியதாக இருந்தன. அங்கர்களின் அந்த மன்னன், சோமச்சாற்றுடன் தான் செய்த ஏழு வேள்விகளில் அவனால் கொடுக்கப்பட்ட செல்வத்தைப் போலக் கொடுத்த, அல்லது கொடுக்கக்கூடிய எந்த மனிதனும் பிறக்கவோ, பிறக்கப்போவதோ இல்லை[8].(37) ஓ! சிருஞ்சயா, நான்கு பண்புகளினும் உன்னிலும் உயர்ந்தவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அந்தப் பிருஹத்ரதனே மரணத்திற்கு இரையானான்; {எனவே} இறந்து போன உன் மகனுக்காக வருத்தமடையாதே.(38)ஓ! சிருஞ்சயா, உசீநரனின் மகனான சிபியும்[8] மரணத்திற்கு இரையானதாக நாம் கேள்விப்படுகிறோம். தன் கையிலுள்ள தோல் கவசத்தை ஆள்வதைப் போல அந்த மன்னன் மொத்த பூமியையும் ஆண்டான்.(39) அந்த மன்னன் சிபி, ஒவ்வொரு போரிலும் வெற்றியையளித்த ஒரே தேரைச் செலுத்திக் கொண்டு, தன் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் மொத்த உலகையும் எதிரொலிக்கச் செய்து, ஏகாதிபதிகள் அனைவரையும் அடக்கினான்.(40) உசீநரனின் மகனான அந்தச் சிபி, ஒரு வேள்வியில் தன்னிடம் இருந்த காட்டு மற்றும் வீட்டுப் பசுக்கள் மற்றும் குதிரைகள் அனைத்தையும் கொடையாக அளித்தான்(41) ஓ! சிருஞ்சயா, இந்திரனுக்கு இணையான ஆற்றலைக் கொண்ட வீரனும், மன்னர்களில் முதன்மையானவனும், உசீநரனின் மகனுமான அந்தச் சிபி சுமந்ததைப் போல, கடந்த கால, எதிர்கால மன்னர்கள் எவராலும் சுமையைச் சுமக்க முடியாது என்று படைப்பாளனே அவனை {சிபியைக்} குறித்து நினைத்தான். எனவே, எந்த வேள்வியும் செய்யாதவனும், எந்தக் கொடையையும் அளிக்காதவனுமான உன் மகனுக்காக வருந்தாதே.(42,43) உண்மையில், நான்கு பண்புகளிலும் உன்னைவிட மேன்மையானவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அந்தச் சிபியே மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்தாதே.(44)ஓ! சிருஞ்சயா, துஷ்யந்தன் மற்றும் சகுந்தலையின் மகனும், நன்கு நிரப்பப்பட்ட பரந்த கருவூலத்தையும், உயர் ஆன்மாவைக் கொண்டவனுமான பரதனும்[9] மரணத்திற்கு இரையானான் என்று நான் கேள்விப்படுகிறோம்.(45) யமுனையின் கரையில் தேவர்களுக்காக முன்னூறு குதிரைகளையும், சரஸ்வதியின் கரைகளில் இருபதையும், கங்கையின் கரைகளில் பதினான்கையும் அர்ப்பணித்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அம்மன்னன் {பரதன்},(46) பழங்காலத்தில் ஓராயிரம் குதிரை வேள்விகளையும், நூறு ராஜசூய வேள்விகளையும் செய்தவனாவான்.(47) எந்த மனிதனாலும் தனது கரங்களின் வலிமையைப் பயன்படுத்தி ஆகாயத்தில் பறக்க முடியாததைப் போலவே, பூமியின் எந்த மன்னனாலும் பரதனின் பெருஞ்செயல்களைப் போலச் செய்யவே முடியாது.(48) எண்ணற்ற வேள்விப்பீடங்களை நிறுவிய அவன், முனிவர் கண்வருக்கு எண்ணற்ற குதிரைகளையும், விவரிக்க முடியாத அளவுக்குச் செல்வத்தையும் கொடையாக அளித்தான்.(49) ஓ! சிருஞ்சயா, நான்கு பண்புகளிலும் உன்னைவிட மேம்பட்டவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்தாதே.(50)ஓ! சிருஞ்சயா, தசரதனின் மகனான ராமனும்[10] கூட மரணத்திற்கு இரையானதாவே நாம் கேள்விப்படுகிறோம். அவன், தனது குடிமக்களைத் தன் மடியில் பிறந்த மகன்களைப் போலவே எப்போதும் பேணிப் பாதுகாத்தான்.(51) அவனது ஆட்சிப் பகுதிகளில் விதவைகளோ, ஆதரவற்றவர்களோ எவரும் இல்லை. உண்மையில், அந்த ராமன், தன் நாட்டை ஆள்வதில், தன் தந்தையான தசரதனைப் போலவே எப்போதும் செயல்பட்டான்.(52) பருவகாலந்தவறாமல் பொழிந்த மேகங்கள், பயிர்களை அபரிமிதமாக வளரச் செய்தன. அவனது ஆட்சி காலத்தில், அவனது நாட்டில் உணவு எப்போதும் அபரிமிதமாகவே இருந்தது.(53) நீரில் மூழ்கியோ, நெருப்பில் வெந்தோ மரணமேதும் நேரவில்லை. ராமன் ஆண்டவரை, அவனது நாட்டில் எந்த நோயைக் குறித்தும் அச்சமேதும் இருக்கவில்லை.(54) ஒவ்வொரு மனிதனும் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தான். ஒவ்வொரு மனிதனும் ஆயிரம் பிள்ளைகளால் அருளப்பட்டவனாக இருந்தான். ராமனின் ஆட்சி காலத்தில், மனிதர்கள் அனைவரும் கூட்டமாக இருந்தனர், மனிதர்கள் அனைவரும் தங்கள் விருப்பங்களின் கனியை அடைந்தனர்.(55) பெண்கள் ஒருவரோடொருவர் சச்சரவு கொள்ள மாட்டார்கள் எனும்போது ஆண்களைக் குறித்துச் சொல்லும் தேவை என்ன இருக்கிறது? அவனது ஆட்சிக்காலத்தில் அவனது குடிமக்கள் எப்போதும் அறத்தில் அர்ப்பணிப்பு கொண்டோராக இருந்தனர்.(56) ராமன் ஆண்ட நாட்டின் மக்கள் அனைவரும், தங்கள் விருப்பப் பொருட்கள் அனைத்தையும் அடைந்தவர்களாக, மனம் நிறைந்தவர்களாக, அச்சமற்றவர்களாக, விடுதலை கொண்டவர்களாக, உண்மையெனும் நோன்பை நோற்றவர்களாக இருந்தனர்.(57) மரங்கள் எப்போதும் மலர்கள் மற்றும் கனிகளைச் சுமந்தவையாக, எந்த விபத்துகளுக்கும் உட்படாதவையாக இருந்தன. ஒவ்வொரு பசுவும் ஒரு துரோணத்தின் {குடத்தின்} விளிம்பு வரை பாலைக் கொடுத்தன.(58) கடுந்தவங்களை நோற்று பதினான்கு வருடங்கள் காட்டில் வசித்தவனான ராமன், யாவருங் கலந்து கொள்ளக்கூடிய பெரும் ஒளிபொருந்திய பத்து குதிரைவேள்விகளைச் செய்தான்.(59) கரிய நிறத்தவனும், கண்கள் சிவந்தவனும், இளமை கொண்டவனுமான அவன், யானைக்கூட்டத்தின் தலைமை யானையைப் போலத் தெரிந்தான். கால் முட்டிகள் வரை கரங்கள் நீண்டவனும், அழகிய முகம் கொண்டவனுமான அவனது தோள்கள் சிங்கத்தைப் போன்றனவாகவும், அவனது கரங்களின் வலிமை பெரியதாகவும் இருந்தன.(60) அயோத்யையின் அரியணையில் ஏறிய அவன் பதினோராயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.(61) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {ராமனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்தாதே.(62)ஓ! சிருஞ்சயா, மன்னன் பகீரதனும்[11] இறந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அம்மன்னனின் வேள்விகளில் ஒன்றில், தான் குடித்த சோமத்தால் போதையுண்டவனும்,(63) தேவர்களின் தலைவனும், பகனைத் தண்டித்த புகழத்தக்கவனுமான இந்திரன், தன் கரங்களின் வலிமையை வெளிப்படுத்திப் பல்லாயிரக்கணக்கான அசுரர்களை வென்றான்.(64) மன்னன் பகீரதன், தான் செய்த வேள்விகளில் ஒன்றில், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பத்து லட்சம் கன்னிகையரைக் கொடையளித்தான்.(65) அந்தக் கன்னியர் ஒவ்வொருவரும் ஒரு தேரில் அமர்ந்திருந்தனர், அந்த ஒவ்வொரு தேரிலும் நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு தேருடனும், முதன்மையான இனத்தைச் சேர்ந்தனவும், தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான நூறு யானைகளும் இருந்தன.(66) ஒவ்வொரு யானையின் பின்பும் ஆயிரம் குதிரைகளும், ஒவ்வொரு குதிரைகளுக்குப் பின்னும் ஆயிரம் பசுக்களும், ஒவ்வொரு பசுவின் பின்னும் ஆயிரம் செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் இருந்தன.(67) (முன்பிருந்தே) பாகீரதி என்று பெயரிடப்பட்ட (நதிதேவியான) கங்கை, (தன் ஓடையின்) அருகே வசித்து வந்த இந்த மன்னனின் மடியில் அமர்ந்ததன் விளைவால் ஊர்வசி என்றும் அழைக்கப்பட்டாள்[12].(68) மூவழிப்பாதை கொண்ட கங்கை[13], இக்ஷவாகு குலத்தைச் சேர்ந்தவனும், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்வதில் எப்போதும் ஈடுபடும் ஏகாதிபதியுமான பகீரதனுக்கு மகளாவதை ஏற்றுக் கொண்டாள்.(69) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளைப் பொறுத்தவரை உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே மரணத்திற்கு இரையானான் எனும்போது, உன் மகனுக்காக நீ வருந்தாதே.(70)ஓ! சிருஞ்சயா, உயர் ஆன்ம திலீபனும்[14] மரணத்திற்கு இரையானான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அவனது எண்ணற்ற செயல்களை உரைப்பதற்குப் பிராமணர்கள் விரும்புவார்கள்.(71) அந்த மன்னன் {திலீனன்} தன்னுடைய பெரும் வேள்விகள் ஒன்றில், செல்வம் நிறைந்த மொத்த உலகத்தையும் முழு இதயத்துடன் பிராமணர்களுக்குக் கொடையாள அளித்தான்.(72) அவன் செய்த ஒவ்வொரு வேள்வியிலும், தலைமைப் புரோகிதர் தன் வேள்விக்கூலியாகத் தங்கத்தாலான ஆயிரம் யானைகளைப் பெற்றார்.(73) அவனுடைய வேள்விகளில் ஒன்றில், (பலிகளுக்காக நிறுவப்பட்ட) கம்பம் தங்கத்தால் செய்யப்பட்டு மிகவும் அழகாக இருந்தது. தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடமைகளை ஆற்றியவர்களும், சக்ரனைத் தங்கள் தலைவனாகக் கொண்டவர்களுமான தேவர்கள், அந்த மன்னனின் {திலீபனின்} பாதுகாப்பையே எப்போதும் நாடினார்கள்.(74) பெரும் பிரகாசம் கொண்டதும், வளையத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தத் தங்கக் கம்பத்தில், ஆறாயிரம் தேவர்களும் கந்தர்வர்களும் மகிழ்ச்சியில் ஆடினர், அவர்களுக்கு மத்தியில் விஸ்வாவசு ஏழு சுவரங்களின் விதிகளின் படி வீணையை இசைத்துக் கொண்டிருந்தான். விஸ்வாசுவுடைய இசையின் தன்மையானது, ஒவ்வொரு உயிரினமும் (அஃது எங்கிருந்தாலும்) அந்தப் பெரும் கந்தர்வன் {விஸ்வாவசு} தனக்காக மட்டுமே இசைக்கிறான் என்று எண்ணும் அளவுக்கு இருந்தது.(75,76) மன்னன் திலீபனின் சாதனையே வேறு எந்த ஏகாதிபதியாலும் செய்ய முடியாது. தங்க அம்பாரிகளால் ஆலங்கரிக்கப்பட்டு மதங்கொண்டிருந்த அந்த மன்னனின் யானைகள், சாலையில் படுத்துக் கிடந்தன[15].(77) பேச்சில் எப்போதும் உண்மை நிறைந்தவனும், நூறு அனந்தங்களின் சக்திக்கு இணையான நூறு பகைவர்களைத் தாங்கக் கூடிய வில்லைக் கொண்டனும், உயர் ஆன்மாவுமான மன்னன் திலீபனைக் கண்டவர்கள் சொர்க்கத்தை அடைந்தனர்.(78) வேதமோதும் குரல், விற்களின் நாணொலி, கொடுக்கப்படட்டும் என்ற ஆணை ஆகிய மூன்று ஒலிகளும் திலீபனின் வசிப்பிடத்தில் எப்போதும் ஓய்ந்ததில்லை.(79) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {திலீபனே} மரணத்துக்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(80)ஓ! சிருஞ்சயா, யுவனாஸ்வனின் மகனான மாந்தாதாவும்[16] மரணத்திற்கு இரையானான் என்று நாம் கேள்விப்படுகிறோம். மருத்தர்கள் என்ற பெயரைக் கொண்ட தேவர்கள், அந்தப் பிள்ளையை அவனது தந்தையின் விலாவில் இருந்து பிரித்தெடுத்தனர்.(81) மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட தெளிந்த நெய்யில் (தாயார் குடிக்கவேண்டியதைத் தவறுதலாகத் தந்தை குடித்ததால்) உதித்த மாந்தாதா, உயர் ஆன்மா யுவனாஸ்வனின் வயிற்றில் பிறந்தான். பெரும் செழிப்பைக் கொண்டவனான மன்னன் மாந்தாதா மூவுலகங்களையும் கைப்பற்றினான்.(82) தந்தையின் மடியில் கிடக்கும் தெய்வீக அழகுடைய பிள்ளையைக் கண்ட தேவர்கள், ஒருவருக்கொருவர், “இந்தப் பிள்ளை யாரிடம் பால் குடிக்கும்?” என்று கேட்டனர்.(83) அவனை {மாந்தாதாவை} அணுகிய இந்திரன், “என்னிடமே குடிப்பான்” என்றான். இந்தச் சந்தர்ப்பத்திலிருந்து அந்தத் தேவர்களின் தலைவன் அந்தப் பிள்ளையை மாந்தாதா[17] என்ற பெயரில் அழைக்கத் தொடங்கினான்.(84) யுவனாஸ்வனின் உயர் ஆன்மப் பிள்ளைக்கான ஊட்டச்சத்திற்காக, இந்திரன் தன் விரலை அவனது {மந்தாதாவின்} வாயில் வைத்ததும், அது பாலூற்றைப் பொழிந்தது.(85) இந்திரனின் விரலைப் பருகிய அவன் நூறு நாட்களில் (இளமை பருவமடைந்து) வளர்ந்துவிட்டான். பனிரெண்டு நாட்களில் அவன் பனிரெண்டு வயதுடையவனைப் போல வளர்ந்தான்.(86) உயர் ஆன்மா கொண்டவனும், ஆறவோனும், துணிச்சல்மிக்கவனும், போராற்றலில் இந்திரனுக்கே ஒப்பானவனுமான அந்த மன்னனின் ஆளுகைக்குள் ஒரே நாளில் மொத்த பூமியும் வந்தது.(87) மன்னன் அங்காரன், மருத்தன், அசிதன், கயன் அங்கர்களின் மன்னனான பிருஹத்ரதன் ஆகியோரை அவன் வென்றான்[18].(88) யுவனாஸ்வனின் மகன் {மாந்தாதா} அங்காரனோடு போரிட்ட போது, அவனது வில்லின் நாணொலியால் வானமே உடையப் போகிறது எனத் தேவர்கள் நினைத்தனர்.(89) சூரியன் உதிக்கும் இடத்தில் இருந்து அவன் மறையும் இடம் வரை உள்ள மொத்த பூமியும் மாந்தாதாவின் நிலம் என்று சொல்லப்படுகிறது.(90) நூற்றுக்கணக்கான குதிரை வேள்விகளையும், ராஜசூய வேள்விகளையும் செய்த அவன், பிரமணர்களுக்கு பல ரோகித மீன்களைக் கொடையாகக் கொடுத்தான்.(91) அந்த மீன்கள் ஒவ்வொன்றும் பத்து யோஜனை நீளத்தையும், ஒரு யோஜனை அகலத்தையும் கொண்டிருந்தன. பிராமணர்களை நிறைவு செய்த பிறகு எஞ்சியவை பிற வகையினரால் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளப்பட்டன[19].(92) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {மாந்தாதாவே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(93)ஓ! சிருஞ்சயா, நகுஷனின் மகனான யயாதியும்[20] மரணத்திற்கு இரையானான் என்று நாம் கேள்விப்படுகிறோம். கடல்களுடன் கூடிய மொத்த உலகையும் அடக்கிய அவன்,(94) உலகம் முழுவதும் பயணித்து, மரத்துண்டை வீசியெறிந்தால் செல்லுத் தூரத்தை இடைவெளியாகக் கொண்டு, அடுத்தடுத்த வேள்விப்பீடங்களால் அதை {பூமியை} அலங்கரித்தான். உண்மையில், அவன் இப்படி (தன் வழியில் பீடங்களை நிறுவி) பெரும் வேள்விகளைச் செய்தே கடலின் கரையை அடைந்துவிட்டான்[21].(95) ஆயிரம் வேள்விகளையும், நூறு வாஜபேயங்களையும் செய்த அவன் {யயாதி}, முதன்மையான பிராமணர்களை மூன்று தங்க மலைகளால் நிறைவு செய்தான்.(96) நகுஷனின் மகனான யயாதி, போரில் முறையாக அணிவகுத்து வந்த பல தைத்தியர்களையும், தானவர்களையும் கொன்று, மொத்த பூமியையும் (தன் பிள்ளைகளுக்குப்) பிரித்துக் கொடுத்தான்.(97) இறுதியாக யது மற்றும் திரஹ்யு ஆகியோரின் தலைமையிலான தன் மற்ற மகன்களை அலட்சியம் செய்து, (தன் இளைய மகனான) பூருவைத் தன் அரியணையில் அமர்த்திவிட்டு, தன் மனைவியின் துணையுடன் கானகம் புகுந்தான்.(98) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {யயாதியே} மரணத்துக்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(99)ஓ! சிருஞ்சயா, நாபாகனின் மகனான அம்பரீஷனும்[22] மரணத்திற்கு இரையானான் என்றே நாம் கேள்விப்படுகிறோம். மன்னர்களில் முதன்மையான அந்த (பூமியின்) பாதுகாவலனை {அம்பரீஷனை}, அவனது குடிமக்கள் அறத்தின் வடிவமாகக் கருதினர்.(100) அந்த ஏகாதிபதி, தனது வேள்விகளில் ஒன்றில், ஆயிரக்கணக்கான வேள்விகளைச் செய்தவர்களான பத்து லட்சம் மன்னர்களைப் பிராமணர்களுக்காகக் காத்திருக்கச் செய்தான் {அம்மன்னர்களைப் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்ய வைத்தான்}.(101) பக்திமான்கள், “அத்தகு சாதனைகள் கடந்த காலத்திலும் நடக்கவில்லை, எதிர்காலத்திலும் நடக்காது” என்று சொல்லி நாபாகனின் மகனான அம்பரீஷனைப் புகழ்ந்தார்கள்.(102) (அம்பரீஷனின் ஆணைக்கிணங்க அவனது வேள்விகளில் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்த) நூற்றுக்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரத்திற்கும் ஆயிரக்கணக்கான மன்னர்கள், குதிரை வேள்வியின் கனிகளை (அந்த அம்பரீஷனின் தகுதிகளின் {புண்ணியங்களின்} மூலம்) அடைந்து, தென்பாதையில் (ஒளியும் அருளும் நிறைந்த உலகங்களுக்கு) தங்கள் தலைவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(103) ஓ! சிருஞ்சயா, நான் முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {அம்பரீஷனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(104)ஓ! சிருஞ்சயா, சித்திரரதனின் மகனான சசபிந்துவும்[23] மரணத்திற்கு இரையானான் என்றே நாம் கேள்விப்படுகிறோம். அந்த உயர் ஆன்ம மன்னனுக்கு {சசபிந்துவுக்கு}, நூறாயிரம் {ஒரு லட்சம்} மனைவியரும்,(105) பத்து லட்சம் மகன்களும் இருந்தனர். தங்கக் கவசம் பூண்டவர்களான அவர்கள் அனைவரும் சிறந்த வில்லாளிகளாக இருந்தனர்.(106) அந்த இளவரசர்களில் ஒவ்வொருவரும் நூறு இளவரசிகளை மணந்தனர், அவர்களில் ஒவ்வொரு இளவரசியும், நூறு யானைகளைக் கொண்டு வந்தனர். அந்த யானைகள் ஒவ்வொன்றுடனும் நூறு தேர்கள் இருந்தன.(107) தேர்கள் ஒவ்வொன்றுடனும் நல்ல இனத்தில் பிறந்தவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான நூறு குதிரைகள் இருந்தன. குதிரைகள் ஒவ்வொன்றுடனும் நூறு பசுக்கள் இருந்தன, பசுக்கள் ஒவ்வொன்றுடனும் நூறு வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும் இருந்தன.(108) ஓ! ஏகாதிபதி {சிருஞ்சயா}, இந்தக் கணக்கிலடங்கா செல்வங்களையும் அந்தச் சசபிந்து, ஒரு குதிரை வேள்வியில் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்துவிட்டான்.(109) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளிலும் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {சசபிந்துவே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(110)ஓ! சிருஞ்சயா, அமூர்த்தரயசின் {அமார்த்தரயஸ், அதூர்த்தரஜஸின்} மகனான கயனும்[24] மரணத்திற்கு இரையானதாக நாம் கேள்விப்படுகிறோம். வேள்வியில் எஞ்சியவற்றை உண்டே அம்மன்னன் நூறு வருடங்கள் வாழ்ந்தான்.(111) (அத்தகு அர்ப்பணிப்பில் நிறைவு கொண்ட) அக்னி, அவனுக்கு வரங்களை அளிக்க விரும்பினான். கயன், “தடையில்லாமல் நான் கொடுத்து வந்தாலும் என் செல்வம் வற்றாததாக இருக்கட்டும். அறத்தின் மீது நான் கொண்ட மதிப்பு எப்போதும் நீடித்திருக்கட்டும்[24].(112) ஓ! வேள்விக் காணிக்கைகளை உண்பவனே, உன் அருளால் என் இதயம் எப்போதும் உண்மையில் திளைக்கட்டும்” என்ற வரங்களைக் கேட்டான். அந்த விருப்பங்கள் அனைத்தையும் மன்னன் கயன் அக்னியிடம் இருந்து அடைந்தான் என நாம் கேள்விப்படுகிறோம்.(113) கயன், புதுநிலவு {அமாவாசை} நாட்களிலும், முழு நிலவு {பௌர்ணமி} நாட்களிலும், ஒவ்வொரு நான்காம் மாதத்திலும், குதிரை வேள்விகளை ஆயிரம் வருடங்களுக்கு மீண்டும் மீண்டும் செய்தான்.(114) இந்தக் காலத்தில் அவன், (ஒவ்வொரு வேள்வி நிறைவிலும்) எழுந்து, நூறாயிரம் {ஒரு லட்சம்} பசுக்களையும், நூற்றுக்கணக்கான கோவேறு கழுதைகளையும் (பிராமணர்களுக்குக்) கொடுத்தான்.(115) அந்த மனிதர்களில் காளை {கயன்}, தேவர்களைச் சோமத்தாலும், பிராமணர்களைச் செல்வத்தாலும், பித்ருக்களைச் சுவாதாக்களாலும், பெண்களை அவர்களுடைய விருப்பங்களை அனைத்தையும் நிறைவேற்றுவதாலும் நிறைவு கொள்ளச் செய்தான்.(116) மன்னன் கயன், தனது பெரும் குதிரை வேள்வியில், நூறு முழம் நீளமும், ஐம்பது முழம் அகலமும் கொண்ட தங்கக் களம் {பொற்பூமி} ஒன்றை அமைத்து, அதை வேள்விக்கூலியாகக் கொடையளித்தான்.(117) ஓ மன்னா {சிருஞ்சயா}, மனிதர்களில் முதன்மையானவனும், அமூர்த்தரயசிஸ் மகனுமான கயன், கங்கையாற்றின் மணற்பருக்கைகளின் அளவுக்குப் பல பசுக்களைக் கொடையாக அளித்தான்.(118) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே {கயனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன்மகனைக் குறித்து நீ வருந்துவது தகாது.(119)ஓ! சிருஞ்சயா, சங்கிருதியின் மகனான ரந்திதேவனும்[25] மரணத்திற்கு இரையானான் என்று நாம் கேள்விப்படுகிறோம். கடந்தவத்தில் ஈடுபட்டு, சக்ரனைப் பெருமதிப்புடன் வழிபட்ட அவன், அவனிடம் இருந்து வரங்களைப் பெற வேண்டி,(120) “நாங்கள் அபரிமிதமான உணவையும், அபரிமிதமான விருந்தினர்களையம் பெற வேண்டும். என் நம்பிக்கை சிதைவடையாமல் இருக்க வேண்டும். எந்த மனிதனிடம் இருந்தும் நாங்கள் எந்தப் பொருளையும் கேட்காமல் இருக்க வேண்டும்” என்று சொன்னான்.(121) உயர் ஆன்மா கொண்டவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனும், பெரும் புகழைக் கொண்டவனுமான ரந்திதேவனின் வேள்வியில் கொல்லப்படும் நாட்டு மற்றும் காட்டு விலங்குகள் தாமாகவே அவனிடம் வந்தன.(122) (அவனது வேள்விகளில் கொல்லப்படும்) வலிங்குகளின் தோல்களில் இருந்து பாயும் சுரப்பி நீரில் உண்டானதே சர்மண்வதி என்ற பெயரில் அறியப்பட்டு இந்த நாள் வரை கொண்டாடப்பட்டு வரும் ஆறாகும்.(123) மன்னன் ரந்திதேவன் தனிப்பட்ட அறைகளில் வைத்து பிராமணர்களுக்குக் கொடையளித்தான். மன்னன், “நான் உமக்கு நூறு நிஷ்கங்கள் கொடுக்கிறேன். நான் உமக்கு நூறு நிஷ்கங்கள் கொடுக்கிறேன்” என்று சொன்ன போது, (கொடுக்கப்பட்டதை ஏற்காமல் மறுக்கும் வகையில்) ஒலியெழுப்பினர்.(124) எனினும், மன்னன், “நான் உமக்கு ஆயிரம் நிஷ்கங்கள்” கொடுக்கிறேன் என்று சொன்ன போது அந்தக் கொடைகள் அனைத்தும் ஏற்கப்பட்டன[26]. ரந்திதேவனின் அரண்மனையில் உணவையும், பிற பொருட்களையும் கொள்ள இருந்த பாத்திரங்கள் மற்றும் தட்டுகள் அனைத்தும்,(125) நீர்க்கலன்கள், குடங்கள், சட்டிகள், தட்டுகள், கோப்பைகள் ஆகியன அனைத்தும் தங்கத்தாலானவையாக இருந்தன.(126) ரந்திதேவனின் வசிப்பிடத்தில் ஓரிரவில் தங்கும் விருந்தினர்களுக்காக இருபதாயிரத்து நூறு பசுக்கள் கொல்லப்பட்டன[27].(127) இருப்பினும் காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட சமையற்கலைஞர்கள், சில சமயங்களில், “குழம்பு நிறைய இருக்கிறது. விரும்பிய அளவு உண்ணுங்கள். ஆனால் முன்பு போல் இன்று அதிக இறைச்சி இல்லை” என்று (இரவு உணவு உண்பதற்காக அமர்பவர்களிடம்) அறிவிப்பார்கள்[28].(128) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைக் காட்டிலும் தூய்மையானவனுமான அவனே {ரந்திதேவனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(129)ஓ! சிருஞ்சயா, உயர் ஆன்ம சகரனும்[29] மரணத்திற்கு இரையானான் என்றே நாம் கேள்விப்படுகிறோம். இக்ஷவாகு குலத்தைச் சேர்ந்தவனான அவன் மனிதர்களில் புலியாகவும், மனித சக்திக்கு மீறிய ஆற்றலைக் கொண்டவனாகவும் இருந்தான்.(130) கூதிர்கால மேகமற்ற வானில் சந்திரனுக்காகக் காத்திருக்கும் கூட்டங்கூட்டமான நட்சத்திரங்களைப் போல அவனுக்குப் பின்னால் அறுபதாயிரம் {60000} மகன்கள் நடப்பார்கள்.(131) அவனது ஆட்சி பூமி முழுவதிலும் பரந்திருந்தது. ஆயிரம் குதிரைவேள்விகளைச் செய்து அவனும் தேவர்களை மனநிறைவு கொள்ளச் செய்தான்.(132) தங்கத்தாலான தூண்களைக் கொண்டவையும், (பிற பகுதிகள் அனைத்தும்) முழுக்க முழுக்க மதிப்புமிக்க உலோகங்களால் ஆனவையும், விலைமதிப்புமிக்கப் படுக்கைகள், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்ட அழகிய மங்கையரின் பெருங்கூட்டம் மற்றும் இன்னும் பிற வகை விலைமதிப்புமிக்கப் பல்வேறு பொருட்கள் ஆகியவை நிறைந்தவையும், அரண்மனை போன்றவையுமான மாளிகைகளைத் தகுந்த பிராமணர்களுக்குக் கொடையாக அளித்தான். அவனது ஆணையின் பேரில் அந்தப் பிராமணர்கள் தங்களுக்கு அந்தக் கொடைகளைப் பகிர்ந்து கொண்டனர்.(133,134) கோபத்தால் அந்த மன்னன் பூமியைத் தோண்டிய போது, அவள் தன் மார்பில் பெருங்கடலை அடைந்தாள். அதன் காரணமாகவே பெருங்கடலானது சாகரம் என்று அவனது பெயரில் அழைக்கப்படுகிறது.(135) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைக் காட்டிலும் தூய்மையானவனுமான அவனே {சகரனே} மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்து போன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது.(136)ஓ! சிருஞ்சயா, வேனனின் மகனான பிருதுவும்[30] மரணத்திற்கு இரையானான் என்றே நாம் கேள்விப்படுகிறோம். ஒரு பெருங்காட்டில் ஒன்றாகக் கூடிய பெரும் முனிவர்கள், அவனைப் பூமியின் அரசுரிமையில் நிறுவினார்கள்.(137) மனித குலம் அனைத்தையும் முன்னேறச் செய்வான் என்ற எண்ணத்தினாலாயே (முன்னேறுபவன் என்ற பொருளில்) பிருது என்று அவன் அழைக்கப்பட்டான். மேலும் காயங்களில் (க்ஷதத்தில் {ஆபத்துகளில்}) இருந்து மக்களை அவன் பாதுகாத்த காரணத்தால் (காயங்களில் இருந்து பாதுகாப்பவன் என்ற பொருளில்) க்ஷத்திரியன் என்றும் அழைக்கப்பட்டான்.(138) வேனனின் மகனான பிருதுவைக் கண்டு, பூமியின் உயிரினங்கள் அனைத்தும், “நாங்கள் அன்பால் இவனுடன் பிணைக்கப்பட்டிருக்கிறோம்” என்றன. (உயிரினங்கள் அனைத்திடமும்) பாசப் பிணைப்புக் கொண்ட இந்தச் சூழ்நிலையிலிருந்து, அவன் “ராஜா” என்று அழைக்கபட்டான்[31].(139) அவன் ஆண்ட போது, பூமியானது உழப்படாமலேயே பயிர்களை விளைவித்தது, மரங்கள் கொண்ட இலைகள் அனைத்தும் தேனைச் சுமந்திருந்தன; ஒவ்வொரு பசுவும் கலன் நிறைந்த பாலைக் கொடுத்தன.(140) மனிதர்கள் அனைவரும் குறையற்ற நலம் கொண்டவர்களாகவும், விருப்பங்கள் அனைத்தம் நிறைவேறியவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு எதனிடமிருந்தும் எந்த அச்சமும் ஏற்படவில்லை. தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல அவர்கள் வெளிகளிலும் வீடுகளிலும் வாழ்ந்தனர்.(141) பிருது கடலில் செல்ல விரும்பிய போது, அதன் நீர் திடமான நிலையை அடைந்தது. அவன் ஆறுகளைக் கடக்கும்போது, அவை ஒருபோதும் பெருகாமல் அமைதியாக இருந்தன. அவனுடைய தேரின் கொடிக்கம்பம் (எந்தத் தடையாலும் தடுக்கப்படாமல்) எங்கும் சுதந்திரமாக நகர்ந்தது.(142) மன்னன் பிருது, தனது மகத்தான குதிரை வேள்விகள் ஒன்றில், மூன்று நல்வங்கள்[32] அளவுள்ள இருபத்தோரு தங்க மலைகளைப் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்தான்.(143) ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கியப் பண்புகளில் உன்னை விஞ்சியவனும், உன் மகனைவிடத் தூய்மையானவனுமான அவனே மரணத்திற்கு இரையானான் எனும்போது, இறந்துபோன உன் மகனுக்காக நீ வருந்துவது தகாது[33].(144)ஓ! சிருஞ்சயா, நீ எதைக் குறித்து அமைதியாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறாய்? ஓ! மன்னா, என் வார்த்தைகளை நீ கேட்பதாக எனக்குத் தெரியவில்லை. இதை நீ கேட்கவில்லையென்றால், இந்த எனது உரையானது, மரணத்தருவாயில் ஒருவனுக்குக் கொடுக்கப்படும் மருந்து, அல்லது உணவைப் போன்று கனியற்ற வீரகாவியமாகவே ஆகும்” {என்றார் நாரதர்}.(145)
சிருஞ்சயன் {நாரதரிடம்}, “ஓ! நாரதரே, சிறந்த செய்திகளைக் கொண்டதும், மலர்களின் மாலையைப் போன்று நறுமணமிக்கதும், தகுதி வாய்ந்த செயல்களைச் செய்தவர்களும், பெரும்புகழையுடையவர்களுமான உயர் ஆன்ம அரச முனிகளின் நடத்தை சம்பந்தமானதும், நிச்சயம் துயரை அகற்றவல்லதுமான இந்த உமது உரையைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.(146) ஓ! பெரும் தவசியே, உமது உரை கனியற்ற வீர காவியம் கிடையாது. நீர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நான் துயரில் இருந்து விடுபட்டேன். அமுதைப் பருகுவதால் தாகம் தணியாதவனைப் போல உமது வார்த்தைகளில் நான் தாகம் தணியவில்லை.(147) ஓ! மெய்ப்பார்வை கொண்டவரே, ஓ! தலைவா, மகனின் மரணத்தால் துயரில் எரிந்து கொண்டிருக்கும் என்னிடம் நீர் கருணை காட்ட விரும்பினால், உமது அருளின் மூலம் அந்த மகன் நிச்சயம் மீண்டு, மீண்டும் என்னுடன் (என் வாழ்வில்) கலப்பான்” என்றான்.(148)
நாரதர் {சிருஞ்சயனிடம்}, “பர்வதரால் உனக்கு அளிக்கப்பட்டவனும், உயிரை இழந்தவனும், சுவர்ணஷ்டீவின் என்ற பெயரைக் கொண்டவனுமான உன் மகனை நான் உனக்குக் கொடுப்பேன். தங்கத்தின் காந்தியைக் கொண்ட அந்தப் பிள்ளை ஆயிரம் வருடங்கள் வாழ்வான்” என்றார்”.(149)
நாரதரின் திருமணமும்! சாபங்களும்!! – சாந்திபர்வம் பகுதி – 30-சுவர்ணஷ்டீவினின் கதையைச் சொல்லுமாறு கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷ்டிரன்; சிருஞ்சயனை அடைந்த நாரதரும், பர்வதரும்; தன் மகள் சுகுமாரியை அவர்களின் பணிவிடைக்கு நியமித்த சிருஞ்சயன்; சுகுமாரியிடம் மையல் கொண்ட நாரதர்; உடன்படிக்கையை மீறியதாக நாரதரைச் சபித்த பர்வதர்; பதிலுக்குச் சபித்த நாரதர்; இருவரும் சாபங்களை விலக்கிக் கொண்டது…
யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, “சிருஞ்சயனின் மகன் எவ்வாறு சுவர்ணஷ்டீவின் ஆனான்? பர்வதர் அந்தப் பிள்ளையைச் சிருஞ்சயனுக்கு ஏன் கொடுத்தார்? அவன் ஏன் இறந்தான்?(1) அந்தக் காலத்தில் மனிதர்களின் வாழ்நாள் ஆயிரம் {1,000} வருடங்கள் என நீண்டிருந்த போது, சிருஞ்சயனின் மகன் ஏன் குழந்தை பருவத்திலேயே இறந்தான்?(2) அல்லது அவன் பெயரளவில் மட்டுமே சுவர்ணஷ்டீவினாக இருந்தானா? அவன் எவ்வாறு அப்படி அழைக்கப்படலானான்? இவை யாவையும் அறிய நான் விரும்புகிறேன்” என்று கேட்டான்.(3)
கிருஷ்ணன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, “நடந்தவற்றை நடந்தவாறே நான் உமக்குச் சொல்கிறேன். நாரதர் மற்றும் பர்வதர் என்று உலகில் முதன்மையான இரு முனிவர்கள் இருந்தனர்.(4) நாரதர் தாய்மாமனாவார், பர்வதர் அவரது சகோதரியின் மகனாவார். ஓ! மன்னா, பழங்காலத்தில் மாமன் நாரதரும், மருமகன் பர்வதரும் தெளிந்த நெய்யையும், அரிசியையும் உண்பதற்காகவும், உலகில் இன்பச் சுற்றுலா செல்லவும் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் சொர்க்கத்தில் இருந்து புறப்பட்டனர்.(5,6) தவத்தகுதி கொண்ட அவர்கள் இருவரும் மனிதர்களின் உணவை உண்டு பூமியில் திரிந்து வந்தனர்.(7) மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாகவும், ஒருவருக்கொருவர் அன்புடையவர்களாகவும் இருந்த அவர்கள், நன்மையோ, தீமையோ அதை {மனத்தில் உதிக்கும் எதையும்} ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதென்றும், அவர்களில் யாராவது ஒருவர் அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டால், அவர் மற்றவரின் சாபத்திற்கு ஆளாவார் என்றும் அவர்களுக்குள் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.(8)
உலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவர்களும், இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டவர்களுமான அந்தப் பெரும் முனிவர்கள் இருவரும், சுவித்யன் மகனான மன்னன் சிருஞ்சயனிடம் சென்று, அவனிடம்,(9) “உன் நன்மைக்காக நாங்கள் இருவரும் உன்னுடன் சில நாட்கள் வசிக்கப் போகிறோம். ஓ! பூமியின் தலைவா, எங்கள் தேவைகள் அனைத்தையும் முறையாகக் கவனிப்பாயாக” என்றனர். “அவ்வாறே ஆகட்டும்” என்று சொன்ன மன்னன் {சிருஞ்சயன்} நல்ல விருந்தோம்பலுடன் அவர்களைக் கவனித்துக் கொண்டான்.(10) சில காலம் கழித்து ஒரு நாள், மகிழ்ச்சியால் நிறைந்திருந்த மன்னன் {சிருஞ்சயன்}, அழகிய நிறம் கொண்ட தன் மகளை {சுகுமாரியை} அந்தச் சிறப்புமிக்கத் தவசிகளிடம் அறிமுகப்படுத்தி, “என் மகளான இவள் உங்கள் இருவருக்கும் பணிவிடை செய்வாள்.(11) தாமரை இதழ்களைப் போன்ற பிரகாசம் கொண்டவளும், அழகியும், களங்கமற்ற அங்கங்கள் கொண்டவளும், இனிய பண்புகளைக் கொண்டவளுமான இவள் சுகுமாரி என்ற பெயரால் அழைக்கப்படுகிறாள்” என்றான். அம்முனிவர்கள் “மிக்க நன்று” என்று மறுமொழி கூறினார்கள். மன்னன் தன் மகளிடம் {சுகுமாரியிடம்}, “ஓ! குழந்தாய், நீ தேவர்களையோ, உனது தந்தையையோ எவ்வாறு கவனிப்பாயோ அவ்வாறே இந்தப் பிராமணர்கள் இருவரையும் கவனிப்பாயாக” என்றான்.(12,13)
அறம்சார்ந்த அந்த இளவரசி {சுகுமாரி}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி தன் தந்தையின் கட்டளைக்கு இணங்கி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அவர்களைக் கவனித்துவரத் தொடங்கினாள்.(14) கடமையுணர்வு நிறைந்த அவளது தொண்டுகளும், அவளது {சுகுமாரியின்} ஒப்பற்ற அழகும், {காமமெனும்} இளம் நெருப்பால், நாரதரை வெகு விரைவில் அவளிடம் ஈர்த்தன.(15) அந்தச் சிறப்புமிக்கத் தவசியின் இதயத்தில் அந்த இளம் உணர்ச்சி {காமம்}, வளர்பிறை நிலவைப் போல வளரத் தொடங்கியது.(16) எனினும், அறம்சார்ந்த நாரதர், அந்த எரியும் பற்றைத் தன் சகோதரியின் மகனான உயர் ஆன்ம பர்வதரிடம் வெட்கத்தால் சொல்லவில்லை.(17) பர்வதரும் தன் தவச் சக்தியாலும், சில அறிகுறிகளாலும் அனைத்தையும் அறிந்தார். சினத்தால் தூண்டப்பட்ட அவர் {பர்வதர்}, காதலால் பீடிக்கப்பட்டிருக்கும் நாரதரைச் சபிக்கத் தீர்மானித்தார்.(18)
அவர் {பர்வதர், நாரதரிடம்}, “நன்மையோ, தீமையோ அதை {மனத்தில் உதிக்கும் எதையும்} ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதென்ற உமது உடன்படிக்கையே நீர் மீறியிருக்கிறீர். ஓ! பிராமணரே {நாரதரே}, இதன் காரணமாக நான் உம்மைச் சபிக்கப் போகிறேன்.(19,20) கன்னிகையான சுகுமாரியின் அழகால் உமது இதயம் துளைக்கப்பட்டிருக்கிறது என்பதை முன்பே எனக்கு நீர் சொல்லவில்லை. இதன் காரணமாகவே நான் உம்மைச் சபிக்கப் போகிறேன்.(21) நீர் ஒரு பிரம்மச்சாரி. எனது ஆசானாகவும் இருக்கிறது. நீர் ஒரு பிராமணரும், தவசியும் கூட. இருப்பினும் என்னுடன் கொண்ட உடன்படிக்கையை நீர் மீறியிருக்கிறீர்.(22) இதன்காரணமாகச் சினத்தில் நிறையும் நான் உம்மைச் சபிக்கப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பீராக. இந்தச் சுகுமாரி உமது மனைவியாவாள் என்பதில் ஐயமில்லை.(23) எனினும், ஓ! பலமிக்கவரே {நாரதரே}, உமது திருமணத்திற்குப் பிறகு உம்மை ஒரு குரங்காக மக்கள் அனைவரும் காண்பார்கள். உமது உண்மை பண்புகள் மறைந்ததால் அனைவருக்கும் குரங்கே தெரியும்” என்றார் {பர்வதர்}.(24)
அவரது {பர்வதரது} இந்த வார்த்தைகளைக் கேட்ட அவரது மாமன் நாரதர், கோபத்தால் நிறைந்து, தமது மருமகனான பர்வதரைப் பதிலுக்குச் சபித்தார். {நாரதர்}, “தவத்தகுதி, பிரம்மச்சரியம், உண்மை, தற்கட்டுப்பாடு, ஆகியவற்றைக் கொண்டவனாக இருந்தும், அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவனாக இருந்தும், உன்னால் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது” என்றார்.(26)
மதங்கொண்ட இரு யானைகளைப் போலச் சினத்தால் நிறைந்தும், பழிதீர்க்க விரும்பியும் அவர்கள் இவ்வாறு ஒருவரையொருவர் சபித்துக் கொண்டனர்.(27). ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, அந்த நேரத்தில் இருந்து உயர் ஆன்ம பர்வதர், தமது சக்திக்குத் தகுந்த மதிப்புடன் பூமியில் திரியத் தொடங்கினார்.(28) பிராமணர்களில் முதன்மையான நாரதர், சிருஞ்சயனின் மகளான களங்கமற்ற சுகுமாரியின் கரங்களை முறையான சடங்குகளின்படி அடைந்தார்.(29) எனினும், அந்த இளவரசி {சுகுமாரி}, நாரதர் அடைந்த சாபத்தின்படியே அவரைக் {குரங்காகக்} கண்டாள். உண்மையில் திருமணத்தின் இறுதி மந்திரத்தைச் சொன்னதற்குச் சற்று பிறகு, சுகுமாரி, அந்தத் தெய்வீக முனிவரை {நாரதரைக்} குரங்கின் முகத்தைக் கொண்டவராகக் கண்டாள். எனினும், இதன் காரணமாக அவள் தன் தலைவனை அலட்சியம் செய்யவில்லை. மறுபுறம், அவள் தன் அன்பையே அவருக்கு அர்ப்பணித்தாள்.(30,31) உண்மையில் அந்த இளவரசி, தன் இதயத்தில் தேவர்கள், முனிவர்கள், யக்ஷர்கள் ஆகியோரில் எவரையும் கணவனாக அடையவிரும்பாமல் மொத்தமாகத் தன்னைத் தன் தலைவனுக்கே {நாரதருக்கே} அர்ப்பணித்தாள்.(32)
சிறப்புமிக்கவரான பர்வதர் தமது பயணத்தின்போது ஒரு நாள் ஒரு தனிமையான காட்டில் நுழைந்து அங்கே நாரதரைக் கண்டார்.(33) அவரை வணங்கிய பர்வதர், “ஓ! பலமிக்கவரே, சொர்க்கத்திற்குச் செல்வதற்கு என்னை அனுமதித்து என்னிடம் உமது கருணையைக் காட்டுவீராக” என்றார்.(34)
பர்வதர் உற்சாகமற்றவராகத் தம் முன் கூப்பிய கரங்களுடன் மண்டியிடுவதைக் கண்ட நாரதர், தாமும் உற்சாகமிழந்தவராக, “நீயே முதலில் என்னை “குரங்காவீராக” என்று சபித்தாய். நீ அவ்வாறு என்னிடம் சொன்ன பிறகே நான் கோபத்தில், “இந்நாளில் இருந்து நீ சொர்க்கத்தில் வசிக்கமாட்டாய்” என்று உன்னைச் சபித்தேன். நீ என் மகனைப் போன்றவனாதலால் அஃது உனக்குத் தகாது” என்றார். பிறகு அந்தத் தவசிகள் இருவரும் தங்களைத் தங்களின் சாபங்களில் இருந்து விடுவித்துக் கொண்டனர்.(37)
தெய்வீக வடிவையும், சுடர்மிக்க அழகையும் கொண்டவராகத் தன் கணவரைக் {நாரதரைக்} கண்ட சுகுமாரி, அவர் தன் தலைவரில்லை வேறு எவரோ என்று நினைத்து அவரிடம் இருந்து விலகி ஓடினாள்.(38) அந்த அழகான இளவரசி தன் தலைவனிடம் இருந்து விலகுவதைக் கண்ட பர்வதர், அவளிடம் {சுகுமாரியிடம்}, “இவர் உன் கணவரே. உனக்கு எந்த ஐயுணர்வும் வேண்டாம். அறவோரில் முதன்மையானவரும், சிறப்புமிக்கவரும், பலமிக்க முனிவருமான நாரதர் இவரே. உன் ஆன்மாவில் ஒன்றாகக் கலந்த உன் தலைவர் இவரே. இதில் நீ எந்த ஐயமும் கொள்ள வேண்டாம்” என்றார்.(40)
உயர் ஆன்ம பர்வதரால் பல்வேறு வழிகளில் உறுதி சொல்லப்பட்டு, அவளது தலைவரின் சாபத்தைக் குறித்தும் சொல்லப்பட்ட பிறகே அந்த இளவரசி தன் மனத்தில் அமைதியை அடைந்தாள். பிறகு பர்வதர் சொர்க்கத்திற்கும், நாரதர் தமது இல்லத்திற்கும் சென்றனர்” {என்றான் கிருஷ்ணன்}”.(41)
வாசுதேவன் தொடர்ந்தான், “இக்காரியத்தில் பங்குபெற்றவரும், சிறப்புமிக்க முனிவருமான நாரதரும் இங்கே இருக்கிறார். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, உம்மால் கேட்கப்பட்டால், நடந்தது அனைத்தையும் அவரே உமக்குச் சொல்வார்” {என்றான் கிருஷ்ணன்}(42).
சுவர்ணஷ்டீவின்! – சாந்திபர்வம் பகுதி – 31-சிருஞ்சயனுக்கு வரமளித்த பர்வதர்; அவனுக்குப் பிறந்த சுவர்ணஷ்டீவின்; சுவர்ணஷ்டீவினைக் கொன்ற புலி; மகனின் மறைவால் வருந்திய சிருஞ்சயன்: சுவர்ணஷ்டீவினை உயிர்மீட்டளித்த நாரதர்; யுதிஷ்டிரனை அரசகனம் ஏற்கும்படி வற்புறுத்தியது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அப்போது பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, நாரதரிடம், “ஓ! புனிதமானவரே, உடற்கழிவுகளைப் பொன்னாகக் கொண்ட அந்தப் பிள்ளையின் {சுவர்ணஷ்டீவின்} பிறப்பைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(1) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு கேட்கப்பட்ட தவசி நாரதர், உடற்கழிவைத் தங்கமாகக் கொண்ட அந்தப் பிள்ளை தொடர்பாக நடந்தவை அனைத்தையும் அவனுக்குச் சொல்லத் தொடங்கினார்.(2)
நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, கேசவன் {கிருஷ்ணன்} சொன்னது போலவேதான் நடந்தது. இந்தக் கதையில் எஞ்சியிருக்கும் பகுதியைக் கேட்கின்ற உனக்கு இப்போது நான் சொல்லப் போகிறேன்.(3) நானும், என் சகோதரியின் மகனான பெருந்தவசி பர்வதனும், வெற்றியடைந்த மன்னர்கள் அனைவரிலும் முதன்மையான சிருஞ்சயனுடன் வசிப்பதற்காக (ஒரு சந்தர்ப்பத்தில்) அவனிடம் வந்தோம்.(4) முறையான சடங்குகளுடன் அவனால் கௌரவிக்கப்பட்டும், எங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறியும் இருந்த நாங்கள், அவனது வசிப்பிடத்தில் தங்கினோம்.(5) மழைக்காலம் சென்ற பிறகு, நாங்கள் செல்வதற்கான நேரம் வந்தபோது, அந்த நேரத்திற்குத் தகுந்த வார்த்தைகளைச் சொல்லும் வகையில் பர்வதன் என்னிடம்,(6) “ஓ! பிராமணரே, மன்னனால் உயர்வாகக் கௌரவிக்கப்பட்ட நிலையில் நாம் சிறுது காலம் அவனது வசிப்பிடத்தில் தங்கினோம். நாம் அதற்கு என்ன கைம்மாறு செய்யபோகிறோம் என்பதை நினைப்பீராக” என்றான்.(7)
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அப்போது நான் அருள் தன்மை கொண்ட பர்வதனிடம், “ஓ! மருமகனே, அதற்குத் தகுந்தவன் நீயே, ஓ! பெருஞ்சக்திகொண்டவரே, இவை அனைத்தும் உன்னை நம்பியே இருக்கின்றன.(8) உன் வரங்களின் மூலம் மன்னன் மகிழ்ச்சி அடையட்டும், அவன் தன் விருப்பங்களை அடையட்டும். அல்லது, நீ விரும்பினால் நம் இருவரின் தவத் தகுதிகளின் மூலம் அவன் வெற்றியால் மகுடம் சூடப்படட்டும்” என்று சொன்னேன்.(9)
அதன் பிறகு, ஓ! குரு குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, வெற்றியாளர்களில் முதன்மையானவனான மன்னன் சிருஞ்சயனை அழைத்த பர்வதன், அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! மன்னா {சிருஞ்சயா}, உண்மையுடனும், விருந்தோம்பலுடனும் கூடிய உனது கவனிப்புகளில் நாங்கள் பெரும் நிறைவடைந்திருக்கிறோம். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, என்ன வரம் வேண்டுவது என எங்கள் அனுமதியுடன் சிந்திப்பாயாக.(11) எனினும், அந்த வரமானது தேவர்களுடன் பகையையோ, மனிதர்களுக்கு அழிவையோ ஏற்படுத்தாதவாறு இருக்கட்டும். ஓ! மன்னா, வரம்பெறத் தகுந்தவன் என உன்னை நாங்கள் கருதுவதால் அஃதை ஏற்பாயாக” என்றான்.
இவ்வார்த்தைகளைக் கேட்ட சிருஞ்சயன்,(12) “நீங்கள் என்னிடம் மனநிறைவு கொண்டால், அதுவே என் நோக்கம் நிறைவேறிய நிலையாகும். அதுவே எனக்குப் பெரிய பேறாகும். என் விருப்பங்கள் அனைத்தின் கனியாக அதையே நான் கருதுகிறேன்” என்றான்.(13)
இவ்வாறு சொன்ன சிருஞ்சயனிடம் மீண்டும் பர்வதன், “ஓ! மன்னா {சிருஞ்சயா}, நீண்ட காலமாக நீ உன் இதயத்தில் பேணிப் பாதுகாக்கும் விருப்பத்தின் கனியை வேண்டுவாயாக” என்றான்.(14)
சிருஞ்சயன் {பர்வதரிடம்}, “வீரனாகவும், பெருஞ்சக்தி கொண்டவனாகவும், தன் நோன்புகளில் உறுதி மிக்கவனாகவும், நீண்ட வாழ்வு கொண்டவனாகவும், உயர்ந்த அருளைக் கொண்டவனாகவும், தேவர்களின் தலைவனுக்கு நிகரான காந்தியைக் கொண்டவனாகவும் ஒரு மகனை நான் விரும்புகிறேன்” என்றான்.(15)
அதற்குப் பர்வதன் {சிருஞ்சயனிடம்}, “உனது இவ்விருப்பம் நிறைவேறும். எனினும், உன் மகன் தேவர்களின் தலைவனை விஞ்சும் அளவில் இருக்க வேண்டும் என்று நீ விரும்புவதால் அவன் நீண்ட வாழ்நாள் கொண்டவனாக இருக்க மாட்டான்.(16) உன் மகன் சுவர்ணஷ்டீவின் என்ற பெயரால் அறியப்படுவான். தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போன்ற காந்தி கொண்டவனாக அவன் இருந்தாலும், நீ அந்தத் தேவனிடம் {இந்திரனிடம்} இருந்து அவனை எப்போதும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்” என்றான்.(17)
உயர் ஆன்ம பர்வதனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட சிருஞ்சயன், வேறு வகையில் விதிக்குமாறு அந்தத் தவசியை வேண்டத் தொடங்கினான், {அவன்}, “ஓ! முனிவரே, உமது தவத் தகுதியின் மூலம் அவன் நீண்ட வாழ்நாள் கொண்டவனாக இருக்கட்டும்” என்று கேட்டான். எனினும், பர்வதன், இந்திரனிடம் தான் கொண்ட சார்பு நிலையினால் ஏதும் பேசாதிருந்தான்.(18)
மன்னன் {சிருஞ்சயன்} மிகவும் உற்சாகமற்றிருப்பதைக் கண்ட {நாரதனாகிய} நான், அவனிடம், “ஓ! மன்னா {சிருஞ்சயா}, (உனது துயர் காலத்தில்) நீ என்னை நினைப்பாயாக. உன்னால் அழைக்கப்படும்போது நான் உன்னிடம் வருவேன் என உறுதியளிக்கிறேன். உன் அன்புக்குரிய மகன் {சுவர்ணஷ்டீவின்} இறந்தாலும் கூட, நான் அவனை உயிருடன் கூடியவனாக உனக்குத் தருவேன்” என்றேன். அந்த ஏகாதிபதியிடம் இவ்வாறு சொல்லிவிட்டு நாங்கள் இருவரும் விரும்பிய இடத்திற்குச் செல்வதற்காக அவனது முன்னிலையில் இருந்து அகன்றோம், சிருஞ்சயனும் அவன் விரும்பியவாறு அவனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான்.(22)
சில காலம் கழிந்ததும், பேராற்றல் கொண்டவனும், சக்தியால் சுடர்விடுபவனுமான ஒரு மகன் அரச முனியான சிருஞ்சயனுக்குப் பிறந்தான்.(23) அந்தப் பிள்ளை தடாகத்தில் வளரும் பெரிய தாமரையைப் போல வளர்ந்து, தன் பெயரைப் போலவே உண்மையிலேயே சுவர்ணஷ்டீவின் ஆனான்.(24) ஓ! குருக்களில் சிறந்தவனே, இயல்புக்கு மிக்க இந்தச் செய்தி வெகுவிரைவில் உலகம் முழுவதும் பரவியது. தேவர்களின் தலைவனும் {இந்திரனும்}, இது பர்வதனுடைய வரத்தின் விளைவு என்பதை அறிய வந்தான்.(25) (அந்தப் பிள்ளை வளர்ந்ததும், அவனால் ஏற்படப்போகும்) அவமதிப்புக்கு அஞ்சியவனும், பலனையும், விருத்திரனையும் கொன்றவனுமான இந்திரன், அந்த இளவரசனின் சிறு குறைகளையும் கவனமாகக் காணத் தொடங்கினான்.(26) அவன் {இந்திரன்}, தன் முன்னே உடல் கொண்டு வந்து நின்ற தன் தெய்வீக ஆயுதமான வஜ்ரத்திடம், “ஓ! பலமிக்கவனே {வஜ்ரனே}, புலியின் வடிவை ஏற்றுச் சென்று இந்த இளவரசனைக் {சுவர்ணஷ்டீவினை} கொல்வாயாக.(27) ஓ! வஜ்ரனே, பர்வதர் சொன்னதைப் போல இந்தப் பிள்ளை வளர்ந்ததும், தனது சாதனைகளால் என்னை அவமதிக்கக்கூடும்” என்றான்.(28) தெய்வீக ஆயுதமும், பகை நகரங்களை அடக்குவதுமான வஜ்ரம், சக்ரனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த நாளிலிருந்து அந்த இளவரசனின் குறைகளைத் தொடர்ந்து கவனித்து வந்தது.(29)
அதேவேளையில், சிருஞ்சயன், இந்திரனின் காந்திக்கு ஒப்பான பிள்ளையைப் பெற்றதால் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தான். தன் மனைவியரின் துணையோடும், தன் இல்லத்தைச் சேர்ந்த வேறு பெண்களின் துணையோடும், காட்டுக்கு மத்தியில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.(30)
ஒருநாள் செவிலியின் துணையுடன் கூடிய அந்தப் பிள்ளை, பாகீரதியின் கரைகளில் அங்கேயும், இங்கேயும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தான்.(31) ஐந்து வயதே ஆனவனாக இருப்பினும் அவனது ஆற்றல் ஒரு வலிமைமிக்க யானைக்கு ஒப்பானதாக இருந்தது. அவ்வாறு அவன் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென அந்தப் பிள்ளை ஒரு பலமிக்கப் புலியைச் சந்தித்தான்.(32) அந்தப் புலியால் சிதைக்கப்பட்டபோது, குழந்தையாக இருந்த அந்த இளவரசன் {சுவர்ணஷ்டீவின்} பயங்கரமாக நடுங்கி, விரைவில் உயிரை இழந்து பூமியில் விழுந்தான். இந்தக் காட்சியைக் கண்ட செவிலி, உரத்த குரலில் துன்பத்துடன் அழுதாள்.(33) புலியானது, அந்த இளவரசனைக் கொன்றபிறகு, இந்திரனின் மாயையின் மூலம் அங்கேயே அப்போதே மறைந்து போனது.(34)
அழுது கொண்டிரக்கும் செலவிலியின் குரலைக் கேட்ட மன்னன் {சிருஞ்சயன்} பெருஞ்சோகத்தோடு அந்த இடத்தை நோக்கி ஓடிச் சென்றான்.(35) அங்கே இரத்தம் குடிக்கப்பட்டு, ஒளியிழந்தவனாக ஆகாயத்திலிருந்து விழுந்த நிலவைப் போலத் தன் மகன் கிடப்பதைக் கண்டான்.(36) குருதியில் மறைந்த சிறுவனைத் தன் மடியில் ஏந்திய மன்னன், துயரால் பீடிக்கப்பட்ட இதயத்துடன் பரிதாபகரமாகப் புலம்பத் தொடங்கினான்.(37) அரச மகளிர் துயரால் பீடிக்கப்பட்டு அழுதுகொண்டே மன்னன் சிருஞ்சயன் இருக்கும் இடத்திற்கு ஓடிச் சென்றனர்.(38) அந்தச் சூழ்நிலையில் மன்னன் {சிருஞ்சயன்} குவிந்த கவனத்துடன் {நாரதனாகிய} என்னைச் சிந்தித்தான். மன்னன் என்னைக் குறித்துச் சிந்திப்பதை அறிந்து நான் அங்கே சென்றேன்.(39) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரனே}, துயரால் பீடிக்கப்பட்டிருந்த அந்த மன்னன்னுக்கு {சிருஞ்சயனுக்கு}, இந்த யதுகுல வீரன் {கிருஷ்ணன்} இப்போது சொன்ன கதைகள் அனைத்தையும் நான் சொன்னேன்.(40) பிறகு இந்திரனின் அனுமதியுடன் நான் சிருஞ்சயனின் பிள்ளையை உயிரோடு மீட்டெடுத்தேன். விதிக்கப்பட்டது நடந்தே தீரும். வேறு வகையில் நடக்க இயலாது.(41)
இதன்பிறகு பெரும் புகழும் சக்தியும் கொண்ட அந்த இளவரசன் சுவர்ணஷ்டீவின் தன் பெற்றோரின் இதயங்களை மகிழ்ச்சியில் திளைக்கச்செய்தான்.(42) பேராற்றலைக் கொண்ட அவன், தன் தந்தை சொர்க்கத்திற்குச் சென்றதும் அரியணை ஏறி, ஆயிரத்து நூறு {1,100} வருடங்கள் ஆட்சி செய்தான்.(43) அபரிமிதமான கொடைகளுடன் கூடிய பெரும் வேள்விகள் பலவற்றில் அவன் தேவர்களை வழிபட்டான். பெருங்காந்தி கொண்ட அவன், தேவர்களையும், பித்ருக்களையும் நிறைவுகொள்ளச் செய்தான்.(44) பல மகன்களைப் பெற்று, அவர்கள் மூலம் குலத்தைப் பெருக்கிய அவன் {சுவர்ணஷ்டீவின்} பல வருடங்களுக்குப் பிறகு இயற்கையின் வழியில் சென்றான்[1].(45)ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, கேசவனும் {கிருஷ்ணனும்}, கடுந்தவங்களைச் செய்த வியாசரும் ஆலோசனை கூறியதைப் போல உன் இதயத்தில் இருக்கும் இந்தத் துயரை அகற்றுவாயாக.(46) ஓ! மன்னா, எழுவாயாக. உன் மூதாதையருடைய நாட்டின் சுமையை ஏற்று, (மறுமையில்) உன்னால் விரும்பப்படும் எந்த உலகத்தையும் அடைய உயர்ந்த பெரும் வேள்விகளைச் செய்வாயாக” என்றார் {நாரதர்}”.(47)
பாவங்கழி! – சாந்திபர்வம் பகுதி – 32-கடமைகள், அறநெறி ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்; தன்னை எரிக்கும் காரணங்களைச் சொன்ன யுதிஷ்டிரன்; செயல்களில் பரம்பொருள் மற்றும் மனிதனின் பொறுப்பு, பாவங்கழிக்கும் பிராயச்சித்தங்கள் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்.
வைசம்பாயனர் சொன்னார், “தீவில் பிறந்தவரும், அறவுண்மைகள் அறிந்த பெரும் தவசியுமான வியாசர், பேச்சற்றவனாகவும், துயரில் மூழ்கியவனாகவும் நீடித்திருந்த மன்னன் யுதிஷ்டிரனிடம் மீண்டும் பேசினார்.(1)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, குடிமக்களைப் பாதுகாப்பதும் மன்னர்களின் கடமையாகும். எப்போதும் கடமையை நோற்கும் மனிதர்கள், கடமையே அனைத்திலும் சக்திமிக்கது எனக் கருதுகின்றனர்.(2) எனவே, ஓ! மன்னா, உன் முன்னோர்களின் பாதச்சுவடுகளில் நீ நடப்பாயாக. பிராமணர்களுக்குத் தவங்களே கடமையாகும். இதுவே வேதங்களில் உள்ள நித்திய விதியாகும்.(3) ஓ! பாரதக் குலத்தின் காளையே, தவங்களே பிராமணர்களின் நித்திய கடமையாகிறது. மக்கள் அனைவரையும் காப்பதே ஒரு க்ஷத்திரியனின் கடமையாகும்[1].(4) பூமிசார்ந்த உடைமைகளுக்கு அடிமையாகி, கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறுபவனும், சமூக இணக்கத்திற்கு எதிரான குற்றவாளியுமான ஒரு மனிதன் வலிய கரம் கொண்டு தண்டிக்கப்பட வேண்டும்.(5)அதிகாரத்தை மீறும் உணர்வற்ற மனிதன், தன் பணியாளாகவோ, மகனாகவோ, தவசியாகவோ இருந்தாலும் கூட, பாவம் நிறைந்த அத்தகு இயல்புடைய மனிதர்கள் அனைவரும் அனைத்து வழிகளிலும் தண்டிக்கப்படவோ, கொல்லப்படவோ வேண்டும். வேறுவகையில் நடந்து கொள்ளும் மன்னன் பாவமிழைத்தவனாவான்.(6,7) அறநெறி அலட்சியம் செய்யப்படும்போது, அதைப் பாதுகாக்காதவனும் அறநெறியை மீறியவனே ஆவான். கௌரவர்கள் அறநெறியை மீறியவர்களாவர். அவர்களும், அவர்களுடைய தொண்டர்களும் உன்னால் கொல்லப்பட்டனர்.(8) நீ உன் வகைக்கான கடமையை நோற்றிருக்கிறாய். ஓ! பாண்டுவின் மகனே, பிறகு ஏன் நீ இத்தகு துயரத்தில் ஈடுபடுகிறாய்? ஒரு மன்னன், சாகத் தகுந்தவர்களைக் கொல்லவும், ஈகைக்குத் தகுந்தோருக்குக் கொடைகள் அளிக்கவும்ம், தன் குடிமக்களை விதிப்படி பாதுகாக்கவும் வேண்டும்” என்றார் {வியாசர்}.(9)
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! பெரும் தவத்தகுதி கொண்டவரே, உமது உதடுகளில் இருந்து உதிரும் வார்த்தைகளில் நான் ஐயங்கொள்ளமாட்டேன். ஓ! அறநெறி மற்றும் கடமை குறித்து அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, அறநெறி மற்றும் கடமை தொடர்பான அனைத்தும் உம்மால் அறியப்பட்டிருக்கிறது.(10) எனினும், நாட்டின் நிமித்தமாக நான் பல மனிதர்களைக் கொல்லச் செய்துவிட்டேன். ஓ! பிராமணரே {வியாசரே}, அந்தச் செயல்களே என்னை எரித்து உட்கொள்கின்றன” என்றான்.(11)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, செயல்படுவது பரம்பொருளா? {பரமாத்மாவா?} மனிதனா? இவ்வுலகில் அனைத்தும் வாய்ப்பின் விளைவுகளா? அல்லது (முந்தைய) செயல்பாடுகளின் விளைவுகளால் உண்டான இன்ப துன்பங்களின் கனிகளா?(12) ஓ! பாரதா, ஒரு மனிதன், பரம்பொருளால் உந்தப்பட்டு நன்மையோ, தீமையோவான அனைத்து செயல்களையும் செய்தால், அந்தச் செயல்களின் கனிகள் அந்தப் பரம்பொருளையே பற்ற வேண்டும்.(13) ஒரு மனிதன் காட்டில் உள்ள ஒரு மரத்தைக் கோடரியால் வெட்டினால், அந்த மனிதன் பாவமிழைக்கிறானேயன்றி, எவ்வழியிலும் அந்தக் கோடரி பாவமிழைக்கவில்லை.(14) அல்லது அந்தக் கோடரி பொருட்காரணமாக மட்டுமே இருக்கிறது, (வெட்டிய) அந்தச் செயலின் விளைவு, (அசையாத {தானாகச் செயல்படாத} கருவியை அல்லாமல்) அசையும் {தானாகச் செயல்படும்} செயலியையே பற்ற வேண்டும் என்று சொன்னால், அந்தப் பாவம் அந்தக் கோடரியைச் செய்த மனிதனையே சாரும். எனினும் இஃது ஒருக்காலும் உண்மையாக முடியாது.(15) மற்றவனால் செய்யப்பட்ட செயலின் விளைவு வேறொரு மனிதனைப் பற்றுவது அறிவார்ந்ததாக இல்லையெனில், ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இதனால் வழிகாட்டப்படும் நீ பொறுப்புகள் அனைத்தையும் பரம்பொருளிடமே விட்டுவிட வேண்டும்[2].(16) மேலும், நல்ல மற்றும் பாவச் செயல்கள் அனைத்தையும் செய்பவன் மனிதனேயென்றால் பரம்பொருளேதும் இல்லை என்றாகிறது, எனவே, நீ செய்த அனைத்தும், உனக்குத் தீய விளைவுகளை உண்டாக்க முடியாது.(17)ஓ! மன்னா {யுதிஷ்டிரனே}, விதிக்கப்பட்டதில் இருந்து எவனாலும் ஒருபோதும் விலக முடியாது. மேலும், முந்தைய வாழ்வு {முற்பிறவிச்} செயல்களின் விளைவுகளே விதி என்றால், மரத்தை வெட்டுவதால் உண்டாகும் பாவம், கோடரியைச் செய்தவனைத் தீண்டாததைப் போலவே, இவ்வாழ்வில் ஒருவனை எந்தப் பாவமும் பற்றாது.(18) வாய்ப்பு மட்டுமே உலகில் செயல்படுகிறது என்று நீ நினைத்தால், அப்போது அத்தகு அழிவுச் செயல் ஒரு போதும் நடைபெற முடியாது, அல்லது ஒரு போதும் நடக்காது.(19) உலகில் எது நன்மை, எது தீமை என்று உறுதி செய்யும் அவசியம் இருந்தால், சாத்திரங்களைக் கவனிப்பாயாக. அந்தச் சாத்திரங்களில், மன்னர்கள், தங்கள் கரங்களில் உயர்த்தப்பட்ட தண்டக்கோலுடன் நிற்க வேண்டும் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது.(20)
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நல்ல மற்றும் தீய செயல்கள் சக்கரம் போல் தொடர்ந்து சுழல்கின்றன என்றும், தாங்கள் செய்யும் அந்த நல்ல, அல்லது தீய செயல்களின் கனிகளையே மனிதர்கள் அடைகிறார்கள் என்றும் நான் நினைக்கிறேன்.(21) பாவம் நிறைந்த ஒரு செயல் மற்றொன்றில் {மற்றொரு பாவத்தில்} இருந்தே விளைகிறது. எனவே, ஓ! மன்னர்களில் புலியே, தீச்செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பாயாக. மேலும் உன் இதயத்தை இவ்வாறான துயரில் நிலைக்கச் செய்யாதே.(22) ஓ! பாரதா, உன் வகைக்குரிய கடமைகள் நிந்திக்கத்தக்கவையே ஆனாலும் அவற்றைப் பின்பற்றுவாயாக. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இந்தத் தன்னழிவு {உடலைத் துறக்கும் தற்கொலை} உனக்குத் தகுந்ததாகத் தெரியவில்லை.(23) ஓ! மன்னா, (தீய) செயல்களுக்கான பாவக்கழிவுகளும் {பிராயச்சித்தங்களும்} விதிக்கப்பட்டிருக்கின்றன. உயிரோடிருப்பவனால் அவற்றைச் செய்ய முடியும், இறந்தவன் அதைச் செய்யத் தவறுகிறான்.(24) எனவே, ஓ! மன்னா, உன் உயிரை விடாமல், அந்தப் பாவம் கழிக்கும் செயல்களை {பிராயச்சித்தங்களைச்} செய்வாயாக. நீ அவற்றைச் செய்யவில்லையெனில், அடுத்த உலகில் {மறுமையில்} நீ வருந்த வேண்டியிருக்கும்” என்றார் {வியாசர்}”.(25)
கடமையைச் செய்! – சாந்திபர்வம் பகுதி – 33-தன் துயரையும், தாங்கள் அடையப் போகும் நிந்தனையையும் நினைத்து துறவே கதி என வியாசரிடம் சொன்ன யுதிஷ்டிரன்; பலரைக் கொன்றது காலமேயன்றி அவனில்லை என்றும், இறந்தவர்கள் தங்கள் செயல்களின் பலனாகவே இறந்தார்கள், கொல்லத்தக்கவர்களே கொல்லப்பட்டார்கள் என்றும், நண்பர்களின் நாடுகளில் அவர்களது வாரிசுகளை அரியணையில் நிறுவச் செய்வதும், தான் அடைந்த நாட்டை ஆள்வதுமே யுதிஷ்டிரனின் கடமை, துறவல்ல என்றும் அவனிடம் சொன்ன வியாசர்…
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! பாட்டா {வியாசரே}, மகன்கள், பேரப்பிள்ளைகள, சகோதரர்கள், தந்தைமார்கள், மாமன்மார்கள், ஆசான்கள், தாய்மாமன்கள், பாட்டன்கள்,(1) உயர் ஆன்ம க்ஷத்திரியர்கள் பலர், (திருமண உறவால் உண்டான) உறவினர்கள் பலர், நண்பர்கள், தோழர்கள், சகோதரியின் மகன்கள்,(2) பல்வேறு நாடுகளில் இருந்து வந்த முதன்மையானோர் பலரும் வீழ்ந்துவிட்டனர். ஓ! பாட்டா, நாடு அடையும் ஆசை கொண்ட என்னால் மட்டுமே இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(3) ஓ! பெரும் தவசியே, அறத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருந்தவர்களும், வேள்விகளில் சோமம் பருகியவர்களுமான வீர மன்னர்கள் பலரைக் கொல்லச் செய்த நான் இறுதியில் என்ன கதியை அடையப் போகிறேன்?(4) ஓ! பாட்டா, பெருஞ்செழிப்பில் திளைத்த மன்னர்களில் சிங்கங்களான பலரை இந்தப் பூமி இழந்துவிட்டதே என்ற நினைப்பில் இந்த நாள் வரை நான் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறேன்.(5) உறவினர்களும், லட்சக்கணக்கான பல மனிதர்களும் கொல்லப்பட்டதைக் கண்டு துயரத்தில் நான் எரிந்து கொண்டிருக்கிறேன்.(6)
ஓ!, மகன்கள், கணவர்கள், சகோதரர்கள் ஆகியோரை இழந்த முதன்மையான பெண்கள் அடையப்போகும் அவலநிலை என்ன?(7) உடல் மெலிந்த அந்தப் பெண்கள், பாண்டவர்களையும், விருஷ்ணிகளையும் கொடூரக் கொலைகாரர்களாக நிந்தித்துத் துயரில் மூழ்கி பூமியில் விழப்போகிறார்கள்.(8) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {வியாசரே}, தங்கள் தந்தைமார், சகோதரர்கள், கணவர்கள் மற்றும் மகன்களைக் காணாத அந்த மகளிர், துயரத்தை அடைந்து, தங்கள் உயிர் மூச்சுகளை விட்டு, யமலோகம் செல்லப் போகிறார்கள். இதில் எனக்கு ஐயமேதுமில்லை. அறநெறியின் பாதையானது மிகவும் நுட்பமானது. இதன் காரணமாகப் பெண்களைக் கொன்ற குற்றத்தால் நாங்கள் களங்கப்படுவோம் என்பது வெளிப்படையானது.(9,10) உறவினர்களையும், நண்பர்களையும் கொன்று, அதன்மூலம் கழிக்கப்படவே முடியாத {பரிகாரமில்லாத} பாவத்தைச் செய்த நாங்கள் நரகிற்குள் தலைக்குப்புற விழப் போகிறோம்.(11) எனவே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, கடுந்தவங்களின் மூலம் நாங்கள் எங்கள் அங்கங்களை வீணாக்கப் போகிறோம். ஓ! பாட்டா, இப்போது நான் எந்த வாழ்வு முறையை நோற்க வேண்டும் என்பதைச் சொல்வீராக” என்று கேட்டான்.(12)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தீவில் பிறந்த முனிவர் {வியாசர்}, யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, சிறிது நேரம் கூர்மையாகச் சிந்தித்து, பின்வருமாறு பாண்டுவின் மகனிடம் பேசினார்.(13)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை நினைவுகூர்வாயாக. துயரில் மூழ்காதே. ஓ! க்ஷத்திரியர்களில் காளையே, அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் தங்களுக்கு முறையான கடமைகளை நோற்றே வீழ்ந்தனர்.(14) பூமியில் பெருஞ்செழிப்பையும், பெரும்புகழையும் தொடர்ந்து சென்றவர்களும், மரணக்கடப்பாடு கொண்டவர்களுமான அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள், காலத்தின் ஆதிக்கத்தின் மூலமே அழிந்தனர்[1].(15) நீயோ, இந்தப் பீமனோ, அர்ஜுனனோ, இரட்டையர்களோ {நகுல சகாதேவர்களோ} அவர்களைக் கொன்றவர்களில்லை. மாற்றம் என்ற பெரும் விதியின்படி காலமே அவர்களது உயிர் மூச்சுகளை எடுத்தது.(16) காலனுக்குத் தாயோ, தந்தையோ, எந்தக் கருணையும் காட்ட வேறு எவருமோ கிடையாது. அவனே {காலனே} அனைத்து உயிரினங்களின் செயல்களுக்கான சாட்சியாக இருக்கிறான். அவர்கள் அவனாலேயே எடுத்துக் கொள்ளப்பட்டனர்.(17) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இந்தப் போரானது அவனால் விதிக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பம் மட்டுமே. உயிரினங்களெனும் கருவிகளின் மூலம் அவனே உயிரினங்களைக் கொல்லச் செய்கிறான். இந்த வகையிலேயே காலமானது தடுக்கப்பட முடியாத தன் பலத்தை வெளிப்படுத்துகிறது.(18)காலமானது (உயிரினங்களின் பிறப்பு மற்றும் இறப்பில்) செயல்பாடுகளில் உள்ள பற்றைச் சார்ந்திருக்கிறது, மேலும் நல்ல மற்ற தீய செயல்கள் அனைத்தின் சாட்சியாக இருக்கிறது என்பதை அறிவாயாக. அருள், அல்லது துயர் நிறைந்த நமது செயல்பாடுகளின் கனியைக் கொண்டு வருவது காலமே.(19) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, வீழ்ந்துவிட்ட அந்த க்ஷத்திரியர்களின் செயல்பாடுகளை நினைவுகூர்வாயாக. அந்தச் செயல்பாடுகளே அவர்களுடைய அழிவுக்கான காரணங்களாகும். அவற்றின் விளைவாகவே அவர்கள் அழிவை அடைந்தனர்.(20) தற்கட்டுபாட்டுடன் கூடிய நோன்புகளை நோற்றுச் செய்யப்பட்ட உன் செயல்களையும் நினைத்துபார். (மனிதர்கள் பலரைக் கொல்லும் வகையில்) இத்தகு செயலைச் செய்யுமாறு விதிசமைத்த உயர்ந்தவனால் எவ்வாறு நீ பலவந்தப்படுத்தப்பட்டாய் என்பதையும் நினைத்துப் பார்.(21) கொல்லனாலோ, தச்சனாலோ செய்யப்பட்ட ஆயுதமானது, அதைப் பயன்படுத்தும் மனிதனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து, அவன் பயன்படுத்துவற்குத்தக்க வகையில் பயன்படுவதைப் போலவே இந்த அண்டமும் காலத்தின் செயல்களால் கட்டுப்படுத்தப்பட்டு, அந்தச் செயல்பாடுகள் தன்னைப் பயன்படுத்துவதற்குத்தக்கவே பயன்படுகிறது[2].(22) தூண்டலற்றவகையில், எந்த (குறிப்பிட்ட) காரணமும் இல்லாமல் உயிரனங்களின் பிறப்பும், இறப்பும் நேர்வதைக் காணும்போது, துன்பமும் இன்பமும் முற்றிலும் தேவையற்றனவாகத் தெரிகின்றன.(23) உன் இதயத்தின் சிக்கல் வெறும் மாயையே என்றாலும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, (ஒரு வகையில் பாவம் என்றழைக்கப்படுவதில் இருந்து விடுபட்டு உன்னைக் கழுவிக் கொள்வதற்கு வேண்டிய) பாவக்கழிவு சடங்குகளைச் செய்வாயாக.(24)ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, தேவர்களும், அசுரர்களும் ஒருவரோடொருவர் போரிட்டனர் என்று கேள்விப்படுகிறோம். அசுரர்கள் மூத்த சகோதரர்களாகவும், தேவர்கள் இளைய சகோதரர்களாகவும் இருந்தனர்.(25) செழிப்பில் பேராசை கொண்டு அவர்களுக்குள் ஏற்பட்ட போரானது மிகக் கடுமையானதாக இருந்தது. அந்தப் போர் முப்பத்திரண்டாயிரம் {32,000} வருடங்கள் நீடித்தது.(26) தேவர்கள், பூமியை ஒரே இரத்தக்கடலாகச் செய்து, தைத்தியர்களைக் கொன்று சொர்க்கத்தை உடைமையாக அடைந்தனர்.(27) பூமியை உடைமையாகக் கொண்டிருந்தவர்களும், வேதங்களை அறிந்தவர்களும், பெரும் எண்ணிக்கையிலானவர்களுமான பிராமணர்கள், செருக்கில் மயங்கி, ஆயுதங்கள் தரித்துக் கொண்டு தானவர்களுக்கு உதவும் வகையில் அவர்களோடு சேர்ந்து போரிட்டனர்.(28) எண்ணிக்கையில் எண்பத்தெட்டாயிரம் {86,000} பேரான அவர்கள் {பிராமணர்கள்} சாலாவிருகர்கள் என்ற பெயரில் அறியப்பட்டனர். எனினும் அவர்கள் அனைவரும் தேவர்களால் கொல்லப்பட்டனர்.(29) அறத்திற்கு அழிவை உண்டாக்க விரும்புபவர்களும், பாவம் செய்பவர்களுமான அந்தத் தீய ஆன்மாக்கள் {பிராமணர்கள்}, தேவர்களால் கொல்லப்பட்ட கடுந்தைத்தியர்களைப் போலவே கொல்லப்படத்தகுந்தவர்களே ஆவர்.(30)
தனிப்பட்ட ஒருவனைக் கொல்வதால் ஒரு குடும்பத்தைக் காக்கமுடியும் என்றால், அல்லது ஒரு தனிப்பட்ட குடும்பத்தைக் கொல்வதன் மூலம் மொத்த நாட்டையும் காக்க முடியும் என்றால், அந்தப் படுகொலைகள் அறமீறலாகாது.(31) ஓ! மன்னா, சில வேளைகளில் பாவமானது அறத்தின் வடிவை ஏற்கிறது, சில வேளைகளில் அறமும் பாவ வடிவை ஏற்கிறது. எனினும் கல்விமான்கள் அவை எவை என்பதைப் பகுத்தறிவார்கள்[3].(32) எனவே, ஓ! பாண்டுவின் மகனே, சாத்திரங்களை நன்கறிந்தவனான நீ ஆறுதலடைவாயாக. ஓ! பாரதா, தேவர்கள் சென்ற பாதையையே நீயும் பின்பற்றியிருக்கிறாய்.(33) ஓ! பாண்டு குலத்தின் காளையே உன்னைப் போன்றோர் ஒருபோதும் நரகை அடைவதில்லை. ஓ! எதிரிகளை எரிப்பவனே, உன் சகோதரர்களையும், உன் நண்பர்கள் அனைவரையும் தேற்றுவாயாக.(34) தெரிந்தே பாவகரச் செயல்களில் ஈடுபட்டும், பாவகரச் செயல்களைச் செய்து வெட்கமேதும் அடையாமல் முன்பைப் போலவே இருப்பவன் (சாத்திரங்களின்படி) பெரும்பாவி என்றழைக்கப்படுகிறான். பாவம் கழிக்கும் எந்த வழியும் {பரிகாரமேதும்} அவனுக்கு இல்லை. {பாவக் கழிப்புச் சடங்குகள் செய்தாலும்} அவனது பாவங்களும் குறைவடைவதில்லை.(36)நீ உன்னதக் குலத்தில் பிறந்திருக்கிறாய். பிறரின் குற்றங்களால் வலுகட்டாய நிலையை அடைந்தும், விருப்பமில்லாமலுமே நீ இதைச் செய்தாய், இதைச் செய்த பிறகு நீ வருந்தலாகாது.(37) பெருஞ்சடங்கான குதிரைவேள்வியே உனக்கான பாவக்கழிப்பாகச் சொல்லப்படுகிறது. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்வாயாக, நீ உன் பாவங்களில் இருந்து விடுபடுவாய்.(38) பகனைத் தண்டித்த தெய்வீகமானவன் {இந்திரன்}, மருத்துக்களின் துணையுடன் தன் எதிரிகளை வென்று, படிப்படியாக நூறு வேள்விகளைச் செய்து சதக்ரதுவானான்[4].(39) பாவத்திலிருந்து விடுபட்டுச் சொர்க்கத்தை அடைந்து, பல அருள் உலகங்களையும், பெரும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அடைந்த சக்ரன் {இந்திரன்}, மருத்துகளால் சூழப்பட்டவனாக, அழகில் ஒளிர்ந்து கொண்டே, தன் காந்தியால் நான்கு பகுதிகளுக்கும் ஒளியூட்டிக் கொண்டிருக்கிறான்.(40) சச்சியின் தலைவனான அவன் {இந்திரன்} சொர்க்கத்தில் அப்சரஸ்களால் துதிக்கப்படுகிறான். முனிவர்களும், பிற தேவர்கள் அனைவரும் அவனை மதிப்புடன் வணங்குகின்றனர்.(41)நீ இந்தப் பூமியை உன் ஆற்றலால் அடைந்திருக்கிறாய். ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, உன் ஆற்றலின் மூலம் நீ மன்னர்கள் அனைவரையும் வென்றாய்.(42) ஓ! மன்னா, உன் நண்பர்களுடன் அவர்களின் நாட்டுக்குச் சென்று, அவர்களது சகோதரர்கள், மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளை அவர்களது அரியணையில் நிறுவுவாயாக.(43) கருவில் இருக்கும் குழந்தையிடமும் கருணையோடு நடந்து கொண்டு, உன் குடிமக்களை மகிழ்ச்சியடையச் செய்து பூமியை ஆள்வாயாக.(44) மகனில்லாதவர்களின் அரியணைகளில் அவர்களது மகள்களை நிறுவுவாயாக. பெண்கள் இன்பத்தையும், அதிகாரத்தையும் விரும்புபவர்களாவர். இந்த வழிமுறையின் மூலம் அவர்கள் தங்கள் கவலைகளை விட்டு, மகிழ்ச்சி அடைவார்கள்.(45) ஓ! பாரதா, இவ்வழியில் பேரரசு முழமைக்கும் ஆறுதலளித்து, வெற்றியாளனான பழங்காலத்து இந்திரனைப் போல ஒரு குதிரை வேள்வியில் தேவர்களைத் துதிப்பாயாக. ஓ! க்ஷத்திரியக் காளையே, (போரில் வீழ்ந்துவிட்ட) உயர் ஆன்ம க்ஷத்திரியர்களுக்காக நீ வருந்துவது முறையாகாது.(46) யமனின் சக்தியால் திகைப்படைந்த அவர்கள், தங்கள் சொந்த கடமைகளை நோற்றதிலேயே அழிவை அடைந்தார்கள்.(47) நீ ஒரு க்ஷத்திரியனுக்குரிய கடமைகளைச் செய்து, முள்ளில்லா {எதிரிகளில்லா} பூமியை அடைந்திருக்கிறாய். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, ஓ! பாரதா, உன் சொந்த கடமைகளை நீ நோற்றால்தான் மறுமையில் இன்பத்தை அடைய முடியும்” என்றார் {வியாசர்}.(48)
பாவக்கழிப்புக்குத் தகுந்த செயல்கள்! – சாந்திபர்வம் பகுதி – 34-பாவக்கழிப்பைச் செய்யத்தக்கவர்கள் எவர்? மனிதர்களுக்குத் தடைசெய்யப்பட்ட செயல்கள் யாவை? தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்தாலும் பாவத்தின் கறைபடாத சந்தர்ப்பங்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன வியாசர்…
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “எந்தச் செயல்களைச் செய்த பிறகு ஒரு மனிதன் பாவக்கழிப்பு {பரிகாரம்} செய்யத்தக்கவனாகிறான்? பாவத்தில் இருந்து விடுபட அவன் எந்தச் செயல்களைச் செய்ய வேண்டும்? ஓ! பாட்டா, இவை யாவையும் எனக்குச் சொல்வீராக” என்றான்.(1)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “விதிக்கப்பட்ட செயல்களைத் தவிர்த்து, தடை செய்யப்பட்ட செயல்களைச் செய்து, வஞ்சகம் நிறைந்த நடத்தை கொண்ட ஒரு மனிதன் பாவக்கழிப்பைச் செய்யத்தக்கவனாகிறான்.(2) சூரியன் உதித்த பிறகு தன் படுக்கையில் இருந்து எழுபவன், அல்லது சூரியன் மறையும்போது படுக்கைக்குச் செல்பவன், சொத்தை நகமோ, கருப்பு பல்லோ கொண்டவன்,(3) தனக்கு முன்பே தம்பி திருமணம் செய்து கொண்ட நிலையில் இருப்பவன், மூத்தவன் திருமணம் செய்து கொள்ளும் முன்பே தான் திருமணம் செய்து கொள்பவன், பிராமணனைக் கொன்ற குற்றவுணர்வு கொண்டவன், பிறரை இழிவாகப் பேசுபவன், {பெண்ணெடுக்கும் இல்லத்தில் உள்ள} மூத்தவள் {தமக்கை} திருமணம் முடிப்பதற்கு முன்பே அவளது தங்கையைத் திருமணம் செய்பவன், தங்கையைத் திருமணம் செய்த பிறகு, அவளது மூத்தவளை {தமக்கையைத்} திருமணம் செய்பவன்,(4) உறுதிமொழி தவறியவன், மறுபிறப்பாள வகைகளில் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த ஒருவனைக் கொல்பவன்[1], தகாதவர்களுக்கு வேத அறிவைப் போதிப்பவன், (5) பல உயிர்களை எடுப்பவன், இறைச்சி விற்பவன், தன் (புனித) நெருப்பைக் கைவிட்டவன், வேத அறிவை விற்பவன்[2],(6) தன் ஆசானையோ, ஒரு பெண்ணையோ கொல்பவன், பாவம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவன், விருப்பத்துடன் ஒரு விலங்கைக் கொல்பவன்[3], குடியிருக்கும் வீட்டுக்கு நெருப்பு வைப்பவன்,(7) வஞ்சகத்தையே வாழ்வாகக் கொண்டவன், தன் ஆசானுக்கு எதிராகச் செயல்படுபவன், ஒப்பந்தத்தை மீறுபவன் ஆகியோர் அனைவரும் பாவக்கழிப்பு {பரிகாரம்} தேவைப்படும் குற்றவாளிகளாவர்.(8)உலகம் மற்றும் வேதங்கள் ஆகிய இரண்டால் மனிதர்களுக்குத் தடைசெய்யப்பட்ட செயல்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன். குவிந்த கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக.(9) தன் சமய நம்பிக்கையை மறுப்பது, பிற மக்களின் சமய நம்பிக்கையைப் பயில்வது[4], உதவத் தகாத ஒருவனின் வேள்வி அல்லது அறச்சடங்குகளில் உதவி செய்வது, விலக்கப்பட்ட உணவை உண்பது,(10) பாதுகாப்பை நாடும் ஒருவனைக் கைவிடுபவன், பணியாட்களையும், தன்னை நம்பியிருப்பவர்களையும் பராமரிக்காமல் புறக்கணிப்பது, உப்பு, புளி (மற்றும் அது போன்ற பொருட்களை) விற்பது, பறவைகளையும், விலங்குகளையும் கொல்வது,(11) இயன்றவனானாலும், தன்னிடம் வேண்டும் பெண்ணிடம் பிள்ளையைப் பெற மறுப்பது, (பசுவுக்குக் கைநிறைய புல்லைக் கொடுப்பது போன்ற) தினக்கொடைகள் கொடுப்பதைத் தவிர்ப்பது,(12) தக்ஷிணை கொடுப்பதைத் தவிர்ப்பது, ஒரு பிராமணனை அவமதிப்பது ஆகிய இவை அனைத்தும் யாராலும் செய்யக்கூடாத செயல்கள் எனக் கடமைகளை அறிந்த மனிதர்களால் சொல்லப்படுகிறது.(13) ஓ! மனிதர்களில் புலியே, தந்தையுடன் சச்சரவு செய்யும் மகன், தன் ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்துபவன், தான் மணந்து கொண்ட மனைவியிடம் வாரிசை உண்டாக்காமல் புறக்கணிப்பவன் ஆகியோர் பாவம் நிறைந்தவர்களாவர்.(14) பாவக்கழிப்புச் செய்யத் தகுந்த மனிதர்களின் செயல்பாடுகள் மற்றும் செயல்படாமை ஆகியவற்றைக் குறித்துச் சுருக்கமாகவும் விரிவாகவும் சொல்லிவிட்டேன்.(15)இப்போது, இந்தச் செயல்களைச் செய்தாலும் கூட மனிதர்கள் பாவத்தின் கறைபடாமல் இருக்கும் சந்தர்ப்பங்களைச் சொல்லப்போகிறேன்.(16) வேதங்களை நன்கறிந்த ஒரு பிராமணன் உன்னைக் கொல்வதற்காக எதிர்த்துப் போரிட வந்தால், நீயும் அவனது உயிரை எடுக்க அவனை எதிர்க்க வேண்டும். அத்தகு செயலைச் செய்வதால் அவனைக் கொல்பவன், பிராமணனைக் கொன்ற குற்ற உணர்வுக்கு ஆளாகமாட்டான்.(17) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே} வேதங்களில் உள்ள ஒரு மந்திரத்தில் இது விதிக்கப்பட்டிருக்கிறது. வேதங்களால் அதிகாரத்துடன் அனுமதிக்கப்படும் நடைமுறைகளை மட்டுமே நான் உனக்கு அறிவிக்கிறேன்.(18) தன் கடமைகளில் இருந்து வழுவிய பிராமணன், கொலை செய்யும் நோக்குடனும், கையில் ஆயுதத்துடனும் முன்னேறி வருபவன் ஆகியோரைக் கொன்றால், உண்மையில் அது பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} ஆகாது. அப்படிப்பட்ட வழக்கில் கொல்பவனின் கோபமே, கொல்லப்படுபவனின் கோபத்தை எதிர்த்துச் செல்கிறது.(19) அறியாமையாலோ, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரு நல்ல மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஒருவன் ஊக்கம்தரும் மதுபானம் அருந்தினால், அவனது வழக்கில் மீண்டும் மீள்பிறப்புச் சடங்குகள் செய்யப்பட வேண்டும்[5].(20)ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, தடுக்கப்பட்ட உணவை உண்பது குறித்து நான் உன்னிடம் சொன்னது அனைத்திலிருந்தும் இத்தகு பாவக்கழிப்பு சடங்குகளின் மூலம் தூய்மையடையலாம்.(21) ஆசானின் ஆணைப்படி ஆசானின் மனைவியுடன் கலப்பது அம்மாணவனைக் களங்கப்படுத்தாது. தவசியான உத்தாலகர், ஒரு சீடனின் மூலமே தன் மகன் ஸ்வேதகேதுவைப் பெற்றார்.(22) துயர் நிறைந்த காலத்தில் தன் ஆசானுக்காகத் திருடுபவன் பாவக்கறை அடைய மாட்டான். எனினும், தன் இன்பங்களுக்காகத் திருடுபவன் பாவத்தால் கறைபட்டவனே ஆவான்.(23) (துயர் நிறைந்த காலத்தில், தன் ஆசானுக்காக) பிராமணர்களைத் தவிர வேறு எவரிடம் திருடுபவனும் கறைபடிந்தவனாக மாட்டான். அத்தகு சூழ்நிலையில் தனக்கென எந்தப் பங்கையும் எடுத்துக் கொள்ளாத ஒருவன் மட்டுமே பாவத்தால் தீண்டப்படாமல் இருப்பான்.(24) ஒருவன், தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பொய் சொல்லலாம், அல்லது ஒருவனுடைய ஆசானுக்காக, அல்லது ஒரு பெண்ணை நிறைவு செய்வதற்காக, அல்லது திருமணம் செய்வதற்காகப் பொய் சொல்லலாம்.(25) ஈரக்கனவுகளால் ஒருவன் தன் பிரம்மச்சரிய நோன்பை உடைத்தவனாக மாட்டான். அத்தகு வழக்குகளில், சுடர்மிக்க நெருப்பில் தெளிந்த நெய்யைக் காணிக்கையாக ஊற்றுவதே பாவக்கழிப்பாக விதிக்கப்படுகிறது[6].(26)மூத்தவன் {அண்ணன்} வீழ்ந்துவிட்டாலோ, உலகைத் துறந்துவிட்டாலோ, இளையவன் {தம்பி} திருமணம் செய்து கொள்வதால், அவன் எந்தப் பாவத்தையும் இழைத்தவனாக மாட்டான். ஒரு பெண்ணால் வேண்டப்பட்டு, அவளுடன் கலப்பது அறத்திற்கு அழிவைத் தராது.(27) வேள்வியைத் தவிர வேறு எதற்காகவும் ஒருவன் விலங்குகளைக் கொல்லவோ, கொல்லப்படச் செய்யவோ கூடாது. படைப்பாளனால் விதிக்கப்பட்ட விதியின் படி அவனால் வெளிப்படுத்தப்படும் கருணையால் விலங்குகள் புனிதமடைகின்றன (வேள்விக்குத் தகுந்தவையாகின்றன).(28) தகாத பிராமணருக்கு அறியாமையால் கொடையளிப்பவன் பாவத்துக்கு உள்ளாக மாட்டான். தகுந்தோரிடம் (அறியாமையினால்) தயாளமில்லாமல் நடந்து கொள்ளும் ஒருவன் பாவத்துக்கு உள்ளாகமாட்டான்.(29) ஒழுக்கங்கெட்ட மனைவியிடம் இருந்து விலகும் ஒருவன் பாவத்துக்கு உள்ளாகமாட்டான். அப்படி நடத்துவதால் அந்தப் பெண் மாசகற்றப்பட்டவளாவாள், அதேவேளையில் கணவனும் பாவத்தைத் தவிர்ப்பான்[7].(30) சோமச்சாற்றின் உண்மை பயனை அறிந்த ஒருவன், அதை விற்பதால் பாவத்தை அடைய மாட்டான்[8]. தொண்டு செய்ய இயலாத பணியாளை நீக்குவதால் ஒருவன் பாவத்தால் தீண்டப்படமாட்டான்.(31) எவற்றைச் செய்தால் ஒருவன் பாவத்திற்கு உள்ளாக மாட்டானோ அந்தச் செயல்களையே இப்போது நான் உனக்குச் சொன்னேன். இனி பாவக்கழிப்பை {பரிகாரங்களைக்} குறித்து உனக்கு விரிவாகச் சொல்லப்போகிறேன்” என்றார் {வியாசர்}[9].(32)
பாவங்களும், பாவக்கழிப்புகளும்! – சாந்திபர்வம் பகுதி – 35-பாவங்கழிக்கும் முறைகள்; பிராமணக் கொலை, மதுவுண்ணல், ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்துவது; ஆசானுக்கு எதிராகச் செயல்படுவது; பிறன்மனையுறவு, களவு, பெண்களின் பாவங்கள் ஆகியவற்றுக்கான பாவக்கழிப்புகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்; அவன் செய்தது குற்றமாகாது, அஃது அவனது கடமை என விளக்கி, அப்படியே அவன் குற்றவுணர்வைக் கொண்டிருந்தாலும் அதற்கான பாவக்கழிப்பைச் செய்துவிட்டு நாடாளுமாறு யுதிஷ்டிரனை வலியுறுத்திய வியாசர்…
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தவங்கள், அறச்சடங்குகள் {வேள்விகள்} மற்றும் கொடைகளின் மூலம் ஒரு மனிதன் தான் இழைத்த பாவங்களைக் கழுவிக் கொள்கிறான்.(1) ஒரு நாளைக்கு ஒரே ஒரு முறை மட்டுமே உணவு உண்டு, பிச்சையெடுத்து உணவுண்டு, (பணியாளின் உதவியை எதிர்பாராமல்) தன் செயல்களனைத்தையும் தானே செய்து, ஒரு கரத்தில் மனித மண்டையோட்டையும், மறு கரத்தில் கட்வாங்கத்தையும்[1] எடுத்துக் கொண்டு பிச்சைக்காரனாய் வலம் வந்து, பிரம்மச்சரிய நிலையடைந்து, எப்போதும் உழைப்புக்கு ஆயத்தமாக இருந்து,(2) தீமைகள் அனைத்தையும் கைவிட்டு, வெறுந்தரையில் உறங்கி, தன் குற்றங்களை {பாவங்களை} உலகத்திற்கு வெளியிட்டு, என இவை யாவற்றையும் முழுமையாகப் பனிரெண்டு {12} ஆண்டுகள் செய்யும் மனிதன் ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தூய்மையடைகிறான்.(3) ஆயுதப்பயன்பாட்டில் வாழும் மனிதனின் ஆயுதத்தாலோ, ஒருவனுடைய சுய விருப்பத்தாலோ, சாத்திரங்களைப் பயின்ற மனிதர்களின் ஆலோசனையின் பேரிலோ அழிவை அடைபவன், அல்லது சுடர்மிக்க நெருப்பில் மூன்று முறை தலைகுப்புற விழுபவன்,(4) அல்லது வேதங்களை ஓதிக்கொண்டே நூறு யோஜனைகள் நடப்பவன், அல்லது வேதங்களை அறிந்த ஒரு பிராமணனுக்குத் தன் மொத்த உடைமைகளையும் கொடையாகக் கொடுப்பவன், (5) அல்லது உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்காவது அவனுக்குக் கொடுப்பவன், அல்லது முறையாக அமைக்கப்பட்ட ஒரு வீட்டைக் கொடுத்து பிராமணர்களையும், பசுக்களையும் பாதுகாப்பவன், ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தூய்மையடைவான்.(6)
[1] “கட்வாங்கம் என்பது மண்டையோடு பொருத்தப்பட்ட ஒரு தடி” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்
ஆறு வருட காலத்திற்கு மிகக் குறைந்த உணவையே தினமும் உண்டு வாழ்வதாலும் ஒரு மனிதன் அந்தப் பாவத்தில் இருந்து தூய்மையடையமுடியும்[2]. உணவைப் பொறுத்தவரையில், இதைவிடக் கடுமையான நோன்பை நோற்பதால் அவன் மூன்று வருடங்களிலேயே தூய்மையடையலாம்[3].(7) ஒரு மாதத்தில் ஒரே ஒரு முறை உண்டு வாழ்ந்தால் ஒருவன் ஒரே வருடத்தில் தூய்மையடையலாம். முற்றாகப் பட்டினி கிடந்தால், ஒருவன் மிகக் குறுகிய காலத்திலேயே தூய்மையடையலாம்.(8) மேலும், ஒரு குதிரை வேள்வியைச் செய்வதால் ஒருவன் தூய்மையடைவான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. பிராமணனைக் கொன்ற குற்ற உணர்வு கொண்ட மனிதர்கள், குதிரை வேள்வியை நிறைவு செய்து, இறுதி நீராடலை முடித்தால்,(9) அவர்களுடைய பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடையலாம். இது ஸ்ருதிகளின் பேரதிகாரத்தில் உள்ள ஒரு தடையாணையாகும். மேலும், போரில் ஒரு பிராமணனுக்காகத் தன் உயிரை விடுபவன், ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தூய்மையடைகிறான்.(10)
[2] “முதல் மூன்று நாள் காலையில் உண்ண வேண்டும், இரண்டாவது மூன்று நாட்கள் மாலையில் உண்ண வேண்டும், அடுத்த மூன்று நாட்கள் வேண்டாமல் கிட்டும் எதையும் உண்ணலாம் வேறேதும் உண்ணக்கூடாது, அடுத்து வரும் மூன்று நாட்கள் எதையுமே உண்ணாதிருக்க வேண்டும் என்பதே அவ்விதி. இவ்விதி கிருச்சிரபோஜனம் Kricchra-bhojana என்று அழைக்கப்படுகிறது. இவ்விதியை ஆறு வருடங்களுக்கு நோற்கும் ஒருவன், பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தூய்மையடைவான்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “மூன்று நாள் காலையில் மாத்திரமும், பின் மூன்று நாள் மாலையில் மாத்திரமும், பின் மூன்று நாள் தன் முயற்சியின்றிக் கிடைத்ததை மாத்திரமும் புஜித்துக் கொண்டு பின்மூன்று நாள் உண்ணாவிரதமுள்ளவனாக இருக்க வேண்டுமென்பது கிருச்சிரவிதி” என்று அடிக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.
[3] “ஏழு நாட்கள் காலையில் மட்டுமே உண்ண வேண்டும்; அடுத்த ஏழு நாட்கள் மாலையில் மட்டுமே உண்ண வேண்டும்; அடுத்த ஏழு நாட்கள் (வேண்டாமல்) கிட்டுவதை உண்ணலாம்; அடுத்த ஏழு நாட்கள் மொத்தமாக எதையும் உண்ணாதிருக்க வேண்டும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தகுந்தோருக்கு நூறாயிரம் {1,00,000} பசுக்களைக் கொடையாக அளிப்பவன், பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்தும், உண்மையில் அவன் செய்த அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான்.(11) கன்றீன்ற இருபத்தைந்தாயிரம் கபிலைப் பசுக்களை {காராம்பசுக்களைக்} கொடையாக அளிப்பவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்து தூய்மையடைவான்.(12) ஒருவன் உயிரைவிடும் தருவாயில், கன்றுகளுடன் கூடிய ஓராயிரம் பசுக்களைத் தகுந்தோருக்குக் கொடையாகக் கொடுத்தால் பாவத்தில் இருந்து விடுபடுவான்.(13) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒழுக்கத்துடன் கூடிய பிராமணர்களுக்கு நூறு காம்போஜக் குதிரைகளைக் கொடையளிக்கும் மனிதன் தன் பாவத்தில் இருந்து விடுபடுகிறான்.(14) ஒரே ஒருவனுக்காவது, அவன் கேட்கும் அனைத்தையும் கொடுத்து, அதைக் குறித்து வேறு யாரிடமும் பேசாத {சொல்லாத} ஒரு மனிதன் பாவத்தில் இருந்து விடுபடுகிறான்.(15)
ஒரு முறை மதுவுண்ட ஒருவன், (பாவக்கழிப்பாக) காய்ச்சிய மதுவைக் குடித்தால், அவன் இம்மையிலும், மறுமையிலும் தன்னைத் தூய்மையாக்கிக் கொள்கிறான்[4].(16) மலைச்சிகரத்தில் இருந்து குதித்தோ, சுடர்மிக்க நெருப்பில் நுழைந்தோ, உலகைத் துறந்து எப்போதும் நீடிக்கும் பயணத்தை மேற்கொண்டோ ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்து விடுபடலாம்.(17) பிருஹஸ்பதியால் விதிக்கப்பட்டுள்ள வேள்வியைச் செய்வதன் மூலம் மதுபானம் உண்ணும் ஒரு பிராமணனால் பிரம்மலோகத்தை அடைவதில் வெல்ல முடியும்[5]. இதைப் பிரம்மனே சொல்லியிருக்கிறான்.(18) மதுவுண்ட பிறகு ஒரு மனிதன், அடக்கமாக நிலக்கொடையளித்து, பிறகு எப்போதும் அதிலிருந்து விலகியிருந்தால், அவன் தூய்மையும், புனிதமும் அடைகிறான்.(19)
[4] கும்பகோணம் பதிப்பில், “ஒருமுறை ஸுரையைப் பானஞ்செய்தவன் அந்த ஸுரையை நெருப்பு போலக் காய்ச்சிப் பானஞ்செய்தோ, அல்லது மலையிலிருந்து பாலைநிலத்தில் விழுந்தோ அல்லது அக்னியில் விழுந்தோ அல்லது மஹாபத யாத்திரை செய்தோ தன் சரீரத்தைத் தியாகஞ்செய்தால் பாவங்களிலிருந்து விடுபட்ட இரண்டு உலகிலும் சக்தி பெறுவான்” என்றிருக்கிறது.தனது ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்திய மனிதன், பழுக்கக் காய்ச்சிய இரும்புத் தகட்டில் கிடந்து, தன் பாலினச் சின்னத்தை அறுத்து, எப்போதும் மேல்நோக்கிய கண்களுடன் காடுகளில் வாழ்ந்து இந்த உலகை விட்டுச் செல்ல வேண்டும்[6].(20] ஒருவன் தன் உடலைக் கைவிடுவதால் அவன் தன் தீச்செயல்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். பெண்கள், ஒரு வருடகாலம் ஒழுங்குபடுத்திய வாழ்வை வாழ்ந்தால் தங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவார்கள்.(21) ஒரு மனிதன் மிகக் கடுமையான நோன்பை நோற்பதாலோ, தன் செல்வம் முழுவதையும் கொடையாகக் கொடுப்பதாலோ, தன் ஆசானுக்காகப் போரிட்டுப் போரில் அழிவடைவதாலோ தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(22) தன் ஆசானின் முன்பு பொய் பேசுபவன், அல்லது அவருக்கு எதிராகச் செயல்படும் ஒருவன், தனது ஆசானுக்கு ஏற்புடைய ஏதாவதொன்றைச் செய்து அந்தப் பாவத்தில் இருந்து தூய்மையடையலாம்.(23) (பிரம்மச்சரிய) நோன்பிலிருந்து விழுந்தவன், மாட்டுத் தோலை ஆறு மாதங்களுக்கு உடுத்தி, பிராமணக்கொலைக்கு விதிக்கப்பட்ட தவங்களைப் பயின்றால் அந்தப் பாவத்திலிருந்து அவன் தூய்மையடைவான்[7].(24)பிறன்மனையுறவு, அல்லது களவு குற்றம் செய்தவன், ஒரு வருட காலம் கடும் நோன்புகளை நோற்று தூய்மையடையலாம்.(25) மற்றொருவனின் உடைமையைத் திருடியவன், தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் களவு செய்ததற்கு இணையான மதிப்புடைய உடைமையைத் திரும்பக் கொடுக்க வேண்டும். அப்போது அவன் (களவின்) பாவத்திலிருந்து தூய்மையடைவான்.(26) மூத்தவன் {அண்ணன்} திருமணம் செய்வதற்கு முன்பே திருமணம் செய்து கொள்ளும் இளையவனும் {தம்பியும்}, தனக்கு முன்பே திருமணம் செய்து கொண்ட தம்பியை உடைய மூத்தவனும் {அண்ணனும்}, பனிரெண்டு இரவுகளுக்கு ஆன்மத் திரட்சியுடன் கடும் நோன்பை நோற்று தூய்மையடையலாம்.(27) எனினும், தம்பியானவன், தன் பித்ருக்களைக் காப்பதற்காக மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அந்த இரண்டாவது திருமணத்தின் மூலம் முதல் மனைவி தூய்மையடைகிறாள், அவளது கணவன் அவளை அடைவதனால் பாவமிழைத்தவனாக மாட்டான்[8].(28) பெண்கள், மிகக்குறைந்த அளவிலான, தூய்மையான உணவை உண்டு சாதுர்மாஸ்ய நோன்பை நோற்பதால், அவர்கள் பெரும்பாவங்களில் இருந்தும் தூய்மையடைவார்கள் என்று சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் அறிவிக்கின்றனர்.(29) பெண்கள், தங்கள் இதயத்தால் இழைக்கும் பாவங்களைச் சாத்திரங்களை அறிந்தோர் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. (இந்த விபரத்துக்குட்பட்ட) அவர்களுடைய எந்தப் பாவமும், சாம்பலால் தேய்க்கப்பட்ட உலோகத் தட்டைப் போல அவர்களது சூதகச் சுழலால் {மாதவிடாயால்} தூய்மையடைகிறார்கள்.(30)சூத்திரன் உண்டதால் கறைபடிந்த (பித்தளை மற்றும் தாமிரம் சேர்ந்த கலப்பு உலோகத்தால் செய்யப்பட்ட) தட்டுகள், அல்லது மாட்டால் நுகரப்பட்ட, அல்லது பிராமணனின் கண்டூஷத்தால் {எச்சிலால்} கறைபடிந்த அதே உலோகப் பாத்திரங்கள் {வெண்கலப் பாத்திரங்கள்}, தூய்மையாக்கும் பத்து பொருட்களின் மூலம் தூய்மையடையும்[9].(31) ஒரு பிராமணன் முழு அளவிலான அறத்தைப் பயின்று அடைய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. மன்னர் வகையைச் சேர்ந்த ஒரு மனிதன், நாலில் ஒரு பாகம் குறைந்த அளவுக்கு {அறத்தைப்} பயின்று அடைய வேண்டும்.(32) ஒரு வைசியன் இன்னும் நாலில் ஒரு பாகம் (க்ஷத்திரியனைவிடக் கால் பாகம்) குறைந்த அளவுக்கும், ஒரு சூத்திரன் அதனிலும் நாலில் ஒரு பாகம் (வைசியனைவிடக் கால் பாகம்) குறைந்த அளவுக்கு அடையலாம். (பாவக்கழிப்பை உறுதி செய்யும்போது) நால்வகையினரில் ஒவ்வொரு வகையினரும் செய்யும் பாவங்களின் கனம் மற்றும் கனமின்மையை இந்தக் {மேற்கண்ட} கொள்கையின்படியே தீர்மானிக்க வேண்டும்.(33) ஒரு மனிதன், பறவை, அல்லது விலங்கைக் கொன்றுவிட்டாலோ, உயிருடன் கூடிய மரங்களை வெட்டி வீழ்த்திவிட்டாலோ, அவன் தான் செய்த பாவத்தை வெளியிட்டு மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(34) புணரக்கூடாதாரோடு புணர்ந்த ஒருவன், ஈர ஆடைகளுடன் திரிந்து, சாம்பல் படுக்கையில்[10] உறங்குவதே அவனுக்குப் பாவக்கழிப்பாகும் {பரிகாரமாகும்}.(35) ஓ! மன்னா, முன்னுதாரணங்கள், அறிவு, சாத்திரங்கள், பிரம்மனின் விதிகள் ஆகியவற்றின் படி பாவம் நிறைந்த செயல்களுக்கான பாவக்கழிப்புகள் {பரிகாரங்கள்} இவையே.(36)ஒரு பிராமணன், தீமைகள் அனைத்தையும் விலக்கி, கோபத்தையும், வெறுப்பையும் கைவிட்டு, புகழ், பழி ஆகியவற்றை அலட்சியம் செய்து, எப்போதும் சொற்ப உணவையே உண்டு வாழ்ந்து, பேசுவதைத் தவிர்த்து {மௌனவிரதம் இருந்து}, ஒரு புனிதமான இடத்தில் காயத்திரி மந்திரத்தை ஓதினால் அவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைவான்.(37) பகல்வேளையில் அவன் வானத்தையே உறைவிடமாகக் கொள்ளவேண்டும், இரவிலும் அத்தகு இடத்திலேயே அவன் படுக்க வேண்டும். அவன் பகலில் மூன்று முறையும், இரவில் மூன்று முறையும் ஓடையிலோ, தடாகத்திலோ ஆடைகளுடன் மூழ்கி தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும்.(38) கடும் நோன்புகளை நோற்கும் அவன் {பிராமணன்}, பெண்கள், சூத்திரர்கள் மற்றும் வீழ்ந்துவிட்ட மனிதர்கள் ஆகியோரோடு பேசாமல் விலக வேண்டும். அத்தகு ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் ஒரு பிராமணன், அவனால் அறியாமல் செய்யப்பட்ட பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடைவான்.(39) ஒரு மனிதன், ஐம்பூதங்களின் சாட்சியாகச் செய்த நல்ல, அல்லது தீய செயல்களின் கனியை மறுமையில் {அடுத்த உலகில்} அடைகிறான். அறமோ, மறமோ அவ்விரண்டை ஒருவன் எவ்வளவு அடைகிறானோ, அவற்றின் விளைவுளான இன்பத்தையோ, துன்பத்தையோ அதே அளவுக்கு அவன் (இங்கேயே) அடைகிறான்.(40) எனவே, ஒருவன் ஞானம், தவங்கள், அறச்செயல்களின் மூலம் (இங்கேயே) அவன் இன்பத்தை அதிகரித்துக் கொள்கிறான். அதேபோல அவன், தீச்செயல்களுக்கான துன்பங்களையும் அடைகிறான்.(41) எனவே ஒருவன் எப்போதும் அறச்செயல்களைச் செய்து, அறமற்ற செயல்களை மொத்தமாகத் தவிர்க்க வேண்டும்.(42)
குறிப்பிட்ட பாவங்களுக்கான பாவக்கழிப்புகள் என்னென்ன என்பதை இப்போது சொல்லிவிட்டேன். மஹாபாதகங்கள் (கடுமையும் கொடுமையும் நிறைந்த பாவங்கள்) என்றழைக்கப்பம் பாவங்களைத் தவிர அனைத்து பாவத்திற்கும் பாவக்கழிப்புகள் உண்டு.(43) தூய்மையற்ற உணவு மற்றும் முறையற்ற பேச்சுகள் போன்ற பாவங்களைப் பொறுத்தவரையில், அவை அறிந்து செய்யப்பட்டவை, அறியாமல் செய்யப்பட்டவை என்று இரு வகைப்படும்.(44) அறிந்து செய்யப்பட்ட பாவங்கள் கொடியவையாகும், அதே வேளையில், அறியாமல் இழைக்கப்பட்ட பாவங்கள் அற்பமானவையே. அவ்விரண்டிற்கும் பாவக்கழிப்புகள் இருக்கின்றன.(45) உண்மையில் பாவமானது, சொல்லப்பட்டிருக்கும் விதிகளால் (அவற்றை நோற்பதால்) கழுவிக்கொள்ளத்தக்கதாக இருப்பினும், அந்த விதிகள் (தெய்வத்தை) நம்புபவர்களுக்காகவும், {பாவக்கழிப்பில்} நம்பிக்கையுள்ளவர்களுக்காகவும் விதிக்கப்பட்டிருக்கின்றன.(46) அவை நாத்திகர்களுக்கோ, நம்பிக்கையற்றவர்களுக்கோ, செருக்கும், தற்பெருமையும் கொண்டவர்களுக்கோ விதிக்கப்படவில்லை.(47)
ஓ! மனிதர்களில் புலியே, ஓ! அறவோரில் முதன்மையானவனே, இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தை விரும்பும் ஒரு மனிதன், அறத்தின்படியும், அறவோரின் (ஆலோசனையின்) படியும், தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளின்படியும் நடப்பவனாக இருக்க வேண்டும்.(48) எனவே, ஓ! மன்னா, ஏற்கனவே (என்னால்) சொல்லப்பட்ட காரணங்களின் படி, நீ மன்னனின் கடமைகளைச் செய்யும்போதும், உங்கள் உயிர் மூச்சுகளையும், வாரிசுரிமையையும் பாதுகாக்கும்பொருட்டும் உன் எதிரிகளைக் கொன்றிருப்பதால் உன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைவாய்.(49) அல்லது, இவையாவற்றுக்கும் பிறகும் நீ பாவம் நிறைந்தவன் என்று உன்னைக் கருதுவாயானால், பாவக்கழிப்பைச் செய்வாயாக. ஞானிக்குத் தகாத முறையில் துயரின் விளைவால் உன் உயிரை விடாதே” என்றார் {வியாசர்}”.(50)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், புனிதமான அந்த முனிவரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, அந்தத் தவசியிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.”(51)
உணவும், கொடையும்! – சாந்திபர்வம் பகுதி – 36-உண்ணத்தக்கவை, உண்ணத்தகாதவை, அதற்குரிய பாவக்கழிப்புகள், கொடைக்குத் தகுந்தவர், கொடைக்குத்தகாதவர் ஆகியவற்றைக் குறித்துத் தவசிகளிடம் மனு ஆற்றிய உரையை யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர் …
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! பாட்டா, எந்த உணவு தூய்மையானது? எது தூய்மையற்றது? எந்தக் கொடை புகழத்தக்கது? (கொடைகளுக்குத்) தகுந்தவராக எவரைக் கருதலாம்? எவரைக் கருதலாகாது?” என்று கேட்டான்.(1)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகத் தவசிகளுக்கும், படைப்பின் தலைவனான மனுவுக்கும் இடையில் நடந்த ஒரு பழைய உரையாடல் இருக்கிறது.(2) கிருத காலத்தில் {யுகத்தில்} கடும் நோன்புகளைக் கொண்ட ஒரு முனிவர் கூட்டமானது, சுகமாக அமர்ந்திருப்பவரும், படைப்பின் பெரிய பலமிக்கத் தலைவருமான மனுவை அணுகி, கடமைகளைக் குறித்து உரையாற்றும்படி கேட்டுக் கொண்டனர்.(3) {அவர்கள்}, “எந்த உணவை உண்ண வேண்டும்? (கொடைகளுக்குத்) தகுந்த மனிதராக எவர் கருதப்பட வேண்டும்? என்ன கொடைகள் கொடுக்கலாம்? ஒரு மனிதன் எவ்வாறு படிக்க {பயில} வேண்டும்? ஒருவன் என்ன தவங்கள் செய்ய வேண்டும்? என்ன செயல்கள், எவ்வாறு செய்யப்பட வேண்டும்? எந்தச் செயல்கள் செய்யப்படக்கூடாது?” என்று கேட்டனர்.(4)
இவ்வாறு அவர்களால் கேட்கப்பட்டவரும், தெய்வீகமானவரும், தான்தோன்றியுமான மனு, அவர்களிடம், “கடமைகளைக் குறித்துச் சுருக்கமாகவும், விரிவாகவும் விளக்கப் போகிறேன், கேட்பீராக.(5) {அறத்தொடர்பிலிருந்து} விலக்கப்பட்ட பகுதிகளில் (புனித மந்திரங்களை) அமைதியாக ஓதுதல், ஹோமங்கள், நோன்புகள், தன்னைக் குறித்த அறிவு, புனித ஆறுகள், பக்திச் செயல்பாடுகளுக்கு அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் வசிக்கும் பகுதிகள் ஆகியன(6) தூய்மையாக்கும் செயல்பாடுகளாகவும், பொருட்களாகவும் சொல்லப்படுகின்றன. குறிப்பிட்ட சில மலைகளும் தூய்மையாக்குபவையே, தங்கம் உண்ணுதல், ரத்தினங்களும், மதிப்புமிக்கக் கற்களும் மூழ்கிய நீரில் நீராடுதல் ஆகியனவும் தூய்மையாக்குபவையே[1].(7) புனிதத்தலங்களுக்குப் பயணிப்பது மற்றும் புனித நெய்யை உண்பது ஆகியனவும், விரைவாக மனிதனைத் தூய்மையாக்கவல்லவையே என்பதில் ஐயமில்லை.(8) செருக்குடைய {அகங்காரம் கொண்ட} எந்த மனிதனும் எப்போதும் ஞானியெனச் சொல்லப்பட மாட்டான். அவன் நீண்ட நாட்கள் வாழ விரும்பினால், (தன் செருக்குக்கான பாவக்கழிப்பாக) மூன்று இரவுகள் வெண்ணீரைக் குடிக்க வேண்டும்[2].(9)கொடுக்கப்படாதவற்றை ஏற்க மறுப்பது, கொடை, (சாத்திரக்) கல்வி, தவம், தீங்கிழையாமை {அஹிம்சை}, உண்மை, கோபத்திலிருந்து விடுதலை, வேள்விகளில் தேவர்களை வழிபடுதல் ஆகியவையே அறத்தின் பண்புகளாகும்.(10) இருப்பினும், காலம் மற்றும் இடத்திற்கு ஏற்ப அந்த அறமே கூடப் பாவமாகக்கூடும். இவ்வாறே (அடுத்தவருக்குச் சொந்தமானவற்றை) ஏற்பது, பொய்மை, தீங்கிழைத்தல், கொலை செய்தல் ஆகியவையும் கூடச் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் அறமாகக் கூடும்[3].(11) நீதியைத் தீர்மானிக்க இயன்ற மனிதர்களைப் பொறுத்தவரை, செயல்கள் என்பன அறம் சார்ந்தவை {நல்லவை}, மறம் சார்ந்தவை {பாவம் நிறைந்த தீயவை} என இரு வகைப்படும். மேலும் உலகம் சார்ந்த மற்றும் வேதம் சார்ந்த கண்ணோட்டத்தில், அறமும், பாவமும் (விளைவுகளின் அடிப்படையில் நல்லவையாகவோ, தீயவையாகவோ அமைகின்றன. வேதத்தின் கண்ணோட்டத்தில் அறமும், பாவமும், (ஒரு மனிதன் செய்யும், அல்லது செய்யாத அனைத்தும்) செயல் மற்றும் செயலின்மை என்ற இருவகையில் வகுக்கப்படுகின்றன. (வேதச்சடங்குகளைச் செய்யாமல், தியான வாழ்வைப் பின்பற்றி) செயல்பாடின்றி இருப்பது (மறுபிறப்பில் இருந்து) விடுதலையளிக்கிறது; அதே வேளையில் (வேதச் சடங்குகளைப் பயில்வதால் உண்டாகும்) செயல்பாட்டின் விளைவுகள் மீண்டும் மீண்டும் இறப்பையும், மறுபிறப்பையும் தருகின்றன. உலகப் பார்வையில் கண்டால், தீச்செயல்கள் தீமைக்கும், நற்செயல்கள் நன்மைக்கும் இட்டுச் செல்கின்றன. எனவே உலகக் கண்ணோட்டத்தில் அறத்தையம், பாவத்தையும், அவற்றின் விளைவுகளால் உண்டான நல்ல மற்றும் தீய தன்மைகளைக் கொண்டு வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்[4].(12,13)(வெளிப்படையாகவே) தீமையாகத் தெரியும் செயல்களை, தேவர்கள், சாத்திரங்கள், உயிர், உயிர்வாழ்வதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைக் கருதி செய்யும்போது, அவை நன்மையான விளைவுகளையே உண்டாக்கும்.(14) எதிர்பார்ப்புடன் செய்யப்படும் செயல்களுக்கும், ஐயம் நிறைந்ததாக இருப்பினும், எதிர்காலத்தில் (யாரோ ஒருவருக்கு) காயத்தை ஏற்படுத்தும், அல்லது காயமேற்படுத்தும் விளைவுகளைத் தரும் என்று தெரிந்தே செய்யப்படும் செயல்களுக்கும் பாவக்கழிப்புகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.(15) கோபத்தாலோ, தீர்மானிக்க முடியாத குழப்பத்தாலோ ஒரு செயல் செய்யப்படும்போது, பாவக்கழிப்பானது, உள்ளுணர்வு, சாத்திரங்கள் மற்றும் அறிவு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படியும், உடலுக்கு வலியைத் தரும்படியும் செய்யப்பட வேண்டும். மேலும் மனத்திற்கு ஏற்புடையதாகவோ, ஏற்பில்லாததாகவோ ஏதாவது செய்யப்பட்டால், அதனால் உண்டாகும் பாவம் புனிதமாக்கப்பட்ட உணவு மற்றும் மந்திரங்களை ஓதுதல் ஆகியவற்றின் மூலம் தூய்மையடையும்.(16,17)
(ஏதோ ஒரு குறிப்பிட்ட வழக்கில்) தன் தண்டக் கோலை புறந்தள்ளும் மன்னன், ஓரிரவு உண்ணா நோன்பிருக்க வேண்டும். (ஏதோ ஒரு குறிப்பிட்ட வழக்குக்கான) தண்டனை வழங்குவதில் மன்னனுக்கு அறிவுரைகூறாமல் தவிர்க்கும் புரோகிதர், பாவக்கழிப்பாக மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(18) துயரத்தின் காரணமாக ஆயுதம் மூலமாகத் தற்கொலை செய்ய முயன்ற மனிதன், {பாவக்கழிப்பாக} மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(19) தங்கள் கடமைகளையும், தங்கள் வகை {வர்ணம்}, குலம், நாடு, குடும்பம் சம்பந்தப்பட்ட நடைமுறைகளையும் கைவிடுபவர்களுக்கும், தங்கள் சொந்த அறத்தையே {தர்மத்தையே}[5] கைவிடுபவர்களுக்கும் எந்தப் பாவக்கழிப்பும் கிடையாது.(20)ஒரு சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற ஐயம் எழும்போது, வேத சாத்திரங்களை அறிந்த பத்து பேரோ, அவற்றை {வேத சாத்திரங்களை} அடிக்கடி உரைக்கும் மூன்று பேரோ தீர்மானிக்க {ஐயத்தைத் தெளிவிக்க} வேண்டும் என்ற சாத்திரங்களின் ஆணை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.(21) காளை, பூமி, சிற்றெறும்புகள், புழுதியில் உதிக்கும் புழுக்கள், நஞ்சு ஆகியவை பிராமணர்களால் உண்ணப்படக்கூடாது.(22) செதில்களற்ற மீன்களையும், தவளைகளையும், நான்கு கால் கொண்ட நீர்விலங்குகளில் ஆமைகளைத்தவிர வேறு எந்த விலங்கையும் அவர்கள் {பிராமணர்கள்} உண்ணக்கூடாது[6].(23) பாசங்கள் என்றழைக்கப்படும் நீர்க்கோழிகள், வாத்துகள், சுபர்ணங்கள், சக்கரவாகங்கள், மீன்கொத்திப்பறவைகள், நாரைகள், காக்கைகள், நீர்க்காகங்கள், கழுகுகள், பருந்துகள், ஆந்தைகள்,(24) மற்றும் ஊன் உண்பவையும், கூரிய நீண்ட பற்களைக் கொண்டவையுமான நான்கு கால் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றையும் உண்ணக்கூடாது,(25) செம்மறி ஆடு, பெண்கழுதை, பெண் ஒட்டகம், புதிதாகக் கன்றீன்ற பசு, {மனிதப்} பெண்கள், மான்கள் ஆகியவற்றின் பாலையும் ஒரு பிராமணன் பருகக் கூடாது.(26) இதைத்தவிரவும், பித்ருக்களுக்குக் காணிக்கையளிக்கப்பபட்ட உணவு, அண்மையில் பிள்ளை ஈன்ற பெண்ணால் சமைக்கப்பட்ட உணவு, அறியாத மனிதரால் சமைக்கப்பட்ட உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது. அண்மையில் கன்றீன்ற பசுவின் பாலும் பருகப்படக்கூடாது.(27)ஒரு க்ஷத்திரியனால் சமைக்கப்பட்ட உணவை ஒரு பிராமணன் உண்டால், அஃது அவனது சக்தியைக் குறைக்கும்; ஒரு சூத்திரனால் அளிக்கப்பட்ட உணவை உண்டால், அவனிடம் பிரம்ம ஒளி குன்றும், கொல்லன், அல்லது கணவனோ, பிள்ளையோ இல்லாத பெண் கொடுக்கும் உணவை அவன் உண்டால், அஃது அவனது வாழும் காலத்தைக் குறைக்கும்.(28) வட்டிக்குப் பணம் தருபவனால் அளிக்கப்படும் உணவு புழுதிக்குச் சமமானது, அதே வேளையில், பரத்தமையினால் வாழும் ஒரு பெண்ணால் கொடுக்கப்படும் உணவு விந்துக்குச் சமமானது. தங்கள் மனைவியரின் கற்பில்லாமையைச் சகித்துக் கொள்ளும் மனிதர்களால் அளிக்கப்படும் உணவும், தங்கள் துணைவிகளால் ஆளப்படும் மனிதர்களால் அளிக்கப்படும் உணவும் தவிர்க்கப்பட வேண்டியன.(29)
வேள்வியின் குறிப்பிட்ட பகுதியில் (கொடைகள் பெற) தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதன் {யாகத்தில் தீக்ஷை பெற்றவன்}, தன் செல்வத்தை அனுபவிக்காதவன், அல்லது கொடைகள் அளிக்காதவனால் கொடுக்கப்படும் உணவு, சோமத்தை விற்பவன், காலணி செய்பவன், கற்பற்ற பெண், வண்ணான்,(30) மருத்துவன், காவலாளி, மனிதக் கூட்டம், மொத்த கிராமத்தால் சுட்டப்படும் ஒருவன், ஆடல் மகளிரின் ஆதரவில் வாழ்பவன்,(31) அண்ணனுக்கு முன்பு மணமுடித்த தம்பி, பாணர்கள், வந்திகள், சூதாடிகள் ஆகியோரால் கொடுக்கப்படும் உணவு, இடது கையால் பெறப்பட்ட உணவு, நாள்பட்ட உணவு,(32) மதுவில் கலந்த உணவு, ஏற்கனவே உண்ணப்பட்ட உணவின் பகுதி, விருந்தில் எஞ்சிய உணவு ஆகியவற்றை (ஒரு பிராமணன்) உண்ணக்கூடாது. பணியாரங்கள், கரும்பு, அறைக்கீரை, இனிப்பூட்டப்பட்ட பாலில் கொதிக்கவைக்கப்பட்ட அரிசி {பால்சோறு/பாயாசம்} ஆகியவை தங்கள் இன்சுவையை இழந்தால் உண்ணப்படக்கூடாது.(33) தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்படாத வறுத்த வாற்கோதுமை மாவு {சத்துமாவு}, வறுக்கப்பட்ட பிறவகைத் தானியங்கள், தயிரில் கலந்தவை ஆகியவை நாட்பட்டதனால் உண்ணப்படக்கூடாது, இனிப்பூட்டப்பட்ட பாலில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசி {பாயாசம்}, எள் கலந்த உணவு, இறைச்சி, அப்பங்கள் ஆகியவை இல்லற நோன்பு நோற்கும் பிராமணர்களால் உண்ணப்படக்கூடாது. தன் இல்லத்தில் இவ்வாறு வாழும் ஓர் இல்லறத்தான், உலகைத் துறந்த பிக்ஷுவைப் போல ஆகிறான்.(34-36) வீட்டில் தன் மனைவியரோடு வாழும் இத்தகு நடத்தை கொண்ட மனிதன், பெரும் அறத்தகுதியை ஈட்டுகிறான்.
புகழ் அடைவதற்காகவோ (நிந்தனை போன்ற) அச்சத்தின் காரணமாகவோ, ஒரு நலம் விரும்பிக்காகவோ ஒருவன் கொடையளிக்கக்கூடாது.(37) பாடல், ஆடல் செய்து வாழ்பவருக்கோ, தொழில்முறை கோமாளிகளுக்கோ, போதையுண்டவனுக்கோ, அறிவு குலைந்தவனுக்கோ, கள்வனுக்கோ, பழுதூற்றுபவனுக்கோ,(38) முட்டாளுக்கோ, நிறம் மங்கியவனுக்கோ, அங்கப்பழுதுள்ளவனுக்கோ, உயரம் குறைந்தவனுக்கோ {குள்ளனுக்கோ}, தீயவனுக்கோ, இழிந்த தீய குடும்பத்தில் பிறந்தவனுக்கோ, நோன்புகள் நோற்று புனிதமடையாதவனுக்கோ நல்லோன் எவனும் கொடையளிக்க மாட்டான்.(39) வேத அறிவில்லாத பிராமணனுக்கு எந்தக் கொடையும் அளிக்கப்படக்கூடாது. ஸ்ரோத்ரியனாக[7] இருந்தால் மட்டுமே அவனுக்குக் கொடைகள் அளிக்கப்படலாம். முறையற்ற கொடையும், முறையற்ற கொடையேற்பும், கொடுப்பவனுக்கும், பெறுபவனுக்கும் தீய விளைவுகளையே உண்டாக்கும்.(40) பாறை, அல்லது கருங்காலி மரத்தின் துணை கொண்டு பெருங்கடலைக் கடக்க முயல்பவன் மூழ்குவதைப் போலவே, (இத்தகு வழக்கில்) கொடுப்பவனும், அதைப் பெறுபவனும் என இருவரும் சேர்ந்தே மூழ்குவார்கள்.(41)ஈர விறகால் மறைக்கப்படும் நெருப்பு சுடர்விடாததைப் போலவே தவம், கல்வி, பக்தி ஆகியவை அற்ற கொடையேற்பாளன், (கொடையாளனின்) கொடையால் எந்த நன்மையையும் அடைய முடியாது.(42) (மனித மண்டை) ஓட்டில் உள்ள நீரும், நாயின் தோலில் செய்யப்பட்ட துருத்தியில் உள்ள பாலும், அவை ஏற்றுக் கொண்ட பாத்திரத்தின் விளைவால் தூய்மையற்றதாவதைப் போலவே, நன்னடத்தை இல்லாதவரிடம் வேதங்களும் கனியற்றதாகப் போகும்.(43) மந்திரங்கள் அறியாதவனும், சாத்திரங்களை அறியாதவனும், பொறாமை குணம் கொண்டவனுமான ஓர் இழிந்த பிராமணனுக்குக் கருணையின் அடிப்படையில் ஒருவன் கொடையளிக்கலாம்.(44) ஏழை, அல்லது துன்பப்படுபவன், அல்லது நோயாளி மனிதனுக்கு ஒருவன் கருணையின் மூலம் கொடையளிக்கலாம். ஆனால், அத்தகு மனிதனுக்குக் கொடுப்பதால் (ஆன்ம) நன்மை பெற முடியும் என்ற நம்பிக்கையிலோ, அதன் மூலம் அறத்தகுதி ஈட்ட முடியும்என்ற நம்பிக்கையிலோ கொடையளிக்கக்கூடாது.(45)
வேதங்களை அறியாத பிராமணனுக்குக் கொடையளிப்பது பெறுபவனுடைய குறையின் விளைவால் முற்றிலும் கனியற்றதாகிறது என்பதில் எந்த ஐயமும் கிடையாது.(46) மரத்தால் செய்யப்பட்ட யானையையோ, தோலால் செய்யப்பட்ட மானையோ போன்றவனே வேத கல்வியற்ற பிராமணன். மேற்கண்ட மூன்றிடமும் பெயரையன்றி வேறேதும் இருப்பதில்லை.(47) மகளிரிடம் உற்பத்தி செய்ய முடியாத அலியைப் போலவோ, பசுவிடம் உற்பத்தி செய்ய முடியாத பசுவைப் போலவோ, இறகுகளற்று வாழும் ஒரு பறைவையைப் போலவோ மந்திரங்கள் இல்லாத பிராமணனும் வாழ்வான்.(43) பருப்பற்ற தானியம், நீரற்ற கிணறு, சாம்பலில் ஊற்றப்படும் நீர்க்காணிக்கைகளைப் போன்றதே கல்வியில்லாத பிராமணனுக்கு அளிக்கப்படும் கொடையாகும்.(49) கல்லாத பிராமணன், தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் கொடுக்கப்படும் உணவை அழிப்பவனும், (அனைவரின்) எதிரியுமாவான். அத்தகு மனிதனுக்குக் கொடுக்கப்படும் கொடை ஏதிலியாகப் போகும். எனவே, அவன் (அடுத்தவர் செல்வத்தைக் கொள்ளையடிக்கும்) கள்வனாவான். மறுமையில் அருள் உலகங்களை அடைவதில் அவன் வெல்லவே முடியாது” {என்றார் மனு}.(50)
ஓ! யுதிஷ்டிரா, (அந்தச் சந்தர்ப்பத்தில்) மனுவால் சொல்லப்பட்ட அனைத்தையும் உனக்குச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். ஓ! பாரதக் குலத்தின் காளையே, இந்த உயர்ந்த உரையாடல் அனைவராலும் கேட்கப்பட வேண்டும்” {என்றார் வியாசர்}.(51)
தலைநகர் நுழைந்த நீதிமகன்! – சாந்திபர்வம் பகுதி – 37-மன்னனின் கடமைகள் மற்றும் அறநெறி குறித்துப் பீஷ்மர் விளக்குவார் எனச் சொன்ன வியாசர்; நாடாளச் சொல்லி மீண்டும் யுதிஷ்டிரனிடம் வற்புறுத்திய கிருஷ்ணன்; வியாசர் மற்றும் கிருஷ்ணனின் சொற்களைக் கேட்டு மனத்தில் அமைதியை அடைந்த யுதிஷ்டிரன், தலைநகரான ஹஸ்தினாபுரத்திற்கள் தன் பரிவாரங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நுழைந்தது .
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஓ! புனிதமான பெருந்தவசியே, மன்னர்களின் கடமைகள் மற்றும் நால்வகையினரின் கடமைகள் அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, துயர் நிறைந்த காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறையையும், அறநெறியின் பாதையில் பயணித்து நான் எவ்வாறு உலகை அடக்க முடியும் என்பதையும் நான் கேட்க விரும்புகிறேன்.(2) பாவக்கழிப்பு {பரிகாரங்கள்}, உண்ணாநோன்புகள் நோற்பது, ஆகியவற்றைக் குறித்ததும், பெரும் ஆவலைத் தூண்டவல்லதுமான இந்த உரை என்னை மகிழ்ச்சியில் நிறைக்கிறது.(3) அறப்பயிற்சியும், மன்னர்களுக்கான கடமைகளையாற்றுவதும் எப்போதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருக்கின்றன. இவ்விரண்டையும் இணங்கச் செய்யும் நினைப்பே என் மனத்தை அடிக்கடி திகைக்கச் செய்கிறது” என்றான்.(4)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அப்போது வேதங்களை அறிந்தோரில் முதன்மையானவரான வியாசர், பழமையானவரும், அனைத்தையும் அறிந்தவருமான நாரதரின் மீது தன் கண்களைச் செலுத்தியவாறே {யுதிஷ்டிரனிடம்},(5) “ஓ! மன்னா, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டோனே, கடமைகளையும், அறநெறியையும் குறித்து முழுமையாக நீ கேட்கவிரும்பினால் குருக்களின் பாட்டனான கிழவர் பீஷ்மரிடம் கேட்பாயாக.(6) கடமைகள் அனைத்தையும் அறிந்தவரும், உலகளாவிய அறிவைக் கொண்டவருமான பாகீரதியின் {கங்கையின்} மைந்தர், கடமைகள் குறித்து நீ இதயத்தில் கொண்டிருக்கும் கடினமான ஐயங்கள் அனைத்தையும் போக்குவார்.(7) மூவழிகளில் செல்லும் தெய்வீக ஆறானவளும், நுண்ணறிவு கொண்டவளுமான அந்தத் தேவியே {கங்கையே} அவரை ஈன்றெடுத்தாள். இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவரையும் அவர் {பீஷ்மர்} தன் கண்களால் கண்டவராவார்.(8) அவர், பிருஹஸ்பதியைத் தலைமையாகக் கொண்ட தெய்வீக முனிவர்களைத் தன் கடமையுணர்வு மிக்கத் தொண்டுகளால் நிறைவு செய்து, மன்னர்களின் கடமைகள் குறித்த அறிவை அடைந்தார்.(9) குருக்களில் முதன்மையான அவர் {பீஷ்மர்}, உசனஸும் {அசுரகுரு சுக்கிரரும்}, மறுபிறப்பாளரான தேவர்களின் ஆசானும் {பிருஹஸ்பதியும்} அறிந்த அறிவியல் மற்றும் அதன் பொருள் விளக்கங்களின் அறிவை அடைந்தவராவார்.(10) அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர், கடும் நோன்புகள் நோற்று, வசிஷ்டர் மற்றும் பிருகு குலத்தின் சியவனர் ஆகியோரிடம் இருந்து வேதங்கள் அனைத்தையும், அவற்றின் அங்கங்களையும் குறித்த அறிவை அடைந்தார்.(11)
பெரும்பாட்டனின் {பிரம்மனின்} மூத்த மகனும், சுடர்மிக்கக் காந்தி கொண்டவரும், ஆன்ம மற்றும் மனோ அறிவியல் குறித்த உண்மைகளை அறிந்தவருமான சனத்குமாரரிடம் அவர் {பீஷ்மர்} பழங்காலத்தில் கல்வி பயின்றார்.(12) யதிகளின் {துறவிகளின்} கடமைகளைக் குறித்து மார்க்கண்டேயரின் உதடுகள் மூலமாகவே முற்றிலுமாக அறிந்தார். அந்த மனிதர்களில் காளை, ராமர் {பரசுராமர்} மற்றும் சக்ரன் {இந்திரன்} ஆகியோரிடம் இருந்து ஆயுதங்கள் அனைத்தையும் அடைந்தார்.(13) மனிதர்களுக்கு மத்தியில் பிறந்தவராக இருப்பினும், மரணம் இன்னும் அவரது கட்டுக்குள்ளேயே இருக்கிறது. பிள்ளையற்றவராக இருப்பினும், மறுமையில் அவருக்குப் பல அருளுலகங்கள் காத்திருக்கின்றன என்று நாங்கள் கேள்விப்படுகிறோம்.(14) பெரும் தகுதி படைத்த மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களே அவரது ஆலோசகர்களாக எப்போதும் இருந்துள்ளனர். அவர் அறியாதது என்று {இனி} அறியப்பட வேண்டும் என்றும் இங்குப் பொருளேதும் இல்லை.(15) கடமைகள் அனைத்தையும் உணர்ந்தவரும், அறநெறியின் நுண்ணிய உண்மைகள் அனைத்தையும் அறிந்தவருமான அவரே {பீஷ்மரே} உன்னிடம் கடமை மற்றும் அறநெறி குறித்து உரையாற்றுவார். அவர் {பீஷ்மர்} தனது உயிர்மூச்சைக் கைவிடுமுன் அவரிடம் செல்வாயாக” என்றார் {வியாசர்}.(16) அவரால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், பேரறிஞனுமான உயர் ஆன்ம குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, நாநயமிக்கவர்களில் முதன்மையானவரும், சத்தியவதியின் மகனுமான வியாசரிடம் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்.(17)
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “அருவருப்பை ஏற்படுத்தக் கூடியதும், பெரியதுமான உறவினர்கள் படுகொலையைச் செய்து, அனைத்திற்கு எதிரான குற்றவாளியாகவும், பூமியை அழித்தவனாகவும் நான் இருக்கிறேன்.(18) நேர்மையாகப் போரிட்ட போர்வீரரான பீஷ்மரை, வஞ்சகத்தின் உதவியால் கொன்ற பிறகு, (கடமைகள் மற்றும் அறநெறி குறித்த) கேள்விகளைக் கேட்பதற்காக என்னால் அவரை எவ்வாறு அணுக முடியும்?” என்று கேட்டான்.(19)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “வலிய கரங்களைக் கொண்ட யது குலத்தின் உயர் ஆன்மத் தலைவன் {கிருஷ்ணன்}, நால்வகையினர் அனைவரும் {நான்கு வர்ணங்களும்} நன்மை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்டு, மீண்டும் அந்த மன்னர்களில் முதன்மையானவனிடம் {யுதிஷ்டிரனிடம்} (பின் வரும் வார்த்தைகளைப்) பேசினான்.(20)
வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, “துயரத்தில் இத்தகு பிடிவாதம் செய்வது உமக்குத் தகாது. ஓ! மன்னர்களில் சிறந்தவரே, புனிதமான வியாசர் சொன்னதைச் செய்வீராக.(21) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, பிராமணர்களும், பெரும் சக்தி கொண்ட உமது இந்தச் சகோதரர்களும், கோடையின் முடிவில் மேகங்களின் தேவனை வேண்டும் மனிதர்களைப் போல உம்மை வேண்டி உம்முன்னால் நிற்கின்றனர்.(22) ஓ! மன்னா, {போருக்குத்} திரண்ட மன்னர்களில் கொல்லப்படாமல் எஞ்சியோர் மற்றும் குருஜாங்கல நாட்டின் நால்வகை மக்கள் அனைவரும் இங்கே இருக்கின்றனர்.(23) ஓ! எதிரிகளை எரிப்பவரே, ஓ! எதிரிகளைக் கொல்பவரே, இந்த உயர் ஆன்ம பிராமணர்களுக்கு ஏற்புடையதைச் செய்வதற்காகவும், அளவிலா சக்தி கொண்ட மதிப்பிற்குரிய பெரியவர் வியாசரின் ஆணைக்குக் கீழ்ப்படிந்தும்,(24) உமது நலன்விரும்பிகளான எங்களின், மற்றும் திரௌபதியின் வேண்டுகோளின்படியும், எங்களுக்கு ஏற்புடையவற்றையும், உலகத்திற்கு நன்மையளிப்பனவற்றையும் செய்வீராக” என்றான் {கிருஷ்ணன்}.(25)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனான அந்த உயர் ஆன்ம மன்னன் (யுதிஷ்டிரன்), கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மொத்த உலகத்தின் நன்மைக்காகத் தன் இருக்கையில் இருந்து எழுந்தான்.(26) பெரும்புகழைக் கொண்டவனும், மனிதர்களில் புலியுமான அந்த யுதிஷ்டிரன், கிருஷ்ணனாலும், தீவில் பிறந்தவராலும் (வியாசராலும்), தேவஸ்தானர், ஜிஷ்ணு {அர்ஜுனன்} ஆகியோராலும், இன்னும் பலராலும் வேண்டிக் கொள்ளப்பட்டதால், தன் துயரையும், கவலையையும் கைவிட்டான்.(27,28) வழக்கமாக மனிதர்கள் அனைவராலும் கேட்கப்படுவதும், அனைவரும் கேட்கத்தகுந்ததுமான சுருதிகளின் தீர்மானங்களையும், அந்தத் தீர்மானங்களின் விளக்கங்கள் குறித்த அறிவியலையும் முழுமையாக அறிந்தவனான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மனோ அமைதியை அடைந்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தான்.(29) நட்சத்திரங்களால் சூழப்பட்ட நிலவைப் போல, அவர்களால் சூழப்பட்டிருந்த மன்னன், வரிசையின் தலைமையில் திருதராஷ்டிரனை முன்னிட்டு, நகருக்குள் நுழைவதற்காகப் புறப்பட்டான்.(30)
கடமைகள் அனைத்தையும் அறிந்தவனும், குந்தியின் மகனுமான யுதிஷ்டிரன், நகருக்குள் நுழைய விரும்பி, தேவர்களுக்கும், ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கும் தன் வழிபாட்டைக் காணிக்கையாக்கினான்.(31) பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, மங்கலக் குறிகளைக் கொண்டவையும், வெள்ளை நிறத்திலானவையுமான பதினாறு இளங்காளைகள் பூட்டப்பட்டதும், வெள்ளை விரிப்புகளாலும், மான் தோல்களாலும் மறைக்கப்பட்டதும், வேத மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்டதுமான ஒரு புதிய தேரில் ஏறினான். பாணர்களாலும், வந்திகளாலும் துதிக்கப்பட்ட அந்த மன்னன், அமுத வாகனத்தைச் செலுத்தும் சோமனைப் {இந்திரனைப்} போல அந்தத் தேரில் ஏறினான்.(32,33) பயங்கர ஆற்றலைக் கொண்டவனும், அவனது தம்பியுமான பீமன், கடிவாளங்களை ஏந்தினான். அர்ஜுனன், பெரும் பிரகாசம் கொண்ட வெண்குடையை அவனது தலைக்கு மேல் ஏந்தினான்.(34) தேரில் இருந்த அந்த வெண்குடையானது, ஆகாயத்தில் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட வெண்மேகத்தைப் போல அழகானதாக இருந்தது.(35) மாத்ரியின் வீர மகன்களான நகுலன், சகாதேவன் ஆகியோர் இருவரும், நிலவின் கதிர்களைப் போல வெண்மையானவையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான வெண்சாமரங்கள் இரண்டால் மன்னனுக்கு விசிறி விட்டனர்.(36) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த ஐந்து சகோதரர்களும் (ஒவ்வொருவரின் உடல் தொகுப்பிலும் நுழைந்திருக்கும்) ஐம்பூதங்களைப் போலத் தெரிந்தனர்.(37)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, மனோவேகம் கொண்ட குதிரைகள் பூட்டப்பட்ட மற்றொரு வெண்தேரைச் செலுத்தி வந்த யுயுத்சு, பாண்டுவின் மூத்த மகனுக்குப் {யுதிஷ்டிரனுக்குப்} பின்னால் தொடர்ந்து சென்றான்.(38) சாத்யகியுடன் கூடிய கிருஷ்ணன், சைவியம், சுக்ரீவம் ஆகியவை பூட்டப்பட்ட தன்னுடைய பிரகாசமான தேரில் குருக்களைப் பின்தொடர்ந்து சென்றான்.(39) ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிருதையுடைய {குந்தியுடைய} மகனின் பெரியப்பன் {திருதராஷ்டிரன்}, மனிதர்களின் தோள்களில் சுமக்கப்படும் பல்லக்கில் வரிசையின் தலைமையிலும், காந்தாரியின் துணையுடனும் சென்று கொண்டிருந்தான்.(40) குரு அரச குடும்பத்தின் பிற பெண்கள், குந்தி, கிருஷ்ணை {திரௌபதி} ஆகியோர் அனைவரும், விதுரனின் தலைமையிலான சிறந்த வாகனங்களில் சென்றனர்.(41) பெரும் எண்ணிக்கையிலான தேர்களும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட யானைகளும், காலாட்படை வீரர்களும், குதிரைகளும் பின்னால் தொடர்ந்து சென்றன.(42) பாணர்களும், வந்திகளும் இனிய குரலில் மன்னனின் புகழைப் பாடிக் கொண்டிருக்க, அவன் {மன்னன்}, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரை {ஹஸ்தினாபுரத்தை} நோக்கிச் சென்றான்.(43)
ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {ஜனமேஜயா}, பூமியில் இதுவரை எப்போதும் காணப்படாததைப் போல மன்னன் யுதிஷ்டிரனின் பயணம் மிக அழகானதாக இருந்தது. உடல்நலமிக்க, உற்சாகமான மனிதர்கள் கூட்டம், எண்ணற்ற குரல்களில் பாடிக் கொண்டிருப்பது அங்கே கேட்கப்பட்டது.(44) பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்} முன்னேறிச் செல்கையில், நகரமும், அதன் தெருக்களும், (மன்னனைக் கௌரவிப்பதற்காக வெளியே வந்திருந்த) மகிழ்ச்சியான குடிமக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(45) மன்னன் கடந்து சென்ற இடங்கள் வெண்ணிறத்திலான அழகிய மலர்த்தோரணங்களாலும், எண்ணற்ற கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நகரத்தின் வீதிகள் நறுமணப் பொருட்களால் மணமூட்டப்பட்டிருந்தன.(46) அரண்மனையைச் சுற்றிலும் நறுமணப்பொடிகளும், மலர்களும், நறுமணம் வீசும் செடிகளும் நிறைந்திருந்தன; மலர்மாலைகளும், தோரணங்களும் தொங்கிக் கொண்டிருந்தன.(47) ஒவ்வொரு வீட்டின் வாசலிலும், விளிம்பு வரை நீர் நிறைந்த புதிய உலோகக் கலசங்கள் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பிட்ட இடங்களில் நல்ல நிறம் கொண்ட அழகிய கன்னிகையர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.(48) நண்பர்களுடன் கூடியவனும், இனிய சொற்களால் புகழப்படுபவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்த நகரவாயிலுக்குள் நுழைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(49)
சார்வாகன்! – சாந்திபர்வம் பகுதி – 38-திரௌபதியைப் புகழ்ந்த மகளிர்; அரண்மனையை அடைந்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனைப் புகழ்ந்த குடிமக்கள்; ஆசி வழங்கிய பிராமணர்கள்; பிராமணனாக வேடம் பூண்டு வந்த ராட்சசன்; யுதிஷ்டிரனை நிந்தித்த சார்வாகன்; அவனைப் பணிந்து வணங்கிய யுதிஷ்டிரன்; சார்வாகனின் பேச்சை மறுத்து, தங்கள் குரலொலியாலேயே சார்வாகனைக் கொன்ற பிராமணர்கள்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பார்த்தர்கள் நகருக்குள் நுழைந்த நேரத்தில், அக்காட்சியைக் காண ஆயிரக்கணக்கான குடிமக்கள் வெளியே வந்தனர்.(1) ஒவ்வொரு கனமும் பெருகும் கூட்டத்தைக் கொண்டவையும், நன்கு அலங்கரிக்கப்பட்டவையான சதுக்கங்களும், வீதிகளும், நிலவின் எழுச்சியில் பெருகும் பெருங்கடலைப் போல அழகாகத் தெரிந்தன.(2) ஓ! பாரதா {ஜனமேஜயா}, வீதியோரங்களில் நின்றவையும், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையும், மகளிர் நிறைந்தவையுமான பெரும் மாளிகைகள், இந்தப் பெரும் கூட்டத்தால் நடுங்குவதாகத் தெரிந்தன.(3) அவர்கள் {அந்தப் பெண்கள்} பணிவான அடக்கமான வார்த்தைகளில் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் மற்றும் மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுல, சகாதேவன்} ஆகியோரைப் புகழ்ந்தனர்.(4)
அவர்கள், “ஓ! அருளப்பட்ட பாஞ்சால இளவரசியே {திரௌபதியே}, (ஏழு) முனிவர்களின் அருகில் இருக்கும் கௌதமியைப் போலவே இந்த மனிதர்களில் முதன்மையானோருக்குப் பணிவிடை செய்யும் நீ அனைத்துப் புகழுக்கும் தகுந்தவளாவாய்.(5) ஓ! மங்கையே {திரௌபதியே}, உன் செயல்களும், நோன்புகளும் உனக்கு அவற்றின் கனிகளைப் பெற்றுத் தந்தன” என்றனர். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வகையிலேயே இளவரசியான கிருஷ்ணையை {திரௌபதியை} அந்தப் பெண்கள் புகழ்ந்தனர்.(6)
ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்தப் புகழ்ச்சிகள், ஒருவருடனொருவர் பேசும் அவர்களது பேச்சுகள், (மனிதர்களால் உண்டான) மகிழ்ச்சிக் கூச்சல் ஆகியவற்றின் விளைவால் அந்நகரமே பேராரவாரத்தால் நிறைந்தது.(7) தனக்குத் தகுந்த நடத்தையுடன் வீதிகளின் ஊடாகக் கடந்து சென்ற யுதிஷ்டிரன், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட (குருக்களின்) அழகிய அரண்மனைக்குள் நுழைந்தான்.(8) நகரத்தையும், மாகாணங்களையும் சார்ந்த மக்கள் அந்த அரண்மனையை அணுகி, காதுகளுக்கு ஏற்புடுயை பேச்சுகளைப் பேசினர்.(9)
அவர்கள், “ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, ஓ! எதிரிகளைக் கொல்பவனே, நற்பேற்றாலேயே நீ உன் எதிரிகளை வென்றாய். நற்பேற்றாலே அறம் மற்றும் ஆற்றலின் மூலம் உன் நாட்டை நீ மீட்டாய்.(10) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, (சொர்க்கவாசிகளைக்) காக்கும் இந்திரனைப் போல உன் குடிமக்களை அறம்சார்ந்து பாதுகாத்து, நூறு ஆண்டுகளுக்கு எங்கள் ஏகாதிபதியாக இருப்பாயாக” என்றனர்.(11)
அரண்மனை வாயிலில் இவ்வாறு அருள்நிறைந்த பேச்சுகளால் புகழப்பட்டும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பிராமணர்களின் ஆசிகளை ஏற்றுக் கொண்டும்,(12) வெற்றியாலும், தன் மக்களின் ஆசிகளாலும் அருளப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, இந்திரனின் மாளிகைக்கு ஒப்பான அந்த அரண்மனைக்குள் நுழைந்து, தன் தேரில் இருந்து இறங்கினான்.(13) அருளப்பட்டவனான யுதிஷ்டிரன், அறைகளுக்குள் நுழைந்து, வீட்டில் இருந்த தேவர்களை அணுகி, ரத்தினங்களாலும், நறுமணப்பொருட்களாலும், மலர் மாலைகளாலும் அவர்களை வழிபட்டான்.(14) பெரும் புகழையும், செழிப்பையும் கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் வெளியே வந்து, (அவனுக்கு ஆசி கூறுவதற்காகத்) தங்கள் கரங்களில் மங்கலப் பொருட்களுடன் காத்திருக்கும் பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்களைக் கண்டான்.(15) ஆசி கூற விரும்பி அவ்வாறு சூழ்ந்திருந்த பிராமணர்களுடன் பார்ப்பதற்கு அந்த மன்னவன், நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள களங்கமில்லா நிலவைப் போல அழகாகத் தெரிந்தன்.(16)
தனது புரோகிதர் தௌமியர், தன் பெரியப்பன் {திருதராஷ்டிரன்} ஆகியோரின் துணையுடன் இருந்த குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பிராமணர்களுக்கு இனிப்பு, ரத்தினங்கள், அபரிமிதமான தங்கம், பசுக்கள், ஆடைகள் மற்றும் அவர்களில் ஒவ்வொருவரும் விரும்பிய பல்வேறு பொருட்கள் ஆகியவற்றை முறையான சடங்குகளுடன் (கொடையாகக்) கொடுத்தான்.(17,18) அப்போது, ஓ! பாரதா {ஜனமேஜயா}, மொத்த ஆகாயத்தையும் நிறைக்கும்படி, “இஃது அருளப்பட்ட தினம்” என்ற உரத்த கூச்சல் எழுந்தது. காதுக்கு இனிமையான அந்தப் புனிதமான ஒலி (பாண்டவர்களின்) நண்பர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் மிகுந்த மனநிறைவைத் தந்தது.(19) அன்னங்களின் கூட்டம் வெளியிடும் ஒலியைப் போலக் கல்விமான்களான அந்தப் பிராமணர்கள் வெளியிட்ட ஒலியானது உரக்கவும், தெளிவாகவும் இருந்ததை மன்னன் {யுதிஷ்டிரன்} கேட்டான். வேதங்களை நன்கறிந்த மனிதர்களின் முக்கியத்துவம் வாய்ந்தவையும் இனிமையானவையுமான அந்த வார்த்தைகளை மன்னன் கேட்டான்.(20) அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, வெற்றியின் குறியீடாகப் பேரிகை முழக்கங்களும், சங்குகளின் இனிய ஒலியும் எழுந்தன.(21)
சிறிது நேரம் கழித்துப் பிராமணர்கள் அமைதியடைந்தபோது, சார்வாகன்[1] என்ற பெயருடைய ராட்சசன், பிராமண வேடத்தில் வந்து மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} பேசினான்.(22) துரியோதனனின் நண்பனான அவன், துறவியின் ஆடையில் அங்கே நின்று கொண்டிருந்தான். ஜபமாலைகளுடனும்[2], தலையில் குடுமியுடனும், கையில் திரி தண்டத்துடனும் கூடிய அவன், தவங்களுக்கும், நோன்புகளுக்கும் தங்களை அர்ப்பணித்தவர்களும், (மன்னனுக்கு) ஆசி கூற வந்தவர்களுமான அந்த ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கு மத்தியில் அச்சமில்லாமல் செருக்குடன் நின்று கொண்டிருந்தான்.(23,24) உயர் ஆன்ம பாண்டவர்களுக்குத் தீமையை விரும்பிய அந்தப் பொல்லாத்தீயவன், அந்தப் பிராமணர்களுடன் ஆலோசிக்காமலேயே மன்னனிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான்.(25)சார்வாகன் {யுதிஷ்டிரனிடம்}, “இந்தப் பிராமணர்கள் அனைவரும் என்னைத் தங்கள் பேச்சாளனாக நியமித்து, ʻதீய மன்னனான உனக்கு ஐயோ. நீ உறவினர்களைக் கொன்றவனாவாய்.(26) ஓ! குந்தியின் மகனே, உன் குலத்தையே இவ்வாறு அழித்துவிட்டு நீ என்ன ஈட்டிவிடப் போகிறாய்? பெரியோரையும், ஆசானையும் கொன்ற நீ உன் உயிரை விடுவதே முறையாகும்’ என்று சொல்கின்றனர்” என்றான்.(27) அந்தத் தீய ராட்சசனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பிராமணர்கள் மிகவும் கலக்கமடைந்தனர். அந்தப் பேச்சால் குட்டுபட்ட அவர்கள் உரத்த ஆரவாரம் செய்தனர்.(28) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரனுடன் கூடிய அவர்கள், கவலையாலும், வெட்கத்தாலும் பேச்சற்றவர்களானார்கள்.(29)
யுதிஷ்டிரன் {ராட்சசன் சார்வாகனிடம்}, “நான் உம்மை வணங்கி, பணிந்து, வேண்டி கேட்டுக் கொள்கிறேன். என்னிடம் நிறைவு கொள்வீராக. என்னை நிந்தனை செய்வது உமக்குத் தகாது. நான் விரைவில் என் உயிரை விடுவேன்” என்றான்”[3].(30)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, அப்போது அந்தப் பிராமணர்கள் அனைவரும், “இவை எங்களுடைய வார்த்தைகளல்ல. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, செழிப்பு உனதாகட்டும்” என்றனர்.(31) வேதங்களை அறிந்தோரும், தவங்களால் அறிவு தெளிவடைந்தோருமான அந்த உயர் ஆன்ம மனிதர்கள், இவ்வாறு பேசியவனின் {ராட்சசன் சார்வாகனனின்} வேடத்தைத் தங்கள் ஆன்மப் பார்வையின் மூலம் ஊடுருவினர்.(32) பிறகு அவர்கள், “இவன் துரியோதனனின் நண்பனான ராட்சசன் சார்வாகனாவான்[4]. அறத்துறவியின் ஆடையை அணிந்து கொண்டு, தன் நண்பன் துரியோதனனின் நன்மைக்காக இவ்வாறு முயற்சிக்கிறான். ஓ! அற ஆன்மாவே, நாங்கள் இவ்வகையில் ஏதும் பேசவில்லை. இந்த உன் கவலை அகலட்டும். உன் தம்பிமாருடன் கூடிய நீ செழிப்பை அடைவாயாக” என்றனர்”[5].(34)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அப்போது சினத்தால் உணர்விழந்தவர்களான அந்தப் பிராமணர்கள் “ஹும்” என்ற ஒலியை வெளியிட்டனர். பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடைந்தவர்களான அவர்கள், பாவம் நிறைந்த அந்த ராட்சசனை நிந்தித்து, (அந்தத் தங்கள் ஒலியாலேயே) அவனை அங்கேயே கொன்றனர்[6].(35) பிரம்மத்தை ஓதுபவர்களான அவர்களின் சக்தியால் எரிக்கப்பட்ட சார்வாகன், குருத்துகளுடன் {தளிர்களுடன்} கூடிய மரமானது இந்திரனின் வஜ்ரத்தால் {இடியால்} வெடிப்பதைப் போல உயிரை இழந்து கீழே விழுந்தான்.(36) அந்தப் பிராமணர்கள், முறையாக வழிபடப்பட்டு, தங்கள் ஆசிகளால் மன்னனை மகிழ்வித்த பிறகு அங்கிருந்து சென்றனர். தன் நண்பர்களுடன் கூடிய பாண்டுவின் அரசமகனும் {யுதிஷ்டிரனும்}, பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(37
சார்வாகன் வரலாறு! – சாந்திபர்வம் பகுதி – 39- சார்வாகனுடைய வரலாற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அப்போது உலகளாவிய அறிவு படைத்தவனான தேவகியின் மகன் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் தம்பிகளுடன் அங்கே நின்று கொண்டிருந்த மன்னன் யுதிஷ்டிரனிடம்,(1) “ஓ! ஐயா, இவ்வுலகில் பிராமணர்கள் எப்போதும் என் வழிபாட்டுக்குரியவராவர். பேச்சில் நஞ்சு கொண்டவர்களும், நிறைவு செய்ய எளிதானவர்களுமான அவர்களே {பிராமணர்களே} இந்தப் பூமியில் தேவர்களாவர்.(2) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, முன்பு கிருத காலத்தில், சார்வாகன் என்ற பெயருடைய ராட்சசன் ஒருவன், பதரியில் பல வருடங்கள் கடுந்தவமிருந்தான்.(3) தம்மிடம் வரங்களை வேண்டுமாறு பிரம்மன் மீண்டும் மீண்டும் அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தான். இறுதியாக அந்த ராட்சசன், அண்டத்தின் அனைத்துயிரிடம் கொண்ட அச்சத்திலிருந்தும் எதிர்ப்புணர்வு கொள்ளும் {எவ்வுயிரிடமும் அச்சமடையாமல் இருக்கும்} வரத்தை வேண்டினான்.(4) அண்டத்தின் தலைவன் {பிரம்மன்}, பிராமணர்களுக்குக் குற்றமிழைக்காமல் கவனத்துடன் இருக்கும்வரை, அனைத்துயிரிடமும் அச்சமடையாத எதிர்ப்புணர்வைக் கொள்வான் என்ற உயர்ந்த வரத்தை அவனுக்கு அளித்தான்.(5)
பாவம் நிறைந்தவனும், வலிமைமிக்கவனும், கொடுஞ்செயல்களைப் புரிபவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான அந்த ராட்சசன் {சார்வாகன்}, வரத்தை அடைந்ததும் தேவர்களுக்குத் துன்பத்தை அளிக்கத் தொடங்கினான்.(6) அந்த ராட்சசனின் வலிமையால் துன்புற்ற தேவர்கள் ஒன்றாகக் கூடி தங்கள் எதிரியின் அழிவைத் தீர்மானிக்கப் பிரம்மனை அணுகினர்.(7) ஓ! பாரதரே, அழிவில்லாதவனும், மாற்றமற்றவனுமான அந்தத்தேவன் {பிரம்மன்} அவர்களிடம், “இந்த ராட்சசன் விரைவில் இறப்பதற்கான வழிமுறைகளை நான் ஏற்கனவே ஏற்பாடு செய்துவிட்டேன்.(8) துரியோதனன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருப்பான். மனிதர்களுக்கு மத்தியில் அவன் {துரியோதனன்} இந்தப் பொல்லாதவனின் {சார்வாகனனின்} நண்பனாக இருப்பான். அவன் {துரியோதனன்} மீது கொண்ட பற்றின் காரணமாக இந்த ராட்சசன் பிராமணர்களை அவமதிப்பான்.(9) அவர்களுக்கு இவன் இழைக்கும் தீமையால் குட்டப்படுபவர்களும், பேச்சையே தங்கள் வலிமையாகக் கொண்டவர்களுமான அந்தப் பிராமணர்கள், கோபத்தால் இவனை {சார்வாகனை} நிந்திப்பார்கள், அதன் பேரில் அவன் அழிவைச் சந்திப்பான்” என்றான்.(10)
ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {ஜனமேஜயா}, அந்த ராட்சசன் சார்வாகனே இப்போது பிராமணர்களின் சாபத்தால் உயிரை இழந்து கீழே கிடக்கிறான். ஓ! பாரதக் குலத்தின் காளையே துயருக்கு ஆளாகாதீர்.(11) ஓ! மன்னா, உமது உறவினர்கள் அனைவரும் க்ஷத்திரியக் கடமைகளை நோற்கும்போதே அழிவடைந்தனர். க்ஷத்திரியர்களில் காளைகளும், உயர் ஆன்ம வீரர்களுமான அவர்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தனர். இப்போது நீர் உமது கடமைகளை ஆற்றுவீராக. ஓ! மங்காப் புகழ் கொண்டவரே, துயரம் உமதாகாதிருக்கட்டும். உமது எதிரிகளைக் கொன்று, உமது குடிமக்களைக் காத்து, பிராமணர்களை வழிபடுவீராக” என்றான் {கிருஷ்ணன்}”.(13)
யுதிஷ்டிரனின் முடிசூட்டுவிழா! – சாந்திபர்வம் பகுதி – 40-கிருஷ்ணனின் ஆணைப்படி வேள்விப்பீடத்தை அமைத்த தௌமியர்; சங்கிலிருந்த மங்கல நீரை யுதிஷ்டிரனின் தலையில் ஊற்றிய கிருஷ்ணன்; குடிமக்கள் கொடுத்த பரிசை ஏற்றுக் கொண்டு, பதிலுக்கு அவர்களைக் கௌரவித்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனை வாழ்த்திய குடிமக்கள்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “துயரத்திலிருந்தும், இதயத்தின் நோயிலிருந்தும் {துன்பத்திலிருந்தும்} விடுபட்ட குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, தங்கத்தாலான ஒரு சிறப்பான இருக்கையில் கிழக்கு நோக்கி அமர்ந்தான்.(1) எதிரிகளைக் கொல்பவர்களான சாத்யகி மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரும், அழகானதும், சுடர்மிக்கதும், தங்கத்தாலானதுமான மற்றொரு இருக்கையில், அவனது {யுதிஷ்டிரனின்} முகம் நோக்கி அமர்ந்தனர்.(2) பீமனும், அர்ஜுனனும், மன்னனைத் தங்களுக்கு மத்தியில் அமர்த்திக் கொண்டு, அவனுக்கு இருபுறத்திலும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய இருக்கைகள் இரண்டில் அமர்ந்தனர்.(3) தந்தத்தாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வெண்ணிறத்திலானதுமான அரசக் கட்டிலில் சகாதேவன் மற்றும் நகுலனுடன் பிருதையும் {குந்தியும்} சேர்ந்து அமர்ந்திருந்தாள்.(4) சுதர்மர்[1], விதுரன், தௌமியர், குருமன்னன் திருதராஷ்டிரன் ஆகியோர் ஒவ்வொருவரும் நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட தனித்தனி இருக்கைகளில் தனியாக அமர்ந்தனர்.(5) யுயுத்சு, சஞ்சயன், பெரும்புகழ் கொண்ட காந்தாரி ஆகியோர் அனைவரும் மன்னன் திருதராஷ்டிரன் எங்கு அமர்ந்திருந்தானோ அங்கேயே அமர்ந்திருந்தனர்.(6)அங்கே அமர்ந்திருந்த அற ஆன்மா கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அழகிய வெண்மலர்கள், ஸ்வஸ்தீகங்கள் {ஸ்வஸ்திக் சின்னங்கள்}, பல்வேறு பொருட்களால் நிறைந்திருந்த பாத்திரங்கள், பூமி, (தன் முன்னே வைக்கப்பட்டிருந்த) தங்கம், வெள்ளி மற்றும் ரத்தினங்கள் ஆகியவற்றைத் தீண்டினான்.(7) பிறகு புரோகிதரின் தலைமையிலான குடிமக்கள் அனைவரும், பல்வேறு வகையான மங்கலப் பொருட்களுடன் மன்னனைக் காண அங்கே வந்தனர்.(8) அப்போது பூமி {மண்}, தங்கம், பல வகைகளிலான ரத்தினங்கள் ஆகியவையும், மூடிசூட்டும் சடங்குக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் அங்கே அபரிமிதமான அளவில் கொண்டு வரப்பட்டன.(9) அங்கே விளிம்பு வரை (நீரால்) நிறைந்திருந்த தங்கக் கலசங்கள், தாமிரம், வெள்ளி மற்றும் மண்ணால் செய்யப்பட்ட கலசங்கள், மலர்கள், பொரி, குசப் புல் {தர்ப்பை}, பசும்பால்,(10) (வேள்விக்கான) விறகுகளான சமி {வன்னி}, பிப்பலம் {அரசு}, பலாசு மரங்கள், தேன், தெளிந்த நெய், உடும்பரத்தால் {அத்தி மரத்தால்} செய்யப்பட்ட வேள்விக் கரண்டிகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சங்குகள் ஆகியன இருந்தன.(11)அப்போது புரோகிதர் தௌமியர், கிருஷ்ணனின் வேண்டுகோளின் பேரில், கிழக்கு மற்றும் வடக்கை நோக்கி படிப்படியாக உயரும் பீடத்தை விதிப்படி கட்டமைத்தார்[2].(12) புலித்தோலால் மறைக்கப்பட்டதும், சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டதும் சர்வதோபத்திரம் என்றழைக்கப்படுவதுமான ஓர் அழகிய இருக்கையில் உயர் ஆன்ம யுதிஷ்டிரனையும், துருபதன் மகளான கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} உறுதியான பாதங்களுடன் அமரச் செய்து, உரிய மந்திரங்களுடன் தெளிந்த நெய்யை (வேள்வித்தீயில்) ஆகுதியாக ஊற்றத் தொடங்கினார்.(13,14) அப்போது தன் இருக்கையில் இருந்து எழுந்த தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, புனிதமாக்கப்பட்ட சங்கை எடுத்து, அதில் இருந்த நீரை, பூமியின் தலைவனும், குந்தியின் மகனுமான யுதிஷ்டிரனின் தலையில் ஊற்றினான். கிருஷ்ணனின் வேண்டுகோளின் பேரில் அரச முனியான திருதராஷ்டிரனும், குடிமக்கள் அனைவரும் அதையே செய்தனர்.(15) சங்கிலிருந்த புனிதமாக்கப்பட்ட நீரில் இவ்வாறு தன் தம்பிகளுடன் குளித்த அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மிகவும் அழகு நிறைந்தவனாகத் தெரிந்தான்.(16)அப்போது, பணவங்களும், ஆனகங்களும், பேரிகைகளும் முழக்கப்பட்டன. நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், குடிமக்களால் தனக்குக் கொடுக்கப்பட்ட பரிசுகளை முறையாக ஏற்றுக் கொண்டான். தன் வேள்விகள் அனைத்திலும் எப்போதும் அபரிமிதமாகக் கொடையளிக்கும் மன்னன், தன் குடிமக்களைப் பதிலுக்குக் கௌரவித்தான்.(17) தனக்கு (சிறப்பான) ஆசிகளைக் கூறிய பிராமணர்களுக்கு ஓராயிரம் நிஷ்கங்களைக் கொடுத்தான். அவர்கள் அனைவரும் வேதங்களைக் கற்றறிந்தவர்களாகவும், ஞானமும், நன்னடத்தையும் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(18) ஓ! மன்னா, (கொடைகளால்) நிறைவடைந்த பிராமணர்கள், செழிப்பையும், வெற்றியையும் அடையுமாறு அவனை வாழ்த்தி, அன்னங்களைப் போன்ற இனிமையான குரலில் அவனைப் புகழ்ந்தனர்.(19)
{அவர்கள்}, “ஓ! வலிமையான கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, ஓ! பாண்டுவின் மகனே, நற்பேற்றாலே வெற்றி உனதானது, ஓ! பெரும் காந்தி கொண்டவனே, நற்பேற்றாலேயே, ஆற்றலின் மூலம் உன் நிலையை மீண்டும் அடைந்தாய்.(20) நற்பேற்றாலேயே, காண்டீவதாரியும் {அர்ஜுனனும்}, பீமசேனனும், நீயும், மாத்ரியின் மகன்கள் இருவரும் உங்கள் எதிரிகள் அனைவரையும் கொன்று, வீரர்களுக்கு அழிவைத் தந்த இந்தப் போரில் இருந்து உயிருடன் தப்பி, நலமாக இருக்கிறீர்கள். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அடுத்து செய்யப்பட வேண்டிய செயல்களைத் தாமதமில்லாமல் கவனிப்பாயாக” என்றனர்.(21,22) ஓ! பாரதா {ஜனமேஜயா}, தன் நண்பர்களுடன் கூடியவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் பக்திமான்களால் இவ்வாறு துதிக்கப்பட்டு, அந்தப் பெரிய நாட்டின் அரியணையில் நிறுவப்பட்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(23)
அமைச்சரவை அமைப்பு! – சாந்திபர்வம் பகுதி – 41-குடிமக்களுக்கு விடைகொடுத்தனுப்பிய யுதிஷ்டிரன்; பீமன், விதுரன், சஞ்சயன், நகுலன், அர்ஜுனன், தௌமியர், சகாதேவன், யுயுத்சு ஆகியோரை நாட்டின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “காலத்திற்கும் இடத்திற்கும் பொருத்தமானதும், தன் குடிமக்களால் சொல்லப்பட்டதுமான இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், பின்வரும் வார்த்தைகளால் அவர்களுக்குப் பதிலளித்தான்.
{யுதிஷ்டிரன்}, “பாண்டு மகன்களின் தகுதிகள் உண்மையோ, பொய்யோ, இவ்வாறு திரண்டிருக்கும் முதன்மையான பிராமணர்களால் இவ்வாறு ஆறுதல் சொல்லப்படுவதற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.(2) இத்தகு பண்புகளைக் கொண்டோராக எங்களை நீங்கள் வெளிப்படையாகச் சொல்வதால் உங்கள் கருணைக்கு நாங்கள் பாத்திரமாக இருக்கிறோம் என்பதில் ஐயமில்லை.(3) எனினும், மன்னர் திருதராஷ்டிரர் எங்களுக்குத் தந்தையும், தேவரும் ஆவார். எனக்கு ஏற்புடையதைச் செய்ய நீங்கள் விரும்பினால், நீங்கள் எப்போதும் அவருக்கு ஏற்புடையதைச் செய்து, அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.(4) என் உறவினர்கள் அனைவரையும் கொன்ற பிறகு, நான் அவருக்காக மட்டுமே உயிருடன் வாழ்கிறேன். அனைத்து வகையிலும் விழிப்புணர்வுடன் எப்போதும் அவருக்குத் தொண்டாற்றுவதே என் பெருங்கடமை.(5)
நீங்களும் என் நண்பர்களும் நான் உங்கள் கருணைக்குப் பாத்திரமானவன் என்று கருதினால், திருதராஷ்டிரரிடம் நீங்கள் முன்பு நடந்து கொண்ட அதே நடத்தையுடன் நடந்துகொள்ளுமாறு உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்வேன்.(6) அவர் இந்த உலகத்திற்கும், உங்களுக்கும் எனக்கும் தலைவராவார். பாண்டவர்களுடன் கூடிய மொத்த உலகமும் அவருக்குச் சொந்தமானதாகும்.(7) இந்த என் வார்த்தைகளை நீங்கள் எப்போதும் மனத்தில் தாங்க வேண்டும்” என்று சொன்னான். பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அவர்களை விரும்பிய இடத்திற்குச் செல்லுமாறு விடைகொடுத்தனுப்பினான்.(8)
குருக்களைத் திளைக்கச் செய்பவனான அவன் {யுதிஷ்டிரன்}, குடிமக்கள் மற்றும் மாகாணங்களின் மக்களுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, தன் தம்பியான பீமசேனனை யுவராஜாவாக {இளவரசனாக} நியமித்தான்.(9) தன் கலந்துரையாடலில் துணை புரியவும், மாநிலத்தின் ஆறு வகைத் தேவைகளைப் பார்த்துக் கொள்ளவும் கூடிய பொறுப்பில்[1] பெரும் நுண்ணறிவு கொண்ட விதுரனை நியமித்தான்.(10) மேலும் அவன், வயதில் முதிர்ந்தவனும், அனைத்து சாதனைகளையும் கொண்டவனுமான சஞ்சயனை, நிதித்துறையின் கண்காணிப்பாளராகவும், பொது இயக்குனராகவும் நியமித்தான்.(11) மேலும் மன்னன், படைகளின் பதிவேடுகளைப் பராமரிக்கவும், அவர்களுக்கு உணவு மற்றும் கூலி வழங்கவும், படையின் பிற காரியங்களைக் கண்காணிக்கவும் நியமித்தான்.(12) மன்னன் யுதிஷ்டிரன், பகைவரின் படையைத் தடுக்கவும், தீயவர்களைத் தண்டிக்கவும் பல்குனனை {அர்ஜுனனை} நியமித்தான்.(13) மேலும் அவன், பிராமணர்களைத் தினமும் கவனித்துக் கொள்ளவும், தேவர்களுக்கான சடங்குகள் அனைத்தையும் செய்யவும், அறச் செயல்கள் அனைத்தையும் கவனித்துக் கொள்ளவும் புரோகிதர்களில் முதன்மையான தௌமியரை நியமித்தான்.(14) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மேலும் அம்மன்னன், தான் எப்போதும் சகாதேவனால் காக்கப்பட வேண்டும் என்று எண்ணியதால், அவனை எப்போதும் தன்னருகிலேயே இருக்குமாறு நியமித்தான்.(15) மேலும் அம்மன்னன், வேறு பிற காரியங்களில் அவரவர்க்குத் தகுந்தது எனத் தான் கருதியவற்றில் அவரவரை நியமித்தான்.(16)பகைவீரர்களைக் கொல்பவனும், எப்போதும் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ளவனும், அற ஆன்மா கொண்டவனுமான மன்னன் யுதிஷ்டிரன், விதுரன், உயர் ஆன்ம யுயுத்சு ஆகியோரை அழைத்து,(17) “என் அரச தந்தையான திருதராஷ்டிரரின் விருப்பங்கள் அனைத்தையும், எப்போதும் கவனமாகவும், விரைவாகவும் நீங்கள் செய்யுங்கள்.(18) குடிமக்கள் மற்றும் மாகாணங்களில் வசிப்பரைப் பொறுத்தவரை என்ன செய்யப்பட வேண்டுமோ அவை அனைத்தும், மன்னரின் {திருதராஷ்டிரரின்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு உங்களின் துறைகளின் மூலம் உங்களால் நிறைவேற்றப்பட வேண்டும்[2]” என்றான் {யுதிஷ்டிரன்}”.(19)
சிரார்த்தச் சடங்குகள்! – சாந்திபர்வம் பகுதி – 42-போரில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களது ஈமக்கடன்களைச் செய்யச் செய்த யுதிஷ்டிரன்; போரின் காரணமாக விதவைகளான பெண்டிருக்குக் கருணை காட்டியது..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இதன்பிறகு, மகத்தான ஆன்மா கொண்டவனான மன்னன் யுதிஷ்டிரன், போரில் கொல்லப்பட்ட உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் சிரார்த்தச் சடங்குகளைச் செய்ய {ஈமக்கடன்களைச் செலுத்தச்} செய்தான்.(1) பெரும்புகழைக் கொண்ட மன்னன் திருதராஷ்டிரனும், அடுத்த உலகில் இருக்கும் தன் மகன்களின் நன்மைக்காகச் சிறந்த உணவு, பசுக்கள், அதிகச் செல்வம், விலைமதிப்புமிக்க அழகிய ரத்தினங்கள் பல ஆகியவற்றை (பிராமணர்களுக்குக்) கொடையாக அளித்தான்.(2) திரௌபதியின் துணையுடன் கூடிய யுதிஷ்டிரன், துரோணர், உயர் ஆன்ம கர்ணன், திருஷ்டத்யும்னன், அபிமன்யு, ஹிடிம்பையின் மகனான ராட்சசன் கடோத்கசன், விராடன், தனக்கு மாறாப்பற்றுடன் தொண்டு புரிந்த நலன் விரும்பிகள் பிறர், துருபதன், திரௌபதியின் மகன்கள் ஐவர் ஆகியோருக்காக அதிகச் செல்வத்தைக் கொடையளித்தான்.(3,4) இவர்கள் ஒவ்வொருவருக்காகவும் மன்னன், செல்வத்தையும், ரத்தினங்களையும், பசுக்களையும், துணிமணிகளையும் ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்குக் கொடையளித்தான்.(5) எந்த உறவினரையும், நண்பரையும் விட்டுவிடாமல் போரில் வீழ்ந்த மன்னர்கள் ஒவ்வொருவரும் அடுத்த உலகில் நன்மை பெறுவதற்காகச் சிரார்த்தச் சடங்கைச் செய்தான்.(6)
மேலும் அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, தன் நண்பர்கள் அனைவருடைய ஆன்மாக்களின் நன்மைக்காக, அவர்களுடைய பெயரிலேயே உணவு விநியோகத்திற்கான வீடுகளையும், நீர் விநியோகத்திற்கான இடங்களையும் நிர்மாணித்து, {அவர்களது பெயரிலேயே} குளங்களையும் வெட்டினான்.(7) இவ்வாறு அவர்களுக்குத் தான் பட்ட கடனை செலுத்தி, உலகத்தின் நிந்தனையைத் தவிர்த்த மன்னன்[1], மகிழ்ச்சியடைந்தவனாகி, தன் குடிமக்களை அறம்சார்ந்து காப்பதைத் தொடர்ந்தான்.(8) அவன் முன்பு போலவே, திருதராஷ்டிரன், காந்தாரி, விதுரன், கௌரவப் பெரியோர்கள், மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் உரிய மதிப்பை வழங்கினான்.(9) அன்பு நிறைந்தவனான அந்தக் குரு மன்னன் {யுதிஷ்டிரன்}, போரின் விளைவால் தங்கள் வீரக் கணவர்களையும், மகன்களையும் இழந்த பெண்கள் அனைவரையும் பாதுகாத்து அவர்களுக்கு மதிப்பளித்தான்.(10) பெருங்கருணை கொண்ட அந்தப் பலமிக்க மன்னன், யாருமற்றவர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கு உணவு, உடை மற்றும் உறைவிடத்தைக் கொடுத்து உதவி செய்தான்.(11) எதிரிகளிடம் இருந்து விடுபட்டு, மொத்த பூமியையும் வென்ற மன்னன் யுதிஷ்டிரன், பெரும் மகிழ்ச்சியில் இன்புறத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(12)
சதநாமாவளி! – சாந்திபர்வம் பகுதி – 43-நூறு பெயர்களால் கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்; மனம் நிறைந்த கிருஷ்ணன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும் ஞானியும், தூய்மையானவனுமான மன்னன் யுதிஷ்டிரன், நாட்டை மீண்டும் அடைந்து, முடிசூட்டுவிழாவும் முடிந்த பிறகு, தாமரைக் கண்ணனும், தசார்ஹ குலத்தோனுமான கிருஷ்ணனிடம் கரங்களைக் கூப்பி,(1) “ஓ! கிருஷ்ணா, ஓ! யதுக்களில் புலியே, உன் அருளாலும், உன் கொள்கை, வலிமை, நுண்ணறிவு, ஆற்றல் ஆகியவற்றாலுமே நான் என் மூதாதையரின் நாட்டை மீண்டும் அடைந்தேன். ஓ! தாமரைக் கண்ணனே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே நான் உன்னை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.(2,3) நீயே ஒரே தலைவன்[1] என்று அழைக்கப்படுகிறாய். மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} உன்னை எண்ணற்ற பெயர்களால் அழைக்கின்றனர்.(4)அண்டத்தின் படைப்பாளனே, உனக்கு வணக்கம். நீயே அண்டத்தின் ஆன்மாவாக இருக்கிறாய், அண்டமானது உன்னிலிருந்தே எழுந்திருக்கிறது. விஷ்ணு நீயே, ஜிஷ்ணு நீயே, ஹரி நீயே, கிருஷ்ணன் நீயே, வைகுண்டன் நீயே, உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே {புருஷோத்தமன் நீயே}.(5) புராணங்களில் சொல்லப்படுவதைப் போல அதிதியின் கருவறையில் ஏழு முறை பிறப்பை எடுத்தவன் நீயே. பிருஸ்னியின் கருவறையில் பிறப்பெடுத்தவன் நீயே[2]. கல்விமான்களால் மூன்று யுகங்கள் {திரியுகன்} என்று சொல்லப்படுபவன் நீயே[3].(6) சாதனைகள் அனைத்தாலும் புனிதமானவன் {சுசிஸ்ரவஸ்} நீயே. எங்கள் புலன்களின் தலைவன் {ஹ்ருஷீகேசன்} நீயே. வேள்விகளில் வழிபடப்படும் பெருந்தலைவன் {க்ருதார்ச்சிஸ்} நீயே. பெரும் அன்னம் {ஹம்சன்} என்றழைக்கப்படுபவன் நீயே, முக்கண் சம்பு நீயே. விபு மற்றும் தாமோதரன் என்று அழைக்கப்பட்டாலும் ஒருவனாகவே இருப்பவன் நீயே.(7) பெரும்பன்றி {வராகன்} நீயே, நெருப்பு {அக்னி} நீயே, சூரியன் {பிருஹத்பானு} நீயே, கொடியில் காளைச் சின்னத்தைக் கொண்டவன் {ரிஷபன்} நீயே, கருடனையும் சின்னமாகக் கொண்டவன் {தார்க்ஷ்யலக்ஷணன்} நீயே. பகைவரின் படைகளைக் கலங்கடிப்பவன் {அநீகஸாஹன்} நீயே, அண்டத்தின் அனைத்து வடிவங்களிலும் படர்ந்தூடுருவியிருப்பவன் {புருஷன்} நீயே, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் {சிபிவிஷ்டன்} நீயே.(8) அனைத்துப் பொருட்களிலும் முதன்மையானவன் {உருக்ரமன்} நீயே, கடுமையானவன் {வரிஷ்டன்} நீயே, போரின் படைத்தலைவன் {உக்ரஸேநாநீ} நீயே, உண்மை {ஸத்யன்} நீயே, உணவை அளிப்பவன் {வாஜஸநி} நீயே, (தேவர்களின் படைத்தலைவனான) குஹன் நீயே, எதிரிகளின் ஒளியை மங்கச் செய்து அவர்களை வீணாகச் செய்யும் மங்காதவன் {அச்சுதன்} நீயே, தூய இரத்தம் கொண்ட பிராமணன் {ஸம்ஸ்கிருதன்} நீயே, கலப்பில் பிறந்தவன் {விக்ருதி} நீயே, பெரியவன் {வ்ருஷன்} நீயே.(9) உயர்வாக நடப்பவன் {கிருஷ்ணதர்மன்} நீயே, மலைகள் {ஆதி} நீயே, விருஷதர்ப்பன் என்றும், வ்ருஷாகபி என்றும் அழைக்கப்படுபவன் நீயே, பெருங்கடல் {ஸிந்து} நீயே, பண்புகளற்றவன் {விதூர்மி} நீயே, மூன்று கூன்களைக் கொண்டவன் {த்ரிககுப்} நீயே, மூன்று வசிப்பிடங்களைக் கொண்டவன் {த்ரிதாமா} நீயே, சொர்க்கத்தில் இருந்து இறங்கி பூமியில் மனித வடிவங்களை எடுப்பவன் {த்ரிவ்ருத்} நீயே.(10) பேரரசன் {ஸம்ராட்} நீயே, விராட் நீயே, ஸ்வராட் நீயே[4]. ஸ்வாராட் நீயே, தேவர்களின் தலைவன் நீயே, அண்டம் உதித்த காரணம் {பூதமயன்} நீயே, எல்லாம் வல்லவன் {பவன்} நீயே, எல்லாம் வல்லவன் {விபு} நீயே, அனைத்து வடிவிலும் இருப்பவன் {பூ} நீயே, வடிவமற்றவனும் {அதிபூவும்} நீயே, கிருஷ்ணன் நீயே, நெருப்பு {கிருஷ்ணவர்த்மா} நீயே.(11)படைப்பாளன் {ஸ்விஷ்டகிருத்} நீயே, தெய்வீக மருத்துவர்களின் தந்தை {பிஷஜாவர்த்தன்} நீயே, (தவசி) கபிலன் நீயே. உயரம் குறைந்தவன் {வாமனன்} நீயே[5].(12) வேள்வியின் வடிவம் {யக்ஞன்} நீயே, துருவன்[6] நீயே, கருடன் {பதங்கன்} நீயே, யக்ஜசேனன் {ஜயத்ஸேனன்} என்றழைக்கப்படுபவன் நீயே. சிகண்டி நீயே, நகுஷன் நீயே, பப்ரு நீயே, ஆகாயத்தில் விரிந்திருக்கும் புநர்வஸு நீயே,(13) பழுப்புநிறம் கொண்டவன் {ஸுபப்ரு} நீயே, உக்தம் என்ற பெயரில் அறியப்படும் வேள்வி {ருக்மயஜ்ஞன்} நீயே, ஸுஷேணன் நீயே, அனைத்துப் பக்கங்களிலும் ஒலியை எழுப்பும் பேரிகை {துந்துபி} நீயே. எடை குறைந்த தேர்ச்சக்கரத்தைக் கொண்டவன் {கபஸ்திநேமி} நீயே, செழிப்பின் தாமரை {ஸ்ரீ பத்மன் நீயே}, புஷ்கரன் என்றழைக்கப்படுபவன் நீயே, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவன் {சுஷ்மதாரணன்} நீயே.(14) செழிப்புமிக்கவன் {ருபு} நீயே, பலமிக்கவன் {விபு} நீயே, மிக நுட்பமானவன் {ஸர்வஸூக்ஷ்மன்} நீயே, வேதங்களை விளக்குபன் {தரித்ரீ} நீயே. பெரிய நீர் கொள்ளிடம் {அம்போநிதி} நீயே, பிரம்மன் நீயே, புனிதமான புகலிடம் {பவித்ரதாமன்} நீயே, அனைத்து வசிப்பிடங்களையும் அறிந்தவன் {தாமவித்து} நீயே, ஹிர்ணயகர்ப்பன் நீயே, ஸ்வதா நீயே, ஸ்வாஹா நீயே, கேசவனும் நீயே.(15) இவ்வுலகத்துடைய இருப்பின் {உற்பத்திக்குக்} காரணமும், இல்லாமையின் {அழிவின்} காரணமும் நீயே. முதலில் இந்த உலத்தைப் படைத்தவன் நீயே. ஓ! அண்டத்தைப் படைத்தவனே, இவ்வண்டம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. ஓ! சாரங்கம், சக்கரம் மற்றும் வாளைத் தரிப்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}[7].(16)சபைக்கு மத்தியில் வைத்து நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு துதிக்கப்பட்ட தாமரைக்கண்ணனான கிருஷ்ணன் நிறைவடைந்தான். பிறகு அந்த யாதவர்களில் முதன்மையானவன் {கிருஷ்ணன்}, ஏற்புடைய பேச்சுகள் பலவற்றால் பாண்டுவின் மூத்த மகனைத் திளைக்க வைக்கத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(17)
அரண்மனைகள் ஒதுக்கீடு! – சாந்திபர்வம் பகுதி – 44-போரில் கொல்லப்பட்ட குரு இளவரசர்களின் அரண்மனைகளைத் தன் தம்பிகளின் முறையான வசிப்பிடங்களாக ஒதுக்கிக் கொடுத்த யுதிஷ்டிரன்; அர்ஜுனனின் அரண்மனையில் தங்கிய கிருஷ்ணனும், சாத்யகியும்; தங்கள் தங்கள் வசிப்பிடங்களில் இரவைக் கழித்த இளவரசர்கள்..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னன் {யுதிஷ்டிரன்} தன் குடிமக்கள் அனைவருக்கும் விடைகொடுத்தனுப்பினான். அவர்களும் அந்த ஏகாதிபதியின் ஆணைக்கிணங்க தங்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர்.(1) சுடர்மிகும் அழகு கொண்ட யுதிஷ்டிரன், பயங்கர ஆற்றலைக் கொண்ட பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} ஆகிய தன் தம்பியரிடம், அவர்களுக்கு ஆறுதலிக்கும் வகையில் (2) “இந்தப் பெரும்போரில் எதிரியின் பல்வேறு வகை ஆயுதங்களால் உங்கள் உடல்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் களைப்பை அடைந்திருக்கிறீர்கள். உங்கள் இதயங்கள் துயரத்தாலும், கோபத்தாலும் எரிகின்றன.(3) பாரதக் குலத்தின் காளைகளே, நான் செய்த குற்றத்தால், நீங்கள் இழிந்த மனிதர்களைப் போல நாடுகடத்தப்பட்டுக் காடுகளில் பேரிடரை அனுபவித்தீர்கள்.(4) (வெற்றியடைந்தவர்களான நீங்கள்) இப்போது இந்த வெற்றியை மகிழ்ச்சியாகக் கொண்டாடித் திளைப்பீராக. ஓய்வையும், உங்களுக்குத் தேவையானவற்றின் முழுப் பயனையும் அடைந்த பிறகு, காலையில் மீண்டும் என்னைச் சந்தியுங்கள்” என்றான்.(5)
அதன்பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான விருகோதரன் {பீமன்}, திருதராஷ்டிரனின் சம்மதத்தின் பேரில் யுதிஷ்டிரனால் தனக்கு ஒதுக்கப்பட்டதும், சிறந்த கட்டடங்கள் மற்றும் அறைகளால் {உப்பரிகைகளால்} அலங்கரிக்கப்பட்டதும், பல்வேறு வகையான ரத்தினங்களால் நிறைந்ததும், ஆண் மற்றும் பெண் பணியாளர்கள் நிறைந்ததுமான துரியோதனனின் அரண்மனைக்குள், மகவத் {இந்திரன்} தன் கோவிலுக்குள் நுழைவதைப்போல நுழைந்தான்.(6,7) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான அர்ஜுனனும், மன்னனின் ஆணைப்படி, சிறந்த கட்டுமானங்கள் பலவற்றைக் கொண்டதும், தங்க வாயிலால் அலங்கரிக்கப்பட்டதும், செல்வத்தால் நிறைந்ததும், இரு பாலினங்களையும் சேர்ந்த பணியாட்கள் நிறைந்ததும், துரியோதனனின் அரண்மனைக்குச் சற்றும் குறையாததுமான துச்சாசனனின் அரண்மனையை அடைந்தான்.(8,9) துர்மர்ஷணனின் அரண்மனை துச்சாசனின் அரண்மனையைவிட மேன்மையானதாக இருந்தது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, அனைத்து வகை ரத்தினங்களுடன் கூடிய அது குபேரனின் மாளிகையைப் போலத் தெரிந்தது.(10) மன்னன் யுதிஷ்டிரன், அதைக் கொள்ளச் சிறந்த தகுதி கொண்டவனும், பெருங்காட்டினால் (அதன் இடர்பாடுகளால்) மெலிந்தவனுமான நகுலனுக்கு மகிழ்ச்சியுடன் கொடுத்தான்.(11) துர்முகனின் முதன்மையான அரண்மனை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு மிக அழகானதாக இருந்தது. அதில் படுக்கைகளும் இருந்தன, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவர்களான அழகிய பெண்களும் இருந்தனர்.(12) மன்னன், தனக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்பவனான சகாதேவனுக்கு அதைக் கொடுத்தான். அஃதை அடைந்த சகாதேவன், கைலாசத்தை அடைந்த பொக்கிஷத் தலைவனை {குபேரனைப்} போலத் திளைப்படைந்தான்.(13)
ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, யுயுத்சு, விதுரன், சஞ்சயன், சுதர்மர், தௌமியர் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குச் சொந்தமான வசிப்பிடங்களுக்குச் சென்றனர்[1].(14) மனிதர்களில் புலியான சௌரின் {கிருஷ்ணன்}, மலையில் உள்ள தன் குகைக்குள் நுழையும் புலியைப் போலச் சாத்யகியின் துணையுடன் அர்ஜுனனின் அரண்மனைக்குள் நுழைந்தான்.(16) (அவர்களுக்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த) உணவு மற்றும் பானங்களை விருந்துண்ட அந்த இளவரசர்கள், தங்கள் இரவை மகிழ்ச்சியாகக் கழித்தனர். நிறைவான இதயத்துடன் காலையில் விழித்து, மன்னன் யுதிஷ்டிரனின் முன்னிலையை அடைந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(16)
ஆழ்தியானத்தில் கிருஷ்ணன்! – சாந்திபர்வம் பகுதி – 45- பிராமணர்களுக்கும், குடிமக்களுக்கும் பெரும் தானங்களைச் செய்த யுதிஷ்டிரன்; கிருஷ்ணன் இருந்த இடத்திற்குச் சென்று அவனைத் துதித்தது; ஆழ்ந்த தியானத்தில் இருந்த கிருஷ்ணன்…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! கற்ற பிராமணரே, தர்மனின் மகனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான யுதிஷ்டிரன் தன் நாட்டை மீட்ட பிறகு என்ன செய்தான் என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்.(1) ஓ! முனிவரே {வைசம்பாயனரே}, மூவுலகங்களின் உயர்ந்த தலைவனான வீர ரிஷிகேசன் {கிருஷ்ணன்} இதன் பிறகு என்ன செய்தான் என்பதையும் எனக்கு நீர் சொல்ல வேண்டும்” என்று கேட்டான்.(2)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! பாவமற்றவனே, வாசுதேவனின் தலைமையிலான பாண்டவர்கள், இதன்பிறகு என்ன செய்தனர் என்பதைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(3) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, குந்தியின் மகனான யுதிஷ்டிரன் தன் நாட்டை அடைந்ததும், நால்வகை மனிதர்களுள் ஒவ்வொருவரையும் அவரவர்களுக்குரிய கடமைகளில் நியமித்தான்.(4) அந்தப் பாண்டுவின் (மூத்த) மகன் {யுதிஷ்டிரன்}, ஸ்நாதக வகையைச் சேர்ந்த ஆயிரம் உயர் ஆன்ம பிராமணர்களில் ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் நிஷ்கங்களைக் கொடுத்தான்.(5) பிறகு அவன் தன்னை நம்பியிருந்த பணியாட்களுக்கும், தன்னிடம் வந்த தகாதோர் மற்றும் வழக்கத்திற்கு மாறான கொள்கைகளை உடையோர் உள்ளிட்ட விருந்தினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி அவர்களை மனம் நிறையச் செய்தான்.(6)
அவன், தனது புரோகிதரான தௌமியருக்கு, ஆயிரக்கணக்கான பசுக்களையும், அதிகமான செல்வம், தங்கம், வெள்ளி மற்றும் பல்வேறு வகையான ஆடைகளையும் கொடுத்தான்.(7) ஓ! ஏகாதிபதி, கிருபரிடம் அவன் ஓர் ஆசானிடம் ஒருவன் நடந்து கொள்ள வேண்டிய வழியில் நடந்து கொண்டான். நோன்புகளை நோற்பவனான அம்மன்னன், விதுரனைப் பெரிதும் கௌரவிப்பதைத் தொடர்ந்தான்.(8) ஈகையாளர்களில் முதன்மையானவனான அவன் {யுதிஷ்டிரன்}, உணவு, பானம், பல்வேறு வகையான ஆடைகள், படுக்கைகள் மற்றும் இருக்கைகள் ஆகியவற்றால் அனைத்து மனிதர்களையும் நிறைவு செய்தான்.(9) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, தன் நாட்டில் அமைதியை நிலைநாட்டியவனும், பெரும்புகழைக் கொண்டவனுமான அம்மன்னன், யுயுத்சு மற்றும் திருதராஷ்டிரனுக்கு உரிய கௌரவங்களை அளித்தான்.(10) திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் விதுரனின் உத்தரவிற்குக் கீழ் தன் நாட்டை வைத்த மன்னன் யுதிஷ்டிரன் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான்.(11)
ஓ! பாரதக் குலத்தின் காளையே, குடிமக்கள் உள்ளிட்ட அனைவரையும் இவ்வழியில் நிறைவு செய்த யுதிஷ்டிரன், கூப்பிய கரங்களுடன் உயர் ஆன்ம வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலைக்குச் சென்றான்.(12) நீலமேக வண்ணனான கிருஷ்ணன், தங்கம் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய இருக்கையில் அமர்ந்திருப்பதை அவன் கண்டான்.(13) மஞ்சள் பட்டாடையுடுத்தி, தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அவனது மேனி, தங்கத்தின் காந்தியுடன் பிரகாசித்தது.(14) கௌஸ்துப ரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்ட மார்புடைய அவன், உதயச் சூரியனால் அலங்கரிக்கப்பட்ட உதய மலையைப் போலத் தெரிந்தான்.(15) மூவுலகங்களிலும் தனக்கு நிகரில்லாதவன் போல அவன் மிக அழகாக இருந்தான். விஷ்ணுவின் அவதார வடிவமான அந்த உயர் ஆன்மாவை அணுகிய மன்னன் யுதிஷ்டிரன், சிரித்துக் கொண்டே இனிமையாக, “ஓ! நுண்ணறிவு கொண்டோரில் முதன்மையானவனே, இரவை மகிழ்ச்சியாகக் கடத்தினாயா?(16,17) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உன் புலன்கள் அனைத்தும் முழு வீரியத்துடன் இருக்கின்றனவா? ஓ! நுண்ணறிவு கொண்டோரில் முதன்மையானவனே, உன் புத்தி சரியாக {தெளிவாக} இருக்கிறதா?(18) ஓ! தெய்வீகத் தலைவா ஓ! மூவுலகங்களின் புகலிடமே, ஓ! மூன்று {நடை} அடிகளைக் கொண்டவனே, உன் அருளின் காரணமாகவே நாங்கள் எங்கள் நாட்டை மீண்டும் அடைந்து, இந்த மொத்த பூமியும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தோம். உன் அருளால் நாங்கள் வெற்றியையும், பெரும் புகழையும் அடைந்து, எங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து வழுவாமல் இருக்கிறோம்” என்றான் {யுதிஷ்டிரன்}.(19)
எதிரிகளைத் தண்டிப்பவனான தெய்வீகக் கிருஷ்ணனிடம், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, அவன் {கிருஷ்ணன்} ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால் ஒரு வார்த்தையும் பேசாதிருந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(20)
பீஷ்மரை நினைத்துக் கொண்டிருந்தேன்! – சாந்திபர்வம் பகுதி – 46-கிருஷ்ணன் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டு வியந்து, அவனைத் துதித்த யுதிஷ்டிரன்; பீஷ்மர் தன்னை நினைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்ன கிருஷ்ணன்; பீஷ்மர் மறைவதற்குள் அவரிடமிருக்கும் அறிவுக்களஞ்சியத்தை அவரிடம் கற்றுப் பெறுமாறு யுதிஷ்டிரனிடம் சொன்ன கிருஷ்ணன்; இருவரும் சேர்ந்து செல்லலாம் என்று சொன்ன யுதிஷ்டிரன்..
யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! அளவிலா ஆற்றல் கொண்டோனே, நீ ஆழ்ந்த தியானத்தில் இருப்பது அற்புதம். ஓ! அண்டத்தின் பெரும்புகலிடமே, மூவுலகங்களும் நலமா?(1) ஓ! தேவா, ஓ! மனிதர்களில் காளையே, (இவ்வுலகில் இருந்து) நான்காம் நிலையைப் பின்பற்றி நீ உன்னை விலக்கிக் கொள்ளும்போது, என் மனம் ஆச்சரியத்தால் நிறைகிறது[1].(2) உடலுக்குள் செயல்படும் ஐந்து உயிர் மூச்சுகள் அசைவில்லாத உன்னால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இன்பத்தில் திளைத்திருக்கும் உன் புலன்கள் உன் மனத்திற்குள் உன்னால் குவிக்கப்படுகின்றன.(3) ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, பேச்சும், மனமும் உன் புத்திக்குள் குவிக்கப்படுகின்றன. உண்மையில் உன் புலன்கள் அனைத்தும் உன் மனத்திற்குள் இழுக்கப்படுகின்றன[2].(4) உன் உடலில் உள்ள மயிர் சிலிர்த்திருக்கிறது. உன் மனமும், புத்தியும் அசைவற்றிருக்கின்றன. ஓ! மாதவா {கிருஷ்ணா}, ஒரு மரத்தைப் போலவோ, பாறையைப் போலவோ நீ அசைவற்றவனாக இருக்கிறாய்.(5)ஓ! சிறப்புமிக்கத் தேவா {கிருஷ்ணா}, காற்றில்லாத இடத்தில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் தழலைப் போல நீ அசைவற்றவனாக இருக்கிறாய். ஒரு பாறைக்குவியலைப் போல நீ அசைவற்றவனாக இருக்கிறாய்.(6) ஓ! தேவா, இதன் காரணத்தைக் கேட்க நான் தகுந்தவனென்றால், இதில் உன் இரகசியமேதும் இல்லையென்றால், என் ஐயத்தை விலக்க வேண்டும் என்ற உதவியை நான் உன்னிடம் இரந்து கேட்கிறேன்.(7) படைப்பவனும், அழிப்பவனும் நீயே. அழியக்கூடியனவும், அழிவற்றனவும் நீயே. தோற்றமும் {ஆதியும்}, மறைவும் {அந்தமும்} அற்றவன் நீயே. உயிரினங்களில் முதல்வனும், முதன்மையானவனும் நீயே.(8) ஓ! நீதியாளர்களில் முதன்மையானவனே, இந்த நுண்மமயத்தின் (யோகத்தின்) காரணத்தை நீ எனக்குச் சொல்வாயாக. நான் உன் உதவியை நாடுபவனும், உனக்கு அர்ப்பணிப்புள்ள வழிபாட்டினனும், சிரம் தாழ்த்தி உன்னை வணங்குபவனும் ஆவேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(9) இவ்வாறு சொல்லப்பட்ட வாசவனின் {இந்திரனின்} சிறப்புமிக்கத் தம்பி {கிருஷ்ணன்}, தன் மனத்தையும், புத்தியையும், புலன்களையும் மீண்டும் தங்கள் வழக்கமான செயற்களத்திற்கு அழைத்து, மெல்லிய புன்னகையுடன் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(10)
வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, “இப்போது கணைப்படுக்கையில் கிடப்பவரும், அணையப்போகும் நெருப்பைப் போல இருப்பவரும், மனிதர்களில் புலியுமான பீஷ்மர் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறார். எனவே, என் மனமும் அவரிடம் குவிந்திருந்தது.(11) எவருடைய நாண்கயிற்றின் நாணொலியையும், உள்ளங்கைகளின் ஒலிகளையும் இந்திரனாலேயே தாங்கிக் கொள்ள முடியாதோ அவரிடமே நான் என் மனத்தைக் குவித்திருந்தேன்.(12) (ஒரு சுயம்வரத்தின்போது, காசி மன்னனின் மகள்களான) மூன்று இளவரசிகளைத் தன் தம்பி விசித்திரவீரியனின் திருமணத்திற்காகக் கடத்தி, அங்கே கூடியிருந்த மன்னர்கள் அனைவரையும் வென்றவர் எவரோ, அவரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(13) பிருகு குல ராமரிடம் {பரசுராமரிடம்} இருபத்து மூன்று {23} நாட்கள் தொடர்ந்து போரிட்டவர் எவரோ, எவரை ராமராலேயே வெல்ல இயலவில்லையோ, அவரைக் {பீஷ்மரைக்} குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(14) தம் புலன்கள் அனைத்தையும் திரட்டி, புத்தியின் உதவியுடன் தம் மனத்தைக் குவித்து (என்னைக் குறித்துச் சிந்திப்பதால்) அவர் {பீஷ்மர்} என்னிடம் புகலிடத்தை நாடுகிறார். அதன் காரணமாகவே நான் என் மனத்தை அவரிடம் மையம் கொள்ளச் செய்தேன்.(15)
எவரைக் கங்கையீன்று, சாதாரண மனித விதிகளின்படி வளர்த்தாளோ, எவரை வசிஷ்டர் தமது சீடராகக் கொண்டாரோ, அவரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(16) எவர் தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும், நான்கு வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் அறிந்தவரோ, வலிமை, சக்தி, பெரும் நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்ட அந்த வீரரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(17) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, ஜமதக்னியின் மகனான ராமருக்குப் {பரசுராமருக்கு} பிடித்தமான சீடர் எவரோ, அறிவியல்கள் அனைத்தின் கொள்ளிடம் எவரோ, அவரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.(18) ஓ! பாரதக் குலத்தின் காளையே, கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலம் ஆகியவற்றையும், அறநெறி மற்றும் கடமைகளையும் நன்கறிந்த அந்த மனிதர்களில் முதன்மையானவரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(19)
ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, அந்த மன்னர்களில் புலி சொர்க்கத்திற்குச் சென்றதும், பூமியானது, நிலவற்ற இரவைப் போலத் தெரியும்.(20) எனவே, ஓ! யுதிஷ்டிரரே, பயங்கர ஆற்றலைக் கொண்டவரும், கங்கையின் மைந்தருமான பீஷ்மரைப் பணிவுடன் அணுகி, நீர் கற்க விரும்பும் எதையும் கேட்பீராக.(21) ஓ! பூமியின் தலைவரே, (அறநெறி, பொருள் ஆதாயம், இன்பம் மற்றும் முக்தி ஆகியவற்றைப் பொருத்தவரையிலான) அறிவின் நான்கு கிளைகளையும, நான்கு வகையினருக்காக விதிக்கப்பட்ட வேள்விகள் மற்றும் சடங்குகள் குறித்தும், வாழ்வின் நான்கு வாழ்வுமுறைகள், மன்னர்களின் கடமைகள் ஆகியவற்றைக் குறித்து முழுமையாக அவரிடம் கேட்பீராக.(22) குரு குலத்தில் முதன்மையானவரான பீஷ்மர் இவ்வுலகில் இருந்து மறைந்துவிட்டால், அவருடன் சேர்ந்து அனைத்து வகை அறிவும் {ஞானமும்} மறைந்துவிடும். இதன் காரணமாகவே நான் (இப்போதே அவரிடம் செல்லுமாறு) உம்மைத் தூண்டுகிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.(23)
உயர்ந்தவையும், முக்கியமானவையுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இந்த நல்ல வார்த்தைளைக் கேட்டவனும், நீதிமானுமான யுதிஷ்டிரன், கண்ணீரால் தடைப்பட்ட குரலுடன் ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} பதிலுரைத்தான்.(24) {அவன்}, “ஓ! மாதவா பீஷ்மரின் சிறப்பைக் குறித்து நீ சொன்னதனைத்தும் முற்றிலும் உண்மையே. அதில் நான் சிறு ஐயமும் கொள்ளவில்லை.(25) உண்மையில், உயர் ஆன்ம பிராமணர்கள், சிறப்புமிக்கப் பீஷ்மரின் உயர்ந்த அருளையும், பெருமையையும் குறித்துப் பேசும்போது அவற்றை நான் கேட்டிருக்கிறேன்.(26) ஓ! எதிரிகளைக் கொல்பவனே, உலகங்கள் அனைத்தின் படைப்பாளன் நீயே. எனவே, ஓ! யாதவர்களைத் திளைக்கச் செய்பவனே, நீ சொல்வதில் சிறு ஐயத்தையும் கொள்ள மடியாது.(27) ஓ! மாதவா, உன் இதயம் அருளுமென்றால், உன் தலைமையில் நாம் பீஷ்மரிடம் செல்வோம்.(28) தெய்வீகமான சூரியன் வடக்குத் திரும்பினால், பீஷ்மர் (இவ்வுலகை விட்டு) தான் வென்றிருக்கும் அருள் உலகங்களுக்குச் சென்றுவிடுவார். எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, அந்தக் குருகுலத்தின் கொழுந்து உன் காட்சியைப் பெறத் தகுந்தவராவார்.(29) (நீ என் வேண்டுதலை அருளினால்), அழியக்கூடியவையாகவும், அழிவற்றவையாகவும் இருப்பவனும், தேவர்களில் முதல்வனுமான உன்னுடைய காட்சியைப் பீஷ்மர் பெறுவார். ஓ! தலைவா, உண்மையில் பிரம்மத்தின் பரந்த கொள்ளிடம் நீயே” என்றான் {யுதிஷ்டிரன்}”.(30)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, தன்னருகே அமர்ந்திருந்த சாத்யகியிடம், “என் தேர் ஆயத்தமாகட்டும் {தேரில் குதிரைகள் பூட்டப்படட்டும்}” என்றான்.(31) இதைக் கேட்ட சாத்யகி, விரைவாகக் கேசவனின் முன்னிலையை விட்டகன்று வெளியே சென்று தாருகனிடம், “கிருஷ்ணனின் தேர் ஆயத்தமாகட்டும்” என்று உத்தரவிட்டான்.(32) சாத்யகியின் வார்த்தைகளைக் கேட்ட தாருகன், விரைவாகக் கிருஷ்ணனின் தேரை ஆயத்தம் செய்தான். தங்கத்தாலானதும், வைடூரியங்கள், சந்திரகாந்தங்கள் மற்றும் சூரிய காந்தங்களால் அலங்கரிக்கப்பட்டதும், தங்கத்தால் மறைக்கப்பட்ட சக்கரங்களைக் கொண்டதும், பிரகாசமுடையதும், மனோவேகமுடையதும், சாரதிக்கு மத்தியில் வேறு பிற ரத்தினங்கள் நிறுவப்பட்டதும், காலைச் சூரியனைப் போல அழகானதும், உச்சியில் கருடனைக் கொண்ட அழகிய கொடிமரத்தைக் கொண்டதும், எண்ணற்ற கொடிகளைக் கொண்டதுமான தேரில், தங்க இழைகளைக் கொண்டவையும், மனோ வேகம் கொண்டவையும், குதிரைகளில் முதன்மையானவையுமான சுக்ரீவம், சைவியம் மற்றும் இன்னும் இரண்டு குதிரைகளும் பூட்டப்பட்டன. ஓ! மன்னர்களில் புலியே, அவற்றை ஆயத்தம் செய்த தாருகன், கூப்பிய கரங்களுடன் சென்று, இந்தச் செய்தியை கிருஷ்ணனிடம் தெரிவித்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(33-36)
பீஷ்மரின் துதி – ஸ்ரீ விஷ்ணு ஸ்தவராஜம்! – சாந்திபர்வம் பகுதி – 47-பீஷ்மர் எவ்வாறு உயிர்துறந்தார் என வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்; பாவங்களை அழிக்கும் ஸ்ரீவிஷ்ணுஸ்வராஜம் என்ற பீஷ்மரின் துதியை ஜனமேஜயனுக்கு உரைத்த வைசம்பாயனர்…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “கணைப்படுக்கையில் கிடந்தவரான பாரதர்களின் பாட்டன் {பீஷ்மர்} எவ்வாறு தன் உடலை விட்டார்? அவர் என்ன வகை யோகத்தைப் பின்பற்றினார்?” என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! குருக்களில் புலியே, உயர் ஆன்ம பீஷ்மர் எவ்வாறு தன் உடலை விட்டார் என்பதைத் தூய்மையான இதயத்துடனும், குவிந்த கவனத்துடனும் கேட்பாயாக.(2) சூரியன் துருவத்தைக் கடந்து வட பாதையில் {உத்தராயணத்தில்} நுழைந்தபோது, பீஷ்மர் குவிந்த கவனத்துடன், (உடலில் இருந்து விடுபட்டாலும் தொடர்புடன் கூடிய) தமது ஆன்மாவை (முழுமையாக விடுபட்ட நிலையுடன் கூடிய) தமது ஆன்மாவுக்குள் நுழையச்செய்தார்[1].(3) முதன்மையான பிராமணர்கள் பலரால் சூழப்பட்டிருந்த அந்த வீரர், எண்ணற்ற கணைகளால் துளைக்கப்பட்டிருந்த உடலுடன், எண்ணற்ற கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலப் பேரழகுடன் பிரகாசித்தார்.(4)வேதங்களை அறிந்த வியாசர், தெய்வீக முனிவரான நாரதர், தேவஸ்தானர், அஸ்மகர், சுமந்து,(5) ஜைமினி, உயர் ஆன்ம பைலர், சாண்டில்யர், தேவராதர், பெரும் நுண்ணறிவைக் கொண்ட மைத்திரேயர்,(6) அசிதர், வசிஷ்டர், உயர் ஆன்ம கௌசிகர், ஹரிதர், லோமசர், பெரும் நுண்ணறிவைக் கொண்ட அத்ரியின் மகன்,(7) பிருஹஸ்பதி, சுக்கிரர், பெரும் தவசியான சியவனர், சனத்குமாரர், கபிலர், வால்மீகி, தும்புரு, குரு,(8) மௌத்கல்யர், பிருகு குலத்தின் ராமர் {பரசுராமர்}, பெருந்தவசியான திருணபிந்து, பிப்பலாதர், வாயு, ஸம்வர்த்தர், புலஹர், கதர் {கசர்},(9) காசியபர், புலஸ்தியர், கிரது, தக்ஷன், பராசரர், மரீசி, அங்கிரஸ், காஸ்மியர், கௌதமர், தவசி காலவர்,(10) தௌம்யர், விபாண்டர், மாண்டவ்யர், தௌம்ரர், கிருஷ்ணாநுபௌதிகர், பிராமணர்களில் முதன்மையான உலூகர், பெருந்தவசி மார்க்கண்டேயர், பாஸ்கரி, புராணர் {பூர்ணர்}, கிருஷ்ணன், சூதர் ஆகிய அறவோர்களில் முதன்மையானோரான இவர்களாலும்,(11) நம்பிக்கையும், தற்கட்டுப்பாடும், மனோ அமைதியையும், உயர்ந்த அருளையும் கொண்ட இன்னும் பலராலும் சூழப்பட்டிருந்த அந்தக் குருவீரர் {பீஷ்மர்}, கோள்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள நிலவைப் போலத் தெரிந்தார்.(12)
கணைப்படுக்கையில் நீண்டு கிடந்தவரும், மனிதர்களில் புலியுமான பீஷ்மர், தூய்மையான இதயத்துடனும், கூப்பிய கரங்களுடனும், மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் கிருஷ்ணனை நினைத்தார்.(13) அவர், யோகத்தின் தலைவனும், நாபியில் தாமரையைக் கொண்டவனும், அண்டத்தின் தலைவனும், விஷ்ணு என்றும், ஜிஷ்ணு என்றும் அழைக்கப்படுபவனுமான மதுசூதனனின் புகழை உற்சாகமான பலத்த குரலில் பாடினார்.(14) நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரும், பலமிக்கவரும், உயர்ந்த அற ஆன்மாவுமான பீஷ்மர், குவிந்த கரங்களுடன் இவ்வாறே வாசுதேவனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்தார்.(15)
பீஷ்மர், “ஓ! கிருஷ்ணா, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, உன்னைப் புகழும் விருப்பத்தால் சுருக்கமாகவும், விரிவாகவும் என்னால் சொல்லப்படும் இவ்வார்த்தைகளில் மகிழ்வாயாக.(16) தூய்மையானவனும், தூய்மையேயானவனும் நீயே. அனைத்தையும் கடந்தவன் நீயே. அஃது என மக்களால் சொல்லப்படுபவன் நீயே. உயர்ந்த தலைவன் நீயே. ஓ! அண்டத்தின் ஆன்மாவும், அனைத்துயிரினங்களின் தலைவனும் ஆனவனே, முழு இதயத்துடன் நான் உனது புகலிடத்தை நாடுகிறேன் {உன்னைச் சரணடைகிறேன்}[2].(17) தொடக்கமும் {ஆதியும்}, முடிவும் {அந்தமும்} அற்றவன் நீயே. உயர்ந்தனவற்றிலும் உயர்ந்தவனும், பிரம்மமும் {பரப்பிரம்மமும்} நீயே. தேவர்களும், முனிவர்களும் கூட உன்னை அறியமாட்டார்கள். நாராயணன் என்றும், ஹரி என்றும் அழைக்கப்படும் தெய்வீகப் படைப்பாளன் மட்டுமே உன்னை அறிவான்.(18) முனிவர்கள், சித்தர்கள், பெரும் நாகர்கள், தேவர்கள் மற்றும் தெய்வீக முனிவர்கள் நாராயணன் மூலமே உன்னைக் குறித்துச் சிறிது அறிவார்கள். உயர்ந்தனவற்றில் உயர்ந்தவனும், சிதைவை அறியாதவனும் நீயே.(19) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பன்னகர்கள் ஆகியோரும் நீ யார் என்பதையும், எங்கிருந்து வந்தாய் என்பதையும் அறியமாட்டார்கள்.(20)அனைத்து உலகங்களும், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் உன்னுள் வாழ்ந்து, (அழிவுக்காலம் வரும்போது) உன்னிலேயே நுழைகின்றன. நூலில் கோர்க்கப்பட்ட ரத்தினங்களைப் போல, பண்புகள் கொண்ட அனைத்துப் பொருட்களும் உயர்ந்த தலைவனான உன்னிலேயே வசிக்கின்றன[3].(21) உனது செயல்பாடும், உனது உறுப்புகளானதும், மனம் மற்றும் பொருள்களாலானதுமான இவ்வண்டம், வலுவான நூலில் கோர்க்கப்பட்ட மலர்ச்சரத்தைப்போல, படர்ந்தூடுருவி அழியாமல் நிலைத்திருக்கும் ஆன்மாவான உன்னில் வசிக்கிறது.(22) ஆயிரக்கணக்கான தலைகளையும், கால்களையும், கண்களையும், கரங்களையும், மகுடங்களையும், பிரகாசமிக்க முகங்களையும் கொண்ட ஹரி என்று அழைக்கப்படுபவன் நீயே. தெய்வீகமானவனும், அண்டத்தின் புகலிடமுமான நாராயணன் என்று அழைக்கப்படுபவன் நீயே.(23) நுண்ணியவற்றில் நுண்ணியமானவனும், திரள்களில் {பெரியவற்றில்} திரளானவனும் {பெரியவனும்}, கனமானவற்றில் கனமானவனும், உயர்ந்தவற்றில் உயர்வானவனும் நீயே.(24) வாக்குகள் {மந்திரங்கள்}, அனுவாக்குகள் {பிராம்மணங்கள்}, நிஷதங்கள் {உபாஸனாவிதிகள்}, உபநிஷதங்கள் ஆகியவற்றில் கருதப்படும் தடுக்கப்படமுடியாத பரம்பொருள் நீயே. எப்போதும் உண்மையையே அறிவிக்கும் சாமங்களிலும் {சாம வேதத்திலும்} கருதப்படும் உண்மையின் வடிவம் நீயே[4].(25)நான்கு பகுதிகளாலான ஆன்மாவைக் கொண்டவன் நீயே. (அனைத்து உயிரினங்களின்) புத்தியில் மட்டுமே வெளிப்படுபவன் நீயே. நம்பிக்கையில் கட்டுப்பட்டிருப்போரின் தலைவன் நீயே. ஓ! தேவா, (நம்பிக்கை நிறைந்தோரால்) சிறந்த, உயர்ந்த, இரகசியமான நான்கு பெயர்களால் புகழப்படுபவன் நீயே[5].(26) தவங்கள் எப்போதும் உன்னில் நிலைத்திருக்கின்றன. (உன்னை நிறைவு செய்வதற்காக உயிரினங்களால்) செய்யப்படும் தவங்கள், உன் வடிவிலேயே வாழ்கின்றன. அண்டத்தின் ஆன்மா நீயே. அண்ட அறிவு நீயே. அண்டமே ஆனவனும் நீயே. அனைத்துமறிந்தவன் நீயே. அண்டத்தில் அனைத்தையும் படைத்தவன் நீயே[6].(27) சுடர்மிக்க நெருப்பை உண்டாக்கும் இரு கட்டைகளை {அரணிக்கட்டைகளைப்} போல, பூமியில் பிரம்மத்தைக் காக்க தெய்வீகமானவர்களான தேவகி மற்றும் வசுதேவரிடத்தில் பிறந்தவன் நீயே[7].(28) ஓ! கோவிந்தா, அர்ப்பணிப்புள்ள ஒரு வழிபாட்டினன் {பக்தன்} தன் நித்திய முக்திக்காக மனத்தில் இருந்து அனைத்தையும் விலக்கி, விருப்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, தூய ஆன்மாவான உன்னையே தன் ஆன்மாவில் காண்கிறான்.(29) மகிமையில் சூரியனுக்கும் மேம்பட்டவன் நீயே. புலன்கள் மற்றும் அறிவுக்கு அப்பாற்பட்டவன் நீயே. ஓ! அனைத்து உயிரினங்களின் தலைவா, நான் உன் கரங்களில் என்னை நிறுத்துகிறேன் {கொடுக்கிறேன்}.(30)(அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் ஆன்மாவான) புருஷன் என்று புராணங்களில் சொல்லப்படுபவன் நீயே. யுகங்களின் தொடக்கத்தில் பிரம்மன் என்றும், அண்ட அழிவின் போது சங்கர்ஷணன் என்றும் சொல்லப்படுபவன் நீயே. புகழத்தக்கவனான உன்னை நான் துதிக்கிறேன்.(31) ஒருவனேயானாலும், எண்ணற்ற வடிவங்களில் இன்னும் பிறந்து கொண்டிருப்பவன் நீயே. விருப்பங்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவன் நீயே. ஓ! அனைத்து விருப்பங்களையும் அளிப்பவனே, உன்னிடம் அர்ப்பணிப்புள்ள வழிபாட்டினர் {பக்தர்கள்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளை நம்பிக்கையுடன் செய்து தங்களைத் தியாகம் செய்கின்றனர்.(32) அண்டம் கிடக்கும் உறையென அழைக்கப்படுபவன் நீயே. நீரில் நீந்தும் அன்னங்களையும், வாத்துகளையும் போல உலகங்கள் அனைத்தும் உன்னிலேயே மிதக்கின்றன.(33) உண்மை நீயே. ஒருவனும், அழிவற்றவனும் நீயே. பிரம்மம் நீயே. மனத்திற்கும், பொருளுக்கும் அப்பாற்பட்ட “அது” நீயே. தொடக்கமும், நடுநிலையும், முடிவும் இல்லாதவன் நீயே. தேவர்களும், முனிவர்களும் உன்னை அறியமாட்டார்கள்.(34) தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், முனிவர்கள், பெரும் உரகர்கள் ஆகியோர் குவிந்த ஆன்மாக்களோடு எப்போதும் உன்னைத் துதிக்கின்றனர். கவலைகள் அனைத்திற்கும் பெரும் மருந்து நீயே.(35) பிறப்பும், இறப்பும் அற்றவன் நீயே. தெய்வீகமானவன் நீயே. தான்தோன்றி நீயே. அழிவற்றவன் நீயே. புலப்படாதவனும், அறிவுக்கு எட்டாதவனும் நீயே. ஓ! பலமிக்கவனே, ஹரி என்றும் நாராயணன் என்றும் அழைக்கப்படுபவன் நீயே[8].(36)அண்டத்தின் படைப்பாளனாகவும், அண்டத்தில் இருக்கும் அனைத்துக்கும் தலைவனாகவும் வேதங்களால் அறிவிக்கப்படுபவன் நீயே. அண்டத்தின் உயர்ந்த பாதுகாவலன் நீயே. சிதைவற்றவன் நீயே. உயர்ந்தவன் {பரம்} என்று அழைக்கப்படுபவன் நீயே.(37) தங்க நிறம் கொண்டவன் நீயே, அசுரர்களைக் கொல்பவன் நீயே. ஒருவனேயாயினும், அதிதியால் பனிரெண்டு வடிவங்களில் பெறப்பட்டவன் நீயே.(38) வளர்பிறையில் தேவர்களை அமுதத்தால் நிறைவு செய்பவனும், தேய்பிறையில் பித்ருக்களை நிறைவு செய்பவனும், மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} அனைவரின் தலைவனுமான சோமனாக இருக்கும் உனது அந்த வடிவத்தை நான் வணங்குகிறேன்.(39) அடர்ந்த இருளுக்கு மறுபுறத்தில் வசிக்கும் பெரும் பிரகாசத்துடன் கூடிய ஒரே ஒருவன் நீயே. உன்னை அறிந்து கொள்ளும் ஒருவன், மரணம் குறித்த எந்த அச்சத்தையும் விடுகிறான். அறிவை அடையச் செய்யும் பொருளாக இருக்கும் அந்த உன் வடிவத்தை நான் வணங்குகிறேன்[9].(40)மகத்தான உக்தவேள்வியில், பிராமணர்கள் பெரும் ரிக்காக உன்னைத் துதிக்கின்றனர். பெரும் நெருப்பு வேள்வியில் {அக்நிசயன யாகத்தில்} அவர்கள் உன்னைத் தலைமை அத்யர்யுவாக (புரோகிதராகப்) பாடுகிறார்கள். வேதங்களின் ஆன்மா நீயே. உன்னை நான் வணங்குகிறேன். ரிக்கும், யஜுரும், சாமங்களும் உன் வசிப்பிடங்களாகும்[10]. (வேள்விகளில் பயன்படுத்தப்படும்) ஐந்து வகைப் புனித காணிக்கைகள் {ஆகுதிகள்} நீயே. வேதங்களில் பயன்படுத்தப்படும் ஏழு ஊடுகள் {சந்தங்கள்} நீயே. வேள்வியாலான உனது அந்த வடிவை நான் வணங்குகிறேன்[11].(42) பதினேழு ஓரசை ஒலிகளுடன் ஹோம நெருப்பில் காணிக்கைகள் {ஆகுதிகள்} ஊற்றப்படுகின்றன. ஹோமத்தின் ஆன்மாவானவன் நீயே. நான் உன்னை வணங்குகிறேன்.(43) வேதங்கள் பாடும் புருஷன் நீயே. யஜுஸ் என்பது உனது பெயராகும். வேத சந்தங்கள் உன் அங்கங்களாகும். மூன்று வேதங்களிலும் விதிக்கப்பட்டிருக்கும் வேள்விகள் உனது மூன்று தலைகளாகும். ரதந்தரம் என்றழைக்கப்படும் பெரும் வேள்வி நிறைவை வெளிப்படுத்தும் உன் குரலாகும். புனிதப் பாடல்களாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்.(44) அண்டப் படைப்பாளர்களால் செய்யப்பட்டு, ஆயிரம் வருடங்கள் நீடித்த பெரும் வேள்வியில் தோன்றிய முனிவன் நீயே. தங்கச் சிறகுகள் கொண்ட பெரும் அன்னம் நீயே. அன்னத்தாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்[12].(45)வேர்களுடன் கூடிய அனைத்து வகை இணை மற்றும் பின்னொட்டு சொற்களும் உனது அங்கங்களாகும். சந்திகள் உன் மூட்டுகளாகும். மெய்யெழுத்துகளும், உயிரெழுத்துகளும் உன் ஆபரணங்களாகும். வேதங்கள் உன்னைத் தெய்வீகச் சொல்லென அறிவிக்கின்றன. சொல்லாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[13].(46) மூவுலகங்களின் நன்மைக்காக வேள்வியாலான அங்கங்களுடன் கூடிய ஒரு பன்றியின் வடிவையேற்று, {நீரில்} மூழ்கியிருந்த பூமியை உயர்த்தியவன் நீயே. முடிவிலா ஆற்றலாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(47) பாம்பால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் ஆயிரந்தலைகளுடன் யோகத்தில் உறங்குபவன் நீயே. உறக்கத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(48) எவ்வழிகளால் முக்தி அடையப்படுமோ, எவ்வழிகளால் புலன்கள் கட்டுப்படுத்தப்படுமோ அந்த வழிகளுடனும், உண்மையுடனும் (வாழ்வெனும் பெருங்கடலைக் கடக்கும்) நல்லோருக்கான பாலத்தை {அணையைக்} கட்டுபவன் நீயே. உண்மையாலான அந்த உனது வடிவை நான் வணங்குகிறேன்.(49) பல்வேறு அறங்களை {சமயங்களைப்} பயிலும் மனிதர்கள், பல்வேறு கனிகளின் விருப்பத்தால் செயலூக்கம் பெற்று, பல்வேறு சடங்குகளுடன் உன்னை வழிபடுகின்றனர். அறத்தாலான அந்த உன் வடிவை {தர்மஸ்வரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்[14].(50)உன்னிலிருந்தே அனைத்துப் பொருள்களும் உண்டாகின. ஆசையெனும் கொள்கையை உடைய உடற்கட்டுகளுடன் கூடிய உயிரினங்கள் அனைத்தையும் தூண்டுபவன் நீயே. தூண்டலாலான அந்த உன் வடிவை {காமரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்.(51) பெருமுனிவர்கள், வடிவமில்லாத உன்னை வடிவங்களுக்குள் தேடுகின்றனர். க்ஷேத்ரஜனன் என்றழைக்கப்படும் நீ க்ஷேத்திரத்தில் அமர்ந்திருக்கிறாய். க்ஷேத்திரத்தாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்[15].(52) விழிப்புடன் தன்னில் நிலைத்திருப்பவனானாலும், விழிப்பு, கனவு மற்றும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய மூன்று நிலைகளில் இருப்பவனாகச் சாங்கியர்கள் உன்னை விவரிக்கின்றனர். மேலும் அவர்கள் உன்னைப் பதினாறு பண்புகளைக் கொண்டவனாகவும், பதினேழாம் {17} எண்ணைக் குறிப்பனவாகவும் சொல்கின்றனர்[16].(53) கட்டுப்படுத்தப்பட்ட புலன்களைக் கொண்ட யோகியர்கள், தங்கள் உறக்கத்தைக் கைவிட்டு, மூச்சைத் தவிர்த்து, தமக்குள் ஒடுங்கி அழிவில்லா ஒளியாகவே உன்னைக் காண்கின்றனர்.(54) அமைதி நிறைந்த சந்நியாசிகள், தங்கள் பாவபுண்ணியங்கள் அனைத்தையும் அழித்ததன் விளைவால் மறுபிறவி எனும் அச்சத்திலிருந்து விடுபட்டு உன்னை அடைகின்றனர். முக்தியாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[17].(55)ஆயிரம் யுகங்களின் முடிவில், சுடர்மிகும் தழல்களுடன் உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் நெருப்பின் வடிவை ஏற்பவன் நீயே. கடுமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(56) அனைத்து உயிரினங்களையும் எரித்து, அண்டத்தைப் பரந்த நீர்க்கொள்ளிடமாக்கி, அந்நீரில் குழந்தையின் வடிவில் உறங்குபவன் நீயே. மாயையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(57) தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட தான்தோன்றியின் நாபியில் ஒரு தாமரை உதித்தது. அந்தத் தாமரையிலேயே இவ்வண்டம் நிறுவப்பட்டது. தாமரையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(58) ஆயிரம் தலைகள் கொண்டவன் நீயே. அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பவன் நீயே. அளவிலா ஆன்மா கொண்டவன் நீயே. நான்கு பெருங்கடல்களைப் போலப் பரந்தவையான நான்கு வகை ஆசைகளையும் அடக்கியவன் நீயே. யோக உறக்கத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(59) மேகங்கள் உன் தலையின் மயிரில் இருக்கின்றன. ஆறுகள் உன் அங்கங்களின் பல்வேறு மூட்டுகளில் இருக்கின்றன. நான்கு பெருங்கடல்களும் உனது வயிறாகும். நீராலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(60)
பிறப்பு மற்றும் இறப்பால் உண்டாகும் மாற்றம் உன்னிலிருந்தே எழுகிறது. மேலும், அண்ட அழிவின் போது அனைத்துப் பொருட்களும் மீண்டும் மீண்டும் உன்னில் கலக்கின்றன. காரணத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(61) இரவில் உறங்காதவன் நீயே. பகலிலும் செயல்படுபவன் நீயே. (அனைத்தின்) நல்ல மற்றும் தீய செயல்களை நோக்குபவன் நீயே. (அண்டத்தை) நோக்கும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(62) உன்னால் செய்ய முடியாத செயலேதும் இல்லை. மேலும் நல்ல செயல்களைச் சாதிக்க எப்போதும் தயாராக இருப்பவன் நீயே. செயலின் வடிவமான, வைகுண்டன் என்றழைக்கப்படும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(63) அறத்தையும், அதிகாரத்தையும் தங்கள் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருந்த க்ஷத்ரியர்களைப் போரில் கோபத்துடன் இருபத்தோரு முறை அழித்தவன் நீயே. கொடூரத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(64) ஐந்து பாகங்களாக உன்னையே வகுத்துக் கொண்டு, அனைவரின் உடலுக்குள் செயல்படும் ஐந்து உயிர்மூச்சுகளாக {பிராண வாயுக்களாக} இயங்கி, அனைத்து உயிரினங்களும் அசைவதற்குக் காரணமானவன் நீயே. காற்றாலான {வாயுவாலான} அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(65)
மாதங்கள் என்றழைக்கப்படும் வடிவங்களிலும், பருவங்கள், அயணங்கள், வருடங்கள் ஆகிய வடிவங்களிலும் யுகந்தோறும் தோன்றி, படைப்பு மற்றும் அழிவுக்குக் காரணமாக இருப்பவன் நீயே. காலத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(66) பிராமணர்கள் உனது வாயாகவும், க்ஷத்திரியர்கள் உன் இரு கைகளாகவும், வைசியர்கள் உன் வயிறு மற்றும் தொடைகளாகவும், சூத்திரர்கள் உன் பாதங்களாகவும் வாழ்கின்றனர். வர்ணத்தாலான அந்த உன் வடிவை {வர்ணரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்.(67) நெருப்பே உன் வாயாகும். சொர்க்கங்கள் உன் தலையின் மகுடமாகும். வானம் உனது நாபியாகும். பூமி உனது பாதங்களாகும். சூரியன் உனது கண்ணாகும். திசைப்புள்ளிகள் உனது காதுகளாகும். (மூன்று) உலகங்களாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(68) காலத்திலும் மேன்மையானவன் நீயே. உயர்ந்தவற்றில் உயர்ந்தவன் நீயே. அண்டத்தின் தொடக்கமாக இருக்கும் தொடக்கமில்லாதவன் நீயே. அண்டத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(69) வைசேஷிக தத்துவத்தின் படி உன் பண்புகளைத் தீர்மானிக்கும் இவ்வுலகின் மனிதர்கள், உன்னையே உலகின் பாதுகாவலனாகக் கருதுகிறார்கள். பாதுகாவலனாக இருக்கும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[18].(70)உணவு, பானம், எரிபொருள் {விறகு} ஆகிய வடிவங்களை ஏற்கும் நீ, இன்பங்களையும், உயிரினங்களின் உயிர் மூச்சுகளையும் {பிராண வாயுக்களையும்} அதிகரித்து, அவர்களின் இருப்பைத் தாங்கிப் பிடிக்கிறாய். உயிராலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(71) உயிர் மூச்சுகளைத் தாங்கிப் பிடிப்பதற்காக நான்கு வகை உணவுகளை[19] நீ உண்கிறாய். வயிற்றில் அக்னியின் வடிவை ஏற்று அந்த உணவை நீயே செரிக்கிறாய். செரிமான வெப்பத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(72) பாதி மனிதன், பாதிச் சிங்கம் என்ற வடிவை ஏற்று, பழுப்புக் கண்கள் மற்றும் பழுப்பு பிடரி மயிர் ஆகியவற்றைக் கொண்டு, பற்களையும், நகங்களையும் ஆயுதமாகக் கொண்டு அசுரர்களின் தலைவனுடைய உயிரை எடுத்தவன் நீயே. பெருகும் வலிமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(73) தேவர்களோ, கந்தர்வர்களோ, தைத்தியர்களோ, தானவர்களோ உண்மையில் உன்னை அறியமாட்டார்கள். நுட்பமேயான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(74) பாதாளலோகத்தில், சிறப்புமிக்க, பலமிக்க, அழகிய அனந்தனின் வடிவை ஏற்று, உலகைத் தாங்குபவன் நீயே. வலிமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(75)படைப்பின் தொடர்ச்சிக்காக, அன்பு, பாசமெனும் பற்றுகளால் உயிரினங்கள் அனைத்தையும் திகைக்கச் செய்பவன் நீயே. (யோகிகள் எதற்காக முயல்கின்றனரோ அந்த) உண்மையான தன்னறிவு ஐம்பூதங்களே என்பதை அறியும் அந்த அறிவைக் கருதியே, அறிவுக்காக மக்கள் உன்னை அணுகுகின்றனர். அறிவாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(77) உன் உடல் அளவில்லாததாகும். உன் அறிவும் கண்களும் அனைத்திற்கும் அர்ப்பணிப்புள்ளவையாகும். எல்லைகள் அனைத்திற்கும் அப்பால் உள்ள எல்லையற்றவன் நீயே. பரந்த தன்மையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(78) சடாமுடிதரித்து, கையில் தண்டத்துடனும், நீண்ட வயிற்றுடனும் {தொங்கும் தொந்தியுடனும்}, அம்பறாத்தூணியையே இரக்கும் ஓடாகவும் கொண்ட துறவியின் வடிவை ஏற்றவன் நீயே. பிரம்மத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[20].(79) திரிசூலதாரியும், தேவர்களின் தலைவனும், முக்கண்ணனும், உயர்ந்த ஆன்மா கொண்டவனும் நீயே. உன் உடல் எப்போதும் சாம்பலால் {திருநீற்றால்} பூசப்பட்டிருக்கிறது. உனது லிங்கச் சின்னம் எப்போதும் மேல்நோக்கியே இருக்கிறது. ருத்திரன் என்ற அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(80)அரைபிறை வடிவங்கள் உன் நெற்றியின் ஆபரணங்களாகும். கழுத்தைச் சுற்றும் புனித நூலாகப் பாம்புகளைக் கொண்டவன் நீயே. பிநாகை மற்றும் திரிசூலதாரி நீயே. கடூரத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(81) அனைத்து உயிரினங்களின் ஆன்மா நீயே. அனைத்துயிரினங்களைப் படைப்பவனும், அழிப்பவனும் நீயே. கோபம், பகை, பாசம் ஆகியவை அற்றவன் நீயே. அமைதியாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(82) அனைத்தும் உன்னில் இருக்கின்றன. ஒவ்வொரு பொருளும் நீயே. எங்கும் இருப்பவன் நீயே. எங்கும், எப்போதும் அனைத்துமாக இருப்பவன் நீயே. ஒவ்வொரு பொருளிலும் இருக்கும் உன் வடிவை நான் வணங்குகிறேன்.(83) அண்டத்தையே செயலாகக் கொண்டவனும், அண்டத்தின் ஆன்மாவாக இருப்பவனும், அண்டம் எழுந்த பொருளாக இருப்பவனும், அனைத்துப் பொருள்களுக்கும் அழிவாக இருப்பவனும், (அனைத்துப் பொருட்களில் இருக்கும் பூதங்களான) ஐந்தைக் கடந்தவனுமான உன்னை நான் வணங்குகிறேன்.(84) மூவுலகங்களாய் இருப்பவனும், மூவுலகங்களிலும் மேன்மையானவனுமான உன்னை நான் வணங்குகிறேன். திசைகள் அனைத்துமான உன்னை நான் வணங்குகிறேன். அனைத்தும் நீயே, அனைத்தின் ஒரே கொள்ளிடம் நீயே.(85)
ஓ! தெய்வீகத் தலைவா, ஓ! விஷ்ணு, ஓ! அனைத்து உலகங்களின் நித்திய மூலமே உன்னை நான் வணங்குகிறேன். ஓ! ரிஷிகேசா, படைப்பவனும் நீயே, அழிப்பவனும் நீயே, வெல்லப்படமுடியாதவன் நீயே.(86) கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றில் வெளிப்படும் உன் தெய்வீக வடிவை என்னால் காண முடியவில்லை. எனினும், (உனது செயல்களில் நம்பிக்கையுடன்) உன் நித்திய வடிவை என்னால் உண்மையில் காண முடியும்.(87) உன் தலையால் சொர்க்கத்தையும், பாதத்தால் பூமியையும், ஆற்றலால் மூவுலகங்களையும் நிறைத்திருப்பவன் நீயே. அழிவற்றவனும், அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் படர்ந்தூடுருவி இருப்பவனும் நீயே.(88) திசைகளே உனது கரங்களாகும், சூரியனே உனது கண்ணாகும், ஆற்றலே உனது உயிர்நீராகும். அனைத்து உயிரினங்களின் தலைவன் நீயே. அளவிலா சக்தி கொண்ட காற்றின் {வாயுவின்} ஏழு பாதைகளையும் அடைத்து நிற்பவன் நீயே.(89) ஓ! மங்கா மகிமை கொண்ட கோவிந்தா, காயாம்பூவைப் போன்ற நிறம் கொண்ட மஞ்சள் ஆடை உடுத்தியவனான உன்னை, அச்சங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவர்களே வழிபடுகின்றனர்.(90)
ஓ! கிருஷ்ணா, ஒரே முறை உன்னிடம் தலைவணங்கினாலும், அது பத்து குதிரை வேள்விகளின் நிறைவுக்கு இணையானதாகும். பத்து குதிரைவேள்விகளைச் செய்தவனும், மறுபிறவி என்ற கடமையில் இருந்து விடுபட மாட்டான். எனினும், கிருஷ்ணனை வழிபடும் மனிதன் மறுபிறவியில் இருந்து தப்புகிறான்.(91) தங்கள் நோன்பாகக் கிருஷ்ணனையே கொண்டோரையும், இரவின்போதும், உறக்கத்திலிருந்து விழிக்கும்போதும் கிருஷ்ணனையே நினைப்போரையும் கிருஷ்ணனையே தங்கள் மேனியாகக் கொண்டவர்கள் என்று சொல்லலாம்., மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட தெளிந்த நெய்யாகுதிகள் சுடர்மிக்க நெருப்பில் நுழைவதைப் போல, அம்மனிதர்கள் (மரணத்திற்குப் பிறகு) கிருஷ்ணனுக்குள்ளேயே நுழைகின்றனர்.(92) ஓ! விஷ்ணுவே, நரகத்தின் அச்சத்தை விலக்குபவனும், உலகவாழ்வெனும் பெருங்கடலின் சுழியில் மூழ்கியவனை, ஒரு படகைப் போல நரகின் அச்சத்தில் இருந்து விடுவிப்பவனான உன்னை நான் வணங்குகிறேன்.(93) ஓ! தேவா, பிராமணனின் நிலையைக் கொண்டவனும், பிராமணர்கள் மற்றும் பசுக்களுக்கு நன்மை செய்பவனும், அண்டத்திற்கு நன்மை செய்பவனும், கிருஷ்ணன் மற்றும் கோவிந்தனாக இருப்பவனுமான உன்னை நான் வணங்குகிறேன்.(94) ஹரி என்ற ஈரெழுத்தானவை, காட்டுவழியில் பயணிக்கும் வணிகர்களையும், சோகம் மற்றும் துயரங்களைக் கொண்ட உலகின் நோய்கள் அனைத்தையும் நன்கு குணமடையச் செய்யும் மருந்தையும் தனக்குள் கொண்டவையாகு[21].(95)உண்மையானது விஷ்ணுவால் நிறைந்திருப்பைத் போலவும், அண்டமானது விஷ்ணுவால் நிறைந்திருப்பதைப் போலவும், அனைத்தும் விஷ்ணுவால் நிறைந்திருப்பதைப் போலவும், என் ஆன்மாவும் விஷ்ணுவால் நிறைந்து, என் பாவங்கள் அழிவையடையட்டும்.(96) உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட நான், மகிழ்ச்சியான முடிவை அடைய விரும்பி, உனது பாதுகாப்பை நாடுகிறேன். ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, ஓ! தேவர்களில் சிறந்தவனே, எது எனக்கு நன்மையோ, அதையே எனக்கு {செய்ய} நினைப்பாயாக.(97) ஓ! விஷ்ணுவே, அறிவுக்கும், தவங்களுக்கும் பிறப்பிடமான பிறப்பற்றவன் நீயே. இவ்வாறே நீ புகழப்படுகிறாய். ஓ! ஜனார்த்தனா, ஓ! தேவா, பேச்சை (மட்டுமே) கொண்ட வேள்வியால் இவ்வாறு என்னால் வழிபடப்படும் நீ என்னிடம் நிறைவு கொள்வாயாக.(98) வேதங்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவையாக இருக்கின்றன. தவங்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவையாக இருக்கின்றன. தேவர்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கின்றனர். எங்கும், எப்போதும் அனைத்தும் நாராயணனே” என்று துதித்தார் {பீஷ்மர்}”.(99)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன பீஷ்மர், குவிந்த மனத்துடன் கிருஷ்ணனிடம், “கிருஷ்ணனை வணங்குகிறேன்” என்று சொல்லி வணங்கினார்.(100) பீஷ்மரின் வழிபாட்டைத் தன் யோக ஆற்றலால் அறிந்தவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனுமான மாதவன், (அவரது {பீஷ்மரது} உடலுக்குள் நுழைந்து), கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலம் ஆகியவற்றின் தெய்வீக அறிவை அவருக்கு அளித்து அங்கிருந்து சென்றான்.(101) பீஷ்மர் அமைதியடைந்தபோது, (அவரைச் சுற்றிலும் அமர்ந்து) பிரம்மத்தை ஓதிக்கொண்டிருந்தவர்கள், கண்ணீரால் தடைபட்ட குரல்களுடன், அந்தக் குருக்களின் உயர் ஆன்மத் தலைவரை {பீஷ்மரைச்} சிறந்த வார்த்தைகளால் துதித்தனர்.(102) பிராமணர்களில் முதன்மையானோரான அவர்கள், உயிரினங்களில் முதன்மையான கிருஷ்ணனையும் புகழ்ந்தபடியே, மெல்லிய குரல்களால் பீஷ்மரை மீண்டும் மீண்டும் பாராட்டினர்.(103) உயிரினிங்களில் முதன்மையான மாதவன் {கிருஷ்ணன்}, தன்னிடம் பீஷ்மர் கொண்ட அர்ப்பணிப்பை (தனது யோக சக்தியால்) அறிந்து, தன் ஆசனத்தில் இருந்து திடீரென எழுந்து தன் தேரில் ஏறினான்.(104) {அப்போது} கேசவனும், சாத்யகியும் ஒரே தேரில் சென்றனர். சிறப்பு மிக்க இளவரசர்களான யுதிஷ்டிரனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} மற்றொரு தேரில் சென்றனர்.(105) பீமசேனனும், இரட்டையர்களும் {நகுல சகாதேவனும்} மூன்றாவதிலும், மனிதர்களில் காளையரான கிருபர், எதிரிகளை எரிப்பவனான யுயுத்சு, சூதனான சஞ்சயன் ஆகியோர், ஒரு நகரத்தைப் போலத் தெரிந்த தங்கள் தங்கள் தேர்களிலும் சென்றனர். அவர்கள் அனைவரும், தங்கள் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் பூமியை நடுங்கச் செய்தபடியே சென்றனர்.(106,107) அந்த மனிதர்களில் முதன்மையானவன் {கிருஷ்ணன்}, பிராமணர்களால் சொல்லப்பட்ட தனக்கான புகழுரைகளைக் கேட்டபடியே மகிழ்ச்சியாகச் சென்றான். அந்தக் கேசியைக் கொன்றவன் {கிருஷ்ணன்}, (வீதியெங்கும்) கூப்பிய கரங்களுடனும், வணங்கிய தலைகளுடனும் காத்திருந்த மக்களை மகிழ்ச்சியான இதயத்துடன் வணங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}[22].(108)“இவ்விதம் பீஷ்மரால் சொல்லப்பட்ட ஸ்ரீகிருஷ்ணஸ்துதியைப் பக்தியுடன் படிப்பவனும், கேட்பவனும், ஸ்ரீகிருஷ்ணனுடைய அனுக்ரஹத்தால் பாபங்களெல்லாம் அற்று, முடிவில் ஸ்ரீ கிருஷ்ணபகவானை அடைகிறான். யோகிகள் உயிர்நீங்குங்காலத்தில் மிக்கப் பிரயத்தனத்துடன் மனத்தில் எந்தப் பகவானை நிலைக்கப் பாவனைச் செய்கிறார்களோ அந்த ஹரியைப் பீஷ்மர் எதிரிற்கண்டு கிருதார்த்தராயத் தம்முயிரைவிட்டார். முன்காலத்தில் பீஷ்மராற் சொல்லப்பட்டதும் மஹாபாபங்களை நாசஞ்செய்வதும், ஆச்சர்யமான செய்கையுள்ள ஸ்ரீ விஷ்ணுவைப் பற்றியதுமான இந்த ஸ்தவராஜம் முடிவுபெற்றது. பரிசுத்தனாகி மோக்ஷவிருப்பமுள்ள மனிதன் நிந்திக்கப்பட்ட பாவங்களை விலக்கும் இந்த ஸ்தவராஜத்தைப் படித்துத் தாமாகக் கிடைத்த அழிவுள்ள உலகங்களைக் கடந்து மஹாத்மாவினுடைய அழிவற்ற பதத்தைப் பெறுகிறான்”
க்ஷத்திரியர்கள் மீண்டதெவ்வாறு? – சாந்திபர்வம் பகுதி – 48-பீஷ்மரைக் காணச் சென்ற கிருஷ்ணனும், யுதிஷ்டிரனும் வழியில் பேசிக் கொண்டது; பரசுராமரால் உண்டாக்கப்பட்ட தடாகங்களை யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக்காட்டிய கிருஷ்ணன்; பரசு ராமர் க்ஷத்திரியர்களை இருபத்தோரு முறை அழித்ததும், க்ஷத்திரியர்கள் மீண்டும் வளர்ந்ததும் எவ்வாறு என்று கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷ்டிரன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ரிஷிகேசனும் {கிருஷ்ணனும்}, மன்னன் யுதிஷ்டிரனும், கிருபரின் தலைமையிலானவர்கள் அனைவரும், நான்கு பாண்டவர்களும், கொடிகள், கொடிமரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையும், அரணமைக்கப்பட்ட நகரங்களைப் போலத் தெரிந்தவையுமான தங்கள் தங்கள் தேர்களில், வேகமான குதிரைகளின் உதவியுடன் குருக்ஷேத்திரத்தை நோக்கி வேகமாகச் சென்றனர்.(1,2) மயிர், ஊனீர், எலும்புகள் ஆகியவற்றால் மறைக்கப்பட்டதும், உயர் ஆன்மாக்களைக் கொண்டோரான லட்சோபலட்சம் க்ஷத்திரியர்கள் தங்கள் உடல்களை விட்ட இடமுமான அந்தக் களத்தில் இறங்கினர்.(3) மேலும் அது {அந்தக் களம்}, யானைகள், குதிரைகளின் எலும்புகளாலும் அமைந்த பல மலைகளாலும், சங்குகளைப் போலச் சிதறிக் கிடக்கும் மனிதத் தலைகளாலும், மண்டை ஓடுகளாலும் நிறைந்திருந்தது.(4) ஆயிரக்கணக்கான ஈமச்சிதைகளாலும், கவசங்கள் மற்றும் ஆயுதங்களின் குவியல்களாலும் நிறைந்திருந்த அந்தப் பரந்த களம், குடிப்பதற்காக அந்தகனால் பயன்படுத்தப்பட்டதும், அண்மையில் கைவிடப்பட்டதுமான அவனுடைய பானசாலையைப் போலத் தெரிந்தது.(5)
அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், பூதக்கூட்டங்களாலும், ராட்சசர்களாலும் மொய்க்கப்பட்ட அந்தப் போர்க்களத்தைப் பார்த்தபடியே வேகமாகச் சென்றனர்.(6) அப்படிச் சென்று கொண்டிருந்தபோது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், யாதவர்களைத் திளைக்கச் செய்பவனுமான கேசவன், ஜமதக்னி மகனின் {பரசுராமரின்} ஆற்றலைக் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்னான்.(7) {கிருஷ்ணன்}, “ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, அதோ தொலைவில் காணப்படுவதே ராமரின் {பரசுராமரின்} ஐந்து தடாகங்களாகும். அங்கேதான் ராமர், க்ஷத்திரியர்களின் குருதியைக் கொண்டு தமது மூதாதையரான பித்ருக்களுக்குக் காணிக்கையளித்தார். பலமிக்கவரான அந்த ராமர் {பரசுராமர்}, இருபத்தோரு {21} முறை க்ஷத்திரியர்களிடம் இருந்து இந்தப் பூமியை விடுவித்த பிறகு, அங்கேதான் தனது பணியைக் கைவிட்டார்” என்றான் (9)
யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, “பழங்காலத்தில் க்ஷத்திரியர்களை இருபத்தோரு முறை ராமர் அழித்தார் என்று நீ சொல்வதில் எனக்குப் பேரையங்கள் {பெரும் சந்தேகங்கள்} இருக்கின்றன.(10) ஓ! யதுக்களில் காளையே, ஓ! அளவிலா ஆற்றலைக் கொண்டோனே க்ஷத்திரிய வித்தே ராமரால் அழிக்கப்பட்டது எனில், க்ஷத்திரிய வகையினர் மீண்டதெவ்வாறு?(11) ஓ! யதுக்களில் காளையே, சிறப்புமிக்க, உயர் ஆன்ம ராமரால் க்ஷத்திரிய வகை எவ்வாறு முற்றாக அழிக்கப்பட்டது? மேலும் அது மீண்டும் எவ்வாறு வளர்ந்தது?(12) பயங்கரமான தேர் மோதல்களில் கோடிக்கணக்கான க்ஷத்திரியர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர்? ஓ! நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, க்ஷத்திரியர்களின் சடலங்களால் பூமி விரவிக் கிடந்தது.(13) ஓ! யதுக்களில் புலியே, பழங்காலத்தில் உயர் ஆன்ம பிருகு குல வழித்தோன்றலான ராமரால் க்ஷத்திரிய வகையானது என்ன காரணத்தால் இவ்வாறு நிர்மூலமாக்கப்பட்டது? ஓ! விருஷ்ணி குலத்தோனே, ஓ! பறவைக் கொடி கொண்டோனே, இந்த என் ஐயத்தை நீக்குவாயாக. ஓ! கிருஷ்ணா, ஓ! வாசவனின் {இந்திரனின்} தம்பியே[1], உயர் அறிவு உன்னில் இருந்தே கிடைக்கிறது” என்றான் {யுதிஷ்டிரன்}.(தக்ஷனின் முதல் மகளான} அதிதியிலிருந்து இந்த அண்டத்தின் தலைவர்களான {லோக ஈஸ்வரர்களான} பனிரெண்டு ஆதித்யர்கள் தோன்றினர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, பெயர் வரிசையில் உனக்கு அவர்களை விவரித்துச் சொல்கிறேன்.(14) தாத்ரி {தாதா}, மித்ரன், அர்யமா, சக்ரன் {இந்திரன்}, வருணன், அம்சன், பகன், விவஸ்வத் {விவஸ்வான்}, உஷா {பூஷா}, சாவித்ரி {சவிதா},(15) த்வஷ்த்ரி {த்வஷ்டா} மற்றும் விஷ்ணு ஆகியோரே அவர்கள். எனினும், இளையவன் {விஷ்ணு} தகுதியால் அவர்கள் அனைவரையும் விட மேன்மையானவனாக இருந்தான்.)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு கதனின் பலமிக்க அண்ணன், ஒப்பற்ற ஆற்றலைக் கொண்ட யுதிஷ்டிரனிடம், பூமியில் க்ஷத்திரியர்கள் மீண்டும் எவ்வாறு நிறைந்தனர் என்பது குறித்த அனைத்தையும் உள்ளபடியே சொன்னான்”.(14-16)
பரசுராமர்! – சாந்திபர்வம் பகுதி – 49-பரசுராமரின் கதையைச் சொன்ன கிருஷ்ணன்; காதிக்குப் பிறந்த விஷ்வாமித்திரர்; காதியின் மகள் சத்தியவதிக்குப் பிறந்த ஜமதக்னி; ஜமதக்னிக்குப் பிறந்த பரசுராமர்; ஹைஹய குல க்ஷத்திரியர்களால் கொல்லப்பட்ட ஜமதக்னி; கோபத்தால் க்ஷத்திரிய குலத்தை அழித்த பரசுராமர்; கசியபருக்குப் பூமியைத் தானமளித்த பரசுராமர்; கசியபரிடம் இரந்து கேட்ட பூமாதேவி; பூமாதேவி குறிப்பிட்ட மன்னர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களை மன்னர்களாக்கிய கசியபர்…
வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குந்தியின் மகனே, ராமரின் {பரசுராமரின்} சக்தி, ஆற்றல் மற்றும் பிறப்பைக் குறித்துப் பெருமுனிவர்களுடன் உரையாடும்போது நான் கேட்டவாறே சொல்கிறேன்; கேட்பீராக.(1) ஜமதக்னியின் மகனால் {பரசுராமரால்} கோடிக்கணக்கான க்ஷத்திரியர்கள் கொல்லப்பட்டது எவ்வாறு? மேலும், பல்வேறு அரச குலங்களில் மீண்டும் பிறந்தவர்கள் எவ்வாறு மீண்டும் கொல்லப்பட்டனர்? என்பதைக் கேட்பீராக.(2) ஜாஹ்னுவுக்கு, ரஜன் {அஜன்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். ரஜனுக்குப் பலாகாஸ்வன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். மன்னன் பலாகாஸ்வனுக்கு, நன்னடத்தைக் கொண்டவனாகக் குசிகன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான்.(3) பூமியில் ஆயிரங்கண் இந்திரனுக்கு ஒப்பானவனாக இருந்த குசிகன், மூவுலகங்களுக்குத் தலைவனாகும் மகனை விரும்பி கடுந்தவங்களைச் செய்து வந்தான்.(4)கடுந்தவங்களைச் செய்பவனும், ஒரு மகனைப் பெறுவதற்குத் தகுந்தவனுமான அவனைக் {குசிகனைக்} கண்ட ஆயிரங்கண் புரந்தரன் {இந்திரன்}, (தன் சக்தியால்) அம்மன்னனை ஈர்த்தான்.(5) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பகனைக் கொன்றவனான அந்த மூவுலகங்களின் பெருந்தலைவனே, காதி என்ற பெயரில் அறியப்பட்டவனாகவும் குசிகரின் மகனாகவும் ஆனான்.(6) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, காதிக்கு, சத்தியவதி என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள். பலமிக்கக் காதி, பிருகுவின் வழித்தோன்றலான ரிசிகருக்கு அவளை (மனைவியாகக்) கொடுத்தான்.(7) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, பிருகு குலத்தவரான அவளது தலைவர் {ரிசிகர்}, அவளது நடத்தையின் தூய்மையில் நிறைவு கொண்டவராக இருந்தார். அவர், (அவளது தந்தையான) காதிக்கு ஒரு மகனைக் கொடுப்பதற்காகப் பால் மற்றும் அரிசி கலந்த வேள்வி உணவைச் சமைத்தார்.(8)
பிருகு குலத்தின் ரிசிகர், தமது மனைவியை {சத்தியவதியை} அழைத்து, “புனிதமாக்கப்பட்ட உணவின் இப்பகுதி உன்னால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், (மறுபாதியான) இந்தப் பகுதி உன் தாயால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அவளுக்குச் {மன்னன் காதியின் மனைவிக்குச்} சுடர்மிக்கப் பிரகாசத்துடன் ஒரு மகன் பிறந்து, க்ஷத்திரியர்களில் காளையாக இருப்பான். பூமியில் க்ஷத்திரியர்களால் வெல்லப்பட முடியாத அவன், க்ஷத்திரியர்களில் முதன்மையானோரைக் கொல்பவனாக இருப்பான்.(10)
உன்னைப் பொறுத்தவரையில், ஓ! அருளப்பட்ட மங்கையே, உணவின் இப்பகுதியானது, பெரும் ஞானம் கொண்டவனும், அமைதியின் வடிவமும், தவத்துறவுகளுடன் கூடியவனும், பிராமணர்களில் முதன்மையானவனுமான ஒரு மகனை உனக்குக் கொடுக்கும்” என்றார்.(11) பிருகு குலத்தைச் சேர்ந்தவரான அந்த அருளப்பட்ட ரிசிகர், தமது மனைவியிடம் {சத்தியவதியிடம்} இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, தவங்களில் தன் இதயத்தை நிலைநிறுத்தி காட்டுக்குச் சென்றுவிட்டார்.(12)
அதேநேரத்தில், மன்னன் காதி, புனித நீர்நிலைகளுக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளத் தீர்மானித்து, ரிசிகரின் ஆசிரமத்திற்குத் தன் ராணியுடன் வந்தான்.(13) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அப்போது சத்தியவதி, புனிதமாக்கப்பட்ட உணவின் இரு பகுதிகளையும் எடுத்துக் கொண்டு, பெரும் அவசரத்துடன் தன் தலைவர் சொன்ன வார்த்தைகளைத் தன் தாயிடம் சொன்னாள்.(14) ஓ! குந்தியின் மகனே, அப்போது அந்த அரசத்தாய் {ராஜமாதா}, அறியாமையால் தனக்கென நிர்ணயிக்கப்பட்டிருந்த பகுதியைத் தன் மகளுக்குக் கொடுத்து, தன் மகளுக்கென நிர்ணயிக்கப்பட்டிருந்த பகுதியைத் தனக்கு எடுத்துக் கொண்டாள்.(15) இதன்பேரில், க்ஷத்திரியர்களை நிர்மூலம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த பயங்கர வடிவிலான பிள்ளையைத் தன் கருவில் கொண்ட சத்தியவதியின் உடல் பிரகாசத்தால் ஒளிவீசியது.(16)
அவளது கருவறைக்குள் கிடக்கும் பிராமணப் பிள்ளையைக் கண்ட அந்தப் பிருகுக்களில் புலி {ரிசிகர்}, தெய்வீக அழகுடையவளான தன் மனைவியிடம் {சத்தியவதியிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(17) “ஓ! அருளப்பட்ட பெண்ணே, புனிதமாக்கப்பட்ட உணவுக் கவளங்களை மாற்றியதன் விளைவால் உன் தாய் உன்னை வஞ்சித்துவிட்டாள். உன் மகன் கொடுஞ்செயல்களைச் செய்பவனாகவும், இதயத்தில் பழியுணர்ச்சி கொண்டவனாகவும் இருப்பான். அதே போல (உன் தாய்க்குப் பிறக்கப்போகும்) உன் சகோதரனோ, தவத்துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பிராமணனாக இருப்பான்.(18) உனக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த புனிதமாக்கப்பட்ட உணவில் உயர்ந்ததும், உலகளாவியதுமான பிரம்மத்தின் வித்து வைக்கப்பட்டிருந்தது. அதே வேளையில், உன் தாய்க்காக நிர்ணயிக்கப்பட்டதில் க்ஷத்திரிய சக்தியின் மொத்த தொகையும் வைக்கப்பட்டிருந்தது.(19) எனினும், ஓ! அருளப்பட்ட மங்கையே {சத்தியவதியே}, அந்த இரண்டு பகுதிகளும் மாற்றப்பட்டதன் விளைவால், என்ன நினைத்து இது செய்யப்பட்டதோ அது நடக்காது. ஒரு தாய் பிராமணப் பிள்ளையை அடைவாள், நீயோ ஒரு க்ஷத்திரியனை மகனாக அடைவாய்” என்றார்.(20)
தன் தலைவரால் இவ்வாறு சொல்லப்பட்ட உயர்ந்த அருளைக் கொண்ட சத்தியவதி, நெடுஞ்சாண்கிடையாக அவரது பாதத்தில் தன் தலையை வைத்து நடுங்கிக் கொண்டே,(21) “ஓ! புனிதமானவரே, பிராமணர்களில் இழிந்தவனை (உமது மகனாக) அடைவேன் என்ற இத்தகு வார்த்தைகளை என்னிடம் சொல்வது உமக்குத் தகாது” என்றாள்.(22)
ரிசிகர் {சத்தியவதியிடம்}, “ஓ! அருளப்பட்ட மங்கையே, உன்னைப் பொறுத்தவரை இஃது என்னால் நினைக்கப்பட்டதன்று. புனிதமாக்கப்பட்ட உணவுக்கவளங்களை மாற்றியதன் விளைவாலேயே கடுஞ்செயல்களைச் செய்யக்கூடிய மகனை நீ கருவில் கொண்டிருக்கிறாய்” என்றார்.(23)
சத்தியவதி {ரிசிகரிடம்}, “ஓ! தவசியே, நீர் விரும்பினால் உம்மால் அவளுக்கு உலகங்களையே படைத்துத் தர முடியும் எனும்போது ஒரு பிள்ளையைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஓ! சக்திமிக்கவரே, அறவோனும், அமைதிக்குத் தன்னை அர்ப்பணித்தவனுமான ஒரு மகனை எனக்குக் கொடுப்பதே உமக்குத் தகும்” என்றாள்.(24)
ரிசிகர் {சத்தியவதியிடம்}, “ஓ! அருளப்பட்ட மங்கையே, இதற்கு முன் கேலிக்காகக் கூட என்னால் பொய்மை பேசப்பட்டது கிடையாது. நெருப்பை மூட்டி, வேத சூத்திரங்களின் உதவியுடன் புனிதமாக்கப்பட்ட உணவைச் சமைத்ததில் (அந்த உள்ளார்ந்த நிகழ்வில்) என்ன சொல்ல முடியும்?(25) ஓ !இனியவளே, இது பழங்காலத்திலேயே விதிக்கப்பட்ட விதியாகும். நான் என் தவங்களின் மூலம் இவை அனைத்தையும் உறுதி செய்திருக்கிறேன். உன் தந்தையின் வழித்தோன்றல்கள் அனைவரும் பிராமணத் தன்மைகளையே கொண்டிருப்பார்கள்” என்றார்.(26)
சத்தியவதி {ரிசிகரிடம்}, “ஓ! சக்திமிக்கவரே, ஓ! தவசிகளில் முதன்மையானவரே, நமது பேரப்பிள்ளை அவ்வாறு இருக்கட்டும், ஆனால் எனக்கு, அமைதியில் நாட்டம் கொண்ட ஒரு மகன் பிறக்க வேண்டும்” என்றாள்.(27)
ரிசிகர் {சத்தியவதியிடம்}, “ஓ! அழகிய நிறம் கொண்டவளே, ஒரு மகனுக்கும், பேரப்பிள்ளைக்கும் இடையில் நான் எந்த வேறுபாட்டையும் காணவில்லை. ஓ! இனிமையானவளே, நீ சொல்வது போலவே ஆகட்டும்” என்றார்”.(28)
வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு சத்தியவதி, தவங்களில் அர்ப்பணிப்பு கொண்டவரும், அமைதியில் நாட்டம் கொண்டவரும், நெறிப்படுத்தப்பட்ட நோன்புகளை நோற்பவருமான ஜமதக்னியை பிருகு குலத்தின் மகனாக ஈன்றெடுழுத்தாள்.(29) குசிகனின் மகன் காதி, விஷ்வாமித்திரர் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான். ஒரு பிராமணனின் ஒவ்வொரு பண்பையும் கொண்ட அந்த மகன் (க்ஷத்திரிய வகையில் பிறந்தவராக இருப்பினும்) ஒரு பிராமணனுக்கு இணையானவராகவே இருந்தான்.(30) (இவ்வாறே) ரிசிகர், ஜமதக்னி என்ற தவக்கடலை மகனாகப் பெற்றார். ஜமதக்னி கடுஞ்செயல்களைச் செய்யவல்ல ஒரு மகனைப் பெற்றார்.(31) மனிதர்களில் முதன்மையானவனான அந்த மகன் {பரசுராமர்}, ஆயுத அறிவியல் உள்ளிட்ட அறிவியல்களில் திறம்பெற்று இருந்தார். சுடர்மிக்க நெருப்பைப் போன்றவரான அந்த மகனே, க்ஷத்திரியர்களை நிர்மூலமாக்கிய ராமராவார் {பரசுராமராவார்}.(32)
கந்தமாதன மலைகளில் மஹாதேவனை நிறைவு செய்த அவர் {பரசுராமர்}, அந்தப் பெருந்தேவனிடம் ஆயுதங்களை, அதிலும் குறிப்பாகக் கடுஞ்சக்தி கொண்ட கோடரியை இரந்து கேட்டார்.(33) நெருப்பின் சக்தியையும், தாங்கிக் கொள்ளப்பட முடியாத கூர்மையையும் கொண்ட அந்த ஒப்பற்ற கோடரியின் விளைவால் அவர் உண்மையில் ஒப்பற்றவரானார்.(34) அதே வேளையில், கிருதவீர்யனின் வலிமைமிக்க மகனும், க்ஷத்திய வகையைச் சேர்ந்தவனும், ஹைஹயர்களின் ஆட்சியாளனும், (பெரும் முனிவரான) தத்தாத்ரேயரின் அருளால் ஆயிரம் கரங்களை அடைந்தவனும், உயர்ந்த அறம்சார்ந்த நடத்தை கொண்டவனுமான அர்ஜுனன் {கார்த்தவீரியார்ஜுனன்}, தன் கரங்களின் வலிமையால் மலைகளுடனும், ஏழு தீவுகளுடனும் கூடிய மொத்த பூமியையும் போரில் அடக்கி, பலமிக்கப் பேரரசனாகி, (இறுதியில்) ஒரு குதிரை வேள்வியில் பூமியை பிராமணர்களுக்குக் கொடையாகக் கொடுத்தான்.(35-37)
ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, ஒரு குறிப்பட்ட சந்தர்ப்பத்தில், பெரும் ஆற்றலைக் கொண்டவனும், ஆயிரங்கரங்களைக் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி, தாகமடைந்தவனான நெருப்புத் தேவனால் வேண்டப்பட்டு அந்தத் தேவனுக்குப் பிச்சையளித்தான்.(38) அவனது கணைகளின் முனைகளில் இருந்து உதித்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்த நெருப்பு தேவன் {அக்னி}, (தனக்குக் கொடுக்கப்பட்டதை) எரிக்க விரும்பி, கிராமங்களையும், நகரங்களையும், நாடுகளையும், மாட்டிடையர்களின் சிற்றூர்களையும் எரித்தான்.(39) மனிதர்களில் முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தக் கார்த்தவீரியனின் ஆற்றலின் மூலம் அந்த நெருப்பு தேவன் மலைகளையும், பெருங்காடுகளையும் எரித்தான்.(40)
ஹைஹயர்களுடைய மன்னனின் துணையோடும், காற்றால் உண்டான சக்தியுடனும் சுடர்விட்டெரிந்த நெருப்பு தேவன், உயர் ஆன்ம ஆபவரின் இனிய ஆசிரமத்தை எரித்தான்.(41) ஓ! வலிய கரங்களைக் கொண்ட மன்னா {யுதிஷ்டிரரே}, பெரும் சக்தி கொண்டவரான ஆபவர், பலமிக்க அந்த க்ஷத்திரியனால் {கார்த்தவீரியனால்} தன் ஆசிரமம் எரிக்கப்பட்டதைக் கண்டு, கோபத்தால் அந்த ஏகாதிபதியிடம்,(42) “ஓ! அர்ஜுனா, கண்ணுக்கினியதான என் வனத்தையும் தவிர்க்காமல் நீ அவற்றை எரித்ததால், (பிருகு குல) ராமன், உன் (ஆயிரம்) கரங்களைத் துணிப்பான்” என்று சபித்தார்.(43) எனினும், ஓ! பாரதரே, பேராற்றல் கொண்டவனும், வலிமைமிக்கவனும், அமைதிக்கு எப்போதும் அர்ப்பணிப்பு உள்ளவனும், பிராமணர்களை எப்போதும் மரியாதையுடன் நடத்துபவனும், (அனைத்து வகையினருக்கும்) பாதுகாப்பை அளித்தவனும், ஈகையாளனும், துணிச்சல்மிக்கவனுமான அர்ஜுனன் {கார்த்தவீரியார்ஜுனன்}, அந்த உயர் ஆன்ம முனிவரால் இடப்பட்ட சாபத்தை எண்ணியும் பார்க்கவில்லை. எப்போதும் செருக்குடையவர்களும், கொடூரர்களுமான அவனது பலமிக்க மகன்கள், அந்தச் சாபத்தின் விளைவாக அவனது மரணத்திற்கு மறைமுகக் காரணமானார்கள். ஓ! பாரதக் குலத்தின் காளையே, அந்த இளவரசர்கள், ஹைஹயர்களின் ஆட்சியாளனான கார்த்தவீரியன் அறியாமலேயே, ஜமதக்னியுடைய ஹோமப் பசுவின் கன்றைக் கவர்ந்து சென்றனர். இதன் காரணமாக உயர் ஆன்ம ஜமதக்னிக்கும் ஹைஹயர்களுக்குமிடையில் சச்சரவு தோன்றியது.(44-47)
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஜமதக்னியின் மகனான சக்திமிக்க ராமர் {பரசுராமர்}, கோபத்தால் நிறைந்து, அர்ஜுனனின் {கார்த்தவீரியார்ஜுனனின்} கரங்களைத் துண்டித்து, அம்மன்னனின் அரண்மனையில் திரிந்து கொண்டிருந்த தமது தந்தையின் கன்றை மீட்டுக் கொண்டு வந்தார்.(48) ஓ! மன்னா, கொண்டாடப்பட்ட ராமர் {பரசுராமர்} புனித விறகும், புல்லும் சேகரிக்கச் சென்றிருந்தபோது, அர்ஜுனனின் மூட மகன்கள் ஒன்றாகச் சேர்ந்து, உயர் ஆன்ம ஜமதக்னியின் ஆசிரமத்திற்குச் சென்று, தங்கள் வேல்களின் முனைகளால் அந்த முனிவரின் {ஜமதக்னியின்} தலையை அவரது உடலில் இருந்து வீழ்த்தினர்.(49,50) தமது தந்தையின் மரணத்தால் கோபமடைந்து, பழி தீர்க்க நினைத்த ராமர், க்ஷத்திரியர்களிடம் இருந்து பூமியை விடுவிக்கச் சபதமேற்று ஆயுதங்களை எடுத்தார்.(51) பிறகு, பெரும் சக்தி கொண்ட அந்தப் பிருகுக்களில் புலி {பரசுராமர்}, தன் ஆற்றலை வெளிப்படுத்தி, கார்த்தவீரியனின் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் அனைவரையும் விரைவில் கொன்றார்.(52)
ஓ! மன்னா, சினத்தால் ஆயிரக்கணக்கான ஹைஹயர்களைக் கொன்ற அந்தப் பிருகுவின் வழித்தோன்றல், பூமியைக் குருதியால் சகதியாக்கினார்.(53) பெரும் சக்தி கொண்ட அவர், விரைவில் பூமியை க்ஷத்திரியர்கள் எவரும் அற்றதாகச் செய்தார். பிறகு கருணையால் நிரம்பிய அவர் காட்டுக்கு ஓய்ந்து சென்றார்.(54) பிறகு, ஆயிரம் வருடங்கள் கடந்த பின்னர், இயல்பிலேயே கோபம் நிறைந்தவரான ராமர் {பரசுராமர்}, (கோழைத்தனம் கொண்டவர்) எனக் குற்றம் சுமத்தப்பட்டார்.(55) ஓ! ஏகாதிபதி, விஷ்வாமித்திரரின் பேரனும், ரைப்பியரின் மகனும், பராவசு என்ற பெயரைக் கொண்டவருமான பெருந்துறவி ஒருவர்,(56) “ஓ! ராமரே {பரசுராமரே}, யயாதியின் வீழ்ச்சியின்போது, வேள்வியில் கூடியிருந்த அறவோரான பிரதர்த்தனன் மற்றும் பிறர், பிறப்பால் க்ஷத்திரியர்களில்லையோ?(57) ஓ! ராமரே, நீர் உண்மை நோன்புகளைக் கொண்டவரல்ல. மக்களுக்கு மத்தியில் நீர் வெறும் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறீர். க்ஷத்திரிய வீரர்களிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகவே நீர் மலைகளில் இருக்கிறீர்” என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.(58)
பராவசுவின் வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பிருகுவின் வழித்தோன்றல் {பரசுராமர்}, மீண்டும் ஆயுதமெடுத்து, மீண்டும் பூமியை நூற்றுக்கணக்கான க்ஷத்திரியர்களின் உடல்களால் விரவிக் கிடக்கச் செய்தார்.(59) எனினும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, ராமரால் தப்ப விடப்பட்டவர்களும், எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கானவர்களுமான க்ஷத்திரியர்கள் (காலத்தின் போக்கில்) பல்கிப் பெருகி, பூமியில் வலிமைமிக்க ஏகாதிபதிகளாகினர்.(60) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, மீண்டும் ராமர் {பரசுராமர்}, பிள்ளைகளைக் கூடத் தப்ப விடாமல் அவர்களைக் கொன்றார். உண்மையில், பூமியானது முற்றாபிறவி கொண்ட க்ஷத்திரிய பிள்ளைகளின் உடல்களால் மீண்டும் விரவிக் கிடந்தது.(61) ராமர் {பரசுராமர்}, க்ஷத்திரியப் பிள்ளைகள் பிறந்த உடனேயே அவர்களைக் கொன்றார். எனினும், சில க்ஷத்திரியப் பெண்டிர், (ராமரின் கோபத்திலிருந்து) தங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்வதில் வென்றனர்.(62)
இருபத்தோரு {21} முறை பூமியை க்ஷத்திரியர்களற்றதாகச் செய்த பலமிக்கப் பார்க்கவர் {பரசுராமர்}, ஒரு குதிரை வேள்வி நிறைவின்போது, கசியபரின் வேள்விக் கொடையாகப் பூமியை அளித்தார்.(63) ஓ! மன்னா, எஞ்சியிருக்கும் க்ஷத்திரியர்களைக் காக்க நினைத்த கசியபர், வேள்விக்கரண்டியுடன் கூடிய தன் கரங்களால் சுட்டிக்காட்டியபடி இந்த வார்த்தைகளைச் சொன்னார்,(64) “ஓ! பெரும் தவசியே, தென்கடலின் கரைகளுக்குச் செல்வாயாக. ஓ! ராமா, (எது) என் ஆட்சிப்பகுதியாக இருக்கிறதோ, அதில் வசிப்பது உனக்குத் தகாது” என்றார்.(65) இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டதும், பெருங்கடலானது, தனது மறுகரையில் சூர்ப்பாரகம் என்றழைக்கப்படும் பகுதியை {நாட்டைத்} திடீரென உண்டாக்கியது.(66) கசியபரும், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பூமியைக் கொடையாக ஏற்று, அதைப் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்துவிட்டுப் பெருங்காட்டுக்குள் நுழைந்தார்.(67)
பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே, சூத்திரர்கள், வைசியர்கள் ஆகியோர், வேண்டுமென்றே பிராமணர்களின் மனைவியரோடு தங்களை இணைத்துக் கொள்ளத் தொடங்கினர்.(68) பூமியில் அரசற்ற நிலை தோன்றும்போது, வலியோரால் வலிமையற்றவர்கள் ஒடுக்கப்பட்டு, எந்த மனிதனும் தன் உடைமைக்குத் தலைவனாக இல்லாத நிலையை அடைந்தான்.(69) அந்தக் குழப்பமான சூழ்நிலையின் விளைவால், பூமியானது அறம் நோற்கும் க்ஷத்திரியர்களால் முறையாகப் பாதுகாக்கப்படாமல், தீயோரால் ஒடுக்கப்பட்டு, விரைவில் மிகக் கீழான நிலையில் {பாதாளத்திற்குள்} மூழ்கியது.(70) அச்சத்தால் மூழ்கும் பூமியைக் கண்ட உயர் ஆன்மக் கசியபர், அவளைத் {பூமாதேவியைத்} தன் மடியில் தாங்கினார்; அந்தப் பெரும் முனிவர் பூமியைத் தன் மடியில் தாங்கியதிலிருந்தே அவள் உர்வி என்ற பெயரில் அறியப்படுகிறாள்.(71) அந்தப் பூமாதேவி, தன் பாதுகாப்புக்காகக் கசியபரிடம் ஒரு மன்னனை இரந்து கேட்டாள்[1].(72)(பிறகு, இவ்வுலகம் அராஜகமானதும், சூத்திரர்களும், வைஸ்யர்களும் தம்மிஷ்டப்படி மேற்குலத்தார் தாரங்களிடம் செல்லத் தொடங்கினார்கள். ஓ! பரதரேறே! பலமுள்ளவர்கள் பலம் குறைந்தவர்களை அடிக்கத் தொடங்கினார்கள். அக்காலம் பொருள்களால் பிரபுத்தன்மை எவனிடமும் நிலைத்திருக்கவில்லை. மூர்க்கர்களான சில பிராம்மணர்கள் தாம் பண்டிதரென்னும் அகங்காரமுள்ளவராய்க் கள்ளைக் குடிக்கத் தலைப்பட்டார்கள். பிராம்மணர்கள், க்ஷத்திரியர்கள், வைசையர்கள், சூத்திரர்கள் யாவரும் கெட்ட வழியிற் சென்று ஒருவரையொருவர் அடுத்துக் கொலைசெய்ய முயன்றார்கள். கெட்டவழியிற் சென்ற பிராம்மணர்கள் தம்தர்மத்தைவிட்டுப் பாஷண்டர்களானார்கள். எல்லோரும் திருட்டு, பொய் மாயைகளைச் செய்தார்கள். தமது ஜாதிதர்மங்களையும் ஆஸ்ரமதர்மங்களையும் ஸரிவரநடத்தி நல்வழிச் செல்லும் பிராம்மணர்களையும், வைசியர்களையும் தர்மஞ்செய்யும் சூத்திரர்களையும், கெட்ட நடையுள்ள சிலர் யாதொரு பயமுமின்றிக் கொலை செய்தார்கள். வேறு சிலர் யாகத்தையும் அத்தியயனத்தையும் செய்பவர்களையும், ஆஸ்ரமத்திலிருக்கும் தவஞ்செய்பவர்களையும், பசுக்கள், பாலர்கள், கிழவர்கள், ஸ்திரீகள் ஆகிய இவர்களையும் நாசஞ்செய்தார்கள். வேதமும், தர்மசாஸ்திரமும், ராஜநீதியும் அக்காலம் ஒளித்துப் போயின. கீழ்மேலான கெட்ட செய்கையால் பல துவிஜர்கள் பெரும்பாலும் விராத்தியர்களும், மிலேச்சர்களுமானார்கள். தர்மத்தைப் பாதுகாக்கும் க்ஷத்திரியர்களால் நீதிப்படி காக்கப்படாத பூமிதேவியும் அக்காலத்தில் துஷ்டமனிதர்களின் தீச்செயல்களால் பீடிக்கப்பட்டுப் பாதாளஞ் செல்லத் தொடங்கினாள். அப்படிப் பயந்து ஓடிப் பாதாளத்தில் முழுகக்கூடிய பூமியைக் கண்டு பெரிய மனுமுள்ள கஸ்யபர் தமது தொடையில் தாங்கித் தூக்கினார்)பூமாதேவி {கசியபரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் சிலர் என்னால் பெண்களுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் ஹைஹயர்களின் குலத்தில் பிறந்தவர்கள். ஓ! தவசியே, அவர்கள் என்னைப் பாதுகாக்கட்டும்.(73) ஓ! சக்திமிக்கவரே, புருவின் குலத்தில் விதுரதனின் மகன் என்றொருவன், ரிக்ஷவான் மலைகளில் கரடிகளுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறான்.(74) சௌதாசனின் மகனான மற்றொருவன், அளவிலா சக்தி கொண்டவரும், எப்போதும் வேள்விகளில் ஈடுபடுபவருமான பராசரரின் கருணையால் பாதுகாக்கப்பட்டு வருகிறான்.(75) அவன் மறுபிறப்பாள வகைகளிலொன்றில் பிறந்திருந்தாலும், ஒரு சூத்திரனைப் போல அந்த முனிவருக்கு அனைத்துப் பணிவிடைகளையும் செய்து வருவதால் அவன் சர்வகர்மன் (அனைத்துப் பணிகளையும் செய்யும் பணியாள்) என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறான்.(76) பெரும் சக்தி கொண்ட சிபியின் மகன் கோபதி என்ற பெயரில் காட்டில் பசுக்களுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறான். ஓ! தவசியே, அவன் என்னைப் பாதுகாக்கட்டும்.(77)
பெரும் வலிமை கொண்ட பிரதர்த்தனன் மகன், வத்சன் என்ற பெயரில் மாட்டுக்கொட்டிலில் கன்றுகளுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறான். அரச வகையைச் சேர்ந்த அவன் என்னைப் பாதுகாக்கட்டும்.(78) திவிரதனின் பேரனும், ததிவாஹனனின் மகனுமான ஒருவன், தவசியான கௌதமரால் கங்கைக்கரையில் பாதுகாக்கப்பட்டு மறைக்கப்பட்டிருக்கிறான்.(79) அவனுடைய பெயர் பிருஹத்ரதன் என்பதாகும். பெரும் சக்தியாலும், எண்ணற்ற அருள் குணங்களாலும் அருளப்பட்டிருக்கும் அந்த அருள் நிறைந்த இளவரசன் கிருத்ரக்கூடம் என்ற மலையில் ஓநாய்களால்[2] பாதுகாக்கப்படுகிறான்.(80) மருத்த குலத்தைச் சேர்ந்த பல க்ஷத்திரியர்களும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றனர். சக்தியில் மருத்த தேவனுக்கே இணையான அவர்கள், பெருங்கடலால் வளர்க்கப்பட்டிருக்கின்றனர்.(81) இந்த க்ஷத்திரிய வகைப் பிள்ளைகள் பல்வேறு இடங்களில் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். அவர்கள், கைவினைஞர்கள் மற்றும் பொற்கொல்லர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் என்னைப் பாதுகாத்தால், நான் அசைவில்லாமல் நிலைபெற்றிருப்பேன்.(82) அவர்களுடைய தந்தைமாரும், பாட்டன்மாரும் பேரன்மாரும் பேராற்றல் கொண்ட ராமரால் {பரசுராமரால்} என் பொருட்டுக் கொல்லப்பட்டனர். ஓ! பெரும் தவசியே {கசியபரே}, அவர்களது ஈமச் சடங்குகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியது என் கடமையாகும்.(83) தற்போதைய ஆட்சியாளர்களால் நான் பாதுகாக்கப்பட விரும்பவில்லை. ஓ! தவசியே, நான் (முன்பு போலவே) நீடிக்க வேண்டிய ஏற்பாடுகளை விரைவாகச் செய்வீராக” என்றாள்.(84)வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது, தவசியான கசியபர், அந்தத் தேவி {பூமாதேவி} குறிப்பிட்ட பெருஞ்சக்தி கொண்ட க்ஷத்திரியர்களைத் தேடி (அவளைப் பாதுகாப்பதற்கான) மன்னர்களாக முறையாக அவர்களை நிறுவினார்.(85) இப்போது வரை நீடித்திருக்கும் அந்த க்ஷத்திரிய குலங்களைச் சேர்ந்தோர், அந்த இளவரசர்களின் வாரிசுகளே ஆவர். ஓ! பாண்டுவின் மகனே, எவற்றை நீர் கேட்டீரோ, அவை பழங்காலத்தில் இவ்வாறே நடந்தன” என்றான் {கிருஷ்ணன்}.(86)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அறவோரில் முதன்மையான அந்த உயர் ஆன்ம யாதவ வீரன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனுடன் இவ்வாறு பேசிக் கொண்டே, திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டும் தெய்வீகச் சூரியனைப் போல அந்தத் தேரில் வேகமாகச் சென்று கொண்டிருந்தான்”.(87)
பீஷ்மரின் மகிமை! – சாந்திபர்வம் பகுதி – 50-பீஷ்மரின் அருகாமையை அடைந்து அவரைச் சுற்றி அமர்ந்து கொண்ட கிருஷ்ணன், யுதிஷ்டிரன் மற்றும் பிறர்; பீஷ்மரைப் புகழ்ந்த கிருஷ்ணன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ராமரின் {பரசுராமரின்} சாதனைகளைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், ஆச்சரியத்தால் நிறைந்து, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்},(1) “ஓ! விருஷ்ணி குலத்தோனே, கோபத்தில் க்ஷத்திரயர்களிடம் இருந்து பூமியை விடுவித்த உயர் ஆன்ம ராமரின் {பரசுராமரின்} ஆற்றல் சக்ரனுக்கே {இந்திரனுக்கே} இணையானது.(2) க்ஷத்திரிய குலக்கொழுந்துகள், ராமர் {பரசுராமர்} மீது கொண்ட அச்சத்தால், பசுக்கள், பெருங்கடல், சிறுத்தை புலிகள் கரடிகள், குரங்குகள் ஆகியவற்றால் மறைக்கப்பட்டனர் (மறைக்கப்பட்டு வளர்த்து வரப்பட்டனர்).(3) ஒரு பிராமணரால் அறச்சாதனை நிறைவேறும்போது, இவ்வுலகில் வசித்த மனிதர்கள் அனைத்துப் புகழுக்கும் தகுந்தவர்களாவர்” என்றான்.(4) இந்த உரையாடல் முடிந்த போது, மங்கா மகிமை கொண்ட கிருஷ்ணன் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய அந்தச் சிறப்புமிக்க மனிதர்கள், பலமிக்கக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} கணைகளின் படுக்கையில் கிடக்கும் இடத்திற்குச் சென்றனர்.(5)
பிறகு அவர்கள், கதிர்களால் மறைக்கப்பட்ட மாலை சூரியனின் காந்திக்கு ஒப்பாகக் கணைப்படுக்கையில் நீண்டு கிடக்கும் பீஷ்மரைக் கண்டனர்.(6) நூறு வேள்விகளைச் செய்த சொர்க்கத்தின் தேவனை {இந்திரனைப்} போல அந்தக் குருவீரர் தவசிகள் பலரால் சூழப்பட்டிருந்தார். ஓகவதி ஆற்றின் கரையில் அமைந்திருந்ததான அவர் {பீஷ்மர்} கிடந்த இடம் மிகப் புனிதமானதாக இருந்தது.(7) தொலைவிலேயே அவரைக் கண்ட கிருஷ்ணன், தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, நான்கு பாண்டவர்கள் மற்றும் சரத்வான் {கிருபர்} தலைமையிலான பிறர் ஆகியோர் தங்கள் வாகனங்களில் இருந்து கீழே இறங்கி, குழப்பமான தங்கள் மனங்களை ஒன்றுதிரட்டி, தங்கள் புலன்களை அனைத்தையும் குவித்துக் கொண்டு அந்தப் பெரும் முனிவர்களை அணுகினர்.(8,9) கோவிந்தன் {கிருஷ்ணன்}, சாத்யகி மற்றும் பிறர், வியாசரின் தலைமையிலான அந்த முனிவர்களில் முதன்மையானோரை வணங்கிவிட்டு, கங்கையின் மைந்தரை அணுகினர்.(10)
மனிதர்களில் முதன்மையானோரான அந்த யது மற்றும் குரு இளவரசர்கள், பெரும் தவத்தகுதி கொண்ட கங்கையின் மைந்தரைக் கண்டு, அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்.(11) அணைந்து போகும் நெருப்பாகத் தெரிந்த பீஷ்மரைக் கண்ட கேசவன் {கிருஷ்ணன்}, உற்சாகமற்ற இதயத்துடன் பின்வருமாறு அவரிடம் பேசினான்.(12) கேசவன் {கிருஷ்ணன் பீஷ்மரிடம்}, “உமது உள்ளுணர்வுகள் முன்பு போல இப்போது தெளிவாக இருக்கின்றனவா? ஓ! நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, உமது புத்தி மயங்காதிருக்கிறது என்று நான் நம்புகிறேன்.(13) கணைகளால் பீடிக்கப்பட்ட காயங்களில் இருந்து எழும் வலி உம்மைத் துன்புறுத்தவில்லை என நான் நம்புகிறேன். மனத்துயரால் உடல் பலவீனமடைகிறது.(14) ஓ! பலமிக்க வீரரே, அறவோரான உமது தந்தை சந்தனு உமக்களித்த வரத்தின் விளைவால், மரணமானது உமது விருப்பதைச் சார்ந்தே இருக்கிறது. நீர் அடைந்திருக்கும் இந்த வரத்தின் விளைவால் உண்டாகும் தகுதியை நான் அடையவில்லை.(15)
(உள்செலுத்தப்படும்) மிக நுண்ணிய ஊசி உடலுக்கு வலியை உண்டாக்கும். ஓ! மன்னா {பீஷ்மரே}, அவ்வாறிருக்கையில், நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டிருக்கும் உம்மிடம்என்ன கேட்க முடியும்?(16) வலி உம்மைப் பீடித்திருக்கிறது எனச் சொல்லமுடியாது என்பது நிச்சயம். ஓ! பாரதரே {பீஷ்மரே}, உயிரினங்களின் தோற்றம் மற்றும் அழிவு ஆகியவற்றைக் குறித்துத் தேவர்களுக்கே போதிக்க நீர் தகுந்தவர்.(17) பெரும் ஞானம் கொண்ட உமக்கு, கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலம் ஆகியவை குறித்த அனைத்தும் உமக்கு நன்றாகத் தெரியும்.(18) ஓ! பெரும் ஞானியே, அறம் மற்றும் கடை ஆகியவற்றின் பெருங்கடலான நீ, படைக்கப்பட்ட உயிரினங்களின் அழிவு, அறவோருக்கான வெகுமதி ஆகியவற்றையும் நன்கறிவீர்.(19) நலமிக்க அங்கங்கள் மற்றும் முற்றான உடல் நலத்துடனும், பெருகும் அரசின் இன்பத்தில் நீர் வாழ்ந்த போது, பெண் தோழிகளால் சூழப்பட்டிருந்தாலும், பெண் உறவை நீர் மறுத்ததை நான் கண்டேன்.(20)
பெரும் சக்தியும், அறத்தில் உறுதியான அர்ப்பணிப்பும், வீரமும், அறத்தையே தமது தொடர்செயலாகக் கொண்டவரும், சந்தனுவின் மகனுமான பீஷ்மரைத் தவிர, கணைகளின் படுக்கையில் கிடக்கும் மரணத் தருவாயிலும், தனது தவசக்தியின் மூலமாக மரணத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்கொண்ட வேறு எந்த மனிதனையும் மூவுலகிலும் நாங்கள் கேள்விப்பட்டதில்லை.(21,22) உண்மை, தவம், கொடை, வேள்விகள், ஆயுத அறிவியல், வேதங்கள், பாதுகாப்பு வேண்டுவோரைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு இவ்வளவு அர்ப்பணிப்புடனும், உயிரினங்கள் அனைத்திற்கும் தீங்கிழைக்காமலும், உயிரினங்கள் அனைத்தின் நன்மையில் ஈடுபாட்டுடனும் கூடிய உம்மைப்போன்ற பெரிய தேர்வீரர் எவரையும் நாங்கள் கேள்விப்பட்டதில்லை.(23,24) தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களை ஒரே தேரில் சென்று அடக்கக்கூடியவர் நீர் என்பதில் ஐயமில்லை.(25)
ஓ! வலிய கரங்களைக் கொண்ட பீஷ்மரே, உம்மை ஒன்பதாவது வசு என்றே பிராமணர்கள் எப்போதும் சொல்கிறார்கள். எனினும், உமது நற்பண்புகளால் அவர்கள் அனைவரையும் விஞ்சி நிற்கும் நீர், வாசவனுக்கே இணையானவராவீர்.(26) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, ஓ! உயிரினங்களில் முதன்மையானவரே, உமது ஆற்றலுக்காகத் தேவர்களாலும் கூடக் கொண்டாடப்படுபவர் நீர் என்பதை நான் அறிவேன்.(27) ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, பூமியில் உள்ள மனிதர்களுக்கு மத்தியில், உம்மைப் போன்ற இத்தகு பண்புகளைக் கொண்ட வேறு எவரையும் நாங்கள் பார்த்ததோ, கேள்விப்பட்டதோ இல்லை.(28) ஓ! அரசவகையைச் சேர்ந்தவரே ஒவ்வொரு பண்பையும் பொறுத்தவரையில் நீர் தேவர்களையும் விஞ்சி நிற்கிறீர். உமது தவச் சக்தியின் மூலம் உம்மால் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களை உண்டாக்க முடியும். அவ்வாறிருக்கையில், உமது முதன்மையான நற்பண்புகளால் அருள் உலகங்கள் பலவற்றை நீர் அடைந்திருப்பதைக் குறித்து வேறு என்ன சொல்ல முடியும்?(29) தமது உறவினர்களைக் கொன்றதால் உண்டான கவலையில் எரிந்து கொண்டிருக்கும் பாண்டுவின் மூத்த மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} துயரத்தை இப்போது அகற்றுவீராக.(30)
நால்வகையினரைப் பொறுத்தவரையில் அறிவிக்கப்பட்டிருக்கும் கடமைகள் அனைத்தையும், நான்கு வகை வாழ்வுமுறைகளைக் குறித்தும் நீர் நன்கறிந்திருக்கிறீர்.(31) ஓ! பாரதரே நால்வகை அறிவுக்கிளைகளில், நான்கு ஹோத்திரங்களில் அறிவிக்கப்பட்டவை அனைத்தும், யோகம் மற்றும் சாங்கிய தத்துவங்களில் விதிக்கப்பட்டுள்ள நித்திய கடமைகள்,(32) ஓ! பாரதரே {பீஷ்மரே}, ஓ! கங்கையின் மைந்தரே, நான்கு வகையினரின் கடமைகளையும், அறிவிக்கப்பட்டிருக்கும் அவர்களது நடைமுறைகளுக்குப் பொருந்தாத கடமைகளையும், அதனதன் விளக்கங்களோடு அறிந்தவர் நீர்.(33) நால் வகையினரின் கலப்பில் உதித்தவர்களுக்காக விதிக்கப்பட்ட கடமைகளையும், குறிப்பிட்ட நாடுகள், குலங்கள், குடும்பங்கள் ஆகியவற்றுக்காக விதிக்கப்பட்ட, வேதங்களாலும், ஞானிகளாலும் அறிவிக்கப்பட்ட கடமைகள் யாவற்றையும் நன்கறிந்தவர் நீர்.(34) வரலாறுகளையும், புராணங்கள் அனைத்தையும் நன்கறிந்தவர் நீர். கடமை மற்றும் நடைமுறைகள் குறித்த சாத்திரங்கள் அனைத்தும் உமது மனத்திலேயே வசிக்கின்றன.(35) ஓ! மனிதர்களில் காளையே, உலகில் கற்கப்படும் அறிவைப் பொறுத்தவரையில் எழும் ஐயங்களை அகற்றக் கூடியவர் உம்மைத் தவிர வேறு எவரும் இல்லை.(36) ஓ! மனிதர்களின் இளவரசரே {பீஷ்மரே}, பாண்டு மகன் {யுதிஷ்டிரன்} உணரும் துயரை, உமது நுண்ணறிவின் உதவியைக் கொண்டு விரட்டுவீர். பெரியவையும், பலதரப்பட்டவையுமான இத்தகு அறிவைக் கொண்டோர், திகைப்படைந்த மனங்களைக் கொண்ட மனிதர்களைத் தேற்றுவதற்காகவே வாழ்கிறார்கள்” என்றான் {கிருஷ்ணன்}”[1].(37)
மன்னரின் மயக்கத்தை விலக்குவீராக! – சாந்திபர்வம் பகுதி – 51-கிருஷ்ணனைத் துதித்த பீஷ்மர்; பீஷ்மரின் துதிகளை ஏற்று, அவரைப் புகழ்ந்து, மன்னன் யுதிஷ்டிரனின் அறிவு மயக்கத்தை விலக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்ட கிருஷ்ணன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட பீஷ்மர், தன் சிரத்தை சற்றே உயர்த்தி, கூப்பிய கரங்களுடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(1)
பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! தெய்வீகக் கிருஷ்ணா, உனக்கு வணக்கம். உலகங்கள் அனைத்தின் தொடக்கமும், முடிவும் நீயே. படைப்பாளன் நீயே, அழிப்பவனும் நீயே. ஓ! ரிஷிகேசா, எவராலும் வெல்லப்பட இயலாதவன் நீயே.(2) இந்த அண்டம் உன் கைத்திறனே. அண்டத்தின் ஆன்மா நீயே. அண்டம் எழுந்த பொருளும் நீயே. உன்னை வணங்குகிறேன். படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் முடிவு நீயே. ஐம்பூதங்களையும் விஞ்சியவன் நீயே.(3) மூவுலகங்களே ஆனவனும், மூவுலகங்களுக்கும் மேம்பட்டவனுமான உன்னை நான் வணங்குகிறேன். ஓ! யோகினிகளின் தலைவனே, அனைத்திற்கும் புகலிடமாக இருக்கும் உனக்கு என் வணக்கம்.(4) ஓ! உயிரினங்களில் முதன்மையானவனே, என்னைக் குறித்து நீ சொன்ன வார்த்தைகள், மூவுலகங்களில் வெளிப்படும் உன் தெய்வீகப் பண்புகளைக் காண இயன்றவனாக என்னை ஆக்கியிருக்கின்றன. ஓ! கோவிந்தா, (அந்தக்கருணையின் விளைவால்), நான் உன் அழிவற்ற வடிவத்தைக் காண்கிறேன்.(5,6)
அளவிலா சக்தி கொண்ட காற்றின் {வாயுவின்} ஏழு பாதைகளையும் அடைத்து நிற்பவன் நீயே. உன் தலை ஆகாயத்தில் இருக்கிறது, உன் பாதங்கள் பூமியில் இருக்கின்றன.(7) திசைப்புள்ளிகள் உன்னிரு கரங்களாக இருக்கின்றன, சூரியன் உன் கண்களாகவும், சக்ரன் {சுக்ரன்} உன் ஆற்றலாகவும் இருக்கிறான். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, காயாம்பூவின் வண்ணத்திற்கு ஒப்பான மஞ்சளாடை {பீதாம்பரம்} உடுத்திய உன் மேனி, மின்னலின் கீற்றுகளால் சக்தியூட்டப்பட்ட ஒரு மேகத்தைப் போல எங்களுக்குத் தெரிகிறது. ஓ! தேவர்களில் சிறந்தவனே, ஓ! தாமரைக் கண்ணனே, உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், உனது பாதுகாப்பை நாடுபவனும், அருள்நிறைந்த முடிவை அடைய விரும்புபவனும், எளியவனுமான எனக்கு நன்மையை நினைப்பாயாக” என்றார் {பீஷ்மர்}.(8,9)
வாசுதேவன் {கிருஷ்ணன் பீஷ்மர்}, “ஓ! மனிதர்களில் காளையே, ஓ!இளவரசரே {பீஷ்மரே}, நீர் என்னிடம் கொண்ட அர்ப்பணிப்பு {பக்தி} மிகப் பெரியதாக இருப்பதால், நான் என் தெய்வீக வடிவை உமக்கு வெளிப்படுத்தினேன்.(10) ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, ஓ! பாரதரே, என்னிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொள்ளாதவனிடமோ, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மா இல்லாதவனிடமோ நான் என்னை வெளிப்படுத்துவதில்லை.(11) நீர் என்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவராகவும், எப்போதும் அறம் நோற்பவராகவும் இருக்கிறீர். தூய இதயம் கொண்ட நீர் எப்போதும் தற்கட்டுப்பாடு கொண்டவராகவும், தவங்களையும், தானங்களையும் நோற்பவராகவும் இருக்கிறீர்.(12) ஓ! பீஷ்மரே, உமது சொந்த தவங்களின் மூலமே நீர் என்னைக் காணத் தகுந்தவரானீர். ஓ! மன்னா, திரும்பி வராத {மறுபிறவியை ஏற்படுத்தாத} உலகங்கள் உமக்காகக் காத்திருக்கின்றன.(13) ஓ! குருக்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, நீர் உயிர் வாழ இன்னும் ஐம்பத்தாறு {56} நாட்கள்[1] இருக்கின்றன.(14) நெருப்பின் வடிவிலான தேவர்கள் மற்றும் வசுக்கள் அனைவரும், சூரியன் வட பாதையில் நுழையும் காலம் வரை {கண்களுக்குப்} புலனாகாத நிலையில் உமக்காகக் காத்திருக்கின்றனர்.(15)ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, அண்டத்தின் காலத்திற்குக்கட்டுப்பட்டு, சூரியன் வடபாதைக்குத் திரும்பும்போது, இந்தப் பூமிக்கு எப்போதும் திரும்பிவராத அறிவுடையோரின் பகுதிகளுக்கு {ஞானிகளின் உலகங்களுக்கு} நீர் செல்வீர்.(16) ஓ! பீஷ்மரே, நீர் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது, இங்குள்ள ஞானங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். இதன்காரணமாகவே, இந்த மனிதர்கள் யாவரும் கடமை மற்றும் அறநெறிகள் குறித்த உமது உரையைக் கேட்க உம்மை அணுகியிருக்கின்றனர்.(17) உண்மையில் உறுதியுடன் இருப்பவரும், தன் உறவினர்களைக் கொன்றதன் காரணமாக அறிவு மறைக்கப்பட்டவருமான யுதிஷ்டிரரிடம், அறம், பொருள் மற்றும் யோகம் குறித்த உண்மையான வார்த்தைகளைப் பேசி, அதன் காரணமாக அவரது துயரை விலக்குவீராக” என்றான் {கிருஷ்ணன்}.(18)
பீஷ்மருக்கு வரமளித்த கிருஷ்ணன்! – சாந்திபர்வம் பகுதி – 52-கிருஷ்ணனை மீண்டும் துதித்து, அவன் கேட்டதைச் செய்ய இயலாத தமது பலவீனத்தைச் சொன்ன பீஷ்மர்; பீஷ்மரின் களைப்பகற்ற அவருக்கு வரமளித்த கிருஷ்ணன்; சூரியன் மறைந்ததும் பீஷ்மரை விட்டகன்று தங்கள் மாளிகைகளுக்கு வந்த பாண்டவர்களும் கிருஷ்ணனும்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அறம் மற்றும் பொருள் நிறைந்த கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்ட சந்தனுவின் மைந்தர் பீஷ்மர் பின்வரும் வார்த்தைகளில் அவனுக்குப் பதிலளித்தார்.(1)
பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! உலகங்கள் அனைத்தின் தலைவா, ஓ! வலிய கரத்தோனே, ஓ! சிவா, ஓ! நாராயணா, ஓ! மங்கா மகிமை கொண்டோனே, நீ பேசும் வார்த்தைகளைக் கேட்டு நான் இன்பத்தில் நிறைந்திருக்கிறேன்.(2) ஓ! பேச்சின் தலைவனே, உன் முன்னிலையில், அதிலும் குறிப்பாகச் சொல்லத்தக்க அனைத்தும் உன் பேச்சிலேயே அடங்கியிருக்கும்போது, நான் என்ன {போதனைகளை} வார்த்தைகளைச் சொல்ல முடியும்?[1](3) ஓ! தேவா, இம்மையிலும், மறுமையிலும் என்ன செய்ய வேண்டுமோ, என்ன செய்யப்படுகிறதோ அஃது உன் நுண்ணறிவின் வடிவில் இருந்தே எழுகிறது.(4) தேவர்களின் தலைவனுக்கு முன்னிலையில் சொர்க்கம் குறித்து எந்த மனிதன் பேசத்தகுந்தவனோ, அவனே உன் எதிரில் அறநெறி, இன்பம், பொருள் மற்றும் முக்தி குறித்துப் பேசத் தகுந்தவனாவான்.(5) ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, என் மனம் கணை தைத்த காயங்களால் உண்டான வலியால் மிகவும் கலக்கமடைந்திருக்கிறது. என் உறுப்புகள் பலவீனமாக இருக்கின்றன. என் புத்தி தெளிவாக இல்லை.(6)நஞ்சுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான இந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டிருக்கும் எனக்கு எதையும் சொல்லும் சக்தியில்லை.(7) என் பலம் என்னைக் கைவிடுகிறது. உன் உயிர்மூச்சு என்னைவிட்டகல விரைகிறது. என் உடலின் முக்கிய அங்கங்கள் எரிகின்றன. என் புத்தி மயக்கமடைகிறது.(8) பலவீனத்தால் என் பேச்சுத் தெளிவற்றதாக இருக்கிறது. இவ்வாறு இருக்கையில் நான் எவ்வாறு பேசத் துணிவேன்?(9) ஓ! வலிய கரத்தோனே, நான் எதையும் சொல்ல மாட்டேன். (என் விருப்பமின்மைக்காக) என்னை மன்னிப்பாயாக. பேச்சின் தலைவனே (பிருஹஸ்பதியே) உன் எதிரில் பேசத் தயங்குவான்.(10) என்னால் இப்போது பூமியிலிருந்து திசைப்புள்ளிகளையோ, வானத்தையோ வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஓ! மதுசூதனா, உன் சக்தியால் மட்டுமே நான் உயிரை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.(11) எனவே, விதிகள் அனைத்தையும் விதித்தவன் நீயே என்பதால் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் நன்மைக்காக நீயே பேசுவாயாக.(12) ஓ! கிருஷ்ணா, அண்டத்தின் அழிவில்லா படைப்பாளனான நீ இருக்கும்போது, ஆசானின் முன்பு பேசும் சீடனைப் போல எவனால் பேச முடியும்” என்று கேட்டார் {பீஷ்மர்}”.(13)
வாசுதேவன் {கிருஷ்ணன் பீஷ்மரிடம்}, “குரு குலத்தில் முதன்மையானவரும், பெரும் சக்தி கொண்டவரும், பெரும் ஆன்மா கொண்டவரும், பெரும் பொறுமையும், அனைத்தைக் குறித்த அறிவும் கொண்டவருமான உம்மால் உமக்குத் தகுந்த வார்த்தைகளே பேசப்பட்டன.(14) ஓ! பீஷ்மரே, கணைக் காயங்களால் உண்டான வலி குறித்து நீர் சொன்னீர். ஓ! பலமிக்கவரே, கருணையால் நான் உமக்கு அளிக்கும் இந்த வரத்தைப் பெற்றுக் கொள்வீராக.(15) ஓ! கங்கையின் மைந்தரே, ஓ! மங்கா மகிமை கொண்டவரே, சோர்வு, மயக்கம், எரிச்சல், வலி, பசி, தாகம் ஆகியன உமக்கு உண்டாகாதிருக்கட்டும்.(16) ஓ! பாவமற்றவரே, உள்ளுணர்வுகளும், நினைவும் தெளிவு அடையட்டும்[2]. உமது புத்தி உம்மைக் கைவிடாதிருக்கட்டும்.(17) ஓ! பீஷ்மரே, மேகங்களில் இருந்து வெளிப்படும் நிலவைப் போல, உமது மனம் ஆசை {ரஜோகுணம்}, இருள் {தமோகுணம்} ஆகிய பண்புகளில் இருந்து விடுபட்டு, எப்போதும் நற்பண்புடன் {சத்வகுணத்துடன்} இருக்கட்டும்.(18) கடமை, அறநெறி, பொருள் என நீர் நினைப்பனவற்றுக்குத் தொடர்புடைய அனைத்திலும் உமது புத்தி ஊடுருவட்டும்.(19) ஓ! மன்னர்களில் புலியே, ஓ! அளவிலா ஆற்றல் கொண்டவரே, தெய்வீகப் பார்வையை அடைந்து, படைப்பின் நால்வகைப் பொருட்களைக் காண்பதில் வெல்வீராக.(20) ஓ! பீஷ்மரே அறிவுக் கண் கொண்ட நீர், தெளிந்த நீரில் உள்ள மீன்களைப் போல, நீர் நினைக்க முயலும் படைப்பின் பொருட்கள் அனைத்தையும் காண்பீராக” என்றான்{கிருஷ்ணன்}”.(21)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அப்போது வியாசருடன் கூடிய பெரும் முனிவர்கள், ரிக், யஜுர், சாமங்களின் பாடல்களைக் கொண்டு கிருஷ்ணனைத் துதித்தனர்.(22) கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} மற்றும் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} ஆகியோரோடு அந்த விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} இருந்த இடத்தில் அனைத்து பருவகாலத்தையும் சேர்ந்த மலர்களின் தெய்வீகமாரி பொழிந்தது.(23) ஆகாயத்தில் அனைத்துவகைத் தெய்வீக இசைக்கருவிகளும் முழங்கின, அப்சரஸ் இனங்கள் பாடத்தொடங்கின. எந்தத் தீமையோ, தீய வகைச் சகுனமோ அங்கே காணப்படவில்லை.(24) அனைத்து வகை நறுமணத்தையும் தாங்கியபடி மங்கலமான, இனிமையான தூய தென்றல் அங்கே வீசத்தொடங்கியது. திசைப்புள்ளிகள் அனைத்தும் தெளிவையும், அமைதியையும் அடைந்தன. விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்தும் அமைதியாகத் திரியத் தொடங்கின.(25)
விரைவில், பெருங்காட்டின் விளிம்பில் உள்ள நெருப்பைப் போல ஆயிரங்கதிர்களைக் கொண்ட தெய்வீக சூரியன் மேற்கில் இறங்குவது காணப்பட்டது.(26) அப்போது பெரும் முனிவர்கள் எழுந்து நின்று, ஜனார்த்தனன், பீஷ்மர் மற்றும் மன்னன் யுதிஷ்டிரனை வணங்கினர்.(27) அதன் பேரில், பாண்டுவின் மகன்கள், சாத்யகி, சஞ்சயன், சரத்வானின் மகன் கிருபர் ஆகியோருடன் கூடிய கேசவன், பதிலுக்கு மரியாதையுடன் அத்துறவிகளை வணங்கினான்.(28) அறப்பயிற்சியில் அர்ப்பணிப்புமிக்க அந்தத் தவசியர், கேசவனாலும், பிறராலும் இவ்வாறு வணங்கப்பட்டு, “நாளை திரும்புகிறோம்” என்று சொல்லிவிட்டு, தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் சென்றனர்.(29) அதன்பிறகு, பீஷ்மரை வணங்கி, அவரை வலம் வந்த கேசவனும், பாண்டவர்களும், தங்கள் அழகிய தேர்களில் ஏறினர்.(30)
தங்கக் கூபரங்களால் அலங்கரிக்கப்பட்ட வேறு பல தேர்கள், மலைகளைப் போலத் தெரிந்த மதங்கொண்ட யானைகள், கருடர்களைப் போன்ற வேகமான குதிரைகள், விற்கள் மற்றும் ஆயுதங்கள் தரித்த காலாட்படை வீரர்கள் ஆகியோருடன் அந்த வீரர்கள் சென்றனர்.(31) பெரும் வேகத்தில் நகர்ந்த அந்தப் படை, இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து, ஒன்று அந்த இளவரசர்களின் முன்பும், மற்றொன்று அவர்களுக்குப் பின்பும் சென்றன. ஓரிடத்தில் குறுக்கே நிற்கும் ரிக்ஷவான் மலைகளால் பிரிக்கப்பட்ட பெரும் ஆறான நர்மதையின் இரண்டு ஓடைகளைக்கு ஒப்பாக அக்காட்சி இருந்தது.(32) அந்தப் பெரும்படையைத் திளைக்கச் செய்யும் வகையில், சூரியனின் வெப்பத்தால் சாறு உறிஞ்சிப்பட்ட மூலிகைகளைத் தன் சக்தியால் ஈரப்பதமடையச் செய்தபடியே அவர்களுக்கு முன்பு சந்திரமாஸ் {சந்திரன்} எழுந்தான்.(33) அப்போது, அந்த யதுகுலக் காளையும் {கிருஷ்ணனும்}, பாண்டுவின் மகன்களும், இந்திரனின் நகரத்திற்கு {அமராவதிக்கு} ஒப்பான காந்தியுடன் கூடிய (குரு) நகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்து, தங்கள் குகைகளை நாடும் களைத்த சிங்கங்களைப் போலத் தங்கள் தங்கள் மாளிகைகளுக்குச் சென்றனர்” {என்றார் வைசம்பாயனர்}.(34)
துயிலெழுந்த கிருஷ்ணன்! – சாந்திபர்வம் பகுதி – 53-கிருஷ்ணனின் திருப்பள்ளியெழுச்சி; அதிகாலையில் விழித்தெழுந்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனிடம் சாத்யகியை அனுப்பிய கிருஷ்ணன்; கிருஷ்ணன் பீஷ்மரிடம் செல்லக் காத்திருப்பதாக யுதிஷ்டிரனிடம் சொன்ன சாத்யகி; பாதுகாவலர்கள் வேண்டாம் என அர்ஜுனனிடம் மறுத்த யுதிஷ்டிரன்; பீஷ்மரை அடைந்து முனிவர்களை வணங்கிய கிருஷ்ணன், சாத்யகி மற்றும் பாண்டவர்கள் ஆகியோர்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மதுசூதனன் {கிருஷ்ணன்} தன் படுக்கைக்குச் சென்று மகிழ்ச்சியாக உறங்கினான்.(1) பொழுது விடிய அரை யாமம் {ஜாமம்} இருக்கும்போது, அவன் ஆழ்ந்த தியானத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். அவன் {கிருஷ்ணன்}, தன் புலன்கள் அனைத்தையும் நிலைநிறுத்தி, அழிவற்ற பிரம்மத்தைத் தியானித்தான்.(2) நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களும், இனிய குரலைக் கொண்டவர்களும், பாடல்கள் மற்றும் புராணங்களை அறிந்தவர்களுமான ஒரு குழுவினர், உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், அண்டத்தின் படைப்பாளனுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} புகழைச் சொல்லத் தொடங்கினர்.(3) வேறு சிலர் கைகளைத் தட்டிக் கொண்டு இனிய பாடல்களைப் பாடத் தொடங்கினர். வாய்ப்பாட்டுக்காரர்களும் பாடத் தொடங்கினர். சங்குகளும், பேரிகைகளும் ஆயிரக்கணக்கில் முழக்கி இசைக்கப்பட்டன.(4) வீணைகள், பணவங்கள், மூங்கில் புல்லாங்குழல்கள் ஆகியவற்றின் இனிய ஒலியும் கேட்கப்பட்டது. இவற்றின் விளைவால் கிருஷ்ணனின் அகன்ற அறையானது, இசையால் சிரிப்பது போலத் தெரிந்தது.(5)
மன்னன் யுதிஷ்டிரனின் அரண்மனையிலும், மங்கல வாழ்த்துகளைச் சொல்லும் இனிய குரல்களும், பாடல்கள், மற்றும் இசைக்கருவிகளின் ஒலிகளும் கேட்கப்பட்டன.(6) பிறகு தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} தன் தூய்மைச் சடங்குகளைச் செய்தான். மங்கா மகிமை கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரன் தன் கரங்களைக் கூப்பி அமைதியாகத் தன் இரகசிய மந்திரங்களைச் சொல்லி, ஒரு நெருப்பை மூட்டி, அதில் தெளிந்த நெய்க்காணிக்கைகளை ஊற்றினான்.(7) நான்கு வேதங்களையும் முழுமையாக அறிந்த ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கு ஓராயிரம் பசுக்களைக் கொடையளித்து, அவர்களைத் தன்னை வாழ்த்தச் செய்தான்.(8) அடுத்தாகக் கிருஷ்ணன், பல்வேறு வகை மங்கலப் பொருட்களைத் தீண்டி, ஒரு தெளிவான கண்ணாடியில் தன்னையே கண்ட பிறகு, சாத்யகியிடம்,(9) “ஓ! சிநியின் வழித்தோன்றலே, யுதிஷ்டிரரின் வசிப்பிடத்திற்குச் சென்று, பெருஞ்சக்தி கொண்ட அம்மன்னர் பீஷ்மரைச் சந்திப்பதற்கு உடுத்திவிட்டாரா என்பதை உறுதி செய்வாயாக” என்றான்.(10)
கிருஷ்ணனின் இந்த வார்த்தைகளின் பேரில் பாண்டுவின் அரச மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} விரைவாகச் சென்ற சாத்யகி, அவனிடம்,(11) “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, ஜனார்த்தனர் {கிருஷ்ணர்}, கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} காணச் செல்கிறார் என்பதால், பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த வாசுதேவருடைய முதன்மையான தேர் ஆயத்தமாக இருக்கிறது. (12) ஓ !பெரும் காந்தி கொண்ட அறமன்னா {தர்மராஜா}, அவர் உமக்காகக் காத்திருக்கிறார். அடுத்ததாக என்ன செய்யப்பட வேண்டுமோ, அதைச் செய்வதே உமக்குத் தகும்” என்றான். இவ்வாறு சொல்லப்பட்ட தர்மனின் மகனான யுதிஷ்டிரன் பின்வருமாறு பதிலளித்தான்.(13)
யுதிஷ்டிரன், “ஓ! ஒப்பற்ற காந்தி கொண்ட பல்குனா {அர்ஜுனா}, என் முதன்மையான தேர்கள் ஆயத்தமாகட்டும். நாம் (இன்று) படைவீரர்களின் துணையில்லாமல் தனியாகவே செல்ல வேண்டும்.(14) அறவோரில் முதன்மையான பீஷ்மர் எரிச்சலடையக்கூடாது. எனவே, ஓ! தனஞ்சயா, இன்று பாதுகாவலர்கள் வர வேண்டாம்.(15) இந்த நாள் முதல் பெரும் புதிர்களாலான பொருள்களைக் குறித்துக் கங்கையின் மைந்தர் பேசப்போகிறார். எனவே, ஓ! குந்தியின் மகனே, வேறு கூட்டம் (பீஷ்மரின் முன்னிலையில்) அங்கிருப்பதை நான் விரும்பவில்லை” என்றான்”.(16)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மனிதர்களில் முதன்மையானவனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, மன்னனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, (வெளியே சென்று, திரும்பி வந்து) சிறந்த தேர்களில் சேணம் பூட்டப்பட்டத்தைத் தெரிவித்தான்.(17) ஐம்பூதங்களுக்கு ஒப்பான மன்னன் யுதிஷ்டிரன், இரட்டையர்கள் {நகுல சகாதேவன்}, பீமன் மற்றும் அர்ஜுனன் ஆகிய ஐவரும், கிருஷ்ணனின் வசிப்பிடத்தை நோக்கிச் சென்றனர்.(18) உயர் ஆன்ம பாண்டவர்கள் வந்து கொண்டிருந்தபோது, சிநியின் பேரனுடனும் {சாத்யகியுடனும்}, பெரும் நுண்ணறிவுடனும் கூடிய கிருஷ்ணன் தன் தேரில் ஏறினான்.(19) தங்கள் தேர்களில் இருந்து ஒருவரையொருவர் வணங்கி, இரவு மகிழ்ச்சியாகக் கடந்ததா என்பதை விசாரித்துக் கொண்ட அந்த மனிதர்களில் காளையர், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான ஒலியைக் கொண்ட முதன்மையான தேர்களில் நிற்காமல் சென்றனர்.(20)
கிருஷ்ணனின் குதிரைகளான வலாஹம், மேகபுஷ்பம், சைப்யம் மற்றும் சுக்ரீவம் ஆகியன தாருகனால் தூண்டப்பட்டன.(21) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவனால் தூண்டப்பட்ட விலங்குகள், தங்கள் குளம்புகளால் பூமியைப் பறித்துக் கொண்டு சென்றன.(22) பெரும் பலமும், பெரும் வேகமும் கொண்டு, வானத்தையே விழுங்கிவிடுவன போல அவை வேகமாகச் சென்றன. குருவின் புனிதக் களத்தின் ஊடாகச் சென்ற அந்த இளவரசர்கள்,(23) தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் பிரம்மனைப் போலப் பலமிக்கப் பீஷ்மர், பெருமுனிவர்கள் சூழ தமது கணைப்படுக்கையில் கிடக்கும் இடத்திற்குச் சென்றனர்.(24)
பிறகு, தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கிய கோவிந்தன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரன், பீமன், காண்டீவதாரி {அர்ஜுனன்}, இரட்டையர்கள் {நகுல சகாதேவன்}, சாத்யகி ஆகியோர், தங்கள் வலக் கரங்களை உயர்த்தி முனிவர்களை வணங்கினர்[1].(25) அவர்களால் சூழப்பட்டு, நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருக்கும் நிலவைப் போல இருந்த மன்னன் யுதிஷ்டிரன், பிரம்மனை நோக்கிச் செல்லும் வாசவனைப் {இந்திரனைப்} போலக் கங்கையின் மைந்தரை நோக்கிச் சென்றான்.(26) அச்சத்தால் பீடிக்கப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, ஆகாயத்தில் இருந்து விழுந்திருக்கும் சூரியனைப் போலக் கணைப் படுக்கையில் கிடக்கும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரரின் மேல் மருட்சியுடன் தன் கண்களைச் செலுத்தினான்” {என்றார் வைசம்பாயனர்}.(27)
அறம் போதிப்பீராக! – சாந்திபர்வம் பகுதி – 54- பீஷ்மரிடம் அறம் வினவும்படி யுதிஷ்டிரன் மற்றும் பிறரிடம் கேட்டுக் கொண்ட நாரதர்; கிருஷ்ணனே முதலில் கேட்க வேண்டும் என்று சொன்ன யுதிஷ்டிரன்; மன்னர்களுக்கு அறம்போதிக்கப் பீஷ்மரைக் கேட்டுக் கொண்ட கிருஷ்ணன்..
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பெரும் தவசியே {வைசம்பாயனரே}, அற ஆன்மாவும், பெரும் சக்திகொண்டவரும், உண்மையை உறுதியுடன் பின்பற்றுபவரும், ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவரும், மங்காமகிமை கொண்டவரும், சந்தனு மற்றும் கங்கையின் மைந்தரும், தேவவிரதன், அல்லது பீஷ்மர் என்ற பெயரைக் கொண்டவருமான அந்த மனிதர்களில் புலி, தம்மைச் சுற்றி பாண்டு மகன்கள் அமர்ந்திருக்க, வீரர்களின் படுக்கையில் கிடந்தபோது, துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்ட பிறகு நேர்ந்த அந்த வீரர்களின் சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1-3)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, குருக்களின் தலைவரான பீஷ்மர், தமது கணைப்படுக்கையில் கிடந்தபோது, நாரதர் தலைமையிலான முனிவர்கள் மற்றும் சித்தர்கள் பலரும் அந்த இடத்திற்கு வந்தனர்.(4) (போரில் திரண்டு) கொல்லப்படாமல் எஞ்சியவர்களும், யுதிஷ்டிரனைத் தங்கள் தலைமையில் கொண்டவர்களுமான மன்னர்கள், திருதராஷ்டிரன், கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} ஆகியோரும் அங்கே வந்தனர்.(5) ஆகாயத்தில் இருந்து விழுந்த சூரியனைப் போலத் தெரிந்த பாரதர்களின் பாட்டனை {பீஷ்மரை} அணுகிய அந்த உயர் ஆன்ம மனிதர்கள், அவருக்காகப் புலம்பல்களின் ஈடுபட்டனர்.(6) அப்போது தேவ பண்புகளைக் கொண்ட நாரதர், சிறிது நேரம் சிந்தித்து, பாண்டவர்கள் அனைவரிடமும், கொல்லப்படாமல் எஞ்சியிருந்த மன்னர்களிடமும்,(7) “மறையும் நேரத்திலான சூரியனைப் போலக் கங்கையின் மைந்தர் மறையப் போவதால், நீங்கள் பீஷ்மரிடம் (அறம் மற்றும் அறநெறி தொடர்பான காரியங்களில்) கேள்வி கேட்பதற்கான நேரம் வந்துவிட்டதென நான் நினைக்கிறேன்.(8) அவர் {பீஷ்மர்} தன் உயிர் மூச்சை விடப்போகிறார். எனவே, நீங்கள் அனைவரும், உங்களிடம் உரையாடும்படி அவரிடம் வேண்டுங்கள். நால்வகைகளின் பல்வேறு கடமைகள் அனைத்தையும் அவர் அறிந்தவராவார்.(9) வயதால் முதிர்ந்த அவர், தமது உடலைக் கைவிட்டு உயர்ந்த அருள் உலகங்களை அடையப் போகிறார். எனவே, உங்கள் மனங்களில் இருக்கும் ஐயங்கள் தெளிவடையத் தாமதமில்லாமல் அவரை வேண்டுவீராக” என்றார்.(10)
நாரதரால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த இளவரசர்கள், பீஷ்மரை அணுகியும், அவரிடம் எதையும் கேட்க முடியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(11) அப்போது பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்}, “பாட்டனிடம் {பீஷ்மரிடம்} கேள்வி கேட்க தேவகியின் மகனை {கிருஷ்ணனைத்} தவிர வேறு எவனும் கிடையாது.(12) எனவே, ஓ! யது குலத்தில் முதன்மையானவனே, ஓ! மதுசூதனா, நீயே முதலில் கேட்பாயாக. ஓ! ஐயா, எங்கள் அனைவரிலும் நீயே முதன்மையானவனும், கடமைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் அறிந்தவனும் ஆவாய்” என்றான்.(13) மங்கா மகிமை கொண்டவனும், சிறப்புமிக்கவனுமான கேசவன், பாண்டு மகனால் இவ்வாறு சொல்லப்பட்டு, வெல்லப்பட முடியாத பீஷ்மரை அணுகி, அவரிடம் பின்வருமாறு பேசினான்.(14)
வாசுதேவன் {கிருஷ்ணன் பீஷ்மரிடம்}, “ஓ! மன்னர்களில் சிறந்தவரே {பீஷ்மரே}, இரவை மகிழ்ச்சியாகக் கழித்தீரா? உமது புத்தி மயங்காதிருக்கிறதா? ஓ! பாவமற்றவரே, உள்ளொளியால் உமது அறிவு உம்மில் ஒளிவிடுகிறதா? உமது இதயம் இனியும் வலியை உணராது என்றும், உமது மனம் கலங்காது என்றும் நான் நம்புகிறேன்” என்றான்.(17)
பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! விருஷ்ணி குலத்தோனே, எரிச்சல், திகைப்பு, களைப்பு, தளர்ச்சி, நோய் மற்றும் வலி ஆகிய அனைத்தும் ஒரே நாளில் உன் அருளால் என்னை விட்டு அகன்றுவிட்டன.(18) ஓ! ஒப்பற்ற காந்தியைக் கொண்டவனே, கடந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம் ஆகிய அனைத்தையும் உள்ளங்கை {நெல்லிக்} கனியைப் போலத் தெளிவாகக் காண்கிறேன்.(19) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, வேதங்களில் அறிவிக்கப்பட்ட கடமைகள் அனைத்தையும், வேதாந்தங்களில் விதிக்கப்பட்டிருப்பவை அனைத்தையும், நீ எனக்கு அருளிய வரத்தின் விளைவால் நான் தெளிவாகக் காண்கிறேன்.(20) கல்விமான்கள் மற்றும் அறவோர் அறிவித்திருக்கும் கடமைகள் என் நினைவில் வசிக்கின்றன. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, குறிப்பிட்ட நாடுகள், குறிப்பிட்ட இனங்கள் மற்றும் குடும்பங்களில் நிலவும் கடமைகள் மற்றும் நடைமுறைகளையும் நான் அறிவேன்.(21) நால்வகை வாழ்வுமுறைகள் தொடர்பான அனைத்தும் என் நினைவுக்குத் திரும்பிவிட்டன. ஓ! கேசவா, ஆட்சித்திறம் தொடர்பான கடமைகளையும் நான் அறிவேன்.(22) ஓ! ஜனார்த்தனா, எந்தெந்த நேரங்களில் என்னென்ன சொல்லப்பட வேண்டும் என்பதை நான் சொல்வேன். உன் அருளால், மங்கலமான புத்தியை நான் அடைந்திருக்கிறேன்.(23) உன்னைத் தியானித்துப் பலமடைந்த நான், மீண்டும் இளைஞனாகிவிட்டதைப் போல உணர்கிறேன். ஓ! ஜனார்த்தனா, உன் ஆதரவினால், (உலகிற்கு) எது நன்மையானது என்பதைக் குறித்து உரையாடும் தகுதியை நான் அடைந்திருக்கிறேன்.(24) எனினும், ஓ! புனிதமானவனே, நன்மையான அனைத்தையும் பாண்டுவின் மகனுக்கு நீயே ஏன் உரைக்கவில்லை? இது குறித்து நீ என்ன விளக்கமளிக்கப் போகிறாய்? ஓ! மாதவா {கிருஷ்ணா}, எனக்கு விரைவாகச் சொல்வாயாக” என்றார்.(25)
வாசுதேவன் {பீஷ்மரிடம்}, “ஓ! குரு குலத்தவரே, புகழுக்கும், நன்மைக்கும் வழிகோலும் அனைத்துக்கும் நானே வேராவேன் என்பதை அறிவீராக. நல்லது, அல்லது யாவும் என்னிலிருந்தே உண்டாகின்றன.(26) நிலவு குளிர்ந்த கதிர்களைக் கொண்டது என்று சொன்னால் பூமியில் எவன் ஆச்சரியப்படுவான்? அதே போல, நானே புகழ் மொத்தமும் கொண்டவனெனச் சொல்லப்பட்டால் எவன் ஆச்சரியப்படப் போகிறான்?[1](27) எனினும், ஓ! பெரும் காந்தி கொண்டவரே, நான் உமது புகழை அதிகரிக்கத் தீர்மானித்திருக்கிறேன். ஓ! பீஷ்மரே, அதன் காரணமாகவே நான் உமக்குப் பெரும் நுண்ணறிவை வாய்க்கச் செய்திருக்கிறேன். ஓ! பூமியின் தலைவரே, இந்தப் பூமி நீடித்திருக்கும் வரையில், உமது புகழ் மங்கா ஒளியுடன் உலகங்கள் அனைத்திலும் பயணிக்கும்.(29) ஓ! பீஷ்மரே, உம்மை விசாரிக்கும் பாண்டுவின் மகனிடம் {யுதிஷ்டிரரிடம்} நீர் சொல்லப் போகும் அனைத்தும், வேதங்களின் அறிவிப்புகளைப் போலத் தகுதி படைத்தவையாகப் பூமியில் கருதப்படப் போகின்றன.(30)உமது அறிவிப்புகளின்படி தன் நடத்தையை அமைத்துக் கொள்பவன், ஒவ்வொரு தகுதி வாய்ந்த செயலுக்குமான வெகுமதியை மறுமையில் பெறுவான்.(31) ஓ! பீஷ்மரே, பூமியில் உமது புகழ் மேன்மையடையும்பொருட்டே நான் உமக்குத் தெய்வீக அறிவைக் கொடுத்திருக்கிறேன்.(32) ஒரு மனிதனின் புகழ் இவ்வுலகில் நீடிக்கும்வரை, அவனது சாதனைகளும் வாழும் எனச் சொல்லப்படுகிறது.(33) (திரண்டு வந்த) மன்னர்களில் கொல்லப்படாமல் எஞ்சியோர், அறநெறி மற்றும் கடமை குறித்த உமது உரையாடலைக் கேட்கும் விருப்பத்தில் உம்மைச் சுற்றி அமர்ந்திருக்கின்றனர். ஓ! பாரதரே {பீஷ்மரே}, அவர்களிடம் பேசுவீராக.(34) நீர் வயதால் முதிர்ந்தவராக இருக்கிறீர். உமது நடத்தையும் சுருதிகளின் விதிகளுக்கு ஏற்புடைய வகையில் இருக்கிறது. மன்னர்களுக்கான கடமைகளையும், கடமை குறித்த வேறு பிற அறிவியல்களையும் நீர் நன்கறிந்திருக்கிறீர்.(35)
உமது பிறப்பிலிருந்தே, உம்மில் எந்த ஒரு சிறு மீறலையும் எவரும் கண்டதில்லை. அறநெறி மற்றும் கடமை குறித்த அறிவியல்கள் அனைத்தையும் அறிந்தவர் நீர் என்பதை மன்னர்கள் யாவரும் அறிவார்கள்.(36) எனவே, ஓ! மன்னா, ஒரு தந்தை தன் மகன்களுக்குச் செய்வதைப் போல, உயர்ந்த அறநெறி குறித்து அவர்களிடம் உரையாடுவீராக. நீர் எப்போதும் முனிவர்களையும், தேவர்களையும் வழிபடுபவராவீர்.(37) அறநெறி மற்றும் கடமைகள் குறித்த உரையாடலைக் கேட்க விரும்பும் மனிதர்களுக்கு அக்காரியங்களை விரிவாக உரைப்பது உமது கடப்பாடாகும். ஒரு கல்விமான், குறிப்பாக நல்லோரால் வேண்டப்படும்போது அவை குறித்து அவர்களுக்கு உரைக்க வேண்டும். தவசிகள் இதை ஒரு கடமையாகவே அறிவித்திருக்கிறார்கள்.(38) ஓ! பலமிக்கவரே, நீர் இக்காரியங்களைக் குறித்துப் பேசவில்லையெனில் நீர் பாவமிழைத்தவராவீர். எனவே, ஓ! கல்விமானே, ஓ! பாரதர்களில் காளையே, (மனிதர்களின்) நித்திய கடமைகள் குறித்து உமது மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளால் கேட்கப்பட்டு, அவை குறித்து அவர்களுக்கு நீர் உரைப்பீராக” என்றான் {கிருஷ்ணன்}”.(39)
போரில் கொலையே அறம்! – சாந்திபர்வம் பகுதி – 55-யுதிஷ்டிரனைக் கொண்டாடிய பீஷ்மர்; உறவினர்களின் கொலைக்குக் காரணமாக அமைந்ததால் யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் பேச நாணுவதாகத் தெரிவித்த கிருஷ்ணன்; போரில் கொலையே அறமெனச் சொன்ன பீஷ்மர்; பீஷ்மரை வணங்கிய யுதிஷ்டிரன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும் சக்தியுடன் கூடியவரும், குருக்களைத் திளைக்கச் செய்பவருமான அவர் (பீஷ்மர்), “கடமைகள் {தர்மங்கள்} குறித்து நான் உரையாடப் போகிறேன். ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, அனைத்துப் பொருளின் நித்திய ஆன்மாவாக நீயே இருப்பதால், உன் அருளின் மூலம் என் பேச்சும், மனமும் உறுதியடைந்திருக்கின்றன.(1) அற ஆன்மாவான யுதிஷ்டிரன், அறநெறி மற்றும் கடமை குறித்து என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும். அதனால் நிறைவடைந்து கடமைகள் அனைத்தையும் குறித்து நான் பேசுவேன்.(2)
எவன் பிறப்பால் விருஷ்ணிகள் அனைவரும் மகிழ்ச்சியில் நிறைந்தனரோ அந்த நல்ல பேரான்மா கொண்ட அரச முனியான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(3) குருக்கள் அனைவரின் மத்தியிலும், நன்னடத்தைக் கொண்டோர் அனைவரின் மத்தியிலும், பெரும் புகழைக் கொண்டோர் அனைவரின் மத்தியிலும் எவனுக்கு இணையில்லையோ அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(4) நுண்ணறிவு, தற்கட்டுப்பாடு, பிரம்மச்சரியம், மன்னிக்கும் தன்மை {பொறுமை}, நீதி, மனோபலம் மற்றும் சக்தி ஆகியன எவனிடம் உண்டோ அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(5)
உறவினர்கள், விருந்தினர்கள், பணியாட்கள், தன்னை நம்பியிருக்கும் பிறர் ஆகியோரிடம் எப்போதும் நல்ல செல்வாக்கு எவனிடம் உண்டோ அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(6) உண்மை, ஈகை, தவம், வீரம், அமைதி, புத்தி, அச்சமின்மை ஆகியவை எவனிடம் உண்டோ, அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(7) இன்பத்திலுள்ள விருப்பம், ஆதாயம், அச்சம் ஆகியவற்றின் ஆதிக்கத்தால் ஒரு போதும் எவன் எந்தப் பாவத்தையும் இழைக்கவில்லையோ அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(8) உண்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, அறிவு ஆகியவற்றிற்கும், விருந்தினர்களுக்கும் எப்போதும் எவன் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, நல்லோருக்கு எப்போதும் எவன் கொடையளிக்கிறானோ, அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(9) வேள்விகள், வேத கல்வி, அறநெறி நடைமுறை, கடமை ஆகியவற்றில் எப்போதும் எவன் ஈடுபடுகிறானோ, எவன் எப்போதும் அமைதி நிறைந்தனவோ, எவன் புதிர்கள் {சாத்திரங்கள்} அனைத்தையும் கேட்டிருக்கிறானோ, அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்” என்றார் {பீஷ்மர்}.(10)
வாசுதேவன் {கிருஷ்ணன் பீஷ்மரிடம்}, “நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர், பெரும் வெட்கமடைந்தும், (உமது) சாபத்திற்கு அஞ்சியும், உம்மை அணுகத் துணியவில்லை.(11) ஓ! ஏகாதிபதி {பீஷ்மரே}, அந்தப் பூமியின் தலைவர் {யுதிஷ்டிரர்}, பெரும் படுகொலைகளை ஏற்படுத்திவிட்டதால், (உமது) சாபத்திற்கு அஞ்சி உம்மை அணுகத் துணியவில்லை.(12) தமது வழிபாட்டிற்கு உரியோரையும், தம்மிடம் அர்ப்பணிப்புமிக்கோரையும், தமது ஆசான்களையும், தமது உறவினர்கள், சொந்தங்களையும், உயர்ந்த மதிப்புக்குத் தகுந்தோரையும் தமது கணைகளால் துளைத்திருப்பதால், அவர் உம்மை அணுகத் துணியவில்லை” என்றான்.(13)
பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, பிராமணர்களுக்கு ஈகை, கல்வி, தவம் ஆகியவை கடமையானதைப் போலவே, க்ஷத்திரியர்களுக்குப் போரில் தங்கள் உடல்களைக் கைவிடுவது கடமையாகும்.(14) நீதியற்ற முறையில் போரில் ஈடுபடும் தந்தைமார், பாட்டன்மார், சகோதரர்கள், ஆசான்கள், உறவினர்கள், சொந்தங்கள் ஆகியோரை ஒரு க்ஷத்திரியன் கொல்லவே வேண்டும். இஃது அவர்களுக்கான அறிவிக்கப்பட்ட கடமையாகும்.(15) ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாவம் நிறைந்தவர்களும், பேராசை கொண்டவர்களும், கட்டுப்பாடுகள் மற்றும் நோன்புகளில் அலட்சியம் நிறைந்தவர்களும் போர் தொடுத்து வந்தால், அவர்கள் தன் ஆசான்களேயானாலும், அவர்களைப் போரில் கொல்லும் க்ஷத்திரியன், தன் கடமையை அறிந்தவன் என்றே சொல்லப்படுகிறான்.(16)
பேராசையினால் நித்திய அறவரம்புகளை அலட்சியம் செய்யும் எந்த மனிதனையும் போரில் கொல்லும் க்ஷத்திரியன், தன் கடமையை அறிந்தவன் என்றே சொல்லப்படுகிறான்.(17) கொல்லப்பட்ட போர்வீரர்களின் தலை முடிகளையே புற்களாகவும், யானைகளைப் பாறைகளாகவும், கொடிமரங்களையே கரைகளின் மரங்களாகவும் கொண்ட குருதித் தடாகத்தைப் போரில் பூமியில் உண்டாக்கும் க்ஷத்திரியன் தன் கடமையை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(18) நியாயமான போர் சொர்க்கத்துக்கும், பூமியில் புகழுக்கும் வழிவகுக்கும் என மனு சொல்வதால், போருக்கு அறைகூவி அழைக்கப்படும் ஒரு க்ஷத்திரியன், எப்போதும் போரில் ஈடுபடவே வேண்டும்” என்றார் {பீஷ்மர்}”.(19)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பீஷ்மர் இவ்வாறு பேசியதும், தர்மனின் மகனான யுதிஷ்டிரன், பெரும்பணிவுடன் அந்தக் குரு வீரரை அணுகி, அவரது பார்வைக்கெதிரில் நின்றான்.(20) அவன் பீஷ்மரின் பாதத்தைப் பற்றினான். அவர் பாசமிகு வார்த்தைகளால் அவனைப் பதிலுக்குத் திளைக்கச் செய்தார். பீஷ்மர் யுதிஷ்டிரனை உச்சிமுகர்ந்து அவனை அமரச் சொன்னார். பிறகு வில்லாளிகளில் முதன்மையான அந்தக் கங்கையின் மைந்தர், யுதிஷ்டிரனிடம், “ஓ! குருக்களில் சிறந்தவனே, அஞ்சாதே. ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, எந்தக் கவலையுமின்றி என்னிடம் கேள்வி கேட்பாயாக” என்றார்”.(22)
ராஜநீதியுரைக்கத் தொடங்கிய பீஷ்மர்! – சாந்திபர்வம் பகுதி – 56-ராஜநீதியை உரைக்குமாறு பீஷ்மரிடம் கேட்டுக் கொண்ட யுதிஷ்டிரன்; முயற்சி, விதி, உண்மைக்கு அர்ப்பணிப்பு, மென்மை மற்றும் கடும் நடத்தை ஆகியவற்றைச் சொல்லி, மனு, சுக்ரன் மற்றும் பிருஹஸ்பதி ஆகியோர் பழங்காலத்தில் பாடிய சுலோகங்களைச் சொன்னது; ஒரு மன்னன் தன் குடிமக்களை எவ்வாறு நடத்த வேண்டும்; பணியாட்களிடம் நடந்து கொள்ளக்கூடாத முறை ஆகியவற்றைச் சொன்ன பீஷ்மர்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ரிஷிகேசனைப் {கிருஷ்ணனைப்} பணிந்து, பீஷ்மரை வணங்கி, அங்கே கூடியிருந்த பெரியோர் அனைவரிடமும் அனுமதியைப் பெற்றுக்கொண்டு பீஷ்மரிடம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான் யுதிஷ்டிரன்.(1)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கடமை மற்றம் அறநெறி அறிந்த மனிதர்கள், அரச கடமைகளே கடமைகளின் உயர்ந்த அறிவியல் என்று சொல்கிறார்கள். அந்தக் கடமைகளின் சுமை மிகவும் கடிமானது என்று நானும் நினைக்கிறேன். எனவே, ஓ! மன்னா {பீஷ்மரே}, அந்தக் கடமைகளைக் குறித்து நீர் உரையாடுவீராக.(2) ஓ! பாட்டா, அரச கடமைகளைக் குறித்து விரிவாகப் பேசுவீராக. அரச கடமைகளைக் குறித்த அறிவியலே மொத்த உலக வாழ்வின் புகலிடமாகும்.(3) ஓ! குரு குலத்தவரே, அறம், பொருள், இன்பம் ஆகியவை அரச கடமைகளைச் சார்ந்தே இருக்கின்றன. முக்திக்கு வழிவகுக்கும் நடைமுறைகளும் அவற்றைச் சார்ந்தே இருக்கின்றன.(4)
குதிரைகளுக்குக் கடிவாளம் போலவும், யானைக்கு அங்குசத்தைப் போலவும், அரச கடமைகளின் அறிவியலானது {ராஜநீதி – அரசியல்} உலகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கடிவாளமாகும்.(5) அரசமுனிகளால் நோற்கப்படும் கடமைகளில் ஒருவன் திகைப்படைந்தால், பூமியில் நிலையின்மை தோன்றி அனைத்தும் குழப்பத்திற்குள்ளாகும்.(6) சூரியன் உதித்து மங்கலமற்ற இருளை விலக்குவதைப் போல இந்த அறிவியல் {அரசியல்} உலகின் அனைத்து வகைத் தீய விளைவுகளையும் அழிக்கும்.(7) ஓ! பாரதர்களின் தலைவரே {பீஷ்மரே}, ஓ! பாட்டா, கடமைகளை அறிந்தோர் அனைவரிலும் நீரே முதன்மையானவர் என்பதால் என் பொருட்டு முதலில் அரச கடமைகளை உரைப்பீராக.(8) ஓ! எதிரிகளை எரிப்பவரே, நுண்ணறிவு கொண்டோர் அனைவரிலும் முதல்வராக உம்மையே வாசுதேவன் {கிருஷ்ணன்} கருதுகிறான். எனவே, நாங்கள் அனைவரும் உம்மிடம் இருந்து உயர்ந்த ஞானத்தை எதிர்பார்க்கிறோம்” என்றான்.(9)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “உயர்ந்தவனான தர்மனையும் {தர்மத்தையும்}, பிரம்மத்தின் முழு வடிவமான கிருஷ்ணனையும், பிராமணர்களையும் வணங்கி (மனிதர்களின்) நித்திய கடமைகளை {அழிவில்ல நீதிகளைக்} குறித்து நான் உரையாடப் போகிறேன்.(10) ஓ! யுதிஷ்டிரா, துல்லியமான விபரங்களுடன் விளக்கப்படும் மொத்த அளவிலான அரச கடமைகளையும், மற்றும் நீ அறிய விரும்பும் பிற கடமைகளையும், குவிந்த கவனத்துடன் என்னிடமிருந்து கேட்பாயாக.(11) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, முதலிடத்தில், மன்னன் (தன் குடிமக்களை) நிறைவு செய்யும் விருப்பத்திலும், விதிக்கு எப்போதும் ஏற்புடைய வகையிலும் நடந்து கொண்டு, தேவர்கள், பிராமணர்கள் ஆகியோரிடம் பணிவுடன் காத்திருக்க வேண்டும்.(12) ஓ! குருகுலத்தைத் தழைக்கச் செய்பவனே, தெய்வங்களையும், பிராமணர்களையும் மன்னன் வணங்குவதால், கடமை மற்றும் அறத்திற்குத் தான் பட்ட கடனைச் செலுத்தி, தன் குடிமக்களிடம் மதிப்பைப் பெறுகிறான்.(13) ஓ! மகனே, ஓ! யுதிஷ்டிரா, முயற்சி செய்ய {உழைப்பதற்கு} ஆயத்தமாகாமல் வெறும் விதி மட்டுமே மன்னர்களின் நோக்கங்களை நிறைவேற்றாது என்பதால், நீ எப்போதும் உழைப்பதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்.(14) முயற்சி, விதி ஆகிய இரண்டும் (தங்கள் செயலளவில்) இணையானவையே. முயற்சியோடு எது தொடங்கப்பட்டதோ, அதன் விளைவுகளின் மூலமே விதியானது உறுதி செய்யப்படுகிறது என்பதால், அவையிரண்டில் {முயற்சி மற்றும் விதி ஆகிய இரண்டில்} முயற்சியையே நான் மேன்மையானதாகக் கருதுகிறேன்.(15)
தொடங்கப்பட்டது {ஏதோ ஒரு காரியம் தொடங்கப்பட்டு, அது} பேரழிவில் முடியுமென்றாலும் துயரில் ஈடுபடாதே. ஏனெனில், {அப்போதுதான்} நீ அதே காரியத்தை இரட்டிப்பு கவனத்துடன் முயற்சி செய்ய வேண்டும். இதுவே மன்னர்களின் உயர்ந்த கடமையாகும். (16) மன்னர்களின் வெற்றிக்கு உண்மையை {சத்தியத்தைப்} போல வேறெதுவும் பெருமளவில் பங்காற்றுவதில்லை. உண்மைக்கு அர்ப்பணிப்புள்ள மன்னன், இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தையே கண்டடைகிறான்.(17) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, முனிவர்களைப் பொறுத்தவரையிலும் கூட, உண்மையே அவர்களது பெருஞ்செல்வமாகும். அதே போலவே, மன்னர்களைப் பொறுத்த வரையிலும், உண்மையைப் போல வேறெதுவும் அவர்களுக்குப் பெருமளவு நம்பிக்கையை ஊட்டாது.(18) அனைத்து சாதனைகளைக் கொண்டவனும், நன்னடத்தையுடன் கூடியவனும், தற்கட்டுப்பாடு, பணிவு, நேர்மை ஆகியவற்றைக் கொண்டவனும், தன் ஆசைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டவனும், நற்பண்புகளைக் கொண்டவனும், தயாளனுமான ஒரு மன்னன் ஒருபோதும் தன் செழிப்பை இழப்பதில்லை.(19) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நீதியை நிர்வகித்து, தன் பலவீனத்தை மறைப்பது, எதிரிகளின் பலவீனங்களை உறுதி செய்வது, தன் ஆலோசனைகளைக் கமுக்கமாக வைப்பது ஆகிய மூன்றையும் செய்து, நேரடியான வெளிப்படை நடத்தையோடு கூடிய மன்னன் செழிப்பை அடைகிறான்.(20)
மன்னன் மென்மையாக நடந்து கொண்டால் அனைவரும் அவனை அவமதிப்பார்கள். மறுபுறம் அவன் கடுமையாக இருந்தாலோ, அவனது குடிமக்கள் தொல்லைக்குள்ளாவார்கள். எனவே, நீ இரு வகை நடத்தைகளையும் கைக்கொள்வாயாக.(21) ஓ! முற்போக்காளர்களின் முதன்மையானவனே, ஓ! பாண்டுவின் மகனே, பூமியில் பிராமணனே முதன்மையானவன் என்பதால் பிராமணர்கள் ஒருபோதும் உன்னால் தண்டிக்கப்படக்கூடாது.(22) ஓ! மன்னர்களின் மன்னா, உயர் ஆன்ம மனு இரண்டு சுலோகங்களைப் பாடியிருக்கிறார். ஓ! குருகுலத்தோனே, உன் கடமைகளைப் பொறுத்தவரையில் நீ அவற்றை உன் மனத்தில் எப்போதும் கொள்ள வேண்டும்.(23) {அவ்விரண்டு சுலோகங்கள் [24 மற்றும் 25] பின்வருமாறு} “நெருப்பு நீரிலிருந்து உண்டானது, க்ஷத்திரியன் பிராமணனிலிருந்து உண்டானான், இரும்பு கல்லிலிருந்து உண்டானது. அம்மூன்றும் (நெருப்பு, க்ஷத்திரியன், இரும்பு என்ற மூன்றும்) தங்கள் பலத்தை அனைத்திலும் வெளிப்படுத்த முடியும். ஆனால் தங்கள் தங்கள் முன்னோரின் தொடர்பு அவற்றுக்கு ஏற்படும்போது, அவற்றின் சக்தி தணிவடைகிறது.(24) இரும்பானது கல்லைத் தாக்கும்போதோ, நெருப்பானது நீருடன் மோதும்போதோ, க்ஷத்திரியனொருவன் பிராமணனிடம் பகைமை பாராட்டும்போதோ அந்த மூன்றும் பலமிழக்கின்றன”[1].(25)(“ஜலத்திலிருந்து அக்னியும், பிராம்மணனிடமிருந்து க்ஷத்திரியனும், கல்லிலிருந்து இரும்பும் உண்டானார்கள். அக்னி முதலிய இம்மூன்றுகளின் சக்தி எங்கும் செல்லத்தக்கதாயினும் தம் காரணங்களில் நாசமடையும். கல்லை அடிக்கச் சென்ற இரும்பும், ஜலத்தைக் கொளுத்தச் சென்ற அக்கினியும், பிராம்மணர்களை த்வேஷிக்க முயன்ற க்ஷத்திரியனும் அப்பொழுதே நாசமடைவார்கள்”.–மனு வார்த்தை)ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, பெரும் முனிவரான உசனஸ் {சுக்கிரன்}, பழங்காலத்தில் இரு சுலோகங்களைப் பாடியிருக்கிறார். ஓ! மன்னா, அவற்றைக் குவிந்த கவனத்தோடு கேட்பாயாக.(28) {அவ்விரண்டு சுலோகங்கள் [29 மற்றும் 30] பின்வருமாறு} “ஒரு பிராமணன், வேதங்களில் திறன்மிக்கவனாகவே இருப்பினும், உயர்த்திய ஆயுதத்துடன் அவன் போரிட வந்தால், தன் கடமைகளில் கவனமாக இருக்கும் நீதிமிக்க க்ஷத்திரியன் ஒருவன், அவனைத் தண்டிக்கவே வேண்டும்.(29) தண்டிப்பவனின் {மன்னனின்} கோபத்தை, தாக்குபவனின் {பிராமணனின்} கோபமே தீர்மானிக்கிறது என்பதால், கடமைகளை அறிந்தவனான க்ஷத்திரியன், மீறப்படும் நீதியை நிலைநிறுத்தும் அச்செயலால் பாவியாக மாட்டான்”[2].(30)(“யுத்தத்தில் ஆயுதமெடுத்துத் தன்னை எதிர்த்து வரும் பிராம்மணன் வேதாந்தமறிந்தவனானாலும் தர்மத்தை விரும்பும் அரசன் அவனை ஆயுதத்தால் அடக்க வேண்டும். தர்மத்திற்குக்குக் குறைவுவராமல் பாதுகாக்கும் தர்மம் அறிந்த அரசன் அக்காரியத்தால் தர்மத்தைக் கெடுத்தவனாகமாட்டான். ஏனெனில், அந்தப் பிராம்மணன் கோபமே அரசனுடைய கோபத்தை உண்டுபண்ணுகிறது”.–சுக்கிரன் சொன்னதாகச் சொல்லப்படும் வார்த்தை)
ஓ! மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, இந்த வரைமுறைகளுக்கு உட்பட்டே பிராமணர்கள் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் குற்றமிழைப்பவர்களானால், உன் ஆட்சிப்பகுதிகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்.(21) ஓ! மன்னா, தண்டனைக்குத் தகுந்தவர்களாகவே இருப்பினும், நீ அவர்களுக்குக் கருணை காட்ட வேண்டும். ஒரு பிராமணன், பிராமணக்கொலை செய்த குற்றவாளியானாலோ, தன் ஆசான் அல்லது மதிப்புக்குரிய பெரியோரின் படுக்கையைக் களங்கப்படுத்தியவனானாலோ, கருச்சிதைவுக்குக் காரணமானாலோ,(32) மன்னனுக்குத் துரோகமிழைத்தாலோ, அவனது தண்டனையானது உன் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக இருக்க வேண்டும். உடல்சார்ந்த தண்டனைகளேதும் அவர்களுக்கு விதிக்கப்படவில்லை.(33) பிராமணர்களிடம் மதிப்பு காட்டும் மனிதர்கள் (அரசு பொறுப்புகள் கொடுக்கப்பட்டு) உன்னால் ஆதரிக்கப்பட வேண்டும். பணியாட்களைத் தேர்ந்தெடுத்துத் திரட்டுவதைக் காட்டிலும் மன்னர்களுக்குப் பெரும் மதிப்புமிக்கச் செல்வமேதும் இல்லை.(34)
சாத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு வகை அரண்களில்[3], (இந்த ஆறு அரண்களும், “பூமி, நீர், பாலைவனம், காடு, மலை, மனிதர்கள்)உண்மையில் குடிகளைக் கொண்ட அரணே (தொண்டாற்ற ஆயத்தமாக இருக்கும் அன்பு கொண்ட குடிமக்களைக் கொண்ட அரணே) கைப்பற்ற முடியாத அரணாகும்.(35) எனவே, அறிவுடைய மன்னன், நால்வகைக் குடிமக்களிடமும் எப்போதும் கருணை காட்ட வேண்டும். அற ஆன்மா கொண்டவனாகவும், உண்மை நிறைந்த பேச்சு கொண்டவனாகவும் இருக்கும் மன்னன் தன் குடிமக்களை நிறைவு செய்வதில் வெல்கிறான்.(36) எனினும், ஓ! மகனே, சீற்றமில்லா யானை இழிந்ததாகக் கருதப் படுவதைப் போலவே மென்மையான மன்னனும் கருதப்படுகிறான் என்பதால், நீ எப்போதும் அனைவரிடமும் மன்னிக்கும் தன்மையுடன் {பொறுமையோடு} நடந்து கொள்ளக்கூடாது.(37)பிருஹஸ்பதி தொகுத்த சாத்திரங்களில், பழங்காலத்தில் இந்தக் காரியம் குறித்து ஒரு சுலோகம் பாடப்பட்டுள்ளது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் அதைச் சொல்கிறேன், கேட்பாயாக.(38) “ஒரு மன்னன் எப்போதும் மன்னிக்கும் தன்மை கொண்டவனாக இருப்பானானால், யானையோட்டும் பாகன் அதன் தலைமீது அமர்ந்து அந்த யானையை ஓட்டுவதைப் போலவே, மனிதர்களில் இழிந்தோரும் அவனை இணங்கச் செய்து மேலோங்குவார்கள்”[4].(39) எனவே ஒரு மன்னன் எப்போதும் மென்மையாக இருக்கக்கூடாது. அதேபோல அவன் எப்போதும் கடுமையாகவும் இருக்கக்கூடாது. அவன் அதிகக் குளிர்ச்சியும், வியர்வையை உண்டாக்கும் அதிக வெப்பமும் இல்லாத இளவேனில் சூரியனைப் போல இருக்க வேண்டும்.(40)(“யானையின் தலையில் மாவுத்தன் ஏறுவது போலத் தாழ்ந்த மனிதனும் பொறுமையுள்ள அரசனை அவமதித்துத் தலையிலேற விரும்புவான்”.–பிருஹஸ்பதி சொன்னதாகச் சொல்லப்படும் இவ்வார்த்தை)
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரனே}, புலனுணர்வுகளின் நேரடி சாட்சிகள், கணிப்பு, ஒப்பீடுகள், சாத்திரங்களின் நெறிமுறைகள் ஆகியவற்றின் மூலம் ஒரு மன்னன் நண்பர்களையும், எதிரிகளையும் பகுத்தறிய வேண்டும்.(41) ஓ! பெரும் முற்போக்காளனே, வியசனங்கள்[5] என்றழைக்கப்படும் தீய நடைமுறைகள் அனைத்தையும் நீ தவிர்க்க வேண்டும். அவற்றில் நீ ஒரு போதும் ஈடுபடலாகாது என்ற, தேவையேதும் இல்லை. இருப்பினும், நீ அவற்றில் பற்று கொள்ளாதிருப்பதே தேவையாகும்.(42) அந்த நடைமுறைகளில் பற்று கொண்டாரை அனைவரும் அடக்கி ஆள்வர். தன் மக்களிடம் அன்பேதும் பேணாத மன்னன் அவர்களைக் கவலையில் ஆழ்த்துவான்.(43)(வ்யஸனங்கள் என்பன பதினெட்டு வகைப்படும்–வேட்டை, சொக்கட்டான் {பகடை}, பகலிலுறக்கம், பிறரை நிந்தித்தல், பெண்மயக்கம், மதம், வீணான பாட்டு, கூத்து, வாத்தியங்கள், குடி இப்பத்தும் காமத்தாலுண்டாவன. தெரியாத குற்றத்தை வெளியிடுவது, குற்றமில்லாதவனைத் தண்டிப்பது, கபடமாகக் கொலை செய்வது, பிறர் பெருமையில் பொறாமை, பிறர் குணங்களைத் தோஷமாகக் கூறுதல், பிறர் பொருளை அபகரித்தல், கடுஞ்சொல், கொடுமையான தண்டம் இவ்வெட்டும் கோபத்தாலுண்டவன. இவைகளில் முதல் வகுப்பிலுள்ள குடி, சொக்கட்டான், பெண்மயக்கம், வேட்டை இந்நான்கும், இரண்டாவது வகுப்பில் பிறர்பொருளை அபகரித்தல், கடுஞ்சொல், கடுமையான தண்டம் இம்மூன்றும் மிகக் கஷ்டமானவை. இவை மனுதர்மசாஸ்திரம் ஏழாவது அத்தியாயத்தில் நாற்பத்தைந்தாவது சுலோகமுதல் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன)
ஒரு தாயானவள் தன் பிள்ளையைக் கருவில் தாங்குவதைப் போலவே, மன்னன் எப்போதும் தன் குடிமக்களைத் தாங்க வேண்டும். ஓ! ஏகாதிபதி, இஃது ஏன் விரும்பத்தக்கது என்பதற்கான காரணத்தைக் கேட்பாயாக.(44) ஒரு தாயானவள், தான் மிகவும் விரும்பும் பொருட்களை அலட்சியம் செய்து தன் பிள்ளையின் நன்மையை மட்டுமே நாடுவதைப் போல, மன்னர்களும் (தங்கள் குடிமக்களிடம்) நடந்து கொள்ள வேண்டும் என்பதில் ஐயமில்லை.(45) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, நீதிமிக்க மன்னன், தன் மக்களுக்கு நன்மை செய்வதற்காகத் தனக்குப் பிடித்தமானவற்றைத் தவிர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.(46) ஓ! பாண்டுவின் மகனே, நீ ஒருபோதும் மனோவுறுதியைக் கைவிடக்கூடாது. மனோவுறுதி கொண்டவனும், தீங்கிழைப்பவர்களைத் தண்டனைகளால் பீடிப்பவனாக அறியப்படுபவனுமான ஒரு மன்னனுக்கு அச்சப்பட எந்தக் காரணமும் இருக்காது.(47)
ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, நீ உன் பணியாட்களிடம் கேலிப் பேச்சுகளில் ஈடுபடக்கூடாது. ஓ! மன்னர்களில் புலியே, அத்தகு நடத்தையின் பிழைகளைக் கேட்பாயாக.(48) தலைவன் பணியாட்களுடன் சாதாரணமாகக் கலந்திருந்தால், அவனை அவர்கள் அவமதிக்கத் தொடங்குவார்கள். அவர்கள் தங்கள் நிலையை மறந்து, உண்மையில் அந்தத் தலைவனை மீறிச் செயல்படுவார்கள்.(49) ஒன்றைச் செய்யப் பணிக்கப்பட்டால், அதைச் செய்யத் தயங்கி, தங்கள் தலைவனின் இரகசியங்களைப் பலரறியக் கூறுவார்கள்[6].(50) அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி, தங்கள் தலைவனைவிடத் தங்களை உயர்வாகக் காட்டிக் கொள்ள முயல்வார்கள். கையூட்டுகள் பெற்று, வஞ்சகம் பயின்று, அரசின் பணிக்குத் தடைசெய்யும் விதத்தில் அவர்கள் மன்னனை விட உயர்விடங்கொள்ளக்கூட முனைவார்கள்.(51(“கட்டளையிட்டு அனுப்பினாலும் அக்காரியத்தில் ஸந்தேகப்படுவார்கள்; கேட்கத்தாகாத ரஹஸ்யத்தையும் கேட்பார்கள்; யாசிக்கத்தகாத வஸ்துவையும் யாசிப்பார்கள்; எஜமானன் புஜிக்கத்தக்க வஸ்துக்களைத் தின்பார்கள்”)
பொய்கள் மற்றும் பொய்யாவணங்கள் மூலம் நிந்தித்து, அரசை அழிவடையச் செய்வார்கள்[7]. அரண்மனையின் பெண் பாதுகாவலர்களுடன் காதல் பழகி, தங்கள் தலைவனைப் போலவே உடைகளை உடுத்துவார்கள்.(52) ஓ மன்னர்களில் புலியே, ஏப்பம் மற்றும் அது போன்ற காரியங்களில் {கொட்டாவி போன்ற காரியங்களில்} வெட்கமில்லாமல் ஈடுபட்டு, தங்கள் தலைவன் முன்னிலையிலேயே காரி உமிழ்வார்கள். மேலும் அவர்கள் மற்றவர்கள் முன்னிலையில் வைத்து அவனை அலட்சியமாகப் பேசவும் அஞ்சமாட்டார்கள்.(53) மன்னன் மென்மையானவனாக நடந்து கொண்டு நையாண்டிப் பேச்சில் ஈடுபட்டால், அவனது பணியாட்கள் அவனை அலட்சியம் செய்து, மன்னர்களைப் போன்றே சிறந்த குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களைச் செலுத்துவார்கள்[8].(54) சபைகளில் திரளும் அவனது அமைச்சர்கள், “இஃது உமது சக்திக்கு மீறியது”, “இது தீய முயற்சி” என்பது போன்ற பேச்சுகளில் வெளிப்படையாக ஈடுபடுவார்கள்.(55) மன்னன் கோபமடைந்தால் அவர்கள் சிரிப்பார்கள்; மேலும், வேறு பிற காரணங்களுக்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும், அவர்களுக்கு {மன்னனால்} அளிக்கப்படும் ஆதரவில் மகிழமாட்டார்கள்.(56)அவர்கள் தங்கள் தலைவனின் இரகசிய ஆலோசனைகளை வெளியிட்டு, மாறுபட்ட ஒலியுடன் {வேடிக்கையாக} அவனது தீய செயல்களைச் சொல்வார்கள். சிறு கவலையுமின்றி அவர்கள் மன்னனின் உத்தரவுகளை மதிக்காமல் இருப்பார்கள்.(57) மன்னனின் நகைகளோ, உணவோ, அவனது குளியலுக்குத் தேவையானவையோ, நறுமணப் பொருட்களோ வரவில்லையென்றாலும், அவனது பணியாட்கள் அவனது முன்னிலையிலேயே சிறு கவலையும் அடையமாட்டார்கள்.(58) அவர்கள் தங்களுக்குச் சேரவேண்டியதை நியாயமாக எடுக்கமாட்டார்கள். மாறாகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதில் நிறைவில்லாத அவர்கள் மன்னனின் உடைமைகளை எடுத்துக் கொள்வார்கள்.(59) அவர்கள் கயிற்றில் கட்டப்பட்ட பறவையோடு விளையாடுவதைப்போல மன்னனுடன் விளையாட விரும்பி, மன்னன் தங்களுடன் நெருக்கமாக இருக்கிறான், அவர்களிடம் மிகவும் அன்பு கொண்டிருக்கிறான் என்று எப்போதும் மக்கள் புரிந்து கொள்ளுமாறு தங்களை வெளிப்படுத்துவார்கள்.(60) ஓ! யுதிஷ்டிரா, மன்னன் மென்மையானவனாக இருந்து, கேலி பேசிக் கொண்டிருந்தால், இவையும் இன்னும் பிற தீமைகளும் அஃதிலிருந்து எழும்” என்றார் {பீஷ்மர்}”.(61)
எவன் சிறந்த மன்னன்? – சாந்திபர்வம் பகுதி – 57-மன்னன் என்பவன் செயல்பட ஆயத்தமாக இருக்க வேண்டும்; குடிமக்களுக்குப் பாதுகாப்பை வழங்க வேண்டும்; அரச காரியங்களில் பணியில் அமர்த்தப்பட வேண்டியவர்களின் பண்புகள்; சிறந்த மன்னனுக்குரிய அடிப்படை தேவைகள்; எவன் ஆளத்தகுந்த மன்னன்; தவிர்க்கப்பட வேண்டிய ஆறு மனிதர்கள் ஆகியன குறித்து யுதிஷ்டிரனிடம் உரையாடிய பீஷ்மர்..
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, ஒரு மன்னன் எப்போதும் செயல்பட ஆயத்தமாக இருக்க வேண்டும். ஒரு பெண்ணைப் போல முயற்சியற்றிருக்கும் மன்னன் புகழத்தகாதவனாவான்.(1) ஓ! ஏகாதிபதி, இது தொடர்பாக, புனிதமான உசனஸ் {சுக்கிரன்} ஒரு சுலோகத்தைப் பாடியிருக்கிறார். ஓ! மன்னா, அதை நான் உரைக்கிறேன் கவனமாகக் கேட்பாயாக.(2) “போரில் வெறுப்புள்ள மன்னன், மனைவியர் மற்றும் பிள்ளைகளிடம் பெரும்பற்றுக் கொண்ட பிராமணன் ஆகிய இருவரையும், எலியை விழுங்கும் பாம்பைப் போலப் பூமியானவள் விழுங்குகிறாள்”.(3) ஓ! மன்னர்களில் புலியே இதை நீ எப்போதும் உன் இதயத்தில் தாங்குவதே உனக்குத் தகும். (விதிப்படி) யாருடன் அமைதி பேணப்பட வேண்டுமோ அந்த எதிரிகளிடம் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, யாருடன் போர்தொடுக்கப்பட வேண்டுமோ அந்த எதிரிகளிடம் போர் தொடுப்பாயாக.(4) ஏழு அங்கங்களுடன்[1] கூடிய உன் நாட்டிடம் பகைமை பாராட்டுபவன் உன் ஆசானோகவோ, உன் நண்பனாகவோ இருந்தாலும் கூட, அவன் உன்னால் கொல்லப்பட வேண்டும்.(5)(மன்னன், அமைச்சர்கள், நண்பர்கள், கருவூலம், நாட்டுக்கு உரிமைப்பட்ட நிலப்பகுதி, கோட்டைகள் படைகள் ஆகியனவே நாட்டின் ஏழு அங்கங்கள்)ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மன்னர்களின் கடமை குறித்து, பிருஹஸ்பதியின் கருத்துக்கு ஏற்புடைய வகையில் மன்னன் மருத்தனால் பாடப்பட்ட பழைய சுலோகம் ஒன்று இருக்கிறது.(6) “ஓர் ஆசான், அகந்தையுடனும், எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதில் அலட்சியத்துடனும் இருந்து வரைமுறைகள் அனைத்தையும் மீறினால் அழிவில்லா வரைமுறைகளின்படி அவருக்கும் தண்டனையுண்டு”.(7) பாஹுவின் மகனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான மன்னன் சகரன், தன் குடிமக்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தன் மூத்த மகனான அசமஞ்சனை நாடு கடத்தினான்.(8) ஓ! மன்னா, அந்த அசமஞ்சன், குடிமக்களின் பிள்ளைகளைச் சரயுவில் {சரயு ஆற்றில்} மூழ்கடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். எனவே அவனது தந்தை {மன்னன் சகரன்} அவனை {அசமஞ்சனை} நிந்தித்து, நாடு கடத்தினான்.(9) முனிவர் உத்தாலகர், தனக்குப் பிடித்தமான மகனும், கடுந்தவங்களைக் கொண்டவருமான சுவேதகேது, பிராமணர்களை மகிழ்விப்பதாக வஞ்சகமாக உறுதி கூறி, அவர்களை அழைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததால் அவரைக் கைவிட்டார்.(10)
குடிமக்களின் மகிழ்ச்சி, உண்மையை நோற்கும் நோன்பு, நடத்தையில் உண்மை மற்றும் நேர்மை ஆகியவையே மன்னர்களின் நித்திய கடமைகளாகும்.(11) ஒரு மன்னன் பிறரின் செல்வத்தில் ஆசை கொள்ளக்கூடாது. எது கொடுக்கப்பட வேண்டுமோ அதைச் சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும். ஒரு மன்னன் ஆற்றல் கொண்டவனாகவும், பேச்சில் உண்மை நிறைந்தவனாகவும், உணர்வால் மன்னிக்கும் இயல்பு கொண்டவனாகவும் இருந்தால் அவன் ஒருபோதும் செழிப்பிலிருந்து வீழமாட்டான்.(12) தீமைகளிலிருந்து தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட மன்னன், தன் கோபத்தைக் கட்டுப்படுத்த இயன்றவனாகவும், சாத்திரங்களுக்கு ஏற்புடைய தீர்மானங்களை எடுப்பவனாகவும் இருப்பான். அவன் எப்போதும் அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு ஆகியவற்றை {தர்மார்த்தகாமமோக்ஷத்தை} (நீதியுடன்) பின்பற்ற வேண்டும்.(13) இவை மூன்றை (அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றைப்) பொறுத்தவரையில் ஒரு மன்னன் தன் ஆலோசனைகளை எப்போதும் மறைக்க வேண்டும். தன் ஆலோசனைகள் வெளிப்படுவதைக் காட்டிலும் ஒரு மன்னனுக்குப் பெரும் தீமை ஏதும் ஏற்பட முடியாது.(14) மன்னர்கள் தங்கள் கடமைகளை ஆற்றுகையில் நால் வகையினரையும் பாதுகாக்க வேண்டும். வேறுபட்ட வகையினரை {நால் வர்ணத்தாரைப்} பொறுத்தவரை கடமைகளில் குழப்பமேற்படாமல் தவிர்ப்பது மன்னர்களின் நித்திய கடமையாகும்.(15)
ஒரு மன்னன் (தன் பணியாட்களைத் தவிர வேறு யாரிடமும்) நம்பிக்கை வைக்கக்கூடாது, அதேபோல (தன் பணியாட்களிடம் கூட) நம்பிக்கை இல்லாமலும் இருக்கக்கூடாது. அவன் தன் புத்தியால், அரசுரிமைக்குத் தேவைப்படும் முக்கியமான ஆறு ஆதாரங்களின்[2] தகுதிகளையும், குறைகளையும் கவனிக்க வேண்டும்.(16) (இந்த ஆறும்: 1. (பலமிக்க எதிரியிடம்) அமைதியைப் பேணல், 2. (சமபலம் கொண்ட எதிரியிடம்) போருக்குத் தயாராக இருத்தல், 3. (பலவீனமானவர்களின் ஆட்சிப்பகுதிகளுக்கு அணிவகுத்து) படையெடுத்தல், 4. இடைத்தங்கல், 5.(பலவீனமாக இருந்தால், தன் கோட்டைக்குள்) பாதுகாப்பை நாடல், 6.(எதிரியின் தலைமை அதிகாரிகளுக்கு மத்தியில்) பிரிவினையைத் தூண்டல்”)தன் எதிரிகளின் கவனக்குறைவுகளைக் கவனிப்பவனும், அறம், பொருள், இன்பத்தில் நீதியைப் பின்பற்றுபவனும், இரகசியங்களை உறுதி செய்யப் புத்திக்கூர்மையுள்ள ஒற்றர்களை நியமிப்பவனும், தன் எதிரிகளுடைய அதிகாரிகளுக்குச் செல்வம் கொடுத்துக் கெடுக்க முயல்பவனுமான மன்னன் பாராட்டுக்குத் தகுந்தவனாவான்.(17) ஒரு மன்னன் யமனைப் போல நீதியை நிர்வகித்து, குபேரனைப் போலச் செல்வத்தைத் திரட்ட வேண்டும். தான் அடைந்தவை, இழந்தவை மற்றும் தன் ஆட்சிப்பகுதிகள் ஆகியவற்றின் நிறை குறைகளை அவன் கண்காணிக்க வேண்டும்.(18) உணவில்லாதவர்களுக்கு அவன் உணவளிக்க வேண்டும். உணவளித்த பிறகு அஃதை அவர்களிடம் விசாரிக்க வேண்டும். அவன் (கடுப்பில்லாத) புன்னகையுடன் கூடிய முகத்துடன் இனிமையாகப்பேச வேண்டும்.(19) அவன், வயதில் பெரியோருக்காக எப்போதும் காத்திருந்து, தன் தாமதத்திற்கு வருந்த வேண்டும். பிறரின் உடைமைகளில் அவன் ஒருபோதும் ஆசை வைக்கலாகாது.(20)அவன் நீதிமான்களின் நடத்தையை உறுதியாகப் பின்பற்றி, அந்நடத்தையைக் கவனமாக நோற்க வேண்டும். நல்லோரின் செல்வத்தை அவன் ஒருபோதும் கைப்பற்றக்கூடாது. நியாயமற்றவர்களிடம் உள்ள செல்வத்தைக் கைப்பற்றி நல்லோரிடம் அவன் கொடுக்க வேண்டும்.(21) ஒரு மன்னன் தானே தாக்குவதில் திறன்கொண்டவனாக இருக்க வேண்டும். அவன் ஈகை பயில வேண்டும். அவன் தன் ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அவன் பிரகாசமாக உடை உடுத்த வேண்டும். அவன் சரியான காலங்களில் கொடையளித்து, தன் உணவை முறையான நேரங்களில் உட்கொள்ள வேண்டும். அவன் நன்னடத்தைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டும்.(22) செழிப்பை அடைய விரும்பும் மன்னன், துணிவுமிக்கோர், அர்ப்பணிப்புமிக்கோர், எதிரிகளால் வஞ்சிக்கப்பட முடியாதோர், நற்குடியில் பிறந்தோர், உடல்நலம் கொண்டோர், நன்னடத்தைக் கொண்டோர், நன்னடத்தைக் கொண்ட குடும்பங்களுடன் தொடர்பிலிருப்போர், மரியாதைக்குரியோர், பிறரை அவமதிக்காதோர், அனைத்து அறிவியல்களையும் அறிந்தோர், உலகம் மற்றும் அதன் காரியங்களைக் குறித்த அறிவைக் கொண்டோர், நாட்டின் எதிர்காலம் குறித்து எப்போதும் கவனமாக இருப்போர், தங்கள் கடமைகளை எப்போதும் நோற்போர், நேர்மையானோர், மலைகளைப் போன்ற உறுதியைக் கொண்டோர் ஆகியோரை எப்போதும் தன் பணியில் இணைத்துக் கொள்ள வேண்டும். இன்ப நோக்கங்களைப் பொறுத்தவரையில் அவனுக்கும் அவர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடுகளும் இருக்கக்கூடாது. தன் குடை மற்றும் கட்டளையிடும் அதிகாரம் ஆகியவை மட்டுமே அவர்களுக்குள் ஒரே வேறுபாடாக இருக்க வேண்டும்.(23-25) அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் அவனுடைய நடத்தையானது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு நடந்து கொள்ளும் மன்னன் ஒருபோதும் துயரடையமாட்டான்.(26)
அனைவரையும் சந்தேகப்பட்டு, தன் குடிமக்களுக்குக் கனமான வரிகளை விதித்து நேர்மையற்றவனாகவும், பேராசைக்காரனாகவும் இருக்கும் மன்னன், விரைவில் தன் பணியாட்கள் அல்லது உறவினர்களாலேயே தன் உயிரை இழப்பான்.(27) நன்னடத்தைக் கொண்டவனும், தன் மக்களின் இதயங்களைக் கவர்வதில் ஈடுபடுபவனுமான மன்னன், எதிரிகளால் தாக்கப்பட்டாலும் ஒருபோதும் அழிவடையமாட்டான். ஒருவேளை வெல்லப்பட்டாலும், அவன் வெகுவிரைவில் தன் நிலையை மீண்டும் அடைவான்.(28) ஒரு மன்னன் கோபம் நிறைந்தவனாக இல்லையென்றால், தீய நடைமுறைகளுக்கு அடிமையாகாமல் இருந்தால், கடும் தண்டனைகளை அளிக்காமல் இருந்தால், தன் ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடியவனாக இருந்தால், அவன் (அனைத்துயிர்களுக்கும் நம்பிக்கையளிக்கும்) இமய மலைகளைப் போல அனைவரின் நம்பிக்கைக்குரியவனாவான்.(29)
ஞானம், ஈகை, எதிரிகளின் கவனக்குறைவைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆயத்த நிலை, இனிய பண்புகள், நால்வகைசேர்ந்த தன் குடிமக்களுக்கான நன்மையையும், தீமையையும் அறிந்த நிலை, செயலூக்கம், கோபத்தை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், பழியுணர்ச்சி இல்லாமை, உயர்ந்த மனம், கோபம் நிறைந்த மனோநிலை இல்லாமை, வேள்விகளிலும், பிற அறச் செயல்களிலும் ஈடுபாடு, தற்பெருமை பேசாமை, தன்னால் தொடங்கப்பட்ட அனைத்து வேலைகளை நிறைவு செய்யத் தீவிரச் செயல்பாடு ஆகியவற்றைக் கொண்டவனே மன்னர்களில் சிறந்தவனாவான்.(30-32) தன் தந்தையின் வீட்டில் இருக்கும் மகனைப் போலத் தன் நாட்டில் உள்ள மக்கள் அச்சமில்லாமல் வாழும் வகைச் செய்பவனே மன்னர்களில் சிறந்தவனாவான்.(33) தங்கள் செல்வத்தை மறைத்து வைக்கும் தேவையில்லாதவர்களும், தங்களுக்கான நன்மை தீமைகளை அறிந்தவர்களுமான குடிமக்களைக் கொண்டிருப்பவனே மன்னர்களில் சிறந்தவனாவான்.(34)
எவனுடைய குடிமக்கள் தங்கள் தங்கள் கடமைகளில் ஈடுபட்டிருக்கின்றனரோ, கடமைக்காகத் தங்கள் உடல்களைக் கைவிடவும் அஞ்சுவதில்லையோ; எவனுடைய மக்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு, அமைதி நிறைந்த நடத்தையுடன், கீழ்ப்படிந்தவர்களாக, அடக்கமானவர்களாக, கட்டுப்படுபவர்களாக, சச்சரவுகளில் ஈடுபட விரும்பாதவர்களாக, முற்போக்கானவர்களாக இருக்கின்றனரோ அவனே உண்மையில் மன்னனாவான். எந்த மன்னனின் ஆட்சிப்பகுதிகளில் தீமைகள், கள்ளநடத்தை, வஞ்சகம், பொறாமை ஆகியவை ஏதும் இல்லையோ அந்த மன்னன் அழிவில்லா தகுதியை ஈட்டுகிறான்.(35,36)
எவன் அறிவை மதிக்கிறானோ, எவன் சாத்திரங்களுக்கும், தன் மக்களுக்கான நன்மைக்கும் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, எவன் நீதியின் பாதையில் நடக்கிறானோ, எவன் முற்போக்காளனோ அந்த மன்னனே உண்மையில் ஆளத்தகுந்தவனாவான்.(37) எவனுடைய ஒற்றர்கள், ஆலோசனைகள், நிறைவேற்றப்பட்ட மற்றும் நிறைவேற்றப்படாத செயல்கள் ஆகியன எதிரிகள் அறியாதனவாகவே இருக்கின்றனவோ அந்த மன்னனே ஆளத்தகுந்தவனாவான்.(38)
பின்வரும் வரியானது ராமசரிதம்[3] என்றழைக்கப்படும் உரையில் பிருகு குலத்தின் உசனஸால் {சுக்கிரனால்} மன்னர்களின் கடமைகள் என்ற கருத்தில் பாடப்பட்டுள்ளது.(39) “ஒருவன் முதலில் (எவனுடைய ஆட்சிப்பகுதியில் வாழ்வதெனத்) தன் மன்னனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு அவன் ஒரு மனைவியைத் தேர்ந்தெடுத்து, பிறகு செல்வம் ஈட்ட வேண்டும். ஒரு மன்னன் இல்லையென்றால் மனைவியும், உடைமைகளும் எவ்வாறு இருக்க முடியும்?”(40) நாட்டின் மீது ஆசை கொண்டோரைப் பொறுத்தவரையில், (குடிமக்களின்) பாதுகாப்பைத் தவிர வேறு எந்தக் கட்டுப்பாடான நித்திய கடமையும் அவர்களுக்குக் கிடையாது. தன் குடிமக்களுக்கு மன்னன் அளிக்கும் பாதுகாப்பே உலகத்தைத் தாங்கிப் பிடிக்கிறது[4].(41)பிசேதசின் மகனான மனு, மன்னர்களின் கடமைகளைக் குறித்து இரு வரிகளைப் பாடியிருக்கிறார். அவற்றைக் கவனமாகக் கேட்பாயாக.(42) கடலில் உள்ள ஓட்டைப் படகைத் தவிர்ப்பதைப் போல இந்த ஆறு மனிதர்கள் தவிர்க்கப்பட வேண்டும். அவர்கள். பேசாத ஆசான், சாத்திரங்கள் பயிலா புரோகிதன்,(43) பாதுகாப்பை வழங்கா மன்னன், ஏற்பில்லாததைப் பேசும் மனைவி, கிராமத்திற்குள் திரிய விரும்பும் இடையன் மற்றும், காடுகளுக்குச் செல்ல விரும்பும் நாவிதன் ஆகியோராவர்[5]” {என்றார் பீஷ்மர்}.(44)
பாதுகாப்பின் வழிமுறைகள்! – சாந்திபர்வம் பகுதி – 58-நாட்டைப் பாதுகாக்கும் வழிமுறைகள்; முயற்சியின் முக்கியத்துவமும், அதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டிய அவசியமும்; மன்னனால் சமயத்திற்கேற்றவாறு கபடமும், கபடமற்ற நிலையும் ஏன் கைக்கொள்ளப்பட வேண்டும் என்பனவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; சூரியன் மறையப்போவதால் தன் ஐயங்களை அடுத்த நாள் கேட்பதாகச் சொன்ன யுதிஷ்டிரன்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, குடிமக்களைப் பாதுகாப்பதே அரச கடமைகளில் முக்கியமானது. தெய்வீகமான பிருஹஸ்பதி வேறு எந்தக் கடமையையும் (இந்த ஒன்றைப் போல்) மெச்சவில்லை.(1) அகன்ற கண்களைக் கொண்டவரும், கடுந்தவங்களைக் கொண்டவருமான கவி (உசனஸ் {சுக்கிரன்}), ஆயிரங்கண் இந்திரன், பிரசேதஸின் மகன் மனு,(2) தெய்வீக பரத்வாஜர், தவசி கௌரசிரஸ் மற்றும் பிரம்மத்தை ஓதி, பிரமத்துக்கு அர்ப்பணிப்புடன் கூடிய அனைவரும் மன்னர்களின் கடமைகளைக் குறித்து உடன்படிக்கைகளைத் தொகுத்திருக்கிறார்கள்.(3) ஓ! அறவோரில் முதன்மையானவனே, அவர்கள் அனைவரும், மன்னர்களைப் பொறுத்தவரையில், பாதுகாப்பை வழங்கும் கடமையையே புகழ்ந்திருக்கின்றனர். ஓ! தாமரை இதழ்களைப் போன்றதும், தாமிர வண்ணம் கொண்டதுமான கண்களைக் கொண்டவனே, பாதுகாப்பை முயன்றடையும் வழிமுறைகளைக் குறித்துக் கேட்பாயாக.(4)
ஓ! யுதிஷ்டிரா, ஒற்றர்களையும், பணியாட்களையும் பணியமர்த்தல், அலட்சியமில்லாமல் அவர்களுக்குரியதைக் {கூலிகளைக்} கொடுப்பது, பிறர் நலத்தை எண்ணிப்பார்த்து வரிகளைத் தெளிவாக்குவது {அடைவது}, கணிக்க முடியாத அளவுக்கு (குடிமக்களிடம் இருந்து) காரணமில்லாமல் ஒருபோதும் எதையும் கைப்பற்றாமல் இருத்தல்,(5) (நிர்வாகக் காரியங்களைச் செயல்படுத்த) நேர்மையான மனிதர்களைத் தேர்ந்தெடுத்தல், வீரம், திறம், (தொழில் பரிவர்த்தனையில்) புத்திக்கூர்மை, உண்மை, மக்களின் நன்மையை நாடுவது, நியாயமான மற்றும் நியாயமற்ற வழிமுறைகளில் எதிரிக்கு மத்தியில் வேறுபாட்டையும், ஒற்றுமையின்மையையும் உண்டாக்குவது,(6) பழைய, அல்லது விழும் நிலையில் உள்ள கட்டடங்களைச் செப்பனிடுவது, சமயத்திற்குத் தகுந்தவாறு ஒழுங்கமைக்கப்பட்ட அபராதங்களையும், உடல்சார்ந்த தண்டனைகளை அளிப்பது,(7) நேர்மையாளர்களைக் கைவிடாதிருப்பது, நற்குடியில் பிறந்தோருக்குப் பணியையும், பாதுகாப்பதையும் அளிப்பது, சேமிக்க வேண்டியதைச் சேமிப்பது, புத்திக்கூர்மை கொண்டோரிடம் தோழமை கொள்வது,(8) படைவீரர்களை நிறைவு செய்வது, குடிமக்களைக் கண்காணிப்பது வணிகப் பரிமாற்றங்களில் நிலைமாறா உறுதியோடு இருப்பது, கருவூலத்தை நிறைப்பது,(9) நகரக் காவலர்களிடம் குருட்டு நம்பிக்கை வைக்காமலிருப்பது, பகை நகரக் குடிமக்களிடம் பற்றுறுதியை {விசுவாசத்தைக்} குலையச் செய்வது, எதிரி நாடுகளுக்கு மத்தியில் வாழும் நண்பர்களையும் கூட்டாளிகளையும் கவனமாகப் பார்த்துக் கொள்வது,(10) பணியாட்களையும், அரசு அதிகாரிகளையும் கடுமையாகக் கண்காணிப்பது, நகரத்தைத் தனிப்பட்ட முறையில் கவனித்துக் கொள்வது, பணியாட்களை நம்பாமல் இருப்பது, உறுதிமொழிகளின் மூலம் எதிரிக்கு ஆறுதலளிப்பது,(11) கொள்கைவிதிகளில் உறுதியோடிருப்பது, செயல்பட ஆயத்தமாக இருப்பது, எந்த எதிரியையும் அலட்சியம் செய்யாதிருப்பது, தீயோரைக் கைவிடுவது ஆகியவையே {பாதுகாப்பை முயன்றடையும்} அந்த வழிமுறைகளாகும்.(12)
முயற்சியில் மன்னர்களின் ஆயத்தமானது அரச கடமைகளின் வேராகும். இது குறித்துப் பிருஹஸ்பதி சொல்லியிருக்கிறார். அவரால் பாடப்பட்ட வரிகளைக் கேட்பாயாக.(13) “முயற்சியாலேயே அமுதம் அடையப்பட்டது; முயற்சியாலேயே அசுரர்கள் கொல்லப்பட்டனர்; முயற்சியாலே இந்திரன் சொர்க்கம் மற்றும் பூமியின் அரசுரிமையை அடைந்தான்.(14) பேச்சில் வீரர்களை விட முயற்சியில் வீரன் மேன்மையானவனாவான். பேச்சில் வீரர்கள், முயற்சியில் வீரர்களை நிறைவு செய்து அவர்களை வழிபடுவார்கள்[1].(15) முயற்சியற்ற மன்னன், நுண்ணறிவைக் கொண்டவனாகவே இருந்தாலும், நஞ்சிழந்த பாம்பைப் போல எதிரிகளால் எப்போதும் வெல்லப்படுவான்.(16) பலங்கொண்ட ஒரு மன்னன், எதிரி எவ்வளவு பலவீனமாக இருப்பினும், அவனை ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது. ஒரே ஒரு தீப்பொறியால் காட்டுத்தீயை உண்டாக்க முடியும், ஒரே ஒரு துளி நஞ்சும் கொல்லக்கூடும்.(17) பகைவன் ஒரே ஒரு வகைப் படையுடன் கோட்டைக்குள் இருந்தால், பலமிக்கச் செழிப்பான மன்னனின் மொத்த நாட்டையும் அவனால் பீடிக்க முடியும்.(18)மன்னனின் இரகசியப் பேச்சுகள், வெற்றியை அடைய திரட்டப்படும் துருப்புகள், அவனது இதயத்தில் இருக்கும் கபட நோக்கங்கள், குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு உண்டான அதே போன்ற நோக்கங்கள், (19) அவன் செய்யும், அல்லது செய்ய நினைக்கும் தீச்செயல்கள் ஆகியவை கள்ளங்கபடமற்ற தோற்றத்துடனே அவனால் {மன்னனால்} மறைக்கப்பட வேண்டும். தன் மக்களைத் தன் ஆளுகைக்குள் வைப்பதற்கு அவன் நியாயமாகச் செயல்பட வேண்டும்.(20) குறுகிய புத்தி கொண்டோரால் பரந்த பேரரசின் சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாது. மென்மையான மன்னனால், உழைப்பைக் கோரும் மேன்மையான தகுதியை அடைய முடியாது.(21) இறைச்சித் துண்டைப் போல அனைவராலும் பேராசை கொள்ளப்படும் நாட்டைக் கள்ளங்கபடமில்லாத, எளிமையான நடத்தையுடன் ஒருபோதும் காக்க முடியாது. எனவே, ஓ! யுதிஷ்டிரா, நீ கள்ளங்கபடமில்லாமலும், கபடத்தோடும் என இரு வகைகளிலும் எப்போதும் நடந்து கொள்ள வேண்டும்.(22) குடிமக்களைப் பாதுகாப்பதில் ஒரு மன்னன் ஆபத்தில் விழ நேர்ந்தால் அவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான். அதுவே மன்னர்களின் நடத்தையாக இருக்க வேண்டும்.(23) மன்னர்களின் கடமைகளைக் குறித்த ஒரு பகுதியை மட்டும் நான் இப்போது உன்னிடம் சொல்லியிருக்கிறேன். ஓ! குருக்களின் சிறந்தவனே {யுதிஷ்டிரனே}, நீ அறிய விரும்புவனவற்றை என்னிடம் சொல்வாயாக” என்றார் {பீஷ்மர்}”.(24)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்தார், “சிறப்புமிக்க வியாசர், தேவஸ்தானர், அஸ்வர், வாசுதேவன் {கிருஷ்ணன்}, கிருபர், சாத்யகி, சஞ்சயன் ஆகியோர்(25) முற்றாக மலர்ந்த மலர்களுக்கு ஒப்பான முகங்களுடன் மகிழ்ச்சியால் நிறைந்து, “சிறப்பு! சிறப்பு!”” என்று சொல்லி மனிதர்களில் புலியும், அறவோரில் முதன்மையானவருமான பீஷ்மரைத் துதித்தனர்.(26) அப்போது குரு குலத்தின் தலைவனான யுதிஷ்டிரன் உற்சாகமற்ற இதயத்துடனும், கண்ணீரால் குளித்த கண்களுடனும், மென்மையாகப் பீஷ்மரின் பாதங்களைத் தீண்டி,(27) “ஓ! பாட்டா, சூரியன் பூமியிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிட்டு இன்று (இப்போது) மறையப் போகிறான் என்பதால் என் ஐயங்களை நான் நாளை கேட்கிறேன்” என்று சொன்னான்.(28) பிறகு, கேசவன், கிருபர், யுதிஷ்டிரன் மற்றும் பிறர், (அங்கே கூடியிருந்த) பிராமணர்களை வணங்கி, அந்தப் பெரும் ஆற்றின் மைந்தரை வலம் வந்து, உற்சாகமாகத் தங்கள் தேர்களில் ஏறினர்.(29) சிறந்த நோன்புகளை நோற்கும் அவர்கள் அனைவரும் திருஷத்வதியின் ஓடையில் {ஆற்றில்} நீராடினர். தங்கள் முன்னோருக்கு நீர்க்காணிக்கைகள் அளித்த அந்த எதிரிகளை எரிப்பவர்கள், அமைதியாகப் புனித மந்திரங்களை ஓதி, வேறு பிற மங்கலச் செயல்களையும் செய்து, மாலை சந்தியை உரிய சடங்குகளுடன் துதித்து, யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(30)
பிரம்மனின் தண்டநீதி! – சாந்திபர்வம் பகுதி – 59அ-இரண்டாவது நாளாக பீஷ்மரிடம் போதனை கேட்கச் சென்ற பாண்டவர்களும், யாதவர்களும்; அரசன் என்ற சொல் உண்டானது எவ்வாறு, அரசனுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது எனப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; அரசோ மன்னனோ அற்றிருந்த உலகில் மெல்ல அறம் வீழத் தொடங்கியது; அதை நிலைநிறுத்த தண்ட நீதியைத் தொகுத்த பிரம்மதேவன்; பிரம்மதேவன் தொகுத்த தண்டநீதியின் உள்ளடக்கங்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனிடம் விவரித்த பீஷ்மர்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அடுத்த நாள் தங்கள் படுக்கையில் இருந்து எழுந்து, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி காலைச் சடங்குகளைச் செய்த பாண்டவர்களும், யாதவர்களும், கோட்டைகளுடன் கூடிய நகரங்களுக்கு ஒப்பான தங்கள் தேர்களில் ஏறி (பீஷ்மர் கிடந்த இடத்திற்குப்) புறப்பட்டுச் சென்றனர்.(1) குருவின் களத்திற்கு {குருக்ஷேத்திரத்திற்குச்} சென்று, பாவமற்ற பீஷ்மரை அணுகிய அவர்கள், அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்} இரவை மகிழ்ச்சியாகக் கழித்தாரா என்பதை விசாரித்தனர்.(2) முனிவர்கள் அனைவரையும் வணங்கி, பதிலுக்கு அவர்களால் ஆசி கூறப்பட்ட இளவரசர்கள், பீஷ்மரைச் சுற்றி அமர்ந்தனர்.(3) அப்போது பெரும் சக்தி கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், முறையாகப் பீஷ்மரை வணங்கிய பிறகு, கூப்பிய கரங்களுடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(4)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா {பீஷ்மரே}, ஓ! பாரதரே, பூமியில் {தற்போது} பயன்படுத்துவதைப் போல ராஜன் என்ற சொல் எப்போதிருந்து உண்டானது? ஓ! எதிரிகளை எரிப்பவரே, இதை எனக்குச் சொல்வீராக.(5) பிறரைப் போலவே, கரங்கள், தோள்கள், கழுத்து, புத்தி, புலன்களைக் கொண்டவனும், பிறரைப் போலவே ஒரே வகை இன்ப துன்பங்களை அனுபவிப்பவனும், உலகில் உள்ள பிறரைப் போலவே முதுகு, வாய் மற்றும் வயிற்றைக் கொண்டவனும்,(6) பிறரைப் போலவே உயிர் நீர், எலும்புகள், மஜ்ஜை, சதை, குருதி ஆகியவற்றைக் கொண்டவனும், பிறரைப் போலவே மூச்சை உள்ளிழுத்து, வெளிவிடுபவனும், உயிர் மூச்சைக் கொண்டவனும், பிற மனிதர்களைப் போலவே உடல்களைக் கொண்டவனும்,(7) பிறப்பு, இறப்பு ஆகியவை ஒத்திருப்பவனும், உண்மையில் மனிதப் பண்புகள் அனைத்திலும் பிறருக்கு ஒப்பாகவும் இருக்கும் ஒரு {சாதாரண} மனிதனான மன்னன், என்ன காரணத்தினால், உலகில் பெரும் நுண்ணறிவும், துணிச்சலும் மிக்கப் பல மனிதர்களை ஆள்கிறான்?(8) துணிச்சல் மிக்கவர்களும், சக்தி மிக்கவர்களும், நன்னடத்தைக் கொண்ட உயர்குடி பிறப்பாளர்களும் நிறைந்த இந்தப் பரந்த உலகை ஒரு மனிதன் ஆள்வது எவ்வாறு? மனிதர்கள் அனைவரும் அவனது ஆதரவை அடைய முயல்வது ஏன்?(9) ஒரு மனிதன் மகிழ்ச்சியடைந்ததும், மொத்த உலகும் மகிழ்ச்சியடைவதும், ஒரு மனிதன் தொல்லைக்குட்பட்டால் மொத்த உலகும் தொல்லைக்குள்ளாவதும் ஏன்?(10) ஓ! பாரதக் குலத்தின் காளையே, நான் இதை விரிவாகக் கேட்க விரும்புகிறேன். ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவரே, இது குறித்து என்னுடன் முழுமையாக உரையாடுவீராக.(11) ஓ! மன்னா, தேவனைப் போல மொத்த உலகமும் ஒருவனை வணங்குவது காணப்படுவதால் இவை அனைத்திற்கும் முக்கியக் காரணம் இல்லாமல் இருக்காது” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(12)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னர்களில் புலியே, கிருத யுகத்தில் முதலில் அரசுரிமை தோன்றியது எவ்வாறு என்பதைக் குவிந்த கவனத்துடன் விரிவாகக் கேட்பாயாக.(13) முதலில் அரசுரிமையோ, மன்னனோ, தண்டனையோ, தண்டனை வழங்குபவனோ ஏதும், எவரும் கிடையாது. மனிதர்கள் அனைவரும் நீதியுடன் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொண்டனர்.(14) ஓ! பாரதா, இவ்வாறு ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொண்டு அவர்கள் வாழ்ந்து வரும் போது, (சில காலத்திற்குப் பிறகு) அந்தப் பணி வலிநிறைந்ததாக இருப்பதைக் கண்டனர். பிறகு அவர்களது இதயங்களைப் பிழைகள் பீடிக்கத் தொடங்கின.(15) ஓ! இளவரசே, பிழையால் பீடிக்கப்பட்ட மனிதர்களின் அறிவும் குழப்பமடைந்த பிறகு அறம் வீழத் தொடங்கியது.(16) ஓ! பாரதர்களின் தலைவா, அறிவு மங்கி, மனிதர்கள் பிழைக்கு ஆட்பட்ட போது, அவர்கள் அனைவரும் பேராசை கொண்டோராக மாறினர்.(17) தங்களிடம் இல்லாத பொருட்களை மனிதர்கள் அடைய விரும்பியதால், மற்றொரு ஆசையான காமம் அவர்களைப் பற்றியது.(18) அவர்கள் காம வசப்பட்டபோது கோபம் என்ற பெயர் கொண்ட மற்றொரு ஆசை விரைவில் அவர்களை வீழ்த்தியது. கோபவசப்பட்டதும், அவர்கள் அனைவரும் எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதை மறந்தனர்.(19) கட்டுப்பாடில்லாத காம ஈடுபாடு பெருகியது. மனிதர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்ததைப் பேசத் தொடங்கினர். தூய மற்றும் தூய்மையற்ற உணவு, அறம் மற்றும் மறம் ஆகியவற்றுக்கிடையான வேறுபாடுகள் காணாமல் போயின[1].(20)(ஆதியில் கிருதயுகத்தில் அரசனும், ராஜ்யமும், தண்டமும், தண்டிப்பவனுமில்லாமல் பிரஜைகளனைவரும் தர்மத்தாலேயே ஒருவரையொருவர் ரக்ஷித்துவந்தார்கள். ஏ! பாரத! அவ்விதம் தர்மத்தால் ஒருவருக்கொருவர் ரக்ஷிக்கப்பட்டு வரும் மனிதர்கள் மிக்கத் தைன்யத்தை அடைந்தார்கள். சிரமமடைந்த அந்த மனிதர்களை அவிவேகம் பிடித்துக் கொண்டது. அந்த மனிதர்கள் மோகத்துக்கு வசப்பட்டார்கள். மனிதஸ்ரேஷ்டனே! அவிவேகத்தால் அறிவு குறைந்தவுடன் அவர்களுடைய தர்மம் நாசமடைந்தது. பரதஸ்ரேஷ்டனே! தர்மக்குறைவாலும், அறிவின் குறைவாலும் மோகத்திற்கு வசப்பட்ட மனிதர்கள் யாவரும் அப்பொழுது தம்மிடமில்லாத பொருளை அடைய வேண்டுமென்னும் லோபமுள்ளவர்களானார்கள். பிரபுவே! விருப்பமுள்ள வஸ்துக்களை அடைய முயற்சி செய்ய வேண்டுமென்னுங்காமம் லோபத்திற்குள்ளான மனிதர்களைத் தன் வசமாக்கிக் கொண்டது. காமத்திற்குள்ளான அந்த ஜனங்களை ராகமென்னும் போகவிடாயும் கைப்பற்றிக் கொண்டது. இவ்விதம் மேன்மேலும் ஆசைபிடித்து மனிதர்கள் யாவரும் இன்னது செய்யத்தக்கது, இன்னது செய்யத்தகாததென்னும் பகுத்தறிவற்றவர்களானார்கள். ஓ! அங்ஙனமே சேரத்தகாத மடந்தையர்களைச் சேர்ந்தார்கள்; பேசத்தக்கது பேசத்தகாதது புஜிக்கத்தக்கது, புஜிக்கத்தகாதது, குற்றமுள்ளது, குற்றமில்லாதது ஆகிய இவையனைத்தையும் கைப்பற்றினார்கள். இம்மானிடவுலகம் இப்படித் தர்மவரம்பு அற்றுத் தடுமாறுதலும், வேதம் அக்காலத்தில் ஒழிவடைந்தது”)
மனிதர்களுக்கு மத்தியில் இந்தக் குழப்பம் ஏற்பட்டபோது, வேதங்கள் மறைந்தன. வேதங்கள் மறைந்ததும், அறம் காணாமல் போனது.(21) வேதங்களும், அறமும் தொலைந்ததும், தேவர்கள் அச்சமடைந்தனர். ஓ! மனிதர்களில் புலியே, அச்சமடைந்த தேவர்கள் பிரம்மனின் பாதுகாப்பை நாடினார்கள்.(22) அண்டத்தின் தெய்வீகப் பெரும்பாட்டனை நிறைவு செய்த தேவர்கள், துயரால் பீடிக்கப்பட்டு, கூப்பிய கரங்களுடன் அவரிடம்,(23) “ஓ! தேவா, பேராசை மற்றும் குற்றங்களில் ஈடுபடும் உலகின் மனிதர்களால் நித்தியமான வேதங்கள் பீடிக்கப்படுகின்றன. இதனால் நாங்கள் அச்சமடைந்துள்ளோம்.(24) ஓ! உயர்ந்த தலைவா, வேதங்கள் தொலைந்ததன் மூலம் அறமும் தொலைந்திருக்கிறது. ஓ! மூவுலகங்களின் தலைவா, இதன் காரணமாக நாங்கள் மனிதர்களின் அளவுக்குக் கீழிறங்கப் போகிறோம்.(25) மனிதர்கள் மேல்நோக்கிப் பொழிவதும், நாங்கள் கீழ்நோக்கிப் பொழிவதும் இதுவரை வழக்கமாக இருந்தது. எனினும், மனிதர்களுக்கு மத்தியில் பக்திச் சடங்குகள் அனைத்தும் நின்று போனதன் விளைவால், பெரும் துயரம் எங்களுடையதானது[2].(26) ஓ! பெரும்பாட்டனே, உமது சக்தியால் படைக்கப்பட்ட இந்த அண்டம் அழிவடையாமல் இருக்க, எங்களுக்கு நன்மையானதை நினைப்பீராக” என்று கேட்டனர்.(27)(மனிதர்கள், வேள்வி நெருப்புகளில் தெளிந்த நெய்யைக் காணிக்கைகளாக ஊற்றி தேவர்களுக்கு உணவூட்டினர். தேவர்கள் அந்தக் காணிக்கைகளை உண்டு, மனிதர்களின் வாழ்வுக்கு ஆதாரமாகப் பூமியில் மழையைப் பொழிந்தனர். எனவே, மனிதர்கள் மேல்நோக்கிப் பொழிந்தனர், தேவர்கள் கீழ்நோக்கிப் பொழிகின்றனர் என்று சொல்லப் படுகிறது”)
தான்தோன்றியான அந்தத் தெய்வீகத் தலைவன் {பிரம்மன்} இவ்வாறு சொல்லப்பட்டதும், அவன் அவர்களிடம், “அனைவருக்கும் எது நன்மையைப் பயக்குமென நான் சிந்திக்கிறேன். தேவர்களில் முதன்மையானோரே, உங்கள் அச்சம் விலகட்டும்” என்றான்.(28) பிறகு அந்தப் பெரும்பாட்டன், தன் நுண்ணறிவைக் கொண்டு, நூறாயிரம் பாடங்களை {ஒரு லட்சம் அத்தியாயங்களைக்} கொண்ட ஓர் ஆய்வை {சாஸ்திரத்தைத்} தொகுத்தான். அஃதில் அறம், பொருள், மற்றும் இன்பம் ஆகியன விரிவாக உரைக்கப்பட்டிருந்தன.(29) அந்தத் தான்தோன்றி அவற்றை {திரிவர்க்கம் என்றழைக்கப்படும்} மூன்று திரட்டுகளாக அமைத்திருந்தான். மேலும் அவன், இவற்றிலிருந்து பொருளும், பண்புகளும் வேறுபட்ட வீடு {மோட்சம்} என்றழைக்கப்படும் நான்காவது திரட்டையும் அமைத்தான்.(30) நல்ல குணம் {சத்வ குணம்}, ஆசை குணம் {ரஜோ குணம்}, இருள் குணம் {தாமச குணம்} என்ற பண்புகளின் படி வீடும் {மோட்சமும்} மூன்று திரட்டுகளாகவும், மற்றொன்றும் (நான்காவதாகப் பேரின்பத்தில், அல்லது இவ்வுலகிலோ, மறுவுலகிலோ வெகுமதி கிடைக்குமென்ற நம்பிக்கையில்லாமல் கடமை பயில்வது) அதில் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாத்தல், வளர்ச்சி மற்றும் அழிவு ஆகியவற்றைக் கொண்ட தண்டனையோடு தொடர்புடைய மேலும் மூன்று திரட்டுகளும் அதில் அமைக்கப்பட்டிருந்தன.[3](31)(“லக்ஷம் அத்தியாயமுள்ள சாஸ்திரத்தைத் தமது புத்தியால் இயற்றினர். அதில் த்ரிவர்க்கமென்று பிரஸித்தி பெற்ற அறம்பொருளின்பங்கள் அவரால் விரிவாகவுரைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மூன்றைத் தவிர நான்காவதாக மோக்ஷமென்பது வேறென்றும் அதன் காரணமும் பயனும் வேறென்றும் ஸத்வம், ரஜஸ், தமஸென்னும் அதைச் சேர்ந்த திரிவர்க்கம் வேறென்றும் அதில் சொல்லப்படும். ஸமநிலை, வளர்ச்சி, குறையென்னும் த்ரிவர்க்கம், தண்டநீதிக்குரியதாகும்)
மனிதர்களின் இதயங்கள் {மனங்கள்}, இடம், காலம், வழிமுறைகள், கருத்தினைக் காட்டும் செயல்கள், கூட்டணிகள், காரணங்கள் ஆகிய மேலும் ஆறு திரட்டுகளும் அதில் அமைக்கப்பட்டிருந்தன.(32) மூன்று வேதங்களிலும் விதிக்கப்பட்டிருக்கும் அறச்சடங்குகள், அறிவு, வாழ்வைத் தாங்குவதற்கு அவசியமான செயல்கள் (உழவு மற்றும் வணிகம் போன்றவை) ஆகியவையும், ஓ! பாரதக் குலத்தின் காளையே, தண்டனை விதிக்கும் சட்டங்களும் {தண்டநீதியும்} அதில் விதிக்கப்பட்டிருந்தன.(33) ஓ! மன்னா, அமைச்சர்களுடன் நடந்து கொள்ளும் முறை, ஒற்றர்கள், இளவரசர்களின் அறிகுறிகள், பல்வேறு வழிமுறைகளுக்கான இரகசிய முகவர்கள், தூதர்கள், பிறவகை முகவர்கள் ஆகியவையும்,(34) மனவேற்றுமை நீக்கல் {சமரசம்}, முரண்களில் ஒத்திசைவு, கொடைகள், தண்டனை, ஐந்தாவதாகப் பொறுமை ஆகியவை அதில் விரிவாக முழுமையாகச் சொல்லப்பட்டிருந்தன.(35) அனைத்து வகையான ஆழமான ஆய்வுகள், வேற்றுமையை உண்டாக்கும் ஆலோசனைகள், ஆய்வின் பிழைகள், வெற்றியின் விளைவுகள் அல்லது ஆலோசனைகளின் தோல்விகள், அச்சமூட்டவது, பதவிச் செல்வாக்குக் கொடுப்பது, செல்வத்தைக் கொடையளிப்பது ஆகியவற்றின் மூலம் அமைக்கப்பட்ட மூவகையிலான நல்ல, மத்திம மற்றும் தீய ஆய்வுகள் ஆகியன அதில் விரிவாக விளக்கப்பட்டிருந்தன.(36,37)
பயணங்கள் செய்வதற்கான நால்வகைக் காலங்கள், நேர்மையாக அடையப்பட்டவை, செல்வத்தால் வெல்லப்பட்டவை, வஞ்சகமாக அடையப்பட்டவை என்ற மூன்று வகை வெற்றிகள் ஆகியன அதில் விரிவாக விளக்கப்பட்டிருந்தன.(38) (அமைச்சர்கள், நாடு, கோட்டை, படை மற்றும் கருவூலம் ஆகிய) ஐந்து திரட்டுகளின் மூன்று வகைகளிலான தீய, மத்திம, மற்றும் நல்ல பண்புகளும் அதில் சொல்லப்பட்டிருந்தன.(39) வெளிப்படையான மற்றும் மறைமுகமான இருவகைத் தண்டனைகளும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. எட்டு வகையான வெளிப்படை தண்டனைகளும், எட்டு வகையான மறைமுகத் தண்டனைகளும் அதில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தன.(40) ஓ! பாண்டுவின் மகனே, ஓ! கௌரவ்யா {யுதிஷ்டிரா}, தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பணிக்குழு, (படைகளில்) ஊதியம் வாங்கும் ஊழியர்கள், போர்ப்பகுதிகள் இருக்கும் நாட்டில் இருந்து கொள்ளப்படும் வழிகாட்டிகள் ஆகியோர் வெளிப்படையான தண்டனையின் கருவிகள் அல்லது வெளிப்படையாகச் செயல்படும் சக்திகள் ஆவர்.(41) {மறைமுகத் தண்டனை என்பது} உடை உடுத்துதல், உணவு மற்றும் மந்திரங்கள் ஆகிய மூவகைப் பொருட்களைப் பொறுத்தவரையும் அசையும் மற்றும் அசையாத நஞ்சை பயன்படுத்துவது மற்றும் செயல்படுத்துவதும் குறிப்பிடப்படுகிறது[4]. எதிரிகள், கூட்டாளிகள், நடுநிலையாளர்கள் குறித்தும் இதில் விளக்கப்படுகிறது.(42,43)(ரஹஸ்யமான தண்டனை ஸர்ப்ப முதலிய ஜங்கவிஷம், வற்சநாப முதலிய ஸ்தாவர விஷம் மற்றும் பல விஷப் பொடிகள், ஆடையாபரண முதலி வஸ்துக்களிலும், அன்ன முதலிய புஜிக்கத்தக்கவைகளிலும், பிரயோகிக்கத்தக்க முறைகள் மற்றும் ஆபிசாரங்கள் எனப் பலவிதமென்றும் விரிவாகக் கூறப்படுகின்றன”–விளையாட்டுச் சண்டையிலும், சூதாட்டத்திலும், நம்பிக்கையுடன் கூடியதும் ஒன்பதாவது உபாயமென்று வித்வான்களால் சொல்லப்பட்டதுமான கள்ளத்தனமும், அறம்பொருளின்பங்களைக் கெடுப்பதும் இஷ்டம் அனிஷ்டமென்னும் இவ்விரு விஷயங்களிலுமுள்ளதுமான உபேக்ஷையும், இந்திரஜால முதலிய மாயையும், சுபாசுபங்களைக் குறிப்பிடும் பல சகுனங்களும், வேஷத்தை அடைந்து பகையாளிகளிடம் உபயோக்கத் தக்க டம்பமும், வஞ்சகமும், ஸித்த தோஷத்தால் கெடுப்பதும், சேஷ்டையில்லாமல் செய்வதும் அதில் சொல்லப்படுகின்றன.)
(நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் பிறவற்றைச் சார்ந்து பயணப்படும்) சாலைகளின் பல்வேறு பண்புகள், (முற்றுகை இடப்படும்) மண்ணின் தன்மைகள், தற்பாதுகாப்பு, தேர்கள், போருக்கான பிற உபகரணங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் கண்காணிப்பு, அவற்றை {தேர்கள் மற்றும் போர் உபகரணங்களைப்} பயன்படுத்துதல்,(44) மனிதர்கள், யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியவற்றைப் பாதுகாத்து, மேம்படுத்தும் பல்வேறு வழிமுறைகள், பல்வேறு வகையான போர் அணிவகுப்புகள் {வியூகங்கள்}, திட்டங்கள், போர் நகர்வுகள் {அசைவுகள்},(45) தீமையை முன்னறிவிக்கும் கோள்களின் சந்திப்புகள், (நிலநடுக்கங்கள் போன்ற) கடும்துயரை விளைவிக்கும் மேற்பார்வைத் தேர்வாய்வுகள், போர்முறைகளில் மற்றும் பின்வாங்குவதில் திறன் நிறைந்த வழிமுறைகள், ஆயுதங்களின் அறிவு, அவற்றை உரிய முறையில் பாதுகாத்தல்,(46) துருப்புகளின் ஒழுங்கின்மை, அவற்றை {துருப்புகளின் ஒழுங்கின்மையைக்} களைவது, படைக்கு மகிழ்ச்சியையும், உறுதியான நம்பிக்கையையும் அளிக்கவல்ல வழிமுறைகள், நோய்கள், துயர்மிகுந்த ஆபத்தான காலங்கள், போரில் காலாட்படையினரை வழிநடத்தும் அறிவு,(47) ஆபத்தை அறிவிக்கும் ஒலிமுறைகள், குறிப்பாணைகள், கொடிமரங்களை வெளிப்படுத்தி எதிரியை அச்சமூட்டுவது, கள்வர்கள் மற்றும் கடும் காட்டு இனக்குழுக்கள், நெருப்பை வீசுபவர்கள், நஞ்சூட்டுபவர்கள், மோசடி செய்பவர்கள் ஆகியவர்களின் மூலம் எதிரியின் நாட்டைப் பீடிக்கும் பல்வேறு வழிமுறைகள், பகைவர் படையின் முக்கிய அதிகாரிகளுக்கு மத்தியில் ஒற்றுமையின்மையை உண்டாக்குவது, பயிர்களையும், செடிகளையும் வெட்டி வீழ்த்துவது,(48,49) எதிரி யானைகளின் திறனை அழிப்பது, பீதியை உண்டாக்குவது, படையெடுத்துச் செல்பவனிடம் நல்ல எண்ணம் கொண்ட எதிரியின் குடிமக்களைக் கௌரவிப்பது, எதிரிக்கு நம்பிக்கையளிப்பது,(50) அரசின் ஏழு அடிப்படைத் தேவைகளின்[5] அழிவு, வளர்ச்சி மற்றும் ஒற்றுமை, (எதிர்பார்க்கப்படும்) வேலைத்திறன், அவற்றை நிறைவேற்றும் வழிமுறைகள், நாட்டை விரிவுபடுத்தும் வழிமுறைகள்,(51) பகைவரின் ஆட்சிப்பகுதிகளில் வாழும் மக்களுடைய நம்பிக்கையை வெல்லும் வழிமுறைகள், தண்டனை, பலமிக்கவர்களை அழிக்கும் முறை,(52) நீதியைச் சரியாக நிர்வகிக்கும் முறை, தீயவர்களை அழிப்பது, மற்போர், கணையேவுதல், ஆயுதங்களை வீசுதலும், ஏவுதலும், கொடைகளை அளிக்கும் வழிமுறைகள், தேவையான பொருட்களைச் சேமிக்கும் வழிமுறை,(53) உணவில்லாதவர்களுக்கு உணவூட்டுவது, உணவளிக்கப்பட்டவர்களைக் கண்காணிப்பது, சரியான காலத்தில் செல்வத்தைக் கொடையளிப்பது, வியசனங்கள் என்றழைக்கப்படும் தீமைகளில் இருந்து விடுபட்டு இருப்பது,(54) மன்னர்களின் பண்புகள், படை அதிகாரிகளின் தகுதிகள், மூன்று தேவைகளின் மூலங்கள், அவற்றின் தகுதிகள் மற்றும் குறைகள்,(55) பல்வேறு வகையான தீய நோக்கங்கள், ஆதரவில் வாழ்வோரின் நடத்தை, அனைவரிடமும் ஐயங்கொள்வது, அலட்சியத்தைத் தவிர்த்தல்,(56) அடையாத பொருட்களை அடைவது, ஏற்கனவே அடையப்பட்ட பொருட்களை மேம்படுத்துவது, அவ்வாறு மேம்படுத்தப்பட்டவற்றைத் தகுந்த நபர்களுக்குக் கொடையளிப்பது,(57) பக்தி நோக்கங்கள், இன்ப நுகர் பொருட்களை அடைவது, ஆபத்து மற்றும் துயரை அகற்றுவது ஆகியவற்றுக்காகச் செல்வத்தைச் செலவு செய்வது, ஆகியவை குறித்தும் அந்த ஆய்வில் {பிரம்மனின் சாத்திரத்தில்} குறிப்பிடப்பட்டிருந்தது.(58)
ஓ! குருக்களின் தலைவா {யுதிஷ்டிரா}, கோபத்தில் இருந்து உண்டாகுபவையும், காமத்திலிருந்து உண்டாகுபவையுமான பத்து வகைக் கடும் தீமைகளும் அந்த ஆய்வில் குறிப்பிட்டப்பட்டிருந்தன.(59) காமத்திலிருந்து பிறப்பதாகக் கல்விமான்களால் சொல்லப்படும் நான்கு வகைத் தீமைகள், வேட்டை, சூது, குடி, பாலியல் ஈடுபாடு ஆகியன எனத் தான்தோன்றியின் {பிரம்மனின்} அந்தப் படைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.(60) கடுஞ்சொல், கொடூரத்தனம், கடும் தண்டனை, உடலுக்கு வலியை அளிப்பது, தற்கொலை, தன் நோக்கங்களையே தடுப்பது ஆகிய இந்த ஆறு வகைக் குற்றங்களும் கோபத்தில் இருந்து பிறக்கின்றன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது[6].(61) பல்வேறு வகை இயந்திரங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் அதில் விளக்கப்பட்டிருந்தன. பகைவரின் ஆட்சிப்பகுதிகளைப் பாழாக்குதல், எதிரிகளைத் தாக்குவது, எளிதில் அடையாளங்காணக்கூடிய நிலக்குறியீடுகளை {நிலத்தின் சின்னங்களை} அழித்தல் மற்றும் நீக்கல், பிற குறிப்புகள்,(62) (எதிரிகளும், எதிரிகளின் குடிமக்களும் நிழலில் புத்துணர்ச்சி பெறாமல் இருக்க) பெரிய மரங்களை வெட்டி வீழ்த்துவது, கோட்டைகளை முற்றுகையிடுவது, உழவைக் கண்காணிப்பது, பிற பயனுள்ள செயல்பாடுகள், (துருப்புகளுக்குத்) தேவையான பொருட்கள், ஆடைகள் மற்றும் துணிகளை) சேகரிப்பது, அவற்றை உற்பத்தி செய்யும் சிறந்த வழிமுறைகள் ஆகியன அனைத்தும் அதில் விளக்கப்பட்டிருந்தன.(63)
ஓ! யுதிஷ்டிரா, பனவங்கள், ஆனகங்கள், சங்குகள், பேரிகைகள் ஆகியவற்றின் தன்மைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவது, (ரத்தினங்கள், விலங்குகள், நிலங்கள், ஆடைகள், பெண் பணியாட்கள், தங்கம் ஆகிய) ஆறுவகைப் பொருட்கள், (ஒருவன் தனக்காக) அவற்றை அடையக்கூடிய வழிமுறைகள், (எதிரிக்குத் தீங்கிழைப்பதற்காக) அவற்றை அழிப்பது,(64) புதிதாக அடையப்பட்ட ஆட்சிப்பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துவது, நல்லோரைக் கௌரவிப்பது, கல்விமான்களுடன் நட்பை வளர்ப்பது, கொடைகள் மற்றும் ஹோமம் போன்ற அறச்சடங்குகளின் விதிகளில் ஞானம் கொள்வது,(65) மங்கலப் பொருட்களைத் தீண்டல், உடலைக் கவனித்தல் மற்றும் அலங்காரம், உணவைச் சமைப்பது மற்றும் பயன்படுத்தும் பாங்கு, கடவுள்பற்றுடன் கூடிய நடத்தை,(66) ஒரு வழியைப் பின்பற்றிச் செழிப்பை அடைவது, பேச்சில் உண்மை, பேச்சில் இனிமை, விழாக்காலங்கள் மற்றும் சமூக அவைகளில் செய்யப்பட வேண்டிய செயல்கள், வீட்டில் செய்யப்பட வேண்டிய செயல்கள்,(67) சந்திக்கும் இடங்கள் அனைத்திலும் நபர்கள் செய்யக்கூடிய வெளிப்படையான, மறைமுகமான செயல்கள், மனிதர்களின் நடத்தையை நிலையாகக் கண்காணிப்பது, பிராமணத் தண்டனைக்கு எதிர்ப்பு, நியாயமான தண்டனைகளைக் கொடுப்பது, உறவுமுறை மற்றும் தகுதியின் அடிப்படையில் சார்ந்திருப்போருக்குக் கௌரவங்களை அளிப்பது,(68,69) குடிமக்களைப் பாதுகாப்பது, நாட்டை விரிவாக்கும் வழிமுறைகள், பனிரெண்டு மன்னர்களுக்கு மத்தியில் வாழும் ஒரு மன்னன், நால்வகை எதிரிகள், நால்வகைக் கூட்டாளிகள் மற்றும் நால்வகை நடுநிலைவாதிகள் ஆகியவர்களைப் பொறுத்தவரை எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற ஆலோசனைகள்,(70) பாதுகாப்பு, பயிற்சி, உடல் தேர்ச்சி, குறிப்பிட்ட நாடுகளின் நடைமுறைகள், இனங்கள் மற்றும் குடும்பங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் ஆகியவற்றைக் குறித்த எழுபத்திரண்டு {72} அறச் செயல்கள்[7] ஆகியனவும் அந்தப் படைப்பில் முறையாக விளக்கப்பட்டிருந்தன.(71)ஓ! அபரிமிதமான கொடைகளை அளிப்பவனே {யுதிஷ்டிரனே}, அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவையும் அதில் விளக்கப்பட்டிருந்தது. பல்வேறு ஈட்டல் முறைகள், பல்வேறு வகைச் செல்வங்களின் மீது விருப்பம்,(72) உழவின் முறைகள், வருவாய்க்கான முக்கிய ஊற்றாக அமையும் பிற செயல்முறைகள், மாயைகளை உண்டாக்கவும், பயன்படுத்தவும் கூடிய பல்வேறு வழிமுறைகள், {ஏரி, குளம் போன்று} தேங்கும் நீரைக் கெடுக்கும் வழிமுறைகள் ஆகியனவும் அதில் விதிக்கப்பட்டிருந்தன.(73) ஓ! மனிதர்களில் புலியே, அறம், நேர்மை ஆகிய பாதைகளிலிருந்து மனிதர்கள் வழுவாமல் இருக்கும் வழிமுறைகள் அனைத்தும் அதில் விரிவாக விளக்கப்பட்டிருந்தன.(74)
மிக உயர்ந்த அந்த ஆய்வைத் தொகுத்த பிறகு, அந்தத் தெய்வீகத் தலைவன் {பிரம்மன்}, இந்திரனின் தலைமையிலான தேவர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(75) “உலகின் நன்மைக்காகவும் (அறம், பொருள், இன்பம் ஆகிய) மூன்று திரட்டுகளை நிறுவுவதற்காகவும், இந்த அறிவியலை {சாத்திரத்தை} அழகிய உரைநடையில் தொகுத்திருக்கிறேன்.(76) தண்டனையின் துணையால் இந்த அறிவியல் உலகத்தைப் பாதுகாக்கும். இந்த அறிவியலானது, வெகுமதிகள் மற்றும் தண்டனைகளைச் சொல்லி மனிதர்களுக்கு மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும்.(77) மனிதர்கள் தண்டனையின் மூலமே (தங்கள் இருப்புக்கான பொருட்களை அடைய) வழிநடத்தப்படுகிறார்கள், அல்லது வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், தண்டனையே அனைத்துக்கும் வழிவகுக்கிறது, அல்லது அனைத்தையும் ஆட்சி செய்கிறது, எனவே, இந்த அறிவியலானது தண்டநீதி (தண்டனையின் அறிவியல்) என மூவுலகங்களிலும் அறியப்படும்.(78) ஆறு திரட்டுகளின்[8] பண்புகள் அனைத்தையும் விவரிக்கும் இந்த அறிவியல், உயர் ஆன்ம மனிதர்களால் எப்போதும் பெரிதாக மதிக்கப்படும். அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு ஆகியவை அனைத்தும் இதில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன” {என்றான் பிரம்மன்}.(79)
வேனனின் மகன் பிருது! – சாந்திபர்வம் பகுதி – 59ஆ-சிவன், இந்திரன், பிருஹஸ்பதி மற்றும் சுக்கிராச்சாரியரால் சுருக்கப்பட்ட பிரம்மனின் தண்டநீதி; உலகில் உள்ள மனிதர்களை ஆள ஒரு மன்னனைக் கொடுக்கும்படி விஷ்ணுவிடம் வேண்டிய தேவர்கள்; விரஜஸை உண்டாக்கிய விஷ்ணு; அதிபலனுக்கும், மிருத்யுவின் மகளான சுநீதைக்கும் பிறந்த வேனன்; வேனனைக் கொன்ற முனிவர்கள்; வேனனின் தொடையில் இருந்து உண்டான நிஷாதர்களும், மிலேச்சர்களும்; வேனனின் வலக்கரத்தில் இருந்து உண்டான பிருது; பூமியைச் சமமாக்கிய மன்னன் பிருது; ராஜன், க்ஷத்திரியன் ஆகிய சொற்கள் உண்டானதன் வரலாறு; பிருதுவின் பெருமை; தேவர்களுக்கு நிகராக மன்னன் மதிக்கப்படுவதற்கான புதிராதிக்கம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, “அதன் {பிரம்மன் தண்ட நீதியைத் தொகுத்த} பிறகு, தெய்வீகமானவனும், அகன்ற கண்களைக் கொண்டவனும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும், அருள் அனைத்தின் இருப்பிடமும், உமையின் தலைவனுமான சிவன், அதை முதலில் கற்று, தேர்ச்சி பெற்றான்.(80) இருப்பினும், அந்தத் தெய்வீக சிவன், படிப்படியாகக் குறைந்து வந்த மனிதனின் வாழ்நாளைக் கருத்தில் கொண்டு, பிரம்மனால் தொகுக்கப்பட்டதும், முக்கியமான கருத்துகளைக் கொண்டதுமான அந்த அறிவியலைச் சுருக்கினான்[1].(81) பத்தாயிரம் {10,000} பாடங்களைக் கொண்ட வைசாலாக்ஷம் என்றழைக்கப்பட்ட அந்தச் சுருக்கம், பிரம்மனுக்கு அர்ப்பணிப்புள்ளவனும், பெரும் தவத்தகுதி கொண்டவனுமான இந்திரனால் பெறப்பட்டது.(82) அந்தத் தெய்வீக இந்திரனும் அந்த ஆய்வை ஐயாயிரம் {5,000} பாடங்களைக் கொண்டதாகச் சுருக்கி, அதைப் பாஹுதந்தகம் என்று அழைத்தான்.(83) அதன்பிறகு பலமிக்கவரும், நுண்ணறிவு கொண்டவருமான {தேவகுரு} பிருஹஸ்பதி, அந்த ஆய்வைக் கொண்ட படைப்பை மூவாயிரம் {3,000} பாடங்கள் கொண்டதாகச் சுருக்கி, அதைப் பார்ஹஸ்பத்தியம் என்றழைத்தார்.(84) அடுத்ததாக, யோகத்தின் ஆசானும், பெரும் புகழைக் கொண்டவரும், அளவிலா ஞானம் கொண்டவருமான {அசுர குரு} கவி {சுக்கிரன்}, அந்தப் படைப்பை ஆயிரம் {1000} பாடங்களைக் கொண்டதாக மேலும் சுருக்கினார்.(85) மனிதனின் வாழ்நாள் காலத்தின் குறைவையும், (அனைத்திடமும் காணப்படும்) பொதுவான குறைவையும் கருத்தில் கொண்டே அந்தப் பெரும் முனிவர்கள் அந்த அறிவியலை இவ்வாறு சுருக்கினர்.(86)
பிறகு தேவர்கள், உயிரினங்களின் தலைவனான விஷ்ணுவை அணுகி, அவனிடம், “ஓ! தேவா, உலகின் மனிதர்களுக்கு மத்தியில் உள்ளோர் அனைவரிலும் எவன் மேன்மையடையத்தக்கவனோ {எவன் எஞ்சியிருப்போரனைவரையும் ஆள்வானோ} அவனைக் குறிப்பிடுவீராக” என்றனர்.(87) பலமிக்கவனும், தெய்வீகமானவனுமான நாராயணன், சிறிது நேரம் சிந்தித்து, அதிகக் காந்தியுள்ள விரஜஸ் என்ற பெயருடைய ஒரு மகனைத் தன் சக்தியின் மூலம் உண்டாக்கினான்.(88) எனினும், உயர்ந்த அருளைக் கொண்ட அந்த விரஜஸ் பூமியின் அரசுரிமையை விரும்பவில்லை. ஓ! பாண்டுவின் மகனே, அவனது மனம் துறவு வாழ்வையே நாடியது.(89) விரஜசுக்கு கீர்த்திமான என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். அவனும் {கீர்த்திமானனும்} கூட மகிழ்ச்சியையும், இன்பத்தையும் துறந்தான். கீர்த்திமானுக்குக் கர்த்தமன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். அந்தக் கர்த்தமனும் கடும் தவங்களைப் பயின்றான்.(90) உயிரினங்களின் தலைவனான கர்த்தமன், அனங்கன் என்ற பெயருடைய ஒரு மகனைப் பெற்றான். பக்தியோடு கூடிய நடத்தை கொண்டவனும், தண்ட அறிவியலை முற்றாக அறிந்தவனுமான அந்த அனங்கனே உயிரினங்களின் பாதுகாவலனானான்.(91)
அனங்கன், அரச கொள்கைகளை நன்கறிந்த அதிபலன் என்ற பெயருடைய ஒரு மகனைப் பெற்றான். அவன் தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு ஒரு பரந்த பேரரசை அடைந்து, தன் ஆசைகளுக்கு அடிமையானவன் ஆனான்.(92) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மிருத்யுவுக்கு {மிருத்யு தேவிக்கு}, தன் மனத்தில் பிறந்த ஒரு மகள் இருந்தாள். சுநீதை என்ற பெயரிடப்பட்டு, மூவுலகங்களில் கொண்டாடப்பட்ட அவள், (அதிபலனை மணந்து கொண்டு) வேனன் என்ற பெயருடைய ஒரு மகனை ஈன்றெடுத்தாள்.(93) கோபத்திற்கும், தீய செயல்களுக்கும் அடிமையாக இருந்த வேனன், அனைத்து உயிரினங்களிடமும் அநீதியாக நடந்து கொண்டான். பிரம்மத்தை ஓதுபவர்களான முனிவர்கள், மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட குசப்புற்களால் {அவற்றையே ஆயுதமாகக் கொண்டு} அவனைக் {வேனனைக்} கொன்றனர்.(94) மந்திரங்களை ஓதிக்கொண்டிருந்த அம்முனிவர்கள் வேனனின் வலது தொடையைத் துளைத்தனர். அப்போது அந்தத் தொடையில் இருந்து, இரத்தச் சிவப்பான கண்களுக்கும், கருப்பு முடியும் கொண்டவனும், தீயால் கருகிய பந்தத்திற்கு ஒப்பானவனுமான ஒரு குள்ளமான மனிதன் பூமியில் தோன்றினான். அந்தப் பிரம்மத்தை ஓதுபவர்கள் அவனிடம், “இங்கே நிஷீத {அமர்வாயாக}” என்றனர்.(95,96) மலைகளையும், காடுகளையும் தங்கள் வசிப்பிடமாகக் கொண்ட தீய இனமான நிஷாதர்களும், விந்திய மலைகளில் வசிக்கும் மிலேச்சர்கள் என்றழைக்கப்படும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பிறரும் அவனில் இருந்தே உண்டாகினர்.(97)
பிறகு அந்தப் பெரும் முனிவர்கள், வேனனின் வலக்கரத்தைத் துளைத்தனர். அதிலிருந்து இரண்டாவது இந்திரனின் வடிவிலான ஒரு மனிதன் தோன்றினான்.(98) கவசம், வாள்கள், விற்கள், கணைகள் ஆகியவற்றைத் தரித்தவனும், ஆயுத அறிவியலை நன்கறிந்தவனுமான அவன், வேதங்களையும், அதன் அங்கங்களையும் முற்றாக அறிந்தவனாக இருந்தான்.(99) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தண்டனை அறிவியலுக்கான விதிகள் அனைத்தும் (தங்கள் உடல் கொண்ட வடிவங்களில்) அந்தச் சிறந்த மனிதனிடம் வந்தன. பிறகு, அந்த வேனனின் மகன், அந்தப் பெரும் முனிவர்களிடம் கூப்பிய கரங்களுடன்,(100) “மிகக் கூரியதும், அறம் நோற்க உதவுவதுமான அறிவை நான் அடைந்திருக்கிறேன். அதைக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு விரிவாகச் சொல்வீராக. எந்தப் பயனுள்ள பணியை நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ, அஃதை எந்தத் தயக்கமும் இல்லாமல் நான் நிறைவேற்றுவேன்” என்றான்.(102)
இவ்வாறு அவனால் சொல்லப்பட்டதும், அங்கிருந்த தேவர்களும், முனிவர்களும் அவனிடம், “எவற்றில் அறம் வசிக்கிறதோ அந்தப்பணிகள் அனைத்தையும் அச்சமில்லாமல் நிறைவேற்றுவாயாக.(103) உனக்கு அன்பானதையும், அல்லாததையும் அலட்சியம் செய்து, வேறுபாடில்லாத கண்களுடன் அனைத்து உயிரனங்களையும் காண்பாயாக. காமம், கோபம், பேராசை, கௌரவம் ஆகியவற்றைத் தொலைவாக வீசி,(104) அறவிதிகளையே எப்போதும் நோற்று, கடமையின் பாதையிலிருந்து வழுவும் எந்த மனிதனையும் உன் கரங்களாலேயே தண்டிப்பாயாக.(105) வேதங்களால் பூமியில் ஆழப் பதிக்கப்பட்ட அறத்தை, உன் மனம், சொல், செயல் ஆகியவற்றில் எப்போதும் கட்டிக்காப்பதாக உறுதியேற்பாயாக.(106) மேலும், வேதங்களால் விதிக்கப்பட்ட கடமைகளை, தண்டனை அறிவியலின் துணையோடு அச்சமில்லமால் கட்டிக்காப்பதாகவும், உறுதியற்ற செயலை ஒருபோதும் செய்வதில்லை எனவும் உறுதியேற்பாயாக.(107) ஓ! பலமிக்கவனே, பிராமணர்கள் தண்டனையிலிருந்து விலக்கப்பட்டவர்கள் என்பதை அறிவாயாக, வர்ணக்கலப்பு ஏற்படாமல் உலகைப் பாதுகாப்பதாகவும் உறுதியேற்பாயாக” என்றனர்.(108)
இவ்வாறு சொல்லப்பட்ட வேனன் மகன், முனிவர்களின் தலைமையிலான தேவர்களிடம், “மனிதர்களில் காளையரான அந்த உயர்ந்த அருளைக் கொண்ட பிராமணர்கள் என்னால் எப்போதும் வழிபடப்படுவார்கள்” என்று மறுமொழி கூறினான்.(109) அப்போது பிரம்மத்தை ஓதுபவர்கள் அவனிடம், “அப்படியே ஆகட்டும்” என்றனர். பிறகு, பிரம்மத்தின் பரந்த கொள்ளிடமான சுக்கிரன் அவனது புரோகிதரானார்.(110) வாலகில்யர்கள் அவனது அமைச்சர்களானார்கள், சாரஸ்வதர்கள் அவனது தோழர்களானார்கள். பெரிய சிறப்புமிக்க முனிவர் கர்க்கர், அவனது சோதிடரானார்.(111) தற்போது மனிதர்களுக்கு மத்தியில் இருக்கும் சுருதிகளின் உயர்ந்த அறிவிப்பில் {வேனனின் மகனான} அந்தப் பிருதுவே, விஷ்ணுவின் எட்டாம் வடிவமாக இருக்கிறான்.
அதற்குச் சற்று முன், சூதன், மாகதன் என்ற பெயர் கொண்ட இரு மனிதர்கள் தோன்றினர். அவர்கள், அவனது பாணர்களாகவும், வந்திகளாகவும அமைந்தனர்.(112) பேராற்றலைக் கொண்டவனும், வேனனின் அரசமகனுமான பிருது மனம் நிறைந்தவனாக, கடற்கரையருகே இருக்கும் {அநூபம் என்ற நாட்டை} நிலத்தைச் சூதனுக்கும், அப்போதிலிருந்து மகதம் என்றறியப்படும் நாட்டை மாகதனுக்கும் அளித்தான்.(113) முன்பு பூமியின் பரப்பானது சமமற்றதாக இருந்ததாக நாம் கேள்விப்படுகிறோம். இந்தப் பிருதுவே பூமியின் பரப்பை சமமாக்கியவனாவான்.(114) ஒவ்வொரு மன்வந்தரத்தின் போதும் பூமி சமமற்றதாக ஆனது. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த வேனன் மகன் {பிருது}, சுற்றிலும் கிடந்த பாறைத்திரள்களையும், பாறைகளையும்,(115) தன் வில்லின் நுனியால் அகற்றினான். இந்த வழிமுறையால் மலைகள் பெரிதாகின.
பிறகு, விஷ்ணு, இந்திரனுடன் கூடிய தேவர்கள்,(116) முனிவர்கள், லோகபாலர்கள், பிராமணர்கள் ஆகியோர் பிருதுவுக்கு (உலகின் மன்னனாக) முடிசூட்ட ஒன்றுதிரண்டனர். ஓ! பாண்டுவின் மகனே, தன் உடல்வடிவத்துடன் கூடிய பூமாதேவி, ரத்தினங்கள் மற்றும் தங்கக் கொடைகளுடன் அவனிடம் வந்தாள்.(117) ஓ! யுதிஷ்டிரா, ஆறுகளின் தலைவனான பெருங்கடல், மலைகளின் மன்னனான இமயம், சக்ரன் ஆகியோர் வற்றாத செல்வத்தை அவனுக்கு அளித்தனர்.(118) மனிதர்களின் தோள்களில் சுமக்கப்பட்டவனும், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களின் தலைவனுமான தெய்வீகக் குபேரன்,(119) அறம், பொருள் மற்றும் இன்பத்திற்கான தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்குச் செல்வத்தை அவனுக்கு அளித்தான். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, வேனனின் மகன் {பிருது} நினைத்தவுடன், குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவையும் மனிதர்களும் கோடிக்கணக்கில் உயிர்பெற்று வந்தனர். அந்தக் காலத்தில் (பூமியில்) முதுமையோ, பஞ்சமோ, பேரிடரோ, நோயோ ஏதுமில்லாதிருந்தது.(120, 121) அந்த மன்னன் வழங்கிய பாதுகாப்பின் விளைவாக, ஊர்வன, கள்வர்கள் மற்றும் வேறு எந்த ஆதாரத்திடம் இருந்தும் எவரும் எந்த அச்சத்தையும் அடையவில்லை.(122)
அவன் {பிருது} கடலுக்குள் சென்றால், அதன் நீர் உறுதியடைந்து கல்லானது. மலைகள் அவனுக்கு வழிவிட்டன, அவனது கொடிமரமானது எங்கும் ஒருபோதும் தடுக்கப்படவில்லை.(123) பசுவில் இருந்து பாலைக் கறப்பவன் போல அவன், யக்ஷர்கள், ராட்சசர்கள், நாகர்கள் மற்றும் பிற உயிரினங்களின் உணவுக்காகப் பூமியில் இருந்து பதினேழு வகைப் பயிர்களையும்[2] கறந்தெடுத்தான்.(124) அந்த உயர் ஆன்ம மன்னன் {பிருது}, அனைத்து உயிரினங்களையும், அறமே அனைத்திலும் உயர்ந்ததென உணரவைத்தான். மேலும் அவன் {பிருது} மக்கள் அனைவரையும் மனம் நிறையச் செய்தான் என்பதால் அவன் ராஜன் என்று அழைக்கப்பட்டான்[3].(125) மேலும் அவன் {பிருது} பிராமணர்களின் காயங்களை ஆற்றியதால் அவன் க்ஷத்திரியன்[4] என்ற பெயரையும் ஈட்டினான். (அவனது ஆட்சிக்காலத்தில்) பூமியானவள் அறப்பயிற்சிக்காகக் கொண்டாடப்பட்டதால், அவள் பிருத்வி என்று பலரால் அழைக்கப்பட்டாள்[5].(126) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அழிவில்லா விஷ்ணு, “ஓ! மன்னா {பிருதுவே}, எவனால் உன்னை விஞ்ச முடியாது” என்று அவனிடம் சொல்லி அவனது சக்தியை உறுதி செய்தான்.(127) பிறகு அந்தத் தெய்வீக விஷ்ணு அந்த ஏகாதிபதியின் தவத்தின் விளைவாக அவனது உடலுக்குள் நுழைந்தான். இந்தக் காரணத்தினால், இந்த மொத்த அண்டத்திலும், மனித தேவர்களின் எண்ணிக்கையில் ஒருவனாக[6] பிருதுவுக்கு தெய்வீக வழிபாடு செய்யப்பட்டது.(128)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உன் நாடு, தண்டனை அறிவியலின் {தண்ட நீதியின்} துணை கொண்டே எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும். உன் ஒற்றர்களின் நடமாட்டம் மூலம் கவனமாகக் கண்காணிப்புச் செய்து, எவனாலும் உன் நாட்டிற்குத் தீங்கு செய்ய முடியாத வகையில் நீ அதைப் பாதுகாக்க வேண்டும்.(129) ஓ! மன்னா, அனைத்து நற்செயல்களும், (அந்த ஏகாதிபதியின்) நன்மைக்கே வழிவகுக்கும். ஒரு மன்னனின் நடத்தையானது, அவனது சொந்த நுண்ணறிவின் மூலமும், வாய்ப்புகள் மற்றும் எதிர்வரும் வழிமுறைகளின் மூலமும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.(130) ஓர் ஏகாதிபதியின் தெய்வீகத்தன்மையையன்றி வேறு எந்தக் காரணத்தின் விளைவால் ஒரு பெருங்கூட்டம் அவனுக்கு அடிபணிந்து நடக்கக்கூடும். அந்நேரத்தில் விஷ்ணுவின் புருவத்தில் இருந்து ஒரு தங்கத் தாமரை தோன்றியது.(131) அந்தத் தங்கத் தாமரையில் ஸ்ரீதேவி பிறந்தாள். அவள், பெரும் நுண்ணறிவு கொண்ட தர்மத்தின் துணைவியானாள். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, தர்மம் அந்த ஸ்ரீயிடம் அர்த்தத்தை {பொருளை} ஈன்றது.(132) தர்மம், அர்த்தம் மற்றும் ஸ்ரீ ஆகிய மூன்றும் அரசில் நிறுவப்பட்டன[7]. தன் தகுதி {புண்ணியம்} தீர்ந்த ஒருவன், சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு விழுந்து,(133) தண்டனை அறிவியல் அறிந்த ஒரு மன்னனாகப் பிறக்கிறான். அத்தகு மனிதன் பெருமையை அடைந்தவனாக உண்மையில் பூமியில் விஷ்ணுவின் பாகமாகவே {அவதாரமாகவே} ஆகிறான். பெரும் நுண்ணறிவைக் கொள்ளும் அவன், பிறரின் மேல் ஆதிக்கத்தை அடைகிறான்.(134) தேவர்களால் நியமிக்கப்பட்டவனை எவனாலும் விஞ்சமுடியாது. இதன் காரணமாகவே அனைவரும் அவனுக்குக் கீழ்ப்படிந்து செயல்படுகின்றனர், இதன் காரணமாகவே உலகத்தால் அவனுக்குக் கட்டளையிடமுடியாது.(135)ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நற்செயல்கள் நன்மைக்கே வழிகோலுகின்றன. இதன் காரணமாகவே, இந்த உலகைச் சார்ந்தவனாக இருப்பினும், தங்களைப் போன்ற அங்கங்களைக் கொண்டவனாகவே இருப்பினும், அவனது வார்த்தைகளுக்கு மக்கள்கூட்டம் கீழ்ப்படிந்து நடக்கிறது.(136) பிருதுவின் இனிய முகத்தைக் கண்ட எவனும் உடனே அவனுக்குக் கீழ்ப்படிந்தவனானான். அதுமுதல் அவன் {பிருது} தன்னை அழகானவனாகவும், செல்வம் படைத்தவனாகவும், உயர்ந்த அருளைக் கொண்டவனாகவும் கருதத் தொடங்கினான்[8].(137) அவனது செங்கோலின் வலிமையின் விளைவால், அறம் மற்றும் நீதியைப் பயிலும் நடைமுறை பூமியில் தெளிவாகக் காணப்பட்டது. அதன் காரணத்தாலேயே பூமி அறத்தால் கவிந்து பரவியிருந்தது.(138) ஓ! யுதிஷ்டிரா, இவ்வாறே, கடந்த கால நிகழ்வுகளின் வரலாறுகள், பெரும் முனிவர்களின் தோற்றம், புனித நீர்நிலைகள், கோள்கள், விண்மீன்கள், நட்சத்திரக்கூட்டங்கள், நால்வகை வாழ்வினரின் கடமைகள், நால்வகை ஹோமங்கள், நால்வகை மனிதர்களின் பண்புகள், கல்வியின் நால்வகைக் கிளைகள் ஆகியவற்றைக் குறித்த அனைத்தும் (பெரும்பாட்டனின் {பிரம்மனின்}) அந்தப் படைப்பில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தன.(139,140)
ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, பூமியில் உள்ள பொருட்கள் யாவும் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} அந்த ஆய்வில் சொல்லப்பட்டிருந்தன. வரலாறுகள், வேதங்கள், நியாய அறிவியல், தவங்கள், அறிவு, அனைத்துயிர்களுக்கும் தீங்கிழையாமை, உண்மை, பொய்மை, உயர்ந்த அறநெறி ஆகியவை அனைத்தும் அதில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தன.(141,142) வயதில் முதிர்ந்தோரை வணங்குதல், கொடைகள், தூய நடத்தை, உழைப்புக்கு ஆயத்தமாக இருத்தல், அனைத்து உயிரினங்களிடமும் கருணை ஆகியவையும் முழுமையாக அதில் விளக்கப்பட்டிருந்தன.(143) இஃதில் எந்த ஐயமுமில்லை. ஓ! ஏகாதிபதி, அந்தக் காலத்திலிருந்தே, கல்விமான்கள், மன்னனுக்கும், தேவனுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்று சொல்லத் தொடங்கினர்.(144) நான் இப்போது மன்னர்களின் பெருமை குறித்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! பாரதர்களின் தலைவா, நான் அடுத்ததாக என்ன உரைக்க வேண்டும்?” என்று கேட்டார் {பீஷ்மர்}”.(145)
சதுர்வர்ணதர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 60-பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் ஆகிய நான்கு வர்ணங்களின் தனிப்பட்ட கடமைகளைப் பட்டியலிட்ட பீஷ்மர்; பிராமணர்களின் பெருமையையும், வேள்விகளின் பயனையும் சொல்லி, வேள்விகள் அனைவரும் செய்யத்தக்கதே என்று சொன்னது…
வைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} சொன்னார், “இதன்பிறகு யுதிஷ்டிரன் தன் கரங்களைக் கூப்பித் தன் பாட்டனான கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} வணங்கி, குவிந்த கவனத்துடன் மீண்டும்,(1) “நால்வகை மனிதர்களின் பொதுவான கடமைகள் எவை? ஒவ்வொரு வகையின் குறிப்பிட்ட கடமைகள் எனென்ன? எவ்வகை மனிதரால் எவ்வகை வாழ்வு முறை நோற்கப்பட வேண்டும்? மன்னர்களின் கடமைகள் எனக் குறிப்பாகச் சொல்லப்படுபவை எவை?(2) எந்த வழிமுறைகளால் ஒரு நாடு வளர்ச்சியை அடையும்? மன்னன் வளர்ச்சியடைவதற்கான வழிமுறைகள் என்ன? ஓ! பாரதக் குலத்தின் காளையே {பீஷ்மரே}, மன்னனின் குடிமக்களும், அவனது பணியாட்களும் வளர்ச்சியடைவது எவ்வாறு?(3) என்ன வகைக் கருவூலங்கள், தண்டனைகள், கோட்டைகள், கூட்டாளிகள், அமைச்சர்கள், புரோகிதர்களை ஒரு மன்னன் தவிர்க்க வேண்டும்?[1](4) எந்தெந்த வகைத் துயரம் மற்றும் ஆபத்துகளில் மன்னன் யாரை நம்ப வேண்டும்? எந்தத் தீமைகளில் இருந்து மன்னன் தன்னை உறுதியாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? ஓ! பாட்டா, இவையனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)(ரித்விஜர் குறிப்பிட்ட நிகழ்வுகளில் மட்டும் ஈடுபடுவார், புரோகிதரோ, நிலையான, நிரந்தரமான தொண்டுகளில் ஈடுபடுவார்)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பெருமையுள்ள தர்மத்தையும், பிரம்மமான கிருஷ்ணனையும் வணங்குகிறேன். (இங்கே கூடியிருக்கும்) பிராமணர்களையும் வணங்கி, அழிவில்லா நித்திய கடமைகளை நான் உரைக்கப் போகிறேன்.(6) கோபத்தை அடக்குதல், பேச்சில் உண்மை, நீதி பேணல், மன்னிக்கும் தன்மை, மணந்து கொண்ட மனைவியிடம் பிள்ளைகளைப் பெறுதல், நடத்தையில் தூய்மை, சச்சரவு தவிர்த்தல், எளிமை, சார்ந்தோரைக் கட்டிக்காத்தல் ஆகிய இந்த ஒன்பது கடமைகளும் நால்வகையினர் அனைவருக்கும் (சமமாகவே) பொருந்தும்.(7)
எனினும், பிராமணர்களுக்கு மட்டுமே உரிய தனிப்பட்ட கடமைகளைக் குறித்து இப்போது நான் உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! மன்னா, தற்கட்டுப்பாடே பிராமணர்களின் முதற்கடமையாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. வேதம் கற்பது, பொறுமையுடன் தவம் செய்வது ஆகியவையும் அவர்களது கடமைகளே. இவை இரண்டையும் செய்தால் அவர்களது செயல்பாடுகள் அனைத்தும் நிறைவடையும்.(8) எந்த முறையற்ற செயலையும் செய்யாமல் தன் கடமைகளை நோற்கும்போது, அந்த அறிவு கொண்ட அமைதியான பிராமணனைத் தேடி செல்வம் வந்தால்,(9) அவன் மணம்புரிந்து கொண்டு, பிள்ளைகளைப் பெற முயன்று, ஈகையும் பயின்று, வேள்விகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு அடையப்படும் செல்வமானது, (தகுந்த மனிதர்களுக்கும், உறவினர்களுக்கும்) பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.(10) அவனது வேத கல்வியின் மூலம், (அந்தப் பிராமணனுக்கு விதிக்கப்பட்ட) அறச் செயல்கள் அனைத்தும் நிறைவடைகிறது. வேறெதையும் அவன் அடைகிறானோ, இல்லையோ, அவன் வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்தால், அவன் பிராமணன் என்றோ, அனைத்துயிர்களுக்கும் நண்பன் என்றோ அறியப்படுவான்.(11)
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஒரு க்ஷத்திரியனின் கடமைகள் என்னென்ன என்பதையும் நான் உனக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு க்ஷத்திரியன் கொடுக்கவே வேண்டும், இரக்கக் கூடாது. தன் வேள்விகளையே அவன் செய்ய வேண்டும், அடுத்தவரின் வேள்விகளில் ஒரு புரோகிதராகப் பொறுப்பேற்று அவனே அவ்வேள்விகளைச் செய்யக் கூடாது.(12) அவன் {க்ஷத்திரியன்} (வேதங்களைப்) பயிற்றுவிக்கக் கூடாது, (ஒரு பிராமண ஆசானின் மூலம்) அவற்றைப் பயிலவே வேண்டும். அவன் மக்களைப் பாதுகாக்க வேண்டும். கள்வர்களையும், தீய மக்களையும் அழிப்பதில் எப்போதும் முயன்று, போரில் தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.(13) வேதங்களில் அறிவைக் கொண்டவர்களும், போரில் வெற்றியை ஈட்டுபவர்களும், பெரும் வேள்விகளைச் செய்பவர்களுமான க்ஷத்திரிய ஆட்சியாளர்கள், தங்கள் தகுதியின் {புண்ணியத்தின்} மூலம் மறுமையில் அருள் உலகங்கள் பலவற்றைப் பெறுவதில் முதன்மையானோராகத் திகழ்வார்கள்.(14) பழைய சாத்திரங்களை அறிந்த மனிதர்கள், போரில் காயமேற்படாமல் திரும்பும் க்ஷத்திரியனை மெச்சுவதில்லை.(15) அஃது இழிந்த க்ஷத்திரியனின் நடத்தையாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கள்வர்களை ஒடுக்குதலைவிட உயர்ந்த கடமையேதும் அவனுக்கு இல்லை.(16) கொடைகள், கல்வி மற்றும் வேள்விகள் ஆகியன மன்னர்களுக்குச் செழிப்பைக் கொண்டு வருகின்றன. எனவே, அறத்தகுதியை அடையவிரும்பும் ஒரு மன்னன் போரில் ஈடுபட வேண்டும்[2].(17) தன் குடிமக்கள் அனைவரையும் தங்கள் தங்கள் கடமைகளை நோற்கும்படி நிறுவும் ஒரு மன்னன், அவர்கள் அனைவரையும், அறவிதிகளுக்கு உட்பட்டே அனைத்தையும் செய்ய வைக்க வேண்டும்.(18) அவன் {மன்னன்} வேறேதும் செயலைச் செய்கிறானோ இல்லையோ, தன் குடிமக்களை மட்டும் பாதுகாத்தாலே அவன் தன் அறச் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றியதாகக் கருதப்பட்டு, க்ஷத்திரியன் என்றும், மனிதர்களில் முதன்மையானவன் என்றும் அழைக்கப்படுவான்.(10)ஓ! யுதிஷ்டிரா, வைசியர்களுக்கான நித்திய கடமைகளை இப்போது நான் உனக்குச் சொல்லப் போகிறேன். ஒரு வைசியன், கொடைகள் அளிப்பது, வேதகல்வி கற்பது, வேள்விகள் செய்வது, நியாயமான வழிமுறைகளில் செல்வத்தை ஈட்டுவது ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.(20) ஒரு தந்தை தம் மகன்களைப் பாதுகாப்பதைப் போல, அவன், (தான் வளர்க்கும்) விலங்குகள் அனைத்தையும் உரிய கவனத்துடன் வளர்த்துப் பாதுகாக்க வேண்டும். வேறெதையும் அவன் செய்வது, அவனுக்கு முறையற்றதாகக் கருதப்படும்.(21) (வீட்டில் வளர்க்கும்) விலங்குகளைப் பாதுகாப்பதால் அவன் பெரும் மகிழ்ச்சியை அடைவான். (வீட்டில் வளர்க்கக்கூடிய) விலங்குகளைப் படைத்த படைப்பாளன், அவற்றைப் பராமரிப்பதை வைசியனுக்கே அளித்திருக்கிறான்.(22) பிராமணனுக்கும், க்ஷத்திரியனுக்கும் அனைத்து உயிரினங்களையும் (பரமாரிப்பதை) அளித்திருக்கிறான். ஒரு வைசியனின் தொழில்கள், மற்றும் அவன் தன் வாழ்வாதாரத்திற்குத் தேவையானதை ஈட்டும் வழிமுறைகள் ஆகியவை என்னென்ன என்பதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(23) அவன் (பிறருக்காக) ஆறு பசுக்களைப் பாதுகாத்தால் {மேய்த்தால்}, தன் உழைப்பூதியமாக ஒரு பசுவின் பாலை அவன் எடுத்துக் கொள்ளலாம்; அவன் (பிறருக்காக) நூறு பசுக்களைப் பாதுகாத்தால் {மேய்த்தால்}, {வருடத்திற்கு} ஒரு ஜோடியை {ஒரு பசு மற்றும் ஒரு காளையை} அத்தகு கட்டணமாக அவன் எடுத்துக் கொள்ளலாம். அவன் {வைசியன்} பிறரின் செல்வத்தைக் கொண்டு வணிகம் செய்தால், பெறுவதில் {லாபத்தில்} ஏழில் ஒரு பங்கை {அவனுடைய பங்காக} எடுத்துக் கொள்ளலாம். கொம்புகளின் வணிகத்தில் எழும் லாபத்திலும் அவன் தன் பங்காக ஏழில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம், ஆனால், குளம்புகளின் வணிகத்தில் அவன் பதினாறில் ஒன்றை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்[3]. அவன் பிறரால் கொடுக்கப்பட்ட விதைகளைக் கொண்டு உழவில் ஈடுபட்டால், கிடைக்கும் விளைச்சலில் அவன் ஏழில் ஒரு பங்கை எடுத்துக் கொள்ளலாம். இதுவே அவனுடையே ஆண்டு உழைப்பூதியமாக இருக்க வேண்டும்.(24) கால்நடை வளர்க்கக்கூடாது என்று ஒரு வைசியன் ஒருபோதும் விரும்பக்கூடது. ஒரு வைசியன் கால்நடை வளர்க்க விரும்பினால், வேறு எவனும் அப்பணியில் ஈடுபடுத்தப்படக்கூடாது.(25)ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, சூத்திரர்களின் கடமைகள் என்ன என்பதை நான் உனக்குச் சொல்கிறேன். ஒரு சூத்திரன் மூன்று பிற வகையினருக்கும் பணியாளாக இருக்க வேண்டும் எனப் படைப்பாளன் கருதினான்.(26) இதனால், மூன்று பிற வகையினருக்கான தொண்டே ஒரு சூத்திரனின் கடமையாயிற்று. மூவகையினருக்கும் இத்தகு தொண்டில் ஈடுபடுவதால், ஒரு சூத்திரன் பெரும் மகிழ்ச்சியை அடைகிறான்.(27) அவன் மூன்று பிற வகையினரிடமும், அவர்களுடைய மூப்பின் அடிப்படையில் பணிசெய்ய வேண்டும். ஒரு சூத்திரன் ஒருபோதும் செல்வம் திரட்டக்கூடாது,(28) அவனுடைய செல்வத்தால் மற்று மூன்று மூத்த வகையினரையும் அவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக ஆக்குகிறான். இதனால் அவன் பாவத்தையே ஈட்டுவான். எனினும், மன்னனின் அனுமதியின் பேரில், அறச்செயல்கள் செய்வதற்காக ஒரு சூத்திரன் செல்வம் ஈட்டலாம்.(29) அவன் செய்ய வேண்டிய தொழிலையும், அவனது வாழ்வாதாரத்திற்குத் தேவையானதை ஈட்டவும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை இப்போது உனக்குச் சொல்கிறேன்.(30) சூத்திரர்கள் பிற (மூன்று) வகையினரால் நிச்சயம் பராமரிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.(31)
பழைய குடை, தலைப்பாகைகள், படுக்கைகள், இருக்கைகள், காலணிகள், விசிறிகள் ஆகியன சூத்திரப் பணியாட்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.(32) அணிவதற்குப் பொருந்தாத கிழிந்த ஆடைகள் யாவும் மறுபிறப்பாள வகையினரால் {மூன்று பிற வர்ணத்தாரால்} சூத்திரனுக்குக் கொடுக்கப்பட வேண்டும். அவை சூத்திரர்களின் சட்டப்படியான உடைமைகளாகும்.(33) ஒரு சூத்திரன், மூவகை மறுபிறப்பாளர்களில் எவரிடம் பணி செய்ய அணுகினாலும், அவர்கள் அவனுக்கு முறையான வேலையை அளிக்க வேண்டும் என்று அறநெறி அறிந்த மனிதர்கள் சொல்கிறார்கள்.(34) மகனில்லாத சூத்திரனுக்கு அவனுடைய தலைவனே ஈமப் பிண்டம் அளிக்க வேண்டும். அவர்களில் பலவீனமானவர்களும், முதியவர்கள் {அவர்களுடைய தலைவனால்} பராமரிக்கப்பட வேண்டும்.
ஒரு சூத்திரன், தன் தலைவனுக்கு நேர்ந்த துயரம் என்ன இயல்பில், அல்லது என்ன தன்மையில் இருந்தாலும் அவனை ஒரு போதும் கைவிடக்கூடாது.(35) தலைவன் தன் செல்வத்தை இழந்தாலும், அவன் மிகுந்த பற்றார்வத்துடன் சூத்திரப் பணியாளால் ஆதரிக்கப்பட வேண்டும்[4]. ஒரு சூத்திரன் தனக்கெனச் செல்வம் கொள்ள முடியாது. அவன் கொண்ட எதுவும் சட்டப்படி அவனுடைய தலைவனுடையதே ஆகும்.(36) வேள்வி செய்வது மூன்று பிற வகையினரின் கடமையாக விதிக்கப்பட்டிருக்கிறது. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அது சூத்திரனுக்கும் விதிக்கப்படுகிறது. எனினும், ஒரு சூத்திரன், சுவாஹா, சதா, அல்லது வேதத்தின் வேறு எந்த மந்திரத்தையும் ஓதத்தகுந்தவனல்ல.(37) இதன்காரணமாக, ஒரு சூத்திரன் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள நோன்புகளை நோற்காமல் பாகயக்ஞங்கள் என்றழைக்கப்படும் சிறு வேள்விகளில் தேவர்களை வழிபட வேண்டும். பூர்ண பாத்திரம் என்றழைக்கப்படும் கொடையே அத்தகு வேள்விகளில் தக்ஷிணையாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது[5].(38) பழங்காலத்தில் பைஜவனன் என்ற பெயர் கொண்ட ஒரு சூத்திரன் (தன் வேள்விகளில் ஒன்றில்) ஐந்திராக்னி[6] {ஐந்திராக்னம்} என்றழைக்கப்படும் விதியின்படி ஒரு நூறாயிரம் {ஒரு லட்சம்} பூர்ண பாத்திரங்கள் அடங்கிய தக்ஷிணையை அளித்தான் என நாம் கேள்விப்படுகிறோம்.(39) (ஏற்கனவே சொல்லப்பட்டபடி) ஓ! பாரதா, வேள்வி என்பது மற்ற மூன்று வகையினரைப் போலவே சூத்திரனுக்கும் விதிக்கப்படுகிறது. அனைத்து வேள்விகளிலும், அர்ப்பணிப்பே முதன்மையானதாக விதிக்கப்படுகிறது[7].(40)
அர்ப்பணிப்பே உயர்ந்த தெய்வமாகும். அது வேள்வி செய்வோர் அனைவரையும் தூய்மைப்படுத்துகிறது. மேலும் பிராமணர்களே அந்தந்த சூத்திரப் பணியாட்களுக்குத் தேவர்களில் முதன்மையானோராவர்.(41) வேள்விகளில் பல்வேறு விருப்பங்கள் கனிவதற்காக அவர்கள் {பிராமணர்கள்} தேவர்களை வழிபடுகின்றனர். மற்ற மூன்று வகையினரும் பிராமணர்களிலிருந்து உதித்தனர்[8].(42) பிராமணர்கள் தேவர்களுக்கே தேவர்களாவர். அவர்கள் எது சொன்னாலும் உனது பெரும் நன்மைக்கே சொல்வார்கள். எனவே, அனைத்து வகை வேள்விகளும், நால்வகையினர் அனைவருக்கும் இயற்கையாகவே உரித்தாகுகின்றன. விருப்பப்பட்டால் செய்யலாம் என்பது ஒருவனுக்குக் கடமையாகாது.(43) ரிக்குகள், யஜுஸ்கள், சாமன்கள் ஆகியவற்றை அறிந்த பிராமணன், ஒரு தேவனாக வழிபடப்பட வேண்டும். ரிக்குகள், யஜஸ்கள், சாமன்கள் {சாம வேதம்} ஆகியவையற்ற சூத்திரன், பிரஜாபதியைத் தன் தேவனாகக் கொள்கிறான்[9].(44) ஓ! ஐயா, ஓ! பாரதா, மனோவேள்வியானது அனைத்து வகையினருக்கும் விதிக்கப்பட்டிருக்கிறது. தேவர்களும், பிற (மேன்மையான) மனிதர்களும், சூத்திரனின் வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகளில் பங்கு பெற விரும்புவதில்லை என்பது உண்மையில்லை[10]. இதன் காரணமாகவே அர்ப்பணிப்பையே வேள்வியாகக் கொள்வது {சூத்திரர்களும் உட்பட} அனைத்து வகையினருக்கும் விதிக்கப்பட்டுள்ளது.(45)பிராமணனே தேவர்களில் முதன்மையானவன். அந்த வகையைச் சார்ந்தவர்கள் மற்ற வகையினரின் வேள்விகளைச் செய்யக்கூடாது என்பது உண்மையில்லை. விதானம் என்றழைக்கப்படும் நெருப்பு, வைசியர்களிடம் இருந்து அடையப்பட்டு, மந்திரங்களால் ஈர்க்கப்பட்டாலும் அதுவும் தாழ்ந்ததே[11]. மற்ற மூன்று வகையினரின் வேள்விகளையும் ஒரு பிராமணனே செய்கிறான்.(46) இதன் காரணமாக நால்வகையைச் சேர்ந்தோர் அனைவரும் புனிதமானவர்களே. இடைப்பட்ட வகையினரின் மூலம் அனைத்து வகையினரும் ஒருவருக்கொருவர் இரத்த உறவு கொண்டவர்களே. அஃதை (பிறப்பின் அடிப்படையில்) உறுதி செய்தால், அனைத்து வகையினரிலும் பிராமணனே முதலில் பிறந்தவன் என்பது வெளிப்படும். முன்பு சாமன் {சாம வேதம்} ஒன்றுதான், யஜுஸ் {யஜுர் வேதம்} ஒன்றுதான், ரிக்கும் {ரிக் வேதம்} ஒன்றுதான்[12].(47) பழைய வரலாறுகளை அறிந்தவர்கள், வைகானச முனிவர்களின் வேள்விகளில் இது தொடர்பாக அவர்களால் புகழ்ந்து பாடப்படும் ஒரு வரியை {சுலோகத்தைக்} காண்கின்றனர்.(48) “புலனடக்கம் கொண்ட ஒரு மனிதன், சூரிய உதயத்திற்கு முன்போ, பின்போ, இதயம் நிறைந்த அர்ப்பணிப்புடன் விதிப்படி (வேள்வி) நெருப்பில் காணைக்கைகளை ஆகுதி செய்கிறன். அர்ப்பணிப்பே வலிமைமிக்கக் காரணியாகும்”.(49) மேலும் ஹோமங்களைப் பொறுத்தவரையில், ஸ்கன்னம் என்றழைக்கப்படும் வகையானதே தொடக்கம், அதே வேளையில் அஸ்கன்னம் என்றழைக்கப்படுவது இறுதியாகும் (ஆனால் தகுதியைப் பொறுத்தவரை முதன்மையானதாகும்). வேள்விகள் பலவகைப்பட்டவை. மேலும் அவற்றின் சடங்குகளும், பலன்களும் பலவகைப்பட்டவை.(50)-அர்ப்பணிப்பும், ஆன்ம கல்வியும் கொண்ட ஒரு பிராமணன் அவை அனைத்தையும் அறிந்தால், அவன் வேள்விகளைச் செய்யத்தகுந்தவனாவான்.(51) ஒருவன் கள்வனாகவோ, பாவியாகவோ, பாவிகளில் இழிந்தவனாகவோ இருந்தாலும் அவன் வேள்வி செய்ய விரும்புவானானால், அவன் நீதிமானாகக் கருதப்படுகிறான்.(52) முனிவர்கள் அத்தகு மனிதனை மெச்சுகிறார்கள். அவர்கள் செய்வது சரி என்பதில் ஐயமில்லை. அவ்வாறெனில், அனைத்து வகையினரும், தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும், வேள்விகளைச் செய்ய வேண்டும் என்பதே முடிவான தீர்மானமாக இருக்க முடியும்.(53) மூவுலகிலும் வேள்விக்கு இணையானது ஏதுமில்லை. எனவே, தீமையிலிருந்து விடுபட்ட இதயம் கொண்ட ஒவ்வொருவரும், புனிதமான அர்ப்பணிப்பின் துணையுடன், தன் சக்திக்குட்பட்ட வகையிலும், தனது விருப்பத்தின்படியும் வேள்விகளைச் செய்யவே வேண்டும்” என்றார் {பீஷ்மர்}”.(54)
ஆசிரமதர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 61-நான்கு வகை வாழ்வுமுறைகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டோனே, ஓ! கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டோனே {யுதிஷ்டிரா}, நான்கு வாழ்வு முறைகளின் பெயர்களையும், அவை ஒவ்வொன்றின் கடமைகளையும் இப்போது சொல்கிறேன், கேட்பாயாக.(1) பிராமணர்களால் பின்பற்றப்படுவது, வானப்ரஸ்தம், பைக்ஷ்யம் {சந்நியாசம்}, பெரும் தகுதியைத் தரும் கார்ஹஸ்த்யம் {இல்லறம்} மற்றும் பிரம்மச்சரியம் ஆகிய நான்கு வாழ்வு முறைகளாகும்.(2) சடாமுடி தரிப்பதைப் பொறுத்தவரையில், தூய்மைச் சடங்கைச் {சௌளம்} செய்து, {உபநயனவிதியைக் கொண்டு} மறுபிறப்புக்கான சடங்கையும் செய்த பிறகு, சில காலம், புனித நெருப்புக்குச் சில சடங்குகளைச் செய்த பிறகு, வேதங்களைக் கற்று,(3) தூய ஆன்மாவுடனும், புலனடக்கத்துடனும், கார்ஹஸ்த்யம் {இல்லறம்} என்றழைக்கப்படும் வாழ்வுமுறையின் கடமைகள் அனைத்தையும் முதலில் கவனமாகச் செய்த பிறகு, மனைவியுடனோ, மனைவியில்லாமலோ, வானப்ரஸ்தம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையைப் பின்பற்ற கானகம் செல்ல வேண்டும்.(4) ஆரண்யகங்கள் என்றழைக்கப்படும் {வானப்ரஸ்த வாழ்வுமுறைக்குரிய} சாத்திரங்களைக் கற்றுத் தன் உயிர் நீரை மேலிழுத்து, உலகக் காரியங்கள் அனைத்தில் இருந்தும் ஓய்ந்த அறம் சார்ந்த துறவி ஒருவன், அழிவில்லா நித்திய ஆன்மாவில் ஒன்றிய நிலையை {பிரம்மஸ்வரூபத்தை} அடையலாம்.(5) இவையே தங்கள் உயிர் நீரை மேலிழுத்த முனிவர்களின் குறியீடுகளாகும். ஓ! மன்னா, கல்விமானான ஒரு பிராமணன் முதலில் அவற்றைப் பயன்று, அவற்றில் ஈடுபட வேண்டும்.(6)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வீடடைய {முக்தியடைய} விரும்பும் ஒரு பிராமணன், பிரம்மச்சரியம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையைக் கடந்தபிறகே பைக்ஷ்ய {சந்நியாச} வாழ்வு முறையைப் பின்பற்றத்தகுந்தவனாவான் என்பது நன்கறியப்பட்ட ஒன்றாகும்.(7) கல்விமானான பிராமணன் ஒருவன், (தினமும் தான் திரிகையில்) மாலைவேளை எங்கே ஏற்படுகிறதோ, அந்தச் சூழ்நிலையைச் சிறந்ததாக்க விரும்பாமல் அங்கேயே உறங்கி, {வசிப்பதற்கு} வீடில்லாமல், (ஈகையில்) கிடைக்கும் உணவை உண்டு, தற்கட்டுப்பாட்டுடன் தியானம் பயின்று, ஆசையேதும் இல்லாமல் புலன்களை அடக்கி,(8) அனைத்து உயிரினங்களையும் சமமாகக் கருதி, எதிலும் மகிழ்ச்சியோ வெறுப்போ அடையாமல் இந்த {சந்நியாச} வாழ்வு முறையைப் பின்பற்றி அழிவில்லா நித்திய ஆன்மாவுடன் தோய்ந்த ஒன்றிய நிலையை அடைகிறான்.(9)
கார்ஹஸ்த்திய {இல்லற} வாழ்வுமுறையில் வாழும் மனிதன், வேதங்களைக் கற்று, தனக்காக விதிக்கப்பட்ட அறச்செயல்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். அவன் பிள்ளைகளைப் பெற்று, இன்பங்களையும், வசதிகளையும் அனுபவிக்க வேண்டும். (மீறல்கள் ஏதுமில்லாமல்) வாழ மிகக் கடினமானதும், தவசிகளால் மெச்சப்படுவதுமான அந்த வாழ்வுமுறையின் கடமைகள் அனைத்தையும் அவன் மிகுந்த கவனத்துடன் நிறைவேற்ற வேண்டும்.(10) அவன் தான் மணந்து கொண்ட மனைவியுடனே நிறைவுடன் இருந்து, அவளது பருவ காலமன்றி வேறு காலங்களில் அவளை அணுகாதிருக்க வேண்டும். அவன், தந்திரமாகவோ, வஞ்சகமாகவோ செயல்படாமல் சாத்திரங்களின் விதிகளைப் பின்பற்ற வேண்டும். அவன் உணவில் சிக்கனமாக இருந்து, தேவர்களுக்கு அர்ப்பணிப்புடன், நன்றி நிறைந்தவனாக, மென்மையானவனாக, கொடூரமற்றவனாக, மன்னிக்கும் தன்மை கொண்டவனாக இருக்க வேண்டும்.(11) அவன், இதய அமைதி கொண்டவனாக, கட்டுப்படக்கூடியவனாக, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் காணிக்கைகள் அளிப்பவனாக இருக்க வேண்டும். அவன் பிராமணர்களிடம் எப்போதும் விருந்தோம்பலுடன் நடந்து கொள்ள வேண்டும். அவன் செருக்கற்றவனாக இருக்க வேண்டும். அவனுடைய ஈகை ஒரு குழுவினருக்கு மட்டுமே கட்டுப்பட்டதாக இருக்கக்கூடாது. வேத சடங்குகளைச் செய்வதில் அவன் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.(12)
இது தொடர்பாக, பெரும் தவத்தகுதியைக் கொண்டதும், பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததும், நாராயணனால் பாடப்பட்டதுமான ஒரு வரியை சிறப்புமிக்கப் பெரும் முனிவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதைத் திரும்பச் சொல்கிறேன் கேட்பாயாக.(13) “உண்மை, எளிமை, விருந்தினரை வழிபடுவது, அறம் பொருள் அடைதல், தான் மணந்து கொண்ட மனைவியோடு இன்புற்றிருத்தல் ஆகியவற்றின் மூலம் ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் பல்வேறு வகை இன்பங்களை அனுபவிக்க வேண்டும்” {என்று நாராயணன் பாடியிருக்கிறான்}.(14) மகன்களையும், மனைவியரையும் ஆதரித்தல், வேதங்களைக் கற்றல் ஆகியவை இந்த உயர்ந்த {இல்லற} வாழ்வுமுறையை நோற்போரின் கடமைகளாக அமைகின்றன என்று பெருமுனிவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.(15) வேள்விகளைச் செய்வதில் எப்போதும் ஈடுபடும் பிராமணன், இந்த வாழ்வுமுறையை முறையாக வாழ்ந்து, தன் கடமைகள் அனைத்தையும் முறையாகச் செய்து, சொர்க்கத்தில் அருள்வெகுமதிகளை அடைகிறான்.(16) அவனது இறப்புக்குப் பிறகு, அவனால் விரும்பப்பட்ட வெகுமதிகள் இறவாத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. உண்மையில், அவை தலைவனின் உத்தரவைச் செயல்படுத்த எப்போதும் விழிப்புடன் இருக்கும் பணியாட்களைப் போல நித்தியமாக {அழிவில்லாமல்} எப்போதும் அவனுக்காகக் காத்திருக்கின்றன {பணிவிடை செய்கின்றன}.(17)
பிரம்மச்சரிய வாழ்வுமுறையை நோற்கும் ஒருவன், எப்போதும் வேதங்களில் ஈடுபாட்டுடன், தன் ஆசானிடம் இருந்து அடைந்த மந்திரங்களை அமைதியாக ஓதிக் கொண்டு, தேவர்கள் அனைவரையும் வழிபட்டு, உடலில் புழுதி மற்றும் தூசியுடனும்,(18) கடமையுணர்வுடனும் தன் ஆசானுக்குத் தொண்டாற்றி, புலனடக்கத்துடன், தனக்குக் கிடைக்கும் கல்வியில் எப்போதும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அவன், வேதங்களைக் குறித்துச் சிந்தித்து, (தியானம் மற்றும் வெளிப்படையான செயல்கள் ஆகிய) தன் கடமைகள் அனைத்தையும் செய்து, கடமையுணர்வுடன் தன் ஆசானுக்காகக் காத்திருந்து, அவரை எப்போதும் வணங்கி வாழ வேண்டும். (பிறரின் வேள்விகளைச் செய்து கொடுத்தல் போன்ற) ஆறு வகை வேலைகளில்[1] ஈடுபடாமை, எந்தச் செயல்பாடுகளிலும் ஒருபோதும் பற்று கொள்ளாமை,(19,20) எவருக்கும் ஆதரவோ, ஆதரவில்லா நிலையையோ ஏற்காமை, தன் எதிரிகளுக்கும் நன்மையைச் செய்தல் ஆகிய இவையே ஒரு பிரம்மச்சாரியின் கடமைகளாக விதிக்கப்பட்டிருக்கின்றன” என்றார் {பீஷ்மர்}.(21)(இவை, “பிராணாயாமம், பிரத்யாஹாராம், த்யாநம், தாரணை, தர்க்கம், ஸமாதி”)
நற்செயல்களும், மனச்சார்புகளும்! – சாந்திபர்வம் பகுதி – 62-வர்ணாசிரம தர்மங்களில் யுதிஷ்டிரனுக்கு ஏற்பட்ட ஐயங்களுக்கு விடையளித்த பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “எங்களைப் போன்றோருக்கு, எந்தக் கடமைகள் மங்கலமானவை, எதிர்காலத்தில் மகிழ்ச்சியை உண்டாக்குபவை, நன்மை செய்பவை, அனைவராலும் அங்கீகரிக்கப்படுபவை, ஏற்கப்படுபவை, இனிமையானவை என்பதை எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பலமிக்கவனே, நான்கு வாழ்வுமுறைகளும் {ஆசிரமங்களும்} பிராமணர்களுக்கே விதிக்கப்பட்டிருக்கின்றன. ஓ! பாரதர்களில் சிறந்தவனே, பிற வகையினர் மூவரும் அவற்றைப் பின்பற்றுவதில்லை.(2) ஓ! மன்னா, குறிப்பாக அரசவகையினருக்கு {க்ஷத்திரியர்களுக்குப்} பொருந்தக்கூடியவையும், சொர்க்கத்திற்கு வழிவகுக்கூடியவையுமான பல செயல்கள் {பிரவிருத்தி சாஸ்திரத்தில்} ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் இரக்கமின்மையை ஏற்காத க்ஷத்திரியர்களுக்கான முறையாக விதிக்கப்பட்டவை என்பதால் அவற்றைத் தற்போதைய உன் கேள்விக்குப் பதிலாகச் சொல்லமுடியாது.(3)
க்ஷத்திரிய, வைசிய, சூத்திர நடைமுறைகளுக்கு அடிமையாக இருக்கும் பிராமணன், நிச்சயமாகப் பூமியில் தீய ஆன்மா என நிந்திக்கப்பட்டு, அடுத்த உலகில் {மறுமையில்} நரகிற்குச் செல்வான்.(4) மனிதர்களுக்கு மத்தியில் பணியாட்கள், நாய்கள், ஓநாய்கள் மற்றும் (பிற) விலங்குகளுக்குச் சூட்டப்படும் பெயர்களே, தனக்குத் தகாத செயல்களில் ஈடுபடும் பிராமணனுக்குச் சூட்டப்படும்.(5)
நான்கு வகை வாழ்வுமுறைகளிலும் (மூச்சை ஒழுங்கமைத்தல் மற்றும் தியானம் போன்ற) ஆறு வகைச் செயல்களில்[1] முறையாக ஈடுபடுபவனும், தன் கடமைகள் அனைத்தையும் செய்பவனும், அமைதியானவனும், தன் ஆசைகளைக் கட்டுக்குள் வைத்தவனும்,(6) எதிர்பார்ப்புகளைச் சிறக்கச் செய்யும் விருப்பம் இல்லாதவனும், ஈகையாளனுமான ஒரு பிராமணன், மறுமையில் அழிவில்லா அருள் உலகங்களை அடைவான்.((7) ஒவ்வொருவனும் தங்களுக்கு அமையும் சூழ்நிலை, இடம், வழிமுறை மற்றும் நோக்கங்களுக்குத்தக்க செய்யும் செயல்களின் இயல்பிலிருந்தே தன் சொந்த இயல்பை {குணத்தை} அடைகிறான்.(8) எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயர்ந்த தகுதிகள் {புண்ணியங்கள்} நிறைந்த வேத கல்வியானது, அரச அதிகாரத்துடன் கூடிய உழைப்புக்கோ, உழவு, வணிகம் மற்றும் வேட்டைத் தொழில்களுக்கோ இணையானதாக உன்னால் கருதப்பட வேண்டும்[2].(9)உலகம் காலத்தால் இயக்கப்படுகிறது. அதன் இயக்கங்கள் காலத்தின் போக்கிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. மனிதன் செய்யும் நல்ல, தீய மற்றும் அலட்சிய செயல்கள் {நல்லது, தீயது என வேறுபாடற்ற} அனைத்தும் முற்றிலும் காலத்தின் ஆதிக்கத்தால் செய்யப்படுபவையே[3].(10) ஒரு மனிதனின் கடந்த கால {முற்பிறவியின்} நற்செயல்களில் எவை அடுத்தப் பிறவியில் பேராதிக்கம் செலுத்துகின்றனவோ, அவை {அவற்றின் புண்ணியங்கள்} தீர்ந்து விடக்கூடும். எனினும், மனிதர்கள் தங்கள் மனச்சார்புகள் வழிகாட்டும் செயல்களை எப்போதும் செய்து கொண்டே இருக்கின்றனர். மேலும் அந்த மனச்சார்புகளே, ஓர் உயிரினத்தை ஒவ்வொரு திசையிலும் செலுத்திக் கொண்டிருக்கின்றன[4]” என்றார் {பீஷ்மர்}.(11)
ஆசிரம மாற்றங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 63-பிராமணன் செய்யத்தகாத செயல்கள் மற்றும் தொழில்கள்; எந்தப் பிராமணன் சூத்திரனாகிறான்? ஆசிரம மாற்றங்கள்; சூத்திரர்கள், வைசியர்கள் மற்றும் க்ஷத்திரியர்கள் பின்பற்றத்தக்க வாழ்வு முறைகள்; க்ஷத்திரிய தர்மத்தின் சிறப்பு ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “{வில்லின்} நாண்கயிற்றை இழுத்தல், எதிரிகளை அழித்தல், உழவு, வணிகம், கால்நடை வளர்த்தல், செல்வத்துக்காகப் பிறருக்குப் பணிவிடை செய்தல் ஆகிய இவை ஒரு பிராமணனுக்கு முறையற்றவையாகும்.(1) நுண்ணறிவு கொண்ட ஒரு பிராமணன், இல்லற வாழ்வுமுறையை நோற்று, வேதங்கள் சுட்டும் ஆறு செயல்களை[1] முறையாகச் செய்ய வேண்டும். ஒரு பிராமணன், இல்லற வாழ்வுமுறையில் தன் கடமைகள் யாவையும் முறையாகச் செய்த பிறகு, காடுகளுக்குள் ஓயச் செல்லலாம் {வானப்ரஸ்த வாழ்வுமுறையைப் பின்பற்றலாம்}.(2)
ஒரு பிராமணன், மன்னனுக்குப் பணிசெய்தல், உழவால் அடையப்படும் செல்வம், வணிகத்தால் கிடைக்கும் வாழ்வாதாரம், அனைத்து வகைக் கோணல் நடத்தைகள், தான் மணந்து கொண்ட மனைவியரைத் தவிர வேறு துணை, நியாயமற்ற வட்டி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.(3)
ஓ! மன்னா, கடமைகளில் இருந்து வீழ்ந்தவனும், தீய நடத்தை கொண்டவனுமான இழிந்த பிராமணன் ஒருவன் சூத்திரனாகிறான். சூத்திரப் பெண்ணை மணந்து கொள்தல், தீய நடத்தை கொள்தல், ஆடல்கலைஞனாதல், கிராமப் பணியாளாதல், முறையற்ற செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றில் ஏதொன்றையும் செய்யும் ஒரு பிராமணன் சூத்திரனாகிறான்.(4) ஓ! மன்னா, அவன் {பிராமணன்} வேதங்களை உரைத்தாலும், இல்லாவிட்டாலும், முறையற்ற செயல்களைச் செய்பவனானால், அவன் சூத்திரனுக்கு இணையானவனாகிறான், உணவு உண்ணும் சந்தர்ப்பங்களில் அவனுக்குச் சூத்திரர்களுக்கு மத்தியிலேயே இடம் ஒதுக்கப்பட வேண்டும்.(5)ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சூத்திரர்களுக்கு இணையான பிராமணர்கள், தேவர்களின் வழிபாடுகள் நடக்கும் நிகழ்வுகளில் விலக்கப்பட வேண்டும்[2].(6)
கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறியவர்களோ, தூய்மையற்ற நடத்தை கொண்டவர்களோ, தீய தொழில்கள், கொடுஞ்செயல்கள் ஆகியவற்றுக்கு அடிமையானவர்களோ, ஒழுங்குமுறையான கடமைகளில் இருந்து வீழ்ந்துவிட்டவர்களோவான பிராமணர்களுக்கு, தேவர்கள் மற்றும் பித்ருக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் உணவுகள் கொடுக்கப்பட்டால் அவை (அவற்றைக் கொடுப்பவனுக்கு) எந்தத் தகுதியையும் ஈட்டிக் கொடுக்காது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதன்காரணமாகவே, தற்கட்டுப்பாடு, தூய்மை, எளிமை ஆகியன ஒரு பிராமணனின் கடமைகளாக விதிக்கப்பட்டிருக்கின்றன. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இவற்றைத் தவிர்த்து, நான்கு வாழ்வுமுறைகளும் அவனுக்காகவே பிரம்மனால் விதிக்கப்பட்டன.(7) எவன் தற்கட்டுப்பாட்டுடன், வேள்விகளில் சோமம் குடித்து, நல்ல நடத்தையுடனும், அனைத்து உயிரினங்களிடமும் கருணையுடனும், அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் பொறுமையுடனும், செல்வத்தை அடைவதன் மூலம் தன் நிலையைச் சிறப்பாக்கிக் கொள்ளும் விருப்பம் இல்லாமல், வெளிப்படையானவனாக, எளியவனாக, மென்மையானவனாக, கொடூரங்களில் இருந்து விடுபட்டவனாக, மன்னிக்கும் தன்மை கொண்டவனாக இருக்கிறானோ, அவனே பிராமணனாவான்; பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவன் பிராமணனாக மாட்டான்.(8) ஓ! மன்னா, அறம் ஈட்ட விரும்பும் மனிதர்கள், சூத்திரர்கள், வைசியர்கள் மற்றும் க்ஷத்திரியர்களின் உதவியை நாடுவார்கள். எனவே, ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, இந்த (மூன்று) வகையினரும், அமைதி நிறைந்த கடமைகளைப் பின்பற்றவில்லையெனில், அவர்களுக்கு விஷ்ணு தன் அருளை நீட்டிக்க மாட்டான். விஷ்ணு நிறைவுபெறவில்லையெனில், சொர்க்கத்தில் இருக்கும் மனிதர்கள் அனைவரின் மகிழ்ச்சி, வேதங்களின் தீர்மானங்கள், அனைத்து வகை வேள்விகள், மனிதர்களின் பிற அறச்செயல்கள் அனைத்தும், பல்வேறு வாழ்வுமுறைகளின் கடமைகள் அனைத்தும் தொலைந்துபோகும்[3].(10)ஓ! பாண்டுவின் மகனே, நான்கு வாழ்வுமுறைகளில் நோற்கப்பட வேண்டிய கடமைகளைக் குறித்து இப்போது கேட்பாயாக[4]. ஒரு க்ஷத்திரியன், (தன் நாட்டிலுள்ள மற்ற) மூன்று வகையினரும் {வர்ணத்தாரும்}, அந்த வாழ்வுமுறைகளின் அந்தந்தக் கடமைகளைக் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும் என விரும்பினால், இவை {பின்வருவன} அவனால் அறியப்பட வேண்டும்.(11)
(சாத்திரங்களைக்) கேட்க விரும்புபவனும், தன் கடமைகளை நிறைவேற்றியவனும், ஒரு மகனைப் பெற்றவனும், உயர்ந்த வகையினருக்கும் தனக்கும் இடையில் நடத்தையின் தூய்மையில் பெரிய வேறுபாடுகள் இல்லாதவனுமான ஒரு சூத்திரனுக்கு, உலகளாவிய அமைதி, (அவனுக்குத் தேவையில்லாத) தற்கட்டுப்பாடு ஆகியவற்றைத் தவிர்த்து, அனைத்து வாழ்வுமுறைகளும் விதிக்கப்படுகின்றன[5].(12,13) ஓ! மன்னா, இந்தக் கடமைகள் யாவையும் பயிலும் ஒரு சூத்திரனுக்கும், ஒரு வைசியனுக்கும், ஒரு க்ஷத்திரியனுக்கும், {இறுதியாக} பிக்ஷு வாழ்வுமுறை விதிக்கப்பட்டிருக்கிறது.(14)வயதில் முதிர்ந்த ஒரு வைசியன், தன் வகைக்கான கடமைகளைச் செய்த பிறகு, மன்னனுக்கும் தொண்டாற்றிய பிறகு, மன்னனின் அனுமதியுடன், {தான் பின்பற்றி வரும் வாழ்வுமுறையை விட்டு விலகி} மற்றொரு வாழ்வுமுறையை ஏற்கலாம்.(15)
ஓ! மன்னா, ஓ! பாவமற்றவனே, ஒரு வயது முதிர்ந்த க்ஷத்திரியன், வேதங்களையும், மன்னர்களின் கடமைகள் குறித்த ஆய்வுகளையும் முறையாகக் கற்று, பிள்ளைகளைப் பெற்று, அதே இயல்புடைய பிற செயல்களையும் செய்து, சோமத்தைக் குடித்து,(16) ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவனே, நீதியுடன் தன் குடிமக்கள் அனைவரையும் பாதுகாத்து, அவர்களை ஆட்சி செய்து, ராஜசூயம், குதிரை வேள்வி மற்றும் பிற பெரும் வேள்விகளைச் செய்து,(17) சாத்திரங்களை ஓதுவதற்குக் கல்விமான்களான பிராமணர்களை அழைத்து, அவர்களது தகுதிக்குத்தக்க அவர்களுக்குக் கொடைகளை அளித்து, சிறிய அல்லது பெரிய போரில் வெற்றிகளை அடைந்து,(18) தன் மடியில் பிறந்த மகனையோ, நற்குடியில் பிறந்த வேறு க்ஷத்திரியனையோ தன் குடிமக்களைக் காக்க அரியணையில் அமர்த்தி,(19) பித்ருக்களைக் கௌரவிக்கச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளை முறையாகச் செய்து, அவர்களை வணங்கி, வேள்விகளைச் செய்து தேவர்களைக் கவனமாக வணங்கி, வேதங்களைக் கற்று முனிவர்களை வணங்கிய பிறகு,(20) ஓ! மன்னா, அவன் மற்றொரு வாழ்வுமுறையை ஏற்க விரும்பினால், அவன் தற்போது பின்பற்றும் வாழ்வுமுறையைக் கைவிட்டு, உடனே அதற்கடுத்த வாழ்வுமுறையாக இருப்பதைப் பின்பற்றுவதன் மூலம் அவன் (தவ) வெற்றியை அடைகிறான்.(21)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு முனிவரின் வாழ்வை வாழ விரும்பும் ஒரு க்ஷத்திரியன், பிக்ஷு வாழ்வு முறையைப் பின்பற்றலாம்; ஆனால், அவன் உலக இன்பங்களை அனுபவிப்பதற்காக ஒருபோதும் அதைச் செய்யக் கூடாது. இல்லறவாழ்வைக் கைவிட்டு, தன் உயிரைத் தாங்கிக் கொள்வதற்காக மட்டுமே இரக்கும் துறவியின் வாழ்வை அவன் பின்பற்றலாம்.(22) துறவு வாழ்வானது, (க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய) மற்ற மூன்று வகையினருக்கான கடப்பாடாகாது. எனினும், அவர்கள் {க்ஷத்திரியர்கள்} இந்த {துறவு} வாழ்வுமுறையைப் பின்பற்றத் தேர்ந்தெடுப்பதைப் போலவே, இவை நான்கு வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} திறந்தேயிருக்கின்றன.(23)
மனிதர்களுக்கு மத்தியில், க்ஷத்திரியர்களால் பயிலப்படும் கடமைகளே உயர்ந்தவையாகும். மொத்த உலகமும் அவர்களுடைய கரங்களின் வலிமைக்கு அடங்கியதாகும். வேறு மூன்று வகையினரின் முக்கிய மற்றும் துணைக் கடமைகள் அனைத்தும், க்ஷத்திரியக் கடமைகளைச் {அவை நோற்கப்படுவதைச்} சார்ந்தே இருக்கின்றன. இதை வேதங்களே அறிவித்திருக்கின்றன.(24) பிற விலங்குகள் அனைத்தின் காலடித்தடங்களும், யானையின் காலடித்தடத்தால் விழுங்கப்படுவதைப் போலவே, அனைத்துச் சூழ்நிலைகளிலும், பிற வகையினரின் கடமைகள் அனைத்தும், க்ஷத்திரியக் கடமைகளால் விழுங்கப்படுகின்றன.(25) வேறு மூன்று வகையினரின் கடமைகள் சிறு ஆறுதலையோ, பாதுகாப்பையோ அளித்து, சிறு வெகுமதிகளை அளிக்குமெனச் சாத்திரமறிந்த மனிதர்கள் சொல்கின்றனர். க்ஷத்திரியக் கடமைகள், பெரும் ஆறுதலை அளித்துப் பெரும் வெகுமதிகளைக் கொடுக்கும் எனக் கற்றோர் சொல்கின்றனர்.(26)
அனைத்துக் கடமைகளும், தங்களைவிட அரசகடமைகளையே முதன்மையாகக் கொண்டுள்ளன. அனைத்து வகையினரும் அவற்றால் பாதுகாக்கப்படுகின்றனர். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அரசகடமைகளின் போது துறவு நேர்கிறது, துறவே அழிவில்லா அறமெனவும், அனைத்திலும் முதன்மையானது எனவும் செல்லப்படுகிறது[6].(27) தண்டநீதி மறைந்தால், வேதங்களும் மறையும். மனிதர்களின் கடமைகளைச் சொல்லும் சாத்திரங்கள் அனைத்தும் தொலைந்து போகும். உண்மையில், க்ஷத்திரியர்களுக்குரிய இந்தப் பழங்கடமைகள் கைவிடப்பட்டால், அனைத்து வாழ்வுமுறைகளின் {ஆசிரமங்களின்} கடமைகளும் மறைந்து போகும்.(28) அரச கடமைகளில் அனைத்து வகைத் துறவும் தென்படுகின்றன; அனைத்து வகைத் தொடக்கங்களும் அவற்றில் தோன்றுகின்றன; அனைத்து வகைக் கல்வியும் அவற்றோடு தொடர்புடையனவாக இருக்கின்றன; அனைத்து வகை உலக நடத்தையும் அவற்றில் நுழையும்.(29)இழிந்தோரால் கொல்லப்படும் விலங்குகள், அறத்தையும், அவர்களின் அறச்செயல்களையும் அழிப்பதைப் போலவே, அரச கடமைகளால் கொடுக்கப்படும் பாதுகாப்பை மனிதர்கள் இழந்தால், அவர்களது பிற கடமைகள் அனைத்தும் தாக்குதலுக்கும், அழிவுக்கும் உள்ளாகி, கவலையில் நிறைந்து, அவர்களுக்காக விதிக்கப்பட்ட நடைமுறைகளை {அறச்செயல்களை} அலட்சியம் செய்வார்கள்” என்றார் {பீஷ்மர்}.(30)
அரசகடமைகள்! – சாந்திபர்வம் பகுதி – 64-அரசகடமைகளின் முக்கியத்துவம்; தேவர்களும் க்ஷத்திரியக் கடமைகளையே நோற்றனர்; இந்திரனின் வடிவை ஏற்ற விஷ்ணு; அரச கடமைகள் குறித்து மாந்தாதாவிடம் உரையாடியது…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாண்டுவின் மகனே, நான்கு வாழ்வுமுறைகளின் கடமைகள், யதிகளின் கடமைகள், மனிதர்களின் பொதுவான நடைமுறை வழக்கங்கள் ஆகிய அனைத்தும் அரச கடமைகளிலும் இருக்கின்றன.(1) ஓ! பாரதர்களின் தலைவா, இந்தச் செயல்கள் அனைத்தும் க்ஷத்திரியக் கடமைகளிலும் நேர்கின்றன. அரச செயல்பாடுகளில் தடங்கலேற்பட்டால், அனைத்து உயிரினங்களுக்கும் தீமை விளைகிறது.(2) மனிதர்களின் கடமைகள் {தர்மங்கள்} வெளிப்படையானவை அல்ல. மேலும் அவை பல கிளைகளைக் கொண்டவையாக இருக்கின்றன[1]. சில வேளைகளில், (தவறான) பல முறைமைகளால் வழிநடத்தப்பட்டு, அவற்றின் நித்திய இயல்பு பாதிக்கப்படுகிறது.(3) உண்மையில், (சாத்திரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள) கடமைகளைக் குறித்த உண்மைகள் எதையும் அறியாமலேயே, {வெறுமனே} அடுத்தவர்களின் தீர்மானங்களைக் கண்டு நம்பும் மனிதர்கள், இறுதியில், முடிவான தீர்மானங்களை அறியாத நம்பிக்கை குழம்பிய நிலையையே அடைகிறார்கள்[2].(4) க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகள் வெளிப்படையானவையும், பெரும் மகிழ்ச்சியை உண்டாக்குபவையும், தாங்கள் விளைவிக்கும் விளைவுகளைப் பொறுத்தவரையில் தெளிவானவையும், வஞ்சகம் இல்லாதவையும், மொத்த உலகத்திற்கும் நன்மை பயக்கக்கூடியவையுமாக இருக்கின்றன.(5)ஓ! யுதிஷ்டிரா, மூன்று வகையினர், பிராமணர்கள் மற்றும் உலக வாழ்வில் ஓய்ந்து சென்றவர்கள் {துறவிகள்} ஆகியோரின் கடமைகள் அனைத்தும் (கார்ஹஸ்த்யம் என்றழைக்கப்படும்) புனித வாழ்வுமுறைக்குள் அடங்கியிருந்தது என்று சொல்லப்படுவதைப் போலவே, நற்செயல்கள் அனைத்தையும் கொண்ட மொத்த உலகமும் அரசகடமைகளுக்கு அடங்கியதாகும்.(6) ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில் எவ்வாறு துணிச்சல்மிக்கப் பல மன்னர்கள், தெய்வீகமானவனும், பலமிக்கவனும், பேராற்றல் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனுமான விஷ்ணுவிடம் சென்று, தண்ட நீதி {அரச நீதி} குறித்த தங்கள் ஐயங்களைத் தீர்த்துக் கொண்டனர் என்பதை நான் உனக்குச் சொன்னேன்[3].(7) உதாரணங்களுடன் சொல்லப்பட்டிருக்கும் சாத்திரங்களின் தீர்மானங்களில் கவனமாக இருந்த அம்மன்னர்கள், பழங்காலத்தில், தங்கள் ஒவ்வொரு செயல்பாட்டையும், ஒவ்வொரு வாழ்வுமுறையின் கடமைகளோடு நிகர்த்துப் பார்த்த பிறகு நாராயணனுக்காகக் காத்திருந்தனர்[4].(8) பழங்காலத்தில் தேவர்களில் முதல்வனால் படைக்கப்பட்ட சத்தியஸ்கள், வசுக்கள், அசுவினிகள், ருத்திரர்கள், விஸ்வர்கள், மருத்துகள், சித்தர்கள் ஆகியோருடன் கூடிய தேவர்கள் அனைவரும் க்ஷத்திரியக் கடமைகளையே நோற்று வந்தனர்.(9)பழங்காலத்தில் தானவர்கள் பெருகி, அனைத்துக் கட்டுப்பாடுகளையும், வேறுபாடுகளையும் மீறியபோது[5],(10) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பலமிக்கவனான மாந்தாத்ரி {மாந்தாதா} மன்னனாக ஆனான். பூமியின் ஆட்சியாளனான மன்னன் மாந்தாத்ரி, பலமிக்கவனும், தேவர்களுக்குத் தேவனும், தொடக்கம், நடுநிலை, முடிவு இல்லாதவனுமான நாராயணனைக் காணும் விருப்பத்தில் ஒரு பெரும் வேள்வியைச் செய்தான்.(11,12) அந்த வேள்வியில் அவன் பெருமைமிக்க விஷ்ணுவைப் பணிவுடன் வணங்கினான். அந்த உயர்ந்த தலைவன் {விஷ்ணு}, இந்திரனின் வடிவில் அவன் முன் தோன்றினான்.(13) நல்ல மன்னர்கள் பலரின் துணையுடன் கூடிய அவன் அந்தப் பலமிக்கத் தேவனுக்குத் தன் துதியைக் காணிக்கையாக்கினான்.(14) அந்த மன்னர்களில் சிங்கத்திற்கும் {மாந்தாத்ரிக்கும்}, பெரும் இந்திரனின் வடிவில் இருந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவனுக்கும் இடையில் பிரகாசமிக்க விஷ்ணுவைத் தீண்டும் இந்த உயர்ந்த உரையாடல் நடந்தது.(15)இந்திரன் {இந்திரன் உருவில் வந்த விஷ்ணு மந்தாதாவிடம்}, “ஓ! அறவோரில் முதன்மையானவனே, புராதானமானவனும், தேவர்களில் முதல்வனும், நினைத்தற்கரிய சக்தி படைத்தவனும், முடிவிலா மாயைகளைக் கொண்டவனுமான நாராயணனைக் காண நீ இவ்வாறு முயல்வதன் நோக்கம் யாது?(16) நானோ, பிரம்மனோ கூட அந்தத் தேவனின் உலகளாவிய வடிவைக் காண முடியாது. நீ மனிதர்களில் முதன்மையானவனாக இருப்பதால், உன் இதயத்தில் இருக்கும் வேறு நோக்கங்களுக்கு நான் உனக்கு அருள் செய்வேன்.(17) உன் ஆன்மா அமைதியில் கட்டுப்பட்டிருக்கிறது; நீ நீதிக்கு அர்ப்பணிப்புள்ளவனாக இருக்கிறாய்; உன் புலன்களைக் கட்டுக்குள் கொண்டிருக்கிறாய்; வீரம் கொண்டவனாகவும் இருக்கிறாய். தேவர்களுக்கு ஏற்புடையதைச் செய்யப் பின்வாங்காமல் நீ முயல்கிறாய். உன் நுண்ணறிவு, அர்ப்பணிப்பு, உயர்ந்த நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக உன்னால் விரும்பப்படும் எந்த வரத்தையும் நான் உனக்கு அளிப்பேன்” என்றான்.(18)
மாந்தாத்ரி {மாந்தாதா விஷ்ணுவிடம்}, “உன்னை நிறைவு செய்ய நான் தலைவணங்குகிறேன். எனினும், ஓ! தெய்வீகத் தலைவா, நான் தேவர்களில் முதல்வனைக் {விஷ்ணுவைக்} காணவே விரும்புகிறேன் என்பதில் ஐயமில்லை. (பூமி சார்ந்த) அனைத்து ஆசைகளைக் கைவிட்டு, அறத்தகுதி ஈட்டி, நல்லோரின் பாதைக்கு இட்டுச் செல்லும் முதன்மையான வாழ்வுமுறையைப் பின்பற்றி, அனைவராலும் உயர்வாக மதிக்கப்படுபவனாக இருக்க நான் விரும்புகிறேன்.(19) ஒரு க்ஷத்திரியனின் உயர்ந்த கடமைகளைச் செய்து, அடுத்த உலகில் வற்றாத தகுதிகளுடன் கூடிய பல பகுதிகளை ஈட்டியிருக்கிறேன். மேலும், அந்தக் கடமைகளின் மூலம் என் புகழும் பரவியிருக்கிறது. எனினும், தேவர்களில் முதல்வனிடமிருந்து {விஷ்ணுவிடம்} வந்தவையும், உலகில் முதன்மையானவையுமான கடமைகளைச் செய்வது எவ்வாறு என்பதை நான் அறியவில்லை” என்று கேட்டான்.(20)
இந்திரன் {விஷ்ணு மந்தாதாவிடம்}, “மன்னர்களாக இல்லாதோர், தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்தாலும், கடமையின் உயர்ந்த வெகுமதிகளை எளிதில் அடைய முடியாது. மூல தேவனிடமிருந்தே அரச கடமைகள் வாய்த்தன. பிற கடமைகள் அவனது உடலில் இருந்து பிற்பாடு தோன்றின.(21) வானப்ரஸ்த வாழ்வுமுறையுடன் கூடியவையும், பிற்பாடு படைக்கப்பட்டவையுமான பிற கடமைகள் முடிவற்றவையாக இருக்கின்றன. அவை அனைத்தின் கனிகளும் {பலன்களும்} வற்றாதவையாக இருக்கின்றன. அவற்றிலேயே பிற கடமைகள் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. இதன் காரணமாகவே அனைத்திலும் முதன்மையானவையாக க்ஷத்திரியக் கடமைகள் சொல்லப்படுகின்றன.(22) பழங்காலத்தில், க்ஷத்திரியக் கடமைகளின்படி செயல்பட்ட விஷ்ணு, தன் எதிரிகளைப் பலவந்தமாக ஒடுக்கி, அழித்து, அளவில்லா சக்தி கொண்ட முனிவர்கள் மற்றும் தேவர்களுக்கும் நிவாரணத்தை அளித்தான்.(23) நினைத்தற்கரிய சக்தி கொண்ட அந்தத் தெய்வீக விஷ்ணு, அசுரர்களுக்கு மத்தியில் இருந்து தன் எதிரிகளைக் கொல்லாமல் இருந்திருந்தால், பிராமணர்கள், உலகங்களின் படைப்பாளன் (பிரம்மன்) ஆகியோருக்கும், க்ஷத்திரியக் கடமைகளும், உயர்ந்த தேவனிடம் இருந்து முதலில் வந்த கடமைகள் அனைத்துக்கும் அழிவு ஏற்பட்டிருக்கும்.(24) தேவர்களில் முதன்மையான அந்த முதல்வன் {விஷ்ணு}, தன் ஆற்றலை வெளிப்படுத்தி அசுரர்களுடன் கூடிய பூமியை அடக்காமல் இருந்திருந்தால், பிராமணர்களுக்கு ஏற்படும் அழிவின் விளைவால், நான்கு வாழ்வுமுறைகளின் கடமைகள் அனைத்தும் அழிவை அடைந்திருக்கும்.(25)
(மனிதர்களின்) நித்திய கடமைகள் அனைத்துக்கும் அழிவு ஏற்பட்டது. க்ஷத்திரியக் கடமைகளைச் செய்தே அவை மீட்கப்பட்டன. பிரம்மத்தை அடையும் பிராமணர்களின் கடமைகளே, ஒவ்வொரு யுகத்திலும் முதலில் தோன்றுகின்றன. எனினும் இவை அனைத்தும் அரசகடமைகளாலேயே காக்கப்படுகின்றன. எனவே, அரசகடமைகளே முதன்மையானவையாகக் கருதப்படுகின்றன.(26) போரில் உயிரைக் கைவிடுவது, அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொள்வது, உலகக் காரியங்களில் அறிவு, மனிதர்களைப் பாதுகாப்பது, ஆபத்திலிருந்து அவர்களை மீட்பது, துயரில் இருப்போரையும், ஒடுக்கபட்டோரையும் விடுவிப்பது ஆகிய இவை அனைத்தும் மன்னர்களால் செய்யப்படும் க்ஷத்திரியக்கடமைகளில் நேர்கின்றன.(27) நலந்தரும் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொள்ளாதோர், காமம் மற்றும் கோபத்தின் வசப்பட்டோர் ஆகியோர் மன்னர்களிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக வெளிப்படையான பாவச் செயலைச் செய்யாதிருக்கிறார்கள். இதன் காரணமாகவே, க்ஷத்திரியக்கடமைகள் நீதிமிக்கவையாகக் கருதப்படுகின்றன.(28) பெற்றோரால் பாதுகாக்கப்படும் பிள்ளைகளைப் போல க்ஷத்திரியக் கடமைகளைச் செய்யும் மன்னர்களால் பாதுகாக்கப்படுவதாலேயே அனைத்து உயிரினங்களும் இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ்கின்றன என்பதில் ஐயமில்லை.(29) கடமைகள் அனைத்திலும் க்ஷத்திரியக் கடமைகளே முதன்மையானவை. உலகில் முதன்மையானவை என்று கருதப்படும் அந்த நித்திய கடமைகளே ஒவ்வொரு உயிரினத்தின் பாதுகாப்பையும் உறுதிசெய்கின்றன. நித்தியமான அவையே, அழிவில்லா பேற்றுக்கு வழிவகுப்பனவாகும்.” என்றான் {இந்திரன்}.(30)
கள்வர்களின் கடமைகள்! – சாந்திபர்வம் பகுதி – 65-க்ஷத்திரியக் கடமைகளின் மேன்மை; கள்வர்களும் பின்பற்ற வேண்டிய கடமைகள்; அரசகடமைகள் மற்றும் தண்டநீதியின் முக்கியத்துவம் ஆகியவற்றை மாந்தாதாவுக்குச் சொன்ன இந்திரன்; பழங்காலத்தில் நடந்த இந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..
இந்திரன் {மந்தாதாவிடம்}, “ஓ! மன்னா {மந்தாதா}, இத்தகு சக்தியைக் கொண்டவையும், பிற கடமைகள் அனைத்தையும் உள்ளடக்கியவையும், கடமைகள் அனைத்திலும் முதன்மையானவையுமான க்ஷத்திரியக் கடமைகள், உலகின் நன்மையை நாடுபவர்களும், உயர் ஆன்மா கொண்டோர்களுமான உன்னைப் போன்ற மனிதர்களால் நோற்கப்பட வேண்டும். அந்தக் கடமைகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லையென்றால், அனைத்து உயிரினங்களும் அழிவையடையும்.(1) அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்ட மன்னன், உழவுக்கான நிலத்தை மீட்பது, அதற்கு உரமிடுவது, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளப் பெரும் வேள்விகளைச் செய்வது, கையேந்துவதைப் புறக்கணிப்பது {துறவைப் புறக்கணிப்பது}, குடிமக்களைப் பாதுகாப்பது போன்றவற்றையே தன் முதன்மையான கடமைகளாகக் கருத வேண்டும்.(2) (கொடைபெறுதலைக்) துறப்பதே அறங்களில் முதன்மையானது எனத் தவசிகள் சொல்கின்றனர். அனைத்து வகைத் துறவுகளிலும், போரில் உடலைக் கைவிடுவதே முதன்மையானது. எப்போதும் க்ஷத்திரியக் கடமைகளை நோற்றவர்களும்,(3) தங்கள் ஆசான்களிடம் முறையாகக் காத்திருந்தவர்களும், பெரும் கல்வி பெற்றவர்களுமான பூமியின் ஆட்சியாளர்கள், ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டு, இறுதியில் எவ்வாறு தங்கள் உடல்களைத் துறந்தனர் என்பதை உன் கண்களாலேயே கண்டாய். அறத்தகுதி ஈட்ட விரும்பும் க்ஷத்திரியன், பிரம்மச்சரிய வாழ்வுமுறையை வாழ்ந்து, பிறகு எப்போதும் தகுதியைத் தரக்கூடியதான இல்லற வாழ்வையே நோற்க வேண்டும்.(4) (குடிமக்களுக்கிடையே) நீதி தொடர்புடைய சராசரி கேள்விகளின் வழக்கில் தீர்ப்பளிப்பதில் அவன் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும். அனைத்து வகையினரையும் தங்கள் தங்கள் கடமைகளை நோற்கச் செய்வதற்கும், அனைவரையும் பாதுகாப்பதற்கும், பல்வேறு திட்டங்கள், வழிமுறைகள், ஆற்றல்,(5) (நோக்கங்கள் நிறைவடைய நாடும்) உழைப்பு ஆகியவற்றுக்கும், அனைத்துக் கடமைகளையும் தங்கள் இலக்கினுள் கொண்ட க்ஷத்திரியக் கடமைகளே முதன்மையானவையாகச் சொல்லப்படுகின்றன. அரச கடமைகளின் விளைவாகவே பிற வகையினர் தங்களுக்குரிய கடமைகளைப் பின்பற்ற இயலும். இதன்காரணமாகவே தகுதியை உண்டாக்குவதில் அரச கடமைகளைச் சார்ந்தே பிற கடமைகள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.(6)
நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் அலட்சியம் செய்வோரும், இவ்வுலகம் சார்ந்த பொருட்களைப் பின்தொடர்ந்து அவற்றில் பெரும்பற்றோடிருப்போரும் அறிவிலிகளின் {விலங்குகளின்} இயல்பைக் கொண்டோராகச் சொல்லப்படுகிறார்கள். அரச கடமைகளின் செயல்பாட்டாலேயே அவர்கள் நீதியுடன் நடந்து கொள்ளும் வற்புறுத்தலுக்கு உட்படுகிறார்கள். எனவே அக்கடமைகளே {அரசகடமைகளே} அனைத்திலும் முதன்மையானவையாகச் சொல்லப்படுகின்றன.(7) மூன்று வேதங்களைப் பின்பற்றும் பிராமணர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் நடத்தைமுறைகளும், பிராமணர்களுக்காக விதிக்கப்படும் வாழ்வுமுறைகளும் அனைத்திற்கும் முன்பாக ஒவ்வொரு பிராமணனாலும் நோற்க வேண்டும். ஒரு பிராமணன் வேறு வகையில் நடந்து கொண்டால், ஒரு சூத்திரனைப் போலவே அவன் தண்டிக்கப்பட வேண்டும்[1].(8) ஓ! மன்னா {மந்தாதா}, நான்கு வாழ்வுமுறைகளின் கடமைகளும், வேதங்களால் பரிந்துரைக்கப்படும் சடங்குகளும் எப்போதும் ஒரு பிராமணனால் பின்பற்றப்பட வேண்டும். அவனுக்கு வேறேதும் கடமைகள் கிடையாது என்பதை அறிவாயாக.(9) வேறு வகையில் செயல்படும் பிராமணனுக்கு எந்த வாழ்வாதாரத்தையும் ஒரு க்ஷத்திரியன் அமைத்துக் கொடுக்கக்கூடாது. அவனது அறத்தகுதிகள் அவனது செயல்பாடுகளின் விளைவாகவே வளரும். உண்மையில் ஒரு பிராமணன் தர்மத்தின் தன்வடிவமாவான்.(10) தனக்காக விதிக்கப்படாத செயல்பாடுகளில் ஈடுபடும் பிராமணன் எந்த மதிப்புக்கும் தகுந்தவனாகான். அவன் {பிராமணன்} முறையான செயல்பாடுகளில் ஈடுபடவில்லையெனில், அவனை ஒருபோதும் நம்பக்கூடாது.(11)பல்வேறு வகையினருக்கும் உரிய கடமைகள் இவையே. (மக்களை) அவற்றைக் கடைப்பிடிக்கச் செய்வதில் முன்னேற்றமடையும் வகையில் க்ஷத்திரியர்கள் அவற்றைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இவையே க்ஷத்திரியர்களின் கடமைகளுமாகும். இதன்காரணமாகவே, வேறு எவற்றையும்விட அரசகடமைகளே அனைத்திலும் முதன்மையானவையாகச் சொல்லப்படுகின்றன. இவையே வீரர்களின் கடமைகள் என்றும், வீரர்களே இவற்றை நடைமுறைப்படுத்துவதில் முதன்மையானவர்கள் என்றும் நான் நம்புகிறேன்” என்றான் {இந்திரன்}.(12)
மாந்தாத்ரி {மாந்தாதா இந்திரனிடம்}, “யவனர்கள், கிராதர்கள், காந்தாரர்கள், சீனர்கள், சபரர்கள், பர்ப்பரர்கள், சகர்கள், துஷாரர்கள், கங்கர்கள், பஹ்லவர்கள் {பல்லவர்கள்}[2], ஆந்திரர்கள், மத்ரகர்கள், பௌண்டரர்கள், புளிந்தர்கள் {உஷ்ட்ரர்கள்}, ராமதர்கள், காம்போஜர்கள், {ஆரட்டர்கள், காசர்கள், மிலேச்சர்கள்} ஆகியோராலும், (ஆரிய) மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளில் வசிக்கும் பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களில் இருந்து எழுந்த பலர், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோராலும் செய்யப்பட வேண்டிய கடமைகள் என்ன? மேலும் களவையே வாழ்வாதாரமாகக் கொண்ட இனங்களை அடக்குவோரான எங்களைப் போன்ற மன்னர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள் என்ன?(13-15) இவை யாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ! சிறப்புமிக்கத் தேவா {இந்திரா}, எனக்கு அறிவுறுத்துவாயாக. ஓ! தேவர்கள் அனைவரின் தலைவனே {இந்திரனே}, க்ஷத்திரியர்களான எங்களின் நண்பன் நீயே” என்றான் {மாந்தாதா}.(16)
இந்திரன் {மந்தாதாவிடம்}, “களவைச் செய்யும் இனக்குழுக்கள் அனைத்தும் தங்கள் தாய்மாருக்கும், தந்தைமாருக்கும், தங்கள் ஆசான்களுக்கும், பெரியோர்களும், காடுகளில் உள்ள ஆசிரமங்களில் வாழும் துறவிகளுக்கும் தொண்டாற்ற வேண்டும்.(17) கள்வர் இனக்குழுக்கள் அனைத்தும் தங்கள் மன்னர்களுக்கும் தொண்டாற்ற வேண்டும். வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கடமைகள் மற்றும் சடங்குகள் அவர்களாலும் பின்பற்றப்பட வேண்டும்.(18) அவர்கள் பித்ருக்களைக் கௌரவிக்க வேள்விகளைச் செய்ய வேண்டும், கிணறுகள் வெட்ட வேண்டும், (உலகத் தொண்டில் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்), தாகத்துடன் இருக்கும் பயணிகளுக்கு நீர் கொடுக்க வேண்டும், படுக்கைகள் மற்றும் பருவகாலத்திற்கேற்ற பிற கொடைகளைப் பிராமணர்களுக்கு அளிக்க வேண்டும்.(19) தீங்கிழையாமை, உண்மை, கோபத்தை அடக்குதல், பிராமணர்களுக்கும், சொந்தங்களுக்கும் அவர்களுக்குரியதைக் கொடுத்து ஆதரித்தல், மனைவியர் மற்றும் பிள்ளைகளைப் பராமரித்தல், தூய்மை, அமைதி,(20) அனைத்து வகை வேள்விகளில் பிராமணர்களுக்குக் கொடையளித்தல் ஆகியவை தன் செழிப்பை விரும்பும் இந்த வகையின் ஒவ்வொரு மனிதனாலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அத்தகு மனிதன் உணவு மற்றும் செல்வத்துடன் கூடிய அனைத்து வகைப் பாகயக்ஞங்களைச் செய்ய வேண்டும்.(21) ஓ! பாவமற்றவனே, இவையும், இன்னும் இதைப் போன்ற கடமைகளும் பழங்காலத்தில் இவ்வகையினருக்காக விதிக்கப்பட்டிருக்கின்றன. ஓ! மன்னா, பிறர் அனைவருக்கும் விதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் அனைத்தும் கள்வர் வகையினராலும் செய்யப்பட வேண்டும்” என்றான் {இந்திரன்}.(22)
மாந்தாத்ரி {இந்திரனிடம்}, “மனிதர்களின் உலகில், நால்வகையினர் மற்றும் நான்கு வாழ்வுமுறைகள் அனைத்திலும் இத்தகு தீய மனிதர்கள் மறைந்து வாழ்வது காணப்படுகிறது” என்றான்.(23)
இந்திரன், “ஓ! பாவமற்றவனே, அரசகடமைகளும், தண்டனை அறிவியலும் {தண்டநீதியும்} மறைந்தால், மன்னர்களின் கொடுங்கோன்மையின் விளைவால் அனைத்து உயிரினங்களும் வெகுவாகப் பாதிக்கப்படும்.(24) கிருத யுகத்திற்குப் பிறகு, பல்வேறு வாழ்வுமுறைகளைப் பொறுத்தவரையில் பெருங்குழப்பம் ஏற்படும், பல்வேறு வகைச் சமுதாயக்குழுக்கள் சார்ந்த அடையாளங்களுடன் எண்ணற்ற பிக்ஷுகள் {துறவிகள்} தோன்றுவார்கள்.(25) புராணங்களையும், அறத்தின் உயர்ந்த உண்மைகளையும் அலட்சியம் செய்து, காமம் மற்றும் கோபத்தால் தூண்டப்பட்டுத் தவறான பாதைகளுக்கு மனிதர்கள் பிறழ்வார்கள்.(26) பாவம் நிறைந்த மனிதர்கள், தண்டனை அறிவியலின் துணையுடன் கூடிய உயர் ஆன்ம மனிதர்களால் (தீச்செயல்களிலிருந்து) தடுக்கப்படும்போதுதான், அனைத்திலும் மேன்மையானதும், அழிவற்றதும், அனைத்து நன்மைக்கும் ஊற்றுக்கண்ணாயிருப்பதுமான அறம் உறுதியுடன் நிறுவப்படும்.(27) அனைவருக்கும் மேன்மையான மன்னனை அவமதிக்கும் மனிதன் செய்யும் கொடைகள், ஆகுதிகள், பித்ருக்களுக்கான காணிக்கைகள் ஆகியவை கனியற்றதாகும்.(28) உண்மையில் நித்திய தேவனேயான ஓர் அறம்சார்ந்த மன்னனை தேவர்களேகூட அவமதிக்கமாட்டார்கள்.(29) அனைத்து உயிரினங்களின் தெய்வீகத்தலைவன், அண்டத்தைப் படைத்த பிறகு, மக்களின் கடமைகள் சார்ந்து ஒரு க்ஷத்திரியன் அவர்களை ஆள வேண்டும் என்று விரும்பினான்.(30) மனிதர்கள் செய்யும் கடமைகளின் போக்கைத் தன் அறிவின் துணை கொண்டு கண்காணிக்கும் மனிதனை {மன்னனை} நான் மதிக்கிறேன், வழிபடுகிறேன். அத்தகு கண்காணிப்பிலேயே க்ஷத்திரியக் கடமைகள் இருக்கின்றன” என்றான் {இந்திரன்}”.(31)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இந்திரனின் வடிவிலிருந்தவனும், பலமிக்கவனுமான அந்தத் தெய்வீக நாராயணன் இந்த வார்த்தைகளைச் சொன்னபிறகு, மருத்துகளின் துணையுடன், வற்றாத அருளுள்ள தன் நித்திய வசிப்பிடத்திற்குத் திரும்பினான்.(32) ஓ! பாவமற்றவனே, நல்லோரால் பின்பற்றப்படும் கடமைகள் பழங்காலத்தில் இவ்வழியில் இருந்தபோது, தூய ஆன்மாவும், கல்வியும் கொண்ட எந்த மனிதன்தான் ஒரு க்ஷத்திரியனை அலட்சியம் செய்ய முடியும்?(33) பார்வையற்ற மனிதர்கள் தங்கள் வழியில் செல்ல முடியாததைப் போல, நீதியற்ற செயல்பாடும், நீதியற்ற தவிர்த்தலும் அழிவையே அடைகின்றன.(34) ஓ! மனிதர்களில் புலியே, ஆதிகாலத்தில் இருந்து செயல்படத் தொடங்கியதும், முன்னோர்களுக்கு மிக முக்கியமுமான இந்த (கடமைகள் எனும்) சக்கரத்தை {தர்மச்சக்கரத்தை} நீ பின்பற்ற வேண்டும். ஓ! பாவமற்றவனே, இதைச் செய்ய நீ தகுந்தவனாவாய் என்பதை நான் அறிவேன்” என்றார் {பீஷ்மர்}.(35)
வர்ணாசிரமங்களில் ராஜதர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 66- வாழ்வுமுறைகள் அனைத்தின் கடமைகளையும் மீண்டும் விரிவாகச் சொல்லும்படி பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; பிற கடமைகள் அனைத்தும் அரச கடமைகளிலேயே அடங்கியிருக்கின்றன என்ற பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மனித வாழ்க்கையின் வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைக்} குறித்து நீர் என்னிடம் சொன்னீர். நான் அவற்றைக் குறித்து அதிகம் அறிய விரும்புகிறேன். அவற்றை விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, இவ்வுலகில் நல்லோரால் பயிலப்படும் கடமைகள் அனைத்தையும் நான் அறிந்த அளவுக்கு நீயும் அறிவாய்.(2) ஓ! அறவோரில் முதன்மையானவனே, வேறு வாழ்வுமுறைகளைப் பின்பற்றும் வேறு சிலரால் பயிலப்படும் கடமைகளின் விளைவாக (ஒரு மன்னன்) அடையும் தகுதி குறித்துக் கேட்பாயாக.(3) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, நான்கு வாழ்வுமுறைகளின் கடமைகளைப் பயிலும் மனிதர்களுக்குரிய தகுதிகள் அனைத்தும் அறம்சார்ந்த மன்னர்களைப் பற்றுகின்றன.(4)
ஓ! யுதிஷ்டிரா, காமம் மற்றும் வெறுப்பின் ஆளுகைக்குட்படாமல், தண்டனை அறிவியலின் துணை கொண்டு ஆட்சி செய்து, அனைத்து உயிரினங்களையும் சமமாகக் கருதும் ஒரு மன்னன், பைக்ஷிய வாழ்வுமுறையின் இலக்கை (பிரம்மத்தை) அடைகிறான்.(5) அறிவுடையவனும், சரியான சந்தர்ப்பங்களில் தகுந்தோருக்குக் கொடை அளிப்பவனும், எவ்வாறு உதவுவது, எவ்வாறு தண்டிப்பது என்பதை அறிந்தவனும், சாத்திர விதிகளின் படி அனைத்திலும் நடந்து கொள்பவனும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவனுமான மன்னன், கார்ஹஸ்த்ய வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(6) ஓ! குந்தியின் மகனே, வழிபாட்டுக்குத் தகுந்தோருக்கு உரியதைக் கொடுத்து எப்போதும் வழிபடுபவன் பைக்ஷிய வாழ்வு முறையின் இலக்கை முழுமையாக அடைகிறான்.(7) ஓ! யுதிஷ்டிரா, தன்னாலான சக்தியுடன் தன் சொந்தங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் துயரில் இருந்து மீட்கும் மன்னன், வானப்ரஸ்த வாழ்வுமுறையின் நோக்கத்தை அடைகிறான்.(8) ஓ! குந்தியின் மகனே, மனிதர்களில் முதன்மையானோரையும், யதிகளில் முதன்மையானோரையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கௌரவிக்கும் மன்னன், வானப்ரஸ்த வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(9) ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, தினமும் பித்ருக்களுக்குக் காணிக்கையளிப்பவனும், மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் காணிக்கைகளை அளிப்பவனுமான மன்னன், அதே {வானப்ரஸ்த} வாழ்வுமுறையின் நோக்கத்தை அடைகிறான்.(10,11)
ஓ! மனிதர்களில் புலியே, நல்லோரைக் காக்க வேறு நாடுகளைக் கலங்கடிக்கும் மன்னன், அதே {வானப்ரஸ்த} வாழ்வுமுறையின் நோக்கத்தை அடைகிறான்.(12) அனைத்துயிரினங்களின் பாதுகாப்பின் விளைவாகவும், தன் நாட்டை முறையாகப் பாதுகாப்பதன் விளவாகவும், ஒரு மன்னன், காக்கப்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கையின் அளவுக்குப் பல வேள்விகளின் தகுதிகளை அடைந்து, அதன்படியே சந்நியாச வாழ்வுமுறையின் நோக்கத்தை அடைகிறான்.(13) தினமும் வேதங்களைக் கற்பது, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, ஆசான்களை வழிபடுவது, தன் குருவுக்குத் தொண்டாற்றுவது ஆகியன பிரம்மச்சரியத்தின் இலக்கை அடைய வழிவகுக்கும்.(14) ஓ! மனிதர்களில் புலியே, தினமும் தன் மந்திரங்களை அமைதியாக ஓதுபவனும், விதிப்படி தேவர்களை எப்போதும் வழிபடுபவனுமான மன்னன், கார்ஹஸ்த்ய வாழ்வுமுறையின் நோக்கத்தை அடைகிறான்.(15)
தன் நாட்டைப் பாதுகாக்கத் தீர்மானித்துப் போரில் ஈடுபடவோ, மரணமடையவோ நேரும் மன்னன் வானப்ரஸ்த வாழ்வு முறையின் இலக்கை அடைகிறான்.(16) ஓ! பாரதா, அனைத்து உயிரினங்களிடமும் நேர்மை மற்றும் உண்மையுடன் எப்போதும் நடந்து கொள்பவனான மன்னன் வானப்ரஸ்த வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(17) வானப்ரஸ்த வாழ்வுமுறை வாழ்பவர்களுக்கும், மூன்று வேதங்களை அறிந்த பிராமணர்களுக்கும் கொடையளிக்கும் மன்னன் வானப்ரஸ்த வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(18) ஓ! பாரதா, அனைத்துயிரினங்களிடமும் கருணையைக் காட்டி, கொடூரத்தை முற்றிலும் தவிர்க்கும் மன்னன், அனைத்து வாழ்வுமுறைகளின் இலக்குகளையும் அடைகிறான்.(19) ஓ! யுதிஷ்டிரா, ஓ! குந்தியின் மகனே, அனைத்து சந்தர்ப்பங்களிலும் இளையவர்களுக்கும், முதியவர்களுக்கும் கருணை காட்டும் மன்னன் அனைத்து வாழ்வுமுறைகளின் இலக்குகளையும் அடைகிறான்.(20)
ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, தன் பாதுகாப்பை நாடும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணத்தை வழங்கும் மன்னன் கார்ஹஸ்த்ய வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(21) அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவனும், தகுந்தோரைக் கௌரவிப்பவனுமான மன்னன், கார்ஹஸ்த்ய வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(22) மூத்த மற்றும் இளைய சகோதரர்களின் மனைவிமார், அவர்களுடைய பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கு உதவிகளை அளிப்பதும், தண்டனைகளால் பீடிப்பதும், ஒரு மன்னனின் இல்லறக் கடமைகளாகும், இவையே அவனது சிறந்த தவமுமாகும்[1].(23) ஓ! மனிதர்களில் புலியே, நல்லோரையும், வழிபாட்டுக்குத் தகுந்தோரையும் கௌரவிப்பவனும், (தவத்தின் மூலம்) தன்னறிவு அடைந்தோரைப் பாதுகாப்பவனுமான மன்னன் கார்ஹஸ்த்ய வாழ்வுமுறையின் இலக்கை அடைவான்.(24) ஓ! பாரதா, வானப்ரஸ்த வாழ்வுமுறையில் வாழும் மனிதர்களையும், பிற வாழ்வு முறைகளில் வாழ்வோரையும் தன் இல்லத்துக்கு அழைத்து, அவர்களுக்கு உணவளிப்பது ஒரு மன்னனின் இல்லறக் கடமையாகும்.(25)படைப்பாளனால் விதிக்கப்பட்ட கடமைகளை முறையாகப் பின்பற்றும் மன்னன், அனைத்து வாழ்வுமுறைகளின் அருள் தகுதிகளை அடைகிறான்.(26) ஓ! குந்தியின் மகனே, ஓ! யுதிஷ்டிரா, எந்த நற்குணமும் அழியாமல் இருக்கும் மன்னன் வானப்ரஸ்தம் மற்றும் வேறு வாழ்வுமுறைகள் அனைத்தையும் நோற்பவனாகக் கல்விமான்களால் சொல்லப்படுகிறான்.(27) குலம், வயது, பதவி, நிலை ஆகியவற்றில் தகுந்தவர்களுக்குக் கௌரவமளிக்கும் மன்னன் அனைத்து வாழ்வு முறைகளிலும் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறான்[2].(28) ஓ! குந்தியின் மகனே, ஓ! மனிதர்களில் புலியே, தன் நாட்டின் கடமைகளையும், தன் குடும்பத்தின் கடமைகளையும் செய்யும் ஒரு மன்னன், அனைத்து வாழ்வுமுறைகளின் தகுதியையும் அடைகிறான்.(29) ஓ! மன்னா, முறையான காலங்களில் நல்லோருக்கு வெகுமதிகளையோ, மதிப்புமிக்கப் பரிசுகளையோ அளிக்கும் மன்னன், அனைத்து வகை வாழ்வுமுறைகளின் தகுதிகளையும் அடைகிறான்.(30)ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, ஆபத்தையும், அச்சத்தையும் அடைந்த போதிலும், மனிதர்கள் அனைவரின் கடமைகளில் {தர்மத்திலும்} கண் கொண்ட மன்னன், அனைத்து வகை வாழ்வுமுறைகளின் {ஆசிரமங்களின்} தகுதியையும் ஈட்டுகிறான்.(31) ஒரு மன்னன், தன் ஆட்சிப்பகுதிகளில் உள்ள நல்லோரைப் பாதுகாப்பதால் ஈட்டப்படும் தகுதிகளின் பங்கை அடைகிறான்.(32) மறுபுறம், ஓ! மனிதர்களில் புலியே, தங்கள் ஆட்சிப்பகுதிகளில் உள்ள நல்லோரை மன்னர்கள் காக்கவில்லையெனில், அவர்கள் (அந்தச் செயல் அல்லது புறக்கணிப்புக்கான) பாவத்தையே ஈட்டுகிறார்கள்.(33) ஓ! யுதிஷ்டிரா, ஓ! பாவமற்றவனே, (தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதில்) மன்னர்களுக்கு உதவி புரியும் மனிதர்களும், (அந்தப் பாதுகாப்பின் விளைவாக) பிறரால் ஈட்டப்படும் தகுதிகளின் பங்கை அடைவதற்கு {மன்னர்களைப் போலவே} சமமான தகுதியைப் பெறுகிறார்கள்.(34) நாம் பின்பற்றும் கார்ஹஸ்த்தியமே வாழ்வுமுறைகள் அனைத்திலும் மேன்மையானது எனக் கல்விமான்கள் சொல்கின்றனர். அதுகுறித்த தீர்மானங்கள் மிகத் தெளிவானவையாகும். ஓ! மனிதர்களில் புலியே அது நிச்சயம் புனிதமானதே.(35)
தன்னைப் போலவே பிற உயிரினங்கள் அனைத்தையும் கருதுபவனும், எத்தீங்கையும் செய்யாதவனும், கோபத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவனுமான மனிதன் இம்மையிலும், மறுமையிலும் பேரின்பத்தை அடைகிறான்[3].(36) ஒரு மன்னன், தன் அரச கடமைகளையே பெரும் வேகம் மிக்கக் கப்பலாகக் கொண்டு, கொடைகள் எனும் காற்றால் தூண்டப்பட்டு, சாத்திரங்களைத் துடுப்பாகக் கொண்டு, நுண்ணறிவையே கப்பல் அதிகாரியின் பலமாகக் கொண்டு, அறத்தின் சக்தியால் உலகமெனும் பெருங்கடலை எளிதாகக் கடப்பான்[4].(37) ஒருவனுடைய இதயத்தில் உலகப்பொருள் ஒவ்வொன்றின் மீதும் இருக்கும் ஆசை விலகினால் அவன் தன்னறிவை {தன் நற்குணத்தை} மட்டுமே சார்ந்திருப்பவனாகக் கருதப்படுகிறான். இந்நிலையில் அவன் விரைவில் பிரம்மத்தை அடைகிறான்[5].(38) ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, ஒரு மன்னன், இதயத்தில் உள்ள விருப்பங்களையும் ஆசைகளையும் கட்டுப்படுத்தி, தியானத்தின் மூலம் உற்சாகமடைந்து, {குடிமக்களைப்} பாதுகாக்கும் கடமையை வெளிப்படுத்தினால், அவன் பெரும் தகுதியை அடைவதில் வெல்கிறான்.(39) எனவே, ஓ! யுதிஷ்டிரா, பக்தி செயல்பாடுகளைக் கொண்டோரும், வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டோருமான பிராமணர்களையும், பிற மனிதர்கள் அனைவரையும் கவனமாகப் பாதுகாக்க முயல்வாயாக.(40) ஓ! பாரதா, ஒரு மன்னன், பாதுகாப்பு எனும் கடமையைச் செய்வதன் மூலம், காட்டில், ஆசிரமங்களில் உள்ள துறவிகள் ஈட்டும் தகுதியைவிட நூறு மடங்கு தகுதியை ஈட்டுகிறான்.(41)ஓ! பாண்டுவின் மூத்த மகனே {யுதிஷ்டிரனே}, மனிதர்களின் பல்வேறு கடமைகளை நான் உனக்கு விளக்கிவிட்டேன். நித்தியமானவையும், பழங்காலத்தில் இருந்து பெரும் மனிதர்களால் பயிலப்படுபவையுமான அரசகடமைகளை நீ பின்பற்றுவாயாக.(42) ஓ! மனிதர்களில் புலியே, (உன் குடிமக்களைப்) பாதுகாக்கும் கடமையில் குவிந்த கவனத்துடன் நீ ஈடுபட்டால், நான்கு வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} மற்றும் நான்கு வகைகள் {வர்ணங்கள்} சார்ந்த மனிதர்கள் அனைவரின் தகுதியையும் நீ அடைவாய்” என்றார் {பீஷ்மர்}.(43)
அரசற்ற நிலையும், மனுவும்! – சாந்திபர்வம் பகுதி – 67-அரசற்ற நாட்டின் நிலையை வர்ணித்த பீஷ்மர்; மன்னனால் உண்டாகும் நன்மையையும், அரசற்ற நிலையால் உண்டாகும் தீமையையும் சொன்னது; பழங்காலத்தில் அரசற்ற நிலையில் எவ்வாறு மனு மன்னனானான் என்பதைச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “{இதுவரை} நான்கு வாழ்வு முறைகள் மற்றும் நான்கு வகையினரின் கடமைகள் குறித்து நீர் சொன்னீர். ஓ! பாட்டா, ஒரு நாட்டின் முக்கியக் கடமைகள் என்னென்ன என்பதை எனக்கு இப்போது சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு மன்னனை (தேர்ந்தெடுத்து) பட்டமேற்கச் செய்வதே, ஒரு நாட்டின் முதற்கடமையாகும். அரசற்ற நிலையிலேயே தொடரும் நாடு பலவீனமடைந்து விரைவில் கள்வர்களால் பீடிக்கப்படும்.(2) அரசற்ற நிலையால் பீடிக்கப்படும் நாடுகளில் அறம் நிலைபெறாது. குடிமக்கள் ஒருவரையொருவர் விழுங்குவார்கள். சாத்தியமான நிலைகளில் மிகவும் கீழ்நிலை அரசற்ற நிலையே ஆகும்.(3) ஒரு மன்னனுக்கு முடிசூட்டுவதால், (அந்த மன்னனின் உள்ளிருக்கும்) இந்திரனே முடிசூட்டப்படுகிறான் என்று சுருதிகள் {வேதங்கள்} அறிவிக்கின்றன. செழிப்பில் விருப்பம் இருக்கும் ஒரு மனிதன், இந்திரனை வழிபடுவதைப் போலவே மன்னனை வழிபட வேண்டும்.(4) அரசற்ற நிலையால் பீடிக்கப்படும் நாட்டில் ஒருவரும் வசிக்கக்கூடாது. அரசற்ற நிலை நீடிக்கும் நாடுகளில் ஊற்றப்படும் காணிக்கைகளை {ஆகுதிகளை} அக்னி (தேவர்களுக்குக்) கொடுப்பதில்லை.(5)
அரசற்ற நிலையால் பலவீனமடைந்த நாடுகளைத் தன் ஆட்சிப்பகுதிகளோடு இணைத்துக் கொள்ளும் விருப்பத்தோடு ஒரு பலமிக்க மன்னன் அவற்றை அணுகினால், மக்களே முன்வந்து அந்தப் படையெடுப்பாளனை மரியாதையுடன் வரவேற்க வேண்டும். இத்தகு நடத்தையே நல்லறிவுக்குப் பொருந்துவதாக இருக்கும். அரசற்ற நிலையைவிட வேறு பெரிய தீமை எதுவுமில்லை[1].(7) அந்தப் பலமிக்கப் படையெடுப்பாளன் தகைமையாளனாக {நேர்மைநெறியுடன் கூடியவனாக} இருந்தால், அனைத்தும் சரியாக இருக்கும். மறுபுறம் கடும்கோபம் கொண்டவனாக இருந்தால் {கோபம் மூட்டப்பட்டால்} அவன் அவனைவரையும் கொல்லக்கூடும்.(8) எளிதாகப் பால்கறக்க முடியாத பசு அதிகத் துன்பத்துக்கு ஆளாகும். மறுபுறம், எளிதாகப் பாலைக் கறக்கவிடும் பசு, எந்தத் துன்பத்துக்கும் ஆளாக நேராது.(9) எளிதாக வளையும் பொருளைச் சுட வேண்டிய தேவையில்லை. எளிதாக வளையும் மரம், (தோட்டக்காரனின் கைகளில்) எந்தத் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டியதில்லை.(10)ஓ! வீரா {யுதிஷ்டிரா}, இந்த எடுத்துக்காட்டுகளால் வழிநடத்தப்படும் மனிதன், பலமிக்கவர்கள் முன்பு பணிய வேண்டும். பலமிக்க மனிதனின் முன்பு தன் தலையை வணங்கும் மனிதன் உண்மையில் இந்திரனிடமே தலைவணங்குகிறான்.(11) செழிப்பை விரும்பும் மனிதர்கள், இந்தக் காரணங்களுக்காகவே, ஒரு மனிதனை (தேர்ந்தெடுத்து) தங்கள் மன்னனாக முடிசூட்ட வேண்டும். அரசற்ற நாடுகளில் வாழ்வோரால் தங்கள் செல்வத்தையோ, மனைவியரையோ அனுபவிக்க முடியாது.(12) பாவம் நிறைந்த மனிதன், அரசற்ற காலங்களில் பிற மக்களின் செல்வத்தைக் கவர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறான். எனினும் (தவறான வழியில் அடையப்பட்ட) தன் செல்வம் பிறரால் பறிக்கப்படும்போது அவன் ஒரு மன்னனை விரும்புகிறான்.(13) எனவே, அரசற்ற காலங்களில் மிகத் தீமையானவர்கள்கூட மகிழ்ச்சியாக {பாதுகாப்பாக} இருக்கமுடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது[2]. ஒருவனுடைய செல்வமானது இருவரால் பறிக்கப்படும். அந்த இருவருடையது, ஒன்றாகச் செயல்படும் பலரால் பறிக்கப்படும்.(14) அடிமையாக இல்லாதவன் அடிமையாக்கப்படுவான். மேலும் பெண்கள் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்படுவார்கள். இந்தக் காரணங்களுக்காகவே, தேவர்கள், மக்களைப் பாதுகாப்பதற்காக மன்னர்களைப் படைத்தார்கள்.(15)பூமியில் தண்டனை வழங்கும் கோலை {செங்கோலைத்} தரித்த மன்னன் எவனும் இல்லையென்றால், நீரில் உள்ள மீன்களைப் போலப் பலமானவர்கள் பலமற்றவர்களை இரையாக்குவார்கள்.(16) நீரில் இருக்கும் பலமிக்க மீன்கள், பலமற்றவையை விழுங்குவதைப் போல, பழங்காலத்தில் அரசற்ற நிலையின் விளைவால் மனிதர்கள் ஒருவரையொருவர் விழுங்கி அழிவைச் சந்தித்தனர் என்று நாம் கேள்விப்படுகிறோம். அப்போது அவர்களில் சிலர் ஒன்று சேர்ந்து, சில குறிப்பிட்ட உடன்படிக்கைகளைச் செய்தனர் என்றும் நாம் கேள்விப்படுகிறோம். {அந்த உடன்படிக்கை பின்வருமாறு} அவர்கள் “எவன் கடுஞ்சொல் பேசுகிறானோ, வன்முறை உணர்வு கொள்கிறானோ, எவன் அடுத்தவரின் மனைவியரை நெறிதவறவோ, அபகரிக்கவோ செய்கிறானோ, எவன் பிறருக்குச் சொந்தமான செல்வத்தைக் களவாடுகிறானோ, அவன் நம்மால் கைவிடப்பட வேண்டும்” என்று சொன்னார்கள். அனைத்து வகை மக்களுக்கும் நம்பிக்கை ஊட்டுவதற்காக அவர்கள் இத்தகு உடன்படிக்கையைச் செய்து கொண்டு சில காலம் வாழ்ந்தனர்.(19) அவர்கள் சிலகாலம் கழித்துத் துன்பத்துடன் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்று, “ஓ! தெய்வீகத் தலைவா, ஒரு மன்னனில்லாமல் நாங்கள் அழிவடையப் போகிறோம். எவனாவது ஒருவனை எங்கள் மன்னனாக நியமிப்பீராக.(20) நாங்கள் அனைவரும் அவனை வழிபடுவோம். அவன் எங்களைப் பாதுகாக்க வேண்டும்” என்றனர். இவ்வாறு கேட்கப்பட்ட பெரும்பாட்டன் {பிரம்மன்} மனுவிடம் கேட்டார். எனினும், மனு அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.(20)
மனு {பிரம்மனிடம்}, “பாவம்நிறைந்த செயல்கள் அனைத்துக்கும் நான் அஞ்சுகிறேன். ஒரு நாட்டை ஆள்வது மிகக் கடினமானதாகும். அதிலும் குறிப்பாக, தங்கள் நடத்தையில் எப்போதும் பொய்யர்களாக, வஞ்சகர்களாக இருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் ஒரு நாட்டை ஆள்வது மிகக் கடினமானதாகும்” என்றான்.(22)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அப்போது பூமியில் வசித்தோர் அவனிடம், “அஞ்சாதே. மனிதர்கள் இழைக்கும் பாவங்கள், (உன்னைக் கிஞ்சிற்றும் களங்கப்படுத்தாமல்) அவற்றை இழைப்போரை மட்டுமே தீண்டும். உன் கருவூலத்தைப் பெருக்குவதற்காக நாங்கள் எங்கள் விலங்குகளிலும் மதிப்புமிக்க உலோகங்களிலும் ஐம்பதில் ஒரு {1/50} பங்கைத் தருகிறோம். எங்கள் தானியங்களில் பத்தில் ஒரு {1/10} பங்கைத் தருகிறோம். எங்கள் கன்னிகையர் மணம் செய்து கொள்ள விரும்பும்போது, அவர்களில் மிக அழகானவர்களை உனக்கு அளிக்கிறோம்.(23,24) ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும், விலங்குகள் மற்றும் வாகனங்களைச் செலுத்துவதிலும் முதன்மையானோராக இருக்கும் மனிதர்கள், இந்திரனுக்குப் பின்னால் வரும் தேவர்களைப் போல உனக்குப் பின் நடப்பார்கள்.(25) இவ்வழியில் பெருகும் உன் பலத்துடன், வெல்லப்பட முடியாதவனாகி, பேராற்றலுடன் எங்கள் மன்னனாக இருந்து, யக்ஷர்களையும், ராட்சசர்களையும் காக்கும் குபேரனைப் போல மகிழ்ச்சியாக எங்களைப் பாதுகாப்பாயாக.(26) உன் பாதுகாப்பின் கீழ் மனிதர்கள் ஈட்டும் தகுதியில் {புண்ணியத்தில்}, நான்கில் ஒரு பங்கு உனதாகட்டும்.(27) ஓ! மன்னா {மனு}, உன்னால் எளிதாக அடையப்படும் அத்தகுதியால் பலமடைந்து, ஆயிரம் வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} தேவர்களைக் காப்பதைப் போல எங்களை நீ பாதுகாப்பாயாக.(28) தன் கதிர்களால் அனைத்தையும் எரிக்கப்புறப்படும் சூரியனைப் போல வெற்றிகளை அடையப் புறப்படுவாயாக. எதிரிகளின் செருக்கை நொறுக்குவாயாக. (இவ்வுலகில்) நல்லோர் என்றும் வெல்லட்டும் {வெல்ல வேண்டும்}” என்றனர்.(29)
பூமியில் வசிப்போரால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், பெருஞ்சக்தி படைத்தவனுமான அந்த மனு, பெரும் படையின் துணையுடன் புறப்பட்டான். உயர் பிறப்பைக் கொண்ட அவன் {மனு}, அப்போது ஆற்றலால் சுடர்விடுவதாகத் தெரிந்தது.(30) இந்திரனின் வலிமையைக் காணும் தேவர்களைப் போல மனுவின் வலிமையைக் கண்ட பூமிவாசிகள், அச்சமடைந்தவர்களாக, தங்கள் தங்களுக்குரிய கடமைகளில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தினர்.(31) பிறகு மனு, அனைத்து இடங்களில் நேரும் தீச்செயல்களைத் தடுத்து, அனைத்து மனிதர்களையும் தங்கள் தங்கள் கடமைகளில் நிறுவி, (நல்ல காரியத்திற்காகத் திரியும்) மழைநிறைந்த மேகத்தைப் போல உலகையே வலம் வந்தான்.(32)
ஓ! யுதிஷ்டிரா, செழிப்பை விரும்புவோரான பூமியில் உள்ள மனிதர்கள் முதலில் ஒரு மன்னனைத் தேர்ந்தெடுத்து, அனைவரின் பாதுகாப்புக்காக அவனுக்கு முடிசூட்ட வேண்டும்.(33) ஆசான்களின் முன்னிலையில் பணியும் சீடர்களைப் போலவோ, இந்திரனின் முன்னிலையில் தேவர்களைப் போலவோ மனிதர்கள் அனைவரும் மன்னனின் முன்பு பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.(34) தன் மக்களால் கௌரவிக்கப்பட்ட ஒருவன், தன் எதிரிகளிடமும் மதிப்புமிக்கவனாவான். தன் மக்களால் அவமதிக்கப்படுபவனோ, எதிரிகளாலும் அவமதிக்கப்படுவான்.(35) மன்னன் தன் எதிரிகளால் அவமதிக்கப்பட்டால், அவனது குடிமக்கள் அனைவரும் மகிழ்ச்சியற்றவர்களாவார்கள். எனவே, குடைகள், வாகனங்கள், வெளிப்புற ஆபரணங்கள்,(26) உணவு, பானங்கள், மாளிகைகள், இருக்கைகள், படுக்கைகள் மற்றும் பயன்பாட்டுக்கும், காட்சிக்கும் உரிய அனைத்துப் பொருட்களும் மன்னனுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.(37) அத்தகு வழிமுறைகளிலாலேயே ஒரு மன்னன் (சிறந்த) பாதுகாப்பைத் தரும் தன் கடமைகளை ஆற்ற முடிந்தவனாகவும், தடுக்கப்பட முடியாதவனாகவும் ஆக முடியும். அவன் புன்னகையுடனே பேச வேண்டும்(38) பிறரால் இனிமையாகப் பேசப்படும் அவன், பிறரிடம் இனிமையாகவே பேச வேண்டும்.(38) அவன், (தனக்குத் தொண்டாற்றுபவர்களிடம்) நன்றியுணர்வுமிக்கவனாகவும், (தன் மரியாதைக்குரியவர்களிடம்) உறுதியான அர்ப்பணிப்புமிக்கவனாகவும், ஆசைகளைக் கட்டுக்குள் கொண்டவனாகவும் இருந்து, அவர்களுக்கு உரியதைக் கொடுக்க வேண்டும். பிறரால் பார்க்கப்படும் அவன், அவர்களை மென்மையாகவும், இனிமையாகவும், அழகாகவும் பார்க்க வேண்டும்” {என்றார் பீஷ்மர்}.(39)
அரசனின் இன்றியமையாத்தன்மை! – சாந்திபர்வம் பகுதி – 68-மன்னர்கள் தேவர்களுக்கு இணையாகப் போற்றப்படுவது ஏன் என்று கேட்ட யுதிஷ்டிரன்; ஒரு நாட்டுக்கு மன்னன் ஏன் அவசியம் என்று வசுமனஸுக்குப் பிருஹஸ்பதி சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் ஒரு தேவன் என்று ஏன் பிராமணர்கள் சொன்னார்கள்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, இது தொடர்பாகப் பழங்கதையில் பிருஹஸ்பதிக்கும், வசுமனசுக்கும்[1] இடையில் நடந்த உரையாடல் தென்படுகிறது.(2) வசுமனஸ் என்ற பெயரில், பெரும் நுண்ணறிவு கொண்ட ஒருவன் கோசலத்தின் மன்னனாக இருந்தான். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அவன் பேரறிவைக் கொண்ட பெரும் தவசி பிருஹஸ்பதியிடம் கேள்வி கேட்டான்.(3) பணிவின் தேவைகளை அறிந்தவனும், அனைவரின் நன்மையிலும் அர்ப்பணிப்புள்ளவனுமான மன்னன் வசுமனஸ் உரிய பணிவுடன் அந்தப் பெரும் தவசியை வலம் வந்து, முறையாக அவரை வணங்கி, மனிதர்கள் மகிழ்ச்சி அடைவதற்கான விருப்பத்தால் உந்தப்பட்டு ஒரு நாட்டிற்கு உண்டான விதிகளைக் குறித்து அந்த அறம்சார்ந்த பிருஹஸ்பதியிடம் விசாரித்தான்.(4,5)வசுமனஸ் {பிருஹஸ்பதியிடம்}, “உயிரினங்கள் என்ன வழிமுறைகளில் வளர்கின்றன? அவை எதனால் அழிவை அடைகின்றன? ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, யாரைத் துதித்து அவை நித்திய மகிழ்ச்சியை அடைகின்றன?” என்று கேட்டான்.(6) அளவிலா சக்தி கொண்ட கோசல மன்னனால் இவ்வாறு கேட்கப்பட்டவரும், பெரும் ஞானம் கொண்டவருமான பிருஹஸ்பதி, மன்னர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையைக் குறித்துப் பொறுமையாக அவனிடம் உரையாடினார்.(7)
பிருஹஸ்பதி {வசுமனஸிடம்}, “ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, மனிதர்கள் அனைவரின் கடமைகளும் மன்னனிடமே தங்கள் வேர்களைக் கொண்டுள்ளன. மன்னன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகவே மனிதர்கள் ஒருவரையொருவர் விழுங்காதிருக்கிறார்கள்.(8) நலந்தரும் கட்டுப்பாடுகளில் உள்ள அலட்சியத்தையும், அனைத்து வகைக் காமங்களையும் தடுத்துத் தன் கடமைகளை நோற்பதின் மூலம் ஒரு மன்னனே பூமியில் அமைதியைக் கொண்டுவருகிறான். இஃதை அடையும் அவன் மகிமையில் ஒளிர்கிறான்.(9) ஓ! மன்னா {வசுமனஸ்}, சூரியனும், சந்திரனும் எழவில்லையெனில் ஒற்றையொன்று காண முடியாமல் முற்றான இருளில் மூழ்கும் உயிரினங்கள் அனைத்தும்,(10) ஆழமில்லாத நீரில் மீன்களும், ஆபத்தில்லாத இடத்தில் பறவைகளும் (ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத்) தங்கள் விருப்பம் போலத் விளையாடித் திரிந்து, மோதி மீண்டும் மீண்டும் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டு உறுதியான அழிவை அடைவதைப் போலவே,(12) தங்களைப் பாதுகாக்க எந்த மன்னனும் இல்லாத மனிதர்கள், இடையனின் கண்காணிப்பில்லாத கால்நடை மந்தையைப் போல இருளில் மூழ்கி அழிவையே அடைவார்கள்.(13)
மன்னன் {குடிமக்களைப்} பாதுகாக்கும் தன் கடமையைச் செய்யவில்லையெனில், பலமிக்கவர்கள் பலவீனமானவர்களின் உடைமைகளைப் பலவந்தமாக அபகரிப்பார்கள், பலவீனர்கள் எளிதாக எதையும் கொடுக்கவில்லையெனில் அவர்களின் உயிரையே கூட எடுப்பார்கள்.(14) எவராலும், தன் உடைமைகளில் எதையும், “இஃது எனது” என்று சொல்ல முடியாது. அப்போது மனைவியர், மகன்கள், உணவு, பிற வகை உடைமைகள் ஆகியன {எவனுக்கும்} நிலைக்காது.(15) மன்னன் பாதுகாப்பை அளிக்கவில்லையெனில் அனைத்தும் அழிவுக்குள்ளாகும். மன்னன் பாதுகாக்கவில்லையெனில் பிறருக்குச் சொந்தமான வாகனங்கள், ஆடைகள், ஆபரணங்கள், மதிப்புமிக்கக் கற்கள், பிறவகை உடைமைகள் ஆகியவற்றைத் தீய மனிதர்கள் பலவந்தமாக அபகரிப்பார்கள்.(16) மன்னனின் பாதுகாப்பில்லாத போது, தங்கள் செயல்பாடுகளில் நியாயமாக நடந்து கொள்வோர் மீது பல்வேறு ஆயுதங்கள் பாயும், அநீதியே அனைவராலும் பின்பற்றப்படும்.(17) அரசபாதுகாப்பில்லாத போது, மனிதர்கள் தங்கள் தாய்மாரையும், வயதுமுதிர்ந்த தங்கள் தந்தைமாரையும் கூட அவமதிக்கவோ, அவர்களுக்குத் தீங்கிழைக்கவோ செய்வார்கள். ஆசான்கள் விருந்தினர்கள் மற்றும் முதியோரையும் அவமதிக்கவோ, அவர்களுக்குத் தீங்கிழைக்கவோ செய்வார்கள்.(18) மன்னன் பாதுகாப்பை வழங்கவில்லையெனில், செல்வமுடைய அனைவரும், மரணம், அடைக்கப்படுதல் {சிறை}, சமய தண்டனை ஆகியவற்றுக்கு உள்ளாக நேரிடும். உடைமை என்ற கருத்தேகூட மறைந்து போகும்.(19) மன்னன் பாதுகாக்கவில்லையெனில், உரிய காலத்திற்கு முன்பே அனைத்தும் அழிவடையும், நாட்டின் ஒவ்வொரு பகுதியும் கள்வர்களால் மேலாதிக்கம் செய்யப்படும் {ஆளப்படும்}, அனைவரும் பயங்கர நரகில் வீழ்வார்கள்.(20)
மன்னன் பாதுகாக்கவில்லையெனில், திருமணம், கலவி குறித்த கட்டுப்பாடுகள் அனைத்தும் (இரத்த உறவு மற்றும் பிற வகை உறவுகள் ஆகியவற்றின் மூலம்) இல்லாமல் போகும்[2]. உழவு, வணிகம் ஆகியன அனைத்தும் குழப்பத்தில் வீழும்; அறநெறி தாழ்ந்து தொலைந்து போகும்; மூன்று வேதங்களும் மறைந்துவிடும்.(21) பாதுகாப்பை வழங்கும் தன் கடமையை மன்னன் செய்யவில்லையெனில், அதற்கு மேலும் விதிப்படி காணிக்கைகள் அளித்து முறையாக நிறைவு செய்யப்படும் வேள்விகள் ஏதும் நடைபெறாது; திருமணங்கள் நடைபெறாது; சமூகம் என்பதே இல்லாமல் போகும்.(22) பாதுகாப்பை வழங்கும் தன் கடமையை மன்னன் செய்யவில்லையெனில், காளைகள் பசுக்களை அணையாது, பால்சட்டிகளும் கடையப்படாது. பசு வளர்ப்பில் வாழும் மனிதர்கள் அழிவை அடைவார்கள்.(23) அரச பாதுகாப்பு இல்லாதபோது, அச்சமும் கவலையும் அடையும் அனைவரும், உணர்வையிழந்தவர்களாகத் துன்ப ஓலமிட்டுக் குறைந்த காலத்திலேயே அழிவை அடைவார்கள்.(24) பாதுகாப்பை வழங்கும் தன் கடமையை மன்னன் செய்யவில்லையெனில், விதிப்படி கொடைகள் அளித்து, ஒரு வருடம் நீளும் வேள்விகள் ஏதும் நிறைவுபெறாது.(25)அரச பாதுகாப்பு இல்லாதபோது, பிராமணர்கள் ஒருபோதும் நான்கு வேதங்களையும் படிக்கவோ, தவங்கள் செய்யவோ, அறிவால் தூய்மையடையவோ, கடும் நோன்புகளை நோற்கவோ மாட்டார்கள்.(26) அரச பாதுகாப்பு இல்லாதபோது, பிராமணனைக் கொன்ற குற்றம் செய்த கொலையாளியைக் கொன்றவன் எந்த வெகுமதியையும் அடைய மாட்டான்; மறுபுறம், பிராமணக்கொலை செய்த குற்றவாளி, முற்றான சட்ட விலக்களிப்பை அனுபவிப்பான்.(27) அரச பாதுகாப்பு இல்லாதபோது, அடுத்தவர் செல்வத்தை அவர்களது கரங்களிலிருந்தே மனிதர்கள் பிடுங்குவார்கள், மேலும் நலம்சார்ந்த கட்டுபாட்டுகள் துடைத்தெறியப்படும், அச்சமடையும் அனைவரும் தப்பி ஓடுவதிலேயே பாதுகாப்பைத் தேடுவார்கள்.(28) அரச பாதுகாப்பு இல்லாதபோது, அனைத்து வகை அநீதிகளும் நடக்கும்; வர்ணக்கலப்பு ஏற்படும்; பஞ்சம் நாட்டைச் சூறையாடும்.(9) அரச பாதுகாப்பின் விளைவால், மனிதர்கள் தங்கள் வீடுகளில் வாயிற்கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டே அச்சமில்லாமல் எங்கும் உறங்கலாம்.(30)
மன்னன் நீதியுடன் பூமியைப் பாதுகாக்கவில்லையெனில், உண்மையாக வலிந்து தாக்குவதைவிடச் சற்றே குறைந்ததான பிறரின் தீய பேச்சை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது[3].(31) மன்னன் பாதுகாப்பை வழங்கும் தன் கடமையைச் செய்தால், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட பெண்டிர், தங்களைக் கவனித்துக் கொள்ள எந்த ஆண் உறவினர்களும் இன்றி அச்சமில்லாமல் எங்கும் திரிய முடியும்.(32) மன்னன் பாதுகாப்பை வழங்கும் தன் கடமையைச் செய்வதால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் தீங்கிழைக்காமல் ஒருவருக்கொருவர் தொண்டுகளைச் செய்யும் நல்லோராக ஆவார்கள்.(33) அரச பாதுகாப்பின் விளைவால், மூன்று வகையைச் சேர்ந்தோரும், உயர்வான வேள்விகளைச் செய்து, கவனமாகக் கல்வி கற்க தங்களை அர்ப்பணிப்பார்கள்.(34) உழவையும், வணிகத்தையும் சார்ந்திருக்கும் உலகம், வேதங்களால் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இவை அனைத்தும் தன் முக்கியக் கடமையை முறையாகச் செய்யும் மன்னனாலேயே பாதுகாக்கப்படுகின்றன.(35)மன்னன் கடுங்கனத்தைத் தானே ஏற்றுக் கொண்டு, தன் வலிமைமிக்கப் படையின் உதவியைக் கொண்டு தன் குடிமக்களைப் பாதுகாப்பதாலேயே, மக்களால் மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.(36) எவனுடைய இருப்பில் மக்கள் இருப்பார்களோ, எவனுடைய அழிவில் மக்கள் அழிவார்களோ, அவனை எவன்தான் வழிபடமாட்டான்?(37) மன்னனுக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் எவன் செய்கிறானோ, அனைத்து வர்க்கத்தினருக்கும் அச்சத்தைக்கொடுக்கும் அரசகடமைகளை எவன் சுமக்கிறானோ {அவற்றில் பங்கு கொள்கிறானோ} அவன் இம்மையையும், மறுமையையும் வெல்கிறான்[4].(38) மன்னனுக்குத் தீங்கிழைக்க எந்த மனிதன் நினைக்கிறானோ, அவன் ஐயமில்லாமல் இம்மையில் துன்பத்தை அடைந்து, மறுமையில் நரகத்தை அடைகிறான்.(39) மன்னன் உண்மையில் மனித வடிவில் உள்ள உயர்ந்த தெய்வீகத்தன்மை கொண்டவன் என்பதால், அவனை {மன்னனை} ஒரு மனிதன்தானே என்று நினைத்து அலட்சியம் செய்யக்கூடாது.(40)மன்னன், ஐந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஐந்து வெவ்வேறு வடிவங்களை ஏற்கிறான். அவன் {மன்னன்} அக்னி, ஆதித்யன், மிருத்யு, வைஸ்ரவணன் {குபேரன்}, யமன் ஆகிய வடிவங்களை ஏற்கிறான்.(41) மன்னன் பொய்மையால் வஞ்சிக்கப்பட்டு, தன் முன்னால் இருக்கும் பாவம் நிறைந்த குற்றவாளிகளைத் தன் கடும் சக்தியால் எரிக்கும்போது, அவன் அக்னியின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(42) அவனே தன் ஒற்றர்களின் மூலம் மனிதர்கள் அனைவரின் செயல்பாடுகளைக் கண்காணித்து, பொது நன்மைக்காக எதையும் செய்யும் போது, ஆதித்யனின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(43) அவன், தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் ஆகியோருடன் நூற்றுகணக்கான தீய மனிதர்களைக் கோபத்துடன் அழிக்கும்போது, மிருத்யுவின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(44) அவன், கடுந்தண்டனைகளால் தீயோரைத் தண்டித்து, வெகுமதிகள் கொடுப்பதன் மூலம் நல்லோரை ஆதரிக்கும்போது, யமனின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(45) அவன், தனக்கு மதிப்புமிக்கத் தொண்டாற்றியவர்களுக்கு அபரிமிதமான செல்வத்தைக் கொடையளித்து, தனக்குக் குற்றமிழைத்தோரிடம் இருந்து செல்வத்தையும், மதிப்புமிக்கக் கற்களையும் பறிக்கும்போது,(46) ஓ! மன்னா {வசுமனஸ்}, உண்மையில் அவன், சிலருக்குச் செழிப்பை அளித்து, வேறு சிலரிடம் இருந்து அவற்றைப் பறிக்கும்போது, பூமியில் குபேரனின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(47)
புத்திசாலித்தனம் உள்ள எவனும், செயல்படவல்ல எவனும், அறமீட்ட விரும்பும் எவனும், தீயவற்றிலிருந்து விடுபட்ட எவனும் மன்னனைக் குறித்த தீய செய்திகளைப் பரப்பக்கூடாது. மன்னனுக்கு எதிராகச் செயல்படும் எந்த மனிதனும் மகிழ்ச்சியை அடைய முடியாது,(48) அவன் மன்னனின் மகனாகவோ, சகோதரனாகவோ, தோழனாகவோ, தன்னைப்போலவே மன்னன் என்று எண்ணும் எவனுமாகவோ இருப்பினும் {மன்னனுக்கு எதிராகச் செயல்பட்டு} மகிழ்ச்சியை அடைய முடியாது. நெருப்பு கூட, தன்னைத் தூண்டப் பயன்படும் காற்றால் (எரியத்தக்க பொருட்களுக்கு மத்தியில்) சுடர்விட்டு எரிந்து எதையாவது எச்சமாக விடும்[5].(49) மன்னனின் கோபம், அதைத் தூண்டும் மனிதனிடம் எதையும் எஞ்ச விடாது. மன்னனுக்குச் சொந்தமான யாவும் தொலைவிலேயே தவிர்க்கப்பட வேண்டும்[6].(50)ஒருவன் மரணத்திலிருந்து விலகுவதைப் போலவே மன்னனுக்கு உரியவற்றில் இருந்து விலக வேண்டும். மன்னனுக்கு உரியதை அடைய விரும்பும் மனிதன், நஞ்சைத் தீண்டும் {விஷச்செடியை உண்ட} மானைப் போல விரைவாக அழிவை அடைகிறான்.(51) நுண்ணறிவு கொண்ட மனிதன், மன்னனுக்கு உரியவற்றைத் தனக்குரியவை போலவே பாதுகாக்க வேண்டும்.(52) மன்னனுக்கு உரிய செல்வத்தை அடைய விரும்புவோர், நித்திய இருள் மற்றும் புகழ்க்கேடு எனும் ஆழ்ந்த நரகில் உணர்வற்றவர்களாக மூழ்குவார்கள்.(53) மக்களைத் திளைக்கச் செய்பவன், மகிழ்ச்சியை அளிப்பவன், வளவன் {செழிப்பைக் கொண்டவன்}, அனைவரிலும் முதன்மையானவன், காயங்களை ஆற்றுபவன், பூமியின் தலைவன், மனிதர்களின் பாதுகாவலன் என்ற சொற்களால் துதிக்கப்படும் மன்னனை வழிபடாதவன் எவன் இருக்கிறான்?(54) எனவே, தன் செழிப்பை விரும்புபவனும், நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் பின்பற்றுபவனும், தன் ஆன்மாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவனும், தன் ஆசைகளைக் கட்டுப்படுத்தி அவற்றுக்குத் தலைவனாக இருப்பவனும், நுண்ணறிவு மற்றும் நினைவுத்திறனைக் கொண்டவனும், (வணிகப் பரிவர்த்தனையில்) புத்திசாலித்தனமிக்கவனுமான ஒரு மனிதன், எப்போதும் மன்னனிடம் பற்றோடு இருக்க வேண்டும்.(55)
நன்றியுணர்வுமிக்கவனும், ஞானம் கொண்டவனும், தாராள மனம் கொண்டவனும், பற்றுறுதிமிக்கவனும், தன்புலன்களைக் கட்டுப்படுத்தி அவற்றை ஆள்பவனும், அறம்சார்ந்தவனும், கொள்கைத் தீர்மானங்களை நோற்பனுமான ஓர் அமைச்சனை மன்னன் முறையாகக் கௌரவிக்க வேண்டும்.(56) தன் செயல்களில் பற்றுறுதிமிக்கவனும், நன்றியுணர்வுமிக்கவனும், அறம்சார்ந்தவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், துணிச்சல்மிக்கவனும், பெருந்தன்மை கொண்டவனும், பிறரின் உதவியேதுமின்றிப் பணிகளை நிறைவேற்றவல்லவனுமான ஒரு மனிதனை மன்னன் எப்போதும் ஊக்கப்படுத்த வேண்டும்.(57) அறிவு மனிதர்களைச் செருக்கடையச் செய்கிறது. மன்னன், மனிதர்களைப் பணிவடையச் செய்கிறான். மன்னனால் பீடிக்கப்படும் மனிதனால் ஒருபோதும் மகிழ்ச்சியை அடைய முடியாது. மறுபுறம், மன்னனால் ஆதரிக்கப்படும் மனிதன் மகிழ்ச்சியாகவே இருப்பான்.(58) மன்னனே தன் மக்களின் இதயமாக இருக்கிறான்; அவனே அவர்களது பெரும்புகலிடமாக இருக்கிறான்; அவனே அவர்களது மகிமையாக இருக்கிறான்; அவனே அவர்களது உயர்ந்த மகிழ்ச்சியாகவும் இருக்கிறான். ஓ! ஏகாதிபதி {வசுமனஸ்}, மன்னிடம் பற்றுடன் இருப்போர் இம்மையையும், மறுமையையும் வெல்கிறார்கள்.(59) தற்கட்டுப்பாடு, உண்மை, நட்பு, பெரும் வேள்விகளில் தேவர்களைத் துதிப்பது ஆகிய பண்புகளின் உதவியுடன் பூமியை ஆளும் மன்னன், பெரும் மகிமையை ஈட்டி, சொர்க்கத்தில் ஓர் அழிவில்லா வசிப்பிடத்தையும் அடைகிறான்” என்றார் {பிருஹஸ்பதி}.(60)
ஏகாதிபதிகளில் சிறந்தவனும், கோசலத்தின் ஆட்சியாளனுமான வீர வசுமனஸ், அங்கிரசின் மகனான பிருஹஸ்பதியால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டு, அதுமுதல் தன் குடிமக்களை {கவனத்துடன்} பாதுகாக்கத் தொடங்கினான்” என்றார் {பீஷ்மர்}.(61)
அரசாட்சி முறை! – சாந்திபர்வம் பகுதி – 69-மன்னர்களுக்கான குறிப்பிட்ட கடமைகள்; பலமிக்க ஏகாதிபதி ஒருவன் தன் நாட்டின் மீது படையெடுத்து வரும்போது அதைத் தடுப்பதற்கு ஒரு மன்னன் ஆற்ற வேண்டிய கடமைகள்; கோட்டை பாதுகாப்பு; ஆறு குண்யங்களும், மூன்று வர்க்கங்களும்; நான்கு யுகங்களை உண்டாக்கும் மன்னனின் செயல்கள்; தண்ட நீதியின் அருள்நிலை…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மன்னன் வெளிப்படுத்த வேண்டிய வேறு சிறப்புக் கடமைகள் என்னென்ன? அவன் தன் நாட்டை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? எவ்வாறு தன் எதிரிகளை அடக்க வேண்டும்?(1) அவன் எவ்வாறு தன் ஒற்றர்களை நியமிக்க வேண்டும்? ஓ! பாரதரே {பீஷ்மரே}, தன் நால்வகைக் குடிமக்கள், தன் பணியாட்கள், மனைவியர் மற்றும் மகன்கள் ஆகியோருக்கு அவன் எவ்வாறு நம்பிக்கையளிக்க வேண்டும்?” என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னர்களின் பல்வேறு கடமைகளையும், மன்னன், அல்லது மன்னனின் நிலையில் உள்ள ஒருவன் முதலில் செய்ய வேண்டிய செயல்களையும் கவனமாகக் கேட்பாயாக.(3) மன்னன் முதலில் தன்னையே அடக்க வேண்டும், அதன் பிறகே அவன் தன் எதிரிகளை அடக்க முயல வேண்டும். தன்னையே வெல்ல முடியாத ஒரு மன்னனால் தன் எதிரிகளை எவ்வாறு வெல்ல முடியும்?(4) ஐந்து திரட்டுகளை {புலன்களை} வெல்வதே தன்னை வெல்வதாகக் கருதப்படுகிறது. தன் புலன்களை அடக்குவதில் வெல்லும் மன்னனே தன் எதிரிகளை ஒடுக்கத் தகுந்தவனாகிறான்.(5)
ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, அவன், தனது கோட்டைகள், எல்லைப்புறங்கள், பூங்காக்கள் {உபவனங்கள்}, இன்ப நந்தவனங்கள் {உத்யானவனங்கள்} மற்றும் தான் செல்லும் இடங்கள் அனைத்திலும், தன் சொந்த அரண்மனைக்குள்ளும் காலாட்படையினரை நிறுத்த வேண்டும்.(6,7) அவன், முட்டாள்களைப் போலத் தெரிபவர்களையோ, குருடர்கள், செவிடர்களைப் போலத் தெரிபவர்களையோ தன் ஒற்றர்களாக நியமிக்க வேண்டும். இவர்கள் அனைவரும் (அவர்களது திறன்களைப் பொறுத்தவரையில்) நன்கு சோதிக்கப்பட்டவர்களாகவும், ஞானம் கொண்டவர்களாகவும், பசி தாகம் ஆகியவற்றைப் பொறுத்துக் கொள்ளக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.(8) மன்னன், தன் நகரத்திலும், மாகாணங்களிலும், தனக்குக் கீழுள்ள தலைவர்களின் ஆட்சிப்பகுதிகளிலும் தன் அமைச்சர்கள், நண்பர்கள் மற்றும் மகன்கள் ஆகியோர் அனைவரிடமும் உரிய கவனத்துடன் ஒற்றர்களை நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுவப்படும் ஒற்றர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அறியக்கூடாது.(9,10)
ஓ! பாரதர்களின் காளையே {யுதிஷ்டிரனே}, மேலும் அவன் தன் எதிரிகளின் ஒற்றர்களை அறிந்து கொள்வதற்காக, கடைகளிலும், கேளிக்கை இடங்களிலும், மக்கள் கூடி பேசும் இடங்களிலும், பிச்சைக்காரர்கள் மத்தியிலும்,(11) தனது இன்ப நந்தவனங்கள், பூங்காக்கள், கூட்டங்கள், கல்விமான்களின் சபைகள், நாடு, பொது இடங்கள், தன் சபைகள் இருக்கும் இடங்கள், குடிமக்கள் இல்லங்கள் ஆகியவற்றிலும் தன் ஒற்றர்களை நிறுவ வேண்டும்.(12) நுண்ணறிவு கொண்ட மன்னன், இவ்வாறே தன் எதிரிகளால் அனுப்பப்படும் ஒற்றர்களை உறுதிசெய்து கொள்ள வேண்டும். ஓ! பாண்டுவின் மகனே, இவற்றை அறிவதன் மூலம் ஒரு மன்னன் பெரும் நன்மையை அடைவான்.(13) ஒரு மன்னன், தன் ஆய்வின் மூலம் தான் பலவீனமாக இருப்பதை அறிந்தால், அவன் தன் அமைச்சர்களுடன் ஆலோசித்துப் பலமிக்க எதிரியுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(14) ஞானமுள்ள மன்னன், தான் பலவீனமாக இல்லை என்பதை அறிந்தாலும், எந்த நன்மையாவது விளையுமென்றால் ஓர் எதிரியுடன் விரைவாக அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(15)
தன் நாட்டை நீதியுடன் பாதுகாப்பதில் ஈடுபடும் மன்னன், அனைத்து சாதனைகளையும் கொண்டோர், பெரும் முயற்சி கொண்டோர், அறம்சார்ந்தோர் மற்றும் நேர்மையானோருடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(16) ஒரு மன்னனுக்கு, ஆபத்து மற்றும் நேரப்போகும் அழிவு ஆகியவற்றால் அச்சமுண்டானால், அவன் முன்பு புறக்கணித்து வந்த குற்றவாளிகள் மற்றும் மக்களால் சுட்டிக்காட்டப்படும் அத்தகு மனிதர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும்.(17) எவனால் தனக்கு நன்மையோ, தீங்கையோ செய்ய முடியாதோ, துயரில் இருந்து தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாதா அந்த மனிதனிடம் மன்னன் செய்வதற்கு ஒன்றுமில்லை.(18) படை நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில், தன் சொந்த பலத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு மன்னன், முதலில் தன் சொந்த தலைநகரத்தின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, பெரும்படைக்குத் தலைமையேற்று, தன் இலக்கை அறிவிக்காமல் {எதிரிகளுக்கு முன்னறிவிக்காமல்}, கூட்டாளிகளும் நண்பர்களும் அற்ற ஒருவனையோ, ஏற்கனவே வேறொருவனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் அல்லது (வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆபத்தைக் குறித்து) கவனமில்லாமல் இருக்கும் ஒருவனையோ, தன்னைவிடப் பலவீனமான ஒருவனையோ எதிர்த்து அணிவகுத்துச் செல்வதற்கு உற்சாகத்துடனும், துணிவுடனும் {தன் படைக்கு} ஆணையிட வேண்டும்.(19,20)
ஒரு மன்னன், ஒருபோதும் பேராற்றல் கொண்ட வேறொருவனுக்கு அடங்கி வாழக்கூடாது. அவன், பலவீனமானவனாக இருப்பினும், பலவானைப் பீடிக்க முனையும் தீர்மானத்துடன் தன் ஆட்சியைத் தொடர வேண்டும்.(21) அவன் பலமிக்க ஒருவனின் நாட்டை ஆயுதங்கள், நெருப்பு, நஞ்சூட்டல் ஆகிய வழிமுறைகளின் மூலம் பீடிக்க வேண்டும். மேலும் அவன், அவனுடைய {எதிரியுடைய} அமைச்சர்கள் மற்றும் பணியாட்களிடம் கருத்து வேறுபாடுகளை உண்டாக்க வேண்டும்.(22) நுண்ணறிவைக் கொண்ட ஒரு மன்னன் ஆட்சிப் பகுதிகளை அடைவதற்கான போரை எப்போதும் தவிர்க்க வேண்டும் என்று பிருஹஸ்பதி சொல்லியிருக்கிறார். (சமரசப் பேச்சு {சாமம்}, கொடை {தானம்}, ஒற்றுமையின்மை {பேதம்} ஆகிய) நன்கறியப்பட்ட மூன்று வழிமுறைகளின் மூலமே ஆட்சிப்பகுதி அடையப்பட வேண்டும்.(23) ஞானம் கொண்ட மன்னன், சமரசப் பேச்சு {சாமம்}, கொடை {தானம்}, ஒற்றுமையின்மை {பேதம்} ஆகிய வழிமுறைகளின் மூலம் அடையப்பட்டவற்றிலேயே நிறைவடைய வேண்டும்.(24)
ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, மன்னன் தன் குடிமக்களின் பாதுகாப்பிற்கான செலவுகளைச் சந்திக்க, அவர்களது வருவாயில் இருந்து ஆறில் ஒரு பங்கைக் கப்பமாக {வரியாகப்} பெற வேண்டும்.(25) அவன் தன் குடிமக்களைப் பாதுகாப்பதற்காக, சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள பத்து வகைக் குற்றவாளிகளிடமிருந்து, (அவ்வழக்கின் தேவைக்கேற்ப) அதிகமாகவோ, சிறிதாகவோ செல்வத்தைப் பலவந்தமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.(26) ஒரு மன்னன் நிச்சயம் தன் குடிமக்களைத் தன் சொந்த பிள்ளைகளைப் போலவே பார்க்க வேண்டும். எனினும், அவர்களுக்குள் உண்டாகும் சச்சரவுகளைத் தீர்மானிப்பதில் அவன் கருணைகாட்டக்கூடாது.(27) நீதியை முறையாக நிர்வகிப்பதைச் சார்ந்துதான் உண்மையில் ஒரு நாடு இருக்க வேண்டும் என்பதால், புகார்களையும், நீதிவழக்குகளில் வழக்கைத் தொடுப்பவர்களின் பதில்களையும் கேட்பதற்காக உலகக் காரியங்களின் ஞானம் கொண்டோரையே ஒரு மன்னன் நியமிக்க வேண்டும்.(28) ஒரு மன்னன், தன் சுரங்கங்கள், உப்பளம், தானியம், படகுத்துறை, யானைக் கூடங்கள் ஆகியவற்றில் நம்பிக்கைக்குரிய நேர்மையான மனிதர்களை நிறுவ வேண்டும்.(29) தகுதியுடன் செங்கோலை {தண்டனை வழங்கும் கோல்} எப்போதும் ஏந்தும் மன்னன் பெரும் தகுதியை ஈட்டுகிறான். தண்டனையை முறையாக ஒழுங்கு செய்வதே மன்னர்களின் உயரிய கடமையும், பெரும் பாராட்டுக்குரிய செயலும் ஆகும்.(30)
ஒரு மன்னன், வேதங்களையும், அதன் அங்கங்களையும் அறிந்தவனாகவும், ஞானம் கொண்டவனாகவும், தவங்களில் ஈடுபடுபவனாகவும், ஈகையாளனாகவும், வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும் இருக்க வேண்டும்.(31) இந்தப் பண்புகள் யாவும் எப்போதும் மன்னனிடம் குடியிருக்க வேண்டும். மன்னன் நீதியை நிர்வகிப்பதில் தவறினால் அவன் சொர்க்கத்தையோ, புகழையோ அடைய முடியாது.(32) ஒரு மன்னன், நுண்ணறிவுமிக்க மற்றொரு பலவானால் பீடிக்கப்பட்டால், அவன் கோட்டையையே புகலிடமாக நாட வேண்டும்.(33) அவன், தன் நண்பர்களை ஆலோசனைக்காகத் திரட்டி உரிய வழிமுறைகளைத் திட்டமிட வேண்டும். அமைதிக்கொள்கையைப் {சாமத்தைப்} பின்பற்றியும், மன வேறுபாடுகளை {பேதத்தை} உண்டாக்கியும் அவன் தன் எதிராளியை எதிர்த்துப் போர் தொடுக்கும் வழிமுறைகளைத் திட்டமிட வேண்டும்.(34) அவன் காட்டுவாசிகளை நெடுஞ்சாலைகளில் நியமிக்க வேண்டும். தேவையேற்பட்டால், மொத்த கிராமங்களையே அகற்றி, கிராமவாசிகள் அனைவரையும் சிறு நகரங்களுக்கோ, பெருநகரங்களின் புறநகர்களுக்கோ மாற்ற வேண்டும்.(35)
அவன் {மன்னன்}, செழிப்புமிக்கத் தன் குடிமக்களுக்கும், படையின் முக்கிய அதிகாரிகளுக்கும் மீண்டும் மீண்டும் உறுதிகூறி, வெளிப்படையாக நாட்டில் வசித்துக் கொண்டிருந்த அவர்களை நன்கு பாதுகாக்கப்பட்ட கோட்டைகளுக்குள் புகலிடம் கொள்ளச் செய்ய வேண்டும்.(36) (திறந்த நாட்டில் இருந்து தன் கோட்டைகளுக்குள்) தானியங்கள் அனைத்தையும் அவன் கொண்டுவரச் செய்ய வேண்டும். அஃது இயலாமல் போனால் அவன் அவற்றை நெருப்பின் மூலம் முழுமையாக அழிக்க வேண்டும்.(37) மேலும் அவன், (எதிரியின் குடிமக்களிடையே ஒற்றுமையின்மையை உண்டாக்கி) எதிரியின் வயல்களில் உள்ள பயிர்களை அழிக்க மனிதர்களை நிறுவ வேண்டும். இதைச் செய்யத் தவறினால், அவன் தன் துருப்புகளின் மூலமே அந்தப் பயிர்களை அழிக்க வேண்டும்.(38) அவன் தன் நாட்டில் உள்ள ஆறுகளில் மேலுள்ள பாலங்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும். தன் ஆட்சிப்பகுதிகளுக்குள் உள்ள குளங்கள் அனைத்திலும் உள்ள நீரை அவன் வெளியேற்ற வேண்டும். அல்லது, வெளியேற்ற முடியாவிட்டால் அவற்றில் நஞ்சைக் கலக்கச் செய்ய வேண்டும்.(39) அவன், தன் நண்பர்களைக் காக்கும் கடமையைக் கருதிப் பாராமல், நிகழ்கால மற்றும் எதிர்காலச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு எதிரியின் எதிரியாகவோ, போர்க்களத்தில் தன் எதிரியை எதிர்கொள்ளத் தகுந்தவனாகவோ இருக்கும் மற்றொரு நாட்டின் ஆட்சியாளனுடைய பாதுகாப்பை நாட வேண்டும்[1].(40)அவன் தன் நாட்டிலுள்ள சிறு கோட்டைகள் அனைத்தையும் அழித்துவிட வேண்டும். சைத்யம்[2] என்றழைக்கப்படும் மரங்களைத் தவிர்த்து சிறு மரங்கள் அனைத்தையும் அவன் வெட்டிவிட வேண்டும்.(41) பெரும் மரங்களின் கிளைகள் அனைத்தையும் அவன் வெட்டிவிட வேண்டும். ஆனால் சைத்தியம் என்றழைக்கப்படும் மரங்களின் இலைகளைக் கூடத் தொடக்கூடாது.(42) தன் கோட்டைகளில் பதுங்கு துளைகளைச்[3] {பிரகண்டிகள், ஆகாசஜநநி} செய்து வெளிப்புற மதில்களை எழுப்ப வேண்டும். அகழிகளின் அடியில் கூரிய சூலங்கள் நிறுவி அவற்றை நீரால் நிறைத்து, அதில் முதலைகளையும், சுறாக்களையும் விட வேண்டும்.(43) அவன் தன் கோட்டையிலிருந்து {பதுங்கி} பாய்வதற்கு ஏதுவாகச் சுவர்களில் சிறு திறப்புகளை {புடைவாயில், கள்ளவழி} வைத்து[4], பெரிய வாயில்களைப் பாதுகாப்பதைப் போல அவற்றையும் பாதுகாக்க தக்க ஏற்பாடுகளைக் கவனமாகச் செய்ய வேண்டும்.(44) அனைத்து வாயில்களிலும் {சிறு திறப்புகளிலும்} அவன் அழிவைத்தரவல்ல இயந்திரங்களை நிறுவ வேண்டும். (தன் கோட்டைகளின்) மதில்களில் அவன் சதக்னிகளையும், பிற ஆயுதங்களையும் நிறுவ வேண்டும்[5].(45)அவன் எரிபொருள் தேவைக்காக விறகைச் சேர்த்து வைக்க வேண்டும் மேலும் கோட்டைக் காவற்படைக்குத் தேவையான நீருக்காகக் கிணறுகளைத் தோண்டவும், சீராக்கவும் வேண்டும்.(46) புல் மற்றும் வைக்கோலால் வேயப்பட்ட வீடுகள் அனைத்தையும் அவன் சேற்றினால் பூச வேண்டும். மேலும், கோடை மாதமாக {சித்திரை, வைகாசி மாதங்களாக} இருந்தால், நெருப்பின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகப் புற்கள் மற்றும் வைக்கோற்கிடங்குகளை (வேறு பாதுகாப்பான இடங்களுக்கு) மாற்ற வேண்டும்.(47) உணவு அனைத்தையும் இரவில் சமைக்குமாறு அவன் ஆணையிட வேண்டும். தினமும் செய்யப்படும் ஹோமத்தையன்றி பகலில் வேறு எதற்காகவும் நெருப்பு மூட்டப்படக்கூடாது.(48) உலோகப் பட்டறைகள் {கொல்லர் பட்டறைகள்}, பிள்ளைப்பேற்றுக்கான அறைகள் ஆகியவற்றில் நெருப்பு தொடர்பாகக் குறிப்பிட்ட கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்குள் வைக்கப்படும் நெருப்புகள் மிகக் கவனமாக மறைக்கப்பட வேண்டும்.(49) நகரத்தைத் திறனுடன் பாதுகாப்பதற்காக, பகலில் நெருப்பு மூட்டும் மனிதர்களுக்குப் பொருத்தமான தண்டனைகளை அறிவிக்க வேண்டும்.(50)
அத்தகு {போர்க்} காலங்களில், பிச்சைக்காரர்கள், வண்டிக்காரர்கள், அலிகள், பைத்தியக்காரர்கள், ஊமைகள் ஆகியோர் நகரத்தைவிட்டே விரட்டப்பட வேண்டும். அவர்கள் அனுமதிக்கப்பட்டால் தீமையே பின்தொடர்ந்து வரும்.(51) பொது இடங்கள், தீர்த்தங்கள்[6], சபைகள், {குறிப்பிட்ட சில} குடிமக்களின் வீடுகள் ஆகியவற்றில் மன்னன் தகுந்த ஒற்றர்களை நிறுவ வேண்டும்.(52) மன்னன் அகன்ற சாலைகளை உண்டாக்கி, கடைகளையும், உகந்த இடங்களில் நீர் விநியோகத்திற்கான நிலைகளையும் திறக்க வேண்டும்.(53) ஓ! யுதிஷ்டிரா, (தேவையான பல்வேறு பொருட்களுக்கான) கிடங்குகள், ஆயுதக்கிடங்குகள், முகாம்கள், படைவீரர்கள் இருக்கும் இடங்கள், குதிரை மற்றும் யானை கொட்டில்கள், படைவீரர்களின் முகாம்கள்,(54) அகழிகள், வீதிகள், கிளைவீதிகள், வீடுகள், ஓய்வு மற்றும் இன்பத்திற்கான நந்தவனங்கள் ஆகியவற்றைப் பிறர் {எதிரிகள்} அறியாவண்ணம் இருக்குமாறு செய்ய வேண்டும்.(55)பகைவரின் படையால் பீடிக்கப்படும் மன்னன், செல்வத்தைத் திரட்ட வேண்டும். மேலும் அவன் எண்ணெய், தேன், தெளிந்த நெய், அனைத்து வகை மருந்துகள்,(56) கரி, முஞ்சா புல், இலைகள், கணைகள், எழுத்தர்கள், வரைகலைஞர்கள், புற்கள், விறகுகள், நஞ்சூட்டப்பட்ட கணைகள்,(57) ஈட்டிகள் போன்ற அனைத்து வகை ஆயுதங்கள், வாள்கள், வேல்கள், மற்றும் பிறவற்றையும் திரட்ட வேண்டும். ஒரு மன்னன் எப்போதும் அவ்வகைப் பொருட்களைச் சேர்க்க வேண்டும்.(58) அதிலும் குறிப்பாக அவன் அனைத்து வகை மருந்துகள், கிழங்குகள், கனிகள் ஆகியவற்றையும், நால்வகை மருத்துவர்கள்,(59) நடிகர்கள், ஆடற்கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள், பல்வேறு வேடங்களை ஏற்கவல்ல மனிதர்கள் ஆகியோரையும் வைத்துக் கொள்ள வேண்டும். அவன் தன் தலைநகரை அலங்கரித்துத் தன் குடிமக்கள் அனைவரையும் மகிழ்ச்சியா வைத்திருக்க வேண்டும்.(60)
மன்னனுக்கு எவரிடம் அச்சமுள்ளதோ, அவர்கள் தன் பணியாட்களாகவோ, அமைச்சர்களாகவோ, குடிமக்களாகவோ, அக்கம்பக்கத்து ஏகாதிபதிகளாகவோ இருப்பினும் அவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் அவன் காலந்தாழ்த்தக்கூடாது.(61) மன்னனின் எந்தப் பணி நிறைவடைந்தாலும், அவன் அதன் நிறைவுக்கு உதவியவர்களுக்குச் செல்வம், விகிதப்படியான பிற கொடைகள் மற்றும் நன்றிநிறைந்த பேச்சுகள் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.(62) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, ஒரு மன்னன் தன் எதிரியைத் தவிடுபொடியாக்கும்போதோ, அவனை ஒரேயடியாகக் கொல்லும்போதோ அவன் தனது கடனையே அடைக்கிறான்[7] என்று சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளன.(63) ஒரு மன்னன் ஏழு காரியங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நான் அதைச் சொல்கிறேன் கேட்பாயாக. அவை தனது சுயம், தனது அமைச்சர்கள், கருவூலம், தண்டனை அளிக்கும் அமைப்பு, நண்பர்கள், மாகாணங்கள் மற்றும் தலைநகரம் ஆகியவையாகும். இந்த ஏழு அங்கங்களைக் கொண்ட தன் நாட்டை அவன் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.(64,65)
ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, ஆறு குண்யங்களையும் {ஷாட்குண்யத்தையும்}, மூன்று வர்க்கங்களையும் {த்ரிவர்க்கத்தையும்}, மூன்று வர்க்கங்களிலும் உயர்ந்ததையும் அறிந்த மன்னன் மொத்த பூமியின் அரசாட்சியை வெல்வான்.(66) ஓ! யுதிஷ்டிரா, ஆறு குண்யங்கள் என்றழைக்கப்படுவதைக் குறித்துக் கேட்பாயாக. அவை, (எதிரியுடன் ஏற்படுத்திக் கொண்ட) ஒப்பந்தத் தீர்மானத்தின்படி அமைதியாக ஆட்சி செய்வது, போரிட அணிவகுத்துச் செல்வது, எதிரிக்கு மத்தியில் ஒற்றுமையின்மையை விளைவிப்பது, (67) எதிரியை அச்சமடையச் செய்வதற்குப் படைகளைக் குவிப்பது, அமைதிக்குத் தயாராகப் போருக்கு ஆயத்தமாதல், பிறருடனான கூட்டணிகள் ஆகியனவே ஆகும்.(68) இப்போது மூன்று வர்க்கங்கள் என்றழைக்கப்படுவனவற்றைக் கவனமாகக் கேட்பாயாக. அவை குறை, இருப்பதைப் பாதுகாப்பது, வளர்ச்சி ஆகியவையாகும். இம்மூன்றின் உயர்ந்த திரள்கள், அறம், பொருள் மற்றும் இன்பமாகும். இவை நீதியுடன் பின்பற்றப்பட வேண்டும். அறத்தின் துணையால் ஒரு மன்னன் பூமியை எப்போதும் ஆள்வதில் வெல்வான்.(70)
இது தொடர்பாக அங்கிரசின் மகனான பிருஹஸ்பதி இரண்டு வரிகளைப் பாடியிருக்கிறார். ஓ! தேவகியின் மகனே {கிருஷ்ணா}, அவற்றைக் கேட்பதே உனக்குத் தகும்.(71) ’ஒரு மன்னன், தன் கடமைகள் அனைத்தையும் செய்து, பூமியைப் பாதுகாத்து, தன் நகரங்களையும் பாதுகாப்பதால் சொர்க்கத்தில் பெரும் மகிழ்ச்சியை அடைகிறான்.(72) அவனுக்குத் தவங்களால் ஆவதென்ன? தன் மக்களை முறையாகப் பாதுகாப்பவனுக்கு வேள்விகளால் ஆகப்போவதென்ன? அத்தகு மன்னன் அறங்கள் அனைத்தையும் அறிந்தவனாகக் கருதப்பட வேண்டும்’ {என்பதே பிருஹஸ்பதியின் அவ்விரண்டு வரிகள்}” என்றார் {பீஷ்மர்}.(73)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தண்டனை அறிவியலும் {தண்டநீதியும்}, மன்னன் மற்றும் குடிமக்களும் இருக்கின்றனர். ஓ! பாட்டா {பீஷ்மரே}, இவற்றில் ஒன்றால் பிறரிடம் இருந்து அடையப்படும் பயன் யாது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(74)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஓ! பாரதா, பெரும் முக்கியத்துவம் வாய்ந்த புனித வார்த்தைகளில் பேரருள் கொண்ட தண்டனை அறிவியலை {தண்ட நீதியை} உனக்குச் சொல்கிறேன், கேட்பாயாக.(75) தண்டனை அறிவியலானது, அனைத்து மக்களையும் தங்கள் தங்கள் கடமைகளைச் செய்யக் கட்டாயப்படுத்துகிறது.(76) நான்கு வகையினரும் {வர்க்கத்தினரும்} தங்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போதும், நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தும் பேணப்படும்போதும், தண்டனை அறிவியலில் இருந்து அமைதியும், மகிழ்ச்சியும் பாயும்போதும், உயர்ந்த மூவகையினர் தங்கள் தங்கள் கடமைகளின்படி நடந்து கொண்டு ஒற்றுமையைப் பேணி அச்சமனைத்திலிருந்தும் மக்கள் விடுபடும்போதும்தான் அவர்கள் {மக்கள்} உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதை அறிவாயாக.(77,78) மன்னன் காலத்தை உண்டாக்குகிறானா? அல்லது, காலம் மன்னனை உண்டாக்குகிறதா என்ற கேள்வியில் நீ எந்த ஐயத்தையும் ஊக்கப்படுத்தக்கூடாது. மன்னனே காலத்தை உண்டாக்கிறான் என்பதே உண்மை.(79)
கண்டிப்புடன் தண்டனை அறிவியலைச் சார்ந்து ஒரு மன்னன் முழுமையாக ஆளும்போது, கிருதம் என்றழைக்கப்படும் முதன்மையான காலம் {யுகம்} அப்போது ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது[8].(80) கிருதகாலத்தில் {கிருதயுகத்தில்} அறமே விளைகிறது. நீதியற்றவையேதும் அப்போது இருப்பதில்லை. நால்வகையைச் சேர்ந்த மனிதர்கள் அனைவரின் இதயங்களும், அநீதியில் எந்த இன்பத்தையும் அடையாது.(81) மனிதர்கள் அனைவரும் தாங்கள் விரும்பும் பொருட்களை அடைந்து, தாங்கள் அடைந்ததைப் பாதுகாத்துக் கொள்வார்கள். வேதச் சடங்குகள் அனைத்தும் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்கவல்லவையாக இருக்கும்.(82) பருவகாலங்கள் அனைத்தும் இனிமை நிறைந்தவையாக, தீமைகளில் இருந்து விடுபட்டவையாக மாறும். மனிதர்கள் அனைவரின் குரல், உச்சரிப்பு மற்றும் மனங்கள் தெளிவானவையாகவும், உற்சாகம் நிறைந்தவையாகவும் மாறும்.(83) நோய்கள் மறைந்துபோகும், மனிதர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள், மனைவியர் விதவைகளாகமாட்டார்கள், எந்த மனிதனும் கஞ்சனாக இருக்க மாட்டான்.(84) உழாமலேயே பூமி பயிர்களை விளைவிக்கும், செடிகொடிகளும் வளமாக வளரும். மரப்பட்டைகள், இலைகள், கனிகள், கிழங்குகள் ஆகியன வேகமாக அபரிமிதமாக விளையும்.(85) எந்த அநீதியும் தென்படாது. அறத்தைத் தவிர மற்றேதும் நிலைக்காது. ஓ! யுதிஷ்டிரா, இவற்றையே கிருத காலத்தின் பண்புகளாக அறிவாயாக.(86)மன்னன், தண்டனை அறிவியலின் {தண்டநீதியின்} நான்கு பாகங்களில், நான்காவதை விட்டுவிட்டு மூன்றை மட்டுமே சார்ந்திருந்தால் திரேதம் என்றழைக்கப்படும் காலம் ஏற்படுகிறது.(87) அவ்வாறு (தண்டனை அறிவியலின்) மூன்றுபாகங்களை நோற்கும்போது நான்காம் பாகத்தின் அநீதியானது தொடர்ந்துகொண்டிருக்கும். பூமி விளைவிக்கும், ஆனால் உழவுக்காகக் காத்திருக்கும். செடிகொடிகளும் (உழவைச் சார்ந்தே) வளரும்.(88) மன்னன் அந்தப் பெரும் அறிவியலை {தண்டநீதியை} பாதி அளவே நோற்கும்போது, துவாபரம் என்றழைக்கப்படும் காலம் ஏற்படுகிறது.(89) அந்தப் பெரும் அறிவியலை இவ்வாறு பாதி அளவே நோற்கும்போது பாதி அளவுக்கு அநீதியே தொடர்ந்து கொண்டிருக்கும். பூமிக்கு உழவு அவசியம் தேவைப்படும், பயிர்கள் பாதி அளவுக்கே விளையும்.(90)
மன்னன் அந்தப் பெரும் அறிவியலை {தண்டநீதியை} முற்றாகக் கைவிட்டு, பல்வேறு வகைத் தீய வழிமுறைகளால் தன் குடிமக்களை ஒடுக்கும்போது, கலி என்றழைக்கப்படும் காலம் ஏற்படுகிறது.(91) கலி என்றழைக்கப்படும் காலத்தில், அநீதியே முழுமையக இருக்கும், அறமென எதுவும் தென்படாது. அனைத்து வகை மனிதர்களின் இதயங்களும், தங்கள் தங்கள் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிடும்.(92) சூத்திரர்கள் துறவிகளாகவும், பிராமணர்கள் பிறருக்குத் தொண்டுபுரிந்தும் வாழ்வார்கள். மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்குரிய பொருட்களை அடையத் தவறுவார்கள், தாங்கள் ஏற்கனவே அடைந்ததையும் பாதுகாக்கத் தவறுவார்கள். நால்வகையினரின் கலப்பும் ஏற்படும்.(93) வேத சடங்குகள் கனிகளை விளைவிக்கத் தவறும். அனைத்து பருவகாலங்களும் இனிமையை இழந்து, தீமை நிறைந்தவையாக இருக்கும்.(94) மனிதர்களின் குரல், உச்சரிப்பு மற்றும் மனங்கள் ஆகியன சுறுசுறுப்பை இழக்கும். நோய்கள் தோன்றும், மனிதர்கள் முதிரா காலத்திலேயே மாள்வார்கள்.(95)
விதவைகளாகும் மனைவியரும், பல தீய மனிதர்களும் தென்படுவார்கள். மேகங்கள் பருவ காலத்தில் பொழியாது, பயிர்கள் விளையாமல் தவறும்.(96) பெரும் அறிவியலில் {தண்டநீதியில்} உரிய கவனத்துடன் மன்னன் குடிமக்களைப் பாதுகாக்காதபோது, ஈரப்பதங்கள் யாவும் தவறும்.(97) கிருத, திரேத மற்றும் துவாபர காலங்களை மன்னனே உண்டாக்குகிறான். (கலி என்றழைக்கப்படும்) நான்காவது காலத்தையும் மன்னனே உண்டாக்குகிறான்.(98) அவன் கிருத காலத்தை உண்டாக்கினால் நீடித்த சொர்க்கத்தை அடைகிறான். அவன் திரேத காலத்தை உண்டாக்கினால், குறிப்பிட்ட காலத்திற்கான சொர்க்கத்தை அடைகிறான்.(99) துவாபரத்தை உண்டாக்கினால், அவன் தன் தகுதிகளுக்கேற்ப {புண்ணியங்களுக்கேற்ப} சொர்க்கத்தில் அருள்நிலையை அடைகிறான். கலிகாலத்தை உண்டாக்குவதால் அந்த மன்னன் பெரும் சுமைமிக்கப் பாவத்தையே இழைக்கிறான்.(100)
அவன் தன் குடிமக்களைப் பாவங்களில் மூழ்கடிப்பதால், பெரும் பாவத்தை இழைத்து, புகழ்க்கேட்டை அடைந்து, தீமையின் கறைபடிந்து, எண்ணற்ற வருடங்கள் நரகில் அழிவடைவான்.(101) பெரும் அறிவியலை {தண்டநீதியில்} கருத்தில் கொண்டவனும், கல்வியறிவு கொண்டவனுமான க்ஷத்திரியன், தான் விரும்பும் பொருட்களை {நோக்கங்களை} அடைய முனைந்து, ஏற்கனவே அடைந்தவற்றைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(102) மக்கள் அனைவரையும் தங்கள் தங்கள் கடமைகளை நோற்கச் செய்வதும், நலந்தரும் மேன்மைகள் அனைத்திற்கும் களப்பணியாகச் செயல்படுவதும், உண்மையில் உலகைத் தாங்கி, அதைச் செயல்பட வைப்பதுமான தண்டனை அறிவியலானது {தண்டநீதியானது}, முறையாகச் செயல்படுத்தப்பட்டால், அது, தாயும் தந்தையும் தங்கள் பிள்ளைகளைக் காப்பதைப் போல மக்கள் அனைவரையும் பாதுகாக்கும்.(103) ஓ! மனிதர்களில் காளையே, உயிரினங்களின் வாழவே அதைச் {தண்டநீதியைச்} சார்ந்துதான் இருக்கிறது என்பதை அறிவாயாக. தண்டனை அறிவியலை அறிவதும், அதை முறையாகச் செயல்படுத்துவதும்தான் ஒரு மன்னனை உயர்ந்த தகுதியை அடையச் செய்யும்.(104) எனவே, ஓ! குருகுலத்தோனே {யுதிஷ்டிரனே}, அந்தப் பெரும் அறிவியலின் துணையுடனும், நீதியுடனும் உன் குடிமக்களைப் பாதுகாப்பாயாக. உன் குடிமக்களைப் பாதுகாத்து, இத்தகு நடத்தையைப் பின்பற்றினால் அடைவதற்கு மிக அரிதான சொர்க்கத்தின் அருள்நிலையை நீ நிச்சயம் அடைவாய்” என்றார் {பீஷ்மர்}.(105)
அரச பண்புகள்! – சாந்திபர்வம் பகுதி – 70- மன்னர்களுக்குரிய முப்பத்தாறு {36} பண்புகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! அனைத்துவகை நடத்தைகளையும் அறிந்தவரே, அந்நடத்தையைப் பின்பற்றுவதால் ஒரு மன்னனால் இம்மையையும், மறுமையையும், முடிவில் மகிழ்ச்சியை அளிக்கும் பொருட்களையும் அடைவதில் வெல்ல முடியுமா?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “(ஒரு மன்னன் நோற்கவேண்டிய) முப்பத்தாறு {36} பண்புகள் இருக்கின்றன. அவை மேலும் முப்பத்தாறுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. ஓர் அறவோன் அப்பண்புகளைக் கைக்கொள்வதால் நிச்சயம் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்ட முடியும்.(2)
[1] மன்னன் தன் கடமைகளைக் கோபமோ, தீய நோக்கமோ இன்றி ஆற்றவேண்டும்.
[2] அவன் கருணையைக் கைவிடக்கூடாது.
[3] அவன் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
[4]துன்புறுத்தலோ, கொடூரமோ இன்றி அவன் தன் செல்வத்தை அடைய வேண்டும்.
[5]அவன் பற்றுதல் இல்லாமல் இன்பங்களை அனுபவிக்க வேண்டும்.(3)
[6] அவன் ஏற்புடையவற்றை உற்சாக நிறைவுடன் சொல்ல வேண்டும், அவன் தற்புகழ்ச்சி செய்து கொள்ளாமல் துணிவுடன் இருக்க வேண்டும்.
[7] அவன் தாராளவாதியாக இருந்தாலும் கவனமில்லாதோருக்குக் கொடைகளை அளிக்கக்கூடாது.
[8] அவன் கொடூரமில்லா ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும்.(4)
[9] அவன் தீயோரைப் புறக்கணித்துக் கூட்டணிகளை அமைக்க வேண்டும்.
[10] அவன் நண்பர்களிடம் பகைமையுடன் நடந்து கொள்ளக்கூடாது.
[11] தன்னிடம் அர்ப்பணிப்பில்லாதவர்களை ஒருபோதும் அவன் தன் ஒற்றர்களாகவும், இரகசிய முகவர்களாகவும் நியமிக்கக்கூடாது.
[12] துன்புறுத்தலின் மூலம் அவன் தன் நோக்கங்களை ஒருபோதும் நிறைவேற்றிக் கொள்ளக்கூடாது.(5)
[13] அவன் ஒருபோதும் தன் நோக்கங்களைத் தீயோர் முன்பு வெளிப்படுத்தக்கூடாது.
[14] அவன் பிறரின் தகுதிகளையன்றி ஒருபோதும் தன்னுடையவற்றைப் பேசக்கூடாது.
[15] அவன், தன் குடிமக்களிடம் இருந்து செல்வத்தைப் பெறலாமேயன்றி ஒருபோதும் நல்லோரிடம் பெறக்கூடாது.
[16] அவன் ஒருபோதும் தீயோரை வேலையில் அமர்த்தவோ, அவர்களின் உதவியை நாடவோ கூடாது.(6)
[17] கவனமான விசாரணையின்றி அவன் ஒருபோதும் தண்டனையை வழங்கக்கூடாது.
[18] அவன் ஒருபோதும் தன் ஆலோசனைகளை வெளிப்படுத்தக்கூடாது.
[19] அவன் கொடையளிக்கலாமேயன்றி, பேராசைக்காரர்களுக்கு அளிக்கக்கூடாது.
[20] அவன் பிறரை நம்பலாமேயன்றி தனக்குத் தீங்கிழைத்தோரை ஒருபோதும் நம்பக்கூடாது.(7)
[21] அவன் கெட்ட நோக்கத்தை வளர்த்துக்கொள்ளக்கூடாது.
[22] அவன், தான் மணந்து கொண்ட மனைவியரைப் பாதுகாக்க வேண்டும்.
[23] அவன் தூய்மையாயிருக்கவேண்டுமேயன்றி ஒருபோதும் கருணையால் உருகக்கூடாது.
[24] அவன் பெண்களிடம் அதிகமாகத் தோழமை பூணக்கூடாது {பெண்களின் துணையை அதிகமாக நாடக்கூடாது}.
[25] அவன், நலம்சார்ந்த உணவையன்றி ஒருபோதும் வேறுவகையானவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது.(8)
[26] அவன் செருக்கில்லாமல் தகுந்தோருக்கு வெகுமதிகளை அளித்து, தன் ஆசான்கள் மற்றும் பெரியோர்களுக்கு உண்மையுடன் தொண்டாற்ற வேண்டும்.
[27] அவன் செருக்கில்லாதவனாகத் தேவர்களை வழிபட வேண்டும்.
[28] அவன் செழிப்பையன்றி ஒருபோதும் புகழ்க்கேட்டைக் கொண்டுவரும் எதையும் நாடக்கூடாது.(9)
[29] அவன், (தன்னைவிடப் பெரியோரிடம்) பணிவுடன் காத்திருக்க வேண்டும்.
[30] அவன் தொழிலில் புத்திசாலியாக இருக்க வேண்டும், ஆனாலும் அவன் தகுந்த காலத்திற்காக எப்போதும் காத்திருக்க வேண்டும்.
[31] அவன் மனிதர்களுக்கு ஆறுதலளிக்க வேண்டும், ஒருபோதும் வெற்று வார்த்தைகளுடன் அவர்களை அனுப்பக்கூடாது.
[32] அவன், ஒரு மனிதனுக்கு ஆதரவளித்துவிட்டு, பிறகு அவனைக் கைவிடக்கூடாது.(10)
[33] அவன் ஒருபோதும் அறியாமையுடன் இருக்கக்கூடாது.
[34] அவன், தன் எதிரியைக் கொன்றுவிட்டு, ஒருபோதும் துயரில் ஈடுபடக்கூடாது.
[35] அவன் கோபத்தை வெளிப்படுத்தலாம், ஆனால் எந்த நிகழ்வும் இல்லாதபோது அதை வெளிப்படுத்தக்கூடாது.
[36] அவன் மென்மையாக இருக்கவேண்டும், ஆனால் ஒருபோதும் குற்றவாளிகளிடம் மென்மையாக இருக்கக்கூடாது.(11)
உன் நாட்டை ஆளும்போது நீ செழிப்பை விரும்பினால் இத்தகு நடத்தையையே நீ பின்பற்றுவாயாக. வேறுமாதிரியாக நடந்து கொள்ளும் மன்னன் பேராபத்தையே அடைவான்.(12) நான் குறிப்பிட்ட இந்தப் பண்புகள் அனைத்தையும் பின்பற்றும் மன்னன் பூமியில் பல அருள்களையும், சொர்க்கத்தில் பெரும் வெகுமதிகளையும் அடைகிறான்” என்றார் {பீஷ்மர்}.(13)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அறிவுரைகளைப் பெறுவதில் அடக்கமுள்ளவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், பீமன் மற்றும் பிறரால் பாதுகாக்கப்படுபவனுமான மன்னன் யுதிஷ்டிரன், சந்தனு மகனின் {பீஷ்மரின்} இந்த வார்த்தைகளைக் கேட்டு, தன் பாட்டனை {பீஷ்மரை} வணங்கி, அந்தக் காலம் முதல் அந்தக் கற்பிதங்களின்படியே ஆளத்தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(14)
கடமையைப் புறக்கணிக்காதே! – சாந்திபர்வம் பகுதி – 71-அறப்பிழையேற்படாமல் குடிமக்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளைப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; வழிமுறைகளைச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, துயரத்தைத் தவிர்க்கும் வகையிலும், அறத்திற்கு எதிராகக் குற்றமிழைக்காத வகையிலும் ஒரு மன்னன் தன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டிய வழியை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த நித்திய கடமைகளை விரிவாகச் சொன்னால் என்னால் அதன் முடிவை எட்ட முடியாது என்பதால் அவற்றைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(2) தங்கள் கடமைகளில் அர்ப்பணிப்புமிக்கோரும், கல்வியறிவைக் கொண்டவர்களும், தேவர்களைத் தொடர்ந்து வழிபடுபவர்களும், உயர்ந்த நோன்புகளை நோற்பவர்களும், பிற சாதனைகளையும் கொண்டவர்களுமான பிராமணர்கள் உன் வசிப்பிடத்திற்கு வரும்போது நீ அவர்களை வழிபட்டு, உன் வேள்விகளைச் செய்வதில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.(3) அவர்கள் உன்னை அணுகும்போது உன் புரோகிதருடன் கூடிய நீ, எழுந்திருந்து அவர்களது பாதங்களை வழிபட்டு, தேவையான பிற செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும்.(4) இந்தப் பக்திச் செயல்களையும், உன் நன்மைக்கான பிற செயல்களையும் செய்து (அவர்களுக்குக் கொடைகளையும் அளித்து) உன் காரியங்களின் வெற்றிக்காக அந்தப் பிராமணர்களை ஆசிகூறச் செய்ய வேண்டும்.(5)
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நேர்மை, ஞானம், நுண்ணறிவு ஆகியவற்றுடன் கூடிய நீ உண்மையைப் பின்பற்றி, காமத்தையும், கோபத்தையும் தவிர்க்க வேண்டும்.(6) காமம் மற்றும் கோபத்தைத் தவிர்க்காத மூட மன்னன், அறமீட்டத் தவறி, இறுதியாகப் பொருளையும் இழக்கிறான்.(7) பேராசை கொண்டோரையும், மூடர்களையும் இன்பம் மற்றும் பொருள் சார்ந்த காரியங்களில் ஒருபோதும் ஈடுபடுத்தாதே. பேராசையில் இருந்து விடுபட்டவர்கள் மற்றும் நுண்ணறிவைக் கொண்டோர் ஆகியோரையே நீ எப்போதும் உன் பணிகள் அனைத்திலும் ஈடுபடுத்த வேண்டும்.(8) காமம் மற்றும் கோபத்தின் கறை படிந்தவர்களும், வணிகப் பரிவர்த்தனையில் திறமற்றவர்களுமான மூட மனிதர்களைப் பொருள் சார்ந்த பொறுப்புகளில் ஈடுபடுத்தினால், அவர்கள் எப்போதும் தீமைகளை உண்டாக்கும் பல்வேறு சூழ்ச்சிகளால் மக்களை ஒடுக்குவார்கள்[2].(9) முறையான கணக்கீட்டின்படி, மண்ணில் விளைவதில் ஆறில் ஒரு பகுதியாகப் பெறப்படும் கப்பத்தையும், குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் அபராதங்களையும், அவர்களிடம் செய்யப்படும் பறிமுதல்களையும், வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்குப் பதிலாகச் சாத்திரங்களின் படி அவர்களிடம் பெறப்படும் தீர்வைகளையும் கொண்டே ஒரு மன்னன் தன் கருவூலத்தை நிரப்ப வேண்டும்[3].(10)இந்த நியாயமான கப்பத்தை அடைந்து, நாட்டை முறையாகவும், கவனத்துடனும் ஆளும் மன்னன், தன் குடிமக்கள் தேவைக்கான எந்த அழுத்தத்தையும் உணராத {அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லாத} வகையில் செயல்பட வேண்டும்.(11) பாதுகாப்பு வழங்கும் கடமையை முறையாகச் செய்பவனும், தாரளவாதியாக இருப்பவனும், அறம் நோற்பதில் உறுதியுள்ளவனும், எச்சரிக்கை உணர்வுடன் விழிப்புடன் இருப்பவனும், காமம் மற்றும் வெறுப்பில் {ஆசை மற்றும் துறவில்} இருந்து விடுபட்டவனுமான மன்னனிடம் மனிதர்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்பைக் கொள்வார்கள்.(12) அநீதியாகவோ, பேராசையாலோ செயல்பட்டு உன் கருவூலத்தை நிரப்ப ஒருபோதும் விரும்பாதே. சாத்திரங்களின்படி செயல்படாத மன்னன் செல்வத்தையும் அறத்தகுதியையும் ஈட்டுவதில் தவறுகிறான்.(13) செல்வம் ஈட்டுவதில் மட்டுமே மனம் கொண்ட மன்னன் அறத்தகுதி மற்றும், செல்வம் ஆகிய இரண்டையும் அடையத் தவறுகிறான். மேலும் (இத்தகு வழிமுறைகளால்) அவன் அடையும் செல்வமானது, தகாத பொருட்களில் வீணாகச் செலவிடப்படுவதே காணப்படுகிறது[4].(14) சாத்திரங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை விதித்து மடமையின் மூலம் தன் குடிமக்களை ஒடுக்கும் பேராசைக்கார மன்னன், தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறான் என்று சொல்லப்படுகிறது.(15)பாலை விரும்பும் ஒருவன், பசுவின் மடியை வெட்டி எதையும் அடையாததைப் போலவே ஒரு நாடும் முறையற்ற வழிமுறைகளால் பீடிக்கப்பட்டால், அது மன்னனுக்கு ஒருபோதும் எதையும் ஈட்டித் தருவதில்லை.(16) ஒரு காராம்பசுவை மென்மையாக நடத்துபவன் எப்போதும் அதனிடமிருந்து பாலை அடைகிறான். அதே போலவே, முறையான வழிமுறைகளின் உதவி மூலம் தன் நாட்டை ஆளும் மன்னனும், அதிலிருந்து அதிகக் கலன்களை அறுவடை செய்கிறான்.(17) ஒரு நாட்டை முறையாகப் பாதுகாத்து, நீதிமிக்க வழிமுறைகளின் உதவியுடன் அஃதை ஆண்டால், ஒரு மன்னன் எப்போதும் அதிகச் செல்வத்தையே அடைகிறான்.(18) மன்னனால் நன்கு பாதுகாக்கப்படும் பூமியானது, மனம் நிறைந்த தாயானவள் தன் பிள்ளைக்குப் பாலைத் தருவதைப் போலவே, (அஃதை ஆள்பவர்களுக்கும், ஆளப்படுபவர்களுக்கும்) பயிர்களையும், தங்கத்தையும் விளைவிக்கிறது.(19) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பூக்காரனின் உதாரணத்தைப் பின்பற்றுவாயாக, கரி உற்பத்தி செய்பவனைப் பின்பற்றாதே. அவ்வாறு பின்பற்றி, பாதுகாப்பு வழங்கும் கடமையைச் செய்யும் உன்னால் எப்போதும் பூமியில் இன்புற்றிருக்க முடியும்[5].(20)ஓர் எதிரியின் நாட்டைத் தாக்கும்போது உன் கருவூலம் வற்றினால், பிராமணர்களைத் தவிர மற்ற அனைவரின் செல்வங்களையும் எடுத்து நீ அதை நிரப்பலாம்.(21) நீ பெரும் துன்பத்தில் இருக்கும்போது, செல்வம்படைத்த பிராமணர்களைக் கண்டாலும் உன் இதயம் அசையாமல் இருக்கட்டும். நீ செழிப்புடன் இருக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை.(22) அவர்களுக்குத் {பிராமணர்களுக்குத்} தகுந்தவாறும், உனது சக்திக்குத்தக்கவாறும் அவர்களுக்குச் {பிராமணர்களுக்குச்} செல்வத்தை அளித்து, பாதுகாத்து, அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்கு {பிராமணர்களுக்கு} ஆறுதலளிக்க வேண்டும். இவ்வாறு நீ நடந்து கொண்டால், மறுமையில் அடைதற்கரியவற்றை நீ அடைவாய்.(23) அத்தகு நன்னடத்தையைப் பின்பற்றியே நீ உன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அப்போது நீ உயர்ந்த, தூய்மையான, நீடித்த புகழை அடைவாய்.(24) ஓ பாண்டுவின் மகனே, உன் குடிமக்களை நீதியுடன் பாதுகாத்தால் எந்த வருத்தமோ, வலியோ உனதாகாது.(25)
அனைத்து உயிரினங்களிடமும் கருணை காட்டி, அவற்றைத் தீங்கிலிருந்து காப்பதே உயர்ந்த தகுதி என்று சொல்லப்படுவதால் குடிமக்களைப் பாதுகாப்பதே ஒரு மன்னனின் உயர்ந்த கடமையாகும்.(26) கடமைகளை அறிந்த மனிதர்கள், மன்னன் அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதில் ஈடுபடும்போது அவற்றின் மீது தன் கருணையை வெளிப்படுத்துவதால் அதுவே அவனுடைய உயர்ந்த தகுதியாகும் {புண்ணியமாகும்} என்று கருதுகின்றனர்.(27) ஒரு மன்னன் அச்சத்திலிருக்கும் தன் குடிமக்களைப் பாதுகாக்காமல், {அக்கடமையை} ஒரு நாள் புறக்கணித்தாலும், அவன் (அதற்காக) ஆயிரம் வருடங்களுக்கு நரகில் துன்புற்றாலும் அதன் {அந்தப் பாவத்திற்கான} முடிவை அடைய மாட்டான். (28) ஒரு மன்னன் தன் குடிமக்களை நீதியுடன் ஒரு நாள் பாதுகாப்பதால் ஈட்டும் தகுதியால், அவன் சொர்க்கத்தில் பத்தாயிரம் வருடங்களை அதற்கான வெகுமதியாக அனுபவிப்பான்.(29) தன் குடிமக்களை நீதியுடன் பாதுகாப்பதால் மட்டுமே ஒரு மன்னன், கார்ஹஸ்த்யம், பிரம்மச்சரியம், வானப்பிரஸ்த வாழ்வுமுறைகளை முறையாகப் பின்பற்றும் மனிதர்கள் அடையும் உலகங்கள் விரைவாக அடைந்துவிடுகிறான்.(30)
ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, எனவே, நீ பெருங்கவனத்துடன் (பாதுகாப்பு எனும்) இந்தக் கடமையை ஆற்றுவாயாக. அப்போதுதான் நீ நீதிக்கான வெகுமதியை அடைவாய், எந்தத் துயரும், எந்த வலியும் உனதாகாது. ஓ! பாண்டுவின் மகனே, சொர்க்கத்தில் நீ பெருஞ்செழிப்பை அடைவாய்.(31) இது போன்ற தகுதியை மன்னர்களாக இல்லாத மனிதர்கள் அடைவது சாத்தியமில்லை. எனவே, வேறெதுவுமாக இல்லாமல் மன்னனாக இருக்கும் ஒருவன், இத்தகு அற வெகுமதியை ஈட்டுகிறான்.(32) நுண்ணறிவைக் கொண்ட நீ ஒரு நாட்டை அடைந்திருக்கிறாய். உன் குடிமக்களை நீதியுடன் பாதுகாப்பாயாக. சோமத்தால் இந்திரனையும், விருப்பத்திற்குரிய பொருட்களால் உன் நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகளையும் நிறைவடையச் செய்வாயாக” என்றார் {பீஷ்மர்}.(33)
வாயு சொன்ன நால்வர்ண தாரதம்மியம்! – சாந்திபர்வம் பகுதி – 72-புரூரவஸுக்கும், வாயு தேவனுக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; நான்கு வர்ணங்களின் ஓப்பீட்டு மதிப்பையும், புரோகிதராக இருக்கத் தகுந்த பிராமணனின் பண்புகளையும் புரூரவஸுக்கு விளக்கிய வாயு தேவன்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] “ஓ! மன்னா, எந்த மனிதன் நல்லோரைப் பாதுகாத்துத் தீயோரைத் தண்டிப்பானோ, அவன் மன்னனால் அவனது புரோகிதராக நியமிக்கப்பட வேண்டும்.(1) இது தொடர்பாக, இளையின் மகனான புரூரவஸுக்கும், மாதரிஸ்வானுக்கும் {வாயுவுக்கும்}[2] இடையில் நடந்த உரையாடல் பழங்காலக் கதையில் தென்படுகிறது.(2)புரூரவஸ் {வாயுதேவனிடம்}, “பிராமணன் எங்கிருந்து உண்டானான்? மூவகையினரும் எங்கிருந்து உண்டானார்கள்? எதன் காரணமாகப் பிராமணன் முதன்மையானவனானான்? இவை யாவற்றையும் சொல்வதே உனக்குத் தகும்” என்று கேட்டான்.(3)
மாதரிஸ்வான் {வாயுதேவன் புரூரவஸிடம்}, “ஓ! மன்னர்களில் சிறந்தவனே {புரூரவஸ்ஸே}, பிராமணன், பிரம்மனின் வாயிலிருந்து உண்டானான். க்ஷத்திரியன், அவரது இரு கரங்களிலிருந்து உண்டானான், வைசியன் அவரது இரு தொடைகளில் இருந்து உண்டானான்.(4) ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே, இந்த மூவகையினருக்காகக் காத்திருப்பதற்காக {பணிவிடை செய்வதற்காக} உயிர்த்தெழுந்தவனும், நான்காவது வகையைச் சேர்ந்தவனுமான சூத்திரன் (பிரம்மனின்) பாதத்தில் இருந்து உண்டானான்.(5) உண்மையில் இவ்வாறு உண்டான பிராமணன், வேதங்களையும், பிற சாத்திரங்களையும் பராமரிப்பதற்காக, அனைத்து உயிரினங்களின் தலைவனாகப் பூமியில் பிறப்பை எடுத்தான்[3].(6) பிறகு, பூமியை ஆள்வதற்காகவும், தண்டக்கோலை {செங்கோலைத்} தரிக்கவும், அனைத்து உயிரினங்களையும் காக்கவும், இரண்டாவது வகையைச் சேர்ந்த க்ஷத்திரியன் படைக்கப்பட்டான்.(7) வைசியன், உழவு, வணிகம் மூலம் தன்னையும் தாங்கிக் கொண்டு, இந்த இரு வகையினரையும் ஆதரிப்பதற்காகப் படைக்கப்பட்டான். இறுதியாக, சூத்திரன் இந்த மூன்று வகையினருக்கும் கீழ்ப்படிந்து பணிசெய்ய வேண்டும் என்ற பிரம்மனால் விதிக்கப்பட்டான்” என்றான் {வாயு தேவன்}.(8)புரூரவஸ் {வாயுதேவனிடம்}, “ஓ! வாயு தேவா, இந்தப் பூமி நியாயமாக யாருக்குச் சொந்தமானதாகும். {இது சொந்தமானது} பிரமணனுக்கா? க்ஷத்திரியனுக்கா?” என்று கேட்டான்.(9)
வாயு தேவன் {புரூரவஸ்ஸிடம்}, “பிறப்பு மற்றும் முன்னிலையின் விளைவால் இந்த அண்டத்தில் இருக்கும் அனைத்தும் பிராமணனுக்கே சொந்தமானதாகும். அறநெறியறிந்தோர் இதையே சொல்கின்றனர்.(10) பிராமணன் எதை உண்கிறானோ, அஃது அவனுடையதே. அவன் வசிக்கும் இடம் அவனுடையதே. அவன் கொடுப்பதும் அவனுடையதே. அவன், அனைத்து {பிற மூன்று} வகையினரின் மதிப்புக்கும் தகுந்தவனாவான். அவனே முதலில் பிறந்தவனும், முதன்மையானவனும் ஆவான்.(11) கணவன் இல்லாத போது, ஒரு பெண், அவனுக்குப் பதில் அவனது தம்பியை ஏற்பதைப் போலவே, பூமியானவள், பிராமணனுடைய மறுப்பின் காரணமாக, அவனுக்கு அடுத்துப் பிறந்த க்ஷத்திரியனைத் தன் தலைவனாக ஏற்றாள். இதுவே முதல் விதியாகும். எனினும், இடர் காலங்களில் இதற்கு விதிவிலக்கும் உண்டு.(12) நீ, உன் வகைக்குண்டான கடமைகளை வெளிப்படுத்த முனைந்து, சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தை அடைய விரும்பினால், நீ வெல்லும் நிலங்கள் அனைத்தையும்,(13) கல்வியறிவு கொண்டவனும், அறநடத்தை கொண்டவனும், கடமைகளை அறிந்தவனும், தவங்களை நோற்பவனும், தன் வகைக்கான கடமைகளில் நிறைவடைந்தவனும், செல்வத்தில் பேராசையில்லாதவனுமான பிராமணனுக்குக் கொடுக்க வேண்டும்.(14) நற்பிறப்பைக் கொண்டவனும், ஞானம் மற்றும் பணிவைக் கொண்டவனுமான
பிராமணன், தன் பெரும் நுண்ணறிவைக் கொண்டு ஒவ்வொரு காரியத்திலும் மன்னனுக்கு வழிகாட்டுகிறான்.(15) நல்லாலோசனைகளின் மூலமாக அவன் அந்த மன்னனைச் செழிப்பீட்டச் செய்கிறான். மன்னன் ஆற்ற வேண்டிய கடமைகளை அந்தப் பிராமணன் சுட்டிக் காட்டுகிறான்.(16) தன் வகைக்குரிய கடமைகளைச் செய்பவனும், செருக்கற்றவனும், ஞானம் கொண்டவனுமான ஒரு மன்னன், பிராமணனின் அறிவுரைகளை எவ்வளவு காலம் கேட்பானோ, அவ்வளவு காலம் அவன் மதிக்கப்படுகிறான், அவ்வளவு காலம் அவன் புகழை அனுபவிக்கிறான். எனவே, மன்னன் அடையும் தகுதியில் {புண்ணியத்தில்} அவனது புரோகிதனுக்கும் ஒரு பங்குண்டு.(17) மன்னன் இவ்வாறு நடக்கும்போது, அவனைச் சார்ந்திருக்கும் அவனது குடிமக்கள் அனைவரும், தங்கள் நடத்தையில் அறவோராகவும், தங்கள் கடமைகளில் கவனமுள்ளோராகவும், அனைத்து வகை அச்சத்தில் இருந்து விடுபட்டவர்களாகவும் இருப்பார்கள்.(18) மன்னன், தன்னால் முறையாகப் பாதுகாக்கப்படும் தன் குடிமக்களால் தன் நாட்டில் செய்யப்படும் அறச் செயல்களின் நான்கில் ஒரு பாகத்தை அடைகிறான்.(19)
தேவர்கள், மனிதர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள், உரகர்கள் மற்றும் ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும் தங்களைத் தாங்கிக் கொள்ள வேள்விகளையே சார்ந்திருக்கின்றனர். மன்னன் இல்லாத ஒரு நாட்டில், எந்த வேள்வியும் நடைபெறாது.(20) தேவர்களும், பித்ருக்களும் வேள்விகளும் அளிக்கப்படும் காணிக்கைகளாலேயே வாழ்கின்றனர். எனினும் வேள்வியானது மன்னனைச் சார்ந்திருக்கிறது.(21) கோடை காலத்தில், மனிதர்கள், மரத்தின் நிழல், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த தென்றல் ஆகியவற்றின் ஆறுதலை விரும்புவார்கள். குளிர் காலத்தில் அவர்கள் நெருப்பு, கதகதப்பான துணிகள் மற்றும் சூரியன் ஆகியவற்றில் இருந்து ஆறுதலை அடைகிறார்கள்.(22)
மனிதனின் இதயமானது, ஒலி, தீண்டல், சுவை, காட்சி மற்றும் மணம் ஆகியவற்றில் இன்பத்தைக் கண்டடைகிறது. எனினும், அச்சமடைந்த மனிதன் இவையாவற்றிலும் எந்த இன்பத்தையும் காண்பதில்லை.(23) மனிதர்களின் அச்சத்தை விலக்கும் மனிதன் பெரும் தகுதியை {புண்ணியத்தை} அடைகிறான். உயிர்க்கொடையைப் போன்ற வேறொரு கொடை மூன்று உலகங்களிலும் கிடையாது.(24) மன்னனே இந்திரனாவான். மன்னனே யமனாவான். மன்னனே தர்மனும் ஆவான். மன்னன் பல்வேறு வடிவங்களை ஏற்கிறான். மன்னனே அனைத்தையும் தாக்குப்பிடித்து, அவற்றை ஆதரிக்கிறான்” என்றான் {வாயு தேவன்}”.(25)
பிராமண க்ஷத்திரிய ஒற்றுமை! – சாந்திபர்வம் பகுதி – 73-புரூரவஸுக்கும், கசியபருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களுக்கிடையில் இருக்க வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தைச் சொன்ன கசியபர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] “ஓ! மன்னா, அறத்தகுதி மற்றும் செல்வம் ஆகிய இரண்டிலும் கண் கொண்டவனும், மிகச் சிக்கலான கருத்துகளைக் கொண்டவனுமான மன்னன், கல்வியறிவு பெற்றவரும், வேதங்களையும், பிற சாத்திரங்களையும் மிக நெருக்கமாக அறிந்தவருமான ஒரு புரோகிதரைத் தாமதமில்லாமல் நியமித்துக் கொள்ள வேண்டும்.(1) நல்லான்மா கொண்டோரும், கொள்கை அறிந்தவர்களுமான புரோகிதர்களையுடைய மன்னர்கள், தாங்களே அத்தகைய பண்புகளைக் கொண்டோராகி, திசைகள் அனைத்திலும் செழிப்பை அனுபவிப்பார்கள்.(2) மதிக்கத்தக்க பண்புகளைக் கொண்ட புரோகிதர், மற்றும் மன்னன் ஆகிய இருவரும், நோன்புகள் மற்றும் தவங்களை நோற்பவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் குடிமக்களையும், தேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிள்ளைகளையும் பெருக்கிக் கொள்ள முடியும் {அல்லது அவர்களின் தரத்தை உயர்த்த முடியும்}.(3) அவர்கள் ஒரே இதயங்களைக் கொண்டவர்களாகவும், ஒருவருக்கொருவர் நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. பிராமணனுக்கும், க்ஷத்திரியனுக்கும் இடையில் உண்டாகும் அத்தகு நட்பின் விளைவாகக் குடிமக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.(4) அவர்கள் ஒருவரையொருவர் மதிக்கவில்லையெனில் மக்களுக்கு அழிவே ஏற்படும். பிராமணனும், க்ஷத்திரியனும் தான் அனைத்து மனிதர்களுக்கும் மூதாதையர்கள் என்று சொல்லப்படுகிறது.(5) இது தொடர்பாக இளையின் மகனுக்கும் {புரூரவஸுக்கும்}, கசியபருக்கும் இடையில் நடந்த உரையாடலொன்று பழங்கதையில் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(6)
இளையின் மகன் {புரூரவஸ் காசியபரிடம்}, “பிராமணன் க்ஷத்திரியனைக் கைவிடும்போது, அல்லது க்ஷத்திரியன் பிராமணனைக் கைவிடும்போது, அவர்களில் எவன் மேன்மையானவனாகக் கருதப்பட வேண்டும்? அவர்களில் எவருடைய ஆணைகளைச் சார்ந்து பிற வகையினர்கள் தங்களைப் பராமரித்துக் கொள்ள முடியும்?” என்று கேட்டான்.(7)
கசியபர் {புரூரவஸ்ஸ்டம்}, “பிராமணனும், க்ஷத்திரியனும் ஒருவரோடொருவர் போரிடும்போது, அந்த க்ஷத்திரியனின் நாடு அழிவடைகிறது. குழப்பமே நீடிக்கும் அந்த நாட்டில் கள்வர்கள் பெருகுவார்கள், நல்லோர் அனைவரும் ஆட்சியாளனை மிலேச்சன் என்று கருதுவார்கள்.(8) அவர்களுடைய {நல்லோரின்} எருதுகள் தழைக்காது, அவர்களின் பிள்ளைகளும் தழைக்கமாட்டார்கள். எந்த நாடுகளில் பிராமணர்கள் க்ஷத்திரியர்களைக் கைவிடுகிறார்களோ, அங்கே {பிராமணப்} பிள்ளைகள் வேதங்களைக் கற்க மாட்டார்கள்.(9) அவர்களது வீடுகளில் செல்வம் பெருகாது. அவர்களது பிள்ளைகள் நல்லோராகமாட்டார்கள், சாத்திரங்களைக் கற்கமாட்டார்கள், வேள்விகளையும் செய்யமாட்டார்கள். பிராமணர்களைக் கைவிடும் க்ஷத்திரியர்கள், தங்கள் குருதியில் மாசடைந்து, கள்வர்களின் இயல்பை அடைவார்கள்.(10) பிராமணனும், க்ஷத்திரியனும் இயல்பிலேயே ஒருவரோடொருவர் தொடர்புடையவர்களும், ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்பவர்களுமாவர். பிராமணனின் வளர்ச்சிக்கான காரணம் க்ஷத்திரியனே, க்ஷத்திரியனின் வளர்ச்சிக்கான காரணம் பிராமணனே.(11) ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளும் போது, அவர்கள் இருவருமே பெருஞ்செழிப்பை அடைவார்கள். பழங்காலத்தில் இருந்து நீடிக்கும் அவர்களது நட்பு உடையுமேயானால், அனைத்திலும் பெருங்குழப்பமே ஏற்படும்.(12)
வாழ்வெனும் பெருங்கடலைக் கடக்க விரும்பும் எந்த மனிதனும், கடலின் பரப்பில் மிதக்கும் சின்னஞ்சிறு படகைப் போலத் தன் பணியில் வெற்றியடைவதில்லை. மனிதர்களில் நால்வகையினரும் குழப்பமடைந்து, அனைவருக்கும் அழிவு ஏற்படுகிறது.(13) ஒரு மரத்தைப் போன்றவனான பிராமணன் பாதுகாக்கப்பட்டால், அது பொன்னையும், தேனையும் பொழியச் செய்கிறது. மறுபுறம் அது பாதுகாக்கப்பட வில்லையெனில், அது கண்ணீரையும், பாவத்தையும் பொழியும்.(14) வேதங்களில் இருந்து வீழ்ந்த பிராமணன், (க்ஷத்திரிய ஆட்சியாளன் இல்லாமல்) சாத்திரங்களின் பாதுகாப்பை நாடும்போது, இந்திரன் பருவ காலத்தில் மழை பொழிய மாட்டான், பல்வேறு வகையான இடர்கள் இடையறாமல் நாட்டைப் பீடித்துக் கொண்டிருக்கும்.(15) இழிந்தவனும், பாவியுமான ஒருவன், ஒரு பெண்ணையோ, பிராமணனையும் கொன்றுவிட்டு, சக மனிதர்களின் சபைகளில் மன்னன் மீதான எந்த அச்சமும் இல்லாமல் நிற்க நேர்ந்தால், அந்த க்ஷத்திரிய ஆட்சியாளனை ஆபத்து அச்சுறுத்தும்.(16) பாவிகளால் இழைக்கப்படும் பாவங்களின் விளைவாக, அந்நாட்டில் தேவன் ருத்ரன் தோன்றுகிறான். உண்மையில், பாவிகள், பழிதீர்க்கும் தேவனையே தங்கள் பாவங்களின் மூலம் கொண்டுவருகிறார்கள். பிறகு அவன் {ருத்ரன்}, நல்லோர் அல்லோர் ஆகியோர் அனைவரையும் ஒன்றாகவே {எந்தப் பாகுபாடுமின்றி} அழிக்கிறான்” என்றார் {கசியபர்}[2].(17)
ஐலன் {இளையின் மகனான புரூரவஸ்}, “ருத்ரன் எங்கிருந்து தோன்றுவான்? அவனுடைய வடிவம் என்ன? உயிரினங்கள் உயிரினங்களாலேயே அழிக்கப்படுவதே காணப்படுகிறது. ஓ! கசியபரே, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக. ருத்ர தேவன் எங்கிருந்து உண்டாகிறான்?” எனக் கேட்டான்.(18)
கசியபர், “ருத்ரன் மனிதர்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறான். அவன் தானிருக்கும் உடல்களையும், பிறரின் உடல்களையும் அழிக்கிறான். {வாயு போன்ற} வழிமண்டலம் சார்ந்த தேர்வாகச் சொல்லப்படுகிறான், அவனது வடிவம் காற்றுத் தேவர்களைப் போன்றதாகும்” என்றார்.(19)
ஐலன், “காற்று வீசுவதால், அஃது அனைத்து சமயங்களிலும் மனிதர்களை அழிப்பதாகக் காண முடியவில்லை. மேகங்களின் தேவனும் மழைப்பொழிவால் அவ்வாறு அழிப்பதில்லை. மறுபுறம், தங்கள் புலனுணர்வுகளை இழக்கும் மனிதர்களே காமத்தினாலும், வன்மத்தினாலும் கொல்லப்படுகிறார்கள்” என்றான்.(20)
கசியபர், “ஒரு வீட்டில் சுடர்விடும் நெருப்பானது, மொத்த பகுதியையோ, மொத்த கிராமத்தையோ எரிக்கிறது. அதே போல, இந்தத் தேவனும், எவனாவது ஒருவனின் புலன்களைத் திகைக்கச் செய்கிறான், அந்தக் குழப்பம் நேர்மையானவர்கள், தீயவர்கள் என எந்த வேறுபாடுமின்றி அனைவரையும் தீண்டுகிறது” என்றார்.(21)
ஐலன், “பாவிகளால் இழைக்கப்படும் பாவங்களின் விளைவால் நேர்மையானவர்கள், தீயவர்கள் என எந்த வேறுபாடுமின்றி அனைவரையும் தண்டனை தீண்டுமேயானால், மனிதர்கள் ஏன் நற்செயல்புரிய வேண்டும்? உண்மையில் அவர்கள் ஏன் தீச்செயல்களில் இருந்து விலக வேண்டும்?” என்று கேட்டான்.(22)
கசியபர், “பாவிகளுடனான அனைத்துத் தொடர்புகளையும் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் தூய்மையடைந்தவனாக, களங்கமற்றவனாக ஆகிறான். எனினும், அவர்கள் பாவிகளுடன் கலந்திருப்பதால், பாவமற்றவர்களும் தண்டனையால் தீண்டப்படுகிறார்கள். ஈர விறகு, காய்ந்த விறகோடு கலந்திருந்தால், அத்தகு உடனுறைவின் விளைவால் அது நெருப்பால் எரிக்கப்படுகிறது. எனவே, பாவமற்றவர்கள் ஒருபோதும் பாவிகளுடன் கலந்து இருக்கக்கூடாது” என்றார்.(23)
ஐலன், “பூமியானது நேர்மையானவர்களையும், தீயோரையும் தாங்குகிறது. சூரியன், நேர்மையானவர்களையும், தீயோரையும் வெப்பமடையச் செய்கிறது. காற்றும் சமமாகவே அவர்களுக்கு வீசுகிறது. நீரும் சமமாகவே அவர்களைக் கழுவுகிறது” என்றான்.(24)
கசியபர், “ஓ! இளவரசே, உண்மையில் இதுவே உலகின் நடைமுறை. எனினும், மறுமையில் இஃது அவ்வாறில்லை. மறு உலகத்தில், நேர்மையாகச் செயல்படுபவர்களுக்கும், பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவர்களுக்கும் இடையில் சூழ்நிலையிலேயே பெரும் வேறுபாடு இருக்கிறது.(25) தகுதிபடைத்த {புண்ணியம் செய்த} மனிதர்கள், தேர் நிறைந்தவையும், தங்கம், அல்லது தெளிந்த நெய் ஊற்றப்படும் நெருப்பின் காந்தியைக் கொண்டவையுமான உலகங்களை அடைகின்றனர். அந்த உலகங்கள் அமுதத்தின் இருப்பிடங்களைப் போன்றனவாகும். தகுதி படைத்த மனிதன் அங்கே பெரும் இன்ப நிலையை அனுபவிக்கிறான். மரணம், முதுமை, கவலை ஆகியன அங்கே கிடையாது.(26) பாவிகளுக்கான உலகம் நரகமாகும். இருளும், இடையறாத வலியும் {துன்பமும்} அங்கே இருக்கின்றன, அது துயரம் நிறைந்ததாகும். பாவம் நிறைந்த செயல்களைச் செய்த மனிதன், புகழ்க்கேட்டில் மூழ்கி, அங்கே பல வருடங்கள் வருத்தத்தில் ஈடுபடுகிறான்.(27)
பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களுக்கிடையிலான ஒற்றுமையின்மையின் விளைவால் மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத துன்பங்களால் பீடிக்கப்படுகிறார்கள். ஒரு மன்னன் இஃதை அறிந்து கொண்டு, அனுபவமும், பரந்த அறிவும் கொண்ட ஒரு (பிராமணப்) புரோகிதனை நியமித்துக் கொள்ள வேண்டும்.(28) ஒரு மன்னன் முதலில் புரோகிதனைத் தன் அலுவலில் நியமித்த பிறகு, அவன் மணிமுடிசூட்டிக்கொள்ள வேண்டும். இதுவே விதியாக விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த விதிகள், பிராமணனே அனைத்து உயிரினங்களிலும் முதன்மையானவன் என்று அறிவிக்கின்றன. வேதங்களை அறிந்த மனிதர்கள், பிராமணனே முதலில் உண்டாக்கப்பட்டான் என்று சொல்கின்றனர்.(29) முந்திப் பிறந்ததன் விளைவால் அவனிடம் இவ்வுலகின் நல்ல பொருட்கள் அனைத்தும் இருக்கின்றன. படைப்பாளன் உண்டாக்கிய சிறந்த பொருட்கள் அனைத்தின் உரிமையாளனான பிராமணன், முந்திப் பிறந்தவனாதலால், அவன் மரியாதைக்குத் தகுந்தவனும், அனைத்து உயிரினங்களின் வழிபாட்டுக்குத் தகுந்தவனுமாவான்.(30) ஒரு மன்னன் பலமிக்கவனாகவே இருந்தாலும், சாத்திரங்களின் ஆணைப்படி, பிற பொருட்களைக் காட்டிலும் தனித்துவமான, புகழ்பெற்ற, சிறந்த பொருட்களைப் பிராமணனுக்கு அளிக்க வேண்டும்.(31) க்ஷத்திரியனின் வளர்ச்சிக்கும் பிராமணன் பங்காற்றுகிறான், பிராமணனின் வளர்ச்சிக்கு க்ஷத்திரியன் பங்காற்றுகிறான். எனவே எப்போதும் பிராமணர்கள் மன்னர்களால் சிறப்பாக வழிபடப்பட வேண்டும்”என்றார் {கசியபர்}”.(32)
முசுகுந்தனும், குபேரனும்! – சாந்திபர்வம் பகுதி – 74-மன்னன் முசுகுந்தனுக்கும், குபேரனுக்கும் இடையில் நடந்த மோதலையும் உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; புரோகிதரால் மன்னனுக்கு நேரும் நன்மைகளை எடுத்துச் சொன்னது…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] “நாட்டைப் பேணிக் காத்து, வளர்ச்சியடையச் செய்வது மன்னனைச் சார்ந்தது என்று சொல்லப்படுகிறது. மன்னனைப் பேணிக் காத்து, அவனை வளர்ச்சியடையச் செய்வது அம்மன்னனின் புரோகிதரைச் சார்ந்தது.(1) எங்குக் குடிமக்களின் கண்ணுக்குப் புலப்படாத அச்சங்கள் களையப்பட்டு, கண்ணுக்குப் புலப்படும் அச்சங்கள் அனைத்தும் மன்னனின் கர வலிமையால் களையப்படுகின்றனவோ அந்த நாடே உண்மையான இன்பத்தை அனுபவிக்கும்.(2) இது தொடர்பாக மன்னன் முசுகுந்தனுக்கும், வைஸ்ரவணனுக்கும் {குபேரனுக்கும்} இடையில் நடைபெற்ற ஒரு பழைய உரையாடல் தென்படுகிறது.(3)மன்னன் முசுகுந்தன், மொத்த உலகத்தையும் அடக்கிய பிறகு, தன் பலத்தைச் சோதிப்பதற்காக அளகையின் தலைவனிடம் {குபேரனிடம்} சென்றான்.(4) மன்னன் வைஸ்ரவணன் {குபேரன்} (தன் ஆன்ம பலத்தால்) ஒரு பெரிய ராட்சசப் படையை உண்டாக்கினான். அவை முசுகுந்தனால் வழிநடத்தப்பட்ட படையைக் கலங்கடித்தது.(5) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {யுதிஷ்டிரா}, தன் படையினர் கொல்லப்படுவதைக் கண்ட மன்னன் முசுகுந்தன், கல்விமானான தனது புரோகிதர் (வசிஷ்டரைக்) கண்டிக்கத் தொடங்கினான்.(6) அதன்பேரில், நேர்மையான மனிதர்களில் முதன்மையான வசிஷ்டர் கடுந்தவங்களைச் செய்து, ராட்சசர்களைக் கொல்லச் செய்து, முசுகுந்தனின் விருப்பத்திற்கான உண்மையான வழிமுறையை உறுதி செய்தார்.(7) மன்னன் வைஸ்ரவணனின் {குபேரனின்} துருப்பினர் கொல்லப்பட்டபோது, அவன் {குபேரன்} முசுகுந்தனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(8)
அந்தப் பொக்கிஷங்களின் தலைவன் {குபேரன்}, “உன்னைவிடப் பலவான்களான பழங்காலத்து மன்னர்கள், தங்கள் புரோகிதர்களின் துணையுடன் இவ்வாறு ஒருபோதும் என்னை அணுகியதில்லை.(9) அவர்கள் அனைவரும் ஆயுதங்களில் திறன் கொண்டவர்களாகவும் பெரும் வலிமை கொண்டவர்களாகவும் இருந்தனர். இன்ப துன்பங்களை அருள்பவனாக என்னைக் கருதிய அவர்கள், வழிபடுவதற்காகவே என்னை அணுகியிருக்கின்றனர்.(10) உண்மையில், உனக்குக் கரவலிமை உண்டானால், அதை வெளிப்படுத்துவதே உனக்குத் தகும். பிராமண வலிமையின் துணையுடன் கூடிய நீ ஏன் இவ்வாறு செருக்குடன் நடந்து கொள்கிறாய்?” என்று கேட்டான்.(11)
இந்த வார்த்தைகளில் கோபமடைந்த முசுகுந்தன், செருக்கேதும், அச்சமேதும் இல்லாமல் பொக்கிஷத்தலைவனிடம் {குபேரனிடம்} நீதியுள்ள, அறிவார்ந்த இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(12) “தான்தோன்றியான பிரம்மன் பிராமணனையும், க்ஷத்திரியனையும் உண்டாக்கினான். அவர்கள் பொது மூதாதையையே கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் பலங்களைத் தனித்தனியாகப் பயன்படுத்தினால், அவர்களால் உலகத்தைத் தாங்க முடியாது. தவங்கள் மற்றும் மந்திரங்களின் சக்தி பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டது; கர மற்றும் ஆயுத வலிமை க்ஷத்திரியர்களுக்கு வழங்கப்பட்டது.(14) மன்னர்கள் இந்த இரு வகைச் சக்திகளையும் பெருக்கிக் கொண்டே தங்கள் குடிமக்களைக் காக்க வேண்டும். நான் அவ்வழியிலேயே செயல்படுகிறேன். எனவே, ஓ! அளகையின் தலைவா {குபேரா}, என்னை இவ்வாறு நிந்திக்காதே” என்றான்.(15)
இவ்வாறு சொல்லப்பட்ட வைஸ்ரவணன் {குபேரன்}, முசுகுந்தனிடமும், அவனது புரோகிதரிடமும் {வசிஷ்டரிடமும்}, “(தான்தோன்றியின்) உத்தரவில்லாமல் நான் எவருக்கும் ஒருபோதும் அரசுரிமையை வழங்குவது கிடையாது. அதே போல, உத்தரவில்லாமல் நான் எவரிடம் இருந்தும் அதைப் பறித்தது கிடையாது. ஓ! மன்னா, இதை அறிவாயாக.(16) கட்டுகள் இல்லாத மொத்த உலகத்தையும் நீ ஆள்வாயாக” என்றான்.
இவ்வாறு சொல்லப்பட்ட முசுகுந்தன் {குபேரனிடம்}, பதிலுரையாக,(17) “ஓ! மன்னா, உன்னிடமிருந்து கொடையாக அளிக்கப்படும் அரசுரிமையை அனுபவிக்க நான் விரும்பவில்லை. நான் என் சொந்த கரவலிமையால் கிடைக்கும் அரசுரிமையையே அனுபவிக்க விரும்புகிறேன்” என்றான்”.(18)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “முசுகுந்தனின் இந்த வார்த்தைகளைக் கேட்டும், அம்மன்னன் {முசுகுந்தன்} அச்சமில்லாமல் க்ஷத்திரியக் கடமைகளை நோற்பதைக் கண்டும் வைஸ்ரவணன் {குபேரன்} மிகுந்த ஆச்சரியத்தால் நிறைந்தான்.(19) க்ஷத்திரியக் கடமைகளுக்கு அர்ப்பணிப்புடன் இருந்த மன்னன் முசுகுந்தன், தன் கரவலிமையால் மொத்த உலகத்தையும் அடைந்து அதை ஆளத் தொடங்கினான்.(20) அறம்சார்ந்த எந்த மன்னன், பிராமணனை முன்னிலையில் கொண்டு, அவனது துணையுடன் தன் நாட்டை ஆள்கிறானோ, அவன் மொத்த உலகத்தை அடக்குவதிலும், பெரும் புகழை அடைவதிலும் வெல்கிறான்.(21) ஒரு பிராமணன் தினமும் தன் அறச்சடங்குகளைச் செய்ய வேண்டும். க்ஷத்திரியன் எப்போதும் ஆயுதங்களைத் தரித்தவனாக இருக்க வேண்டும். அவ்விருவரே இந்த அண்டத்தில் உள்ள அனைத்திற்கும் உண்மையான உரிமையாளர்கள்” {என்றார் பீஷ்மர்}.(22)
அரசவொழுக்கம்! – சாந்திபர்வம் பகுதி – 75-அரசன் எவ்வாறான நடத்தைகளைக் கொண்டவனாக இருக்க வேண்டும் என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, தன் குடிமக்களை மேன்மையடையச் செய்வதிலும், மறுமையில் புகழுலகங்களை ஈட்டுவதிலும் எந்த மன்னன் வெல்கிறான் என்பதைச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, மன்னன், பரந்த மனம் கொண்டவனாகவும், வேள்விகளைச் செய்பவனாகவும் இருக்க வேண்டும். அவன் நோன்புகளையும், தவங்களையும் நோற்க வேண்டும், மேலும் அவன் தன் குடிமக்களைப் பாதுகாக்கும் கடமையில் அர்ப்பணிப்புள்ளவனாக இருக்க வேண்டும்.(2) தன் குடிமக்களை நீதியுடன் பாதுகாக்கும் அவன், அறவோர் வரும்போது எழுந்திருந்து, அவர்களுக்குக் கொடையளித்து அவர்கள் அனைவரையும் மதிக்க வேண்டும்.(3) மன்னன் நேர்மையை {அறத்தை} மதித்தால், எங்கும் அது {நேர்மை} மதிக்கப்படும். மன்னனால் விரும்பப்படும் செயல்கள் மற்றும் பொருட்களை, அவனது குடிமக்களும் விரும்புவார்கள்.(4)
மன்னன், எப்போதும் தன் கரங்களில் உயர்த்தப்பட்ட தண்டக்கோலுடன் இருக்கும் காலனைப் போலத் தன் எதிரிகளிடம் நடந்த கொள்ள வேண்டும். அவன் தன் நாட்டில் கள்வர்கள் எங்கிருப்பினும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டும், உறுதியின்மையால் அவன் ஒருபோதும் அவர்களில் எவரையும் மன்னிக்கக்கூடாது. (5) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, மன்னன் தன் பாதுகாப்பில் இருக்கும் குடிமக்கள் ஈட்டும் தகுதியின் {புண்ணியத்தின்} நான்கில் ஒரு பகுதியை ஈட்டுகிறான்.(6) கல்வி, கொடைகள், ஆகுதிகள், தேவர்களை வழிபடுதல் ஆகியவற்றின் மூலம் தன் குடிமக்கள் அடையும் தகுதியில் நான்கில் ஒரு பகுதியை, அந்தக் குடிமக்களைப் பாதுகாப்பதின் மூலம் மட்டுமே மன்னன் அடைந்துவிடுகிறான்.(7) பாதுகாப்பை வழங்கும் தன் கடமையை மன்னன் புறக்கணிப்பதால் நாட்டில் எழும் எந்தத் துயரின் விளைவாலும் அவனுடைய குடிமக்கள் செய்யும் பாவத்தில் நான்கில் ஒரு பகுதியையும் அவன் அடைகிறான்.(8) மன்னன், கொடூரனாகவும், பேச்சில் உண்மை இல்லாதவனாகவும் மாறுவதால் உண்டாகும் எந்தப் பாவத்திலும், அவன் ஒரு பகுதியை ஈட்டுகிறான் என்று ஒரு சிலரும், மொத்த பாவத்தையும் அடைகிறான் என்று ஒரு சிலரும் சொல்கிறார்கள்.(9)
அத்தகு பாவங்களிலிருந்து மன்னன் எவ்வாறு தூய்மையடையலாம் என்ற வழிமுறைகளை இப்போது கேட்பாயாக. கள்வர்களால் ஒரு குடிமகனிடம் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை மீட்பதில் மன்னன் தவறினால், அவன் தன் கருவூலத்திலிருந்தாவது, அல்லது, அஃது இயலாவிட்டாலும், தன்னைச் சார்ந்திருப்பவர்களிடம் அடையப்பட்ட செல்வத்தைக் கொண்டாவது அந்தப் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு இழப்பீடு தர வேண்டும்.(10) அனைத்து வகையினரும், பிராமணர்களின் உடலையோ, உயிரையோ காக்க வேண்டியதைப் போலவே பிராமணர்களின் செல்வத்தையும் காக்க வேண்டும். பிராமணர்களுக்கு எதிராகக் குற்றமிழைக்கும் மனிதன் நாடுகடத்தப்பட வேண்டும்.(11) பிராமணனின் செல்வத்தைப் பாதுகாப்பதன் மூலம் அனைத்தும் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறு அடையப்படும் பிராமணனின் அருளால் மன்னன் வெற்றிமகுடம் சூட்டுவான்.(12) மேகங்களிடம் இருந்து நிவாரணத்தை நாடும் உயிரினங்களைப் போலவோ, ஒரு பெரிய மரத்திடம் புகலிடத்தை நாடும் பறவைகளைப் போலவோ மனிதர்கள், தகுந்த மன்னனின் பாதுகாப்பை நாடுகிறார்கள்.(13) காமம் நிறைந்த ஆன்மா கொண்டவனும், தன் இச்சைகளை நிறைவுசெய்யவே எப்போதும் முனைபவனும், பேராசைக்காரனும், கொடூரனுமான ஒரு மன்னன், தன் குடிமக்களைப் பாதுகாப்பதில் ஒருபோதும் வெல்வதில்லை” என்றார் {பீஷ்மர்}.(14)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அரசுரிமை அளிக்கும் மகிழ்ச்சி, அல்லது தன்னலம் பேணும் அந்த அரசுரிமையையே கூட நான் ஒருக்கணமும் விரும்பவில்லை. எனினும், அதன் மூலம் ஒருவன் அடையும் தகுதிக்காகவே {புண்ணியத்துக்காகவே} அதை நான் விரும்பினேன். எந்தத் தகுதிக்கும் {புண்ணியத்துக்கும்} அதனுடன் தொடர்பில்லை என்றே {இப்போது} எனக்குத் தெரிகிறது.(15) எனில், எந்தத் தகுதியும் ஈட்டமுடியாத அரசுரிமைக்கான எந்தத் தேவையும் இல்லை. எனவே, தகுதியை {புண்ணியத்தை} ஈட்டும் விருப்பத்தால் நான் காட்டிற்குள் ஓயப் போகிறேன். செங்கோலைப் புறந்தள்ளி, என் புலன்களை அடக்கி, புனிதமான காடுகளுக்குச் சென்று, கனிகளையும், கிழங்குகளையும் உண்டு வாழும் துறவியாகி அறத்தகுதிகளை ஈட்டுவதில் முனையப் போகிறேன்” என்றான்[1].(16,17)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா,, உன் இதயத்தின் இயல்பு என்ன என்பதையும், குற்றமில்லாத உன் மனநிலையையும் நான் அறிவேன். எனினும், குற்றமில்லா தன்மையினால் மட்டுமே உன்னால் உன் நாட்டை ஆள முடியாது.(18) உன் இதயம் மென்மையானதாக இருக்கிறது. நீ கருணையுள்ளவனாகவும், அதீத நீதிமானாகவும் இருக்கிறாய். சக்தி இல்லாதவனாகவும், அறவோனாகவும், கருணை நிரம்பியவனாகவும் நீ இருக்கிறாய். எனவே, மக்கள் உன்னை அதிகமாக விரும்புகின்றனர்.(19) நீ உன் தந்தை மற்றும் பாட்டனின் நடத்தையைப் பின்பற்றுவாயாக. நீ பின்பற்ற விரும்பும் நடத்தையை மன்னர்கள் ஒருபோதும் பின்பற்றக்கூடாது.(20) (உன் கடமையைச் செய்த பிறகு) இதுபோன்ற கவலையால் தீண்டப்பட்டவனாக ஒருபோதும் இராதே. குற்றமற்ற {புண்படுத்தா} நடத்தையை நீ ஒருபோதும் பின்பற்றாதே.(21) உன் புத்தியாலும், ஞானத்தாலும் தூண்டப்பட்டு, நீ பின்பற்ற விரும்பும் நடத்தையானது உன் தந்தை பாண்டுவின் ஆசிகளுக்கோ, உன் தாய் குந்தி உனக்காக வேண்டி வருவதற்கோ தகுந்ததில்லை.(22) துணிவு, வலிமை, உண்மை ஆகியவற்றையே உன் தந்தை எப்போதும் உனக்காக வேண்டினான். உயர்ந்த மனத்தையும், பெரும் தகைமையையுமே குந்தி எப்போதும் உனக்காக வேண்டினாள். சிராத்தங்கள் மற்றும் வேள்விகளில் ஸ்வாஹா மற்றும் ஸ்வாதாக்களுடன் அளிக்கப்படும் காணிக்கைகளை, பித்ருக்களும், தேவர்களும் தங்கள் பிள்ளைகளிடம் இருந்து எப்போதும் வேண்டுகின்றனர்.(24)
கொடைகள், கல்வி, வேள்விகள், குடிமக்களின் பாதுகாப்பு ஆகியவை தகுதியை {புண்ணியத்தைத்} தருபவையாகவோ, பாவம் நிறைந்தவையாகவோ இருப்பினும், அவற்றைப் பயிலவும், நடைமுறைப்படுத்தவுமே நீ பிறந்திருக்கிறாய்.(25) ஓ! குந்தியின் மகனே, மனிதர்கள் தங்கள் மேல் வைக்கப்பட்ட சுமைகளையும், அவர்களின் வாழ்வோடு பிணைக்கப்பட்டவற்றையும் சுமப்பதில் தோல்வியுற்றாலும், அவர்களது புகழ் ஒருபோதும் மங்குவதில்லை.(26) ஒரு குதிரை கூட நன்கு பயிற்சியளிக்கப்பட்டால், விழுந்துவிடாமல் சுமையைச் சுமப்பதில் வெல்லும். (அப்படியிருக்கையில் மனிதனாக இருக்கும் உன்னைக் குறித்த என்ன சொல்ல வேண்டும்?) வெற்றியானது (செயல்களையும், சொற்களையும்} செயல்களைச் சார்ந்ததாகச் சொல்லப்படுவதால், ஒருவனுடைய செயல்களும், வார்த்தைகளும் முறையானவையாக இருந்தால் அவன் ஒருபோதும் நிந்தனைக்குள்ளாக மாட்டான்.(27) இல்லறம் நோற்கும் அறவோனாகவோ, மன்னனாகவோ, பிரம்மச்சாரியாகவோ எவ்வாறானவனாக இருப்பினும் எந்த மனிதனும் இடறாமல் செயல்படுவதில் வென்றதில்லை.(28) செயல்படாமல் இருப்பதே பாவம் நிறைந்தது என்பதால், அனைத்துச் செயல்களில் இருந்தும் விலகாமல், சிறு தகுதியாவது {புண்ணியமாவது} இருக்கும் நன்மையான செயலைச் செய்வதே சிறந்ததாகும்.(29)
நற்பிறவி கொண்டவனும், நீதிமானுமான ஒருவன் செழிப்படைவதில் வெல்கிறான் எனும்போது, மன்னனானவன், தன் காரியங்கள் அனைத்திலும் செழிப்பை அடைவதில் வெல்வான்.(30) ஒரு நாட்டை அடையும் அறம்சார்ந்த மன்னன் ஒருவன், கொடைகளால் {தானத்தால்} சிலரையும், பலத்தால் (தண்டத்தால்) சிலரையும், இனிமையான வார்த்தைகளால் {சாமத்தால்} சிலரையும் அடிபணியச் செய்ய முயல வேண்டும்.(31) நற்பிறவி கொண்டவர்களும், தங்கள் வாழ்வாதார இழப்பை அஞ்சும் கல்விமான்களும் எவனைச் சார்ந்திருக்கிறார்களோ, எவனை நம்பி நிறைவுடன் வாழ்கிறார்களோ, அவனைவிட {அந்த மன்னனைக் காட்டிலும்} அறவோன் வேறு எவனும் இல்லை”[2] என்றார் {பீஷ்மர்}.(32)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ ஐயா, சொர்க்கத்திற்கு உகந்த நடத்தைகள் என்ன? அவற்றில் இருந்து பெறப்படும் பெரும் புகழின் இயல்பு என்ன? அதிலிருந்து அடையப்படும் உயர்ந்த செழிப்பு யாது? நீர் அறிந்தால் இவை யாவையும் எனக்குச் சொல்வீராக” என்றான்.(33)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அச்சத்திலிருக்கும் ஒருவன் எந்த மனிதனிடம் ஒரு கணமேனும் நிவாரணம் அடைகிறானோ, அவனே நம்மில் சொர்க்கத்திற்கு மிகவும் தகுந்தவனாவான். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(34) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, உற்சாகமாகக் குருக்களின் மன்னன் ஆவாயாக, சொர்க்கத்தை அடைவாயாக, நல்லோரைக் காத்து, தீயோரைக் கொல்வாயாக.(35) மேகங்களின் தலைவனிடம் இருந்து {வருணபகதேவனிடமிருந்து காக்கப்படும்} அனைத்து உயிரினங்களைப் போலவும், இனிய கனிகளுடன் கூடிய பெருமரத்திடம் இருந்து பறவைகளைப் போலவும், நியாயவான்கள் அனைவருடன் சேர்ந்த உன் நண்பர்கள் யாவரும் உன்னிடமிருந்து ஆதரவைப் பெற்றுக் கொள்ளட்டும்.(36) கண்ணியமானவனும், துணிவுமிக்கவனும், தாக்கவல்லவனும், கருணை கொண்டவனும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்பவனும், தகைமையாளனும், நீதிமானுமான ஒருவனின் பாதுகாப்பையே மனிதர்கள் நாடுகிறார்கள்” என்றார் {பீஷ்மர்}.(37)
பிராமணப் பண்புகள்! – சாந்திபர்வம் பகுதி – 76-பிராமணனின் பண்புகளையும், அவன் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, பிராமணர்களில் சிலர் தங்கள் வகைக்குரிய கடமைகளில் ஈடுபடுகின்றனர், அதே வேளையில் வேறு சிலரோ வேறு கடமைகளில் ஈடுபடுகின்றனர். இந்த இரண்டு வகையினருக்கிடையிலான வேறுபாட்டை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, கல்விமான்களும், நற்பண்புகளைக் கொண்டோரும், சமபார்வை கொண்டோருமான பிராமணர்கள் பிரம்மனுக்கு இணையானவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(2)
{வேதங்களான} ரிக்குகள், யஜுஸ்கள் மற்றும் சாமங்களை அறிந்தவர்களும், தங்கள் வகைக்கான நடைமுறைகளில் அர்ப்பணிப்பு கொண்டவர்களுமான அவர்கள் தேவர்களுக்கு இணையானவர்களாவர்.(3)
எனினும், அவர்களில் {பிராமணர்களில்} நற்பிறவியற்றோர், தங்கள் வகைக்குரிய கடமைகளில் அர்ப்பணிப்பில்லாதோர், அதையும் தவிரத் தீய நடைமுறைகளைச் செய்வோர் ஆகியோர் சூத்திரர்களைப் போன்றோராவர்.(4)
ஓர் அறம் சார்ந்த மன்னன், வேதமறியாதவர்களும், வழிபடுவதற்குத் தங்கள் சொந்த நெருப்புகள் இல்லாதவர்களுமான பிராமணர்களைக் கப்பம் கட்டும்படியும், கட்டணமில்லாமல் பொதுச் சேவையில் ஈடுபடும்படியும் பணிக்க வேண்டும்.(5)
நீதிமன்றங்களில் மக்களை அழைக்க நியப்பட்டவர்கள் கட்டணத்தின் நிமித்தம் மற்றவர்களுக்காக வழிபாடுகளைச் செய்பவர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திர்களின் வேள்விகளைச் செய்பவர்கள், மொத்த கிராமத்தின் சார்பாக வேள்விகளைச் செய்வதில் ஈடுபடுபவர்கள் ஆகிய இந்த ஐவரும் பிராமணர்களுக்கு மத்தியில் சண்டாளர்களாகக் கருதத்தக்கவர்களாவர்[1].(6)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்களில் ரித்விக்குகள், புரோகிதர்கள், அமைச்சர்கள், தூதர்கள் ஆகியோர் க்ஷத்திரியர்களுக்கு இணையானவர்களாவார்கள்.(7)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்களில் குதிரைகள், அல்லது யானைகள், அல்லது தேர்களைச் செலுத்துபவர்களும், காலாட்படை வீரர்களும் வைசியர்களுக்கு இணையானவர்களாவார்கள்.(8)
மன்னனின் கருவூலம் நிரம்பவில்லையெனில், அவன் இவர்களிடம் இருந்து கப்பம் {வரி} வசூலிக்கலாம். எனினும், கப்பம் திரட்டும்போது, அம்மன்னன், தேவர்களுக்கோ, (தங்கள் நடத்தையால்) பிரம்மனுக்கோ இணையான பிராமணர்களைத் தவிர்க்க வேண்டும்.(9) பிராமணர்களைத் தவிர்த்த மற்ற வகையினர் அனைவருடைய செல்வங்களுக்கும் மன்னனே தலைவன் என்று வேதங்கள் சொல்கின்றன. சட்டப்படியான தங்கள் கடமைகளில் இருந்து தவறிய பிராமணர்களின் செல்வத்தையும் அவன் எடுத்துக் கொள்ளலாம். (10)
தங்கள் கடமைகளை நோற்காத பிராமணர்களிடம் ஒரு மன்னன் எந்த அலட்சியமும் கொள்ளக்கூடாது. தன் மக்களை அறம்சார்ந்தவர்களாக்கும் நிமித்தமாக அவன், சிறந்தவர்களிடம் இருந்து அவர்களைப் பிரித்துத் தண்டிக்க வேண்டும்.(11) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, எவனுடைய ஆட்சிப்பகுதியில் ஒரு பிராமணன் கள்வனாகிறானோ, அந்தக் கெட்ட காரியத்திற்குக் காரணம் அந்த மன்னனே என்று கல்விமான்கள் கருதுகின்றனர்.(12) வேதங்களை அறிந்தவனும், நோன்புகளை நோற்பவனுமான ஒரு பிராமணன், தன் வாழ்வாதாரத்தைத் தாங்கிக் கொள்ளும் தேவைகளுக்காக ஒரு கள்வனாக மாறினால், அத்தேவைகளைக் கொடுத்து அவனை ஆதரிக்க வேண்டியது மன்னனின் கடமையாகும்.(13) ஓ! எதிரிகளை எரிப்பவனே, அவனைத் தாங்கிக் கொள்வதற்கான பொருட்களைக் கொடுத்த பிறகும் அவன் களவைத் தவிர்க்கவில்லையெனில், அவன் அவனுடைய சொந்தங்களுடன் சேர்ந்து நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(14)
கைகேய மன்னனும், ராட்சசனும்! – சாந்திபர்வம் பகுதி – 77-எவருடைய செல்வத்துக்கெல்லாம் அரசன் தலைவனாகக் கருதப்படுகிறான் என்பதையும், மன்னன் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்துக் கேகய மன்னனுக்கும் ராட்சசனுக்கும் நடந்த உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்துக் காளையே, எவருடைய செல்வத்திற்கு மன்னன் தலைவனாகக் கருதப்படுகிறான்? மன்னன் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன? ஓ! பாட்டா, இது குறித்து என்னிடம் உரைப்பீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பிராமணர்களைத் தவிர்த்து, அனைவருக்குச் சொந்தமான செல்வத்துக்கும், தங்கள் முறையான கடமைகளை நோற்காத பிராமணர்களுக்குச் சொந்தமான செல்வத்துக்கும் மன்னனே தலைவன் என்று வேதங்கள் அறிவிக்கின்றன.(2) தங்கள் கடமைகளை நோற்காத பிராமணர்களை மன்னன் {தண்டனை இல்லாமல் தப்ப} விட்டுவிடக்கூடாது. இதுவே பண்டைய மன்னர்களின் பாரம்பரிய வழக்கமாகும் என்று நீதிமான்கள் சொல்கின்றனர்.(3) ஓ! ஏகாதிபதி, எவனுடைய ஆட்சிப்பகுதியில் உள்ள ஒரு பிராமணன் கள்வனாகிறானோ, அந்த மன்னனே அக்குற்றத்திற்குக் காரணமாகக் கருதப்படுகிறான். அவ்வழக்கில் அவனே பாவம் நிறைந்தவனாகிறான்.(4) அத்தகு சூழ்நிலையின் விளைவால் மன்னர்கள் தங்களையே நிந்தனைக்குத் தகுந்தவர்களாகக் கருதுகிறார்கள். எனவே நீதிமான்களான மன்னர்கள் அனைவரும், பிராமணர்கள் தங்களைத் தாங்கிக் கொள்வதற்கான வழிமுறைகளை அவர்களுக்கு வழங்குகின்றனர்.(5)
ஒரு ராட்சசன், கைகேயர்களின் மன்னனைக் கடத்தும்போது அவனிடம் அம்மன்னன் பேசியதாக உள்ள ஒரு பழைய உரையாடல் இது தொடர்பாகத் தென்படுகிறது.(6) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, கடும் நோன்புகளைக் கொண்டவனும், வேதங்களை அறிந்தவனுமான கைகேயர்களின் மன்னன், காட்டில் வசித்துவந்தபோது, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஒரு ராட்சசனால் பலவந்தமாகக் கைப்பற்றப்பட்டான்.(7) {அப்போது} அம்மன்னன், “என் ஆட்சிப்பகுதிகளில் திருடன் எவனும், தீய நடத்தை கொண்டவன் எவனும், மதுவுண்பவன் எவனும் கிடையாது. புனித நெருப்பு இல்லாதவனோ, வேள்விகளைச் செய்யாதவனோ எவனும் என் ஆட்சிப்பகுதிகளில் கிடையாது. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தை அடைய முடிந்தது?[1](8) கல்வியில்லா, நோன்பு நோற்கா, சோமம் பருகா பிராமணர் எவரும் என் ஆட்சிப்பகுதிகளில் கிடையாது. புனித நெருப்பு இல்லாதவனோ, வேள்விகளைச் செய்யாதவனோ எவனும் என் ஆட்சிப்பகுதிகளில் கிடையாது[2]. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் ஆன்மாவையடைய முடிந்தது?(9) என் ஆட்சிப்பகுதிகளில் தக்ஷிணையுடன் நிறைவுபெறாத வேள்வி ஏதும் செய்யப்படுவதில்லை. என் ஆட்சிப்பகுதிகளில் நோன்புகளை நோற்காதோர் எவரும் வேதங்களைக் கற்பதில்லை. இவ்வாறிருக்கையில், உன்னால் எவ்வாறு என் ஆன்மாவையடைய முடிந்தது?(10)
என் நாட்டில் உள்ள பிராமணர்கள் கற்பிக்கவும், கற்கவும், வேள்விகள் செய்யவும், மற்றவர்களின் வேள்விகளைச் செய்து கொடுக்கவும், கொடையளிக்கவும், கொடைபெறவும் செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் அந்த ஆறு செயல்பாடுகளையும் செய்கிறார்கள்.(11) என் நாட்டில் உள்ள பிராமணர்கள் அனைவரும் தங்கள் வகைக்கான கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்கிறார்கள். அவர்கள் மென்மையானவர்களாகவும், பேச்சில் உண்மை நிறைந்தவர்களாகவும் இருப்பதால் அனைத்தும் வழங்கப்பட்டவர்களாகவும், வழிபடப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வாறிருக்கையில், உன்னால் எவ்வாறு என் ஆன்மாவையடைய முடிந்தது?(12)
என் நாட்டில் உள்ள க்ஷத்திரியர்கள் அனைவரும், தங்கள் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஒருபோதும் இரந்து கேட்காமல் கொடுக்கவே செய்கிறார்கள். மேலும் அவர்கள் உண்மையையும், அறத்தையும் அறிந்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கற்பிக்காமல் எப்போதும் கற்கவே செய்கிறார்கள். வேள்விகளைச் செய்கிறார்களேயன்று ஒருபோதும் மற்றவர்களின் வேள்வியை நடத்துவதில்லை. அவர்கள் பிராமணர்களைப் பாதுகாக்கிறார்கள். ஒருபோதும் அவர்கள் போரில் புறமுதுகிடுவதில்லை. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் ஆன்மாவையடைய முடிந்தது?(13,14)
என் ஆட்சிப்பகுதிகளில் உள்ள வைசியர்கள் அனைவரும் தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கின்றனர். அவர்கள் எளிமையாகவும், வஞ்சகமில்லாமலும் உழவு, கால்நடை வளர்த்தல், வணிகம் ஆகியவற்றின் மூலம் தங்கள் வாழ்வாதாரங்களை அடைகின்றனர். அவர்கள் அனைவரும் கவனம் நிறைந்தவர்களாகவும், அறச்சடங்குகளையும், அற்புத நோன்புகளை நோற்பவர்களாகவும், உண்மைநிறைந்த பேச்சு கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.(15) அவர்கள், விருந்தினர்களுக்கு உரியதைக் கொடுப்பவர்களாகவும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களாகவும், தூய்மையானவர்களாகவும், தங்கள் உறவினர்கள் மற்றும் சொந்தங்களுடன் பிணைப்புள்ளவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(16)
என் நாட்டில் உள்ள சூத்திரர்கள், தங்கள் வகைக்குரிய கடமையை நோற்பவர்களாகவும், பணிவுடையவர்களாகவும் இருந்து, முறையான தொண்டாற்றி, மூன்று வகையினரிடமும் எந்தத் தீய எண்ணமும் இன்றி அவர்களுக்காகக் காத்திருக்கின்றனர் {அவர்களுக்குப் பணிவிடை செய்கின்றனர்}. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(17)
ஆதரவற்றோர், முதியோர், பலவீனர், நோய்வாய்ப்பட்டார், (பாதுகாப்பவரில்லா) பெண்கள் ஆகியோர் அனைவருக்கும் அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து நான் ஆதரிக்கிறேன். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(18) பழங்காலத்தில் இருந்து வழக்கத்தில் இருந்து வரும் நாடுகள் சார்ந்த, குடும்பங்கள் சார்ந்த, சிறப்புக்குரிய பழக்கவழக்கங்கள் எதையும் ஒருபோதும் நான் ஒழித்ததில்லை. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(19)
என் நாட்டில் உள்ள தவசிகள் பாதுகாக்கப்பட்டும், வழிபடப்பட்டும் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கௌரவிக்கப்படுபவர்களாக, உணவு கொடுத்து பராமரிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(20) பிறருக்குக் கொடுக்காமல் நான் உண்பதில்லை. அடுத்தவரின் மனைவியரிடம் நான் செல்வதில்லை. நான் தனியாக விளையாடுவதோ, மகிழ்வதோ இல்லை. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(21) பிரம்மச்சாரியல்லாத எவரும் என் நாட்டில் உணவுக்கு இரப்பதில்லை. பிக்ஷு வாழ்வு முறையை நோற்பவர்கள் எவரும் பிரம்மச்சாரியாக விரும்புவதில்லை. ரித்விக்காக இல்லாத எவரும் வேள்வி நெருப்பில் (தெளிந்த நெய்யாலான) ஆகுதிகளை ஊற்றுவதில்லை. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் ஆன்மாவையடைய முடிந்தது?(22) கற்றறிந்தோர், முதியோர், தவங்களில் ஈடுபடுவோர் ஆகியோர் நான் ஒருபோதும் அவமதித்ததில்லை. மொத்த மக்களும் உறங்கும்போது, (அவர்களுக்குக் காவலாக) நான் விழித்திருக்கிறேன். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(23)
என் புரோகிதர் தன்னை அறிந்த ஞானியாக இருக்கிறார். அவர் தவங்களைச் செய்பவராகவும், அனைத்து கடமைகளை அறிந்தவராகவும் இருக்கிறார். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவர் என் நாட்டில் முழு அதிகாரம் கொண்டவராக இருக்கிறார்.(24) கொடைகளின் மூலம் அறிவையும், உண்மை மற்றும் பிராமணர்களைப் பாதுகாப்பதன் மூலம் சொர்க்கத்தில் உள்ள அருள் உலகங்களையும் அடைய நான் விரும்புகிறேன். தொண்டால் நான் என் ஆசான்களுடன் பிணைப்புடன் இருக்கிறேன். எனக்கு ராட்சசர்களிடம் எந்த அச்சமும் கிடையாது.(25)
என் நாட்டில் விதவைகளோ, தீய பிராமணர்களோ, தங்கள் கடமைகளில் இருந்து தவறிய பிராமணர்களோ, வஞ்சகர்களோ, கள்வர்களோ, தகாதோரின் வேள்விகளைச் செய்து கொடுக்கும் பிராமணர்களோ, பாவம் நிறைந்த செயல்களைச் செய்யும் பாவிகளோ எவரும் கிடையாது. எனக்கு ராட்சசர்களிடம் எந்த அச்சமும் கிடையாது.(26)
என் உடலில் ஆயுதங்களால் ஏற்பட்ட காயத்தால் உண்டான வடு இல்லாத இரண்டு விரல் அகல இடம் கூடக் கிடையாது. நான் எப்போதும் அறத்திற்காகப் போரிடுகிறேன். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(27) என் நாட்டின் மக்கள், நான் அவர்களின் பசுக்களையும், பிராமணர்களையும் பாதுகாப்பேன் என்பதாலும், வேள்விகளைச் செய்வேன் என்பதாலும் எப்போதும் எனக்கு ஆசி கூறுகின்றனர். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என்னை அடைய முடிந்தது?” என்று கேட்டான் {கைகேய மன்னன்}.(28)
ராட்சசன், “ஓ! கைகேயர்களின் மன்னா, அனைத்துச் சூழ்நிலைகளிலும் நீ உன் கடமைகளை நோற்றவனாக இருப்பதால், நீ உன் வசிப்பிடத்திற்குச் செல்லலாம். நான் உன்னை விடுகிறேன், நீ அருளப்பட்டிருப்பாயாக.(29) ஓ! கைகேயர்களின் மன்னா, பசுக்கள் மற்றும் பிராமணர்களைப் பாதுகாப்போரும், தங்கள் குடிமக்கள் அனைவரையும் பாதுகாப்போரும் ராட்சசர்களிடமும், பாவம் நிறைந்த மனிதர்களிடமும் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை.(30) எந்த மன்னர்கள் பிராமணர்களை வழிகாட்ட விடுகிறார்களோ, எவர்களின் வலிமை பிராமணர்களைச் சார்ந்து இருக்கிறதோ, எவர்களது குடிமக்கள் விருந்தோம்பும் கடமைகளைச் செய்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்தை அடைவதில் எப்போதும் வெல்கிறார்கள்” என்றான்.”(31)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “எனவே, நீ பிராமணர்களைப் பாதுகாக்க வேண்டும். உன்னால் பாதுகாக்கப்படும் அவர்கள், பதிலுக்கு உன்னைப் பாதுகாப்பார்கள். ஓ! மன்னா, அவர்களுடைய ஆசிகள் அறம்சார்ந்த நடத்தை கொண்ட மன்னர்களுக்கு எப்போதும் கிடைக்கும்.(32) தங்கள் கடமைகளை நோற்காத பிராமணர்களை அறத்தின் நிமித்தமாகத் தண்டித்து, சிறந்தவர்களிடம் இருந்து அவர்களைத் (தனிப்பட்ட வகுப்பாக) தனிமைப்படுத்த வேண்டும்.(33) நகர மற்றும் மாகாண மக்களிடம் இவ்வழியில் நடந்து கொள்ளும் மன்னன் ஒருவன் இம்மையில் செழிப்பையும், இந்திரனுடன் கூடிய சொர்க்கத்தில் வசிப்பிடத்தையும் அடைகிறான்” {என்றார் பீஷ்மர்}.(34)
சூத்திரனும் மன்னனாகத் தகுந்தவனே! – சாந்திபர்வம் பகுதி – 78-ஆபத்துக் காலங்களில் பிராமணர்கள் செய்யக்கூடிய, செய்யகூடாத தொழில்கள்; மன்னன் பலவீனமடையும்போது, அவனுக்குப் பலத்தை அளிக்க வேண்டிய பிராமணனின் கடமை; மக்களைப் பாதுகாப்பதே முதல் கடமை, அதைச் சூத்திரன் செய்தாலும், அவன் மன்னனாகலாம் என்று யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஆபத்துக் காலங்களில் ஒரு பிராமணன் க்ஷத்திரியக் கடமைகளைப் பயின்று தன்னை ஆதரித்துக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், எந்தக் காலத்திலாவது அவன் வைசியர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைப் பயில முடியுமா?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு பிராமணன் தன் வாழ்வாதாரத்தை இழந்து ஆபத்தில் வீழும்போது, க்ஷத்திரியக் கடமைகளுக்கு அவன் தகுந்தவனாக இல்லையென்றால், நிச்சயம் அவன் வைசியர்களின் நடைமுறைகளைப் பின்பற்றி, உழவு, கால்நடை வளர்த்தல் ஆகியவற்றின் மூலம் தன்னைத் தாங்கிக் கொள்ளலாம்” என்றார்.(2)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒரு பிராமணன் வைசியக் கடமைகளைப் பின்பற்றி, சொர்க்கம் செல்லும் எதிர்பார்ப்பைத் தொலைக்காமல் அவன் என்னென்ன பொருட்களை விற்கலாம்?” என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, அனைத்துச் சூழ்நிலைகளிலும் ஒரு பிராமணன், மதுவகைகள், உப்பு, எள், பிடரி கொண்ட விலங்குகள், காளைகள், தேன், இறைச்சி மற்றும் சமைத்த உணவு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இவற்றை விற்பதால் ஒரு பிராமணன் நரகத்தில் மூழ்குவான்.(4,5) ஒரு பிராமணன் ஓர் ஆட்டை விற்பதனால், அவன் அக்னி தேவனை விற்ற பாவத்தை இழைத்தவனாகிறான்; குதிரையை விற்பதனால் சூரிய தேவனை விற்ற பாவத்தையும், சமைத்த உணவை விற்பதனால் நிலத்தை விற்ற பாவத்தையும், ஒரு பசுவை விற்பதனால் வேள்வி மற்றும் சோமச்சாற்றை விற்ற பாவத்தையும் இழைத்தவனாகிறான்.(6) சமைத்த உணவை மற்றாகக் கொடுத்து, சமைக்கப்படாத உணவை வாங்குவதை நல்லோர் மெச்சுவதில்லை. எனினும், ஓ! பாரதா, சமைத்த உணவை அடைவதற்காகச் சமைக்கப்படாத உணவை மாற்றாகக் கொடுக்கலாம்.(7) “சமைக்கப்பட்ட உன் உணவை நாங்கள் உண்கிறோம். (நாங்கள் மாற்றாகக் கொடுக்கும்) இந்தக் கச்சாப் பொருட்களை நீ சமைப்பாயாக” என்ற ஒப்பந்தத்தில் எந்தப் பாவமுமில்லை[1].(8) ஓ! யுதிஷ்டிரா, பழங்காலத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்ட பழக்கவழக்கங்களின்படி நடந்து கொள்ளும் மனிதர்களின் நித்திய நடைமுறைகளைக் குறித்துச் சொல்கிறேன், கேட்பாயாக.(9) “இதை நான் உனக்குக் கொடுக்கிறேன். பதிலுக்கு இந்தப் பொருளை எனக்குக் கொடுப்பாயாக” என்ற இத்தகு ஒப்பந்தத்தின் மூலம் பரிமாற்றம் செய்து கொள்வது நீதியே. எனினும் பலவந்தமாகப் பொருட்களை எடுத்துக் கொள்வது பாவம் நிறைந்ததாகும்.(10) இதுவே முனிவர்கள் மற்றும் பிறரின் பழங்காலப் பழக்கவழக்கமாகும். இது நீதியே என்பதில் ஐயமில்லை” என்றார் {பீஷ்மர்}.(11)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, அனைத்து வகையினரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைக் கைவிட்டு, மன்னனுக்கு எதிராக ஆயுதம் எடுப்பார்களேயானால், மன்னனின் சக்தி குறைவை அடையும்.(12) அப்போது அம்மன்னனால் எந்த வழிமுறைகளின் மூலம் மக்களின் பாதுகாவலனாகவும், புகலிடமாகவும் ஆக முடியும்? ஓ! மன்னா, என்னிடம் விரிவாகப் பேசி இந்த என் ஐயத்தைத் தீர்ப்பீராக” என்று கேட்டான்.(13)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அத்தகு சந்தர்ப்பங்களில், பிராமணர்களின் தலைமையிலான அனைத்து வகையினரும் கொடைகள், தவங்கள், வேள்விகள், அமைதி, தற்கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் தங்கள் நன்மையை நாட வேண்டும்.(14) அவர்களில் வேத பலம் கொண்டோர் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் எழுந்து, இந்திரனுக்குப் பலமூட்டும் தேவர்களைப் போல, மன்னனின் பலத்தை (வேத சடங்குகளின் மூலம்) மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புக் கொள்ள வேண்டும்.(15) மன்னனின் சக்தி சிதைவுறும்போது பிராமணர்களே அவனது புகலிடமாகச் சொல்லப்படுகிறார்கள். ஞானம் கொண்ட மன்னன், பிராமண சக்தியின் மூலமே தன் சக்தியை மேம்படுத்த முனைய வேண்டும்.(16) வெற்றிமகுடம் சூடிய மன்னன், அமைதியை நிலைநிறுத்த முனையும்போது, அனைத்து வகையினரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைச் செய்ய வேண்டும்.(17) கள்வர்கள் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் உடைத்து, எங்கும் அழிவைப் பரப்பும்போது, அனைத்து வகையினரும் ஆயுதம் எடுக்க வேண்டும். ஓ! யுதிஷ்டிரா, அவ்வாறு செய்வதால் அவர்கள் எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை” என்றார்.(18)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “க்ஷத்திரியர்கள் அனைவரும் பிராமணர்களுக்குப் பகைவர்களானால், அப்போது பிராமணர்களையும், வேதங்களையும் எவன் பாதுகாக்க வேண்டும்? அப்போது பிராமணர்களின் கடமையென்ன? எவன் அவர்களுடைய புகலிடமாக இருப்பான்?” என்று கேட்டான்.(19)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தவங்கள், பிரம்மச்சரியம், ஆயுதங்கள், (உடல்) வலிமை ஆகியவற்றின் மூலம், வஞ்சகத்தின் உதவியுடனோ, இல்லாமலோ க்ஷத்திரியர்கள் அடக்கப்பட வேண்டும். க்ஷத்திரியன் தவறாக நடந்து கொண்டால், அதிலும் குறிப்பாகப் பிராமணர்களிடம் தவறாக நடந்து கொண்டால், வேதங்களே அவர்களை அடக்கும். க்ஷத்திரியர்கள் பிராமணர்களிடம் இருந்து உதித்தவர்களே ஆவர்.(21) நெருப்பு நீரிலிருந்து உதிக்கிறது; க்ஷத்திரியன் பிராமணனிலிருந்தும்; இரும்பு கல்லில் இருந்தும் உண்டாகின்றன. ஆனால் இவை தங்கள் பிறப்பின் மூலத்தோடு தொடர்படுகையில் தணிவையடைகின்றன.(22) இரும்பு கல்லைத் தாக்கும்போது, அல்லது நெருப்பு நீருடன் மோதும்போது, அல்லது க்ஷத்திரியன் பிராமணனிடம் பகைமைபாராட்டும்போது, இந்த மூன்றின் பலமும் அழிவடைகிறது.(23) ஓ! யுதிஷ்டிரா, இவ்வாறு சக்தியும், வலிமையும் என்னதான் பெரியனவாகவும், தடுக்கப்பட முடியாதனவாகவும் இருப்பினும், க்ஷத்திரியர்கள் பிராமணர்களுக்கு எதிராகத் திருப்பப்படும்போது தணிவடைகின்றனர்.(24)
பிராமணர்களின் சக்தி மென்மையடையும்போதும், க்ஷத்திரிய சக்தி பலவீனமடையும்போதும், மனிதர்கள் அனைவரும் பிராமணர்களிடம் தவறாக நடந்து கொள்ளும்போதும்,(25) பிராமணர்களையும், அறநெறியையும், தங்களையும் காப்பாற்றிக் கொள்ளப் பெரும் மனோ பலத்துடன், நீதியின் பாதையில் செல்ல விரும்பும் எவர்கள், மரணம் குறித்த அச்சமனைத்தையும் விடுகிறார்களோ, அவர்கள் மறுமையில் உயர்ந்த அருள் உலகங்களை வெல்வார்கள். பிராமணர்களின் நிமித்தமான அனைத்து மனிதர்களும் ஆயுதமெடுக்க வேண்டும்.(26,27) துணிவுமிக்க எவர்கள் பிராமணர்களுக்காகப் போராடுகிறார்களோ, அவர்கள், வேதங்களை எப்போதும் கவனமாகக் கற்றவர்கள், கடுந்தவங்களைச் செய்தவர்கள், நோன்பிருந்து தங்கள் உடல்களைச் சுடர்மிக்க நெருப்பில் விட்டவர்கள் ஆகியோருக்காகச் சொர்க்கத்தில் ஒதுக்கப்பட்ட புகழுலகங்களை அடைவார்கள்.(28) மற்ற மூன்று வகையினருக்காக ஆயுதம் ஏந்தும் பிராமணன் பாவமிழைத்தவனாக மாட்டான். அத்தகு சூழ்நிலையில் உயிரை விடுவதை விட உயர்ந்த கடமையேதும் இல்லை என்று மக்கள் சொல்கின்றனர்.(29)
பிராமணர்களின் எதிரிகளைத் தண்டிக்க முயன்று, இவ்வாறு தங்கள் உயிரை விடுபவர்கள் அருளப்பட்டிருப்பாராக. நான் அவர்களை வணங்குகிறேன். அவர்களுக்கான உலகத்தை நாம் அடைவோமாக. அந்த வீரர்கள் பிரம்ம லோகத்தை அடைவார்கள் என்று மனுவே சொல்கிறார்.(30) குதிரை வேள்வியில் இறுதி நீராடலைச் செய்து தங்கள் பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடையும் மனிதர்களைப் போலவே, தீய மனிதரோடு போராடுகையில் ஆயுத முனைகளில் இறப்பவர்களும் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைகிறார்கள்.(31) இடத்திற்கும், காலத்திற்கும் தக்கபடி, நீதி அநீதியாகவும், அநீதி நீதியாகவும் மாறுகின்றன. (மனித செயல்பாட்டின் தன்மைகளைத் தீர்மானிப்பதில்) இடத்திற்கும், காலத்திற்கும் இத்தகு சக்தி இருக்கிறது.(32) மனிதநேயத்திற்கு நட்பாக இருப்பவர்கள், கொடூரச் செயல்களைச் செய்திருந்தாலும் உயர்ந்த சொர்க்கத்தை அடைந்திருக்கிறார்கள். நீதிமிக்க க்ஷத்திரியர்கள், பாவம் நிறைந்த செயல்களைச் செய்தாலும் அருளப்பட்ட முடிவுகளை அடைந்திருக்கிறார்கள்[2].(33) தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, பிற வகையினரை அவர்களது கடமைகளைச் செய்ய வைக்க, கள்வர்களைத் தண்டிக்க என்ற இந்த மூன்று சந்தர்ப்பங்களில் ஆயுதங்களை எடுப்பதால் ஒரு பிராமணன் எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை” என்றார் {பீஷ்மர்}.(34)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கள்வர்கள் தலைதூக்கி, குழப்பத்தின் விளைவால் வகை {வர்ணக்} கலப்பு தொடங்கி, க்ஷத்திரியர்களும் பலவீனமடைந்திருந்தால், ஒரு க்ஷத்திரியனைத் தவிர வேறு ஒரு பலமிக்க மனிதன், மக்களைக் காப்பதற்காக அந்தக் கள்வர்களை அடக்க முனைந்தால்[3],(35) ஓ! மன்னர்களில் சிறந்தவரே {பீஷ்மரே}, உண்மையில் அந்தப் பலமிக்க மனிதன், பிராமணனாகவோ, வைசியனாகவோ, சூத்திரனாகவோ இருந்தால், மேலும் அவன் நீதியுடன் செங்கோல் தரித்து மக்களைப் பாதுகாப்பதில் வென்றால், அவனது செயல் நியாயமானதாகக் கொள்ளப்படுமா? அல்லது, அந்தக் கடமையை நிறைவேற்றியதற்காக விதிமுறைகளால் அவன் அடக்கப்படுவானா? க்ஷத்திரியர்கள் இழிவடையும்போது, பிற வகையினர் ஆயுதமெடுக்க வேண்டும் என்றே {எனக்குத்} தோன்றுகிறது” என்று சொன்னான்[4].(37)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அவன் சூத்திரனாகவோ, வேறு வகையைச் சார்ந்தவனாகவோ இருப்பினும், தெப்பமில்லா ஓடையில் தெப்பமாகவும், கடப்பதற்கு எந்த வழிமுறையும் இல்லாத இடத்தில் கடக்கும் வழிமுறையாகவும் உள்ள அவன், நிச்சயம் அனைத்து வழியிலும் மதிக்கப்படத் தகுந்தவனே.(38) ஓ! மன்னா, ஆதரவற்ற மனிதனும், ஒடுக்கப்பட்டவனும், கள்வர்களால் பீடிக்கப்பட்டவனும் எவனை நம்பி மகிழ்ச்சியாக வாழ்கிறார்களோ, அந்த மனிதன், ஒரு சொந்தக்காரனைப் போலவே அனைவராலும் அன்புடன் வழிபடத்தகுந்தவனாவான். ஓ! குருகுலத்தவனே, பிறரின் அச்சத்தை விலக்குபவன் எவனோ, அவன் எப்போதும் மதிப்புக்குத் தகுந்தவனே ஆவான்.(39,40) சுமைகளைத் தாங்காத காளைகள், அல்லது, பால் கறக்காத பசுக்கள், அல்லது வெறுமையாய் {மலடாய்} இருக்கும் மனைவி ஆகியவற்றால் யாது பயன்? அதே போலவே, பாதுகாப்பை வழங்க முடியாத ஒரு மன்னனால் யாது பயன்?(41) வேத அறிவில்லா பிராமணனும், பாதுகாப்பை வழங்க முடியாத மன்னனும், மரத்தால் செய்யப்பட்ட யானையையோ, தோலால் செய்யப்பட்ட மானையோ, செல்வமற்ற மனிதனையோ, அலியையோ, களர் நிலத்தையோ போன்றவர்களே. அவர்கள் இருவரும் மழைபொழியா மேகத்தைப் போன்றவர்களே.(42,43) எப்போதும் நல்லோரைப் பாதுகாத்து, தீயோரை அடக்கும் எந்த மனிதனும், மன்னனாகவும், உலகை ஆளவும் தகுந்தவனே” என்றார் {பீஷ்மர்}.(44)
வேள்விகளும், தவங்களும்! – சாந்திபர்வம் பகுதி – 79-ரித்விக்குகளின் நடத்தை மற்றும் பண்புககளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; வேள்விகளைக் குறித்தும், தவங்களைக் குறித்தும் சொன்னது; தவத்தின் மேன்மை…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நம் வேள்விகளில் புரோகிதர்களாக {ரித்விக்குகளாக} நியமிக்கப்படும் மனிதர்களின் நடத்தையும், செயல்பாடுகளும் எவ்வாறு இருக்க வேண்டும்? ஓ! மன்னா {பீஷ்மரே}, அவர்கள் எப்படிப்பட்ட மனிதர்களாக இருக்க வேண்டும்? ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “{சாமவேதமான} சாமங்கள் உள்ளிட்ட சந்தங்களையும், சுருதிகளில் சொல்லப்பட்டுள்ள சடங்குகள் அனைத்தையும் அறிந்தோரும், மன்னனின் செழிப்புக்கு வழிவகுக்கும் அறச்செயல்கள் அனைத்தையும் செய்யத்தக்கவர்களுமான பிராமணர்களே புரோகிதர்களாக {ரித்விக்குகளாகத்} தகுந்தவர்கள் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(2) அவர்கள் அர்ப்பணிப்புடன் கூடிய மாறா பற்றுறுதியுடன் கூடியவர்களாகவும், மன்னர்களிடம் ஏற்படைய வகையில் பேசுபவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் நட்புடனும், அனைவரிடமும் சம பார்வையுடனும் இருக்க வேண்டும்.(3) அவர்கள் கொடூரமற்றவர்களாகவும், பேச்சில் உண்மை நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அநியாய வட்டிக்கு விடுபவர்களாக அவர்கள் ஒருபோதும் இருக்கக்கூடாது. அவர்கள் எப்போதும் எளிமையானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும்.(4) அமைதி நிறைந்த தன்மை, போலித்தன்மையின்மை, அடக்கம், ஈகைத்தன்மை, தற்கட்டுப்பாடு, நிறைவுடைமை, புத்திக்கூர்மை, உண்மை, நோன்பு நோற்றல், அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழையாமை, காமம் மற்றும் தீய நோக்கம் இல்லாமை, மூன்று சிறந்த குணங்களுடைமை,(5) பொறாமையின்மை, அறிவுடைமை ஆகியவற்றைக் கொண்ட ஒருவன் பிரம்மனின் ஆசனத்திற்கே {பிரம்மனின் பதவிக்கே, அதாவது வேள்விகளின் ரித்விக்காகத்} தகுந்தவனாவான்” என்றார்.(6)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “வேள்விகளில் தக்ஷிணைக்கொடையைக் குறித்து வேத உரைகள் இருக்கின்றன. எனினும், எவ்வளவு கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து எந்த விதியும் இல்லை.(7) செல்வத்தைப் பிரித்துக் கொடுத்தல் தொடர்புடைய நோக்கங்களில் இருந்து (தக்ஷிணைக் கொடை) இவ்விதி பிறக்கவில்லை. கொடுக்க வேண்டிய விளைவால் எழுந்த இவ்விதியின் ஆணை திறனில்லாதவர்களின் வழக்குகளில் பயங்கரமானதாக இருக்கிறது. அந்த ஆணை வேள்வி செய்பவனின் தகுதியைக் காண்பதில்லை[1].(8) ஒரு மனிதன் அர்ப்பணிப்புடன் ஒரு வேள்வியைச் செய்ய வேண்டும் என்ற இந்தத் திறன்தேர்வானது {விதியானது} வேதங்களில் இருக்கிறது. ஆனால், வேள்வியானது பொய்மையினால் கறைபடியும்போது, அர்ப்பணிப்பினால் என்ன செய்ய முடியும்?”[2] என்று கேட்டான்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “வேதங்களை அவமதிப்பதாலோ, வஞ்சகத்தாலோ, பொய்மையினாலோ எந்த மனிதனும் அருளையோ, தகுதியையோ {புண்ணியத்தையோ} அடைய முடியாது. இது மாறானது என்று ஒருபோதும் நினைக்காதே.(10) தக்ஷிணை என்பது வேள்வியின் ஓர் அங்கமாகும்; அது வேதங்களின் ஊட்டத்திற்கு வழிவகுக்கிறது. தக்ஷிணையில்லாத வேள்வியானது ஒருபோதும் முக்திக்கு வழிவகுக்காது.(11) எனினும், ஒரு பூர்ணபாத்திரத்தின்[3] உச்சவினையானது, எவ்வளவு செழிப்பான எந்தத் தக்ஷிணைக்கும் இணையானது[4]. எனவே, ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, மூன்று வகையைச் சேர்ந்தோரும் வேள்விகளைச் செய்ய வேண்டும்[5].(12) சோமமானது பிராமணர்களுக்கு மன்னனைப் போன்றது என்று வேதங்கள் தீர்மானிக்கின்றன. இருப்பினும் அவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காக இல்லையென்றாலும், வேள்விகளைச் செய்வதற்காக அதை விற்கிறார்கள்.(13) நீதிமிக்க நடத்தை கொண்ட முனிவர்கள் அறநெறிகளின் விதிகளுக்கு ஏற்புடைய வகையில், சோமவிற்பனையின் மூலம் செய்யப்படும் வேள்வியானது, வேள்விகளை நீட்டிக்கவே உதவுகிறது என்று அறிவிக்கிறார்கள்[6].(14) மனிதன், வேள்வி, சோமம் ஆகிய இம்மூன்றும் நற்பண்புடன் இருக்க வேண்டும். தீய பண்பு கொண்ட மனிதன் இம்மைக்கானவனுமில்லை; மறுமைக்கானவனுமில்லை.(15) அதீத உடலுழைப்பால் ஈட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு உயர் ஆன்ம பிராமணர்களால் செய்யப்படும் வேள்வியானது பெரும் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்குவதில்லை என்ற திறன்தேர்வையும் நாம் கேள்விப்படுகிறோம்[7].(16)வேள்விகளை விடத் தவங்கள் உயர்வானவை என்று வேதங்களில் ஒரு தீர்மானம் இருக்கிறது. நான் இப்போது உனக்குத் தவங்களைக் குறித்துச் சொல்லப் போகிறேன். ஓ! கல்விமானான இளவரசனே {யுதிஷ்டிரனே}, நான் சொல்வதைக் கேட்பாயாக.(17) தீங்கிழையாமை, பேச்சில் உண்மை, நல்லுணர்வு, கருணை ஆகியவையே தவங்கள் எனவும், உடல் மெலிவது தவமல்ல எனவும் ஞானிகள் கருதுகின்றனர்.(18) வேதத்தை அவமதிப்பது, சாத்திரவிதிகளுக்குக் கீழ்ப்படியாமை, நலம்சார்ந்த கட்டுப்பாடுகளை மீறல், ஆகியவை தன்னழிவை உண்டாக்குபவை.(19) ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரா}, நாளின் பத்து வேளைகளில் நெருப்பில் பத்து ஆகுதிகளை ஊற்றுவோர் விதித்தவற்றைக் கேட்பாயாக. தவமெனும் வேள்வியைச் செய்வோருக்கு, அவர்கள் பிரம்மத் திறனுடன் முயலும் யோகமே கரண்டியாகும்; அவர்களது இதயமே தெளிந்த நெய்யாகும்; உயர்ந்த அறிவே பவித்ரமாகும்[8].(20) அனைத்துவகைக் கபடங்களும் மிருத்தியுவாகும், அனைத்து வகை உண்மையும் பிரம்மம் என்றழைக்கப்படுகிறது. இதுவே ஞானத்தை உள்ளடக்கியிருக்கிறது. அமைப்பைக் கட்டுபவர்களின் வீரகாவியங்கள் இதற்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்றார் {பீஷ்மர்}[9].(21)
நட்பு, பகை மற்றும் உறவு! – சாந்திபர்வம் பகுதி – 80-நண்பன், எதிரி, உறவினன் ஆகியோரின் பண்புகளையும், அமைச்சர்களாகத் தகுந்தவர்களையும், அவர்களிடம் மன்னன் நடந்து கொள்ள வேண்டிய முறையையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, மிக அற்பமான காரியத்தைக் கூடத் துணையில்லாமல் எந்த மனிதனாலும் நிறைவேற்ற முடியாது. அப்படியிருக்கையில் (நாட்டை ஆளும் காரியத்தில்) மன்னனைக் குறித்து என்ன சொல்வது?(1) மன்னர்களுடைய அமைச்சரின் நடத்தையும், செயல்களும் எவ்வாறு இருக்க வேண்டும்? எவன் மீது மன்னன் நம்பிக்கை வைக்கலாம்? எவன் மீது வைக்கக் கூடாது?” என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னர்களுக்கு நான்கு வகை நண்பர்கள் உண்டு.
{1}ஒரே நோக்கம் கொண்டவன் {ஸஹார்த்தன்},
{2}அர்ப்பணிப்புள்ளவன் {பஜமானன்},
{3}பிறப்பால் உறவினன் {ஸஹஜன்} மற்றும்
{4}(கொடைகளாலும், அன்பாலும்) வெல்லப்பட்டவன் {கிருத்திரிமன்}
ஆகியோரே அவர்கள்[1].(3)
{5}இரு தரப்புக்கும் அல்லாமல், ஒரு தரப்புக்கு சேவை செய்யும் அற ஆன்மா கொண்டவன் மன்னர்களின் நண்பர்களுடைய பட்டியலில் ஐந்தாவதாகச் சேர்த்துக்கொள்ளத் தக்கவனாவான். அத்தகு மனிதன், அறத்தின் தரப்பைப் பின்பற்றி, நீதியுடன் நடந்து கொள்பவனாவான்.(4) அத்தகு மனிதனைப் பொறுத்தவரையில், அவனது பரிவைப் பெறாத எந்தக் காரியத்தையும் மன்னன் அவனிடம் வெளிப்படுத்தக்கூடாது[2]. வெற்றியை விரும்பும் மன்னன் நீதி மற்றும் அநீதி ஆகிய இருபாதைகளையும் பின்பற்றக்கூடிய கடப்பாடுடையவனாவான்.(5) நான்கு வகை நண்பர்களில், இரண்டாவது மற்றும் மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள் உயர்வானவர்கள் ஆவர். அதேவேளையில் முதல் மற்றும் நான்காவது வகையைச் சேர்ந்தவர்கள் எப்போதும் ஐயத்துடனே கருதப்படத்தக்கவர்கள் ஆவர்.(6)
தன் நண்பர்களைக் கண்காணிக்கும் காரியத்தில் மன்னன் ஒருபோதும் கவனமில்லாமல் செயல்படக்கூடாது. கவனமில்லாமல் இருக்கும் மன்னன் எப்போதும் பிறரால் அவமதிக்கப்படுவான்.(7) தீய மனிதன் நேர்மையெனும் ஆடையை உடுத்தி வருவான், அதே வேளையில் நேர்மையானவர்களும் மாறானவர்களாவார்கள். ஓர் எதிரி நண்பனாவான், ஒரு நண்பனும் எதிரியாவான்.(8) ஒரு மனிதன் எப்போதும் ஒரே மனநிலையில் இருக்க மாட்டான். எவன்தான் அவனை முழுமையாக நம்புவான்? எனவே, முக்கியச் செயல்கள் அனைத்தையும் மன்னன் நேரடியாகத் தன் மேற்பார்வையிலேயே நிறைவேற்ற வேண்டும்.(9) (அமைச்சர்களை) முழுமையாக நம்புவது, அறம், பொருள் ஆகிய இரண்டுக்கும் அழிவைத் தரும். அனைவரிடமும் நம்பிக்கையில்லாமல் இருப்பது காலனைவிடக் கொடியதாகும்.(10)
நம்பிக்கை நிறைந்திருப்பது அகால மிருத்யுவாகும். நம்பிக்கையால் ஒருவன் ஆபத்துக்கு உள்ளாவான். ஒருவன் மற்றொருவனை முழுமையாக நம்பினால் அவன் நம்பும் மனிதனால் பாதிப்பை அடைந்து வாழ்வான் எனச் சொல்லப்படுகிறது.(11) இதன் காரணமாகவே அனைவரையும் நம்ப வேண்டும், அதே வேளையில் நம்பாமலும் இருக்க வேண்டும். ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, கவனத்தில் கொள்ள வேண்டிய கொள்கையில் நித்திய விதியாகும் இது.(12) ஒருவனுடைய இறப்பில், அவனுடைய செல்வத்தை அடையும் மனிதனை ஒருபோதும் நம்பக்கூடாது. அத்தகு மனிதன் அவனுடைய எதிரியாவான் என்று ஞானிகள் அறிவிக்கின்றனர்.(13) மன்னனின் வளர்ச்சியில் கட்டற்ற இன்பத்தையும், மன்னனின் அழிவில் துன்பத்தையும் அடையும் மனிதன் மன்னனுடைய சிறந்த நண்பர்களுக்குரிய குறிப்புகளை வெளிப்படுத்துகிறான்.(14) எவன் உனது வீழ்ச்சியில் வீழ்வானோ, அவனை உனது தந்தையைப் போல முழுமையாக நம்பலாம். நீ வளர்ச்சியடையும் போது, உனது சக்திக்குத் தக்க அளவில் அவனையும் நீ வளரச் செய்ய வேண்டும்.(15,16)
உன் அறச்சடங்குகளில் கூட உன்னைத் தீங்கிலிருந்து காக்க முனையும் ஒருவன், பிற பணிகள் அனைத்திலும் தீங்கான வழியில் இருந்து உன்னைக் காப்பான். மறுபுறம், ஒருவனுடைய தீங்கை விரும்புபவர்கள் அவனுடைய எதிரிகளாவர்.(17) உனக்கு இடரேற்படும்போது அச்சமடைபவனும், நீ செழிப்பாய் இருக்கும் போது மகிழ்பவனுமான ஒரு நண்பன் உன்னைப் போன்றவனே ஆவான் என்று சொல்லப்படுகிறது.(18) அழகு, நல்ல நிறம், சிறந்த குரல், ஈகை, நற்குணம், நற்பிறப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு மனிதன் அத்தகு நண்பனாக இருக்க முடியாது[3].(19) நுண்ணறிவு மற்றும் நினைவுத்திறனைக் கொண்டவனும், தொழில் பரிவர்த்தனையில் கெட்டிக்காரனும், இயல்பாகவே கொடுமையில் நாட்டமில்லாதவனும், ஒருபோதும் கோபப்படாதவனும், மதிக்கப்பட்டாலும், அல்லாவிட்டாலும் எப்போதும் நிறைவுடன் இருப்பவனுமான மனிதன்,(20) உன் புரோகிதராகவோ {ரித்விக்காகவோ}, ஆசானாகவோ, மதிப்பிற்குரிய நண்பனாகவோ இருந்தாலும், அவன் உன் அமைச்சராக இருப்பதை ஏற்றாலோ, உன் வசிப்பிடத்தில் இருந்தாலோ அவர்கள் எப்போதும் உனது வழிபாட்டைப் பெற வேண்டும்.(21,22)
அத்தகு மனிதனிடம் மிகக் கமுக்கமான ஆலோசனைகளையும் சொல்லலாம், அறம் மற்றும் பொருள் சார்ந்த உன் காரியங்கள் அனைத்தின் உண்மை நிலையையும் சொல்லலாம். நீ அவனை உன் தந்தையைப் போல நம்பவேண்டும்[4].(23) ஒரு பணியில் ஒருவனே நியமிக்கப்பட வேண்டும், இருவரோ, மூவரோ அல்ல. இவர்கள் ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். ஒரு பணியில் பலரை ஈடுபடுத்தினால், அவர்கள் ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதே எப்போதும் காணப்படுகிறது.(24) புகழை அடைபவனும், கட்டுப்பாடுகள் அனைத்தையும் பயில்பவனும், திறன்மிக்கோரிடம் ஒருபோதும் பொறாமை கொள்ளாதவனும், எந்தத் தீய செயலையும் செய்யாதவனும்,(25) காமத்தினாலோ, அச்சத்தினாலோ, பேராசையினாலோ, கோபத்தினாலோ அறத்தை {நீதியைக்} கைவிடாதவனும், தொழில் பரிவர்த்தனையில் கெட்டிக் காரனும், ஞானம் நிறைந்த பேச்சைக் கொண்டவனுமான ஒரு மனிதன் உன் அமைச்சர்களில் முதன்மையானவனாக இருக்க வேண்டும்.(26)
நற்பிறவி, நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்டோரும், ஈகையாளர்களும், தற்புகழ்ச்சியில் ஒருபோதும் ஈடுபடாதவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், மதிப்பிற்குரியவர்களும், கல்விமான்களும், வளம் நிறைந்தவர்களும்,(27) உன் காரியங்கள் அனைத்தையும் கண்காணிக்கும் அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும். உன்னால் கௌரவிக்கப்பட்டு, செல்வத்தால் நிறைவடைந்த அவர்கள் உன் நன்மைக்காகச் செயல்பட்டு உனக்குப் பேருதவியாக இருப்பார்கள்.(28) பொருள் மற்றும் பிற முக்கியக் காரியங்களின் தொடர்புடைய அலுவல்களில் நியமிக்கப்படும் அவர்கள் எப்போதும் பெருஞ்செழிப்பையே கொண்டு வருவார்கள்.(29) நலமிக்கப் போட்டியுணர்வால் தூண்டப்படும் அவர்கள், தேவையானபோதெல்லாம் ஒருவரோடொருவர் ஆலோசித்துப் பொருள் சார்ந்த கடமைகள் அனைத்தையும் செய்வார்கள்.(30)
காலனையே கண்டதுபோல நீ உன் இரத்த உறவினர்களைக் கண்டு அஞ்ச வேண்டும். தன்மீது மேலாதிக்கம் செலுத்துபவனின் {பேரரசனின்} செழிப்பைப் பொறுக்கமுடியாத சிற்றரசனைப் போல, ஓர் உறவினன் மற்றொரு உறவினனின் செழிப்பைப் பொறுக்க மாட்டான்.(31) நேர்மை, மென்மை, ஈகை, பணிவு, உண்மை நிறைந்த பேச்சு ஆகியவற்றைக் கொண்ட ஓர் உறவினனின் அழிவில் மற்றொரு உறவினனையன்றி வேறு எவனும் மகிழ்ச்சியடையமாட்டான்.(32) அதே போல உறவினர்களே இல்லாதவர்களும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. உறவினனற்றவர்களை விட வேறு எந்த மனிதனும் அருவருக்கத்தக்கவன் அல்ல. எந்த உறவினனும் இல்லாத ஒரு மனிதன் எளிதில் எதிரிகளால் வெல்லப்படுகிறான்.(33) ஓர் உறவினன் பிற மக்களால் பீடிக்கப்படுவதை மற்றொரு உறவினனால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதால், பிறரால் பீடிக்கப்படும் ஒருவனுடைய புகலிடமாக ஓர் உறவினனே இருப்பான்.(34) ஓர் உறவினன் அவனுடைய நண்பர்களாலேயே தண்டிக்கப்படும்போது, தண்டிக்கப்படுபவனின் ஒவ்வொரு உறவினனும், தானே அந்தத் தீங்கால் துன்புறுவதாகக் கருதுவான். எனவே, உறவினர்களால் நன்மைகள் மற்றும் தீமைகள் ஆகிய இரண்டும் உண்டு.(35)
உறவினர்களற்ற ஒரு மனிதன், வேறு எவனுக்கும் ஒருபோதும் நன்மை செய்வதுமில்லை, எவனிடமும் பணிவு கொள்வதுமில்லை. எனவே, உறவினர்களில் உள்ள நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டும் குறித்துக் கொள்ளப்பட வேண்டும்.(36) இதன் காரணமாகவே ஒருவன் தன் உறவினர்களைச் சொல்லாலும், செயலாலும் எப்போதும் மதிக்கவும் வழிபடவும் செய்து, அவர்களுக்கு ஒருபோதும் தீங்கிழைத்து விடாமல் இனிமையான காரியங்களையே செய்ய வேண்டும்.(37) ஒருவன் இதயத்தால் அவர்களை நம்பாமல், அவர்களை முழுமையாக நம்புவதைப் போலவே அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். அவர்களது {உறவினர்களது} இயல்பைச் சிந்தித்துப் பார்த்தால், அவர்களால் நன்மையும் இல்லை, தீமையும் இல்லை என்றே தோன்றுகிறது.(38) இவ்வழியில் கவனமாக நடக்கும் ஒரு மனிதன், தங்கள் பகைவர்கள் பகைமையை விட்டு, நண்பர்களாக மாறுவதைக் காண்கிறான்.(39) உறவினர்கள் மற்றும் சொந்தங்களுக்கு மத்தியில் எப்போதும் இவ்வழியிலேயே நடக்கும் ஒருவன், இவ்வாறே நண்பர்களிடமும், பகைவர்களிடமும் நடந்து கொண்டு நிலைத்து நீடிக்கும் புகழை அடைவதில் வெல்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(40)
போஜர்கள், விருஷ்ணிகள்: உட்பகை! – சாந்திபர்வம் பகுதி – 81-உறவினர்களை நிறைவுகொள்ளச் செய்ய முடியாதபோது செய்ய வேண்டியது குறித்துப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; போஜர்களுக்கு, விருஷ்ணிகளுக்குமிடையில் உண்டான உட்பகையால் கிருஷ்ணன் துன்புற்றிருந்தபோது, நாரதர் அவனுக்குச் சொன்ன வழிமுறைகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “(இவ்வழியில்) ஒருவனால் தன் இரத்த சொந்தங்களையும், உறவினர்களையும் வெல்லமுடியவில்லையெனில், எவர்கள் நண்பர்களாக வேண்டுமோ அவர்கள் பகைவர்களாகிவிடுகிறார்கள். அப்போது, நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இரு தரப்பின் இதயங்களையும் வெல்லும் வகையில் ஒருவன் தனது நடத்தையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது சம்பந்தமாகப் பழங்கால வரலாற்றில் வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, நாரதருக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல் தென்படுகிறது.(2)
ஒரு குறிப்பிட்ட தருணத்தில் வாசுதேவன் {கிருஷ்ணன் நாரதரிடம்}, “ஓ! நாரதரே, கல்லாத மூட நண்பனும், கல்விமானாகவே ஆனாலும் நல்லறிவில்லாத நண்பனும் ஒருவனுடைய கமுக்கமான {இரகசிய} ஆலோசனைகளை அறியத் தகுந்தவர்களல்ல[1].(3) ஓ! தவசியே {நாரதரே}, நீர் என்னிடம் கொண்டுள்ள நட்பை நம்பி, நான் உம்மிடம் ஒன்றைச் சொல்லப் போகிறேன். ஓ! விருப்பம் போல் சொர்க்கத்திற்குச் செல்ல முடிந்தவரே, அடுத்தவன் நுண்ணறிவைக் கொண்டவன் என்ற உறுதியடைந்தால் மட்டுமே ஒருவன் அவனிடம் பேசலாம்.(4) நான் என் உறவினர்களிடம் அவர்களது செல்வத்தைக் குறித்து முகத்துதி செய்து ஒருபோதும் அடிமைத் தொழில் செய்வதில்லை. நான் என்னிடமுள்ளவற்றில் பாதியை அவர்களுக்குக் கொடுத்து, அவர்களுடைய தீய பேச்சுகளை மன்னிக்கிறேன்[2].(5) நெருப்பை அடைய விரும்பும் ஒரு மனிதனால் அரணிக்கட்டை அரைக்கப்படுவதைப் போலவே, என் இதயமும் என் உறவினர்களின் தீச்சொற்களால் கலங்கடிக்கப்படுகிறது. உண்மையில், ஓ! தெய்வீக முனிவரே, அந்தக் கொடூரப் பேச்சுகள் என் இதயத்தைத் தினமும் எரிக்கின்றன.(6)
சங்கர்ஷணரில் {பலராமன்} வலிமையும், கதனில் மென்மையும் வசிக்கின்றன, பிரத்யும்னனைப் பொறுத்தவரையில், அவன் மேனியழகில் என்னையும் விஞ்சியிருக்கிறான். ஓ! நாரதரே, (இவர்கள் அனைவரும் என் தரப்பில் இருந்தாலும்) நான் ஆதரவற்றவனாகவே இருக்கிறேன்.(7) அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகளில், பெருஞ்செழிப்புடையவர்கள், வலிமை நிறைந்தவர்கள், துணிவுமிக்கவர்கள் மற்றும் தொடர்ந்த விடா முயற்சியுடையவர்கள் எனப் பலர் இருக்கின்றனர்.(8) யாருடைய தரப்பில் அவர்கள் இல்லையோ அவர்கள் அழிவை அடைவார்கள், மறுபுறம், யார் தரப்பில் அவர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் அனைத்தையும் அடைகிறார்கள். (ஆஹுகர் மற்றும் அக்ரூரர் ஆகியோர்) இருவராலும் மீண்டும் மீண்டும் விலக்கப்படும் நான், யாருடைய தரப்பையும் அடைந்ததில்லை.(9) ஒருவன் தன் தரப்பில் ஆஹுகர், மற்றும் அக்ரூரர் ஆகிய இருவரையும் கொண்டிருப்பதைவிட வேறு எந்தத் துன்பம் பெரியது? இருவரையும் என் தரப்பில் கொள்ளாமல், அவர்களில் ஒருவரை மட்டுமே கொள்வதை விட வேறு எந்தத் துன்பம் பெரியது?[3](10) ஒருவரோடொருவர் சூதாடிக்கொண்டிருக்கும் இரு சகோதரர்களும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பும் அவர்களுடைய தாயைப் போலத்தான் நான் இருக்கிறேன்.(11) ஓ! நாரதரே, இவ்வாறே நான் அவர்கள் இருவராலும் துன்பத்துக்குள்ளாகிறேன். எனக்கும் என் உறவினர்களுக்கும் எது நன்மையோ, அதைச் சொல்வதே உமக்குத் தகும்” என்றான்{கிருஷ்ணன்}.(12)
நாரதர் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, வெளியில் இருந்து வருவது, உள்ளிருந்து வருவது எனத் துன்பங்கள் இருவகைப்படும். ஓ! விருஷ்ணி குலத்தோனே, அவை ஒருவனின் சொந்த செயல்பாடுகளாலோ, பிறரின் செயல்பாடுகளாலோ உண்டாகின்றன.(13) இப்போது உனக்கு நேரும் துன்பமானது, உன் சொந்த செயல்களாலேயே உள்ளிருந்து உண்டானது. அக்ரூரரைச் சார்ந்தவர்களான பலதேவனும் {பலராமனும்}, போஜகுலத்தைச் சேர்ந்த பிறரும்,(14) செல்வம், அல்லது பேராசை, அல்லது {குற்றமுள்ள} சொற்கள், அல்லது வெறுப்பின் நிமித்தமாக அவரது {அக்ரூரரின்} தரப்பைச் சேர்ந்திருக்கிறார்கள். உன்னைப் பொறுத்தவரையில், நீ அடைந்த செல்வத்தை மற்றவருக்கு {ஆஹுகருக்குக்} கொடுத்தாய்.(15) நண்பர்களாக இருக்க வேண்டிய மனிதர்களை நீ கொண்டிருந்தாலும், உன் செயலாலேயே நீ உன் தலைக்கு மேல் துன்பத்தை ஏற்றுக் கொண்டாய். ஒருவன் கக்கிய உணவை மீண்டும் உட்கொள்ள முடியாததைப் போலவே, உன்னால் அந்தச் செல்வத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது.(16)
பப்ருவிடம் இருந்தோ, உக்ரசேனரிடம் இருந்தோ (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) நாட்டையும் திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது. ஓ! கிருஷ்ணா, (அவர்களிடம் இருந்து) அவற்றைத் திரும்ப எடுத்துக் கொள்வது உட்பகையை உண்டாக்கிவிடக்கூடும் என்ற அச்சத்தால் உன்னாலேயே கூட அவ்வாறு செய்யமுடியாது.(17) ஒருவேளை அம்முயற்சி வெற்றிபெற்றாலும், பெரும் பிரச்சனைக்குப் பிறகே, அடைவதற்கரிதான அந்த மிகக் கடும் சாதனையை அடைய முடியும். பெரும் படுகொலைகளும், செல்வத்திற்குப் பேரிழப்பும் நேரிடும், ஒருவேளை மொத்த அழிவும்கூட ஏற்படலாம்.(18) எனவே, இரும்பாலாகாததும், மென்மையானதாக இருப்பினும், இதயங்கள் அனைத்தையும் துளைக்கவல்லதுமான ஓர் ஆயுதத்தைப் பயன்படுத்துவாயாக. அவ்வாயுதத்தை மீண்டும் மீண்டும் கூர்த்தீட்டி உன் உறவினர்களின் நாவுகளைச் சீர்திருத்துவாயாக” என்றார்.(19)
வாசுதேவன் {கிருஷ்ணன் வாசுதேவரிடம்}, “ஓ! தவசியே, இரும்பாலாகாததும், மென்மையானதும், இருப்பினும் அனைவரின் இதயங்களையும் துளைக்கவல்லதும், என் உறவினர்களின் நாவுகளைச் சீர்திருத்த நான் பயன்படுத்த வேண்டியதுமான அந்த ஆயுதம் எது?” என்று கேட்டான்.(20)
நாரதர் {கிருஷ்ணரிடம்}, “உன் சக்திக்குத் தக்கபடி உணவளிப்பது, மன்னிப்பது {பொறுமை}, நேர்மை, மென்மை, உரிய மரியாதை கொடுத்து கௌரவித்தல் ஆகியவற்றையே இரும்பாலாகாத அவ்வாயுதம் கொண்டுள்ளது.(21) கொடுஞ்சொற்கள் பேசும் உறவனிரின் கோபத்தையும், அவர்களது இதயங்கள், மனங்கள் மற்றும் இகழும் நாவுகளையும் மென்மையான வார்த்தைகளால் மட்டுமே அடக்குவாயாக.(22) தூய்மையான ஆன்மாவையும், பெருஞ்சாதனைகளையும், நண்பர்களையும் கொண்ட பெரிய மனிதனாக இல்லாத எவராலும், கனமான சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாது. நீ (விருஷ்ணிகளை ஆளும்) இந்தப் பெருங்கனத்தை உன் தோள்களில் சுமப்பாயாக.(23) மேடுபள்ளமில்லாத சமமான சாலையில் அனைத்து எருதுகளாலும் கனமான சுமைகளைச் சுமக்க முடியும். அவற்றில் பலமிக்கவையே கடினமான சாலைகளிலும் அத்தகு கனங்களைச் சுமக்கவல்லனவாகும்.(24) ஒற்றுமையின்மையால் போஜர்கள் மற்றும் விருஷ்ணிகள் அனைவருக்கும் அழிவே ஏற்படும். ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீ அவர்களில் முதன்மையானவனாவாய். போஜர்களும், விருஷ்ணிகளும் அழியாமல் இருக்கத்தக்கவகையில் நீ செயல்படுவாயாக.(25)
ஞானியான ஒரு மனிதனிடம், நுண்ணறிவு, மன்னிப்பு {பொறுமை}, புலனடக்கம், ஈகை ஆகியவற்றைத் தவிர வேறேதும் இருக்காது.(26) தன் குலத்தை மேன்மையுறச் செய்வதே எப்போதும் புகழத்தக்கதும், மகிமையானதும், நீண்ட வாழ்வை அளிக்கக்கூடியதுமாகும். ஓ! கிருஷ்ணா, உன் உறவினர்களுக்கு அழிவு நேராத வகையில் நீ செயல்படுவாயாக.(27) ஓ! தலைவா, கொள்கை மற்றும் போர்க்கலை ஆகியவற்றைப் பொறுத்தவரையில், நீ அறியாதது ஒன்றுமில்லை[4].(28) ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, லோகபாலர்கள் அனைவரையும் நம்பியிருக்கும் அனைத்து உலகங்களையும் போல, யாதவர்கள், குகுரர்கள், போஜர்கள், அந்தகர்கள், விருஷ்ணிகள் ஆகியோர் அனைவரும் உன்னையே நம்பியிருக்கின்றனர். ஓ! மாதவா {கிருஷ்ணா}, முனிவர்கள் எப்போதும் உன் முன்னேற்றத்தையே வேண்டுகின்றனர்.(29) அனைத்து உயிரினங்களின் தலைவன் நீயே. கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர் காலத்தை அறிந்தவன் நீயே. உன்னை நம்பி மகிழ்ச்சியான வாழ்வை எதிர்பார்க்கும் யாதவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் நீயே” என்றார் {நாரதர்}”.(30)
க்ஷேமதர்சினும் காலகவிருக்ஷீயரும்! – சாந்திபர்வம் பகுதி – 82-குற்றம் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கான பாதுகாப்பின் அவசியத்தை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; இதை விளக்குவதற்காகக் கோசல மன்னன் க்ஷேமதர்சின் மற்றும் காலகவிருக்ஷீயர் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற உரையாடலைச் சொன்னது…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இப்போது நான் உனக்குச் சொன்னது முதன்மையான வழிமுறைகளாகும். ஓ! பாரதா, இரண்டாம் வழிமுறைகளை இப்போது கேட்பாயாக. மன்னனின் நிலை மேன்மையடைய முயற்சிக்கும் ஒரு மனிதன், எப்போதும் அம்மன்னனால் பாதுகாக்கப்பட வேண்டும்.(1) ஓ! யுதிஷ்டிரா, கூலி கொடுக்கப்பட்ட, அல்லது கொடுக்கப்படாத {உன்னிடம் பணியாளாகவோ, இல்லாமலோ உள்ள} ஒரு மனிதன், உன் கருவூலத்தில் உள்ள செல்வங்கள் உன் அமைச்சரால் கையாடல் செய்யப்படுவதைச் சொல்ல வந்தால்,(2) நீ அவனைத் தனிமையில் சந்தித்து {அவன் சொல்வதைக் கேட்டு}, (களங்கம் கற்பிக்கப்பட்ட) அந்த அமைச்சரிடம் இருந்தும் அவனைப் பாதுகாக்க வேண்டும். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நிதியைக் கையாடல் செய்யும் அமைச்சர்கள், அத்தகு தகவல் தருவோரைக் கொல்ல முனைவார்கள்.(3) அரச கருவூலத்தைக் கொள்ளையடிப்போர், அதைக் காக்க முயலும் மனிதனை எதிர்ப்பதற்காக ஒன்றாகச் சேர்வார்கள். பின்னவன் {காக்க முயல்பவன்} பாதுகாப்பில்லாமல் இருந்தால் அவனை நிச்சயம் அழித்துவிடுவார்கள்.(4)
இது தொடர்பாகத் தவசி காலகவிருக்ஷீயர் Kalakavrikshiya, கோசலத்தின் மன்னனிடம் {க்ஷேமதர்சினிடம் Kshemadarsin} சொன்னது, பழங்கதை ஒன்றில் குறிப்பிடப்படுகிறது.(5) ஒரு காலத்தில் கோசல நாட்டின் அரியணை ஏறிய க்ஷேமதர்சினிடம் காலகவிருக்ஷீயர் எனும் தவசி வந்ததாக நாம் கேளவிப்படகிறோம்.(6) க்ஷேமதர்சினின் அதிகாரிகள் அனைவருடைய நடத்தையையும் ஆய்வு செய்ய விரும்பிய அந்தத் தவசி, தன் கையில் கூண்டுக்குள் அடைபட்ட ஒரு காக்கையுடன், அந்த மன்னனின் {க்ஷேமதர்சினின்} ஆட்சிப்பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் பயணித்தார்.(7) மனிதர்கள் அனைவரிடமும் அவர், “காக அறிவியலைப் படிப்பீராக. காகங்கள் எனக்கு நிகழ்காலத்தையும், கடந்த காலத்தையும், எதிர் காலத்தையும் சொல்கின்றன” என்றார்.(8) அந்த நாட்டில் இவ்வாறு அறிவித்துக் கொண்டு, பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களின் துணையுடன் கூடிய அவர், அந்த மன்னனுடைய அதிகாரிகள் அனைவரும் செய்யும் தீச்செயல்களை நோக்கத் தொடங்கினார்.(9) அந்தத் தவசி {காலகவிருக்ஷீயர்} அந்த நாட்டில் நடைபெறும் அனைத்து காரியங்களையும் உறுதி செய்து கொண்டு, மன்னனால் நியமிக்கப்பட்டிருந்த அதிகாரிகள் அனைவரும் மோசடியில் ஈடுபடுவதையும் அறிந்து கொண்டு,(10) அம்மன்னனைக் காண வந்தார்.
கடும் நோன்புகளைக் கொண்ட அவர் அம்மன்னனிடம், “(உன் நாட்டைக் குறித்த) அனைத்தையும் நான் அறிவேன்” என்றார்.(11) மன்னனிடம் வந்த அவர் {காலகவிருக்ஷீயர்}, அலுவல் முத்திரைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவனுடைய அமைச்சனிடம், அவன் இந்த இடத்தில், இந்தத் தீங்கைச் செய்தான் என்பதையும், அரச கருவூலத்தை அவன் கொள்ளையடித்ததை இந்த இந்த மனிதர்கள் அறிவார்கள் என்பதையும் தனது காக்கை தன்னிடம் சொல்லியிருப்பதாகச் சொன்னார். “என் காக்கை இதைச் சொல்கிறது. இந்தக் குற்றத்தை ஏற்பாயாக. அல்லது அது பொய் என்பதை விரைந்து மெய்ப்பிப்பாயாக” என்றார்.(13) பிறகும் அந்தத் தவசி, அதேபோன்ற கையாடல்களைச் செய்த பிற அதிகாரிகளின் பெயர்களையும் அறிவித்து, “என் காகம் ஒருபோதும் எந்தப் பொய்யையும் சொன்னதில்லை” என்றும் சொன்னார்.(14) ஓ! குருகுலத்தோனே {யுதிஷ்டிரா}, இவ்வாறு அந்தத் தவசியால் குற்றஞ்சாட்டப்பட்டு, தீங்கடைந்த அரசு அதிகாரிகள் அனைவரும் (ஒன்றுசேர்ந்து), இரவில் அந்தத் தவசி உறங்கும்போது அந்தக் காகத்தைத் துளைத்தனர் {கொன்றனர்}.(15)
கூண்டுக்குள் துளைக்கப்பட்டுக் கிடக்கும் தன் காகத்தைக் கண்ட அந்த மறுபிறப்பாள {பிராமண} முனிவர் {காலகவிருக்ஷீயர்}, காலையில் க்ஷேமதர்சினிடம் சென்று, அவனிடம்,(16) “ஓ! மன்னா, நான் உன் பாதுகாப்பை நாடுகிறேன். நீ பலமிக்கவன், அனைவரின் வாழ்வு மற்றும் செல்வங்களுக்கும் நீயே தலைவன். எனக்கு உன் உத்தரவு கிடைத்தால், உனக்கான நன்மையை என்னால் சொல்ல முடியும். நான் என் நண்பனாகக் கருதும் உனக்காக வருந்தியும், என் அர்ப்பணிப்பால் தூண்டப்பட்டும், என் முழு இதயத்துடன் உனக்குத் தொண்டாற்றும் ஆயத்தத்துடனும் உன்னிடம் வந்திருக்கிறேன்.(17) உன் செல்வம் களவாடப்படுகிறது. கள்வர்களிடம் எந்தக் கருணையும் காட்டாமல், அஃதை உன்னிடம் வெளியிடவே நான் வந்தேன். என் நண்பனாக நான் கருதும் உன்னை விழிப்படையச் செய்யவே நல்ல குதிரையைத் தூண்டும் ஒரு சாரதியைப் போல நான் இங்கு வந்திருக்கிறேன்.(18) தன் நலனையும், செழிப்பையும், வளர்ச்சியையும் விரும்பும் ஒரு நண்பனானவன், தனக்கு நன்மை செய்வதற்காகவும், அர்ப்பணிப்பு மற்றும் கோபத்தால் உந்தப்பட்டும் அத்துமீறும் மற்றொரு நண்பனை மன்னிக்க வேண்டும் {அவனிடம் பொறுமை காக்க வேண்டும்}” என்றார்.(19)
மன்னன் அவரிடம் {கோசல மன்னன் க்ஷேமதர்சின் தவசிகாலகவிருக்ஷீயரிடம்}, “என் நன்மைக்கானவற்றின் நான் குருடனல்ல என்பதால், நீர் சொல்வதனை நான் ஏன் பொறுத்துக் கொள்ள மாட்டேன்?(20) ஓ! மறுபிறப்பாளரே நான் உமக்கு அனுமதி அளிக்கிறேன். நீர் விரும்பியதை என்னிடம் சொல்லலாம். ஓ! பிராமணரே, நீ சொல்லும் அறிவுரைகளுக்கு நிச்சயம் நான் கீழ்ப்படிவேன்” என்று மறுமொழி கூறினான்.(21)
அந்தத் தவசி {காலகவிருக்ஷீயர் க்ஷேமதர்சினிடம்}, “உன் பணியாட்களின் நன்மைகளையும், குற்றங்களையும் உறுதி செய்து கொண்டு, அவர்களின் கரங்களில் உனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் உறுதி செய்து கொண்டு, என் அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டு, உன்னிடம் அனைத்தையும் சொல்வதற்காகவே நான் இங்கு வந்தேன்.(22) ஓ! மன்னா, (மனிதகுலத்திற்கான) பழங்காலத்து ஆசான்கள், பிறருக்குத் தொண்டாற்றுவோருக்கான சாபங்கள் என்னென்ன என்பதை அறிவித்திருக்கின்றனர். மன்னனுக்குத் தொண்டாற்றுவோரின் நிலையானது வலிநிறைந்ததும், இழிவானதுமாகும்.(23) எவன் மன்னர்களுடன் தொடர்பைக் கொண்டிருக்கிறானோ, அவன் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுடன் தொடர்புடையவன் என்று சொல்லப்படுகிறான். மன்னர்களுக்குப் பல நண்பர்கள் இருப்பதைப் போலவே பல எதிரிகளும் இருக்கிறார்கள்.(24) மன்னர்களுக்குத் தொண்டாற்றுபவர்கள், அவர்கள் அனைவருக்கும் அஞ்ச வேண்டும். மேலும், ஓ! ஏகாதிபதி, அவர்கள் ஒவ்வொரு கணமும் மன்னனுக்கும் அஞ்ச வேண்டும்.(25)
மன்னனுக்குத் தொண்டாற்றும் ஒரு மனிதன், மன்னனின் வேலையைச் செய்வதில் கவனக்குறைவாக இருக்க முடியாது. உண்மையில், செழிப்பை வெல்ல விரும்பும் ஒரு பணியாள், தன் கடமைகளை ஆற்றுவதில் ஒருபோதும் கவனக்குறைவுடன் இருக்கக்கூடாது.(26) அவனது கவனக்குறைவு {அஜாக்ரதை} மன்னனைக் கோபமடையச் செய்யும், அந்தக் கோபம் (அந்தப் பணியாளுக்கு) அழிவைக் கொண்டுவரும். எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனக் கவனமாகக் கற்கும் ஒருவன், சுடர்மிக்க நெருப்பின் முன் இருப்பதைப் போலவே மன்னனின் முன்பு அமர்ந்திருக்க வேண்டும்.(27) எந்தக் கணத்திலும் உயிரைவிட ஆயத்தமாக இருக்கும் ஒருவன், மன்னனே அனைத்திலும் பலமிக்கவன், அனைவரின் வாழ்வு மற்றும் செல்வத்திற்குத் தலைவன் என்பதாலும், கடும் நஞ்சுமிக்கப் பாம்பைப் போன்றவன் என்பதாலும், அவன் மன்னனிடம் கவனமாகப் பணியாற்ற வேண்டும்.(28) அவன், மன்னனின் முன்னிலையில் தீய பேச்சைப் பேசவோ, உற்சாகமில்லாமல், அல்லது அலட்சியமான நிலையில் அமரவோ, அவமதிக்கும் தன்மையுடன் காத்திருக்கவோ, புறக்கணிக்கும் வகையில் நடக்கவோ, இழிவான நிலைகள் மற்றும் அவமதிக்கும் வகையிலான அங்க அசைவுகளை வெளிக்காட்டவோ எப்போதும் அஞ்ச வேண்டும்.(29) மன்னன் மனம்நிறைந்தால், அவன் ஒரு தேவனைப் போலச் செழிப்பைப் பொழிவான். சீற்றமடைந்தாலோ, சுடர்மிக்க நெருப்பைப் போல அவன் வேர்களையே எரித்துவிடுவான்.(30)
ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, இதை யமன் சொல்லியிருக்கிறான். இதன் உண்மை உலகக் காரியங்களின் தென்படுகின்றன. (இந்தக் கருதுகோள்களின் படி செயல்பட்டு) நான் இப்போது எது உனக்குச் செழிப்பை அளிக்குமோ அதைச் செய்வேன்.(31) என்னைப் போன்ற நண்பர்கள், உன்னைப் போன்ற நண்பர்களின் கேடு காலங்களில் தங்களது நுண்ணறிவால் உதவி செய்வார்கள். ஓ! மன்னா, என் காகமானது உன் காரியத்தைச் செய்ததற்காகக் கொல்லப்பட்டிருக்கிறது.(32) எனினும், இதற்காக உன்னை நான் குற்றஞ்சாட்ட முடியாது. (இந்தப் பறவையைக் கொன்றவர்கள் எவர்களோ) அவர்களால் நீ விரும்பப்படவில்லை. உன் நண்பர்கள் யார், உன் எதிரிகள் யார் என்பதை உறுதி செய்து கொள்வாயாக. நுண்ணறிவுக்காக யாரிடமும் பணியாமல் அனைத்தையும் நீயே செய்வாயாக.(33) உன் நிறுவனத்தில் {அரசு அலுவலகங்களில்) உள்ள அனைவரும் கையாடல் செய்பவர்களே. அவர்கள் உன் குடிமக்களுக்கான நன்மையை விரும்பவில்லை. நான் அவர்களது பகைமைக்கு ஆளாகிவிட்டேன்.(34) உன்னுடன் தொடர்பிலிருக்கும் பணியாட்களுடன் சேர்ந்து சதி செய்யும் அவர்கள், உன்னை அழித்துவிட்டு, உனக்குப் பிறகு இந்த நாட்டை அடைய பேராசைப்படுகிறார்கள். எனினும், எதிர்பாராத சூழ்நிலைகளால் அவர்களது திட்டங்கள் வெற்றியடையவில்லை.(35)
ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, அந்த மனிதர்களிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக நான் உன் நாட்டை விட்டு வேறேதேனும் ஆசிரமத்திற்குச் செல்லப் போகிறேன். எனக்கு உலகம் சார்ந்த விருப்பமேதுமில்லை, இருப்பினும், ஓ! தலைவா, வஞ்சக எண்ணம் கொண்ட அந்த மனிதர்கள் என் காக்கையின் மீது இந்தக் கணையை ஏவி, அப்பறவையை யமலோகம் அனுப்பிவிட்டனர். ஓ! மன்னா, தவங்களால் மேன்மையடைந்த பார்வையைக் கொண்ட கண்களுடன் இதை நான் கண்டேன்.(36,37) முதலைகளும், சுறாக்களும், திமிங்கலங்களும் நிறைந்த ஆற்றைப் போலிருக்கும் உன் நாட்டை இந்தக் காக்கை ஒன்றின் துணையுடன் கடந்திருக்கிறேன்.(38) உண்மையில், (விழுந்த) மரங்கள், சிதறிக்கிடக்கும் பாறைகள், முட்புதர்கள், சிங்கங்கள், புலிகள், மற்றும் பிற இரைதேடும் விலங்குகளின் விளைவால் புகமுடியாததும், அணுகமுடியாததுமான இமாலய பள்ளத்தாக்கைப் போன்ற உன் ஆட்சிப்பகுதிகளை அந்தப் பறவையின் துணையின் மூலமே நான் கடந்து வந்தேன்.(39) இருளின் விளைவால் அணுகமுடியாததாக இருக்கும் ஒரு பகுதியை ஒளியின் உதவியுடனும், கடக்க முடியாத ஆற்றை ஒரு படகின் உதவியுடனும் கடக்க முடியும் என்று கல்விமான்கள் சொல்கின்றனர். எனினும், அரச காரியங்களின் வழியைக் கடக்கவோ, ஊடுருவவோ எந்த வழிமுறைகளும் கிடையாது.(40)
உன் நாடானது, இருளில் மூழ்கியிருக்கும் அணுக முடியாத காட்டைப் போன்றதாகும். (அதன் தலைவனாக இருக்கும்) நீயே அதை நம்ப முடியாது. எனில், என்னால் எவ்வாறு முடியும்?(41) நன்மையும், தீமையும் இங்கே ஒன்றாகவே கருதப்படுகின்றன. எனவே, இங்கே தங்குவது பாதுகாப்பானதில்லை. அறச்செயல்கள் செய்வோர் இங்கே இறக்கின்றனர், அதே வேளையில் நீதியற்ற செயல்களைச் செய்வோருக்கு எந்த ஆபத்தும் இல்லை.(42) நீதியின் தேவைக்கேற்றபடி நீதியற்ற செயல்களைச் செய்வோர் கொல்லப்பட வேண்டுமேயன்றி ஒருபோதும் நல்லோர் தங்கள் செயல்களுக்காகக் கொல்லப்படக்கூடாது. எனவே, இந்த நாட்டில் நீண்ட காலம் தங்குவது எவனுக்கும் நல்லதல்ல. மான உணர்வு கொண்ட எந்த மனிதனும் இந்த நாட்டைவிட்டு விரைவில் அக வேண்டும்.(43) ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, சீதை என்ற பெயரில் ஓர் ஆறு இருக்கிறது. படகும் அதில் மூழ்கிவிடும். இந்த உனது நாடும் அந்த ஆற்றைப் போலவே இருக்கிறது. அதைச் சுற்றிலும் அனைத்தையும் அழிக்கும் வலை இருப்பதாகத் தெரிகிறது.(44) தேன் சேகரிப்பவனுக்காகக் காத்திருக்கும் வீழ்ச்சியைப் போலவோ, நஞ்சைக் கொண்ட கவர்ச்சிகரமான உணவைப் போலவோ நீ இருக்கிறாய். உன் இயல்பானது இப்போது நேர்மையற்ற மனிதர்களுக்கானதைப் போல அன்றி நல்லோருக்கானதாக இல்லை. ஓ! மன்னா, நீ கடும் நஞ்சுமிக்கப் பாம்புகள் நிறைந்த ஒரு குழியைப் போன்றவன்.(45)
ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, இனிய நீரால் நிறைந்திருப்பினும், அணுகுவதற்கு மிகக் கடினமானதும், அடர்ந்து வளர்ந்த காரிரங்கள் {மூங்கில்} மற்றும் முள் பிரம்பு ஆகியவற்றுடன் கூடியதும், ஆழமான கரைகளைக் கொண்டதுமான ஓர் ஆற்றுக்கு ஒப்பாக இருக்கிறாய். நாய்கள், கழுகுகள் மற்றும் நரிகளுக்கு மத்தியில் நீ ஓர் அன்னத்தைப் போல இருக்கிறாய்.(46,47) பெரும் மரத்தில் இருந்து வாழ்வாதாரத்தைப் பெறும் புல்லுருவிகள், அபரிமிதமாக வளர்ந்து பெருகி, இறுதியாக மரத்தையே முழுமையாக மறைத்துவிடும்.(48) காட்டுத்தீ ஏற்படும்போது, அந்தப் புல்லுருவிகளை முதலில் பிடித்தாலும், அவற்றோடு சேர்த்து அந்தத் தலைமை மரத்தையும் எரித்துவிடும். ஓ மன்னா, உன் அமைச்சர்களே நான் சொல்லும் புல்லுருவிகளுக்கு ஒப்பாக இருக்கின்றனர். நீ சோதித்து அவர்களைச் சரி செய்வாயாக.(49) அவர்கள் உன்னால் வளர்க்கப்படுகின்றனர். ஆனால் உனக்கு எதிராகச் சதி செய்யும் அவர்கள் உனது செழிப்பை அழிக்கின்றனர்.(50)
ஒருபாம்புடன் ஓர் அறையில் வாழ்வதைப் போலவோ, ஒரு வீரனுடைய மனைவியின் காதலனை {ஜாரப்புருஷனைப்} போலவோ உன் பணியாட்களின் தவறுகளை (உன்னிடமிருந்து) மறைத்து, தொடர்ச்சியான பயங்கர ஆபத்துடன் உன் வசிப்பிடத்தில் வாழ்கிறேன். என் சகாவாக வசிக்கும் மன்னனின் நடத்தையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதே என் நோக்கம்.(51) மன்னன் தன் ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கிறானா, அவனுடைய பணியாட்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறார்களா, அவர்கள் அவனை விரும்புகிறார்களா, அவன் தன் குடிமக்களை விரும்புகிறானா என்பனவற்றை நான் அறிய விரும்பினேன். ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இவற்றை உறுதிசெய்துகொள்ளும் நோக்குடனே நான் உன்னிடம் வந்தேன்.(52) பசித்தவனுக்கு உணவைப் போல நீ எனக்கு அன்பானவனாக இருக்கிறாய். எனினும், தாகமடங்கிய மனிதன் பானத்தை விரும்பாததைப் போல எனக்கு உன் அமைச்சர்களைப் பிடிக்கவில்லை.(53) நான் உன் நன்மைக்கு முனைவதால் அவர்கள் என்னிடம் களங்கம் காண்கின்றனர். என்னுடனான அவர்களது பகைக்கும் வேறேதும் காரணமில்லை என்பதில் ஐயமில்லை.(54) நான் அவர்களுடைய களங்கங்களை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்கிறேன். காயமடைந்த பாம்புக்கு அஞ்சுவதைப் போலத் தீய இதயத்தைக் கொண்ட எதிரியிடம் அச்சம் கொள்ள வேண்டும்” என்றார் {{காலகவிருக்ஷீயர்}.(55)
அதற்கு மன்னன் {மன்னன் க்ஷேமதர்சின் தவசி காலகவிருக்ஷீயரிடம்}, “ஓ! பிராமணரே, என் அரண்மனையில் தங்குவீராக. நான் எப்போதும் உம்மை மதித்து, கௌரவித்து, வழிபட்டு வருகிறேன்.(56) உம்மை விரும்பாதோர் என்னுடன் வசிக்க மாட்டார்கள். (நீர் சொன்ன) அந்த மனிதர்களை என்ன செய்யலாம் என்பதை நீரே சொல்வீராக.(57) ஓ! புனிதமானவரே, தண்டக்கோல் {செங்கோல்} முறையாகத் தரிக்கப்படுகிறதா, என் நாட்டில் அனைத்தும் நன்றாகச் செய்யப்படுகிறதா எனக் காண்பீராக. அனைத்தையும் சிந்தித்து நான் செழிப்பையடையும் வழியில் என்னை வழிநடத்துவீராக” என்றான் {க்ஷேமதர்சின்}.(58)
அதற்குத் தவசி {காலகவிருக்ஷீயர் மன்னன் க்ஷேமதர்சினிடம்}, “அவர்களது குற்றமான இந்த முதல் நிகழ்வுக்குக் கண்ணை மூடிக்கொண்டு {அதை வெளிப்படுத்தாமல்} அவர்களை ஒருவர் பின் ஒருவராகப் பலவீனப்படுத்துவாயாக. அவர்களது குற்றங்களை மெய்ப்பிட்டு ஒருவர் பின் ஒருவராகத் தாக்குவாயாக.(59) பலர் ஒரே குற்றத்தைச் செய்யும்போது, ஒன்றாகச் செயல்படுவதால் அவர்களால் முள்ளின் கூர்மையை மழுங்கடிக்க முடியும். (சந்தேகத்திற்காளாகி உனக்கு எதிராகச் செயல்படும்) உன் அமைச்சர்கள் உன் கமுக்கமான ஆலோசனைகளை வெளியிடும் வரை, அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க உன்னை நான் அறிவுறுத்துவேன்.(60) எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இயல்பிலேயே கருணை கொண்டவர்களும், எவருக்கும் துன்பம் தர விரும்பாதவர்களுமான பிராமணர்கள் ஆவோம். நாங்கள் எங்கள் நன்மையை விரும்புவதைப் போலவே, உன் நன்மையையும், பிறரின் நன்மையையும் விரும்புகிறோம்.(61)
ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, நான் என்னைக் குறித்துச் சொல்கிறேன். நான் உன் நண்பன். தவசி காலகவிருக்ஷீயன் என்ற பெயரில் நான் அறியப்படுகிறேன்.(62) நான் எப்போதும் உண்மையைப் பின்பற்றுகிறேன். உன் தந்தை என்னைத் தமது விருப்பத்திற்குரிய நண்பனாகக் கருதினார். ஓ! மன்னா, உன் தந்தை ஆட்சி செய்கையில் நாட்டுக்குத் துன்பம் நேர்ந்தபோது, (அதை விரட்ட) அனைத்துத் தொழில்களையும் கைவிட்டுத் தவங்கள் பலவற்றைச் செய்தேன். உன் மீது கொண்ட அன்பின் காரணமாக, நீ (தகாத மனிதர்களிடம் நம்பிக்கை வைக்கும்) தவற்றை மீண்டும் இழைக்காமல் இருப்பதற்காக நான் இதைச் சொல்கிறேன்.(64) நீ எந்தத் தொல்லையும் இல்லாமல் நாட்டை அடைந்தாய். அதன் இன்பதுன்பங்களோடு தொடர்புடைய அனைத்தையும் சிந்தித்துப்பார். நீ உன் நாட்டில் அமைச்சர்களைக் கொண்டிருக்கிறாய். ஆனால், ஓ! மன்னா, ஏன் உனக்குக் கவனக்குறைவெனும் குற்றவுணர்வு ஏற்பட வேண்டும்?” என்றார்.(65)
இதன்பிறகு, அந்தக் கோசல மன்னன் க்ஷத்திரிய வகையில் இருந்து ஓர் அமைச்சரையும், அந்தப் பிராமணக் காளையை {காலகவிருக்ஷீயரைத்} தன் புரோகிதராகவும் நியமித்துக் கொண்டான்.(66) இம்மாற்றங்களைச் செய்த பிறகு, அந்தக் கோசலத்தின் மன்னன் {க்ஷேமதர்சின்} மொத்த உலகத்தையும் அடக்கி, பெரும்புகழை அடைந்தான். தவசி காலகவிருக்ஷீயர், மன்னனுக்காகப் பெரும் வேள்விகளைச் செய்து தேவர்களை வழிபட்டார்.(67) அந்தக் கோசல மன்னன், அவரது நல்ல ஆலோசனைகளைக் கேட்டு, மொத்த உலகையும் கைப்பற்றி, அந்தத் தவசி சொன்ன வழியிலே அனைத்து வகையிலும் நடந்து கொண்டான்” என்றார் {பீஷ்மர்}.(68)
ஆலோசிக்கத் தக்கார், தகவிலார்! – சாந்திபர்வம் பகுதி – 83-அரசவையினர், அமைச்சர்கள், படைத்தலைவர்கள் ஆகியோரின் பண்புகளையும், ஒரு மன்னனுக்கு ஆலோசிக்கத்தகுந்தவர் யாவர், தகாதவர் யாவர் என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஒரு மன்னனின் சட்டமன்றத்தினர், போர்த்துறை அமைச்சர்கள், அரசவையினர், படைத்தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் எவ்விதப் பண்புகளைக் கொண்டோராக இருக்க வேண்டும்?” என்று கேட்டான்[1].(1)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “பணிவு, தன்னடக்கம், உண்மை, நேர்மை, சரியானதைச் சொல்லும் துணிவு ஆகிய பண்புகளைக் கொண்டோரே உன் சட்டமன்றத்தினராக {அரசவையோரோக} இருக்க வேண்டும்.(2) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, எப்போதும் உன் தரப்பில் இருப்போரும், பெரும் துணிவு கொண்டோரும், மறுபிறப்பாள வகையைச் சார்ந்தோரும், பெரும் கல்விமான்களும், எப்போதும் உன்னிடம் நிறைவு கொண்டோரும், அனைத்துச் செயல்பாடுகளிலும் விடாமுயற்சியுடன் கூடியவர்களும் துன்பகாலங்கள் அனைத்திலும் உடனிருப்பவனையே போர்த்துறை அமைச்சர்களாக நீ விரும்ப வேண்டும்.(3) உயர்ந்த மரபுவழியில் வந்தவனும், உன்னால் கௌரவிக்கப்படுபவனும், உன்சார்பாக முடிந்த அளவுக்கு எப்போதும் தன் சக்தியை வெளிப்படுத்துபவனும், இன்பத்திலோ துன்பத்திலோ, நோயிலோ, மரணத்திலோ ஒருபோதும் உன்னைக் கைவிடாதவனும் உன் அரசவை உறுப்பினராக ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.(4) உன்நாட்டில் பிறந்த உயர் பிறப்பாளர்களும், ஞானம், அழகிய வடிவம், நற்பண்புகள், பெரும் கல்வி, நடத்தையில் கண்ணியம் ஆகியவற்றைத் தவிர உன்னிடம் அர்ப்பணிப்பும் கொண்டோர் உன் படை அதிகாரிகளாக நியமிக்கப்பட வேண்டும்.(5)
தாழ்ந்த மரபுவழி, பேராசையுடன் கூடிய மனோநிலை ஆகியவற்றைக் கொண்டவர்கள், கொடூரர்கள், வெட்கமில்லாதவர்கள் ஆகியோர், அவர்களது கரங்களில் ஈரம் உள்ள வரையில் உன் அவையில் இருப்பார்கள்[2].(6) நற்பிறவி, நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்டோர், குறியீடுகள் மற்றும் சைகைகள் அனைத்தையும் படிப்போர், கொடுமையற்றோர், இடத்திற்கும், காலத்திற்கும் தக்க தேவைகளை அறிந்தோர், அனைத்துச் செயல்பாடுகளிலும் தங்கள் தலைவனின் நன்மையையே எப்போதும் நாடுவோர் ஆகியோரை மன்னன் தன் காரியங்கள் அனைத்திலும் அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்.(7) செல்வக்கொடை, கௌரவங்கள், மரியாதைமிக்க வரவேற்பு, புகழை அடையும் வழிமுறைகள் ஆகியவற்றின் மூலம் வெல்லப்பட்டவர்கள், உன் காரியங்கள் அனைத்திலும் உனக்கு நன்மை செய்வார்கள் என்று கருதப்படத்தக்கவர்கள் ஆகியோர் எப்போதும் உன் மகிழ்ச்சியைப் பங்கிட்டுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும்.(8) மாறாநடத்தை கொண்டவர்கள், கல்வியும் நல்லொழுக்கமும் படைத்தவர்கள், சிறந்த நோன்புகளை நோற்பவர்கள், பெரிய இதயம் கொண்டவர்கள், பேச்சில் உண்மை நிறைந்தவர்கள் ஆகியோர் எப்போதும் உன் காரியங்களில் கவனம் உள்ளவர்களாகவும், உன்னை ஒருபோதும் கைவிடாதவர்களாகவும் இருப்பார்கள்.(9) மறுபுறம், கௌரவமற்றவர்கள், கட்டுப்பாடுகள் எதையும் நோற்காதவர்கள், தீய ஆன்மா படைத்தவர்கள், நற்செயல்களில் இருந்து வீழ்ந்துவிட்டவர்கள், ஆகியோர் நலம்சார்ந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நோற்கும்படி எப்போதும் கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.(10)எத்தரப்பைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழும்போது, ஒரு தரப்பைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பலரை நீ கைவிடக் கூடாது. எனினும், ஒரே ஒரு மனிதன் சாதனைகள் பலவற்றின் விளைவாகப் பலரை விஞ்சியிருக்கும்போது, அந்த ஒருவனுக்காக நீ பலரைக் கைவிட வேண்டும்[3].(11) ஆற்றல், புகழைத் தரும் செயல்களில் அர்ப்பணிப்பு, நலம்சார்ந்த கட்டுப்பாடுகளை நோற்றல் ஆகியவையே மேன்மையின் குறியீடுகளாகக் கருதப்படுகின்றன.(12) மேலும், திறன் கொண்ட மனிதர்கள் அனைவரையும் கௌரவிப்பவன், எந்தத் தகுதியும் இல்லாதவனிடம் ஒருபோதும் போட்டியிடாதவன், காமம், அல்லது அச்சம், அல்லது கோபம், அல்லது பேராசை ஆகியவற்றின் காரணமாக ஒருபோதும் அறத்தைக் கைவிடாதவன்,(13) பணிவால் அலங்கரிக்கப்பட்டவன், பேச்சில் உண்மை நிறைந்தவன், மன்னிக்கும் இயல்பு கொண்டவன், தன் ஆன்மாவைக் கட்டுக்குள் கொண்டவன், கண்ணிய உணர்வு கொண்டவன், அனைத்துச் சூழ்நிலைகளையும் பயன்படுத்துபவன் ஆகியோர் உன் அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும்.(14) ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரா} உயர்ந்த மரபுவழி, குருதித்தூய்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, புத்திசாலித்தனம், ஆன்மத்தூய்மை, துணிச்சல், நன்றியுணர்ச்சி, உண்மை ஆகியன மேன்மை மற்றும் நல்லியல்பு ஆகியவற்றின் குறியீடுகளாகும்.(15) இவ்வழியில் தன்னை நடத்திக் கொள்ளும் ஞானி ஒருவன், தன் எதிரிகளிடம் உள்ள பகைமையை அகற்றி, அவர்களைத் தன் நண்பனாக்கிக் கொள்வான்.(16)தன் ஆன்மாவைக் கட்டுக்குள் கொண்டவன், ஞானம் கொண்டவன், செழிப்பை விரும்புவனான ஒரு மன்னன், தன் அமைச்சர்களின் தகுதிகள் மற்றும் தவறுகளைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.(17) செழிப்பையும், போட்டியாளர்களுக்கு மத்தியில் ஒளிர்வதையும் விரும்பும் மன்னன் ஒருவன், தன் நாட்டில் பிறந்தவர்களும், உயர் குடிபிறப்பு கொண்டவர்களும், பிழை செய்ய இயலாதவர்களும், ஒழுக்கக்கேடு மற்றும் அதுபோன்ற பிற தீமைகளின் களங்கம் படியாதவர்களும், நன்கு பரிசோதிக்கப்பட்டவர்களும், நல்ல குடும்பங்களைச் சார்ந்தவர்களும், கல்வி படைத்தவர்களும், அதே போன்ற அலுவல்களைச் செய்திருந்த தந்தைமார் மற்றும் பாட்டன்மாரிடம் இருந்து உதித்தவர்களும், பணிவால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான தன் நம்பிக்கைகுரிய நண்பர்களுடன் தொடர்புடைய மனிதர்களையே தன் அமைச்சர்களாகக் கொண்டிருக்க வேண்டும்[4].(18,19) செருக்கால் களங்கப்படாத நுண்ணறிவு, நல்ல மனோநிலை, சக்தி, பொறுமை, மன்னிக்கும் தன்மை, தூய்மை, பற்று, உறுதி, துணிவு ஆகியவற்றைக் கொண்டவர்களும், தகுதி மற்றும் பிழைகளுக்காக நன்கு பரிசோதிக்கப்பட்டவர்களும், வயதால் முதிர்ந்தவர்களாக இருப்பவர்களும் {அனுபவமிக்கோர்}, {பணிச்} சுமைகளைச் சுமக்கவல்லவர்களும், வஞ்சனையற்றவர்களுமாக இருப்போரில் ஐந்து பேரை, மன்னன் தன் காரியங்களைக் கவனித்துக் கொள்வதில் நியமிக்க வேண்டும்.(20,21) பேச்சில் ஞானம் கொண்டோர், வீரம் கொண்டோர், கடினமான காலங்களிலும் வளம் நிறைந்தோர், நற்பிறவி கொண்டோர், உண்மை நிறைந்தோர், குறியீடுகளை உணர்ந்து கொள்வோர், கொடூரமற்றோர்,(22) இடம் மற்றும் நேரத்திற்குத் தக்க தேவையானவற்றை அறிந்தோர், தங்கள் தலைவர்களுக்கு நன்மையை விரும்புவோர் ஆகியோர் நாட்டின் அனைத்து காரியங்களையும் கவனிக்கும் அமைச்சர்களாக மன்னனால் நியமிக்கப்பட வேண்டும்.(23)
சக்தியற்றவனாலும், நண்பர்களால் கைவிடப்பட்டவனாலும் விடாமுயற்சியுடன் ஒருபோதும் செயல்பட முடியாது. அத்தகு மனிதனை {அமைச்சனாக} நியமித்தால் அவன் கிட்டத்தட்ட அனைத்து தொழிலிலும் தோல்வியுறவே செய்வான்.(24) குறைந்த கல்வி கொண்ட ஓர் அமைச்சர், நற்பிறவி கண்டவராகவும், அறம், பொருள் மற்றும் இன்ப காரியங்களில் கவனத்துடனும் இருந்தாலும், அவர் சரியான செயல்களைச் செய்யத் தவறுவார்.(25) அதேபோலவே, தாழ்ந்த மரபுவழியில் வந்த ஒரு மனிதன், பெரும் கல்வியைக் கொண்டவனாக இருந்தாலும், அவன் வழிகாட்டியில்லாத ஒரு குருடரைப் போல, திறன்மிக்க இயக்கம் மற்றும் முன்னறிதிறனுக்கான தேவை இருக்கும் செயல்கள் அனைத்திலும் எப்போதும் தவறு செய்வான்.(26) மேலும், உறுதியற்ற நோக்கங்களை {நிலையற்ற எண்ணங்களைக்} கொண்ட ஒரு மனிதன், நுண்ணறிவு, கல்வி ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும், வழிமுறைகளை அறிந்தவனாக இருந்தாலும் நீண்ட காலம் {தேவைப்படும் காரியங்களில்} வெற்றியடையமுடியாது.(27) தீய இதயம் கொண்டவனும், கல்வி இல்லாதவனுமான ஒரு மனிதன், ஒரு வேலையைச் செய்யத் தொடங்கலாம், ஆனால், அவன் தனது பணியின் விளைவுகளை உறுதிசெய்வதில் தவறுவான்.(28)
ஒரு மன்னன், தன்னிடம் அர்ப்பணிப்பில்லாத அமைச்சனிடம் ஒருபோதும் நம்பிக்கை வைக்கக்கூடாது. எனவே, அவன் தன்னிடம் அர்ப்பணிப்பில்லாத அமைச்சனிடம் ஒருபோதும் தன் ஆலோசனைகளை வெளிப்படுத்தக்கூடாது.(29) அத்தகு தீய அமைச்சன், மன்னனின் பிற அமைச்சர்களுடன் சேர்ந்து, காற்றின் உதவியுடன் ஏற்பட்ட வழிகளில் மரத்தினுள் சென்று அஃதை எரித்துவிடும் நெருப்பைப் போலவே தன் தலைவனை அழித்துவிடுவான்.(30) ஒரு தலைவன், ஒரு நாள் கோபத்திற்கு ஆட்பட்டு ஒரு பணியாளனை அவனது அலுவலில் இருந்து இறக்கலாம் {பதவி நீக்கலாம்}, அல்லது சீற்றத்துடன் கடும் வார்த்தைகளில் நிந்திக்கவும் செய்யலாம், அவனே மீண்டும் {ஒருநாள்} அதிகாரத்தில் அமர்த்தவும் செய்யலாம்.(31) தலைவனுக்கு அர்ப்பணிப்புள்ள ஒரு பணியாளனால் மட்டுமே இவ்வாறு நடத்தப்படுவதைத் தாங்கிக் கொள்ளவும், மன்னிக்கவும் முடியுமேயன்றி வேறு யாராலும் முடியாது. சில வேளைகளில் அமைச்சர்களும் தங்கள் அரசத் தலைவர்களால் அதிகம் புண்படுத்தப்படுகிறார்கள்.(32) அவர்களில், தன் தலைவனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தன் கோபத்தை அடக்கிக் கொள்பவனும், மன்னனின் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொள்பவனுமான ஒருவனிடம் மன்னன் தன் காரியங்கள் அனைத்திலும் ஆலோசனை பெற வேண்டும்.(33) தன் தலைவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும், ஞானியாகவும், எண்ணற்ற நற்குணங்களால் அலங்கரிக்கப்பட்டவனாகவும் இருந்தாலும்கூட, குறுகிய இதயம் கொண்ட ஒரு மனிதனிடம் மன்னன் ஒருபோதும் எதையும் ஆலோசிக்கக்கூடாது.(34)
எதிரியுடன் கூட்டு சேர்பவனும், மன்னனின் குடிமக்களுக்கான நன்மையைக் கருத்தில் கொள்ளாதவனுமான ஒருவன் எதிரியாகவே அறியப்பட வேண்டும். மன்னன் அவனோடு ஒருபோதும் ஆலோசிக்கூடாது.(35) கல்வியற்றவனும், தூய்மையற்றவனும், செருக்கால் களங்கமடைந்தவனும், மன்னனின் எதிரிகளுடன் கூட்டு சேர்பவனும், தற்புகழ்ச்சியில் ஈடுபடுபவனும், நட்புணர்வற்றவனும், கோபம் நிறைந்தவனும், பேராசை கொண்டவனுமான ஒருவனிடம் மன்னன் ஆலோசிக்கக் கூடாது.(36) அயலானான ஒருவன், மன்னனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும், கல்வி மானாகவும் இருந்தாலும் கூட, அவன் மன்னனால் கௌரவிக்கப்படலாம், வாழ்வாதாரத்திற்குத் தேவையான பணிகளை ஒப்படைக்கப்பட்டு நிறைவு செய்யப்படலாம், ஆனால் மன்னன் ஒருபோதும் தன் காரியங்களைக் குறித்து அவனிடம் ஆலோசிக்கக்கூடாது.(37) எந்த மனிதனின் தந்தை அரசாணையின்படி அநீதியாகத் தண்டிக்கப்பட்டானோ, அவனுக்கு மன்னன் கௌரவத்தை அளித்து, வாழ்வாதாரத்திற்கான பணிகளை அவனிடம் ஒப்படைத்தாலும்கூட, அவனிடம் ஆலோசிக்கக்கூடாது.(38) சிறிய மீறலுக்காகச் செல்வம் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு நலன் விரும்பி, அனைத்து சாதனைகளையும் கொண்டவனாகவே இருந்தாலும் கூட, மன்னன் அவனிடம் ஆலோசிக்கக்கூடாது.(39)
ஞானம், நுண்ணறிவு, கல்வி ஆகியவற்றைக் கொண்டவனும், தன் நாட்டிலேயே பிறந்தவனும், தூய்மையானவனும், தன் செயல்கள் அனைத்திலும் நீதியுடன் இருப்பவனுமான ஒரு மனிதனே, மன்னன் ஆலோசிக்கத்தகுந்தவன் ஆவான்.(40) அறிவும், விவேகமும் கொண்டவனும், நண்பர்கள் மற்றும் எதிரிகளின் மனோநிலைகளை அறிந்தவனும், மன்னன் தன்னைப் போலவே கருதிக்கொள்ளும் நண்பனுமான ஒருவன், ஆலோசனைக்குத் தகுந்தவனாவான்.(41) பேச்சில் உண்மையும், பணி மற்றும் மென்மை கொண்டவனும், தலைமுறை தலைமுறையாக மன்னனின் பணியாளுமான ஒருவன், ஆலோசனைக்குத் தகுந்தவனாவான்.(42) நிறைவுடையவனும், கௌரவமிக்கவனும், உண்மை நிறைந்தவனும், கண்ணியமானவனும், தீமையையும், தீய மனிதர்களையும் வெறுப்பவனும், கொள்கை மற்றும் காலத்தின் தேவைகள் ஆகியவற்றை அறிந்தவனும், துணிவுமிக்கவனுமான ஒருவன் ஆலோசனைக்குத் தகுந்தவனாவான்.(43)
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இணங்கச் செய்வதன் மூலம் மனிதர்கள் அனைவரையும் வெல்லத்தகுந்த ஒருவனிடம், தண்டனை அறிவியலின் ஆணைப்படி ஆள விரும்பும் ஒரு மன்னன் ஆலோசிக்க வேண்டும்.(44) எவனுடைய நியாயமான நடவடிக்கையின் காரணமாக அவன் மீது தலைநகரம் மற்றும் மாகாணங்களில் வசிப்போர் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ, எவன் போரிடத் தகுந்தவனோ, எவன் கொள்கைவிதிகளை அறிந்தவனோ, அவன் மன்னனால் ஆலோசனை கேட்கப்படத் தகுந்தவனாவான்.(45) எனவே, அத்தகு பண்புகளைக் கொண்ட மனிதர்கள், அனைவரின் மனோநிலைகளையும் அறிந்தவர்களும், உயர்ந்த செயல்களைச் செய்ய விரும்புபவர்களுமான மனிதர்கள் மன்னனால் கௌரவிக்கப்பட்டு, அவனது அமைச்சர்களாக்கப்பட வேண்டும். அவர்களுடைய எண்ணிக்கை மூன்றுக்கும் குறைவாக இருக்கக் கூடாது[5].(46)
அமைச்சர்கள், தங்கள் தலைவர்களின் குறைகள், தங்கள் மற்றும் குடிமக்களின் குறைகள் மற்றும் தங்கள் தலைவனுடைய எதிரியின் குறைகளைக் காண நியமிக்கப்பட வேண்டும். அமைச்சர்களிடம் இருந்து பாயும் கொள்கை ஆலோசனைகளே நாட்டின் வேராகும், மேலும் அது நாடு எனும் அந்த மூலத்தில் இருந்தே வளர்கிறது.(47) அமைச்சர்கள், தங்கள் தலைவனுடைய எதிரிகள் தங்கள் குறைகளைக் காண இயலாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். மறுபுறம், அவர்களது குறைகள் வெளிப்படையாகத் தெரிந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஓர் ஆமை தனது அங்கங்களை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வதைப் போலவே, அமைச்சர்கள் தங்கள் ஆலோசனைகளைப் பாதுகாக்க வேண்டும். மேலும் அவர்கள் தங்கள் குறைகளையும் மறைக்க வேண்டும்.(48) தங்கள் ஆலோசனைகளை மறைப்பதில் வெல்லும் ஒரு நாட்டின் அமைச்சர்கள் விவேகிகள் என்று சொல்லப்படுகிறார்கள். ஆலோசனைகள் மன்னனின் கவசமாகவும், குடிமக்கள் மற்றும் அதிகாரிகளின் அங்கங்களாகவும் இருக்கின்றன.(49) ஒரு நாடு, தன் ஒற்றர்கள் மற்றும் இரகசிய உளவாளிகளிடமே தன் வேரைக் கொண்டுள்ளது, அதன் பலம் கொள்கைகளின் ஆலோசனையிலேயே இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. தலைவர்களும், அமைச்சர்கள், செருக்கையும் கோபத்தையும், பகத்தையும், பொறாமையையும் அடக்கி, ஒருவரிடம் இருந்து ஒருவர் ஆதரவைப் பெற்று, ஒருவரையொருவர் பின்பற்றினால் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியடைவார்கள்.(50)
ஒரு மன்னன், ஐந்து வகை வஞ்சகங்களில் இருந்து விடுபட்ட அமைச்சர்களிடமே ஆலோசிக்க வேண்டும்[6].(51) முதல் தருணத்தில், மன்னனுடன் ஆலோசித்தவர்களுள் மூவரின் வெவ்வெறு கருத்துகளை நன்கு உறுதிப்படுத்திக் கொண்டு, அதன் பிறகு உறுதியான தீர்மானத்தை அடையும் மன்னன், தன் ஆசானிடம் சென்று அந்தக் கருத்துகளையும், தன் சொந்தக் கருத்தையும் சொல்ல வேண்டும். அவனது ஆசான், அறம், பொருள் மற்றும் இன்பம் குறித்த அனைத்து காரியங்களையும் நன்கு அறிந்த ஒரு பிராமணராக இருக்க வேண்டும். உறுதியான தீர்மானத்துடன் அவரிடம் செல்லும் மன்னன், குவிந்த மனத்தோடு அவரது கருத்தையும் கேட்க வேண்டும். மன்னன் அவரோடு சேர்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்தபிறகு, எந்தப் பற்றும் இல்லாமல் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.(52,53) ஆலோசனை எனும் அறிவியலின் தீர்மானங்களை நன்கறிந்தோர், மன்னர் எப்போதும் இவ்வழியிலேயே தங்கள் ஆலோசனைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். ஆலோசனைகளை இவ்வழியில் தீர்மானிக்கும் அவர்கள், குடிமக்கள் அனைவரையும் வெல்வதற்காக அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.(54)
மன்னன் தன் ஆலோசனைகளைச் செய்யும் இடத்தில், உயரம் குறைந்தோர் {குள்ளர்கள்}, முதுகு வளைந்தோர் {கூனர்கள்}, மெலிந்த உடல் வாகைக் கொண்டவர்கள், முடமானோர், பார்வையற்றோர் {குருடர்கள்}, மூடர்கள், பெண்கள், அலி ஆகியோரில் எவரும் இருக்கக்கூடாது. அங்கே எதுவும் முன்போ, பின்போ, மேலோ, கீழோ, குறுக்காகவோ நகர்ந்து கொண்டிருக்கக்கூடாது.(55) மன்னன், படகில் ஏறியோ, புல், புதர் அற்ற, சுற்றிலும் தெளிவாகத் தெரியக்கூடிய நிலங்களைக் கொண்ட திறந்தவெளிக்குச் சென்றோ, பேச்சு மற்றும் தோற்றத்தில் குறைகளைத் தவிர்த்து உரிய நேரத்தில் ஆலோசனைகளைச் செய்ய வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(56)
இன்சொல்லும் இனிய நடத்தையும்! – சாந்திபர்வம் பகுதி – 84-இனிமையான பேச்சும், இனிமையான நடத்தையும் சாதிக்கக் கூடியவற்றைப் பிருஹஸ்பதிக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலின் மூலம் யுதிஷ்டிரனுக்கு எடுத்துச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பிருஹஸ்பதிக்கும், சக்ரனுக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(1)
சக்ரன் {இந்திரன் பிரஹஸ்பதியிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, ஒரு மனிதன், எந்தக் காரியத்தைக் கவனமாகச் சாதிப்பதன் மூலம், அனைத்து உயிரினங்களின் மதிப்புக்குரியவனாகி பெரும்புகழை அடைய முடியும்?” என்று கேட்டான்.(2)
பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா {இந்திரா}, ஒரு மனிதன் பேச்சில் இனிமையுடையவனாக இருந்தால், அவன் அனைத்து உயிரினங்களின் மதிப்புக்குரியவனாகி, பெரும் புகழை அடைவான்.(3) ஓ! சக்ரா, இதுவே அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒன்றாகும். இதைப் பயில்வதால் ஒருவனால் எப்போதும் அனைத்து உயிரினங்களின் அன்பைப் பெற முடியும்.(4) {இனிய} ஒரு சொல்லும் பேசாதவனும், புருவம் சுருங்கி, முகம் சுழிப்பவனுமான ஒரு மனிதன் அனைத்து உயிரினங்களின் வெறுப்புக்கு ஆளாகிறான். இனிய சொல் பேசாமை அவனை அவ்வாறு ஆக்குகிறது.(5) பிறரைக் கண்டதும், புன்னகையுடன் முதலில் பேசும் மனிதன், அவர்கள் அனைவரையும் தன்னிடம் நிறைவுகொள்ளச் செய்கிறான்.(6)
இனிமையான சொல் இல்லாமல் கொடைகளையே {தானங்களையே} அளித்தாலும்கூட, அது குழம்பில்லாத சோற்றைப் போலப் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்காது.(7) ஓ! சக்ரா, இனிய சொற்களுடன் மனிதர்களின் உடைமைகளே பறிக்கப்பட்டாலும்கூட, அத்தகு இனிமையான நடத்தையானது கொள்ளை கொடுத்தவனைச் சமரசம் செய்வதில் வெல்லும்.(8) எனவே, ஒரு மன்னன், தண்டனையையே அளிக்க விரும்பினாலும் இனிமையான வார்த்தைகளிலேயே பேச வேண்டும். பேச்சில் இனிமை ஒருபோதும் காரியங்களில் தவறுவதில்லை. அதே வேளையில், எந்த இதயத்தையும் காயப்படுத்துவதும் இல்லை.(9) நற்செயல்கள் செய்து நல்லவனாக இருக்கும் ஒரு மனிதன், இனிமையானவனாகவும், இனிமையான பேச்சைக் கொண்டவனாகவும் இருந்தால் அவனுக்கு இணையானவன் வேறு எவனும் கிடையாது” என்றார் {பிருஹஸ்பதி}”.(10)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு தன் புரோகிதரால் {பிருஹஸ்பதியால்} சொல்லப்பட்ட சக்ரன் {இந்திரன்}, அந்த அறிவுரைகளின்படியே செயல்படத் தொடங்கினான். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீயும் இவ்வறத்தைப் பயில்வாயாக” {என்றார்}.(11)
அமைச்சர்கள் நியமனம்! – சாந்திபர்வம் பகுதி – 85-எந்தெந்த வர்ணங்களில் எத்தனை அமைச்சர்களை நியமிக்க வேண்டும்; அவர்கள் எத்தகைய பண்புகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்; குற்றவாளிகளுக்கு எவ்வாறு தண்டனை வழங்க வேண்டும்; தூதர், மெய்க்காப்பாளன், அமைச்சர், படைத்தலைவன் ஆகியோர் என்ன திறன்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பன குறித்து யுதிஷ்டிரனுக்கு எடுத்துச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, பேரருளையும், நித்திய புகழையும் அடைய ஒரு மன்னன் தன் குடிமக்களை எவ்வழிமுறையின் ஆள வேண்டும்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தூய ஆன்மாவையும், தன் குடிகளை ஆளும் கடமையில் கவனத்தையும் கொண்ட ஒரு மன்னன், நீதியுடன் தன்னை நடத்திக் கொண்டால் இம்மையிலும், மறுமையிலும் அவன் தகுதியையும், புகழையும் ஈட்டுவான்” என்றார்.(2)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மன்னன், எவருடன் எவ்வழியில் நடந்து கொள்ள வேண்டும்? ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, கேட்கும் எனக்கு முறையாக அனைத்தையும் சொல்வதே உமக்குத் தகும்.(3) நீர் ஏற்கனவே சொன்னவற்றில் ஒரு மனிதனுக்கான அறங்களில் {பண்புகளில்} எதுவும் எந்த ஒரு தனி மனிதனிடமும் காணப்படவில்லை என்பதே என் நம்பிக்கை” என்றான்[1].(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, நீ பெரும் நுண்ணறிவு கொண்டவனாக இருக்கிறாய். இது நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. அந்த நற்குணங்கள் அனைத்தையும் கொண்ட மனிதன் மிக அரிதானவனே.(5) சுருக்கமாகச் சொன்னால், கவனமான தேடலுக்குப் பிறகும் கூட {எவனிடமும்} இத்தகு நடந்தை (சொல்லப்படும் அறங்கள் அனைத்தின் இருப்பும்) காணப்படுவது மிக அரிதே. எனினும், உன்னால் எந்த வகையான அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று உனக்குச் சொல்கிறேன்.(6)
வேதகல்வி, கண்ணிய உணர்வு ஆகியவற்றைக் கொண்டவர்களும், சனாதக வகையைச் சேர்ந்தவர்களும், தூய நடத்தை கொண்டவர்களுமான நான்கு {4} பிராமணர்களும்; உடல் பலம் கொண்டவர்களும், ஆயுதந்தரிக்க வல்லவர்களுமான எட்டு {8} க்ஷத்திரியர்களும்,(7) செல்வம் படைத்தவர்களான இருபத்தோரு {21} வைசியர்களும், பணிவானவர்களும், தூய நடத்தை கொண்டவர்களும், தினசரி கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான மூன்று {3} சூத்திரர்களும்,(8) புராணங்கள் மற்றும் எட்டு முக்கிய அறங்களை[2] {பண்புகளைக்} குறித்த அறிவு கொண்டவனான ஒரு சூதனும் உன் அமைச்சர்களாக இருக்க வேண்டும். {ஆக மொத்தம் 37 அமைச்சர்கள்}. அவர்கள் அனைவரும் ஐம்பது வயதைக் கடந்தவர்களாகவும், கண்ணிய உணர்வு கொண்டவர்களாகவும், பொறாமையில் இருந்து விடுபட்டவர்களாகவும்,(9) சுருதிகள் மற்றும் ஸ்மிருதிகளை அறிந்தவர்களாகவும், பணிவுடையவர்களாகவும், நடுநிலையாளர்களாகவும், வழக்காடுபவர்களின் மத்தியில் செயலின் பல்வேறு வகைகளைக் குறித்துச் சொல்லி தீர்வை எட்ட ஆயத்தமாக இருப்பவர்களாகவும், பேராசையில் இருந்து விடுபட்டவர்களாகவும்,(10) வியசனங்கள் என்று அழைக்கப்படும் ஏழு அதிபயங்கரத் தீமைகளில்[3] இருந்து விடுபட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மன்னன், {வழக்கு விசாரணையின்போது} அந்த எட்டு அமைச்சர்களுக்கு மத்தியில் ஆலோசிக்க வேண்டும்[4].(11) மேலும் அவன் {மன்னன்}, அந்த ஆலோசனையின் விளைவுகளைத் தன் குடிமக்களுக்கான செய்தியாகத் தன் நாட்டில் வெளியிட வேண்டும். நீ எப்போதும் இத்தகு நடத்தையையே பின்பற்றி உன் மக்களைக் கண்காணிக்க வேண்டும்.(12)பொருளின் உரிமை குறித்து இரு மனிதர்களிடையிலான சச்சரவின் பேரில் உன்னிடம் கொடுக்கப்பட்டவற்றை, நீ ஒருபோதும் பறிமுதல் செய்யவோ, உனதாகக் கொள்ளவோ கூடாது. அத்தகு நடத்தை நீதி நிர்வாகத்தைக் கெடுத்துவிடும். உன் நீதி நிர்வாகம் இவ்வாறு பழுதுபட்டால், பாவமே உன்னைப் பீடிக்கும்.(13) அஃது உன் நாட்டையும் பீடித்து, பருந்தைக் கண்ட சிறு பறவைகளைப் போல உன் மக்களை அஞ்சவைக்கும். பிறகு உனது நாடானது, கடலில் உடைந்த படகைப் போல உருகி {அழிந்து} விடும்.(14) மன்னன் தன் குடிகளை அநீதியுடன் ஆண்டால், அவனது இதயம் அச்சத்தால் பீடிக்கப்பட்டு, சொர்க்கத்தின் கதவானது அவனுக்கு எதிராகச் சாத்தப்படும்.(15) ஓ! மனிதர்களில் காளையே, ஒரு நாடானது நீதியிலேயே தன் வேரைக் கொண்டுள்ளது. நீதி வழங்கும் ஆசனத்தில் அமர்ந்து, தன்னலத்துடன், அநீதியாகச் செயல்படும் அமைச்சரும், அல்லது மன்னனின் மகனும் {இளவரசனும்}, காரியங்களின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, தன்னலத்தால் உந்தப்பட்டு நியாயமில்லாமல் நடந்து கொள்ளும் அதிகாரிகள் அனைவரும் அந்த மன்னனுடன் சேர்ந்து நரகில் மூழ்குவார்கள்.(16,17)
வலியோரால் ஒடுக்கப்பட்டு, பரிதாபகரமான ஒப்பாரிகளில் ஈடுபடும் ஆதரவற்ற மனிதர்கள் தங்கள் பாதுகாவலனை மன்னனிடமே கொண்டுள்ளனர்.(18) இரு தரப்புகளுக்கிடையிலான சச்சரவு வழக்குகளில், சாட்சிகளின் ஆதார அடிப்படையிலேயே தீர்மானம் எட்டப்பட வேண்டும். வழக்காளிகளில் ஒருவர் சாட்சி ஏதும் இல்லாமல், ஆதரவற்றவராக இருந்தால், மன்னன் அந்த வழக்கில் சிறப்பான கவனத்தைச் செலுத்த வேண்டும்.(19) குற்றவாளிகள் அவர்கள் செய்த குற்றங்களின் அடிப்படையில் தண்டனை பெற மன்னன் ஆவன செய்ய வேண்டும். செல்வந்தர்கள் {குற்றமிழைக்கும்போது}, அபராதங்கள் மற்றும் பறிமுதல்கள் செய்வதன் மூலமும், ஏழைகள் {குற்றமிழைக்கும்போது}, சுதந்திரம் இழக்கச் செய்வதன் மூலமும் தண்டிக்கப்பட வேண்டும்.(20) மிகத்தீய நடத்தை கொண்டோரை, உடற்சார் துன்பங்களின் மூலம் மன்னன் தண்டிக்க வேண்டும். நல்லோர் அனைவரையும் மன்னன் இனிய சொற்கள் மற்றும் செல்வக்கொடைகளின் மூலம் பேணிக் காக்க வேண்டும்.(21) மன்னனைக் கொல்ல முனைபவன், பல்வேறு வழிமுறைகளின் மூலமான மரணத் தண்டனையால் தண்டிக்கப்பட வேண்டும். தீவைத்தல், களவு, வர்ணக்கலப்புக்கு வழிவகுக்கும் வகையில் பெண்களின் துணையை நாடுதல் ஆகிய குற்றங்களைச் செய்பவனும் அதே வகையில் தண்டிக்கப்பட வேண்டும்.
ஓ! ஏகாதிபதி, தண்ட அறிவியலின் விதிகளுக்கு ஏற்புடைய வகையிலும் முறையாகத் தண்டனை அளிக்கும் மன்னன் அச்செயலால் எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை. மறுபுறம், அவன் அழியா தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுகிறான்.(23) காரணமின்றித் தண்டனைகளை விதிக்கும் மூட மன்னன், இம்மையில் புகழ்க்கேட்டை ஈட்டி, மறுமையில் நரகில் மூழ்குகிறான்.(24) ஒருவன் வேறொருவரின் குற்றத்திற்காகத் தண்டிக்கப்படக்கூடாது. (குற்றவியல்) சட்டத்தை நன்கு சிந்தித்துப் பார்த்த பிறகே, ஒரு மனிதன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படவோ, விடுவிக்கப்படவோ வேண்டும்.(25)
ஒரு மன்னன் எந்தச் சூழ்நிலையிலும் ஒரு தூதரைக் கொல்லக்கூடாது. தூதரைக் கொல்லும் மன்னன், தன் அமைச்சர்கள் அனைவருடன் சேர்ந்து நரகில் மூழ்குவான்.(26) தனக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை பற்றுறுதியுடன் சொன்ன ஒரு தூதனைக் கொல்லும் மன்னன், தன் மூதாதையர்களுக்குக் கருவைக் கொன்ற பாவத்தைத் தேடித் தருகிறான்.(27) ஒரு தூதன், உயர்ந்த குடிபிறப்பு, நாநயம், புத்திக்கூர்மை, இனிய பேச்சு, தனக்குக் கொடுக்கப்பட்ட செய்தியைப் பற்றுறுதியுடன் கூறல், நல்ல நினைவுத்திறன் ஆகிய ஏழு திறமைகளைக் கொண்டிருக்க வேண்டும்.(28) மன்னனைப் பாதுகாக்கும் மெய்க்காப்பாளர்களும் அதே வகைப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். தலைநகரையோ, நகரரணையோ காக்கும் அதிகாரியும் அதே திறன்களைக் கொண்டவனாக இருக்க வேண்டும்.(29)
மன்னனின் அமைச்சர், சாத்திரங்களின் தீர்மானங்களை அறிந்தவராக, போர்களை வழிநடத்துபவராக, உடன்படிக்கைகளை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும். மேலும் அவர், நுண்ணறிவு, துணிவு, பணிவு, ஆகியவற்றைக் கொண்டவராகவும், இரகசியங்களைக் காப்பவராகவும் இருக்க வேண்டும்.(30) அவர் உயர் குடி பிறப்பையும், மனோ பலத்தையும், தூய நடத்தையும் கொண்டவராக இருக்க வேண்டும். இந்தப் பண்புகளைக் கொண்டிருந்தால் அவர் தகுந்தவராகக் கருதப்பட வேண்டும்.
மன்னனுடைய படைகளின் தலைவனும் அதேபோன்ற திறன்களைக் கொண்டவனாக இருக்க வேண்டும்.(31) அவன் பல்வேறு வகைப் படை அணிவகுப்புகளை {வியூகங்களை} அறிந்தவனாகவும், இயந்திரங்கள் மற்றும் ஆயுதங்களின் பயன்பாடுகளை அறிந்தவனாகவும் இருக்க வேண்டும். அவன், மழை, குளிர், வெப்பம், காற்று ஆகியவற்றைத் தாங்கிக் கொள்ளக் கூடியவனாகவும், பகைவரின் தவறுகளைக் கவனமாகப் பார்ப்பவனாகவும் இருக்க வேண்டும்.(32)
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஒரு மன்னன், தன் எதிரிகளைப் பாதுகாப்பு உணர்வுடன் அமைதியடையச் செய்ய இயன்றவனாக இருக்க வேண்டும். எனினும், அவன் {மன்னன்} எவனையும் நம்பாமல் இருக்க வேண்டும். தன் சொந்த மகனிடம் நம்பிக்கை கொள்வதே கூட அவனுக்கு அங்கீகரிக்கப்படவில்லை.(33) ஓ! பாவமற்றவனே, சாத்திரங்களின் தீர்மானங்கள் என்ன என்பதை இப்போது நான் உனக்குச் சொன்னேன். எவனையும் நம்ப மறுத்தலே ஆட்சித்திறத்தின் உயர்ந்த புதிர்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது” என்றார் {பீஷ்மர்}.(34)
அரசநகரத்தின் லக்ஷணம்! – சாந்திபர்வம் பகுதி – 86-மன்னனும், அரச அங்கத்தினரும் வசிக்க வேண்டிய நகரத்திற்குரிய அடையாளங்கள், ஒரு நாடு வலுவூட்டப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டிய வழிமுறைகள்; தவசிகளிடம் மன்னன் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “மன்னன் எவ்வித நகரத்திற்குள் வசிக்க வேண்டும்? அவன், ஏற்கனவே உண்டாக்கப்பட்ட ஒரு நகரத்தில் வசிக்க வேண்டுமா? அல்லது அவன் தனியாக ஒன்றைக் கட்ட வேண்டுமா? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, ஓ! குந்தியின் மகனே, ஒரு மன்னன் வசிக்க வேண்டிய நகரத்தைப் பொறுத்தவரையில் கடைப்பிடிக்க வேண்டிய தற்காப்புகளையும், பிற்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளையும் விசாரிப்பதே {விசாரித்தறிவது} முறையாகும்.(2) எனவே, நகரரண்களின் {கோட்டைகளின்} தற்பாதுகாப்பைக் குறித்து நான் உரையாடப்போகிறேன். நான் சொல்வதைக் கேட்ட பிறகு, தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு, வழிநடத்தப்படும்படியே கவனமாக உன்னை நடத்திக் கொள்வாயாக.(3) ஆறு வகை அரண்களில் {துருக்கங்களில்} தன் கண்களைச் செலுத்தியபடியே {கவனத்தைக் கொண்டு} மன்னன், அனைத்து வகைச் செழிப்புகளையும், பயன்படுத்துவதற்கான அனைத்து வகைப் பொருட்களையும் அபரிமிதமாகக் கொண்ட தன் நகரங்களைக் கட்ட வேண்டும்.(4) நீர்அரண்கள் {ஜலதுர்க்கம்}, பூமிஅரண்கள் {பூமிதுர்க்கம்}, மலைஅரணங்கள் {கிரிதுர்க்கம்}, மனிதஅரண்கள் {மனுஷ்யதுர்க்கம்}, மண்அரண்கள் {மருதுர்க்கம்}, காட்டுஅரண்கள் {வனதுர்க்கம்} ஆகியனவே அந்த ஆறு வகை அரண்களாகவும் {துருக்கங்களாகும்}[1].(5)
அரணால் பாதுகாக்கப்பட்டதும், அரிசி மற்றும் ஆயுதக் கிடங்குகளை அபரிமிதமாகக் கொண்டதும், ஊடுருவமுடியா சுவர்கள் மற்றும் அகழியால் பாதுகாக்கப்பட்டதும், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்கள் நிறைந்ததும், கல்வி மற்றும் இயந்திரவியல் கலையில் திறன் ஆகியவற்றைக் கொண்ட மனிதர்கள் வசிப்பதும், அனைத்து வகைப் பொருட்கள் நன்கு சேமிக்கப்பட்டதும், அறநடத்தையும், தொழிலில் நுண்ணறிவும், பலமும், சக்தியும் கொண்ட மனிதர்கள் நிறைந்ததும், விலங்குகள் நிறைந்ததும், நேர்மையான நடத்தை கொண்ட மனிதர்கள் இருப்பதும், அமைதி நிலைத்திருப்பதும், ஆபத்தில்லாததும், அழகால் சுடர்விடுவதும், இசை மற்றும் பாடல்களால் எதிரொலிப்பதும், துணிச்சல்மிக்க, செல்வம் நிறைந்த மனிதர்களைக் கொண்டதும், வேத மந்திரங்களின் ஒலியால் எதிரொலிக்கப்படுவதும், விழாக்களும், பண்டிகைகளும் அடிக்கடி நடைபெறுவதும், எப்போதும் தேவர்களின் வழிபாடுகள் நடைபெறுவதுமான ஒரு நகரத்திலேயே மன்னன், அவனது அமைச்சர்கள், பற்றுறுதி கொண்ட அவனது படையினர் ஆகியோர் வசிக்க வேண்டும்[2].(6-10)
அங்கே வசிக்கும் மன்னன், தன் படைகளை அதிகரித்து, தன் நண்பர்களின் எண்ணிக்கையை மேம்படுத்தி, நீதிமன்றங்களை நிறுவி தன் கருவூலத்தை நிறைப்பதில் ஈடுபட வேண்டும். தன் நகரங்கள் மற்றும் மாகாணங்களில் நிந்தனைகள் மற்றும் தீமைகள் அனைத்தையும் அவன் தடுக்க வேண்டும்.(11) அவன் அனைத்துவகைப் பொருட்களையும் முன்னேற்பாட்டுடன் சேகரிப்பதிலும், தன் ஆயுதக்கிடங்குகளைக் கவனத்துடன் நிறைப்பதிலும் ஈடுபட வேண்டும். அரிசி மற்றும் பிற தானியங்களையும் அவனது கிடங்குகளில் அதிகரிக்கச் செய்து, (விவேகத்துடன்) தனது ஆலோசனைகளை உறுதியடையச் செய்ய வேண்டும்.(12) அவன் மேலும் தன் கிடங்குகளில், விறகு, இரும்பு, உமிகள், கரிகள், மரங்கள், கொம்புகள், எலும்புகள், மூங்கில்கள், மஜ்ஜை, எண்ணெய் மற்றும் வெண்ணெய், கொழுப்பு, தேன், மருந்து வகைகள்,(13) பட்டுச்சணல், {ஸர்ஜரம் எனும்} நறுமணத் திரவியம், அரிசி, ஆயுதங்கள், அம்புகள், தோல், (நாண்கயிறுகளுக்கான) நரம்பு, பிரம்பு, முஞ்சப் புல் {ஒரு வகைத் தர்ப்பம்}, பிறவகைச் செடிகொடிகள் {மூலிகைகள்} ஆகியவற்றையும் அதிகரிக்க வேண்டும்.(14) மேலும், பெரும் அளவிலான நீரைக் கொண்ட குளங்கள் {அல்லது தொட்டிகள்} மற்றும் கிணறுகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து, பாலுள்ள மரங்கள் அனைத்தையும் அவன் பாதுகாக்க வேண்டும்[3].(15)
(பல்வேறு அறிவியல் துறைகளில்) ஆசான்களாக இருப்போரையும், ரித்விக்குகள், புரோகிதர்கள், வலிமைமிக்க வில்லாளிகள், கட்டடக் கலைஞர்கள், வானியல் வல்லுனர்கள், சோதிடக் கலைஞர்கள், மருத்துவர்கள் ஆகியோரையும்,(16) ஞானம், நுண்ணறிவு, தற்கட்டுப்பாடு, புத்திக்கூர்மை, துணிவு, கல்வி, உயர்குடி பிறப்பு, மனோசக்தி ஆகியவற்றைக் கொண்டவர்களையும், அனைத்தவகை பணிகளையும் செய்யவல்ல மனிதர்கள் அனைவரையும் கௌரவித்து, கவனத்துடன் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.(17) மன்னன் நல்லோரைக் கௌரவித்து, நியாயமற்றவர்களைத் தண்டிக்க வேண்டும். தீர்மானத்துடன் செயல்படும் அவன், பல்வேறு வகையினரையும் அவரவருக்குரிய கடமைகளில் நிறுவ வேண்டும்.(18) அவன் {மன்னன்}, தன் நகரம் மற்றும் மாகாணங்களில் வசிப்போரின் வெளிப்புற நடத்தையையும், மனோநிலையையும் ஒற்றர்கள் மூலம் சரியாக உறுதிச் செய்து கொண்டு, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .(19) மன்னன் தானே தன் ஒற்றர்கள், ஆலோசகர்கள், தன் கருவூலம், தண்டனை அளிக்கும் துறைகளைச் சார்ந்தோர் ஆகியோரை நேரடியாகக் கண்காணிக்க வேண்டும். அனைத்தும் இவர்களையே சார்ந்திருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.(20)
ஒற்றர்களையே தன் பார்வையாகக் கொள்ளும் மன்னன், தன் எதிரிகள், நண்பர்கள் மற்றும் நடுநிலையாளர்களின் செயல்களை அனைத்தையும், அவர்களது நோக்கங்கள் அனைத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.(21) பிறகு அவன் கவனத்துடன் தன் திட்டங்களை வகுத்து, தன்னிடம் பற்றுறுதியுடன் இருப்பவர்களைக் கௌரவிக்கவும், பகைமையுடன் இருப்பவர்களைத் தண்டிக்கவும் செய்ய வேண்டும்.(22) மன்னன் எப்போதும் வேள்விகளில் தேவர்களைத் துதித்து, எவருக்கும் துன்பமளிக்காமல் கொடைகளைக் கொடுக்க வேண்டும். நீதிக்குத் தடங்கலாகவோ, குறுக்கீடாகவோ ஒருபோதும் எதையும் செய்யாமல் அவன் தன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும்.(23) ஆதரவற்றோர், தலைவனற்றோர், முதியோர், விதவைகளாக இருக்கும் பெண்டிர் ஆகியோரை அவன் எப்போதும் பாதுகாத்து, அவர்களைப் பராமரிக்க வேண்டும்.(24)
மன்னன் எப்போதும் தவசிகளைக் கௌரவித்து, உரிய காலங்களில் துணிகள், பாத்திரங்கள் மற்றும் உணவை அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும் (25) அவன் (நாட்டில்) தன்னிலை குறித்தும், தன் திட்டங்கள் அனைத்தையும் குறித்தும், தன் நாட்டைக் குறித்தும் மிகுந்த கவனத்துடன் அந்தத் தவசிகளுக்குத் தெரிவித்து, அவர்கள் முன்னிலையில் எப்போதும் அவன் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.(26) உயர்ந்த பிறப்பையும், பெரும் கல்வியையும் கொண்டவர்களும், உலகம் சார்ந்த அனைத்துப் பொருட்களையும் கைவிட்டவர்களுமான தவசிகளை அவன் காணும்போது, படுக்கைகள், ஆசனங்கள் மற்றும் உணவுக் கொடைகளுடன் அவர்களை அவன் கௌரவிக்க வேண்டும்.(27) எந்த இயல்பிலான துன்பத்தில் அவன் விழுந்தாலும், அஃதை அவன் ஒரு தவசியிடம் நம்பிக்கையுடன் சொல்ல வேண்டும். கள்வர்களே கூட அத்தகைய பண்பு கொண்ட மனிதர்களிடம் நம்பிக்கை கொள்வார்கள்.(28) மன்னன் தன் செல்வத்தை ஒரு தவசியின் பொறுப்பில் கொடுத்து, அவருடைய ஞானத்தை அவன் எடுத்துக் கொள்ள வேண்டும். எனினும் அவன் அனைத்துச் சந்தர்ப்பங்களில் அவர்களுக்காகக் காத்திருக்கவோ, வழிபடவோ கூடாது[4].(29)தன் நாட்டில் வசிப்போரில் ஒருவரை அவன் தன் நட்புக்கெனத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோலவே, எதிரியின் நாட்டில் வசிப்போரில் மற்றொருவரையும் அவன் தேர்ந்தெடுக்க வேண்டும். காடுகளில் வசிப்போரில் இருந்து மூன்றாமவரையும், தனக்குக் கப்பம் கட்டும் நாடுகளில் வசிப்போரில் ஒருவரை நான்காமவராகவும் தேர்ந்தெடுக்க வேண்டும்.(30) அவன், அவர்களிடம் நல்ல விருந்தோம்பலை வெளிப்படுத்தி, அவர்களுக்குக் கௌரவங்களை அளித்து, அவர்களுக்கான வாழ்வாதார வழிமுறைகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவன் {மன்னன்} எதிரிகளின் நாடுகளில் வசிக்கும் தவசிகளிடமும், தன் நாட்டில் வசிக்கும் தவசிகளிடமும் ஒரே வழியிலேயே நடந்து கொள்ள வேண்டும்.(31) தவங்கள் மற்றும் கடும் நோன்புகளில் ஈடுபடும் அவர்கள், மன்னனுக்குப் பேரிடர் நேர்ந்து அவன் பாதுகாப்பை நாடும்போது, அவனுக்கு வேண்டியதைக் கொடுப்பார்கள்.(32) மன்னன் வசிக்கத் தகுந்த நகரத்துக்குண்டான குறியீடுகள் நான் இப்போது உனக்குச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்” என்றார் {பீஷ்மர்}.(33)
நிர்வாகம் மற்றும் வரிவிதிப்பு! – சாந்திபர்வம் பகுதி – 87-நாட்டைப் பாதுகாத்து வலுப்படுத்த ஏற்படுத்தப்பட வேண்டிய நிர்வாக முறையையும், வரி, தீர்வைகள் மூலம் நாட்டிலிருந்து பொருளைச் சேர்க்கும் முறையையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா {பீஷ்மரே}, ஒரு நாட்டை எவ்வாறு வலுப்படுத்த வேண்டும்? அஃதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? நான் இவற்றை அறிய விரும்புகிறேன். ஓ! பாரதக் குலத்தின் காளையே, இவை யாவையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நான் சொல்வதைக் குவிந்த கவனத்தோடு கேட்பாயாக. ஒரு நாடு எவ்வாறு வலுப்படுத்தப்பட வேண்டும், எவ்வாறு அது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உனக்குச் சொல்கிறேன்.(2) ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தலைவனை நியமிக்க வேண்டும். பத்துக் {10} கிராமங்களுக்கு (அல்லது பத்து தலைவர்களுக்கு) ஒரு கண்காணிப்பாளன் {அதிபதி} இருக்க வேண்டும். இப்படிப்பட்ட இரண்டு கண்காணிப்பாளர்களுக்கு (இருபது {20} கிராமங்களைக் கட்டுப்படுத்த) ஓர் அதிகாரி இருக்க வேண்டும். அந்த அதிகாரிக்கும் மேல் நூறு {100} கிராமங்களைக் கொண்ட ஒருவன் இருக்க வேண்டும்; அவனுக்கும் மேல் ஆயிரம் {1000} கிராமங்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்ட ஒருவன் இருக்க வேண்டும்.(3) ஒரு கிராமத் தலைவனானவன், அந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனின் பண்புகளையும், திருத்த வேண்டிய குறைகள் அனைத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். பிறகு அவன், அதை (தனக்கு மேல்நிலையில் உள்ளவனான) இருபது {20} கிராமங்களுக்குப் பொறுப்பான அதிகாரியிடம் சொல்ல வேண்டும்.(4) அந்த அதிகாரி பதிலுக்கு, (தனக்கு மேல்நிலையில் உள்ளவனான) நூறு {100} கிராமங்களுக்குப் பொறுப்பான அதிகாரியிடம் தன் ஆட்சிப்பகுதிக்குள் இருக்கும் மனிதர்கள் அனைவரின் நடத்தையையும் தெரிவிக்க வேண்டும்.(5)
கிராமத் தலைவனே அந்தக் கிராமத்தில் உள்ள விளைச்சல் மற்றும் உடைமைகள் ஆகிய அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க வேண்டும்.
ஒவ்வொரு தலைவனும், பத்துக் {10} கிராமங்களுக்குத் தலைவனாக இருப்பவனைப் பராமரிப்பதற்கான தன் பங்கைக் கொடுக்க வேண்டும். பின்னவன் {பத்துக் {10} கிராமங்களுக்குத் தலைவன்}, இருபது {20} கிராமங்களின் தலைவனை ஆதரிக்க அதையே செய்ய வேண்டும்.(6)
ஓ! பாரதர்களின் தலைவா, நூறு {100} கிராமங்களுக்குத் தலைவன், மன்னனிடம் இருந்து அனைத்து கௌரவத்தையும் பெற வேண்டும், மேலும் அவன், தன்னை ஆதரித்துக் கொள்ள மக்கள் மற்றும் செல்வம் நிறைந்த ஒரு பெரிய கிராமத்தைக் கொண்டிருக்க வேண்டும்.(7)
எனினும், நூறு {100} கிராமங்களின் தலைவனுக்கு அவ்வாறு ஒதுக்கப்பட்ட ஒரு கிராமமானது, ஆயிரம் {1000} கிராமங்களுக்குத் தலைவனாக இருப்பவனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்.
மேலும், ஆயிரம் {1000} கிராமங்களுக்குத் தலைவனான அந்த மேலதிகாரி, தன்னை ஆதரித்துக் கொள்ள ஒரு சிறு நகரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.(8) அவன் அதிலிருந்து கிடைக்கும் தானியங்கள், தங்கம் மற்றும் பிற உடைமைகளை அனுபவிக்க வேண்டும். அவனே அது தொடர்பான போர்க்கடமைகள் மற்றும் உள் விவகார காரியங்கள் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.(9) அந்த அதிகாரிகளுக்கிடையிலான பரஸ்பர உறவுகள் மற்றும் நிர்வாகக் காரியங்களை ஏதோ ஓர் அறம்சார்ந்த அமைச்சர் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு நகரத்திலும், அதன் அதிகார எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு காரியத்தையும் கவனிக்க ஓர் அதிகாரி இருக்க வேண்டும்.(10)
விண்மீன் கூட்டத்திற்கிடையில் நகர்ந்து கொண்டிருக்கும் ஏதோவொரு பயங்கரக் கோளைப் போல, இறுதியாகச் சொல்லப்பட்ட (மட்டுமடங்கற்ற அதிகாரங்களைக் கொண்ட) அந்த அதிகாரியானவன், அவனுக்குக் கீழுள்ள அதிகரிகள் அனைவருக்கும் மேலானவனாகச் செயல்பட்டு, நடந்து கொள்ள வேண்டும். அத்தகு அதிகாரியானவன், தன் ஒற்றர்களின் மூலம் தனக்குக் கீழுள்ளவர்களின் நடத்தையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.(11)
அப்படிப்பட்ட உயரதிகாரிகளானவர்கள், கொலைகார மனோநிலையில் இருக்கும் மனிதர்கள் அனைவரிடம் இருந்தும், தீச்செயல்களைச் செய்யும் மனிதர்கள் அனைவரிடம் இருந்தும், பிறரின் செல்வத்தைக் களவாடுவோர் அனைவரிடம் இருந்தும், வஞ்சகம் நிறைந்தோர் அனைவரிடம் இருந்தும், பிசாசின் ஆதிக்கத்திலிருப்போர் எனக் கருதப்படும் அனைவரிடம் இருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டும்.(12)
மன்னனானவன், வணிகத்தில் ஈடுபடுவோரின் விற்பனைகள், கொள்முதல்கள், சாலைகளின் நிலை, உணவு, ஆடை, கையிருப்புகள், ஆதாயங்கள் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டு அவர்களுக்கு வரி விதிக்க வேண்டும்.(13) மன்னன், உற்பத்தியாளர்களின் பரிணாமத்தையும், உற்பத்தியில் ஈடுபடுவோரின் வரவு செலவுகளையும், கலைகளின் நிலையையும் அனைத்துத் தருணங்களிலும் உறுதி செய்து கொண்டு, கைவினைஞர்கள் {தொழிலாளிகள்} பின்பற்றும் கலைகளுக்கு {தொழிலுக்கு} ஏற்ப அவர்களுக்கு வரிவிதிக்க வேண்டும்.(14) ஓ! யுதிஷ்டிரா, மன்னன் அதிக வரிகளை விதிக்கலாம், ஆனால் தன் மக்களைக் காயடிக்கும் வகையில் அவன் ஒருபோதும் வரிகளை விதிக்கக்கூடாது. (15)
உற்பத்தியின் அளவு, உற்பத்தி செய்யத் தேவைப்படும் உழைப்பின் அளவு ஆகியவற்றை உறுதி செய்து கொள்ளாமல் எந்த வரியும் விதிக்கப்படக்கூடாது. போதிய காரணமில்லாமல் உற்பத்தியைப் பெருக்குவதற்காக எவரும் பணி செய்யவோ, உழைப்பில் ஈடுபடவோ மாட்டார்கள்[1].(16) மன்னன், தானும், பொருளை உற்பத்தி செய்ய உழைத்து வரிவிதிக்கப்படுபவனும் அதன் மதிப்பைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் வரிகளை விதிக்க வேண்டும்.(17) மன்னன் தனக்கிருக்கும் தாகத்தால், தன் {நாடு எனும்} அடித்தளத்தையும், பிறரின் {காரியங்கள் எனும்} அடித்தளங்களையும் அழித்துவிடக்கூடாது. தன் மக்களிடம் வெறுப்புக்குள்ளாகும் எந்தச் செயலையும் எப்போதும் அவன் தவிர்க்க வேண்டும். உண்மையில் இவ்வழியில் நடந்து கொண்டால் அவன் மக்களிடம் செல்வாக்கடைவதில் வெல்வான்.(18) (வரிகள் மற்றும் தீர்வைகளின் காரியத்தில்) தீராப் பெரும்பசி கொண்டவன் என்று கெட்ட பெயர் ஈட்டும் மன்னனை குடிமக்கள் வெறுப்பார்கள். வெறுப்பின் பொருளாக மாறும் ஒரு மன்னனால் எங்கிருந்து செழிப்பை அடைய முடியும்? அப்படிப்பட்ட மன்னனால் ஒருபோதும் தனக்கான நன்மையை அடைய முடியாது.(19)நல்ல நுண்ணறிவு கொண்ட ஒரு மன்னன், கன்றுகளின் (காரியத்தில் மனிதர்கள் நடந்து கொள்ளும்} ஒப்புமையைப் போலத் தன் நாட்டில் இருந்து {வரிகளைக்} கறக்க வேண்டும்.(20) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, பால் குடிக்கக் கன்றை அனுமதித்தால், அது பலமுள்ளதாக வளர்ந்து பெருங்கனங்களைச் சுமக்கும்.(20) மறுபுறம், பசுவிடமிருந்து அதிகமாகப் பால் கறக்கப்பட்டால் கன்று மெலிந்து, தன் தலைவனுக்குத் தொண்டாற்றத் தவறும். அதே போலவே நாட்டில் இருந்து அதிகமாக {வரிகளை} எடுத்தால், குடிமக்கள் எந்தப் பெரிய செயலையும் அடைவதில் தவறுவர்.(21) தன் நாட்டைத் தானே பாதுகாத்து, (வரிகள் மற்றும் தீர்வைகளின் காரியத்தில்) தன் குடிமக்களுக்கு ஆதரவைக் காட்டி, எளிதாக அடைந்தவற்றில் இருந்து தன்னைத் தாங்கிக் கொள்ளும் மன்னன் மகத்தான விளைவுகளை அடைவதில் வெல்கிறான்.(22) அப்போது அந்த மன்னன் தன் தேவைகளை நிறைவு செய்து கொள்ளப் போதுமான அளவுக்குச் செல்வத்தை அடைய மாட்டானா?[2] இவ்வழக்கில் மொத்த நாடும் அவனது கருவூலமாகிறது, அதே வேளையில் கருவூலமானது அவனது படுக்கையறையாகிறது.(23) நகரங்கள் மற்றும் மாகாணங்களில் வசிப்போர் மன்னனைச் சார்ந்திருக்கும் ஏழைகளாக இருந்தால், அவன் தனது சக்திக்குத் தகுந்தபடி அவர்களிடம் கருணை காட்ட வேண்டும்.(24) மன்னன், புறநகர்களில் நிறைந்திருக்கும் கள்வர்கள் அனைவரையும் தண்டித்து, தன் கிராமங்களில் இருக்கும் மக்களைப் பாதுகாத்து, அவர்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும். அவ்வழக்கில், குடிமக்கள் தங்கள் மன்னனின் இன்ப துன்பங்களில் பங்குதாரர்களாகி அவனிடம் மிகுந்த மனநிறைவடைவார்கள்.(25)செல்வம் சேகரிக்க நினைக்கையில், மன்னன் தன் நாட்டின் தலைமையான மையப் பகுதிகளுக்கு ஒன்றன்பின் ஒன்றாகச் சென்று தன் மக்கள் அஞ்சிடுமாறு முயற்சி செய்ய வேண்டும்.(26) அவன் அவர்களிடம், “இதோ பேரிடர் நம்மை அச்சுறுத்துகிறது. எதிரியின் செயல்பாடுகளின் விளைவாகப் பேரச்சம் உண்டாகிறது. எனினும், பூத்திருக்கும் மூங்கில்லைப் போல, எதிரி மிக விரைவில் அழிவை அடைப்போகிறான் என்பதால், இந்த ஆபத்து நம்மைக் கடந்து போவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன.(27) எழுச்சி அடைந்திருக்கும் என் எதிரிகள், பெரும் எண்ணிக்கையிலான கள்வர்களுடன் சேர்ந்து, தங்கள் அழிவுக்காகவே நம் நாட்டை இடரில் ஆழ்த்த விரும்புகிறார்கள்.(28) பயங்கர ஆபத்துகள் நிறைந்த இந்தப் பேரிடரைக் கருத்தில் கொண்டும், உங்கள் பாதுகாப்புக்காகவும் நான் உங்கள் செல்வத்தை வேண்டுகிறேன்.(29)
இந்த ஆபத்து கடந்து சென்றதும், நான் இப்போது உங்களிடம் எடுத்துக் கொள்வனவற்றைத் திரும்பக் கொடுத்து விடுவேன். எனினும், எதிரிகள் (எதிர்க்கப்படவில்லையென்றால்), அவர்கள் உங்களிடம் இருந்து பலவந்தமாகப் பிடுங்கும் எதையும் அவர்கள் திரும்பக் கொடுக்க மாட்டார்கள்.(30) மறுபுறம், அவர்கள் (எதிர்க்கப்படவில்லையென்றால்) உங்கள் மனைவியர் உட்பட உங்கள் உறவினர்கள் அனைவரையும் கொல்லக் கூடும். நீங்கள் உங்கள் பிள்ளைகள் மற்றும் மனைவியருக்காகவே செல்வத்தை விரும்புகிறீர்கள் என்பது நிச்சயம்.(31) நான் உங்கள் செழிப்பில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் நான் உங்களை என் சொந்தப் பிள்ளைகளைப் போலவே பார்க்கிறேன். உங்களால் எனக்கு எவ்வளவு கொடுக்க முடியுமோ, அதை நான் பெற்றுக் கொள்ளப் போகிறேன். நான் யாருக்கும் துன்பமளிக்க விரும்பவில்லை.(32) பேரிடர் காலங்களில் பலமிக்கக் காளைகளைப் போல நீங்கள் இத்தகு சுமைகளைச் சுமக்க வேண்டும். துயர்மிக்கக் காலங்களில் செல்வம் உங்களுக்கு விருப்பத்திற்குரியதாக இருக்கக்கூடாது” என்று சொல்ல வேண்டும்.(33)
காலம் தொடர்பான கருத்துகளை அறிந்த மன்னன், இத்தகு ஏற்கத்தக்க, இனிமையான, புகழ்ச்சியான வார்த்தைகளுடன் தன் முகவர்களை அனுப்பித் தன் மக்களிடம் இருந்து தீர்வைகளைத் திரட்ட வேண்டும்.(34) தன் கோட்டைகளைச் செப்பனிடும் தேவை குறித்து அவர்களுக்குச் சுட்டிக்காட்டி, தன் நிறுவனங்கள் மற்றும் பிற தலைமைகளின் செலவுகளைக் கொடுத்துத் தீர்த்து, அந்நிய படையெடுப்பைக் குறித்த அவர்களின் அச்சத்தைத் தூண்டி, அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையை வலியுறுத்தி, அவர்கள் அமைதியாக வாழ வேண்டிய வழிமுறைகளை உறுதி செய்ய வேண்டும் என்று சொல்லி மன்னன் தன் ஆட்சிப்பகுதியில் உள்ள வைசியர்களுக்குத் தீர்வைகளை விதிக்க வேண்டும்.(35)
மன்னன் வைசியர்களை அலட்சியம் செய்தால் அவர்கள் அவனது ஆட்சிப்பகுதிகளைக் கைவிட்டு அங்கிருந்து தொலைந்து காடுகளுக்குச் சென்று விடுவார்கள். எனவே, மன்னன் அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.(36) ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, மன்னன் எப்போதும் வைசியர்களை இணங்கச் செய்து, அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தூண்டி, அவர்களது உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்து, எப்போதும் அவர்களுக்கு ஏற்புடையதைச் செய்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.(37)
ஓ! பாரதா, மன்னன் எப்போதும் வைசியர்களின் உற்பத்தி சக்திகளைப் பெருக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் பலத்தை அதிகரிப்பதும், வேளாண்மையை முன்னேற்றுவதும், வணிகத்தை வளர்ச்சியடையச் செய்வதும் வைசியர்களே.(38) எனவே, ஞானமுள்ள மன்னன் எப்போதும் அவர்களை மனம் நிறையச் செய்ய வேண்டும். கவனத்துடனும், கனிவுடனும் செயல்படும் அவன், அவர்களுக்கு மென்மையான தீர்வைகளையே விதிக்க வேண்டும்.(39) வைசியர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்வது எளிதானதே. ஓ! யுதிஷ்டிரா, நாட்டில் உள்ள வைசியர்களிடம் இவ்வாறு நடந்து கொள்வது நாட்டுக்குப் பெரும் நன்மையை உண்டாக்குமேயன்றி வேற்றில்லை” என்றார் {பீஷ்மர்}.(40)
வரியும், பாதுகாப்பும்! – சாந்திபர்வம் பகுதி – 88-குடிமக்களிடம் வரிவாங்கும் முறை குறித்தும், நாட்டை வலுப்படுத்தும் வழிமுறை குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, மன்னன் தன்னிடம் பெருஞ்செல்வம் இருந்தபோதிலும், இன்னும் அதிகமாக விரும்பினால், அவன் எவ்வாறு நடந்து கொள்ள {வரி விதிக்க} வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறத்தகுதியை ஈட்ட விரும்பும் ஒரு மன்னன், தன் குடிமக்களின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தன் அறிவையும், சக்தியையும் சிறந்த வகையில் பயன்படுத்தி, இடத்தையும் காலத்தையும் கருத்தில் கொண்டு அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.(2) எந்த நடவடிக்கைகள் தனக்கு ஏற்பட்ட நன்மைகளைப் போன்று அவர்களுக்கும் {குடிமக்களுக்கும் நன்மையை} ஏற்படுத்துமோ, அவை அனைத்தையும் அவன் தன் ஆட்சிப்பகுதிகளில் பின்பற்ற வேண்டும்.(3) வண்டானது, செடிகளில் தேனைச் சேகரிப்பதைப் போல, ஒரு மன்னன் தன் நாட்டில் இருந்து {வரியைக்} கறக்க வேண்டும். பசுவின் மடிக்கும் காயமேற்படுத்தாமல், கன்றையும் பட்டினி போடாமல் பால் கறக்கும் ஓர் இடையனைப் போலவே அவன் செயல்பட வேண்டும்.(4) (வரி விதிக்கும் காரியங்களில்) மன்னன், கடுமையில்லாமல் குருதியை உறிஞ்சும் அட்டைப்பூச்சியைப் போலச் செயல்பட வேண்டும். பெண்புலியானது, தன் குட்டிகளைத் தூக்கிச் செல்லும்போது, தன் பற்களால் அவற்றைத் தீண்டினாலும், அவற்றைக் கொண்டு ஒருபோதும் துளைத்திடாததைப் போலவே, அவன் தன் குடிமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.(5) எலியானது கூரிய பற்களைக் கொண்டிருந்தாலும், உறங்கிக்கொண்டிருக்கும் விலங்குகள் அறியாத வண்ணம் அவற்றின் கால்களைக் கடிப்பதைப் போலவே அவன் நடந்து கொள்ள வேண்டும்.(6)
{செழிப்பில்} வளரும் குடிமகனிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகவே எடுக்கவேண்டும், இவ்வழிமுறைகளின் மூலம் அவன் {செல்வத்தை} வெட்டுப்படச் {பகிர்ந்து கொள்ளச்} செய்ய வேண்டும். ஒரு நல்ல விழுக்காட்டை எட்டும் அளவுக்குப் படிப்படியாகத் தேவை {வரி} அதிகரிக்கப்பட்டுப் பெறப்பட வேண்டும்.(7) ஓர் இளங்காளையின் மீது ஒரு மனிதன் படிப்படியாகச் சுமைகளை அதிகரிப்பதைப் போலவே, மன்னனும் தன் குடிமக்களின் மீது படிப்படியாகவே சுமைகளை அதிகரிக்க வேண்டும். அவன், கவனத்துடனும், கடுமையில்லாமலும் செயல்பட்டு, இறுதியாக அவர்களின் மீது கடிவாளங்களைப் பூட்ட வேண்டும்.(8) இவ்வாறு கடிவாளம் பூட்டப்பட்டால், அவர்கள் வசப்படுத்தப்பட முடியாதவர்களாக இருக்க மாட்டார்கள். உண்மையில், அவர்களைக் கீழ்ப்படியச் செய்யப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவர்களைக் கீழ்ப்படிய வைக்க வெறும் கெஞ்சல்கள் மட்டும் போதாது.(9) மனிதர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரியாக, சமமாக நடந்து கொள்வது சாத்தியமில்லாதது. முதன்மையானவர்களை இணங்கச் செய்தால் பொதுமக்களும் கீழ்ப்படிவார்கள்.(10)
மன்னன், சுமைகளைச் சுமக்கப் போகும் பொதுமக்களுக்கு மத்தியில் (அவர்களது தலைவர்களுடைய அமைப்புகளின் மூலம்) ஒற்றுமையின்மையை உண்டாக்கி, தானே முன்வந்து அவர்களோடு இணக்கம் செய்த பிறகு, அவர்களிடம் கிடைப்பவற்றைக் கொண்டு அவன் மகிழ்ச்சியடைய வேண்டும்.(11) மன்னன், உரியதல்லாத காலத்திலும், சுமக்க முடியாத மனிதர்களுக்கும் ஒருபோதும் வரிவிதிக்கக் கூடாது. அவன் படிப்படியாக இணங்கச் செய்வதன் மூலமும், உரிய காலத்திலும், முறையான வடிவங்களிலும் அவற்றை விதிக்க வேண்டும்.(12) நான் அறிவிக்கும் இந்தச் சூழ்ச்சிகள் {திட்டங்கள்} சட்டப்படியான ஆட்சித்திறன் வழிமுறைகளாகும். இவை வஞ்சகம் நிறைந்த வழிமுறைகளாக அறியப்படுவதில்லை. முறையற்ற வழிகளில் குதிரைகளை வசப்படுத்தும் வழிமுறைகள் அவற்றைச் சீற்றமடையவே செய்யும்.(13) மதுவிடுதிகளும், பொது மகளிர், காமத்தரகர்கள், நடிகர்கள், சூதாடிகள், சூதாட்ட விடுதி நடத்துவோர் மற்றும் இதே வகையைச் சேர்ந்த பிறர் அனைவரும் {மன்னனால்} தடுக்கப்பட {தடைசெய்யப்பட} வேண்டும். நாட்டுக்குள்ளேயே வசித்து, குடிமக்களில் சிறந்த வர்க்கத்தினரைப் பீடித்துத் துன்புறுத்துபவர்கள் இவர்களே.(15)
எந்தத் துயரமும் இல்லாதபோது, யாரும் எதையும் யாரிமும் கேட்கக் கூடாது. மனிதர்கள் யாவரையும் குறித்த இந்தத் தடையாணையைப் பழங்காலத்தில் மனுவே விதித்திருக்காறர்[1].(16) மனிதர்கள் யாவரும் பணிசெய்யாமல் யாசித்து, அல்லது பிச்சையெடுத்து வாழ நேர்ந்தால், உலகமே அழிவடையும் என்பதில் ஐயமில்லை.(17) மன்னன் மட்டுமே அடக்கவும், தடுக்கவும் தகுந்தவனாவான். தன் குடிமக்களை (பாவத்திலிருந்து) தடுக்காத மன்னன், (அரச பாதுகாப்பின்மையின் விளைவாக) தன் மக்களால் இழைக்கப்படும் பாவத்தின் நான்கில் ஒரு பகுதியை அடைகிறான். இதுவே சுருதிகளின் தீர்மானமாகும்.(18) குடிமக்களின் தகுதிகளை {புண்ணியங்களைப்} போலவே மன்னன் அவர்களது பாவங்களையும் பகிர்ந்து கொள்வதால், ஓ! ஏகாதிபதி, அவன் தன் குடிமக்களில் பாவிகளை அடக்க வேண்டும்.(19) அவர்களை அடுக்குவதைப் புறக்கணிக்கும் மன்னன் தானே பாவியாகிறான். (ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல) அவன் அவர்களது தகுதிகளில் நான்கில் ஒரு பாகத்தை ஏற்பதைப் போலவே, அவர்களது பாவங்களிலும் நான்கில் ஒரு பாகத்தை ஏற்கிறான்.(20)
நான் சொல்லும் பின்வரும் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். இவை அனைவரையும் வறுமையை அடையச் செய்யும். ஆசையின் {காமத்தின்} ஆளுகைக்குள் இருக்கும் ஒரு மனிதன் எந்தத் தீய செயலைத்தான் செய்ய மாட்டான்?(21) ஆசையால் {காமத்தால்} ஆளப்படும் மனிதன், வினையூக்கிகள் {போதை மருந்துகள்}, இறைச்சி ஆகியவற்றை உட்கொண்டு, பிறரின் மனைவியரையும், செல்வத்தையும் தனதுரிமையாக்கி, (பிறரும் அதுபோலச் செய்யும்படி) ஒரு தீய முன்மாதிரியை நிறுவுகிறான்.(22) பிச்சையெடுத்து வாழாதவர்களும் துயர்மிக்கக் காலங்களில் பிச்சையெடுக்கலாம். அறம் நோற்கும் மன்னன், அச்சத்தாலன்றிக் கருணையால் அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.(23) உன் நாட்டில் பிச்சைக்காரர்களோ, கள்வர்களோ இருக்க வேண்டாம். கள்வர்களே பிச்சைக்காரர்களுக்குக் கொடுக்கிறார்கள் (நல்லோர் அல்ல). அப்படிக் கொடுப்பவர்கள் உண்மையில் மனிதர்களுக்கு நன்மை செய்பவர்களல்ல.(24) உன் ஆட்சிப்பகுதிகளில் பிறர் விருப்பங்களில் முன்னேற்றமேற்படச் செயல்படுபவர்களும், பிறருக்கு நன்மை செய்பவர்களும் வசிக்கட்டும், பிறரை அழிப்பவர்கள் அல்ல.(25)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உரியதற்கு மேல் குடிமக்களிடம் இருந்து பெறும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவர்கள் உரியதை மட்டுமே எடுத்துக் கொள்ளும் வகையில் நீ பிறரை {அவர்களுக்கு மேல்} நியமிக்க வேண்டும்.(26) உழவு, ஆநிரைவளர்த்தல், வணிகம், அதே போன்ற இயல்புடைய பிற செயல்கள் ஆகியன உழைப்புப் பகுப்பு கொள்கையின்படி பலரால் செய்யப்பட வேண்டும்[2].(27) உழவு, கால்நடை வளர்த்தல், அல்லது வணிகத்தில் ஈடுபடும் மனிதன், (கள்வர்கள் மற்றும் கொடுங்கோல் அதிகாரிகளின் விளைவாக) பாதுகாப்பில்லாத உணர்வை அடைந்தால், அதன் விளைவாக மன்னன் புகழ்க்கேட்டையே ஈட்டுவான்.(28) மன்னன் தன் குடிமக்களில் செல்வந்தர்களை எப்போதும் கௌரவித்து, அவர்களிடம், “என்னோடு சேர்ந்து நீங்களும் மக்கள் விருப்பங்களில் முன்னேற்றமேற்படச் செயல்படுங்கள்” என்று சொல்ல வேண்டும்.(29) அனைத்து நாடுகளிலும் செல்வந்தர்களே அந்த நாட்டின் தோட்டமாக {அங்கமாக} இருக்கிறார்கள். ஒரு செல்வந்தனே மனிதர்களில் முதன்மையானவன் என்பதில் ஐயமில்லை[3].(30)ஞானியாகவோ, துணிவுமிக்கவனாகவோ, செல்வந்தனாகவோ, செல்வாக்குடையவனாகவோ, நீதிமானாகவோ, தவங்களில் ஈடுபடுபவனாகவோ, பேச்சில் உண்மையுள்ளவனாகவோ, நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவனாகவோ, இருக்கும் ஒருவனே (சக குடிமக்களைப்) பாதுகாப்பதில் துணைபுரிகிறான்.(31) ஓ! ஏகாதிபதி, இக்காரணங்களுக்காகவே நீ உயிரினங்கள் அனைத்தையும் விரும்புபவனாக, உண்மை, நேர்மை, கோபமின்மை, தீங்கிழையாமை ஆகிய பண்புகளை வெளிப்படுத்துபவனாக இருக்க வேண்டும்.(32) இவ்வாறே தண்டக்கோலை {செங்கோலைத்} தரித்து, உன் கருவூலத்தைப் பெருகச் செய்து, உன் நண்பர்களை ஆதரித்து, உன் நாட்டுக்கு வலுவூட்டும் நீ, உன் நண்பர்கள், கருவூலம் மற்றும் படைகளால் ஆதரிக்கப்பட்டு, உண்மை மற்றும் நேர்மையின் பண்புகளைப் பயில வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(33)
நாட்டின் இயல்பும், பாதுகாப்பு முறைகளும்! – சாந்திபர்வம் பகுதி – 89-நாட்டின் இயல்பையும், பாதுகாப்பு முறைகளையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனுக்கு}, “உன் ஆட்சிப்பகுதிகளில், உண்ணத்தக்க கனிகளைத் தரும் மரங்கள் வெட்டப்பட வேண்டாம். கனிகளும், கிழங்குகளும் பிராமணர்களின் உடைமைகளாகும். தவசிகள் இதை அறவிதியாகவே அறிவித்திருக்கிறார்கள்.(1) பிராமணர்களை ஆதரித்த பின்பு மிகையாக இருப்பவை பிற மக்களை ஆதரிக்கப பயன்பட வேண்டும். எவரும் பிராமணர்களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் எதையும் எடுத்துக் கொள்ளக்கூடாது[1].(2) ஒரு பிராமணன், பிழைத்திருக்க வேண்டிய தேவையால் பீடிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை அடைவதற்காக ஒரு நாட்டைக் கைவிட (கைவிட்டு வேறு நாடுகளுக்குச் செல்ல) விரும்பினால், மன்னன் அவனுக்கு வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்.(3) மேலும் அவன் அதிலிருந்து (நாட்டைவிட்டுச் செல்வதில் இருந்து) விலகவில்லையெனில், மன்னன் பிராமணர்களின் சபையைக் கூட்டி, “இப்படிப்பட்ட ஒரு பிராமணர் நாட்டை விட்டுச் செல்கிறார். என் மக்கள் தங்கள் வழிகாட்டியாக யாரைக் கண்டடைய வேண்டும்?” என்று கேட்க வேண்டும்[2].(4) இதன் பிறகும் அவன் அங்கிருந்து செல்லும் நோக்கத்தைக் கைவிடாமல் வேறேதும் பேசினால், மன்னன் அவனிடம், “கடந்த காலத்தை மறப்பீராக” என்று சொல்ல வேண்டும். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இதுவே அரசகடமையின் அழிவில்லா வழியாகும்[3].(5)
மன்னன் மேலும் அவனிடம், “ஓ! பிராமணரே, உண்மையில் ஒரு பிராமணன் தன்னைப் பராமரித்துக் கொள்வதற்குப் போதுமான அளவு மட்டுமே அவனுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று மக்கள் சொல்கின்றனர். எனினும், நான் அக்கருத்தை ஏற்கவில்லை. மறுபுறம், தன்னைத் தாங்கிக் கொள்ளும் வாழ்வு முறைகளை வழங்காதிருந்த மன்னனின் புறக்கணிப்பிற்காக ஒரு பிராமணன் ஒரு நாட்டை விட்டுச் செல்ல முனைந்தால், அத்தகு வழிமுறைகள் அவனுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அவன் ஆடம்பர வழிமுறைகளை அடையும் நோக்கோடு அதை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்றாலும், அவன் தங்குமாறு வேண்டப்பட்டு, அவ்வழிமுறைகள் அவனுக்கு வழங்கப்பட வேண்டும்[4].(6) உழவு, கால்நடை வளர்த்தல், வணிகம் ஆகியவையே மனிதர்கள் அனைவருக்கும் வாழும் வழிமுறைகளை வழங்குகின்றன. எனினும் வேத அறிவானது, சொர்க்கத்தை அடையும் வழிமுறைகளை அவர்களுக்கு வழங்குகிறது.(7) எனவே, வேத கல்வியைத் தடுப்பவர்களும், வேத நடைமுறைகளின் காரணத்துக்குத் தடை விதிப்பவர்களும் சமூகத்தின் எதிரிகளாகக் கருதப்பட வேண்டும்[5]. இவர்களை அழிக்கவே பிரம்மன் க்ஷத்திரியர்களை உண்டாக்கினான்.(8) உன் எதிரிகளை அடக்கி, உன் குடிகளைக் காத்து, வேள்வியில் தேவர்களை வழிபட்டு, ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, துணிவுடன் போர்க்களங்களில் போரிடுவாயாக.(9) ஒரு மன்னன் பாதுகாக்கத் தகுந்தவர்களைப் பாதுகாக்க வேண்டும். இதைச் செய்யும் மன்னனே ஆட்சியாளர்களில் சிறந்தவனாவான். பாதுகாக்கும் கடமையைப் பயிலாத மன்னர்கள் வீணே வாழ்கிறார்கள்.(10)
ஓ! யுதிஷ்டிரா, மன்னன் தன் குடிமக்கள் அனைவரின் நன்மைக்காக அனைவரின் செயல்பாடுகளையும், எண்ணங்களையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்; அக்காரணத்திற்காகவே அவன் {மன்னன்} ஒற்றர்களையும், இரகசிய முகவர்களையும் நியமிக்க வேண்டும்[6].(11) உன்னவர்களிடம் இருந்து பிறரையும், பிறரிடம் இருந்து உன்னவர்களையும், பிறரிடம் இருந்து பிறரையும், உன்னவரிடம் இருந்து உன்னவரையும் பாதுகாத்து, எப்போதும் உன் மக்களை நீ பேணி வளர்க்க வேண்டும்.(12) மன்னன், முதலில் தன்னை அனைவரிடம் இருந்தும் பாதுகாத்துக் கொண்ட பிறகு பூமியைப் பாதுகாக்க வேண்டும். அனைத்தும் தனக்குள்ளேயே வேரைக் கொண்டுள்ளன என்று ஞானிகள் சொல்கின்றனர்.(13) மன்னன், தன் தவறுகள் என்ன? தான் அடிமைப்பட்டிருக்கும் தீய பழக்கவழக்கங்கள் என்னென்ன? தன் பலவீனத்தின் ஆதாரங்கள் என்னென்ன? தன் தவறுகளின் ஆதாரங்கள் என்னென்ன என்பனவற்றைக் குறித்து எப்போதும் சிந்திக்க வேண்டும்.(14)மன்னன், தான் முந்தைய நாளில் வெளிப்படுத்திய நடத்தையை மக்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக நம்பிக்கைக்குரிய இரகசிய முகவர்களை நாடு முழுவதும் திரிய விட வேண்டும்.(15) உண்மையில் அவன் {மன்னன்}, தன் நடத்தை பொதுவாகப் புகழப்படுகிறதா, இல்லையா, அல்லது மாகாணத்து மக்கள் அதை ஏற்கிறார்களா, இல்லையா, அல்லது நாட்டில் நல்ல பெயரை ஈட்டுவதில் அவன் வென்றிருக்கிறானா, இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும்.(16) ஓ! யுதிஷ்டிரா, நல்லோர், விவேகிகள், போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதோர், உன் நாட்டில் வசிக்காதோர் உன்னைச் சார்ந்திருப்போர், உன் அமைச்சர்கள், எத்தரப்பையும் சாராதவர்கள் ஆகியோருக்கு மத்தியில் உன்னைப் புகழவோ, பழிக்கவோ செய்பவர்களை ஒருபோதும் நீ அவமதிக்கக்கூடாது.(17,18) ஓ! ஐயா, உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் நல்ல கருத்தையும் எவனாலும் ஒருபோதும் ஈட்ட முடியாது. ஓ! பாரதா, அனைத்து மனிதர்களும், நண்பர்கள், எதிரிகள் மற்றும் நடுநிலையாளர்களைக் கொண்டுள்ளனர்” என்றார் {பீஷ்மர்}.(19)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கரவலிமை, சாதனை ஆகியவற்றில் இணையாக இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் மத்தியில், ஒருவன் எவ்வாறு எஞ்சிய அனைவரைவிடவும் மேன்மையை அடைகிறான், அவர்களை ஆள்வதில் அவன் வெல்வது எவ்வாறு?” என்று கேட்டான்.(20)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அசையும் உயிரினங்கள், அசையாதனவற்றை விழுங்குகின்றன {உண்கின்றன}; பற்களையுடைய விலங்குகள், பற்களற்றவையை விழுங்குகின்றன; கடும்நஞ்சுமிக்கக் கோபக்கார பாம்புகள் தங்கள் வகையைச் சேர்ந்த சிறு பாம்புகளையே விழுங்குகின்றன. (இந்தக்கொள்கையின்படி மனிதர்களுக்கு மத்தியில் பலவானான மன்னன், பலமற்றவர்களை இரையாகக் கொள்கிறான்).(21) ஓ! யுதிஷ்டிரா, மன்னன், தன் குடிமக்களிடமும், தன் எதரிகளிடமும் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவன் கவனமற்றவனாக இருந்தால், அவர்கள் அவன் மீது (அழுகும் பிணங்களின் மீது பாயும்) கழுகுகளாகப் பாய்வார்கள்.(22) ஓ! மன்னா, (விற்பனைக்காக) உயர்வான மற்றும் மலிவான விலைகளில் பொருட்களைக் கொள்முதல் செய்வோரும், தங்கள் பயணங்களின்போது காடுகளிலும், அடைவதற்கரிதான இடங்களிலும் உறங்கவோ, ஓய்வெடுக்கவோ செய்யும் வணிகர்கள், கடும் வரிவிதிப்பால் பீடிக்கப்படாமல் இருக்க வேண்டும்[7].(23) மன்னனின் சுமைகளைச் சுமப்பவர்களும், நாட்டின் பிற குடிமக்களை ஆதரிப்பவர்களுமான உழவர்கள், ஒடுக்குமுறையின் மூலம் உன் நாட்டை விட்டுச் செல்லாமல் இருக்க வேண்டும்[8].(24) உன்னால் இவ்வுலகில் கொடுக்கப்படும் கொடைகள், தேவர்களையும், பித்ருக்கள், மனிதர்கள், நாகர்கள், ராட்சசர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளையும் ஆதரிக்கின்றன.(25) ஓ! பாரதா, இவையே ஒரு நாட்டை ஆள்தற்கும், அதன் ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதற்குமான வழிமுறைகளாகும். ஓ! பாண்டுவின் மகனே, நான் மேலும் இது குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்” என்றார் {பீஷ்மர்}.(26)
உதத்தியரும், மாந்தாதாவும்! – சாந்திபர்வம் பகுதி – 90-பிரம்ம முனிவரான உதத்யர், மன்னன் மாந்தாதாவுக்குப் போதித்த அரசநீதியை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “(முன்னொரு காலத்தில்) வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும் அங்கீரச குலத்தவருமான உதத்தியர் {உசத்தியர்}, யுவனாஸ்வனின் மகனான மாந்தாத்ரியிடம் {மன்னன் மாந்தாதாவிடம்} உற்சாகமாக உரையாடினார்.(1) ஓ! யுதிஷ்டிரா, வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரான உதத்தியர், அந்த மன்னனிடம் {மாந்தாதாவிடம்} சொன்ன யாவற்றையும் நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன்.(2)
உதத்தியர் {மன்னன் மந்தாதாவிடம்}, “நீதியின் படி செயல்படவே ஒருவன் மன்னனாகிறானேயன்றி கணிக்கமுடியாதபடி நடந்து கொள்வதற்காக அல்ல. ஓ! மாந்தாத்ரி, உண்மையில் மன்னனே இவ்வுலகின் பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்வாயாக.(3) மன்னன் நீதியுடன் செயல்பட்டால், அவன் தேவ நிலையை அடைகிறான். மறுபுறம், அவன் நீதியில்லாமல் செயல்பட்டாலோ அவன் நரகில் மூழ்குகிறான்.(4) அனைத்துயிர்களும் அறத்திலேயே ஓய்ந்திருக்கின்றன. அறமோ மன்னனில் ஓய்ந்திருக்கிறது. எனவே, அறத்தை உயர்த்திப் பிடிக்கும் மன்னனே, உண்மையில் மன்னனாவான்.(5) நீதிமிக்க ஆன்மாவையும், அருள்கள் அனைத்தையும் கொண்ட மன்னன் அறத்தின் வடிவம் என்றே சொல்லப்படுகிறான். மன்னன், அநீதியை தண்டிக்கத் தவறினால், தேவர்கள் அவனது மாளிகையைக் கைவிடுவார்கள், மேலும் அவன் மனிதர்களுக்கு மத்தியில் கடுங்கண்டனத்தையீட்டுவான்.(6) தங்கள் கடமைகளை நோற்கும் மனிதர்களின் முயற்சிகள் எப்போதும் வெற்றியால் மகுடம் சூட்டப்படும். இதன் காரணமாகவே மனிதர்கள் அனைவரும் செழிப்பை உண்டாக்கும் அறவிதிகளுக்குக் கீழ்ப்படிந்த நடக்க முனைகிறார்கள்.(7)
பாவத்தைக் கட்டுப்படுத்தாதபோது, நீதிமிக்க நடத்தை முடிவுக்கு வந்து, அநீதி பெருமளவில் அதிகரிக்கிறது.(8) பாவம் கட்டுப்படுத்தப்படாதபோது, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள உடைமை உரிமைகளின்படி, “இஃது எனது, இஃது எனதில்லை” என்று எவனாலும் சொல்லமுடியாது.(9) உலகில் பாவமே மேலோங்கியிருக்கும்போது மனிதர்களால் தங்கள் மனைவியர், விலங்குகள், நிலங்கள் மற்றும் வீடுகளை அனுபவிக்க முடியாது.(10) பாவத்தைக் கட்டுப்படுத்தாத போது, தேவர்கள் எந்த வழிபாட்டையும் பெற மாட்டார்கள், பித்ருக்கள் சிராத்தங்களில் எந்தக் காணிக்கைகளையும் பெற மாட்டார்கள், விருந்தினர்கள் விருந்தோம்பலைப் பெற மாட்டார்கள்.(11) பாவத்தைக் கட்டுப்படுத்தாத போது, மறுபிறப்பாள வர்க்கத்தினர் வேதங்களைக் கற்க மாட்டார்கள், அல்லது உயர்ந்த நோன்புகளை நோற்கமாட்டார்கள், அல்லது வேள்விகளைப் பரவ விடமாட்டார்கள்.(12) ஓ! மன்னா {மாந்தாதா}, பாவத்தைக் கட்டுப்படுத்தாத போது, மனிதர்களின் மனமானது, ஆயுதங்களால் காயமடைந்தோரைப் போன்ற, பலவீனத்தையும் குழப்பத்தையும் அடையும் .(13) இம்மையிலும், மறுமையிலும் தங்கள் கண்களைச் செலுத்தும் முனிவர்கள், பூமியில் நீதியின் வடிவமாக இருக்கும் வகையில் மன்னனை மேன்மையானவனாக அமைத்தார்கள்[1].(14) எவனிடம் நீதி ஒளிர்கிறதோ அவனே ராஜன் என்று அழைக்கப்படுகிறான். மேலும் எந்த மன்னனிடம் அறமில்லையோ அவன் விருஷலன் என்று அழைக்கப்படுகிறான்[2].(15)எவன் விருஷத்தை {அறத்தை} பலவீனமடையச் செய்கிறானோ அவன் விருஷலன் என்ற பெயரில் அறியப்படுகிறான். எனவே, ஒரு மன்னன் அறத்திற்கான காரணத்தை முன்னேற்ற வேண்டும்.(16) அனைத்துயிரினங்களும் அறத்தின் வளர்ச்சியில் வளர்கின்றன, அதன் சிதைவில் அழிகின்றன. எனவே, அறம் அழிய ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.(17) செல்வத்தை (தனத்தை) அடைந்து, பாதுகாக்கத் துணைபுரியும் காரணத்தால் நீதியே தர்மம் {அறம்} என்றழைக்கப்படுகிறது. ஓ! மன்னா, தவசிகள், தர்மமே மனிதர்களின் அனைத்துத் தீய செயல்களையும் கட்டுப்படுத்தி, எல்லைகளை நிர்ணயிக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள்.(18)தான்தோன்றி (பிரம்மன்), உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காகவே தர்மத்தை {அறத்தை} உண்டாக்கினான். இதன் காரணமாகவே, ஒரு மன்னன், தன் குடிமக்களின் நன்மைக்காக அறவிதிகளின்படி செயல்பட வேண்டும்.(19) மேலும், இதே காரணத்திற்காகவே, ஓ! மனிதர்களில் புலியே {மந்தாதா}, அனைத்திலும் முதன்மையானதாகத் தர்மம் {அறம்} சொல்லப்படுகிறது. மனிதர்களில் முதன்மையான எவன், தன் குடிமக்களை நீதியுடன் ஆள்கிறானோ, அவனே மன்னன் என்று அழைக்கப்படுகிறான்.(20)
காமத்தையும், கோபத்தையும் அலட்சியம் செய்து, அறவிதிகளை நீ நோற்பாயாக. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மன்னர்களின் செழிப்புக்கு உகந்ததாக இருக்கும் அறமே அனைத்திலும் முதன்மையானது.(21) மேலும், தர்மமானது பிராமணனிடம் இருந்து உண்டானது. இதன்காரணமாகவே, எப்போதும் பிராமணன் வழிபடப்பட வேண்டும். ஓ! மாந்தாத்ரி, நீ பிராமணர்களின் விருப்பங்களைப் பணிவுடன் நிறைவு செய்வாயாக.(22) பிராமணர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதைப் புறக்கணித்தால், மன்னன் தனக்கு ஆபத்தை வரவழைத்துக் கொள்கிறான். அத்தகு புறக்கணிப்பின் விளைவால் அவன், நண்பர்கள் எவரையும் அடைவதில் தவறி, தன் எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்கிறான்.(23)
விரோசனன் மகனான அசுரன் பலியின் {மகாபலியின்}மூடத்தனத்தால் எழுந்த பிராமணர்களுக்கு எதிரான வன்மத்தின் விளைவாக, முன்பு அவனிடமே {மகாபலியிடமே} வசித்திருந்த செழிப்பின் தேவி {திருமகள்} அவனைக் கைவிட்டாள்.(24) அவள் {திருமகள்}, அந்த அசுரனைக் கைவிட்டுத் தேவர்களின் தலைவனான இந்திரனிடம் சென்றாள். புரந்தரனுடன் {இந்திரனுடன்} வாழும் அந்தத் தேவியைக் கண்ட பலி, பலவாறாக வீண் வருத்தமடைந்தான்.(25)
ஓ! பலமிக்கவனே {மந்தாதா}, இதுவே வன்மம் மற்றும் செருக்கின் விளைவாகும். ஓ! மாந்தாத்ரி {மாந்தாதா}, செழிப்பின் தேவி {திருமகள்} கோபத்தில் உன்னைக் கைவிடாதவாறு நீ விழிப்புடன் இருப்பாயாக.(26) அநீதியானது {அதர்மமானது}, செழிப்பின் தேவியிடம் {திருமகளிடம்} செருக்கு {அகங்காரம்} என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றது என்று சுருதிகள் அறிவிக்கின்றன. ஓ! மன்னா {மந்தாதா}, இந்தச் செருக்கே தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு மத்தியில் பலரை அழிவடையச் செய்தது.(27) அவனால் {செருக்கால்} அரசமுனிகள் பலரும் அழிவை அடைந்திருக்கின்றனர். எனவே, ஓ! மன்னா, நீ விழிப்படைவாயாக. அவனை {செருக்கை} வெற்றிகொள்வதில் வெல்பவனே மன்னனாகிறான். மறுபுறம், அவனால் {செருக்கால்} வெற்றி கொள்ளப்படுபவன் எவனோ, அவன் ஓர் அடிமையே ஆகிறான்.(28) ஓ! மாந்தாத்ரி, நீ அழிவில்லா (புகழ்) வாழ்வை விரும்பினால், செருக்கு மற்றும் அநீதி {அதர்மம்} ஆகிய இரண்டிலும் ஈடுபடாத ஒரு மன்னனாக வாழ்வாயாக.(29) (செருக்கால்) போதையுண்டிருப்பவன், (நேர்மையின் விதிகளில்) அலட்சியமாக இருப்பவன், அறத்தை ஏளனம் செய்பவன், உணர்வற்றவன், ஒன்றுசேர்ந்திருக்கும் அவர்கள் அனைவருடனும் சேர்ந்து கொள்பவன் ஆகியோரின் தோழமையைத் தவிர்ப்பாயாக.(30)
முன்பு உன்னால் தண்டிக்கப்பட்டவன், அதிலும் குறிப்பாகப் பெண்களின் நிமித்தமாகத் தண்டிக்கப்பட்ட அமைச்சர்களின் தோழமை, மலைகள், சமமற்ற நிலங்கள், அடைவதற்கரிதான காடுகள், யானைகள், குதிரைகள் மற்றும் நச்சுப்பாம்புகள் ஆகிவற்றிடம் இருந்து விலகிச் செல்வாயாக. நீ இரவில் திரிவதைக் கைவிட வேண்டும். மேலும், கஞ்சத்தனம், பகட்டு, தற்புகழ்ச்சி, கோபம் ஆகிய பிழைகளையும் நீ தவிர்க்க வேண்டும்.(32) அறியாத பெண்களிடமோ, இருபாலினத்தோரிடமோ {பேடிகளிடமோ}, காமவெறிபிடித்தவர்களிடமோ, பிறரின் மனைவியரிடமோ, திருமணமாகாத கன்னியரிடமோ நீ ஒருபோதும் உடலுறவில் ஈடுபடக்கூடாது.(33) தீயொழுக்கத்தை மன்னன் கட்டுப்படுத்தாத போது, வர்ணக் குழப்பம் பின்தொடரும், மதிப்பிற்குரிய குடும்பங்களில் கூட, பாவம் நிறைந்த ராட்சசர்களும், அலிகளும், உறுப்பிழந்த பிள்ளைகளும், தடித்த நா படைத்தவர்களும், மூடர்களும் பிறப்பெடுக்கத் தொடங்குவார்கள்.(34) எனவே, மன்னன் தன் குடிமக்களுக்கு நன்மை செய்வதன் பொருட்டு, நீதியுடன் செயல்படக் குறிப்பான கவனத்தைக் கொள்ள வேண்டும்.(35)
ஒரு மன்னன் கவனமில்லாமல் செயல்பட்டால், அதன் விளைவாகப் பெருந்தீமையே விளையும். அநீதியானது {அதர்மமானது} அதிகரித்தால், அது வர்ணக்குழப்பத்தையே உண்டாக்கும்.(36) கோடைகால மாதங்களில் குளிர் ஏற்பட்டு, அதற்குரிய காலம் வரும்போது மறைந்துபோகும். வறட்சி, வெள்ளம், தொற்றுநோய்கள் ஆகியன மக்களைப் பீடிக்கும்.(37)
அத்தகு தருணங்களில், தீமை விளைவிக்கும் நட்சத்திரங்கள் எழுந்து, பயங்கரமான எரிநட்சத்திரங்கள் தோன்றும். நாட்டின் அழிவைக் குறிக்கும் பல்வேறு சகுனங்கள் பிறவும் தோன்றும்(38) மன்னன் தன் பாதுகாப்புக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல், தன் குடிமக்களையும் பாதுகாக்காமல் இருந்தால், முதலில் பின்னவர்களுக்கு {குடிமக்களுக்கு} அழிவு ஏற்பட்டு, பிறகு அந்த அழிவானது மன்னனையே பற்றும்.(39) இரு மனிதர்கள் ஒன்றுசேர்ந்து ஒருவனின் செல்வத்தைப் பறிப்பார்கள், குழுவாகச் செயல்படும் பலர் அந்த இருவரிடமும் கொள்ளையடிப்பார்கள். கன்னியரின் கற்பு அழிக்கப்படும். அத்தகு நிலைகள் மன்னனின் பிழைகளில் இருந்தே உண்டாகின்றன என்று சொல்லப்படுகிறது.(40) மன்னன் அறத்தைக் கைவிட்டு, கவனமில்லாமல் செயல்பட்டால், மனிதர்களுக்கு மத்தியில், உடைமைக்கான உரிமைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விடும்” என்றார் {உதத்தியர்}.(41)
உதத்தியர் சொன்ன அரசகடமைகள்! – சாந்திபர்வம் பகுதி – 91-மன்னன் நீதியுடன் செயல்படாவிட்டால் நடப்பதென்ன? பலவீனமே பெரியது என்பதேன்? துன்புறுபவனின் கண்ணீர் செய்வதென்ன? மன்னனின் கடமைகள் என்னென்ன? மன்னனின் நடத்தை இருக்க வேண்டியதெவ்வாறு என்பது குறித்து, உதத்ய முனிவர் மன்னன் மாந்தாதாவுக்குச் சொன்னதைப் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
உதத்தியர் {மன்னன் மந்தாதாவிடம்}, “மேகங்களின் தேவன் {இந்திரன்}, {உரிய} காலத்தில் மழையைப் பொழிந்து, அதே போல, மன்னனும் அறம்சார்ந்த செயல்பட்டால் விளையும் செழிப்பு, குடிமக்களைப் புகழில் நிலைக்கச் செய்யும்.(1) துணியின் சாயத்தை வெளுக்க விடாமல் அழுக்கை அகற்றத் தெரியாத வண்ணான், தன் தொழில் மிகவும் திறனற்றவன் ஆவான்.(2) பிராமணர்களிலோ, க்ஷத்திரியர்களிலோ, வைசியர்களிலோ எந்த மனிதனும், தன் வகைக்கு உரிய கடமைகளில் இருந்து வீழ்ந்து சூத்திரனானால் அவன், உண்மையில் அத்தகு வண்ணானுடன் ஒப்பிடத்தகுந்தவனே. உடல்சார்ந்த தொண்டு சூத்திரனையும்; உழவு வைசியனையும், தண்டனை அறிவியல் க்ஷத்திரியனையும், பிரம்மச்சரியம், தவங்கள், மந்திரங்கள், உண்மை ஆகிய பிராமணனையும் பிணைக்கின்றன.(4) பிறரின் நடத்தையில் உள்ள பிழைகளைத் திருத்தவும், வண்ணானைப்போல அவற்றைத் தூய்மையாக்கவும் அறிந்த க்ஷத்திரியனே உண்மையில் அவர்களின் தந்தையாகவும், அவர்களது மன்னனாகவும் இருக்கத் தகுந்தவனாவான்.(5)
ஓ! பாரதக் குலத்தின் காளையே {மாந்தாதா}, முறையே கிருதம், திரேதம், துவாபரம், கலி என்றழைக்கப்படும் காலங்கள் அனைத்தும் மன்னனின் நடத்தையைச் சார்ந்தே இருக்கின்றன. மன்னனே காலமாக இருக்கிறான்[1].(6) மன்னன் கவனமற்றவனாக {அலட்சியம் உள்ளவனாக} இருந்தால், நான்கு வகையினர், வேதங்கள், நான்கு வாழ்வு முறைகளின் கடமைகள் ஆகிய அனைத்தும் குழப்பத்திற்குள்ளாகி பலவீனமடையும்.(7) மன்னன் கவனமற்றவனாக இருந்தால், மூன்று வகை நெருப்புகள், மூன்று வேதங்கள், தக்ஷிணையுடன் கூடிய வேள்விகள் ஆகிய அனைத்தும் தொலைந்து போகும்.(8) மன்னனே அனைத்து உயிரினங்களை உண்டாக்குபவனும், அழிப்பவனும் ஆவான். நீதிமிக்க ஆன்மா கொண்ட மன்னன் படைப்பவனாகக் கருதப்படுகிறான், அதே வேளையில், பாவம் நிறைந்தவனோ அழிப்பவனாகக் கருதப்படுகிறான்.(9) மன்னன் கவனமற்றவனாக இருந்தால், மன்னனின் மனைவியர், மகன்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் அனைவரும் மகிழ்ச்சியற்றவர்களாகி துயரில் ஈடுபடுவார்கள்.(10)மன்னன் நீதியற்றவனாக மாறும்போது, யானைகள், குதிரைகள், பசுக்கள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், கழுதைகள் மற்றும் பிற விலங்குகள் அனைத்தும் தங்கள் உடலுறுதியை இழக்கும்.(11) ஓ! மாந்தாத்ரி, பலவீனரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே {பிரம்மன்} படைப்பாளன் (மன்னனின் வடிவில்) பலத்தை உண்டாக்கினான். பலவீனத்தைச் சார்ந்தே அனைத்தும் இருப்பதால், உண்மையில், அதுவே பெரியது[2].(12) அனைத்து உயிரினங்களும் மன்னனை வழிபடுகின்றன. அனைத்து உயிரினங்களும் மன்னனுக்குப் பிள்ளைகளைப் போன்றவர்களே. எனவே, ஓ! ஏகாதிபதி {மந்தாதா}, நீதியில்லாதவனானால், அனைத்து உயிரினங்களும் துயரடையும்.(13) பலவீனர், முனிவர் ஆகியோரின் கண்கள் மற்றும் கடும்நஞ்சுமிக்கப் பாம்பின் கண்கள் ஆகியவை பொறுத்துக்கொள்ள முடியாதவையாகக் கருதப்பட வேண்டும். எனவே, பலவீனரின் அருகே (பகையுடன்) செல்லாதே.(14) பலவீனர்கள் எப்போதும் அவமதிக்கப்படத் தகாதவர்களாக உன்னால் கருதப்பட வேண்டும். பலவீனரின் கண்கள் உன்னையும், உன் உறவினர்களையும் எரித்துவிடாமல் இருக்கக் கவனம் கொள்வாயாக.(15)பலவீனரின் கண்களால் எரிக்கப்பட்ட ஒரு குலத்தில் பிள்ளைகள் பிறப்பதில்லை. அத்தகு கண்கள் குலத்தின் வேரையே அழித்துவிடும். எனவே, பலவீனரின் அருகே (பகையுடன்) செல்லாதே.(16) பலவீனரால் எரிக்கப்படும் பலம் முற்றிலும் அழிவை அடைகிறது என்பதால் எந்தப் பெரும்பலத்தையும்விடப் பலவீனமே பலமிக்கது.(17) அவமதிக்கபடும், அல்லது தாக்கப்படும் மனிதன் ஒருவன், துணைக்காகக் கதறியும் பாதுகாவலனை அடையத் தவறினால், தெய்வீகத் தண்டனை மன்னனை அடையும், அஃதுவே அவனுக்கு அழிவையும் கொண்டுவரும்.(18) ஓ! ஐயா, அதிகாரத்தை அனுபவிக்கும்போது, பலவீனரின் செல்வத்தை ஒருபோதும் அபகரியாதே. சுடர்மிக்க நெருப்பைப் போன்ற பலவீனரின் கண்கள் உன்னை எரித்துவிடாதிருப்பதில் கவனம் கொள்வாயாக.(19) பொய்மையால் பீடிக்கப்பட்டு அழுது கொண்டிருக்கும் மனிதனின் கண்ணீரானது, அந்தப் பொய்களைச் சொன்னோரின் பிள்ளைகளையும், விலங்குகளையும் கொன்றுவிடும்.(20)
இழைக்கப்பட்ட பாவச்செயல் ஒரு பசுவைப் போல உடனடி பலன்களை உண்டாக்காது[3]. பாவமிழைத்தவனிடம் அப்பலன் தென்படவில்லையென்றால், அஃது அவனது மகன், அல்லது மகனின் மகன், அல்லது மகளின் மகனிடம் தென்படும்.(21) ஒரு பலவீனன் பாதுகாவலனை அடையத் தவறும்போது, தெய்வீகத் தண்டனை என்ற பெரும் தண்டம் (மன்னனின் மீது) {நாட்டின் மீது} பாயும்.(22) ஒரு மன்னனின் குடிமக்கள் அனைவரும் (துன்பத்திற்கு ஆட்பட்டு) பிராமணர்களைப் போலப் பிச்சையெடுக்க நேர்ந்தால், அந்தப் பிச்சையெடுக்கும் நிலையானது மன்னனுக்கு அழிவைக் கொண்டுவரும்.(23) மாகாணங்களில் உள்ள மன்னனின் அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நீதியில்லாமல் செயல்பட்டால், அம்மன்னன் தன் நாட்டில் கலப்படமில்லாத தீமையைக் கொண்டு வருகிறான் என்று சொல்லப்படுகிறது.(24) மன்னனின் அதிகாரிகள், நியாயமில்லாத வழிமுறைகளின் மூலமோ, காமம் மற்றுப் பேராசையால் செயல்பட்டோ, கருணையை வேண்டும் பரிதாபகரமான மனிதர்களிடம் இருந்து செல்வத்தைப் பறிக்கும்போது, அந்த மன்னனுக்கும் நிச்சயம் பேரழிவு ஏற்படும்.(25)ஒரு பெரிய மரம், முதலில் தன் வாழ்வைத் தொடங்கிப் பெரும் அளவுகளில் வளர்கிறது. அதன்பின், எண்ணற்ற உயிரினங்கள் வந்து அதனிடம் உறைவிடத்தை நாடுகிறார்கள். எனினும், அது வெட்டப்படும்போதோ, காட்டுத்தீயால் எரிக்கப்படும்போதோ, அதனிடம் உறைவிடம் கொண்டவை அனைத்தும் வீடுகளற்றதாகின்றன[4].(26) நாட்டில் வசிப்போர், அறச்செயல்களையும், அறச்சடங்குகள் அனைத்தையும் செய்து, மன்னனின் நற்குணங்களை மெச்சும்போது, அவன் செல்வாக்கை அறுவடைசெய்கிறான். மறுபுறம், குடிமக்கள் அறியாமை கொண்டோராக அறத்தைக் கைவிட்டு, நீதியில்லாமல் நடந்து கொண்டால், அம்மன்னன் துன்பத்துக்கு ஆளாவான்.(27) என்ன செயல் செய்வார்கள் என்று அறியப்பட்ட பாவிகள், (அவர்களது குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படாமல்) நல்லோர் மத்தியில் உலவ அனுமதிக்கப்பட்டால், அந்த நாடுகளின் ஆட்சியாளர்களைக் கலி அடையும். தீயவர்கள் அனைவரையும் மன்னன் தண்டிக்கும்போது, அவனது நாட்டில் செழிப்பு தழைத்தோங்கும்.(28) எந்த மன்னன், தன் அமைச்சர்களுக்கு உரிய கௌரவங்களை அளித்து, கொள்கை நடைமுறைகளிலும், போர்களிலும் அவர்களை நியமிக்கிறானோ, அவனது நாடு நிச்சயம் தழைத்தோங்கும்.(29) எந்த மன்னன், நற்செயல்கள் மற்றும் நற்சொற்கள் அனைத்தையும் முறையாகக் கௌரவிக்கிறானோ, அவன் பெருந்தகுதியை {பெரும்புண்ணியத்தை} ஈட்டுவதில் வெல்கிறான்.(30)பிறருடன் பகிர்ந்து கொண்ட பிறகு நல்ல பொருட்களை அனுபவிப்பது, அமைச்சர்களுக்கு உரிய கௌரவங்களை அளிப்பது, பலம் எனும் போதையில் இருப்போரைஅடக்கி வைத்தல் ஆகியவையே மன்னனின் பெருங்கடமை என்று சொல்லப்படுகிறது.(31) சொற்கள், உடல், செயல்களால் மனிதர்கள் அனைவரையும் பாதுகாத்து, (குற்றமிழைத்தால்) தன் மகனேயானாலும் ஒருபோதும் மன்னிக்காமல் இருப்பதும் மன்னனின் பெரும் கடமையாகும்.(32) பொருட்களைப் பலவீனருடன் பகிர்ந்து கொண்டு பராமரித்து, அதன்மூலம் அவர்களது பலத்தை அதிகரிப்பதும் மன்னனின் கடமையாகும்.(33) நாட்டைப் பாதுகாப்பது, கள்வர்களை அழிப்பது, போரில் வெல்வது ஆகியன மன்னனின் கடமையாகும்.(34) செயலாலோ, சொல்லாலோ அன்புக்குரியவனே கூடக் குற்றமிழைத்தாலும், அவனை ஒரு போதும் மன்னிக்காததும் மன்னனின் கடமையாகும்.(35)
உறைவிடம் வேண்டுவோருக்குப் பாதுகாப்பளித்துத் தன் சொந்த பிள்ளைகளைப் போலவே தன் மக்களைப் பாதுகாக்கும் அவன், ஒருவனுக்கு உரிய கௌரவங்களை ஒருபோதும் பறிக்காமல் இருப்பதும் மன்னனின் கடமையாகும்[5].(36) கொடைகளால் நிறைவுபெறும் வேள்விகளில், காமத்தையும், பொறாமையையும் அடக்கி, அர்ப்பணிப்புமிக்க இதயத்துடன் தேவர்களைத் துதிப்பதும் மன்னனின் கடமையாகும்.(37) துன்புறுவோர், ஆதரவற்றோர், முதியோர் ஆகியோரின் கண்ணீரைத் துடைத்து, அவர்களை மகிழ்ச்சியடையச் செய்வதும் மன்னனின் கடமையாகும்.(38) நண்பர்களை வளர்ப்பதும், எதிரிகளைப் பலவீனப்படுத்தவதும், நல்லோரைக் கௌரவிப்பதும் மன்னனின் கடமையாகும்.(39) உண்மையின் கடப்பாடுகளை உற்சாகமாக நோற்பதும், எப்போதும் நிலக்கொடைகள் அளிப்பதும், விருந்தினர்களை உபசரிப்பதும், சார்ந்தோரை ஆதரிப்பதும் மன்னனின் கடமையாகும்.(40)உதவிகளுக்குத் தகுந்தோருக்கு உதவுபவனும், தண்டைக்குத் தகுந்தோரைத் தண்டிப்பவனுமான மன்னன், இம்மையிலும், மறுமையிலும் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுகிறான்.(41) மன்னனே யமனாவான். ஓ! மாந்தாத்ரி {மாந்தாதா}, நீதிமிக்கவர் அனைவருக்கும் அவனே (அவதாரம் செய்திருக்கும்) தேவனாவான். அவன், தனது புலன்களைக் கட்டுப்படுத்துவதால் பெரும் செல்வாக்கை அடைவதில் வெல்கிறான். அவற்றைக் கட்டுப்படுத்தாததால் பாவத்தையே ஈட்டுகிறான்[6].(42) ரித்விக்குகள், புரோகிதர்கள், ஆசான்கள் மற்றும் அவர்களுக்கு நல்ல அலுவல்களைச் செய்து கொடுப்போர் ஆகியோருக்கு உரிய கௌரவங்களை அளிப்பதும் மன்னனின் கடமையாகும்.(43) யமன் உயிரினங்கள் அனைத்திடமும் எந்தப் பாகுபாடும் பார்ப்பதில்லை. மன்னன் தன் குடிமக்கள் அனைவரையும் முறையாகக் கட்டுப்படுத்தும் நடத்தையில் அவனையே {யமனையே} பின்பற்ற வேண்டும்.(44) மன்னனானவன், அனைத்து வகையிலும் ஆயிரங்கண்ணோனுக்கு (இந்திரனுக்கு) ஒப்பானவனாகச் சொல்லப்படுகிறான். நீதியும் அவனால் அதே போலவே கருதப்படுகிறது.(45)நீ கவனமில்லாதவனாக இருக்காமல், மன்னிக்கும் குணம், நுண்ணறிவு, பொறுமை, அனைத்து உயிரினங்களிடமும் அன்பு ஆகியவற்றை வளர்க்க வேண்டும். மேலும் நீ மனிதர்கள் அனைவரின் பலம் மற்றும் பலவீனங்களையும் உறுதி செய்து கொண்டு, நல்லோர் மற்றும் தீயோரை வேறுபடுத்திப் பார்க்க கற்க வேண்டும்.(46) நீ அனைத்து உயிரினங்களிடமும் நியாயமாக நடந்து கொண்டு, கொடைகள் அளித்து, ஏற்புடைய இனிய சொற்களையே பேச வேண்டும். நீ உன் நகரம் மற்றும் மாகாணங்களில் உள்ள குடிமக்களை மகிழ்ச்சியுடன் பராமரிக்க வேண்டும்.(47) புத்திக்கூர்மை இல்லாத மன்னன் தன் குடிமக்களைக் காப்பதில் ஒருபோதும் வெல்ல மாட்டான். ஓ! ஐயா, அரசுரிமை என்பது தாங்கிக் கொள்ளப் மிகக்கனமானதாகும்.(48) ஞானமும், துணிவும் கொண்டவனும், தண்டனை அறிவியலை அறிந்தவனுமான மன்னனால் மட்டும் ஒரு நாட்டைக் காக்க முடியும். மறுபுறம், சக்தியும், நுண்ணறிவு இல்லாதவனும், பெரும் அறிவியலை அறியாதவனுமாக இருந்தால், அவன் அரசுரிமையின் கனத்தைச் சுமக்க இயன்றவனல்ல.(49) நற்பண்புகள் மற்றும் நற்குடி பிறப்பு, தொழில் புத்திக்கூர்மை, தலைவனிடம் அர்ப்பணிப்பு, பெரும் கல்வியுடைமை ஆகியவற்றுடன் கூடிய அமைச்சர்களின் துணை கொண்டு நீ, காடுகளில் உள்ள தவசிகளையும் சேர்த்து மனிதர்கள் அனைவரின் இதயங்களையும், செயல்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.(50)
இவ்வாறு உன்னை நடத்திக் கொண்டால் உன்னால் அனைத்து வகை மனிதர்களின் கடமைகளையும் கற்க முடியும். நீ உன் நாட்டில் இருக்கும் போதோ, அல்லது பிற நாடுகளுக்குச் செல்லும்போதோ உன் கடமைகளை நோற்பதற்கு அஃது {அந்நடத்தை} உதவி செய்யும். (51) அறம், பொருள், இன்பம் ஆகிய இம்மூன்றில் அறமே முதன்மையானதாகும். அற ஆன்மா கொண்ட ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் பெருமகிழ்ச்சியை அடைகிறான்.(52) மனிதர்கள் கௌரவத்துடன் நடத்தப்பட்டால், (நீ அவர்களுக்கு அளிக்கும் கௌரவத்தின் நிமித்தமாக அவர்கள்) தங்கள் மனைவியரையும், மகன்களையும் கூடக் கைவிடுவார்கள். கொடைகள், இனிய சொற்கள், அக்கறை, தூய நடத்தை ஆகியவற்றின் மூலம், (அவர்களுக்கு நல்ல அலுவல்களைச் செய்து கொடுப்பதன் மூலமும்) நல்ல மனிதர்களைத் தன்னோடு இணைத்துக் கொள்ளும் மன்னன் பெருஞ்செழிப்பை வெல்கிறான். எனவே, ஓ! மாந்தாத்ரி {மாந்தாதா}, இந்தப் பண்புகளிலும், செயல்களிலும் அக்கறையில்லாமல் இருக்காதே.(53,54) மன்னன், தன் குறைகளைக் கட்டுப்படுத்துவதிலும், தன் எதிரிகளின் குறைகளைக் கண்காணிப்பதிலும் ஒருபோதும் அக்கறையில்லாம்ல இருக்கக்கூடாது. அவன் தன் எதிரிகள் தன் குறைகளைக் காண முடியாதவாறு செயல்பட்டு, அவர்களுடைய குறைகள் தென்படும்போதெல்லாம் தாக்கவும் வேண்டும்.(55)
வாசவன் {இந்திரன்}, யமன், வருணன் மற்றும் பெரும் அரசமுனிகள் அனைவரும் இவ்வழியிலேயே செயல்பட்டிருக்கின்றனர். நீயும் அதே நடத்தையை நோற்பாயாக.(56) ஓ! பெரும் மன்னா (மாந்தாதா), அந்த அரசமுனிகள் பின்பற்றிய நடத்தையையே நீயும் பின்பற்றுவாயாக. ஓ! பாரதக் குலத்தின் காளையே {மந்தாதா}, நீ விரைவில் இந்தத் தெய்வீகப் பாதையைப் பின்பற்றுவாயாக.(57) பெருஞ்சக்தி கொண்ட தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள் ஆகியோர் நீதிமிக்க நடத்தை கொண்ட மன்னின் புகழை இம்மையிலும், மறுமையிலும் பாடுவார்கள்” என்றார் {உதத்தியர்}”.(58)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உதத்யரால் இவ்வாறு சொல்லப்பட்ட மாந்தாத்ரி {மாந்தாதா}, தயங்காமல் அவர் சொன்னது போலச் செய்து, இந்தப் பரந்த பூமியின் ஒரே தலைவனானான்.(59) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீயும் மாந்தாத்ரியை {மாந்தாதாவைப்} போல நீதியுடன் நடந்து கொள்வாயாக. அப்போதுதான், நீ பூமியை ஆண்ட பிறகு, சொர்க்கத்தில் ஒரு வசிப்பிடத்தை அடைவாய்” {என்றார் பீஷ்மர்}.(60)
வாமதேவரும், வசுமனஸும்! – சாந்திபர்வம் பகுதி – 92-செங்கோலின் சிறப்பு மற்றும் கொடுங்கோலின் இழிவு ஆகியவை குறித்து வாமதேவர் வசுமனசுக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அறத்தின் பாதையைப் பின்பற்ற விரும்பும் ஒரு நீதிமிக்க மன்னன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, ஓ! பாட்டா {பீஷ்மரே}, கேட்கும் எனக்குப் பதில் அளிப்பீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவரும், பழங்காலத்தில் பாடப்பட்ட அனைத்தின் உண்மையை அறிந்தவருமான வாமதேவர் என்ன சொன்னார் என்பது பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2) ஒரு காலத்தில், அறிவு, மனோவுறுதி, தூய நடத்தை ஆகியவற்றைக் கொண்ட {கோசல நாட்டு} மன்னன் வாசுமனஸ், உயர்ந்த தவத்தகுதியை உடைய பெரும் முனிவர் வாமதேவரிடம்,(3) “ஓ! புனிதமானவரே, எந்த நடத்தையைப் பின்பற்றுவதால் நான் எனக்கு அளிக்கப்பட்ட கடமைகளில் இருந்து வீழாமல் இருப்பேன் என்பதை, முக்கியத்துவமும் அறமும் நிறைந்த வார்த்தைகளில் எனக்குக் கற்பிப்பீராக” என்று கேட்டான்.(4) தவசிகளில் முதன்மையானவரும், பெரும் சக்தி கொண்டவருமான வாமதேவர், நகுஷனின் மைந்தனான யயாதியைப் போலச் சுகமாக வீற்றிருந்த அந்தத் தங்க நிறத்தோனிடம் {வசுமனஸிடம்} பின்வருமாறு சொன்னார்.(5)
வாமதேவர் {வாசுமனஸ்}, “நீ நீதியுடன் நடந்து கொள்வாயாக. நீதிக்கும் {அறத்துக்கும்} மேன்மையானது ஏதும் இல்லை. அறம் நோற்கும் மன்னர்கள் மொத்த உலகையும் வெற்றி கொள்வதில் வெல்கிறார்கள்.(6) தன் நோக்கங்களைச் சாதிப்பதில் எதிர்பார்க்கும் விளைவைத் தரவல்ல வழிமுறைகளையே நீதியாகக் கருதி, நல்லோரின் ஆலோசனைகளின்படி செயல்படும் மன்னன், நீதியுடன் சுடர்விடுகிறான்.(7) அறத்தை அலட்சியம் செய்து, முரட்டு பலத்துடன் செயல்பட விரும்பும் மன்னன் விரைவில் அறத்திலிருந்து விழுந்து, அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டையும் இழக்கிறான்.(8) குற்றமுள்ளவனும், பாவியுமான ஓர் அமைச்சனின் ஆலோசனைகளின்படி செயல்படும் மன்னன், அறத்தை அழிப்பவனாகி, தன் குடும்பம் அனைத்துடன் சேர்த்து, தன் குடிமக்களால் கொல்லப்படத் தகுந்தவனாகிறான். உண்மையில், அவன் மிக விரைவில் அழிவை அடைவான்.(9) அரசகலையின் கடமைகளை வெளிப்படுத்த இயலாதவனும், தன் செயல்பாடுகள் அனைத்திலும் உறுதியின்மையால் {சபலத்தால்} ஆளப்படுபவனும், தற்புகழ்ச்சியில் ஈடுபடுபவனுமான மன்னன் மொத்த பூமியின் ஆட்சியாளனாகவே இருந்தாலும், விரைவில் அழிவை அடைவான்.(10)
மறுபுறம், செழிப்பை விரும்புபவனும், வன்மமற்றவனும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவனுமான மன்னன், நூற்றுக்கணக்கான ஆறுகளால் நிரப்பப்பட்டுப் பெருகும் பெருங்கடலைப் போல வளமையில் தழைத்தோங்குவான்.(11) அவன் அறம், இன்பம், செல்வம், நுண்ணறிவு மற்றும் நண்பர்கள் ஆகியவற்றில் நிறைவு {போதுமான அளவுக்குக்} கொண்டவனாகத் தன்னை ஒருபோதும் கருதக்கூடாது[1].(12) உலகின் ஒழுக்கம் இவற்றைச் சார்ந்தே இருக்கிறது. இந்த ஆலோசனைகளைக் கேட்பதால் ஒரு மன்னன், புகழ், சாதனைகள், செழிப்பு மற்றும் குடிமக்களை அடைகிறான்.(13) அறத்திற்குத் தன்னை அற்பணித்துக் கொண்டு, இத்தகு வழிமுறைகளின் மூலம் அறம் மற்றும் செல்வத்தை அடைய முனைபவனும், தன் திட்டங்கள் அனைத்திலும் அவற்றின் நோக்கங்கள் குறித்துச் சிந்தித்தபிறகு தொடங்குபவனுமான மன்னன், பெருஞ்செழிப்பை அடைவதில் வெல்கிறான்.(14)கஞ்சனும், பற்றில்லாதவனும், முறையற்ற தண்டனைகளால் தன் குடிமக்களைப் பீடிப்பவனும், தன் செயல்பாடுகளில் முரடனுமாம மன்னன் விரைவில் அழிவை அடைகிறான்.(15) நுண்ணறிவைக் கொடையாகக் கொள்ளாத மன்னன், தன் குற்றங்களைக் காணத் தவறுகிறான். அவன் இம்மையில் புகழ்க்கேட்டிலும், மறுமையில் நரகிலும் மூழ்குகிறான்.(16) மன்னன், கௌரவிக்கத் தகுந்தவர்களுக்கு அஃதை அளித்து, இனிமையான பேச்சின் மதிப்பை உணர்ந்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் அப்படியே பேசினால், அவனுக்கு ஏற்படும் பேரிடரைத் குடிமக்கள் தங்களுக்கே ஏற்பட்டதாகக் கருதி, அதிலிருந்து அவனை விடுவிப்பார்கள்.(17) அறவழிகள் போதிப்பவர் எவரும் இல்லாதவனும், பிறரின் ஆலோசனைகளை ஒருபோதும் கேளாதவனும், உறுதியற்ற வழிமுறைகளின் மூலம் செல்வத்தை அடைய முனைபவனுமான மன்னன், நீடித்த மகிழ்ச்சியை அனுபவிப்பதில் ஒருபோதும் வெல்வதில்லை.(18) மறுபுறம், அறம் தொடர்புடைய காரியங்களில் தன் ஆசானின் அறிவுரைகளைக் கேட்பவனும், தன் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைத் தானே கண்காணிப்பவனும், அனைத்தையும் அடைவதில் அறக்கருத்துகளால் வழிநடத்தப்படுபவனுமான மன்னன், நீண்டகால மகிழ்ச்சியை அனுபவிப்பதில் வெல்கிறான்” என்றார் {வாமதேவர்}.
அரசதர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 93-மன்னனின் நடத்தை இருக்க வேண்டியதெவ்வாறு? மன்னன் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்வதெப்போது? மன்னனின் கண்காணிப்பு இருக்க வேண்டியதெப்படு என்பதை வசுமனஸுக்குச் சொன்ன வாமதேவர்…
வாமதேவர் {கோசல நாட்டு மன்னன் வசுமனஸிடம்} தொடர்ந்தார், “பலமிக்கவனான மன்னன், பலவீனரிடம் நீதியில்லாமல் நடந்து கொள்ளும்போது, அவனது குலத்தில் பிறந்தோரும் அதே நடத்தையே பின்பற்றுவார்கள்.(1) மேலும், பாவம் செய்யும் அந்த இழிந்தவனைப் பிறரும் பின்பற்றுவார்கள். அவ்வாறு பின்பற்றும் மனிதன் {மன்னன்}, கட்டுப்பாடுகளால் அடக்கப்படவில்லையென்றால், அவனது அத்தகு செயலே விரைவில் நாட்டுக்கு அழிவைக் கொண்டுவரும்.(2) தனக்குரிய கடமைகளை நோக்கும் மன்னனின் நடத்தையானது, பின்பற்றத்தக்க எடுத்துக்காட்டாக மனிதர்களால் பொதுவாக ஏற்கப்படுகிறது. எனினும், தன் கடமைகளில் இருந்து வீழும் ஒரு மன்னன், தன் உறவினர்களால் கூடப் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டான்[1].(3) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள ஆணைகளை அலட்சியம் செய்யும் முரட்டு மன்னன், தன் நாட்டில் வரம்பைமீறிச் செயல்பட்டு, மிகவிரைவில் அழிவை அடைகிறான்.(4)
பழங்காலத்தில் இருந்து வெற்றிகொள்ளப்பட்ட அல்லது வெல்லப்படாத வேறு க்ஷத்திரியர்களின் நடத்தையை எந்த க்ஷத்திரியன் பின்பற்றவில்லையோ, அவன் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்தவனாகச் சொல்லப்படுகிறான்[2].(5) ஒரு போரில் வெற்றிக் கொண்ட எந்த மன்னன், முன்னொரு சமயம் தனக்கு ஏதோ நன்மையைச் செய்த அரச எதிரியைக் கைப்பற்றி, வன்மத்துடன் செயல்பட்டு, அவனுக்கு உரிய கௌரவத்தை அளிக்கவில்லையோ, அவன் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(6) மன்னன், தன் பலத்தை வெளிக்காட்டி, உற்சாகமாக வாழ வேண்டும், ஆபத்துக் காலங்களில் என்ன தேவையோ, அதையும் செய்ய வேண்டும். அத்தகு ஆட்சியாளன் அனைத்து உயிரினங்களாலும் விரும்பப்பட்டு, செழிப்பில் இருந்து ஒரு போதும் வீழாதிருப்பான்.(7) நீ எவனோ ஒருவனுக்குப் பொல்லாங்கு செய்தால், காலம் வரும்போதும் நீ அவனுக்குத் தொண்டு {நல்லது} செய்ய வேண்டும். விரும்பப்படாத ஒருவனும், ஏற்புடையதைச் செய்யும்போது அன்புக்குரியவனாகிறான்[3].(8)பொய்மை தவிர்க்கப்பட வேண்டும். வேண்டப்படாமலேயே {கேட்காமலேயே} நீ பிறருக்கு நன்மை செய்ய வேண்டும். காமத்தாலோ {ஆசையாலோ}, கோபத்தாலோ, வன்மத்தாலோ நீ ஒருபோதும் நீதியைக் கைவிடக்கூடாது.(9) எவராலும் கேள்வி கேட்கப்படும்போது, கடுமையான பதில்களைக் கொடுக்காதே. கண்ணியமற்ற சொற்களைப் பேசாதே. எதையும் செய்ய ஒருபோதும் அவசரப்படாதே. வன்மத்தில் ஒருபோதும் ஈடுபடாதே. இத்தகு வழிமுறைகளால் ஓர் எதிரியும் வெல்லப்படுவான்.(10) ஏற்புடைய ஏதும் நடந்தால் மிகைப்பட்ட வகையில் மகிழ்ச்சியடையாதே, அல்லது ஏற்பில்லாத ஏதும் நடந்தால் துயரில் மூழ்கிவிடாதே. செல்வம்சார்ந்த வளங்கள் தீர்ந்துபோகும்போது ஒருபோதும் துயரில் ஈடுபடாதே. உன் குடிமக்களுக்கு நன்மை செய்யும் கடமையை எப்போதும் நினைவில் கொள்வாயாக.(11) தன் மனோ நிலையின்படி அறத்திற்கேற்புடையதையே எப்போதும் செய்யும் மன்னன், தன் திட்டங்கள் அனைத்திலும் வெற்றியை அடைந்து, ஒரு போதும் செழிப்பை இழப்பதில்லை.(12)
தன் தலைவனுக்குத் தீமை தருபவற்றைத் தவிர்ப்பவனும், அவனது நன்மைக்காகவே எப்போதும் செயல்படுபவனும், அர்ப்பணிப்புள்ளவனுமான பணியாளனை மன்னன் கவனத்துடன் எப்போதும் பேணி வளர்க்க வேண்டும்.(13) தங்கள் புலன்கள அடக்கியவர்களும், அர்ப்பணிப்பும், பற்றுறுதியும் கொண்டவர்களும், தூய நடத்தைக் கொண்டவர்களும், திறன்மிக்கவர்களுமான மனிதர்களையே அவன் அனைத்துக் காரியங்களிலும் நியமிக்க வேண்டும்.(14) இத்தகு தகுதிகளைக் கொண்டு மன்னனை நிறைவு செய்பவனும், தன் தலைவனின் நன்மைகளில் கவனத்துடன் எப்போதும் அக்கறைகொள்பவனுமான மனிதன் எவனோ, அவனை மன்னன் தன் நாட்டின் காரியங்களில் நியமிக்க வேண்டும்.(15) மறுபுறம், மூடர்கள், புலனடிமைகள், பேராசைக்காரர்கள், மதிப்பில்லா நடத்தை கொண்டோர், வஞ்சகர்கள், போலி நடத்தையுள்ள பொய்யர்கள், தீய நோக்குடையோர், தீய ஆன்மா கொண்டோர், அறியாமையில் இருப்போர், இழிந்த மனம் கொண்டோர், மது, சூது, பெண்கள், வேட்டை ஆகியவற்றுக்கு அடிமையாக இருப்போர் ஆகியோரை முக்கிய அலுவல்களில் நியமித்தால் அந்த மன்னன் தன் செழிப்பை இழப்பான்.(16,17)
முதலில் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு, பாதுகாக்கத் தகுந்த பிறரையும் பாதுகாக்கும் மன்னன், தன் குடிமக்கள் செழிப்பில் வளர்வதைக் காணும் நிறைவை உணர்வான். அத்தகு மன்னன் மகத்துவத்தை அடைவதிலும் வெல்கிறான்.(18) ஒரு மன்னன், தன்னிடம் அர்ப்பணிப்புள்ள இரகசிய முகவர்கள் {ஒற்றர்கள்} மூலம் பிற மன்னர்களின் நடத்தைகளையும், செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும். அத்தகு வழிமுறைகளின் மூலம் அவன் மேன்மையை அடையலாம்.(19) பலமிக்க ஒரு மன்னனுக்குத் தீங்கிழைத்த ஒருவன் {குறுநில மன்னன்}, தீங்கடைந்தவன் {பலமிக்க மன்னன்} தான் வாழும் இடத்தில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறான் என்று தன்னைத் தேற்றிக் கொள்ளக்கூடாது. அத்தகு மன்னர்கள் {பலமிக்கவர்கள்} தீங்கடையும்போது, இரையின் மீது பாயும் பருந்தைப்போலவே கவனமற்ற கணப்பொழுதில் தீங்கிழைத்தவன் {குறுநில மன்னன்} மீது பாய்வான்.(20)
வலுவூட்டப்பட்ட பலம் கொண்டவனும், தன் பலத்தில் நம்பிக்கை கொண்டவனுமான ஒரு மன்னன், தன்னைவிடப் பலவீனமான அண்டை நாட்டானை {அண்டை நாட்டு மன்னனைத்} தாக்கவேண்டுமேயன்றி ஒருபோதும் பலமிக்கவனையல்ல.(21) அறத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட மன்னன் ஒருவன், ஆற்றலால் பூமியின் அரசுரிமையை அடைந்து, தன் குடிமக்களை நீதியுடன் பாதுகாத்து, எதிரிகளைப் போரில் கொல்ல வேண்டும்.(22) இவ்வுலகத்திற்குச் சொந்தமான அனைத்தும் அழிவடையவே விதிக்கப்பட்டிருக்கிறது. இங்கே இருக்கும் எதுவும் நீடித்து நிற்கக்கூடியவையல்ல. இதன் காரணமாகவே, அறத்தைப் பின்பற்றும் மன்னன், தன் மக்களை நீதியுடன் பாதுகாக்க வேண்டும்.(23) கோட்டைகளில் தற்பாதுகாப்பு, போர், நீதி நிர்வாகம், கொள்கை சம்பந்தமான கேள்விகளில் கலந்தோலோசனை செய்தல், குடிமக்களை மகிழ்ச்சியுடன் வைத்திருத்தல் ஆகிய இந்த ஐந்து செயல்களும், ஒரு மன்னனின் ஆட்சிப்பகுதிகளை விரிவடையச் செய்வதில் பங்காற்றுகின்றன.(24)
இவற்றில் உரிய கவனம் செலுத்தும் மன்னனே, மன்னர்களில் சிறந்தவனாகக் கருதப்படுகிறான். இவற்றை எப்போதும் கவனிப்பதால் ஒரு மன்னன் தன் நாட்டைப் பாதுகாப்பதில் வெல்கிறான்.(25) எனினும், அனைத்துக் காலங்களில் இக்காரியங்கள் அனைத்தையும் ஒரே மனிதன் கண்காணிப்பது இயலாதது. ஒரு மன்னன், கண்காணிப்பு செய்யும் அத்தகு பணியைத் தன் அமைச்சர்களிடம் ஒப்படைத்து, பூமியை என்றென்றைக்கும் ஆளலாம்.(26) பரந்த மனமுடையவனும், இன்பம் சார்ந்த பொருட்கள் அனைத்தையும் பிறருடன் பகிர்ந்து கொள்பவனும், மென்மையான மனோநிலை கொண்டவனும், தூய நடத்தை கொண்டவனும், தன் குடிமக்களை எப்போதும் கைவிடாதவனுமான ஒருவனையே மக்கள் மன்னனாகச் செய்கிறார்கள்.(27) ஞான அறிவுரைகளைக் கேட்டு, அவற்றை ஏற்று, தன் சொந்தக் கருத்துகளைக் கைவிடுபவனுக்கு உலகமே கீழ்ப்படிகிறது.(28)
தன் பார்வைக்கு எதிர் பார்வை கொண்டதன் விளைவாக ஒரு நலன் விரும்பியின் ஆலோசனையைப் பொறுத்துக் கொள்ளாதவனும், தன் பார்வைகளுக்கு எதிராகச் சொல்லப்படுபவற்றைக் கேட்பதில் அக்கறையில்லாதவனும், வெல்லப்பட்ட, அல்லது வெல்லப்படாத உயர்ந்த உன்னதமான மனிதர்களின் நடத்தையைப் பின்பற்றாதவனுமான மன்னன் தன் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்தவனாகச் சொல்லப்படுகிறான்[4].(29,30) முன்பொருமுறை தண்டிக்கப்பட்ட அமைச்சர்கள், குறிப்பாகப் பெண்கள் ஆகியோரிடமும், மலைகள், அடைதற்கரிய இடங்கள், யானைகள், குதிரைகள், பாம்புகள் ஆகியவற்றிடமும் இருந்து(31) மன்னன் முழுகவனத்துடன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்[5]. தனது முதன்மையான அமைச்சர்களைக் கைவிட்டு, இழிந்தோரைத் தனக்குப் பிடித்தமானவர்களாக ஆக்கிக்கொள்ளும் மன்னன் விரைவில் துயரில் வீழ்ந்து, (தான் எண்ணியிருந்த) தன் திட்டங்களின் எல்லையை {முடிவை} அடைவதில் ஒருபோதும் வெல்வதில்லை.(32)
உறுதியற்ற ஆன்மா கொண்டவனும், கோபம் மற்றும் வன்மத்தின் வசத்தை அடைபவனும், நற்பண்புகள் கொண்ட தன் உறவினர்களில் எவரையும் விரும்பவும், மதிக்கவும் செய்யாதவனுமான மன்னன், அழிவடையும் தருணத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறான்.(33) சாதனையாளர்கள் எவரையும் தன் இதயதால் விரும்பாவிடினும், அவர்களுக்கு நன்மை செய்து தன்னோடு இணைத்துக் கொள்ளும் மன்னன், நீடித்த புகழை அனுபவிப்பதில் வெல்கிறான்.(34) நீ ஒருபோதும் அகாலத்தில் வரிகளை விதிக்கக்கூடாது. நீ, ஏற்பில்லாதது ஏதும் நேரும்போது துன்பப்படுவதிலும், ஏற்புடைய ஏதும் நேரும்போது மிகைப்பட்ட மகிழ்ச்சியடைவதிலும் ஒருபோதும் ஈடுபடாதே. நற்செயல்களை நிறைவேற்றுவதிலேயே எப்போதும் உன்னை நீ நிறுவிக் கொள்ள வேண்டும்.(35) உன்னைச் சார்ந்திருக்கும் {குறுநில} மன்னர்களில் உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டிருப்பவன் எவன், அச்சத்தால் உன்னிடம் பற்றுறுதியுடன் இருப்பவன், அவர்களில் குற்றங்களையுடையவன் எவன் என்பதை எப்போது நீ உறுதிசெய்து கொள்ள வேண்டும்.(36)
கவனமில்லாத தருணங்களில், கழுகுக்கூட்டம் தங்கள் இரையைப் பற்றுவதைப் போலப் பலவீனர்கள் பலமிக்கவர்களைத் தாக்கக்கூடும் என்பதால், மன்னன் பலவீனர்களை நம்ப வேண்டும்.(37) பாவம் நிறைந்த ஆன்மா கொண்ட ஒரு மனிதன், தன் தலைவன் இனிய சொல் பேசுபவனாகவும், அனைத்து சாதனைகளைக் கொண்டவனாகவும் இருப்பினும் அவனைத் தாக்க முயல்வான். எனவே, நீ அத்தகு மனிதர்களிடம் நம்பிக்கை வைக்காதே.(38) நகுஷனின் மகனான யயாதி, அரசகலையின் {ராஜதந்திரத்தின்} புதிர்களை அறிவிக்கும்போது, “மனிதர்களை ஆள்வதில் ஈடுபடும் ஒரு மனிதன், அருவருக்கத்தக்க எதிரிகளையும் கொல்ல வேண்டும்” எனச் சொன்னான்” {என்றார் வாமதேவர்}.(39)
அதிகார உறுதி! – சாந்திபர்வம் பகுதி – 94-உறுதியான அதிகாரம் படைத்த மன்னன் எவன்? வெற்றின் கனிகளைச் சுவைக்கக்கூடிய மன்னன் எவன்? என்பவை குறித்து வசுமனஸுக்குச் சொன்ன வாமதேவர்; அந்த உரையாடலில் வாமதேவர் சொன்னவற்றைக் கடைப்பிடிக்கும்படி யுதிஷ்டிரனைக் கேட்டுக் கொண்ட பீஷ்மர்…
வாமதேவர் {கோசல நாட்டு மன்னன் வசுமனஸிடம்} சொன்னார், “மன்னன் போர்கள் இல்லாமலேயே வெற்றிகளை வென்றெடுக்க வேண்டும். ஓ! ஏகாதிபதி {வசுமனஸே}, போர்களின் மூலம் அடையப்படும் வெற்றிகள் ஞானியரால் புகழப்படுவதில்லை.(1) அரசின் சொந்த பலம் உறுதியாகாதபோது, அவன் புதிய பொருட்களை {உரிமைகளை} அடைவதில் முனையக் கூடாது. அதிகாரம் வலுப்பெறாத மன்னன் அவ்வாறு பொருட்களை {உரிமைகளை} அடைவதில் முனைவது முறையாகாது.(2) எவனுடைய ஆட்சிப்பகுதிகள் பரந்ததாகவும், செல்வம் நிறைந்ததாகவும் இருக்கிறதோ, எவன் பெரும் எண்ணிக்கையிலான அதிகாரிகளைக் கொண்டிருக்கிறானோ, அந்த மன்னனின் அதிகாரமே உறுதியானது என்று சொல்லப்படுகிறது.(3) எந்த மன்னனின் படைவீரர்கள் (ஊதியம் மற்றும் பரிசுகளால்) மனம் நிறைந்தவர்களாக, பகைவர்களை வஞ்சிக்கத் தகுந்தவர்களாக இருக்கிறார்களோ அவன் சிறு படையையே கொண்டிருந்தாலும் மொத்த உலகத்தையும் அடக்குவான்.(4) எந்த மன்னனின் குடிமக்கள், நகரங்களைச் சார்ந்தவர்களாகவோ, மாகாணங்களைச் சார்ந்தவர்களாகவோ இருப்பினும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்களாகவும், செல்வம் மற்றும் தானியங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ அவனது அதிகாரமே உறுதியானது என்று சொல்லப்படுகிறது.(5) ஒரு மன்னன், தன் பலம் எதிரியின் பலத்தைவிடப் பெரியது என்று நினைக்கும்போது, தன் நுண்ணறிவின் துணையுடன், பின்னவனின் ஆட்சிப்பகுதிகளையும், செல்வத்தையும் அடைய அவன் முயல வேண்டும்.(6)
வளங்கள் பெருகுபவனும், அனைத்து உயிரினங்களிடம் கருணை கொண்டவனும், காலதாமதத்தால் ஒருபோதும் நேரத்தை இழக்காமல் இருப்பவனும், தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனத்துடன் இருப்பவனுமான மன்னன் முன்னேற்றத்தை ஈட்டுவதில் வெல்கிறான்.(7) எந்த மன்னன், எக்குற்றமும் இல்லாத தன் மக்களிடம் வஞ்சகமாக நடந்து கொள்கிறானோ, அவன் கோடரியால் காட்டை அழிக்கும் ஒருவனைப் போலத் தன்னையே வெட்டிக் கொள்கிறான்.(8) மன்னன் தன் எதிரிகளைக் கொல்லும் பணியை எப்போதும் கவனிக்கவில்லையெனில், பின்னவர்கள் {எதிரிகள்} குறையமாட்டார்கள். எந்த மன்னன், தன் கோபத்தைக் கொல்லத் தெரிந்தவனோ, அவனுக்கு எந்த எதிரியும் இருக்க மாட்டான்.(9) மன்னன் ஞானம் கொண்டவனாக இருப்பின், அவன் நல்லோர் அங்கீகரிக்காத எச்செயலையும் ஒருபோதும் செய்யமாட்டான். மறுபுறம், அவன் தனது சொந்த நன்மைக்கும், பிறரின் நன்மைக்கு வழிவகுக்கும் செயல்களையே எப்போதும் செய்பவனாக இருப்பான்.(10) எந்த மன்னன் தன் கடமைகள் யாவையும் நிறைவு செய்து, தன் மனசாட்சியின் ஒப்புதலில் மகிழ்ச்சியடைகிறானோ, அவன் ஒருபோதும் மற்றவரின் நிந்தனைக்கு ஆளாகமாட்டான், எப்போதும் வருத்தமடையவும் மாட்டான்.(11) எந்த மன்னன் மனிதர்களிடம் இத்தகு நடத்தையைக் கடைப்பிடிக்கிறானோ, அவன் இரண்டு உலகங்களையும் அடக்குவதில் வென்று, வெற்றியின் கனிகளைச் சுவைப்பான்” {என்றார் வாமதேவர்}”.(12)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “வாமதேவரால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் வசுமனஸ், அவர் வழிநடத்தியதைப் போலவே செய்தான். நீயும் இந்த ஆலோசனைகளைப் பின்பற்றினால், இரண்டு உலகங்களையும் வெற்றி கொள்வதில் நீ வெல்வாய் என்பதில் ஐயமில்லை”.(13)
வெற்றிக்கான வழிமுறைகள்! – சாந்திபர்வம் பகுதி – 95-வெற்றியடைய விரும்பும் மன்னன் செயல்பட வேண்டிய முறை; போரிடச் செல்லும் க்ஷத்திரியனின் நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்தும், வெற்றி அடையவும், தன் வளங்களை அதிகரிக்கவும் நியாயமான வழிமுறைகளே பின்பற்றப்பட வேண்டும் என்றும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்..
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு க்ஷத்திரியன் மற்றொரு க்ஷத்திரியனைப் போரில் அடக்க விரும்பினால், முன்னவன் வெற்றி குறித்த காரியத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்னால் கேட்கப்படும் நீர் இதற்குப் பதிலளிப்பீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தன் பின்னே படையுடனோ, இல்லாமலோ செல்லும் மன்னன், தான் அடக்கப்போகும் மன்னனின் ஆட்சிப்பகுதிக்குள் நுழைந்து, அந்த மக்கள் அனைவரிடமும், “நானே உங்கள் மன்னன், நான் எப்போதும் உங்களைப் பாதுகாப்பேன்.(2) எனக்கு உரிய கப்பத்தைக் கொடுங்கள், அல்லது போரில் என்னோடு மோதுங்கள்” என்று சொல்ல வேண்டும். மக்கள் அவனைத் தங்கள் மன்னனாக ஏற்றால், எந்தப் போருக்குமான அவசியமில்லை.(3) பிறப்பால் க்ஷத்திரியர்களாக இல்லாத அவர்கள், பகைமையின் குறியீடுகளை வெளிப்படுத்தும்போது, அவர்கள் தங்களுக்கு விதிக்கப்படாத நடைமுறைகளை நோற்பதால், அனைத்து வழிமுறைகளிலும் அவர்கள் அடக்கப்பட வேண்டும்.(4) எதிரியிடம் அதிகம் எதிர்பார்ப்பவனும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாதவனும், போரிட ஆயுதமின்றி வருபவனுமான க்ஷத்திரியனைக் கண்டால், பிற வகையைச் சேர்ந்த மக்களும் (படையெடுத்து வருபவனைத் தடுப்பதற்காக) ஆயுதங்களை எடுப்பார்கள்[1]” என்றார் {பீஷ்மர்}.(5)யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, மற்றொரு க்ஷத்திரிய மன்னனை எதிர்த்து போரிடச் செல்லும் க்ஷத்திரிய மன்னன் ஒருவனின் நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(6)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “கவசம் பூணாத க்ஷத்திரியனுடன் போரிட அந்த க்ஷத்திரியன் தானும் கவசம் பூணக்கூடாது. ஒருவன் மற்றொருவனோடு போரிட்டு, எதிராளி இயலாமையை அடையும்போது பின்னவனை {எதிராளியைக்} கைவிட வேண்டும்[2].(7) எதிரி கவசம் பூண்டு வந்தால், அவனது எதிராளியும் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். எதிரி ஒரு படையின் பாதுகாப்புடன் முன்னேறி வந்தால், படையின் பாதுகாப்புடன் கூடிய ஒருவன் அவனைப் போருக்கு அறைகூவி அழைக்க வேண்டும்.(8) எதிரி வஞ்சகத்தின் உதவியுடன் போரிட்டால், அவனை வஞ்சகத்தின் உதவியுடனேயே சந்திக்க வேண்டும். மறுபுறம் அவன் நியாயமாகப் போரிட்டால், நியாயமான வழிமுறைகளின்படியே அவன் தடுக்கப்பட வேண்டும்.(9) ஒருவன், ஒரு தேர்வீரனை எதிர்த்து குதிரையின் முதுகில் செல்லக்கூடாது. ஒரு தேர்வீரன் மற்றொரு தேர்வீரனை எதிர்த்தே செல்ல வேண்டும். எதிராளி துயரில் வீழ்ந்தால், அவன் தாக்கப்படக்கூடாது; அச்சத்தில் இருப்பவனும், வெல்லப்பட்டவனும் தாக்கப்படக்கூடாது[3].(10)நஞ்சு தோய்த்த கணைகளோ, முள்பதித்த கணைகளோ {கர்ணிகளோ} பயன்படுத்தப்படக்கூடாது. இவை தீயவர்களின் ஆயுதங்களாகும். ஒருவன் கோபத்திற்கோ, கொல்லும் விருப்பத்திற்கோ வசப்படாமல் நியாயமான முறையில் போரிட வேண்டும்.(11) பலவீனமானவனோ, காயம்பட்டவனோ கொல்லப்படக்கூடாது. அதேபோலவே மகனற்றவனோ, ஆயுதம் முறிந்தவனோ, துயரில் வீழ்ந்தவனோ, நாண்கயிறு அறுந்தவனோ, தன் வாகனத்தை இழந்தவனோ கொல்லப்படக்கூடாது. காயம்பட்ட எதிரியை, அவனது வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும், அல்லது அவன் வெற்றியாளனின் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டால், திறன்மிக்க மருத்துவ நிபுணர்களைக் கொண்டு அவனது காயங்கள் கவனிக்கப்பட வேண்டும்.(12) நல்ல மன்னர்களுக்கிடையில் சச்சரவு விளையும்போது, ஒரு நல்ல போர்வீரன் துயரில் விழுந்தால் (அவனது காயங்கள் கவனிக்கப்பட்டு) குணமடைந்தபிறகு அவனைச் சுதந்திரமாக விட வேண்டும். இதுவே நித்திய கடமையாகும் {இதுவே ஸனாதன தர்மமாகும்}.(13) தான்தோன்றியின் (பிரம்மனின்) மகனான மனுவே, போர்கள் நியாயமான முறையில் போரிடப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவர்கள் {க்ஷத்திரியர்கள்} அறத்தை அழிக்காமல் அதைப் பின்பற்ற வேண்டும்.(14)
நியாயமாகப் போரிடுவதைக் கடமையாகக் கொண்ட ஒரு க்ஷத்திரியன், நியாயமற்ற வழிமுறைகளின்படி வெற்றியடைந்தால் அவன் பாவியாகிறான். வஞ்சக நடத்தை கொண்ட அத்தகு மனிதன் தன்னையே கொல்கிறான் எனச் சொல்லப்படுகிறான்.(15) தீயோரின் நடைமுறை இதுவே. தீயோனும் கூட நியாயமான வழிமுறைகளின்படியே அடக்கப்பட வேண்டும். பாவகரமான வழிமுறைகளில் வெற்றியை அடைவதை விட அறம் நோற்று உயிரைவிடுவதே சிறந்தது.(16) ஓ! மன்னா, இழைக்கப்படும் பாவமானது, ஒரு பசுவைப் போலவே உடனடி பலனை உண்டாக்குவதில்லை. அந்தப் பாவம், அஃதை இழைத்தவனின் வேர்களையும், கிளைகளையும் எரித்த பிறகே அவனை மூழ்கச் செய்கிறது.(17) பாவம் நிறைந்த ஒரு மனிதன், பாவம்நிறைந்த வழிமுறைகளில் செல்வத்தை அடைந்து மிகவும் இன்புற்றிருக்கிறான். ஆனால், பாவம் நிறைந்த வழிமுறைகளில் முன்னேற்றத்தை அடைந்த அந்தப் பாவி அந்தப் பாவத்தையே தொடர்வான்.(18) அறம் எந்த உச்சவினையுமாற்றுவதில்லை என்று நினைக்கும் அவன் நன்னடத்தைக் கொண்ட மனிதரை ஏளனம் செய்கிறான். அறத்தை நம்பாத அவன், இறுதியில் அழிவையடைகிறான்.(19)
அவன், வருணனின் சுருக்கு {பாசக்} கயிற்றில் சிக்கியிருந்தாலும், தன்னை இறவாதவனாகவே கருதுகிறான். காற்றடைக்கப்பட்ட பெரிய தோற்பையைப் போல, அந்தப் பாவி தன்னை அறத்திலிருந்து முற்றிலுமாகத் துண்டித்துக் கொள்கிறான். எனினும், விரைவில் அவன் ஆற்றங்கரை மரமானது, வேருடன் சேர்த்து அடித்துச் செல்லப்படுவதைப் போலவே காணாமல் போகிறான்.(20) அப்போது, கல் தரையில் விழுந்து உடைந்த மண்குடத்துக்கு ஒப்பானவனாக அவனைக் காணும் மக்கள், அவனுக்குத் தகுந்தபடியே அவனைக் குறித்துப் பேசுவார்கள். எனவே, மன்னனானவன், வெற்றி மற்றும் தன் வளங்களை அதிகரித்தல் ஆகிய இரண்டிலும் நியாயமான வழிமுறைகளையே நாட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(21)
வெற்றியாளனின் நடந்தை! – சாந்திபர்வம் பகுதி – 96-வெல்லப்பட்ட எதிரியை நடத்த வேண்டியதெவ்வாறு? கைப்பற்றப்பட்ட கன்னிகையிடம் நடந்து கொள்ளும் முறை என்ன? கைப்பற்றப்பட்ட உடைமைகளை எவ்வாறு கையாள வேண்டும்? எதிரிநாட்டு மக்கள் எவ்வாறு இணங்கச் செய்யப்பட வேண்டும்? வேர்களை உறுதியாகக் கொண்டவனும், உலகின் வழிகளை அறிந்தவனுமான மன்னன் எவன்? பிரதர்த்தன், திவோதாசன் மற்றும் நாபாகன் ஆகியோர் படையெடுத்துச் சென்று செய்ததென்ன? போன்றவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் ஒடுக்கும் செயல் மொத்த பூமியின் அரசுரிமையையும் ஒரு மன்னனுக்குக் கொடுக்கும் என்றாலும், அவன் ஒருபோதும் அவ்வாறு அடக்க விரும்பக்கூடாது. நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் வெற்றியடையும் எந்த மன்னன்தான் அதன்பிறகு மகிழ்ச்சியடைவான்?(1) அநீதியால் களங்கப்படும் வெற்றியானது, நிச்சயமற்றதும், சொர்க்கத்திற்கு வழிநடத்தாததுமாகும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அத்தகு வெற்றியானது, மன்னன் மற்றும் பூமி ஆகிய இரண்டையும் பலவீனப்படுத்தும்.(2) கவசம் நழுவிய போர்வீரன், “நான் உன்னவன்” என்று சொல்லி சரணடைந்தவன், கரங்கூப்புபவன், தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டவன் ஆகியோரை வெறுமனே கைப்பற்ற வேண்டுமேயன்றி ஒருபோதும் கொல்லக்கூடாது.(3) ஓர் எதிரி மன்னன், படையெடுப்பாளனின் துருப்புகளால் வெல்லப்பட்டால், பின்னவன் வெல்லப்பட்ட தன் எதிரியுடன் போரிடக்கூடாது. மறுபுறம், அவன் அவனைத் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து, “நான் உன் அடிமை” என்று சொல்லும் வகையில் ஒரு வருடகாலம் அவனை இணங்கியிருக்கச் செய்ய வேண்டும். அவன் அதைச் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், வெற்றியாளனின் வீட்டில் ஒரு வருடம் வாழும் வெல்லப்பட்ட அந்த எதிரி, புதிய வாழ்வுக் காலத்தையே அடைகிறான்[1].(4)
ஒரு மன்னன், வெல்லப்பட்ட எதிரியின் வீட்டில் இருந்து ஒரு கன்னிகையைப் பலவந்தமாகக் கொண்டு வந்தால், அவளை ஒரு வருடம் {பாதுகாப்பாக} வைத்திருந்து, பிறகு அவள் தன்னைத் திருமணம் செய்து கொள்கிறாளா, அல்லது வேறு எவரையும் திருமணம் செய்து கொள்கிறாளா என்று கேட்க வேண்டும். அவள் ஏற்கவில்லை என்றால், அவள் {அவளது நாட்டுக்கே} திரும்ப அனுப்பப்பட வேண்டும். பலவந்தமாக அடையப்பட்ட பிற செல்வங்களைப் {அடிமைகள் [பணியாட்கள்]} பொறுத்தவரையிலும் கூட இவ்வாறே நடந்து கொள்ள வேண்டும்.(5) கள்வர்கள் மற்றும் {மரண} தண்டனைக்குக் காத்திருப்போர் ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்வத்தை மன்னன் ஒருபோதும் தனதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எதிரியிடம் இருந்து பலவந்தமாகக் கைப்பற்றப்பட்ட பசுக்கள், பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் அவ்விலங்குகளின் பாலை அருந்துவார்கள். எதிரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட காளைகள் உழவுப் பணியில் நிறுவப்பட வேண்டும், அல்லது எதிரியிடமே மீண்டும் கொடுக்கப்பட வேண்டும்[2].(6) ஒரு மன்னன், மற்றொரு மன்னனிடமே போரிட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. எவன் மன்னனாக இல்லையோ அவன் வேறொரு மன்னனை ஒருபோதும் தாக்கக்கூடாது.(7) ஒரு பிராமணன், அமைதியை விரும்பியவனாக, போரிட்டுக்கொள்ளும் இரு படைகளுக்கு மத்தியில் அச்சமில்லாமல் சென்றால், இரு தரப்பும் உடனடியாகப் போரைக் கைவிட வேண்டும்.(8) ஒரு பிராமணனைக் கொல்லவோ, காயப்படுத்தவோ செய்பவனும் ஒரு நித்திய விதியை உடைப்பான். எந்த க்ஷத்திரியனாவது அவ்விதியை உடைத்தால், அவன் தன் வகையில் இழிந்தவனாவான்.(9) இதனுடன் சேர்த்து, அறத்தை அழித்து, நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறும் அந்த க்ஷத்திரியன், ஒரு க்ஷத்திரியனாக இருக்கத் தகாதவனாகவே கருதப்பட்டுச் சமூகத்தில் இருந்து விரட்டப்பட வேண்டும்.(10)
வெற்றியடைய விரும்பும் ஒரு மன்னன் அத்தகு நடத்தையை ஒருபோதும் பின்பற்றக்கூடாது. நியாயமாக வென்ற வெற்றியை விட ஈட்டுதவற்கு வேறென்ன பெரிதாக இருக்கிறது?(11) (அண்மையில் வெற்றிகொள்ளப்பட்ட ஒரு நாட்டில் உள்ள) எளிதில் சினங்கொள்கின்ற வர்க்கத்தினர், ஆறுதலான வார்த்தைகளாலும், கொடைகளாலும் தாமதமில்லாமல் இணங்கச்செய்யப்பட வேண்டும். இது மன்னன் பின்பற்றத் தகுந்த நல்ல கொள்கையாகும். இதைச் செய்வதற்குப் பதில் இம்மனிதர்களைக் கொள்கையில்லாத அளவில் ஆள முனைந்தால், அவர்கள் நாட்டைவிட்டுச் சென்று (வெற்றியாளனுடைய) எதிரிகளின் தரப்பைச் சேர்ந்து, (வெற்றியாளனை எதிர்ப்பதற்கானப்) பேரிடர் நேரக் காத்திருப்பார்கள்.(13) நிறைவில்லாத மனிதர்கள், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னனின் இடர்களைக் கவனித்து, ஆபத்தான காலங்களில் காலதாமதமின்றிப் பின்னவனுடைய {மன்னனுடைய} எதிரிகளின் தரப்பில் சேர்ந்து கொள்வார்கள்.(14) ஓர் எதிரி நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் வஞ்சிக்கப்படக்கூடாது. அதே போல அவன் மரணம் அடையும் அளவுக்குக் காயப்படுத்தப்படக்கூடாது. அவ்வாறு தாக்கினால் அவனது உயிரே போய்விடக் கூடும்[3].(15)குறைந்த வளங்களே கொண்ட ஒரு மன்னன், அதை வைத்துக் கொண்டு நிறைவுடன் இருந்தால், அவன் வாழ்வதே பெரிதெனக் கருதுபவனாவான்[4].(16) எந்த மன்னன், பரந்து விரிந்த, செல்வம் நிறைந்த ஆட்சிப் பகுதிகளைக் கொண்டவனோ, பற்றுறுதியுடன் கூடிய குடிமக்களைக் கொண்டவனோ, மனநிறைவுடன் இருக்கும் பணியாட்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்டவனோ, அவனே தன் வேர்களை உறுதியாகக் கொண்டவன் என்று சொல்லப்படுகிறான்.(17) எந்த மன்னனின் ரித்விக்குகள், புரோகிதர்கள், ஆசான்கள், சாத்திரங்களை நன்கறிந்தவர்கள், கௌரவங்களுக்குத் தகுந்த பிறர் ஆகியோர் முறையாகக் கௌரவிக்கப்படுகிறார்களோ, அவனே இவ்வுலகின் வழிகளை அறிந்தவன் என்று சொல்லப்படுகிறான்.(18) இத்தகு நடத்தையின் மூலமே இந்திரன் உலகத்தின் அரசுரிமையைப் பெற்றான். இந்த நடத்தையின் மூலமே பூமி சார்ந்த மன்னர்கள், இந்திரனின் நிலையை அடைவதில் வெல்கிறார்கள்.(19)மன்னன் பிரதர்த்தனன், பெரும்போரில் தன் எதிரிகளை அடக்கி, தானியங்கள், மருத்துவ மூலிகைகள் உள்ளிட்ட அவர்களுடைய செல்வமனைத்தையும் எடுத்துக் கொண்டாலும், அவர்களுடைய நிலத்தைத் தீண்டாமல் விட்டுவிட்டான்.(20) மன்னன் திவோதாசன், தன் எதிரிகளை அடக்கிய பிறகு, அவர்களுடைய வேள்வி நெருப்பில் எஞ்சியவற்றையும், (காணிக்கைக்காக வைக்கப்பட்டிருந்த) தெளிந்த நெய்யையும், அவர்களது உணவையும் எடுத்துக் கொண்டான். இதன் காரணமாக அவன் வெற்றி கொண்டதன் தகுதியை இழந்தான்[5].(21) மன்னன் நாபாகன் (தன் படையெடுப்புகள் முடிந்ததும்), கல்விமான்களான பிராமணர்கள் மற்றும் தவசிகளின் செல்வத்தைத் தவிர்த்து, மொத்த நாடுகளையும் அதன் ஆட்சியாளர்களோடு சேர்த்துப் பிராமணர்களுக்கான வேள்விக்கொடையாகக் கொடுத்தான்.(22) ஓ யுதிஷ்டிரா, பழங்காலத்தின் நீதிமிக்க மன்னர்கள் அனைவரின் நடத்தைகள் சிறப்பானவையாக இருக்கின்றன. அவற்றை நான் மொத்தமாக அங்கீகரிக்கிறேன்.(23) எந்த மன்னன் தன் செழிப்பை விரும்புவானோ, அவன் சிறப்பான அனைத்தின் துணை கொண்டு படையெடுக்க முனைய வேண்டுமேயன்றி, வஞ்சகத்துடனோ, செருக்குடனோ அல்ல” என்றார் {பீஷ்மர்}.(24)
வீரம்! – சாந்திபர்வம் பகுதி – 97-மன்னர்கள் குற்றமற்றவர்களாக ஆகும் வழிமுறைகள்; மன்னன் ஏன் ஒரு வேள்வியின் தன்வடிவமாகச் சொல்லப்படுகிறான்? அச்சத்திலிருப்போரைப் போராதுகாத்தல் மற்றும் அச்சமின்மை ஆகிய வீரர்களின் பண்புகள்; நோய்ப்படுக்கையில் மரணம் மற்றும் வீரமரணம் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மன்னா, க்ஷத்திரியர்களின் நடைமுறைகளைவிடப் பாவம் நிறைந்தவை வேறெவையும் இல்லை. போருக்கு அணிவகுத்துச் செல்லும் போதோ, போரிலோ மன்னன் பெரும் எண்ணிக்கையிலானவர்களைக் கொல்கிறான்[1].(1) எந்தச் செயல்பாடுகளின் மூலம் மன்னன் புகழ் உலகங்களை வெல்கிறான்? ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஓ! கல்விமானே நான் அறிய விரும்பும் இவற்றை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “தீயோரைத் தண்டித்தல், நல்லோரை இணைத்துக் கொண்டு அவர்களைப் பேணி வளர்த்தல், வேள்விகள் செய்தல் மற்றும் கொடைகள் அளிதல் ஆகியவற்றின் மூலம் மன்னர்கள் குற்றமற்றவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் ஆகிறார்கள்.(3) வெற்றியடைய விரும்பும் மன்னர்கள் பல உயிரினங்களைப் பீடிக்கிறார்கள் என்பது உண்மையே. இருப்பினும் வெற்றி அடைந்த பிறகு அவர்கள் அவை அனைத்தையும் முன்னேற்றவும், வளர்ச்சியடையச் செய்யவும் உதவுகிறார்கள்.(4) கொடைகள், வேள்விகள், தவங்கள் ஆகியவற்றால் அவர்கள் தங்கள் பாவங்களை அழித்து, உயிரினங்கள் அனைத்திற்கும் செய்யும் நன்மையால் தங்கள் தகுதிகளையும் {புண்ணியங்களையும்} அதிகரித்துக் கொள்கிறார்கள்.(5)
நிலத்தைச் சீரமைப்பவன், அதைச் சீரமைப்பதற்காக நெற்கதிர்களையும், களைகளையும் எடுக்கிறான். எனினும், அவனது செயல்பாடுகள் நெற்கதிர்களை அழிக்காமல் அவற்றை மேலும் வளமாக வளரச் செய்கின்றன.(6) ஆயுதங்களைத் தரிப்போர், அழிவுக்குத் தகுந்த பலரை அழிக்கிறார்கள். எனினும், அத்தகு பரந்த அழிவானது, எஞ்சியிருப்போரை வளரவும், முன்னேறவும் செய்கிறது.(7) கொள்ளை, கொலை, துன்பம் ஆகியவற்றில் இருந்து மக்களைக் காக்கும் ஒருவன், இவ்வாறு அவர்களின் வாழ்வைக் கள்வர்களிடம் இருந்து காப்பதன் விளைவால், செல்வம், உயிர் மற்றும் உணவு ஆகியவற்றைக் கொடுப்பவனாகக் கருதப்படுகிறான்.(8) எனவே, மன்னன், அனைவரின் அச்சங்களையும் விலக்கும் தக்ஷிணையுடன் கூடிய வேள்வியைச் செய்து தேவர்களைத் துதிப்பதன் மூலம் இம்மையில் புகழையும், மறுமையில் இந்திரனின் சொர்க்கத்தில் ஒரு வசிப்பிடத்தையும் அடைகிறான்[2].(9)பிராமணர்களின் நிமித்தமாக எழுந்த போர்களில் எதிரிகளுடன் போரிட்டு உயிரை விடும் மன்னன், அளவிலா கொடைகளுடன் கூடிய ஒரு வேள்வியின் உடல் வடிவமாகவே கருதப்படுகிறான்.(10) ஒரு மன்னன், தன் அம்பறாத்தூணிகள் நிறந்த கணைகளைத் தன் எதிரிகளின் மீது அச்சமில்லாமல் ஏவினால், பூமியில் அவனுக்கும் மேன்மையான எவனையும் தேவர்களும் கூடக் காண்பதில்லை.(11) அவ்வாறிருக்கையில், அவன் தன் எதிரிகளின் உடல்களை எத்தனை கணைகளால் துளைக்கிறானோ, அழிவில்லாதவையும், அனைத்து விருப்பங்களையும் அருளவல்லவையுமான அத்தனை உலகங்களையும் அவன் {மறுமையில்} அனுபவிக்கிறான்.(12) அத்தருணத்தில் அவனது உடலில் இருந்து வழியும் குருதியானது, அவனது உடல்வலியுடன் சேர்த்து அவனது பாவங்கள் அனைத்தையும் கழுவுகிறது.(13) ஒரு க்ஷத்திரியின் போரில் அனுபவிக்கும் வலியானது, அவனது தகுதியை {புண்ணியத்தை} மேம்படுத்தச் செயல்படும் தவங்களைப் போல ஆகிறது எனச் சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் சொல்கின்றனர்.(14)
அச்சத்திலிருக்கும் நல்லோர், மேகங்களிடம் மழையை வேண்டும் மனிதர்களைப் போலப் போருக்கு விரைந்து சென்றிருக்கும் வீரர்களிடம் உயிரை வேண்டி பின்னால் நிலைக்கிறார்கள்.(15) வீரர்கள், அவ்வாறு வேண்டுவோரை போரின் ஆபத்துகளை அடைய விடாமல், தாங்களே ஆபத்துகளைச் சந்தித்து அவர்களைப் பின்புறம் இருக்கச் செய்தால், அவர்களுடைய தகுதி {புண்ணியம்} மகத்தானதாகிறது.(16) மேலும் அச்சத்திலிருக்கும் அந்த மனிதர்கள், அந்தத் துணிச்சல்மிக்கச் செயலைப் பாராட்டி, தங்களைப் பாதுகாப்போரை எப்போதும் மதித்தால், அவர்கள் முறையானதையும், நீதியானதையும் செய்கிறார்கள். அவர்கள் வேறு வகையில் செயல்பட்டால், அவர்களால் தங்களை அச்சத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முடியாது.(17) தோற்றத்தில் இணையான மனிதர்களுக்கிடையிலேயே பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன. பயங்கரக் கலவரத்துக்கு மத்தியில் சிலர் பகைவரின் படையணிகளை எதிர்த்து விரைகின்றனர்.(18)
உண்மையில், வீரர்களானவர்கள், சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையைப் பின்பற்றி, எதிரிக்கூட்டத்தை எதிர்த்து விரைகிறார்கள். எனினும், கோழைத்தனமான அச்சத்திலிருப்பவன், ஆபத்தில் இருக்கும் தன் தோழர்களைக் கைவிட்டுத் தப்பி ஓடுவதில் பாதுகாப்பை அடைய முனைகிறான்.(19) அதுபோன்ற இழிந்தவர்கள் உன் குலத்தில் பிறக்க வேண்டாம். தங்கள் தோழர்களைப் போரில் கைவிட்டு, காயமில்லா அங்கங்களுடன் வீடு திரும்புவோருக்கு இந்திரனின் தலைமையிலான தேவர்களே பேரிடரை உண்டாக்குவார்கள். எவன் தன் தோழர்களைக் கைவிட்டு தன் உயிர் மூச்சைக் காக்க விரும்புகிறானோ, அவன் தண்டங்களாலோ, கற்களாலோ அடித்துக் கொல்லப்பட வேண்டும், அல்லது காய்ந்த புற்படுக்கையில் உருட்டி தீயிட்டுக் கொல்லப்பட வேண்டும். அத்தகு குற்றமுள்ள நடத்தை கொண்ட க்ஷத்திரியர்கள், விலங்குகளைக் கொல்லும் முறையில் கொல்லப்பட வேண்டும்.(20-22)
இளைப்பாறும் படுக்கையில், மலம் மற்றும் சிறுநீரை வெளியிட்டு, பரிதாபமாகக் கதறி அழுது மரணத்தை அடையும் க்ஷத்திரியன் பாவம் நிறைந்தவனாவான்.(23) சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் உடலில் காயமின்றி ஒரு க்ஷத்திரியன் அடையும் மரணத்தை மெச்சுவதில்லை.(24) ஓ! ஐயா, வீட்டில் மரணத்தை அடையும் க்ஷத்திரியன் புகழுக்குத் தக்கவனன்று. அவர்கள் {க்ஷத்திரியர்கள்} வீரர்களாவர். அவர்களுடைய வீரமில்லா எந்தச் செயலும் பாவம் நிறைந்ததும், மகிமையற்றதுமாகும்.(25)
ஒரு நோயாளி, தன் உடல் மற்றும் துணிகளில் இருந்து நாற்றம் வெளிப்படும் நிலையில், வற்றிய முகத்துடன், “இஃது என்ன துயரம்? இது வலிநிறைந்தது! நான் பெரும் பாவியாவேன்” என்று சொல்லி தன் உறவினர்களைத் துயரில் ஆழ்த்துகிறான்.(26) உடல்நலமிக்கவர்களின் நிலையில் நாட்டங்கொள்ளும் அவன், (தான் அடையும் சித்திரவதைகளுக்கு மத்தியில்) மரணத்தையே திரும்பத் திரும்ப விரும்புகிறான். எவன் கண்ணியமும், செருக்கும் மிக்க வீரனோ, அவன் இத்தகு மகிமையற்ற மரணத்திற்குத் தகுந்தவனல்ல.(27) உறவினர்கள் சூழ போரில் தன் எதிரிகளைக் கொல்லும் க்ஷத்திரியன், கூரிய ஆயுதங்களின் முனையிலேயே இறக்க வேண்டும்.(28) இன்பமடையும் ஆசையில், கோபத்தால் நிறையும் ஒரு வீரன், சீற்றத்துடன் போரிட்டால், எதிரிகளால் தன் உடலில் ஏற்படும் காயங்களின் வலியை உணர மாட்டான்.(29) போரில் மரணத்தை அடையும் அவன், புகழ் நிறைந்த உயர்ந்த தகுதியை {புண்ணியத்தை} ஈட்டி, தன் வகைக்கான உலகத்தை எட்டி, இறுதியாக இந்திரனின் சொர்க்கத்தில் ஒரு வசிப்பிடத்தையும் அடைகிறான்.(30)
போரில் புறமுதுகிடாத வீரன் ஒருவன், தன் உயிரைத் துச்சமாக மதித்து போரின் முன்னணியில் தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் போரிட்டு, இந்திரனின் தோழமையை அடைகிறான்.(31) பகைவர்களுக்கு மத்தியில், உன்னதமற்ற அச்சத்தையோ, உற்சாகமின்மையையோ வெளிப்படுத்தாமல் எந்த வீரன் மரணத்தை அடைகிறானோ, அவன் மறுமையில் அழிவில்லா அருளைக் கொண்ட உலகங்களை ஈட்டுவதில் வெல்கிறான்” என்றார் {பீஷ்மர்}.(32)
அம்பரீஷனும், இந்திரனும்! – சாந்திபர்வம் பகுதி – 98-சுதேவனின் வரலாற்றையும், போர் எனும் வேள்வியில் ரித்விக்குகள், சத்யஸ்கள் முதலிய அங்கங்களையும், போரில் இறந்தவர்கள் அடையும் உலகங்களையும் இந்திரன் அம்பரீஷனுக்குச் சொன்னது…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, புறமுதுகிடாமல் போரில் மரணமெய்தும் வீரர்கள் ஈட்டும் உலகங்கள் என்னென்ன என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாக அம்பரீஷனுக்கும், இந்திரனுக்கும் நடந்த உரையாடல் பழங்கதை ஒன்றில் குறிப்பிடப்படுகிறது.(2) நாபாகனின் மகனான அம்பரீஷன் அடைதற்கரிய சொர்க்கத்திற்குச் சென்று, அந்தத் தெய்வீக உலகங்களில் இந்திரனின் துணையுடன் தன் படைத்தலைவன் {சுவேதன்} இருப்பதைக் கண்டான்.(3) அந்த மன்னன் {அம்பரீஷன்}, பலமிக்கத் தன் படைத்தலைவன், தெய்வீக வடிவுடன் அனைத்து வகைச் சக்தியாலும் ஒளிர்ந்து கொண்டு, ஓர் அழகிய தேரில் அமர்ந்து கொண்டு (அந்த வாகனத்திலேயே) மேலும் மேலும் உயர்ந்த உலகங்களுக்குச் செல்வதைக் கண்டான்.(4) தன் படைத்தலைவனான சுதேவனின் செழிப்பைக் கண்டு, மேலும் மேலும் உயர்ந்த உலகங்களுக்கு அவன் செல்வதையும் கண்ட உயர் ஆன்ம அம்பரீஷன், ஆச்சரியத்தால் நிறைந்து, பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு வாசவனிடம் {இந்திரனிடம்} பேசினான்.(5)
அம்பரீஷன் {இந்திரனிடம்}, “கடல் சூழ்ந்த மொத்த உலகையும் முறையாக ஆண்டு, அறத்தகுதியை ஈட்ட சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ளபடி நால்வகையினருக்கான பொதுவான கடமைகள் அனைத்தையும் பயின்று,(6) பிரம்மச்சரிய வாழ்வுமுறையின் கடமைகள் அனைத்தையும் கடுந்தவத்துடன் பயின்று, என் ஆசான்களிடமும், மதிப்பிற்குரிய பிற பெரியோரிடமும் கடமைநிறைந்த பணிவுடன் காத்திருந்து {பணிவிடை செய்து}, வேதங்களையும், அரச கடமைகள் சார்ந்த சாத்திரங்களையும் உரிய நடைமுறையுடன் கற்று,(7) உணவு மற்றும் பானங்களால் விருந்தினர்களையும், சிரார்த்தங்களில் காணிக்கையளித்துப் பித்ருக்களையும், கவனமாகச் சாத்திரங்களைக் கற்று முனிவர்களையும் நிறைவு செய்து, (அறப்புதிர்களில் உரிய வடிவங்களிலான) தொடக்கத்தை ஏற்படுத்தி, சிறந்தவையும், உயர்ந்தவையுமான பல வேள்விகளைச் செய்து தேவர்களையும் நிறைவு செய்து,(8) ஓ! வாசவா {இந்திரா}, சாத்திரங்களில் அறிவுறுத்தியுள்ளபடி க்ஷத்திரியக் கடமைகளை முறையாக நோற்று, பகைவரின் படைமீது அச்சமில்லாமல் என் கண்களைச் செலுத்தி போரில் பல வெற்றிகளை நான் அடைந்தேன்.(9) ஓ! தேவர்களின் தலைவா, இந்தச் சுதேவன் முன்பு என் படைகளின் தலைவனாக இருந்தான். அமைதியான ஆன்மா கொண்ட போர்வீரன் அவன் என்பது உண்மையே. எனினும், என்ன காரணத்தால் அவன் {சுவேதன்} என்னை விஞ்சி நிற்கிறான்?(10) உயர்ந்தவையும், பெரியவையுமான வேள்விகளில் அவன் ஒருபோதும் தேவர்களை வழிபட்டதில்லை. விதிப்படி அவன் (அடிக்கடி கொடுக்கப்படும் விலையுயர்ந்த கொடைகளால்) பிராமணர்களை ஒருபோதும் நிறைவு செய்ததில்லை. அவ்வாறிருக்கையில், {இங்கே சொர்க்கத்தில்} அவன் {சுவேதன்} எவ்வாறு என்னை விஞ்சி நிற்கிறான்?” என்று கேட்டான்[1].(11)இந்திரன் {அம்பரீஷனிடம்}, “ஓ! ஐயா, இந்தச் சுதேவனைப் பொறுத்தவரையில், பெரும் வேள்வியெனும் போரில் அவன் அடிக்கடி ஈடுபட்டான். போரில் ஈடுபடும் வேறு எந்த மனிதனும் அதே நிலையையே அடைவான்.(12) கவசம் போன்ற போர்வீரன் ஒவ்வொருவனும், போர் வியூகத்தில் எதிரிகளை எதிர்த்து விரைந்து, அந்த வேள்வியில் நிறுவப் பட்டவனாகிறான். உண்மையில், அத்தகு மனிதன், இவ்வழியில் செயல்படுவதால், போரெனும் வேள்வியைச் செய்தவனாகக் கருதப்படுவான் என்பது தீர்மானிக்கப்பட்டிருக்கும் ஒன்றாகும்” என்றான்.(13)
அம்பரீஷன் {இந்திரனிடம்}, “அந்த வேள்வியில் எவை ஆகுதியாகின்றன? எவை அதன் நீர்க்காணிக்கைகளாகின்றன? தக்ஷிணை என்பது என்ன? மேலும் ரித்விக்குகளாகக் கருதப்படுபவர் யாவர்? ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(14)
இந்திரன் {அம்பரீஷனிடம்}, “யானைகளே அவ்வேள்வியில் ரித்விக்குகளாகின்ற, குதிரைகள் அதர்யுக்களாகின்றன. பகைவரின் சதை அதன் ஆகுதிகளாகின்றன, குருதியே அதன் நீர்க்காணிக்கையாகிறது.(15) நரிகள், கழுகுகள், கருங்காக்கைகள், சிறகு படைத்த கணைகள் ஆகியன சத்யஸ்களாகின்றன. இவை இந்த வேள்வியில் நீர்க்காணிக்கையாக்கப்படுவனவற்றில் எஞ்சியதைப் பானம் செய்து, அதன் ஆகுதிகளில் எஞ்சியவற்றை உண்கின்றன.(16) சுடர்மிக்கவையும், கூரியவையும், நன்கு கடினமாக்கப்பட்டவையுமான வேல்கள், ஈட்டிகள், வாள்கள், கணைகள், கோடரிகள் ஆகியன வேள்வி செய்பவர்களின் கரண்டிகளாகின்றன.(17) நேரானவையும், கீரியவையும், நன்கு கடினமாக்கப்பட்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையும், பகைவரின் உடல்களைத் துளைக்கவல்லவையும், நன்கு வளைக்கப்பட்ட விற்களில் இருந்து ஏவப்படுபவையுமான கணைகள், இரு வாய்க் கொண்ட கரண்டிகளாகின்றன.(18) புலித் தோலாலான வாளுரையில் இருப்பவையும், தந்தக் கைப்பிடி அமைந்தவையும், யானையின் துதிக்கையை வெட்டவல்லவையுமான வாள்கள் இவ்வேள்வியின் ஸ்ப்யங்களாகின்றன[1]. சுடர்மிக்கவையும், கூரியவையும், கடின இரும்பாலானவையுமான வேல்கள், ஈட்டிகள், வாள்கள் மற்றும் கோடரிகளால் உண்டாக்கப்பட்ட கீறல்கள், தொகை மற்றும் காலத்திற்கு உடன்பட்டு மதிப்பு மிக்க மனிர்களிடம் இருந்து அடையப்படும் அபரிமிதமான செல்வங்களாகின்றன.(20)மூர்க்கமான தாக்குதலின் விளைவால் களத்தில் பாயும் குருதியானது, இந்த வேள்வியின் ஹோமத்தில், பெரும் தகுதி {புண்ணியம்} நிறைந்ததும், அனைத்து விருப்பங்களையும் அருளவல்லதுமான இறுதி ஆகுதியாகிறது.(21) அணிவகுக்கும் படைகளின் முன்னணியில் கேட்கப்படும் வெட்டு, துளை போன்ற ஒலிகள், யமனின் வசிப்பிடத்தில் வேதம் ஓதுபவர்களால் பாடப்படும் சாமங்களாகின்றன.(22) பகைவருடைய அணிவகுப்பில் உள்ள முன்னணி படையணிகள், ஆகுதிகளை வைக்கும் பாத்திரங்களாகின்றன. கவசம் தரித்த மனிதர்கள் யானைகள் மற்றும் குதிரைகளின் கூட்டமானது, அந்த வேள்வியின் சியேனசிதமெனும் நெருப்பாகிறது[3].(23) ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதும் எழுந்து நிற்கும் தலையற்ற முண்டங்கள், அந்த வேள்வியைச் செய்யும் வீரனுக்காகச் செய்யப்படுவதும், கருங்காலி மரத்திலானதுமான எண்கோண {எட்டு பக்கமுள்ள} யூபமாகிறது {வேள்வித்தண்டாகிறது}.(24) அங்குசங்களால் தூண்டப்படும் யானைகளின் பிளிறல்கள், இடாஹ்வானம் எனும் மந்திரங்களாகின்றன. ஓ! மன்னா, பேரிகைகளும், வசத்களாகும் உள்ளங்கையொலிகளும், அதன் திரிசாமன் உத்காத்ரியாகின்றன {மூன்று சாமங்களையுடைய உத்காதாவாகின்றன}.(25)
ஒரு பிராமணனின் உடைமை கைப்பற்றப்படும்போது, அந்த உடைமையைக் காக்க எவன் தன் இன்னுயிரையும் விடத் துணிவானோ, அவன் தன்னர்ப்பணிப்புக்கான அந்தச் செயலால், முடிவிலா கொடைகளைக் கொண்ட ஒரு வேள்விக்கான தகுதியை {புண்ணியத்தை} அடைகிறான்.(26) எந்த வீரன் தன் தலைவனுக்காக அணிவகுப்பின் முன்னணியில் அச்சத்துடன் புறமுதுகிடாமல் ஆற்றலை வெளிப்படுத்துவானோ, அவன் எனக்கு {இந்திரனுக்குச்} சொந்தமான புகழ் உலகங்களை ஈட்டுகிறான்.(27) எவனுடைய போர் வேள்வியானது புலித்தோல் உறைகளுள்ள வாள்களாலும், பரிகாயுதத்திற்கு ஒப்பான கரங்களாலும் பரப்பப்பட்டிருக்கிறதோ, அவன் எனக்குச் சொந்தமான புகழ் உலகங்களைப் போன்ற உலகங்களை வெல்கிறான்.(28) வெற்றியடையத் தீர்மானித்து, எந்தத் துணைக்காகவும் காத்திராமல் பகைவனின் பகையணிகளுக்குள் ஊடுருவும் போர்வீரன், எனக்குச் சொந்தமானவை போன்ற புகழ் உலகங்களை அடைவதில் வெல்கிறான்.(29)
பயங்கரமானதும், கடப்பதற்குக் கடினமானதும், பேரிகைகளையே தவளைகளாகவும், ஆமைகளாகவும் கொண்டதும், வீரர்களின் எலும்புகளையே அதன் மணற்பரப்பாகக் கொண்டதும், குருதியும், சதையும் புழுதியாகக் கொண்டதும், வாள்கள் மற்றும் கேடயங்களைத் தெப்பங்களாகக் கொண்டதும், கொல்லப்பட்ட போர்வீரர்களின் மயிர்களையே பாசியாகவும், மிதக்கும் புற்களாகவும் கொண்டதும், குதிரை, யானை மற்றும் தேர்களின் கூட்டங்களைப் பாலங்களாக {அணைகளாகக்} கொண்டதும், கொடிமரங்கள், கொடிகள் ஆகியவற்றைப் பிரம்புப் புதராகக் கொண்டதும், கொல்லப்பட்ட யானைகளின் உடல்களைப் படகுகளாகவும், பெரும் முதலைகளாகவும் கொண்டதும், வாள்கள், கத்திகள் ஆகியவற்றைப் பெரும் கப்பல்களாகக் கொண்டதும், கழுகுகள், கங்கங்கள், கருங்காக்கைகளை அதில் மிதக்கும் தெப்பங்களாகக் கொண்டதும், துணிவும் சக்தியும் கொண்டோராலும் கடக்கக் கடினமானதும், மருண்டோரை அச்சங்கொள்ள வைப்பதுமான ஒரு குருதிப்புனலைப் போர்க்களத்தில் பாயச்செய்யும் போர்வீரனே, இறுதி நீராடலுடன் கூடிய அந்த வேள்வியை நிறைவு செய்தவனாகச் சொல்லப்படுகிறான்.(30-34) எந்த வீரனின் பீடமானது, பகைவரின் தலைகள், குதிரைகள் மற்றும் யானைகளின் தலைகளுடன் பரவச் செய்யப்பட்டிருக்கிறதோ, அவனே எனக்குச் சொந்தமானவற்றைப் போன்ற புகழ் உலகங்களை அடைகிறான்.(35)
எந்த வீரன், பகைவரின் படையில் உள்ள முன்னணி படையைத் தன் மனைவியரின் அறைகளாகக் கருதுவானோ, எவன் தன் படையில் உள்ள முன்னணி படையை வேள்வி காணிக்கைகளை வைப்பதற்கான பாத்திரமாகக் கருதுவானோ, எவன் தனக்குத் தெற்கே நிற்கும் போராளிகளைத் தன் சத்யஸ்களாகவும், வடக்கே நிற்பவர்களை அக்நிதரர்களாகவும் கருதுகிறானோ, எவன் பகைவரின் படைகளைத் தான் மணந்து கொண்ட மனைவியைப் போலப் பார்க்கிறானோ, அவன் புகழ் உலகங்கள் அனைத்தையும் அடைவதில் வெல்கிறான்.(36,37) இரு படைகளுக்கு இடையில் கிடக்கும் திறந்தவெளியானது, வேள்வி செய்பவனின் வேள்விப் பீடமாகவும், மூன்று வேதங்கள் அவனது மூன்று வேள்வி நெருப்புகளாகவும் ஆகின்றன. அந்தப் பீடத்தில், வேத நினைவின் துணையுடன், அவன் தன் வேள்வியைச் செய்கிறான்.(38) மகிமையற்ற எந்த வீரன், அச்சத்தால் போரில் இருந்து புறமுதுகிட்டு பகைவர்களால் கொல்லப்படுவானோ அவன் நரகில் மூழ்குகிறான். இதில் எந்த ஐயமும் கிடையாது.(39) மறுபுறம், எந்தப் போர்வீரன், ஏற்கனவே, மயிர், சதை, எலும்புகளால் பரப்பப்பட்டிருக்கும் அந்த வேள்விப்பீடத்தைத் தன் குருதியால் நனையச் செய்கிறானோ அவன் உயர்ந்த கதியை அடைவதில் நிச்சயம் வெல்கிறான்.(40)
எந்தப் பலமிக்கப் போர்வீரன், பகைவர் படையின் தளபதியைக் கொன்று, வீழ்ந்துவிட்ட எதிராளியின் வாகனத்தில் ஏறுகிறானோ, அவன் விஷ்ணுவின் ஆற்றலைக் கொண்டவனாகவும், தேவர்களின் ஆசானான பிருஹஸ்பதியின் நுண்ணறிவைக் கொண்டவனாகவும் கருதப்படுகிறான்.(41) எந்தப் போர்வீரன், எதிரி படையின் தளபதியையோ, அவனது மகனையோ, மதிப்பிற்குரிய வேறு பிற தலைவரையோ உயிருடன் கைப்பற்றுகிறானோ, அவன் எனக்குச் சொந்தமானவற்றைப் போன்ற புகழ் உலகங்களை அடைவதில் வெல்கிறான்.(42) ஒருவன், போரில் கொல்லப்பட்ட ஒரு வீரனுக்காக ஒருபோதும் வருந்தக்கூடாது. ஒரு கொல்லப்பட்ட வீரன், தனக்காக வருந்த எவருமில்லாமல் இருந்தால், அவன் சொர்க்கதிதற்குச் சென்று சொர்க்கவாசிகளின் பெரும் மதிப்பை ஈட்டுகிறான்.(43) மனிதர்கள் (அவனுடைய {போரில் கொல்லப்பட்டவனின்} முக்திக்காகத்) தங்கள் உணவையும் பானத்தையும் அர்ப்பணிக்க விரும்புவதில்லை. அல்லது (செய்தியை அறிந்ததும், அவர்கள் நீராடவோ, அவனுக்காக வருந்தவோ செய்வதில்லை. அத்தகு மனிதனுக்குக் கிடைக்கப்போகும் புகழை {புகழ் உலகங்களைச்} சொல்லப் போகிறேன் கேட்பாயாக[4].(44)
எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் இருக்கும் அப்சரஸ்களில் முதன்மையானவர்கள், (கொல்லப்பட்ட வீரனின் ஆத்மாவை வரவேற்பதற்காக) அவனைத் தங்கள் தலைவனாக அடைய ஆசை கொண்டு பெரும் வேகத்துடன் செல்வார்கள்.(45) போரில் தன் கடமையை முறையாக நோற்கும் க்ஷத்திரியன் அச்செயலின் மூலம், தவங்கள் மற்றும் புண்ணியச் செயல்களின் தகுதியை {புண்ணியத்தை} அடைகிறான். உண்மையில், அத்தகு நடத்தையானது அவனுடைய அழிவில்லா கடமை வழியை இயைந்து செல்கிறது. அத்தகு மனிதன், நான்கு வகை வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} அனைத்தின் தகுதிகளையும் {புண்ணியங்களையும்} அடைகிறான்.(46) முதியோரும், சிறுவர்களும் கொல்லப்படக்கூடாது; பெண்டிரும் கொல்லப்படக்கூடாது; தப்பி ஓடுபவனோ, தன் உதடுகளில் வைக்கோலைக் கொண்டவனோ கொல்லப்படக் கூடாது; “நான் உன்னவன்” என்று சொல்பவனும் கொல்லப்படக்கூடாது[5].(47) திதி மற்றும் தனு ஆகியோரின் மகன்களான ஜம்பன், விருத்திரன், பலன், பாகன், சதமாயன் {மஹாகாயன்}, விரோசனன், தடுக்கப்பட முடியாதவனான நமுசி, எண்ணிலடங்கா மாயைகளைக் கொண்டவனான சம்பரன், விப்ரசித்தி ஆகியோரையும், பிரஹ்லாதனையும் போரில் கொன்ற பிறகே நான் தேவர்களின் தலைவனாக ஆனேன்.” என்றான் {இந்திரன்}.(48,49)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சக்ரன் {இந்திரன்} சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டு, அவற்றை அங்கீகரித்த மன்னன் அம்பரீஷன், (போரைத் தங்கள் வழிமுறைகளாகக் கொண்டு) போர் வீரர்கள் எவ்வாறு (அழகிய சொர்க்கலோகங்களை அடைவதைப் பொறுத்தவரையில்) தங்களுக்கான வெற்றியை ஈட்டினார்கள் என்பதை அறிந்து கொண்டான்” {என்றார் பீஷ்மர்}.(50)
வீரனும், கோழையும்! – சாந்திபர்வம் பகுதி – 99-மிதிலையின் மன்னன் ஜனகன் தன் படைகளை உற்சாகப்படுத்திப் போருக்கு அனுப்பிய வரலாற்றையும், அணிவகுத்தல், பகைவரைத் துரத்துதல், வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளல் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக, பிரதர்த்தனனுக்கும், மிதிலையின் ஆட்சியாளனுக்கும் {ஜனகனுக்கும்} இடையில் நடைபெற்ற போரானது பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(1) மிதிலையின் ஆட்சியாளனான ஜனகன், போரெனும் வேள்வியில் தன்னை நிறுவிக் கொண்ட பிறகு, (அப்போரின் தொடக்கத்தில்) தன் துருப்புகள் அனைத்தையும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தான். ஓ! யுதிஷ்டிரா, நான் அக்கதையைச் சொல்கிறேன் கேட்பாயாக.(2) அனைத்தின் உண்மையை அறிந்தவனும், மிதிலையின் உயர் ஆன்ம மன்னனுமான ஜனகன், தன் போர்வீரர்களுக்குச் சொர்க்கம் மற்றும் நரகம் ஆகிய இரண்டையும் காட்டினான்.(3) அவன் {ஜனகன்} அவர்களிடம் {தன் படைவீரர்களிடம்}, “அச்சமில்லாமல் போரிடுபவர்களுக்காக ஒதுக்கப்படுபவையும், பெரும் காந்தியைக் கொண்டவையுமான இவ்வுலகங்களைப் பார்ப்பாயாக. கந்தர்வப் பெண்கள் நிறைந்த அந்த உலகங்கள், விருப்பம் அனைத்தையும் அருள வல்லவையும், அழிவற்றவையுமாகும்.(4) மறுபுறம், போரில் இருந்து தப்பி ஓட நினைப்போருக்கான நரக உலகங்கள் அதோ இருக்கின்றன. அவர்கள் அங்கே அழிவில்லாமல் நீடிக்கும் மகிமையின்மையில் அழுகுவார்கள்.(5) உங்கள் உயிரைக் கைவிடத் தீர்மானித்து, உங்கள் எதிரிகளை நீங்கள் வெல்வீராக. மகிமையற்ற நரகத்தில் வீழ்ந்துவிடாதீர்கள். வீரர்களைப் பொறுத்தவரையில், (போரில்) உயிரை விடுவதே சொர்க்கத்திற்கான அவர்களின் இன்பக் கதவாகும்” என்றான் {ஜனகன்}.(6)
ஓ! பகை நகரங்களை அடக்குபவனே {யுதிஷ்டிரா}, இவ்வாறு தங்கள் மன்னனால் சொல்லப்பட்ட மிதிலையின் போர்வீரர்கள், தங்கள் ஆட்சியாளர்களை மகிழ்விக்கும் வகையில் போரில் தங்கள் எதிரிகளை வென்றார்கள். உறுதியான ஆன்மா கொண்டோர் போரில் முன்னணியில் நிற்கும் அவர்களது நிலையையே ஏற்க வேண்டும்.(7) தேர்வீரர்கள், யானைகளுக்கு மத்தியில் நிறுத்தப்பட வேண்டும். தேர்வீரர்களுக்குப் பின்னால் குதிரைவீரர்கள் நிற்க வேண்டும். அதற்கும் பின்னால் கவசம் பூண்ட காலாட்படையினர் அனைவரும் நிறுத்தப்பட வேண்டும்.(8) எந்த மன்னன் தன் அணிவகுப்பை இவ்வகையில் அமைக்கிறானோ அவன் எப்போதும் தன் எதிரிகளை வெல்கிறான். எனவே, ஓ! யுதிஷ்டிரா, போர் வியூகமானது எப்போதும் இவ்வாறே அமைக்கப்பட வேண்டும்.(9) கோபத்தால் நிறையும் வீரர்கள், நியாயமாகப் போரிடுவதன் மூலம் சொர்க்கத்தின் அருள்நிலையை வெல்லவே விரும்புவார்கள். பெருங்கடலைக் கலங்கடிக்கும் மகரங்களைப் போல அவர்கள் பகைவரின் படையணிகளைக் கலங்கடிப்பார்கள்.(10)
ஒருவருக்கொருவர் உறுதிகூறிக் கொள்ளும் அவர்கள், (தங்களுக்கு மத்தியில்) உற்சாகமற்று இருப்பவர்களை மகிழச் செய்ய வேண்டும். வெற்றியாளன் (வலிய தீங்குகள் ஏதும் செய்யாமல்) புதிதாக வென்ற நிலத்தைப் பாதுகாக்க வேண்டும். அவன் {வெற்றியாளன்} முறியடிக்கப்பட்ட தன் எதிரியைத் தன் துருப்புகளைக் கொண்டு அதிகமாகத் தொடர்ந்து துரத்தக்கூடாது.(11) முறியடிக்கப்பட்டுச் செல்பவர்கள், தங்கள் பாதுகாப்பில் நம்பிக்கையிழந்து தங்களைப் பின்தொடர்பவர்களைத் தாக்கத் தொடங்கினால் அது பொறுத்துக் கொள்ளப்பட முடியாததாக இருக்கும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதன் காரணமாகவே நீ முறியடிக்கப்பட்ட எதிரியை அதிகமாகத் துரத்த உன் துருப்புகளைப் பணிக்ககூடாது.(12) துணிவுமிக்கப் போர்வீரர்கள், வேகமாக ஓடிக்கொண்டிருப்போரைத் தாக்க விரும்புவதில்லை. முறியடிக்கப்பட்ட எதிரி அதிகமாகப் பின்தொடரக்கூடாது என்பதற்கு இதுவும் மற்றொரு காரணமே.(13) அசையாதன அசைவனவற்றால் உட்கொள்ளப்படுகின்றன; பற்களற்ற உயிரினங்கள், பற்களுள்ளவற்றால் விழுங்கப்படுகின்றன; நீரானது தாகம் கொண்டோரால் குடிக்கப்படுகிறது; கோழைகள் வீரர்கள் விழுங்கப்படுகிறார்கள்.(14)
கோழைகள் தாங்களும் வெற்றியாளர்களைப் போல முதுகுகளும், வயிறுகளும், கரங்களும், கால்களும் கொண்டவர்களாக இருப்பினும் தோல்வியையே நீடிக்கச் செய்வார்கள். அச்சத்தால் பீடிக்கப்பட்டோர், துணிவுமிக்கோர் முன்னிலையில், கரங்களைக் கூப்பித் தலை வணங்கி நிற்பார்கள்.(15) தகப்பனின் தோள்களில் இருக்கும் மகனைப் போல இந்த உலகமானது வீரர்களின் தோள்களில் ஓய்ந்திருக்கிறது. எனவே, அனைத்து சந்தர்ப்பங்களிலும் வீரனானவன் மரியாதைக்குத் தகுந்தவனாவான்.(16) மூன்று உலகங்களிலும் வீரத்தைவிட உயர்ந்தது வேறேதும் இல்லை. வீரனே அனைத்தையும் பாதுகாத்துப் பேணி வளர்க்கிறான், அனைத்துப் பொருட்களும் வீரனைச் சார்ந்தே இருக்கின்றன” என்றார் {பீஷ்மர்}.(17)
போர்த்திட்டப் பயன்பாடு! – சாந்திபர்வம் பகுதி – 100-உண்மை, அறிவு, நன்னடத்தை மற்றும் திட்டத்துடன்கூடிய வழிமுறைகளால் அறம் உறுதியாக நிலைக்கச் செய்யப்படுகிறது என்றும் அவற்றில் திட்டத்துடன் கூடிய வழிமுறைகளே உடனடி பலன்களை உண்டாக்கவல்லைவை என்றும் சொல்லும் பீஷ்மர், அவற்றைக் குறித்து மேலும் விரிவாகச் சொல்வது…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பாரதக் குலத்தின் காளையே, வெற்றியை விரும்பும் மன்னர்கள், அறவிதிகளுக்குச் சற்றே எதிராகச் செயல்பட்டாவது போரில் தங்கள் துருப்புகளை எவ்வாறு வழிநடத்த வேண்டும்?”(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அறமானது உண்மையால் {சத்தியத்தால்} உறுதியாக நிலைக்கச் செய்யப்படுகிறது என்று சிலர் சொல்கிறார்கள்; அறிவால் எனச் சிலரும்; நன்னடத்தையால் எனச் சிலரும், வழிமுறைகள் மற்றும் திட்டங்களின் {சூழ்ச்சியின்} பயன்பாடு ஆகியவற்றால் {உறுதியாக நிலைக்கச்செய்யப்படுகிறது} என்று சிலரும் சொல்கிறார்கள்[1].(2) உடனடி பலனை உண்டாக்கவல்ல வழிமுறைகளும், திட்டங்களும் எவை என்பது குறித்து நான் இப்போது உனக்குச்சொல்லப் போகிறேன். நலம் சார்ந்த கட்டுபாடுகள் அனைத்தையும் மீறும் கள்வர்கள், உடைமைகளையும். அறத்தகுதியையும் நித்தம் நித்தம் அழிப்பவர்களாக இருக்கிறார்கள்.(3) அவர்களைத் தடுத்துக் கட்டுப்படுத்துவதற்குச் சாத்திரங்களில் குறிப்பிடப்படும் திட்டங்கள் என்னென்ன என்பதை நான் உனக்குச் சொல்கிறேன். அனைத்துச் செயல்களின் வெற்றிக்குமான அந்த வழிமுறைகளைச் சொல்கிறேன் கேட்பாயாக.(4)நேர், குறுக்கு ஆகிய இரண்டு புத்திகளையும் மன்னன் பயன்படுத்தத் தயாராக {அவற்றை அறிந்து வைத்து} இருக்க வேண்டும். குறுக்கு புத்தியை அவன் அறிந்திருந்தாலும், (பிறருக்குத் தீங்கிழைக்க) அதைப் பயன்படுத்தக் கூடாது. தனக்கு ஏற்படும் ஆபத்துகளைத் தடுக்க அதைப் பயன்படுத்தலாம்.(5) பகைவர்கள், மன்னனுக்குத் தீங்கிழைப்பதற்காக, (அமைச்சர்கள், அல்லது துருப்புகள், அல்லது கூட்டாளிகள், அல்லது குடிமக்கள் ஆகியோருக்கு மத்தியில்) அடிக்கடி ஒற்றுமையின்மையை உண்டாக்க முனைவார்கள். கபடம் அறிந்த மன்னன், பகைவரின் அச்செயல்களுக்கு வஞ்சகத்தின் துணையுடன் எதிர்வினையாற்றலாம்.(6) யானைகளின் உடல்களைக் காக்கும் தோற்கவசங்கள், அதே பொருளாலான காளைகளுக்கான கவசங்கள், எலும்புகள், முட்கள், இரும்பாலான கூர்முனை ஆயுதங்கள், இரும்புக்கவசங்கள், வெண்சாமரங்கள்,(7) கூரியவையும், நன்கு கடினமாக்கப்பட்டவையுமான ஆயுதங்கள், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தாலான அனைத்து வகைக் கவசங்கள், பல்வேறு வண்ணங்களிலான கொடிகள் மற்றும் கொடிமரங்கள்,(8) பெருங்கூர்மையுடைய வாள்கள், வேல்கள், கத்திகள், போர்க்கோடரிகள், ஈட்டிகள், கேடயங்கள் ஆகியவை {போர்கருவிகள்} அபரிமிதமாக உற்பத்தி செய்யப்பட்டு, கிடப்பில் வைக்கப்பட்ட வேண்டும்.(9)
ஆயுதங்கள் அனைத்தும் முறையாகக் கூர்த்தீட்டப்பட வேண்டும். படைவீரர்களுக்கு உற்சாகமும், உறுதியும் ஊட்டப்பட வேண்டும். சைத்ரம் {சித்திரை}, அல்லது அக்ரஹாயண {மகரசீரிஷ – மார்கழி} மாதத்தில் துருப்புகள் {போருக்குப்} புறப்படுவதே முறையாகும் {சிறப்பாகும்}.(10) அக்காலத்தில்தான் பயிர்கள் முதிர்கின்றன, நீரும் அரிதாவதில்லை. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, வருடத்தின் அந்தக் காலங்களில்தான் அதிகக் குளிரோ, வெப்பமோ இருப்பதில்லை.(11) எனவே, துருப்புகள் அக்காலத்தில் நகரத்தப்பட வேண்டும். எனினும், பகைவன் துன்புறும் காலம் நேரும்போது (இத்தகு உகந்த காலத்திற்காகக் காத்திராமல்) துருப்புகளை உடனடியாகப் புறப்படச் செய்ய வேண்டும். பகைவரை அடக்கும் காரியத்தில் படைகளை நகர்த்த இவையே (இந்த இரண்டு காலங்களும், பகைவனின் ஆபத்துக் காலங்களுமே) சிறந்த தருணங்களாகும்.(12) (படைகளை நகர்த்தும் போது), நீர் நிறைந்ததும், நெடுகிலும் புற்கள் இருப்பதும், சமமானதும், அணிவகுத்துச் செல்ல எளிமையானதுமான சாலை {பாதை} பின்பற்றப்பட வேண்டும். அந்தச் சாலைக்கு அருகே உள்ள பகுதிகள் (சாலைக்கு இரு மருங்கிலும் உள்ள பகுதிகள்), திறன்மிக்கவர்களும், வனங்கள் குறித்த நல்லறிவு கொண்டவர்களுமான ஒற்றர்களின் மூலம் முன்னதகாவே {சோதிக்கப்பட்டு} உறுதி செய்யப்பட வேண்டும்.(13) துருப்பினரை விலங்குகளைப் போல வனப்பகுதிகளின் ஊடாக அணிவகுக்கச் செய்யக்கூடாது. எனவே, வெற்றியை விரும்பும் மன்னர்கள் தங்கள் துருப்புகள் அணிவகுத்துச் செல்ல நல்ல சாலைகளைப் பின்பற்ற வேண்டும்[2].(14)பலமும், உயர்குடி பிறப்பும் கொண்ட துணிச்சமிக்க மனிதர்கள் படையின் முன்னணியில் நிறுத்தப்பட வேண்டும். கோட்டைகளைப் பொறுத்தவரையில், அவை சுவர்களையும், சுற்றிலும் நீர் நிறைந்த ஓர் அகழியையும், ஒரே ஒரு நுழைவாயிலையும் கொண்டவையாக இருப்பதே புகழத்தக்கது.(15) படையெடுத்துவரும் பகைவர்களைப் பொறுத்தவரையில், அதனுள் {கோட்டையினுள்} இருந்தே அவர்களைத் தடுக்கலாம். முகாம் அமைப்பதைப் பொறுத்தவரையில், அது திறந்த வெளியில் இருப்பதைவிடக் காடுகளுக்கு அருகே இருப்பதே சிறப்பானது எனப் போரை அறிந்தவர்களாலும், படை சார்ந்த சாதனைகளைச் செய்தோராலும் கருதப்படுகிறது. முகாமானது வனத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட வேண்டும்.(16,17) அத்தகு இடத்தில் முகாமை அமைத்து, காலாட்படையினரை பாதுகாப்பான நிலையில் நிறுவி, பகைவன் வந்ததும் அவனுடன் மோதுவது, ஆபத்தையும், துயரத்தையும் விலக்கும் வழிமுறைகளாகும். (18)துருப்புகள், உர்ச மேஜர் {ஸப்தரிஷிநக்ஷத்திரங்கள்}[3] என்றழைக்கப்படும் நட்சத்திரக் கூட்டத்தைத் தங்கள் பின்னே கொண்டு, மலைகளைப் போன்ற நிலைத்து நின்று போரிட வேண்டும். இவ்வழிமுறையின் மூலம் ஒருவனால் தடுக்கப்பட முடியாத எதிரிகளையும்கூட வெல்ல முடியும்.(19)காற்று, சூரியன் மற்றும் சுக்கிரனெனும் கோள் ஆகியவை தங்கள் பின்னே இருந்து வீசவும், ஒளிரவும் செய்யும் வகையில் துருப்பினர் தங்கள் நிலைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். ஓ! யுதிஷ்டிரா, வெற்றியடையும் வழிமுறைகளில் காற்று, சூரியனை விட மேன்மையானது, சூரியன் சுக்கிரனை விட மேன்மையானவன்[4].(20)போரை அறிந்த மனிதர்கள், புழுதியற்றதும், ஈரமற்றதும், சமமானதும், அதிகக் கற்கள் இல்லாததுமான பகுதியானது, குதிரைப்படையின் செயல்பாட்டுக்கு மிகத் தகுந்தது என அங்கீகரிக்கின்றனர்.(21) புழுதி மற்றும் குழிகளற்ற களமானது தேர்வீரர்களுக்குத் தகுந்ததாகும். புதர்கள் அடர்ந்ததும், பெரும் மரங்கள் நிறைந்ததும், நீருள்ளதுமான பகுதி யானை வீரர்களுக்குத் தகுந்ததாகும்.(22) பெரும் மரங்கள் நிறைந்ததும், மூங்கில் மற்றும் பிரம்புப்புதர்கள் அடர்ந்ததும், மலைசார்ந்த அல்லது வனம் சார்ந்த அடைதற்கரிய பல இடங்களைக் கொண்டதுமான ஒரு பகுதியானது, யானைப்படையின் செயல்பாட்டுக்கு மிகவும் தகுந்ததாகும்.(23) ஓ! பாரதா, பெரும் யானைப்படைப்பிரிவைக் கொண்ட ஒரு படையானது, மிகப் பலமானதாகக் கருதப்படுகிறது. தேர் மற்றும் குதிரைவீரர்கள் பெருகியிருக்கும் ஒரு படையானது, (மழையற்ற) தெளிவான நாளில் மிகச் சிறந்த பலனளிக்கும் எனக் கருதப்படுகிறது.(24) காலாட்படை வீரர்களும், யானைகளும் நிறைந்த ஒரு படையானது, மழைக்காலத்தில் மிகச் சிறந்த பலனை அளிக்கும். (பல்வேறு வகையான படைகளின் தன்மைகள், அவற்றை அணிவகுத்து, நிறுவி வழிநடத்தும் முறைகள் ஆகிய) இந்தக் குறிப்புகளைக் கவனத்தில் கொள்ளும் மன்னன், காலம் மற்றும் இடத்தின் பண்புகளிலும் தன் கவனத்தைத் திருப்ப வேண்டும்.(25)
எந்த மன்னன், இந்தக் கருத்துகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு, சரியான நட்சத்திரக்கூட்டம் மற்றும் மங்கலமான சந்திர நாள் ஆகியவற்றின் கீழ் {போருக்குப்} புறப்படுவானோ, அவன் தன் துருப்புகளை முறையாக வழிநடத்தி எப்போதும் வெற்றியையே அடைவான்.(26) உறங்குபவர்களையோ, தாகத்திலிருப்பவர்களையோ, களைப்பாக இருப்பவர்களையோ, கவசம் நழுவியவர்களையோ, முக்தியில் தன் இதயத்தை நிலைக்கச் செய்தவனையோ, தப்பி ஓடுபவனையோ, (ஆயத்தமில்லாமல்) சாலையில் நடந்த செல்பவனையோ, உணவு உண்டு கொண்டிருப்பவனையோ, பானம் செய்து கொண்டிருப்பவனையோ,(27) பைத்தியக்காரனையோ, மனநிலை குலைந்தவனையோ, மரணக்காயமடைந்தவனையோ, காயங்களால் மிகவும் பலவீனமடைந்தவனையோ, நம்பிக்கைக்குரியவனாக இருப்பவனையோ, ஒரு காரியத்தைத் தொடங்கிவிட்டு அதை முடிக்க இயலாமல் இருப்பவனையோ, குறிப்பிட்ட கலையில் திறம் பெற்றவனையோ, துயரத்தில் இருப்பவனையோ, கால்நடைத் தீவனம் கொள்முதல் செய்ய முகாமை விட்டு வெளியே செல்பவனையோ, முகாம்களை அமைப்பவனையோ {கட்டுபவனையோ}, முகாமின் தொண்டர்களையோ {பணியாட்களையோ},(28) மன்னன், அல்லது அவனது அமைச்சர்களின் வாயில்காப்போராகப் பணி செய்பவர்களையோ, (படைத்தலைவர்களுக்கு) பணிவிடை செய்பவர்களையோ, பணியாளர்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்களையோ எவனும் ஒருபோதும் கொல்லக்கூடாது.(29)
உன் போர்வீரர்களில், பகைவரின் படையணிகளை உடைப்பவர்களுக்கும், பின்வாங்கிச் செல்லும் உன் துருப்புகளை மீண்டும் திரட்டுபவர்களுக்கும், இரட்டிப்பான ஊதியம் வழங்கி, உணவு, பானம் மற்றும் உனக்கு இணையான ஆசனம் ஆகியவை கொடுக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட வேண்டும்.(30) அவர்களில் பத்து படைவீரர்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்கள், நூறு படைவீரர்களுக்குத் தலைவர்களாக நியமிக்கப்பட வேண்டும். மேலும் (அவர்களில்) நூறு படைவீரர்களுக்குத் தலைவனாக இருக்கும் கருத்துள்ள வீரன், ஆயிரம் படைவீரர்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட வேண்டும்.(31)
{போரின் போது} முக்கியமான போர்வீரர்களைத் திரட்டி, அவர்களிடம், “வெற்றியடைய உறுதியேற்போம், ஒருபோதும் ஒருவரையொருவர் கைவிடோம்.(32) அச்சமடைந்தோர் இங்கேயே இருக்கட்டும். போரின் நெருக்கத்தில் வீரத்தைப் புறக்கணித்து, தங்கள் தலைவர்கள் கொல்லப்பட விடுபவர்களும் இங்கேயே இருக்கட்டும்.(33) போரில் இருந்து தப்பி ஓடாதவர்களும், தங்கள் தோழர்கள் கொல்லப்பட அனுமதியாதவர்களும் வரட்டும். தங்களையும், தங்கள் தோழர்களையும் பாதுகாக்கும் அவர்கள் நிச்சயம் போரில் எதிரியைக் கொல்வார்கள்.(34) போரில் இருந்து தப்பி ஓடுவதென்பது, செல்வ இழப்பு, மரணம், புகழ்க்கேடு, நிந்தனை ஆகியவற்றை ஏற்படுத்தும். போரில் இருந்து தப்பி ஓடுபவனும், உதடுகளையும், பற்களையும் இழந்தவனும், ஆயுதங்கள் அனைத்தையும் கைவிடுபவனும், எதிரியால் கைப்பற்றப்படுபவனுமான மனிதன் ஏற்பில்லாது, கடுஞ்சொற்களைக் கேட்க வேண்டிருக்கும். அத்தகு தீய விளைவுகள் நம் பகைவீரர்களுக்கு உண்டாகட்டும்.(35,36)
போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் மனிதர்களில் இழிந்தோராவர். அவர்கள் வெறுமனே பூமியில் மனிதர்களின் எண்ணிக்கையைப் பெருக்குகிறார்கள். எனினும், ஆண்மையைப் பொறுத்தவரையில் அவர்கள் இம்மையிலும், மறுமையிலும் அவ்வாறிருக்க மாட்டார்கள்.(37) ஓ! ஐயா {யுதிஷ்டிரனே}, வெற்றிபெறும் பகைவர்கள் உற்சாகமாகச் செல்வார்கள், ஓடும் எதிராளிகளைத் தொடர்ந்து செல்பவர்கள் எனப் பாணர்களால் அவர்கள் துதிக்கப்படுவார்கள்.(38) போருக்கு வரும் எதிரிகள் ஒரு மனிதனின் புகழை அழித்தால், அவன் அடையும் துயரம் மரணத்தைவிடக் கொடியதாகும்.(39) வெற்றியே அறத்தகுதி மற்றும் அனைத்து வகை இன்பங்களுக்கும் வேர் என்பதை அறிவீர்களாக. எது பெரும் துயரம் என்று கோழைகளால் கருதப்படுமோ, அதை வீரர்கள் உற்சாகமாகச் சுமப்பார்கள்.(40) சொர்க்கத்தை அடையத் தீர்மானித்து, உயிரையே துச்சமாக மதித்து, வெற்றி அல்லது மரணம் என்ற தீர்மானத்துடன் போரிட்டு, இறுதி அருளை சொர்க்கத்தில் அடைவோம்.(41)” என்று சொல்ல வேண்டும்.
இத்தகு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டு, உயிரையே விட ஆயத்தமாக இருக்கும் வீரர்கள், பகைவரின் படையணிகளை எதிர்த்துத் துணிவுடன் விரைய வேண்டும்.(42) படையின் முன்னணியில் வாள்கள் மற்றும் கேடயங்களுடன் கூடிய மனிதர்கள் நிறுத்தப்பட வேண்டும். பின்புறம் தேர்ப்படை நிறுத்தப்பட வேண்டும். அவற்றின் இடைவெளியில் பிற வகைப் போராளிகள் நிறுத்தப்பட வேண்டும்.(43) பகைவரைத் தாக்கும் ஏற்பாடாக இஃது இருக்க வேண்டும். படையில் உள்ள தேர்ந்த போர்வீரர்கள் முன்னணியில் இருந்து போரிட வேண்டும். அவர்கள் பின்னால் இருக்கும் தங்கள் தோழர்களைக் காக்க வேண்டும்.(44) படையினருக்கு மத்தியில் பலத்திலும், துணிவிலும் முதன்மையானவர்களாகக் கருதப்படுபவர்கள், முன்னணியில் நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்குப் பின்னால் பிறர் நிற்க வேண்டும்.(45)
அச்சமடைந்தோருக்கு ஆறுதலையும்ம் உற்சாகத்தையும் கவனமாக அளிக்க வேண்டும். பலவீனமான போராளிகளும், (எதிரிக்குப்) படையின் எண்ணிக்கையைக் காட்டுவதற்காகவாவது களத்தில் (இருந்து விலக்கப்படாமல்) நிறுத்தப்பட வேண்டும்[5]. (46) துருப்புகள் {துருப்புகளின் எண்ணிக்கை} சொற்பமாக இருப்பின், அவர்கள் நெருங்கியிருந்து போரிடுமாறு செய்யப்பட வேண்டும். சில நேரங்களில், தலைவன் விரும்பினால், நெருக்கமாக இருக்கும் வியூகமானது, பரந்து விரிந்ததாக அமைக்கப்படலாம்.சிறு எண்ணிக்கையிலான துருப்புகள் பெரும் எண்ணிக்கையிலானோருடன் போரிடும்போது, சூசிமுகம் என்றழைக்கப்படும் வியூகம் அமைக்கப்பட வேண்டும்[6].(47) சிறுபடையானது, பெரும்படையுடன் மோதும்போது, அந்தச் சிறு படையின் தலைவன், தன் மக்களின் கரங்களைக் குலுக்கி, உரக்கக் கூச்சலிடும் வகையில், “பகைவர்கள் பிளக்கப்படுகிறார்கள்! பகைவர்கள் பிளக்கப்படுகிறார்கள்!” என்று கூவ வேண்டும்.(48)அவர்களில் பலமிக்கோர், தங்கள் தோழர்களிடம், “புதிய நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அச்சமில்லாமல் உங்கள் எதிரிகளைத் தாக்குங்கள்” என்று உரக்கச் சொல்ல வேண்டும்.(49) எஞ்சியோர் அனைவருக்கும் முன்னால் நிற்பவர்கள், உரக்க கூச்சலிட்டபடி, பல்வேறு வகைகளிலான ஒலிகளை உண்டாக்கியபடி, கிரகசங்கள், கொம்புகள், பேரிகைகள், மிருதங்கங்கள் மற்றும் பணவங்களை முழங்க வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(50)(பூமியின் வடக்கு பக்கத்தில் மிகக் கடைகோடியில் உள்ள துருவ நட்சத்திரமே (Pole Star) பூமியில் உள்ள அனைவருக்கும், எந்த நாட்டில் உள்ளவர்களுக்கும், கடல் பயணத்தில் உள்ளவர்களுக்கும், எந்த காலத்திலும் வடக்கு எது என்று வழிகாட்ட உதவும் மிக மிக முக்கியமான நட்சத்திரமாகும். இந்த துருவ நட்சத்திரத்திற்கு (Pole Star) சற்று தொலைவிலேயே நாம் வசிஷ்ட நட்சத்திரத்தை (Mizar Star) பார்க்கலாம். இந்த வசிஷ்ட நட்சத்திரத்திற்கு பின்னாலேயே அதை ஒட்டியே இருப்பதும் கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியக்கூடியதுதான் இந்த அருந்ததி நட்சத்திரம் (Alcor Star) ஆகும். இந்த அருந்ததி நட்சத்திரத்தை திருமணச் சடங்குகளில் பெண்ணும் மாப்பிள்ளையையும் பார்க்கத்தூண்டுவதே நமது இந்திய மரபாகும்.)
போர்வீரர்களின் அங்கலக்கணம்! – சாந்திபர்வம் பகுதி – 101-எந்தெந்த நாடுகளைச் சார்ந்தோர், எந்தெந்தப் போர்முறைகளில் வல்லவர்கள் என்பதையும், போர்வீரர்களின் அங்க அடையாளங்களையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “போருக்குத் தகுந்தவர்களாகத் தங்களை வகைப்படுத்திக் கொள்ளப் போராளிகள் என்ன மனநிலையை மற்றும் என்ன நடத்தையைக் கொண்டிருக்க வேண்டும்? அவர்கள் எவ்வாறு கவசமணிந்திருக்க வேண்டும்? எவ்வாறு ஆயுதந்தரித்திருக்க வேண்டும்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “(போராளிகளில் {அந்தந்த நாடுகளைச் சேர்ந்த} குறிப்பிட்ட குழுவினரின்) பயன்பாட்டில் மிகப் பரிச்சயமாக இருக்கும் ஆயுதங்களையும், வாகனங்களையும் {அவர்கள்} ஏற்றுக்கொள்வதே முறையாகும். துணிச்சல்மிக்கப் படைவீரர்கள், அந்த ஆயுதங்களையும், வாகனங்களையும் ஏற்றுக்கொண்டே போரில் ஈடுபடுகிறார்கள்.(2)
காந்தாரர்கள், சிந்துக்கள், சௌவீரர்கள் ஆகியோர் தங்கள் நகங்கள் மற்றும் வேல்களைக் கொண்டு சிறப்பாகப் போரிடுவார்கள். அவர்கள் துணிச்சல்மிக்கவர்களாகவும், பெரும்பலம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களது படைகள், அனைத்துப் படைகளையும் வெல்லவல்லவையாக இருக்கின்றன.(3)
உசீநரர்கள், பெரும் பலம் கொண்டவர்களாகவும், அனைத்து வகை ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும் திறன்மிக்கவர்களாக இருக்கிறார்கள்.
கிழக்கத்தியர்கள், யானைகளின் முதுகுகளில் இருந்து போரிடுவதில் திறன்பெற்றவர்களாகவும், நீதியற்ற போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களாகவும் இருக்கின்றனர்.(4)
யவனர்கள், காம்போஜர்கள், மதுராவைச் சுற்றிலும் வசிப்போர் ஆகியோர் வெறுங்கரங்களால் போரிடுவதில் திறன்பெற்றவர்களாக இருக்கிறார்கள்[1].தெற்கத்தியர்கள் தங்கள் கரங்களில் வாளுடன் போரிடுவதில் திறம்பெற்றவர்களாக இருக்கிறார்கள்[2].(5)பெரும் பலமும், பெரும் துணிவும் படைத்தோர் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் பிறக்கிறார்கள் என்பது நன்கறியப்பட்டது. அவர்களின் அறிகுறிகளை விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(6)
சிங்கம், அல்லது புலி போன்ற குரலையும், கண்களையும் கொண்டோர், சிங்கம் மற்றும் புலியின் நடையைக் கொண்டோர், பாம்பு அல்லது புறா போன்ற கண்களைக் கொண்டோர் ஆகியோர் அனைவரும், பகைவரின் படையணிகளைக் கலங்கடிக்கவல்லவர்கள் ஆவர்[3].(7). மான் போன்ற குரலும், சிறுத்தை, அல்லது காளை போன்ற கண்களும் கொண்டவர்கள் பெரும் சுறுசுறுப்புக் கொண்டவர்கள் ஆவர். மணியோசைக்கு ஒப்பான குரலைக் கொண்டவர்கள் எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடியவர்களாகவும், தீச்செயல் புரியக்கூடியவர்களாகவும், கோபம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(8) மேகங்களைப் போன்ற ஆழ்ந்த ஒலியைக் குரலாகக் கொண்டவர்கள், கோபம் நிறைந்த முகங்களைக் கொண்டவர்கள், ஒட்டகங்களைப் போன்ற முகங்களைக் கொண்டவர்கள், கோணலான மூக்கும், நாக்கும் கொண்டவர்கள் ஆகியோர் பெரும் வேகத்தைக் கொண்டவர்களாகவும், பெருந்தொலைவுக்குத் தங்கள் ஆயுதங்களை ஏவவோ, வீசவோ கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.(9) பூனை போன்று வளையும் உடல்களும், மெலிந்த முடியும், மெலிந்த தோலும் கொண்டவர்கள், பெரும் வேகம் கொண்டவர்களாகவும், ஓய்வறியாதவர்களாகவும், கிட்டத்தட்ட போரில் வெட்டப்பட முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.(10)உடும்பு போன்ற மூடிய கண்களைக் கொண்ட சிலர், மென்மையான மனநிலை கொண்டவர்களாகவும், குதிரையின் வேகமும், குரலும் கொண்டவர்கள், எதிரிகள் அனைவருடனும் போரிடத் தகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(11) கடினமான உடல் படைத்தவர்களாக, அழகானவர்களாக, கட்டுடல் கொண்டவர்களாக, அகன்ற மார்பைக் கொண்டவர்களாக இருப்போர், பகைவனின் பேரிகையையோ, எக்காளத்தையோ கேட்டதும் கோபமடைவோர், அனைத்து வகை அமளிகளிலும் மகிழ்ச்சியில் திளைப்போர்,(12) ஈர்ப்பைக் குறிக்கும் வகையிலான கண்களை, அல்லது வெளியில் பிதுங்கிய கண்களை, அல்லது பச்சை நிறக் கண்களைக்[4] கொண்டோர், நெரிந்த புருவங்களுடன் கருமையடைந்த முகங்களைக் கொண்டோர், கீரிப்பிள்ளையைப் போன்ற கண்களைக் கொண்டோர் ஆகிய அனைவரும் துணிச்சல்மிக்கவர்களாகவும், போரில் தங்கள் உயிர்களைக் கைவிட வல்லவர்களாகவும் இருக்கிறார்கள்.(13) கோணலான கண்களும், அகன்ற நெற்றியும், சதைப்பற்றில்லாத கன்னங்களும், வஜ்ரங்களைப் போன்ற உறுதிமிக்கக் கரங்களும், வளையக் குறிகள் கொண்ட விரல்களும், மெலிந்த உடல்களும், புடைத்துத் தெரியும் நரம்புகளும் கொண்டோர்,(14) போர்க்களத்தில் விரைந்து செல்லக்கூடியவர்களாவர். மதங்கொண்ட யானைகளைப் போன்ற அவர்கள் தடுக்கப்பட முடியாதவர்களாக இருகிறார்கள்.(15)பச்சைநிறத்தில்[5] பிளந்து சுருளாக இருக்கும் மயிர் கொண்டவர்கள், பருத்த விலாப்புறங்களுடன் கொளுத்த சதை கொண்டவர்கள், உயர்ந்த தோள்களையும், அகன்ற கழுத்துகளையும் கொண்டவர்கள், அச்சமேற்படுத்தும் முகங்களையும், பருத்த ஆடுதசைகளையும் கொண்டவர்கள்,(16) (வாசுதேவனின் குதிரையான) சுக்ரீவத்தைப் போன்றோ, வினதையின் மகனான கருடனின் வாரிசுகளைப் போன்றோ சீற்றமுடையவர்கள், உருண்ட தலைகள், அகன்ற வாய், பூனைகளைப் போன்ற முகங்கள் ஆகியவற்றைக் கொண்டோர்,(17) கீச்சுக்குரலும், கோபம் நிறைந்த இயல்பும் கொண்டோர், ஆரவாரத்துடன் போரில் விரைவோர், தீய நடத்தையும், நிறைந்த அகந்தையும் கொண்டோர், பயங்கர முகத்தோற்றங்களைக் கொண்டோர், வெளிப்புற மாவட்டங்களில் வாழ்வோர் ஆகிய அனைவரும்,(18) தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்து, போரில் இருந்து ஒருபோதும் தப்பி ஓடாதவர்களாக இருக்கிறார்கள். அத்தகு துருப்பினரே படையின் முன்னணியில் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் எப்போதும் போரில் தங்கள் எதிரிகளைக் கொன்று, புறமுதுகிடாமல் கொல்லப்படுபவர்களுமாக இருக்கிறார்கள்.(19) தீய நடத்தையும் அந்நிய பழக்க வழக்கங்களும் கொண்டோர், மென்மையான பேச்சைத் தோல்வியின் அறிகுறியாகக் கருதுகிறர்கள். அவர்கள் மென்மையாக நடத்தப்பட்டால், எப்போதும் அரசுக்கு எதிரான கோபத்தையே அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள்” என்றார் {பீஷ்மர்}.(20)
இணக்கக்கலை! – சாந்திபர்வம் பகுதி – 102-வெற்றிபெறத்தக்க அறிகுறிகள் மற்றும் சகுனங்களையும், போர் தொடுக்கும் முன்பும், போரிடும்போதும், வெற்றியடைந்த பிறகும் மன்னன் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும், சமரசக் கலையைக் குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒரு படை அடையப் போகும் (எதிர்கால) வெற்றியின் நன்கறியப்பட்ட அறிகுறிகள் என்னென்ன? நான் அவற்றை அறிய விரும்புகிறேன்” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒரு படையின் (எதிர்கால) வெற்றிக்கான நன்கறியப்பட்ட அறிகுறிகள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்வேன்.(2) தேவர்கள் கோபமடைந்து, மனிதர்கள் விதியால் உந்தப்படும்போது, கல்விமான்கள் தெய்வீக அறிவின் கண்ணால் அனைத்தையும் கண்டு,(3) மங்கலச் செயல்கள், ஹோமம் உள்ளிட்ட கேடு நீக்க {பரிகாரச்} சடங்குகள் ஆகியவற்றைச் செய்து, திருவாய்மொழிகளை {மந்திரங்களை} அமைதியாக ஓதுவதன் மூலம் அனைத்துத் தீங்குகளையும் தணிக்கின்றனர்[1].(4) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, எந்தப் படையின் துருப்புகள் மற்றும் விலங்குகள் அனைத்தும் தளராத உற்சாகம் கொண்டிருக்குமோ, அதுவே உறுதியான வெற்றியை நிச்சயம் வெல்லும்.(5)காற்றானது அந்தத் துருப்புகளின் பின்னால் நலம்பயக்கும் வகையில் {சாதகமாக} வீசிக் கொண்டிருக்கும். வானவில் தோன்றும். மேகங்கள் தங்கள் நிழல்களை அவர்களின் மீது படியச் செய்யும், சில நேரங்களில் சூரியனும் அவர்களின் மேல் ஒளிர்வான்.(6) நரிகளும், கருங்காக்கைகளும், கழுகுகளும் கூட அவர்களுக்கு மங்கலமானவையாகின்றன. இவை அந்தப் படையிடம் இவ்வாறு நடந்து கொண்டால், அதன் மூலம் உயர்ந்த வெற்றியை அடைவது நிச்சயமாகும்.(7) அவர்களது (வேள்வி) நெருப்புகள் மேல்நோக்கி ஒளிர்ந்து, சற்றே தெற்கு நோக்கிய புகையற்ற தழல்களுடனும், தூய காந்தியுடனும் சுடர்விடும். அவற்றின் மேல் ஊற்றப்படும் ஆகுதிகள் இனிமையான நறுமணத்தை வீசும். இவையே எதிர்கால வெற்றியின் அறிகுறிகளாகச் சொல்லப்படுகின்றன.(8) முழக்கப்படும் சங்குகளும், பேரிகைகளும், உரத்த ஆழமான ஒலிகளை வெளியிடும். போராளிகள் ஆர்வம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவையும் எதிர்கால வெற்றிக்கான அறிகுறிகளாகச் சொல்லப்படுகின்றன.(9) மானும், நான்கு கால் விலங்குகளும், போருக்குப் புறப்பட்டவரின், அல்லது புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருப்பவரின் பின்னாலோ, இடதுபுறமோ தென்பட்டால், அவை மங்கலமானவையாகக் கருதப்படுகின்றன. போர்வீரர்கள் படுகொலையில் {போரில்} ஈடுபடும்போது அவர்களின் வலப்புறம் அவை தென்பட்டால், அதுவும் வெற்றிக்கான அறிகுறியாகவே கருதப்படுகிறது. எனினும், அவை அத்தகு மனிதர்களின் முன்னால் தோன்றினால், அவை பேரழிவையும், தோல்வியையும் குறிக்கின்றன.(10)
அன்னங்கள், நாரைகள் {கிரௌஞ்சங்கள்}, சதபத்திரங்கள் {மரங்கொத்திகள்}, சாஷங்கள் {காடைகள்} ஆகிய பறவைகள் மங்கல ஒலிகளையெழுப்புவதும், திறன்மிக்கப் போராளிகள் அனைவரும் உற்சாகமடைதலும் எதிர்கால வெற்றியின் குறியீடுகளாகக் கருதப்படுகின்றன.(11) எவருடைய வியூகமானது காந்தியால் சுடர்விடுகிறதோ, ஆயுதங்கள், இயந்திரங்கள், கவசங்கள், கொடிமரங்கள், சீற்றமிகு மனித முகங்களின் ஒளிரும் நிறங்கள் ஆகியவற்றின் விளைவால் பயங்கரமாகத் தெரிகிறதோ, அவர்கள் தங்களுடைய எதிரிகளை எப்போதும் வெல்வார்கள்.(12) படையின் போராளிகள் தூய நடத்தை கொண்டோராக, பணிவுள்ளவர்களாக, ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுபவராக இருந்தால், அதுவும் எதிர்கால வெற்றிக்கான குறியீடாகக் கருதப்படுகிறது.(13) இனிமையான ஒலிகள், மணங்கள், உணர்ச்சிமிக்கத் தீண்டல் ஆகியவை மேலோங்கினால், போராளிகள் செய்நன்றி, பொறுமை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டவர்களாக இருந்தால், அவையே வெற்றிக்கான வேர்களாகக் கருதப்படுகின்றன.(14) போரில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவனுக்கு இடப்புறமும், ஈடுபட இருப்பவனுக்கு வலப்புறமும் இருக்கும் காகம், மங்கலமானதாகக் கருதப்படுகிறது. பின்புறம் தென்பட்டால் அது கருத்தில் உள்ள நோக்கங்கள் நிறைவடையாமையைக் குறிக்கும், முன்புறம் தென்பட்டாலோ அஃது ஆபத்தின் முன்னறிவிப்பாகும்[2].(15)ஓ! யுதிஷ்டிரா, நால்வகைப் படைகளைக் கொண்ட ஒரு பெரும்படையை {பட்டியல் சரிபார்க்கப்பட்டுக்} கணக்கிட்டபிறகும் கூட முதலில் அமைதியாக {சாமோபாயத்துடன்} நடந்து கொள்வாயாக. அமைதிக்கான உன் முயற்சிகள் தோல்வியடைந்தால், பிறகு நீ போரில் ஈடுபடலாம்.(16) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, போரில் ஒருவன் அடையும் வெற்றியானது தாழ்ந்ததே. போரில் அடையப்படும் வெற்றியானது, உறுதியின்மை, அல்லது விதியைச் சார்ந்திருப்பதாகவே தெரிகிறது.(17) ஒரு பெரும்படையானது பிளந்து, துருப்புகள் தப்பி ஓடும்போது, அவர்களின் ஓட்டத்தைத் தடுப்பது என்பது மிகக் கடினமானதாகும். தப்பி ஓடும் வேகமானது, ஒரு பெரும் நீரூற்றுக்கோ, அச்சமடைந்த மான்மந்தைக்கோ ஒப்பானதாகும்.(18) சிலர் பிளந்தால், துணிச்சல்மிக்கவர்களும், போரில் திறன்மிக்கவர்களுமான பிறரும்கூடப் போதுமான காரணமின்றிப் பிளந்து செல்வார்கள். துணிச்சல்மிக்கப் படைவீரர்களைக் கொண்ட ஒரு பெரும்படையேகூட, ருருமான் மந்தையைப் போன்றதே[3].(19) சில வேளைகளில், உறுதியானவர்களும், ஒருவரையொருவர் சார்ந்திருப்பவர்களும், உற்சாகம் நிறைந்தவர்களும், தங்கள் உயிரையே விட ஆயத்தமாயிருப்பவர்களுமான வெறும் ஐம்பது {50} மனிதர்களே கூட, எண்ணிக்கையில் மிக அதிகமான பகைவர்களைக் கலங்கடிப்பதில் வெல்வதைக் காண முடிகிறது.(20) சில வேளைகளில், உறுதியானவர்களும், ஒற்றுமையுடன் நெருக்கமாக நிற்பவர்களும், உயர்ந்த குடிவழியில் வந்தவர்களும், அறிந்தவர்களால் மதிக்கப்படுபவர்களுமான ஐந்து, அல்லது ஆறு, அல்லது ஏழு மனிதர்கள் கூட, எண்ணிக்கையில் மிக அதிகமான பகைவர்களை வெல்கிறார்கள்.(21)தவிர்க்கக்கூடிய வரை போரானது விரும்பத்தக்கதன்று. கொடைகளைக் கொடுத்து ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்கும் இணக்க {சமரசக்} கொள்கையே முதலில் முயற்சிக்கப்பட வேண்டும். இவற்றின் பிறகே போரிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.(22) சொர்க்கத்தின் சுடர்மிக்க வஜ்ரத்தைக் கண்டு, “ஓ!, எதன் மூலம் இது நிறைவை எட்டும்” என்று அச்சமடைந்தோர் சொல்வதைப் போல, (பகைவரின்) படையைக் கண்டதும் அச்சமானது மருண்டோரை முடமாக்குகிறது[4].(23) போரை உறுதிசெய்து கொண்டு, அதில் ஈடுபடப்போவோரின் அங்கங்களும், வெல்பவனின் அங்கங்களும் அபரிமிதமாக வியர்க்கின்றன[5].(24) ஓ! மன்னா, (போரின் இருக்கையாக விளங்கும்) மொத்த நாடும் கலக்கமடைந்து, அதிலிருக்கும் அசையும், மற்றும் அசையாத உயிரினங்களுடன் சேர்த்துப் பீடிக்கப்படுகிறது. உடல்கொண்ட உயிரினங்களின் மஜ்ஜைகள் ஆயுதங்களின் வெப்பத்தால் எரிக்கப்பட்டு, வலியால் {துன்பத்தால்} வாடுகின்றன.(25)எனவே, ஒரு மன்னன் கடுமையான நடவடிக்கைகளுடன் கலந்த இணக்க {சமரசக்} கலைகளை அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்த வேண்டும். மக்கள் பகைவர்களால் பீடிக்கப்படும்போது, {அப்பகைவரின்} வரையறைகளை ஏற்கும் மனநிலையையே அவர்கள் எப்போதும் வெளிப்படுத்துவார்கள்[6].(26) எதிரியின் கூட்டாளிகளுக்கு மத்தியில் ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்க மறைமுகவர்கள் {ஒற்றர்கள்} அனுப்பப்பட வேண்டும். ஒற்றுமையின்மையை உண்டாக்கிய பிறகு, (நசுக்கப்பட வேண்டிய) எதிரியை விட அதிகப் பலசாலியாக இருக்கும் மன்னனிடம் அமைதியை ஏற்படுத்திக் கொள்வது மிகச்சிறந்தது.(27) படையெடுப்பாளன் இவ்வழியில் செயல்படவில்லையெனில், அவன் தன் எதிரியை நசுக்குவதில் ஒருபோதும் முற்றான வெற்றியை அடைய மாட்டான். பகைவரைக் கையாளும்போது, அனைத்துப் புறங்களில் இருந்தும் அவனை வளைப்பதில் கவனமாக வேண்டும்.(28) மன்னிக்கும் தன்மை {பொறுமை} எப்போதும் நல்லோருக்கே ஏற்படும். தீயோருக்கு அஃது ஏற்படாது. ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, மன்னிக்கும் தன்மை {பொறுமை} மற்றும் கடுமை ஆகியவற்றின் பயன்களை இப்போது கேட்பாயாக.(29)படையெடுப்புக்குப் பிறகு, மன்னிக்கும் தன்மையை {பொறுமையை} வெளிப்படுத்தும் மன்னனின் புகழ் மிக விரிவான அளவில் பரவுகிறது. மன்னிக்கும் மனநிலையுடன் இருக்கும் ஒரு மனிதனின் பகைவர்களே கூட, மிக முக்கிய மீறலுக்கான குற்றச்சாட்டுக்கு அவன் ஆளாகும் போது, அவனை நம்புவார்கள்.(30) ஒரு மரத்தண்டானது {மூங்கில், பிரம்பு போன்ற மரங்கள்} சுடப்படாமல் நேராக்கப்பட்டால் {நிமிர்க்கப்பட்டால்}, அது மீண்டும் தன் பழைய நிலையையே மிக விரைவில் ஏற்கும். எனவே, பகைவனை முதலில் பீடித்த பிறகே அவனுக்கு மன்னிப்பு {பொறுமை} காட்டப்பட வேண்டும் என்று சம்பரன் {சம்பராசுரன்} சொல்லியிருக்கிறான்.(31) எனினும் சாத்திரங்களில் திறன்வாய்ந்த மனிதர்கள் இதை மெச்சுவதில்லை. மேலும் அவர்கள் அஃதை ஒரு நல்ல மன்னனுக்குரிய அறிகுறியாகவும் கருதவில்லை. மறுபுறம் அவர்கள், ஒரு தந்தை தன் மகனைக் கோபமில்லாமலும், அவனை அழித்துவிடாமலும் அடக்கித் தடுப்பதைப் போலவே, ஒரு பகைவனும் அடக்கித் தடுக்கப்பட வேண்டும் என்று சொல்கின்றனர்.(32) ஓ! யுதிஷ்டிரா, ஒரு மன்னன் கடுமையாக இருந்தால், அவன் அனைத்துயிர்களின் வெறுப்புக்கான பொருளாகிறான். மறுபுறம் மென்மையானவனாக இருந்தாலோ, அனைவராலும் அவமதிக்கப்படுகிறான். எனவே, நீ கடுமை, மென்மை ஆகிய இரண்டையும் பயில வேண்டும்.(33) ஓ! பாரதா, தாக்குவதற்கு முன்பும், தாக்கும்போதும் இனிமையான சொற்களைப் பேசுவாயாக; தாக்கிய பிறகு அவர்களிடம் கருணை காட்டி, நீ அவர்களுக்காக வருந்துவதையும், அழுவதையும் அவர்களுக்குப் புரிய வைப்பாயாக.(34)
மன்னன், ஒரு படையை வென்ற பிறகு, {எதிரிப் படையினரில்} எஞ்சியிருப்போரிடம், “என் துருப்புகளால் இவ்வளவு அதிகமான பேர் கொல்லப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. ஐயோ, என்னால் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்பட்டும் அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லையே.(35) (கொல்லப்பட்டவர்கள்) அனைவரும் உயிரோடிருப்பதையே நான் விரும்பினேன். அவர்கள் இத்தகு மரணத்திற்குத் தகுந்தவர்களல்ல. அவர்கள் அனைவரும், நல்லோராகவும், உண்மையானவர்களாகவும், போரில் புறமுதுகிடாதவர்களாகவும் இருந்தனர். உண்மையில் அத்தகு மனிதர்கள் அரிதானவர்கள்.(36) போரில் அத்தகு வீரனைக் கொன்ற ஒருவன், நிச்சயமாக எனக்கு ஏற்பில்லாததையே செய்திருக்கிறான்” என்று சொல்ல வேண்டும். வெல்லப்பட்ட எதிரிப் படையில் எஞ்சியிருப்போரிடம் இவ்வாறு பேசிவிட்டு, தன் துருப்பினரில் எதிரியைத் துணிவுடன் கொன்றவர்களுக்கு மறைமுகமாகக் கௌரவங்களை அளிக்க வேண்டும்.(37)
பகைவரின் கைகளால் காயமடைந்து துன்புற்றிருக்கும் கொலையாளிகளுக்கு ஆறுதலளிக்கவும், தன்னோடு அவர்களை இணைத்துக் கொள்ளவும் விரும்பும் மன்னன், அவர்கள் கரங்களை அன்புடன் பற்றிக் கொண்டு அழவும் செய்யலாம்.(38) இவ்வாறு மன்னனானவன், அனைத்துச் சூழ்நிலைகளிலும் இணக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அச்சமற்றவனாக, அறவோனாக இருக்கும் மன்னன் ஒருவன், அனைத்து உயிரினங்களாலும் விரும்பப்படுகிறான்.(39) ஓ! பாரதா, அனைத்து உயிரினங்களும் அத்தகு ஆட்சியாளனையே நம்பும். அவர்களது நம்பிக்கையை வெல்லும் ஒருவன், தான் விரும்பும்வரை பூமியை அனுபவிப்பதில் வெல்கிறான்.(40) எனவே, மன்னனானவன் வஞ்சகத்தைக் கைவிட்டு, அனைத்துயிரினங்களின் நம்பிக்கையைப் பெற முயற்சிக்க வேண்டும். மேலும் அவன், பூமியை அனுபவிக்க முனைந்தால், தன் குடிமக்களை அச்சங்கள் அனைத்தில் இருந்து பாதுகாக்கவும் முனைய வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(41)
எவன் தீயவன்! – சாந்திபர்வம் பகுதி – 103-எதிரியை வெற்றி கொள்வது குறித்தும், தீயவர்களின் அறிகுறிகளைக் குறித்தும் இந்திரனுக்கும், பிருஹஸ்பதிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீமரிடம்}, “ஓ! பாட்டா, மென்மையான எதிரியிடமும், கடுமையான எதிரியிடமும், பல கூட்டாளிகளையும், பெரிய படையையும் கொண்ட ஒருவனிடமும் ஒரு மன்னன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பிருஹஸ்பதிக்கும், இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலை ஒரு பழங்கதை குறிப்பிடுகிறது.(2) ஒரு காலத்தில், பகைவீரர்களைக் கொல்பவனும், தேவர்களின் தலைவனுமான வாசவன் {இந்திரன்}, தன் கரங்களைக் கூப்பியபடியே பிருஹஸ்பதியை அணுகி, அவரை வணங்கி இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(3)
இந்திரன் {பிருஹஸ்பதியிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே, நான் என் எதிரிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? {சூழ்ச்சித்}திட்டங்களைக் கொண்ட வழிமுறைகளின் {ராஜதந்திரங்களின்} மூலம் நான் எவ்வாறு அவர்களை {எதிரிகளை} அடக்க வேண்டும்?(4) இரு படைகளுக்கிடையிலான மோதலில் ஒரு தரப்பே வெற்றியை அடையும். நான் வென்ற சுடர்மிக்கச் செழிப்பும், என் பகைவர்கள் அனைவரின் வாட்டமும் என்னைக் கைவிடாதிருக்க, நான் எவ்வழியில் நடந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(5) இவ்வாறு கேட்கப்பட்டவரும், அறம், பொருள் மற்றும் இன்பம் குறித்த காரியங்களில் திறன்மிக்கவரும், அரச கடமைகளின் அறிவைக் கொண்டவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவருமான பிருஹஸ்பதி, பின்வரும் வார்த்தைகளில் இந்திரனுக்குப் பதிலளித்தார்.(6)
பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “ஒருவன் தன் எதிரிகளைச் சச்சரவின் {கலகத்தின்} மூலம் அடக்க ஒருபோதும் விரும்பக்கூடாது. கோபத்தில் தூண்டப்பட்ட, மன்னிக்கும் தன்மையற்ற {பொறுமையற்ற} சிறுவர்கள் மட்டுமே சச்சரவு செய்ய முனைவார்கள்.(7) எதிரியை அழிக்க விரும்பும் ஒருவன், அந்த எதிரி பாதுகாப்பை அடையும்படி செயல்படக்கூடாது. மறுபுறம், ஒருவன் தன் கோபத்தையோ, அச்சத்தையோ, மகிழ்ச்சியையோ ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது. அவன் அவற்றைத் தன் நெஞ்சுக்குள்ளேயே மறைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.(8) ஒருவன் உண்மையில் தன் எதிரியை நம்பக்கூடாது என்றாலும், அவனிடம் முழுமையான நம்பிக்கையுடனிருப்பது போல அவனிடம் நடந்து கொள்ள வேண்டும். ஒருவன் தன் எதிரிகளிடம் எப்போதும் இனிமையான வார்த்தைகளையே பேச வேண்டும், அவனுக்கு ஏற்பில்லாத எதையும் ஒருபோதும் செய்யக்கூடாது.(9) ஒருவன் பலனற்ற பகைச்செயல்களையும், துடுக்குத்தனமான பேச்சையும் {கோள் சொல்வதைத்} தவிர்க்க வேண்டும். ஒரு வேடனானவன், அவன் பிடிக்க, அல்லது கொல்ல விரும்பும் பறவைகள் போன்றே கவனமாகக் குரலெழுப்பி,(10) அவற்றைக் கைப்பற்றி, தன் ஆளுகைக்குள் கொண்டுவருவதைப் போலவே, ஓ! புரந்தரா {இந்திரா}, ஒரு மன்னனும் தன் எதிரிகளைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவந்த பிறகு, தான் விரும்பினால் அவர்களைக் கொல்லலாம்[1].(11)ஒருவன் தன் எதிரிகளை வென்றபிறகு, கவலையில்லாமல் உறங்கக்கூடாது. தீயவனான பகைவன், கவனமில்லாமல் விடப்படும் நெருப்பு மீண்டும் தோன்றுவதைப் போலவே தன் தலையை மீண்டும் உயர்த்துவான்.(12) இரு தரப்பாலும் வெற்றியடையமுடியும் எனும்போது, பகைமைமிக்க ஆயுத மோதல் தவிர்க்கப்பட வேண்டும். ஒருவன் தன் எதிரியைப் பாதுகாப்பாக வளைத்து அமைதிப்படுத்திய பிறகு, அவனைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவந்து, தன் நோக்கத்தை ஈடேற்றிக் கொள்ள வேண்டும்.(13) ஒரு பகைவன் அவமதிக்கவும், புறக்கணிக்கவும் பட்டு, {வாழ்க்கை} நெடுகிலும் இதயத்தால் அடங்காதவனாக இருந்தால், அவன் தன் அமைச்சர்களுடனும், கொள்கை அறிந்த புத்திமான்களுடனும் கலந்தாலோசித்து,(14) உரிய காலம் நேரும்போது, அதிலும் குறிப்பாக அவமதித்தவன் தவறான அடியை எடுத்து வைக்கும்போது அவனைத் தாக்குவான். அத்தகு எதிரியானவன், தன் நம்பிக்கைக்குரிய முகவர்களை {ஒற்றர்களை} நியமித்து, அவனுடைய {அவமதித்தவனின்} திறனில்லா படைகளுக்கு மத்தியில் ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்குவான்.(15)
ஒரு மன்னன், தன் எதிரிகளின் தொடக்கக் காலம், மத்திய காலம் மற்றும் முடிவுக்காலம் ஆகியவற்றை உறுதி செய்து {தெரிந்து} கொண்டு[2], இரகசியமாக அவர்களிடம் பகைவளர்க்க வேண்டும். அவன் நேர்மறையான ஆதாரங்கள் அனைத்தையும் உறுதி செய்து {தெரிந்து} கொண்டு, தன் எதிரியின் படைகளை ஊழலில் மலியச் செய்து, {பேதவழியில்}வேற்றுமையை உண்டாக்கும் கலைகளைப் பயன்படுத்தி, {தான வழியில்} கொடைகளைக் கொடுத்து, {தண்ட வழியில்} விஷம் கொடுத்துச் சிதைக்க வேண்டும். ஒரு மன்னன் தன் எதிரிகளின் தோழமையில் ஒருபோதும் வாழக்கூடாது. ஒரு மன்னன் நீண்ட காலம் காத்திருந்தாவது தன் எதிரிகளைக் கொல்ல வேண்டும். உண்மையில் அவன், குறைந்தது தன் எதிரி எதிர்பார்க்காத வேளையில் அவன் மீது பாயும் வகையில் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். ஒரு மன்னன் தன் வெற்றியை ஐயமற்றதாகச் செய்ய, தன் எதிரியின் துருப்பினரைக் கொல்ல வேண்டும் என்றாலும், பெரும் எண்ணிக்கையில் அவர்களை ஒருபோதும் கொல்லக்கூடாது.(18) மன்னன் தன் எதிரியின் இதயம் எரிச்சலடையும் வகையில் ஒருபோதும் அவனுக்குக் காயத்தை ஏற்படுத்தக்கூடாது. மேலும் அவன் சொற்கணைகளாலும் அவனுக்குக் காயங்களை உண்டாக்கக்கூடாது. வாய்ப்பேற்படும்போது, அவன் நழுவிவிடாதவாறு அவனைத் தாக்க வேண்டும். ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, எதிரிகளைக் கொல்ல விரும்பும் மன்னன், தன் எதிரிகளாக இருப்போரிடம் இவ்வாறே நடந்து கொள்ள வேண்டும்.(19) வாய்ப்புக்காகக் காத்திருக்கும் மனிதனைப் பொறுத்தவரையில், செயல் பட விரும்பும் அவனிடம் இருந்து வாய்ப்பு ஒரு முறை நழுவிச் சென்றால், மீண்டும் அஃது ஒருபோதும் வாய்க்காது.(20)ஞானியரின் கருத்துகளின் படி செயல்படும் மன்னன், தன் எதிரியின் பலத்தை மட்டுமே உடைக்க வேண்டும். வாய்ப்பில்லாதபோது தன் நோக்கங்களை நிறைவேற்ற அவன் ஒருபோதும் முனையக்கூடாது. அதே வேளையில் வாய்ப்பு இருக்கும்போது, தன் எதிரியை வாட்டவும் கூடாது[3].(21) காமம், கோபம் மற்றும் செருக்கு ஆகியவற்றைக் கைவிடும் மன்னன், தன் எதிரிகளின் தவறுகளை {காலதாமதத்தைத்} தொடர்ந்து கண்காணித்துக் கவனத்துடன் செயல்பட வேண்டும்.(22) ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, இயல்பான மென்மை, தண்டனைகளில் கடுமை, செயல்படாமை, கவனக்குறைவு ஆகியவற்றின் மூலம் (எதிரிகளிடம்) செயல்படுத்தப்படும் வஞ்சகம் நிறைந்த சதித்திட்டங்கள் ஒரு மூட மன்னனை அழித்துவிடும்.(23) இந்த நான்கு தவறுகளை வெற்றிக் கொள்ளும் மன்னன், தன் எதிரிகளின் வஞ்சக சதித்திட்டங்களுக்கு எதிர்வினையாற்றி, அவர்கள் அனைவரையும் தாக்கி ஐயமில்லாமல் வெல்கிறான்.(24) (மன்னனின்) ஓர் இரகிசய நோக்கத்தை (வேறெந்த உதவியுமின்றி) நிறைவேற்றத் தகுந்தவன் ஒரேஒரு அமைச்சனே என்ற போது, அத்தகு இரகசிய நோக்கத்தைப் பொறுத்தவரை அந்தவொரு அமைச்சனிடம் மட்டுமே அவன் ஆலோசிக்க வேண்டும். பல அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தால், அவர்கள் அந்தப் பணியின் சுமையை அடுத்தவர்களின் தோள்களில் சுமத்த முயற்சித்து, இரகசியமாக வைக்கப்பட வேண்டிய அந்நோக்கத்தை விளம்பரப்படுத்திவிடக்கூடும்.(25) ஒரே ஒருவரிடம் ஆலோசிப்பது முறையாகாது எனும்போது மட்டுமே மன்னன் பலருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.எதிரி கண்ணுக்குப் புலப்படாதபோது, தெய்வீக தண்டனை அவர்களுக்கு ஏற்பட அஃதை {தெய்வீகத் தண்டனையை} இருப்புக்கு அழைக்கவேண்டும். அவர்கள் {எதிரிகள்} புலப்பட்டால், நால்வகைப் படைகள் நகர்த்தப்பட வேண்டும்[4].(26) மன்னன் முதலில் ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்கும் {பேத} முறையையும், இணக்க {சாம} முறைகளையும் பயன்படுத்த வேண்டும். அந்தந்தக் குறிப்பிட்ட வழிமுறைக்கான காலம் வாய்க்கும்போது, அந்தக் குறிப்பிட்ட வழிமுறைகளையே செயல்படுத்த வேண்டும்.(27) சில நேரங்களில் மன்னன், தன் பலமிக்க எதிரிகளின் முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழவும் வேண்டும். மேலும் கவனமாகச் செயல்படும் அவன், வெற்றியாளன் {எதிரி} கவனமற்றவனாக இருக்கும்போது அவனுக்கு அழிவை ஏற்படுத்த முயல வேண்டும்.(28) நெடுஞ்சாண்கிடையாக விழுவது, கப்பத்தைக் கொடையாகக் கொடுப்பது, இனிய சொற்கள் பேசுவது ஆகியவற்றின் மூலம் ஒருவன் பலமிக்க மன்னனின் எதிரில் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். (இத்தகு செயல்களுக்கான வாய்ப்பு நேரும்போது) ஒருவன் தன் பலமிக்க எதிரி ஐயங்கொள்ளும் அளவுக்கு எச்செயலையும் ஒருபோதும் செய்யக்கூடாது.(29) அத்தகு சூழ்நிலைகளில் பலவீனமான ஓர் ஆட்சியாளன், ஐயத்தை எழுப்பும் செயல்கள் அனைத்தையும் கவனமாகத் தவிர்க்க வேண்டும். மேலும், வெற்றியாளனான ஒரு மன்னன், வெல்லப்பட்டவனான எதிரிகள் எப்போதும் விழிப்புடன் இருப்பார்கள் என்பதைக் கருத்திக் கொண்டு, அவர்களை நம்பாமல் இருக்க வேண்டும்.(30)ஓ! தேவர்களில் சிறந்தவனே {இந்திரனே}, ஓ! இறவாதவர்களின் ஆட்சியாளனே, செழிப்பை அடைவதைவிட, அமைதியற்ற மனநிலை கொண்ட மனிதர்களுக்கு மிகக் கடினமானது வேறேதும் இல்லை.(31) அமைதியற்ற மனோநிலை கொண்ட மனிதர்களின் இருப்பே ஆபத்து நிறைந்ததாகும். எனவே, மன்னர்கள் தங்கள் நண்பர்களையும், எதிரிகளையும் கவனமாக உறுதி செய்ய {தேர்ந்தெடுக்க} வேண்டும்.(32) ஒரு மன்னன் மென்மையடைந்தால், அவன் அவமதிக்கப்படுகிறான். அவன் மூர்க்கமடைந்தால், மக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறான். எனவே, நீ மூர்க்கனாயிராதே, அதே வேளையில் மென்மையானவனாகவும் இராதே. கடுமை, மென்மை ஆகிய இரண்டையும் கொண்டவனாக இருப்பாயாக.(33) மூர்க்கமான நீரோடை உயர்ந்த கரையைக்கூட அரித்து, நிலச்சரிவை ஏற்படுத்துவதைப் போலவே, கவனமின்மையும், தவறும் ஒரு நாட்டையே அழித்துவிடும்.(34) ஒரே நேரத்தில் பல எதிரிகளை ஒருபோதும் எதிர்க்காதே. ஓ! புரந்தரா, இணக்க {சாம}, கொடை {தான}, வேற்றுமையை உண்டாக்குதல் {பேதம்} ஆகிய கலைகளைக் கொண்டு அவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கலங்கடிக்கப்பட வேண்டும்.(35)
(சிறு எண்ணிக்கையில்) எஞ்சியிருப்போரைப் பொறுத்தவரையில், வெற்றியாளன் அவர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளலாம். நுண்ணறிவைக் கொண்ட ஒரு மன்னன், ஒரே நேரத்தில் (தன் எதிரிகள்) அனைவரையும் நொறுக்க இயன்றவனாக இருப்பினும், அவன் அவ்வாறு செயல்படக்கூடாது[5].(36) ஒரு மன்னனானவன், தன்னிடம் அர்ப்பணிப்புள்ள குதிரை, யானைகள், தேர்கள், காலாள், இயந்திரங்கள் ஆகியவை அடங்கிய ஆறு அங்கங்களைக் கொண்ட ஒரு பெரிய படையைக்[6] கொண்டிருப்பவனானால்,(37) ஒரு நியாயமான ஒப்பீட்டளவில் பல விதங்களில் தன் எதிரியைவிடத் தான் மேன்மையானவனாக இருப்பதாகக் கருதினால், அப்போது அவன் தயங்காமல் வெளிப்படையாக எதிரியைத் தாக்க வேண்டும்.(38) எதிரி பலவானாக இருந்தால், (அவனிடம்) இணக்கக் கொள்கையைப் பின்பற்றுவது பாராட்டுக்குரியதல்ல. மறுபறம், இரகசிய வழிமுறைகளில் தண்டிக்கும் கொள்கையே பின்பற்றப்படவேண்டும். நிர்வாகத்தின் ஏழு கிளைகளைப் பொறுத்தவரையில் பயிர் இழப்பு, கிணறுகள் மற்றும் குளங்களுக்கு நஞ்சூட்டுவது, ஐயுணர்வை ஏற்படுத்தல்ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என்பதால், அத்தகு எதிரிகளிடம் மென்மையான நடத்தையோ, மீண்டும் மீண்டும் படையெடுப்பதோ பின்பற்றப்படக்கூடாது[7]. (39) அத்தகு சந்தர்ப்பங்களில் மன்னன் பல்வேறு வஞ்சனைகளையும், பல்வகைச் சதிச்செயல்களையும் செய்து, பல்வேறு வகைக் கபட நடத்தைகளையும் மேற்கொண்டு எதிரிகளை ஒருவருக்கொருவர் எதிராகத் திருப்ப வேண்டும்.(40)ஓ! பலனையும், விருத்திரனையும் கொன்றவனே {இந்திரனே}, எதிரிகளைத் துரத்தும் மன்னர்கள், அவர்களது கோபுரங்களில் {நகரத்திற்குள்} நுழைந்து, அங்கே கிடைக்கும் சிறந்த பொருட்களைக் கைப்பற்றித் தனதாக்கி, தங்கள் சொந்த நகரங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகளில் உரிய கொள்கை நடவடிக்கைகளை வகுக்கின்றனர்.(41) மன்னர்கள், பகைவருக்குத் தனிமையில் {மறைமுகமாகச்} செல்வக்கொடையளித்து, வெளிப்படையாக அவர்களது உடைமைகளைப் பறிமுதல் செய்து, பொருள் சார்ந்த காயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தாமல், அவர்கள் அனைவரும் தீய மனிதர்கள் என்றும், அவர்களது தவறான செயல்களுக்காகவே அவர்கள் துன்புறுகிறார்கள் என்பதையும் அறிவிக்கும் வகையில் தங்கள் பகைவரின் நகரங்கள் மற்றும் மாகாணங்களுக்குத் தங்கள் ஒற்றர்களை அனுப்ப வேண்டும்.(42) அதே வேளையில், தங்கள் சொந்த நகரங்களில் சாத்திரங்களை அறிந்தவர்களும், அனைத்துச் சாதனைகளையும் கொண்டவர்களும், புனித நூல்களின் விதிகளை அறிந்தவர்களும், கல்வியாளர்களுமான மனிதர்களைக் கொண்டு, எதிரிகளைக் கொல்வதற்கான சடங்குகளையும், மந்திரங்களை ஓதுவதையும் செய்ய வைக்க வேண்டும்” என்றார் {பிருஹஸ்பதி}.(43)
இந்திரன் {பிருஹஸ்பதியிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, ஒரு தீய மனிதனின் அறிகுறிகள் என்னென்ன? என்னால் கேட்கப்படும் நீர், நான் எவ்வாறு தீயவர்களை அறிவது என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(44)
பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “எவன் அடுத்தவரின் குறைகளை அவர்களின் முதுகுக்குப் பின்னால் அறிவிக்கிறானோ; எவன் அடுத்தவரின் சாதனைகளில் பொறாமை கொள்கிறானோ; எவன் தன் முன்னிலையில் வேறு மக்களின் தகுதிகள் அறிவிக்கப்படும்போது, அந்தக் கூட்டுத்துதியில் சேரத் தயங்கி அமைதியாக இருக்கிறானோ அவனே தீய மனிதன்.(45) அத்தகு சந்தர்ப்பங்களில் அமைதியாக இருப்பது மட்டுமே தீமையின் குறியீடு அல்ல. எனினும், அத்தகு நேரங்களில் ஒரு தீய மனிதன், நெடும் மூச்சு விடுவான், தன் உதடுகளைக் கடித்துக் கொள்வான், மேலும் தன் தலையையும் அசைப்பான்.(46) அத்தகு மனிதன் எப்போதும் சமூகத்துடன் கலந்து, தொடர்பில்லாமல் பேசுவான்[8]. அத்தகு மனிதன் எந்த மனிதனுக்கு எந்த உறுதியை அளித்தானோ, அந்த மனிதனின் கண் தன் மேல் இல்லாதவரை, அஃதை ஒருபோதும் செய்யமாட்டான். அந்த மனிதனின் கண் அவன் மீது இருக்கும்போதோ, அந்தத் தீய மனிதன் அதுகுறித்து மறைமுகமாகக் கூடக் குறிப்பிட மாட்டான்.(47) அந்தத் தீய மனிதன் (பிறரைச் சேர்த்துக் கொள்ளாமல் தான் மட்டும்) தனியாக உண்பான், “மற்ற நாட்களைப் போல இல்லாமல் இன்று எதுவும் சரியில்லை” என்று தன் முன் வைக்கப்படும் உணவிலும் குறை கண்டுபிடிப்பான். அமர்வது, படுப்பது, போவது தொடர்பான சூழ்நிலைகளில் கூட அவனுடைய மனோநிலை வெளிப்படும்[9].(48) கவலைநிறைந்த சந்தர்ப்பங்களில் கவலைப்படுவதும், மகிழ்ச்சிமிக்கத் தருணங்களில் மகிழ்ந்திருப்பதும் ஒரு நண்பனின் அறிகுறிகளாகும். இதற்கு மாறான நடத்தையே ஓர் எதிரிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.(49) ஓ! தேவர்களின் ஆட்சியாளா {இந்திரா}, இஃதை உன் இதயத்திலேயே வைத்துக் கொள்வாயாக. தீய மனிதர்களின் மனோநிலையை ஒருபோதும் மறைக்க முடியாது.(50) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, தீய மனிதர்களுக்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை இப்போது நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! தேவர்களின் ஆட்சியாளா, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள உண்மைகளைக் கேட்டு முறைப்படி அதைப் பின்பற்றுவாயாக” என்றார் {பிருஹஸ்பதி}”.(51)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிருஹஸ்பதியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட புரந்தரன் {இந்திரன்}, அவற்றின் படியே உறுதியுடன் செயல்பட்டு தன் எதிரிகளை அடக்குவதில் ஈடுபட்டான். வெற்றியில் நோக்கம் கொண்ட அந்த எதிரிகளைக் கொல்பவன், வாய்ப்பு ஏற்பட்ட போது, இந்த அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்து, தன் எதிரிகள் அனைவரையும் அடக்கினான்”.(52)
க்ஷேமதர்சினும், காலகவிருக்ஷீயரும்! – சாந்திபர்வம் பகுதி – 104-நாட்டை இழந்தவனும், அறவோனுமான மன்னனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து க்ஷேமதர்சினுக்கும் காலகவிருக்ஷீயருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தன் சொந்த அதிகாரிகளாலேயே எதிர்க்கப்படுபவனும், கருவூலமும், படையும் தன் கட்டுப்பாட்டில் இல்லாதவனும், செல்வமில்லாதவனும், அறவோனுமான ஒரு மன்னன் மகிழ்ச்சியை அடைவதற்காகத் தன்னை எவ்வாறு நடத்திக் கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக எப்போதும் க்ஷேமதர்சினின் கதை சொல்லப்படுகிறது. நான் அக்கதையை உனக்குச் சொல்கிறேன். ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(2) பழங்காலத்தில் {கோசல நாட்டு} இளவரசன் க்ஷேமதர்சின் பலவீனமடைந்தவனாக, பெரும் துயரத்தில் வீழ்ந்தபோது, அவன் தவசி காலகவிருக்ஷீயரிடம் சென்று, பணிவுடன் வணங்கி அவரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்[1].(3)மன்னன் {க்ஷேமதர்சின் காலகவிருக்ஷீயரிடம்}, “ஓ! பிராமணரே, செல்வம் வேண்டும் என்னைப் போன்ற ஒரு மனிதன், மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும், தன் நாட்டை மீட்கத் தவறினால், தற்கொலை, களவு, கொள்ளை, அடுத்தவரின் புகலிடத்தை நாடுதல், மேலும் இது போன்ற அற்ப காரியங்களைத் தவிர வேறு என்ன செய்ய வேண்டும்? ஓ! மனிதர்களில் சிறந்தவரே, இஃதை எனக்குச் சொல்வீராக.(4,5) அறநெறிகளை அறிந்தவரும், மகிமை நிறைந்தவருமான உம்மைப் போன்ற ஒருவரே, மன, அல்லது உடல் நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் மனிதனுக்குப் புகலிடமாவீர்.(6) மனிதன் தன் ஆசைகளைக் கைவிட வேண்டும். இவ்வழியில் இன்ப துன்பங்களைக் கைவிட்டு, அறிவெனும் செல்வத்தை ஈட்டிச் செயல்படும் ஒருவன் புகழை அடைவதில் வெல்கிறான். செல்வத்தைச் சார்ந்து உலக இன்பங்களில் பற்று கொள்வோருக்காக நான் வருந்துகிறேன். எனினும், அவை யாவும் ஒரு கனவைப் போல மறைந்து விடுகின்றன.(8) பரந்த செல்வத்தைக் கைவிட முடிந்தோர், மிகக் கடினமான சாதனையை அடைகிறார்கள். எங்களைப் பொறுத்தவரையில், எங்களிடம் இல்லாத செல்வத்தைக் கைவிட முடியாதவர்களாக நாங்கள் இருக்கிறோம்[2].(9) செழிப்பை இழந்து, மகிழ்ச்சியற்ற துயரமான இழிநிலையில் நான் விழுந்துவிட்டேன். ஓ! பிராமணரே, எந்த மகிழ்ச்சிக்காக நான் இன்னும் முயற்சி செய்ய வேண்டும் என்பதை எனக்குப் போதிப்பீராக” எனக் கேட்டான்.(10) நுண்ணறிவு மிக்க அந்தக் கோசல இளவரசனால் {க்ஷேமதர்சினால்} இவ்வாறு கேட்கப்பட்டவரும், பெரும் காந்தியைக் கொண்டவருமான தவசி காலகவிருக்ஷீயர் பின்வரும் பதிலை அளித்தார்.(11)தவசி {காலகவிருக்ஷீயர் க்ஷேமதர்சினிடம்}, “ஏற்கனவே நீ அதைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய் என்றே தெரிகிறது. அறிவைக் கொண்டவனான நீ, உன் எண்ணத்தைப் போலவே செயல்பட வேண்டும். “நான் மற்றும் நான் கொண்டவை உள்ளிட்ட இவை அனைத்தும் நிலையற்றவை என்றே நான் காண்கிறேன்” என்ற உன் நம்பிக்கை சரியானதே.(12) ஓ! இளவரசே, எப்பொருள் இருக்கிறது என நீ கருதுகிறாயோ, அஃது உண்மையில் இல்லை என்று அறிவாயாக. ஞானம் கொண்ட மனிதன் இஃதை அறிகிறான், அதன்படி, எத்துன்பம் அவனுக்கு ஏற்பட்டாலும் அவன் ஒருபோதும் துன்பப்படுவதில்லை.(13) எவை நடந்தனவோ, எவை நடக்க இருக்கின்றனவோ, அவை அனைத்தும் உண்மையற்றவை.அனைவரும் அறிய வேண்டிய இதை நீ அறியும்போது, அநீதியில் {அதர்மத்தில்} இருந்து விடுபடுவாய்.(14) முன்பு ஈட்டப்பட்ட, அடையப்பட்ட பொருட்கள், அதற்குப் பின் ஈட்டப்பட்ட அடையப்பட்ட பொருட்கள் யாவும் அழிந்துவிட்டன. இதைக் கருத்தில் கொண்டால், எவன் தான் துன்பப்பட மாட்டான்?(15)
எப்பொருட்கள் இருந்தனவோ, அவை ஒன்றும் இப்போது இல்லை. இப்போது இருப்பவையும் இல்லாமலே போகும். துயரத்திற்கு அவற்றை மீட்கும் சக்தி கிடையாது. எனவே, ஒருவன் துன்பத்தில் ஈடுபடக்கூடாது.(16) ஓ! மன்னா {க்ஷேமதர்சனா}, இன்று உன் தந்தையும் எங்கே? உன் பாட்டன் எங்கே? இன்று நீயும் அவர்களைக் காணவில்லை. அவர்களும் இப்போது உன்னைக் காணவில்லை.(17) உனது நிலையின்மையைக் கருத்தில் கொண்டால், அவற்றுக்காக நீ ஏன் வருந்தப் போகிறாய்? நுண்ணறிவின் துணையுடன் சிந்திப்பாயாக, நீயும் இருக்க மாட்டாய் என்பதை நீ புரிந்து கொள்வாய்.(18) ஓ! மன்னா, நான், நீ, உன் நண்பர்கள், எதிரிகள் ஆகியோர் அனைவரும் நிச்சயம் இல்லாமல் போவோம். உண்மையில், அனைத்தும் இல்லாமலே போகும்.(19) இன்று இருபது, அல்லது முப்பது வயது கொண்டோர் அனைவரும், அடுத்த நூறு ஆண்டுகளில் நிச்சயம் இறந்துவிடுவார்கள்.(20)
ஒரு மனிதன் தன் பரந்த உடைமைகளை விட்டுக் கொடுக்கும் இதயம் இல்லாதவனாக இருந்தால், அவன் தன் உடைமைகள் தனதல்ல என்று நினைக்க முயற்சித்து, அதன் மூலம் தன் நன்மையை நாட வேண்டும்[3].(21) எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் உடைமைகளும் தன்னுடையவையல்ல என அவன் கருத வேண்டும். ஏற்கனவே மறைந்த உடைமைகளும் தன்னுடையவையல்ல எனவும் ஒருவன் கருத வேண்டும். விதியே அனைத்திலும் வலியது எனக் கருதப்பட வேண்டும். இவ்வகையில் சிந்திப்போரே ஞானம் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இவ்வகையில் பொருட்களைக் காணும் பழக்கம் நல்ல பண்பாகும்.(22) புத்தியிலும், முயற்சியிலும் உனக்கு இணையானவர்களாகவோ, மேன்மையானவர்களாகவோ உள்ள பல மனிதர்கள், செல்வதை இழந்தவர்களாக உயிரோடு இருந்தாலும், நாடுகளை ஒருபோதும் ஆள்வதில்லை.(23) அவர்கள் உன்னைப் போன்றோரல்ல. அவர்கள் உன்னைப் போலத் துயரத்தில் ஈடுபடுவதில்லை. எனவே, இவ்வழியில் துயருறுவதை நிறுத்துவாயாக. நீ புத்தியிலும், முயற்சியிலும் அம்மனிதர்களை விட உயர்ந்தவனோ, குறைந்தது அவர்களுக்கு இணையானவனோ இல்லையா?” என்று கேட்டார்{காலகவிருக்ஷீயர்}.(24)மன்னன் {க்ஷேமதர்சின் காலகவிருக்ஷீயரிடம்}, “என் நாடானது, அது கொண்டிருந்த அனைத்துப் பொருட்களுடன் எந்த முயற்சியுமில்லாமல் என்னால் {முன்பு} வெல்லப்பட்டது என்று கருதுகிறேன். எனினும், ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, அனைத்திலும் வலிமையான காலம் அஃதை அபகரித்து விட்டது.(25) ஓர் ஓடையால் அடித்துச் செல்லப்படுவதைப் போல என் நாடு காலத்தால் அடித்துச் செல்லப்பட்டதன் விளைவாகவே, (ஈகை பெறுவதன் மூலம்) அடையும் எதையும் கொண்டு என்னை ஆதரித்துக் கொள்ள வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன் என்பதைக் காண்கிறேன்” என்றான்.(26)
தவசி {காலகவிருக்ஷீயர் க்ஷேமதர்சினிடம்}, “(வாழ்வில்) உண்மை அறிவால் தூண்டப்பட்ட ஒருவன், கடந்த காலத்திற்காகவோ, எதிர்காலத்திற்காகவோ ஒருபோதும் வருந்தக்கூடாது. ஓ! கோசல இளவரசே {க்ஷேமதர்சின்}, நீ உன் கவனத்தைச் செலுத்தும் ஒவ்வொரு காரியத்திலும் நீ இத்தகு மனநிலையையே கொள்வாயாக.(27) கிடைக்கமுடியாததை அல்லாமல், கிடைக்கக்கூடியதை மட்டுமே அடைய விரும்பி, தற்போது நீ கொண்டிருக்கும் உடைமைகளில் இன்புற்று, இல்லாததை நினைத்து ஒருபோதும் வருந்தாமல் இருப்பாயாக.(28) ஓ! கோசல இளவரசே, எளிமையாக நீ அடைந்த எதையும் கொண்டு நீ மகிழ்ச்சியாக இருப்பாயாக. செழிப்பை இழந்தாலும், தூய மனநிலையைப் பாதுகாக்க வேண்டுமேயன்றி ஒருபோதும் அதற்காக வருந்தக்கூடாது.(29) மூடப்புத்தி கொண்ட பேரற்ற மனிதனே, முந்தைய செழிப்பை இழக்கும்போது, தன் தற்போதைய உடைமைகளில் நிறைவில்லாமல் படைப்பாளனை நிந்திக்கிறான்.(30)
அத்தகு மனிதன், பிறர் அதற்குத் தகாதவர்களாக இருப்பினும், செழிப்பால் அருளப்பட்டிருக்கும் மனிதர்களாக இருக்கிறார்களே எனக் கருதுகிறான். இதன் காரணமாகவே, ஆணவமும் அகந்தையும் கொண்டவர்களும், தங்கள் முக்கியத்துவம் குறித்த உணர்விலேயே நிறைந்திருப்பவர்களுமான அவர்கள் அதிகத் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். எனினும், ஓ! மன்னா {க்ஷேமதர்சினே}, நீ அத்தகு களங்கங்களினால் கறைபடியாதவனாக இருக்கிறாய்.(31,32) நீ செல்வத்தை இழந்தவனாக இருப்பினும், அடுத்தவரின் செழிப்பைப் பொறுத்துக் கொள்வாயாக. கைத்திறன் கொண்டவர்கள், பிறரிடம் உள்ள செழிப்பை அனுபவிக்கிறார்கள். செழிப்பானது, பிறரின் செழிப்பை வெறுப்பவனிடம் இருந்து விலகிச் செல்கிறது.(33) நன்னடத்தை மற்றும் ஞானம் கொண்டவர்களும், யோகத்தின் கடமைகளை அறிந்தவர்களுமான மனிதர்கள், செழிப்பு, மகன்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோரைத் தாங்களாகவே துறக்கிறார்கள்.(34) உலகம் சார்ந்த செல்வமானது, இடையறாத செயல்பாடு மற்றும் முயற்சியைச் சார்ந்தது என்பதால் அது நிலையில்லாதது என்றும் அடையமுடியாதது என்றும் கருதும் வேறு சிலரும், அதைத் துறப்பதைக் காண முடிகிறது.(35)
நீ ஞானம் கொண்டவனாகத் தெரிகிறாய். பிறகு ஏன் நீ விரும்பக்கூடாதவையும், நிலையற்றவையும், பிறரைச் சார்ந்திருக்கக்கூடியவையுமான பொருட்களை விரும்பி பரிதாபத்துக்குரியவனாக வருந்துகிறாய்? நீ (உன் உடைமைகள் எப்படி இருந்தபோதிலும் புகழை அனுபவிக்கத்தக்கவனாக உன்னைச் செயல்பட வைப்பதற்கான) குறிப்பிட்ட மனோநிலையைக் குறித்துக் கேட்க விரும்புகிறாய். நான் உனக்குக் கொடுக்கும் அறிவுரை என்னவென்றால், விருப்பத்திற்குரிய அந்தப் பொருட்கள் யாவையும் துறந்துவிடுவாயாக. தவிர்க்கப்பட வேண்டிய பொருட்களே, முயற்சி செய்து அடைய வேண்டிய வடிவில் தோன்றும், அதே வேளையில், எவை முயற்சி செய்து அடையப்பட வேண்டுமோ, அவை தவிர்க்கப்பட வேண்டிய பொருட்களாகத் தோன்றும்.(37) சிலர் செல்வத்தைத் தேடியே செல்வத்தை இழக்கிறார்கள். வேறு சிலர் செல்வத்தை முடிவிலா இன்பத்தின் வேராகக் கருதி, அதை ஆவலுடன் பின்தொடர்கிறார்கள்.(38) மேலும் சிலர், செல்வத்தில் மகிழ்ந்து, அதைவிட வேறெதுவும் மேன்மையானதல்ல என நினைக்கிறார்கள். அத்தகு மனிதர்கள், செல்வத்தை அடையும் விருப்பத்தில் உள்ள தங்கள் ஆவலால், வாழ்வின் பிற நோக்கங்கள் அனைத்தையும் இழக்கிறார்கள்.(39) ஓ! கோசல இளவரசே, கடினமாக ஈட்டப்பட்டதும், தன் ஆசைகளின் அளவுக்கு இணையானதுமான செல்வத்தை ஒரு மனிதன் இழந்தால், {அதன் விளைவாக உண்டாகும்} துன்பத்தால் ஏற்படும் செயல்பாடின்மையில் மூழ்கி, செல்வம் குறித்த விருப்பம் அனைத்தையும் கைவிடுகிறான்.(40)
நல்லான்மாவையும், உயர்ந்த பிறப்பையும் கொண்ட சில மனிதர்கள், அறம் ஈட்டுவதில் ஈடுபடுகிறார்கள். மறுமையில் புகழை வெல்லும் விருப்பத்தால் அவர்கள் உலகம் சார்ந்த அனைத்து வகை இன்பங்களையும் துறக்கிறார்கள்.(41) சில மனிதர்கள், செல்வத்தை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்டுத் தங்கள் உயிரை இழக்கிறார்கள். செல்வத்தோடு தொடர்பில்லா வாழ்வில் எந்தப் பயனும் இல்லை என்றே அவர்கள் நினைக்கிறார்கள்.(42) அவர்களது பரிதாப நிலையைப் பார். அவர்களது மூடத்தனத்தைப் பார். வாழ்வென்பது மிகக் குறுகியது, நிச்சயமற்றது எனும்போது இம்மனிதர்கள், அறியாமையால் உந்தப்பட்டுத் தங்கள் கண்களைச் செல்வத்தில் நிலைக்கச் செய்கிறார்கள்.(43) அழிவே முடிவு எனும்போது கட்டடச்சாரங்களிலும், மரணமே முடிவு எனும்போது வாழ்விலும், பிரிவே முடிவு எனும்போது சேர்க்கையிலும் எவன் இதயத்தை நிலைக்கச் செய்வான்?(44) சில நேரங்களில் மனிதன் செல்வத்தைத் துறக்கிறான், மேலும் சிலநேரங்களில் செல்வம் மனிதனைத் துறக்கிறது. செல்வ இழப்பால் ஞானம் கொண்ட எந்த மனிதன் வருந்துவான்? செல்வத்தையும் நண்பர்களையும் இழக்கும் பலர் இந்த உலகத்தில் இருக்கின்றனர்.(45)
ஓ! மன்னா {க்ஷேமதர்சின்}, மனிதர்களுக்கு நேரும் இடர்கள் அனைத்தும் அவர்களுடைய சொந்த நடத்தையாலேயே நேர்கிறது என்பதைக் கண்டு புரிந்து கொள்வாயாக. எனவே நீ உன் புலன்கள், மனம் மற்றும் பேச்சைக் கட்டுப்படுத்துவாயாக.(46) ஏனெனில், இவை பலவீனமடைந்து, தீமையை உண்டாக்கினால் எந்த மனிதனும் எப்போதும் தன்னைச் சூழ்ந்திருக்கும் வெளிப்பொருட்களின் மேலுள்ள ஆசையில் {சபலத்தில்} இருந்து ஒருபோதும் விடுபட முடியாது. காலம் மற்றும் இடம் ஆகியவற்றில் பல இடைவெளிகள் இருப்பதால், கடந்த காலத்தைக் குறித்த போதுமான கருத்தையோ, எதிர்காலத்தைக் குறித்த முன்னுணர்தலையோ ஒருவனாலும் அமைத்துக் கொள்ள முடியாததைப் போலவே, இத்தகு ஞானமும், ஆற்றலும் கொண்ட உன்னைப் போன்ற ஒரு மனிதன், சேர்க்கை பிரிவு, நன்மை தீமை ஆகியவற்றுக்காக ஒருபோதும் துயரில் ஈடுபட மாட்டான்.(47) இத்தகு மென்மையான மனநிலை, நன்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மா, முடிவுசெய்யப்பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றைக் கொண்டவனும், பிரம்மச்சரிய நோன்பை நோற்பவனுமான ஒரு மனிதன் துயரில் ஈடுபடாதவனாகவும், {எதையும்} அடையும் ஆசையில் ஒருபோதும் அமைதியற்றவனாக மாறாதவனாகவும், அற்ப மதிப்பைக் கொண்ட எதையும் இழப்பதற்கு அஞ்சாதவனாகவும் இருப்பான்.(48) அத்தகு மனிதன், பாவம் நிறைந்ததும், தீமையானதும், கொடுமையானதும், இழிந்தோருக்கு மட்டுமே தகுந்ததுமான ஆண்டி {பிச்சைக்காரன்} எனும் வஞ்சக வாழ்வைப் பின்பற்ற ஒரு போதும் தகுந்தவனாகான்[4].(49) பெருங்காட்டுக்குச் சென்று, தனியாக இருந்து, கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே உண்டு, பேச்சையும், ஆன்மாவையும் கட்டுப்படுத்தி, அனைத்துயிரினங்களிடமும் கருணையால் நிறைந்து அங்கே இன்பமாக வாழ்வாயாக.(50)அருகே மனிதர்கள் இல்லாமல், பெரும் தந்தங்களுடைய யானைகளின் தோழமையில், காட்டின் விளைச்சலில் நிறைந்து உற்சாகமான இத்தகு வாழ்வைக் காட்டில் வாழ்வது ஞானியரின் நடத்தை எனச் சொல்லப்படுகிறது.(51) பெரும் தடாகம் ஒன்று கலங்கும்போது, தன் அமைதியைத் தானே மீட்கிறது. அதே போலவே, ஞானம் கொண்ட மனிதனும், இத்தகு காரியங்களில் குழப்பமடையும்போது, தானாகவே அமைதியடைகிறான். உன்னைப் போன்று இத்தகு பரிதாபகரமான நிலையில் வீழ்ந்த ஒரு மனிதன் இவ்வாறே மகிழ்ச்சியாக வாழ முடியும் என்றே நான் காண்கிறேன்.(52) உன் செழிப்பை மீட்பது கிட்டத்தட்ட முடியாதநிலையில், அமைச்சர்களும், ஆசோலகர்களும் இல்லாதவனாக இருக்கும்போது, இத்தகு வழியே உனக்குத் திறந்திருக்கிறது. விதியை நம்பிக்கொண்டிருப்பதால் எந்தப் பலனையும் அடைய முடியும் என்பதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார் {காலகவிருக்ஷீயர்}.(53)
நன்கு தீட்டப்பட்ட வஞ்சகத் திட்டங்கள்! – சாந்திபர்வம் பகுதி – 105-பகைவர்களை வெல்வதற்குப் பின்பற்றக்கூடிய வஞ்சகத் திட்டங்களைக் குறித்து க்ஷேமதர்சினுக்கும் காலகவிருக்ஷீயருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
தவசி {காலகவிருக்ஷீயர் கோசல நாட்டு இளவரசன் க்ஷேமதர்சினிடம்} சொன்னார், “ஓ! க்ஷத்திரியா, மறுபுறம், உன் நாட்டை மீட்பதற்கு உனக்கு இன்னும் ஆற்றல் இருப்பதாக நினைத்தால், நீ பின்பற்ற வேண்டிய கொள்கை வழியைக் குறித்து உன்னோடு உரையாடுவேன்.(1) அந்தக் கொள்கை வழியை நீ பின்பற்றி, முயற்சி செய்ய முனைந்தால், உன்னால் உன் செழிப்பை மீட்க முடியும். விபரமாக நான் உனக்குச் சொல்லப்போகும் அனைத்தையும் கவனமாகக் கேட்பாயாக. அந்த ஆலோசனைகளின்படி உன்னால் செயல்பட முடிந்தால், அபரிமிதமான செல்வத்தையும், உண்மையில், உனது நாட்டையும், அரசு அதிகாரத்தையும், பெருஞ்செழிப்பையும் நீ அடைவாய்.(3) ஓ! மன்னா, நீ அதை விரும்பினால் எனக்குச் சொல்வாயாக, அப்போது நான் உனக்கு அந்தக் கொள்கையைக் குறித்துச் சொல்வேன்” {என்றார் காலகவிருக்ஷீயர்}.(4)
மன்னன் {க்ஷேமதர்சின் காலவிருக்ஷீயரிடம்}, “ஓ! புனிதமானவரே, நீர் சொல்ல விரும்புவதை எனக்குச் சொல்வீராக. உமது ஆலோசனைகளைக் கேட்பதற்கும், அதன்படி செயல்படுவதற்கும் நான் விரும்புகிறேன். இன்னும் உம்முடனான இந்தச் சந்திப்பு (எனக்கான) விளைவுகளில் பலன்நிறைந்ததாக இருக்கட்டும்” என்றான்.(5)தவசி {காலகவிருக்ஷீயர் க்ஷேமதர்சினிடம்}, “செருக்கு, ஆசை, கோபம், இன்பம், அச்சம் ஆகியைவற்றைக் கைவிட்டு, பணிவுள்ளவனாகவும், கூப்பிய கரங்களுடனும் உன் எதிரிகளுக்காகக் காத்திருப்பாயாக {எதிரிகளுக்குப் பணிவிடை செய்வாயாக}? நல்லவையும், தூயவையுமான செயல்களை எப்போதும் செய்துவரும் மிதிலையின் ஆட்சியாளனான ஜனகனுக்கு நீ பணிவிடை செய்வாயாக. உண்மையில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருக்கும் அந்த விதேஹ மன்னன் {ஜனகன்}, நிச்சயம் உனக்குப் பெருஞ்செல்வத்தை அளிப்பான்.(7) நீ அந்த மன்னனுக்கு {ஜனகனுக்கு} வலக்கரமாகி, அனைத்து மனிதர்களின் நம்பிக்கையைப் பெறுவாயாக. அதன் விளைவாக, துணிவு, விடாமுயற்சி, தூய நடத்தை கொண்டவர்களும், முக்கியமான ஏழு குற்றங்களில் இருந்து விடுபட்டவர்களுமான பல கூட்டாளிகளை அடைவதில் நீ வெல்வாய்.(8) அடக்கப்பட்ட ஆன்மாவையும், கட்டுப்படுத்தப்பட்ட புலன்களையும் கொண்ட ஒரு மனிதன், தன் கடமைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், தன்னை உயர்த்திக் கொள்வதிலும், பிறரை இன்புறச் செய்வதிலும் வெல்வான்.(9) நுண்ணறிவையும், செழிப்பையும் கொண்ட ஜனகனால் கௌரவிக்கப்பட்டு, அந்த ஆட்சியாளனின் வலக்கரமாகி, நிச்சயம் நீ அனைவரின் நம்பிக்கையையும் அடைந்து மகிழ்வாய்.(10)
இவ்வாறு பெரும்படையைத் திரட்டி, நல்ல அமைச்சர்களுடன் ஆலோசித்து, உன் எதிரிகளுக்கு மத்தியில் வேற்றுமையை உண்டாக்கி, ஒரு மனிதன் வில்வக்காயைக் கொண்டு மற்றொரு வில்வக்காயைப் பிளப்பதைப் போலவே அவர்களுக்குள் ஒருவரையொருவர் எதிர்க்கச் செய்வாயாக. அல்லது, உன் எதிரியின் எதிரிகளிடம் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, அவனது சக்தியை அழிப்பாயாக.(11) பிறகு, எளிதிற்கிடைக்காத நல்ல பொருட்களிலும், அழகிய பெண்களிலும், விலைமதிப்புமிக்கத் துணிமணிகள், படுக்கைகள், இருக்கைகள், மற்றும் வாகனங்களிலும், வீடுகளிலும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகள் மற்றும் விலங்குகளிலும், சாறுகள், நறுமணப்பொருட்கள் மற்றும் கனிகளிலும் உன் எதிரியைப் பற்றுக் கொள்ளச் செய்து, அவனை அழிவடையச் செய்வாயாக[1].(13) ஒருவனுடைய எதிரி இவ்வாறு நிர்வகிக்கப்பட்டால், அல்லது அவனைக் கவனிக்காமல் விட்டால், நல்ல கொள்கையின் படி செயல்பட விரும்பும் ஒருவன், அந்த எதிரி ஒருபோதும் எதையும் அறியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்[2].(14) ஞானியரால் அங்கீகரிக்கப்பட்ட நடத்தையைப் பின்பற்றி, உன் எதிரியின் ஆட்சிப்பகுதிகளில் உள்ள அனைத்து வகை இன்பங்களிலும் இன்புற்று, நாய், மான், காகம் ஆகியவற்றின் நடத்தையைப் பின்பற்றி, உன் எதிரிகளிடம் வெளிப்படையான நட்புடன் நடந்து கொள்வாயாக.(15)பெரியவையும், நிறைவேற்றக் கடினமானவையுமான சாதனைகளை அவர்களை மேற்கொள்ளச் செய்வாயாக. மேலும் அவர்கள், பலமிக்க எதிரிகளுடன் பகைமையில் ஈடுபடும்படியும் பார்த்துக் கொள்வயாக.(16) இனிமையான நந்தவனங்கள், விலைமதிப்புமிக்கப் படுக்கைகள் மற்றும் இருக்கைகள் ஆகிவற்றில் அவர்களது கவனத்தைத் திருப்பி, அத்தகு இன்ப நுகர் பொருட்களை அளித்து, உன் எதிரிகளின் கருவூலத்தை வற்றச் செய்வாயாக.(17) உன் பகைவனை வேள்விகள் செய்ய வைத்து, கொடைகளை அளிக்க வைத்து, பிராமணர்களை நிறைவு செய்வாயாக. (உன் கரங்களால் அந்தப் பரிசுகளைப் பெற்ற) அவர்கள் {பிராமணர்கள்}, பதிலுக்கு (தவங்களையும், வேதச் சடங்குகளையும் செய்வதன் மூலம்) உனக்கு நன்மையைச் செய்து, ஓநாய்களைப் போல உன் எதிரிகளை விழுங்குவார்கள்.(18) நீதிமிக்கச் செயல்களைச் செய்யும் மனிதன் உயர்ந்த கதியையே அடைவான் என்பதில் ஐயமில்லை. அத்தகு செயல்களின் மூலம் மனிதர்கள், சொர்க்கத்தில் உயர்ந்த புகழ் உலகங்களை ஈட்டுவதில் வெல்கிறார்கள்.(19) (நல்ல, அல்லது நியாயமற்ற செயல்களின் மூலம்) உன் எதிரிகளின் கருவூலம் தீர்ந்து போனால், ஓ! கோசல இளவரசே, அவர்கள் ஒவ்வொருவரும் அடக்கப்பட வேண்டும்.(20)
கருவூலமே, சொர்க்கத்தில் புகழுக்கும், பூமியில் வெற்றிக்கும் வேராக இருக்கிறது. எதிரிகள் அவர்களுடைய கருவூலங்களின் விளைவாலேயே அத்தகு மகிழ்ச்சியில் இன்புற்றிருக்கிறார்கள். எனவே, அனைத்து வழிகளிலும் கருவூலமானது வற்றச் செய்யப்பட வேண்டும். உன் எதிரியின் முன்பு உழைப்பை மெச்சாதே, ஆனால் விதியை உயர்வாகப் பேசுவாயாக.(21) தேவர்களின் வழிபாடு சார்ந்த செயல்பாடுகளையே அதிகமாகச் சார்ந்திருக்கும் மனிதன் விரைவில் அழிவடைவான் என்பதில் ஐயமில்லை. நீ உன் எதிரியை விஸ்வஜித் என்றழைக்கப்படும் பெரும் வேள்வியைச் செய்ய வைத்து, அவனது உடைமைகளுக்கான வழிமுறைகள் அனைத்தையும் அவனை இழக்கச் செய்வாயாக.(22) இதன் மூலம் உனது நோக்கம் நிறைவேறும். (வற்றிய கருவூலத்தை மீண்டும் நிரப்புவதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்தி {மக்களின் பொருட்களை} மன்னன் அபகரித்து வருவதால்) நாட்டின் சிறந்த மனிதர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை உன் எதிரிக்குச் சொல்லி, (உலகம் சார்ந்த உடைமைகளை அனைத்தையும் எதிரியிடம் இருந்து வற்றச் செய்வதற்காக) யோகக் கடமைகளை நன்கறிந்த உயர்ந்த தவசி எவரையாவது அவனுக்குச் சுட்டிக்காட்டுவாயாக.(23) அப்போது உன் எதிரி துறவைப் பின்பற்றி, முக்தி வேண்டி வனத்திற்குள் ஓய்ந்து போவான். பிறகு, எதிர்பார்க்கும் விளைவைத் தரக்கூடிய உயர்ந்த மூலிகைகள், செடிகள், செயற்கை உப்புகள் ஆகியவற்றைக் கொதிக்கச் செய்வதன் மூலம் உண்டாக்கப்பட்ட மருந்துகளின் உதவியுடன், (உன் எதிரியின் ஆட்சிப் பகுதிகளில் உள்ள) யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களை அழிப்பாயாக.(24) இவையும், வஞ்சனையுடன் தொடர்புடையவையும், நன்கு தீட்டப்பட்டவையுமான திட்டங்கள் பலவும் இருக்கின்றன. ஒரு நுண்ணறிவுமிக்க மனிதன், இவ்வாறே நஞ்சின் மூலம் ஓர் எதிரி நாட்டின் மக்கள் தொகையை அழிக்க முடியும்” என்றார் {காலகவிருக்ஷீயர்}.(25)
அமைதி நிறுவலே உயர்கடமை! – சாந்திபர்வம் பகுதி – 106-க்ஷேமதர்சினுக்கும், ஜனகனுக்கும் இடையில் நட்பை ஏற்படுத்திய காலகவிருக்ஷீயர்; க்ஷேமதர்சினை மரியாதையுடன் நண்பனாய் ஏற்று அவனுடன் உரையாடிய ஜனகன்; அமைதியை ஏற்படுத்திக் கொள்வதே மன்னர்களின் உயர்ந்த கடமையாகும் என்பதை விளக்க இந்தக் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்.
மன்னன் {க்ஷேமதர்சின் தவசி காலகவிருக்ஷீயரிடம்}, “ஓ! பிராமணரே, வஞ்சகம், அல்லது மோசடியின் மூலம் வாழ்வைத் தாங்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. செல்வமானது எவ்வளவுதான் பெரியதாக இருப்பினும், நியாயமற்ற வழிமுறைகளில் ஈட்டப்படும் செல்வத்தை நான் விரும்பவில்லை.(1) நமது உரையாடலின் தொடக்கத்திலேயே நான் இந்த வழிமுறைகளைத் தவிர்த்தேன். நிந்தனைக்கு வழிவகுக்காதவையும், அனைத்து வகையிலும் எனக்கு நன்மையே செய்பவையும், விளைவுகளில் தீங்கில்லாதவையுமான செயல்களை மட்டுமே செய்து இந்த உலகில் நான் வாழ விரும்புகிறேன். நீர் சுட்டிக்காட்டும் வழிகளைப் பின்பற்ற இயலாதவனாக நான் இருக்கிறேன். உண்மையில், இந்தப் போதனைகள் எனக்குத் தகாது” என்றான்.(2,3)
தவசி {காலகவிருக்ஷீயர் கோசலநாட்டு இளவரசன் க்ஷேமதர்சினிடம்}, “ஓ! க்ஷத்திரியா, நீ சொல்லும் இந்த வார்த்தைகள் உன்னை அறவுணர்ச்சிகள் கொண்டவனாகச் சுட்டிக்காட்டுகின்றன. ஓ! பெரும் அனுபவம் கொண்டவனே, உண்மையில், மனோநிலையிலும், புத்தியிலும் நீ நீதிமானாக இருக்கிறாய்.(4) உனக்கும், அவனுக்கும் {விதேஹ ஆட்சியாளனான ஜனகனுக்கும்} நல்லது செய்ய நான் முயற்சிப்பேன். அழிவில்லாததும், வஞ்சனையில்லாததுமான ஒற்றுமையை உனக்கும் அந்த மன்னனுக்கும் இடையில் நான் ஏற்படுத்துவேன்.(5) உன்னதக் குலத்தில் பிறந்தவனும், நீதியற்றவையும், கொடூரமானவையுமான செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவனும், பெரும் கல்வி பயின்றவனும், அரசை நடத்துவது மற்றும் அனைத்து மனிதர்களுக்குள்ளும் இணக்கத்தை ஏற்படுத்தும் கலைகளை நன்கறிந்தவனுமான உன்னைப் போன்ற ஒருவனை அமைச்சனாக அடைய விரும்பாதவன் எவன் இருக்கிறான்?(6) ஓ! க்ஷத்திரியா {க்ஷேமதர்சின்}, நாட்டை இழந்து பெருந்துன்பத்தில் மூழ்கியிருப்பவனாக இருப்பினும், நீ நீதிமிக்க நடத்தையைப் பின்பற்றி வாழ விரும்புவதன் காரணமாகவே நான் இதைச் சொல்கிறேன்.(7) உண்மையை உறுதியாகக் கடைப்பிடிக்கும் விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்}, விரைவில் என் வசிப்பிடத்திற்கு வரப்போகிறான். நான் சொல்வதை அவன் நிச்சயமாகச் செய்வான்” என்றார் {காலகவிருக்ஷீயர்}”.(8)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இதன்பிறகு, விதேஹர்களின் ஆட்சியாளனை {ஜனகனை} அழைத்த அந்தத் தவசி {காலகவிருக்ஷீயர்}, அவனிடம் {ஜனகனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னார், “இந்த மனிதன் {கோசல இளவரசன் க்ஷேமதர்சின்} அரச குடி பிறந்தவன். இவனது இதயத்தையே நான் அறிவேன்.(9) இவனது ஆன்மாவானது கண்ணாடியின் பரப்பையோ, கூதிர்கால நிலவு வட்டிலையோ போன்று தூய்மையானது. அனைத்து வழியிலும் நான் இவனைச் சோதித்துவிட்டேன். நான் இவனிடம் எந்தக் குற்றத்தையும் காணவில்லை.(10) இவனுக்கும் உனக்கும் இடையில் நட்பு இருக்கட்டும். என்னை நம்புவதைப் போலவே நீ இவனிடமும் நம்பிக்கை கொள்வாயாக. (தகுந்த) அமைச்சன் இல்லாத மன்னனால், தன் நாட்டை மூன்று நாட்களுக்குக் கூட ஆள முடியாது.(11) அமைச்சன், துணிவுமிக்கவனாகவும், பெரும் நுண்ணறிவு கொண்டவனாகவும் இருக்க வேண்டும். இந்த இரு பண்புகளைக் கொண்டே ஒருவனால் இருவுலகங்களையும் {இம்மையையும், மறுமையையும்} வெல்ல முடியும். ஓ! மன்னா {ஜனகனே}, ஒரு நாட்டை ஆள்வதற்கும் இந்த இரு பண்புகளே அவசியம் என்பதைக் காண்பாயாக.(12) நீதிமிக்க மன்னர்களுக்கு, இத்தகு பண்புகளைக் கொண்ட ஓர் அமைச்சனைவிட வேறு எந்தப் புகலிடமும் கிடையாது. இந்த உயர் ஆன்ம மனிதன் அரசகுல வழித்தோன்றலாவான். நீதியின் பாதையிலேயே இவன் {க்ஷேமதர்சின்} நடக்கிறான்.(13) அறத்தையே எப்போதும் நோக்கமாகக் கொண்ட இவன் அடைவதற்கு மதிப்புமிக்க ஒருவனாவான். உன்னால் கௌரவத்துடன் நடத்தப்பட்டால், இவன் உன் எதிரிகள் அனைவரையும் அடக்குவான்.(14) இவன் உன்னோடு போரிட்டால், ஒரு க்ஷத்திரியன் என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வான். தன் தந்தைமார் மற்றும் பாட்டன்மாரின் நடத்தையைப் பின்பற்றி உன்னை வெல்ல அவன் போரிட்டால்,(15) எதிராளிகளை வெல்லும் க்ஷத்திரியக் கடமையை நோற்பவனாக நீ அவனோடு போர்புரிவதே உன் கடமையாக இருக்கும். எனினும், என் ஆணையின் பேரில் போரில் ஈடுபடாமல், உனக்கு நன்மை செய்யும் விருப்பத்தோடு இவனை உனக்குக் கீழ் நியமித்துக் கொள்வாயாக.(16) முறையற்ற பேராசையைக் கைவிட்டு அறத்தில் உன் கண்களைச் செலுத்துவாயாக. காமத்தாலோ, போரிடும் விருப்பத்தாலோ, உன் வகைக்கான கடமைகளைக் கைவிடுவது உனக்குத் தகாது.(17) ஓ! ஐயா, வெற்றி நிச்சயமானதில்லை. தோல்வியும் நிச்சயமானதில்லை. இதை நினைவில் கொண்டு, எதிரிக்கு உணவையும், பிற இன்ப நுகர் பொருட்களையும் கொடுத்து அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(18) வெற்றியையும், தோல்வியையும் ஒருவன் தன் வழக்கிலேயே காணலாம். ஓர் எதிரியை அழிக்க முனைபவர்கள், சில வேளைகளில் முயலும்போது தாங்களே அழிந்து விடுகிறார்கள்” என்றார் {காலகவிருக்ஷீயர்}.(19)
இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் ஜனகன், அனைத்துக் கௌரவங்களுக்கும் தகுந்தவரான அந்தப் பிராமணர்களில் காளையை {காலகவிருக்ஷீயரை} முறையாக வணங்கிக் கௌரவித்து, அவரிடம்,(20) “பெரும் கல்வியும், பெரும் ஞானமும் கொண்டவர் நீர். எங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தில் நீர் எதைச் சொன்னீரோ, அது நிச்சயம் எங்கள் இருவருக்கும் பயன் பயக்கக்கூடியதே.(21) அவ்வாறு நடந்து கொள்வதே (எங்களுக்கு) உயர்ந்த நன்மையை அளிக்கும். இதைச் சொல்வதில் எனக்கு எத்தயக்கமும் இல்லை” என்றான் {ஜனகன்}.(22)
பிறகு அந்த விதேஹர்களின் ஆட்சியாளனானவன் {ஜனகன்}, கோசல இளவரசனிடம் {க்ஷேமதர்சினிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், “க்ஷத்திரியக் கடமைகளை நோற்றும், கொள்கையின் உதவியுடனும் நான் இவ்வுலகை வென்றேன்.(23) எனினும், ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உன் நற்பண்புகளால் நான் வெல்லப்பட்டேன். அவமான உணர்வேதும் வளர்க்காமல் (என் அருகில் நீ இருந்தால்), ஒரு வெற்றியாளனாகவே நீ என்னுடன் வாழ்வாய்.(24) உன் நுண்ணறிவை நான் மதிக்கிறேன், உன் ஆற்றலை நான் மதிக்கிறேன். நான் உன்னை வென்றுவிட்டேன் என்று சொல்லி நான் உன்னை அவமதிக்கமாட்டேன். மறுபுறம், ஒரு வெற்றியாளனாகவே நீ என்னுடன் வாழ்வாயாக.(25) ஓ! மன்னா, என்னால் முறையாகக் கௌரவிக்கப்பட்டு என் வசிப்பிடத்திற்குச் செல்வாயாக” என்றான் {ஜனகன்}.பிறகு அந்தப் பிராமணரை {காலகவிருக்ஷீயரை} வணங்கிய மன்னர்கள் இருவரும், ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை கொண்டு, *மிதிலையின் தலைநகரத்திற்குச் சென்றனர்.(26) விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்}, அந்தக் கோசல இளவரசனை {க்ஷேமதர்சினைத்} தன் வசிப்பிடத்திற்குள் நுழையச் செய்து, அனைத்து கௌரவங்களுக்கும் தகுந்த அவனுக்கு, கால்கழுவ நீரையும், தேன் மற்றும் தயிர்க்கடைசல்களையும் {மதுபர்க்கங்களையும்}, மற்றும் வழக்கமான பொருட்களையும் கொடுத்து கௌரவித்தான்.(27)
மேலும் மன்னன் ஜனகன், பல்வேறு வகை ரத்தினங்கள் மற்றும் நகைகளுடன் சேர்த்துத் தன் சொந்த மகளையே அவனுக்கு {க்ஷேமதர்சினுக்கு} அளித்தான் {திருமணம் செய்து கொடுத்தான்}. இதுவே (அமைதியை ஏற்படுத்துவதே) மன்னர்களின் உயர்ந்த கடமையாகும்; வெற்றி, தோல்வி ஆகிய இரண்டும் நிச்சயமற்றதாகும்” {என்றார் பீஷ்மர்}.(28)
உயர்குடியினர்! – சாந்திபர்வம் பகுதி – 107-உயர்குடியினருக்கும் மன்னர்களுக்கும் இடையில் பகைமை உண்டாகும் காரணங்கள்; உயர்குடியினர் ஒற்றுமையுடன் இருந்தால் நாட்டுக்கு ஏற்படும் நன்மைகள்; பெருந்திரள் மக்களைத் துயரம் மற்றும் ஆபத்தில் இருந்து காக்கக்கூடிய உயர் குடியினர் யாவர்; உயர்குடியினர் மன்னனிடம் இருந்து விலக வழிவகுக்கும் காரணங்கள்; உயர்குடியினரால் நாட்டுக்கு ஏற்படும் அச்சம்; உயர்குடியினருக்கு மத்தியில் உண்டாகக்கூடிய வேற்றுமை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்கு விரிவாகச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! எதிரிகளை எரிப்பவரே, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களுக்குரிய கடமைகளின் வழி, பொது நடத்தை {ஒழுக்கம்}, வாழ்வாதார வழிமுறைகள் ஆகியவற்றையும், அவற்றின் விளைவுகளையும் நீர் விளக்கிச் சொல்லியிருக்கிறீர்.(1) மன்னர்களின் கடமைகள், அவர்களின் கருவூலங்கள், அவற்றை நிரப்பும் வழிமுறைகள், படையெடுப்பு மற்றும் வெற்றி ஆகியவற்றைக் குறித்தும் சொன்னீர். அமைச்சர்களின் சிறப்பியல்புகள், குடிமக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் நடவடிக்கைகள்,(2) ஒரு நாட்டினுடைய ஆறு அங்கங்களின் சிறப்பியல்புகள், படைகளின் தரம், தீயோரை அடையாளங்காணும் வழிமுறைகள், நல்லோரின் அறிகுறிகள்,(3) நடுநிலையுடன் இருப்போர், தாழ்ந்தோர், மேன்மையானோர் ஆகியோரின் பண்புகள், முன்னேற்றத்தை விரும்பும் மன்னன் பெருந்திரள் மக்களிடம் பின்பற்ற வேண்டிய நடத்தை,(4) பலவீனர்கள் பாதுகாக்கப்பட்டுப் பேணி வளர்க்கப்பட வேண்டிய பாங்கு ஆகியவற்றைக் குறித்தும் நீர் சொல்லியிருக்கிறீர். ஓ! பாரதரே, இந்தக் காரியங்கள் அனைத்தையும் குறித்து, புனித உடன்படிக்கைகளில் ஆழப் பதியப்பட்டிருக்கும் அறிவுரைகளை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்.(5)
எதிரிகளை வெல்ல விரும்பும் மன்னர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தையைக் குறித்தும் நீர் சொல்லியிருக்கிறீர். ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, ஒரு மன்னைச் சுற்றிக் கூடியிருக்கும் துணிச்சல் மிக்க மனிதக்கூட்டத்திடம் {உயர்குடிமக்களிடம்} நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து நான் இப்போது கேட்க விரும்புகிறேன்[1].(6) ஓ! பாரதரே, அவர்கள் {கூட்டங்கள்} எவ்வாறு வளர முடியும்? மன்னனிடம் அவர்கள் எவ்வாறு பற்றுடனிருக்க முடியும்? எதிரிகளை அடக்குவதிலும், நண்பர்களை அடைவதிலும் அவர்கள் எவ்வாறு வெல்வார்கள்?(7) வேற்றுமை மட்டுமே அவர்களுக்கு அழிவைக் கொண்டுவரும் என்று எனக்குத் தோன்றுகிறது. பலருக்குத் தொடர்பேற்படும்போது, ஆலோசனைகளை எப்போதும் இரகசியமாக வைத்துக் கொள்வது மிகக் கடினமானது என நான் நினைக்கிறேன். ஓ! எதிரிகளை எரிப்பவரே {பீஷ்மரே}, இது குறித்த அனைத்தையும் நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். ஓ! மன்னா, மன்னனிடம் இருந்து அவர்கள் விலகுவதைத் தடுக்கும் வழிமுறைகளையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(9)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, ஒருபுறமிருக்கும் உயர் குடியினருக்கும், மறுபுறமிருக்கும் மன்னர்களுக்கும் இடையில் பகைமையை உண்டாக்கும் காரணங்களாகப் பேராசையும், கோபமும் இருக்கின்றன[2].(10) இவர்களில் ஒரு தரப்பினர் (மன்னர்கள், அல்லது உயர்குடியினர்) பேராசைக்கு இரையாகின்றனர். அதன் விளைவாக அடுத்தத் தரப்புக்கு (உயர் குடியினர் அல்லது மன்னர்களுக்கு) கோபமேற்படுகிறது. அடுத்தவரை பலவீனமடையச் செய்து, வீணாக்க முனையும் அந்த இரு தரப்பும் அழிவையே அடைகிறது.(11) ஒற்றர்களை நியமித்து, கொள்கையையும், உடல்சக்தியும் கொண்டு திட்டத்தை வகுத்து, இணக்கம் {சாம}, ஈகை {தான}, வேற்றுமை {பேதம்} ஆகிய கலைகளைப் பின்பற்றி, பலவீனம், வீணாக்குதல், அச்சம் ஆகியவற்றை உண்டாக்கக்கூடிய பிற வழிமுறைகளையும் பயன்படுத்தி அந்தத் தரப்புகள் {மன்னர் தரப்பினரும், உயர் குடி தரப்பினரும்} ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வார்கள்.(12) கச்சிதமான அமைப்பின் சிறப்பியல்புகளுடன் கூடியவர்களான ஒரு நாட்டின் உயர் குடிமக்கள், அவர்களிடம் இருந்து மன்னன் அதிகம் பறிக்க முயன்றால், அவனிடம் இருந்து ஒதுங்கி விடுவார்கள். மன்னனிடம் இருந்து ஒதுங்கி, நிறைவில்லாமல் இருக்கும் அவர்கள் அனைவரும், அச்சத்தின் காரணமாகத் தங்கள் ஆட்சியாளனுடைய எதிரிகளின் தரப்பை அடைவார்கள்.(13) மேலும் ஒரு நாட்டின் உயர்குடிமக்கள் தங்களுக்குள்ளேயே ஒற்றுமையின்றி இருந்தால் அவர்கள் அழிவையே அடைவார்கள். ஒற்றுமையில்லாத அவர்கள் எளிதாக எதிரிக்கு இரையாக விழுவார்கள். எனவே, உன்னதமானவர்கள், எப்போதும் ஒரே கருத்துடன் செயல்பட வேண்டும்.(14) அவர்கள் ஒற்றுமையாக இருந்தால், தங்கள் பலம் மற்றும் ஆற்றலின்மூலம் அவர்கள் மதிப்புமிக்க உடைமைகளை ஈட்டுவார்கள். உண்மையில் அவர்கள் இவ்வாறு ஒற்றுமையுடன் இருந்தால், வெளித்தரப்பினர் பலர் அவர்களின் கூட்டணியை நாடுவார்கள்.(15)
அன்பெனும் கட்டுக்குள் ஒருவரோடொருவர் ஒற்றுமையாக இருக்கும் அந்த உன்னதமானவர்களை ஞானிகள் மெச்சுகின்றனர். காரியத்தோடு ஒற்றுமையாக இருந்தால், அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.(16) ({பிறருக்கு} எடுத்துக்காட்டாக இருப்பதன் மூலம்) ஒழுக்கத்திற்கான அறவழிகளை அவர்களால் நிறுவ முடியும். முறையாக நடந்து கொள்வதால் அவர்கள் செழிப்பில் முன்னேற முடியும்.(17) உயர்குடி மக்கள், தங்கள் மகன்கள், உடன்பிறந்தோர் ஆகியோரைக் கட்டுப்படுத்தி, அறிவால் செருக்கு தணிந்த மனிதர்கள் அனைவரிடமும் அன்பாக நடந்து கொண்டு செழிப்பில் முன்னேறுவார்கள்.(18) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உயர்குடிமக்கள், ஒற்றர்களை நிறுவும் தங்கள் கடமைகளைக் கவனித்து, கொள்கை வழிமுறைகளையும், கருவூலங்களை நிரப்பும் வழிமுறைகளையும் தீட்டி, செழிப்பில் முன்னேறுவார்கள்.(19) உயர்குடிமக்களானவர்கள், ஞானம், துணிவு, விடாமுயற்சி ஆகியவற்றைக் கொண்டோருக்கு உரிய மரியாதையைச் செலுத்தி, அனைத்து வகைப் பணிகளிலும் உறுதியான ஆற்றலை வெளிப்படுத்தி, செழிப்பில் முன்னேறுவார்கள்.(20)
செல்வம், வளம், சாத்திர அறிவு, கலைகள் மற்றும் அறிவியல்கள் அனைத்தின் அறிவு ஆகியவற்றைக் கொண்ட உயர்குடி மக்கள், அறியாமையில் உள்ள பெருந்திரள் மக்களை அனைத்து வகைத் துயரம் மற்றும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவார்கள்.(21) ஓ! பாரதர்களின் தலைவா, (மன்னனின் பங்குக்கு) கோபம், முறிவு, அச்சம், தண்டனை, ஒறுப்பு, ஒடுக்குதல், கொலை ஆகியவை உன்னதக் குடிமக்களை மன்னனிடம் இருந்து விலகச் செய்து, மன்னனுடைய எதிரிகளின் தரப்பை அடையச் செய்கிறது.(22) எனவே, மன்னனால் அந்த உயர் குடிமக்களின் தலைவர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நாட்டின் காரியங்கள் பெருமளவில் அவர்களைச் சார்ந்தே இருக்கின்றன.(23) ஓ! பகைவர்களை நொறுக்குபவனே, உயர்குடி மக்களின் தலைவர்களிடம் மட்டுமே ஆசோலனைகள் செய்யப்பட வேண்டும், அவர்களிடம் மட்டுமே ஒற்றர்களும் இருக்க வேண்டும். ஓ! பாரதா, உயர்குடியின் ஒவ்வொரு நபரிடமும் மன்னன் ஆலோசிக்கக்கூடாது.(24) மன்னன், அந்தத் தலைவர்களுடன் இணக்கமாக நடந்து கொண்டு, மொத்த வகையினருக்கும் நன்மை செய்ய வேண்டும். எனினும், அந்த உயர்குடி கூட்டமானது, பிளவடைந்து, வேற்றுமையடைந்து, தலைவர்கள் அற்றுப் போனால், வேறு வகைச் செயல்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும்.(25)
உயர்குடி மக்கள் தங்களுக்குள் ஒருவரோடொருவர் சச்சரவு செய்து கொண்டு, தங்கள் வளங்களுக்கேற்ற வகையில் ஒவ்வொருவரும் ஒற்றுமையில்லாமல் செயல்பாட்டால், அவர்களது செழிப்பானது தேய்ந்துபோகும், பல்வேறு வகைத் தீமைகளும் நேரும்.(26) அவர்களில் கல்வியும், ஞானமும் கொண்டோர், ஒரு சச்சரவு தோன்றிய உடனேயே அதைக் களைய வேண்டும். உண்மையில், ஒரு குலத்தின் பெரியோர், அலட்சியத்துடன் நடந்து கொண்டால், அந்தக் குலத்தினர் மத்தியில் கலகம் பிறக்கும். அத்தகு கலகங்களே ஒரு குலத்தின் அழிவாகி, உன்னதமானவர்களுக்கு மத்தியில் (உயர்குடியினர் அனைவருக்கும் மத்தியில்) வேற்றுமையை உண்டாக்கும்.(27) ஓ! மன்னா, உள்ளே இருந்து எழும் அச்சங்கள் அனைத்தில் இருந்தும் உன்னைப் பாதுகாத்துக் கொள்வாயாக. வெளியில் இருந்து எழும் அச்சங்கள் அற்ப விளைவுகளையே உண்டாக்கும். ஓ! மன்னா, முதல் வகை அச்சமானது {உட்பகையானது}, ஒரே நாளில் உன் வேரையே அறுத்துவிடும்.(28) குலத்தாலும், குருதியாலும் ஒருவருக்கொருவர் இணையான மனிதர்கள், தங்கள் இயல்பில் இருந்து எழும் கோபம், அல்லது மடமை, அல்லது பேராசை ஆகியவற்றால் ஒருவரோடொருவர் பேசுவதையும் நிறுத்திவிடுவார்கள். இது தோல்வியின் அறிகுறியாகும். துணிவாலோ, நுண்ணறிவாலோ, அழகாலோ, செல்வத்தாலோ எதிரிகள் உயர்குடியை அழிப்பதில்லை. வேற்றுமையாலும் {பேதமுறையினாலும்}, கொடைகளாலும் {தானமுறையாலும்} மட்டுமே அதை அடக்க முடியும். இதன் காரணமாகவே, ஒற்றுமை ஒன்றே உயர்குடியின் பெரும்புகலிடமாகச் சொல்லப்படுகிறது” என்றார் {பீஷ்மர்}.(29-31)
தாய், தந்தை, ஆசான்! – சாந்திபர்வம் பகுதி – 108-கடமைகள் அனைத்திலும் முக்கியமானவை எவை என யுதிஷ்டிரன் கேட்பது; தாய், தந்தை, ஆசான் ஆகியோரை வழிபடுவதே முக்கியக் கடமை என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷமரிடம்}, “கடமையின் பாதை நீண்டதாகும். ஓ! பாரதரே, மேலும் அது பல கிளைகளைக் கொண்டதாக இருக்கிறது. எனினும், உம்மைப் பொறுத்தவரையில், நடைமுறையில் பின்பற்ற மிகத் தகுந்தவை எவை?(1) உம்மைப் பொறுத்தவரையில், இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த தகுதியை எனக்கு ஈட்டித் தருபவையும், கடமைகள் அனைத்திலும் மிக முக்கியமானவையுமான செயல்கள் எவை?” என்று கேட்டான்.(2)ஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “என்னைப் பொறுத்தவரையில் தாய், தந்தை, ஆசான் ஆகியோரை வழிபடுவதே மிக முக்கியமானது. இம்மையில் அக்கடமையைச் செய்யும் மனிதன், பெரும் புகழையும், புகழுலகங்கள் பலவற்றையும் ஈட்டுவதில் வெல்கிறான்.(3) ஓ! யுதிஷ்டிரா, அவர்கள் மரியாதையுடன் வழிபடப்பட்டு, அறத்திற்கு இசைவாகவோ, இல்லாமலோ அவர்களால் ஆணையிடப்படும் எதுவும் எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.(4) அவர்கள் தடை செய்ததை ஒருவன் ஒருபோதும் செய்யக்கூடாது. அவர்கள் எதை ஆணையிடுவார்களோ, அஃது எப்போதும் நிச்சயம் செய்யப்பட வேண்டும்.(5) மூவுலகங்கள் அவர்களே. மூன்று வாழ்வுமுறைகளும் அவர்களே. மூன்று வேதங்களும் அவர்களே. மூன்று புனித நெருப்புகளும் அவர்களே.(6) கார்ஹபத்ய நெருப்பாகத் தந்தை சொல்லப்படுகிறார்; தக்ஷிண நெருப்பாகத் தாய் சொல்லப்படுகிறார்; ஆகுதி ஊற்றப்படும் {ஆஹவநீ} நெருப்பாக ஆசான் சொல்லப்படுகிறார். உண்மையில் இந்த மூன்று நெருப்புகளும் மிக உயர்ந்தவையாகும். இந்த மூன்று நெருப்புகளிலும் நீ கவனத்தோடு இருந்தால், மூவுலகங்களையும் நீ வெல்வாய்.(7)
முறைமையுடன் தந்தைக்குத் தொண்டாற்றினால் ஒருவன் இவ்வுலகைக் கடக்கலாம். அதே வழியில் தாய்க்குத் தொண்டாற்றினால், அவன் மறுமையில் புகழுலகங்களை அடையலாம். முறைமையுடன் ஆசானுக்குத் தொண்டாற்றினால், ஒருவன் பிரம்மலோகத்தையே அடையலாம்.(8) ஓ!பாரதா {யுதிஷ்டிரா}, இந்த மூவரிடமும் முறையாக நடந்து கொண்டால், நீ மூவுலகங்களிலும் புகழையடைவாய், அருளப்பட்டவனாவாய், உன் தகுதியும் {புண்ணியமும்}, வெகுமதியும் பெரியதாக இருக்கும்.(9) எச்செயலையும் ஒருபோதும் அவர்களை மீறிச் செய்யாதே. அவர்கள் உண்பதற்கு முன் நீ உண்ணாதே, அவர்கள் உண்பதைவிடச் சிறந்த எதையும் நீ உண்ணாதே. அவர்களின் மேல் எந்தக் குற்றத்தையும் ஒருபோதும் சுமத்தாதே. ஒருவன் எப்போதும் அவர்களிடம் பணிவுடன் தொண்டாற்ற வேண்டும். அதுவே உயர்ந்த தகுதியை {புண்ணியத்தைக்} கொண்ட ஒரு செயலாகும்.(10) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இவ்வழியில் செயல்பட்டால், புகழ், தகுதி, கௌரவம், மறுமையில் புகழ் உலகங்கள் ஆகியவற்றை அடைவாய். எவன் இவர்களைக் கௌரவிப்பானோ, அவன் மூவுலகங்களிலும் கௌரவிக்கப்படுவான்.(11)
மறுபுறம், எவன் இவர்களை அவமதிப்பானோ, அவன் செய்யும் எந்தச் செயல்களிலும் எந்தத் தகுதியும் {புண்ணியத்தையும்} அடையமாட்டான். ஓ! எதிரிகளை எரிப்பவனே {யுதிஷ்டிரனே}, அத்தகு மனிதன் இம்மையும், மறுமையும் அடைவதில்லை.(12) இந்த மூன்று பெரியோரையும் எவன் எப்போதும் அவமதிப்பானோ, அவன் இம்மையிலும் மறுமையிலும் ஒருபோதும் புகழை அடையமாட்டான். அவன் மறுமையில் எந்த நன்மையையும் ஒருபோதும் ஈட்டமாட்டான்.(13) இந்த மூவரைக் கௌரவிக்கும் வகையில் நான் கொடுத்த அனைத்தும் அதன் உண்மை அளவைவிட நூறு மடங்காகவோ, ஆயிரம் மடங்காகவோ ஆனது. ஓ! யுதிஷ்டிரா, அந்தத் தகுதியின் விளைவாகவே, நான் என் கண்களால் மூவுலகங்களையும் தெளிவாகக் காண்கிறேன்.(14) ஓர் ஆச்சாரியர் {ஆசிரியர்}, கல்வி கற்ற பத்து பிராமணர்களைவிட மேன்மையானவராவார். ஓர் உபாத்யாயர் {துணையாசிரியர்}, பத்து ஆச்சாரியர்களைவிட மேன்மையானவராவார். தந்தை, பத்து உபாத்யாயர்களைவிட மேன்மையானவராவார். தாயானவள், பத்து தந்தைகளைவிட, முக்கியத்துவத்தைப் பொறுத்தவரையில் ஒருவேளை, மொத்த உலகையும்விட மேன்மையானவளாவாள்.(15,16)
எனினும், ஓர் ஆசான், தந்தையையும், தாயைவிடவும் கூட அதிக மதிப்புக்குத் தகுந்தவர் என்பது என் கருத்து. தந்தையும், தாயும் ஒருவனைப் படைக்கிறார்கள்.(17) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தந்தையும், தாயும் உடலை மட்டுமே உண்டாக்குகிறார்கள். மறுபுறம், தன் ஆசானிடம் இருந்து ஒருவன் பெறும் பிறவியானது தெய்வீகமானதாகும். அந்த வாழ்வானது சிதைவும் {முதுமையும்}, அழிவும் இல்லாததாகும்.(18) தந்தையும், தாயும் எக்குற்றமிழைத்தாலும் அவர்கள் கொல்லப்படக்கூடாது. (தண்டனைக்குத் தகுந்தவர்களாக இருப்பினும்) ஒரு தந்தையையும், ஒரு தாயையும் தண்டிக்காமல் இருப்பதால் ஒருவன் பாவமிழைத்தவன் ஆகமாட்டான். உண்மையில், தண்டனையிலிருந்து தப்பும் அத்தகு மதிப்புக்குரிய மனிதர்கள் மன்னனைக் களங்கப்படுத்துவதில்லை. பாவம் நிறைந்த தந்தையை மதிப்புடன் பேணி வளர்க்க முயலும் மனிதர்களுக்குத் தேவர்களும், முனிவர்களும் தங்கள் உதவிகளை நிறுத்துவதில்லை.(19) உண்மையான கல்வியைக் கொடுப்பது, வேதங்களைச் சொல்வது, அழிவில்லா ஞானத்தைக் கொடுப்பது ஆகிய காரியங்களால் ஒரு மனிதனுக்கு உதவுபவர், தந்தையாகவும், தாயாகவும் கருதப்பட வேண்டும். ஆசானின் செயலை நன்றியுடன் நினைவுகூரும் சீடன், எதற்காகவும் ஒருபோதும் அவருக்கு எத்தீங்கையும் செய்யக்கூடாது.(20)
ஆசான்களிடம் இருந்து கல்வியை அடைந்த பிறகு, எண்ணத்தாலும், செயலாலும் கடமையுணர்வுடன் அவர்களுக்குக் கீழ்ப்படியாமல், அவர்களை மதிக்காமல் இருப்போர் கருவைக் கொன்ற பாவத்தை இழைக்கிறார்கள். அவர்களைப் போன்ற பாவிகள் இவ்வுலகில் வேறு எவரும் இல்லை. ஆசான்கள் எப்போதும் தங்கள் சீடர்களிடம் பெரும் அன்பை வெளிப்படுத்துவார்கள். எனவே, சீடர்களும் ஒப்பிடத்தக்க தங்கள் மரியாதையை அவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.(21) எனவே, பழங்காலத்தில் இருந்த உயர்ந்த தகுதியை {புண்ணியத்தை} ஈட்ட விரும்பும் ஒருவன், தன் ஆசான்களைப் போற்றி வழிபட்டு, அனைத்து இன்பநுகர் பொருட்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.(22) தன் தந்தையை எவன் நிறைவு கொள்ளச் செய்கிறானோ, அவனிடம் பிரஜாபதி நிறைவுடன் இருக்கிறார். தன் தாயை எவன் நிறைவு கொள்ளச் செய்கிறானோ, அவன் பூமாதேவியையே நிறைவுகொள்ளச் செய்கிறான்.(23) எவன் தன் ஆசானை நிறைவுகொள்ளச் செய்கிறானோ, அவன் அச்செயலால் பிரம்மனையே நிறைவுகொள்ளச் செய்கிறான். இதன் காரணமாகவே, ஓர் ஆசான், தந்தையையோ, தாயையோ விடப் பெரும் மதிப்புக்குத் தகுந்தவராக இருக்கிறார்.(24) ஆசான்கள் வழிபடப்பட்டால், முனிவர்களுடனும், தேவர்களுடனும் சேர்ந்த பித்ருக்கள் அனைவரும் நிறைவடைகிறார்கள். எனவே, ஆசான் என்பவர் உயர்ந்த மதிப்புக்குத் தகுந்தவராவார்.(25)
ஆசானானவர், ஒரு சீடனால் எவ்வகையிலும் ஒருபோதும் அலட்சியம் செய்யப் {அவமதிக்கப்} படக்கூடாது. தாயோ, தந்தையோ கூட ஆசானின் அளவுக்கு மதிப்புக்குத் தகுந்தவர்கள் இல்லை.(26) தந்தை, தாய், ஆசான் ஆகியோர் ஒருபோதும் அவமதிக்கப்படக்கூடாது. அவர்களுடைய எச்செயலிலும் குற்றம் காணக்கூடாது. எவன் தன் ஆசான்களிடம் மதிப்புடன் நடந்து கொள்கிறானோ, அவனிடம் தேவர்களும், பெரும் முனிவர்களும் நிறைவு கொள்கிறார்கள்.(27) எண்ணத்தாலோ, செயலாலோ ஆசான்கள், அல்லது தந்தைமார், அல்லது தாய்மார் ஆகியோருக்குத் தீங்கிழைப்பவர்கள், ஒரு கருவைக் கொன்ற பாவத்தை இழைக்கிறார்கள். அவர்களுக்கு இணையான பாவிகள் இவ்வுலகில் வேறு எவரும் இல்லை.(28) தந்தையின் மடியிலும், தாயின் கருவறையிலும் பிறந்த ஒரு மகன், அவர்களால் வளர்க்கப்பட்டு, வயதடையும்போது தன் பங்குக்கு அவர்களை ஆதரிக்காமல் போனால், அவன் ஒரு கருவைக் கொன்ற பாவத்தை இழைக்கிறான். அவனுக்கு இணையான பாவி இவ்வுலகில் வேறு எவனும் இல்லை.(29) ஒரு நண்பனுக்குத் தீங்கிழைப்பவன், நன்றியில்லாதவன், ஒரு பெண்ணைக் கொல்பவன், ஓர் ஆசானைக் கொல்பவன் ஆகிய நால்வரும் {பாவங்களில் இருந்து} தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டதாக நாம் ஒருபோதும் கேள்விப்படுவதில்லை.(30) இவ்வுலகில் ஒரு மனிதன் பொதுவாகச் செய்ய வேண்டிய அனைத்தையும் நான் இப்போது உனக்குச் சொல்லிவிட்டேன். நான் சொன்ன கடமைகளைத் தவிர்த்து, பெரும் புகழை உண்டாக்கக்கூடியவை வேறு {செயல்கள்} எவையும் இல்லை. கடமைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, அவற்றின் சாரத்தை நான் உனக்குச் சொல்லிவிட்டேன்” என்றார் {பீஷ்மர்}.(31)
ஸநாதன தர்மம்! – சாந்திபர்வம் பகுதி – 109-உண்மை மற்றும் பொய்ம்மையின் பண்புகளையும், அவையிரண்டும் பயன்படுத்தப்பட வேண்டிய நேரங்களையும், அழிவில்லா அறமான நித்திய கடமையையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, அறத்தைக் கடைப்பிடிக்க விரும்பும் ஒரு மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும்? ஓ! பாரதக் குலத்தின் காளையே, கல்விமானான நீர் என்னால் கேட்கப்படும் இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பீராக.(1) உண்மை மற்றும் பொய்ம்மை ஆகியன உலகங்கள் அனைத்தையும் சூழ்ந்தபடியே இருக்கின்றன. ஓ! மன்னா, அறத்தில் உறுதியாக இருக்கும் மனிதன் இவை இரண்டில் எதைப் பின்பற்ற வேண்டும்?(2) மேலும், உண்மை என்றால் என்ன? பொய்ம்மை என்றால் என்ன? மேலும் அழிவில்லா அறம் {ஸநாதன தர்மம்} என்பது என்ன? எச்சமயத்தில் ஒரு மனிதன் உண்மையைச் சொல்ல வேண்டும், மேலும் எச்சமயத்தில் பொய்யைச் சொல்ல வேண்டும்?” என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “உண்மையைச் சொல்வதே அறத்திற்கு இசைவானது. உண்மையைவிட வேறு உயர்ந்தது ஏதும் கிடையாது. ஓ! பாரதா, பொதுவாக மனிதர்கள் அறியாததை நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன்.(4) எங்கே பொய்ம்மை, உண்மையின் தன்மையை ஏற்குமோ, அங்கே உண்மை சொல்லப்படக்கூடாது. மேலும், எங்கே உண்மையானது, பொய்ம்மையின் தன்மையை ஏற்குமோ, அங்கே பொய்மையும்கூடச் சொல்லப்படலாம்[1].(5) அறத்தின் தொடர்பறுந்த உண்மையைச் சொல்லும் அறியாமை கொண்ட மனிதன் பாவத்தையே இழைக்கிறான். பொய்ம்மையில் இருந்து உண்மையை வேறுபடுத்திப் பார்க்க முடிந்த மனிதனே கடமைகளை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்[2].(6) மதிக்கத்தகாதவனும், தூய்மையற்ற ஆன்மா கொண்டவனும், மிகக் கொடூரமானவனுமான ஒரு மனிதனும் கூட, (அனைத்து உயிரினங்களையும் அழிக்க அச்சுறுத்திய) குருட்டு விலங்கைக் கொன்றதன் மூலம் வேடன் பலாகன்[3] அடைந்த பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்ட முடியும்.(7) மூட அறிவு கொண்ட ஒரு மனிதன், (கடுந்தவங்களின் மூலம்) தகுதியை அடைய விரும்பினாலும், பாவம் நிறைந்த ஒரு செயலை அவனால் செய்ய முடியும்[4]. மேலும் கங்கைக் கரையில் உள்ள ஓர் ஆந்தையானது, (நியாயமற்ற ஒரு செயலைச் செய்ததன் மூலம்) பெரும் தகுதியை அடைந்தது[5].(8)அறம் எதுவெனச் சொல்வது கடினமானதாகையால், நீ என்னிடம் கேட்ட கேள்வி மிகக் கடினமானதே. அதைச் சுட்டிக்காட்டுவது எளிதன்று. அறம் குறித்து உரையாடும் எவராலும் அதைச் சரியாகச் சுட்டிக்காட்ட முடியாது.(9) அறமானது, உயிரினங்கள் அனைத்தின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்காகவுமே (பிரம்மனால்) அறிவிக்கப்பட்டது. எனவே, எது முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்குமோ, அதுவே அறமாகும்.(10) உயிரினங்கள் ஒன்றையொன்று காயப்படுத்துவதைத் தவிர்க்கவே அறம் அறிவிக்கப்பட்டது. எனவே, எது உயிரினங்களைத் தீங்கு செய்வதில் இருந்து தவிர்க்குமோ அதுவே அறமாகும்.(11) அறமானது {தர்மமானது}, உயிரினங்கள் அனைத்தையும் தூக்கி நிறுத்துவதாலேயே அஃது அவ்வாறு அழைக்கப்படுகிறது. உண்மையில் அனைத்து உயிரினங்களும் அறத்தாலேயே தூக்கி நிறுத்தப்படுகின்றன. எனவே, உயிரினங்கள் அனைத்தையும் தூக்கி நிறுத்தவல்லது எதுவோ அதுவே அறமாகும்.(12) ஸ்ருதிகளில் பதியப்பட்டிருப்பவற்றைக் கொண்டதே அறம் எனச் சிலரால் சொல்லப்படுகிறது. வேறு சிலர் இஃதை ஏற்பதில்லை. அவ்வாறு சொல்வோரை நான் கண்டிக்கமாட்டேன். மேலும், அனைத்தும் ஸ்ருதிகளில் சொல்லப்படவில்லை[6].(13)
சில வேளைகளில், பிறரின் செல்வத்தை அடைய விரும்பும் மனிதர்கள் (கள்வர்கள்), (கொள்ளைச் செயலுக்கு உதவிபுரிவதற்காக) இது குறித்து விசாரிக்கின்றனர். ஒருவன், அத்தகு கேள்விகளுக்கு ஒருபோதும் பதிலளிக்கக்கூடாது. அது தீர்மானிக்கப்பட்ட கடமையாகும்.(14) அமைதியாயிருப்பதன் மூலம், ஒருவன் தப்ப முடியுமென்றால், அவன் அமைதியாகவே இருக்க வேண்டும். மறுபுறம், ஒருவன் பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருப்பதில் ஐயமெழுந்தால்,(15) அத்தகு தருணங்களில், உண்மையைச் சொல்வதைவிட உண்மையற்றதைச் சொல்வதே சிறப்பானதாகும். இந்த முடிவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். (பொய்யான) ஓர் உறுதிமொழியின் மூலம், ஒருவனால் பாவியிடம் இருந்து தப்ப முடியுமென்றால், அவன் அவ்வாறு செய்வதால் பாவத்தை இழைத்தவனாக மாட்டான்.(16) ஒருவனால் தன் செல்வத்தைக் கொடுக்க முடியும் என்றாலும், பாவம் நிறைந்த மனிதர்களுக்கு அஃதை அவன் கொடுக்கக்கூடாது. பாவிகளுக்குக் கொடுக்கப்படும் செல்வமானது அதைக் கொடுப்பவனையும் பீடிக்கும்.(17) கடன் கொடுத்தவன், தன்னிடம் கடன் பெற்றவன் உடல் சார்ந்த தொண்டைச் செய்து அக்கடனை அடைக்க வேண்டும் என்று விரும்பினால், {அந்தக் கடன்} ஒப்பந்தத்தின் உண்மையை நிறுவுவதற்காகக் கடன் கொடுத்தவனால் அழைக்கப்பட்ட சாட்சிகள் என்ன சொல்லப்பட வேண்டுமோ அதைச் சொல்லவில்லையென்றால், அவர்கள் {சாட்சி சொன்னவர்கள்} அனைவரும் பொய்யர்களாவர்[7]. உயிர் ஆபத்திலிருக்கும்போதோ, திருமணத் தருணங்களிலோ ஒருவன் பொய்ம்மை பேசலாம்.(18,19) அறம் நாடும் ஒருவன், பிறரின் செல்வத்தையும், செழிப்பையும் காப்பதற்கோ, அறக்காரியங்களுக்கோ பொய்ம்மை பேசினால், அந்தப் பொய்ம்மையால் அவன் பாவமிழைத்தவனாக மாட்டான்.(20)
ஒருவன் கொடுக்கிறேன் என உறுதிகூறிவிட்டால், தன் உறுதிமொழியை நிறைவற்ற அவன் கட்டுப்பட்டவனாகிறான். தவறினால், தன்னையே கொள்ளையிடும் அவன், பலவந்தமாக அடக்கப்பட வேண்டும். நியாயமான ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் ஒருவன் நியாயமில்லாமல் செயல்பட்டால், அத்தகு ஒழுக்கத்தைப் பின்பற்றியதற்காக அவன் தண்டக்கோலால் நிச்சயம் பீடிக்கப்பட வேண்டும்[8].(21) கடமைகள் அனைத்தில் இருந்து வழுவி, தன் வகையைச் சேர்ந்தோரைக் கைவிட்ட வஞ்சகன் ஒருவன், தன் வாழ்வைத் தாங்கிக் கொள்வதற்காக அசுரர்களின் நடைமுறையான ஒழுக்கமின்மையையே எப்போதும் விரும்புவான்.(22) வஞ்சகத்தால் வாழும் அத்தகு பாவம் நிறைந்த இழிந்தவன், அனைத்து வழிமுறைகளினாலும் கொல்லப்பட வேண்டும். அத்தகு பாவிகள் செல்வத்தை விட உயர்ந்தது இவ்வுலகில் வேறேதும் இல்லை என்று நினைக்கின்றனர்.(23) அத்தகு மனிதர்களை ஒருபோதும் பொறுத்து {சகித்துக்} கொள்ளக்கூடாது. அவர்களுடன் சேர்ந்து யாரும் உண்ணக்கூடாது. அவர்கள், தங்கள் பாவங்களின் விளைவால் வீழ்ந்துவிட்டவர்களாகவே கருதப்பட வேண்டும். மனித நிலையில் இருந்து வீழ்ந்து, தேவர்களின் அருளில் இருந்து ஒதுக்கப்பட்ட அவர்கள் பிணங்களைப் போன்றோரே ஆவர்.(24)
வேள்விகள் செய்யாமல், தவங்களில் ஈடுபடாமல் இருக்கும் அவர்கள், தங்கள் தோழமையை விட்டு {தோழர்களிடம் இருந்து} விலகுகிறார்கள். அவர்களது செல்வம் தொலைந்துபோனால், மிகப் பரிதாபகரமான தற்கொலையையும்கூடச் செய்து கொள்வார்கள்.(25) இந்தப் பாவிகளில் ஒருவனிடமும், “இஃது உன் கடமை. உன் இதயம் இதை நோக்கித் திரும்பட்டும்” என்று உன்னால் சொல்ல முடியாது. இவ்வுலகத்தில் செல்வத்துக்கு இணையானது வேறெதுவும் இல்லை என்பது அவர்கள் தீர்மானித்து வைத்திருக்கும் திட நம்பிக்கையாகும்.(26) அத்தகு பிறவியைக் கொல்பவன், எந்தப் பாவத்தையும் அடையமாட்டான். எவன் அவனைக் கொல்வானோ, ஏற்கனவே தன் சொந்த செயல்களால் கொல்லப்பட்ட ஒருவனையே கொல்கிறான். அவன் கொல்லப்பட்டால், அங்கே {ஏற்கனவே} இறந்தவனே கொல்லப்படுகிறான் {ஒரு பிணமே கொல்லப்படுகிறது}.(27) உணர்விழந்தவர்களான அம்மனிதர்களைக் கொல்ல சபதம் செய்தவன், தன் சபதத்தை நிறைவேற்ற வேண்டும்[9]. அத்தகு பாவிகள், தங்கள் வாழ்வுக்காக வஞ்சகத்தை நம்பி வாழும் காகத்தையும், கழுகையும் போன்றோராவர். அவர்களது (மனித) உடல் அழிவை அடைந்த பிறகு, அவர்கள் காகங்களாகவும், கழுகுகளாகவும் மறுபிறப்பை அடைகிறார்கள்.(28) எந்தக் காரியத்திலும், அடுத்தவன் அந்தக் காரியத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறானோ, அதே போலவே அவனிடம் ஒருவன் நடந்து கொள்ள வேண்டும். வஞ்சகம் பயில்பவன் வஞ்சகத்தாலேயே தடுக்கப்பட வேண்டும். நேர்மையானவன் நேர்மையாகவே எதிர்க்கொள்ளப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(29)
கிருஷ்ணனே நாராயணன்! – சாந்திபர்வம் பகுதி – 110-உயிரினங்களால் துன்பங்களை எவ்வாறு தவிர்க்க முடியும் என்பதையும், நாராயணனே அனைத்தின் புகலிடம் என்பதையும், கிருஷ்ணனே அந்த நாராயணன் என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “கிட்டத்தட்ட தொடர்ச்சியாகவே பல்வேறு வழிகளில் உயிரினங்கள் பீடிக்கப்படுவது {துன்புறுவதும்} காணப்படுகிறது. ஓ பாட்டா, அந்தக் கடினமான துன்பங்கள் அனைத்தில் இருந்தும் ஒருவன் விடுபடக்கூடிய வழியென்ன?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மறுபிறப்பாள வகையைச் சேர்ந்தோர், அடக்கப்பட்ட ஆன்மாக்களுடனும், பல்வேறு வாழ்வுமுறைகளுக்காக {அசிரமங்களுக்காக} சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாகப் பயின்றும் இந்தத் துன்பங்களைக் கடப்பதில் வெல்கின்றனர்.(2) வஞ்சகத்தை ஒருபோதும் பயிலாதவர்களும், வணங்கத்தக்க கட்டுப்பாடுகளால் அடக்கப்பட்ட ஒழுக்கத்தைக் கொண்டவர்களும், உலக ஆசைகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(3) தீய மொழி பேசப்படும்போது பேசாமல் இருப்பவர்களும், தாக்கப்படும்போதும் பிறரைத் தாக்காதவர்களும், எடுக்காமல் கொடுப்பவர்களும் அனைத்துத் துன்பங்களையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(4) விருந்தினர்களுக்கு விருந்தோம்பலுடன் உறைவிடத்தை எப்போதும் கொடுப்பவர்களும், வன்மத்தில் ஈடுபடாதவர்களும், தொடர்ந்து வேத கல்வியில் ஈடுபடுபவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(5) கடமைகளை அறிந்தவர்களும், தங்களைப் பெற்றோரிடம் தகுந்த நடையில் நடந்து கொள்பவர்களும், பகலில் உறங்குவதைத் தவிர்ப்பவர்களுமான மனிதர்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(6) எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் எவ்வகைப் பாவத்தையும் செய்யாதவர்களும், எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காதவர்களும் தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(7)
ஆசை மற்றும் பேராசையின் ஆதிக்கத்தில் {மக்களை} ஒடுக்கும் வகையில் வரிகளை விதிக்காதவர்களும், தங்கள் ஆட்சிப்பகுதிகளைக் காப்பவர்களுமான மன்னர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(8) பிற பெண்களின் தோழமையை நாடாமல், தாங்கள் திருமணம் செய்து கொண்ட மனைவியரிடம் மட்டுமே தகுந்த காலத்தில் செல்பவர்களும், நேர்மையானவர்களும், தங்கள் அக்னி ஹோத்திரங்களில் கவனமாக இருப்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(9) மரணம் குறித்த அச்சமனைத்தையும் கைவிட்டு, நியாயமான வழிமுறைகளின் மூலம் வெற்றியை அடைய விரும்பி போரில் ஈடுபடும் துணிவுமிக்கோர், தங்கள் கடமைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(10) உயிரையே பணயம் வைத்து இவ்வுலகில் எப்போதும் உண்மையைப் பேசி வருபவர்களும், அனைத்து உயிரினங்களுக்கும் முன்மாதிரியான எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(11) செயல்களில் ஒருபோதும் வஞ்சிக்காதவர்களும், எப்போதும் ஏற்புடைய வார்த்தைகளைப் பேசுபவர்களும், செல்வத்தை எப்போதும் சிறப்புடன் நன்றாகச் செலவழிப்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(12)
தகாத வேளைகளில் வேதங்களை ஒருபோதும் கல்லாதவர்களும், அர்ப்பணிப்புடன் தவங்களைப் பயில்பவர்களுமான பிராமணர்கள், தங்கள் கடமைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(13) மணமாகா நிலையையும், பிரம்மச்சரியத்தையும் வாழ்வாகக் கொள்பவர்களும், தவங்களைச் செய்பவர்களும்,கல்வியால் தூய்மையடைந்தவர்களும், வேத ஞானமும், முறையான நோன்புகளும் கொண்டவர்களுமான பிராமணர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(14) ஆசை {ரஜோ} மற்றும் இருள் {தமோ} குணங்கள் அனைத்தையும் தடுப்பவர்களும், உயர் ஆன்மாக்களைக் கொண்டவர்களும், நன்மை என்றழைக்கப்படும் பண்புகள் அனைத்தையும் பயில்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(15)
எவர்களைக் கண்டு எந்த உயிரினமும் அச்சப்படாதோ, எவர்கள் எந்த உயிரினத்தையும் கண்டு அஞ்சாதிருக்கிறார்களோ, எவர்கள் அனைத்து உயிரினங்களையும் தம்மைப் போலப் பார்க்கிறார்களோ, அவர்கள் தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(16) நல்லோராக இருப்பவர்களும், செழிப்பாக இருக்கும் மக்களைக் கண்டு ஒருபோதும் துயரடையாதவர்களும், உன்னதமற்ற அனைத்து வகைச் செயல்களையும் தவிர்ப்பவர்களுமான மனிதர்களில் காளைகள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(17) தேவர்கள் அனைவரையும் வணங்குபவர்களும், நம்பிக்கைகளைக் கொண்ட சமயங்களின் கோட்பாடுகள் அனைத்தையும் கேட்பவர்களும், அமைதியான ஆன்மாக்களைக் கொண்டவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்[1].(18) தங்களுக்குக் கௌரவங்களை விரும்பாமல், பிறருக்குக் கௌரவங்களைக் கொடுப்பவர்களும், வழிபாட்டுக்குத் தகுந்தோரை வணங்குபவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(19) வாரிசுகளை விரும்பி, தூய மனத்துடன் முறையான சந்திர நாட்களில் சிராத்தங்களைச் செய்பவர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்[2].(20)தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி, பிறரின் கோபத்தைத் தணிப்பவர்களும், எந்த உயிரினத்திடமும் ஒருபோதும் கோபமடையாதவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(21) தேன் {மது}, இறைச்சி, போதையூட்டும் பானங்கள் ஆகியவற்றைப் பிறப்பிலிருந்தே தவிர்ப்பவர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்[3].(22) உயிரைத் தாங்கிக் கொள்வதற்காக மட்டுமே உண்பவர்களும், வாரிசுகளுக்காக மட்டுமே பெண்களின் தோழமையை நாடுபவர்களும், உண்மையைப் பேசுவதற்காக மட்டுமே தங்கள் உதடுகளைத் திறப்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(23) அனைத்து உயிரினங்களின் உயர்ந்த தலைவனும் {பரமனும்}, அண்டத்தின் தோற்றம் மற்றும் அழிவுக்குக் காரணமாக இருப்பவனுமான தேவன் நாராயணனை அர்ப்பணிப்புடன் வழிபடுபவர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(24) தாமரை போல் கண்கள் சிவந்தவனும், மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியிருப்பவனும், வலிய கரங்களைக் கொண்டவனும், நமது நலன் விரும்பியும், சகோதரனும் {உங்கள் மைத்துனனும், நண்பனும், உறவினனுமான இந்தக் கிருஷ்ணனே மங்கா மகிமை கொண்ட அந்த நாராயணனாவான்.(25)
தோலுறையைப் போல இந்த உலகங்கள் யாவையும் தன் விருப்பம்போல மறைப்பவன் இவனே. நினைத்தற்கரிய ஆன்மா கொண்ட பலமிக்கத் தலைவன் இவனே. உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையான கோவிந்தன் இவனே.(26) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஜிஷ்ணுவுக்கும் {அர்ஜுனனுக்கும்}, உனக்கும் ஏற்புடையதையும், நன்மையானதையும் செய்வதில் எப்போதும் ஈடுபடுபவனான இந்தக் கிருஷ்ணனே, தடுக்கப்படமுடியாதவனும், அழிவில்லா புகழின் வசிப்பிடமாக இருப்பவனுமான அவனாவான் {நாராயணனாவான்}.(27) ஹரி என்றும் அழைக்கப்படும் இந்த நாராயணனின் புகலிடத்தை அர்ப்பணிப்புடன் நாடுபவர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(28) துன்பங்களைக் கடப்பது குறித்த இந்த வரிகளைப் படிப்பவர்களும், பிறருக்கு உரைப்பவர்களும், பிராமணர்களிடம் சொல்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(29) ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, எச்செயல்களின் மூலம் மனிதர்கள் இம்மையிலும், மறுமையிலும் துன்பங்கள் அனைத்தையும் கடப்பார்களோ, அவை அனைத்தையும் இப்போது நான் உனக்குச் சொல்லிவிட்டேன்” என்றார் {பீஷ்மர்}.(30)
நரியும், புலியும்! – சாந்திபர்வம் பகுதி – 111-நல்லோரையும், தீயோரையும் வேறுபடுத்திப் பார்ப்பது எவ்வாறு? புலிக்கு அமைச்சராகச் செயல்பட்ட நல்ல நரியின் கதை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “இங்கே பல மனிதர்கள் உண்மையில் அமைதியான ஆன்மா கொண்டோராக இல்லையெனினும், வெளிப்புறத்தோற்றத்தில் அமைதி நிறைந்த ஆன்மா கொண்டோராகத் தெரிகின்றனர். மேலும் உண்மையில் அமைதியான ஆன்மா கொண்டோர் வேறு வகையில் தெரிகின்றனர். ஓ! ஐயா, இம்மனிதர்களை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது?” எனக் கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக ஒரு புலிக்கும், ஒரு நரிக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(2) பழங்காலத்தில், புரிகை என்றழைக்கப்படும் செழிப்புமிக்க ஒரு நகரத்தில் பௌரிகன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். உயிரினங்களில் இழிந்தவனான அவன் மிகக் கொடூரனாகவும், பிறருக்குத் தீங்கிழைப்பதில் மகிழ்பவனாகவும் இருந்தான்.(3) அவனது வாழ்நாளின் காலம் முடிந்ததும், விரும்பத்தகாத முடிவை அவன் அடைந்தான். உண்மையில், மனிதவாழ்வில் அவன் செய்த தீச்செயலின் களங்கத்தோடு கூடிய அவன், ஒரு நரியாக மறுபிறவி அடைந்தான்.(4) அவன், தனது பழைய செழிப்பை நினைவுகூர்ந்து, துயரத்தால் நிறைந்து, பிறர் கொண்டு வந்து கொடுத்தாலும் இறைச்சியை உண்ணாதிருந்தான்.(5) அவன் அனைத்து உயிரினிங்களிடமும் கருணை கொண்டவனாகவும், பேச்சில் உண்மை நிறைந்தவனாகவும், கடும் நோன்புகளை நோற்பதில் உறுதியுள்ளவனாகவும் இருந்தான். குறிப்பிட்ட நேரத்தில் மரங்களில் இருந்து விழும் கனிகளை அவன் உணவாகக் கொண்டான்.(6) அந்த நரியானவன், ஒரு பரந்த சுடலையில் {சுடுகாட்டில்} வசித்து வந்தான், அங்கேயே தொடர்ந்து வசிக்கவும் விரும்பினான். அதுவே அவன் பிறந்த இடமாகையால், அவன் வேறு சிறப்பான இடத்திற்கு மாற ஒரு போதும் விரும்பாதிருந்தான்.(7)
அவனது நடத்தையின் தூய்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாத அவனது வகையைச் சேர்ந்த உயிரினங்கள் {நரிகள்}, அவனது தீர்மானத்தை மாற்றும் முயற்சியில், பணிவுடன் கூடிய இவ்வார்த்தைகளை அவனிடம் சொல்லின,(8) “பயங்கரச் சுடலையில் வசித்தாலும், இத்தகு தூய ஒழுக்கத்துடன் வாழ நீ விரும்புகிறாய். அழுகும் பிணங்களை உண்பதை இயற்கை பண்பாகக் கொண்ட நீ, இப்போது உன் பங்குக்குப் பிறழ்புத்தி கொண்டவனாகத் தெரியவில்லையா?(9) எங்களைப் போல இருப்பாயாக. நாங்கள் அனைவரும் உனக்கு உணவளிக்கிறோம். இத்தகு தூய ஒழுக்கத்தைக் கைவிட்டு, எப்போதும் எது உன் உணவாக இருக்க முடியுமோ அஃதை உண்பாயாக” என்றன.(10)
அவற்றின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த நரியானவன், குவிந்த கவனத்துடனும், தீங்கிழையாமையை அனைவரின் மனத்தில் பதிய வைக்கும் வகையிலும், இந்த இனிமை நிறைந்த வார்த்தைகளைப் பேசினான்:(11) “என் பிறவி இழிந்ததாக இருக்கிறது. எனினும், ஒழுக்கமே குலத்தைத் தீர்மானிக்கிறது.[1] என் புகழ் பரவும் வகையில் நடந்து கொள்ளவே நான் விரும்புகிறேன்.(12) என் வசிப்பிடம் சுடலையாக இருப்பினும், ஒழுக்கம் தொடர்பான என் நோன்புகளைக் கேட்பீராக. ஒருவனின் செயல்களே அவனது சுயத்தை விளைவிக்கின்றன. ஒருவன் செய்யும் அறச்செயல்களின் விளைவாக அவன் மேற்கொள்ளும் வாழ்வுமுறை {ஆசிரமம்} அமைவதில்லை.(13) ஒரு குறிப்பிட்ட வாழ்வுமுறையை நோற்கும் ஒருவன் ஒரு பிராமணனைக் கொன்றால், பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} எனும் பாவம் அவனைப் பற்றாமல் இருக்குமா? மறுபுறம், ஒருவன் எந்த வாழ்வுமுறையையும் நோற்காமல் இருந்து, அவனே ஒரு பசுவைத் தானமளித்தால், அந்த நற்கொடை அவனுக்கு எந்தத் தகுதியையும் {புண்ணியத்தையும்} உண்டாக்காதா?(14) ஏற்புடையதை அடைய விரும்பும் உந்துதலால் நீங்கள் உங்கள் வயிற்றை மட்டுமே நிரப்புவதில் ஈடுபடுகிறீர்கள். மூடத்தனத்தில் மயங்கியிருக்கும் நீங்கள், முடிவில் உண்டாகும் மூன்று குற்றங்களைக் காணாமல் இருக்கிறீர்கள்.(15) இம்மையிலும், மறுமையிலும் தீமையையே கொண்டதும், நிறைவில்லாமை, மயக்கம் {சபலம்} ஆகியவற்றுடன் அற இழப்பை ஏற்படுத்துவதுமான நீங்கள் வாழும் வாழ்வைப் பின்பற்ற நான் விரும்பவில்லை” என்றான் {நரியாக இருந்த மன்னன் பௌரிகன்}.(16)ஆற்றலுக்காகக் கொண்டாடப்படும் ஒரு புலியானது, இந்த உரையாடலைக் கேட்க நேர்ந்து, அந்த நரியை தூய ஒழுக்கம் கொண்ட கல்விமானாகக் கருதி, தனக்கு இணையாக மரியாதையை அவனுக்குச் செலுத்தி, அவனைத் தன் அமைச்சராக நியமித்துக் கொள்ளும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தியது.(17)
அந்தப் புலியானது {நரியிடம்}, “ஓ! அறவோனே, நீ யார் என்பதை நான் அறிவேன். என்னோடு சேர்ந்து அரசின் கடமைகளைக் கவனிப்பாயாக. உன் சுவைக்குத் தகாத எதையும் கைவிட்டு, நீ விரும்பும் எந்தப் பொருளையும் அனுபவிப்பாயாக.(18) எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் சீற்றமிகு கடும் மனோநிலை கொண்டவர்களாக அறியப்படுகிறோம். இதை நான் முன்கூட்டியே உனக்குச் சொல்லிவிடுகிறேன். நீ மென்மையாக நடந்து கொண்டால் நன்மைகளை அடைந்து, உனக்கான பயன்களையும் அறுவடை செய்வாய்” என்றது.(19) விலங்குகள் அனைத்தின் தலைவனான அந்த உயர் ஆன்மாவின் {புலியின்} இந்த வார்த்தைகளை மதித்த நரியானவன், தன் தலையைச் சற்றே தொங்கவிட்டபடியே, பணிவு நிறைந்த இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(20)
அந்த நரியானவன் {மன்னன் பௌரிகன்}, “ஓ! விலங்குகளின் மன்னா, என்னைக் குறித்த உன் வார்த்தைகள் உனக்குத் தகுந்தவையே. தூய நடத்தை கொண்டவர்களும், கடமைகளையும், உலகக் காரியங்களை அறிந்தவர்களுமான அமைச்சர்களை நீ நாடுவதும் உனக்குத் தகுந்ததே.(21) ஓ! வீரா, ஒரு நல்ல அமைச்சரில்லாமல் உன் பெருமையை உன்னால் தக்கவைத்துக் கொள்ள முடியாது, அல்லது ஒரு தீய அமைச்சனின் மூலம் உன் வாழ்வுக்கே முடிவேற்படலாம்.(22) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, உன் அமைச்சர்களில் உனக்கு அர்ப்பணிப்புள்ளவர்கள், கொள்கை அறிந்தவர்கள், ஒருவருக்கொருவர் சுதந்திரமாக இருப்பவர்கள், வெற்றியால் உனக்கு மகுடம் சூட்ட விரும்புபவர்கள், பேராசை எனும் களங்கம் இல்லாதவர்கள், வஞ்சகமில்லாதவர்கள், ஞானம் உள்ளவர்கள், உன் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவர்கள் பெரும் மனத் திண்மை கொண்டவர்கள் ஆகியோரையோ, ஆசான்களையோ, உன் பெற்றோர்களையோ போல மதிப்பாயாக.(23,24) ஓ! விலங்குகளின் மன்னா, என் தற்போதைய நிலையில் நான் நிறைவுடன் இருப்பதால், எதன் காரணமாகவும் நான் அந்நிலையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. ஆடம்பர இன்பங்களினால் எழும் மகிழ்ச்சியிலும் நான் ஆசை கொள்ளவில்லை.(25)
மேலும் என் நடத்தையை உன் பழைய பணியாட்கள் ஏற்காமல் போகக்கூடும். அவர்கள் தீய நடத்தை கொண்டோராக இருந்தால், உனக்கும் எனக்கும் இடையில் ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்குவார்கள்.(26) அந்த வேறொருவர், காந்தியைக் கொண்டவராக இருப்பினும், அவரைச் சார்ந்திருப்பது விரும்பத்தக்கதோ, புகழத்தக்கதோ அல்ல.(27) நான் தூய்மைப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்டவன் ஆவேன். நான் உயர்ந்த அருளைப் பெற்றிருக்கிறேன். பாவிகளிடம் கூட நான் கடுமையைக் காட்டவல்லவனாக இல்லை. நான் பெரும் முன்னறிதிறனைப் பெற்றிருக்கிறேன். பேருழைப்புக்குத் தகுதியுடையவனாக இருக்கிறேன். சிறு காரியங்களை நான் பார்ப்பதில்லை. நான் பெரும் பலத்தைக் கொண்டவனாவேன். நான் என் செயல்களில் வெற்றிகரமாக இருக்கிறேன். கனியற்ற செயலை நான் ஒருபோதும் செய்வதில்லை. இன்பநுகர் பொருட்கள் அனைத்தாலும் நான் அலங்கரிக்கப்பட்டிருக்கிறேன்.(28) சிறிதளவே கொண்டு நான் ஒரு போதும் நிறைவடைவதில்லை. நான் ஒருபோதும் பிறருக்குத் தொண்டாற்றியவனில்லை. மேலும் பணிவிடை செய்வதில் நான் திறனற்றவனாக இருக்கிறேன். நான் என் விருப்பப்படி காடுகளில் இன்பமாக வாழ்ந்து வருகிறேன்[2].(29)
மன்னர்களைச் சார்ந்து வாழும் அனைவரும், தங்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் தீய பேச்சுகளின் விளைவால் பெரும் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். எனினும், காடுகளில் வசிப்போர், எந்தக் கவலையும், அச்சமுமில்லாமல் தங்கள் நோன்புகளை நோற்றபடி நாட்களைக் கடத்த முடியும்.(30) மன்னனால் அழைக்கப்பட்டவனின் இதயத்தில் எழும் அச்சத்தை, காட்டில் கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, தங்கள் நாட்களைக் கடத்தியபடி நிறைவுடன் வாழ்ந்து வருபவர்கள் அறியமாட்டார்கள்.(31) முயற்சியேதும் இல்லாமல் அடையப்படும் எளிய உணவு மற்றும் பானத்திற்கும், அச்சத்துடன் தருவிக்கப்படும் ஆடம்பர உணவுக்கும் இடையில் பெருத்த வேறுபாடு உள்ளது. இவையிரண்டையும் சிந்திக்கும் நான், எங்கே கவலையில்லையோ அங்கேயே மகிழ்ச்சியிருக்க முடியும் என்ற கருத்தை அடைகிறேன்.(32) அரசத் தொண்டாற்றுவோருக்கு மத்தியில் மிகச் சிலர் மட்டுமே அவர்களது குற்றங்களுக்காக நீதியுடன் தண்டிக்கப்படுகின்றனர். எனினும், அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர், பொய்க் குற்றச்சாட்டுகளின் மூலமே மரணத்தை அடைகின்றனர்.(33) ஓ! விலங்குகளின் மன்னா, இவையனைத்தும் இருந்தபோதிலும், நீ என்னை உன் அமைச்சராக நியமித்துக் கொண்டால், நீ என்னிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து உன்னுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள நான் விரும்புகிறேன்.(34) உன் நன்மைக்காக நான் பேசும் சொற்கள் உன்னால் கேட்கப்பட்டு, உன்னால் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். உன்னால் எனக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் வழிவகைகளில் நீ ஒருபோதும் குறிக்கிடக்கூடாது.(35)
நான் ஒருபோதும் உன் மற்ற அமைச்சர்களுடன் ஆலோசிக்க மாட்டேன். நான் அவ்வாறு செய்தால், என்னிலும் மேன்மையடைய விரும்பும் அவர்கள், பல்வேறு வகைக் குற்றச்சாட்டுகளால் என்னைக் களங்கப்படுத்துவார்கள்.(36) உன்னை மட்டுமே தனிமையில் சந்தித்து, உனக்கு எது நன்மையோ அதை இரகசியமாகச் சொல்வேன். உன் உறவினர்கள் தொடர்புடைய காரியங்கள் அனைத்திலும், உனக்கு நன்மையானது எது, அல்லது நன்மையற்றது எது என்பதை என்னிடம் நீ கேட்காமலிருக்க வேண்டும்.(37) என்னிடம் ஆலோசித்த பிறகு, நீ உன் பிற அமைச்சர்களைத் தண்டிக்காமல் இருக்க வேண்டும். என்னைப் பின்தொடர்பவர்களையும், என்னைச் சார்ந்திருப்பவர்களையும் நீ சினத்தின் வசப்பட்டுத் தண்டிக்காமல் இருக்க வேண்டும்” என்றான் {நரியாக இருந்த மன்னன் பௌரிகன்}.(38) நரியால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த விலங்குகளின் மன்னன் {புலியானவன்}, அவனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அவனுக்கு அனைத்து கௌரவங்களையும் அளித்தான். பிறகு, புலியின் அமைச்சராக நரியானவன் பொறுப்பேற்றான். நரியானவன், மரியாதையாக நடத்தப்படுவதையும், அவனது செயல்கள் அனைத்தும் கௌரவிக்கப்படுவதையும் கண்ட மன்னனின் {புலியின்} பழைய பணியாட்கள் ஒன்றாகச் சேர்ந்து சதித்திட்டங்களைத் தீட்டி, அவனுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை இடையறாமல் வெளிப்படுத்தத் தொடங்கினர்.(40)
அந்தத் தீயவர்கள், நட்புடன் பழகி அவனை நிறைவு செய்யவும், அரசில் நிலவிய அதிகாரத்துக்குப் புறம்பான பல்வேறு குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளச் செய்யவும் முதலில் முயற்சித்தனர்.(41) அடுத்தவரின் சொத்தைக் கொள்ளையடிக்கும் அவர்கள், தங்கள் மேல்வருமானங்களில் இன்புற்றவர்களாக நீண்ட காலம் வாழ்ந்து வந்தனர். எனினும் இப்போதோ, நரியால் ஆளப்படும்போது, அவர்கள், பிறருக்குச் சொந்தமானவற்றை அபகரிக்க இயலாதவர்களானார்கள்.(42) முன்னேற்றத்தையும், செழிப்பையும் விரும்பிய அவர்கள், இனிய பேச்சுகளால் அவனை மயக்கத் {சபலப்படுத்தத்} தொடங்கினர். உண்மையில், அவனது இதயத்தைக் கவர்ந்திழுக்கும்படியான பெரிய அளவிலான கையூட்டுகளும் கொடுக்கப்பட்டன. ஆனால் பெரும் ஞானியான அந்த நரியானவன், அந்தச் சபலங்களுக்கு வசப்படுவதற்கான எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டவில்லை.(43) பிறகு அவர்களில் சிலர், அவனை அழிப்பதற்காகத் தங்களுக்குள் திட்டம் வகுத்துக் கொண்டு, விலங்குகளின் மன்னனால் {புலியால்} மிகவும் விரும்பப்படுவதும், அவனுக்கெனவே வைக்கப்பட்டிருந்ததுமான நன்கு பக்குவப்படுத்தப்பட்ட இறைச்சியை எடுத்து இரகசியமாக நரியின் வீட்டில் வைத்துவிட்டனர்.(44) இறைச்சியைத் திருடியது யார் என்பதையும், யார் இந்தச் சதியைச் செய்தது என்பதையும் நரியானவன் அறியவந்தான். அனைத்தையும் அறிந்தாலும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் அதைப் பொறுத்துக் கொண்டான்.(45) அவன் அமைச்சர் பொறுப்பை ஏற்ற சமயத்தில், “ஓ ஏகாதபதி {புலியே}, நீ என் நட்பை விரும்புகிறாய். ஆனால் காரணமேதுமில்லாமல் நீ என்னில் நம்பிக்கையிழக்கலாகாது” என்ற ஒப்பந்தத்தை மன்னனிடம் {புலியிடம்} ஏற்படுத்தியிருந்தான்”.(46)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ விலங்குகளின் மன்னன் பசியை உணர்ந்து, உண்ண வந்த போது, எப்போதும் ஆயுத்தமாக வைக்கப்படும் இறைச்சி இல்லாதத்தைக் கண்டான். அப்போது மன்னன், “கள்வன் கண்டுபிடிக்கப்பட வேண்டும்” என்று ஆணையிட்டான்.(17) வஞ்சகம் நிறைந்த அவனது அமைச்சர்கள், அவனுக்காக வைக்கப்பட்டிருந்த இறைச்சியை, கல்விமானும், ஞானச்செருக்கு கொண்டவனும், அவனது மற்றொரு அமைச்சனுமான நரியே திருடினான் என்று சொன்னார்கள்.(48) நரி நியாயமில்லாமல் நடந்து கொண்டதைக் கேட்ட அந்தப் புலி சீற்றத்தால் நிறைந்தவனானான். உண்மையில், மன்னன் {புலி} கோபவசப்பட்டு, தன் அமைச்சரைக் கொல்லும்படி ஆணையிட்டான்.(49) இந்த வாய்ப்பைக் கண்ட முன்னாள் அமைச்சர்கள், மன்னனிடம் வந்து, “அந்த நரியானவன், எங்கள் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறான்” என்று சொன்னார்கள்.(50)
இதைச் சொன்ன அவர்கள், மன்னனின் உணவைக் களவாடிய நரியின் செய்கையைக் குறித்து மீண்டும் மீண்டும் பேசினர். அவர்கள், “அவனது செயல்கள் இவ்வாறே இருக்கின்றன. அவன் என்னதான் செய்யத் துணியமாட்டான்?(51) அவன் நீர் கேள்விப்பட்டது போன்றவனல்ல. அவன் பேச்சில்தான் அறவோன், ஆனால் பாவம் நிறைந்த மனநிலை கொண்டவனாவான்.(53) உண்மையில் இழிந்தவன், ஆனால், அறப்போர்வை போர்த்திக் கொண்டு வேடம் போடுகிறான். அவனது நடத்தையும் உண்மையில் பாவம் நிறைந்ததாகும். தன் தேவைகளுக்குத் தொண்டாற்றிக் கொள்ளவே, அவன் உணவு காரியங்களில் துறவையும் நோன்புகளையும் பயில்கிறான்.(53) இதை நீ நம்பவில்லையெனில், ஆதாரத்தை உன் கண் முன்பே காட்டுகிறோம்” என்றனர். பிறகு அவர்கள் உடனடியாக நரியின் வசிப்பிடத்திற்குள் நுழைந்து இறைச்சியைக் கண்டுபிடித்தனர்.(54) நரியின் இல்லத்தில் இருந்து இறைச்சி கொண்டுவரப்பட்டதை உறுதிசெய்து கொண்டு, தன் பழைய பணியாட்கள் சொன்னதனைத்தையும் கேட்ட மன்னன் {புலி}, “நரி கொல்லப்பட வேண்டும்” என்று கட்டளையிட்டான்.(55)
புலியின் வார்த்தைகளைக் கேட்ட அவனது {புலியின்} தாய், நல்லாலோசனைகளின் மூலம் தன் மகனின் நல்லறிவை விழிப்படையச் செய்வதற்காக அவ்விடத்திற்கு வந்தாள்.(56) அந்த மதிப்பிற்குரிய சீமாட்டி {புலியின் தாய்}, “ஓ! மகனே, வஞ்சகம் நிறைந்த இந்தக் குற்றச்சாட்டை நீ ஏற்கக்கூடாது. பகையாலும், பொறாமையாலும் உந்தப்பட்ட தீயோர், நேர்மையானவனின் மீது கூடக் குற்றஞ்சாட்டுவார்கள்.(57) சச்சரவை விரும்பும் பகைவர்களால், உயர்ந்த சாதனை படைக்கப்போகும் தன் எதிரியின் மேன்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாது. தவங்களில் ஈடுபடும் தூய ஆன்மா கொண்டவர்கள் மேலும்கூடக் குற்றம் சுமத்தப்படும்.(58) காடுகளில் (தீங்கற்ற) செயல்களில் ஈடுபடும் தவசிக்குக் கூட, நண்பர்கள், நடுநிலையாளர்கள், எதிரிகள் என்ற மூன்று தரப்பினர் எழுகின்றனர்.(59) பிறரைத் துன்புறுத்துவோர், தூயவர்களை வெறுக்கிறார்கள். சோம்பேறிகள் சுறுசுறுப்புடையவனை வெறுக்கிறார்கள். கல்வியற்றவர்கள் கல்விமான்களை வெறுக்கிறார்கள். வறியவர்கள், வசதிபடைத்தவர்களை வெறுக்கிறார்கள். நீதியற்றவர்கள் நீதிமான்களை வெறுக்கிறார்கள். அழகற்றவர்கள் அழகானவர்களை வெறுக்கிறார்கள்.(60)
கல்விமான்கள், கல்வியற்றவர்கள், பிறரைத் துன்புறுத்துவோர், வஞ்சகம் நிறைந்தோர் ஆகியோரில் பலர், பிருஹஸ்பதியின் நற்பண்புகளையும், நுண்ணறிவையும் கொண்ட அப்பாவிகளின் மேல் பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்துவார்கள்.(61) நீ இல்லாதபோது, உன் வீட்டில் இருந்து உண்மையில் இறைச்சி களவாடப்பட்டதென்றால், நரியானவன் அவனுக்குக் கொடுக்கும் எந்த இறைச்சியையும் மறுப்பவன் என்பதை நினைவுகூர்வாயாக. (கள்வனைக் கண்டுபிடிப்பதில்) இந்த உண்மையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.(62) தீயவர்கள் சில வேளைகளில் நல்லவர்களைப் போலவும், நல்லவர்கள் சிலவேளைகளில் தீயவர்களைப் போலவும் தோன்றுவார்கள். பல்வேறு வகையான தன்மைகள் உயிரினங்களில் காணப்படுகின்றன. எனவே, எது எதுவாக இருக்கிறது என்று ஆராயும் தேவை இருக்கிறது.(63) ஆகாயமானது, ஒரு பாத்திரத்தின் கடினமான அடிப்பாகத்தைப் போலத் தெரிகிறது. விட்டில்பூச்சியானது, உண்மையான நெருப்பின் கீற்று போலவே தெரிகிறது. எனினும், உண்மையில், ஆகாயத்திற்கு எந்த அடித்தளமும் கிடையாது, விட்டில் பூச்சியிலும் எந்த நெருப்பும் இல்லை.(64) எனவே, கண்ணுக்குப் புலப்படும் இத்தகு காரியங்களில் கூராய்வுக்கான தேவை இருக்கிறது. கூராய்வுக்குப் பிறகே எதையும் உறுதி செய்து கொள்பவனுக்கு, பின்னால் எவ்வகையிலும் வருந்த வேண்டிய அவசியமேற்படாது.(65)
ஓ! மகனே, ஒரு தலைவனுக்கு ஒரு பணியாளைக் கொல்வது ஒருபோதும் கடினமானதில்லை. எனினும், அதிகாரம் படைத்தவர்களிடம் உள்ள மன்னிக்கும் தன்மையானது {பொறுமையானது}, எப்போதும் புகழத்தக்கதும், புகழை உண்டாக்கத்தக்க ஒன்றாகவும் இருக்கிறது.(66) நீ அந்த நரியானவனை முதல் அமைச்சராக்கினாய். அதன் விளைவாக, அக்கம்பக்கத்துத் தலைவர்களுக்கு மத்தியில் அவன் பெரும்புகழை ஈட்டியிருக்கிறான். ஒரு நல்ல அமைச்சரை அடைவது எளிதன்று. அந்த நரி உனது நலன்விரும்பியாவான். எனவே, அவன் ஆதரிக்கப்படுபவனாக இருக்க வேண்டும்.(67) உண்மையில் அப்பாவியான ஒருவன் மீது எதிரிகள் பொய் குற்றச்சாட்டுகளை வைக்கும்போது மன்னன் அவனைக் குற்றவாளியாகக் கருதினால், அந்தத் தீர்மானத்திற்கு அவனை வழிநடத்திச் சென்ற அந்தத் தீய அமைச்சர்களின் விளைவால், அவன் விரைவில் அழிவையே அடைவான்” என்றாள் {புலியின் தாய்}.(68)
புலியின் தாயார் இவ்வாறு பேசிய பிறகு, நரியைச் சார்ந்த ஒரு நல்ல ஒற்றன், பகைவர்களின் ஒன்றுபட்டக்குழுவில் இருந்து முன்வந்து, பொய்க் குற்றச்சாட்டு அமைக்கப்பட்ட விதம் குறித்த அனைத்தையும் கண்டுபிடித்துச் சொன்னான்.(69) நரியின் குற்றமின்மை வெளிப்படையானது, அவன் {நரி} தன் தலைவனால் குற்றமற்றவனாக அறிவிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டான். விலங்குகளின் மன்னன் {புலி} மீண்டும் மீண்டும் அவனை {நரியை} அன்புடன் அணைத்துக் கொண்டான்.(70) எனினும் கொள்கையறிவியலை நன்கறிந்த நரியானவன், துயரால் எரிந்து, விலங்குகளின் மன்னனை வணங்கி, பிராய நோன்பை நோற்று தன் உயிரை விடுவதற்கு அவனது {புலியின்} அனுமதியை வேண்டினான்.(71) புலியானவன், அன்பால் விரிந்த தன் கண்களை அறவோனான அந்த நரியின் மீது செலுத்தி, மரியாதையுடன் கூடிய வழிபாட்டால் அவனைக் கௌரவித்து, அவனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதில் இருந்து அவனைத் தடுக்க முயன்றான்.(72)
தன் தலைவன் கலங்குவதைக் கண்ட நரியானவன், அவனை வணங்கி, கண்ணீரால் தடைபட்ட குரலுடன்,(73) “உன்னால் முதலில் கௌரவிக்கப்பட்டேன். பிறகு உன்னால் அவமதிக்கவும் பட்டேன். நீ என்னிடம் நடந்து கொண்ட விதம், என்னை உன் எதிரியாக்கியிருக்கிறது. எனவே, நான் இனியும் உன்னோடு வசிப்பது முறையாகாது.(74) பணியில் இருந்து விரட்டப்பட்டோ, தங்களுக்குரிய கௌரவங்களில் இருந்து படியிறக்கப்பட்டோ, தனிமைப்படுத்தப்பட்டோ, (தங்கள் தலைவனின் கோபத்தின்மூலம்) தங்கள் எதிரிகளால் அழிவையடைந்தோ,(75) துன்பத்தையேற்படுத்தும் மனநிலையிலோ, சீற்றமடைந்தோ, அச்சமடைந்தோ, (தங்கள் தலைவர்களைப் பொறுத்தமட்டில்) வஞ்சிக்கப்பட்டோ, பறிமுதல் செய்யப்பட்டோ, பெரும் சாதனைகளைச் செய்யும் செருக்கும், விருப்பமும் இருந்தும், செல்வமீட்டும் வழிமுறைகள் இல்லாதவர்களாக ஆக்கப்பட்டோ,(76) தங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கின் விளைவால் சீற்றமடைந்தோ, துயரில் எரிந்தோ, நிறைவில்லாமல் இருக்கும் பணியாட்கள், தங்கள் தலைவர்களுக்குப் பேரிடர் ஏற்படும் காலத்திற்காக எப்போதும் காத்திருப்பார்கள். வஞ்சிக்கப்பட்ட அவர்கள் தங்கள் தலைவர்களை விட்டு, எதிரிகளின் கைகளில் உள்ள திறன்மிக்கக் கருவிகளாகிறார்கள்.(77)
நான் உன்னால் அவமதிக்கப்படு என் இடத்தில் இருந்து இறக்கப்பட்டேன். நீ மீண்டும் என்னை எவ்வாறு நம்புவாய்? (என் தரப்பில்) நான் எவ்வாறு உன்னுடன் தொடர்ந்து வசிக்க முடியும்?(78) தகுந்தவனாக நினைத்தே, ஆய்வு செய்து உன் அலுவலில் நீ என்னை நியமித்தாய். (நமக்கிடையில்) முன்பு செய்யப்பட்ட உடன்படிக்கையை மீறி நீ என்னை அவமதித்திருக்கிறாய்.(79) ஒருவன் தன் நிலைத்திறனைப் பராமரிக்க விரும்பினால், முன்பு பிறரின் முன்னிலையில் வைத்து குறிப்பிட்டவனை அறநடத்தை கொண்டவன் என்று பேசிவிட்டு, பிறகு அவனையே தீயோன் எனச் சொல்லக்கூடாது.(80) உன்னால் அவமதிக்கப்பட்ட நான், இனியும் உன்னில் நம்பிக்கை கொள்ள முடியாது. என் தரப்பில், என்னிடம் நீ நம்பிக்கை இழப்பதைக் கண்டால், நான் அச்சத்திலும், கவலையிலும் நிறைந்தவனாவேன்.(81) நீயும் ஐயங்கொண்டு, நானும் அஞ்சி இருக்கும் நிலையானது, நமக்குத் தீங்கிழைக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நமது எதிரிகளுக்கு உதவியாக அமையும். அதன்விளைவாக உனது குடிமக்களும், கவலையடைந்து, நிறைவில்லாதவர்களாக ஆவார்கள். காரியங்களில் அத்தகு நிலையானது பல குற்றங்களைக் கொண்டதாகும்.(82)
முதலில் கௌரவமும், பிறகு அவமதிப்பும் எங்கே இருக்கிறதோ, அந்நிலையை ஞானிகள் மகிழ்ச்சியானதாகக் கருதுவதில்லை.(83) ஒற்றுமையாக இருக்கும் இருவரைப் பிரிக்க முடியாததைப் போலவே, பிரிந்த இருவரைச் சேர்ப்பதும் மிகக் கடினமானதாகும். பிரிவுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்தவர்கள், ஒருவரையொருவர் மீண்டும் அணுகும்போது, அவர்களது அணுகுமுறை அன்புடையதாக இருக்க முடியாது.(84) தன் தலைவனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தை மட்டுமே எந்தப் பணியாளும் கொள்வதில்லை. தன் தலைவனுக்கும், தனக்கும் நன்மை செய்யும் நோக்கில் இருந்தே தொண்டு பிறக்கிறது. அனைத்துச் செயல்பாடுகளும் தன்னல நோக்கங்களிலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன. தன்னலமற்ற செயல்களோ, நோக்கங்களோ மிக அரிதானவையாகும்.(85) அமைதியற்ற இதயங்களைக் கொண்ட மன்னர்கள், மனிதர்களின் உண்மை அறிவை அடையமாட்டார்கள். திறன் கொண்டவனாகவும், அச்சமற்றவனாகவும் நூற்றிலொருவனே காணப்படுவான்.(86) மனிதர்களின் செழிப்பும், அவர்களது வீழ்ச்சியும் தானே நேர்கின்றன. செழிப்பு, வறுமை, பெருமை ஆகிய அனைத்தும் புத்திகுறைவில் இருந்தே உண்டாகின்றன” என்றான் {அந்த நரியானவன்}”.(87)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவை நிரம்பிய இந்த இணக்கமான சொற்களைப் பேசி, மன்னனை நிறைவு செய்த நரியானது காட்டுக்கு ஓயச் சென்றது.(88) விலங்குகளின் மன்னனுடைய {புலியினுடைய} கெஞ்சல்களைக் கேளாத அந்தப் புத்திசாலி நரியானது, பிராயத்தில் அமர்ந்து, தன் உடலைக் கைவிட்டு, (பூமியில் தான் செய்த நற்செயல்களுக்கான வெகுமதியாக) சொர்க்கத்திற்குச் சென்றது” {என்றார் பீஷ்மர்}.(89)
சோம்பேறி ஒட்டகம்! – சாந்திபர்வம் பகுதி – 112- சோம்பலால் உண்டாகும் தீங்கைக் குறித்து ஓர் ஒட்டகத்தின் கதை மூலம் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஒரு மன்னனால் எச்செயல்கள் செய்யப்பட வேண்டும்? எச்செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு மன்னன் மகிழ்ச்சியை அடைவான்? ஓ கடமைகளை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரே, இஃதை எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடன்}, “நீ அறிய விரும்புவதை நான் உனக்குச் சொல்வேன். ஒரு மன்னனால் இவ்வுலகில் செய்யப்பட வேண்டியது மற்றும் மன்னன் மகிழ்ச்சியடையக்கூடிய செயல்கள் என்னென்ன என்பது குறித்துத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் உண்மையைக் கேட்பாயாக.(2) ஒரு மன்னன், நாம் கேள்விப்பட்டிருக்கும் ஓர் ஒட்டகத்தின் உயர்ந்த வரலாற்றில் சொல்லப்பட்டுள்ள முறையில் நடந்து கொள்ள வேண்டும். ஓ! யுதிஷ்டிரா அந்த வரலாற்றைக் கேட்பாயாக. ஓ! யுதிஷ்டிரா, இப்போது அந்த வரலாற்றைக் கேட்பாயாக.(3) கிருத யுகத்தில், தன் முந்தைய பிறவியின் செயல்கள் அனைத்தையும் நினைவில் கொண்டுள்ள ஒரு பெரிய ஒட்டகம் இருந்தது. கடும் நோன்புகளை நோற்றுவந்த அவ்வொட்டகம், காட்டில் கடுந்தவத்தைச் செய்து வந்தது.(4) அதனுடைய தவத்தின் முடிவில் பலமிக்கப் பிரம்மன் அதனிடம் நிறைவு கொண்டான். எனவே, பெரும்பாட்டன் அதற்கு {அந்த ஒட்டகத்திற்கு} வரங்களை அளிக்க விரும்பினான்.(5)
ஒட்டகம் {பிரம்மனிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! பலமிக்கத் தலைவா, நூறு யோஜனைகள் தொலைவில் உள்ள எந்த உணவையும் பற்றும் வகையில், உமது அருளால் என் கழுத்து நீண்டதாகட்டும்” என்று கேட்டது.(6)
வரங்களை அளிக்கும் அந்த உயர் ஆன்மா {பிரம்மன்}, “அப்படியே ஆகட்டும்” என்றான். பிறகு அந்த ஒட்டகம் தன் காட்டிற்குச் சென்றது.(7)
வரம்பெற்ற நாள்தொடங்கி அந்த மூட விலங்கு சோம்பேறியானது. உண்மையில், விதியால் மயக்கமடைந்த அந்த இழிந்த விலங்கு, அந்த நாள் முதலே மேய்ச்சலுக்குச் செல்லவில்லை.(8) ஒரு நாள், அந்த விலங்கு நூறு யோஜனைகள் கொண்ட தன் கழுத்தை நீட்டி, எந்த முயற்சியுமின்றித் தன் உணவை அடைவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பெரும்புயலொன்று எழுந்தது.(9) அந்த ஒட்டகம் தன் தலையையும், தன் கழுத்தின் ஒரு பகுதியையும் ஒரு மலைக்குகையில் மறைத்துக் கொண்டு, புயல் ஓயும்வரை காத்திருக்கத் தீர்மானித்தது.(10)
அப்போது ஒரு நரியானது, தன் மனைவியுடன் சேர்ந்து மழையில் நனைந்து, குளிரில் நடுங்கியபடியே, பெரும் சிரமங்களுக்குப் பிறகு அதே குகையை நோக்கிச் சென்று உறைவிடத்திற்காக அதற்குள் விரைவாக நுழைந்தது.(11) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இறைச்சியை உண்டு வாழ்ந்தது என்பதாலும், களைப்புடன் இருந்ததாலும், அந்த நரியானது ஒட்டகத்தின் கழுத்தைக் கண்டு, தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உண்ணத் தொடங்கியது. தன் கழுத்து உண்ணப்படுவதைக் கண்ட ஒட்டகம், அதைக் குறுக்கி {சுருக்கிக்} கொள்ள முயற்சித்தது.(12) ஆனால், அது தன் கழுத்தை மேலும் கீழும் அசைத்த போது, நரியும், அதன் மனைவியும், அதைப் பிடித்திருக்கும் தங்கள் பிடியை விடாமல் தொடர்ந்து உண்டன.(14) குறுகிய காலத்திற்குள்ளாகவே அந்த ஒட்டகம் இறந்தது. இவ்வாறு அந்த ஒட்டக்கதைக்கொன்று தின்ற நரியானது, புயல் அடங்கி, மழை நின்றதும் அந்தக் குகையைவிட்டு வெளியே வந்தது.(15) இவ்வாறே அந்த மூட ஒட்டகம் மரணமடைந்தது.
செயலின்மையின் தொடர்ச்சியாக எவ்வளவு பெரிய தீமை விளைந்தது என்பதைப் பார்.(16) உன்னைப் பொறுத்தவரையில் நீ சோம்பலைத் தவிர்த்து, உன் புலன்களைக் கட்டுப்படுத்தி, இவ்வுலகில் அனைத்தையும் முறையான வழிமுறைகளில் செய்வாயாக. வெற்றியானது புத்தியைச் சார்ந்திருக்கிறது என்று மனுவே சொல்லியிருக்கிறார்.(17) நுண்ணறிவின் துணையால் நிறைவேற்றப்பட்ட செயல்கள் அனைத்தும் முதன்மையானவையாகவும், கரங்களின் உதவியால் அடையப்பட்டவை நடுநிலையாகவும், கால்களின் உதவியால் அடையப்பட்டவை தாழ்ந்தவையாகவும் கருதப்படுகின்றன.(18) தொழில் பரிவர்த்தனையில் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொண்டு, புலனடக்கத்துடன் உள்ள மன்னன், தன் நாட்டைத் தக்க வைத்துக் கொள்கிறான். ஆர்வமிக்க மனிதர்கள், நுண்ணறிவின் உதவியுடன் வெற்றிகளை அடைவார்கள் என்று மனுவே சொல்லியிருக்கிறார்.(19)
ஓ! யுதிஷ்டிரா, ஓ! பாவமற்றவனே, பொதுவாக அறியப்படாத விவேகமிக்க ஆலோசனைகளைக் கேட்பவர்களும், கூட்டாளிகளைக் கொண்டவர்களும், முறையான கூராய்வுக்குப் பிறகு செயல்படுபவர்களும், இவ்வுலகில் தங்கள் நோக்கங்கள் அனைத்தையும் அடைவதில் வெல்கிறார்கள்.(20) இத்தகு துணைகளைப் பெற்ற ஒருவன், மொத்த பூமியையும் ஆள்வதில் வெல்கிறான்.(21) ஓ! இந்திரனைப் போன்ற ஆற்றலைக் கொண்டவனே, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளை அறிந்த பழங்காலத்து ஞானிகளால் இது சொல்லப்பட்டிருக்கிறது. சாத்திரங்களை நோக்கும் பார்வை கொண்ட நானும், அதையே உனக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா, உன் நுண்ணறிவைப் பயன்படுத்தி, இவ்வுலகில் செயல்படுவாயாக” என்றார் {பீஷ்மர்}.(22)
பணிவு! – சாந்திபர்வம் பகுதி – 113-பெருங்கடலுக்கும், ஆறுகளுக்கும் இடையில் நடந்த உரையாடலின் மூலம் பலவீனமான மன்னன், பலமிக்க எதிரியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, மதிப்புமிக்க உடைமையான ஒரு நாட்டை அடைந்தும், வழக்கமான துணைகள் ஏதுமில்லாத ஒரு மன்னனானவன், ஒரு பலமிக்க எதிரியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பெருங்கடலுக்கும், ஆறுகளுக்கும் இடையில் நடைபெற்ற ஓர் உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில், ஆறுகளின் தலைவனும், தேவர்களுடைய எதிரிகளின் புகலிடமுமான அழிவில்லாத பெருங்கடலானவன், தன் மனத்தில் எழுந்த இந்த ஐயத்தைத் தீர்க்குமாறு ஆறுகள் அனைத்திடமும் கேட்டான்.(3)
அந்தப் பெருங்கடல், “ஆறுகளே, வேருடனும், கிளைகளுடனும் பிடுங்கப்பட்ட பெரும் தண்டுகளைக் கொண்ட மரங்கள் நீரோட்டம் நிறைந்த உங்கள் அனைவராலும் அடித்துக் கொண்டு வரப்படுவதைக் காண்கிறேன். எனினும் நீங்கள் ஒருபோதும் பிரம்பை[1] கொண்டு வருவதில்லை.(4) உங்கள் கரைகளில் வளரும் பிரம்புகள் {நாணல்கள்} அற்பமான தண்டுகளைக் கொண்டவையாகவும், பலமற்றவையாகவும் இருக்கின்றன. இகழ்வால் நீங்கள் அவற்றைப் பிடுங்க மறுக்கிறீர்களா? அல்லது அவற்றால் உங்களுக்கு ஏதேனும் பயனிருக்கிறதா?(5) உங்கள் அனைவரையும் ஈர்க்கும் நோக்கம் என்ன என்பதை நான் கேட்க விரும்புகிறேன். உண்மையில், கரைகளில் வளரும் பிரம்புகள் {நாணல்கள்} உங்களில் ஒருவராலும் ஏன் வேரோடு பிடுங்கப்படுவதில்லை?” என்று கேட்டான்{பெருங்கடல்}}.(6)இவ்வாறு கேட்கப்பட்டதும், கங்கை ஆறானவள், ஆறுகள் அனைத்தின் தலைவனான அந்தப் பெருங்கடலிடம், முக்கியத்துவம் வாய்ந்தவையும், அறிவு நிறைந்தவையும், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுபவையுமான வார்த்தைகளில் பதிலளித்தாள்.(7) கங்கை, “மரங்கள் தனியாக, ஒரே இடத்தில், தாங்கள் இருக்கும் இடத்தை விட்டுச் சற்றும் நகராமல் {விறைப்பாக} நிற்கின்றன. எங்கள் நீரோட்டத்தைத் தடுக்கும் அவற்றுடைய நிலைப்பாட்டின் விளைவாலேயே, அவை தாங்கள் வளரும் இடத்தைவிட்டு அகலும் கடன்பட்டவையாக இருக்கின்றன. எனினும், பிரம்புகள் {நாணல்கள்} வேறுவகையில் செயல்படுகின்றன.(8) முன்னேறிவரும் நீரோட்டத்தைக் காணும் பிரம்பானது {நாணலானது}, அதற்கேற்ப வளைந்து கொடுக்கிறது. மற்றவை இவ்வழியில் செயல்படுவதில்லை. நீரோட்டம் கடந்து சென்றதும், பிரம்பானது {நாணலானது} தன் பழையை நிலையையே ஏற்கிறது.(9) பிரம்பானது {நாணலானது}, காலம் மற்றும் வாய்ப்பு ஆகியவற்றின் அறங்களை அறிந்திருக்கிறது. அது கட்டுப்படுவதாகவும், கீழ்ப்படிவதாகவும் இருக்கிறது. விறைப்பாக இல்லாமல் அது வளைந்து கொடுக்கிறது. இந்தக் காரணங்களாலேயே அஃது எங்களுடன் அடித்து வரப்படாமல், தான் வளரும் இடத்திலேயே நிற்கிறது.(10) காற்று மற்றும் நீரின் சக்திக்கு முன்பு வளைந்து, எழும் செடிகள், மரங்கள் மற்றும் கொடிகள் ஆகியன ஒருபோதும் (வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்படும்) ஏமாற்றத்தை அடைவதில்லை” என்றாள் {கங்கை}”.(11)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “வலிமையில் மிகுந்தவனும், சிறைபிடிக்கவோ, கொல்லவோ வல்லவனுமான ஒரு பலமிக்க எதிரிக்கு வளைந்து கொடுக்காத ஒருவன் விரைவில் அழிவை அடைவான்[2].(12) தன்னுடைய மற்றும் தன் எதிரியுடைய பலம் மற்றும் பலவீனம், வலிமை மற்றும் சக்தி ஆகியவற்றை முழுமையாக உறுதி செய்து கொண்ட பிறகு செயல்படும் ஞானம் கொண்ட மனிதன், ஒருபோதும் ஏமாற்றத்தை அடைவதில்லை.(13) எனவே, ஒரு நுண்ணறிவுமிக்க மனிதன், தன் எதிரியைத் தன்னைவிடப் பலவானாகக் காணும்போது, இந்தப் பிரம்பின் {நாணலின்} நடத்தையையே பின்பற்ற வேண்டும். அதுவே ஞானத்தின் அறிகுறியாகும்” {என்றார் பீஷ்மர்}.(14)
வசையும், அவதூறும்! – சாந்திபர்வம் பகுதி – 114-சபைகளில் அற்பர்களால் வசைமாரி பொழியப்படும்போதும், அவதூறு செய்யப்படும் போதும், அதைப் பொறுத்துக் கொள்ளும் நல்லோன் அடையும் பயனைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, இறுமாப்பில் பெருகியவனும், அறியாமை கொண்டவனுமான ஒரு மனிதனால், சபைகளுக்கு மத்தியில் வைத்து கடுஞ்சொற்களால் தாக்கப்படும்போது, அடக்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கல்விமான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இவ்வுலகில் சிறு மதி கொண்டோரின் வசைமொழிகளை, நல்லான்மா கொண்ட ஒருவன் எவ்வாறு பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து (சாத்திரங்களில்) எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்பதைக் கேட்பாயாக.(2) ஒரு மனிதன் மற்றொருவனால் நிந்திக்கப்படும்போது, கோபவசப்படாமல் இருந்தால், அவன் நிந்திப்பவனின் {வசைபாடுபவனின்} நற்செயல்கள் அனைத்தையும் (அவை அனைத்தின் தகுதியையும் {புண்ணியத்தையும்}) எடுத்துக் கொள்வான். அத்தகு வழக்கில் {அந்த வசையைப்} பொறுமையாகத் தாங்கிக் கொள்பவன், தன் தீச்செயல்களுடைய குற்றங்கள் அனைத்தையும் {அவற்றால் விளையும் பாவங்கள் அனைத்தையும்} கோபவசப்பட்டு நிந்தனையில் ஈடுபடும் {வசைமாரி பொழியும்} மனிதனுக்குக் கொடுக்கிறான்.(3) நுண்ணறிவுமிக்க ஒரு மனிதன், பொருந்தாக் கூச்சலிடும் அற்பமான ஒரு தித்திபத்துக்கு {நீர்க்கோழிக்கு} ஒப்பாக வசைமொழி பேசும் ஒருவனை அலட்சியம் செய்ய வேண்டும். வெறுப்பின் வசப்படுபவன் வீணாக வாழ்கிறான் எனச் சொல்லப்படுகிறது. “அத்தகு மரியாதைக்குரிய மனிதனை, அத்தகு மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் வைத்து, இத்தகு வார்த்தைகளைச் சொல்லி நான் பேசினேன்” என்று ஒரு மூடன் சொல்வதையும், அந்தத் தீச்செயலைக் குறித்து அவன் தற்பெருமை பேசிக் கொள்வதையும் நாம் அடிக்கடி கேட்கிறோம்(4,5). மேலும் அவன், “என்னால் நிந்திக்கப்பட்ட அந்த மனிதன், செத்தவனைப் போல வெட்கத்துடன் அமைதியாக இருந்தான்” என்றும் சேர்த்துச் சொல்வான். இவ்வாறே, எவனும் பீற்றிக் கொள்ளக்கூடாத ஒரு செயலைக் குறித்துச் சொல்லி ஒரு வெட்கங்கெட்ட மனிதன் தற்புகழ்ச்சி செய்து கொள்வான்.(6) மனிதர்களில் இழிந்தவனான இத்தகையவன் கவனமாக அலட்சியம் செய்யப்பட வேண்டும். சிறு மதி கொண்ட இத்தகையவன் சொல்லக்கூடிய அனைத்தையும் ஞானம் கொண்ட ஒரு மனிதன் பொறுத்துக் கொள்ள வேண்டும்.(7)
ஒரு மதிக்கத்தகாத {மதிப்பில்லாத} நபரால் செய்யப்படும், தற்புகழ்ச்சியாலோ, பழிச் சொல்லாலோ என்ன செய்து விட முடியும்? கானகங்களில் பயனில்லாமல் கரையும் ஒரு காகத்தைப் போன்றவனே அவன்.(8) தங்கள் வார்த்தைகளால் மட்டுமே பிறரை குற்றஞ்சாட்டுபவர்கள், தகுந்த வழிமுறைகளின் மூலம் அந்தக் குற்றச்சாட்டுகளை நிறுவினால், அவர்களுடைய வார்த்தைகள் சற்றே {சிறிது} மதிக்கப்படலாம். எனினும் உண்மையென்னவெனில், யாரிடம் சச்சரவு செய்கிறார்களோ அவர்களுக்கு மரணத்தை இருப்புக்கு அழைக்கும் மூடர்களுடைய வார்த்தைகளின் அளவுக்கே அவர்களுடைய வார்த்தைகள் திறன் கொண்டவை[1].(9) இத்தகு நடத்தை {செயல்} மற்றும் வார்த்தைகளில் ஈடுபடும் மனிதன், தன் தகாவழிப் பிறப்பையே அறிவித்துக் கொள்கிறான். உண்மையில் அவன், எப்போதும் மறைக்கப்பட வேண்டிய உடலின் பகுதியைக் காட்டிக் கொண்டு ஆடும் ஒரு மயிலைப் போன்றவனாவான்[2].(10) தூய நடத்தை கொண்ட ஒருவன், எதையும் சொல்லவோ, செய்யவோ ஐயுணர்வு கொள்ளாதவனும், பாவம் நிறைந்தவனுமான இழிந்தவனிடம் ஒருபோதும் பேசக்கூடாது.(11)ஒருவனுடைய பார்வை தன் மேல் இருக்கும்போது, அவனுடைய தகுதிகளைப் பேசுபவனும், அவனுடைய பார்வை தன்னிடம் இருந்து விலகும்போது அவனைக் குறித்து இழிவாகப் பேசுபவனுமான மனிதன், உண்மையில் ஒரு நாயைப் போன்றவனாவான். அத்தகு மனிதன் சொர்க்கத்தில் தனக்கான பகுதிகள் அனைத்தையும், தான் கொண்ட எந்த அறிவு மற்றும் பண்பின் பலன்கள் அனைத்தையும் மொத்தமாக இழக்கிறான்.(12) ஒருவனுடைய பார்வை தன் மேல் இல்லாத போது, அவனைக் குறித்து இழிவாகப் பேசும் மனிதன், நெருப்பிலிட்ட தன் ஆகுதிகள் {காணிக்கைகள்} அனைத்தின் கனிகளையும், நூற்றுக்கணக்கான மனிதர்களுக்கு அவன் அளித்திருக்கும் கொடைகளின் பலன்களையும் தாமதமில்லாமல் இழக்கிறான்.(13) எனவே, ஞானம் கொண்ட மனிதன் ஒருவன், நேர்மையான மனிதர்கள் அனைவராலும் தவிர்க்கப்படத் தகுந்த இத்தகு பாவம் நிறைந்த இதயம் கொண்டவனை, நாயின் இறைச்சியைத் தவிர்ப்பதுபோலத் தயங்காமல் தவிர்க்க வேண்டும்.(14) ஓர் உயர் ஆன்ம மனிதனின் குற்றங்களை அறிவிக்கும் தீய ஆன்மா கொண்ட இழிந்தவன், (அச்செயலின் மூலம்) பாம்பானது (மற்றவர்கள் தலையிடும்போது) தன் தலையை வெளிக்காட்டுவதைப் போலத் தன் தீய இயல்பையே வெளிப்படுத்துகிறான்.(15) தனக்கு இனிமையான தொழிலிலேயே எப்போதும் ஈடுபடும் இத்தகு புறங்கூறுவோரிடம் எதிரிவினையாற்ற முனையும் உணர்வுள்ள மனிதன், சாம்பற்குவியலில் மூழ்கிய மூடக் கழுதையைப் போலத் துன்பம் நிறைந்த நிலையையே அடைகிறான்.(16)
பிறரின் குற்றங்களைப் பேசுவதில் எப்போதும் ஈடுபடும் மனிதனானவன், வெஞ்சினமிக்கதோர் ஓநாய், அல்லது பித்துப் பிடித்துப் பிளிறும் மதங்கொண்ட ஒரு யானை, அல்லது மூர்க்கமான ஒரு நாயைப் போலத் தவிர்க்கப்பட வேண்டியவனாவான்.(17) மூடப் பாதையில் செல்பவனும், நலம்தரும் கட்டுப்பாடுகள் மற்றும் அடக்கம் ஆகியவற்றில் இருந்து வீழ்ந்துவிட்டவனும், பிறருக்குத் தீங்கு செய்வதிலேயே எப்போதும் ஈடுபடுபவனும், தன் செழிப்பைக் குறித்துக் கவலையில்லாதவனுமான அந்த இழிந்த பாவிக்கு ஐயோ {அந்த இழிந்த பாவியை வெறுக்க வேண்டும்}.(18) இத்தகு இழிந்தோரால் அவமதிக்கப்படும்போது, அவர்களிடம் வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்ள ஒரு நேர்மையான மனிதன் விரும்பினால், “துன்பத்தை அனுபவிக்காதே” என்ற இவ்வார்த்தைகளால் அவனுக்கு அறிவுரை கூற வேண்டும். ஓர் உயர்ந்த மனிதனுக்கும், இழிந்த மனிதனுக்கும் இடையிலான வார்த்தை மோதலை அமைதியான மனம் கொண்டோர் ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை.(19) அவதூறு செய்யும் இழிந்தவன், சினங்கொள்ளும்போது, தன் உள்ளங்கையால் அடுத்தவனை அடிக்கவோ, புழுதி, அல்லது உமி வாரி இறைக்கவோ, பற்களைக் காட்டி, அல்லது நறநறவெனக் கடித்து அச்சுறுத்தவோ செய்வான். இவையனைத்தும் நன்கறியப்பட்டதே.(20) தீய ஆன்மா கொண்ட இழிந்தோர் சபைகளில் கூறும் நிந்தனைகளையும், அவதூறுகளையும் பொறுத்துக் கொள்ளும் மனிதன், அல்லது இந்த அறிவுரைகளை அடிக்கடி படிக்கும் மனிதன், பேச்சால் நேரும் எந்தத் துன்பத்தையும் ஒருபோதும் அனுபவிக்கமாட்டான்” என்றார் {பீஷ்மர்}.(21)
பணியாட்கள்! – சாந்திபர்வம் பகுதி – 115-மன்னனால் பணியமற்றத்தப்படும் மனிதர்களின் தகுதிகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானத்தைக் கொண்டவரே, என்னைக் குழப்பத்தில் பெரும் ஐயம் ஒன்று எனக்கிருக்கிறது. ஓ! மன்னா, நீர் அக்குறை தீர்க்க வேண்டும். நீர் நமது குடும்பத்தை முன்னேற்றமடையச் செய்பவராவீர்.(1) தீய நடத்தையும், தீய ஆன்மாவும் கொண்ட இழிந்தவர்கள் பேசும் அவதூறுகளைக் குறித்து எங்களிடம் உரையாடினீர். எனினும், நாம் உம்மை மேலும் கேள்வி கேட்க விரும்புகிறேன்.(2) நாட்டுக்கு எது நன்மையோ, அரச குலத்திற்கு எது மகிழ்ச்சியை உண்டாக்குமோ, எதிர்காலத்திலும், நிகழ்காலத்திலும் எது நன்மையையும் முன்னேற்றத்தையும் உண்டாக்குமோ,(3) உணவு, பானம் மற்றும் இந்த உடல் தொடர்புடையவற்றில் எது நன்மையோ, அதைக்குறித்து நீர் உரையாட வேண்டுமென நான் விரும்புகிறேன்.(4) அரியணையில் அமர்த்தப்பட்டு, நண்பர்கள், அமைச்சர்கள் மற்றும் பணியாட்கள் சூழ அதில் தொடர்ந்திருக்கும் {தொடர்ந்து அமர்ந்திருக்கும்} மன்னன், தன் மக்களை எவ்வாறு நிறைவுகொள்ளச் செய்ய வேண்டும்?(5)
எந்த மன்னன், தன் பற்று மற்றும் சார்புநிலை ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டுத் தீய கூட்டாளிகளுடன் அர்ப்பணிப்புள்ளவனாக மாறுவானோ, எவன், தன் உணர்வுகளுக்கு அடிமையாவதன் விளைவால் தீய மனிதர்களிடம் செல்வானோ, அவன்,(6) நல்ல குடி மற்றும் குருதியில் பிறந்த பணியாட்கள் அனைவரும் தன்னிடம் வெறுப்படைந்திருப்பதைக் காண்கிறான். அத்தகைய மன்னன், நல்ல பணியாட்களின் எண்ணிக்கை பலத்தால் அடையத்தக்க எந்த நோக்கத்தின் நிறைவையும் அடைய மாட்டான்.(7) நுண்ணறிவில் பிருஹஸ்பதிக்கு இணையாவரான உமக்கு, உறுதிசெய்து கொள்ளக் கடினமான மன்னர்களின் கடமைகளைக் குறித்து என்னிடம் உரையாடி, என் ஐயங்களைக் களைவதே தகும். (8) ஓ! மனிதர்களில் புலியே {பீஷ்மரே}, நமது குலத்திற்கு நன்மை செய்வதில் நீர் எப்போதும் ஈடுபட்டிருக்கிறீர். அதன் காரணமாகவே, ஆட்சித்திறத்தின் கடமைகள் குறித்து நீர் எப்போதும் எங்களிடம் உரையாடுகிறீர். பெரும் ஞானம் கொண்ட க்ஷத்திரியும் (விதுரரும்), மதிப்புமிக்க அறிவுரைகளை எப்போதும் எங்களுக்கு வழங்கி வருகிறார்.(9) நமது குலத்திற்கும், நாட்டுக்கும் நன்மையை உண்டாக்கவல்ல அறிவுரைகளை உம்மிடமிருந்து கேட்டால், இறவாநிலை தரும் அமுதத்தைப் பருகி நிறைவடைந்திருக்கும் மனிதனைப் போல என்னால் என் நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்த முடியும். (10) பணியாட்களில் எந்த வர்க்கத்தினர் இழிந்தவர்களாகவும், எவர்கள் அனைத்து சிறப்புகளைக் கொண்டவர்களாகவும் கருதப்பட வேண்டும்? எந்த வர்க்கத்துப் பணியாட்கள், அல்லது எவ்வகைப் பிறப்புக் கொண்ட பணியாட்களின் உதவியுடன், ஆட்சிக் கடமைகளை வெளிப்படுத்துவது பரிந்துரைக்கப்படலாம்?(11) மன்னன் பணியாட்கள் இல்லாமல் தனியாகச் செயல்படுவதைத் தேர்ந்தெடுத்தால், அவனால் ஒருபோதும் தனது மக்களைப் பாதுகாப்பதில் வெல்ல முடியாது. எனினும், உயர்குடி பிறப்பைக் கொண்ட மனிதர்கள் அனைவரும், அரசுரிமையை அடையும் ஆசையுடன் இருக்கின்றனர்” என்றான் {யுதிஷ்டிரன்}.(12)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, ஒரு மன்னனால் தனியாகத் தன் நாட்டை ஆள முடியாது. அவனுக்கு உதவி செய்யப் பணியாட்கள் இல்லாமல், அவனால் எந்த நோக்கத்தையும் நிறைவேற்றுவதில் வெல்ல முடியாது. எந்த நோக்கத்தையாவது அடைவதில் அவன் வென்றாலும், அவனால் (தனியாக) அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது.(13) எந்த மன்னனின் பணியாட்கள் அனைவரும், அறிவும், ஞானமும் கொண்டவர்களாக இருப்பார்களோ, தங்கள் தலைவனின் நன்மையில் அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருப்பார்களோ, உயர்குடி பிறப்பையும், அமைதியான மனநிலையும் கொண்டவர்களாக இருப்பார்களோ, அவனே {அந்த மன்னனே} அரசு தொடர்பான இன்பங்களை அனுபவிப்பதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(14) எந்த மன்னனின் அமைச்சர்கள் அனைவரும் நற்குடி பிறப்பு கொண்டவர்களாக, (கையூட்டுகள் மற்றும் பிற ஆதிக்கங்களின் மூலம்) அவனிடம் இருந்து விலகிச் செல்ல முடியாதவர்களாக, எப்போதும் அவனுடனே வாழ்பவர்களாக, தங்கள் தலைவனுக்கு அறிவுரை வழங்குவதில் ஈடுபடுபவர்களாக, ஞானம், நற்பண்பு ஆகியவற்றையும், பொருள்களின் உறவுகள் குறித்த அறிவையும் கொண்டவர்களாக,(15) எதிர்கால மற்றும் எதிர்பாரா நிகழ்வுகளைக் குறித்துச் சொல்பவர்களாக, காலத்தின் தன்மைகளைக் குறித்த நல்லறிவு கொண்டவர்களாக, கடந்து போனவற்றின் நிமித்தம் ஒருபோதும் வருந்தாதவர்களாக இருப்பார்களோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான இன்பங்களை அனுபவிப்பதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(16) எந்த மன்னனின் பணியாட்கள், அவனுடைய இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்பவர்களாக, அவனுக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்பவர்களாக, தங்கள் தலைவனின் நோக்கங்களை நிறைவேற்றுவதிலேயே எப்போதும் கவனம் கொண்டவர்களாக, பற்றுறுதிமிக்கவர்களாக இருப்பார்களோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான இன்பங்களை அனுபவிப்பதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(17)
எந்த மன்னனின் குடிமக்கள் எப்போதும் உற்சாகம் நிறைந்தவர்களாக, உயர்ந்த மனம் கொண்டவர்களாக, எப்போதும் அறவழியில் நடப்பவர்களாக இருப்பார்களோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான இன்பங்களை அனுபவிப்பதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(18) எவனுடைய வருமானத்தின் {வரவின்} மூலங்கள் அனைத்தும், நிறைவு கொண்டவர்களும், நம்பிக்கைக்குரியவர்களும், நிதியைப் பெருகச் செய்யும் வழிமுறைகளை நன்கறிந்தவர்களுமான மனிதர்களால் கண்காணிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகிறதோ, அவனே {அந்த மன்னனே} மன்னர்களில் சிறந்தவனாவான்.(19) எந்த மன்னனுடைய பண்டகசாலைகளும், தானியக்களஞ்சியங்களும், கையூட்டு பெறாதவர்களும், நம்பிக்கைக்குரியவர்களும், அர்ப்பணிப்புள்ளவர்களும், ஆசையற்றவர்களும், திரள {பெருகச்} செய்வதில் முனைப்புள்ளவர்களுமான பணியாட்களின் மேற்பார்வையில் நடத்தப்படுகிறதோ, அவன் {அந்த மன்னன்} செழிப்பையும், பெரும் தகுதியையும் {புண்ணியத்தையும்} அடைவதில் வெல்கிறான்.(20) எந்த மன்னனின் நகரத்தில் நீதியானது, நன்கறியப்பட்ட விளைவுகளை உண்டாக்கும் உண்மையற்ற வழக்கைக் கொண்ட வாதி அல்லது பிரதிவாதிக்கு அபராதம் விதிக்கும் வகையிலும், குற்றவியல் வழக்குகளில் சங்கர் மற்றும் லிகிதரின்[1] ஒழங்கிலும் முறையாக நிர்வகிக்கப்படுகிறதோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(21) எந்த மன்னன் தன் குடிமக்களிடம் அன்பால் தன்னைப் பிணைத்துக் கொள்கிறானோ, மன்னர்களின் கடமைகளைஅறிந்தவனாக இருக்கிறானோ, ஆறு தொகுப்புகளை {ஆறு முக்கிய நோக்கங்களைக்} கவனிக்கிறானோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(22)
வேங்கையான ஞமலி! – சாந்திபர்வம் பகுதி – 116-அச்சத்தில் நடுங்கிய ஒரு நாயானது, ஒரு முனிவரின் உதவியால் சிறுத்தையாகவும், புலியாகவும் மாறிய கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பின்வரும் பழங்கால வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. நல்லோருக்கும் ஞானிகளுக்கும் மத்தியில் அந்த வரலாறானது நல்ல முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.(1) அவ்வரலாறு தற்போதைய தலைப்புக்கு {உரையாடலுக்குத்} தொடர்புடையதாகும். ஜமதக்னியின் மகனான ராமரின் {பரசுராமரின்} ஆசிரமத்தில், முனிவர்களில் முதன்மையானோர் பலரால் அஃது உரைக்கப்படும்போது நான் கேட்டிருக்கிறேன்.(2) மனிதர்கள் வசிக்காத ஒரு பெருங்காட்டில், கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, புலனடக்கத்துடன், கடுந்தவங்களை நோற்கும் ஒரு தவசி வாழ்ந்து வந்தார்.(3) அவர், கடும் விதிமுறைகள் மற்றும் தன்னடக்கத்தை நோற்பவராக, அமைதியான மற்றும் தூய்மையான ஆன்மா கொண்டவராக, வேதம் ஓதுவதில் எப்போதும் கவனம் உள்ளவராக, நோன்புகளால் இதயம் தூய்மை அடைந்தவராக, அனைத்து உயிரினங்களிடமும் நற்பண்புகளுடன் நடந்து கொள்ளும் ஒரு வாழ்வைப் பின்பற்றி வந்தார்.(4) பெரும் நுண்ணறிவுடன் தன் இருக்கையில் அமர்ந்திருக்கும் அவரது நல்லியல்பானது, காட்டில் வாழும் அனைத்து உயிரினங்களாலும் அறியப்பட்டதே என்பதால், அவை அவரை அன்புடன் அணுகி வந்தன.(5)
சீற்றமிகு சிங்கங்களும், புலிகளும், பெரும் அளவைக் கொண்ட மதங்கொண்ட யானைகளும், சிறுத்தைகள், காண்டாமிருகங்கள், கரடிகள் மற்றும் குருதியுண்டு வாழும் கடுந்தன்மை கொண்ட பிற விலங்குகளும் அம்முனிவரை அணுகி, அவரிடம் வழக்கமான கேள்விகளைக் கேட்டு வந்தன. உண்மையில் அவை அனைத்தும் அவரிடம் சீடர்களைப் போலவும், பணியாட்களைப் போலவும் நடந்து கொண்டு, எப்போதும் அவருக்கு ஏற்புடையவற்றையே செய்து வந்தன.(6,7) அவரிடம் வந்து வழக்கமான விசாரிப்புகளை விசாரித்துவிட்டு, தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்வதை அவை வழக்கமாகக் கொண்டிருந்தன. எனினும், ஒரு வளர்ப்பு விலங்கானது {நாயானது}, எந்த நேரமும் அந்த முனிவரை விட்டு விலகாமல், அங்கேயே வாழ்ந்து வந்தது.(8) அஃது {அந்த நாய்} அந்தத் தவசியிடம் அர்ப்பணிப்பும், ஆதிதப் பற்றுக் கொண்டதாக இருந்தது. நோன்புகளால் பலவீனமடைந்து மெலிந்திருந்த அது, கனிகளையும், கிழங்குகளையும், நீரையும் உண்டு வாழ்ந்து, அமைதியுடனும், குற்றமிழைக்கா தன்மையுடனும் இருந்தது.(9) அந்த உயர் ஆன்ம முனிவரின் பாதத்தில் கிடந்த அது {அந்த நாயானது}, தான் நடத்தப்படும் விதத்ததில் விளைந்த அன்பின் விளைவால் அவரிடம் {முனிவரிடம்} மிகவும் பற்றுடன் இருந்தது.(10)
ஒரு நாள் பெரும்பலம் படைத்ததும், குருதியையுண்டு வாழ்வதுமான ஒரு சிறுத்தை அங்கே வந்தது. தீய மனோநிலை கொண்டதும், எப்போதும் இரை தேடும் திளைப்பில் நிறைந்ததுமான அந்தக் கடும் விலங்கானது இரண்டாம் யமனைப் போலத் தெரிந்தது.(11) அந்தச் சிறுத்தையானது, நாவால் தன் கடைவாயை நக்கியபடியும், தன் வாலை மூர்க்கமாக ஆட்டியபடியும், பசியுடனும், தாகத்துடனும், தன் வாயை அகல விரித்துக் கொண்டு, அந்த நாயைத் தன் இரையாகப் பிடிக்க விரும்பி அங்கே வந்தது.(12) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தக் கடும் விலங்கு வருவதைக் கண்ட அந்த நாய், உயிருக்கு அஞ்சி முனிவரிடம் இவ்வார்த்தைகளில் பேசியது. ஓ! ஏகாதிபதி, அதைக் கேட்பாயாக.(13) {அந்த நாய் முனிவரிடம்}, “ஓ! புனிதமானவரே, இந்தச் சிறுத்தையானது நாய்களுக்கு எதிரியாகும். அஃது என்னைக் கொல்ல விரும்புகிறது. ஓ! பெரும் தவசியே, இந்த விலங்கிடம் நான் கொண்ட அச்சங்கள் அனைத்தும் உமது அருளால் என்னிடமிருந்து விலகும் வழியில் செயல்படுவீராக. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, நீர் அனைத்தையும் அறிந்தவர் என்பதில் ஐயமில்லை” என்றது.(14) அனைத்து உயிரினங்களின் எண்ணங்களையும் அறிந்தவரான அந்தத் தவசி, அந்த நாய் பெரும் அச்சத்தில் இருப்பதை உணர்ந்தார். ஆறு பண்புகளைக் கொண்டவரும், விலங்குகள் அனைத்தின் குரல்களைப் படிக்கவல்லவருமான அந்தத் தவசி பின்வரும் வார்த்தைகளைச் சொன்னார்.(15)
அந்தத் தவசி {நாயிடம்}, “இனியும் உனக்குச் சிறுத்தைகளிடம் மரண அச்சமேதும் வேண்டாம். ஓ! மகனே, உன் இயல்பான வடிவம் மறைந்து, நீயும் ஒரு சிறுத்தையாவாயாக” என்றார்.(16) அந்த வார்த்தைகளைச் சொல்லப்பட்டதும், அந்த நாயானது, தங்கம் போன்ற பிரகாசத்துடன் கூடிய தோலைக் கொண்ட ஒரு சிறுத்தையாக மாறியது. உடலில் கோடுகளுடனும், {வாயில்} பெரும்பற்களுடனும் கூடிய அஃது, அந்தக் காட்டில் அச்சமில்லாமல் வாழத் தொடங்கியது.(17) அதே வேளையில், தன் இனத்தைச் சேர்ந்த மற்றொரு விலங்கைத் தன் முன் கண்ட சிறுத்தையானது, அதனிடம் கொண்ட பகையுணர்வனைத்தையும் அப்போதே கைவிட்டது.(18) சில காலம் கழித்து, சீற்றமும் பசியும் நிறைந்த ஒரு புலியானது திறந்த வாயுடன் அந்த ஆசிரமத்திற்கு வந்தது. நாவால் தன் கடைவாயை நக்கியபடியும், குருதி குடிக்கும் ஆவல் மற்றும் விருப்பத்துடனும் அந்தப் புலியானது, சிறுத்தையாக மாறியிருந்த அந்த விலங்கை நோக்கிச் செல்லத் தொடங்கியது.(19) பயங்கரப் பற்களைக் கொண்டதும், பசியுடன் கூடியதுமான புலி, அந்தக் காட்டை அணுகுவதைக் கண்ட (வடிவம் மாறிய) சிறுத்தையானது, தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த முனிவரின் பாதுகாப்பை நாடியது.(20)
அந்தச் சிறுத்தை அதே இடத்திலேயே தன்னுடன் வாழ்ந்து வந்ததால், அதனிடம் பெரும் பற்றுக் கொண்ட அந்தத் தவசி, அந்தச் சிறுத்தையை, அனைத்து எதிரிகளைவிடவும் பலமிக்க ஒரு புலியாக மாற்றினார்.(21) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தன் இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கைக் கண்ட புலியானது, அதற்கு எந்தத் தீங்கையும் செய்யாதிருந்தது. காலத்தின் ஓட்டத்தில், குருதியும், இறைச்சியும் உண்டு வாழும் பலமிக்க ஒரு புலியாக உருமாறிய அந்த நாயானது, தன் முந்தைய உணவான கனிகளையும், கிழங்குகளையும் தவிர்த்தது.(22) ஓ! ஏகாதிபதி, உண்மையில் அது {அந்த நாயானது}, புலியாக மாறிய நேரத்தில் இருந்து, உண்மையான விலங்குகளின் மன்னனைப் போலவே காட்டின் பிற விலங்குகளை உண்டு வாழ்ந்தது” என்றார் {பீஷ்மர்}.(23)
சரபமான ஞமலி தன் வடிவை அடைந்தது! – சாந்திபர்வம் பகுதி – 117-முனிவரின் உதவியால் சிறுத்தையாகவும், புலியாகவும் மாறிய நாய், பின்பு, யானையாகவும், சிங்கமாகவும், சரபமாகவும் மாற்றப்பட்டது; சரபமாகி இன்புற்றிருந்த நாய் அந்த முனிவரையே கொல்ல நினைத்தது; அதை அறிந்த முனிவர் சரபமாகியிருந்த அந்த நாயை மீண்டும் தன் வடிவையே ஏற்கச் செய்தது…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “புலியாக உருமாறிய நாய், கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்டு சுகமாக உறங்கிக் கொண்டிருந்தது. ஒரு நாள் அஃது ஆசிரமத்தின் முற்றத்தில் கிடந்தபோது, எழுச்சியடைந்த மேகம் போலத் தெரிந்த ஒரு மதங்கொண்ட யானை அங்கே வந்தது.(1) பெரிய உடற்கட்டுடனும், மதநீர் பெருகிய கன்னத்துடனும், உடலில் தாமரையின் குறியீடுகளுடனும், அகன்ற மத்தகங்களுடனும் இருந்த அந்த விலங்குக்கு, நீண்ட தந்தங்களும், மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலும் இருந்தன.(2) பலத்தில் செருக்கடைந்திருக்கும் அந்த மதங்கொண்ட யானை தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்தப் புலி, அச்சத்தால் கலங்கி, அந்த முனிவரின் பாதுகாப்பை நாடியது.(3) அதன் பேரில் அந்த முனிவர்களில் சிறந்தவர் அந்தப் புலியை ஒரு யானையாக மாற்றினார். உண்மையான யானையானது, தன் இனத்தைச் சார்ந்ததும், மேகத் திரளைப் போன்று பெரிதாக இருப்பதுமான அதைக் கண்டு அச்சமடைந்தது.(4) முனிவரின் யானையானது, தாமரை இதழ்களை உடற்புள்ளிகளாக {மச்சங்களாகப் போலக்} கொண்டு, தாமரைகள் அடர்த்தியாக மலர்ந்திருக்கும் தடாகங்களுக்குள் மகிழ்ச்சியாகக் குதித்து, முயல் பொந்துகள் நிறைந்த அதன் கரைகளில் திரிந்தது.(5)
இவ்வழியில் ஒரு குறிப்பிட்ட காலம் கடந்து சென்றது. ஒரு நாள் அந்த யானை ஆசிரமத்தின் பக்கம் உலவிக் கொண்டிருந்தபோது, மலைக்குகையில் பிறந்ததும், யானைகளைக் கொல்வதை வழக்கமாகக் கொண்டதுமான பிடரி படைத்த சிங்கம் ஒன்று அங்கே வந்தது.(6,7) சிங்கம் வருவதைக் கண்ட முனிவரின் யானை, உயிருக்கு அஞ்சி நடுங்கத் தொடங்கி, அந்தத் தவசியின் பாதுகாப்பை நாடியது.(8) அதன் பேரில் அந்தத் தவசி அந்த யானைகளின் இளவரசனை ஒரு சிங்கமாக மாற்றினார். அந்தக் காட்டுச்சிங்கம் தன் இனத்தைச் சேர்ந்த விலங்காக இருந்ததால், முனிவரின் சிங்கம் அதற்குமேலும் அஞ்சவில்லை. மறுபுறம், அந்தக் காட்டுச் சிங்கமானது, தன் இனத்தைச் சேர்ந்த வலிமைமிக்க விலங்கைத் தன் முன்னே கண்டு அச்சமடைந்தது.(9) முனிவரின் சிங்கம் காட்டில் உள்ள அந்த ஆசிரமத்திலேயே வசிக்கத் தொடங்கியது. அந்த விலங்கிடம் கொண்ட அச்சத்தால், அதற்கு மேலும் வேறெந்த விலங்கும் அந்த ஆசிரமத்தை அணுகத் துணியவில்லை. உண்மையில் அந்த விலங்குகள் அனைத்தும் தங்கள் உயிரின் பாதுகாப்பைக் கருதி அச்சமடைந்தன.(10)
சில காலம் கடந்ததும், ஒரு நாள், பெரும் பலம் கொண்டதும், அனைத்து விலங்குகளையும் கொல்லக்கூடியதும், அனைத்து விலங்குகளுக்கும் அச்சமூட்டக்கூடியதும், எட்டுக் கால்களைக் கொண்டதும், நெற்றியில் கண்களைக் கொண்டதுமான ஒரு சரபம் அங்கே வந்தது. உண்மையில், அது முனிவரின் சிங்கத்தைக் கொல்லும் நோக்குடன் அந்த ஆசிரமத்திற்கே வந்தது.(11,12) இதைக் கண்ட தவசி, தன் சிங்கத்தைப் பெரும்பலமிக்க ஒரு சரபமாக மாற்றினார். அந்தக் காட்டுச் சரபமானது, சீற்றமிக்கதும், தன்னைவிடப் பலமிக்கதுமான முனிவரின் சரபம் தன் முன்னே நிற்பதைக் கண்டு வேகமாக அந்தக் காட்டைவிட்டுத் தப்பி ஓடியது.(14) இவ்வாறு அந்தத் தவசியால் சரபமாக மாற்றப்பட்ட அந்த விலங்கானது, தன்னை அவ்வாறு மாற்றியவரின் அருகிலேயே மகிழ்ச்சியாக வாழ்ந்தது.(15)
அருகில் வசித்து வந்த விலங்குகள் அனைத்தும் அந்தச் சரபத்தால் அச்சமடைந்தன. அச்சமும், தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ளும் விருப்பமும் அவை அனைத்தும் அந்தக் காட்டில் இருந்து தப்பி ஓடுவதற்கு வழிவகுத்தன.(16) மகிழ்ச்சியில் நிறைந்திருந்த அந்தச் சரபம், தினமும் தன் உணவுக்காக விலங்குகளைக் கொல்வதைத் தொடர்ந்தது. ஊனுண்ணும் விலங்காக மாற்றப்பட்ட அஃது, அதற்கு மேலும் முந்தைய வாழ்வில் தான் உண்ட கனிகளையும், கிழங்குகளையும் உண்ணவில்லை.(17) முன்பு நாயாக இருந்து இப்போது சரபமாக மாறியிருக்கும் அந்த நன்றியற்ற விலங்கு, ஒரு நாள், ஆவலுடன் கூடிய குருதி தாகத்துடன் அந்தத் தவசியைக் கொல்ல விரும்பியது.(18) அவர் {தவசி}, தன் தவச் சக்தியாலும், தன் ஆன்ம அறிவாலும் அனைத்தையும் கண்டார். பெரும் ஞானத்தைக் கொண்ட அந்தத் தவசி, அந்த விலங்கின் நோக்கங்களை உறுதிசெய்து கொண்டு, அதனிடம் இவ்வார்த்தைகளைப் பேசினார்.(19)
அந்தத் தவசி {சரபமாக மாறியிருக்கும் நாயிடம்}, “ஓ! நாயே, நீ முதலில் ஒரு சிறுத்தையாக உருமாற்றப்பட்டாய். பிறகு சிறுத்தையிலிருந்து ஒரு புலியாக மாற்றப்பட்டாய். புலியாக இருந்த நீ, கன்னங்களில் மதநீர் ஒழுகும் ஒரு யானையாக மாற்றப்பட்டாய். அடுத்ததாகச் சிங்கமாகவும் மாற்றப்பட்டாய்.(20) பிறகு வலிமைமிக்கச் சிங்கமாக இருந்த நீ ஒரு சரபமாகவும் மாற்றப்பட்டாய். உன்னிடம் அன்பால் நிறைந்ததால் நான் உன்னைப் பல்வேறு வடிவங்களில் உருமாற்றி வந்தேன். பிறப்பால் நீ அந்த இனங்களில் ஏதேனும் ஒன்றில் இருப்பதோ, இருக்ககூடிய பிறப்போ அல்ல.(21) எனினும், ஓ பாவம் நிறைந்த இழிந்த பிறவியே, உனக்கு எந்தத் தீங்கையும் செய்யாத என்னை நீ கொல்ல விரும்பியதால், மீண்டும் நீ உன் இனத்தைச் சேர்ந்த பிறவியாகவே மாறி, மீண்டும் ஒரு நாயாவாயாக” என்றார்.(22) இதன்பிறகு, சரபமாக மாற்றப்பட்டிருந்ததும், குறுகிய புத்தி கொண்டதுமான அந்த மூட விலங்கு, அந்த முனிவருடைய சாபத்தின் வீளைவால் மீண்டும் அதற்குரிய நாயின் வடிவத்தை ஏற்றது” என்றார் {பீஷ்மர்}.(23)
அரசு ஊழியர்களின் பண்புகள்! – சாந்திபர்வம் பகுதி – 118-மன்னன் தன் பணியாட்களை நியமிக்க வேண்டிய முறை; நியமிக்கப்பட வேண்டிய அமைச்சர்களின் பண்புகள்; ஒரு மன்னனுக்கு இருக்க வேண்டிய, அல்லது அவன் வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்புகள்; போர்வீரர்களுக்குத் தேவையான பண்புகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்த நாயானது, தனக்கு உரிய வடிவத்தை ஏற்றவுடன் உற்சாகமிழந்தது. அந்தப்பாவம் நிறைந்த விலங்கைக் கண்டித்த முனிவர், அதைத் {நாயை} தன் ஆசிரமத்திலிருந்து விரட்டிவிட்டார்.(1) நுண்ணறிவு கொண்ட மன்னன் ஒருவன், இந்த எடுத்துக்காட்டால் வழிகாட்டப்பட்டு, பணியாட்கள் ஒவ்வொருவரும் பணியமர்த்தப்படும் முன்பே, அவர்களின் உண்மைத்தன்மை, தூய்மை, நேர்மை, பொதுவான மனநிலை, சாத்திர அறிவு, நடத்தை, பிறப்பு, தன்னடக்கம், கருணை, பலம், சக்தி, கண்ணியம் மற்றும் மன்னிக்கும் தன்மை {பொறுமை} ஆகியவற்றை உறுதி செய்து கொண்டு, அலுவலுக்குத் தகுந்த பணியாட்களை நியமிக்க வேண்டும்.(2,3) ஒரு மன்னன், முதலிலேயே தீர ஆராயமல் ஓர் அமைச்சரை ஒருபோதும் நியமிக்கக்கூடாது. ஒரு மன்னன் தன்னைச் சுற்றிலும் இழிபிறவிகளைத் திரட்டி வைத்திருந்தால், அவனால் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.(4) உயர் குடி பிறப்பைக் கொண்டவன், எக்குற்றமும் செய்யாமலே தன் தலைவனால் தண்டிக்கப்பட்டாலும், தன் குருதியுடைய மதிப்பின் விளைவால், தன் தலைவனுக்குத் தீங்கிழைப்பதில் ஒருபோதும் இதயத்தை நிலைக்கச் செய்ய மாட்டான்[1].(5)
எனினும், இழிபிறவியான ஒருவன், ஏதோவொரு நேர்மையான மனிதனின் தொடர்பால் பெருஞ்செழிப்பை அடைந்திருந்தாலும், வெறுமனே வார்த்தைகளில் கண்டிக்கப்பட்டாலும்கூட அம்மனிதனின் பகைவனாகிவிடுவான்[2].(6) ஓர் அமைச்சன் உயர்குடி பிறப்பைக் கொண்டவனாக, பலமிக்கவனாக இருக்க வேண்டும்; அவன் மன்னிக்கும் தன்மையும், தன்னடக்கமும் கொண்டவனாக, தன் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தியவனாக, கொள்ளை எனும் தீமையில் இருந்து விடுபட்டவனாக, நியாயமான முறையில் அடையப்பட்ட உடைமைகளில் மனம்நிறைந்தவனாக, தன் தலைவன் மற்றும் நண்பர்களின் செழிப்பில் மகிழ்ச்சி கொள்பவனாக,(7,8) இடம் மற்றும் நேரத்திற்குத் தக்க தேவைகளை அறிந்தவனாக, தன் தலைவனுக்கான நல்ல அலுவல்களைச் செய்பவனாக, அல்லது அதில் எப்போதும் ஈடுபடுபவனாக, எப்போதும் கவனமிக்கவனாக,(9) தன் கடமைகளை ஆற்றுவதில் நம்பிக்கைக்குரியவனாக, போர் மற்றும் அமைதியின் கலைகளில் முற்றான திறம் கொண்டவனாக, மூன்று பெரும் தொகுப்புகளின் {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில்} மன்னனின் தேவைகளை அறிந்தவனாக, குடிமக்களாலும், மாகாணங்களில் வசிப்போராலும் அன்புடன் விரும்பப்படுபவனாக,(10) பகைவரின் படையணிகளைப் பிளக்கவும், துளைக்கவும் கூடிய அனைத்து வகைப் போர்வியூகங்களையும் அறிந்தவனாக, தன் தலைவனின் படைகளுக்கு உற்சாகத்தையும் இன்பத்தையும் அளிப்பவனாக, அறிகுறிகளையும், தோற்றநிலைகளையும் படிக்கவல்லவனாக, அணிவகுப்புக்குத் தேவையான அனைத்தையும் அறிந்தவனாக,(11) யானைகளுக்குப் பயிற்சி அளிப்பதில் திறம் கொண்டவனாக, செருக்கில் இருந்து விடுபட்டவனாக, தன் சக்திகளில் நம்பிக்கை உள்ளவனாக, தொழில் பரிவர்த்தனையில் புத்திசாலியாக, எப்போதும் சரியானதையே செய்பவனாக,(12) நல்லொழுக்கம் கொண்டவனாக, நல்ல நண்பர்களால் சூழப்பட்டவனாக, இனிய பேச்சைக் கொண்டவனாக, ஏற்புடைய பண்புகளைக் கொண்டவனாக, சிறப்புத் திறமை, செயல்பாட்டில் துடிப்பு,(13) சுறுசுறுப்பு, புத்திக்கூர்மை, இனிய மனம், பேச்சில் பணிவு, பொறுமை, துணிவு, வளமை ஆகியவற்றைக் கொண்டவனாக, இடம் மற்றும் காலத்திற்குத் தகுந்த தேவைகளின்படி தன் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளவல்லவனாக இருக்க வேண்டும்.(14) இத்தகு அமைச்சனை அடையும் மன்னனை, வேறு எவனாலும் ஒருபோதும் அவமதிக்கவோ, வீழ்த்தவோ முடியாது. உண்மையில் அவனது நாடானது, நிலவின் வெளிச்சத்தைப் போல இந்தப் பூமியில் படிப்படியாகப் பரவும்.(15)
மேலும் சாத்திரங்களை அறிந்தவனும், அறமே அனைத்திற்கும் மேலானது எனக் கருதுபவனும், தன் குடிமக்களைக் காப்பதில் எப்போதும் ஈடுபடுபவனும், பின்வரும் பண்புகளைக் கொண்டவனுமான ஒரு மன்னனானவன் அனைவரின் அன்பையும் பெறுவான்.(16) அவன் {ஒரு மன்னன்}, பொறுமை, மன்னிக்கும் தன்மை, தூய ஒழுக்கம், தேவையான தருணங்களில் கடுமை, பெரியோர் அனைவரையும் மதிக்கும் நடத்தை, சாத்திர அறிவு, அறிவுரையும் ஆலோசனையும் வழங்கத்தக்கவர்களிடம் அவற்றைக் கேட்கக்கூடிய ஆயத்தம், தனக்குப் பரிந்துரைக்கப்படும் வேறுபட்ட, அல்லது எதிர் நடவடிக்கைகளுக்கு மத்தியில் சரியாகத் தீர்மானிக்கும் திறன்,(17) புத்திக்கூர்மை, நல்ல நினைவுத்திறன், நீதியைச் செய்ய ஆயத்தம், தற்கட்டுப்பாடு, எப்போதும் பேச்சில் இனிமை, எதிரிகளையும் மன்னிக்கும் தன்மை,(18) தனிப்பட்ட ஈகை பயில்வது, நம்பிக்கையுடன் இருப்பது, ஏற்புடைய பண்புகளைக் கொண்டிருப்பது, துயரில் மூழ்கியிருக்கும் மனிதர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஆயத்தநிலையிலிருப்பது, தன் நன்மையை எப்போதும் நாடும் அமைச்சர்களைக் கொண்டிருப்பது,(19) தற்பெருமை எனும் குற்றத்தைத் தவிர்ப்பது, மனைவியில்லாமல் ஒருபோதும் இல்லாத நிலை, எதையும் அவசரமாகச் செய்யாத நிலை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் .(20)
அவன், சோம்பலைத் தவிர்த்து, தனக்கு நன்மை செய்யும் மனிதர்களுடன் எப்போதும் இணைந்திருக்க வேண்டும். அவனது முகம் எப்போதும் உற்சாகம் நிறைந்ததாக இருக்க வேண்டும். தன் பணியாட்களின் தேவைகளில் எப்போதும் கவனமாக இருப்பவனாகவும், கோப வசப்படாதவனாகவும் அவன் இருக்க வேண்டும். இவற்றைத் தவிர்த்து அவன் பெருந்தன்மை கொண்டவனாக இருக்க வேண்டும்.(21) தண்டக்கோலைக் கீழே வைக்காமல், அதை முறையுடன் தரிக்க வேண்டும். தன் மக்கள் அனைவரையும் நியாயமாக நடக்கச் செய்ய வேண்டும். அவன், ஒற்றர்களைத் தன் கண்களாகக் கொண்டு, தன் குடிமக்களின் காரியங்களைக் கண்காணித்து, அறம் மற்றும் செல்வம் தொடர்பான அனைத்துக் காரியங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த நூறு பண்புகளையும் கொண்ட மன்னன் அனைவரின் அன்பையும் ஈட்டுவான். ஒவ்வொரு ஆட்சியாளனும் இவ்வாறு இருக்க முயற்சிக்க வேண்டும்.(22) ஓ! ஏகாதிபதி, ஒரு மன்னன், தன் நாட்டைப் பாதுகாப்பதில் தனக்கு உதவி செய்வதற்குத் தேவையான தகுதிகளுடன் கூடிய நல்ல போர்வீரர்களைத் (தன் படையில் சேர்த்துக் கொள்வதற்குத்) தேட வேண்டும்.(23) தன் முன்னேற்றத்தை விரும்புபவனான ஒரு மன்னன் ஒருபோதும் தன் படையை அலட்சியம் செய்யக்கூடாது.
எந்த மன்னனின் படைவீரர்களில், போரில் துணிவுமிக்கவர்களாகவும், நன்றியுணர்வு மிக்கவர்களாகவும், சாத்திரங்களை அறிந்தவர்களாகவும் இருக்கிறார்களோ, எவனுடைய படையில், அறம் மற்றும் கடமை குறித்த உடன்படிக்கைகளை அறிந்த காலாட்படையினர் இருக்கிறார்களோ, எவனுடைய யானைவீரர்கள் அச்சமில்லாதவர்களாக இருக்கிறார்களோ, எவனுடைய தேர்வீரர்கள், தங்கள் வகைப் போரில் திறம்பெற்றவர்களாகவும், கணை ஏவுவதை நன்கறிந்தவர்களாகவும், பிற ஆயுதங்களைத் தரிக்கவும் தெரிந்தவர்களாக இருக்கிறார்களோ, அவன் {அந்த மன்னன்} மொத்த உலகையும் அடக்குவான்.(24,25) எந்த மன்னன், மனிதர்கள் அனைவரையும் தன்னோடு இணைப்பதில் எப்போதும் ஈடுபடுவானோ, எவன் முயற்சிக்கு {உழைப்புக்கு} எப்போதும் ஆயத்தமாக இருக்கிறானோ, எவன் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் காரியத்தில் வளத்துடன் இருக்கிறானோ, அவன் {அந்த மன்னன்} ஆட்சியாளர்களில் முதன்மையானவன் ஆவான்.(26) ஓ! பாரதா, மனிதர்கள் அனைவரையும் தன்னோடு இணைத்துக் கொள்வதில் வெற்றி காணும் மன்னன், துணிவுடன் கூடிய ஓராயிரம் குதிரைவீரர்களை மட்டுமே கொண்டும் கூட மொத்த உலகையும் கைப்பற்றுவான்” என்றார் {பீஷ்மர்}.(27)
தக்க நியமனம்! – சாந்திபர்வம் பகுதி – 119-பணியாட்களில் ஒவ்வொருவரையும் அவரவர்க்குத் தகுந்த அலுவல்களில் நியமிக்க வேண்டும்; தகாதவர்களைத் தகாத நிலையில் நியமித்தால் ஏற்படும் நிலை மற்றும், தகுந்தவர்களைத் தகுந்த நிலையில் நியமித்தால் ஏற்படும் நிலை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக் காட்டிய பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “எந்த மன்னன், இந்த நாயின் கதையில் இருந்து பெறப்பட்ட பாடத்தால் வழிகாட்டப்பட்டு, தன் பணியாட்கள் ஒவ்வொருவரையும் அவர்களுக்குத் தகுந்த அலுவல்களில் நியமிக்கிறானோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்புடைய இன்பங்களை அனுபவிப்பதில் வெல்வான் {அரசின் பயனைப் பெறுவான்}. ஒரு நாயானது, அதற்குத் தகுந்த நிலைக்கு மேலே கௌரவத்துடன் அமர்த்தப்படக்கூடாது. ஒரு நாய், அதற்குத் தகுந்த நிலைக்கு மேல் அமர்த்தப்பட்டால், அது செருக்கால் போதையுறும்.(2) தகுந்த அலுவல்களில் நியமிக்கப்படும் அமைச்சர்கள், அந்தந்தத் தொழிலுக்குத் தகுந்த தகுதிகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தகாத மனிதர்களின் நியமனங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாது.(3) எந்த மன்னன், தன் பணியாட்கள் ஒவ்வொருவருக்கும் தகுந்த அலுவல்களைக் கொடுக்கிறானோ, அத்தகு தகுதியின் {புண்ணியத்தின்} விளைவால் அவன் {அந்த மன்னன்}, அரசு தொடர்புடைய இன்பங்களை அனுபவிப்பதில் வெல்வான் {அரசின் பயனைப் பெறுவான்}.(4) ஒரு சரபம், சரபத்தின் நிலையை ஏற்க வேண்டும்; ஒரு சிங்கம், சிங்கத்தின் வலிமையால் பெருகியதாக இருக்க வேண்டும்; ஒரு புலியானது, புலியின் நிலையில் அமர்த்தப்பட வேண்டும்; ஒரு சிறுத்தையானது, சிறுத்தையின் நிலையில் அமர்த்தப்பட வேண்டும்.(5)
பணியாட்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தகுந்த அலுவல்களில் விதிப்படி நியமிக்கப்பட வேண்டும். நீ வெற்றியை அடைய விரும்பினால், பணியாட்களுக்குத் தகுந்ததைவிட உயரிய நிலையில் ஒருபோதும் அவர்களை நியமிக்கக்கூடாது.(6) எந்த மூட மன்னன், இந்த எடுத்துக்காட்டை மீறி, தகாத நிலைகளில் பணியாட்களை நியமிப்பானோ, அவன் தன் மக்களை நிறைவடையச் செய்வதில் தவறுவான்.(7) திறன்மிக்கப் பணியாட்களைக் கொள்ள விரும்பும் மன்னன் ஒருவன், நுண்ணறிவற்றவர்களும், இழிந்த மனம் கொண்டவர்களும், ஞானம் இல்லாதவர்களும், தங்கள் புலன்களுக்குத் தலைவர்களாக இல்லாதவர்களும், உயர் குடியில் பிறக்காதவர்களுமான மனிதர்களை ஒருபோதும் {எந்த அலுவலிலும்} நியமித்துக் கொள்ளக்கூடாது.(8) நேர்மையானவர்களும், உயர்குடி பிறப்பைக் கொண்டவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், கல்விமான்களும், தீயநோக்கமும், பொறாமையும் இல்லாதவர்களும், உயர்ந்த மனம் கொண்டவர்களும், நடத்தையில் தூய்மையானவர்களும், தொழில் பரிவர்த்தனையில் புத்திசாலிகளுமான மனிதர்கள், அமைச்சர்களாக நியமிக்கப்படத் தகுந்தவர்களாவர்.(9) பணிவுடையவர்களும், தங்கள் கடமைகளை ஆற்றத் தயாராக இருப்பவர்களும், அமைதியான மனநிலை கொண்டவர்களும், மனத்தில் தூய்மையானவர்களும், இயல்பான பல்வேறு பிற கொடைகளைக் கொண்டவர்களும், தாங்கள் இருக்கும் அலுவல்களின் தொடர்பான அவதூறுகளுக்கு ஆளாகாதவர்களுமான மனிதர்கள், மன்னனின் அணுக்கமான துணைவர்களாக இருக்க வேண்டும்.(10)
ஒரு சிங்கமானவன், எப்போதும் மற்றொரு சிங்கத்தையே தன் தோழனாகக் கொள்ள வேண்டும். சிங்கமல்லாத ஒருவன், ஒரு சிங்கத்திற்குத் தோழனானால், அவன் அந்தச் சிங்கத்திற்கு உண்டான பயன்கள் அனைத்தையும் ஈட்டுவான்.(11) எனினும் ஒரு சிங்கமானவன், நாய்களின் கூட்டத்தை மட்டுமே தன் துணைவர்களாகக் கொண்டிருந்தால், அவன் சிங்கத்திற்குரிய கடமைகளை ஆற்றும்போது, தன் தோழமையின் விளைவால், அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதில் தவறுவான்.(12) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, ஒரு மன்னன், துணிவு, ஞானம், பெரும் கல்வி, உயர்குடி பிறப்பு ஆகியவற்றைக் கொண்ட மனிதர்களைத் தன் அமைச்சர்களாகக் கொண்டிருந்தால், அவன் மொத்த உலகையும் அடக்குவதில் வெல்வான்.(13) ஓ! அரசத் தலைவர்களில் முதன்மையானவனே, கல்வி, நேர்மை, ஞானம், பெருஞ்செல்வம் ஆகியவையற்ற ஒரு பணியாளனை மன்னர்கள் ஒருபோதும் ஊக்கப்படுத்தக் கூடாது.(14) தங்கள் தலைவனுக்கான தொண்டுகளில் அர்ப்பணிப்போடு இருக்கும் மனிதர்களை எந்தத் தடைகளாலும் ஒருபோதும் தடுத்துவிட முடியாது. மன்னர்கள், தங்கள் தலைவர்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடும் பணியாட்களிடம் எப்போதும் ஆறுதலாகவே பேச வேண்டும்.(15)
மன்னர்கள் எப்போதும் பெருங்கவனத்துடன் தங்கள் கருவூலங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மையில் மன்னர்கள், தங்கள் கருவூலங்களிலேயே தங்கள் வேர்களைக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மன்னன் எப்போதும் தன் கருவூலத்தைப் பெருகச் செய்வதில் முனைய வேண்டும்.(16) ஓ! மன்னா, உன் பண்டகசாலைகள் {கிடங்குகள்} தானியங்களால் நிறைக்கப்படட்டும். அதை நேர்மையான பணியாட்கள் கவனித்துக் கொள்ளட்டும். நீ உன் செல்வத்தையும், தானியங்களையும் பெருகச் செய்ய முனைவாயாக.(17) போரில் திறன்பெற்ற உன் பணியாட்கள், அவர்களுடைய கடமைகளைக் கவனமாகச் செய்யட்டும். அவர்கள் குதிரைகளை நிர்வகிப்பதில் திறன்பெற்றவர்களாக இருப்பது விரும்பத்தக்கதாகும்.(18) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, உன் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தேவைகளைக் கவனிப்பாயாக. நீ நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சூழப்பட்டிருப்பாயாக. உனது நகரத்துக்கான நன்மையை நீ நாடுவாயாக.(19) நாயின் எடுத்துக்காட்டைச் சொன்னதன் மூலம், உன் குடிமக்களிடம் நீ பின்பற்ற வேண்டிய கடமைகளைக் குறித்து உனக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன். மேலும் நீ என்ன கேட்க விரும்புகிறாய்” என்று கேட்டார் {பீஷ்மர்}.(20)
மயிலொழுக்கம்! – சாந்திபர்வம் பகுதி – 120-மயிலுக்கு ஒப்பாக மன்னன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும், ஒரு மன்னன் குடிமக்களைப் பாதுகாக்கும் தன் கடமையில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பதையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, அரச கடமைகளை அறிந்த பழங்காலத்து மனிதர்களால் விதிக்கப்பட்டு, நடைமுறையில் இருந்த அரசதிறத்தின் பல்வேறு கடமைகளைக் குறித்து நீர் உரையாடினீர்.(1) உண்மையில், ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்ட அந்தக் கடமைகளைக் குறித்து நீர் விரிவாகப் பேசியிருக்கிறீர். எனினும், ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவற்றை ஒருவன் நினைவில் தக்க வைத்துக் கொள்வதில் வெல்லும் வகையில் சொல்வீராக” என்று கேட்டான்[1].(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பதே ஒரு க்ஷத்திரியனின் உயர்ந்த கடமை என்று சொல்லப்படுகிறது. ஓ! மன்னா, பாதுகாக்கும் கடமையை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை என்னிடம் இருந்து கேட்பாயாக.(3) தன் கடமைகளை அறிந்த ஒரு மன்னன், பல்வேறு நிறங்களைத் தோகையில் எற்கும் ஒரு மயிலைப் போலவே பல்வேறு வடிவங்களை ஏற்க வேண்டும்.(4) கூர்மை, கபடம், உண்மை, நேர்மை ஆகிய பண்புகள் அவனிடம் இருக்க வேண்டும். அவன், முழுமையாகப் பாரபட்சமில்லாமல், நற்பண்புகளை நடைமுறைப்படுத்தி, புகழை ஈட்ட வேண்டும்.(5) அவன் தான் நிறைவேற்ற முனையும் குறிப்பிட்ட நோக்கத்தில் நன்மையடைவதைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நிறத்தையோ, வடிவையோ ஏற்க வேண்டும். பல்வேறு வடிவங்களை ஏற்கவல்ல மன்னனால் மிக நுண்ணிய நோக்கங்களையும் கூட நிறைவேற்றுவதில் வெல்வான்.(6)
கூதிர்காலத்து ஊமை மயிலைப் போல அவன் தன் ஆலோசனைகளை மறைக்க வேண்டும். அவன் குறைவாகவே பேச வேண்டும், அந்தக் குறைவான பேச்சும் இனிமையாக இருக்க வேண்டும். அவன் நற்பண்புகளைக் கொண்டவனாகவும், சாத்திரங்களை நன்கறிந்தவனாகவும் இருக்க வேண்டும்.(7) மனிதர்கள் தங்கள் வயல்கள் மற்றும் வீடுகளை வெள்ளத்தால் நிறைக்கக் கூடிய பெரிய ஏரிகளுடைய உடைப்புகளைக் கவனித்துக் கொள்வதைப் போலவே அவன் தன்னை வீழ்த்தக்கூடிய ஆபத்துகள் வரும் வாயில்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். மலைத் தடாகங்களில் திரளும் மழைநீரில் இருந்து உண்டாகும் ஆறுகளை மனிதர்கள் நாடுவதைப் போலவே அவன் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிராமணர்களின் புகலிடத்தை நாட வேண்டும். செல்வத்தைத் திரட்ட விரும்பும் மன்னன், சடாமுடி தரிக்கும் போலி அறவோரைப் போலச் செயல்பட வேண்டும்.(8) மன்னன் தன் கரங்களில் எப்போதும் தண்டக்கோலை உயர்த்தியபடியே இருக்க வேண்டும். வருவாயையும், செலவினங்களையும் நன்கு ஆய்வு செய்த பிறகு, முழுதாக வளர்ந்த பனைமரத்திடம் அதன் சாறை உறிஞ்சச் செல்வதைப் போல அவன் (வரி விதிக்கும் காரியங்களில்) எப்போதும் கவனமாகச் செயல்பட வேண்டும்.(9) அவன் தன் குடிமக்களிடம் தகமையுடன் {நியாயமாக} நடந்து கொள்ள வேண்டும்; தன் சிறகுகள் பலம்பெற்றதும் எதிரியை எதிர்த்துப் படையெடுத்து, தன் குதிரைப் படையைக் கொண்டு எதிரிகளின் பயிர்களை நசுக்க வேண்டும்; மேலும் தன் பலவீனங்களின் தோற்றுவாய்களையும் நோக்க வேண்டும்.(10)
தன் எதிரிகளின் குற்றங்களை அவன் அறிக்கையிட வேண்டும்; தன்னைச் சார்ந்தோரின் குற்றங்களை நசுக்க வேண்டும்; காட்டிலிருக்கும் மலர்களைக் கொய்யும் மனிதனைப் போலவே வெளியில் இருந்து செல்வத்தைத் திரட்ட வேண்டும்.(11) வலிமையில் பெருகியவர்களும், மலைகளைப் போன்று உயர்ந்த தலைகளுடன் நிமிர்ந்து நிற்பவர்களுமான முதன்மையான ஏகாதிபதிகளை அவன் அறியப்படாத நிழல்களையும் நாடுதல், ஒளிந்து மறைந்திருத்தல், திடீர் தாக்குதல்களை நடத்துதல் ஆகியவற்றின் மூலம் அழிக்க வேண்டும்.(12) மழைக்காலத்து மயிலைப் போல அவன் தன் இரவு வசிப்பிடங்களில் தனியாகவும், யாராலும் காணப்படாமல் நுழைய வேண்டும். உண்மையில் அவன் மயிலின் நடையிலேயே தன் மனைவியரின் துணையுடன் தன் அந்தப்புரங்களுக்குள் இன்புற்றிருக்க வேண்டும்[2].(13) அவன் தன் கவசத்தைக் கழற்றக்கூடாது. அவன் தன் எதிரிகளின் ஒற்றர்களால் விரிக்கப்படும் வலையைத் தவிர்த்து, தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(14) மேலும் அவன் தன் எதிரிகளின் ஒற்றர்களுடைய பற்றை வெல்ல வேண்டும், ஆனால், வாய்ப்பு நேரும்போது அவர்களை வேரோடு அழித்துவிட வேண்டும். மயில்களைப் போலவே மன்னனும் தன் பலமிக்கக் கோபக்கார எதிரிகளைக் கபடத் திட்டங்களின் மூலம் கொன்று,(15) அவர்களது படையையும் அழித்து, தன் நாட்டில் இருந்து அவர்களை விரட்ட வேண்டும். மேலும் மன்னனானவன், மயில்களைப் போலவே தனக்கு நன்மையானதைச் செய்து கொண்டு, காட்டில் இருந்து அவை {மயில்கள்} பூச்சிகளைச் சேகரிப்பது போல அனைத்து இடங்களில் இருந்தும் ஞானத்தைச் சேகரிக்க வேண்டும்.(16)ஞானியும், மயிலைப் போன்றவனுமான மன்னன், இவ்வாறே தன் நாட்டை ஆண்டு, தனக்கு நன்மையை அளிக்கும் கொள்கையை {திட்டத்தைப்} பின்பற்ற வேண்டும்.(17) தன் நுண்ணறிவைக் கொண்டே அவன் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். பிறருடன் ஆலோசிப்பதன் மூலம் அவன் அத்தகு தீர்மானத்தைக் கைவிடவோ, உறுதிசெய்யவோ வேண்டும். சாத்திரங்களால் கூர்த்தீட்டப்பட்ட நுண்ணறிவின் துணையுடன் ஒருவன் தன் செயற்பாட்டு வழிமுறைகளைத் தீர்மானித்துக் கொள்ள முடியும். சாத்திரங்களின் பயன் இதில்தான் {காரியங்களின் போக்கைத் தீர்மானிப்பதில்தான்} இருக்கிறது.(18) இணக்கக் கலைகளை {சாம முறையைப்} பயில்வதன் மூலம் அவன் தன் எதிரிகளுடைய இதயங்களின் நம்பிக்கையை ஈர்க்க வேண்டும். அவன் தன் சொந்த பலத்தை வெளிக்காட்ட வேண்டும். பல்வேறு செயல்பாட்டு வழிமுறைகளைத் தன் மனத்திற்குள் மதிப்பிடுவதன் மூலம், அவன் தன் நுண்ணறிவைப் பயன்படுத்தித் தீர்மானங்களை அடைய வேண்டும்.(19) மன்னன், இணக்கக் கொள்கையின் {சாம முறையின்} கலைகளை நன்கறிந்திருக்க வேண்டும், அவன் ஞானம் கொண்டவனாக இருக்க வேண்டும்; எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வல்லவனாகவும், எது கூடாதாதோ அதைத் தவிர்க்க வல்லவனாகவும் இருக்க வேண்டும். ஞானமும், ஆழமான நுண்ணறிவும் கொண்ட மனிதனுக்கு ஆலோசனைகளோ, அறிவுரைகளோ தேவைப்படுவதில்லை.(20)
பிருஹஸ்பதியைப் போன்ற நுண்ணறிவைக் கொண்ட ஒரு ஞானி, அவதூறு செய்பவனானால், அவன் நீரில் முக்கப்படும் சுடப்பட்ட இரும்பைப் போல விரைவில் தன் மனநிலை சீரடைவான்.(21) மன்னன் தனது, அல்லது பிறரின் நோக்கங்கள் அனைத்தையும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படியே நிறைவேற்ற வேண்டும்.(22) செல்வத்தை அடையும் வழிமுறைகளை அறிந்த மன்னன் ஒருவன், தன் செயல்பாடுகள் அனைத்திலும் மென்மையான மனநிலை, ஞானம், துணிவு, பெரும் பலம் ஆகியவற்றைக் கொண்ட மனிதர்களையே எப்போதும் நியமிக்க வேண்டும்.(23) {வீணை போன்ற} இசைக்கருவியின் நாண்களைச் சுவரங்களுக்குத் தக்கபடி சரியான அழுத்தத்தில் கட்டுவதைப் போல ஒருமன்னன், தன் பணியாட்கள், அவர்களுக்குத் தகுந்த செயல்களில் நியமிக்கப்படுவதைக் கண்டு அவர்களுடன் சேர்ந்து கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்.(24) மன்னன், அற விதிகளை மீறாமல் அனைத்து மனிதர்களுக்கு நன்மையே செய்ய வேண்டும். “இவன் என்னவன்” என்று அனைவராலும் கருதப்படும் மன்னன் அசையாத மலையென நிலைத்து நிற்பான்.(25)
வழக்காடுபவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிக்கும் பணியில் தன்னை நிறுவிக்கொள்ளும் மன்னன், தன்னால் விரும்பப்படும், மற்றும் விரும்பப்படாத நபர்களுக்கு மத்தியில் எந்த வேறுபாட்டையும் காணாமல், நீதியை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.(26) குறிப்பிட்ட குடும்பங்கள், குறிப்பிட்ட மக்கள் திரள், பல்வேறு நாடுகள் ஆகியவற்றின் பண்புகளை அறிந்தவர்கள்; பேச்சில் மென்மையாக இருப்பவர்கள்; நடு வயதில் இருப்பவர்கள், குற்றங்கள் {குறைகள்} ஏதும் இல்லாதவர்கள்; நற்செயல்களுக்குத் தங்களை அர்ப்பணித்தவர்கள்; ஒருபோதும் அலட்சியமாக இல்லாதவர்கள்; கொள்ளையில் ஈடுபடாதவர்கள்; கல்வியும், தற்கட்டுப்பாடும் கொண்டவர்கள்; அறத்தில் உறுதியும், அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டும் சார்ந்த காரியங்களை உயர்த்திப்பிடிக்க எப்போதும் தயாராக இருப்பவர்கள் ஆகியோரையே மன்னன் தன் அலுவல்கள் அனைத்திலும் நியமிக்க வேண்டும்.(27,28) இவ்வழியில், செயல்களின் நடைமுறையையும், இறுதி நோக்கங்களையும் உறுதி செய்து கொள்ளும் மன்னன், அவற்றைக் கவனமாக நிறைவேற்ற வேண்டும்; தன் ஒற்றர்கள் மூலம் அனைத்து செய்திகளையும் அறிந்து கொண்டு அவன் உற்சாகத்துடன் வாழ வேண்டும்.(29) போதுமான காரணங்களில்லாமல் கோபத்துக்கும், இன்பத்துக்கும் ஒருபோதும் வசப்படாதவனும், வரவு மற்றும் செலவு ஆகியவற்றைத் தன் கண்களால் நேரடியாகக் கண்காணிப்பவனுமான மன்னன், உலகத்தில் இருந்து பெருஞ்செல்வத்தை அடைவதில் வெல்கிறான்.(30)
தன் அதிகாரிகள் மற்றும் குடிமக்களை (அவர்கள் செய்ய நற்காரியங்களுக்காக) பொதுவில் வைத்து கௌரவிப்பவனும், தண்டனைக்குத் தகுந்தோரைத் தண்டிப்பவனும், தன்னையும், தன் நாட்டையும் அனைத்துத் தீமைகளில் இருந்தும் பாதுகாத்துக் கொள்பவனுமான மன்னன், அரசகலையின் {ஆட்சித்திறத்தின்} கடமைகள் அனைத்தையும் அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(31) கீழிருக்கும் அனைத்தின் மேலும் தன் கதிர்களைப் பொழியும் சூரியனைப் போல மன்னன், எப்போதும் தன் நாட்டைப் பார்த்துக் கொண்டு, தன் நுண்ணறிவின் உதவியால், தன் ஒற்றர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் கண்காணிக்க வேண்டும்.(32) மன்னன் உரிய காலத்தில் தன் குடிமக்களிடம் இருந்து செல்வத்தைப் பெற வேண்டும். அவன் செய்வதை அவன் ஒருபோதும் அறிக்கையிடக்கூடாது. பசுவிடம் இருந்து தினமும் பால்கறக்கும் ஒரு புத்திசாலியைப் போல, மன்னனும் தினமும் தன் நாட்டைக் கறக்க வேண்டும்.(33) ஒரு தேனியானது, மலர்களில் இருந்து படிப்படியாகத் தேனைத் திரட்டுவதைப் போலவே மன்னனும் தன் நாட்டில் இருந்து படிப்படியாகச் செல்வத்தைத் திரட்டிப் பாதுகாக்க வேண்டும்.(34) போதுமான அளவைத் தனியாக வைத்துக் கொண்டு, எஞ்சியவற்றைக் கொண்டு, அறத்தகுதியை அடைவது மற்றும், இன்பத்துக்காக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வது ஆகியவற்றில் செலவிட வேண்டும். கடமைகளை அறிந்தவனும், நுண்ணறிவு கொண்டவனுமான ஒரு மன்னன், பாதுகாக்கப்பட்டதை {அவ்வாறு திரட்டப்பட்டுப் பாதுகாக்கப்படும் செல்வத்தை} ஒருபோதும் வீணாக்கமாட்டான்.(35)
மன்னன், சிறியது என எந்தச் செல்வத்தையும் ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது; அவன் எதிரிகளின் பலவீனத்தை ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது; அவன் தன் நுண்ணறிவைப் பயன்படுத்தி, தன்னை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்; அவன் ஒருபோதும் நுண்ணறிவற்ற மனிதர்களின் நம்பிக்கையைச் சார்ந்திருக்கக் கூடாது.(36) உறுதி {உற்சாகம்}, புத்திசாலித்தனம் {ஸாமர்த்தியம்}, தற்கட்டுப்பாடு {அடக்கம்}, நுண்ணறிவு {அறிவு}, உடல்நலம் {தேகம்}, பொறுமை {சௌரியம்}, துணிவு {தைரியம்}, இடம் மற்றும் நேரத்திற்குத் தேவையான கவனம் {ஜாக்ரதையுணர்வு} ஆகிய இந்த எட்டு பண்புகளும், சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கும் செல்வத்தைப் பெருகவே வழிவகுக்கும்.(37) சிறு நெருப்பும், தெளிந்த நெய்யூட்டப்பட்டால் பெரும் நெருப்பாகச் சுடர்விட்டெரியும். ஒரே ஒரு விதை கூட ஆயிரம் மரங்களை உண்டாக்கிவிடும். எனவே, ஒரு மன்னன், தன் வருவாயும், செலவினங்களும் பெரிய அளவில் இருப்பதாகக் கேள்விப்பட்டாலும், சிறிய பொருட்களை அலட்சியம் செய்யக்கூடாது.(38) ஓர் எதிரியானவன், சிறுவனாகவோ, இளைஞனாகவோ, முதியவனாகவோ இருப்பினும், கவனமில்லாத மனிதனைக் கொல்வதில் வெல்வான். முக்கியமற்ற ஓர் எதிரியும் பலமடைந்தால், ஒரு மன்னனையே அழித்துவிடுவான். எனவே, காலத்தின் தேவைகளை அறிந்த மன்னனே ஆட்சியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவான்.(39) ஓர் எதிரி பலவானாகவோ, பலவீனனாகவோ இருப்பினும், கபடத்தால் வழிநடத்தப்படும் அவன், ஒரு மன்னனின் புகழை மிக விரைவில் அழித்து, அவனால் அடையப்படும் அறத்தகுதியைத் தடுத்து, அவனுடைய சக்தியையே இழக்கச் செய்துவிடுவான். எனவே ஒழுங்குபடுத்தப்பட்ட மனம் கொண்ட மன்னன் ஒருவன், தனக்கு ஓர் எதிரி இருக்கும்போதும் ஒருபோதும் கவனமில்லாமல் இருக்கக்கூடாது.(40)
நுண்ணறிவு கொண்ட ஒரு மன்னன், செழிப்பையும், வெற்றியையும் அடைய விரும்பினால், அவன் தன் செலவினம், வருவாய், சேமிப்பு, நிர்வாகம் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகு, அமைதியையோ, போரையோ தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் காரணமாக மன்னனானவன், நுண்ணறிவுமிக்க ஓர் அமைச்சனின் உதவியை நாட வேண்டும்.(41) சுடர்மிக்க நுண்ணறிவானது ஒரு பலமிக்க மனிதனையும் {எதிரியையும்} பலவீனமடையச் செய்யும்; வளர்ந்து வரும் பலமானது நுண்ணறிவால் பாதுகாக்கப்படும்; வளர்ந்து வரும் ஒரு பகைவன் நுண்ணறிவால் பலவீனமடையச் செய்யப்படுவான். எனவே, நுண்ணறிவின் விதிகளுக்கு இணக்கத்துடன் செய்யப்படும் அனைத்துச் செயலும் போற்றத் தகுந்தவையே ஆகும்.(42) பொறுமையுள்ளவனும், குறையேதும் இல்லாதவனுமான மன்னன் விரும்பினால், சிறிய படையின் உதவியை மட்டுமே கொண்டு அவன் விருப்பங்கள் அனைத்தின் பயன்களையும் அடைவான். எனினும், தன்னலம் நாடும் துதிபாடிக்கூட்டத்தால் சூழப்பட்டிருப்பதை விரும்பும் மன்னன், சிறு நன்மை அடைவதில் கூட ஒருபோதும் வெல்லமாட்டான்.(43) இந்தக் காரணங்களால், மன்னன் தன் மக்களிடம் இருந்து செல்வத்தைப் பெறுவதில் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு மன்னன் தொடர்ந்து தன் மக்களை ஒடுக்கினால், ஒரு நொடி மட்டுமே மின்னும் மின்னலின் கீற்றைப் போல அவன் அழிவை அடைவான்.(44) கல்வி, தவம், பரந்த செல்வம் ஆகியவற்றையும், உண்மையில் அனைத்தையும் உழைப்பால் {முயற்சியால்} ஈட்ட முடியும். உடல் படைத்த உயிரினங்களில் தோன்றும் உழைப்பானது {முயற்சியானது} நுண்ணறிவாலேயே ஆளப்படுகிறது. எனவே உழைப்பே அனைத்திலும் முதன்மையானதாகக் கருதப்பட வேண்டும்.(45)
சக்ரன் {இந்திரன்}, விஷ்ணு, சரஸ்வதி மற்றும் பெரும் சக்தி படைத்த, நுண்ணறிவுமிக்கப் பல உயிரினங்களின் {பூதங்களின்} வசிப்பிடமாக மனித உடலே இருக்கிறது. எனவே, அறிவு கொண்ட மனிதன் ஒருவன் ஒருபோதும் உடலை[3] அலட்சியம் செய்யக்கூடாது.(46) பேராசை கொண்ட மனிதன் ஒருவன், தொடர்ந்த கொடைகளின் மூலம் அடக்கப்பட வேண்டும். பேராசை கொண்டவன் மக்களின் செல்வத்தைப் பறிப்பதில் ஒருபோதும் தணிவடைய மாட்டான். எனினும், இன்புறும் காரியங்களில் அனைவரும் பேராசைக்காரர்களாகவே இருக்கிறார்கள். எனவே, ஒரு மனிதன் செல்வத்தை இழந்தால், அவன் (செல்வத்தால் அடையப்படும் பொருட்களான) அறம் மற்றும் இன்பத்தை இழந்தவனாகிறான்.(47) பேராசைக்கார மனிதன் ஒருவன், பிறரின் செல்வம், இன்பங்கள், மகன்கள், மகள்கள் மற்றும் செழிப்பை அபகரிக்கவே முனைகிறான். பேராசைக்கார மனிதர்களில் அனைத்து வகைக் குற்றங்களும் தென்படும். எனவே, மன்னன் ஒரு பேராசைக்கார மனிதனை தன் அமைச்சராகவோ, அதிகாரியாகவோ ஒருபோதும் நியமிக்கக்கூடாது.(48) ஒரு மன்னன், (உரிய முகவர்கள் இல்லாத போது) எதிரியின் நிலையையும், செயல்பாடுகளையும் அறிந்து கொள்ள ஓர் அற்பனையும் அனுப்பலாம். ஞானம் கொண்ட ஆட்சியாளன் ஒருவன், தன் எதிரிகளின் முயற்சிகள் மற்றும் நோக்கங்கள் அனைத்தையும் கலங்கடிக்க வேண்டும்.(49) நம்பிக்கை நிறைந்தவனும், உயர்குடி பிறந்தவனுமான எந்த மன்னன், கல்வியாளர்களும், அறவோருமான பிராமணர்களின் அறிவுரையை நாடுவானோ, எவன் தன் அமைச்சர்களால் பாதுகாக்கப்படுகிறானோ, அவன் {அந்த மன்னன்}, கப்பங்கட்டும் தன் தலைவர்கள் அனைவரையும் உரிய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் வெல்கிறான்[4].(50)ஓ! மனிதர்களின் இளவரசே {யுதிஷ்டிரனே}, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகள் அனைத்தையும் உனக்குச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். உன் நுண்ணறிவின் துணையுடன் அவற்றைக் கவனிப்பாயாக. தன் ஆசானுக்குக் கீழ்ப்படிந்து, இவற்றைக் கவனிக்கும் மன்னன், மொத்த உலகையும் ஆள்வதில் வெல்கிறான்.(51) கொள்கையில் இருந்து அடையப்படும் இன்பத்தை அலட்சியம் செய்து, விதி கொண்டு வரும் வாய்ப்பை நாடும் மன்னன், அரசு தொடர்புடைய இன்பத்தை அடைவதிலும், மறுமையில் அருள் உலகங்களை அடைவதிலும் ஒருபோதும் வெல்வதில்லை.(52) போர் மற்றும் அமைதியின் தேவைகளுக்கு உரிய முறையில் பெரும் கவனத்துடன் இருக்கும் மன்னன், செல்வத்துக்காகப் புகழ்பெற்றவர்களும், நுண்ணறிவு மற்றும் நன்னடத்தைக்காக வழிபடப்படுபவர்களும், சாதனைகளைக் கொண்டவர்களும், போரில் துணிவுமிக்கவர்களும், உழைப்புக்கு {முயற்சிக்கு} ஆயத்தமாக இருப்பவர்களுமான எதிரிகளைக் கூடக் கொல்வதில் வெல்கிறான்.(53) பல்வேறு வகையான செயல்கள் மற்றும் நடவடிக்கைகளால் அமையும் வழிமுறைகளை மன்னன் கண்டுபிடிக்க வேண்டும். அவன் ஒருபோதும் விதியை நம்பியிருக்கக்கூடாது. குற்றமற்ற மனிதர்களிடம் குற்றங்களைக் காணும் ஒருவன், செழிப்பையும், புகழையும் அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்.(54) இரு நண்பர்கள், ஒரே செயலை நிறுவேற்றுவதில் ஈடுபடும்போது, அவர்கள் இருவரில் அந்தப் பணியில் பெரும் சுமையைத் தன் பங்காக ஏற்றுக் கொள்பவனையே எப்போதும் ஞானிகள் மெச்சுகிறார்கள்.(55) நான் உனக்குச் சொன்ன அரச கடமைகளைச் செய்வாயாக. மனிதர்களைப் பாதுகாக்கும் கடமையில் உன் இதயத்தை நிலைநிறுத்துவாயாக. அப்போது நீ அறவெகுமதியை நீ எளிதில் அடைவாய். மறுமையில் உள்ள புகழுலகங்கள் அனைத்தும் தகுதியை {புண்ணியத்தைச்} சார்ந்தே இருக்கின்றன” என்றார் {பீஷ்மர்}.(56)
குற்றமும், தண்டனையும் – சட்டம்! – சாந்திபர்வம் பகுதி – 121-தண்டனை என்பது யாது? அதன் தோற்றம், பண்புகள், விழிப்புநிலை ஆகியவற்றையும், தண்டனை சார்ந்திருக்கும் வியவஹாரம் {சட்டம்} என்பது யாது? அஃது எத்தனை வகைப்படும் என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நீ இப்போது மன்னர்களின் கடமைகளைக் குறித்த உமது உரையை நிறைவு செய்துவிட்டீர். அனைத்தும் தண்டனையைச் சார்ந்தே இருப்பதால், தண்டனையே உயர்ந்த நிலையில் இருப்பதாகவும், அனைத்துக்கும் தலைவனாக இருப்பதாகவும் நீர் சொன்னவற்றிலிருந்து தெரியவருகிறது.(1) ஓ! பலமிக்கவரே, பெரும் சக்தி கொண்டதும், எங்கும் இருப்பதுமான தண்டனையானது, தேவர்கள், முனிவர்கள், உயர் ஆன்ம பித்ருக்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், சத்யஸ்கள், அல்லது இவ்வுலகின் உயிரினங்கள் ஆகிய அனைத்துக்கும் மத்தியில் முதன்மையானதாக இருப்பதாகத் தெரிகிறது.(2,3) தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் உள்ளிட்ட அசைவன மற்றும் அசையாதன அடங்கிய மொத்த உலகமும் தண்டனையைச் சார்ந்தே இருப்பதாக நீர் சொன்னீர்.(4) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இந்தத் தண்டனையானவன் எவன் என்பதை அறிய இப்போது நான் விரும்புகிறேன்.
அவன் என்ன வகையைச் சார்ந்தவன்?
அவனுடைய வடிவம் என்ன?
அவனுடைய நிலை என்ன?(5)
அவன் எதனால் செய்யப்பட்டவன்?
அவன் தோன்றியது எப்போது?
அவனது பண்புகள் என்னென்ன?
அவனது காந்தி என்ன?
வாழும் உயிரினங்களுக்கு மத்தியில் அவன் கவனமானவனாகவும், விழிப்புடனும் எவ்வாறு இருக்கிறான்?(6) இந்த அண்டத்தைப் பாதுகாத்துக் கொண்டு நித்திய விழிப்புடன் இருக்கும் அவன் எவன்? அனைத்துப் பொருட்களிலும் முதன்மையானதாக அறியப்படுபவனான அவன் எவன்? உண்மையில், தண்டனை என்றழைக்கப்படும் உயர்ந்தவன் எவன்? தண்டனையாவன் எதைச் சார்ந்து இருக்கிறான்? அவனது வழி என்ன?” என்று கேட்டான்.(7)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குருகுல வழித்தோன்றலே, தண்டனை என்பது யார்? அவன் ஏன் வியவஹாரம் என்றழைக்கப்படுகிறான் என்பதைக் கேள். அனைத்துப் பொருட்களும் எவனைச் சார்ந்திருக்கின்றனவோ, அவனே தண்டனை என்றழைக்கப்படுகிறான்.(8) அறம் எவனைக் கொண்டு நிலைநாட்டப்படுமோ அவனே தண்டனையாவான். அவன் சில வேளைகளில் வியவஹாரம் என்றும் அழைக்கப்படுகிறான். கவனமாக விழிப்புடன் இருக்கும் மன்னனின் அறம் கெடாமல் இருக்கக் காரணமாக இருப்பதால் (தண்டனையானவன்) அப்பெயரில் அழைக்கப்படுகிறான்.(9) இதன் காரணமாகவே, அதற்கு வியவஹாரம் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது[1].ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில் மனு, ’அன்புக்குரியனவாகவும், அதே வேளையில் வெறுக்கத்தக்கனவாகவும் உள்ள உயிரினங்கள் அனைத்தையும், தண்டக்கோல் தரித்துப் பாரபட்சமில்லாமல் பாதுகாப்பவன் எவனோ, அவனே அறவடிவானவன் {அறவோன் = தர்மன்} என்று சொல்லப்படுகிறான்’ என்ற அனைத்திலும் முதன்மையான இந்த உண்மையைச் சொல்லியிருக்கிறார்.(10,11) ஓ! மன்னா, நான் சொன்ன இந்த வார்த்தைகள் முதன்முதலில் பழங்காலத்தில் மனுவால் சொல்லப்பட்டன. அவை பிரம்மனின் உயர்ந்த வார்த்தைகளைப் பிரதிபலிக்கின்றன[2].(12) இந்த வார்த்தைகளே முதலில் பேசப்பட்டதால், அவை முதல் வார்த்தைகள் என்று அறியப்படுகின்றன. அடுத்தவரின் உடைமைகளை முறையில்லாமல் பறிப்பது தண்டனையால் தடுக்கப்படுவதால், தண்டனையானது, வியவஹாரம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.(13) நன்கு செயற்படுத்தப்படும் தண்டனையைச் சார்ந்தே, {அறம், பொருள், இன்பம் ஆகிய} மூன்று தொகுப்புகளும் எப்போதும் இருக்கின்றன. தண்டனையானவன் பெருந்தேவனாவான். வடிவத்தில் அவன் ஒரு சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிகிறான்.(14) கருங்குவளை {நீலோத்பல} மலரின் இதழ்களைப் போல அவன் கரிய நிறம் கொண்டவனாவான். அவன், நான்கு பற்களையும், நான்கு கரங்களையும், எட்டு கால்களையும், கண்கள் பலவற்றையும் கொண்டவனாவான். அவனது காதுகள் கணைகளைப் போன்று கூர்மையானவை, அவனது மயிர் குத்திட்டு நிற்கிறது.(15) அவன் சடா முடியும், இரு நாவுகளையும் கொண்டவனாவான். அவனது முகம் தாமிரத்தின் வண்ணத்தைக் கொண்டதாகும், அவன் சிங்கத் தோலை உடுத்தியிருக்கிறான். {தண்டனையெனும்} அந்தத் தடுக்கப்பட முடியாத தேவன் இத்தகு கடும் வடிவையே ஏற்றிருக்கிறான்[3].(16)மேலும் தண்டனையானவன், வாள், வில், கதாயுதம், ஈட்டி {வேல்}, திரிசூலம், தடி, கணை, உலக்கை, போர்க்கோடரி, சக்கரம், சுருக்குக் கயிறு {பாசம்}, தடி, ரிஷ்டி, தோமரம் மற்றும் உலகில் உள்ள அனைத்து வகை ஆயுதங்களின் வடிவை ஏற்று இவ்வுலகில் உலவி வருகிறான்.(17,18) உண்மையில் தண்டனையானவன், துளைத்தல், வெட்டுதல், பீடித்தல், துண்டித்தல், பிரித்தல், தாக்குதல், கொல்லுதல், எதிர்த்து விரைதல் ஆகியவற்றின் மூலம் இவ்வுலகில் உலவி வருகிறான்.(19) ஓ! யுதிஷ்டிரா, இந்தத் தண்டனையானவன், வாள் {அஸி – ஆன்மா}, கத்தி {விசஸனம் – துன்பம்}, அறம் {தர்மம்}, சீற்றம் {தீக்ஷ்ணவர்மா}, தடுக்கப்படமுடியாதது {துராஸதம்}, செழிப்பின் தாய் {ஸ்ரீகர்ப்பம்}, வெற்றி {விஜயம்}, தண்டிப்பவன் {சாஸ்தா}, தடுப்பவன் {வ்யவகாரம்}, நித்தியமானவன் {ப்ரஜாகரம்}, சாத்திரங்கள், பிராமணன், மந்திரம் {பிராம்மணமந்த்ரம்}[4], பழிவாங்குபவன் {ப்ரவசனம்}, நீதி வழங்குபவர்களில் முதன்மையானவன் {பரம்}, நீதிபதி {தர்மபாலம்}, {அக்ஷரம்}, {கோபம்}, {ஸத்யகம்}, அழிவில்லாதவன் {நித்யகம்}, தேவன் {கிருஜம்}, தடுக்கப்படமுடியாத வழி கொண்ட ஒருவன், எப்போது முந்தியிருப்பவன், முதலில் தோன்றியவன், பற்றில்லா ஒருவன் {அஸங்கம்}, ருத்ரனின் ஆன்மா {ருத்ரதனயம்}, மூத்த மனு, {மனு, ஜ்யேஷ்டம்}, பெரும் நன்மை {சிவங்கரம்} என்ற பெயர்களிலும் அறியப்படுகிறான்.(20-22)
தண்டனையே புனிதமான விஷ்ணு ஆவான். அவனே பலமிக்க நாராயணன் ஆவான். அவன் எப்போதும் பயங்கர வடிவையே ஏற்றுக் கொண்டிருப்பதால், அவன் மஹாபுருஷன் என்று அழைக்கப்படுகிறான்.(23) அவனது மனைவியான அறநெறியானவள், பிரம்மனின் மகள், லட்சுமி, விரிதி {நீதி}, சரஸ்வதி, அண்டத்தின் தாய் என்ற பெயர்களில் அறியப்படுகிறாள். இவ்வாறு தண்டனையானவன் பல்வேறு வடிவங்களைக் கொண்டவனாக இருக்கிறான்.(24)
அருள் மற்றும் சாபம், இன்பம் மற்றும் துன்பம், அறம் {நீதி} மற்றும் மறம் {அநீதி}, பலம் மற்றும் பலவீனம், நல்லூழ் மற்றும் தீயூழ், தகுதி மற்றும் தகுதியின்மை, நற்பண்பு {குணம்} மற்றும் குறை {தோஷம்},(25) விருப்பம் மற்றும் வெறுப்பு, பருவம் {ருது} மற்றும் மாதம், இரவு, பகல் மற்றும் கணம், கவனம் மற்றும் கவனமின்மை, இன்பம் மற்றும் கோபம், அமைதி மற்றும் தற்கட்டுப்பாடு,(26) விதி மற்றும் உழைப்பு {முயற்சி}, முக்தி மற்றும் கண்டிப்பு, அச்சம் மற்றும் அச்சமின்மை, தீங்கிழைத்தல் {ஹிம்சை} மற்றும் தீங்கிழையாமை {அஹிம்சை}, தவம், வேள்வி மற்றும் கடும் துறவு, நஞ்சு மற்றும் நல்ல உணவு,(27) தொடக்கம், நடுநிலை மற்றும் முடிவு, கொலைபாதகச் செயல்கள் அனைத்தின் விளைவு, திமிர், கொடூரம், ஆணவம், செருக்கு, பொறுமை, கொள்கையுடைமை, கொள்கையின்மை,(28) சக்தியின்மை மற்றும் சக்தி, மரியாதை, அவமரியாதை, சிதைவு, உறுதியானநிலை, பணிவு, ஈகை, தகுந்த நேரம் மற்றும் தகாதநேரம்,(29) பொய்ம்மை, ஞானம், உண்மை, நம்பிக்கை, நம்பிக்கையின்மை, ஆண்மையின்மை, வணிகம், ஆதாயம், இழப்பு, வெற்றி, தோல்வி,(30) கடுமை மென்மை, மரணம், அடைதல் மற்றும் அடையாமை, ஏற்புடைமை மற்றும் ஏற்பில்லாமை, செய்யப்படக்கூடியது மற்றும் செய்யப்படக்கூடாதது, பலம் மற்றும் பலவீனம்,(31) வன்மம் மற்றும் நல்லெண்ணம், அறம் மற்றும் மறம், வெட்கம் மற்றும் வெட்கமின்மை, அடக்கம், செழுமை மற்றும் வறுமை,(32) ஆற்றல், செயல்கள், கல்வி, நாவண்மை, கூரிய அறிவு ஆகிய இவையெனைத்தும், ஓ! யுதிஷ்டிரா, இவ்வுலகில் தண்டனையின் வடிவங்களே. எனவே, தண்டனையென்பது அதிகமான பல்வேறு வடிவங்களைக் கொண்டதாகும்.(33)
தண்டனையில்லாவிட்டால் உயிரினங்கள் அனைத்தும் ஒன்றையொன்று கலங்கடிக்கும். வாழும் உயிரினங்கள், ஓ! யுதிஷ்டிரா, தண்டனை மீது கொண்ட அச்சத்தாலேயே ஒன்றையொன்று கொல்லாதிருக்கின்றன.(34) ஓ! மன்னா, தண்டனையால் பாதுகாக்கப்படும் குடிமக்கள், தங்கள் ஆட்சியாளனின் வலிமையை அதிகரிக்கின்றனர். இதன் காரணமாகவே தண்டனையானது அனைத்திற்கும் புகலிடமாகக் கருதப்படுகிறது.(35) ஓ! மன்னா, தண்டனையே உலகை அறத்தின் பாதையில் விரைவாக நிலைநிறுத்துகிறது. உண்மையைச் சார்ந்திருக்கும் அறமானது பிராமணர்களிடம் இருக்கிறது.(36) அறத்துடன் கூடிய முதன்மையான பிராமணர்கள் வேதங்களில் பற்று கொள்கிறார்கள். வேதங்களில் இருந்து வேள்விகள் வருகின்றன. வேள்விகள் தேவர்களை நிறைவு செய்கின்றன.(37) அவற்றால் நிறைவடையும் தேவர்கள், பூமிவாசிகளை இந்திரனிடம் ஒப்படைக்கிறார்கள். பூமிவாசிகளுக்கு நன்மை செய்வதற்காக இந்திரன் அவர்களுக்கு (எது இல்லாமல் பயிர்களும், விளைச்சலும் பொய்த்துப் போகுமோ அந்த மழையின் வடிவில்) உணவை அளிக்கிறான்.(38) உயிரினங்கள் அனைத்தின் வாழ்வு உணவைச் சார்ந்தே இருக்கிறது. உணவிலிருந்தே உயிரினங்கள் தங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைப் பெற்று வளர்ச்சியடைகின்றன. தண்டனையானவன் (க்ஷத்திரிய ஆட்சியாளனின் வடிவில்) அவர்களுக்கு {உயிரினங்களுக்கு} மத்தியில் விழிப்புடன் இருக்கிறான்.(39) இந்த நோக்கத்திற்காகவே தண்டனையானவன், மனிதர்களுக்கு மத்தியில் ஒரு க்ஷத்திரியனின் வடிவை ஏற்கிறான். மனிதர்களைப் பாதுகாக்கும் அவன், எப்போதும் கவனத்துடனும், ஒருபோதும் சிதையாமலும் விழிப்புடன் இருக்கிறான்.(40)
மேலும் தண்டனைக்கு, தேவன் {ஈஸ்வரன்}, மனிதன் {புருஷன்}, உயிர் {பிராணனன்}, சக்தி {ஸத்வம்}, இதயம் {வ்ருத்தம்}, அனைத்துயிர்களின் தலைவன் {ப்ரஜாபதி}, அனைத்துப் பொருட்களின் ஆன்மா {பூதாத்மா}, வாழும் உயிர் {ஜீவன்} என்று எட்டு பெயர்களும் இருக்கின்றன.(41) (படைகளின் வடிவில்) பலம் கொண்டவனும், ஐந்து பொருட்களின் சேர்க்கையாயிருப்பவனுமான மன்னனுக்குச் செழிப்பு மற்றும் தண்டக் கோல் ஆகியவற்றைத் தேவன் {ஈஸ்வரன்} கொடுத்தான்[5].(42) ஓ! யுதிஷ்டிரா, கீழே சொல்லப்பட்டுள்ள {இதற்கு அடுத்து சொல்லப்படும்} எட்டுப் பொருட்களுடன் சேர்த்து உன்னதக் குருதி, பெருஞ்செல்வமுள்ள அமைச்சர்கள், அறிவு, (உடற்பலம் மற்றும் மனோசக்தி போன்ற) பல்வேறு வகையான சக்திகள் ஆகியவற்றையும், (நன்கு நிரப்பப்பட்ட கருவூலத்தைச் சார்ந்திருக்கும்) வேறு சக்திகளையும் மன்னன் நாட வேண்டும்.(43) யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்படைவீரர்கள், படகுகள், பொருத்தமான கூலியாட்கள் (முகாமைப் பின்தொடர்ந்து பிற வேலைகளைச் செய்யக்கூடியவர்கள் {சுமை தூக்குபவர்கள்}), மக்கள் தொகை பெருக்கம், கால்நடை ஆகியவையே {முன் சொல்லப்பட்ட} அந்த எட்டு பொருட்களாகும்.(44) கவசங்கள் மற்றும் வேறு பாதுகாப்பு உறைகளைப் பூண்டிருக்கும் தேர்வீரர்கள், குதிரைவீரர்கள், யானைவீரர்கள், குதிரைப்படை வீரர்கள், காலாட்படை வீரர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள் ஆகியோர் படையின் அங்கத்தினராவர்.(45)பிச்சைக்காரர்கள், முக்கிய நீதிபதிகள், கணியர்கள் {சோதிடர்கள்}, தணிவுச் சடங்குகள் மற்றும் அதர்வணச் சடங்குகளைச் செய்பவர்கள், கருவூலம், கூட்டாளிகள், தானியங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் ஆகியன,(46) ஏழு பண்புகளையும், எட்டு அங்கங்களையும் கொண்ட ஒரு நாட்டின் உடலாகின்றன. தண்டனையும், ஒரு நாட்டின் மற்றொரு பலமிக்க அங்கமே. (ஒரு படையின் வடிவில் உள்ள) தண்டனையே ஒரு நாட்டின் முக்கிய அங்கமாக இருக்கிறது.(47) க்ஷத்திரியப் பயன்பாட்டுக்காகத் தேவனே பெருங்கவனத்துடன் தண்டனையை அனுப்பினான். அழிவில்லா அண்டமானது, பாரபட்சமற்ற தண்டனையின் உடல்வடிவமே ஆகும்.(48) அறத்தின் வழிகளைச் சுட்டிக்காட்டும் தண்டனையைவிட மன்னர்களால் மதிக்கத்தக்கது வேறெதுவும் இல்லை. உலகின் பாதுகாப்புக்காகவும், பல்வேறு மனிதர்களின் கடமைகளை நிறுவுவதற்காகவும் பிரம்மனே தண்டனையை அனுப்பினான் (படைத்தான்).(49) வாதி, பிரதிவாதிகளின் சச்சரவுகளில் எழும் மற்றொரு வகை வியவஹாரமும், பிரம்மனில் இருந்தே எழுந்தது. இரு தரப்பினருக்கு மத்தியிலும் முக்கிய நம்பிக்கையையூட்டும் அந்த வியவஹாரம் நன்மைபயக்குவதாகவே தெரிகிறது.(50)
வேதத்தை ஆன்மாவாகக் கொண்ட {இரண்டாவது வகையைச் சார்ந்த} மற்றொரு வியவஹாரமும் இருக்கிறது. அது வேதத்தையே தன் காரணமாகக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஓ! மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, குடும்பப் பழக்கவழக்கங்களின் தொடர்புடையதாக இருப்பினும், சாத்திரங்களுக்குப் பொருந்தும் வகையில் உள்ள மற்றொரு (மூன்றாவது) வகையைச் சேர்ந்த வியவஹாரமும் இருக்கிறது[6].(51) இந்த வியவஹாரமானது, மேலே சொல்லப்பட்டபடி, வழக்காடுபவர் இருவரின் நம்பிக்கையின் மூலம் விவரிக்கப்படுவதாகவும், அது மன்னர்களிடம் {மட்டுமே} இருப்பதாகவும் நம்மால் அறியப்பட வேண்டும். அது தண்டனை என்ற பெயராலும், அத்தாட்சி {ஆதாரம்} என்ற பெயராலும் அறியப்பட வேண்டும்.(52) தண்டனையானது அத்தாட்சியால் ஒழுங்குபடுத்தப்படுவதாகத் தெரிந்தாலும், அது தன் ஆன்மாவை வியவஹாரத்திலேயே {சட்டத்திலேயே} கொண்டுள்ளது. எது வியவஹாரம் என்று அழைக்கப்படுகிறதோ, அஃது உண்மையில் வேதவிதிகளை அடிப்படையாகக் கொண்டதே.(53) வேதங்களை ஆன்மாவாகக் கொண்டதாகச் சொல்லப்படும் வியவஹாரமானது, அறநெறி, அல்லது கடமையே ஆகும். கடமை மற்றும் அறநெறிகளை நம்பும் மனிதர்களுக்கு அது நன்மையை உண்டாக்குகிறது. தூய ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள் பொதுச் சட்டத்தில் செய்துள்ளபடியே வியவஹாரம் குறித்துப் பேசுகின்றனர்.(54) ஓ! யுதிஷ்டிரா, மூன்றாம் வகை வியவஹாரமும் மனிதர்களின் பாதுகாவலனாகவும், வேதத்தைத் தன் வேராகக் கொண்டதாகவும் இருக்கிறது. அதுவே மூவுலகங்களையும் நிலைநிறுத்துகிறது. உண்மையையே ஆன்மாவாகக் கொண்டிருக்கும் அது {மூன்றாவது வியவஹாரம்} செழிப்பை உண்டாக்குவதாகும்.(55)எது தண்டனையோ, அது நித்திய வியவஹாரமாகவே {அழிவில்லா சட்டமாகவே} நம்மால் காணப்படுகிறது. எது வியவஹாரம் என்று சொல்லப்படுகிறதோ, அஃது உண்மையில் வேதமே ஆகும்.(56) எது வேதமோ, அதுவே நெறியும், கடமையும் ஆகும். எது நெறியும், கடமையும் ஆகுமோ அதுவே அறவழியாகும். இந்த இறுதியானது எதுவோ, அஃது அனைத்து உயிரினங்களின் தலைவனான பெரும்பாட்டன் பிரம்மனிடம் தொடக்கத்திலேயே இருந்தது.(57) தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்கள், மனிதர்கள், பாம்புகள், மேலும் பிற அனைத்தையும் உள்ளடக்கிய மொத்த அண்டத்திற்கும் படைப்பாளன் பிரம்மனே.(58) எனவே, வழக்காடும் இரு தரப்பினரிடம் கொண்ட நம்பிக்கையால் விவரிக்கப்படும் வியவஹாரமும் அவனிடம் {பிரம்மனிடம்} இருந்தே வந்தது. வியவஹாரத்தைப் பொறுத்தவரையில், இதன் காரணமாகவே பின்வருவதை அவன் {பிரம்மன்} விதித்திருக்கிறான்:(59) “தன் கடமைக்கு ஏற்ப ஆட்சி செய்யும் மன்னனால், தாயோ, தந்தையோ, உடன் பிறந்தவனோ {சகோதரனோ}, மனைவியோ, புரோஹிதனோ தண்டிக்கப்படக்கூடாதவர்கள் அல்ல”[7] {என்று விதித்திருக்கிறான் பிரம்மன்}” என்றார் {பீஷ்மர்}.(60)
வசுஹோமனின் தண்டபோதனை! – சாந்திபர்வம் பகுதி – 122-தண்டனையின் தோற்றம் குறித்து வசுஹோமன் மற்றும் மாந்தாதாவுக்கு இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பின்வரும் பழங்கதை குறிப்பிடப்படுகிறது. அங்கர்களுக்கு மத்தியில் வசுஹோமன் என்றழைக்கப்படும் பெரும் மன்னன் ஒருவன் இருந்தான்.(1) அந்த மன்னன் எப்போதும் பக்திச் செயல்பாடுகளில் ஈடுபடுபவனாகத் தன் மனைவியின் துணையுடன், எப்போதும் கடும் தவங்களைச் செய்து வந்தான். அவன், பித்ருக்கள் மற்றும் தெய்வீக முனிவர்களால் பெரிதும் மதிக்கப்படும் முஞ்சப்பிருஷ்தம் என்றழைக்கப்பட்ட இடத்திற்குச் சென்றான். அங்கே மேருவின் தங்க மலைகளுக்கு அருகில், இமயத்தின் கொடுமுடியில் உள்ள நன்கறியப்பட்ட ஓர் ஆலமரத்தின் நிழலின் கீழ், (பெரும் பிராமணரான) ராமர் {பரசுராமர்} தன் சடாமுடியை ஒன்றாகச் சேர்த்து கட்டியிருந்தார்[1].(3) ஓ! ஏகாதிபதி, அக்காலத்தில் இருந்து, ருத்திரனால் பெரிதும் விரும்பப்பட்ட அந்த இடம், கடும் நோன்புகளைக் கொண்ட முனிவர்களால் முஞ்சப்பிருஷ்தம் என்று அழைக்கப்பட்டது.(4) மன்னன் வசுஹோமன், அந்த இடத்தில் வசித்து, பல தெய்வீகப் பண்புகளை அடைந்து, பிராமணர்களின் மதிப்பை ஈட்டி, புனிதத்தால் ஒரு தேவ முனிவனாகக் கருதப்பட்டான்.(5)
எதிரிகளை நொறுக்குபவனும், சக்ரனின் நண்பனும், பெரும் ஆன்மா கொண்டவனுமான மன்னன் மாந்தாத்ரி {மாந்தாதா} வசுஹோமனின் அந்த மலை ஆசிரமத்திற்கு வந்தான்.(6) அங்கே வந்த மாந்தாத்ரி {மாந்தாதா}, கடுந்தவங்களைக் கொண்ட மன்னன் வசுஹோமனைக் கண்டு, அவனுக்கு முன்னிலையில் பணிவுடன் நின்றான்.(7) வசுஹோமன் தன் விருந்தினனுக்குக் கால்களைக் கழுவிக்கொள்ள நீரும், வழக்கமான பொருட்களைக் கொண்ட அர்க்கியமும் கொடுத்து, நலம் விசாரித்து, ஏழு அங்கங்களுடன் கூடிய அவனுடைய நாட்டைக் குறித்தும் விசாரித்தான்.(8) அதன் பிறகு, வசுஹோமன், பழங்காலத்து அறவோரின் நடைமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றும் தன் அரசவிருந்தாளியிடம் {மாந்தாதாவிடம்}, “ஓ! மன்னா {மந்தாதா}, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.(9) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, இவ்வாறு கேட்கப்பட்டவனும், மன்னர்களில் சிறந்தவனுமான மாந்தாத்ரி {மாந்தாதா}, மிகவும் நிறைவடைந்து, சுகமாக அமர்ந்திருக்கும் பெரும் ஞானியன வசுஹோமனுக்குப் பின்வரும் வார்த்தைகளில் பதிலளித்தான்.(10)
மாந்தாத்ரி {வசுஹோமனிடம்}, “ஓ! மன்னா {வசுஹோமரே}, நீர் பிருஹஸ்பதியின் சித்தாந்தங்கள் அனைத்தையும் கற்றவராவீர். ஓ மனிதர்களில் சிறந்தவரே, உசனஸால் {சுக்கிராச்சாரியரால்} விதிக்கப்பட்ட சித்தாந்தங்களையும் நீர் அறிவீர்.(11) நான் தண்டனையின் பிறப்பைக் குறித்து அறிய விரும்புகிறேன். தண்டனைக்கு முன்பு விழிப்புடன் இருந்தது எது? மேலும் அதன் முடிவென்னவென்று சொல்லப்படுகிறது?(12) தண்டனை க்ஷத்திரியனைச் சார்ந்தது என்று எவ்வாறு உண்டானது? ஓ! பெரும் ஞானியே இவை யாவையும் எனக்குச் சொல்வீராக. உமக்குப் பயிற்சிக் கட்டணம் {குருதக்ஷிணை} கொடுக்க ஆயத்தமான ஒரு சீடனாக நான் உம்மிடம் வந்திருக்கிறேன்” என்றான்[2].(13)
வசுஹோமன் {மந்தாத்ரியிடம்}, “ஓ! மன்னா, உலகைத் தாங்கிப் பிடிக்கும் தண்டனை எவ்வாறு எழுந்தது என்பதைக் கேட்பாயாக. அறத்தின் ஆன்மாவும், அழிவில்லாததுமான அஃது {தண்டனை}, அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு உரிய அரசைப் பராமரித்துக் கொள்வதற்காக உண்டாக்கப்பட்டது.(14) ஒரு காலத்தில், அனைத்துலகின் பெரும்பாட்டனும், தெய்வீகமானவனுமான பிரம்மன், ஒரு வேள்வி செய்ய விரும்பியபோது, தம்மைப் போன்ற தகுதிகளைக் கொண்ட ஒரு புரோகிதரைக் காணத் தவறினார் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(15) இதன் காரணமாக அவர் {பிரம்மன்} தமது மூளையில் கருத்தரித்து, அங்கேயே {அந்த மூளையிலேயே} நீண்ட வருடகாலங்களாக அந்தக் கருவைத் தாங்கி வந்தார். ஆயிரம் வருடம் கடந்ததும் அந்தப் பெருந்தேவன் {பிரம்மன்} தும்மினார். அச்செயல்பாட்டால், அந்தக் கரு அவரது தலையில் இருந்து கீழே விழுந்தது.(16) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {மந்தாத்ரி}, பிரம்மனில் இருந்து இவ்வாறு பிறப்பை அடைந்த அந்தத் தெய்வீகமானவர், க்ஷுபர் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். பெரும் சக்திகளைக் கொண்ட அவர், உயிரினங்களின் தலைவராக ஆனார். ஓ! மன்னா {மந்தாத்ரி}, அந்த க்ஷுபரே, உயர் ஆன்ம பெரும்பாட்டனின் {பிரம்மனின்} வேள்வியில் புரோகிதரானார்.(17)
ஓ! மன்னர்களில் சிறந்தவனே {மந்தாத்ரி}, பிரம்மனின் அந்த வேள்வி தொடங்கியதும் பெரும்பாட்டன் {பிரம்மன்} ஏற்றுக் கொண்ட வடிவத்தின் விளைவால் தண்டனை மறைந்தது[3].(18) தண்டனை மறைந்ததும், அனைத்து உயிரினங்களுக்கு மத்தியிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதற்கு மேலும், எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதற்குள் எந்த வேறுபாடும் இல்லாமல் போனது.(19) அனுமதிக்கப்பட்ட பானம் எது, அனுமதிக்கப்படாத பானமெது என்பதில் வேறுபாடு காண்பதை மனிதர்கள் நிறுத்தினர். அனைத்து உயிரினங்களும் ஒன்றுக்கொன்று தீங்கிழைக்கத் தொடங்கின. பாலினக்கலவியின் காரியத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் போனது.(20) அனைத்து உயிரினங்களும் திருடத் தொடங்கின, ஒருவருக்கொருர் இறைச்சியைப் பறித்தனர். பலவான், பலவீனனைக் கொல்லத் தொடங்கினான். எவரும் தன் அருகில் இருப்பவனிடம் சிறு கருணையும் கொள்ளவில்லை.(21)அப்போது பெரும்பாட்டன் {பிரம்மன்}, அழிவில்லாத தெய்வீக விஷ்ணுவை வணங்கி, வரந்தரும் அந்தப் பெருந்தேவனிடம்,(22) “ஓ! கேசவா, தற்போதைய நிலையில் நீ உன் கருணையைக் காட்டுவதே தகும்[4]. இப்போது நேரும் குழப்பம் மறையும் வகையில் நீ விதிப்பாயாக” என்றார்.(23) இவ்வாறு சொல்லப்பட்டவனும், மகத்தான சூலத்தைத் தரித்தவனுமான[5], அந்தத் தேவர்களில் முதன்மையானவன், நீண்ட நேரம் சிந்தித்து, தன்னையே, தண்டனையின் வடிவாக்கிக் கொண்டான்.(24) சரஸ்வதி தேவி, அறத்தையே கால்களாகக் கொண்ட அந்த வடிவத்தில் {தண்டனை வடிவத்தில்} இருந்தே, மிக விரைவில் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட தண்டநீதியை (தண்டனை அறிவியலை} உண்டாக்கினாள்[6].(25)
இதன் பிறகு, மகத்தான சூலத்தைத் தரித்திருந்த அந்தப் பெருந்தேவன் {விஷ்ணு/சிவன்}, சிறிது நேரம் சிந்தித்து, தேவர்களில் ஒரு சிலரை, அவரவர் வகையைச் சேர்ந்தோருக்குத் தலைவர்களாகவோ, ஆட்சியாளர்களாகவோ நியமித்தான்.(26) இதன் பிறகே அவன் ஆயிரம் கண்களைக் கொண்ட தெய்வீக இந்திரனை தேவர்களின் ஆட்சியாளனாக்கினான். விவஸ்வானின் மகனான யமன், பித்ருக்களின் தலைவனாக்கப்பட்டான்.(27) குபேரன், புதையல்களுக்கும் {பொக்கிஷங்களுக்கும்}, ராட்சசர்கள் அனைவருக்கும் தலைவனாக்கப்பட்டான். மேரு மலைகளின் மன்னனாகவும், பெருங்கடல் {சமுத்திர தேவன்} ஆறுகளின் தலைவனாகவும் ஆக்கப்பட்டனர்.(28) பலமிக்க வருணன், நீர்நிலைகள் மற்றும் அசுரர்களுக்கான அரசில் {அரசனாக} நிறுவப்பட்டான். மிருத்யுவானவன், உயிர் மற்றும் உயிரினங்கள் அனைத்தின் தலைவனாக்கப்பட்டான். நெருப்பானவன் {அக்நி}, சக்தி படைத்த அனைத்துப் பொருட்களுக்குத் தலைவனாக்கப்பட்டான்.(29) பலமிக்க ஈசானனும், உயர் ஆன்மா கொண்டவனும், முக்கண்ணனும், அழிவில்லாதவனுமான மஹாதேவன் {சிவன்}, ருத்திரர்கள் அனைவருக்கும் தலைவனாக்கப்பட்டான்[7].(30)வசிஷ்டர் பிராமணர்களின் தலைவராக்கப்பட்டார்,
ஜாதவேதஸ் {அக்னியின் மற்றொரு வடிவம்} வசுக்களின் தலைவனாக்கப்பட்டான்.
சூரியன், ஒளிரும் கோள்கள் அனைத்தின் தலைவனாக்கப்பட்டான்,
சந்திரமாஸ் {சந்திரன்}, நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்களின் தலைவனாக்கப்பட்டான்.(31)
அன்சுமான் அனைத்துச் செடிகொடிகளுக்கும், மூலிகைகளுக்கும் தலைவனாக்கப்பட்டான்.
பலமிக்கவனும், தேவர்களில் முதன்மையானவனும், பனிரெண்டு கரங்களைக் கொண்டவனுமான குமாரன், அல்லது ஸ்கந்தன், (மஹாதேவனுக்குப் பணிவிடை செய்யும்) கணங்கள் மற்றும் பேய்கள் அனைத்திற்கும் தலைவனாக்கப்பட்டான்.(32)
அழிவு, வளர்ச்சி ஆகிய இரண்டின் வித்துகளையும் கொண்ட காலன், அனைத்து உயிர்கள், மரணத்தின் நான்கு பகுதிகள் (ஆயுதங்கள், நோய்கள், யமன் மற்றும் செயல்கள்) மற்றும் இறுதியாக இன்பம் மற்றும் துன்பத்தின் அரசனாக்கப்பட்டான்.(33)
தலைவர்களுக்குத் தலைவனும், சூலந்தரித்தவனும், உயர்ந்த தேவனுமான மகாதேவனே {சிவனே}, ருத்திரர்களின் தலைவன் என்று ஸ்ருதிகள் அறிவிக்கின்றன.(34)
பிரம்மனுக்கு, அதற்கடுத்து {க்ஷுபர் பிறந்த பிறகு} பிறந்தவரும், அனைத்து உயிரினங்களின் தலைவரும், அறவோர் அனைவரிலும் முதன்மையானவருமான க்ஷபரிடம் தண்டனைக்கோல் கொடுக்கப்பட்டது.(35)
உரிய சடங்குகளுடன் அந்த வேள்வி நிறைவடைந்ததும், உரிய மதிப்பை அளித்தபிறகு, மஹாதேவன் {சிவன்}, அறத்தைப் பாதுகாக்கும் தண்டனையை விஷ்ணுவிடம் கொடுத்தான்[8].(36)
விஷ்ணு அதை அங்கிரசுக்குக் கொடுத்தான், தவசிகளில் முதன்மையான அங்கிரஸ், இந்திரனுக்கும், மரீசிக்கும் அதைக் கொடுத்தார். மரிசி அதைப் பிருகுவுக்குக் கொடுத்தார்.(37) பிருகு, அறத்தைப் பாதுகாக்கும் நோக்குடைய அந்தத் தண்டத்தை முனிவர்கள் அனைவருக்கும் கொடுத்தார். முனிவர்கள் அதை லோகபாலர்களுக்கு அளித்தனர். லோகபாலர்கள் மீண்டும் அதை க்ஷுபரிடமே அளித்தனர். க்ஷுபர் அதைச் சூரியனின் மகனான மனுவுக்கு அளித்தார். சிராத்தங்களின் தேவனான அவர் (மனு), உண்மையான அறம் மற்றும் செல்வத்தின் பொருட்டு அதைத் தன் மகன்களிடம் கொடுத்தார்.(39)தண்டனையானது, உறுதியின்மையால் அல்லாமல் அறத்தால் வழிநடத்தப்பட்டு எந்தப் பாகுபாடுமின்றி விதிக்கப்பட வேண்டும். அது, தீயோரைத் தடுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும். அபராதங்களும், பறிமுதல்கள் ஆகியன அச்சமூட்டும் நோக்கம் கொண்டவையேயன்றி, மன்னனின் கருவூலத்தை நிரப்புவதற்காக அல்ல.(40) ஒருவனுடைய உடலின் அங்கத்தை இழக்கச்செய்வது, அல்லது மரணம் போன்ற தண்டனைகளை அற்பமான காரணங்களுக்காகக் கொடுக்கக்கூடாது. மலைகளில் இருந்து வீசப்படுவது, நாடு கடத்தல் போன்ற பல்வேறு வழிமுறைகளால் விதிக்கப்படும் உடல் வலி சார்ந்த தண்டனைகளும் அதுபோன்ற {அற்ப} காரணங்களால் கொடுக்கப்படக்கூடாது.(41) சூரியனின் மகனான மனு உலகின் பாதுகாப்புக்காகத் தண்டக்கோலை (தன் மகன்களிடம்) கொடுத்தார். அடுத்தடுத்து தண்டனையை {தண்டக்கோலைக்} கைகளில் ஏந்தியோரின் மூலம், அஃது உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாத்துக் கொண்டு விழிப்புடன் இருக்கிறது.(42) தராசின் {துலாக்கோலின்} உச்சியில் (தண்டக்கோலுடன்) தெய்வீக இந்திரன் விழிப்புடன் இருக்கிறான்; அவனுக்குப் பிறகு, சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட அக்னியும்; அவனுக்குப் பிறகு, வருணனும்; வருணனுக்குப் பிறகு பிரஜாபதியும் {விழிப்புடன் இருக்கின்றனர்};(43) பிரஜாபதிக்குப் பிறகு, கட்டுப்பாட்டைச் சாரமாகக் கொண்ட அறமும் {ஒழுக்கமும்}; அறத்திற்குப் பிறகு, பிரம்மனின் மகனான அழிவில்லா சட்டமும் {வியவஹாரமும்};(44) சட்டத்திற்குப் பிறகு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ஆற்றலும் விழிப்புடன் இருக்கின்றன; ஆற்றலுக்குப் பிறகு, (தேவர்களை ஆதரிக்க வேள்விகளில் ஆகுதியாகக் கொடுக்கப்படுவதும், உணவாகவும், மருந்துகளாகவும் பயன்படுத்தப்படுவதுமான) மூலிகைகளும்; மூலிகைகளுக்குப் பிறகு மலைகளும்;(45) மலைகளுக்குப் பிறகு, அனைத்து வகைச் சாறுகளும் {ரசங்களும்}, அதன் பண்புகளும்; அவற்றுக்குப் பிறகு நிருதி {நிருருதி} தேவியும்; நிருதிக்குப் பிறகு கோள்களும், சொர்க்கத்தின் ஒளிக்கோள்களும்;(46) இவற்றுக்குப் பிறகு வேதங்களும்; வேதங்களுக்குப் பிறகு, குதிரைத் தலை கொண்ட விஷ்ணுவின் பலமிக்க வடிவமும் {ஹயக்கிரீவனும்}; அவனுக்குப் பிறகு, எல்லாம்வல்லவரும், அழிவில்லா பெரும்பாட்டனுமான பிரம்மனும்;(47) பெரும்பாட்டனுக்குப் பிறகு, தெய்வீகமானவனும், அருளப்பட்டவனுமான மஹாதேவனும்; மஹாதேவனுக்குப் பிறகு விஸ்வதேவர்களும்; அவர்களுக்குப் பிறகு பெரும் முனிவர்களும்;(48) முனிவர்களுக்குப் பிறகு தெய்வீக சோமனும்; சோமனுக்குப் பிறகு, அழிவற்றவர்களான அனைத்துத் தேவர்களும்; தேவர்களுக்குப் பிறகு பிராமணர்களும் விழிப்புடன் இருப்பதாக அறிவாயாக.(49) அசையும், மற்றும் அசையாத உயிரினங்களை உள்ளடக்கிய அழிவில்லா அண்டமானது, க்ஷத்திரியர்களால் விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளது.(50)
இவ்வுலகில் உயிரினங்கள் விழிப்புடன் வைக்கப்பட்டு, அவர்களுக்கு மத்தியில் தண்டனையும் விழிப்புடன் இருக்கிறது. பெரும்பாட்டனுக்கு {பிரம்மனுக்கு} ஒப்பான காந்தியுடன் கூடிய தண்டனையே அனைத்தையும் தாங்கிப் பிடிக்கிறது[9].(51) ஓ பாரதா, காலமானது, தொடக்கத்திலும், மத்தியிலும், முடிவிலும் என எப்போதும் விழிப்புடனே இருக்கிறது. உலகங்கள் அனைத்தின் தலைவனும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், பலமிக்கவனும், அருளப்பட்டவனும், தேவர்களுக்குத் தேவனுமான மஹாதேவனும் எப்போதும் விழிப்புடன் இருக்கிறான். அவன், கபர்தின், சங்கரன், ருத்திரன், பவன், ஸ்தாணு, உமையின் தலைவன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறான்[10].(52,53) இவ்வாறே தண்டனையானது, தொடக்கத்திலும், நடுவிலும், முடிவிலும் விழிப்புடன் இருகிறது. ஓர் அறம்சார்ந்த மன்னன், தண்டனையால் வழிநடத்தப்பட்டு முறையாக ஆள {ஆட்சி செய்ய} வேண்டும்” என்றான் {வசுஹோமன்}”.(54)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “வசுஹோமனின் இந்த அறிவுரையைக் கேட்டு, அதில் சொல்லப்பட்டுள்ளபடி நடக்கும் மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தையும் நிச்சயம் அடைவான்.(55) ஓ! மனிதர்களில் காளையே, அறத்தால் ஆளப்படுவதும், இந்த அண்டத்தைக் கட்டுப்படுத்துவதுமான தண்டனையைக் குறித்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன்” {என்றார் பீஷ்மர்}.(56)
தர்மார்த்தகாமம்! – சாந்திபர்வம் பகுதி – 123-அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் பயன்களையும், அறத்தைக் கைவிட்டவன் செய்யத்தகு கேடுநீக்கும் செயல்முறைகளையும், இவை தொடர்பாகப் பழங்காலத்தில் மன்னன் ஆங்கரிஷ்டனுக்கும் முனிவர் காமந்தகருக்கும் இடையில் நடந்த உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! ஐயா, அறம் பொருள், இன்பம் குறித்த முடிவான தீர்மானங்களை நான் கேட்க விரும்புகிறேன். அவற்றில் எதைச் சார்ந்து வாழ்வின் போக்கு செல்கிறது?(1) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய ஒவ்வொன்றின் வேராகவ இருப்பவை யாவை? மேலும் அம்மூன்றின் விளைவுகள் என்ன? அவை சில சமயங்களில் ஒன்றோடொன்று கலந்தும், சில வேளைகளில் ஒன்றிலிருந்து ஒன்று தனித்தவையாகவும், சார்பற்றவையாகவும் {வேறுபட்டும்}இருக்கின்றன” என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வுலகின் மனிதர்கள் நல்லிதயங்களுடனும், அறத்தின் துணையுடனும் செல்வத்தை அடைய முயலும்போது, காலம், காரணம் மற்றும் செயற்பாடு ஆகியவற்றைப் பொறுத்து, அறம், பொருள், இன்பம் ஆகியன ஒன்று கலந்த நிலையிலும், ஒன்றோடொன்று உடன் உறைந்த நிலையிலும் காணப்படுகின்றன[1].(3) செல்வமானது அறத்தில் வேர் கொண்டுள்ளது, மேலும் இன்பமோ, அச்செல்வத்தின் கனி {பயன்} என்றே சொல்லப்படுகிறது. மேலும் இந்த மூன்றும் மனவுறுதியிலேயே {சங்கல்பத்திலேயே} தங்கள் வேர்களைக் கொண்டுள்ளன. மனவுறுதியானது, பொருள்கள் {நோக்கங்கள்} தொடர்புடையதாகும்.(4) மேலும் அனைத்துப் பொருட்களும் மொத்தமாக இன்ப விருப்பத்தை நிறைவு செய்யவே இருக்கின்றன. அப்போது, இந்த மூன்று திரட்டுகளும் இவற்றையே {மனவுறுதி மற்றும் நோக்கங்களையே} சார்ந்திருக்கின்றன. அனைத்துப் பொருட்களில் இருந்து முற்றிலும் பிரிந்து இருப்பதே முக்தியாகும் {மோட்சமாகும்}.(5)
[1] “இந்தச் சுலோகத்தை, அறம் சார்ந்த கணவன் ஒருவன், தான் மணந்து கொண்ட மனைவியிடம் உரிய காலத்தில் கலவியை நாடும் செயலின் மூலம் உரையாசிரியர் விளக்குகிறார். கர்ப்பதானம் Garbhadhan என்ற பெயரில் அறியப்பட்ட சடங்கைச் செய்வதன் மூலம் அறத்தகுதியை அடையலாம். மேலும் {இரண்டாவதாக} அச்செயலில் அவனுக்கு இன்பமும் இருக்கிறது, மேலும் இறுதியில் கிடைக்கும் மகன் என்ற வகையில் அவன் மூன்றவதாகப் பொருளையும் அடைகிறான். {எனவே இக்காரியத்தின் மூலம் அவன் அறம், இன்பம் மற்றும் பொருள் ஆகிய மூன்றையும் அடைகிறான்}” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “உலகத்தில் மனிதர்கள் பரிசுத்தமான மனமுள்ளவர்களாயிருக்கும்பொழுது, தர்மத்தை முன்னிட்டுப் புத்திரனென்னும் பொருளை அடைய வேண்டுமென்ற நிச்சயமுண்டாகி அதற்குரிய காலமும், அதற்கிடமான பத்நியும் நியாயமான காரியமும் நேர்ந்தால் (அறம்பொருள்இன்பங்களாகிற) மூன்றும் சேர்க்கையடைகின்றன” என்றிருக்கிறது.
உடலைப் பாதுகாக்க அறமும், அறம் ஈட்டுவதற்காகச் செல்வமும் நாடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இன்பமானது புலன்களை நிறைவு செய்வதே ஆகும். எனவே, இம்மூன்றும் ஆசைப் பண்பை {ரஜோ குணத்தைக்} கொண்டிருக்கின்றன[2].(6) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன சொர்க்கத்திற்காகவும், அதுபோன்ற வெகுமதிகளுக்காகவும் நாடப்படும்போது, அவ்வெகுமதிகளே தொலைவில் இருப்பதால் அவை {சொர்க்கமும், அதுபோன்ற வெகுமதிகளும்} தொலைவில் இருப்பவையாகச் சொல்லப்படுகின்றன. எனினும், தன்னறிவின் நிமித்தமாக நாடப்படும்போது, அவை நெருக்கமாவதாகச் சொல்லப்படுகிறது. அவை அத்தகைய பண்பில் இருக்கும்போது, அவற்றை ஒருவன் நாட வேண்டும்[3]. ஒருவன் அவற்றை மனத்தாலும் கைவிடக்கூடாது. அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன கைவிடப்பட்டால், தவத்த்துறவுகளின் மூலம் ஒருவன் தன்னை விடுவித்துக் கொண்ட பிறகே அவற்றைக் கைவிட வேண்டும்[4].(7) முக்தியை நோக்கியதே இந்த மூன்று திரட்டுகளின் குறிக்கோளாகும். தகுந்த மனிதன் அஃதை அடைவான். ஒருவன் செய்யும் செயல்கள், நுண்ணறிவின் துணையுடன் நிறைவடையவோ, எதிர்பாரா விளைவுகளுக்கு வழிவகுக்கவோ செய்யும். அறத்தை விட (தொண்டு, உழவு போன்ற) வேறு பொருட்களே செல்வத்திற்கு வழிவகுப்பதால், செல்வத்தின் {பொருளின்} வேர் எப்போதும் அறத்தில் {மட்டுமே} இருப்பதில்லை. மேலும் (சிலர் செல்வமானது, வாய்ப்பு, அல்லது பிறப்பு, அல்லது அதுபோன்ற காரணங்களைக் கொண்டு ஈட்டப்படுவதால்) அதில் ஒரு முரண்பட்ட கருத்தும் இருக்கிறது. சில சமயங்களில், அடையப்படும் செல்வம் தீமையையே விளைவிக்கும். மேலும் செல்வத்தைத் தவிர (விரதங்கள், நோன்புகள் போன்ற) பிற பொருட்கள் அறத்தை அடைய வழிவகுக்கின்றன. எனவே, இதைப் பொறுத்தவரையில், அறியாமை கலந்த அறிவைக் கொண்ட மூடன், அறம் மற்றும் செல்வத்தின் {பொருளின்} உயர்ந்த குறிக்கோளான முக்தியை {மோட்சத்தை} அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்.(9) அறத்தின் கழிவுகள், வெகுமதியடையும் விருப்பத்தில் இருக்கின்றன; செல்வத்தின் {பொருளின்} கழிவுகள், அதை விளம்பரப்படுத்துவதில் இருக்கிறது; இந்தக் கசடுகள் தூய்மையடையும்போது, அவை பெரும் விளைவுகளை உண்டாக்குகின்றன.(10)
[2] “நன்மை, ஆசை மற்றும் இருள் {நற்பண்பு [சத்வகுணம்], ஆசைப்பண்பு [ரஜோகுணம்], இருள்பண்பு [தமோகுணம்]} என்ற மூன்று குணங்கள், அல்லது பண்புகள் மனிதனினுடைய செயல்களின் பண்புகளை விரித்துரைக்கின்றன. பகவத்கீதையின் இறுதிப் பகுதிகளைக் காண்க. எனவே, அத்தகு {ரஜோ குணம் கொண்ட} அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன பின்பற்றக்கூடிய உயர்ந்த நோக்கங்களல்ல. நற்பண்பை {சத்வகுணத்தைக்} கொண்ட நோக்கங்களே பின்பற்றத்தகுந்தவை” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
[3] “அஃதாவது, ஒருவன் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்காக மட்டுமே அறத்தையும், கனியில் விருப்பமில்லாமல் {பயனில் ஆசையில்லாமல்} செய்யப்படும் செயல்களுக்குச் செலவழிப்பதற்காக மட்டுமே செல்வத்தையும், உடலைத் தாங்கிக் கொள்வதற்காக மட்டுமே இன்பத்தையும் நாட வேண்டும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
[4] தர்மாதிங்காமானைஷ்திகானம் Dharmadinkamanaishthikan, அதாவது தர்மத்தை {அறத்தை} முதலாகவும், காமத்தை {இன்பத்தை} இறுதியாகவும் கொள்தல், எனவே இவை அறம், பொருள் மற்றும் இன்பத்தைக் குறிக்கின்றன” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இது தொடர்பாகப் பழங்காலத்தில் காமந்தகர் மற்றும் ஆங்கரிஷ்டன் ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடலில் குறிப்பிடப்படுகிறது.(11) ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்த மன்னன் ஆங்கரிஷ்டன், சுகமாக அமர்ந்திருந்தவரான முனிவர் காமந்தகரை {அணுகி} வணங்கி, அவரிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்டான்.(12)
{ஆங்கரிஷ்டன் காமாந்தகரிடம்}, “ஓ! முனிவரே, ஒரு மன்னன், காமத்தாலோ, மடமையினாலோ உந்தப்பட்டுப் பாவமிழைத்துவிட்டு, பின்பு அதற்காக வருந்தினால், எச்செயல்களைச் செய்வதன் மூலம் {அவனால்} அந்தப் பாவங்களை அழிக்க முடியும்?(13) மேலும் ஒரு மனிதன், அறியாமையால் உந்தப்பட்டும், நேர்மையாகச் செயல்படுகிறோம் என்று நம்பிக்கையிலும் பாவம் நிறைந்த செயலைச் செய்தான் என்றால், மனிதர்களுக்கு மத்தியில் {பொதுவாகவே} நடைமுறையில் இருக்கும் அந்தப் பாவத்தை மன்னனால் எவ்வாறு நிறுத்த முடியும்?” என்று கேட்டான்.(14)
காமந்தகர் {ஆங்கரிஷ்டனிடம்}, “அறம், செல்வம் {பொருள்} ஆகியவற்றைக் கைவிட்டு, இன்பத்தை மட்டுமே பின்தொடரும் மனிதன், அத்தகு நடத்தையின் மூலம் தன் நுண்ணறிவை இழப்பதையே அறுவடை செய்கிறான்.(15) நுண்ணறிவின் {புத்தியின்} அழிவைக் கவனமின்மை {மயக்கம்} பின்தொடர்கிறது. உடனே அறம் மற்றும் செல்வம் {பொருள்} ஆகிய இரண்டும் அழிவை அடைகின்றன. அத்தகு கவனமின்மையால் {மயக்கத்தால்}, கடும் இறைமறுப்பும் {நாத்திகமும்}, திட்டப்படியான தீயொழுக்கமும் உண்டாகின்றன.(16) பாவம்நிறைந்த ஒழுக்கம் கொண்ட அந்தத் தீய மனிதர்களை மன்னன் அடக்கிவைக்கவில்லையெனில், பாம்பு மறைந்திருக்கும் வீட்டிற்குள் இருக்கும் ஒருனைப் போல நல்ல குடிமக்கள் அனைவரும் அவனிடம் அச்சத்துடன் வாழ வேண்டியிருக்கும்.(17) குடிமக்கள் அத்தகைய மன்னனைப் பின்பற்ற மாட்டார்கள். பிராமணர்களும், பக்திமான்களும் {நல்லோரும்} அவ்வாறே செயல்படுவார்கள். விளைவாக, மன்னன் பேராபத்தையும், அழிவையுமே ஈட்டுவான்.(18) புகழ்க்கேட்டையும், அவமதிப்பையும் அடையும் அவன், துன்பகராமன இருப்பிலேயே தன் வாழ்வை நீட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.(19)
சாத்திரங்களைக் கற்ற மனிதர்கள், பாவத்தைத் தடுப்பதற்காகப் பின்வரும் வழிமுறைகளைக் குறிப்பிட்டிருக்கின்றனர். மன்னன், மூன்று வேதங்களையும் கற்பதற்கே தன்னை அர்ப்பணிக்க வேண்டும். அவன் பிராமணர்களை மதித்து, அவர்களுக்கு நற்காரியங்களைச் செய்ய வேண்டும்.(20) அவன் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ளவனாக இருக்க வேண்டும். அவன் தூய்மைச் சடங்குகளைச் செய்பவனாக, புனித மந்திரங்களை ஓதுபவனாக இருந்து, தன் நேரத்தை மகிழ்ச்சியாகக் கடத்த வேண்டும். அவன், தீய குடிமக்களைத் தன்னிடம் இருந்தும் தன் நாட்டில் இருந்தும் விரட்டி, நல்லோரின் தோழமையை நாட வேண்டும்.(22) அவன், இனிய சொல், அல்லது நற்செயல்களின் மூலம் மனிதர்கள் அனைவரையும் நிறைவு செய்ய வேண்டும். அவன் அனைவரிடமும், “நான் உங்களுடையவன்” என்று சொல்லி, தன் எதிரியின் நற்பண்புகளையும் அறிவிக்கையிட வேண்டும்.(23) இத்தகைய ஒழுக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம், அவன் விரைவில் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, உயர்ந்த வெகுமதிகள் அனைத்தையும் வெல்வான். இத்தகையான ஒழுக்கத்தின் மூலம் அவனது பாவங்கள் அனைத்தும் நிச்சயம் அழிவடையும்.(24) உன்னுடைய பெரியோர்கள் மற்றும் ஆசான்கள் குறிப்பிடும் உயர்ந்த கடமைகள் அனைத்தையும் நீ நிறைவேற்ற வேண்டும். உன்னைச் சார்ந்த பெரியோர்கள் மற்றும் ஆசான்களின் அருளின் மூலமாக உன்னால் நிச்சயம் பெரும்பேற்றை அடைய முடியும்” என்றார் {காமந்தகர்}”.(25)
அறமொழுகு! – சாந்திபர்வம் பகுதி – 124-அறம், உண்மை, நற்செயல்கள், வலிமை, செழிப்பு ஆகியன அறப்பண்பிலேயே தங்கள் வேர்களைக் கொண்டுள்ளன என்பதை நிறுவ துரியோதனனுக்குத் திருதராஷ்டிரன் சொன்ன பிரகலாதன், இந்திரன் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, பூமியில் அறப்பண்பையே {தர்மசீலத்தையே} மனிதர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். எனினும், அவற்றின் பெருமையில் எனக்குப் பேரையங்கள் இருக்கின்றன. ஓ! அறவோரில் முதன்மையானவரே, அவை எங்களால் புரிந்து கொள்ளத்தக்கவையாக இருந்தால், அறப்பண்பை {நன்னடத்தையை} அடையும் வழி குறித்த அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.(2) ஓ! பாரதரே, உண்மையில் அந்நடத்தை எவ்வாறு அடையப்படுகிறது. அதைக் கேட்க நான் விரும்புகிறேன். ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, அந்நடத்தையின் சிறப்பியல்புகளைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ளவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! கௌரவங்களை அளிப்பவனே, முன்பொரு சமயம் துரியோதனன், இந்திரப்பிரஸ்தத்தில் உனக்கும், உன் தம்பிகளுக்கும் சொந்தமான நன்கறியப்பட்ட செழிப்பைக் கண்டும், பெரும் மாளிகையில் தான் செய்த தவறுகளுக்காக உள்ளான ஏளனங்களாலும் துயரத்தில் எரிந்து கொண்டிருந்த போது, தன் தந்தையான திருதராஷ்டிரனிடம் இதே கேள்வியைக் கேட்டான். ஓ! பாரதா, அச்சந்தர்ப்பத்தில் நிகழ்ந்தவற்றைக் கேட்பாயாக[1].(4,5) உனது பெரும் மாளிகையையும், உன் தலைமையில் இருந்த பெருஞ்செழிப்பையும் கண்ட துரியோதனன், தன் தந்தையின் முன் அமர்வதற்கு முன்னர், அவனிடம் தான் கண்டவற்றைக் குறித்துச் சொன்னான்[2].(6) துரியோதனனின் வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், தன் மகனிடமும் {துரியோதனிடமும்}, கர்ணனிடமும் பின்வருமாறு பதிலளித்தான்.(7)திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்}, “ஓ! மகனே, நீ ஏன் வருந்துகிறாய்? அதற்கான காரணத்தை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். அந்தக் காரணங்கள் போதுமானவையாகத் தோன்றுவதாக உறுதியடைந்த பிறகு, நான் உனக்கு அறிவுரை கூற முயற்சிக்கிறேன்.(8) ஓ! பகைநகரங்களை அடக்குபவனே, நீயும் பெருஞ்செழிப்பையே அடைந்திருக்கிறாய். உன்னுடன் பிறந்தவர்கள் அனைவரும், உன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் உனக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கின்றனர்.(9) சிறந்த ஆடைகளேயே நீ உன் அங்கங்களில் அணிகிறாய். ஆண்டம்பர உணவையே நீ உண்கிறாய்[3]. சிறந்த வகைக் குதிரைகளே உன்னைச் சுமக்கின்றன. பிறகு ஏன் நீ நிறம் மங்கியவனாக மெலிந்திருக்கிறாய்?” என்று கேட்டான்.(10)
துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்}, “உயர் ஆன்ம ஸ்நாதக வகைப் பிராமணர்கள் பத்தாயிரம் {10000} பேர் (தினமும்) யுதிஷ்டிரனின் அரண்மனையில் தக்கத்தட்டுகளில் உண்கின்றனர்.(11) சிறந்த மலர்கள், கனிகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அவனது அற்புத மாளிகை, அவனது தித்திரி மற்றும் கல்மாஷ இனக் குதிரைகள், அவனுடைய பல்வேறு வகையான ஆடைகள் ஆகியவற்றைக் கண்டும், ஓ! பாரதரே, வைஸ்ரவணனின் {குபேரனின்} பெருஞ்செழிப்புக்கு ஒப்பான உயர்ந்த செழிப்பை என் எதிரிகளான பாண்டுவின் மகன்களிடம் கண்டும் நான் துயரத்தால் எரிந்து கொண்டிருக்கிறேன்” என்றான்.(13)
திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்}, “ஓ! ஐயா, யுதிஷ்டிரனைப் போன்ற செழிப்பையோ, அதைவிட மேன்மையானதையோ நீ விரும்பினால், ஓ! மகனே, அறப்பண்பு {நன்னடத்தை} கொண்டவனாக நீ முயற்சி செய்வாயாக.(14) நடத்தையின் மூலம் மட்டுமே ஒருவனால் மூன்று உலகங்களையும் வெல்ல முடியும் என்பதில் ஐயமில்லை.(15) மாந்தாத்ரி {மாந்தாதா} ஒரே இரவில் மொத்த உலகத்தையும் கைப்பற்றினான், ஜனமேஜயன் மூன்றிலும், நாபாகன் ஏழு இரவுகளிலும் அதைச் செய்தனர் {உலகைக் கைப்பற்றினர்}.(16) இந்த மன்னர்கள் அனைவரும் கருணையும், அறப் பண்பையும் {நன்னடத்தையையும்} கொண்டிருந்தனர். இதன் காரணமாகவே, அவர்களது பண்புகளால் வெல்லப்பட்ட பூமாதேவி தானாகவே அவர்களிடம் வந்தாள்” என்றான்.(17)
துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பாரதரே, (உம்மால் பெயர் சொல்லப்பட்ட மன்னர்களின்) எந்த நடத்தையின் மூலம் இந்த உலகம் அவ்வளவு விரைவாக வெல்லப்பட்டதோ, அந்த நடத்தையை எவ்வாறு அடைவது என்பதைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(18)
திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்}, “இது தொடர்பாகப் பின்வரும் இந்தப் பழைய விவரிப்பில் குறிப்பிடப்படுகிறது. அறப்பண்பு {நன்னடத்தை} குறித்து இது முன்பொரு சமயத்தில் நாரதரால் உரைக்கப்பட்டதாகும்.(19) பழங்காலத்தில் தைத்தியன் பிரஹலாதன், தனது நடத்தையின் தகுதியால் {புண்ணியத்தால்}, உயர் ஆன்ம இந்திரனின் அரசைப் பறித்து, மூவுலகங்களையும் வென்றான்.(20) அப்போது சக்ரன் {இந்திரன்}, கூப்பிய கரங்களுடன் பிருஹஸ்பதியை அணுகினான். பெரும் ஞானம் கொண்டவனான அந்தத் தேவர்கள் தலைவன் {இந்திரன்}, அந்தப் பேராசானிடம் {பிருஹஸ்பதியிடம்}, “இன்பநிலையின் மூலத்தைக் குறித்து நீர் எனக்குச் சொல்ல வேண்டுமென நான் விரும்புகிறேன்” என்று கேட்டான்.(21) இவ்வாறு கேட்கப்பட்ட பிருஹஸ்பதி, உயர்ந்த இன்பநிலையின் மூலமான (முக்திக்கு {மோட்சத்துக்கு} வழிவகுக்கும்) அந்த அறிவைக் குறித்து அவனிடம் {இந்திரனிடம்} சொன்னார். உண்மையில், அறிவே பரம இன்பத்தின் மூலம் என்று பிருஹஸ்பதி குறிப்பிட்டார். எனினும் இந்திரன், அதை விட உயர்ந்தது ஏதேனும் உள்ளதா என்று மீண்டும் அவரிடம் கேட்டான்.(23)
பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “ஓ! மகனே, அதைவிட மேலும் உயர்ந்ததும் இருக்கிறது. உயர் ஆன்ம பார்க்கவர் (உசனஸ் {சுக்கிராச்சாரியர்}) அஃதை உனக்குச் சிறப்பாகப் போதிப்பார். நீ அருளப்பட்டிருப்பாயாக. ஓ! தேவர்களின் தலைவா, நீ அவரிடம் சென்று விசாரிப்பாயாக” என்று சொன்னார்.(24)
பெரும் தவத்தகுதியும், பெரும் காந்தியும் கொண்ட தேவர்களின் தலைவன், பார்க்கவரிடம் சென்று, நிறைவடைந்த இதயத்துடன், பெரும் நன்மையை விளைவிக்கும் ஓர் அறிவை அவரிடம்{சுக்கிராச்சாரியாரிடம்} இருந்து அடைந்தான்.(25) நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, உயர் ஆன்மப் பார்க்கவரிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, (இன்பத்தை அடையும் வழிமுறைகளில்) அந்தத் தவசி ஏற்கனவே தனக்குச் சொன்னதை விட உயர்ந்ததேதும் இருக்கிறதா என்று அந்தத் தவசியிடமே {சுக்கிராச்சாரியாரிடமே} கேட்டான்.(26)
அனைத்துமறிந்தவரான பார்க்கவர் {சுக்கிராச்சாரியார்}, “உயர் ஆன்ம பிரஹலாதன் அது குறித்த சிறந்த அறிவைப் பெற்றிருக்கிறான்” என்று சொன்னார்.
இதை அறிந்த இந்திரன் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான்.(27) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், பகனைத் தண்டித்தவனுமான அவன் {இந்திரன்}, ஒரு பிராமணனின் வடிவத்தை ஏற்று, பிரஹலாதனிடம் சென்று, “எது இன்பத்தை அளிக்கிறது என்பது குறித்துக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(28)
பிரஹலாதன் அந்தப் பிராமணனிடம், “ஓ! மறுபிறப்பாளர்களின் தலைவரே, மூவுலகங்களையும் ஆட்சி செய்யும் பணியில் முழுவதுமாக ஈடுபட்டிருப்பதால் எனக்கு நேரமேதும் இல்லை. எனவே, என்னால் உமக்குப் போதிக்க முடியாது” என்றான்.(29)
அதற்கு அந்தப் பிராமணன் {பிரஹலாதனிடம்}, “ஓ! மன்னா, உனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது, நன்மையை உண்டாக்கவல்ல நடத்தைவழி எது என்பதைக் குறித்த உன் போதனைகளை நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(30)
பிரம்மத்தை உச்சரிப்பவரின் இந்தப் பதிலில் மகிழ்ச்சியடைந்தான் மன்னன் பிரஹலாதன். “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன அவன், அறிவைக் குறித்த உண்மைகளை அந்தப் பிராமணருக்குப் போதிக்கத் தக்க சமயத்தைக் கொடுப்பதாகச் சொன்னான்.(31) ஓர் ஆசானிடம் ஒரு சீடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ, அவ்வாறே பிரஹலாதனிடம் முறையாக நடந்து கொண்ட அந்தப் பிராமணன், பிரஹலாதன் விரும்பியதை முழு இதயத்துடன் செய்யத் தொடங்கினான்.(32) பல சந்தர்ப்பங்களில் அந்தப் பிராமணன், “எதிரிகளைத் தண்டிப்பவனே, எந்த வழிமுறைகளின் மூலம் உன்னால் மூவுலகங்களின் அட்சியை வெல்ல முடிந்தது? ஓ! அறமன்னா, அவ்வழிமுறைகள் யாவை என்பதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான். ஓ! ஏகாதிபதி, அந்தப் பிராமணன் கேட்ட கேள்விக்குப் பிரஹலாதன் பதிலளித்தான்.(33)
பிரஹலாதன், “ஓ! மறுபிறப்பாளரே, நான் ஒரு மன்னனாக இருப்பதன் விளைவால் எந்தச் செருக்கையும் உணர்வதில்லை, அதே போல, பிராமணர்களிடம் பகையுணர்வேதும் வளர்ப்பதில்லை. மறுபுறம், சுக்ரனின் போதனைகளின் அடிப்படையில் அமைந்த கொள்கை ஆலோசனைகளை அவர்கள் எனக்கு அறிவிக்கும்போது, நான் அவற்றை ஏற்றுப் பின்பற்றுகிறேன்.(34) முழு நம்பிக்கையுடன் அவர்கள் விரும்புவதை என்னிடம் சொல்லி, அறமற்ற, முறையற்ற வழிமுறைகளில் இருந்து என்னை அவர்கள் தடுக்கிறார்கள். நான் எப்போதும் சுக்கிரனின் போதனைகளுக்குக் கீழ்ப்படிந்தவனாவேன். நான் பிராமணர்களிடமும், பெரியோர்களிடமும் காத்திருந்து அவர்களுக்குத் தொண்டு செய்கிறேன். நான் எந்த வன்மமும் கொள்வதில்லை.(35) நான் அற ஆன்மா கொண்டவனாவேன். தற்கட்டுப்பாட்டுடன் கூடிய நான் எனது புலன்கள் அனைத்தையும் என் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறேன். எனக்குப் போதகர்களாக இருக்கும் அந்த மறுபிறப்பாளர்கள், தேன்கூட்டில் தேனைச் சிந்தும் தேனீக்களைப் போல எனக்கு நன்மையான போதனைகளைப் பொழிகிறார்கள்.(36) நான், அந்தக் கல்விமான்களால் சிந்தப்படும் தேனைச் சுவைத்து, நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில் உள்ள நிலவைப் போல என் குலத்தைச் சார்ந்தவர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறேன்[4].(37) சுக்கிரரின் போதனைகளைப் பிராமணர்களின் உதடுகளில் இருந்து கேட்டு அதன்படி செயல்படுவதே பூமியில் அமுதமும் தெளிவான கண்ணும் ஆகும்.(38) இவற்றிலேயே ஒரு மனிதனுக்கான நன்மை இருக்கிறது” என்றான். இவ்வாறே பிரம்மத்தை உச்சரிப்பவரிடம் பிரஹலாதன் பேசினான்.அவனால் கடமையுணர்வுடன் தொண்டாற்றப்பட்ட தைத்தியர்களின் தலைவன் {பிரஹலாதன்} மீண்டும் அவனிடம், “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நீர்! என்னிடம் கடமையுணர்வுடன் நடந்து கொள்வதன் விளைவால் நான் உம்மிடம் மிகவும் மனம்நிறைந்திருக்கிறேன். நீ அருளப்பட்டிருப்பீராக. நீர் விரும்பும் வரத்தை என்னிடம் கேட்பீராக. நீர் கேட்கும் வரத்தை நான் நிச்சயம் உமக்கு அளிப்பேன்” என்றான்.(40)
அதற்கு அந்தப் பிராமணன் {பிரஹலாதனிடம்}, அந்தத் தைத்தியர்களின் தலைவனிடம், “மிக்க நன்று, நான் உனக்குக் கீழ்ப்படிவேன்” என்று சொன்னான். அவனிடம் மனம் நிறைந்த பிரஹலாதன், “நீர் விரும்புவதைப் பெற்றுக் கொள்ளும்” என்றான்.(41)
அந்தப் பிராமணன், “ஓ! மன்னா, நீ என்னிடம் நிறைவடைந்திருக்கிறாய், எனக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்புகிறாய் என்றால், நான் உன் நடத்தையை அடைய விரும்புகிறேன். இதுவே நான் உன்னிடம் வேண்டும் வரமாகும்” என்று கேட்டான்[5].(42)
இதனால் பிரஹலாதன் மகிழ்ச்சியடைந்தாலும், அவன் பேரச்சத்தாலும் நிறைந்தான். உண்மையில், இந்த வரத்தை அந்தப் பிராமணன் குறிப்பிட்ட போது, அந்தத் தைத்திய தலைவன், கேட்பவன் இயல்பான சக்தியைக் கொண்ட ஒரு மனிதனாக இருக்க முடியாது என்று நினைத்தான்.(43)
மிகவும் ஆச்சரியமடைந்த பிரஹலாதன், இறுதியாக, “அப்படியே ஆகட்டும்” என்றான். இருப்பினும் வரமளித்த பிறகு அந்தத் தைத்திய தலைவன் துயரத்தால் நிறைந்தான்.(44) ஓ! மன்னா, வரத்தை அடைந்த பிராமணன் சென்றுவிட்டாலும், பிரஹலாதன் ஆழமான கவலைக்கு உள்ளாகி என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(45) அந்தத் தைத்திய தலைவன் இக்காரியத்தை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தபோது, ஒளியின் தழல் ஒன்று அவனது உடலில் இருந்து வெளியே வந்தது. பெரும் காந்தியைக் கொண்ட நிழல் வடிவமாகவும்,(46) பெரும் வடிவம் கொண்டதாகவும் அஃது இருந்தது.
பிரஹலாதன் அந்த வடிவத்திடம், “நீ யார்?” என்று கேட்டான்.
அதற்கு அந்த வடிவம், “நான் உன் நடத்தையின் உடல் வடிவமாவேன். உன்னால் கைவிடப்பட்ட நான் இப்போது செல்லப் போகிறேன்.(47) எனவே, ஓ! மன்னா, நான் உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், குற்றமில்லாதவனுமான அந்தப் பிராமணர்களில் முதன்மையானவனிடம் இனி வசிக்கப் போகிறேன்” என்றது.
இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த வடிவம் மறைந்து, அதன்பிறகு விரைவில் சக்ரனின் {இந்திரனின்} உடலில் நுழைந்தது.(48) அந்த வடிவம் மறைந்ததும், அதேபோன்ற மற்றொரு வடிவம் பிரஹலாதனின் உடலில் இருந்து வெளிப்பட்டது. அந்தத் தைத்திய தலைவன், அதனிடம், “நீ யார்?” என்று கேட்டான்.(49)
அதற்கு அந்த {மற்றொரு} வடிவம், “ஓ! பிரஹலாதா, என்னை அறத்தின் உடல்வடிவமாக அறிந்து கொள்வாயாக. ஓ! தைத்தியர்களின் தலைவா, எங்கே நடத்தை {பண்பு} இருக்கிறதோ அங்கேயே நான் வசிப்பேன், எனவே நான் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவனிடம் செல்லப் போகிறேன்” என்றது.(50)
அறம் மறைந்ததும், ஓ! ஏகாதிபதி, காந்தியுடன் சுடர்விட்ட மூன்றாவது வடிவம் ஒன்று உயர் ஆன்மப் பிரஹலாதனின் உடலில் இருந்து வெளிப்பட்டது.(51) அது யார் எனப் பிரஹலாதனால் கேட்கப்பட்டதும், பெரும்பிரகாசம் கொண்ட அந்த வடிவம், “ஓ! தைத்தியர்களின் தலைவா, நானே உண்மை என்பதை அறிவாயாக. அறத்தின் வழியைப் பின்பற்றி நான் உன்னை விட்டுச் செல்லப் போகிறேன்” என்றது.(52)
அறத்தைப் பின்பற்றி உண்மையானது பிரஹலாதனை விட்டுச் சென்றதும், {நான்காவதாக} மற்றொரு பெரும் வடிவம் பிரஹலாதனின் உடலைவிட்டு வெளியே வந்தது. தைத்திய மன்னனால் கேட்கப்பட்டதும் அந்த வலிமைமிக்கது, “நானே நற்செயல்களின் உடல்வடிவமாவேன். ஓ! பிரஹலாதா, எங்கே உண்மை வாழுமோ, அங்கேயே நான் வாழ்வேன் என்பதை அறிவாயாக” என்றது.(53)
அது பிரகலாதனை விட்டுச் சென்றதும், {ஐந்தாவதாக} மற்றொரு வடிவம் அழுகையுடனும், ஓலத்துடனும் வெளிய வந்தது. பிரஹலாதனால் கேட்கப்பட்ட அஃது, “என்னை வலிமை என்று அறிவாயாக. நற்செயல்கள் எங்கிருக்குமோ அங்கேயே நான் வசிப்பேன்” என்றது.(54) இவ்வார்த்தைகளைச் சொன்னபிறகு, நற்செயல்கள் சென்ற இடத்திற்கே வலிமையும் சென்றது.
இதன்பிறகு, பிரஹலாதனின் உடலில் இருந்து பெரும் பிரகாசம் கொண்ட ஒரு தேவி வெளிப்பட்டாள். அந்தத் தைத்தியத் தலைவனால் கேட்கப்பட்டதும், அவள் தான் செழிப்பின் உடல் வடிவம் என்று பதிலளித்து, “ஓ! வீரா, ஓ! கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே, உன்னில் வசித்து வந்த நான், உன்னால் கைவிடப்பட்டு, வலிமையைப் பின்தொடர்ந்து செல்கிறேன்” என்றாள்.(56)
பேரச்சமடைந்த உயர் ஆன்மப் பிரஹலாதன், மீண்டும் அந்தத் தேவியிடம், “ஓ! தேவி, ஓ! தாமரைகளுக்கு மத்தியில் வசிப்பவளே, நீ எங்கே செல்கிறாய்?(57) ஓ தேவி, நீ எப்போதும் உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவளும், தேவிகளில் முதல்வியும் ஆவாய். (என் சீடனாக இருந்த) அந்தப் பிராமணர்களில் முதன்மையானவன் யார்? நான் உண்மையை அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றான்.(58)
அதற்கு அந்தச் செழிப்பின் தேவி, “பிரம்மச்சரிய நோன்புக்கு அர்ப்பணிப்புடன் உள்ளவனும், உன்னால் போதிக்கப்பட்டவனுமான அந்தப் பிராமணன் சக்ரனாவான் {இந்திரனாவான்}. ஓ! பலமிக்கவனே, மூவுலகங்களின் மீதும் நீ கொண்டிருந்த அரசுரிமையை அவன் களவாடிவிட்டான்.(59) ஓ! அறவோனே, நீ உன் நடத்தையாலேயே மூவுலகங்களையும் அடக்கி ஆண்டாய். இஃதை அறிந்து கொண்ட தேவர்களின் தலைவன், உன் நடத்தையை உன்னிடம் இருந்து களவாடிவிட்டான்.(60) ஓ! பெரும் ஞானியே, அறம், உண்மை, நற்செயல்கள், வலிமை ஆகியவையும் நானும் நடத்தையிலேயே எங்கள் வேரைக் கொண்டிருக்கிறோம்” என்றாள்”.(61)
பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தச் செழிப்பின் தேவி, எஞ்சியவை அனைத்தையும் போலவே சென்றுவிட்டாள். துரியோதனன் மீண்டும் தன் தந்தையிடம் இவ்வார்த்தைகளில்,(62) “ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, நடத்தையின் உண்மையை அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன். அஃதை அடையும் வழிமுறைகளை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(63)
திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்}, “உயர் ஆன்மப் பிரஹலாதன் இந்திரனிடம் உரையாடியபோது அந்த வழிமுறைகள் சொல்லப்பட்டன. எனினும், ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நடத்தையை எவ்வாறு அடைவது என்பதைக் குறித்துச் சுருக்கமாகக் கேட்பாயாக.(64) செயல், எண்ணம் மற்றும் சொல்லில் தீங்கிழையாமை, அனைத்து உயிரினங்களிடமும் கருணை, கொடை ஆகியவை புகழத்தக்க அந்நடத்தையில் அடங்கியவையாகும்.(65) எந்தச் செயலாலோ, முயற்சியாலோ பிறர் நன்மையடைய மாட்டார்களோ, அல்லது எந்தச் செயலின் விளைவால் ஒருவன் அவமானத்தை அடைவானோ, அச்செயல் ஒருபோதும் செய்யப்படக்கூடாது.(66) மறுபுறம், எந்தச் செயலின் மூலம் சமூகத்தில் ஒருவன் புகழடைவானோ அது செய்யப்பட வேண்டும். ஓ! குருக்களில் சிறந்தவனே {துரியோதனா}, நடத்தை என்றால் என்ன என்பதைக் குறித்து நான் உனக்குச் சுருக்கமாகச் சொன்னேன்.(67) ஓ! மன்னா, தீய நடத்தை கொண்ட மனிதர்கள் செழிப்பை எப்போதாவது வென்றால், ஓ! மகனே அஃதை அவர்கள் நீண்ட காலம் அனுபவிக்க மாட்டார்கள், வேரோடு அழிபவர்களாகவே காணப்படுகிறார்கள்” என்றான்”.(68)
திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்} தொடர்ந்தான், “ஓ! மகனே, யுதிஷ்டிரனைவிட நீ பெருஞ்செழிப்பையடைய விரும்பினால், இவையாவற்றையும் உண்மையாக அறிந்து கொண்டு, நன்னடத்தையுடன் இருப்பாயாக” என்றான்”.(69)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இதுவே மன்னன் திருதராஷ்டிரன் தன் மகனுக்குச் சொன்னதாகும். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, நீ இந்த அறிவுரைகளின்படி செயற்பட்டால், நிச்சயம் நீ அவற்றின் கனியை அடைவாய்” {என்றார் பீஷ்மர்}.(70)
மான் வேட்டை! – சாந்திபர்வம் பகுதி – 125-நம்பிக்கையைக் குறித்து எழும் ஐயத்தைப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; வேட்டையாடச் சென்ற மன்னன் சுமித்திரனின் கதையைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, (ஒரு மனிதனின் தேவைகளில்) நடத்தையே முதன்மையானது என்று சொல்கிறீர். எனினும், எப்போது அந்த நம்பிக்கை {எதிர்பார்பபு}[1] எழுகிறது? அஃது என்ன என்பதை எனக்குச் சொல்வீராக.(1) இந்தப் பெரும் ஐயம் என் மனத்தை ஆட்கொள்கிறது. ஓ! பகைநகரங்களை அடக்குபவரே, அஃதை அகற்றுவதற்கு உம்மைத் தவிர வேறு எந்த மனிதனும் இல்லை.(2) ஓ! பாட்டா, ஓ! தலைவா, சுயோதனன் (அவனது பிடிவாதத்தின் விளைவால் உண்டான) போர் தொடங்குவதற்கு முன், முறையானதையே செய்வான் என்ற பெரும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு} எனக்கு இருந்தது.(3) ஒவ்வொரு மனிதனிலும் பெரும் நம்பிக்கையிருக்கிறது. அந்த நம்பிக்கை {எதிர்பார்ப்பு} அழியும்போது, அதைத் தொடரும் துயரம் பெரியது; கிட்டத்தட்ட மரணத்திற்கு இணையானது என்பதில் ஐயமில்லை.(4) நான் மூடனாக இருந்ததால், திருதராஷ்டிரரின் தீய மகன் துரியோதனன் நான் வளர்த்து வந்த நம்பிக்கையை அழித்தான். ஓ! மன்னா {பீஷ்மரே}, என் மனத்தின் மடமையைக் காண்பீராக.(5) மரங்கள் அனைத்துடன் கூடிய ஒரு மலையைவிட நம்பிக்கை பெரியது என்று நான் நினைக்கிறேன். அல்லது, ஒருவேளை அஃது ஆகாயத்தைவிடவும் பரந்து விரிந்ததாக இருக்கலாம். அல்லது, ஒருவேளை, ஓ! மன்னா, உண்மையில் அஃது அளவிடப்பட முடியாததாகவும் இருக்கலாம்.(6) ஓ! குருக்களின் தலைவரே {பீஷ்மரே}, நம்பிக்கையைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானதே, அதற்கு இணையாகவே அஃதை அடக்குவதும் கடினமானதாகவே இருக்கிறது. நம்பிக்கையின் இறுதித் தன்மையைக் கண்டு, இதைப் போலவே வெல்லப்பட முடியாதது வேறு என்ன இருக்கிறது என்று கேட்கிறேன்?” என்றான்.(7)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, பழங்காலத்தில் சுமித்திரனுக்கும், ரிஷபருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை நான் உனக்கு உரைக்கிறேன். அதைக் கேட்பாயாக.(8) ஹைஹய குலத்தைச் சேர்ந்தவனும், சுமித்திரன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஓர் அரசமுனி வேட்டையாடச் சென்றான். அவன் நேரான கணையொன்றால் ஒரு மானைத் துளைத்து, அதைப் பின்தொடர்ந்து சென்றான்.(9) பெரும் பலம் கொண்ட அந்த மான், உடலில் தைத்த கணையுடனே ஓடிச் சென்றது. பெரும் பலம் கொண்ட மன்னனும் {சுமித்திரனும்} தன் பெரிய இரையைப் பெரும் வேகத்துடன் விரட்டிச் சென்றான்.(10) பெரும் வேகம் கொண்ட அந்த விலங்கு, பள்ளத்திலும், சமவெளியிலும் என மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தது. இளைஞனும், சுறுசுறுப்புடையவனும், பலவானும், வில் மற்றும் வாள் தரித்தவனும், கவசம் பூண்டவனுமான மன்னன் மேலும் மேலும் அதைப் பின்தொடர்ந்து சென்றான்.(11) எவரின் துணையுமின்றிக் காட்டில் ஊடாக அந்த விலங்கைத் துரத்திச் சென்ற மன்னன், பல ஆறுகளையும், ஓடைகளையும், ஏரிகளையும், சிறு காடுகளையும் கடந்து சென்றான்.(13)
பெரும் வேகங்கொண்ட அவ்விலங்கு, தன்விருப்பப்படியே அப்போதைக்கப்போது தன்னை மன்னனுக்கு வெளிப்படுத்திக்கொண்டு பெரும் வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது.(14) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னனின் {சுமித்திரனின்} பலகணைகளால் துளைக்கப்பட்ட அந்தக் காட்டுவாசி {மான்}, விளையாடிக் கொண்டிருப்பதைப் போலத் தனக்கும், தன்னைப் பின்தொடர்ந்து வருபவனுக்குமான இடைவெளியைக் குறைத்துக் கொண்டே வந்தது.(15) மீண்டும் மீண்டும் வேகத்தை வெளிப்படுத்தியும், ஒன்றன்பின் ஒன்றாகக் காடுகளைக் கடந்து கொண்டும், அப்போதைக்கப்போது மன்னனுக்கு அருகிலேயே தன்னை வெளிப்படுத்திக் கொண்டேயும் சென்றது.(16)
இறுதியாக, அந்த எதிரிகளை நொறுக்குபவன் {மன்னன் சுமித்திரன்}, கூரியதும், பயங்கரமானதும், உயிர்நிலைகளையே துளைக்கவல்லதுமான மிக மேன்மையான ஒரு கணையைத் தன் வில்லின் நாணில் பொருத்தினான்.(17) பெரும் அளவு உடல்வடிவத்தைக் கொண்ட அந்த விலங்கு, தன்னைப் பின்தொடர்ந்து வருபவனின் முயற்சியைக் கண்டு சிரிப்பதைப் போல, கணை அடையும் தொலைவை விட நான்கு மைல்களுக்கு அப்பால் உள்ள ஓர் இடத்தை அடைந்து, திடீரெனத் தொலைவாகச் சென்றுவிட்டது.(18) சுடர்மிக்கக் காந்தி கொண்ட அந்தக் கணையானது தரையில் விழுந்தது. மானோ ஒரு பெரும் காட்டுக்குள் நுழைந்தது, இருப்பினும் மன்னன் {சுமித்திரன்} அதைத் துரத்துவதைத் தொடர்ந்து கொண்டே இருந்தான்” என்றார் {பீஷ்மர்}.(19)
நம்பிக்கை, அல்லது எதிர்பார்ப்பு! – சாந்திபர்வம் பகுதி – 126-மானைத் துரத்தி வந்து பெரும் காட்டில் உள்ள தவசிகளின் ஆசிரமத்தை அடைந்த மன்னன் சுமித்திரன் நம்பிக்கையைக் குறித்து எழும் ஐயத்தை அங்கிருந்த தவசிகளிடம் கேட்டது…
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மன்னன் {சுமித்திரன்}, அந்தப் பெரும் காட்டுக்குள் நுழைந்ததும் தவசிகளின் ஆசிரமம் ஒன்றை வந்தடைந்தான். கடும் அலைச்சலின் விளைவாகக் களைப்படைந்த அவன், ஓய்வெடுப்பதற்காகக் கீழே அமர்ந்தான்.(1) அவன் வில் தரித்திருப்பதையும், அலைச்சலில் களைத்திருப்பதையும், பசித்திருப்பதையும் கண்ட தவசிகள், அவனை அணுகி, அவனுக்கு உரிய மதிப்பை வழங்கினர்.(2) அந்த முனிவர்கள் செலுத்திய கௌரவத்தை ஏற்றுக் கொண்ட மன்னன், அவர்களுடைய தவ முன்னேற்றம் குறித்து விசாரித்தான்.(3) மன்னனின் விசாரிப்புகளுக்கு முறையான பதிலளித்தவர்களும், தவத்தையே தங்கள் செல்வமாகக் கொண்டவர்களுமான அந்த முனிவர்கள், அந்த மனிதர்களில் புலி {சுமித்திரன்} ஆசிரமத்திற்கு வந்த காரணத்தைக் கேட்டனர்.(4)
அவர்கள் {தவசிகள் சுமித்திரனிடம்}, “நீ அருளப்பட்டிருப்பாயாக. கைகளில் வாள், வில் மற்றும் கணைகளுடனும், நடந்தபடியும், எந்த இனிமையான பொருளைத் தேடி இந்த ஆசிரமத்திற்கு வந்தாய்? ஓ! கௌரவங்களை அளிப்பவனே, நீ எங்கிருந்து வருகிறாய் என்பதை நாங்கள் கேட்க விரும்புகிறோம். நீ பிறந்த குலத்தையும், உன் பெயரையும் எங்களுக்குச் சொல்வாயாக” என்று கேட்டனர் {அந்த தவசிகள்}.(6)
ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, ஓ! பாரதா, இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மன்னன், அந்தப் பிராமணர்கள் அனைவரிடமும் தன்னைக் குறித்து முறையாகச் சொல்லும் வகையில்,(7) “நான் ஹைஹய குலத்தில் பிறந்தவன். நான் சுமித்திரன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறேன், மேலும் நான் மித்திரனின் மகனாவேன். நான் மான்கூட்டத்தைத் துரத்தி, ஆயிரக்கணக்கான மான்களை என் கணைகளால் கொன்றிருக்கிறேன். ஒரு பெரும்படை, என் அமைச்சர்கள், என் வீட்டில் உள்ள பெண்கள் ஆகியோரின் துணையுடன் நான் வேட்டைக்காக இங்கே வந்தேன். ஒரு கணையால் நானொரு மானைத் துளைத்தேன். ஆனால் அந்த விலங்கு, தன் உடலில் தைக்கப்பட்ட கணையுடனும் பெரும் வேகத்துடன் ஓடிச் சென்றது.(8,9) குறிப்பிட்ட எந்த நோக்கமும் இல்லாமல் அதைத் துரத்தி வந்த நான், இந்தக் காட்டை அடைந்து, காந்தி இழந்தவனாகவும், அலைச்சலால் களைத்தவனும், நம்பிக்கை {எதிர்பார்ப்பை} இழந்தவனுமாக உங்கள் முன்னிலையில் இருக்கிறேன்.(10)
களைப்படைந்தவனாகவும், அரசக் குறியீடுகளை {ராஜலக்ஷணங்களை} இழந்தவனகாவும், நம்பிக்கை அனைத்தையும் இழந்தவனாகவும் இந்த ஆசிரமத்தை அடைந்திருக்கும் என் நிலையை விட வேறு பரிதாபகரமான நிலை என்ன இருக்க முடியும்?(11) தவசிகளே, அரசக் குறியீடுகளை இழந்ததற்காகவோ, என் தலைநகரில் இருந்து தொலைவாக வந்துவிட்டதற்காகவோ நான் ஒருபோதும் வருந்தவில்லை. எனினும், நம்பிக்கை இழந்திருப்பதன் விளைவாக நான் கடும் துயரை உணர்கிறேன்.(12) மலைகளின் இளவரசனான இமயமும், நீர்நிலைகளின் பரந்த கொள்ளிடமான கடலும்கூட, ஆகாயத்தின் பரந்த அளவை அடைய முடியாது.(13) அதே போலவே, தவசிகளே, நம்பிக்கையின் {எதிர்பார்ப்பின்} அளவை என்னால் தெளிந்தறிய முடியவில்லை. நீங்கள் அனைத்தையும் அறிந்த நிலையான தவம்மெனும் செல்வத்துடன் கூடியவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் அறியாதது ஏதும் இல்லை.(14) நீங்கள் உயர்ந்த அருளைக் கொண்டவர்களாகவும் இருக்கிறீர்கள். எனவே, என் ஐயத்தை விலக்குமாறு நான் உங்களை வேண்டுகிறேன். மனிதனால் வளர்த்துக் கொள்ளப்படும் நம்பிக்கை, பரந்த ஆகாயம் ஆகிய இரண்டில் எது உங்களுக்கு மிகப் பரந்ததாகத் தோன்றுகிறது?(15)
நம்பிக்கையைப் போல வெல்லப்பட முடியாதது வேறு எது இருக்கிறது என்பதை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்.(16) இது நீங்கள் உரையாடத்தகாதது இல்லை என்றால், அது குறித்த அனைத்தையும் எனக்குத் தாமதமில்லாமல் சொல்வீராக. மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்களே, உரையாடத் தகாத புதிர்கள் எதையும் நான் உங்களிடம் கேட்க விரும்பவில்லை.(17) மேலும் இந்த உரையாடல் உங்கள் தவங்களுக்குத் தீங்கானதாக இருந்தால், நீங்கள் பேச வேண்டும் என நான் விரும்பமாட்டேன். என் கேள்வி உரையாடத் தகுந்தது என்றால்,(18) அந்தக் காரணத்தை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். தவங்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் நீங்கள் இது குறித்த அனைத்தையும் எனக்குப் போதிப்பீராக” என்றான் {மன்னன் சுமித்திரன்}.(19)
ரிஷபர், தனு, வீரத்யும்னன்! – சாந்திபர்வம் பகுதி – 127-ரிஷபரென்ற முனிவர் ஒருவர் தான் தீர்த்தயாத்திரை சென்று வந்தது குறித்தும், பதரியில் தாம் கண்ட முனிவர் தனு மற்றும் மன்னன் வீரத்யும்னன் குறித்தும் மன்னன் சுமித்திரனிடம் விவரித்தது..
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அப்போது அந்த முனிவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தவரும், முனிவர்களில் சிறந்த மறுபிறப்பாளருமான ரிஷபர்[1], சிறிதாகப் புன்னகைத்து இந்த வார்த்தைகளைச் சொன்னார்:(1) “ஓ! மன்னர்களில் புலியே {சுமித்திரனே}, ஓ! தலைவா, புனிதத்தலங்களுக்குப் பயணம் {தீர்த்தயாத்திரை} மேற்கொண்டிருந்தபோது, நரன் மற்றும் நாராயணரின் அழகிய ஆசிரமத்திற்குச் சென்றேன்.(2) பதரி {பத்ரிநாத்} என்றழைக்கப்படும் ஓர் இனிமையான இடம் இருக்கிறது. அங்கே (புனிதமான கங்கை பிறந்த) ஆகாயத்தில் ஒரு தடாகமும் இருக்கிறது[2]. ஓ! மன்னா, அங்கே தவசி அஸ்வசிரஸ் {ஹயக்ரீவர்} அழிவில்லாத வேதங்களை (எப்போதும்) படித்துக் கொண்டிருக்கிறார்.(3) அந்தத் தடாகத்தில் தூய்மைச் சடங்குகளை முடித்துக் கொண்டு, பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் நீர்க்காணிக்கைகளை உரிய சடங்குகளுடன் காணிக்கையளித்த பிறகு நான் ஆசிரமத்திற்குள் நுழைந்தேன்.(4) முனிவர்களான நரனும், நாராயணனும் அந்த ஆசிரமத்திற்குள் எப்போதும் தங்கள் நேரத்தை உண்மையான இன்பத்துடன் கடத்துகிறார்கள்[3]. அந்த இடத்தில் அருகிலேயே நான் வசிப்பதற்காக மற்றொரு ஆசிரமத்திற்குச் சென்றேன்.(5)
அங்கே அமர்ந்திருந்த போது, மிக நெடியவரும், தோலாடையும் மரவுரியும் அணிந்திருப்பவரும், மெலிந்திருப்பவருமான ஒரு முனிவர் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். தவமெனும் செல்வத்தைக் கொண்ட அவர் தனு என்ற பெயரைக் கொண்டவராவார்.(6) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, வேறு மனிதர்களை ஒப்பிடுகையில் அவரது {தனுவின்} உயரம் எட்டு மடங்கு பெரியதாகத் தெரிந்தது. ஓ! அரசமுனியே {சுமித்திரனே}, அவரது மெலிந்த உடலைப் பொறுத்தவரையில், அதபோன்றதொரு உடலை நான் இதுவரை கண்டதில்லை.(7) ஓ! மன்னா, அவரது உடல் ஒருவனின் சுண்டுவிரல் அளவுக்கு மெலிதாக இருந்தது. அவரது கழுத்து, கரங்கள், கால்கள் மற்றும் முடி ஆகியன இயல்புக்குமீறிய தன்மைகளுடன் இருந்தன.(8) அவரது தலையானது அவரது உடலின் அளவுக்குத் தகுந்ததாகவும், அவரது காதுகளும், கண்களும் அதே போலவும் இருந்தன. ஓ! மன்னர்களில் சிறந்தவனே, அவரது பேச்சும், அசைவுகளும் பலவீனமாகவே இருந்தன.(9) மிக மெலிந்தவரான அந்தப் பிராமணரைக் கண்ட நான், உற்சாகத்தை இழந்தவனாகவும், அச்சமடைந்தவனாகவும் ஆனேன். அவரது பாதத்தை வணங்கிய நான், அவர் முன்பு குவிந்த கரங்களுடன் நின்றேன்.(10)
ஓ! மனிதர்களுள் காளையே {சுமித்திரா}, அவரிடம் என் பெயரையும், என் குடும்பத்தையும், என் தந்தையின் பெயரையும் அவருக்குச் சொன்னபிறகு, அவரால் குறிப்பிடப்பட்ட ஓர் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.(11) ஓ! ஏகாதிபதி, அப்போது, அறவோரில் முதன்மையானவரான தனு, அங்கே வசித்து வந்த முனிவர்களுக்கு மத்தியில் அறம் மற்றும் பொருள் சம்பந்தப்பட்டவற்றைக் குறித்து உரையாடத் தொடங்கினார்.(12) அந்த உரையாடலில் ஈடுபட்டிருந்தபோது, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், படைகள் மற்றும் தன் வீட்டுப் பெண்மணிகள் ஆகியோரின் துணையுடன் கூடியவனுமான ஒரு மன்னன் வேகமான குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் அந்த இடத்திற்கு வந்தான்.(13) அந்த மன்னனின் பெயர் வீரத்யும்னன் ஆகும். அழகிய பண்புகளைக் கொண்ட அவன், பெரும் குழைக் கொண்டவனாக இருந்தான். அவனுடைய மகனின் பெயர் பூரித்யும்னன் ஆகும். அந்தப் பிள்ளை தொலைந்து போகவும், உற்சாகமிழந்த அவனுடைய தந்தை, தொலைந்து போனவனைத் தேடிக் காடுகளில் அலைந்தபடியே,(14) “நான் இங்கே என் மகனைக் கண்டுவிடுவேன்! நான் இங்கே என் மகனைக் கண்டுவிடுவேன்” என்று நம்பிக்கொண்டே அந்தக்காலத்தில் அந்தக் காட்டில் திரிந்து கொண்டிருந்தான்.(15)
அந்த மெலிந்த முனிவரிடம் பேசிய அவன், “உயர்ந்த அறவோனான என் மகனைக் கண்டுபிடிப்பது நிச்சயம் மிகக் கடினமானதாகவே இருக்கிறது. ஐயோ, அவன் என் ஒரே மகனாவான். தொலைந்து போன அவனை எங்கும் காண முடியவில்லை.(16) அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லையாயினும், கண்டுபிடித்துவிடுவோம் என்ற என்ற நம்பிக்கை {எதிர்பார்ப்பு} மிகப் பெரியதாக இருக்கிறது. உண்மையில் மரணத் தருவாயில் இருக்கும் நான், (தொடர்ந்து தவறினாலும்) அந்தத் நம்பிக்கையால் {எதிர்பார்ப்பால்} நிறைந்திருக்கிறேன்” என்றான்.(17)
மன்னின் இந்த வார்த்தைகளைக் கேட்டவரும், முனிவர்களில் முதன்மையானவரும், புனிதமானவருமான தனு, தலையைத் தொங்கவிட்டபடியே தியானத்தில் தம்மைப் புதைத்துக் கொண்டு, சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.(18) தியானத்தில் புதைந்திருக்கும் அவரைக் கண்ட மன்னன், உற்சாகத்தைப் பெரிதும் இழந்தான். பெருந்துயரத்தில் மெதுவாகவும், மென்மையாகவும் பேசத் தொடங்கிய அவன்,(19) “ஓ! தெய்வீக முனிவரே, எது வெல்லப்பட முடியாதது? மேலும் எது நம்பிக்கையை விடப் பெரியது? ஓ! புனிதமானவரே, நான் கேட்பது முறையற்றதாக இல்லையென்றால் {முறையானதென்றால்}, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(20)
அதற்கு அந்த முனிவர் {தனு, மன்னன் வீரத்யும்னனிடம்}, “புனிதமான பெரும் முனிவர் ஒருவர் உன் மகனால் அவமதிக்கப்பட்டார். அவன் தன் தீயூழின் மூலமும், தன் மூட அறிவினால் உந்தப்பட்டும் அதைச் செய்துவிட்டான்.(21) அந்த முனிவர் உன் மகனிடம், ஒரு தங்கத்தாலான கொள்கலன் ஒன்றையும், மரவுரியையும் கேட்டார். உன் மகனோ அவமதிக்கும் வகையில், அந்தத் தவசியை நிறைவு செய்ய மறுத்தான்.(22) உன் மகனால் இவ்வாறு நடத்தப்பட்ட அந்தப் பெரும் தவசி ஏமாற்றமடைந்தார்” என்றார்.
இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மன்னன், உலகம் அனைத்தாலும் வழிபடப்படும் அந்தத் தவசியை வழிபட்டான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, அற ஆன்மா கொண்ட அந்த வீரத்யும்னன், நீ இப்போது இருப்பதைப் போலவே களைப்புடன் அங்கே அமர்ந்திருந்தான்.(23) பதிலுக்கு அந்தப் பெரும் முனிவரும், கானகவாசிகள் நோற்கும் சடங்குகளின்படி, மன்னனின் காலைக் கழுவிக் கொள்ள நீரும், வழக்கமான பொருட்களைக் கொண்ட அர்க்கியத்தையும் அவனுக்குக் கொடுத்தார்.(24) அப்போது, ஓ! மனிதர்களில் புலியே, துருவ நட்சத்திரத்தைச் சூழ்ந்திருக்கும் நட்சத்திரக் கூட்டங்களைப் போல அந்த மனிதர்களில் காளையைச் சுற்றிலும் முனிவர்கள் அனைவரும் அமர்ந்தனர்.(25) பிறகு அவர்கள், அந்த வெல்லப்பட முடியாத மன்னன் அந்த ஆசிரமத்திற்கு வந்ததற்கான காரணத்தை அவனிடம் கேட்டனர்” என்றார் {ரிஷபர்}.(26)
எதிர்பார்ப்பைத் துறப்பாயாக! – சாந்திபர்வம் பகுதி – 128-மன்னன் வீரத்யும்னனுக்கும் தனு என்ற முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலை மன்னன் சுமித்திரனுக்குச் சொன்ன முனிவர் ரிஷபர்; ரிஷபரின் வார்த்தைகளை யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக்காட்டிய பீஷ்மர்…
{ரிஷபர் மான் வேட்டையாட வந்த மன்னன் சுமித்திரனிடம் தொடர்ந்தார்}, “மன்னன் {வீரத்யும்னன் தவசி தனுவிடம்}, “நான் வீரத்யும்னன் என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு மன்னனாவேன். என் புகழ் திசைகள் அனைத்திலும் பரவியிருக்கிறது. என் மகன் பூரித்யும்னன் காணாமல் போனான். அவனைத் தேடியே நான் இந்தக் காட்டுக்கு வந்திருக்கிறேன்.(1) பிராமணர்களில் முதன்மையானோரே, அந்தப் பிள்ளை என் ஒரே மகனாவான். பாவமற்றவர்களே, வயதில் அவன் மிகவும் இளையவனாவான். எனினும், அவனை இங்கும் காண முடியவில்லை. அவனைக் காணவே நான் எங்கும் திரிந்து வருகிறேன்” என்றான்”.(2)
ரிஷபர் {சுமித்திரனிடம்} தொடர்ந்தார், “மன்னன் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், தவசி தனு தமது தலையைத் தொங்கவிட்டார். அவர் பதிலாக எந்த ஒரு வார்த்தையையும் சொல்லாமல் முற்றிலும் அமைதியாக இருந்தார்.(3) முற்காலத்தில் அந்தப் பிராமணர், இந்த மன்னனால் கௌரவிக்கப்படாதவராவார். ஓ! ஏகாதிபதி, ஏமாற்றமடைந்திருந்த அவர், அந்தக் காரணத்திற்காகவே நெடுங்காலம் கடுந்தவம் இருந்தார்;(4) மன்னர்கள் எவரிடம் இருந்தோ, வேறு எந்த வகையினரிடம் இருந்த கொடையாக எதையும் ஒருபோது ஏற்பதில்லை என்று தமது மனத்திற்குள் தீர்மானித்துக் கொண்டார்.(5)
அவர் தமக்குள்ளேயே, “மூட அறிவு கொண்ட ஒவ்வொரு மனிதனையும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு} கலங்கடிக்கிறது. நான் என் மனத்திலிருக்கும் நம்பிக்கையை {எதிர்பார்ப்பை} அகற்றுவேன்” என்று தீர்மானித்தார். இதுவே அவரது தீர்மானமாக இருந்தது. வீரத்யும்மன் அந்தத் தவசிகளில் முதன்மையானவரிடம் மீண்டும் இந்த வார்த்தைகளில் கேள்வியைக் கேட்டான்.(6)
மன்னன் {வீரத்யும்னன் தவசி தனுவிடம்}, “நம்பிக்கையுடைய மெலிவின் அளவென்ன? இந்த உலகில் அடைவதற்கு மிகக் கடினமானது எது? ஓ! புனிதமானவரே, அறநெறி மற்றும் பொருளை நன்கறிந்திருப்பதால், இவை யாவற்றையும் நீர் எனக்குச் சொல்வீராக?” என்று கேட்டான்”.(7)
ரிஷபர் {மன்னன் சுமித்திரனிடம்} தொடர்ந்தார், “புனிதமானவரும், மெலிந்த உடலைக் கொண்டவருமான அந்த முனிவர் {தனு}, (மன்னனிடம் தான் அடைந்த அவமானம் குறித்த) கடந்த கால நினைவுகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்து, மன்னனுக்கும் அவற்றைத் திரும்ப நினைவுப்படுத்திப் பின்வரும் வார்த்தைகளை அவனிடம் சொன்னார்:(8)
அந்தத் தவசி {தனு மன்னன் வீரத்யும்னனிடம்}, “ஓ! மன்னா, மெலிந்ததில் நம்பிக்கைக்கு {எதிர்பார்ப்புக்கு} இணையானது வேறேதும் கிடையாது. நான் பல மன்னர்களிடம் வேண்டிக் கேட்டிருக்கிறேன். நம்பிக்கையானது {எதிர்பார்ப்பானது} மனத்தின் முன் நிறுவும் {கொண்டுவரும்} காட்சியைப் போல அடைதற்கரிதான வேறெதுவும் இல்லை எனவும் நான் கண்டிருக்கிறேன்” என்றார்[1].(9மன்னன் {வீரத்யும்னன்}, “ஓ! பிராமணரே, உமது வார்த்தைகளைக் கொண்டு மெலிவு என்றால் என்ன? அவ்வாறல்லாதவை எவை? என்பதைப் புரிந்து கொள்கிறேன்[2]. நம்பிக்கையால் {எதிர்பார்ப்பின் மூலம்} மனத்தின் முன் நிறுவப்படும் காட்சிகள் எவ்வாறு அடைதற்கரியனவாக இருக்கின்றன என்பதையும் புரிந்து கொள்கிறேன். உமது வார்த்தைகள் ஸ்ருதியில் சொல்லப்பட்டவை என்று நான் கருதுகிறேன்.(10) ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, எனினும் என் மனத்தில் ஓர் ஐயம் எழுகிறது. ஓ! தவசியே, என்னால் கேட்கப்படும் உமக்கு, அதை விரிவாக விளக்குவதே தகும்.(11) உமது உடலைவிட மெலிதானது எது? ஓ! புனிதமானவரே, ஓ! தவசிகளில் சிறந்தவரே, இதைக் குறித்துப் பேசுவது முறையென்றால் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(12)அதற்கு அந்த மெலிந்த துறவி {தனு மன்னன் வீரத்யும்னனிடம்}, “வேண்டுபவர்களில் {யாசகர்களில்} மனம் நிறைந்தவனைக் காண்பது மிக அரிதானதாகும். ஒருவேளை, இவ்வுலகில் அப்படிப்பட்ட எவரும் இல்லை என்றே கொள்ளலாம். ஓ! ஐயா, வேண்டும் ஒருவனை ஒருபோதும் அவமதியாதவன் இன்னும் அரிதானவனாவான்.(13) வேண்டுபவர்களுக்கு உறுதி அளித்துவிட்டு, தங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி, அவர்களுக்கு {வேண்டுபவர்களுக்குத்} தகுந்த நன்மையைச் செய்யாத மனிதர்களிடம் வைக்கப்படும் நம்பிக்கையானது என் உடலைவிட மெலிதானதாகும்[3].(14) நன்றியற்ற மனிதர்களிடம் வைக்கப்படும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு}, அல்லது கொடூரன், சோம்பேறி, பிறருக்குத் தீங்கிழைப்பவன் ஆகியோர் மீது வைக்கப்படும் நம்பிக்கையானது என் உடலைவிட மெலிதானதாகும்.(15) ஒரே மகனுடைய தந்தை, தொலைந்து போன, அல்லது தவறவிட்ட தன் மகனைக் காணத் தனக்குள் வளர்த்துக் கொள்ளும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு} என் உடலைவிட மெலிதானதாகும்.(16) ஓ! மன்னா, ஒரு வயதுமுதிர்ந்த பெண் {கிழவி} மகன்களைப் பெறக் கொள்ளும் நம்பிக்கையும், செல்வந்தர்களால் வளர்க்கப்படும் நம்பிக்கையும் என் உடலைவிட மெலிதானதாகும்.(17) வளர்ந்த கன்னியரின் இதயங்களில், திருமணம் குறித்து எவரும் பேசும்போது மட்டும் எழும் நம்பிக்கையானது {எதிர்பார்ப்பானது}, என் உடலைவிட மெலிந்ததாகும்[4]” என்றார் {முனிவர் தனு}.(18)ஓ! ஏகாதிபதி {சுமித்திரா}, இந்த வார்த்தைகளைக் கேட்டு, மன்னன் வீரத்யும்னனும், அவனது வீட்டைச் சேர்ந்த பெண்களும் அந்தப் பிராமணர்களில் காளையின் முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, அவரது பாதத்தைத் தீண்டி தலைவணங்கினர்.(19)
மன்னன் {வீரத்யும்னன்}, “ஓ! புனிதமானவரே, நான் உமது அருளை வேண்டுகிறேன். நான் என் மகனைக் காண விரும்புகிறேன். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, நீர் சொன்னது உண்மையே. நீர் சொன்ன உண்மைகளில் எந்த ஐயமும் இல்லை” என்றான்”.(20)
ரிஷபர் {சுமித்திரனிடம்} தொடர்ந்தார், “அறவோரில் முதன்மையானவரும், புனிதமானவருமான தனு, புன்னகைத்தபடியே, தமது கல்வி மற்றும் தவங்களின் மூலமாக மன்னனின் மகனை {பூரித்யும்னனை} அந்த இடத்திற்குக் கொண்டு வந்தார்.(21) அந்த இளவரசனை அங்கே கொண்டுவரச் செய்த அந்தத் தவசி மன்னனை (அவனது தந்தையைக்) கண்டித்தார்[5]. அப்போது அறவோரில் முதன்மையான அவர் {தவசி தனு}, தம்மையே அற தேவனாக {தர்மதேவனாக} வெளிப்படுத்திக் கொண்டார்.(22) உண்மையில் ஆச்சரியமிக்கத் தமது தெய்வீக வடிவை வெளிப்படுத்திய அவர், கோபம் மற்றும் பழிதீர்க்கும் விருப்பம் ஆகியவற்றில் இருந்து விடுபட்ட இதயத்துடன் அருகில் இருந்த காட்டுக்குள் நுழைந்தார்.(23) ஓ! மன்னா {சுமித்திரா}, இவை யாவற்றையும் நான் கண்டேன். நான் {இப்போது} சொன்ன வார்த்தைகளையும் கேட்டேன். (அந்தத் தவசி குறிப்பிட்டவற்றில் எதையும் விட) மிக மெலிந்ததான உன் நம்பிக்கையை விரட்டுவாயாக” என்றார் {ரிஷபர்}”.(24)பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, உயர் ஆன்ம ரிஷபரால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் சுமித்திரன், தன் இதயத்தில் இருந்ததும், (மெலிந்த தவசியால் குறிப்பிடப்பட்ட எந்த வகை நம்பிக்கையையும் விட) மெலிந்ததுமான நம்பிக்கையை {எதிர்பார்ப்பை} விரைவாகக் கைவிட்டான்.(25) ஓ! குந்தியின் மகனே, நீயும் இந்த என் வார்த்தைகளைக் கேட்டு இமய மலையைப் போல அமைதியடைந்து, அசைவற்றவனாக {உறுதிமிக்கவனாக} இருப்பாயாக.(26) துயரில் மூழ்கியவனான நீ, என்னைக் கேள்வி கேட்டு, நான் சொன்ன பதிலையும் கேட்டாய். ஓ! ஏகாதிபதி, உன் வருத்தங்களை அகற்றிக் கொள்வதே உனக்குத் தகும்” {என்றார் பீஷ்மர்}.(27)
தாய் தந்தை! – சாந்திபர்வம் பகுதி – 129– பெற்றோருக்குப் பணிவிடை செய்வது ஒவ்வொருவரின் கடனை நேர் செய்வதற்குரிய இயல்பு என்று யமன் கௌதம முனிவருக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அமுதத்தைக் குடிப்பவன் போலவே, நீர் சொல்வதைக் கேட்கும் நானும் தாகம் தணியாதவனாக இருக்கிறேன். தன்னறிவைக் கொண்ட ஒருவன், தியானத்தால் ஒருபோதும் தணிவடையாததைப் போலவே, நீர் சொல்வதைக் கேட்பதால் நான் ஒருபோதும் தணிவடையவில்லை.(1) எனவே, ஓ! பாட்டா, அறநெறி குறித்து நீர் மீண்டும் உரைப்பீராக. அறநெறி குறித்த உமது உரையாடல்கள் எனும் அமுதத்தைப் பருகுவதால் என் தாகம் ஒருபோதும் தணிவடையவில்லை” என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்காலத்தில் கௌதமருக்கும், சிறப்புமிக்க யமனுக்கு இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகின்றது.(3) கௌதமர் பாரிபாத்ர {பாரியாத்திர} மலையில் ஒரு பெரிய ஆசிரமத்தைக் கொண்டிருந்தார். அந்த வசிப்பிடத்தில் அவர் எத்தனை வருடங்கள் இருந்தார் என்பதை என்னிடம் கேட்பாயாக. அறுபதாயிரம் {60,000} வருடங்களுக்கு அந்தத் தவசி அந்த ஆசிரமத்திலேயே பல கடுந்தவங்களைச் செய்தார்.(4) ஒரு நாள், ஓ! மனிதர்களில் புலியே, லோகபாலகனான யமன், தூய ஆன்மா படைத்த அந்தத் தவசி கடுந்தவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கே சென்றான். கடுத் தவங்களைச் செயதவரும், கடுந்தவங்களிலேயே எப்போதும் ஈடுபட்டு வருபவருமான அந்தத் தூய்மையான ஆன்மாவை {கௌதமரை} யமன் கண்டான்.(5)
வந்தவன் யமன் என்பதைப் புரிந்து கொண்ட அந்த மறுபிறப்பாள தவசி, கூப்பிய கரங்களுடனும், (அவனது ஆணைகளுக்குக் காத்திருக்கும் வகையில்) அவனை விரைவாக வணங்கி அமர்ந்தார்.(6) தர்மராஜனும் அந்தப் பிராமணக் காளையைக் கண்டு (பதிலுக்கு) முறையாக வணங்கி, தான் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டான்.(7)
கௌதமர் {யமனிடம்}, “ஒருவன் எச்செயல்களைச் செய்வதால் தன் தாய்க்கும், தந்தைக்கும் பட்ட கடனில் இருந்து விடுபடலாம்? மேலும் அடைவதற்கரிதான தூய அருள் கொண்ட உலகங்களை ஒருவன் எவ்வாறு வெல்லலாம்?” என்று கேட்டார்.(8)
யமன் {கௌதமரிடம்}, “ஒருவன், உண்மை என்ற கடமைக்குத் தன்னை அர்ப்பணித்து, தூய்மையையும், தவங்களையும் பயின்று, இடையறாமல் தனது தாய் மற்றும் தந்தையை வழிபட வேண்டும்.(9) ஒருவன், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளை அளிக்கும் குதிரை வேள்விகளையும் செய்ய வேண்டும். இத்தகு செயல்களால் ஒருவன் அற்புதமான (புகழ்) உலகங்களை வெல்லலாம்” என்றான்”.(10)
துன்பகால நடைமுறை! – சாந்திபர்வம் பகுதி – 130-பேராபத்திலும், துயரிலும், நண்பர்களை இழந்த நிலையிலும் மன்னன் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்…
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, நண்பர்களை இழந்தவனும், பல எதிரிகளைக் கொண்டவனும், கருவூலம் தீர்ந்தவனும், துருப்புகளற்றவனுமான ஒரு மன்னனுடைய நடந்தை எவ்வாறு இருக்க வேண்டும்?(1) உண்மையில் அவன், தீய அமைச்சர்களால் சூழப்பட்டிருக்கும்போதும், ஆலோசனைகள் {இரகசியங்கள்} அனைத்தும் வெளிப்படும்போதும், தன் முன்னே உள்ள வழி தெளிவற்று இருக்கும்போதும்,(2) வேறு நாடுகளைத் தாக்கச் செல்லும்போதும், ஒரு பகை நாட்டைக் கலங்கடிப்பதில் ஈடுபட்டிருக்கும்போதும், பலவீனனாக இருந்தும் ஒரு பலமிக்க ஆட்சியாளனுடன் போர் புரியும் போதும் அவனது {மன்னனின்} நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? நாட்டின் காரியங்களில் ஒழுங்கில்லாமல் இருப்பவனும், இடம் மற்றும் நேரத்தின் தேவைகளை அலட்சியம் செய்பவனும், ஒடுக்குமுறையின் விளைவாக அமைதியை ஏற்படுத்த முடியாதவனும், எதிரிகளுக்கு மத்தியில் வேற்றுமையை உண்டாக்க முடியாதவனுமான ஒரு மன்னனின் நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? அவன் தீய வழிமுறைகளின் மூலம் செல்வத்தை அடைய முனைய வேண்டுமா? அல்லது, செல்வத்தை நாடாமல் தன் உயிரை விட வேண்டுமா?” என்று கேட்டான்.(3,4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, கடமைகளை அறிந்தவனான நீ, (கடமைகள் தொடர்பான) ஒரு புதிரைக் குறித்து என்னிடம் கேட்கிறாய்[1].(5) ஓ! யுதிஷ்டிரா, கேளாமல் இந்தக் கடமை குறித்து நான் சொல்லத் துணியேன். அறநெறி மிக நுட்பமானதாகும். ஓ! பாரதக் குலத்தின் காளையே, சாத்திர உரைகளின் துணையுடன் அஃதை ஒருவன் புரிந்து கொள்ள வேண்டும். கேள்விப்பட்டதை நினைவுகூர்வதன் மூலமும், நற்செயல்களைச் செய்வதன் மூலமும், எந்த இடத்திலும் உள்ள எவனும் அறவோனாகலாம் {நல்லோனாகலாம்}.(6) மன்னன், நுண்ணறிவுடன் செயல்படுவதன் மூலம் செல்வத்தை அடைவதில் வெல்லவோ, வெல்லாமலோ போகலாம்[2]. இக்காரியத்தில் உன் கேள்விக்கான பதில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று உன் நுண்ணறிவின் உதவியுடன் நினைத்தப்பார்.(7) ஓ! பாரதா, (துயர்மிக்க {ஆபத்து} காலங்களில்) மன்னர்கள் பெரும் தகுதியையுடைய {புண்ணியத்தையுடைய} எந்த வழிமுறைகளின் மூலம் தங்கள் நடத்தையை அமைத்துக் கொள்கிறார்கள் என்பதைக் கேட்பாயாக. எனினும், உண்மை அறநெறிகளின் நிமித்தமாக, அந்த வழிமுறைகளை அறம்சார்ந்தவை {நல்லவை} என்று நான் சொல்லமாட்டேன்.(8) ஒடுக்குமுறையின் மூலம் கருவூலம் நிரப்பப்பட்டால், அத்தகைய நடத்தையானது மன்னனை அழிவின் விளிம்புக்குக் கொண்டு விடும். இக்காரியம் குறித்துச் சிந்தித்த நுண்ணறிவுமிக்க மனிதர்களின் தீர்மானம் இதுவே ஆகும்.(9) ஒருவன் எந்த வகைச் சாத்திரங்கள், அல்லது அறிவியலை எப்போதும் படிக்கிறானோ, அவை தங்களால் இயன்ற வகையிலான அறிவையே அவனுக்குக் கொடுக்கும். அத்தகையே அறிவே உண்மையில் அவனுக்கு ஏற்புடையதாகிறது.(10)வழிமுறைகளைப் பொறுத்தவரையில், அறியாமையானது புதிய கண்டுபிடிப்புகளில் வெறுமையான நிலைக்கே ஒருவனை வழிவகுக்கும். மேலும், அறிவின் உதவியுடன் வழிமுறைகளைத் தீட்டும் நிலையானது, பெரும்புகழின் ஊற்றுக்கண்ணாக இருக்கும். எந்த ஐயுணர்வையும், எந்த வன்மத்தையும் ஊக்கப்படுத்திக் கொள்ளாமல் இந்த அறிவுரைளைக் கேட்பாயாக[3].(11) கருவூலம் குறைவடைவதன் மூலம், மன்னனின் படைகள் குறைவடைகின்றன. எனவே, நீரில்லா காட்டில் நீரை உண்டாக்கும் ஒருவனைப் போல, மன்னன் (எவ்வழிமுறைகளிலாவது) தன் கருவூலத்தை நிரப்ப வேண்டும்.(12) பழங்காலத்தவரால் பின்பற்றப்பட்ட இந்தப் போலி அறநெறிக்கு ஏற்புடைய வகையில் மன்னன் செயல்பட வேண்டும், நேரம் வரும்போது தன் மக்களிடம் கருணையைக் காட்ட வேண்டும்[4]. இதுவும் ஒரு நித்திய கடமையாகும்.(13) இயன்றவர்களும், தகுந்தவர்களுமான மனிதர்களுக்கு, கடமைகள் ஒரே வகையைச் சார்ந்தவையே. எனினும், துன்ப காலங்களில் ஒருவனுடைய கடமை வேறு வகையைச் சார்ந்ததாகும். செல்வமில்லாமல் ஒரு மன்னன் (தவங்கள் அல்லது அதுபோன்ற செயல்களால்) அறத்தகுதியை ஈட்ட முடியும். எனினும் வாழ்வென்பது, அறத்தகுதியை விட மிக முக்கியமானதாகும். (செல்வமில்லாமல் வாழ்வைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால், செல்வத்தை அடையும் வழியின் குறுக்கே நிற்கும் எந்தத்தகுதியும் நாடப்படக்கூடாது).(14)பலவீனமான மன்னன், எவ்வளவுதான் முயன்றாலும், தன் அறத்தகுதியை மட்டுமே துணையாகக் கொண்டு அதிகாரத்தை அடைய முடியாது. அவன் அறத்தகுதியை மட்டுமே அடைவதால் அவனுக்குரிய நியாயமான வாழ்வாதாரத்தை அவனால் ஒருபோதும் அடையமுடியாது.(15) எனவே, துன்ப கால நடைமுறைகள் சில வேளைகளில் அறநெறிக்கு இசைவற்றதாகவே கருதப்படுகின்றன. எனினும், கல்விமான்கள் அந்த நடைமுறைகள் பாவத்திற்கே வழிவகுக்கின்றன என்று கருதுகிறார்கள்.(16) துன்ப காலம் முடிந்ததும் ஒரு க்ஷத்திரியன் என்ன செய்ய வேண்டும்? (அத்தகைய நேரத்தில்) அவன் தன் தகுதிக்கு அழிவு ஏற்படாதவாறு தன் நடத்தையை அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அவன் தன் எதிரிகளுக்குத் தான் அடிபணியாமல் இருக்கும் வழியில் செயல்பட வேண்டும்[5]. இவையும் அவனது கடமைகளாகவே அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அவன் சோர்வில் மூழ்கக்கூடாது.(17) (துன்ப காலங்களில்) அவன், பிறருடைய தகுதியையோ, தனது தகுதியையோ (அழிவடையும் ஆபத்திலிருந்து) காக்க முயலக்கூடாது. மறுபுறம், அவன் தன்னையே காத்துக் கொள்ள வேண்டும். இதுவே தீர்மானமான முடிவாகும்[6]. கடமைகளை அறிந்தவர்களான பிராமணர்கள், தங்களுக்குரிய கடமைகளில் செயல்திறனுடன் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட இந்த ஸ்ருதி இருக்கிறது. அதே போல, க்ஷத்திரியனைப் பொறுத்தவரையில், கரங்களின் வலிமையே பெரும் உடைமை என்பதால், அவன் உழைப்பில் {முயற்சியில்} செயல்திறன் கொண்டவனாக இருக்க வேண்டும்.(18,19) ஒரு க்ஷத்திரியனுக்கு வாழ்வாதார வழிமுறைகள் இல்லையென்றால், தவசிகளுக்கும் உரியவற்றையும், பிராமணர்களுக்குச் சொந்தமானவற்றையும் தவிர வேறு எதைத்தான் அவன் எடுக்கக்கூடாது? {அதாவது வேறு எதையும் அவன் எடுத்துக் கொள்ளலாம்}.(20)ஒரு பிராமணன், (சாதாரண நேரங்களில்) எவனுக்கு ஒருபோதும் வேள்வி செய்யக்கூடாதோ அவனுக்கே துன்ப காலங்களில் வேள்வி செய்து கொடுக்கலாம், தடைசெய்யப்பட்ட உணவையும் உண்ணலாம் என்பது போல, (துயரில் இருக்கும்) ஒரு க்ஷத்திரியன், தவசிகள் மற்றும் பிராமணர்களைத் தவிர அனைவரிடமும் செல்வத்தை எடுத்துக் கொள்ளலாம் என்பதில் ஐயமில்லை.(21) (எதிரியால்) பீடிக்கப்பட்டு, (தப்பும் வழிமுறைகளை நாடும்) ஒருவனுக்கு எதுதான் முறையற்ற போக்காக இருக்கும்? (நிலவறைக்குள்) அடைபட்டு கிடந்து, (தப்ப முயலும்) ஒரு மனிதனுக்கு எதுதான் முறையற்ற பாதையாக இருக்க முடியும்? ஒரு மனிதன் துன்பத்துக்குள்ளானால், முறையற்ற போக்கின் மூலமும் தப்பலாம்.(22) கருவூலம் மற்றும் படை பலவீனத்தின் விளைவால் ஒரு க்ஷத்திரியன் மிகுந்த அவமானத்தை அடைந்தால், பிச்சைக்கார வாழ்வோ, வைசியத் தொழிலோ, சூத்திரத் தொழிலோ அவனுக்கு விதிக்கப்படவில்லை.(23) போர் மற்றும் வெற்றியின் மூலம் செல்வத்தை அடைவதே தொழிலாக ஒரு க்ஷத்திரியனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. அவன் தன் வகையைச் சேர்ந்த ஒருவனிடம் பிச்சை எடுக்கக்கூடாது. சாதாரண நேரங்களில் முதன்மையாகத் தனக்கு விதிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றும் மனிதன், துன்ப காலங்களில், மாற்று நடைமுறைகளைப் பின்பற்றித் தன்னை ஆதரித்துக் கொள்ள வேண்டும்.(24) துன்ப காலங்களில் சாதாரண நடைமுறைகளைப் பின்பற்ற முடியாது. ஒரு க்ஷத்திரியன் நீதியற்ற, முறையற்ற வழிமுறைகளின் மூலமும் வாழலாம். பிராமணர்களே கூடத் தங்கள் வாழ்வாதாரங்கள் அழிவடையும் போது, அதையே செய்வதைக் காண முடிகிறது.(25)
(அத்தகைய நேரங்களில்) பிராமணர்களே இவ்வாறு நடந்து கொள்ளும்போது, க்ஷத்திரியர்கள் அவ்வாறு செய்வதில் என்ன ஐயமிருக்க முடியும்? உண்மையில் இது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். மனச்சோர்வில் மூழ்காமலும், அழிவடையாமலும் ஒரு க்ஷத்திரியன் செல்வந்தர்களிடம் இருந்து (பலவந்தமாக) தன்னால் முடிந்ததை எடுத்துக் கொள்ளலாம்.(26) க்ஷத்திரியனே மக்களைப் பாதுகாப்பவனும், அழிப்பவனும் ஆவான் என்பதை அறிவாயாக. எனவே, துயரில் இருக்கும் ஒரு க்ஷத்திரியன், (முற்றிலும்) மக்களைக் காக்கும் நோக்கோடு தன்னால் முடிந்ததை (பலவந்தமாக) எடுத்துக் கொள்ள வேண்டும்.(27) ஓ! மன்னா, உலகில் உள்ள எந்த மனிதனாலும், பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைக்காமல் தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ள முடியாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆழ்ந்த கானகத்தில் தனியாக வாழும் தவசி கூட இதற்கு விதிவிலக்கானவரல்ல.(28) ஓ! குருக்களின் தலைவா, ஒரு க்ஷத்திரியன், அதிலும் குறிப்பாக ஆட்சி செய்வதில் விருப்பமுள்ள ஒருவன், விதியைச் சார்ந்து ஒருபோதும் வாழக்கூடாது.(29) மன்னனும் நாடும், எப்போதும் முறையாக ஒருவரையொருவர் காத்துக் கொள்ள வேண்டும். இதுவும் ஒரு நித்திய கடமையாகும்.(30)
நாடு துன்பத்தில் மூழ்கும்போது, மன்னன் தன் உடைமைகள் அனைத்தையும் செலவழித்துப் பாதுகாப்பதால், நாடும் மன்னன் துன்பத்தில் மூழ்கும்போது அவனைப் பாதுகாக்க வேண்டும்.(31) அதிகத் துன்பத்திலும் கூட, கருவூலம், தீயோரைத் தண்டிக்கும் {அரசு} இயந்திரம், படை ஆகியவற்றையும், நண்பர்கள், கூட்டாளிகள், தேவையான பிற அமைப்பினரையும், தன் நாட்டில் உள்ள தலைவர்கள் ஆகியோரையும் மன்னன் கைவிடக்கூடாது.(32) ஒருவன் தன் வித்துகளைக் காப்பதற்காக, அவற்றைத் தன் உணவிலிருந்து கழித்துக் கொள்ள வேண்டும் என்ற கடமையை அறிந்தோர் சொல்கின்றனர்[7]. பெரும் மாயாசக்திகளுக்காக நன்கறியப்பட்டவனான சம்பரனின் உடன்படிக்கையில் இந்த உண்மை குறிப்பிடப்படுகிறது.(33) எந்த மன்னனின் நாடு நலிவுறுகிறதோ, அவனுடைய வாழ்வுக்கு ஐயோ. எந்த மனிதன் வாழ்வாதாரத் தேவைகளுக்காக அந்நிய நாட்டுக்குச் சென்று வாழ்கிறானோ, அவனுடைய வாழ்வுக்கு ஐயோ.(34) கருவூலமும், படையுமே மன்னனின் வேர்களாகும். மேலும் அவனுடைய படையானது, கருவூலத்திலேயே தன் வேரைக் கொண்டுள்ளது. அவனுடைய படையே அனைத்து அறத்தகுதிகளுக்கும் வேராகும். மேலும் அறத்தகுதிகளே அவனுடைய குடிமக்களின் வேராகும்.(35)பிறரை ஒடுக்காமல் ஒருபோதும் கருவூலத்தை நிரப்ப முடியாது. ஒடுக்குமுறையில்லாமல் படையை எவ்வாறு பாதுகாக்க முடியும்? எனவே, மன்னன், துன்ப காலங்களில், கருவூலத்தை நிரப்புவதற்காகத் தன் குடிமக்களை ஒடுக்கினால் எந்தக் குற்றத்தையும் இழைத்தவனாகமாட்டான்.(36) வேள்விகளைச் செய்வதற்காக முறையற்ற செயல்கள் பல செய்யப்படுகின்றன. இந்தக் காரணத்தினால், (துன்ப காலத்தில் தன் கருவூலத்தை நிரப்பும் நோக்குடன்) ஒரு மன்னன் முறையற்ற செயல்களைச் செய்வதால் எந்தக் குற்றத்தையும் இழைத்தவனாகமாட்டான்.(37) செல்வத்தை அடைவதற்காக, (துன்ப காலங்களில்) முறையான நடைமுறைகளையும் தவிர்த்து, வேறு நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. (துன்ப காலங்களில்) அத்தகைய முறையற்ற நடைமுறைகளைப் பின்பற்றவில்லையெனில், தீமையே நிச்சயமான விளைவாக இருக்கும். அழிவுக்காகவும், துயருக்காகவும் இயங்கும் அமைப்புகள் அனைத்தும், செல்வத்தைத் திரட்டுவதற்காகவே அமைந்திருக்கின்றன. ஒரு நுண்ணறிவுமிக்க மன்னன் (அத்தகைய காலங்களில்) இத்தகைய கருத்துகளால் வழிநடத்தப்பட்டு, தன் போக்கைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.(38) வேள்விகளுக்கு விலங்குகளும், பிற பொருட்களும் தேவைப்படுவதைப் போலவே, வேள்விகள் இதயத்தைத் தூய்மைப்படுத்துவதைப் போலவே, விலங்குகள், வேள்விகள் மற்றும் இதயத்தூய்மை ஆகிய அனைத்தும் இறுதி விடுதலைக்கானது {முக்திக்கானது} என்பதைப் போலவே, கொள்கையும், தண்டனையும், கருவூலத்துக்காக இருக்கின்றன, கருவூலம் படைக்காக இருக்கிறது, கொள்கை, கருவூலம் மற்றும் படை ஆகிய மூன்று எதிரிகளை வெல்வதற்காகவும், நாட்டைப் பாதுகாத்து பெருக்குவதற்காகவும் இருக்கின்றன.(39)
நான் இங்கே அறநெறியின் உண்மை வழிகளை எடுத்துரைக்கும் ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லப் போகிறேன். ஒரு வேள்விக் கம்பை {யூபத்தை} அமைப்பதற்காக ஒரு பெரு மரம் வெட்டப்படுகிறது. அதை வெட்டும் போது, அதன் வழியில் குறுக்கிடும் பிற மரங்களும் வெட்டப்படுகின்றன. வீழும் அவையும், அந்த இடத்தில் நிற்கும் பிறரைக் கொல்கின்றன {பிற உயிரினங்கள், அல்லது மரங்களையும் கொல்கின்றன}.(40,41) அதேபோலவே நன்கு நிரம்பிய கருவூலத்தை அமைக்கும் வழியில் குறுக்கே நிற்பவர்களும் கொல்லப்படவே வேண்டும். வேறு வகையில் எவ்வாறு வெற்றியை அடைய முடியும் என்பதை நான் காணவில்லை[8].(42) இம்மை, மறுமை ஆகிய ஈருலகங்களும், உண்மையும், அறத்தகுதியும் செல்வத்தால் அடையப்படுகிறது. செல்வமில்லாத மனிதன் பிணமே ஆவான்.(43) வேள்விகள் செய்வதற்கான செல்வம் எல்லா வழிமுறைகளிலும் அடையப்பட வேண்டும். ஓ! பாரதா, துன்பகாலத்தில் செய்யப்படும் எந்தச் செயலையும் பற்றியிருக்கும் தகுதியின்மையும், பிற நேரத்தில் அதே செயலில் பற்றியிருக்கும் தகுதியின்மையும் ஒன்றல்ல.(44) ஓ! மன்னா, செல்வத்தை அடைவதையும், கைவிடப்படுவதையும் ஒரே மனிதனிடம் காண முடியாது. காட்டில் எந்தச் செல்வந்தனையும் நான் காணவில்லை.(45)
உலகத்தில் உள்ள எந்தச் செல்வத்தை எடுத்துக் கொண்டாலும், “இஃது எனதாகும், இஃது எனதாகும்” என்று சொல்லி ஒவ்வொருவரும் வேறு அனைவருடனும் போட்டியிடுவதே காணப்படுகிறது.(46) ஓ! பகைவர்களை எரிப்பவனே, நாட்டை அடைவதைவிட ஒரு மன்னனுக்குத் தகுதி வாய்ந்தது {புண்ணியம் நிறைந்தது} வேறு எதுவும் இல்லை. சாதாரணக் காலங்களில் தன் குடிமக்களிடம் கடும் தீர்வைகளைச் சுமத்தி அவர்களை ஒடுக்குவது ஒரு மன்னனுக்குப் பாவம் நிறைந்த செயலாகும். எனினும், துன்ப காலங்களில் இது முற்றிலும் வேறுபடும்.(47) கொடைகள், வேள்விகள் மூலம் சிலர் செல்வத்தை அடைகிறார்கள்; தவத்தில் விருப்பமுடைய சிலர், தவங்களின் மூலம் செல்வத்தை அடைகிறார்கள்; சிலர் அதைத் தங்கள் நுண்ணறிவு மற்றும் புத்திசாலித்தனத்தின் உதவியுடன் அடைகிறார்கள்.(48) செல்வமில்லாதவன் பலவீனன் என்று சொல்லப்படும் அதே வேளையில் செல்வந்தன் பலமிக்கவனாகிறான். ஒரு செல்வந்தனால் அனைத்தையும் அடைய முடியும். நன்கு நிரப்பப்பட்ட கருவூலத்தைக் கொண்ட மன்னன் அனைத்தையும் சாதிப்பதில் வெல்வான்.(49) கருவூலத்தைக் கொண்டு ஒரு மன்னனால் அறத்தகுதியை ஈட்ட முடியும், தன் இன்ப விருப்பங்களை நிறைவு செய்து கொள்ள முடியும், இம்மையையும், மறுமையையும் அடைய முடியும். எனினும், கருவூலம் அறத்தின் துணை கொண்டே நிரப்பப்பட வேண்டும், துன்ப காலங்களைத் தவிர்த்து அறமில்லா நடைமுறைகளால் ஒருபோதும் அது {கருவூலம்} நிரப்பப்படக்கூடாது” என்றார் {பீஷ்மர்}.(50)
ராஜதர்மாநுசாஸன உப பர்வம் முற்றும்
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்