Archive for the ‘ஸ்ரீ மஹாபாரதம்’ Category

ஸ்ரீ மஹாபாரதம் –சௌப்திக பர்வம்–சௌப்திக உபபர்வம்–

October 15, 2025

ஆந்தையும் காக்கைகளும்! – சௌப்திக பர்வம் பகுதி – 01-ஆலமரத்தினடியில் அமர்ந்த மூவர்; ஆந்தையொன்று காக்கைகள் பலவற்றைக் கொல்வதைக் கண்ட அஸ்வத்தாமன்; கிருபரையும், கிருதவர்மனையும் விழித்தெழச் செய்து ஆலோசனை கேட்ட அஸ்வத்தாமன்…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த வீரர்கள் {கிருபர், அஸ்வத்தாமன் மற்றும் கிருதவர்மன் ஆகியோர்} ஒன்றாகச் சேர்ந்து தெற்கு திசையை நோக்கிச் சென்றனர். சூரியன் மறையும் நேரத்தில் அவர்கள் (குரு) முகாமின் அருகாமையிலான ஓர் இடத்தை அடைந்தனர்.(1) {பாண்டவர்களைக் குறித்த} அச்சத்தால் மிகவும் பீடிக்கப்பட்ட நிலையில் தங்கள் விலங்குகளை {தங்கள் தேர்களில் இருந்து} விடுவித்தனர். பிறகு ஒரு காட்டை அடைந்து அதற்குள் கமுக்கமாக நுழைந்தனர்.(2) அவர்கள் (குரு) முகாமுக்கு, வெகு தொலைவில் அல்லாமல் அருகிலேயே தங்கினர். பல கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு, சிதைக்கப்பட்டிருந்த அவர்கள் பாண்டவர்களைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டே சூடான நெடுமூச்சுகளைவிட்டுக் கொண்டிருந்தனர்.(3) பிறகு, வெற்றிபெற்ற பாண்டவர்களின் உரத்த கூச்சலைக் கேட்ட அவர்கள், தாங்கள் பின்தொடரப்படுவோம் என்று அஞ்சி கிழக்கு திசையை நோக்கித் தப்பி ஓடினர்.(4) சிறிது நேரம் சென்றதும், அவர்களது விலங்குகளும் களைத்து, அவர்களும் தாகத்தை அடைந்தனர். கோபத்தாலும், பழியுணர்ச்சியாலும் நிறைந்த அந்தப் பெரும் வில்லாளிகள், மன்னனின் படுகொலையால் (உண்டான துயரத்தில்) எரிந்து, அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். எனினும், அவர்கள் சிறிது நேரம் {ஒரு முகூர்த்த காலத்திற்குப் பேசாமல்} ஓய்வெடுத்தனர்” {என்றான் சஞ்சயன்}.(5)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்டவனான எனது மகனை {துரியோதனனை} வீழ்த்திய பீமனின் அருஞ்செயல் நம்பத்தகாததாக இருக்கிறது.(6) ஆண்மையின் உச்சத்தில் இருந்தவனும், வஜ்ரம் போன்ற உடற்கட்டைக் கொண்டவனுமான அவன், எந்த உயிரினத்தாலும் கொல்லப்பட முடியாதவனாவான். ஐயோ, அப்படிப்பட்ட என் மகனே கூடப் போரில் பாண்டவர்களால் வீழ்த்தப்பட்டானே. ஓ! சஞ்சயா, எனது நூறு {100} மகன்களின் படுகொலையைக் கேட்ட பிறகும் ஆயிரந்துண்டுகளாகப் பிளக்காமல் இருக்கும் என் இதயம் வஜ்ரத்தாலானது என்பதில் ஐயமில்லை. ஐயோ, பிள்ளைகளை இழந்த முதிர்ந்த தம்பதியரான என் நிலையும், என் மனைவியின் {காந்தாரியின்} நிலையும் எவ்வளவும் பரிதாபமாக இருக்கப் போகிறதோ. பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} ஆட்சிப்பகுதியில் வசிக்க நான் துணியமாட்டேன்.(7-10)

மன்னனின் தந்தையும், மன்னனுமான என்னால், பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} கீழ்ப்படிந்த அடிமையாக[1] என் நாட்களை எவ்வாறு கழிக்க முடியும்?(11) மொத்த பூமியிலும் அதிகாரம் செலுத்தி, அனைவரின் தலைக்கு மேலும் இருந்த நான், ஓ! சஞ்சயா, இப்போது எவ்வாறு இழிந்த நிலையிலான அடிமையாக {பணியாளாக} வாழ முடியும்?(12) ஓ! சஞ்சயா, தனியொருவனாக முழுமையாக என் நூறு மகன்களைக் கொன்றவனான பீமனின் வார்த்தைகளை என்னால் எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடியும்?(13) உயர் ஆன்ம விதுரனின்  வார்த்தைகள் என்னால் உணரப்படுகின்றன. ஐயோ, ஓ! சஞ்சயா, அந்த வார்த்தைகளை நான் கேட்கவில்லையே.(14) எனினும், என் மகன் துரியோதனன் நியாயமற்ற வகையில் தாக்கி வீழ்த்தப்பட்ட பிறகு, கிருதவர்மன், கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் என்ன செய்தனர்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(15)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா, அவர்கள் வெகு தொலைவுக்குச் செல்லும் முன்பே, மரங்களும், செடிகொடிகளும் நிறைந்த அடர்ந்த கானகம் ஒன்றைக் கண்டு நின்றனர்.(16) அவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, தாகம் தணிக்கப்பட்ட தங்கள் சிறந்த குதிரைகளால் இழுக்கப்பட்ட தேர்களில் அந்தப் பெரும் காட்டிற்குள் நுழைந்தனர்.(17) அந்தக் காடானது, பல்வேறு வகை விலங்குகளும், பல்வேறு இனப் பறவைகளும் நிறைந்ததாக இருந்தது. பல மரங்களாலும், செடிகொடிகளாலும் மறைக்கப்பட்டிருந்த அஃது, ஊனுண்ணும் எண்ணற்ற உயிரினங்களால் மொய்க்கப்பட்டிருந்தது.(18) பல தடாகங்களால் மறைக்கப்பட்டு, பல்வேறு வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அது, நீலத் தாமரைகள் {கருநெய்தல் மலர்கள்} நிறைந்த பல ஓடைகளைக் கொண்டிருந்தது.(19) அந்த அடர்ந்த காட்டுக்குள் நுழைந்த அவர்கள் தங்கள் கண்களைச் சுற்றிலும் செலுத்து, ஆயிரங்கிளைகளைக் கொண்டிருந்த ஒரு பெரும் ஆலமரத்தைக் கண்டனர்.(20)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் முதன்மையான அந்தப் பெரும் தேர்வீரர்கள், அந்த ஆலமரத்தின் நிழலுக்குச் சென்று, அந்தக் காட்டில் அதுவே பெரிய மரம் என்பதைக் கண்டனர்.(21) தங்கள் தேர்களில் இருந்து இறங்கி, தங்கள் விலங்குகளை {குதிரைகளை} விடுவித்த அவர்கள், முறையாகத் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தங்கள் மாலைநேர வேண்டுதல்களைச் சொன்னார்கள்[2]. சூரியன் அஸ்த மலைகளை அடைந்ததும், அண்டத்தின் தாயான இரவும் வந்தாள்.(23) கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் விரவிக் கிடந்த ஆகாயமானது, சித்திர வேலைப்பாடுகளால் அமைந்த ஒரு துணியைப் போல ஒளிர்ந்து, மிக உயர்ந்த இனிமையான காட்சியைத் தந்தது.(24) பகலில் திரிவோர் உறக்கத்தின் ஆளுகைக்குள் இருக்கும்போது, இரவில் திரியும் உயிரினங்கள் தங்கள் விருப்பம்போல ஊளையிடவும், கதறவும் தொடங்கின.(25)-இரவில் திரியும் விலங்குகளின் ஒலி பயங்கரமாக இருந்தது. ஊனுண்ணும் விலங்கினங்கள் மகிழ்ச்சியில் நிறைந்ததும், இரவு அடர்ந்து பயங்கரத் தன்மையை அடைந்தது.(26) அந்த நேரத்தில், துயரிலும், கவலையிலும் நிறைந்தவர்களான கிருதவர்மன், கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் அனைவரும் ஒன்றாக அமர்ந்தனர்.(27) அந்த ஆலமரத்திற்கடியில் அமர்ந்த அவர்கள், குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருதரப்புக்கும் நடந்த அழிவைக் குறித்துத் தங்கள் கவலையை வெளிப்படுத்த தொடங்கினர்.(28) உறக்கத்தின் கனத்தை உணர்ந்த அவர்கள், வெறுந்தரையிலேயே தங்களைக் கிடத்திக் கொண்டனர். அவர்கள் கணைகளால் பெரிதும் சிதைக்கப்பட்டவர்களாகவும், மிகவும் களைத்துப்போனவர்களாகவும் இருந்தனர்.(29) பெருந்தேர்வீரர்களான கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் இருவரும் உறக்கத்திற்கு அடிபணிந்தனர். மகிழ்ச்சிக்குத் தகுந்தவர்களும் துயருக்குத் தகாதவர்களுமான அவர்கள் வெறுந்தரையிலேயே நெடுஞ்சாண் கிடையாக நீண்டு கிடந்தனர்.(30)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உண்மையில், விலைமதிப்புமிக்கப் படுக்கைகளிலேயே எப்போதும் உறங்கியவர்களான அவர்கள் இருவரும், களைப்பாலும், துயரத்தாலும் பீடிக்கப்பட்டு ஆதரவற்ற மனிதர்களைப் போல வெறுந்தரையில் கிடந்தனர்.(31) எனினும், கோபம் மற்றும் பழியுணர்ச்சியின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டவனான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தூங்க முடியாமல் ஒரு பாம்பைப் போல மூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.(32) சினத்தில் எரிந்து கொண்டிருந்த அவனால் உறக்கத்திற்காகத் தனி விழியைத் தட்டக்கூட முடியவில்லை. வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான அவன், அந்தப் பயங்கரக் காட்டின் அனைத்துப் பக்கங்களிலும் தன் விழிகளைச் செலுத்தினான்.(33) அந்தப் பெருந்தேர் வீரன் {அஸ்வத்தாமன்}, பல்வேறு வகை உயிரினங்கள் நிறைந்த அந்தக் காட்டை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, காக்கைகள் நிறைந்த ஒரு பெரும் ஆலமரத்தைக் கண்டான்.(34) அந்த ஆலமரத்தில் ஆயிரக்கணக்கான காக்கைகள் அவ்விரவில் வசித்திருந்தன. ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, அருகில் இருந்த மற்ற காக்கையிடமிருந்து தனித்தனியாகப் பிரிந்து இருந்த அந்தக் காக்கைகள் ஒவ்வொன்றும் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தன.(35)

எனினும், அனைத்துப் பக்கங்களிலும் அப்பறவைகள் பாதுகாப்பாக உறங்கிக் கொண்டிருந்தபோது, பயங்கரத் தன்மை கொண்ட ஆந்தையொன்று {கோட்டான்} அங்கே தோன்றியதை அஸ்வத்தாமன் கண்டான்.(36) பச்சை நிறக் கண்களையும், பழுப்பு நிற இறகுகளையும் கொண்டதும், பெரும் உடல் படைத்ததும், அச்சந்தரும் வகையில் அலறிக் கொண்டிருந்ததுமான அதன் மூக்கு {அலகு} மிகப் பெரியதாகவும், அதன் நகங்கள் மீக நீண்டவையாகவும் இருந்தன. மேலும் அது வந்த வேகமானது கருடனுக்கு ஒப்பானதாக இருந்தது.(37) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இறகுபடைத்த அந்த உயிரினம் {ஆந்தை}, மென்மையான ஒலியையெழுப்பியபடியே அந்த ஆலமரத்தின் கிளைகளைக் கமுக்கமாக அணுகியது.(38) காக்கைகளைக் கொல்வதான அந்த வானுலாவி {ஆந்தை}, அந்த ஆலமரத்தின் கிளைகளில் ஒன்றில் இறங்கி, உறங்கிக் கொண்டிருக்கும் தன் எதிரிகளைப் பெரும் எண்ணிக்கையில் கொன்றது.(39) அது, தன் கூரிய நகங்களால் சிலவற்றின் சிறகுகளைக் கிழித்து, சிலவற்றின் தலைகளை வெட்டி, பலவற்றின் கால்களை முறித்தது. பெரும்பலம் கொண்ட அது தன் கண்ணெதிரே வீழ்ந்த பலவற்றைக் கொன்றது.(40)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அனைத்துப்பக்கங்களிலும் அடர்த்தியாக விரிந்த ஆலமரத்தின் கிளைகளால் மறைக்கப்பட்டிருந்த அந்தத் தரையானது, கொல்லப்பட்ட காக்கைகளின் அங்கங்கள் மற்றும் உடல்களால் நிறைந்தது.(41) பகைவர்களைக் கொல்லும் ஒருவன், தன் விருப்பப்படி பகைவர்களிடம் நடந்து கொண்ட பிறகு மகிழ்வதைப் போலவே காக்கைகளைக் கொன்ற அந்த ஆந்தையும் மகிழ்ச்சியால் நிறைந்தது.(42) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, உயர்ந்த பரிந்துரையாக இரவில் அந்த ஆந்தையால் செய்யப்பட்ட அந்தச் செயலைக் கண்டு, அந்த உதாரணத்தின் ஒளியில் தன் செயல்பாட்டை அமைத்துக் கொள்ள விரும்பி, அதைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான்.(43)

அவன் தனக்குள், “இந்த ஆந்தையானது, போரில் எனக்கொரு பாடத்தைக் கற்பித்திருக்கிறது. எதிரியை அழிக்க முயலும் நான், செயல்படுவதற்குரிய நேரம் வந்துவிட்டது.(44) வெற்றியாளர்களான பாண்டவர்கள் என்னால் கொல்லப்பட முடியாதவர்களாக இருக்கின்றனர். வலிமையையும், விடாமுயற்சியையும் கொண்ட அவர்கள் இலக்கில் துல்லியமும், தாக்குவதில் திறமும் கொண்டிருக்கின்றனர்.(45) எனினும், அவர்களைக் கொல்வதாக மன்னனின் {துரியோதனனின்} முன்னிலையில் நான் சூளுரைத்திருக்கிறேன். சுடர்மிக்க நெருப்புக்குள் விரைந்து செல்லும் ஒரு பூச்சியைப் போலவே, தன்னழிவுக்கான செயலையே இவ்வாறு நான் சூளுரைத்திருக்கிறேன்.(46) நான் அவர்களோடு நியாயமான முறையில் போரிட்டால், நான் என் உயிரை விட வேண்டியதிருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், வஞ்சச் செயல் ஒன்றால் வெற்றி எனதானால், என் எதிரிகள் பேரழிவை அடையக் கூடும்.(47) உறுதியற்ற வழிமுறைகளைவிட, உறுதியான வழிமுறைகளையே சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் மெச்சுகின்றனர்.(48)

இச்செயலால் எத்தகு நிந்தனையும், இழிபெயரும் நேர்ந்தாலும், க்ஷத்திரிய நடைமுறைகளை நோற்கும் ஒரு மனிதன் இதைச் செய்தே ஆக வேண்டும்.(49) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட பாண்டவர்கள், ஒவ்வொரு தருணத்திலும், மிக இழிவான, நிந்தனைக்குரிய, வஞ்சகம் நிறைந்த செயல்களையே மீண்டும் மீண்டும் செய்து வந்தனர்.(50) இக்காரியத்தைப் பொறுத்தவரை, உண்மையைக் காண்பவர்களும், அறம் நோற்பவர்களுமான மனிதர்களால் பாடப்பட்ட உண்மை நிறைந்த குறிப்பிட்ட புராதன வரிகள் கேட்கப்பட்டிருக்கின்றன.(51) அந்த வரிகள் {சுலோகங்கள்}, “எதிரியின் படையினர், களைத்திருந்தாலும், ஆயுதங்களால் காயமடைந்திருந்தாலும், உண்டு கொண்டிருந்தாலும், ஓய்ந்திருந்தாலும், தங்கள் முகாமில் இருந்தாலும் அவர்கள் தாக்கப்பட வேண்டும்.(52) அதே போலவே, அவர்கள் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்தாலும், தலைவர்களற்றவர்களாக இருந்தாலும், பிளந்திருந்தாலும், பிழை செய்த தோற்றத்திலிருந்தாலும் அவர்களிடம் அதே வழிமுறையே பின்பற்றப்பட வேண்டும்” என்று சொல்கின்றன” என்று நினைத்தான் {அஸ்வத்தாமன்}.(53)

இவ்வழியில் சிந்தித்தவனான துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் கொல்லும் தீர்மானத்தை அடைந்தான்.(54) இந்தத் தீய தீர்மானத்தை அமைத்துக் கொண்டு, மீண்டும் மீண்டும் அதைச் செய்வதாகத் தனக்குள் உறுதிப்படுத்திக் கொண்ட அவன், தனது தாய்மாமன் {கிருபர்} மற்றும் போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்} ஆகிய இருவரையும் விழித்தெழச் செய்தான்.(55) சிறப்புமிக்கவர்களும், வலிமைமிக்கவர்களுமான கிருபர் மற்றும் போஜத் தலைவன் {கிருதவர்மன்} ஆகியோர் இருவரும் உறக்கத்திலிருந்து விழித்து, அஸ்வத்தாமனின் திட்டத்தைக் கேட்டனர். வெட்கத்தால் நிறைந்த அவர்கள் இருவரும், தகுந்த மறுமொழியைக் கொடுக்காதிருந்தனர்.(56)

சிறிது நேரம் சிந்தித்த அஸ்வத்தாமன், கண்ணீர் நிறைந்த கண்களுடன், “எவனுக்காக நாம் பாண்டவர்களிடம் பகைமை கொண்டோமோ, பெரும் வலிமை கொண்டவனும், வீரனுமான அந்த மன்னன் துரியோதனன் கொல்லப்பட்டான். பதினோரு அக்ஷௌஹிணி துருப்புகளின் தலைவனாக இருந்தாலும், யாருமற்றவனாகவும், தனியனாகவும் இருந்த அந்தக் களங்கமற்ற ஆற்றலையுடைய வீரன், பீமசேனனாலும், போரில் ஒன்றுகூடியவர்களும், பெரும் எண்ணிக்கையிலானவர்களுமான இழிந்தோர் பலராலும் தாக்கி வீழ்த்தப்பட்டான்.(57,58) புனித நீராட்டைப் பெற்றதும், மணிமுடி தரித்ததுமான ஒருவனுடைய தலையைத் தனது காலால் தீண்டியதன் மூலம், தீயவனான விருகோதரனால் {பீமனால்} மற்றுமொரு தீய செயல் செய்யப்பட்டிருக்கிறது.(59) பாஞ்சாலர்கள் உரக்க முழங்கிக் கொண்டும், கூச்சலிட்டுக் கொண்டும், உரத்தச் சிரிப்பை வெடித்துச் சிரித்துக் கொண்டுமிருக்கின்றனர். மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள், தங்கள் சங்குகளையும், பேரிகைகளையும் முழக்கிக் கொண்டிருக்கின்றனர்.(60) காதுகளுக்கு அச்சத்தைத் தருவதும், சங்கொலிகளுடன் கலந்ததுமான அவர்களது இசைக்கருவிகளின் உரத்த ஒலியானது, காற்றினால் பரவும்படி செய்யப்பட்டுத் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் நிறைத்துக் கொண்டிருக்கிறது.(61) அவர்களது குதிரைகளின் கனைப்பொலிகளும், யானைகளின் பிளிறலும், போர்வீரர்களின் முழக்கமும் உரத்த ஆரவாரத்தை ஏற்படுத்துகின்றன.(62)

மகிழ்ச்சியால் நிறைந்த போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடங்களை நோக்கி அணிவகுத்துச் செல்லும்போது காதுகளைச் செவிடாக்கும் வகையில் உண்டாகும் ஒலியும், அச்சத்தை ஏற்படுத்தும் அவர்களது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும் கிழக்கில் இருக்கும் நம்மை வந்தடைகிறது.(63) தார்தராஷ்டிரர்களில் நாம் மூவர் மட்டுமே அந்தப் பேரழிவிலிருந்து உயிரோடு எஞ்சியிருக்கிறோம் என்ற அளவுக்கும் பாண்டவர்களால் தார்தராஷ்டிரர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பேரழிவானது மிகப் பெரியதாகும்.(64) சிலர் நூறு யானைகளின் பலத்தைக் கொண்டவர்களாகவும், சிலர் அனைத்து ஆயுதங்களில் திறன் பெற்றவர்களாகவும் இருந்தனர். காலம் கொண்டு வந்த மாறுபாடுகளின் தருணமாகவே நான் இதைக் கருதுகிறேன்.(65) உண்மையில், அத்தகு செயல்கள் இந்த முடிவுக்கே வழிவகுக்கும். உண்மையில், பாண்டவர்கள் கடினமான சாதனைகளை அடைந்திருந்தாலும், அந்தச் சாதனைகளின் விளைவு இஃதாகவே இருக்க வேண்டும்[3].(66) திகைப்பினால் {மயக்கத்தினால்} உங்கள் அறிவு உங்களை விட்டு அகலாமல் இருக்குமேயானால், ஆபத்து நிறைந்த இந்த முக்கியக் காரியத்தில் நாம் என்ன செய்தால் சரியாக இருக்கும் என்பதைச் சொல்வீராக” என்றான் {அஸ்வத்தாமன்}.(67)

கிருபர் சொன்ன நல்லாலோசனை! – சௌப்திக பர்வம் பகுதி – 02- அஸ்வத்தாமனால் கேட்கப்பட்ட கிருபர், செயலின் வெற்றி தோல்வி எதனால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதைச் சொல்வது; துரியோதனனின் தீச்செயல்களையும், அதனால் தங்களுக்கு ஏற்பட்ட பேரிடரையும் எடுத்துச் சொல்வது; கிருபர் அஸ்வத்தாமனுக்குச் சொன்ன நல்லாலோசனை…

கிருபர் {அஸ்வத்தாமனிடம்}, “ஓ! பலமிக்கவனே {அஸ்வத்தாமா}, நீ சொன்னதனைத்தையும் நாங்கள் கேட்டோம். எனினும், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, என் வார்த்தைகள் சிலவற்றையும் கேட்பாயாக.(1) விதி மற்றும் முயற்சி ஆகிய இந்த இரண்டு சக்திகளுக்கும் மனிதர்கள் அனைவரும் கட்டுப்பட்டு, அவற்றால் ஆளப்படுகிறார்கள்.(2) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, விதியின் விளைவால் மட்டுமே, அல்லது முயற்சியால் மட்டுமே நமது செயல்பாடுகள் வெற்றியை அடைவதில்லை. அவ்விரண்டின் ஒருங்கிணைப்பிலேயே வெற்றி எழுகிறது.(3) உயர்ந்தவை மற்றும் இழிந்தவை ஆகிய நோக்கங்கள் அனைத்தும் இவ்விரண்டின் ஒருங்கிணைப்பைச் சார்ந்தே இருக்கின்றன. இந்த உலகம் முழுவதிலும், மனிதர்கள் செயல்படுவதும், செயலைத் தவிர்ப்பதும் இவ்விரண்டின் மூலமே நடக்கிறது.(4)

மலையின் மீது மழையைப் பொழியும் மேகங்களால் என்ன விளைவு உண்டாகிறது? உழப்பட்ட நிலத்தில் பொழிவதால் என்ன விளைவுகள் உண்டாகவில்லை?(5) எங்கே விதி மங்கலமாக இல்லாமல், முயற்சி இருக்கிறதோ, எங்கே விதி மங்கலமாயிருந்தும் முயற்சி இல்லையோ அவ்விரண்டு இடங்களும் கனியற்றவையாகும் {பலனற்றவையாகும்}. (அவ்விரண்டின் ஒருங்கிணைப்பு குறித்து) நான் முன்பே சொன்னதுதான் உண்மை[1].(6) நன்கு உழப்பட்ட மண்ணை மழையானது முறையாக நனைத்தால் வித்துகள் பெரும் விளைவுகளை உண்டாக்குகின்றன. மனிதவெற்றியானது இவ்வியல்பைக் கொண்டதே.(7) சிலவேளைகளில், விதியானது, நிகழ்வுகளின் வழிகளைத் தீர்மானித்துக் கொண்டு, (முயற்சிக்காகக் காத்திராமல்) தானே செயல்படுகிறது. இவை அனைத்திற்காகவும்தான், ஞானிகள் திறனின் துணை கொண்டு முயற்சியில் {உழைப்பில்} ஈடுபடுகிறார்கள்.(8) ஓ! மனிதர்களில் காளையே, மனித செயல்களின் அனைத்து நோக்கங்களும், இவ்விரண்டின் துணையாலேயே நிறைவேறுகின்றன. இவ்விரண்டின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டே மனிதர்கள் உழைப்பதாகவோ, {உழைப்பைத்} தவிர்ப்பதாகவோ காணப்படுகிறார்கள்.(9) முயற்சியானது செய்யப்படலாம். ஆனால், அம்முயற்சி விதியின் மூலமே வெற்றியை அடைகிறது. விதியின் விளைவாலேயே, முயற்சியை நம்பி ஒருவன், தன்னைச் செயலில் ஈடுபடுத்திக் கொண்டு வெற்றியை அடைகிறான்.(10)

எனினும், முயற்சியானது, தகுந்த மனிதர்களால் செய்யப்பட்டு, நன்கு நடைமுறைப்படுத்தப்பட்டாலும், விதியின் இசைவின்றிக் கனியை உண்டாக்காமல் போவதும் இவ்வுலகில் காணப்படுகிது.(11) எனவே, மனிதர்களில் சோம்பேறிகளும், அறிவற்றவர்களும்தான் முயற்சியை {உழைப்பை} ஏற்க மறுக்கின்றனர். எனினும், இது ஞானியரின் கருத்தல்ல.(12) செய்யப்பட்ட செயலானது கனியை உண்டாக்காமல் போவது பொதுவாக இவ்வுலகில் காணப்படவில்லை. மேலும், செயலின்மையானது, பெருந்துன்பத்தை உண்டாக்குவதையும் காணமுடிகிறது.(13) எந்த முயற்சியும் செய்யாமல் ஒன்றை அடைபவனும், முயன்ற பிறகு எதையும் அடையாதவனையும் காண முடிவதில்லை.(14) செயலில் எப்போதும் மும்முரமாக இருப்பவன், தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ளவல்லவனாவான். மறுபுறம், சோம்பேறியோ ஒருபோதும் மகிழ்வை அடையமாட்டான். மனிதர்களின் இவ்வுலகில், செயலுக்கு அடிமையாக இருப்போர், எப்போதும் நன்மையை ஈட்டும் விருப்பத்தால் தூண்டப்பட்டவர்களாகவே பொதுவாகக் காணப்படுகிறார்கள்[2].(15)செயலில் அர்ப்பணிப்புக் கொண்ட ஒருவன், தன் நோக்கத்தை அடைவதில் வெற்றி கொண்டாலோ, தன் செயல்களுக்கான கனியை அடையத் தவறினாலோ, எவ்வகையிலும் அவன் நிந்திக்கத்தகுந்தவனாக மாட்டான்.(16) எந்தச் செயலையும் செய்யாமல், செயலின் கனிகளை அனுபவித்துக் கொண்டு, இவ்வுலகில் ஆடம்பரமாகக் காணப்படும் ஒருவன், கேலிக்கும், வெறுப்புக்கும் உள்ளாவது பொதுவாகவே காணப்படுகிறது.(17) செயலைக் குறித்த இவ்விதியை அலட்சியம் செய்யும் ஒருவன், வேறுவகையில் வாழ்வதால், தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது. இதுவே நுண்ணறிவைக் கொண்டோரின் கருத்தாகும்.(18) விதியிருந்தும் கடும் முயற்சியில்லாமை மற்றும் கடும் முயற்சியிருந்தும் விதியில்லாமை ஆகிய இவ்விரண்டு காரணங்களின் விளைவாகவே முயற்சிகள் கனிகளை உண்டாக்குவதில்லை[3].(19) முயற்சியில்லாமல் இவ்வுலகில் எச்செயலும் வெற்றியடையாது. எனினும், தேவர்களை வணங்கி, செயல்பாட்டில் அர்ப்பணிப்பு, திறம் ஆகியவற்றைக் கொண்டு, தன் நோக்கங்களின் நிறைவை வேண்டும் ஒருவன் ஒருபோதும் வீழ்வதில்லை {வெற்றியடையாமல் போவதில்லை}.(20)வெற்றியை விரும்பும் ஒருவன், பெரியோருக்குப் பணிவிடை செய்து, தனக்கு நன்மையானதை வேண்டி, அவர்களது நல்ல ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவனுக்கும் அதே நிலையே ஏற்படுகிறது {அவனும் வெற்றியடையாமல் போவதில்லை}.(21) ஒருவன் முயற்சியில் ஈடுபடும்போது, பெரியோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனிதர்களின் ஆலோசனைகளை எப்போதும் வேண்டிக் கேட்க வேண்டும். இம்மனிதர்களே பிழையற்ற வழிமுறைகளின் வேர்களாவர், மேலும் வெற்றியானது வழிமுறைகளையே நம்பி இருக்கிறது.(22) பெரியோரின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, முயற்சியில் ஈடுபடும் ஒருவன், அம்முயற்சிகளில் இருந்து அபரிமிதமான கனிகளை அறுவடை செய்கிறான்.(23) மதிப்பில்லாமல், (தனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க வல்ல) யாரையும் மதிக்காமல் இருக்கும் மனிதன், விருப்பம், கோபம், அச்சம், பேராசை ஆகியவற்றால் உந்தப்பட்டு, தன் நோக்கங்களின் நிறைவை வேண்டும் போது, விரைவாகத் தன் செழிப்பை இழக்கிறான்.(24)

பொருளில் பேராசை கொண்டவனும், முன்னறிதிறமற்றவனுமான துரியோதனன், ஆலோசனைகளை ஏற்காமல், செரிக்க முடியாத திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மூடத்தனமான முயற்சியைத் தொடங்கினான்.(25) தனது நலன்விரும்பிகள் அனைவரையும் அலட்சியம் செய்து, {அவர்களால்} தடுக்கப்பட்டும், தீயவர்களின் ஆலோசனையை மட்டுமே ஏற்று, நல்ல குணங்கள் அனைத்திலும் தனக்கு மேம்பட்டவர்களான பாண்டவர்களிடம் பகைமை கொண்டான்.(26) தொடக்கத்திலிருந்தே அவன் மிகத் தீயவனாகவே இருந்தான். அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. நண்பர்கள் கேட்டுக் கொண்டதை அவன் செய்யவில்லை. அவை அனைத்தின் காரணமாகவே அவன் இப்போது பேரிடருக்கு மத்தியில் துயரில் எரிந்து கொண்டிருக்கிறான்.(27) நம்மைப் பொறுத்தவரை, அந்த இழிந்த பாவியை நாம் பின்பற்றியதால் நம்மையும் இந்தப் பேரிடர் வந்தடைந்தது.(28) இந்தப் பேரிடர் என் அறிவை எரிக்கிறது. சிந்தனையில் மூழ்கினாலும், நமக்கான நன்மையைக் காண்பதில் நான் தவறுகிறேன்.(29)

{மயக்கத்தினால்} திகைப்படைந்திருக்கும் ஒருவன், தன் நண்பர்களின் ஆலோசனையைக் கேட்க வேண்டும். அத்தகு நண்பர்களிலேயே அவன், தன் அறிவையும், பணிவையும், செழிப்பையும் கொண்டிருக்கிறான்.(30) ஒருவனின் செயல்பாடுகள் அவர்களிலேயே வேர்விட்டிருக்க வேண்டும்[4]. நுண்ணறிவுமிக்க நண்பர்கள் சொன்ன ஆலோசனைகளைக் கேட்டுத் தங்கள் அறிவைக் கொண்டு தீர்மானித்து அவற்றை {அந்தச் செயல்பாடுகளைச்} செய்ய வேண்டும்.(31) எனவே, திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் உயர் ஆன்ம விதுரனிடம் சென்று நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் கேட்போம்.(32) நம்மால் கேட்கப்பட்டதும் அவர்கள் என்ன சொல்வார்களோ, அது நமது நன்மைக்கானதாகவே இருக்கும். அவர்கள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். இதுவே எனது உறுதியான தீர்மானமாகும்.(33) நன்கு முயற்சி செய்தும் செயல்கள் வெற்றிபெறாத மனிதர்கள், விதியால் பீடிக்கப்பட்டவர்களாகவே கருதப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை” என்றார் {கிருபர்}”.(34)

அஸ்வத்தாமனின் கொடூரத் திட்டம்! – சௌப்திக பர்வம் பகுதி – 03-கிருபரை மறைமுகமாக நிந்தித்த அஸ்வத்தாமன்; தன் ஆதங்கத்தைக் கிருதவர்மனிடமும், கிருபரிடமும் சொன்னது; அன்றைய இரவில் தான் செய்யப் போகும் கோரச் செயலை அவ்விருவருக்கும் எடுத்துச் சொன்னது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மங்கலமானவையும், அறம் மற்றும் பொருள் நிரம்பியவையுமான கிருபரின் வார்த்தைகளைக் கேட்ட அஸ்வத்தாமன் கவலையிலும், துயரத்திலும் மூழ்கினான்.(1) சுடர்மிக்க நெருப்பைப் போலத் துயரத்தில் எரிந்த அவன், ஒரு தீய தீர்மானத்தை அமைத்துக் கொண்டு, அவர்கள் இருவரிடமும் {கிருபர் மற்றும் கிருதவர்மனிடம்},(2) “வெவ்வேறு மனிதர்களிடம் உள்ள அறிவுப்புலம் வெவ்வேறானவையே. எனினும், ஒவ்வொரு மனிதனும், தன்னறிவில் மகிழ்ச்சி கொள்கிறான்.(3) ஒவ்வொரு மனிதனும் பிறரைவிடத் தன்னை அதிக அறிவு கொண்டவனான கருதிக் கொள்கிறான். ஒவ்வொருவனும் தன்னறிவை மதித்து, அதன்படியே பெரிதாக அதைப் புகழ்ந்து கொள்கிறான்.(4) ஒவ்வொருவரும் தன் ஞானத்தைப் புகழத்தக்க ஒன்றாகக் கருதுகிறான். ஒவ்வொருவனும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிறரின் ஞானத்தைப் பழித்து, தனதை நல்லதாகச் சொல்கிறான்.(5)

பல்வேறு கருத்துகள் இருந்தாலும், ஏதாவது அடையப்படாத நோக்கத்தை ஏற்கும் தீர்மானத்துடன் கூடிய மனிதர்கள், நிறைவை அடைந்து ஒருவரையொருவர் புகழ்ந்து கொள்கிறார்கள்.(6) மேலும் அதே மனிதர்களின் தீர்மானங்கள், காலத்தின் ஆளுகையால் மாறுபட்டு ஒருவரையொருவர் எதிர்க்கவும் செய்கிறார்கள்.(7) மிகவும் குறிப்பாக, மனித அறிவுகளின் பன்முகத்தன்மையின் விளைவால் அறிவு மயக்கமடையும்போது தீர்மானங்கள் வேறுபடுகின்றன[1].(8) ஒரு திறன்மிக்க மருத்துவர், ஒரு நோயை முறையாகக் கண்டறிந்து, அதைக் குணப்படுத்துவதற்காகத் தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு மருந்தைப் பரிந்துரைப்பது போலவே,(9) மனிதர்கள், தங்கள் செயல்களை நிறைவேற்றுவதற்காகத் தங்கள் ஞானத்தின் {அறிவின்} துணையுடன் தங்கள் அறிவைப் {புத்தியைப்} பயன்படுத்துகின்றனர். அவர்கள் செய்வதும் பிறரால் ஏற்கப்படுவதில்லை.(10)இளைஞன் ஒருவன், ஒருவகை அறிவைக் கொண்டிருக்கிறான். அவனே நடுவயதை அடையும்போது, அதே அறிவுக்கு இணங்குவதில்லை, முதுமையில் வேறு வகை அறிவே அவனுக்கு ஏற்புடையதாகிறது.(11) ஓ! போஜர்களின் தலைவா {கிருதவர்மா}, பயங்கரத் துன்பத்தில் வீழும்போதோ, பெருஞ்செழிப்பையடையும்போதோ, ஒருவனது அறிவு மிகவும் பீடிக்கப்படுவதாகத் தெரிகிறது.(12) அதே மனிதன், ஞானமில்லாமையால் {அறிவில்லாமையால்} வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு அறிவை {புத்தியைக்} கொண்டிருக்கிறான். ஒரு நேரத்தில் ஏற்புடைய அறிவானது, வேறு நேரத்தில் முற்றாக மாறுகிறது.(13) எனினும், ஒருவனின் ஞானத்திற்குத் தக்க தீர்மானத்தை அடைந்த பிறகு, சிறப்பான அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றவே முயற்சிக்க வேண்டும். எனவே, அத்தகு தீர்மானமானது அவனை முயற்சி செய்யத் தூண்ட வேண்டும்.(14) ஓ! போஜர்களின் தலைவா, மரணத்தைத் தரக்கூடிய காரியங்களில் கூட, அவற்றைத் தங்களால் அடைய முடியும் என்ற நம்பிக்கையில் மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகச் செயல்படத் தொடங்குகின்றனர்.(15)

தங்கள் தீர்மானங்களையும், ஞானத்தையும் நம்பும் மனிதர்கள் அனைவரும், பல்வேறு நோக்கங்களை நல்லவையாக அறிந்து அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர்.(16) நமக்கு ஏற்பட்ட பேரிடரின் விளைவால் இன்று என் மனத்தை ஆக்கிரமித்த தீர்மானத்தை, என் துயரத்தை அகற்றவல்ல ஒன்றாகக் கருதுகிறேன். உங்கள் இருவருக்கும் அதைச் சொல்கிறேன்.(17) படைப்பாளன், உயிரினங்களைப் படைத்து அவை ஒவ்வொன்றிற்கும் உரிய தொழிலையும் நிர்ணயித்திருக்கிறான். பல்வேறு வகைகளை {வர்ணங்களைப்} பொறுத்தவரையில், அவன் ஒவ்வொன்றுக்கும் சிறப்பான பங்கைக் கொடுத்திருக்கிறான்.(18) பிராமணர்களுக்கு அனைத்துப் பொருட்களிலும் முதன்மையான வேதத்தை நிர்ணயித்திருக்கிறான். க்ஷத்திரியர்களுக்கு மேன்மையான சக்தியை நிர்ணயித்திருக்கிறான். வைசியர்களுக்குத் திறனையும், சூத்திரர்களுக்கு மூவகை வர்க்கங்களுக்குத் தொண்டாற்றும் கடமையையும் நிர்ணயித்திருக்கிறான்.(19) எனவே தன்னடக்கம் இல்லாத ஒரு பிராமணன் நிந்திக்கத் தகுந்தவனாவான். சக்தியற்ற க்ஷத்திரியன் இழிந்தவனாவான். திறனற்ற வைசியனும் (வேறு வகையினரிடம்) பணிவில்லாத சூத்திரனும் இகழத்தக்கவர்களாவார்கள்.(20)

போற்றுதலுக்குரிய உயர்ந்த பிராமணர்களின் குடும்பத்தில் நான் பிறந்தேன். எனினும், தீப்பேற்றால் நான் க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றுபவனானேன்.(21) க்ஷத்திரியக் கடமைகளை அறிந்தவனானதால், இப்போது நான் பிராமணர்களின் கடமையைப் பின்பற்றி (இத்தகு தீங்குகளில் தன்னடக்கத்துடன்) உயர்ந்த நோக்கத்தை அடைந்தால், அவ்வழி பெருமைக்குத் தகுந்ததாக இராது.(22) நான் போரில் சிறந்த வில்லையும், சிறந்த ஆயுதங்களையும் தரிக்கிறேன். என் தந்தையின் படுகொலைக்கு நான் பழிதீர்க்கவில்லை என்றால், மனிதர்களுக்கு மத்தியில் என்னால் எவ்வாறு வாயைத் திறக்க முடியும்?(23) எனவே நான், எந்தத் தயக்கமும் இல்லாமல் க்ஷத்திரியக் கடமைகளை மதித்து என் உயர் ஆன்மத் தந்தை {துரோணர்} மற்றும் மன்னனின் {துரியோதனனின்} அடிச்சுவட்டில் இன்று நடக்கப் போகிறேன்.(24) வெற்றியால் ஊக்கமடைந்திருக்கும் பாஞ்சாலர்கள், தங்கள் கவசங்களை அகற்றி, தாங்கள் அடைந்த வெற்றியை எண்ணி மகிழ்ச்சியடைந்து, களைப்படைந்தவர்களாக இன்றிரவு நம்பிக்கையுடன் உறங்குவார்கள்.(25)

அவர்கள் இவ்விரவில் தங்கள் முகாமில் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் போது, நான் அந்த முகாமில் பயங்கரத் தாக்குதலை நடத்தப் போகிறேன்.(26) தானவர்களைக் கொல்லும் மகவத்தை {இந்திரனைப்} போல நான், தங்கள் முகாமில் உணர்வற்றவர்களாக இறந்தவர்கள் போல உறங்கிக் கொண்டிருக்கும் அவர்களைத் தாக்கி, என் ஆற்றலை வெளிப்படுத்தி அவர்கள் அனைவரையும் கொல்லப் போகிறேன்.(27) வைக்கோல் குவியலை எரிக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போலத் தங்கள் தலைவனான திருஷ்டத்யும்னனின் தலைமையில் ஒரே இடத்தில் கூடியிருக்கும் அவர்கள் அனைவரையும் நான் கொல்லப் போகிறேன். ஓ! மனிதர்களில் சிறந்தவனே {கிருதவர்மா}, அந்தப் பாஞ்சாலர்களைக் கொன்று நான் மன அமைதியை அடையப் போகிறேன்.(28) அந்தப் படுகொலையில் ஈடுபடும்போது, உயிரினங்களுக்கு மத்தியில் திரியும் பினாகைதாரியான ருத்திரனைப் போல நான் அவர்களுக்கு மத்தியில் திரியப் போகிறேன்.(29) இன்று பாஞ்சாலர்கள் அனைவரையும் வெட்டிக் கொன்ற பிறகு, மகிழ்ச்சியுடன் நான் போரில் பாண்டுவின் மகன்களைப் பீடிக்கப் போகிறேன்.(30)

ஒருவர் பின் ஒருவராக அவர்களது உயிர்களை எடுத்து, பாஞ்சாலர்கள் அனைவரின் உடல்களையும் பூமியில் விரவிக் கிடக்கச் செய்து, என் தந்தைக்கு {துரோணருக்கு} நான் பட்டிருக்கும் கடனை அடைக்கப் போகிறேன்.(31) நான் இன்று, துரியோதனன், கர்ணன், பீஷ்மர், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோர் சென்ற கடினமான பாதையில் பாஞ்சாலர்களைப் பின்தொடரச் செய்யப் போகிறேன்.(32) என் வலிமையை வெளிப்படுத்தி, ஏதாவது ஒரு விலங்கின் தலையைப் போலப் பாஞ்சாலர்களின் மன்னனான திருஷ்டத்யும்னனின் தலையை முறிக்கப் போகிறேன்.(33) ஓ !கோதமரின் மகனே {கிருபரே}, உறங்கிக் கொண்டிருக்கும் பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்களின் மகன்களை இன்றைய இரவு போரில் என் கூரிய வாளால் வெட்டப் போகிறேன்.(34) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே {கிருபரே}, இன்றிரவு உறக்கத்தில் மூழ்கியிருக்கும் பாஞ்சாலப்படையை நிர்மூலமாக்கி, என் கடமையைச் செய்தவனாக என்னைக் கருதிக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை அடையப் போகிறேன்” என்றான் {அஸ்வத்தாமன்}.(35)

கிருபர் அஸ்வத்தாமன் உரையாடல்! – சௌப்திக பர்வம் பகுதி – 04-காலையில் போரிடலாம் என்று அஸ்வத்தாமனுக்குச் சொன்ன கிருபர்; தன் இதய வேதனை எத்தகையது என்று கிருபருக்கு எடுத்துரைத்த அஸ்வத்தாமன்…

கிருபர் {அஸ்வத்தாமனிடம்}, “ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உன் இதயம் இன்று பழிவாங்குவதில் நிலைத்திருப்பது நற்பேறாலேயே[1]. வஜ்ரபாணியாலேயே {இந்திரனாலேயே} கூட இன்று உன்னைத் தடுக்க முடியாது.(1) எனினும், காலையில் நாங்கள் இருவரும் உனக்குத் துணையாக வருகிறோம். உனது கவசத்தை அகற்றி, உனது கொடிமரத்தை இறக்கி இன்றிரவு ஓய்வெடுப்பாயாக.(2) நீ எதிரியை எதிர்த்துச் செல்லும்போது, கவசம் பூண்டவர்களான நானும், சாத்வத குலத்தின் கிருதவர்மனும், எங்கள் தேர்களைச் செலுத்திக் கொண்டு உனக்குத் துணையாக வருகிறோம்.(3) ஓ! தேர்வீரர்களில் முதன்மையானவனே, நாம் ஒற்றுமையுடன் நம் ஆற்றலை வெளிப்படுத்தி, நாளைய போரின் அழுத்தத்தில் எதிரிகளான பாஞ்சாலர்களைக் கொல்வோம்.(4) உன் ஆற்றலை வெளிப்படுத்தினால் அந்த அருஞ்செயலை அடைய நீ தகுந்தவனே. எனவே இவ்விரவில் ஓய்ந்திருப்பாயாக. நீ பல இரவுகளாக விழித்திருக்கிறாய்.(5)ஓ! கௌரவங்களை அளிப்பவனே {அஸ்வத்தாமா}, உறங்கி, ஓய்வெடுத்து, சிறிது புத்துணர்வை அடைந்த பிறகு, நீ போரில் எதிரியோடு மோதுவாயாக. அப்போது, நீ எதிரியைக் கொல்வாய் என்பதில் ஐயமில்லை.(6) ஓ! தேர்வீரர்களில் முதல்வனே, முதன்மையான ஆயுதங்களுடன் இருக்கும் உன்னை, தேவர்களில் வாசவனே {இந்திரனே} கூட வெல்லத் துணிய மாட்டான்.(7) கிருபனின் துணையுடனும், கிருதவர்மனால் பாதுகாக்கப்பட்டும் செல்லும் துரோணரின் மகனோடு, அவன் தேவர்களின் தலைவனாகவே இருந்தாலும் கூட எவன் போரிடுவான்?(8) எனவே, இவ்விரவில் உறங்கி ஓய்வெடுத்து, களைப்பையுதறிய பிறகு, நாளை காலையில் நாம் எதிரியைக் கொல்வோம்.(9) நீ தெய்வீக ஆயுதங்களில் திறன் கொண்டவன். நானும் அவ்வாறே என்பதில் ஐயமில்லை. இந்தச் சாத்வதக் குலத்து வீரன் {கிருதவர்மன்}, போரில் எப்போதும் திறன் கொண்ட வலிமைமிக்க வில்லாளியாக இருக்கிறான்.(10)

ஓ! {மரு}மகனே {அஸ்வத்தாமனே}, நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, நம் வலிமையைப் போரில் வெளிப்படுத்தி, கூடியிருப்பவர்களான நம் எதிரிகளைக் கொல்வதில் வெல்வோம். உன் கவலைகளை அகற்றி, இவ்விரவில் ஓய்ந்து, மகிழ்ச்சியாக உறங்குவாயாக.(11) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, நீ எதிரிகளை எதிர்த்து உன் தேரில் செல்லும்போது, விற்களைத் தரித்தவர்களும், எதிரிகளை எரிக்கவல்லவர்களுமான நானும் கிருதவர்மனும் கவசத்தைப் பூண்டு கொண்டு உன்னைப் பின்தொடர்வோம்.(12) எதிரிகளின் முகாமுக்குச் செல்லும் நீ, போரில் உன் பெயரை அறிவித்துக் கொண்டு, அவர்களைப் படுகொலை செய்வாயாக.(13) நாளை காலையில் தெளிவான வெளிச்சத்தில், பெரும் அசுரர்களைக் கொன்ற சக்ரனை {இந்திரனைப்} போல நீ அவர்களுக்கு மத்தியில் பெரும் படுகொலைகளைச் செய்து விளையாடுவாயாக.(14) தானவர்களைக் கொல்பவன் {இந்திரன்}, சினத்தால் தானவப் படையைக் கொல்வதைப் போல நீயும் பாஞ்சாலப்படையை வெல்லத் தகுதவனே.(15)

போரில் என்னோடு சேர்ந்தும், கிருதவர்மனால் பாதுகாக்கப்பட்டும் இருக்கும் நீ வஜ்ரபாணியாலேயே தாக்குப்பிடித்துக் கொள்ளப்பட முடியாதவனாவாய்.(16) நானோ, கிருதவர்மனோ, பாண்டுக்களை வெல்லாமல் போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.(17) கோபக்காரப் பாஞ்சாலர்களைப் பாண்டவர்களோடு சேர்த்துக் கொல்வோம், அல்லது அவர்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்திற்குச் செல்வோம்.(18) எங்கள் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் நாங்கள் இருவரும் நாளை காலையில் போரில் உனக்கு உதவிபுரிவோம். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! பாவமற்றவனே, நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன்” என்றார் {கிருபர்}.(19)

ஓ! மன்னா, தன் தாய்மாமனால் இந்த நன்மையான வார்த்தைகள் சொல்லப்பட்ட போது, அஸ்வத்தாமன் சினத்தில் சிவந்த கண்களுடன், தன் மாமனுக்குப் பதிலளிக்கும் வகையில்,(20) “துன்பத்திலோ, சினத்தின் வசத்திலோ, காமத்தின் ஆதிக்கத்திலோ இருப்பவனும், செல்வத்தை அடைவதற்காக எப்போதும் திட்டங்களைச் சுழற்றும் இதயத்தைக் கொண்டவனுமான ஒருவனால் எங்கு உறக்கத்தை அடைய முடியும்?(21) இந்த நான்கு காரணங்களும் என் வழக்கில் இருப்பதைக் காண்பீராக. இவற்றில் எந்த ஒன்றும் உறக்கத்தை அழித்துவிடும்.(22) தன் தந்தையின் படுகொலையை எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒருவனுடைய இதயத்தின் துயரம் எவ்வளவு பெரியதாக இருக்கும்? இப்போது என் இதயம் இரவும், பகலுமாக எரிந்து கொண்டிருக்கிறது. நான் அமைதியை அடையத் தவறுகிறேன்.(23) குறிப்பாக என் தந்தை, அந்தப் பாவிகளால் எவ்வழியில் கொல்லப்பட்டார் என்பதை நீங்கள் அனைவரும் கண்டீர்கள். அந்தப் படுகொலையைக் குறித்த எண்ணமே என் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் பிளக்கின்றன.(24) பாஞ்சாலர்கள் என் தந்தையைக் கொன்றதாகச் சொல்வதைக் கேட்டும் என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு ஒரு கணமும் வாழமுடியும்?(25)

போரில் திருஷ்டத்யும்னனைக் கொல்லாமல் என் உயிரைத் தாங்கிக் கொள்ளும் எண்ணத்தையேகூட என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என் தந்தை {துரோணர்} படுகொலை செய்யப்பட்டதன் விளைவால் அவனும் {திருஷ்டத்யும்னனும்}, அவனுடன் சேர்ந்திருப்போரும் என்னால் கொல்லத்தக்கவர்களாகிறார்கள்.(26) முறிந்த தொடைகளுடன் கிடக்கும் மன்னனின் {துரியோதனனின்} புலம்பல்களைக் கேட்ட பிறகும், எரியாத கடும் இதயம் கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள்?(27) முறிந்த தொடைகளுடன் கூடிய மன்னனால் {துரியோதனனால்} சொல்லப்பட்ட அத்தகு வார்த்தைகளைக் கேட்ட பிறகும், கண்ணீரால் நிறையாத கருணையற்றவர்கள் யார் இருக்கிறார்கள்?(28) நான் எத்தரப்பினரைச் சேர்ந்தேனோ, அவர்கள் வெல்லப்பட்டார்கள். விரைந்து வரும் நீரானது கடலை அதிகரிப்பது போல இந்த என் எண்ணமே என் கவலையை அதிகரிக்கிறது.(29)

ஓ! மாமா {கிருபரே}, வாசுதேவனாலும் {கிருஷ்ணனாலும்}, அர்ஜுனனாலும் பாதுகாக்கப்படும் அவர்கள் மஹேந்திரனாலும் தடுக்கப்பட முடியாதவர்களாவர் என்று நான் கருதுகிறேன்.(30) என் இதயத்தில் எழும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவனாக நான் இருக்கிறேன். என் கோபத்தைத் தணிக்கக்கூடிய மனிதன் எவனையும் நான் இவ்வுலகில் காணவில்லை.(31) என் நண்பர்களின் தோல்வியையும், பாண்டவர்களின் வெற்றியையும் தூதர்கள் எனக்குத் தெரிவித்தார்கள். அஃது என் இதயத்தை எரிக்கிறது.(32) எனினும், என் எதிரிகள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அவர்களைக் கொன்ற பிறகு, ஓய்வெடுத்துக் கொண்டு, கவலையில்லாமல் உறங்குவேன்” என்றான் {அஸ்வத்தாமன்}.(33)

வாயிலை அடைந்த அஸ்வத்தாமன்! – சௌப்திக பர்வம் பகுதி – 05-உறங்குபவர்களைக் கொல்வது முறையாகாது என்று தடுத்த கிருபர்; அதை மறுத்து இரவிலேயே அவர்களைக் கொல்லப்போவதாகச் சொன்ன அஸ்வத்தாமன்; கிருபரும், கிருதவர்மனும் அஸ்வத்தாமனைப் பின்தொடர்ந்து சென்றது…

கிருபர் {அஸ்வத்தாமனிடம்}, “ஒருவன் பெரியோரிடம் கடமையுணர்வுடன் பணிசெய்பவனாக இருப்பினும், அறிவற்றவனாகவோ, தன் ஆசைகளைக் கட்டுக்குள் வைக்காதவனாகவோ இருப்பின், அவனால் அறக்கருத்துகள் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது. இதுவே என் கருத்து.(1) அதேபோலவே, பணிவில்லாத அறிவாளியும், அறக்கருத்துகளைப் புரிந்து கொள்ளத் தவறுகிறான்.(2) துணிச்சல் கொண்ட ஒரு மனிதன், அறிவற்றவனானால், தன் வாழ்நாள் முழுவதும் கல்விமான்களிடம் பணிவிடை செய்தாலும், (கறியிலேயே {குழம்பிலேயே} மூழ்கியிருந்தாலும்) கறிச்சுவையறியாத மரக்கரண்டியைப்[1] போலவே தன் கடமைகளை அறிவதில் தவறுவான்.(3) எனினும், ஞானியான ஒரு மனிதன் கல்விமானிடம் ஒரு கணம் பணிசெய்தாலும், (கறியைத் தீண்டியதும்) கறிச்சுவையறியும் நாவைப் போலத் தன் கடமைகளை அறிவதில் வெல்கிறான்.(4) அறிவைக் கொண்ட மனிதன், பெரியோரிடம் பணிவிடை செய்து, தன் ஆசைகளைக் கட்டுக்குள் வைத்து, அறநெறிகளின் விதிகளை அறிவதில் வென்று, அனைவராலும் ஏற்கப்பட்டவற்றில் ஒருபோதும் சச்சரவு கொள்ள மாட்டான்.(5)அடங்காதவனும், தொடர்பற்றவனும், தீய ஆன்மா கொண்டவனுமான பாவி, விதியை அலட்சியம் செய்து, தன்னலத்தை நாடினால் பாவத்தையே இழைக்கிறான்.(6) நலம்விரும்பிகள் தனது நண்பனைப் பாவத்தில் இருந்து தடுப்பார்கள். {அவ்வாறு} தடுக்கப்படும் ஒருவன் செழிப்பை வெல்கிறான். வேறுவகையில் செய்பவன் அவல நிலையையே அறுவடை செய்கிறான்.(7) மூளை கலங்கிய ஒருவன், ஆறுதல் தரும் வார்த்தைகளால் தடுக்கப்படுவதைப் போலவே, ஒரு நண்பனும் அவனது நலன்விரும்பிகளால் தடுக்கப்பட வேண்டும். அவ்வாறு தடுக்கப்படுபவன் ஒரு போதும் அவல நிலைக்கு இரையாகமாட்டான்.(8) ஒரு நல்ல நண்பன் தீச்செயலைச் செய்யப்போகும்போது, ஞானம் கொண்ட அவனது நலன் விரும்பிகள் தங்கள் சக்தி கொண்ட மட்டும் மீண்டும் மீண்டும் அவனைத் தடுக்க முயல வேண்டும்.(9) ஓ! {மரு}மகனே {அஸ்வத்தாமனே}, உண்மையில் எது நன்மையானது என்பதில் உனது இதயத்தை நிலைக்கச் செய்து, உன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, பின்னால் நீ வருத்தப்படாத வகையில், நான் சொல்வதைச் செய்வாயாக.(10)

உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களைக் கொல்வது அறவிதிகளுக்கு ஏற்ப இவ்வுலகில் மெச்சப்படுவதில்லை. தங்கள் ஆயுதங்களை வைத்துவிட்டவர்கள், தங்கள் தேர்கள் மற்றும் குதிரைகளில் இருந்து இறங்கியவர்கள் ஆகியோரின் வழக்கிலும் {அவர்கள் கொல்லப்படுவதும்} அவ்வாறே {மெச்சப்படுவதில்லை}.(11) “நாங்கள் உன்னவர்கள்” என்று சொல்பவர்கள், சரணடைந்தவர்கள், கேசம் கலைந்தவர்கள், தாங்கள் ஏறிவந்த விலங்குகள் கொல்லப்பட்டவர்கள், தேர்கள் நொறுக்கப்பட்டவர்கள் ஆகியோரும் கொல்லத்தகாதவர்களே.(12) ஓ! தலைவா {அஸ்வத்தாமா}, பாஞ்சாலர்கள் அனைவரும் தங்கள் கவசங்களை அகற்றிவிட்டு இவ்விரவில் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பார்கள். நம்பிக்கையுடன் உறக்கத்தில் மூழ்கியிருப்பவர்கள், இறந்த மனிதர்களைப் போன்றவர்களாவர்.(13) கோணல்புத்தி கொண்ட எந்த மனிதன் அவர்களிடம் அப்போது பகைமை கொள்வானோ, அவன் தன்னைக் காத்துக் கொள்ள ஒரு தெப்பமும் இல்லாதவனாக ஆழமான எல்லையற்ற நரகில் மூழ்கிப் போவான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(14) இவ்வுலகில் நீ ஆயுதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகக் கொண்டாடப்படுகிறாய். ஒரு சிறு மீறலையும் நீ இதுவரை செய்ததில்லை.(15) அடுத்தச் சூரிய உதயத்தில், அனைத்துப் பொருட்களையும் ஒளி கண்டடையும்போது, பிரகாசம் கொண்ட இரண்டாவது சூரியனைப் போலப் போரில் நீ உன் எதிரிகளை வெல்வாயாக.(16) உன்னைப் போன்ற ஒருவனிடம் இருக்கத் தகாததும், நிந்திக்கத்தக்கதுமான இந்தச் செயலானது, வெண்பரப்பில் சிவப்புப் புள்ளியைப் போலத் தெரியும். இதுவே என் கருத்தாகும்” என்றார் {கிருபர்}.(17)

அஸ்வத்தாமன் {கிருபரிடம்}, “ஓ! அம்மானே {தாய்மாமனே}, நீர் சொல்வது போலத்தான் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. எனினும், அறமெனும் அணையானது இதற்கு முன்பே பாண்டவர்களால் நூறு துண்டுகளாக நொறுக்கப்பட்டுவிட்டது.(13) மன்னர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, உமது கண்களுக்கும் முன்பாகவே, ஆயுதங்களைக் கீழே வைத்த என் தந்தை {துரோணர்}, திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார்.(19) தேர்வீரர்களில் முதன்மையானவனான கர்ணனும், தன் தேர்ச்சக்கரம் பூமியில் புதைந்து, பெரும் துயரில் மூழ்கியிருந்தபோது, காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டான்.(20) அதேபோலவே, சந்தனுவின் மைந்தனான பீஷ்மரும், தன் ஆயுதங்களைக் கீழே வைத்து, ஆயுதமற்றவராக ஆன பிறகு, சிகண்டியைத் தன் முன்னிலையில் கொண்ட அர்ஜுனனால் கொல்லப்பட்டார்.(21) 

அதே போலவே, வலிமைமிக்க வில்லாளியான பூரிஸ்ரவஸ், போர்க்களத்தில் பிராய நோன்பை நோற்றுக் கொண்டிருந்தபோது, மன்னர்கள் அனைவரின் கதறல்களையும் அலட்சியம் செய்தபடியே யுயுதானனால் {சாத்யகியால்} கொல்லப்பட்டார்.(22) பீமனோடு கதாயுதப் போரில் மோதிய துரியோதனனும், பூமியின் தலைவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவனால் {பீமனால்} நியாயமற்ற வகையில் கொல்லப்பட்டான்.(23) தன்னைச் சுற்றி நின்ற பெரும் எண்ணிக்கையிலான வலிமைமிக்கத் தேர்வீரர்களுக்கு மத்தியில் மன்னன் {துரியோதனன்} தனியொருவனாக நின்று கொண்டிருந்தான். அத்தகு சூழ்நிலையிலேயே அந்த மனிதர்களில் புலியானவன் {துரியோதனன்}, பீமசேனனால் கொல்லப்பட்டான்.(24) செய்தி சொல்லும் தூதர்கள் மூலமாக அறிந்தவையும், தொடைகள் முறிந்து பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்த மன்னனுடையவையுமான அந்தப் புலம்பல்களைக் கேட்டு என் இதயத்தின் மையப் பகுதியே பிளக்கிறது.(25)

அறமெனும் அணையை முறித்தவர்களும், நியாயமற்றவர்களும், பாவிகளுமான பாஞ்சாலர்களும் அத்தகையவர்களே {வஞ்சகர்களே}. கருதுகோள்கள் அனைத்தையும் மீறியவர்களான அவர்களை நீர் ஏன் நிந்திக்கவில்லை.(26) இரவில் உறக்கத்தில் புதைந்திருப்பவர்களும், என் தந்தையைக் கொன்றவர்களுமான பாஞ்சாலர்களைக் கொன்ற பிறகு, அடுத்த வாழ்வில் {ஜென்மத்தில்} நான் ஒரு புழுவாகவோ, சிறகு படைத்த பூச்சியாகவோ பிறந்தாலும் எனக்குக் கவலையில்லை.(27) நான் எதைத் தீர்மானித்திருக்கிறேனோ, அஃதை நிறைவேற்ற என்னை அது விரைவுகொள்ளச் செய்கிறது. அதனால் பரபரப்பாக இருக்கும் நான் எவ்வாறு உறக்கத்தையோ, மகிழ்ச்சியையோ அடைய முடியும்?(28) அவர்களை அழிக்க நான் அமைத்திருக்கும் இந்தத் தீர்மானத்தைக் கலங்கடிக்கவல்லவன் இன்னும் பிறக்கவில்லை, இனிமேலும் பிறக்க மாட்டான்” என்றான் {அஸ்வத்தாமன்}”.(29)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளைச் சொன்ன துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, ஒரு மூலையில் இருந்த தன் தேரில் குதிரைகளைப் பூட்டித் தன் எதிரிகள் இருக்கும் திசையை நோக்கிப் புறப்பட்டான்.(30)

அப்போது, உயர் ஆன்மா கொண்டவர்களான போஜனும் {கிருதவர்மனும்}, சரத்வான் மகனும் {கிருபரும்} அவனிடம் {அஸ்வத்தாமனிடம்}, “உன் தேரில் ஏன் குதிரைகளைப் பூட்டுகிறாய்? நீ என்ன செய்யப் போகிறாய்?(31) ஓ! மனிதர்களில் காளையே, நாளை உன்னோடு வருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உன் துன்ப துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். எங்களிடம் நம்பிக்கையின்மை கொள்வது உனக்குத் தகாது” என்றனர்.(32)

தன் தந்தையின் படுகொலையை நினைவுகூர்ந்த அஸ்வத்தாமன், தான் செய்யத் தீர்மானித்திருக்கும் செயலை உண்மையாக அவர்களிடம் சினத்துடன் சொன்னான்.(33) அவன், “நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான போர்வீரர்களைத் தன் கூரிய கணைகளால் கொன்ற என் தந்தை {துரோணர்}, தமது ஆயுதங்களைக் கீழே வைத்தபிறகு திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார்.(34) அவன் {திருஷ்டத்யும்னன்} தன் கவசத்தை அகற்றி இருக்கும் அதே நிலையில், இன்று நான் அவனைக் கொல்லப் போகிறேன். பாஞ்சால மன்னனின் பாவம் நிறைந்த மகனை ஒரு பாவச்செயலால் இன்று கொல்லப் போகிறேன்.(35) ஆயுதங்களால் கொல்லப்பட்டோர் ஈட்டும் உலகங்களைப் பாவியான அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்} அடையாதவாறு, ஒருவிலங்கைப் போல அவனைக் கொல்ல நான் தீர்மானித்திருக்கிறேன்.(36) தாமதமில்லாமல் உங்கள் கவசங்களை அணிவீராக, உங்கள் விற்களையும், வாள்களையும் எடுத்துக் கொள்வீராக. தேர்வீரர்களில் முதன்மையானவர்களே, எதிரிகளை எரிப்பவர்களே, எனக்காக இங்கேயே காத்திருப்பீராக” என்றான் {அஸ்வத்தாமன்}.(37)

இவ்வார்த்தைகளைச் சொன்ன அஸ்வத்தாமன், தன் தேரில் ஏறிக் கொண்டு, எதிரியிருக்கும் திசையை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் இருவரும் அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.(38) அந்த மூவரும் எதிரியை எதிர்த்துச் சென்றபோது, தெளிந்த நெய்யூட்டப்பட்ட சுடர்மிக்க மூன்று வேள்வி நெருப்புகளைப் போல ஒளிர்ந்தனர்.(39) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அவர்கள், முகாமில் உறங்கிக் கொண்டிருந்தவர்களான பாஞ்சாலர்களை நோக்கிச் சென்றார்கள். வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, {முகாமின்} வாயிலை அடைந்ததும் நின்றான்” {என்றான் சஞ்சயன்}.(40)

வாயிலைக் காத்த பூதம்! – சௌப்திக பர்வம் பகுதி – 06-முகாமின் வாயிலை அடைந்த அஸ்வத்தாமன்; அங்கே ஒரு பெரும்பூதத்தைக் கண்டது; அஸ்வத்தாமன் ஏவிய ஆயுதங்கள் அனைத்தையும் அந்தப் பூதம் விழுங்கியது; மஹாதேவனைத் துதிக்க நினைத்த அஸ்வத்தாமன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, முகாமின் வாயிலில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} நின்றதைக் கண்டதும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் இருவரும் என்ன செய்தனர். இதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(1)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கிருதவர்மனையும், வலிமைமிக்கத் தேர்வீரரான கிருபரையும் அழைத்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சினத்தால் நிறைந்து முகாமின் வாயிலை அணுகினான்.(2) அங்கே, பெரும் உடற்கட்டைக் கொண்டதும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தவல்லதும், சூரியன் அல்லது சந்திரனின் பிரகாசத்தைக் கொண்டதுமான ஒரு பூதமானவன் அவ்வாயிலைப் பாதுகாப்பதைக் கண்டான்.(3) அவனது {அந்தப் பூதத்தின்} இடுப்பைச் சுற்றி குருதி சொட்டும் புலித்தோல் இருந்தது. மேலும் அவன் கருப்பு மானை {மானின் தோலை} மேலாடையாக அணிந்திருந்தான். அவன் ஒரு பெரும்பாம்பைத் தன் புனித நூலாக அணிந்திருந்தான்.(4) நீண்டவையாகவும், பருத்தவையாகவும் இருந்த அவனது கரங்கள் பல வகையிலான ஆயுதங்களை உயர்த்திப் பிடித்திருந்தன. அவன் தனது தோள்களைச் சுற்றிலும் ஒரு பெரும்பாம்பை அங்கதமாக {தோள்வளையாக} அணிந்திருந்தான். அவனது வாய் நெருப்பின் தழல்களுடன் எரிந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(5)

அவனது பற்கள் அவனது முகத்தைக் காணப் பயங்கரமானதாகச் செய்தன. அவனது வாய் திறந்திருந்ததாகவும், அச்சந்தருவதாகவும் இருந்தது. அவனது முகமானது ஆயிரக்கணக்கான அழகிய விழிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவனது உடலும், ஆடைகளும் வர்ணிக்க இயலாதவையாக இருந்தன. அவனைக் கண்டால் மலைகளே கூட ஆயிரந்துண்டுகளாகச் சிதறிவிடும்.(7) அவனது வாய், மூக்கு, காதுகள் மற்றும் அந்த ஆயிரக்கணக்கான கண்கள் ஆகியவற்றில் இருந்து சுடர்மிக்க நெருப்பின் தழல்கள் வெளிப்படுவதாகத் தெரிந்தது.(8) அந்தச் சுடர்மிக்கத் தழல்களில் சங்குகள், சக்கரங்கள் மற்றும் கதாயுதங்கள் ஆகியவற்றுடன் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ரிஷிகேசர்கள் {கிருஷ்ணர்கள்} வெளிப்பட்டார்கள்.(9) மொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் அந்த இயல்புக்குமீறிய பூதமானவனைக் கண்ட துரோணர் மகன், எந்தக் கலக்கமும் அடையாமல், தெய்வீக ஆயுதங்களின் மழையால் அவனை  மறைத்தான். எனினும் அந்தப் பூதமானவன், துரோணர் மகனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள் அனைத்தையும் விழுங்கினான்.(10) கடல்நீரை விழுங்கும் வடவா நெருப்பைப் போல, அந்தப் பூதமானவன், துரோணர் மகன் ஏவிய கணைகள் அனைத்தையும் விழுங்கினான்.(11)

தன் கணைமாரி கனியற்றதானதைக் கண்ட அஸ்வத்தாமன், நெருப்பின் தழலைப் போன்ற ஒரு நீண்ட ஈட்டியை {ரதசக்தியை} அவன் மீது ஏவினான்.(12) சுடர்மிக்க முனையைக் கொண்ட அந்த ஈட்டியானது, அந்தப் பூதத்தின் மீது மோதி, யுகமுடிவின்போது, ஒரு பெரும் எரிநட்சத்திரமானது {உற்கையானது} சூரியன் மீது மோதி உடைந்து, ஆகாயத்தில் இருந்து விழுவதைப் போலத் துண்டுகளாக நொறுங்கி விழுந்தது.(13) அப்போது, ஒரு கணத்தையும் இழக்காத அஸ்வத்தாமன், வானின் வண்ணத்தைக் கொண்டதும், தங்கக் கைப்பிடியைக் கொண்டதுமான தன் சிறந்த வாளை உறையில் இருந்து உருவினான். அந்த வாளும், பொந்துக்குள் இருந்து வெளிப்படும் சுடர்மிக்கப் பாம்பைப் போல வெளியே வந்தது.(14) பிறகு, துரோணரின் அந்தப் புத்திசாலி மகன் {அஸ்வத்தாமன்}, அந்தச் சிறந்த வாளை அந்தப் பூதத்தின் மீது வீசினான். அந்தப் பூதத்தை அடைந்த அந்த ஆயுதமானது, பொந்துக்குள் மறையும் கீரிப்பிள்ளையைப் போல, அவனது உடலுக்குள்ளேயே மறைந்து போனது.(15) அப்போது சினத்தில் நிறைந்த துரோணரின் மகன், இந்திரனைக் கௌரவிக்க நிறுவப்படும் கம்பின் {இந்திரத்வஜத்தின்} அளவு உள்ள ஒரு சுடர்மிக்கக் கதாயுதத்தை ஏவினான். அந்தப் பூதமானவன் அதையும் விழுங்கினான்.(16) இறுதியாக, தன் ஆயுதங்கள் அனைத்தும் தீர்ந்து போன அஸ்வத்தாமன், சுற்றிலும் தன் கண்களைச் சுழல விட்டு, மொத்த ஆகாயமும் ஜனார்த்தனின் {கிருஷ்ணனின்} உருவங்களால் அடர்த்தியாக நிறைந்திருப்பதைக் கண்டான்.(17)

ஆயுதங்களை இழந்தவனான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அந்த அற்புதக் காட்சியைக் கண்டு, கிருபரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து, துயரமடைந்து, {தனக்குள்ளேயே}, “அறிவுரை கூறும் நண்பர்களின் நன்மையான வார்த்தைகளைக் கேட்காத ஒருவன், நலன்விரும்பிகள் இருவரை அலட்சியம் செய்த மூடனான என்னைப் போலவே, பேரிடரில் மூழ்கி வருந்த வேண்டியிருக்கும்.(19) சாத்திரங்களில் சுட்டப்பட்டுள்ள வழியை அலட்சியம் செய்து, தன் எதிரிகளைக் கொல்ல முயலும் மூடன், அறத்தின் பாதையில் இருந்து நழுவி, பாவமெனும் பாதையற்ற காட்டில் தொலைந்து போகிறான்.(20) பசுக்கள், பிராமணர்கள், மன்னர்கள், பெண்கள், நண்பர்கள், தன் தாய், தன் ஆசான், பலவீனன், மடையன், குருடன், உறங்கிக் கொண்டிருக்கும் மனிதன், பயந்த மனிதன், உறக்கத்திலிருந்து அப்போதே எழுந்தவன், போதையில் இருப்பவன், பைத்தியக்காரன், மூளையற்றவன் ஆகியோர் மீது ஒருவன் ஆயுதங்களை ஏவக்கூடாது. பழங்காலத்தின் ஆசான்கள் எப்போதும் இந்த உண்மையை மனிதர்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.(21,22) எனினும் நான், சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள அழிவில்லாத வழியை அலட்சியம் செய்து, தவறான பாதையில் நடந்து, இந்தப் பயங்கரத் துயரில் விழுந்திருக்கிறேன்.(23)

ஒரு பெரும் செயலை அடைய முயன்று, அச்சத்தால் ஒருவன் விழுவதை {விலகிப் போவதைப்} பயங்கரப் பேரிடராக ஞானியர் அழைக்கின்றனர்.(24) என் திறன் மற்றும் வலிமையை மட்டுமே வெளிப்படுத்தி, என்னால் நான் கொண்ட சபதத்தை நிறைவேற்ற முடியவில்லை. விதியை விட மனிதமுயற்சி எதிர்பார்த்த பலனைத் தரும் என்று ஒருபோதும் கருதப்படுவதில்லை.(25) தொடங்கப்பட்ட மனிதசெயலெதுவும் விதியால் வெல்லவில்லையென்றால், அதைச் செய்பவன், அறப்பாதையில் இருந்து நழுவி, பாவமெனும் காட்டில் தொலைந்து போகிறவன் ஆகிறான்.(26) ஒரு செயலைத் தொடங்கிவிட்டு, அச்சத்தால் ஒருவன் விலகும்போது அந்தத் தோல்வியை மடமை என்று தவசிகள் சொல்கின்றனர்.(27) என் செயலுடைய தீய தன்மையின் விளைவால் இந்தப் பேரிடர் எனக்கு வந்திருக்கிறது. அல்லது துரோணரின் மகன், போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்கும் நிலை ஏற்பட்டிருக்காது.(28) மேலும், நான் என் முன்னே காணும் இந்தப் பூதமானவன், மிக அற்புதமானவனாக இருக்கிறான். உயர்த்தப்பட்ட தெய்வீக தண்டத்தைப் போலவே அவன் இங்கே நின்று கொண்டிருக்கிறான். இன்னும் ஆழமாகச் சிந்தித்தாலும், இந்தப் பூதத்தை என்னால் அடையாளம் காண முடியவில்லை.(29)

நியாயமற்ற வகையில் நான் அடைய முயன்ற பாவம் நிறைந்த என் தீர்மானத்தின் பயங்கரக் கனியே இந்தப் பூதம் என்பதில் ஐயமில்லை. இவன் என் தீர்மானத்தைக் கலங்கடிக்கவே இங்கே நின்று கொண்டிருக்கிறான்.(30) எனவே, போரில் இருந்து நான் விலகுவது விதியால் விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. விதி என் நோக்கத்திற்குச் சாதகமாகாத வரையில் அஃதை என்னால் நிறைவேற்ற முடியாது.(31) எனவே, இந்நேரத்தில் நான் பலமிக்க மஹாதேவனின் பாதுகாப்பை நாடப்போகிறேன். என் முன்பாக உயர்த்தப்பட்டிருப்பதும், அச்சந்தருவதுமான இந்தத் தெய்வீகத் தண்டத்தை அவன் விலக்குவான்.(32) நன்மையனைத்தின் ஊற்றுக்கண்ணும், கபர்தின் {கபர்தி = அடர்ச்சடையன்} என்றும் அழைக்கப்படுபவனும், மனித மண்டையோடுகளின் மாலையால் அலங்கரிக்கப்பட்டவனும், பகனின் கண்களைப் பிடுங்கியவனும், ருத்ரன் என்றும், ஹரன் என்றும் அழைக்கப்படுபவனும், உமையின் தலைவனுமான அந்தத் தேவனை {சிவனை} நான் சரணடையப் போகிறேன்.(33) தவத்துறவுகள் மற்றும் ஆற்றலில் அவன் தேவர்கள் அனைவரையும் விஞ்சி நிற்பவனாவான். எனவே, திரிசூலபாணியான அந்தக் கிரிசனின் {சிவனின்} பாதுகாப்பை நான் நாடப்போகிறேன்” என்றான் {அஸ்வத்தாமன்}”.(34)

மஹாதேவன் நுழைந்தான்! – சௌப்திக பர்வம் பகுதி – 07-அஸ்வத்தாமனின் மஹாதேவத் துதி; அவன் முன்னே தோன்றிய தங்கமயமான வேள்விப் பீடம்; அஸ்வத்தாமன் சொன்ன ஸர்வபூதோபஹாரத் துதி; இயல்புக்குமீறிய பல பூதங்கள் தோன்றியது; தன்னையே காணிக்கையாக்கிய அஸ்வத்தாமன்; அங்கே தோன்றிய மஹாதேவன் பாஞ்சாலர்களைக் காத்த காரணத்தைச் சொன்னது; அஸ்வத்தாமனுக்கு ஒரு வாளைக் கொடுத்து, அவனையும் தன் சக்தியால் நிறைத்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இவ்வாறு சிந்தித்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் தேர்த்தட்டில் இருந்து கீழே இறங்கி, அந்த உயர்ந்த தலைவனுக்கு {சிவனுக்குத்} தலைவணங்கி நின்றான்.(1) அவன் {அஸ்வத்தாமன்}, “கடுமையானவன், ஸ்தாணு, சிவன், ருத்திரன், சர்வன், ஈசானன், ஈஸ்வரன், கிரிசன் என்று அழைக்கப்படுபவனும், அண்டத்தின் படைப்பாளனும், தலைவனுமான வரங்கொடுக்கும் தேவனும்;(2) நீலமிடறு கொண்டவனும், பிறப்பற்றவனும், சங்கரன் என்று அழைக்கப்படுபவனும், தக்ஷனின் வேள்வியை அழித்தவனும், ஹரன் என்று அழைக்கப்படுபவனும், அண்டமே வடிவானவனும், முக்கண்ணனும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும், உமையின் தலைவனும்;(3) சுடலைகளில் வசிப்பவனும், சக்தியில் பெருகுபவனும், பல்வேறு பூதகணங்களின் தலைவனும், அழியாத செழிப்பு மற்றும் சக்தியைக் கொண்டவனும்; மண்டையோட்டு நுனியுடன் கூடிய தண்டத்தைத் தரிப்பவனும், ருத்திரன் என்று அழைக்கப்படுபவனும், தலையில் சடாமுடி தரிப்பவனும், பிரம்மச்சாரியுமான தேவனின் {சிவனின்} பாதுகாப்பை நான் நாடுகிறேன்.(4), அற்பசக்தியே கொண்டவனான நான், தூய்மைப்படுத்த கடினமானதான என் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, திரிபுரத்தை அழித்தவனைத் துதித்து என்னையே பலியாகக் காணிக்கை அளிக்கிறேன்[1].(5)துதிக்கப்படும் நீ துதிகளுக்குத் தகுந்தவனே, உன் மகிமையை நான் துதிக்கிறேன்.

கலங்காத நோக்கங்கள் கொண்டவன் நீ.

தோலாடை உடுத்தியவன் நீ, செஞ்சடை கொண்டவன் நீ;

நீலத் தொண்டை கொண்டவன் நீ;

தாங்கிக்கொள்ளப்பட முடியாதவன் நீ;

தடுக்கப்பட முடியாதவன் நீ.(6)

தூய்மையானவன் நீ;

பிரம்மனைப் படைத்தவன் நீ;

பிரம்மமும் நீ;

பிரம்மச்சாரியும் நீ;

நோன்புகளை நோற்பவன் நீ;

தவத்துறவுகளில் அர்ப்பணிப்புள்ளவன் நீ;

அளவில்லாதவன் நீ;

தவசிகள் அனைவரின் புகலிடம் நீ;(7)

பல்வேறு வடிவினன் நீ;

பல்வேறு பூதகணங்களின் தலைவன் நீ;

முக்கண்ணன் நீ;

தோழர்கள் {பாரிஷதர்கள்} என்றழைக்கப்படும் பூதங்களுக்கு அன்பானவன் நீ;

பொக்கிஷத் தலைவனால் {குபேரனால்} எப்போதும் காணப்படுபவன் நீ;

கௌரியின் இதயத்துக்கு அன்பானவன் நீ;(8)

குமாரனின் {முருகனின்} தந்தை நீ;

பழுப்பானவன் நீ;

சிறந்த காளைக் கொடியைக் கொண்டவன் நீ;

நுண்ணிய ஆடை உடுத்தியவன் நீ;

மிகக் கடுமையானவன் நீ;

உமையைப் போற்றும் ஆவல் கொண்டவன் நீ;(9)

உயர்ந்தவை அனைத்திற்கும் உயர்ந்தவன் நீ;

தன்னை விட உயர்ந்தவை ஏதுமில்லாதவன் நீ;

ஆயுதங்களைத் தரித்திருப்பவன் நீ;

அளக்கமுடியாதவன் நீ,

அனைத்துப் பகுதிகளையும் பாதுகாப்பவன் நீ;(10)

தங்கக் கவசம் பூண்டவன் நீ;

தெய்வீகமானவன் நீ;

புருவத்தில் ஆபரணமாக நிலவைக் கொண்டவன் நீ.

ஓ! தேவா, குவிந்த கவனத்துடன் நான் உன்னிடம் பாதுகாப்பை நாடுகின்றேன்.(11)

கடப்பதற்கு அரிதான இந்த அச்சந்தரும் துயரில் இருந்து வெளியேறுவதில் வெற்றிபெற, தூய்மையிலும் தூய்மையானவனான உனக்கு, (ஐம்)பூதங்களாலான என் உடலைக் காணிக்கையளிக்கிறேன்” என்றான் {என்று துதித்தான் அஸ்வத்தாமன்}.(12)

தன் நோக்கத்தை அடையும் விருப்பத்தின் விளைவால் ஏற்பட்ட அவனது இந்தத் தீர்மானத்தை அறிந்து, துரோணரின் உயர் ஆன்ம மகனின் {அஸ்வத்தாமனின்} முன்பு தங்கமயமான ஒரு வேள்விப் பீடம் தோன்றியது.(13) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வேள்விப்பீடத்தில், முக்கிய மற்றும் துணைத் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் நிறைத்தபடியே பிரகாசத்துடன் சுடர்மிக்க நெருப்பு தோன்றியது.(14) சுடர்மிக்க வாய்களையும், கண்களையும் கொண்டவர்களும், பல கால்களையும், தலைகளையும், கரங்களையும் கொண்டவர்களும், ரத்தினங்கள் பதிக்கப்பட்ட அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், உயர்த்தப்பட்ட கரங்களுடன் கூடியவர்களும், யானைகளையும், மலைகளையும் போலத் தெரிந்தவர்களுமான பல்வேறு வலிமைமிக்கப் பூதகணங்கள் அங்கே தோன்றினர். அவர்களின் முகங்கள், முயல்கள், பன்றிகள், ஒட்டகங்கள், குதிரைகள், நரிகள் மற்றும் மாடுகளைப் போன்றும்,(15,16) கரடிகள், பூனைகள், புலிகள், சிறுத்தைகள், காக்கைகள், குரங்குகள் மற்றும் கிளிகளைப் போன்றும் இருந்தன.(17) சிலரின் முகங்கள் பெரும்பாம்புகளைப் போலவும், சிலரின் முகங்கள் வாத்துகளைப் போலவும் இருந்தன. ஓ! பாரதரே, சிலரின் முகங்கள் மரங்கொத்திகள், காடைகள்,(18) ஆமைகள், முதலைகள், கடற்பன்றிகள் {சிம்சுமாரங்கள்}, பெரும் சுறாக்கள், திமிங்கலங்கள்,(19) சிங்கங்கள், நாரைகள், புறாக்கள், யானைகள் மற்றும் நீர்க்காக்கைகளைப் போல இருந்தன.(20)

கருங்காக்கைகள், பருந்துகள் போன்ற முகங்களுடன் சிலரும் இருந்தனர். சிலருக்குக் கைகளில் காதுகள் இருந்தன, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிலர் ஆயிரம் கண்களைக் கொண்டிருந்தனர். சிலர் பெரும் வயிறுகளைப் படைத்தவர்களாக இருந்தனர். சிலர் சதையே இல்லாமல் இருந்தனர்.(21) ஓ! மன்னா, சிலருக்குத் தலைகள் இல்லை, ஓ! பாரதரே, சிலருக்கு கரடிகளைப் போன்ற முகங்கள் இருந்தன. சிலரின் கண்கள் நெருப்பைப் போலவும், சிலரின் நிறம் நெருப்பைப் போலவும் இருந்தன.(22) சிலரின் தலைகளிலும், உடல்களிலும் இருந்த முடிகள் சுடர்விட்டுக் கொண்டிருந்தன. சிலர் நான்கு கரங்களைக் கொண்டவர்களாக இருந்தனர். ஓ! மன்னா, சிலரின் முகங்கள் வெள்ளாடுகளையும், செம்மறி ஆடுகளைப் போலவும் இருந்தன.(23) சிலரின் நிறம் சங்குகளைப் போல இருந்தது, சிலரின் முகங்கள் சங்குகளைப் போல இருந்தன, சிலரின் காதுகளும் சங்குகளைப் போல இருந்தன. சங்குகளாலான மாலைகளைச் சிலர் அணிந்திருந்தனர். சிலரின் குரல்கள் சங்கொலியைப் போல இருந்தன.(24) சிலர் மெலிந்த வயிறுகளைக் கொண்டிருந்தனர்; சிலர் நான்கு பற்களைக் கொண்டிருந்தனர்; சிலர் நான்கு நாக்குகளைக் கொண்டிருந்தனர், சிலர் அம்பைகளைப் போன்ற காதுகளைக் கொண்டிருந்தனர். சிலரின் புருவங்களில் கிரீடங்கள் இருந்தன.(25)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிலர் புல்லிழைகளைத் தங்கள் உடல்களில் கொண்டிருந்தனர். சிலரின் முடி சுருள்முடியாக இருந்தது. சிலர் துணியாலான மகுடங்களை அணிந்திருந்தனர், சிலர் சிறு மகுடங்களை அணிந்திருந்தனர். சிலர் அழகான முகங்களைக் கொண்டிருந்தனர், சிலர் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.(26) தாமரைகளாலான ஆபரணங்களைச் சிலர் அணிந்திருந்தனர், மலர்களால் சிலர் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் {பூதங்கள்} நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் இருந்தனர்.(27) சிலர் சதக்னிகளையும், சிலர் வஜ்ரத்தையும், சிலர் தங்கள் கரங்களில் முசலங்களையும் கொண்டிருந்தனர். ஓ! பாரதரே, சிலர் புசுண்டிகளையும், சிலர் சுருக்குக் கயிறுகளையும், சிலர் கதாயுதங்களையும் தங்கள் கைகளில் கொண்டிருந்தனர்.(28) சிலரின் முதுகுகளில் சிறந்த கணைகளைக் கொண்ட அம்பறாத்தூணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் அனைவரும் போரில் கடுமையானவர்களாக இருந்தனர். கொடிகள் மற்றும் மணிகளுடன் கூடிய கொடிமரத்தைச் சிலர் கொண்டிருந்தனர், சிலர் போர்க்கோடரிகளைத் தரித்திருந்தனர்.(29) சிலர் உயர்த்தப்பட்ட தங்கள் கரங்களில் பெரும் சுருக்குக் கயிறுகளைக் கொண்டிருந்தனர். சிலர் தண்டாயுதங்களையும், தடிகளையும் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் கரங்களில் பருமனான கம்புகளைக் கொண்டிருந்தனர், சிலர் வாள்களைக் கொண்டிருந்தனர். சிலர், தங்கள் கிரீடங்களில் நிமிர்ந்த தலை கொண்ட பாம்புகளைக் கொண்டிருந்தனர்.(30)

சிலர், அங்கதங்களுக்குப் பதிலாக (தங்கள் தோள்களைச் சுற்றிலும்) பெரும்பாம்புகளை அணிந்திருந்தனர். சிலர் அழகிய ஆபரணங்களைத் தங்கள் மேனியில் அணிந்திருந்தனர். சிலர் புழுதி படிந்தவர்களாகவும், சிலர் சகதி பூசப்பட்டவர்களாகவும் இருந்தனர். அனைவரும் வெள்ளை உடையும், துணியும் அணிந்திருந்தனர். சிலரின் அங்கங்கள் நீல நிறத்தில் இருந்தன, வேறு சிலரின் அங்கங்களோ பழுப்பு நிறத்திலிருந்தன. அங்கே இருந்த சிலர் தாடியற்றவர்களாக இருந்தனர்.(31) தோழர்கள் {பாரிஷதர்கள்} என்றழைக்கப்பட்ட அவர்கள், தங்க நிறம் கொண்டவர்களாக, மகிழ்ச்சியில் நிறைந்தவர்களாக, பேரிகைகள், சங்கங்கள், மிருதங்கங்கள், ஜர்ஜரங்கள், ஆனகங்கள் கோமுகங்கள் ஆகியவற்றை இசைத்துக் கொண்டிருந்தனர்.(32) சிலர் பாடினர், சிலர் உரத்த ஒலிகளை வெளியிட்டவாறே ஆடிக் கொண்டிருந்தனர், சிலர் தாவினர், குறுக்கே பாய்ந்னர்.(33) பெரும் வேகம் கொண்ட அவர்கள், உரத்த முழக்கங்களைச் செய்தபடியே ஆசையால் மதங்கொண்ட பெரும் யானைகளைப் போலத் தங்கள் தலையில் இருந்த முடிகள் பறக்க மிக மூர்க்கமாக ஓடினர்.(34) அச்சந்தரும் பயங்கர முகங்களுடனும், வேல்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றைத் தரித்தும் இருந்த அவர்கள், பல்வேறு வண்ணங்களில் ஆடைகள் உடுத்தியவர்களாக, அழகிய மாலைகள் மற்றும் களிம்புகளால் அலங்கரிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.(35)

ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அங்கதங்களைக் கொண்டவர்களும், உயர்த்தப்பட்ட கரங்களைக் கொண்டவர்களுமான அவர்கள், பெரும் துணிவையும் கொண்டவர்களாக இருந்தனர். எதிரிகள் அனைவரையும் பலவந்தமாகக் கொல்லவல்ல அவர்கள், ஆற்றலில் தடுக்கப்பட முடியாதவர்களாக இருந்தனர்.((36) இரத்தம், கொழுப்பு மற்றும் விலங்குப் பொருள் ஆகியவற்றைக் குடிப்பவர்களான அவர்கள், விலங்குகளின் இறைச்சியையும், உள்ளுறுப்புகளையும் உண்டு வாழ்ந்து வந்தனர். சிலர் தங்கள் தலைக்கு மேலே நெடு குடுமியாகத் தங்கள் சடைகளைக் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் தலைகளில் ஒற்றைக் குடுமியைக் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் காதுகளில் வளையங்களை அணிந்திருந்தனர். சிலர், சமைப்பதற்குப் பயன்படுத்தும் மண்பாண்டங்களைப் போன்ற வயிறுகளைக் கொண்டிருந்தனர்.(37) சிலர், உடற்கட்டில் மிகக் கட்டையானவர்களாகவும், சிலர் மிக உயர்ந்தவர்களாகவும் இருந்தனர். சிலர் நெடியவர்களாகவும், மூர்க்கர்களாகவும் இருந்தனர். சிலர் பயங்கரத் தன்மைகளைக் கொண்டிருந்தனர். சிலர் பெரிய உதடுகளைக் கொண்டிருந்தனர், சிலரின் பிறப்புறுப்புகள் மிக நீண்டவையாக இருந்தன.(38) சிலர், விலைமதிப்புமிக்கவையும், பல்வேறு வகைகளிலானவையுமான மகுடங்களைத் தங்கள் தலையில் சூடியிருந்தனர்; சிலர் வழுக்கைத் தலையர்களாக இருந்தனர், சிலர் சடாமுடியால் மறைக்கப்பட்ட தலையைக் கொண்டவர்களாக இருந்தனர். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை ஆகாயத்தில் இருந்து பூமிக்குக் கொண்டவர வல்லவர்களாகவும், படைக்கப்பட்ட நான்கு வகையினரையும் அழிக்கவல்லவர்களாகவும் இருந்தனர்.(39) அச்சம் என்பது என்ன என்றே அவர்கள் அறியாதவர்களாகவும், ஹரனின் கடுஞ்சினத்தைத் தாங்கிக் கொள்ள வல்லவர்களாகவும் இருந்தனர்.(40)

அவர்கள் எப்போதும் தங்கள் விருப்பப்படி செயல்படுபவர்களாகவும், மூவுலங்களின் தலைவனுக்குத் தலைவர்களாகவும் இருந்தனர். எப்போதும் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபட்ட அவர்கள், பேச்சில் முற்றான திறம் கொண்டவர்களாகவும், செருக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களாகவும் இருந்தனர்.(41) எட்டு வகைத் தெய்வீக செல்வங்களைப் பெற்ற அவர்கள் எப்போதும் செருக்கற்றவர்களாகவே இருந்தனர். தெய்வீக ஹரன், அவர்களின் அருஞ்செயல்களால் எப்போதும் ஆச்சரியத்தில் நிறைந்தபடியே இருக்கிறான்.(42) அவர்கள் மஹாதேவனை அர்ப்பணிப்புடன் வழிபடுபவர்களாவர். மனம், சொல், மற்றும் செயல் ஆகியவற்றைக் கொண்டு அவர்களால் துதிக்கப்படும் அந்தப் பெரும் தேவன் {சிவன்}, தன்னை வழிபடுவோரை {அந்த பூதகணங்களைத்} தன் மடியில் பிறந்த பிள்ளைகளைப் போலவே கருதி மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் அவர்களைப் பாதுகாக்கிறான்.(43) சினத்தால் நிறைந்த அவர்கள், பிரம்மத்தை வெறுப்போர் அனைவரின் குருதியையும், கொழுப்பையும் எப்போதும் குடிக்கின்றனர். அவர்கள் நால் வகைச் சுவையுடன் கூடிய சோமச்சாற்றையும் எப்போதும் குடிக்கின்றனர்.(44) வேதம் ஓதி, பிரம்மச்சரியத்துடனும், தவத்துறவுகளுடனும், தன்னடக்கத்துடனும் திரிசூலபாணியான அந்தத் தேவனைத் துதிக்கும் அவர்கள், அந்தப் பவனையே {சிவனையே} தங்கள் தோழனாக அடைந்திருக்கின்றனர்.(45) கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றின் தலைவனும், பார்வதியின் தலைவனுமான அந்தத் தெய்வீக மஹேஸ்வரன், தன் இயல்பையே கொண்டவர்களும், பல்வேறு இனக்குழுக்களைச் சார்ந்தவர்களுமான அந்த வலிமைமிக்கப் பூதங்களுடனே எப்போதும் உண்கிறான்.(46)

{அப்படிப்பட்ட} அவர்கள், பல்வேறு வகை இசைக்கருவிகளின் ஒலியாலும், சிரிப்பொலியாலும், உரத்த முழக்கங்களாலும், கூச்சல்களாலும், சிங்க முழக்கங்களாலும் அண்டத்தை எதிரொலிக்கச் செய்தபடியே அஸ்வத்தாமனை அணுகினர்.(47) மஹாதேவனின் புகழைச் சொல்லியபடியும், சுற்றிலும் பிரகாசமாக ஒளியைப் பரப்பியபடியும், அஸ்வத்தாமனின் மதிப்பையும், உயர்ஆன்ம ஹரனின் மகிமையையும் பெருக்கியபடியும், அஸ்வத்தாமனின் சக்தியின் எல்லையை உறுதி செய்து கொள்ள விரும்பியும், உறங்கும் நேரத்தில் படுகொலையைக் காண விரும்பியும்,(48) அந்த விநோதமான பூதக்கூட்டம், பயங்கரமான, கடுமையான தண்டங்கள், நெருப்புச் சக்கரங்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் வந்தனர்.(49) தங்களைப் பார்ப்பதாலேயே மூவுலகங்களையும் அச்சங்கொள்ளச் செய்ய வல்லவர்களாக அவர்கள் இருந்தனர். எனினும், வலிமைமிக்க அஸ்வத்தாமன் அவர்களைக் கண்டும் எந்த அச்சமும் கொள்ளவில்லை.(50)

அப்போது, வில்தரித்திருந்தவனும், உடும்பின் தோலாலான விரலுறைகளை விரல்களுக்கு அணிந்திருந்தவனுமான அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன்னையே மஹாதேவனுக்குக் காணிக்கையாக {பலியாக} அளித்தான்.(51) ஓ! பாரதரே அந்த வேள்விச் செயல்பாட்டில், விற்களே விறகுகளாகின, கூரிய கணைகளே கரண்டிகளாகின, பெரும் வலிமை கொண்ட அவனது ஆன்மாவே நீர்க்காணிக்கையானது.(52) வீரமும் கோபமும் நிறைந்த அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} உரிய மந்திரங்களைச் சொல்லி, தன் ஆன்மாவையே பலியாகக் காணிக்கையளித்தான்.(53) அஸ்வத்தாமன், கடுஞ்செயல்புரிபவனான ருத்திரனைக் கடும் சடங்குகளால் துதித்து, கூப்பிய கரங்களுடன் அந்த உயர் ஆன்மத் தேவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(54)

அஸ்வத்தாமன் {ருத்ரனிடம்}, “ஓ! தேவா, அங்கிரச குலத்தில் உதித்த நான், இந்த நெருப்பில் என் ஆன்மாவை நீர்க்காணிக்கையாக ஊற்றப்போகிறேன் {ஹோமம் செய்யப் போகிறேன்}. ஓ! தலைவா, இந்தப் பலியை ஏற்பாயாக.(55) ஓ! அண்டத்தின் ஆன்மாவே, துயர்மிக்க இந்த நேரத்தில், உன்னிடம் கொண்ட பக்தியால், தியானத்தில் குவிந்த இதயத்துடன் என்னையே வேள்விப் பலியாக உனக்குக் காணிக்கையளிக்கிறேன்.(56) அனைத்து உயிரினங்களும் உன்னிலிருக்கின்றன, அனைத்து உயிரினங்களிலும் நீ இருக்கிறாய். உயர்ந்த குணங்கள் அனைத்தின் ஒருமை உன்னில் நேர்கிறது.(57) ஓ! தலைவா, அனைத்துயிர்களுக்கும் புகலிடமாய் இருப்பவனே, என் எதிரிகளை வீழ்த்த முடியாதவனாக இருப்பதால் நான் உனக்கான நீர்க்காணிக்கையாக {ஆகுதியாகக்} காத்திருக்கிறேன். ஓ! தேவா, என்னை ஏற்பாயாக” என்றான்.(58)

இவ்வார்த்தைகளைச் சொன்ன துரோணர் மகன், அந்த வேள்விப் பீடத்தில், பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த நெருப்பில் தன்னையே பலியாகக் காணிக்கையளித்து, சுடர்மிக்க நெருப்புக்குள் நுழைந்தான்.(59) அசையாமல் உயர்த்திய கரங்களுடன், தன்னையே காணிக்கையளித்த அவனைக் கண்ட தெய்வீக மஹாதேவன் {சிவன்}, சிரித்துக் கொண்டே அங்கே தோன்றி,(60) “தூய்மையான செயல்களைச் செய்யும் கிருஷ்ணன், உண்மை, தூய்மை, நேர்மை, பொறுப்புதுறப்பு, தவத்துறவு, நோன்புகள், மன்னிப்பு {பொறுமை}, அர்ப்பணிப்பு {பக்தி}, பொறுமை, எண்ணம் செயல் ஆகியவற்றால்(61) என்னை முறையாகத் துதித்திருக்கிறான். இதன் காரணமாக, கிருஷ்ணனைவிட எனது அன்புக்குரியவன் வேறு எவனும் இல்லை.(62) அவனை மதிப்பதற்காகவே, அவனது வார்த்தைகளின் படி, பாஞ்சாலர்களைக் காப்பதற்காகப் பல்வேறு வகை மாயைகளை நான் வெளிப்படுத்தினேன்.(63) பாஞ்சாலர்களைப் பாதுகாத்ததால் நான் அவனை {கிருஷ்ணனை} மதித்தேன். எனினும் அவர்கள் காலத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்வின் காலமும் தீர்ந்துவிட்டது” என்றான் {சிவன்}.(64)

உயர் ஆன்ம அஸ்வத்தாமனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன மஹாதேவன், பளபளப்பான சிறந்த வாளொன்றை அஸ்வத்தாமனிடம் கொடுத்து, அவனது உடலுக்குள் நுழைந்தான்.(65) அந்தத் தெய்வீகமானவனால் நிறைக்கப்பட்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} சக்தியில் சுடர்விட்டெரிந்தான். அந்தப் பரமனிமிருந்து பெறப்பட்ட சக்தியின் விளைவால் அவன் போரில் பெரும் பலம்மிக்கவனாக ஆனான்.(66) அவன் {அஸ்வத்தாமன்} புறப்பட்டபோது, தன் எதிரிகளின் முகாமுக்குள் நுழையும் தலைவன் மஹாதேவனைப் போலவே, கண்ணுக்குத் தெரியாத பல பூதங்களும், ராட்சசர்களும் அவனுக்கு வலப்பக்கத்திலும், இடப்பக்கத்தில் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.(67)

அஸ்வத்தாமன் செய்த படுகொலைகள்! – சௌப்திக பர்வம் பகுதி – 08அ-கிருபரையும், கிருதவர்மனையும் வாயிலில் அமர்த்திவிட்டு முகாமுக்குள் நுழைந்த அஸ்வத்தாமன்; திருஷ்டத்யும்னனைத் தாக்கிக் கொன்றது; ருத்திர ஆயுதத்தைக் கொண்டு பாஞ்சாலர்களைக் கொன்றது. உறங்கிக் கொண்டிருந்த உத்தமௌஜஸைக் கொன்றது; திரௌபதியின் மகன்களைக் கொன்றது; சிகண்டியை இரண்டாகப் பிளந்து கொன்றது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} பகைவரின் முகாமை நோக்கிச் சென்ற போது, அச்சத்தால் கிருபரும், போஜனும் {கிருதவர்மனும்} நின்று விட்டார்களா?(1) பெரும் தேர்வீரர்களான அவர்கள் இருவரும், கோரமான காவலர்களால் தடுக்கப்பட்டு, எதிராளிகள் தடுக்கப்பட முடியாதவர்கள் என்று கருதி கமுக்கமாகத் தப்பி ஓடவில்லையா?(2) அல்லது சோமகர்கள் மற்றும் பாண்டவர்களின் முகாமை கலங்கடித்துக் கொண்டிருந்தபோது, துரியோதனன் சென்ற உயர்ந்த மகிமையான வழியிலேயே சென்றுவிட்டார்களா?(3) அந்த வீரர்கள் பாஞ்சாலர்களால் கொல்லப்பட்டு வெறுந்தரையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்களா? அவர்கள் சாதனை ஏதும் செய்தார்களா? ஓ! சஞ்சயா, இவையாவையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(4)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உயரான்ம துரோணர்மகன் {அஸ்வத்தாமன்} முகாமை நோக்கிச் சென்றபோது, கிருபரும், கிருதவர்மனும் வாயிலில் காத்திருந்தனர்.(5) ஓ! மன்னா, தங்களையும் {இம்முயற்சியில்} ஈடுபடுத்திக் கொள்ளத் தயாராக இருக்கும் அவர்களைக் கண்ட அஸ்வத்தாமன், மகிழ்ச்சியில் நிறைந்து, அவர்களிடம் கிசுகிசுக்கும் தொனியில், “முயற்சி செய்தால், க்ஷத்திரியர்கள் அனைவரையும் கொல்லத்தக்கவர்கள் நீங்கள்.(6) எனவே, எஞ்சியிருக்கும் இந்தப் (பாண்டவப்) படையை என்ன சொல்வது? அதிலும் குறிப்பாக உறக்கத்தில் புதைக்கப்பட்டிருக்கும் போது அஃதை என்ன சொல்வது?(7) நான் முகாமுக்குள் நுழைந்து யமனைப் போலத் திரியப் போகிறேன். எம்மனிதனும் உயிரோடு தப்பிச் செல்லாத வகையில் நீங்கள் செயல்படுவீர்கள் என்று நான் உறுதி கொள்கிறேன்” என்றான்.(8) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} இவ்வார்த்தைகைச் சொல்லிவிட்டு, பார்த்தர்களின் பரந்த முகாமுக்குள் நுழைந்தான். அச்சமனைத்தையும் உதறிவிட்டு, எங்கே கதவு இல்லையோ அந்த இடத்தின் வழியாக அதற்குள் ஊடுருவினான்.(9) வலிய கரங்களைக் கொண்ட அந்த வீரன், முகாமுக்குள் நுழைந்ததும், அடையாளங்களால் வழிநடத்தப்பட்டு மெதுவாகத் திருஷ்டத்யும்னனின் இருப்பிடத்தை நோக்கிச் சென்றான்.(10)

சாதனைகளைச் செய்திருந்த பாஞ்சாலர்கள் போரால் மிகவும் களைத்திருந்தனர். ஒன்றாகக் கூடிய அவர்கள், ஒருவருக்கொருவர் அருகருகே நம்பிக்கையுடன் உறங்கிக் கொண்டிருந்தனர்.(11) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரின் மகன், திருஷ்டத்யும்னனின் அறைக்குள் நுழைந்து, தன் எதிரே உறங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பாஞ்சால இளவரசனைக் கண்டான்.(12) விலைமதிப்புமிக்கதும், சிறந்ததுமான கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த அழகிய பட்டு விரிப்பில் அவன் கிடந்தான். அந்தப் படுக்கையில் சிறந்த மலர்க்குவியல்கள் தூவப்பட்டு, தூபப்பொடிகளால் அது நறுமணமூட்டப்பட்டிருந்தது.(13) ஓ! மன்னா, அஸ்வத்தாமன், நம்பிக்கையுடனும், அச்சமில்லாமலும் தன் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த அந்த உயர் ஆன்ம இளவரசனை {திருஷ்டத்யும்னனை} உதைத்து, அவனை விழித்தெழச் செய்தான்.(14) போரில் தடுக்கப்பட முடியாதவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான அந்த இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, அந்த உதையை உணர்ந்து, உறக்கத்தில் இருந்து விழித்து, தன் முன்னே நிற்கும் துரோணரின் மகனை அறிந்து கொண்டான்.(15)

அவன் தன் படுக்கையில் இருந்து எழுந்தபோதே, வலிமைமிக்க அஸ்வத்தாமன் அவனது {திருஷ்டத்யும்னனின்} தலைமுடியைப் பிடித்து, தன் கரங்களால் அவனைப் பூமியில் அழுத்தத் தொடங்கினான். இவ்வாறு அஸ்வத்தாமனால் பெரும்பலத்துடன் அழுத்தப்பட்ட அந்த இளவரசன், அச்சத்தாலும், உறக்கக் கலக்கத்தாலும் அந்நேரத்தில் தன் பலத்தை வெளிப்படுத்த முடியாதவனாக இருந்தான்.(17) ஓ! மன்னா, தன் பலி {திருஷ்டத்யும்னன்} அலறித் துடித்துக் கொண்டிருந்தபோது, தன் காலால் அவனது தொண்டை மற்றும் மார்பில் மிதித்த துரோணரின் மகன், ஒரு விலங்கைப் போலக் கருதி அவனைக் கொல்ல முயற்சித்தான்.(18)

அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} தன் நகங்களால் அஸ்வத்தாமனைக் கிழித்து, இறுதியாக மெதுவாக, “ஓ! ஆசான் மகனே, தாமதிக்காதீர் என்னை ஆயுதத்தால் கொல்வீராக. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, உமது செயலின் மூலமாக என்னை நீதியாளர்களின் {நல்லோரின்} உலகத்தை அடையச் செய்வீராக” என்றான்.(19) எதிரிகளைக் கொல்பவனான அந்தப் பாஞ்சால மன்னின் மகன் இவ்வளவே சொன்னபோது, அந்த வலிமைமிக்க வீரனின் பலத்தால் தாக்கப்பட்டு அமைதியடைந்தான்.(20) தெளிவில்லாத அந்த ஒலிகளைக் {திருஷ்டத்யும்னனின் குரலைக்} கேட்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, “ஓ! உன் குலத்தில் இழிந்தவனே, ஆசான்களைக் கொன்றோருக்கு எவ்வுலகமும் கிடையாது. ஓ! தீய புரிதல் {துர்ப்புத்தி} கொண்டவனே, நீ எந்த ஆயுதத்தாலும் கொல்லப்படத் தகுந்தவனல்ல” என்றான்.(21) அப்படிச் சொன்னவாறே சினத்தில் நிறைந்த அஸ்வத்தாமன், தன் குதிகால்களின் வலிமையான உதைகளால் தன் பலியின் {பலியாடான திருஷ்டத்யும்னனின்} முக்கிய அங்கங்களைத் தாக்கத் தொடங்கி, மதங்கொண்ட யானையைக் கொல்லும் சிங்கத்தைப் போலத் தன் எதிரியைக் கொன்றான்[1].(22)ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்} கொல்லப்படும்போது கதறியதைக் கேட்டு, பாசறையில் இருந்த அவனது மனைவியரும், பாதுகாவலர்கள் அனைவரும் விழித்தெழுந்தனர்.(23) மனித சக்திக்கு அப்பாற்பட்ட பலத்துடன் யாரோ ஒருவன் இளவரசனை நொறுக்குவதைக் கண்ட அவர்கள், தாக்குபவன் இயற்கையைக் கடந்த உயிரினம் {பூதம்} எனக் கருதி அச்சத்தால் கதறாமல் இருந்தனர்.(24) பெரும் சக்தி கொண்டவனான அஸ்வத்தாமன், இத்தகு வழியில் அவனை {திருஷ்டத்யும்னை} யமலோகம் அனுப்பி வைத்துவிட்டு, வெளியே சென்று, தன் அழகிய தேரில் ஏறி நின்றான்.(25) உண்மையில், ஓ! மன்னா, திருஷ்டத்யும்னனின் வசிப்பிடத்தில் இருந்து வெளிய வந்த அஸ்வத்தாமன், தன் முழக்கங்களால், திசைப்புள்ளிகள் அனைத்தையும் எதிரொலிக்கச் செய்தபடியே தன் எதிரிகளைக் கொல்வதற்காக முகாமின் பிற பகுதிகளுக்குச் சென்றான்.(26)

வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} சென்ற பிறகு, பெண்களும், பாதுகாவலர்கள் அனைவரும், துன்பத்தால் உரக்க ஓலமிட்டனர்.(27) தங்கள் மன்னன் கொல்லப்பட்டதைக் கண்ட திருஷ்டத்யும்னனின் மனைவியர் அனைவரும், பெரும் சோகத்தால் நிறைந்து உரக்க அழுதனர்.(28) வலிமைமிக்க க்ஷத்திரியர்கள் பலர், அந்த ஓலத்தைக் கேட்டு விழித்தெழுந்து, தங்கள் கவசங்களைப் பூட்டிக் கொண்டு, அந்தக் கூச்சலின் காரணத்தை விசாரிக்க அங்கே வந்தனர்.(29) அஸ்வத்தாமனைக் கண்டு பீதியடைந்திருந்த அந்த மங்கையர், தாமதமில்லாமல் அவனைப் பின்தொடருமாறு பரிதாபகரமான தொனியில் அம்மனிதர்களைக் கேட்டுக் கொண்டனர்.(30) அவர்கள், “அவன் ராட்சசனோ? மனிதனோ? அவன் யாரென்று நாங்கள் அறியவில்லை. பாஞ்சால மன்னனை {திருஷ்டத்யும்னனைக்} கொன்றுவிட்டு அவன் இங்கே இருக்கிறான்” என்றனர்.(31) இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த முதன்மையான போர்வீரர்கள் திடீரெனத் துரோணரின் மகனைச் {அஸ்வத்தாமனைச்} சூழ்ந்து கொண்டனர். பின்னவனோ {அஸ்வத்தாமனோ}, அவர்கள் அனைவரையும் ருத்திர ஆயுதத்தின் மூலம் கொன்றான்.(32)

திருஷ்டத்யும்னனையும், அவனது தொண்டர்களையும் கொன்ற பிறகு, படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் உத்தமௌஜஸை அவன் {அஸ்வத்தாமன்} கண்டான்.(33) தன் காலால் அவனது தொண்டையையும், மார்பையும் தாக்கிய துரோணரின் மகன், அந்தப் பெரும் வீரன் {உத்தமௌஜஸ்} வலியால் துடித்துக் கொண்டிருக்கும்போதே கொன்றான்.(34) அங்கே வந்த யுதாமன்யு, தன் தோழன் ஒரு ராட்சசனால் கொல்லப்பட்டான் என்று நம்பி, ஒரு கதாயுதத்தால் வேகமாகத் துரோணரின் மகனைத் தாக்கினான்.(35) அவனை {யுதாமன்யுவை} நோக்கி விரைந்து சென்ற அஸ்வத்தாமன், அவனைப் பிடித்துத் தரையில் சாய்த்து, அவன் உரக்கக் கதறிக் கொண்டிருக்கும்போதே ஒரு விலங்கைக் கொல்வதைப் போல அவனைக் {யுதாமன்யுவைக்} கொன்றான்.(36) இவ்வாறு யுதாமன்யுவைக் கொன்ற அந்த வீரன், உறங்கிக் கொண்டிருந்தவர்களும், மன்னனைச் சேர்ந்தவர்களுமான பிற தேர்வீரர்கள் அனைவரையும் எதிர்த்துச் சென்றான்.(37) அவன், நடுங்கிக் கூச்சலிட்டவர்களான அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் வேள்வியில் விலங்குகளைக் கொல்வதைப் போலக் கொன்றான். அப்போது அவன், தன் வாளை எடுத்துக் கொண்டு வேறு பலரையும் கொன்றான்.(38)

வாளைப் பயன்படுத்துவதில் சாதித்தவனான அஸ்வத்தாமன் ஒன்றன்பின் ஒன்றாக முகாமின் பல்வேறு பாதைகளில் சென்று, பல்வேறு குல்மங்களைக் கண்டு, அவற்றுக்குள் உறங்கிக் கொண்டிருந்தவர்களும், ஆயுதமற்றவர்களும், களைத்தவர்களுமான போர்வீரர்களைக் கணப்பொழுதுக்குள் கொன்றான்.(39) அந்தச் சிறந்த வாளைக் கொண்டு அவன் போராளிகளையும், குதிரைகளையும், யானைகளையும் வெட்டிச் சாய்த்தான். மேனியெங்கும் குருதியால் நனைந்திருந்த அவன் {அஸ்வத்தாமன்}, காலத்தால் நியமிக்கப்பட்ட அந்தகனைப் போலவே அப்போது தெரிந்தான்.(40) {வலது, இடது அசைவுகள் மற்றும் சுழற்றுதல் ஆகிய} தன் மூவகை வாள்வீச்சுகளால் மீண்டும் மீண்டும் தன் எதிரிகளை நடுங்கச் செய்த அஸ்வத்தாமன் குருதியில் குளித்தவனானான்.(41) குருதியில் நனையும், சுடர்மிக்க வாளுடன் போரில் திரிந்து கொண்டிருந்த அவனது வடிவம், மனித சக்திக்கு அப்பாற்பட்ட பயங்கரமானதாக இருந்தது.(42)

ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்தவர்கள், (சுற்றிலும் தாங்கள் கேட்ட) உரத்த ஒலியால் திகைப்படைந்தனர். துரோணரின் மகனைக் {அஸ்வத்தாமனைக்} கண்ட அவர்கள், ஒருவரையொருவர் முகங்களைப் பார்த்துக் கொண்டு (அச்சத்தால்) நடுங்கினர்.(43) அந்த எதிரிகளை நொறுக்குபவனின் வடிவத்தைக் கண்ட க்ஷத்திரியர்கள், அவனை ராட்சசனாகக் கருதி தங்கள் கண்களை மூடிக் கொண்டனர்.(44) பயங்கர வடிவத்துடன் யமனைப் போல முகாமுக்குள் திரிந்து கொண்டிருந்த அவன், இறுதியாகத் திரௌபதியின் மகன்களையும், எஞ்சிய சோமகர்களையும் கண்டான்.(45) ஒலியைக் கேட்டு அஞ்சியவர்களும், திருஷ்டத்யும்னன் கொல்லப்பட்டதை அறிந்தவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்தத் திரௌபதியின் மகன்கள், விற்களைத்தரித்துக் கொண்டு, அச்சமில்லாமல் துரோணரின் மகன் மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர்.(46) அவர்களது ஒலியால் விழித்தெழுந்த சிகண்டியின் தலைமையிலான பிரபத்ரகர்கள், தங்கள் கணைகளால் துரோணர் மகனைக் கலங்கடிக்கத் தொடங்கினர்.(47) துரோணரின் மகன் தன் மீது கணைகளைப் பொழியும் அவர்களைக் கண்டு உரக்க முழங்கி, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் கொல்லும் விருப்பம் கொண்டான்.(48) தன் தந்தையின் மரணத்தை நினைத்துப் பார்த்த அஸ்வத்தாமன் சினத்தால் நிறைந்தான். அவன், தன் தேர்த்தட்டில் இருந்து இறங்கி (தன் எதிரிகளை எதிர்த்து) மூர்க்கமாக விரைந்தான்.(49) வலிமைமிக்கவனான அஸ்வத்தாமன், பளபளப்பானதும், ஆயிரம் சந்திரன்களால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் கேடயத்தையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் பெரிய வாளையும் எடுத்துக் கொண்டு, திரௌபதியின் மகன்களை எதிர்த்து விரைந்து, தன் ஆயுதத்தால் அவர்களைக் வீழ்த்தத் தொடங்கினான்.(50)

அப்போது அந்த மனிதர்களில் புலி {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சந்தரும் போரில் {அந்தவாளால், யுதிஷ்டிரனின் மகனான} பிரதிவிந்தியனை வயிற்றில் தாக்கினான். அதன்பேரின் அவன் {பிரதிவிந்தியன்} கீழே விழுந்து தன் உயிரை இழந்தான்.(51) வீரனான {பீமன் மகன்} சுதசோமன், ஈட்டியினால் துரோணர் மகனைத் துளைத்து, வாளை உயர்த்திக் கொண்டு அவனை நோக்கி விரைந்து சென்றான்.(52) எனினும், அஸ்வத்தாமன், கையில் வாளுடன் கூடிய சுதசோமனின் கரங்களை வெட்டி, மீண்டும் அவனை விலாப்புறத்தில் தாக்கினான். இதனால் சுதசோமன் உயிரை இழந்து கீழே விழுந்தான்[2].(53) நகுலனின் மகனான சதானீகன், தன் இரு கரங்களாலும் ஒரு தேர்ச்சக்கரத்தை எடுத்துக் கொண்டு, அஸ்வத்தாமனின் மார்பைத் தாக்கினான்.(54) மறுபிறப்பாளனான அஸ்வத்தாமன், தேர்ச்சக்கரத்தை சதானீகன் வீசியபிறகு, வன்மையுடன் அவனைத் தாக்கினான். மிகவும் கலங்கிப் போன நகுலனின் மகன் பூமியில் விழுந்தான். அப்போது துரோணரின் மகன் அவனுடைய {சதானீகனின்} தலையை அறுத்தான்.(55)அப்போது {அர்ஜுனன் மகன்} சுருதகர்மன், ஒரு பரிகத்தை எடுத்துக்கொண்டு அஸ்வத்தாமனைத் தாக்கினான். துரோணர் மகனை நோக்கி மூர்க்கமாக விரைந்து, அவனது இடது நெற்றியில் பலமாகத் தாக்கினான்.(56) அப்போது அஸ்வத்தாமன் தன் சிறந்த வாளால் சுருதகர்மனின் முகத்தைத் தாக்கினான். அவன் {சுருதகர்மன்}, தன் உணர்வுகளை இழந்து, {கோரமாக} முகம் சிதைந்தவனாக உயிரை இழந்து பூமியில் விழுந்தான்.(57) பெரும் தேர்வீரனும், {சகாதேவனின் மகன்} வீரனுமான சுருதகீர்த்தி இவ்வொலியைக் கேட்டு அங்கே வந்து, அஸ்வத்தாமன் மீது கணைமாரியைப் பொழிந்தான்.(58) தன் கேடயத்தால் அந்தக் கணைமாரிகளைக் கலங்கடித்த அஸ்வத்தாமன், காதுகுண்டலங்களுடன் அலங்கரிக்கப்பட்ட தன் எதிரியின் {சுருதகீர்த்தியின்} தலையை அவனது உடலில் இருந்து துண்டித்தான்.(59)

பீஷ்மரைக் கொன்றவனான வலிமைமிக்கச் சிகண்டி, பிரபத்ரகர்கள் அனைவருடன் சேர்ந்து, பல்வேறு ஆயுதங்களுடன் அனைத்துப் பக்கங்களிலும் அஸ்வத்தாமனைத் தாக்கினான். சிகண்டி, ஒரு கணையால் அஸ்வத்தாமனின் புருவங்களுக்கு மத்தியில் தாக்கினான்.(60) இதனால் சினத்தால் நிறைந்தவனும், பெரும் வலிமை கொண்டவனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சிகண்டியை அணுகி, தன் வாளால் அவனை இரண்டு துண்டுகளாக வெட்டிப் போட்டான்.(61) சிகண்டியைக் கொன்ற பிறகு சினத்தால் நிறைந்தவனான அஸ்வத்தாமன், வேறு பிரபத்ரகர்களை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான். அவன் எஞ்சியிருந்த விராடப் படையை எதிர்த்தும் சென்றான்.(62) பெரும் பலம் கொண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஒருவர் பின் ஒருவராகத் துருபதனின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரைத் தனியாக்கி அவர்களுக்கு மத்தியில் பேரழிவை நிகழ்த்தினான்.(63) வாளைப் பயன்படுத்துவதில் சாதித்தவனான அஸ்வத்தாமன், பிற போராளிகளை எதிர்த்து விரைந்து தன் சிறந்த வாளால் அவர்களை வெட்டி வீழ்த்தினான்.(64)

பாண்டவ முகாமைச் சேர்ந்தவர்கள், கரிய உருவம் கொண்டவளும், குருதி வழியும் வாய் மற்றும் கண்களுடன் கூடியவளும், சிவப்பு மாலை அணிந்தவளும், சிவப்பு வண்ண சந்தனத்தைப் பூசியிருந்தவளும், சிவப்புத் துணியாலான ஒற்றையாடையை உடுத்தியவளும், கையில் சுருக்குக் கயிற்றுடன் கூடியவளும், கிழவிக்கு ஒப்பாகத் தோன்றியவளும், பொலிவிழந்த குரலில் பாடுபவளும், தங்கள் கண்களுக்கு முன்னே முழுமையாக நிற்பவளும், தடித்த கயிற்றில் மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் அனைத்தையும் கட்டி இழுத்துச் செல்பவளுமாக உடல் கொண்டு வந்த அந்தக் கால இரவை {காளராத்ரியைக்} கண்டனர்.(65,66) அவள், கலைந்த கேசத்தைக் கொண்டவர்களும், கயிற்றில் ஒன்றாகக் கட்டப்பட்டவர்களுமான பல்வேறு வகைப் பூதங்களையும், ஆயுதங்களை இழந்த பல வலிமைமிக்கத் தேர்வீரர்களையும் கொண்டு செல்பவளாகத் தெரிந்தாள்.(67) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வேறு நாட்களில், பாண்டவ முகாமைச் சேர்ந்த அந்த முதன்மையான போர்வீரர்கள், உறங்கிக் கொண்டிருக்கும் போராளிகளையும், அவர்களைப் பின்னால் இருந்து தாக்கும் துரோணரின் மகனையும் வழிகாட்டி அழைத்துச் செல்லும் அந்த வடிவத்தை {காளராத்ரியைத்} தங்கள் கனவுகளில் வழக்கமாகக் கண்டு வந்தனர்.(68) அந்தப் பாண்டவப் படைவீரர்கள், முதலில் குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் போர் தொடங்கிய போதிலிருந்தே ஒவ்வொரு நாள் இரவிலும், அந்தப் பெண்ணையும், துரோணரின் மகனையும் தங்கள் கனவுகளில் கண்டு வந்தனர்.(69) முன்பே விதியால் பீடிக்கப்பட்ட அவர்கள் இப்போது அச்சந்தரும் வகையில் முழங்கி பீதியடையச் செய்த துரோணரின்  மகனால் {அஸ்வத்தாமனால்} தாக்கப்பட்டனர்.(70) விதியால் பீடிக்கப்பட்டவர்களும், பாண்டவ முகாமைச் சேர்ந்தவர்களுமான அந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் தங்கள் கனவில் ஏற்கனவே கண்டவற்றை நினைத்துப் பார்த்து, இப்போது தாங்கள் காண்பதை அடையாளம் கண்டனர்” {என்றான் சஞ்சயன்}.(71)

அஸ்வத்தாமனின் கோரச் செயல்! – சௌப்திக பர்வம் பகுதி – 08ஆ-உறக்கத்திலிருந்து எழுந்து போரிட வந்த அனைவரையும் கொன்ற அஸ்வத்தாமன்; தப்பி ஓட முயன்ற போர்வீரர்களை வாயிலில் நின்ற கிருபரும், கிருதவர்மனும் கொன்றது; பாண்டவ மூகாமை அவர்கள் எரித்தது; அஸ்வத்தாமன் இதை ஏன் முன்பே செய்யவில்லை என்று கேட்ட திருதராஷ்டிரன்; பாண்டவர்கள், கிருஷ்ணன் ஆகியோர் இல்லாமையும், போர்வீரர்களின் உறக்கமும் தான் அஸ்வத்தாமனின் வெற்றிக்குக் காரணம் என்று சொன்ன சஞ்சயன்; துரியோதனனைத் தேடிச்சென்ற அஸ்வத்தாமன்…

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அவ்வாறு ஏற்பட்ட ஒலியின் காரணமாக, முகாமில் இருந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாண்டவ வில்லாளிகள் தங்கள் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டனர்.(72) காலத்தால் விடுவிக்கப்பட்ட அந்தகனைப் போல அஸ்வத்தாமன், அவர்களில் சிலரின் கால்களையும், சிலரது இடைகளையும் வெட்டி, சிலரது விலாப்புறங்களைத் துளைத்துத் திரிந்து கொண்டிருந்தான்.(73) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, வடிவமற்றவர்களாக நொறுக்கப்பட்டோ, யானைகள் மற்றும் குதிரைகளால் மிதிக்கப்பட்டோ கிடந்த மனிதர்கள் பூமியை மறைத்துக் கொண்டு, பெரும் துன்பத்தில் கதறிக் கொண்டிருந்தனர்.(74) பலர், “இஃது என்ன? இவன் எவன்? ஏன் இந்த ஒலி? இதைச் செய்தவன் எவன்?” என்று உரக்கக் கதறினர். இவ்வாறு அவர்கள் கதறிக் கொண்டிருந்தபோது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அவர்களைக் கொல்லும் காலனானான்.(75)

தாக்குபவர்களில் முதன்மையானவனான அந்தத் துரோணரின் மகன், கவசம் மற்றும் ஆயுதங்களற்றவர்களாக இருந்த பாண்டுக்கள் மற்றும் சிருஞ்சயர்களை யமலோகத்திற்கு அனுப்பி வைத்தான்.(76) பலர், அவ்வொலியால் பீடிக்கப்பட்ட உறக்கத்தில் இருந்து எழுந்தனர். அச்சத்தால் பீடிக்கப்பட்டும், உறக்கத்தால் குருடாகவும், தங்கள் புலனுணர்வுகளை இழந்து இருந்த அந்தப் போர்வீரர்கள் (அஸ்வத்தாமனின் சீற்றத்திற்கு முன்னால்) காணாமல் போனார்கள்.(77) பலரின் தொடைகள் முடக்கப்பட்டன. தங்கள் சக்தி முழுவதையும் தொலைக்கும் அளவுக்குப் பலர் திகைப்பை அடைந்திருந்தனர். அச்சத்தால் பீடிக்கப்பட்டுக் கதறிக் கொண்டிருந்த அவர்கள், ஒருவரையொருவர் கொல்லத் தொடங்கினர்.(78) துரோணரின் மகன், பயங்கரச் சடசடப்பொலியைக் கொண்ட தன் தேரில் மீண்டும் ஏறித் தன் வில்லை எடுத்துக் கொண்டு பலரைத் தன் கணைகளால் யமலோகம் அனுப்பி வைத்தான்.(79) உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த, துணிச்சல்மிக்க, மனிதர்களில் முதன்மையான வேறு போர்வீரர்கள், அஸ்வத்தாமனை நெருங்கும் முன்பே அவனால் கொல்லபட்டு, இவ்வாறே அந்தக் கால இரவுக்கு {கால ராத்ரிக்குப்} பலியாகக் காணிக்கையளிக்கப்பட்டனர்.(80)

அந்த முதன்மையான தேரால் பலரை நசுக்கியவண்ணம், முகாமில் திரிந்து கொண்டிருந்த அவன் {அஸ்வத்தாமன்}, தன் கணைமாரிகளால் மீண்டும் மீண்டும் எதிரிகளை மறைத்துக் கொண்டிருந்தான்.(81) பிறகு மீண்டும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட தன் அழகிய கேடயத்தையும், ஆகாயத்தின் நிறத்தைக் கொண்ட தன் வாளையும் எடுத்துக் கொண்டு எதிரிகளின் மத்தியில் திரிந்தான்.(82) பெரும் தடாகத்தைக் கலங்கடிக்கும் யானையைப் போலப் போரில் தடுக்கப்பட முடியாதவனான துரோணரின் மகன் பாண்டவ முகாமைக் கலங்கடித்தான்.(83) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்வொலியால் விழித்தெழுந்த போர்வீரர்கள் பலர், அப்போதும் உறக்கத்தாலும், அச்சத்தாலும் பீடிக்கப்பட்டு, மதிமயக்கத்துடன் அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தனர்.(84) பலர் கடுந்தொனியில் கதறினார், இன்னும் பலர் தொடர்பற்ற சொற்களைப் பிதற்றினர். பலர், தங்கள் ஆயுதங்களையும், கவசங்களையும் அடையத் தவறினர்.(85)

பலரது கேசங்கள் கலைந்திருந்தன, பலர் ஒருவரையொருவர் அடையாளங்காண தவறினர். உறக்கத்தில் இருந்து எழுந்த பலர் களைத்துப் போய்க் கீழே விழுந்தனர்; சிலர் காரணம் ஏதும் அறியாமல் இங்கேயும், அங்கேயும் திரிந்து கொண்டிருந்தனர்.(86) யானைகள், குதிரைகள் ஆகியன தங்கள் கட்டுகளை அறுத்துக் கொண்டு மலமும், சிறுநீரும் கழித்தன.(87) பெருங்குழப்பத்தோடு கூடிய பலர் ஒன்றாகத் திரண்டனர். அவர்களில் சிலர் அச்சத்தால் தங்களைப் பூமியில் கிடத்திக் கொண்டனர். முகாமைச் சேர்ந்த விலங்குகள் அவர்களை அங்கேயே நசுக்கின.(88) முகாம் இந்நிலையை அடைந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதர்களின் தலைவரே, ராட்சசர்கள் மகிழ்ச்சியில் உரக்க முழக்கமிட்டனர்.(89) ஓ! மன்னா, மகிழ்ச்சியில் இருந்த பூதக்கூட்டங்களால் வெளியிடப்பட்ட அந்த உரத்த ஒலியானது திசைகளின் புள்ளிகள் அனைத்தையும், ஆகாயத்தையும் நிறைத்தது.(90)

துன்ப ஓலங்களைக் கேட்ட யானைகள், குதிரைகள் ஆகியன, தங்கள் கட்டுகளை அறுத்துக் கொண்டு அங்கேயும், இங்கேயும் ஓடி, முகாமின் போராளிகளை நசுக்கின.(91) அவ்விலங்குகள் அங்குமிங்கும் விரைந்த போது, அவற்றால் எழுப்பப்பட்ட புழுதியானது அவ்விரவின் இருளை இரட்டிப்பாக்கியது.(92) அந்த அடர்த்தியான இருள் சூழ்ந்தபோது, முகாமை சேர்ந்த போர்வீரர்கள் முற்றிலும் திகைப்படைந்தனர்; தந்தையரால் தங்கள் மகன்களையும், சகோதரர்களால் தங்கள் சகோதரர்களையும் அடையாளங்காண முடியவில்லை.(93) பாகர்களற்ற யானைகளைப் பிற யானைகளும், சாரதிகளற்ற குதிரைகளைப் பிற குதிரைகளும் {ஒன்றையொன்று} தாக்கிப் பிளந்து, தங்கள் வழியில் நின்ற மக்களை நசுக்கின.(94) ஒழுங்கனைத்தையும் இழந்த போராளிகள் விரைந்து சென்று ஒருவரையொருவர் கொன்று, தங்கள் வழியில் நின்றவர்கள் மீது பாய்ந்து அவர்களைத் துண்டுகளாக வெட்டிக் கொன்றனர்.(95)

உணர்வுகளை இழந்து, உறக்கத்தின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு, இருளில் மூழ்கிய அம்மனிதர்கள், விதியால் உந்தப்பட்டுத் தங்கள் தோழர்களையே கொன்றனர்.(96) வாயில் காப்போர் தாங்கள் காத்து வந்த வாயில்களையும், புறக்காவலில் ஈடுபட்டோர் புறங்களையும் கைவிட்டு, எங்கே செல்கிறோம் என்று தெரியாமல், உணர்வுகளை இழந்து தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தப்பி ஓடினர்.(97) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தக் கொலைகாரர்கள், கொல்லப்படுபவர்களை அடையாளம் காணாமல் ஒருவரையொருவன் கொன்றனர். விதியால் உந்தப்பட்ட அவர்கள் தங்கள் தந்தைமாரையும், மகன்களையும் அழைத்தனர்.(98) தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களைக் கைவிட்டு அவர்கள் தப்பி ஓடியபோது, தங்கள் குடும்பங்கள் மற்றும் தங்கள் பெயர்களைக் குறிப்பிட்டு ஒருவரையொருவர் அழைத்தனர்.(99) வேறு சிலர், “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கதறியபடியே கீழே பூமியில் விழுந்தனர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, போருக்கு மத்தியில் அவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு கொன்றான்.(100)

இவ்வாறு கொல்லப்படும்போது, வேறுசில க்ஷத்திரியர்கள், தங்கள் உணர்வுகளை இழந்து, அச்சத்தால் பீடிக்கப்பட்டுத் தங்கள் முகாம்களை விட்டுத் தப்பி ஓட முயன்றனர்.(101) அவ்வாறு தங்கள் உயிர்களைக் காத்துக்கொள்ள முகாமை விட்டுத் தப்பி ஓட முயற்சித்த அம்மனிதர்கள் வாயிலில் இருந்த கிருதவர்மன் மற்றும் கிருபரால் கொல்லப்பட்டனர்.(102) ஆயுதங்கள், கருவிகள் மற்றும் கவசங்கள் அற்றவர்களும், கலைந்த கேசத்தைக் கொண்டவர்களும், அச்சத்தால் நடுங்கி தங்கள் கரங்களைக் கூப்பியவர்களும் தரையில் கிடந்தார்கள். எனினும், (தங்கள் தேர்களில் இருந்த) அந்தக் குரு வீரர்கள் இருவரும் {அவர்களில்} யாருக்கும் இடமளிக்கவில்லை.(103) கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகிய அந்தத் தீயவர்கள் இருவரும், முகாமில் இருந்து தப்பித்த எவரையும் விட்டுவிடவில்லை.(104) துரோணரின் மகனுக்கு மிகவும் ஏற்புடையதைச் செய்வதற்காக அவர்கள் இருவரும், அந்தப் பாண்டவ முகாமின் மூன்று இடங்களில் நெருப்பூட்டினர்.(105)

அந்த முகாம் {இவ்வாறு} ஒளியூட்டப்பட்டபோது {எரிக்கப்பட்டபோது}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் தந்தைமாரை திளைக்கச் செய்பவனான அஸ்வத்தாமன், கையில் வாளுடன், பெரும் திறனுடன் தன் எதிரிகளைத் தாக்கினான்.(106) துணிச்சல்மிக்க அவனது எதிரிகளில் சிலர் அவனை நோக்கி விரைந்தனர், சிலர் இங்கேயும் அங்கேயும் ஓடினர். அந்த மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையான துரோணரின் வீரமகன், தன் வாளால் அவர்கள் அனைவரின் உயிரையும் எடுத்தான்.(107) சினத்தால் நிறைந்து போர்வீரர்களில் சிலரை வீழ்த்தி, எள்ளுக்கட்டையை வெட்டுவதைப் போலத் தன் வாளால் அவர்களை இரண்டாக வெட்டினான்.(108) ஓ! பாரதக் குலத்தின் காளையே, துன்ப ஓலங்களுடன் கதறியபடியே வீழ்ந்த மனிதர்களில் முதன்மையானவர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் உடல்கள் ஆகியவை ஒன்றாகக் கலந்து பூமியெங்கும் பரவிக்கிடந்தன.(109) ஆயிரக்கணக்கான மனிதர்கள் உயிரையிழந்து கீழே விழுந்தபோது, எண்ணற்ற தலையற்ற முண்டங்கள் எழுந்து நின்று மறுபடியும் கீழே விழுந்தன.(110)

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அஸ்வத்தாமன், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், ஆயுதங்களைப் பிடித்திருந்தவையுமான கரங்களையும், தலைகளையும், யானையின் துதிக்கைகளுக்கு ஒப்பான தொடைகளையும், கைகளையும், கால்களையும் வெட்டினான்.(111) துரோணரின் சிறப்புமிக்க மகன் சிலரின் முதுகுகளைச் சிதைத்து, சிலரின் தலைகளை அறுத்து, சிலரைப் போரில் இருந்து புறமுதுகிட்டு ஓடும்படியும் செய்தான்.(112) அவன் சிலரின் உடல்களையும், வேறு சிலரின் காதுகளையும், சிலரின் தோள்களையும் வெட்டி, சிலரின் தலைகளை அவர்களது உடல்களுக்குள் நசுக்கினான்.(113) அஸ்வத்தாமன் இவ்வழியில் ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கொன்று திரிந்து கொண்டிருந்தபோது நேர்ந்த இருளின் விளைவால் அந்த ஆழ்ந்த இரவு பயங்கரத்தை அடைந்தது.(114) இறந்தும், சாகக்கிடந்துமிருந்த ஆயிரக்கணக்கான மனிதர்கள், எண்ணற்ற குதிரைகள் மற்றும் யானைகளுடன் பூமியானது காணப் பயங்கரமானதாக இருந்தது.(115)

சினகொண்ட துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} வெட்டப்பட்ட அவனது எதிரிகள் விழுந்ததும் அந்தப் பூமியானது, யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களின் கூட்டத்தால் அடையப்பட்டு, (முறிந்த) தேர்கள், கொல்லப்பட்ட குதிரைகள் மற்றும் யானைகளுடன் சேர்ந்து அச்சம் நிறைந்ததாகத் தெரிந்தது.(116) {அவ்வாறு வீழும்போது} சிலர் தங்கள் சகோதரர்களையும், சிலர் தங்கள் தந்தைமாரையும், சிலர் தங்கள் மகன்களையும் அழைத்தனர். சிலர், “சினங்கொண்ட தார்தராஷ்டிரர்களால் போரில் இத்தகு அருஞ்செயல்களைச் செய்ய முடியாது. உறங்கும் நேரத்தில் அடையப்படும் இத்தீச்செயல்கள் ராட்சசர்களின் வேலையே. பார்த்தர்கள் இல்லாததன் விளைவாலேயே இந்தப் பெரும் படுகொலை நடந்து கொண்டிருக்கிறது.(117,118) ஜனார்த்தனனைத் {கிருஷ்ணனைத்} தன் பாதுகாவலனாகக் கொண்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தேவர்களாலும், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களாலும் வெல்லப்பட முடியாதவனாவான்.(119) பிரம்மத்துக்கு அர்ப்பணிப்புடனும், உண்மை நிறைந்த பேச்சுடனும், தன்னடக்கத்துடனும், அனைத்துயிர்களிடமும் கருணையுடனும் இருக்கும் பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, உறங்கிக் கொண்டிருப்பவர்களையோ, கவனமில்லாமல் இருப்பவனையோ, தன் ஆயுதங்களை வைத்துவிட்டவனையோ, கூப்பிய கரங்களுடன் சரணடைந்தவனையோ, பின்வாங்கிச் செல்பவனையோ, கேசம் கலைந்தவனையோ ஒருபோதும் கொல்ல மாட்டான்.(120) ஐயோ, நம்மீது இத்தகு கொடூரத்தை இழைப்பவர்கள் தீச்செயல்களைச் செய்யும் ராட்சசர்களே” என்று சொன்னார்கள். இத்தகு வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே பலர் கீழே விழுந்தனர்.(121)

மனிதர்களின் கதறல்களாலும், அழுகைகளாலும் எழுந்த உரத்த ஆரவராம் ஒரு குறுகிய காலத்திற்குள்ளாகவே அடங்கியது.(122) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருதியால் பூமி நனைந்ததால், அச்சந்தரும்வகையில் அடர்த்தியாக எழுந்த புழுதியானது விரைவில் மறைந்தது.(123) அஸ்வத்தாமன், உயிரினங்களைக் கொல்லும் ருத்திரனைப் போலவே, வலியுடனும், வேதனை மற்றும் துயரத்தில் மூழ்கியும் நகர்ந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கொன்றான்.(124) கட்டிப்பிடித்துக் கொண்டே கீழே விழுந்த பலரும், தப்பி ஓட முயன்ற பலரும், ஒளிந்து கொள்ள முயன்ற பலரும், போரில் போராடிக் கொண்டிருந்த பலரும் என அனைவரும் துரோணரின் மகனால் கொல்லப்பட்டனர்.(125) எரியும் தழல்களில் எரிந்தும், அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டும், மனிதர்கள் தங்கள் புலனுணர்வுகளை இழந்து ஒருவரையொருவர் கொன்றனர்.(126) ஓ! ஏகாதிபதி, பாதி இரவு முடிவதற்குள்ளாகவே, அந்தத் துரோணரின் மகன், பாண்டவர்களின் பெரும்படையை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(127) மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளுக்கு அழிவைத் தந்த அந்தப் பயங்கரமான இரவில், இருளில் உலவும் உயிரினங்கள் அனைத்தும் மகிழ்ச்சியில் நிறைந்தன.(128)

ராட்சசர்கள் மற்றும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த பிசாசங்கள் ஆகியோர், தரையில் கிடந்த மனித இறைச்சியைக் கடித்து, குருதியைக் குடித்தனர்.(129) அவர்கள் கடுமையானவர்களாகவும், பழுப்பு நிறத்தவர்களாகவும், பயங்கரமானவர்களாகவும், வஜ்ரம் போன்ற பற்களைக் கொண்டவர்களாகவும், குருதியால் நனைந்தவர்களாகவும் இருந்தனர். தலைகள் சடாமுடி தரித்துக் கொண்டு, நீண்ட பருத்த தொடைகளுடனும், ஐந்து கால்களுடன் கூடியவர்களுமாக இருந்த அவர்களின் வயிறுகள் பெரியனவாக இருந்தன.(130) அவர்களின் விரல்கள் பின்புறத்தில் இருந்தன. கடுங்குணமும், கோரத் தன்மைகளையும் கொண்ட அவர்களின் உரத்த குரல் பயங்கரமானதாக இருந்தது. அவர்கள் தங்கள் உடல்களில் கிங்கிணி மணிகளை வரிசையாகக் கட்டியிருந்தனர். நீலத் தொண்டைகளைக் கொண்டிருந்த அவர்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துபவர்களாக இருந்தனர்.(131) மிகவும் கொடூரமானவர்களும், அச்சமடையாமல் பார்க்க இயலாதவர்களும், எதிலும் வெறுப்படையாதவர்களுமான அவர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் மனைவியருடன் அங்கே வந்தனர். உண்மையில் அங்கே காணப்பட்ட ராட்சசர்கள் பல்வேறு வடிவங்களில் இருந்தனர்.(132)

ஓடையாக ஓடிக் கொண்டிருந்த குருதியைக் குடித்த அவர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து தனித்தனி கூட்டங்களாக ஆடத் தொடங்கினர். “இஃது அருமையாக இருக்கிறது”, “இது தூய்மையாக இருக்கிறது”, “இது மிக இனிமையாக இருக்கிறது” என்ற வார்த்தைகளையே அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர்.(133) விலங்குணவை உண்டு வாழும் பிற ஊனுண்ணிகளும், கொழுப்பு, மஜ்ஜை, எலும்புகள் ஆகியவற்றை ருசித்து, சடலங்களில் உள்ள இனிமையான பகுதிகளை உண்ணத் தொடங்கின.(134) வேறு சிலர், ஓடையாகப் பாய்ந்து கொண்டிருந்த கொழிப்பைக் குடித்து, களத்தில் நிர்வாணமாக ஓடிக் கொண்டிருந்தனர். பல்வேறு வகை முகங்களைக் கொண்டவர்களும், பெரும் மூர்க்கம் கொண்டவர்களும், இறந்தவற்றின் இறைச்சியை உண்டு வாழ்பவர்களுமான வேறு ஊனுண்ணிகளும்,(135) அங்கே ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் வந்தனர். கோரமானவர்களும், தீச்செயல்களைச் செய்பவர்களுமான பெரும் ராட்சசர்கள் எண்ணற்ற கூட்டங்களாக அங்கே வந்தனர்.(136) ஓ! மன்னா, அந்தப் பயங்கரப் பேரழிவுக்கு மத்தியில் காணப்பட்ட வேறு வகைப் பூதங்களும், அங்கே வந்து, மகிழ்ச்சியால் நிறைந்து, மனநிறைவுடன் உண்டனர்.(137)

காலை விடிந்ததும் அஸ்வத்தாமன் அம்முகாமைவிட்ட அகல விரும்பினான்.(138) அவன் மனித இரத்தத்தில் குளித்திருந்தான், அவனது கரமும், வாளும் ஒன்றானது போல, அந்த வாளின் கைப்பிடி அவனது பிடியில் உறுதியாக இருந்தது.(139) (நல்ல போர்வீரர்களால்) ஒரு போதும் நடக்கப்படாத பாதையில் நடந்து சென்ற அஸ்வத்தாமன், அந்தப் படுகொலைக்குப் பிறகு, யுகத்தின் முடிவில் அனைத்து உயிரினங்களையும் சாம்பலாய் எரித்த சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிந்தான்.(140) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தத் துரோணரின் மகன், நடக்கப்படாத வழியில் நடந்து, தன் நோன்புக்கு ஏற்புடைய சாதனையைச் செய்து, தன் தந்தையின் படுகொலையால் ஏற்பட்ட துயரை மறந்தான்.(141) துரோணரின் மகன் அந்த இரவில் உள்ளே நுழைந்த போது, உறக்கத்தில் அனைவரும் புதைந்திருந்ததன் விளைவால் பாண்டவ முகாமானது முற்றிலும் அசைவற்றதாக இருந்தது. இந்த இரவு படுகொலைக்குப்பின்னர், மீண்டும் அனைவரும் அமைதியடைந்ததும் அஸ்வத்தாமன் அங்கிருந்து வெளியே வந்தான்.(142) ஓ! மன்னா, முகாமில் இருந்து வெளியே வந்த வீர அஸ்வத்தாமன், தன் இரு தோழர்களையும் சந்தித்து, தன் சாதனையின் செய்தியைச் சொல்லி அவர்களை மகிழ்ச்சி கொள்ளச் செய்தான்.(143) அவனது நன்மையில் அர்ப்பணிப்புடன் கூடிய அவ்விருவரும், (வாயிலில்) பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும் அவர்கள் எவ்வாறு கொன்றார்கள் என்ற இனிய செய்தியை அவனிடம் சொன்னார்கள்.(144) இவ்வாறே அவ்விரவானது கவனமற்று, உறக்கத்தில் புதைந்திருந்த சோமகர்களுக்குப் பயங்கர அழிவைத் தந்தது.(145) காலத்தின் வழியானது தடுக்கப்படமுடியாதது என்பதில் ஐயமில்லை. நம்மை அழித்தவர்கள், இப்போது தாங்களே அழிந்து போனார்கள்” {என்றான் சஞ்சயன்}.(146)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, துரியோதனனுக்கு வெற்றியைத் தேடித்தர உறுதி கொண்டிருந்தாலும், இத்தகு சாதனையை ஏன் அவன் முன்பே அடையவில்லை?(147) அந்தப் பெரும் வில்லாளி {அஸ்வத்தாமன்} எக்காரணத்தினால் துரியோதனன் இறந்தபிறகு இந்தப் படுகொலையை நிகழ்த்தினான். இவற்றை எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்” என்று கேட்டான்.(148)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! குருகுலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, பார்த்தர்கள் மீது கொண்ட அச்சத்தினால், அஸ்வத்தாமன் அத்தகு சாதனையைச் செய்யவில்லை. பார்த்தர்களும், புத்திசாலியான கேசவனும் {கிருஷ்ணனும்}, சாத்யகியும் இல்லாததனாலேயே துரோணரின் மகனால் அச்சாதனையைச் செய்ய முடிந்தது.(149) அவ்வீரர்கள் இருக்கும்போது, தலைவன் இந்திரனைத் தவிர அவர்களைக் கொல்லத்தகுந்தவன் வேறு எவன் இருக்கிறான்?[1] ஓ! மன்னா, மேலும் அம்மனிதர்க்ள அனைவரும் உறக்கத்தில் இருந்ததால் மட்டுமே அஸ்வத்தாமனால் அச்சாதனையைச் செய்ய முடிந்தது.(150) பாண்டவப் படைக்குப் பேரழிவை ஏற்படுத்திய அம்மூன்று வீரர்களும் (அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர்) ஒன்றாகச் சந்தித்து, “நற்பேறு பெறுவோம்” என்று சொன்னார்கள்.(151) அவ்விரு தோழர்களும் அஸ்வத்தாமனை வாழ்த்தி அவனை ஆரத்தழுவிக் கொண்டனர். அப்போது பெருமகிழ்ச்சியடைந்த அவன் {அஸ்வத்தாமன்}, இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(152) “பாஞ்சாலர்கள் அனைவரும், திரௌபதியின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். சோமகர்களும், எஞ்சியிருந்த மத்ஸ்யர்கள் அனைவரும் என்னால் கொல்லப்பட்டனர்.(153) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட நாம் தாமதமில்லாமல் மன்னனிடம் {துரியோதனனிடம்} செல்வோமாக. மன்னன் இன்னும் உயிரோடு இருந்தால் அவனுக்கு இந்த மகிழ்ச்சி நிறைந்த செய்தியைச் சொல்வோம்” {என்று சொன்னான் அஸ்வத்தாமன்}”.(154)

மாண்டான் துரியோதனன்! – சௌப்திக பர்வம் பகுதி – 09-கௌரவர்களில் எஞ்சியிருந்தவர்களான மூன்று வீரர்களும் துரியோதனனிடம் சென்று, அவன் உயிரோடிருப்பதைக் காண்பது; குரு மன்னனின் பரிதாபகரமான நிலை; மூன்று வீரர்களின் புலம்பல்; கிருபரின் புலம்பல்; பாண்டவப்படைக்குச் செய்த பேரழிவைத் துரியோதனனிடம் சொன்ன அஸ்வத்தாமன்; செய்தியைக் கேட்டு மனநிறைவு கொண்ட துரியோதனன்; துரியோதனனின் மரணம்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாஞ்சாலர்களையும், திரௌபதியின் மகன்களையும் கொன்றபிறகு, எதிரியால் தாக்கி வீழ்த்தப்பட்டுத் துரியோதனன் கிடக்கும் இடத்திற்கு அந்தக் குரு வீரர்கள் மூவரும் சென்றனர்.(1) அங்கே வந்த அவர்கள், குற்றுயிராகக் கிடக்கும் மன்னனைக் {துரியோதனனைக்} கண்டனர். அவர்கள், தங்கள் தேர்களில் இருந்து குதித்து, உமது மகனைச் சூழ்ந்து கொண்டனர்.(2) ஓ! ஏகாதிபதி, குரு மன்னன் {துரியோதனன்} அங்கே முறிந்த தொடைகளுடன் கிடந்தான். கிட்டத்தட்ட உணர்விழந்த நிலையில், உயிர் போகும் தருவாயில் அவன் கிடந்தான். கீழே பார்த்த விழிகளுடன் அவன் அடிக்கடி இரத்தம் கக்கிக் கொண்டிருந்தான்.(3) அப்போது அவன் {துரியோதனன்}, பயங்கர வடிவிலான ஊனுண்ணும் விலங்குகளால் சூழப்பட்டிருந்தான், ஓநாய்கள், கழுதைப்புலிகள் ஆகியன அவனது உடலை உண்பதற்காக நெடுந்தொலைவில்லில்லாமல் அருகிலேயே காத்திருந்தன.(4) அம்மன்னன், தன்னை உண்ணும் எதிர்பார்ப்பில் நிற்கும் அந்த ஊனுண்ணும் விலங்குகளைப் பெரும் சிரமத்துடன் தடுத்துக் கொண்டிருந்தான். அவன் பெரும் வேதனையுடன் பூமியில் கிடந்து துடித்துக் கொண்டிருந்தான்.(5)

அவனது {துரியோதனது} படையில் எஞ்சியிருப்பவர்களான அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகிய மூன்று வீரர்களும், தன்குருதியிலேயே குளித்து இவ்வாறு பூமியில் கிடக்கும் அவனைக் கண்டு துன்பத்தால் பீடிக்கப்பட்டு, அவனைச் சுற்றி அமர்ந்தார்கள்.(6) குருதியில் நனைந்து, வெப்பப் பெருமூச்சுகளை விட்டுக் கொண்டிருந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் சூழப்பட்ட குரு மன்னன் {துரியோதனன்}, மூன்று நெருப்புகளால் சூழப்பட்ட வேள்விப்பீடத்தைப் போலவே தெரிந்தான்.(7) அந்த மூன்று வீரர்களும், முற்றிலும் தகாத அவலநிலையில் கிடக்கும் மன்னனைக் கண்டு, தாங்கிக் கொள்ள முடியாத சோகத்தில் அழுதனர்.(8) அவனது முகத்திலிருந்த குருதியைத் தங்கள் கரங்களால் துடைத்த அவர்கள், போர்க்களத்தில் கிடக்கும் மன்னன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இந்தப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டனர்.(9)

கிருபர், “பதினோரு {11} அக்ஷௌஹிணிகளின் தலைவனான இந்த மன்னன் துரியோதனன், எதிரியால் தாக்கி வீழ்த்தப்பட்டு, குருதியால் மறைக்கப்பட்டு வெறுந்தரையில் உறங்குவதால், விதியினால் எதையும் கொண்டு வர முடியும் என்பது தெரிகிறது.(10) பசும்பொன்னின் காந்தியைக் கொண்டதும், இம்மன்னனுக்குப் பிடித்தமானதும், பசும்பொன்னாலேயே அலங்கரிக்கப்பட்டதுமான இவனது கதாயுதம் இவன் அருகிலேயே கிடப்பதைப் பாருங்கள்.(11) எந்தப் போரிலும் இந்தக் கதாயுதம் இந்த வீரனைக் கைவிடவில்லை. இப்போதும், இந்தச் சிறப்புமிக்கப் போர்வீரன் சொர்க்கத்திற்குச் செல்ல இருக்கும் இத்தருணத்திலும் இந்தக் கதாயுதம் இவனை விடவில்லை.(12) பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்ட இவ்வாயுதம், படுக்கையறையில் தன் தலைவனின் அருகில் கிடக்கும் காதல் மனைவியைப் போலவே இந்த வீரனின் அருகில் கிடப்பதைப் பாருங்கள்.(13) காலம் கொண்டு வந்த இந்த மாற்றங்களைப் பாருங்கள். எதிரிகளை எரிப்பவனும், மகுடம் தரித்த மன்னர்கள் அனைவரின் தலையிலும் நடப்பவனுமான இவன், (எதிரியால்) வீழ்த்தப்பட்டு, இப்போது புழுதியை உண்டு கொண்டிருக்கிறான்.(14) எவன் முன்பு எதிரிகள் பலரைத் தாக்கி வீழ்த்தி, வெறுந்தரையில் கிடக்கச் செய்தானோ, அந்தக் குருக்களின் மன்னன் இன்று எதிரிகளால் தாக்கி வீழ்த்தப்பட்டு வெறுந்தரையில் கிடக்கிறான்.(15) நூற்றுக்கணக்கான மன்னர்கள், எவனுக்கு அஞ்சிப் பணிவார்களோ, அவன் இன்று இரைதேடும் விலங்குகளால் சூழப்பட்டுப் போர்க்களத்தில் கிடக்கிறான்.(16) முன்பு பிராமணர்கள் எவனிடம் காத்திருந்தார்களோ {பணிவிடை செய்தார்களோ}, ஐயோ, இன்று அந்தச் செல்வத்தலைவனின் உடலை உண்பதற்காக இரைதேடும் விலங்குகள் இவனுக்காகக் காத்திருக்கின்றன” என்றார்”.(17)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொட்ரந்தான், “ஓ! பாரதர்களில் சிறந்தவரே, அந்தக் குருகுலத் தலைவன் {துரியோதனன்} தரையில் கிடப்பதைக் கண்ட அஸ்வத்தாமன், இந்தப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டான்:(18) “ஓ! மன்னர்களில் புலியே {துரியோதனனே}, மக்கள் அனைவரும் உன்னை வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவன் என்று சொன்னார்கள். அந்த மக்கள், (கதாயுதப் போரில்) சங்கர்ஷணரின் {பலராமரின்} சீடனான நீயே பொக்கிஷத் தலைவன் (குபேரன்) என்றும் சொன்னார்கள்.(19) ஓ! பாவமற்றவனே, பிறகு உன்னில் எந்தத் தாமதத்தையும் அந்தப் பீமனால் காண முடிந்தது எவ்வாறு? நீ எப்போதும் வலிமைமிக்கவனாகவும், திறம் கொண்டவனாகவும் இருந்தாய். ஓ! மன்னா, மறுபுறம் அவனோ {பீமனோ}, தீய ஆன்மா கொண்ட பொல்லாதவனாக இருந்தான்.(20)

ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அப்படிப்பட்ட நீயே போரில் பீமசேனனால் தாக்கி வீழ்த்தப்பட்டதை நாங்கள் காண்பதால், இவ்வுலகில் அனைத்தையும் விடக் காலமே வலிமைமிக்கது என்பதில் ஐயமில்லை.(21) ஐயோ, நீதியின் ஒவ்வொரு விதியையும் அறிந்தவனான உன்னை, இழிந்தவனும், தீயவனுமான விருகோதரனால் {பீமனால்} நியாயமற்ற வகையில் தாக்கி வீழ்த்த முடிந்தது எவ்வாறு? காலம் தடுக்கப்பட முடியாதது என்பதில் ஐயமில்லை.(22) ஐயோ, உன்னால் நியாயமான போருக்கு அழைக்கப்பட்ட பீமசேனன், தன் வலிமையை வெளிப்படுத்தி உன் தொடைகளை முறித்தான்.(23) போரில் நியாயமற்ற வகையில் தாக்கி வீழ்த்தி, காலால் தீண்டிய ஒருவனைப் பொறுத்துக் கொண்ட அந்த இழிந்த யுதிஷ்டிரனுக்கு ஐயோ.(24) உலகம் உள்ளவரையில், போர்கள் அனைத்திலும், விருகோதரனை {பீமனை} நிச்சயம் போர்வீரர்கள் நிந்திப்பார்கள். நீ நியாயமற்ற முறையில் தாக்கி வீழ்த்தப்பட்டாய் என்பதில் ஐயமில்லை.(25)

ஓ! மன்னா {துரியோதனா}, யதுகுலத்தின் வீரப் பலராமன், “கதாயுதப் போர்களில் துரியோதனனுக்கு இணையானவன் யாருமில்லை” என்று எப்போதும் சொல்வான்.(26) ஓ! பாரதா, அந்த விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தவன் {பலராமன்}, “குருகுலத்தின் துரியோதனன் எனக்குத் தகுந்த சீடனாவான்” என்று வழக்கமாகவே ஒவ்வொரு சபையிலும் பெருமை பேசுவான்.(27) பெரும் முனிவர்களால் சொல்லப்படுவதைப் போலப் போரில் எதிரியை முகத்துக்கு நேராகச் சந்தித்து உயர்ந்த வெகுமதியை நீ அடைந்திருக்கிறாய்.(28) ஓ! மனிதர்களில் காளையே, ஓ! துரியோதனா, நான் உனக்காக வருந்தவில்லை. உன் தாயான காந்தாரி மற்றும் உனது தந்தை {திருதராஷ்டிரர்} ஆகியோர் பிள்ளைகளற்றவர்களாகிவிட்டனரே என்றே இப்போது வருந்துகிறேன்.(29) அவர்கள், சோகத்தால் பீடிக்கப்பட்ட நிலையில் தங்கள் உணவுக்காகப் பூமியெங்கும் திரியப் போகிறார்கள். விருஷ்ணி குலத்தின் கிருஷ்ணனுக்கும், தீய புரிதல் {துர்ப்புத்தி} கொண்ட அர்ஜுனனுக்கு ஐயோ.(30) அவர்கள் தங்களை அறநெறிகளின் கடமைகளை அறிந்தவர்கள் என்று கருதிக் கொண்டாலும், நீ கொல்லப்பட்டபோது அலட்சியமாகவே நின்றார்கள். ஓ! மன்னா, வெட்கமற்றவர்களாகவே இருந்தாலும் பிற பாண்டவர்களும், உன்னைக் கொன்ற முறையைக் குறித்து எவ்வாறு பேசப் போகிறார்கள்?(31)

ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனனே}, ஓ! மனிதர்களில் காளையே, எதிரியை முறையாக எதிர்த்துப் போர்க்களத்தில் கொல்லப்பட்டதால் நீ உயர்ந்த நற்பேற்றையே அடைவாய்.(32) ஐயோ, இப்போது பிள்ளைகளை இழந்தவளும், தன் சொந்தங்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் இழந்தவளுமான காந்தாரி அடையப்போகும் அவல நிலை என்னவாக இருக்கும்? பார்வையற்ற மன்னன் {திருதராஷ்டிரன்} அடையப்போகும் அவல நிலையும் என்னவாக இருக்கும்?(33) அரசனான உன்னை முன்னிட்டுக் கொண்டு சொர்க்கத்தை அடையாமல் இருக்கும் கிருதவர்மன், நான் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரரான கிருபர் ஆகிய எங்களுக்கு ஐயோ.(34) விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவனும், மனிதர்கள் அனைவரின் பாதுகாவலனும், குடிமக்கள் அனைவருக்கும் நன்மை செய்பவனுமான உன்னைப் பின்தொடராமல் இருக்கும் இழிந்த மனிதர்களான எங்களுக்கு ஐயோ.(35)

ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனனே}, கிருபரின் வசிப்பிடம், என் வசிப்பிடம் மற்றும் என் தந்தையின் வசிப்பிடம் ஆகியவையும், நம்மைச் சார்ந்திருப்பவர்களின் வசிப்பிடங்களும் உன் அதிகாரத்தாலேயே செல்வத்தால் நிறைந்திருந்தன.(36) உன் அருளால் நாங்களும், எங்கள் நண்பர்களும், உறவினர்களும், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளைக் கொடுத்து முதன்மையான வேள்விகள் பலவற்றைச் செய்தோம்.(37) பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு நீ சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டால், இத்தகு பாவிகளான நாங்கள் எங்கே செல்வோம்?(38) ஓ! மன்னா, (வாழ்வின்) உயர்ந்த எல்லையை அடையப்போகும் உன்னை நாங்கள் மூவரும் பின்தொடராததால், இத்தகு புலம்பல்களிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கப் போகிறோம்.(29) உன்னோடு நாங்கள் வராததால், உன் தோழமையை இழந்து, செல்வமற்று, உன் செழிப்பில் வலியுடன் வசிக்கப்போகும் நாங்கள் அடையப்போகும் கதிதான் என்ன?(40)

ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, நாங்கள் இவ்வுலகத்தில் துயரத்துடன் திரியப் போகிறோம் என்பதில் ஐயமில்லை. ஓ! மன்னா, உன்னை இழந்து நாங்கள் அமைதியை எங்கே அடைவோம்? மகிழ்ச்சியை எங்கே அடைவோம்?(41) ஓ! ஏகாதிபதி, இவ்வுலகில் இருந்து சென்று, (உனக்கு முன்பு அங்கே சென்றிருக்கும்) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களைச் சந்தித்து, என் வேண்டுகோளுக்கிணங்க, அவர்களின் வயதின் அடிப்படையிலும், பதவியின் அடிப்படையிலும் ஒருவர்பின் ஒருவராக உன் மரியாதையைச் செலுத்துவாயாக.(42) ஓ! மன்னா {துரியோதனா}, விற்களைத் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான உன் ஆசானை {துரோணரை} வழிபட்டபிறகு, திருஷ்டத்யும்னன் என்னால் கொல்லப்பட்டான் என்பதை அவரிடம் சொல்வாயாக.(43) உனக்கு முன்னே சொர்க்கத்திற்குச் சென்றிருப்பவர்களான வலிமைமிக்கத் தேர்வீரரும், மன்னருமான பாஹ்லீகரையும், சிந்துக்களின் ஆட்சியாளனையும் {ஜெயத்ரதனையும்}, சோமதத்தன் மற்றும் பூரிஸ்ரவஸையும்,(44) இன்னும் பிற முதன்மையான மன்னர்களையும் ஆரத்தழுவிக் கொள்வாயாக. என் வேண்டுகளோளுக்கிணங்க அவர்கள் அனைவரையும் ஆரத்தழுவி, அவர்களது நலத்தை விசாரிப்பாயாக” என்றான் {அஸ்வத்தாமன்}”.(45)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அந்த அஸ்வத்தாமன், உணர்வுகளை இழந்தவனாக, முறிந்த தொடைகளுடன் கிடந்த மன்னனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொல்லி, மீண்டும் தன் கண்களை அவன் மீது செலுத்தி, அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(46) “ஓ! துரியோதனா, உன்னில் இன்னும் உயிரானது இருக்குமானால், கேட்பதற்கு இனிய இவ்வார்த்தைகளைக் கேட்பாயாக. பாண்டவர்களின் தரப்பில் எழுவர் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர், தார்தராஷ்டரர்களில் நாங்கள் மூவர் மட்டுமே {உயிருடன் இருக்கிறோம்}.(47) ஐந்து சகோதரர்கள் {பாண்டவர்கள்}, வாசுதேவன் {கிருஷ்ணன்}, மற்றும் சாத்யகி ஆகியோரே அவர்களின் தரப்பில் இருக்கும் எழுவராவர். நம் தரப்பிலோ நான், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகிய மூவர் {எஞ்சியிருக்கிறோம்}.(48) திரௌபதியின் மகன்கள் அனைவரும், திருஷ்டத்யும்னனின் பிள்ளைகள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஓ! பாரதா, பாஞ்சாலர்கள் அனைவரும், எஞ்சியிருந்த மத்ஸ்யர்களும் கொல்லப்பட்டனர்.(49) அவர்கள் என்ன செய்தார்களோ, அந்தப் பழிக்குப்பழியைப் பார். பாண்டவர்கள் இப்போது பிள்ளைகளற்றவர்களா இருக்கின்றனர். அவர்களது முகாமில் உறக்கத்தில் புதைந்திருந்த மனிதர்கள் அனைவரும், விலங்குகள் அனைத்தும் கொல்லப்பட்டன.(50) ஓ! மன்னா, அவர்களது முகாமுக்குள் இரவில் ஊடுருவிய நான் பாவம்நிறைந்த செயல்களைச் செய்யும் பொல்லாதவனான திருஷ்டத்யும்னனை விலங்குகளைக் கொல்வதைப் போலக் கொன்றேன்” {என்றான் அஸ்வத்தாமன்}.(51)

அப்போது துரியோதனன், தன் இதயத்துக்கு ஏற்புடைய அவ்வார்த்தைகளைக் கேட்டு, புலனுணர்வு மீண்டு, பதிலுரையாக இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(52) “கங்கையின் மைந்தனோ {பீஷ்மரோ}, கர்ணனோ, உமது தந்தையோ {துரோணரோ} அடையாத ஒன்று, இறுதியாகக் கிருபர் மற்றும் போஜனனின் {கிருதவர்மனின்} துணையுடன் கூடிய உம்மால் இன்று அடையப்பட்டது.(53) பாண்டவப் படைகளின் தலைவனான அந்த இழிந்தவனையும் (திருஷ்டத்யும்னனையும்}, சிகண்டியையும் நீர் கொன்றிருக்கிறீர். இதன் விளைவாக நான் என்னை மகவத்துக்கு {இந்திரனுக்கு} இணையானவனாகக் கருதுகிறேன்.(54) உங்கள் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும். செழிப்பு உங்களுடையதாகட்டும். நாம் அனைவரும் மீண்டும் சொர்க்கத்தில் சந்திப்போம்” {என்றான் துரியோதனன்}.

இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் குருக்களின் மன்னன் {துரியோதனன்} அமைதியடைந்தான்.(55) (கொல்லப்பட்ட) தன் சொந்தங்கள் அனைவருக்குமான தன் துயரங்கள் அனைத்தையும் கைவிட்டு, அவன் {துரியோதனன்} தன் உயிர் மூச்சை விட்டான். அவனது உடல் மட்டுமே பூமியில் கிடந்தபோது, அவனது ஆன்மாவோ புனிதமான சொர்க்கத்திற்கு உயர்ந்து சென்றது.(56) ஓ! மன்னா, இவ்வாறே உமது மகன் துரியோதனன் தன் இறுதி மூச்சை சுவாசித்தான். போரை முதலில் துண்டியவனான அவன், தன் எதிரிகளால் இறுதியாகக் கொல்லப்பட்டான்.(57) அந்த மூன்று வீரர்களும் மன்னனை மீண்டும் மீண்டும் ஆரத்தழுவி கொண்டு அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறகு அவர்கள் தங்கள் தேர்களில் ஏறினர்.(58)

துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} இந்தப் பரிதாபகரமான புலம்பல்களைக் கேட்ட பிறகே, விடியற்காலையில் நான் நகரத்தை நோக்கிப் புறப்பட்டு வந்தேன்.(59) இவ்வாறே குருக்கள் மற்றும் பாண்டவர்களின் படைகள் அழிக்கப்பட்டன. ஓ! மன்னா, உமது தீய கொள்கையினால் ஏற்பட்ட அழிவு பெரிதானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது.(60) உமது மகன் சொர்க்கத்திற்கு உயர்ந்த பிறகு, நான் துயரத்தால் பீடிக்கப்பட்டேன், மேலும் முனிவர் {வியாசர்} கொடுத்த ஆன்மப் பார்வையையும் இழந்தேன்” {என்றான் சஞ்சயன்}”.(61)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மன்னன் {திருதராஷ்டிரன்}, தன் மகன் {துரியோதனன்} இறந்ததைக் கேட்டு, வெப்பப் பெருமூச்சுகளை விட்டுக்கொண்டு, பெரும் சோகத்தில் மூழ்கினான்”[1].(62)

சௌப்திக உபபர்வம் முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் -சல்லிய பர்வம்-ஹிரதப் பிரவேச பர்வம்-கதா யுத்த பர்வம்-

October 15, 2025

தடாகத்திற்குள் நுழைந்த துரியோதனன்! – சல்லிய பர்வம் பகுதி – 29-(சம்ஸ்க்ருதத்தில் ஹ்ரதம் என்றால் பெரிய நீர்நிலை என்ற பொருளாம். எனவே, தடாகநுழைவு என்று இந்த உபபர்வத்திற்குப் பொருள் கொள்ளலாம்.)தன் படையைத் தூண்டிய துரியோதனன்; எஞ்சியிருந்த கௌரவர்களை அழித்த பாண்டவர்கள்; பாண்டவர்களிடம் எஞ்சியிருந்த துருப்புகளின் எண்ணிக்கை; சஞ்சயனைக் கொல்ல எத்தனித்த சாத்யகி; சாத்யகியைத் தடுத்த வியாசர்; துரியோதனனைக் கண்ட சஞ்சயன்; தடாகத்தில் நுழைந்த துரியோதனன்; அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மனைச் சந்தித்த சஞ்சயன்; கௌரவர்களுக்கு ஏற்பட்ட அழிவைக்கேட்டு முகாமில் இருந்த அரசகுடும்பத்து மகளிர் நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது; யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு ஹஸ்தினாபுரம் சென்ற யுயுத்சு; விதுரனைச் சந்தித்த யுயுத்சு; யுயுத்சுவின் அமைதியின்மை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதன்பிறகு, ஓ! ஏகாதிபதி, சுபலன் மகனின் {சகுனியின்} தொண்டர்கள் சினத்தால் நிறைந்தனர். அந்தப் பயங்கரப் போரில் அவர்கள், தங்கள் உயிர்களையும் விட ஆயத்தமாகி, பாண்டவர்களைத் தடுக்கத் தொடங்கினர்.(1) சகாதேவனின் வெற்றிக்குத் துணை சேர்க்க விரும்பிய அர்ஜுனனும், பெரும் சக்தி கொண்ட பீமசேனனும், கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புக்கு ஒப்பாக அந்தப் போர்வீரர்களை வரவேற்க {எதிர்க்கத்} தொடங்கினர்.(2) தனஞ்சயன் {அர்ஜுனன்}, சகாதேவனைக் கொல்ல விரும்பியவர்களும், ஈட்டிகள், வாள்கள் வேல்கள் ஆகியவற்றைத் தரித்திருந்தவர்களுமான அந்தப் போர்வீரர்களின் நோக்கத்தைத் தன் காண்டீவத்தால் கலங்கடித்தான்.(3) அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, கையில் ஆயுதங்களுடன் விரைந்து வந்த அந்தப் போராளிகளின் குதிரைகளையும், கரங்களையும், சிரங்களையும் தன் அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} வெட்டி வீழ்த்தினான்.(4) பெரும் சுறுசுறுப்புடைய அந்த வீரர்களின் குதிரைகள் சவ்யசச்சினால்{அர்ஜுனனால்} தாக்கப்பட்டுப் பூமியில் விழுந்து தங்கள் உயிரை விட்டன.(5)தன் துருப்புகளின் பேரழிவைக் கண்ட மன்னன் துரியோதனன், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்தவனானான். இன்னும் பல நூறுகளாக இருந்த அவனது எஞ்சிய தேர்களையும்,(6) மேலும் தன் யானைகள், குதிரைகள் மற்றும் காலாட்களையும் ஒன்றாகத் திரட்டிய உமது மகன் {துரியோதனன்}, அந்தப் போர்வீரர்களிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(7) “நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் கூடிய பாண்டவர்கள் அனைவரோடும், தன் துருப்புகளுடன் கூடிய பாஞ்சால இளவரசனோடும் {திருஷ்டத்யும்னனோடும்} மோதி வேகமாக அவர்களைக் கொன்றுவிட்டுப் போரில் இருந்து திரும்புவீராக” என்றான்.(8) அவனது ஆணையை மரியாதையுடன் ஏற்றுக் கொண்டவர்களும், போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களுமான அந்தப் போர்வீரர்கள், உமது மகனுடைய ஆணையின் பேரில் அந்தப் போரில் பார்த்தர்களை எதிர்த்து மீண்டும் சென்றனர்.(9) எனினும், பாண்டவர்கள், கௌரவப்படையில் எஞ்சியிருப்பவர்களும், அந்தப் பயங்கரப் போரில் தங்களை எதிர்த்து இவ்வாறு வேகமாக விரைந்து வந்தவர்களுமான அந்தப் போர்வீரர்களை, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தங்கள் கணைகளால் மறைத்தனர்.(10)

போரிட வந்த அந்தப் படையினர், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, ஒரு பாதுகாவலனை அடையத் தவறியவர்களாக, அந்த உயர் ஆன்மப் போர்வீரர்களால் ஒரு கணத்தில் அழிக்கப்பட்டனர்.(11) அந்தப் படையால் எழுப்பப்பட்ட புழுதியுடன், (கௌரவக்) குதிரைகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்ததன் விளைவால், முக்கிய மற்றும் துணைத் திசைகளுக்கிடையில் வேறுபாட்டைக் காண முடியவில்லை.(12) பாண்டவ வியூகத்தில் இருந்து வெளியே வந்த பல போர்வீரர்கள், ஓ! பாரதரே, அந்தப் போரில் ஒரு கணத்தில் உமது துருப்பினரைக் கொன்றனர்.(13) ஓ! பாரதரே, உமது மகனால் {துரியோதனனால்} பதினோரு  {11} அக்ஷௌஹிணி துருப்புகள் திரட்டப்பட்டிருந்தன. ஓ! தலைவா, அவையனைத்தும் பாண்டுக்களாலும், சிருஞ்சயர்களாலும் கொல்லப்பட்டன.(14) உமது தரப்பைச் சேர்ந்த பல்லாயிரம் உயர் ஆன்ம மன்னர்களில், ஓ! ஏகாதிபதி, இப்போது துரியோதனன் மட்டுமே அதிகக் காயங்களுடன் உயிரோடு காணப்பட்டான்.(15)

துரியோதனன், அனைத்துப் பக்கங்களிலும் தன் கண்களைச் சுழலவிட்டு, பூமி வெறுமையாக இருப்பதையும், துருப்புகள் அனைத்தையும் தான் இழந்து நிற்பதையும், அதே வேளையில், பாண்டவர்கள் தங்கள் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறியதன் விளைவால் உரக்க முழங்கிக் கொண்டு அந்தப் போரில் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதையும் கண்டு, ஓ! ஏகாதிபதி, அந்த உயர் ஆன்மப் போர்வீரர்களால் ஏவப்பட்ட கணைகளின் விஸ் ஒலிகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் திகைத்து நின்றான். துருப்புகளையும், விலங்குகளையும் இழந்த அவன், தன் இதயத்தைக் களத்தில் இருந்து பின்வாங்குவதில் நிலைநிறுத்தினான்” {என்றான் சஞ்சயன்}.(16-18)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “என் துருப்புகள் கொல்லப்பட்டு, நமது முகாம் முற்றிலும் வெறுமையானபோது, ஓ! சூதா {சஞ்சயா}, பாண்டவர்களிடம் எஞ்சியிருந்து துருப்புகளின் பலம் என்ன? நான் இஃதை அறிய விரும்புகிறேன். எனவே, ஓ! சஞ்சயா, (உரைப்பதில்) திறன்மிக்கவனான நீ எனக்கு அதைச் சொல்வாயாக.(19) மேலும், ஓ! சஞ்சயா, பூமியின் தலைவனும், பலரில் எஞ்சியிருக்கும் ஒரே ஒருவனும், எனது மகனுமான அந்தத் தீயத் துரியோதனன், தன் படை அழிக்கப்பட்டபோது என்ன செய்தான் என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(20)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! ஏகாதிபதி, பாண்டவர்களின் வலிமைமிக்கப் படையில் எஞ்சியிருந்தது இரண்டாயிரம் {2000} தேர்களும், எழுநூறு {700} யானைகளும், ஐயாயிரம் {5000} குதிரைகளும், பத்தாயிரம் {10,000} காலாட்படை வீரர்களும் ஆகும். திருஷ்டத்யும்னன், இந்தப் படையைக் கவனித்துக் கொண்டு, அந்தப் போரில் காத்திருந்தான்.(21,22) அதேவேளையில், ஓ! பாரதர்களின் தலைவரே, தேர்வீரர்களில் முதன்மையானவனான மன்னன் துரியோதனனோ, எந்தவொரு போர்வீரனையும் தன் தரப்பில் காணவில்லை.(23) பூமியின் தலைவனான அந்தத் துரியோதனன், ஓ! ஏகாதிபதி, தன் எதிரிகள் உரக்க முழங்குவதையும, தன் படையின் அழிவையும் கண்டு, எந்தத் துணைவனும் இல்லாதவனாக, கொல்லப்பட்ட தன் குதிரையைக் கைவிட்டுவிட்டு, களத்தைவிட்டுக் கிழக்குத் திசையை நோக்கித் தப்பி ஓடினான்.(24) பதினோரு அக்ஷௌஹிணிகளின் தலைவனும், பெரும் சக்தி கொண்டவனுமான உமது மகன் துரியோதனன், தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு ஒரு தடாகத்தை நோக்கி காலாளாகத் தப்பி ஓடினான்.(25)

காலாளாக அதிகத் தொலைவைக் கடப்பதற்கு முன், அம்மன்னன் {துரியோதனன்}, புத்திசாலியும், அறவோனுமான விதுரனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.(26) ’பெரும் ஞானம் கொண்டவரான விதுரர், க்ஷத்திரியர்களுக்கும், நமக்கும் போரில் ஏற்படப்போகும் இந்தப் பேரழிவை முன்னறிந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை’(27) என்று நினைத்தவாறே, தன் படையின் அழிவைக் கண்டு துயரில் இதயம் எரிந்து கொண்டிருந்த அந்த மன்னன் {துரியோதனன்}, அத்தடாகத்தின் ஆழங்களுக்குள் ஊடுருவ விரும்பினான்.(28)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனைத் தங்கள் தலைமையில் கொண்ட பாண்டவர்கள், ஓ! மன்னா, சினத்தால் நிறைந்து, (எஞ்சியிருக்கும் மிகச்சிறிய) உமது படையை எதிர்த்து விரைந்தனர்.(29) தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் காண்டீவத்தைக் கொண்டு, ஈட்டிகள், வாள்கள், வேல்கள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு உரத்து முழங்கிக் கொண்டிருந்த (கௌரவத்) துருப்புகளின் நோக்கத்தைக் கலங்கடித்தான்.(30) தன் கூரிய கணைகளால் அந்தத் துருப்புகளையும், அதன் கூட்டாளிகளையும், சொந்தங்களையும் கொன்ற அர்ஜுனன், வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தன் தேரில் நின்று கொண்டிருந்தபோது, மிக அழகானவனாகத் தெரிந்தான்.(31) குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றோடு சுபலனின் மகனும் {சகுனியும்} வீழ்ந்த பிறகு, உமது படையானது, (காற்றால்) வீழ்த்தப்பட்ட பெரும் காட்டைப் போலத் தெரிந்தது.(32) லட்சக்கணக்கான போர்வீரர்கள் இருந்த அந்தத் துரியோதனனின் படையில், துரோணரின் வீரமகன் {அஸ்வத்தாமன்}, கிருதவர்மன், கௌதமரின் மகனான கிருபர் மற்றும் பூமியின் தலைவனான உமது மகன் {துரியோதனன்} ஆகியோரைத் தவிர மற்றொரு பெருந்தேர்வீரன் எவனையும் உயிரோடு காண முடியவில்லை.(34)

{சஞ்சயனான} என்னைக் கண்ட திருஷ்டத்யும்னன், சாத்யகியிடம் சிரித்துக் கொண்டே, “இவனைப் பிடித்து வைப்பதால் யாது பயன்? இவனை உயிரோடு வைத்திருப்பதால் எவ்வொன்றையும் ஈட்ட முடியாது” என்றான்.(35) திருஷ்டத்யும்னனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் தேர்வீரனுமான சிநியின் பேரன் {சாத்யகி}, தன் கூரிய வாளை உயர்த்திக் கொண்டு, என்னைக் கொல்ல ஆயத்தமானான்.(36) சரியாக அதே நேரத்தில், பெரும் ஞானியும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் (கருப்பு நிறம் கொண்ட வியாசர்), அங்கே வந்து “சஞ்சயன் உயிரோடு செல்லட்டும். எவ்வகையிலும் அவன் கொல்லப்படக்கூடாது” என்றார்.(37) அந்தத் தீவில் பிறந்தவரின் {துவைபாயனரின்} வார்த்தைகளைக் கேட்ட சிநியின் பேரன் {சாத்யகி}, தன் கரங்களைக் கூப்பிக் கொண்டு, என்னை விடுவித்துவிட்டு, “ஓ! சஞ்சயா, உனக்கு அமைதியுண்டாகட்டும், நீ எங்கும் செல்லலாம்” என்றான்.(38) அவனால் அனுமதிக்கப்பட்ட நான், என் கவசத்தைக் கழற்றிவிட்டு, என் ஆயுதங்களையும் கைவிட்டுவிட்டு, குருதியில் குளித்திருந்த என் அங்கங்களுடன், நகரத்தை நோக்கிச் செல்லும் சாலையில் மாலைவேளையில் புறப்பட்டேன்.(39)

இரண்டு மைல்கள் {ஒரு குரோசம்} தொலைவுக்கு வந்த பிறகு, ஓ! ஏகாதிபதி, கையில் கதாயுதத்துடனும், அதிகமாகச் சிதைக்கப்பட்ட உடலுடனும் தனியொருவனாக நிற்கும் துரியோதனனை நான் கண்டேன்.(40) அவனது கண்கள், கண்ணீரால் நிரம்பியிருந்ததால், அவனால் என்னைப் பார்க்க முடியவில்லை. நான் அவன் முன்னிலையில் உற்சாகமற்றவனாக நின்றிருந்தேன். அவனும் அதேபோலவே என்னை {இன்னாரென} அறிந்து கொள்ளாமலேயே பார்த்துக் கொண்டிருந்தான்.(41) களத்தில் தனியொருவனாக நின்று துயரப்பட்டுக் கொண்டிருக்கும் அவனைக் கண்டு, கவலையில் மூழ்கிய என்னால், சிறிது நேரத்திற்கு ஒரே ஒரு வார்த்தையைக் கூடப் பேச முடியவில்லை.(42) பிறகு, கைப்பற்றப்பட்டு, துவைபாயனரின் {வியாசரின்} அருளால் நான் விடுவிக்கப்பட்டது குறித்த அனைத்தையும் அவனிடம் சொன்னேன்.(43) ஒரு கணம் சிந்தித்த அவன் {துரியோதனன்}, தன் உணர்வுகள் மீண்டதும், அவனது சகோதரர்கள் மற்றும் அவனது துருப்புகளைக் குறித்து என்னிடம் விசாரித்தான்.(44) என் கண்களால் அனைத்தையும் நான் கண்டிருந்ததால், அவனது தம்பிமார் அனைவரும் கொல்லப்பட்டது, அவனது துருப்புகள் முற்றாக அழிக்கப்பட்டது என அனைத்தையும் அவனுக்குச் சொன்னேன்.(45) (பாண்டவர்கள் இருந்த இடத்தில் இருந்து) நான் புறப்பட்டபோது, துவைபாயனர் {வியாசர்} என்னிடம் சொன்னது போலவே, அந்நேரத்தில் எங்களில் மூன்று தேர்வீரர்கள் மட்டுமே உயிரோடு இருப்பதாக மன்னனிடம் நான் சொன்னேன்.(46)

ஆழ்ந்த பெருமூச்சுகளை விட்டபடியே, மீண்டும் மீண்டும் என்னைப் பார்த்த உமது மகன் {துரியோதனன்}, தன் கரத்தால் என்னைத் தீண்டி,(47) “ஓ! சஞ்சயா, இந்தப் போரில் ஈடுபட்டவர்களில், உன்னைத் தவிர வேறு எவரும் உயிரோடில்லை. உயிரோடிருக்கும் தங்கள் கூட்டாளிகளுடன் பாண்டவர்கள் இருக்கையில், (என் தரப்பில்) நான் ஒருவனையும் {உயிரோடு} காணவில்லை.(48) தலைவரான குருட்டு மன்னர் திருதராஷ்டிரரிடம், அவரது மகன் துரியோதனன், தடாகத்தின் ஆழங்களுக்குள் நுழைந்துவிட்டதாகச் சொல்வாயாக.(49) நண்பர்கள், மகன்கள், சகோதரர்கள் ஆகியோரை இழந்து, பாண்டவர்களால் தன் நாடு எடுத்துக் கொள்ளப்பட்டதையும் கண்டு, உயிரோடு வாழ விரும்புவதற்கு என்னைப் போன்ற எவன் இருக்கிறான்?(50) இவை அனைத்தையும் மன்னரிடம் சொல்லிவிட்டு, அந்தப் பயங்கரப் போரில் இருந்து நான் உயிரோடு தப்பியதையும், அதிகமாகக் காயமடைந்திருந்தாலும், இந்தத் தடாகத்தின் ஆழங்களுக்குள் உயிரோடு ஓய்ந்திருக்கப் போகிறேன் என்பதையும் அவருக்குச் சொல்வாயாக” என்றான்.(51)

இவ்வார்த்தைகளை என்னிடம் சொன்னபிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னன் அந்தத் தடாகத்திற்குள் நுழைந்தான். அந்த மனிதர்களின் ஆட்சியாளன் {துரியோதனன்}, தன் மாய சக்தியைக் கொண்டு, அத்தடாகத்தின் நீரைக் கட்டி, அதற்குள் தனக்கென ஓர் இடைவெளியை உண்டாக்கிக் கொண்டான்.(52) அந்தத் தடாகத்திற்குள் அவன் நுழைந்த பிறகு, என் தரப்பில் எவரும் இல்லாத நான், (எங்கள் படையைச் சேர்ந்த) அந்த மூன்று தேர்வீரர்களும், களைத்துப் போன தங்கள் விலங்குகளுடன் ஒன்றாக வருவதைக் கண்டேன்.(53) சரத்வான் மகனான கிருபர், தேர்வீரர்களில் முதன்மையானவனான வீர அஸ்வத்தாமன், போஜர் குலத்தின் கிருதவர்மன் ஆகியோரே அவர்கள். கணைகளால் சிதைக்கப்பட்டிருந்த அவர்கள் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த இடத்திற்கு வந்தனர்.(54)

என்னைக் கண்ட அவர்கள் அனைவரும், தங்கள் குதிரைகளை வேகமாகத் தூண்டி என்னிடம் வந்து, “ஓ! சஞ்சயா, நற்பேறாலேயே நீ இன்னும் வாழ்கிறாய்” என்றனர்.(55) பிறகு அவர்கள் அனைவரும் மனிதர்களின் ஆட்சியாளனான உமது மகனை {துரியோதனனைக்} குறித்து விசாரிக்கும் வகையில், “ஓ! சஞ்சயா, நமது மன்னன் துரியோதனன் உயிருடன் இருக்கிறானா?” என்று கேட்டனர்.(56) மன்னனின் உடல்நலம் நன்றாக இருப்பதை நான் அவர்களுக்குச் சொன்னேன். மேலும், துரியோதனன் என்னிடம் சொன்ன அனைத்தையும் அவர்களிடம் சொன்னேன். துரியோதனன் நுழைந்த தடாகத்தையும் அவர்களுக்குச் சுட்டிக் காட்டினேன்.(57) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, என் வார்த்தைகளைக் கேட்ட அஸ்வத்தாமன், அந்தப் பரந்தத் தடாகத்தின் மீது தன் கண்களைச் செலுத்தி, “ஐயோ, ஐயோ, நாங்கள் உயிரோடிருப்பதை மன்னன் அறிந்தானில்லை. அவனுடன் நாங்களும் இருந்தால், நம் எதிரிகளுடன் போரிடும் வல்லமை இன்னும் நமக்கிருக்கிறது” என்று சொல்லித் துயரத்தால் புலம்பத் தொடங்கினான்.(59) நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், பாண்டுவின் மகன்களைக் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர்.(60) நமது எஞ்சிய படையைச் சேர்ந்தவர்களான அந்த மூன்று தேர்வீரர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த கிருபரின் தேரில் என்னை ஏற்றிக் கொண்டு, குரு முகாமுக்குச் சென்றனர்.(61)

சூரியன் சற்று முன்பே மறைந்தான். முகாமின் புறக்காவலில் இருந்த துருப்பினர், உமது மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டதை அறிந்து உரக்க அழுதனர்.(62) பிறகு, ஓ! ஏகாதிபதி, அரசகுடும்பத்தின் மகளிரைக் கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்டிருந்த முதிர்ந்த மனிதர்கள், அந்த இளவரசிகளை அழைத்துக் கொண்டு நகரத்தை நோக்கிச் சென்றனர்.(63) மொத்த படையின் அழிவையும் கேட்டு அழுது கொண்டிருந்த மங்கையர், மேலும் உரக்க ஓலமிட்டு அழுதனர்.(64) ஓ! மன்னா, இடையறாமல் அழுதுகொண்டிருந்த பெண்கள், பெண் அன்றில்கூட்டங்களைப் போலத் தங்கள் குரல்களைப் பூமியில் எதிரொலித்தனர்.(65) அவர்கள் தங்கள் நகங்களால் தங்கள் உடல்களைக் கிழித்துக் கொண்டும், தங்கள் கரங்களால் தங்கள் தலைகளில் அடித்துக் கொண்டும், தங்கள் கூந்தலை அவிழ்த்துவிட்டுக் கொண்டும் உரக்க அழுது கொண்டே இருந்தனர்.(66) “ஓ!” மற்றும் “ஐயோ!” என்ற ஒலிகளால் காற்றை நிறைத்து, தங்கள் மார்புகளை அடித்துக் கொண்ட அவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உரக்க அழுது கதறினர்.(67)

அப்போது, ஆழமாகப் பீடித்திருந்தவர்களான துரியோதனனின் நண்பர்கள் {அமைச்சர்கள்}, தங்கள் கண்ணீரால் குரலற்றவர்களாகி, அரசகுல மங்கையரைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு நகரத்தை நோக்கிப் புறப்பட்டனர்.(68) முகாமின் காவலர்கள், விலைமதிப்பு மிக்க விரிப்புகளால் மூடப்பட்ட பல வெண் படுக்கைகளை எடுத்துக் கொண்டு, நகரத்தை நோக்கி வேகமாகச் சென்றனர்.(69) வேறு சிலர், பெண்கோவேறு கழுதைகளால் இழுக்கப்பட்ட தேர்களில் தங்கள் மனைவியரை அமர்த்திக்கொண்டு, நகரத்தை நோக்கிச் சென்றனர். வீடுகளில் இருக்கும்போது சூரியனாலும் காணப்படாத அந்த மங்கையர், ஓ! ஏகாதிபதி, இப்போது நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, பொதுமக்களின் பார்வைக்கு வெளிப்பட்டனர்.(71) ஓ! பாரதக் குலத்தின் தலைவரே {திருதராஷ்டிரரே}, மிக மென்மையானவர்களாக இருந்த அந்தப் பெண்கள், தங்களுக்கு நெருக்கமானவர்களையும், உறவினர்களையும் இழந்து, இப்போது நகரத்தை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தனர்.(72) மாட்டிடையர்களும், ஆட்டிடையர்களும், பொதுமக்களும், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டுப் பீதியால் நிறைந்து, நகரத்தை நோக்கித் தப்பி ஓடினர்.(73) இவர்களும் கூடப் பார்த்தர்களிடம் கொண்டிருந்த பேரச்சத்தால் நிறைந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே நகரத்தை நோக்கித் தப்பி ஓடினர்.(74)

அச்ச சூழ்நிலையில் அவர்கள் தப்பி ஓடும்போது, துயரத்தால் தன் உணர்வுகளை இழந்தவனான யுயுத்சு, வந்திருக்கும் ஆபத்துக் காலத்தில் செய்யப்பட வேண்டியது என்ன என்பது குறித்துச் சிந்தித்தான்.(75) “பயங்கர ஆற்றலைக் கொண்ட பாண்டவர்களால் போரில் துரியோதனன் வெல்லப்பட்டான். அவன் தன்னிடம் பதினோரு அக்ஷௌஹிணிகளைக் கொண்டிருந்தான். அவனது சகோதரர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(76) பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையிலான கௌரவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர். விதியின் ஆதிக்கத்தால் நான் மட்டுமே காக்கப்பட்டிருக்கிறேன்.(77) குரு முகாமிலிருந்த அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். ஐயோ, சக்தியை இழந்து, பாதுகாவலர்களையும் இழந்து அவர்கள், அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடுகின்றனர்.(78) இத்தகு காட்சியை இதற்கு முன்பு ஒருபோதும் கண்டதில்லை. கவலையால் பீடிக்கப்பட்டுள்ள அவர்கள், அஞ்சும் கண்களுடன், மான் கூட்டங்களைப் போல ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடுகிறார்கள்.(79) துரியோதனனின் ஆலோசகர்களில் {அமைச்சர்களில்} உயிரோடிருப்பவர்கள், அரச குடும்பத்தின் மகளிரைக் கூட்டிக் கொண்டு நகரத்தை நோக்கித் தப்பி ஓடுகின்றனர்.(80) ஓ! தலைவா[1], யுதிஷ்டிரன் மற்றும் வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} அனுமதி பெற்றுக் கொண்டு நானும் அவர்களுடன் நகரத்தில் நுழைய வேண்டிய நேரம் வந்துவிட்டதென நான் நினைக்கிறேன்” என்று நினைத்தான் {யுயுத்சு}. இக்காரணத்திற்காகவே அந்த வலிய கரங்களைக் கொண்ட இளவரசன் {யுயுத்சு}, அந்த வீரர்கள் இருவரிடமும் {யுதிஷ்டிரன் மற்றும் கிருஷ்ணனிடம்} சென்று, தன் நோக்கத்தை வெளிப்படுத்தினான்.(81)எப்போதும் கருணை கொண்டவனான மன்னன் யுதிஷ்டிரன், அவனிடம் மிகவும் மனநிறைவு கொண்டான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்}, வைசியத் தாய்க்குப் பிறந்த அந்தப் பிள்ளையை {யுயுத்சுவைத்} தழுவி கொண்டு, பாசத்துடன் அவனை அனுப்பிவைத்தான்.(82) தன் தேரைச் செலுத்திய அவன் {யுயுத்சு}, தன் குதிரைகளைப் பெரும் வேகத்தில் தூண்டினான். பிறகு அவன் {யுயுத்சு}, அரச குடும்பத்தின் மகளிர் நகரத்துக்குச் செல்வதை மேற்பார்வையிட்டான்.(83) சூரியன் மறைந்து கொண்டிருந்தான். அந்தப் பெண்களுடன் சேர்ந்து, கண்ணீர் நிறைந்த கண்களுடனும், துயரால் தடைபட்ட குரலுடனும் யுயுத்சுவும் ஹஸ்தினாபுர நகரத்திற்குள் நுழைந்தான்.(84)

அப்போது அவன் {யுயுத்சு} பெரும் ஞானியான விதுரன் கண்ணீர் நிறைந்த கண்களுடன் அமர்ந்திருப்பதைக் கண்டான். பெரும் சோகத்தால் இதயம் பீடிக்கப்பட்டதால், அவன் திருதராஷ்டிரனிடம் இருந்து அகன்று வந்திருந்தான்.(85) அவன் {யுயுத்சு}, விதுரனை வணங்கிவிட்டு, அவனது முன்னிலையில் நின்றான். உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் விதுரன் அவனிடம் {யுயுத்சுவிடம்}, “ஓ! மகனே, குருக்களின் அழிவுக்கு மத்தியில் நீ உயிருடன் இருப்பது நற்பேறாலேயே.(86) எனினும், நீ துரியோதனனை உடன் அழைத்து வராதது ஏன்? இதன் காரணத்தை எனக்கு விரிவாகச் சொல்வாயாக” என்று கேட்டான்.(87)

அப்போது யுயுத்சு {விதுரனிடம்}, “ஓ! ஐயா, சகுனியும், அவரது உறவினர்களும், நண்பர்களும் வீழ்ந்த பிறகு, மன்னன் துரியோதனன், தான் செலுத்திய குதிரையைக் கைவிட்டுவிட்டு, அச்சத்தால் கிழக்குத் திசையை நோக்கி தப்பி ஓடினான்.(88) மன்னன் தப்பி ஓடிய பிறகு, (கௌரவ) முகாமில் இருந்த மக்கள் அனைவரும், அச்சத்தால் கலக்கமடைந்து நகரத்தை நோக்கித் தப்பி ஓடினர்.(89) பிறகு, பெண்களின் பாதுகாவலர்கள், மன்னனுடைய {துரியோதனனின்} மனைவியரையும், அவனது தம்பிகளின் மனைவியரையும் வாகனங்களில் அமர்த்திக் கொண்டு, அச்சத்தால் தப்பி ஓடினர்.(90) இவ்வாறு தப்பி ஓடும் மக்களைப் பாதுகாப்பதற்காகவே, மன்னன் யுதிஷ்டிரன் மற்றும் கேசவனின் {கிருஷ்ணனின்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு, நான் ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டு வந்தேன்” என்றான் {யுயுத்சு}.(91)

திருதராஷ்டிரனுடைய வைசிய மனைவியின் மகன் {யுயுத்சு} சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், அளவிலா ஆன்மா கொண்டவனும், அனைத்து நடைமுறைகளையும் அறிந்தவனுமான விதுரன், அந்த நேரத்திற்கு எது முறையானது என்பதை உணர்ந்து, சொல்திறமிக்க யுயுத்சுவைப் பாராட்டினான்.(92) மேலும் அவன் {விதுரன்}, “பாரதர்கள் அனைவருக்கும் நேர்ந்த இந்த அழிவைக் கருத்தில் கொண்டு, நீ முறையாகவே செயல்பட்டிருக்கிறாய். கருணையினால் நீ உனது குலத்தின் கௌரவத்தையும் தக்க வைத்திருக்கிறாய்.(93) சுடர்மிக்க மகிமை கொண்ட சூரியனைக் காணும் உயிரினங்களைப் போல[2], வீரர்களுக்கு அழிவைத் தந்த இந்தப் பெரும்போரில் இருந்து நீ மீண்டு வந்ததை நாங்கள் காண்பது எங்கள் நற்பேறாலேயே.(94) ஓ! மகனே, முன்னறிதிறனை இழந்தவரும், பேரிடரால் பீடிக்கப்பட்டவரும், விதியால் தாக்கப்பட்டவரும், மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்டாலும், தன் தீய கொள்கையைத் தொடர்வதை நிறுத்த முடியாதவருமான குருட்டு மன்னருக்கு {திருதராஷ்டிரருக்கு}, இப்போது அனைத்து வகையிலும் நீ ஒருவனே ஒரே ஊன்றுகோலாக இருக்கிறாய்.(95) இந்த நாள் இங்கு ஓய்ந்திருப்பாயாக. நாளை நீ யுதிஷ்டிரனிடம் திரும்பலாம்” என்றான் {விதுரன்}.இவ்வார்த்தைகளைச் சொன்ன விதுரன், கண்ணீர் நிறைந்த கண்களுடன்,(96) யுயுத்சுவிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, துயரால் பீடிக்கப்பட்ட குடிமக்கள் மற்றும் கிராமவாசிகள், “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும் செய்த கூச்சல்களை எதிரொலித்த மன்னனின் {திருதராஷ்டிரனின்} வசிப்பிடத்திற்குள் நுழைந்தான்.(97) உற்சாகமற்ற அந்த மாளிகை, அதன் அழகனைத்தையும் இழந்ததாகத் தெரிந்தது; வசதிகளும், மகிழ்ச்சியும் அம்மாளிகையைக் கைவிட்டதாகத் தெரிந்தது. முழுவதும் வெறுமையாக இருந்த அம்மாளிகை முழுமையாகவே சீர்கெட்டிருந்தது. ஏற்கனவே சோகத்தால் நிறைந்திருந்த விதுரனின் துயரம், அக்காட்சியால் இன்னும் அதிகரித்தது.(98) அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனான விதுரன், நீண்ட பெருமூச்சுகளைவிட்டபடியே, சோகம் நிறைந்த இதயத்துடன் அரண்மனைக்குள் நுழைந்தான்.(99) யுயுத்சுவைப் பொறுத்தவரை, அவன் அந்த இரவைத் தன் வசிப்பிடத்திலேயே கழித்தான். துயரால் பீடிக்கப்பட்டிருந்த அவன் {யுயுத்சு}, துதிகளால் வரவேற்கப்பட்ட போது, எந்த மகிழ்ச்சியையும் அடையவில்லை. ஒருவரின் கரங்களால் மற்றவர்களுக்கு நேர்ந்த பாரதர்களின் பயங்கர அழிவை நினைத்துக் கொண்டே அவன் காலத்தைக் கடத்தினான்” {என்றான் சஞ்சயன்}.(100)

துரியோதனனைக் கண்டுபிடித்த வேடர்கள்! – சல்லிய பர்வம் பகுதி – 30-தடாகத்தில் மறைந்திருந்த துரியோதனனிடம் பேசிய கிருபர் முதலானோர்; ஓரிரவு ஓய்ந்திருக்கப் போவதாகச் சொன்ன துரியோதனன்; இந்நிகழ்வை மறைந்திருந்து கவனித்த வேடர்கள், அதைப் பீமசேனனிடம் தெரிவித்தது; துரியோதனன் இருந்த இடத்திற்கு வந்த பாண்டவர்கள்; பாண்டவர்கள் வருவதை அறிந்து தப்பி ஓடிய அஸ்வத்தாமன் முதலானோர் ஓர் ஆலமரத்தை அடைந்து ஓய்ந்திருப்பது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “போர்க்களத்தில் பாண்டு மகன்களால் கௌரவத் துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்ட பிறகு, என் படையில் பிழைத்திருந்தவர்களான கிருதவர்மன், கிருபர் மற்றும் துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் என்ன செய்தனர்? மேலும், தீய ஆன்மா கொண்ட மன்னன் துரியோதனன் அப்போது என்ன செய்தான்?” என்று கேட்டான்.(1,2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த உயர் ஆன்ம க்ஷத்திரியர்களின் மகளிர் தப்பி ஓடி, (கௌரவ) முகாம் முற்றிலும் வெறுமையான பிறகு, (நீர் குறிப்பிட்ட) அந்த மூன்று தேர்வீரர்களும் கவலையில் நிறைந்தனர்.(3) பாண்டு மகன்களின் வெற்றிக் கூச்சல்களைக் கேட்டும், மாலைவேளையில் முகாம் கைவிடப்பட்டதைக் கண்டும், மன்னனைக் காக்க விரும்பியும், களத்தில் நிற்க முடியாமலும், நமது தரப்பின் அந்த மூன்று தேர்வீரர்களும் அந்தத் தடாகத்தை நோக்கிச் சென்றனர்.(4) வெற்றி ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன், அந்தப் போரில் தன் சகோதரர்களுடன் சேர்ந்து பெரும் மகிழ்ச்சியை உணர்ந்து, துரியோதனனைக் கொல்லும் விருப்பத்தில் களமெங்கும் திரிந்து கொண்டிருந்தான்.(5) கோபத்தால் நிறைந்தவர்களும், வெற்றியை விரும்பியவர்களுமான பாண்டவர்கள் உமது மகனைத் தேடினர். அவர்கள் மிகக் கவனமாகத் தேடிய போதிலும் அவர்களால் (குரு) மன்னனை {துரியோதனனைக்} கண்டுபிடிக்க முடியவில்லை.(6)

கையில் கதாயுதத்துடன், பெரும் வேகத்துடன் போர்க்களத்தில் இருந்து தப்பிச் சென்ற அவன் {துரியோதனன்}, தனது மாய சக்திகளின் உதவியால் தடாகத்தின் நீரைக் கட்டி அதற்குள் ஊடுருவினான்.(7) இறுதியாகப் பாண்டவர்களின் விலங்குகள் மிகவும் களைத்தபோது, அவர்கள் தங்கள் முகாமுக்குச் சென்று அங்கே தங்கள் படைவீரர்களுடன் ஓய்வெடுத்தனர்.(8) பார்த்தர்கள் முகாமுக்குச் சென்ற பிறகு, கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் மெதுவாகத் தடாகத்தை நோக்கிச் சென்றனர்.(9) மன்னன் இருந்த அந்தத் தடாகத்தை அணுகிய அவர்கள், நீருக்குள் உறங்கிக் கொண்டிருந்தவனும், வெல்லப்பட முடியாதவனுமான அந்த மனிதர்களின் ஆட்சியாளனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! மன்னா, எழுவாயாக. எங்களோடு சேர்ந்து யுதிஷ்டிரனிடம் போரிடுவாயாக. வெற்றியை அடைந்து பூமியை அனுபவிப்பாயாக, அல்லது, ஓ! துரியோதனா, கொல்லப்பட்டு சொர்க்கத்திற்குச் செல்வாயாக.(11) ஓ! துரியோதனா, பாண்டவர்களின் படைகள் அனைத்தும் கூட உன்னால் கொல்லப்பட்டிருக்கின்றன. அவர்களில் உயிரோடிருப்பவர்களும் மிகவும் சிதைக்கப்பட்டிருக்கின்றனர்.(12) ஓ! ஏகாதிபதி, அவர்களால் உனது வேகத்தைத் தாங்கிக் கொள்ள இயலாது. அதிலும் குறிப்பாக எங்களால் நீ பாதுகாக்கப்படும்போது அவர்களால் தாங்கிக் கொள்ளவே இயலாது. எனவே, ஓ! பாரதா, எழுவாயாக” என்றனர்.(13)

துரியோதனன், “மனிதர்களில் காளைகளே, பாண்டவர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் நடந்த இந்த அழிவைத் தரும்போரில் உயிரோடு நீங்கள் வந்திருப்பதை நற்பேறாலேயே நான் காண்கிறேன்.(14) நாம் சற்றே ஓய்ந்து, நம் களைப்பகன்றதும், எதிரியோடு மோதி நாம் அவனை வெல்வோம். நீங்களும் களைப்பாக இருக்கிறீர்கள். நானும் மிகவும் சிதைக்கப்பட்டிருக்கிறேன். பாண்டவர்களின் படையோ வலிமையில் பெருகியிருக்கிறது. இக்காரணங்களுக்காவே நான் இப்போது போரிட விரும்பவில்லை.(15) வீரர்களே, உங்களது உன்னத இதயங்களின் காரணமாக உங்கள் பங்கிற்கு நீங்கள் சொல்லும் இந்த அறிவுரைகள் உங்களுக்கு {உங்கள் தரத்திற்கு} அற்புதமானவையல்ல. என்னிடம் நீங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்புணர்வும் பெரியதே. எனினும், இஃது ஆற்றலை வெளிக்காட்டும் நேரமில்லை.(16) இந்த ஓரிரவில் நான் ஓய்ந்திருந்து, நாளை உங்களுடன் சேர்ந்து எதிரியோடு போரிடுவேன். இதில் எவ்வையமும் கிடையாது” என்றான்.”(17)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவ்வாறு சொல்லப்பட்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, போரில் வெல்லப்பட முடியாத அம்மன்னனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! மன்னா, எழுவாயாக, நீ அருளப்பட்டிருப்பாயாக. இப்போதும் நாம் எதிரியை வெல்லலாம்.(18) என் அறச்செயல்கள் அனைத்தின் மீதும், உண்மையில் நான் கொடுத்துள்ள கொடைகள் அனைத்தின் மீதும், என் மௌனத் தியானங்களின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன், ஓ! மன்னா, நான் இன்று சோமகர்களைக் கொல்வேன்.(19) நான் போரில் பாண்டவர்களைக் கொல்லாமல் இவ்விரவு கழியுமேயானால், வேள்விகள் செய்வதன் மூலம் விளையும் மகிழ்ச்சியும், பக்திமான்கள் அனைவராலும் உணரப்படும் மகிழ்ச்சியும் எனக்குக் கிடைக்காமல் போகட்டும்.(20) ஓ! தலைவா, பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்லாமல் நான் எனது கவசத்தைக் களைய மாட்டேன். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே, என்னை நம்புவாயாக” என்றான்.(21)

அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, சில வேடர்கள் அங்கே வந்தனர். தாங்கள் சுமந்து வந்த இறைச்சியின் கனத்தால் களைத்துப் போயிருந்த அவர்கள், குறிப்பிட்ட எந்தக் காரியத்திற்காகவும் இல்லாமல் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக அங்கே வந்தனர்.(22) ஓ! தலைவா, ஓ! மன்னா, அந்த வேடர்கள் தினந்தோறும் பெரும் மதிப்புடன் பீமசேனனுக்காகக் கூடைகூடையாக இறைச்சியைக் கொண்டு வந்து கொடுப்பவர்களாவர்.(23) அத்தடாகத்தின் கரையில் மறைவாக அவர்கள் அமர்ந்தபோது, துரியோதனனுக்கும், அந்தப் போர்வீரர்களுக்கும் இடையில் நடந்த அந்த உரையாடலின் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டனர்.(24) போரிட விரும்பாத குரு மன்னனைக் கண்டவர்களும், போரிட விரும்பியவர்களுமான அந்தப் பெரும் வில்லாளிகள், தங்கள் ஆலோசனைகளைப் பின்பற்றும்படி அவனைப் பெரிதும் தூண்டத் தொடங்கினர்.(25)

அந்த வேடர்கள், கௌரவப்படையைச் சேர்ந்த அந்தத் தேர்வீரர்களைக் கண்டும், போரிட விரும்பாத மன்னன் {துரியோதனன்} நீருக்குள் இருப்பதைப் புரிந்து கொண்டும்,(26) அந்தப் போர்வீரர்களுக்கும், தடாகத்தின் ஆழங்களுக்குள் இருக்கும் அவர்களது தலைவனுக்கும் இடையில் நடந்த அந்த உரையாடலைக் கேட்டும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உண்மையில், தடாகத்திற்குள் இருப்பவன் துரியோதனனே என்பதைத் தெளிவாகக் கண்டும் ஒரு தீர்மானத்தைச் செய்தனர்.(27) சிறிது நேரத்திற்கு முன்புதான், மன்னனைத் தேடிக் கொண்டிருந்த பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, இம்மனிதர்களைச் சந்தித்து, அவர்களிடம் துரியோதனன் இருக்கும் இடத்தைக் குறித்த விசாரித்திருந்தான்.(28) பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} சொன்ன அந்த வார்த்தைகளை நினைவுகூர்ந்த அந்த வேடர்கள், ஓ! மன்னா, ஒருவொருக்கொருவர் கிசிகிசுத்தபடியே,(29) “(பாண்டவர்களிடம்) துரியோதனனை வெளிப்படுத்துவோம். அந்தப் பாண்டுவின் மகன் நமக்குச் செல்வத்தைத் தருவான். கொண்டாடப்படும் மன்னன் துரியோதனன் இங்கிருப்பது நமக்குத்தெளிவாகத் தெரிகிறது.(30) பழியுணர்ச்சி கொண்ட துரியோதனன் இந்தத் தடாகத்தின் நீருக்குள் மறைந்திருப்பதைச் சொல்வதற்காக மன்னன் யுதிஷ்டிரன் இருக்குமிடத்திற்கு நாம் அனைவரும் செல்வோம்.(31) மேலும், நாம் அனைவரும் சென்று, பெரும் வில்லாளியும், புத்திசாலியுமான பீமசேனனிடமும், திருதராஷ்டிரன் மகன் இந்தத் தடாகத்தின் நீருக்குள் மறைந்திருக்கிறான் என்பதைச் சொல்வோம்.(32) நம்மிடம் மனநிறைவு கொள்ளும் அவன் {பீமன்}, நமக்கு இன்னும் அதிகச் செல்வத்தைக் கொடுப்பான். பிறகு, இவ்வளவு கடினமாக உழைத்து, நாளுக்கு நாள் இறைச்சியை அடைந்து, இப்படிக் களைப்படைய வேண்டிய தேவை நமக்கு என்ன இருக்கிறது?” என்றனர்.(33)

இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த வேடர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து, செல்வத்துக்காக ஏங்கி, தங்கள் இறைச்சிக்கூடைகளை எடுத்துக் கொண்டு (பாண்டவ) முகாமை நோக்கிச் சென்றனர்.(34) இலக்கில் துல்லியமும், தாக்குவதில் திறனும் கொண்ட பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி, அப்போது மறைந்திருந்த துரியோதனனைக் களத்தில் காணாது, தங்கள் முகாமில் ஓய்ந்திருந்தனர்.(35) அந்தப் பொல்லாத பாவியின் தீய கொள்கைக்கு ஒரு முடிவை அடைய விரும்பிய அவர்கள், போர்க்களத்தின் அனைத்துத் திசைகளுக்கும் ஒற்றர்களை அனுப்பிக் கொண்டிருந்தனர்.(36) எனினும், அக்காரியத்திற்காக அனுப்பப்பட்ட படைவீரர்கள் அனைவரும், ஒன்றாக முகாமுக்குத் திரும்பி வந்து, மன்னன் துரியோதனன் குறித்த எத்தடயத்தையும் காண முடியவில்லை என்று நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் தெரிவித்தனர்.(37) திரும்பி வந்த தூதர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதக் குலத்தின் காளையே, பெரும் கவலையால் நிறைந்து, கடும் மூச்சு விடத் தொடங்கினான்.(38)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் இவ்வாறு உற்சாகமற்றிருந்தபோது, ஓ! தலைவா, தடாகக் கரையில் இருந்து பெரும் வேகத்துடன் வந்த அந்த வேடர்கள்,(39) துரியோதனனைக் கண்டுபிடித்திருந்ததால் மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாக முகாமை அடைந்தனர். முகாமுக்குள் நுழைய தடுக்கப்பட்டாலும், பீமசேனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் உள்ளே நுழைந்தனர்.(40) பாண்டுவின் வலிமைமிக்க மகனான பீமசேனனை அடைந்த அவர்கள், தாங்கள் கண்டது மற்றும் கேட்டது அனைத்தையும் சொன்னார்கள்.(41) பிறகு எதிரிகளை எரிப்பவனான விருகோதரன் {பீமன்}, அவர்களுக்குப் பெரும் செல்வத்தைக் கொடுத்து, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் அனைத்தையும் சொல்லும் வகையில்,(42) “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, எனக்கு இறைச்சி கொடுக்கும் வேடர்களால் துரியோதனன் கண்டுபிடிக்கப்பட்டார். ஓ! மன்னா, யாருக்காக நீர் இவ்வளவு கவலைப்படுகிறீரோ, அவன் {துரியோதனன்} இப்போது தடாகத்தின் நீரைக்கட்டி அதற்குள் இப்போது கிடக்கிறான்” என்றான்.(43)

பீமசேனனின் இந்த இனிமையான வார்த்தைகளைக் கேட்டவனும், குந்தியின் மகனுமான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, தன் தம்பியர் அனைவருடன் சேர்ந்து மகிழ்ச்சியால் நிறைந்தான்.(44) வலிமைமிக்க வில்லாளியான துரியோதனன், தடாகத்தின் நீருக்குள் ஊடுருவியிருப்பதை அறிந்த அம்மன்னன், ஜனார்த்தனனை {கிருஷ்ணனைத்} தன் தலைமையாகக் கொண்டு, பெரும் வேகத்துடன் அந்த இடத்திற்குச் சென்றான்.(45) அப்போது, ஓ! ஏகாதிபதி, மகிழ்ச்சியால் நிறைந்திருந்த பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவருக்கும் மத்தியில் ஆரவாரவொலி எழுந்தது.(46) ஓ! பாரதக் குலத்தின் காளையே, போர்வீரர்கள் சிங்க முழக்கங்களைச் செய்து உரக்கக் கூச்சலிட்டனர். க்ஷத்திரியர்கள் அனைவரும், ஓ! மன்னா, துவைபாயனம் {த்வைபாயனஹ்ரதம்} என்றழைக்கப்பட்ட அந்தத் தடாகத்திற்குப் பெரும் வேகத்துடன் சென்றனர்.(47) மகிழ்ச்சியடைந்த சோமகர்கள், “பாவியான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} கண்டுபிடிக்கப்பட்டான்” என்று சுற்றிலும் மீண்டும் மீண்டும் கூச்சலிட்டனர்.(48) ஓ! ஏகாதிபதி, பெரும் வேகத்துடன் வந்த அந்த மூர்க்கமான தேர்வீரர்களின் தேர்களால் உண்டான பேரொலி சொர்க்கங்களையே எட்டியது.(49) அவர்கள் அனைவரின் விலங்குகளும் களைத்திருந்தாலும், துரியோதனனைக் கண்டுபிடிப்பதில் முனைப்புடன் இருந்த மன்னன் யுதிஷ்டிரனின் பின்னால் அவர்கள் வேகமாகத் தொடர்ந்து சென்றனர்.(50)

அர்ஜுனன், பீமசேனன், பாண்டுவுக்கும் மாத்ரிக்கும் பிறந்த இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னன், வெல்லப்பட முடியாதவனான சிகண்டி,(51) உத்தமௌஜஸ், யுதாமன்யு, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, திரௌபதியின் மகன்கள் (ஐவர்), பாஞ்சாலர்களில் இன்னும் உயிரோடு எஞ்சிருந்தவர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும், அவர்களது யானைகளும், நூற்றுக்கணக்கான காலாட்படை வீரர்களும் யுதிஷ்டிரனுடன் சென்றனர்.(52) பெரும் வீரம் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், ஓ! ஏகாதிபதி, அப்போது துரியோதனன் எதற்குள் இருந்தானோ அந்தத் துவைபாயனம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட தடாகத்தை வந்தடைந்தான். பெருங்கடலைப் போலப் பரந்திருந்த அதன் {அத்தடாகத்தின்} தன்மை இனிமையானதாகவும், அதன் நீர் தெளிவானதாகவும், குளுமையானதாகவும் இருந்தது.(53) உண்மையில், அற்புத வழிமுறையான தனது மாய சக்தியால் அதன் நீரைக் கட்டிய உமது மகன் துரியோதனன், ஓ! பாரதரே, அந்தத் தடாகத்திற்குள்ளேயே இருந்தான்.(54) உண்மையில், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, ஓ! தலைவா, எம்மனிதனாலும் வெல்லப்பட முடியாதவனான அம்மன்னன் {துரியோதனன்} தன் கதாயுதத்துடன் அந்த நீருக்குள்ளேயே கிடந்தான்.(55) அத்தடாகத்தின் நீருக்குள் இருந்த மன்னன் துரியோதனன், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பாக (பாண்டவப் படை உண்டாக்கிய) அந்த ஆரவாரப் பேரொலியைக் கேட்டான்.(56) அப்போது யுதிஷ்டிரன், ஓ! மன்னா, துரியோதனனைக் கொல்லும் விருப்பத்துடன் தன் தம்பிகளோடு அந்தத் தடாகத்திற்கு வந்தான்.(57) அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தன் தேர்ச்சக்கரங்களின் ஒலியாலும், தன் சங்கின் உரத்த முழக்கத்தாலும் பூமியை நடுங்கச் செய்தபடியே அடர்த்தியான புழுதியை எழுப்பினான்.(58)

யுதிஷ்டிரனின் படையால் உண்டாக்கப்பட்ட அவ்வொலியைக் கேட்ட பெரும் தேர்வீரர்களான கிருதவர்மன், கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர், அந்தக் குரு மன்னனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள்:(59) “மகிழ்ச்சியால் நிறைந்தும், வெற்றிக்கான ஏக்கத்துடனும் பாண்டவர்கள் இங்கே வருகின்றனர். எனவே, நாங்கள் இந்த இடத்தை விட்டகல்கிறோம். இதை நீ அறிவாயாக. {எங்களுக்கு விடை கொடுப்பாயாக}” என்றனர்.(60) பெரும் சுறுசுறுப்புடைய அவ்வீரர்கள் வார்த்தைகளைக் கேட்ட அவன், “அப்படியே ஆகட்டும்” என்று அவர்களுக்குப் பதிலளித்து, (முன்பு போலவே) தன் மாயசக்தியால் நீரைக் கட்டி அதற்குள்ளேயே இருந்தான்.(61) கிருபரின் தலைமையிலான அந்தத் தேர்வீரர்கள், துயரால் நிறைந்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னனிடம் {துரியோதனனிடம்} விடைபெற்றுக் கொண்டு, அந்த இடத்தில் இருந்து தொலைவான ஓரிடத்திற்குச் சென்றுவிட்டனர்.(62)

தொலைவாகச் சென்ற அவர்கள், ஓ! ஐயா, ஓர் ஆலமரத்தைக் கண்டு, அதன் நிழலில் நின்றனர். மிகவும் களைத்துப் போய், மன்னனைக் குறித்த கவலையில் இருந்த அவர்கள், இத்தகு சிந்தனைகளில் ஈடுபட்டனர்:(63) ‘வலிமைமிக்கத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, தடாகத்தின் நீரைக் கட்டி அதன் அடியில் கிடக்கிறான். பாண்டவர்களோ போரிடும் விருப்பத்துடன் அந்த இடத்தை அடைந்திருக்கின்றனர்.(64) போர் எவ்வாறு நடைபெறும்? மன்னனுக்கு {துரியோதனனுக்கு} என்ன ஆகும்? குரு மன்னனைப் பாண்டவர்களால் எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்?’ {என்று நினைத்தனர்}.(65) இவற்றை நினைத்த கிருபர் முதலான அந்த வீரர்கள், தங்கள் தேர்களில் இருந்து தங்கள் குதிரைகளை விடுவித்து, சிறிது நேரம் ஓய்வெடுக்க ஆயத்தமாகினர்” {என்றான் சஞ்சயன்}.(66)

துரியோதனனிடம் பேசிய யுதிஷ்டிரன்! – சல்லிய பர்வம் பகுதி – 31-துவைபாயனத் தடாகத்தின் கரைக்கு வந்து யுதிஷ்டிரனும், கிருஷ்ணனும் பேசிக்கொண்டது; நீரிலிருந்து வெளியே வருமாறு துரியோதனனைக் கேட்டுக் கொண்ட யுதிஷ்டிரன்; ஓய்வைக் கேட்ட துரியோதனன்; மறுத்த யுதிஷ்டிரன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த மூன்று தேர்வீரர்களும் அவ்விடத்தைவிட்டு அகன்ற பிறகு, பாண்டவர்கள், துரியோதனன் ஓய்ந்திருந்த அந்தத் தடாகத்திற்குப் வந்தனர்.(1) அந்தத் துவைபாயனத் தடாகத்தின் கரையை அடைந்த அவர்கள், ஓ! குரு குலத்தின் தலைவரே {திருதராஷ்டிரரே}, உமது மகனால் கவர்ந்திழுக்கப்பட்ட அந்த நீர்க்கொள்ளிடத்தைக் கண்டனர். அப்போது யுதிஷ்டிரன், வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்},(2) “இந்த நீரில் துரியோதனன், தன் மாய சக்தியைப் பயன்படுத்தியிருப்பதைப் பார். நீர்நிலையைக் கவர்ந்திழுத்து {ஸ்தம்பனம் செய்து} அதனுள் அவன் கிடக்கிறான். இப்போது அவனுக்கு மனிதர்களிடம் இருந்து எந்த அச்சமும் இல்லை.(3) அவன் {துரியோதனன்}, தெய்வீக மாயை இருப்புக்கு அழைத்து இப்போது இந்த நீர்நிலைக்குள் இருக்கிறான். அனைத்து வஞ்சகச் செயல்களையும் அறிந்தவனான அந்தப் பொல்லாதவன், இந்த வஞ்சச் செயலால் இப்படிப்பட்ட புகலிடத்தை அடைந்திருக்கிறான். எனினும், அவனால் உயிருடன் தப்ப முடியாது.(4) போரில் அவனது உதவிக்கு வஜ்ரதாரியே {இந்திரனே} வந்தாலும், ஓ! மாதவா {கிருஷ்ணா}, இன்று அவன் கொல்லப்படுவதை மக்கள் காண்பார்கள்” என்றான்.(5)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, உமது மாயசக்தியைப் பயன்படுத்தி, மாயாவியான துரியோதனனின் இந்த மாயை அழிப்பீராக. மாயையை அறிந்த ஒருவனை அந்த மாயையைக் கொண்டே கொல்ல வேண்டும். ஓ! யுதிஷ்டிரரே, இதுவே உண்மையாகும் {சத்தியமாகும்}.(6) ஓ! பாரதர்களின் தலைவரே, செயல்கள் மற்றும் வழிமுறைகளைக் கொண்டும், இந்நீர்நிலையில் உமது மாயசக்தியைப் பயன்படுத்தியும் மாய ஆன்மாவேயான அந்தச் சுயோதனனைக் கொல்வீராக.(7) செயல்கள் மற்றும் வழிமுறைகளைக் கொண்டுதான் தைத்தியர்களையும், தானவர்களையும் இந்திரன் கொன்றான். பலியும் {பலி சக்கரவர்த்தியும்} கூடப் பல செயல்கள் மற்றும் வழிமுறைகளைக் கொண்டே அந்த உயரான்மாவால் (உபேந்திரனால்) கட்டப்பட்டான்.(8) பெரும் அசுரனான ஹிரண்யாக்ஷனும், மற்றுமொருவனான ஹிரண்யகசிபுவும் பல செயல்கள் மற்றும் வழிமுறைகளின் உதவியைக் கொண்டே கொல்லப்பட்டனர்.(9) 

அதேபோலவே தான், புலஸ்திய குலத்தைச் சேர்ந்த ராட்சசன் ராவணனும், அவனது சொந்தங்கள் மற்றும் தொண்டர்களுடன் சேர்த்து ராமனால் கொல்லப்பட்டான். நடைமுறைகள் மற்றும் சூழ்ச்சித்திட்டங்களைக் கொண்டு நீரும் உமது ஆற்றலை வெளிப்படுத்துவீராக.(10) பெரும் பலம் கொண்டவர்களும், பழங்காலத்து தைத்தியர்களுமான தாரகன் மற்றும் விப்ரசித்தி ஆகிய இருவரும், ஓ! மன்னா, செயல்கள் மற்றும் வழிமுறைகளின் துணையைக் கொண்டே பழங்காலத்தில் கொல்லப்பட்டனர்.(11) அதே போலவே, வாதாபி, இல்வலன், திரிசரஸ், அசுரர்களான சுந்தன் மற்றும் உபசுந்தன் ஆகிய அனைவரும், ஓ! தலைவா, வழிமுறைகளின் துணைகொண்டே கொல்லப்பட்டனர்.(12) இந்திரனே கூட, செயல்கள் மற்றும் வழிமுறைகளின் உதவியால்தான் சொர்க்கத்தை அனுபவிக்கிறான். ஓ! யுதிஷ்டிரரே செயல்களே விளைவுகளைத் தரவல்லவை. அவற்றைப் போல வேறெதுவும் விளைவைத் தராது.(13) தைத்தியர்கள், தானவர்கள், ராட்சசர்கள் மற்றும் மன்னர்கள் ஆகியோர் செயல்கள் மற்றும் வழிமுறைகளின் உதவியால் கொல்லப்பட்டுள்ளனர். எனவே நீர், செயல்களின் உதவியை நாடுவீராக” என்றான் {கிருஷ்ணன்}”.(14)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வாசுதேவனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, சிரித்துக் கொண்டே, ஓ! ஏகாதிபதி, அந்தத் தடாகத்தின் நீருக்குள் இருந்தவனும், பெரும் வலிமைமிக்கவனுமான உமது மகனிடம் {துரியோதனனிடம்} பேசினான்,(15) “ஓ! சுயோதனா, க்ஷத்திரியர்கள் அனைவரையும் அழியச் செய்து, உனது குலத்தையே அழிவடையச் செய்துவிட்டு, ஓ! மன்னா, இந்நீரை ஏன் நீ இவ்வாறு செய்திருக்கிறாய்?(16) இன்று நீ உனது உயிரைக் காத்துக் கொள்ள விரும்பி ஏன் இத்தடாகத்திற்குள் நுழைந்திருக்கிறாய்? ஓ! மன்னா, ஓ! சுயோதனா, எழுந்து எங்களுடன் போரிடுவாயாக.(17) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இந்நீரைக் கவர்ந்திழுத்து அதற்குள் இப்போது கிடக்கிறாயே, உன் செருக்கும், கௌரவமும் இப்போது எங்கே சென்றன?(18) சபைகளில் மனிதர்கள் அனைவரும் உன்னை வீரன் என்று சொல்கிறார்கள். எனினும், நீ இந்த நீருக்குள் மறைந்திருப்பதால் அது முற்றான பொய்மை என்று நான் நினைக்கிறேன்.(19) ஓ! மன்னா, உன்னதக் குலத்தில் பிறந்த க்ஷத்திரியனாக எழுந்து போரிடுவாயாக. அதிலும் குறிப்பாக நீ ஒரு கௌரவேயனும் ஆவாய். உன் பிறப்பை நினைவுகூர்வாயாக.(20)

அச்சத்தால் போரில் இருந்து ஓடி இந்தத் தடாகத்தின் ஆழத்திற்குள் மறைந்து கொண்டு, குரு குலத்தில் பிறந்ததைக் குறித்து நீ எவ்வாறு தற்பெருமை பேச முடியும்?(21) ஒரு க்ஷத்திரியனின் நித்திய கடமையானது போரில் இருந்து விலகியிருப்பதல்ல. மதிக்கத்தக்கவர்களின் நடைமுறையானது போரில் இருந்து ஓடுவதல்ல; அது சொர்க்கத்திற்கும் வழிவகுக்காது.(22) வெற்றியில் விருப்பமுள்ளவனும், மகன்கள், சகோதரர்கள், தந்தைமார், உறவினர்கள், நண்பர்கள், தாய்மாமன்கள் மற்றும் சொந்தங்கள் கொல்லப்படுவதைக் கண்டவனுமான நீ, இப்போது இந்தப் போரின் முடிவை எட்டாமல் இந்தத் தடாகத்தில் எவ்வாறு இருக்கிறாய்?(23,24) வீரனாக இல்லாவிட்டாலும், உனது துணிவைக் குறித்து எப்போதும் தற்பெருமை பேசுகிறாய். ஓ! பாரதா, ஓ! தீய புரிதலைக் கொண்டவனே, மனிதர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கையில் உன்னை நீ வீரன் என்று பொய்யாகச் சொல்லிக் கொள்கிறாய்.(25)

எதிரிகள் பார்த்துக் கொண்டிருக்கையில் வீரர்கள் ஒருபோதும் தப்பி ஓடமாட்டார்கள். அல்லது, ஓ! வீரா, நீ போரில் இருந்து தப்பியதன் விளைவாக உனக்கு உண்டான துணிவைக் குறித்து எங்களுக்குச் சொல்வாயாக.(26) ஓ! இளவரசனே, உன் அச்சங்களைக் கைவிட்டு எழுந்து போரிடுவாயாக. உனது துருப்புகள் மற்றும் உனது தம்பிகள் அனைவரும் கொல்லப்படக் காரணமாக இருந்த நீ, ஓ! சுயோதனா,(27) நியாயமான நோக்கங்களைக் கொண்டிருந்தாயானால், உன் உயிரைக் காத்துக் கொள்ள நினைக்க மாட்டாய். ஓ! சுயோதனா, க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றும் உன்னைப் போன்ற ஒருவன், இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது.(28) கர்ணன் மற்றும் சுபலனின் மகனான சகுனி ஆகியோரை நம்பி, மூடத்தனத்தால் உன்னை அழிவற்றவனாகக் கருதிக் கொண்ட நீ, உன்னை நீயே புரிந்து கொள்ளத் தவறிவிட்டாய்.(29) இவ்வளவு பயங்கரமான பாவத்தைச் செய்தவனான நீ, ஓ! பாரதா, இப்போது போரிடுவாயாக.(30)

ஓ! ஐயா உனது ஆண்மை எங்கே? ஓ! சுயோதனா, உன்னால் பேணப்பட்ட அந்தச் செருக்கு எங்கே? இப்போது உனது ஆற்றல் எங்கே? உன்னில் பெருகியிருந்த அந்தப் பெருஞ்சக்தி எங்கே?(31) உன் ஆயுத சாதனைகள் எங்கே? நீ ஏன் இப்போது இந்தத் தடாகத்திற்குள் கிடக்கிறாய்? ஓ! பாரதா, க்ஷத்திரியக் கடமைகளை நோற்று எழுந்து போரிடுவாயாக.(32) எங்களை வென்று இந்தப் பரந்த பூமியை ஆள்வாயாக, அல்லது, ஓ! பாரதா, எங்களால் கொல்லப்பட்டு வெறுந்தரையில் உறங்குவாயாக.(33) இதுவே சிறப்புமிக்கப் படைப்பாளனாலேயே விதிக்கப்பட்ட உயர்ந்த கடமையாகும். சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி உண்மையாக நடந்து கொள்வாயாக. ஓ! பெரும் தேர்வீரா, மன்னனாகச் செயல்படுவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}”.(34)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! ஏகாதிபதி, தர்மனின் புத்திசாலி மகனால் {யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, நீருக்குள் இருந்தவாறே இவ்வார்த்தைகளைச் சொல்லி பதிலளித்தான்.(35)

துரியோதனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, வாழும் உயிரினங்களின் இதயங்களில் அச்சம் நுழைவது ஒருபோதும் ஆச்சரியமானதில்லை. எனினும், ஓ! பாரதா, என்னைப் பொறுத்தவரை, என் உயிரின் மீது கொண்ட அச்சத்தால் தூண்டப்பட்டு போர்க்களத்தைவிட்டு நான் தப்பி ஓடி வரவில்லை.(36) என் தேர் அழிக்கப்பட்டது, என் அம்பறாத்தூணிகளும் இல்லை, என் பார்ஷினி தேரோட்டிகளும் கொல்லப்பட்டனர். நான், போரில் ஒரே ஒரு தொண்டனுமின்றி தனியொருவனாக  இருந்தேன். அதற்காகவே நான் சிறிது ஓய்வெடுக்க விரும்பினேன்.(37) ஓ! மன்னா நான் இந்த நீருக்குள் புகுந்தது, என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக அல்ல, அச்சத்தாலுமல்ல, துயராலுமல்ல. களைப்பின் விளைவால் மட்டுமே நான் அப்படிச் செய்தேன்.(38) ஓ! குந்தியின் மகனே, உன்னைப் பின்தொடர்பவர்களுடன் நீ சற்று ஓய்ந்திருப்பாயாக. இந்தத் தடாகத்தில் இருந்து எழுந்து, நிச்சயம் உங்கள் அனைவருடனும் நான் போரிடுவேன்” என்றான்.(39)

யுதிஷ்டிரன் {துரியோதனனிடம்}, “நாங்கள் அனைவரும் போதுமான அளவுக்கு ஓய்ந்திருக்கிறோம். நீண்ட நேரமாக நாங்கள் உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறோம். ஓ! சுயோதனா, இப்போதே எழுந்து எங்களுக்குப் போரைத் தருவாயாக.(40) பார்த்தர்களைக் கொன்று செழிப்பான இந்த நாட்டை உனதாக்கிக் கொள்வாயாக, அல்லது போரில் எங்களால் கொல்லப்பட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் உலகங்களை அடைவாயாக” என்றான்.(41)

துரியோதனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குரு குலத்தோனே, ஓ! மன்னா, குருக்களில் நான் யாருக்காக அரசுரிமையை விரும்பினேனோ அந்தச் சகோதரர்கள் அனைவரும் களத்தில் இறந்து கிடக்கின்றனர்.(42) செல்வத்தை இழந்து, மேன்மையான க்ஷத்திரியர்களற்று, விதவையைப் போல இருக்கும் இந்தப் பூமியை இனிமேலும் நான் அனுபவிக்க விரும்பவில்லை.(43) எனினும், ஓ! யுதிஷ்டிரா, ஓ! பாரதக் குலத்தின் காளையே, உன்னை வென்று, பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டுக்களின் செருக்கை அடக்குவேன் என இன்னும் நம்புகிறேன்.(44) இருப்பினும், துரோணரும், கர்ணனும் ஒழிக்கப்பட்டு, நமது பாட்டன் பீஷ்மரும் கொல்லப்பட்ட பிறகு போருக்கான எந்தத் தேவையும் இல்லை.(45) ஓ! மன்னா, வெறுமையாய் இருக்கும் இந்தப் பூமி இப்போது உனக்காகவே இருக்கிறது. நண்பர்களும், கூட்டாளிகளும் அற்ற நாட்டை ஆள எந்த மன்னன்தான் விரும்புவான்?(46)

என்னைப் போன்ற நண்பர்களைக் கொல்லச் செய்து, மகன்கள், தம்பிகள் மற்றும் தந்தைமாரையும் கொல்லச் செய்து, என் நாடும் உன்னால் பறிக்கப்பட்ட பிறகு, என்னைப் போன்ற ஒருவன் எவ்வாறு உயிர்வாழ விரும்புவான்?(47) மான் தோலுடுத்திக் கொண்டு நான் காட்டுக்குச் செல்வேன். ஓ! பாரதா, நண்பர்களையும், கூட்டாளிகளையும் இழந்திருக்கும் எனக்கு நாட்டின் மீது எந்த விருப்பமுமில்லை.(48) ஓ! மன்னா, நண்பர்கள், கூட்டாளிகள் ஆகியோரையும், குதிரைகள், யானைகள் ஆகியவற்றையும் கிட்டத்தட்ட மொத்தமாக இழந்திருக்கும் இந்தப்பூமி உனக்காகவே இருக்கிறது.(49) என்னைப் பொறுத்தவரை, மான்தோலுடுத்திக் கொண்டு நான் காட்டுக்குச் செல்லப் போகிறேன். ஓ! தலைவா, நண்பர்களற்றவனான எனக்கு உயிர்வாழ எந்த விருப்பமும் இல்லை.(50) செல்வாயாக, ஓ! ஏகாதிபதி, தலைவர்களற்றதும், போர்வீரர்கள் இல்லாததும், செல்வத்தை இழந்ததும், கோட்டைகள் இல்லாததுமான பூமியை நீ தேர்ந்தெடுத்தவாறே ஆள்வாயாக” என்றான்”.(51)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கடும் வருத்தத்துடன் கூடிய இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், சிறப்புமிக்கவனுமான யுதிஷ்டிரன், இன்னும் நீருக்குள்ளேயே இருந்த உமது மகன் துரியோதனனிடம்,(52) “ஓ! ஐயா, நீருக்குள் இருந்து கொண்டு இவ்வாறு துயரில் பிதற்றாதே. இத்தகு வார்த்தைகளைக் கேட்கும் நான், ஓ! மன்னா, சகுனியைப் போல உன்னிடம் இரக்கமேதும் கொள்ள மாட்டேன்.(53) ஓ! சுயோதனா, இப்போது நீ இந்தப் பூமியை எனக்குக் கொடையளிக்க விரும்பலாம். இருப்பினும், இவ்வாறு உன்னால் கொடுக்கப்படும் பூமியை ஆள நான் விரும்பவில்லை.(54) உன்னிடம் இருந்து இந்தப் பூமியைக் கொடையாகப் பெற்று என்னால் பாவம் செய்ய முடியாது. ஓ! மன்னா, ஒரு க்ஷத்திரியனுக்குக் கொடையை ஏற்பது கடமையாக விதிக்கப்படவில்லை.(55) எனவே, உன்னால் இவ்வாறு கொடுக்கப்படும் இந்தப் பரந்த பூமியைப் பெற நான் விரும்பவில்லை. மறுபுறம், போரில் உன்னை வென்ற பிறகு அதை நான் அடைவேன்.(56)

இப்போது நீ பூமியின் தலைவனில்லை. உன் ஆட்சிப்பகுதியாக இல்லாத ஒன்றை நீ ஏன் கொடையாகக் கொடுக்க விரும்புகிறாய்? ஓ! மன்னா, நீதியின் விதிகளை நோற்று, நம் குலத்தின் நன்மையை விரும்பி உன்னிடம் எங்கள் பங்கை நாங்கள் இரந்து கேட்ட போது, இந்தப் பூமியை நீ ஏன் எங்களுக்குத் தரவில்லை?(57) வலிமைமிக்கக் கிருஷ்ணனின் கோரிக்கையை முதலில் மறுத்துவிட்டு, இப்போது நீ ஏன் பூமியைக் கொடுக்க விரும்புகிறாய்? உனக்கு ஏன் இந்த மூடத்தனம்?(58) எதிரியால் தாக்கப்பட்ட எந்த மன்னன்தான் தன் நாட்டைக் கொடுக்க விரும்புவான்? ஓ! குரு குலத்தின் மகனே, நீ இன்று பூமியைக் கொடுப்பதற்குத் தகுந்தவனல்ல.(59) உனக்கு அதிகாரம் இல்லாத ஒன்றை நீ ஏன் கொடையளிக்க விரும்புகிறாய்? போரில் என்னை வென்று இந்தப் பூமியை ஆள்வாயாக.(60) ஊசியின் முனையில் மறைக்கப்படும் அளவு நிலத்தை எனக்குக் கொடுப்பதைக்கூட நீ முன்பு ஏற்கவில்லை.(61) ஓ! ஏகாதிபதி, பிறகு எப்படி நீ முழுப் பூமியையும் எனக்குக் கொடையாகக் கொடுக்கிறாய்? ஊசியின் முனை மறைக்கக்கூடிய அளவு நிலத்தைக் கூட முன்பு கைவிட முடியாத நீ, இப்போது மொத்த பூமியையும் கைவிட எவ்வாறு விரும்புகிறாய்?(62) இத்தகு செழிப்பையடைந்து மொத்த பூமியையையும் ஆண்ட எவன்தான், தன் எதிரிகளுக்கு அந்தப் பூமியைக் கொடையளிக்கும் அளவுக்கு மூடனாக இருப்பான்?(63) 

மடமையினால் மலைத்திருக்கும் நீ, இதில் ஒழங்கற்ற முறைமையைக் காணவில்லை. நீ இந்தப் பூமியைக் கொடுத்துவிட விரும்பினாலும் உன்னால் உயிரோடு தப்ப முடியாது.(64) எங்களை வென்று இந்தப் பூமியை ஆள்வாயாக, அல்லது எங்களால் கொல்லப்பட்டு அருள் உலகங்களை அடைவாயாக.(65) நான், நீ என நாமிருவரும் உயிரோடிருந்தால், வெற்றியானது யாருக்குச் சொந்தம் என்பதில் உயிரினங்கள் அனைத்தும் ஐயங்கொள்ளும்.(66) ஓ! குறைந்த முன்னறிதிறன் கொண்டவனே, இப்போது உன் உயிரானது என்னை நம்பியே இருக்கிறது. நான் விரும்பினால் உன்னை உயிரோடு விடலாம், ஆனால் நீயோ உன்னைக் காத்துக் கொள்ள இயன்றவனில்லை.(67) நீ எங்களை எரித்துக் கொல்லவும், பாம்புகளைக் கொண்டு, பிற வகை நஞ்சுகள் மூலம், நீரில் எங்களை மூழ்கச் செய்து எனப் பலமுறை எங்கள் உயிரை எடுக்கவும் முயற்சி செய்தாய்.(68) ஓ! மன்னா, எங்கள் நாட்டைப் பறித்ததன் மூலமும், உன்னால் பேசப்பட்ட கொடுஞ்சொற்கள் மூலமும், திரௌபதியை முறையற்ற வகையில் நீ நடத்தியதன் மூலமும் உன்னால் நாங்கள் தீங்கிழைக்கப்பட்டோம்.(69) ஓ! இழிந்தவனே, இக்காரணங்களுக்காக உனது உயிர் பறிக்கப்பட வேண்டும். எழு, எழுந்து, எங்களுடன் போரிடுவாயாக. உனக்கான நன்மையை அதுவே தரும்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(70)

சஞ்சயன் தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெற்றியில் கொழித்த பாண்டவர்கள் அங்கே இவ்வாறே (துரியோதனனை கடிந்துரைத்தவாறும், கேலிசெய்தவாறும்) மீண்டும் மீண்டும் பேசினார்கள்” {என்றான் சஞ்சயன்}.(71)

நீரிலிருந்து எழுந்த துரியோதனன்! – சல்லிய பர்வம் பகுதி – 32-ஒவ்வொருவராகத் தன்னோடு போரிடலாம் என்று நீருக்குள் மறைந்திருந்தபடியே பாண்டவர்களை அழைத்த துரியோதனன்; பலர் சேர்ந்து அபிமன்யுவைக் கொன்றதைத் துரியோதனனுக்குச் சுட்டிக் காட்டிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரன் கொடுத்த வரங்கள்; நீரிலிருந்து எழுந்த துரியோதனன், பாண்டவர்களை ஒவ்வொருவர் பின் ஒருவராகப் போரிட வரும்படி அழைத்தது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “இவ்வாறு (தன் எதிரிகளால்) கடிந்துரைக்கப்பட்ட போது, எதிரிகளை எரிப்பவனும், கோபம் நிறைந்த இயல்பைக் கொண்டவனும், வீரனுமான என் அரச மகன் {துரியோதனன்} எவ்வாறு நடந்து கொண்டான்?(1) அவன் இதற்குமுன் ஒருபோதும் இதுபோன்ற கடிந்துரைகளைக் கேட்டதில்லை. மேலும் அவன், மன்னனுக்குரிய மரியாதையுடனேயே பிறரால் நடத்தப்பட்டிருக்கிறான்.(2) ஒரு குடையின் நிழலில் நின்றால், பிறரின் புகலிடத்தை எடுத்துக் கொண்டதாகிவிடும் என்று நினைத்து, அதில் நிற்க முன்பு துயரப்பட்டவனும், தன்னுணர்வுமிக்கச் செருக்கின் விளைவால் சூரியனின் பிரகாசத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாதவனுமான அவனால், தன் எதிரிகளின் வார்த்தைகளை எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடிந்தது?(3) மிலேச்சர்கள் மற்றும் நாடோடி இனங்களுடன் கூடிய மொத்த பூமியும் அவனுடைய அருளை நம்பி இருந்ததை நீயே உன் கண்களால் கண்டிருக்கிறாய்.(4) தொண்டர்கள் மற்றும் பணியாட்களை இழந்து ஒரு தனிமையான இடத்தில் மறைந்து கிடக்கையில், அந்த இடத்தில் வைத்து, குறிப்பாகப் பாண்டு மகன்களால் இவ்வாறு நிந்திக்கப்பட்ட போது, ஐயோ, அவன், வெற்றியாளர்களான தன் எதிரிகளால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட கசப்பான குற்றச்சாட்டுகளைக் கேட்டு, அவர்களுக்கு என்ன பதிலைச் சொன்னான்? ஓ! சஞ்சயா, அது குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(5,6)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “யுதிஷ்டிரனாலும், அவனது தம்பிகளாலும் இவ்வாறு நிந்திக்கப்பட்ட உமது அரச மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி, ஓ! மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த நீர்நிலைக்குள் கிடந்தபடியே அந்தக் கசப்பான வார்த்தைகளைக் கேட்டு மிகுந்த அவலமான நிலையை அடைந்தான். சூடான நீண்ட பெருமூச்சுகளை மீண்டும் மீண்டும் விட்டுக்கொண்டிருந்த அம்மன்னன் {துரியோதனன்}, தன் கரங்களை மீண்டும் மீண்டும் அசைத்து, போரில் தன் இதயத்தை நிலைக்கச் செய்து, நீருக்குள் இருந்தவாறே பாண்டுவின் அரச மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} இவ்வாறு பதிலளித்தான்.(7-9)

துரியோதனன், “பார்த்தர்களே, நீங்கள் அனைவரும் நண்பர்களையும், தேர்களையும், விலங்குகளையும் கொண்டுள்ளீர்கள். எனினும் நானோ, ஒரு தேரும், ஒரு விலங்கும் கூட இல்லாமல் உற்சாகமற்றவனாகவும், தனியொருவனாகவும் இருக்கிறேன்.(10) ஆயுதங்களை இழந்து, தனியொரு காலாளாக நிற்கும் நான், நன்கு ஆயுதம் தரித்தவர்களும், தேர்களை உடையவர்களுமான எண்ணற்ற எதிரிகளை எதிர்த்து எவ்வாறு போரிடத் துணிவேன்?(11) எனினும், ஓ! யுதிஷ்டிரா, நீங்கள் ஒவ்வொருவராக என்னுடன் போரிடலாம். துணிச்சலுடன் கூடிய பலருடன் ஒருவன் போரிடுவது முறையாகாது,(12) அதிலும் குறிப்பாகக் கவசமில்லாமல், களைத்தவனாக, பேரிடரால் பீடிக்கப்பட்டவனாக, அங்கங்கள் மிகவும் சிதைந்தவனாக, விலங்குகள் மற்றும் துருப்புகள் ஆகிய இரண்டையும் இழந்தவனாக இருக்கும் ஒருவனுக்கு அது முறையாகாது.(13) நான் உன்னிடமோ, பிருதையின் மகனான விருகோதரனிடமோ {பீமனிடமோ}, பல்குனனிடமோ {அர்ஜுனனிடமோ}, வாசுதேவனிடமோ {கிருஷ்ணனிடமோ}, பாஞ்சாலர்கள் அனைவரிடமோ, இரட்டையரிடமோ {நகுலன் மற்றும் சகாதேவனிடமோ}, யுயுதானானிடமோ {சாத்யகியிடமோ},(14) பிற துருப்புகள் அனைத்திடமோ போரிட சற்றும் அஞ்சவில்லை. போரில் தனியொருவனாகவே நின்று, உங்கள் அனைவரையும் நான் தடுப்பேன்.(15)

ஓ! மன்னா, அறவோரனைவரின் புகழுக்கும், அறமே அடிப்படையாகும். அறம் மற்றும் புகழ் ஆகியவற்றை நோற்கும் உன்னிடம் நான் இவை யாவற்றையும் சொல்கிறேன்.(16) நான் (இத்தடாகத்தில் இருந்து) எழுந்து உங்கள் அனைவருடனும் போரிடுவேன். பருவங்கள் அனைத்தையும் அடுத்தடுத்தாகச் சந்திக்கும் ஒரு வருடத்தைப் போல, நான் உங்கள் அனைவரையும் போரில் சந்திப்பேன்.(17) பாண்டவர்களே காத்திருப்பீராக. அதிகாலையில் விண்மீன்கள் {நட்சத்திரங்கள்} அனைத்தின் ஒளியையும் தன் சக்தியால் அழிக்கும் சூரியனைப் போல, இன்று ஆயுதமற்றவனாக, தேரற்றவனாக நான் இருப்பினும், தேர்களையும், குதிரைகளையும் கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் நான் அழிப்பேன்.(18) சிறப்புமிக்க க்ஷத்திரியர்களான பாஹ்லீகர், துரோணர், பீஷ்மர், உயர் ஆன்மக் கர்ணன், வீர ஜெயத்ரதன், பகதத்தன், மத்ரர்களின் ஆட்சியாளரான சல்லியர், பூரிஸ்ரவஸ், என் மகன்கள், ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, சுபலரின் மகனான சகுனி, என் நண்பர்கள், நலன்விரும்பிகள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் அனைவருக்கும் நான் பட்டிருக்கும் கடனிலிருந்து இன்று நான் விடுபடப் போகிறேன்.(19-21) உன்னையும், உனது சகோதரர்களையும் கொன்று, நான் பட்டிருக்கும் கடனிலிருந்து இன்று நான் விடுபடுவேன்” என்று சொன்னான். இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த (குரு) மன்னன் {துரியோதனன்} பேசுவதை நிறுத்திக் கொண்டான்.(22)

யுதிஷ்டிரன் {துரியோதனனிடம்}, “ஓ! சுயோதனா, நற்பேறாலேயே ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை நீ அறிந்து வைத்திருக்கிறாய். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நற்பேறாலேயே உன் இதயம் போரிட விரும்புகிறது.(23) நற்பேறாலேயே நீ வீரனாயிருக்கிறாய், ஓ! குரு குலத்தோனே, நற்பேறாலேயே போரிட நீ அறிந்திருக்கிறாய். தனியொருவனாய் இருந்தாலும் நற்பேறாலேயே எங்கள் அனைவரோடும் நீ போரிட விரும்புகிறாய்.(24) நீ விரும்பும் ஆயுதம் எதையும் எடுத்துக் கொண்டு, எங்களில் யாருடன் வேண்டுமானாலும் நீ போரிடலாம். நாங்கள் அனைவரும் இங்கே பார்வையாளர்களாக நிற்போம்.(25) ஓ! வீரா, (இன்னும்) உன் இதயத்தில் இருக்கும் மற்றொரு விருப்பத்தையும் நான் உனக்குக் கொடுக்கிறேன். எங்களில் எவரொருவரை கொன்றாலும் நீ மன்னனாகலாம். அல்லது எங்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்திற்குச் செல்வாய்” என்றான்.(26)

துரியோதனன் {யுதிஷ்டிரனிடம்}, “உங்களில் ஒருவனுடன் மட்டும் போரிடும் உகப்பைக்[1] கொடுத்தால் நீ துணிச்சல்மிக்கவனே, நான் கையில் கொண்டிருக்கும் இந்தக் கதாயுதமே நான் தேர்ந்தெடுத்திருக்கும் ஆயுதமாகும்.(27) எனக்கு இணையானவன் என்று உங்களில் எவன் தன்னை நினைப்பானோ, அவன் என் முன்னே வந்து, கதாயுதந்தரித்து, காலாளாக என்னுடன் போரிடட்டும். தேர்களைக் கொண்டு பல அற்புதமான தனிப்போர்கள் நேர்ந்தன. அற்புதமானதும், பெரியதுமான இந்தக் கதாயுதப் போர் இன்று நடைபெறட்டும்.(29) மனிதர்கள் (போரிடும்போது) ஆயுதங்களை மாற்றிக் கொள்ள விரும்புவார்கள். அப்படிப் போரிடும் தன்மையானது, உன் அனுமதியுடன் இன்று மாற்றப்படட்டும்.(30) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இன்று என் கதாயுதத்தைக் கொண்டு உன்னையும், உன் தம்பிகள் அனைவரையும், பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் அனைவரையும், இன்னும் நீ கொண்டிருக்கும் பிற துருப்புகள் அனைத்தையும் என்னால் வெல்ல முடியும். ஓ! யுதிஷ்டிரா, சக்ரனிடம் {இந்திரனிடம்} கூட நான் சிறிதும் அச்சமடைவதில்லை” என்றான்.(31)

யுதிஷ்டிரன் {துரியோதனனிடம்}, “எழு, ஓ! காந்தாரியின் மகனே, ஓ! சுயோதனா, எழுந்து என்னுடன் போரிடுவாயாக. தனியொருவனாக இருக்கும் நீ, ஓ! பெரும் வலிமை கொண்டவனே, கதாயுதம் தரித்துக் கொண்டு, ஒரு நேரத்தில் ஒருவரோடு மோதும் வகையில் {ஒருவர் பின் ஒருவராக} எங்களோடு போரிடுவாயாக.(32) ஓ! காந்தாரியின் மகனே, ஆண்மையுடனும், நல்ல கவனத்துடனும் போரிடுவாயாக. இன்று இந்திரனே உன் கூட்டாளியாக வந்தாலும் நீ உன் உயிரை விடுவாய்” என்றான்”.(33)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மனிதர்களில் புலியான உமது மகனால் {துரியோதனனால்} யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பொந்துக்குள் இருக்கும் வலிமைமிக்கப் பாம்பொன்றைப் போல அந்த நீருக்குள் இருந்தபடியே அவன் நீண்ட கடும் மூச்சுகளை விட்டுக் கொண்டிருந்தான்.(34) உயர்ந்த குலத்தில் பிறந்த ஒரு குதிரையால் சாட்டை அடியைப் பொறுத்துக் கொள்ள முடியாததைப் போலவே, இவ்வாறாக மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட அவனால் அந்த வார்த்தை அங்குசங்களைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(35)

தண்ணீரைப் பெரும் வேகத்தோடு கலங்கடித்த அந்தப் போர்வீரன், தடாகத்திலிருந்து எழும் யானைகளின் இளவரசனைப் போல, சினத்தால் பெருமூச்சுவிட்டபடியே, வஜ்ரம் போன்று பலமானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் கனத்த கதாயுதத்துடன் எழுந்தான்.(36) உமது மகன் {துரியோதனன்}, கட்டப்பட்டிருக்கும் அந்த நீரைத் துளைத்துக் கொண்டும், முழுக்க இரும்பாலான தன் கதாயுதத்தைத் தோளில் தாங்கியபடியும், கதிர்களால் அனைத்தையும் எரிக்கும் சூரியனைப் போல எழுந்தான்.(37) பெரும் பலமும், பெரும் நுண்ணறிவும் கொண்ட உமது மகன், இரும்பாலானதும், தாங்கு கயிறுடன் கூடியதுமான தன் கனத்த கதாயுதத்தைக் கையாளத் தொடங்கினான்.(38) சிகரத்துடன் கூடிய மலைக்கோ, வாழும் உயிரினங்களின் மேல் தன் கோபப்பார்வையைச் செலுத்தும் திரிசூலபாணியான ருத்ரனுக்கோ ஒப்பாகக் கதாயுதத்துடன் இருக்கும் அந்தப் பாரதத் தலைவனைக் கண்ட அவர்கள், வானத்தில் உள்ள தகிக்கும் சூரியனைப்போலத் தன்னைச் சுற்றி பிரகாசத்தைப் பொழிந்தான். உண்மையில், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான அவன், தோளில் கதாயுதத்துடன் நீரில் இருந்து எழுந்து நின்ற போது, உயிரினங்கள் அனைத்தும் தண்டத்துடன் கூடிய அந்தகனைப் போல அவனைக் கண்டன.(39-41)

உண்மையில் அப்போது, பாஞ்சாலர்கள் அனைவரும், வஜ்ரதாரியான சக்ரனையோ {இந்திரனையோ}, திரிசூலபாணியான ஹரனையோ போல உமது அரச மகனை {துரியோதனனைக்} கண்டன.(42) எனினும், நீரில் இருந்து எழும் அவனைக் கண்ட பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும், தங்கள் கரங்களைப் பற்றிக் கொண்டு மகிழ்ச்சியுறத் தொடங்கினர்[1].(43) உமது மகன் துரியோதனன், பார்வையாளர்களின் அந்தச் செயல்பாட்டைத் தனக்கு எதிரான அவமதிப்பாகக் கருதினான். பார்வையாலேயே பாண்டவர்களை எரித்துவிடுபவனைப் போலக் கோபத்தால் தன் விழிகளை உருட்டி, தன் புருவ அசைவால் நெற்றியை மூன்றாகச் சுருக்கி, மீண்டும் மீண்டும் தன் கீழுதட்டைக் கடித்தபடியே,(44,45) “பாண்டவர்களே, இந்தப் பரிகாசத்திற்கான கனியை நீங்கள் சுமப்பீர்கள். என்னால் இன்று கொல்லப்படும் நீங்கள், பாஞ்சாலர்களுடன் சேர்ந்து யமனின் வசிப்பிடத்தை அடைவீர்கள்” என்றான்.”(46)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “நீரில் இருந்து எழுந்த உமது மகன் துரியோதனன், கதாயுதத்தைத் தரித்து, குருதியால் குளித்த அங்கங்களுடன் அங்கே நின்று கொண்டிருந்தான்.(47) குருதியால் மறைக்கப்பட்டு, நீரில் நனைந்திருந்த உடலுடன் கூடிய அவன், நீர்ப்பெருக்குடன் கூடிய {அருவிகளைக் கொண்ட} ஒரு மலையைப் போலத் தெரிந்தான்.(48) கதாயுதத்துடன் அவன் நின்று கொண்டிருந்தபோது, பாண்டவர்கள், கிங்கரம்[2] என்றழைக்கப்படும் தண்டாயுதம் தரித்தவனும், கோபக்காரனுமான சூரியனின் மகனை {யமனைப்} போலவே அவனைக் கருதினர்.(49) பெரும் ஆற்றலைக் கொண்டவனான துரியோதனன், தன் கதாயுதத்தைத் தரித்துக் கொண்டு, மேகங்களையோ, அல்லது மகிழ்ச்சியுடன் முழங்கும் ஒரு காளையையோ போன்ற ஆழ்ந்த குரலுடன் பார்த்தர்களைப் போருக்கழைத்தான்.(50)(யமதண்டத்தின் பெயரே கிங்கரம்)

துரியோதனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, நீங்கள் ஒவ்வொருவராகவே என்னுடன் மோத வேண்டும். ஒரு வீரன், ஒரே நேரத்தில் பலரோடு மோதுவது முறையாகாது,(51) அதிலும் குறிப்பாகக் கவசமிழந்து, முயற்சியால் களைத்து, நீரால் நனைக்கப்பட்டு, அங்கங்கள் மிகவும் சிதைக்கப்பட்டு, தேர்கள், விலங்குகள் மற்றும் துருப்புகளையும் இழந்திருக்கும் ஒருவனுக்கு {பலரோடு மோதுவது} முறையாகாது.(52) எந்தக் கருவியுமற்றவனாக, கவசம் மற்றும் ஆயுதங்களை இழந்தவனாக இருந்தும் தனியொருவனாகப் போரிடும் என்னைச் சொர்க்கத்தில் இருக்கும் தேவர்கள் காணட்டும்.(53) நான் நிச்சயம் உங்கள் அனைவருடனும் போரிடுவேன். அனைத்தின் முறைமை மற்றும் முறையின்மைகளைக் குறித்த தேவையான தகுதிகளைக் கொண்டிருக்கும் நீ நடுவராக இருப்பாயாக” என்றான்.(54)

யுதிஷ்டிரன் {துரியோதனனிடம்}, “ஓ! துரியோதனா, பெருந்தேர்வீரர்கள் பலர் ஒன்றுசேர்ந்து போரில் அபிமன்யுவைக் கொன்றபோது இந்த அறிவு உனக்கு இல்லாமல் போனது எவ்வாறு?(55) எதையும் கருத்தில் கொள்ளாத, சிறு கருணையும் இல்லாத க்ஷத்திரியக் கடமைகள் மிகக் கொடூரமானவையாகும். இல்லையெனில், அந்தச் சூழ்நிலையில் அபிமன்யுவை நீங்கள் எவ்வாறு கொன்றிருக்க முடியும்?(56) நீங்கள் அனைவரும் நீதியை அறிந்தவர்களாவீர். நீங்கள் அனைவரும் வீரர்களுமாவீர். நீங்கள் அனைவரும் போரில் உங்கள் உயிர்களைக் கொடுக்கவும் ஆயத்தமாக இருந்தீர்கள். நேர்மையாகப் போரிடுபவர்களுக்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் உயர்ந்த முடிவானது சக்ரனின் {இந்திரனின்} உலகத்தை அடைவதேயாகும்.(57) ஒருவன் பலரால் ஒருபோதும் கொல்லப்படலாகாது என்பது உங்கள் கடமையாக இருந்தால், உன் ஆலோசனைகளின்படி செயல்பட்ட பலரால் அபிமன்யு ஏன் கொல்லப்பட்டான்?(58) கடினமான காலத்தில் அனைத்து உயிரினங்களும் அறக் கருத்துகளை மறக்கின்றன. பிறகு மறுவுலகத்தின் வாயில்கள் அடைக்கப்பட்டிருப்பதை அவை காண்கின்றன.(59) ஓ! வீரா {துரியோதனா}, உன் கவசத்தைப் பூட்டுவாயாக, உன் குழல்களை {கேசத்தைக்} கட்டுவாயாக. ஓ பாரதா, உனக்குத் தேவையான அனைத்தையும் எடுத்துக் கொள்வாயாக.(60) ஓ! வீரா, மேலும் கூடுதலாக, பாண்டவர்கள் ஐவரில் நீ மோத விரும்பும் ஒருவனை உன்னால் கொல்ல முடிந்தால்கூட, நீயே மன்னனாகலாம் என்ற உனது மற்றொரு விருப்பத்தையும் உனக்கு நான் அளிக்கிறேன். அல்லது (அவனால்) கொல்லப்படும் நீ சொர்க்கத்திற்குச் செல்வாய். ஓ! வீரா, உனது உயிரைத் தவிர எங்களால் கொடுக்க இயலும் எந்த வரத்தையும் நீ எங்களிடம் கேட்கலாம்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(61,62)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கத்தாலான கவசத்தைத் தன் உடலில் பூட்டிக் கொண்டு, பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கிரீடம் ஒன்றையும் அணிந்து கொண்டான்.(63) பிரகாசமான தங்கக்கவசத்தைப் பூண்டிருந்த அவன், அந்தத் தலைக்கவசத்தையும் சூட்டிக் கொண்டான். உண்மையில், ஓ! மன்னா, உமது மகன் ஒரு தங்கச் சிகரத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(64) கவசம்பூட்டி, கதாயுதம் தரித்து, பிற கருவிகளுடன் போர்க்கோலம் பூண்ட உமது மகன் துரியோதனன், ஓ! மன்னா, களத்தில் நின்றபடியே பாண்டவர்கள் அனைவரிடமும்,(65) “சகோதரர்களில் (ஐவரில்), கதாயுதம் தரித்துக் கொண்டு எவனொருவனும் என்னோடு போரிடலாம். என்னைப் பொறுத்துவரை, நான் சகாதேவனோடோ, பீமனோடோ, நகுலனோடோ,(66) பல்குனனோடோ {அர்ஜுனனோடோ}, உன்னோடோ இன்று போரிடவே விரும்புகிறேன். ஏற்றுக் கொண்ட மோதலின்படி உங்களில் ஒருவனோடு போரிடும் நான் இக்களத்தில் வெற்றியையடைவேன் என்பது உறுதியானதாகும்.(67)

தங்கத்துணியால் போர்த்தப்பட்டிருக்கும் என் கதாயுதத்தின் துணையுடன் அடைவதற்கரிதான இந்தப் பகைமைகளின் முடிவை இன்று நான் அடைவேன்.(68) கதாயுத மோதலில் எனக்கு இணையானவனாக ஒருவனையும் நான் நினைக்கவில்லை. என் கதாயுதத்தைக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக நான் உங்கள் அனைவரையும் கொல்வேன்.(69) உங்கள் அனைவரிலும் என்னோடு நியாயமாகப் போர் செய்யத் தகுந்தவன் ஒருவனுமில்லை. என்னைக் குறித்து இத்தகு செருக்கு நிறைந்த வார்த்தைகளைப் பேசுவது எனக்கு முறையாகாது. இருப்பினும், என் இந்த வார்த்தைகளை உங்கள் முன்னிலையில் நான் உண்மையாக்குவேன்.(70) இந்த நேரத்திற்குள்ளாகவே {முகூர்த்தத்திற்குள்ளாகவே} அந்த வார்த்தைகள் உண்மையாகவோ, பொய்யாகவோ ஆகலாம். உங்களில் கதாயுதத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவன் என்னோடு போரிடுவானாக” என்றான் {துரியோதனன்}.(71)

பீம துரியோதன வாக்குவாதம்! – சல்லிய பர்வம் பகுதி – 33-யுதிஷ்டிரனிடம் கோபடைந்த கிருஷ்ணன்; துரியோதனனை வெல்வது கடினமானது என்று சொன்ன கிருஷ்ணன்; எளிதில் வெல்வேன் என்று சொன்ன பீமன்; பீமனைப் புகழ்ந்த கிருஷ்ணன்; பீமனுக்கும் துரியோதனனுக்கு இடையில் நடந்த வாக்குவாதம்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன் இந்தத் தொணியிலேயே மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டிருந்தபோது, கோபத்தால் நிறைந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, “எங்களில் ஒருவரைக் கொன்று குருக்களின் மத்தியில் மன்னனாவாயாக” என்று ஆராயாமால் என்ன வார்த்தைகளைச் சொல்லிவிட்டீர். உண்மையில், ஓ! யுதிஷ்டிரரே, துரியோதனன், உம்மையோ, அர்ஜுனனையோ, நகுலனையோ, சகாதேவனையோ தேர்ந்தெடுத்தால் (விளைவதென்ன)?(2,3) ஓ! மன்னா, பீமசேனரைக் கொல்லும் விருப்பத்தால் துரியோதனன் இரும்புச் சிலையுடன் இந்தப் பதிமூன்று வருடங்களாகக் கதாயுதப்பயிற்சி செய்திருக்கிறான்[1].(4) ஓ! பாரதக் குலத்தின் காளையே, பிறகு நம் காரியத்தை எவ்வாறு நம்மால் அடையமுடியும்? ஓ! மன்னர்களில் சிறந்தவரே, கருணையால் தகாத பெருந்துணிவுடன் செயல்படுகிறீர்.(5)இக்கணத்தில், பிருதையின் மகனான விருகோதரரை {பீமரைத்} தவிர (துரியோதனனுக்கு) இணையான வேறொருவரை நான் காணவில்லை. மேலும் அவரது {பீமரது} கதாயுதப் பயிற்சியும் மிகப் பெரிதாக இல்லை.(6) எனவே, ஓ! ஏகாதிபதி, முன்பு உமக்கும், சகுனிக்கும் இடையில் நடைபெற்றதுபோல மீண்டும் வாய்ப்பைக் கொடுக்கும் ஓர் இழிந்த விளையாட்டுக்கு நீர் அனுமதி கொடுத்திருக்கிறீர்.(7) பீமர் வலிமையையும், ஆற்றலையும் கொண்டிருக்கிறார். எனினும் மன்னன் சுயோதனனோ திறமையைக் கொண்டிருக்கிறான். ஓ! மன்னா, வலிமைக்கும், திறமைக்கும் இடையிலான போட்டியில், திறனுடையவனே எப்போதும் வெல்வான்.(8) ஓ! மன்னா, இப்படிப்பட்ட ஒரு பகைவனை உமது வார்த்தைகளால் சுகமான, வசதியான இடத்தில் நிறுத்திவிட்டீர். எனினும், உமது நிலையையோ கடினமாக்கிக் கொண்டீர். இதன் விளைவாக நாம் பேராபத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறோம்.(9) எதிரிகள் அனைவரையும் வென்று, துயரங்களில் மூழ்கியிருக்கும் ஒரே ஓர் எதிரி மட்டுமே களையப்படவேண்டியவனாக இருக்கும் நேரத்தில் கைப்பிடியில் கிடைத்த அரசுரிமையை எவன்தான் கைவிடுவான்?(10)

இன்று உலகில் தேவனாகவே இருப்பினும் கூட, போரில் கதாயுதந்தரித்த துரியோதனனை வெல்லத்தகுந்த எந்த மனிதனையும் நான் காணவில்லை.(11) நீரோ, பீமரோ, நகுலனோ, சகாதேவனோ, பல்குனனோ {அர்ஜுனனோ} நேர்மையான போரில் துரியோதனனை வெல்லவல்லவர்களல்ல. மன்னன் துரியோதனன் பெருந்திறமையைக் கொண்டவனாக இருக்கிறான்.(12) ஓ! பாரதரே, “கதாயுதத்தை ஆயுதமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, எங்களில் ஒருவனைக் கொன்றால் நீ மன்னனாகலாம்” என்ற வார்த்தைகளை எவ்வாறு உம்மால் சொல்ல முடிந்தது?(13) துரியோதனன், நமக்கு மத்தியில் நேர்மையான போரை விரும்பி, விருகோதரரோடு {பீமரோடு} மோதினாலும் கூட, நமது வெற்றியானது ஐயத்திற்கிடமானதேயாகும். துரியோதனன் பெரும் வலிமையும், பெரும் திறமையும் கொண்டவனாவான்.(14) “எங்களில் ஒருவனைக் கொன்று மன்னனாவாயாக” என்று உம்மால் எவ்வாறு சொல்ல முடியும்? பாண்டு மற்றும் குந்தியின் வாரிசுகள் அரசாள விதிக்கப்பட்டவர்களில்லை என்பதில் ஐயமில்லை. காட்டு வாழ்வைத் தொடரவோ, பிச்சையெடுத்து வாழ்ந்து தங்கள் நாட்களைக் கடத்தவோதான் அவர்கள் பிறப்பை அடைந்திருக்கிறார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.(15)

பீமசேனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மதுசூதனா, ஓ! யதுக்களை மகிழ்விப்பவனே, கவலைப்படாதே. எவ்வளவு கடினமானதாக இருப்பினும், இந்தப் பகைமையின் முடிவை இன்று நான் அடைவேன்.(16) போரில் சுயோதனனைக் கொல்வேன் என்பதில் ஐயமில்லை. ஓ! கிருஷ்ணா, நீதிமானான யுதிஷ்டிரரின் வெற்றி உறுதியானது என்றே தோன்றுகிறது.(17) இந்த எனது கதாயுதமானது, துரியோதனனுடைய கதாயுதத்தைவிட ஒன்றரைமடங்கு கனமானதாகும். ஓ! மாதவா, கவலை அடையாதே.(18) கதாயுதத்தையே ஆயுதமாகக் கொண்டு நான் அவனோடு போரிடத் துணிவேன். ஓ! ஜனார்த்தனா, நீங்கள் அனைவரும் அம்மோதலில் பார்வையாளர்களாக நிற்பீர்களாக.(19) அனைத்து வகை ஆயுதங்களைக் கொண்ட தேவர்களை உள்ளடக்கி மூவுலகத்தோடும் என்னால் போரிட முடியும் எனும்போது, துரியோதனனைக் குறித்து நீ என்ன சொல்வாய்?” என்றான்”.(20)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “விருகோதரன் {பீமன்} இவ்வார்த்தைகளைச் சொன்னதும், மகிழ்ச்சியால் நிறைந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, உயர்வாக மெச்சியபடியே அவனிடம்,(21) “ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, உம்மை நம்பியிருக்கும் நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர், தன் எதிரிகள் அனைவரையும் கொன்று, மீண்டும் தன் சுடர்மிக்கச் செழிப்பை அடைவார் என்பதில் ஐயமில்லை.(22) போரில் நீர் திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும் கொன்றுவிட்டீர். உமது கைகளால் மன்னர்கள் பலரும், இளவரசர்களும், யானைகளும் தங்கள் விதியைச் சந்திக்க நேர்ந்தது.(23) ஓ! பாண்டுவின் மகனே, கலிங்கர்கள், மகதர்கள், கௌரவர்கள், மேற்கத்தியர்கள், காந்தாரர்கள் ஆகியோர் அனைவரும் இந்தப் பயங்கரப் போரில் கொல்லப்பட்டனர்.(24) ஓ! குந்தியின் மகனே, துரியோதனனைக் கொன்று, விஷ்ணு (மூவுலகங்களின் அரசுரிமையையும்) சச்சியின் தலைவனுக்கு {இந்திரனுக்குக்} கொடுத்ததைப் போல, கடல்களுடன் கூடிய பூமியை நீதிமானான யுதிஷ்டிரருக்கு அளிப்பீராக.(25) பொல்லாத திருதராஷ்டிரர் மகனோ {துரியோதனனோ}, போரில் உம்மை எதிரியாக அடைந்து, தன் விதியைச் சந்திப்பான் என்பதில் ஐயமில்லை. அவனது எலும்புகளை நொறுக்கி உமது உறுதிமொழியை நிச்சயம் நீர் நிறைவேற்றுவீர்.(26) எனினும், ஓ! பிருதையின் மகனே, திருதராஷ்டிரன் மகனுடன் எப்போதும் கவனமாகப் போரிடுவீராக. அவன், திறன் மற்றும் பலம் ஆகிய இரண்டையும் பெற்று எப்போதும் போரில் திளைப்பவனாக இருக்கிறான்” என்றான் {கிருஷ்ணன்}.(27)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு சாத்யகி அந்தப் பாண்டுவின் மகனைப் பாராட்டினான்.(28) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரும் பீமசேனனின் அவ்வார்த்தைகளைப் பாராட்டினர்.(29) பிறகு, பயங்கர வலிமையைக் கொண்டவனான பீமன், சுடர்மிக்கச் சூரியனைப் போலச் சிருஞ்சயர்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த யுதிஷ்டிரனிடம், (30) “இந்தப் போரில் நான் இவனோடு {துரியோதனனோடு} மோதத் துணிவேன். மனிதர்களில் இழிந்தவனான இவன், போரில் என்னை வெல்லத் தகுந்தவன் இல்லை.(31) காண்டவ வனத்தில் நெருப்பை வீசிய அர்ஜுனனைப் போல, இன்று திருதராஷ்டிரர் மகனான இந்தச் சுயோதனன் மேல் என் இதயத்தில் நான் வளர்த்து வந்த கோபத்தைக் கக்கப் போகிறேன்.(32) ஓ! பாண்டுவின் மகனே, உமது இதயத்தில் தைத்திருக்கும் ஈட்டியை நான் இன்று பிடுங்கப் போகிறேன். ஓ! மன்னா, என் கதாயுதத்தைக் கொண்டு இந்த இழிந்தவனை வீழ்த்தியபிறகு, நீர் மகிழ்ச்சி அடைவீராக.(33) எனினும், ஓ! பாவமற்றவரே, உமது மகிமை நிறைந்த மாலையை {கீர்த்திமாலையை} நான் இன்று மீட்டெடுப்பேன். இன்று சுயோதனன் தனது உயிர் மூச்சையும், செழிப்பையும், நாட்டையும் கைவிடுவான்.(34) இன்று மன்னர் திருதராஷ்டிரரும் கூட, தன் மகனின் கொலையைக் கேட்டுவிட்டு, சகுனியின் பரிந்துரைகளில் இருந்து எழுந்த (நமக்கு அவர் இழைத்த) தீமைகள் அனைத்தையும் நினைவுகூர்வார்” என்றான் {பீமன்}.(35)

இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தப் பாரதக் குல இளவரசன் {பீமன்}, விருத்திரனை (மோதலுக்கு) அழைக்கும் சக்ரனை {இந்திரனைப்} போலப் போரிடுவதற்காக நின்று கொண்டிருந்தான்.(36) அந்த அழைப்பைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனும், பெரும் சக்தி கொண்டவனுமான உமது மகன் {துரியோதனன்}, மதங்கொண்ட யானையைத் தாக்கச் சொல்லும் மற்றொரு யானையைப் போல அம்மோதலுக்குச் சென்றான்.(37) பாண்டவர்கள், கதாயுதத்துடன் வந்த உமது மகனை, சிகரம் கொண்ட கைலாச மலையைப் போலக் கண்டனர்.(38) உண்மையில், மந்தையில் இருந்து பிரிந்து தனியாக நிற்கும் யானைகளின் இளவரசனைப் போல உமது வலிமைமிக்க மகனைக் கண்ட பாண்டவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(39) போரில் சிங்கத்தைப் போலவே நின்று கொண்டிருந்த துரியோதனன், எந்த அச்சத்தையும், திகைப்பையும், வலியையும், கவலையையும் அடையவில்லை.(40)

சிகரம் கொண்ட கைலாச மலையைப் போன்ற கதாயுதத்தை உயர்த்தி நின்ற அவனை {துரியோதனனைக்} கண்ட பீமசேனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனிடம்,(41) “மன்னர் திருதராஷ்டிரரும், நீயும் எங்களுக்குச் செய்த தீமைகள் அனைத்தையும் மனத்தில் நிறுத்துவாயாக. வாரணாவதத்தில் என்ன நடந்தது என்பதை நினைவுகூர்வாயாக.(42) திரௌபதி தன் பருவ {மாதவிடாய்} காலத்தில் சபைக்கு மத்தியில் வைத்து தவறாக நடத்தப்பட்டதையும், சகுனியின் பரிந்துரையால் மன்னர் யுதிஷ்டிரர் எவ்வாறு வீழ்த்தப்பட்டார் என்பதையும் நினைவுகூர்வாயாக.(43) ஓ! தீய ஆன்மாவே, அந்தச் செயல்கள் மற்றும் அப்பாவி பார்த்தர்களுக்கு நீ செய்த பிற தீங்குகள் ஆகியவற்றின் பயங்கர விளைவை இப்போது காண்பாயாக.(44) பாரதர்களின் சிறப்புமிக்கத் தலைவரும், நம் அனைவருக்கும் பாட்டனுமான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, உன் காரணமாக (எங்களால்) தாக்கி வீழ்த்தப்பட்டு இப்போது கணைப்படுக்கையில் கிடக்கிறார்.(45)

துரோணரும் கொல்லப்பட்டார், கர்ணனும் கொல்லப்பட்டான். பெரும் வீரம் கொண்ட சல்லியரும் கொல்லப்பட்டார். அதோ பகைமைகளின் வேராக இருந்த அந்தச் சகுனியும் போரில் அங்கே கொல்லப்பட்டிருக்கிறான்.(46) உனது வீரச் சகோதரர்களும், உனது மகன்களும், உன் துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்டிருக்கின்றன. பெரும் வீரம் கொண்டவர்களும், போரில் இருந்து பின்வாங்காதவர்களுமான வேறு பிற மன்னர்களும் கொல்லப்பட்டனர்.(47) இவர்களும், பிற க்ஷத்திரியக் காளைகள் பலரும், திரௌபதியின் குழல்களைப் பற்றிய அந்த இழிபிறவியான பிராதிகாமினும் கொல்லப்பட்டனர்.(48) குலத்தை அழித்தவனும், மனிதர்களில் இழிந்தவனுமான நீ மட்டுமே இன்னும் உயிருடன் இருக்கிறாய். உன்னையும் இன்று என் கதாயுதத்தால் கொல்லப்போகிறேன். இதில் ஐயமேதும் இல்லை.(49) ஓ! மன்னா, இன்றைய போரில் நான் உன் செருக்கைத் தணிப்பேன். அரசுரிமை குறித்த உன் நம்பிக்கை அனைத்தையும் அழித்து, ஓ! மன்னா, பாண்டுவின் மகன்களுக்கு இழைக்கபட்ட குற்றச் செயல்களுக்காகப் பழிதீர்ப்பேன்” என்றான் {பீமன்}.(50)

துரியோதனன் {பீமனிடம்}, “வார்த்தைகள் பலவற்றால் என்ன பயன்? என்னுடன் இப்போது போரிடுவாயாக. ஓ! விருகோதரா {பீமா}, போருக்கான உன் விருப்பத்தை உன்னில் இருந்து இன்று நான் விரட்டுவேன்.(51) ஓ! இழிந்தவனே {பீமா}, மோதலுக்காகக் கதாயுதத்துடன் நின்று கொண்டிருக்கும் என்னை நீ ஏன் காணவில்லையா? இமய மலையின் பாறையைப் போலத் தெரியும் உறுதிமிக்கக் கதாயுதத்தை நான் தரித்திருக்கவில்லையா?(52) ஓ! இழிந்தவனே, இவ்வாயுதத்தைத் தரித்திருக்கும் என்னை வெல்ல எந்த எதிரிதான் துணிவான்? இது நேர்மையான போராக இருந்தால், தேவர்களில் புரந்தரனே ஆனாலும் கூட அந்த எல்லைக்கு {துணிவுறத்} தகுந்தவன் இல்லை.(53) நீ குறிப்பிட்ட என் தீச்செயல்கள் அனைத்திருக்காகவும் (இப்போதும் கூட) உன்னால் எனக்குச் சிறு காயத்தையும் ஏற்படுத்திவிட முடியாது.(54) நான், என் பலத்தைப் பயன்படுத்தி உங்கள் அனைவரையும் காட்டில் வசிக்கவும், தலைமறைவாக மாறுவேடங்களில் இருக்கவும் செய்தேன்.(55) உங்களின் நண்பர்களும், கூட்டாளிகளும்கூடக் கொல்லப்பட்டிருக்கின்றனர். எங்கள் இழப்பும் அதற்கு இணையானதே. இப்போது இந்தப் போரில் நான் வீழ்ந்தாலும் அஃது உயர்வாகப் புகழத்தக்கதாகவே இருக்கும். ஒருவேளை காலமேகூட அதற்குக் காரணமாக அமையலாம்.(56) இந்த நாள் வரை, போர்களத்தில் நேர்மையான போரில் ஒருபோதும் நான் வீழ்த்தப்பட்டதில்லை. வஞ்சகத்தால் என்னை நீ வீழ்த்தினால், உனக்குப் புகழ்க்கேடு எப்போதும் நிலைதிருக்கும் என்பது நிச்சயம். அந்த உனது செயல் நியாயமற்றதும், இழிவானதுமாகும் என்பதில் ஐயமில்லை.(57) ஓ! குந்தியின் மகனே, நீரில்லா கூதிர்கால மேகத்தைப் போல இவ்வாறு கனியில்லாமல் {பலனில்லாமல்} முழங்காதே. உன் பலமனைத்தையும் இப்போது போரில் காட்டுவாயாக” என்றான் {துரியோதனன்}.(58)

அவனது இந்த வார்த்தைகளைக் கேட்டவர்களும் வெற்றியில் உள்ள விருப்பத்தால் உந்தப்பட்டவர்களுமான பாண்டவர்களும், சிருஞ்சயர்களும் அவற்றை உயர்வாக மெச்சினார்கள்.(59) கரங்களைத் தட்டி மதங்கொண்ட யானையைத் தூண்டும் மனிதர்களைப் போல, அவர்கள் (தங்கள் புகழுரைகளாலும், உற்சாகமூட்டல்களாலும்) மன்னன் துரியோதனனை மகிழ்வுறச் செய்தனர்.(60) அங்கே இருந்த யானைகள் மீண்டும் மீண்டும் பிளிறவும், குதிரைகள் மீண்டும் மீண்டும் கனைக்கவும் தொடங்கின. வெற்றியடையும் விருப்பத்தால் உந்தப்பட்ட பாண்டவர்களின் ஆயுதங்கள் தன்னொளியாலேயே ஒளிர்ந்து கொண்டிருந்தன” {என்றான் சஞ்சயன்}.(61)

பலராமன் வருகை! – சல்லிய பர்வம் பகுதி – 34-கதாயுத்தம் தொடங்குமுன் அங்கே வந்த பலராமன்; பலராமனை முறையாக வரவேற்ற பாண்டவர்கள்; அனைவரும் அமர்ந்ததும் கதாயுதப் போர் தொடங்கியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்ம பாண்டவர்கள் அனைவரும் அமர்ந்த பின்னர், உண்மையில் அந்தக் கடும்போர் தொடங்கப்போகும் தருணத்தில்,(1) பனைமரக் கொடியைக் கொண்டவனும், கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்டவனுமான ராமன் {பலராமன்}, தன் சீடர்களான அந்த இரு வீரர்களுக்கிடையில் நடக்கப்போகும் போரைக் கேள்விப்பட்டு அந்த இடத்திற்கு வந்தான்.(2) கேசவனுடன் {கிருஷ்ணனுடன்} கூடிய பாண்டவர்கள், அவனைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்து, அவனை நோக்கி விரைந்து முறையான சடங்குகளுடன் அவனை {பலராமனை} வழிபட்டு வரவேற்றனர்.(3) அவர்களது வழிபாடு முடிந்ததும், ஓ! மன்னா, அவர்கள் அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள், “ஓ! ராமரே, உமது சீடர் இருவரின் போர்த்திறன்களைக் காண்பீராக” {என்றனர்}.(4)

அப்போது ராமன் {பலராமன்}, கிருஷ்ணன் மற்றும் பாண்டவர்கள் மீது தன் கண்களைச் செலுத்தி, அங்கே கதாயுதத்துடன் நின்றிருந்த குருகுலத்து துரியோதனனையும் கண்டு,(5) “நான் வீட்டைவிட்டுச் சென்றதிலிருந்து நாற்பத்திரண்டு நாட்கள் கடந்திருக்கின்றன. புஷ்ய {பூசம்} நட்சத்திரக்கூட்டத்தின் கீழ் புறப்பட்ட நான் சிரவணத்தில் {திருவோணம்} திரும்பியிருக்கிறேன்[1]. ஓ! மாதவா {கிருஷ்ணா}, நான், என் சீடர்கள் இருவருக்கிடையிலான மோதலைக் காண விரும்புகிறேன்” என்றான்.(6) அந்நேரத்தில் வீரர்களான துரியோதனன் மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரும் கதாயுதங்களுடன் களத்தில் பிரகாசமாக நின்று கொண்டிருந்தனர்.(7) கலப்பையை ஆயுதமாகக் கொண்டவனை {பலராமனைத்} தழுவிக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், அவனது நலத்தை விசாரித்து, அவனை வரவேற்றான்.(8)

இரு பெரும் வில்லாளிகளான அந்தச் சிறப்புமிக்கக் கிருஷ்ணர்கள் {அதாவது கருப்பர்களான வாசுதேவன் மற்றும் அர்ஜுனன் ஆகியோர்} இருவரும், மகிழ்ச்சியால் நிறைந்து, கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட அந்த வீரனை {பலராமனை} உற்சாகமாக வணங்கி அவனைத் தழுவிக் கொண்டனர்.(9) அதேபோலவே, மாத்ரியின் மகன்கள் இருவரும் {நகுலன் மற்றும் சகாதேவனும்}, திரௌபதியின் மகன்கள் ஐவரும், பெரும்பலம் கொண்டவனான அந்த ரோகிணியின்மகனை {பலராமனை} வழிபட்டு, (மரியாதையுடன் ஒரு குறிப்பிட்ட தொலைவில்) நின்றனர்.(10) பெரும் பலத்தைக் கொண்டவனான பீமசேனனும், உமது மகனும் {துரியோதனன்}, (தங்கள் கரங்களில் இருந்த) கதாயுதங்கள் இரண்டையும் உயர்த்தி, அந்தப் பலதேவனை {பலராமனை} வழிபட்டனர்.(11) பிற மன்னர்கள் அனைவரும் ராமனுக்கு {பலராமனுக்கு} மரியாதை செலுத்தி வரவேற்று, அவனிடம், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, இம்மோதலைக் காண்பீராக” என்றனர். இவ்வாறே அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் உயர் ஆன்மா கொண்டவனான ரோகிணியின் மகனிடம் {பலராமனிடம்} சொன்னார்கள்.(12)

அளவிலா சக்தி கொண்டவனான ராமனும், பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சர்களைத் தழுவிக் கொண்டு, (பிற) மன்னர்கள் அனைவரின் நலத்தையும் குறித்து விசாரித்தான். அதேபோலவே, அவனை அணுகிய அவர்கள் {பிற மன்னர்கள்} அனைவரும் அவனது நலத்தைக் குறித்து விசாரித்தனர்.(13) கலப்பையைக் கொண்ட அந்த வீரன், அந்த உயர் ஆன்ம க்ஷத்திரியர்களின் வயதுக்கேற்ப மரியாதையாக விசாரித்துப் பதிலுக்கு வணங்கி,(14) ஜனார்த்தனனையும், சாத்யகியையும் அன்புடன் தழுவிக் கொண்டான். அவர்களது தலைகளை முகர்ந்து பார்த்த அவன், அவர்களது நலனையும் விசாரித்தான்.(15) ஓ! மன்னா, அவர்கள் இருவரும், தேவர்களின் தலைவனான பிரம்மனை வழிபடும் இந்திரனையும், உபேந்திரனையும் போலத் தங்களுக்கு மூத்தவனான அவனை முறையாகப் பதிலுக்கு வழிபட்டனர்.(16)

அப்போது தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! பாரதரே, எதிரிகளைத் தண்டிப்பவனான ரோகிணியின் மகனிடம், “ஓ! ராமா {பலராமா}, இரு சகோதரர்களுக்கிடையில் நடக்கும் இந்த அஞ்சத்தக்க மோதலைக் காண்பாயாக” என்றான்.(17) இவ்வாறு அந்தப் பெரும் தேர்வீரர்களால் வழிபடப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களும், பேரழகும் கொண்ட அந்தக் கேசவனின் அண்ணன் {பலராமன்}, அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டான்.(18) நீல நிற ஆடை அணிந்தவனும், வெண்ணிற மேனி கொண்டவனுமான ராமன் {பலராமன்}, அம்மன்னர்களுக்கு மத்தியில் அமர்ந்தபோது, ஆகாயத்தில் பல்லாயிரம் நட்சத்திரங்களால் சூழப்பட்ட சந்திரனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(19) அப்போது உமது மகன்கள் இருவருக்குமிடையில் {துரியோதனன் மற்றும் பீமனுக்கிடையில்}, (பல வருடங்களாகத் தொடரும்) சச்சரவை முடித்து வைப்பதற்காக மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் பயங்கரமான மோதல் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.(20)

சந்திரனும், ரோஹிணியும் – பிரபாஸத் தீர்த்தம்! – சல்லிய பர்வம் பகுதி – 35-பலராமனின் புனிதப்பயணத்தைக் குறித்து வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்; பிரபாஸத்தின் பெயர்க்காரணத்தைச் சொன்ன வைசம்பாயனர்; தக்ஷன் தன் மகள்களைச் சந்திரனுக்கு மணமுடித்துக் கொடுத்தது; ரோகிணியுடன் மட்டும் அதிக அன்புடன் இருந்த சந்திரன்; சந்திரனைச் சபித்த தக்ஷன்; தக்ஷனிடம் பரிகாரம் கேட்ட தேவர்கள்; பிரபாஸத்தை அடைந்து பிணிதீர்ந்த சந்திரன்; உதபானத்தில் மறைந்த சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கடியில் ஓடிக் கொண்டிருப்பதைச் சொல்லும் குறிப்பு…

ஜனமேஜயன் {வியாசரின் சீடரான வைசம்பாயனரிடம்}, “(குருக்களுக்கும் பாண்டுக்களுக்கும் இடையில் நடந்த) அந்தப் பெரும்போர் தொடங்குவதற்கு முன்பு, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} விடைபெற்றுக் கொண்ட தலைவன் ராமன் {பலராமன்}, விருஷ்ணிகள் பலருடன் (துவாரகையிலிருந்து) புறப்பட்டுச் சென்றான்.(1) அவன் கேசவனிடம், “நான் திருதராஷ்டிரன் மகனுக்கோ, பாண்டுவின் மகன்களுக்கோ என் ஆதரவைத் தரமாட்டேன், மாறாக நான் விரும்பும் இடங்களுக்குச் செல்லப்போகிறேன்” என்று சொன்னான்.(2) இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, எதிரிகளைத் தடுப்பவனான ராமன் {பலராமன்} அங்கிருந்து சென்று விட்டான். ஓ! பிராமணரே {வைசம்பாயனரே}, அவனது வருகை குறித்த அனைத்தையும் எனக்கு நீர் சொல்வதே தகும்.(8) ராமன் {பலராமன்} அந்த இடத்திற்கு எவ்வாறு வந்தான், அந்தப் போரை எவ்வாறு கண்டான் என்பதை எனக்கு விரிவாகச் சொல்வீராக. என் கருத்தின்படி நீர் உரைப்பதில் நல்ல திறம் பெற்றவராக இருக்கிறீர்” என்றான் {ஜனமேஜயன்}.(4)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “உயர் ஆன்மப் பாண்டவர்கள் உபப்லாவ்யத்தில் நிலைகொண்ட பிறகு, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {ஜனமேஜயா}, அமைதி நோக்குடனும், அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்வதற்காகவும் மதுசூதனனை {கிருஷ்ணனை} திருதராஷ்டிரன் முன்னிலைக்கு அனுப்பினர்.(5) ஹஸ்தினாபுரம் சென்று திருதராஷ்டிரனைச் சந்தித்த கேசவன் {கிருஷ்ணன்}, உண்மையான, அதிலும் குறிப்பாக நன்மையை விளைவிக்கும் வார்த்தைகளைச் சொன்னான்.(6) எனினும் அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, நான் ஏற்கனவே சொன்னது போலவே அந்த ஆலோசனைகளைக் கேட்கவில்லை.(7) அமைதியை ஏற்படுத்த இயலாதவனும், மனிதர்களில் முதன்மையானவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான கிருஷ்ணன், ஓ! மனிதர்களில் புலியே {ஜனமேஜயனே}, தன் தூது தோல்வியுற்றதும், (பாண்டவ முகாமுக்குத்) திரும்பி, பாண்டவர்களிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(9) “விதியால் உந்தப்படும் கௌரவர்கள் என் வார்த்தைகளை அலட்சியம் செய்கின்றனர். பாண்டவர்களே, என்னுடன் (போர்க்களத்திற்கு) வந்து, புஷ்ய {பூசம்} நட்சத்திரத்தின் கீழ் புறப்படுங்கள்” {என்று கிருஷ்ணன் சொன்னான்}.(10)

அதன்பிறகு, (இரு தரப்பின்) துருப்புகளும் திரட்டப்பட்டு, அணிவகுக்கப்பட்டபோது, மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமையைக் கொண்டவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான ரோகிணியின் மகன் {பலராமன்}, தன் தம்பியான கிருஷ்ணனிடம்,(11) “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! மதுசூதனா, நாம் குருக்களுக்கு ஆதரவளிப்போமாக” என்றான். எனினும் கிருஷ்ணனோ அவனது வார்த்தைகளைக் கேட்கவில்லை.(12) (இதனால்) இதயம் நிறைந்த சினத்துடன் கூடியவனும், கலப்பைதாரியுமான அந்த யதுகுலத்தின் சிறப்புமிக்க மகன் {பலராமன்}, சரஸ்வதிக்குப் {சரஸ்வதி ஆற்றுக்கு} புனிதப் பயணம் புறப்பட்டான்.(13) யாதவர்கள் அனைவரின் துணையுடன் கூடிய அவன், மைத்ரம்[1] என்றழைக்கப்படும் நட்சத்திரக்கூட்டத்தின் கீழ் புறப்பட்டான். எனினும் போஜத் தலைவன் (கிருதவர்மன்) துரியோதனன் தரப்பை அடைந்தான். யுயுதானனின் {சாத்யகியின்} துணையுடன் கூடிய வாசுதேவன் பாண்டவர்களை அடைந்தான்.(14) புஷ்ய நட்சத்திரக்கூட்டத்தின் கீழ் அந்த ரோகிணியின் வீரமகன் {பலராமன்} புறப்பட்ட பிறகு, அந்த மதுசூதனன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களை முன்னணியில் நிறுத்திக் கொண்டு, குருக்களை எதிர்த்துச் சென்றான்.(15)அப்படிச் சென்றபோது ராமன் {பலராமன்} வழியில் தன் பணியாட்களிடம், “புனித பயணத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும், பயன்படக்கூடிய ஒவ்வொரு பொருளையும் கொண்டு வருவீராக. துவாரகையில் இருக்கும் (புனித) நெருப்பையும், நமது புரோகிதர்களையும் கொண்டு வருவீராக. தங்கம், வெள்ளி, பசுக்கள், ஆடைகள், குதிரைகள், யானைகள், தேர்கள், கோவேறுகழுதைகள், ஒட்டகங்கள் மற்றும் பிற இழுவை கால்நடைகளையும் கொண்டு வருவீராக.(17) புனித நீர்நிலைகளில் தற்காலிகமாகத் தங்கும் போது தேவைப்படும் அனைத்தையும் கொண்டு வந்து, சரஸ்வதியை நோக்கிப் பெரும் வேகத்துடன் செல்வோமாக.(18) ரித்விக்குகளையும், நூற்றுக்கணக்கான முதன்மையான பிராமணர்களையும் அழைத்துவருவிராக” என்று பணியாட்களுக்கு ஆணைகளையிட்ட வலிமைமிக்கப் பலதேவன் {பலராமன்},(19) குருக்களுக்குப் பேரிடர் நேர்ந்த அந்நேரத்தில் புனிதப் பயணத்துக்குப் புறப்பட்டான். சரஸ்வதியை நோக்கிப் புறப்பட்ட அவன் {பலராமன்}, அவளது {சரஸ்வதி ஆற்றின்} போக்கில் உள்ள புண்ணியத்தலங்கள் அனைத்துக்கும்,(20) புரோகிதர்கள், நண்பர்கள், பிராமணர்களில் முதன்மையானோர் பலர் ஆகியோருடனும், தேர்கள், யானைகள், குதிரைகள், பணியாட்கள் ஆகியவற்றுடனும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மாடுகள், கோவேறு கழுதைகள் மற்றும் ஒட்டகங்களால் இழுக்கப்பட்ட பல வாகனங்களில் சென்றான்.(21)

பல்வேறு நாடுகளில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, களைத்திருந்தவர்களுக்கும், உடல் இளைத்திருந்தவர்களுக்கும், குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வாழ்வுக்குத் தேவையான பல்வேறு பொருட்கள் பெரும் அளவில் {தானமாகக்} கொடுக்கப்பட்டன.(22) ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிராமணர்கள் விரும்பிய எந்த உணவுவகைகளும் எங்கும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.(23) ரோகிணி மகனின் {பலராமனின்} ஆணைக்கிணங்க, பயணத்தின் வேறு வேறு நிலைகளில், உண்ணத்தக்கவையும், குடிக்கத்தக்கவையும் பெரும் அளவில் சேமிக்கப்பட்டன.(24) விலையுயர்ந்த ஆடைகள், படுக்கைகள், விரிப்புகள் ஆகியன சுகத்தையும், வசதியையும் விரும்பும் பிராமணர்களின் மனநிறைவுக்காக {தானமாகக்} கொடுக்கப்பட்டன.(25) எந்த ஒரு பிராமணனோ, எந்த ஒரு க்ஷத்திரியனோ கேட்ட எந்த ஒரு பொருளும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, மனவெறுப்பில்லாமல் அவனுக்குக் கொடுக்கப்படுவது காணப்பட்டது.(26) அந்தக் குழுவில் இருந்த அனைவரும் பெரும் மகிழ்ச்சியோடு சென்று, மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். (பலராமனைத் தொடர்ந்து சென்ற) மனிதர்கள், பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்கு வாகனங்களையும், தாகத்திலிருந்தோருக்கு பானங்களையும், பசித்தவர்களுக்கு ருசியான உணவுவகைகளையும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பலருக்கு அடைகளையும், ஆபரணங்களையும் {தானமாகக்} கொடுத்தனர்.(27,28)

அந்தக் குழு பயணம் செய்த சாலையானது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிரகாசமானதாக, ஓ! வீரா, அனைவருக்கும் உயர்ந்த வசதியை அளிப்பதாக, சொர்க்கத்துக்கு ஒப்பானதாக இருந்தது.(29) அதில் {அந்த சாலையில்} எங்கும் மகிழ்ச்சி இருந்தது, எங்கும் கொள்ளத்தக்க சுவையான உணவு வகைகளும் இருந்தான. அங்கே கடைகளும், சிறு கடைகளும், இருந்தன, விற்பனைக்குரிய பல்வேறு பொருட்களும் இருந்தன. மேலும் அந்த மொத்த வழியும் {சாலையும்} மனிதர்களால் நிரம்பியிருந்தது. மேலும் அது பல்வேறு வகையான மரங்கள், உயிரினங்கள் மற்றும் பல்வேறு வகையான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(30) கடும் நோன்புகளை நோற்பவனான அந்த உயர்ஆன்ம பலதேவன், ஓ! மன்னா {ஜனமேஜயா}, பல்வேறு புண்ணியத்தலங்களில் பிராமணர்களுக்கு அபரிமிதமான வேள்விப் பொருட்களையும், அதிகமான செல்வத்தையும் {தானமாக} அளித்தான்.(31) அந்த யது குலத் தலைவன் {பலராமன்}, சிறந்த துணிகளால் மறைக்கப்பட்டவையும், தங்கத்தால் பூட்டப்பட்ட கொம்புகளைக் கொண்டவையுமான ஆயிரக்கணக்கான கறவைப்பசுக்களையும்,(32) பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குதிரைகளையும், பல வாகனங்களையும், பல அழகிய பணியாட்களையும் {தானமாக} அளித்தான்.(33) இவ்வாறே அந்த உயர் ஆன்ம ராமன் {பலராமன்}, சரஸ்வதியில் இருந்து பல்வேறு சிறந்த தீர்த்தங்களில் செல்வத்தை {தானமாகக்} கொடுத்தான். ஒப்பற்ற சக்தியும், பெருந்தன்மையுடன் கூடிய நடத்தையையும் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, தன் பயணத்தின் போக்கில் இறுதியாகக் குருக்ஷேத்திரத்தை வந்தடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(34)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, சரஸ்வதியில் உள்ள பல்வேறு தீர்த்தங்களின் குணங்களையும், தோற்றங்களையும், தகுதிகளையும் {புண்ணியப் பலன்களையும்}, தற்காலிகமாக ஆங்காங்கே இருக்கும்போது நோற்கப்பட்ட விதிகளையும் எனக்குச் சொல்வீராக.(35) ஓ! சிறப்புமிக்கவரே, அவற்றை, அவற்றின் வரிசையிலேயே எனக்குச் சொல்வீராக. ஓ! பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, என் ஆவல் அடக்கமுடியாததாக இருக்கிறது” என்று கேட்டான்.(36)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, இந்தத் தீர்த்தங்கள் அனைத்தின் குணங்களும், தோற்றங்களும் பற்றிய கருத்து மிகப்பெரியதாகும். இருப்பினும் நான் உனக்கு அவற்றை விவரிப்பேன். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தப் புனித விவரிப்பை முழுமையாகக் கேட்பாயாக.(37) பலதேவன், தன்புரோகிதர்கள் மற்றும் நண்பர்களின் துணையுடன் முதலில் பிரபாஸம்[2] என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான். காசநோயால் {க்ஷயரோகத்தால்} பாதிக்கப்பட்டிருந்த நட்சத்திரக்கூட்டங்களின் தலைவன் (சோமன்), அங்கே தன் பாவத்தில் இருந்து விடுதலை அடைந்தான். அங்கே சக்தியை மீண்டும் பெற்ற அவன், ஓ! மன்னா, இப்போது அண்டத்திற்கு ஒளியூட்டிக் கொண்டிருக்கிறான். பூமியில் முதன்மையானதான அந்தத் தீர்த்தம், முன்பு (பிரகாசத்தை இழந்திருந்த) சோமனுக்கு {சந்திரனுக்குக்} காந்தியை அளித்ததால், அது பிரபாஸம் என்று அழைக்கப்படுகிறது” {என்றார் வைசம்பாயனர்}.(38,39)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “புகழப்படும் சோமன் {சந்திரன்} காசநோயால் பாதிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? மேலும் அவன் {சந்திரன்} அந்தத் தீர்த்தத்தில் எவ்வாறு நீராடினான்?(40) அந்தப் புனித நீரில் நீராடிய அவன், எவ்வாறு தன் சக்தியை மீண்டும் பெற்றான்? ஓ! முனிவரே, இவை யாவற்றையும் எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்றான்.(41)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, தக்ஷனுக்கு இருபத்தேழு {27} மகள்கள் இருந்தனர். அவர்கள் (திருமணத்திற்காக) சோமனுக்கு அளிக்கப்பட்டனர்.(42) மங்கலமான செயல்களைக் கொண்டவ சோமன் {சந்திரன்}, பல்வேறு நட்சத்திரக்கூட்டங்களான அந்த மனைவியருடன் தொடர்பு கொண்டு மனிதர்கள் காலத்தைக் கணக்கிட தொண்டாற்றினான்.(43) அகன்ற விழிகளைக் கொண்ட அவர்கள் அனைவரும் இவ்வுலகில் அழகில் ஒப்பற்ற அழகைக் கொண்டவர்களாக இருந்தனர். எனினும், ரோகிணியானவள் அழகெனும் செல்வத்தில் அவர்கள் அனைவரிலும் முதன்மையானவளாக இருந்தாள்.(44) புகழத்தக்கவனான சோமன் அவளிடம் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தான். அவள் அவனுக்கு இனிமையானவளானதால், அவளையே இன்பத் துணையாக (பெரும்பாலும்) அவன் அனுபவித்தான்.(45) அந்தப் பழங்கால நாட்களில், ஓ! ஏகாதிபதி, சோமன் ரோகிணியுடன் (அதிக) காலம் வாழ்ந்தான். நட்சத்திரக்கூட்டங்கள் என்றழைக்கப்பட்ட அவனது பிற மனைவியர் இதனால் அந்த உயர் ஆன்மாவிடம் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தனர்.(46)

படைப்புத் தலைவனான அவர்களது தந்தையிடம் (தக்ஷனிடம்) வேகமாகச் சென்ற அவர்கள், அவனிடம், “சோமன் எங்களுடன் வாழவில்லை. அவன் எப்போதும் ரோகிணியுடனேயே இருக்கிறான்.(47) எனவே, ஓ! உயிரினங்களின் தலைவரே, கட்டுப்படுத்தப்பட்ட உணவுமுறை மற்றும் கடும் நோன்புகளை நோற்றபடியே நாங்கள் அனைவரும் உமது தரப்பிலேயே வசிக்கப் போகிறோம்” என்றனர்.(48) அவர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தக்ஷன் (சோமனைக் கண்டு) அவனிடம், “உன் மனைவியர் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வயாக. பெரும்பாவம் உன்னைக் களங்கப்படுத்தாமல் இருக்கட்டும்” என்றான். பிறகு தக்ஷன் தன் மகள்களிடம், “நீங்கள் அனைவரும் சசினிடம் (சந்திரனிடம்} செல்லுங்கள். என் ஆணையின் பேரில் சந்திரமாஸ் உங்கள் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வான்” என்றான்.(50)

அவனால் {தக்ஷனால்} அனுப்பப்பட்ட அவர்கள் குளிர்ந்த கதிர்களைக் கொண்டோனின் {சந்திரனின்} வசிப்பிடத்திற்குச் சென்றனர். அதன்பிறகும் அந்தத் துதிக்கத்தக்க சோமன், ஓ! பூமியின் தலைவா, ரோஹிணியிடம் மட்டுமே நிறைவுகொண்டு, முன்பு போலவே அவளுடனேயே அதிகமாக வாழ்வதைத் தொடர்ந்தான்.(51) அவனது மற்ற மனைவியர் மீண்டும் தங்கள் தந்தையிடம் {தக்ஷனிடம்} சென்று அவனிடம், “உமக்குத் தொண்டு செய்து, உமது ஆசிரமத்திலேயே நாங்கள் வசிக்கப் போகிறோம். சோமன் எங்களோடு வாழவில்லை, உமது ஆணைகளையும் மனத்தில் கொள்ளவில்லை” என்றனர்.(52) அவர்களது வார்த்தைகளைக் கேட்ட தக்ஷன் மீண்டும் சோமனிடம், “உன் மனைவியர் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வாயாக. ஓ! விரோசனா, நான் சபிக்காதிருக்கும்படி நடந்து கொள்வாயாக” என்றான்.(53) எனினும், போற்றுதலுக்குரிய சோமன், அந்தத் தக்ஷனின் வார்த்தைகளை அலட்சியம் செய்து, ரோஹிணியுடன் மட்டுமே வாழ்வதைத் தொடர்ந்தான். இதனால் அவனது பிற மனைவியர் மீண்டும் அவனிடம் கோபமடைந்தனர்.(54) தங்கள் தந்தையிடம் சென்று, தங்கள் சிரங்களைத் தாழ்த்தி வணங்கி, அவனிடம், “சோமன் எங்களுடன் வாழவில்லை. எங்களுக்கு உமது பாதுகாப்பைத் தருவீராக.(55) போற்றுதலுக்குரிய சந்திரமாஸ் எப்போதும் ரோஹிணியுடனேயே அதிகமாக வாழ்கிறார். அவர் உமது வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தராமல், எங்களிடம் எந்த அன்பையும் காட்ட விரும்பவில்லை. எனவே, எங்கள் அனைவரையும் சோமன் ஏற்றுக் கொள்ளும் வகையில் எங்களைக் காப்பீராக” என்றனர்.(56)

போற்றுதலுக்குரிய தக்ஷன், இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கோபமடைந்து, அதன் விளைவாகச் சோமனின் {சந்திரனின்} மீது காசநோயை {க்ஷயரோகத்தைச்}[3] சாபமாக வீசினார். இவ்வாறு நட்சத்திரங்களின் தலைவனுக்கு அந்நோய் ஏற்பட்டது.(57) காசநோயால் {க்ஷயரோகத்தால்} பீடிக்கப்பட்ட சசின் {சந்திரன்} நாளுக்கு நாள் மெலிந்தான் {தேய்ந்தான்}. ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அவன் அந்நோயில் இருந்து விடுபடுவதற்காகப் பல்வேறு வேள்விகளைச் செய்வதன் மூலம் பல முயற்சிகளைச் செய்தான். எனினும் அந்த இரவைச் செய்பவனால் {சந்திரனால்} அச்சாபத்திலிருந்து விடுபட முடியவில்லை. மறுபுறம் அவன் மெலிந்து தேய்ந்து கொண்டே வந்தான்.(58,59) எனினும், சோமன் தேய்ந்து வருவதன் விளைவால், மூலிகைகள் வளரத் தவறின. அவற்றின் சாறுகள் வற்றி, சுவையற்றதாகின. அவை அனைத்தும் தங்கள் தன்மைகளை இழந்தன.(60) மூலிகைகளின் இந்த நலிவின் விளைவால், உயிரினங்களும் சிதைவடையத் தொடங்கின. உண்மையில் சோமன் தேய்ந்து வந்ததன் விளைவால், உயிரினங்கள் அனைத்தும் மெலியத் தொடங்கின.(61)அப்போது தேவர்கள் அனைவரும் சோமனிடம் வந்து, ஓ! மன்னா {ஜனமேஜயா}, “ஏன் உன் வடிவம் (முன்பு போல) அவ்வளவு அழகாகவோ, பிரகாசமாகவோ இல்லை? இந்தப் பேரிடர் எங்கிருந்து வந்தது என்ற காரணத்தை எங்களுக்குச் சொல்வாயாக.(62) உன் பதிலைக் கேட்ட பிறகு, உன் அச்சத்தைப் போக்கத் தேவையானதை நாங்கள் சொல்கிறோம்” என்றனர். இவ்வாறு சொல்லப்பட்டதும், முயலைத் தன் அடையாளமாகக் கொண்ட அந்தத் தேவன் {சந்திரன்}, சாபத்தின் காரணத்தையும், அதனால் காசநோயால் தான் பாதிக்கப்பட்டதையும் அவர்களுக்குச் சொன்னான்.(63) அவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், தக்ஷனிடம் சென்று, “ஓ! போற்றுதலுக்குரியவரே, சோமனிடம் நிறைவு கொள்வீராக. உமது இந்தச் சாபம் விலக்கிக் கொள்ளப்படட்டும்.(64) சந்திரமாஸ் {சந்திரன்} மிகவும் மெலிந்துவிட்டான். அவனது சிறு பகுதி மட்டுமே இப்போது காணப்படுகிறது. ஓ! தேவர்களின் தலைவரே, அவன் தேய்ந்து வருவதால், உயிரினங்கள் அனைத்தும் சிதைவையடைகின்றன.(65) பல்வேறு வகையான மூலிகைகளும் சிதைவையடைகின்றன. அவை சிதைவடைவதால் நாங்களும் சிதைவையடைகிறோம். நாங்கள் இல்லாமல் இந்த அண்டம் என்னவாகும்? ஓ! அண்டத்தின் தலைவரே, இஃதை அறிந்து கொண்டு (சோமனிடம்) மனநிறைவடைவதே உமக்குத் தகும்” என்றனர்.(66)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்த உயிரினங்களின் தலைவன் (தக்ஷன்), தேவர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “என் வார்த்தைகளை வேறு வகையில் ஆகச் செய்வது இயலாது.(67) எனினும், அருளப்பட்டவர்களே சில சூழ்ச்சிகளால் என் வார்த்தைகள் விலக்கப்படலாம். சசின் {சந்திரன்} தனது மனைவியர் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்ளட்டும். தேவர்களே, முயலைத் தன் அடையாளமாகக் கொண்டவன் {சந்திரன்}, சரஸ்வதியில் இருக்கும் அந்த முதன்மையான தீர்த்தத்தில் நீராடினால் மீண்டும் வளர்வான். இந்த என் வார்த்தைகள் உண்மையானவையாகும்.(69) சோமன் {சந்திரன்} அரைமாத காலத்திற்கு ஒவ்வொரு நாளும் தேய்வான், (தொடர்ந்து வரும் அடுத்த) அரை மாத காலத்தில் ஒவ்வொரு நாளும் வளர்வான். இந்த என் வார்த்தைகள் உண்மையானவையாகும்.(70) மேற்குப் பெருங்கடலுடன் சரஸ்வதி சந்திக்கும் இடத்தில் உள்ள அந்த நீர்க்கொள்ளிடத்தில் {பிரபாஸத்தில்}, தேவர்களுக்குத் தேவனை (மகாதேவனை) அவன் துதிக்கட்டும். மீண்டும் அவன் தன் வடிவையும், அழகையும் அடைவான்” {என்றான் தக்ஷன்}.(71)

அந்த (தெய்வீக) முனிவரின் ஆணைக்கிணங்க சோமன் சரஸ்வதிக்கு {சரஸ்வதி ஆற்றுக்குச்} சென்றான். அவன், தீர்த்தங்களில் முதன்மையானதும், சரஸ்வதிக்குச் சொந்தமானதுமான பிரபாஸம் என்று அழைக்கப்படும் அந்தத் தீர்த்தத்தை அடைந்தான்.(72) பெரும் சக்தி கொண்டவனும், பெரும் பிரகாசம் கொண்டவனுமான அந்தத் தேவன் {சந்திரன்}, புதுநிலவில் {அமாவாசையில்} அங்கே நீராடி, தன் குளுமையான கதிர்களை மீண்டும் அடைந்து, உலகங்களுக்கு ஒளியூட்டுவதை மீண்டும் தொடர்ந்தான்.(73) பிரபாஸைக்குச் சென்ற அனைத்து உயிரினங்களும், சோமனைத் தங்களுக்கு மத்தியில் கொண்டு, தக்ஷன் இருக்கும் இடத்திற்குத் திரும்பி வந்தன.(74) அந்த உயிரினங்களின் தலைவன் {தக்ஷன்}, (அவர்களை முறையாக வரவேற்று), அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பினான்.

போற்றுதலுக்குரிய தக்ஷன், சோமனிடம் மனநிறைவு கொண்டு, மீண்டும் அவனிடம்,(75) “ஓ! மகனே, பெண்களை அலட்சியம் செய்யாதே, பிராமணர்களை ஒருபோதும் அவமதிக்காதே. செல்வாயாக, கவனமாக என் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவாயாக” என்று சொன்னான்.(76) அவனால் விடைகொடுத்து அனுப்பப்பட்ட சோமன் தன் வசிப்பிடத்திற்குத் திரும்பினான். அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியால் நிறைந்து முன்பு போலவே வாழத் தொடங்கின.(77) இவ்வாறே, இரவைச் சமைப்பவன் {சந்திரன்} எவ்வாறு சபிக்கப்பட்டான் என்பதையும், தீர்த்தங்கள் அனைத்திலும் பிரபாஸம் எவ்வாறு முதன்மையடைந்தது என்பதையும் குறித்த அனைத்தையும் சொல்லிவிட்டேன்.(78) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, முயலைத் தன் அடையாளமாகக் கொண்ட தேவன் {சந்திரன்}, அடுத்தடுத்த ஒவ்வொரு புதுநிலவிலும் {அமாவாசையிலும்} அந்தச் சிறந்த தீர்த்தமான பிரபாஸத்தில் நீராடி தன் வடிவத்தையும், அழகையும் மீண்டும் அடைகிறான்.(79) ஓ! பூமியின் தலைவா, சந்திரமாஸ் நீராடி தன் பெரும் பிரகாசத்தை (பிரபையை) மீண்டும் அடைந்த காரணத்தினாலேயே அந்தத் தீர்த்தம் பிரபாஸம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.(80)

அதன்பிறகு சிதைவிலா மகிமை கொண்ட வலிமைமிக்கப் பலதேவன் {பலராமன்}, சமஸோத்பேதம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(81) கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, விலையுயர்ந்த பல கொடைகளை அந்த இடத்தில் கொடுத்து, தூய்மைச் சடங்குகளை முறையாகச் செய்து ஓரிரவை அங்கே கடத்தினான்.(82) பிறகு அந்தக் கேசவனின் அண்ணன் {பலராமன்}, உதபானத்திற்கு {உதபானம் என்ற இடத்திற்கு} வேகமாகச் சென்றான். அங்கே சரஸ்வதி தொலைந்துபோனவளாகத் தெரிந்தாலும், அந்த இடத்தில் தாங்கள் அடைந்த பெரும் புண்ணியம் மற்றும் பேரருளின் விளைவால், தவத்தில் வெற்றி மகுடம் சூட்டிக் கொண்ட மனிதர்கள் {சித்தர்கள்}, அங்கே இருந்த மூலிகைகளாலும், அந்த நிலத்தாலும் குளுமையை {நிதானத்தை} அடைந்து, பூமியின் குடல்களுக்குள், கண்ணுக்குத் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஓடையாக அந்த ஆற்றை அறிகிறார்கள்” {என்றார் வைசம்பாயனர்}[4].(83,84)

திரித முனிவரின் மனோவேள்வி – உதபானத் தீர்த்தம்! – சல்லிய பர்வம் பகுதி – 36-ஏகதன், துவிதன் மற்றும் திரிதன் என்ற மூன்று சகோதரர்களின் கதை; பேராசையால் திரிதரை வஞ்சிக்க நினைத்த அவரது சகோதரர்கள்; கிணற்றுக்குள் விழுந்த திரிதர்; சோமரசத்திற்காக மனோவேள்வி செய்த திரிதர்; அவரிடம் நிறைவடைந்த தேவர்கள்; உதபானத் தீர்த்தத்தில் நீராடுவதால் கிடைக்கும் பலன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “(ஏற்கனவே சொன்னது போல) பலதேவன் {பலராமன்}, முன்பொரு சமயம் சிறப்புமிக்க (முனிவரான) திரிதரின் வசிப்பிடமாக இருந்ததும், சரஸ்வதியில் {சரஸ்வதி நதிக்கரையில்} இருப்பதுமான உதபானம் என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(1) கலப்பையை ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, பெரும் செல்வத்தைத் தானமளித்து, பிராமணர்களை வழிபட்டு, அங்கே நீராடி மகிழ்ச்சியால் நிறைந்தான்.(2) அறத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட பெரும் தவசி திரிதர் அங்கேதான் வாழ்ந்திருந்தார். அந்த உயர் ஆன்மா கொண்டவர் {திரிதர்} ஒரு குழியில் {கிணற்றில்} இருந்த போது, சோமச்சாற்றைப் பருகினார்.(3) அவரது சகோதரர்கள் இருவரும், அவரை அந்தக் குழிக்குள் {கிணற்றுக்குள்} விட்டுவிட்டுத் தங்கள் இல்லத்திற்குத் திரும்பினர். பிராமணர்களில் முதன்மையானவரான அந்தத் திரிதர், அவர்கள் இருவரையும் சபித்தார்”.(4)ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “உதபானத்தின்[1] {உபதானம் என்ற அந்தக் கிணற்றின்} தோற்றம் என்ன? அந்தப் பெரும் தவசி அங்கே அந்தக் குழிக்குள் {கிணற்றுக்குள்} எவ்வாறு விழுந்தார்? அந்தப் பிராமணர்களில் முதன்மையனவர் ஏன் தமது சகோதரர்களால் குழிக்குள் விடப்பட்டார்?(5) குழிக்கள் அவரை விட்டு வந்த அவரது சகோதரர்கள் எவ்வாறு தங்கள் இல்லத்திற்குத் திரும்பினர்? திரிதர் தன் வேள்வியை எவ்வாறு செய்தார்? அவர் எவ்வாறு சோமத்தைக் குடித்தார்? ஓ! பிராமணரே, இவை யாவற்றையும் நான் கேட்பது முறையென நீர் நினைத்தால் அவற்றை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(6)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, இதற்கு முந்தைய யுகத்தில், தவசிகளான மூன்று சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் ஏகதன், துவிதன், திரிதன் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் மூவரும் சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்டிருந்தனர்.(7) படைப்பின் தலைவர்களைப் போல இருந்த அவர்கள், பிள்ளைகளுடன் அருளப்பட்டிருந்தனர். பிரம்மத்தை உச்சரிப்பவர்களான அவர்கள், தங்கள் தவங்களால் (இறப்புக்குப் பிறகு) பிரம்மலோகத்தை அடையும் தனிச்சலுகையைப் பெற்றனர்.(8) அறத்தில் எப்போதும் அர்ப்பணிப்புக் கொண்ட அவர்களது தந்தையான கௌதமர், அவர்களது தவங்கள், நோன்புகள், தற்கட்டுப்பாடு ஆகியவற்றால் அவர்களிடம் மிகவும் மனநிறைவு கொண்டவராக இருந்தார்.(9)

போற்றுதலுக்குரிய கௌதமர், தன் மகன்களால் பெரும் மகிழ்வை அடைந்து, அங்கேயே தன் நீண்ட வாழ்நாளைக் கழித்து, இறுதியாகத் தனக்குத் தகுந்த உலகத்தை அடைந்தார்.(10) எனினும், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, கௌதமரின் யஜமானர்களாக {சீடர்களாக} இருந்த மன்னர்கள், அவர் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டாலும், கௌதமரின் மகன்களைத் தொடர்ந்து வழிபட்டனர்.(11) அவர்களில் திரிதர், தன் செயல்கள் மற்றும் (வேத) கல்வியால், அவரது தந்தையான கௌதமரைப் போலவே முதன்மையானவராகத் திகழ்ந்தார்.(12) அறத்தன்மையும், உயர்ந்த அருளையும் கொண்ட தவசிகள் அனைவரும், முன்பு அவரது தந்தையான கௌதமரைத் எவ்வாறு வழிபட்டனரோ அவ்வாறே திரிதரையும் வழிபடத் தொடங்கினர்.(13)

ஒரு சமயம், சகோதரர்களான ஏகதன் மற்றும் துவிதன் ஆகிய இருவரும் செல்வத்தில் ஆவல் கொண்டு ஒரு வேள்வியைச் செய்ய நினைத்தனர்.(14) ஓ! எதிரிகளை எரிப்பவனே, திரிதரைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு, தங்கள் யஜமானர்கள் {சீடர்கள்} அனைவரிடமும் சென்று, தேவையான எண்ணிக்கையில் விலங்குகளைத் {கால்நடைகளைத்} திரட்டிக் கொண்டால்,(15) தாங்கள் இன்பமாகச் சோமச்சாற்றைப் பருகி, வேள்வியின் பெரும் தகுதிகளை {புண்ணியங்களை} அடையலாம் என்பதே அவர்கள் தீட்டிய திட்டமாகும். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த மூன்று சகோதரர்களும் அத்தீர்மானத்தின் படியே செய்தனர்.(16)

உயர் ஆன்மா கொண்ட அந்தப் பெரும் முனிவர்கள், விலங்குகளுக்காக (அவற்றை அடைவதற்காகத்) தங்கள் யஜமானர்கள் {சீடர்கள்} அனைவரிடமும் சென்று, அவர்களின் வேள்விகளில் துணையாக இருந்து, தாங்கள் செய்த புரோகிதத் தொண்டின் விளைவால், பெரும் எண்ணிக்கையிலான விலங்குகளைக் முறையான கொடையாகப் பெற்றுக் கிழக்கை நோக்கிச் சென்றனர்.(17,18) ஓ! மன்னா {ஜனமேஜயா}, திரிதர் உற்சாகமிக்க இதயத்துடன் அவர்களுக்கு முன்பு நடந்து சென்றார். ஏகதனும், துவிதனும் அவருக்குப் பின்னால் விலங்குகளுடன் வந்தனர்.(19) அந்தப் பெரும் விலங்கு மந்தையைக் கண்ட அவர்கள் இருவரும், திரிதருக்கு உரிய பங்கைக் கொடுக்காமல், அதைத் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்வதெவ்வாறு என்று சிந்திக்கத் தொடங்கினர்.(20) ஓ! மன்னா {ஜனமேஜயா}, இழிந்த பாவிகளான அந்த ஏகதன் மற்றும் துவிதன் ஆகிய இருவரும் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டதைக் கேட்பாயாக.(21)

அவர்கள், “திரிதன் வேள்விகளில் துணைபுரிவதில் திறம்பெற்றவனாக இருக்கிறான். திரிதன் வேதங்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும் இருக்கிறான். திரிதன், இன்னும் பல பசுக்களை ஈட்டவல்லவனாவான்.(22) எனவே, நாம் இருவரும் {அவனது பங்கான} பசுக்களை எடுத்துக் கொள்வோம். திரிதன் நம் துணையில்லாமல், தான் தேர்ந்தெடுக்கும் ஓர் இடத்திற்குச் செல்லட்டும்” என்றனர்.(23) அப்படி அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, வழியிலேயே இரவும் வந்தது. அவர்கள் அப்போது தங்கள் முன்பு ஓர் ஓநாயைக் கண்டனர். அந்த இடத்திற்கு அருகிலேயே சரஸ்வதியின் கரையில் ஆழமான குழி {கிணறு} ஒன்று இருந்தது.(24) தன் சகோதரர்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தவரான திரிதர், ஓநாயைக் கண்ட அச்சத்தால் ஓடிச் சென்று அந்தக் குழிக்குள் விழுந்தார்.(25)

அந்தக் குழியானது அடியற்றதாகவும், பயங்கரமானதாகவும், அனைத்துயிரினங்களையும் அச்சுறுத்துவதாகவும் இருந்தது. தவசிகளில் சிறந்தவரான அந்தத் திரிதர், அந்தக் குழிக்கள் இருந்தபடியே துன்ப ஓலமிடத் தொடங்கினார். அவரது இரு சகோதரர்களும் அவருடைய கதறலைக் கேட்டனர்.(26) அவரது சகோதரர்களான ஏகதனும், துவிதனும், அவர் குழிக்குள் விழுந்ததை அறிந்தும்கூட, ஓநாயிடம் கொண்ட அச்சத்தாலும், பேராசையினாலும் தங்கள் சகோதரனைக் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.(27) விலங்குகளை அடையும் பேராசையால் உந்தப்பட்டவர்களான அவரது இரு சகோதரர்களாலும் இவ்வாறு கைவிடப்பட்ட அந்தப் பெரும் தவசியான திரிதர், ஓ! மன்னா, புழுதியாலும்,(28) செடிகொடிகளாலும் நன்கு மறைக்கப்பட்டுத் தனியாக அந்தக் குழிக்குள் இருந்தபோது, ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா}, ஓர் இழிந்த பாவியைப் போல நரகத்திற்குள் மூழ்கியிருப்பவராகத் தம்மை நினைத்துக் கொண்டார்.(29) தாம் இன்னும் சோமச்சாற்றைக் குடிக்கும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டாததல் இறப்பதற்கு அவர் அஞ்சினார். பெரும் ஞானம் கொண்ட அவர், அங்கேயே இருந்து சோமத்தைக் குடிப்பதெவ்வாறு என்று தன் நுண்ணறிவின் துணை கொண்டு சிந்திக்கத் தொடங்கினார்.(30)

அந்தப் பெரும் தவசி {திரிதர்}, அதைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டே அந்தக் குழியில் நின்றிருந்தபோது, வளர்ந்து வரும் கொடியொன்று அங்கே குழிக்குள் {கிணற்றுக்குள்} தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.(31) அந்தக் குழி வறண்டிருந்தாலும், அந்தத் தவசி அதில் நீர் இருப்பதாகவும், வேள்வி நெருப்பு இருப்பதாகவும் கற்பனை செய்தார். தன்னையே ஹோத்ரியாக அமைத்து {கற்பனை செய்து)(32) கொண்ட அந்தப் பெரும் தவசி, தான் கண்ட அந்தக் கொடியைச் சோமச்செடியாக {ஸோமலதையாகக்} கற்பனை செய்தார். பிறகு அவர் (வேள்வி நடத்துவதற்குத் தேவையான) ருக்குக்களையும், யஜுஸுகளையும், சாமங்களையும்[2] மனத்தாலேயே சொன்னார்.(33) திரிதர், (அந்தக் கிணற்றுக்கடியில் கிடக்கும்) கூழாகற்களை (கற்பனையால்) சர்க்கரையாக்கினார். பிறகு அவர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, (மனத்தாலேயே) தன் தூய்மைச் சடங்குகளைச் செய்தார். அவர், (தான் கற்பனை செய்து வைத்திருந்த) நீரை தெளிந்த நெய்யாகக் கண்டார்.(34) (அந்த வேள்விக் கொடையில்) தேவர்களுக்கு அவரவருக்குரிய பங்கை ஒதுக்கினார். அடுத்ததாக அவர், (மனத்தால்) சோமத்தைப் பருகியபடியே உரத்த ஒலியெழுப்பத் தொடங்கினார். ஓ! மன்னா {ஜனமேஜயா}, வேள்வி செய்த அந்த முனிவர் முதலில் உதிர்த்த அவ்வொலிகள் சொர்க்கத்தை அடைந்தன. பிரம்மத்தை உச்சரிப்பவர்கள் விதித்துள்ள முறையின் படியே திரிதர் அவ்வேள்வியை நிறைவும் செய்தார்.(35)உயர் ஆன்ம திரிதர், அந்த வேள்வியைச் செய்து கொண்டிருந்தபோது, தேவலோகம் முழுமையும் கலக்கமடைந்தது. எனினும், எவரும் அதன் காரணத்தை அறியவில்லை. (தேவர்களின் ஆசானான) பிருஹஸ்பதி, (திரிதரால் உண்டான) அந்தப் பேரொலியைக் கேட்டார். அந்தத் தேவர்களின் புரோகிதர் {பிருஹஸ்பதி}, தேவர்களிடம், “திரிதன் ஒரு வேள்வியைச் செய்து கொண்டிருக்கிறான். தேவர்களே நாம் அங்கே செல்ல வேண்டும்.(37) பெரும் தவத்தகுதியைக் கொண்ட அவன் {திரிதன்}, கோபமடைந்தால், வேறு தேவர்களையே உண்டாக்கத் தகுந்தவனாகிவிடுவான்” என்றார்.(38) பிருஹஸ்பதியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, திரிதரின் வேள்வி நடந்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றனர்.(39) அவ்விடத்திற்குச் சென்ற தேவர்கள், அங்கே அந்த வேள்வியில் நிறுவப்பட்டிருக்கும் உயர் ஆன்ம திரிதரைக் கண்டனர்.(40)

பிரகாசமிக்க அழகுடன் கூடிய அந்த உயர் ஆன்மாவைக் கண்ட தேவர்கள் அவரிடம், “(உமது காணிக்கைகளில்) எங்கள் பங்கைப் பெறுவதற்காக நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்” என்றனர்.(41) அந்த முனிவர் அவர்களிடம், “சொர்க்கவாசிகளே, என் புலனுணர்வைக் கிட்டத்தட்ட இழந்த நிலையில் இந்தப் பயங்கரக் கிணற்றுக்குள் கிடக்கும் என்னைப் பாருங்கள்” என்றார்.(42) பிறகு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தத் திரிதர், உரிய மந்திரங்களுடன் தேவர்களுக்கு அவர்களுடைய பங்கை முறையாகக் கொடுத்தார். தேவர்கள், அதைப் பெற்றுக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.(43) அந்தச் சொர்க்கவாசிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை முறையாகப் பெற்று, அவரிடம் மனநிறைவுகொண்டு, அவர் விரும்பிய வரங்களை அவருக்கு அளித்தனர்.(44) அவர், (கிணற்றுக்குள் இருக்கும்) தமது துயர்நிறைந்த நிலையிலிருந்து தம்மை விடுவிக்க வேண்டும் எனும் வரத்தைத் தேவர்களிடம் கேட்டார்.(45)

மேலும் அவர் {திரிதர்}, “இந்தக் கிணற்றில் எவன் நீராடுவானோ, அவன், சோமத்தைப் பருகிய மனிதர்கள் அடையும் முடிவை {கதியை} அடையட்டும்” என்றும் கேட்டார்.(46) இந்த வார்த்தைகளைச் சொன்னதும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கிணற்றுக்குள் சரஸ்வதியே தன் அலைகளுடன் தோன்றினாள். அவளால் உயர்த்தப்பட்ட திரிதர், {கிணற்றுக்கு} மேலே வந்து, அந்தச் சொர்க்க வாசிகளை வழிபட்டார்.(47) அப்போது தேவர்கள் அவரிடம், “நீர் விரும்பியபடியே ஆகட்டும்” என்றனர். பிறகு அவர்கள் அனைவரும் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே சென்றனர். திரிதரும் மகிழ்ச்சியால் நிறைந்து, தன் வசிப்பிடத்திற்குச் சென்றார்.(48)

அங்கே தன் சகோதரர்களான இரு முனிவர்களையும் சந்தித்த அவர், அவர்களிடம் பெருங்கோபம் கொண்டார். பெரும் தவத்தகுதியைக் கொண்ட அவர் {திரிதர்}, அவர்களிடம் கடுஞ்சொற்களைப் பேசி,(49) “பேராசையால் என்னைக் கைவிட்டு ஓடிய உங்கள் பாவச்செயல்களுக்காக என்னால் சபிக்கப்படும் நீங்கள், கூரிய பற்களுடைய கடும் ஓநாய்களாய் மாறி காட்டில் திரிவீர்களாக.(50) மேலும், உங்கள் சந்ததிகள் சிறுத்தைப்புலிகளையும், கரடிகளையும், கருங்குரங்குகளையும் கொண்டவையாக இருக்கும்” என்று சபித்தார். திரிதர் அவ்வார்த்தைகளைச் சொன்னதும், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த உண்மை நிறைந்த முனிவரின் வார்த்தைகளின் விளைவால், அவரது சகோதரர்கள் இருவரும் மிக விரைவாக அந்த வடிவங்களுக்கு {ஓநாய்களாக} மாற்றமடைந்தனர்.(51)

அளவிலா ஆற்றலைக் கொண்ட பலதேவன் {பலராமன்}, உதபானத்தின் {உதபானம் என்ற அந்த இடத்தின்} நீரைத் தீண்டினான். அவன் பல்வேறு வகைகளிலான செல்வத்தைத் தானமளித்து, பிராமணர்கள் பலரை வழிபட்டான்.(52) உதபானத்தைக் கண்டு அதை மீண்டும் மீண்டும் புகழ்ந்த பலதேவன், அடுத்ததாக, சரஸ்வதியிலேயே இருந்த விநாசனத்திற்குச் {விநாசனம் என்ற இடத்திற்குச்} சென்றார்” {என்றார் வைசம்பாயனர்}.(53}

நைமிசத்தில் நுழைந்த சரஸ்வதி! – சல்லிய பர்வம் பகுதி – 37- விநாசனை,ஸுபூமிகை, கந்தர்வம், கர்க்கஸ்ரோதம், சங்கம், துவைதத்தடாகம், நாகதன்வானம் ஆகிய தீர்த்தங்களை அடைந்து, நீராடி, தானமளித்த பலராமன்; கர்க்கரைக் குறித்த சிறு விளக்கம்; நைமிசவனத்தில் நுழைந்த சரஸ்வதி; சரஸ்வதி நதிக்கரையை முழுமையாக ஆக்ரமித்த தவசிகள்; சரஸ்வதி ஆறு திடீரெனக் கிழக்கு நோக்கிப் பாய்ந்து, மீண்டும் மேற்கில் பாய்வதற்கான காரணம்; சப்தசாரஸ்வதத் தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சூத்திரர்கள் மற்றும் ஆபிரர்களின் மேல் சரஸ்வதி கொண்ட வெறுப்பினால் கண்ணுக்குத் தெரியாமல் எங்கு மறைந்து போனாளோ, அந்த விநாசனத்திற்குப் பலதேவன் {பலராமன்} சென்றான்.(1) இத்தகு வெறுப்பின் விளைவால், சரஸ்வதி அந்த இடத்தில் தொலைந்து போனவளாக இருப்பதால், ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா}, முனிவர்கள் எப்போதும் அந்த இடத்தை விநாசனை {விநாசனம்} என்ற பெயரால் அழைக்கின்றனர்[1].(2) சரஸ்வதியின் அந்தத் தீர்த்தத்தில் நீராடிய வலிமைமிக்கப் பலதேவன், அதே ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் சுபூமிகத்திற்கு {சுபூமிகம் என்ற இடத்திற்குச்} சென்றான்.(3) நல்ல நிறத்தையும், அழகிய முகத்தையும் கொண்ட பல அப்சரஸ்கள், எந்த இடைவேளையும் இல்லாமல் தூய தன்மை கொண்ட விளையாட்டுகளில் அங்கே எப்போதும் ஈடுபடுகின்றனர்.(4)

ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {ஜனமேஜயா}, தேவர்களும், கந்தர்வர்களும், பிரம்மனின் ஓய்விடமான அந்தப் புனிதமான தீர்த்தத்திற்கு ஒவ்வொரு மாதமும் செல்கின்றனர்.(5) ஓ! மன்னா, கந்தர்வர்களும், பல்வேறு அப்சரஸ் இனங்களும் ஒன்றாகக் கூடி, தாங்கள் விரும்பியவாறு மகிழ்ச்சியாகத் தங்கள் நேரத்தைக் கடத்துவதை அங்குக் காணலாம்.(6) அங்கே தேவர்களும், பித்ருக்களும், தங்கள் மேல் பொழியப்படும் புனிதமான, மங்கலமான மலர்களுடன் இன்பமாக விளையாடுவர்,(7) அங்கே செடிகொடிகள் அனைத்தும் மலர்க்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஓ! மன்னா, சரஸ்வதியின் அற்புத ஆற்றங்கரையில், அப்சரஸுகளின் அழகிய விளையாட்டுக் களமாக அந்தத் தீர்த்தம் இருப்பதால், அது சுபூமிகை {ஸுபூமிகை} என்று அழைக்கப்படுகிறது.(8) மதுகுலத்தின் பலதேவன், அந்தத் தீர்த்தத்தில் நீராடி, பிராமணர்களுக்கு ஏராளமான செல்வத்தைக் கொடையளித்து, அந்தத் தெய்வீகப் பாடல்கள் மற்றும் இசைக்கருவிகளின் ஒலியைக் கேட்டான்.(9) மேலும் அவன், தேவர்கள், கந்தவர்கள் மற்றும் ராட்சசர்கள் பலரின் நிழல்களையும் அங்கே கண்டான்.

பிறகு அந்த ரோகிணியின் மகன் {பலராமன்}, கந்தர்வர்களின் தீர்த்தத்திற்குச் சென்றான்.(10) விஸ்வாவசுவின் தலைமையிலானவர்களும், தவத்தகுதியைக் கொண்டவர்களும் கந்தர்வர்கள் பலரும், மிக அழகானவகையில் ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் அங்கே இருக்கின்றனர்.(11) அங்கே பல்வேறு வகையான செல்வங்களையும், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், பசுக்கள், கோவேறுகழுதைகள், ஒட்டகங்கள், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றையும் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்து,(12) பிராமணர்கள் பலருக்கு உணவளித்து, அவர்கள் விரும்பிய விலையுயர்ந்த பல பரிசுகளைக் கொடுத்து அவர்களை நிறைவு செய்த மதுகுலத்தின் பலதேவன் {பலராமன்}, பல பிராமணர்கள் சூழ, அவர்களால் துதிக்கப்பட்டபடியே அங்கிருந்து சென்றான்.(13)

ஒரே காது குண்டலத்தைக்[2] கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த எதிரிகளைத் தண்டிப்பவன், கந்தர்வத் தீர்த்ததிலிருந்து புறப்பட்டு, கர்க்கஸ்ரோதம் என்றழைக்கப்படும் புகழ்பெற்ற தீர்த்தத்திற்குச் சென்றான்.(14) அங்கே அந்தப் புனிதமான சரஸ்வதியின் தீர்த்தத்தில், வயதால் மதிப்புமிக்கவரும், தவத்துறவுகளால் ஆன்மத் தூய்மையடைந்தவருமான சிறப்புமிக்கக் கர்க்கர், காலம் மற்றும் அது செல்லும் பாதை, (ஆகாயத்தின்) ஒளிக்கோள்களுடைய மாறுதல்கள், மங்கல மற்றும் அமங்கல சகுனங்கள் அனைத்தின் அறிவையும் அடைந்தார்.(15,16) இந்தக் காரணத்தினாலே அந்தத் தீர்த்தம், அவரது பெயரையே கொண்டு கர்க்கஸ்ரோதம் என்று அழைக்கப்பட்டு வந்தது. ஓ மன்னா {ஜனமேஜயா}, சிறந்த நோன்புகளையும், உயர்ந்த அருளையும் கொண்ட முனிவர்கள், ஓ!தலைவா, காலத்தின் அறிவை அடைந்திருந்த கர்க்கருக்காக அங்கே எப்போதும் காத்திருந்தனர் {பணிவிடை செய்தனர்}[3].(17) வெண்சந்தனக் குழம்பைத் தன் மேனியில் பூசிக்கொண்டு அந்தத் தீர்த்தத்திற்குச் சென்ற பலதேவன், தூய ஆன்மாக்களைக் கொண்ட பல தவசிகளுக்குச் செல்வத்தை முறையாகத் தானமளித்தான்.(18)

நீல ஆடை உடுத்தியிருந்த அந்தச் சிறப்புமிக்கவன், பல வகைகளிலான விலையுயர்ந்த உணவுவகைகளைப் பிராணர்களுக்குக் கொடுத்த பிறகு, சங்கம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(19) பனைமரக் கொடியைக் கொண்ட அந்த வலிமைமிக்க வீரன், அங்கே அந்தச் சரஸ்வதியின் ஆற்றங்கரையில், மஹாசங்கம் என்று அழைக்கப்பட்டதும், மேருவைப் போல நெடிதுயர்ந்ததும், வெண்மைலையைப் போலத் தெரிந்ததும், பல முனிவர்களால் அடையப்பட்டதுமான ஒரு பெரும் மரத்தைக்[4] கண்டான்.(20) அங்கே ஆயிரக்கணக்கான யக்ஷர்களும், வித்யாதரர்களும், அளவிலா சக்தி கொண்ட ராட்சசர்களும், அளவிலா வலிமை கொண்ட பிசாசங்களும், சித்தர்களும் வசித்தனர்.(21) பிற வகை உணவுகளைக் கைவிட்ட அவர்கள் அனைவரும், ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, நோன்புகளையும், ஒழுங்கு கட்டுப்பாடுகளையும் நோற்று, உரிய காலங்களில் அந்தக் கானகத் தலைவனின் {அந்தப் பெரும் மரத்தின்} கனிகளை உண்டு, மனிதர்களால் காணப்படாதவாறு, தனித்தனி குழுக்களாகத் திரிந்து வந்தனர். ஓ! மன்னா, அந்தக் கானகத்தின் ஏகாதிபதி {அந்தப் பெரும் மரம்} இதற்காகவே உலகம் முழுவதும் அறியப்பட்டிருக்கிறான்.(22,23) சரஸ்வதியில் இருக்கும் அந்தத் தீர்த்தமானது {சங்கத் தீர்த்தம்} இக்காரணத்திற்காகவே புனிதமானதாகக்[5] கொண்டாடப்படுகிறது. கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்டவனும், யதுகுலத்தின் புலியுமான அந்தப் பலதேவன், அந்தத் தீர்த்தத்தில் பல கறவை பசுக்களையும், தாமிர மற்றும் இரும்பு பாத்திரங்களையும், பல்வேறு வகைகளிலான பிற பாத்திரங்களையும் தானமளித்து, பிராமணர்களை வணங்கி, பதிலுக்கு அவர்களாளும் வணங்கப்பட்டான்.-பிறகு அவன் {பலராமன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, துவைதத் தடாகத்திற்கு {நைஸர்க்கிகத் தீர்த்தத்திற்குச்}[6] சென்றான்.(24,25) அங்கே வந்த பலன் {பலராமன்}, பல்வேறு வகைகளிலான ஆடைகளில் பல்வேறு வகையான தவசிகளைக் கண்டான். அவன், அதன் நீரில் நீராடி, பிராமணர்களை வழிபட்டான்.(26) மகிழ்ச்சிக்குரிய பல்வேறு பொருட்களைப் பிராமணர்களுக்கு அபரிமிதமாகக் கொடையளித்த பலதேவன், பிறகு சரஸ்வதியின் தென் கரைவழியாகச் சென்றான்.(27)மங்கா மகிமையையும், வலிய கரங்களையும், அற ஆன்மாவையும் கொண்ட அந்தச் சிறப்புமிக்க ராமன் {பலராமன்}, அடுத்ததாக நாகதன்வானம் என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(28) எண்ணற்ற பாம்புகள் நிறைந்த அது, பெரும் காந்தியைக் கொண்ட பாம்புகளின் மன்னன் வாசுகியின் வசிப்பிடமாகும். அங்கே பத்தாயிரத்து நான்கு முனிவர்கள் தங்கள் நிரந்தர வசிப்பிடத்தைக் கொண்டிருந்தனர்.(29) (பழங்காலத்தில்) அங்கே வந்த தேவர்கள், சிறந்த பாம்பான {நாகமான} வாசுகியை அனைத்துப் பாம்புகளின் அரசனாக நிறுவினர். ஓ! குரு குலத்தோனே, அவ்விடத்தில் பாம்புகளால் எந்த அச்சமும் கிடையாது.(30) பிறகு மதிப்புமிக்கப் பல பொருட்களைப் பிராமணர்களுக்குத் தானமளித்த பலதேவன், கிழக்கு நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அடுத்தடுத்த ஒவ்வொரு அடியிலும் தோன்றிய நாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான புகழ்பெற்ற தீர்த்தங்களை அடைந்தான்.(31) அந்தத் தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடி, முனிவர்களால் சொல்லப்பட்ட நோன்புகளையும், நியமங்களையும் நோற்று, அபரிமிதமான செல்வத்தைத் தானமளித்து,(32) அங்கே தங்கள் வசிப்பிடங்களைக் கொண்ட தவசிகள் அனைவரையும் வணங்கிய பலதேவன், கிழக்குத்திசையில் சரஸ்வதி திரும்பும் இடத்தை அடைவதற்காக, காற்றின் செயல்பாட்டால் வழிநடத்தப்படும் மழைத்தாரைகளைப் போல அந்தத் தவசிகளால் சுட்டிக்காட்டப்பட்ட வழியில் சென்றான். அந்த நதியானது, நைமிசவனத்தில் வசிக்கும் உயர் ஆன்ம முனிவர்களைக் காண்பதற்காக அவ்வழியில் சென்றது.(33,34) எப்போதும் வெண்சந்தனக் குழம்பைப் பூசியிருந்தவனும், கதாயுதத்தைத் தன் ஆயுதமாகக் கொண்டவனுமான பலன் {பலராமன்}, ஆறுகளில் முதன்மையான அவள் {சரஸ்வதிதேவி} தன் பாதையை மாற்றிக் கொள்வதைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(35)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பிராமணரே, ஏன் சரஸ்வதி தன் பாதையைக் கிழக்குத் திசையை நோக்கி திருப்பிக் கொண்டாள்? ஓ! அத்வர்யுக்களுள் சிறந்தவரே, இது குறித்த அனைத்தையும் நீர் எனக்குச் சொல்வதே தகும்.(36) யதுக்களைத் திளைக்கச் செய்பவன் {பலராமன்} எக்காரணத்தால் வியப்படைந்தான்? உண்மையில், ஆறுகளில் முதன்மையான அவள் {சரஸ்வதிதேவி} இவ்வாறு தன் பாதையை மாற்றிக் கொண்டது ஏன்?” என்று கேட்டான்.(37)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “முன்பொரு காலத்தில், கிருதயுகத்தில், ஓ! மன்னா, நைமிச வனத்தில் வசிக்கும் தவசிகள் பனிரெண்டு வருடங்கள் நீடிக்கும் மகத்தான வேள்வியைச் செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.(38) ஓ! மன்னா, அந்த வேள்விக்கு வந்த முனிவர்கள் பலராவர். முறையான சடங்குகளுடன் அந்த வேள்வியை நடத்தித் தங்கள் நாட்களைக் கழித்து வந்த பேரருளாளர்கள்,(39) நைமிசத்தில் நடந்த வேள்வியின் அந்தப் பனிரெண்டு வருடங்களையும் நிறைவு செய்து, தீர்த்தயாத்திரை {புனிதநீர்நிலைகளுக்குப் பயணம்} செய்யப் புறப்பட்டனர்.(40) ஓ! மன்னா, முனிவர்களின் எண்ணிக்கையின் விளைவால், சரஸ்வதியின் தென்கரையில் இருந்த தீர்த்தங்கள் அனைத்தும், நகரங்களைப் போலத் தோன்றின.(41) ஓ! மனிதர்களில் புலியே, அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர்கள், தீர்த்தங்களின் தகுதிகளை {புண்ணியங்களை} அனுபவிக்கும் ஆவலின் விளைவால் சமந்தபஞ்சகம் வரை அந்நதியின் கரைகளில் தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டனர்.(42)

வேள்வி நெருப்புகளில் ஆகுதிகளை ஊற்றிக் கொண்டிருந்த தூய ஆன்மா கொண்ட முனிவர்களால் ஓதப்பட்ட வேதப் பேரொலியானது அந்த மொத்தப் பகுதிகளிலும் எதிரொலிப்பதாகத் தெரிந்தது.(43) அந்த உயர் ஆன்ம தவசிகளால் தெளிந்த நெய்யானது ஆகுதியாக ஊற்றப்பட்டதன் விளைவாகச் சுடர்விட்ட ஹோம நெருப்புகளால் அந்த ஆறுகளில் முதன்மையானவள் மிக அழகானவளாகத் தெரிந்தாள்.(44) வாலகில்யர்கள், அஸ்மகுட்டர்கள், தந்தோலூகலினர்கள், சம்பிராக்ஷியானர்கள்,[7] பிற தவசிகள்,(45) காற்றை உண்டு வாழ்ந்தவர்கள், நீரை உண்டு வாழ்ந்தவர்கள், மரங்களின் உலர்ந்த இலைகளை உண்டு வாழ்ந்தவர்கள், பல்வேறு வகையான நோன்புகளை நோற்றவர்கள், படுக்கையைத் துறந்து வெறுந்தரையை ஏற்றுக் கொண்டவர்கள்,(46) ஆகியோர் அனைவரும் சரஸ்வதிக்கு அருகில் இருந்த அந்த இடங்களுக்கு வந்தனர். அவர்கள், மந்தாகினி என்றழைக்கப்படும் தெய்வீக ஓடையை (தங்கள் இருப்பால்) அழகாக்கிய தேவர்களைப் போல அந்த முதன்மையான ஆற்றை {சரஸ்வதி ஆற்றை} மிக அழகானதாக்கினார்கள்.(47)வேள்விகளைச் செய்யத் தங்களை அர்ப்பணித்தவர்களான முனிவர்கள் நூற்றுக்கணக்கில் அங்கே வந்தனர். எனினும், உயரந்த நோன்புகளைப் பயில்பவர்களான அவர்கள் சரஸ்வதி ஆற்றங்களையில் போதுமான இடத்தை அடைவதில் தவறினார்கள்.(48) அவர்கள், தங்கள் புனிதமான நூல்களை {யஜ்ஞோபவீதங்களைக்} கொண்டு, நிலத்தின் சிறு பகுதிகளை அளந்து தங்கள் அக்னிஹோத்ரங்களையும், பல்வேறு பிற சடங்குகளையும் செய்தனர்.(49) தங்கள் சடங்குகளைச் செய்வதில் (அகன்ற தீர்த்தம் வேண்டி) கவலையில் மூழ்கியிருந்த பெரும் எண்ணிக்கையிலான முனிவர்களை அந்தச் சரஸ்வதி கண்டாள். அவர்களின் நிமித்தமாகவே,(50) புனித தவத்தைச் செய்யும் அந்த முனிவர்களிடம் கருணை கொண்ட அந்த முதன்மையான ஓடை {சரஸ்வதி}, ஓ! ஜனமேஜயா, அவ்விடங்களில தனக்கான பல்வேறு வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டாள் {திரும்பினாள்}.(51) இவ்வாறு ஆறுகளில் முதன்மையான அந்தச் சரஸ்வதி, அவர்களின் நிமித்தமாகத் தன் வழியைத் திருப்பிக் கொண்டு, மீண்டும் மேற்கு திசை நோக்கிப் பாய்ந்தாள்.(52)

{அப்படி அவள் மீண்டும் திரும்பும்போது}, “இந்த முனிவர்களின் வருகை பலனற்றுப்போவதைத் தவிர்த்துவிட்டேன், இனி நான் செல்ல வேண்டும்” என்று அவளே சொல்வது போல இருந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, இந்த அற்புதம் நிறைந்த அருஞ்செயல் அந்தப் பெரும் நதியால் அங்கே நிறைவேற்றப்பட்டது.(53) இவ்வாறே, ஓ! மன்னா, அந்த நீர்க்கொள்ளிடங்கள் நைமிசத்தில் {நைமிசவனத்தில்} உண்டாகின. ஓ! குருகுலத்தில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அங்கே அந்தக் குருக்ஷேத்திரத்தில் நீயும் மகத்தான வேள்விகளையும், சடங்குகளையும் செய்வாயாக.(54) நீர்க்கொள்ளிடங்கள் பலவற்றையும், அந்த முதன்மையான நதி தன் பாதையைத் திருப்பிக் கொண்டதையும் கண்ட அந்த உயர் ஆன்ம ராமன் {பலராமன்} ஆச்சரியத்தால் இதயம் நிறைந்தான்.(55) யது குலத்தை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் அவன் {பலராமன்}, அத்தீர்த்தங்களில் முறையாக நீராடி, செல்வத்தையும், மகிழ்ச்சிக்குரிய பல்வேறு பிற பொருட்களையும் பிராமணர்களுக்குத் தானமளித்து,(56) மேலும் அவர்களுக்குப் பல்வேறு வகைகளிலான உணவையும், அவர்களின் விருப்பத்துக்குகந்த பல்வேறு பொருட்களையும் கொடுத்தான்.

அந்த மறுபிறப்பாளர்களால் {பிராமணர்களால்} வழிபடப்பட்ட அந்தப் பலன் {பலராமன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சரஸ்வதியிலுள்ள தீர்த்தங்கள் அனைத்திலும் முதன்மையான (சப்த சாரஸ்வதம் என்ற) தீர்த்ததிற்குப் புறப்பட்டான். இறகு படைத்த எண்ணற்ற உயிரினங்கள் அங்கே தங்கள் இல்லங்களைக் கொண்டுள்ளன. அங்கே அந்தச் சரஸ்வதி ஆற்றங்கரையில் பதரி {இலந்தை}, இங்குதம், காஸ்மாரியம் {ஸ்யாமாகம்}, பிலக்ஷம், அஸ்வதம் {அரசம்}, விபிதகம் {தான்றி}, கக்கோலம் {கங்கோலம்}, பலாசம், கரீரம் {இளமூங்கில்}, பீலு ஆகிய மரங்களும், பல்வேறு பிறவகை மரங்களும் நிறைந்திருந்தன.(57-59) மேலும் அது கரூசகம், வில்வம், ஆம்ராதகம், அதிமுக்தகம், காஷந்தம், பாரிஜாதம் ஆகிய மரங்களைக் கொண்ட காடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(60) காட்சிக்கு இனிமையானதாக, மிக அழகியதாக இருந்த அதில் வாழைத் தோப்புகள் நிறைந்திருந்தன. காற்றையுண்டு வாழும் சிலர், நீரில் வாழும் சிலர், கனியில் வாழும் சிலர், இலைகளில் வாழும் சிலர், உமிநீக்கப்படாத தானியங்களை வெறும் கற்களின் துணை கொண்டு உமி நீக்கி உண்டு வாழும் சிலர் வானேயர்கள் என்று அழைக்கப்பட்ட சிலர் ஆகியோரைக் கொண்ட பல்வேறு தவசிகள் வந்து செல்லும் இடமாக அஃது இருந்தது. மேலும் அது வேதமோதலை எதிரொலித்தபடியே பல்வேறு வகையான விலங்குகள் நிறைந்ததாக இருந்தது.(61-62) அப்பழுக்கற்றவர்களும், அறத்திற்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான மனிதர்களுக்குப் பிடித்தமான இடமாக அஃது இருந்தது. கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட பலதேவன், பெரும் தவசியான மங்கணகர் எங்குத் தன் தவத்தைச் செய்து வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டாரோ அந்தச் சப்தசாரஸ்வதம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்தை வந்தடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(63)

சப்தசாரஸ்வதம்! – சல்லிய பர்வம் பகுதி – 38-சுப்ரபை, காஞ்சனாக்ஷி, விசாலை, மனோரமை, ஓகவதி, சுரேணு, விமலோதகை என ஏழு வடிவங்களாக வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு இடங்களில் தோன்றிய சரஸ்வதி ஆறு; அந்த ஏழு ஆறுகளும் ஒன்று கலந்த சப்தசாரஸ்வதத் தீர்த்தம்; மங்கணகர் வரலாறு; சிவனின் அருள்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஏன் அந்தத் தீர்த்தம் சப்தசாரஸ்வதம் என்றழைக்கப்பட்டது? யாரந்தத் தவசி மங்கணகர்? எவ்வாறு அந்தப் போற்றுதலுக்குரியவர் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டார் {எவ்வாறு சித்தரானார்}? அவரது நோன்புகளும், நியமங்களும் என்ன?(1) அவர் யாருடைய குலத்தில் பிறந்தவராவார்? மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரான அவர் எந்தெந்த புத்தகங்களைப் படித்தார் {எவற்றை அத்யயனம் செய்தார்}? ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, இவையாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, இந்த அண்டத்தை ஏழு சரஸ்வதிகள் மறைக்கின்றன. பெரும் சக்தி மிக்க மனிதர்களால் அந்தச் சரஸ்வதி எங்கெல்லாம் அழைக்கப்பட்டாளோ, அங்கெல்லாம் அவள் தோன்றினாள்.(3) சுப்ரபை, காஞ்சனாக்ஷி, விசாலை, மனோரமை, ஓகவதி, சுரேணு, விமலோதகை ஆகிய இவையே சரஸ்வதியின் ஏழு வடிவங்களாகும்.(4)

ஒரு காலத்தில் பெரும்பாட்டன் {பிரம்மன்} ஒரு பெரும் வேள்வியைச் செய்தான். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிலத்தில் அந்த வேள்வி நடந்து கொண்டிருந்தபோது, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மறுபிறப்பாளர்கள் {பிராமணர்களால்} பலர் அங்கே வந்தனர்.(5) அங்கே பாடப்பட்ட புனிதமான பாடல்களும், ஓதப்பட்ட வேதங்களும் அந்த இடத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. அந்த வேள்விச் சடங்குகளில், தேவர்கள் தங்கள் நிதானத்தை இழந்தனர் (அந்த அளவுக்கு ஆயத்தங்கள் நடந்தன).(6) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தப் பெரும்பாட்டன் வேள்வியில் நிறுவப்பட்டு, செல்வத்தையும், அனைத்து விருப்பங்களையும் அளிக்கவல்ல அந்த மகத்தான விழாவை நடத்திக் கொண்டிருந்தபோது,(7) அறம், பொருள் குறித்த அனைத்தையும் அறிந்த குறிப்பிட்ட சிலர் அங்கே இருந்தனர். ஓ! ஏகாதிபதி, அவர்களுக்குத் தேவையான பொருட்களை அவர்கள் நினைத்தவுடன், அவர்களுக்கு முன்பு அவை உடனே தோன்றின.(8) கந்தர்வர்கள் பாடினர், அப்சரஸ்களில் பல்வேறு இனத்தவர் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்கள் எப்போதும் பல்வேறு தெய்வீக இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டிருந்தனர்.(9) அந்த வேள்வியில் கொணரப்பட்ட பொருட்செல்வத்தில் தேவர்களேகூட மனம்நிறைந்தனர். அப்படியிருக்கையில் மனிதர்களைக் குறித்து நான் என்ன சொல்வது? தேவர்களே கூட ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(10)அந்த வேள்வி புஷ்கரையில் பெரும்பாட்டனின் முன்னிலையில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஓ! மன்னா, முனிவர்கள், “ஆறுகளில் முதன்மையான சரஸ்வதி இங்கே காணப்படாமையால், உயர்ந்த தன்மைகளைக் கொண்ட வேள்வியாக இதைச் சொல்ல முடியாது” என்றனர். இவ்வார்த்தைகளைக் கேட்ட பிரம்மன் உற்சாகமாகச் சரஸ்வதியை நினைத்தான்.(11,12) புஷ்கரையில் வேள்வியைச் செய்து கொண்டிருந்த பெரும்பாட்டனால் {பிரம்மனால்} இவ்வாறு அழைக்கப்பட்ட சரஸ்வதி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சுப்ரபை {ஸுப்ரபை} என்ற பெயரில் அங்கே தோன்றினாள். சரஸ்வதி அந்தப் பெரும்பாட்டனுக்கு விரைவாகச் செலுத்திய அம்மரியாதையைக் கண்ட முனிவர்கள் அந்த வேள்வியை உயர்வாக மதித்தனர்.(14) இவ்வாறே ஆறுகளில் முதன்மையான அந்தச் சரஸ்வதி, பெரும்பாட்டனின் {பிரம்மனின்} நிமித்தமாகவும், அந்த முனிவர்களை மனநிறைவு கொள்ளச் செய்வதற்காகவும் புஷ்கரையில் தோன்றினாள்.(15)(மற்றொரு நேரத்தில்) ஓ! மன்னா, நைமிசத்தில் பல முனிவர்கள் ஒன்றாகக் கூடி அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர். அங்கே வேதங்களைக் குறித்து அவர்களுக்குள் ஆய்வுக்குரிய பல இனிமையான விவாதங்கள் நடந்தன.(16) பல்வேறு சாத்திரங்களை அறிந்தவர்களான அம்முனிவர்கள் வசித்த இடத்தில் அவர்கள் சரஸ்வதியைக் குறித்துச் சிந்தித்தனர்.(17) வேள்வியைச் செய்யும் அம்முனிவர்களால் இவ்வாறு நினைக்கப்பட்டதும், உயர்ந்த அருளைக் கொண்டவளும், புனிதமானவளுமான சரஸ்வதி, அவர்களுக்கு உதவி செய்வதற்காக அந்த உயர் ஆன்ம முனிவர்கள் ஒன்றுதிரண்டிருந்த நைமிசத்தில் தோன்றி காஞ்சனாக்ஷி என்று அழைக்கப்பட்டாள்.(18,19) ஓ! பாரதா, இவ்வாறே அனைவராலும் வழிபடப்பட்ட முதன்மையான ஆறான அவள் அங்கே வந்தாள்.கயாவில் (மன்னன்) கயன் ஒரு பெரும் வேள்வியைச் செய்து கொண்டிருந்தபோது, ஆறுகளில் முதன்மையான அந்தச் சரஸ்வதி அந்தக் கயனின் வேள்வியில் அழைக்கப்பட்டாள் (அவ்வாறே அங்கே தோன்றவும் செய்தாள்). அங்கே இருந்தவர்களான கடும் நோன்புகளை நோற்கும் முனிவர்கள் கயாவில் தோன்றிய அவளது அந்த வடிவத்துக்கு விசாலை என்று பெயரிட்டனர்.(21) அந்த ஆற்றின் வேகமான நீரோட்டம் இமயத்தின் சாரலில் இருந்து பாய்கிறது.

ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஔத்தாலகர் என்பவரும் ஒரு வேள்வியைச் செய்தார்.(22) உயர் ஆன்ம ஔத்தாலகரின் வேள்வி கோசலத்தின் வட பாகத்தில் உள்ள புனிதமான பகுதியில் நடைபெற்றது.(23) முனிவர்களின் பெருங்கூட்டம் அங்கே திரண்டது. ஔத்தாலகர் தன் வேள்வியைத் தொடங்கும் முன்னர்ச் சரஸ்வதியை நினைத்தார். ஆறுகளில் முதன்மையான அவள், அந்த முனிவர்களின் நிமித்தமாக அந்தப் பகுதிக்கு வந்தாள்.(24) மரவுரிகளையும், மான்தோல்களையும் உடுத்தியிருந்த அம்முனிவர்கள் அனைவராலும் வழிபடப்பட்ட அவள், அம்முனிவர்கள் தங்கள் மனத்தால் அழைத்தபடியே மனோரமை என்ற பெயரில் அறியப்படலானாள்.(25)

மேலும் உயர் ஆன்ம குரு, குருக்ஷேத்திரத்தில் ஒரு வேள்வியைச் செய்தபோது, ஆறுகளில் முதன்மையானவளும், உயர்ந்த அருளைக் கொண்டவளுமான சரஸ்வதி அங்கே தோன்றினாள்.(26) ஓ! ஏகாதிபதி, (குருவின் வேள்வியில் உதவி செய்து கொண்டிருந்த) உயர் ஆன்ம வசிஷ்டரால் அழைக்கப்பட்டவளும், தெய்வீக நீர் நிரம்பியவளுமான சரஸ்வதி, அந்தக் குருக்ஷேத்திரத்தில் ஓகவதி எனும் பெயரில் தோன்றினாள்.(27)

ஒரு சமயம் தக்ஷன், கங்கை தோன்றும் இடத்தில் {கங்கோத்ரியில்} ஒரு வேள்வியைச் செய்தான். வேகமாகப் பாயும் சுரேணு எனும் பெயரில் சரஸ்வதி அங்கே தோன்றினாள்.(28)

பிரம்மன் புனிதமான இமயமலைக் காட்டில் மீண்டும் ஒரு வேள்வியைச் செய்தபோது, (அவனால் {பிரம்மனால்}) அழைக்கப்பட்டவளான போற்றுதலுக்குரிய சரஸ்வதி {விமலோதகை என்ற பெயரில்} அங்கே தோன்றினாள்.(29)

இந்த ஏழு வடிவங்கள் அனைத்தும், பலதேவன் {பலராமன்} வந்திருந்த அந்தத் தீர்த்தத்தில் {சப்த சாரஸ்வத்ததில்} ஒன்று கலந்தது. அவ்விடத்தில் {சரஸ்வதியின்} ஏழு வடிவங்கள் ஒன்று கலந்ததால் அந்தத் தீர்த்தப் இப்பூமியில் சப்தசாரஸ்வதம் என்ற பெயரில் அறியப்படுகிறது.(30) இவ்வாறே ஏழு சரஸ்வதிகளையும், அவர்களின் பெயர் வரிசையில் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். மேலும் நான் சப்தசாரஸ்வதம் என்றழைக்கப்படும் அந்தப் புனிதமான தீர்த்தம் குறித்தும் உனக்குச் சொல்லிவிட்டேன்.(31)

இப்போது இளமையில் இருந்தே பிரம்மச்சரிய வாழ்வுமுறையை ஏற்று வாழ்ந்த மங்கணகரின் அருஞ்செயலைக் குறித்துக் கேட்பாயாக. அவர், (ஒரு நாள்) ஆற்றில் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்தபோது,(32) களங்கமற்ற அங்கங்கள் மற்றும் அழகிய புருங்களைக் கொண்ட ஒரு பெண், திறந்த மேனியுடன் அந்நதியில் நீராடிக் கொண்டிருந்தாள். அதைக் கண்டதும், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அம்முனிவரின் உயிர்நீர் சரஸ்வதியில் {சரஸ்வதி நதியில்} விழுந்தது.(33) அந்தப் பெரும் தவசி அஃதை எடுத்து தனது மண்குடத்திற்குள் வைத்தார். அந்தப் பாத்திரத்திற்குள் வைக்கப்பட்ட அந்த உயிர்நீர் ஏழுபகுதிகளாகப் பிரிந்தது.(34) அந்த ஏழு பகுதிகளில் இருந்து ஏழு முனிவர்கள் பிறந்தனர். அவர்களில் இருந்து (நாற்பத்தொன்பது) மருத்துக்கள் தோன்றினர். அந்த ஏழு முனிவர்களும், வாயுவேகன், வாயுபலன் வாயுஹன், வாயுமண்டலன்,(35) வாயுஜாதன் {வாயுஜ்வாலன்}, வாயுரேதஸ், பெரும் சக்தி கொண்ட வாயுசக்கிரன் எனப் பெயரிடப்பட்டனர். இவ்வாறே பல்வேறு மருத்துக்களின் தந்தைமார் தோன்றினர்.(36)

அந்தப் பெரும் முனிவரின் நடத்தை குறித்ததும், பூமியில் மிக அற்புதமானதும், மூவலங்களாலும் நன்கு அறியப்பட்டதுமான ஒரு ஆச்சரியமான காரியத்தை இப்போது கேட்பாயாக.(37) பழங்காலத்தில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த மங்கணகர் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிறகு, ஒரு சந்தர்ப்பத்தில், குசப்புல்லால் {தர்ப்பையால்} அவரது கை துளைக்கப்பட்டது. அதன்பேரில் அந்தக் காயத்தில் இருந்து (சிவப்பான இரத்தம் வராமல்) காய்கறிச்சாறு {சாகரசம் – மூலிகைச்சாறு} வந்தது.(38) அந்த மூலிகைச் சாற்றைக் கண்ட அந்த முனிவர், மகிழ்ச்சியால் நிறைந்து, அந்த இடத்தில் நர்த்தனம் {நடனம்} செய்தார். அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும், அவர் ஆடுவதைக் கண்டு, அவரது சக்தியால் மயக்கமடைந்து ஆடத் தொடங்கின.(39)

அப்போது பிரம்மனின் தலைமையிலான தேவர்களும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும் மகாதேவனிடம் சென்று, ஓ! மன்னா, அந்த (மங்கணக) முனிவரின் செயலைக் குறித்துச் சொன்னார்கள். அவர்கள் அவனிடம் {மகாதேவனிடம்}, “ஓ! தேவா, அம்முனிவரை ஆடுவதிலிருந்து தடுப்பதே உனக்குத் தகும்” என்றனர்.(40) பெரும் மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும் அம்முனிவரைக் கண்ட மகாதேவன் {சிவன்}, தேவர்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தில், அவரிடம் {மங்கணகரிடம்},(41) “ஓ! பிராமணரே, உமது கடமைகளைக் குறித்த அறிந்த நீர் ஏன் இவ்வாறு நர்த்தனம் செய்கிறீர்? ஓ! தவசியே, ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, அறப்பாதையில் நடப்பவரும், தவசியுமான நீர் இவ்வாறு செயல்படும் அளவிற்கு என்ன முக்கியக் காரணத்தால் இவ்வளவு மகிழ்ச்சியை அடைந்திருக்கிறீர்?” என்று கேட்டான்.(42)

அம்முனிவர் {மங்கணகர்}, “ஓ! பாஹ்மணா {சிவனே}[1] என் காயத்தில் இருந்து மூலிகைச் சாறு பாய்வதை நீ காணவில்லையா? ஓ! தலைவா, இதைக் கண்டே நான் பெரும் மகிழ்ச்சியில் நர்த்தனம் செய்கிறேன்” என்றார்.(43) அந்தத் தேவன், அதிக விருப்பத்தால் மயங்கியிருந்த அந்த முனிவரிடம் சிரித்துக் கொண்டே, “நான் இஃதில் எந்த அதிசயத்தையும் காணவில்லை. என்னைப் பார்ப்பீராக” என்றான்.(44) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான மகாதேவன், அந்த முதன்மையான முனிவரிடம் இதைச் சொல்லி, தன் விரல்களின் நுனியைக் கொண்டு தன் கட்டைவிரலை அடித்தான்.(45) அதன்பேரில், ஓ! மன்னா, அக்காயத்தில் இருந்து சாம்பலும், வெண்பணியும் வெளிவந்தன. ஓ! ஏகாதிபதி, இதைக் கண்ட அம்முனிவர் நாணமடைந்து, அந்தத் தேவனின் காலில் விழுந்தார்.(46) வந்தது மகாதேவனைத் தவிர வேறு யாருமில்லை என்பதை அவர் அறிந்து கொண்டார்-ஆச்சரியத்தால் நிறைந்த அவர்{மங்கணகர்}, “பெரியவனும், பரம்பொருளுமான ருத்ரனையன்றி நீ வேறு எவனுமில்லை என நான் நினைக்கிறேன்.(47) ஓ! திரிசூலபாணியே, தேவர்களும், அசுரர்களும் அடங்கிய இந்த அண்டத்தின் புகலிடம் நீயே. இந்த அண்டத்தைப் படைத்தவன் நீயே என ஞானியர் சொல்கின்றனர்.(48) அண்ட அழிவின் {பிரளயத்தின்} போது, மீண்டும் அனைத்தும் உன்னுள் நுழைகின்றன. தேவர்களாலேயே அறியப்பட முடியாதவனான உன்னை நான் மற்றும் அவ்வாறு அறிந்து கொள்வேன்?(49) இந்த அண்டத்தில் உள்ள வடிவங்கள் அனைத்தும் உன்னில் தெரிகின்றன. ஓ! பாவமற்றவனே, பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் வரமருள்பவனான உன்னையே வழிபடுகின்றனர்.(50) அனைத்தும் நீயே. தேவர்களைப் படைத்தவன் நீயே, அவர்கள் படைக்கப்படக் காரணமானவனும் நீயே. தேவர்கள் தங்கள் காலத்தை மகிழ்ச்சியாகவும், முற்றிலும் அச்சமற்ற நிலையிலும் கடத்துவது உன் அருளாலேயே” என்றார். இவ்வாறு அந்த முனிவர் மகாதேவனைத் துதித்து வணங்கினார்.(51)

மேலும், “ஓ! தேவா, நான் வெளிப்படுத்திய இந்த மிக அற்பமான பணிவின்மை என் தவத்தகுதியை அழித்துவிட வேண்டாம். இதற்காக நான் உன்னிடம் வேண்டுகிறேன்” என்று கேட்டார்.(52) அந்தத் தேவன், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், மீண்டும் அவரிடம், “ஓ! பிராமணரே, என் அருளால் உமது தவத்தகுதி ஆயிரம் மடங்காக அதிகரிக்கட்டும். நான் எப்போதும் உம்மோடு இந்த ஆசிரமத்தில் வசித்திருப்பேன்.(53) சப்த சாரஸ்வதம் எனும் இந்தத் தீர்த்தத்தில் என்னை வழிபடும் ஒரு மனிதனால், இவ்வுலகிலும் {இம்மையிலும்}, அடுத்தவுலகிலும் {மறுமையிலும்} அடையமுடியாதது எதுவுமில்லை. அப்படிப்பட்ட ஒருவன் இறந்ததும் (சொர்க்கத்தில்) சாரஸ்வதம் என்றழைக்கப்படும் பகுதிக்குச் {சாரஸ்வதலோகத்துக்குச்} செல்வான் என்பதில் ஐயமில்லை” என்றான் {சிவன்}.(54) இதுவே, அபரிமிதமான சக்தி கொண்டவரான மங்கணகரின் வரலாறாகும். அவர் சுகன்யையிடத்தில் காற்றுத் தேவனால் {வாயுவால்} பெறப்பட்ட மகனாவார்” {என்றார் வைசம்பாயனர்}[2].(55)

மஹோதர ருசங்க முனிகள்! – சல்லிய பர்வம் பகுதி – 39-கபாலமோசனத் தீர்த்தத்தை அடைந்த பலராமன்; முனிவர் மஹோதரரின் வரலாறு; தசரதராமன் வெட்டிய ராட்சசனின் தலை; மஹோதரர் விடுபட்டது; ருசங்கு முனிவரின் தீர்மானம்; பிருதூதகத் தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கலப்பையை ஆயுதமாகக் கொண்டவனான ராமன் {பலராமன்}, அங்கே {சப்தசாரஸ்வதத்தில்} ஓரிரவைக் கழித்து, அந்தத் தீர்த்தத்தில் வசிப்போரை வழிபட்டு, மங்கணகரிடம் தான் கொண்ட மரியாதையைக் காட்டினான்.(1) கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, செல்வத்தைப் பிராமணர்களுக்குத் தானமளித்து, முனிவர்களால் வழிபடப்பட்டு அந்த இரவை அங்கே கடத்தினான்.(2) காலையில் எழுந்து தவசிகள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்ட அவன் {பலராமன்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, புனித நீரைத் தீண்டி பிற தீர்த்தங்களை நோக்கி வேகமாகப் புறப்பட்டான்.(3)-பலதேவன் பிறகு உசனஸ் என்ற பெயரால் அறியப்படும் தீர்த்தத்துக்குச் சென்றான். அது கபாலமோசனம் என்றும் அழைக்கப்படுகிறது. முன்பொரு காலத்தில் (தசரதனின் மகனான) ராமன், ஒரு ராட்சசனைக் கொன்று, அவனது தலையைப் பெரும் தொலைவில் எறிந்தான். அந்தத் தலையானது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, மஹோதரர் என்ற பெயருடைய பெரும் தவசி ஒருவரின் தொடையில் விழுந்து, அதனுடன் ஒட்டிக் கொண்டது {தொடையைக் கவ்விக் கொண்டது}. அந்தப் பெரும் முனிவர் {மஹோதரர்}, அந்தத் தீர்த்தில் நீராடி, அந்தச் சுமையில் இருந்து விடுபட்டார். உயர் ஆன்ம கவி (சுக்கிரன்) இங்கே தன் தவத்தைச் செய்துள்ளார்.(4,5) அங்கேதான் (சுக்கிரனின் பெயரால் அறியப்படும்) அரசியல் மற்றும் நெறிகள் ஆகியவற்றின் மொத்த அறிவியலும் அவருக்கு {சுக்கிரனுக்கு} உள்ளொளியில் தோன்றியது. சுக்கிரன் அங்கே வசித்தபோது, (தேவர்களுடன்) தைத்திய தானவப் போரைக் குறித்துத் தியானித்தார்.(6) தீர்த்தங்களில் முதன்மையான அந்தத் தீர்த்தத்திற்கு வந்த பலதேவன், ஓ! மன்னா, உயர் ஆன்ம பிராமணர்களுக்கு முறையாகத் தானமளித்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(7)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “(ராட்சசன் தலையிடமிருந்து) அந்தப் பெரும் முனிவர் {மஹோதரர்} விடுபட்ட இடம் கபாலமோசனம் என்று ஏன் அழைக்கப்படுகிறது? எந்தக் காரணத்திற்காக, எவ்வாறு அந்தத் தலை அவரிடம் ஒட்டிக் கொண்டது” என்று கேட்டான்.(8)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “முன்பொருசமயம், ஓ! மன்னர்களில் புலியே {ஜனமேஜயா}, (தசரதன் மகனான) உயர் ஆன்ம ராமன், ராட்சசர்களைக் கொல்லும் விருப்பத்தோடு தண்டக வனத்தில் வாழ்ந்தான்.(9) ஜனஸ்தானத்தில் அவன் அந்தத் தீய ஆன்மா கொண்ட ராட்சசனின் தலையைப் பெரும் கூர்மை கொண்ட ஒரு கத்தித் தலைக் கணையால் வெட்டினான். அந்தத் தலையானது ஆழ்ந்த கானகத்தில் சென்று விழுந்தது.(10) மஹோதரர் காட்டில் சென்று கொண்டிருந்தபோது (ஆகாயத்தின் ஊடாக) வந்த அந்தத் தலை அவரது தொடையில் விழுந்தது. ஓ! மன்னா, அவரது தொடையைத் துளைத்து, அதனுடன் ஒட்டிக் கொண்டு அங்கேயே நீடித்திருந்தது.(11) அந்தத் தலை இவ்வாறு அவரது தொடையில் ஒட்டிக் கொண்டதன் விளைவால், பெரும் ஞானம் கொண்ட அந்தப் பிராமணரால் (மஹோதரரால்} தீர்த்தங்களுக்கும், பிற புண்ணியத்தலங்களுக்கும் (எளிதாகச்) செல்ல முடியவில்லை.(12) பெரும் வலியால் பீடிக்கப்பட்டும், தொடையில் அழுகிய ஊனீர் வழிந்து கொண்டும் அவர் {மஹோதரர்} பூமியில் உள்ள தீர்த்தங்கள் அனைத்திற்கும் (ஒன்றன்பின் ஒன்றாகச்) சென்றார் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(13)

அவர் {மஹோதரர்} ஆறுகள் அனைத்திற்கும், பெருங்கடலுக்கும் கூடச் சென்றார். (எந்த நிவாரணத்தையும் காணாத) அந்தப் பெரும் தவசி, தூய ஆன்மாக்களைக் கொண்ட முனிவர்கள் பலரிடம் தனது பாடுகளைக் குறித்தும்,(14)அனைத்துத் தீர்த்தங்களில் நீராடியும் தான் வேண்டிய நிவாரணத்தை அடைய முடியாதது குறித்தும் பேசினார். அப்போது அந்த முதன்மையான பிராமணர், அந்தத் தவசிகளிடம் இருந்து முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைகளைக் கேட்டார்.(15) சரஸ்வதியில், முதன்மையான தீர்த்தமாக அமைந்திருப்பதும், அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுவிக்கவல்லதும், உசனாஸம் என்ற பெயரில் அறியப்படுவதும், (தவ) வெற்றியை அடைய சிறந்த இடமுமான அந்தத் தீர்த்தத்தைக் குறித்துக் கேள்விப்பட்டார்.(16) பிறகு அந்த ஔசனஸ {உசனஸ} தீர்த்தத்திற்குச் சென்ற அந்தப் பிராமணர் அங்கே அதன் நீரில் நீராடினார். அதன் பேரில் அந்த ராட்சசனின் தலையானது, அவனது தொடையை விட்டகன்று நீரில் விழுந்தது.(17) அந்த (உயிரில்லா) தலையிடம் இருந்து விடுபட்ட அந்த முனிவர் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தார். அந்தத் தலையைப் பொறுத்தவரால், அஃது அந்த நீரில் தொலைந்து போனது.(18)ஓ! மன்னா {ஜனமேஜயா}, ராட்சசனின் தலையிடம் இருந்து விடுபட்ட அந்த மஹோதரர், தூய்மையாக்கப்பட்ட ஆன்மாவோடும், தன் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டும், வெற்றியை அடைந்து தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(19) இவ்வாறு விடுபட்ட அந்தப் பெரும் தவசி, தன் புனிதமான ஆசிரமத்திற்குத் திரும்பியதும், தூய ஆன்மாக்களைக் கொண்ட அந்த முனிவர்களிடம் என்ன நடந்தது என்பதைக் குறித்துப் பேசினார்.(20) அங்கே கூடியிருந்த முனிவர்கள், அவரது வார்த்தைகளைக் கேட்டு, அந்தத் தீர்த்தத்திற்குக் கபாலமோசனம் என்ற பெயரை அளித்தனர்.(21) அந்தப் பெரும் முனிவர் மஹோதரர், மீண்டும் அந்த முதன்மையான தீர்த்தத்திற்கு {ஔசனஸம் [அ] உசனஸம் என்ற தீர்த்ததிற்குச்} சென்று, அதன் நீரைப் பருகி, பெரும் தவ வெற்றியை அடைந்தார்.(22)

அந்த மதுகுலத்தோன் {பலராமன்}, பிராமணர்களுக்குப் பெரும் செல்வத்தைத் தானமளித்து, அவர்களை வழிபட்ட பிறகு, ருசங்குவின் {உசங்குவின்} ஆசிரமத்திற்குச் சென்றான்.(23) முன்பொருகாலத்தில் அங்கே, ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஆர்ஷ்டிஷேணர் கடுந்தவங்களைச் செய்துவந்தார். அங்கேதான் (முன்பு க்ஷத்திரியராக இருந்த) பெரும் முனிவரான விஷ்வாமித்திரர் பிராமணரானார்.(24) அந்தப் பெரும் ஆசிரமம், அனைத்து விருப்பங்களுக்கும் கனியை அருளவல்லதாகும். ஓ! தலைவா, அஃது எப்போதும் முனிவர்கள் மற்றும் பிராமணர்களின் வசிப்பிடமாக இருந்தது.(25) பிராமணர்களால் சூழப்பட்டவனும், பேரழகனுமான பலதேவன் {பலராமன்}, முன்பொரு காலத்தில் ருசங்கு எங்குத் தன் உடலை விட்டாரோ அங்கே அந்த இடத்திற்குச் சென்றான்.(26)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, ருசங்கு, எப்போதும் கடுந்தவத்துக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த ஒரு முதிய பிராமணராவார். தன் உடலைக் கைவிடத் தீர்மானித்த அவர், நீண்ட காலமாக அதுகுறித்து ஆலோசித்திருந்தார்.(27) பெரும் தவத்தகுதியைக் கொண்ட அவர், தன் மகன்கள் அனைவரையும் அழைத்து, நீரானது அபரிமிதமாக இருக்கும் இடத்திற்குத் தன்னைக் கொண்டு போகச் சொன்னார்.(28) தங்கள் தந்தை மிகவும் முதிர்ந்துவிட்டதை அறிந்த அந்தத் தவசிகள், அவரைச் சரஸ்வதியில் இருக்கும் ஒரு தீர்த்தத்திற்குக் கொண்டு சென்றனர்.(29) நூறு தீர்த்தங்களைக் கொண்டவளும், உலகுடன் தொடர்பில்லாத முனிவர்கள் வசித்த கரைகளைக் கொண்டவளுமான புனிதமான சரஸ்வதியிடம் தம் மகன்களால் கொண்டுவரப்பட்டவரும், கடுந்தவங்களைச் செய்தவரும், தீர்த்தங்களின் தகுதிகளை {புண்ணியங்களைக்} குறித்து அறிந்தவரும், முனிவர்களில் முதன்மையானவருமான அந்த நுண்ணறிவுமிக்கத் தவசி {ருசங்கு}, முறையான சடங்குகளின்படி அந்தத் தீர்த்தத்தில் நீராடி, ஓ! மனிதர்களில் புலியே, கடமையுணர்வுடன் தமக்காகக் காத்திருந்த தமது மகன்கள் அனைவரிடமும் இந்த வார்த்தைகளை உற்சாகமாகச் சொன்னார்:(30,31) “புனிதமான மந்திரங்களை மனத்தில் ஓதிக் கொண்டிருக்கும்போது, அபரிமிதமான நீரைக் கொண்ட சரஸ்வதியின் வடகரையில் தன் உடலைக் கைவிடும் ஒருவன், மீண்டும் ஒருபோதும் இறப்பால் பீடிக்கப்படமாட்டான் {மறுபிறவி அடையமாட்டான்}” என்றார்.(32)

அற ஆன்மா கொண்ட பலதேவன் அத்தீர்த்தத்தின் {ருசங்கு} நீரைத் தீண்டி, அதில் நீராடி, பிராமணர்களிடம் அர்ப்பணிப்புக் கொண்டவனான அவன் அவர்களுக்கு மிகுதியான செல்வத்தைக் கொடுத்தான்.(33) பெரும் வலிமையையும், பெரும் ஆற்றலையும் கொண்ட அந்தப் பலதேவன், போற்றுதலுக்குரிய பெரும்பாட்டன் {பிரம்மன்} எங்கு லோகாலாகம் என்ற மலைகளை உண்டாக்கினானோ, கடும் நோன்புகளைக் கொண்டவரும், முனிவர்களில் முதன்மையானவருமான ஆர்ஷ்டிஷேணர் கடுந்தவங்களைச் செய்து எங்குப் பிராமணத் தன்மையை அடைந்தாரோ, அரசமுனியான சிந்துத்வீபனும், பெரும் தவசியான தேவாபியும், போற்றுதலுக்குரியவரும், கடுந்தவத்தையும், கடும் சக்தியையும் கொண்டவருமான சிறப்புமிக்க முனிவர் விஷ்வாமித்திரரும் எங்கு அதே நிலையை {பிராணத்தன்மையை} அடைந்தனரோ அந்தத் தீர்த்தத்திற்கு {பிருதூதகத் தீர்த்தத்திற்குச்} சென்றான்[1]” {என்றார் வைசம்பாயனர்}.(34-36)

பிராமணரான க்ஷத்திரியர்கள்! – சல்லிய பர்வம் பகுதி – 40-பிருதூதகத் தீர்த்ததிற்கு வரமருளிய ஆர்ஷ்டிஷேணர்; க்ஷத்திரியர்களான சிந்துத்வீபர், தேவாபி மற்றும் விஷ்வாமித்திரர் ஆகியோர் பிருதூதகத் தீர்த்தில் தவம் செய்து நீராடி பிராமண நிலையை அடைந்தது; அங்கிருந்து பக தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “போற்றுதலுக்குரிய ஆர்ஷ்டிஷேணர் ஏன் கடுந்தவங்களைச் செய்தார்? சிந்துத்வீபர் எவ்வாறு பிராமணத் தன்மையை அடைந்தார்?(1) ஓ! பிராமணரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, தேவாபியும், விஷ்வாமித்திரரும் எவ்வாறு அதே நிலையை அடைந்தனர்? ஓ! போற்றுதலுக்குரியவரே, இவையாவற்றையும் கேட்கும் ஆவல் எனக்குப் பெரிதாக இருக்கிறது” என்று சொன்னான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “முன்பொரு சமயம், கிருதயுகத்தில், ஓ! மன்னா, ஆர்ஷ்டிஷேணர் என்றழைக்கப்பட்ட மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர் ஒருவர் இருந்தார். அவர், தமது ஆசானின் இல்லத்தில் வசித்து, தினமும் பாடங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.(3) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவர் தமது ஆசானின் இல்லத்தில் நெடுங்காலம் வசித்திருந்தாலும், ஓ! ஏகாதிபதி, வேதங்களிலும், அறிவின் எந்தத் துறையிலோ திறன் எதையும் அடைய முடியவில்லை.(4) ஓ! மன்னா, இதனால் பெரும் ஏமாற்றமடைந்த அந்தத் தவசி மிகக் கடுமையான தவங்களைச் செய்தார். அவர் தமது தவத்தின் மூலம் ஒப்புவமையற்ற வேதங்களில் தேர்ச்சி பெற்றார்.(5) பெரும் கல்வியையும், வேதங்களில் தேர்ச்சியையும் அடைந்த அந்த முனிவர்களில் முதன்மையானவர் {ஆர்ஷ்டிஷேணர்}, அந்தத் தீர்த்தத்தில்தான் {பிருதூதகத் தீர்த்தத்தில் தான்} வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டார். அந்த இடத்தில் அவர் மூன்று வரங்களை அளித்தார்.(6) அவர், “இன்று முதல், இந்தப் பெரும் நதியின் (சரஸ்வதியின்) இந்தத் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன், குதிரை வேள்வியின் {அஸ்வமேதயாகத்தின்} பெருங்கனியை {பெரும்பலனை} அடைவானாக.(7) இன்று முதல், இந்தத் தீர்த்தத்தில் பாம்புகளினாலோ, காட்டு விலங்குகளாலோ எந்த அச்சமும் ஏற்படாது. {மேலும் இங்கே வந்து தவம் செய்யும்} சிறு முயற்சிகளிலேயே ஒருவன் இந்தப் பெரும் விளைவை இங்கே அடையலாம்” என்று வரமளித்தார் {ஆர்ஷ்டிஷேணர்}.(8) பெரும் சக்தியைக் கொண்ட அந்த முனிவர் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றார். இவ்வாறே போற்றுதலுக்குரிய ஆர்ஷ்டிஷேணர் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டார்.(9)

கிருதயுகத்தில், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெரும் சக்தி கொண்ட சிந்துத்வீபரும், தேவாபியும் கூட உயர்ந்த நிலையான பிராமணத் தன்மையை இந்தத் தீர்த்தத்திலேயே அடைந்தனர். அதே போல, புலன்களை அடக்கிக் கடுந்தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த குசிகரின் மகனும் {விஷ்வாமித்திரரும்} கூட, நல்ல தவம் பயின்று பிராமணத் தன்மையை அடைந்தார்.(11) காதி என்ற பெயரில் அறியப்பட்டு உலகத்தில் கொண்டாடப்பட்ட பெரும் க்ஷத்திரியர் ஒருவர் இருந்தார். அவருக்கு விஷ்வாமித்திரர் என்ற பெயரில் பேராற்றல் படைத்த மகனொருவர் பிறந்தார்.(12) அந்த மன்னன் கௌசிகர் {காதி} பெரும் தவசியாக ஆனார். பெரும் தவத்தகுதியைக் கொண்ட அவர், தம்முடலைக் கைவிடத் தீர்மானித்து, தமது மகனான விஷ்வாமித்திரரை அரியணையில் நிறுவ விரும்பினார்.(13) அவரது குடிமக்கள் அவரை {காதியை} வணங்கி, “ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, பேரசச்சத்திலிருந்து எங்களைப் பாதுகாப்பீராக. எங்களை விட்டுச் செல்லாதீர்” என்றனர்.(14) இவ்வாறு சொல்லப்பட்ட காதி, தன் குடிகளிடம், “என் மகன் {விஷ்வாமித்திரன்}, இந்தப் பரந்த அண்டத்தின் பாதுகாவலனாக இருப்பான்” என்றார்.(15)

இவ்வார்த்தைகளைச் சொன்ன காதி, (விஷ்வாமித்திரரை) அரியணையில் அமர்த்தி, சொர்க்கத்திற்குச் சென்றார், விஷ்வாமித்திரரும் மன்னனானார். இருப்பினும், அவர் சிறப்பாக முயன்றும்கூட அவரால் உலகத்தைக் காக்க முடியவில்லை.(16) அப்போது அந்த மன்னன் {விசுவாமித்திரர்}, (தன் நாட்டில்) ராட்சசர்களால் ஏற்படும் பேரச்சத்தைக் குறித்துக் கேள்விப்பட்டார். அவர், தமது நால்வகைப் படைகளுடன் தமது தலைநகரைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.(17) அவர்  {விசுவாமித்திரர்}, தமது வழியில் வெகு தூரம் சென்று வசிஷ்டரின் ஆசிரமத்தை அடைந்தார். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவரது துருப்புகள் அங்கே அதிக முறைகேடுகளைச் செய்தனர்.(18) போற்றுதலுக்குரிய பிராமணரான வசிஷ்டர், தமது ஆசிரமத்திற்கு வந்தபோது, அந்தப் பரந்தகாடு அழிக்கப்படுவதைக் கண்டார்.(19) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! ஏகாதிபதி, முனிவர்களில் சிறந்தவரான அந்த வசிஷ்டர், விஷ்வாமித்திரரிடம் கோபம் கொண்டார்.

அவர் {வசிஷ்டர்} தமது (ஹோமப்) பசுவிடம், “பெரும் எண்ணிக்கையிலான சபரர்களை உண்டாக்குவாயாக” என்று ஆணையிட்டார்.(20) இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பசு, அச்சந்தரும் முகத்தோற்றங்களையுடைய பெரும் மனிதக்கூட்டத்தை உண்டாக்கியது. அவர்கள் விஷ்வாமித்திரரின் படையுடன் மோதி, எங்கும் பேரழிவை ஏற்படுத்த தொடங்கினர்.(21) இதைக் கண்ட துருப்புகள் அங்கிருந்து தப்பி ஓடின. எனினும், காதியின் மகனான விஷ்வாமித்திரர், துறவும், தவமும் எதிர்பார்க்கும் விளைவுகளைத் தருவதாகக் கருதி, அவற்றின் மேல் தமது இதயத்தை நிலைநிறுத்தினார்.(22) சரஸ்வதியின் இந்த முதன்மையான தீர்த்தத்தில்தான், ஓ! மன்னா {ஜனமேஜயா} அவர், நோன்புகள் மற்றும் உறுதியான தீர்மானத்துடன் கூடிய உண்ணாநோன்புகள் ஆகியவற்றால் தமது உடல் மெலியத் தொடங்கினார்.(23) அவர் {விஷ்வாமித்திரர்} நீரையும், காற்றையும், மரங்களின் (மரங்களில் இருந்து விழுந்த) இலைகளையும் தன் உணவாக்கிக் கொண்டார். அவர் வெறுந்தரையில் உறங்கி (தவசிகளுடன் சேர்ந்து) பிற நோன்புகளையும் நோற்றார்.(24)

அவரது நோன்புகள் நோற்பதைத் தடுக்கத் தேவர்கள் மீண்டும் மீண்டும் முயற்சித்தனர். எனினும் அவரது இதயம் (தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்ட) நோன்புகளில் இருந்து பிறழவில்லை.(25) அப்போது, பெரும் அர்ப்பணிப்புடன் பல்வேறு வகையான தவங்களைப் பயின்ற அந்தக் காதியின் மகன் {விஷ்வாமித்திரர்} சூரியனைப் போலப் பிரகாசமிக்கவரானார்.((26) வரமருள்பவனான பெரும்பாட்டன் {பிரம்மன்}, தவத்தகுதி கொண்ட விஷ்வாமித்திரர் வேண்டிய வரத்தை அருளத் தீர்மானித்தான்.(27) விஷ்வாமித்திரர், தாம் ஒரு பிராமணராக அனுமதிக்கபட வேண்டும் என்ற வரத்தை] வேண்டினார். அனைத்து உலகங்களின் பெரும்பாட்டனான பிரம்மன், அவரிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னான்[1].(28) தமது கடுந்தவத்தால் பிராமணத்தன்மையை அடைந்த சிறப்புமிக்க விஷ்வாமித்திரர், தன் விருப்பம் நிறைவேறியதும், ஒரு தேவனைப் போல மொத்த உலகிலும் திரிந்து கொண்டிருந்தார்.(29)ராமனும் {பலராமனும்}, அந்த முதன்மையான தீர்த்தத்தில் பல்வேறு வகையான செல்வங்களைத் தானமளித்து, பிராமணர்களில் முதன்மையான பலரை முறையாக வழிபட்டு, அவர்களுக்குக் கறவைமாடுகளையும், வாகனங்களையும், படுக்கைகளையும், ஆபரணங்களையும், உணவையும், சிறந்த பானங்களையும் உற்சாகமாகக் கொடுத்தான்.(30,31) பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, ராமன் அங்கிருந்து {பிருதூதகத் தீர்த்தத்தில் இருந்து}அதிக தொலைவில் இல்லாததும், தால்பிய-பகர் கடுந்தவம் பயின்ற இடமுமான பக ஆசிரமத்திற்குச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(32)

யாயாத தீர்த்தம்! – சல்லிய பர்வம் பகுதி – 41-அவாகீர்ணத் தீர்த்ததிற்குச் சென்ற பலராமன்; முனிவர் பகரின் வரலாறு; பகரை அவமதித்த பாஞ்சால திருதராஷ்டிரன்; பாஞ்சாலத்தின் வீழ்ச்சி; பகரிடம் கருணை வேண்டிய திருதராஷ்டிரன்; யாயாத தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்; யாயாத தீர்த்ததில் வேள்வி செய்த யயாதி; வேள்விக்குத் துணை புரிந்தோருக்குச் செல்வத்தைப் பெருக்கிய சரஸ்வதி ஆறு; அடுத்ததாக வசிஷ்டாபவாகத் தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, அந்த யதுக்களைத் திளைக்கச் செய்பவன் {பலராமன்}, வேதமோதும் ஒலியை எதிரொலிக்கும் (பக) ஆசிரமத்திற்குச் சென்றான். அங்கே {அவாகீர்ணத் தீர்த்தத்தில் இருந்த பக ஆசிரமத்தில்} தால்பிய பகர் என்ற பெயருடைய பெருமுனிவர் ஒருவர்,(1) விசித்திரவீரியனின் மகனான திருதராஷ்டிரனின் நாட்டை ஆகுதியாக (வேள்வி நெருப்பில்) ஊற்றினார்[1]. அவர் {தால்பியபகர்}, மிகக் கடுமையான தவம் பயின்று தன் உடலை மெலியச் செய்தார். பெரும் சக்தியும் கொண்டவரும், அறவோருமான அந்த முனிவர் பெரும் கோபத்தில் நிறைந்தார் {பெருங்கோபத்தில் நிறைந்து (அச்செயலைச் செய்தார்]}.(2) பழங்காலத்தில் நைமிசவாசிகளான முனிவர்கள் பனிரெண்டு வருடங்களுக்கு நீளும் வேள்வி ஒன்றைச் செய்தனர். அந்த வேள்வி நடந்து கொண்டிருந்த போது, அதிலும் குறிப்பாக விஸ்வஜித் என்றழைக்கப்பட்ட வேள்வியின் நிறைவில், அந்த முனிவர்கள், பாஞ்சாலர்களின் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(3) அங்கே சென்ற அவர்கள், (தாங்கள் நிறைவு செய்த அந்த வேள்விக்கு) தக்ஷிணையாக, நல்ல வலுவான இருபத்தோரு பசுக் கன்றுகளை {பாஞ்சால} மன்னனிடம் வேண்டிக் கேட்டனர்.(4)தால்பிய-பகர், (அம்முனிவர்களை அழைத்து) அவர்களிடம், “(என்னுடைய) விலங்குகளை உங்களுக்குள் பகிர்ந்து கொள்ளுங்கள். (உங்களுக்கு) இவற்றைக் கொடுத்துவிட்டு, அந்தப் பெரும் மன்னனிடம் (இன்னும் சிலவற்றைக்) கேட்கப் போகிறேன்” என்றார்.(5) பெரும் சக்தி கொண்டவரும், பிராமணர்களில் சிறந்தவருமான {முனிவர்} பகர், அம்முனிவர்கள் அனைவரிடமும் இவ்வாறு சொல்லிவிட்டு, திருதராஷ்டிரனின் வசிப்பிடத்திற்குச் சென்றார்.(6) அந்தத் தால்பியர், மன்னன் திருதராஷ்டிரனின் முன்னிலையை அடைந்தது, தனக்காகச் சில விலங்குகளை இரந்து கேட்டார். எனினும், அந்த மன்னர்களில் சிறந்தவன் {திருதராஷ்டிரன்}, எக்காரணமும் இன்றித் தனது பசுக்களில் சில இறந்ததைக் கண்டு, அவரிடம் கோபத்துடன், “இழிந்த பிராமணரே, நீர் விரும்பினால், (இறந்திருக்கும்) இந்த விலங்குகளை எடுத்துச் செல்வீராக” என்றான்.(7,8) கடமைகளை நன்கறிந்தவரான அந்த முனிவர், இவ்வார்த்தைகளைக் கேட்டு, “ஐயோ, சபையில் வைத்து என்னிடம் சொல்லப்பட்ட வார்த்தைகள் கொடூரமானவையாக இருக்கின்றன” என்று நினைத்தார்.(9) இவ்வாறு நினைத்த அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், கோபத்தால் நிறைந்து, மன்னன் திருதராஷ்டிரனின் அழிவில் தன் இதயத்தை நிலைநிறுத்தினார்.(10)

இறந்த போன அந்த விலங்குகளின் சதைகளை வெட்டியெடுத்த அந்தத் தவசிகளில் சிறந்தவர், சரஸ்வதியின் அந்தத் தீர்த்தத்தில் {அவாகீர்ணத் தீர்த்தத்தில்} (வேள்வி) நெருப்பை மூட்டி, மன்னன் திருதராஷ்டிரனுடைய நாட்டின் அழிவுக்காக அந்தச் சதைத் துண்டுகளை ஆகுதியாக ஊற்றினர் {அச்சதைகளைக் கொண்டு ஹோமம் செய்தார்}. கடும் நோன்புகளைக் கொண்ட அந்தப் பெரும் தால்பிய-பகர், அந்த இறைச்சித் துண்டுகளின் உதவியால், திருதராஷ்டிரனின் நாட்டையே அந்நெருப்பில் ஆகுதியாக ஊற்றினார்[2].(11,12) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, முறையான சடங்குகளுடன் அந்தக் கடும் வேள்வி தொடங்கப்பட்டதும், திருதராஷ்டிரனின் நாடானது அழிவடையத்தொடங்கியது.(13) உண்மையில், ஓ! தலைவா {ஜனமேஜயா}, மனிதர்கள் கோடரியைக் கொண்டு வெட்டுவதால் பெருங்காடு காணாமல் போவதைப் போலவே அந்த ஏகாதிபதியின் நாடும் அழிவடையத் தொடங்கியது. பேரிடரில் மூழ்கிய அந்த நாடு, தனது செழிப்பையும், வாழ்வையும் இழக்கத் தொடங்கியது.(14)இவ்வாறு பீடிக்கப்பட்ட தனது நாட்டைக் கண்ட அந்தப் பலமிக்க ஏகாதிபதி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, உற்சாகமற்றவனாகச் சிந்தனையில் மூழ்கினான்.(15) பிராணமர்களுடன் ஆலோசித்த அவன், (அத்துன்பத்திலிருந்து) தனது ஆட்சிப்பகுதிகளை விடுவிக்கப் பெருமுயற்சி செய்யத் தொடங்கினான்.(16) மன்னன் தன் உற்சாகத்தை இழந்தான். ஓ! பாவமற்றவனே, பிராமணர்களும் துயரால் நிறைந்தனர். இறுதியாகத் தன் நாட்டைக் காக்க மன்னன் {திருதராஷ்டிரன்} தவறிய நிலையில்,(17) ஓ! ஜனமேஜயா, அவன் தன் அமைச்சர்களிடம் (தீர்வுகளைக் குறித்து) கேட்டான். அந்த அமைச்சர்கள் இறந்த பசுக்களுடன் தொடர்புடைய அந்தத் தீமையை அவனுக்கு நினைவுறுத்தினர்.(18) அவர்கள், “தவசியான பகர், (அவ்விலங்குகளின்) சதையின் மூலம் நெருப்பின் உன் நாட்டை ஆகுதியாக ஊற்றுகிறார். அதனால் தான் எனது நாட்டுக்குப் பேரழிவு ஏற்படுகிறது.(19) இவை தவச்சடங்குகளின் விளைவாலேயே நடைபெறுகின்றன. அதனால்தான் இந்தப் பேரிடர் நேர்ந்திருக்கிறது. ஓ! மன்னா, சரஸ்வதியின் கரையில் உள்ள நீர்க்கொள்ளிடத்திற்கு அருகில் இருக்கும் அந்த முனிவரிடம் சென்று அவரை மனநிறைவு கொள்ளச் செய்வாயாக” என்றனர்.(20)

பிறகு அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, சரஸ்வதியின் கரைக்குச் சொன்று அவரது பாதங்களில் வீழ்ந்து, அவற்றை {பாதங்களைத்} தன் தலையால் தீண்டி, ஓ! பாரதக் குலத்தோனே {ஜனமேஜயா}, தன் கரங்களைக் கூப்பி இந்த வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! புகழத்தக்கவரே, நான் உம்மை மனம் நிறைவுறச் செய்வேன், என் குற்றத்தை மன்னிப்பீராக.(21) பேராசையால் ஈர்க்கப்பட்ட இழிந்தவனான நான் அறிவற்ற மூடனாவேன். நீரே என் புகலிடம், நீரே என் பாதுகாவலர், எனக்கு உமது கருணையைக் காட்டுவதே உமக்குத் தகும்” என்றான்.(22) இவ்வாறு துயரில் மூழ்கி, இதுபோல ஒப்பாரி செய்ய்யும் அவனைக் {மன்னன் திருதராஷ்டிரனைக்} கண்ட பகர், அவனிடம் இரக்கம் கொண்டு, அவனது நாட்டை விடுவித்தார்.(23) அந்த முனிவர், தன் கோப உணர்வை விட்டகன்று, அவனிடம் மனநிறைவு கொண்டார். அவனது நாட்டை விடுவிப்பதற்காக அந்தத் தவசி மீண்டும் நெருப்பில் ஆகுதிகளை ஊற்றினார்.(24) அந்நாட்டை (பேரிடரில் இருந்து) விடுவித்து, பல விலங்குகளைக் கொடையாகப் பெற்ற அவர் {முனிவர் பகர்}, இதயம் மகிழ்ந்தவராக மீண்டும் நைமிச வனத்திற்குச் சென்றார்.(24) தயாள மனமும், அற ஆன்மாவும் கொண்ட மன்னன் திருதராஷ்டிரனும், உற்சாகமிக்க இதயத்துடன், செழிப்பால் நிறைந்து தன் தலைநகருக்குச் சென்றான்.(26)

அந்தத் தீர்த்தத்தில்தான் பெரும் நுண்ணறிவைக் கொண்ட பிருஹஸ்பதியும், அசுரர்களின் அழிவுக்காகவும், சொர்க்கவாசிகளின் செழிப்புக்காகவும்,(27) சதையின் உதவியுடன் வேள்வி நெருப்பில் ஆகுதிகளை ஊற்றினான். இதன்காரணமாக போரில் நலிவடைந்த அசுரர்களை,  வெற்றியின் மீது கொண்ட ஆசையால் தூண்டப்பட்டிருந்த தேவர்கள் அழித்தனர்.(28) பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, குதிரைகள், யானைகள் மற்றும் கோவேறுகழுதைகள் பூட்டப்பட்ட வாகனங்கள், பெரும் மதிப்பிலான தங்கம், அதிகச் செல்வம், அதிகத் தானியம் ஆகியவற்றை முறையான சடங்குகளுடன் பிராமணர்களுக்குக் கொடுத்த ராமன் {பலராமன்} அடுத்ததாக யாயாதம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(29,30)

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அங்கே நகுஷனின் மைந்தனான உயர் ஆன்ம யயாதி நடத்திய வேள்வியில்தான், சரஸ்வதி பாலையும், தெளிந்த நெய்யையும் பெருக்கினாள்.(31) மனிதர்களில் புலியான மன்னன் யயாதி, அங்கே {யாயாதத் தீர்த்தத்தில்} வேள்வி செய்து, உற்சாகமாகச் சொர்க்கத்திற்குச் சென்று, பல அருள் உலகங்களை அடைந்தான்.(32) அந்தச் சரஸ்வதி ஆறானவள், (அந்த வேள்விக்கு அழைக்கப்பட்ட) பிராணர்களின் பெரும் ஆன்மப் பெருந்தன்மையையும், அவளிடம் அவர்கள் கொண்ட மாற்றமுடியாத அர்ப்பணிப்பையும் கண்டு, அவர்களின் இதயங்கள் விரும்பிய அனைத்தையும் அவர்களுக்குக் கொடுத்தாள்.(33) அந்த வேள்விக்கு அழைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் எங்கிருந்தனரோ, அங்கேயே அவர்களுக்கு வீடுகளையும், படுக்கைகளையும், ஆறு வெவ்வேறு வகைச் சுவைகளைக் கொண்ட உணவையும், பல்வேறு பிற வகைப் பொருட்களையும் அந்த ஆறுகளில் முதன்மையானவள் கொடுத்தாள்.(34) அந்தப் பிராமணர்களோ, அவர்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்புமிக்கப் பரிசுகள் அனைத்தையும் மன்னர் கொடுத்ததாகக் கருதிக் கொண்டனர். அவர்கள் அந்த ஏகாதிபதியை உற்சாகமாகப் புகழ்ந்து, அவனுக்குத் தங்கள் மங்கலமான ஆசிகளை வழங்கினர்.(35) தேவர்கள் மற்றும் கந்தர்வர்கள் அனைவரும் அவ்வேள்வியில் இருந்த அபரிமிதமான பொருட்களால் மனநிறைவை அடைந்தனர். மனிதர்களைப் பொருத்தவரையில் அந்த அபரிமிதமான பொருட்களைக் கண்டு அவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(36)

பனைமரக் கொடி கொண்டவனான அந்தச் சிறப்புமிக்கப் பலதேவன், வென்று, கட்டுப்படுத்தித் தூய்மையடைந்த ஆன்மாவுடனும், பேரறத்தின் தனித்தன்மையுடனும், மதிப்புமிக்கப் பொருட்களைத் தானமளித்து, அடுத்ததாக, வேகமான ஊற்றைக் கொண்ட வசிஷ்டாபவாகம் என்ற தீர்த்தத்திற்குச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(37)

வசிஷ்டாபவாஹத் தீர்த்தம்! – சல்லிய பர்வம் பகுதி – 42-விஷ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்கும் இடையிலான பகை; வசிஷ்டரைக் கொல்ல நினைத்த விஷ்வாமித்திரர் சரஸ்வதியை ஏவியது; விஷ்வாமித்திரரை வஞ்சித்த சரஸ்வதி; சரஸ்வதி பெற்ற சாபம்; வசிஷ்டாபவாஹத் தீர்த்தத்தின் பெயர்க்காரணம்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “வசிஷ்டாபவாகத்தின் (என்ற பெயரில் அறியப்பட்ட தீர்த்தத்தின்) ஓட்டம் ஏன் பயங்கரமான வேகம் கொண்டதானது? என்ன காரணத்தினால் அந்த முதன்மையான ஆறு வசிஷ்டரைக் கொண்டு {இழுத்துச்} சென்றது?(1) ஓ! தலைவரே {வைசம்பாயனரே}, வசிஷ்டருக்கும், விஷ்வாமித்திரருக்கும் இடையிலான சச்சரவின் காரணம் என்ன? ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, என்னால் கேட்கப்படும் இவை அனைத்தையும் குறித்து எனக்குச் சொல்வீராக. நீர் சொல்வதைக் கேட்டு என்னால் தணிவை அடையமுடியவில்லை” என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதா {ஜனமேஜயா}, கடுந்தவம் குறித்த போட்டாபோட்டியால் விஷ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்கும் இடையில் பெரும் பகை எழுந்தது. வசிஷ்டரின் உயர்ந்த வசிப்பிடம் சரஸ்வதியின் கிழக்குக்கரையில் ஸ்தாணு என்றழைக்கப்பட்ட தீர்த்தத்தில் இருந்தது. எதிர்க்கரையில் நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரரின் ஆசிரமம் இருந்தது.(4) ஓ! ஏகாதிபதி, அந்தத் தீர்த்தத்தில் ஸ்தாணு (மஹாதேவன்) கடுந்தவம் பயின்றான். தவசிகள் இன்னும் அந்தக் கடுஞ்சாதனைகளைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.(5) அங்கே ஒரு வேள்வியைச் செய்த ஸ்தாணு, அங்கே அந்தத் தீர்த்தத்தை நிறுவி அந்தச் சரஸ்வதி ஆற்றை வழிபட்டான். எனவே, ஓ! தலைவா, அது ஸ்தாணு தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.(6) பழங்காலத்தில் தேவர்கள், ஓ! மன்னா, தேவர்களின் எதிரிகளைக் கொல்பவனான ஸ்கந்தனைத் தங்கள் படைத்தலைவனாக அத்தீர்த்தத்தில் வைத்தே நிறுவினர்.(7)

சரஸ்வதியின் அந்தத் தீர்த்தத்தில்தான் பெரும் முனிவரான விஷ்வாமித்திரர், தன் கடுந்தவத்தின் துணையால் வசிஷ்டரைக் கொண்டு {இழுத்து} வந்தார். அந்த வரலாற்றைக் கேட்பாயாக.(8) தவசிகளான விஷ்வாமித்திரர் மற்றும் வசிஷ்டர் ஆகியோர் இருவரும், தங்கள் தவங்களின் மேன்மை குறித்த மெய்யுறுதியுடன் ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் எதிர்த்தனர்.(9] பெருமுனிவரான விஷ்வாமித்திரர், வசிஷ்டரின் சக்தியைக் கண்டு (பொறாமையால்) எரிந்து, அந்தக் காரியம் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.(10) அவர் தன் கடமைகளைச் செய்வதில் அர்ப்பணிப்புடன் இருந்தாலும், “இந்தச் சரஸ்வதி, தன் ஓட்டத்தின் சக்தியால் தவசிகளில் முதன்மையான வசிஷ்டரை என் முன் வேகமாகக் கொண்டு {இழுத்து} வர வேண்டும். இங்கே கொண்டுவரப்படும் அந்த மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரை {வசிஷ்டரை} நான் கொல்வேன் என்பதில் ஐயமில்லை”, என்ற இந்தத் தீர்மானத்தை எட்டினார்.(11,12)

இதைத் தீர்மானித்துக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கப் பெருமுனிவர் விஷ்வாமித்திரர், கண்கள் சிவந்த கோபத்துடன், அந்த ஆறுகளில் முதன்மையானவளை {சரஸ்வதியை} நினைத்தார்.(13) இவ்வாறு அந்தத் தவசியால் நினைக்கப்பட்டதும் அவள் {சரஸ்வதி} மிகவும் கலக்கமடைந்தாள். எனினும், அந்த அழகான மங்கை {சரஸ்வதி}, பெரும் சக்தியும், பெரும் கோபமும் கொண்ட அம்முனிவரிடம் {விஷ்வாமித்திரரிடம்} சென்றாள்.(14) அந்தச் சரஸ்வதி, நிறம் மங்கியவளாக, கூப்பிக் கரங்களுடன் உடல் நடுங்கிக் கொண்டே அந்த முதன்மையான தவசியின் முன் தோன்றினாள்.(15) உண்மையில், துயரால் அதிகம் பீடிக்கப்பட்டிருந்த அந்த மங்கை, வலிமைமிக்கத் தன் தலைவனை இழந்துவிட்ட ஒரு பெண்ணைப் போல இருந்தாள். அவள் அந்தச் சிறந்த முனிவரிடம் {விஸ்வாமித்திரரிடம்}, “நான் உமக்குச் செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்டாள்.(16) சினம் நிறைந்த அந்தத் தவசி அவளிடம், “வசிஷ்டரை நான் கொல்லும் வகையில், தாமதமில்லாமல் அவரை இங்கே கொண்டு வருவாயாக” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த {சரஸ்வதி} ஆறானவள் மிகவும் கலக்கமடைந்தாள்.(17) தாமரைக் கண்களைக் கொண்ட அந்த மங்கை, காற்றால் அசைக்கப்பட்ட கொடியைப் போலக் கூப்பிய கரங்களுடன், அச்சத்தால் மிகவும் நடுங்கினாள்.(18) அந்தப் பெரும் ஆற்றின் அந்த அவலநிலையைக் கண்ட அந்தத் தவசி {விஷ்வாமித்திரர்}, அவளிடம் {சரஸ்வதியிடம்}, “எந்த ஐயுணர்வுமின்றி வசிஷ்டரை என் முன் கொண்டு வருவாயாக” என்றார்.(19)

அவரது இந்த வார்த்தைகளைக் கேட்டவளும், அவர் {விஷ்வாமித்திரர்} செய்ய நினைக்கும் தீமையை அறிந்தவளுமான அவள் {சரஸ்வதி}, பூமியில் ஒப்பற்றவரான வசிஷ்டரின் ஆற்றலை அறிந்து,(20) அவரிடம் சென்று, நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரர் தன்னிடம் சொன்னதைத் தெரிவித்தாள்.(21) அவள், அந்த இருவரின் சாபம் குறித்தும் அஞ்சி மீண்டும் மீண்டும் நடுங்கினாள். உண்மையில், (அவர்களில் எவரேனும் ஒருவர் தனக்கு அளிக்கப்போகும்) துயர் நிறைந்த சாபத்திலேயே அவளது இதயம் நிலைத்திருந்தது. அவள் இருவரிடமும் கொண்ட அச்சத்துடன் நின்று கொண்டிருந்தாள்.(22) அற ஆன்மா கொண்டவரும், மனிதர்களில் முதன்மையானவருமான அந்த வசிஷ்டர், நிறம் மங்கியவளாகவும், கவலையில் மூழ்கியவளாகவும் அவளைக் கண்டு, அவளிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(23) வசிஷ்டர் {சரஸ்வதியிடம்}, “ஓ! நதிகளில் முதன்மையானவளே, உன்னைக் காத்துக் கொள்வாயாக. ஓ! வேகமாக ஓடையைக் கொண்டவளே, என்னைக் கொண்டு {இழுத்து} செல்வாயாக, இல்லையெனில் விஷ்வாமித்திரர் உன்னைச் சபிப்பார். எந்த ஐயமும் கொள்ளாதே” என்றார்.(24)

இரக்க குணம் கொண்ட அம்முனிவரின் {வசிஷ்டரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த ஆறானவள் {சரஸ்வதி}, ஓ! கௌரவ்யா {ஜனமேஜயா}, தான் பின்பற்ற வேண்டிய சிறந்த வழியைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினாள்.(25) அவள் மனத்தில், “வசிஷ்டர் என்னிடம் பெருங்கருணையை வெளிப்படுத்துகிறார். அவருக்குத் தொண்டாற்றுவதே எனக்கு முறையானது” என்ற எண்ணமே எழுந்தது.(26) அந்தச் சரஸ்வதி, தன் கரையில் மௌனமாக (மந்திரங்களை) ஓடிக்கொண்டிருந்த அந்தச் சிறந்த முனிவரை {வசிஷ்டரைக்} கண்டும், ஹோமத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குசிகரின் மகனை (விஷ்வாமித்திரரைக்) கண்டும்,(27) “இதுவே எனக்கான வாய்ப்பு {தக்க சமயம் இதுவே}” என்று நினைத்தாள். அப்போது அந்த ஆறுகளில் முதன்மையானவள் {சரஸ்வதி} தன் கரைகளில் ஒன்றைத் தன் {வேகமான} ஓட்டத்தால் இடித்துத் தள்ளினாள்.(28) அப்படி அந்தக் கரையை இடித்தபடியே அவள் வசிஷ்டரையும் கொண்டு {இழுத்துச்} சென்றாள்.

அப்படிக் கொண்டு செல்லப்படும்போது, ஓ! மன்னா, வசிஷ்டர் அந்த ஆற்றை இவ்வார்த்தைகளால் புகழ்ந்தார்:(29) “ஓ! சரஸ்வதி, அந்தப் பெரும்பாட்டனின் (மானஸத்) தடாகத்தில் நீ உதித்தாய். இந்த மொத்த அண்டமும் உன் சிறந்த நீரால் நிறைந்திருக்கிறது.(30) ஓ! தேவி, ஆகாயத்தில் பாய்ந்து மேகங்களுக்கு உனது நீரைப் புகட்டுகிறாய். நீர்கள் அனைத்தும் நீயே. உன் மூலமாகவே நாங்கள் எங்கள் சிந்தனைத் திறன்களைப் பயன்படுத்துகிறோம்.(31) நீயே புஷ்டி, தியுதி {காந்தி}, கீர்த்தி {புகழ்}, சித்தி {வெற்றி}, உமை {பார்வதி}[1] ஆவாய். நீயே பேச்சும், நீயே சுவாஹாவும்[2] ஆவாய். மொத்த அண்டமும் உன்னை நம்பியே இருக்கிறது. அனைத்து உயிரினங்களிலும் நான்கு வடிவங்களில் வசிப்பவள் நீயே” {என்று துதித்தார்}.(32)

[1] “வளர்ச்சி, காந்தி, புகழ் மற்றும் வெற்றியின் பொருத்தமான வடிவங்கள் இவை. இறுதியில் உள்ள உமை என்பது சிவனின் மனைவியான பரமேஸ்வரியைக் குறிப்பதாகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] “பெரும் செயல்திறனைக் கொண்ட ஒரு மந்திரமாகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இவ்வாறு அந்தப் பெருமுனிவரால் புகழப்பட்ட அந்தச் சரஸ்வதி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தப் பிராமணரை {வசிஷ்டரை} வேகமாக விஷ்வாமித்திரரின் ஆசிரமத்தை நோக்கி கொண்டு {இழுத்துச்} சென்று, முன்னவர் {வசிஷ்டர்} வந்திருப்பதைக் குறித்துப் பின்னவரிடம் {விஷ்வாமித்திரரிடம்} மீண்டும் மீண்டும் சொன்னாள்.(33) இவ்வாறு சரஸ்வதியால் தன் முன் கொண்டு வரப்பட்ட வசிஷ்டரைக் கண்ட விஷ்மாத்திரர், சினத்தால் நிறைந்து, அந்தப் பிராமணரைக் {வசிஷ்டரைக்} கொல்வதற்கு ஓர் ஆயுதத்தைத் தேடத் தொடங்கினார்.(34) அவர் கோபத்தால் நிறைந்திருப்பதைக் கண்ட அந்த ஆறானவள், ஒரு பிராமணரின் கொலையின் மீது (கொலை செய்வதைக் காண்பதிலும், அதற்கு உதவுவதிலும்) கொண்ட அச்சத்தால், மீண்டும் வசிஷ்டரைத் தனது கிழக்குக் கரைக்கே வேகமாகக் கொண்டு சென்றாள். இவ்வாறு தன் செயலால் காதியின் மகனை {விஷ்வாமித்திரரை} வஞ்சித்தாலும், அவள், இருவரின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தவளானாள்.(35)

பழியுணர்ச்சி கொண்ட விஷ்வாமித்திரர், முனிவர்களில் சிறந்தவரான வசிஷ்டர் {மீண்டும்} கொண்டு செல்லப்பட்டதைக் கண்டு, கோபத்தால் நிறைந்து சரஸ்வதியிடம்,(36) “ஓ! ஆறுகளில் முதன்மையானவளே, நீ என்னை வஞ்சித்துச் சென்றதால், உன் ஓடையானது, ராட்சசர்களுக்கு ஏற்புடைய குருதியாக மாறிப் போகட்டும்” என்றார்.(37) பிறகு, நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரரால் சபிக்கப்பட்ட சரஸ்வதி, இரத்தம் கலந்த நீரைச் சுமந்தபடியே ஒரு வருடம் முழுவதும் பாய்ந்து கொண்டிருந்தாள்.(38) தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோர், அந்த அவலநிலைக்குக் குறைக்கப்பட்ட சரஸ்வதியைக் கண்டு, பெருங்கவலையில் நிறைந்தனர்.(39) இதன் காரணமாகவே, ஓ! மன்னா, அந்தத் தீர்த்தம், வசிஷ்டாபவாஹம் என்று பூமியில் அழைக்கப்பட்டது. எனினும், அந்த முதன்மையான நதியானவள், மீண்டும் தன் முறையான நிலையை அடைந்தாள்” {என்றார் வைசம்பாயனர்}.(40)

நமுசியின் தலையைக் கொய்த இந்திரன்! – சல்லிய பர்வம் பகுதி – 43-தவத்தினால் சரஸ்வதியைத் தூய்மைப்படுத்திய தவசிகள்; அங்கே வேள்வி செய்து பிரம்மஹத்தியைப் போக்கிக் கொண்ட இந்திரன்; அங்கிருந்து சோமதீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்; பெரும் அரச மரத்தைக் கொண்டிருந்த சோம தீர்த்தம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரரால் கோபத்தில் சபிக்கப்பட்ட சரஸ்வதி, அந்த மங்கலமான சிறந்த தீர்த்தத்தின் {வசிஷ்டாபவாஹத் தீர்த்தத்தின்}, நீரோட்டத்தில் இரத்தத்தைச் சுமந்தபடி பாய்ந்தாள்.(1) பிறகு, ஓ! மன்னா!, ஓ பாரதா {ஜனமேஜயா}, ராட்சசர்கள் பலர் அங்கே வந்து, அங்கே பாய்ந்து கொண்டிருந்த குருதியைக் குடித்து, அங்கேயே மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.(2) அவர்கள், அந்தக் குருதியால் நிறைவடைந்து, உற்சாகத்தால் நிறைந்து, எந்த வகைக் கவலையுமில்லாமல், (புண்ணியத்தால்) சொர்க்கத்தை அடைந்த மனிதர்களைப் போல, அங்கே ஆடிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர்.(3) சில காலம் கழிந்ததும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட சில முனிவர்கள், சரஸ்வதியின் தீர்த்தங்களுக்குப் பயணிக்கும்போது அங்கேயும் {அந்த வசிஷ்டாபவாஹத் தீர்த்தத்திற்கும்} வந்தனர்.(4) அந்த முனிவர்களில் முதன்மையானவர்கள், அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடி, பெரும் மகிழ்ச்சியை அடைந்து, மேலும் புண்ணியத்தை அடைய விரும்பினர்.(5)

இறுதியாக, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கல்விமான்கள் இரத்த ஓடையாகப் பாய்ந்து கொண்டிருந்த சரஸ்வதியின் அந்தத் தீர்த்தத்திற்கும் {வசிஷ்டாபவாஹத்திற்கும்} வந்தனர். உயர்ந்த அருளைக் கொண்ட அவர்கள், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அச்சந்தரும் அந்தத் தீர்த்தத்திற்கு வந்து சேர்ந்து,(6) இரத்தத்துடன் கலந்திருக்கும் சரஸ்வதியின் நீரையும், அதை எண்ணற்ற ராட்சசர்கள் குடித்துக் கொண்டிருப்பதையும் கண்டனர்.(7) ஓ! மன்னா, கடும் நோன்புகளைக் கொண்ட அந்தத் தவசிகள் அந்த ராட்சசர்களைக் கண்டு, சரஸ்வதியை அந்த அவல நிலையில் இருந்து மீட்கப் பெரும் முயற்சிகளைச் செய்தனர்.(8) உயர்ந்த நோன்புகளைக் கொண்ட அந்த அருளாளர்கள், அங்கே வந்து, அந்த நதிகளில் முதன்மையானவளை {சரஸ்வதியை} இருப்புக்கு அழைத்து, அவளிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்:(9) “ஓ! மங்கலமான மங்கையே {கல்யாணி}, உன்னில் இருக்கும் இந்தத் தடாகம் ஏன் இவ்வாறு பீடிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான காரணத்தை எங்களுக்குச் சொல்வாயாக. அதைக் கேட்டு, (அத்தடாகத்தை முறையான நிலைக்கு மீட்க) நாங்கள் முயற்சி செய்வோம்” {என்றனர்}.(10)

இவ்வாறு கேட்கப்பட்ட சரஸ்வதி, பேசும்போது நடுங்கிக் கொண்டே, நேர்ந்த அனைத்தையும் அவர்களிடம் சொன்னாள். துயரால் பீடிக்கப்பட்டிருக்கும் அவளைக் கண்ட அந்தத் தவசிகள், அவளிடம்,(11) “நாங்கள் காரணத்தைக் கேட்டுவிட்டோம். ஓ! பாவமற்ற மங்கையே, நீ பெற்ற சாபத்தைக் குறித்தும் கேட்டோம். நாங்கள் அனைவரும் இனி முயற்சி செய்வோம்” என்றனர்.(12) அந்த ஆறுகளில் முதன்மையானவளிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன அவர்கள், அவர்களுக்குள் கலந்தாலோசித்தபடி, “நாம் அனைவரும் சேர்ந்து சரஸ்வதியை அவளது சாபத்திலிருந்து விடுவிப்போமாக” என்றனர்.(13) அந்தப் பிராமணர்கள் அனைவரும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அண்டத்தின் தலைவனும், உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவனுமான மஹாதேவனை வழிபட்டு, தவங்கள், நோன்புகள், உண்ணா நோன்புகள், பல்வேறு பொருட்களைத் தவிர்த்தல், வலிநிறைந்த நோன்புகள் ஆகியவற்றை நோற்று, ஆறுகளில் முதன்மையான அந்தத் தெய்வீக சரஸ்வதியை {அந்த அவலநிலையில் இருந்து} விடுவித்தனர்.(14-16)

அம்முனிவர்களால் சரஸ்வதியின் நீர் தூய்மையாக்கப்பட்டதைக் கண்ட (அங்கே வசித்து வந்த) ராட்சசர்கள், பசியால் பீடிக்கப்பட்டு, அந்த முனிவர்களின் பாதுகாப்பையே நாடினர்.(17) பசியால் பீடிக்கப்பட்ட அந்த ராட்சசர்கள், கூப்பிக் கரங்களுடன், கருணை நிரம்பிய அந்தத் தவசிகளிடம் இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொன்னார்கள்:(18) “நாங்கள் அனைவரும் பசித்திருக்கிறோம். நித்திய அறத்தில் இருந்து நாங்கள் விலகியிருக்கிறோம். பாவம் நிறைந்த எங்களின் இந்நடத்தை, நாங்கள் விரும்பி ஏற்றுக் கொண்டது கிடையாது.(19) உங்கள் அருள் இல்லாமையாலும், எங்கள் சொந்த தீய செயல்களாலும், எங்கள் பெண்களின் பாலியல் பாவங்களாலும் எங்கள் குற்றங்கள் {பாவங்கள்} அதிகரித்து, இவ்வாறு பிரம்ம ராட்சசர்களானோம். வைசியர்கள், சூத்திரர்கள், க்ஷத்திரியர்கள் ஆகியோரில் சிலரும், பிராமணர்களை வெறுப்பவர்களும், அவர்களுக்கு {பிராமணர்களுக்குக்} காயமேற்படுத்துபவர்களும் ராட்சசர்களாகின்றனர்.(20,21) பிராமணர்களில் சிறந்தவர்களே, எங்கள் துயர்துடைப்புக்கான ஏற்பாடுகளைச் செய்வீராக. நீங்கள் அனைத்து உலகங்களின் துயரையும் துடைக்கத் தகுந்தவர்களாவீர்கள்” என்றனர்.(23) அவர்களது இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தவசிகள், அந்தப் பெரும் நதியைப் புகழ்ந்தனர்.

அந்த ராட்சசர்களை மீட்பதற்காக, ஆழமான சிந்தனையில் ஆழ்ந்த அந்தத் தவசிகள்,(24) “தும்மலில் எச்சில் தெறித்த உணவு, புழு பூச்சிகளைக் கொண்டது, பிறர் உண்ட எச்சங்களின் கலவை, முடி {மயிர்} கலந்தது, அழுகியது {கெட்டுப் போனது}, கண்ணீர் கலந்தது ஆகிய உணவுகள் இந்த ராட்சசர்களின் பங்காகட்டும்.(25) இவையனைத்தையும் அறிந்த ஒரு கல்விமான், இவ்வகை உணவுகளைக் கவனமாகத் தவிர்ப்பானாக. அத்தகு உணவை உண்பவன் ராட்சசர்களின் உணவை உண்டதாகக் கருதப்படுவான்” என்றனர்.(26) அந்தத் தீர்த்தத்தைத் தூய்மைப்படுத்திய அந்தத் தவசிகள், அந்த ராட்சசர்களின் துயர் துடைப்புக்காக அந்த ஆற்றிடம் இவ்வாறு வேண்டினர்.(27) அந்தப் பெரும் முனிவர்களின் நோக்கத்தை அறிந்து கொண்ட அந்த ஆறுகளில் முதன்மையானவள் {சரஸ்வதியானவள்}, தன் உடலை, அருணை என்றழைக்கப்படும் புதிய வடிவில் ஏற்றுக் கொண்டாள்.(28) (சரஸ்வதியின் கிளையான) அந்தப் புதிய ஆற்றில் நீராடிய ராட்சசர்கள், தங்கள் உடல்களை விட்டுச் சொர்க்கத்தை அடைந்தனர்.(29) நூறு வேள்விகளைச் செய்தவனான தேவர்களின் தலைவன் (இந்திரன்), இவை யாவையும் உறுதிசெய்து கொண்டு, அந்த முதன்மையான தீர்த்தத்தில் {அருணசங்கத் தீர்த்தத்தில்} நீராடி, மிகப் பயங்கரமான பாவத்தில் இருந்து தூய்மையடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(30)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “என்ன காரணத்தால் இந்திரன் பிராமணரைக் கொன்ற {பிரம்மஹத்தி} பாவத்தால் களங்கமடைந்தான்? எவ்வாறு அவன் {இந்திரன்} அந்தத் தீர்த்தத்தில் நீராடி தூய்மையடைந்தான்?” என்று கேட்டான்.(31)

வைசம்பாயனர் {ஜனமேஜயன்} சொன்னார், “ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே, அந்த வரலாற்றைக் கேட்பாயாக. அந்த நிகழ்வுகளை, அவை நிகழ்ந்தவாறே கேட்பாயாக. பழங்காலத்தில் வாசவன் {இந்திரன்}, நமுசியிடம் தான் செய்து கொண்ட உடன்படிக்கையை எவ்வாறு உடைத்துக் கொண்டான் என்பதைக் கேட்பாயாக.(32) (அசுரன்) நமுசி, வாசவனின் மீது கொண்ட அச்சத்தால், சூரியனின் ஒரு கதிருக்குள் நுழைந்து {ஒளிந்து} கொண்டான். பிறகு இந்திரன் {அந்தப் போர் நடந்து கொண்டிருதபோதே} நமுசியோடு நட்பு கொண்டு, ஓர் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு,(33) “ஓ! அசுரர்களில் முதன்மையானவனே, ஓ! நண்பா, ஈரமடைந்த, அல்லது உலர்ந்த எப்பொருளினாலும் நான் உன்னைக் கொல்ல மாட்டேன். இரவிலோ, பகலிலோ நான் உன்னைக் கொல்ல மாட்டேன். இதையே உண்மை {சத்தியம்} என உறுதிகூறுகிறேன்” என்று சொன்னான்.(34) இந்த உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்ட தலைவன் இந்திரன், {போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது} ஒரு நாள் மூடுபனியைக் கண்டான். அப்போது {பகலும் இரவுமற்ற அந்தச் சந்திப் பொழுதில்} அவன் நீரின் {கடலின்} நுரையை (தனது ஆயுதமாகக்) கொண்டு நமுசியின் தலையைக் கொய்தான்.(35)

வெட்டப்பட்ட அந்த நமுசியின் தலையானது, இந்திரனைப் பின்தொடர்ந்து சென்று, அவனருகில் இருந்து, “ஓ! நண்பனைக் கொன்றவனே, ஓ! இழிந்தவனே” என்ற இந்த வார்த்தைகளைச் சொன்னது.(36) அந்தத் தலையால் இடைவிடாமல் {இவ்வாறு} தூண்டப்பட்ட இந்திரன், பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்று, என்ன நடந்தது என்பதைத் துயருடன் சொன்னான்.(37) அண்டத்தின் அந்த உயர்ந்த தலைவன் {பிரம்மன்}, அவனிடம் {இந்திரனிடம்}, “ஓ! தேவர்களின் தலைவா, ஒரு வேள்வியைச் செய்து, முறையான சடங்குகளுடன் அருணையில் {அருணசங்கமத் தீர்த்தத்தில்} நீராடினால், அந்தத் தீர்த்தம் பாவம் குறித்த அச்சத்தில் இருந்து உன்னைக் காக்கும்.(38) ஓ! சக்ரா {இந்திரா}, முனிவர்களால் அந்த ஆற்றின் நீர் புனிதப்படுத்தப்பட்டிருக்கிறது.

முன்பொரு சமயம், அவ்விடத்தில் அந்த ஆறு மறைந்தே இருந்தது.(39) தெய்வீகமான சரஸ்வதி, அருணையிடம் சென்று, அதில் தனது நீரைப் பாயவிட்டாள். சரஸ்வதி மற்றும் அருணையின் இந்தச் சங்கமம் {அருண சங்கமம்}, மிகப் புனிதமானதாகும்.(40) ஓ! தேவர்களின் தலைவா, அங்கு ஒரு வேள்வியைச் செய்வாயாக. அபரிமிதமான கொடைகளை அளிப்பாயாக. அங்கே உன் தூய்மைச் சடங்கைச் செய்து, உனது பாவத்தில் இருந்து விடுபடுவாயாக” என்றான் {பிரம்மன்}.(41)

இவ்வாறு சொல்லப்பட்ட சக்ரன் {இந்திரன்}, ஓ! ஜனமேஜயா, பிரம்மனின் அந்த வார்த்தைகளின்பேரில் சரஸ்வதியின் அந்த வசிப்பிடத்தில் பல்வேறு வேள்விகளைச் செய்தான்.(42) பலனைக் கொன்றவனான அந்த நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, கொடைகள் பலவற்றைக் கொடுத்து, அந்தத் தீர்த்தத்தில் நீராடி, குறிப்பிட்ட வேள்விகளை முறையாகச் செய்து, அருணையில் மூழ்கினான்.(43) அப்போது அவன் ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபட்டவனாக வெளியே எழுந்து வந்தான்[1]. பிறகு அந்தச் சொர்க்கத்தின் தலைவன் {இந்திரன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் சொர்க்கத்திற்குத் திரும்பிச் சென்றான்.(44) ஓ! பாரதா, அந்த நமுசியின் தலையும் அவ்வோடையில் {அருணையில்} விழுந்தது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அந்த அசுரனும் {நமுசியும்}, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற வல்ல நித்திய பகுதிகள் பலவற்றை அடைந்தான்.”

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்ம பலதேவன் {பலராமன்}, அந்தத் தீர்த்தத்தில் நீராடி, பல வகையிலான தானங்களை அளித்து, பெரும் புண்ணியத்தை அடைந்தான். அறச்செயல்களையே செய்யும் அவன்{பலராமன்}, அடுத்ததாகச் சோமனின் பெரும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(46) ஓ! மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, பழங்காலத்தில் அங்கேதான் சோமன் {சந்திரன்}, ராஜசூய வேள்வியைச் செய்தான். பிராமணர்களில் முதன்மையானவரும், பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவருமான உயர் ஆன்ம அத்ரியே அந்த மகத்தான வேள்வியின் ஹோத்ரியாக இருந்தார். அவ்வேள்வியின் நிறைவில், (ஒரு தரப்பில் இருந்த) தேவர்களுக்கும், (மறுதரப்பில் இருந்த) தானவர்கள், தைத்தியர்கள் மற்றும் ராட்சசர்களுக்கும் இடையில் ஒரு பெரும்போர் நடந்தது. அந்தக் கடும்போரானது, (அசுரன்) தாரகனின் பெயரால் {தாரகம் என்றே} அறியப்பட்டது. அந்தப் போரில் ஸ்கந்தன் {முருகன்} அந்தத் தாரகனைக் கொன்றான்.(47,48) அந்தச் சந்தர்ப்பத்தில் தைத்தியர்களை அழிப்பவனான மஹாசேனன் (என்றும் ழைக்கப்பட்ட ஸ்கந்தன்), தேவர்களின் படைத்தலைமை பொறுப்பை அடைந்தான்[2]. அந்தத் தீர்த்தத்தில்தான் ஒரு பெரும் அஸ்வத {அரச} மரம் இருக்கிறது. குமாரன் என்றும் அழைக்கப்பட்ட கார்த்திகேயன், {சோம தீர்த்தத்தில் உள்ள} அதன் {அந்த அரச மரத்தின்} நிழலில் தான் எப்போதும் வசித்திருக்கிறான்” {என்றார் வைசம்பாயனர்}.(49)

கார்த்திகேயன் பிறப்பு! – சல்லிய பர்வம் பகுதி – 44-சிவனிடம் உண்டாகி அக்னியில் விழுந்த ஸ்கந்தன்; ஸ்கந்தனைக் கங்கையில் விட்ட அக்னி; ஸ்கந்தனை இமயத்தில் விட்ட கங்கை; கார்த்திகைப் பெண்டிர் ஸ்கந்தனுக்கு முலையூட்டியது; சிவனைக் கண்டு அணுகிய ஸ்கந்தன்; பூதகணங்களின் தோற்ற வேறுபாடுகள்; நான்கு வடிவங்களாகத் தன்னைப் பிரித்துக் கொண்ட ஸ்கந்தன்; ஸ்கந்தனுக்கு ஆட்சியுரிமை கோரிய நால்வர்; ஸ்கந்தனைத் தேவர்களின் படைத்தலைவனாக்கிய பிரம்மன்; சமந்தபஞ்சகத்துக்கு வந்த தேவர்கள்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, சரஸ்வதியின் தகுதிகளைக் குறித்து விவரித்தீர். குமாரன் {முருகன்}, ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, (தேவர்களின் மூலம்) {படைத் தலைவனாக} பதவியேற்றுக் கொண்டதை விளக்குவதே உமக்குத் தகும்.(1) நான் என்னுள் பெரிய ஆவலை உணர்கிறேன். எனவே, போற்றுதலுக்குரியவனும், பலமிக்கவனுமான தலைவன் ஸ்கந்தன், (தேவர்களின் படைத்தலைவனாக) பதவியேற்ற காலம், இடம் மற்றும் தன்மை குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, அவனைப் பதவியேற்கச் செய்தது யார்? உண்மையான சடங்குகளைச் செய்தது யார்? அந்தத் தேவர்களின் படைத்தலைவன் {முருகன்} எவ்வாறு தைத்தியர்களுக்குப் பேரழிவை உண்டாக்கினான்?” என்று கேட்டான்.(2,3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இந்த ஆவலை நீ உணர்வது, உனது குருக் குலப் பிறப்புக்குத் தகுந்ததே. ஓ! ஜனமேஜயா, நான் சொல்லப்போகும் வார்த்தைகள் உனக்கு இன்பத்தை உண்டாக்கும்.(4) ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {ஜனமேஜயா}, நீ கேட்க விரும்புவதால், குமாரனின் பதவியேற்பையும், அந்த உயர்ஆன்மாவின் ஆற்றலையும் நான் சொல்லப் போகிறேன்.(5)

பழங்காலத்தில், மஹேஸ்வரனின் {சிவனின்} உயிர் வித்து வெளியேறி சுடர்மிக்க நெருப்பில் {அக்னியில்} விழுந்தது. அனைத்தையும் எரிப்பவனும், போற்றுதலுக்குரியவனுமான அக்னியால் அந்த அழிக்கப்பட முடியாத வித்தை எரிக்க முடியவில்லை.(6) மறுபுறம், வேள்விக் காணிக்கைகளைச் சுமப்பவனான அவன் {அக்னி}, அந்த வித்தின் விளைவால் பெரும் சக்தியையும், காந்தியையும் பெற்றான். பெருஞ்சக்தி கொண்ட அந்த வித்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.(7) பிரம்மனின் ஆணைக்கிணங்க தலைவன் அக்னி, கங்கையை (கங்கை ஆற்றை) அணுகி, சூரியப்பிரகாசத்தைக் கொண்ட அந்தத் தெய்வீக வித்தை அவளுக்குள் வீசினான்.(8) கங்கையாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாததால், அவள், தேவர்களால் வழிபடப்படும் இமயத்தின் அழகிய சாரலில் அதை விட்டாள்.(9) அதன்பேரில், அக்னியின் மகன் {ஸ்கந்தன்}, தன் சக்தியில் அனைத்துலகையும் மூழ்கச் செய்து அங்கேயே வளரத் தொடங்கினான். அதே வேளையில், கார்த்திகைகள் (அறுவர்), கடும் பிரகாசம் கொண்ட அந்தப் பிள்ளையைக் கண்டனர்.(10)

ஒரு மகனை விரும்பியவர்களான அந்தக் கிருத்திகைகள் அறுவரும், அக்னியின் உயர்ஆன்ம மகனான அந்தப் பலமிக்கத் தலைவன் {ஸ்கந்தன்}, நாணற்கொத்தில் கிடப்பதைக் கண்டு, “இவன் என் பிள்ளை, இவன் என் பிள்ளை” என்று உரக்கக் கதறினர்.(11) போற்றுதலுக்குரிய தலைவனான ஸ்கந்தன், அந்த ஆறு தாய்மாரின் மனோநிலையைப் புரிந்து கொண்டு, ஆறு வாய்களால் அவர்கள் அனைவரின் முலைகளையும் பருகினான்.(12) போற்றுதலுக்குரிய அந்தப் பிள்ளை கங்கையாற்றால் இமயத்தின் உச்சியில் விடப்பட்டதால், ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {ஜனமேஜயா}, தங்கமாக மாறிய அந்த மலை அழகாகத் தெரிந்தது.(14) வளர்ந்துவரும் அந்தப் பிள்ளையால் மொத்த பூமியும் அழகானது, இதன் காரணமாகவே (அக்காலத்தில் இருந்து) மலைகள் தங்கத்தை உண்டாக்கின.(15)

பெருஞ்சக்தி கொண்ட அந்தப் பிள்ளை கார்த்திகேயன் என்ற பெயரில் அழைக்கப்பட்டான். முதலில் அவன் காங்கேயன் என்ற பெயரால் அழைக்கப்பட்டான். அவன் உயர்ந்த தவச் சக்திகளையும் அடைந்தான்.(16) ஓ! ஏகாதிபதி, சுயக்கட்டுப்பாடு, தவம், பெரும் சக்தி ஆகியவற்றுடன் கூடிய அந்தப் பிள்ளை, சோமனைப் போலவே ஏற்புடைய உயர்ந்த தன்மைகளுடன் வளர்ந்தான்.(17) தங்கமயமான சிறந்த நாணற்கொத்தில் பேரழகுடன் கிடந்த அந்தப் பிள்ளை {ஸ்கந்தன்}, கந்தர்வர்களாலும், தவசிகளாலும் போற்றித் துதிக்கப்பட்டான்.(18) தெய்வீக இசையையும், நர்த்தனத்தையும் அறிந்தவர்களும், மிக அழகிய தன்மைகளைக் கொண்டவர்களுமான ஆயிரக்கணக்கான தேவமங்கையர், அவனைப் {ஸ்கந்தனைப்} புகழ்ந்து, அவனுக்கு முன்பாக நர்த்தனம் செய்தனர்.(19) ஆறுகள் அனைத்திலும் முதன்மையானவளான கங்கை அந்தத் தேவனுக்காகக் காத்திருந்தாள். பூமாதேவியும் பேரழகை ஏற்று, அப்பிள்ளையைத் (தனது மடியில்) தாங்கினாள்.(20) தெய்வீகப் புரோகிதரான பிருஹஸ்பதி, பிறப்புக்குப் பின்பு செய்யப்படும் வழக்கமான சடங்குகளை அந்தப் பிள்ளைக்குச் செய்தார். வேதங்கள் நான்கு வடிவங்களை ஏற்று, கூப்பிய கரங்களுடன் அந்தப் பிள்ளையை அணுகின. நான்கு பிரிவுகளுடன் கூடிய ஆயுத அறிவியலும், ஆயுதங்கள் அனைத்தும், அனைத்து வகைக் கணைகளும் அவனிடம் {ஸ்கந்தனிடம்} வந்தன.(22)

ஒரு நாள், பெருஞ்சக்தி கொண்ட அப்பிள்ளை {ஸ்கந்தன்}, தேவர்களுக்குத் தேவனான அந்த உமையின் தலைவன் {சிவன்}, பூதகணங்களின் கூட்டத்திற்கு மத்தியில், இமயத்தின் மகளுடன் {உமையுடன்} அமர்ந்திருப்பதைக் கண்டான்.(23) மெலிந்த உடல்களைக் கொண்ட அந்தப் பூதகணங்கள், அற்புதத்தன்மைகளைக் கொண்டிருந்தன. அழகற்றவையும், அழகற்ற தன்மைகளைக் கொண்டவையுமான அவை {பூதகணங்கள்}, விகாரமான ஆபரணங்களையும் அடையாளங்களையும் அணிந்திருந்தன.(24) புலிகள், சிங்கங்கள், கரடிகள், பூனைகள் மகரங்கள் ஆகியவற்றின் முகங்களைப் போல அவற்றின் முகங்கள் இருந்தன. வேறு சிலவற்றுக்குத் தேள்கள், யானைகள், ஒட்டகங்கள், ஆந்தைகள் ஆகியவற்றைப் போன்ற முகங்களும் இருந்தன. சில கழுகுகள் மற்றும் நரிகளின் முகங்களையும் கொண்டிருந்தன.(25)

அங்கே இருந்த சிலவற்றின் முகங்கள் நாரைகள், புறாக்கள் மற்றும் ருருக்களை {ஒருவகை மான்களைப்} போலவும் இருந்தன. அவற்றில் பலவற்றுக்கு நாய்கள், முள்ளம்பன்றிகள், உடும்புகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், மாடுகள் ஆகியவற்றைப் போன்ற உடல்களைக் கொண்டிருந்தன. சில மலைகளுக்கு ஒப்பாக இருந்தன, சில கடல்களுக்கு ஒப்பாக இருந்தன, சில உயர்த்தப்பட்ட சக்கரங்களுடனும், கதாயுதங்களைத் தங்கள் ஆயுதமாகக் கொண்டும் நின்றிருந்தன. அவற்றில் சில கரிய மைக் குவியலைப் போலவும், சில வெண்மலையைப் போலவும் தெரிந்தன. ஓ ஏகாதிபதி, ஏழு மைத்ரிகளும் {சப்த மாதர்களும்} அங்கே இருந்தனர்.(26,27) சத்யஸ்கள், விஸ்வதேவர்கள், மருத்துக்கள், வசுக்கள், பித்ருக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள், சித்தர்கள், தானவர்கள், பறவைகள் ஆகியவையும்,(28) சுயம்புவும், போற்றுதலுக்குரியவனுமான பிரம்மன் தன் மகன்களுடனும், விஷ்ணு, சக்ரன் ஆகியோரும் என அனைவரும் மங்கா மகிமை கொண்ட அந்தப் பிள்ளையினைக் கண்டு அங்கே சென்றனர்.(29) தேவர்களில் முதன்மையானோர் பலர், நாரதரின் தலைமையிலான கந்தர்வர்கள், தெய்வீக முனிவர்கள் பலர், பிருஹஸ்பதியின் தலைமையிலான சித்தர்கள்,(30) முதன்மையானோரான அண்டத்தின் தந்தைமார், தேவர்களுக்கே தேவர்களாகக் கருதப்பட்டோர், யாமர்கள் மற்றும் தாமர்கள் ஆகியோர் அனைவரும் அங்கே சென்றனர்.(31)

பெரும் பலமும், பெரும் தவச் சக்தியும் கொண்ட அந்தப் பிள்ளை {ஸ்கந்தன்}, திரிசூல, பினாகைபாணியான அந்தத் தேவர்களின் தலைவனிடம் (மஹாதேவனிடம்) சென்றான்.(32) அந்தப் பிள்ளை வருவதைக் கண்ட சிவனின் மனத்தில், இமயத்தின் மகள் {உமை}, கங்கை, அக்னி ஆகியோர் எண்ணியது போலவே, ’தங்கள் நால்வரில் எவரைக் கௌரவிக்க அந்தப் பிள்ளை, அவனிடமோ, அவளிடமோ வருவான்’ என்ற எண்ணம் உண்டானது. அவர்கள் ஒவ்வொருவரும், “அவன் தன்னிடம்தான் வருவான்” என்று நினைத்தனர்.(33,34) அந்த நால்வரின் எதிர்பார்ப்பையும் புரிந்து கொண்ட அவன், தன் யோக சக்தியால் ஒரே நேரத்தில் நான்கு வெவ்வேறு வடிவங்களை ஏற்றான்.(35) உண்மையில், போற்றுதலுக்குரிய அந்தப் பலமிக்கத் தலைவன் {ஸ்கந்தன்} ஒரு கணத்தில் அந்த நான்கு வடிவங்களையும் ஏற்றான். அவனுக்குப் பின்னால் நின்ற மூன்று வடிவங்ககளும் சாகன், விசாகன், நைகமேயன் என்ற பெயருடையவையாகும்.(36)

போற்றுதலுக்குரியவனும், பலமிக்கவனுமான அவன் {ஸ்கந்தன்} தன்னையே நான்கு வடிவங்களாகப் பிரித்துக் கொண்டு (தன்னை எதிர்பார்த்து அமர்ந்திருந்த அந்த நால்வரை நோக்கிச் சென்றான்). ஸ்கந்தன் என்றழைக்கப்படும் அற்புத தோற்றத்தைக் கொண்டவன், ருத்திரன் அமர்ந்திருக்கும் இடத்திற்குச் சென்றான்.(37) விசாகன், இமயத்தின் தெய்வீக மகள் {உமை} இருந்த இடத்திற்குச் சென்றான். கார்த்திகேயனின் வாயு வடிவமான போற்றுதலுக்குரிய சாகன், அக்னியை நோக்கிச் சென்றான். நெருப்பின் காந்தியைக் கொண்ட பிள்ளையான நைகமேயன், கங்கையிடம் சென்றான்.(38) தோற்றத்தில் ஒன்றாகவே தெரிந்த இந்த நான்கு வடிவங்களும் பெரும் காந்தியுடன் கூடியவையாக இருந்தன. அந்த நான்கு வடிவங்களும் அமைதியாக (ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள) அந்த நான்கு தேவதேவிகளிடம் சென்றன. இவையாவும் மிக அற்புதமானவையாகத் தெரிந்தன.(39) மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் இந்த மிக அற்புதமான நிகழ்வைக் கண்ட தேவர்கள், தானவர்கள் மற்றும் ராட்சசர்கள் ஆகியோர் பேரொலியை எழுப்பினர்.(40)

அப்போது ருத்திரன், உமாதேவி, அக்னி மற்றும் கங்கை ஆகியோர் அனைவரும், அண்டத்தின் தலைவனான பெரும்பாட்டனை வணங்கி, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, கார்த்திகேயனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்:(42) “ஓ! தேவர்களின் தலைவா {ருத்திரா}, எங்கள் மகிழ்ச்சிக்காக இந்த இளைஞனுக்கு {ஸ்கந்தனுக்கு}, அவனுக்குத் தகுந்ததும், அவனுக்கு விருப்பமானதுமான ஏதோ ஒரு வகை ஆட்சியுரிமையை வழங்குவதே உமக்குத் தகும்” என்றனர்.(43) போற்றுதலுக்குரியவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டன் {பிரம்மன்}, அந்த இளைஞனுக்கு {ஸ்கந்தனுக்கு} எதைக் கொடுப்பது என்று தனது மனத்திற்குள் நினைக்கத் தொடங்கினான். அவன் {பிரம்மன்} ஏற்கனவே, உயர் ஆன்மா தேவர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள் ஆகியோர் மற்றும், பூதங்கள், யக்ஷர்கள், பறவைகள், பாம்புகள் ஆகியற்றின் ஆட்சிப்பகுதிகளில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் வடிவங்களற்றோருக்கு (தேவர்களுக்கு) வழங்கிவிட்டான். எனவே, (தேவர்களுக்கு அளிக்கப்பட்ட) அந்த ஆட்சிப்பகுதி முழுமைக்கும் அந்த இளைஞனே உரிமையுடையவன் என்று கருதினான்.(45,46)

தேவர்களின் நன்மையில் எப்போதும் மனம் நிறைந்திருப்பவனான அந்தப் பெரும்பாட்டன் ஒரு கணம் சிந்தித்து, ஓ! பாரதா {ஜனமேஜயா}, அனைத்து உயிரினங்களின் படைத்தலைவன் என்ற நிலையை அவனுக்கு {ஸ்கந்தனுக்கு} அளித்தான்.(47) மேலும் அந்தப் பெரும்பாட்டன், தேவர்கள் மற்றும் வடிவமற்ற பிறர் அனைவருக்கும் தலைவர்களாகக் கருதப்படும் தேவர்கள் அனைவரும் அவனுக்காக {ஸ்கந்தனுக்காகக்} காத்திருக்க வேண்டும் {ஸ்கந்தனுக்குப் பணிசெய்ய வேண்டும்} என்று ஆணையிட்டான்.(49) பிறகு பிரம்மனின் தலைமையிலான தேவர்கள் அந்தப் பிள்ளையைத் {ஸ்கந்தனை} தங்களுடன் அழைத்துக்கொண்டு ஒன்றாக இமயத்திடம் வந்தனர்.(49) அவர்கள் தேர்ந்தெடுத்த இடமானது, புனிதமானவளும், தெய்வீகமானவளும், ஆறுகளில் முதன்மையானவளும், இமயத்தில் இருந்து உதித்து வருபவளும், மூவுலகங்குளாலும் கொண்டாடப்படுபவளுமான சரஸ்வதியின் கரையிலிருக்கும் சமந்தபஞ்சகமாகும்.(50) அங்கே, தேவர்களும், கந்தர்வர்களும், தங்கள் விருப்பங்கள் நிறைவேறியதன் விளைவால் மகிழ்ச்சியான இதயங்களுடன் அனைத்து தகுதியும் கொண்ட அந்தப் புனிதமான சரஸ்வதியின் கரையில் அமர்ந்திருந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(51)

தேவசேனாதிபதியானான் கந்தன்! – சல்லிய பர்வம் பகுதி – 45-ஸ்கந்தனை தேவர்களின் படைத்தலைவனாக முடிசூட்டிய பிருஹஸ்பதி, ஸ்கந்தனுக்குத் துணைவர்களைக் கொடுத்த தேவர்கள்; அந்தத் துணைவர்களின் பெயர்கள், தன்மைகள் மற்றும் உடற்கூறுகள்; அவர்கள் பேசிய மொழிகள்; அந்தத் துணைவர்களின் மகிழ்ச்சிக்கூத்து…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிருஹஸ்பதி, பதவியேற்பு விழாவுக்கெனச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேகரித்து, சுடர் மிக்க நெருப்பில் ஆகுதிகளை முறையாக ஊற்றினார்.(1) இமவான் {இமயமலை}, விலைமதிப்புமிக்க ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட இருக்கை ஒன்றைக் கொடுத்தான். சிறந்த ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், மங்கலமானதுமான அந்தச் சிறந்த ஆசனத்தில் கார்த்திகேயன் அமர வைக்கப்பட்டான்.(2) தேவர்கள், அவ்வகை விழாவுக்குத் தேவையான அனைத்து மங்கலப் பொருட்களையும் உரிய சடங்குகள் மற்றும் மந்திரங்களுடன் அங்கே கொண்டு வந்தனர்.(3)

பெருஞ்சக்தி கொண்ட இந்திரன் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும், சூரியன், சந்திரமாஸ், தாத்ரி, விதாத்ரி, வாயு, அக்னி,(4) பூஷன், பகன், அர்யமான், அம்சன், விவஸ்வான், பெரும் நுண்ணறிவைக் கொண்ட ருத்திரன், மித்திரன்,(5) (பதினோரு) ருத்திரர்கள், (எட்டு) வசுக்கள், (பனிரெண்டு) ஆதித்தியர்கள், (இரட்டையர்களான) அஸ்வினிகள், விஸ்வதேவர்கள், மருத்துக்கள் ஆகிய பல்வேறு தேவர்களும், சாத்யர்கள், பித்ருக்கள்,(6) கந்தர்வர்கள், அப்சரஸ்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள் ஆகியோரும், எண்ணற்ற தெய்வீக முனிவர்களும்,(7) வைகானஸர்கள், வாலகில்யர்கள் ஆகியோரும், பிற முனிகளில் காற்றை மட்டுமே உண்டு வாழ்வோர் மற்றும் சூரியக்கதிர்களை மட்டுமே உண்டு வாழ்வோருமாகிய பிருகு மற்றும் அங்கீரஸின் வழித்தோன்றல்களும், உயர் ஆன்ம யதிகள் பலரும்,(8) வித்யாதர்கள் அனைவரும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட அனைவரும்,(9) பெரும்பாட்டன் {பிரம்மன்}, புலஸ்தியர், பெரும் தவத்தகுதியைக் கொண்ட புலஹர், அங்கிரஸ், கசியபர், அத்ரி, மரீசி, பிருகு, கிரது, ஹரன், பிரசேதஸ், மனு, தக்ஷன் ஆகியோரும்,(10) காலங்கள், கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவையும், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, வடிவமேற்றுக் கொண்ட ஆறுகள் அனைத்தும், நித்திய வேதங்களும்,(11) கடல்கள், தடாகங்கள், பல்வேறு தீர்த்தங்கள், பூமி, வானம், முக்கிய மற்றும் துணைத்திசைகள் ஆகியவையும், மரங்கள் அனைத்தும், ஓ! மன்னா {ஜனமேஜயா},(12) தேவர்களின் தாயான அதிதி, ஹ்ரீ, ஸ்ரீ, சுவாஹா, சரஸ்வதி, உமை, சச்சி, சினீவாலி, அனுமதி, குஹு ஆகியோரும்,(13) புதுநிலவின் நாள் {அமாவாசையின்} வடிவமும், முழு நிலவின் நாள் {பௌர்ணமியின்} வடிவமும், சொர்க்கவாசிகளின் மனைவியரும், இமவான் {இமயமலை}, விந்தியம், பல முகடுகளைக் கொண்ட மேரு ஆகியவையும், தன் தொண்டர்களுடன் கூடிய ஐராவதனும், கலை, காஷ்டை, மாதம், அரைமாதம் {பிறைநாட்கள்}, ருது, இரவு, பகல் என்றழைக்கப்படும் காலத்தின் பிரிவுகளும், ஓ! மன்னா,(15) குதிரைகளின் இளவரசனான உச்சைஸ்ரவம், பாம்புகளின் மன்னனான வாசுகி, அருணன், கருடன் ஆகியோரும், மரங்கள் மற்றும் மூலிகைகளும்,(16) போற்றுதலுக்குரிய தர்மன் ஆகியோர் அனைவரும் ஒன்றாக அங்கே வந்தனர். காலன், யமன், மிருத்யு மற்றும் யமனின் தொண்டர்களும் அங்கே வந்தனர்.(17) பட்டியல் இன்னும் பெருகும் என்ற அச்சத்தால், அங்கே வந்த இன்னும் பல்வேறு தேவர்களைக் குறித்து நான் இங்கே சொல்லவில்லை. படைத்தலைவனாகக் கார்த்திகேயன் பொறுப்பேற்றுக் கொள்ளும் அவ்விழாவிற்கு இவர்கள் அனைவரும் வந்தனர்.(18)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, சொர்க்கவாசிகள் அனைவரும், அவ்விழாவுக்குத் தேவையான மங்கலப் பொருட்கள் அனைத்தையும் அங்கே கொண்டு வந்தனர்.(19) மகிழ்ச்சியால் நிறைந்த சொர்க்கவாசிகள், அக்காரியத்திற்குத் தேவையான புனிதமான பொருட்களுடன் கூடிய தங்கக் குடங்களில், சரஸ்வதியின் சிறந்த, புனிதமான நீரை, அசுரர்களுக்குப் பயங்கரனான அந்த உயர்ஆன்ம இளைஞனின் {ஸ்கந்தனின்} தலையில் ஊற்றி, அவனைத் தேவர்களின் படைத்தலைவனாக்கினர்.(20,21) உலங்கங்களின் பெரும்பாட்டனான பிரம்மன், பெரும் சக்தி கொண்டவரான கசியபர், இங்கே (குறிப்பிடப்பட்ட மற்றும்) குறிப்பிடப்படாத வேறு சிலர் ஆகியோர் அனைவரும், நீர்நிலைகளின் தலைவனாக வருணனை அமர்த்துவதற்காக, அவனது தலையில் நீரை ஊற்றியதுபோலவே ஸ்கந்தனின் தலையிலும் நீரை ஊற்றினர்.(22) அப்போது இதயம் நிறைந்தவனான தலைவன் பிரம்மன், பெரும் வலிமையைக் கொண்டவர்களும், காற்றின் வேகத்துடன் கூடியவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், நினைத்தமாத்திரத்தில் பெருகும் சக்தியைக் கொடையாகக் கொண்டவர்களுமான நான்கு துணைவர்களை ஸ்கந்தனுக்கு அளித்தான்.(23) அவர்கள் நந்திசேனன், லோஹிதாக்ஷன், கண்டாகர்ணன், குமுதமாலி என்ற பெயர்களைக் கொண்டவர்களாவர்.(24)

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தலைவன் ஸ்தாணு, நூறு மாயைகளை உண்டாக்கவல்லவனும், பெரும் வேகம் கொண்டவனும், பெருகக்கூடியவையான பெரும் வலிமையும், சக்தியும் கொண்டவனுமான ஒரு துணைவனை[1] ஸ்கந்தனுக்குக் கொடுத்தான். அவன், அசுரர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்துபவனாக இருந்தான்.(25) தேவர்களுக்கும், அசுரர்களுக்குமான பெரும்போரில், ஸ்தாணுவால் கொடுக்கப்பட்ட இந்தத் துணைவன், கோபத்தால் நிறைந்து, கடுஞ்செயல்களைப் புரிபவர்களான பதினான்கு லட்சம் {14,00,000} தைத்தியர்களைத் தன் வெறுங்கரத்தினாலேயே கொன்றான்.(26) அதன்பிறகு தேவர்கள், வெல்லப்பட முடியாததும், தெய்வீகத் துருப்புகள் நிறைந்ததும், தேவர்களின் எதிரிகளை அழிக்கவல்லதும், விஷ்ணுவைப் போன்ற வடிவங்களைக் கொண்டதுமான தேவர்களின் படையை ஸ்கந்தனிடம் ஒப்படைத்தனர்.(27) அப்போது, வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்களும், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், முனிவர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகியோர் அனைவரும், “(ஸ்கந்தனுக்கு} வெற்றி” என்று கூச்சலிட்டனர்.(28)

யமன், பெரும் சக்தி, பெரும் காந்தி ஆகியவற்றைக் கொண்டவர்களும், காலனுக்கே ஒப்பானவர்களுமான உன்மாதன் மற்றும் பிரமாதன் ஆகிய இருவரையும் அவனுக்கு {ஸ்கந்தனுக்குத்} துணைவர்களாகக் கொடுத்தான்.(29) பெரும் ஆற்றலைக் கொண்டவனான சூரியன், தன் தொண்டர்களான சுப்ராஜன் மற்றும் பாஸ்வரன் என்ற பெயர்களைக் கொண்ட இருவரை, நிறைந்த இதயத்துடன் கார்த்திகேயனுக்குக் கொடுத்தான்.(30) சோமன் {சந்திரன்}, கைலாச மலைச் சிகரங்களைப் போலத் தெரிந்தவர்களும், எப்போதும் வெண்மாலைகளையும், வெண்களிம்புகளையும் {சந்தனத்தையும்} பயன்படுத்துபவர்களான மணி மற்றும் சுமணி ஆகிய இருவரையும் அவனுக்குத் துணைவர்களாக அளித்தான்.(31) அக்னி, பகைவரின் படைகளைக் கலங்கடிப்பவர்களும், ஜ்வாலாஜிஹ்வன், ஜோதி {ஜ்யோதிஸ்} என்ற பெயர்களைக் கொண்டவர்களுமான வீரத் துணைவர்கள் இருவரை அவனுக்கு {ஸ்கந்தனுக்குக்} கொடுத்தான்.(32) அம்சன், பயங்கரப் பலத்தைக் கொண்டவர்களான பரிகன், வடன், பீமன் ஆகியோரையும், கடுஞ்சீற்றமும், பெரும் சக்தியும் கொண்டவர்களான தஹதி, தஹனன் ஆகிய இருவரையும் சேர்த்து, அந்த ஐவரையும் பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான ஸ்கந்தனுக்குத் துணைவராக கொடுத்தான்.(33) பகைவீரர்களைக் கொல்பவனான வாசவன் {இந்திரன்}, முறையே வஜ்ரத்தையும், கதாயுதத்தையும் ஆயுதங்களாகக் கொண்டவர்களான, உத்கிரோசன் மற்றும் பஞ்சகன் {ஸ்தகரன்} ஆகியோர் இருவரையும் அக்னியின் மகனுக்கு {ஸ்கந்தனுக்குத்} துணைவர்களாகக் கொடுத்தான்.(34) சிறப்புமிக்க விஷ்ணு, பெரும் வலிமையைக் கொண்டவர்களான சக்ரன், விக்ரமன், சங்கிரமன் என்ற மூன்று துணைவர்களை ஸ்கந்தனுக்குக் கொடுத்தான்.(35)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அஸ்வினிகளோ, அறிவியல்கள் அனைத்திலும் திறம்பெற்றவர்களான வர்த்தனன் மற்றும் நந்தனன் ஆகிய இருவரையும் ஸ்கந்தனுக்குத் துணைவர்களாக இதய நிறைவுடன் கொடுத்தனர்.(36) சிறப்புமிக்கத் தாத்ரியோ {பிரம்மனோ}, குந்தன், குசுமன், குமுதன், டம்பரன், ஆம்பரன் ஆகிய ஐவரையும் ஸ்கந்தனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(37) தாஷ்டிரி {விஸ்வகர்மன்}, பெரும் பலம் கொண்டவர்களான {ஆட்டு முகத்தைக் கொண்டோரான} சக்ரன் {வக்ரன்} மற்றும் அனுசக்ரன் {அனுவக்ரன்} ஆகியோர் இருவரையும், அந்த உயர் ஆன்மாவுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(38) தலைவன் மித்ரன், பெரும் கல்வி, தவத் தகுதி, ஏற்புடைய குணங்கள் ஆகியவற்றைக் கொண்டவர்களும், வரங்களை அருளவல்லவர்களும், மூவுலகங்களாலும் கொண்டாடப்படுபவர்களுமான சுவிரதன், சத்தியசந்தன் ஆகிய இருவரையும் அந்த உயர்ஆன்ம குமாரனுக்கு {ஸ்கந்தனுக்குத்} துணைவர்களாகக் கொடுத்தான்.(39) விதாத்ரி, பெரும்புகழைக் கொண்டவர்களான உயர் ஆன்ம சுப்பிரபன் மற்றும் சுபகர்மன் ஆகிய இருவரையும் அந்தக் கார்த்திகேயனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(40)

பூஷன், ஓ! பாரதா {ஜனமேஜயா}, பெரும் மாயசக்திகளைக் கொண்டவர்களான பாணீத்ரகன், காலிகன் ஆகிய இருவரையும் துணைவர்களாகக் கொடுத்தான்.(41) வாயு, ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, பெரும் பலம் கொண்டவர்களும், மிகப் பெரிய வாயைக் கொண்டவர்களுமான பலன், அதிபலன் ஆகிய இருவரையும் துணைவர்களாகக் கொடுத்தான்.(42) உண்மையை உறுதியாகப் பின்பற்றுபவனான வருணன், திமியின் வாயைப் போன்ற வாய்களைக் கொண்டவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களுமான கூடியவர்களான கசன், அதிகசன் ஆகிய இருவரையும் துணைவர்களாகக் கொடுத்தான்.(43) இமவான் {இமயமலை}, ஓ! மன்னா, சுவர்ச்சஸ், அதிவர்ச்சஸ் ஆகிய இருவரையும் அந்த அக்னியின் மகனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(44) மேரு, ஓ! பாரதா, காஞ்சனன், மேகமாலி ஆகிய இருவரையும் அவனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(45) மனுவும், பெரும் பலத்தையும் ஆற்றலையும் கொண்டவர்களான ஸ்திரன், அஸ்திரன் ஆகிய இருவரையும் அந்த அக்னியின் மகனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(46) விந்தியன் {விந்திய மலை}, பெரும் கற்களைக் கொண்டு போரிடுபவர்களான உச்சிருங்கன், அக்னிசிருங்கன் ஆகிய இருவரையும் அந்த அக்னியின் மகனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(47) சமுத்திரன் {பெருங்கடல்}, பெரும் வலிமைமிக்கவர்களும், கதாயுதம் தரித்தவர்களுமான சங்கிரஹன், விக்ரஹன் ஆகிய இருவரையும் அவனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(48) அழகிய பண்புகளைக் கொண்டவளான பார்வதி, அந்த அக்னியின் மகனுக்கு, உன்மாதன், புஷ்பதந்தன், சங்குகர்ணன் ஆகிய மூவரைத் துணைவர்களாகக் கொடுத்தாள்(49) பாம்புகளின் மன்னனான வாசுகி, ஓ! மனிதர்களில் புலியே, ஜயன், மஹாஜயன் ஆகிய இருவரையும் அந்த அக்னியின் மகனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(50)

அதேபோலவே, பெரும் வலிமை கொண்டவர்களான சாத்யர்கள், ருத்திரர்கள், வசுக்கள், பித்ருக்கள் ஆகியோரும், கடல்கள், ஆறுகள், மலைகள் ஆகியவையும், வேல்கள் மற்றுப் போர்க்கோடரிகளைத் தரித்தவர்களும், பல்வேறு வகை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான துணைவர்களை அந்தப் படைத்தலைவனுக்குக் கொடுத்தனர்.(52) ஸ்கந்தனால் அடையப்பட்டவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்தவர்களும், பல்வேறு வகை ஆடைகள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தவர்களுமான வேறு போராளிகளின் பெயர்களை இப்போது கேட்பாயாக.(53) அவர்கள், சங்குகர்ணன், நிகும்பன், பத்மன், குமுதன், பனிரெண்டு கைகளுடன் கூடிய அநந்தன், கிருஷ்ணன், உபகிருஷ்ணன்,(54) கிராணஸ்வரன், கபிஸ்கந்தன், காஞ்சனாக்ஷன், ஜலந்தமன், அக்ஷசந்தர்ஜனன், குணதீகன், தமோந்தக்ருதன்,(55) ஏகாக்ஷன், துவாதசாக்ஷன், ஏகஜடன், சஹஸ்ரபாகு, விகடன், வியாக்ராக்ஷன், க்ஷிதிகம்பனன்,(56) புண்யநாமன், சுநாமன், சுசக்ரன், பிரயதர்சனன், பரிஸ்ருதன், {யவனான} கோகநதன், பிரியமால்யானுலேபணன்,(57) அஜோதரன், கஜசிரன், ஸ்கந்தாக்ஷன், சதலோசனன், ஜ்வாலாஜிஹ்வன், கராளன், சிதகேசன், ஜடி, ஹரி,(58) {பரிஸ்ருதன், கோகநதன்}, கிருஷ்ணகேசன், ஜடாதரன், சதுர்த்தம்ஷ்டிரன், அஷ்டஜிஹ்வன், மேகநாதன், பிருதுஸ்ரவன்,(59) வித்யுதாக்ஷன், தனுர்வக்தரன், ஜாதரன், மாருதாசனன், உதாராக்ஷன், ரதாக்ஷன், வஜ்ரநாபன், வசுப்பிரபன்,(60) சமுத்திரவேகன், சைலகம்பி, விருஷன், மேஷப்பிரவாஹன், நந்தன், உபநந்தகன்,(61) தூம்ரன், சுவேதன், கலிங்கன், சித்தார்த்தன், விரதன், பிரயகன், நந்தன், கோநந்தன்,(62) ஆநந்தன், பிரமோதன், சுவஸ்திகன், திருவகன், க்ஷேமவாஹன், சுவாஹன், சித்தபாத்திரன்,(63) கோவ்ரஜன், கனகாபீடன், {மஹாபாரிஷதேஸ்வரன்}, காயனன், ஹஸனன், பாணன், கட்கன்,(64) வைதாலி, அதிதாலி, கதகன், வாதிகன், ஹம்ஸனன், பக்ஷதிக்தாங்கன், சமுத்ரோன்மாதனன்,(65) ரணோத்கடன், பிரஹாஸன், சுவேதசித்தன், நந்தகன், காலகண்டன், பிரபாஸன், கும்பாண்டகன்,(66) காலகக்ஷன், சிதன், பூதலோன்மதனன், யஜ்ஞவாஹன், பிரவாஹன் {சுவாஹன்}, தேவயாஜி, சோமபன்,(67) மஜ்ஜானன், {மஹாதேஜன்}, கிரதன், கிராதன், துஹரன், துஹாரன், சித்திரதேவன்,(68) மதுரன், சுப்ரசாதன், கிரீடி, {மகாபலன்}, வத்சலன், மதுவர்ணன், கலசோதரன்,(69) தர்மதன், மன்மதகரன், சூசீவக்தரன், சுவேதவக்தரன், சுவக்தரன், சாருவக்தரன், பாண்டுரன்,(70) தண்டபாகு, சுபாகு, ரஜன், கோகிலகன், அசலன், கனகாக்ஷன், பாலகரக்ஷகன்,(71) சஞ்சாரகன், கோகநதன், கிருதபத்திரன், ஜம்புகன், லோஹஜவக்தரன், ஜவனன், கும்பவக்தரன், கும்பகன்,(72) முண்டக்ரீவன் {சுவர்ணக்ரீவன்}, கிருஷ்ணௌஜஸ், ஹம்சவக்திரன், சந்திரபன், பாணிகூர்ச்சன், சம்பூகன், பஞ்சவக்தரன், சிக்ஷகன், சாஷவக்தரன், ஜாம்பூகன், காரவக்தரன் {சாகவக்தரன்}, குஞ்சகன், {யோகயோக்தன்} ஆவர்.(73)

இவர்களைத் தவிரக் கடுந்தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருந்தவர்களும், உயர் ஆன்மா கொண்டோருமான மதிப்பிற்குரிய பிராமணர்கள் பலரும் பெரும்பாட்டனால் அவனுக்கு {ஸ்கந்தனுக்குக்} கொடுக்கப்பட்டனர். அவர்களில் சிலர் இளைஞர்களாகவும், சிலர் முதிர்ந்தவர்களாகவும், ஓ! ஜனமேஜயா, சிலர் வயதால் மிக இளையவர்களாகவும் இருந்தனர். இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கானோர் அந்தக் கார்த்திகேயனிடம் வந்தனர்.(75)

அவர்கள் பல்வேறு வகைகளிலான முகங்களைப் பெற்றிருந்தனர். ஓ! ஜனமேஜயா, அவற்றைச் சொல்கிறேன் கேட்பாயாக. அவர்களில் சிலர் ஆமைகளைப் போன்ற முகங்களைக் கொண்டிருந்தனர், சிலர் சேவல்களைப் போன்ற முகங்களைக் கொண்டிருந்தனர். ஓ! பாரதா, சிலரின் முகங்கள் மிக நீளமானவையாக இருந்தன.(76) மேலும் சிலரின் முகங்கள், நாய்கள், ஓநாய்கள், முயல்கள், ஆந்தைகள், கழுதைகள், ஒட்டகங்கள், காட்டுப்பன்றிகளைப் போலிருந்தன.(77) சிலருக்கு மனித முகங்களும், சிலருக்கு, ஆடுகள் மற்றும் நரிகளைப் போன்ற முகங்களும் இருந்தன. சிலர் மகரங்கள் மற்றும் முள்ளம்பன்றிகளின் முகங்களுடன் மிகப் பயங்கரமாக இருந்தனர்.(78) சிலருக்குப் பூனைகளைப் போன்ற முகங்கள் இருந்தன, சிலர் பூச்சிகளைப் போன்ற முகத்தைக் கொண்டிருந்தனர். சிலரின் முகங்கள் மிக நீண்டவையாக இருந்தன. சிலர், கீரிப்பிள்ளை, ஆந்தை மற்றும் காக்கைகளின் முகங்களைக் கொண்டிருந்தனர்.(79) சிலர், எலி, மயில், மீன், செம்மறி ஆடு, வெள்ளாடு, எருமைகள் ஆகியவற்றின் முகங்களைக் கொண்டிருந்தனர்.(80)

சிலரின் முகங்கள், கரடிகள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் சிங்கங்களுக்கு ஒப்பானவையாக இருந்தன. சிலர் யானைகள் மற்றும் முதலைகளின் முகங்களைக் கொண்டிருந்தனர்.(81) சிலரின் முகங்கள் கருடன், காண்டாமிருகம், ஓநாய்கள் ஆகியவற்றைப் போல இருந்தன. சிலர், பசுக்கள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், பூனைகள் ஆகியவற்றின் முகங்களைக் கொண்டிருந்தனர்.(82) வயிறு, கால்கள் மற்றும் அங்கங்கள் பெருத்தவர்களான சிலரின் கண்கள் நட்சத்திரங்களைப் போல இருந்தன. சிலரின் முகங்கள் புறாக்கள் மற்றும் காளைகளைப் போல இருந்தன.(83) சிலரின் முகங்கள் கோகிலங்கள் {குயில்கள்}, பருந்துகள், தித்திரிகள், பல்லிகள் ஆகியவற்றைப் போல இருந்தன. சிலர் வெள்ளுடை உடுத்தியிருந்தனர்.(84) சிலர் பாம்புகளைப் போன்ற முகங்களைக் கொண்டிருந்தனர். சிலரின் முகங்கள் முள்ளம்பன்றிகளுக்கு ஒப்பானதாக இருந்தன. உண்மையில், சிலர் பயங்கர முகங்களையும், சிலர் இனிய முகங்களையும் பெற்றிருந்தனர். சிலர் பாம்புகளையே தங்கள் ஆடையாக உடுத்தியிருந்தனர். சிலரின் முகங்களும், மூக்குகளும் மாடுகளுக்கு ஒப்பானவையாக இருந்தன.(85)

சிலர் துருத்திக் கொண்டிருக்கும் பெரிய வயிறுகளையும், ஆனால் மிக மெலிந்த அங்கங்களையும் கொண்டிருந்தனர். சிலர் பெரிய அங்கங்களையும், ஆனால் மிக மெலிந்த வயிற்றையும் கொண்டிருந்தனர். சிலரின் கழுத்துகள் குட்டையாக இருந்தன. சிலரின் காதுகள் மிகப் பெரியனவாக இருந்தன. சிலர் பல்வேறு வகைப் பாம்புகளைத் தங்கள் ஆபரணங்களாகக் கொண்டிருந்தனர்.(86) சிலர் பெரிய யானைகளின் தோல்களையும், சிலர் கருப்பு மான்தோல்களையும் உடுத்தியிருந்தனர். சிலரின் வாய்கள் அவர்களின் தோள்களில் இருந்தன.(87)சிலருக்குத் தங்கள் வாய்களை வயிற்றிலேயேயும், சிலர் முதுகிலேயும், சிலர் கன்னங்களிலேயும், சிலர் தங்கள் கணுக்கால்களிலும், சிலர் இடையிலேயும், கொண்டிருந்தனர். மேலும் பலரின் வாய்கள் அவர்களின் உடலுடைய பிற பகுதிகளில் இருந்தன.(88) அந்தத் துருப்புகளின் தலைவர்களுக்கு மத்தியில் பலரின் முகங்கள் புழு மற்றும் பூச்சிகளைப் போல இருந்தன. அவர்களில் பலரின் வாய்கள், இரைதேடும் பல்வேறு விலங்குகளின் வாய்களைப் போல இருந்தன. சிலர் பல கரங்களையும், சிலர் பல தலைகளையும் பெற்றிருந்தனர்.(89) சிலரின் கரங்கள் மரங்களுக்கு ஒப்பானவையாக இருந்தன, சிலரின் முகங்கள் சிங்கங்களின் முகங்களுக்கு ஒப்பானவையாக இருந்தன. சிலரின் முகங்கள் பாம்புகளின் உடல்களைப் போல வழுவழுப்பானவையாக இருந்தன. அவர்களில் பலரின் வசிப்பிடங்கள் பல்வேறு வகைச் செடிகள் மற்றும் மூலிகைகளில் இருந்தன.(90)

சிலர் மரவுரியை உடுத்தியிருந்தனர், சிலர் பல்வேறு வகை எலும்புகளை உடுத்தியிருந்தனர், பல்வேறு வகைகளில் ஆடையுடுத்தியிருந்தனர். சிலர் பல்வேறு வகை மாலைகளாலும், பல்வேறு வகைச் சந்தனங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தனர்.(91) பல்வேறு வகைகளில் ஆடையுடுத்தியிருந்த அவர்களில் சிலர் தோல்களையே தங்கள் ஆடையாகக் கொண்டிருந்தனர். சிலர் தலைக்கவசங்களை அணிந்திருந்தனர். சிலரின் புருவங்கள் சுருங்கி நெற்றியில் கோடுகள் இருந்தன. சிலரின் கழுத்துகளில் சங்குகளில் காணப்படும் குறிகள் தென்பட்டன. சிலர் பெரும் பிரகாசத்தைக் கொண்டிருந்தனர்.(92) சிலர் கிரீடங்களைத் தரித்திருந்தனர். சிலர் தங்கள் தலைகளில் ஐந்து குடுமிகள் வைத்திருந்தனர், சிலர் முரட்டு மயிரைக் கொண்டிருந்தனர். சிலர் இரண்டு குடுமிகளையும், சிலர் மூன்றையும், சிலர் ஏழு குடுமிகளையும் கொண்டிருந்தனர்.(93) சிலரின் தலைகளில் இறகுகளைக் கொடிருந்தனர், சிலர் மகுடங்களைக் கொண்டிருந்தனர். சிலரின் தலைகள் முற்றிலும் வழுக்கையாக இருந்தன. சிலர் சடாமுடி தரித்திருந்தனர். சிலர் அழகிய மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். சிலரின் முகங்களில் மயிர் அடர்த்தியாக இருந்தது.(94) போர் ஒன்றே அவர்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்வைக் கொடுத்தது. அவர்கள் அனைவரும் தேவர்களில் முதன்மையானோராலும் வெல்லப்பட முடியாதவர்களாக இருந்தனர். அவர்களில் பலர், பல்வேறு வகைத் தெய்வீக ஆடைகளை அணிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் போரில் விருப்பம் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(95)

சிலர் கரிய நிறம் கொண்டவர்களாக இருந்தனர். சிலரின் முகங்களில் சதையே இல்லாமல் இருந்தது. சிலர் மிக நீண்ட முதுகுகளைக் கொண்டிருந்தனர், சிலருக்கு வயிறுகளே இல்லை. சிலரின் முதுகுகள் பெரியனவாக இருந்தன, சிலருக்கு மிகக் குறுகியவையாக இருந்தன. சிலர் நீண்ட வயிறுகளையும், சிலர் நீண்ட அங்கங்களையும் கொண்டிருந்தனர்.(96) சிலரின் கரங்கள் மிக நீண்டவையாக இருந்தன, அதேவேளையில் சிலரின் கரங்கள் குட்டையாகவும் இருந்தன. சிலர் குட்டையான அங்கங்களையுடைய குள்ளர்களாக இருந்தனர். சிலர் கூன்முதுகு கொண்டவர்களாக இருந்தனர். சிலர் குறுகிய இடை கொண்டவர்களாக இருந்தனர். சிலரின் காதுகளும், தலைகளும் யானைகளைப் போல இருந்தன.(97) சிலர் ஆமைகளைப் போன்ற மூக்குகளைக் கொண்டிருந்தனர். சிலருக்கு {மூக்குகள்} ஓநாய்களைப் போல இருந்தன. சிலருக்கு நீண்ட உதடுகள் இருந்தன, சிலருக்கு நீண்ட இடை இருந்தது. சிலர் பயங்கரமான தோற்றத்துடனும், கீழ்நோக்கிய முகங்களைக் கொண்டவர்களாக இருந்தனர்.(98) சிலர் மிக நீண்ட பற்களைக் கொண்டிருந்தனர், சிலர் குட்டையான பற்களைக் கொண்டிருந்தனர். சிலருக்கு நாலே பற்கள்தான் இருந்தன. அவர்களில் ஆயிரக்கணக்கானோர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, மதங்கொண்ட பெருவடிவ யானைகளைப் போல மிகப் பயங்கரமாக இருந்தனர்.(99) நல்ல உடற்கட்டைக் கொண்ட சிலர், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுப் பெருங்காந்தியுடன் திகழ்ந்தனர். சிலருக்கு மஞ்சள் கண்கள் இருந்தன. சிலருக்கு அம்புகளைப் போன்ற காதுகள் இருந்தன. ஓ! பாரதா, சிலருக்குக் கங்கை நீர் முதலைகளைப் போன்ற {சிவந்த} மூக்குகள் இருந்தன.(100)

சிலர் அகன்ற பற்களையும் சிலர் அகன்ற உதடுகளையும், சிலர் பச்சை மயிர்களையும் கொண்டிருந்தனர். பல்வேறு வகையான பாதங்கள், உதடுகள், பற்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்த அவர்கள், பல்வேறு வகைக் கரங்களையும், தலைகளையும் கொண்டிருந்தனர்.(101) ஓ! பாரதா {ஜனமேஜயா}, பல்வேறு வகைத் தோல்களை உடுத்தியிருந்த அவர்கள், பல்வேறு வகை மொழிகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.அந்தப் பலமிக்கவர்கள் அனைத்து மாகாணங்களின் வட்டாரப் பேச்சுமொழிகளிலும் திறனுடன் கூடியவர்களாக ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருந்தனர்.(102) வலிமைமிக்கவர்களான அந்தத் துணைவர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, (கார்த்திகேயனைச் சுற்றிலும்) முட்செடிகளை வெட்டிக் கொண்டு, அங்கே குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். சிலர் நீண்ட கழுத்துகளையும், சிலர் நீண்ட நகங்களையும், சிலர் நீண்ட கால்களையும் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் பெரிய தலைகளையும், சிலர் பெரிய கரங்களையும் கொண்டிருந்தனர்.(103) சிலரின் கண்கள் மஞ்சளாக இருந்தன, சிலரின் தொண்டைகள் நீலமாக இருந்தன, ஓ! பாரதா, சிலரின் காதுகள் மிக நீண்டவையாக இருந்தன. சிலரின் வயிறுகள் கரிய மைக்குவியலைப் போல இருந்தன.(104) சிலரின் கண்கள் வெண்மையாக இருந்தன, சிலரின் கழுத்துகள் சிவப்பாக இருந்தன, ஓ! மன்னா, சிலரோ பழுப்பு நிறக் கண்களைக் கொண்டிருந்தனர். கரிய நிறம் கொண்ட பலரும், ஓ!பாரதா, பல்வேறு நிறங்களைக் கொண்ட பலரும் அங்கே இருந்தனர்.(105) சிலர் வெண்சாமரங்களைப் போன்ற ஆபரணங்களைத் தங்கள் மேனியில் தரித்திருந்தனர். சிலர் தங்கள் உடல்களில் வெண்கோடுகளையும் {ரேகைகளையும்}, சிலர் சிவப்பு கோடுகளையும் கொண்டிருந்தனர். பல்வேறு நிறங்களில் சிலரும், தங்க நிறத்தில் சிலரும், மயில்களைப் போன்ற காந்தியுடன் கூடியவர்களாகச் சிலரும் இருந்தனர்.(106)

இறுதியாகக் கார்த்திகேயனிடம் வந்தோர் தரித்திருந்த ஆயுதங்களைக் குறித்துச் சொல்கிறேன். கேட்பாயாக.(107) சிலர் தங்கள் உயர்த்தப்பட்ட கரங்களில் சுருக்குக் கயிறுகளைக் கொண்டிருந்தனர். அவர்களது முகங்கள் புலிகளைப் போன்றும், கழுதைகளைப் போன்றும் இருந்தன. அவர்கள் கண்கள் கரியனவாகவும், அவர்களது தொண்டைகள் நீலமாகவும், அவர்களது கரங்கள் முள்பதித்த தண்டாயுதங்களுக்கு {பரிகங்களுக்கு} ஒப்பானவையாகவும் இருந்தன.(108) சிலர் சதக்னிகளையும், சக்கரங்களையும் கொண்டிருந்தனர், சிலர் கனத்த குறுங்கதாயுதங்களைக் கொண்டிருந்தனர். ஓ! பாரதா, சிலர் வாள்களையும், உலக்கைகளையும், தண்டாயுதங்களையும் கொண்டிருந்தனர்.(109) பெரும் வடிவமும், பெரும்பலமும் கொண்ட சிலர், வேல்களையும், வாள்களையும் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் கரங்களில் கதாயுதங்களையும், புசுண்டிகளையும், சிலர் சூலங்களையும் கொண்டிருந்தனர்.(110) உயர் ஆன்மாவும், பெரும்பலமும், பெரும் வேகமும், மூர்க்கமும் கொண்ட அந்த வலிமைமிக்கத் துணைவர்கள், தங்கள் கரங்களில் பல்வேறு வகையான பயங்கர ஆயுதங்களைக் கொண்டிருந்தனர்.(111)

வலிமையும், சக்தியும் கொண்டவர்களும், போரில் திளைப்பவர்களுமான அவர்கள், கார்த்திகேயனின் பட்டமேற்பைக் கண்டு, கிங்கிணி மணி வரிசைகளைத் தங்கள் மேனியில் தரித்துக் கொண்டு, அவனை {ஸ்கந்தனைச்} சுற்றிலும் ஆடிக் கொண்டிருந்தனர்.(112) ஓ! மன்னா, இவர்களும், இன்னும் பல வலிமைமிக்கத் துணைவர்களும், உயர் ஆன்மா கொண்டவனும், சிறப்புமிக்கவனுமான கார்த்திகேயனிடம் வந்தனர்.(113) சிலர் தேவலோகத்தைச் சேர்ந்தவர்களாகவும், சிலர் வானத்தைச் சேர்ந்தவர்களாகவும், சிலர் பூலோகத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் காற்றின் வேகத்தைக் கொண்டவர்களாக இருந்தனர். துணிச்சல்மிக்கவர்களும், வலிமைமிக்கவர்களுமான அவர்கள், தேவர்களால் ஆணையிடப்பட்டுக் கார்த்திகேயனின் துணைவர்களானார்கள்.(114) ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான இத்தகையோர் உயர் ஆன்ம கார்த்திகேயனின் பட்டமேற்புக்கு வந்து, அவனைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(115)

கிரௌஞ்ச மலையைப் பிளந்த கந்தன்! – சல்லிய பர்வம் பகுதி – 46-ஸ்கந்தனின் போர்த்துணைவர்களாக இருந்த தாய்மாரின் பெயர்கள்; மயிலையும், சேவலையும் அடைந்த ஸ்கந்தன்; தாரகாசுரன், மஹிஷன், திரிபாதன், ஹிரதோததரன் மற்றும் பாணன் ஆகியோரை ஸ்கந்தன் கொன்றது; கிரௌஞ்ச மலையைப் பிளந்த ஸ்கந்தன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! வீரா, எதிரிகளைக் கொல்பவர்களும், குமாரனின் துணைவர்களானவர்களுமான தாய்மாரின் பெருங்கூட்டத்தில் அடங்கியோரின் {மாத்ருகணங்களின்} பெயர்களை இப்போது சொல்லப் போகிறேன்.(1) ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்தச் சிறப்புமிக்கத் தாய்மாரின் பெயர்களைக் கேட்பாயாக. இவ்வண்டத்தில் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றில் இந்த மங்கலமானவர்கள் படர்ந்தூடுருவியிருக்கிறார்கள்.(2)

அவர்கள், பிரபாவதி, விசாலாக்ஷி, பாலிதை, கோனாசி {கோஸ்தனி}, ஸ்ரீமதி, பகுலை, பகுபுத்திரிகை,(3) அப்சுஜாதை, கோபாலி, பிருஹதம்பாலிகை, ஜயாவதி, மாலதிகை, திருவரத்னை, பயங்கரி,(4) வசுதாமை, சுதாமை, விசோகை, நந்தினி, ஏகசூடை, மஹாசூடை, சக்ரநேமி,(5) உத்தேஜனை, ஜயத்ஸேனை, கமலாக்ஷி, சோபனை, சத்ருஞ்சயை, குரோதனை, சலபி, கரி,(6) மாகதி {மாதவி}, சுபவக்தரை, தீர்த்தசேனி, கீதப்பிரியை, கல்யாணி, கோத்ருரோமை {ருத்ரரோமை}, அமிதாசனை,(7) மேகஸ்வனை, போகவதி, சுப்ரு, கனகாவதி, அலாதாக்ஷி, வீர்யவதி, வித்யுஜ்ஜிஹ்வை,(8) பத்மாவதி, சுநக்ஷத்ரை, கந்தரை, பகுயோஜனை, சந்தாநிகை, கமலை, மஹாபலை,(9) சுதாமை, பகுதாமை, சுப்ரபை, யசஸ்விநி, நிருத்யப்பிரியை, சதோலூகலமேகலை,(10) சதகண்டை, சதாநந்தை, பகநந்தை, பாவிநி, வபுஷ்மதி, சந்திரசீதை, பத்ரகாளி,(11) ஜங்காரிகை {ருக்ஷாம்பிகை}, நிஷ்குந்திகை {நிஷ்குடிகை}, வாமை, சத்வரவாஸிநீ, சுமங்கலை, ஸ்வஸ்திமதி {ஸ்வஸ்திமி}, பிருத்திகாமை {புத்திகாமை}, ஜயப்பிரியை,(12) கனதை {தனதை}, சுப்ரசாதை, பவதை, ஜலேஸ்வரி, ஏடீ, பேடீ, சமேடீ, வேதாளோஜநநி,(13) கண்டூதி, காலிகை, தேவமித்திரை, தம்புசி {வசுஸ்ரீ}, கேதகி {கோடரை}, சித்திரசேனை, அசலை,(14) குக்குடிகை, சங்கலிகை, சகுனிகை, குண்டாரிகை, கோகுலிகை {கௌகுலிகை}, கும்பிகை, சதோதரி,(15) உத்கிராதினி, ஜலேலை, மஹாவேகை, கங்கணை, மனோஜவை, கண்டகினி, பிரஹஸை, பூதனை {பீதனை},(16) கேசயை {கேசயந்தரி}, அந்தர்கதி {த்ருடி}, வாமை, குரோசனை, தடித்பிரபை, மந்தோதரி, துஹுண்டி {முண்டி}, கோடரை, மேகவாஹிநி,(17) சுபாகை {சுபிகை}, லம்பினி, லம்பை, வசுசூடை {தாம்ரசூடை}, விகாதினி {விகாசினி}, ஊர்த்வவேணிதரை, பிங்காக்ஷி, லோஹமேகலை,(18) பிருதுவக்தரை {பிருதுவஸ்திரை}, மதுலிகை, மதுகும்பை, யக்ஷாலிகை, மத்சுனிகை {மத்குலிகை}, ஜராயு, ஜர்ஜராநனை,(19) கியாதை, தஹதஹை, தமதமை, கண்டகண்டை, பூஷணை, மணிகுட்டிகை,(20) அமோகை, லம்பபயோதரை, வேணுவீணாதரை, பிங்காக்ஷி, லோஹமேக்ஷலை,(21) சசோலூகமுகி, கிருஷ்ணை, கரஜங்கை, மஹாஜவை, சிசுமாரமுகி, ஸ்வேதை, லோஹிதாக்ஷி, விபீஷணை,(22) ஜடாலிகை, காமசரி, தீர்க்கஜிஹ்வை, பலோத்கடை, காலேஹிகை, வாமனிகை, முகுடை,(23) லோஹிதாக்ஷி, மஹாகாயை, ஹரிபிண்டை, ஏகத்வசை, சுகுசுமை, கிருஷ்ணகர்ணி,(24) க்ஷுரகர்ணி, சதுஷ்கர்ணி, கர்ணப்பிராவரணை, சதுஷ்பதநிகேதை, கோகர்ணி, மஹிஷாநனை,(25) கரகர்ணி, மஹாகர்ணி, பேரீஸ்வனமஹாஸ்வனை, சங்ககும்பஸ்ரவை, பகதை,(26) {மஹாபலை}, கணை, சுகணை, பீநி, காமதை, சதுஷ்பதரதை, பூதிதீர்த்தை, அந்யகோசரை,(27) பசுதை, வித்ததை, சுகதை, மஹாயசை, பயோதை, கோமஹிஷதை, ஸவிசாலை,(28) பிரதிஷ்டை, சுப்ரதிஷ்டை, ரோசமானை, சுரோசனை, நௌகர்ணி {கௌகர்ணி}, முககர்ணி, வசிரை, மந்தினி, ஏகவக்தரை {ஏகசந்திரை}, மேகரவை {மேககர்ணை}, மேகமாலை, விரோசனை ஆகியோர் ஆவர்.(29) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, இவர்களும், பல்வேறு வடிவங்களைக் கொண்ட இன்னும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் பலரும் கார்த்திகேயனின் தொண்டர்களானார்கள்.(30)

அவர்களது நகங்கள் நீளமானைவையாக இருந்தன, ஓ! பாரதா, அவர்களின் பற்களும், உதடுகளும் அகன்றனவையாகத் துருத்திக் கொண்டு இருந்தன. நேரான வடிவங்களும், இனிய பண்புகளைக் கொண்டு இளமையுடன் இருந்த அவர்கள் அனைவரும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.(31) தவத் தகுதியைக் கொண்ட அவர்கள் அனைவரும் விரும்பிய வடிவை ஏற்றுக்கொள்ளவல்லவர்களாகவும் இருந்தனர். அவர்கள், தங்கள் அங்கங்களில் அதிகச் சதைப்பற்றில்லாதவர்களாகவும், நல்ல நிறத்தைக் கொண்டவர்களாகவும், தங்கத்தின் காந்தியையும் கொண்டிருந்தனர்.(32) அவர்களில் கருப்பாக இருந்த சிலர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மேகங்களின் வண்ணத்தில் இருந்தனர், சிலர் புகையின் வண்ணத்தில் இருந்தனர். காலைச் சூரியனின் காந்தியைக் கொண்டிருந்த சிலர் உயர்ந்த அருள் கொண்டவர்களாக இருந்தனர். நீண்ட குழல்களை {கேசத்தைக்} கொண்டிருந்த அவர்கள் வெள்ளுடை உடுத்தியிருந்தனர்.(33) சிலரின் சடை மேல் நோக்கிப் பின்னப்பட்டிருந்தது, சிலரின் கண்கள் பழுப்பு நிறத்தில் இருந்தன, சிலரது இடுப்புக் கச்சைகள் மிக நீண்டவையாக இருந்தன. சிலர் நீண்ட வயிறுகளையும், நீண்ட காதுகளையும், நீண்டு தொங்கும் முலைகளையும் கொண்டிருந்தனர்.(34) சிலர் தாமிரக் கண்களையும், தாமிர நிறத்தையும், பச்சைக் கண்களையும் கொண்டிருந்தனர். அவர்கள், வரங்களை அருளவல்லவர்களாகவும், விருப்பப்படி திரிபவர்களாகவும் எப்போதும் உற்சாகத்துடன் கூடியவர்களாகவும் இருந்தனர்.(35)

ஓ! எதிரிகளை எரிப்பவனே {ஜனமேஜயா}, பெரும் பலம் கொண்ட சிலர், யமனின் இயல்பையும், சிலர் ருத்திரனின் இயல்பையும், சிலர் சோமன், சிலர் குபேரன், சிலர் வருணன், சிலர் இந்திரன், சிலர் அக்னி என அவரவர் இயல்புகளிலும் பங்கு கொண்டனர்.(36) ஓ! பாரதக்குலத்தின் காளையே, சிலர், வாயு, குமாரன், பிரம்மன், விஷ்ணு, சூரியன், வராஹன் ஆகியோரின் இயல்புகளிலும் பங்கு கொண்டனர்.(37) இனிய அழகிய பண்புகளைக் கொண்ட அவர்கள் அப்சரஸ்களைப் போன்ற அழகுடையவர்களாக இருந்தனர். குரலில் கோகிலத்தை {குயிலைப்} போலவும், செழிப்பில் பொக்கிஷத் தலைவனை {குபேரனைப்} போலவும் அவர்கள் இருந்தனர்.(38)

போரில், அவர்களது சக்தி சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானதாக இருந்தது. காந்தியில் அவர்கள் நெருப்புக்கு ஒப்பானவர்களாக இருந்தனர். போரில் அவர்கள் எப்போதும் தங்கள் எதிரிகளைப் பீதியடையச் செய்தனர்.(39) விரும்பிய வடிவத்தை ஏற்க வல்லவர்களாகவும், காற்றின் வேகத்தைக் கொண்டவர்களாகவும் அவர்கள் இருந்தனர். கற்பனைக்கெட்டாத வலிமையும், சக்தியும் கொண்ட அவர்களின் ஆற்றலும் கற்பனைக்கெட்டாத வகையிலேயே இருந்தது.(40) மரங்கள், திறந்தவெளிகள் மற்றும் சாலைகளின் நாற்சந்திகள் ஆகியவற்றில் அவர்கள் தங்கள் வசிப்பிடங்களைக் கொண்டிருந்தனர். குகைகள், சுடலை {சுடுகாடு}, மலைகள் மற்றும் அருவிகளிலும் அவர்கள் வாழ்ந்தனர்.(41) அவர்கள் பல்வேறு வகையிலான ஆபரணங்களைப் பூண்டிருந்தனர், பல்வேறு வகையான ஆடைகளை உடுத்தியிருந்தனர், பல்வேறு மொழிகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.(42) எதிரிகளை அச்சத்தில் ஆழ்த்தவல்ல இவர்களும், (தாய்மாரின்) இன்னும் பிற இனங்களும்  சேர்ந்து, தேவர்களின் தலைவனுடைய {இந்திரனுடைய} ஆணைக்கிணங்க உயர் ஆன்ம கார்த்திகேயனைப் பின்பற்றினர்.(43)

பகனைத் தண்டித்த போற்றுதலுக்குரியவன் {இந்திரன்}, ஓ! மனிதர்களில் புலியே அந்தக் குஹனுக்கு (கார்த்திகேயனுக்கு), தேவர்களின் எதிரிகளை அழிக்கவல்ல ஓர் ஈட்டியை {வேலைக்} கொடுத்தான்.(44) விஸ் என்ற பேரொலியை உண்டாக்கும் அந்த ஈட்டி பல பெரிய மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெரும் காந்தியைக் கொண்டிருந்த அஃது, ஒளியால் சுடர்விடுவதாகத் தெரிந்தது. மேலும் இந்திரன் அவனுக்குக் காலைச் சூரியனைப் போன்ற ஒரு பிரகாசமான கொடியையும் கொடுத்தான்.(45)

சிவன், கடுஞ்சீற்றமிக்கதும், பல்வேறு வகை ஆயுதங்களைத் தரித்திருப்பதும், தவத்தால் பெறப்பட்ட பெருஞ்சக்தியைக் கொண்டதுமான ஒரு பெரும் படையை அவனுக்குக் {கார்த்திகேயனுக்குக்} கொடுத்தான்.(46) ஒரு நல்ல படைக்குண்டான நல்ல குணங்கள் அனைத்தையும் கொண்டதும் வெல்லப்பட முடியாததுமான அந்தப் படை தனஞ்சயம் என்ற பெயரால் அறியப்பட்டது. ருத்திரனுக்கு இணையான வலிமையைக் கொண்ட முப்பதாயிரம் {30,000} போர்வீரர்களால் அது பாதுகாக்கப்பட்டது. அந்தப் படைக்குப் போரில் இருந்து தப்பி ஓடுவது எவ்வாறு என்பது தெரியாது.(47)

விஷ்ணு, சூடிக் கொள்பவரின் வலிமையை அதிகரிக்கவல்ல ஒரு வெற்றிமாலையை அவனுக்குக் {கார்த்திகேயனுக்குக்} கொடுத்தான். உமை, சூரியனுக்கு ஒப்பான இரண்டு துண்டு துணிகளைக் கொடுத்தாள்.(48) கங்கை, அமுதத்தைக் கொண்ட ஒரு தெய்வீக நீர்க்குடத்தை அந்தக் குமாரனுக்குப் பெரும் மகிழ்வுடன் கொடுத்தாள். பிருஹஸ்பதி ஒரு புனிதமான தடியை {தண்டத்தை} அவனுக்குக் கொடுத்தான்.(49) கருடன், தனக்குப் பிடித்தமான மகனும், அழகிய இறகுகளையுடையதுமான ஒரு மயிலை அவனுக்குக் கொடுத்தான்.(50) அருணன், கூரிய அலகுகளைக் கொண்ட ஒரு சேவலை அவனுக்குக் கொடுத்தான். அரசன் வருணன், பெரும் சக்தியும், வலிமையும் கொண்ட ஒரு பாம்பை அவனுக்குக் கொடுத்தான்.(51) தலைவன் பிரம்மன், பிரம்மத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அந்தத் தேவனுக்கு {ஸ்கந்தனுக்கு} ஒரு கருப்பு மான்தோலைக் கொடுத்தான். உலகங்கள் அனைத்தையும் படைத்தவனான அவன் {பிரம்மன்}, போர்கள் அனைத்திலும் வெற்றியையும் கொடுத்தான்.(52)

தெய்வீகப் படைகளின் தலைமைப் பொறுப்பை அடைந்த ஸ்கந்தன், பிரகாசமான தழல்களுடன் கூடிய ஒரு சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(53) அந்தத் துணைவர்கள் மற்றும் தாய்மாரின் துணையுடன் கூடிய அவன், தேவர்களில் முதன்மையான அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம், தைத்தியர்களை அழிக்கச் சென்றான்.(54) மணிகளால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களைக் கொண்டதும், பேரிகைகள், சங்குகள், முரசுகள் ஆகியவற்றைக் கொண்டதும், கொடிகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டதுமான தேவர்களின் அந்தப் பயங்கரப் படையானது, கோள்களும், நட்சத்திரங்களும் சிதறிக் கிடக்கும் கூதிர்கால ஆகாயம் போல மிக அழகாகத் தெரிந்தது.(55)

பிறகு, தேவர்களின் அந்தப் பெருங்கூட்டமும், பல்வேறு வகையிலான உயிரினங்களும், ஆயிரக்கணக்கான பேரிகைகளை இசைத்துத் தங்கள் சங்குகளை முழக்கினர்.(56) அவர்கள், படகங்கள் {தம்பட்டங்கள்}, ஜர்ஜரங்கள், கிரகசங்கள், மாட்டுக் கொம்புகள் {கோவிஷாணிகங்கள்}, ஆடம்பரங்கள், கோமுகங்கள் டிண்டிமங்கள் ஆகியவற்றைப் பேரொலியுடன் முழக்கினர்.(57) வாசவனை {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் அனைவரும் அந்தக் குஹனைப் {கார்த்திகேயனைப்} புகழ்ந்தனர். தேவர்களும், கந்தர்வர்களும் பாடினர், அப்சரஸ்கள் நர்த்தனம் புரிந்தனர்.(58) (இந்தக் கவனிப்புகளால்) மிகவும் மகிழ்ந்த ஸ்கந்தன், தேவர்கள் அனைவருக்கும் ஒரு வரம் தரும் வகையில், “உங்களைக் கொல்ல விரும்பும் உங்கள் எதிரிகள் அனைவரையும் நான் கொல்வேன்” என்றான்.(59) அந்தத் தேவர்களில் சிறந்தவனிடம் {ஸ்கந்தனிடம்} இருந்து இவ்வரத்தை அடைந்த சிறப்புமிக்கத் தேவர்கள், தங்கள் எதிரிகள் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகக் கருதினர்.(60)

ஸ்கந்தன் அவ்வரத்தை அருளிய பிறகு, மகிழ்ச்சியடைந்த அந்த உயிரினங்கள் அனைத்திடமிருந்தும் மூவுலகங்களையும் நிறைக்கும் வகையில் பேரொலி எழுந்தது.(61) அந்தப் பரந்த படையுடன் கூடிய ஸ்கந்தன், சொர்க்கவாசிகளைப் பாதுகாக்க, தைத்தியர்களை அழிக்கப் புறப்பட்டான்.(62) ஓ! மன்னா {ஜனமேஜயா}, (உடல் கொண்டு வந்தவையான) முயற்சி, வெற்றி, அறம், நிறைவு, செழிப்பு, துணிவு மற்றும் சாத்திரங்கள் ஆகியவை கார்த்திகேயனின் படைக்கு முன்னணியில் சென்றன.(63) வேல்கள், முத்கரங்கள், எரிகொள்ளிகள், கதாயுதங்கள், உலக்கைகள், நாராசங்கள், ஈட்டிகள், சூலங்கள் ஆகியவற்றைத் தரித்ததும், செருக்கில் கொழுத்த சிங்கம் போல முழங்கிக் கொண்டிருந்ததுமான அந்தப் பயங்கரப் படையோடு தெய்வீகக் குஹன் புறப்பட்டான்.(64,65)

தைத்தியர்கள், ராட்சசர்கள் மற்றும் தானவர்கள் அனைவரும் அவனைக் கண்டு, அச்சத்தால் கவலையடைந்து, அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(66) பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்த தேவர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். சக்தியும், வலிமையும் கொண்டவனான ஸ்கந்தன், இதை (எதிரிகள் தப்பி ஓடுவதைக்) கண்டு கோபத்தால் தூண்டப்பட்டான்.(67) அவன் (அக்னியிடம் இருந்து பெற்றிருந்த) பயங்கர ஆயுதமான ஈட்டியை {வேலை} மீண்டும் மீண்டும் ஏவினான். அப்போது அவன் வெளிப்படுத்திய சக்தியானது, தெளிந்த நெய்க் காணிக்கைகளால் ஊட்டப்பட்ட நெருப்புக்கு ஒப்பானதாக இருந்தது.(68) அளவிலா சக்தி கொண்டவனான ஸ்கந்தனால், அந்த ஈட்டி மீண்டும் மீண்டும் ஏவப்பட்டபோது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பூமியில் நெருப்புக் கீற்றுகள் விழுந்தன.(69) பேரொலியுடன் கூடிய இடிகளும், பூமியில் விழுந்தன. ஓ! மன்னா, அண்ட அழிவு நாளில் {பிரளயத்தின் போது) ஏற்படும் பீதியை அனைத்தும் அடைந்தன.(70)

அக்னியின் மகனால் {கார்த்திகேயனால்} அந்தப் பயங்கர ஈட்டி ஒரு முறை ஏவப்பட்டபோது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயனே}, அதிலிருந்து லட்சக்கணக்கான ஈட்டிகள் வெளிவந்தன.(71) இறுதியாக, பலமிக்கவனும், போற்றுதலுக்குரியவனுமான ஸ்கந்தன், மகிழ்ச்சியால் நிறைந்து, (அந்தப் போரில்) லட்சக்கணக்கான, வலிமைமிக்க வீர தைத்தியர்களால் சூழப்பட்டவனும், பெரும் வலிமையும், ஆற்றலும் கொண்டவனும், தைத்தியர்களின் தலைவனுமான தாரகனைக் கொன்றான்.(72) பிறகு அவன், எட்டுப் பத்மம் எண்ணிக்கையிலான தைத்தியர்களால் சூழப்பட்டவனான மஹிஷனை அந்தப் போரில் கொன்றான். அடுத்ததாக, ஆயிரம் ஆஜுதங்கள் எண்ணிக்கையிலான தைத்தியர்களால் {நூறு லட்சம் பேரால்} சூழப்பட்ட திரிபாதனைக் கொன்றான்.(73) பிறகு அந்தப் பலமிக்க ஸ்கந்தன், பத்து நிகர்வ எண்ணிக்கையிலான தைத்தியர்களால் {லட்சம் கோடி பேரால்} சூழப்பட்ட ஹிரதோததரனை, பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்த அவனுடைய தொண்டர்களுடன் சேர்த்துக் கொன்றான்.(74) ஓ! மன்னா, அந்தத் தைத்தியர்கள் கொல்லப்பட்டபோது, திசைகளின் பத்து புள்ளிகளும் நிறையும்படி பேரொலி எழுப்பிய குமாரனின் தொண்டர்கள், ஆடி, குதித்து, மகிழ்ச்சியுடன் சிரத்துக் கொண்டிருந்தனர்.(75)

ஓ! மன்னா, ஸ்கந்தனின் ஈட்டியில் இருந்து வெளிப்பட்ட தழல்களில் ஆயிரக்கணக்கான தைத்தியர்கள் எரிந்தனர், அதே வேளையில் ஸ்கந்தனின் முழக்கங்களால் பீதியடைந்த சிலர், தங்கள் இறுதி மூச்சையும் விட்டனர்.(76) ஸ்கந்தனுடைய படைவீரர்களின் கொட்டாவிகளில் மூவுலகங்களும் பீதியடைந்தன. ஸ்கந்தனால் உண்டாக்கப்பட்ட தழல்களில் எதிரிகள் எரிந்தனர். பலர், அவனது வெறும் முழக்கங்களிலேயே கொல்லப்பட்டனர்.(77) தேவர்களின் எதிரிகளில் சிலர், கொடிகளால் தாக்கப்பட்டு உயிரை இழுந்தனர். சிலர், மணிகளின் ஒலியால் பீதியடைந்து பூமியின் பரப்பில் விழுந்தனர். சிலர், ஆயுதங்களால் சிதைக்கப்பட்டுக் கீழே விழுந்து உயிரை விட்டனர்.(78) இவ்வகையில், வீரனும், வலிமைமிக்கவனுமான கார்த்திகேயன், தன்னோடு போரிட வந்த பெரும் பலம் கொண்டவர்களான தேவர்களின் எதிரிகளில் எண்ணிலடங்காதோரைக் கொன்றான்.(79)

பெரும் வலிமை கொண்டவனும், பலியின் மகனுமான பாணன், கிரௌஞ்ச மலையில் ஏறி அந்தத் தேவர்களின் படையுடன் போரிட்டான்.(80) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், பெரும் படைத்தலைவனுமான ஸ்கந்தன், தேவர்களின் அந்த எதிரியை {பாணனை} எதிர்த்து விரைந்து சென்றான். கார்த்திகேயனிடம் அச்சம் கொண்ட அவன், அந்தக் கிரௌஞ்ச மலைக்குள் பதுங்கினான்.(81) சினத்தால் நிறைந்தவனும், போற்றுதலுக்குரியவனுமான அந்தக் கார்த்திகேயன், அக்னியால்[1] அவனுக்கு அளிக்கப்பட்ட ஈட்டியைக் கொண்டு அம்மலையை {கிரௌஞ்ச} மலையைப் பிளந்தான். அம்மலை வெளியிடும் ஒலியானது நாரைக்கு {கிரௌஞ்சத்திற்கு} ஒப்பானதாக இருந்ததால் அது கிரௌஞ்சம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.(82) சால மரங்களுடன் கூடிய அம்மலை பலவண்ணங்களைக் கொண்டிருந்தது. அதிலிருந்த {அம்மலையிலிருந்த} குரங்குகளும், யானைகளும் பீதியடைந்தன. அதில் தங்கள் வசிப்பிடத்தைக் கொண்டிருந்த பறவைகள் எழுந்து, ஆகாயத்தில் சுற்றிக் கொண்டிருந்தன. பாம்புகள், அதன் சாரலில் வெளியேற தொடங்கின.(83) அச்சத்தால் அங்கேயும், இங்கேயும் ஓடிக்கொண்டிருந்த சிறுத்தைகள் மற்றும் கரடிகளின் ஓலத்தை அஃது எதிரொலித்தது. அதில் இருந்த பிற காடுகளும், நூற்றுக்கணக்கான விலங்குகளின் ஓலத்தை வெளியிட்டன.(84) திடீரெனச் சரபங்களும், சிங்கங்களும் வெளியே ஓடின. அம்மலை இந்த அவலநிலைக்குக் குறைக்கப்பட்டாலும், இவையனைத்தின் விளைவால் அஃது அழகிய தன்மையை ஏற்றது.(85)அதன் சிகரங்களில் வசித்த வித்யாதரர்கள் காற்றில் பறந்து சென்றனர். கின்னரர்களும், ஸ்கந்தனின் ஈட்டி பாய்ந்த அச்சத்தால் கலக்கமடைந்து கவலையில் மூழ்கினர்.(86) அழகிய ஆபரணங்களும், மாலைகளும் அணிந்திருந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தைத்தியர்கள், அந்தச் சுடர்மிக்க மலையில் இருந்து வெளியே வந்தனர். அந்தப் போரில் அவர்களை விஞ்சிய குமாரனின் தொண்டர்கள், அவர்கள் அனைவரையும் கொன்றனர்.(87) போற்றுதலுக்குரிய ஸ்கந்தன், சினத்தால் நிறைந்து, (பழங்காலத்தில்) விருத்திரனைக் கொன்ற இந்திரனைப் போலவே, அந்தத் தைத்திய தலைவனின் (பலியின்) மகனை, அவனுடைய தம்பியுடன் சேர்த்துக் கொன்றான்.(88) பகைவீரர்களைக் கொல்பவனான அந்த அக்னியின் மகன், சிலநேரங்களில் தன்னைப் பலராகவும், சில நேரங்களில் தன் அனைத்துப் பகுதிகளை ஒன்றாகத் திரட்டியும், தன் ஈட்டியால் அந்தக் கிரௌஞ்ச மலையைப் பிளந்தான்.(89) அவனது கரங்களில் இருந்து மீண்டும் மீண்டும் ஏவப்பட்ட அந்த ஈட்டியானது, மீண்டும் மீண்டூம் அவனிடமே திரும்பி வந்தது. இவ்வாறே போற்றுதலுக்குரிய அக்னியின் மகனுடைய வலிமையும், மகிமையும் இருந்தது.(90)

இரட்டிப்பான வீரம், சக்தி, ஆற்றல், நிறைவு ஆகியவற்றைக் கொண்ட அந்தத் தேவன் {ஸ்கந்தன்}, அம்மலையை {கிரௌஞ்ச மலையைப்} பிளந்து, நூற்றுக்கணக்கான தைத்தியர்களைக் கொன்றான்.(91) இவ்வாறு தேவர்களின் எதிரிகளைக் கொன்ற அந்தப் போற்றுதலுக்குரிய தேவன், தேவர்களால் வழிபடப்பட்டு, கௌரவிக்கப்பட்டுப் பெரும் மகிழ்வை அடைந்தான்.(92) கிரௌஞ்ச மலை பிளக்கப்பட்டு, சந்தனின் மகன் கொல்லப்பட்ட பிறகு பேரிகைகள் முழக்கப்பட்டன.(93) யோகிகளின் அந்தத் தெய்வீகத் தலைவன் {ஸ்கந்தன்} மீது, தெய்வீக மாதர்கள் அடுத்தடுத்து மலர்மாரியைப் பொழிந்தனர்.(94) தெய்வீக நறுமணத்தைச் சுமந்து வந்த மங்கலமான தென்றல் அங்கே வீசத் தொடங்கியது. கந்தர்வர்களும், வேள்வி செய்வதில் எப்போதும் ஈடுபடுபவர்களான பெரும் முனிவர்களும் அவனைத் துதித்துப் பாடினர்.(95)

சிலர் அவனை {ஸ்கந்தனை} பெரும்பாட்டனின் பலமிக்க மகனும், பிரம்மனின் மகன்கள் அனைவரிலும் மூத்தவனுமான சனத்குமாரன் என்று சொல்கின்றனர்.(96) சிலர் அவனை மகேஸ்வரனின் {சிவனின்} மகன் என்று சொல்கின்றனர். சிலரோ அக்னியின் மகன் என்று சொல்கின்றனர். மேலும் சிலர் அவனை உமையின் மகனென்றோ, கிருத்திகைகள், அல்லது கங்கையின் மகனென்றோ சொல்கின்றனர்.(97) அவர்களில் ஒருவரின் மகனென்றோ, அவர்களில் இருவரின் மகனென்றோ, நால்வரில் ஒருவரின் மகன் என்றோ, சுடர்மிக்க வடிவமும், பெரும் வலிமையும் கொண்ட அந்த யோகியரின் தலைவனைக் குறித்து நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் சொல்கின்றனர்.(98)

ஓ! மன்னா {ஜனமேஜயனிடம்}, இவ்வாறே கார்த்திகேயனின் பட்டமேற்பு குறித்த அனைத்தையும் உனக்கு நான் சொல்லிவிட்டேன். இப்போது சரஸ்வதியின் தீர்த்தங்களில் முதன்மையான, புனிதமான தீர்த்தத்தின் {சோம தீர்த்தத்தின்} வரலாற்றைக் கேட்பாயாக.(99) ஓ! ஏகாதிபதி, தேவர்களின் எதிரிகள் கொல்லப்பட்ட பிறகு அந்த முதன்மையான தீர்த்தம் {சோம தீர்த்தம்}, இரண்டாவது சொர்க்கமானது.(100) அக்னியின் பலமிக்க மகன் {ஸ்கந்தன்}, தேவர்களில் முதன்மையானோர் ஒவ்வொருவருக்கும், பல்வேறு வகையான ஆட்சிப்பகுதிகள், வளங்கள் மற்றும் இறுதியாக மூவுலகங்களின் அரசுரிமையையும் கொடுத்தான்.(101) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வாறே தைத்தியர்களை அழித்தவனான அந்தப் போற்றுதலுக்குறியவன், தேவர்களால் தங்கள் படைத்தலைவனாக நிறுவப்பட்டான்.(102) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பழங்காலத்தில் தேவர்களால் நீர்நிலைகளின் தலைவனாக வருணன் நிறுவப்பட்ட மற்றொரு தீர்த்தம் தைஜஸம் {ஔசனம்} என்ற பெயரால் அறியப்படுகிறது.(103) அந்தத் தீர்த்தத்தில் நீராடி, ஸ்கந்தனைப் போற்றிய ராமன் {பலராமன்}, தங்கம், துணிகள், ஆபரணங்கள் மற்றும் பிற பொருட்களைப் பிராமணர்களுக்குக் கொடுத்தான்.(104) பகைவீரர்களைக் கொல்பவனான அந்த மாதவன் {பலராமன்}, அங்கே ஓரிரவைக் கழித்து, அந்த முதன்மையான தீர்த்தத்தைத் துதித்து, அதன் நீரைத்தீண்டி, உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அடைந்தான்.(105) தேவகூட்டத்தால் எவ்வாறு தெய்வீக ஸ்கந்தன் {படைத்தலைவனாக} நிறுவப்பட்டான் என்பது குறித்து நீ கேட்ட அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன்” {என்றார் வைசம்பாயனர்}.(106)

அக்னி, குபேரத் தீர்த்தங்கள்! – சல்லிய பர்வம் பகுதி – 47-நீர்நிலைகளின் தலைவனாக வருணனை நிறுவிய தேவர்கள்; அக்னி தீர்த்தம் மற்றும் கௌபேர தீர்த்தம் ஆகியவற்றுக்குச் சென்ற பலராமன்; அத்தீர்த்தங்களின் மகிமை…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, முறையான சடங்குகளுடன் ஸ்கந்தன் பட்டமேற்றதைக் குறித்து நான் உம்மிடம் இருந்து கேட்ட இந்த வரலாறு மிக அற்புதமானதாகும்.(1) ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, இந்த விவரிப்பைக் கேட்டதனால் தூய்மையடைந்தவனாக என்னை நான் கருதுகிறேன். என் மனம் மிகவும் உற்சாகமடைவதால், எனக்கு மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது.(2) குமாரனின் பட்டமேற்பையும், தைத்தியர்களின் அழிவையும் கேட்ட பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனினும், எனக்கு மற்றொரு காரியம் குறித்து மிகுந்த ஆவல் ஏற்படுகிறது.(3) பழங்காலத்தில் நீர்நிலைகளின் தலைவன் {வருணன்} எவ்வாறு அந்தத் தீர்த்ததில் வைத்து பட்டமேற்கச் செய்யப்பட்டான்? ஓ மனிதர்களில் சிறந்தவரே, பேரறிவையும், உரைப்பதில் திறனையும் கொண்டுள்ள நீர் அவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, உண்மையில் முந்தைய கல்பத்தில் நடந்தவாறே இந்த அற்புத வரலாற்றைக் கேட்பாயாக. பழங்காலத்தில், கிருத யுகத்தில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, வருணனை முறையாக அணுகிய தேவர்கள் அனைவரும், அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள்:(5) “தேவர்களின் தலைவனான சக்ரன் {இந்திரன்}, அனைத்து அச்சங்களில் இருந்தும் எங்களை எப்போதும் பாதுகாப்பதைப் போல, நீயும் ஆறுகள் அனைத்தின் தலைவனாக இருப்பாயாக.(6) ஓ! தேவா, நீ எப்போதும் மகரங்களின் வீடான பெருங்கடலில் வசிக்கிறாய். ஆறுகளின் தலைவனான இந்தப் பெருங்கடல் உனது ஆட்சிப்பகுதியாகட்டும்.(7) சோமனுடன் சேர்ந்து நீ வளர்ந்து, தேய வேண்டும்” என்றனர். (இவ்வாறு சொல்லப்பட்ட) வருணன், அவர்களிடம், “அப்படியே ஆகட்டும்” என்றான்.(8)

பிறகு, ஒன்றாகச் சேர்ந்த தேவர்கள் அனைவரும், பெருங்கடலையே தன் வசிப்பிடமாகக் கொண்டிருக்கும் வருணனை, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படி, நீர்நிலைகள் அனைத்தின் தலைவனாக நிறுவினார்கள்.(9) நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தின் தலைவனாக வருணனை நிறுவிய தேவர்கள், முறையாக அவனை வழிபட்டுத் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(10) தேவர்களால் நிறுவப்பட்டவனான சிறப்புமிக்க வருணன், தேவர்களைக் காக்கும் சக்ரனைப் போலவே, கடல்கள், தடாகங்கள், ஆறுகள் மற்றும் பிற நீர்க்கொள்ளிடங்களை முறையாகக் காக்கத் தொடங்கினான்.(11) பிரலம்பனைக் கொன்றவனும், பெரும் அறிவைக் கொண்டவனுமான பலதேவன் {பலராமன்}, அந்தத் தீர்த்தத்திலும் நீராடி, பல்வேறு வகையான தானங்களைச் செய்து, அடுத்ததாக, தெளிந்த நெய்யை உண்பவனான அக்னி, வன்னிமரத்திற்குள் ஒளிந்து கொண்டு, காட்சிக்குப் புலனாகாதபடி எந்த இடத்தில் மறைந்து போனானோ, அந்த அக்னி தீர்த்தத்திற்குச் சென்றான்.(12) உலகங்கள் அனைத்தின் ஒளியும் இவ்வாறு மறைந்தபோது, ஓ! பாவங்களற்றவனே, தேவர்கள் அண்டத்தின் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்றனர்.(13) அவர்கள், “போற்றுதலுக்குரிய அக்னி மறைந்துவிட்டான். தன் காரணத்தை நாங்கள் அறியவில்லை. அனைத்து உயிரினங்களும் அழிக்கப்படாமல் இருக்கட்டும். ஓ! பலமிக்கத் தேவா, நெருப்பை உண்டாக்குவீராக” என்றனர்”.(14)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “எக்காரணத்தினால் உலகங்கள் அனைத்தையும் உண்டாக்குபவனான அக்னி மறைந்து போனான்? மேலும் தேவர்களால் அவன் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டான்? இவை அனைத்தையும் எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்றான்.(15)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெருஞ்சக்தி கொண்ட அக்னி, பிருகுவின் சாபத்தால் பெரும்பீதியை அடைந்தான். அதனால் வன்னிமரத்திற்குள் ஒளிந்து கொண்டு, அந்தப் போற்றுதலுக்குரிய தவன் காட்சியில் இருந்து மறைந்து போனான்.(16) அக்னி மறைந்ததும், வாசவனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவரும், பெரும் துன்பத்தை அடைந்து, காணாமல் போன அந்தத் தேவனைத் தேடினார்கள்.(17) அவர்கள் அக்னியைக் கண்டுபிடித்த போது, அந்தத் தேவன் வன்னிமரத்திற்குள் கிடப்பதைக் கண்டனர்.(18) ஓ! மனிதர்களில் புலியே, பிருஹஸ்பதியைத் தங்கள் தலைமையாக் கொண்ட தேவர்கள், அந்தத் தேவனைக் கண்டுபிடிப்பதில் வெற்றியை அடைந்து, வாசவனுடன் சேர்ந்து மகிழ்ச்சியை அடைந்தனர்.(19) பிறகு அவர்கள் எங்கிருந்து வந்தனரோ அந்த இடத்திற்கே திரும்பி சென்றனர். அக்னியும், பிருகுவின் சாபத்தினால், பிரம்மத்தை உச்சரிப்பவரான அந்தப் பிருகு சொன்னது போலவே அனைத்தையும் உண்பவனானான்.(20)

நுண்ணறிவு கொண்ட பலராமன், அங்கே நீராடிய பிறகு, உலகங்கள் அனைத்தின் போற்றுதலுக்குரிய பெரும்பாட்டன் {பிரம்மன்} எங்குத் தன் படைப்பு வேலைகளைச் செய்தானோ அந்தப் பிரம்மயோனிக்குச் சென்றான்.(21) பழங்காலத்தில், தலைவன் பிரம்மன், அனைத்துத் தேவர்களுடன் சேர்ந்து அங்கே நீராடிய பிறகு, முறையான சடங்குகளைச் செய்து தேவர்களுக்காகத் தீர்த்தங்கள் அனைத்தையும் படைத்தான்.(22) பலதேவன் அங்கே நீராடி, பல்வேறு வகைத் தானங்களைச் செய்த பிறகு, ஓ! மன்னா, பலமிக்க ஐலபிலன் {குபேரன்} கடுந்தவங்களைச் செய்து எங்கே பொக்கிஷங்கள் அனைத்தின் தலைமையை அடைந்தானோ அந்தக் கௌபேரம் என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(23) அவன் {குபேரன்} (தவத்தில் ஈடுபட்டபடி) அங்கே வசித்தபோது அனைத்து வகைச் செல்வங்களும், அனைத்து விலைமதிப்புமிக்க ரத்தினங்களும் தாமாகவே அவனிடம் வந்தன. பலதேவன், அந்தத் தீர்த்தத்திற்குச் சென்று, அதன் நீரில் நீராடி, பிராமணர்களுக்கு முறையே அதிகச் செல்வத்தைக் கொடுத்தான்.(24)

அந்த இடத்தில் ராமன் {பலராமன்}, குபேரனின் சிறந்த நந்தவனத்தைக் கண்டான். பழங்காலத்தில், யக்ஷர்களின் தலைவனான உயர் ஆன்ம குபேரன், அங்கே கடுந்தவங்களைச் செய்து, பல வரங்களை அடைந்தான்.(25) பொக்கிஷங்களின் தலைமைப் பொறுப்பு, அளவிலா சக்தி கொண்ட ருத்ரனிடம் நட்பு, தேவன் என்ற நிலை, குறிப்பிட்ட திசைப் புள்ளியில் (வடக்குத் திசையின்) ஆதிக்கப் பொறுப்பு, நளகுபேரன் என்ற பெயரைக்கொண்ட ஒரு மகன் ஆகியவற்றை அங்கேதான் பெற்றான். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இவை யாவையும் அங்கேதான் அந்த யக்ஷர்களின் தலைவன் {குபேரன்} வேகமாக அடைந்தான்.(26) அங்கே வந்த மருத்துக்கள், அவனை (ஆட்சிப்பொறுப்பில்) முறையாக நிறுவினர். மேலும் அவன், தன் வாகனமாக நன்கு ஆயத்தம் செய்யப்பட்டதும், மனோ வேகம் கொண்டதுமான தெய்வீகத் தேர் ஒன்றையும், தேவர்களின் செல்வங்கள் அனைத்தையும் அடைந்தான்.(27) வெண்சந்தனத்தைப் பயன்படுத்துபவனான அந்தப் பலன் {பலராமன்}, அந்தத் தீர்த்தத்தில் நீராடி, அதிகச் செல்வத்தைத் தானமளித்து, வேகமாக மற்றொரு தீர்த்தத்திற்குச் சென்றான்.(28) அனைத்து வகை உயிரினங்களையும் கொண்ட அந்தத் தீர்த்தம் பதரபாசனை என்ற பெயரால் அறியப்படுகிறது. அங்கே ஒவ்வொரு பருவகாலத்தின் கனிகளும் எப்போதும் காணப்படும், மேலும், மலர்களும், அனைத்து வகைக் கனிகளும் எப்போதும் அபரிமிதமாகக் கிடைக்கும்” {என்றார் வைசம்பாயனர்}.(29)

சுருவாவதியும், அருந்ததியும்! – சல்லிய பர்வம் பகுதி – 48- பதரபாசனத் தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்; பரத்வாஜரின் மகளான சுருவாவதி, இந்திரனை நினைத்துக் கடுந்தவம் இயற்றியது; அருந்ததியிடம் இலந்தைப் பழங்களைச் சமைத்துத் தரக் கேட்ட சிவன்; இமயத்தில் தவம்செய்வோர் அடையும் புண்ணியத்தை அடைந்த அருந்ததி; பதரபாசனத் தீர்த்தத்தின் மகிமை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “(முன்பு சொன்னதைப் போலவே) ராமன் {பலராமன்}, தவசிகள் மற்றும் சித்தர்கள் பலரும் வசிக்கும் பதரபாசனம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான். அங்கே, பூமியில் ஒப்பற்ற அழகைக் கொண்டவளும், சுருவாவதி {சுருதாவதி} என்ற பெயரைக் கொண்டவளுமான பரத்வாஜரின் மகள் கடுந்தவம் செய்து கொண்டிருந்தாள். அவள், ஒரு பிரம்மச்சாரினியின் வாழ்வை நோற்று வந்த கன்னிகையாவாள்.(1,2) அந்த அழகிய காரிகை {சுருதாவதி}, தேவர்களின் தலைவனை {இந்திரனைத்} தன் கணவனாக அடையும் விருப்பத்தால், பல்வேறு வகை நோன்புகளை நோற்று, கடுந்தவத்தைப் பயின்று வந்தாள்.(3) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, பெண்கள் பயில மிகக் கடுமையான பல்வேறு நோன்புகளைத் தொடர்ச்சியாக அவள் நோற்றாள். பல வருடங்களும் கடந்து சென்றன.(4) இறுதியாக, பகனைத் தண்டித்தவனான போற்றுதலுக்குரியவன் {இந்திரன்}, அவளது அந்நடத்தை மற்றும் தவம் ஆகியவற்றின் விளைவாக அவளிடம் மனம் நிறைந்து, அவளை உயர்வாகக் கருதினான்.(5)

பலமிக்க அந்தத் தேவர்களின் தலைவன் {இந்திரன்}, மறுபிறப்பாள {பிராமண} முனிவரான உயர் ஆன்ம வசிஷ்டரின் வடிவத்தை ஏற்று, {சுருவாவதி இருந்த} அந்த ஆசிரமத்திற்கு வந்தான்.(6) தவசிகளில் முதன்மையானவரும், கடுந்தவங்களைக் கொண்டவருமான வசிஷ்டரைக் கண்ட அவள், ஓ! பாரதா {ஜனமேஜயா}, தவசிகளால் நோற்கப்படும் முறையான சடங்குகளின் படி அவரை வழிபட்டாள்.(7) நோன்புகளை அறிந்தவளும், மங்கலமானவளும், இனிய பேச்சுடையவளுமான அந்தக் காரிகை, அவரிடம் {வசிஷ்டரின் வடிவத்திலிருந்த இந்திரனிடம்}, “ஓ! போற்றுதலுக்குரியவரே, ஓ! தவசிகளில் புலியே, ஓ! தலைவா, உமது ஆணைகளை எனக்குச் சொல்வீராக.(8) ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, என் வலிமைக்குத்தக்கவாறு நான் உமக்குத் தொண்டாற்றுவேன். எனினும், சக்ரன் மீது கொண்டுள்ள மதிப்பின் {பக்தியின்} விளைவாக நான் {திருமணம் செய்து கொள்வதற்காக} உமக்கு என் கரத்தைத் தர மாட்டேன்.(9) என் நோன்புகள், நியமங்கள், கடும் தவம் ஆகியவற்றின் மூலம் மூவுலகங்களின் தலைவரான சக்ரனை, மனநிறைவு கொள்ளச் செய்வேன்” என்றாள்.(10)

அவளால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {இந்திரன்}, அவளது நோன்புகளை அறிந்து கொண்டு, சிரித்துக்கொண்டே அவள் மீது தன் கண்களைச் செலுத்தி, ஓ! பாரதா {ஜனமேஜயனிடம்}, அவளிடம் இனிமையாக,(11) “நீ கடும் வகையிலான தவத்தைப் பயில்கிறாய். ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவளே {சுருதாவதியே}, அதை நான் அறிவேன். ஓ! மங்கலமானவளே, உன் இதயத்தில் இருக்கும் நோக்கமும், ஓ! அழகிய முகத்தைக் கொண்டவளே, எதை அடைய நீ முயல்கிறாயோ, அதுவும் உன்னால் அடையப்படும். தவங்களாலாயே அனைத்தும் அடையப்படுகின்றன. அனைத்தும் தவங்களைச் சார்ந்தே இருக்கின்றன.(12,13) ஓ! அழகிய முகத்தைக் கொண்டவளே, தேவர்களுக்குச் சொந்தமான அருள் உலகங்கள் அனைத்தையும் தவங்களால் அடைய முடியும். பெரும் மகிழ்ச்சியின் வேராகத் தவங்களே இருக்கின்றன.(14) ஓ! மங்கலமானவளே, கடுந்தவங்களைச் செய்து, தங்கள் உடலைக் கைவிட்ட மனிதர்கள், தேவர்களின் நிலையை அடைகிறார்கள். இந்த என் வார்த்தைகளை மனத்தில் கொள்வாயாக.(15) ஓ! அருளப்பட்ட காரிகையே, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவளே, இப்போது நீ எனக்கு இந்த ஐந்து இலந்தைப்பழங்களையும் சமைத்து {பக்குவம் செய்து) தருவாயாக” என்றான் {வசிஷ்டரின் வடிவில் இருந்த இந்திரன்}.

{அசுரன்} பலனைக் கொன்றவனான போற்றுதலுக்குரியவன், இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, குறிப்பிட்ட மந்திரங்களை மனத்தால் உரைப்பதற்காக அந்த ஆசிரமத்தின் அருகில் இருக்கும் சிறந்த தீர்த்தத்திற்குச் சென்றுவிட்டான். ஓ! கௌரவங்களை அளிப்பவனே {ஜனமேஜயா}, அந்தத் தீர்த்தமானது, இந்திரனின் பெயராலேயே மூன்று உலகங்களிலும் அறியப்படுகிறது.(16,17) உண்மையில், அந்தத் தேவர்களின் தலைவன் {இந்திரன்}, அந்தக் காரிகையின் {சுருவாவதியின்} அர்ப்பணிப்பைச் சோதிக்கும் காரியத்திற்காகவே அந்த இலந்தைப் பழங்களைச் சமைப்பதைத் தடுக்கும் வழியில் அவ்வாறு செயல்பட்டான்.(18) அந்தக் காரிகை, ஓ! மன்னா, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பேச்சைத் துறந்து, அதில் {சமைப்பதில்} கவனத்தை நிலைக்கச் செய்து, தன் பணியைச் செய்யத் தொடங்கி, களைப்பெதையும் உணராதவளாக அப்பணியைச் செய்து கொண்டிருந்தாள்.(19) ஓ! மன்னர்களில் புலியே, இவ்வாறே உயர்ந்த நோன்புகளைக் கொண்ட அந்தக் காரிகை, அந்த இலந்தைகளைச் சமைக்கத் தொடங்கினாள். ஓ! மனிதர்களில் காளையே, தன் பணியில் அமர்ந்திருந்த அவளுக்கு, பகல்வேளை முடியப் போனாலும், மென்மையானதற்கான எந்த அறிகுறிகளையும் அந்த இலந்தைகள் காட்டவில்லை.(20)

அங்கே அவள் வைத்திருந்த எரிபொருள் {விறகு} அனைத்தும் எரிக்கப்பட்டுவிட்டது. எரிபொருளில்லாமல் நெருப்பு அணையப் போவதைக் கண்ட அவள் {சுருதாவதி}, தன் அங்கங்களையே எரிக்கத் தொடங்கினாள்.(21) அந்த அழகிய காரிகை முதலில் தன் கால்களை நெருப்புக்குள் நுழைத்தாள். அந்தப் பாவமற்ற காரிகை, தனது கால்கள் எரியும்போது அசையாமல் அமர்ந்திருந்தாள்.(22) அந்தக் களங்கமற்ற பெண், தன் கால்கள் எரிவதைக் கருத்தில் கொள்ளவே இல்லை. செய்வதற்குக் கடினமான அதை {அக்காரியத்தை}, (விருந்தினராக வந்த) அந்த முனிவருக்கு {வசிஷ்டரான இந்திரனுக்கு} நன்மை செய்யும் விருப்பத்தால் செய்தாள்.(23) வலி நிறைந்த அந்தச் செய்கையின் போது, அவளது முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அக்காரியத்தால் அவள் உற்சாகத்தையும் இழக்கவில்லை. நெருப்புக்குள் தன் அங்கங்களைத் திணித்த அவள், ஏதோ அவற்றைக் குளிர்ந்த நீருக்குள் முக்கியிருப்பதைப் போலப் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தாள்.(24) ஓ! பாரதா, “இந்த இலந்தைகளை நன்றாகச் சமைப்பாயாக” என்ற அம்முனிவரின் வார்த்தைகளை மட்டுமே அவள் தன் மனத்தில் சுமந்திருந்தாள்.(25)

அந்தப் பெரும் முனிவரின் வார்த்தைகளை மனத்தில் சுமந்த அந்த மங்கலமான காரிகை, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த இலந்தைகள் மென்மையாவதற்கு எந்த அறிகுறியையும் காட்டவில்லையெனினும் சமைத்துக் கொண்டேயிருந்தாள்.(26) போற்றுதலுக்குரிய அக்னி, அவளது கால்களை உண்டான் {எரித்தான்}. எனினும் இக்காரியத்தில் அந்தக் கன்னிகை சிறு வலியையும் உணரவில்லை.(27) மூவுலகங்களின் தலைவன் {இந்திரன்}, அவளது இச்செயல்பாட்டைக் கண்டு பெரிதும் மனநிறைவடைந்தான். பிறகு அவன், அந்தக் காரிகைக்குத் தன் சொந்த வடிவத்தை வெளிப்படுத்தினான்.(28)

அப்போது தேவர்களின் தலைவன் , கடும் நோன்புகளைக் கொண்ட அந்தக் கன்னிகையிடம் {இந்திரன் சுருவாவதியிடம்}, “உன் அர்ப்பணிப்பு, தவம் மற்றும் நோன்புகளால் நான் நிறைவடைந்தேன்.(29) எனவே, ஓ! மங்கலமானவளே{சுருதாவதியே}, நீ பேணிவளர்க்கும் விருப்பமானது நிறைவை அடையும். ஓ! அருளப்பட்டவளே, உன் உடலைத் துறந்து, சொர்க்கத்தில் நீ என்னோடு வாழ்வாய்.(30) இந்த ஆசிரமமானது, அனைத்துப் பாவங்களையும் அகற்றவல்லதாக உலகத்தில் முதன்மையான தீர்த்தமாக இருக்கும். ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, இது பதரபாசனம் என்ற பெயரில் அறியப்படும். இது மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டுப் பெரும் முனிவர்களால் புகழப்படும்.(31)

ஓ! மங்கலமானவளே {சுருதாவதியே}, பாவமற்றவளே, உயர்ந்த அருளைக் கொண்டவளே, ஒரு சந்தர்ப்பத்தில் ஏழு முனிவர்களும் இமயமலைக்குச் செல்லும் போது, (அவர்களில் ஒருவரின் {வசிஷ்டரின்} மனைவியான) அருந்ததியை இந்தத் தீர்த்தத்தில்தான் விட்டுச் சென்றனர்.(32) கடும் நோன்புகளைக் கொண்டோரான அந்த உயர்ந்த அருளாளர்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்கான கனிகளையும், கிழங்குகளையும் சேகரிக்கச் சென்றனர்.(33) தங்கள் வாழ்வாதாரத்தை அடைவதற்காக இமயமலையின் காடொன்றில் அவர்கள் வாழ்ந்து வந்தபோது, பனிரெண்டு வருடங்களுக்கு நீடித்த பஞ்சம் ஏற்பட்டது.(34) அந்தத் தவசிகள் தங்களுக்கென ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு, அங்கேயே வாழத் தொடங்கினர். அதேவேளையில் அருந்ததியானவள், (தான் விட்டுச் செல்லப்பட்ட அந்த இடத்திலேயே) கடுந்தவத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தாள்.(35) வரமளிப்பவனான முக்கண் தேவன் (மஹாதேவன்), கடும் நோன்புகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அருந்ததியைக் கண்டு மிகவும் மகிழ்ந்து அங்கே வந்தான்.(36)

அந்தச் சிறப்புமிக்க மஹாதேவன், ஒரு பிராமணரின் வடிவத்தை ஏற்று, அவளிடம் வந்து, “ஓ! மங்கலமானவளே, நான் பிச்சையை விரும்புகிறேன்” என்றான்.(37) அதற்கு அந்த அழகிய அருந்ததி, அவனிடம், “ஓ! பிராமணரே, சேகரித்து வைத்திருந்த எங்கள் உணவு தீர்ந்துவிட்டது. இந்த இலந்தைகளை உண்பாயாயாக” என்றாள்.(38) மஹாதேவன், “ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவளே, இந்த இலந்தைகளைச் சமைப்பாயாக” என்று பதிலுரைத்தான். இந்த வார்த்தைகளுக்குப் பிறகு, அந்தப் பிராமணருக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக அவள் அந்த இலந்தைகளைச் சமைக்கத் தொடங்கினாள்.(39) கொண்டாடப்பட்டவளான அருந்ததியானவள், அந்த இலந்தைகளை நெருப்பிலிட்டு, (மஹாதேவனின் உதடுகளில் இருந்து) பல்வேறு அற்புதமான, அழகிய, புனிதமான உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள். (ஏதோ அஃது ஒரு நாள் என்பதைப் போல) அந்தப் பனிரெண்டு வருட பஞ்சம் கழிந்துவிட்டது.(40)

உணவில்லாமல், சமைப்பதிலும், அந்த மங்கலமான உரைகளைக் கேட்பதிலும் ஈடுபட்டிருந்த அவளுக்கு {அருந்ததிக்கு}, அந்தப் பனிரெண்டு வருடங்களும், ஒரு நாளை போலக் கடந்து சென்றன.(41) பிறகு அந்த ஏழு முனிவர்களும் {சப்தரிஷிகளும்}, மலையில் இருந்து கனிகளை அடைந்து அந்த இடத்திற்குத் திரும்பி வந்தனர். போற்றுதலுக்குரிய மஹாதேவன், அருந்ததியிடம் மிகவும் நிறைவடைந்து, அவளிடம்,(42) “ஓ! அறமறிந்தவளே, இந்த முனிவர்களை முன்பு போலவே அணுகுவாயாக. உன் தவங்களாலும், நோன்புகளாலும் நான் நிறைவடைந்தேன்” என்றான்.(43) போற்றுதலுக்குரிய ஹரன், அப்போது தன் சொந்த வடிவை ஏற்று நின்று கொண்டிருந்தான். நிறைவடைந்தவனான அவன், அவர்களிடம் உன்னத நடத்தை கொண்ட அருந்ததியைக் குறித்து (இவ்வார்த்தைகளில்),(44) “மறுபிறப்பாளர்களே {பிராமணர்களே}, இந்த மங்கை ஈட்டியிருக்கும் தவத்தகுதியானது, இமயத்தின் சாரலில் நீங்கள் ஈட்டியதைவிட மிகப் பெரியது என நான் கருதுகிறேன்.(45) இவள், பனிரெண்டு வருடங்களாக உண்ணாமல், சமைத்துக் கொண்டே பனிரெண்டு வருடங்களைக் கடத்தி, கடுமையான தவத்தைச் செய்திருக்கிறாள்” என்றான்.(46) பிறகு, அருந்ததியிடம் பேசிய அந்தத் தெய்வீக மஹாதேவன், அவளிடம், “ஓ! மங்கலமான பெருமாட்டியே, உன் இதயத்தில் இருக்கும் வரத்தைக் கேட்பாயாக” என்று சொன்னான்.(47)

அப்போது சிவந்த நிறத்தில் அகன்ற கண்களைக் கொண்டிருந்த அந்த மங்கை, ஏழு முனிவர்களுக்கு மத்தியிலும் வைத்து, அந்தத் தேவனிடம், “ஓ! தெய்வீகமானவனே, நீ என்னிடம் நிறைவுகொண்டிருந்த இந்த இடமானது சிறந்த தீர்த்தமாகட்டும். பதரபாசனம் என்ற பெயரில் இஃது அறியப்படட்டும். இது சித்தர்கள் மற்றும் தெய்வீக முனிவர்களுக்குப் பிடித்தமான ஓய்விடமாக இருக்கட்டும்.(48) மேலும், ஓ! தேவர்களின் தேவா, எவன் தன்னைத் தூய்மையாக்கிக் கொண்டு, நோன்பை நோற்று மூன்று இரவுகள் இங்கே தங்கியிருக்கிறானோ, அவன் பனிரெண்டு வருடங்கள் நோன்பிருந்ததற்கான கனியை அடையட்டும்” என்று கேட்டாள்.(49) அந்தத் தேவன் {மகாதேவன்}, “அப்படியே ஆகட்டும்” என்று அவளிடம் சொல்லிவிட்டு, அந்த ஏழு முனிவர்களாலும் புகழப்பட்டு, சொர்க்கத்திற்குச் சென்றான்.(50) உண்மையில், அம்முனிவர்கள், அந்தத் தேவனைக் கண்டும், களைப்படையாமல், நிறம் மாறாமல், பசி தாகத்தைத் தாங்கவல்லவளாக இருந்த அருந்ததியைக் கண்டும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(51) ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட பெண்ணே, இவ்வாறே பழங்காலத்தில் தூய ஆன்மா கொண்ட அருந்ததியானவள், ஓ! கடும் நோன்புகளைக் கொண்ட காரிகையே {சுருதாவதியே}, என் நிமித்தமாக நீ அடைந்தது போலவே உயர்ந்த வெற்றியை அடைந்தாள்.(52)

எனினும், ஓ! இனிய கன்னிகையே {{சுருதாவதியே}, நீ இன்னும் கடுமையான தவத்தைச் செய்திருக்கிறாய். உன் நோன்புகளால் நிறைவடைந்த நான், ஓ! மங்கலமானவளே, அருந்ததிக்கு அருளப்பட்ட வரத்தைவிட மேம்பட்ட வரத்தை உனக்குத் தருவேன். ஓ! இனிமையானவளே, அருந்ததிக்கு வரத்தை அருளிய அந்த உயர் ஆன்ம தேவனின் சக்தியின் மூலமும், உனது ஆற்றலின் மூலமும் நான் உனக்கு, “இந்தத் தீர்த்தத்தில் ஓரிரவு மட்டுமே வசித்து, (தியானத்தில்) ஆன்மாவை நிலைக்கச் செய்பவன், தன் உடலைக் கைவிட்டு, (வேறு வழிகளில்) அடைவதற்குக் கடினமான பல அருள் உலகங்களை அடைவான்” என்ற மற்றொரு வரத்தையும் இப்போது கொடுப்பேன்” என்றான் {இந்திரன்}.(53-55)

பிறகு, பெரும் சக்தியைக் கொண்டவனான ஆயிரங்கண் சக்ரன் {இந்திரன்}, தூய்மையடைந்த சுருவாவதியிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி, சொர்க்கத்திற்குத் திரும்பிச் சென்றான்.(56) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, வஜ்ரதாரி சென்றதும், அங்கே இனிய நறுமணமிக்க தெய்வீக மலர்மாரி பொழிந்தது.(57) தெய்வீகத் துந்துபிகளும் பேரொலியுடன் அங்கே முழங்கின. ஓ! ஏகாதிபதி, மங்கலமான நறுமணமிக்கத் தென்றலும் அங்கே வீசியது.(58) அந்த மங்கலமான சுருவாவதி, தன் உடலைக் கைவிட்டு, இந்திரனின் மனைவியானாள். கடுந்தவத்தால் அந்நிலையை அடைந்த அவள், எப்போதும் அவனுடன் {இந்திரனுடன்} விளையாடிக் கொண்டு தன் காலத்தைக் கழிக்கத் தொடங்கினாள்” {என்றார் வைசம்பாயனர்}.(59)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “சுருவாவதியின் தாயார் யார்? அந்த அழகிய சுருவாவதி எவ்வாறு வளர்ந்தாள்? ஓ! பிராமணரே, என் ஆவல் அதிகமாக இருப்பதால், இதை நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(60)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஒரு காலத்தில், மறுபிறப்பாளரும், உயர் ஆன்மா கொண்ட முனிவருமான பரத்வாஜருக்கு, அகன்ற கண்களையுடையவளான கிரிடாச்சி {கிருதாசி} என்ற அப்சரஸ் கடந்து செல்வதைக் கண்டு உயிர்நீர் வெளியேறியது.(61) அதன்பேரில் அந்தத் தவசிகளில் முதன்மையானவர் {பரத்வாஜர்} அதைத் தன் கைகளில் ஏந்தினர். மரத்தின் இலைகளால் செய்யப்பட்ட ஒரு குடுவையில் அது வைக்கப்பட்டது. அந்தக் குடுவையிலேயே சுருவாவதி என்ற பெண் பிறந்தாள்.(62) தவத்தை செல்வமாகக் கொண்ட பரத்வாஜர், பிறப்புக்குப் பிறகு நடத்தப்படும் சடங்குகளைச் செய்து அவளுக்கு ஒரு பெயரைச் சூட்டினார்.(63) அறஆன்மா கொண்ட அம்முனிவர் {பரத்வாஜர்}, தேவர்களுக்கு முன்னிலையில் வைத்து சுருவாவதி என்ற பெயரைச் சூட்டினார். பரத்வாஜர், அப்பெண்ணைத் தன் ஆசிரமத்தில் வைத்து இமயத்தின் காடுகளுக்குச் சென்றார்.(64) யாதவர்களில் முதன்மையானவனும், பெரும் கண்ணியமும் மிக்கப் பலதேவன் {பலராமன்}, அந்தத் தீர்த்தத்தில் நீராடி, பிராமணர்களில் முதன்மையானோர் பலருக்கு அதிகச் செல்வத்தைக் கொடுத்து, ஆன்மாவைத் தியானத்தில் நிலைக்கச் செய்து, சக்ரனின் {இந்திரனின்} தீர்த்தத்திற்குச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(65)

தீர்த்தங்களில் புனிதநீராடல்! – சல்லிய பர்வம் பகுதி – 49-இந்திர, ராம, யமுனா, ஆதித்திய தீர்த்தங்களுக்குச் சென்ற பலராமன்; இந்திரன், பரசுராமர், வருணன், சூரியன் ஆகியோர் செய்த வேள்விகள்; மதுகைடபர்களைக் கொன்று ஆதித்தியத் தீர்த்தத்தில் நீராடிய விஷ்ணு; யோகசக்திகளை அடைந்த வியாசர் மற்றும் அசிததேவலர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “’அந்த யதுக்களின் வலிமைமிக்கத் தலைவன் {பலராமன்}, இந்திரனின் தீர்த்தத்திற்குச் சென்று, அங்கே உரிய சடங்குகளுடன் நீராடி, பிராமணர்களுக்குச் செல்வத்தையும், ரத்தினங்களையும் கொடுத்தான்.(1) தேவர்களின் தலைவன் {இந்திரன்} அங்கே நூறு வேள்விகளைச் செய்து, பிருஹஸ்பதிக்கு அபரிமிதமான செல்வத்தைத் தானமளித்தான்.(2) உண்மையில், அந்தச் சக்ரன் {இந்திரன்}, வேதங்களை அறிந்தோரான பிராமணர்களின் உதவியுடனும், (சாத்திரங்களில்) விதிக்கப்பட்டுள்ள சடங்குகளுடனும் அவ்வேள்விகள் அனைத்தையும் செய்தான். அந்த வேள்விகளில் அனைத்தும் தடங்கலற்றவையாக இருந்தன. அனைத்து வகைக் குதிரைகளும் அங்கே கொண்டுவரப்பட்டன. பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட தானங்கள் அபரிமிதமாக இருந்தன.(3) ஓ! பாரதர்களின் தலைவா, பெரும் காந்தியைக் கொண்ட சக்ரன் அந்த நூறு வேள்விகளையும் முறையாக முடித்ததும், சதக்ரது என்ற பெயரில் அழைக்கப்பட்டான்.(4) அனைத்துப் பாவங்களையும் துடைக்கவல்லதும், மங்கலமானதுமான அந்தப் புனிதத் தீர்த்தம், இதன் காரணமாகவே இந்திரத் தீர்த்தம் என்று அவன் பெயரால் அழைக்கப்பட்டது.(5)

அங்கே முறையாக நீராடிய பலதேவன், சிறந்த உணவும் மற்றும் ஆடைகளைத் தானமளித்துப் பிராமணர்களை வழிபட்டான். பிறகு அவன், ராமரின் {பரசுராமரின்} பெயரால் அழைக்கப்பட்டதும், மங்கலமானதுமான முதன்மையான தீர்த்தத்திற்குச் சென்றான்.(6) உயர்ந்த அருளையும், பெரும் தவத் தகுதியையும் கொண்ட பிருகு குலத்தின் ராமர் {பரசுராமர்}, மீண்டும் மீண்டும் பூமியைப் பணியச் செய்து, க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் அனைவரையும் கொன்றார்.(7) (அத்தகு அருஞ்செயல்களைச் செய்த) ராமர், முனிவர்களில் சிறந்தவரும், தன் ஆசானுமான கசியபரின் துணையுடன் ஒரு வாஜபேய வேள்வியையும், நூறு குதிரை வேள்விகளையும் அந்தத் தீர்த்தத்தில்தான் செய்தார். அங்கே ராமர் {பரசுராமர்}, தன் ஆசானுக்குக் கடல்களுடன் கூடிய மொத்த பூமியையும் வேள்விக்கூலியாகக் கொடுத்தார்.(8) ஓ! ஜனமேஜயா, அந்தப் பெரும் ராமர் {பரசுராமர்}, அங்கே முறையாக நீராடி, பிராமணர்களுக்குத் தானமளித்து அவர்களை வழிபட்டார்.(9) அவர், பல்வேறு வகை ரத்தினங்கள், பசுக்கள், யானைகள், பெண் பணியாட்கள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் ஆகிய பல்வேறு தானங்களை அளித்த பிறகு காட்டுக்குள் ஓய்ந்து சென்றார்.(10)

தேவர்களும், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களும் வந்து போகும் இடமானதும், புனிதமானதுமான அந்த முதன்மையான தீர்த்தத்தில் நீராடிய பிறகு, பலதேவன் {பலராமன்}, அங்கே இருந்த தவசிகளை முறையாக வழிபட்டு, யமுனா என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(11) ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, பழங்காலத்தில், பெரும்பிரகாசத்தைக் கொண்டவனும், உயர்ந்த அருளைக் கொண்டவனும், அதிதியின் மகனுமான வருணன், அந்தத் தீர்த்தத்தில்தான் ராஜசூய வேள்வியைச் செய்தான்.(13) ஓ!மன்னா {ஜனமேஜயா}, போரில் மனிதர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் ராட்சசர்களை அடக்கியவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான வருணன், அந்தத் தீர்த்தத்தில்தான் தன் மகத்தான வேள்வியைச் செய்தான். அந்த முதன்மையான வேள்வி தொடங்கியதும், மூவுலகங்களையும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் போர் மூண்டது.(14) வேள்விகளில் முதன்மையான (வருணனின்) ராஜசூயம் நிறைவடைந்ததும், ஓ! ஜனமேஜயா, க்ஷத்திரியர்களுக்கிடையில் ஒரு பயங்கரமான போர் தொடங்கியது.(15)

எப்போதும் தயாளமாக இருப்பவனும், பலமிக்கவனுமான பலதேவன், அங்கே முனிவர்களை வழிபட்டு, தானத்தை விரும்பியோருக்கு பல தானங்களை அளித்தான்.(16) மகிழ்ச்சியால் நிறைந்தவனும், பெரும் முனிவர்களால் புகழப்பட்டவனும், காட்டு மலர் மாலைகளால் எப்போதும் அலங்கரிக்கப்பட்ட வீரனுமான அந்தப் பலதேவன் அடுத்ததாக ஆதித்தியம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(17) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, போற்றுதலுக்குரியவனும், பெருங்காந்தியைக் கொண்டவனுமான சூரியன் அங்கே ஒரு வேள்வியைச் செய்து, (அண்டத்தின்) ஒளிக்கோள்கள் அனைத்தின் மீதான அரசுரிமையையும், தனக்கான பெரும் சக்தியையும் அடைந்தான்.(18)

அந்த ஆற்றின் {சரஸ்வதி ஆற்றின்} கரையில் அமைந்துள்ள அந்தத் தீர்த்தத்தில், வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்கள், விஸ்வதேவர்கள், மருத்துக்கள், கந்தர்வர்கள், அப்சரர்கள்,(19) தீவில் பிறந்தவர் (வியாசர்), சுகர், மதுசூதனனான கிருஷ்ணன், யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா},(20) ஆயிரக்கணக்கான பலர் மற்றும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் ஆகியோர் எப்போதும் வசிக்கின்றனர். உண்மையில், பழங்காலத்தில் விஷ்ணுவானவன், மது, கைடபன் என்ற அசுரர்கள் இருவரைக் கொன்று, மங்கலமானதும், புனிதமானதுமான அந்தச் சரஸ்வதியின் தீர்த்தத்தில் நீராடி {பாவம் விலகுவதற்காகத்} தனக்கான தூய்மைச் சடங்குகளைச் செய்தான்.(21,22) அற ஆன்மா கொண்டவரான தீவில் பிறந்தவரும் ((துவைபாயனரான} வியாசரும்) அந்தத் தீர்த்தத்தில் நீராடி, பெரும் யோக சக்திகளையும், உயர்ந்த வெற்றியையும் அடைந்தான்.(23) பெரும் தவத் தகுதியை உடையவரான முனிவர் அசித தேவலரும், உயர்ந்த யோகத் தியானத்தில் தன் ஆன்மாவை நிலைக்கச் செய்து அந்தத் தீர்த்தத்தில் நீராடியே பெரும் யோக சக்திகளை அடைந்தார்” {என்றார் வைசம்பாயனர்}.(24)

அசிததேவலரும், ஜைகிஷவ்யரும்! – சல்லிய பர்வம் பகுதி – 50-தேவலர் மற்றும் ஜைகிஷவ்யர் வரலாறு; இல்லறம் நோற்ற அசிததேவலர்; யாசகம் கேட்டு வந்த ஜைகிஷவ்யர்; ஐயமிட்டு நிறைவையடைந்த தேவலர்; ஜைகிஷவ்யர் அடைந்த தகுதிகளை எண்ணி பொறாமை கொண்ட தேவலர்; தேவலருக்கு யோகம் போதித்த ஜைகிஷவ்யர்; இருவரும் முக்தியை அடைந்தது; சோமதீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பழங்காலத்தில், அறஆன்மா கொண்டவரும், இல்லறம் சார்ந்த கடமைகளை நோற்பவரும், அசிததேவலர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு முனிவர் அந்தத் தீர்த்தத்தில் {ஆதித்திய தீர்த்தத்தில்} வாழ்ந்து வந்தார்.(1) அவர், அறத்திற்குத் தம்மை அர்ப்பணித்து, சுயக்கட்டுப்பாடுடைய தூய்மையான வாழ்வை மேற்கொண்டார். பெரும் தவத் தகுதியை உடைய அவர் {அசிததேவலர்}, அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவராகவும், எவருக்கும் தீங்கிழைக்காதவராகவும் இருந்தார். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, சொல், செயல், எண்ணம் ஆகியவற்றில் அனைத்து உயிரினங்களிடமும் அவர் {அசிததேவலர்} சமமாகவே நடந்து கொண்டார்.(2) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, கோபமற்றிருந்த அவருக்கு, நிந்தனையும், புகழும் சமமாகவே இருந்தன. ஏற்புடையவை {இனியவை} மற்றும் ஏற்பில்லாதவையிடம் சமமான மனப்பாங்கைக் கொண்டிருந்த அவர், யமனைப் போலவே முற்றிலும் பாரபட்சமற்றவராக {நடுநிலைமை கொண்டவராக} இருந்தார்.(3) அந்தப் பெரும் தவசி, தங்கத்தையும், கூழாங்கற்களின் குவியலையும் சமமான கண்களுடனேயே கண்டார். அவர் தினமும், தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் (தம்மிடம் வரும்) பிராமணர்கள் ஆகியோரை வழிபட்டார். அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்த அவர், எப்போதும் பிரம்மச்சரிய நோன்பையே நோற்றுவந்தார்.(4)

ஒரு காலத்தில், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, யோகத்திற்குத் தம்மை அர்ப்பணித்திருந்தவரும், ஆழ்ந்த தியானத்தைக் கொண்டவரும், பிச்சைக்காரர்களின் வாழ்வை வாழ்பவருமான {சந்நியாசியுமான} ஜைகிஷவ்யர் என்ற பெயரையுடைய நுண்ணறிவுமிக்க ஒரு தவசியானவர், தேவலரின் ஆசிரமத்திற்கு வந்தார்.(5) யோகத்தில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவரும், பெருங்காந்தியைக் கொண்டவருமான அந்தப் பெருந்தவசி {ஜைகிஷவ்யர்}, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தேவலரின் ஆசிரமத்தில் வசித்து வந்தபோது, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டார்.(6) உண்மையில் அந்தப் பெரும் முனிவரான ஜைகிஷவ்யர் அங்கே வசித்து வந்தபோது, தேவலர், எந்தக் காலத்திலும், ஒருபோதும் அவரைப் புறக்கணிக்காமல் அவர் மீதும் தம் கண்களை நிலைக்கச் செய்திருந்தார்.(7) ஓ! ஏகாதிபதி, இவ்வாறு பழங்காலத்தில் இந்த இருவரும் நீண்ட காலத்தைக் கழித்தனர். ஒரு சந்தர்ப்பத்தில், தவசிகளில் முதன்மையானவரான அந்த ஜைகிஷவ்யரைத் தேவலரால் காண முடியவில்லை.(8) எனினும், ஓ! ஜனமேஜயா, அறம் சார்ந்தவரும், பிட்சாடன {பிச்சை எடுத்து வாழும்} வாழ்வை நோற்பவருமான அந்த நுண்ணறிவுமிக்கத் தவசி {ஜைகிஷவ்யர்}, இரவுணவுக்கான நேரத்தில் ஐயம்வேண்டி {யாசகம் வேண்டி} தேவலரை அணுகினார்.(9) அந்தப் பெரும் தவசி {ஜைகிஷவ்யர்}, ஆண்டியின் கோலத்தில் மீண்டும் தோன்றியதைக் கண்ட தேவலர், அவருக்குப் பெரும் கௌரவங்களை அளித்து, மிகுந்த மனநிறைவைக் கொண்டார்.(10)

அந்தத் தேவலர், முனிவர்களால் விதிக்கப்பட்ட சடங்குகளுடனும், பெருங்கவனத்துடனும் தம்மால் இயன்ற அளவுக்குத் தமது விருந்தினரைப் பல வருடங்களாக வழிபட்டார்.(11) எனினும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒரு நாள் உயர் ஆன்ம தேவலரின் இதயத்தில், அந்தப் பெரும் முனிவரைக் கண்டு பெருங்கவலை உண்டானது.(12) அவர் {அசிததேவலர்} தனக்குள்ளேயே, “நான் இந்தத் தவசியைப் {ஜைகிஷவ்யரைப்} பல வருடங்களாக வழிபட்டு வருகிறேன். எனினும், அலட்சியமாக இருக்கும் இந்த ஆண்டி என்னிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லையே” என்று நினைத்தார்.(13) அருள்நிறைந்த தேவலர், இவ்வாறு நினைத்துக் கொண்டு, கையில் மண்குடத்துடன் ஆகாயமார்க்கமாகப் பெருங்கடலின் கரைக்குச் சென்றார்.(14) ஆறுகளின் தலைவனான பெருங்கடலின் கரையை அடைந்த உயர் ஆன்ம தேவலர், ஓ! பாரதா, அங்கே தனக்கு முன்பே வந்திருந்த ஜைகிஷவ்யரைக் கண்டார்.(15)

இதைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்த தலைவர் அசிதர், தனக்குள்ளேயே, “எனக்கு முன்பே பெருங்கடலை அடைந்து, தூய்மைச் சடங்குகளைச் செய்ய இந்த ஆண்டியால் எவ்வாறு முடிந்தது” என்று நினைத்தார்.(16) இவ்வாறே அந்தப் பெருமுனிவரான அசிதர் நினைத்தார். தூய்மைச் சடங்குகளை முறையாகச் செய்து, அதன்மூலம் தூய்மையடைந்த அவர் {அசிததேவலர்}, அமைதியாகப் புனிதமான மந்திரங்களை உரைக்கத் தொடங்கினார்.(17) தூய்மைச்சடங்குகளையும், மௌன வேண்டுதல்களையும் நிறைவு செய்த அந்த அருளப்பட்ட தேவலர், தமது மண் குடத்தில் நீரை நிரப்பிக் கொண்டு தமது ஆசிரமத்திற்குச் சென்றார். அந்தத் தவசி தமது ஆசிரமத்திற்குள் நுழைந்தபோதே அங்கே அமர்ந்திருந்த ஜைகிஷவ்யரைக் கண்டார்.(18,19) தேவலரிடம் ஒரு வார்த்தையும் பேசாத பெரும் தவசியான ஜைகிஷவ்யர், அவரது ஆசிரமத்தில் ஒரு மரக்கட்டையைப் போல வாழ்ந்து வந்தார்.(20)

தவங்களின் பெருங்கடலான அந்தத் தவசி {ஜைகிஷவ்யர்} (தான் செல்வதற்கு முன்பாகவே) கடலுக்குச் சென்று நீராடியதைக் கண்ட அசிதர், இப்போது தாம் வருவதற்கு முன்பாகவே அவர் அசிரமத்திற்கும் வந்துவிட்டதைக் கண்டார்.(21) பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான அசிததேவலர், ஜைகிஷவ்யரின் தவங்களால் யோகத்தின் மூலமாக அடையப்பட்ட இந்தச் சக்தியைக் கண்டு, அக்காரியம் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.(22) உண்மையில், அந்தச் சிறந்த தவசி {தேவலர்}, “எவ்வாறு இவர் எனக்கு முன்பே பெருங்கடலிலும், மீண்டும் என் ஆசிரமத்திலும் காணப்பட்டார்?” என்று மிகவும் ஆச்சரியமடைந்தார்.(23) மந்திரங்களை அறிந்தவரும், தவசியுமான அந்தத் தேவலர், இவ்வாறாகச் சிந்தித்துக் கொண்டிருந்த போது, ஓ! ஏகாதிபதி, ஆண்டியின் வாழ்வை வாழும் இந்த ஜைகிஷவ்யர் உண்மையில் யார் என்பதை அறிய தமது ஆசிரமத்தில் இருந்து எழுந்து வானத்தில் உயர்ந்தார்.(24) தேவலர், வானத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் சித்தர்களின் கூட்டத்தையும், அந்தச் சித்தர்களால் மரியாதையுடன் வழிபடப்படும் ஜைகிஷவ்யரையும் கண்டார்.(25)

தமது நோன்புகளில் உறுதியுடனும், (முயற்சிகளில்) விடாமுயற்சியுடனும் இருந்த தேவலர், அக்காட்சியைக் கண்டு கோபத்தால் நிறைந்தார். பிறகு அவர் {அசிததேவலர்} அந்த ஜைகிஷவ்யர் சொர்க்கத்திற்குப் புறப்பட்டுச் செல்வதைக் கண்டார்.(26) அடுத்ததாக அவர் பிதுருக்களின் உலகத்திற்குச் செல்வதை அவர் கண்டார். அதன் பிறகு அவர் யமலோகத்திற்குச் செல்வதையும் அவர் கண்டார்.(27) அந்தப் பெரும்தவசியான ஜைகிஷவ்யர் யமலோகத்தில் இருந்து, சோமலோகத்திற்குப் பறந்து செல்வதைக் கண்டார். பிறகு அவர் (ஒன்றன்பின் ஒன்றாக) குறிப்பிட்ட கடுமையான வேள்விகளைச் செய்தவர்கள் செல்லும் அருள் உலகங்களுக்குச் செல்வதைக் கண்டார்.(28) அங்கிருந்து அக்னிஹோத்ரிகளின் உலகத்திற்குச் சென்ற அவர், அங்கிருந்து தர்ச மற்றும் பௌர்ணமாச வேள்விகளைச் செய்தோரின் உலகத்திற்குச் சென்றார்.(29) நுண்ணறிவைக் கொண்டவரான தேவலர், தேவர்களாலேயே வழிபடப்படுவதும், விலங்குகளைக் கொன்று வேள்வி செய்தோர் அடைவதுமான தூய்மையான உலகத்திற்கு அவர் செல்வதைக் கண்டார்.(30)

அடுத்ததாக அவர், சாதுர்மாஸ்யம் என்றழைக்கப்படுவதும் மற்றும் அதே போன்ற பலவேறு வேள்விகளையும் செய்த தவசிகளின் இடத்திற்குச் செல்வதைத் தேவலர் கண்டார். அங்கிருந்து அவர், அக்னிஷ்டோம வேள்வியைச் செய்தவர்களுக்குச் சொந்தமான உலகதிற்குச் சென்றார்.(31) அடுத்ததாகத் தேவலர், அக்னிசுடம் என்றழைக்கப்படும் வேள்வியைச் செய்தோரின் உலகத்திற்கத் தமது விருந்தினர் {ஜைகிஷவ்யர்} செல்வதைக் கண்டார்.(32) உண்மையில், அவர் வாஜபேயம் என்றழைக்கப்படும் முதன்மையான வேள்வியையும், அபரிமிதமான தங்கம் தேவைப்படும் பிற வேள்விகளை {பகுஸுவர்ணகம் போன்றவற்றைச்} செய்த உயர்ந்த ஞானியரின் உலகங்களுக்குச் செல்வதைத் தேவலர் கண்டார்.(33) பிறகு அவர், ராஜசூயம் மற்றும் பௌண்டரிகம் ஆகியற்றைச் செய்தோரின் உலகத்திற்கு ஜைகிஷவ்யர் செல்வதைக் கண்டார்.(34) குதிரை வேள்வி {அஸ்வமேதம்} மற்றும் மனிதர்கள் கொல்லப்படும் வேள்வி {நரமேதம்} ஆகியவற்றைச் செய்த முதன்மையான மனிதர்களின் உலகங்களில் அவரைக் கண்டார்.(35)

உண்மையில் தேவலர், சௌத்ராமணி என்றழைக்கப்படும் வேள்வி மற்றும் அடைவதற்கு மிகக் கடினமானதும், அனைத்து விலங்குகளின் இறைச்சியும் தேவைப்படுவதுமான வேள்வியையும் {சர்வமேதம்} செய்தோரின் உலகத்தில் ஜைகிஷவ்யரைக் கண்டார்.(36) துவாதசாகம் என்றழைக்கப்படும் வேள்வி மற்றும் அதே தன்மை கொண்ட பல்வேறு வேள்விகளைச் செய்தோரின் உலகத்தில் ஜைகிஷவ்யர் காணப்பட்டார்.(37) அடுத்ததாக அசிதர், தமது விருந்தினர், மித்ராவருணன் மற்றும் ஆதித்தியர்களின் உலகங்களுக்குச் செல்வதைக் கண்டார்.(38) அடுத்ததாக அசிதர், தன் விருந்தினர் {ஜைகிஷவ்யர்} ருத்திரர்கள், வசுக்கள் மற்றும் பிருஹஸ்பதியின் உலகங்களைக் கடந்து செல்வதைக் கண்டார்.(39) கோலோகம் என்றழைக்கப்படும் அருள் உலகத்திற்குப் பறந்து சென்ற ஜைகிஷவ்யர், அடுத்ததாகப் பிரம்மசத்ரம் செய்தோரின் உலகத்தைக் கடக்கும்போது காணப்பட்டார்.(40)

தமது சக்தியால் மேலும் மூன்று உலகங்களைக் கடந்த அவர் {ஜைகிஷ்வ்யர்}, கணவர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டோரும், கற்புடையவர்களுமான பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட உலத்தில் அவர் காணப்பட்டார்.(41) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, அந்த இடத்தில், ஆழ்ந்த யோகம் கொண்டவரும், தவசிகளில் முதன்மையானவருமான ஜைகிஷவ்யர் தன் பார்வையில் இருந்து மறைந்துவிட்டதை அசிதர் கண்டார்.(42) அப்போது உயர்ந்த அருளைக் கொண்டவரான அந்தத் தேவலர், ஜைகிஷவ்யரின் சக்தி, அவரது நோன்புகளின் சிறப்பு, ஒப்பிலாத அவரது யோக வெற்றி ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்தார்.(43) பிறகு சுயக்கட்டுப்பாடு கொண்டவரான அசிதர், மரியாதையுடன் தமது கரங்களைக் குவித்து, பிரம்மசத்ரம் செய்தோரின் உலகத்தில் இருந்த முதன்மையான சித்தர்களிடம்,(44) “நான் ஜைகிஷவ்யரைக் காணவில்லை. பெரும் சக்தி கொண்ட அந்தத் தவசி எங்கே இருக்கிறார் என்பதை எனக்குச் சொல்வீராக. என் ஆவல் அதிகமாக இருப்பதால் இதை நான் கேட்க விரும்புகிறேன்” என்று விசாரித்தார்.(45)

அதற்குச் சித்தர்கள் {அசிததேவலரிடம்}, “ஓ! கடும் நோன்புகளைக் கொண்ட தேவலரே, நாங்கள் சொல்லும் உண்மையைக் கேட்பீராக. ஜைகிஷவ்யர் அழிவில்லாத பிரம்மலோகத்திற்குச் சென்றுவிட்டார்” என்றனர்”.(46)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிரம்மசத்ரியின் பகுதிகளில் வசித்த சித்தர்கள் சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்ட அசிதர், உயரப் பறக்க முயற்சித்து விரைவில் கீழே விழுந்தார்.(47) அப்போது சித்தர்கள், மீண்டும் தேவலரிடம், “ஓ! தேவலரே, ஜைகிஷவ்யர் சென்றிருக்கும் பிரம்ம லோகத்திற்கு நீர் செல்லத் தகுந்தவரல்ல” என்றனர்”.(48)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சித்தர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவலர், முறையான வரிசையில் ஒவ்வொரு உலகமாகத் தாண்டி கீழே வந்தார்.(49) உண்மையில், சிறகு படைத்த ஒரு பூச்சியைப் போல அவர் வேகமாகத் தனது ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார். தமது வசிப்பிடத்திற்குள் நுழையும் போதே அங்கே அமர்ந்திருக்கும் ஜைகிஷவ்யரைக் கண்டார்.(50) ஜைகிஷவ்யரின் தவ யோகத்தின் மூலம் அடையப்பட்ட சக்தியைக் கண்ட தேவலர், அதுகுறித்து நேர்மையான அறிவோடு சிந்தித்து,(51) ஓ! மன்னா {ஜனமேஜயா}, பணிவுடன் அந்தப் பெரும் தவசியை அணுகி, அந்த உயர் ஆன்ம ஜைகிஷவ்யரிடம், “ஓ! போற்றுதலுக்குரியவரே, மோட்ச (விடுதலையின்) அறத்தை {மோக்ஷதர்மத்தைப்} பின்பற்ற நான் விரும்புகிறேன்” என்றார்.(52) அவரது வார்த்தைகளைக் கேட்ட ஜைகிஷவ்யர், அவருக்குப் பாடங்களைக் கொடுத்தார். அவர் {ஜைகிஷவ்யர்}, யோகம் மற்றும் அழியாத உயர்ந்த கடமைகளையும், அவற்றின் நேர்மாறான தன்மைகளையும் அவருக்கு {தேவலருக்குப்} போதித்தார்.(53) அந்தப் பெருந்துறவி {ஜைகிஷவ்யர்}, உறுதியான தீர்மானத்தில் இருக்கும் அவரைக் கண்டு, (அவ்வறத்திற்குள் அவர் நுழைவதற்காக) விதிக்கப்பட்டிருக்கும் செயல்களனைத்தையும் முறையான சடங்குகளுடன் செய்தார்.(54) அப்போது பித்ருக்களுடன் சேர்ந்த உயிரினங்கள் அனைத்தும், மோட்ச அறத்தைப் பின்பற்றத் தீர்மானத்திருக்கும் தேவலரைக் கண்டு, “ஐயோ, இனி நமக்கு யார் உணவளிப்பார்?” என்று அழத் தொடங்கின.(55)

{திசைகளின்} பத்து புள்ளிகளிலும் எதிரொலித்த அவ்வுயிரினங்களின் இந்தப் புலம்பல்களைக் கேட்ட தேவலர், மோட்ச அறத்தை {துறவறத்தைக்} கைவிடுவதில் தன் இதயத்தை நிலைக்கச் செய்தார்.(56) ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிறகு அனைத்து வகையிலான புனித கனிகளும், கிழங்குகளும், மலர்களும், இலையுதிர்க்கும் மூலிகைகளும், “தீய இதயம் கொண்டவனும், அற்பனுமான இந்தத் தேவலன், மீண்டும் நம்மை வெட்டிப் பிடுங்கப் போகிறான் என்பதில் ஐயமில்லை. ஐயோ, அனைத்துயிர்களுக்கும் முற்றான தீங்கிழையாமையை உறுதிசெய்துவிட்டு, அவன் செய்யப்போகும் தீங்கை அவன் அறியவில்லை” என்றன.(57,58) இதனால், அந்தச் சிறந்த தவசி, தன் அறிவின் துணையுடன் சிந்திக்கத் தொடங்கி, “மோட்ச அறம், அல்லது இல்லறம் ஆகிய இரண்டில்[1] எனக்கு எது சிறந்தது?” என்று நினைத்தார்.(59) இதுகுறித்துச் சிந்தித்த தேவலர், ஓ மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, இல்லறத்தைக் கைவிட்டு, மோட்ச அறத்தை {துறவறத்தைப்} பின்பற்றினார்.(60)

இவ்வாறு சிந்தித்த தேவலர், அந்தத் தீர்மானத்தின் விளைவால், ஓ! பாரதா {ஜனமேஜயா}, உயர்ந்த வெற்றியையும், உயர்ந்த யோகத்தையும் அடைந்தார்.(61) அப்போது, பிருஹஸ்பதியின் தலைமையிலான தேவர்கள், ஜைகிஷவ்யரையும், அந்தத் தவசியின் தவங்களையும் புகழ்ந்தனர்.(62) தவசிகளில் முதன்மையானவரான நாரதர், அந்தத் தேவர்களிடம், “அசிதரை ஆச்சரியத்தில் நிறைத்த ஜைகிஷவ்யரிடம் கடுந்தவம் இல்லை” என்றார்.(63) அப்போது அந்தச் சொர்க்கவாசிகள், இந்த அச்சந்தரும் வார்த்தைகளைச் சொன்ன நாரதரிடம், “பெரும் தவசியான ஜைகிஷவ்யரைக் குறித்து அவ்வாறு சொல்லாதீர்.(64) ஆற்றல், தவம் மற்றும் யோக சக்தியில் இந்த உயர் ஆன்மாவுக்கு மேன்மையான, அல்லது இணையான எவரும் இல்லை. ஜைகிஷவ்யர் மற்றும் அசிதரின் சக்தி இவ்வாறானதே. அந்த இருவரின் இடமும், அந்த உயர் ஆன்மாக்கள் இருவரின் தீர்த்தமும் இதுதான் {ஆதித்திய தீர்த்தம் தான்}.(66) உயர் ஆன்மா கொண்டவனும், உன்னதச் செயல்களைச் செய்பவனுமான அந்தக் கலப்பைதாரி {பலராமன்}, அங்கே நீராடி, பிராமணர்களுக்குச் செல்வத்தைத் தானமளித்து, பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டிய பிறகு, சோம தீர்த்தத்தை நோக்கிச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(67)

ததீசரும், சாரஸ்வதரும்! – சல்லிய பர்வம் பகுதி – 51-ததீச, சாரஸ்வத முனிவர்களின் வரலாறு; ததீச முனிவரை மயக்கிய அலம்புசை; சரஸ்வதி ஆற்றிடம் பிறந்த சாரஸ்வதர்; ததீசரின் எலும்புகளால் ஆயுதம் செய்து அசுரர்களை வென்ற இந்திரன்; பனிரெண்டு வருடங்கள் நீடித்த பஞ்சம்; சரஸ்வதியாற்றின் மீன்களை உண்டு வாழ்ந்த சாரஸ்வத முனிவர்; அறுபதாயிரம் முனிவர்களுக்கு வேதங்களைக் கற்பித்த சாரஸ்வதர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதா, அந்தத் தீர்த்தத்தில்தான் {சோம தீர்த்தத்தில்தான்}, பழங்காலத்தில், நட்சத்திரங்களின் தலைவன் {சந்திரன்}, தாரகனைத் தீமையின் வேராகக் கொண்ட ஒரு பெரும்போரில் ஈடுபட்டு, ராஜசூய வேள்வியைச் செய்தான்.(1) தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அறவோனான பலன் {பலராமன்}, அத்தீர்த்தத்தில் நீராடி, தானங்கள் பலவற்றைச் செய்து, சாரஸ்வதர் என்ற பெயர் கொண்ட முனிவரின் தீர்த்தத்திற்குச் சென்றான்.(2) அங்கே முன்பொரு காலத்தில், பனிரெண்டு {12} வருட பஞ்சம் நீடித்தபோது, தவசியான அந்தச் சாரஸ்வதர், பிராமணர்களில் முதன்மையானோர் பலருக்கு வேதங்களைக் கற்பித்தார்” {என்றார் வைசம்பாயனர்}.(2,3)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! தவத் தகுதியைக் கொண்டவரே, அந்தத் தவசியான சாரஸ்வதர், பனிரெண்டு வருடகாலப் பஞ்சத்தின் போது, ஏன் வேதங்களைக் கற்பித்தார்?” என்று கேட்டான்.(4)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில், நுண்ணறிவும், பெரும் தவத்தகுதியும் கொண்ட ஒரு தவசி இருந்தார். அவர் ததீசர் {ததீசி} என்ற பெயரால் கொண்டாடப்பட்டார். தமது புலன்களில் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்ட அவர், ஒரு பிரம்மச்சாரியின் வாழ்வை நோற்றார்.(5) அவரது மிகக் கடுமையான தவங்களின் விளைவால், சக்ரன் {இந்திரன்} பேரச்சத்தால் பீடிக்கப்பட்டான். பல்வேறு வகை வெகுமதிகளைக் கொடுக்க முன்வந்தும், அந்தத் தவசியை (அவரது தவத்திலிருந்து) விலக்க முடியவில்லை.(6) இறுதியாக அந்தப் பகனைத் தண்டித்தவன் {இந்திரன்}, அந்தத் தவசியை ஆசையில் மயக்கமடையச் செய்ய, பேரழகுடையவளும், அலம்புசை என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு தெய்வீக அப்சரஸை அவரிடம் அனுப்பி வைத்தான்.(7) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த உயர் ஆன்ம தவசி, தேவர்களை நிறைவு செய்யும் செயலை {தவத்தை} எங்கே செய்து வந்தாரோ, அந்தச் சரஸ்வதியின் கரையில் மேற்கண்ட {அலம்புசை என்ற} பெயரையுடைய தெய்வீகக் காரிகை தோன்றினாள்.(8) அழகிய அங்கங்கள் கொண்ட அந்தக் காரிகையைக் {அலம்புசையைக்} கண்டதும், அந்தத் தூய ஆன்மா கொண்ட தவசியின் {ததீசரின்} உயிர் வித்து வெளிப்பட்டது. சரஸ்வதியில் விழுந்த அஃதை அவர் கையில் ஏந்தினார்.(9) உண்மையில், ஓ! மனிதர்களில் காளையே {ஜனமேஜயா}, அவ்வித்தைக் கண்ட அந்த ஆறானவள் {சரஸ்வதி}, அதைத் தன் கருவறையில் தாங்கினாள். சரியான காலத்தில் அது கருவாக வளர்ந்தது. அந்தப் பேராறும், உயிர் கொண்ட பிள்ளையாவதற்காக அதைத் தாங்கிக் கொண்டாள்.(10)

ஓ! தலைவா {ஜனமேஜயா}, காலம் வந்தபோது, அந்தப் பிள்ளையை ஈன்ற அந்த முதன்மையான ஆறானவள் {சரஸ்வதியானவள்}, அப்பிள்ளையை எடுத்துக் கொண்டு அம்முனிவரிடம் {ததீசரிடம்} வந்தாள்.(11) அந்த முனிவர்களில் சிறந்தவர் {ததீசர்}, {முனிவர்களின்} சபையில் இருப்பதைக் கண்ட சரஸ்வதி, அவரிடம் {ததீசரிடம்} பிள்ளையைக் கொடுக்கும்போது,(12) “ஓ! மறுபிறப்பாள {பிராமண} முனிவரே, உம்மிடம் கொண்ட அர்ப்பணிப்பினால், நான் உமது மகனைத் தாங்கினேன். அலம்புசை என்ற அப்சரஸைக் கண்டதும் வெளிப்பட்ட உமது வித்தைக் கண்டு, உம்மிடம் கொண்ட அர்ப்பணிப்பினாலும், உமது சக்திக்கு எந்த அழிவும் ஏற்படாது என்பதை அறிந்தும், அஃதை என் கருவறையில் தாங்கினேன்.(13,14) என்னால் கொடுக்கப்படும் உமது களங்கமற்ற பிள்ளையை ஏற்றுக் கொள்வீராக” என்றாள். இவ்வாறு அவளால் {சரஸ்வதியால்} சொல்லப்பட்ட அம்முனிவர் {ததீசர்}, அப்பிள்ளையை ஏற்றுக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தார்.(15)

அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் {ததீசர்}, ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, பாசத்தால் தன் மகனின் தலையை முகர்ந்து, சில காலத்திற்கு அவனைத் தன் நெருக்கமான அரவணைப்புக்குள் வைத்திருந்தார்.(16) அந்த ஆற்றிடம் {சரஸ்வதியிடம்} மனம் நிறைந்தவரும், பெரும் தவசியுமான அந்தத் ததீசர், அவளுக்கு ஒரு வரத்தைக் கொடுக்கும் வகையில், “ஓ! அருளப்பட்டவளே, இதுமுதல், உன் நீரைக் கொண்டு விஸ்வதேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்களின் அனைத்து இனங்கள், அப்சரஸ்கள் ஆகியோருக்குப் பலியுணவு {திருப்படையல்} கொடுக்கப்படும்போது, அதனால் அவர்கள் பெரும் மகிழ்வை அடைவார்கள்” என்றார்.(17) அந்தப் பேராற்றிடம் {சரஸ்வதியிடம்} இவ்வாறு சொன்ன அந்தத் தவசி, நிறைவை அடைந்து, மகிழ்ச்சியால் நிறைந்து, இவ்வார்த்தைகளால் அவளைப் புகழ்ந்தார். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவற்றை முறையாகக் கேட்பாயாக.(18)

{ததீசர் சரஸ்வதியிடம்}, “ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவளே, பழங்காலத்தில் பிரம்மத் தடாகத்தில் இருந்து நீ எழுந்து வந்தாய். ஓ! ஆறுகளில் முதன்மையானவளே, கடும் நோன்புகளைக் கொண்ட தவசிகள் அனைவரும் உன்னை அறிவார்கள்.(19) எப்போதும் ஏற்புடைய {இனிமையான} குணத்தைக் கொண்ட நீ, எனக்குப் பெரும் நன்மையைச் செய்திருக்கிறாய். ஓ! அழகிய நிறத்தைக் கொண்டவளே, இந்த உனது பெரும்பிள்ளை, சாரஸ்வதன் என்ற பெயரில் அறியப்படுவான்.(20) புதிய உலகங்களையே உண்டாக்கவல்லவனான இந்த உனது மகன், உன் பெயராலேயே அறியப்படுவான். உண்மையில், அந்தப் பெருந்தவசி சாரஸ்வதன் என்ற பெயரால் அறியப்படுவான்.(21) ஓ! அருளப்பட்டவளே, பனிரெண்டு வருடங்கள் நீடிக்கும் பஞ்சம் ஏற்படும்போது, இந்தச் சாரஸ்வதன், பிராமணர்களில் முதன்மையானோர் பலருக்கு வேதங்களைக் கற்பிப்பான்.(22) ஓ! அருளப்பட்ட சரஸ்வதியே, ஓ அழகியே, என் அருளால் நீ எப்போதும் புனிதமான நதிகள் அனைத்திலும் முதன்மையானவளாக இருப்பாய்” என்றார் {ததீசர்}.(23)

அந்தத் தவசியால் {ததீசரால்} வரங்கள் அருளப்பட்ட பிறகு, அந்தப் பேராறானவள் இவ்வாறே புகழப்பட்டாள். ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பிறகு அந்த ஆறானவள் தன் பிள்ளையை எடுத்துக் கொண்டு பெரும் மகிழ்ச்சியுடன் சென்றாள்.(24) அதேவேளையில், தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் போர் நேர்ந்த தருணத்தில், சக்ரன் {இந்திரன்}, ஆயுதங்களைத் தேடி மூவுலகங்களிலும் திரிந்து கொண்டிருந்தான்.(25) எனினும், அந்தப் பெருந்தேவன் {இந்திரன்}, தேவர்களின் எதிரிகளைக் கொல்லத்தக்க ஆயுதங்களைக் கண்டடைவதில் தோல்வியுற்றான்.(26) பிறகு அந்தச் சக்ரன் தேவர்களிடம், “இந்தப் பேரசுரர்களை என்னால் சந்திக்க முடியவில்லை. உண்மையில், ததீசரின் எலும்புகள் இல்லாமல் நமது எதிரிகளை நம்மால் கொல்ல முடியாது.(27) எனவே தேவர்களே, அந்த முனிவர்களில் சிறந்தவரிடம் {ததீசரிடம்} சென்று, அவரிடம், “ஓ! ததீசரே, உமது எலும்புகளைத் தாரும். அவற்றைக் கொண்டு நாங்கள் எங்கள் எதிரிகளைக் கொல்வோம்” என்று வேண்டிக் கொள்ளுங்கள்” என்றான்.(28) அவர்களால் மன்றாடிக் கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த முனிவர்களில் முதன்மையானவர் {ததீசர்}, எந்தத் தயக்கமுமின்றித் தம்முயிரைக் கொடுத்தார். தேவர்களுக்கு ஏற்புடையதைச் செய்த அந்தத் தவசி, வற்றாத தகுதிகளை {புண்ணியங்களைக்} கொண்ட பல உலகங்களை அடைந்தார்.(29)

அதேவேளையில் சக்ரன் {இந்திரன்}, அவரது எலும்புகளைக் கொண்டு, வஜ்ரம், சக்கரம், கனத்த கதாயுதங்கள், பலவகையிலான தண்டங்கள் மற்றும் தடிகள் போன்ற பல்வேறு ஆயுதங்களை மகிழ்ச்சியாக உண்டாக்கினான். படைப்பாளனுக்கே இணையானவரான ததீசர், அனைத்துயிர்களுடைய தலைவனின் {பிரம்மனின்} மகனும், பெரும் முனிவருமான பிருகுவால் கடுந்தவங்களின் துணைகொண்டு பெறப்பட்டவராவார்[1].(31) பருத்த அங்கங்களும், பெரும் சக்தியும் கொண்டவரான ததீசர், உலகின் உயிரினங்களில் பலமிக்கவராகப் படைக்கப்பட்டார். மகிமைக்காகக் கொண்டாடப்படுபவரான அந்தப் பலமிக்கத் ததீசர், மலைகளின் மன்னனைப் போன்ற உயரத்தை அடைந்தார். பகனைத் தண்டித்தவன் {இந்திரன்}, அவரது {ததீசரது} சக்தியால் எப்போதும் கவலையடைந்திருந்தான்.(32) பிரம்ம சக்தியில் பிறந்த வஜ்ரத்தை, மந்திரங்களால் ஈர்த்த இந்திரன், ஓ! பாரதா, அதை ஏவியபோது பேரொலியை எழுப்பி, தைத்தியர்களின் தொண்ணூற்றொன்பது வீரர்களைக் கொன்றான்.(33) பயங்கரமான நீண்ட காலம் சென்றதும், ஓ! மன்னா, பனிரெண்டு ஆண்டுகளுக்கு நீடித்த பஞ்சம் ஏற்பட்டது.(34) பனிரெண்டாண்டு காலம் அந்தப் பஞ்சம் நீடித்த போது, ஓ! ஏகாதிபதி, பெரும் முனிவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(35)அனைத்துத் திசைகளிலும் அவர்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டவரும், தவசியுமான சாரஸ்வதரும், தப்பி ஓடுவதிலேயே தன் இதயத்தை நிலைநிறுத்தினார். அப்போது சரஸ்வதி ஆறானவள், அவரிடம் {சாரஸ்வதரிடம்}, “ஓ! மகனே, இங்கிருந்து நீ செல்ல வேண்டாம். இங்கேயே எப்போதும் பெரிய மீன்களை உனக்கு நான் உணவாகக் கொடுப்பேன். எனவே, இங்கேயே இருப்பாயாக” என்றாள்.(37) (அந்த ஆற்றால்) இவ்வாறு சொல்லப்பட்ட அந்தத் தவசி {சாரஸ்வதர்}, முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் உணவுக் காணிக்கைகளைக் கொடுத்து அங்கேயே வாழ்ந்து வந்தார். தமது தினசரி உணவை அடைந்த அவர், இவ்வாறே தன் உயிரையும், தேவர்களையும் தொடர்ந்து தாங்கி வந்தார்.(38) பனிரெண்டு வருட பஞ்சம் கடந்த பிறகு, வேதங்களின் உரைகளைக் குறித்துப் பெருமுனிவர்கள் ஒருவருக்கொருவர் வேண்டிக் கேட்டுக் கொண்டனர்.(39) அம்முனிவர்கள், பசித்த வயிறுகளுடன் திரிந்து கொண்டிருந்ததில், தங்கள் வேத அறிவை இழந்திருந்தனர். உண்மையில், அவர்களில் எவரும் சாத்திரங்களைப் புரிந்து கொள்ளக்கூடியவராக இல்லை.(40)

அவர்களில் எவரோ ஒருவர், குவிந்த கவனத்தோடு முனிவர்களில் முதன்மையான சாரஸ்வதர், வேதங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது, அவரைச் சந்திக்க நேர்ந்தது.(41) முனிவர்களின் சபைக்குத் திரும்பிய அவர் {அந்த ஒருவர்}, ஒப்பற்ற ஒளியையும், தேவர்களைப் போன்ற மேனியையும் கொண்டிருந்த சாரஸ்வதர், தனிமையான காட்டில் வேதங்களைப் படித்துக் கொண்டிருப்பதைக் குறித்து அவர்களிடம் {அந்தச் சபையில் இருந்த முனிவர்களிடம்} சொன்னார்.(42) பிறகு அந்தப் பெரும் முனிவர்கள் அனைவரும் அந்த இடத்திற்கு வந்து, அந்தத் தவசிகளில் சிறந்த சாரஸ்வதரிடம், “ஓ!தவசியே, எங்களுக்குக் கற்பிப்பீராக” என்ற வார்த்தைகளைச் சொன்னார்கள். அந்தத் தவசியும் {சாரஸ்வதரும்} அவர்களிடம், “முறையாக என் சீடர்கள் ஆவீர்களாக” என்று மறுமொழிகூறினார்.(43,44)

அதற்கு அந்தத் தவசிகளின் சபையானது {சாரஸ்வதரிடம்}, “ஓ! மகனே, நீ வயதால் மிகவும் இளையவனாக இருக்கிறாய்” என்றது. அதற்கு அவர் அந்தத் தவசிகளிடம், “என் அறத்தகுதி அழிவடையாமல் இருக்க நான் அத்தகு வழியிலேயே செயல்பட வேண்டும்.(45) எவன் முறையில்லாமல் கற்பிப்பிப்பானோ, எவன் முறையில்லாமல் கற்பானோ, அவர்கள் இருவரும் வெகு விரைவில் {அறிவின்} அழிவையடைந்து ஒருவரையொருவர் வெறுப்பார்கள்.(46) வருடங்கள் {வயது}, மூப்பு {தலைமயிர் நரைத்தல்}, செல்வம், சொந்தங்கள் ஆகியவற்றால் முனிவர்கள் தங்கள் தகுதியை அடைவதில்லை. நம்மில் எவர் வேதங்களைப் படித்துப் புரிந்து கொள்ளவல்லவரோ அவரே பெரியவர்” என்றார்.(47) அவரது இவ்வார்த்தைகளைக் கேட்ட அம்முனிவர்கள், முறையாக அவரது சீடர்களாகி, அவரிடம் இருந்து வேதங்களை அடைந்து, மீண்டும் தங்கள் சடங்குகளைப் பயின்றனர்.(48) மறுபிறப்பாள {பிராமண} முனிவரான சாரஸ்வதரிடம் இருந்து வேதங்களை அடைவதற்காக {இவ்வாறு} அறுபதாயிரம் {60,000} முனிவர்கள் அவரது சீடர்களானார்கள்.(49) ஏற்புடைய அம்முனிவர் சிறுவனாயிருப்பினும், அவருக்குக் கீழ்ப்படிந்த அம்முனிவர்கள் ஒவ்வொருவரும், அவர் அமர்வதற்கான ஆசனமாகக் கைநிறைந்த புற்களை {தர்ப்பைப் புற்களைக்} காணிக்கை அளித்தனர்.(50)

ரோகிணியின் வலிமைமிக்க மகனும், கேசவனின் {கிருஷ்ணனின்} அண்ணனுமானவன் {பலராமன்}, அத்தீர்த்தத்தில் {சாரஸ்வதத் தீர்த்தத்தில்} செல்வத்தைத் தானமளித்து, பழங்காலத்தில் முதிர்ந்த பெண்ணொருத்தி திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த மற்றொரு தீர்த்தத்திற்கு {விருத்தகன்யாஸ்ரமத்திற்கு} மகிழ்ச்சியாகச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(51)

முதிர்கன்னியும், சிருங்கவானும்! – சல்லிய பர்வம் பகுதி – 52-குணிகர்க்கர் உண்டாக்கிய மகள்; திருமணத்தில் விருப்பமில்லாமல் கடுந்தவம் செய்து முதிர் கன்னியாகியது; திருமணம் செய்யாததால் அருள் உலகங்கள் கிடைக்காது என்று அவளிடம் சொன்ன நாரதர்; ஓர் ஒப்பந்தத்தின் பேரில் அவளைத் திருமணம் செய்து கொண்ட சிருங்கவான்; விருத்தகன்யாஸ்ரமத் தீர்த்தத்திற்குண்டான பலன்; சல்லியனின் மறைவை அறிந்த பலராமன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, பழங்காலத்தில் அந்தக் கன்னிகை ஏன் தவத்தில் ஈடுபட்டாள். என்ன காரணத்திற்காக அவள் தவத்தில் ஈடுபட்டாள்? அவளது நியமம் என்ன?(1) நான் ஏற்கனவே உம்மிடம் கேட்ட உரையானது ஒப்பற்றதாகவும், புதிர் நிறைந்ததாகவும் இருக்கிறது. (இப்போது) அந்தக் கன்னிகை எவ்வாறு தன்னைத் தவத்தில் ஈடுபடுத்திக் கொண்டாள் என்ற விபரங்கள் அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குணி-கர்க்கர் என்ற பெயரில் பெரும் சக்தியையும், பெரும் புகழையும் கொண்ட ஒரு முனிவர் இருந்தார். அந்தத் தவசிகளில் முதன்மையானவர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, கடுந்தவங்களைச் செய்து, தம் விருப்பத்தின் ஆணையால் அழகிய புருவங்களைக் கொண்ட ஒரு மகளை[1] உண்டாக்கினார். கொண்டாடப்பட்ட தவசியான அந்தக் குணிகர்க்கர் அவளைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தார். பிறகு அவர், ஓ! மன்னா, தன் உடலைக் கைவிட்டு, சொர்க்கத்திற்குச் சென்றார்.(3,4) களங்கமற்றவளும், இனிமையானவளும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளும், அழகிய புருவங்களைக் கொண்டவளுமான அந்தக் கன்னிகை, தொடர்ந்து மிகக் கடுமையான தவங்களைச் செய்துவந்தாள். அவள் தன் உண்ணாநோன்புகளால் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட்டாள்.(5)இத்தகு கடும் தவங்களைப் பயில்வதிலேயே நீண்ட காலம் கடந்து சென்றது. அவளது தந்தை {குணி-கர்க்கர்} அவளை ஒரு கணவனுக்குக் கொடுப்பதற்குத் தயாராக இருந்தாலும், தனக்குத் தகுந்த ஒரு கணவனை அவள் காணாததால் திருமணத்தில் அவள் விருப்பம் கொள்ளவில்லை.(6) கடுந்தவங்களால் தொடர்ந்து தன் உடலை மெலியச் செய்த அவள், அந்தத் தனிமையான காட்டில் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபடுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள்.(7) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வளவு கடுமையான முயற்சியாலும், வயதாலும், தவங்களாலும் தன்னை மெலியச் செய்திருந்தாலும், அவள் தன்னை மகிழ்ச்சி நிறைந்தவளாகவே கருதினாள்.(8) இறுதியாக எந்த ஒருவரின் துணையுமின்றி ஓரடியும் நகர முடியாத (மிக முதிர்ந்த வயதான) நிலையை அவள் அடைந்ததும், அடுத்த உலகத்திற்குச் செல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினாள்.(9)

அவள், தன் உடலைக் கைவிடப்போவதைக் கண்ட நாரதர், அவளிடம், “ஓ! பாவமற்றவளே, திருமணச் சடங்கால் நீ தூய்மையடையாததன் விளைவால், உனக்கு எந்த அருள் உலகமும் கிடைக்காது.(10) ஓ! பெரும் நோன்புகளைக் கொண்டவளே, இதை நாங்கள் சொர்க்கத்தில் கேட்டிருக்கிறோம். உன் கடுந்தவங்கள் பெரியவாயினும், அருள் உலகங்களில் உனக்கு உரிமையேதும் கிடையாது” என்றார்.(11) நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த முதிர்ந்த மங்கை, முனிவர்களின் சபைக்குச் சென்று, “எவர் திருமணத்தில் என் கரங்களை ஏற்பாரோ, அவருக்கு என் தவத்தில் பாதியை நான் அளிப்பேன்” என்றாள்.(12) அவள் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், காலவரின் மகனும்[2], சிருங்கவான் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு முனிவர், ஓர் ஒப்பந்ததை முன்மொழிந்து அவளது கரங்களை ஏற்றார். {அந்த சிருங்கவான்},(13) “ஓ! அழகிய பெண்ணே, நீ என்னுடன் ஓரிரவு மட்டுமே வாழ்வாய் என்ற இந்த ஒப்பந்தத்தின் மூலம், நான் உன் கரத்தை ஏற்கிறேன்” என்றார். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட அவள், தனது கரத்தை அவரிடம் கொடுத்தாள்.(14) உண்மையில், அந்தக் காலவரின் மகன் {சிருங்கவான்}, விதிக்கப்பட்டிருந்த விதிகளின்படி நெருப்பில் முறையாக ஆகுதிகளை ஊற்றி அவளது கரத்தை ஏற்று, அவளைத் திருமணம் செய்து கொண்டார்.(15)அவ்விரவில் அவள், தெய்வீக ஆடையை உடுத்திக் கொண்டு, தெய்வீக ஆபரணங்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தெய்வீக களிம்புகள் {சந்தனம்} மற்றும் நறுமணப் பொருட்களைப் பூசப்பட்ட, அழகிய நிறம் கொண்ட இளம்பெண்ணாக மாறினாள்.(16) சுடர்மிக்க அவளது அழகைக் கண்ட காலவரின் மகன் {சிருங்கவான்}, மிகவும் மகிழ்ச்சியடைந்து அவளது துணையுடன் ஓரிரவைக் கழித்தார். காலையில் அவள் அவரிடம்,(17) “ஓ! பிராமணரே, ஓ! தவசிகளில் முதன்மையானவரே, உம்மிடம் நான் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் நிறைவடைந்தது. நீர் அருளப்பட்டிருப்பீராக, நான் இப்போது உம்மைவிட்டுச் செல்கிறேன்” என்றாள்.(18) அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்ட அவள், மீண்டும், “நீர்க்காணிக்கைகளுடனும், ஆழ்ந்த கவனத்துடனும் சொர்க்கவாசிகளை {தேவர்களை} நிறைவுசெய்தபிறகு, இந்தத் தீர்த்தத்தில் {விருத்தகன்யாஸ்ரமத் தீர்த்தத்தில்} எவன் ஓரிரவைக் கழிப்பானோ, அவன், ஐம்பத்தெட்டு வருடங்கள் பிரம்மச்சரிய நோன்பை நோற்றதன் தகுதியை அடைவான்” என்றாள்.(20)

இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் கற்புடைய மங்கை சொர்க்கத்திற்குச் சென்றாள். அவளது தலைவனான முனிவர் {சிருங்கவான்}, அவளது அழகை நினைத்து நினைத்து மிகவும் உற்சாகமற்றவராக ஆனார்.(21) அவர் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் விளைவால் அவர் அவளுடைய பாதித் தவத்தையும் சிரமத்துடன் ஏற்றுக் கொண்டார். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அவளது அழகால் கவலையில் ஆழ்ந்த அவர் {சிருங்கவான்}, தன்னுடலைக் கைவிட்டு விரைவில் அவளைப் பின்தொடர்ந்து சென்றார்.(22) நான் உனக்குச் சொன்ன இதுவே அந்த முதிர்ந்த கன்னிகையின் {விருத்தகன்யையின்} மேன்மைபொருந்திய வரலாறாகும். இதுவே அவளது பிரம்மச்சரியம் மற்றும் சொர்க்கத்திற்கான அவளது மங்கலப் புறப்பாடு ஆகியவற்றைக் குறித்த விவரிப்பாகும்.(23) அங்கே இருந்தபோதுதான், சல்லியனின் படுகொலையைக் குறித்துப் பலதேவன் {பலராமன்} கேள்விப்பட்டான். அங்கே பிராமணர்களுக்குத் தானமளித்த அவன், ஓ! எதிரிகளை எரிப்பவனே, போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்ட சல்லியனின் நிமித்தமாகத் துயரத்தை அடைந்தான்.(24) பிறகு அந்த மதுகுலத்தோன் {பலராமன்}, சமந்தபஞ்சகத்தின் {வாயிலை விட்டு வெளியே} சுற்றுப்புறத்திற்கு வந்து, குருக்ஷேத்திரப் போரின் விளைவுகளைக் குறித்து முனிவர்களிடம் விசாரித்தான்.(25) குருக்ஷேத்திரப் போரின் விளைவுகள் குறித்து அந்த யதுகுலத்தின் சிங்கத்தால் கேட்கப்பட்ட அந்த உயர் ஆன்மாக்கள், நடந்தது அனைத்தையும் குறித்து அவனிடம் {பலராமனிடம்} சொன்னார்கள்”.(26)

குருக்ஷேத்திரமே உயர்ந்த புண்ணியத்தலம்! – சல்லிய பர்வம் பகுதி – 53-பலராமனுக்குக் குருக்ஷேத்திரத்தின் வரலாற்றைச் சொன்ன முனிவர்கள்; மண்ணை உழுது கொண்டிருந்த குரு மன்னன்; குரு மன்னனை மீண்டும் மீண்டும் கேலி செய்த இந்திரன்; விடாமுயற்சியுடன் களத்தை உழுத குரு; குருக்ஷேத்திரத்தில் இறப்பவர்கள் பாவிகளாயிருப்பினும் சொர்க்கத்தை அடைவார்கள் என்ற வரத்தை அளித்த இந்திரன்; அவ்வரத்தை அங்கீகரித்த பிரம்மன், விஷ்ணு மற்றும் சிவன்…

அம்முனிவர்கள், “ஓ! ராமா {பலராமா}, உயிரினங்கள் அனைத்தின் தலைவனான பிரம்மனின் அழிவிலா வடவேள்விப்பீடம் {உத்தரவேதி} என்று சமந்தபஞ்சகம் சொல்லப்படுகிறது. பெரும் வரங்களை அளிப்பவர்களான சொர்க்கவாசிகள் பழங்காலத்தில் அங்கே பெரும் வேள்வி ஒன்றைச் செய்தனர்.(1) அரசமுனிகளில் முதன்மையானவனும், பெரும் நுண்ணறிவும், அளவிலா சக்தியும் கொண்டவனான உயர் ஆன்ம குரு, இந்தக் களத்தில் பல வருடங்கள் உழுதான் {களத்தைச் சமப்படுத்தினான்}. எனவே இது குருக்ஷேத்திரம் (குருவின் களம்) என்று அழைக்கப்படுகிறது” என்றனர்.(2)

ராமன் {பலராமன்}, “அந்த உயர் ஆன்ம குரு இந்தக் களத்தை என்ன காரணத்திற்காக உழுதான்? தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களே இஃது உங்களால் உரைக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கேட்டான்.(3)

அதற்கு அம்முனிவர்கள் {பலராமனிடம்}, “பழங்காலத்தில், ஓ! ராமா {பலராமா}, குருவானவன் இந்தக் களத்தின் மண்ணை விடாமுயற்சியுடன் உழுதுகொண்டிருந்தான். சொர்க்கத்தில் இருந்து கீழே இறங்கி வந்த சக்ரன், அவனிடம் அதன் காரணத்தைக் கேட்கும் வகையில்,(4) “ஓ! மன்னா {குருவே}, இத்தகு விடாமுயற்சியில் நீ ஏன் ஈடுபடுகிறாய்? ஓ! அரசமுனியே, எதை அடையும் நோக்கிற்காக நீ மண்ணை உழுதுகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.(5) அதற்குக் குரு, “ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, இந்தச் சமவெளியில் இறப்பவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைந்தவர்களாக அருள் உலகங்களை அடைய வேண்டும்” என்று மறுமொழி கூறினான்.(6) தலைவன் சக்ரனோ, அதைக் கேலி செய்து விட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டான். எனினும், அரசமுனியான குரு, எந்தத் தளர்வையும் அடையாமல், தொடர்ந்து மண்ணை உழுது கொண்டிருந்தான்.(7)

அவனிடம் மீண்டும் திரும்பி வந்த சக்ரன், மீண்டும் மீண்டும் அவனைக் கேலி செய்துவிட்டுச் சென்றான். எனினும் குரு அக்காரியத்தில் எந்தத் தளர்ச்சியையும் உணரவில்லை.(8) தளராத விடாமுயற்சியுடன் மன்னன் {குரு} மண்ணை உழுவதைக் கண்ட சக்ரன் {இந்திரன்}, தேவர்களை அழைத்து, அவர்களிடம் அந்த ஏகாதிபதியின் தொழிலைக் குறித்துச் சொன்னான். இந்திரனின் வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், ஆயிரங்கண்களைக் கொண்ட தங்கள் தலைவனிடம், “ஓ! சக்ரா, உன்னால் முடியுமாகையால் அந்த அரசமுனி கேட்கும் வரத்தை அளித்து அவனை நிறுத்துவாயாக.(10) நமக்கான வேள்விகளைச் செய்யாமல், அங்கே இறப்பதால் மட்டுமே மனிதர்கள் சொர்க்கத்தை அடையமுடியுமென்றால், நம் இருப்பே ஆபத்துக்குள்ளாக நேரிடும்” என்றனர்.(11)

இவ்வாறு உற்சாகமளிக்கப்பட்ட சக்ரன், அந்த அரசமுனியிடம் திரும்பி வந்து, “மேலும் உழாதே. என் வார்த்தைகளின்படி செயல்படுவாயாக. ஓ! மன்னா {குரு மன்னா}, தங்கள் புலன்கள் அனைத்தும் விழிப்புடன் இருக்கையில் உணவைத் துறந்து இங்கே இறப்பவர்களும், இங்கே போரில் அழிவடைவோரும் சொர்க்கத்திற்குச் செல்வார்கள். ஓ! பேரான்மா கொண்டவனே, ஓ! ஏகாதிபதி, அவர்கள் சொர்க்கத்தின் அருளை அனுபவிப்பார்கள்” என்றான். இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் குரு, “அப்படியே ஆகட்டும்” என்று சக்ரனுக்குப் பதிலளித்தான்.(14) பலனைக் கொன்றவனான சக்ரன், குருவிடம் விடைபெற்றுக் கொண்டு இதயம்நிறைந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் விரைவாகச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(15)

ஓ! யது குலத்தில் முதன்மையானவனே {பலராமா}, இவ்வாறே அந்த அரசமுனியானவன் {குரு} பழங்காலத்தில் நிலத்தை உழுததால், இங்கே தங்கள் உயிர் மூச்சை விடுபவர்களுக்குச் சக்ரன் பெரும் தகுதியை {புண்ணியத்தை} உறுதியளித்தான்.(16) உண்மையில், பிரம்மனின் தலைமையிலான தேவர்களில் முதன்மையானோர் அனைவராலும், புனிதமான முனிவர்களாலும், பூமியில் இதைவிடப் புண்ணியத்தலம் வேறில்லை என்று {குருக்ஷேத்திரம்} அங்கீகரிக்கப்பட்டது.(17) இங்கே கடுந்தவங்களைச் செய்வோர், தங்கள் உடல்களைக் கைவிட்ட பிறகு பிரம்மனின் வசிப்பிடத்திற்குச் செல்கின்றனர்.(18) மேலும் இங்கே தங்கள் செல்வத்தைத் தானமளிக்கும் தகுதிவாய்ந்த மனிதர்கள் {புண்ணியவான்கள்}, விரைவில் தங்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கிக் கொள்வார்கள்.(19) மேலும் நன்மையை எதிர்பார்த்து இங்கேயே நிரந்தரமாக வசிப்போர் யமலோகத்தை எப்போதும் காணமாட்டார்கள்.(20)

இங்கே பெரும் வேள்விகளைச் செய்யும் மன்னர்கள், இந்தப் பூமி நீடித்திருக்கும் வரை சொர்க்கத்தில் வசித்திருப்பார்கள்.(21) தேவர்களின் தலைவனான சக்ரனே இது குறித்து ஒரு வரியை இங்கே தொகுத்துப் பாடியிருக்கிறான். ஓ! பலதேவா, அதைக் கேட்பாயாக. {இந்திரன்},(22) “குருக்ஷேத்திரத்தில் இருந்து காற்றால் சுமந்து செல்லப்படும் புழுதியும் கூடத் தீச்செயல் புரிவோரையும் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்து, அவர்களைச் சொர்க்கத்திற்குச் சுமந்து செல்லும்” {என்று பாடியுள்ளான்}.(23) தேவர்களில் முதன்மையானோரும், பிராமணர்களில் முதன்மையானோரும், நிருகனைப் போன்ற பூமியின் மன்னர்களில் முதன்மையானோர் பலரும், பிறரும், விலைமதிப்புமிக்க வேள்விகளை இங்கே செய்து, தங்கள் உடல்களைக் கைவிட்டபிறகு சொர்க்கத்திற்குச் சென்றனர்.(24)

தரந்துகை, அரந்துகை {என்ற இரு நதிகள்}, {பரசு}ராமத் தடாகங்களுக்கும், சமசக்ரம் {மசக்ருக தீர்த்தம்} ஆகியவற்றுக்கு இடைப்பட்ட வெளியே குருக்ஷேத்திரம் என்றழைக்கப்படுகிறது. சமந்தபஞ்சகமானது, அனைத்துயிர்களின் தலைவனான பிரம்மனின் வட (வேள்விப்) பீடம் என்றழைக்கப்படுகிறது.(25) மங்கலமான, மிகப் புனிதமான, சொர்க்கவாசிகளாலும் மிகவும் மதிக்கப்பட்ட இந்த இடமானது {சொர்க்கத்திற்குரிய} அனைத்து குணநலன்களையும் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே இங்கே போரில் கொல்லப்படும் க்ஷத்திரியர்கள் அழிவிலா அருளைக் கொண்ட புனிதமான உலகங்களை அடைகின்றனர்.(26) குருக்ஷேத்திரத்தின் உயர்ந்த அருளைக் குறித்த இதுவும் சக்ரனாலேயே சொல்லப்பட்டது. சக்ரனால் சொல்லப்பட்டதனைத்தும், பிரம்மன், விஷ்ணு மற்றும் மஹேஸ்வரனாலும் அங்கீகரிக்கப்பட்டது” {என்றனர் அம்முனிவர்கள்}.(27)

சரஸ்வதியை எப்போதும் நினைக்க வேண்டும்! – சல்லிய பர்வம் பகுதி – 54-சாண்டில்யரின் மகளான ஸ்ரீமதியின் ஆசிரமத்திலிருந்து பிலக்ஷப்பிரஸ்ரவணத் தீர்த்தத்திற்கும், அடுத்ததாகக் காரபவனத் தீர்த்தத்திற்கும், மித்ராவருண ஆசிரமத்திற்கும், பிறகு அங்கிருந்து யமுனா தீர்த்ததிற்குச் சென்ற பலராமன்; அங்கே யமுனா தீர்த்தத்தில் கூடிய முனிவர்களின் சபையில் நாரதரைக் கண்ட பலராமன்; பீம துரியோதன கதாயுத்தத்தைக் குறித்துப் பலராமனுக்குச் சொன்ன நாரதர்; தன் சீடர்களுக்கிடையிலான மோதலைக் காண விரும்பி களத்திற்கு விரைந்து சென்ற பலராமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குருக்ஷேத்திரம் சென்று, அங்கே தானமளித்த அந்தச் சாத்வத குலத்தோன் {பலராமன்}, பேரழகுடன் கூடிய மிகப்பெரிய ஓர் ஆசிரமத்திற்குச் சென்றான்.(1) அந்த ஆசிரமத்தில் மதுக {இலுப்பை} மரங்கள், மாமரங்கள், பிலாக்ஷ {ஆல} மரங்கள், நியகிரோத {புங்க} மரங்கள், வில்வ மரங்கள், சிறப்பான பலா மரங்கள், அர்ஜுன {மருத} மரங்கள் நிறைந்திருந்தன.(2) புனிதக் குறியீடுகள் பலவற்றைக் கொண்ட அந்த நல்ல ஆசிரமத்தைக் கண்ட பலதேவன், அது யாருடையது என்று முனிவர்களிடம் கேட்டான்.(3)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த உயர் ஆன்மாக்கள் அந்தப் பலதேவனிடம் {பலராமனிடம்}, “ஓ! ராமா, பழங்காலத்தில் இந்த ஆசிரமம் யாருடையதாக இருந்தது என்பதை விவரமாகக் கேட்பாயாக.(4) பழங்காலத்தில் இங்கே தேவன் விஷ்ணு கடுந்தவத்தைச் செய்தான். நித்தியமான வேள்விகள் அனைத்தையும் அவன் இங்கே செய்தான்.(5) இங்கே ஒரு பிராமணக் கன்னிகை, இளமையிலிருந்து பிரம்மச்சரிய நோன்பிருந்து, தவ வெற்றியை அடைந்தாள். மாற்றமில்லா யோக சக்திகளைக் கொண்ட தவசியான அந்தப் பெண் சொர்க்கத்திற்குச் சென்றாள்.(6) உயர் ஆன்ம சாண்டில்யர்[1], ஓ! மன்னா, கடும் நோன்புகளை நோற்பவளும், கற்புடையவளும், சுயக்கட்டுப்பாடு கொண்டவளும், பிரம்மச்சரியத்தை நோற்பவளுமான ஓர் அழகிய மகளைப் {ஸ்ரீமதி} பெற்றார். பெண்களால் செய்ய முடியாத கடுந்தவங்களையும் செய்த அந்த அருளப்பட்ட மங்கை, இறுதியில் தேவர்களாலும், பிராமணர்களாலும் வழிபடப்பட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றாள். பலதேவன், அம்முனிவர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்டு அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.(8) முனிவர்களிடம் விடைபெற்றுக் கொண்டவனும், மங்கா புகழைக் கொண்டவனுமான பலதேவன், இமயத்தின் சாரலில் மாலை வேளைக்கான அனைத்து சடங்குகளையும் செய்து, அம்மலையின் மீது ஏறினான்.(9) பனைமரக்கொடியைக் கொண்ட அந்த வலிமைமிக்கப் பலராமன், அம்மலையில் ஏறிக் கொண்டிருக்கையில் அருகிலேயே ஒரு நல்ல புனிதமான தீர்த்தத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தான்.(10)சரஸ்வதியின் மகிமையையும், பிலக்ஷப்பிரஸ்ரவணம் என்றழைக்கப்பட்ட அந்தத் தீர்த்தத்தின் மகிமையையும் கண்ட பலன் {பலராமன்}, அடுத்ததாகக் காரவபனம் {காரபசனம்} என்றழைக்கப்படும் மற்றுமொரு சிறந்த, முதன்மையான தீர்த்தத்தை அடைந்தான்.(11) பெரும் பலத்தையும், கலப்பையையும் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, அங்கே தானமளித்த பிறகு, குளுமையானதும், தெளிவானதும், புனிதமானதும், பாவங்களை அகற்றுவதுமான (அந்தத் தீர்த்தத்தின்) நீரில் நீராடினான்.(12) அங்கே தவசிகளுடனும், பிராமணர்களுடனும் ஓரிரவைக் கழித்த ராமன், அடுத்ததாக மித்ராவருணர்களின் புனிதமான ஆசிரமத்திற்குச் சென்றான்.(13) அவன் {பலராமன்}, காரவபனத்திலிருந்து, பழங்காலத்தில் இந்திரன், அக்னி, அர்யமன் ஆகியோர் எங்கு பெரும் மகிழ்ச்சியை அடைந்தோர்களோ, அந்த யமுனையின் இடத்திற்குச் சென்றான்.(14) அற ஆன்மா கொண்ட அந்த யதுகுல காளை {பலராமன்} அங்கே நீராடி பெரும் மகிழ்ச்சியை அடைந்தான். பிறகு அந்த வீரன், முனிவர்கள் மற்றும் சித்தர்களின் சிறந்த பேச்சைக் கேட்பதற்காகக் கீழே அமர்ந்தான்.(15)எங்கே ராமன் {பலராமன்} அமர்ந்தானோ, அந்தச் சபைக்கு மத்தியில் அங்கே போற்றுதலுக்குரிய நாரதர் (தம் உலவல்களின் போது) வந்தார்.(16) சடாமுடியால் மறைக்கப்பட்டும், தங்கக் கதிர்களை உடுத்திக் கொண்டும் இருந்த அவர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, தமது கைகளில் தங்கத்தாலான ஒரு தண்டத்தையும், அதே விலைமதிப்புமிக்க உலோகத்தாலான ஒரு நீர்க்குடத்தையும் {கமண்டலத்தையும்} கொண்டிருந்தார்.(17) பாடுவதிலும், ஆடுவதிலும் சாதித்தவரும், தேவர்கள் மற்றும் பிராமணர்களால் போற்றப்படுபவருமான அவர் {நாரதர்}, ஆமை ஓட்டினாலானதும், இனிய இசையை எழுப்பக்கூடியதுமான அழகிய வீணை ஒன்றையும் வைத்திருந்தார்.(18) சச்சரவுகளைத் தூண்டுபவரும், சச்சரவுகளை எப்போதும் விரும்புபவருமான அந்தத் தெய்வீக முனிவர் {நாரதர்}, அழகிய ராமன் {பலராமன்} ஓய்ந்திருந்த அந்த இடத்திற்கு வந்தார்.(19) ராமன் எழுந்து நின்று, நெறிப்படுத்தப்பட்ட நோன்புகளைக் கொண்ட அந்தத் தெய்வீக முனிவரைத் தகுந்தவாறு வணங்கி, குருக்களுக்கு நேர்ந்தது அனைத்தையும் குறித்து அவரிடம் கேட்டான்.(20) கடமைகள் மற்றும் நடைமுறைகளை நன்கறிந்தவரான நாரதர் அவனுக்குக் குருக்களின் துயரகரமான பேரழிவு குறித்து நடந்தது அனைத்தையும் நடந்தவாறே சொன்னார்.(21) அப்போது அந்த ரோகிணியின் மகன் {பலராமன்} சோகம் நிறைந்த வார்த்தைகளில் அம்முனிவர்களிடம், “களத்தில் நிலை என்ன? அங்கே கூடியிருக்கும் மன்னர்கள் இப்போது எவ்வாறிருக்கிறார்கள்??(22) ஓ! தவச் செல்வத்தைக் கொண்டவரே, நான் அனைத்தையும் ஏற்கனவே கேட்டுவிட்டேன். இருப்பினும் அதை விவரமாக அறிய எனக்கு அதிக ஆவல் ஏற்படுகிறது” என்று கேட்டான்.(23)

நாரதர் {பலராமனிடம்}, “பீஷ்மர், துரோணர் மற்றும் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோர் ஏற்கனவே வீழ்ந்துவிட்டனர். வைகர்த்தனின் மகனான கர்ணனும், பெரும் தேர்வீரர்களான அவனது மகன்களுடன் வீழ்ந்துவிட்டான்.(24) ஓ! ரோகிணியின் மகனே {பலராமா}, பூரிஸ்ரவஸும், மத்ரர்களின் வீரத் தலைவனும் {சல்லியனும்} வீழ்ந்துவிட்டனர். இவர்களும், அங்கே கூடியிருந்த இன்னும் பல வலிமைமிக்க வீரர்களும், துரியோதனனின் வெற்றிக்காகத் தங்கள் அன்புக்குரிய உயிரையே விடத்தயாரானவர்களும், போரில் இருந்து திரும்பாதவர்களுமான மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் ஆகியோர் அனைவரும் வீழ்ந்துவிட்டனர்.(25,26) ஓ! மாதவா {பலராமா}, உயிரோடு இருப்பவர்களைக் குறித்து இப்போது சொல்கிறேன், கேட்பாயாக. திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} படையில் இப்போது படைகளைக் கலங்கடிக்கும் மூவர் மட்டுமே உயிருடன் எஞ்சியுள்ளனர்.(27) அவர்கள் கிருபர், கிருதவர்மன் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோராவர். அவர்களும், ஓ! ராமா, அச்சத்தால் திசைகளின் பத்து புள்ளிகளை நோக்கித் தப்பி ஓடிவிட்டனர்.(28)

சல்லியன் வீழ்ந்து, கிருபரும் மற்றவர்களும் ஓடிய பிறகு, பெரும் துயரத்தில் இருந்த துரியோதனன், துவைபாயனத் தடாகத்தின் ஆழங்களுக்குள் புகுந்து கொண்டான்.(29) அத்தடாகத்தின் நீரைக் கட்டி அதனடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த துரியோதனன், கிருஷ்ணனுடன் கூடிய பாண்டவர்களால் அணுகப்பட்டு, அவர்களது கொடும் வார்த்தைகளால் துளைக்கப்பட்டான்.(30) அந்த வார்த்தை ஈட்டிகளால் அனைத்துப் பக்கங்களிலும் துளைக்கப்பட்டவனும், வலிமைமிக்கவனுமான அந்த வீரத் துரியோதனன், ஓ! ராமா {பலராமா}, கனமான தன் கதாயுதத்துடன் அத்தடாகத்தில் இருந்து எழுந்தான்.(31) தற்போது அவன் பீமனோடு போரிடப் போகிறான். ஓ! ராமா, அந்தப் பயங்கர மோதல் இன்று நடைபெறப் போகிறது.(32) உனக்கு ஆர்வமிருந்தால், ஓ! மாதவா {பலராமா}, இங்கே தாமதிக்காமல் அங்கே விரைந்து செல்வாயாக. உன் சீடர்கள் இருவருக்குள் நடக்கப் போகும் பயங்கரப் போரை நீ காண விரும்பினால் செல்வாயாக” என்றார் {நாரதர்}.(33)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட ராமன் {பலராமன்}, அந்தப் பிராமணர்களில் முதன்மையானோரிடம் மரியாதையுடன் விடை பெற்றுக் கொண்டு, (தன் புனிதப் பயணத்தில்) தனக்குத் துணையாக வந்தோர் அனைவரையும் அனுப்பி வைத்தான்.(34) உண்மையில் அவன், தன் பணியாட்களிடம், “துவாரகைக்குத் திரும்புவீராக” என்று ஆணையிட்டான். பிறகு அவன் அந்த மலைகளின் இளவரசனிடம் இருந்தும், பிலக்ஷப்பிரஸ்ரவணம் என்று அழைக்கப்படும் அந்த அழகிய ஆசிரமத்தில் இருந்தும் இறங்கினான்.(35) தீர்த்தங்களின் பெரும் தகுதிகளை {புண்ணியங்களைக்} குறித்த தவசிகளின் உரையாடலைக் கேட்டவனும் மங்கா மகிமை கொண்டவனுமான அந்த ராமன் {பலராமன்}, பிராணர்களின் மத்தியில் இந்த வரியைப் பாடினான்:(36) “சரஸ்வதியின் அருகில் வசிப்பதால் ஏற்படும் இத்தகு மகிழ்வு வேறு எங்கே இருக்கிறது? சரஸ்வதியின் அருளில் வசிப்போரிடமுள்ள இத்தகு தகுதிகள் {புண்ணியங்கள்} வேறு எங்கே இருக்கின்றன? சரஸ்வதியை அணுகிய மனிதர்கள் சொர்க்கத்திற்குச் சென்றிருக்கின்றனர். அனைவரும் எப்போதும் சரஸ்வதியை நினைக்க வேண்டும். சரஸ்வதியே ஆறுகள் அனைத்திலும் மிகப் புனிதமானவளாவாள்.(37) சரஸ்வதி எப்போதும் மனிதர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறாள். சரஸ்வதியை அடைந்த மனிதர்கள், இங்கேயும் {இம்மையிலும்}, இதற்குப் பிறகும் {மறுமையிலும்} தங்கள் பாவங்களைக் குறித்து வருந்த வேண்டாம்” என்றான்.(38) மகிழ்ச்சி நிறைந்த கண்களுடன் மீண்டும் மீண்டும் சரஸ்வதியைப் பார்த்த அந்த எதிரிகளை எரிப்பவன், பிறகு நல்ல குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு சிறந்த தேரில் ஏறிக் கொண்டான்.(39) யது குலத்தின் காளையான அந்தப் பலதேவன் {பலராமன்}, தன் சீடர்கள் இருவருக்கிடையில் எதிர்வரப்போகும் மோதலைக் காணும் விருப்பத்தால் பெரும் வேகம் கொண்ட அந்தத் தேரில் பயணித்து அந்தக் களத்தை அடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(40)

கதாயுத்தத் தொடக்கம்! – சல்லிய பர்வம் பகுதி – 55- களத்திற்கு வந்த பலராமனை வணங்கிய யுதிஷ்டிரன்; சமந்தபஞ்சகத்தில் போரிட வேண்டும் என்று கேட்ட துரியோதனன்; களர்மண்ணற்ற பகுதியில் போரிடத் தீர்மானித்து, இடத்தைத் தேர்ந்தெடுத்து பீமனையும், துரியோதனனையும் போரிட விட்டு அவர்களைச் சுற்றி அனைவரும் அமர்ந்து கொண்டது; சொற்போர் நடத்திய பீமனும் துரியோதனனும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஜனமேஜயா இவ்வாறு அந்தப் பயங்கரப் போர் நடைபெற்றபோது, பெருஞ்சோகத்தில் இருந்த மன்னன் திருதராஷ்டிரன், இவ்வார்த்தைகளில் அதைச் சுட்டிக் காட்டினான்”.(1)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “கதாயுதப் போர் தொடங்கப்படும்போது, அவ்விடத்திற்கு வந்த ராமனை {பலராமனைக்} கண்ட என் மகன் {துரியோதனன்}, எவ்வாறு பீமனோடு போரிட்டான்?” என்று கேட்டான்.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், போரை விரும்பியவனுமான உமது வீரமகன் துரியோதனன், ராமன் வந்ததைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தான்.(3) அந்தக் கலப்பை வீரனை {பலராமனைக்} கண்ட மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெரும் மகிழ்ச்சியடைந்து, எழுந்து நின்று முறையாக அவனைக் கௌரவித்தான். அவனுக்கு இருக்கையையும் அளித்து, அவனது நலத்தைக் குறித்தும் விசாரித்தான்.(4)

அப்போது ராமன் {துரியோதனன்}[1], வீரர்களுக்கு உயர்ந்த நன்மையைத் தருபவையும், இனியவையுமான இந்த நீதிமிக்க வார்த்தைகளை யுதிஷ்டிரனுக்குப் பதிலாக அளித்தான். {துரியோதனன்},(5) {அவன்}, “ஓ! மன்னர்களில் சிறந்தவனே, மிகப் புனிதமான, பாவங்களைப் போக்கவல்ல, சொர்க்கத்திற்கு இணையான இடம் என்று தேவர்கள், முனிவர்கள், உயர் ஆன்மப் பிராமணர்கள் ஆகியோரால் போற்றப்படுவது குருக்ஷேத்திரமே என்று முனிவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.(6) இக்களத்தில் போரில் ஈடுபட்டுத் தங்கள் உடல்களைக் கைவிடும் மனிதர்கள், ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, சொர்க்கத்தில் சக்ரனுடன் {இந்திரனுடன்} வசிக்கப்போவது உறுதியாகும்.((7) இதற்காகவே, ஓ! மன்னா, நான் வேகமாக சமந்தபஞ்சகத்திற்குச் செல்வேன். தேவர்களின் உலகத்தில் அந்த இடமானது, அனைத்துயிர்களின் தலைவனான பிரம்மனின் வட (வேள்விப்) பீடமாக அறியப்படுகிறது.(8) மூவுலங்குகளிலும் அழிவில்லாத மிகப் புனிதமான அந்த இடத்தில் போரிட்டு இறப்பவன் சொர்க்கத்தை அடையப் போவது உறுதி” என்றான்[1].(9) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, குந்தியின் துணிச்சல் மிக்க மகனான தலைவன் யுதிஷ்டிரன், “அப்படியே” ஆகட்டும் என்று சொல்லி சமந்தபஞ்சகத்தை நோக்கிச் சென்றான்.(10)

மன்னன் துரியோதனனும், கோபத்துடன் தனது பெரும் கதாயுதத்தைத் தூக்கிக் கொண்டு, பாண்டவர்களுடன் கால்நடையாக நடந்து சென்றான்.(11) கவசம் தரித்து கதாயுதத்துடன் அவன் அவ்வாறு சென்ற போது,  வானத்தில் இருந்த தேவர்கள், “நன்று நன்று” என்று சொன்னார்கள். காற்றைப் போன்ற வேகம் கொண்ட சாரணர்கள்[2], குரு மன்னனைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.(12) பாண்டவர்களால் சூழப்பட்டவனும், உமது மகனுமான குரு மன்னன் {துரியோதனன்}, மதங்கொண்ட யானையின் நடையை ஏற்றுச் சென்றான்.(13) குறித்த இடத்திற்கு மேற்கு நோக்கி (தங்களுக்கு மத்தியில்) உமது மகனுடன் சென்ற அவர்கள், அந்த இடத்தை அடைந்ததும் அனைத்துப் பக்கங்களிலும் பரவினர்.(15) அது சரஸ்வதியின் தென் பக்கம் உள்ள சிறந்த தீர்த்தமாகும். அங்கே இருந்த தரையானது களர்மண் அற்றதாக இல்லாததால் அது மோதலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.(16)கவசம் தரித்து, தடித்த பெரும் கதாயுதத்துடன் கூடிய பீமன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்க கருடனின் வடிவை ஏற்றான்.(17) தன் தலையில் தலைக்கவசத்தைப் பூட்டிக் கொண்டு, தங்கத்தால் ஆன கவசத்தைத் தரித்துக் கொண்டு, கடைவாயை நாவால் நனைத்தபடி, கோபத்தால் கண்கள் சிவந்து, பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி, ஓ! மன்னா, தங்க சுமேருவைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(18) பெரும் சக்தி கொண்ட மன்னன் துரியோதனன், தன் கதாயுதத்தைத் தூக்கிக் கொண்டு, பீமசேனன் மீது தன் பார்வைகளைச் செலுத்தி, ஒரு யானையானது, மற்றொரு எதிரி யானையை மோதலுக்கு அழைப்பது போல அறைகூவி அழைத்தான்.(19) அதேபோலவே, வீர பீமனும், கடினமான தன் கதாயுதத்தைத் தூக்கிக் கொண்டு, ஒரு சிங்கம் மற்றொரு சிங்கத்தை அழைப்பதைப் போல அம்மன்னனை {துரியோதனனை} அறைகூவி அழைத்தான்.(20)

கதாயுதங்களை உயர்த்திய துரியோதனனும், பீமனும், அந்தப் போர்க்களத்தில் உயர்ந்த சிகரங்களைக் கொண்ட இரு மலைகளைப் போலத் தெரிந்தனர்.(21) அவர்கள் இருவரும் மிகுந்த கோபத்துடன் இருந்தனர்; பயங்கர ஆற்றலைக் கொண்டிருந்தனர்; கதாயுத மோதல்களில் அவர்கள் நுண்ணறிவு கொண்டவனான ரோகிணியின் மகனுடைய {பலராமனுடைய} சீடர்களாக இருந்தனர்;(22) சாதனைகளில் ஒப்பானவர்களாக இருந்த, அவர்கள் மயனையும், வாசவனையும் {இந்திரனையும்} போல இருந்தனர். பெரும் பலத்தைக் கொண்ட அவர்கள் இருவரும் சாதனைகளில் வருணனுக்கு ஒப்பானவர்களாக இருந்தனர்.(23) வாசுதேவன் {கிருஷ்ணன்}, அல்லது ராமன், அல்லது விஸ்ரவணனின் மகன் (ராவணன்) ஆகியோருக்கு ஒப்பானவர்களான அவர்கள் ஒவ்வொருவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மது மற்றும் கைடபனைப் போல இருந்தனர்.(24) சாதனைகளில் ஒப்பாக இருந்த அவர்கள், சுந்தன் மற்றும் உபசுந்தன் போலவோ, ராமன் மற்றும் ராவணன் போலவோ, வாலி மற்றும் சுக்ரீவன் போலவோ தெரிந்தனர்.(25)

எதிரிகளை எரிப்போரான அவ்விருவரும் காலனையும், மிருத்யுவையும் போலத் தெரிந்தனர். அப்போது அவர்கள் இருவரும், செருக்கில் பெருகி கூதிர்காலத்தின் ஆசையால் வெறிகொண்ட இரு யானைகள், பருவ காலத்தில் இருக்கும் பெண் யானையின் மீது கொண்ட ஏக்கத்தால் எதிர்ப்பது போல ஒருவரையொருவர் எதிர்த்தோடினர். சீற்றமிக்க இரு பாம்புகள் கோபத்தால் தங்கள் நஞ்சை மற்றொரு பாம்பின் மேல் கக்குவதைப் போல அவர்கள் இருவரும் தெரிந்தனர்.(26,27) எதிரிகளைத் தண்டிப்போரான அவ்விருவரும், ஒருவர் மீது ஒருவர் தங்கள் கோபப் பார்வைகளைச் செலுத்தினர். பாரதக் குலத்தின் புலிகளான அவ்விருவரும், பேராற்றலைக் கொண்டவர்களாக இருந்தனர்.(28) எதிரிகளை எரிப்போரான அவ்விருவரும், கதாயுதமோதலில்  வெல்லப்பட முடியாத சிங்கங்களைப் போல இருந்தனர். உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வெற்றியின் மீது கொண்ட விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட அவ்விருவரும், மதங்கொண்ட இரு யானைகளைப் போலவே தெரிந்தனர்.(29) பற்களையும், நகங்களையும் கொண்டு போர்க்கோலம் பூண்ட இரு புலிகளைப்போல அவர்கள் தாங்கிக் கொள்ளப்பட முடியாதவர்களாக இருந்தனர். உயிரினங்களை அழிக்கும் நோக்குடன் சீற்றத்துடன் பொங்கும் இரு கடக்கமுடியாத பெருங்கடல்களைப் போலவோ,(30) அனைத்தையும் எரிப்பதற்காக எழும் கோபக்கார சூரியன்கள் இரண்டைப் போலவோ அவர்கள் இருந்தனர்.

அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவரும் காற்றால் கலங்கடிக்கப்பட்டு, பயங்கரமாக முழங்கிக் கொண்டு, மழைக்காலத்தில் மழைத்தாரைகளைப் பொழியும் கிழக்கு மற்றும் மேற்குப்புற மேங்களைப் போலத் தெரிந்தனர். உயர் ஆன்மாவும், வலிமையும் கொண்ட அவ்விரு வீரர்களும், அண்ட அழிவின் போது எழும் இரு சூரியன்களைப் போலப் பெரும் ஒளியுடனும், பிரகாசத்துடனும் இருந்தனர். சினங்கொண்ட இரு புலிகளைப் போலவோ, முழங்கிக் கொண்டிருக்கும் இரு மேகத் திரள்களைப் போலவோ தெரிந்த அவர்கள்,(31-33) பிடரி கொண்ட இரு சிங்கங்களைப் போல மகிழ்ச்சியை அடைந்தனர். கோபக்கார யானைகள் இரண்டையோ, சுடர்மிக்க  நெருப்புகள் இரண்டையோ போல இருந்த அந்த உயர் ஆன்மாக்கள்,(34) உயர்ந்த சிகரங்களைக் கொண்ட இரு மலைகளைப் போலத் தோன்றினர். சினத்தில் பெருகிய உதடுகளுடன் ஒருவரையொருவர் நோக்கிக் கூரிய பார்வைகளைச் செலுத்திய உயர் ஆன்மா கொண்ட அவ்விரு சிறந்த மனிதர்களும், கதாயுதங்களுடன் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர். மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள் இருவரும், அடுத்தவரைத் தனக்குத் தகுதியான எதிராளியாகக் கருதினர்.(35,36)

அப்போது துரியோதனனும், விருகோதரனும் {பீமனும்} ஒன்றையொன்று நோக்கி கனைத்துக் கொள்ளும் இரு நல்ல குதிரைகளுக்கோ, பிளிறிக் கொள்ளும் இரு யானைகளுக்கோ ஒப்பாக இருந்தனர்.(37) மனிதர்களில் முதன்மையானோரான அவ்விருவரும், அப்போது வலிமையில் பெருகியிருக்கும் தைத்தியர்கள் இருவரைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர். அப்போது துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சகோதரர்கள், உயர் ஆன்மக் கிருஷ்ணன், அளவிலா சக்தி கொண்ட ராமன் {பலராமன்} ஆகியோருக்கு மத்தியில் இருந்த யுதிஷ்டிரனிடம் செருக்குமிக்க இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(39,39) “கைகேயர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் உயர் ஆன்மப் பாஞ்சாலர்கள் ஆகியோரால் பாதுகாக்கப்பட்டு, இங்கே இருக்கும் இந்த மன்னர்களில் முதன்மையானோர் அனைவருடனும் சேர்ந்து அமர்ந்து, எனக்கும், பீமனுக்கும் இடையில் நடக்கப் போகும் இந்தப் போரைக் காண்பீராக” என்றான். துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, அந்த வேண்டுகோளின்படியே அவர்கள் நடந்து கொண்டனர்.(40,41)

பெரிதாக இருந்த மன்னர்களின் கூட்டம் அமர்ந்த போது, அந்த இடம் சொர்க்கத்தில் உள்ள தேவர்களின் சபையைப் போல இருந்தது.(42) அந்த வலிமைமிக்க கரங்களைக் கொண்டோரின் கூட்டத்திற்கு மத்தியில், கேசவனின் {கிருஷ்ணனின்} அண்ணன் {பலராமன்} அமர்ந்த போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனைச் சுற்றிலும் இருந்த அனைவராலும் வழிபடப்பட்டான்.(43) அந்த மன்னர்களுக்கு மத்தியில், நீல ஆடை உடுத்தியவனும்,  அழகான நிறத்தைக் கொண்டவனுமான பலதேவன், இரவில் ஆயிரம் நட்சத்திரங்களால் சூழப்பட்ட முழு நிலவைப் போல அழகாகத் தெரிந்தான்.(44) அதேவேளையில் கதாயுதம் தரித்தவர்களும், எதிரிகளால் தாங்கிக் கொள்ளப்பட முடியாதவர்களுமான அவ்விரு வீரர்களும், ஓ! ஏகாதிபதி, அங்கே நின்று கொண்டு ஒருவரையொருவர் நோக்கி சீற்றத்துடன் பேசிக்கொண்டனர்.(45) இனிமையற்ற கசந்த வார்த்தைகளால் ஒருவரோடொருவர் பேசிக் கொண்ட அந்தக் குரு குலத்தின் முதன்மையான வீரர்கள் இருவரும், போரில் சக்ரனையும் {இந்திரனையும்}, விருத்திரனையும் போல ஒருவர் மீதொருவர் தங்கள் கோபப் பார்வைகளை வீசிக் கொண்டனர்” {என்றான் சஞ்சயன்}”.(46)

பீம, துரியோதனச் சொற்போர்! – சல்லிய பர்வம் பகுதி – 56-திருதராஷ்டிரனின் புலம்பல்; பீமனைப் போருக்கழைத்த துரியோதனன்; களத்தில் தென்பட்ட தீய சகுனங்கள்; யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி உற்சாகமூட்டிய பீமன்; துரியோதனனுக்கு அவனது பழைய குற்றங்களை நினைவுப்படுத்திய பீமன்; வீண்தற்புகழ்ச்சி வேண்டாம் எனப் பீமனை நிந்தித்த துரியோதனன்; துரியோதனனை நோக்கிச் சீற்றத்துடன் விரைந்த பீமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஜனமேஜயா, தொடக்கத்திலேயே அவ்விரு வீரர்களுக்கும் இடையில் சீற்றமிக்க ஒரு சொற்போர் நடந்தது. அதனால் துயரமடைந்த மன்னன் திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்},(1) “ஓ! இத்தகு முடிவைக் கொண்ட மனிதன் நிந்திக்கத்தக்கவன் ஆவான். ஓ! பாவமற்றவனே {சஞ்சயா}, என் மகன் {துரியோதனன்} பதினோரு சமுக்களின்[1] தலைவனாக இருந்தான்.(2) அவன் தன் ஆணையின் கீழ் மன்னர்கள் அனைவரையும் வைத்துக் கொண்டு, மொத்த பூமியின் அரசுரிமையையும் அனுபவித்தான். ஐயோ, அப்படி இருந்த அவன் இப்போது காலாளாகத் தோளில் கதாயுதத்துடன் ஒரு போர் வீரனாகப் போரிடப் போகிறான்.(3) முன்பு இந்த அண்டத்தின் பாதுகாவலனாக இருந்த பாவப்பட்ட என் மகன் {துரியோதனன்}, இப்போது தானே பாதுகாவலன் இல்லாதவனாக இருக்கிறான். ஐயோ, இந்தச் சந்தர்ப்பத்தில் அவன் தோளில் கதாயுதத்துடன் காலாளாகச் செல்கிறான். இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(4) ஐயோ, ஓ! சஞ்சயா, இப்போது என் மகனால் உணரப்படும் துயரம் பெரிதாக இருக்கிறது” என்றான். இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்த மனிதர்களின் ஆட்சியாளன் {திருதராஷ்டிரன்}, பெருந்துயரத்தால் பீடிக்கப்பட்டு அமைதியை அடைந்தான்.(5)(மூன்று சமுக்கள் சேர்ந்தது ஓர் அனீகினி, பத்து அனீகினி சேர்ந்தது ஓர் அக்ஷௌஹிணி. அதாவது முப்பது சமுக்கள் சேர்ந்தது ஓர் அக்ஷௌஹிணியாகும்)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது துரியோதனன், மேகம் போன்ற ஆழ்ந்த குரலுடனும், ஒரு காளைமாட்டைப் போல இன்பமாகவும் முழங்கினான். பெரும் சக்தியைக் கொண்ட அவன் அந்தப் பிருதையின் {குந்தியின்} மகனை {பீமனை} போருக்கு அறைகூவி அழைத்தான்.(6) குருக்களின் அந்த உயர் ஆன்ம மன்னன் {துரியோதனன்} இவ்வாறு பீமனை மோதலுக்கு அழைத்தபோது, பயங்கர வகையிலான பல்வேறு சகுனங்கள் தென்பட்டன.(7) இடைவேளைகளில் பேரொலியுடன் கடுங்காற்று வீசத் தொடங்கி, புழுதி மாரியைப் பொழிந்தது. திசைகளின் அனைத்துப் புள்ளிகளும் அடர்த்தியான இருளில் மறைக்கப்பட்டன.(8) பேரொலியுடன் கூடிய இடிகள் அனைத்துப் பக்கங்களிலும் விழுந்து பெருங்குழப்பத்தை உண்டாக்கி, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தின. நூற்றுக்கணக்கான எரிக்கோள்கள் பேரொலியுடன் வெடித்தபடியே ஆகாயத்தில் இருந்து விழுந்தன.(9) ஓ! ஏகாதிபதி, ராகு, சூரியனின் பெரும்பகுதியை காலந்தவறி விழுங்கினான். காடுகளுடனும், மரங்களுடனும் கூடிய பூமியானவள் பெரிதும் நடுங்கினாள்.(10)

தரையில் இருந்து கடினமான கூழாங்கற்களைச் சுமந்து பொழியும் வகையில் சூடான காற்றுகள் வீசின, மலைகளின் சிகரங்கள் பூமியின் பரப்பில் விழுந்தன.(11) பல்வேறு வடிவங்களைக் கொண்ட விலங்குகள் அனைத்துப் பக்கங்களிலும் ஓடுவது தெரிந்தது. பயங்கரமான, சீற்றமிக்க நரிகள், சுடர்மிக்க வாய்களுடன் எங்கும் ஊளையிட்டுக் கொண்டிருந்தன.(12) மயிர்க்கூச்சம் ஏற்படும் வகையில் அனைத்துப் பக்கங்களிலும் பயங்கரமான பேரொலிகள் கேட்டன. நான்கு பக்கங்களும் எரிவதாகத் தெரிந்தது, தீய சகுனங்களைத் தெரிவிக்கும் பலவிலங்குகள் தென்பட்டன.(13) கிணறுகளில் இருந்த நீர் தானாகப் பெருகியது. ஓ! மன்னா, காணப்படாத உயிரினங்களின் பேரோலிகள் அனைத்துப் பக்கங்களிலும் கேட்டன.(14)

இவற்றையும், இன்னும் பிற சகுனங்களையும் கண்ட விருகோதரன் {பீமன்}, தன் அண்ணனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனிடம்,(15) “தீய ஆன்மா கொண்ட இந்தச் சுயோதனன், போரில் என்னை வீழ்த்தத்தகுந்தவன் இல்லை. காண்டவ வனத்தின் மீது நெருப்பை வீசிய அர்ஜுனனைப் போல, என் இதயத்தில் கமுக்கமாக நீண்ட நாட்களாகப் பேணிக் காத்த கோபத்தை, இந்தக் குருக்களின் ஆட்சியாளன் {துரியோதனன்} மீது நான் இன்று கக்கப் போகிறேன். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, உமது இதயத்தைத் துளைத்திருக்கும் ஈட்டியை நான் இன்று பிடுங்கப் போகிறேன்.(16,17) இந்தக் குரு குலத்தின் இழிந்த பாவியை என் கதாயுதத்தால் கொன்று, நான் இன்று புகழ் மாலையை உமது கழுத்தில் சூட்டப்போகிறேன்.(18) பாவ காரியங்களைச் செய்யும் இந்தப் பொல்லாதவனை என் கதாயுதத்தால் கொல்லப்போகிறேன். இந்த என் கதாயுதத்தைக் கொண்டே நான் இவனது உடலை நூறு துண்டுகளாகப் பிளக்கப் போகிறேன்.(19) யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} அவன் மீண்டும் நுழைய மாட்டான்.(20)

தூங்கிக் கொண்டிருந்தபோது நம் மீது பாம்பை ஏவியும், உண்ணும்போது நமக்கு நஞ்சைக் கொடுத்தும், பிரமாணகோடியின் நீரில் நம் உடலை வீசியும், அரக்கு வீட்டில் வைத்து நம்மை எரிக்க முயிற்சித்தும்,(21) சபையில் நம்மை அவமதித்தும், நம் உடைமைகள் அனைத்தையும் களவாடியும், ஒரு முழு வருடம் நம்மைத் தலைமறைவாக வாழச் செய்தும்,(22) நாடுகடந்து நம்மைக் காட்டில் வாழ வைத்தும் என, ஓ! பாவமற்றவரே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, {இவனால்} நமக்கு ஏற்பட்ட வேதனைகளுக்கெல்லாம் ஒரு முடிவை நான் இன்று எட்டுவேன். ஒரே நாளில் இந்த அற்பனைக் கொன்று, நான் இவனுக்குப் பட்டிருக்கும் கடனையெல்லாம் அடைக்கப் போகிறேன்.(23)

ஓ! பாரதர்களின் தலைவரே {யுதிஷ்டிரரே}, தூய்மையற்ற ஆன்மாக் கொண்ட இந்தத் தீய திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} வாழ்வுக்காலம் இன்று முடிவை நெருங்கிவிட்டது. இந்த நாளுக்குப் பிறகு அவன் தனது தந்தையையும், தாயையும் மீண்டும் காணமாட்டான்.(24) ஓ! ஏகாதிபதி, குருக்களின் இந்தத் தீய மன்னனுடைய மகிழ்ச்சி இன்று ஒரு முடிவை எட்டுகிறது. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இந்நாளுக்குப் பிறகு இவன் மீண்டும் பெண்ணழகின் மேல் தன் கண்களைச் செலுத்தமாட்டான்.(25) சந்தனு குலத்தின் இழுக்கான இவன், இன்று தன் உயிர் மூச்சு, செழிப்பு மற்றும் நாட்டைக் கைவிட்டு வெறுந்தரையில் உறங்குவான்.(26) இன்று மன்னர் திருதராஷ்டிரரும், தமது மகனின் வீழ்ச்சியைக் கேட்டு, சகுனியின் மூளையில் பிறந்த தீசெயல்கள் அனைத்தையும் நினைவுகூர்வார்” என்றான் {பீமன்}.(27)

ஓ மன்னர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, கதாயுதந்தரித்தவனும், பெருஞ்சக்தியைக் கொண்டவனுமான விருகோதரன், இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அசுரன் விருத்திரனை அறைகூவியழைக்கும் சக்ரனை {இந்திரனைப்} போலப் போரிட நின்றான்.(28)

சிகரத்துடன் கூடிய கைலாச மலையைப் போல உயர்த்தப்பட்ட கதாயுதத்துடன் நிற்கும் துரியோதனனைக் கண்ட பீமசேனன், கோபத்தால் நிறைந்து, மீண்டும் அவனிடம், “வாரணாவதத்தில் உன்னாலும் மன்னர் திருதராஷ்டிரராலும் செய்யப்பட்ட தீச்செயலை உன் மனத்தில் நினைப்பாயாக.(30) பருவகாலத்தில் இருந்த திரௌபதி சபைக்கு மத்தியில் வைத்து முறைகேடாக நடத்தப்பட்டதை நினைவுகூர்வாயாக. உன்னாலும், சுபலனின் மகனாலும் {சகுனியாலும்} பகடையின் மூலமாக மன்னருக்கு {யுதிஷ்டிரருக்கு} கையறுநிலையை ஏற்படுத்தியதை நினைவுகூர்வாயாக.(31) காட்டிலும், விராடனின் நகரத்திலும் கருவறைக்குள் மீண்டும் நுழைந்தவர்களைப் போல உன்னால் நாங்கள் அனுபவித்த பெரும் வேதனைகளை நினைவுகூர்வாயாக. அவை அனைத்திற்கும் நான் இன்று வஞ்சம் தீர்ப்பேன். ஓ! தீய ஆன்மா கொண்டவனே, நற்பேறாலேயே இன்று நான் உன்னைக் காண்கிறேன்.(32)

தேர்வீரர்களில் முதன்மையானவரும், பேராற்றலைக் கொண்டவருமான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, உன் நிமித்தமாகவே யக்ஞ்சேனன் {துருபதன்} மகனால் {சிகண்டியால்} தாக்கி வீழ்த்தப்பட்டு, கணைப்படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்.(33) துரோணர், கர்ணன் மற்றும் பேராற்றலைக் கொண்ட சல்லியன் ஆகியோரும் கொல்லப்பட்டனர். இந்தப் பகை நெருப்பின் வேரும், சுபலனின் மகனுமான சகுனியும் கூடக் கொல்லப்பட்டுவிட்டான்.(34) திரௌபதியின் குழல்களைப் பற்றி இழுந்த அற்பன் பிராதிகாமினும் கொல்லப்பட்டான். பெரும் வீரத்தோடு போரிட்ட உனது சகோரர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(35) இவர்களும், இன்னும் பல மன்னர்களும் உன் குற்றத்திற்காகவே கொல்லப்பட்டனர். இன்று கதாயுதத்துடன் கூடிய உன்னையும் நான் கொல்லப் போகிறேன். இதில் மிகச் சிறிய ஐயமும் கிடையாது” என்றான்.(36)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெருங்குரலுடன் இவ்வார்த்தைகளை விருகோதரன் {பீமன்} சொல்லிக் கொண்டிருந்தபோது, உண்மையான ஆற்றலைக் கொண்டவனான உமது அச்சமற்ற மகன் {துரியோதனன்},(37) “இந்தப் பெரும் தற்புகழ்ச்சியால் என்ன பயன்? ஓ! விருகோதரா {பீமா}, என்னோடு போரிடுவாயாக. உன் குலத்தில் இழிந்தவனே {குலாதம}, இன்று நான் உனது போரிடும் விருப்பத்தை அழிப்பேன்.(38) சாதாரண மனிதனை அச்சுறுத்துவதைப் போல, உன்னைப் போன்ற மனிதனால் துரியோதனனை அச்சுறுத்த முடியாது என்பதை அற்ப பலமுள்ளவனான நீ அறிந்து கொள்வாயாக.(39) இந்த விருப்பத்தை நீண்ட காலமாக நான் பேணி வளர்த்திருக்கிறேன். இந்த விருப்பமானது நீண்டகாலமாக என் இதயத்தில் இருந்தது. இறுதியில் நற்பேறாலேயே தேவர்கள் உன்னுடனான இந்தக் கதாமோதலை ஏற்படுத்தியிருக்கின்றனர்.(40) ஓ! தீய ஆன்மா கொண்டவனே, நீண்ட பேச்சுகளாலும், வெறும் தற்புகழ்ச்சியாலும் யாது பயன்? இந்த உன் வார்த்தைகளைச் செயலில் சாதிப்பாயாக. சற்றும் தாமதிக்காதே” என்றான்.(41)

அங்கிருந்தவர்களான சோமகர்களும், பிற மன்னர்களும் அவனது இவ்வார்த்தைகளைக் கேட்டு அவனை உயர்வாக மெச்சினார்கள்.(42) அனைவராலும் புகழப்பட்டதால் மகிழ்ச்சியால் மயிர்க்கூச்சமேற்பட்ட துரியோதனன், போரில் தன் இதயத்தை உறுதியாக நிலைநிறுத்தினான்.(43) மீண்டும் அங்கிருந்த மன்னர்கள், மோதலுக்குச் செல்லும் மதங்கொண்ட யானையைத் தூண்டிவிடுவோரைப் போலக் கோபக்காரனான உமது மகனுக்குக் கைத்தட்டி உற்சாகமூட்டினர்.(44) பாண்டுவின் மகனான உயர் ஆன்ம விருகோதரன் {பீமன்}, தன் கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு உமது உயர் ஆன்ம மகனை {துரியோதனனை} நோக்கி சீற்றத்துடன் விரைந்தான்.(45) அங்கே இருந்த யானைகள் உரக்கப் பிளிறின, குதிரைகளும் மீண்டும் மீண்டும் கனைத்தன. வெற்றிக்காக ஏங்கிய பாண்டவர்களின் ஆயுதங்கள் தாமாகவே சுடர்விட்டுப் பிரகாசித்தன” {என்றான் சஞ்சயன்}.(46)

பீமனைச் சாய்த்த துரியோதனன்! – சல்லிய பர்வம் பகுதி – 57-பீமனின் விலாவைத் தாக்கிய துரியோதனன்; பீமனின் தலையைத் தாக்கிய துரியோதனன்; கவனத்துடன் பொறுமைகாத்த பீமன்; பீமனின் வீச்சைத் தவிர்த்த துரியோதனன்; பீமனின் மார்பைத் தாக்கிய துரியோதனன்; துரியோதனனின் விலாவைத் தாக்கிய பீமன்; அந்த அடியால் மலைப்படைந்து முழங்கால் மடக்கிக் கீழே விழுந்த துரியோதனன். பீமனின் நெற்றியைத் தாக்கிய துரியோதனன்; பீமனின் எதிர்த்தாக்குதலால் மயக்கமடைந்து விழுந்த துரியோதனன்; துரியோதனனின் தாக்குதலால் நிலைகுலைந்து பலவீனமடைந்த பீமன்; பீமனின் கவசத்தைப் பிளந்த துரியோதனன்; மீண்டும் எழுந்து நின்ற பீமன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மனச்சோர்வடையாத இதயம் கொண்டவனான துரியோதனன், பீமசேனனை அந்நிலையில் கண்டு, பெரு முழக்கம் செய்து, சீற்றத்துடன் அவனை எதிர்த்து விரைந்தான்.(1) அவர்கள் இருவரும், தங்கள் கொம்புகளால் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் இரு காளைகளைப் போல மோதிக் கொண்டனர். அவர்களது கதாயுத வீச்சுக்கள் இடியொலிகளைப் போலப் பேரொலியை எழுப்பின.(2) வெற்றிக்கான ஏக்கத்துடன் கூடிய அவ்விருவருக்கும் இடையில் நடைபெற்ற போரானது, இந்திரனுக்கும், பிரகலாதனுக்கும் இடையில் நடைபெற்ற போரைப் போல மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தியது.(3) பெருஞ்சக்தி படைத்தவர்களும், கதாயுதம் தரித்திருந்தவர்களுமான அந்த உயர் ஆன்மப் போர்வீரர்கள் இருவரும், அங்கமெலாம் குருதியில் நனைய, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலத் தெரிந்தனர்.(4) பயங்கரமான அந்தப் பெரும்போர் நடந்து கொண்டிருந்தபோது, விட்டிற்பூச்சிகளால் நிறைந்திருப்பதைப் போல ஆகாயம் மிக அழகாகத் தெரிந்தது.(5)

கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் சிறிது நேரம் நீடித்தபிறகு, எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள் இருவரும் களைப்பையடைந்தனர்.(6) எதிரிகளை எரிப்பவர்களான அவர்கள் இருவரும் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, மீண்டும் தங்கள் அழகிய கதாயுதங்களை எடுத்துக் கொண்டு, ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.(7) உண்மையில், பெருஞ்சக்தி கொண்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களும், பெரும் வலிமைமிக்கவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும், சிறிது ஓய்வெடுத்த பிறகு ஒருவரோடொருவர் மோதிக் கொண்டபோது, பருவகாலத்தில் பெண் யானையின் துணையை அடைவதற்காக ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் இரு யானைகளைப் போல அவர்கள் தெரிந்தனர்.(8) கதாயுதம் தரித்திருந்தவர்களும், இணையான சக்தி கொண்டவர்களுமான அவ்விரு வீரர்களையும் கண்டு, தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோர் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(9) கதாயுதம் தரித்திருந்தவர்களான துரியோதனன் மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரையும் கண்ட உயிரினங்கள் அனைத்தும், அவர்களில் எவன் வெற்றியடைவான் என்பதில் ஐயங்கொண்டன.(10)

சகோதரர்களும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானோருமான அவ்விருவரும், அடுத்தவரின் தாமதத்தில் பயன்பெற விரும்பி, காத்திருந்து அவர்களைக் கண்காணித்து ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்தனர்.(11) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கனமானதும், கடுமையானதும், யமனின் தண்டம், அல்லது இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பானதும், கொலைகாரக் கருவியுமான தங்கள் கதாயுதங்களை அவ்விருவரும் உயர்த்தியிருப்பதைப் பார்வையாளர்கள் கண்டார்கள்.(12) பீமசேனன் தன் ஆயுதத்தைச் சுழற்றிய போது, அது பயங்கரமான பேரொலியை உண்டாக்கியது.(13) தன் எதிரியான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, இவ்வாறு தன் கதாயுதத்தை ஒப்பற்ற வேகத்துடன் சுழற்றுவதைக் கண்ட துரியோதனன், ஆச்சரியத்தால் நிறைந்தான்.(14) உண்மையில் வீர விருகோதரன், ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, பல்வேறு வழிகளில் {கதிகளில்} திரிந்த போது {சுழன்ற போது} மிக உயர்வான அழகிய காட்சியை வெளிப்படுத்தினான்.(15)

தங்களைப் பாதுகாப்பதில் கவனமாக இருந்த அவ்விருவரும், இறைச்சித் துண்டுக்காகப் போரிடும் இரு பூனைகளைப் போல ஒருவரையொருவர் அணுகி அடுத்தவரை மீண்டும் மீண்டும் சிதைத்தனர்.(16) பீமசேனன், பல்வேறு வகையான பரிமாணங்களைச் செய்தான். முன்னேறியும், பின்வாங்கியும் அழகிய வட்டங்களில் அவன் திரிந்தான்.(17) அவன் {பீமன்} ஆச்சரியமான செயல்பாட்டால், அடிகளைக் கொடுத்தும், தன் எதிராளியின் அடிகளில் இருந்து விலகவும் செய்தான். (தாக்குதல் மற்றும் தற்காத்தல் ஆகியவற்றுக்காக) அவன் பல்வேறு வகையான நிலைகளை எடுத்தான். அவன் தாக்கவும் செய்தான், தன் எதிராளியின் தாக்குதலைத் தவிர்க்கவும் செய்தான். ஒருநேரம் வலமாகவும், ஒருநேரம் இடமாகவும் திரும்பி அவன் தன் எதிரியை நோக்கி ஓடினான்.(18) அவன் நேராகத் தன் எதிரியை எதிர்த்துச் சென்றான். அவன்{பீமன்} தன் எதிரியை இழுப்பத்காகச் சில தந்திரங்களையும் செய்தான். அவன் தன் எதிரி தன்னைத் தாக்க வெளிப்படும் வரை அசையாமல் நின்று, அவனைத் தாக்குவதற்குத்தயாராக இருந்தான். அவன் தன் எதிரியை வலம் வந்து, தன்னை வலம் வருவதில் இருந்து எதிரியைத் தவிர்த்தான். அவன் தன் எதிரியின் தாக்குதல்களைக் குனிந்தோ, உயரக் குதித்தோ, நகர்ந்தோ தவிர்த்தான்.(19) அவன் தன் எதிரியுடன் முகமுகமாக வந்து தாக்கினான், அல்லது அவனிடம் இருந்து நகர்ந்து சென்று அவனைத் தள்ளினான். கதாயுத மோதல்களில் சாதித்தவர்களான பீமன் மற்றும் துரியோதனன் ஆகிய இருவரும், இவ்வாறு போரிட்டு திரிந்தபடியே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்[1].(20)

குரு குலத்தில் முதன்மையானோரான அவ்விருவரும் இவ்வாறு திரிந்து, தங்கள் ஒவ்வொருவரின் அடிகளையும் தவிர்த்து வந்தனர். உண்மையில் அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் இருவரும் இவ்வாறு வட்டமாகச் சுழன்றுகொண்டிருந்தபோது, அவர்கள் ஒருவரோடொருவர் விளையாடிக் கொண்டிருப்பதைப் போலத் தெரிந்தது.(21) அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களான இருவரும், அம்மோதலில் தங்கள் போர்த்திறனை வெளிப்படுத்துவதற்காகச் சிலநேரங்களில், இரு யானைகள் தங்கள் தந்தங்களைக் கொண்டு ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போலத் திடீரெனத் தங்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். குருதியால் நனைந்திருந்த அவர்கள், ஓ! ஏகாதிபதி, அந்தக் களத்தில் மிக அழகாகத் தெரிந்தனர்.(23) இவ்வாறே அந்தப் போரானது, நாளின் முடிவில் பெரும் கூட்டத்தின் பார்வைக்கு முன்னிலையில் விருத்திரனுக்கும் வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடைபெற்ற போரைப் போல அச்சத்தையேற்படுத்துவதாக இருந்தது. கதாயுதங்களைத் தரித்திருந்த அவ்விருவரும் வட்டங்களில் சுழலத் தொடங்கினர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனன் வல மண்டலத்தையும், பீமசேனன் இட மண்டலத்தையும் பின்பற்றினர்[2].(25)

இவ்வாறு அந்தப் போர்க்களத்தில் பீமன் வட்டமாகச் சுழன்று வந்தபோது, துரியோதனன் திடீரென ஒரு கடும் வீச்சால் அவனது {பீமனது} விலாப்புறத்தைத் தாக்கினான்.(26) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது மகனால் தாக்கப்பட்ட பீமன், அந்த அடியைத் திருப்பிக் கொடுப்பதற்காகக் கனமான தன் கதாயுதத்தைச் சுழற்றத் தொடங்கினான்.(27) பார்வையாளர்கள், ஓ! ஏகாதிபதி, பீமசேனனின் அந்தக் கதாயுதத்தை, இந்திரனின் வஜ்ரத்தையோ, யமனின் உயர்த்தப்பட்ட தண்டத்தையோ போன்று பயங்கரமானதாகக் கண்டார்கள்.(28) பீமன் தன் கதாயுதத்தைச் சுழற்றுவதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்} தன் பயங்கரமான ஆயுதத்தை உயர்த்தி மீண்டும் அவனைத் தாக்கினான்.(29) ஓ! பாரதரே, உமது மகன் இறக்கிய கதாயுதத்தின் ஒலி பேரொலியாக இருந்தது. ஆகாயத்தில் {காற்றுவெளியில்} தீப்பொறி உண்டாகும் அளவுக்கு அந்த இறக்கம் அவ்வளவு வேகமானதாக இருந்தது.(30)

பெருஞ்சக்தி கொண்ட சுயோதனன் {துரியோதனன்}, பல்வேறு வகையான வட்டங்களில் சுழன்று, சரியான நேரத்தில் ஒவ்வொரு அசைவையும் பின்பற்றி மீண்டும் பீமனை விஞ்சியிருப்பதைப் போலத் தெரிந்தது.(31) அதேவேளையில், பீமசேனனின் பருத்த கதாயுதமானது, முழுச் சக்தியுடன் சுழந்து, பேரொலியையும், புகையையும், தீப்பொறிகளையும், தழல்களையும் உண்டாக்கியது.(32) பீமசேனன் தன் கதாயுதத்தைச் சுழற்றுவதைக் கண்ட சுயோதனன், கனமானதும், கடினமானதுமான தன் ஆயுதத்தைச் சுழற்றி மிக அழகிய தன்மையை வெளிப்படுத்தினான்.(33) துரியோதனனின் கதாயுதச் சுழற்சியில் உண்டான காற்றின் மூர்க்கத்தைக் குறித்துக் கொண்ட பாண்டுக்கள் மற்றும் சோமகர்கள் அனைவரின் இதயங்களிலும் பேரச்சம் நுழைந்தது.(34) அதேவேளையில், எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், போரின் அனைத்துப் பக்கங்களிலும் தங்கள் திறனை வெளிப்படுத்தி, தந்தங்களைக் கொண்டு ஒன்றையொன்று தாக்கிக் கொள்ள அணுகும் இரு யானைகளைப் போலத் தங்கள் காதாயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஓ! ஏகாதிபதி, குருதியால் நனைந்திருந்த அவர்கள் இருவரும் மிக அழகாகத் தெரிந்தனர்.(35,36) இவ்வாறே ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்க்க, விருத்திரனுக்கும், வாசவனுக்கும் இடையில் நடைபெற்ற கடுமையான போரைப் போல அப்போர் அந்த நாளில் முடிவு வரை நடந்து கொண்டிருந்தது.(37)

பீமன் களத்தில் உறுதியாக நிற்பதைக் கண்ட உமது வலிமைமிக்க மகன் {துரியோதனன்}, இன்னும் அழகான அசைவுகளைச் செய்து அந்தக் குந்தியின் மகனை {பீமனை} நோக்கி விரைந்தான்.(38) கோபத்தால் நிறைந்த பீமன், தங்கத்தால் அலங்கரிக்கபட்டதும், பெரும் மூர்க்கம் கொண்டதுமான கோபக்கார துரியோதனனின் கதாயுதத்தைப் பெரும் வேகத்தோடு தாக்கினான்.(39) எதிர் திசைகளில் வந்த இரு வஜ்ரங்களின் மோதலைப் போன்ற அந்த இரண்டு கதாயுதங்களின் மோதலால், தீப்பொறிகளுடன் கூடிய பேரொலி எழுந்தது.(40) பீமசேனனால் வீசப்பட்டு, வேகமாக விழுந்த கதாயுதம் பூமியையே நடுங்கச் செய்தது.(41) அந்தத் தாக்குதலில் தன் கதாயுதம் இவ்வாறு கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட அந்தக் குரு இளவரசனால் {துரியோதனனால்} அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உண்மையில் அவன், பகை யானைக் கொண்ட மதங்கொண்ட யானையைப் போலச் சினத்தால் நிறைந்தான்.(42) ஓ! ஏகாதிபதி, இடது மண்டலத்தைப் பின்பற்றித் தன் கதாயுதத்தைச் சுழற்றிய சுயோதனன், உறுதியான தீர்மானத்துடன், பயங்கர சக்தியைக் கொண்ட தன் ஆயுதத்தைக் கொண்டு அந்தக் குந்தியின் மகனுடைய {பீமனின்} தலையைத் தாக்கினான்.(43) உமது மகனால் தாக்கப்பட்டவனான பாண்டுவின் மகன் பீமன் நடுங்காததால், ஓ! ஏகாதிபதி, பார்வையாளர்கள் அனைவரும் மிகவும் ஆச்சரியமடைந்தனர்.(44) ஓ! மன்னா, மிகப் பலமாகத் தாக்கப்பட்டாலும், மிகுந்த பொறுமையுடன், ஓர் அங்குலமும் கலங்காத பீமசேனனை அங்கிருந்த போராளிகள் அனைவரும் பாராட்டினர்.(45)

அப்போது பயங்கர ஆற்றலைக் கொண்டவனான பீமன், கனமானதும், சுடர்மிக்கதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் கதாயுதத்தைத் துரியோதனன் மீது வீசினான்.(46) வலிமைமிக்கவனும், அச்சமற்றவனுமான துரியோதனன் அந்த வீச்சைத் தன் செயல்பாட்டால் தவிர்த்தான். இதைக்கண்ட பார்வையாளர்கள் பேராச்சரியத்தை உணர்ந்தனர்.(47) பீமனால் வீசப்பட்ட கதாயுதம், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, செயலிழந்து கலங்கிக் கீழே விழுந்தபோது, இடியைப் போன்ற பேரொலியை எழுப்பிப் பூமியை நடுங்கச் செய்தது.(48) கௌசிகம் என்றழைக்கப்படும் திறன்மிக்கச் செயல்முறையைப் பின்பற்றி, மீண்டும் மீண்டும் உயரக் குதித்த துரியோதனன், சரியாகப் பீமனுடைய கதாயுதத்தின் இறக்கத்தைக் கவனித்து, அதைக் கலங்கடித்து,(49) பெரும் பலத்தைக் கொண்டவனான அந்தக் குரு மன்னன், இவ்வாறு பீமசேனனைக் கலங்கடித்து, இறுதியாகச் சினத்துடன் அவனது {பீமனது} மார்பைத் தாக்கினான்.(50)

அந்தப் பயங்கரப் போரில் உமது மகனால் {துரியோதனனால்} பலமாகத் தாக்கப்பட்ட பீமசேனன் மலைப்பையடைந்து சற்று நேரத்திற்கு என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(51) அந்த நேரத்தில், ஓ! மன்னா, சோமகர்களும் பாண்டவர்களும் பெரும் ஏமாற்றமடைந்து, உற்சாகத்தை இழந்தனர்.(52) அந்த அடியால் சினமடைந்த பீமன், யானையொன்று மற்றொரு யானையை எதிர்த்து விரைவதைப் போல உமது மகனை நோக்கி விரைந்தான்.(53) உண்மையில் பீமன், உயர்த்தப்பட்ட கதாயுதத்துடன், சிங்கமொன்று காட்டுயானையை எதிர்த்து விரைவதைப் போலத் துரியோதனனை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான்.(54) கதாயுதப் பயன்பாட்டில் சாதனை செய்தவனான அந்தப் பாண்டுவின் மகன், குரு மன்னனை அணுகி, உமது மகனை இலக்காகக் கொண்டு, தன் ஆயுதத்தைச் சுழற்றத் தொடங்கினான்.(55)

பிறகு பீமசேனன் துரியோதனனின் விலாப்புறத்தைத் தாக்கினான். அந்த அடியால் மலைப்பையடைந்த அவன் {துரியோதனன்}, முட்டியால் தன்னைத் தாங்கிக் கொண்டு பூமியில் விழுந்தான்.(56) குரு குலத்தின் முதன்மையான அவன், முழங்கால் மடிந்து மண்டியிட்டு விழுந்ததும், ஓ! உலகத்தின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, சிருஞ்சயர்களுக்கு மத்தியில் பேராரவாரம் எழுந்தது.(57) ஓ! மனிதர்களில் காளையே, சிருஞ்சயர்களின் அவ்வாரவாரத்தைக் கேட்ட உமது மகன் சினத்தால் நிறைந்தான்.(58) அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரன், எழுந்து நின்று ஒரு பெரும்பாம்பைப் போலப் பெருமூச்சு விடத் தொடங்கி, பீமசேனனை எரித்துவிடுபவனைப் போல அவன் மீது தன் பார்வைகளைச் செலுத்தினான்.(59) பிறகு அந்தப் போரில், அந்தப் பாரதக் குலத்தில் முதன்மையானவன், அந்நேரத்தில் தன் எதிராளியின் தலையை நொறுக்கிவிடுபவனைப் போலப் பீமசேனனை நோக்கி விரைந்து சென்றான்.(60)

அப்போது, பயங்கர ஆற்றலைக் கொண்டவனான உயர் ஆன்ம துரியோதனன், அந்த உயர் ஆன்ம பீமசேனனின் நெற்றியைத் தாக்கினான். எனினும் அவன் ஓரங்குலமும் அசையாது மலையெனவே நின்றிருந்தான்.(61) அந்தப்போரில் இவ்வாறு தாக்கப்பட்ட அந்தப் பிருதையின் மகன் {பீமன்}, அபரிமிதமாகக் குருதி சிந்திய போது, மதநீர் வழியும் யானையைப் போல அழகானவனாகத் தெரிந்தான்.(62) தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அண்ணனும், எதிரிகளை நொறுக்குபவனுமான அவன், இரும்பாலானதும், வஜ்ரத்தைப் போன்ற ஒலியை உண்டாக்குவதும், வீரர்களைக் கொல்வதுமான தன் கதாயுதத்தை எடுத்து, தன் எதிராளியைப் பெரும் பலத்துடன் தாக்கினான்.(63) பீமசேனனால் தாக்கப்பட்ட உமது மகன், காட்டில் சூறாவளியின் பலத்தால் வேரோடு முறிக்கப்பட்டதும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு பெரும் சால மரத்தைப் போல மேனியெங்கும் நடுங்கியபடியே கீழே விழுந்தான்.(64) உமது மகன் {துரியோதனன்} பூமியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்ததைக் கண்ட பாண்டவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து, பேராரவாரம் செய்தனர். பிறகு உமது மகன், தடாகத்தில் இருந்து எழும் யானை ஒன்றைப் போலச் சுயநினைவு மீண்டு எழுந்தான்.(65)

எப்போதும் கோபம் நிறைந்தவனும், பெரும் தேர்வீரனுமான அந்த ஏகாதிபதி, பெருந்திறனுடன் திரிந்து, தன் முன் நிற்கும் பீமசேனனைத் தாக்கினான். இதில் அந்தப் பாண்டுவின் மகன் அங்கங்கள் பலவீனமடைந்து பூமியில் விழுந்தான்.(66) அந்தக் குரு இளவரசன், தன் சக்தியால் பீமசேனனைத் தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழச் செய்து சிங்க முழக்கம் செய்தான். இடியின் பலத்துக்கு ஒப்பாக இறங்கிய தனது கதாயுதத்தால் அவன் பீமனின் கவசத்தைப் பிளந்தான்.(67) அப்போது, சொர்க்கவாசிகளாலும், அப்சரஸுகளாலும் உண்டாக்கப்பட்ட பேராரவாரமானது ஆகாயத்தில் கேட்கப்பட்டது. பெரும் நறுமணத்தை வெளியிடும் மலர்மாரி தேவர்களால் பொழிப்பட்டு விழுந்தது.(68) பீமன் நெடுஞ்சாண் கிடையாகப் பூமியில் கிடப்பதையும், அவனது பலம் குறைந்ததையும், அவனது கவசம் பிளக்கப்பட்டதையும் கண்டு நமது எதிரிகளின் இதயங்களில் பேரச்சம் நுழைந்தது.(69) ஒரு கணத்தில் தன் உணர்வுகளை மீண்டும் அடைந்த விருகோதரன் {பீமன்}, குருதியால் கறைபடிந்திருந்த தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு, பெரும் முயற்சியுட்ன தன்னை உறுதியடையச் செய்து கொண்டு, உருளும் கண்களுடன் எழுந்து நின்றான்” {என்றான் சஞ்சயன்}.(70)

தொடை முறிக்கப்பட்ட துரியோதனன்! – சல்லிய பர்வம் பகுதி – 58-பீமனுக்கும், துரியோதனனுக்கும் இடையில் கடும்போர் நடந்தது; அவ்விரு போராளிகளுக்கிடையில் உள்ள தகுதிகளைக் குறித்துக் கிருஷ்ணனிடம் விசாரித்த அர்ஜுனன்; கிருஷ்ணன் சொன்ன பதில்; பீமனுக்கு அவனது சபதத்தை நினைவூட்டுவதற்காகத் தன் தொடையைத் தட்டிக் காட்டிய அர்ஜுனன்; துரியோதனனின் தொடையை முறித்த பீமன்; துரியோதனனின் வீழ்ச்சியின் போது நேர்ந்த சகுனங்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “குருகுலத்தின் முதன்மையான வீரர்களான அந்த இருவருக்கிடையில் இவ்வாறு நடைபெற்று வந்த போரைக் கண்ட அர்ஜுனன், வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்},(1) “உன் கருத்தில் இவர்கள் இருவருக்கிடையில் மேன்மையானவர் யார்? அவர்கள் எவர் எந்தத் தகுதியை {குணத்தைக்} கொண்டிருக்கின்றனர்? ஓ! ஜனார்த்தனா, இஃதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(2)

வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “அவர்கள் பெற்ற கல்வி இணையானதே, எனினும், பீமரின் வலிமை மிகப் பெரியது, அதே வேளையில் திருதராஷ்டிரர் மகனோ {துரியோதனனோ} மிகப் பெரும் திறனையும், பயிற்சியையும் கொண்டிருக்கிறான்.(3) பீமசேனர் நியாயமாக {முறையாகப்} போரிட்டால், அவர் வெற்றியை அடையமாட்டார். எனினும் அநியாயமாக {முறையில்லாமல்} போரிட்டால், அவரால் நிச்சயம் துரியோதனனைக் கொல்ல முடியும்.(4) தேவர்கள் வஞ்சத்தின் {மாயையின்} துணைகொண்டே அசுரர்களை வென்றனர். இதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். விரோசனன், வஞ்சத்தின் {மாயையின்} துணைகொண்டே சக்ரனால் {இந்திரனால்} வெல்லப்பட்டான்.(5) பலனைக் கொன்றவன் {இந்திரன்}, வஞ்சச் செயல் {மாயம்} ஒன்றாலேயே விருத்திரனை சக்தியிழக்கச் செய்தான். எனவே, வஞ்சத்தின் துணை கொண்டே பீமசேனர் தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.(6)

ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, சூதாட்டத்தின் போது, பீமர், போரில் தமது கதாயுதத்தால் சுயோதனனின் {துரியோதனனின்} தொடைகளை நொறுக்குவேன் எனச் சூளுரைத்திருக்கிறார்.(7) எனவே இந்த எதிரிகளை நொறுக்குபவர், தமது சபதத்தை இப்போது நிறைவேற்றட்டும். அவர், முழு வஞ்சகனான இந்தக் குரு மன்னனை, வஞ்சத்தாலேயே கொல்லட்டும்.(8) தமது பலத்தை மட்டுமே சார்ந்து பீமர் நியாயமாகப் போரிட்டால், மன்னர் யுதிஷ்டிரர், பேராபத்தை அடையக்கூடும்.(9) நான் உனக்கு மீண்டும் சொல்கிறேன், ஓ! பாண்டுவின் மகனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. மன்னர் யுதிஷ்டிரரின் தவறால் மட்டுமே இப்போது மீண்டும் நமக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.(10)

பீஷ்மர் மற்றும் பிற குருக்களைக் கொன்று பெரும் சாதனைகளை அடைந்த மன்னர் {யுதிஷ்டிரர்}, வெற்றியையும், புகழையும் அடைந்து, கிட்டத்தட்ட பகைமையின் முடிவையும் எட்டிவிட்டார்.(11) இவ்வாறு வெற்றியை அடைந்த அவர், ஐயத்திற்கும், ஆபத்தும் கொள்ளும் நிலையில் தன்னை மீண்டும் நிறுத்திக் கொண்டார். ஓ! பாண்டவா {அர்ஜுனா}, ஒரே போர்வீரனின் வெற்றி அல்லது தோல்வியில் போரின் விளைவை அமைத்துக் கொண்டதில் யுதிஷ்டிரரின் பங்குக்கு இது பெரும் மூடச் செயலாகும். சுயதோதனன் சாதித்தவனும், வீரனும், உறுதியான தீர்மானமும் கொண்டவனாவான்.(12,13) உசனஸால் {சுக்கிராச்சாரியரால்} சொல்லப்பட்ட பழைய வரியொன்றை நாம் கேட்டிருக்கிறோம். உண்மை பொருளுடன் அதைச் சொல்கிறேன் கேட்பாயாக.(14) “பகைவரின் படையில் எஞ்சியோரில் பிளக்கப்பட்டு, உயிருக்காகத் தப்பி ஓடி, மீண்டும் அணிதிரண்டு திரும்பிப் போரிட வருவோர், உறுதியான தீர்மானத்துடனும், ஒரே நோக்கத்துடனும் வருவதால் அவர்களைக் கண்டு எப்போதும் நாம் அஞ்சவேண்டும்” {என்பதே அந்த வரி}.(15)

ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, உயிரில் கொண்ட நம்பிக்கை அனைத்தையும் கைவிட்டு சீற்றத்துடன் விரைந்து வருவோரின் முன் சக்ரனாலேயே நிற்க முடியாது.(16) இந்தத் துரியோதனன் முறியடிக்கப்பட்டுத் தப்பி ஓடியவனாவான். அவனது துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்டுவிட்டன. அவன் தடாகத்தின் ஆழங்களுக்குள் நுழைந்தான். எனவே, அவன் வீழ்த்தப்பட்டு, தன் நாட்டைத் தக்க வைத்துக் கொள்வதில் நம்பிக்கையை இழந்து, காட்டுக்குள் ஓய்ந்து செல்லவும் விரும்பினான். அத்தகு மனிதனை, ஞானம் கொண்ட எந்த மனிதன்தான் தனிப் போருக்கு அறைகூவி அழைப்பான்?(17) ஏற்கனவே நமதாகிவிட்ட நாட்டைப் பறிப்பதில் துரியோதனன் வெல்லமாட்டானா? இல்லையா? என்பதை நான் அறியமாட்டேன். முழுமையாகப் பதிமூன்று வருடங்களாக அவன் பெரும் தீர்மானத்துடன் அந்தக் கதாயுதத்தில் பயிற்சி செய்திருக்கிறான். இப்போதும் கூட அவன், பீமசேனரைக் கொல்வதற்காக உயரக் குதிக்கிறான்; குறுக்காகவும் தாண்டுகிறான்.(18) வலிய கரங்களைக் கொண்ட பீமர், அநியாயமாக அவனைக் கொல்லவில்லையெனில், திருதராஷ்டிரர் மகனே நிச்சயம் மன்னனாக நீடிப்பான்” என்றான் {கிருஷ்ணன்}.(19) அந்த உயர் ஆன்மக் கேசவனின் {கிருஷ்ணனின்} அவ்வார்த்தைகளைக் கேட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, பீமசேனனின் கண்களுக்கு முன்பாகத் தன் இடது தொடையை அடித்தான்.(20)

அந்தக் குறியீட்டைப் புரிந்து கொண்ட பீமன், உயர்த்தப்பட்ட தன் கதாயுதத்துடன், அழகிய வட்டமாகவும், யமகம் மற்றும் இன்னும் பிற நகர்தல் முறைகளிலும் {கதிகளிலும்} நகர்ந்து திரிந்து கொண்டிருந்தான்.(21) அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சில நேரங்களில் வலது மண்டலத்தையும், சில நேரங்களில் இடதும் மண்டலத்தையும், சில நேரங்களில் கோமூத்ரகம் {கோமூத்ரி} என்றழைக்கப்படும் அசைவையும் பின்பற்றித் திரியத் தொடங்கித் தன் எதிரியை மலைக்கச் செய்தான்.(22) அதேபோலவே, ஓ! ஏகாதிபதி, கதாயுதப் போரை நன்கறிந்தவனான உமது மகனும், பீமசேனனைக் கொல்வதற்குப் பெருஞ்சுறுசுறுப்புடன் அழகாகத் திரிந்து கொண்டிருந்தான்.(23) அந்த வீரர்கள் இருவரும், பகைமையின் முடிவை அடைய விரும்பி, சந்தனக் குழம்பு மற்றும் நறுமணக் களிம்புகளால் பூசப்பட்டிருந்த தங்கள் பயங்கரக் கதாயுதங்களைச் சுழற்றியபடியே இரு கோபக்கார யனைகளைப் போல அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தனர்.(24) ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களும், பெரும் வீரத்தைக் கொண்டவர்களுமான அந்த மனிதர்களில் முதன்மையானோர் இருவரும், பாம்பைப் பிடிக்க விரும்பும் இரு கருடர்களைப் போலப் போரிட்டனர்.(25)

அம்மன்னனும், பீமனும் அழகிய வட்டங்களில் சுழன்று அவர்களது கதாயுதங்கள் மோதிக் கொண்டபோது, அவ்வாறு மீண்டும் மீண்டும் ஏற்பட்ட மோதல்களால் தீப்பொறிகள் உண்டாகின.(26) வீரமிக்கவர்களும், வலிமைமிக்கவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும், அந்தப் போரில் இணையாகவே தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள், ஓ! ஏகாதிபதி, சூறாவளியால் கலங்கடிக்கப்பட்ட இரண்டு பெருங்கடல்களுக்கு ஒப்பாக இருந்தனர்.(27) மதங்கொண்ட இரு யானைகளைப் போல இணையாக ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட அவர்களின் கதாயுதங்கள் மோதிக் கொண்டபோது, அவை இடியின் பேரொலியை உண்டாக்கின.(28) கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நெருக்கமான இடத்திற்குள் நடந்து கொண்டிருந்தபோது, அந்த எதிரிகளைத் தண்டிப்போரான இருவரும் போரினால் களைப்பையடைந்தனர்.(29) எதிரிகளை எரிப்போரான அவ்விருவரும், சிறிது நேரம் ஓய்வெடுத்து, சினத்தால் நிறைந்து, தங்கள் கதாயுதங்களை உயர்த்திக் கொண்டு, மீண்டும் ஒருவரோடொருவர் போரிடத் தொடங்கினர்.(30)

அவர்களது கதாயுதங்கள் மீண்டும் மீண்டும் இறங்கி அவர்கள் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்ட போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்கள் செய்த போரானது, மிகப் பயங்கரமானதாகவும், முற்றிலும் தடுக்கப்பட முடியாததாகவும் ஆனது.(31) காளைகளைப் போன்ற கண்களைக் கொண்டவர்களும், பெருஞ்சுறுசுறுப்பைக் கொண்டவர்களுமான அந்த வீரர்கள் இருவரும், அம்மோதலில் ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்து, சகதியிலுள்ள இரு காட்டெருமைகளைப் போல மூர்க்கமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(32) அங்கங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, தலைமுதல் கால் வரை குருதியால் மறைக்கப்பட்டு இருந்த அவர்கள், இமயத்தின் சாரலில் உள்ள இரு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலத் தெரிந்தனர்.(33) அம்மோதல் நடந்து கொண்டிருந்த போது, விருகோதரன் {பீமன்} (ஓர் உத்தியுடன்) துரியோதனனுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுப்பதுபோல் தெரிந்த போது, சிரித்துக் கொண்டே அவன் {துரியோதனன்} சிறிது முன்னே சென்றான்.(34) போரில் நன்கு திறம் படைத்தவனும், வலிமைமிக்கவனுமான விருகோதரன், தன் எதிராளி அருகில் வருவதைக் கண்டு திடீரென அவன் மீது தன் கதாயுதத்தை வீசினான்.(35)

தன் மீது வீசப்படும் கதாயுதத்தைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவ்விடத்தில் இருந்து நகர்ந்து சென்றதால் அந்த ஆயுதம் கலங்கடிக்கப்பட்டுப் பூமியில் விழுந்தது.(36) குரு குலத்தில் முதன்மையானவனான உமது மகன், அந்த வீச்சைத் தவிர்த்து, தன் ஆயுதத்தால் வேகமாகப் பீமசேனனைத் தாக்கினான்.(37) அந்த வீச்சின் பலத்தால் வழிந்த பெரும் அளவிலான குருதியின் விளைவால், அளவிலா சக்தி கொண்ட பீமசேனன் மலைப்படைந்ததாகத் தெரிந்தது.(38) எனினும் துரியோதனன், அந்தக் கணத்தில் பீமன் அவ்வளவு பீடிக்கப்பட்டிருக்கிறான் என்பதை அறியாதிருந்தான். பீமன் ஆழமாகப் பீடிக்கப்பட்டிருந்தாலும், தன் பொறுமையனைத்தையும் திரட்டிக் கொண்டு அதைத் தாக்குப்பிடித்தான்.(39) எனவே துரியோதனன், அசைவில்லாதவனாகவும், அடியைத் திருப்பிக் கொடுக்கத் தயாராக இருப்பவனுமாகவே அவனைக் கண்டான். அதன் காரணமாகவே உமது மகன் மீண்டும் அவனைத் தாக்காதிருந்தான்.(40)

சற்று ஓய்ந்திருந்த வீரப் பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அருகிலேயே நின்றிருந்த துரியோதனனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(41) அளவிலா சக்தி கொண்ட பீமசேனன், சினத்தால் நிறைந்து, தன்னை நோக்கி விரைந்து வருவதைக் கண்ட உமது உயர் ஆன்ம மகன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவனது வீச்சைக் கலங்கடிக்க விரும்பி, அவஸ்தானம் என்றழைக்கப்படும் திறன் நடையில் தன் இதயத்தை நிலைக்கச் செய்தான். எனவே அவன், விருகோதரனை {பீமனை} வஞ்சிப்பதற்காக உயரக் குதிக்க விரும்பினான்.(42,43) பீமசேனன் தன் எதிராளியின் நோக்கத்தை முற்றிலும் புரிந்து கொண்டான். எனவே, சிங்க முழக்கத்தோடு அவனை நோக்கி விரைந்த அவன் {பீமன்}, தனது முதல் இலக்கைக் கலங்கடிக்க அந்தக் குருமன்னன் {துரியோதனன்} உயரக் குதித்த போது, அவனது தொடைகளில் தன் கதாயுதத்தை வீசினான்.(44,45)

இடியின் சக்தியைக் கொண்டதும், பயங்கரச் செயல்களைப் புரியும் பீமனால் வீசப்பட்டதுமான அந்தக் கதாயுதம், துரியோதனின் அழகிய தொடைகள் இரண்டையும் முறித்தது.(46) மனிதர்களில் புலியான உமது மகன், பீமசேனனால் தன் தொடைகள் முறிக்கப்பட்டதும், தன் வீழ்ச்சியால் பூமியை எதிரொலிக்கச் செய்தபடியே கீழே விழுந்தான்.(47) மீண்டும் மீண்டும் இடைவேளைவிட்டு பேரொலியுடன் கூடிய கடுங்காற்று வீசத் தொடங்கியது. புழுதி மாரி பொழிந்தது. மரங்கள், செடிகள், மலைகள் ஆகியவற்றுடன் கூடிய பூமாதேவி நடுங்கத் தொடங்கினாள்.(48) பூமியின் ஏகாதிபதிகள் அனைவருக்கும் தலைவனான அந்த வீரர் வீழ்ந்தபோது, அடிக்கடி விழுந்த இடியுடன் சேர்ந்து பேரொலியுடன் கூடிய கடுங்காற்று வீசியது. உண்மையில், அந்தப் பூமியின் தலைவன் வீழ்ந்தபோது, வானத்தில் இருந்து பெரிய எரிநட்சத்திரங்கள் விழுவது தெரிந்தது.(49) ஓ! பாரதா அங்கே குருதிமாரியும், புழுதிமாரியும் பொழிந்தது. உமது மகனின் வீழ்ச்சியின் காரணமாக மகவத்தால் {இந்திரனால்} இவை பொழியப்பட்டன.(50)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, யக்ஷர்கள், ராட்சசர்கள் மற்றும் பிசாசங்களால் உண்டாக்கப்பட்ட பேரொலி ஆகாயத்தில் கேட்கப்பட்டது.(51) அந்தப் பயங்கர ஒலியால் ஆயிரக்கணக்கான பறவைகளும், விலங்குகளும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பீதிநிறைந்த ஒலிகளை வெளியிடத் தொடங்கின.(52) (பாண்டவப்) படையில் (கொல்லப்படாமல்) எஞ்சியிருந்த குதிரைகள், யானைகள் ஆகியவையும், மனிதர்களும், உமது மகன் {துரியோதனன்} வீழ்ந்ததும் பேரொலியை எழுப்பினர். சங்கு முழக்கங்களும், பேரிகைகளின் பேரொலிகளும், மிருதங்களின் ஒலிகளும் உரக்கக் கேட்டன.(53) பூமியின் ஆழங்களில் இருந்து ஒரு பயங்கர ஒலி வருவதாகத் தெரிந்தது. உமது மகனின் வீழ்ச்சியால், ஓ! ஏகாதிபதி, அச்சந்தரும் வடிவங்களைக் கொண்ட தலையற்ற உயிரினங்களும், பல கால்கள் மற்றும் கரங்களைக் கொண்டிருந்தவையும், அனைத்துயிர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், ஆடத்தொடங்கிப் பூமியின் அனைத்துப் பக்கங்களையும் மறைக்கத் தொடங்கின.(54) ஓ! மன்னா, கரங்களில் கொடிமரங்கள், அல்லது ஆயுதங்களுடன் இருந்த போராளிகள், ஓ! மன்னா, உமது மகனின் வீழ்ச்சிக்குப் பிறகு நடுங்கத் தொடங்கினர்.(55)

ஓ! மன்னர்களில் சிறந்தவரே, தடாகங்களும், கிணறுகளும் இரத்ததைக் கக்கின. வேகமான நீரோட்டத்தைக் கொண்ட ஆறுகள் எதிர்த்திசைகளில் ஓடத் தொடங்கின.(56) உமது மகனான துரியோதனன் வீழ்ந்த நேரத்தில், ஓ! மன்னா, ஆண்கள், பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் தெரியத் தொடங்கினர்.(57) இந்த அற்புதச் சகுனங்களைக் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும், ஓ! பாரதக் குலத்தின் காளையே, மனக்கலக்கத்தால் நிறைந்தனர்.(58) தேவர்களும், கந்தர்வர்களும், உமது மகன்களுக்கிடையே நடைபெற்ற அந்த அற்புதப் போரைக் குறித்துப் பேசிக் கொண்டே தாங்கள் விரும்பிய உலகத்திற்குச் சென்றனர்.(59) அதே போல, வேகமாகச் செல்பவர்களான சித்தர்களும், சாரணர்களும், மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவரையும் புகழ்ந்தபடியே, தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அவ்விடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.(60)

பீமனைக் கண்டித்த யுதிஷ்டிரன்! – சல்லிய பர்வம் பகுதி – 59- தொடை முறிந்து கிடந்த துரியோதனன்; பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, துரியோதனனை நிந்தித்து, அவனது தலையைக் காலால் மிதித்த பீமன்; பீமனைக் கண்டித்து, துரியோதனனுக்கு ஆறுதல் சொன்ன யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் புலம்பல்…

சஞ்சயன் சொன்னான், “(சூறாவளியால்) வேராடு முறிந்த விழுந்த பெரும் சால மரத்தைப் போலப் பூமியில் விழுந்து கிடந்த துரியோதனனைக் கண்ட பாண்டவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(1) மயிர்க்கூச்சத்தை அடைந்த சோமகர்களும், சிங்கத்தால் வீழ்த்தப்பட்ட மதங்கொண்ட யானையொன்றைப் போல வீழ்ந்து கிடக்கும் அந்தக் குரு மன்னனை {துரியோதனனைக்} கண்டனர்.(2) துரியோதனனைக் கீழே வீழ்த்திய வீர பீமசேனன், அந்தக் குரு தலைவனை {துரியோதனனை} அணுகி,(3) “ஓ இழிந்தவனே, முன்பு சபைக்கு மத்தியில் ஆடையிழந்திருந்த திரௌபதியைக் கண்டு சிரித்து, ஓ மூடா, எங்களை, “மாடு, மாடு” என்று நீ அழைத்தாய்.(4) அந்த அவமதிப்பின் கனியை {பலனை} இப்போது நீ தாங்கிக் கொள்வாயாக” என்றான். இவ்வார்த்தைகளைச் சொன்ன அவன், வீழ்ந்துவிட்ட தன் எதிரியின் தலையைத் தன் இடது காலால் தீண்டினான்.(5)

கோபத்தால் கண்கள் சிவந்திருந்தவனும், பகைவரின் படையைக் கலங்கடிப்பவனுமான பீமசேனன் மீண்டும் இவ்வார்த்தைகளைச் சொன்னான். ஓ ஏகாதிபதியே {திருதராஷ்டிரரே} அவற்றைக் கேட்பீராக,(6) “எங்களை அவமதிக்கும் வகையில் “மாடு, மாடு” என்று சொல்லி ஆடியவர்கள் எவரோ, அவர்களைக் கண்டு, “மாடு, மாடு” என்ற அதே வார்த்தைகளைச் சொல்லி இப்போது நாங்கள் ஆடுவோம்.(7) எங்களிடம் வஞ்சனையோ, நெருப்போ, பகடையாட்டமோ {சூதாட்டமோ} ஏதும் இல்லை. எங்கள் கரங்களின் வலிமையை நம்பியே நாங்கள் எங்கள் எதிரிகளைத் தடுத்துப் பீடிக்கிறோம்” என்றான்.(8) பகைமையின் மறுகரையை அடைந்தவனான விருகோதரன் மீண்டும் சிரித்துக் கொண்டே, யுதிஷ்டிரன், கேசவன் {கிருஷ்ணன்}, சிருஞ்சயர்கள், தனஞ்சயன் {அர்ஜுனன்}, மாத்ரியின் இரு மகன்கள் ஆகியோரிடம் மெதுவாக இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(9) {அவன்}, “திரௌபதி நோயுற்றிருந்தபோது, சபைக்கு இழுத்து வந்து அவளை ஆடையிழக்கச் செய்தவர்கள் எவரோ[1], அந்தத் தார்தராஷ்டிரர்கள், யக்ஞசேனன் மகளின் {திரௌபதியின்} தவத்தின் மூலம் பாண்டவர்களால் கொல்லப்பட்டதைக் காண்பீராக.(10) எங்களை எள்ளுப் பதர்கள் என்றழைத்த மன்னர் திருதராஷ்டிரரின் தீய இதயம் கொண்ட மகன்கள் அனைவரும், அவர்களது உறவினர்கள் மற்றும் தொண்டர்களுடன் எங்களால் கொல்லப்பட்டனர். (அச்செயல்களின் விளைவால்) ஒன்று நாம் சொர்க்கத்திற்குச் செல்வோமா, அல்லது நகரகத்தில் வீழ்வோமா என்பது சிறிய காரியமே[2]” என்றான்.(11)

மீண்டும் தன் தோளில் கிடந்த கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு, பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த அந்த ஏகாதிபதியின் தலையைத் தன் இடது காலால் தாக்கி, வஞ்சகம் நிறைந்த துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(12) நீதிமிக்க ஆன்மாக்களைக் கொண்ட சோமகர்களில் முதன்மையான வீரர்கள் பலரால், அந்தக் குரு குலத்தில் முதன்மையானவனின் தலையில், குறுகிய இதயத்தோடு இன்புற்றிருந்த பீமசேனனின் காலைக் கண்டு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.(13) விருகோதரன் உமது மகனைத் தாக்கி வீழ்த்தி இவ்வாறு தற்பெருமை பேசி, வெறிகொண்டு கூத்தாடியபோது, மன்னன் யுதிஷ்டிரன் அவனிடம்,(14) “நீ உன் பகைமையைத் தீர்த்துக் கொண்டாய், நியாமாகவோ, அநியாயமாகவோ உன் சபதத்தையும் நிறைவேற்றிக் கொண்டாய். ஓ பீமா, இப்போது நிறுத்துவாயாக.(15)

உன் காலால் இவனது தலையை நசுக்காதே. பாவகரமாகச் செயல்படாதே. துரியோதனன் ஒரு மன்னனாவான். மேலும் இவன் உன் சொந்தக்காரனுமாவான். இவன் வீழ்ந்துவிட்டான். ஓ பாவமற்றவனே, இந்த உனது நடத்தை முறையானதில்லை.(16) துரியோதனன் பதினோரு அக்ஷௌஹிணிகளின் தலைவனாக இருந்தான். இவன் குருக்களின் மன்னனாகவும் இருந்தான். ஓ பீமா, மன்னனும், உறவினனுமான இவனை உன் காலால் தீண்டாதே.(17) இவனது உறவினர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவனது நண்பர்களும், அமைச்சர்களும் சென்றுவிட்டனர். இவனது துருப்புகளும் அழிக்கப்பட்டுவிட்டன. போரில் இவன் வீழ்த்தப்பட்டுவிட்டான். அனைத்து வகையிலும் இவன் அனுதாபத்திற்குரியவன். இவன் மன்னன் என்பதை நினைவுகூர்ந்தால், இவன் அவமதிக்கப்படத் தகுந்தவனில்லை.(18) இவன் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டான். இவனது நண்பர்களும், சொந்தங்களும் கொல்லப்பட்டுவிட்டனர். இவனது சகோதரர்களும், மகன்களும் கூடக் கொல்லப்பட்டுவிட்டனர். இவனது ஈமப்பிண்டம் எடுக்கப்பட்டுவிட்டது. இவன் நமது சகோதரனாவான். இதை அவனுக்கு நீ செய்வது முறையாகாது.(19) “பீமசேனன் நீதிமிக்க நடத்தை கொண்டவனாவான்” என்று முன்பு உன்னைக் குறித்து மக்கள் சொன்னார்கள். ஓ பீமசேனா, நீ ஏன் இம்மன்னனை இவ்வழியில் அவமதிக்கிறாய்?” என்று கேட்டான்.(20)

இவ்வார்த்தைகளைப் பீமசேனனிடம் சொன்ன யுதிஷ்டிரன், கண்ணீரால் தடைபட்ட குரலுடனும், துன்பத்தால் பீடிக்கப்பட்டும், எதிரிகளைத் தண்டிப்பவனான துரியோதனனை அணுகி, அவனிடம்,(21) “ஓ ஐயா, நீ கோபப்படவோ, உனக்காகத் துன்பப்படவோ கூடாது. உனது முந்தைய செயல்களின் பயங்கர விளைவுகளையே நீ சுமக்கிறாய் என்பதில் ஐயமில்லை.(22) ஓ குரு குலத்தில் முதன்மையானவனே, நாங்கள் உன்னைக் காயப்படுத்த வேண்டும், நீ எங்களைக் காயப்படுத்த வேண்டும் என்ற இந்தச் சோகமான தீய முடிவு படைப்பாளனாலேயே விதிக்கப்பட்டிருக்கிறது என்பதிலும் ஐயமில்லை.(23) ஓ பாரதா, பேராசை, செருக்கு, மடைமை ஆகிய உன் குற்றங்களாலேயே இந்தப் பேரிடர் உனக்கு நேர்ந்திருக்கிறது.(24) உன் தோழர்கள், சகோதரர்கள், தந்தைமார்கள், மகன்கள், பேரர்கள் மற்றும் அனைவரையும் கொல்லச் செய்து, இப்போது நீ உன் மரணத்தை நெருங்கியிருக்கிறாய்.(25)

உன் குற்றத்தின் விளைவாலேயே, வலிமைமிக்கத் தேர்வீரர்களான உன் சகோதரர்கள் மற்றும் சொந்தங்கள் அனைவரும் எங்களால் கொல்லப்பட்டனர். இவை யாவும் தடுக்கப்பட முடியாத விதியின் செயல்பாடு என்றே நான் நினைக்கிறேன்.(26) நீ பரிதாபத்திற்குரியவன் அல்ல. மறுபுறம், ஓ பாவமற்றவனே, உன் மரணம் பொறாமை கொள்ளத்தக்கதாகும். ஓ கௌரவா, அனைத்து வகையிலும் நாங்களே பரிதாபத்திற்குரியவர்கள். எங்கள் அன்புக்குரிய நண்பர்களும், சொந்தங்களும் இல்லாமல் நாங்கள் பரிதாபகரமான வாழ்வை இழுக்கப் போகிறோம்.(27) ஐயோ, என் சகோதரர்கள், மகன்கள் மற்றும் பேரர்களைக் குறித்த சோகத்தில் உணர்வுகளை இழந்து துக்கத்தில் மூழ்கியிருக்கும் கைம்பெண்களை நான் எவ்வாறு காணப் போகிறேன்.(28) ஓ மன்னா, நீ இந்த உலகத்தில் இருந்து செல்லப் போகிறாய். நீ சொர்க்கத்தில் நிச்சயம் வசிப்பிடத்தைக் கொள்ளப் போகிறாய். மறுபுறம் நாங்களோ, நரகில் வாழும் உயிரினங்களாகக் கருதப்பட்டு, கடுந்துக்கத்தைத் தொடர்ந்து அனுபவிக்கப் போகிறோம்.(29) திருதராஷ்டிரர் மகன்கள் மற்றும் பேரர்களின் மனைவியர் துன்பத்தால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். சோகத்தால் நொறுங்கியிருக்கும் அந்தக் கைம்பெண்டிர், எங்கள் அனைவரையும் சபிப்பார்கள் என்பதில் ஐயமில்லை” என்றான்.(30)

இவ்வார்த்தைகளைச் சொன்ன தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, துயரால் ஆழமாகப் பீடிக்கப்பட்டு, கடும் மூச்சு விடத் தொடங்கி, புலம்பல்களில் ஈடுபட்டான்” {என்றான் சஞ்சயன்}.(31)

பலராமனை வளைத்துப் பிடித்த கேசவன்! – சல்லிய பர்வம் பகுதி – 60-கதாயுத்த விதிமுறைகளை மீறி, துரியோதனனின் உந்திக்குக் கீழே தாக்கிய பீமனைக் கண்டு கோபமடைந்த பலராமன் தன் கலப்பையை ஓங்கியபடியே பீமனை நோக்கி விரைந்து சென்றது; பலராமனைப் பிடித்துத் தடுத்த கிருஷ்ணன்; பீமன் தரப்பு நியாயத்தைச் சொன்ன கிருஷ்ணன்; கிருஷ்ணனின் உரையைக் கேட்டு வெகுண்ட பலராமன், துரியோதனனைப் புகழ்ந்து, பீமனை இகழ்ந்து துவாரைகைக்குப் புறப்பட்டுச் சென்றது; நாட்டின் அரசுரிமையை ஏற்குமாறு யுதிஷ்டிரனிடம் சொன்ன பீமன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா, வலிமைமிக்கவனும், மது குலத்தில் முதன்மையானவனுமான பலதேவன் {பலராமன்}, நியாயமற்ற வகையில் (குரு) மன்னன் {துரியோதனன்} தாக்கி வீழ்த்தப்பட்டதைக் கண்டு என்ன சொன்னான்?(1) ஓ! சஞ்சயா, கதாயுத மோதல்களில் நல்ல திறம் கொண்டவனும், அதன் விதிமுறைகளை நன்கறிந்தவனுமான அந்தத ரோகிணியின் மகன் {பலராமன்}, அச்சந்தர்ப்பத்தில் என்ன செய்தான் என்பதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தாக்குபவர்களில் முதன்மையானவனும், வலிமைமிக்கவனுமான ராமன் {பலராமன்}, உமது மகன் {துரியோதனன்} தொடைகளில் தாக்கப்பட்டதைக் கண்டு மிகுந்த கோபத்தை அடைந்தான்.(3) தன் கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, அம்மன்னர்களுக்கு மத்தியில் தன் கரங்களை உயர்த்தி, ஆழ்ந்த சோகக் குரலில், “ஓ!, பீமனுக்கு ஐயோ, பீமனுக்கு ஐயோ.(4) ஓ!, ஒரு வீச்சால் உந்திக்கு {தொப்புளுக்குக்} கீழே தாக்கப்பட்ட இத்தகு நியாயமற்ற போருக்கு ஐயோ. கதாயுதப்போரில் விருகோதரன் {பீமன்} செய்தது போன்ற ஒரு செயலை இதற்கு முன்பு எப்போதும் பார்க்கப்பட்டதில்லை.(5) உந்திக்குக் கீழே உள்ள எந்த அங்கமும் தாக்கப்படலாகாது. இதுவே ஆய்வுகளில் {சாத்திரங்களில்} விதிக்கப்பட்ட விதியாகும். எனினும், ஆய்வுகளின் உண்மைகளை அறியாதவனான இந்தப் பீமன் அறியாமை கொண்ட இழிந்தவனாவான். எனவேதான் இவன் {பீமன்} தன் விரும்பியபடி நடந்து கொண்டான்” என்றான்[1].(6)இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ராமன் {பலராமன்} பெரும் கோபம் கொண்டான். அப்போது, அந்த வலிமைமிக்கப் பலதேவன் {பலராமன்}, தன் கலப்பையை உயர்த்திக் கொண்டு பீமசேனனை நோக்கி விரைந்தான்.(7) உயர்த்தப்பட்ட கரங்களுடன் கூடிய அந்த உயர் ஆன்மப் போர்வீரனின் வடிவமானது, பல்வேறு வகை உலோகங்களுடன் பல வண்ணங்களில் இருக்கும் பெரும் கைலாச மலையைப் போல இருந்தது[2].(8) எனினும், எப்போதும் பணிவுடன் இருப்பவனான வலிமைமிக்கக் கேசவனோ {கிருஷ்ணனோ}, விரைந்து சென்ற அந்த ராமனை {பலராமன}, பருத்துருண்டிருந்த தன் கரங்களால் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டான்.(9) நிறத்தில் ஒருவன் கருப்பாகவும் {கிருஷ்ணன்}, மற்றவன் வெளுப்பாகவும் {பலராமன்} இருந்த அந்த யது குல வீரர்களில் முதன்மையான இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மாலை நேர வானில் {ஒரே நேரத்தில்} இருக்கும் சூரியனையும் சந்திரனையும் போல அக்கணத்தில் மிக அழகானவர்களாகத் தெரிந்தனர்.(10)ராமனின் {பலராமனின்} கோபத்தைத் தணிக்கும் வகையில் கேசவன் {கிருஷ்ணன்} அவனிடம், “ஒருவனின் சொந்த வளர்ச்சி, ஒருவனுடைய நண்பனின் வளர்ச்சி, ஒருவனுடைய நண்பனது நண்பர்களின் வளர்ச்சி,, ஒருவனுடைய எதிரியின் சிதைவு, ஒருவனின் எதிரியுடைய நண்பனின் சிதைவு, ஒருவனின் எதிரியுடைய நண்பர்களின் நண்பர்களுடைய சிதைவு ஆகிய ஆறு வகை வளர்ச்சியையும் ஒரு மனிதன் தன் வளர்ச்சியாகக் கொள்ளலாம்.(11) இவை ஒருவனுக்கு இதற்கு மாறாக நடக்கும்போதோ, ஒருவனுடைய நண்பர்களுக்கு அவ்வாறு நடக்கும்போதோ, அவன் தன் வீழ்ச்சி அருகில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, அத்தகு நேரங்களின் அவன் தீர்வை அடைவதற்கான வழிகளைத் தேட வேண்டும் {பகைமையைத் தணித்துக் கொள்ள வேண்டும்}.(12) மாசில்லா ஆற்றலைக் கொண்டவர்களான பாண்டவர்கள் இயல்பாகவே நம் நண்பர்களாவர். அவர்கள் நமது அத்தையின் {குந்தியின் -நம் தந்தையின் சகோதரியுடைய} பிள்ளைகளாவர். அவர்கள் தங்கள் பகைவர்களால் பெரிதும் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்.(13) தன் சபதத்தை நிறைவேற்றுவது ஒருவனது கடமையாகும். முன்பு பீமர், பெரும்போர் ஒன்றில் இந்தத் துரியோதனனின் தொடைகளைத் தமது கதாயுதத்தால் நொறுக்குவதாகச் சபைக்கு மத்தியில் வைத்து சபதமேற்றார்.(14) மேலும், பெரும் முனிவரான மைத்திரேயரும் கூட, ஓ எதிரிகளை எரிப்பவரே, “பீமன் தன் கதாயுதத்தால் உன் தொடைகளை நொறுக்குவான்” என்று முன்பே துரியோதனனைச் சபித்திருக்கிறார்.(15) இவை யாவற்றின் விளைவால், நான் பீமரிடம் எக்குற்றத்தையும் காணவில்லை. ஓ! பிரலம்பனைக் கொன்றவரே {பலராமரே}, கோபத்திற்கு வசப்படாதீர். பாண்டவர்களுடனான நமது உறவு, பிறப்பாலும், குருதியாலும், இதயங்களின் ஈர்ப்பாலும் ஏற்பட்டதாகும்.(16) இவர்களது வளர்ச்சியே நம் வளர்ச்சியாகும். எனவே, ஓ! மனிதர்களில் காளையே, கோபத்திற்கு வசப்படாதீர்” என்றான் {கிருஷ்ணன்}.

அறநெறிகளை அறிந்தவனான அந்தக் கலப்பைதாரி {பலராமன்}, வாசுதேவனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, “நல்லோரால் அறநெறி {அறம்} நன்றாகப் பயிலப்படுகிறது. எனினும், பெரும் பேராசையுள்ளோருக்குப் பயனில் {பொருளில்} விருப்பமும், காரியங்களில் பெரும்பற்று கொண்டோருக்கு இன்பத்தில் விருப்பமும் என இவ்விரு காரியங்களால், அறநெறியானது {அறமானது} எப்போதும் பீடிக்கப்படுகிறது.(18) அறம் மற்றும் பொருளையோ, அறம் மற்றும் இன்பத்தையோ, இன்பம் மற்றும் பொருளையோ பீடிக்காமல் {பாதிப்படையச் செய்யாமல்}, அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் முறையே பின்பற்றுபவர்கள், பெரும் மகிழ்ச்சியை அடைவதில் எப்போதும் வெல்கிறார்கள்.(19) நீ என்னிடம் என்ன சொன்னாலும், பீமசேனனால் அறம் பீடிக்கப்பட்டதன் விளைவால், என்னால் இப்போது சொல்லப்பட்ட இந்த {அறம், பொருள் மற்றும் இன்பத்தின்} ஒத்திசைவு நிலைகுலைகிறது” என்று சொன்னான்.(20)

கிருஷ்ணன் {பலராமரிடம்}, “கோபமில்லாதவராகவும், அற ஆன்மாகக் கொண்டவராகவும், அறத்திற்கு அர்ப்பணிப்பு கொண்டவராகவும் நீர் எப்போதும் சொல்லப்படுகிறீர். எனவே, அமைதியடைவீராக, கோபத்திற்கு வசப்படாதீர்.(21) கலிகாலம் அருகில் இருக்கிறது என்பதை அறிவீராக. பாண்டுவின் மகன் {பீமன்} செய்த சபதத்தையும் நினைவுகூர்வீராக. எனவே, இந்தப் பாண்டுவின் மகன், தமது சபதத்தை நிறைவேற்றுவதற்காகத் தமது பகைமைக்கான கடனைத் தீர்த்தவராகவே கருதப்பட வேண்டும்” என்றான்”.(22)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} இருந்து இந்தத் தவறான உரையை {கபட தர்மத்தைக்}[3] கேட்ட ராமன் {பலராமன்}, தன் கோபத்தைத் தணித்துக் கொள்ளவும், உற்சாகங்கொள்ளவும் தவறினான். பிறகு அவன் அந்தச் சபையில்,(23) “அற ஆன்மா கொண்ட மன்னன் சுயோதனனை நியாயமற்ற முறையில் கொன்ற இந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, இவ்வுலகில் வஞ்சகப் போர்வீரனாக {கபடயுத்தவீரனாக்} கருதப்படுவான்.(24) மறுபுறம், அற ஆன்மா கொண்ட துரியோதனனோ, அழிவில்லா அருளை அடைவான். இவ்வாறு தாக்கப்பட்டவனும், திருதராஷ்டிரரின் அரச மகனுமான இந்த மனிதர்களின் ஆட்சியாளன் {துரியோதனன்} நல்ல போர்வீரனாவான்.(25) போர் வேள்விக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, களத்தில் தொடக்க விழாக்களையும் செய்து, இறுதியாகத் தன் எதிரிகள் காட்டிய நெருப்பில் தன் உயிரையே ஆகுதியாக ஊற்றிய துரியோதனன், மகிமையை அடைந்து தன் இறுதி காணிக்கைகளைச் செலுத்தி தன் வேள்வியை நல்ல முறையில் நிறைவு செய்தான்” என்று சொன்னான்.(26) வெண்மேகத்தின் முகட்டைப் போலத் தெரிந்தவனான அந்த ரோகிணியின் வீர மகன் {பலராமன்}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, தன் தேரில் ஏறி துவாரகையை நோக்கிச் சென்றான்.(27) ராமன் துவாராவதிக்குப் புறப்பட்டதும், பாஞ்சாலர்கள், விருஷ்ணிகள் மற்றும் பாண்டவர்கள் உற்சாகத்தை இழந்தனர்.(28)அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்}, பெரும் துன்பத்தில் இருந்தவனும், கவலையில் நிறைந்தவனும், தலையைத் தொங்கப் போட்டிருந்தவனும், ஆழ்ந்த துன்பத்தின் விளைவால் என்ன செய்வது என்று அறியாதிருந்தவனுமான யுதிஷ்டிரனை அணுகி, அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(29) வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, “ஓ! நீதிமானான யுதிஷ்டிரரே, உறவினர்களும், நண்பர்களும் கொல்லப்பட்டவனும், உணர்வற்று வீழ்ந்து கிடப்பவனுமான துரியோதனனின் தலையானது, பீமரின் காலால் தாக்கப்பட அனுமதித்து, இந்த நியாயமில்லாத செயலை ஏன் நீர் அங்கீகரித்தீர். அறநெறிகளின் வழிகளை அறிந்தவரான நீர், ஓ! மன்னா, இந்தச் செயலை ஏன் அலட்சியமாகப் {பாரபட்சத்துடன்} பார்த்துக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டான்.(30,31)

யுதிஷ்டிரன், “ஓ! கிருஷ்ணா, விருகோதரன் கோபத்தால் உந்தப்பட்டு, தன் காலால் மன்னனின் தலையைத் தீண்டிய இந்தச் செயல் எனக்கு ஏற்புடையதில்லை, என் குலத்தின் இவ்வழிவிலும் எனக்கு மகிழ்ச்சியில்லை.(32) திருதராஷ்டிரர் மகன்களின் வஞ்சகத்தால் {கபடத்தால்} நாங்கள் எப்போதும் வஞ்சிக்கப்பட்டோம். அவர்கள் எங்களிடம் பல கொடூர வார்த்தைகளைப் பேசினர். மேலும் அவர்கள் எங்களைக் காடுகளுக்கு நாடு கடத்தினர்.(33) அச்செயல்கள் அனைத்தின் காரணமாகவும் பீமசேனனின் இதயம் பெருந்துயரை அடைந்தது. ஓ! விருஷ்ணி குலத்தோனே, இவையாவையும் சிந்தித்தே நான் அலட்சியமாகப் பார்த்திருந்தேன்.(34) ஞானத்தை இழந்தவனும், ஆசைகளுக்கு அடிமையானவனும், பேராசை கொண்டவனுமான அந்தத் துரியோதனனைக் கொன்ற இந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, நீதியினாலோ {தர்மத்தினாலோ}, அநீதியினாலோ {அதர்மத்தினாலோ}, தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டும்” என்றான்”.(35)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “யுதிஷ்டிரன் இதைச் சொன்ன பிறகு, யது குலத்தைத் தழைக்கச் செய்பவனான வாசுதேவன், “அப்படியே ஆகட்டும்” என்று சிரமத்துடன் சொன்னான்.(36) உண்மையில் வாசுதேவனிடம், யுதிஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, பீமனுக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் எப்போதும் விரும்பிய அவன் {கிருஷ்ணன்}, போரில் பீமன் செய்த அச்செயல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டான்.(37) போரில் உமது மகனைத் தாக்கி வீழ்த்திய கோபக்கார பீமசேனன், இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடனும், கூப்பிய கரங்களுடனுன் யுதிஷ்டிரனின் முன்பு நின்று, முறையான வடிவில் அவனை வணங்கினான்.(38) பெருஞ்சக்தி கொண்ட விருகோதரன் {பீமன்}, மகிழ்ச்சியால் விரிந்த கண்களுடனும், தான் வென்ற வெற்றியின் செருக்குடனும், ஓ! மன்னா, தன் அண்ணனிடம் {யுதிஷ்டிரனிடம்},(39) “ஓ! மன்னா, பூசல்கள் என்ற இடைஞ்சல் இல்லாதவளும், முட்கள் அனைத்தும் நீக்கப்பட்டவளுமான பூமாதேவி இன்று உம்முடையவனாள். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அவளை ஆட்சி செய்து உமது வகைக்கு {க்ஷத்திரியனுக்கு} உண்டான கடமைகளை நோற்பீராக.(40) இந்தப் பகைமைகளுக்குக் காரணமானவனும், தனது கபடவழிகளால் அதை வளர்த்தவனும், வஞ்சகத்தை விரும்பியவனும் இழிந்தவனுமான அந்தப் பொல்லாதவன் {துரியோதனன்}, ஓ! பூமியின் தலைவா, தாக்கி வீழ்த்தப்பட்டு {இதோ} வெறுந்தரையில் கிடக்கிறான்.(41) கொடூர வார்த்தைகளைச் சொல்பவர்களும், ராதையின் மகன் {கர்ணன்} மற்றும் சகுனி ஆகிய உமது எதிரிகளும், துச்சாசனனின் தலைமையிலான இழிந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர்.(42) ரத்தினங்கள் அனைத்தாலும் நிரம்பியவளும், காடுகள் மற்றும் மலைகளுடன் கூடியவளுமான பூமாதேவி, ஓ! ஏகாதிபதி, உயிரோடுள்ள எந்த எதிரியுமற்றவளாக மீண்டும் உம்மிடம் வருகிறாள்” என்றான்.(43)

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “பகைமைகள் முடிவுக்கு வந்துவிட்டன. மன்னன் துரியோதனனும் வீழ்ந்துவிட்டான். கிருஷ்ணனின் ஆலோசனைகளின் படி நடந்து கொண்ட நம்மால், இந்தப் பூமாதேவி வெல்லப்பட்டிருக்கிறாள்.(44) உன் தாய்க்கும், உன் கோபத்திற்கும் பட்ட கடனை நற்பேறாலேயே நீ அடைத்திருக்கிறாய். ஓ! வெல்லப்பட முடியாத வீரனே, நற்பேறாலேயே நீ வெற்றியாளனானாய், நற்பேறாலேயே உன் எதிரியும் கொல்லப்பட்டான்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(45)

தெய்வீகப் பூமாரி! – சல்லிய பர்வம் பகுதி – 61-துரியோதனன் வீழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்த பாண்டவ வீரர்கள்; அவர்களால் புகழப்பட்ட பீமன்; துரியோதனன் அவமதிக்கப்படுவதைத் தடுத்த கிருஷ்ணன்; அநியாயங்கள் அனைத்துக்கும் கிருஷ்ணனையே குற்றஞ்சாட்டிய துரியோதனன்; துரியோதனனின் தீச்செயல்களை நினைவூட்டி, அவனது பரிதாபகரமான முடிவு தவிர்க்கமுடியாதது என்று சொன்ன கிருஷ்ணன்; தன் மகிமையைக் குறித்துத் தற்புகழ்ச்சி செய்த துரியோதனன்; தெய்வீக மலர்மாரி பொழிந்தது; பெருந்தேர்வீரர்களை அநியாயமாகக் கொன்றதற்கான காரணங்களைச் சொன்ன கிருஷ்ணன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, போரில் பீமசேனனால் தாக்கி வீழ்த்தப்பட்ட துரியோதனனைக் கண்டு, பாண்டவர்களும், சிருஞ்சயர்களும் என்ன செய்தனர்?” என்று கேட்டான்.(1)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கிருஷ்ணனோடு கூடிய பாண்டவர்கள், சிங்கத்தால் கொல்லப்பட்ட காட்டு யானையைப் போலப் போரில் பீமசேனனால் கொல்லப்பட்ட துரியோதனனைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தனர். அந்தக் குரு மன்னன் {துரியோதனன்} வீழ்ந்த போது, பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும்,(2,3) தங்கள் மேலாடைகளை (காற்றில்) அசைத்து, சிங்க முழக்கம் செய்தனர். அந்தப் போர் வீரர்களின் மகிழ்ச்சியானது, பூமியால் பொறுத்துக் கொள்ள முடியாததாகத் தெரிந்தது.(4) சிலர் தங்கள் விற்களை வளைத்தனர்; சிலர் தங்கள் நாண்கயிறுகளை இழுத்தனர். சிலர் தங்கள் பெரும் சங்குகளை முழக்கினர்; சிலர் தங்கள் துந்துபிகளை ஒலித்தனர்.(5) சிலர் விளையாடிக் கொண்டும், குதித்துக் கொண்டும் இருந்தனர்; உமது பகைவர்களில் சிலர் உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

பல வீரர்கள் பீமசேனனிடம் இவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொன்னார்கள்,(6) “பெரும் போர்வீரரனான குரு மன்னனை {துரியோதனனை}, உன் கதாயுதத்தால் தாக்கி வீழ்த்தியதன் மூலம், மிகக் கடினமானதும், பெரியதுமான அருஞ்செயலை போரில் இன்று நீ செய்திருக்கிறாய்.(7) இந்திரனால் விருத்திரன் கொல்லப்பட்டதைப் போன்றே எதிரி உன்னால் கொல்லப்பட்டதாக இம்மனிதர்கள் அனைவரும் கருதுகின்றனர்.(8) ஓ! விருகோதரா {பீமா}, பல்வேறு வகை அசைவுகளைச் செய்து கொண்டும், (இத்தகு மோதல்களின் சிறப்பியல்புகளான) மண்டலகதிகளைச் செய்துகொண்டும் வீரத் துரியோதனனைக் கொல்ல உன்னைத் தவிர வேறு யாரால் முடியும்?(9) அடைவதற்கு அரிதான பகைமையின் அடுத்தக் கரையை இப்போது நீ அடைந்துவிட்டாய். நீ அடைந்திருக்கும் இந்தச் சாதனையானது, வேறு எந்தப் போர்வீரனாலும் அடைய முடியாததாகும்.(10)

ஓ! வீரா {பீமா}, ஒரு மதங்கொண்ட யானையைப் போலப் போர்க்களத்தில் துரியோதனனின் தலையை உன் காலால் நீ நொறுக்கியது நற்பேறாலேயே.(11) ஓ! பாவமற்றவனே {பீமனே}, எருமையின் குருதியைக் குடிக்கும் சிங்கம் ஒன்றைப் போல, ஓர் அற்புதப் போரில் துச்சாசனனின் குருதியை நீ குடித்ததும் நற்பேறாலேயே.(12) அற ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரனுக்குத் தீங்கிழைத்தோர் அனைவரின் தலையிலும் நீ உன் சக்தியால் கால் வைத்ததும் நற்பேறாலேயே.(13) நற்பேற்றால் உன் எதிரிகளை வென்று, துரியோதனனைக் கொன்றதன் விளைவால், ஓ! பீமா, உன் புகழ் உலகங்கெங்கும் பரவப் போகிறது.(14) விருத்திரன் வீழ்ந்ததும் சக்ரனைப் புகழ்ந்த வந்திகளையும், பாணர்களையும் போல, ஓ! பாரதா {பீமா}, இப்போது உன் எதிரிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, நாங்கள் உன்னைப் புகழ்கிறோம்.(15) ஓ! பாரதா {பீமா}, துரியோதனன் கொல்லப்பட்டபோது எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி {மயிர்ச்சிலிர்ப்பு} இன்னும் தணியவில்லை என்பதை அறிந்து கொள்வாயாக” என்றனர். அச்சந்தர்ப்பத்தில் அங்கே கூடிய துதிபாடிகளால் பீமசேனனிடம் இவ்வார்த்தைகளே சொல்லப்பட்டன.(16)

மனிதர்களில் புலிகளான பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்து இத்தகு மொழியில் பேசிக் கொண்டிருந்தபோது, மதுசூதனன் {கிருஷ்ணன்} அவர்களிடம்,(17) “மனிதர்களின் ஆட்சியாளர்களே, கொல்லப்பட்ட எதிரியை இத்தகு கொடூரப் பேச்சுகளால் மீண்டும் மீண்டும் கொல்வது முறையாகாது.((18) பாவம் நிறைந்தவனும், வெட்கங்கெட்டவனும், பேராசை கொண்ட இழிந்தவனுமான இவன் {துரியோதனன்}, பாவம் நிறைந்த அமைச்சர்களால் சூழப்பட்டு, நல்ல நண்பர்களின் அறிவுரை அலட்சியம் செய்தபோதே இறந்துவிட்டான்.(19) பாண்டவர்கள் அவனிடம் வேண்டிக் கொண்ட அவர்களது தந்தை வழி நாட்டின் {பாண்டுவின்} பங்கைக் கொடுத்துவிடுமாறு விதுரர், துரோணர், கிருபர், சஞ்சயன் ஆகியோர் மீண்டும் மீண்டும் சொல்லியும் மறுத்த போதே இவன் {துரியோதனன்} இறந்துவிட்டான்.(20) இந்த இழிந்தவன் இப்போது நண்பனாகவோ, எதிரியாகவோ கருதப்படத்தகுந்தவனல்ல. வெறும் மரக்கட்டையாகிவிட்டவனிடம் கசந்த மூச்சைச் செலவிட்டு {கசந்த மொழிகளைப் பேசி} என்ன பயன்?(21) மன்னர்களே, நாம் இந்த இடத்தைவிட்டுச் செல்லவேண்டும், எனவே உங்கள் தேர்களில் ஏறுவீராக. இந்த இழிந்த பாவி, தனது அமைச்சர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொல்லப்பட்டது நற்பேறாலேயே” என்றான் {கிருஷ்ணன்}.(22)

கிருஷ்ணனின் நிந்தனைகளைக் கேட்டுக் கொண்டிருந்த மன்னன் துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபவசப்பட்டு எழும்ப முயற்சி செய்தான்.(23) பின்தட்டில் அமர்ந்து, தன்னிரு கைகளாலும் தன்னைத் தாங்கிக் கொண்ட அவன் {துரியோதனன்}, தன் புருவங்களைச் சுருக்கித் தன் கோபப்பார்வைகளை வாசுதேவன் {கிருஷ்ணன்} மீது செலுத்தினான்.(24) பாதி உயர்ந்திருந்த அந்தத் துரியோதனனுடைய உடலின் வடிவமானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வாலில்லா நஞ்சுமிக்கப் பாம்பைப் போலத் தெரிந்தது.(25) எரிச்சலூட்டும்படியும், தாங்கிக் கொள்ளமுடியாதபடியும் இருந்த தன் வலிகளை அலட்சியம் செய்த அந்தத் துரியோதனன், கூரிய, கசந்த வார்த்தைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனைப்} பீடிக்கத் தொடங்கினான்.(26)

{துரியோதனன்}, “ஓ! கம்சனுடைய அடிமையின் {வசுதேவரின்} மகனே {கிருஷ்ணா}, கதாயுத மோதல்களில் நீடித்திருக்கும் விதிகளின் தீர்மானத்தின்படி, நான் மிகவும் நியாயமற்ற {மிக அநியாயமான} முறையில் தாக்கி வீழ்த்தப்பட்டிருப்பதை மறந்ததால் நீ வெட்கமில்லாதவன் என்பது தெரிகிறது. என் தொடைகளை முறிக்குமாறு குறிப்பால் உணர்த்தி, பீமனுக்கு நினைவூட்டி நீயே இந்த நியாயமற்ற செயலைச் செய்தாய். அர்ஜுனன், (உன் ஆலோசனையின் பேரில்) பீமனுக்குக் குறிப்பால் உணர்த்தியதை நான் கவனிக்கவில்லை என்று நினைத்தாயா?(27,28) எப்போதும் நியாயமாகப் போரிட்ட ஆயிரக்கணக்கான மன்னர்களைப் பல்வேறு வகையான நியாயமற்ற வழிகளில் கொன்ற நீ அச்செயல்களுக்கான பொறுப்பையோ, வெட்கத்தையோ உணரவில்லையா?(29) நாளுக்குநாள் வீரம் நிறைந்த போர்வீரர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய நீயே, சிகண்டியை முன்னிலையில் நிறுத்தி பாட்டனையும் {பீஷ்மரையும்} கொன்றாய்.(30)

அஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட யானையைக் கொன்றுவிட்டு, ஓ! தீய புரிதல் கொண்டவனே {கிருஷ்ணா}, ஆசானை {துரோணரைத்} தன் ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு நீயே செய்தாய். இஃது எனக்குத் தெரியாது என்று நீ நினைக்கிறாயா?(31) மேலும் வீரஞ்செறிந்த அவ்வீரர் {துரோணர்}, கொடூரனான இந்தத் திருஷ்டத்யும்னனால் கொல்லப்படும்போது, நீ அவனை எதிர்த்து தடுக்கவில்லையே.(32) அர்ஜுனனைக் கொல்வதற்காகக் கர்ணனால் (சக்ரனிடம் வரமாக) இரந்து பெறப்பட்ட ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} கடோத்கசன் மூலம் நீயே கலங்கடித்தாய். உன்னை விட வேறு எவன் பாவம் நிறைந்தவனாக இருக்க முடியும்?(33) அதே போலவே, வலிமைமிக்கவனும், தனது ஒரு கரம் வெட்டப்பட்டவனுமான பூரிஸ்ரவஸ், பிராய விரதத்தை நோற்றுக் கொண்டிருந்தபோது, உயர் ஆன்ம சாத்யகியின் மூலம் உன்னாலேயே கொல்லலப்பட்டான்.(34)

பார்த்தனை {அர்ஜுனனை} வெல்வதற்காகக் கர்ணன் அருஞ்செயல் புரிந்தான். எனினும், நீயோ, பாம்புகளின் இளவரசனுடைய (தக்ஷகனுடைய) மகனான அஸ்வசேனனின் நோக்கம் நிறைவேறுவதைக் கலங்கடித்தாய்.(35) மேலும் கர்ணனின் தேர்ச்சக்கரம் புழுதியில் புதைந்து, பேரிடரில் பீடிக்கப்பட்டு, அக்காரணத்தினாலேயே அந்த மனிதர்களில் முதன்மையானவன் கிட்டத்தட்ட வெல்லப்பட்டவனாக இருந்தபோது, உண்மையில், அவன் தன் சக்கரத்தை விடுவிக்கும் ஆவலில் இருந்தபோது, நீ அந்தக் கர்ணனைக் கொல்லச் செய்தாய்.(36) நியாயமான முறையில் என்னுடனும், கர்ணன், பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோருடனும் நீ போரிட்டிருந்தால், வெற்றி ஒருபோதும் உனதாகியிருக்காது என்பதில் ஐயமில்லை.(37) தங்கள் கடமைகளை நோற்பவர்களான மன்னர்கள் பலரையும், எங்களையும், மிகவும் நேர்மையற்ற, நியாயமற்ற வழிகளைப் பின்பற்றி நீயே கொல்லச் செய்தாய்” என்றான் {துரியோதனன்}.(38)

வாசுதேவன் {கிருஷ்ணன் துரியோதனனிடம்}, “ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனனே}, பாவம் நிறைந்த பாதையில் நீ நடந்ததன் விளைவாகவே, உன் தம்பிகள், மகன்கள், சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் தொண்டர்களுடன் சேர்த்து நீ கொல்லப்பட்டிருக்கிறாய்.(39) உன் தீச்செயல்களின் மூலமே பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய அவ்விரு வீரர்களும் கொல்லப்பட்டனர். கர்ணனும், உன் நடத்தையையே பின்பற்றியதால் கொல்லப்பட்டான்.(40) ஓ! மூடா, பாண்டவர்களின் தந்தை வழி பங்கைக் கொடுத்துவிடு என்று என்னால் வேண்டிக் கொள்ளப்பட்டும், பேராசை கொண்ட நீ அந்தச் சகுனியின் ஆலோசனையின்படி நடந்து கொண்டாய்.(41) பீமசேனருக்கு நீ நஞ்சூட்டினாய். ஓ! தீய புரிதல் கொண்டவனே, அரக்கு மாளிகையில் வைத்து, தங்கள் தாயோடு கூடிய பாண்டவர்கள் அனைவரையும் நீ எரிக்க முயன்றாய்.(42) சூதாட்ட நிகழ்வின்போது, தனது பருவகாலத்தில் இருந்த யக்ஞசேனன் மகளை {திரௌபதியைச்} சபைக்கு மத்தியில் வைத்து நீ துன்புறுத்தினாய்.(43) பகடையை நன்கறிந்தவனான சுபலனின் மகனை {சகுனியைக்} கொண்டு, சூதாட்டத்தில் திறமற்றவரும், அறவோருமான யுதிஷ்டிரரை நியாயமற்ற வகையில் நீ வென்றாய். அதற்காகவே நீ கொல்லப்படுகிறாய்.(44)

மற்றொரு சந்தர்ப்பத்தில், கிருஷ்ணையின் {திரௌபதியின்} தலைவர்களான பாண்டவர்கள் திருணபிந்துவின் ஆசிரமத்தை நோக்கி வேட்டையாடச் சென்றிருந்தபோது, பாவம் நிறைந்த ஜெயத்ரதன் மூலம் நீ அவளைத் துன்புறுத்தினாய்.(45) சிறுவனும், தனியனுமான அபிமன்யுவைச் சுற்றிலும் பல வீரர்களைச் சூழச் செயது, நீயே அவ்வீரனைக் கொல்லச் செய்தாய். ஓ! இழிந்த பாவியே, அந்தக் குற்றத்தின் விளைவாலேயே நீ கொல்லப்படுகிறாய்.(46) நாங்கள் செய்த நியாயமற்ற செயல்கள் என்று நீ சொல்லும் அனைத்தும், உண்மையில், பாவம் நிறைந்த உனது இயல்பின் விளைவால் உன்னால் செய்யப்பட்டவையே ஆகும்.(47) பிருஹஸ்பதி மற்றும் உசனஸின் {சுக்ராச்சாரியரின்} ஆலோசனைகளை நீ ஒருபோதும் கேட்டதில்லை. முதிர்ந்தவர்களுக்காக நீ ஒருபோதும் காத்திருந்ததில்லை {அவர்களுக்குப் பணிவிடை செய்ததில்லை}. நல்ல வார்த்தைகளை நீ ஒருபோதும் கேட்டதில்லை.(48) அடக்கமுடியாத பேராசைக்கும், பலனில் உள்ள தாகத்திற்கும் அடிமையாக இருந்த நீயே நியாயமற்ற செயல்கள் பலவற்றைச் செய்தவனாவாய். அந்த உன் செயல்பாடுகளின் விளைவை நீ இப்போது தாங்கிக் கொள்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(49)

துரியோதனன் {கிருஷ்ணனிடம்}, “நான் கல்வி கற்றவனாக, விதிப்படி தானம் செய்தவனாக, கடல்களுடன் கூடிய பரந்த பூமியை ஆட்சி செய்தவனாக, என் எதிரிகளின் தலைக்கு மேலேயே {உயர்ந்து} இருந்திருக்கிறேன்.(50) தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கும் க்ஷத்திரியர்களால் விரும்பப்படும் போர்க்கள மரணம் என்ற முடிவு இப்போது எனதாகியிருக்கிறது. எனவே, என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(51) தேவர்களுக்குத் தகுந்ததும், பிற மன்னர்களால் சிரமத்துடன் அடையப்படுவதுமான மனித இன்பங்கள் {அனைத்தும்} எனதாகவே இருந்திருக்கின்றன. உயர்ந்த வகைச் செல்வம் என்னால் அடையப்பட்டிருந்தது. என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(52) ஓ! மங்கா மகிமை கொண்டவனே {கிருஷ்ணா}, என் நலவிரும்பிகள், என் தம்பிகள் ஆகியோர் அனைவருடனும் நான் சொர்க்கத்திற்குச் செல்லப் போகிறேன். உங்களைப் பொறுத்தவரை, உங்கள் காரியம் நிறைவேறாமல், துயரால் {மனம்} கிழிக்கப்பட்டு, மகிழ்ச்சியற்ற இவ்வுலகில் நீங்கள் வாழப்போகிறீர்கள்” என்றான் {துரியோதனன்}”.(53)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “குருக்களின் அந்தப் புத்திசாலி மன்னனுடைய {துரியோதனனுடைய} இவ்வார்த்தைகளின் நிறைவின்போது, நறுமணமிக்க மலர்களின் அடர்த்தியான மழை வானத்தில் இருந்து பொழிந்தது.(54) கந்தர்வர்கள் இனிய இசைக்கருவிகளை முழக்கினார்கள். அப்சரஸ்கள் மன்னன் துரியோதனனின் மகிமையைக் கூட்டமாகப் பாடினர்.(55) சித்தர்கள், “மன்னன் துரியோதனன் புகழப்படுவான்” என்ற ஒலியை எழுப்பினர். அனைத்துப் பக்கங்களிலும் நறுமணமிக்க இனிய தென்றல் மென்மையாக வீசியது. அனைத்துப் பகுதிகளும் தெளிவடைந்து, ஆகாயமானது வைடூரியத்தைப் போன்ற நீலத்தை அடைந்தது.(56) இந்த அற்புதமான காரியங்களையும், துரியோதனனுக்குச் செய்யப்பட்ட வழிபாடுகளையும் கண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} தலைமையிலான பாண்டவர்கள் வெட்கத்தை அடைந்தனர்.(57) பீஷ்மர், துரோணர், கர்ணன், பூரிஸ்ரவஸ் ஆகியோர் நியாயமற்ற வகையில் கொல்லப்பட்டனர் என்று (கண்ணுக்குத் தெரியாத உயிரினங்களால் உரக்கச் சொல்லப்பட்டதைக்) கேட்ட அவர்கள் துயரால் பீடிக்கப்பட்டுக் கவலையால் அழுதனர்.(58)

கவலையிலும், துயரத்திலும் மூழ்கியிருந்த பாண்டவர்களைக் கண்ட கிருஷ்ணன், மேகங்கள், அல்லது துந்துபியைப் போன்ற ஆழ்ந்த குரலுடன் அவர்களிடம்,(59) “அவர்கள் அனைவரும் பெருந்தேர் வீரர்களாகவும், ஆயுதப் பயன்பாட்டில் வேகம் கொண்டவர்களாகவும் இருந்தனர். நீங்கள் உங்கள் ஆற்றல் முழுவதையும் வெளியிட்டிருந்தாலும், நியாயமான முறையில் போரிட்டு அவர்களை ஒருபோதும் கொன்றிருக்க முடியாது.(60) நியாயமான போரில் மன்னன் துரியோதனனும் கொல்லப்பட முடியாதவனே ஆவான். பீஷ்மரின் தலைமையிலான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரின் காரியமும் அதேதான்.(61) நான், உங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தாலேயே போரில் மீண்டும் மீண்டும் என் மாய சக்திகளையும், பல்வேறு வழிமுறைகளையும் பயன்படுத்தி அவர்களைக் கொல்லச் செய்தேன்.(62) போரில் அத்தகு வஞ்சிக்கும் வழிகளை நான் பின்பற்றவில்லையென்றால், வெற்றியோ, நாடோ, செல்வமோ ஒருபோதும் உங்களுடையதாகி இருக்காது.(63)

உயர் ஆன்மப் போர்வீரர்களான அவர்கள் நால்வரும், உலகத்தால் அதிரதர்களாகக் கருதப்பட்டனர். நியாயமான போரில் அவர்களை லோகபாலர்களாலேயே கொல்ல முடியாது.(64) அதேபோலவே, களைப்பை அறியாதவனும், கதாயுதம் தரித்தவனுமான திருதராஷ்டிரன் மகனும் {துரியோதனனும்}, தண்டந்தரித்த யமனாலேயேகூட நியாயமான போரில் கொல்லப்பட முடியாது.(65) உங்கள் எதிரிகள் வஞ்சகத்தாலேயே கொல்லப்பட்டனர் என்பதை நீங்கள் உங்கள் இதயம் வரை கொண்டு செல்லாதீர். ஒருவனின் எதிரிகளுடைய எண்ணிக்கை பெரிதாகும்போது, சூழ்ச்சிகள் மற்றும் வழிமுறைகளின் மூலமே அவர்களுக்கு அழிவை உண்டாக்க வேண்டும்.(66) தேவர்களே கூட அசுரர்களைக் கொல்வதில் இதே வழியிலேயே நடந்திருக்கின்றனர். எனவே, தேவர்கள் நடந்த அந்த வழியில் அனைவரும் நடக்கலாம்.(67) நாம் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டிருக்கிறோம். இது மாலை வேளை. நாம், நமது பாசறைகளுக்குத் திரும்புவதே சிறந்தது. மன்னர்களே, குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களுடன் நாம் அனைவரும் ஓய்வெடுப்போமாக” என்றான்.(68)

வாசுதேவனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் மகிழ்ச்சியால் நிறைந்து, சிங்கங்கள் பலவற்றைப் போல முழக்கம் செய்தனர்.(69) அவர்கள் அனைவரும் தங்கள் சங்குகளை முழக்கினர், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, மாதவனும் {கிருஷ்ணனும்}  மகிழ்ச்சியால் நிறைந்து, போரில் தாக்கிவீழ்த்தப்பட்ட துரியோதனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாஞ்சஜன்யத்தை முழக்கினான்” {என்றான் சஞ்சயன்}.(70)

அர்ஜுனனின் தேர் சாம்பலானது! – சல்லிய பர்வம் பகுதி – 62-முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட கௌரவ முகாமுக்குச் சென்ற பாண்டவர்கள்; அர்ஜுனனைத் தேரைவிட்டு இறங்கச் சொன்ன கிருஷ்ணன்; அர்ஜுனனின் தேர் எரிந்தது; அதன் காரணத்தை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்; யுதிஷ்டிரனின் வெற்றிக்கு வாழ்த்து கூறிய கிருஷ்ணன்; கிருஷ்ணனே அதற்குக் காரணம் என்று சொன்ன யுதிஷ்டிரன்; கிருஷ்ணனின் ஆலோசனையின் பேரில் பாண்டவர்களும், சாத்யகியும் முகாமுக்கு வெளியே தங்கியது; கிருஷ்ணனை ஹஸ்தினாபுரத்திற்கு அனுப்பிய பாண்டவர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பரிகங்களுக்கு ஒப்பான கரங்களைக் கொண்ட அம்மன்னர்கள் அனைவரும், மகிழ்ச்சியால் நிறைந்து, வழியில் சங்குகளை முழக்கிக் கொண்டே தங்கள் பாசறைகளை நோக்கிச் சென்றனர்.(1) பாண்டவர்களும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நமது முகாமை நோக்கிச் சென்றனர். பெரும் வில்லாளியான யுயுத்சு, சாத்யகி, திருஷ்டத்யும்னன், சிகண்டி, மற்றும் திரௌபதியின் ஐந்து மகன்களும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். பெரும் வில்லாளிகள் பிறரும் நமது பாசறைகளை நோக்கிச் சென்றனர்.(2,3) ஒளியை இழந்து, தன் தலைவனை இழந்து, கேளிக்கைக்குப் பிறகு பார்வையாளர்களால் கைவிடப்பட்ட அரங்கத்தைப் போல இருந்த துரியோதனனின் பாசறைக்குள் பார்த்தர்கள் நுழைந்தனர்.(4) உண்மையில், அந்த அரங்கமானது, கொண்டாட்டங்களை இழந்த ஒரு நகரத்தைப் போலவோ, யானையில்லாத ஒரு தடாகத்தைப் போலவோ தெரிந்தது. அப்போது அது பெண்களாலும், அலிகளாலும், முதிர்ந்த வயதுடைய குறிப்பிட்ட சில அமைச்சர்களாலும் நிறைந்திருந்தது.(5) முன்பெல்லாம் துரியோதனனும், மஞ்சள் சாயம் பூசப்பட்ட உடைகளை உடுத்திய பிற வீரர்களும் அந்த முதிர்ந்த அமைச்சர்களிடம் கரங்களைக் கூப்பி வணங்கி, அவர்களுக்காகக் காத்திருப்பார்கள்[1].(6) தேர்வீரர்களில் முதன்மையானோரான அந்தப் பாண்டவர்கள், குரு மன்னனின் {துரியோதனனின்} கூடாரத்தை அடைந்து தங்கள் தேர்களில் இருந்து இறங்கினர்.(7)அந்நேரத்தில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் நண்பனின் நன்மையிலேயே எப்போதும் ஈடுபடுபவனான கேசவன் {கிருஷ்ணன்}, காண்டீவதாரியிடம் {அர்ஜுனனிடம்},(8) “உன் காண்டீவத்தையும், வற்றாத அம்பறாத்தூணிகள் இரண்டையும் {இரண்டு அக்ஷயதூணீரங்ககையும்} எடுத்துக் கொண்டு இறங்குவாயாக. ஓ! பாரதர்களில் சிறந்தவனே, நான் உனக்குப் பின்பு இறங்குவேன்.(9) ஓ! பாவமற்றவனே, உன் நன்மைக்காக நீ கீழே இறங்குவாயாக” என்றான். பாண்டுவின் வீரமகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, தனக்குச் சொல்லப்பட்டதைப் போலவே செய்தான்.(10) நுண்ணறிவு கொண்ட கிருஷ்ணன், குதிரைகளின் கடிவாளங்களைக் கைவிட்டு, பிறகு தனஞ்சயனின் தேரில் இருந்து கீழே இறங்கினான்.(11) உயிரினங்கள் அனைத்தின் தலைவனான உயரான்மா {கிருஷ்ணன்}, அந்தத் தேரில் இருந்து இறங்கியதும், அர்ஜுனனின் வாகனக் கொடிமரத்தின் உச்சியில் இருந்த தெய்வீகக் குரங்கு அங்கேயே அப்போதே மறைந்து போனது.(12) முன்பு துரோணர் மற்றும் கர்ணனின் தெய்வீக ஆயுதங்களால் எரிக்கப்பட்ட அந்தப் பெரும் வாகனம், ஓ! மன்னா, கண்ணுக்குத் தெரிந்த எந்த நெருப்பும் ஊட்டப்படாமலே, வேகமாகத் தழல்களுடன் சுடர்விட்டெரிந்தது.(13) உண்மையில், அம்பறாத்தூணிகள், கடிவாளங்கள், குதிரைகள், நுகத்தடி, ஏர்க்கால் ஆகியவற்றுடன் கூடிய தனஞ்சயனின் தேரானது, சாம்பலாகக் குறைக்கப்பட்டுக் கீழே விழுந்தது {எரிந்து சாம்பலானது}.(14) அந்த வாகனம் இவ்வாறு சாம்பலாகக் குறைக்கப்பட்டதைக் கண்ட பாண்டுவின் மகன்கள், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, ஆச்சரியத்தால் நிறைந்தனர்.

மேலும் அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கரங்களைக் கூப்பிக் கிருஷ்ணனை வணங்கி, அன்பான குரலுடன், “ஓ! கோவிந்தா, ஓ! தெய்வீகமானவனே, என்ன காரணத்தினால் இந்தத் தேர் நெருப்பால் எரிக்கப்பட்டது?(15,16) நம் கண் முன்பே நடைபெறும் இந்த மிக ஆச்சரியமான நிகழ்ச்சியானது யாது? ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, எந்தத் தீங்குமின்றி என்னால் கேட்க முடியும் என்று நீ நினைத்தால், அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(17)

அதற்கு வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! அர்ஜுனா, அந்தத் தேரானது முன்பே பல்வேறு வகை ஆயுதங்களால் எரிக்கப்பட்டிருந்தது. ஓ! எதிரிகளை எரிப்பவனே, போரின்போது நான் அதில் அமர்ந்திருந்ததால், அது துண்டுகளாகச் சிதறாமல் இருந்தது.(18) பிரம்மாயுதங்களின் சக்தியால் முன்பே எரிக்கப்பட்டிருந்த அஃது, உன் நோக்கங்கள் அனைத்தையும் நீ நிறைவேற்றிக் கொண்ட பிறகு, என்னால் கைவிடப்பட்டதால் சாம்பலாகக் குறைக்கப்பபட்டது” என்றான்.(19)

பிறகு, எதிரிகளைக் கொல்பவனான தெய்வீகக் கேசவன் {கிருஷ்ணன்} சற்றே செருக்குடன் மன்னன் யுதிஷ்டிரனைத் தழுவி கொண்டு, அவனிடம்,(20) “ஓ! குந்தியின் மகனே, நீர் வெற்றியை அடைந்தது நற்பேறாலேயே, உமது எதிரிகள் வெல்லப்பட்டது நற்பேறாலேயே. வீரர்களுக்கு அழிவைத் தந்த இந்தப் போரில் இருந்து காண்டீவதாரி {அர்ஜுனன்}, பாண்டுவின் மகனான பீமசேனர், நீர் மற்றும் மாத்ரியின் இரு மகன்கள் ஆகியோர் உயிரோடு தப்பியதும், உங்கள் எதிரிகள் அனைவரையும் கொன்றதும் நற்பேறாலேயே.(21,22) ஓ! பாரதரே, உம்மால் என்ன செய்யப்பட வேண்டுமோ அதை விரைவாகச் செய்வீராக.(23) நான் உபப்லாவ்யத்துக்கு வந்த போது, காண்டீவதாரியின் துணையோடு என்னை அணுகிய நீர், தேனையும், சில வழக்கமான பொருள்களையும் கொடுத்து, “ஓ! தலைவா,(24) ஓ! கிருஷ்ணா, இந்தத் தனஞ்சயன் உனது சகோதரனும், நண்பனுமாவான். எனவே, இவன் {அர்ஜுனன்} அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டியவன்” என்ற வார்த்தைகளைச் சொன்னீர்.(25) நீர் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், நான், “அப்படியே ஆகட்டும்” என்று பதிலளித்தேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்} என்னால் பாதுகாக்கப்பட்டான், வெற்றியும் உமதானது.(26) ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, உண்மையான ஆற்றலைக் கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, வீரர்களுக்கு அழிவைத் தந்த இந்தப் பயங்கரப் போரிலிருந்து தன் சகோதரர்களுடன் {பாதுகாப்பாக} வெளியே வந்திருக்கிறான்” என்று சொன்னான் {கிருஷ்ணன்}.(28)

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மயிர்க்கூச்சத்துடன் கூடியவனாகி அந்த ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(28) யுதிஷ்டிரன், “ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே, துரோணர் மற்றும் கர்ணனால் ஏவப்பட்ட பிரம்மாயுதங்களைத் தாங்கிக் கொள்ள இந்திரனாலும் முடியாது எனும்போது வேறு எவரால் முடியும்?(29) சம்சப்தகர்கள் உன் அருளாலேயே வெல்லப்பட்டார்கள். கடுமைநிறைந்த மோதல்களிலும் உன் அருளாலேயே பார்த்தன் ஒருபோதும் புறமுதுகிடவில்லை.(30) அதேபோலவே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நானும் என் சந்ததியும், ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறு செயல்களை நிறைவேற்றி ஆற்றலும் சக்தியும் கொண்ட ஒரு மங்கல முடிவை உன் அருளாலேயே அடைந்தோம்.(31) உபப்லாவ்யத்தில் என்னிடம், பெருமுனிவரான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, “எங்கே அறம் இருக்கிறதோ அங்கே கிருஷ்ணன் இருப்பான். எங்கே கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கே வெற்றியிருக்கும்” என்று சொன்னார்” என்றான் {யுதிஷ்டிரன்}”[2].(32)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்த உரையாடலுக்குப் பிறகு உமது முகாமுக்குள் நுழைந்த அவ்வீரர்கள், இராணுவக் கருவூலத்தையும், பல நகைகளையும், பல செல்வத்தையும் அடைந்தனர்.(33) மேலும் அவர்கள் வெள்ளி, தங்கம், ரத்தினங்கள், முத்துக்கள் மற்றும் விலைமதிப்புமிக்கப் பல்வேறு ஆபரணங்கள், விரிப்புகள் தோல்கள்,(34) எண்ணற்ற ஆண், பெண் பணியாட்கள், மேலும் அரசுரிமைக்குத் தேவையான பிற பொருட்கள் பலவற்றையும் அடைந்தனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே, எவருடைய எதிரிகள் கொல்லப்பட்டுவிட்டனரோ அந்த உயர் ஆன்மாக்கள் {பாண்டவர்கள்} உமக்குச் சொந்தமான அந்த வற்றாத செல்வத்தை அடைந்து மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர்.(35) தங்கள் விலங்குகளைப் பூட்டுகளில் இருந்து விடுவித்த பாண்டவர்களும், சாத்யகியும், ஓய்வு கொள்வதற்காகச் சற்று நேரம் அங்கே இருந்தனர்.(36) அப்போது பெரும்புகழைக் கொண்ட வாசுதவேன் {கிருஷ்ணன்}, “அருளின் தொடக்கச் செயலாக இவ்விரவு நாம் நமது முகாமை விட்டு வெளியே இருப்போம்” என்றான்[3].(37) “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன பாண்டவர்கள், சாத்யகியும், எது மங்கலக் காரியம் என்று கருதப்படுகிறதோ, அதைச் செய்ய வாசுதேவனின் துணையுடன் முகாமை விட்டு வெளியே வந்தனர்.(38)எதிரிகளற்றவர்களான அந்தப் பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புனித ஓடையான ஓகவதியின் கரைக்கு வந்து, அவ்விரவிற்காக அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.(39) பிறகு அவர்கள் யது குலத்தின் கேசவனை ஹஸ்தினாபுரத்திற்கு அனுப்பி வைத்தனர். பெரும் ஆற்றலைக் கொண்டவனான வாசுதேவன், தாருகனைத் தன் தேரை எடுத்து வரச் செய்து, அம்பிகையின் அரச மகன் {திருதராஷ்டிரன்} இருந்த இடத்திற்கு மிக வேகமாக் சென்றான்.(40) சைவியம், சுக்ரீவம் (மற்றும் பிற குதிரைகள்) ஆகியவை பூட்டப்பட்ட அவனது தேர் புறப்பட்டபோது, (பாண்டவர்கள்) அவனிடம் {கிருஷ்ணனிடம்}, “தன் மகன்கள் அனைவரையும் இழந்து ஆதரவற்றவளாக இருக்கும் காந்தாரிக்கு ஆறுதலளிப்பாயாக” என்றனர்.(41) பாண்டவர்களால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தச் சாத்வதர்களின் தலைவன் {கிருஷ்ணன்}, ஹஸ்தினாபுரத்தை நோக்கிச் சென்று, தன் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டவளான காந்தாரியின் முன்னிலையை அடைந்தான்” {என்றான் சஞ்சயன்}”.(42)

காந்தாரியிடம் பேசிய கிருஷ்ணன்! – சல்லிய பர்வம் பகுதி – 63-காந்தாரியின் கோபத்தைத் தணிப்பதற்காகக் கிருஷ்ணனை ஹஸ்தினாபுரத்திற்கு அனுப்பிய யுதிஷ்டிரன்; திருதராஷ்டிரனின் அரண்மனையை அடைந்து அவனுக்கு ஆறுதலளித்த கிருஷ்ணன்; காந்தாரியிடம் பேசிய கிருஷ்ணன்; காந்தாரியின் மறுமொழி; திருதராஷ்டிரன் மற்றும் காந்தாரியிடம் இருந்து விரைவாக விடைபெற்றுக் கொண்ட கிருஷ்ணன்; அஸ்வத்தாமனிடமிருந்து பாண்டவர்களைப் பாதுகாக்குமாறு கிருஷ்ணனிடம் சொன்ன திருதராஷ்டிரனும், காந்தாரியும்; பாண்டவர்களிடம் திரும்பி வந்த கிருஷ்ணன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “மன்னர்களில் புலியும், நீதிமானுமான யுதிஷ்டிரன், எதிரிகளை எரிப்பவனான வாசுதேவனை {கிருஷ்ணனைக்} காந்தாரியிடம் அனுப்பிய காரணமென்ன?(1) கிருஷ்ணன், அமைதியை நிறுவுவதற்காக ஏற்கனவே கௌரவர்களிடம் சென்றிருந்தான். {அப்போது} அவன் தன் விருப்பத்தின் பலனை அடையவில்லை. அதன் விளைவாகவே இந்தப் போர் நடைபெற்றது.(2) போர்வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டு, துரியோதனன் வீழ்த்தப்பட்ட பிறகு, அந்தப் போரின் விளைவால் பாண்டுமகனின் {யுதிஷ்டிரனின்} பேரரசு முற்றிலும் எதிரிகளற்றதான பிறகு,(3) (குரு) முகாம்கள் அனைத்தும் வெறுமையாகி, அதில் இருந்தோர் அனைவரும் தப்பி ஓடிய பிறகு, அந்தப் பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} பெரும்புகழ் வெல்லப்பட்ட பிறகு, ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே வைசம்பாயனரே}, கிருஷ்ணன் மறுபடியும் (ஹஸ்தினாபுரத்திற்குச்} செல்ல வேண்டிய காரணமென்ன?(4) ஓ! பிராமணரே, அளவிலா ஆன்மா கொண்ட ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} அப்படிப் பயணம் செய்யப் போகிறவன் எனும்போது அதன் காரணம் எளிமையானதாக இருக்காது.(5) அத்யர்யுக்கள் அனைவரிலும் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, இத்தகைய தூதுக்கான காரணம் என்ன என்பதை எனக்கு விவரமாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(6)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, உண்மையில், நீ கேட்கும் இந்தக் கேள்வி உனக்குத் தகுந்ததே. ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, உண்மையில் நேர்ந்தவாறே அனைத்தையும் உனக்குச் சொல்கிறேன்.(7) திருதராஷ்டிரனின் வலிமைமிக்க மகனான துரியோதனன், நேர்மையான போர் விதிகளுக்கு முரண்பட்டுப் பீமசேனனால் தாக்கி வீழ்த்தப்பட்டதைக் கண்டவனும்,(8) உண்மையில், அந்தக் குரு மன்னன் நியாயமற்ற முறையில் கொல்லப்பட்டதைக் கண்டவனுமான யுதிஷ்டிரன், ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஓ! ஏகாதிபதி, தவத்தகுதி கொண்டவளான உயர் ஆன்ம காந்தாரியின் நினைப்பால் பேரச்சத்தில் நிறைந்தான். “அவள் கடுந்தவங்களைச் செய்திருக்கிறாள், எனவே மூவுலகங்களையும் அவளால் {காந்தாரியால்} எரித்து விட முடியும்”(9,10) என்றே அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} நினைத்தான்.

கிருஷ்ணனை அனுப்புவதால், கோபத்தில் எரிந்து கொண்டிருக்கும் காந்தாரி, யுதிஷ்டிரன் அங்குச் செல்வதற்கு முன்பே ஆறுதலை அடையக்கூடும்.(11) “நம்மால் இத்தகு அவல நிலைக்குக் கொண்டு வரப்பட்ட அவளது மகனின் {துரியோதனனின்} மரணத்தைக் கேட்டுக் கோபமடையும் அவளால், தன் மனத்தில் உள்ள நெருப்பைக் கொண்டு நம்மைச் சாம்பலாகக் குறைத்துவிட முடியும்.(12) எப்போதும் நியாயமாகப் போரிட்டவனான அவளது மகன் {காந்தாரியின் மகன் துரியோதனன்}, நியாயமற்ற முறையில் நம்மால் கொல்லப்பட்டான் என்று அவள் கேள்விப்பட்ட பிறகு, எரிச்சலையூட்டும் இத்தகு துயரத்தைக் காந்தாரியால் எவ்வாறு தாங்கிக் கொள்ள இயலும்?” {என்று நினைத்தான்”.(13) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், நீண்டநேரமாக இவ்வாறே சிந்தித்து, அச்சத்தாலும், துயராலும் நிறைந்தவனாக, வாசுதேவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(14)

{யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம்}, “ஓ! கோவிந்தா, உன் அருளால் என் நாடு முட்களற்றதானது. ஓ! மங்கா மகிமை கொண்டவனே, கற்பனையாலும் நாங்கள் அடைய முடியாத ஒன்று இப்போது எங்களுடையதாகியிருக்கிறது. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! யாதவர்களைத் திளைக்கச் செய்பவனே, போரில் நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில், கடுமையான தாக்குதல்களை நீ தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.(15,16) பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில், தேவர்களுடைய எதிரிகளின் அழிவுக்கு நீ உதவினாய், அவ்வெதிரிகளும் கொல்லப்பட்டனர்.(17) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவேனே, ஓ! மங்கா மகிமை கொண்டவனே, அதே வழியிலேயே நீ எங்களுக்கும் உன் உதவியைத் தந்திருக்கிறாய். ஓ! விருஷ்ணி குலத்தோனே, எங்கள் சாரதியாக இருக்கச் சம்மதித்து, காலமெல்லாம் நீ எங்களைப் பாதுகாத்திருக்கிறாய்.(18) இந்தப் பயங்கரப் போரில் நீ பல்குனனின் {அர்ஜுனனின்} பாதுகாவலனாக இல்லாவிடில், கடலெனும் இத்துருப்புகளை எவ்வாறு {நாங்கள்} வென்றிருக்க இயலும்?(19) மேலும், கதாயுத வீச்சுகள் பலவற்றையும், பரிகங்கள், ஈட்டிகள் {சக்திகள்}, குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, வேல்கள் {தோமரங்கள்}, போர்க்கோடரிகள் ஆகியவற்றின் தாக்குதல்கள் பலவற்றையும் {இப்போரில்} நீ தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.(20) ஓ! கிருஷ்ணா, போராயுதங்களில் வஜ்ரத்திற்கு ஒப்பான கடுஞ்சொற்கள் பலவற்றை எங்களின் நிமித்தமாக நீ கேட்கவேண்டியிருந்தது; அவற்றைப் பொறுத்துக் கொள்ளவும் வேண்டியிருந்தது.(21) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, இவையனைத்தும், துரியோதனனின் படுகொலையின் விளைவால் கனியற்றதாகிவிடவில்லை {துரியோதனனின் படுகொலையால் இவ்வாறு நீ பட்ட துன்பமெல்லாம் வீணாகிவிடவில்லை}. அந்தச் செயல்கள் அனைத்தின் கனிகளும் {பலன்களும்} அழிந்துவிடாமல் இருக்கும் வகையில் நீ மீண்டும் செயல்படுவாயாக.(22)

ஓ! கிருஷ்ணா, வெற்றி நமதானாலும், நமது இதயம் இன்னும் ஐயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறது. ஓ! மாதவா, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, காந்தாரியின் கோபம் தூண்டப்பட்டிருக்கிறது என்பதை அறிவாயாக.(23) உயர்ந்த அருளைக் கொண்ட அம்மங்கை {காந்தாரி}, கடுந்தவங்களால் தன்னை எப்போதும் மெலியச் செய்து வருகிறாள். அவள், தனது மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளின் படுகொலையைக் கேட்டு, நம்மை எரித்துவிடுவாள் என்பதில் ஐயமில்லை. ஓ! வீரா {கிருஷ்ணா}, அவளை அமைதிப்படுத்துவதற்கான நேரமிது என்று நான் நினைகிகறேன்.(24) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, தாமிரம் போல் கண்கள் சிவந்தவளும், தன் பிள்ளைகளுக்கு நேர்ந்த தீங்கால் மிகவும் பீடிக்கப்பட்டிருப்பவளுமான அம்மங்கையைக் காண இயன்றவன் இங்கே உன்னைத் தவிர வேறு எவன் இருக்கிறான்?(25) ஓ! மாதவா, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, கோபத்தில் எரிந்து கொண்டிருக்கும் காந்தாரியை அமைதிப்படுத்துவதற்கு நீ அங்கே செல்வதே முறையானது என நான் நினைக்கிறேன். நீயே அழிவற்றவனானதால், உலகங்கள் அனைத்தின் முதல் காரணமாக நீயே இருக்கிறாய்.(26) காலத்தின் விளைவுகளான, புலப்படும் மற்றும் புலப்படாத[1] அனைத்துக் காரணங்களும் நிறைந்த வார்த்தைகளால் உன்னாலேயே விரைவில் காந்தாரியை அமைதிப்படுத்த இயலும்.(27) எங்கள் பாட்டனும், புனிதருமான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, அங்கே இருப்பார். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உன் சக்திக்கு அடங்கிய அனைத்து வழிகளிலும் காந்தாரியின் கோபத்தைத் தணிப்பதே உன் கடமையாகும்” என்றான் {யுதிஷ்டிரன்}.(28)அந்த யதுகுலத்தைத் தழைக்கச் செய்பவன் {கிருஷ்ணன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, தாருகனை அழைத்து, “என் தேர் ஆயத்தம் செய்யப்படட்டும்” என்றான்.(29) கேசவனின் உத்தரவைப் பெற்றுக் கொண்ட தாருகன், மிக விரைவாகத் திரும்பி, தன் உயர் ஆன்மத் தலைவனிடம் {கிருஷ்ணனிடம்} தயாராக இருக்கும் தேரைக் காட்டினான்.(30) எதிரிகளை எரிப்பவனும், யதுகுலத்தின் தலைவனுமான தலைவன் கேவசன், அந்தத் தேரில் ஏறி, குருக்களின் நகரத்திற்கு மிக விரைவாகச் சென்றான்.(31) அப்போது போற்றுதலுக்குரியவனான அந்த மாதவன், தன் வாகனத்தைச் செலுத்திக் கொண்டு, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரத்தை} அடைந்து, அதனுள் நுழைந்தான்.(32) அதற்குள் நுழைகையிலேயே தனது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் அந்நகரை எதிரொலிக்கச் செய்த அவன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரனுக்கு ஒரு வார்த்தையைச் சொல்லியனுப்பி, தன் வாகனத்தில் இருந்து இறங்கி, அந்த முதிர்ந்த மன்னனின் அரண்மனைக்குள் நுழைந்தான்.(33)

அங்கே அவன் {கிருஷ்ணன்}, தனக்கு முன்பே வந்திருந்த முனிவர்களில் சிறந்தவரை (துவைபாயனரைக்) கண்டான். வியாசர் மற்றும் திருதராஷ்டிரன் ஆகிய இருவரின் பாதங்களையும் தழுவிக் கொண்ட ஜனார்த்தனன்,(34) அமைதியாகக் காந்தாரியையும் வணங்கினான். பிறகு யாதவர்களில் முதன்மையானவனான அந்த விஷ்ணு {அதோக்ஷஜன்} {கிருஷ்ணன்}, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, திருதராஷ்டிரனின் கரங்களைப் பற்றிக் கொண்டு, இனிமையாக அழத் தொடங்கினான்.(35) கவலையால் சிறிது நேரம் கண்ணீர் சிந்திய அவன்,(36) நீரைக் கொண்டு விதிப்படி தன் கண்களையும் முகத்தையும் கழுவிக் கொண்டான். பிறகு அந்த எதிரிகளைத் தண்டிப்பவன், மென்மையாக வெளிவந்த இவ்வார்த்தைகளைத் திருதராஷ்டிரனிடம் சொன்னான்.(37)

{கிருஷ்ணன்}, “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கடந்த காலம், எதிர்காலம் என நீர் அறியாதது எதுவுமில்லை. ஓ! தலைவா, காலத்தின் வழியைக் குறித்து நீர் நன்கறிந்தவராவீர்.(38) ஓ! பாரதரே, பாண்டவர்கள் உம்மீது கொண்டிருந்த மதிப்பால், தங்கள் குலத்தின் அழிவையும், க்ஷத்திரியர்களின் முற்றான அழிவையும் தடுப்பதற்கு முயற்சி செய்தனர்.(39) தன் தம்பிகளுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்ட அறவோனான யுதிஷ்டிரர் அமைதியாகவே வாழ்ந்துவந்தார். அவர் {யுதிஷ்டிரர்}, நியாமற்ற வகையில் பகடையில் வீழ்த்தப்பட்டு, நாடு கடந்தும் {வனவாசம்} சென்றார்.(40) பல்வேறு மாறுவேடங்களில் ஆடைகளை உடுத்திக் கொண்டு, தமது தம்பியரோடு தலைமறைவு வாழ்வையும் வாழ்ந்தார். அவர்கள் தினமும் சந்தித்த தங்கள் பல்வேறு இன்னல்களைக் கிட்டத்தட்ட ஆதரவற்றவர்களாகவே பொறுத்துக் கொண்டனர்.(41) போர் தொடங்குவதற்கு முன், அனைத்து மனிதர்களுக்கும் முன்னிலையில் நானே வந்து, ஐந்து கிராமங்களை மட்டுமே {உங்களிடம்} இரந்து கேட்டேன்.(42) காலத்தால் பீடிக்கப்பட்டும், பேராசையால் உந்தப்பட்டும், என் வேண்டுகோளை நீர் அருளவில்லை. ஓ! மன்னா, உமது குற்றத்தாலேயே, அனைத்து க்ஷத்திரிய குலங்களும் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன.(43)

பீஷ்மர், சோமதத்தர், பாஹ்லீகர், கிருபர், துரோணர், அவரது மகன் {அஸ்வத்தாமன்}, ஞானியான விதுரர் ஆகியோர் உம்மிடம் எப்போதும் அமைதியையே வேண்டினர். எனினும் நீர் அவர்களது ஆலோசனைகளைப் பின்பற்றவில்லை.(44) ஓ! பாரதரே, நீரே கூட இக்காரியத்தில் மடமையுடன் செயல்பட்டதால், ஓ! மன்னா, காலத்தால் பீடிக்கப்படும்போது அனைவரும் மலைப்பையே அடைகின்றனர் என்றே தெரிகிறது.(45) காலத்தின் விளைவைத் தவிர இது வேறென்னவாக இருக்க முடியும்? உண்மையில், விதியே உயர்ந்தது. ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, பாண்டவர்கள் மீது எக்குற்றத்தையும் சுமத்தாதீர்.(46) ஓ! எதிரிகளை எரிப்பவரே, அறநெறிவிதிகளின்படியோ, காரணத்தின்படியோ {அறிவின்படியோ}, பாசத்தின்படியோ, உயர் ஆன்ம பாண்டவர்களின் மிகச் சிறு மீறலையும் கூடத் தெளிவாகத் தீர்மானிக்க முடியவில்லை.(47) இவையாவும் உமது குற்றத்தின் கனியே என்பதை அறிந்து, பாண்டவர்கள் மீது எந்தத் தீய உணர்வையும் வளர்ப்பது உமக்குத் தகாது.(48)

குலம், பரம்பரை, ஈமப்பிண்டம் மற்றும் எவையெல்லாம் வாரிசைச் சார்ந்திருக்கின்றனவோ, அவையெல்லாம் உமக்கும் காந்தாரிக்கும் இப்போது பாண்டவர்களைச் சார்ந்தே இருக்கின்றன.(49) ஓ! குருக்களில் புலியே, நீரும், புகழ்பெற்ற காந்தாரியும் பாண்டவர்களிடம் எந்தக் கெடுநோக்கமும் கொள்ள வேண்டாம்.(50) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இவையனைத்தையும் சிந்தித்துப் பார்த்து, உமது சொந்த மீறல்களையும் நினைத்துப் பார்த்து, பாண்டவர்களிடம் நல்லுணர்வுகளையே வளர்க்க வேண்டும் என்று உம்மை நான் வணங்கிக் கேட்கிறேன்.(51) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! மன்னர்களில் புலியே, மன்னர் யுதிஷ்டிரர் உம்மிடம் கொண்ட பாசத்தையும், அர்ப்பணிப்பையும் {பக்தியையும்} நீர் அறிவீர்.(52) தமக்குத் தீங்கிழைத்த எதிரிகளைக் கொன்ற அவர், மன அமைதியை அடைவதில் வெல்லாமல் பகலும், இரவும் எரிந்து கொண்டிருக்கிறார்.(53) அந்த மனிதர்களில் புலி {யுதிஷ்டிரர்}, உமக்காகவும், காந்தாரிக்காகவும் துயரமடைந்து எந்த மகிழ்ச்சியையும் அடைவதில் தவறுகிறார்.(54) உமது பிள்ளைகளின் நிமித்தமாகத் துயரில் எரிந்து கொண்டிருப்பவரும், அந்தத் துன்பத்தால் அறிவும், புலன்களும் கலக்கப்பட்டிருப்பவருமான உம்மைக் காண வெட்கமடைந்தே அவர் உம் முன்னிலைக்கு வராமல் இருக்கிறார்” என்றான் {கிருஷ்ணன்}.(55)

திருதராஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த யது குலத்தின் முதன்மையானவன் {கிருஷ்ணன்}, ஓ! ஏகாதிபதி, துயரால் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரியிடம் இந்த உன்னதமான வார்த்தைகளைச் சொன்னான்:(56) “ஓ! சுபலரின் மகளே {காந்தாரியே}, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவளே, நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! மங்கலக் காரிகையே, இப்போது இவ்வுலகில் உன்னைப் போன்ற ஒரு பெண் கிடையாது.(57) ஓ! ராணி, என் முன்னிலையில் வைத்து நீ சபையில் பேசியவையும், நீதி நிறைந்தவையும், இருதரப்புக்கும் நன்மை செய்பவையுமான, உமது மகன்கள் கீழ்ப்படியாதவையுமான உனது அந்த வார்த்தைகளை நினைவுகூர்வாயாக.(58,59) வெற்றியில் பேராசை கொண்ட துரியோதனனிடம் நீ இந்தக் கசந்த வார்த்தைகளைச் சொன்னாய். அப்போது நீ அவனிடம், “ஓ! மூடா {துரியோதனனிடம்}, எங்கே அறமிருக்கிறதோ {நீதியிருக்கிறதோ} அங்கே வெற்றியிருக்கும் என்ற என் இந்த வார்த்தைகளைக் கேட்பாயாக” என்றாய்.(60) ஓ! இளவரசி, அந்த உன் வார்த்தையே இப்போது நிறைவேறியிருக்கிறது. ஓ! மங்கலமான பெண்ணே, இவையாவற்றையும் அறிந்து கொண்டு, உன் இதயத்தைக் கவலையில் நிலை கொள்ளச் செய்யாதே.(61) பாண்டவர்களின் அழிவை உன் இதயம் நாடாதிருக்கட்டும். உன் தவவலிமையின் விளைவால், ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவளே, சினத்தால் தூண்டப்பட்ட உன் கண்களைக் கொண்டே, அசையும், அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த மொத்த உலகத்தையும் நீ எரித்துவிட இயன்றவளாவாய்” என்றான் {கிருஷ்ணன்}.(62)

வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட காந்தாரி, “ஓ! கேசவா, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது.(63) எனினும், ஓ! ஜனார்த்தனா, உன் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, அந்த இதயம் ஒரு நிலையை அடைந்திருக்கிறது. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, முதிந்தவரும், பார்வையற்றவருமான இந்த மன்னனைப் {திருதராஷ்டிரனைப்} பொறுத்தவரையில், பிள்ளைகளற்றவரான இவருக்கு, பாண்டுவின் மகன்களான அவ்வீரர்களுடன் கூடிய நீயே புகலிடமாக இருக்கிறாய் {அவருக்கு நீயே கதி}” என்றாள்.(65)

இவ்வளவும் சொன்ன காந்தாரி, தன் மகன்களின் மரணத்தால் உண்டான துயரில் எரிந்து, துணியால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு, உரக்க அழத் தொடங்கினாள்.(66) பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான தலைவன் கேசவன், புலப்பட்ட மற்றும் புலப்படாத நிகழ்வுகளில் இருந்து பெறப்பட்ட காரணங்கள் நிறைந்த வார்த்தைகளால், துயரால் பீடிக்கப்பட்ட அவ்விளவரசிக்கு ஆறுதலை அளித்தான்.(67) காந்தாரியையும், திருதராஷ்டிரனையும் தேற்றிய அந்த மதுகுலத்துக் கேசவன், துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்) தியானிக்கப்படும் தீமையை (தன் உள்ளுணர்வால்) அறியவந்தான்.(68)

அந்தக் கேசவன், தலைவணங்கி வியாசரின் பாதத்தை வழிபட்ட பிறகு, விரைவாக எழுந்து, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தத் திருதராஷ்டிரனிடம்,(69) “ஓ! குரு குலத்தில் முதன்மையானவரே, நான் உம்மிடம் இருந்து விடைபெறுகிறேன். உமது இதயத்தைத் துயரத்தில் நிலைகொள்ளச் செய்யாதீர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, ஒரு தீய நோக்கத்தைக் கொண்டுள்ளார். இதன் காரணமாகவே நான் இவ்வளவு விரைவாக எழுந்தேன்.(70) அவர் இரவு வேளையில் பாண்டவர்களை அழிக்கும் திட்டத்தை அமைத்திருப்பதாகத் தெரிகிறது” என்றான்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட காந்தாரி மற்றும் திருதராஷ்டிரன் ஆகியோர் இருவரும், கேசியைக் கொன்றவனான அந்தக் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்}, இவ்வார்த்தைகளில், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, வேகமாகச் சென்று பாண்டவர்களைக் காப்பாயாக.(71,72) ஓ! ஜனார்த்தனா, மீண்டும் நாங்கள் உன்னைச் சந்திக்க வேண்டும்” என்றனர்.

பிறகு, மங்கா மகிமை கொண்டவனான அந்தக் கேசவன், தாருகனுடன் சேர்ந்து அங்கிருந்து சென்றான்.(73) ஓ! மன்னா {ஜனமேஜயா}, வாசுதேவன் புறப்பட்டுச் சென்றதும், மொத்த உலகத்தாலும் போற்றப்படுபவரும், கற்பனைக்கெட்டா ஆன்மாவைக் கொண்டவருமான வியாசர், மன்னன் திருதராஷ்டிரனுக்கு ஆறுதலளிக்கத் தொடங்கினார்.(74) அற ஆன்மா கொண்டவனான வாசுதேவன் {கிருஷ்ணன்}, தன் தூதை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டு, முகாமையும், பாண்டவர்களையும் காண்பதற்காக ஹஸ்தினாபுரத்திலிருந்து புறப்பட்டுச் சென்றான்.(75) அவன் முகாமை அடைந்து, பாண்டவர்களின் முன்னிலைக்குச் சென்றான். அவன், (நகரத்திற்குத் தூது சென்ற போது நடந்த) அனைத்தையும் அவர்களிடம் சொல்லி அவர்களோடு அமர்ந்து கொண்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(76)

“சார்வாகர் நிச்சயம் பழிதீர்ப்பார்” என்ற துரியோதனன்! – சல்லிய பர்வம் பகுதி – 64-தொடைகள் முறிந்து களத்தில் கிடக்கும் துரியோதனனுடைய புலம்பல்களைத் திருதராஷ்டிரனிடம் உரைத்த சஞ்சயன்; துரியோதனன் தன் பெற்றோருக்குச் சொல்லியனுப்பிய செய்தி; கௌரவப் படையில் எஞ்சியிருந்த மூவருக்கு தெய்திதாங்கிகளின் மூலம் அவன் சொல்லியனுப்பிய செய்திகள்; தன் நண்பனான சார்வாகனிடம் தன் மரணச் சூழ்நிலையைச் சொல்லுமாறு சொன்ன துரியோதனன்; துரியோதனனின் இறுதி வார்த்தைகளை அஸ்வத்தாமனிடம் சொன்ன தூதர்கள்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, தலையில் மிதிக்கப்பட்டுத் தன் தொடைகள் முறிக்கப்பட்டு, தரையில் நெஞ்சாண்கிடையாகக் கிடந்தவனும், மிகவும் செருக்குடையவனுமான என் மகன் {துரியோதனன்} அப்போது என்ன சொன்னான்?(1) மன்னன் துரியோதனன் மிகவும் கோபம் நிறைந்தவனாகவும், பாண்டு மகன்களிடம் ஆழமாக வேர் விட்டிருந்த பகைமை கொண்டவனாகவும் இருந்தான். எனவே, அவனுக்கு இந்தப் பேரிடர் நேர்ந்தபோது, அந்தக் களத்தில் அடுத்து என்ன சொன்னான்?” என்று கேட்டான்.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நான் உமக்குச் சொல்லும்போதே கேட்பீராக. ஓ! மன்னா, பேரிடர் நேர்ந்தபோது, துரியோதனன் என்ன சொன்னான் என்பதைக் கேட்பீராக.(3) ஓ! ஏகாதிபதி, தொடைகள் முறிந்திருந்த அம்மன்னன், புழுதியால் மறைக்கப்பட்டவனாகக் கலைந்த தன் தலைமயிரைக் கோதிவிட்டபடியே அனைத்துப் பக்கங்களிலும் தன் கண்களைச் செலுத்திக் கொண்டிருந்தான்.(4) சிரமத்துடன் குழலை {கேசத்தைத்} திரட்டிய அவன் {துரியோதனன்}, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அவன் சினத்தால் நிறைந்தவனாக, தன் கண்களில் இருந்து வேகமாகக் கண்ணீர் பெருகியவனாக {சஞ்சயனான} என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சிறிது நேரம் ஒரு மதங்கொண்ட யானையைப் போலப் பூமியில் தன் கரங்களை அடித்துக் கொண்டிருந்தான்.(5)

தளர்ந்திருந்த தலைமயிரை அசைத்துக் கொண்டும், பற்களை நறநறவெனக் கடித்துக் கொண்டும், பாண்டுவின் மூத்த மகனை {யுதிஷ்டிரனை} அவன் நிந்திக்கத் தொடங்கினான். பிறகு அவன், பெருமூச்சுவிட்டுக்கொண்டே,(6) “ஐயோ, என் பாதுகாவலரும், சந்தனுவின் மகனுமான பீஷ்மர், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான கர்ணன், கௌதமர் மகன் {கிருபர்}, சகுனி, ஆயுததாரிகள் அனைவரிலும் முதல்வரான துரோணர்,(7) அஸ்வத்தாமன், வீர சல்லியன், கிருதவர்மன் ஆகியோரும் நானும் கூட இந்த அவலநிலையை அடைந்துவிட்டோம். காலம் தடுக்கப்பட முடியாததாகத் தெரிகிறது.(8) நான் பதினோரு சமுக்களின் தலைவனாக இருந்தும், இந்த அவல நிலையை அடைந்திருக்கிறேன். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {சஞ்சயா}, காலத்திற்கு மேல் மேன்மையாக எழ எவராலும் முடியாது.(9) இப்போரில் என் தரப்பில் உயிரோடு தப்பியவர்களிடம், நியாயமான போர்விதிகளுக்கு முரணாக நான் பீமசேனனால் தாக்கி வீழ்த்தப்பட்டிருக்கிறேன் என்பது தெரிவிக்கப்பட வேண்டும்.(10)

பூரிஸ்ரவஸ், பீஷ்மர், பெருஞ்செழிப்பைக் கொண்ட துரோணர் ஆகியோருக்கு இழைக்கப்பட்ட பாவம் நிறைந்த, நியாயமற்ற செயல்கள் பலவாகும்.(11) பாண்டவர்களால் இழைக்கப்பட்ட மற்றுமொரு மிக இழிந்த செயலான இது, நல்லோர் அனைவரின் நிந்தனைக்கும் உள்ளாகும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.(12) நியாயமற்ற வகையில் நடந்து கொண்டு ஈட்டப்பட்ட வெற்றியால் அறவோன் ஒருவனுக்கு என்ன மகிழ்ச்சி ஏற்பட முடியும்? மேலும், நியாயவிதிகளுக்கு முரண்படும் ஒரு மனிதனை எந்த ஞானிதான் ஏற்பான்?(13) இழிந்த பாவியான பாண்டுவின் மகன் விருகோதரனை {பீமனைப்} போல, எந்தக் கல்விமான அநீதியினால் வெற்றியடைந்து இவ்வாறு மகிழ்வான்?(14) தொடைகள் முறிந்து கிடக்கும் என்னைப் போன்ற ஒருவனின் தலையைப் பீமசேனன் கோபத்துடன் தன் காலால் தீண்டியதைவிட ஆச்சரியம் என்ன இருக்க முடியும்?(15) ஓ! சஞ்சயா, மகிமையும், செழிப்பும் கொண்டவனும், நண்பர்களுக்கு மத்தியில் வாழ்பவனுமான ஒரு மனிதனிடம் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடிய ஒருவன் மரியாதைக்குத் தகுந்தவனா?(16)

என்னைப் பெற்றோர் போர்க்கடமைகளைக் குறித்து அறியாதவர்களல்ல. ஓ! சஞ்சயா, துன்பத்தில் பீடிக்கப்பட்டிருக்கும் அவர்களிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக:(17) “நான் வேள்விகளைச் செய்திருக்கிறேன், பெரும் எண்ணிக்கையிலான பணியாட்களை முறையாக ஆதரித்திருக்கிறேன், கடல்களுடன் கூடிய மொத்த பூமியையும் ஆட்சி செய்திருக்கிறேன். உயிரோடு இருக்கும் என் எதிரிகளின் தலைக்கு மேலேயே நான் நிலைத்திருக்கிறேன்.(18) என் ஆற்றலை விரிவுபடுத்த என் சொந்தங்களுக்குச் செல்வத்தைக் கொடுத்தேன், நண்பர்களுக்கு ஏற்புடையதை {இனிமையானதைச்} செய்தேன். என் எதிரிகள் அனைவரையும் நான் தாக்குப்பிடித்தேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(19) பகைவரின் நாடுகளில் முன்னேறி, மன்னர்களை அடிமைகளைப் போல நான் ஆணையிட்டிருக்கிறேன். நான் விரும்பிய மற்றும் அன்புடன் இருந்த அனைவரிடமும் நல்ல முறையில் நடந்திருக்கிறேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(20)

நான் என் சொந்தங்கள் அனைவரையும் மதித்திருக்கிறேன் மற்றும் என்னைச் சார்ந்திருந்தோர் அனைவரின் நன்மையையும் கவனித்திருக்கிறேன். மனித இருப்பின் எல்லைகளான அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய மூன்றையும் நான் கவனித்திருக்கிறேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(21) பெரும் மன்னர்களுக்கு நான் ஆணையிட்டேன், பிறரால் அடைய முடியாத கௌரவம் என்னுடையதானது. நான் எப்போதும் என் பயணங்களை மிகச் சிறந்த குதிரைகளிலேயே செய்திருக்கிறேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(22) நான் வேதங்களைக் கற்றிருக்கிறேன், விதிப்படி தானங்களையும் அளித்திருக்கிறேன். என் வாழ்வு மகிழ்ச்சியிலேயே கழிந்தது. என் வகைக்காகக் கடமைகளை நோற்ற நான், இதன் பிறகு பல அருள் உலகங்களை அடைவேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(23) போரில் வெல்லப்பட்டு, என் எதிரிகளைத் தலைவர்களாகக் கொண்டு தொண்டு புரியும் நிலை எனக்கு ஏற்படாதது நற்பேறாலேயே. ஓ! தலைவா, பெருகியிருக்கும் செழிப்பானது, என் மரணத்திற்குப் பிறகு மட்டுமே என்னைக் கைவிட்டு மற்றொருவனுக்காகக் காத்திருக்கப் போகிறது.(24) தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கும் நல்ல க்ஷத்திரியர்களால் விரும்பப்படும் மரணத்தையே நான் அடைந்திருக்கிறேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(25)

பகைமையின் பாதையில் இருந்து விலகாமலும், சாதாரண மனிதனைப் போல வெல்லப்படாமலும் நான் இருப்பது நற்பேறாலேயே. சில வம்புகள் செய்திருந்தாலும் நான் வெல்லப்படாமல் இருப்பது நற்பேறாலேயே.(26) நியாயமான போர்விதிகளுக்கு முரணாக நியாயமற்ற வகையில் நான் கொல்லப்பட்டிருப்பதால், என் படுகொலையானது உறங்கிக் கொண்டிருப்பவனையோ, கவனமில்லாமல் இருப்பவனையோ கொல்வதைப் போன்றதோ, நஞ்சூட்டிக் கொல்லப்படுவதைப் போன்றதோ ஆகும்.(27) உயர்ந்த அருளைக் கொண்டவர்களான அஸ்வத்தாமர், சாத்வத குலத்தின் கிருதவர்மன் மற்றும் சரத்வான் மகனான கிருபர் ஆகியோரிடம்,(28) “விதிகளை மீறியவர்களும், அநீதிமிக்கச் செயல்களைச் செய்தவர்களுமான பாண்டவர்கள் மீது ஒருபோதும் நம்பிக்கை வைக்காதீர்கள்” என்ற இந்த என் வார்த்தைகள் சொல்லப்பட வேண்டும்” என்று {சஞ்சயனிடம் துரியோதனன்} சொன்னான்.(29)

அதன்பிறகு, உண்மையான ஆற்றலைக் கொண்டவனான உமது அரச மகன் {துரியோதனன்} செய்தி தாங்கிகளிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,: “போரில் நான் பீமசேனனால் மிக அநியாயமாகக் கொல்லப்பட்டேன்.(30) ஏற்கனவே சொர்க்கத்திற்குச் சென்று விட்டவர்களான துரோணர், கர்ணன், சல்லியன், பெரும் சக்தி கொண்ட விருஷசேனன், சுபலனின் மகனான சகுனி, பெரும் வீரம் கொண்ட ஜலசந்தன், சோமதத்தர் மகனான மன்னர் பகதத்தர், வலிமைமிக்க வில்லாளியான சிந்துமன்னன் ஜெயத்ரதன், துச்சாசனன் தலைமையிலானவர்களும், எனக்கு இணையானவர்களுமான என் தம்பிகள் அனைவர், பேராற்றலைக் கொண்டவனான துச்சாசனன் மகன், என் மகன் லக்ஷ்மணன், மற்றும் என்னுடன் சேர்ந்து போரிட்ட ஆயிரக்கணக்கானோரின் வழியைப் பின்பற்றிப் பணமற்ற வழிப்போக்கனைப் போல நான் இப்போது செல்லப் போகிறேன்.(31-34)

ஐயோ, துன்பத்தில் பீடிக்கப்பட்டிருக்கும் என் தங்கையானவள், அவளது சகோதரர்கள் மற்றும் கணவனின் படுகொலையைக் கேட்டுக் கவலை நிறைந்தவளாக எவ்வாறு வாழ்வாள்?(35) ஐயோ, காந்தாரி மற்றும் மருமகள்கள், மற்றும் பேரர்களின் மனைவிமார்கள் ஆகியோருடன் கூடியவரும், என் தந்தையுமான முதிர்ந்த மன்னர் {திருதராஷ்டிரர்} எவ்வளவு அவலநிலையில் இருக்கப் போகிறார்?(36) அழகியும், அகன்ற கண்களைக் கொண்டவளும், மகன்களற்று, கணவனற்றுப் போனவளுமான லக்ஷ்மணனின் தாய் {பானுமதி}, விரைவில் தன் மரணத்தைச் சந்திப்பாள் என்பதில் ஐயமில்லை.(37) பேச்சில் வல்லவரும், அர்ப்பணிப்பு கொண்டவரும், துறவியுமான சார்வாகர்[1]அனைத்தையும் அறிந்தால், அந்த அருளப்பட்ட மனிதர் நிச்சயம் என் மரணத்திற்காகப் பழிதீர்ப்பார்.(38) மூவுலகங்களிலும் கொண்டாடப்படும் புனிதக் களமான சமந்தபஞ்சகத்தில் இறப்பதால், நான் நிச்சயம் அழிவில்லாத உலகங்களை அடைவேன்” என்றான் {துரியோதனன்}.(39)அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மன்னனின் இந்தப் புலம்பல்களைக் கேட்டு, ஆயிரக்கணக்கான மனிதர்கள் கண்கள் நிறைந்த கண்ணீருடன் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(40) காடுகள், கடல்கள், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த உலகமும், பேரொலியை உண்டாக்கியபடியே பயங்கரமாக நடுங்கத் தொடங்கியது. திசைகளின் புள்ளிகள் அனைத்தும் இருளடைந்தன.(41) அந்தத் தூதர்கள் {செய்திதாங்கிகள்} துரோணரின் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} சென்று, கதாயுத மோதல் நடந்த விதம், மன்னனின் {துரியோதனனின்} வீழ்ச்சி ஆகியவை அனைத்தையும் {நடந்தவாறே} சொன்னார்கள்.(42) அவர்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரின் மகனிடம் அனைத்தையும் சொன்னபிறகு, நீண்ட நேரத்திற்குச் சிந்தித்தவாறே அங்கிருந்த பிறகு, துயரால் பீடிக்கப்பட்டு, தாங்கள் எங்கிருந்து வந்திருந்தனரோ அங்கேயே சென்றுவிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(43)

படைத்தலைவனானான் அஸ்வத்தாமன்! – சல்லிய பர்வம் பகுதி – 65-துரியோதனன் கிடந்த இடத்திற்குக் கிருபர், அஸ்வத்தாமன் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் வந்தது; விழுந்திருக்கும் துரியோதனனைக் கண்டு அஸ்வத்தாமன் புலம்பியது; துரியோதனனின் மறுமொழி; பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வதாகச் சபதமேற்ற அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனைப் படைத்தலைவனாக்குமாறு கிருபரிடம் கேட்டுக் கொண்ட துரியோதன்; மூன்று வீரர்களும் துரியோதனனைத் தனிமையில் விட்டு அகன்றது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கூரிய கணைகள், கதாயுதங்கள், வேல்கள் மற்றும் ஈட்டிகளால் மிகவும் காயமடைந்தும், கொல்லப்படாமல் கௌரவப் படையில் எஞ்சியிருந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் மூவரும், துரியோதனனின் வீழ்ச்சியைக் கேட்டு,(1,2) தங்களின் வேகமான குதிரைகளில் ஏறி விரைவாகப் போர்க்களத்திற்கு வந்தனர். அங்கே அவர்கள், காட்டில் சூறாவளியால் வீழ்த்தப்பட்ட பெரும் சால மரத்தைப் போல அந்த உயர் ஆன்ம திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, தரையில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைக் கண்டனர். அவர்கள், காட்டில் வேடனால் வீழ்த்தப்பட்ட ஒரு வலிமைமிக்க யானையைப் போலக் குருதியில் நனைந்து, வெறுந்தரையில் கிடந்து துடித்துக் கொண்டிருக்கும் அவனைக் கண்டனர். அவன், அபரிமிதமான இரத்த ஓடையில் குளித்தவனாக, வேதனையில் உருண்டு புரண்டு கொண்டிருப்பதைக் கண்டனர்.(3-5)

உண்மையில் அவர்கள், அவனைப் {துரியோதனனைப்} பூமியில் விழுந்த சூரியனைப் போலவோ, பெருங்காற்றால் வற்றிய பெருங்கடலைப் போலவோ, ஆகாயத்தில் மூடுபனியால் வட்டில் மறைக்கப்பட்ட முழு நிலவைப் போலவோ கண்டனர். ஆற்றலில் யானைக்கு இணையானவனும், நீண்ட கரங்களைக் கொண்டவனுமான அந்த மன்னன், புழுதியால் மறைக்கப்பட்டுப் பூமியில் கிடந்தான்.(6,7) ஒரு நாட்டின் ஏகாதிபதியைச் சுற்றி, செல்வத்தில் ஆசை கொண்டோர் இருப்பதைப் போல அவனைச் சுற்றிலும் ஊனுண்ணும் பல்வேறு பயங்கர விலங்குகளும், உயிரினங்களும் இருந்தன.(8) அவனது நெற்றி சினத்தால் ஆழ்வடுக்களைப் போலச் சுருங்கியிருந்தது, அவனது கண்கள் கோபத்தால் உருண்டு கொண்டிருந்தன. மனிதர்களில் புலியான அந்த மன்னன், (வேடர்களால்) வீழ்த்தப்பட்ட புலியைப் போலச் சினம் நிறைந்தவனாக இருப்பதைக் கண்டனர்.(9) பெரும் வில்லாளிகளான கிருபரும், பிறரும், பூமியில் வீழ்ந்து கிடந்த அந்த ஏகாதிபதியைக் கண்டு திகைப்படைந்தனர்.(10)

அவர்கள் தங்கள் தேர்களில் இருந்து இறங்கி மன்னை {துரியோதனனை} நோக்கி ஓடினர். துரியோதனனைக் கண்ட அவர்கள் அனைவரும் அவனைச் சுற்றி பூமியில் அமர்ந்தனர்.(11) அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கண்ணீர் நிறைந்த கண்களுடன், ஒரு பாம்பைப் போல மூச்சு விட்டுக் கொண்டு, பூமியில் கிடப்பவனும், மன்னர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தப் பாரதக் குலத் தலைவனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(12) “ஓ! மனிதர்களில் புலியே, புழுதிக்கறை படிந்து வெறுந்தடையில் நீ கிடப்பதால், மனிதர்களின் உலகில் நிலையானது ஏதுமில்லை என்பது உண்மையே.(13) மொத்த உலகிற்கும் ஆணை பிறப்பிக்கும் மன்னனாக நீ இருந்தாய். பிறகு ஏன், ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, இத்தகு தனிமையான காட்டில் வெறுந்தரையில் தனியனாக நீ கிடக்கிறாய்?(14) உன் அருகில் துச்சாசனனையோ, பெரும் தேர்வீரனான கர்ணனையோ, உன் நூற்றுக்கணக்கான நண்பர்களையோ நான் காணவில்லை. ஓ! மனிதர்களில் காளையே, இஃது என்ன?(15)

ஓ! உலகங்கள் அனைத்தின் தலைவனே {துரியோதனனே}, புழுதிக் கறைபடிந்து வெறுந்தரையில் நீ இவ்வாறு கிடப்பதால், யமனின் {விதியின்} வழிகளை அறிவது கடினம் என்பதில் ஐயமில்லை.(16) ஐயோ, மணிமுடிசூட்டுவிழாவில் புனித நீர் தெளிக்கப்பட்ட கேசங்களைக் கொண்ட க்ஷத்திரியர்கள் அனைவருக்கும் தலைமையில் இந்த எதிரிகளை எரிப்பவன் {இந்தத் துரியோதனன்} செல்வான். ஐயோ இப்போது அவன் புழுதியை உண்கிறான். காலம் அதன் வழியில் கொண்டு வரும் முரண்களைப் பாருங்கள்.(17) தூய்மையான உன் வெண்குடை எங்கே? ஓ! மன்னா {துரியோதனா}, காற்றை வீசும் வெண்சாமரம் எங்கே? ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, உனது பரந்த படையானது இப்போது எங்கே?(18) உலகின் தலைவனாக இருந்த நீ, இத்தகு அவல நிலைக்குக் குறைக்கப்பட்டதால், புத்தகம் {சாத்திரங்களைச்} சாராத காரணங்களைக் கொண்ட நிகழ்வுகளின் வழிகள் புதிர் நிறைந்தவையே என்பது நிச்சயம்.(19) சக்ரனுக்கு இணையான நீ, பரிதாபகரமான இத்தகு அவல நிலைக்குக் குறைக்கப்பட்டதால், மனிதர்கள் அனைவரின் செழிப்பும் நிலையில்லாததே என்பதில் ஐயமில்லை” என்றான் {அஸ்வத்தாமன்}.(20)

அஸ்வத்தாமனின் இந்தக் கவலைநிறைந்த வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் {துரியோதனன்}, அச்சந்தர்ப்பத்திற்குத் தகுந்த இந்த வார்த்தைகளை அவனுக்குப் பதிலாக அளித்தான்.(21) அவன் தன் கரங்களால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, மறுபடியும் சோகத்தால் கண்ணீர் சிந்தினான். பிறகு அந்த மன்னன், கிருபர் தலைமையிலான அந்த வீரர்களிடம்,(22) “(உயிரினங்கள் அனைத்தின்) மரணக்கட்டுப்பாடு படைப்பாளனால் விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. காலத்தின் வழியில் அனைத்து உயிரினங்களுக்கும் மரணம் நேர்கிறது.(23) அந்த மரணமே இப்போதும் உங்கள் அனைவரின் கண்களுக்கு முன்பாக எனக்கு நேர்கிறது. மொத்த உலகையும் ஆட்சி செய்த நான் இந்த அவல நிலைக்குக் குறைக்கப்பட்டிருக்கிறேன்.(24) என்ன பேரிடர் நேரிட்டாலும், நான் போரில் இருந்து ஒருபோதும் புறமுதுகிடாதது நற்பேறாலேயே. குறிப்பாக வஞ்சகத்தின் துணையைக் கொண்டு அந்தப் பாவிகளால் நான் கொல்லப்பட நேர்ந்ததும் நற்பேறாலேயே.(25)

பகைமையில் ஈடுபட்டபோதும், நான் வீரத்தையும், விடாமுயற்சியையும் எப்போதும் வெளிப்படுத்தியது நற்பேறாலேயே. நான் என் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் போரில் கொல்லப்பட்டதும் நற்பேறாலேயே.(26) இந்தப் பெரும்படுகொலையில் உயிரோடு தப்பியவர்களாக, பாதுகாப்பாக, உடல்நலத்துடன் இருப்பவர்களாக உங்களை நான் காண்பதும் நற்பேறாலேயே.(27) இஃது எனக்கு மிகவும் ஏற்புடையதாகும் {இனிமையானதாகும்}.(27) பாசத்தால் என் மரணத்திற்காக வருந்தாதீர்கள். வேதங்களுக்கு அதிகாரம் இருக்குமானால், நான் நிச்சயம் அழிவில்லாத பல உலகங்களை அடைந்திருக்கிறேன்.(28) அளவிலா சக்தி கொண்ட கிருஷ்ணனின் மகிமையை நான் அறியாதவனல்ல. அவன், க்ஷத்திரியக் கடமைகளை முறையாக நோற்று என்னை விழச் செய்யவில்லை.(29) நான் அவனை அடைந்துவிட்டேன். எக்காரணத்திற்காகவும், எவரும் எனக்காக வருந்தக்கூடாது. உங்களைப் போன்ற மனிதர்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதையே நீங்கள் செய்திருக்கிறீர்கள். நீங்கள் என் வெற்றிக்காக எப்போதும் முயற்சி செய்தீர்கள். எனினும், விதி கலங்கடிக்கப்பட முடியாததாகும்” என்றான் {துரியோதனன்}.(30)

இவ்வளவே சொன்ன அந்த மன்னன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கண்ணீரால் அலைமோதும் கண்களுடன், மரணவேதனையால் கலக்கமடைந்து அமைதியை அடைந்தான்.(31) மன்னனின் கண்ணீரையும், துயரத்தையும் கண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அண்ட அழிவின்போது காணப்படும் நெருப்பைப் போலக் கோபத்தால் சுடர்விட்டெரிந்தான்.(32) சினத்தில் மூழ்கிய அவன் {அஸ்வத்தாமன்} தன் கரங்களைப் பிசைந்து கொண்டே, கண்ணீரால் கரகரப்பான குரலுடன் மன்னனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(33) “ஒரு கொடூர சதியின் மூலம் அந்த இழிந்தவர்களால் என் தந்தை {துரோணர்} கொல்லப்பட்டார். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, இந்த அவலநிலைக்கு நீ குறைக்கப்பட்டிருப்பதைக் காணும்போது எரிக்கப்படுவதைப் போல அச்செயல் கூட என்னை இவ்வளவு அதிகமாக எரிக்கவில்லை.(34) ஓ! தலைவா, உண்மையின் மீதும், என் பக்திச் செயல்கள் அனைத்தின் மீதும், என் தானங்கள், என் அறம், நான் வென்ற அறத்தகுதிகள் அனைத்தின் மீதும் ஆணையிட்டு நான் சொல்லப் போகும் இவ்வார்த்தைகளைக் கேட்பாயாக.(35) நான் இன்று, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வைத்து, என் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும், பாஞ்சாலர்கள் அனைவரையும் யமலோகம் அனுப்பிவைப்பேன். ஓ! ஏகாதிபதி, எனக்கு அனுமதி அளிப்பதே உனக்குத் தகும்” என்றான் {அஸ்வத்தாமன்}.(36)

துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} சொன்னதும், தன் இதயத்திற்கு மிகவும் ஏற்புடையதுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தக் குரு மன்னன், கிருபரிடம், “ஓ! ஆசானே, ஒரு குடம் நிறைந்த நீரைத் தாமதமில்லாமல் என்னிடம் கொண்டு வாரும்” என்றான்.(37) மன்னனின் இந்த வார்த்தைகளின் பேரில் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் {கிருபர்}, ஒரு பாத்திரம் நிறைந்த நீரை விரைவாகக் கொண்டு வந்து, மன்னனை அணுகினார்.(38) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்}, அந்தக் கிருபரிடம், “ஓ! பிராணர்களில் முதன்மையானவரே, நீர் அருளப்பட்டிருப்பீராக, நீர் எனக்கு நன்மையை விரும்பினால், என் உத்தரவின் பேரில் இந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} படைத்தலைவனாக நிறுவப்படட்டும்.(39) மன்னனின் உத்தரவின் பேரில், ஒரு பிராமணன் கூடப் போரிடலாம், அதிலும் குறிப்பாக க்ஷத்திரியப் பயிற்சிகளைப் பின்பற்றுபவர்கள் {நிச்சயம்} போரிடலாம். சாத்திரங்களைக் கற்றோர் இதைச் சொல்கின்றனர்” என்றான் {துரியோதனன்}.(40)

சரத்வான் மகனான கிருபர், மன்னனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, அம்மன்னனின் உத்தரவின் பேரில் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைப்} படைத்தலைவனாக நிறுவினார்.(41) பட்டஞ்சூட்டல் முடிந்ததும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த மன்னர்களில் சிறந்தவனை ஆரத்தழுவிக் கொண்ட அஸ்வத்தாமன், தன் சிங்க முழக்கங்களால் பத்து புள்ளிகளையும் எதிரொலிக்கச் செய்து அந்த இடத்தை விட்டு அகன்றான்.(42) மன்னர்களில் முதன்மையானவனான துரியோதனன், அபரிமிதமான குருதியால் மறைக்கப்பட்டு, அனைத்துயிர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய அவ்விரவை அங்கேயே கழிக்கத் தொடங்கினான்.(43) போர்க்களத்தில் இருந்து விரைவாகச் சென்ற அவ்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துயரத்தால் கலங்கிய இதயங்களுடன், கவலையுடனும், மெய்யுறுதிப்பாடுடனும் சிந்திக்கத் தொடங்கினர்” {என்றான் சஞ்சயன்}.(44)

கதாயுத்த உப பர்வம் முற்றும்

சல்லியபர்வம் முற்றிற்று

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் -சல்லிய பர்வம்-சல்லிய வத பர்வம்-

October 15, 2025

தரையில் விழுந்துகிடந்த அரசசபை! – சல்லிய பர்வம் பகுதி – 01-கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு கௌரவர்கள் என்ன செய்தனர் என்று கேட்ட ஜனமேஜயன்; கர்ணனின் படுகொலையால் துரியோதனன் அடைந்த துயரம்; படைத்தலைவனாக நியமிக்கப்பட்ட சல்லியன்; நடுப்பகலில் யுதிஷ்டிரனால் கொல்லப்பட்ட சல்லியன்; பீமசேனனால் கொல்லப்பட்ட துரியோதனன்; பாண்டவப் படையை இரவில் அழித்த மூவர்; சஞ்சயனின் சொற்களைக் கேட்டு மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்; அரச மகளிரின் துயரம்; திருதராஷ்டிரனுக்கு ஆறுதலளித்த விதுரன்…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.ஜனமேஜயன், “ஓ! மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, அந்தப் போரில் இவ்வாறு சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கர்ணன் கொல்லப்பட்ட பிறகு, கௌரவர்களில் (கொல்லப்படாமல்) எஞ்சிய சிலர் என்ன செய்தனர்?(1) வலிமையிலும், சக்தியிலும் பெருகியிருந்த (பாண்டவர்களின்) படையைக் கண்டு, குரு இளவரசனான துரியோதனன், அந்த நேரத்திற்குத் தகுந்ததாக நினைத்துப் பாண்டவர்களிடம் எவ்வாறு நடந்து கொண்டான்?(2) இவை யாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {வைசம்பாயனரே} எனக்குச் சொல்வீராக. என் மூதாதையரின் பெரும் சாதனைகளைக் கேட்பதில் நான் ஒருபோதும் சலிப்படைவதில்லை” என்று கேட்டான்.(3)வைசம்பாயனர் சொன்னார், “கர்ணன் வீழ்ந்த பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரனின் மகனான சுயோதனன் {துரியோதனன்}, துன்பப்பெருங்கடலில் மூழ்கியவனாக, அனைத்துப் பக்கத்திலும் நம்பிக்கை இழந்த நிலையையே கண்டான்.(4) “ஐயோ, ஓ! கர்ணா, ஐயோ, ஓ! கர்ணா” என்று இடையறாத ஒப்பாரியில் ஈடுபட்ட அவன், பெரும் சிரமத்துடனும், தன் தரப்பில் கொல்லப்படாமல் எஞ்சிய மன்னர்கள் துணையுடனும் தன் பாசறையை அடைந்தான்.(5) சாத்திரங்கள் கற்பிக்கும் அற்புதக் காரணங்களைச் சொல்லி அம்மன்னர்கள் அவனைத் {துரியோதனனைத்} தேற்றினாலும் கூட, சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலையை நினைத்து அவனது மனம் அமைதியடையவில்லை.(6) {பிறகு}, விதியும், தேவையும் அனைத்திலும் பலமிக்கவை என்று கருதிய அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, போரிடுவதென உறுதியாகத் தீர்மானித்தான்.(7) தன் படைகளின் தலைவனாக முறையாகச் சல்லியனை நியமித்த அந்த மன்னர்களில் காளை {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தன் படைகளில் கொல்லப்படாமல் எஞ்சியிருப்போர் துணையுடன் போரிடச் சென்றான்.(8)

அப்போது, ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, தேவர்களுக்கும், அசுரரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பாகக் குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நடந்தது.(9) பிறகு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பேரழிவை ஏற்படுத்திய சல்லியன், பெரும் எண்ணிக்கையிலான தன் துருப்புகளை இழந்து, இறுதியாக நடுப்பகல் வேளையில் யுதிஷ்டிரனால் கொல்லப்பட்டான்.(10) அப்போது தன் நண்பர்கள் மற்றும் சொந்தங்கள் அனைவரையும் இழந்த மன்னன் துரியோதனன், போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடி, தன் எதிரிகள் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக ஒரு பயங்கரமான தடாகத்தின் ஆழத்திற்குள் ஊடுருவிச் சென்றான்.(11) அந்நாளின் பிற்பகல் வேளையில், அந்தத் தடாகத்தை வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரால் சூழச் செய்த பீமசேனன், துரியோதனனை {தடாகத்திற்கு} வெளியே வரவைத்து, தன் பலத்தை வெளிப்படுத்தி வேகமாக அவனை {துரியோதனனைக்} கொன்றான்.(12)

துரியோதனன் கொல்லப்பட்ட பிறகு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, (குரு தரப்பில்) கொல்லப்படாமல் எஞ்சிய மூன்று தேரவீரர்கள் (அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர்), சினத்தால் நிறைந்து, இரவில் பாஞ்சாலத் துருப்புகளைக் கொன்றனர்.(13) அடுத்த நாள் காலையில், முகாமில் இருந்து புறப்பட்ட சஞ்சயன், சோகத்தாலும், கவலையாலும் நிறைந்து, உற்சாகமற்ற நிலையில் நகருக்குள் (குரு தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்}) நுழைந்தான்.(14) நகருக்குள் நுழைந்த அந்தச் சூதன் சஞ்சயன், துயரால் தன் கரங்களை உயர்த்தியபடியும், அங்கங்கள் நடுங்கிக் கொண்டும், மன்னனின் {திருதராஷ்டிரனின்} அரண்மனைக்குள் நுழைந்தான்.(15)

துயரால் நிறைந்த அவன் {சஞ்சயன்}, ஓ! மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, உரக்க அழுதபடியே, “ஐயோ, ஓ! மன்னா! ஐயோ, உயர் ஆன்ம ஏகாதிபதியின் {துரியோதனனின்} கொலையால் நாம் அனைவரும் அழிவையடைந்தோம்.(16) ஐயோ, சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையான வலிமையை உடைய நமது கூட்டாளிகள் {மன்னர்கள்} அனைவரும் பாண்டவர்களால் கொல்லப்பட்டதால், காலனே அனைத்திலும் பலமிக்கவனும், தன் வழியில் கோணலானவனும் ஆவான்[1].” என்றான்.(17) ஓ! மன்னா {ஜனமேஜயா}, “சஞ்சயன் அந்த அவல நிலையில் நகருக்கு திரும்பியதைக் கண்ட மக்கள் அனைவரும், ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பெரும் துயரால் நிறைந்து, “ஐயோ, ஓ! மன்னா!” என்று சொல்லி உரக்க அழுதனர்.(18) ஓ! மனிதர்களில் புலியே, துரியோதனனின் மரணத்தைக் கேட்டு, குழந்தைகள் உட்பட அனைத்துப் பக்கங்களிலும் மொத்த நகரமும் ஒப்பாரியிட்டது.(19) துன்பத்தில் ஆழமாகப் பீடிக்கப்பட்டிருந்த ஆண்களும், பெண்களும் என அனைவரும், தங்கள் புலனுணர்வை இழந்து, பைத்தியக்காரர்களுக்கு ஒப்பாக அங்கேயும் இங்கேயும் ஓடுவதை நாங்கள் கண்டோம்[2].(20)

மிகவும் கலங்கிப் போயிருந்த அந்தச் சூதன் சஞ்சயன், மன்னனின் {திருதராஷ்டிரனின்} வசிப்பிடத்திற்குள் நுழைந்து, ஏகாதிபதிகளில் முதன்மையானவனும், தன் கண்களையே அறிவாகக் கொண்டவனுமான அந்த மனிதர்களின் தலைவனை {திருதராஷ்டிரனைக்} கண்டான்.(21) பாவமற்ற ஏகாதிபதியான அந்தப் பாரதக் குலத்தின் தலைவன் {திருதராஷ்டிரன்}, தன் மருமகள்கள், காந்தாரி, விதுரன் ஆகியோரும், எப்போதும் தன் நலன்விரும்பிகளாக இருந்த பிற நண்பர்களும், உறவினர்களும் சூழ அமர்ந்திருப்பதையும்,(22) கர்ணனின் மரணத்தையே நினைத்துக் கொண்டிருப்பதையும் கண்ட அந்தச் சூதன் சஞ்சயன், ஓ! ஜனமேஜயா, இதயம் நிறைந்த துயரத்துடனும், கண்ணீரால் தடைபட்ட குரலுடனும் அழுதுகொண்டே அவனிடம், “ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, நான் சஞ்சயன் {வந்திருக்கிறேன்}. ஓ! பாரதக் குலத்தின் காளையே, நான் உம்மை வணங்குகிறேன்.(23,24) மத்ரர்களின் ஆட்சியாளன் சல்லியன் கொல்லப்பட்டான். அதே போலச் சுபலனின் மகனான சகுனியும், அந்தச் சூதாடியின் வீர மகனான உலூகனும் கொல்லப்பட்டனர்.(25)

சம்சப்தகர்கள் அனைவரும், சகர்களோடு கூடிய காம்போஜர்களும், மிலேச்சர்களும், மலைவாசிகளும், யவனர்களும் கூடக் கொல்லப்பட்டனர்.(26) ஓ! ஏகதிபதி {திருதராஷ்டிரரே}, கிழக்கத்தியர்களும், தெற்கத்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, வடக்கத்தியர்கள் மற்றும் மேற்கத்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(27) ஓ! ஏகாதிபதி, மன்னர்கள் அனைவரும், இளவரசர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். மன்னன் துரியோதனனும், பாண்டுவின் மகனால் {பீமனால்}, அவனது சபத்தின்படியே கொல்லப்பட்டான்.(28) ஓ! ஏகாதிபதி, முறிந்த தொடைகளுடன், குருதியில் நனைந்து, புழுதியில் இப்போது அவன் கிடக்கிறான். ஓ! மன்னா, திருஷ்டத்யும்னனும், வெல்லப்பட முடியாத சிகண்டியும் கூடக் கொல்லப்பட்டனர்.(29) ஓ! மன்னா, உத்தமௌஜஸ், யுதாமன்யு, பிரபத்ரகர்கள், மனிதர்களில் புலிகளான பாஞ்சாலர்கள் மற்றும் சேதிகள் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.(30)

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் அனைவரும், திரௌபதியின் மகன்களும் (ஐவரும்) கூடக் கொல்லப்பட்டனர். வீரனும், கர்ணனின் வலிமைமிக்க மகனுமான விருஷசேனனும் கொல்லப்பட்டான்.(31) (அங்கே கூடியிருந்த) மனிதர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். யானைகள் அனைத்தும் கொல்லப்பட்டன. ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்கள் அனைவரும் போரில் வீழ்ந்தனர், குதிரைகள் அனைத்தும்கூட வீழ்ந்தன.(32) ஓ! தலைவா, உமது தரப்பில் மிகச் சிலரே உயிரோடுள்ளனர். பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஒருவரோடொருவர் மோதிக்கொண்டதன் விளைவாக,(33) காலத்தால் திகைப்படையச் செய்யப்பட்ட இந்த உலகமானது இப்போது பெண்களை மட்டுமே கொண்டிருக்கிறது. பாண்டவர்களின் தரப்பில் எழுவர் உயிரோடிருக்கின்றனர், தார்தராஷ்டிரர்களிலோ மூவர் அவ்வாறு {உயிரோடு} இருக்கின்றனர்.(34) ஐந்து (பாண்டவ) சகோதரர்கள், வாசுதேவன் {கிருஷ்ணன்}, சாத்யகி, கிருபர், கிருதவர்மன், வெற்றியாளர்களில் முதன்மையான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோரே அவர்கள்.(35)

ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, உமது தரப்பில் திரட்டப்பட்ட அக்ஷௌஹிணிகள் அனைத்திலும் பிழைத்திருப்போர் இந்தத் தேர்வீரர்கள் மூவர் மட்டுமே.(36) பிழைத்திருப்போர் இவர்களே, எஞ்சியோர் {அனைவரும்} அழிந்துவிட்டனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரியோதனனையும், (பாண்டவர்களிடம்) அவன் கொண்ட பகைமையையும் காரணமாகக் கொண்டு, காலத்தால் மொத்த உலகமும் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது” என்றான் {சஞ்சயன்}.”(37)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மனிதர்களின் ஆட்சியாளனான திருதராஷ்டிரன், இந்தக் கொடுமொழியைக் கேட்டுத் தன் புலனுணர்வுகளை இழந்து பூமியில் விழுந்தான்.(38) மன்னன் கீழே விழுந்ததும், ஓ! ஏகாதிபதி, மன்னனின் துயரைக் கண்டவனும், பெரும்புகழைக் கொண்டவனுமான விதுரனும் சோகத்தால் பீடிக்கப்பட்டுப் பூமியில் விழுந்தான்.(39) ஓ! மன்னர்களின் சிறந்தவனே {ஜனமேஜயா}, காந்தாரியும், குரு பெண்கள் அனைவரும், இந்தக் கொடுஞ்சொற்களைக் கேட்டுத் திடீரெனத் தரையில் விழுந்தனர்.(40) பெரிய துணியில் வரையப்பட்ட வடிவங்களைப் போல, அரச மக்களின் அந்த மொத்த சபையும், தங்கள் புலனுணர்வை இழந்து, அறிவுபிறழ்ந்த நிலையில் பிதற்றிக் கொண்டே தரையில் கிடந்தது.(41) அப்போது பூமியின் தலைவனான மன்னன் திருதராஷ்டிரன், தன் மகன்களின் மரணத்தினால் உண்டான துயரில் பீடிக்கப்பட்டு, மெதுவாகவும், மிகுந்த சிரமத்துடனும் தன் உயிர் மூச்சை மீட்டெடுத்தான்.(42)

தன் புலனுணர்வை மீண்டும் அடைந்த அம்மன்னன் {திருதராஷ்டிரன்}, நடுங்கும் அங்கங்களுடனும், கவலை நிறைந்த இதயத்துடனும் தன் முகத்தை அனைத்துப் பக்கங்களிலும் திருப்பியபடி, க்ஷத்ரியிடம் (விதுரனிடம்) இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(43) “ஓ! கல்விமானான க்ஷத்ரியே {விதுரா}, ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, நீயே இப்போது எனது புகலிடமாவாய். என் மகன்கள் அனைவரையும் இழந்த நான், {இப்போது} தலைவனற்றவனாக இருக்கிறேன்” என்றான்.(44) இதைச் சொன்ன அவன், மீண்டும் தன் புலனுணர்வுகளை இழந்து கீழே விழுந்தான். கீழே விழுந்த அவனைக் கண்டவர்களும், அங்கிருந்தவர்களுமான அவனது உறவினர்கள் அனைவரும்,(45) அவன் மீது குளிர்ந்த நீரைத் தெளித்து, விசிறிகளால் அவனுக்கு வீசியும்விட்டனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு தேறுதலடைந்த அந்தப் பூமியின் தலைவன் {திருதராஷ்டிரன்},(46) தன் மகன்களுடைய மரணத்தின் நிமித்தமாகக் கவலையால் பீடிக்கபட்டு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, குடத்திலிட்ட பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டபடியே அமைதியாக இருந்தான்.(47) இவ்வாறு பீடிக்கப்பட்ட மன்னனைக் கண்டு சஞ்சயனும் அழுதான். மங்கையர் அனைவரும், பெரும் புகழைக் கொண்ட காந்தாரியும் கூட அவ்வாறே செய்தனர் {அழுதனர்}.(48)ஓ! மனிதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, மீண்டும் மீண்டும் மயங்கி விழுந்த திருதராஷ்டிரன், நீண்ட நேரத்திற்குப் பிறகு, விதுரனிடம்,(49) “மகளிர் அனைவரும் செல்லட்டும், பெரும்புகழைக் கொண்ட காந்தாரியும், இந்த நண்பர்கள் அனைவரும் செல்லட்டும். என் மனம் மிகவும் கலங்கியிருக்கிறது” என்றான்.(50) இவ்வாறு சொல்லப்பட்ட விதுரன், ஓ! பாரதக் குலத்தின் காளையே, மீண்டும் மீண்டும் நடுங்கிக் கொண்டே மெதுவாக மங்கையரை அனுப்பிவைத்தான்.(51) ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஆழமாகப் பீடிக்கப்பட்ட மன்னனைக் கண்டு, அந்த மங்கையர் அனைவரும், நண்பர்கள் அனைவரும் {அங்கிருந்து} சென்றனர்.(52) அப்போது சஞ்சயன், ஓ! எதிரிகளை எரிப்பவனே {ஜனமேஜயா}, புலனுணர்வு மீண்டவனும், பெரும் துன்பத்தால் அழுது கொண்டிருந்தவனுமான மன்னனை உற்சாகமில்லாமல் கண்டான்.(53) பிறகு விதுரன், இடையறாமல் அழுது கொண்டிருந்த அந்த மனிதர்களின் ஆட்சியாளனுக்கு {திருதராஷ்டிரனுக்கு}, கூப்பிய கரங்களுடனும், இனிய சொற்களுடனும் தேறுதல் கூறினான்” {என்றார் வைசம்பாயனர்}.(54)

துரியோதனனின் அன்புமொழிகளை இனி எப்போது கேட்பேன்? – சல்லிய பர்வம் பகுதி – 02-திருதராஷ்டிரன் புலம்பல்; துரியோதனனின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த திருதராஷ்டிரன்; விதியை நொந்து கொண்டது; விதுரனின் ஆலோசனைகளைக் கேட்காமல் போனதற்காக வருந்தியது; போர் நடந்த முறையை விவரமாகச் சொல்லுமாறு சஞ்சயனைப் பணித்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “{அங்கிருந்து} மகளிர் {அனைவரும்} அனுப்பப்பட்ட பிறகு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், முன்பைவிடப் பெருந்துயரில் மூழ்கிப் புலம்பத் தொடங்கினான். புகைக்கு ஒப்பான பெருமூச்சுகளைவிட்டபடியே, மீண்டும் மீண்டும் தன் கரங்களை அசைத்துக் கொண்டு, சிறிது நேரம் சிந்தித்த அவன் {திருதராஷ்டிரன்}, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(2)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஐயோ, ஓ! சூதா {சஞ்சயா}, போரில் எந்த இழப்பையும் சந்திக்காமல், பாண்டவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று உன்னிடம் இருந்து நான் கேட்கும் செய்தி துயர் மிகுந்ததாகும்.(3) என் மகன்கள் வீழ்ந்ததைக் கேட்டும் நொறுங்காமல் இருப்பதால், கடுமையான என் இதயம் வஜ்ரத்தின் தன்மையைக் கொண்டது என்பதில் ஐயமில்லை.(4) ஓ! சஞ்சயா, அவர்களது வயது, பிள்ளைப்பருவத்தில் அவர்களின் விளையாட்டுகள் ஆகியவற்றை நினைத்தும், இன்று அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர் என்பதை அறிந்தும் என் இதயம் துண்டுகளாக நொறுங்குவதாகத் தெரிகிறது.(5) பார்வையற்றதன் விளைவால், நான் அவர்களின் வடிவங்களைப் பார்த்ததில்லை என்றாலும், பிள்ளைகளிடம் ஒருவன் கொள்ளும் பாசத்தின் விளைவால், அவர்களிடம் நான் பேரன்பைக் கொண்டிருந்தேன்.(6) ஓ! பாவமற்றவனே, பிள்ளைப்பருவத்தைக் கடந்து, ஆண்மையின் தொடக்கமான இளமைப் பருவத்திற்குள் அவர்கள் நுழைந்துவிட்டார்கள் என்று கேட்டதும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.(7) இன்று செழிப்பையும், சக்தியையும் இழந்த நிலையில் அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று கேட்டதும், அவர்களுக்கு நேர்ந்த துயரால் ஏற்பட்ட கவலையில் மூழ்கி, மன அமைதியை அடைய முடியாதவனாக நான் இருக்கிறேன்.(8) {இவ்வாறு சஞ்சயனிடம் பேசிக் கொண்டிருந்த திருதராஷ்டிரன், துரியோதனனை நினைத்துப் பின்வருமாறு புலம்பத் தொடங்கினான்}

வா, ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, இப்போது பாதுகாவலனற்றவனாக இருக்கும் என்னிடம் வருவாயாக. ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, உன்னை இழந்தவனான நான், எந்த அவல நிலையை அடைவேனோ?(9) ஓ! ஐயா, கூடியிருக்கும் மன்னர்களை விட்டுவிட்டு, சாதாரணமான ஓர் இழிந்த மன்னனைப் போல உயிரையிழந்து வெறுந்தரையில் ஏன் நீ கிடக்கிறாய்?(10) ஓ! ஏகாதிபதி, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் புகலிடமாய் இருந்தவனே, ஓ! வீரா, குருடனும், கிழவனுமான என்னைவிட்டு நீ எங்கே சென்றுவிட்டாய்?(11) ஓ! மன்னா {துரியோதனா}, உன்னுடைய அந்தக் கருணையும், அந்த அன்பும், அந்த மரியாதையும் இப்போது எங்கே? போரில் வெல்லப்பட முடியாதவனான நீ, ஐயோ, எவ்வாறு பார்த்தர்களால் கொல்லப்பட்டாய்?(12) உறக்கத்திலிருந்து சரியான நேரத்தில் விழிக்கும் என்னை, அன்பு மற்றும் மரியாதை நிறைந்த வார்த்தைகளால், “ஓ! அப்பா, ஓ! அப்பா, ஓ! பெரும் மன்னா, ஓ! உலகத்தின் தலைவா” என்று இனி அழைக்கப்போவது எவன்?(13) கண்ணீர் நிறைந்த கண்களுடன் என் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “ஓ! குருகுலத்தவரே, எனக்கு ஆணையிடுவீராக” என்று இனி என்னிடம் கேட்கப் போவது எவன்?(14)

ஓ! அன்புக்குழந்தாய், உன் உதடுகளில் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டேனே, “இந்தப் பரந்த உலகம் பிருதையின் {குந்தியின்} மகனுக்கு எவ்வளவோ, அவ்வளவு நமக்கும் இருக்கிறது[1].(15) பகதத்தர், கிருபர், சல்லியர், அவந்தியின் இளவரசர்கள் இருவர் {விந்தன் மற்றும் அனுவிந்தன்}, ஜெயத்ரதன், பூரிஸ்ரவஸ், சலன், சோமதத்தர், பாஹ்லீகர்,(16) அஸ்வத்தாமர், போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, மகதத்தின் வலிமைமிக்க இளவரசன், பிருஹத்பலன், காசிகளின் ஆட்சியாளன், சுபலனின் மகன் சகுனி,(17) பல்லாயிரக்கணக்கான மிலேச்சர்கள், சகர்கள், யவனர்கள், கம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன், திரிகர்த்தர்களின் மன்னன் {சுசர்மன்},(18) பாட்டன் பீஷ்மர், பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கௌதமரின் மகன் {கிருபர்}[2]சுருதாயுஷ், அஸ்ருதாயுஷ், பெரும் சக்தி கொண்ட சதாயுஷ்,(19) ஜலசந்தன், ரிஷ்யசிருங்கனின் மகன் {ஆர்ஷ்யஸ்ருங்கி}, ராட்சசன் அலாயுதன், வலிய கரங்களைக் கொண்ட அலம்புசன், பெரும் தேர்வீரனான சுபாகு ஆகிய இவர்களும், இன்னும் எண்ணற்ற பிற மன்னர்களும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, பெரும்போரில் என் நிமித்தமாகத் தங்கள் உயிரையே விடச் சித்தமாயிருக்கிறார்கள்.(21) களத்தில் இவர்களுக்கு மத்தியில், என் தம்பிகள் சூழ நிற்கும் நான், ஓ! மன்னர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, பார்த்தர்கள், பாஞ்சாலர்கள்,(22) சேதிகள், திரௌபதியின் மகன்கள், சாத்யகி, குந்திபோஜன், ராட்சசன் கடோத்கசன் ஆகிய அனைவருடனும் போரிடவேன்.(23) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட இவர்களில் ஒருவனே கூட, ஓ! மன்னா, போரில் தன்னை நோக்கி விரையும் பாண்டவர்களைத் தடுக்க இயன்றவனே.(24) {அப்படியிருக்கையில்}, பாண்டவர்களோடு பகை கொண்டவர்களும், வீரர்களுமான இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும் என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஓ! ஏகாதிபதி, இவர்கள் அனைவரும் பாண்டவர்களைப் பின்தொடர்வோருடன் போரிட்டு, அவர்களைப் போரில் கொல்வார்கள்.(25) கர்ணன் மட்டுமே கூட, என்னுடன் சேர்ந்து பாண்டவர்களைக் கொன்றுவிடுவான். பிறகு வீர மன்னர்கள் அனைவரும் என் அதிகாரத்தின் கீழ் வாழ்வார்கள்.(26) ஓ! மன்னா, எவன் அவர்களுக்குத் தலைவனோ, அந்த வலிமைமிக்க வாசுதேவன் {கிருஷ்ணன்}, கவசந்தரிக்கமாட்டேன் என்று என்னிடம் சொல்லியிருக்கிறான்”.(27) {என்று துரியோதனனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து சொன்ன திருதராஷ்டிரன், சஞ்சயனிடம் திரும்பி}, இவ்வாறே, ஓ! சூதா {சஞ்சயா}, துரியோதனன் எப்போதும் என்னிடம் பேசுவான். இதைக் கேட்டே நானும் போரில் பாண்டவர்கள் கொல்லப்படுவார்கள் என்று நம்பினேன்.(28) எனினும், என் மகன்கள் அனைவரும், அந்த வீரர்களுக்கு மத்தியில் நின்று போரில் தீவிரமாக முயன்று கொண்டிருந்த போது கொல்லப்பட்டார்கள் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(29)

உலகின் தலைவரான வீரப் பீஷ்மர், சிகண்டியோடு மோதி, நரியால் கொல்லப்படும் சிங்கமாக மரணத்தை அடைந்தார் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(30) தாக்குதல் மற்றும் தற்காத்தல் ஆகியவற்றுக்கு உண்டான ஆயுதங்கள் அனைத்தின் ஆசானான பிராமணர் துரோணர், போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்டார் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(31) பூரிஸ்ரவஸ், சோமதத்தன், மன்னர் பாஹ்லீகர் ஆகியோரும் போரில் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(32) யானைகளின் முதுகுகளில் இருந்து போரிடம் திறன்பெற்ற பகதத்தன் கொல்லப்பட்டான், ஜெயத்ரதனும் கொல்லப்பட்டான் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(33) சுதக்ஷிணன், பூரு குலத்தின் ஜலசந்தன், சுருதாயுஷ், அஸ்ருதாயுஷ் ஆகியோரும் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(34) ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமைமிக்கவனுமான பாண்டியன் {சாரங்கத்வஜன்}, போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்டான். இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(35)

பிருஹத்பலன் கொல்லப்பட்டான், மகதர்களின் வலிமைமிக்க மன்னன், வீர உக்ராயுதன், அந்த வகை வில்லாளிகள் அனைவரும்,(36) அவந்தியின் இளவரசர்கள் இருவரும் (விந்தன் மற்றும் அனுவிந்தன்), திரிகர்த்தர்களின் மன்னன் {சுசர்மன்}, எண்ணற்ற சம்சப்தகர்கள் ஆகியோரும் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(37) மன்னன் அலம்புசன், ராட்சசன் அலாயுதன், ரிஷ்யசிருங்கன் மகன் {ஆர்ஷ்யசிருங்கி} ஆகியோர் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(38) நாராயணர்கள், கோபாலர்கள் ஆகியரை உள்ளடக்கிய, போரில் வெல்லப்பட முடியாத உருப்புகளும், பல்லாயிரம் மிலேச்சர்களும் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(39) சுபலனின் மகன் சகுனி, சூதாடியின் மகன் என்றழைக்கப்படுபவனும், தன் படைகளின் தலைமையில் நிற்கும் வீரனுமான வலிமைமிக்க உலூகன் ஆகியோர் கொல்லப்பட்டர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(40)

தாக்குதல் மற்றும் தற்காத்தல் ஆகியவற்றுக்கு உண்டான ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவர்களும், ஓ! சூதா, சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையான ஆற்றலைக் கொண்டவர்களுமான எண்ணிலடங்கா உயர் ஆன்ம வீரர்கள் ஆகியோரும்,(41) பல்வேறு ஆட்சிப்பகுதிகளைச் சேர்ந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(42) பெரும் வலிமை கொண்டவர்களான என் மகன்கள், என் பேரப்பிள்ளைகள், என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(43) விதிக்கு உட்பட்டே மனிதன் பிறப்பை எய்துகிறான் என்பதில் ஐயமில்லை. நற்பேறு பெற்ற மனிதனே நன்மையைச் சந்திக்கிறான்.(44) ஓ! சஞ்சயா, நான் நற்பேற்றை இழந்தவனாதலால், என் பிள்ளைகளை இழந்தேன். கிழவனான நான், இப்போது என் எதிரிகளின் ஆளுகைக்கு எவ்வாறு அடிபணிவது?(45)

ஓ! தலைவா {சஞ்சயா}, நாடுகடந்து காடுகளுக்குச் செல்வதைத் தவிர எனக்கு நன்மை வேறேதும் இல்லை என நான் நினைக்கிறேன். உறவினர்களையும், சொந்தங்களையும் இழந்தவனாக இருப்பதால், நான் காடுகளுக்கே செல்லப் போகிறேன்.(46) ஓ! சஞ்சயா, சிறகுகளை இழந்து அவல நிலையில் வீழ்ந்திருக்கும் எனக்கு, நாடுகடந்து காடுகளுக்குச் செல்வதைத் தவிர வேறேதும் சிறந்ததாக இருக்க முடியாது.(47) துரியோதனன், சல்லியன், துச்சாசனன், விவிம்சன், வலிமைமிக்க விகர்ணன் ஆகியோர் கொல்லப்பட்ட பிறகு,(48) போரில் ஒருவனாகவே என் நூறு மகன்களைக் கொன்ற பீமசேனனின் முழக்கங்களை நான் எவ்வாறு தாங்கிக் கொள்ளப் போகிறேன்?(49) அவன் {பீமன்}, நான் கேட்டுக் கொண்டிருக்கும்போதே துரியோதனனின் படுகொலையை அடிக்கடிப் பேசுவான். துயரிலும், கவலையிலும் எரிந்து கொண்டிருக்கும் என்னால் அவனது கொடுஞ்சொற்களைத் தாங்கிக் கொள்ள இயலாது” என்றான் {திருதராஷ்டிரன்}.”(50)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறே உறவினர்கள் மற்றும் சொந்தங்களை இழந்தவனும், துயரில் எரிந்து கொண்டிருந்தவனுமான அந்த மன்னன் {திருதராஷ்டிரரன்}, தன் மகன்களின் மரணத்தால் உண்டான சோகத்தில் மூழ்கி மீண்டும் மீண்டும் மயங்கி விழுந்தான்.(51) நீண்ட நேரம் அழுத பிறகு, தன் தோல்வியை எண்ணியவனும், அம்பிகையின் மகனுமான திருதராஷ்டிரன் சூடான பெருமூச்சுகளை விட்டான்.(52) கவலையில் மூழ்கி, துயரில் எரிந்து கொண்டிருந்த அந்தப் பாரதக் குலத்துக் காளை {திருதராஷ்டிரன்}, என்ன நடந்தது என்ற விபரங்களைக் கவல்கணன் மகனான தன் தேரோட்டி சஞ்சயனிடம் மீண்டும் கேட்டான்.(53)

திருதராஷ்டிரன், “பீஷ்மரும், துரோணரும் கொல்லப்பட்ட பிறகு, சூதன் மகனும் {கர்ணனும்} வீழ்ந்த பிறகு, என் போர்வீரர்கள் யாரைத் தங்கள் படைத்தலைவனாகக் கொண்டனர்?(54) போரில் என் வீரர்கள் யாரைத் தங்கள் படைத்தலைவனாக்குகிறார்களோ அவரை எந்தத் தாமதமும் இல்லாமல் பாண்டவர்கள் கொன்று வருகின்றனர்.(55) நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால், போரின் முன்னணியில் பீஷ்மர் கொல்லப்பட்டார். துரோணரும் நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்டார்.(56) அதே போலவே சூதன் மகனான வீரக் கர்ணனும், மன்னர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(57)

துரியோதனனுடைய குற்றத்தின் மூலம் இந்தப் பூமியின் மக்கள்தொகை அழிக்கப்படும் என்று நீண்ட காலத்திற்கு முன்பே உயர் ஆன்ம விதுரன் என்னிடம் சொன்னான்.(58) காரியங்களில் தங்கள் கண்களைச் செலுத்தினாலும், அவற்றைப் பார்க்காத மூடர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மூடனான எனக்கு விதுரனின் சொற்கள் அவ்வாறே ஆகின.(59) அனைத்தின் தன்மைகளையும் அறிந்த நீதிமிக்க ஆன்மாவான விதுரனின் சொற்கள் உண்மையைத் தவிர வேறேதும் இல்லை என்பதால், அப்போது அவன் என்ன சொன்னானோ, சரியாக அதுவே நடந்திருக்கிறது.(60) விதியால் பீடிக்கப்பட்ட நான், அந்தச் சொற்களின்படி நடந்து கொள்ளவில்லை. அத்தீய வழியின் கனிகளே இப்போது தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. ஓ! கவல்கணன் மகனே {சஞ்சயா}, மீண்டும் அவற்றை எனக்கு விவரிப்பாயாக.(61) கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு எவன் நமது படையின் தலைவனானான்? அர்ஜுனனையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} எதிர்த்துச் சென்ற தேர்வீரன் எவன்?(62) போரில் மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} வலது சக்கரத்தைப் பாதுகாத்தவர்கள் யாவர்? அந்த வீரன் {சல்லியன்} போரிடச் சென்ற போது, அவனது இடது சக்கரத்தைப் பாதுகாத்தவர்கள் யாவர்?அவனது பின்புறத்தைப் பாதுகாத்தது யார்?(63)

நீங்கள் அனைவரும் ஒன்றாக இருந்தபோது, ஓ! சஞ்சயா, வலிமைமிக்க மத்ரர்களின் மன்னனையும் {சல்லியனையும்}, எனது மகனையும் {துரியோதனனையும்} பாண்டவர்களால் எவ்வாறு கொல்ல முடிந்தது?(64) பாரதர்கள் பேரழிவை அடைந்த விவரங்களை எனக்குச் சொல்வாயாக. என் மகன் துரியோதனன் போரில் எவ்வாறு வீழ்ந்தான், என்பதை எனக்குச் சொல்வாயாக.(65) பாஞ்சாலர்கள், அவர்களைப் பின்தொடர்ந்தவர்கள், திருஷ்டத்யும்னன், சிகண்டி, திரௌபதியின் மகன்கள் ஐவர் ஆகியோர் அனைவரும் எவ்வாறு வீழ்ந்தனர் என்பதை எனக்குச் சொல்வாயாக.(66) பாண்டவர்கள் (ஐவர்), சாத்வதர்கள் இருவர் (கிருஷ்ணன் மற்றும் சாத்யகி), கிருபர், கிருதவர்மன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் உயிருடன் தப்பியது எவ்வாறு என்பதை எனக்குச் சொல்வாயாக.(67) போர் நடந்த முறை, அந்தப் போரின் தன்மை ஆகியவை அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ! சஞ்சயா, உரைப்பதில் நீ திறம் பெற்றவனாய் இருக்கிறாய். அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.”(68)

துரியோதனனின் வீர உரை! – சல்லிய பர்வம் பகுதி – 03-கர்ணன் கொல்லப்பட்ட பிறகு தப்பி ஓடிய கௌரவப்படையின் நிலை; தன் சாரதியிடம் பேசிய துரியோதனன்; இருபத்தைந்தாயிரம் பேரைத் தன் கதாயுதத்தால் கொன்ற பீமசேனன்; திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன் மற்றும் சாத்யகி ஆகியோர் செய்த போர்; பாண்டவர்கள் அனைவரையும் தடுத்த துரியோதனன்; மீண்டும் தப்பி ஓடிய கௌரவப் படை; துரியோதனன் ஆற்றிய வீர உரை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருக்களும், பாண்டவர்களும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டபோது, பேரழிவு நடந்தது எவ்வாறு என்பதைக் கவனமாகக் கேட்பீராக.(1) பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {அர்ஜுனனால்}, சூதன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டபிறகு, மீண்டும் மீண்டும் துருப்புகள் திரட்டப்பட்டு, மீண்டும் மீண்டும் அவை தப்பி ஓடிய பிறகு,(2) கர்ணனின் மரணத்தை அடுத்து நடந்த போரில் மனிதர்களுக்குப் பேரழிவு நேர்ந்த பிறகு, பார்த்தன் {அர்ஜுனன்} சிங்க முழக்கங்களைச் செய்தான். அந்நேரத்தில் உமது மகன்களின் இதயங்களில் பேரச்சம் நுழைந்தது.(3) உண்மையில், கர்ணனின் மரணத்திற்குப் பிறகு, உமது படையில் எவனாலும், துருப்புகளைத் திரட்டுவதிலோ, தன் ஆற்றலை வெளிக்காட்டுவதிலோ தன் இதயத்தை நிலைநிறுத்த முடியவில்லை.(4) அடியற்ற பெருங்கடலில் தங்களைக் காத்துக் கொள்ள ஒரு தெப்பம் இல்லாத கப்பலுடைந்த வியாபாரிகளைப் போல அவர்கள் தெரிந்தனர். தங்கள் பாதுகாவலன் {கர்ணன்}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் கொல்லப்பட்ட போது, அவர்கள் பரந்த கடலில் இருந்து பாதுகாப்பாக ஏதோ ஒரு கரையை அடைய விரும்பும் மனிதர்களைப் போல இருந்தனர்.(5) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலைக்குப் பின்னர் கணைகளால் சிதைக்கப்பட்டுப் பீதியடைந்த உமது துருப்பினர், பாதுகாவலனை விரும்பும் பாதுகாப்பற்ற மனிதர்களைப் போலவோ, சிங்கத்தால் பீடிக்கப்படும் மான்கூட்டம் போலவோ இருந்தனர்.(6)

சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வெல்லப்பட்ட அவர்கள், கொம்புகளொடிந்த காளைகளைப் போலவோ, நச்சுப்பற்கள் உடைபட்ட பாம்புகளைப் போலவோ மாலை வேளையில் திரும்பினார்கள்.(7) அவர்களது வீரர்களில் முதன்மையானவர்கள் கொல்லப்பட்டதும், கூரிய கணைகளால் துளைக்கப்பட்டுக் குழம்பிய உமது மகன்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலைக்குப் பின்னர் அச்சத்தால் தப்பி ஓடினர்.(8) ஆயுதங்கள் மற்றும் கவசங்களை இழந்த அவர்கள் அனைவரும், தங்கள் புலனுணர்வுகளையும் இழந்து எந்தத் திசையில் ஓடுவது என்பதை அறியாதிருந்தனர். அச்சத்தால் அனைத்துப் பக்கங்களிலும் தங்கள் கண்களைச் செலுத்திக்கொண்டே அவர்களில் பலர் ஒருவரையொருவர் கொல்லத் தொடங்கினர்.(9) பலர், “என்னைத்தான் பீபத்சு {அர்ஜுனன்} பின்தொடர்ந்து வருகிறான். என்னைத்தான் விருகோதரன் {பீமன்} பின்தொடர்ந்து வருகிறான்” என்றெண்ணி கீழே விழுந்தனர், அல்லது வாட்டமடைந்தனர்.(10)

சிலர் வேகமாகக் குதிரைகளைச் செலுத்திக் கொண்டும், சிலர் வேகமான தேர்களிலும், சிலர் வேகமான யானைகளிலும், எனப் பெரும் தேர்வீரர்கள் பலர், காலாட்படைவீரர்களைக் கைவிட்டுவிட்டு அச்சத்தால் தப்பி ஓடினர்.(11) களத்தில் இருந்து அவர்கள் தப்பி ஓடியபோது, யானைகளால் தேர்கள் உடைக்கப்பட்டன, பெரும் தேர்வீரர்களால் குதிரைவீரர்கள் நொறுக்கப்பட்டனர், குதிரைக்கூட்டங்களால் காலாட்படையினர் நசுக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.(12) சூதன் மகனின் {கர்ணனின்} வீழ்ச்சிக்குப் பிறகு, கள்வர்களும், இரைதேடும் விலங்குகளும் நிறைந்த காட்டில் வணிகர்க்கூட்டத்திலிருந்து பிரிந்து சென்றவர்களைப்போல உமது துருப்பினர் இருந்தனர்.(13) பாகர்கள் கொல்லப்பட்ட சில யானைகளும், துதிக்கைகள் வெட்டப்பட்ட சில யானைகளும் அச்சத்தால் பீடிக்கப்பட்டு, மொத்த உலகமும் பார்த்தனால் {அர்ஜுனனால்} நிறைந்திருப்பதைப் போலக் கண்டன.(14)

பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டுத் தப்பி ஓடும் தன் துருப்புகளைக் கண்ட துரியோதனன், ஓ! என்றும் ஐயோ! என்று கதறிக் கொண்டே தன் சாரதியிடம்,(15) “வில் தரித்துக் கொண்டு, படையின் பின்புறத்தில் நான் நிலைகொண்டால், பார்த்தனால் என்னை மீறிச் செல்ல இயலாது. எனவே, குதிரைகளை வேகமாகச் செலுத்துவாயாக.(16) போரில் நான் என் வீரத்தை வெளிப்படுத்தினால், கரைகளை ஒருபோதும் மீறத் துணியாத பெருங்கடலைப் போலவே குந்தியின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} என்னை மீறத் துணிய மாட்டான்.(17) இன்று, அர்ஜுனன், கோவிந்தன் {கிருஷ்ணன்}, செருக்கு மிக்க விருகோதரன் {பீமன்} மற்றும் எஞ்சியிருக்கும் என் எதிரிகளையும் கொன்றுவிட்டு, கர்ணனுக்கு நான் பட்டிருக்கும் கடனிலிருந்து விடுபடுவேன்” என்றான் {துரியோதனன்}.(18) இவ்வாறு வீரனாகவும், மதிப்புமிக்க மனிதனாகவும் மாறிய குருமன்னனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அவனது சாரதி, தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் குதிரைகளை மெதுவாகவே தூண்டினான்.(19) அந்நேரத்தில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களை இழந்த துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் பலரும், இருபத்தைந்தாயிரம் {25,000} காலாட்படை வீரர்களும் (போரிடுவதற்காக) மெதுவாகச் சென்றனர்.(20)

அப்போது கோபத்தால் நிறைந்த பீமசேனனும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனும் நால்வகைப் படைகளின் துணையுடன் அந்தத் துருப்புகளைச் சூழ்ந்து கொண்டு, கணைகளால் அவர்களை அழித்தனர்.(21) அவர்கள் அனைவரும் பீமனுடனும், பிருஷதன் மகனுடனும் {திருஷ்டத்யும்னனுடனும்} தீவிரமாகப் போரிட்டனர். அவர்களில் பலர், அந்தப் பாண்டவ வீரர்கள் இருவரின் பெயர்களையும் சொல்லி அவர்களை அறைகூவியழைத்தனர்.(22) போரில் அவர்களால் சூழப்பட்ட பீமன் அவர்களிடம் சினம் கொண்டவனானான். வேகமாகத் தன் தேரில் இருந்து இறங்கிய அவன் {பீமன்}, தன் கதாயுதத்தைக் கொண்டு போரிடத் தொடங்கினான்.(23) தன் சொந்த கரங்களின் பலத்தைச் சார்ந்திருந்தவனும், குந்தியின் மகனுமான விருகோதரன் {பீமன்}, தேரில் இருந்தவனானாலும், நியாயமான போர்விதிகளை நோற்பவனாக, தரையில் இருந்த அந்த எதிரிகளோடு போரிடவில்லை.(24) முழுக்க இரும்பாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டும், தாங்கு கயிற்றைக் கொண்டதும், யுகமுடிவின் அந்தகனுக்கு ஒப்பானதுமான அந்தக் கனத்த கதாயுதத்தை எடுத்துக் கொண்ட பீமன், யமன் தன் தண்டத்தால் உயிரினங்கள் அனைத்தையும் கொல்வதைப் போல அவர்கள் அனைவரையும் கொன்றான்.(25)

சினத்தால் தூண்டப்பட்ட அந்தக் காலாட்படைவீரர்கள், தங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் இழந்த நிலையில், தங்கள் உயிர்களையும் விடத் தயாராகி, சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும் பூச்சிகளைப் போல அந்தப் போரில் பீமனை நோக்கி விரைந்தனர்.(26) உண்மையில், சினத்தால் நிறைந்தவர்களும், போரில் வெல்லப்பட முடியாதவர்களுமான அந்தப் போர்வீரர்கள், பீமசேனனை அணுகி, யமனின் பார்வைபட்ட உயிரினங்களைப் போலத் திடீரென மடிந்தனர்.(27) வாளையும், கதாயுதத்தையும் எடுத்துக் கொண்ட பீமன், ஒரு பருந்தைப் போலத் தெரிந்து, உமது அந்த இருபத்தைந்தாயிரம் போர்வீரர்களையும் கொன்றான்.(28) அந்தத் துணிச்சல்மிக்கப் படைப்பிரிவைக் கொன்ற பிறகு, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான பீமன், தன் முன் திருஷ்டத்யும்னனைக் கொண்டு மீண்டும் நின்றான்.(29)

அதே வேளையில் பெரும் சக்தியைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} (குருக்களின்) தேர்ப்படைப்பிரிவை நோக்கிச் சென்றான். பெரும் பலத்தைக் கொண்டவர்களான மாத்ரியின் இரட்டை மகன்களும் {நகுலன், சகாதேவன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் அனைவரும், சகுனியைக் கொல்லும் விருப்பத்தில் அவனை எதிர்த்துப் பெரும் வேகத்தில் உற்சாகமாக விரைந்து சென்றனர்.(30) சகுனியின் எண்ணற்ற குதிரைப்படையைக் கூரிய கணைகளால் கொன்ற அந்தப் பாண்டவ வீரர்கள், சகுனியை எதிர்த்து வேகமாக விரைந்து, ஒரு பயங்கரப் போரைச் செய்தனர்.(31) அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்}, மூவுலகிலும் கொண்டாடப்பட்ட தன் வில்லான காண்டீவத்தை வளைத்துக் கொண்டு, கௌரவர்களின் தேர்ப்படைப் பிரிவுக்கு மத்தியில் ஊடுருவினான்.(32) வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், கிருஷ்ணனைச் சாரதியாகக் கொண்டதும், அர்ஜுனனை அதிலிருக்கும் போர்வீரனாகக் கொண்டதுமான அந்தத் தேரைக் கண்ட உமது துருப்புகள் அச்சத்தால் தப்பி ஓடின.(33) தேர்கள் மற்றும் குதிரைகளை இழந்தவர்களும், அனைத்துப் பக்கத்திலும் கணைகளால் துளைக்கப்பட்டவர்களுமான இருபத்தைந்தாயிரம் காலாட்படைவீரர்கள் பார்த்தனை {அர்ஜுனனை} நோக்கிச் சென்று அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(34)

அப்போது பாஞ்சாலர்களுக்கு மத்தியில் வலிமைமிக்கத் தேர்வீரனாக இருந்தவன் (திருஷ்டத்யும்னன்), தன் தலைமையில் பீமசேனனைக் கொண்டு, அந்தத் துணிச்சல்மிக்கப் படைப்பிரிவை வேகமாகக் கொன்று, வெற்றியாளனாக நின்றான்.(35) பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனும், கொண்டாடப்பட்டவனுமான திருஷ்டத்யும்னன் பேரழகு கொண்டவனாகவும், எதிரிகளின் பெருங்கூட்டத்தை நொறுக்கப்பவனாகவும் இருந்தான்.(36) புறாக்களைப் போன்ற வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தேரைக் கொண்டவனும், உயர்ந்த கோவிதார மரத்தால் செய்யப்பட்ட கொடிமரத்தைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னனைக் கண்டதும், உமது துருப்புகள் அச்சத்தால் தப்பி ஓடின.(37) தங்களுக்கு மத்தியில் சாத்யகியைக் கொண்ட மாத்ரியின் கொண்டாடப்பட்ட மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர்), ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் வேகம் கொண்டவனான காந்தார மன்னனை {சகுனியைப்} பின்தொடர்ந்து சென்று வேகமாக எங்கள் முன் தோன்றினர்.(38) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சேகிதானன், சிகண்டி, திரௌபதியின் மகன்கள் (ஐவர்) ஆகியோர், பெரும் எண்ணிக்கையிலான உமது துருப்பினரைக் கொன்று தங்கள் சங்குகளை முழங்கினர்.(39) களத்தில் இருந்து முகங்களைத் திருப்பிக் கொண்டு ஓடும் உமது துருப்பினர் அனைவரையும் கண்ட அந்த (பாண்டவ) வீரர்கள், வெல்லப்பட்ட காளைகளைத் துரத்தும் காளைகளைப் போல அவர்களைத் துரத்திச் சென்று தாக்கினர்.(40)

அப்போது பாண்டுவின் மகனான வலிமைமிக்கச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இன்னும் களத்தில் எஞ்சி நின்ற உமது படையைக் கண்டு சினத்தால் நிறைந்தான்.(41) ஓ! ஏகாதிபதி, அந்த எஞ்சிய உமது படையினரைத் திடீரென அவன் தன் கணைகளால் மறைத்தான். எனினும், அப்போது எழுந்த புழுதியால் காட்சி மறைக்கப்பட்டதன் விளைவால் எதையுமே {என்னால்} காண முடியவில்லை.(42) போர்க்களம் கணைகளால் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியிலும் இருள் பரவியது. ஓ! ஏகாதிபதி, உமது துருப்புகள் அச்சத்தால் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(43) அவனது {துரியோதனனது} படை இவ்வாறு பிளக்கப்பட்ட போது, ஓ! ஏகாதிபதி, அந்தக் குருமன்னன் {துரியோதனன்}, நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இருவரையும் எதிர்த்து விரைந்தான்.(44) அப்போது, ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, அசுரன் பலி, தேவர்கள் அனைவரையும் அறைகூவியழைத்ததைப் போலவே, துரியோதனன் பாண்டவர்கள் அனைவரையும் போருக்கு அறைகூவியழைத்தான்.(45)

பிறகு சினத்தால் நிறைந்து, ஒன்று கூடிய பாண்டவர்கள், முழங்கிக் கொண்டிருக்கும் துரியோதனனை எதிர்த்து, மீண்டும் மீண்டும் அவனை நிந்தித்தபடியும், பல்வேறு ஆயுதங்களை ஏவியபடியும் சென்றனர்.(46) எனினும் பின்னவன் {துரியோதனன்}, அச்சமில்லாமல் தன் எதிரிகளைக் கணைகளால் தாக்கினான். அப்போது உமது மகனிடம் நாங்கள் கண்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(47) ஏனெனில், பாண்டவர்கள் அனைவரும் அவனை {துரியோதனனை} மீறிச் செல்ல இயலாதவர்களாக இருந்தனர். இந்த நேரத்தில், சற்றுத் தொலைவில் இருந்தவர்களும் கணைகளால் மிகவும் சிதைக்கப்பட்டவர்களும், தப்பி ஓடத் தயாராக இருந்தவர்களுமான தன் துருப்புகளைத் துரியோதனன் கண்டான். ஓ! ஏகாதிபதி, அவர்களை அணிதிரட்டிய உமது மகன் {துரியோதனன்}, போரிடத் தீர்மானித்தவனாகவும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்பியவனாகவும் அந்தப் போர்வீரர்களிடம்,(48,49) “இங்கிருந்து நீங்கள் தப்பி ஓடினாலும், சமவெளியிலோ, மலைகளிலோ, பாண்டவர்களால் உங்களைக் கொல்ல முடியாத இடமொன்றையும் நான் காணவில்லை. தப்பி ஓடுவதால் என்ன பயன்?(50) பாண்டவப் படையினர் இப்போது எஞ்சியிருக்கும் சிலராகக் குறைக்கப்பட்டுள்ளனர். இரு கிருஷ்ணர்களும் மிகவும் சிதைக்கப்பட்டிருக்கின்றனர். இங்கே நாம் அனைவரும் ஒரு நிலையை எடுத்தால், நாம் வெற்றியை அடைவது உறுதியே.(51)

எனினும், உங்கள் வியூகத்தைப் பிளந்து நீங்கள் தப்பி ஓடினாலோ, பாவிகளான உங்களைப் பின் தொடர்ந்து வந்து உங்கள் அனைவரையும் பாண்டவர்கள் கொல்வார்கள். எனவே, போரில் மரணமானது, நமக்கு நன்மையே.(52) க்ஷத்திரிய நடைமுறையின்படி, போர்க்களத்தில் போரிடுகையில் மரணித்தல் இனிமையானதாகும். அத்தகு மரணம் {மரணிப்பவனுக்கு} எந்தத் துயரையும் தராது. அத்தகு மரணத்தை அடைவதால், ஒரு மனிதன் அடுத்த உலகில் அழிவில்லா மகிழ்ச்சியை அனுபவிக்கிறான்.(53) இங்கே கூடியிருக்கும் க்ஷத்திரியர்கள் அனைவரும் நான் சொல்வதைக் கேட்பீராக. உங்கள் மூதாதையரின் காலத்தில் இருந்து, உங்களால் பயிலப்படும் கடமைகளைத் துறப்பதைவிட, நீங்கள் கோபக்கார பீமசேனனின் சக்திக்குச் சரணடைவதே சிறந்ததாகும்.(54) போரில் இருந்து தப்பி ஓடுவதைவிட ஒரு க்ஷத்திரியனுக்குப் பாவம் நிறைந்த செயல் வேறொன்றும் இல்லை. கௌரவர்களே, போர்க்கடமையைவிடச் சொர்க்கத்திற்குச் செல்லும் சிறந்த பாதை வேறேதும் இல்லை.(55) பிறரால் நெடுங்காலத்தில் அடையப்படும் (அடுத்த உலகத்தில் {மறுமையில்} உள்ள) அருள் நிறைந்த பகுதிகளை, ஒரு போர்வீரன் ஒரே நாளில் அடையலாம்” என்றான் {துரியோதனன்}[1].

மன்னனின் இந்த வார்த்தைகளை நிறைவேற்றிய பெரும் க்ஷத்திரியத் தேர்வீரர்கள்,(56) தங்கள் தோல்வியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு, பாண்டவர்களை எதிர்த்து மீண்டும் விரைந்தனர்.(57) அப்போது உமது துருப்புகளுக்கும், எதிரியின் துருப்புகளுக்கும் இடையில், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பான மிகப் பயங்கரமான போர் மீண்டும் தொடங்கியது.(58) அப்போது, ஓ! ஏகாதிபதி, உமது மகன் துரியோதனன் தன் துருப்புகள் அனைத்துடன், யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவர்களை எதிர்த்து விரைந்தான்” {என்றான் சஞ்சயன்}[2].(59)

துரியோதனனுக்குக் கிருபர் உரைத்த நீதி! – சல்லிய பர்வம் பகுதி – 04-போரில் கௌரவர்கள் சந்தித்திருக்கும் வீழ்ச்சியையும், அர்ஜுனன் மற்றும் பீமசேனனின் வீரத்தையும் துரியோதனனிடம் எடுத்துரைத்த கிருபர், பாண்டவர்களுடன் அமைதியேற்படுத்திக் கொள்ள அவனிடம் சொன்னது..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வீழ்ந்து கிடக்கும் தேர்களின் நீடங்கள், உயர் ஆன்மப் போர்வீரர்களின் தேர்கள், யானைகள் ஆகியவற்றையும், போரில் கொல்லப்பட்ட காலாட்படை வீரர்களையும் கண்டும்,(1) போர்க்களமானது, ருத்ரனின் விளையாட்டு மைதானத்தின் தன்மையை அடைந்திருப்பதைப் பார்த்தும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மன்னர்களின் மகிமையற்ற முடிவுகளை நோக்கியும்,(2) துயரத்தால் பீடிக்கப்பட்ட உமது மகன் {துரியோதனன்} பின்வாங்கிய பிறகு, பார்த்தனின் {அர்ஜுனனின்} ஆற்றலைக் கண்டும், கவலையால் நிறைந்த துருப்புகள் பெருந்துயரத்தில் விழுந்து,(3) அடுத்து என்ன செய்வது என்று ஆலோசித்துக் கொண்டிருக்கையில், நசுக்கப்பட்ட கௌரவப் போர்வீரர்களின் உரத்த ஓலங்களைக் கேட்டும், ஓ! பாரதரே,(4) முறையின்றி இடம்பெயர்ந்திருக்கும் பெரும் மன்னர்களின் அடையாளச்சின்னங்களைக் கண்டும், வயதையும், நன்னடத்தையையும் கொண்டவரும், கருணையால் நிறைந்தவரும், சொல்வன்மை கொண்டவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான குரு தலைவர் கிருபர், மன்னன் துரியோதனனை அணுகி, கோபத்துடன் இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னார்:(6)

அவர் {கிருபர்}, “ஓ! துரியோதனா, ஓ! பாரதா, நான் உன்னிடம் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்பாயாக. அதைக் கேட்ட பிறகு, ஓ! ஏகாதிபதி, ஓ! பாவமற்றவனே, உனக்கு விருப்பமுண்டானால் அவற்றின்படி செயல்படுவாயாக.(7) ஓ! ஏகாதிபதி, போர்க்கடமையைவிடச் சிறந்த பாதை வேறேதும் கிடையாது. ஓ! க்ஷத்திரிய ஒழுங்கின் காளையே, அப்பாதையை அடைந்த க்ஷத்திரியர்களே போரில் ஈடுபடுகிறார்கள்.(8) க்ஷத்திரிய நடைமுறைகளை நோற்று வாழ்பவன், தன் மகன், தந்தை, சகோதரன், சகோதரியின் மகன், தாய்மாமன், உறவினர்கள் மற்றும் சொந்தங்களுடன் போரிடுகிறான்.(9) போரில் அவன் கொல்லப்பட்டால், அதில் {அவனுக்குப்} பெரும் தகுதி {புண்ணியம்} கிடைக்கிறது. அதே போல, களத்திலிருந்து அவன் ஓடினாலோ, பெரும் பாவமே கிடைக்கிறது. இதன் காரணமாகத் தான், க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றி வாழ விரும்பும் மனிதனின் வாழ்வு மிகப் பயங்கரமானதாக இருக்கிறது.(10)

இதைப் பொறுத்தவரை, உனக்கு நான் சில நல்ல வார்த்தைகளைச் சொல்லப் போகிறேன். பீஷ்மர், துரோணர் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன் ஆகியோர் வீழ்ந்த பிறகு,(11) ஓ! பாவமற்றவனே {துரியோதனா}, ஜெயத்ரதன், உனது சகோதரர்கள், உனது மகன் லக்ஷ்மணன் ஆகியோர் கொல்லப்பட்ட பிறகு, இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன இருக்கிறது?(12) யாவர் மீது சுமைகள் அனைத்தையும் வைத்து, நாம் அரசுரிமையில் இன்புற்றோமோ, அவர்கள் அனைவரும் தங்கள் உடல்களைத் துறந்து, பிரம்மத்தை அறிந்த மனிதர்களால் அடையத்தக்க அருள் உலகங்களுக்குச் சென்றுவிட்டனர்.(13) நம்மைப் பொறுத்தவரை, எண்ணற்ற சாதனைகளைக் கொண்ட அந்தப் பெரும் தேர்வீரர்களை இழந்துவிட்டு, எண்ணற்ற மன்னர்களை அழிவடையச் செய்து, துன்பத்திலேயே நாம் நமது காலத்தைக் கடத்தப் போகிறோம்.(14) அந்த வீரர்கள் அனைவரும் உயிரோடு இருக்கும்போதுகூட, பீபத்சு {அர்ஜுனன்} வெல்லப்பட முடியாதவனாகவே இருந்தான். கிருஷ்ணனைத் தன் கண்களாகக் கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரன் {அர்ஜுனன்}, தேவர்களாலேயே கூட வீழ்த்தப்பட முடியாதவனாவான்.(15)

பரந்த (கௌரவப்) படையானது, (வசந்தகாலத்தில் நிறுவப்படும்) இந்திரத்வஜத்தைப் போல உயர்ந்திருப்பதும், இந்திரவில்லை {வானவில்லைப்} போலப் பிரகாசிப்பதும், குரங்கைத் தாங்கியிருப்பதுமான அவனது {அர்ஜுனனின்} கொடிமரத்தை அணுகி, எப்போதும் அச்சத்திலேயே நடுங்கியது.(16) பீமசேனனின் சிங்கமுழக்கம், பாஞ்சஜன்யத்தின் சங்கொலி, காண்டீவத்தின் நாணொலி ஆகியவற்றைக்கேட்டே நமது இதயங்கள் நமக்குள் இறந்து விழுந்தன {நமது மனம் மயக்கமடைந்தது}.(17) மின்னலின் கீற்றுகளைப் போல அசைந்து, நம் கண்களைக் குருடாக்கிய அர்ஜுனனின் காண்டீவமானது, நெருப்பு வளையத்திற்கு ஒப்பாகத் தெரிகிறது.(18) பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்ட அந்த உறுதிமிக்க வில் {காண்டீவம்} அசைக்கப்படும்போது, அனைத்துப் பக்கங்களிலும் அசையும் மின்னலின் கீற்றைப் போலத் தெரிகிறது.(19) வெண்ணிறத்தையும், பெரும் வேகத்தையும், சந்திரன் அல்லது குசப் புல்லின் காந்தியையும் கொண்டவையும், வானத்தையே விழுங்கியபடி ஓடக்கூடியவையுமான குதிரைகள் அவனது {அர்ஜுனனின்} தேரில் பூட்டப்பட்டிருக்கின்றன.(20) காற்றால் விரட்டப்படும் மேகத் திரள்களைப் போலக் கிருஷ்ணனால் தூண்டப்பட்டும், தங்கத்தால் தங்கள் அங்கங்கள் அலங்கரிக்கப்பட்டும், போரில் அவை அர்ஜுனனைச் சுமந்து செல்கின்றன.(21)

குளிர்காலத்தில் காட்டில் உலர்ந்த புற்களை எரித்துப் பெருகும் காட்டுத்தீயைப் போலவே ஆயுதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான அந்த அர்ஜுனன் போரில் உமது பெரும்படையை எரித்தான்.(22) இந்திரனின் காந்தியைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} நமது படையணிகளுக்குள் நுழையும்போது, நான்கு தந்தங்களைக் கொண்ட யானையொன்றைப் போல அவன் தெரிவதை நாம் கண்டிருக்கிறோம்.(23) உமது படையைக் கலங்கடித்து மன்னர்களை அச்சுறுத்தியபோது, தாமரைகள் நிறைந்திருக்கும் தடாகத்தைக் கலங்கடிக்கும் ஒரு யானைக்கு ஒப்பாகவே தனஞ்சயனை {அர்ஜுனனை} நாம் கண்டிருக்கிறோம்.(24) தன் வில்லின் நாணொலியால் போர்வீரர்கள் அனைவரையும் அச்சுறுத்தும்போது, சிறு விலங்குகளைத் திகிலடையச் செய்யும் சிங்கத்திற்கு ஒப்பாகவே அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} நாம் கண்டிருக்கிறோம்.(25)

உலகங்கள் அனைத்திலும் உள்ள வில்லாளிகளில் முதன்மையானவர்களும், வில் தரித்தோரில் காளைகளுமான அந்தக் கிருஷ்ணர்கள் இருவரும் {கருப்பர்களான கிருஷ்ணன், அர்ர்ஜுனன்}, கவசம் பூண்டபடி மிக அழகாகத் தெரிகிறார்கள்.(26) ஓ! பாரதா {துரியோதனா}, களத்தில் இன்று கொல்லப்படுவோருக்கு, இது பயங்கரமான பனினேழாவது {17வது} நாள் போராகும்.(27) காற்றால் கலைக்கப்படும் கூதிர்கால மேகங்களைப் போல உனது படையின் பல்வேறு பிரிவுகள் பிளந்துவிட்டன.(28) ஓ! ஏகாதிபதி, புயலால் கலங்கடிக்கப்பட்ட படகானது, பெருங்கடலின் மத்தியில் வெளிப்படுத்தப் படுவதைப்போல {மூழ்கடிக்கப்படுவதைப் போல}, ஓ ஏகாதிபதி {துரியோதனா}, அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, உனது படையை நடுங்கச் செய்தான்.(29)

(ஜெயத்ரதன் கொல்லப்பட்டபோது) சூதன் மகன் {கர்ணன்} எங்கே சென்றான்? தமது தொண்டர்களுடன் கூடிய துரோணர் எங்கே சென்றார்? நான் எங்கே சென்றேன்? நீ எங்கே சென்றாய்? ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} எங்கே சென்றான்? தன் சகோதரர்களுடன் கூடிய உன் சகோதரன் துச்சாசனன் எங்கே சென்றான்?(30) ஜெயத்ரதனைக் கண்டும், அவன் தன் கணைகள் அடையும் தொலைவில் இருக்கிறான் என்பதையும் அறிந்த அர்ஜுனன், உனது உறவினர்கள், சகோதரர்கள், கூட்டாளிகள், தாய்மாமன்கள் ஆகியோர் மீது தனது காலை வைத்து, அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மன்னன் ஜெயத்ரதனைக் கொன்றான். அப்போது செய்ய முடியாததை இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?(31,32) உன் துருப்பில் அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} வெல்ல எவன் இருக்கிறான்?(33) அந்த உயர் ஆன்மப் போர்வீரன் தெய்வீக ஆயுதங்கள் பலவற்றைக் கொண்டுள்ளான். மேலும் காண்டீவத்தின் நாணொலியே நமது சக்திகளை அபகரித்துவிடுகிறது.(34) இப்போது தலைவனில்லாமல் இருக்கும் இந்த உனது படையானது, நிலவில்லாது ஓரிரவைப் போலவோ, யானைகளால் முறிக்கப்பட்ட மரங்களைத் தன் கரைகளில் கொண்ட நீர்வற்றிய ஓர் ஆற்றைப் போலவோ இருக்கிறது.(35)

வெண்குதிரைகளையும், வலிய கரங்களையும் கொண்ட அர்ஜுனன், உலர்ந்த புற்களுக்கிடையில் பரவும் காட்டுத்தீயைப் போல, தலைவனற்ற இந்த உன் படைக்குள் ஊடுருவி, தன் விருப்பம் போலத் திரிவான்.(36) சாத்யகி, பீமசேனன் ஆகிய இருவரின் மூர்க்கமும், மலைகள் அனைத்தையும் பிளக்கவோ, பெருங்கடல்கள் அனைத்தையும் வற்றச்செய்வோ வல்லமைபெற்றதாகும்.(37) ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, சபைக்கு மத்தியில் பீமன் பேசிய வார்த்தைகள்[1] அனைத்தும் கிட்டத்தட்ட அவனால் நிறைவேற்றப்பட்டுவிட்டன. நிறைவேற்றப்படாமல் எஞ்சியிருப்பவனையும் அவனால் நிறைவேற்றப்படும்[1].(38) வீழ்த்தக் கடினமான பாண்டவர்களின் படைக்கு எதிராகக் கர்ணன் போரிட்டுக் கொண்டிருக்கும்போதே, அது காண்டீவதாரியால் தீவிரமாகப் பாதுகாக்கப்பட்டது.(39) எக்காரணமும் இன்றி, நீதிமான்களான பாண்டவர்களுக்கு நீ இன்னல்கள் பலவற்றை விளைவித்திருக்கிறய். அச்செயல்பாடுகளின் கனிகளே இப்போது வருகின்றன.(40)

உன் நோக்கங்களுக்காகவே நீ பெருங்கவனத்துன் ஒரு பெரும் படையைத் திரட்டினாய். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்தப் பரந்த படையும், நீயும் கூட இப்போது பேராபத்தில் விழுந்துவிட்டீர்கள்.(41) சுயமே {ஆத்மாவே} அனைத்திற்கும் புகலிடம் என்பதால், இப்போது உன்னை நீ பாதுகாத்துக் கொள்வாயாக. {ஆதாரமான} அந்தப் புகலிடம் உடைந்துபோனால், ஓ! ஐயா, அதிலுள்ள அனைத்தும் அனைத்துப் பக்கங்களிலும் சிதறிப் போகும்[2].(42) பலவீனமடைந்தவன், சமரசத்தின் மூலம் அமைதியை நாட வேண்டும். வளர்பவனோ, போரிட வேண்டும். இதுவே பிருஹஸ்பதி கற்பித்திருக்கும் கொள்கையாகும் {நீதியாகும்}.(43) நமது படை பலத்தைப் பொறுத்தவரை நாம் இப்போது பாண்டு மகன்களைவிடக் குறைவடைந்தவர்களாக இருக்கிறோம். எனவே, ஓ! தலைவா, பாண்டவர்களோடு அமைதியேற்படுத்திக் கொள்வதே நமக்கு நன்மையாகும் என நான் நினைக்கிறேன்.(44) எவன் தனக்கான நன்மையை அறிந்து கொள்ளவில்லையோ, தனக்கான நன்மையை (அறிந்தே) அலட்சியம் செய்வானோ, அவன் எந்த நன்மையையும் அடையமாட்டான்.(45)

மன்னன் யுதிஷ்டிரனைப் பணிந்தால், அரசுரிமை நம்மிடமே இருக்கும் என்றால், அதுவும் நமக்கு நன்மையையே உண்டாக்கும், மூடத்தனத்தின் மூலம் (பாண்டவர்களிடம்) தோற்பது நன்மையைத் தராது.(46) யுதிஷ்டிரன் கருணையுள்ளவன். விசித்திரவீரியன் மகனும் {திருதராஷ்டிரனும்}, கோவிந்தனும் {கிருஷ்ணனும்} வேண்டினால், அவன் உன்னையே மன்னனாகத் தொடர அனுமதிப்பான்.(47) வெற்றியாளர்களான மன்னன் யுதிஷ்டிரன், அர்ஜுனன் மற்றும் பீமசேனன் ஆகியோரிடம் ரிஷிகேசன் என்ன சொன்னாலும், அதற்கு அவர்கள் அனைவரும் ஐயமறக் கீழ்ப்படிவார்கள்.(48) கிருஷ்ணன், குருகுலத்தின் திருதராஷ்டிரன் வார்த்தைகளை மீற மாட்டான் என்றும், அதே போல, பாண்டுவின் மகனும் கிருஷ்ணனின் வார்த்தைகளை மீற மாட்டான் என்றும் நான் நினைக்கிறேன்.(49) பிருதையின் {குந்தியின்} மகன்களுடனான பகைமைகள் நிறுத்தப்படுவதே உனக்கான நன்மை என நான் கருதுகிறேன். குறுகிய நோக்கங்களுக்காகவோ, என் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவோ இதை நான் உனக்குச் சொல்லவில்லை. ஓ! மன்னா {துரியோதனா}, நன்மையெனக் கருதுவதையே நான் உனக்குச் சொல்கிறேன். (இப்போது இவற்றை நீ புறக்கணித்தால்) இவ்வார்த்தைகளை நீ உன் மரணத் தருவாயில் நினைவுகூர்வாய்” என்றார் {கிருபர்}.(50) வயதில் முதிர்ந்தவரும், சரத்வானின் மகனுமான கிருபர் அழுதுகொண்டே இவ்வார்த்தைகளைச் சொன்னார். வெப்பப் பெருமூச்சுகளை விட்ட அவர் கவலையடைந்தவராகக் கிட்டத்தட்ட தமது புலனுணர்வுகளை இழந்தார்” {என்றான் சஞ்சயன்}.(51)

திரௌபதியின் துகிலுரிப்பை மறப்பானோ? – சல்லிய பர்வம் பகுதி – 05-கிருபரின் வார்த்தைகள் நன்மையளிப்பனவாக இருப்பினும், அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொன்ன துரியோதனன்; பாண்டவர்களுடன் அமைதியேற்படுத்திக் கொள்ள முடியாத நிலையைக் கிருபருக்கு எடுத்துச் சொன்ன துரியோதனன்; பாண்டவர்களுக்குத் தான் இழைத்த தீமைகளைச் சொன்னது; துரியோதனனின் பேச்சால் உற்சாகமடைந்த வீரர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கௌதமரின் கொண்டாடப்பட்ட மகனால் {கிருபரால்} இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் (துரியோதனன்), சூடான பெருமூச்சுகளை விட்டபடி மௌனமாக இருந்தான்.(1) சிறிது நேரம் சிந்தித்தவனும், எதிரிகளை எரிப்பவனுமான அந்த உயர் ஆன்ம திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, சரத்வான் மகனான கிருபரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(2) “ஒரு நண்பன் சொல்லும் அத்தனையும் என்னிடம் நீர் சொல்லியிருக்கிறீர். மேலும், போரிடும்போதும், உமது உயிரைக் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைகொள்ளமால் எனக்காக அனைத்தையும் செய்திருக்கிறீர்.(3) பாண்டவப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் ஊடுருவி, பெரும் சக்தி கொண்டவர்களான பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் நீர் போராடியதை இந்த உலகம் கண்டிருக்கிறது.(4) ஒரு நண்பனால் சொல்லப்பட வேண்டியது எதுவோ, அஃது உம்மால் சொல்லப்பட்டது. எனினும், மரணத்தருவாயில் இருக்கும் ஒரு மனிதனுக்கு மருந்தைப் போல, உமது வார்த்தைகள் எனக்கு மகிழ்வைத் தரவில்லை.(5)

நன்மையானதும், சிறப்பானதும், காரணம் நிறைந்ததுமான நீர் சொன்ன இந்த வார்த்தைகள், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே {கிருபரே}, எனக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை.(6) (முன்பொரு சமயம்) நம்மால் நாடிழந்த அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, எவ்வாறு நம்மீது நம்பிக்கை வைப்பான்? அந்த வலிமைமிக்க மன்னன் {யுதிஷ்டிரன்} ஒருமுறை நம்மால் பகடையில் வீழ்த்தப்பட்டான். என் வார்த்தைகள் அவன் எவ்வாறு நம்புவான்?(7) அதேபோல, பார்த்தர்களின் நன்மையிலேயே எப்போதும் ஈடுபடும் கிருஷ்ணன், நம்மிடம் தூதனாக வந்தபோது, நம்மால் வஞ்சிக்கப்பட்டான். நமது அந்தச் செயல்பாடு ஆய்வமைவற்றதாகும் {தவறான முடிவாகும்}. ஓ! மறுபிறப்பாளரே, ரிஷிகேசன் {கிருஷ்ணன்} எவ்வாறு என் வார்த்தைகளை நம்புவான்?(8) இளவரசி கிருஷ்ணை {திரௌபதி} சபையில் நின்று கொண்டிருந்தபோது, பரிதாபகரமாக அழுதாள். நமது அந்தச் செயல்பாட்டையோ, நம்மால் யுதிஷ்டிரன் நாடிழந்ததையோ ஒருபோதும் கிருஷ்ணன் மறக்கமாட்டான்.(9) இந்த இரு கிருஷ்ணர்களும் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகியோர்} தங்களுக்குள் ஒரே இதயத்தைக் கொண்டவர்கள் என்றும், ஒருவர் மீதொருவர் உறுதியான பற்றுடையவர்கள் என்றும் முன்பே நாம் கேட்டிருந்தோம். ஓ! தலைவரே {கிருபரே}, இன்று அதை நம் கண்களாலேயே நாம் காண்கிறோம்.(10)

தன் தங்கை {சுபத்திரை} மகனின் {அபிமன்யுவின்} படுகொலையைக் கேட்ட கேசவன் {கிருஷ்ணன்}, தன் இரவுகளைக் கவலையிலேயே கழிக்கிறான். அவனுக்கு நாம் பெரிய தீங்கை இழைத்திருக்கிறோம். அவன் நம்மை எவ்வாறு மன்னிப்பான்?(11) அபிமன்யுவுடைய மரணத்தின் விளைவாக அர்ஜுனனும், அவலமான நிலையை அடைந்திருக்கிறான். வேண்டிக் கேட்டுக் கொண்டாலும் கூட, அவன் எவ்வாறு எனக்கு நன்மையைச் செய்ய முயல்வான்?(12) பாண்டுவின் இரண்டாவது மகனும், வலிமைமிக்கவனுமான பீமசேனன், மிகவும் சீற்றத்துடன் இருக்கிறான். அவன் ஒரு பயங்கரமான சபதத்தைச் செய்திருக்கிறான். அவன் {பீமன்} உடைவானேயொழிய ஒருபோதும் வளையமாட்டான். {இறப்பானேயொழிய பணியமாட்டான்}.(13) நமக்கு எதிராகப் பகைமையையே சுவாசிக்கும் அந்த வீர இரட்டையர்கள் {நகுலனும், சகாதேவனும்}, கவசம்பூட்டி, வாள் தரிக்கும்போது இரு யமன்களுக்கு ஒப்பாக இருக்கின்றனர்.(14) திருஷ்டத்யும்னனும், சிகண்டியும் எனக்கு எதிராகத் தங்கள் வாள்களை உருவியிருக்கிறார்கள். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {கிருபரே}, அவர்கள் எவ்வாறு எனக்கு நன்மையைச் செய்ய முயல்வார்கள்?(15)

ஒற்றையாடையுடுத்தி {வீட்டுக்கு விலக்காகத்} தன் பருவ காலத்தில் இருந்த இளவரசி கிருஷ்ணை {திரௌபதி}, அனைவரின் கண்களுக்கு முன்பாகவும் சபைக்கு மத்தியில் வைத்துத் துச்சாசனனால் கொடூரமாக நடத்தப்பட்டாள்.(16) துயரில் மூழ்கிய அந்த நிர்வாண திரௌபதியை[1] இன்னும் நினைவில் வைத்திருப்பவர்களும், எதிரிகளை எரிப்பவர்களுமான பாண்டவர்களைப் போரில் இருந்து விலக்கவே முடியாது.(17) மேலும் துருபதனின் மகளான கிருஷ்ணை {திரௌபதி}, என் அழிவுக்காகவும், தன் கணவர்களால் பேணப்படும் நோக்கங்களின் வெற்றிக்காகவும் கடும் நோன்புகளை நோற்று, அனைத்து நாட்களிலும் வெறுந்தரையில் படுத்து, பகைமைகள் முடியும் வரை அந்நிலையிலேயே தொடரவே நினைத்திருக்கிறாள்.(18) கௌரவம் மற்றும் செருக்கைக் கைவிட்டவளான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} உடன் பிறந்த தங்கை (சுபத்ரை), உண்மையான ஒரு பணிப்பெண்ணாகவே மாறி திரௌபதிக்கு எப்போதும் பணிவிடைகளைச் செய்கிறாள்.(19) எனவே, அனைத்தும் தழல்விட்டெரிகின்றன. அந்த நெருப்பை ஒருபோதும் தணிக்க முடியாது. அபிமன்யுவுடைய படுகொலையின் விளைவால் அவர்களுடன் அமைதி ஏற்படுத்திக் கொள்வது சாத்தியமற்றதாகிவிட்டது.(20)

கடல் சூழ்ந்த இந்தப் பூமியின் அரசுரிமையை அனுபவித்த நான், பாண்டவர்களின் உதவியின் கீழ் ஓர் அரசை எவ்வாறு அமைதியாக அனுபவிக்க முடியும்?(21) மன்னர்கள் அனைவரின் தலைகளின் மீது, சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த நான், யுதிஷ்டிரனின் பின்னால் ஓர் அடிமையைப் போல எவ்வாறு நடந்து செல்ல முடியும்?(22) மகிழத்தக்க பொருட்கள் அனைத்தையும் அனுபவித்து, பெரும் கருணையை வெளிப்படுத்திய நான், இப்போது இரங்கத்தக்கவர்களை என் தோழர்களாக அடைந்து ஓர் இரங்கத்தக்க வாழ்வை எவ்வாறு நோற்க முடியும்?(23) நீர் பேசிய மென்மையான நன்மையான அந்த வார்த்தைகளை நான் வெறுக்கவில்லை. எனினும், அமைதிக்கான நேரம் இதுவல்ல என்றே நான் நினைக்கிறேன்.(24) ஓ! எதிரிகளை எரிப்பவரே {கிருபரே}, நேர்மையாகப் போரிடுவதே நல்ல கொள்கை என நான் கருதுகிறேன். ஓர் அலியைப் போலச் செயல்படுவதற்கு இது நேரமல்ல. மறுபுறம், இது போருக்கான நேரமாகும்.(25)

நான் பல வேள்விகளைச் செய்திருக்கிறேன். பிராமணர்களுக்குத் தக்ஷிணைகளைக் கொடுத்திருக்கிறேன். என் விருப்பங்கள் அனைத்தையும் நான் அடைந்திருக்கிறேன். வேத உரைகளை நான் கேட்டிருக்கிறேன். என் எதிரிகளின் தலைகளின் மீது நான் நடந்திருக்கிறேன்.(26) என் பணியாட்கள் அனைவரும் என்னால் நன்கு பேணப்பட்டனர். மக்களைத் துயரில் இருந்து விடுவித்திருக்கிறேன். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, பாண்டவர்களிடம் இத்தகு எளிய வார்த்தைகளைப் பேச நான் ஒருபோதும் துணியமாட்டேன்.(27) வெளிநாட்டு அரசுகளை நான் கைப்பற்றியிருக்கிறேன். என் சொந்த அரசையும் நான் முறையாகவே ஆண்டிருக்கிறேன். இன்பத்துக்குகந்த பல்வேறு பொருட்களை நான் அனுபவித்திருக்கிறேன். பித்ருக்கள் மற்றும் க்ஷத்திரியக்கடமைக்கு நான் செலுத்த வேண்டிய கடன்களைச் செலுத்தியிருக்கிறேன்.(28) நிச்சயமாக இங்கே இனி மகிழ்ச்சியில்லை. அரசாலோ, நற்பெயராலோ என்ன நேரப்போகிறது? இங்கே அடையத்தக்கது புகழ் மட்டுமே. அந்தப் புகழைப் போரின் மூலமே அடையலாம்; வேறு எவ்வழியிலும் அடையமுடியாது.(29) க்ஷத்திரியன் ஒருவன் தன் வீட்டில் மரணமடைவது நிந்திக்கத்தக்கதாகும். வீட்டிலுள்ள படுக்கையில் மரணம் என்பது ஒருவனுக்கு மிகவும் பாவம் நிறைந்ததாகும்.(30)

வேள்விகளைச் செய்த பிறகு, தன் உடலைக் காடுகளிலோ, போரிலோ துறக்கும் ஒரு மனிதன் பெரும் மகிமையை அடைகிறான்.(31) அழுதுகொண்டிருக்கும் உறவினர்களுக்கு மத்தியில், நோய் மற்றும் முதுமையால் பீடிக்கப்பட்டு, வலியில் பரிதாபமாக அழுதவாறு இறப்பவன் மனிதனே அல்ல.(32) பல்வேறு இன்பநுகர் பொருட்களைக் கைவிட்டு, நேர்மையாகப் போரிடப் போகும் நான், உயர்ந்த எல்லையை அடைந்தோரின் தோழமையை அடைந்து, சக்ரனின் {இந்திரனின்} உலகங்களுக்குச் செல்லப் போகிறேன்.(33) போரில் இருந்து பின்வாங்காதவர்களும், அறிவைக் கொடையாகக் கொண்டவர்களும், உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், வேள்விகளைச் செய்தவர்களும், ஆயுதவேள்வியில் {போரில்} தூய்மையடைந்தவர்களும் {புனிதமடைந்தவர்களும் [இறந்தவர்களும்]}, நேர்மையான நடத்தை கொண்டவர்களுமான வீரர்களின் வசிப்பிடம் சொர்க்கமேயாகும் என்பதில் ஐயமில்லை.(34) போரில் ஈடுபடும் அத்தகு வீரர்களை, பல்வேறு இனங்களைச் சேர்ந்த அப்சரஸ்கள் இன்பமாகப் பார்க்கின்றனர் என்பதில் ஐயமில்லை. அப்சரஸ்களின் தோழமையுடன், சொர்க்கத்தில் இன்புற்று, தேவர்களின் சபையில் வழிபடப்படும் அவர்களைப் பித்ருக்கள் பார்க்கின்றனர் என்பதில் ஐயமில்லை.(35)

போரில் இருந்து திரும்பாதவர்களும், தேவர்களும் செல்லும் பாதையில் நாம் இப்போது உயர்வோமாக.(36) அந்தப் பாதையிலேயே நம் மதிப்பிற்குரிய பாட்டனும் {பீஷ்மரும்}, பெரும் அறிவைக் கொண்ட ஆசானும் {துரோணரும்}, ஜெயத்ரதனும், கர்ணனும், துச்சாசனனும் சென்றனர்.(37) இந்தப் போரில் எனக்காகத் தீவிரமாகப் போராடிய துணிச்சல்மிக்க மன்னர்கள் பலர் கொல்லப்பட்டுவிட்டனர். கணைகளால் சிதைக்கப்பட்டு, குருதியில் குளித்த அங்கங்களுடன் கூடிய அவர்கள் வெறுந்தரையில் இப்போது கிடக்கிறார்கள்.(38) பெரும் துணிச்சலைக் கொண்டவர்களும், சிறந்த ஆயுதங்களை அறிந்தவர்களும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வேள்விகளைச் செய்தவர்களுமான அம்மன்னர்கள், தங்கள் கடமைகளைச் செய்து தங்கள் உயிர்மூச்சைத் துறந்து இப்போது இந்திரலோகவாசிகளாகிவிட்டனர்.(39) (அருள் உலகத்திற்குச் செல்ல) அவர்கள் வழிவகுத்துக் கொடுத்துள்ளனர். அந்த அருள் இலக்கை அடைய விரைந்து செல்லும் வீரர்களுடைய கூட்டத்தின் விளைவாக மீண்டும் அவ்வழி அடைவதற்கரிதாக மாறும்[2].(40)

எனக்காக இறந்த அந்த வீரர்களின் சாதனைகளை நன்றியுடன் நினைவுகூரும் நான், என் இதயத்தை அரசில் நிலைக்கச் செய்யாமல், அவர்களுக்கு நான் பட்டிருக்கும் கடனையே அடைக்க விரும்புகிறேன்.(41) என் நண்பர்கள், தம்பிகள் மற்றும் பாட்டன்கள் கொல்லப்படக் காரணமான நான் என் உயிரைக் காத்துக் கொண்டால், உலகம் என்னை நிந்திக்கும் என்பதில் ஐயமில்லை.(42) பாண்டு மகனுக்கு {யுதிஷ்டிரனைப்} பணிந்து, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இல்லாமல் நான் அனுபவிக்கப்போவது எத்தகைய அரசாக இருக்கக்கூடும்?(43) அண்டத்தில் அதை அடைந்து தலைவனாக இருந்த நான், இப்போது நல்ல போரின் மூலம் சொர்க்கத்தை அடையப் போகிறேன். இது வேறுவிதமாகாது” என்றான் {துரியோதனன்}.(44) துரியோதனனால் இவ்வாறு சொல்லப்பட்ட க்ஷத்திரியர்கள் அனைவரும் அந்தப் பேச்சை மெச்சி, மன்னனை உற்சாகமூட்டும் வகையில், “நல்லது, நல்லது” என்றனர்.(45)

தங்கள் தோல்விக்காக எவ்வருத்தமும் கொள்ளாமல், தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த உறுதியாகத் தீர்மானித்த அவர்கள் அனைவரும், போரிடத் தீர்மானித்த பிறகு, உற்சாகத்தால் நிறைந்தனர்.(46) தங்கள் விலங்குகளைத் தேற்றிய கௌரவர்கள், போரின் எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியை அடைந்து, களத்தில் இருந்து சற்றே இரு யோஜனைகளுக்குக் குறைந்த தொலைவில் (அந்த இரவுக்கான) தங்கள் முகாமை அமைத்தனர்.(47) புனிதமான சரஸ்வதியின் {சரஸ்வதி நதியின்} சிவந்த நீரையும், இமய மலையின் அடிவாரத்தில் மேட்டுச் சமவெளியை அடைந்த அவர்கள், அந்நீரில் குளித்து, அதைக் கொண்டு தங்கள் தாகத்தைத் தணித்துக் கொண்டனர். உமது மகனால் {துரியோதனனால்} உற்காசமடைந்த அவர்கள் (அந்த ஓய்வுக் களத்தில்) காத்திருந்தனர்.(48) மீண்டும் தங்களை ஒருவரோடொருவர் அணிதிரட்டிக் கொண்ட அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும், விதியால் உந்தப்பட்டு (தங்கள் முகாமில்) காத்திருந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(49)

படைத்தலைவனானான் சல்லியன்! – சல்லிய பர்வம் பகுதி – 06-இமய மலையின் அடிவாரத்தில் உள்ள மேட்டுச் சமவெளியில் பதினேழாம் நாள் இரவைக் கழித்த கௌரவர்கள்; படைத்தலைவரை நியமிக்கும்படி துரியோதனனைக் கேட்டுக் கொண்ட படை வீரர்கள்; அஸ்வத்தாமனிடம் சென்று ஆலோசனை கோரிய துரியோதனன்; சல்லியனைப் படைத்தலைவராக நியமிக்கும்படி சொன்ன அஸ்வத்தாமன்; அவ்வாறே ஆகும்படி சல்லியனை வேண்டிக் கொண்ட துரியோதனன்; அதை ஏற்றுக் கொண்ட சல்லியன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இமய மலையின் அடிவாரத்தில், அந்த மேட்டுச் சமவெளியில் இருந்த அந்த வீரர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரின் எதிர்பார்ப்பில் மகிழ்ந்து ஒன்றாகத் திரண்டு அந்த இரவைக் கழித்தனர்.(1) உண்மையில், சல்லியன், சித்திரசேனன், வலிமைமிக்கத் தேர்வீரனான சகுனி, அஸ்வத்தாமன், கிருபர், சாத்வதகுலத்தின் கிருதவர்மன்,(2) சுஷேனன், அரிஷ்டசேனன், பெரும் சக்தி கொண்ட திருதசேனன், ஜயத்சேனன் ஆகிய இந்த மன்னர்கள் அனைவரும் அங்கேயே தங்கள் இரவைக் கழித்தனர்.(3) வீரக் கர்ணன் போரில் கொல்லப்பட்ட பிறகு, வெற்றியை விரும்பிய பாண்டவர்களிடம் அச்சம் கொண்ட உமது மகன்கள், அந்த இமய மலைகளிலும் அமைதியை அடையத் தவறினர்.(4)

போரிடத் தீர்மானித்த அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னனை {துரியோதனனை} முறையாக வழிபட்டு, சல்லியனின் முன்னிலையில் அவனிடம் {துரியோதனனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்.(5) அவர்கள், “உன் படைக்கு யாராவது ஒருவரைத் தலைவராக்கிய பிறகு எதிரியுடன் போரிடுவதே உனக்குத் தகும். அவரால் பாதுகாக்கப்பட்டே போரில் நாம் எதிரிகளை வெல்வோம்” என்றனர்.(6) அப்போது துரியோதனன், தன் தேரில் இருந்து இறங்காமலேயே, தேர்வீரர்களில் முதன்மையானவனும், போர்விதிகள் அனைத்தையும் அறிந்தவனும், போரில் அந்தகனுக்கு ஒப்பானவனுமாi வீரனை (அஸ்வத்தாமனை) நோக்கிச் சென்றான்[1].(7) அழகிய அங்கங்களைக் கொண்டவனும், தலையை நன்கு மறைத்திருந்தவனும், சங்கில் உள்ளதைப் போலக் கழுத்தில் மூன்று கோடுகளைக் கொண்டவனும், இனிய பேச்சைக் கொண்டவனும், முற்றாக மலர்ந்த தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனும், புலியைப் போன்ற முகத்தைக் கொண்டவனும், மேருவைப் போன்ற மேன்மை கொண்டவனும்,(8) மஹாதேவனின் {சிவனின்} காளைக்கு ஒப்பான கழுத்து, கண்கள், நடை மற்றும் குரலைக் கொண்டவனும், நன்கு இயைந்த, பருத்த, நீண்ட கரங்களைக் கொண்டவனும், நன்கு கட்டமைக்கப்பட்ட அகன்ற மார்பைக் கொண்டவனும்,(9) காற்றில் பறக்கும் கருடனுக்கு இணையான வேகத்தையும், பலத்தையும் கொண்டவனும், சூரியனின் கதிர்களைப் போன்ற காந்தியைக் கொடையாகக் கொண்டவனும், புத்திக்கூர்மையில் உசனசுக்கு {சுக்கிரனுக்குப்} போட்டியாளனும் {இணையானவனும்},(10) அழகு, வடிவம் மற்றும் முகத்தின் கவர்ச்சி ஆகியவற்றில் சந்திரனைப் போன்றவனும், எண்ணற்ற தங்கத் தாமரைகளால் அமைந்ததைப் போன்ற உடலைக் கொண்டவனும், இயைந்து பொருந்தும் மூட்டுகளைக் கொண்டவனும்,(11) நன்கு கட்டமைக்கப்பட்ட தொடைகள், இடை மற்றும் குறுக்கைக் கொண்டவனும், அழகிய பாதம், அழகிய விரல்கள், அழகிய நகங்கள் ஆகியவற்றைக் கொண்டவனுமான அவன் {அஸ்வத்தாமன்}, படைப்புகள் அனைத்தின் நற்பண்புகள் மற்றும் அழகு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக நினைத்துப் பார்த்த பிறகு, படைப்பாளனால் பெருங்கவனத்துடன் படைக்கப்பட்டவனாகத் தெரிந்தான்.(12)

நற்குறிகள் அனைத்தையும் கொண்டவனும், ஒவ்வொரு செயலிலும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்பவனுமான அவன் {அஸ்வத்தாமன்}, கல்வியில் பெருங்கடலாவான். எப்போதும் தன் எதிரிகளைப் பெரும் வேகத்துடன் வெற்றிக் கொண்ட அவன், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான்.(13) நான்கு பாதங்கள் மற்றும் பத்து அங்கங்களைக் கொண்ட ஆயுத அறிவியலின் அனைத்து விவரங்களையும் அறிந்தவனாக அவன் இருந்தான்[2]. நான்கு வேதங்களையும், அதன் அங்கங்களையும், ஐந்தாவதாக ஆக்யானங்களையும்[3] அறிந்தவனாக அவன் இருந்தான்.(14) பெரும் தவத் தகுதியைக் கொண்டவரும், பெண்ணிடம் பிறக்காதவருமான துரோணர், பெருங்கவனத்துடனும், தவ நோன்புகளுடனும் முக்கண் தேவனை வழிபட்டு, {அவரைப் போன்றே} பெண்ணிடம் பிறக்காத தன் மனைவியிடம் {கிருபியிடம்} அவனை {அஸ்வத்தாமனைப்} பெற்றெடுத்தார்.(15)

அப்படிப்பட்ட ஒப்பற்ற சாதனைகளையும், புகழையும் கொண்டவனும், பூமியில் ஒப்பற்ற அழகைக் கொண்டவனும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் கற்றறிந்தவனும், சாதனைகளில் பெருங்கடலும், களங்கமற்றவனுமான அஸ்வத்தாமனை அணுகிய உமது மகன் {துரியோதனன்}, அவனிடம், “ஓ! ஆசான் மகனே {அஸ்வத்தாமரே}, நீரே இன்று எங்களது உயர்ந்த புகலிடமாக இருக்கிறீர். எனவே, இப்போது எவரை நமது படைத்தலைவராக நியமிப்பது? யாரைத் தலைமையாக்கிக் கொண்டு, ஒன்று சேர்ந்திருக்கும் நம் அனைவராலும் பாண்டவர்களை வெல்ல முடியும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக” என்றான் {துரியோதனன்}.(16-18)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}“சல்லியர் நமது படையின் தலைவராகட்டும். குலம், ஆற்றல், சக்தி, புகழ், அழகு மற்றும் பிற அனைத்து சாதனைகளிலும் அவரே மேன்மையானவராக இருக்கிறார்.(19) தமக்கு அளிக்கப்பட்ட சேவைகளால் மனம் நிறைந்த அவர் {சல்லியர்}, தன் சொந்த தங்கையின் {மாத்ரியின்} மகன்களைக் கைவிட்டுவிட்டு, நமது தரப்பை அடைந்திருக்கிறார். தாமே ஒரு பெரிய படையை வைத்திருக்கும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர், தேவர்ப்படையின் இரண்டாம் தலைவனை (கார்த்திகேயனை {முருகனைப்}) போன்றவராவார்.(20) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, அம்மன்னரை {சல்லியரை} நமது படைத்தலைவராக்கினால், வெல்லப்பட முடியாத ஸ்கந்தனை {முருகனைப்) படைத்தலைவனாக்கிய தேவர்களைப் போலவே நம்மால் வெற்றியை ஈட்ட முடியும்” என்றான் {அஸ்வத்தாமன்}.(21)

துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} இவ்வார்த்தைகளைச் சொன்னதும், சல்லியனைச் சூழ்ந்து கொண்ட மன்னர்கள் அனைவரும், அவன் வெற்றியடைவானென {வெற்றி} முழக்கமிட்டனர். போருக்குத் தங்கள் மனத்தை ஆயத்தம் செய்து கொண்ட அவர்கள் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தனர்.(22) அப்போது கரங்களைக் கூப்பியபடியே தன் தேரில் இருந்து இறங்கிய துரியோதனன், போரில் துரோணர் மற்றும் பீஷ்மருக்குப் போட்டியாளனும் {இணையானவனும்}, {அப்போது} தன் தேரில் இருந்தவனுமான சல்லியனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(23) “ஓ! நண்பர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவரே, நண்பர்களின் வடிவத்தில் இருக்கும் மனிதர்கள் உண்மையான நண்பர்கள்தானா? இல்லையா? என ஞானியர் சோதிப்பது போன்ற அப்படிப்பட்ட நேரம் இப்போது உமது நண்பர்களுக்கு வந்திருக்கிறது.(24) துணிச்சல்மிக்க நீரே எங்கள் படைத்தலைவராகி, எங்கள் படையின் முன்னணியில் இருக்க வேண்டும். நீர் போரிடச் செல்லும்போது பாண்டவர்களும், அவர்களது நண்பர்களும் உற்சாகத்தை இழப்பார்கள், பாஞ்சாலர்களோ தளர்வடைவார்கள்” என்றான் {துரியோதனன்}.(25)

சல்லியன், “ஓ! குருக்களின் மன்னா {துரியோதனா}, நீ என்னிடம் நிறைவேற்றச் சொல்வதை நான் நிறைவேற்றுவேன். உயிர்மூச்சு, நாடு, செல்வம் ஆகிய நான் கொண்ட அனைத்தும் உன் சேவைக்காகவே {உனக்காகவே} இருக்கின்றன” என்று பதிலுரைத்தான்.(26)

துரியோதனன், “ஓ! அம்மானே {தாய்மாமனே}, என் படையின் தலைமைப் பொறுப்பை அடைய நான் உம்மை வேண்டி நிற்கிறேன். ஓ! போர்வீரர்களில் முதன்மையானவரே, போரில் தேவர்களைப் பாதுகாக்கும் ஸ்கந்தனை {முருகனைப்} போலவே ஒப்பற்றவகையில் எங்களைக் காப்பீராக.(27) ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, பாவகனின் {அக்னியின்} மகனான கார்த்திகேயன் {முருகன்}, தேவர்களின் (படை) தலைமையை ஏற்றதுபோலவே, நீரே உம்மைத் தலைமைப்பொறுப்பில் நிறுவிக் கொள்வீராக. ஓ! வீரரே, தானவர்களைக் கொல்லும் இந்திரனைப் போல, போரில் நமது எதிரிகளைக் கொல்வீராக” என்றான் {துரியோதனன்}.”(28)

கிருஷ்ணனுடன் ஆலோசித்த யுதிஷ்டிரன்! – சல்லிய பர்வம் பகுதி – 07-துரியோதனனுக்கு உறுதிகூறிய சல்லியன்; சல்லியனைப் படைத்தலைமையில் நிறுவிய துரியோதனன்; கர்ணன் கொல்லப்பட்ட துயர் மறைந்து, மகிழ்ச்சியடைந்த கௌரவர்கள் சல்லியனை வாழ்த்தியது; படைத்தலைமையில் சல்லியன் நிறுவப்பட்டதை அறிந்து கிருஷ்ணனுடன் ஆலோசித்த யுதிஷ்டிரன்; சல்லியனைப் புகழ்ந்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரனைத் தவிர வேறு எவராலும் சல்லியனைக் கொல்ல முடியாது என்று சொன்ன கிருஷ்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “(குரு) மன்னனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த வீர ஏகாதிபதி (சல்லியன்), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனுக்கு மறுமொழியாக இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1) “ஓ! வலிய கரங்களைக் கொண்ட துரியோதனா, ஓ! சொல்திறமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. தேரில் இருக்கும் இரு கிருஷ்ணர்களையும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களாக நீ கருதுகிறாய். எனினும், அவ்விருவரும் ஒன்றாகச் சேர்ந்தாலும்கூடக் கரங்களின் வலிமையில் எனக்கு இணையாக மாட்டார்கள்.(2) பாண்டவர்களைக் குறித்துச் சொல்ல வேறு என்ன தேவை இருக்கிறது? போரின் முன்னணியில் கோபத்துடன் போரிடும்போது, தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் அடங்கிய மொத்த உலகமும் ஆயுதங்களுடன் எதிர்த்து வந்தாலும், அவர்களுடன் என்னால் போரிட முடியும்.(3) போரில் கூடியிருக்கும் பார்த்தர்களையும், சோமகர்களையும் நான் வெல்வேன். நான் உன் துருப்புகளுக்குத் தலைவனாவேன் என்பதில் ஐயமில்லை.(4) நம் எதிரிகளால் விஞ்சமுடியாத ஒரு வியூகத்தை நான் வகுப்பேன். ஓ! துரியோதனா, இதையே நான் உனக்குச் சொல்வேன். இதில் எந்த ஐயமுமில்லை” என்றான் {சல்லியன்}.(5)

(சல்லியனால்) இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் துரியோதனன், ஓ! பாரதர்களில் சிறந்தவரே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, காலந்தாழ்த்தாமல் மகிழ்ச்சியுடன் தன் துருப்புகளுக்கு மத்தியில் வைத்து, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி மத்ரர்களின் மன்னன் {சல்லியன்} மீது புனித நீரை ஊற்றினான்[1].(6) சல்லியனுக்குத் தலைமைப் பொறுப்புக் கொடுக்கப்பட்ட பிறகு, ஓ! பாரதரே, உமது துருப்புகளுக்கு மத்தியில் உரத்த சிங்க முழக்கங்களும், பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளும் எழுந்தன.(7) கௌரவப் போர்வீரர்களும், மத்ரகர்களுக்கு மத்தியில் வலிமைமிக்கத் தேர்வீரர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து, போர்க்கள ரத்தினமான அரசன் சல்லியனை இவ்வார்த்தைகளில் புகழ்ந்தனர்.(8) அவர்கள், “ஓ! மன்னா {சல்லியா}, வெற்றி உனதாகட்டும். நீ நீடூழி வாழ்வாயாக. கூடியிருக்கும் எதிரிகள் அனைவரையும் கொல்வாயாக. உனது கரங்களின் வலிமையைப் பெற்ற பிறகு, பெரும் பலம் கொண்ட தார்தராஷ்டிரர்கள், ஓர் எதிரியுமற்ற பரந்த உலகை ஆளட்டும்.(9) தேவர்களும், அசுரர்களும் அடங்கிய மூலவுலங்கங்களையும் போரில் நீ வெல்ல வல்லவன் என்பதால், அழியக்கூடியவர்களான சோமகர்கள் மற்றும் சிருஞ்சயர்களைக் குறித்துச் சொல்லும் தேவை என்ன இருக்கிறது?” என்றனர்.(10)

இவ்வாறு புகழப்பட்ட அந்த மத்ரகர்களின் வலிமைமிக்க மன்னன் {சல்லியன்} பண்படாத ஆன்மாக்களைக் கொண்டோரால் அடைய முடியாத பெருமகிழ்ச்சியை அடைந்தான்.(11) சல்லியன், “ஓ! மன்னா {துரியோதனா}, போரில் பாண்டவர்களையும், பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வேன், அல்லது அவர்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்திற்குச் செல்வேன்.(12) இன்று (போர்க்களத்தில்) அச்சமற்றுத் திரியப்போகும் என்னை இந்த உலகம் காணட்டும். இன்று, பாண்டுவின் மகன்கள் அனைவரும், வாசுதேவனும், சாத்யகியும், (13) திரௌபதியின் மகன்களும், திருஷ்டத்யும்னனும், சிகண்டியும், பிரபத்ரகர்கள் அனைவரும்(14) என் ஆற்றல், என் வில்லின் பெரும் வலிமை, எனது வேகம், என் ஆயுதங்களின் சக்தி, என் கரங்களின் பலம் ஆகியவற்றைப் போரில் காணப் போகிறார்கள்.(15) இன்று பார்த்தர்களும், சித்தர்கள் மற்றும் சாரணர்கள் அனைவரும், என் கரங்களின் பலத்தையும், நான் கொண்டிருக்கும் ஆயுத செல்வத்தையும் காணட்டும்.(16) இன்று என் ஆற்றலைக் காணும் பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், எதிர்நடவடிக்கை எடுக்க விரும்பி, பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றப் போகிறார்கள்.(17) இன்று நான் பாண்டவர்களின் துருப்புகளை அனைத்துப் பக்கங்களிலும் முறியடிப்பேன். ஓ! தலைவா {துரியோதனா}, துரோணர், பீஷ்மர் மற்றும் சூதன் மகன் {கர்ணன்} ஆகியோரை நான் போரில் விஞ்சுவேன். ஓ! கௌரவா {துரியோதனா}, உனக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக நான் களத்தில் திரிவேன்” என்றான் {சல்லியன்}.”(18)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “சல்லியன் தலைமைப் பொறுப்பில் நிறுவப்பட்ட பிறகு, ஓ! கௌரவங்களை அளிப்பவரே {திருதராஷ்டிரரே}, அதற்கு மேலும் உமது துருப்புகளில் எவரும், கர்ணன் குறித்து எத்துயரும் அடையவில்லை.(19) உண்மையில், துருப்புகள் உற்சாகமும், மகிழ்ச்சியுமடைந்தனர். பார்த்தர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டதாகவும், மத்ரர்களின் ஆட்சியாளனுடைய பலத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதாகவும் அவர்கள் கருதினர்.(20) பெரும் மகிழ்ச்சியை அடைந்த உமது துருப்புகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவ்விரவில் மகிழ்ச்சியாக உறங்கி, பெரும் உற்சாகம் அடைந்தனர்.(21)

உமது படையின் அந்தக் கூச்சல்களைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், க்ஷத்திரியர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும்போது, விருஷ்ணி குலத்தோனிடம் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(22) “ஓ! மாதவா {கிருஷ்ணா}, மத்ரர்களின் ஆட்சியாளரும், போர் வீரர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்படுபவரும், பெரும் வில்லாளியுமான சல்லியரை, அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, தன் படையின் தலைவராக்கியிருக்கிறான்.(23) ஓ! மாதவா, நடந்ததை அறிந்த பிறகு, எது நன்மையோ அதைச் செய்வாயாக. நீயே எங்கள் தலைவனும், பாதுகாவலனுமாவாய். அடுத்து செய்யப்பட வேண்டியதைச் செய்வாயாக” என்றான்{யுதிஷ்டிரன்}.(24)

அப்போது, வாசுதேவன் {கிருஷ்ணன்}, ஓ! ஏகாதிபதி, அம்மன்னிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, ஆர்த்தாயனியை {சல்லியரை} உண்மையாக {உள்ளபடியே} நான் அறிவேன்.(25) ஆற்றலும், பெரும் சக்தியும் கொண்ட அவர், மிகவும் சிறப்புமிக்கவராவார். அவர் போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவரும், பெரும் கரநளினம் கொண்டவரும் ஆவார்(26) நான் அந்த மத்ரர்களின் ஆட்சியாளரை {சல்லியரை} பீஷ்மர், அல்லது துரோணர், அல்லது கர்ணன் ஆகியோருக்கு இணையானவர், அல்லது, ஒருவேளை அவர்களுக்கும் மேம்பட்டவர் என்றே நினைக்கிறேன்.(27) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {யுதிஷ்டிரரே}, போரிடும் சல்லியருக்கு ஒப்பான ஒரு போர்வீரனை நன்கு சிந்தித்த பிறகும் நான் காணவில்லை.(28) போரில் அவர் {சல்லியர்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிகண்டி, அர்ஜுனன், பீமர், சாத்யகி, திருஷ்டத்யும்னன் ஆகியோரைவிட வலிமைமிக்கமிக்கவராவார்.(29) ஓ! ஏகாதிபதி, சிங்கம், அல்லது யானையின் ஆற்றலைக் கொண்டவரான அந்த மத்ரர்களின் மன்னன், அண்ட அழிவின் போது உயிரினங்களுக்கு மத்தியில் கோபத்துடன் திரியும் அந்தகனைப் போலவே போரில் அச்சமில்லாமல் திரியப் போகிறார்.(30)

ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, புலிக்கு இணையான அற்றலைக் கொண்ட உம்மைத் தவிர, போரில் அவருக்கு இணையான வேறு எவரையும் நான் காணவில்லை.(31) ஓ! குரு குலத்தின் மகனே, போரில் கோபத்தால் தூண்டப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளரைக் கொல்ல இந்த மொத்த உலகத்திலோ, சொர்க்கத்திலோ கூட உம்மைத்தவிர வேறொரு மனிதன் இல்லை.(32) நாளுக்கு நாள் போரில் ஈடுபட்டு உமது துருப்புகளை அவர் கலங்கடித்து வருகிறார். இதற்காகவே, சம்பரனைக் கொன்ற மகவத்தை {இந்திரனைப்} போல, போரில் சல்லியரைக் கொல்வீராக.(33) திருதராஷ்டிரர் மகனால் {துரியோதனனால்} மதிப்புடன் நடத்தப்படும் அந்த வீரர்கள் போரில் வெல்லப்பட முடியாதவராவார். போரில் மத்ரர்களின் ஆட்சியாளர் {சல்லியரே} வீழ்ந்த பிறகே, நீர் அடையப்போகும் வெற்றி உறுதியானதாகும். அவர் கொல்லப்பட்டால், பரந்த தார்தராஷ்டிரப் படையும் கொல்லப்படும்.(34) ஓ! ஏகாதிபதி, ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, இப்போது என் வார்த்தைகளைக் கேட்கும் நீர், வலிமைமிக்கத் தேர்வீரரான அந்த மத்ரர்களின் ஆட்சியாளரை எதிர்த்துச் செல்வீராக.(35)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, அசுரன் நமுசியைக் கொன்ற வாசவனை {இந்திரனைப்} போல அந்தப் போர்வீரரை நீர் கொல்வீராக. அவர் {சல்லியர்} உமது தாய்மாமன் என்பதை நினைத்து இங்கே எந்தக் கருணையும் காட்டப்பட வேண்டிய தேவை இல்லை. க்ஷத்திரியக் கடமைகளை உமக்கு முன் கொண்டு, அந்த மத்ரர்களின் ஆட்சியாளரைக் கொல்வீராக.(36) பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் ஆகிய அடியற்ற பெருங்கடல்களைக் கடந்துவிட்டு, மாட்டுக்குளம்படி தடமேயான {அத்தடத்தில் உள்ள நீரேயான} சல்லியரிடம் நீரும், உம்மைப் பின்தொடர்பவர்களும் மூழ்கிவிடாதீர்.(37) உமது மொத்த தவச் சக்தியையும், உமது க்ஷத்திரிய ஆற்றலையும் போரில் வெளிப்படுத்துவீராக. அந்தத் தேர்வீரரை {சல்லியரைக்} கொல்வீராக” என்றான் {கிருஷ்ணன்}.(38)

இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், பாண்டவர்களால் வழிபடப்படுபவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, அந்த மாலை வேளையில் தன் பாசறைக்குச் சென்றான்.(39) கேசவன் சென்றதும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் மற்றும் சோமகர்கள் அனைவருக்கும் விடைகொடுத்தனுப்பி, உடலில் இருந்து ஈட்டிகள் பிடுங்கப்பட்ட யானை ஒன்றைப் போல அவ்விரவில் மகிழ்ச்சியாக உறங்கினான்.(40) பெரும் வில்லாளிகளான பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும், கர்ணனுடைய வீழ்ச்சியின் விளைவில் திளைத்து, அவ்விரவில் மகிழ்ச்சியாக உறங்கினர்.(41) நோய் விலகியதும், வில்லாளிகள் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரர்களால் நிரம்பியதுமான அந்தப் பாண்டவர்களின் படையானது, ஓ! ஐயா, கர்ணனின் படுகொலையால் கிடைத்த வெற்றியின் விளைவால் அவ்விரவில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(42)

தனியொருவனாகப் போரிட வேண்டாம்! – சல்லிய பர்வம் பகுதி – 08- எவரும் தனியொருவராகப் பாண்டவர்களுடன் நேருக்கு நேராகப் போரிட வேண்டாம் என்று தீர்மானித்த கௌரவர்கள்; இரு தரப்பிலும் அமைக்கப்பட்ட வியூகங்கள்; எஞ்சியிருந்த கௌரவ மற்றும் பாண்டவப் படைகளின் எண்ணிக்கை; அப்போதும் கௌரவர்களே எண்ணிக்கையில் அதிகமாக இருந்தது; பதினெட்டாம் நாள் போர் தொடங்கியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த இரவு கழிந்ததும், துரியோதனன், உமது படைவீரர்கள் அனைவரிடமும், “வலிமைமிக்கத் தேர்வீரர்களே, ஆயுதம் தரிப்பீராக” என்றான்.(1) மன்னனின் ஆணையைக் கேட்ட அந்தப் போர்வீரர்கள் தங்கள் கவசங்களைப் பூட்டத் தொடங்கினர். சிலர் தங்கள் தேர்களில் வேகமாகத் தங்கள் குதிரைகளைப் பூட்டினர், வேறு சிலர் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தனர்.(2) யானைகளை ஆயத்தம் செய்வது தொடங்கப்பட்டது. காலாட்படைவீரர்கள் ஆயுதங்களைத் தரிக்கத் தொடங்கினர். ஆயிரக்கணக்கான வேறு சிலர், தேர்த்தட்டுகளில் தரைவிரிப்புகளைப் பரப்பத் தொடங்கினர்.(3) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, படைவீரர்களின் உற்சாகத்தை அதிகரிக்க இசைக்கருவிகளின் ஒலி அங்கே எழுந்தது.(4) அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சரியான நிலைகளில் நிறுத்தப்பட்ட துருப்பினர் அனைவரும், கவசமணிந்து கொண்டு, மரணத்தையே தங்கள் இலக்காகத் தீர்மானித்து நிற்பதாகத் தெரிந்தது.(5)

மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைத்} தங்கள் தலைவனாக்கிக் கொண்ட கௌரவர்களின் பெரும் தேர்வீரர்கள், தங்கள் துருப்புகளைப் பிரித்துப் படைப்பிரிவுகளாக அணிவகுத்து நின்றனர்.(6) பிறகு, கிருபர், கிருதவர்மன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சல்லியன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோரோடு கூடிய உமது போர்வீரர்கள் அனைவரும், இன்னும் உயிரோடு எஞ்சியிருக்கும் பிற மன்னர்களும், உமது மகனை {துரியோதனனைச்} சந்தித்து, அவர்களில் எவரும் தனி நபராகவோ, துணையின்றியோ பாண்டவர்களுடன் போரிடுவதில்லை என்ற தீர்மானத்தை எட்டினர்.(7,8) அவர்கள், “பாண்டவர்களுடன் எவன் எந்த ஆதரவுமின்றித் தனியாகப் போரிடுவானோ, எவன் போரிட்டுக் கொண்டிருக்கும் தன் தோழனைக் கைவிடுவானோ, அவன் ஐந்து முக்கியப் பாவங்களையும் {பஞ்சமாபாதகங்களால் விளையும் பாவங்களையும்}, சிறு பாவங்கள் {உபபாதகங்களால் விளையும் பாவங்கள்} அனைத்தையும் அடைவான்” என்றனர். மேலும் அவர்கள், “நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து {ஒருவரையொருவர் காத்துக் கொண்டு} எதிரியுடன் போரிடுவோமாக” என்றனர்.(9) ஒருவருக்கொருவர் இவ்வாறு ஒரு தீர்மானத்தை எட்டிய அந்தப் பெரும் தேர்வீரர்கள், மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைத்} தங்கள் தலைமையில் கொண்டு, தங்கள் எதிரிகளை எதிர்த்து விரைந்து சென்றனர்.(10)

அதேபோல, பாண்டவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும்போரில் தங்கள் துருப்புகளை அணிவகுத்துக் கொண்டு, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கௌரவர்களோடு போரிடுவதற்காக அவர்களை எதிர்த்துச் சென்றனர்.(11) ஓ! பாரதர்களின் தலைவரே, கலங்கும் பெருங்கடலுக்கு ஒப்பான ஒலியுடன் கூடியதும், தேர்கள் மற்றும் யானைகளின் விளைவால் அற்புதமாகத் தெரிந்ததுமான அந்தப் படையானது அலைகள் பெருகிய ஆழமான பெருங்கடலின் தன்மையை விரைவில் அடைந்தது” {என்றான் சஞ்சயன்}.(12)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “துரோணர், பீஷ்மர் மற்றும் ராதையின் மகன் {கர்ணன்} ஆகியோரின் வீழ்ச்சியை நான் கேட்டிருக்கிறேன். இப்போது சல்லியன் மற்றும் என் மகனின் {துரியோதனனின்} வீழ்ச்சியை எனக்குச் சொல்வாயாக.(13) ஓ! சஞ்சயா, உண்மையில் சல்லியன் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் எவ்வாறு கொல்லப்பட்டான்? மேலும் எனது மகன் துரியோதனன், பெரும் வலிமை கொண்ட பீமசேனனால் எவ்வாறு கொல்லப்பட்டான்?” என்று கேட்டான்.(17)

சஞ்சயன் {திடுதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் போரை (உமக்கு) விவரிக்கும்போதே, மனித உடல்களின் அழிவையும், யானைகள் மற்றும் குதிரைகள் இழப்பையும் {மனவுறுதியுடன்} பொறுமையாகக் கேட்பீராக.(15) ஓ! மன்னா, துரோணர், பீஷ்மர் மற்றும் சூதன் மகன் {கர்ணன்} ஆகியோர் வீழ்த்தப்பட்ட பிறகு, ஓ! ஐயா, போரில் பார்த்தர்கள் அனைவரையும் சல்லியன் கொன்றுவிடுவான் என்ற நம்பிக்கை உமது மகன்களின் இதயத்தில் பலமடைந்தது.(16) அந்நம்பிக்கையைத் தன் இதயத்தில் வளர்த்துக் கொண்டு, அதன் மூலம் ஆறுதலை அடைந்த உமது மகன் துரியோதனன், ஓ! பாரதரே, போரில் வலிமைமிக்கத் தேர்வீரனான மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} நம்பி, தன்னைப் பாதுகாவலனுள்ளவனாகக் கருதிக் கொண்டான்.(17) கர்ணனின் வீழ்ச்சியில் பார்த்தர்கள் சிங்க முழக்கங்கள் செய்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தார்தராஷ்டிரர்களின் இதயங்களைப் பேரச்சம் பீடித்திருந்தது.(18) முறையாக அவனுக்கு உறுதி கூறிய, மத்ரர்களின் வீர மன்னன் {சல்லியன்}, ஓ! ஏகாதிபதி, அனைத்து வகையிலும் மங்கலகரமான ஏற்பாடுகளுடன் கூடிய ஒரு பெரும் வியூகத்தை அமைத்து,(19) போரில் பார்த்தர்களை எதிர்த்துச் சென்றான். மத்ரர்களின் அந்த வீர மன்னன் {சல்லியன்}, மிகப் பலமானதும், பெரும் வேகத்தில் கணைகளை ஏவவல்லதுமான தன் அழகிய வில்லை அசைத்துக் கொண்டே சென்றான்.(20)

அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சல்லியன்}, சிந்துவில் பிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட முதன்மையான வாகனத்தில் ஏறிச் சென்றான். அவனது தேரை ஓட்டிய சாரதி, அவ்வாகனத்தினை பிரகாசமாகத் தெரியும்படி செய்தான்.(21) எதிரிகளை நொறுக்கும் துணிச்சல்மிக்கவனான அந்த வீரன் (சல்லியன்), ஓ! ஏகாதிபதி, உமது மகன்களின் அச்சங்களை விலக்கியபடி, அத்தேரால் பாதுகாக்கப்பட்டு நின்றான்.(22) அப்படி (போருக்கு) முன்னேறிச் செல்கையில், கவசம் பூண்டிருந்த அந்த மத்ரர்களின் மன்னன், வியூகத்தின் தலைமையில் நின்று கொண்டு, துணிச்சல் மிக்க மத்ரகர்களின் மற்றும் வெல்லப்பட முடியாத கர்ணனின் மகன்கள் ஆகியோரின் துணையுடன் சென்றான் (23) இடப்பக்கத்தில், கிருதவர்மன், திரிகர்த்தர்களால் சூழப்பட்டு நின்றான். வலப்பக்கத்தில், கௌதமர் (கிருபர்), சகர்கள் மற்றும் யவனர்களுடன் கூடி நின்றார்.(24) பின்புறத்தில், அஸ்வத்தாமன், காம்போஜர்களால் சூழப்பட்டு நின்றான். நடுவில், துரியோதனன், முதன்மையான குரு போர்வீரர்களால் சூழப்பட்டு நின்றான்.(25) சுபலனின் மகனான சகுனியும், வலிமைமிக்கத் தேர்வீரனான உலூகனும், பெரும் குதிரைப்படை மற்றும் பிற துருப்புகளுடன் முன்னேறிச் சென்றனர்.(26)

எதிரிகளைத் தண்டிப்பவர்களான பாண்டவர்களில் வலிமைமிக்க வில்லாளிகள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, உமது துருப்புகளை எதிர்த்து விரைந்தனர்.(27) திருஷ்டத்யும்னன், சிகண்டி, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர், சல்லியனின் படையை எதிர்த்து பெரும் வேகத்தோடு சென்றனர்.(28) அப்போது தன் துருப்புகளின் துணையுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதக் குலத்தின் காளையே, சல்லியனைக் கொல்லும் விருப்பத்தால், அவனை மட்டுமே எதிர்த்துச் சென்றான்.(29) எதிரிகளின் பெருங்கூட்டங்களைக் கொல்பவனான அர்ஜுனன், பெரும் வில்லாளியான கிருதவர்மனையும், சம்சப்தகர்களையும் எதிர்த்துப் பெரும் வேகத்தோடு விரைந்தான்.(30) பீமசேனன் மற்றும் சோமகர்களில் பெரும் தேர்வீரர்கள் ஆகியோர், ஓ! ஏகாதிபதி, போரில் தங்கள் எதிரிகளைக் கொல்ல விரும்பி கிருபரை எதிர்த்து விரைந்தானர்.(31) தங்கள் துருப்புகளின் துணையுடன் கூடியவர்களான மாத்ரியின் மகன்கள் {நகுலன்-சகாதேவன்} இருவரும், சகுனியையும், அவர்களது படைகளின் முன்னணியில் இருந்த பெரும் தேர்வீரனான உலூகனையும் எதிர்த்து விரைந்தனர்.(32) அதேபோலவே உமது படையைச் சேர்ந்த ஆயிரமாயிரம் போர்வீரர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.(33)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வலிமைமிக்க வில்லாளிகளான பீஷ்மர், துரோணர் மற்றும் பெரும் தேர்வீரனான கர்ணன் ஆகியோரின் வீழ்ச்சிக்குப் பிறகு, குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருதரப்பினரின் எண்ணிக்கையும் குறைந்த பிறகு, உண்மையில், பெரும் ஆற்றலைக் கொண்ட பார்த்தர்கள் போரில் மீண்டும் கோபமடைந்த போது, ஓ! சஞ்சயா, படைகள் ஒவ்வொன்றின் பலமும் என்னவாக இருந்தது?” என்று கேட்டான்.(34,35)

சஞ்சயன்{திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா, அந்தச் சந்தர்ப்பத்தில் நாமும், எதிரியும் போருக்காக எவ்வாறு நின்றோம்? அந்த இரண்டு படைகளின் பலமும் அப்போது என்னவாக இருந்தது என்பதைக் கேட்பீராக.(36) ஓ! பாரதக் குலத்தின் காளையே,

பதினோராயிரம் {11,000} தேர்கள், பத்தாயிரத்து எழுநூறு {10,700} யானைகள்,(37) இருநூறாயிரம் {2லட்சம்} குதிரைகள், முப்பது லட்சம் {3 Million} காலாட்படை வீரர்கள் ஆகியவையே உமது படையின் {கௌரவப்படையின்} பலமாக இருந்தது.(38)

ஆறாயிரம் {6,000} தேர்கள், ஆறாயிரம் {6,000} யானைகள், பத்தாயிரம் {10,000} குதிரைகள், பத்து லட்சம் {1 Million} காலாட்படை வீரர்கள் ஆகியவை, ஓ! பாரதரே,(39) அந்தப் போரில் எஞ்சிய பாண்டவப் படையாக இருந்தது[1]. ஓ! பாரதக் குலத்தின் காளையே, இவர்களே போரில் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(40)

இவ்வழியில் தங்கள் படைகளைப் பிரித்துக் கொண்ட நாங்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டும், வெற்றியடையும் விருப்பத்தாலும், எங்களை மத்ரர்களின் ஆட்சியாளனின் {சல்லியனின்} கட்டுப்பாட்டில் நிறுத்திக் கொண்டு பாண்டவர்களை எதிர்த்துச் சென்றோம்.(41) அதே போல, மனிதர்களில் புலிகளும், வெற்றியில் விருப்பம் கொண்டவர்களுமான அந்தத் துணிச்சல்மிக்கப் பாண்டவர்களும், பெரும்புகழைக் கொண்ட பாஞ்சாலர்களும் {எங்களை எதிர்த்துப்} போரிட வந்தனர்.(42) இவ்வாறே, ஓ! ஏகாதிபதி, ஓ! தலைவா, அந்த மனிதப் புலிகள் அனைவரும் தங்கள் எதிரிகளைக் கொல்லும் விருப்பத்தால், நாளின் வைகறைப் பொழுதில் {விடியற்காலையில்} ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(43) அதன் பிறகு, ஒருவரையொருவர் அடிப்பதிலும், கொல்லுவதிலும் ஈடிபட்டிருந்த உமது துருப்புகளுக்கும், எதிரிகளுக்கும் இடையில் கடுமையானதும், பயங்கரமானதுமான ஒரு போர் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(44)

பதினெட்டாம் நாள் போர்த்தொடக்கம்! – சல்லிய பர்வம் பகுதி – 09-பதினெட்டாம் நாள் போர் தொடங்கியது; இரு தரப்பிலும் நேர்ந்த பயங்கரமான அழிவு; அர்ஜுனனும், பீமசேனனும் கௌரவப் படையைப் பிளந்து தப்பி ஓடச் செய்தது; குரு தலைவர்கள் தங்கள் துருப்புகளை மீண்டும் அணிதிரட்ட முயற்சித்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதன் பிறகு, தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு இடையில் நடைபெற்றதைப் போன்றதும், கடுமையானதும், பயங்கரமானதுமான ஒரு போர் குருக்களுக்கும், சிருஞ்சயர்களுக்கும் இடையில் நடைபெற்றது.(1) மனிதர்கள், தேர்க்கூட்டங்கள், யானைகள், யானைவீரர்கள், ஆயிரக்கணக்கான குதிரைவீரர்கள், பெரும் ஆற்றலைக் கொண்ட குதிரைகள் ஆகியன யாவும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன.(2) பயங்கர வடிவிலான யானைகள் பேரொலியுடன் விரைந்து கொண்டிருப்பது, மழைக்காலங்களில் ஆகாய மேகங்களின் முழக்கங்களுக்கு ஒப்பாகக் கேட்டது.(3) யானைகளால் தாக்கப்பட்ட சில தேர்வீரர்கள் தங்கள் தேர்களை இழந்தனர். அந்த மதங்கொண்ட விலங்குகளால் முறியடிக்கப்பட்ட சில துணிச்சல் மிக்கப் போராளிகள் களத்தில் ஓடிக் கொண்டிருந்தனர்.(4)

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களும், தங்கள் கணைகளுடன் கூடியவர்களுமான தேர்வீரர்கள், பெரும் குதிரைப்படையையும், யானைகளைத் தூண்டி அவற்றைப் பாதுகாத்துவந்த காலாட்படைவீரர்களையும் அடுத்த உலகத்திற்கு அனுப்பினர்.(5) ஓ! மன்னா, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட குதிரைவீரர்கள், களத்தில் திரிந்து கொண்டிருந்த பெரும் தேர்வீரர்களைச் சூழ்ந்து கொண்டு, சூலங்கள், ஈட்டிகள் மற்றும் வாள்களால் அவர்களைத் தாக்கிக் கொன்றனர்.(6) விற்களைத் தரித்திருந்த சில போராளிகள் பலரும் ஒன்று சேர்ந்து, பெரும் தேர்வீரர்களைச் சூழ்ந்து கொண்டு, தனித்தனியாக இருந்த அவர்களை ஒவ்வொருவராக யமலோகம் அனுப்பிவைத்தனர்.(7) வேறு சில பெருந்தேர் வீரர்கள், யானைகளையும், தங்கள் வகையைச் சேர்ந்த முதன்மையான போர்வீரர்களையும் சூழ்ந்து கொண்டு, களத்தில் போரிட்டபடி திரிந்து கொண்டிருநண அவர்களில் வலிமைமிக்கச் சிலரைக் கொன்றனர்[1].(8) அதே போலவே, ஓ! மன்னா, யானை வீரர்கள், கோபத்தால் தூண்டப்பட்ட தன்னந்தனி தேர்வீரர்களைச் சூழ்ந்து கொண்டு, கணைகளை இறைத்து அவர்களை அடுத்த உலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.(9) அந்தப் போரில் யானை வீரர்களை எதிர்த்து யானை வீரர்களும், தேர்வீரர்களை எதிர்த்து தேர்வீரர்களும் எதிர்த்துச் சென்று, ஈட்டிகள், வேல்கள் மற்றும் துணிக்கோல் கணைகளால் {நாராசங்களால்} ஒருவரையொருவர் கொன்றனர்.(10)

போருக்கு மத்தியில், யானைகளும், குதிரைகளும், திகைத்துப் போயிருந்த காலாட்படைகளை மிதித்துக் கொண்டு அதிகக் குழப்பத்தைச் செய்து கொண்டிருந்தன.(11) சாமரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த குதிரைகள், இமய அடிவாரத்தின் சமவெளிகளில் காணப்படும் அன்னங்களைப் போல அனைத்துப் பக்கங்களிலும் விரைந்தன. பூமியையே விழுங்கிவிட ஆயத்தமாகத் தெரியும்படி அவ்வளவு வேகத்துடன் அவை விரைந்தன.(12) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தக் குதிரைகளின் குளம்படிகளால் துளைக்கப்பட்ட போர்க்களமானது, மேனியில் (தன் காதலனின்) நகக்குறிகளைத் தாங்கிக் கொண்டிருக்கும் அழகிய பெண்ணைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(13) வீரர்களின் நடை, தேர்ச்சக்கரங்கள், காலாட்படை வீரர்களின் கூச்சல், யானைகளின் பிளிறல்,(14) பேரிகைகளின் முழக்கம் மற்றும் பிற இசைக்கருவிகள், சங்கொலி ஆகியவற்றால் உண்டான ஒலியானது, செவிடாக்கும் இடியின் முழக்கங்களைப் போலப் பூமியில் எதிரொலிக்கத் தொடங்கியது.(15)

விற்களின் நாணொலிகள், கத்திகளின் கீற்றுகள், போராளிகளுடைய கவசங்களின் பளபளப்பு ஆகியவை அனைத்தும் சேர்ந்து எதையும் காணமுடியாதபடி குழப்பத்தை ஏற்படுத்தின.(16) யானைகளின் தந்தங்களைப் போலத் தெரிந்தவையும், மனித உடல்களில் இருந்து வெட்டப்பட்ட விழுந்தவையுமான கரங்கள், உயரக்குதித்து, நடுங்கியபடியே சீற்றத்துடன் நகர்ந்தன.(17) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் விழுந்த தலைகளால் உண்டான ஒலியானது, பனை மரங்களில் இருந்து விழும் கனிகளின் ஒலிக்கு ஒப்பானவையாக இருந்தன.(18) அந்த விழுந்த தலைகளால் விரவி, இரத்தச் சிவப்பாகக் கிடந்த பூமியானது, பருவ காலத்தில் தங்க நிறத் தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டதைப் போலத் தெரிந்தது.(19) உண்மையில், அதிகமாகச் சிதைக்கப்பட்டு, விழி பிதுங்கியிருந்த அந்த உயிரற்ற தலைகளால், ஓ! மன்னா, போர்க்களமானது முற்றும் மலர்ந்திருந்த தாமரைகள் விரவிக் கிடப்பதைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(20)

சந்தனம் பூசப்பட்டவையும், விலைமதிப்புமிக்கக் கேயூரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தவையுமான போராளிகளின் விழுந்த கரங்களால், அந்தப் பூமியானது, இந்திரனைக் கௌரவிப்பதற்காக நடப்பட்டிருக்கும் கவர்ச்சிகரமான கம்பங்கள் விரவிக் கிடப்பதைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(21) யானைகளின் துதிக்கைகளைப் போல வழவழப்பாகத் தெரிந்தவையும், அந்தப் போரில் வெட்டப்பட்டவையுமான மன்னர்களின் தொடைகளால் அந்தப் போர்க்களம் மறைக்கப்பட்டது.(22) நூற்றுக்கணக்கான தலையற்ற முண்டங்கள் நிறைந்ததும், குடைகளும் சாமரங்களும் விரவிக் கிடந்ததுமான அந்தப் பரந்த படையானது, மலர்ந்திருக்கும் காட்டைப் போல அழகாகத் தெரிந்தது.(23) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கங்கள் குருதியில் குளித்திருந்ததால் மலர்ந்திருக்கும் கின்சுகங்களைப் போலத் தெரிந்த போர்வீரர்கள் அச்சமில்லாமல் அந்தப் போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.(24) கணைகள் மற்றும் வேல்களால் பீடிக்கப்பட்ட யானைகளும் கூட, வானத்தில் இருந்து விழும் சிதறிய மேகங்களைப் போல இங்கேயும், அங்கேயும் விழுந்து கொண்டிருந்தன.(25)

உயர் ஆன்மப் போர்வீரர்களால் கொல்லப்பட்ட யானைப்படைப்பிரிவுகள், காற்றால் கலக்கப்பட்ட மேகங்களைப் போல அனைத்துத் திசைகளிலும் பிரிந்து சென்றன.(26) மேகங்களைப் போலத் தெரிந்த அந்த யானைகள், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, யுக முடிவில் உலகம் அழியும் தருணத்தில் இடியால் பிளக்கப்படும் மலைகளைப் போலப் பூமியில் விழுந்து கொண்டிருந்தன.(27) தரையில் சாரதிகளுடன் குவியல் குவியலாக விழுந்து கிடக்கும் குதிரைகள் மலைகளைப் போலத் தெரிந்தன.(28) அந்தப் போர்க்களத்தில், அடுத்த உலகத்தை நோக்கிப் பாயும் ஆறு ஒன்று தோன்றியது. குருதியே அதன் நீரானது, தேர்கள் அதன் சுழிநீர்களாகின. கொடிமரங்கள் அதன் மரங்களாகவும், எலும்புகள் அதன் கூழாங்கற்களாகவும் ஆகின.(29) (போராளிகளின்) கரங்கள் அதன் முதலைகளாகவும், விற்கள் அதன் நீரோட்டமாகவும், யானைகள் அதன் பெரும்பாறைகளாகவும், குதிரைகள் சிறிய பாறைகளாகவும் ஆகின. கொழுப்பும், ஊனீரும் அதன் சகதியாகவும், குடிகள் அதன் அன்னங்களாகவும், கதாயுதங்கள் அதன் தெப்பங்களாகவும் ஆகின.(30)

நிறைந்திருந்த கவசங்கள், தலைக்கவசங்கள், கொடிகள் ஆகியன அதன் அழகிய மரங்களாகின. அதிகமாக இருந்த சக்கரங்கள் அதன் சக்கரவாகப் பறவைகளாகின. அது திரிவேணுகளாலும், தண்டங்களாலும் மறைக்கப்பட்டிருந்தது.(31) துணிவுள்ளோரின் மகிழ்ச்சியைத் தூண்டியும், மருண்டோரின் அச்சங்களை அதிகரித்தும், குருக்களையும், சிருஞ்சயர்களையும் தன் கரையில் அதிகமாகக் கொண்டிருந்த அந்த ஆறு சீற்றத்துடன் ஓடியது.(32) பரிகங்களுக்கு ஒப்பான கரங்களைக் கொண்ட அந்தத் துணிச்சல் மிக்கப் போர்வீரர்கள், தெப்பங்கள் மற்றும் படகுகளாகச் செயல்படும் தங்கள் வாகனங்கள் மற்றும் விலங்குகளின் துணையுடன், இறந்தோரின் உலகத்தை நோக்கிப் பாய்ந்த அந்தப் பயங்கர ஆற்றைக் கடந்தனர்.(33) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யாராலும் எவருக்கும் எந்தக் கருணையையும் காட்டப்படாததும், நால்வகைப் படைகளுக்கும் பேரழிவைத் தந்ததுமான அந்தப் போர், பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கு இடையில் நடந்ததற்கு ஒப்பாக நடந்தது.(34) ஓ! எதிரிகளை எரிப்பவரே, போராளிகளில் சிலர் தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் உரக்க அழைத்தனர். சிலர், அழுது கொண்டிருக்கும் உறவினர்களால் அழைக்கப்பட்டு அச்சத்தால் பீடிக்கப்பபட்டனர்.(35)

கடுமையும், பயங்கரமும் நிறைந்த அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, அர்ஜுனனும், பீமசேனனும் தங்கள் எதிரிகளை மலைப்படையச் செய்தனர்.(36) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, இவ்வாறு கொல்லப்பட்ட உமது பரந்த படையானது, மது மயக்கத்தில் உள்ள ஒரு பெண்ணைப் போலப் போர்க்களத்தில் மயங்கி விழுந்தது.(37) பீமசேனனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, அந்தப் பட்டையை மலைப்படையச் செய்து தங்கள் சங்குகளை முழக்கி, சிங்க முழக்கம் செய்தனர்.(38) அந்த உரத்த இடி முழக்கத்தைக் கேட்ட திருஷ்டத்யும்னனும், சிகண்டியும், தங்களுக்குத் தலைமையில் மன்னன் யுதிஷ்டிரனை நிறுத்திக் கொண்டு, மத்ரர்களின் ஆட்சியாளனை எதிர்த்து விரைந்தனர்.(39) ஓ! ஏகாதிபதி, அந்தப் போர்வீரர்கள் ஒன்றாகவும், தனித்தனியாகவும் சல்லியனுடன் போரிட்ட விதம் மிக அற்புதமானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது.(40) பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களும், ஆயுதங்களை அறிந்தவர்களும், போரில் வெல்லப்பட முடியாதவர்களுமான மாத்ரியின் மகன்கள் இருவரும் {நகுலனும், சகாதேவனும்}, வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, உமது படையை எதிர்த்துப் பெரும் வேகத்துடன் சென்றனர்.(41)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அப்போது வெற்றியில் ஆவலுள்ள பாண்டவர்களின் கணைகளால் பல்வேறு வழிகளில் சிதைக்கப்பட்ட உமது படையானது, போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடத் தொடங்கியது.(42) உறுதிமிக்க வில்லாளிகளால் இவ்வாறு தாக்கப்பட்டு, பிளக்கப்பட்ட அந்தப் படையானது, உமது மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடியது.(43) ஓ! பாரதரே, முறியடிக்கப்பட்ட போராளிகளுக்கு மத்தியில் இருந்த சிறப்புமிக்க க்ஷத்திரியர்கள், வெற்றி மீது கொண்ட விருப்பத்தால், “நில்லுங்கள், நில்லுங்கள்” என்று சொல்லி கூச்சலிட்டபோது, உமது போர்வீரர்களுக்கு மத்தியில் “ஓ!” என்றும் “ஐயோ!” என்றும் கூச்சல்கள் எழுந்தன.(44) இவை அனைத்திற்கும் பிறகு, பாண்டவர்களால் பிளக்கப்பட்ட உமது படையானது, தன் அன்பு மகன்களையும், சகோதரர்களையும், தாய்மாமன்களையும், சகோதரியின் மகன்களையும், திருமணத்தால் ஏற்பட்ட பந்தங்களையும், சில உறவினர்களையும் கைவிட்டுவிட்டுப் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடியது.((45) ஓ! பாரதக் குலத்தின் காளையே, தங்கள் பாதுகாப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஆயிரக் கணக்கான போர்வீரர்கள், தங்கள் குதிரைகளையும், யானைகளையும் பெரும் வேகத்தில் தூண்டியபடியே அங்கிருந்து தப்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.(46)

கர்ணன் மகன்களைக் கொன்ற நகுலன்! – சல்லிய பர்வம் பகுதி – 10-யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்த சல்லியன்; கர்ணனின் மகனான சித்திரசேனனை எதிர்த்து விரைந்த நகுலன்; கர்ணனின் மகன்களான சித்திரசேனன், சத்தியசேனன், சுஷேனன் ஆகிய மூவரைக் கொன்ற நகுலன்; சிதறிய படையை மீண்டும் திரட்டிய சல்லியன்; சாத்யகி, திருஷ்டத்யும்னன், பீமசேனன், அர்ஜுனன் ஆகியோர் அந்த இடத்திற்கு விரைந்து வந்தது….

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “படை பிளப்பதைக் கண்ட மத்ரர்களின் வீர மன்னன் {சல்லியன்}, தன் சாரதியிடம், “மனோவேகம் கொண்ட இந்தக் குதிரைகளை விரைவாகச் செலுத்துவாயாக.(1) அதோ, பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்டிரன், தனது தலைக்கு மேலே பிடிக்கப்பட்ட குடையுடன் பிரகாசமாகத் தெரிகிறான்.(2) ஓ! சாரதியே, என்னை அங்கே வேகமாகக் கொண்டு சென்று, என் வலிமையைக் காண்பாயாக. போரில் பார்த்தர்கள் என் எதிரே நிற்க இயலாதவர்களாவர்” என்றான் {சல்லியன்}.(3) இவ்வாறு சொல்லப்பட்ட மத்ர மன்னனின் {சல்லியனின்} சாரதி, துல்லியமான இலக்கைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் நின்று கொண்டிருந்த அந்த இடத்திற்குச் சென்றான்.(4)

சல்லியன், வலிமைமிக்க அந்தப் பாண்டவர்களின் படை மீது திடீரெனப் பாய்ந்தான். பொங்கும் கடலை அடக்கும் கரைகளைப் போலத் தனியொருவனாகவே அவன் அதைத் தடுத்தான்.(5) உண்மையில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மலையை நோக்கி விரையும் கடலைப் போலப் பாண்டவர்களின் அந்தப் பெரிய படையானது, அந்தப் போரில் சல்லியனை எதிர்த்துச் சென்று அசையாமல் நின்றது.(6) போர்க்களத்தில் நிற்கும் மத்ரர்களின் ஆட்சியாளனைக் கண்ட கௌரவர்கள், மரணத்தையே தங்கள் இலக்காகச் செய்து கொண்டு திரும்பிவந்தனர்.(7) அவர்கள் திரும்பியதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நன்றாக அணிவகுக்கப்பட்ட அந்த வியூகத்தில் தனித்தனியாகத் தங்கள் நிலைகளை எடுத்துக் கொண்டதும், நீரைப் போலக் குருதிபாயும் பயங்கரமான போர் தொடங்கியது.

வெல்லப்பட முடியாதவனான நகுலன், {கர்ணன் மகனான} சித்திரசேனனுடன் மோதினான்.(8) சிறந்த வில்லாளிகளான அவ்விரு வீரர்களும், அந்தப் போரில் ஒருவரையொருவர் அணுகி, ஆகாயத்தின் தெற்கிலும் வடக்கிலும் எழுந்த இரு மேகங்கள் மழை பொழிவதைப் போல, அந்தப் போரில் தங்கள் கணைமாரியால் ஒருவரையொருவர் நனைத்தனர். பாண்டுவின் மகனுக்கும் {நகுலனுக்கும்}, எதிராளிக்கும் {சித்திரசேனனுக்கும்} இடையிலான எந்த வேறுபாட்டையும் என்னால் காணமுடியவில்லை.(9,10) அவர்கள் இருவரும் ஆயுதங்களில் சாதித்தவர்களாகவும், வலிமைமிக்கவர்களாகவும், தேர்வீரர்களின் நடைமுறையை அறிந்தவர்களாகவும் இருந்தனர். ஒருவரையொருவர் கொல்ல விரும்பிய அவர்கள், அடுத்தவரின் குறைபாடுகளையும், தாமதத்தையும் கவனமாகத் தேடினர்.(11) அப்போது சித்திரசேனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நன்கு கடினமாக்கப்பட்டும், கூர்மையானதுமான ஓர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்}, நகுலனின் வில்லை அதன் கைப்பிடியில் அறுத்தான்.(12)

அப்போது கர்ணனின் மகன் {சித்திரசேனன்}, வில்லற்றிருந்த நகுலனின் நெற்றியில், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளுடன் கூடியவையுமான மூன்று கணைகளால் தாக்கினான்.(13) இன்னும் சில கூரிய கணைகளால் அவன் {சித்திரசேனன்} நகுலனின் குதிரைகளை யமலோகம் அனுப்பி வைத்தான். அடுத்ததாக, அவன் தன் எதிராளியின் கொடிமரத்தையும் சாரதியையும் மும்மூன்று கணைகளால் வீழ்த்தினான்.(14) தன் எதிரியின் கரங்களால் ஏவப்பட்ட அம்மூன்று கணைகளை, தன் நெற்றியில் தைத்திருக்க, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மூன்று முகடுகளைக் கொண்ட ஒரு மலையைப் போல நகுலன் மிக அழகாகத் தெரிந்தான்.(15) தன் வில்லையும், தேரையும் இழந்த நகுலன், ஒரு வாளை எடுத்துக் கொண்டு, மலைச்சிகரத்தில் இருந்து குதிக்கும் ஒரு சிங்கத்தைப் போலத் தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்தான்.(16)

எனினும் அவன் {நகுலன்} தரையில் நடந்து விரைந்து சென்ற போது, அவனுடைய எதிராளி {சித்திரசேனன்} அவன் {நகுலன்} மீது கணைமாரியைப் பொழிந்தான். சுறுசுறுப்பும், ஆற்றலும் கொண்ட நகுலன், அந்தக் கணைமாரியை தன் கேடயத்தில் ஏற்றான்.(17) பிறகு சித்திரசேனனின் தேரை அடைந்தவனும், போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்தவனும், உழைப்பால் களைக்காதவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரனுமான அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, துருப்புகள் அனைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதில் {அந்தத் தேரில்} ஏறினான்.(18) பிறகு அந்தப் பாண்டுவின் மகன், கிரீடத்தாலும், காது குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், அழகிய நாசி மற்றும் அகன்ற பெரிய இரு கண்கள் ஆகியவற்றால் அருளப்பட்டதுமான சித்திரசேனனின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான். சூரியனின் காந்தியுடன் கூடிய சித்திரசேனன் இதனால் தன் தேர்த்தட்டில் இருந்து கீழே விழுந்தான்.(19) சித்திரசேனன் கொல்லப்பட்டதைக் கண்ட பெரும் தேர்வீரர்கள் அனைவரும், சிங்க முழக்கங்களாலும் புகழ்ச்சியாலும் உரக்கக் கதறினர்.(20)

அதேவேளையில் கர்ணன் மகன்களான சுஷேனன் மற்றும் சத்தியசேனன் ஆகிய பெரும் தேர்வீரர்கள் இருவரும், தன் சகோதரன் {சித்திரசேனன்} கொல்லப்பட்டதைக் கண்டு, கூரிய கணைமாரியை ஏவினர்.(21) தேர்வீரர்களில் முதன்மையானவர்களான அவர்கள், அந்தப் பாண்டுவின் மகனை {நகுலனை} நோக்கி, இரு புலிகளைப் போல வேகமாக விரைந்தனர்.(22) அவர்கள் இருவரும், வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலன் மீது கூரிய கணைகளைப் பொழிந்தனர். உண்மையில், அவர்கள் அந்தக் கணைகளைப் பொழிந்தபோது, மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகத் திரள்களுக்கு ஒப்பானவர்களாக அவர்கள் தெரிந்தனர்.(23) மேனியெங்கும் கணைகளால் துளைக்கப்பட்டிருந்தாலும், பாண்டுவின் அந்த வீரமகன், மற்றொரு தேரில் ஏறி, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, சினத்துடன் இருக்கும் யமனைப் போலப் போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தான்.(24) பிறகு அந்த இரு சகோதரர்களும் {கர்ணனின் மகன்களும்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் நேரான கணைகளால் நகுலனின் தேரைத் துண்டுகளாகச் சிதறடித்தனர்.(25)

அப்போது நகுலன், அம்மோதலில் சிரித்துக் கொண்டே நான்கு கூரிய கணைகளால் சத்தியசேனனின் குதிரைகளைத் தாக்கினான்.(26) அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகள் கொண்ட நீண்ட கணையொன்றைக் {நாராசத்தை} குறிபார்த்து சத்தியசேனனின் வில்லை அறுத்தான்.(27) இதன்காரணமாக மற்றொரு தேரில் ஏறி, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட பின்னவனும் {சத்தியசேனனும்}, அவனது சகோதரனான சுஷேனனும், பாண்டுவின் மகனை {நகுலனை} எதிர்த்து விரைந்தனர்.(28) மாத்ரியின் வீர மகனோ {நகுலனோ}, ஓ! ஏகாதிபதி போரின் முன்னணியில் இருந்த அவர்கள் ஒவ்வொருவரையும் இரு கணைகளால் அச்சமில்லாமல் துளைத்தான்.(29) பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான சுஷேனன், கோபத்தால் நிறைந்து, சிரித்துக் கொண்டே, அந்தப் போரில் பாண்டுவின் மகனுடைய உறுதிமிக்க வில்லை ஒரு கத்தி முனை கணையால் {க்ஷுரப்ரத்தால்} அறுத்தான்.(30)

அப்போது கோபத்தால் உணர்விழந்த நகுலன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஐந்து கணைகளால் சுஷேனனையும், ஒன்றால் அவனது கொடிமரத்தையும் துளைத்தான்.(31) பிறகு ஒரு கணத்தையும் இழக்காத அவன் {நகுலன்}, சத்யசேனனின் தோல் கவசத்தையும் {கையுறையையும்} அறுத்ததால், ஓ! ஐயா, துருப்புகள் அனைத்தும் உரத்த கூச்சலிட்டன.(32) எதிரியைக் கொல்லவல்லதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட சத்தியசேனன், அனைத்துப் பக்கங்களிலும் பாண்டுவின் மகனைக் கணைகளால் மறைத்தான்.(33) அந்தக் கணைகளைக் கலங்கடித்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான நகுலன், தன் எதிராளிகள் ஒவ்வொருவரையும் இரு கணைகளால் துளைத்தான்.(34) பின்னவர்களில் ஒவ்வொருவரும், நேராகச் செல்லும் கணைகள் பலவற்றால் பதிலுக்கு அந்தப் பாண்டுவின் மகனைப் பல கூரிய கணைகளால் துளைத்தனர்.(35)

அப்போது, பெரும் கரநளினம் கொண்ட வீர சத்தியசேனன், தன் சகோதரனின் துணையில்லாமலேயே நகுலனுடைய தேரின் ஏர்க்காலையும், அவனது வில்லையும் இரு கணைகளால் அறுத்தான்.(36) எனினும், அதிரதனான நகுலன், தன் தேரில் நின்று கொண்டு, தங்கக் கைப்பிடி கொண்டதும், கூர்முனை கொண்டதும், எண்ணெயில் ஊற வைத்ததும், மிகப் பிரகாசமானதுமான ஓர் ஈட்டியை எடுத்துக் கொண்டான்.(37) ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, அஃது {அந்த ஈட்டி}, அடிக்கடி தன் நாவை வெளியே தள்ளும் கடும் நஞ்சுமிக்க ஒரு பெண்பாம்புக்கு ஒப்பாக இருந்தது. அவ்வாயுதத்தை உயர்த்திய அவன் {நகுலன்}, அம்மோதலில் சத்தியசேனன் மீது அதை ஏவினான்.(38) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த ஈட்டியானது, அந்தப் போரில் சத்தியசேனனின் இதயத்தைத் துளைத்து, அதை நூறு துண்டுகளாக்கியது. புலன் உணர்வையும், உயிரையும் இழந்த அவன் {சத்தியசேனன்}, தன் தேரில் இருந்து கீழே பூமியில் விழுந்தான்.(39) தன் சகோதரன் கொல்லப்பட்டதைக் கண்ட சுஷேனன், சினத்தால் உணர்விழந்தவனாக அந்தப் போரில் திடீரென நகுலனைத் தேரற்றவனாகச் செய்தான்.ஒரு கணத்தையும் இழக்காத அவன், தரையில் நின்று போராடிய அந்தப் பாண்டுவின் மகன் மீது தன் கணைகளைப் பொழிந்தான்.(40)

நகுலன் தேரற்றவனாக இருப்பதைக் கண்ட திரௌபதியின் மகன் சுதசோமன், அந்தப் போரில் தன் தந்தையைக் {நகுலனைக்} காக்க அந்த இடத்தில் விரைந்து வந்தான்.(41) சுதசோமனின் தேரில் ஏறிக் கொண்டவனும், பாரதக் குலத்தின் வீரனுமான நகுலன், மலையில் இருக்கும் ஒரு சிங்கம் போல மிக அழகாகத் தெரிந்தான்.(42) அந்தப் பெரும் தேர்வீரர்கள் இருவரும், தங்கள் கணைமாரிகளை ஏவியபடி ஒருவரையொருவர் அணுகி அடுத்தவரின் அழிவுக்கு முயற்சி செய்தனர்.(43)_ அப்போது சினத்தால் நிறைந்த சுஷேனன், மூன்று கணைகளால் பாண்டுவின் மகனையும் {நகுலனையும்}, இருபதால் {நகுலனின் மகன்} சுதசோமனின் கரங்களையும், மார்பையும் தாக்கினான்.(44) ஓ! ஏகாதிபதி, இதனால் மூர்க்கமடைந்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான நகுலன், திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் தன் கணைகளால் மறைத்தான்.(45)

பெரும் சக்தி கொண்டதும், அரை வட்டத் தலை கொண்டதுமான ஒரு கூரிய கணையை {அர்த்தச்சந்திர பாணத்தை} எடுத்துக் கொண்ட நகுலன், அந்தப் போரில் அதைக் கர்ணனின் மகன் {சுஷேணன்} மீது பெரும் வேகத்தோடு ஏவினான்.(46) ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்} அந்தக் கணையைக் கொண்டு, துருப்புகள் அனைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சுஷேனனின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான். அந்த அருஞ்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(47) இவ்வாறு சிறப்புமிக்க நகுலனால் கொல்லப்பட்ட கர்ணனின் மகன் {சுஷேனன்}, ஆற்றங்கரையில் நிற்கும் நெடிய மரம் ஒன்று நீரோட்டத்தால் தூக்கி வீசப்படுவதைப் போலக் கீழே விழுந்தான்.(48) கர்ணன் மகன்களின் படுகொலையையும், நகுலனின் ஆற்றலையும் கண்ட உமது படையானது, ஓ! பாரதக் குலத்தின் காளையே, அச்சத்தால் அங்கிருந்து தப்பி ஓடியது.(50) எனினும், அவர்களது படைத்தலைவனும், துணிச்சல்மிக்கவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான மத்ரர்களின் வீர ஆட்சியாளன் {சல்லியன்}, ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் துருப்புகளைப் பாதுகாத்தான்.(50)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் படையை அணிதிரட்டிய அந்தச் சல்லியன், சிங்க முழக்கங்கள் செய்து கொண்டும், தன் வில்லில் சீற்றத்துடன் நாணொலி எழுப்பியபடியும் போரில் அச்சமற்று நின்றிருந்தான்.(51) அப்போது, அந்த உறுதிமிக்க வில்லாளியால் {சல்லியனால்} அந்தப் போரில் பாதுகாக்கப்பட்ட உமது துருப்புகள், ஓ! மன்னா, எதிரியை எதிர்த்து மீண்டும் உற்சாகமாக அனைத்துப் பக்கங்களில் இருந்தும் சென்றன.(52) ஓ! மன்னா, அந்த உயர் ஆன்மப் போர்வீரர்கள், அனைத்துப் பக்கங்களிலும் போரிட விரும்பி அந்தப் பெரும் வில்லாளியான மத்ரர்களின் ஆட்சியாளனைச் {சல்லியனைச்} சூழ்ந்து நின்றனர்.(53) அப்போது, சாத்யகி, பீமசேனன், மாத்ரியின் இரட்டை மகன்களான அந்த இரு பாண்டவர்கள் {நகுலன், சகாதேவன்} ஆகியோர், பணிவின் வசிப்பிடமும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான யுதிஷ்டிரனைத் தங்களுக்குத் தலைமையில் நிறுத்திக் கொண்டு,(54) போரில் அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் {சல்லியனைச்} சூழ்ந்து நின்று உரத்த சிங்க முழக்கங்களைச் செய்தனர். மேலும் அந்த வீரர்கள், தாங்கள் ஏவிய கணைகளால் “விஸ்” ஒலியை உண்டாக்கியும், பல்வேறு வகைகளில் அடிக்கடி கூச்சலிட்டபடியும் இருந்தனர்.(55) உமது வீரர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே சினத்தால் நிறைந்து, போரிடும் விருப்பத்தால், மத்ரர்களின் ஆட்சியாளனைச் சூழ்ந்து நின்றனர்.(56)

அப்போது, மருண்டோரின் அச்சத்தைத் தூண்டும் வகையில், மரணத்தையே தங்கள் இலக்காக்கிக் கொண்ட உமது படைவீரர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இரு தரப்பினருக்கிடையில் ஒரு போர் தொடங்கியது.(57) யமனுடைய அரசின் மக்கள் தொகையை அதிகரித்தபடி அச்சமற்ற போராளிகளுக்கிடையில் நடந்த அந்தப் போரானது, ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பானதாக இருந்தது.(58) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குரங்குக் கொடியைக் கொண்டவனான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, போரில் சம்சப்தகர்களைக் கொன்றுவிட்டு, கௌரவப் படையின் அந்தப் பகுதியை எதிர்த்து விரைந்து வந்தான்.(59) திருஷ்டத்யும்னனின் தலைமையிலான பாண்டவர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே அதே படைப்பிரிவை எதிர்த்து விரைந்து, கூரிய கணைமாரிகளைப் பொழிந்தனர்.(60) பாண்டவர்களால் விஞ்சப்பட்ட அந்தக் கௌரவப் படை திகைப்படைந்து மலைத்து நின்றது. உண்மையில், அப்போது அந்தப் படைப்பிரிவினால், திசைகள் மற்றும் துணைத் திசைகளின் புள்ளிகளை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(61)

பாண்டவர்களால் ஏவப்பட்ட கூரிய கணைகளால் மறைக்கப்பட்டிருந்த அந்தக் கௌரவப் படையானது, தன் முதன்மையான வீரர்களை இழந்து, நடுங்கி, அனைத்துப் பக்கங்களிலும் பிளந்தது. உண்மையில், ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, உமது அந்தப் படையானது, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்களால் கொல்லப்பட நேர்ந்தது.(62) அதேபோல, ஓ! மன்னா, பாண்டவப் படையும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உமது மகன்களால் அந்தப் போரில் ஏவப்பட்ட நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகளால் கொல்லப்பட நேர்ந்தது.(63) மிகவும் தூண்டப்பட்டவையாக இருந்த அந்த இருபடைகளும் ஒன்றையொன்று கொன்று கொண்டிருந்தபோது, மழைக்காலங்களில் கலங்கும் ஓடைகள் இரண்டைப் போல மிகவும் கலக்கமடைந்திருந்தன.(64) அந்தப் பயங்கரப் போரின் போது, ஓ! ஏகாதிபதி, உமது போர்வீரர்கள் மற்றும் பாண்டவர்களின் போர்வீரர்கள் ஆகியோரின் இதயங்களில் பேரச்சம் நுழைந்தது” {என்றான் சஞ்சயன்}.(65)

தப்பி ஓடிய கிருதவர்மன்! – சல்லிய பர்வம் பகுதி – 11-பலவீனமடைந்து கலங்கிய கௌரவப் படை; படையை மீட்கப் பாண்டவர்களை எதிர்த்த சல்லியன்; அப்போது தோன்றிய தீய சகுனங்கள்; யுதிஷ்டிரனை எதிர்த்த சல்லியன்; யுதிஷ்டிரனின் துணைக்கு வந்த பீமசேனன்; சல்லியனுக்குத் துணையாக வந்த கிருதவர்மன்; பீமனின் குதிரைகளை மீண்டும் மீண்டும் கொன்ற கிருதவர்மன்; கதாயுதத்தால் கிருதவர்மனின் குதிரைகளையும், தேரையும் நொறுக்கிய பீமசேனன்; தப்பி ஓடிய கிருதவர்மன்; சல்லியனை இலக்காகக் கொண்ட பீமன், அவனது சாரதியை வீழ்த்தியது; பீமனும், சல்லியனும் கதாயுதத்திற்கு ஆயத்தமாக நின்றது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஒருவரையொருவர் கொன்று இவ்வாறு துருப்புகள் கலங்கியபோது, பல போர்வீரர்கள் தப்பி ஓடி, யானைகள் உரக்கக் கதறத் தொடங்கியபோது,(1) அந்தப் பயங்கரப் போரில் காலாட்படையினர் பேரொலியுடன் கதறி ஓலமிடத் தொடங்கியபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகள் பல்வேறு திசைகளில் ஓடியபோது,(2) பயங்கரப் படுகொலைகள் நடந்த போது, உடல்படைத்த உயிரினங்கள் அனைத்தும் பயங்கர அழிவைச் சந்தித்த போது, பல்வேறு வகைகளிலான ஆயுதங்கள் ஒன்றோடொன்று பாயவோ, மோதவோ செய்த போது, தேர்களும், யானைகளும் ஒன்றாகக் கலக்கத் தொடங்கியபோது,(3) வீரர்கள் பெருமகிழ்ச்சியையும், கோழைகள் பேரச்சத்தையும் உணர்ந்த போது, போராளிகள் ஒருவரையொருவர் கொல்ல விரும்பி மோதிக் கொண்டபோது,(4) யமனின் அரசுகுடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அச்சந்தரும் விளையாட்டான அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்தபோது, பாண்டவர்கள் தங்கள் கூரிய கணைகளால் உமது துருப்புகளைக் கொன்றனர். அதே வகையில் உமது துருப்பினரும் பாண்டவத் துருப்புகளைக் கொன்றனர்.(6)

சூரியன் உதித்த அந்தக் காலை வேளையில், உண்மையில், மருண்டோரை அச்சுறுத்தும்வகையில் அந்தப் போர் நடந்து கொண்டிருந்த போது,(7) உயர் ஆன்ம யுதிஷ்டிரனால் பாதுகாக்கப்பட்டவர்களும் துல்லியமான இலக்கைக் கொண்டவர்களுமான பாண்டவ வீரர்கள், மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு உமது படைகளுடன் போரிட்டனர்.(8) ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, பெரும் பலம் கொண்டதும், தாக்குவதில் திறன் கொண்டதும், இலக்கில் துல்லியம் கொண்டதுமான செருக்குமிக்கப் பாண்டவர்களுடன் மோதி அந்தக் குரு படை, காட்டுத்தீயால் அச்சமடைந்த ஒரு மந்தையின் பெண்மானைப் போலப் பலவீனமடைந்து, கலங்கிப் போனது.(9)

புழுதியில் மூழ்கும் மாட்டைப் போல ஆதரவற்றுப் பலவீனமாக இருந்த அந்தப் படையைக் கண்ட சல்லியன், அதை மீட்க விரும்பி, பாண்டவப் படையை எதிர்த்துச் சென்றான்.(10) சினத்தால் நிறைந்த அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, ஒரு சிறந்த வில்லை எடுத்துக் கொண்டு, பாண்டவ எதிரிகளை எதிர்த்துப் போரிட விரைந்தான்.(11) பாண்டவர்களும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் வெற்றியடைய விரும்பி, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} எதிர்த்துச் சென்று, கூரிய கணைகளால் அவனைத் துளைத்தனர்.(12) அப்போது, பெரும்பலத்தைக் கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கூரிய கணைகளால் அப்படையைப் பீடித்தான்.(13)

அச்சமயத்தில் பல்வேறு சகுனங்கள் தோன்றின. மலைகளுடன் கூடிய பூமியானவள் {பூமாதேவி} பேரொலியை உண்டாக்கியபடியே நடுங்கினாள்.(14) கைப்பிடிகளுடன் கூடிய வேல்களைப் போலப் பிரகாசமான கூர்முனைகளைக் கொண்ட எரிநட்சத்திரங்கள், ஆகாயத்தில் இருந்து காற்றைக் கிழித்துக் கொண்டு கீழே பூமியில் விழுந்தன.(15) பெரும் எண்ணிக்கையிலான மான்கள், எருமைகள் மற்றும் பறவைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையைத் தங்கள் வலப்புறத்தில் கொண்டன[1].(16) வெள்ளி மற்றும் செவ்வாய்க் கோள்கள், புதனுடன் சேர்ந்து பாண்டவர்களுக்குப் பின்புறமாகவும், பூமியின் தலைவர்கள் (கௌரவர்கள்) அனைவருக்கும் முன்னிலையிலும் {எதிர்ப்புறத்திலும்} தோன்றின[2].(17) ஆயுதங்களின் முனைகள், (போர்வீரர்களின்) கண்களைக் கூசச் செய்யும் வகையில் சுடர்மிக்கத் தழல்களை வெளியிடுவதாகத் தெரிந்தது. பெரும் எண்ணிக்கையிலான காகங்கங்களும், ஆந்தைகளும் போராளிகளின் தலைகளிலும், அவர்களது கொடிமர நுனிகளிலும் அமர்ந்தன.(18)

பிறகு, பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த கௌரவ மற்றும் பாண்டவப் போராளிகளுக்கு இடையில் ஒரு கடும்போர் நடந்தது.(19) அப்போது, ஓ! மன்னா, கௌரவர்கள் தங்கள் படைப்பிரிவுகளைத் திரட்டிக் கொண்டு பாண்டவப் படையை எதிர்த்து விரைந்தனர்.(20) தளர்வடைய இயலா ஆன்மா கொண்ட சல்லியன், மழைத்தாரைகளைப் பொழியும் ஆயிரங்கண் இந்திரனைப் போலக் குந்தியின் மகனான யுதிஷ்டிரனின் மீது அடர்த்தியான கணைமாரிகளைப் பொழிந்தான்.(21) பெரும் பலம் கொண்ட அவன் {சல்லியன்}, பீமசேனன், திரௌபதியின் ஐந்து மகன்கள், பாண்டுவின் மூலம் மாத்ரியிடம் பிறந்த இரு மகன்கள் {நகுலனும், சகாதேவனும்}, திருஷ்டத்யும்னன், சிநியின் பேரன் {சாத்யகி}, சிகண்டி ஆகிய ஒவ்வொருவரையும், தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பத்து கணைகளால் துளைத்தான்.(22,23) உண்மையில் அவன் {சல்லியன்}, கோடைகால நெருக்கத்தில் மழையைப் பொழியும் மகவத்தை {இந்திரனைப்} போலத் தன் கணைமாரிகளைப் பொழியத் தொடங்கினான்.(24)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சல்லியனுடைய கணைகளான் விளைவால், பிரபத்ரகர்களும், சோமகர்களும் ஆயிரக்கணக்கில் வீழ்வது காணப்பட்டது.(25) வண்டுகள் அல்லது வெட்டுக்கிளிகளின் கூட்டங்களைப் போலவும், மேகங்களில் இருந்து விழும் இடியைப் போலவும் சல்லியனின் கணைகள் விழுவது அங்கே காணப்பட்டது.(26) யானைகள், குதிரைகள், காலாட்படைவீரர்கள், தேர்வீரர்கள் ஆகியோர் சல்லியனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, கீழே விழவோ, திரியவோ, உரத்த ஓலமிடவோ செய்தனர்.(27) சினத்திலும், ஆற்றலிலும் மதங்கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, யுகத்தின் முடிவில் வரும் அந்தகனைப் போலப் போரில் தன் எதிரிகளை மறைத்தான். மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளன் மேகங்களைப் போல உரக்க முழங்கத் தொடங்கினான்.(28) இவ்வாறு சல்லியனால் கொல்லப்பட்ட பாண்டவப் படையானது, (பாதுகாப்பு நாடி) குந்தியின் மகனான யுதிஷ்டிரனை நோக்கி ஓடியது.(29)

பெருங்கரநளினம் கொண்ட சல்லியன், அவர்களைக் கூரிய கணைகளால் போரில் நொறுக்கிய பிறகு, அடர்த்தியான கணைமாரியால் யுதிஷ்டிரனைப் பீடிக்கத் தொடங்கினான்.(30) குதிரை மற்றும் காலாட்படையுடன் தன்னை நோக்கி மூர்க்கமாக விரைந்து வரும் சல்லியனைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், சினத்தால் நிறைந்து, அங்குசத்தால் தடுக்கப்படும் மதங்கொண்ட யானையைப் போலக் கூரிய கணைகளால் அவனைத் தடுத்தான்.(31) அப்போது சல்லியன் கடும் நஞ்சுக்கு ஒப்பான பயங்கரக் கணையொன்றை யுதிஷ்டிரன் மீது ஏவினான். அந்தக் கணையானது, குந்தியின் உயர் ஆன்ம மகனை {யுதிஷ்டிரனைத்} துளைத்து வேகமாகப் பூமியில் விழுந்தது.(32) அப்போது, கோபத்தால் நிறைந்த விருகோதரன் {பீமன்}, ஏழு கணைகளாலும், சகாதேவன் ஐந்தாலும், நகுலன் பத்தாலும் சல்லியனைத் துளைத்தனர்.(33) திரௌபதியின் (ஐந்து) மகன்கள், எதிரிகளைக் கொல்பவனும், மூர்க்கமாக இருப்பவனுமான ஆர்தாயனியின் {சல்லியனின்} மீது, மலையின் மீது மழையைப் பொழியும் மேகத் திரள்களைப் போலக் கணைமாரிகளைப் பொழிந்தனர்.(34)

சல்லியன் அனைத்துப் புறங்களில் இருந்தும் பார்த்தர்களால் தாக்கப்படுவதைக் கண்ட கிருதவர்மனும், கிருபரும் அந்த இடத்திற்குக் கோபத்துடன் விரைந்தனர்.(35) வலிமையும், சக்தியும் கொண்ட உலூகன், சுபலனின் மகனான சகுனி, உதடுகளில் புன்னகையைக் கொண்டவனும் வலிமைமிக்கத் தேர்வீரனுமான அஸ்வத்தாமன் ஆகியோரும், உமது மகன்கள் அனைவரும், அந்தப் போரில் அனைத்து வழிகளிலும் சல்லியனைப் பாதுகாத்தனர்.(36) பீமசேனனை மூன்று கணைகளால் துளைத்த கிருதவர்மன், அடர்த்தியான கணைமாரிகளை ஏவி, கோபத்தின் வடிவமாகத் தெரிந்த அந்தப் போர்வீரனை {பீமனைத்} தடுத்தான்.(37) சினத்தால் தூண்டப்பட்ட கிருபர், பல கைகளால் திருஷ்டத்யும்னனைத் தாக்கினார். சகுனி, திரௌபதியின் மகன்களை எதிர்த்துச் சென்றான், அஸ்வத்தாமன் இரட்டையர்களை {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரை எதிர்த்துச் சென்றான்.(38) போர்வீரர்களில் முதன்மையானவனும், கடும் சக்தி கொண்டவனுமான துரியோதனன், அந்தப் போரில் வலிமை கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, மற்றும் அர்ஜுனனை எதிர்த்துச் சென்று பல கணைகளால் அவர்களைத் தாக்கினான்.(39) இவ்வாறு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, களத்தின் பல்வேறு பகுதிகளில் சீற்றமிக்கவர்களும், அழகானவர்களுமான நூற்றுக்கணக்கான மோதல்கள் உமது படைக்கும், எதிரியின் படைக்கும் இடையில் நடைபெற்றன.(40)

அப்போது போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, அம்மோதலில் பீமசேனனுடைய தேரின் பழுப்பு நிற {கரடி நிற} குதிரைகளைக் கொன்றான். குதிரைகளற்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் தேரில் இருந்து இறங்கி, தண்டத்தை உயர்த்திய காலனைப் போலத் தன் கதாயுதத்தைக் கொண்டு போரிடத் தொடங்கினான்.(41) சகாதேவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அவனுடைய குதிரைகளைக் கொன்றான். அப்போது சகாதேவன் தன் வாளால் சல்லியனின் மகனைக் கொன்றான்.(42) ஆசானான கௌதமர் {கிருபர்}, மீண்டும் அச்சமில்லாமல் திருஷ்டத்யும்னனுடன் போரிட்டார். அவர்கள் இருவரும் மிகக் கவனமான முயற்சியுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர்.(43) ஆசானின் மகனான அஸ்வத்தாமன், அதிகக் கோபம் இல்லாமல் போரில் சிரித்துக் கொண்டே, திரௌபதியின் ஐந்து வீரமகன்கள் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் துளைத்தான்.(44) மீண்டும் அந்தப் போரில் பீமசேனனின் குதிரைகள் கொல்லப்பட்டன. குதிரைகளற்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் தேரில் இருந்து இறங்கி,(45) தண்டத்தை உயர்த்திய காலனைப் போலத் தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டான். கோபத்தால் தூண்டப்பட்ட அந்த வலிமைமிக்க வீரன் {பீமன்}, கிருதவர்மனின் குதிரைகளையும், தேரையும் நொறுக்கினான். கிருதவர்மன் தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்துத் தப்பி ஓடினான்.(46)

சினத்தால் தூண்டப்பட்ட சல்லியனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சோமகர்கள் மற்றும் பாண்டவர்கள் பலரைக் கொன்று, கூரிய கணைகள் பலவற்றால் மீண்டும் யுதிஷ்டிரனைப் பீடித்தான்.(47) அப்போது வீரப் பீமன், தன் கீழுதட்டைக் கடித்தவாறு, சினத்தில் மதங்கொண்டு, அந்தப் போரில் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, சல்லியனைக் கொல்வதற்காக அவனையே இலக்காக நோக்கினான்.(48) மரண இரவைப் போல(எதிரியின் தலையை) எதிர்நோக்கும், யமனின் தண்டத்திற்கு ஒப்பானதும், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் உயிருக்கு அழிவைத் தரக்கூடியதும்,(49) தங்கத் துணியால் கட்டப்பட்டதும், சுடர்மிக்க எரிநட்சத்திரத்தைப் போலத் தெரிவதும், தாங்குக் கயிற்றுடன் கூடியதும், பெண் பாம்பைப் போலச் சீற்றமிக்கதும், வஜ்ரத்தைப் போலக் கடினமானதும், முழுக்க இரும்பாலானதும்,(50) இனிய மங்கையைப் போலச் சந்தனக் குழம்பு மற்றும் பிற நறுமணப் பொருட்களால் பூசப்பட்டதும், கொழுப்பு, குருதி, ஊனிர் ஆகியவற்றைச் சிந்தத் செய்வதும், யமனின் நாவுக்கு ஒப்பானதும்,(51) அதனுடன் இணைக்கப்பட்ட மணிகளின் விளைவால் கீச்சொலிகளை உண்டாக்குவதும், இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பானதும்,  புதிதாகச் சட்டை உரித்து விடுபட்ட கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானதும், யானைகளின் மதநீரால் நனைந்ததும்,(52) பகைவரின் துருப்புகளை அச்சுறுத்துவதும், நட்பு துருப்புகளை மகிழ்ச்சி கொள்ளச் செய்வதும், உலக மனிதர்களால் கொண்டாடப்படுவதும், மலைச்சிகரங்களையே பிளக்கவல்லதும்,(53) எதைக் கொண்டு, கைலாசத்தில் அந்தக் குந்தியின் வலிமைமிக்க மகன் {பீமன்}, மகேஸ்வரனின் நண்பனான தலைவன் அளகனையே {குபேரனையே}[3] அறைகூவி அழைத்தானோ,(54) திரௌபதிக்கு ஏற்புடையதைச் செய்து மந்தார மலர்களை அடையும் பொருட்டுக் கந்தமாதன மலைச்சாரலில் பலரால் தடுக்கப்பட்டாலும், கோபத்துடன் கூடிய பீமன், செருக்கு மிக்கவர்களும், மாயசக்திகளைக் கொண்டவர்களுமான பெரும் எண்ணிக்கையிலான குஹ்யர்களை எந்த ஆயுதத்தைக் கொண்டு பீமன் கோபத்துடன் கொன்றானோ,(55) வைரங்கள், ரத்தினங்கள் நிறைந்ததும், எட்டு பட்டைகளைக் கொண்டுதும், இந்திரனின் வஜ்ரத்தைப் போலக் கொண்டாடப்பட்டதுமான அந்தக் கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு, வலிமைமிக்கக் கரத்தைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} சல்லியனை எதிர்த்து விரைந்தான்.(56)

பயங்கர ஒலியைக் கொண்ட அந்தக் கதாயுதத்துடன் கூடியவனும், போரில் திறன்மிக்கவனுமான பீமன், பெரும் வேகம் கொண்ட சல்லியனின் நான்கு குதிரைகளை நொறுக்கினான்.(57) அப்போது அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்ட வீரச் சல்லியன், பீமசேனனின் அகன்ற மார்பின் மீது ஒரு வேலை வீசி உரக்கக் கூச்சலிட்டான். அந்த வேலானது, பாண்டு மகனின் {பீமனின்} கவசத்தைத் துளைத்துச் சென்று அவனது உடலுக்குள் ஊடுருவியது.(58) எனினும், விருகோதரன், அவ்வாயுதத்தைப் பிடுங்கி எடுத்து, அதைக் கொண்டே சல்லியனுடைய சாரதியைத் துளைத்தான்.(59) முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்ட அந்தச் சாரதி, குருதி கக்கிக் கலங்கிய இதயத்துடன் கீழே விழுந்தான். இதனால் தன் தேரில் இருந்து கீழே இறங்கி வந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மகிழ்ச்சியாகப் பீமனைப் பார்த்தான்.(60) தன் அருஞ்செயலுக்குப் பதிலடிக் கொடுக்கப்பட்டதைக் கண்ட சல்லியன் ஆச்சரியத்தால் நிறைந்தான். அமைதியான ஆன்மா கொண்ட அந்த மத்ரர்களின் ஆட்சியாளன், தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் எதிரியின் மீது தன் பார்வையைச் செலுத்துத் தொடங்கினான்.(61) போரில் பீமனின் பயங்கரச் சாதனையைக் கண்ட பார்த்தர்கள், மகிழ்ச்சிமிக்க இதயங்களுடன், உழைப்பால் களைப்படைய முடியாதவனான அவனை {பீமனை} வழிபட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(62)

சல்லியன் பீமன் கதாயுத்தம், – சல்லிய பர்வம் பகுதி – 12-சல்லியனுக்கும், பீமனுக்கும் இடையில் நேர்ந்த கடுமையான கதாயுதப் போர்; ஒரே நேரத்தில் கீழே விழுந்த சல்லியனும், பீமனும்; கீழே விழுந்த சல்லியனைப் போர்க்களத்தைவிட்டு வெளியே கொண்டு போன கிருபர்; நொடிப்பொழுதில் எழுந்து நின்று, மீண்டும் சல்லியனை அறைகூவியழைத்த பீமசேனன்; சேகிதானனைக் கொன்ற துரியோதனன்; யுதிஷ்டிரனோடு போரிட்ட சல்லியன்; சல்லியனின் தேர்ச்சக்கரப் பாதுகாவலர்களைக் கொன்று, சல்லியனின் கொடிமரத்தையும் வெட்டிய யுதிஷ்டிரன்; சல்லியனுக்கு முன்பு ஆற்றலை இழந்து நின்ற யுதிஷ்டிரன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தன் சாரதி வீழ்ந்துவிட்டதைக் கண்ட சல்லியன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முழுக்க இரும்பாலான தன் கதாயுதத்தை வேகமாக எடுத்துக் கொண்டு, அசையாத மலையென நின்றான்.(1) எனினும், வலிமைமிக்கக் கதாயுதத்துடன் கூடிய பீமன், சுடர்மிக்க யுகநெருப்பையோ, பாசக்கயிற்றைக் கொண்ட யமனையோ, உறுதியான சிகரத்தைக் கொண்ட கைலாச மலையையோ, வஜ்ரத்துடன் கூடிய இந்திரனையோ, திரிசூலத்துடன் கூடிய மஹாதேவனையோ, காட்டில் உள்ள மதங்கொண்ட யானையொன்றையோ போலத் தெரிந்த சல்லியனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(2,3) அந்நேரத்தில், வீரர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்படி, ஆயிரக்கணக்கான சங்கொலிகளும், கொம்பு {எக்காள} ஒலிகளும், சிங்க முழக்கங்களும் எழுந்தன.(4) அந்த இரு முதன்மையான போர்வீரர்களையும் அனைத்துப் பக்கங்களிலும் இருந்த பார்த்த இரு படைகளின் போராளிகளும், “நன்று, நன்று” என்று சொல்லி அவர்கள் இருவரையும் பாராட்டினர்.(5)

மத்ரர்களின் ஆட்சியாளனையோ {சல்லியனையோ}, யதுக்களைத் திளைக்கச் செய்யும் ராமனையோ {பலராமனையோ} தவிர, போரில் பீமனின் மூர்க்கத்தைத் தாங்கிக் கொள்ளும் துணிவு கொண்டோர் வேறு எவரும் இல்லை.(6) அதே போலவே, பீமனைத் தவிர, மத்ரர்களின் சிறப்புமிக்க மன்னனின் {சல்லியனின்} கதாயுத சக்தியைத் தாங்கிக் கொள்ளும் துணிவு கொண்ட வேறு எந்தப் போர்வீரனும் அங்கே இல்லை.(7) விருகோதரன் {பீமன்} மற்றும் மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஆகிய அந்தப் போராளிகள் இருவரும், காளைகளைப் போல முழங்கிக் கொண்டு, அடிக்கடி காற்றில் குதித்து எழுந்தவாறு, வட்டமாகச் சுழன்றனர் {மண்டகதிகளோடு சஞ்சரித்தனர்}.(8) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கும் இடையிலான அம்மோதலில், வட்டமாகச் சுழல்வதிலோ {மண்டலகதிகளிலோ}, கதாயுதத்தைப் பயன்படுத்துவதிலோ அவர்களுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை.(9)

பிரகாசமான தங்கத்துணியால் சுற்றிலும் கட்டப்பட்டு நெருப்புப் பட்டையாகத் தெரிந்த சல்லியனின் கதாயுதமானது, பார்வையாளர்களிடம் அச்சத்தைத் தூண்டியது.(10) அதே போலவே, உயர் ஆன்ம பீமனின் கதாயுதமும், அவன் வட்டமாகச் சுழல்கையில், மேகங்களுக்கு மத்தியில் இருக்கும் மின்னலைப் போலத் தெரிந்தது.(11) மத்ர ஆட்சியாளனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட பீமனின் கதாயுதம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் தீப்பொறிகளை உண்டாக்கி எரிவது போலத் தெரிந்தது.(12) அதே போல, பீமனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட சல்லியனின் கதாயுதமும், சுடர்மிக்கத் தணல் மழையைப் பொழிந்து கொண்டு அற்புதமாகத் தெரிந்தது.(13) பெரும் யானைகள் இரண்டு, தங்கள் தங்கள் தந்தங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போலவோ, பெரும் காளைகள் இரண்டு தங்கள் கொம்புங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போலவோ அந்த இருவீரர்களும், இரும்பால் கட்டப்பட்ட தண்டங்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் இரு போராளிகளைப் போலத் தங்கள் முதன்மையான கதாயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர்.(14) கதாயுதங்களால் தாக்கப்பட்ட அவர்களது அங்கங்கள், விரைவில் குருதியில் குளித்து, மலர்ந்திருக்கும் இரு கின்சுகங்களைப் போலத் தெரிந்த விளைவால் அழகாகத் தெரிந்தன.(15)

மத்ர ஆட்சியாளனால் {சல்லியனால்} இடப்பக்கமும், வலப்பக்கமும் தாக்கப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன் மலையொன்றைப் போல அசையாதவனாக நின்றான்.(16) அதே போலவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனின் கதாயுதத்தால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டாலும்,  யானையின் தந்தங்களால் தாக்கப்படும் மலையொன்றைப் போலச் சல்லியன் அசையாது நின்றான்.(17) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவரின் கதாயுத வீச்சுகளால் உண்டான ஒலியானது, அடுத்தடுத்த இடியொலிகளைப் போல அனைத்துப் பக்கங்களிலும் கேட்டது.(18) ஒரு கணம் நின்றவர்களும், பெரும் சக்தி கொண்டவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும், தங்கள் கதாயுதங்களை உயர்த்திக் கொண்டு, மிக நெருக்கத்தில் மீண்டும் வட்டமாகச் சுழலத் தொடங்கினர்.(19) மனிதசக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளைக் கொண்ட அந்தப் போர்வீரர்கள் இருவருக்கும் இடையில் மீண்டும் தொடங்கிய மோதலில், அவர்கள் ஒவ்வொருவரும் எட்டு எட்டுகள் {நடையடிகள்} மட்டும் அடுத்தவனை நோக்கி முன்னேறி, உயர்த்தப்பட்ட இரும்பு தண்டங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(20)

அப்போது, ஒருவரையொருவர் அடைய விரும்பிய அவர்கள் மீண்டும் வட்டமாகச் சுழலத் தொடங்கினர். (கதாயுதப்பயன்பாட்டில்) சாதித்தவர்களான அவ்விருவரும் தங்கள் தங்கள் திறன்மேன்மையை வெளிக்காட்டத் தொடங்கினர்.(21) தங்கள் பயங்கர ஆயுதங்களை உயர்த்திக் கொண்ட அவர்கள், நிலநடுக்கத்தின்போது, சிகரங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் மலைகளைப் போல மீண்டும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(22) அவர்களின் பலத்தின் விளைவால் ஒருவரையொருவர் அதிகமாக நொறுக்கிய அந்த வீரர்கள் இருவரும், இந்திர வழிபாட்டுக்காக நடப்பட்ட கம்புகள் இரண்டைப் போல ஒரே நேரத்தில் கீழே விழுந்தனர்.(23) அப்போது அந்தக் காட்சியைக் கண்டவர்களும், இருபடைகளைச் சேர்ந்தவர்களுமான துணிச்சல்மீக்க போராளிகள், ஓ என்றும் ஐயோ என்றும் கூச்சலிட்டனர். பெரும் பலத்தோடு முக்கிய அங்கங்கள் தாக்கப்பட்டதால், அவர்கள் இருவரும் மிகவும் கலங்கிப் போயிருந்தனர்.(24) அப்போது வலிமைமிக்கக் கிருபர், மத்ரர்களில் காளையான சல்லியனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு, போர்க்களத்தில் இருந்து அவனை வேகமாகக் கொண்டு சென்றார்.(25)

எனினும், கண்ணிமைப்பதற்குள் எழுந்து நின்ற பீமசேனன், மதுவுண்டவன் போலத் தள்ளாடியபடியே உயர்த்திப்பிடித்த கதாயுதத்துடன் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} அறைகூவியழைத்தான்.(26) அப்போது வீரத்துடன் கூடிய உமது படையின் போர்வீரர்கள், பல்வேறு ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, பல்வேறு இசைக்கருவிகளை முழக்கி இசைத்தபடியே பாண்டவர்களுடன் போரிட்டனர்.(27) கரங்களையும், ஆயுதங்களையும் உயர்த்திக் கொண்டு, பேரொலியை எழுப்பிக் கொண்டிருந்த உமது போராளிகள், ஓ! ஏகாதிபதி, துரியோதனன் தலைமையில் பாண்டவர்களை எதிர்த்து விரைந்தனர்.(28) கௌரவப் படையைக் கண்ட பாண்டுமகன்கள், துரியோதனன் தலைமையிலான அந்தப்போர்வீரர்களை எதிர்த்து சிங்க முழக்கங்களுடன் விரைந்தனர்.(29)

பிறகு உமது மகன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அப்படி விரைந்து வரும் வீரர்களில் சேகிதானானைத்[1] தனிமைப்படுத்தி, ஒரு வேலால் அவனது மார்பை ஆழமாகத் துளைத்தான்.(30) இவ்வாறு உமது மகனால் தாக்கப்பட்ட சேகிதானன், குருதியால் மறைக்கப்பட்டு, ஆழ்ந்த மயக்கத்தை அடைந்து தன் தேர்த்தட்டில் இருந்து கீழே விழுந்தான்.(31) பாண்டவர்களில் பெரும் தேர்வீரர்கள், சேகிதானன் கொல்லப்பட்டதைக் கண்டு, (கௌரவர்கள் மீது) இடையறாத கணைமாரியைப் பொழிந்தனர்.(32) உண்மையில், வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்ட பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி, உமது படைப்பிரிவுகளின் அனைத்துப் பக்கங்களிலும் அழகாகத் திரிந்து கொண்டிருந்தனர்.(33) கிருபர், கிருதவர்மன், வலிமைமிக்கவனான சுபலனின் மகன் {சகுனி} ஆகியோர் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைத்} தங்கள் முன் கொண்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுடன் போரிட்டனர்.(34) துரியோதனன், ஓ! ஏகாதிபதி, பரத்வாஜர் மகனை {துரோணரைக்} கொன்றவனும், அபரிமிதமான சக்தியும், ஆற்றலும் கொண்ட வீரனான திருஷ்டத்யும்னனுடன் போரிட்டான்.(35)உமது மகனால் {துரியோதனனால்} அனுப்பப்பட்ட, துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} தலைமையிலான மூவாயிரம் {3000} தேர்கள் விஜயனோடு (அர்ஜுனனோடு) போரிட்டுக் கொண்டிருந்தன.(36) அந்தப் போராளிகள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெற்றியடைய உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு, உயிரின் மீது கொண்ட அச்சத்தைத் துறந்தனர். உண்மையில், ஓ! மன்னா, ஒரு தடாகத்தினுள் செல்லும் அன்னங்களைப் போலவே, உமது போர்வீரர்கள், பாண்டவப்படைக்கு மத்தியில் ஊடுருவின.(37) அப்போது, அடி கொடுப்பதிலும், வாங்குவதிலும் இன்பங்கொண்டு ஒருவரையொருவர் கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்ட போராளிகளைக் கொண்ட குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் ஒரு கடும் போர் நடந்தது.(38) ஓ! மன்னா, வீரர்களுக்கு அழிவை ஏற்படுத்திய அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, காணப் பயங்கரமான பூமியின் புழுதி காற்று எழுந்தது.(39) போர் நடந்து கொண்டிருந்த போது, சொல்லப்பட்ட (பாண்டவப் போர்வீரர்களின்) பெயர்களையும், பாண்டவர்களால் சொல்லப்பட்ட (குரு போர்வீரர்களின்) பெயர்களையும் கேட்டே, அச்சமில்லாமல் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டிருந்த போராளிகளை நாங்கள் அறிந்தோம்.(40)

எனினும், ஓ! மனிதர்களில் புலியே , விரைவில் அந்தப் புழுதியானது, அப்போது சிந்தப்பட்ட குருதியால் விலக்கப்பட்டு, புழுதியோடு கூடிய இருளும் விரட்டப்பட்டு, மீண்டும் திசைகளின் புள்ளிகள் அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன.(41) உண்மையில், அச்சந்தருவதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, உமது போர்வீரர்களிலோ, எதிரியின் போர்வீரர்களிலோ எவரும் புறமுதுகிடவில்லை.(42) பிரம்மலோகத்தை அடையும் விருப்பத்தாலும், நியாயமாகப் போரிட்டு வெற்றியை அடையும் விருப்பத்தாலும், சொர்க்கத்தை அடையும் நம்பிக்கையாலும் தூண்டப்பட்ட போராளிகள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.(43) தங்கள் தலைவர்களால் தங்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதரங்களின் நிமித்தமாக அவர்களுக்குப் பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தவோ, தங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் நோக்கத்தை நிறைவேற்றும் உறுதியான தீர்மானம் கொண்டோ, சொர்க்கத்தில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்த போர்வீரர்கள், அந்தச் சந்தர்ப்பத்தில் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டிருந்தனர்.(44) பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை ஏவியும், வீசியும் கொண்டிருந்த பெரும் தேர்வீரர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து முழங்கிக் கொண்டோ, தாக்கிக் கொண்டோ இருந்தனர்.(45) உமது போர்வீரர்களும், எதிரியின் போர்வீரர்களும், “கொல்வாயாக, துளைப்பாயாக, கைப்பற்றுவாயாக, தாக்குவாயாக, வெட்டுவாயாக” என்ற வார்த்தைகளைச் சொல்வதே அந்தப் போர்க்களத்தில் கேட்டுக் கொண்டிருந்தது.(46)

அப்போது சல்லியன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனைக் கொல்லவிரும்பி, கூரிய கணைகள் பலவற்றால் அவனைத் துளைத்தான்.(47) எனினும், உடலின் முக்கிய அங்கங்கள் எவை என்பதை அறிந்த பிருதையின் மகனோ {யுதிஷ்டிரனோ}, ஓ! ஏகாதிபதி, மத்ரர்களின் ஆட்சியாளனுடைய {சல்லியனுடைய} முக்கிய அங்கங்களைக் குறிபார்த்து, பதினான்கு துணிக்கோல் கணைகளால் {நாராசங்களால்} மிக எளிதாக அவனைத் தாக்கினான்.(48) பெரும் புகழைக் கொண்ட சல்லியன், தன் கணைகளால் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைத்} தடுத்து, சினத்தால் நிறைந்து, தன் எதிராளியைக் கொல்ல விரும்பி, அந்தப் போரில் கங்க இறகுகளைக் கொண்ட எண்ணற்ற கணைகளால் அவனைத் துளைத்தான்.(49) ஓ! ஏகாதிபதி, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருந்த போதே அவன் {சல்லியன்}, நேரான கணையொன்றால் யுதிஷ்டிரனை மீண்டும் தாக்கினான்.(50)

பெரும் புகழைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், சினத்தால் நிறைந்து, கங்கங்கள் மற்றும் மயில்களின் இறகுகளைக் கொண்ட கூரிய கணைகள் பலவற்றால் மத்ரர்களின் ஆட்சியாளனைத் துளைத்தான்.(51) பிறகு, அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {யுதிஷ்டிரன்} எழுபது கணைகளால் சந்திரசேனனையும், ஒன்பதால் சல்லியனின் சாரதியையும், அறுபத்து நான்கால் துருமசேனனையும் துளைத்தான்.(52) உயர் ஆன்மப் பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} (இவ்வாறு) சல்லியனுடைய தேர்ச்சக்கரங்களின் இரு பாதுகாவலர்களும் கொல்லப்பட்ட போது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {சல்லியன்}, சேதிகளுக்கு மத்தியில் இருபத்தைந்து போர்வீரர்களைக் கொன்றான்.(53) மேலும் அந்தப் போரில் அவன் {சல்லியன்}, சாத்யகியை இருபத்தைந்து கூரிய கணைகளாலும், பீமசேனனை ஏழாலும், மாத்ரியின் இரு மகன்களை {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரை} நூறு கணைகளாலும் துளைத்தான்.(54) சல்லிய்ன இவ்வாறு போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தபோது, மன்னர்களில் சிறந்தவனான பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான பல கணைகளை அவன் மீது ஏவினான்.(55)

குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தன் எதிராளி முன்னணியில் நின்று கொண்டிருந்தபோது, ஓர் அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} கொண்டு அவனது தேரில் உள்ள கொடிமரநுனியை அறுத்தான்.(56) அந்தப் பெரும்போரில் பாண்டுவின் மகனால் இவ்வாறு வெட்டப்பட்ட சல்லியனின் கொடிமரம், பிளக்கப்பட்ட மலைச்சிகரத்தைப் போலக் கீழே விழுவதை நாங்கள் கண்டோம்.(57) தன் கொடிமரம் கீழே விழுந்ததையும், பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} தன் முன் நின்று கொண்டிருப்பதையும் கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, சினத்தால் நிறைந்து, கணைமாரிகளை ஏவினான்.(58) க்ஷத்திரியர்களில் காளையும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான சல்லியன், மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களின் தேவனைப் போல அந்தப் போரில் அடர்த்தியான கணைமாரிகளைப் பொழிந்தான்.(59) சாத்யகி, பீமசேனன், மாத்ரியின் இரட்டை மகன்கள் ஆகியோர் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் துளைத்த அவன் {சல்லியன்}, யுதிஷ்டிரனையும் பெரிதாகப் பீடித்தான்.(60)

அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மேகத்திரள்கள் எழுந்ததைப் போலப் பாண்டு மகனின் மார்புக்கு முன்பு பரவியிருந்த கணைகளின் வலையொன்றை நாங்கள் கண்டோம்.(61) அந்தப் போரில் சினத்தால் நிறைந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சல்லியன், நேரான கணைகளால் யுதிஷ்டிரனை மறைத்தான்.(62) அந்தக் கணை மாரிகளால் பீடிக்கப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், விருத்திரனைக் கொன்றவனுக்கு {இந்திரனுக்கு} முன்பு அசுரன் ஜம்பனைப் போலவே தன் ஆற்றலை இழந்தவனாக உணர்ந்தான்” {என்றான் சஞ்சயன்}.(63)

சல்லியனின் ஆற்றல்! – சல்லிய பர்வம் பகுதி – 13-சல்லியனை எதிர்த்த பாண்டவ வீரர்கள்; அனைவரையும் கலங்கடித்த சல்லியன்; பீமசேனனின் படையும், யுதிஷ்டிரனின் படையும் மட்டுமே தப்பி ஓடாமல் இருந்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இவ்வாறு மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} பீடிக்கப்பட்டபோது, சாத்யகி, பீமசேனன், பாண்டுவினால் மாத்ரிக்குப் பிறந்த இரண்டு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் தங்கள் தேர்களுடன் சல்லியனைச் சூழ்ந்து கொண்டு அந்தப் போரில் அவனைப் பீடிக்கத் தொடங்கினர்.(1) ஆதரவற்றவனாக இருந்த சல்லியன் அந்தப் பெரும் தேர்வீரர்களால் இவ்வாறு பீடிக்கப்பட்டதை (அத்தாக்குதல்களை அவன் வெற்றிகரமாகத் தடுப்பதைக்) கண்டு, உரத்த பாராட்டொலிகள் கேட்கப்பட்டன, மேலும், (அம்மோதலைக் கண்ட) சித்தர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். (அந்தப் போரைப் பார்ப்பதற்காக) அங்கே கூடியிருந்த துறவிகள் அதை அற்புதமானதாக அறிவித்தனர்.(2) அம்மோதலில் பீமசேனன், ஆற்றலில் (அவனது பெயருக்கு ஏற்றபடியே} தடுக்கப்பட முடியாத ஈட்டியாக[1] இருந்த சல்லியனை ஒரு கணையால் துளைத்து, அடுத்ததாக ஏழால் மீண்டும் அவனைத் {சல்லியனைத்} துளைத்தான்.(3) தர்மனின் மகனை {யுதிஷ்டிரனைக்} காக்க விரும்பிய சாத்யகி, நூறு கணைகளால் சல்லியனைத் துளைத்து, சிங்க முழக்கம் செய்தான்.(4) நகுலன் ஐந்து கணைகளாலும், சகாதேவன் ஏழாலும் அவனைத் துளைத்தனர்; அதன் பிறகு பின்னவன் {சகாதேவன்} அதே அளவு கணைகளால் மீண்டும் அவனைத் துளைத்தான்.(5)

அந்தப் போரில் கவனமாகப் போராடிய மத்ரர்களின் வீர ஆட்சியாளன் {சல்லியன்}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் இவ்வாறு பீடிக்கப்பட்டதும், கணைகளை ஏவுவதில் பெரும் சக்தி கொண்டதும், பெருங்கடினத்தைத் தாங்கவல்லதும், உறுதிமிக்கதுமான ஒரு வில்லை எடுத்துக் கொண்டு,(6) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இருபத்தைந்து கணைகளால் சாத்யகியையும், எழுபத்திமூன்றால் பீமனையும், ஏழால் நகுலனையும் துளைத்தான்.(7) பிறகு ஓர் அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} கொண்டு, நாணில் கணை பொருத்தப்பட்ட சகாதேவனின் வில்லை அறுத்து, அந்தப் போரில் எழுபத்து மூன்று கணைகளால் சகாதேவனையும் துளைத்தான்.(8) அப்போது சகாதேவன், மற்றொரு வில்லில் நாண்பொருத்திக் கொண்டு, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கோ, சுடர்மிக்க நெருப்புக்கோ ஒப்பான ஐந்து கணைகளால் தன் தாய்மாமனை {சல்லியனைத்} துளைத்தான்.(9) பெரும் சினத்தால் நிறைந்த அவன் {சகாதேவன்}, அந்தப் போரில் தன் எதிராளியின் சாரதியை ஒரு நேரான கணையால் தாக்கி, மூன்று கணைகளால் சல்லியனையும் மீண்டும் துளைத்தான்.(10)

அப்போது பீமசேனன், எழுபது கணைகளால் அந்த மத்ரர்களின் ஆட்சியாளனைத் துளைத்தான், சாத்யகி ஒன்பதாலும், மன்னன் யுதிஷ்டிரன் அறுபதாலும் அவனைத் துளைத்தனர்.(11) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் இவ்வாறு துளைக்கப்பட்டதும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, செஞ்சுண்ண மலையின் சாரலில் ஓடும் சிவப்பு ஓடைகளைப் போல, சல்லியனின் உடலில் குருதி வழியத் தொடங்கியது.(12) எனினும், ஓ! மன்னா, சல்லியன் விரைவாக ஐந்து கணைகளால் அந்தப் பெரும் வில்லாளிகளைப் பதிலுக்குத் துளைத்தது மிகவும் அற்புதமானதாகத் தெரிந்தது.(13) ஓ! ஐயா, மற்றொரு அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} எடுத்துக் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சல்லியன்}, அம்மோதலில் நாண் பொருத்தப்பட்ட தர்மனின் {யுதிஷ்டிரனின்} வில்லை அறுத்தான்.(14) மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டவனும், பெரும் தேர்வீரனுமான அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, சல்லியனையும், அவனது குதிரைகள், சாரதி, கொடிமரம், தேர் ஆகியவற்றையும் பல கணைகளால் மறைத்தான்.(15)

அந்தப் போரில் தர்மன் மகனின் {யுதிஷ்டிரனின்} கணைகளால் இவ்வாறு மறைக்கப்பட்ட சல்லியன், கூரிய பத்து கணைகளால் முன்னவனை {யுதிஷ்டிரனைத்} தாக்கினான்.(16) அப்போது, தர்மனின் மகன் கணைகளால் இவ்வாறு பீடிக்கப்பட்டதைக் கண்டு சினத்தால் நிறைந்த சாத்யகி, கணைமேகங்களால் அந்த மத்ரர்களின் வீர ஆட்சியாளனைத் {சல்லியனைத்} தடுத்தான்.(17) சல்லியன், கத்திமுகக் கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் சாத்யகியின் உறுதிமிக்க வில்லை அறுத்து, பிற பாண்டவப் போர்வீரர்கள் ஒவ்வொருவரையும் மும்மூன்று கணைகளால் துளைத்தான்.(18) அப்போது, ஓ! ஏகாதிபதி, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகி, சினத்தால் நிறைந்து, தங்கக் கைப்பிடி கொண்டதும், பல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு வேலை சல்லியன் மீது வீசினான்.(19) பீமசேனன், சுடர்மிக்கப் பாம்பொன்றைப் போலத் தெரிந்த துணிக்கோல் கணை {நாராசம்} ஒன்றை அவன் மீது ஏவினான்; நகுலன் அவன் மீது ஈட்டி ஒன்றை வீசினான், அவனைக் கொல்லும் விருப்பம் கொண்டவர்களான சகாதேவன் ஒரு கதாயுதத்தையும், தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} சதக்னி ஒன்றையும் அவன் மீது வீசினர்.(20)

எனினும், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அந்த ஐந்து போர்வீரர்களின் கரங்களால் வீசப்பட்ட அவ்வாயுதங்கள் அனைத்தும் தன் தேரை நோக்கி வந்து கொண்டிருந்தபோதே அந்தப் போரில் அவற்றைக் கலங்கடித்தான்.(21) சல்லியன், பெரும் எண்ணிக்கையிலான அகன்ற தலை கணைகளை {பல்லங்களைக்} கொண்டு, சாத்யகியால் ஏவப்பட்ட வேலை அறுத்தான். வீரமும், பெரும் கரநளினமும் கொண்ட அவன் {சல்லியன்}, பீமனால் ஏவப்பட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான கணையை இரு துண்டுகளாக வெட்டினான்.(22) மேலும் அவன், நகுலனால் ஏவப்பட்ட தங்கப்பிடி கொண்ட அந்தப் பயங்கரமான ஈட்டியையும், சகாதேவனால் வீசப்பட்ட கதாயுதத்தையும் கணை மேகங்களால் தடுத்தான்.(23) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேலும் அவன் {சல்லியன்}, மன்னனால் {யுதிஷ்டிரனால்} தன் மீது ஏவப்பட்ட சதக்னியை, பாண்டு மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இரு கணைகளால் வெட்டி, உரத்த சிங்க முழக்கம் செய்தான். எனினும், அந்தப் போரில் தன் ஆயுதம் வீழ்த்தப்பட்டதைச் சிநியின் பேரனால் {சாத்யகியால்} தாங்கிக் கொள்ள முடியவில்லை.(24) சினத்தால் உணர்ச்சியை இழந்த சாத்யகி, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, இரண்டு கணைகளால் மத்ரர்களின் ஆட்சியாளனையும் {சல்லியனையும்}, மூன்றால் அவனது சாரதியையும் துளைத்தான்.(25)

இதனால் சினம் தூண்டப்பட்ட சல்லியன், ஓ! ஏகாதிபதி, வலிமைமிக்க யானைகளைக் கூரிய வேல்களால் துளைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களைப் போல இருந்த அவர்கள் அனைவரையும் பத்து கணைகளால் ஆழத் துளைத்தான்.(26) இவ்வாறு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} தடுக்கப்பட்டவர்களான அந்த எதிரிகளைக்கொல்பவர்களால், சல்லியனுக்கு முன்னிலையில் நிற்கவும் முடியவில்லை.(27) சல்லியனின் ஆற்றலைக் கண்ட மன்னன் துரியோதனன்பாண்டவர்களும், பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகவே கருதினான்.(28) அப்போது, ஓ! மன்னா, வலிமைமிக்கக் கரங்களையும், பெரும் ஆற்றலையும் கொண்ட பீமசேனன், தன் உயிர் மூச்சை விட்டுவிட மனத்தில் தீர்மானித்துக் கொண்டு மத்ரர்களின் ஆட்சியாளனுடன் மோதினான்.(29) நகுலன், சகாதேவன் மற்றும் பெரும் வலிமை கொண்ட சாத்யகி ஆகியோர் சல்லியனைச் சூழ்ந்து கொண்டு அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவன் மீது தங்கள் கணைகளை ஏவினர்.(30)

பெரும் வில்லாளிகளும், பாண்டவர்களில் பெரும் தேர்வீரர்களுமான அந்த நால்வரால் சூழப்பட்டாலும்கூட, மத்ரர்களின் வீர ஆட்சியாளன் {சல்லியன்} தொடர்ந்து அவர்களுடன் போரிட்டுக் கொண்டே வந்தான்.(31) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பயங்கரப் போரில் சல்லியனுடைய தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களில் ஒருவனைக் கத்தித் தலை கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் விரைவாக வெட்டினான்.(32) துணிச்சல்மிக்கவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தச் சல்லியனுடைய தேர்ச்சக்கரப் பாதுகாவலன் இவ்வாறு கொல்லப்பட்டதும், பெரும் பலம் கொண்ட சல்லியன், பாண்டவத் துருப்புகளைக் கணைமாரியால் மறைத்தான்.(33) ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் தன் துருப்புகள் கணைகளால் மறைக்கப்படுவதைக் கண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், இவ்வகையில் சிந்தித்தான்,(34) “உண்மையில், மாதவனின் {கிருஷ்ணனின்} அந்த முக்கியத்துவம்வாய்ந்த வார்த்தைகள் எவ்வாறு உண்மையாகப் போகின்றன? சினத்தால் தூண்டப்பட்டிருக்கும் மத்ரர்களின் ஆட்சியாளர் {சல்லியர்} போரில் என் படையை அழித்துவிடமாட்டார் என நம்புகிறேன்” {என்று யுதிஷ்டிரன் சிந்தித்தான்}.(35)

அப்போது, ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றோடு கூடிய பாண்டவர்கள், மத்ரர்களின் ஆட்சியாளனை அணுகி, அனைத்துப் பக்கத்தில் இருந்தும் அவனைப் பீடிக்கத் தொடங்கினர்.(36) பெரும் மேகத்திரள்களை விலக்கும் காற்றைப் போல, அந்தப் போரில் மத்ரர்களின் மன்னன், அங்கே எழுந்த கணைமாரியையும், பல்வேறு வகைகளைச் சேர்ந்த அபரிமிதமான ஆயுதங்களையும் விலக்கினான்.(37) பிறகு, சல்லியனால் ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான கணைமழையானது, வெட்டுக்கிளிகளின் கூட்டங்களைப் போல ஆகாயத்தில் செல்வதை நாங்கள் கண்டோம்.(38) உண்மையில், போரின் முன்னணியில் இருந்து மத்ரர்களின் ஆட்சியாளனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள், பறவைக்கூட்டங்கள் பாய்ந்து செல்வதைப் போலக் காணப்பட்டன.(39) மத்ர மன்னனின் வில்லில் இருந்து வெளிப்பட்டவையும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான கணைகளால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் ஓர் அங்குலம் இடம் கூட இல்லாத அளவுக்கு நிரம்பியிருந்தது.(40)

அந்தப் பயங்கரப் போரில், வலிமைமிக்கவனும், அதீத கரநளினம் கொண்டவனுமான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஏவிய கணைகளால், அடர்த்தியான இருள் உண்டானபோதும்,(41) பாண்டவர்களின் பரந்த படையானது அந்த வீரனால் இவ்வாறு கலங்கடிக்கப்படுவதைக் கண்ட போதும், தேவர்களும், கந்தர்வர்களும் பேராச்சரியத்தால் நிறைந்தனர்.(42) அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளால் பாண்டவ வீரர்கள் அனைவரையும் சீற்றத்துடன் பீடித்த சல்லியன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனையும் மறைத்து, ஒரு சிங்கத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கினான்.(43) அந்தப் போரில் சல்லியனால் இவ்வாறு மறைக்கப்பட்ட பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அந்த வீரனை எதிர்த்துப் போரிட முடியாதவர்களாக ஆனார்கள்.(44) எனினும், பீமசேனனைத் தங்கள் தலைமையில் கொண்ட பாண்டவர்களும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் வழிநடத்தப்பட்டவர்களும், போர்க்கள ரத்தினமான துணிச்சல்மிக்கச் சல்லியனிடம் இருந்து தப்பி ஓடவில்லை” {என்றான் சஞ்சயன்}.(45)

அர்ஜுனன் அஸ்வத்தாமன் மோதல்! – சல்லிய பர்வம் பகுதி – 14-பதினெட்டாம் நாள் போரில் அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த மோதல்; அஸ்வத்தாமனைத் தேரற்றவனாகச் செய்த அர்ஜுனன்; பாஞ்சாலத்தின் சுரதனைக் கொன்று அவனது தேரில் ஏறிக் கொண்ட அஸ்வத்தாமன்; தனியொருவனாகப் பலரிடம் போரிட்டுக் கொண்டிருந்த அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் அந்தப் போரில் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அவனைப் பின் தொடர்ந்து வந்தோரும், வீரமிக்கோருமான திரிகர்த்தர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஆகியோரின் கணைகள் பலவற்றால் துளைக்கப்பட்ட அர்ஜுனன்,(1) துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} மூன்று கணைகளாலும், பிற வீரர்களில் ஒவ்வொருவரையும் இரண்டு கணைகளாலும் பதிலுக்குத் துளைத்தான்.(2) கூரிய கணைகளால் தாக்கப்பட்டு, அந்தக் கணைகள் தங்கள் அங்கங்களின் தைத்திருந்ததன் விளைவால் முள்ளம்பன்றிகளைப் போலத் தெரிந்தாலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது துருப்பினர் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து தப்பி ஓடாமலிருந்தனர்.(3) துரோணர் மகனைத் தங்கள் தலைமையில் கொண்ட அவர்கள், அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டு அவனோடு போரிட்டனர்.(4) ஓ! மன்னா, அவர்களால் ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான கணைகள், விரைவில் அர்ஜுனனின் தேர்த்தட்டை நிறைத்தன.(5)

பெரும் வில்லாளிகளும், போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களுமான அந்த இரு கிருஷ்ணர்களும் கணைகளால் மறைக்கப்பட்டதைக் கண்ட அந்த வெல்லப்படமுடியாத (கௌரவப்) போராளிகள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(6) உண்மையில் அந்நேரத்தில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனுடைய தேரின் கூபரம், சக்கரங்கள், ஏர்க்கால், கடிவாளங்கள், நுகத்தடி, அனுஷ்கரம் ஆகியவை கணைகளால் முற்றிலும் மறைக்கப்பட்டிருந்தன.(7) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது உமது போர்வீரர்களால் பார்த்தனுக்குச் செய்யப்பட்டவற்றைப் போன்றவை இதற்கு முன்னர்ப் பார்க்கப்பட்டதோ, கேட்கப்பட்டதோ இல்லை.(8) அழகிய சிறகுகளைக் கொண்ட கூரிய கணைகளுடன் கூடிய அந்தத் தேரானது, பூமியில் நூற்றுக்கணக்கான தீப்பந்தங்களால் சுடர்விட்டெரியும் ஒரு தெய்வீக வாகனத்தை {விமானத்தைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(9) அப்போது அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி, மலைமீது மழைத்தாரைகளைப் பொழியும் ஒரு மேகத்தைப் போல நேரான கணைகளின் மாரியால் பகைவரின் படையை மறைத்தான்.(10)

அந்தப் போரில் பார்த்தனின் {அர்ஜுனனின்} பெயர் பொறிக்கப்பட்ட கணைகளால் தாக்கப்பட்ட அந்தப் போர்வீரர்கள், காரியங்களின் அந்நிலையைக் கண்டு, போர்க்களம் முழுவதும் பார்த்தனால் நிரம்பியிருப்பதாகக் கருதினர்.(11) அப்போது, கணைகளைத் தழல்களாகவும், காண்டீவத்தின் உரத்த நாணொலியைக் காற்றாகவும் கொண்ட பார்த்த நெருப்பானது, உமது துருப்புகளாலான விறகை எரிக்கத் தொடங்கியது.(12) பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வீழ்ந்துவிட்ட சக்கரங்கள், நுகத்தடிகள், அம்பறாத்தூணிகள், கொடிகள், கொடிமரங்கள், அவற்றைச் சுமந்திருந்த தேர்கள், அனுஷ்கரங்கள், திரிவேணுக்கள், அச்சுகள், பூட்டுவார்கள், கொறடாக்கள், காதுகுண்டலங்களாலும், தலைக்கவசங்களாலும் அலங்கரிக்கப்பட்ட போர்வீரர்களின் தலைகள், ஆயிரக்கணக்கான தொடைகள், விசிறிகளுடன் கூடிய குடைகள், கிரீடங்கள், மகுடங்கள் ஆகியவற்றின் குவியல்கள் பார்த்தனின் தேர் சென்ற வழித்தடமெங்கும் காணப்பட்டன.(13-16) உண்மையில், ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதர்களின் தலைவரே, அந்தக் கோபக்கார பார்த்தனின் தேர் சென்ற வழித்தடமெங்கும், குருதியால் சகதியான தரையானது, ருத்ரனின் விளையாட்டுக்களம் போலக் கடக்க முடியாததாக இருந்தது. அந்தக் காட்சியானது, கோழைகளை அச்சுறுத்தி, துணிச்சல்மிக்கோரை மகிழ்வித்தது.(17,18) எதிரிகளை எரிப்பவனான பார்த்தன், கூடுகளுடன் கூடிய இரண்டாயிரம் {2000} தேர்களை அழித்து, சுடர்மிக்கத் தழல்களுடன் கூடிய புகையற்ற நெருப்பைப் போலத் தெரிந்தான்.(19) உண்மையில் வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தப் பார்த்தன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றுடன் கூடிய அண்டத்தை (யுக முடிவில்) அழிப்பதற்காகச் சுடர்விட்டெரியும் சிறப்புமிக்க அக்னியைப்போலவே தெரிந்தான்.(20)

அந்தப் போரில் பாண்டு மகனின் {அர்ஜுனனின்} ஆற்றலைக் கண்டவனும், தன் தேரில் பல கொடிகளைக் கொண்டவனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} அவனைத் தடுக்க முயற்சி செய்தான்.(21) வாகனங்களில் வெண்குதிரைகள் பூட்டியிருப்பவர்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பி விரைவில் ஒருவருடனொருவர் மோதிக் கொண்டனர்.(22) ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவ்விருவராலும் ஏவப்பட்ட கணைமாரிகள், கோடையின் நெருக்கத்தில் இரு மேகத் திரள்களால் பொழியப்படும் மழைத்தாரைகளைப் போல அடர்த்தியானவையாகவும், பயங்கரமானவையாகவும் இருந்தன.(23) ஒருவரையொருவர் அறைகூவியழைத்த அந்த இரு போர்வீரர்களும், இரு காளைகள் தங்கள் கொம்புகளால் ஒன்றையொன்று கிழித்துக் கொள்வதைப் போலவே, அந்தப் போரில் நேரான கணைகளால் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(24) ஓ! மன்னா, அவர்களுக்கிடையில் நீண்ட நேரத்திற்குச் சமமான போரே நடைபெற்றது. ஆயுங்களின் மோதல் பயங்கரத்தை அடைந்தது.(25)

அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! பாரதரே, தங்கச் சிறகுகளையும் பெரும் சக்தியையும் கொண்ட பனிரெண்டு கணைகளால் அர்ஜுனனையும், பத்தால் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தான்.(26) அந்தப் பெரும்போரில் ஆசானின் மகனுக்குச் சிறிது நேரம் கொஞ்சம் மதிப்பைக் காட்டிய பீபத்சு {அர்ஜுனன்}, பிறகு சிரித்துக் கொண்டே, தன் வில்லான காண்டீவத்தைப் பலமாக வளைத்தான்.(27) வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, விரைவில் தன் எதிராளியை குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும், தேரற்றவனாகவும் செய்து, அதிகப் பலத்தைச் செலுத்தாமலே மூன்று கணைகளால் அவனைத் துளைத்தான்.(28) குதிரைகளற்ற தேரில் நின்று கொண்டிருந்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சிரித்துக் கொண்டே இரும்பு முள் பதித்த கதாயுதம் {பரிகம்} ஒன்றைப் போலத் தெரிந்த ஒரு கனமான உலக்கையை அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது வீசினான்.(29) தங்கத் துணியால் அலங்கரிக்கப்பட்ட அவ்வாயுதம் தன்னை நோக்கி வருவதைக் கண்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்த வீரப் பார்த்தன் {அர்ஜுனன்}, அதை ஏழு துண்டுகளாக வெட்டினான்.(30)

தன் உலக்கை வெட்டப்பட்டதைக் கண்டவனும், பெரும் கோபம் கொண்டவனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, மலைச் சிகரத்தைப் போலத் தெரிந்ததும், இரும்பு முட்கள் பதிக்கப்பட்டதுமான ஒரு பயங்கரமான கதாயுதத்தை {பரிகத்தை} எடுத்துக் கொண்டான். போரில் சாதித்தவனான அந்தத் துரோணர் மகன் அதைப் பார்த்தன் மீது வீசினான்.(31) அந்த முட்கதாயுதம் {பரிகம்} சினம் கொண்ட அந்தகனைப் போலத் தன்னை நோக்கி வருவதைக் கண்ட பாண்டுவின் மகன் அர்ஜுனன், ஐந்து சிறந்த கணைகளால் அதை வேகமாக வெட்டினான்.(32) அந்தப் பெரும்போரில் பார்த்தனின் கணைகளால் வெட்டப்பட்ட அந்த ஆயுதம், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (பகை) மன்னர்களின் இதயங்களைப் பிளப்பதைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(33) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் மூன்று பிற கணைகளால் துரோணரின் மகனைத் துளைத்தான். வலிமைமிக்கப் பார்த்தனால் துரோணரின் மகன் பெரும்பலத்துடன் ஆழத்துளைக்கப்பட்டாலும், ஆண்மையுடன் கூடியவனாக அச்சம் அல்லது கலக்கத்தின் எந்த அறிகுறியையும் வெளிக்காட்டவில்லை.(34)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் தேர்வீரனான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, க்ஷத்திரியர்கள் அனைவரின் கண்களுக்கு முன்பாகவே சுரதனை {ஸுரதனைக்} கணைமாரியால் மறைத்தான்.(35) பாஞ்சாலர்களில் பெரும் தேர்வீரனான சுரதன் அந்தப் போரில் மேகங்களின் முழக்கத்தைப் போல ஆழ்ந்த சடசடப்பொலியைக் கொண்ட தன் தேரைச் செலுத்திக் கொண்டு துரோணரின் மகனை எதிர்த்து விரைந்தான்.(36) உறுதியானதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதுமான தன் முதன்மையான வில்லை வளைத்த அந்தப் பாஞ்சால வீரன், நெருப்பின் தழல்களுக்கோ, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கோ ஒப்பான கணைகளால் அஸ்வத்தாமனை மறைத்தான்.(37) கோபத்தில் தன்னை நோக்கி விரையும் பெரும் போர்வீரனான சுரதனைக் கண்ட துரோணரின் மகன், தடியால் தாக்கப்பட்ட பாம்பொன்றைப் போலச் சினத்தால் நிறைந்தான்.(38) புருவத்தை மூன்று கோடுகளாகச் சுருக்கிக் கொண்டு, தன் நாவால் கடவாயை நனைத்த அவன் {அஸ்வத்தாமன்}, சினத்துடன் சுரதனைப் பார்த்து, தன் வில்லின் நாண்கயிற்றைத் தேய்த்து, யமனின் மரணக்கோலுக்கு {யமதண்டத்துக்கு} ஒப்பான கூரிய துணிக்கோல் கணையொன்றை {நாராசத்தை} ஏவினான்.(39) பெரும் வேகம் கொண்ட அந்தக் கணையானது, சுரதனின் இதயத்தைத் துளைத்து வெளியேறி, வானத்தில் இருந்து வீசப்பட்ட சக்ரனின் வஜ்ரத்தைப் போலப் பூமியைப் பிளந்து கொண்டு உள்ளே நுழைந்தது.(40)

அந்தக் கணையால் தாக்கப்பட்ட சுரதன், இடியால் பிளப்பட்ட மலைச்சிகரம் ஒன்றைப் போலக் கீழே பூமியில் விழுந்தான்.(41) அந்த வீரன் வீழ்ந்த பிறகு, தேர்வீரர்களின் முதன்மையான அந்தத் துரோணரின் வீரமகன் {அஸ்வத்தாமன்}, கொல்லப்பட்ட தன் எதிரியின் {சுரதனின்} வாகனத்தில் வேகமாக ஏறிக் கொண்டான்.(42) பிறகு, ஓ! ஏகாதிபதி, போரில் வெல்லப்பட முடியாத போர்வீரனான அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கவசமும், ஆயுதங்களும் தரித்துக் கொண்டு, சம்சப்தகர்களால் ஆதரிக்கப்பட்டு அர்ஜுனனோடு போரிட்டான்.(43) நடுப்பகல் வேளையில் ஒருவனுக்கும், பலருக்கும் இடையில் நடந்த அந்தப் போரானது, யமனின் ஆட்சிப்பகுதியில் உள்ளோரின் எண்ணிக்கையைப் பெருக்கியபடியே மிகவும் கடுமையான நிலையை அடைந்தது.(44) அப்போது அந்தப் போராளிகள் அனைவரின் ஆற்றலையும் கவனித்த அர்ஜுனன், தனியனாக, ஆதரவற்றவனாக ஒரே நேரத்தில் தன் எதிரிகள் அனைவருடனும் போரிட்ட அந்த அற்புதமான காட்சியை நாங்கள் கண்டோம்.(45) அர்ஜுனனுக்கும், அவனது எதிரிகளுக்கும் இடையில் நடைபெற்ற அம்மோதலானது, பழங்காலத்தில் இந்திரனுக்கும், அசுரர்களின் பரந்த படைக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக மிகக் கடுமையானதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(46)

பாண்டவர்களோடு மோதிய சல்லியன்! – சல்லிய பர்வம் பகுதி – 15-துரியோதனனைப் பீடித்த திருஷ்டத்யும்னன்; கிருபர் மற்றும் கிருதவர்மனுடன் போரிட்ட சிகண்டி, சாத்யகியுடன் மோதிய சல்லியன்; சல்லியனின் ஆற்றல்; தாய்மாமனைக் கொல்ல விரைந்த மருமக்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனும், பிருஷதனின் மகனான திருஷ்டத்யும்னனும், அபரிமிதமான கணைகளையும், ஈட்டிகளையும் பயன்படுத்தி ஒரு கடும்போரைச் செய்தனர்.(1) அவர்கள் இருவரும், ஓ! ஏகாதிபதி, மழைக்கால மேகங்கள் பொழியும் மழையைப் போலக் கணைமாரியை ஏவினர்.(2) (குரு) மன்னன் {துரியோதனன்}, துரோணரைக் கொன்றவனும், கடுங்கணைகளைக் கொண்டவனுமான பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} ஐந்து கணைகளால் துளைத்து, மீண்டும் ஏழு கணைகளால் அவனைத் துளைத்தான்.(3) பெரும் வலிமையும், உறுதியான ஆற்றலும் படைத்த திருஷ்டத்யும்னன், துரியோதனனை அந்தப் போரில் எழுபது கணைகளால் பீடித்தான்.(4) மன்னன் இவ்வாறு பீடிக்கப்படுவதைக் கண்டவர்களான அவனுடன் பிறந்த சகோதரர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒரு பெரும் படையின் துணையுடன் அந்தப் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனைச்} சூழ்ந்து கொண்டனர்.(5)

அனைத்துப் பக்கங்களிலும் அந்த அதிரதர்களால் சூழப்பட்ட அந்தப் பாஞ்சால வீரன் {திருஷ்டத்யும்னன்}, ஓ! மன்னா, ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் தன் வேகத்தை வெளிப்படுத்தியபடியே அந்தப்போரில் திரிந்து கொண்டிருந்தான்.(6) சிகண்டி, பிரபத்ரகர்களால் ஆதரிக்கப்பட்டவனானக் கிருதவர்மன் மற்றும் பெரும் தேர்வீரரான கிருபர் ஆகிய இரு குரு வில்லாளிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தான்.(7) மேலும், ஓ! ஏகாதிபதி, போர்வீரர்கள் அனைவரும் தங்கள் உயிரை விடத் தீர்மானித்துத் தங்கள் உயிரையே பணயம் வைத்துப் போரிட்டுக் கொண்டிருந்ததால், அந்தப் போரானது கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது.(8) சல்லியன், அனைத்துப் பக்கங்களிலும் கணைமாரிகளை ஏவியபடி, சாத்யகி மற்றும் விருகோதரனோடு {பீமனோடு} கூடிய பார்த்தர்களைப் பீடித்துக் கொண்டிருந்தான்.(9) ஓ! ஏகாதிபதி, பொறுமையும், பெரும் பலமும் கொண்ட அந்த மத்ரர்களின் மன்னன் {சல்லியன்}, ஆற்றலில் அந்தகனுக்கு ஒப்பானவர்களான இரட்டையர்களுடனும் (நகுலன் மற்றும் சகாதேவனோடும்) அதே நேரத்தில் போரிட்டுக் கொண்டிருந்தான்.(10)

அந்தப் பெரும்போரில் சல்லியனின் கணைகளால் சிதைக்கப்பட்ட பாண்டவப் பெருந்தேர்வீரர்கள், ஒரு பாதுகாவலனை அடையத் தவறினர்.(11) அப்போது மாத்ரியின் மகனான வீர நகுலன், பெரிதும் பீடிக்கப்படும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்டு, தன் தாய்மாமனை {சல்லியனை} எதிர்த்து வேகமாக விரைந்தான்.(12) அந்தப் போரில் (பலகணைகளால்) சல்லியனை மறைத்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான நகுலன் சிரித்துக் கொண்டே, முழுக்க இரும்பாலானவையும், கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், தன் வில்லில் இருந்து பெரும் வேகத்துடன் ஏவப்பட்டவையுமான பத்து கணைகளால் அவனது {சல்லியனின்} நடு மார்பைத் துளைத்தான்.(13, 14) சிறப்புமிக்கத் தன் மருமகனால் பீடிக்கப்பட்ட சல்லியன், நேரான கணைகள் பலவற்றால் பதிலுக்குத் தன் மருமகனை {நகுலனைப்} பீடித்தான்.(15)

அப்போது மன்னன் யுதிஷ்டிரன், பீமசேனன், சாத்யகி, மாத்ரியின் மகனான சகாதேவன் ஆகியோர் அனைவரும் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} எதிர்த்து விரைந்தனர்.(16) எதிரிகளை வீழ்த்துபவனான அந்தக் குரு படையின் தலைவன் {சல்லியன்}, தேர்களின் சடசடப்பொலியால் முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகளை நிறைத்து பூமியை நடுங்கச் செய்தபடியே தன்னை நோக்கி வேகமாக விரைந்து வந்த அந்த வீரர்கள் அனைவரையும் அந்தப் போரில் வரவேற்றான் {எதிர்த்தான்}.(17) யுதிஷ்டிரனை மூன்று கணைகளாலும், பீமனை ஏழாலும் துளைத்த சல்லியன், அந்தப் போரில் சாத்யகியை நூறு கணைகளாலும், சகாதேவனை மூன்றாலும் துளைத்தான்.(18) பிறகு அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கத்தித் தலைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்}, உயர் ஆன்ம நகுலனின் கணை பொருத்தப்பட்ட வில்லை அறுத்தான்.(19) பெரும் தேர்வீரனான அந்த மாத்ரியின் மகன் {நகுலன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, சிறகுள்ள கணைகளால் மத்ரர்கள் ஆட்சியாளனை வேகமாக மறைத்தான்.(20)

யுதிஷ்டிரன், சகாதேவன் ஆகியோர் ஒவ்வொருவரும், ஓ! ஐயா, அந்த மத்ரர்களின் ஆட்சியாளனுடைய மார்பை பத்து கணைகளால் துளைத்தனர்.(21) பீமசேனன் மற்றும் சாத்யகி ஆகியோர் இருவரும், மத்ரர்களின் ஆட்சியாளனை நோக்கி விரைந்து, கங்க இறகுகளாலான சிறகுகள் படைத்த கணைகளைக் கொண்டு முன்னவன் {பீமன்} அறுபதாலும், பின்னவன் {சாத்யகி} ஒன்பதாலும் அவனைத் தாக்கினர்.(22) இதனால் சினத்தால் நிறைந்த அந்த மத்ரர்களின் ஆட்சியாளன், ஒன்பது கணைகளால் சாத்யகியைத் துளைத்து மீண்டும் எழுபது நேரான கணைகளால் அவனைத் துளைத்தான்.(23) பிறகு அவன் {சல்லியன்}, ஓ! ஐயா, சாத்யகியின் கணை பொருத்தப்பட்ட வில்லின் பிடியை அறுத்து, பின்னவனின் {சாத்யகியின்} நான்கு குதிரைகளையும் யமனின் உலகத்திற்கு அனுப்பி வைத்தான்.(24) சாத்யகியைத் தேரற்றவனாகச் செய்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்த மத்ரர்களின் ஆட்சியாளன், அனைத்துப் பக்கங்களிலும் ஒரு நூறு கணைகளால் அவனை {சாத்யகியைத்} தாக்கினான்.(25) அடுத்ததாக அவன் {சல்லியன்}, மாத்ரியின் இரு கோபக்கார மகன்கள், பாண்டுவின் மகனான பீமசேனன், யுதிஷ்டிரன் ஆகியோர் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் துளைத்தான்.(26)

பார்த்தர்கள் ஒன்று சேர்ந்தும் கூட அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனை அணுக முடியாத அளவுக்கு மிக அற்புதமான அவனது ஆற்றலை அப்போது நாங்கள் கண்டோம்.(27) மற்றொரு தேரில் ஏறிக் கொண்டவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான அந்த வலிமைமிக்கச் சாத்யகி, மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} அடங்கிப் பீடிக்கப்படும் பாண்டவர்களைக் கண்டு அவனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(28) சபைகளின் ரத்தினமான சல்லியன், மதங்கொண்ட யானையொன்று மற்றொரு யானையை எதிர்ப்பதைப் போலச் சாத்யகியின் தேரை எதிர்த்துத் தன் தேரில் விரைந்தான்.(29) சாத்யகிக்கும், மத்ரர்களின் வீர ஆட்சியாளனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது, பழங்காலத்தில் அசுரன் சம்பரனுக்கும், தேவர்களின் தலைவனுக்கும் இடையில் நடைபெற்றத்தைப் போலக் காண்பதற்குப் பயங்கரமானதாகவும், அற்புதமானதாகவும் இருந்தது.(30) அந்தப் போரில் தன் எதிரே நின்ற மத்ரர்களின் ஆட்சியாளனைக் கண்ட சாத்யகி, பத்து கணைகளால் அவனைத்துளைத்து, “நில்லும், நில்லும்” என்றான்.(31)

அந்த உயர் ஆன்மப் போர்வீரனால் ஆழத்துளைக்கப்பட்ட அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அழகிய இறகுகளுடன் கூடிய கூரிய கணைகளால் பதிலுக்குச் சாத்யகியைத் துளைத்தான்.(32) பெரும் வில்லாளிகளான அந்தப் பார்த்தர்கள், சாத்யகியால் தாக்கப்படும் மத்ரர்களின் மன்னனைக் கண்டு, தங்கள் தாய்மாமனான அவனைக் {சல்லியனைக்} கொல்ல விரும்பி அவனை நோக்கி வேகமாக விரைந்தனர்.(33) போராடிக்கொண்டிருந்த அந்த வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற மோதலானது, குருதியின் பெரும்பாய்ச்சலால் அடையாளங்காணப்பட்டு, முழங்கிக் கொண்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான சிங்கங்களுக்கு இடையில் நடைபெறும் மோதலைப் போல மிகப் பயங்கரமாக இருந்தது.(34) அந்தப் போராட்டமானது, ஓ! ஏகாதிபதி, முழங்கிக் கொண்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான சிங்கங்கள், இறைச்சிக்காகத் தங்களுக்குள் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதற்கு ஒப்பாக இருந்தது.(35) அவர்களால் ஏவப்பட்ட அடர்த்தியான கணைமாரியால் பூமியானது முற்றிலும் நிறைந்து, ஆகாயமும் கணைகளின் ஒரே திரளாக ஆனது.(36)

அந்தக் கணைகளால் களத்தைச் சுற்றிலும் இருள் உண்டானது. உண்மையில், அந்தச் சிறப்புமிக்க வீரர்களால் ஏவப்பட்ட கணைகளால், மேகங்களால் உண்டாவதைப் போன்ற நிழல் உண்டானது.(37) அப்போது, ஓ! மன்னா, போர்வீரர்களால் ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், சட்டை உரித்த பாம்புகளைப் போலத் தெரிபவையுமான சுடர்மிக்கக் கணைகளுடன் திசைப்புள்ளிகள் எதிர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(38) எதிரிகளைக் கொல்பவனான அந்தச் சல்லியன், தனியனாக, ஆதரவற்றவனாக அந்தப் போரில் பல கணைகளை ஏவிப் போரிட்டு அடைதற்கரிதான சாதனையை அடைந்தான்.(39) கங்கங்கள் மற்றும் மயில்களின் இறகுகளைக் கொண்டவையும், மத்ரர்களின் ஆட்சியாளனுடைய கரங்களில் இருந்து ஏவப்பட்டுப் பாய்ந்தவையுமான அந்தக் கடுங்கணைகளால் பூமியானது மறைக்கப்பட்டது.(40) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் அசுரர்களின் அழிவின்போது இருந்த சக்ரனின் {இந்திரனின்} தேரைப் போல அந்தப் பயங்கரப் போரில் சல்லியனின் தேரானது திரிந்து கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம்” {என்றான் சஞ்சயன்}.(41)

சல்லியன் யுதிஷ்டிரன் மோதல்! – சல்லிய பர்வம் பகுதி – 16-குருக்களால் பீடிக்கப்பட்ட பாண்டவர்கள்; கிருபரையும், கிருதவர்மனையும் கணைகளால் மறைத்த அர்ஜுனன்; சல்லியனை எதிர்த்து உறுதியாக நின்ற யுதிஷ்டிரன்; சல்லியனிடம் இருந்து தப்பி ஓடிய பாண்டவர்கள்; கிருஷ்ணனிடமும், தன் தம்பிகளிடமும் பேசி, சல்லியனைக் கொல்வதற்கு உறுதியேற்ற யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் அருஞ்செயல்; சல்லியனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட அஸ்வத்தாமன்; மற்றொரு தேரில் மீண்டும் சல்லியனுக்கும், யுதிஷ்டிரனுக்கும் இடையில் மீண்டும் நடந்த போர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் சல்லியனைத் தங்கள் தலைமையில் கொண்ட உமது துருப்புகள், பெரும் மூர்க்கத்துடன் பார்த்தர்களை எதிர்த்து மீண்டும் விரைந்தனர்.(1) போரில் கடுமையானவர்களான உமது துருப்பினர் பார்த்தர்களை எதிர்த்து விரைந்து பீடிக்கப்பட்டாலும், எண்ணிக்கையில் அதிகமானோராக இருந்ததன் விளைவால் மிகவிரைவில் அவர்களை {பார்த்தர்களைக்} கலங்கடித்தனர்.(2) இரு கிருஷ்ணர்களும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே குருக்களால் தாக்கப்பட்ட அந்தப் பாண்டவத் துருப்பினர், பீமசேனனால் தடுக்கப்பட்டாலும் களத்தில் நிற்கவில்லை.(3) இதன் காரணமாகச் சினத்தால் நிறைந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, கிருபரையும், அவரைப் பின்தொடர்வோரையும், கிருதவர்மனையும் கணைமாரியால் மறைத்தான்.(4)

சகாதேவன் தன் படைகள் அனைத்துடன் சகுனியைத் தடுத்தான். நகுலன், அருகில் இருந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மீது தன் பார்வையைச் செலுத்தினான்.(5)
திரௌபதியின் (ஐந்து) மகன்கள், (குரு படையின்) பெரும் எண்ணிக்கையிலான மன்னர்களைத் தடுத்தனர்.
பாஞ்சால இளவரசனான சிகண்டி, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைத்} தடுத்தான்.(6)
கதாயுதம் தரித்திருந்த பீமசேனன், மன்னனை {துரியோதனனைத்} தடுத்தான்.
குந்தியின் மகனான யுதிஷ்டிரன், {கௌரவப்} படைகளுக்குத் தலைவனாக இருந்த சல்லியனைத் தடுத்தான்.(7)

போரில் எப்போதும் புறமுதுகிடாதவர்களான எதிரிகளுக்கும், உமது போர்வீரர்களுக்கு மத்தியிலும், அந்த இணைக்கு இடையிலும் மீண்டும் போர் தொடங்கியது.(8) மொத்த பாண்டவப் படையையும் எதிர்த்து தனியொருவனாகப் போரிட்டுக் கொண்டிருந்த சல்லியனின் மிக அற்புதமான சாதனையை அப்போது நாங்கள் கண்டோம்.(9) அந்தப் போரில் யுதிஷ்டிரனின் அருகில் இருந்த சல்லியன், சந்திரனுக்கு அருகே இருக்கும் சனிக்கோளை {சனி கிரகத்தைப்} போலத் தெரிந்தான்.(10) கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகளால் மன்னனை {யுதிஷ்டிரனைப்} பீடித்த சல்லியன், கணைமாரியால் பீமனை மறைத்தபடி அவனை {பீமனை} எதிர்த்து விரைந்தான்.(11) சல்லியனால் வெளிப்படுத்தப்பட்ட கரநளினம், மற்றும் ஆயுதங்களில் தேர்ச்சி ஆகியவற்றைக் கண்டு இரு படைகளின் துருப்புகளும் அவனை உயர்வாக மெச்சின.(12)

சல்லியனால் பீடிக்கப்பட்டுப் பெரும் சிதைவையடைந்த பாண்டவர்கள், நிற்குமாறு கட்டளையிட்ட யுதிஷ்டிரனின் கூச்சல்களையும் அலட்சியம் செய்தபடியே போரைவிட்டுவிட்டு தப்பி ஓடினர்.(13) மத்ரர்களின் ஆட்சியாளனால் அவனது {யுதிஷ்டிரனின்} துருப்புகள் இவ்வாறு கொல்லப்பட்டபோது, பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் சினத்தால் நிறைந்தான்.(14) தன் ஆற்றலில் நம்பிக்கைக் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன், போரில் வெல்வது, அல்லது மரணத்தைச் சந்திப்பது என்ற தீர்மானத்துடன் மத்ரர்களின் ஆட்சியாளனைப் பீடிக்கத் தொடங்கினான்.(15)

அவன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பியர் அனைவரையும், மதுகுலத்தின் கிருஷ்ணனையும் அழைத்து, அவர்களிடம், “கௌரவர்களுக்காகத் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திய பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் பிற மன்னர்கள் அனைவரும் போரில் அழிந்துவிட்டனர். நீங்கள் அனைவரும் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கின்படியே உங்கள் வீரத்தை வெளிப்படுத்திப் போராடிவருகிறீர்கள்.(17) வலிமைமிக்கத் தேர்வீரரான சல்லியரைக் கொண்ட என்னுடைய ஒரு பங்கு மட்டுமே மிச்சமிருக்கிறது. இன்றைய போரில் நான் மத்ரர்களின் ஆட்சியாளரை {சல்லியரை} வெல்ல விரும்புகிறேன். அந்தப் பணி நிறைவேறுவதற்காக நான் விரும்புவதனைத்தையும் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(18) வீரர்களான மத்ராவதியின் {மாத்ரியின்} மகன்கள் இருவரும் என் {தேர்ச்} சக்கரங்களின் பாதுகாவலர்களாகட்டும். அவர்கள் வாசவனாலும் {இந்திரனாலும்} வெல்லப்பட முடியாத வீரர்களாகக் கணக்கிடப்படுகிறார்கள்[1].(19) தங்கள் சபதங்களில் உறுதியானவர்களும், அனைத்துக் கௌரவங்களுக்குத் தகுதியானவர்களுமான அவர்கள் இருவரும், க்ஷத்திரியர்களின் கடமைகளைத் தங்கள் முன் நிறுத்தியபடியே தங்கள் தாய்மாமனுடன் {சல்லியனுடன்} போரிடுவார்கள்.(20)

ஒன்று, போரில் சல்லியர் கொல்லப்படுவார், அல்லது நான் அவரைக் கொல்வேன். நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. உலக வீரர்களில் முதன்மையானவர்களே, நான் சொல்லும் இந்த உண்மையான வார்த்தைகளைக் கேட்பீராக.(21) பூமியின் தலைவர்களே, க்ஷத்திரியக் கடமைகளை நோற்று, வெற்றியடையவோ, கொல்லப்படவோ உறுதியாகத் தீர்மானத்துக் கொண்டு, என் தாய்மாமனுடன் நான் போரிடப் போகிறேன்.(22) தேரைச் செய்வோர், அறிவியலின் விதிகளின்படி செய்யப்பட்ட என் வாகனத்தையும், சல்லியரை விட அதிகமாக அளவுகளில் பிற வகைக் கருவிகள் அனைத்தையும் வேகமாக எனக்குக் கொடுக்கட்டும்.(23) சிநியின் பேரன் {சாத்யகி} எனது வலது சக்கரத்தையும், திருஷ்டத்யும்னன் இடதையும் பாதுகாக்கட்டும். பிருதையின் மகனான தனஞ்சயன் இன்று என் பின்புறத்தைப் பாதுகாக்கட்டும்.(24) ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான பீமன் என் முன்பு நின்று போரிடட்டும். இவ்வாறிருந்தால் நேரப்போகும் பெரும்போரில் நான் சல்லியரைவிட மேன்மையானவனாக இருப்பேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(25)

இவ்வாறு மன்னன் {யுதிஷ்டிரன்} சொன்னதும், அவனது நலன்விரும்பிகள் அனைவரும் தாங்கள் வேண்டிக் கொள்ளப்பட்டதைப் போலவே செய்தனர்.(26) பாண்டவத் துருப்பினர், அதிலும் குறிப்பாகப் பாஞ்சாலர்கள், சோமகர்கள் மற்றும் மத்ஸ்யர்கள் ஆகியோர் மீண்டும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(27) மன்னன் இந்தச் சபதத்தைச் செய்த பிறகு, மத்ரர்களின் ஆட்சியாளனை எதிர்த்துச் சென்றான். அப்போது பாஞ்சாலர்கள், எண்ணற்ற சங்குகள் மற்றும் பேரிகைகளை முழக்கி, சிங்க முழக்கம் செய்தனர்.(28) பெரும் சுறுசுறுப்புடைய அவர்கள் சினத்தால் நிறைந்து, குருக்களில் காளையான மத்ரர்களின் ஆட்சியாளனை எதிர்த்து உரத்த மகிழ்ச்சிக் கூச்சல்களுடன் விரைந்து சென்றனர்.(29) மேலும் அவர்கள், யானைகளின் மணியோசையையும், சங்குகள் மற்றும் துந்துபிகளின் உரத்த முழக்கங்கங்களையும் பூமியில் எதிரொலிக்கச் செய்தனர்.(30)

அப்போது உமது மகனும் {துரியோதனனும்}, மத்ரர்களின் வீர ஆட்சியாளனும் {சல்லியனும்}, உதய மற்றும் அஸ்த மலைகளைப் போலத் தங்களைத் தாக்குபவர்களை வரவேற்றனர் {எதிர்கொண்டனர்}.(31) போரில் தன் ஆற்றல் குறித்துத் தற்பெருமை பேசிக் கொண்ட சல்லியன், மழையைப் பொழியும் மகவத்தை {இந்திரனைப்} போல, எதிரிகளைத் தண்டிக்கும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் மீது கணை மாரியைப் பொழிந்தான்.(32) உயர் ஆன்மா கொண்ட குருக்களின் மன்னனும் {யுதிஷ்டிரனும்}[2], தன் அழகிய வில்லை எடுத்துக் கொண்டு, துரோணர் தனக்குக் கற்றுத் தந்த பல்வேறு வகைகளிலான பாடங்களை வெளிப்படுத்தினான்.(33) அவன் பெருந்திறனுடனும், வேகமாகவும் அடுத்தடுத்த கணைமாரிகளை அழகாகப் பொழிந்தான். போரில் அவன்{யுதிஷ்டிரன்} திரிந்து கொண்டிருந்தபோது, எவராலும் அவனிடம் ஒரு குறையையும் காண முடியவில்லை.(34) போரில் பெரும் ஆற்றலைக் கொண்ட சல்லியன் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவரும் இறைச்சித் துண்டுக்காகப் போரிடும் புலிகளிரண்டைப் போல ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(35)

பீமன், போரில் திளைப்பவனான உமது மகனுடன் {துரியோதனனுடன்} போரிட்டுக் கொண்டிருந்தான். பாஞ்சால இளவரசன் (திருஷ்டத்யும்னன்), சாத்யகி, பாண்டுவுக்குப் பிறந்த மாத்ரியின் இரு மகன்கள் {நகுல, சகாதேவன்} ஆகியோர் சகுனியையும், சுற்றிலும் இருந்த பிற குரு வீரர்களையும் வரவேற்றனர் {எதிர்கொண்டனர்}.(36) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கையின் விளைவால், அந்த இடத்தில், வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டிருந்த உமது போர் வீரர்களுக்கும், எதிரியின் போர்வீரர்களுக்கும் இடையில் பயங்கரமான போர் நிகழ்ந்தது.(37) அப்போது துரியோதனன், அந்தப் போரில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த பீமனின் கொடிமரத்தை நேரான கணையொன்றால் குறிபார்த்து, அதை வெட்டி வீழ்த்தினான்.(38) ஓ! கௌரவங்களை அளிப்பவரே, பல மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பீமசேனனின் அந்த அழகிய கொடிமரம் கீழே விழுந்தது.(39) மீண்டும் அந்த மன்னன் {துரியோதனன்}, யானையின் துதிக்கையைப் போலத் தெரிந்த பீமனின் அழகிய வில்லை, கூரிய கத்தி முனை கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} வெட்டினான்.(40)

பெருஞ்சக்தி கொண்டவனும், வில்லற்றவனுமான பீமன், தன் ஆற்றலை வெளிப்படுத்தி, ஈட்டியொன்றால் உமது மகனின் {துரியோதனனின்} மார்பைத் துளைத்தான். இதனால் உமது மகன் {துரியோதனன்}, தனது தேர்த்தட்டில் கீழே அமர்ந்தான்.(41) {இவ்வாறு} துரியோதனன் மயங்கியதும், மீண்டும் விருகோதரன் {பீமன்}, கத்தி முனைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்}, அவனது சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(42) துரியோதனனின் தேரில் இருந்த குதிரைகள் தங்கள் சாரதியை இழந்து, தேரை இழுத்துக் கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் மூர்க்கமாக ஓடியதால் (குரு படையில்) உரத்த ஓலங்கள் எழுந்தன.(43) அப்போது வலிமைமிக்கத் தேர்வீரனான அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் உமது மகனைக் {துரியோதனனைக்} காக்க விரும்பி அந்தத் தேரைப் பின்தொடர்ந்து சென்றனர்.(44) (இதைக் கண்ட கௌரவத்) துருப்புகள் மிகவும் கலக்கமடைந்தன. துரியோதனனைப் பின்தொடர்ந்தோர் பீதியடைந்தனர். அந்நேரத்தில், தன் வில்லை வளைத்த காண்டீவதாரி {அர்ஜுனன்}, தன் கணைகளால் அவர்களைக் கொல்லத் தொடங்கினான்.(45)

அப்போது, சினத்தால் தூண்டப்பட்ட யுதிஷ்டிரன், மனோவேகம் கொண்டவையும், தந்தத்தைப் போன்ற வெண்மையானவையுமான தன் குதிரைகளைத் தூண்டி, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} எதிர்த்து விரைந்தான்.(46) பிறகு, குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம் அற்புதமான ஒன்றைக் கண்டோம். இதற்கு முன்பு வரை மெதுவாகவும், மென்மையாகவும் போரிட்டு வந்த அவன் {யுதிஷ்டிரன்} {அப்போது} மிக உக்கிரமாகப் போரிட்டான்.(47) அகலத் திறந்த கண்களுடனும், சினத்தால் நடுங்கிய உடலுடனும் இருந்த அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, தன் கூரிய கணைகளால் பகைவரின் போர்வீரர்களை நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வெட்டி வீழ்த்தினான்.(48) மூத்த பாண்டவன் எதிர்த்துச் சென்ற அந்தப் படைவீரர்கள், ஓ! மன்னா, இடியினால் பிளக்கப்பட்ட மலைச்சிகரங்களைப் போல அவனால் வீழ்த்தப்பட்டனர்.(49) குதிரைகள், சாரதிகள், கொடிமரங்கள் ஆகியவற்றுடன் கூடிய தேர்களை வீழ்த்தி, பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்களையும் வீழ்த்திய யுதிஷ்டிரன், மேகத்திரள்களை அழிக்கும் வலிமைமிக்கக் காற்றைப் போல எந்தத் துணையுமின்றி அந்த இடத்தில் விளையாடத் தொடங்கினான்.(50)

சினத்தால் நிறைந்த அவன் {யுதிஷ்டிரன்}, (அண்ட அழிவின்போது) வாழும் உயிரினங்களை அழிக்கும் ருத்திரனைப் போல, அந்தப் போரில் சாரதிகளுடன் கூடிய குதிரைகளையும், சாரதிகளற்ற குதிரைகளையும், ஆயிரக்கணக்கான காலாட்படை வீரர்களையும் அழித்தான்.(51) அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை ஏவி போர்க்களத்தை வெறுமையாகச் செய்த யுதிஷ்டிரன், “நில்லும், நில்லும்” என்று சொல்லியபடியே மத்ரர்களின் ஆட்சியாளனை எதிர்த்து விரைந்தான்.(52) பயங்கரச் செயல்களைப்புரியும் அவ்வீரனின் சாதனைகளைக் கண்ட உமது வீரர்கள் அனைவரும் அச்சமடைந்தனர். எனினும் சல்லியன் அவனை எதிர்த்துச் சென்றான்.(53) சினத்தால் நிறைந்த அவர்கள் இருவரும் தங்கள் சங்குகளை முழக்கினர். ஒருவரையொருவர் அறைகூவி அழைத்துக் கொண்ட அவர்கள் இருவரும் மீண்டும் தங்களுக்குள் மோதிக் கொண்டனர்.(54) அப்போது சல்லியன் கணைமாரிகளால் யுதிஷ்டிரனை மறைத்தான். அதேபோல, குந்தியின் மகனும், மத்ரர்களின் ஆட்சியாளனை கணைமாரியால் மறைத்தான்.(55)

அப்போது மத்ரர்களின் ஆட்சியாளன் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய அவ்விரு வீரர்களும், அந்தப் போரில் ஒருவரையொருவர் கணைகளால் சிதைத்துக் கொண்டு, குருதியில் குளித்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சால்மலி {இலவ மரம்} மற்றும் கின்சுக {பலாச மரம்} மரங்களைப் போல அழகாகத் தெரிந்தனர். பெரும் காந்தியைக் கொண்டவர்களும், போரில் வெல்லப்பட முடியாதவர்களும், சிறப்புமிக்க வீரர்களுமான அவர்கள் இருவரும் உரத்த முழக்கங்களைச் செய்தனர்.(56,57) அவ்விருவரையும் கண்ட படைவீரர்களால் அவர்களில் யார் வெல்லப்போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைக்} கொன்று பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்} பூமியை அனுபவிப்பானா? அல்லது சல்லியன், பாண்டுவின் மகனைக் கொன்று துரியோதனனுக்குப் பூமியை அளிப்பானா? என்பதை அங்கிருந்த போர்வீரர்களால் தீர்மானிக்க முடியவில்லை. அவ்வாறு போரிட்டுக் கொண்டிருக்கும்போதே மன்னன் யுதிஷ்டிரன் எதிரிகளைத் தன் வலப்புறத்தில் நிறைத்தினான்.(58,59) பிறகு சல்லியன் நூற்றுக்கணக்கான முதன்மையான கணைகளால் யுதிஷ்டிரன் மீது ஏவினான். பெருங்கூர்மை கொண்ட மற்றொரு கணையால் அவன் {சல்லியன்}, பின்னவனின் {யுதிஷ்டிரனின்} வில்லை அறுத்தான்.(60) மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட யுதிஷ்டிரன், முன்னூறு {300} கணைகளால் சல்லியனைத் துளைத்து, கத்தி முகக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} பின்னவனின் {சல்லியனின்} வில்லையும் அறுத்தான்.(61)

அப்போது அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, சில நேரான கணைகளால் தன் எதிராளியின் நான்கு குதிரைகளைக் கொன்றான். மேலும் இரண்டு மிகக் கூரிய கணைகளால் அவன், சல்லியனின் பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் வெட்டி வீழ்த்தினான்.(62) பிறகு அவன், சுடர்மிக்கதும், நன்கு கடினமாக்கப்பட்டதுமான மற்றொரு கூரிய கணையை எடுத்துக் கொண்டு, தன் முன்பு நின்றிருந்த சல்லியனின் கொடிமரத்தையும் அறுத்தான். அப்போது, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, துரியோதனனின் படையானது பிளந்தது.(63) அந்த நேரத்தில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அந்த அவல நிலைக்குத் தள்ளப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} நோக்கி வேகமாகச் சென்று, தன் தேரில் அவனை ஏற்றிக் கொண்டு வேகமாகத் தப்பி ஓடினான்.(64) அவர்கள் இருவரும் சென்றபிறகு, யுதிஷ்டிரனின் உரத்த முழக்கத்தைக் கேட்டனர். அப்போது நின்ற மத்ரர்களின் ஆட்சியாளன், முறையாக ஆயத்தம் செய்யப்பட்டிருந்த மற்றொரு தேரில் ஏறிக் கொண்டான்.(65) அந்தச் சிறந்த தேரானது, மேகங்களின் முழக்கத்தைப் போன்ற ஆழ்ந்த சடசடப்பொலியைக் கொண்டிருந்தது. ஆயுதங்கள் மற்றும் பிற வகைக் கருவிகள் அனைத்தும் பொருத்தப்பட்டிருந்த அந்த வாகனமானது, எதிரிகளுக்கு மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தியது” {என்றான் சஞ்சயன்}.(66)

சல்லியனைக் கொன்ற யுதிஷ்டிரன்! – சல்லிய பர்வம் பகுதி – 17-சல்லியனைத் தாக்கிய பாண்டவத் தலைவர்கள்; சல்லியனோடு போரிட்ட யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்ற சல்லியன்; சல்லியனின் கவசத்தை அறுத்த பீமசேனன்; தெய்வீக ஈட்டியால் சல்லியனைக் கொன்ற யுதிஷ்டிரன்; சல்லியனின் தம்பிக்கும், யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடந்த மோதல்; யுதிஷ்டிரனிடம் இருந்து தப்பி ஓடிய கௌரவப் படை; கிருதவர்மனுக்கும், சாத்யகிக்கும் இடையில் நடந்த மோதல்; கிருதவர்மனை வீழ்த்திய சாத்யகி; கிருதவர்மனைக் காத்த கிருபர்; துரியோதனனின் வீரம்; கிருதவர்மனைத் தேரற்றவனாக்கிய யுதிஷ்டிரன்; கிருதவர்மனைக் காத்த அஸ்வத்தாமன்; யுதிஷ்டிரனோடு போரிட்ட கிருபர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, மிக உறுதியானதும், மேலும் கடினமானதுமான மற்றொரு வில்லை எடுத்து யுதிஷ்டிரனைத் துளைத்து ஒரு சிங்கத்தைப் போல முழங்கினான்.(1) அப்போது, அளவிலா ஆன்மா கொண்ட அந்த க்ஷத்திரியக் காளை {சல்லியன்}, மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களின் தேவனைப் போல க்ஷத்திரியர்கள் அனைவரின் மேலும் கணைமாரிகளைப் பொழிந்தான்.(2) பத்து கணைகளால் சாத்யகியையும், மூன்றால் பீமனையும், அதே அளவுக்குச் சகாதேவனையும் துளைத்த அவன் {சல்லியன்} யுதிஷ்டிரனைப் பெரிதும் பீடித்தான்.(3) மேலும் அவன், சுடர்மிக்கப் பந்தங்களால் யானைகளைப் பீடிக்கும் ஒரு வேடனைப் போலவே, குதிரைகள், தேர்கள், யானைகளுடன் கூடிய பெரும் வில்லாளிகளான பிறர் அனைவரையும் பல கணைகளால் பீடித்தான்.(4) உண்மையில், அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {சல்லியன்}, யானைகள், யானை வீரர்கள், குதிரைகள், குதிரைவீரர்கள், தேர்கள் மற்றும் தேர்வீரர்கள் ஆகியோரை அழித்தான்.(5) ஆயுதங்களைப் பிடித்திருந்த போராளிகளின் கரங்களையும், வாகனங்களின் கொடிமரங்களையும் வெட்டிவீழ்த்திய அவன், குசப்புல் ஈக்குகள் விரவிக் கிடக்கும் ஒரு வேள்விப்பீடத்தைப் போல (கொல்லப்பட்ட) போர்வீரர்களைப் பூமியில் விரவிக் கிடக்கச் செய்தான்.(6)

அப்போது சினத்தால் நிறைந்தவர்களான பாண்டுக்கள், பாஞ்சாலர்கள், சோமகர்கள் ஆகியோர், அனைத்தையும் அழிக்கும் காலனைப் போலத் தங்கள் துருப்புகளை இவ்வாறு கொன்றுவரும் அந்த வீரனை {சல்லியனைச்} சூழ்ந்து கொண்டனர்.(7) அந்தப் போர்வீரன் பயங்கர வலிமை கொண்ட (பாண்டவ) மன்னனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும்போது, பீமசேனன், சிநியின் பேரன் {சாத்யகி}, முதன்மையான மனிதர்களான மாத்ரியின் இரு மகன்கள் {நகுல சகாதேவன்} ஆகியோர் அவனைச் {சல்லியனைச்} சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் அவனைப் போருக்கு அறைகூவியழைத்தனர்.(8) பிறகு அந்தப் போர்க்களத்தில், போர்வீரர்களில் முதன்மையான மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} அடைந்த அந்த வீரர்கள், அம்மோதலில் அந்த முதன்மையான மனிதனை {சல்லியனைத்} தடுத்து, கடும் சக்தி கொண்ட சிறகு படைத்த கணைகளால் அவனைத் தாக்கத் தொடங்கினர்.(9) பீமசேனன், மாத்ரியின் இரு மகன்கள், மதுகுலத்தோன் {சாத்யகி} ஆகியோரால் பாதுகாக்கப்பட்டவனான தர்மனின் அரசமகன் {யுதிஷ்டிரன்}, கடும் சக்தி கொண்ட, சிறகு படைத்த கணைகளால் மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} நடுமார்பைத் தாக்கினான்.(10) அப்போது கவசமும், ஆயுதங்களும் தரித்திருந்த உமது படையின் தேர்வீரர்கள் மற்றும் பிற போராளிகள், அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளன் கணைகளால் அதிகமாகப் பீடிக்கப்பட்டதைக் கண்டு, துரியோதனனின் கட்டளையின் பேரில் அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(11)

போரில் அந்நேரத்தில் மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஏழு கணைகளால் யுதிஷ்டிரனை வேகமாகத் துளைத்தான். அந்தப் பயங்கர மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த உயர் ஆன்மப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, ஒன்பது கணைகளால் தன் எதிரியைப் பதிலுக்குத் துளைத்தான்.(12) பெரும் தேர்வீரர்களான மத்ர ஆட்சியாளன் {சல்லியன்} மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவரும், எண்ணெயில் துவைக்கப்பட்டவையும், அவர்களின் காது வரை வளைக்கப்பட்ட வில்லின் நாண்கயிறுகளில் இருந்து ஏவப்பட்டவையுமான கணைகளால் ஒருவரையொருவர் மறைக்கத் தொடங்கினர்.(13) பெரும் பலம் கொண்டவர்களும், எதிரிகளால் வீழ்த்தப்பட முடியாதவர்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், அடுத்தவரின் கவனக்குறைவில் கவனமாக இருப்பவர்களுமான அந்தச் சிறந்த மன்னர்கள் இருவரும், தங்கள் கணைகளால் வேகமாகவும், ஆழமாகவும் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர்.(14) உயர் ஆன்மப் போர்வீரர்களான துணிச்சல்மிக்க மத்ர ஆட்சியாளனும், அந்த வீரப் பாண்டவனும் ஒருவரின் மீது ஒருவர் எண்ணற்ற கணைகளைப் பொழிந்த போது, அவர்களுடைய விற்கள், நாண்கயிறுகள், உள்ளங்கைகள் ஆகியவற்றில் உண்டான உரத்த ஒலியானது, இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பானதாக இருந்தது.(15) அவர்கள், ஆழ்ந்த கானகத்தில் இறைச்சித் துண்டுக்காகப் போரிடும் இளம்புலிகள் இரண்டைப் போல அந்தப் போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தனர். ஆற்றல் செருக்கு பெருகியவர்களான அவர்கள், பலமிக்கத் தந்தங்களுடன் கூடிய மதங்கொண்ட இரண்டு யானைகளைப் போல ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(16)

அப்போது, பெரும் மூர்க்கம் கொண்டவனான மத்ரர்களின் சிறப்புமிக்க ஆட்சியாளன் {சல்லியன்}, தன் வீரத்தை வெளிப்படுத்தி, பயங்கர வலிமை கொண்ட வீரனான யுதிஷ்டிரனின் மார்பை, நெருப்பு அல்லது சூரியனின் காந்தியைக் கொண்ட கணையொன்றால் துளைத்தான்.(17) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வாறு ஆழத் துளைக்கப்பட்டவனும், குரு குலத்துக் காளையுமான சிறப்புமிக்க யுதிஷ்டிரன், நன்கு ஏவப்பட்ட கணையொன்றால் மத்ரர்களின் ஆட்சியாளனைத் தாக்கி மகிழ்ச்சியால் நிறைந்தான்.(18) கண்ணிமைக்கும் நேரத்தில் தன் புலனுணர்வுகள் மீண்டவனும், ஆயிரங்கண் கொண்டவனுக்கு {இந்திரனுக்கு} இணையான ஆற்றலைக் கொண்டவனுமான அந்த மன்னர்களில் முதன்மையானவன் (சல்லியன்), கோபத்தால் கண்கள் சிவந்து, அந்தப் பிருதையின் மகனை{யுதிஷ்டிரனை} நூறு கணைகளால் வேகமாகத் தாக்கினான்.(19) இதன்காரணமாகச் சினத்தால் நிறைந்த தர்மனின் சிறப்புமிக்க மகன் {யுதிஷ்டிரன்}, சல்லியனின் மார்பை வேகமாகத் துளைத்து, ஒரு கணத்தையும் இழக்காமல், ஆறு கணைகளால் அவனுடைய தங்கக் கவசத்தையும் தாக்கினான்.(20)

அப்போது, மகிழ்ச்சியால் நிறைந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, தன் வில்லை வளைத்துப் பல கணைகளை ஏவி, இறுதியாகத் தன் அரச எதிரியான அந்தக் குரு குலத்துக் காளையின் வில்லை கத்தி முகக் கணைகள் {க்ஷுரப்ரங்கள்} இரண்டால் அறுத்தான்.(21) பிறகு அந்தப் போரில், புதியதும், மேலும் உறுதிமிக்கதுமான வில்லொன்றை எடுத்துக் கொண்ட சிறப்புமிக்க யுதிஷ்டிரன், அசுரன் நமுசியைத் துளைக்கும் இந்திரனைப் போலக் கூர்முனை கணைகள் பலவற்றால் சல்லியனைத் துளைத்தான்.(22) சிறப்புமிக்கச் சல்லியன், ஒன்பது கணைகளால் பீமன் மற்றும் மன்னன் யுதிஷ்டிரனின் தங்கக் கவசங்களை வெட்டி, அவ்விருவரின் கரங்களையும் துளைத்தான்.(23) பிறகு, நெருப்பு அல்லது சூரியனின் காந்தியைக் கொண்ட மற்றொரு கத்தி முகக் கணையால் {க்ஷுரப்ரத்தால்} யுதிஷ்டிரனின் வில்லையும் அவன் அறுத்தான். இந்நேரத்தில் கிருபர், ஆறு கணைகளை ஏவி மன்னனின் {யுதிஷ்டிரனின்} சாரதியைக் கொன்றதன் காரணமாக, அவன் {அந்த சாரதி} தேருக்கு முன்பு கீழே விழுந்தான்.(24) பிறகு மத்ரர்களின் ஆட்சியாளன் நான்கு கணைகளைக் கொண்டு யுதிஷ்டிரனின் நான்கு குதிரைகளைக் கொன்றான். மன்னனின் குதிரைகளைக் கொன்ற உயர் ஆன்ம சல்லியன், பிறகு தர்மனின் அரச மகனுடைய துருப்பினரைக் கொல்லத் தொடங்கினான்.(25)

அந்த (பாண்டவ) மன்னன் அந்த அவல நிலைக்குக் கொண்டு வரப்பட்டபோது, சிறப்புமிக்கப் பீமசேனன், பெரும் வேகத்தைக் கொண்ட ஒரு கணையால் மத்ர மன்னனின் {சல்லியனின்} வில்லை வேகமாக அறுத்து, மேலும் இரு கணைகளால் அம்மன்னனையும் ஆழமாகத் துளைத்தான்.(26) மற்றொரு கணையால் அவன், சல்லியனுடைய சாரதியின்  கவசம் பொருந்திய உடலில் இருந்து அவனது தலையை வெட்டினான். பெருஞ்சினத்தால் தூண்டப்பட்ட பீமசேனன், ஒரு கணமும் தாமதியாமல் அடுத்ததாகத் தன் எதிரியின் நான்கு குதிரைகளையும் கொன்றான்.(27) பிறகு, வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான பீமன், பெரும் வேகம் கொண்ட நூறு கணைகளால் அவ்வீரனை மறைத்து, அந்தப் போரில் தனியொருவனாகத் திரிந்து வந்தான். மாத்ரியின் மகனான சகாதேவனும் அதையே செய்தான். அக்கணைகளால் சல்லியன் திகைப்படைந்ததைக் கண்ட பீமன், வேறு கணைகளால் அவனது கவசத்தையும் அறுத்தான்.(28) பீமசேனனால் கவசம் வெட்டப்பட்டவனான அந்த உயர் ஆன்ம மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, ஒரு வாளையும், ஆயிரம் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, தன் தேரில் இருந்து கீழே குதித்து, குந்தியின் மகனை நோக்கி விரைந்தான். பயங்கரப் பலத்தைக் கொண்ட சல்லியன், நகுலனுடைய தேரின் ஏர்க்காலை வெட்டி, யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தான்.(29) சினத்துடன் விரையும் யமனைப் போல, மன்னனை நோக்கி மூர்க்கமாக விரையும் அவனைக் கண்ட திருஷ்டத்யும்னன், சிகண்டி, திரௌபதியின் மகன்கள் (ஐவர்), மற்றும் சிநியின் பேரன் {சாத்யகி} ஆகியோர் திடீரென அவனை நோக்கிச் சென்றனர்.(30)

அப்போது சிறப்புமிக்கவனான பீமன், முன்னேறிவரும் அவ்வீரனின் {சல்லியனின்} ஒப்பற்ற கேடயத்தைப் பத்து கணைகளால் அறுத்தான். மேலும் அவன் {பீமன்}, மற்றொரு அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} அந்தப் போர்வீரனின் வாளையும் கைப்பிடியில் அறுத்தான். இதனால் மகிழ்ச்சியில் நிறைந்த அவன் {பீமன்}, துருப்புகளுக்கு மத்தியில் உரக்க முழங்கினான்.(31) பீமனின் அந்த அருஞ்செயலைக் கண்ட பாண்டவத் தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர். உரக்கச் சிரித்த அவர்கள், கடும் முழக்கங்களைச் செய்தபடியே, சந்திரனைப் போன்று வெண்மையான தங்கள் சங்குகளை முழக்கினர்.(32) வியர்வையில் நனைந்து, குருதியில் குளித்து, மிகவும் துயருற்றிருந்த உமது படையின் வீரர்கள், அந்தப் பயங்கர ஒலியால் கிட்டத்தட்ட உயிரற்றவர்களைப் போல தங்கள் உற்சாகத்தை இழந்தனர்.(33) பீமசேனன் தலைமையிலான அந்த முதன்மையான பாண்டவ வீரர்களால் தாக்கப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளன், (அவர்களைப் பொருட்படுத்தாமல்) ஒரு மானைக் கைப்பற்றப்போகும் சிங்கத்தைப் போல யுதிஷ்டிரனை நோக்கிச் சென்றான்.(34) அப்போது, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாக இருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கோபத்தில் தூண்டப்பட்டதன் விளைவால் சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிந்தான். தன் எதிரே மத்ர ஆட்சியாளனைக் {சல்லியனைக்} கண்ட அவன் {யுதிஷ்டிரன்}, அந்த எதிரியை நோக்கி மிக மூர்க்கமாக விரைந்தான்.(35)

கோவிந்தனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளை நினைவுகூர்ந்த அவன், சல்லியனின் அழிவில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். உண்மையில் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், குதிரைகளற்ற, சாரதியற்ற தன் தேரில் நின்று கொண்டு, ஓர் ஈட்டியை எடுக்க விரும்பினான்.(36) அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, சல்லியனின் அருஞ்செயலைக் கண்டும், தன் பங்காக ஒதுக்கப்பட்ட அந்த வீரன் இன்னும் கொல்லப்படாமல் இருப்பதை நினைவுகூர்ந்தும், இந்திரனின் தம்பி {கிருஷ்ணன்} தன்னிடம் செய்யச் சொன்ன செயலை நிறைவேற்றுவதில் தன் இதயத்தை நிலைக்கச் செய்தான்.(37) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தங்கம் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்டதும், தங்கத்தைப் போன்ற பிரகாசமான ஒளியைக் கொண்டதுமான ஓர் ஈட்டியை எடுத்தான். அகன்று விரிந்திருந்த தன் விழிகளை உருட்டிய அவன், சினம் நிறைந்த இதயத்துடன் தன் பார்வையை மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மீது செலுத்தினான்.(38) ஓ மனிதர்களில் தேவரே {திருதராஷ்டிரரே}, இவ்வாறு தூய ஆன்மா கொண்டவனும், பாவங்களனைத்தும் கழுவப்பட்டவனுமான அம்மன்னனால் பார்க்கப்பட்டும், மத்ரர்களின் அந்த ஆட்சியாளன் {சல்லியன்} சாம்பலாகக் குறையாமல் {எரிந்து சாம்பலாகாமல்} இருந்தான். இஃது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, எங்களுக்குப் பேராச்சரியத்தை ஏற்படுத்தியது.(39) பிறகு, குருக்களின் அந்தச் சிறப்புமிக்கத் தலைவன் {யுதிஷ்டிரன்}, கடினமான அழகிய கைப்பிடியுடன் கூடியதும், ரத்தினங்கள் மற்றும் பவழங்களால் பிரகாசித்ததுமான அந்தச் சுடர்மிக்க ஈட்டியை {சக்தி ஆயுதத்தை}, மத்ரர்களின் மன்னன் {சல்லியன்} மீது பெரும்பலத்துடன் வீசினான்.(40)

பெரும் பலத்துடன் வீசப்பட்டு, ஆகாயத்தினூடே சென்ற அந்தச் சுடர்மிக்க ஈட்டியானது {சக்தி ஆயுதம்}, யுகமுடிவில் வானத்தில் இருந்து விழும் எரிநட்சத்திரத்தைப் போல நெருப்புப்பொறிகளை உமிழ்வதைக் கௌரவர்கள் அனைவரும் கண்டனர்.(41) அந்தப் போரில், நீதிமானானான மன்னன் யுதிஷ்டிரன், மரணத்தைத் தரும் பாசக்கயிற்றைத் தரித்திருக்கும் கால இரவுக்கோ {காலராத்திரிக்கோ}, அச்சந்தரும் யமனின் தன்மையைக் கொண்ட வளர்ப்புத் தாய்க்கோ ஒப்பானதும், பிராமணச் சாபத்தைப் போன்றதும், கலங்கடிக்கப்பட முடியாததுமான அந்த ஈட்டியை மிகக் கவனமாக வீசினான்[1].(42) பாண்டுவின் மகன்கள், நறுமணப்பொருட்கள், மாலைகள், சிறந்த இருக்கைகள், சிறந்த வகை உணவுகள் மற்றும் பானங்களுடன் எப்போதும் அவ்வாயுதத்தைக் கவனமாக வழிபட்டு வந்தனர். சம்வர்த்தக நெருப்பைப் போலச் சுடர்விடுவதாகத் தெரிந்த அவ்வாயுதம், அங்கீரசின் அதர்வணச் சடங்கைப் போலக் கடுமையானதாக இருந்தது.(43) ஈசானனின் பயன்பாட்டுக்காக (தெய்வீகத் தச்சனான) தஸ்த்ரியால் {விஸ்வகர்மாவால்} உண்டாக்கப்பட்ட அஃது, எதிரிகள் அனைவரின் உயிர் மூச்சுகளையும், உடலையும் எரிக்கவல்லதாய் இருந்தது. அது தன் சக்தியால் பூமி, ஆகாயம், அனைத்து நீர் கொள்ளிடங்கள் மற்றும் அனைத்து வகை உயிரினங்களையும் அழிக்கவல்லதாய் இருந்தது.(44) மணிகள், கொடிகள், ரத்தினங்கள், வைரங்கள், வைடூரியங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதும், தங்கக் கைப்பிடி கொண்டதுமான அது, பல நோன்புகளை நோற்ற பிறகு, தஸ்திரியாலேயே {விஸ்வகர்மனாலேயே} கவனமாக வடிவமைக்கப்பட்டதாகும். தவறாமல் மரணத்தைத் தரக்கூடிய அது பிரம்ம வெறுப்பாளர்கள் அனைவரையும் அழிக்கவல்லதாகும்.(45)

கடுமையான பல மந்திரங்களால் அஃதை {அந்த ஈட்டியை} ஈர்த்து, பெரும் பலம் மற்றும் பெருங்கவனத்தால் அதற்குப் பயங்கர வேகத்தை அளித்த மன்னன் யுதிஷ்டிரன், மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} அழிவுக்காக {பறவைகளின்} சிறந்த வழித்தடத்தின் ஊடாக அதை வீசினான்.(46) அந்த மன்னன் {யுதிஷ்டிரன் சல்லியனிடம்}, “ஓ! இழிந்தவரே, நீர் கொல்லப்பட்டீர்” என்ற வார்த்தைகளை உரத்த குரலில் சொல்லி, பழங்காலத்தில் அந்தகாசுரனின் அழிவுக்காகத் தன் கணையை ஏவிய ருத்ரனைப் போல, வெளிப்படையாகக் கோபத்தில் ஆடியபடியே, வலுவானதும், அழகானதுமான தன் (வலக்) கரத்தை வளைத்து அஃதை {அந்த ஈட்டியை} ஏவினான்.(47) இருப்பினும் உரக்க முழங்கிய சல்லியன், நெருப்பானது, தன் மேல் ஊற்றப்படும் தெளிந்த நெய்யைப் பிடிக்கத் தாவுவதைப் போலவே, வலிமையனைத்தையும் பயன்படுத்தி யுதிஷ்டிரனால் ஏவப்பட்டதும், தடுக்கப்பட முடியாத சக்தி கொண்டதுமான அந்தச் சிறந்த ஈட்டியைப் பிடிக்க முயற்சித்தான்.(48) அவனது முக்கிய அங்கங்களையும், அவனது அகன்ற அழகிய மார்பையும் துளைத்த அந்த ஈட்டியானது, சிறு தடையுமில்லாமல் (மத்ரத்தைச் சார்ந்த) அம்மன்னனின் உலகம் பரந்த புகழை (தன்னோடு) கவர்ந்து சென்று, நீர் நுழைவது போலவே பூமிக்குள் எளிதாக நுழைந்தது.(49) நாசித்துளைகள், கண்கள், காதுகள், வாய் ஆகியவற்றில் இருந்தும், காயங்களில் வழிந்தும் வெளிப்பட்ட குருதியால் நனைக்கப்பட்ட அவன் {சல்லியன்}, ஸ்கந்தனால் துளைக்கப்பட்ட பெருவடிவ கிரௌஞ்ச மலையைப் போலத் தெரிந்தான்.(50)

குரு குல வழித்தோன்றலால் கவசம் அறுபட்டவனும், இந்திரனின் யானையைப் போன்ற பலவானுமான அந்தச் சிறப்புமிக்கச் சல்லியன், தன் கரங்களை அகல விரித்து, இடியால் பிளக்கப்பட்ட ஒரு மலைச்சிகரத்தைப் போலக் கீழே பூமியில் விழுந்தான்.(51) இந்திரனை வழிபட நிறுவப்பட்ட நெரும் கொடிமரமொன்று தரையில் விழுவதைப் போல அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, தன் கரங்களை அகல விரித்தபடி நீதிமானான மன்னன் யுதிஷ்ட்டிரனை நோக்கிய முகத்துடன் கீழே பூமியில் விழுந்தான்[2].(52) தன் மார்பில் விழப்போகும் அன்புத்தலைவனை வரவேற்கும் ஓர் அன்புமனைவியைப் போலவே, சிதைந்து குருதியில் குளித்த அங்கங்களுடன் விழும் அந்த மனிதர்களில் காளையை வரவேற்பதற்காகப் பூமியானவள் பாசத்துடன் சற்றே எழுந்தது போலத் தெரிந்தது.(53) பலமிக்கச் சல்லியன், அன்பு மனைவியைப் போலப் பூமியை நீண்ட காலம் அனுபவித்த பிறகு, தன் அங்கங்கள் அனைத்தாலும் பூமியை அணைத்தபடியே, அவளது மார்பில் உறங்குவதைப் போல அப்போது தெரிந்தது.(54) நியாயமான போரில் நீதிமிக்க ஆன்மாவான தர்மனின் மகனால் {யுதிஷ்டிரனால்} கொல்லப்பட்ட சல்லியன், வேள்வி மேடையில் தணிந்து கிடக்கும் நன்னெருப்பின் தன்மையை ஏற்றதாகத் தெரிந்தது.(55) ஆயுதங்களையும் கொடிமரத்தையும் இழந்து, இதயம் துளைக்கப்பட்டிருந்தாலும், உயிரற்றுக் கிடந்த அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் தன் அழகைக் கைவிட்டதாகத் தெரியவில்லை.(56)

அப்போது யுதிஷ்டிரன், இந்திரனின் வில்லுக்கு ஒப்பான காந்தியைக் கொண்ட தன் வில்லை எடுத்து, பாம்புகளை அழிக்கும் பறவைகளின் அரசனைப் போல, அந்தப் போரில் தன் எதிரிகளை அழிக்கத் தொடங்கினான். பிறகு தனது கூர்முனைக் கணைகளால் தன் எதிரிகளின் உடல்களைப் பெரும் வேகத்துடன் வெட்டத் தொடங்கினான்.(57) அப்போது அந்தப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்} ஏவிய கணைமாரிகளால், உமது துருப்புகள் முற்றிலும் மறைக்கப்பட்டன. அச்சத்தால் தங்கள் கண்களை மூடிக் கொண்ட அவர்கள், (திகைத்துப் போய்) ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர். அவர்கள் தங்கள் உடல்களில் இரத்தம் வழிய, தாக்குதலுக்கும், தற்காப்புக்கும் உண்டான தங்கள் ஆயுதங்களை இழந்து, தங்கள் உயிர் மூச்சுகளையும் விட்டனர்.(58)

சல்லியன் வீழ்ந்ததும், இளமையுடன் கூடியவனும், (இறந்து போன) தன் அண்ணனுக்கு அனைத்து சாதனைகளிலும் இணையானவனும், வலிமைக்க ஒரு தேர்வீரனாகக் கருதப்பட்டவனுமான மத்ர மன்னனின் தம்பி, யுதிஷ்டிரனை எதிர்த்துச் சென்றான்.(59) போரில் வெல்லப்பட முடியாதவனும், தன் அண்ணனுக்கு இறுதி மரியாதைகளைச் செலுத்த விரும்பியவனுமான அந்த மனிதர்களில் முதன்மையானவன், பல கணைகளால் அந்தப் பாண்டவனை {யுதிஷ்டிரனை} வேகமாகத் துளைத்தான்.(60) பெரும் வேகத்துடன் கூடியவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், ஆறு கணைகளால் அவனைத் துளைத்தான். அவன், கத்திமுகக் கணைகள் {க்ஷுரப்ரங்கள்} இரண்டால் தன் எதிராளியின் வில்லையும், கொடிமரத்தையும் அறுத்தான்.(61) பிறகு அவன், அகன்ற தலையும், கூர்முனையும், பெரும் சக்தியும் கொண்ட சுடர்மிக்கக் கணையொன்றால் தன் முன் நின்றிருந்த தன் எதிரியின் தலையைத் தாக்கி வீழ்த்தினான்.(62) காது குண்டலங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தலையானது, புண்ணியங்கள் தீர்ந்து விழும் ஒரு சொர்க்கவாசியைப் போல அந்தத் தேரில் இருந்து கீழே விழுவதை நான் கண்டேன்.(63)

முழுவதும் குருதியால் குளித்திருந்த அவனது தலையற்ற உடலான தேரில் இருந்து கீழே விழுவதைக் கண்ட கௌரவத் துருப்புகள் பிளந்து ஓடின.(64) உண்மையில், அழகிய கவசம் பூட்டியிருந்தவனான மத்ரனின் அந்தத் தம்பி கொல்லப்பட்டதும், ஓ! என்றும், ஐயோ என்றும் கதறியபடியே குருக்கள் பெரும் வேகத்தோடு தப்பி ஓடினர்.(65) சல்லியனின் தம்பி கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், புழுதியால் மறைக்கப்பட்டவர்களுமான உமது துருப்பினர், பாண்டவர்களிடம் ஏற்பட்ட அச்சத்தால், தங்கள் வாழ்வில் நம்பிக்கையிழந்து தப்பி ஓடினர்.(66) பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சிநியின் பேரனான சாத்யகி, அச்சமடைந்து தப்பி ஓடும் கௌரவர்களை எதிர்த்துச் சென்றான்.(67) அப்போது ஹிருதிகனின் மகன் {கிருதவர்மன்}, ஓ! மன்னா, (வீழ்த்தப்பட்ட படையை எதிர்த்து) முன்னேறுபவனும், தடுக்கப்பட முடியாதவனும், வலிமைமிக்க வில்லாளியுமான அந்த வெல்லப்பட முடியாத போர்வீரனை {சாத்யகியை} அச்சமில்லாமல் வேகமாக எதிர்த்தான்.(68)

விருஷ்ணி குலத்தைச் சேர்ந்த சிறப்புமிக்கவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} மற்றும் சாத்யகி ஆகியோர் இருவரும், சீற்றமிக்க இரு சிங்கங்களைப் போல ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(69) பிரகாசத்தில் சூரியனுக்கு ஒப்பான அவர்கள் இருவரும் சூரியக் கதிர்களுக்கு ஒப்பான சுடர்மிக்கக் காந்தியைக் கொண்ட கணைகளால் ஒருவரையொருவர் மறைத்தனர்.(70) விருஷ்ணி குலத்தின் அந்த இரு சிங்கங்கள் தங்கள் விற்களில் இருந்து ஏவிய அந்தப் பலமிக்கக் கணைகளை, ஆகாயத்தில் வேகமாகச் செல்லும் பூச்சிகளைப் போல நாங்கள் கண்டோம்.(71) சாத்யகியைப் பத்து கணைகளாலும், அவனது குதிரைகளை மூன்றாலும் துளைத்த அந்த ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, ஒரு நேரான கணையால் அவனது {சாத்யகியின்} வில்லையும் அறுத்தான்.(72) இவ்வாறு வெட்டப்பட்ட தனது சிறந்த வில்லை அப்பால் கிடத்திய அந்தச் சிநி குலத்துக் காளை {சாத்யகி}, முதலில் இருந்ததைவிடக் கடினமான மற்றொரு வில்லை வேகமாக எடுத்துக் கொண்டான்.(73)

முதன்மையான வில்லை எடுத்துக் கொண்ட அந்த முதன்மையான வில்லாளி {சாத்யகி}, பத்து கணைகளால் ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} நடுமார்பைத் துளைத்தான்.(74) பிறகு நன்கு ஏவப்பட்ட கணைகள் பலவற்றால் அவனது தேரையும், அந்தத் தேரின் ஏர்க்காலையும் வெட்டிய சாத்யகி, பிறகு தன் எதிராளியின் குதிரைகளையும், அவனது பார்ஷினி சாரதிகள் இருவரையும் வேகமாகக் கொன்றான்.(75) அப்போது, சரத்வானின் மகனான வீரக் கிருபர், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, ஹிருதிகன் மகன் தேரற்றவனாகச் செய்யப்பட்டதைக் கண்டு, அவனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து அவனைக் கொண்டு சென்றார்.(76) மத்ரர்களின் மன்னன் {சல்லியன்} கொல்லப்பட்டு, கிருதவர்மன் தேரற்றவனாகச் செய்யப்பட்ட பிறகு, துரியோதனனின் மொத்தப் படையும் அந்தப் போரில் மீண்டும் புறமுதுகிட்டது.(77) அந்நேரத்தில் அந்தப் படையானது புழுதி மேகத்தால் மறைக்கப்பட்டது. எங்களால் எதையும் காண முடியவில்லை. எனினும் உமது படையின் பெரும்பகுதி வீழ்ந்தது. உயிரோடு எஞ்சியவர்களும் போரில் இருந்து தங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு புறமுதுகிட்டோடினர்.(78)

விரைவில், அனைத்துப் பக்கங்களிலும் பாய்ந்த பல்வேறு குருதி ஓடைகளின் விளைவால் பூமியின் புழுதி தணிவது தெரிந்தது.(79) அப்போது தன் படை பிளப்பதை அருகில் இருந்து கண்ட துரியோதனன், முன்னேறிவரும் பார்த்தர்கள் அனைவரையும் தனியொருவனாகத் தடுத்தான்.(80) பாண்டவர்களும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனும், ஆனர்த்தர்களின் வெல்லப்பட முடியாத தலைவனும் (சாத்யகியும்) தங்கள் தேர்களில் இருப்பதைக் கண்ட குரு மன்னன் {துரியோதனன்}, அவர்கள் அனைவரையும் கூரிய கணைகளால் மறைத்தான்.(81) (அந்நேரத்தில்) தங்கள் முன் நிற்கும் யமனை அணுக அஞ்சும் உயிரினங்களைப் போல, எதிரிகள் அவனை {துரியோதனனை} நெருங்கவில்லை. அதேவேளையில், ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} மற்றொரு தேரில் ஏறிக் கொண்டு, அந்த இடத்திற்குச் சென்றான்.(82) அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான யுதிஷ்டிரன், நான்கு கணைகளால் கிருதவர்மனின் நான்கு குதிரைகளைக் கொன்று, பெரும் சக்தி கொண்ட ஆறு அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} கௌதமர் மகனையும் {கிருபரையும்} துளைத்தான்.(83)

அப்போது அஸ்வத்தாமன், (பாண்டவ) மன்னனால் குதிரைகளற்றவனாகவும், தேரற்றவனாகவும் செய்யப்பட்ட ஹிருதிகன் மகனை {கிருதவர்மனைத்} தன் தேரில் ஏற்றிக் கொண்டு, யுதிஷ்டிரனின் முன்னிலையில் இருந்து அவனை அப்பால் கொண்டு சென்றான்.(84) சரத்வான் மகன் {கிருபர்}, பதிலுக்கு எட்டு கணைகளால் யுதிஷ்டிரனைத் துளைத்து, மேலும் எட்டு கூரிய கணைகளால் அவனது குதிரைகளையும் துளைத்தார்.(85) ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இவ்வாறு உமது மகன் மற்றும் உமது தீய கொள்கைகளால் அந்தப் போரின் தணல்கள் அங்குமிங்கும் எரியத் தொடங்கின.(86) அந்தப் போர்க்களத்தில், குரு குலத்துக் காளையால் {யுதிஷ்டிரனால்}, அந்த வில்லாளிகள் முதன்மையானவன் {சல்லியன்} கொல்லப்பட்ட பிறகு, சல்லியன் கொல்லப்பட்டதைக் கண்ட பார்த்தர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியால் நிறைந்து, தங்கள் சங்குகள் முழக்கினர்.(87) பழங்காலத்தில் விருத்திரன் கொல்லப்பட்ட பிறகு இந்திரனை மெச்சிய தேவர்களைப் போலவே, அந்தப் போரில் அனைவராலும் யுதிஷ்டிரன் பாராட்டப்பட்டான். அவர்கள் பல்வேறு வகைகளிலான இசைக்கருவிகளை இசைத்து முழக்கி, அவ்வொலியைப் பூமியின் அனைத்துப் பக்கங்களிலும் எதிரொலிக்கச் செய்தனர்” {என்றான் சஞ்சயன்}.(88)

சல்லியனின் தொண்டர்கள்! – சல்லிய பர்வம் பகுதி – 18-தங்கள் தலைவனின் படுகொலைக்குப் பழிதீர்க்க முனைந்த சல்லியனின் தொண்டர்கள்; அவர்களைத் தடுத்த துரியோதனன்; துரியோதனனுக்குக் கீழ்ப்படியாத மத்ரகர்கள்; அவர்களைத் தாக்கி அழித்த பாண்டவர்கள்; மத்ரகர்களைக் காக்க துரியோதனனைத் தூண்டிய சகுனி; மத்கர்களைக் காக்க விரைந்த கௌரவவீரர்கள்; களத்தில் இருந்து மீண்டும் புறமுதுகிட்ட கௌரவர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சல்லியன் கொல்லப்பட்ட பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மத்ர மன்னனை {சல்லியனைப்} பின்தொடர்ந்த எழுனூறு {700} வீரப் போர்வீரர்கள் பெரும் சக்தியுடன் போரிடச் சென்றனர்.(1) தலைக்கு மேல் வெண்குடை பிடிக்கப்பட்டு, எப்போதும் வெண்சாமரம் வீசப்பட்டு, மலை போன்ற ஒரு பெரிய யானையைச் செலுத்திக் கொண்டு வந்த துரியோதனன், “செல்லாதீர்கள், செல்லாதீர்கள்” என்று சொல்லி மத்ரகப் போர்வீரர்களைத் தடுத்தான்.(2) துரியோதனனால் மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்டாலும், அவ்வீரர்கள், யுதிஷ்டிரனைக் கொல்லும் விருப்பத்தோடு பாண்டவப் படைக்குள் ஊடுருவினர்.(3) துரியோதனனிடம் மாறாப்பற்றுக் கொண்ட அந்தத் துணிச்சல்மிக்கப் போராளிகள், தங்கள் விற்களில் உரத்த நாணொலி எழுப்பியபடியே பாண்டவர்களுடன் போரிட்டனர்.(4)

அதேவேளையில், சல்லியன் கொல்லப்பட்டதையும், மத்ரக மன்னனின் {சல்லியனின்} நலனில் அர்ப்பணிப்புக் கொண்ட மத்ரகர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களால் யுதிஷ்டிரன் பீடிக்கப்படுவதையும் கேட்ட பெரும் தேர்வீரனான பார்த்தன் {அர்ஜுனன்}, தன் வில்லான காண்டீவத்தை வளைத்துக் கொண்டும், தன் தேரின் சடசடப்பொலியால் பூமியை நிறைத்துக் கொண்டும் அங்கே வந்தான்.(5,6) பிறகு, அர்ஜுனன், பீமன், பாண்டுவின் மூலமாக மாத்ரிக்குப் பிறந்த இரண்டு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, மனிதர்களில் புலியான சாத்யகி, திரௌபதியின் (ஐந்து) மகன்கள்,(7) திருஷ்டத்யும்னன், சிகண்டி, பாஞ்சாலர்கள், சோமகர்கள் ஆகியோர் யுதிஷ்டிரனைக் காக்க விரும்பி, அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து நின்றனர்.(8) மன்னனை {யுதிஷ்டிரனைச்} சுற்றித் தங்கள் நிலைகளை ஏற்றவர்களும், மனிதர்களில் காளைகளுமான அந்தப் பாண்டவர்கள், பெருங்கடலைக் கலங்கடிக்கும் மகரங்களைப் போலப் பகைவரின் படையைக் கலங்கடிக்கத் தொடங்கினர். உண்மையில், மரங்களை அசைக்கும் வலிமைமிக்கச் சூறைக்காற்றைப் போல அவர்கள் உமது படையை நடுங்கச் செய்தனர்.(9)

{ஆனாலும்} எதிர்க்காற்றால் கலங்கலடிக்கப்படும் பெரும் கங்கையாற்றைப் போல, மீண்டும் அந்தப் பாண்டவப் படை அதிகமாகக் கலக்கமடைந்தது.(10) அந்த வலிமைமிமிக்கப் படையைக் கலங்கச் செய்தவர்களும், சிறப்புமிக்கவர்களுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் (மத்ரகர்கள) அனைவரும், “எங்கே அந்த மன்னன் யுதிஷ்டிரன்?(11) துணிச்சல்மிக்க அவனது சகோதரர்கள் ஏன் இங்குத் தென்படவில்லை? பெரும் சக்தி கொண்ட பாஞ்சாலர்களுக்கும், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டிக்கும் என்ன ஆயிற்று? திருஷ்டத்யும்னன், சிநியின் பேரன் {சாத்யகி}, பெரும் தேர்வீரர்களான திரௌபதியின் (ஐந்து) மகன்கள் ஆகியோர் எங்கே சென்றுவிட்டனர்?” என்று உரக்கக் கூச்சலிட்டனர்.(12) இதனால், வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரௌபதியின் மகன்கள், அந்த வார்த்தைகளைச் சொல்லி மூர்க்கமாகப் போரிட்டுக் கொண்டிருந்த மத்ர மன்னனின் தொண்டர்களைக் கொல்லத் தொடங்கினர்.(13) அந்தப் போரில் உமது துருப்புகளில் சிலர் தேர்ச்சக்கரங்களால் நசுக்கப்படுவதும், சிலர் உயர்ந்த கொடிமரங்களால் கொல்லப்படுவதும் அங்கே காணப்பட்டது.(14) எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படையைச் சேர்ந்த துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், உமது மகனால் தடுக்கப்பட்டாலும் கூட, அந்த வீரப் பாண்டவர்களைக் கண்டதும், அவர்களை எதிர்த்து மேலும் விரைந்தனர்.(15)

மென்மையாகப் பேசிய துரியோதனன், அவ்வீரர்கள் எதிரியோடு போரிடுவதைத் தவிர்க்க முயன்றான். எனினும், பெரும் தேர்வீரர் எவரும் அவனது கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை.(16) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, காந்தார மன்னனின் மகனும், பேச்சுத்திறன் கொண்டவனுமான சகுனி, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(17) “நம் கண்களுக்கு முன்பாக மத்ரகப் படை கொல்லப்படும்போது, நாம் எவ்வாறு நின்று கொண்டிருக்கலாம்? ஓ! பாரதா {துரியோதனா}, நீ இங்கிருக்கும்போது இது {இப்படி நடப்பது} நல்லதாகத் தெரியவில்லை.(18) ஒற்றுமையுடன் நான் அனைவரும் போரிட வேண்டும் என்பதே நமது திட்டம். ஓ! மன்னா {துரியோதனா}, பிறகு ஏன் நீ, நமது துருப்புகள் இவ்வாறு எதிரிகளால் கொல்லப்படும்போதும் பொறுத்துக் கொள்கிறாய்?” என்று கேட்டான்.(19)

துரியோதனன் {சகுனியிடம்}, “என்னால் முன்பே தடுக்கப்பட்டாலும், அவர் என் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. இந்த மனிதர்கள் ஒன்றாக இந்தப் பாண்டவப்படைக்குள் சென்று விட்டனர்” என்றான்.(20)

சகுனி, “போரில் சினத்தால் தூண்டப்படும் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், தங்கள் தலைவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை. அம்மனிதர்களிடம் நீ கோபப்படுவது உனக்குத் தகாது. அக்கறையின்மைக்கு இது சமயமில்லை.(21) எனவே, மத்ர மன்னனின் தொண்டர்களான அந்தப் பெரும் வில்லாளிகளைக் காப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து, நமது தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுடன் செல்வோம்.(22) ஓ! மன்னா {துரியோதனா}, பெருங்கவனத்துடம் நாம் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்வோம்” என்றான் {சகுனி}. சகுனியின் நடத்தையைக் குறித்துச் சிந்தித்த கௌரவர்கள் அனைவரும், மத்ரர்கள் இருந்த அந்த இடத்திற்குச் சென்றனர்.(23) இவ்வாறு (தன் தாய்மாமனால்) சொல்லப்பட்ட துரியோதனனும், சிங்க முழக்கங்கள் செய்து கொண்டும், அவ்வொலியால் பூமியை எதிரொலிக்கச் செய்தபடியும், ஒரு பெரும் படை சூழ எதிரியை எதிர்த்துச் சென்றான்.(24) “கொல்வாயாக, துளைப்பாயாக, பிடிப்பாயாக, தாக்குவாயாக, வெட்டுவாயாக” என்ற இவ்வொலிகளே அங்கே அந்தத் துருப்புகளுக்கு மத்தியில் கேட்கப்பட்டன.(25)

அதேவேளையில், அந்தப் போரில் மத்ர மன்னின் {சல்லியனின்} தொண்டர்கள் ஒன்றுசேர்ந்து தங்களைத் தாக்குவதைக் கண்ட பாண்டவர்கள், மத்யமம் என்றழைக்கப்பட்ட வியூகத்தில் தங்களை அணிவகுத்துக் கொண்டு அவர்களை எதிர்த்துச் சென்றனர்[1].(26) கையோடு கையாகச் சிறிது நேரம் போரிட்டவர்களும், மத்ரமன்னனின் தொண்டர்களுமான அந்த வீரப் போர்வீரர்கள், அழிவைச் சந்திப்பது அங்கே காணப்பட்டது.(27) பிறகு நாங்கள் முன்னேறிக் கொண்டிருந்த போது, ஒன்று சேர்ந்து வந்த பாண்டவர்கள், பெரும் சுறுசுறுப்புடன் மத்ரகர்களின் படுகொலையை நிறைவுசெய்து, மகிழ்ச்சியில் நிறைந்து இன்பக்கூச்சலிட்டனர்.(28) அப்போது சுற்றிலும் அங்கே தலையில்லாத வடிவங்கள் எழுவது காணப்பட்டது. சூரிய வட்டலில் இருந்து பெரும் எரிநட்சத்திரங்கள் விழுவதும் தென்பட்டது.(29) பூமியானது, தேர்கள், உடைந்த அச்சுகள், நுகத்தடிகள், கொல்லப்பட்ட போர்வீரர்கள், உயிரற்ற குதிரைகள் ஆகியவற்றால் மறைக்கப்பட்டது.(30)

காற்றின் வேகத்தைக் கொண்டவையும், (வழிநடத்த சாரதிகளில்லாமல்) தேர்களில் இன்னும் பூட்டப்பட்டிருந்தவையுமான குதிரைகள், ஓ! ஏகாதிபதி, போர்க்களத்தில் இங்கேயும் அங்கேயும் போர்வீரர்களை இழுத்துச் செல்வது காணப்பட்டது.(31) சில குதிரைகள் உடைந்த சக்கரங்களைக் கொண்ட தேர்களை இழுத்துச் சென்றன, சில உடைந்த தேர்களின் பகுதிகளைச் சுமந்து கொண்டே அனைத்துப் பக்கங்களிலும் ஓடின.(32) பூட்டாங்கயிறுகளால் தணிவடைந்த சில குதிரைகளும் ஆங்காங்கே தென்பட்டன புண்ணியங்கள் தீர்ந்து சொர்க்கத்தில் இருந்து விழும் சொர்க்கவாசிகளைப் போலத் தங்கள் தேர்களில் இருந்து தேர்வீரர்கள் கீழே விழும்வதும் காணப்பட்டன.(33) மத்ரமன்னனின் துணிச்சல்மிக்கத் தொண்டர்கள் கொல்லப்பட்ட போது, தாக்குவதில் பெருந்திறன் கொண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான பார்த்தர்கள், தங்களை நோக்கி ஒரு குதிரைப்படை வருவதைக் கண்டு, வெற்றியடையும் விருப்பத்தால் அதை நோக்கி வேகமாக விரைந்தனர்.(34) தங்கள் கணைகளால் உரத்த விஸ் ஒலியை உண்டாக்கி, தங்கள் சங்கொலிகளுடன் கலந்து பல்வேறு வகை ஒலிகளையும் வெளியிட்டவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களும், தாக்குவதில் திறன்மிக்கவர்களுமான அவர்கள், தங்கள் விற்களை அசைத்துக் கொண்டு சிங்க முழக்கம் செய்தனர்.(35)

மத்ர மன்னனின் அந்தப் பெரும்படை அழிக்கப்பட்டதைக் கண்டும், அவர்களது வீர மன்னன் {சல்லியன்} போரில் கொல்லப்பட்டதைக் கண்டும் துரியோதனனின் மொத்த படையும் மீண்டும் களத்தில் இருந்து புறமுதுகிட்டது.(36) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உறுதிமிக்க வில்லாளிகளான பாண்டவர்களால் தாக்கப்பட்ட அந்தக் குரு படையானது, அச்சத்தால் தூண்டப்பட்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடியது” {என்றான் சஞ்சயன்}.(37)[2]

இருபத்தோராயிரம் பேரைக் கொன்ற பீமன்! – சல்லிய பர்வம் பகுதி – 19-புறமுதுகிட்ட கௌரவப் படை; பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டது; படையின் பின்புறத்தை அடைந்த துரியோதனன்; காலாட்படையினரில் இருபத்தோராயிரம் பேரைக் கொன்ற பீமன்; துரியோதனன் தன் வீரர்களிடம் பேசிய வீர உரை; மீண்டும் அணிதிரண்ட கௌரவப்படை..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்கத் தேர்வீரனும், வெல்லப்பட முடியாத வீரனுமான அந்தப் பெரும் மன்னன் {சல்லியன்} போரில் கொல்லப்பட்டதும், உமது துருப்புகளும், உமது மகன்கள் அனைவரும் போரில் இருந்து புறமுதுகிட்டு ஓடினர்.(1) உண்மையில், சிறப்புமிக்க யுதிஷ்டிரனால் அவ்வீரன் {சல்லியன்} கொல்லப்பட்டதும், உமது துருப்புகள், ஆழ்ந்த கடலில் மரக்கலம் உடைந்து, அதைக் கடக்க ஒரு படகில்லாத வணிகர்களைப் போல இருந்தன.(2) மத்ர மன்னன் {சல்லியன்} வீழ்ந்ததும், ஓ! ஏகாதிபதி, உமது துருப்பினர், ஒரு பாதுகாவலனை விரும்பும் தலைவனற்ற மனிதர்கள் போலவோ, சிங்கம் ஒன்றால் பீடிக்கப்படும், ஒரு மான்கூட்டத்தைப் போலவோ இருந்தனர்.(3) கொம்புகளை இழந்த காளைகளைப் போலவோ, தந்தங்கள் உடைந்த யானைகளைப் போலவோ இருந்த உமது துருப்பினர், அஜாதசத்ருவால் {யுதிஷ்டிரனால்}, வீழ்த்தப்பட்டு நடுப்பகல் வேளையில் தப்பி ஓடினர்.(4) சல்லியன் வீழ்ந்த பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்பினரில் ஒருவனும் படையைத் திரட்டுவதிலோ, தன் ஆற்றலை வெளிப்படுத்துவதிலோ தன் இதயத்தை நிலைநிறுத்தவில்லை.(5)

ஓ! மன்னா, பீஷ்மர், துரோணர், சூதன் மகன் {கர்ணன்} ஆகியோர் வீழ்ந்த போது இருந்த அச்சமும், துயரமும், ஓ! பாரதரே, ஓ! ஏகாதிபதி, மீண்டும் நமதானது.(6) வலிமைமிக்கத் தேர்வீரனான சல்லியனின் வீழ்ச்சியில் வெற்றியை இழந்த குரு படையானது, கொல்லப்படும் தன் வீரர்களுடன் குழப்பமடைந்து, கூரிய கணைகளால் வெட்டுப்பட்டு வீழத் தொடங்கியது. மத்ர மன்னனின் படுகொலையால், ஓ! ஏகாதிபதி, உமது போர்வீரர்கள் அனைவரும் அச்சத்தால் தப்பி ஓடினர்.(7) சிலர் குதிரைமுதுகிலும், சிலர் யானைகளிலும், சிலர் தேர்களிலும் எனப் பெரும் தேர்வீரர்களும், காலாட்படைவீரர்களும் அச்சத்தால் பெரும் வேகத்துடன் தப்பி ஓடினர்.(8) மலைகளைப் போலத் தெரிந்தவையும், தாக்குவதில் சாதித்தவையுமான இரண்டாயிரம் யானைகள், சல்லியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அங்குசங்களாலும், கட்டை விரல்களாலும் தூண்டப்பட்டுத் தப்பி ஓடின.(9) உண்மையில், ஓ! பாரதர்களின் தலைவரே, உமது படைவீரர்கள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர். கணைகளால் பீடிக்கப்பட்ட அவர்கள், மூச்சுவாங்க ஓடுவதும் காணப்பட்டது.(10)

வீழ்ந்தவர்களாக, பிளந்து ஓடுபவர்களாக மனத்தளர்ச்சியால் ஓடும் அவர்களைக் கண்டு, பாஞ்சாலர்களும், பாண்டவர்களும், வெற்றி அடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, வேகமாக அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(11) வீரப் போர்வீரர்கள் வெளிப்படுத்திய கணைகளின் விஸ் ஒலிகளும், பிற ஒலிகளும், உரத்த சிங்க முழக்கங்களும், சங்கு முழக்கங்களும் பேராற்றல்வாய்ந்ததவையாக இருந்தன.(12) அச்சத்தால் கலக்கமடைந்து ஓடும் கௌரவப்படையைக் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் ஒருவருக்கொருவர்,(13) “உண்மையில் உறுதியுள்ள மன்னன் யுதிஷ்டிரன் இன்று தன் எதிரிகளை வென்றான். துரியோதனன் இன்று தன் காந்தியையும், அரச செழுமையையும் இழந்தான்.(14) இன்று மனிதர்களின் மன்னனான திருதராஷ்டிரன், தன் மகன் கொல்லப்பட்டதைக் கேட்டு மலைப்படைந்து, பூமியில் புரண்டு, கடும் வேதனையை உணரட்டும்.(15)

குந்தியின் மகனே {அர்ஜுனனே} வில்லாளிகள் அனைவரிலும் பெரும் வலிமை மிக்கவன் என்பதை அவன் {திருதராஷ்டிரன்} இன்று அறியட்டும். பாவியும், தீய இதயம் கொண்டவனுமான அந்த மன்னன் இன்று தன்னைத் தானே கடிந்து கொள்ளட்டும்.(16) இன்று அவன் காலத்தையும், விதுரனின் நன்மையான வார்த்தைகளையும் நினைவுகூரட்டும். இந்த நாள் முதல் அவன் பார்த்தர்களின் அடிமையாகக் காத்திருக்கட்டும் {பணி செய்யட்டும்}. பாண்டு மகன்கள் அனுபவித்த துயரத்தை இன்று அந்த மன்னனும் அனுபவிக்கட்டும்.(17) கிருஷ்ணனின் பெருமையை இன்று அம்மன்னன் அறியட்டும். அவன் {திருதராஷ்டிரன்}, போரில் அர்ஜுனனுடைய வில்லின் பயங்கரமான நாணொலியையும், அவனது ஆயுதங்கள் அனைத்தின் பலத்தையும், போரில் அவனது கரங்களின் வலிமையையும் இன்று கேட்கட்டும்.(18) இந்திரனால் கொல்லப்பட்ட அசுரன் பலியைப் போலவே போரில் துரியோதனன் கொல்லப்படும்போது, உயர்ஆன்ம பீமனின் பயங்கர வலிமையை இன்று அவன் அறிந்து கொள்வான்.(19) துச்சாசனனைக் கொன்று பீமன் அடைந்த சாதனையை அடைய, வலிமையும், பலமும் கொண்ட பீமனைத் தவிர, இவ்வுலகில் வேறு எவனும் இல்லை.(20) தேவர்களாலேயே வீழ்த்தப்பட முடியாதவனான மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} படுகொலையைக் கேட்டு, பாண்டுவுடைய மூத்த மகனின் {யுதிஷ்டிரனின்} ஆற்றலை இன்று அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} அறிந்து கொள்வான்.(21) சுபலனின் வீரமகனும் {சகுனியும்}, காந்தாரர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகு, அவன் பாண்டுவின் மூலம் மாத்ரிக்குப் பிறந்த இரண்டு மகன்களின் பலத்தை அறிந்து கொள்வான்.(22)

தனஞ்சயன் {அர்ஜுனன்}, சாத்யகி, பீமசேனன், பிருஷதனின் மகனான திருஷ்டத்யும்னான், திரௌபதியின் ஐந்து மகன்கள், மாத்ரியின் இரண்டு மகன்கள், வலிமைமிக்க வில்லாளியான சிகண்டி, மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோரைத் தங்கள் போர்வீரர்களாகக் கொண்டவர்களால் ஏன் வெல்ல முடியாது?(23,24) அண்டத்தின் பாதுகாவலனும், ஜனார்த்தனன் என்றும் அழைக்கப்படுபவனுமான கிருஷ்ணனைத் தங்கள் பாதுகாவலனாகக் கொண்டவர்களால் ஏன் வெல்ல முடியாது? அறத்தையே தங்கள் புகலிடமாகக் கொண்டோரால் ஏன் வெல்ல முடியாது?(25) அறம் மற்றும் புகழின் புகலிடமான ரிஷிகேசனை {கிருஷ்ணனைத்} தன் பாதுகாவலனாகக் கொண்டவனும், பிருதையின் மகனுமான யுதிஷ்டிரனைத் தவிர, பீஷ்மர், துரோணர், கர்ணன், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மற்றும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பிற மன்னர்களையும் வெல்ல வேறு எவன் தகுந்தவன்?” என்று {பாண்டவ வீரர்களும், பாஞ்சால வீரர்களும் ஒருவருக்கொருவர்} பேசிக் கொண்டனர்.(26,27) இவ்வார்த்தைகளைச் சொல்லி இன்பத்தில் நிறைந்த சிருஞ்சயர்கள், அந்தப் போரில் கணைகளால் அதிகமாகச் சிதைக்கப்பட்டிருந்த உமது துருப்புகளைப் பின்தொடர்ந்து சென்றனர்.(28)

அப்போது பெரும் வீரம் கொண்ட தனஞ்சயன் பகைவரின் தேர்ப்படையை எதிர்த்துச் சென்றான். மாத்ரியின் இரு மகன்களும், வலிமைமிக்கப் போர்வீரனான சாத்யகியும் சகுனியை எதிர்த்துச் சென்றனர்.(29) பீமசேனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக வேகமாகத் தப்பி ஓடும் அவர்கள் அனைவரையும் கண்ட துரியோதனன், சிரித்துக் கொண்டே தன் சாரதியிடம்,(30) “பார்த்தன் {அர்ஜுனன்} தன் வில்லோடு அங்கு நின்று கொண்டு, என்னை மீறுகிறான். என் குதிரைகளை மொத்த படையின் பின்புறத்திற்குக் கொண்டு செல்வாயாக.(31) கரைகளை மீற முடியாத பெருங்கடலைப் போலவே, குந்தியின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, பின்புறத்தில் நான் நிலைகொண்டால் என்னை மீறிச் செல்ல ஒருபோதும் துணியமாட்டான்.(32) ஓ! சாரதியே, பாண்டவர்களால் பின்தொடரப்படும் இந்தப் பரந்த படையைப் பார். துருப்புகள் நகர்வதன் விளைவால் அனைத்துப் பக்கங்களிலும் எழும் இந்தப் புழுதி மேகத்தைப் பார்.(33) பயங்கரமானவையும், பேரொலியுடன் கூடியவையுமான அந்தச் சிங்க முழக்கங்களைக் கேள். எனவே, ஓ சாரதியே, மெதுவாகச் சென்று பின்புறத்தில் நிலையெடுப்பாயாக.(34) போரில் நின்று பாண்டவர்களுடன் நான் போரிட்டால், ஓ! சாரதியே, என்படை மீண்டும் திரண்டு வந்து வீரத்துடன் போரிடும்” என்றான்.(35)

மதிப்புக்குரிய வீரன் ஒருவனுக்குத் தகுந்த உமது மகனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சாரதி, தங்க இழைகளுடன் கூடிய அந்தக் குதிரைகளை மெல்லத் தூண்டினான்.(36) யானைகள், குதிரைகள் ஆகியவற்றையும், தேர்வீரர்களையும் இழந்தவர்களும், தங்கள் உயிரையே விட ஆயத்தமாக இருந்தவர்களுமான இருபத்தோராயிரம் {21,000} காலாட்படை வீரர்கள் இன்னும் போரிட நின்று கொண்டிருந்தனர்.(37) பல்வேறு நாடுகளில் பிறந்தவர்களும், பல்வேறு நகரங்களில் இருந்து வந்தவர்களுமான அந்தப் போர்வீரர்கள், பெரும்புகழை வெல்ல விரும்பி களத்தில் நின்று கொண்டிருந்தனர்.(38) மகிழ்ச்சியால் நிறைந்து விரைந்து செல்லும் அந்தப் போர்வீரர்களுக்கிடையிலான மோதல் பேரொலியுடன் கூடியதாகவும், மிகவும் பயங்கரமானதாகவும் இருந்தது.(39) அப்போது, ஓ! மன்னா, பீமசேனனும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனும், நால்வகைப் படைகளுடன் அவர்களைத் தடுத்தனர்.(40)

சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பிய சில காலாட்படைவீரர்கள், உரத்த கூச்சலிட்டபடியும், தங்கள் கக்கங்களை அறைந்தபடியும், பீமனை எதிர்த்துச் சென்றனர்.(41) போரில் வெல்லப்பட முடியாதவர்களான அந்தத் தார்தராஷ்டிரப் போராளிகள், சினத்தால் நிறைந்து, பீமசேனனை அடைந்து சீற்றத்துடன் கூச்சலிட்டனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. அந்தப் போரில் பீமனைச் சூழ்ந்த கொண்ட அவர்கள் அனைத்துப் பக்கங்களிலும் அவனைத் தாக்கத் தொடங்கினர்.(42) பெரும் எண்ணிக்கையிலான அந்தக் காலாட்படை வீரர்களால் சூழப்பட்டு, அந்தப் போரில் அவர்களால் தாக்கப்பட்ட பீமன், மைநாக மலையைப் போலத் தான் நின்ற இடத்திலேயே அசையாமால் நின்றிருந்தான்.(43) அதேவேளையில், ஓ! ஏகாதிபதி, அவனைத் தாக்கியவர்கள், சினத்தால் நிறைந்து, பாண்டவர்களின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரனைப் பீடிக்க முயற்சி செய்தபடியே, (அவனை {பீமனைக்} காக்க முயன்ற) பிற போராளிகளையும் தடுத்தனர்.(44) அவ்வீரர்களுடன் மோதிய பீமன் சினத்தால் நிறைந்தவனானான். வேகமாகத் தன் தேரைவிட்டு இறங்கி அவன், காலாளாக அவர்களை எதிர்த்துச் சென்றான்.(45)

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தனது பெரும் கதாயுதத்தை எடுத்துக் கொண்ட பீமன், தண்டத்துடன் கூடிய யமனைப் போலவே உமது துருப்பினரைக் கொல்லத் தொடங்கினான்.(46) வலிமைமிக்கவனான பீமன், தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளற்றவர்களாக இருந்த அந்த இருபத்தோராயிரம் {21000} காலாட்படைவீரர்களையும் தன் கதாயுதத்தால் நொறுக்கினான்.(47) பலமான அந்தப் படைப்பிரிவினரைக் கொன்றவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், தன் முன்னிலையில் திருஷ்டத்யும்னனுடன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(48) இவ்வாறு கொல்லப்பட்ட அந்தத் தார்தராஷ்டிரக் காலாட்படை வீரர்கள், மலர்க்கொத்துகளுடன் கூடிய கர்ணிகாரங்கள் சூறாவளியால் வீழ்த்தப்பட்டதைப் போலக் குருதியில் குளித்துத் தரையில் கிடந்தனர்.(49) பல்வேறு வகை மலர்களால் அமைக்கப்பட்ட மாலையால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பல்வேறு வகைக் காது குண்டலங்களை அணிந்தவர்களும், பல்வேறு குலங்களைச் சார்ந்தவர்களும், பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்து வந்தவர்களுமான அந்தப் போராளிகள் உயிரையிழந்து களத்தில் கிடந்தனர்.(50)

கொடிகள் மற்றும் கொடிமரங்களால் மறைக்கப்பட்ட அந்தப் பெரும் காலாட்படையானது, இவ்வாறு வெட்டப்பட்டுக் களத்தில் கிடக்கும்போது, கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், அச்சத்தை ஏற்படுத்துவதுமாகக் காணப்பட்டது.(51) யுதிஷ்டிரனின் தலைமையில் தங்கள் தொண்டர்களுடன் போரிட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும், உமது சிறப்புமிக்க மகன் துரியோதனனை {எதிர்த்து அவனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(52) அந்தப் பெரும் வில்லாளிகள், உமது துருப்பினர் போரில் இருந்து புறமுதுகிடுவதைக் கண்டு, துரியோதனனை எதிர்த்துச் சென்று, கரைகளைக் கடக்க முடியாத பெருங்கடலைப் போலவே அவனைக் கடக்க முடியாதவர்களானார்கள்.(53) ஒன்று சேர்ந்திருந்த பார்த்தர்களால், தனியொருவனான அவனை மீற முடியாதபோது, உமது மகனிடம் நாங்கள் கண்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(54)

அப்போது, அதிகத் தூரம் தப்பி ஓடாதவர்களும், கணைகளால் சிதைக்கப்பட்டிருந்தவர்களும், தப்பி ஓடுவதையே தங்கள் இதயங்களில் நிலைநிறுத்தியிருந்தவர்களுமான தன் படையினரிடம் பேசிய துரியோதனன் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(55) “நீங்கள் ஓடினால், பாண்டவர்களால் உங்களைப் பின் தொடர முடியாது, அல்லது கொல்ல முடியாது என்று சொல்லும் அளவுக்கு, சமவெளியிலோ, மலையிலோ எந்த இடத்தையும் நான் காணவில்லை. பிறகு ஓடுவதால் என்ன பயன்?(56) பாண்டவர்களின் படையானது எண்ணிக்கையில் குறைக்கப்பட்டிருக்கிறது. இரு கிருஷ்ணர்களும் அதிகமாகச் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் நிலைத்து நின்றால், நிச்சயம் வெற்றி நமதாகும்.(57) முறையனைத்தையும் இழந்து நீங்கள் ஓடுவீர்கள் என்றால், பாவிகளான பாண்டவர்கள் பின்தொடர்ந்து வந்து உங்கள் அனைவரையும் கொள்வார்கள். மறுபுறம் நாம் நிலைத்து நின்றால், நமக்கு நல்ல விளைவு ஏற்படும்.(58) இங்கே தாக்கப்பட்டிருக்கும் க்ஷத்திரியர்கள் அனைவரும் கேட்பீராக. வீரர்களையும், கோழைகளையும் யமன் கொல்வான் எனும்போது, க்ஷத்திரியன் என்று தன்னை அழைத்துக் கொண்டு எந்த மனிதன் போரிடாத மூடனாக இருப்பான்?(59) கோபக்கார பீமசேனனின் முன்னிலையில் நாம் நின்றால், நல்ல விளைவு நமக்கு ஏற்படும். க்ஷத்திரிய நடைமுறையின்படி போராடிக் கொண்டிருக்கும்போது போரில் மரணமேற்பட்டால் அது மகிழ்ச்சி நிறைந்ததே.(60) வெற்றியடைவதால் ஒருவன் இங்கே மகிழ்ச்சியை அடைகிறான். கொல்லப்பட்டாலோ, அவன் அடுத்த உலகில் பெரும் கனிகளை {பலன்களை} அடைகிறான். கௌரவர்களே, போர் அளிப்பதை விடச் சொர்க்கத்திற்கான சிறந்த பாதை வேறு எதுவும் கிடையாது. போரில் கொல்லப்படும் நீங்கள் எத்தாமதமும் இன்றி அருள் உலகங்கள் அனைத்தையும் அடைவீர்கள்” என்றான் {துரியோதனன்}.(61)

அவனது இவ்வார்த்தைகளைக் கேட்டு அவனை உயர்வாக மெச்சிய (குரு) மன்னர்கள் மீண்டும் பாண்டவர்களை எதிர்த்துப் போரிட விரைந்தனர்.(62) வேகமாக முன்னேறிவரும் அவர்களைக் கண்டவர்களும், போருக்காக அணிவகுத்திருந்தவர்களும், தாக்குவதில் திறம்படைத்தவர்களுமான பார்த்தர்கள், சினத்தால் நிறைந்து, வெற்றியடையும் விருப்பத்தால் அவர்களை எதிர்த்து விரைந்தனர்.(63) வீரமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, மூவுலகங்களிலும் கொண்டாடப்படும் தன் வில்லான காண்டீவத்தை வளைத்து, தன் தேரில் எதிரியை எதிர்த்துச் சென்றான்.(64) மாத்ரியின் இரு மகன்கள், சாத்யகி ஆகியோர் சகுனியை எதிர்த்து விரைந்தனர். பிற (பாண்டவ) வீரர்கள், சிரித்துக் கொண்டு, உமது படைகளை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(65)

எதிரிகளைக் கலங்கடித்த மிலேச்சன் சால்வன்! – சல்லிய பர்வம் பகுதி – 20-பாண்டவப் படையை எதிர்த்து வந்த மிலேச்சன் சால்வன்; படையைக் கலங்கடித்த சால்வனின் பெரும் யானை; பாண்டவப் படையைப் பிளந்த சால்வன்; சால்வனை எதிர்த்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனின் தேரை நொறுக்கிய யானை; யானையைக் கொண்ட திருஷ்டத்யும்னன்; சால்வனைக் கொன்ற சாத்யகி…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “(குரு) படை மீண்டும் அணிதிரண்டபிறகு, மிலேச்சர்களின் ஆட்சியாளனான சால்வன், சினத்தால் நிறைந்து, அங்கங்களில் மதநீர் சொரிந்ததும், மலையைப் போலத் தெரிந்ததும், செருக்கு நிறைந்ததும், {இந்திரனின் யானையான} ஐராவதனுக்கு ஒப்பானதும், பகைவரின் பெருங்கூட்டத்தை நொறுக்கவல்லதுமான ஒரு பெரிய யானையைச் செலுத்திக் கொண்டு, பாண்டவர்களின் பெரும்படையை எதிர்த்து விரைந்தான்.(2) அந்தச் சால்வனின் விலங்கானது {யானையானது} உன்னதமான உயர்ந்த குலத்தில் {பத்ர குலத்தில்} பிறந்ததாகும். அஃது எப்போதும் திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} வழிபடப்பட்டதாகும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அது யானை பழக்குவதை நன்கறிந்தோரால் சரியாக ஆயத்தம் செய்யப்பட்டு, போருக்காகச் சரியாகப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அந்த யானையைச் செலுத்தி வந்த அந்த மன்னர்களில் முதன்மையானவன் {சால்வன்} கோடையின் நெருக்கத்தில் உள்ள காலை சூரியனைப் போலத் தெரிந்தான்.(3) அந்த முதன்மையான யானையில் ஏறிய அவன் {சால்வன்}, ஓ! ஏகாதிபதி, பாண்டவர்களை எதிர்த்துச் சென்று, சக்தியில் இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பானவையும், பயங்கரமானவையுமான கூரிய கணைகளால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவர்களைத் துளைத்தான்.(4) அந்தப்போரில் அவன் {சால்வன்} தன் கணைகளை ஏவி, பகைவீரர்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பியபோது, ஓ மன்னா, பழங்காலத்தில் வஜ்ரதாரியான வாசவன் {இந்திரன்}, தைத்தியர்களின் படைகளை நொறுக்குகையில் ஏற்பட்ட தைத்தியர்களின் நிலையைப் போலக் கௌரவர்களாலோ, பாண்டவர்களாலோ அவனிடம் எந்தக் குறையையும் {கவனக்குறைவையும்} காணமுடியவில்லை.(5)

பாண்டவர்கள், சோமகர்கள் மற்றும் சிருஞ்சயர்கள், ஆயிரம் யானைகளைப் போலத் தங்களைச் சுற்றித் திரிந்து கொண்டிருந்த அந்த யானையை, பழங்காலப் போரில் இந்திரனின் யானையைத் தேவர்களின் எதிரிகள் கண்டதைப் போலக் கண்டார்கள்.(6) (அந்த விலங்கால்) கலங்கடிக்கப்பட்டிருந்த பகைவரின் படை அனைத்துப் பக்கங்களிலும் உயிரை இழந்ததைப் போலத் தெரிந்தது. போரில் நிற்க இயலாமல், ஒருவரையொருவர் மிதித்து நசுக்கிக் கொண்டே பேரச்சத்துடன் தப்பி ஓடினார்கள்.(7) மன்னன் சால்வனால் பிளக்கப்பட்ட பாண்டவர்களின் அந்தப் பெரும் படையானது, அந்த யானையின் மூர்க்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திடீரென அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடியது.(8) பாண்டவப்படை பிளந்து வேகமாகத் தப்பி ஓடுவதைக் கண்ட உமது படையின் முதன்மையான தேர்வீரர்கள் அனைவரும் மன்னன் சால்வனை வழிபட்டு, சந்திரனைப் போல வெண்மையான தங்கள் சங்குகளை முழக்கினர்.(9) சங்குகளை முழக்கிக் கொண்டு கௌரவர்கள் மகிழ்ச்சியால் கூச்சலிடுவதைக் கேட்டவனும், பாண்டவ மற்றும் சிருஞ்சயப் படைகளின் தலைவனுமான பாஞ்சால இளவரசனால் (திருஷ்டத்யும்னனால்) அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(10)

அப்போது சிறப்புமிக்கத் திருஷ்டத்யும்னன், இந்திரனோடு கூடிய மோதலில் அசுரன் ஜம்பன், இந்திரன் செலுத்தி வந்த யானைகளின் இளவரசனான ஐராவதனை எதிர்த்துச் சென்றதைப் போல அந்த யானையை வெல்வதற்காகச் சென்றான்.(11) பாஞ்சாலர்களின் ஆட்சியாளன் தன்னை எதிர்த்து மூர்க்கமாக விரைந்து வருவதைக் கண்டவனும், மன்னர்களில் சிங்கமுமான சால்வன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருபதன் மகனை {திருஷ்டத்யும்னனை} அழிப்பதற்காகத் தன் யானையை விரைவாகத் தூண்டினான்.(12) பின்னவன் {திருஷ்டத்யும்னன்}, குப்புற வீழ்வதுபோலத் தன்னை அணுகி வந்த அந்த விலங்கை, கொல்லன் கையால் பளபளக்காப்பட்டவையும், சுடர்மிக்கவையும், கடுஞ்சக்தி கொண்டவையும், நெருப்பின் காந்திக்கும் ஒப்பானவையுமான முதன்மையான மூன்று கணைகளால் துளைத்தான்.(13) பிறகு அந்தச் சிறப்புமிக்க வீரன், கூராக்கப்பட்ட முதன்மையான ஐந்து கணைகளால் அவ்விலங்கின் மத்தகத்தைத் தாக்கினான். அவற்றால் துளைக்கப்பட்ட அந்த யானைகளின் இளவரசன், போரில் இருந்து புறமுதுகிட்டு பெரும் வேகத்தோடு ஓடியது.(14) எனினும் சால்வன், அதீதமாகச் சிதைக்கப்பட்டிருந்ததும், பின்வாங்கச்செய்யப்பட்டுதுமான அந்த முதன்மையான யானையைத் திடீரெனத் தடுத்துத் திரும்பச் செய்து, அந்த மதங்கொண்ட விலங்குக்குப் பாஞ்சால மன்னனின் {திருஷ்டத்யும்னனின்} தேரைக் காட்டி, அங்குசங்கள் மற்றும் கூரிய வேல்களால் அத்தேரை எதிர்த்துச் செல்லத் தூண்டினான்.(15)

அவ்விலங்கு தன்னை நோக்கி மூர்க்கமாக விரைவதைக் கண்ட வீரத் திருஷ்டத்யும்னன், ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, அச்சத்தால் அங்கங்கள் திகைத்துப் போய், தன் தேரில் இருந்து கீழே பூமியில் குதித்தான்.(16) அதே வேளையில் அந்தப் பெரும் யானையானது, குதிரைகள் மற்றும் சாரதியுடன் கூடியதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தத் தேரைத் திடீரெனத் தன் துதிக்கையால் தூக்கி பூமியில் அடித்து நொறுக்கியது. பாஞ்சால மன்னனின் சாரதி, அந்த யானையால் இவ்வாறு நசுக்கப்பட்டதைக் கண்ட பீமன், சிகண்டி மற்றும் சிநியின் பேரன் {சாத்யகி} ஆகியோர் அவ்விலங்கை எதிர்த்துப் பெரும் வேகத்தோடு விரைந்தனர்.(18) மூர்க்கமாக முன்னேறிவரும் அவ்விலங்கைத் தங்கள் கணைகளால் வேகமாகத் தடுத்தனர். அந்தத் தேர்வீரர்களால் இவ்வாறு எதிர்க்கப்பட்டு, போரில் அவர்களால் தடுக்கப்பட்ட அந்த யானையானது நடுங்கத் தொடங்கியது.(19) அதே வேளையில், மன்னன் சால்வன், அனைத்துப் பக்கங்களிலும் கதிர்களைப் பொழியும் சூரியனைப் போலத் தன் கணைகளை ஏவத் தொடங்கினான். அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட (பாண்டவத்) தேர்வீரர்கள் தப்பி ஓடத் தொடங்கினர்.(20)

சால்வனின் அந்த அருஞ்செயலைக் கண்ட பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் மத்ஸ்யர்கள் ஆகியோர், ஓ! மன்னா, அந்தப் போரில் ஓ! என்றும், ஐயோ! என்றும் உரக்கக் கூச்சலிட்டனர்.(21) அப்போது, அந்தத் துணிச்சல்மிக்கவனான பாஞ்சால மன்னன் {திருஷ்டத்யும்னன்}, உயர்ந்த மலைச்சிகரத்திற்கு ஒப்பான தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அங்கே தோன்றினான். ஓ! மன்னா, எதிரிகளைத் தாக்குபவனான அந்த வீரன், அச்சமில்லாமல் அந்த யானையை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(22) பெரும் சுறுசுசுறுப்புடன் கூடிய அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, மலையைப் போலப் பெரியதாக இருந்ததும், மழைபொழியும் மேகங்களைப் போல மதநீரைப் பெருக்கியதுமான அந்த யானையைத் தன் கதாயுதத்தால் தாக்கத் தொடங்கினான்.(23) மலையைப் போன்ற அந்தப் பெரும் விலங்கானது, திடீரென மத்தகம் பிளக்கப்பட்டு, உரக்கப் பிளிறிக் கொண்டே பெரும் அளவிலான குருதியைக் கக்கி, நிலநடுக்கத்தின் போது கீழே விழும் மலையைப் போலத் திடீரெனக் கீழே விழுந்தது.(24) அந்த யானைகளின் இளவரசன் விழுந்த காட்சியைக் கண்டு உமது மகனின் துருப்புகள் ஓலமிட்டபோது, சிநிகுலத்தப் போர்வீரர்களில் முதன்மையானவன் {சாத்யகி}, ஒரு கூரிய அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்}, மன்னன் சால்வனின் தலையை அறுத்தான்.(25) சாத்வத வீரனால் {சாத்யகியால்} அந்தச் சால்வனின் தலை வெட்டப்பட்டப்பட்டதும், தேவர்களின் தலைவன் வீசிய வஜ்ரத்தால் திடீரெனப் பிளக்கப்பட்ட ஒரு மலைச்சிகரத்தைப் போல அவன், யானைகளின் இளவரசனான தன் யானையுடன் சேர்ந்து கீழே பூமியில் விழுந்தான்” {என்றான் சஞ்சயன்}.(26)

கிருதவர்மனை வென்ற சாத்யகி! – சல்லிய பர்வம் பகுதி – 21-கிருதவர்மன் போரிடுவதைக் கண்டு திரும்பி வந்த கௌரவர்கள்; கிருதவர்மனை எதிர்த்த சாத்யகி; கிருதவர்மனைத் தேரற்றவனாகச் செய்த சாத்யகி; கிருதவர்மனைக் காத்த கிருபர்; தனியொருவனாக நின்று பாண்டவப் படையை எதிர்த்த துரியோதனன்; மற்றொரு தேரில் ஏறி மீண்டும் வந்த கிருதவர்மன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சபைகளின் ரத்தினமான சால்வன்[1] கொல்லப்பட்ட பிறகு, சூறாவளியில் முறிந்த விழுந்த பெரும் மரம் போல உமது படை வேகமாகப் பிளந்தது.(1) படை பிளவுறுவதைக் கண்டவனும், வீரமும், பெரும்பலமும் கொண்டவனும், வலிமைமிக்கத்தேர்வீரனுமான கிருதவர்மன், அந்தப் போரில் பகைவரின் படையைத் தடுத்தான்.(2) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தப்பி ஓடியவர்களான குருவீரர்கள், அந்தச் சாத்வத வீரன் {கிருதவர்மன்}, (எதிரியின்) கணைகளால் துளைக்கப்பட்டாலும் அந்தப் போரில் மலையென நிற்பதைக் கண்டு, மீண்டும் அணிதிரண்டு திரும்பி வந்தனர்.(3) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களுக்கும், தப்பி ஓடி, மரணத்தையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு மீண்டும் திரும்பி வந்தவர்களான குரு வீரர்களுக்கு இடையில் போர் நடந்தது.(4) அந்தச் சாத்வத வீரனுக்கும் {கிருதவர்மனுக்கும்}, அவனது எதிரிகளுக்கும் இடையில் நேர்ந்த கடும் மோதலானது, வெல்லப்பட முடியாத பாண்டவப் படையைத் தனியொருவனாக அவன் {கிருதவர்மன்} தடுத்ததால் அற்புதமானதாக இருந்தது.(5)

நண்பர்கள் மிகக்கடுமையான சாதனைகளைச் செய்வதைக் கண்ட அவர்களது நண்பர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, சொர்க்கத்தையே எட்டுமளவுக்கு உரத்த சிங்க முழக்கங்களைச் செய்தனர்.(6) ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த ஒலிகளைக் கேட்ட பாஞ்சாலர்கள் அச்சமடைந்தனர். அப்போது சிநியின் பேரனான சாத்யகி அவ்விடத்திற்கு வந்தான்.(7) பெரும் பலம் கொண்டவனான மன்னன் க்ஷேமகீர்த்தியை {க்ஷேகதூர்த்தியை} அணுகிய சாத்யகி, ஏழு கூரிய கணைக்களால் அவனை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான்.(8) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட தேர்வீரனான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, கூரிய கணைகளை ஏவியபடியே வந்தபோது, பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} அவனை {சாத்யகியை} எதிர்த்து வேகமாக விரைந்தான்.(9) தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், முதன்மையான ஆயுதங்களைத் தரித்து வந்தவர்களுமான அவ்விரு வில்லாளிகளும், சிங்கங்களைப் போல முழங்கி, பெரும்பலத்துடன் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(10)

பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் மற்றும் பிற போர்வீரர்களும், அவ்விரு வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட பயங்கரமான மோதலின் பார்வையாளர்களானார்கள்.(11) விருஷ்ணி மற்றும் அந்தகக் குலத்தைச் சேர்ந்த அவ்விரு வீரர்களும், மகிழ்ச்சியால் நிறைந்த இரு யானைகளைப் போல, நீண்ட கணைகளாலும் {நாராசங்களாலும்}, கன்றின் பல் போன்ற தலைகளைக் கொண்ட கணைகளாலும் {வத்சதந்தங்களாலும்} ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(12) பல்வேறு வகையான தடங்களில் திரிந்தவர்களான ஹிருதிகன் மகனும் {கிருதவர்மனும்}, அந்தச் சிநிகுலத்துக் காளையும் {சாத்யகியும்}, விரைவில் கணைமாரிகளால் ஒருவரையொருவர் மறைத்தனர்.(13) அந்த இரு விருஷ்ணி சிங்கங்களின் விற்களில் இருந்து பெரும் பலத்துடன் ஏவப்பட்ட கணைகள், வேகமாகச் செல்லும் பூச்சிகளுக்கு ஒப்பாக ஆகாயத்தில் பறப்பது காணப்பட்டது.(14) அப்போது ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, உண்மையான ஆற்றலைக் கொண்டவனான சாத்யகியை அணுகி, அவனது நான்கு குதிரைகளையும் நான் கூரிய கணைகளால் துளைத்தான்.(15)

நீண்ட கரங்களைக் கொண்ட சாத்யகி, வேலால் தாக்கப்பட்ட ஒரு யானையைப் போல இதனால் சினம் தூண்டப்பட்டு, எட்டு முதன்மையான கணைகளால் கிருதவர்மனைத் துளைத்தான்.(16) பிறகு கிருதவர்மன், முழுமையாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான மூன்று கணைகளால் சாத்யகியைத் துளைத்து, மற்றொரு கணையால் அவனது வில்லையும் அறுத்தான்.(17) முறிந்த தன் வில்லை ஒருபுறம் கிடத்திய அந்தச் சிநி குலத்துக் காளை {சாத்யகி}, கணைபொருத்தப்பட்ட மற்றொன்றை {மற்றொரு வில்லை} வேகமாக எடுத்துக் கொண்டான்.(18) முதன்மையான அந்த வில்லை எடுத்து, அதற்கு நாண்பொருத்தியவனும், பெரும் நுண்ணறிவும், பெரும் பலமும் கொண்டவனும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமையும் சக்தியும் கொண்டவனுமான அந்த அதிரதன் {சாத்யகி}, கிருதவர்மனால் தன் வில் வெட்டப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சீற்றத்தால் நிறைந்து, பின்னவனை {கிருதவர்மனை} எதிர்த்து வேகமாக விரைந்தான்.(19,20)

அப்போது அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, பத்து கூரிய கணைகளால், கிருதவர்மனின் சாரதி, குதிரைகள் மற்றும் கொடிமரத்தைத் தாக்கினான்.(21) இதன் காரணமாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வில்லாளியும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கிருதவர்மன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தேர் சாரதியற்றதாக, குதிரைகளற்றதாகச் செய்யப்பட்டதைக் கண்டு(22) சினத்தால் நிறைந்தான். கூர்முனை கொண்ட ஒரு வேலை உயர்த்திய அவன் {கிருதவர்மன்}, அந்தச் சிநிகுலத்துக் காளையைக் கொல்லும் விருப்பத்தால் தன் கரவலிமை முழுவதையும் பயன்படுத்தி அஃதை அவன் {சாத்யகி} மீது வீசினான்.(23) எனினும், அந்தச் சாத்வத குலத்தின் சாத்யகி, பல கூரிய கணைகளால் அந்த வேலைத் தாக்கி பல துண்டுகளாக வெட்டி வீழ்த்தி, மதுகுலத்துக் கிருதவர்மனை (தன் சுறுசுறுப்பாலும், ஆற்றலாலும்) திகைப்படையச் செய்தான். மற்றுமோர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்} அவன் கிருதவர்மனின் மார்பைத் துளைத்தான்.(24) அந்தப் போரில் ஆயுதங்களில் திறன் கொண்ட யுயுதானனால் {சாத்யகியால்}, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாகச் செய்யப்பட்ட கிருதவர்மன் கீழே பூமியில் இறங்கினான்.(25)

அந்த வீரக் கிருதவர்மன், அந்தத் தனிப்போரில் சாத்யகியால் தன் தேரை இழந்ததால், (கௌரவர்களின்) துருப்புகள் அனைத்தும் பேரச்சத்தால் நிறைந்தன.(26) கிருதவர்மன் இவ்வாறு குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாக, தேரற்றவனாகச் செய்யப்பட்ட போது உமது மகன்களின் இதயங்கள் பெரும் சோகத்தால் பீடிக்கப்பட்டன.(27) எதிரிகளைத் தண்டிப்பவனான அவன் குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாகச் செய்யப்பட்டதைக் கண்ட கிருபர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சிநி குலத்துக் காளையை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்ப விரும்பி அவனை நோக்கி விரைந்தார்.(28) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருபர், வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கிருதவர்மனைத் தமது தேரில் ஏற்றிக் கொண்டு, போரின் நெருக்கத்தில் இருந்து அவனை வெளியே கொண்டு சென்றார்.(29) கிருதவர்மன் தேரற்றவனாகச் செய்யப்பட்ட பிறகு, சிநியின் பேரன் {சாத்யகி} அக்களத்தில் பலம் நிறைந்தவனாக ஆனதும், துரியோதனனின் மொத்த படையும் போரில் இருந்து புறமுதுகிட்டது.(30)

எனினும், (குரு) படையானது புழுதி மேகத்தால் மறைக்கப்பட்டிருந்ததால், எதிரியால் அதைப் பார்க்க முடியவில்லை. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} மன்னன் துரியோதனனைத் தவிர உமது போர்வீரர்களான மற்றவர்கள் அனைவரும் தப்பி ஓடினர்.(31) தன் படை முறியடிக்கப்பட்டதை அருகில் இருந்து கண்ட அவன், வேகமாக விரைந்து, வெற்றியடைந்த எதிரியைத் தாக்கி, தனியொருவனாக அவர்கள் அனைவரையும் தடுத்தான்.(32) அந்த வெல்லப்பட முடியாத வீரன் {துரியோதனன்}, சினத்தால் நிறைந்து, பாண்டுக்கள், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னன், சிகண்டி, திரௌபதியின் மகன்கள் ஆகியோர் அனைவரும் மற்றும் பாஞ்சாலர்கள், கைகேயர்கள், சோமகர்கள் ஆகியோரின் பெருங்கூட்டத்தையும் கூரிய கணைகளால் அச்சமில்லாமல் தாக்கினான்.(33,34) மந்திரங்களால் தூய்மையாக்கப்பட்ட வேள்வி மேடையில் எரியும் சுடர்மிக்கப் பெரும் நெருப்பைப் போல, வலிமைமிக்கவனான உமது மகன் {துரியோதனன்}, உறுதியான தீர்மானத்துடன் களத்தில் நின்று கொண்டிருந்தான். இவ்வாறே மன்னன் துரியோதனன் அந்தப் போரில் களமெங்கும் திரிந்து கொண்டிருந்தான்.(35) அப்போது, அந்தகனை அணுகமுடியாத உயிரினங்களைப் போலவே, அவனது எதிரிகளால் அவனை {துரியோதனனை} நெருங்க முடியவில்லை. பிறகு, ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, மற்றொரு தேரைச் செலுத்திக் கொண்டு அங்கே வந்தான்” {என்றான் சஞ்சயன்}.(36)

யுதிஷ்டிரனைத் தேரற்றவனாகச் செய்த சகுனி! – சல்லிய பர்வம் பகுதி – 22-துரியோதனனின் அருஞ்செயல்; பாண்டவப்பட்டையைத் தனியொருவனாக எதிர்கொண்ட துரியோதனன்; தப்பி ஓடிய போர்வீரர்கள் துரியோதனன் போரிடுவதைக் கண்டு மீண்டும் வந்தது; அஸ்வத்தாமன் பீமனோடும், சகுனி யுதிஷ்டிரனோடும் போரிட்டது; யுதிஷ்டிரனைத் தேரற்றவனாகச் செய்த சகுனி; மற்றொரு தேரில் ஏறிவந்த யுதிஷ்டிரன்; உலூகன் நகுலனோடும், துரியோதனன் திருஷ்டத்யும்னனோடும், கிருபர் திரௌபதியின் மகன்களோடும் போரிட்டது; களமெங்கும் அடர்த்தியாக எழுந்த புழுதி மேகம், போர்வீரர்களின் குருதியால் நனைந்து தணிவையடைந்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தேர்வீரர்களில் முதன்மையானவனான உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் தேரைச் செலுத்திக் கொண்டு, மனத்தளர்ச்சியால் ஏற்பட்ட துணிவால் நிறைந்து, பெரும் வீரத்தோடு கூடிய ருத்திரனைப் போல அந்தப் போரில் தெரிந்தான்.(1) அவனால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளால் பூமி முற்றிலும் மறைக்கப்பட்டது. உண்மையில் அவன் {துரியோதனன்}, மலைச்சாரல்களில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமாரிகளால் தன் எதிரிகளை நனைத்தான்.(2) அப்போது அந்தப் பெரும்போரில் பாண்டவர்களில் எந்த ஒரு மனிதனோ, குதிரையோ, யானையோ, தேரோ, துரியோதனனின் கணைகளால் தாக்கப்படாதவர்களாகவோ, தாக்கப்படாததாகவோ இல்லை.(3) போர்வீரர்களில் யார்மீதெல்லாம் நான் கண்களைச் செலுத்தினேனோ, ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதரே, அவர்கள் அனைவரும் உமது மகனின் {துரியோதனனின்} கணைகளால் தாக்கப்பட்டிருந்தனர்.(4) போரில் விரையும்போதோ, அணிவகுத்துச் செல்லும்போதே எழும் புழுதியால் மறைக்கப்படும் ஒரு கூட்டத்தைப் போல, அந்தப் பாண்டவப் படையானது அப்போது அந்தச் சிறப்புமிக்க வீரனின் கணைகளால் மறைக்கப்பட்டிருந்தது.(5)

அப்போது பூமியானது, ஓ! பூமியின் தலைவரே {திருதராஷ்டிரரே}, பெரும் கரநளினம் கொண்ட வில்லாளியான உமது மகன் துரியோதனனின் கணைகளாலான ஒரே பரப்பாக என்னால் காணப்பட்டது.(6) உமது தரப்பையும், எதிரியின் தரப்பையும் சேர்ந்தவர்களான களத்தில் இருந்த ஆயிரமாயிரம் போர்வீரர்களில், அப்போது துரியோதனன் என்ற ஒரு மனிதன் மட்டுமே எனக்குத் தெரிந்தான்.(7) ஒன்று சேர்ந்திருந்தவர்களான பார்த்தர்களால், தனியொருவனான உமது மகனை {துரியோதனனை} அணுக முடியாததால், அப்போது அவனிடம் {துரியோதனனிடம்} நாங்கள் கண்ட ஆற்றலானது மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(8) அவன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே, யுதிஷ்டிரனை நூறு கணைகளாலும், பீமசேனனை எழுபதாலும், சகாதேவனை ஏழாலும் துளைத்தான்.(9) அவன், நகுலனை அறுபத்துநான்காலும், திருஷ்டத்யும்னனை ஐந்தாலும், திரௌபதியின் மகன்களை ஏழாலும், சாத்யகியை மூன்று கணைகளாலும் துளைத்தான். பிறகு அவன், ஓ! ஐயா ஓர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்} சகாதேவனின் வில்லையும் அறுத்தான்.(10)

முறிந்த வில்லை ஒருபுறம் கிடத்திய மாத்ரியின் வீரப் புதல்வன் {சகாதேவன்}, மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்டு மன்னன் துரியோதனனை எதிர்த்து விரைந்து, அந்தப் போரில் பத்து கணைகளால் அவனைத் துளைத்தான்.(11) பெரும் வில்லாளியும், துணிவுமிக்கவனுமான நகுலன், மேலும் பயங்கரமான ஒன்பது கணைகளால் மன்னனைத் {துரியோதனனைத்} துளைத்து உரக்க முழங்கினான்.(12) சாத்யகி நேரான ஒற்றைக் கணையால் மன்னனை {துரியோதனனைத்} தாக்கினான்; திரௌபதியின் மகன்கள் எழுபத்துமூன்றாலும், மன்னன் யுதிஷ்டிரன் ஐந்தாலும் அவனைத் தாக்கினர். பீமசேனன் அம்மன்னனை எண்பது கணைகளால் பீடித்தான்.(13) இவ்வாறு பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த துருப்பினர்களுக்கு முன்னிலையில் அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர்களால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் எண்ணற்ற கணைகளால் துளைக்கப்பட்டாலும் துரியோதனன் நடுங்கவில்லை.(14) அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரனின் வேகம், திறம், ஆற்றல் ஆகியவை அனைத்து உயிரினங்களையும் விஞ்சுவதாக மனிதர்கள் அனைவராலும் காணப்பட்டது.(15)

அதேவேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்ற தார்தராஷ்டிரர்கள், மன்னனைக் கண்டு மீண்டும் அணிதிரண்டு, கவசம் தரித்தவர்களாக அங்கே திரும்பி வந்தனர்.(16) அவர்கள் திரும்பி வந்தபோது அவர்களால் உண்டாக்கப்பட்ட ஒலியானது, மழைக்காலங்களில் பொங்கும் கடலைப் போல மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.(17) அந்தப் போரில் வெல்லப்படாத தங்கள் மன்னனை {துரியோதனனை} அணுகிய அந்தப் பெரும் வில்லாளிகள், போரிடுவதற்காகப் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றனர்.(18) அந்தப் போரில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பீமசேனனத் தடுத்தான். ஓ! ஏகாதிபதி, துணிச்சல்மிக்கப் போராளிகளால் முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகளுக்கிடையில் வேறுபாடு காணமுடியாத அளவுக்கு அந்தப் போரில் ஏவப்பட்ட கணைகளால் திசைப்புள்ளிகள் அனைத்தும் முற்றிலும் மறைக்கப்பட்டன.(19,20)

அஸ்வத்தாமன் மற்றும் பீமசேனனைப் பொறுத்தவரையில், ஓ! பாரதரே, அவர்கள் இருவரும் கொடுஞ்சாதனைகளைப் புரிபவர்களாக இருந்தனர். அவ்விருவரும் போரில் தடுக்கப்பட முடியாதவர்களாக இருந்தனர். மீண்டும் மீண்டும் வில்லின் நாண்கயிற்றை இழுத்ததால் இருவரின் கரங்களும் பல வடுக்களைக் கொண்டிருந்தன. ஒருவருக்கொருவர் சாதனைகளில் பதிலடி கொடுத்து, மொத்த அண்டத்தையே அச்சுறுத்தும் வகையில் அவர்கள் இருவரும் தொடர்ந்து போரிட்டனர்.(21) வீரனான சகுனி அந்தப் போரில் யுதிஷ்டிரனைத் தாக்கினான். சுபலனின் வலிமைமிக்க மகன் {சகுனி}, மன்னனின் {யுதிஷ்டிரனின்} நான்கு குதிரைகளைக் கொன்று, துருப்புகள் அனைத்தையும் அச்சத்தால் நடுங்கச் செய்தபடியே உரக்க முழங்கினான்.(22) அதேவேளையில் வீரச் சகாதேவன், வீரனும், வெல்லப்பட்டவனுமான மன்னனை {யுதிஷ்டிரனைத்} தன் தேரில் ஏற்றிக் கொண்டு அந்தப் போரில் இருந்து கொண்டு சென்றான்.(23) மற்றொரு தேரைச் செலுத்திக் கொண்டு (போருக்குத் திரும்பி வந்த) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், முதலில் ஒன்பது கணைகளால் சகுனியைத் துளைத்து, மீண்டும் ஐந்தால் அவனை மேலும் துளைத்தான். பிறகு, வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்} உரத்த முழக்கம் செய்தான்.(24) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அச்சத்தை ஏற்படுத்துவதான அந்தப் போர் இவ்வாறே காண்பதற்கு அற்புதமானதாக இருந்தது. பார்வையாளர்களை மகிழ்ச்சியில் நிறைத்த அந்தப் போர், சித்தர்களாலும், சாரணர்களாலும் புகழப்பட்டது.(25)

அளவிலா ஆன்மா கொண்ட {சகுனியின் மகன்} உலூகன், அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கணைமாரியை ஏவியபடியே வலிமைமிக்க வில்லாளியான நகுலனை எதிர்த்து விரைந்தான்.(26) வீர நகுலனோ, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் அடர்த்தியான கணைமாரிகளை அந்தச் சகுனியின் மகனை {உலூகனைத்} தடுத்தான்}.(27) அந்தத் தேர்வீரர்கள் இருவரும் நற்பிறப்பையும், வலிமையையும் கொண்டவர்களாக இருந்தனர். பெரும் சினத்துடன் ஒருவரோடொருவர் போரிடுவதாக அவர்கள் இருவரும் காணப்பட்டனர்.(28) அதேபோலக் கிருதவர்மன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அசுரன் பலனோடு போரிடும் சக்ரனை {இந்திரனைப்} போல, எதிரிகளை எரிப்பவனான சிநியின் பேரனோடு {சாத்யகியோடு} போரிட்டுப் பிரகாசமாகத் தெரிந்தான்.(29) துரியோதனன், அந்தப் போரில் திருஷ்டத்யும்னனின் வில்லை வெட்டி, வில்லற்றிருந்த தன் எதிராளியைக் கூரிய கணைகளால் துளைத்தான்.(30) அம்மோதலில் மற்றொரு உறுதிமிக்க வில்லை எடுத்துக் கொண்ட திருஷ்டத்யும்னன், அனைத்து வில்லாளிகளும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அம்மன்னனோடு {துரியோதனனோடு} போரிட்டுக் கொண்டிருந்தான்.(31) ஓ! பாரதக் குலத்தின் காளையே, மதநீர் பெரும் இரு காட்டு யானைகளுக்கிடையில் நடக்கும் மோதலைப் போல அவ்வீரர்கள் இருவருக்கும் இடையில் நடந்த போரானது மிகக் கடுமையானதாக இருந்தது.(32)

அந்தப் போரில், சினத்தால் தூண்டப்பட்ட வீரக்கௌதமர் {கிருபர்}, நேரான கணைகள் பலவற்றால் திரௌபதியின் வலிமைமிக்க மகன்களைத் துளைத்தார்.(33) உடல் படைத்த ஒருவன், தன் (ஐந்து) புலன்களோடு போரிடுவதற்கு ஒப்பாக அவருக்கும் அந்த ஐவருக்கும் இடையில் நடைபெற்ற போர் இருந்தது. அச்சத்தை ஏற்படுத்துவதும், மிகக் கடுமையானதாகவும் இருந்த அந்தப் போரில் எத்தரப்பும் அடுத்தவருக்கு எக்கருணையும் காட்டவில்லை.(34) திரௌபதியின் (ஐந்து) மகன்களும், மூடனைப் பீடிக்கும் (ஐம்)புலன்களைப் போலக் கிருபரைப் பீடித்தனர். மறுபுறம் அவரோ அவர்களோடு மிகத் தீவிரமாகப் போரிட்டு அவர்களைக் கட்டுப்படுத்தினார்.(35) ஓ! பாரதரே, இவ்வாறே, அவருக்கும் {கிருபருக்கும்}, அவர்களுக்கும் {திரௌபதியின் மகன்களுக்கும்} இடையில் நடைபெற்ற போரானது மிக அற்புதமானதாக இருந்தது.(36)

மனிதர்கள் மனிதர்களோடும், யானைகள் யானைகளோடும், குதிரைகள் குதிரைகளோடும், தேர்வீரர்கள் தேர்வீரர்களோடும் போரிட்டனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மீண்டும் அந்தப் போரானது, சாதாரணமானதாகவும், அச்சந்தருவதுமாக மாறியது.(37) ஓ! தலைவா, இங்கே ஒரு மோதல் அழகானதாக இருந்தால், அங்கே மற்றொரு மோதல் அச்சம்தருவதாகவும், வேறு இடத்தில் மிகக் கடுமையானதாக இருந்தது. ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் பயங்கரமான பல மோதல்கள் நடைபெற்றன.(38) (இரு படைகளையும் சார்ந்தவர்களான) அந்த எதிரிகளைத் தண்டிப்போர் ஒருவரோடொருவர் மோதி, அந்தப் பயங்கரப் போரில் ஒருவரையொருவர் துளைத்துக் கொன்றனர்.(39) போர்வீரர்களின் வாகனங்களாலும், விலங்குகளாலும் எழுப்பப்பட்ட அடர்த்தியான புழுதி மேகம் அங்க காணப்பட்டது. ஓ! மன்னா, ஓடும் குதிரைகளால் எழுப்பப்பட்ட அடர்த்தியான புழுதியும், காற்றால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.(40) சக்கரங்களாலும், யானைகளின் மூச்சுக்காற்றாலும் எழுப்பப்பட்ட புழுதியானது, மாலை மேகத்தைப் போல வானத்தில் அடர்த்தியாக எழுந்தது.(41)

புழுதி எழுந்து, சூரியன் ஒளியை இழந்து, பூமி மறைக்கப்பட்டபோது, வீரமும், வலிமையும் கொண்ட தேர்வீரர்களைக் காண முடியவில்லை.(42) ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, வீரர்களின் குருதியால் பூமி நனைக்கப்பட்டபோது, ஒருகணத்தில் புழுதி மறைந்து அனைத்தும் தெளிவாகத் தெரிந்தது.(43) உண்மையில், அடர்த்தியானதும், பயங்கரமானதுமான அந்தப் புழுதி மேகம் தணிக்கப்பட்டது. அப்போது, ஓ! பாரதரே, அந்த நடுப்பகலில் போராளிகளுக்கிடையில் தங்கள் தங்கள் பலம் மற்றும் தரத்தின் அடிப்படையில் உண்டானவையும், மிகக் கடுமையானவையுமான பல்வேறு தனிப்போர்களை என்னால் காண முடிந்தது. அந்த அருஞ்செயல்களின் பிரகாசமான காந்தி முழுமையாகக் காட்சியில் தோன்றியது.(44,45) அந்தப் போரில் பாய்ந்த கணைகளின் ஒலியானது, அனைத்துப் பக்கங்களிலும் எரிந்து கொண்டிருக்கும் பரந்த மூங்கில் காட்டில் எழும் ஒலிக்கு ஒப்பான போரொலியாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(46)

சகுனியின் குதிரைப் படை! – சல்லிய பர்வம் பகுதி – 23- கிருதவர்மனின் குதிரைகளைக் கொன்ற யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனை எதிர்க்க எழுநூறு தேர்வீரர்களை அனுப்பிய துரியோதனன்; துரியோதனன் அனுப்பிய வீரர்கள் அனைவரையும் கொன்ற சிகண்டியின் பாஞ்சாலப் படை; பயங்கரச் சகுனங்கள் தோன்றின; பாண்டவர்களை எதிர்த்த சகுனி; சகுனியை எதிர்க்க சகாதேவனை அனுப்பிய யுதிஷ்டிரன்; பத்தாயிரம் குதிரைகளைக் கொண்ட சகுனியின் குதிரைப்படை ஆறாயிரமாகச் சுருங்கியது; தலையற்ற முண்டங்கள் ஒரு கையில் தலையுடனும், மறுகையில் வாளுடனும் எழுந்து நின்றது; சகுனியைச் சூழ்ந்த கொண்ட பாண்டவர்கள்; சகுனியின் உதவிக்குச் சென்ற கௌரவர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அச்சத்தையேற்படுத்தும் அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்தபோது, பாண்டவர்களால் உமது மகனின் {துரியோதனனின்} படை பிளக்கப்பட்டது.(1) எனினும், பெரும் முயற்சி செய்து தங்கள் பெரும் தேர்வீரர்களை அணிதிரட்டிய உமது மகன்கள், பாண்டவப் படையோடு போரிடுவதைத் தொடர்ந்தனர்.(2) உமது மகனின் நலனை விரும்பிய (குரு) போர்வீரர்கள், திடீரென மீண்டும் திரும்பி வந்தனர். அவர்கள் திரும்பி வந்ததும், உமது போர்வீரர்களுக்கும், எதிரியின் போர்வீரர்களுக்கும் இடையில், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பான போர் மிகப் பயங்கரமாக நடந்தது.(3,4) போர்வீரர்கள், அனுமானம் மற்றும் அங்கே சொல்லப்பட்ட பெயர்களின் துணை கொண்டு போரிட்டனர். இவ்வாறு அவர்கள் ஒருவரோடொருவர் போரிட்டபோது ஏற்பட்ட அழிவானது பெரிதானதாக இருந்தது.(5)

பெரும் கோபத்தில் நிறைந்த மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் போரில் தார்தராஷ்டிரர்களையும், அவர்களது மன்னனையும் {துரியோதனனையும்} வெல்லும் விருப்பத்தால்,(6) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான மூன்று கணைகளால் சரத்வான் மகனை {கிருபரைத்} துளைத்து, அடுத்ததாக வேறு நான்கு கணைகளால் கிருதவர்மனின் நான்கு குதிரைகளையும் கொன்றான்.(7) அப்போது அஸ்வத்தாமன், கொண்டாடப்பட்டவனான ஹிருதிகன் மகனை {கிருதவர்மனை} அங்கிருந்து கொண்டு சென்றான். சரத்வானின் மகன் {கிருபர்} பதிலுக்கு எட்டு கணைகளால் யுதிஷ்டிரனைத் துளைத்தார்.(8) பிறகு மன்னன் துரியோதனன், மன்னன் யுதிஷ்டிரன் போரிட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு எழுநூறு {700} தேர்களை அனுப்பினான்.(9) சிறந்த போர்வீரர்களால் செலுத்தப்பட்டவையும், காற்று அல்லது எண்ணத்தின் வேகத்தைக் கொண்டவையுமான அந்தத் தேர்கள், குந்தி மகனின் {யுதிஷ்டிரனின்} தேரை எதிர்த்து அந்தப் போரில் விரைந்தன.(10)

அனைத்துப் பக்கங்களிலும் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்ட அவர்கள், சூரியனைக் காட்சியில் இருந்து மறைக்கும் மேகங்களைப் போல, அவனைக் காட்சியில் இருந்து மறைத்தனர்.(11) அப்போது, சிகண்டியின் தலைமையிலான வீரர்கள், கௌரவர்களால் அவ்வாறு தாக்கப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்டு, சினத்தால் நிறைந்து, அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களானார்கள்.(12) குந்தியின் மகனான யுதிஷ்டிரனைக் காக்க விரும்பிய அவர்கள், பெரும் வேகம் கொண்டவையும், மணி வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் தேர்களில் அந்த இடத்திற்கு வந்தனர்.(13) அப்போது, பாண்டவர்களுக்கும், குருக்களுக்கும் இடையில், யமனின் ஆட்சிப்பகுதிகளில் வசிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும், குருதியே நீராகப் பாயும் வகையிலும் ஒரு பயங்கரப் போர் தொடங்கியது.(14) பாண்டவர்களும், பாஞ்சாலர்களும், எதிரிகளான குரு படையின் அந்த எழுநூறு தேர்வீரர்களையும் கொன்று, மீண்டும் (ஒட்டுமொத்த குரு படையையும்) தடுத்தனர்.(15)

அங்கே உமது மகனுக்கும் {துரியோதனனுக்கும்}, பாண்டவர்களுக்கும் இடையில் ஒரு கடும்போர் நடந்தது. அதற்குமுன் நாங்கள் அதுபோன்றதொரு போரை கேட்டதோ பார்த்ததோ கிடையாது.(16) எவராலும் யாருக்கும் கருணையே காட்டப்படாத அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, உமது படை மற்றும் எதிரி படையின் போர்வீரர்கள் வேகமாக வீழ்ந்து கொண்டிருக்கும்போது,(17) போராளிகள் அனைவரும் கூச்சலிட்டு, தங்கள் சங்குகளை முழக்கிக் கொண்டிருக்கும்போது, வில்லாளிகள் முழக்கம் செய்து கொண்டும், பல்வேறு வகைகளினான ஒலிகளை எழுப்பிக் கொண்டு இருக்கும்போது,(18) உண்மையில், அந்தப் போர் கடுமையாக நடந்து, போராளிகளின் முக்கிய அங்கங்கள் தாக்கப்பட்டு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வெற்றியை விரும்பியவர்களான துருப்புகள் வேகமாக விரைந்து கொண்டிருந்தபோது,(19) உலகில் உள்ள அனைத்தும் பயங்கரமான பேரழிவுக்கு உட்பட்டபோது, நற்பிறவியும், அழகும் கொண்ட எண்ணற்ற பெண்மணிகள் விதவைகளாக்கப்பட்டபோது,(20) உண்மையில், நண்பர்களுக்கும், எதிரிகளுக்கும் போர்வீரர்களால் எந்தக் கருணையும் காட்டப்படாமல் அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருக்கும்போது, அனைத்தின் அழிவுக்கான முன்னறிவிப்பாகப் பயங்கரச் சகுனங்கள் தோன்றின.(21)

மலைகள், காடுகளுடன் கூடிய பூமியானவள், பேரொலியை உண்டாக்கியபடி நடுங்கினாள். கைப்பிடிகளுடன் கூடிய எரிப்பந்தங்களைப் போன்ற எரிநட்சத்திரங்கள், சூரிய வட்டிலில் இருந்து விழுவதைப் போல, வானத்தில் இருந்து அனைத்துப் பக்கங்களிலும் விழுந்தன.(22) சூறாவளி எழுந்து, கடுங்கூழாங்கற்களைச் சுமந்து கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் தாழ்வாக வீசியது. யானைகள் அபரிமிதமான கண்ணீரைச் சொரிந்து, அதிகமாக நடுங்கின.(23) இந்தப் பயங்கரமான கடுஞ்சகுனங்கள் அனைத்தையும் அலட்சியம் செய்த க்ஷத்திரியர்கள், ஒருவரோடொருவர் கலந்தாலோசித்துக் கொண்டு, சொர்க்கத்தை அடையும் விருப்பத்தால், குருவின் பெயரால் அழைக்கப்பட்டதும், அழகானதுமான அந்தப்புனிதக் களத்தில் {குருக்ஷேத்திரத்தில்} மீண்டும் போரிடுவதற்காக உற்சாகமாக நின்றனர்.(24)

அப்போது காந்தார மன்னனின் மகனான சகுனி, “நீங்கள் அனைவரும் முன்னால் இருந்து போரிடுங்கள். நானோ, பின்னால் இருந்து பாண்டவர்களைக் கொல்வேன்” என்றான்.(25) பிறகு, பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களான மத்ரகப் போர்வீரர்களில், நமது தரப்பில் இருந்து முன்னேறிச் சென்றவர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, பல்வேறு மகிழ்ச்சியான ஒலிகளை வெளியிட்டனர்.(26) எனினும், வெல்லப்பட முடியாதவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களுமான பாண்டவர்கள், தங்கள் விற்களை அசைத்துக் கொண்டே மீண்டும் நம்மை எதிர்த்து வந்து, கணைமாரியால் நம்மை மறைத்தனர்.(27) அப்போது எதிரியால் மத்ரகப் படையினர் கொல்லப்பட்டனர். இதைக் கண்டு, துரியோதனனின் துருப்புகள் மீண்டும் போரில் இருந்து புறமுதுகிட்டன.(28) எனினும், காந்தாரர்களின் வலிமைமிக்க மன்னன் {சகுனி}, மீண்டும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “பாவிகளே! நில்லுங்கள்! (எதிரியோடு) போரிடுங்கள்! போரால் என்ன பயன்?” என்றான்.(29) அந்நேரத்தில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, காந்தாரர்களின் மன்னன் {சகுனி}, பளபளப்பான வேல்களுடன் போரிட வல்லவர்களாகப் பத்தாயிரம் {10000} குதிரை வீரர்களை முழுமையாகத் தன்னிடம் கொண்டிருந்தான்.(30)

அந்தப் பேரழிவு நடந்து கொண்டிருந்தபோது, அந்தப் பெரும்படையின் துணையுடன் கூடியவனான சகுனி, தன் வீரத்தை வெளிப்படுத்தி, பின்புறத்தில் இருந்து பாண்டவப்படையைத் தாக்கி, தன் கூரிய கணைகளால் அவர்களைக் கொன்றான்.(31) அப்போது பாண்டுக்களின் அந்தப் பரந்த படையானது, ஓ! ஏகாதிபதி, வலிமைமிக்கக் காற்றால் அனைத்துப் பக்கங்களிலும் கலைக்கப்படும் மேகத்திரளைப் போலவே பிளந்தது.(32) அப்போது யுதிஷ்டிரன், தன் படை முறியடிக்கப்படுவதை அருகிலிருந்து கண்டு, வலிமைமிக்கச் சகாதேவனைத் தூண்டும்வகையில் அமைதியாக, “அதோ சுபலனின் மகன் {சகுனி}, கவசம் பூண்டவனாக நமது படையின் பின்புறத்தைப் பீடித்து நிற்கிறான். அவன் நமது படைகளைப் படுகொலை செய்கிறான். ஓ! பாண்டுவின் மகனே {சகாதேவா}, பொல்லாதவனான அத்தீயவனைக் காண்பாயாக.(34) திரௌபதி மகன்களின் துணையுடன், சுபலனின் மகனான அந்தச் சகுனியை நோக்கிச் சென்று, அவனைக் கொல்வாயாக. அதேவேளையில் நான், ஓ! பாவமற்றவனே, பாஞ்சாலர்களின் ஆதரவுடன் எதிரியின் தேர்ப்படையை அழிக்கப்போகிறேன்.(35) உன்னுடன் யானைகள் அனைத்தையும், குதிரைகள் அனைத்தையும், மூவாயிரம் காலாட்படைவீரர்களையும் அழைத்துச் செல்வாயாக. இவற்றின் துணையுடன் சகுனியைக் கொல்வாயாக” என்றான்.(36)

அதன் பிறகு, வில்தரித்த போராளிகளால் செலுத்தப்பட்ட எழுநூறு யானைகள், ஐயாயிரம் குதிரைகள், வீரனான சகாதேவன்,(37) மூவாயிரம் காலாட்படை வீரர்கள், திரௌபதியின் மகன்கள் ஆகியோர் அனைவரும், போரில் வீழ்த்தக் கடினமானவனான சகுனியை எதிர்த்து விரைந்தனர்.(38) எனினும் பெரும் வீரம் கொண்டவனான அந்தச் சுபலனின் மகன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களை விஞ்சி நின்று, வெற்றிக்கான ஏக்கத்துடன், அவர்களது படையைப் பின்புறத்தில் இருந்து கொல்லத் தொடங்கினான்.(39)

பாண்டவப் படையைச் சேர்ந்தவர்களும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களும், சினத்தால் மதங்கொண்டவர்களுமான குதிரைவீரர்கள், சுபலன் மகனின் தேர்வீரர்களை விஞ்சி அவனது படைக்குள் ஊடுருவினர்.(40) வீரம் கொண்டவர்களான அந்தக் குதிரைவீரர்கள், தங்கள் யானைகளுக்கு மத்தியில் நின்று கொண்டு, கணைமாரியால் சுபலன் மகனின் பெரும்படையை மறைத்தனர்.(41) உமது தீய ஆலோசனைகளின் விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, கதாயுதங்களும், வேல்களும் பயன்படுத்தப்பட்டதும், வீரர்கள் மட்டுமே பங்கேற்றதுமான அந்தப் பயங்கரப் போர் நிகழ்ந்தது.(42) அந்தப் போரில் தேர்வீரர்கள் அனைவரும் பார்வையாளர்களாக நின்றுவிட்டதால், அங்கே வில்-நாண்கயிறுகளின் நாணொலிகள் அதற்கு மேலும் கேட்கவில்லை. அந்நேரத்தில் போரிட்ட தரப்புகளுக்கு எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.(43) ஓ! பாரதக் குலத்தின் காளையே, குருக்கள் மற்றும் பாண்டவர்களாகிய இரு தரப்பினரும், வீரர்களின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட ஈட்டிகளை ஆகாயத்தில் இருந்து வரும் எரிநட்சத்திரங்களைப் போலவே கண்டனர்.(44)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் பளபளப்பைக் கொண்டவையும், விழுபவையுமான வாள்களால் மறைக்கப்பட்ட மொத்த ஆகாயமும் மிக அழகாகத் தெரிந்தது.(45) ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சுற்றிலும் வீசப்பட்ட வேல்களின் தன்மையானது, ஆகாயத்தில் செல்லும் வெட்டுக்கிளிகளின் கூட்டங்களைப் போல ஆனது.(46) கணைகளால் காயமடைந்த குதிரைவீரர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட காயங்களின் விளைவால், குருதியில் குளித்த அங்கங்களுடன் கூடிய குதிரைகள், அனைத்துப் பக்கங்களிலும் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் விழுந்தன.(47) ஒன்றோடொன்று மோதிக் கொண்டு நொறுங்கிய அவற்றில் பல சிதைக்கப்பட்டவையாகத் தெரிந்தன, மேலும் பல தங்கள் வாய்களில் இருந்து குருதியைக் கக்கின. துருப்புகள் புழுதிமேகத்தால் மறைக்கப்பட்ட போது, அங்கே அடர்த்தியான இருள் பரவியது.(48) அந்த இருளானது அனைத்தையும் மறைத்தபோது, ஓ! மன்னா, அந்த இடத்திலிருந்து, துணிச்சல்மிக்கப் போராளிகளும், குதிரைகளும், மனிதர்களும் நகர்வதை நாங்கள் கண்டோம்.(49)

சிலர் பூமியில் விழுந்து அதிகமாகக் குருதியைக் கக்குபவர்களாகக் காணப்பட்டனர். வேறு சில போராளிகள், ஒருவரையொருவர் தலைமுடியைப் பற்றி இழுத்து, அசைய முடியாமல் இருந்தனர்.(50) பெரும் பலத்தைக் கொண்ட பலர், குதிரைகளின் முதுகுகளில் இருந்து ஒருவரையொருவர் இழுத்து, அவர்களோடு மோதி, மற்போரில் ஈடுபடும் போராளிகளைப் போல ஒருவரையொருவர் கொன்றனர்.(51) உயிரை இழந்தவர்களான பலர், தாங்கள் செலுத்தி வந்த குதிரைகளின் முதுகுகளிலேயே கொண்டு செல்லப்பட்டனர். தங்கள் வீரத்தில் செருக்குக் கொண்டு, வெற்றி மீது கொண்ட விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட பலர், கீழே பூமியில் விழுபவர்களாகக் காணப்பட்டனர்.(52) குருதியில் குளித்து, அங்கங்களை இழந்து, தலைமயிரற்றவர்களாக நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான போராளிகள் பூமியில் விரவிக் கிடந்தனர்.(53) யானைவீரர்கள், குதிரைவீரர்கள், கொல்லப்பட்ட குதிரைகள், போராளிகள், இரத்தக்கறைபடிந்த கவசங்கள், ஆயுதந்தரித்த பிறர், பல்வேறு வகைகளிலான பயங்க ஆயுதங்களால் ஒருவரையொருவர் கொல்ல முயன்ற சிலர், ஆகியோர் அனைவரும் அச்சந்தருவதும், பயங்கரப் பேரழிவை ஏற்படுத்தியதுமான அந்தப் போரில் ஒருவரையொருவர் நெருக்கமாகக் கட்டிக் கொண்டு கிடந்ததால் பூமியின் பரப்பு மறைக்கப்பட்டதன் விளைவாக, எந்தப் போர்வீரனாலும் தன் குதிரையில் வெகுதொலைவுக்குச் செல்ல முடியவில்லை.(54,55)

சிறிது நேரம் போரிட்டுக் கொண்டிருந்தவனும், சுபலனின் மகனுமான சகுனி, எண்ணிக்கையில் ஆறாயிரமாக {6000} எஞ்சியிருந்த தன் குதிரைப்படையுடன் அங்கிருந்து சென்றுவிட்டான்.(56) அதேபோல, பாண்டவப் படையும், குருதியில் நனைந்தும், அதன் விலங்குகள் களைப்படைந்தும், எஞ்சியிருந்தவையான ஆறாயிரம் {6000} குதிரைகளுடன் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டது.(57) இரத்தக்கறை படிந்திருந்த பாண்டவப் படையின் குதிரைவீரர்கள், போரிடும் நோக்கோடும், தங்கள் உயிரையே விடத் துணிந்தும்,(58) “இனியும் இங்கே தேர்களில் போரிடுவது இயலாது; பிறகு, இங்கே யானைகளில் போரிடுவது எவ்வளவு கடினமானதாக இருக்கும். தேர்கள் தேர்களை எதிர்த்தும், யானைகள் யானைகளை எதிர்த்தும் செல்லட்டும்.(59) பின்வாங்கிச் சென்ற சகுனி தன் படைப்பிரிவின் உள்ளே நிற்கிறான். சுபலனின் அரச மகன் {சகுனி} போரிடுவதற்காக மீண்டும் வரமாட்டான்” என்று சொன்னார்கள்.(60)

அப்போது திரௌபதியின் {ஐந்து} மகன்களும், மதங்கொண்ட யானைகளும், பெரும் தேர்வீரனான பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னன் இருந்த இடத்திற்குச் சென்றனர்.(61) சகாதேவனும் கூட, புழுதி மேகம் எழுந்தபோது, மன்னன் யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்குத் தனியாகச் சென்றான்.(62) இவ்வாறு அனைவரும் சென்றுவிட்ட பிறகு, சுபலனின் மகனான சகுனி, கோபத்தால் தூண்டப்பட்டு, மீண்டும் திருஷ்டத்யும்னனுடைய படைப்பிரிவின் மேல் பாய்ந்து, அதைத் தாக்கத் தொடங்கினான்.(63) ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களும், தங்கள் உயிரையே துச்சமாக மதித்தவர்களுமான உமது படையின் வீரர்களுக்கும், எதிரி படையின் வீரர்களுக்கும் இடையில் அங்கே மீண்டும் ஒரு பயங்கரப் போர் தொடங்கியது.(64) வீரர்களுக்கிடையிலான அம்மோதலில், ஒருவரையொருவர் நிலைத்த கண்களுடன் பார்த்த போராளிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஒருவர்மீதொருவர் பாய்ந்தனர்.(65)

அழிவை ஏற்படுத்தும் அந்தப் பெரும் படுகொலையில், வாள்களால் வெட்டப்பட்ட தலைகள் கீழே விழும்போது, பனம்பழம் விழும் ஒலியை உண்டாக்கின.(66) கவசங்களை இழந்து, ஆயுதங்களால் சிதைக்கப்பட்டு, கீழே தரையில் விழும் உடல்கள், கரங்கள், உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட தொடைகள் ஆகியன மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேரொலியை ஏற்படுத்தின.(67) சகோதரர்களையும், மகன்களையும், தந்தைமாரையும் கூரிய ஆயுதங்களால் தாக்கிய போராளிகள், இறைச்சித் துண்டுகளுக்காகப் போரிடும் பறவைகளைப் போலக் காணப்பட்டனர்.(68) சினத்தால் தூண்டப்பட்ட ஆயிரக்கணக்கான போர்வீரர்கள் ஒருவர் மீதொருவர் பாய்ந்து, அந்தப் போரில் பொறுமையில்லாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(69) நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான போராளிகள், கொல்லப்பட்டுத் தங்கள் குதிரைகளில் இருந்து கீழே விழும் குதிரைவீரர்களின் கனத்தால் கொல்லப்பட்டுக் கீழே களத்தில் விழுந்தனர்.(70)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கையின் விளைவால் ஒருவரையொருவர் முக்கிய அங்கங்களில் துளைக்க விரும்பிய போராளிகளின் ஈட்டிகளும், வாள்களும் கீழே விழும் ஒலிகளும், ஓ! மன்னா, பெரும் வேகம் கொண்ட குதிரைகளின் கனைப்பொலிகளும், கவசம் தரித்த மனிதர்களின் கூச்சல்களும் பேரொலியாகின.(71,72) அந்நேரத்தில் களைப்பை அடைந்து உமது படைவீரர்கள், சினம் தீர்ந்தவர்களாக, தங்கள் விலங்குகள் களைப்படைந்தவர்களாக, தாகத்தால் உலர்ந்தவர்களாக, கூரிய ஆயுதங்களால் சிதைக்கப்பட்டவர்களாகப் போரில் இருந்து புறமுதுகிடத் தொடங்கினர்.(73) குருதிமணத்தால் மதங்கொண்ட {இரத்த வாசனையால் வெறிகொண்ட} பலர், நண்பர்களையே எதிரிகளைப் போலக் கொல்லத்தக்கவர்களாகவும், உண்மையில், அகப்பட்ட எவரையும் கொல்லத்தக்கவர்களாகவும் மதியிழந்தவர்களானார்கள்.(74) பெரும் எண்ணிக்கையிலான க்ஷத்திரியர்கள், ஓ! மன்னா, வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, கணைகளால் தாக்கி வீழ்த்தப்பட்டுப் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்தனர்.(75)

ஓநாய்கள், கழுகுகள், நரிகள் ஆகியன ஊளையிடவும், மகிழ்ச்சியால் அலறவும் செய்து, பேரொலியை உண்டாக்கின. உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது படை பேரிழப்பை அடைந்தது.(76) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மனிதர்கள் மற்றும் குதிரைகளின் உடல்களால் விரவிக் கிடந்த பூமியானது, இரத்த ஓடைகளால் மறைக்கப்பட்டு, மருண்டோரை அச்சங்கொள்ளச் செய்தது.(77) ஓ! பாரதரே, வாள்கள், போர்க்கோடரிகள், வேல்கள் ஆகியவற்றால் மீண்டும் மீண்டும் தாக்கிச் சிதைக்கப்பட்ட உமது போர்வீரர்களும், பாண்டவப் போர்வீரர்களும் ஒருவரையொருவர் அணுகுவதை நிறுத்தினர்.(78) தங்கள் தங்கள் பலத்திற்குத் தக்க ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, இறுதிச் சொட்டுக் குருதியுள்ளவரை போரிட்ட போராளிகள், தங்கள் காயங்களில் இருந்து குருதி வழிய கீழே விழுந்தனர்.(79) தலையற்ற வடிவங்கள், (ஒரு கரத்தில்) தங்கள் தலைகளின் மயிரைப் பற்றியபடியும், (மறுகரத்தில்) உயர்த்தப்பட்டவையும், இரத்தம் தோய்ந்தவையுமான வாள்களோடும் காணப்பட்டன.(80)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வாறு பல தலையற்ற வடிவங்கள் எழுந்து, குருதிமணம் போராளிகளைக் கிட்டத்தட்ட உணர்வற்றவர்களாகச் செய்து,(81) அந்தப் போரொலியானது சற்றே தணிவடைந்தபோது, சுபலனின் மகன் {சகுனி}, எஞ்சிய தனது சிறு குதிரைப்படையுடன், பாண்டவர்களின் பெரும்படையை (மீண்டும்) அணுகினான்.(82) வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டவர்களும், பெரும் சுறுசுறுப்பையுடையவர்களுமான பாண்டவர்கள், காலாட்படையினர், யானைகள் மற்றும் குதிரைப்படைகளுடனும், உயர்த்தப்பட்ட ஆயுதங்களுடனும் சகுனியை நோக்கி விரைந்தனர்.(83) பகைமையின் எல்லையை {முடிவை} அடைய விரும்பிய பாண்டவர்கள், ஒரு சுவராக அணிவகுத்து அனைத்துப் பக்கங்களிலும் சகுனியைச் சூழ்ந்து கொண்டு, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களால் அவனை {சகுனியைத்} தாக்கத் தொடங்கினர்.(84)

அனைத்துப் பக்கங்களிலும் தாக்கப்படும் உமது படையைக் கண்ட கௌரவர்களும், குதிரைகள், காலாட்படையினர், யானைகள் மற்றும் தேர்களுடன் பாண்டவர்களை நோக்கி விரைந்தனர்.(85) பெரும் துணிவுமிக்கவர்களான காலாட்படைவீரர்கள் சிலர், ஆயுதங்களே இல்லாதவர்களாக, தங்கள் கால்களாலும், முட்டிகளாலும் அந்தப் போரில் எதிரிகளைத் தாக்கி வீழ்த்தினர்.(86) தேர்வீரர்கள் தங்கள் தேர்களில் இருந்தும், யானைவீரர்கள் யானைகளிலிருந்தும், புண்ணியமற்ற மனிதர்கள் தங்கள் புண்ணியங்கள் தீர்ந்ததும் தங்கள் தெய்வீக வாகனங்களில் இருந்து வீழ்வதைப் போல விழுந்தனர்.(87) இவ்வாறு, அந்தப் போரில் ஒருவரோடொருவர் போரிட்ட போராளிகள், தந்தைமாரையும், சகோதரர்களையும், நண்பர்களையும், மகன்களையும் கொன்றனர்.(88) ஓ பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, எவருக்கும் எவராலும் எந்தக் கருணையும் காட்டப்படாததும், அனைத்துப் பக்கங்களிலும் வேல்கள், வாள்கள், கணைகள் வேகமாக வீழ்த்தப்பட்டுக் காணும் காட்சியைப் பயங்கரமாக்கியதுமான அந்தப் போர் இவ்வாறே நிகழ்ந்தது” {என்றான் சஞ்சயன்}.(89)

துரியோதனனை நிந்தித்த அர்ஜுனன்! – சல்லிய பர்வம் பகுதி – 24-துரியோதனனைக் குறித்து வீரர்களிடம் விசாரித்த சகுனி; துரியோதனன் இருக்குமிடம் அறிந்து அங்கே சென்ற சகுனி; சகுனியின் உற்சாகமிக்கப் பேச்சால் மகிழ்ந்த கௌரவவீரர்கள் பாண்டவப் படையை எதிர்த்துச் சென்றது; கிருஷ்ணனிடம் துரியோதனனை நிந்தித்த அர்ஜுனன்; கௌரவப்படைக்குள் ஊடுருவிய கிருஷ்ணன்; அர்ஜுனனால் தாக்கப்பட்டு ஊக்கத்தை இழந்த கௌரவர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரின் பேரொலி ஒருவாறு தணிந்து, பாண்டவர்கள் பெரும் எண்ணிக்கையிலான தங்கள் எதிரிகளைக் கொன்ற பிறகு, எஞ்சியிருந்த தன் எழுநூறு {700} குதிரைகளுடன்[1] சுபலனின் மகன் {சகுனி} (மீண்டும்) போரிட வந்தான்.(1) தன் படைவீரர்களை வேகமாக அணுகி, அவர்களைப் போரிடத் தூண்டிய அவன், மீண்டும் மீண்டும், “எதிரிகளைத் தண்டிப்பவர்களே, கவனமாகப் போரிடுங்கள்” என்று சொன்னான்.(2) அவன் அங்கிருந்த க்ஷத்திரியர்களிடம், “பெரும் தேர்வீரனான மன்னன் {துரியோதனன்} எங்கே?” என்று கேட்டான். சகுனியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அவர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, “அதோ, முழு நிலவுக்கு இணையான பெரிய குடை இருக்குமிடத்தில், கவசம் தரித்த தேர்வீரர்கள் இருக்கும் இடத்தில், மேகங்களுக்கு ஒப்பான பேரொலி கேட்கும் இடத்தில் பெரும் தேர்வீரரான குரு மன்னன் {துரியோதனன்} இருக்கிறார். ஓ! மன்னா {சகுனியே}, வேகமாக அங்கே சென்றால், உம்மால் குரு ஏகாதிபதியை {துரியோதனனைக்} காண முடியும்” என்று பதிலுரைத்தனர்.(5)துணிச்சல்மிக்க அந்தப் போர்வீரர்களால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், சுபலனின் மகனுமான சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பின்வாங்காத வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டவனாக உமது மகன் இருந்த இடத்திற்குச் சென்றான்.(6) அந்தத் தேர்ப்படைக்கு மத்தியில் இருந்த துரியோதனனைக் கண்ட சகுனி, அங்கே இருந்த உமது தேர்வீரர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில்,(7) ஓ! மன்னா, துரியோதனனிடம் உற்சாகமாக இவ்வார்த்தைகளைச் சொன்னான். உண்மையில் அவன் {சகுனி}, தன் காரியங்கள் அனைத்தும் ஏற்கனவே நிறைவேறிவிட்டதைக் காட்டும் வகையில் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்[2].(8) “ஓ! மன்னா {துரியோதனா}, (பாண்டவர்களின்) தேர்ப்படைப்பிரிவினரைக் கொல்வாயாக. அவர்களது குதிரைகள் அனைத்தும் என்னால் வெல்லப்பட்டன. ஒருவன் தன் உயிரைக் கொடுக்காமல் போரில் யுதிஷ்டிரனைக் கைப்பற்றுவது சாத்தியமில்லை.(9) பாண்டு மகனால் {யுதிஷ்டிரனால்} பாதுகாக்கப்படும் அந்தத் தேர்ப்படை அழிக்கப்பட்ட பிறகு, யானைகள், காலாட்படைவீரர்கள் மற்றும் பிறர் அனைவரையும் நாம் கொல்வோம்” என்றான்.(10)அவனது இவ்வார்த்தைகளைக் கேட்ட உமது போர்வீரர்கள், வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டுப் பாண்டவப்படையை நோக்கி உற்சாகமாக ஓடினர்.(11) தங்கள் முதுகுகளில் அம்பறாத்தூணிகளுடனும், கைகளில் விற்களுடனும் கூடிய அவர்கள் அனைவரும் தங்கள் விற்களை அசைத்து, சிங்க முழக்கத்தைச் செய்தனர்.(12) ஓ! மன்னா, விற்களின் கடும் நாணொலிகளும், உள்ளங்கைகளை அறையும் ஒலிகளும், பலமாக ஏவப்பட்ட கணைகளான் விஸ் ஒலிகளும் மீண்டும் கேட்கப்பட்டன.(13)

அந்தக் குரு போராளிகள் உயர்த்தப்பட்ட விற்களுடன் பாண்டவப்படையை நோக்கி வருவதைக் கண்டவனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேவகியின் மகனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(14) “அச்சமில்லாமல் குதிரைகளைத் தூண்டி, இந்தத் துருப்புகளின் கடலுக்குள் ஊடுருவுவாயாக. என் கூரிய கணைகளின் மூலம் இன்று நான் இந்தப் பகைமைகளின் எல்லையை {முடிவை} அடைவேன்.(15) ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இரு தரப்புக்கிடையில் நடக்கும் இந்தப் பெரும்போரில் இது பதினெட்டாவது நாளாகும்.(16) உண்மையில் எண்ணற்றவையாக இருந்த அந்த உயர் ஆன்ம வீரர்களின் படையானது கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. விதியின் வழியைப் பார்.(17) ஓ! மாதவா {கிருஷ்ணா}, பரந்த கடலைப் போல இருந்த திருதராஷ்டிர மகனின் {துரியோதனனின்} படையானது, நம்மோடு மோதிய பிறகு, பசுவின் குளம்புகளால் உண்டான தடத்தைப் போலாகிவிட்டது.(18)

பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பிறகு அமைதி ஏற்படுத்தப்பட்டிருந்தால், ஓ! மாதவா {கிருஷ்ணா}, அனைத்தும் நன்றாக இருந்திருக்கும். எனினும், பலவீனமான அறிவைக் கொண்ட மூடனான துரியோதனன் அமைதியை ஏற்படுத்தவில்லை.(19) ஓ! மாதவா, பீஷ்மரால் சொல்லப்பட்ட வார்த்தைகள் நன்மை தருபவையும், பின்பற்றத் தகுந்தவையுமாகும். எனினும், அறிவை இழந்தவனான சுயோதனன், அதன்படி செயல்படவில்லை.(20) பீஷ்மர் தாக்கப்பட்டு, பூமியில் வீழ்த்தப்பட்ட பிறகும், போர் ஏன் தொடர்கிறது என்பதற்கான காரணத்தை நான் அறியவில்லை.(21) சந்தனு மகனின் {பீஷ்மரின்} வீழ்ச்சிக்குப் பிறகும் தார்தராஷ்டிரர்கள் போரைத் தொடர்ந்ததால், அனைத்து வழிகளிலும் அவர்கள் மூடர்கள் என்றும், பலவீனமான அறிவைக் கொண்டவர்கள் என்றும் நான் கருதுகிறேன்.(22)

அதன்பிறகும், பிரம்மத்தை உச்சரிப்பவர்கள் அனைவரிலும் முதன்மையான துரோணர் வீழ்ந்த பிறகும், ராதையின் மகன் {கர்ணன்} வீழ்ந்த பிறகும், விகர்ணன் வீழ்ந்த பிறகும் பேரழிவு நிற்கவில்லையே.(23) ஐயோ, மனிதர்களில் புலியான கர்ணன் தன் மகன்களுடன் வீழ்ந்து, சிறு (கௌரவப்) படை மட்டுமே எஞ்சியிருந்தபோதும் பேரழிவு நிற்கவில்லையே.(24) வீரனான சுருதாயுஷ், பூரு குலத்தின் ஜலசந்தன், மன்னன் சுருதாயுதன் ஆகியோர் வீழ்ந்த பிறகும் கூடப் பேரழிவு நிற்கவில்லை.(25) ஓ ஜனார்த்தனா, பூரிஸ்ரவஸ், சல்லியர், சால்வன், அவந்தியின் வீரர்கள் ஆகியோர் வீழ்ந்தபிறகும் பேரழிவு நிற்கவில்லை.(26) ஜெயத்ரதன், ராட்சசன் அலாயுதன், பாஹ்லீகர், சோமதத்தன் ஆகியோர் வீழ்ந்த பிறகும் பேரழிவு நிற்கவில்லை.(27) வீரரான பகதத்தர், காம்போஜத் தலைவன் சுதக்ஷிணன், துச்சாசனன் ஆகியோர் வீழ்ந்த பிறகும் பேரழிவு நிற்கவில்லை.(28) ஓ! கிருஷ்ணா, வீரமும், பெரும் நாடுகளைச் சொந்தமாகக் கொண்டவர்களும், வலிமையும் மிக்கவர்களுமான பல்வேறு மன்னர்கள் போரில் கொல்லப்பட்ட பிறகும் பேரழிவு நிற்கவில்லை.(29) போரில் பீமசேனரால் முழுமையாக ஓர் அக்ஷௌஹிணி துருப்புகள் கொல்லப்பட்ட பிறகும், தார்தராஷ்டிரர்களின் மடமையினாலோ, பேராசையாலோதான் இந்தப்பேரழிவு நிற்கவில்லை.(30)

நிச்சயம் மூடனான துரியோதனனைத் தவிர, குரு குலத்தைப் போன்ற உன்னதக் குலத்தில் பிறந்த வேறு எந்த மன்னன்தான், கனியற்ற {பலனற்ற} இந்தக் கடும் பகைமைகளைத் தொடர்வான்?(31) அறிவும், ஞானமும் கொண்டும், தீமையிலிருந்து நன்மையைப் பகுத்துப் பார்க்க வல்லவனுமாக இருந்தும், தகுதியிலும், பலத்திலும், துணிவுலும் தன் எதிரிகள் தன்னைவிட மேம்பட்டவர்கள் என்பதை அறிந்தும் இவ்வாறு போரைத் தொடுப்பவன் இங்கே எவன் இருக்கிறான்?(32) உன்னால் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கீழ்ப்படிந்து பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள மனமில்லாத ஒருவனால் உண்மையில் பிறரின் ஆலோசனைகளை எவ்வாறு கேட்க இயலும்?(33) சந்தனுவின் மகனான பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோர் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளுமாறு தூண்டியபோது அவர்களை அலட்சியம் செய்த அவனுக்கு என்ன மருந்துதான் இன்று ஏற்புடையதாக இருக்கக்கூடும்?(34) ஓ! ஜனார்த்தனா, வயது முதிர்ந்த தந்தையும், நல்ல அறிவு கொண்ட அவனது தாயும் நன்மையான வார்த்தைகளைச் சொன்னபோது, மூடத்தனத்தால் அவர்களை அலட்சியம் செய்து அவமதித்த அவனால் நல்ல ஆலோசனைகளை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?(35)

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, தன் குலத்தை அழிப்பதற்காகவே துரியோதனன் பிறப்பை எடுத்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஓ! தலைவா, அவனது நடத்தையும், கொள்கையும் அதையே சுட்டுகிறது. இன்னும் கூட அவன், எங்களது நாட்டை எங்களுக்குக் கொடுக்க மாட்டான். ஓ! அச்யுதா, இதுவே என் கருத்தாகும்.(36) ஓ! ஐயா, திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} உயிரோடுள்ளவரை, எங்கள் பங்கான நாட்டை அவன் எங்களுக்குக் கொடுக்க மாட்டான் என்று உயர் ஆன்ம விதுரர் என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்.(37) மேலும் விதுரர், “ஓ! கௌரவங்களை அளிப்பவனே, திருதராஷ்டிரர் உயிரோடுள்ளவரை, பொல்லாதவனான அந்தப் பாவி உங்களுக்குப் பாவத்தையே செய்வான்.(38) போரில்லாமல் உங்களால் துரியோதனனை வெல்லவே முடியாது” என்றார். ஓ! மாதவா, முன்னறிதிறம் கொண்டவரான விதுரர், இவ்வாறே என்னிடம் அடிக்கடி சொன்னார்.(39) தீய ஆன்மா கொண்டவனும், பொல்லாதவனுமான அவன் செய்யும் செயல்கள் அனைத்தும், உயர் ஆன்ம விதுரர் சொன்னதற்கு முற்றிலும் சரியாக இருப்பதாக இப்போது நான் அறிகிறேன்.(40)

நன்மையைத் தரக்கூடியவையும், சரியானவையுமான ஜமதக்னி மகனின் {பரசுராமரின் வார்த்தைகளைக் கேட்டும், அவற்றை அலட்சியம் செய்த அந்தத் தீய புத்தியுள்ளவன், உறுதியாக அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட வேண்டும்.(41) துரியோதனன் பிறந்ததும், அந்த இழிந்தவனின் விளைவால் மொத்த க்ஷத்திரிய வகையும் அழிவுக்குள்ளாகும் என்று தவவெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பலர் சொன்னார்கள்.(42) துரியோதனனின் செயல்களால் க்ஷத்திரியர்கள் கிட்டத்தட்ட மொத்தமாக அழிவை அடைந்துவிட்டதால், ஓ! ஜனார்த்தனா, அம்முனிவர்களின் வார்த்தைகள் இப்போது {உண்மையென} உணரப்படுகின்றன. ஓ! மாதவா, நான் இன்று போர்வீரர்கள் அனைவரையும் கொல்வேன்.(43) க்ஷத்திரியர்கள் அனைவரும் கொல்லப்பட்டு, (கௌரவ) முகாம் வெறுமையான பிறகும், தன் அழிவுக்காகத் துரியோதனன் எங்களுடன் போரையே விரும்புவான்.(44) இந்தப் பகைமைகளை அதுவே {அந்தப் போரே} முடித்துவைக்கும். ஓ! மாதவா, ஓ விருஷ்ணி குலத்தோனே, விதுரரின் வார்த்தைகளை என் மனத்திற்குள்ளேயே நான் சிந்தித்துப் பார்த்தும், தீய ஆன்மா கொண்ட துரியோதனனின் செயல்களைக் கருத்தில் கொண்டும் நான் இந்தத் தீர்மானத்திற்கே வந்திருக்கிறேன். ஓ! வீரா {கிருஷ்ணா}, தீய ஆன்மா கொண்ட துரியோதனனையும், அவனது படையையும் இன்று என் கூரிய கணைகளால் நான் கொல்லப்போவதால் இந்தப் பாரதப் படைக்குள் ஊடுருவுவாயாக.(45,46) திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இந்தப் பலவீனமான படையைக் கொன்று, யுதிஷ்டிரருக்கு எது நன்மையோ அதை இன்று நான் செய்யப் போகிறேன்” என்றான் {அர்ஜுனன்}.”(47)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “சவ்யசச்சினால் {அர்ஜுனனால் இவ்வாறு சொல்லப்பட்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, கைகளில் கடிவாளத்துடன், அச்சமில்லாமல் அந்தப் பரந்த எதிரி படைக்குள் போருக்காக ஊடுருவினான்.(48) (அவ்விரு வீரர்களும் நுழைந்த) அது விற்களாலான பயங்கரமான காடாக இருந்தது. ஈட்டிகளே அதன் முட்களாக இருந்தன. கதாயுதங்கள், முள்பதித்த தண்டங்கள் {பரிகங்கள்} ஆகியன அதன் பாதைகளாக இருந்தன. தேர்களும், யானைகளும் அதில் இருக்கும் பெரும் மரங்களாக இருந்தன.(49) குதிரைப்படையும், காலாட்படையும் அதில் இருக்கும் கொடிகளாக இருந்தன. சிறப்புமிக்கவனான கேசவன் {கிருஷ்ணன்}, பல கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தக் காட்டுக்குள் நுழைந்த போது, மிகப் பிரகாசமானவனாகத் தெரிந்தான்.(50) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் அர்ஜுனனைச் சுமந்து சென்ற அந்த வெள்ளைக் குதிரைகள், தாசார்ஹ குலத்தோனால் {கிருஷ்ணனால்} தூண்டப்பட்ட நிலையில் எங்கும் திரிவதாகக் காணப்பட்டன.(51) அப்போது எதிரிகளை எரிப்பவனான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, மழையைப் பொழியும் மேகத்தைப் போல நூற்றுக்கணக்கான கூரிய கணைகளை ஏவியபடியே தன் தேரில் சென்று கொண்டிருந்தான்.(52)

அந்த நேரான கணைகளால் உண்டான ஒலியும், அவற்றைக் கொண்டு அந்தப் போரில் சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} மறைக்கப்பட்ட அந்தப் போராளிகள் உண்டாக்கிய ஒலியும் பேரொலியாக இருந்தன. போராளிகளின் கவசத்தைத் துளைத்துச் சென்ற அந்தக் கணைமாரிகள் பூமியில் விழுந்தன.(53) இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான தீண்டலைக் கொண்டவையும், காண்டீவத்திலிருந்து ஏவப்பட்டவையுமான கணைகள், ஓ! மன்னா, அந்தப் போரில் மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளைத் தாக்கி, சிறகு படைத்த பூச்சிகளைப் போன்ற ஒலியுடன் போரில் விழுந்தன.(54) காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளால் அனைத்தும் மறைக்கப்பட்டன. அந்தப் போரில் முக்கிய மற்றும் துணைத் திசைகளுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை.(55) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எண்ணையில் துவைக்கப்பட்டவையும், கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்பட்டவையும், பார்த்தனின் பெயர் பொறிக்கப்பட்டவையுமான கணைகளால் மொத்த உலகமும் நிறைந்திருப்பதைப் போலத் தெரிந்தது.(56) அந்தக் கூரிய கணைகளால் தாக்கப்பட்டு, தீப்பந்தங்களால் எரிக்கப்பட்ட யானைக்கூட்டத்தைப் போலப் பார்த்தனால் எரிக்கப்பட்ட கௌரவர்கள், ஊக்கம் குன்றியவர்களாகத் தங்கள் பலத்தை இழந்தனர்[3].(57)விற்களும், கணைகளும் தரித்திருந்த பார்த்தன், சுடர்மிக்கச் சூரியனுக்கு ஒப்பாக, உலர்ந்த புற்குவியலை எரிக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போல அந்தப் போரில் பகைவரின் போராளிகளை எரித்தான்.(58) காட்டுவாசிகளால் காட்டில் விடப்பட்டதும், சுடர்மிக்கத் தழல்களும், (தணலில் இருந்து எழும்) பெரும் சக்தியும் கொண்டு முழங்குவதுமான நெருப்பானது, மரங்களும், உலர்ந்த கொடிகளின் குவியல்களையும் கொண்ட அந்தக் காட்டையே எரிப்பதைப் போலவே,(59) பெரும் சுறுசுறுப்பும், கடுஞ்சக்தியும் கொண்டவனும், கணைகளையே தன் தழல்களாகக் கொண்டவனும், ஆயுதங்களில் ஆற்றல் கொண்டவனுமான அந்த வீரன் {அர்ஜுனன்}, கோபத்தால் உமது மகனின் {துரியோதனனின்} துருப்புகள் அனைத்தையும் வேகமாக எரித்தான்.(60) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், மரணபலத்தைக் கொண்டவையும், கவனமாக ஏவப்பட்டவையுமான அவனது கணைகளை எந்தக் கவசத்தாலும் கலங்கடிக்க முடியவில்லை. அவன், எந்த மனிதன் மீதும், குதிரையின் மீதும், அல்லது பெரும் வடிவம் கொண்ட யானையின் மீதும் இரண்டாம் கணையை ஏவ வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.(61) வஜ்ரதாரியான இந்திரன், தைத்தியர்களைத் தாக்கி வீழ்த்தியதைப் போலவே, வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் கொண்ட அந்தப் படைப்பிரிவுக்குள் தனியொருவனாக நுழைந்த அர்ஜுனனும், பல்வேறு வடிவங்களிலான கணைகளால் அதை {அந்தப் படைப்பிரிவை} அழித்தான்” {என்றான் சஞ்சயன்}.(62)

குதிரையில் தப்பி ஓடிய துரியோதனன்! – சல்லிய பர்வம் பகுதி – 25-துரியோதனனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்ற திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனிடம் தோல்வியடைந்த துரியோதனன் ஒரு குதிரையில் தப்பி ஓடியது; திருஷ்டத்யும்னனிடம் தப்பிய சஞ்சயன் சாத்யகியிடம் உயிரோடு அகப்பட்டது; அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் துரியோதனனைத் தேடிக்கொண்டு சகுனி இருக்கும் இடத்திற்குச் சென்றது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}   சொன்னான், “தனஞ்சயன் {அர்ஜுனன்}, போரில் போராடிக் கொண்டிருந்தவர்களும், பின்வாங்காதவர்களுமான அந்த வீரர்களின் நோக்கத்தைத் தன் காண்டீவத்தால் வீணாகும்படி செய்தான்.(1) அர்ஜுனனால் ஏவப்பட்டவையும், தடுக்கப்பட முடியாதவையும், பெரும் சக்தி கொண்டவையும், வஜ்ரத்தைப் போன்ற தீண்டலைக் கொண்டவையுமான அந்தக் கணைகள் மேகத்தால் பொழியப்படும் மழைத்தாரைகளுக்கு ஒப்பாகத் தெரிந்தன.(2) ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கிரீடியால் {அர்ஜுனனால்} இவ்வாறு தாக்கப்பட்ட அந்தப் படையானது, உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே தப்பி ஓடியது.(3)

சிலர் தங்கள் தந்தைமாரையும், சகோதரர்களையும் கைவிட்டனர்; வேறு சிலர், தங்கள் தோழர்களைக் கைவிட்டனர். சில தேர்வீரர்கள் தங்கள் விலங்குகளை இழந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிலருடைய அச்சுகளோ, நுகத்தடிகளோ, சக்கரங்களோ உடைந்தன.(4) சிலருக்குக் கணைகள் தீர்ந்து போயின. சிலர் கணைகளால் பீடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டனர். காயம்படாதவர்களாக இருப்பினும் சிலர், அச்சத்தால் பீடிக்கப்பட்டுக் கூட்டமாகத் தப்பி ஓடினர்.(5) தங்கள் சொந்தங்கள் அனைவரையும், விலங்குகளையும் இழந்த சிலர், தங்கள் மகன்களைக் காக்க முயன்றனர். சிலர் தங்கள் தந்தைமாரை உரக்க அழைத்தனர், சிலர் தங்கள் தோழர்களையும், தொண்டர்களையும் அழைத்தனர்.(6) ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, ஓ! ஏகாதிபதி, சிலரோ, தங்கள் உறவினர்கள, சகோதரர்கள் மற்றும் பிற சொந்தங்களைக் கைவிட்டுத் தப்பி ஓடினர்.(7)

பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர், அதனால் ஆழத் துளைக்கப்பட்டு, தங்கள் உணர்வுகளை இழந்தவர்களாக, கடினத்துடன் மூச்சுவிடுபவர்களாகத் தென்பட்டனர்.(8) அவர்களைத் தங்கள் தேர்களில் ஏற்றிக் கொண்ட வேறு சிலர், சிறிது நேரம் அவர்களின் துயராற்றி, அவர்களை ஓய்வெடுக்கச் செய்து, நீர் கொடுத்து அவர்களின் தாகத்தைத் தணித்து, மீண்டும் போரிடச் சென்றனர்.(9) போரில் எளிதாக வீழ்த்தப்பட முடியாதவர்களான சிலர், காயம்பட்டவர்களைக் கைவிட்டுவிட்டு, உமது மகனின் கட்டளைகளைக்குக் கீழ்ப்படிய விரும்பி மீண்டும் போரிடச் சென்றனர்.(10) தங்கள் தாகத்தைத் தணித்துக் கொண்டோ, விலங்குகளைக் களைப்பாறச் செய்தோ சிலரும், ஓ! பாரதர்களின் தலைவரே, (புதிய) கவசம் அணிந்து கொண்ட சிலரும்,(11) தங்கள் சகோதரர்கள், மகன்கள் மற்றும் தந்தைமாருக்கு ஆறுதலளித்து, அவர்களை முகாமில் விட்டுவிட்டு மீண்டும் போரிட வந்தனர்.(12) மூத்தோர், சிறியோர் வரிசையில் தங்கள் தேர்களை அணிவகுத்துக் கொண்ட சிலர், மீண்டும் பாண்டவர்களை எதிர்த்துப் போரிடச் சென்றனர்.(13) (தங்கள தேர்களில்) மணிவரிசைகளால் மறைக்கப்பட்ட அந்த வீரர்கள், மூன்று உலகங்களையும் வெற்றிகொள்ளும் நோக்குடன் செல்லும் தைத்தியர்கள் மற்றும் தானவர்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(14) தங்கத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்கள் வாகனங்களில் பதற்றத்துடன் விரைந்த சிலர், பாண்டவப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் இருந்த திருஷ்டத்யும்னனுடன் போரிட்டனர்.(15)

பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னன், பெரும் தேர்வீரனான சிகண்டி, நகுலனின் மகனான சதானீகன் ஆகியோர் எதிரியின் தேர்ப்படையோடு போரிட்டனர்.(16) அப்போது சினத்தால் நிறைந்தவனும், ஒரு பெரும்படையால் ஆதரிக்கப்பட்டவனுமான பாஞ்சால இளவரசன் {திருஷ்டம்யும்னன்}, கோபக்காரர்களான உமது துருப்பினரைக் கொல்லும் விருப்பத்தோடு அவர்களை நோக்கி விரைந்தான்.(17) பிறகு, உமது மகன் {துரியோதனன்}, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதரே, இவ்வாறு தன்னை நோக்கி விரைந்து வந்த அந்தப் பாஞ்சால இளவரசன் மீது கணைமாரிகள் பலவற்றை ஏவினான்.(18) அப்போது திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா, வில்லைக் கொண்டு போரிட்டு வந்த உமது மகனின் {துரியோதனனின்} கணைகள் பலவற்றால் மார்பிலும், கரங்களிலும் வேகமாகத் துளைக்கப்பட்டான்.(19) கூரிய வேல்களால் துளைக்கப்பட்ட யானையொன்றைப் போல ஆழத்துளைக்கப்பட்ட அந்தப் பெரும் வில்லாளி {திருஷ்டத்யும்னன்}, தன் கணைகளைக் கொண்டு துரியோதனனின் நான்கு குதிரைகளை யமலோகத்திற்கு அனுப்பிவைத்தான். அடுத்ததாக, மற்றோர் அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} கொண்டு, அவன் தன் எதிரியுடைய {துரியோதனனுடைய} சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தெடுத்தான்.(20)

எதிரிகளைத் தண்டிப்பவனான மன்னன் துரியோதனன், இவ்வாறு தன் தேரை இழந்து, ஒரு குதிரையின் முதுகில் ஏறிக்கொண்டு, ஒரு தொலைவான இடத்திற்குப் பின்வாங்கிச் சென்றான்.(21) தன் படையானது ஆற்றலை இழந்ததைக் கண்டவனும், வலிமைமிக்கவனுமான உமது மகன் துரியோதனன், ஓ! மன்னா, சுபலன் மகன் {சகுனி} இருந்த இடத்திற்குச் சென்றான்.(22) கௌரவத் தேர்கள் நொறுக்கப்பட்டபோது, தேர்வீரர்களான அந்த ஐந்து பாண்டவர்களையும் மூவாயிரம் பெரும் யானைகள் சூழ்ந்து கொண்டனர்.(23) யானைப்படையால் சூழப்பட்டவர்களான அந்த ஐந்து சகோதரர்களும், ஓ! பாரதரே, ஓ! மனிதர்களில் புலியே, மேகங்களால் மறைக்கப்பட்ட கோள்களை {கிரகங்களைப்} போல அழகாகத் தெரிந்தனர்.(24) வலிமைமிக்கக் கரங்களையும், வெண்குதிரைகளையும், இலக்கில் துல்லியத்தையும் கொண்டவனான அர்ஜுனன், ஓ! மன்னா, கிருஷ்ணனைத் தன் சாரதியாகக் கொண்டு தன் தேரில் சென்று கொண்டிருந்தான்.(25)

மலைகளைப் போன்ற அந்தப் பெரும் யானைகளால் சூழப்பட்ட அவன் {அர்ஜுனன்}, கூரியவையும், பளபளக்கப்பட்டவையுமான தன் கணைகளால் அவ்விலங்குகளை அழிக்கத் தொடங்கினான்.(26) தனித்தனி கணைகளால் கொல்லப்பட்ட பெரும் யானைகள் ஒவ்வொன்றும், சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்டவையாகவோ, வீழ்ந்து கொண்டிருப்பவையாகவோ, சிதைக்கப்படுபவையாகவோ இருப்பதை நாங்கள் கண்டோம்.(27) மதங்கொண்ட யானையைப் போன்றவனான பீமசேனன், அந்த ஆனைகளைக் கண்டு, உறுதிமிக்கத் தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தண்டந்தரித்த யமனைப் போலத் தன் தேரில் இருந்து கீழே குதித்து அவற்றை நோக்கி விரைந்து சென்றான்.(28) பாண்டவர்களில் பெரும் தேர்வீரனான அவன் {பீமன்}, உயர்த்தப்பட்ட கதாயுதத்துடன் வருவதைக் கண்ட உமது படைவீரர்கள் அச்சத்தால் நிரம்பியவர்களாக மலமும், சிறுநீரும் கழித்தனர்.(29) அப்போது நாங்கள், பீமனின் கதாயுதத்தால் மத்தகம் பிளக்கப்பட்டு, அங்கமெல்லாம் குருதியால் நனைக்கப்பட்டு அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டிருப்பவையாக மலைகளைப் போன்ற அந்தப் பெரிய யானைகளைக் கண்டோம்.(30)

பீமனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட அந்த யானைகள், வலியால் கதறிக் கொண்டே அவனிடம் இருந்து அப்பால் ஓடிச்சென்று, சிறகிழந்த மலைகளைப் போலக் கீழே விழுந்தன.(31) மத்தகம் பிளக்கப்பட்டு அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருப்பவையோ, கீழே விழுந்து கொண்டிருப்பவையோவான அந்த யானைகள் எண்ணிக்கையில் பலவாக இருப்பதைக் கண்டு உமது படைவீரர்கள் அச்சத்தை அடைந்தனர்.(32) பிறகு, யுதிஷ்டிரனும், மாத்ரியின் இரு மகன்களும் {நகுல, சகாதேவன்} கோபத்தால் நிறைந்து, கழுகின் இறகுகளாலான சிறகுகளைக் கொண்ட கணைகளால் அந்த யானைவீரர்களைக் கொல்லத் தொடங்கினர்.(33) போரில் தோல்வியடைந்த (குரு) மன்னன் {துரியோதனன்} அவ்விடத்தில் இருந்து குதிரையின் முதுகிலேறி தப்பிச் சென்ற பிறகு, (கௌரவ) யானைகளால் பாண்டவர்கள் அனைவரும் சூழப்பட்டிருப்பதைத் திருஷ்டத்யும்னன் கண்டான்.(34) ஓ! ஏகாதிபதி, பாஞ்சால மன்னனின் மகனான திருஷ்டத்யும்னன் இதைக் கண்டு, அந்த யானைகள் அனைத்தையும் கொல்ல விரும்பி அவற்றை நோக்கிச் சென்றான்.(35)

அதேவேளையில், தேர்ப்படைக்கு மத்தியில் துரியோதனனைக் காணாதவர்களான அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர், “துரியோதனன் எங்குச் சென்றுவிட்டான்?” என்று அங்கே இருந்த க்ஷத்திரியர்கள் அனைவரிடமும் கேட்டனர்.(36) அந்தப் பேரழிவுக்கு மத்தியில் மன்னனை {துரியோதனனைக்} காணாதவர்களான அந்தப் பெரும் தேர்வீரர்கள் அனைவரும், உமது மகன் கொல்லப்பட்டதாக நினைத்தனர். எனவே, துன்பம் நிறைந்த முகங்களுடன் அவர்கள் அவனைக் குறித்து விசாரித்தனர்.(37) அவனுடைய சாரதி வீழ்ந்ததும் அவன் {துரியோதனன்} சுபலனின் மகனிடம் {சகுனியிடம்} சென்று விட்டதாகச் சிலர் அவர்களிடம் சொன்னார்கள்.(38) காயங்களுடன் அங்கே மிகவும் சிதைக்கப்பட்டிருந்த சில க்ஷத்திரியர்கள், “துரியோதனனால் இங்கே என்ன தேவை இருக்கிறது? அவன் இன்னும் உயிரோடிருந்தால் பாருங்கள். ஒற்றுமையுடன் நீங்கள் அனைவரும் போரிடுவீராக. மன்னன் உங்களுக்கு என்ன செய்யப் போகிறான்?” என்று சொன்னார்கள்.(39)

மிகவும் சிதைக்கப்பட்டவர்களும், தங்கள் உறவினர்கள் பலரை இழந்தவர்களும், எதிரியின் கணைகளால் இன்னும் பீடிக்கப்பட்டுக் கொண்டிருந்தவர்களுமான வேறு சில க்ஷத்திரியர்கள், “நம்மைச் சூழ்ந்திருக்கும் இந்தப் படைகளைக் கொல்வோம். யானைகளைக் கொன்றதும் பாண்டவர்கள் இங்கே வருகிறார்கள் பாருங்கள்” என்று தெளிவற்ற வார்த்தைகளைச் சொன்னார்கள்.(40,41) அவர்களுடைய இவ்வார்த்தைகளைக் கேட்ட அஸ்வத்தாமன், பாஞ்சால மன்னனின் தடுக்கப்படமுடியாத படையைத் துளைத்துக் கொண்டு, கிருபருடனும், கிருதவர்மனுடனும் சேர்ந்து சுபலனின் மகன் {சகுனி} இருக்குமிடத்திற்குச் சென்றான். உண்மையில், உறுதிமிக்க வில்லாளிகளான அந்த வீரர்கள் தேர்ப்படையை விட்டுவிட்டு (துரியோதனனைத் தேடி) சென்றனர்.(42,43) அவர்கள் அங்கிருந்த சென்ற பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யுமன்ன தலைமையிலான பாண்டவர்கள் தங்கள் எதிரிகளைக் கொல்லத் தொடங்கினர்.(44) வீரமும், துணிச்சலும் கொண்டவர்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அவர்களை உற்சாகமாக விரைவதைக் கண்டவர்களும், முகம் வெளிறியவர்களுமான உமது துருப்பினர், தங்கள் உயிர்களில் நம்பிக்கையிழந்தனர்.(45)

கிட்டத்தட்ட ஆயுதங்களை இழந்தவர்களும், (எதிரியால்) சூழப்பட்டவர்களுமான நமது படைவீரர்களைக் கண்டவனும், இரு வகைப் படைகளை மட்டுமே கொண்டவனுமான {சஞ்சயனாகிய} நான், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயிரைத் துச்சமாக மதித்து,(46) நமது படையின் ஐந்து தலைவர்களுடன் சேர்ந்து கொண்டு, சரத்வான் மகன் {கிருபர்} நின்று கொண்டிருந்த இடத்தில் நம் மனிதர்களை நிறுத்தி, பாஞ்சால இளவரசனின் {திருஷ்டத்யும்னனின்} படைகளோடு போரிட்டேன்.(47) கிரீடியின் {அர்ஜுனனின்} கணைகளால் நாங்கள் பீடிக்கப்பட்டோம். இருப்பினும், எங்களுக்கும், திருஷ்டத்யும்னனின் படைப்பிரிவுக்கும் இடையில் ஒரு கடும்போர் நடந்தது. இறுதியில் பின்னவனால் {திருஷ்டத்யும்னனால்} வெல்லப்பட்ட நாங்கள் அனைவரும் அம்மோதலில் இருந்து பின்வாங்கிச் சென்றோம்.(48) அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி எங்களை எதிர்த்து விரைந்து வருவதை நான் கண்டேன். அந்தப் போரில் நானூறு {400} தேர்களுடன் அந்த வீரன் எங்களைப் பின்தொடர்ந்து வந்தான்.(49) குதிரைகள் களைத்துப் போயிருந்த திருஷ்டத்யும்னனிடம் இருந்து பெருங்கடினத்துடன் தப்பித்த நான், நகரத்திற்குள் வீழும் பாவியைப் போல மாதவனின் {சாத்யகியின்} படைகளுக்கு மத்தியில் விழுந்தேன். அங்கே குறுகிய காலத்திற்குச் சீற்றமும் கடுமையும் கொண்ட ஒரு போர் நடந்தது.(50)

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகி, என்னை உயிரோடு பிடிக்க விரும்பி என் கவசத்தை வெட்டினான். உணர்விழந்தவனாகத் தரையில் கிடந்த என்னை அவன் {சாத்யகி} கைப்பற்றினான் {உயிரோடு பிடித்தான்}.(51) அப்போது குறுகிய காலத்திற்குள்ளாகவே பீமசேனனின் கதாயுதத்தினாலும், அர்ஜுனனின் கணைகளாலும் அந்த யானைப்படையானது அழிக்கப்பட்டது.(52) மலைகளைப் போன்று பெரியவையான அந்த வலிமைமிக்க யானைகள், நொறுங்கிய அங்கங்களுடன் அனைத்துப் பக்கங்களிலும் விழுந்ததன் விளைவால், தங்கள் வழி முற்றிலும் அடைக்கப்பட்டதைப் பாண்டவப் போர்வீரர்கள் கண்டனர்.(53) அப்போது வலிமைமிக்கப் பீமசேனன், ஓ! ஏகாதிபதி, அந்தப் பெரும் யானைகளை இழுத்துத் தள்ளி, பாண்டவர்கள் வெளியே வருவதற்கான வழியை உண்டாக்கினான்.(54) அதேவேளையில், அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர், தேர்ப்படைக்கு மத்தியில் எதிரிகளைத் தண்டிப்பவனான துரியோதனனைக் காணாமல், உமது அரச மகனைத் தேடினர்.(55) அந்தப் பயங்கரப் பேரழிவின் போது, பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனைக்} கைவிட்ட அவர்கள், மன்னனைக் காணும் ஆவலால் சுபலன் மகன் {சகுனி} இருந்த இடத்திற்குச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.(56)

துரியோதனனின் தம்பிகளைக் கொன்ற பீமன்! – சல்லிய பர்வம் பகுதி – 26-எஞ்சியிருந்த துரியோதனனின் தம்பிகள் பீமனை எதிர்த்து வந்தது; பீமனைத் தாக்கிய சுருதர்வன்; துரியோதனனின் தம்பியரில் பதினோரு பேரைக் கொன்ற பீமன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனால் {பீமனால்} அந்த யானைப்படை கொல்லப்பட்ட பிறகு, போரில் பீமசேனனால் உமது படை இவ்வாறு கொல்லப்பட்டபோது,(1) தண்டம் தரித்தவனும், சினத்துடன் கூடியவனுமான, அனைத்தையும் அழிப்பவனுமான அந்தகனைப் போலத் தெரிந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவனைக் கண்டவர்களும்,(2) உடன்பிறந்த சகோதரர்களும், கொல்லப்படாமல் எஞ்சியிருப்பவர்களுமான உமது மகன்கள், குரு குலத்தவனான உமது மகன் துரியோதனன் காணப்படாத அந்த அந்த நேரத்தில் ஒன்றுகூடி பீமசேனனை எதிர்த்து விரைந்தனர்.(3) அவர்கள் துர்மர்ஷணன், சுருதாந்தன், ஜைத்ரன், பூரிபலன், ரவி, ஜயத்சேனன், சுஜாதன், எதிரிகளைக் கொல்பவனான துர்விஷகன்,(4) துர்விமோசனன் என்றழைக்கப்பட்ட ஒருவன், துஷ்பிரசாதன், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான சுருதர்வன் ஆகியோராவர். அவர்கள் அனைவரும் போரில் சாதித்தவர்களாக இருந்தனர்.(5)

இந்த உமது மகன்கள் ஒன்றாகச் சேர்ந்து, பீமசேனனை எதிர்த்து விரைந்து அனைத்துப் பக்கங்களிலும் அவனை அடைத்துக் கொண்டனர்.(6) பிறகு மீண்டும் தன் தேரில் ஏறிக் கொண்ட பீமன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே, உமது மகன்களின் முக்கிய அங்கங்களின் மேல் கூரிய கணைகளை ஏவத் தொடங்கினான்.(7) அந்தப் பயங்கரப் போரில் பீமசேனனின் கணைகளால் மறைக்கப்பட்ட உமது மகன்கள், பாதையில் குறுக்கிடும் யானையை இழுக்கும் மனிதர்களைப் போல அந்தப் போர்வீரனை {பீமனை} இழுக்கத் தொடங்கினர்.(8) சினத்தால் தூண்டப்பட்ட பீமசேனன், ஒரு கத்தித் தலை கணையால் {க்ஷுரப்ரத்தால்} துர்மர்ஷணனின் தலையை வெட்டி விரைவில் அதைப் பூமியில் வீழ்த்தினான்.(9) அடுத்ததாகப் பீமன், அனைத்து கவசங்களையும் ஊடுருவவல்ல மற்றொரு அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்}, வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகன் சுருதாந்தனைக் கொன்றான்.(10)

பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஒரு துணிக்கோல் கணையால் {நாராசத்தால்} ஜயத்சேனனை மிக எளிதாகத் துளைத்து, அந்தக் குரு குலக் கொழுந்தை அவனது தேரில் இருந்து வீழ்த்தினான். ஓ! மன்னா, கீழே விழுந்த அந்த இளவரசனும் உடனே இறந்தான்.(11) இதனால் சினம் தூண்டப்பட்ட உமது மகன் சுருதர்வன், கழுகின் இறகுகளால் சிறகமைந்த ஒரு நூறு நேரான கணைகளால் பீமனைத் துளைத்தான்.(12) அப்போது சினத்தால் எரிந்த பீமன், நஞ்சுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான மூன்று கணைகளால் ஜைத்ரன், ரவி, பூரிபலன் ஆகிய மூவரையும் துளைத்தான்.(13) இவ்வாறு தாக்கப்பட்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், வசந்தகாலத்தில் மலர்ந்திருப்பவையும், (விறகு வெட்டியால்) வெட்டப்படுபவையுமான கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலத் தங்கள் தேர்களில் இருந்து கீழே விழுந்தனர்.(14) பிறகு, அந்த எதிரிகளை எரிப்பவன் {பீமன்}, மிகக் கூர்மையான மற்றொரு அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} கொண்டு துர்விமோசனனைத் தாக்கி, அவனை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(15) இவ்வாறு தாக்கப்பட்ட அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {துர்விமோசனன்}, மலைச்சிகரத்தில் ஓங்கி வளர்ந்த மரம் ஒன்று காற்றால் முறிவதைப் போலத் தன் தேரில் இருந்து கீழே தரையில் விழுந்தான்.(16)

அடுத்ததாக அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, படைகளின் தலைமையில் இருந்த உமது மற்ற மகன்களான துஷ்பிரசாதன் மற்றும் சுஜாதன் ஆகிய இருவரில் ஒவ்வொருவரையும் அந்தப் போரில் இருகணைகளைக் கொண்டு தாக்கினான். அந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட அந்த முதன்மையான தேர்வீரர்கள் இருவரும் கீழே விழுந்தனர்.(17) அடுத்ததாக உமது மற்றொரு மகனான துர்விஷகனை நோக்கி விரைந்த பீமன், அந்தப் போரில் ஓர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்} அவனைத் துளைத்தான். அந்த இளவரசன், வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் தேரில் இருந்து கீழே விழுந்தான்.(18) அந்தப் போரில் தனியொருவனான பீமனால் தன் சகோதரர்களில் பலர் கொல்லப்படுவதைக் கண்ட சுருதர்வன், சினம் கொண்டு, உறுதியானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் வில்லை வளைத்து, சக்தியில் நஞ்சுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான எண்ணற்ற கணைகளை ஏவியபடியே பீமனை நோக்கி விரைந்தான்.(19,20)

அந்தப் பயங்கரப் போரில் பாண்டு மகனின் {பீமனின்} வில்லை வெட்டிய அந்தக் குரு இளவரசன் {சுருதர்வன்}, வில்லற்றவனான பீமனை இருபது கணைகளால் துளைத்தான்.(21) அப்போது, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டவனும் வலிமைமிக்கத் தேர்வீரனுமான பீமசேனன், “நில், நிற்பாயாக” என்று சொன்னபடியே உமது மகனை {சுருதர்வனைக்} கணைகளால் மறைத்தான்.(22) அவ்விருவருக்குள் நடைபெற்ற போரானது, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் வாசவனுக்கு {இந்திரனுக்கு}, அசுரன் ஜம்பனுக்கும் இடையில் நடைபெற்றதைப் போல அழகியதாகவும், கடுமையானதாகவும் இருந்தது.(23) யமனின் மரணக் கோலுக்கு {காலதண்டத்திற்கு} ஒப்பானவையும், அவ்விரு போர்வீரர்களால் ஏவப்பட்டவையுமான கூரிய கணைகளால், பூமி, வானம் மற்றும் திசைப்புள்ளிகள் அனைத்தும் மறைக்கப்பட்டன.(24) அப்போது சினத்தால் நிறைந்த சுருதர்வன், தன் வில்லை எடுத்துக் கொண்டு அந்தப் போரில் பீமசேனனின் கரங்களையும், மார்பையும் கணைகள் பலவற்றால் தாக்கினான்.(25)

வில்தரித்த உமது மகனால் {சுருதர்வனால்} ஆழத்துழைக்கப்பட்ட பீமன், முழு நிலவிலோ {பௌர்ணமியிலோ}, புதுநிலவிலோ {அமாவசையிலோ} கலங்கும் பெருங்கடலைப் போலப் பெருங்கலக்கமடைந்தான்.(26) அப்போது கோபத்தால் நிறைந்தவனான பீமன், ஓ! ஐயா, தன் கணைகளைக் கொண்டு, உமது மகனின் சாரதியையும், நான்கு குதிரைகளையும் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான்.(27) தேரற்றவனான அவனை {சுருதர்வனைக்} கண்டவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தங்கள் கரங்களின் நளினத்தை வெளிக்காட்டியபடியே, சிறகுகள் படைத்த கணைகளால் அவனை மறைத்தான்.(28) அப்போது, தேரற்றவனான சுருதர்வன், ஒரு வாளையும், கேடயம் ஒன்றையும் எடுத்துக் கொண்டான். எனினும், வாளுடனும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான கேடயத்துடனும் அந்த இளவரசன் திரிந்த போது, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஒரு கத்தித் தலைக் கணையால் {க்ஷுரப்ரத்தால்} அவனது {சுருதவர்மனது} தலையைத் தாக்கி, அதைப் பூமியில் வீழ்த்தினான்.(29) அந்தக் கத்தித் தலைக் கணையால் தலையற்றதாகச் செய்யப்பட்ட அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரனின் உடலானது, பேரொலியோல் பூமியை நிறைத்தபடியே தேரில் இருந்து கீழே விழுந்தது[1].(30)

உமது துருப்புகள் அந்த வீரனின் வீழ்ச்சியால் அச்சமடைந்திருந்தாலும், அந்தப்போரில் பீமசேனனுடன் போரிட விரும்பி அவனை எதிர்த்து விரைந்தன.(31) வீரனும், கவசந்தரித்தவனுமான அந்தப் பீமசேனன், கொல்லப்படாமல் எஞ்சியிருந்த அந்தத் துருப்புகளின் பெருங்கடலுக்கு மத்தியில் இருந்து தன்னை நோக்கி வேகமாக விரைந்து வந்த அந்தப் போர்வீரர்களை வரவேற்றான் {எதிர்த்தான்}. அவ்வீரனை அடைந்த அந்தப் போர்வீரர்கள், அவனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.(32) இவ்வாறு உமது போர்வீரர்களால் சூழப்பட்ட பீமன், ஆயிரங்கண் கொண்டவன் {இந்திரன்}, அசுரர்களைப் பீடிப்பதைப் போல, கூரிய கணைகளால் அவர்கள் அனைவரையும் பீடிக்கத் தொடங்கினான்.(33) தேர்க்கூடுகளுடன் கூடிய ஐநூறு {500} பெருந்தேர்களை அழித்த அவன் {பீமன்}, அந்தப் போரில் மீண்டும் எழுநூறு {700} யானைகளைக் கொன்றான்.(34) அடுத்ததாக அந்தப் பாண்டுவின் மகன், தன் வலிமைமிக்கக் கணைகளால் பத்தாயிரம் {10000} காலாட்படைவீரர்களைக் கொன்று, மேலும் எண்ணூறு {800} குதிரைகளையும் கொன்று பிரகாசமானவனாகத் தெரிந்தான்.(35)

உண்மையில், குந்தியின் மகனான அந்தப் பீமசேனன், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகன்களைக் கொன்ற பிறகு, தன் நோக்கம் அடையப்பட்டதாகவும், தன் பிறப்பின் காரணம் நிறைவேறியதாகவும் கருதிக் கொண்டான்.(36) அந்நேரத்தில் உமது துருப்புகள், ஓ! பாரதரே, இவ்வகையில் போரிட்டவனும், உமது மக்களை இவ்வழியில் கொன்றவனுமான அந்தப் போர்வீரனைப் பார்க்கவும் துணியவில்லை.(37) குருக்கள் அனைவரையும் முறியடித்து, அவர்களின் தொண்டர்களையும் கொன்ற பீமன், தன் கக்கங்களை அறைந்து கொண்டதால் உண்டான ஒலியால் பெரும் யானைகளை அச்சுறுத்தினான்.(38) அப்போது, ஓ! ஏகாதிபதி, பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களை இழந்ததும், அப்போதைக்குச் சொற்பமான படைவீரர்களையே கொண்டிருந்ததுமான உமது படையானது, ஓ! மன்னா, மிகவும் உற்சாகமற்றதாக ஆனது” {என்றான் சஞ்சயன்}.(39)

மற்றுமொருவனைக் கொன்ற பீமன்! – சல்லிய பர்வம் பகுதி – 27-திருதராஷ்டிரன் மகன்களில் உயிரோடு எஞ்சியிருந்த இருவர்; அர்ஜுனனிடம் பேசிய கிருஷ்ணன்; திரிகர்த்தப் படையை நோக்கிச் சென்று சுசர்மனைக் கொன்ற அர்ஜுனன்; திருதராஷ்டிரன் மகனான சுதர்சனனைக் கொன்ற பீமன்; பீமனுக்கும் கௌரவப்படைக்கும் இடையில் ஏற்பட்ட போர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது பிள்ளைகளில் இன்னும் கொல்லப்படாதவர்களான துரியோதனன் மற்றும் உமது மகன் சுதர்சனன் ஆகிய இருவர் மட்டுமே அந்நேரத்தில் (கௌரவ) அந்தக் குதிரைப்படைக்கு மத்தியில் இருந்தனர்.(1) அந்தக் குதிரைப்படைக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த துரியோதனனைக் கண்ட தேவகியின் மகன் (கிருஷ்ணன்), குந்தியின் மகனான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்},(2) “நமது பாதுகாப்பைப் பெற்றிருந்த உறவினர்களான பெரும் எண்ணிக்கையிலான நமது எதிரிகள் கொல்லப்பட்டுவிட்டனர். அதோ, சஞ்சயனைக் கைப்பற்றிக் கொண்டு சிநியின் பேரன் {சாத்யகி} திரும்பி வருகிறான்.(3) நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும், ஓ! பாரதா, தார்தராஷ்டிரர்களுடனும், அவர்களின் தொண்டர்களுடனும் போரிட்டு களைத்துப் போயிருக்கின்றனர்.(4) கிருபர், கிருதவர்மன் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான அஸ்வத்தாமன் ஆகியோர் துரியோதனனின் தரப்பைவிட்டு, வேறெங்கோ தங்கள் நிலைகளைக் கொண்டுள்ளனர்.(5) துரியோதனனின் துருப்புகளைக் கொன்றுவிட்டு, அதோ பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, பிரபத்ரகர்களுக்கு மத்தியில் பேரழகுடன் நிற்கிறான்.(6)

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அதோ, தலைக்குமேல் வெண்குடை பிடிக்கப்பட்டு, சுற்றிலும் தன் பார்வையைச் சுழலவிட்டபடியே தன் குதிரைப்படைக்கு மத்தியில் துரியோதனன் நிற்கிறான்.(7) அவன், (எஞ்சியிருக்கும் தன்) படையை மீண்டும் அணிவகுத்திருக்கும் தன் படைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருக்கிறான். உனது கூரிய கணைகளால் இவனைக் கொன்றுவிட்டால், உன் நோக்கங்கள் அனைத்தையும் நீ அடைந்தவனாவாய்.(8) இந்தத் துருப்புகள், தங்களுக்கு மத்தியில் இருக்கும் உன்னைக் கண்டும், தங்கள் யானைப்படையின் அழிவைக் கண்டும் தப்பி ஓடாதவரை, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, நீ துரியோதனனைக் கொல்ல முயற்சிப்பாயாக.(9) யாராவது ஒருவர் பாஞ்சால இளவரசனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} சென்று, அவனை இந்த இடத்திற்கு வரச் சொல்லட்டும். ஓ! ஐயா, கௌரவத் துருப்புகள் அனைத்தும் களைத்துப் போயிருக்கின்றன. பாவியான துரியோதனனால் ஒருபோதும் தப்ப இயலாது.(10) போரில் பெரும் எண்ணிக்கையிலான உன் துருப்புகளைக் கொன்றிருக்கும் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பாண்டவர்கள் வெல்லப்பட்டதாக நம்பி செருக்கை வெளிப்படுத்துகிறான்.(11) அவனது துருப்புகள் பாண்டவர்களால் பீடிக்கப்பட்டு, கொல்லப்பட்டதைக் கண்டு, அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, அவனது அழிவுக்காகவே நிச்சயம் போரிட வருவான்” என்றான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட பல்குனன் {அர்ஜுனன்}, அவனிடம் {கிருஷ்ணனிடம்} மறுமொழியாக,(12)

“ஓ! கௌரவங்களை அளிப்பவனே, திருதராஷ்டிரரின் மகன்களில் கிட்டத்தட்ட அனைவரும் பீமரால் கொல்லப்பட்டுவிட்டனர். இருவர் மட்டுமே இன்னும் உயிருடன் எஞ்சியிருக்கின்றனர். எனினும், ஓ! கிருஷ்ணா, அவர்களும் இன்று தங்கள் அழிவை அடைவார்கள்.(13) பீஷ்மர் கொல்லப்பட்டார், துரோணரும் கொல்லப்பட்டார், வைகர்த்தனன் என்றும் அழைக்கப்படும் கர்ணனும் கொல்லப்பட்டான். மத்ரர்களின் மன்னனான சல்லியர் கொல்லப்பட்டார், ஓ! கிருஷ்ணா, ஜெயத்ரதனும் கொல்லப்பட்டான்.(14) ஓ! கிருஷ்ணா, சுபலனின் மகனான சகுனியின் துருப்புகளில் ஐநூறு குதிரைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஓ! ஜனார்த்தனா, தேர்களில் இன்னும் இருநூறே இருக்கின்றன. உறுதிமிக்க யானைகளில் இன்னும் நூறு மட்டுமே இருக்கின்றன. மூவாயிரம் காலாட்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றனர்.(15) அஸ்வத்தாமர், கிருபர், திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, உலூகன், சகுனி, சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோரும் இன்னும் எஞ்சியிருக்கின்றனர்.(16) இவையே, ஓ! மாதவா {கிருஷ்ணா}, துரியோதனனின் எஞ்சிய படையாக இருக்கின்றன. உண்மையில் இவ்வுலகத்தில் எவராலும் மரணத்தில் இருந்து தப்பிக்க இயலாது.(17)

இவ்வளவு பெரிய பேரழிவு ஏற்பட்டிருந்தாலும், இன்னும் துரியோதனன் உயிரோடிருப்பதைப் பார். எனினும், மன்னன் யுதிஷ்டிரர் இன்று தன் எதிரிகள் அனைவரிடம் இருந்தும் விடுபடுவார். எதிரிகளில் எவரும் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது என்றே நான் கருதுகிறேன்.(18) மனிதர்களைவிடவும் சக்தி வாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பினும், போர்க்களத்தில் இருந்து அவர்கள் தப்பி ஓடாமலிருந்தால், போர் எவ்வளவு மூர்க்கமாக நடைபெற்றாலும் நான் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் கொல்வேன்.(19) இன்றைய போரில் கோபத்தால் நிறையும் நான், என் கூரிய கணைகளால் காந்தார இளவரசனைக் {சகுனியைக்} கொல்வதன் மூலமாக, நீண்ட காலமாக அவதிப்பட்டு வரும் மன்னருடைய {யுதிஷ்டிரருடைய} தூக்கமற்ற நிலையை விலக்குவேன்.(20) சபையில் நடந்த சூதாட்டத்தில் தீய நடத்தை மூலமாக எங்களிடம் இருந்து சுபலனின் மகன் {சகுனி} வென்ற விலைமதிப்புமிக்க அனைத்துப் பொருட்களையும் மீண்டும் நான் வென்றெடுப்பேன்.(21) யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திலிருக்கும் {ஹஸ்தினாபுரத்தில் இருக்கும்} பெண்கள் அனைவரும், பாண்டவர்களின் கரங்களால் தங்கள் கணவர்கள், மகன்கள் ஆகியோர் போரில் கொல்லப்பட்டதைக் கேட்டு உரக்க ஓலமிடப் போகின்றனர்.(22)

ஓ! கிருஷ்ணா, இன்று நமது பணி முடிவை அடையும். இன்று துரியோதனன் சுடர்மிக்கத் தன் செழிப்பனைத்தையும், தன் உயிர் மூச்சையும் கூட விட்டுவிடுவான்.(23) ஓ! விருஷ்ணி குலத்தோனே, இன்று என்னால் தொடுக்கப்படும் போரில் இருந்து அவன் தப்பி ஓடவில்லையெனில், ஓ! கிருஷ்ணா, திருதராஷ்டிரரின் மூட மகன் {துரியோதனன்} இறந்துவிட்டதாகவே கருதிக் கொள்வாயாக.(24) அந்தக் குதிரைகள், என் வில்லின் நாணொலியையும், உன் உள்ளங்கையொலியையும் தாங்கிக் கொள்ள இயலாதவையாக இருக்கின்றன. ஓ! கிருஷ்ணா, அவற்றை நான் கொல்லும் வகையில், நீ அங்கே செல்வாயாக” {என்றான் அர்ஜுனன்}.(25)

பெரும் மனோவலிமை கொண்ட அந்தப் பாண்டுவின் மகனால் இவ்வாறு சொல்லப்பட்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் படைப்பிரிவை நோக்கித் தன் குதிரைகளைத் தூண்டினான்.(26) (துரியோதனன் இருந்த) அந்தப் படையைக் கண்டு, பீமசேனன், அர்ஜுனன் மற்றும் சகாதேவன் ஆகிய மூன்று வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அதைத் தாக்குவதற்காகத் தங்களை ஆயத்தம் செய்து கொண்டு, துரியோதனனைக் கொலும் விருப்பத்தால் உரத்த சிங்க முழக்கம் செய்தபடியே அதை {அந்தப் படையை} எதிர்த்து ஒன்றாக விரைந்து சென்றனர்.(27) உயர்த்திய விற்களுடன் ஒன்றாகச் சேர்ந்து விரைந்து வரும் அம்மூன்று போர்வீரர்களையும் கண்ட சுபலனின் மகன் {சகுனி}, எதிரிகளான பாண்டவர்களை எதிர்த்து அந்த இடத்தை நோக்கிச் சென்றான்.(28) உமது மகன் சுதர்சனன் பீமசேனனை எதிர்த்து விரைந்து சென்றான். சுசர்மனும், சகுனியும் கிரீடியுடன் {அர்ஜுனனுடன்} மோதினார்கள். குதிரையின் முதுகில் இருந்து உமது மகன் துரியோதனன் சகாதேவனை எதிர்த்துச் சென்றான்.(29)

அப்போது உமது மகன் {துரியோதனன்}, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, கவனத்துடனும், பெரும் வேகத்துடனும், பலத்துடனும், ஒரு வேலால் சகாதேவனின் தலையைத் தாக்கினான்.(30) உமது மகனால் இவ்வாறு தாக்கப்பட்ட சகாதேவன், அங்கமெங்கும் குருதியால் குளித்து, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(31) பிறகு, தன் உணர்வுகள் மீண்ட சகாதேவன், ஓ! மன்னா, சினத்தால் நிறைந்து, கூரிய கணைகளால் துரியோதனனை மறைத்தான்.(32) பார்த்தன் என்றும் வேறு பெயரால் அழைக்கப்படுபவனும், தன் ஆற்றலை வெளிப்படுத்தியவனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, குதிரைமுதுகுகளில் இருந்த துணிச்சல்மிக்கப் போராளிகள் பலரின் தலைகளை வெட்டினான்.(33) உண்மையில் அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்}, தனது கூரிய கணைகள் பலவற்றால் அந்த (குதிரைப்) படையை அழித்தான். குதிரைகள் அனைத்தையும் வீழ்த்திய அவன், அடுத்ததாக, திரிகர்த்தர்களின் தேர்களை எதிர்த்துச் சென்றான்.(34) இதன் காரணமாக ஒன்று சேர்ந்த திரிகர்த்தர்களில் பெரும் தேர்வீரர்கள், கணைமாரிகளால் அர்ஜுனனையும், வாசுதேவனையும் மறைத்தனர்.(35)

பெரும்புகழைக் கொண்டவனான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கத்தித் தலைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} சத்தியகர்மனைத் தாக்கி, தன் எதிராளியுடைய தேரின் ஏர்க்கால்களையும் அறுத்தான்.(36) அந்தக் கொண்டாடப்பட்ட வீரன் சிரித்துக் கொண்டே, ஓ! தலைவா, பிரகாசமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன் எதிராளியின் {சத்தியகர்மனின்} தலையை மற்றொரு கத்தித் தலைக் கணையால் அறுத்தான்.(37) அடுத்ததாக அவன், போர்வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பசித்திருந்த சிங்கமொன்று காட்டில் ஒரு மானைத் தாக்குவதைப் போலச் சத்யேஷுவைத் தாக்கினான்.(38) அவனைக் கொன்ற பார்த்தன், மூன்று கணைகளால் சுசர்மனையும் துளைத்து, தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தேர்வீரர்கள் அனைவரையும் கொன்றான்.(39) பிறகு அவன், வெகுகாலம் பேணிக் காக்கப்பட்ட கோபமெனும் கடும் நஞ்சைக் கக்கியபடியே பிரஸ்தலத்தின் ஆட்சியாளனான சுசர்மனை எதிர்த்துப் பெரும் வேகத்தோடு விரைந்தான்.(40)

ஓ! பாரதக் குலத்தின் காளையே, முதலில் ஒரு நூறு கணைகளால் அவனை மறைத்த அர்ஜுனன், பிறகு அந்த வில்லாளியின் குதிரைகள் அனைத்தையும் கொன்றான்.(41) பிறகு, தனது வில்லின் நாண்கயிற்றில், யமதண்டத்திற்கு ஒப்பான வலிமைமிக்கக் கணையொன்றைப் பொருத்திய பார்த்தன் {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே சுசர்மனைக் குறி பார்த்து அவன் மீது வேகமாக அதைத் தொடுத்தான்.(42) கோபத்தால் சுடர்விட்ட அந்த வில்லாளியால் ஏவப்பட்ட அந்தக் கணையானது, சுசர்மனை அடைந்து, அந்தப் போரில் அவனது இதயத்தைத் துளைத்துச் சென்றது.(43) ஓ! ஏகாதிபதி, பாண்டவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியுறச் செய்யும் வகையிலும், உமது போர்வீரர்கள் அனைவரையும் துன்புறச் செய்யும் வகையிலும் அந்தச் சுசர்மன் உயிரை இழந்து பூமியில் விழுந்தான்.(44) அந்தப் போரில் சுசர்மனைக் கொன்ற பார்த்தன், பிறகு பெரும் தேர்வீரர்களான, அந்த மன்னனின் {சுசர்மனின்} முப்பத்தைந்து {35} மகன்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான்.(45) சுசர்மனின் தொண்டர்கள் அனைவரையும் கூரிய கணைகளால் கொன்றவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அர்ஜுனன், எஞ்சியிருக்கும் பாரதப் படையை எதிர்த்துச் சென்றான்.(46)

அந்தப் போரில் சினத்தால் நிறைந்த பீமன், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, சிரித்துக் கொண்டே உமது மகனான சுதர்சனனைக் காணமுடியாதபடி மறைத்தான்.(47) சினத்தால் நிறைந்தவனான அந்தப் பாண்டுவின் மகன், சிரித்துக் கொண்டே, பெரும் கூர்மை கொண்ட கத்தித் தலைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} தன் எதிராளியின் {சுதர்சனனின்} தலையைக் கொய்தான்[1].(48) அந்த (குரு) வீரனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்தப் போரில் அவனது {சுதர்சனனின்} தொண்டர்கள் பீமனைச் சூழ்ந்து கொண்டு கூரிய கணைகளின் மாரியை அவன் மீது ஏவினார்கள்.(49) எனினும் விருகோதரன் {பீமன்}, தன்னைச் சுற்றிலும் மறைத்திருந்த படையை, இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட தன் கூரிய கணைகளால் மறைத்தான். ஓ பாரதக் குலத்தின் காளையே, மிகக் குறுகிய காலத்திற்குள்ளாவே பீமன் அவர்கள் அனைவரையும் கொன்றான்.(50)

இவ்வாறு அழிவை அடைந்து கொண்டிருந்தபோது, பெரும் வலிமை கொண்ட கௌரவ வீரர்கள் பலர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமனை அணுகி அவனோடு போரிடத் தொடங்கினர்.(51) அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஓ! மன்னா, தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் மறைத்தான். அதேபோலவே, ஓ! ஏகாதிபதி, உமது வீரர்களும் அனைத்துப்பக்கங்களில் இருந்தும் பாண்டவர்களில் பெரும் தேர்வீரர்களை மறைத்தனர்.(52) அப்போது இரு தரப்பைச் சேர்ந்த போர்வீரர்கள் அனைவரும், இவ்வாறு ஒருவரோடொருவர் போரிட்டபடியே மிகவும் கலக்கமடைந்தனர்.(53) ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இரு படைகளின் போராளிகளும், ஓ! மன்னா, (இறந்து போன) தங்கள் உறவினர்களுக்காக உரத்த ஓலமிட்டபடியே கீழே விழத் தொடங்கினர்” {என்றான் சஞ்சயன்}.(54)

சகுனியையும், உலூகனையும் கொன்ற சகாதேவன்! – சல்லிய பர்வம் பகுதி – 28-காதேவனை எதிர்த்து வந்த சகுனி; பீமனோடு மோதிய சகுனியும், உலூகனும்; போர்க்களத்தின் கோரநிலை; சகாதேவனைத் தாக்கிய உலூகன்; படைவீரர்களுக்கு உற்சாகமூட்டிய துரியோதனன்; உலூகனின் தலையைக் கொய்த சகாதேவன்; சகுனி ஏவிய ஆயுதங்களைக் கலங்கடித்த சகாதேவன்; சகுனியைக் கொன்ற சகாதேவன்; காண்டீவத்தின் நாணொலி கேட்டு அஞ்சி ஓடிய வீரர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுக்கு அழிவைத் தந்த அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுபலனின் மகனான சகுனி, சகாதேவனை எதிர்த்து விரைந்தான்.(1) வீரச் சகாதேவனோ, சகுனி தன்னை நோக்கி வேகமாக விரைந்தபோது, பூச்சிக்கூட்டங்களைப் போன்ற எண்ணற்ற வேகமான கணைமாரியை அந்தப் போர்வீரனின் {சகுனியின்} மீது ஏவினான்.(2) அந்த நேரத்தில் உலூகனும் பீமனோடு மோதி, பத்து கணைகளால் அவனைத் துளைத்தான். அதேவேளையில் மூன்று கணைகளால் பீமனைத் துளைத்த சகுனி, ஓ! ஏகாதிபதி, தொண்ணூறால் சகாதேவனை மறைத்தான்.(3) உண்மையில், போரில் ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட அந்த வீரர்கள், கங்க மற்றும் மயில் இறகுகளைக் கொண்டவையும், தங்கத்தாலான சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கள் காதுவரை இழுக்கப்பட்ட நாண்கயிறுகளில் இருந்து ஏவப்பட்டவையுமான கூரிய கணைகள் பலவற்றால் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர்.(4) அவர்களின் விற்களில் இருந்தும், கரங்களில் இருந்தும் ஏவப்பட்ட அந்தக் கணைமாரிகள், ஓ! ஏகாதிபதி, மேகத்தில் இருந்து பொழியும் அடர்த்தியான மழைப்பொழிவைப் போலத் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தன.(5)

அப்போது சினத்தால் நிறைந்தவனான பீமன் மற்றும் பெரும் வீரம் கொண்டவனான சகாதேவன் ஆகிய இருவரும், பெரும் வலிமையைக் கொண்டவர்களாக, மிகப் பெரும் பேரழிவையுண்டாக்கியபடி அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தனர்.(6) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் படையானது, அவ்விரு வீரர்களால் ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான கணைகளால் மறைக்கப்பட்டது. அதன் காரணமாகக் களத்தில் பல பகுதிகளில் ஆகாயமானது இருளால் மறைக்கப்பட்டது.(7) ஓ! ஏகாதிபதி, கணைகளால் மறைக்கப்பட்ட குதிரைகள், ஓடிக்கொண்டிருந்த பெரும் எண்ணிக்கையிலான போராளிகளை இழுத்துச் சென்று, அவர்கள் கொல்லப்பட்டதன் விளைவாக, போர்க்களத்தில் உள்ள பல பகுதிகளின் வழித்தடங்கள் முற்றாக மறைக்கப்பட்டன.(8) சாரதிகளுடன் கொல்லப்பட்ட குதிரைகள், உடைந்த கேடயங்கள், வேல்கள், வாள்கள், ஈட்டிகள், சூலங்கள் ஆகியவற்றால் சுற்றிலும் மறைக்கப்பட்ட பூமியானது, மலர்களால் மூடப்பட்டுக் கிடப்பதைப் போலப் பலவண்ணங்களில் தென்பட்டது.(9) ஒருவரோடொருவர் மோதிக்கொண்டு, போரில் திரிந்து கொண்டிருந்த போராளிகள், ஓ! மன்னா, கோபத்தால் நிறைந்து ஒருவரையொருவர் கொன்றனர்.(10)

விரைவில் அந்தப் போர்க்களமானது, காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், கோபத்தில் கண்கள் புரண்டு, சினத்தால் உதடுகள் கடிக்கப்பட்ட நிலையில் இருந்த முகங்களால் அருளப்பட்டவையுமான தலைகளால் மறைக்கப்பட்டதாயிற்று.(11) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் யானைகளின் துதிக்கைகளுக்கு ஒப்பானவையும், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், தோலுறைகளால் மறைக்கப்பட்டவையும், வாள்களையும், வேல்களையும், போர்க்கோடரிகளையும் இன்னும் பிடித்துக் கொண்டிருந்தவையுமான போர்வீரர்களின் வெட்டப்பட்ட கரங்களாலும்,(12) எழுந்து நின்ற நிலையில், இரத்தம் சிந்தியபடி களத்தில் ஆடிக் கொண்டிருந்த தலையற்ற உடல்களாலும் மறைக்கப்பட்டும், ஊனுண்ணும் பல்வேறு விலங்குகளால் மொய்க்கப்பட்டும், ஓ! தலைவா, பூமியானது பயங்கரத் தன்மையை வெளிப்படுத்தியது.(13) பாரதப் படையானது எஞ்சிய சிறு குழுவாகக் குறைக்கப்பட்ட பிறகு, அந்தப் பயங்கரப் போரில் மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவர்கள், கௌரவர்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பத் தொடங்கினர்.(14)

அதே வேளையில், வீரனான சுபலன் மகனின் {சகுனியின்} வீரமகன் {உலூகன்}, ஒரு வேலால் {பராசத்தால்} சகாதேவனின் தலையை மிகப் பலமாகத் தாக்கினான்.(15) அந்த அடியின் விளைவால் மிகவும் கலக்கமடைந்த சகாதேவன், ஓ! ஏகாதிபதி, கீழே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(16) சகாதேவனை அந்த அவலநிலையில் கண்ட வீரப் பீமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து மொத்த குரு படையையும் தடுத்தான்.(17) அவனது துணிக்கோல் கணைகளால் {நாராசங்களால்} பகைவீரர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் துளைத்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {பீமன்}, அவர்களைத் துளைத்தபிறகு சிங்க முழக்கம் செய்தான்.(18) அந்த முழக்கத்தால் அச்சமடைந்த சகுனியின் தொண்டர்கள், தங்கள் குதிரைகள் மற்றும் யானைகளுடன் அச்சத்தால் அவசரமாக அங்கிருந்து தப்பி ஓடினர்.(19)

அவர்கள் பிளந்தோடுவதைக் கண்ட மன்னன் துரியோதனன், அவர்களிடம், “அறநெறியறியா க்ஷத்திரியர்களே, நிற்பீராக. போரிடுவீராக. தப்படி ஓடுவதால் என்ன பயன்? புறமுதுகிடாமல் போரில் உயிர்மூச்சை விடும் வீரன், இங்கேயும் புகழை அடைந்து, இதன்பிறகும் அருள் உலகங்களில் மகிழ்கிறான்” என்றான்.(20) இவ்வாறு மன்னனால் உற்சாகமூட்டப்பட்ட சுபலன் மகனின் {சகுனியின்} தொண்டர்கள், மரணத்தையே தங்கள் இலக்காக்கிக் கொண்டு பாண்டவர்களை எதிர்த்து மீண்டும் விரைந்தனர்.(22) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அப்படி விரைந்து வந்த போர்வீரர்களால் உண்டாக்கப்பட்ட ஒலியானது, கலங்கிய கடலுக்கு ஒப்பாகப் பயங்கரமானதாக இருந்தது.(23) ஓ! ஏகாதிபதி, போரில் இவ்வாறு முன்னேறிவரும் சுபலன் மகனின் {சகுனியின்} தொண்டர்களைக் கண்டவர்களும், வெற்றியாளர்களுமான பாண்டவர்கள் அவர்களை எதிர்த்துச் சென்றனர்.(24) சிறிது ஆறுதலையடைந்தவனும், வெல்லப்படமுடியாதவனுமான சகாதேவன், ஓ! ஏகாதிபதி, பத்து கணைகளால் சகுனியையும், மூன்றால் அவனது குதிரைகளையும் துளைத்தான். பிறகு அவன், பெரும் எண்ணிக்கையிலான வேறு சில கணைகளால் சுபலன் மகனின் {சகுனியின்} வில்லை மிக எளிதாக வெட்டினான்.(25) எனினும், போரில் வெல்லப்பட முடியாதவனான சகுனி, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு அறுபது கணைகளால் நகுலனையும், அடுத்தது ஏழால் பீமசேனனையும் துளைத்தான்.(26)

உலூகனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் தன் தந்தையை {சகுனியைக்} காக்க விரும்பி, ஏழு கணைகளால் பீமனையும், எழுபதால் சகாதேவனையும் துளைத்தான்.(27) அம்மோதலில் பீமசேனன், பல கூரிய கணைகளால் உலூகனையும், அறுபத்துநான்கால் சகுனியையும், அவர்களைச் சுற்றிப் போரிட்டுக் கொண்டிருந்த பிற போர்வீரர்கள் ஒவ்வொருவரையும் மும்மூன்றாலும் துளைத்தான்.(28) எண்ணெயில் தோய்க்கப்பட்ட கணைகளைக் கொண்டு பீமசேனனால் தாக்கப்பட்ட கௌரவர்கள், அந்தப் போரில் சினத்தால் நிறைந்து, மின்னலால் சக்தியூட்டப்பட்ட மேகங்கள் மலைச்சாரில் மழையைப் பொழிவதைப் போலக் கணைமாரிகளால் சகாதேவனை மறைத்தனர்.(29)

அப்போது, வீரச் சகாதேவன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன்னை எதிர்த்து வந்த உலூகனின் தலையை ஓர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்} கொய்தான்.(30) சகாதேவனால் கொல்லப்பட்ட உலூகன், அந்தப் போரில் பாண்டவர்களை மகிழ்வித்தபடியே, தன் அங்கங்கள் அனைத்தும் குருதியில் குளித்த நிலையில், தனது தேரில் இருந்து கீழே பூமியில் விழுந்தான்.(31) தன் மகன் {உலூகன்} கொல்லப்பட்டதைக் கண்ட சகுனி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கண்ணீரால் தடைபட்ட குரலுடனும், நீண்ட பெருமூச்சுகளை விட்டபடியும் விதுரனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.(32) கண்ணீர் நிறைந்த கண்களுடன் ஒரு கணம் சிந்தித்த சகுனி, கடுமூச்சுவிட்டபடியே சகாதேவனை அணுகி, அவனை மூன்று கணைகளால் துளைத்தான்.(33) சுபலன் மகனால் {சகுனியால்} ஏவப்பட்ட அந்தக் கணைகளைக் கணைமாரிகளால் கலங்கடித்த அந்த வீரச் சகாதேவன், ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் தன் எதிராளியின் {சகுனியின்} வில்லை அறுத்தான்.(34)

தன் வில்லானது வெட்டப்பட்டதைக் கண்டவனும், சுபலனின் மகனுமான சகுனி, ஓ! மன்னா, உறுதியான ஒரு வாளை எடுத்துக் கொண்டு, அதைச் சகாதேவன் மீது வீசினான்.(35) எனினும் பின்னவன் {சகாதேவன்}, ஓ! ஏகாதிபதி, அம்மோதலில் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த சுபலன் மகனின் {சகுனியின்} அந்தப் பயங்கரமான வாளை மிக எளிதாக இரண்டு துண்டுகளாக வெட்டினான்.(36) தன் வாளானது இரண்டாக வெட்டப்பட்டதைக் கண்ட சகுனி, உறுதிமிக்கக் கதாயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதைச் சகாதேவன் மீது வீசினான். அந்தக் கதாயுதமும், தன் இலக்கை அடையமுடியாமல் பூமியில் விழுந்தது.(37) இதன் பிறகு சினத்தால் நிறைந்தவனான அந்தச் சுபலன் மகன் {சகுனி}, எதிர்வரும் கால இரவுக்கு ஒப்பான பயங்க ஈட்டி ஒன்றை அந்தப் பாண்டு மகனின் {சகாதேவனின்} மீது வீசினான்.(38) அம்மோதலில் சகாதேவன், தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கும் அந்த ஈட்டியைத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் கணைகளைக் கொண்டு மூன்று துண்டுகளாக மிக எளிதாக வெட்டி வீழ்த்தினான்.(39) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், துண்டுகளாக வெட்டப்பட்டதுமான அந்த ஈட்டியானது ஆகாயத்தில் இருந்து விழும் ஒரு சுடர்மிக்க வஜ்ரத்தைப் போலப் பல கீற்றுகளாகச் சிதறியபடியே பூமியில் விழுந்தது.(40)

அந்த ஈட்டியானது கலங்கடிக்கப்பட்டதைக் கண்டு அச்சத்தால் பீடிக்கப்பட்ட சுபலனின் மகனும் {சகுனியும்}, உமது துருப்பினர் அனைவரும் அச்சத்துடன் அங்கிருந்து தப்பி ஓடினர்.(41) அப்போது வெற்றியில் ஆவலோடு இருந்த பாண்டவர்கள் உரத்த கூச்சல்களை வெளியிட்டனர். தார்தராஷ்டிரர்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட அவர்கள் அனைவரும் போரில் இருந்து புறமுதுகிட்டனர்.(42) உற்சாகமற்றவர்களாக அவர்களைக் கண்ட மாத்ரியின் அந்த வீரமகன் {சகாதேவன்} அந்தப் போரில் பல்லாயிரம் கணைகளால் அவர்களைத் தடுத்தான்.(43) அப்போது சகாதேவன், வெற்றியடையும் எதிர்பார்ப்பில் ஓடிக் கொண்டிருந்தவனும், காந்தாரர்களின் சிறந்த குதிரைப்படையால் பாதுகாக்கப்பட்டவனுமான சுபலனின் மகனை {சகுனியை} வந்தடைந்தான்.(44) ஓ! மன்னா, தன் பங்காக ஒதுக்கப்பட்ட அந்தச் சகுனி இன்னும் உயிரோடிருப்பதை நினைத்துப் பார்த்த சகாதேவன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தேரில் அந்தப் போர்வீரனைப் பின்தொடர்ந்து சென்றான்.(45)

உறுதிமிக்கத் தன் வில்லுக்கு நாண்பொருத்திக் கொண்டு, அதை மிகப் பலமாக வளைத்த சகாதேவன், சினத்தால் நிறைந்து, அந்தச் சுபலன் மகனைப் {சகுனியைப்} பின்தொடர்ந்து சென்று, கூர்முனை வேல்களால் வலிமைமிக்க யானையொன்றைத் தாக்கும் ஒரு மனிதனைப் போல, கழுகின் இறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கணைகள் பலவற்றால் அவனை மூர்க்கமாகத் தாக்கினான்.(46) பெரும் மனோவலிமை கொண்ட சகாதேவன், இவ்வாறு தன் எதிரியைப் பீடித்து, (அவனுடைய கடந்த காலக் கெடுசெயல்களை) அவனது மனத்திற்கு நினைவூட்டும்படி இந்த வார்த்தைகளால்: “க்ஷத்திரியக் கடமைகளை நோற்று (என்னோடு) போரிடுவீராக. ஆண்மையோடிருப்பீராக.(47) ஓ! மூடரே, சபைக்கு மத்தியில் பகடையில் சூதாடும்போது நீர் மிகவும் மகிழ்ந்தீர். ஓ! தீய அறிவைக் கொண்டவரே, அச்செயலின் கனியை இப்போது பெறுவீராக.(48) அப்போது எங்களைக் கேலிபேசிய தீய ஆன்மாக்களைக் கொண்டோர் அனைவரும் அழிந்துவிட்டனர். குலத்தில் இழிந்தவனான துரியோதனனும், அவனது தாய்மாமனான நீரும் மட்டுமே இன்னும் உயிரோடிருக்கிறீர்கள்.(49) ஒரு தடியைக் கொண்டு மரத்தின் கனியைக் கொய்யும் ஒரு மனிதனைப் போல நான் என் கத்தித் தலைக் கணை ஒன்றைக் கொண்டு தலையைக் கொய்து இன்றும்மைக் கொல்லப் போகிறேன்” என்றான்.(50)

பெரும் வலிமை கொண்ட மனிதர்களில் புலியான அந்தச் சகாதேவன் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, சினத்தால் நிறைந்து, சகுனியை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(51) போர்வீரர்களில் முதன்மையானவனும், வெல்லப்படமுடியாதவனுமான அந்தச் சகாதேவன், கோபத்தால் எரித்துவிடுபவனைப் போலத் தன் எதிரியை அணுகி, தன் வில்லைப் பலமாக வளைத்து,(52) பத்து கணைகளால் சகுனியையும், நான்கால் அவனது குதிரைகளையும் துளைத்தான். பிறகு அவனது குடை, கொடிமரம், வில் ஆகியவற்றை வெட்டி வீழ்த்திய அவன், ஒரு சிங்கத்தைப் போல முழக்கம் செய்தான்.(53) சகாதேவனால் இவ்வாறு கொடிமரம், வில் மற்றும் குடை ஆகியன வெட்டப்பட்ட அந்தச் சுபலனின் மகன் {சகுனி}, தன் முக்கிய அங்கமெங்கும் கணைகள் பலவற்றால் துளைக்கப்பட்டிருந்தான்.(54) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த வீரச் சகாதேவன், தடுக்கப்படமுடியாத கணைமாரியை சகுனியின் மீது மீண்டுமொருமுறை ஏவினான்.(55)

அப்போது சினத்தால் நிறைந்த அந்தச் சுபலன் மகன் {சகுனி}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வேல் ஒன்றால் சகாதேவனைக் கொல்லும் விருப்பத்துடன் அம்மோதலில் தனியொருவனாகப் பின்னவனை {சகாதேவனை} நோக்கி விரைந்து சென்றான்.(56) எனினும் அந்த மாத்ரியின் மகனோ {சகாதேவனோ}, ஒரு கணத்தையும் இழக்காமல், மூன்று அகன்ற தலைக் கணைகளைக் கொண்டு, போரின் முன்னணியில் வைத்துத் தன் எதிரியின் உயர்த்தப்பட்ட வேலையும், நன்கு பருத்திருந்த அவனது கரங்கள் இரண்டையும் வெட்டி வீழ்த்தி, உரத்த முழக்கம் செய்தான்.(57) பெரும் சுறுசுறுப்பை உடையவனான வீரச் சகாதேவன், கடினமான இரும்பாலானதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதும், கவசமனைத்தையும் ஊடுவவல்லதும், பெரும் வேகத்துடனும், கவனத்துடனும் ஏவப்பட்டதுமான ஓர் அகன்ற தலைக் கணையை {பல்லத்தைக்} கொண்டு தன் எதிரியின் {சகுனியின்} தலையை அவனது உடலில் இருந்து வெட்டி வீழ்த்தினான்.(58) சுபலனின் மகன் {சகுனி}, அந்தப் போரில் பாண்டுவின் மகனால் ஏவப்பட்டதும், பெருங்கூர்மை மற்றும் சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தக் கணையால் தன் தலையை இழந்து கீழே பூமியில் விழுந்தான்.(59) உண்மையில், சினத்தால் நிறைந்த அந்தப் பாண்டுவின் மகன் {சகாதேவன்}, தங்கச் சிறகால் அலங்கரிக்கப்பட்டதும், கல்லில் கூராக்கப்பட்டதும், வேகமாகச் செல்லக் கூடியதுமான அக்கணையைக் கொண்டு குருக்களின் தீய கொள்கைக்கு வேராக இருந்த அந்தத் தலையைத் தாக்கி வீழ்த்தினான்.(60) முக்கிய அங்கமெங்கும் ஊனீராக நனைந்தபடி தரையில் கிடக்கும் தலையற்ற சகுனியைக் கண்ட உமது போர்வீரர்கள், அச்சத்தால் பலவீனர்களாகி, தங்கள் கைகளில் ஆயுதங்களுடன் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(61)

அந்த நேரத்தில் தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியவற்றுடன் கூடிய உமது மகன்கள், காண்டீவத்தின் நாணொலியைக் கேட்டு முற்றிலும் பிளந்தவர்களாக, நிறமற்ற முகங்களைக் கொண்டவர்களாக, அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களாக, தங்கள் உணர்வுகளை இழந்தவர்களாகத் தப்பி ஓடினார்கள்.(62) சகுனியை அவனது தேரில் இருந்து வீசியெறிந்த பிறகு, ஓ! பாரதரே, அந்தப் பாண்டவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். தங்களுக்கு மத்தியில் இருந்த கேசவனுடன் மகிழ்ந்த அவர்கள், அந்தப் போரில் தங்கள் துருப்புகளுக்கு மகிழ்வூட்டும்படி தங்கள் சங்குகளை முழக்கினர்.(63) மகிழ்ச்சியான இதயங்களுடன் கூடிய அவர்கள், “ஓ! வீரா, தீய ஆன்மா மற்றும் தீய வழிகளைக் கொண்டவனான சகுனி, அவனுடைய மகனுடன் சேர்த்து உன்னால் கொல்லப்பட்டது நற்பேறாலேயே {பாக்கியத்தினாலேயே}” என்று சொல்லி சகாதேவனை வழிபட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(64)

சல்லிய வத பர்வம் முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  துரோண பர்வம்-துரோண வதப் பர்வம் –

October 15, 2025

படைகளை உறங்க அனுமதித்த அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 184-துரோணரைத் தடுக்க, திருஷ்டத்யும்னனைத் தூண்டிய யுதிஷ்டிரன்; துரோணரை எதிர்த்து பாண்டவத் தலைவர்கள் அனைவரும் விரைவது; துரியோதனனும், பிறரும் துரோணரைக் காக்க வருவது; இரு படைகளுக்கும் இடையிலான கடும் போர்; போர்வீரர்களைத் தூங்க அனுமதித்த அர்ஜுனன்; அர்ஜுனனின் இந்தக் கருணைக்கு அவனை வாழ்த்திய கௌரவத் துருப்புகள்; போராளிகள் அனைவரும் போர்க்களத்திலேயே உறங்குவது; சந்திரன் உதித்து இருளை விலக்கியது; உறக்கத்தில் இருந்து எழுந்த இரு படைகளும் போருக்குத் தயாராவது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வியாசரால் இப்படிச் சொல்லப்பட்டவனும், நீதிமானுமான வீர மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கர்ணனைத் தானே சென்று கொல்லும் முயற்சியில் இருந்து விலகினான்.(1) எனினும், அவ்விரவில் சூதன் மகனால் {கர்ணனால்} கடோத்கசன் கொல்லப்பட்டதன் விளைவால், துயராலும், கோபத்தாலும் அம்மன்னன் {யுதிஷ்டிரன்} நிறைந்தான்.(2)

உமது பரந்த படையானது பீமனால் தடுக்கப்பட்டதைக் கண்ட யுதிஷ்டிரன், திருஷ்டத்யும்னனிடம், “குடத்தில் பிறந்தவரை {துரோணரைத்} தடுப்பாயாக.(3)  ஓ! எதிரிகளை எரிப்பவனே, கவசம்பூண்டவனாக, வில், கணைகள் மற்றும் வாள் தரித்தவனாகத் துரோணரின் அழிவுக்காகவே நீ நெருப்பில் இருந்து உதித்தாய்.(4) உற்சாகத்துடன் போரிட விரைவாயாக, உனக்கு எந்த அச்சமும் தேவையில்லை. ஜனமேஜயன்[1], சிகண்டி, துர்முகனின் மகன், யசோதரன்[2] ஆகியோர்(5) குடத்தில் பிறந்தவரை {துரோணரை} எதிர்த்து அனைத்துப்பக்கங்களிலும் விரையட்டும். நகுலன், சகாதேவன், திரௌபதியின் மகன்கள், பிரபத்ரகர்கள்,(6) மகன்கள் மற்றும் சகோதரர்களுடன் கூடிய துருபதரும், விராடரும், சாத்யகி, கைகேயர்கள், பாண்டவர்கள், தனஞ்சயன் {அர்ஜுனன்},(7) ஆகியோர் அனைவரும் பரத்வாஜர் மகனை {துரோணரைக்} கொல்லும் விருப்பத்தோடு அவரை எதிர்த்து வேகமாக விரையட்டும். நமது தேர்வீரர்கள் அனைவரும், நாம் கொண்டுள்ள யானைகள் மற்றும் குதிரைகள் அனைத்தும், நமது காலாட்படைவீரர்கள் அனைவரும், வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரைப் போரில் வீழ்த்தட்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}.இப்படிப் பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {யுதிஷ்டிரனால்} ஆணையிடப்பட்ட அவர்கள் அனைவரும்,(9) குடத்தில் பிறந்தவரை {துரோணரைக்} கொல்ல விரும்பி, அவரை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தனர். எனினும் ஆயுதம் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான துரோணர், தன்னை நோக்கித் திடீரெனப் பெரும்பலத்துடனும், விடாமுயற்சியுடனும் விரைந்து வந்த அந்தப் பாண்டவப் போர்வீரர்கள் அனைவரையும் போரில் எதிர்கொண்டு வரவேற்றார். அப்போது துரோணரின் உயிரைக் காக்க விரும்பியவனும், கோபத்தால் நிறைந்தவனுமான மன்னன் துரியோதனன், பெரும்பலத்துடனும், விடாமுயற்சியுடனும் பாண்டவர்களை எதிர்த்து விரைந்தான். அப்போது ஒருவரை நோக்கி ஒருவர் முழங்கிய குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் போர் தொடங்கியது. இரு படைகளின் விலங்குகளும், போர்வீரர்களும் மிகவும் களைத்திருந்தனர். போர் முயற்சியால் களைத்துப் போய் உறக்கத்தால் கண்கள் மூடும் நிலையில் இருந்த பெரும் தேர்வீரர்களும் கூட, அப்போது என்ன செய்வது என்பதை அறியாதிருந்தனர். ஒன்பது மணி நேரம்[3] கொண்ட அந்த இரவானது மிகப் பயங்கரமானதாகவும், அச்சந்தருவதாகவும், உயிரினங்களுக்கு அழிவைத் தருவதாகவும், நீடித்துக் கொண்டே[4] இருந்தது.(10-14)இப்படி அவர்கள் ஒருவரையொருவர் சிதைத்துக் கொன்று வருகையில்,(15) அவர்களது கண்களில் உறக்கம் கனமாக குடிகொண்ட போது நடு இரவு ஆகிவிட்டது. க்ஷத்திரியர்கள் அனைவரும் உற்சாகமற்றவர்களாகவும், இதயமற்றவர்களாகவும் {இரக்கமற்றவர்களாகவும்} ஆகிவிட்டனர்.(16) உமது துருப்புகளிடமும், எதிரியுடையவைகளிடமும் மேலும் ஆயுதங்கள் ஏதும் இல்லை. பணிவும், சக்தியும் கொண்டு, தங்கள் வகைக்கான {க்ஷத்திரியக்} கடமைகளை நோற்று வந்த (இரு படைகளின் பெரும்பாலான) போர்வீரர்களும், இப்படியே தங்கள் நேரத்தைக் கடத்தினாலும் தங்கள் படைப்பிரிவுகளைக் கைவிடவில்லை. உறக்கத்தால் குருடான {தூக்க மயக்கத்தில் இருந்த} பிறர், தங்கள் ஆயுதங்களைக் எறிந்துவிட்டு படுத்துக் கொண்டனர்.(17,18) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} சிலர் யானைகளின் முதுகிலும், சிலர் தேர்களிலும், சிலர் குதிரைகளின் முதுகிலும் படுத்தனர். உறக்கத்தால் குருடான {தூக்க மயக்கமடைந்த} அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முற்றிலும் அசைவற்றவர்கள் ஆனார்கள்.(19) அந்தப் போரில் (விழித்திருந்த) பிற போர்வீரர்கள், அவர்களை யமனுலகு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிறர், தங்கள் புலனுணர்வுகளை இழந்து, குறை தூக்க நிலையில் கனவு கண்டு, அனைவரையும் தங்கள் எதிரிகளாக நினைத்துக் கொண்டு தங்கள் எதிரிகளைப் போலவே தங்கள் சொந்த தோழர்களையே கொல்லத் தொடங்கினர். உண்மையில் அவர்கள் அந்தப் பயங்கரப் போரில் பல்வேறு கூச்சல்களை எழுப்பிக் கொண்டே போரிட்டனர்.(20,21) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நமது படையின் வீரர்கள் பலர், எதிரியோடு தொடர்ந்து போரிட விரும்பி, உறக்கத்தால் மயங்கிய கண்களுடனேயே நின்றிருந்தனர்.(22) கருக்கிருட்டான அந்தப் பயங்கர வேளையில், சில துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், உறக்கத்தால் குருடாகியிருந்தாலும், அந்தப்போரில் களத்தில் திரிந்து ஒருவரையொருவர் கொன்று வந்தனர்.(23) எதிரிக்கு மத்தியில் பலர், உறக்க மயக்கத்தால் முழுதாக மலைப்படைந்து (தங்களை நித்தியத்திற்குள் அழைத்துச் சென்ற ஆயுத வெட்டுக்களை உணராமல்) சுயநினைவில்லாத நிலையிலேயே கொல்லப்பட்டனர்.(24)

படைவீரர்களின் இந்நிலையைக் கண்ட பீபத்சு {அர்ஜுனன்}, ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, உரத்த குரலில் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(25) “உங்கள் விலங்குகளுடன் சேர்த்து நீங்கள் அனைவரும், களைத்துப் போய் உறக்கத்தால் குருடாகியிருக்கிறீர்கள் {தூக்க மயக்கத்தை அடைந்திருக்கிறீர்கள்}. வீரர்களே, நீங்கள் இருட்டாலும், புழுதியாலும் மறைக்கப்பட்டிருக்கிறீர்கள்.(26) எனவே, உங்களுக்கு விருப்பமுண்டானால், நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். உண்மையில், இங்கே இந்தப் போர்க்களத்திலேயே சற்று நேரம் உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள்.(27) குருக்களே {கௌரவர்களே}, பாண்டவர்களே, உறங்கி ஓய்வெடுத்த பிறகு, சந்திரன் உதயமாகையில் சொர்க்கத்தை அடையும் பொருட்டு நீங்கள் மீண்டும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளலாம்” என்றான் {அர்ஜுனன்}.(28)

அறம் சார்ந்த அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அறம் சார்ந்த அந்தப் போர்வீரர்கள், அந்தப் பரிந்துரையை ஏற்று, ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு,(29) “ஓ! கர்ணா, ஓ! கர்ணா, ஓ! துரியோதன மன்னா, போரை நிறுத்துவீர். பாண்டவப் படை நம்மைத் தாக்குவதை நிறுத்திவிட்டது” என்று உரக்கச் சொன்னார்கள்.(30) பிறகு பல்குனனால் {அர்ஜுனனால்} உரக்கச் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படையும், உமது படையும், போரில் இருந்து விலகின.(31) உண்மையில், பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்த உன்னத வார்த்தைகள், தேவர்களாலும், உயர் ஆன்ம முனிவர்களாலும், மகிழ்ச்சி அடைந்த படைவீரர்கள் அனைவராலும் மிகவும் பாராட்டப்பட்டன.(32) அந்த அன்பான வார்த்தைகளைப் பாராட்டிய அனைத்துத் துருப்புகளும், ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, களைத்துப் போய் {அங்கேயே} படுத்து உறங்கினார்கள்.(33)

அப்போது உமது அந்தப் படையானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிடைக்கப்போகும் ஓய்வு மற்றும் உறக்கத்தால் மகிழ்ந்து, {அர்ஜுனனிடம்}, “உன்னிடம் வேதங்களும், அனைத்து ஆயுதங்களும் உள்ளன. உன்னிடம் நுண்ணறிவும், ஆற்றலும் உள்ளன. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பாவமற்றவனே, உன்னிடம் நீதியும் {அறமும்}, அனைத்து உயிர்களிடம் கருணையும் உள்ளன. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் ஆறுதலளிக்கப்பட்டதால், நாங்கள் உனக்கு நன்மையை விரும்புகிறோம். செழுமை உனதாகட்டும். ஓ! வீரா, உன் இதயத்துக்கு விருப்பமான பொருள்கள் {நீ விரும்பும் நோக்கங்கள்} அனைத்தும் உனக்கு விரைவில் கிடைக்கட்டும்” என்று சொல்லி அர்ஜுனனை உண்மையாக வாழ்த்தினர்.(34-36) ஓ! மனிதர்களில் புலியே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இப்படி அவனை {அர்ஜுனனை} வாழ்த்திய அந்தப் பெரும் தேர்வீரர்கள், உறக்கத்தால் மயக்கமடைந்து அமைதியடைந்தனர்.(37) சிலர் குதிரைகளின் முதுகுகளிலும், சிலர் தேர்க்கூடுகளிலும், சிலர் யானைகளின் கழுத்துகளிலும், சிலர் வெறுந்தரையிலும் படுத்துக் கொண்டனர்.(38) தங்கள் ஆயுதங்கள், கதாயுதங்கள், வாள்கள், போர்க்கோடரிகள், வேல்கள், ஆகியவற்றுடனும், தங்கள் கவசங்களுடனும் கூடிய பல மனிதர்கள் உறங்குவதற்காக அங்கே தனித்தனியாகப் படுத்துக் கிடந்தனர்.(39)

ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்த யானைகள், புழுதி படிந்தவையும், பாம்பு போன்றவையுமான தங்கள் துதிக்கை நாசித்துளைகளின் மூச்சுக்காற்றால் பூமியைக் குளிரச் செய்தன.(40) உண்மையில், தரையில் மூச்சுவிட்டுக்கிடந்த அந்த யானைகள், சீறுகின்ற பெரும் பாம்புகளோடு கீழே சிதறிக் கிடக்கும் மலைகளைப் போல அழகாகத் தெரிந்தன.(41) தங்கப் பூட்டாங்கயிறுகளைக் கொண்டவையும், நுகத்தடிகளோடு தங்கள் பிடரி மயிர் கலந்தவையுமான குதிரைகள், சமமான தரையைத் தங்கள் குளம்படிகளால் சமமற்றவையாகச் செய்தன.(42) இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒவ்வொருவனும் தான் ஏறி வந்த விலங்குடனே அங்கே உறங்கினான். இப்படியே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மிகவும் களைத்துப் போயிருந்த குதிரைகள், யானைகள் ஆகியனவும், போர்வீரர்களும் போரைத் தவிர்த்து உறங்கத் தொடங்கினர். (43) அப்படி உறங்கிக் கிடந்த படையானது, புலனுணர்வை இழந்து உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் காட்சி, ஓவியம் தீட்டும் திரைச்சீலையில் திறன்மிக்க ஓவியர்களால் வரையப்பட்ட அற்புதமான ஓவியத்தைப் போலத் தெரிந்தது.(44) காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், இளமையுடன் கூடியவர்களும், கணைகளால் சிதைக்கப்பட்ட அங்கங்களுடையவர்களுமான அந்த க்ஷத்திரியர்கள், அழகிய மங்கையரின் பருத்த முலைகளில் கிடப்பதைப் போல, யானைகளின் மத்தகங்களில் படுத்து உறக்கத்தில் மூழ்கினர்.(45)

கண்களுக்கு இனியவனும், அழகிய மங்கையின் கன்னங்களைப் போன்ற வெண்ணல்லிமலர்களின் {ஆம்பல் மலர்களின்} தலைவனுமான சந்திரன், இந்திரனால் ஆளப்படும் திசையை {கிழக்கை} அலங்கரித்தபடியே உதித்தான்[4].(46) உண்மையில், உதய மலைகளின் சிங்கம் ஒன்றைப் போல, பிரகாசமான மஞ்சள் பிடரிமயிர்களுடன் கூடிய தன் கதிர்களை, கிழக்கில் உள்ள தன் குகையில் இருந்து வெளியிட்ட அவன் {சந்திரன்}, யானைகளின் பெருங்கூட்டத்திற்கு ஒப்பான அந்த இரவின் அடர்த்தியான இருளைத் துண்டுகளாகக் கிழித்தெறிந்தான்[5].(47) மகாதேவனுடைய {சிவனுடைய} சிறப்புமிக்கக் காளையின் உடலைப் போன்ற பிரகாசமானவையும், காமனின் வில்லைப் போன்ற ஒளி பொருந்தியவையும், நாணமிக்க மணப்பெண்ணின் உதட்டுப் புன்னகையைப் போல அழகானவையுமான (உலகில் உள்ள) அல்லிக்கூட்டங்கள் அனைத்திற்கும் தலைவன் {சந்திரன்} ஆகாயத்தில் அப்போது மலர்ந்தான்.(48)அப்போது, முயலைத் தன் அடையாளமாகக் கொண்ட அந்தத் தெய்வீகத் தலைவன் {சந்திரன்}, தன் பிரகாசமான கதிர்களைச் சுற்றிலும் பொழிந்தபடி சிவப்பாகத் தன்னை வெளிக்காட்டினான்.(49) உண்மையில், அதன் பிறகு சந்திரன், தங்கத்தின் காந்திக்கு ஒப்பானதும் நெடுந்தொலைவை அடைவதுமான பிரகாசமான ஒளிவட்டத்தைப் படிப்படியாக வெளியிட்டான்.(50) அப்போது அந்த ஒளிக்கோளின் கதிர்கள் தங்கள் காந்தியால் இருளை விலக்கி, மெதுவாக ஆகாயத்திலும், பூமியிலும், திசைப்பகுதிகள் அனைத்திலும் தங்களை மெதுவாகப் பரப்பிக் கொண்டன.(51) எனவே விரைவில் உலகம் ஒளியூட்டப்பட்டது. அனைத்தையும் மறைத்துவைத்திருந்த சொல்லப்பட முடியாத இருள் வேகமாக விலகியது.(52)

இப்படிக் கிட்டத்தட்ட பகல்வெளிச்சத்தைப் போலச் சந்திரனால் உலகம் ஒளியூட்டப்பட்டபோது [6], (போர் அமாவாசையில் தொடங்கியது… 14 நாளாயிற்று…. இவ்விரவு பௌர்ணமியாக இருந்திருக்க வேண்டும்.)இரவில் உலவும் விலங்குகளில் சில தொடர்ந்து சுற்றிக் கொண்டிருந்தன; சில ஒதுங்கிச் சென்றன.(53) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சந்திரனின் கதிர்களால் விழிப்படைந்த அந்தப் படையினர், சூரியனின் கதிர்களால் விரிந்த தாமரைக்கூட்டங்களைப் போல (உயிர்ப்புடன்) மலர்ந்தனர்.(54) உண்மையில், சந்திரன் உதிக்கும்போது, ஆர்ப்பரிக்கும் அலைகளால் பொங்கும் கடலைப் போல அந்த ஒளிக்கோளின் {சந்திரனின்} உதயத்தால் அந்தக் கடல் போன்ற துருப்புகள் விழிப்பையடைந்தன.(55) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உலக மக்கள் தொகையை அழிப்பதற்காகச் சொர்க்கத்தை அடைய விரும்பிய மனிதர்களுக்கு இடையில் பூமியில் மீண்டும் போர் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(56)

“அர்ஜுனன் களைத்தான் என நினைத்தாயோ?” என்ற துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 185-துரோணரை அணுகிய துரியோதனன், தகாத நேரத்தில் பாண்டவப் படையிடம் அவர் காட்டும் கருணையைக் கோபத்துடன் கண்டிப்பது; பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வதாகத் துரோணர் உறுதி கூறுவது; அர்ஜுனனின் வலிமையையும், ஆற்றலின் அளவையும் துரியோதனனுக்கு விளக்கிய துரோணர்; கோபமுற்ற துரியோதனன் அர்ஜுனனைத் தானே கொல்லப்போவதாகச் சொல்வது; துரியோதனனைப் பரிகசித்து, சகுனியைக் கேலி செய்த துரோணர், அஞ்சாமல் அர்ஜுனனுடன் மோதி அவனால் கொல்லப்பட்டுப் புகழை அடையும்படி துரியோதனனிடம் சொன்னது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த நேரத்தில், கோபத்தின் ஆதிக்கத்தில் இருந்த துரியோதனன், துரோணரை அணுகி அவரது மகிழ்ச்சியை அதிகரித்து ஊக்கப்படுத்தவும், அவரது கோபத்தைத் தூண்டவும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(1) துரியோதனன், “இலக்கில் துல்லியமான நம் எதிரிகள் உற்சாகமற்றவர்களாக, கடுமையான உழைப்பால் களைத்தவர்களாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு எந்தக் கருணையும் காட்டப்பட்டிருக்கக்கூடாது.(2) உமக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பியதால், அவர்களை அப்படியே விட்டு நாம் அவர்களுக்குக் கருணை காட்டினோம். எனினும், களைத்துப் போயிருந்த பாண்டவர்கள் (ஓய்வெடுத்த பிறகு) இப்போது வலிமையடைந்திருக்கின்றனர்.(3) நம்மைப் பொறுத்தவரை, அனைத்து வகையிலும் நம் சக்தியையும், பலத்தையும் தற்போது நாம் இழந்து வருகிறோம். பாண்டவர்களோ, உம்மால் பாதுகாக்கப்பட்டு இடையூறின்றிச் செழிப்பை ஈட்டுகிறார்கள்.(4) தெய்வீகமான ஆயுதங்கள் அனைத்தும், பிரம்மனுக்கு உரியவை {ஆயுதங்கள்} அனைத்தும் உம்மிடம் இருக்கின்றன.(5) பாண்டவர்களோ, நாங்களோ, உலகின் வேறு எந்த வில்லாளியோ போரில் ஈடுபடும் உமக்கு ஈடாகமாட்டார்கள் என்று நான் உண்மையாகச் சொல்கிறேன்.(6) ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே {துரோணரே}, நீர் அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவராவீர். உமது தெய்வீக ஆயுதங்களின் மூலம் தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள் அடங்கிய (மூன்று) உலகங்களையும் அழிக்கும் வல்லமை கொண்டவர் நீர் என்பதில் ஐயமில்லை.(7) பாண்டவர்கள் அனைவரும் உம்மைக் கண்டு அஞ்சுகின்றனர். எனினும், அவர்களை உமது சீடர்களாக நினைவுகூர்ந்தோ, ஒரு வேளை என் தீப்பேற்றாலோ அவர்களை நீர் மன்னிக்கிறீர் {பொறுத்துக் கொள்கிறீர்}” என்றான் {துரியோதனன்}.(8)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படி உமது மகனால் {துரியோதனனால்} கண்டிக்கப்பட்டுக் கோபப்படுத்தப்பட்ட துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனிடம் கோபத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(9) “கிழவனே என்றாலும், ஓ! துரியோதனா, நான் என் முழு வலிமையைப் பயன்படுத்தி இன்னும் போரில் முயன்று கொண்டே இருக்கிறேன். இம்மனிதர்கள் அனைவரும் ஆயுதங்களை அறியாதவர்களாக இருக்கிறார்கள். நானோ அவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறேன். வெற்றி மீது கொண்ட விருப்பத்தால், இம்மனிதர்களை நான் கொன்றேன் என்றால், {அதைவிட} நான் செய்வதற்கு வேறு எந்த இழிசெயலும் இருக்காது. எனினும், என் மனத்தில் எது இருக்கிறதோ, ஓ! கௌரவ்யா {துரியோதனா}, அது நல்லதோ, அல்லதோ உன் ஆணையின் பேரில் அதை நான் சாதிப்பேன்.(10,11) அது வேறுவகையாகாது. போரில் என் ஆற்றலை வெளிப்படுத்தி, ஓ! மன்னா {துரியோதனா}, பாஞ்சாலர்கள் அனைவரையும் கொன்றபிறகே நான் என் கவசத்தைக் களைவேன். இதை நான் உனக்கு உண்மையாகவே உறுதியளிக்கிறேன்.

குந்தியின் மகனான அர்ஜுனன் போரில் களைப்படைந்துவிட்டான் என்றா நீ நினைக்கிறாய்?(12,13) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கௌரவா {துரியோதனா}, அவனது {அர்ஜுனனது} உண்மையான ஆற்றலை என்னிடம் கேட்பாயாக. சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} கோபம் தூண்டப்பட்டால், கந்தர்வர்களாலோ, யக்ஷர்களாலோ, ராட்சசர்களாலோ கூட அவனை {அவனது சக்தியைத்} தாங்கிக் கொள்ள முடியாது. காண்டவத்தில் {காண்டவன் என்ற காட்டில்} அவன் தேவர்களின் தெய்வீகத் தலைவனிடமே {இந்திரனிடமே} மோதியிருக்கிறான்.(14,15) அந்தச் சிறப்புமிக்க அர்ஜுனன், ஆயுதங்களைப் பொழிந்து கொண்டிருந்தவனான இந்திரனையே தன் கணைகளால் கலங்கடித்திருக்கிறான். யக்ஷர்களும், நாகர்களும், தைத்தியர்களும், தங்கள் வலிமையில் செருக்குமிக்கோர் பிறர் அனைவரும் அந்த மனிதர்களில் முதன்மையானவனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டிருக்கின்றனர்.(16) அதுவும் நீ அறிந்ததே.

பசுக்களைக் கணக்கெடுக்கும் நிகழ்வின் {கோஷ யாத்திரையின்} போது, சித்திரசேனனின் தலைமையிலான கந்தர்வர்களும், பிறரும் அவனால் வெல்லப்பட்டனர்.(17) கந்தர்வர்களால் நீ கடத்தப்பட்ட போதும், அந்த உறுதிமிக்க வில்லாளியே {அர்ஜுனனே} உன்னை மீட்டான். தேவர்களின் எதிரிகளும், போரில் தேவர்களாலேயே கொல்லப்பட முடியாதவர்களுமான நிவாதகவசர்களும், அந்த வீரனால் வெல்லப்பட்டனர். ஹிரண்யபுரத்தில் வசித்த ஆயிரக்கணக்கான தானவர்களும், அந்த மனிதப் புலியால் வெல்லப்பட்டனர். அப்படியிருக்கையில் மனிதர்களால் எவ்வாறு அவனை {அர்ஜுனனை} எதிர்த்து நிற்க முடியும்? ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, உன் படைகள் எவ்வளவுதான் வீரமாக முயன்றாலும் அந்தப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} அழிவடைந்ததை உன் கண்களாலேயே நீயும் கண்டிருக்கிறாய்” என்றார் {துரோணர்}.(18-20)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படி அர்ஜுனனைப் புகழ்ந்து கொண்டிருந்த துரோணரிடம் கோபம் கொண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளை மீண்டும் சொன்னான்:(21) “நானும், துச்சாசனன், கர்ணன், என் தாய்மாமன் சகுனி ஆகியோரும் சேர்ந்து இந்தப் பாரதப் படையை இரண்டாகப் பிரித்துக் கொண்டு (அதில் ஒன்றை எங்களுடன் வைத்துக் கொண்டு), இன்றைய போரில் அர்ஜுனனைக் கொல்வோம்” என்றான் {துரியோதனன்}.(22)

அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட பரத்வாஜரின் மகன் {துரோணர்} சிரித்துக் கொண்டே அந்த மன்னனின் {துரியோதனனின்} பேச்சை அங்கீகரித்து, “உனக்கு என் ஆசிகள்.(23) க்ஷத்திரியர்களில் காளையும், கொல்லப்பட முடியாதவனும், சக்தியால் சுடர்விட்டெரியும் வீரனுமான அந்தக் காண்டீவதாரியை {அர்ஜுனனைக்} கொல்லவல்ல க்ஷத்திரியன் எவன் இருக்கிறான்?(24) கருவூலங்களின் தலைவனோ {குபேரனோ}, இந்திரனோ, யமனோ, அசுரர்களோ, உரகர்களோ, ராட்சசர்களோ கூட ஆயுதம்தரித்த அர்ஜுனனைக் கொல்ல முடியாது.(25) ஓ! பாரதா {துரியோதனா}, மூடர்கள் மட்டுமே நீ சொன்னது போன்ற வார்த்தைகளைச் சொல்வார்கள். போரில் அர்ஜுனனுடன் மோதிய பிறகு வீட்டுக்குப் பாதுகாப்பாகத் திரும்பக்கூடியவன் எவன் இருக்கிறான்?(26)

உன்னைப் பொருத்தவரை, நீயொரு பாவி, கொடூரன் மற்றும் அனைவரையும் சந்தேகப்படுபவன். உன் நன்மையில் ஈடுபடுவோரையும் இது போல நிந்திக்க எப்போதும் நீ தயாராகவே இருக்கிறாய்.(27) உன் பொருட்டுக் குந்தியின் மகனை {அர்ஜுனனை} எதிர்கொள்ள, நீயே அவனை எதிர்த்துச் செல்வாயாக. நீயோ நற்குலத்தில் பிறந்த க்ஷத்திரியன். போரிடவும் முயல்கிறாய்.(28) குற்றமிழைக்காத இந்த க்ஷத்திரியர்கள் அனைவரையும் நீ ஏன் கொல்லச் செய்கிறாய்? இந்தப் பகைமைக்கு நீயே ஆணிவேராவாய். எனவே, நீயே அர்ஜுனனை எதிர்த்துச் செல்வாயாக.(29)

இந்த உனது தாய்மாமனோ {சகுனியோ}, ஞானம் கொண்டவனும், க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவனுமாவான். ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, சூதுக்கு அடிமையான இவன் {சகுனி} போரில் அர்ஜுனனை எதிர்த்துச் செல்லட்டும்.(30) பகடையில் வல்லவனும், வஞ்சகம் கொண்டவனும், சூதுக்கு அடிமையானவனும், தந்திரம் மற்றும் வஞ்சங்களை நன்கு பழகியவனும், வஞ்சிக்கும் வழிகளை நன்கறிந்தவனுமான இந்தச் சூதாடிதான் {சகுனிதான்} போரில் பாண்டவர்களை வெல்லப் போகிறான்.(31)

கர்ணனை உன் துணையாகக் கொண்ட நீ, மூடத்தனத்தாலும், வெற்று அறிவினாலும் மகிழ்ச்சியாக அடிக்கடி தற்புகழ்ச்சி செய்து கொண்டே, திருதராஷ்டிரன் கேட்டுக் கொண்டிருக்கும்போது, “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, நான், கர்ணன் மற்றும் என் தம்பி துச்சாசனன் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து போரில் பாண்டுவின் மகன்களைக் கொல்வோம்” என்று சொன்னாய். இந்த உனது தற்புகழ்ச்சி ஒவ்வொரு சபைக்கூட்டத்திலும் கேட்கப்பட்டது. உன் சபதத்துக்கு உண்மையாக இருந்து அதை இப்போது சாதிப்பாயாக.(34)

அதோ உன் மரண எதிரியான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} உன் எதிரிலேயே நிற்கிறான். ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை நோற்பாயாக. ஜயனின் {அர்ஜுனனின்} கைகளால் நீ கொல்லப்பட்டால், அனைத்துப் புகழுக்கும் நீ தகுந்தவனாவாய்.(35) நீ ஈகை பயின்றவனாவாய். (நீ விரும்பிய அனைத்தையும் எப்போதும்) உண்ணவும் செய்திருக்கிறாய். நீ விரும்பிய அளவிற்குச் செல்வத்தையும் அடைந்திருக்கிறாய். உனக்குக் கடன்கள் ஏதுமில்லை. ஒருவன் {ஒரு மனிதன்} செய்ய வேண்டிய அனைத்தையும் நீ செய்திருக்கிறாய். அஞ்சாதே. பாண்டு மகனுடன் {அர்ஜுனனுடன்} இப்போதே போரிடுவாயாக”[1] என்றார் {துரோணர்}.(36) அந்தப் போரில் துரோணர் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு நிறுத்திக் கொண்டார். (பாரதப்) படையானது இரண்டாகப் பகுக்கப்பட்டது, போரும் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(37)

துருபதனையும், விராடனையும் கொன்ற துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 186-முழு ஆற்றலையும் பயன்படுத்தும்படி அர்ஜுனனைத் தூண்டிய பீமன்; இரு படைகளுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர்; துரோணர் போர்க்களத்தின் வடக்குத் திசைக்குச் செல்வது; துருபதனின் மூன்று பேரர்களைக் கொன்ற துரோணர்; துருபதனையும், விராடனையும் கொன்ற துரோணர்; துரோணரை அன்றே கொல்லச் சபதம் ஏற்ற திருஷ்டத்யும்னன்; துரோணரைக் கடுமையாகத் தாக்கிய பாஞ்சாலர்கள்; திருஷ்டத்யும்னனிடம் கோபத்துடன் பேசிய பீமசேனன்; துரோணரின் படைப்பிரிவைத் தாக்கிய பீமனும், திருஷ்டத்யும்னனும்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த இரவின் நான்கில் மூன்று {முக்கால்} பாகம் கழிந்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் மீண்டும் போர் தொடங்கியது. இரு தரப்பினரும் மகிழ்ச்சி கிளர்ந்தெழுந்தவர்களாக இருந்தனர்.(1) விரைவில், சந்திரனின் காந்தியைக் குறைத்து, ஆகாயத்தைத் தாமிர வண்ணம் ஏற்கச் செய்தபடியே சூரியனின் தேரோட்டியான அருணன் தோன்றினான்.(2) வட்டமான தங்கத் தட்டுக்கு ஒப்பான சூரியனின் செங்கதிர்களால் கிழக்கு சிவப்பானது. பிறகு குரு மற்றும் பாண்டவப் படைகளின் போர்வீரர்கள் அனைவரும் தங்கள் தேர்கள், குதிரைகள் மற்றும் மனிதர்களால் சுமக்கப்பட்டும் வாகனங்கள் ஆகியவற்றில் இருந்து கீழே இறங்கி, சூரியனை நோக்கிக் குவிந்த கரங்களுடன் நின்று (நாளின் முதல்) சந்திப்பொழுதுக்கான தங்கள் வேண்டுதல்களைத் தெரிவித்தனர்[1].(4) இரண்டாகப் பகுக்கப்பட்ட குருபடையானது, துரோணருடனும், அவருக்கு முன்பு நின்ற துரியோதனனுடனும், சோமகர்கள், பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்களை எதிர்த்துச் சென்றது.(5)குரு படையானது இரண்டு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டதைக் கண்ட மாதவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம், “உன் எதிரிகளை உனக்கு இடப்பக்கமாகக் கொண்டு, (துரோணரால் தலைமை தாங்கப்பட்ட) இந்தப் படைப்பிரிவை உனக்கு வலப்பக்கத்தில் கொள்வாயாக” {என்றான்}.(6) குருக்களைக் குறித்த மாதவனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, துரோணர் மற்றும் கர்ணன் ஆகிய அந்த இரு வலிமைமிக்க வில்லாளிகளின் இடது பக்கமாக நகர்ந்து சென்றான்[2].(7) கிருஷ்ணனின் நோக்கங்களைப் புரிந்து கொண்டவனும், பகை நகரங்களை அடக்குபவனுமான பீமசேனன், போரின் முன்னணியில் நின்று கொண்டிருந்த பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(8) பீமசேனன், “ஓ! அர்ஜுனா, ஓ! அர்ஜுனா, ஓ! பீபத்சு, இந்த என் வார்த்தைகளைக் கேட்பாயாக. எந்த நோக்கத்திற்காக க்ஷத்திரியப் பெண்கள் மகன்களை ஈன்றெடுக்கிறார்களோ, அதற்கான நேரம் இப்போது வாய்த்திருக்கிறது.(9) இத்தகு நேரத்தில் நீ செழிப்பை வெல்ல முயலவில்லையெனில், மெய்யான பாதகனைப் போலவே அற்பமாகச் செயல்பட்டவனாவாய்.(10) உன் ஆற்றலை வெளிப்படுத்தி, உண்மைக்கும் {சத்தியத்திற்கும்}, செழிப்புக்கும், அறத்திற்கும், புகழுக்கும் நீ பட்டிருக்கும் கடனைச் செலுத்துவாயாக. ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே, இந்தப் படைப்பிரிவை உனது வலப்பக்கத்தில் கொண்டு பிளப்பாயாக” என்றான்.(11)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிப் பீமனாலும், கேசவனாலும் {கிருஷ்ணனாலும்} தூண்டப்பட்ட சவ்யசச்சின் {அர்ஜுனன்}, துரோணரையும், கர்ணனையும் விஞ்சி சுற்றிலும் இருந்த எதிரிகளைத் தடுக்கத் தொடங்கினான்.(12) (குருக்கள் மத்தியில் உள்ள) க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் பலர், தங்கள் ஆற்றல் அனைத்தையும் வெளிப்படுத்தினாலும், காட்டுத்தீயைப் போலத் தன் எதிரிகளில் முதன்மையானோரை எரித்தபடியே முன்னேறி வந்து கொண்டிருந்த அர்ஜுனனைத் தாக்குப்பிடிப்பதில் தவறினார்கள். அப்போது, துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர்,(13,14) குந்தியின் மகனான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கணைமாரியால் மறைத்தனர். அவ்வீரர்கள் அனைவரின் ஆயுதங்களைக் கலங்கடித்தவனும், ஆயுதங்களில் நன்கு திறன் பெற்றவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அவன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (பதிலுக்குத்) தன் கணைகளால் அவர்களை மறைத்தான். தன் ஆயுதங்களைக் கொண்டு அவர்களின் ஆயுதங்களைக் குறி பார்த்தவனும், (அவை யாவையும் இப்படிக் கலங்கடித்தவனும்), பெரும் கரநளினம் கொண்டவனும், தன் புலன்களில் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டவனுமான அர்ஜுனன்,(15,16) பத்துக் கூர்முனைக் கணைகளால் அவ்வீரர்கள் ஒவ்வொருவரையும் துளைத்தான்.

அப்போது ஆகாயமானது புழுதியால் மறைக்கப்பட்டது. அடர்த்தியான கணைமாரி பொழிந்தது. இருள் சூழ்ந்தது, உரத்த பயங்கர ஆரவாரமும் எழுந்தது. இப்படிப்பட்ட நிலை இருக்கையில், ஆகாயத்தையோ, பூமியையோ, திசைகளின் புள்ளிகளையோ அதற்கு மேலும் பார்க்க முடியவில்லை.(17,18) புழுதியால் மலைப்படைந்த துருப்புகள் அனைத்தும் குருடாகின. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரியாலோ, நம்மாலோ, ஒருவரையொருவர் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(19) இக்காரணத்தால் அந்த மன்னர்கள் ஊகத்தையும், அவர்கள் உச்சரித்த பெயர்களையும் வழிகாட்டியாகக் கொண்டு போரிடத் தொடங்கினர். தங்கள் தேர்களை இழந்த தேர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரோடொருவர் மோதி, ஒழுங்குகள் அனைத்தையும் இழந்து, குழம்பிய திரளாக மாறினர். தங்கள் குதிரைகளும், சாரதிகளும் கொல்லப்பட்ட அவர்களில் பலர், செயலின்மையை அடைந்து தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொண்டு மிகவும் அச்சத்திலிருப்பவர்களாகத் தெரிந்தனர். உயிரையிழந்த சாரதிகளோடு கூடிய கொல்லப்பட்ட குதிரைகள், மலைச்சாரல்களில் படர்ந்து கிடப்பன போலக் கொல்லப்பட்ட யானைகளின் மீது கிடப்பது காணப்பட்டது.

அப்போது துரோணர், அந்தப் போரில் வடக்கு நோக்கி நகர்ந்து அங்கேயே தன் நிலையை ஏற்று, புகையற்ற நெருப்புக்கு ஒப்பாகக் காணப்பட்டார். அந்தப் போரில் அவர் வடக்கு நோக்கி நகர்ந்ததைக் கண்ட பாண்டவத் துருப்புகள்,(20-24) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடுங்கத் தொடங்கின. உண்மையில், பிரகாசமானவரும், அழகானவரும், சக்தியால் சுடர்விடுபவருமான துரோணரைக் கண்டு அஞ்சிய எதிரிகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} ஒளியிழந்து களத்தில் நடுங்கத் தொடங்கினர். எதிரிப் படையைப் போருக்கு அழைக்கையில், மதங்கொண்ட யானையைப் போலத் தெரிந்த அவரைக் கண்ட எதிரிகள்(25,26) வாசவனை {இந்திரனை} வெல்வதில் நம்பிக்கையற்ற தானவர்களைப் போல அவரை வெல்வதில் முற்றிலும் நம்பிக்கையை இழந்தனர். அவர்களில் சிலர் முற்றாக உற்சாகமிழந்தனர், சக்தி கொண்ட சிலர் கோபத்தால் தூண்டப்பட்டனர்.(27) சிலர் ஆச்சரியத்தால் நிறைந்தனர், சிலரோ (அந்த அறைகூவலை) பொறுத்துக் கொள்ள முடியாதவர்களானார்கள். சில மன்னர்கள் தங்கள் கைகளைப் பிசைந்தனர்,(28) சினத்தால் புலனுணர்வை இழந்த சிலரோ தங்கள் உதடுகளைக் கடித்துக் கொண்டனர். சிலர் தங்கள் ஆயுதங்களைச் சுழற்றினர், சிலரோ தங்கள் கரங்களை {தோள்களைத்} தேய்த்துக் கொண்டனர்.(29) பெரும் சக்தியும், முழுதும் கட்டுப்பட்ட ஆன்மாவும் கொண்ட சிலர் துரோணரை எதிர்த்து விரைந்தனர். குறிப்பாகத் துரோணரின் கணைகளால் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் வலியால் துன்புற்றாலும், போரில் மோதுவதைத் தொடர்ந்தனர்.

அப்போது அந்தப் போரில், களத்தில் இப்படித் திரிந்து கொண்டிருந்தவரும், வெல்லப்பட முடியாத போர்வீரரருமான துரோணரை எதிர்த்து, துருபதனும், விராடனும் முன்னேறினர். பிறகு ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருபதனின் மூன்று பேரர்களும்,(31,32) வலிமைமிக்க வில்லாளிகளான சேதிகளும், அம்மோதலில் துரோணரை எதிர்த்து முன்னேறினர். துரோணர், மூன்று கூரிய கணைகளைக் கொண்டு துருபதனின் மூன்று பேரர்களுடைய உயிரை எடுத்தார். அந்த இளவரசர்களும் உயிரை இழந்து பூமியில் விழுந்தனர். அடுத்ததாக அந்தப் போரில் சேதிகள், கைகேயர்கள் மற்றும் சிருஞ்சயர்களையும் துரோணர் வென்றார்.(33,34) பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, மத்ஸ்யர்கள் அனைவரையும் வென்றார். அப்போது கோபத்தால் நிறைந்த துருபதனும், விராடனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரின் மீது கணைமாரியை ஏவினர். க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான துரோணர், அந்தக் கணைமாரியைக் கலங்கடித்து,(35,36) துருபதன் மற்றும் விராடன் ஆகிய இருவரையும் தன் கணைகளால் மறைத்தார்.

துரோணரால் மறைக்கப்பட்ட அந்தப் போர்வீரர்கள் இருவரும், சினத்தால் வெறிகொண்டு, அந்தப் போர்க்களத்தில் தங்கள் கணைகளால் அவரைத் துளைக்கத் தொடங்கினர். பிறகு துரோணர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் நிறைந்து, பழிதீர்க்க விரும்பி,(37,38) அகன்ற தலை கொண்ட கணைகள் {பல்லங்கள்} இரண்டைக் கொண்டு, தன் எதிராளிகள் இருவரின் விற்களையும் வெட்டினார். அப்போது கோபத்தால் நிறைந்த விராடன், அம்மோதலில் துரோணரைக் கொல்ல விரும்பி, பத்து வேல்களையும் {தோமரங்களையும்}, பத்து கணைகளையும் ஏவினான். கோபத்தில் இருந்த துருபதனும், இரும்பாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், ஒரு பெரும்பாம்புக்கு ஒப்பானதுமான ஒரு பயங்கர ஈட்டியை துரோணரின் தேர்மீது வீசினான். பெரும் எண்ணிக்கையிலானவையும், கூரியவையும், அகன்ற தலைகளைக் கொண்டவையுமான கணைகள் {பல்லங்கள்} பலவற்றால் (விராடனின்) அந்தப் பத்து வேல்களை வெட்டிய துரோணர்,(39-41) தங்கத்தாலும், வைடூரியக் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த (துருபதனின்) அந்த ஈட்டியைக் குறிப்பிட்ட சில கணைகளைக் கொண்டு வெட்டினார். பிறகு எதிரிகளைக் கலங்கடிப்பவரான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, நன்கு கடினமாக்கப்பட்டவையும், அகன்ற தலைகளைக் கொண்டவையுமான இரு கணைகளை {பல்லங்களைக்} கொண்டு,(42) துருபதன் மற்றும் விராடன் ஆகிய இருவரையும் யமனுலகு அனுப்பினார்.

விராடன் மற்றும் துருபதன் ஆகியோர் வீழ்ந்து, கைகேயர்கள்,(43) சேதிகள், மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோர் கொல்லப்பட்டு, துருபதனின் பேரர்களான அந்த மூன்று வீரர்களும் வீழ்ந்ததும்,(44) துரோணரின் அந்தச் சாதனைகளைக் கண்ட உயர் ஆன்ம திருஷ்டத்யும்னன், சினத்தாலும், துயரால் நிறைந்து, தேர்வீரர்கள் அனைவருக்கும் மத்தியில் இப்படிச் சொல்லி உறுதியேற்றான்.(45) அவன் {திருஷ்டத்யும்னன்}, “துரோணர் இன்று என்னிடம் இருந்து உயிருடன் தப்பித்தாலோ, என்னை வீழ்த்துவதில் அவர் வென்றாலோ, என் அறச் செயல்கள் அனைத்தின் தகுதிகளையும், என் க்ஷத்திரிய மற்றும் பிரம்ம சக்திகளையும் நான் இழப்பேனாக” என்றான்[3].(46) வில்லாளிகள் அனைவருக்கு மத்தியிலும் இந்தச் சபதத்தைச் செய்தவனும், பகைவர்களைக் கொல்லும் வீரனுமான அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, தன் சொந்தப் படையால் ஆதரிக்கப்பட்டுத் துரோணரை எதிர்த்து முன்னேறினான்.(47). பிறகு ஒரு பக்கத்தில் இருந்து பாஞ்சாலர்களும், மறு பக்கத்தில் இருந்து அர்ஜுனனும் துரோணரைத் தாக்கத் தொடங்கினர். (அங்கிருந்த) துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோரும்,(48) துரியோதனனுடன் பிறந்த அவனது தம்பிகளும் தங்கள் தேர்வுக்கேற்ப போரில் துரோணரைப் பாதுகாக்கத் தொடங்கினர். இந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர்களால் போரில் இப்படித் துரோணர் பாதுகாக்கப்பட்டபோது,(49) மிகத் தீவிரமாகப் போராடினாலும் பாஞ்சாலர்களால் அவரைப் {துரோணரைப்} பார்க்கக்கூட முடியவில்லை.

அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனிடம் மிகவும் கோபமடைந்த அந்தப் பாண்டுவின் மகன் பீமசேனன், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனை இந்தக் கடும் வார்த்தைகளால் துளைத்தான்.(50) பீமசேனன், “க்ஷத்திரியன் என்று கருதப்படுபவனும், துருபதன் குலத்தில் பிறந்தவனும், ஆயுதங்களின் அறிவைக் கொண்ட மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான எந்த மனிதன்தான் தன் எதிரே நிலைகொண்டிருக்கும் தன் எதிரியை இப்படிப் பார்த்துக் கொண்டே இருப்பான்?(51) தன் தந்தை கொல்லப்பட்டதைக் கண்டவனும், மன்னர்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட ஒரு சபதத்தை ஏற்றவனுமான எந்த மனிதன்தான் இப்படித் தன் எதிரியை அலட்சியம் செய்வான்?(52) தன் சக்தியால் பெருகும் நெருப்பைப் போல அதோ துரோணர் நின்று கொண்டிருக்கிறார். உண்மையில், வில்லையும் கணைகளையும் எரிபொருளாக {விறகாகக்} கொண்ட அவர் க்ஷத்திரியர்கள் அனைவரையும் எரித்துக் கொண்டிருக்கிறார்.(53) விரைவில் அவர் பாண்டவப் படையை அழித்துவிடுவார். (பார்வையாளனாக மட்டும்) நீ நின்று கொண்டே, என் அருஞ்செயலைப் பார்ப்பாயாக. துரோணரை எதிர்த்து நானே செல்வேன்” என்றான் {பீமன்}.(54)

இந்த வார்த்தைகளைச் சொன்ன விருகோதரன் {பீமன்}, சினத்தால் நிறைந்து, துரோணரின் படைப்பிரிவுக்குள் ஊடுருவி, தன் வில்லை முழுதாக வளைத்து, கணைகளை ஏவி, அந்தப் படையைப் பீடித்து, முறியடிக்கத் தொடங்கினான்.(55) பிறகு பாஞ்சால இளவரசனான திருஷ்டத்யும்னனும், அந்தப் பெரும்படைக்குள் ஊடுருவி துரோணருடன் போரில் ஈடுபட்டான். அந்தப் போர் மூர்க்கமடைந்தது.(56) அந்த நாளின் சூரிய உதயத்தின் போது நடந்த இந்த மோதலானது, இதுவரை நாம் பார்க்காத அளவுக்கு, கேள்விப்படாத அளவுக்குக் கடுமையானதாக இருந்தது.(57) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தேர்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டிருந்தன. உடல்கொண்ட உயிரினங்கள் உயிரை இழந்து களமெங்கும் சிதறிக் கிடந்தன.(58) களத்தின் மற்றொரு பகுதிக்குச் சென்ற சிலர், வழியிலேயே பிறரால் தாக்கப்பட்டனர். சிலர் தப்பி ஓடும்போது, அவர்களது முதுகுகளும் சிலரின் விலாப்புறங்களும் தாக்கப்பட்டன.(59) இயல்பான அம்மோதல் இப்படிக் கடுமையாகவே தொடர்ந்தது. எனினும், விரைவில் காலைச் சூரியன் உதித்தான் [4]” {என்றான் சஞ்சயன்}.(60)

நகுலனைப் புறமுதுகிடச் செய்த துரியோதனன்! – துரோண பர்வம் பகுதி – 187-துரோணரும், அர்ஜுனனும் தங்கள் தங்கள் படைகளின் பாதுகாவலர்களாகத் திகழ்வது; துரியோதனன் நகுலனுடனும், கர்ணன் பீமனுடனும், துரோணர் அர்ஜுனனுடனும், துச்சாசனன் சகாதேவனுடனும் மோதுவது; நகுலனை வீழ்த்திய துரியோதனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் கவசம்பூண்ட போர்வீரர்கள், காலையில் உதித்த ஆயிரங்கதிரோனான ஆதித்யனை {சூரியனை} வணங்கினார்கள்.(1) புடம்போட்ட தங்கம்போலப் பிரகாசமான காந்தியுடன் கூடிய அந்த ஆயிரங்கதிர் ஒளிக்கோள் உதித்த போது, உலகம் ஒளியூட்டப்பட்டு, மீண்டும் போர் தொடங்கியது.(2) சூரிய உதயத்திற்கு முன்னர், ஒருவரோடொருவர் மோதிய அதே படைவீரர்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சூரிய உதயத்திற்குப் பின்னர் மீண்டும் ஒருவரோடொருவர் போரிட்டனர்.(3) குதிரைவீரர்கள் தேர்வீரர்களோடும், யானைகள் குதிரைவீரர்களோடும், காலாட்படைவீரர்கள் யானைகளோடும், குதிரை வீரர்கள் குதிரைவீரர்களோடும், காலாட்படையினர், காலாட்படையினரோடும் போரிட்டனர்.(4) மேலும் ஓ! பாரதக் குலத்தின் காளையே, தேர்வீரர்கள் தேர்வீரர்களோடும், யானைகள் யானைகளோடும், குதிரைவீரர்கள் குதிரைவீரர்களோடும் போரிட்டனர். சில நேரங்களில் சேர்ந்தும், சில நேரங்களில் தனித்தனியாகவும் அந்தப் போரில் போர்வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்தனர்.(5)

இரவில் மூர்க்கமாகப் போரிட்ட பலர், உழைப்பால் களைத்து, பசியாலும், தாகத்தாலும் பலவீனமடைந்து தங்கள் புலன்களை இழந்தவர்களானார்கள்.(6) ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சங்குகள் மற்றும் பேரிகைகளின் முழக்கங்களாலும், யானைகளின் பிளிறலாலும், பலமாக வளைக்கப்பட்ட விற்களின் நாணொலிகளாலும் உண்டான ஆரவாரமானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சொர்க்கங்களையே எட்டின. விரைந்து செல்லும் காலாட்படை, ஆயுதங்களின் பாய்ச்சல், குதிரைகளின் கனைப்பொலிகள், உருளும் தேர்கள், கூச்சலிட்டு முழங்கும் போர்வீரர்கள் ஆகியோரால் உண்டாக்கப்பட்ட ஒலியானது மகத்தானதாக இருந்தது.(7-9) ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்த அந்தப் பேரொலி, சொர்க்கங்களையே எட்டின. விழுந்து கொண்டிருப்பவர்களும், விழுந்துவிட்டவர்களுமான காலாட்படைவீரர்கள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியோரின் முனகல்களும், வலியால் உண்டான ஓலங்களும், அக்களத்தில் கேட்பதற்குப் பரிதாபமாகவும், பெரும் ஒலியோடும் இருந்தது.(10,11) அந்த மோதல் இயல்பானதாக இருந்த போதே, ஒருவரையொருவர் கொன்று கொண்ட இரு தரப்பும் தங்கள் சொந்த மனிதர்களையும், விலங்குகளையும் கூடக் கொன்றன.(12)

வீரர்களின் கைகளில் இருந்து போர்வீரர்கள் மற்றும் யானைகளின் மீது வீசப்பட்ட வாள்களின் குவியலானது, சலவை செய்யும் இடத்தில் குவிந்து கிடக்கும் துணிகளுக்கு ஒப்பாகக் களத்தில் காட்சியளித்தது.(13) வீரர்களின் கைகளில் உயர்த்தி வீசப்பட்ட வாள்களின் ஒலியானது துணிகளைச் சலவை செய்ய அடித்துத் துவைக்கும் ஒலிக்கு ஒப்பானதாக இருந்தது.(14) வாள்கள், கத்திகள், வேல்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றைக் கொண்டு ஒருவரோடு ஒருவர் மோதிய அந்த மோதலின் இயல்பு பயங்கரத்தை அடைந்தது.(15) பிறகு வீரப்போராளிகள் இறந்தோரின் உலகங்களை நோக்கிப் பாயும் ஆறு ஒன்றை அங்கே உண்டாக்கினார்கள். யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் குருதிகள் அதன் நீரோட்டமாக அமைந்தன. ஆயுதங்கள் அதன் அபரிமிதமான மீன்களாகின. குருதியாலும், சதையாலும் அது சகதியாக இருந்தது. துயர் மற்றும் வலி ஆகியவற்றால் எழுந்த ஓலங்கள் அதன் முழக்கங்களாக அமைந்தன. கொடிகளும், துணிகளும் அதன் {அந்த ஆற்றின்} நுரைகளாகின.(16,17) கணைகள் மற்றும் ஈட்டிகளால் பீடிக்கப்பட்டு, (முந்தைய) இரவைக் கடின உழைப்பில் கழித்ததால் களைப்படைந்து, மிகவும் பலவீனமடைந்த யானைகளும், குதிரைகளும், முற்றிலும் அங்கங்கள் அசையாத நிலையில் களத்தில் நின்று கொண்டிருந்தன.(18)

(அழகான தன்மைகள் கொண்ட) தங்கள் கரங்களுடனும், தங்கள் அழகிய கவசங்களுடனும், அழகிய காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளுடனும் கூடியவர்களான போர்வீரர்கள், போர்க்கருவிகளால் அலங்கரிக்கப்பட்டு மிகப் பிரகாசமாகத் தெரிந்தனர்[1].(19) அந்நேரத்தில், ஊனுண்ணும் விலங்குகள் ஆகியவை, இறந்தோர், இறந்து கொண்டிருந்தோர் ஆகியோரின் விளைவால் களமெங்கும் தேர் செல்வதற்கான பாதையேதும் இருக்கவில்லை. கணைகளால் பீடிக்கப்பட்டவையும், நல்ல இனத்தில் பிறந்தவையும், திறன் மிகுந்தவையும், (அளவு மற்றும் பலத்தில்) யானைகளுக்கு ஒப்பானவையுமான குதிரைகள், பெரும் முயற்சியோடு உழைத்துக் களைத்ததால் பூமியில் புதைந்த சக்கரங்களைக் கொண்ட தங்கள் வாகனங்களை {தேர்களை} நடுக்கத்துடன் இழுத்துக் கொண்டிருந்தன. துரோணரையும், அர்ஜுனனையும் தவிர, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கடலுக்கு ஒப்பான அந்தப் பரந்த படை முழுவதும் கலக்கமடைந்து, பீடிக்கப்பட்டு, பயங்கரத்தை அடைந்திருந்தது. இந்த இருவரே தங்கள் தங்கள் தரப்புகளின் போர்வீரர்களுக்குப் புகலிடமாகவும், பாதுகாவலர்களாகவும் திகழ்ந்தனர்.(20-23) இவ்விருவருடன் மோதிய பிறர் யமலோகம் சென்றனர். அப்போது குருக்களின் அந்தப் பரந்த படை மிகவும் கலக்கமடைந்து, வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்குப் பாஞ்சாலர்களுடன் ஒன்றாகக் கலந்திருந்திருந்தன.

பூமியில் க்ஷத்திரியர்களின் பேரழிவு நடந்து கொண்டிருந்த போது, மருண்டோரின் அச்சத்தை அதிகப்படுத்துவதும், சுடலையை {சுடுகாட்டைப்} போலத் தெரிந்ததுமான அந்தப் போர்க்களத்தில், ஒவ்வொருவரும் துருப்புகளுடன் கலந்து புழுதிமேகங்களால் மறைக்கப்பட்டிருந்ததால், ஓ !மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணனோ, துரோணரோ அர்ஜுனனோ, யுதிஷ்டிரனோ,(24-26) பீமசேனனோ, இரட்டையரோ {நகுலன் மற்றும் சகாதேவனோ}, பாஞ்சால இளவரசனோ {திருஷ்டத்யும்னனோ}, சாத்யகியோ, துச்சாசனனோ, துரோணரின் மகனோ {அஸ்வத்தாமனோ}, துரியோதனனோ, சுபலனின் மகனோ {சகுனியோ},(27) கிருபரோ, மத்ர ஆட்சியாளனோ {சல்லியனோ}, கிருதவர்மனோ, பிறரோ, நானோ, பூமியோ, திசைகளின் புள்ளிகளோ(28) அங்கே காணப்படவில்லை. கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நடக்கையில் புழுதி மேகம் எழுந்த போது,(29) மீண்டும் இரவே வந்துவிட்டதென அனைவரும் நினைத்தனர். கௌரவர்களையோ, பாஞ்சாலர்களையோ, பாண்டவர்களையோ,(30) திசைப்புள்ளிகளையோ, ஆகாயத்தையோ பூமியையோ, சமமான, சமமற்ற பூமியையோ வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. வெற்றியை விரும்பிய போர்வீரர்கள், எதிரிகளையும், நண்பர்களையும், உண்மையில், தங்கள் கரங்களின் தீண்டலால் தாங்கள் காணக்கூடிய அனைவரையும் கொன்றனர். பூமியில் எழுந்த அந்தப் புழுதியானது, விரைவில் வந்த காற்றாலும், சிந்தப்பட்ட குருதியால் நனைந்ததாலும் விலகியது. யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள் மற்றும் காலாட்படைவீரர்கள் ஆகியோர்,(31-33) குருதியில் குளித்திருந்ததால், (தேவர்களின்) பாரிஜாத காட்டைப் போல அழகாகத் தெரிந்தனர்.

அப்போது, துரியோதனன், கர்ணன், துரோணர், துச்சாசனன்(34) ஆகிய நான்கு (கௌரவப்) போர்வீரர்களும், நான்கு பாண்டவப் போர்வீரர்களுடன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். துரியோதனனும், அவனது தம்பிமாரும் இரட்டையருடன் (நகுலன் மற்றும் சகாதேவனுடன்) மோதினர்.(35) ராதையின் மகன் {கர்ணன்} விருகோதரனோடும் {பீமனோடும்}, அர்ஜுனன் பரத்வாஜர் மகனோடும் {துரோணரோடும்} போரிட்டுக் கொண்டிருந்தனர். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அனைத்துத் துருப்புகளும் அந்தப் பயங்கர மோதல்களைக் கண்டு கொண்டிருந்தன.(36) பல்வேறு இனிய பரிணாமங்களைச் செய்து காட்டிய தங்கள் அழகிய தேரில் ஏறி வந்தவர்களும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், கடுமையானவர்களுமான அந்த முதன்மையான தேர்வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற மனித சக்திக்கு அப்பாற்பட்ட மோதலான அந்த அழகிய போரை (அமைதியாக இருந்த இரு படையின்) தேர்வீரர்கள் கண்டனர். பெரும் ஆற்றலைக் கொண்டவர்களும், மிகத் தீவிரமாகப் போராடுபவர்களும், ஒருவரையொருவர் வெல்ல விரும்பியவர்களுமான அவர்கள் ஒவ்வொருவரும்,(37,38) கோடையின் முடிவில் வரும் (மழைத்தாரைகளைப் பொழியும்) மேகங்களைப் போலக் கணைமாரிகளால் ஒருவரையொருவர் மறைத்தனர். சூரியப் பிரகாசம் கொண்ட தங்கள் தேர்களில் ஏறி வந்த அந்த மனிதர்களில் காளையர்,(39) கூதிர்கால வானத்தில் கூடித் திரண்ட மேகங்களைப் போல அழகாகத் தெரிந்தனர். பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் நிறைந்து பழிதீர்க்க விரும்பிய போர்வீரர்களான(40) அந்த வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரும், யானைக்கூட்டங்களின் மதங்கொண்ட தலைமை யானைகளைப் போலப் பெரும் மூர்க்கத்துடன் ஒருவரை நோக்கி ஒருவர் அறைகூவி அழைத்தபடியே விரைந்தனர்.(41)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்வீரர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அந்தப் போரில் அழியாததால், நேரம் வரும்வரை மரணம் நேராது என்பது உண்மையே[2].(42) வெட்டப்பட்ட கரங்கள், கால்கள், காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகள், விற்கள், கணைகள், வேல்கள் {பராசங்கள்}, கத்திகள், போர்க்கோடரிகள், (பிற வகையிலான) கோடரிகள், நாளீகங்கள், கத்தி தலை கணைகள் {க்ஷுரப்ரங்கள்}, துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, ஈட்டிகள், சூலங்கள், பல்வேறுவிதங்களிலான அழகிய கவசங்கள், உடைந்து போன அழகிய தேர்கள், கொல்லப்பட்ட யானைகள், நகரங்களைப் போலத் தெரியும் கொடிகளற்ற தேர்கள், காற்றின் வேகத்தைக் கொண்டவையும், சாரதியற்றவையும், பெரும் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தவையுமான குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்ட வாகனங்கள், நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களும் துணிவுமிக்கவர்களுமான பெரும் எண்ணிக்கையிலான போர்வீரர்கள், வீழ்ந்து கிடந்த சாமரங்கள், கவசங்கள், கொடிமரங்கள், ஆபரணங்கள், ஆடைகள், நறுமணமிக்க மலர்மாலைகள், தங்கச் சங்கிலிகள், மகுடங்கள், கிரீடங்கள், தலைப்பாகைகள், மணிகள், மார்பிலணியும் நகைகள், மார்புக்கவசங்கள், கழுத்துப்பட்டைகள், தலைப்பாகைகளை அலங்கரித்த ரத்தினங்கள் ஆகியன இறைந்து கிடந்த அந்தப் போர்க்களமானது, நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கும் ஆகாயத்தைப் போல அழகாகத் தெரிந்தது.(43-49)

அப்போது, கோபத்தால் நிறைந்தவனும், பழிதீர்க்க விரும்பியவனுமான துரியோதனனுக்கும், அதே போன்ற உணர்ச்சிகளால் நிறைந்திருந்த நகுலனுக்கும் இடையில் மோதல் நேர்ந்தது.(50) அந்த மாத்ரியின் மகன் {நகுலன்}, நூற்றுக்கணக்கான கணைகளை ஏவியபடி உமது மகனை {துரியோதனனைத்} தனக்கு வலப்புறத்தில் நிறுத்தினான்[3]. அதன் பேரில் அவனுக்காக {நகுலனுக்காக} உரத்த ஆரவாரம் எழுந்தது.(51) கோபத்தில் இருந்த தன் தம்பியால் {நகுலனால்} வலப்புறத்தில் நிறுத்தப்பட்டவனும், உமது மகனுமான மன்னன் துரியோதனன், சினத்தால் நிறைந்து, அந்தப் பக்கத்தில் இருந்தே நகுலனை எதிர்த்து அற்புதமாகப் போரிட்டான்.(52) அதன்பேரில், பெரும் சக்தி கொண்டவனும், (தேரை நடத்திச் செல்வதில்) பல்வேறு வழிமுறைகளை அறிந்தவனுமான நகுலன், தன் வலப்புறத்தில் இருந்து, தன்னை எதிர்த்துக் கொண்டிருக்கும் உமது மகனைத் தடுக்கத் தொடங்கினான். எனினும், கணைமாரிகளால் நகுலனைப் பீடித்து, அனைத்துப் பக்கங்களிலும் அவனைத் தடுத்த துரியோதனன், அவனை {நகுலனைப்} புறமுதுகிடச் செய்தான்.(53,54) (உமது மகனின்) அந்தச் சாதனையைத் துருப்புகள் அனைத்தும் மெச்சின. அப்போது நகுலன், உமது தீய ஆலோசனைகளால் உண்டான தன் துன்பங்கள் அனைத்தையும் நினைவு கூர்ந்து, “நில்லும், நிற்பீராக” என்று உமது மகனிடம் சொன்னான்” {என்றான் சஞ்சயன்}.(55)

துரோணார்ஜுனப் போர்! – துரோண பர்வம் பகுதி – 188, 189-துச்சாசனனின் சாரதியைக் கொன்ற சகாதேவன்; சகாதேவனிடம் வீழும் நிலையை அடைந்த துச்சாசனன்; கர்ணன் குறுக்கிட்டது; கர்ணனுக்கும், பீமனுக்கும் இடையில் நடந்த கடும் மோதல்; நகுலனின் தேரில் ஏறிக் கொண்ட பீமன்; துரோணருக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த மோதல்; சித்தர்களும் முனிவர்களும் அந்த இரு போர்வீரர்களையும் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தது; இரு படைகளுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர் இயல்பு நிலையை அடைந்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது துச்சாசனன், கோபத்தால் நிறைந்து, தன் தேரின் கடும் வேகத்தால் பூமியை நடுங்கச் செய்தபடி சகாதேவனை எதிர்த்து விரைந்தான்.(1) எனினும், எதிரிகளை நசுக்குபவனான மாத்ரியின் மகன் {நகுலன்}, தன்னை எதிர்த்து வரும் எதிராளியின் சாரதியுடைய தலைப்பாகையுடன் கூடிய தலையை அகன்ற தலை கொண்ட கணை யொன்றால் {பல்லத்தால்} விரைவாக வெட்டினான்.(2) சகாதேவனால் சாதிக்கப்பட்ட இந்தச் செயல் வேகத்தால் துச்சாசனனோ, துருப்புகளில் ஏதுமோ சாரதியின் தலை வெட்டப்பட்டதை அறியவில்லை.(3) கடிவாளங்கள் எவராலும் இழுத்துப் பிடிக்கப்படாததால் குதிரைகள் தங்கள் விருப்பப்படி ஓடின. அப்போதுதான் துச்சாசனன் தன் சாரதி கொல்லப்பட்டதை அறியவந்தான்.(4) குதிரைகளை நடத்த அறிந்தவனான அந்த முதன்மையான தேர்வீரன் {துச்சாசனன்}, தானே அந்தப் போரில் தன் குதிரைகளை நடத்திக்கொண்டு, பெரும் சுறுசுறுப்புடனும், திறனுடனும் அழகாகப் போரிட்டான்.(5) சாரதியற்ற தேரில் அந்தப் போரில் அச்சமில்லாமல் சென்ற அந்த அவனது {துச்சாசனனது} செயலை நண்பர்களும், எதிரிகளும் பாராட்டினர்.(6)

அப்போது சகாதேவன், அந்தக் குதிரைகளைக் கூரிய கணைகளால் துளைத்தான். அக்கணைகளால் பீடிக்கப்பட்ட அவை அங்கேயும் இங்கேயும் வேகமாக ஓடின.(7) அவன் {துச்சாசனன்} கடிவாளங்களைப் பிடிப்பதற்காக வில்லைக் கீழே வைக்கவும், பிறகு வில்லைப் பயன்படுத்துவதற்காகக் கடிவாளத்தைக் கீழே வைக்கவும் செய்தான்.(8) அந்தச் சந்தர்ப்பங்களில் மாத்ரியின் மகன் {சகாதேவன்} கணைகளால் அவனை {துச்சாசனனை} மறைத்தான். அப்போது கர்ணன், உமது மகனை {துச்சாசனனைக்} காக்க விரும்பி அவ்விடத்திற்கு விரைந்தான்.(9) அதன்பேரில் விருகோதரன் {பீமன்}, பெரும் கவனத்தோடு முழுமையாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} கர்ணனின் மார்பையும் கரங்களையும் துளைத்தான்.(10) தடியால் அடிபட்ட பாம்பு போல அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட கர்ணன், கூரிய கணைகளை ஏவியபடி பீமசேனனைத் தடுத்து நின்றான்.(11) அதன்பேரில், பீமனுக்கும், ராதையின் மகனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் ஒரு கடும்போர் நடைபெற்றது. அந்த இருவரும் காளைகளைப் போல முழங்கினர். அவ்விருவரின் கண்களும் (சினத்தால்) விரிந்திருந்தன.(12)

கோபத்தால் தூண்டப்பட்டு, பெரும் வேகத்துடன் ஒருவரையொருவர் நோக்கி முழங்கியபடியே அவர்கள் விரைந்து சென்றனர். போரில் திளைப்பவர்களான அவ்விருவரும் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமான நிலையை அடைந்தனர். ஒருவரை நோக்கி மற்றவர் கணைகளை எளிதாக ஏவமுடியாத அளவுக்கு அவர்கள் மிக நெருக்கமாக இருந்தனர். அதன்பேரில், கதாயுதப் போர் நிகழ்ந்தது. பீமசேனன் வேகமாகக் கர்ணனுடைய தேரின் கூபரத்தைத் தன் கதாயுதத்தால் நொறுக்கினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனது {பீமனது} இந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது. பிறகு அந்த ராதையின் வீர மகன் {கர்ணன்}, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு பீமனுடைய தேரின் மீது வீசினான். எனினும், அதைப் பீமன், தனது கதாயுதத்தால் நொறுக்கினான். பிறகு மீண்டும் ஒரு கனமான கதாயுத்தை எடுத்துக் கொண்ட பீமன், அஃதை அந்த அதிரதன் மகன் {கர்ணன்} மீது வீசினான்.(13-16) கர்ணன், அழகிய சிறகுகளைக் கொண்ட எண்ணற்ற கணைகளைக் கொண்டு அந்தக் கதாயுதத்தைப் பெரும்பலத்துடன் தாக்கி, மீண்டும் இன்னும் பிற கணைகளால் தாக்கினான். கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட அந்தக் கதாயுதமானது, மந்திரங்களால் பீடிக்கப்பட்ட பாம்பைப் போலப் பீமனை நோக்கித் திரும்பியது. அந்தக் கதாயுதத்தின் எதிர்வீச்சால் பீமனின் பெரும் கொடிமரம் ஒடிந்து விழுந்தது.(17,18) அதே கதாயுதத்தினால் தாக்கப்பட்ட பீமனின் சாரதியும் உணர்வுகளை இழந்தான்.

பிறகு சினத்தால் வெறிக் கொண்ட பீமன், கர்ணன் மீதும்,(19) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனது {கர்ணனின்} கொடிமரம், வில் மற்றும் தோலுறை ஆகியவற்றின் மீதும் எட்டு கணைகளை ஏவினான். பகைவீரர்களைக் கொல்பவனும், வலிமைமிக்கவனுமான பீமசேனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தக் கூரிய கணைகளால் கர்ணனின் கொடிமரம், வில் மற்றும் தோலுறைகளைப் பெரும் கவனத்தோடு அறுத்தான். பிறகு வெல்லப்படமுடியாததும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட ராதையின் மகன் {கர்ணன்}, கரடியின் நிறத்தில் இருந்த பீமனின் குதிரைகளையும், அவனது {பீமனது} பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் பெரும் எண்ணிக்கையிலான கணைகளால் வேகமாகக் கொன்றான்.(20-22) இப்படித் தனது தேருக்குத் தீங்கேற்பட்டதும், எதிரிகளைத் தண்டிப்பவனான பீமன், மலைச்சிகரத்தில் இருந்து கீழே குதிக்கும் சிங்கத்தைப் போல, நகுலனின் தேரில் வேகமமாகக் குதித்தான்.(23)

அதே வேளையில், தேர்வீரர்களில் முதன்மையானோரும், ஆசான் சீடனுமானோரும், ஆயுதங்களில் திறம் பெற்றோருமான துரோணரும், அர்ஜுனனும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் ஒருவரோடொருவர் போரிட்டு,(24) ஆயுதப் பயன்பாட்டில் தங்கள் நளினம், இலக்கில் உறுதி, தேர்களின் நகர்வுகள் ஆகியவற்றால் மனிதர்களின் கண்களையும், மனங்களையும் மலைப்படையச் செய்தனர்.(25) இதுவரை என்றும் நடக்காததைப் போல ஆசானுக்கும் {துரோணருக்கும்}, சீடனுக்குமிடையில் {அர்ஜுனனுக்கும்} நடந்த இதுபோன்றதொரு போரைக் கண்ட போர்வீரர்கள் பிறர், ஒருவரோடொருவர் போரிடுவதை நிறுத்தி நடுக்கத்தை அடைந்தனர்.(26) அவ்வீரர்கள் ஒவ்வொருவரும், தங்கள் தேர்களின் அழகிய பரிணாமங்களை வெளிக்காட்டியபடியே அடுத்தவரைத் தன் வலப்புறத்தில் நிறுத்த விரும்பினர்[1].(27)

அங்கே இருந்த போர்வீரர்கள், அவர்களது ஆற்றலைக் கண்டு ஆச்சரியத்தால் நிரம்பினர். உண்மையில், துரோணருக்கும், பாண்டுவின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த அந்தப் பெரும்போரானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஓர் இறைச்சித் துண்டுக்காக வானில் மோதிக் கொள்ளும் இரண்டு பருந்துகளுக்கு ஒப்பாக இருந்தது. குந்தியின் மகனை {அர்ஜுனனை} வெல்வதற்காகத் துரோணரால் செய்யப்பட்ட சாதனைகள் அனைத்தும்,(28,29) அதே போன்ற சாதனைகளைச் செய்த அர்ஜுனனால் எதிர்க்கப்பட்டது. துரோணர், பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} விஞ்சுவதில் தவறியபோது, ஆயுதங்கள் அனைத்தின் வழிமுறைகளை அறிந்த போர்வீரரான அந்தப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, ஐந்திரம், பாசுபதம், தாஷ்டிரம், வாயவ்யம், யாம்ய ஆயுதங்களை இருப்புக்கு அழைத்தார்.(30,31) அந்த ஆயுதங்கள் துரோணரின் வில்லில் இருந்து வெளிப்பட்டதும், தனஞ்சயன் {அர்ஜுனன்} அவற்றை வேகமாக அழித்தான். இப்படித் தன் ஆயுதங்களை முறையாகத் தன் ஆயுதங்களால் அர்ஜுனன் அழித்தபோது,(32) தெய்வீக ஆயுதங்களில் வலிமைமிக்க ஓர் ஆயுதத்தைக் கொண்டு, துரோணர் அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} மறைத்தார். பார்த்தனை {அர்ஜுனனை} வெல்லும் விருப்பத்தால் பார்த்தன் மீது அதைத் துரோணர் ஏவினாலும், அவன் பதிலுக்குத் தாக்கி அதைக் கலங்கடித்தான். தன் ஆயுதங்கள் அனைத்தும், குறிப்பாக தெய்வீக ஆயுதங்களும் கூட அர்ஜுனனால் கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட துரோணர், பின்னவனைத் {அர்ஜுனனைத்} தன் இதயத்தால் பாராட்டினார். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த எதிரிகளைத் தண்டிப்பவர் {துரோணர்}, அர்ஜுனனைத் தன் சீடனாகக் கொண்டதன் விளைவால், இவ்வுலகில் ஆயுதங்களை அறிந்தோர் அனைவரைக் காட்டிலும் தம்மை மேன்மையானவராகக் கருதிக் கொண்டார். அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர்கள் அனைவருக்கும் மத்தியில், இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} தடுக்கப்பட்ட துரோணர்,(33-36) தீவிரமாகப் போராடி, ஆச்சரியத்துடன் மகிழ்ச்சியாக (பதிலுக்கு) அர்ஜுனனைத் தடுத்தார்.

அப்போது, ஆயிரக்கணக்கான தேவர்களும், கந்தர்வர்களும்,(37) முனிவர்கள் மற்றும் சித்தர்களின் கூட்டங்களும் அனைத்துப் பக்கங்களிலும் தென்பட்டனர். (அவர்களும், அவர்களோடு கூடிய) அப்சரஸ்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோராலும்(38) நிறைந்திருந்த அந்த ஆகாயமானது, மேகங்கள் திரண்டு மீண்டும் இருண்டிருப்பதைப் போலத் தெரிந்தது. துரோணரையும், உயர் ஆன்ம பார்த்தனையும் {அர்ஜுனனையும்} புகழ்ந்து கொண்டிருந்த கண்ணுக்குப் புலப்படாத குரல் ஒன்று ஆகாயமெங்கும் மீண்டும் மீண்டும் கேட்டது. துரோணர் மற்றும் பார்த்தன் ஆகியோரால் ஏவப்பட்ட கணைகளின் விளைவாக அனைத்துப் பக்கங்களும் ஒளியால் சுடர்விட்டு எரிந்த போது,(39,40) அங்கே இருந்த சித்தர்களும் முனிவர்களும், “இது மனிதப் போரோ, அசுரப்போரோ, ராட்சசப் போரோ, தெய்வீகப் போரோ, கந்தர்வப் போரோ அல்ல. உயர்வான பிரம்ம மோதலே இஃது என்பதில் ஐயமில்லை. இந்தப்போர் மிக அழகானது; ஆச்சரியகரமானது. இதைப் போன்ற ஒன்றை நாம் பார்த்ததோ, கேள்விப்பட்டதோ இல்லை.(41-42) சில நேரங்களில் ஆசான் {துரோணர்} பாண்டுவின் மகனையும் {அர்ஜுனனையும்}, சில நேரங்களில் பாண்டுவின் மகன் துரோணரையும் விஞ்சி நிற்கின்றனர். அவர்களுக்குள் எந்த வேறுபாட்டையும் எவனாலும் காண முடியாது.(43) ருத்ரன் தன்னையே இரு பாகங்களாகப் பகுத்துக் கொண்டு, தானே தன்னுடன் போரிட்டால், அஃது இது போன்ற நிகழ்வுக்கு ஒப்பாகலாம். இதற்கு ஒப்பாக வேறொரு நிகழ்வை வேறு எங்கும் காண முடியாது.(44) அறிவியலானது, ஒன்றாகத் திரண்டு ஆசானிடம் {துரோணரிடம்} இருக்கிறது. அறிவியலும், வழிமுறைகளும் {தொழில்நுட்பமும்} பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} உள்ளது.(45) இந்தப் போர்வீரர்களில் எவரையும் எந்த எதிரிகளாலும் போரில் எதிர்க்க முடியாது. இவ்விருவரும் விரும்பினால் தேவர்களுடன் கூடிய அண்டத்தையே இவர்களால் அழித்துவிட முடியும்” என்றனர்.(46) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கண்ணுக்குப் புலப்படாத மற்றும் புலப்படும் உயிரினங்கள் அனைத்தும், மனிதர்களில் காளையரான இவ்விருவரையும் கண்டு இவ்வார்த்தைகளைச் சொல்லின.(47)

அந்தப் போரில் உயர் ஆன்மத் துரோணர், பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, கண்ணுக்குப் புலப்படாத உயிரினங்கள் அனைத்தையும் பீடித்தபடியே பிரம்ம ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்தார்.(48) அதன் பேரில் மலைகள், நீர்நிலைகள், மரங்களுடன் கூடிய பூமாதேவி நடுங்கினாள். கடுமையான காற்று வீசத்தொடங்கியது. கடல்கள் ஆர்ப்பரித்துப் பொங்கின.(49) அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர் {துரோணர்}, ஆயுதத்தை உயர்த்திய போது, குரு மற்றும் பாண்டவப் படைகளின் போராளிகளும் அச்சமடைந்தனர்; இன்னும் பிற உயிரினங்கள் அனைத்தும் அச்சமடைந்தன.(50) அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அச்சமற்ற வகையில் தனது பிரம்மாயுதத்தைக் கொண்டு அந்த ஆயுதத்தைக் கலங்கடித்ததால், இயற்கையின் கலக்கம் விரைவாகத் தணிந்தது.(51) இறுதியாக அவர்களில் எவராலும் தன் எதிராளியைத் தனிப்போரில் வெல்ல இயலாத போது, களத்தில் ஏற்பட்ட பெருங்குழப்பத்தால் இரு படைகளுக்கும் இடையில் இயல்பான மோதலே நடந்தது.(52) துரோணருக்கும், பாண்டுவின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் அந்தப் பயங்கரப் போர் (மேலும் இருபடைகளின் இயல்பான போரும்) நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(53) மேகத் திரள்களால் மறைக்கப்பட்டதைப்போல அடர்த்தியான கணை மழையால் ஆகாயம் மறைக்கப்பட்டது, வானுலாவும் உயிரினத்தாலும், அந்தப் பூதத்தின் {வானத்தின்} ஊடாக ஒரு பாதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. {ஆகாயத்தில் பறவையேதும் பறக்கவில்லை}” {என்றான் சஞ்சயன்}.(54)

சாத்யகி துரியோதன நட்பு! – துரோண பர்வம் பகுதி – 190-துச்சாசனனை வென்ற திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னன், நகுலன் மற்றும் சகாதேவனோடு போரிட்ட கிருதவர்மனும், அவனது மூன்று தம்பியரும்; துரோணரை நோக்கிச் சென்ற திருஷ்டத்யும்னன்; துரோணரைக் காக்க விரைந்த துரியோதனன்; துரியோதனனை நோக்கி விரைந்த சாத்யகி; சாத்யகியிடம் பேசிய துரியோதனன், தன்னைத்தானே பழித்துக் கொண்டது; சாத்யகியின் பதில்; துரியோதனனைப் பாதுகாக்க விரைந்த கர்ணன்; தேர்வீரர்களைக் காக்க தன் போர்வீரர்களைத் தூண்டிய யுதிஷ்டிரன்..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மனிதர்களும், குதிரைகள், யானைகள் ஆகியவையும் பயங்கரமாகக் கொல்லப்பட்டபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனுடன்  துச்சாசனன் மோதினான்.(1) தன் தங்கத் தேரில் ஏறிவந்தவனும், துச்சாசனனின் கணைகளால் மிகவும் பீடிக்கப்பட்டவனும், கோபத்துடன் கூடியவனுமான பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, உமது மகனின் {துச்சாசனனின்} குதிரைகள் மீது தன் கணைகளைப் பொழிந்தான்.(2) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஷதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனுடைய} கணைகளால் மறைக்கப்பட்டதும், கொடியுடனும், சாரதியுடனும் கூடிய துச்சாசனனின் தேரானது விரைவில் கண்ணுக்குப் புலப்படாததாகியது.(3) அந்தக் கணை மழையால் பீடிக்கப்பட்ட துச்சாசனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிறப்புமிக்க அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்} முன்பு நிற்க இயலாதவனானான்.(4) தன் கணைகளின் மூலம் துச்சாசனனைப் புறமுதுகிடச் செய்த பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, மேலும் தன் கணைகளை இறைத்தபடியே அந்தப் போரில் துரோணரை எதிர்த்து விரைந்தான்.(5)

அந்த நேரத்தில், ஹிருதிகன் மகனான கிருதவர்மன், தன் தம்பிகள் மூன்று பேருடன் சேர்ந்து காட்சியில் தோன்றி, திருஷ்டத்யும்னனை எதிர்க்க முயன்றான்.(6) எனினும், மனிதர்களில் காளையரான இரட்டையர்கள் (நகுலனும், சகாதேவனும்), சுடர்மிக்க நெருப்பைப் போலத் துரோணரை நோக்கிச் சென்று கொண்டிருந்த திருஷ்டத்யும்னனைப் பின்தொடர்ந்து சென்று, அவனைப் பாதுகாக்கத் தொடங்கினர்.(7) பிறகு வலிமையுடன் கூடிய அந்தப் பெரும் தேர்வீரர்கள் அனைவரும், சினத்தால் தூண்டப்பட்டு, மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.(8) தூய ஆன்மாவும், தூய நடத்தையும் கொண்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சொர்க்கத்தைத் தங்கள் நோக்கில் கொண்டு, ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, நேர்மையான வழிமுறைகளில் போரிட்டனர்.(9) களங்கமற்ற குலத்தில் தோன்றியவர்களும், களங்கமற்ற செயல்கள் மற்றும் பெரும் நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்டவர்களுமான அந்த மனிதர்களின் ஆட்சியாளர்கள், சொர்க்கத்தைத் தங்கள் நோக்கில் கொண்டு, ஒருவரோடொருவர் நேர்மையாகப் போரிட்டனர்.(10)

அந்தப் போரில் நியாயமற்றதென்று ஏதுமில்லை, மேலும் நியாயமற்றதாகக் கருதப்பட்ட ஆயுதம் ஏதும் பயன்படுத்தப்படவுமில்லை. முள்பதித்த கணைகளையோ {கர்ணிகளையோ}, நாளீகங்கள் என்று அழைக்கப்பட்டவற்றையோ, நஞ்சூட்டப்பட்டவற்றையோ {லிப்தகங்களோ}, கொம்புகளால் செய்யபட்ட தலைகளைக் கொண்டவையோ {பஸ்திகமங்களையோ}, கூரிய பல தலைகள் கொண்டவற்றையோ {சூசிகளையோ, கபிசங்களையோ}, காளைகள் மற்றும் யானைகளின் எலும்புகளாலானவையோ {சூளிகளையோ}, இரு தலைகள் கொண்டவையோ {பலிசங்களையோ}, துருப்பிடித்த தலை கொண்டவையோ {யமிகளையோ}, நேராகச் செல்லாதவையோ {பாசகங்களையோ}, என இவற்றில் எதையும் அவர்கள் பயன்படுத்தவில்லை[1].(11,12) புகழையும், நேர்மையாகப் போரிடுவதால் கிடைக்கும் பேரருள் உலகங்களையும் வெல்ல விரும்பிய அவர்கள் யாவரும் எளிமையான, நியாயமான ஆயுதங்களையே பயன்படுத்தினர்.(13) உமது படையின் அந்த நான்கு போர்வீரர்களுக்கும் {கிருதவர்மன், அவனது மூன்று தம்பியர் ஆகியோருக்கும்}, பாண்டவத்தரப்பின் அந்த மூன்று பேருக்கும் {திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன் ஆகியோருக்கும்} இடையில் நடைபெற்ற போரானது, நியாயமற்ற எதையும் கொண்டிருக்காவிடினும் மிகப் பயங்கரமானதாகவே இருந்தது[2].(14)அப்போது, ஆயுதப் பயன்பாட்டில் மிகுந்த வேகம் கொண்ட திருஷ்டத்யும்னன், துணிச்சல்மிக்கவர்களான உமது படையின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், இரட்டையரால் (நகுலனாலும், சகாதேவனாலும்) தடுக்கப்படுவதைக் கண்டு துரோணரை நோக்கிச் சென்றான்.(15) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவராலும் தடுக்கப்பட்ட அந்த நான்கு போர்வீரர்களும், (தங்கள் வழியில் நிற்கும்) இரு மலைகளைத் தாக்கும் காற்றைப் போல முன்னவர்களுடன் மோதினார்கள்.(16) பெரும் தேர்வீரர்களான அந்த இரட்டையரில் ஒவ்வொருவரும், இரண்டு எதிராளிகளுடன் போரிட்டனர். அதே வேளையில், திருஷ்டத்யும்னன் துரோணரின் மீது கணைமாரியைப் பொழிந்தான்.(17) வெல்லப்பட முடியாதவனான பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, துரோணரை எதிர்த்துச் செல்வதையும், (தன் படையின்) நான்கு வீரர்கள் இரட்டையருடன் போரிடுவதையும் கண்ட துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரனிடம்}, குருதியைக் குடிக்கும் கணைமாரியை இறைத்தபடியே அந்த இடத்திற்கு விரைந்து சென்றான். இதைக் கண்ட சாத்யகி, குரு மன்னனை {துரியோதனனை} வேகமாக அணுகினான்.(18,19) குரு மற்றும் மது குலங்களின் வழித்தோன்றல்களும், மனிதர்களில் புலிகளுமான அவ்விருவரும் ஒருவரையொருவர் அணுகி, போரில் ஒருவரையொருவர் தாக்க விரும்பினர்.(20) குழந்தைப் பருவத்தில் ஒருவரோடு ஒருவர் நடந்து கொண்ட விதங்களை மனதில் நினைத்து, அதைக் குறித்து மகிழ்ச்சியாகச் சிந்தித்து, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட அவர்கள் மீண்டும் மீண்டும் புன்னகைத்தனர்.(21)

தன் நடத்தையை (மனதில்) பழித்துக் கொண்ட மன்னன் துரியோதனன், எப்போதும் தனது அன்புக்குரிய நண்பனான சாத்யகியிடம்,(22) “ஓ! நண்பா, கோபத்திற்கு ஐயோ!, பழிவுணர்ச்சிக்கு ஐயோ! {கோபத்தையும், பழி உணர்ச்சியையும் நிந்திக்க வேண்டும்}. நீ என் மீது உன் ஆயுதங்களைக் குறிவைப்பதாலும், நான் உன் மீது குறி வைப்பதாலும், ஓ! சிநி குலத்துக் காளையே {சாத்யகி}, க்ஷத்திரியத் தொழிலுக்கு ஐயோ!, வலிமை மற்றும் ஆற்றலுக்கும் ஐயோ! அந்நாட்களில் நீ எனக்கு உயிரினும் அன்புக்குரியவனாக இருந்தாய், நானும் உனக்கு அவ்வாறே இருந்தேன்.(23,24) ஐயோ, குழந்தைப் பருவத்தில் நீயும், நானும் நடந்து கொண்ட விதங்களும், செய்த செயல்களும் என் நினைவில் இருக்கின்றன. அவையாவும் போர்க்களத்தில் ஒன்றுமில்லாதவை ஆகினவே.(25) ஐயோ, ஓ !சாத்வத குலத்தோனே, இங்கே கோபம் மற்றும் பேராசையால் உந்தப்பட்டு, இன்று நாம் ஒருவரோடு ஒருவர் போரிட இருக்கிறோமே” என்றான் {துரியோதனன்}.

இந்த வார்த்தைகளைச் சொன்ன அவனிடம் {துரியோதனனிடம்}, சில கூரிய கணைகளை எடுத்துக் கொண்டே புன்னகைத்தவனும், உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனுமான சாத்யகி, “ஓ! இளவரசே {துரியோதனா}, முன்னர் நாம் ஒன்றாகக் கூடி விளையாடிய இடங்களைப் போல, ஓ! இளவரசே, இது சபையோ, நமது ஆசானின் வசிப்பிடமோ அல்ல” என்றான்.(26,27) துரியோதனன், “ஓ! சிநி குலத்தோனே {சாத்யகியே}, நம் குழந்தைப் பருவத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள் எங்கே போயின? ஐயோ, இப்போதைய இந்தப் போரானது நம் மீது எவ்வாறு விழுந்தது? காலத்தின் ஆதிக்கம் தடுக்கப்பட முடியாதது என்பதாகவே தெரிகிறது.(28) (நாம் உந்தப்பட்டிருப்பதைப் போல) செல்வத்தின் மீது கொண்ட ஆசை என்ன பயனைத் தரப்போகிறது? எவ்வளவுதான் நாம் செல்வத்தைக் கொண்டிருந்தாலும், செல்வத்தின் மீது கொண்ட பேராசையாலேயே போரிடுவதற்கு நாம் இப்போது ஒன்று கூடியிருக்கிறோம்” என்றான்.{துரியோதனன்}.(29)

சஞ்சயன் சொன்னான், “இவ்வாறு சொன்ன மன்னன் துரியோதனனிடம் சாத்யகி, “இதுவே க்ஷத்திரியத் தொழில், அவர்கள் தங்கள் ஆசானுடன் கூடப் போரிட வேண்டியிருக்கிறது.(30) நான் உனது அன்புக்குரியவனாக இருந்தால், ஓ! மன்னா {துரியோதனா}, தாமதமேதும் செய்யாமல் என்னைக் கொல்வாயாக. ஓ! பாரத் குலத்தின் காளையே, உன் மூலமாக நான் நல்லோரின் உலகங்களை அடைவேன்.(31) உன் வலிமை மற்றும் ஆற்றல் அனைத்தையும் தாமதியாமல் வெளிப்படுத்துவாயாக. நண்பர்களுக்கிடையேயான இந்தப் பெரும் துயரைக் காண நான் விரும்பவில்லை” என்றான் {சாத்யகி}.(32)

இவ்வாறு மறுமொழி கூறிய சாத்யகி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உயிரைத் துச்சமாக மதிக்கும்படி அச்சமற்ற வகையில் துரியோதனனை எதிர்த்து வேகமாகச் சென்றான்.(33) அவன் {சாத்யகி} முன்னேறிவருவதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்} அவனை எதிர்கொண்டான். உண்மையில், ஓ! மன்னா, உமது மகன், அந்தச் சிநி குலத்தோன் மீது சரியாகக் கணைமாரியைப் பொழிந்தான்.(34) பிறகு, குரு மற்றும் மது குலங்களின் சிங்கங்களான அவர்களுக்கு இடையில், யானைக்கும், சிங்கத்திற்கும் இடையில் நடக்கும் மோதலுக்கு ஒப்பான ஒரு பயங்கரப் போர் தொடங்கியது.(35)

அப்போது கோபத்தால் நிறைந்த துரியோதனன், தன் வில்லை முற்று முழுதாக வளைத்து, கூரிய கணைகளை ஏவி, வெல்லப்பட முடியாத சாத்யகியைத் துளைத்தான்.(36) சாத்யகியும், குரு இளவரசனை {துரியோதனனை} அந்தப் போரில் ஐம்பது கூரிய கணைகளால் விரைவில் துளைத்து, மீண்டும் இருபதாலும், பிறகு மீண்டும் பத்து கணைகளாலும் துளைத்தான்.(37) பிறகு அம்மோதலில் உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா, புன்னகைத்துக் கொண்டே, தன் வில்லின் நாணைத் தன் காது வரை இழுத்து, முப்பது கணைகளால் சாத்யகியைப் பதிலுக்குத் துளைத்தான்.(38) பிறகு கத்தி தலை கணையை {க்ஷுரப்ரத்தை} ஏவிய அவன் {துரியோதனன்}, கணை பொருத்தப்பட்டிருந்த சாத்யகியின் வில்லை இரண்டாக அறுத்தான். பெரும் கரநளினம் கொண்ட பின்னவன் {சாத்யகி} மேலும் கடினமான ஒரு வில்லை எடுத்துக் கொண்டு, உமது மகனின் மீது கணை மாரியை ஏவினான். துரியோதனனைக் கொல்லச் சென்ற அந்தக் கணைகளின் சரத்தைப் பின்னவன் {துரியோதனன்},(39,40) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகள் உரக்க முழங்கச் செய்யும்படி துண்டுகளாக வெட்டினான். பெரும் வேகத்தைக் கொண்ட அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எண்ணையில் ஊறவைத்தவையும், முற்று முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான எழுபத்துமூன்று கணைகளால் சாத்யகியைப் பீடித்தான்.

அப்போது, துரியோதனனின் கணைகள் யாவற்றையும், அவற்றுடன் சேர்த்துக் கணை பொருத்தப்பட்ட அவனது {துரியோதனனின்} வில்லையும் சாத்யகி வேகமாக வெட்டினான்.(41,42) பிறகு அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, தன் எதிராளியின் மீது கணைமாரியைப் பொழிந்தான். சாத்யகியால் ஆழத் துளைக்கப்பட்டு, வலியை உணர்ந்த துரியோதனன், ஓ! மன்னா, பெரும் துயரத்துடன் மற்றொரு தேரில் அடைக்கலம் தேடினான். சிறிது நேரம் இளைப்பாறி புத்துணர்வை அடைந்த உமது மகன் {துரியோதனன்}, மீண்டும் சாத்யகியை எதிர்த்துச் சென்று,(43,44) பின்னவனுடைய தேரின் மீது கணைமாரியை ஏவினான். ஓ! மன்னா, சாத்யகியோ சிரித்துக் கொண்டே, துரியோதனனின் தேரின் மீது பெரும் எண்ணிக்கையிலான கணைகளை இடையறாமல் ஏவினான். இருவரின் கணைகளும் ஆகாயத்தில் ஒன்றோடொன்று கலந்தன. இப்படி ஏவப்பட்ட அந்தக் கணைகளின் அனைத்துப் பக்கங்களிலும் வேகமாகப் பாய்ந்ததன் விளைவால், பெரும் காட்டை எரிக்கும்போது நெருப்பினால் உண்டாகும் ஒலியைப் போன்றே அங்கே பேரொலி எழுந்தது. இருவராலும் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளால் பூமியானது அடர்த்தியாக மறைக்கப்பட்டது.(45-47) ஆகாயமும் அப்படியே நிறைந்தது.

தேர்வீரர்களில் முதன்மையான அந்த மதுகுலத்து வீரன் {சாத்யகி}, துரியோதனனை விட வலிமைமிக்கவனாக இருப்பதைக் கண்ட கர்ணன், (48) உமது மகனை மீட்க விரும்பி அவ்விடத்திற்கு விரைந்தான். எனினும், வலிமைமிக்கப் பீமசேனனால் கர்ணனின் அம்முயற்சியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(49) எனவே, அவன் கர்ணனை எதிர்த்து வேகமாகமாகச் சென்று, எண்ணற்ற கணைகளை ஏவினான். பீமனின் அந்தக் கணைகள் அனைத்தையும் மிக எளிதாக வெட்டிய கர்ணன்,(50) தன் கணைகளால் பீமனின் வில், கணைகள் ஆகியவற்றையும் மற்றும் அவனது சாரதியையும் வெட்டினான். பாண்டுவின் மகனான பீமன், சினத்தால் நிறைந்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு,(51) தன் எதிராளியின் வில், கொடிமரம் மற்றும் சாரதியை அம்மோதலில் நொறுக்கினான். அந்த வலிமைமிக்கப் பீமன், கர்ணனின் தேர்ச்சக்கரங்களில் ஒன்றையும் நொறுக்கினான்.(52) எனினும் கர்ணன், ஒரு சக்கரம் உடைந்த அந்தத் தேரிலேயே மலைகளின் அரசனை (மேருவைப்) போல அசையாமல் நின்றான். ஒரு சக்கரத்தை மட்டுமே கொண்ட அவனது அழகிய தேரானது, ஒரு சக்கரத்தையே உடைய சூரியனின் தேர் ஏழு தெய்வீகக் குதிரைகளால் இழுக்கப்படுவதைப் போல அவனது குதிரைகளால் இழுக்கப்பட்டது. பீமசேனனின் சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள இயலாத கர்ணன், பல்வேறு வகைகளிலான கணைகளையும், பிற ஆயுதங்களையும் அம்மோதலில் அபரிமிதமாகப் பயன்படுத்தியபடியே பின்னவனுடன் {பீமனுடன்} போரிடுவதைத் தொடர்ந்தான். பீமசேனனும், கோபத்தால் நிறைந்து, சூதன் மகனுடன் {கர்ணனுடன்} போரிடுவதைத் தொடர்ந்தான்.(53-55)

அந்தப் போரானது இயல்பையடைந்து குழம்பியபோது, அந்தத் தர்மனின் மகன் (யுதிஷ்டிரன்), பாஞ்சாலர்கள் மற்றும் மத்ஸ்யப் போர்வீரர்களில் முதன்மையானோர் யாவரிடமும்,(56) “யாவர் நமக்கு உயிரோ, யாவர் நமக்குத் தலைவர்களோ, யாவர் நம்மில் பெரும்பலம் கொண்டவர்களோ, அப்படிப்பட்ட மனிதர்களில் காளையர் அனைவரும், தார்தராஷ்டிரர்களிடம் போர்புரிகின்றனர்.(57) உணர்வுகளை இழந்து மலைப்படைந்தவர்களைப் போல நீங்கள் ஏன் இப்படி நிற்கிறீர்கள்? என் படையின் அந்தத் தேர்வீரர்கள் போரிடும் இடத்திற்குச் செல்வீராக.(58) வெற்றி அடைவது, அல்லது கொல்லப்படுவது ஆகியவற்றால் நீங்கள் விரும்பிய இலக்குகளை அடைவீர்கள் என்பதால், உங்கள் அச்சங்களை விரட்டி, க்ஷத்திரியக் கடமைகளை நோக்கில் கொள்வீராக (போரில் ஈடுபடுவீராக).(59) நீங்கள் வெற்றியாளர்கள் என நிரூபித்தால், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளுடன் கூடிய பல்வேறு வேள்விகளை நீங்கள் செய்யலாம். மறுபுறம் நீங்கள் கொல்லப்பட்டாலோ, தேவர்களுக்கு இணையானவர்களாகி, அருள் உலகங்கள் பலவற்றை நீங்கள் வெல்லலாம்” என்றான் {யுதிஷ்டிரன்}.(60)

இப்படி மன்னனால் {யுதிஷ்டிரனால்} தூண்டப்பட்டவர்களும், வலிமைமிக்கவர்களும், க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவர்களுமான அந்த வீரத் தேர்வீரர்கள், துரோணரை எதிர்த்து வேகமாக விரைந்து போரில் ஈடுபட்டனர்.(61) அப்போது ஒரு புறத்தில இருந்து பாஞ்சாலர்கள் எண்ணற்ற கணைகளால் துரோணரைத் தாக்கினர், அதே வேளையில் பீமசேனனின் தலைமையிலான பிறர் மற்றொரு புறத்தில் இருந்து அவரைத் தடுத்தனர்.(62) பாண்டவர்கள் தங்களுக்கு மத்தியில், நேர்மையற்ற மனம் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான மூவரைக் கொண்டிருந்தனர். அவர்கள் பீமசேனனும், இரட்டையரும் (நகுலனும், சகாதேவனும்) ஆவர் [3]. இவர்கள் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்},(63) “ஓ! அர்ஜுனா, வேகமாக விரைந்து சென்று துரோணரின் அருகில் உள்ள குருக்களை விரட்டுவாயாக. ஆசானின் {துரோணரின்} பாதுகாவலர்களை அவர் இழந்தால், பாஞ்சாலர்களால் அவரை எளிதில் கொல்ல முடியும்” என்று உரக்கச் சொன்னார்கள்.(64) இப்படிச் சொல்லப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கௌரவர்களை எதிர்த்து திடீரென விரைந்தான், அதே வேளையில் திருஷ்டத்யும்னனின் தலைமையிலான பாஞ்சாலர்கள் துரோணரை எதிர்த்து விரைந்தனர். உண்மையில், (துரோணரின் தலைமையிலான) அந்த ஐந்தாம் நாளில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த வீரப் போராளிகள் கலங்கடிக்கப்பட்டு, பெரும் வேகத்துடன் (அந்தப் பரத்வாஜர் மகனால் {துரோணரால்}) நொறுக்கப்பட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(65)

மண்ணைத் தொட்ட யுதிஷ்டிரத் தேர்! – துரோண பர்வம் பகுதி – 191-துரோணரால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு; துரோணரைக் கொல்வதில் அறத்தைக் கைவிடுமாறு பாண்டவர்களைத் தூண்டிய கிருஷ்ணன்; கிருஷ்ணனின் ஆலோசனையைத் தயக்கத்துடன் ஏற்றுக் கொண்ட யுதிஷ்டிரன்; அர்ஜுனன் அஃதை ஏற்காதது; அஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட யானையைப் பீமன் கொல்வது; அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாகத் துரோணரிடம் சொன்ன பீமன்; பீமனை நம்பாத துரோணர், பிரம்மாஸ்திரத்தைக் கொண்டு பாஞ்சாலர்களைக் கொன்றது; துரோணரை நிந்தித்த முனிவர்கள்; அஸ்வத்தாமனைக் குறித்து யுதிஷ்டிரனிடம் விசாரித்த துரோணர்; யுதிஷ்டிரன் சொன்ன பொய்; யுதிஷ்டிரனின் தேர் மண்ணைத் தொட்டது; கவலையில் மூழ்கிய துரோணர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பழங்காலத்தில் தானவர்களுக்கு மத்தியில் பேரழிவை உண்டாக்கிய சக்ரனை {இந்திரனைப்} போலப் பாஞ்சாலர்களுக்கு மத்தியில் துரோணர் பேரழிவை ஏற்படுத்தினார்.(1) வலிமையும், சக்தியும் கொண்ட பாண்டவப்படையின் பெரும் தேர்வீரர்கள், துரோணரின் ஆயுதங்களால் கொல்லப்பட்டாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரைக் கண்டு அஞ்சவில்லை.(2) உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் அனைவரும் துரோணருடன் போரிடுவதற்காக, அவரை எதிர்த்து விரைந்தனர்.(3) துரோணரைச் சூழ்ந்து கொள்வதற்காக அவரை நோக்கி விரைந்து, அவரது கணைகளாலும், ஈட்டிகளாலும் கொல்லப்பட்ட அவர்களது ஓலங்களின் பேரொலி கடுமையானதாக இருந்தது.(4) அந்தப் போரில் சிறப்புமிக்கத் துரோணரால் பாஞ்சாலர்கள் கொல்லப்படுவதைக் கண்டும், அவரது ஆயுதங்கள் அனைத்துப் பக்கங்களையும் நிறைப்பதைப் பார்த்தும், பாண்டவர்களின் இதயத்துக்குள் அச்சம் நுழைந்தது.(5) அந்தப் போரில் குதிரைகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படும் பயங்கரமான பேரழிவைக் கண்டு, ஓ! ஏகாதிபதி, பாண்டவர்கள் வெற்றியில் நம்பிக்கையற்றவர்களானார்கள்.(6)

அவர்கள் (தங்களுக்குள் ஒருவருக்கொருவர்), “வலிமைமிக்க ஆயுதங்களை அறிந்த போர்வீரரான இந்தத் துரோணர், இளவேனில் காலத்தில் வைக்கோல் குவியலை எரிக்கும் காட்டுத் தீயைப் போல நம் அனைவரையும் எரித்து விடுவார் என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா?(7) போரில் அவரைப் பார்ப்பதற்குக் கூட எவரும் தகுந்தவரல்லர். அறநெறிகளின் வழிகளை அறிந்த அர்ஜுனனோ, (அவன் மட்டுமே அவருக்கு இணையானவன் என்றாலும்) அவருடன் போரிட மாட்டான்” என்று சொல்லிக் கொண்டனர்.(8) துரோணரின் கணைகளால் பீடிக்கப்படும் குந்தியின் மகன்களைக் கண்டு அச்சத்தால் ஈர்க்கப்பட்டவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனும், அவர்களின் நலத்தில் அர்ப்பணிப்பு கொண்டவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம்,(9) “வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான இவரை, வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்களால் கூடப் போரில் பலத்தால் வெல்ல முடியாது.(10) எனினும், இவர் {துரோணர்} தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டால், மனிதர்களால் கொல்லப்படத்தக்கவர் ஆவார். பாண்டுவின் மகன்களே, தங்கத்தேரைக் கொண்ட துரோணர், போரில் நம் அனைவரையும் கொல்ல முடியாத வகையில், வெற்றியை ஈட்டுவதற்காக அறத்தை விட்டு, இப்போது சிறு சூழ்ச்சியை நீங்கள் பின்பற்ற வேண்டும்[1]. (தம் மகனான) அஸ்வத்தாமனின் வீழ்ச்சியில் அவர் போரிடுவதை நிறுத்துவார் என நான் நினைக்கிறேன்.(11,12) எனவே, ஏதாவதொரு மனிதன், போரில் அஸ்வத்தாமன் கொல்லப்பட்டதாக அவரிடம் {துரோணரிடம்} சொல்லட்டும்” என்றான் {கிருஷ்ணன்}. எனினும், ஓ! மன்னா, இந்த அறிவுரையைக் குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} ஏற்கவில்லை.(13) பிறர் இஃதை ஏற்றனர். ஆனால், யுதிஷ்டிரனோ பெருங்கடினத்துடன் {பெரும் தயக்கத்துடனே} இஃதை ஏற்றுக் கொண்டான்[2].

பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளைக் கொல்லும் பயங்கரமான கதாயுதம் ஒன்றால், தன் படையைச் சேர்ந்ததும், மாலவர்களின் தலைவன் இந்திரவர்மனுக்குச் சொந்தமானதும், அஸ்வத்தாமன் என்ற பெயரைக் கொண்டதுமான பெரும் யானையைக் கொன்றான்[3].(14,15) பிறகு அந்தப் போரில் சற்றே நாணத்தோடு துரோணரை அணுகிய பீமசேனன், “அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான்” என்று உரக்கக் கூவினான்.(16) அஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட அந்த யானை இப்படிக் கொல்லப்பட்டிருந்தாலும், பீமன் அஸ்வத்தாமன் கொல்லப்பட்டதாகச் சொன்னான். உண்மைச் செய்தியைத் தன் மனத்தில் கொண்டு, உண்மையற்றதையே அவன் {பீமன்} சொன்னான்.(17) ஏற்றுக் கொள்ள முடியாத பீமனின் அந்த வார்த்தைகளைக் குறித்துச் சிந்தித்த துரோணரின் அங்கங்கள் நீரில் கரையும் மண்ணைப் போல் கரைவதாகத் தெரிந்தது.(18) எனினும், விரைவில் தன் மகனின் {அஸ்வத்தாமனின்} ஆற்றலை நினைவுகூர்ந்த அவர் {துரோணர்}, அதைத் தவறான செய்தி என்று கருதினார். எனவே அவனது கொலையைக் கேட்ட அவர் தைரியத்தை இழக்காதவராக இருந்தார்.(19) உண்மையில், விரைவாக உணர்வுகள் மீண்ட அவர் {துரோணர்}, எதிரிகளால் தடுக்கப்பட முடியாதவன் தமது மகன் {அஸ்வத்தாமன்} என்பதை நினைவுகூர்ந்து ஆறுதலை அடைந்தார்.(20)பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி விரைந்து, தம்மைக் கொல்வதற்காக விதிக்கப்பட்ட அந்த வீரனைக் கொல்ல விரும்பிய அவர் {துரோணர்}, கங்க இறகுகளைக் கொண்ட ஆயிரம் கூரிய கணைகளால் அவனை மறைத்தார்.(21) பிறகு, பெரும் சக்தி கொண்ட பாஞ்சாலத் தேர்வீரர்கள் இருபதாயிரம் {20,000} பேர், போரில் இப்படித் திரிந்து கொண்டிருந்த அவரைத் தங்கள் கணைகளால் மறைத்தனர்.(22) மழைக்காலங்களில் மேகங்களால் மறைக்கப்படும் சூரியனுக்கு ஒப்பாக, ஓ! ஏகாதிபதி, அந்தக் கணைகளால் முழுமையாக மறைக்கப்பட்ட அந்தப் பெரும் தேர்வீரரை அதற்கு மேலும் எங்களால் காண முடியவில்லை.(23) கோபத்தால் நிறைந்தவரும், அந்தத் துணிச்சல்மிக்கப் பாஞ்சாலர்களுக்கு அழிவை உண்டாக்க விரும்பியவரும், வலிமைமிக்கத் தேர்வீரரும், எதிரிகளை எரிப்பவருமான அந்தத் துரோணர் பாஞ்சாலர்களின் அந்தக் கணைகள் யாவையும் விலக்கி, பிரம்ம ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்தார். அந்நேரத்தில் துரோணர், புகையற்ற சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தார்.(24,25) மீண்டும் சினத்தால் நிறைந்த பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, சோமகர்கள் அனைவரையும் கொன்று, பெரும் காந்தியுடன் கூடியவராகத் தெரிந்தார்.(26)

அச்சத்தை ஏற்படுத்தும் அந்தப் பயங்கரப் போரில், பாஞ்சாலர்களின் தலைகளை வீழ்த்திய அவர் {துரோணர்}, முள்பதித்த கதாயுதங்களை {பரிகங்களைப்} போலத் தெரிந்தவையும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான அவர்களின் பருத்த கரங்களையும் அறுத்தார்.(27) உண்மையில் அந்தப் பரத்வாஜர் மகனால் {துரோணரால்} போரில் கொல்லப்பட்ட க்ஷத்திரியர்கள், புயலால் வேரோடு சாய்ந்த மரங்களைப் போல விழுந்து பூமியில் சிதறிக் கிடந்தனர்.(28) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வீழ்ந்து கிடந்த குதிரைகள் மற்றும் யானைகளால், குருதியும், சதையும் கலந்து சேறாக இருந்த பூமியானது கடக்கமுடியாததாக இருந்தது.(29) அந்தப் போரில் இருபதாயிரம் பாஞ்சாலத் தேர்வீரர்களைக் கொன்ற துரோணர், புகையற்ற சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தார்.(30) மீண்டும் சினத்தால் நிறைந்த பரத்வாஜரின் வீர மகன், அகன்ற தலை கணை {பல்லம்} ஒன்றால், வசுதானனின் [4] தலையை அவனது உடலில் இருந்து அறுத்தார்.(31) மீண்டும் அவர், ஐநூறு {500} மத்ஸ்யர்களையும், ஆறாயிரம் {6,000} யானைகளையும், பத்தாயிரம் {10,000} குதிரைகளையும் கொன்றார்.(32)க்ஷத்திரிய குலத்தை முற்றாக அழிப்பதற்காகக் களத்தில் நின்று கொண்டிருந்த துரோணரைக் கண்ட முனிவர்கள் விஸ்வாமித்ரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், வசிஷ்டர், கசியபர், அத்ரி, ஸிகதர்கள் {லிகதர்கள்}, பிருஸ்னிகள், கர்க்கர் {கர்க்கர்கள்}, வாலகில்யர்கள், மரீசிபர்கள், பிருகுவின் வழித்தோன்றல்கள், அங்கிரஸ் {அங்கிரசர்கள்} ஆகியோரும், நுண்ணிய வடிவங்களைக் கொண்ட {மெலிந்த உடலைக் கொண்ட} இன்னும் பிற முனிவர்களும், துரோணரை பிரம்மலோகத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பி, வேள்விக்காணிக்கைகளைச் சுமப்பவனை {அக்னியைத்} தங்கள் தலைமையில் கொண்டு அங்கே விரைந்து வந்து,(33-35) போர்க்கள இரத்திமானத் துரோணரிடம், “நீ நேர்மையற்ற வகையில் {அநீதியாகப்} போரிடுகிறாய். உன் மரணத்திற்கான நேரம் வந்துவிட்டது.(36) உன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, ஓ! துரோணா, இங்கே நிற்கும் எங்களைக் காண்பாயாக. இதற்கு மேலும், இது போன்ற மிகக் கொடூரமான செயல்களைச் செய்வது உனக்குத் தகாது.(37) வேதங்களையும், அதன் கிளைகளையும் {அங்கங்களையும்} அறிந்தவன் நீ. உண்மைக்குக் கட்டுப்படும் கடமைகளில் {செயல்களில்} அர்ப்பணிப்புள்ளவன் நீ. குறிப்பாக, நீ ஒரு பிராமணனுமாவாய். இது போன்ற செயல்கள் உனக்குத் தகாது.(38) உன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, உன்னை மறைத்துக் கொண்டிருக்கும் குற்றத்திரையை விலக்குவாயாக. அழிவற்ற பாதையை இப்போது பின்பற்றுவாயாக. மனிதர்களின் உலகில் நீ வசிக்க வேண்டிய காலம் இப்போது முழுமையடைந்துவிட்டது.(39) இப்பூமியின் ஆயுதங்கள் குறித்து அறியாத மனிதர்களைப் பிரம்மாயுதம் {பிரம்மாஸ்திரம்} கொண்டு நீ எரித்துவிட்டாய். ஓ! மறுபிறப்பாளனே {பிராமணனே}, நீ செய்த இந்தச் செயல் நேர்மையானதல்ல {நீதிக்குக் கட்டப்பட்டது அல்ல}.(40) ஓ! துரோணா, தாமதமில்லாமல் போரில் ஆயுதங்களைக் கீழே வைப்பாயாக. பூமியில் நீண்ட காலம் காத்திருக்காதே. ஓ! மறுபிறப்பாளா, இது போன்ற பாவச்செயலை மீண்டும் செய்யாதே” என்றனர்.(41)

அவர்களது இந்த வார்த்தைகளையும், பீமசேனனின் வார்த்தைகளையும் கேட்ட, துரோணர், தன் எதிரே திருஷ்டத்யும்னன் நிற்பதைக் கண்டு, போரில் உற்சாகத்தை மிகவும் இழந்தார்.(42) துயரால் எரிந்து, மிகவும் பீடிக்கப்பட்ட அவர் {துரோணர்} குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம் தன் மகன் (அஸ்வத்தாமன்) கொல்லப்பட்டானா, இல்லையா என்பது குறித்து விசாரித்தார்.(43) மூவுலகங்களின் அரசுரிமைக்காகக் கூட யுதிஷ்டிரன் பொய்யேதும் பேச மாட்டான் என்று துரோணர் உறுதியாக நம்பினார்.(44) இக்காரணத்திற்காகவே, அந்தப் பிராமணக் காளை {துரோணர்} வேறு யாரிடமும் கேட்காமல் யுதிஷ்டிரனிடம் கேட்டார். அவர், யுதிஷ்டிரனின் குழந்தைப் பருவத்திலிருந்தே, பின்னவனிடமே உண்மையை எதிர்பார்த்திருந்தார்.(45)

அதே வேளையில், ஓ! ஏகாதிபதி, போர்வீரர்களில் முதன்மையான துரோணர், பாண்டவர்கள் அனைவரையும் பூமியின் பரப்பில் இருந்து துடைத்து விடக்கூடியவர் என்பதை அறிந்த கோவிந்தன் {கிருஷ்ணன்} பெரும் கவலை கொண்டான். யுதிஷ்டிரனிடம் பேசிய அவன் {கிருஷ்ணன்},(46) “துரோணர், சினத்தால் நிறைந்த நிலையில் அரை நாள் போரிட்டாலும் உமது படை நிர்மூலமாக்கப்படும் என்பதை நான் உண்மையாகவே உமக்குச் சொல்கிறேன்.(47) துரோணரிடம் இருந்து எங்களைப் பாதுகாப்பீராக. இத்தகு சூழ்நிலையில், உண்மையை விடப் பொய்மையே சிறந்தது. ஒருவனின் உயிரைக் காப்பதற்காக உண்மையற்றதைச் சொல்வதால், பாவம் அவனைத் தீண்டாது.(48) பெண்களிடமோ, திருமணங்களிலோ, பசுவைக் காப்பதற்கோ, ஒரு பிராமணரைக் காப்பதற்கோ உண்மையற்றதைச் சொல்வதில் எந்தப் பாவமும் இல்லை[5]” என்றான்.(49) கோவிந்தனும் யுதிஷ்டிரனும் இவ்வாறு ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருந்தபோது (மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} பேசிய) பீமசேனன், “ஓ! ஏகாதிபதி, உயர் ஆன்ம துரோணர் கொல்லப்படத்தக்க வழிமுறைகளைக் கேட்ட உடனேயே,(50) போரில் என் ஆற்றலை வெளிப்படுத்தி, சக்ரனின் யானைக்கு {ஐராவதத்துக்கு} ஒப்பானதும், மாலவர்களின் தலைவனான இந்திரவர்மனுக்குச் சொந்தமானதும், உமது படைக்குள் இருந்ததுமான ஒரு வலிமைமிக்க யானையைக் கொன்றேன். பிறகு துரோணரிடம் சென்ற நான், அவரிடம், “ஓ! பிராமணரே, அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான். போரிடுவதை நிறுத்துவீராக” என்று சொன்னேன்.(51,52) ஓ! மனிதர்களில் காளையே, என் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை ஆசான் நம்பவில்லை. வெற்றியில் விருப்பமுள்ள நீர், கோவிந்தனின் அறிவுரையை ஏற்பீராக.(53) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, சரத்வான் மகளுடைய மகன் {அஸ்வத்தாமன்} மாண்டான் என்று துரோணரிடம் சொல்வீராக. உம்மால் {இப்படிச்} சொல்லப்பட்டால், அந்தப் பிராமணர்களில் காளை ஒருபோதும் போரிடமாட்டார்.(54) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {யுதிஷ்டிரரே}, மூவுலகங்களில் உண்மை நிறைந்தவரென்ற மதிப்பை நீர் பெற்றிருக்கிறீர்” என்றான் {பீமன்}.(55)பீமனின் அந்த வார்த்தைகளைக் கேட்டும், கிருஷ்ணனின் ஆலோசனைகளால் தூண்டப்பட்டும், தவிர்க்கப்பட முடியாத விதியின் காரணத்தாலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தான் என்ன சொல்ல வேண்டும் என்று {தன் தரப்பால்} விரும்பப்படுகிறதோ அதை யுதிஷ்டிரன் மனத்தால் ஏற்றான். உண்மையற்ற ஒன்றைச் சொல்ல அஞ்சியவனும், வெற்றியடையும் விருப்பத்தாலான ஆர்வத்தோடு கூடியவனுமான யுதிஷ்டிரன்,(56) அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்பதைத் துல்லியமாகவும், யானை என்ற வார்த்தையைத் துல்லியமில்லாமலும் (பெயருக்குப் பின்னால்) சேர்த்துச் சொன்னான்[6]. அதுவரை பூமியின் பரப்பில் இருந்து நான்கு விரல்கட்டை அளவு உயரத்தில் யுதிஷ்டிரனின் தேர் நின்றிருந்தது.(57) எனினும், அவன் {யுதிஷ்டிரன்} அந்த உண்மையற்றதை {பொய்யைச்} சொன்ன பிறகு, அவனது (வாகனம் மற்றும்) விலங்குகள் பூமியைத் தொட்டன. வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர், யுதிஷ்டிரனிடம் இருந்து அவ்வார்த்தைகளைக் கேட்டதும்,(58) தன் மகன் {அஸ்வத்தாமன்} மாண்ட ({மாண்டான் என்ற} நம்பிக்கையில்) துயரால் பீடிக்கப்பட்டு, மனத்தளர்வின் வசமடைந்தார். முனிவர்களின் வார்த்தைகளை மீண்டும் நினைத்த அவர், உயர் ஆன்ம பாண்டவர்களுக்கு எதிராகப் பெரிய குற்றத்தைச் செய்தவராகத் தன்னைக் கருதினார். தன் மகனின் மரணத்தைக் குறித்து இப்போது கேட்டதும், அவர் முற்றிலும் உற்சாகமற்றவராக ஆனார்; திருஷ்டத்யும்னனைக் கண்டதால் கவலையில் நிறைந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவரால் {துரோணரால்} அதற்கு மேலும் முன்பு போலப் போரிட முடியவில்லை” {என்றான் சஞ்சயன்}.(59-60)(“அஸ்வத்தாமாஹத: குஞ்சர:” என்பது மூலம். இங்கே “அஸ்வத்தாமாஹத: {அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான்} என்ற வார்த்தைகளை உரக்கச் சொன்ன யுதிஷ்டிரன், குஞ்சரம் {யானை} என்ற சொல்லை மெல்ல {மென்மையாகச்} சொன்னான்“ என்பது பொருள்.  கொல்லப்பட்டது அஸ்வத்தாமன் என்ற யானை; அல்லது அஸ்வத்தாமனே கொல்லப்பட்ட யானை என்ற தொனியில் யுதிஷ்டிரன் சொல்லியிருக்க வேண்டும்.)

திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 192-துரோணர் அழைத்தும், தோன்றாமல் போன தெய்வீக ஆயுதங்கள்; துரோணரின் ஆயுதங்கள் தீர்ந்து போனது; துரோணருக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையிலான கடும் மோதல்; திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி; சாத்யகியின் வீரத்தை மெச்சிய அர்ஜுனன்; சாத்யகியின் ஆற்றலை இரு படைகளும் புகழ்ந்ததாகச் சொன்ன சஞ்சயன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரோணர் பெருங்கவலையில் மூழ்கியிருப்பதையும், துயரால் கிட்டத்தட்ட உணர்வுகளை இழந்திருப்பதையும் கண்டவனும், பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனுமான திருஷ்டத்யும்னன் அவரை நோக்கி விரைந்து சென்றான்.(1) ஒரு பெரும் வேள்வியில், வேள்விக் காணிக்கைகளைச் சுமப்பவனின் {அக்னியின்} மூலம், மனிதர்களின் ஆட்சியாளனான துருபதனால் அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்} துரோணரின் அழிவுக்காகவே பெறப்பட்டான்.(2) துரோணரைக் கொல்ல விரும்பிய அவன் {திருஷ்டத்யும்னன்}, வெற்றியைத் தரவல்லதும், உறுதிமிக்கதும், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான நாணொலியைக் கொண்டதும், பெரும் பலத்துடன் கூடிய நாண்கயிற்றைக் கொண்டதும், மீற முடியாததும், தெய்வீகமானதுமான வில்லொன்றை எடுத்தான். அவன் {திருஷ்டத்யும்னன்}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானதும், நெருப்பின் காந்தியைக் கொண்டதுமான கடுங்கணை ஒன்றை அதில் பொருத்தினான்.

நெருப்பின் கடுந்தழல்களுக்கு ஒப்பானதும், அவனது வட்டமான வில்லுக்குள் அடங்கி இருந்ததுமான அந்தக் கணையானது, பிரகாசமான ஒளிவட்டத்திற்குள் உள்ள {பரிவேஷத்துடன் கூடிய} பெரும் காந்தியுடைய கூதிர் காலச் சூரியனுக்கு ஒப்பாக இருந்தது.(3-5) அந்தச் சுடர்மிக்க வில்லானது பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} பலத்துடன் வளைக்கப்படுவதைக் கண்ட துருப்புகள், (உலகின்) இறுதி நேரம் வந்துவிட்டது என்றே கருதினர்.(6) அந்தக் கணை தன்னை நோக்கிக் குறிவைக்கப்படுவதைக் கண்ட அந்த வீரப் பரத்வாஜ மகன் {துரோணர்}, தன் உடலின் இறுதி நேரம் வந்துவிட்டதென நினைத்தார்.(7) அந்தக் கணையைக் கலங்கடிப்பதற்காக ஆசான் {துரோணர்} கவனமாகத் தயாரானார். எனினும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த உயர் ஆன்மா கொண்டவரின் {துரோணரின்}ஆயுதங்கள், அவரது உத்தரவுக்குப் பிறகும் தோன்றாமல் போயின[1].(8)நான்கு நாட்கள் மற்றும் இரவுகளாக அவர் இடையறாமல் தமது ஆயுதங்களை ஏவிக்கொண்டிருந்தாலும், அவை தீர்ந்துவிடவில்லை. எனினும், அந்த ஐந்தாம் நாளின் மூன்றாம் பகுதியில் அவரது ஆயுதங்கள் தீர்ந்தன.(9) தன் கணைகள் தீர்ந்து போனதைக் கண்டும், தமது மகனின் {அஸ்வத்தாமனின்} மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டும், தன் உத்தரவுக்கு ஏற்பத் தோன்ற வேண்டிய தெய்வீக ஆயுதங்களின் விருப்பமின்மையின் காரணமாகவும்,(10) முனிவர்களின் வார்த்தைகளில் உந்தப்பட்டும் அவர் {துரோணர்} தமது ஆயுதங்களைக் கீழே வைக்க விரும்பினார். பெரும் சக்தியால் நிறைந்திருந்தாலும், அவரால் முன்பு போலப் போரிட முடியவில்லை.(11) பிறகு, அங்கிரஸ் முன்பு தமக்குக் கொடுத்திருந்த மற்றொரு தெய்வீக வில்லையும், பிராமணனின் சாபத்திற்கு ஒப்பான சில குறிப்பிட்ட கணைகளையும் எடுத்துக் கொண்ட அவர், திருஷ்டத்யும்னனுடன் போரிடுவதைத் தொடர்ந்தார்.(12) அந்தப் பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} அடர்த்தியான கணை மாரியால் மறைத்த அவர், சினத்தால் நிறைந்து, தமது கோபக்கார எதிரியைச் {திருஷ்டத்யும்னனை} சிதைத்தார்.(13) அவர் {துரோணர்} தன் கூரிய கணைகளைக் கொண்டு அந்த இளவரசனின், கணைகள், கொடிமரம் மற்றும் வில் ஆகியவற்றை நூறு துண்டுகளாக அறுத்தார். பிறகு அவர் {துரோணர்} தன் எதிராளியின் {திருஷ்டத்யும்னனின்} சாரதியை வீழ்த்தினார்.(14)

அப்போது திருஷ்டத்யும்னன், புன்னகைத்தபடியே மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஒரு கூரிய கணையால் துரோணரின் நடுமார்பைத் துளைத்தான்.(15) அதனால் ஆழத் துளைக்கப்பட்டு, அம்மோதலில் தன்னிலையை இழந்த அந்த வலிமைமிக்க வில்லாளி, பிறகு, அகன்ற தலை கொண்ட கூரிய கணை {பல்லம்} ஒன்றால் மீண்டும் திருஷ்டத்யும்னனின் வில்லை அறுத்தார்.(16) உண்மையில் அந்த வெல்லப்பட முடியாத துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் எதிராளியின் காதாயுதம் மற்றும் வாளைத் தவிர அவன் {திருஷ்டத்யும்னன்} கொண்டிருந்த ஆயுதம் மற்றும் விற்கள் அனைத்தையும் அறுத்தார்.(17) சினத்தால் நிறைந்த அவர் {துரோணர்}, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, எந்த எதிரியின் உயிரையும் எடுக்க வல்லவையான ஒன்பது கூரிய கணைகளால் கோபக்காரத் திருஷ்டத்யும்னனைத் துளைத்தார்.(18)

அப்போது அளக்க முடியாத ஆன்மா {தைரியம்} கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான திருஷ்டத்யும்னன், பிரம்மாயுதத்தை இருப்புக்கு அழைத்து, தன் தேரின் குதிரைகளோடு தன் எதிரியின் குதிரைகளைக் கலக்கச் செய்தான்.(19) ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, காற்றின் வேகத்தைக் கொண்டவையும், சிவப்பு நிறம் கொண்டவையும், புறாக்களின் நிறத்தைக் கொண்டவையுமான அந்தக் குதிரைகள் இப்படி ஒன்றோடொன்று கலந்தது மிக அழகாகத் தெரிந்தது.(20) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் இப்படி ஒன்றோடொன்று கலந்த அந்தக் குதிரைகள் மழைக்காலங்களில் மின்னலின் சக்தியூட்டப்பட்டு முழங்கும் மேகங்களைப் போல அழகாகத் தெரிந்தன.(21) அப்போது, அளவிலா ஆன்மா கொண்ட அந்த இருபிறப்பாளர் {பிராமணரான துரோணர்}, திருஷ்டத்யும்னனுடைய தேரின் ஏர்க்கால் இணைப்புகளையும், சக்கர இணைப்புகளையும், தேரின் (பிற) இணைப்புகளையும் அறுத்தார்.(22)

தனது வில்லை இழந்து, தேரற்றவனாக, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாகச் செய்யப்பட்ட அந்த வீரத் திருஷ்டத்யும்னன், பெரும் துயரத்தில் விழுந்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டான்.(23) சினத்தால் நிறைந்தவரும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவருமான துரோணர், அந்தக் கதாயுதம் தன் மீது வீசப்படத் தயாராக இருந்த நிலையில் பெரும் எண்ணிக்கையிலான கூரிய கணைகளால் அஃதை அறுத்தார்.(24) துரோணரின் கணைகளால் தன் கதாயுதம் வெட்டப்பட்டதைக் கண்ட அந்த மனிதர்களில் புலி (பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}), குறையற்ற ஒரு வாளையும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டான்.(25) அந்தச் சூழ்நிலையில், உயர் ஆன்மப் போர்வீரரான அந்த ஆசான்களில் முதன்மையானவருக்கு ஒரு முடிவை ஏற்படுத்துவதில் அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} ஐயமறத் தீர்மானமாக இருந்தான்.(26) சில நேரங்களில் தேர்க்கூட்டில் பதுங்கியும், சிலநேரங்களில் தன் தேரின் ஏர்க்கால்களில் நின்றபடியும் இருந்த அந்த இளவரசன், தன் வாளை உயர்த்தியபடியும், பிரகாசமான தன் கேடயத்தைச் சுழற்றியபடியும் திரிந்து கொண்டிருந்தான்[2].(27) வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் மடமையினால் ஒரு கடினமான சாதனையை அடைய விரும்பி, அந்தப் போரில் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} மார்பைத் துளைக்க எண்ணினான்.(28) அவன் {திருஷ்டத்யும்னன்}, சில நேரங்களில் நுகத்தடியிலும், சில நேரங்களில் துரோணருடைய சிவப்பு குதிரைகளின் இடுப்புக்குக் கீழும் இருந்தான். அவனது இந்த நகர்வுகளை {இயக்கங்களைத்} துருப்புகள் அனைத்தும் உயர்வாகப் பாராட்டின.(29) உண்மையில், அவன் நுகத்தடியின் கட்டுகளுக்கு மத்தியிலோ, அந்தச் சிவப்புக் குதிரைகளுக்குப் பின்புறமோ இருக்கையில், அவனைத் தாக்க எந்த வாய்ப்பையும் துரோணர் காணவில்லை. இவை யாவும் காண்பதற்கு மிக அற்புதமானவையாக இருந்தன.(30)அந்தப் போரில் துரோணர் மற்றும் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} ஆகிய இருவரின் இயக்கங்களும், இறைச்சித் துண்டு ஒன்றிற்காக ஆகாயத்தில் திரியும் ஒரு பருந்துக்கு ஒப்பானவையாக இருந்தன.(31) அப்போது துரோணர், ஓர் ஈட்டியின் மூலமாகத் (தமக்குச் சொந்தமான) சிவப்புக் குதிரைகளைத் தாக்கிவிடாதவாறு, தன் எதிராளியின் வெண்குதிரைகளை மட்டும் ஒன்றன் பின் ஒன்றாகத் துளைத்தார்[3].(32) திருஷ்டத்யும்னனுடைய அந்தக் குதிரைகள் உயிரையிழந்து பூமியில் விழுந்தன. அதன் பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணருடைய சிவப்புக் குதிரைகள், திருஷ்டத்யும்னனுடைய தேரில் சிக்கியிருந்த நிலையில் இருந்து விடுபட்டன.(33) அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரால் தன் குதிரைகள் கொல்லப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், போராளிகளில் முதன்மையானவனுமான பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(34) அந்த வாள்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {திருஷ்டத்யும்னன்}, தன் தேரை இழந்தாலும், தன் வாளை எடுத்துக் கொண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வினதையின் மகன் (கருடன்) ஒரு பாம்பின் மீது வேகமாகப் பாய்வதைப் போலத் துரோணரை நோக்கிப் பாய்ந்தான்.(35)ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகனை {துரோணரைக்} கொல்ல விரும்பிய அத்தருணத்தில் அவன் {திருஷ்டத்யும்னன்}, பழங்காலத்தில் ஹிரண்யகசிபுவைக் கொல்ல விரும்பிய விஷ்ணுவின் வடிவத்தைக் கொண்டிருந்தான்.(36) மேலும் அவன் {திருஷ்டத்யும்னன்} பல்வேறு பரிணாமங்களைச் செய்தான். உண்மையில் அந்தப் பிருஷதன் மகன், ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, நன்கு அறியப்பட்டவையும், பல்வேறு வகைகளிலான இருபத்தோரு நகர்வுகளையும் {இயக்கங்களையும்}[4] களத்தில் திரிந்தபடியே வெளிக்காட்டினான்.(37) வாள்தரித்துக் கையில் கேடயத்துடன் கூடிய அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன் வாளை உயரச் சுழற்றி {பிராந்தம்}, பக்கத்தூண்டுதல்கள் செய்து {உத்ப்ராந்தம்}, முன்நகர்ந்து விரைந்து {ஆவித்தம்}, பக்கவாட்டில் ஓடி {ஆப்லுதம்}, உயரக் குதித்து {ப்ரஸ்ருதம்}, தன் எதிராளிகளின் பக்கங்களை {விலாப்புறங்களைத்} தாக்கி {ஸ்ருதம்}, பின்புறமாக விலகி {பரிவ்ருத்தம்}, எதிரியை நெருங்கியும் {நிவ்ருத்த சம்பாதம்} மற்றும் அவர்களைக் கடுமையாக அழுத்தியபடியும் {சமுதீர்ணம்} திரிந்து கொண்டிருந்தான். அவற்றை நன்றாகப் பயின்ற பிறகு, அவன் {திருஷ்டத்யும்னன்}, பாரதம், கௌசிகம், சாத்வதம் என்ற பரிமாணங்களையும் காட்டியபடியே துரோணருக்கு அழிவை உண்டாக்குவதற்காக அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தான் [5].கையில் வாளுடனும், கேடயத்துடனும் களத்தில் திரிந்து கொண்டிருந்த திருஷ்டத்யும்னனின் அந்த அழகிய பரிணாமங்களைக் கண்ட போர்வீரர்கள் அனைவரும், மேலும் அங்கு இருந்த தேவர்களும் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அப்போது மறுபிறப்பாளரான {பிராமணரான} துரோணர், அந்தப் போரின் நெருக்கத்தில் ஆயிரக்கணக்கான கணைகளை ஏவியபடியே, திருஷ்டத்யும்னனின் வாளையும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவனது கேடயத்தையும் அறுத்தார். மிக அருகில் இருந்து போரிட்ட அந்தத் துரோணர் ஏவிய கணைகள் {வைஸ்திகங்கள்}, ஒரு முழம் அளவு நீளத்திற்கே இருந்தன[6].(38-42) அத்தகு கணைகள் நெருங்கிய போரில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சரத்வான் மகன் (கிருபர்), பார்த்தன் {அர்ஜுனன்}, அஸ்வத்தாமன், கர்ணன் ஆகியோரைத் தவிர அவ்வகையிலான கணைகள் வேறு எவரிடமும் இல்லை.(43) அத்தகு கணைகளைப் பிரத்யும்னன், யுயுதானன் {சாத்யகி}, அபிமன்யு ஆகியோரும் வைத்திருந்தனர்.பிறகு அந்த ஆசான் {துரோணர்}, தம் சொந்த மகனைப் {அஸ்வத்தாமனைப்} போன்ற தமது அந்தச் சீடனைக் {திருஷ்டத்யும்னனைக்} கொல்ல விரும்பி, பெரும் வேகம் கொண்ட வலிமையான கணையொன்றைத் தன் வில்லின் நாணில் பொருத்தினார். எனினும், உமது மகனும் {துரியோதனனும்}, உயர் ஆன்மக் கர்ணனும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தக் கணையைப் பத்து கணைகளால் வெட்டிய சாத்யகி, துரோணருக்கு அடிபணியும் தருவாயில் இருந்த திருஷ்டத்யும்னனைக் காத்தான்.(44-46) அப்போது கேசவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (குரு போர்வீரர்களின்) தேர்த்தடங்களில் இப்படித் திரிந்து கொண்டிருந்தவனும், துரோணர், கர்ணன் மற்றும் கிருபரின் கணைகள் தாக்கும் தொலைவில் இருந்தவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகியைக் கண்டனர். “நன்று, நன்று” என்று சொன்ன அவர்கள் இருவரும், அந்தப் போர்வீரர்கள் அனைவரின் தெய்வீக ஆயுதங்களையும் இப்படி அழித்துக் கொண்டிருந்தவனும், மங்காப் புகழைக் கொண்டவனுமான அந்தச் சாத்யகியை உரக்கப் பாராட்டினர். பிறகு கேசவனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} குருக்களை நோக்கி விரைந்தனர்.(47-49)

கிருஷ்ணனிடம் பேசிய தனஞ்சயன் {அர்ஜுனன்}, “ஓ! கேசவா {கிருஷ்ணா}, மது குலத்தைத் தழைக்க வைப்பவனும், உண்மையான ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, என்னையும், இரட்டையரையும் {நகுல-சகாதேவரையும்}, பீமரையும், மன்னர் யுதிஷ்டிரரையும் மகிழச் செய்யும் வகையில், ஆசான் மற்றும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் முன்பு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பாயாக.(50-51) விருஷ்ணிகளின் புகழை அதிகரிப்பவனான சாத்யகி, பயிற்சியால் அடைந்த திறனுடனும், செருக்கில்லாமலும் போரில் திரிந்து, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பாயாக.(52) போரில் வெல்லப்பட முடியாத அவனைக் {சாத்யகியைக்} கண்டு இந்தத் துருப்புகள் அனைத்தும், (வானிலிருக்கும்) சித்தர்களும் ஆச்சரியத்தால் நிறைந்து, “நன்று, நன்று” என்று சொல்லி அவனைப் {சாத்யகியைப்} புகழ்கின்றனர்” என்றான் {அர்ஜுனன்}. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இருபடைகளைச் சேர்ந்த போர்வீரர்கள் அனைவரும், அந்தச் சாத்வத வீரனுடைய {சாத்யகியுடைய} சாதனைகளின் விளைவாக அவனைப் புகழ்ந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(53)

துரோணரின் தலையை வெட்டிய திருஷ்டத்யும்னன்! – துரோண பர்வம் பகுதி – 193-துரியோதனன், கர்ணன் மற்றும் கிருபரோடு மோதிய சாத்யகி; துரோணரை எதிர்த்து விரையுமாறு தன் துருப்புகளைத் தூண்டிய யுதிஷ்டிரன்; தன்னைத் தாக்குபவர்களைப் பெரும் வீரத்தோடு எதிர்கொண்ட துரோணர், பிரம்மாஸ்திரத்தை மீண்டும் பயன்படுத்தியது; அஸ்வத்தாமனின் மரணம் குறித்துத் துரோணரிடம் மீண்டும் நினைவூட்டிய பீமன்; துயரடைந்த துரோணர், தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, யோகத்தில் கரைவது; சொர்க்கத்திலுள்ள சுடர்மிக்க ஒளிக்குள் நுழையும் துரோணர்; உயிரற்ற துரோணரின் தலையை வெட்டிய திருஷ்டத்யும்னன்; ஆசானை உயிருடன் அழைத்துவருமாறு கதறிய அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தச் சாத்வத வீரனின் {சாத்யகியின்} சாதனைகளைக் கண்ட துரியோதனனும், பிறரும், சினத்தால் நிறைந்து, அனைத்துப் பக்கங்களிலும் அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டனர்.(1) கிருபர், கர்ணன் மற்றும் உமது மகன்களும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் சிநியின் பேரனை வேகமாக அணுகி, கூரிய கணைகளால் அவனைத் துளைக்கத் தொடங்கினர்.(2) பிறகு, மன்னன் யுதிஷ்டிரனும், பிற பாண்டவர்களான மாத்ரியின் மகன்கள் {நகுலன்-சகாதேவன்} இருவரும், பெரும் வலிமை கொண்ட பீமசேனனும், (பாதுகாப்பதற்காக) சாத்யகியைச் சூழ்ந்து கொண்டனர்.(3) கர்ணன், வலிமைமிக்கத் தேர்வீரரான கிருபர், துரியோதனன் மற்றும் பிறர் அனைவரும் சாத்யகியின் மீது கணை மாரியைப் பொழிந்து அவனைத் தடுத்தனர்.(4) எனினும் அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, அந்தத் தேர்வீரர்கள் அனைவரோடும் போரிட்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, எதிரிகளால் திடீரென உண்டாக்கப்பட்ட அந்தப் பயங்கரக் கணைப் பொழிவைக் கலங்கடித்தான்.(5) உண்மையில் சாத்யகி, அந்தப் பயங்கரப் போரில், அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர்களால் தன்னை நோக்கிக் குறி வைக்கப்பட்ட தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும், தன் தெய்வீக ஆயுதங்களின் மூலமே முறையாகத் தடுத்தான்.(6)

அரசப் போராளிகளுக்குள்ளான மோதலில் அந்தப் போர்க்களமானது, பழங்காலத்தில் சினத்தால் நிறைந்த ருத்ரன், உயிரினங்கள் அனைத்தையும் அழித்த காட்சிக்கு ஒப்பாகப் பல கொடூரக் காட்சிகள் நிறைந்ததாக இருந்தது.(7) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மனிதக் கரங்கள் மற்றும் தலைகள், (தேர்களில்) விழுந்த குடைகள், சாமரங்கள் ஆகியன,(8) அந்தப் போர்க்களத்தில் குவியலாகக் கிடப்பது காணப்பட்டது. உடைந்த தேர்கள் மற்றும் சக்கரங்கள், உடல்களில் இருந்து வெட்டப்பட்ட பெருங்கரங்கள் ஆகியவையும், உயிரையிழந்தவர்களான துணிச்சல்மிக்கக் குதிரை வீரர்களும் அந்தப் பூமியில் அடர்த்தியாகப் பரவிக் கிடந்தனர். ஓ! குருக்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும்போரில், கணைகளின் பாய்ச்சலில் சிதைந்து போன பெரும் எண்ணிக்கையிலான போர்வீரர்கள்,(9,10) உருளுவதோ, வலியால் தரையில் புரளுவதோ, மரணத்தின் விளிம்பில் துடித்துக் கொண்டிருப்பதோ காணப்பட்டது.

பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்த போது, தன் போர்வீரர்களுடன் பேசிய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், “பெரும் தேர்வீரர்களே, உங்கள் திறன் அனைத்தையும் வெளிப்படுத்தியபடியே குடத்தில் பிறந்தவரை {துரோணரை} எதிர்த்து விரைவீராக.(12) அதோ பிருஷதனின் வீரமகன் {திருஷ்டத்யும்னன்} துரோணரிடம் போரிடுகிறான். தன் வலிமையால் இயன்ற அளவுக்கு அவன் {திருஷ்டத்யும்னன்} பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கொல்ல முயல்கிறான்.(13) இந்தப் பெரும்போரில் அவன் வெளிப்படுத்தும் தன்மைகளைக் கண்டால், சினத்தால் நிறைந்த அவன் {திருஷ்டத்யும்னன்}, இன்று துரோணரை வீழ்த்துவான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(14) அனைவரும் ஒன்று சேர்ந்து குடத்தில் பிறந்தவரோடு {துரோணரோடு} போரிடுவீராக” என்றான். யுதிஷ்டிரனால் இப்படி ஆணையிடப்பட்ட சிருஞ்சயர்கள் அனைவரும்,(15) அந்தப் பரத்வாஜர் மகனைக் {துரோணரைக்} கொல்வதற்காகப் பெரும் வேகத்துடன் விரைந்தனர்.

வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, தாம் இறக்கப் போகிறோம் என்பதை உறுதியாக அறிந்தாலும், முன்னேறி வரும் அந்தப் போர்வீரர்களை எதிர்த்து வேகமாக விரைந்தார். துல்லிய இலக்கைக் கொண்ட அந்தத் துரோணர் இப்படிச் சென்ற போது பூமியானது பயங்கரமாக நடுங்கியது.(16,17) (பகைவரின்) படையணிகளுக்குள் அச்சத்தைத் தூண்டும் வகையில் கடுங்காற்று வீசத் தொடங்கியது. சூரியனில் இருந்து வெளியே வருவதாகத் தெரிந்த பெரும் விண்கற்கள்,(18) பெரும் பயங்கரங்களை முன்னறிவித்துக் கொண்டு கடுமையாகச் சுடர்விட்டபடியே கீழே விழுந்தன. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, துரோணரின் ஆயுதங்கள் எரிவதைப் போலத் தெரிந்தன.(19) தேர்கள் உரத்த சடசடப்பொலியை உண்டாக்குவதும், குதிரைகள் கண்ணீரை உதிர்ப்பதும் காணப்பட்டது. வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரும் தன் சக்திகளை இழந்தவராகவே காணப்பட்டார்.(20) அவரது இடது கண்ணும், இடது கையும் துடிக்கத் தொடங்கின. தம் முன்னே நிற்கும் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} மீண்டும் கண்டும், தாம் உலகத்தை விட்டுச் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்று சொன்ன முனிவர்களின் வார்த்தைகளை மனத்தில் கொண்டும் அவர் {துரோணர்} உற்சாகமிழந்தவரானார். பிறகு அவர் {துரோணர்}, நேர்மையாகப் போரிட்டு உயிரை விட விரும்பினார்.(21,22)

துருபதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனின்} துருப்புகளால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்ட துரோணர், பெரும் எண்ணிக்கையிலான க்ஷத்திரியர்களைக் கொன்றபடியே அந்தப் போரில் திரியத் தொடங்கினார்.(23) இருபத்துநாலாயிரம் {24,000} க்ஷத்திரியர்களைக் கொன்றவரான அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவர், தமது கூர்முனைக் கணைகளால் பத்து மடங்களவு பத்தாயிரம் பேரை {ஒரு லட்சம் பேரை} யமனுலகுக்கு அனுப்பிவைத்தார்[1].(24) கவனத்துடன் முயற்சி செய்த அவர், புகையற்ற நெருப்பைப் போல அந்தப் போரில் நின்று கொண்டிருந்தார். பிறகு அவர் {துரோணர்}, க்ஷத்திரிய குலத்தையே முற்றாக அழிப்பதற்காகப் பிரம்மாயுதத்தின் {பிரம்மாஸ்திரத்தின்} உதவியை நாடினார்.(25) அப்போது வலிமைமிக்கப் பீமன், சிறப்புமிக்கவனும், பொறுத்துக்கொள்ளப்பட முடியாதவனுமான பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, தேரற்றவனாகவும், ஆயுதங்களற்றவனாகவும் இருப்பதைக் கண்டு, அவனை நோக்கி வேகமாகச் சென்றான்.(26) துரோணருக்கு மிக அருகில் இருந்து தாக்கிக் கொண்டிருந்த அவனைக் {திருஷ்டத்யும்னனைக்} கண்ட அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {பீமன்}, அந்தத் திருஷ்டத்யும்னனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு, அவனிடம்,(27) “உன்னைத் தவிர ஆசானுடன் {துரோணருடன்} போரிட வேறு எந்த மனிதனும் துணியமாட்டான். அவரைக் கொல்வதைத் துரிதப்படுத்துவாயாக. அவரைக் கொல்லும் சுமை {பொறுப்பு} உன்னிடமே இருக்கிறது” என்றான்.(28)பீமனால் இப்படிச் சொல்லப்பட அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட திருஷ்டத்யும்னன், வலியதும், புதியதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதுமான ஒரு மேன்மையான வில்லை விரைவாக எடுத்துக் கொண்டான்.(29) சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் தடுக்கப்பட முடியாதவரான துரோணரின் மீது தன் கணைகளை ஏவிய திருஷ்டத்யும்னன், ஆசானை {துரோணரை} எதிர்த்து நிற்க விரும்பி அவரை மறைத்தான்.(30) போர்க்கள ரத்தினங்களும், போராளிகளில் முதன்மையானோருமான அவ்விருவரும், சினத்தால் நிறைந்து பிரம்மாயுதத்தையும், பல்வேறு தெய்வீக ஆயுதங்களையும் இருப்புக்கு அழைத்தனர்.(31) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் திருஷ்டத்யும்னன் வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றால் துரோணரை மறைத்தான். பரத்வாஜர் மகனின் {துரோணரின்} அனைத்து ஆயுதங்களையும் அழித்தவனும், மங்காப் புகழ் கொண்ட போர்வீரனுமான அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்},(32) துரோணரைப் பாதுகாத்தவர்களான வஸாதிகள், சிபிக்கள், பாஹ்லீகர்கள் மற்றும் கௌரவர்கள் ஆகியோரைக் கொல்லத் தொடங்கினான்.(33) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கணைமாரியை ஏவிய திருஷ்டத்யும்னன், அந்த நேரத்தில் ஆயிரங்கதிர்களை இறைக்கும் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(34) எனினும், அந்த இளவரசனின் வில்லை மீண்டும் அறுத்த துரோணர், கணைகள் பலவற்றால் அவ்விளவரசனின் முக்கிய அங்கங்களையும் துளைத்தார். இப்படித் துளைக்கப்பட்ட அந்த இளவரசன் {திருஷ்டத்யும்னன்} பெரும் வலியை உணர்ந்தான்.(35)

அப்போது பெரும் கோபம் கொண்ட பீமன், துரோணரின் தேரைப் பிடித்துக் கொண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவரிடம் இந்த வார்த்தைகளை மெதுவாகச் சொன்னான்,(36) “{ஓ! பிராமணரே}, தங்கள் வகைக்கான தொழில்களில் நிறைவடையாதவர்களும், ஆயுதங்களை நன்கறிந்தவர்களுமான பிராமணர்களில் இழிந்தவர்கள் {ப்ரஷ்டப் பிராம்மணர்கள்} போரிடாமல் இருந்திருந்தால், க்ஷத்திரிய வகையினர் இப்படி அழிய மாட்டார்கள்.(37) அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழையாமல் இருப்பதே அறங்கள் அனைத்திலும் உயர்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பிராமணனே அவ்வறத்தின் ஆணிவேராவான். உம்மைப் பொறுத்தவரை, பிரம்மத்தை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவர் நீர்.(38) ஓ! பிராமணரே {துரோணரே}, தங்கள் மகன்களுக்கும், மனைவியருக்கும் நன்மை செய்வதற்காகச் செல்வத்தை விரும்பி, தங்களுக்குரிய முறையான {க்ஷத்திரிய} தொழில்களில் ஈடுபட்டிருக்கும் இந்த மிலேச்சர்கள் அனைவரையும், பிற வீரர்களையும், உமது மகன் {அஸ்வத்தாமன்} ஒருவனுக்காக மட்டுமே, அறியாமையிலும், மடமையிலும் உந்தப்பட்டுக் கொல்லும் நீர் வெட்கத்தை ஏன் உணரவில்லை[2]?(39,40) எவனுக்காக நீர் ஆயுதங்களை எடுத்தீரோ, எவனுக்காக நீர் வாழ்கிறீரோ, அவன் {அஸ்வத்தாமன்} இன்று உயிரையிழந்து, நீர் அறியாதவாறு உமது முதுகுக்குப் பின்னால் போர்க்களத்தில் கிடக்கிறான்.(41) நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் இஃதை உமக்குச் சொன்னார். இந்த உண்மையில் ஐயங்கொள்வது உமக்குத் தகாது” என்றான் {பீமன்}. பீமனால் இப்படிச் சொல்லப்பட்டதும், துரோணர் தன் வில்லைக் கீழே வைத்தார்.(42)தமது ஆயுதங்கள் அனைத்தையும் கீழே வைக்க விரும்பியவரும், அற ஆன்மா கொண்டவருமான பரத்வாஜர் மகன் {துரோணர்}, “ஓ! கர்ணா, ஓ! கர்ணா, ஓ! பெரும் வில்லாளியே, ஓ! கிருபரே, ஓ! துரியோதனா,(43) போரில் கவனமாக முயற்சி செய்ய நான் உங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். பாண்டவர்களால் நீங்கள் எந்தக் காயமும் அடைய வேண்டாம். என்னைப் பொறுத்தவரை, நான் என் ஆயுதங்களைக் கீழே வைக்கிறேன்” என்று உரக்கச் சொன்னார்.(44) இவ்வார்த்தைகளைச் சொன்ன அவர் அஸ்வத்தாமனின் பெயரைச் சொல்லி உரக்க அலறினார். அந்தப் போரில் தமது ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, தமது தேர்த்தட்டில் அமர்ந்து கொண்டு,(45) யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்த அவர் {துரோணர்}, அனைத்து உயிரினங்களின் அச்சங்களை விலக்கி அவற்றுக்கு உறுதியை அளித்தார்.

அந்த வாய்ப்பைக் கண்ட திருஷ்டத்யும்னன் தன் சக்தியனைத்தையும் திரட்டிக் கொண்டான்.(46) வில்லின் நாணில் பொருத்தப்பட்ட கணையுடன் இருந்த தன் உறுதிமிக்க வில்லைத் தன் தேரில் வைத்த அவன் {திருஷ்டத்யும்னன்}, ஒரு வாளை எடுத்துக் கொண்டு தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்துத் துரோணரை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(47) மனிதர்களும், மனிதர் அல்லாதவர்களுமான உயிரினங்கள் அனைத்தும், திருஷ்டத்யும்னனின் ஆளுகைக்குள் இப்படிக் கொண்டுவரப்பட்ட துரோணரைக் கண்டு துன்பக் குரலுடன் அலறினர்.(48) “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும், “ச்சீச்சீ!” என்றும் உரத்த அலறல்கள் அங்கே எழுந்தன. துரோணரைப் பொறுத்தவரை, தன் ஆயுதங்களைக் கைவிட்ட அவர் {துரோணர்}, உயர்ந்த அமைதியான நிலையை அப்போது அடைந்தார்.(49) பெரும் பிரகாசமும், உயர்ந்த தவத்தகுதியும் கொண்ட அவர் {துரோணர்}, உயர்ந்தவனும், பழமையானவனுமான விஷ்ணுவில் தன் இதயத்தை நிலைநிறுத்தினார்[3].(50)சற்றே தம் முகத்தைக் கீழே சாய்த்து, தமது மார்பை முன்நிமிர்த்தி, கண்களை மூடி, நற்குணத்தில் நிலைத்து, ஆழ்ந்த சிந்தனையில் தமது இதயத்தை ஆழ்த்தி,(51) பிரம்மத்தைப் பிரதிபலிக்கும் ஓம் என்ற ஓரசைச் சொல்லை நினைத்து, வல்லமையும், உயர்வும், அழியாத் தன்மையும் கொண்ட தேவர்களின் தேவனை நினைவுகூர்ந்தவரும், (குருக்கள் மற்றும் பாண்டவர்களின்) ஆசானுமான ஒளிமிக்கத் துரோணர், இறையுணர்வுமிக்கோராலும் அடைவதற்கு மிகக் கடினமான சொர்க்கத்தை அடைந்தார். உண்மையில், துரோணர் இப்படிச் சொர்க்கத்திற்குச் சென்ற போது, ஆகாயத்தில் இரு சூரியன்கள் இருப்பதாக எங்களுக்குத் தெரிந்தது.(52,53) சூரியப் பிரகாசம் கொண்டவரும், சூரியனைப் போன்றவருமான பரத்வாஜர் {துரோணர்} வானத்திற்கு உயர்ந்த போது, சீரான ஒளியுடன் கூடிய ஒரே பெரிய பரப்பான மொத்த ஆகாயமும் எரிவது போலத் தெரிந்தது.(54) எனினும் கண்ணிமைப்பதற்குள்ளாக அந்த மொத்த பிரகாசமும் மறைந்து போனது. இப்படித் துரோணர் பிரம்மலோகத்திற்குச் சென்ற போது, அதை முற்றிலும் உணராதவனாக அவருக்கு அருகில் திருஷ்டத்யும்னன் நின்று கொண்டிருந்தபோது, மகிழ்ச்சி அடைந்த தேவர்களால் உதிர்க்கப்படும் குழப்பமான {கிலா கிலா என்ற} மகழ்ச்சியொலிகள் கேட்கப்பட்டன.

யோகத்தில் ஆழ்ந்த உயர் ஆன்மத் துரோணர் உயர்ந்த அருளுலகத்தை அடைவதை மனிதர்களில் நாங்கள் ஐவர் மட்டுமே கண்டோம்.(54-56) நானும் {சஞ்சயனான நானும்} , பிருதையின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, துரோணரின் மகனான அஸ்வத்தாமன், விருஷ்ணி குலத்தின் வாசுதேவன் {கிருஷ்ணன்}, பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோருமே அந்த ஐவர். உண்மையில் மனிதர்கள் அனைவரும், அனைத்திலும் உயர்ந்ததும், தேவர்களுக்கே புதிரானதும், மிக உயர்ந்த உலகமுமான பிரம்ம லோகத்தை ஆசான் அடைந்ததை அறியாதவர்களாகவே இருந்தனர். உண்மையில், கணைகளால் தமது உடல் சிதைக்கப்பட்டவரும், குருதியில் குளித்தவருமான அந்த எதிரிகளைத் தண்டிப்பவர் {துரோணர்}, தமது ஆயுதங்களை வைத்துவிட்டு யோகத்தில் அர்ப்பணிப்புடன் இருந்து, முனிவர்களில் முதன்மையானோர் துணையுடன் பிரம்ம லோகத்திற்குச் சென்றதை அவர்களில் ஒருவராலும் காண முடியவில்லை.(57-61)பிருஷதன் மகனைப் {திருஷ்டத்யும்னனைப்} பொறுத்தவரை, அனைவரும் அவனை நோக்கி நிந்தித்தாலும், துரோணரின் உயிரற்ற தலையில் தன் பார்வையைச் செலுத்தி அஃதை இழுக்கத் தொடங்கினான்.(62) பிறகு, இவ்வளவு நேரமும் பேச்சற்றவராக இருந்த தன் எதிரியின் {துரோணரின்} உடலில் இருந்து அந்தத் தலையைத் தன் வாளால் வெட்டினான். பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கொன்று பெரும் மகிழ்ச்சியால் நிறைந்த திருஷ்டத்யும்னன்,(63) தன் வாளைச் சுழற்றியபடியே சிங்க முழக்கமிட்டடான். கரிய நிறத்தவரும், தமது காதுகள் வரை தொங்கும் வெண்குழல்களைக் கொண்டவரும், எண்பத்தைந்து {85} வயதையுடைவருமான[4] அந்தக் கிழவர் {துரோணர்}, உமக்காக மட்டுமே போர்க்களத்தில் பதினாறு வயது இளைஞனின் சுறுசுறுப்புடன் திரிந்து வந்தார். (துரோணரின் தலை வெட்டப்படுவதற்கு முன்) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட குந்தியின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்},(64,65) “ஓ! துருபதர் மகனே {திருஷ்டத்யும்னனே}, ஆசானை {துரோணரை} உயிருடன் கொண்டு வா, அவரைக் கொல்லாதே” என்றான். துருப்புகள் அனைத்தும் கூட “அவர் கொல்லப்படலாகாது” என்றே கதறின.(66) அதிலும் குறிப்பாக அர்ஜுனன், பரிதாபகரமாக உருகியபடி மீண்டும் மீண்டும் அலறினான்.எனினும், அர்ஜுனனின் அலறல்களையும், அந்த மன்னர்கள் அனைவரின் கதறல்களையும் அலட்சியம் செய்த திருஷ்டத்யும்னன்,(67) மனிதர்களில் காளையான அந்தத் துரோணரை அவரது தேர்த்தட்டில் கொன்றான். துரோணரின் குருதியில் நனைந்த திருஷ்டத்யும்னன், பிறகு அந்தத் தேரில் இருந்து கீழே தரையில் குதித்தான்.(68) அப்போது அவன் மிகக் கடுமையானவனாகச் சூரியனைப் போலச் சிவப்பாகத் தெரிந்தான். இப்படியே அந்தப் போரில் துரோணர் கொல்லப்படுவதைத் துருப்புகள் கண்டன.(69) அப்போது, பெரும் வில்லாளியான அந்தத் திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகனின் {துரோணரின்} அந்தப் பெரிய தலையை உமது படையின் போர்வீரர்கள் முன்பு கீழே வீசினான்.(70) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகனின் தலையைக் கண்ட உமது படைவீரர்கள், தப்பி ஓடுவதில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தி, அனைத்துத் திசைகளிலும் ஓடினர்.(71)

அதே வேளையில் வானத்திற்கு உயர்ந்த துரோணர், நட்சத்திரங்களின் பாதைக்குள் நுழைந்தார். சத்தியவதியின் மகனான முனிவர் கிருஷ்ணரின் (துவைபாயனரின்) {கிருஷ்ண துவைபாயனரின்_வியாசரின்} அருளால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரின் மரணத்தை (அது குறித்த உண்மையான சூழ்நிலைகளைச்) நான் சாட்சியாகக் கண்டேன். அந்தச் சிறப்புமிக்கவர் வானத்திற்கு உயர்ந்த பிறகு, சுடர்மிக்கக் காந்தியுடன் கூடிய புகையற்ற தீப்பந்தத்தைப் போலச் சென்று கொண்டிருப்பதை நான் கண்டேன். துரோணரின் வீழ்ச்சிக்குப் பிறகு, உற்சாகத்தை இழந்த குருக்கள், பாண்டவர்கள், சிருஞ்சயர்கள் அனைவரும் பெரும் வேகத்துடன் ஓடினர்.(72-74) பிறகு உமது படை பிளந்தது. கூரிய கணைகளால் பலர் கொல்லப்பட்டனர்; பலர் காயம்பட்டனர்.(75) துரோணரின் வீழ்ச்சிக்குப் பிறகு (குறிப்பாக) உமது போர்வீரர்கள் உயிரை இழந்தவர்களைப் போலக் காணப்பட்டனர். தோல்வியடைந்து, எதிர்காலம் குறித்த அச்சத்தால் ஈர்க்கப்பட்ட குருக்கள்,(76) இரண்டு உலகங்களையும் இழந்தவர்களாகவே தங்களைக் கருதிக் கொண்டனர்[5]. உண்மையில் அவர்கள் தற்கட்டுப்பாடுகள் அனைத்தையும் இழந்தனர்.

தலையற்ற ஆயிரக்கணக்கான உடல்களால் நிறைந்த களத்தில் பரத்வாஜர் மகனுடைய {துரோணருடைய} உடலைத் தேடிய மன்னர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வெற்றியையும், எதிர்காலத்தில் புகழைத்தரும் பெரும் சிறப்புகளையும் ஈட்டிய பாண்டவர்கள்,(77,78) தங்கள் கணைகளாலும், சங்குகளாலும் பேரொலிகளை உண்டாக்கத் தொடங்கி, சிங்க முழக்கங்களைச் செய்தனர். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனனும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனும்,(79) ஒருவரையொருவர் ஆரத்தழுவி கொண்ட நிலையில் (பாண்டவப்) படைக்கு மத்தியில் காணப்பட்டனர். பிருஷதன் மகனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} பேசிய எதிரிகளை எரிப்பவனான பீமன்,(80) “இழிந்தவனான சூதன் மகனும் {கர்ணனும்}, மற்றொரு இழிந்தவனான துரியோதனனும் போரில் கொல்லப்படும் போது, வெற்றி மகுடம் சூடுபவனாக மீண்டும் நான் உன்னைத் தழுவிக் கொள்வேன்” என்றான்.(81) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பாண்டுவின் மகனுமான பீமசேனன், மகிழ்ச்சிப்போக்கில் நிறைந்து தன் தோள்களைத் தட்டியபடியே பூமியை நடுங்கச் செய்தான்.(82) அவ்வொலியால் அஞ்சிய உமது துருப்பினர் தப்பி ஓடுவதில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தி, க்ஷத்திரியக் கடமைகளை மறந்து போரில் இருந்து ஓடினர்.(83) வெற்றியாளர்களான பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரில் தங்கள் எதிரிகளின் அழிவால் கிடைத்த பெரும் இன்பத்தை உணர்ந்து மிகுந்த மகிழ்ச்சியையடைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(84)

துரோணவத பர்வம் முற்றும்[6]

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  துரோண பர்வம்-கடோத்கச வத பர்வம் –

October 15, 2025

துரியோதனனை வென்ற யுதிஷ்டிரன்! – துரோண பர்வம் பகுதி – 152-பாஞ்சாலர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பயங்கரப் போர்; பாண்டவப் படைக்கு மத்தியில் ஊடுருவிச் சென்ற துரியோதனன்; துரியோதனனின் இயல்புக்கு மீறிய வீரம்; அவனால் ஏற்பட்ட பேரழிவு; துரியோதனனை மயக்கமடையச் செய்த யுதிஷ்டிரன்; துரியோதனனை மீட்கச் சென்ற துரோணர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பலத்தில் பெருகியிருந்த உமது யானைப்படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவப்படையை மீறி எங்கும் போரிட்டுக் கொண்டிருந்தது.(1) மறு உலகம் செல்லத் தீர்மானித்த பாஞ்சாலர்களும், கௌரவர்களும், பெருகிவந்த யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் நுழைவதற்காக ஒருவரோடொருவர் போரிட்டனர்.(2) துணிவுமிக்க எதிராளிகளுடன் மோதிய துணிவுமிக்கப் போர்வீரர்கள், கணைகளாலும், வேல்களாலும், ஈட்டிகளாலும் துளைத்து யமனின் வசிப்பிடத்திற்கு ஒருவரையொருவர் அனுப்பிக் கொண்டிருந்தனர்.(3) ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட தேர்வீரர்களுக்கிடையில் நடந்த போரானது குருதியின் கடும் பாய்ச்சலால் பயங்கரமாக இருந்தது.(4) மதங்கொண்ட எதிராளிகளுடன் மோதிய மதங்கொண்ட யானைகள், தங்கள் தந்தங்களால் ஒன்றையொன்று பீடித்தன.(5)

புகழ் வேண்டிய குதிரை வீரர்கள் அந்தக் கடும் மோதலில் சூலங்களாலும், ஈட்டிகளாலும், போர்க்கோடரிகளாலும் {பகைவரணியைச் சேர்ந்த} குதிரைவீரர்களைத் துளைத்து வெட்டி வீழ்த்தினர்.(6) நூற்றுக் கணக்கான காலாட்படைவீரர்களும், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, உறுதியான தீர்மானத்துடன் ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்தனர்.(7) பாஞ்சாலர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் அவர்கள் ஒவ்வொருவரும் சொன்ன இனம், குலம் மற்றும் தனிப்பட்ட பெயர்களைக் கேட்டு மட்டுமே எங்களால் வேறுபாட்டைக் காண முடிந்தது என்ற அளவுக்கு அங்கே பெருங்குழப்பம் நிலவியது.(8) கணைகளாலும், ஈட்டிகளாலும், கோடரிகளாலும் ஒருவரையொருவர் மறு உலகத்திற்கு அனுப்பியபடியே போர்வீரர்கள் அச்சமற்றவகையில் களத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.(9) எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியன் மறைந்ததன் விளைவாக, போராளிகளால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளால் பத்து திசைப்புள்ளிகளும் முன்பைப் போல ஒளிரவில்லை.(10)

பாண்டவர்கள் இப்படிப் போரிட்டுக் கொண்டிருந்தபோது, ஓ! பாரதரே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களின் படைகளுக்கு மத்தியில் துரியோதனன் ஊடுருவினான்.(11) சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதில் பெரும் கோபத்தால் நிறைந்த அவன் {துரியோதனன்}, தன் உயிரையே விடத் தீர்மானித்துப் பகைவரின் படைக்குள் ஊடுருவினான்.(12) உமது மகன் {துரியோதனன்}, தன் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் பூமியை நிறைத்து, அவளை {பூமியை} நடுங்கச் செய்தபடியே பாண்டவப் படையை அணுகினான்.(13) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனுக்கும் {துரியோதனனுக்கும்} அவர்களுக்கும் {பாண்டவப்படையினருக்கும்} இடையில் நடந்த பயங்கரமான போரானது, துருப்புகளுக்கு மத்தியில் பெரும் அழிவை உண்டாக்கியது.(14) நடுப்பகலில் தன் கதிர்களால் அனைத்தையும் எரிக்கும் சூரியனைப் போல உமது மகன் {துரியோதனன்}, தன் கணைமாரியால் [1] பகைவரின் படையை எரித்தான்.(15) பாண்டவர்கள் தங்கள் சகோதரனை (துரியோதனனைப்) பார்க்கவும் இயலாதவர்களானார்கள். தங்கள் எதிரியை வெல்வதில் கையறு நிலையை {விரக்தியை} அடைந்த அவர்கள், களத்தைவிட்டு ஓடுவதில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தினர்.(16)சுடர்மிக்க முனைகளுடனும், தங்கச் சிறகுகளுடனும் கூடிய கணைகளைக் கொண்டு, வில்தரித்த உமது சிறப்புமிக்க மகனால் {துரியோதனனால்} கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(17) அந்தக் கூரிய கணைகளால் பீடிக்கப்பட்ட பாண்டவத் துருப்புகள் கீழே தரையில் விழத் தொடங்கின. உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது அரச மகன் {துரியோதனன்} அடைந்ததைப் போன்ற இத்தகு சாதனையை அடைவதில் பாண்டவர்கள் எப்போதும் வெல்லவில்லை [2].(18) ஒரு யானையினால் நசுக்கப்பட்டுக் கலக்கப்படும் தாமரைக் கூட்டத்தைப் போல அந்தப் போரில் உமது மகனால் பாண்டவப்படை நசுக்கப்பட்டுக் கலங்கடிக்கப்பட்டது [3].(19) மேலும், உமது மகனுடைய ஆற்றலின் விளைவால், சூரியனாலும், காற்றாலும் நீர் வற்றி அழகை இழந்த தாமரைக் கூட்டத்தைப் போலவே பாண்டவப் படையும் ஆனது.(20)ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது மகனால் {துரியோதனனால்} பாண்டவப்படைக் கொல்லப்படுவதைக் கண்டவர்களும், பீமசேனனைத் தங்கள் தலைமையில் கொண்டவர்களுமான பாஞ்சாலர்கள் அவனை {துரியோதனனை} நோக்கி மூர்க்கமாக விரைந்தனர்.(21) அப்போது அவன் {துரியோதனன்}, பீமசேனனைப் பத்து கணைகளாலும், மாத்ரியின் மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர்} ஒவ்வொருவரையும் மூன்றாலும், விராடன் மற்றும் துருபதன் ஆகியோர் ஒவ்வொருவரையும் ஆறாலும், சிகண்டியை நூறாலும், திருஷ்டத்யும்னனை எழுபதாலும், யுதிஷ்டிரனை ஏழாலும், கைகேயர்களையும், சேதிகளையும் எண்ணற்ற கூரிய கணைகளாலும், சாத்வதனை {சாத்யகியை} ஐந்தாலும், திரௌபதியின் மகன்கள் (ஐவரில்) ஒவ்வொருவரையும் மூன்றாலும், கடோத்கசனை சிலவற்றாலும் {சில கணைகளாலும்} துளைத்துச் சிங்க முழக்கம் செய்தான்.(22-24) அந்தப் பெரும்போரில் நூற்றுக்கணக்கான பிற போர்வீரர்களையும், யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களையும் தன் கடுங்கணைகளால் வெட்டி வீழ்த்திய அவன் {துரியோதனன்}, படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கும் அந்தகனைப் போலவே நடந்து கொண்டான் [4].எனினும், தன் எதிரிகளை இப்படிக் கொல்வதில் அவன் {துரியோதனன்} ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பின்புறம் கொண்ட அவனது பெரிய வில்லை, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன் இரண்டு பல்லங்களால் மூன்று துண்டுகளாக வெட்டினான். மேலும் யுதிஷ்டிரன் பத்து கணைகளைப் பெரும் பலத்துடன் ஏவி துரியோதனனையும் துளைத்தான்.(25-27) துரியோதனனின் முக்கிய அங்கங்களைத் துளைத்துக் கடந்த அவை, தொடர் கோடாகப் பூமிக்குள் நுழைந்தன. அப்போது சுற்றியிருந்த துருப்பினர் விருத்திரனைக் கொல்வதற்காகப் புரந்தரனை {இந்திரனைச்} சூழ்ந்து நின்ற தேவர்களைப் போல யுதிஷ்டிரனைச் சூழ்ந்து நின்றனர். அப்போது எளிதாக வீழ்த்தப்பட முடியாத மன்னன் யுதிஷ்டிரன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகனை நோக்கி கடுங்கணை ஒன்றை ஏவினான். அதனால் ஆழத்துளைக்கப்பட்ட துரியோதனன் தன் சிறந்த தேரில் கீழே {தேர்த்தட்டில்} அமர்ந்தான்.(28-30) அப்போது பாஞ்சாலத் துருப்புகளுக்கு மத்தியில் பேரொலி எழுந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} “மன்னன் {துரியோதனன்} கொல்லப்பட்டான்” என்பதே அந்த மிகப் பெரிய ஆரவாரமாக இருந்தது.(31) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கணைகளின் கடும் விஸ் ஒலிகளும் அங்கே கேட்கப்பட்டன.

அந்தப் போரில் துரோணர் விரைவாகத் தன்னை அங்கே வெளிப்படுத்திக் கொண்டார்.(32) அதே வேளையில் உணர்வுகள் மீண்ட துரியோதனன் வில்லை உறுதியாகப் பிடித்துக் கொண்டான். அப்போது அவன் {துரியோதனன்}, “நில், நில்” என்று சொல்லி பாண்டுவின் அரசமகனை {யுதிஷ்டிரனை} நோக்கி விரைந்து செல்பவனாகக் காணப்பட்டான்.(33) வெற்றியை வேண்டிய பாஞ்சாலர்களும் வேகமாக முன்னேறத் தொடங்கினர். குரு இளவரசனை {துரியோதனனைக்} காக்க விரும்பிய துரோணர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார் {எதிர்கொண்டார்}.(34) பிரகாசமான கதிர்களைக் கொண்டவனான நாளை உண்டாக்குபவன் {சூரியன்}, சூறாவளியால் கொந்தளிக்கும் மேகங்களை அழிப்பதைப் போல, ஆசான் {துரோணர்} அவர்களை அழிக்கத் தொடங்கினார். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரிடும் விருப்பத்தால் ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட உம்மவர்களுக்கும், அவர்களுக்கும் இடையில் பெரும் படுகொலைகள் நிறைந்த ஒரு கடும் போர் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.(35)

எனினும், தன் எதிரிகளை இப்படிக் கொல்வதில் அவன் {துரியோதனன்} ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பின்புறம் கொண்ட அவனது பெரிய வில்லை, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன் இரண்டு பல்லங்களால் மூன்று துண்டுகளாக வெட்டினான். மேலும் யுதிஷ்டிரன் பத்து கணைகளைப் பெரும் பலத்துடன் ஏவி துரியோதனனையும் துளைத்தான்.(25-27) துரியோதனனின் முக்கிய அங்கங்களைத் துளைத்துக் கடந்த அவை, தொடர் கோடாகப் பூமிக்குள் நுழைந்தன. அப்போது சுற்றியிருந்த துருப்பினர் விருத்திரனைக் கொல்வதற்காகப் புரந்தரனை {இந்திரனைச்} சூழ்ந்து நின்ற தேவர்களைப் போல யுதிஷ்டிரனைச் சூழ்ந்து நின்றனர். அப்போது எளிதாக வீழ்த்தப்பட முடியாத மன்னன் யுதிஷ்டிரன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகனை நோக்கி கடுங்கணை ஒன்றை ஏவினான். அதனால் ஆழத்துளைக்கப்பட்ட துரியோதனன் தன் சிறந்த தேரில் கீழே {தேர்த்தட்டில்} அமர்ந்தான்.(28-30) அப்போது பாஞ்சாலத் துருப்புகளுக்கு மத்தியில் பேரொலி எழுந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} “மன்னன் {துரியோதனன்} கொல்லப்பட்டான்” என்பதே அந்த மிகப் பெரிய ஆரவாரமாக இருந்தது.(31) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கணைகளின் கடும் விஸ் ஒலிகளும் அங்கே கேட்கப்பட்டன.

அந்தப் போரில் துரோணர் விரைவாகத் தன்னை அங்கே வெளிப்படுத்திக் கொண்டார்.(32) அதே வேளையில் உணர்வுகள் மீண்ட துரியோதனன் வில்லை உறுதியாகப் பிடித்துக் கொண்டான். அப்போது அவன் {துரியோதனன்}, “நில், நில்” என்று சொல்லி பாண்டுவின் அரசமகனை {யுதிஷ்டிரனை} நோக்கி விரைந்து செல்பவனாகக் காணப்பட்டான்.(33) வெற்றியை வேண்டிய பாஞ்சாலர்களும் வேகமாக முன்னேறத் தொடங்கினர். குரு இளவரசனை {துரியோதனனைக்} காக்க விரும்பிய துரோணர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார் {எதிர்கொண்டார்}.(34) பிரகாசமான கதிர்களைக் கொண்டவனான நாளை உண்டாக்குபவன் {சூரியன்}, சூறாவளியால் கொந்தளிக்கும் மேகங்களை அழிப்பதைப் போல, ஆசான் {துரோணர்} அவர்களை அழிக்கத் தொடங்கினார். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரிடும் விருப்பத்தால் ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட உம்மவர்களுக்கும், அவர்களுக்கும் இடையில் பெரும் படுகொலைகள் நிறைந்த ஒரு கடும் போர் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.(35)

இரவுநேரப் போர்க்களம்! – துரோண பர்வம் பகுதி – 153-துரோணர் செய்த போர் குறித்துச் சஞ்சயனிடம் விசாரித்த திருதராஷ்டிரன்; இரவு நேரப் போர்க்களத்தை வர்ணித்த சஞ்சயன்; பாண்டவத் தலைவர்கள் அனைவரையும் இயல்புக்கு மீறிய துணிவுடன் எதிர்கொண்ட துரோணர்.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “என் ஆணைகளுக்கு எப்போதும் கீழ்ப்படியாதவனான என் மகன் துரியோதனனிடம் இவ்வார்த்தைகள் அனைத்தையும் சொல்லிவிட்டு, பெரும் பலம் கொண்டவரும், வலிமைமிக்க வில்லாளியும் ஆசானுமான அந்த வீரத் துரோணர், கோபத்துடன் பாண்டவப் படைக்குள் ஊடுருவியபடி களத்தில் தன் தேரில் திரிந்து கொண்டிருந்த போது, அவரது  பாதையைப் பாண்டவர்கள் எவ்வாறு தடுத்தனர்?(1, 2) அந்தப் பயங்கரப் போரில் ஆசானுடைய {துரோணருடைய} தேரின் வலது சக்கரத்தைப் பாதுகாத்தது யார்? எதிரியை அவர் {துரோணர்} கடுமையாகக் கொன்ற போது, அவரது இடது சக்கரத்தைப் பாதுகாத்தது யார்?(3) போரிட்டுக் கொண்டிருந்த அந்த வீரரின் {துரோணரின்} பின்புறத்தில், அவரைத் தொடர்ந்து சென்ற துணிவுமிக்கப் போர்வீரர்கள் யாவர்? அந்தத் தேர்வீரருக்கு முன்பு நின்றவர்கள் யாவர்?(4) வெல்லப்படாத பெரும் வில்லாளியும், ஆயுதங்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையானவருமான அவர், தன் தேரில் செல்லும் வழியெங்கும் நர்த்தனம் செய்தபடியே பாண்டவப்படைக்குள் நுழைந்த போது, பருவகாலமற்ற மிதமிஞ்சிய குளிரை அவரது எதிரிகள் உணர்ந்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன். குளிர்கால வெடிப்புகளுக்கு வெளிப்பட்ட பசுவைப் போல அவர்கள் நடுங்கியிருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.(5, 6) பரவும் காட்டுத் தீயைப் போலப் பாஞ்சாலர்களின் துருப்புகள் அனைத்தையும் எரித்தவரும், தேர்வீரர்களில் காளையுமான அவர் {துரோணர்} தன் மரணத்தை எப்படிச் சந்தித்தார்?” என்று கேட்டான்.(7]

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மாலைப் பொழுதில் சிந்துக்களின் ஆட்சியாளனைக் {ஜெயத்ரதனைக்} கொன்ற பார்த்தன் {அர்ஜுனன்}, யுதிஷ்டிரனையும், பெரும் வில்லாளியான அந்தச் சாத்யகியையும் சந்தித்த பிறகு, அந்த இருவரும் துரோணரை நோக்கிச் சென்றனர்.(8) அப்போது யுதிஷ்டிரன் மற்றும் பாண்டுவின் மகனான பீமசேனன் ஆகியோர் ஒரு தனிப் படைப்பிரிவுடன், துரோணரை எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(9) அதே போல, நுண்ணறிவு கொண்ட நகுலன், வெல்லப்பட முடியாத சகாதேவன், தன் சொந்தப் படைப்பிரிவுடன் கூடிய திருஷ்டத்யும்னன், விராடன், ஒரு பெரும்படையுடன் கூடிய சால்வர்களின் ஆட்சியாளன் ஆகியோர் போரில் துரோணரை எதிர்த்துச் சென்றனர். அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களால் பாதுகாக்கப்பட்டவனும், திருஷ்டத்யும்னனின் தந்தையுமான மன்னன் துருபதனும், துரோணரை எதிர்த்துச் சென்றான். திரௌபதியின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன் ஆகியோரும் தங்கள் படைகளுடன் சேர்ந்து பெரும் பிரகாசம் கொண்ட துரோணரை எதிர்த்துச் சென்றனர்.(10, 12) திறனுடன் தாக்குபவர்களும், பலம் நிறைந்தவர்களுமான ஆறாயிரம் பிரபத்ரகப் பாஞ்சாலர்களும், சிகண்டியைத் தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்டு துரோணரை எதிர்த்துச் சென்றனர்.(13) மனிதர்களில் முதன்மையான பிறரும், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களும் ஒன்றாகச் சேர்ந்து துரோணரை எதிர்த்துச் சென்றனர்.(14)

ஓ! பாரதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, வீரமிக்க அந்தப் போர்வீரர்கள் போரிடச் சென்ற போது, மருண்டோரின் அச்சங்களை அதிகரிக்கும் வகையில் அந்த இரவானது மிகுந்த இருளடைந்தது.(15) அந்த இருண்ட நேரத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயிரைவிட்ட போர் வீரர்கள் பலராவர்.(16) அந்த இரவில், பல யானைகள், குதிரைகள், மற்றும் காலாட்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். கும்மிருட்டான அவ்விரவில் ஒளிரும் வாய்களுடன் கூடிய நரிகள் பெரும் அச்சத்தைத் தூண்டும் வகையில் எங்கும் ஊளையிட்டுக் கொண்டிருந்தன. கௌரவர்களின் கொடிமரங்களை அடைந்த ஆந்தைகள் {கோட்டான்கள்} அங்கிருந்து அலறி அச்சங்களை {ஆபத்துகளை} முன்னறிவித்தன. அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகளுக்கு மத்தியில் ஒரு கடும் ஆரவாரம் எழுந்தது.(17-19) பேரிகைகள், மிருதங்கங்கள் ஆகியவற்றின் உரத்த ஒலியுடன் யானைகளின் பிளிறல்கள், குதிரைகளின் கனைப்பொலிகள், குதிரைலாடங்களின் தடவொலிகள் ஆகியவையும் கலந்த அந்த ஆரவாரம் எங்கும் பரவியது.(20)

பிறகு, அந்த மாலை {இரவு} வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணருக்கும், சிருஞ்சயர்கள் அனைவருக்கும் இடையில் கடும்போரொன்று நடைபெற்றது.(21) உலகமே இருளில் மூழ்கியிருந்ததால் எதையும் பார்க்க முடியவில்லை.(22) போராளிகளால் எழுப்பப்பட்ட புழுதியால் ஆகாயம் மறைக்கப்பட்டது. மனிதன், குதிரை மற்றும் யானைகளின் குருதிகள் ஒன்றாகக் கலந்தன.(23) அப்போது பூமியின் புழுதி மறைந்து போனது. நாங்கள் அனைவரும் முற்றிலும் உற்சாகமற்றவர்களாக ஆனோம். மலையில் மூங்கில் காடு ஒன்று எரியும் ஒலியைப் போல, ஆயுத மோதல்களின் பயங்கர ஒலிகள் அந்த இரவு பொழுதில் கேட்கப்பட்டன.(24) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே} மிருதங்கங்கள், அனகங்கள், வல்லகிகள், படகங்கள் [1] ஆகியவற்றின் ஒலிகளோடு, (மனிதர்களின்) கூச்சல்களும், (குதிரைகளின்) கனைப்பொலிகளும் கலந்து எங்கும் பயங்கரக் குழப்பத்தை உண்டாக்கின.(25)அந்தக் களம் இருளில் மூழ்கியிருந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.(26) அந்த இரவின் மதத்தையே {வெறியையே} அனைவரும் பூண்டு கொண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கே எழும்பிய பூமியின் புழுதி இரத்த மழையால் தணிக்கப்பட்டது.(27) பிறகு தங்கக் கவசங்கள் மற்றும் போர்வீரர்களின் பிரகாசமான ஆபரணங்களின் விளைவால் அந்த இருள் அகன்றது. அப்போது தங்கத்தாலும் ரத்தினங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்ததும், ஈட்டிகளும் கொடிமரங்களும் நிறைந்ததுமான அந்தப் பாரதப் படை, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நட்சத்திரங்கள் சிதறிக்கிடக்கும் இரவு வானத்தைப் போலத் தெரிந்தது. அப்போது அந்தப் போர்க்களம் நரிகளின் ஊளைகளையும், காகங்களின் கரைதல்களையும், யானைகளின் பிளிறல்களையும், போர்வீரர்களின் கூக்குரல்கள் மற்றும் கதறல்களையும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அந்த ஒலிகள் யாவும் ஒன்றாகக் கலந்து மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் ஒரு பெரும் ஆரவாரத்தை உண்டாக்கியது.(28-30) இந்திரனின் வஜ்ரத்தைப் போல அந்தப் பேராரவாரம் அனைத்துத் திசைப்புள்ளிகளையும் நிறைத்தது.

அந்த நடு இரவில், அந்தப் பாரதப் படையானது, போராளிகளின் அங்கதங்கள், காது குண்டலங்கள், மார்புக் கவசங்கள் மற்றும் ஆயுதங்களால் ஒளிர்வதாகத் தெரிந்தது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானைகளும், தேர்களும் மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகங்களைப் போல அந்த இரவில் தெரிந்தன. வாள்கள், ஈட்டிகள், கதாயுதங்கள், கத்திகள், தண்டாயுதங்கள், வேல்கள், கோடரிகள் ஆகியன விழுகையில், திகைப்பூட்டும் நெருப்புக் கீற்றுகளைப் போலத் தெரிந்தன. முன்னோடியாக இருந்த துரியோதனனே அதன் (புயல் போன்ற படையின்) பலமான காற்றாக இருந்தான். தேர்களும் யானைகளும் அதன் உலர்மேகங்களாகின.(31-34) பேரிகைகள் மற்றும் பிற கருவிகளின் உரத்த ஒலிகள் அதன் பெருத்த இடிமுழக்கங்களாகின. கொடிமரங்களும், விற்களும் அதன் மின்னல் கீற்றுகளாகின. துரோணரும், பாண்டவர்களும் அதன் {அந்தப் புயல் போன்ற படையின்} பொழியும் மேகங்களாகினர். வாள்கள், ஈட்டிகள், கதாயுதங்கள் அதன் இடிகளாகின.(35) கணைகள் அதன் மழைப்பொழிவாகின, (பிற வகைகளிலான) ஆயுதங்கள் அதன் வன்காற்றுகளாகின. மேலும் அங்கே வீசிய காற்றுகள் மிக வெப்பமாகவும், மிகக் குளிர்ந்ததாகவும் இருந்தன.

பயங்கரமானதும், அதிர்ச்சியளிப்பதும், கடுமையானதுமான அது {புயல் போன்ற அந்தப் பாரதப் படை} உயிரை அழிப்பதாக இருந்தது. {பாதுகாப்பான} உறைவிடமாகக் கொள்ள அதில் {அந்தப் படையில்} ஏதும் இல்லை.(36) மருண்டோரின் அச்சங்களை அதிகப்படுத்துவதும், வீரர்களை மகிழ்ச்சிப்படுத்துவதும், பயங்கரமான ஒலிகளை எதிரொலிப்பதுமான அந்தப் பயங்கர இரவில் போரை விரும்பிய போராளிகள் அச்சந்தரும் அந்தப் படைக்குள் {பாரதப் படைக்குள்} நுழைந்தனர்.(37) இரவில் அந்தக் கடுமையான, பயங்கரமான போர் நடந்து கொண்டிருந்த போது, பாண்டுக்களும், சிருஞ்சயர்களும் ஒன்றாகச் சேர்ந்து துரோணரை எதிர்த்து கோபத்துடன் விரைந்தனர்.(38) எனினும், சிறப்புமிக்கத் துரோணரை எதிர்த்துச் சென்ற அவர்கள் அனைவரும், ஒன்று புறமுதுகிடச்செய்யப்பட்டனர், அல்லது யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பபட்டனர்.(39) உண்மையில், அந்த இரவில், துரோணர் மட்டுமே தனியாகத் தன் கணைகளால், ஆயிரம் {1000} யானைகளையும், பத்தாயிரம் {10,000} தேர்களையும், பத்து லட்சம் {10,00,000} காலாட்படை வீரர்கள் மற்றும் குதிரைகளையும் துளைத்தார்” {என்றான் சஞ்சயன்}.(40, 41)

பீமசேனனின் ருத்ரதாண்டவம்! – துரோண பர்வம் பகுதி – 154-சிபியைக் கொன்ற துரோணர்; கலிங்கர்களின் இளவரசன், துருவன், ஜயராதன் ஆகியோரைக் கொன்ற பீமன்; திருதராஷ்டிரன் மகன்களான துர்மதன், துஷ்கர்ணன் ஆகியோரைத் துரியோதனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொன்ற பீமன்; குரு படையை விரட்டியடித்த பீமசேனன்

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வெல்லப்பட முடியாதவரும், அளவிலா சக்தி கொண்டவரும், (ஜெயத்ரதன் கொலையைப்} பொறுத்துக் கொள்ள முடியாதவருமான துரோணர், கோபத்துடன் சிருஞ்சயர்களுக்கு மத்தியில் நுழைந்த போது நீங்கள் யாவரும் என்ன நினைத்தீர்கள்?(1) அளவற்ற ஆன்மா கொண்ட அந்தப் போர்வீரர் {துரோணர்}, கீழ்ப்படியாதவனான என் மகன் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி விட்டு, (பகைவரின் படையணிகளுக்குள்) நுழைந்த போது, பார்த்தன் {அர்ஜுனன்} என்ன நடவடிக்கைகளை எடுத்தான்?(2) வீர ஜெயத்ரதன் மற்றும் பூரிஸ்ரவஸ் ஆகியோரின் வீழ்ச்சிக்குப் பின்னர், பெரும் சக்தி கொண்டவரும், வெல்லப்படாத போர்வீரரும், எதிர்களை எரிப்பவரும், வெற்றிகொள்ளப்பட முடியாதவருமான துரோணர் பாஞ்சாலர்களை எதிர்த்துச் சென்ற போது, அர்ஜுனன் என்ன நினைத்தான்? சந்தர்ப்பத்திற்குத் தக்க தான் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்று துரியோதனனும் எவற்றை நினைத்தான்?(3, 4)

வரமளிக்கும் வீரரும், மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவருமான அவரை {துரோணரைப்} பின்தொடர்ந்து சென்றவர்கள் யாவர்? ஓ! சூதா {சஞ்சயா}, போரில் ஈடுபடும்போது, அந்த வீரருக்கு {துரோணருக்குப்} பின்னால் நின்ற வீரர்கள் யாவர்? போரில் எதிரிகளைக் கொல்வதில் அவர் {துரோணர்} ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவருக்கு முன்னணியில் நின்று போரிட்டது யார்?(5) குளிர் கால வானத்தின் கீழ் நடுங்கிக் கொண்டிருக்கும் மெலிந்த பசுக்களைப் போல, ஓ! சூதா {சஞ்சயா}, பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணைகளால் பாண்டவர்கள் அனைவரும் பீடிக்கப்பட்டிருப்பர் என்றே நான் நினைக்கிறேன்.(6) பாஞ்சாலர்களுக்கு மத்தியில் ஊடுருவிய பிறகு, மனிதர்களில் புலியும், எதிரிகளை எரிப்பவருமான அந்தப் பெரும் வில்லாளி {துரோணர்}, தன் மரணத்தை எவ்வாறு சந்தித்தார்?(7)

அந்த இரவில் ஒன்றாகச் சேர்ந்திருந்த துருப்புகள் அனைத்தும், ஒன்று சேர்ந்திருந்த பெரும் தேர்வீரர்கள் அனைவரும், (துரோணரால்) தனித்தனியாகக் கலங்கடிக்கப்பட்ட போது, உங்களில் புத்திசாலியான எந்த மனிதர்கள் அங்கே இருந்தனர்?(8) என் துருப்புகள் கொல்லப்பட்டதாக, அல்லது ஒன்றாக நெருக்கப்பட்டதாக, அல்லது வெல்லப்பட்டனர் என்றும், அம்மோதல்களின் என் தேர்வீரர்கள் தேரிழந்தவர்களாகச் செய்யப்பட்டனர் என்றும் நீ சொல்கிறாய். பாண்டவர்களால் கலங்கடிக்கப்பட்ட அந்தப் போராளிகள் உற்சாகமற்றவர்களாக ஆன போது, அந்த இருண்ட இரவில் இப்படிப்பட்ட துன்பத்தில் மூழ்கிய அவர்கள் என்ன நினைத்தனர்?(9,10) பாண்டவர்களை உற்சாகமானவர்களாகவும், நம்பிக்கை மிகுந்தவர்களாகவும், என்னுடையவர்களை மனச்சோர்வடைந்தவர்களாகவும், உற்சாகமற்றவர்களாகவும், பீதியால் தாக்கப்பட்டவர்களாகவும் நீ சொல்கிறாய்.(11) ஓ! சஞ்சயா, அந்த இரவில் குருக்களுக்கும், புறமுதுகிடாத பார்த்தர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை எப்படி நீ அடையாளம் கண்டாய்?” என்றான் {திருதராஷ்டிரன்}.(12)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கடுமையான இரவு போர் நடந்து கொண்டிருந்த போது, பாண்டவர்களும் அவர்களோடு கூடிய சோமகர்கள் அனைவரும் துரோணரை எதிர்த்து விரைந்தனர்.(13) அப்போது துரோணர் வேகமாகச் செல்லும் தமது கணைகளால் கைகேயர்கள் அனைவரையும், திருஷ்டத்யும்னனின் மகன்களையும் ஆவிகளின் உலகத்திற்கு [1] அனுப்பி வைத்தார்.(14) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரை எதிர்த்து வந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்தப் பூமியின் தலைவர்கள் அனைவரும் இறந்தோரின் உலகத்திற்குள் (அவரால்) அனுப்பப்பட்டனர்.(15) அப்போது பெரும் ஆற்றலைக் கொண்டவனான மன்னன் சிபி, சினத்தால் நிறைந்து, (பகைவர் தரப்பு போராளிகளை) இப்படிக் கலங்கடிப்பதில் ஈடுபட்டிருந்த வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பரத்வாஜர் மகனை {துரோணரை} எதிர்த்துச் சென்றான்.(16)பாண்டவர்களின் அந்தப் பெரும் தேர்வீரன் {சிபி} முன்னேறுவதைக் கண்ட துரோணர், முழுவதும் இரும்பாலான பத்து கணைகளால் அவனைத் துளைத்தார்.(17) எனினும் சிபி, கங்க இறகுகளாலமைந்த சிறகுகளைக் கொண்ட முப்பது கணைகளால் பதிலுக்குத் துரோணரைத் துளைத்தான். மேலும் சிரித்துக் கொண்டேயிருந்த அவன் {சிபி}, ஒரு பல்லத்தால், துரோணருடைய தேரின் சாரதியையும் வீழ்த்தினான்.(18) பிறகு துரோணர் சிறப்புமிக்க அந்தச் சிபியின் குதிரைகளைக் கொன்று, அவனது தேரின் சாரதியையும் கொன்று, தலைக்கவசத்துடன் கூடிய சிபியின் தலையை அவனது உடலில் இருந்து வெட்டினார்.(19) பிறகு துரியோதனன், துரோணரின் தேருக்கு ஒரு சாரதியை விரைவாக அனுப்பினான். அவரது குதிரைகளின் கடிவாளங்களைப் புதிய மனிதன் ஏற்றதும், துரோணர் தம் எதிரிகளை எதிர்த்து மீண்டும் விரைந்தார்.(20)

கலிங்கத்துருப்புகளால் ஆதரிக்கப்பட்ட கலிங்கர்களின் ஆட்சியாளனுடைய [2] மகன், பீமசேனனால் தன் தந்தை கொல்லப்பட்டதால் சினத்தால் நிறைந்து பின்னவனை {பீமனை} எதிர்த்து விரைந்தான்.(21) ஐந்து கணைகளால் பீமனைத் துளைத்த அவன் {சுருதாயுஷின் மகன்}, ஏழால் {எழு கணைகளால்} மீண்டும் அவனை {பீமனைத்} துளைத்தான். மேலும் அவன் (பீமனுடைய தேரின் சாரதியான) விசோகனை மூன்று கணைகளாலும், பின்னவனின் {பீமனின்} கொடிமரத்தை ஒன்றாலும் தாக்கினான்.(22) அப்போது சினத்தால் நிறைந்த விருகோதரன் {பீமன்}, தன் தேரில் இருந்து, எதிரியின் தேருக்குக் குதித்து, கலிங்கர்களின் அந்தக் கோபக்கார வீரனை {சுருதாயுஷின் மகனைத்} தன் கை முட்டிகளை மட்டுமே கொண்டு கொன்றான்.(23) பாண்டுவின் வலிமைமிக்க மகனால் {பீமனால்}, அவனது கை முட்டிகளை மட்டுமே கொண்டு இப்படிப் போரில் கொல்லப்பட்ட அந்த இளவரசனின் எலும்புகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து தனித்தனியாகக் கீழே பூமியில் விழுந்தன.(24)கர்ணன் மற்றும் கொல்லப்பட்ட அந்த இளவரசனின் சகோதரன் ஆகியோரால், (இன்னும் பிறராலும்) பீமனின் அந்தச் செயலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் அனைவரும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கூரிய கணைகளால் பீமசேனனைத் தாக்கத் தொடங்கினர்.(25) (தான் நின்று கொண்டிருந்த) எதிரியின் தேரைக் கைவிட்ட பீமன், துருவனின் {துருமனின்} [3] தேருக்குச் சென்று, இடைவிடாமல் தன்னைத் தாக்கிக் கொண்டிருந்த அந்த இளவரசனைத் {துருமனைத்} தன் கை முட்டியால் அடித்து நசுக்கினான்.(26) பாண்டுவின் வலிமைமிக்க மகனால் இப்படித் தாக்கப்பட்ட துருவன் கீழே விழுந்தான். அவனைக் {துருமனைக்} கொன்ற பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும்பலம்கொண்ட பீமசேனன், ஜெயராதனின் தேருக்குச் சென்று, ஒரு சிங்கத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கினான்.(27) முழங்கிக் கொண்டே தன் இடது கரத்தால் ஜெயராதனை இழுத்து வந்த அவன் {பீமன்}, கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன் உள்ளங்கையின் ஒரே அறையால் அந்தப் போர் வீரனை {ஜெயராதனைக்} கொன்றான்.(28)-அப்போது கர்ணன் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஈட்டியொன்றை அந்தப் பாண்டுவின் மகன் மீது வீசினான்.(29) எனினும் அந்தப் பாண்டவன் {பீமன்} சிரித்துக் கொண்டே தன் கரத்தால் அந்த ஈட்டியைப் பிடித்தான். வெல்லப்படாத விருகோதரன் {பீமன்}, அதே ஈட்டியை அந்தப் போரில் கர்ணன் மீதே திரும்ப வீசினான்.(30) அப்போது சகுனி, எண்ணெய் குடித்த கணையொன்றால் கர்ணனை நோக்கிச் சென்ற அந்த ஈட்டியை வெட்டினான். போரில் இந்த வலிமைமிக்கச் சாதனைகளைச் செய்தவனும், அற்புதமான ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், தன் தேருக்கே திரும்பி வந்து, உமது துருப்புகளை எதிர்த்து விரைந்தான்.(31)

சினத்துடன் கூடிய பீமன் யமனைப் போல (உமது துருப்புகளைக்) கொன்றபடியே அப்படி முன்னேறிச் செல்கையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} அந்த வலிமைமிக்க வீரனை உமது மகன்கள் தடுக்க முயன்றனர்.(32) உண்மையில் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அவனை {பீமனை} அடர்த்தியான கணை மழையால் மறைத்தனர்.(33) அப்போது பீமன், சிரித்துக் கொண்டே, அந்தப் போரில் தன் கணைகளால் துர்மதனின் சாரதியையும், குதிரைகளையும் யமனுலகுக்கு அனுப்பி வைத்தான்.(34) இதன் காரணமாகத் துர்மதன் வேகமாகத் துஷ்கர்ணனின் தேரில் ஏறிக் கொண்டான். அப்போது ஒரே தேரில் ஏறிச் சென்ற எதிரிகளை எரிப்பவர்களான அந்த இரு சகோதரர்களும், தைத்தியர்களில் முதன்மையான தாரகனை எதிர்த்து விரையும், நீர் நிலைகளின் தலைவன் {வருணன்} மற்றும் சூரியன் ஆகியோரைப் போலப் போரின் முன்னணியில் இருந்த பீமனை எதிர்த்து விரைந்தனர்.(35, 36)

அப்போது உமது மகன்களான துர்மதனும், துஷ்கர்ணனும், ஒரே தேரில் இருந்து கொண்டு கணைகளால் பீமனைத் துளைத்தனர்.(37) பிறகு, கர்ணன், அஸ்வத்தாமன், துரியோதனன், கிருபர், சோமதத்தன், பாஹ்லீகன் ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் பாதத்தால் மிதித்தே வீரத் துர்மதன் மற்றும் துஷ்கர்ணனின் அந்தத் தேரை பூமிக்குள் மூழ்கச் செய்தான்.(38, 39) சினத்தால் நிறைந்த அவன் {பீமன்}, வலிமையும், துணிவும் மிக்க உமது மகன்களான துர்மதன் மற்றும் துஷ்கர்ணன் ஆகியோரைத் தன் கை முட்டிகளால் தாக்கி நசுக்கி உரக்க முழங்கினான் [4].(40) அப்போது துருப்புகளுக்கு மத்தியில் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூச்சல்கள் எழுந்தன. பீமனைக் கண்ட மன்னர்கள், “தார்தராஷ்டிரர்களுக்கு மத்தியில் பீமனின் வடிவில் போரிட்டுக் கொண்டிருப்பது ருத்ரனே” என்றனர்.(41) இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்து, தங்கள் விலங்குகளைப் பெரும் வேகத்தில் தூண்டி அங்கிருந்த தப்பி ஓடினர். உண்மையில், அவர்களில் இருவராகச் சேர்ந்து ஓடுவதாக எவரும் தென்படவில்லை {அனைவரும் தனித்தனியாகச் சிதறி ஓடினர்}.(42)அப்போது, அந்த இரவில் (கௌரவப்) படைக்கு மத்தியில் பேரழிவு உண்டான போது, முழுதும் மலர்ந்த தாமரையைப் போன்ற அழகான கண்களைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான விருகோதரன் {பீமன்}, மன்னர்களில் காளையர் பலரால் உயர்வாகப் புகழப்பட்டு யுதிஷ்டிரனிடம் சென்று அவனுக்குத் தன் மரியாதைகளைச் செலுத்தினான்.(43) அப்போது, இரட்டையர் (நகுலன் மற்றும் சகாதேவன்), துருபதன், விராடன், கைகேயர்கள் ஆகியோரும், யுதிஷ்டிரனும் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தனர். மேலும் அவர்கள் அனைவரும், அந்தகன் கொல்லப்பட்ட பிறகு மகாதேவனைப் புகழ்ந்த தேவர்களைப் போலவே விருகோதரனுக்குத் தங்கள் துதிகளைச் செலுத்தினர்.(44) பிறகு வருணனின் மகன்களுக்கு ஒப்பானவர்களான உமது மகன்கள் அனைவரும், சினத்தால் நிறைந்து, சிறப்புமிக்க ஆசானின் {துரோணரின்} துணையுடன், பெரும் எண்ணிக்கையிலான தேர்கள், காலாட்படை வீரர்கள், யானைகள் ஆகியவற்றுடன் சேர்ந்து போரிடும் விருப்பத்தால் அனைத்துப் பக்கங்களிலும் விருகோதரனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டனர்.(45) அப்போது, ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கர இரவில், அனைத்தும் மேகத்தைப் போன்ற அடர்ந்த இருட்டில் மூழ்கியிருந்த போது, ஓநாய்கள், காகங்கள் மற்றும் கழுகுகள் ஆகியவற்றுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் அச்சந்தரும் போரொன்று அந்தச் சிறப்புமிக்க வீரர்களுக்கு மத்தியில் நடைபெற்றது” {என்றான் சஞ்சயன்}.(46)

சாத்யகியின் ஆண்மை! – துரோண பர்வம் பகுதி – 155அ-சாத்யகியிடம் சோமதத்தனின் பேச்சு; சாத்யகியின் ஆண்மைநிறைந்த மறுமொழி; சோமதத்தனுக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; மயங்கி விழுந்த சோமதத்தனைச் சுமந்து சென்ற அவனது தேரோட்டி; சாத்யகியைக் கொல்ல விரைந்த துரோணர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிராயத்தில் அமர்ந்திருந்த {பிராயோபவேசம் செய்த} தன் மகன் (பூரிஸ்ரவஸ்) சாத்யகியால் கொல்லப்பட்ட பிறகு, சினத்தால் நிறைந்த சோமதத்தன் சாத்யகியிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “ஓ! சாத்வதா {சாத்யகி}, உயர் ஆன்ம தேவர்களால் விதிக்கப்பட்ட க்ஷத்திரியக் கடமைகளைக் கைவிட்டுக் கள்வர்களின் நடைமுறையை ஏன் நீ கைக்கொண்டாய்?(2) க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவனும், விவேகியுமான ஒருவன், போரில் இருந்து திரும்புபவனையோ {பின்வாங்குபவனையோ}, ஆதரவற்றவனையோ, தன் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டவனையோ, இடத்தை வேண்டுபவனையோ போரில் தாக்குவானா?(3) உண்மையில், ஓ! சாத்யகி, விருஷ்ணிகளில் வலிமையும் சக்தியும் கொண்ட பிரத்யும்னனும், நீயும் பெரும் தேர்வீரர்களில் முதன்மையானவர்கள் என்று புகழ்பெற்றவர்கள்.(4) அப்படியிருக்கையில் பிராயத்தில் அமர்ந்தவனும், பார்த்தனால் {அர்ஜுனனால்} தன் கரம் வெட்டப்பட்டவனுமான ஒருவனிடம்  பாவம் நிறைந்த கொடூரமாக ஏன் நீ நடந்து கொண்டாய்?(5)

ஓ! தீய நடத்தை கொண்டவனே, உனது அந்தச் செயலின் விளைவை இப்போது போரில் பெறுவாயாக. ஓ! இழிந்தவனே {சாத்யகி}, என் ஆற்றலை வெளிப்படுத்தும் நான், சிறகு படைத்த கணையொன்றால் உன் தலையை இன்று வெட்டப் போகிறேன்.(6) ஓ! சாத்வதா {சாத்யகி}, என்னிரு மகன்கள் மீதும், எனக்குப் பிடித்த எதன் மீதும், என் புண்ணியச் செயல்கள் அனைத்தின் மீதும் ஆணையாகச் சொல்கிறேன், ஓ! விருஷ்ணி குலத்தில் இழிந்தவனே {சாத்யகி}, இன்றிரவு கடப்பதற்குள், பிருதையின் {குந்தியின்} மகனான ஜிஷ்ணு {அர்ஜுனன்} உன்னைக் காக்கவில்லையெனில், வீரத்தில் செருக்குக் கொண்ட உன்னை, உன் மகன்கள், தம்பி ஆகியோரோடு சேர்த்துக் கொல்லாதிருந்தால் நான் பயங்கர நரகத்திற்குள் மூழ்குவேனாக” என்றான் {சோமதத்தன்}.(7,8) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், வலிமைமிக்கவனுமான சோமதத்தன், சினத்தால் நிறைந்து தன் சங்கை உரக்க முழங்கி சிங்க முழக்கம் செய்தான்.(9)

அப்போது, தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும், சிங்கம் போன்ற பற்களையும், பெரும் பலத்தையும் கொண்ட சாத்யகி, சினத்தால் நிறைந்து, சோமதத்தனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(10) “ஓ! குரு குலத்தவரே {சோமதத்தரே}, உம்மோடு போரிட்டாலும், பிறரோடு போரிட்டாலும், என் இதயத்தில் கிஞ்சிற்றும் நான் அச்சத்தை உணர்வதில்லை.(11) ஓ! குரு குலத்தவரே {சோமதத்தரே}, துருப்புகள் அனைத்தாலும் பாதுகாக்கப்பட்டு நீர் என்னோடு போரிட்டாலும், உம்மால் எந்த வலியையும் நான் அடையமாட்டேன்.(12) நான் எப்போதும் க்ஷத்திரிய நடைமுறைகளேயே பயில்பவனாவேன். எனவே, போர்மணம் கொண்ட வார்த்தைகள், அல்லது நல்லோரை அவமதிக்கும் பேச்சுகள் ஆகியவற்றால் மட்டுமே உம்மால் என்னை அச்சுறுத்த முடியாது.(13) நீர் இன்று என்னோடு போரிட விரும்பினால், ஓ! மன்னா {சோமதத்தரே}, கூரிய கணைகளால் கொடூரமாக என்னைத் தாக்குவீராக, நானும் உம்மைத் தாக்குவேன்.(14) ஓ! மன்னா {சோமதத்தரே}, உமது மகனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான பூரிஸ்ரவஸ் கொல்லப்பட்டான். சலனும், விருஷசேனனும் என்னால் நசுக்கப்பட்டனர் [1].(15) உமது மகன்களுடனும், சொந்தங்களுடனும் கூடிய உம்மையும்கூட இன்று நான் கொல்வேன். ஓ! கௌரவரே {சோமதத்தரே}, பெரும் பலங்கொண்டவர் நீரென்பதால், போரில் உறுதியோடு இருப்பீராக.(16)கொடை, புலனடக்கம், இதயத் தூய்மை, கருணை, பணிவு, நுண்ணறிவு, மன்னிக்கும் தன்மை {பொறுமை} ஆகியவற்றையும், அழிவில்லாத அனைத்தையும் கொண்டவரும், முரசை {முரசு} கொடியில் கொண்டவருமான மன்னர் யுதிஷ்டிரரின் சக்தியால் நீர் ஏற்கனவே கொல்லப்பட்டவரே. நீர் கர்ணனோடும், சுபலனின் மகனோடும் {சகுனியோடும்} சேர்ந்து அழிவையே அடைவீர்.(17, 18) கிருஷ்ணனின் பாதங்களின் மீதும், என் நற்செயல்கள் அனைத்தின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன், சினத்தால் நிறையும் நான் உம்மையும் உமது மகன்களையும் என் கணைகளால் போரில் கொல்வேன்.(19) போரைவிட்டு ஓடிவிட்டால் மட்டுமே நீர் பாதுகாப்பாக இருக்கலாம்” என்றான் (சாத்யகி). கோபத்தால் சிவந்த கண்களுடன் ஒருவரோடொருவர் இப்படிப் பேசிக் கொண்டவர்களான அந்த மனிதர்களில் முதன்மையானோர் {சோமதத்தனும், சாத்யகியும்}, தங்கள் கணைகளை ஒருவரின் மீதொருவர் ஏவத் தொடங்கினர்.(20)

அப்போது துரியோதனன், ஆயிரம் தேர்களுடனும், பத்தாயிரம் குதிரைகளுடனும் வந்து சோமதத்தனைச் சூழ்ந்து நின்றான். சினத்தால் நிறைந்த சகுனியும், அனைத்து ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு, இந்திரனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்ட தன் மகன்கள், பேரர்கள் மற்றும் தன் சகோதரர்கள் சூழ (அதையே செய்தான் {சோமதத்தனைச் சூழ்ந்து}) நின்றான்.(21, 22) வயதால் இளமையுடையவனும், வஜ்ரத்தைப் போன்ற உடலைக் கொண்டவனும், ஞானம் கொண்டவனுமான உமது மைத்துனன் {சகுனி} முதன்மையான தீரம் கொண்ட நூறாயிரம் {ஒரு லட்சம்} குதிரைகளைத் தன்னிடம் கொண்டிருந்தான். அவற்றுடனேயே அவன் {சகுனி}, வலிமைமிக்க வில்லாளியான சோமதத்தனைச் சூழ்ந்து நின்றான்.(23, 24) அந்த வலிமைமிக்கப் போர்வீரர்களால் பாதுகாக்கப்பட்ட சோமதத்தன் (கணை மேகங்களால்) சாத்யகியை மறைத்தான். நேரான கணைகளின் மேகங்களால் இப்படி மறைக்கப்பட்ட சாத்யகியைக் கண்ட திருஷ்டத்யும்னன், ஒரு பெரும் படையின் துணையுடனும் சினத்துடனும் அவனை {சாத்யகியை} நோக்கிச் சென்றான்.(25) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்றையொன்று தாக்கிக் கொண்ட அந்தப் பெரும் படைகள் இரண்டிலும் எழுந்த பேரோலியானது, பயங்கரச் சூறாவளியால் சீற்றத்துடன் தாக்கப்பட்டும் பெருங்கடல்களுக்கு ஒப்பாக இருந்தது.

அப்போது சோமதத்தன் ஒன்பது கணைகளால் சாத்யகியைத் துளைத்தான்.(26, 27) பதிலுக்குச் சாத்யகி, ஒன்பது கணைகளாலேயே குரு போர்வீரர்களில் முதன்மையான அவனை {சோமதத்தனைத்} துளைத்தான். வலிமைமிக்கவனும், உறுதிமிக்கவனுமான அந்த வில்லாளியால் (சாத்யகியால்) ஆழத் துளைக்கப்பட்ட சோமதத்தன், மயக்கத்தால் உணர்வுகளை இழந்து தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(28) அவன் {சோமதத்தன்} உணர்வுகளை இழந்ததைக் கண்ட அவனது சாரதி, பெரும் தேர்வீரனான அந்தச் சோமதத்தனைப் போரில் இருந்து வெளியே பெரும் வேகத்துடன் சுமந்து சென்றான்.(29) யுயுதானனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்ட சோமதத்தன் தனது உணர்வுகளை இழந்ததைக் கண்ட துரோணர், அந்த யது வீரனை {சாத்யகியைக்} கொல்லும் விருப்பத்தால் பெரும் வேகத்துடன் விரைந்து சென்றார்.(30) ஆசான் {துரோணர்} முன்னேறுவதைக் கண்டவர்களும், யுதிஷ்டிரனின் தலைமையில் இருந்தவர்களுமான பாண்டவ வீரர்கள் பலர், யது குலத்தைத் தழைக்க வைப்பவனான அந்தச் சிறப்புமிக்கவனை {சாத்யகியைக்} காக்கும் விருப்பத்தால் அவனைச் சூழ்ந்து கொண்டனர்” {என்றான் சஞ்சயன்}.31

கடோத்கசன் அஸ்வத்தாமன் மோதல்! – துரோண பர்வம் பகுதி – 155ஆ-பாண்டவப் படையினரைக் கொன்ற துரோணர்; பாண்டவப்படை தப்பி ஓடியது; துரோணரை எதிர்த்த அர்ஜுனனும், பீமனும்; மீண்டும் திரண்ட பாண்டவப் படை; அஸ்வத்தாமனை நோக்கி விரைந்த கடோத்கசன்; கடோத்கசனின் தேர் குறித்த வர்ணனை; கடோத்கசனுக்கும், அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த கடும் மோதல்…

சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அப்போது துரோணருக்கும் பாண்டவர்களுக்கும் இடையில், மூவுலகங்களுக்கான ஆட்சி உரிமையில் உள்ள விருப்பத்தால் பலிக்கும் {மகா பலிக்கும்}, தேவர்களுக்கும் இடையில் நடந்த போருக்கு ஒப்பாக ஒரு போர் தொடங்கியது.(32) பெரும் சக்தி கொண்ட பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கணை மேகங்களால் பாண்டவப்படையை மூழ்கடித்து, யுதிஷ்டிரனையும் துளைத்தார். மேலும் துரோணர் சாத்யகியைப் பத்து கணைகளாலும், பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} இருபதாலும் துளைத்தார்.(33, 34) பிறகு அவர் பீமசேனனை ஒன்பது கணைகளாலும், நகுலனை ஐந்தாலும், சகாதேவனை எட்டாலும், சிகண்டியை நூறு கணைகளாலும் துளைத்தார்.(35) பிறகு அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரர் {துரோணர்} திரௌபதியின் மகன்கள் (ஐவரில்) ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் துளைத்தார். மேலும் அவர் {துரோணர்}, விராடனை எட்டு கணைகளாலும், துருபதனை பத்தாலும் துளைத்தார்.(36) பிறகு அவர் {துரோணர்} அம்மோதலில் யுதாமன்யுவை மூன்று கணைகளாலும், உத்தமௌஜஸை ஆறாலும் துளைத்தார். மேலும் பல போராளிகளையும் துளைத்த அவர் {துரோணர்}, பிறகு யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தார்.(37)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரால் கொல்லப்பட்ட பாண்டுமகனின் துருப்புகள் அச்சத்தால், உரத்த ஓலங்களுடன் அனைத்துத் திசைகளிலும் ஓடின.(38) துரோணரால் அப்படிக் கொல்லப்பட்ட அந்தப் படையைக் கண்டவனும், பிருதையின் {குந்தியின்} மகனுமான பல்குனன் {அர்ஜுனன்}, சற்றே கோபத்தால் தூண்டப்பட்டு, ஆசானை {துரோணரை} நோக்கி வேகமாகச் சென்றான்.(39) அந்தப் போரில் துரோணரும் அர்ஜுனனை நோக்கிச் செல்வதைக் கண்ட யுதிஷ்டிரனின் படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மீண்டும் அணிதிரண்டது.(40) அப்போது துரோணருக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் மீண்டும் போர் நேர்ந்தது.

உமது மகன்களால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்ட துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பஞ்சுப்பொதியை எரிக்கும் நெருப்பைப் போலப் பாண்டவப் படையை எரிக்கத் தொடங்கினார்.(41) சூரியனைப் போல ஒளிர்ந்தவரும், சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசம் கொண்டவருமான அவர் {துரோணர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இடையறாமல் வட்டமாக வளைக்கப்பட்ட தம் வில்லிலிருந்து கடுமையாகவும், தொடர்ச்சியாகவும், கதிர்களைப் போன்ற கணைகளை வெளியிட்டுக் கொண்டும், சூரியனைப் போலச் சுற்றிலும் உள்ள அனைத்தையும் எரித்தபடியே தமது எதிரிகளை எரிப்பதைக்கண்டும் கூட, அவரைத் {துரோணரைத்} தடுக்கக்கூடியவர் எவரும் அந்தப் படையில் இல்லை.(42, 43) துரோணரின் கணைகள், அவரது முகத்துக்கு நேரே அணுகத் துணிந்தோர், அனைவரின் தலைகளையும் வெட்டிவிட்டு, பூமிக்குள் நுழைந்தன. அந்தச் சிறப்புமிக்கப் போர் வீரரால் இப்படிக் கொல்லப்பட்ட அந்தப் பாண்டவப் படை, அர்ஜுனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் தப்பி ஓடியது.(44, 45) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த இரவில் துரோணரால் இப்படி முறியடிக்கப்பட்ட அந்தப் படையைக் கண்ட ஜிஷ்ணு {அர்ஜுனன்}, துரோணரின் தேரை நோக்கிச் செல்லுமாறு கோவிந்தனை {கிருஷ்ணனைக்} கேட்டுக் கொண்டான்.(46) அப்போது தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} வெள்ளி, அல்லது, பசுவின் பால், அல்லது குந்த {குறுக்கத்தி} மலர், அல்லது சந்திரனின் நிறம் கொண்ட அந்தக் குதிரைகளைத் துரோணரின் தேரை நோக்கித் தூண்டினான்.

பல்குனன் {அர்ஜுனன்} துரோணரை நோக்கிச் செல்வதைக் கண்டு, பீமசேனனும் தன் தேரோட்டியிடம்,(47, 48) “துரோணரின் படைப்பிரிவை நோக்கி என்னைச் சுமந்து செல்வாயாக” என்றான். பீமனின் அந்த வார்த்தைகளைக் கேட்ட அவனது சாரதி விசோகன், துல்லியமான இலக்கைக் கொண்ட ஜிஷ்ணுவை {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து செல்லும்படி தன் குதிரைகளைத் தூண்டினான்.(49) உறுதியான தீர்மானத்துடன் துரோணரின் படைப்பிரிவை நோக்கிச் செல்லும் அந்த இரு சகோதரர்களைக் கண்டவர்களும், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள், மத்ஸ்யர்கள், சேதிகள், காருஷர்கள், கோசலர்கள் மற்றும் கைகேயர்கள் ஆகியோரில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(50, 51)

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் பயங்கரப் போர் ஒன்று நடைபெற்றது. வலிமைமிக்க இரு தேர்க்கூட்டங்களுடன் சென்ற பீபத்சுவும் {அர்ஜுனனும்}, விருகோதரனும் {பீமனும்}, முன்னவன் {அர்ஜுனன்} வலப்புறத்திலும், பின்னவன் {பீமன்} முன்புறத்திலும் என உமது படைகளைத் தாக்கினர் [2]. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (இப்படிப் போரிட்டுக் கொண்டிருந்த) மனிதர்களில் புலிகளான பீமசேனனையும், தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} கண்டவர்களான திருஷ்டத்யும்னனும், பெரும்பலமுடைய சாத்யகியும் அவர்களைப் பின்னால் தொடர்ந்து சென்றனர்.(52, 53) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் இரு படைகளின் விளைவாக அங்கே எழுந்த ஆரவாரமானது, புயலொன்றால் சீற்றத்துடன் தாக்கப்படும் பல கடல்களின் ஒலிக்கு ஒப்பானதாக இருந்தது. போரில் சாத்யகியைக் கண்ட அஸ்வத்தாமன், சோமதத்தன் மகனின் {பூரிஸ்ரவஸின்} கொலையால் சினத்தால் நிறைந்து, போரின் முன்னணியில் இருந்த அந்தச் சாத்வத வீரனை {சாத்யகியை} எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான்.சினியின் பேரனுடைய {சாத்யகியின்} தேரை எதிர்த்து அந்தப் போரில் விரையும் அவனை {அஸ்வத்தாமனைக்} கண்டவனும், பீமசேனனின் மகனும், பெரும் ராட்சசனும், பெரும் பலத்தைக் கொண்டவனுமான கடோத்கசன், கரடித் தோல்களால் மறைக்கப்பட்டதும், உருக்காலானதும், பெரியதுமான ஒரு பயங்கரத் தேரில் ஏறி அவனை {அஸ்வத்தாமனை} நோக்கி விரைந்தான். அந்தப் பெரிய தேரின் உயரம் மற்றும் அகலம் இரண்டும் அளவில் முப்பது நல்வங்கள் [3] இருந்தன. (ஒரு நல்வம் என்பது நானூறு முழம் )சரியான இடங்களில் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுத் தயாரிக்கப்பட்டிருந்த அதன் சடசடப்பொலி பெரும் மேகத்திரள்களுக்கு ஒப்பானதாக இருந்தது.(54-58) அதில் குதிரைகளோ, யானைகளோ பூட்டப்படவில்லை, ஆனால், யானைகளைப் போன்ற உயிரினங்கள் [4] பூட்டப்பட்டிருந்தன. அதன் நெடிய கொடிமரத்தில், சிறகுகளையும், கால்களையும் விரித்தபடியும், கண்களை அகல விரித்த படியும், பயங்கரமாகக் கூச்சலிட்டபடியும் கழுகுகளின் இளவரசன் அமர்ந்திருந்தான். மேலும் சிவப்புக் கொடிகளுடன் கூடிய அது பல்வேறு விலங்குகளின் உள்ளுறுப்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(59, 60) அந்தப் பெரும் வாகனம் எட்டுச் சக்கரங்களை உடையதாக இருந்தது.

அதில் {அந்தத் தேரில்} ஏறிச் சென்ற கடோத்கசன், வேல்கள் {சூலங்கள்}, கனமான தண்டாயுதங்கள் {உலக்கைகள்}, பாறைகள் {மலைகள்}, மரங்கள் ஆகியவற்றை ஆயுதமாகக் கொண்டிருந்தவர்களும், கடுந்தோற்றும் கொண்டவர்களும், முழுமையாக ஓர் அக்ஷௌஹிணி அளவுக்கு இருந்தவர்களுமான ராட்சசர்களால் சூழப்பட்டிருந்தான். பிரளய காலத்தில் தண்டாயுதத்துடன் கூடிய யமனுக்கு ஒப்பாக உயர்த்திப் பிடிக்கப்பட்ட வில்லுடன் முன்னேறி வரும் அவனை {கடோத்கசனைக்} கண்ட பகை மன்னர்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். மலைச்சிகரத்தைப் போலத் தெரிந்தவனும், அச்சந்தரும் வகையில் பயங்கரத்தோற்றம் கொண்டவனும், பயங்கரப் பற்கள், கடும் முகம், அம்பு போன்ற காதுகள், உயர்ந்த தாடை எலும்புகள், மேல்நோக்கி நிற்கும் விறைப்பான முடி, பயங்கரக் கண்கள், சுடர்விடும் வாய், ஆழமான வயிறு, குறுகிய திறப்புக் கொண்ட ஆழமான பள்ளத்தைப் போல அகன்ற உணவுக்குழாய் ஆகியவற்றைக் கொண்டவனும், தலையில் கிரீடம் தரித்தவனும், அனைத்து உயிரினங்களையும் அச்சத்தால் பீடிக்கவல்லவனும், யமனைப் போல அகல விரிந்த வாய் கொண்டவனும், பெரும் காந்தி கொண்டவனும், எதிரிகள் அனைவரையும் கலங்கடிக்கவல்லவனும், ராட்சசர்களின் இளவரசனுமான அந்தக் கடோத்கசன் தங்களை நோக்கி வருவதைக் கண்ட உமது மகனின் {துரியோதனனின்} படையானது, காற்றினால் (அசைவால்) உண்டாகும் கடும் அலைகளால் கலங்கடிக்கப்படும் கங்கையின் ஓடையைப் போலப் பெரும் கலக்கமடைந்து அச்சத்தால் பீடிக்கப்பட்டது.(61-67) கடோத்கசனால் செய்யப்பட்ட சிங்கமுழக்கங்களால் பீதியடைந்த யானைகள் சிறுநீர் கழிக்கத்தொடங்கின, மன்னர்கள் நடுங்கத் தொடங்கினர்.(68)

இரவின் விளைவால் மிகப் பலமடைந்த ராட்சசர்களால் பொழியப்பட்ட அடர்த்தியான கற்களின் மழையொன்று அந்தப் போர்க்களத்தில் விழத் தொடங்கியது.(69) இரும்புச்சக்கரங்கள், புசுண்டிகள், ஈட்டிகள், வேல்கள், சூலங்கள், சதாக்னிகள் மற்றும் கோடரிகள் ஆகியவற்றின் தடையற்ற மழை அங்கே பொழிந்தது.(70) அச்சந்தருவதும், கடுமையானதுமான அந்தப் போரைக் கண்ட மன்னர்கள், உமது மகன்கள் ஆகியோரும், கர்ணனும் கூட வலியை மிகவும் உணர்ந்து தப்பி ஓடினர்.(71) தன் ஆயுத வலிமையில் எப்போதும் தற்பெருமை கொண்டவனான துரோணரின் பெருமைமிக்க மகன் {அஸ்வத்தாமன்} மட்டுமே அச்சமில்லாமல் நின்றான். மேலும் அவன் {அஸ்வத்தாமன்} விரைவில் கடோத்கசனால் உண்டாக்கப்பட்ட அந்த மாயையை விலக்கினான்.(72)

தன் மாயை அழிக்கப்பட்டதும் சினமடைந்த கடோத்கசன், (அஸ்வத்தாமன் மீது) கடுங்கணைகளை ஏவினான். கோபக்காரப் பாம்புகள் எறும்புப்புற்று ஒன்றை வேகமாகத் துளைத்துச் செல்வதைப் போலவே அவை துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைத்} துளைத்தன.(73) அஸ்வத்தாமனின் உடலைத் துளைத்துச் சென்ற அக்கணைகள் குருதியால் நனைந்து, எறும்புப்புற்றுக்குள் செல்லும் பாம்புகளைப் போல வேகமாகப் பூமிக்குள் நுழைந்தன.(74) எனினும், வேகமான கரங்களையும், பெரும் ஆற்றலையும் கொண்ட அஸ்வத்தாமன், கோபத்தால் நிறைந்து, பத்து கணைகளால் கடோத்கசனைத் துளைத்தான்.(75) துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} தன் முக்கிய அங்கங்களில் ஆழத் துளைக்கப்பட்ட கடோத்கசன், பெரும் வலியை உணர்ந்து, ஆயிரம் ஆரங்களைக் கொண்ட சக்கரம் ஒன்றை எடுத்துக் கொண்டான்.(76)

உதயச் சூரியனின் பிரகாசத்தைக் கொண்ட அதன் {அந்தச் சக்கரத்தின்} முனை கத்தியைப் போன்று கூர்மையானதாக இருந்தது. மேலும் அது பல்வேறு ரத்தினங்களாலும், வைரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(77) அஸ்வத்தாமனைக் கொல்ல விரும்பிய பீமசேனன் மகன் {கடோத்கசன்}, அந்தச் சக்கரத்தை அவன் மீது வீசினான். அது வேகமாகத் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} நோக்கிச் சென்ற போது, பின்னவன் {அஸ்வத்தாமன்}, தன் கணைகளால் அதைத் துண்டுகளாக வெட்டினான்.(78) இப்படிக் கலங்கடிக்கப்பட்ட அது, பேறற்ற மனிதனால் பேணிவளர்க்கப்பட்ட நம்பிக்கையைப் போலக் கீழே பூமியில் விழுந்தது. தன் சக்கரம் கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட கடோத்கசன், சூரியனை விழுங்கும் ராகுவைப் போலத் தன் கணைகளால் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} வேகமாக மறைத்தான்” {என்றான் சஞ்சயன்}.(79)

கடோத்கசனின் மகனைக் கொன்ற அஸ்வத்தாமன்! – துரோண பர்வம் பகுதி – 155இ-அஸ்வத்தாமனை எதிர்த்த கடோத்கசன் மகன் அஞ்சனபர்வன்; அஞ்சனபர்வனைக் கொன்ற அஸ்வத்தாமன்; கடோத்கசனுக்கும் அஸ்வத்தாமனுக்கு இடையில் நடந்த பேச்சு; அர்ஜுனனை எதிர்த்துச் செல்ல சகுனியைத் தூண்டிய துரியோதனன்…

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அதேவேளையில், பெரும் காந்தி கொண்டவனும், கரிய மைக்குவியலுக்கு ஒப்பானவனுமான கடோச்கசனின் மகன் {அஞ்சனபர்வன்}, முன்னேறி வந்து கொண்டிருந்த துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} காற்றின் வழியைத் தடுக்கும் மலைகளின் அரசனை (மேருவைப்) போலத் தடுத்தான்.(80) பீமசேனனின் பேரனான அஞ்சனபர்வனின் கணைகளால் பீடிக்கப்பட்ட அஸ்வத்தாமன், பெரும் மேகத்திலிருந்து கொட்டும் மழைத்தாரைகளைத் தாங்கிக் கொள்ளும் மேரு மலையைப் போலத் தெரிந்தான். ஆற்றலில் ருத்ரனுக்கோ, உபேந்திரனுக்கோ இணையான அஸ்வத்தாமன், அப்போது சினத்தால் நிறைந்தான்.(81,82) ஒரு கணையால் அவன் {அஸ்வத்தாமன்} அஞ்சனபர்வனின் கொடிமரத்தை வெட்டினான்; மேலும் இரண்டால் அவனது {அஞ்சனவர்வனின்} இரு சாரதிகளையும், மேலும் மூன்றால் அவனது திரிவேணுகத்தையும் [5] வெட்டினான்.(83) (தேர், வண்டி முதலியவற்றில் சாரதி அமர்வதற்கு உள்ள இடம்.)பிறகும் அவன் {அஸ்வத்தாமன்} அந்த ராட்சசனின் {அஞ்சனபர்வனின்} வில்லைத் தன் கணை ஒன்றாலும், நான்கு பிற கணைகளால் அவனது குதிரைகள் நான்கையும் வெட்டினான்.தேரற்றவனாகச் செய்யப்பட்ட அஞ்சனபர்வன் ஒரு கத்தியை எடுத்துக் கொண்டான். அந்த ராட்சசன் கைகளில் இருந்ததும், தங்க நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுமான அந்தக் கத்தியை மற்றொரு கூரிய கணையால் அஸ்வத்தாமன் இரண்டு துண்டுகளாக வெட்டினான். அப்போது அந்த ஹிடிம்பையின் பேரன் {அஞ்சனபர்வன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கதாயுதத்தைச் சுழற்றி அஸ்வத்தாமன் மீது வீசினான். எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அதைத் தன் கணைகளால் தாக்கி, பூமியில் விழச் செய்தான். உயரப் பறந்து வானத்தை அடைந்த அஞ்சனபர்வன், கரிய மேகம் ஒன்றைப் போல முழங்கத் தொடங்கினான்.(84-86) அங்கே ஆகாயத்தில் இருந்த படியே அவன் {அஞ்சனபர்வன்} தன் எதிரியின் மீது மரங்களைப் பொழிந்தான். மேகத் திரள்களைத் தன் கதிர்களால் துளைக்கும் சூரியனைப் போலவே, மாயைகளின் கொள்ளிடமாக ஆகாயத்தில் இருந்த அந்தக் கடோத்கசன் மகனை {அஞ்சனபர்வனை} அஸ்வத்தாமன் தன் கணைகளால் துளைத்தான். பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட அந்த ராட்சசன் {அஞ்சனபர்வன்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தேருக்கு மீண்டும் கீழிறங்கி வந்தான்.(87,88) பிறகு அவன் {அஞ்சனபர்வன்} பூமியின் பரப்பில் உள்ள நெடிய அழகிய மை மலை ஒன்றை {மலை போன்ற மைக்குவியவலைப்} போலத் தெரிந்தான். அப்போது, பழங்காலத்தில் அசுரன் அந்தகனைக் கொன்ற மகாதேவனைப் போல, இரும்பு கவசத்துடன் கூடிய பீமனுடைய மகனின் {கடோத்கசனின்} மகனை {அஞ்சனபர்வனைத்} துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} கொன்றான்.

வலிமைமிக்கத் தனது மகன் {அஞ்சனபர்வன்}, அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டதைக் கண்ட கடோத்கசன், துரோணரின் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} வந்து, காட்டுத்தீயைப் போலப் பாண்டவத் துருப்புகளை எரித்து வந்த அந்தச் சரத்வான் மகளின் {கிருபியின்} வீர மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(89-91) கடோத்கசன், “நில்லும், ஓ! துரோண மகனே {அஸ்வத்தாமா} நில்லும். என்னிடம் இருந்து நீர் உயிருடன் தப்ப முடியாது. கிரௌஞ்சனை அழித்த அக்னியின் மகனை {கார்த்திகேயனைப்} போல இன்று நான் உம்மைக் கொல்லப் போகிறேன்” என்றான்.(92) அதற்கு அஸ்வத்தாமன், “ஓ! மகனே {கடோத்கஜா}, செல்வாயாக, ஓ! தெய்வீக ஆற்றல் கொண்டவனே {கடோத்கசா}, பிறருடன் போரிடுவாயாக. ஓ! ஹிடிம்பையின் மகனே {கடோத்கசா}, தந்தை மகனுடன் போரிடுவது முறையாகாது [6].(93) (“பாண்டவர்களும் அஸ்வத்தாமனும் துரோணரின் சீடர்கள் என்பதால் அவர்கள் சகோதரர்களைப் போன்றவர்களே. எனவே, கடோத்கசன் பீமனின் மகன் என்பதால், அவன் அஸ்வத்தாமனுக்குச் சகோதரனின் மகனாவான்”)ஓ! ஹிடிம்பையின் மகனே, நான் உன்னிடம் எந்தக் கோபமும் கொள்ளவில்லை. எனினும், ஒருவனது கோபம் தூண்டப்படும்போது, ஒருவன் தன்னையே கூடக் கொன்றுகொள்ளக் கூடும் [7]” என்றான் {அஸ்வத்தாமன்}.(94)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்த வார்த்தைகளைக் கேட்ட கடோத்கசன், தன் மகனின் வீழ்ச்சியால் துயரத்தில் நிறைந்து, கோபத்தால் தாமிரம் போல் கண்கள் சிவந்து, அஸ்வத்தாமனை அணுகி,(95) “ஓ! துரோண மகனே {அஸ்வத்தாமா}, நான் போருக்குப் பயந்த இழிந்தவன் என்பதைப் போல இவ்வார்த்தைகளால் என்னை அச்சுறுத்துகிறீரா? இந்த உமது வார்த்தைகள் முறையற்றனவாகும்.(96) உண்மையில், கொண்டாடப்படும் குருக்களின் குலத்தில் பீமரால் பெறப்பட்டவன் நான். போரில் ஒருபோதும் புறமுதுகிடாத வீரர்களான பாண்டவர்களின் மகன் நான்.(97) பலத்தில் பத்து கழுத்தோனுக்கு (ராவணனுக்கு) இணையான ராட்சசர்களின் மன்னன் நான். நில்லும், ஓ! துரோண மகனே நில்லும். நீர் என்னிடம் இருந்து உயிரோடு தப்ப முடியாது.(98) நான் இன்றைய போர்க்களத்தில் போரிடும் உமது விருப்பத்தை அகற்றுவேன்” என்றான் {கடோத்கசன்}.

சினத்தால் கண்கள் சிவக்க அஸ்வத்தாமனுக்கு இப்படி மறுமொழிகூறிய அந்த வலிமைமிக்க ராட்சசன் {கடோத்கசன்}, யானைகளின் இளவரசனை எதிர்த்துச் செல்லும் சிங்கம் ஒன்றைப் போலத் துரோணரின் மகனை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான்.(99) பிறகு கடோத்கசன், போரில் பயன்படும் தேரொன்றின் அக்ஷத்தின் {ஏர்க்காலின்} அளவுடைய கணைகளை, தேர்வீரர்களில் காளையான அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது மழைத்தாரைகளைப் பொழியும் ஒரு மேகத்தைப் போலப் பொழிந்தான். எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அந்தக் கணை மழை தன்னை அடையும் முன்பே அவற்றைத் தன் கணைகளால் விலக்கினான்.(100, 101) அந்நேரத்தில் ஆகாயத்தில் கணைகளுக்கிடைய (போராளிகளைப் போல) ஒரு மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது அந்த இரவு ஆகாயம், விட்டில் பூச்சிகளைப்(கூட்டங்களைப்) போல அந்த ஆயுதங்களின் மோதலால் உண்டான பொறிகளால் பிரகாசமாக ஒளிர்ந்தது. அந்தப் போரில் தன் ஆற்றலில் செருக்குடைய துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} தன் மாயை விலக்கப்பட்டதைக் கண்ட கடோத்கசன், மீண்டும் தன்னைக் கண்களுக்குப் புலப்படாதவனாக ஆக்கிக் கொண்டு {மீண்டும்} ஒரு மாயையை உண்டாக்கினான்.(102,103) சிகரங்களும், மரங்களும் நிறைந்ததும், சூலங்கள், வேல்கள், வாள்கள், கனமான தண்டங்கள் ஆகியன தடையில்லாமல் பாயும்படியான ஓர் அருவியைக் கொண்டதுமான ஒரு மலையின் வடிவத்தை அவன் {கடோத்கசன்} ஏற்றான்.(104) கரிய மைத் திரளைப் போலிருந்த அந்த மலையையும், அதிலிருந்து பாயும் எண்ணற்ற ஆயுதங்களையும் கண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சற்றும் அசையவில்லை. அப்போது பின்னவன் {அஸ்வத்தாமன்} வஜ்ர ஆயுதத்தை {வஜ்ராஸ்திரத்தை} [8] இருப்புக்கு அழைத்தான்.(105,106) அவ்வாயுதத்தால் தாக்கப்பட்ட அந்த மலைகளின் இளவரசன் வேகமாக அழிந்தான்.பிறகு அந்த ராட்சசன் {கடோத்கசன்}, ஆகாயத்தில் வானவில்லுடன் கூடிய நீல மேகங்களாகி அந்தப் போரில் துரோணரின் மகன் மீது கற்கள் மற்றும் பாறைகளாலான மழையை மூர்க்கமாகப் பொழியத் தொடங்கினான்.(107) அப்போது ஆயுதங்களை அறிந்த மனிதர்களில் அனைவரிலும் முதன்மையான அந்த அஸ்வத்தாமன், வாயவ்ய ஆயுதத்தைக் குறி பார்த்து, ஆகாயத்தில் எழுந்த அந்த நீல மேகத்தை அழித்தான்(108) மனிதர்களில் முதன்மையான அந்தத் துரோண மகன் {அஸ்வத்தாமன்} திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் தன் கணைகளால் மறைத்து, நூறாயிரம் {100,000} தேர்வீரர்களைக் கொன்றான். பிறகு அவன் {அஸ்வத்தாமன்}, சிங்கங்கள், அல்லது புலிகள், அல்லது மதங்கொண்ட ஆற்றலைக் கொண்ட யானைகளுக்கு ஒப்பான ராட்சசர்களில், சிலர்கள் யானைகளில் ஏறியும், சிலர் தேர்களிலும், சிலர் குதிரைகளிலும் எனப் பெரும் எண்ணிக்கையில் வந்தவர்களின் துணையுடன், வில்லை வளைத்துக் கொண்டு தன்னை நோக்கி வரும் கடோத்கசனைக் கண்டான்.(109-111) அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, பயங்கர முகங்கள், தலைகள் மற்றும் கழுத்துகள் கொண்ட தன் தொண்டர்கள் துணையுடன் இருந்தான்.(112) அந்த ராட்சசர்களில் பௌலஸ்தியர்கள் மற்றும் யாதுதானர்களும் இருந்தனர் [9]. அவர்கள் ஆற்றலில் இந்திரனுக்கு இணையானவர்களாக இருந்தனர். அவர்கள் பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை ஏந்தியவர்களாகவும், பல்வேறு விதங்களிலான கவசங்களைப் பூண்டவர்களாகவும் இருந்தனர்.(113) பயங்கர முகத்தோற்றங்களைக் கொண்ட அவர்கள் சினத்தில் பெருகியவர்களாகவும் இருந்தனர். உண்மையில் போரில் எளிதில் வெல்லப்பட முடியாதவர்களான அந்த ராட்சசர்களின் துணையுடனேயே போருக்கு கடோத்கசன் வந்தான்.(114)அவர்களைக் கண்ட உமது மகன் துரியோதனன் மிகவும் உற்சாகமற்றவனாக ஆனான். அவனிடம் {துரியோதனனிடம்} துரோண மகன் {அஸ்வத்தாமன்}, “ஓ! துரியோதனா, பொறுப்பாயாக. உனக்கு அச்சம் தேவையில்லை.(115) உனது இந்த வீரச் சகோதரர்களுடனும், இந்திரனின் ஆற்றலைக் கொண்ட இந்தப் பூமியின் தலைவர்களுடனும் ஒருபுறமாக நிற்பாயாக. நீ தோல்வியடைய மாட்டாய். நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். அதே வேளையில் உன் துருப்புகளுக்கும் நீ உறுதியளிப்பாயாக {ஆறுதலளிப்பாயாக}” என்றான் {அஸ்வத்தாமன்}.(116) அதற்குத் துரியோதனன், “உமது இதயம் பெரியதென்பதால், நீர் சொல்வதை நான் அற்புதமாகக் கருதவில்லை. ஓ! கௌதமர் மகனின் {கிருபரின்} மகனே {அஸ்வத்தாமரே}, நீர் எங்களிடம் கொண்ட மதிப்பு பெரியதே” என்றான் {துரியோதனன்}.(117)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அஸ்வத்தாமனிடன் இவ்வார்த்தைகளைச் சொன்ன அவன் {துரியோதனன்}, பிறகு சுபலனின் மகனிடம் {சகுனியிடம்}, “பெரும் வீரமிக்க நூறாயிரம் தேர்வீரர்கள் சூழத் தனஞ்சயன் {அர்ஜுனன்} போரில் ஈடுபடுகிறான். அறுபதாயிரம் தேர்களுடன் நீர் அவனை எதிர்த்துச் செல்வீராக. கர்ணன், விருஷசேனன், கிருபர், நீலன், வடக்கத்தியர் {வடநாட்டு அரசர்கள்}, கிருதவர்மன், புருமித்ரனின் மகன்கள், துச்சாசனன், நிகும்பன், குண்டபேதி, புரஞ்சயன், திருடரதன், பதாகின், ஹேமபுஞ்சகன் {ஹேமகம்பனன், [ஹேமபுஷ்யகன்]}, சல்லியன், ஆருணி, இந்திரசேனன், சஞ்சயன், விஜயன், ஜெயன், கமலாக்ஷன், பரகிராதின், ஜெயதர்மன் {ஜெயவர்மன்}, சுதர்சனன் ஆகியோரும் [10] மேலும் அறுபதாயிரம் காலாட்படை வீரர்களுடன் உம்மைத் தொடர்ந்து வருவார்கள்.(118-122)அம்மானே {சகுனியே}, தேவர்களின் தலைவன் அசுரர்களைக் கொல்வதைப் போலவே, பீமன், இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்} மற்றும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோரை நீர் கொல்வீராக. உம்மிடமே வெற்றி குறித்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.(123) ஏற்கனவே துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கணைகளால் ஆழத்துளைக்கப்பட்ட அவர்களின் அங்கங்கள் அனைத்தும் மிகவும் சிதைக்கப்பட்டுள்ளன. ஓ! மாமனே {சகுனியே}, அக்னியின் மகன் (கார்த்திகேயன்) அசுரர்களைக் கொன்றதைப் போலவே குந்தியின் மகன்களைக் கொல்வீராக” என்றான் {துரியோதனன்}.(124) உமது மகனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்ட சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களை அழிப்பதற்காக வேகமாகச் சென்று, உமது மகன்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்” {என்றான் சஞ்சயன்}.(125)

அனைவராலும் புகழப்பட்ட அஸ்வத்தாமன்! – துரோண பர்வம் பகுதி – 155ஈ-அஸ்வத்தாமனின் வில்லை வெட்டிய கடோத்கசன்; கடோத்கசனின் தேரை அழித்த அஸ்வத்தாமன்; திருஷ்டத்யும்னனின் தேரில் ஏறிய கடோத்கசன்; ராட்சசக் கூட்டத்தை அழித்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமன் உண்டாக்கிய குருதிப்புனல்; துருபதன் மகன்களையும், குந்திபோஜன் மகன்களையும் கொன்ற அஸ்வத்தாமன்; மயக்கமடைந்த கடோத்கசனை வேறு தேரில் ஏற்றிய திருஷ்டத்யும்னன்; அனைவராலும் புகழப்பட்ட அஸ்வத்தாமன்..

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அதேவேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, பிரகலாதனுக்கும் இடையில் நடந்ததைப் போல அவ்விரவில், அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்}, துரோணரின் மகனுக்கும் {அஸ்வத்தாமனுக்கும்} இடையிலான போர் நடைபெற்றது.(126) சினத்தில் நிறைந்த கடோத்கசன், நஞ்சையோ, நெருப்பையோ போன்ற பத்து கடுங்கணைகளால் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} மார்பைத் தாக்கினான்.(127) பீமசேனன் மகனால் {கடோத்கசனால்} ஏவப்பட்ட அந்தக் கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட அஸ்வத்தாமன், புயலால் அசைக்கப்பட்ட நெடிய மரம் ஒன்றைப் போலத் தன் தேர்த்தட்டில் நடுங்கிக் கொண்டிருந்தான்.(128) கடோத்கசன் மீண்டும் ஒரு பல்லத்தைக் கொண்டு துரோண மகனின் {அஸ்வத்தாமனின்} கைகளில் இருந்த பிரகாசமான வில்லை வெட்டினான்.(129) பிறகு பெருங்கடினத்தைத் தாங்கவல்ல மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட பின்னவன் {அஸ்வத்தாமன்}, (தன் எதிரியின் மீது) மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கூரிய கணைகளைப் பொழிந்தான்.(130) பிறகு அந்தச் சரத்வான் மகளின் {கிருபியின்} மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வானுலாவுபவையும், எதிரிகளைக் கொல்பவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான கணைகள் பலவற்றை வானுலாவும் அந்த ராட்சசன் {கடோத்கசன்} மீது ஏவினான்.(131)

அப்போது அஸ்வத்தாமனின் அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவையும், அகன்ற மார்பினரான ராட்சசர்களைக் கொண்டவையுமான அந்தப் பெரிய படை, சிங்கங்களால் பீடிக்கப்பட்ட மதயானைக் கூட்டத்தைப் போலத் தெரிந்தது.(132) குதிரைகள், சாரதிகள், யானைகள் ஆகியவற்றுடன் கூடிய அந்த ராட்சர்களைத் தன் கணைகளால் எரித்த அவன் {அஸ்வத்தாமன்}, யுக முடிவில் உயிரினங்களை எரிக்கும் புகழத்தக்க அக்னியைப் போலச் சுடர்விட்டெரிந்தான்.(133) தன் கணைகளால் ஒரு முழு அக்ஷௌஹிணி ராட்சசத் துருப்புகளை எரித்த அஸ்வத்தாமன், முந்நகரத்தை {திரிபுரத்தை} [11] எரித்த தெய்வீக மகேஸ்வரனைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான்.(134) வெற்றியாளர்களில் முதன்மையான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, உமது எதிரிகளை எரித்து, யுகமுடிவின் போது உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் யுக நெருப்பைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான்.(135)அப்போது சினத்தால் நிறைந்த கடோத்கசன், “துரோணரின் மகனைக் கொல்வீராக” என்று சொல்லி அந்தப் பரந்த ராட்சசப் படையைத் தூண்டினான்.(136) பிரகாசமான பற்களையும், பெரிய முகங்களையும், பயங்கரத் தன்மைகளையும், அகன்ற வாய்களையும், நீண்ட நாக்குகளையும், கோபத்தால் சிவந்த கண்களையும் கொண்ட அந்தப் பயங்கர ராட்சசர்கள், கடோத்கசனின் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர்.(137) தங்கள் சிங்க முழக்கங்களால் பூமியை நிறைத்து, பல்வேறு வகை ஆயுதங்களை எடுத்துக் கொண்ட அவர்கள் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} கொல்வதற்காக அவனை எதிர்த்து விரைந்தனர்.(138) பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்த ராட்சசர்கள், கோபத்தால் கண்கள் சிவந்து, அஸ்வத்தாமனின் தலை மீது நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஈட்டிகள், சதக்னிகள், பரிகங்கள், அசனிகள், நீண்ட வேல்கள் {சூலங்கள்}, கோடரிகள், கத்திகள், கதாயுதங்கள், குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, கனமான தண்டாயுதங்கள், போர்க்கோடரிகள், பராசங்கள், வாள்கள், வேல்கள் {தோமரங்கள்}, குணபங்கள், பளபளப்பான கம்பனங்கள், ஸ்தூலங்கள் {புசுண்டிகள்}, ஏவுகணைகள், கற்கள், (சூடான) பாகு நிறைந்த பாத்திரங்கள், எஃகால் ஆன ஸ்தூணங்கள் {தூண்கள்}, உலக்கைகள் மற்றும் பயங்கரமான வடிவத்துடன் கூடியவையும் எதிரிகளை அழிக்கவல்லவையான அனைத்தையும் வீசினார்கள்.(139-142)

துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} தலையில் விழுந்து கொண்டிருந்த, அந்த ஆயுதங்களின் அடர்த்தியான கணைமாரியைக் கண்ட உமது போர்வீரர்கள் மிகவும் துன்புற்றனர்.(143) எனினும், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஆகாயத்ததில் எழுந்த மேகத்தைப் போலத் தெரிந்ததும், இடியின் பலத்தைக் கண்டதுமான அந்தப் பயங்கர ஆயுத மழையைத் தன் கூரிய கணைகளால் அச்சமற்றவகையில் அழித்தான்.(144) பிறகு அந்த உயர் ஆன்ம துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், தெய்வீக ஆயுதங்களின் சக்தியை மந்திரங்களால் ஈர்த்திருந்தவையுமான பிற ஆயுதங்களால் வேகமாக ராட்சசர்களில் பலரைக் கொன்றான்.(145) அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவர்களும், அகலமான மார்பைக் கொண்டவர்களுமான அந்த ராட்சசர்களின் பெரும்படை, சிங்கங்களால் பீடிக்கப்பட்ட மதங்கொண்ட யானைகளின் கூட்டத்தைப் போலத் தெரிந்தது.(146)

அப்போது, துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} இப்படிப் பீடிக்கப்பட்ட அந்த வலிமைமிக்க ராட்சசர்கள், சீற்றத்தால் நிறைந்து, முன்னவனை {அஸ்வத்தாமனை} எதிர்த்து விரைந்தனர்.(147) அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்} பார்த்துக் கொண்டிருந்தபோதே, தன் சுடர்மிக்கக் கணைகளால் அந்த ராட்சசப் படையை எரித்தவனும், உயர்ந்த வலிமைமிக்க ஆயுதங்களை அறிந்தவனுமான அந்தப் போர்வீரன் {அஸ்வத்தாமன்}, தனியாகவும், ஆதரவற்றவனாகவும் இருந்து கொண்டே, உயிருடன் கூடிய வேறு எந்த உயிரினங்களும் செய்ய முடியாத அருஞ்செயல்களைச் செய்ததால், அப்போது துரோணரின் மகனால் வெளிக்காட்டப்பட்ட ஆற்றலானது மிக அற்புதமானதாக இருந்தது.(148,149) ராட்சசப் படையை எரித்துக் கொண்டிருந்த போது, அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, யுகமுடிவில் அனைத்தையும் எரிக்கும் சம்வர்த்தக நெருப்பைப் போல அந்தப் போரில் பிரகாசமாக ஒளிர்ந்தான்.(150)

உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த ஆயிரக்கணக்கான மன்னர்கள் மற்றும் பாண்டவர்களுக்கு மத்தியில், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தன் கணைகளால், அந்தப் போரில் அவர்களது படைகளை எரிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைப்} பார்க்கவல்ல சக்தி, வலிமைமிக்க ராட்சச இளவரசனான அந்த வீர கடோத்கசனைத் தவிர வேறு எவனிடமும் இல்லை.(151,152) ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, கோபத்தால் கண்களை உருட்டிக் கொண்டும், உள்ளங்கைகளைத் தட்டிக் கொண்டும், தன் (கீழ்) உதட்டைக் கடித்துக் கொண்டும் இருந்த அந்த ராட்சசன் {கடோத்கசன்}, தன் தேரோட்டியிடம், “துரோணர் மகனிடம் {அஸ்வத்தாமரிடம்} என்னைச் சுமந்து செல்வாயாக” என்றான்.(153)

வெற்றிக் கொடிகளைக் கொண்ட அந்த உறுதிமிக்கத் தேரில் ஏறிச் சென்ற அந்த எதிரிகளைக் கொல்பவன் {கடோத்கசன்}, துரோணரின் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} மீண்டும் ஒரு தனி மோதலை விரும்பி, பின்னவனை {அஸ்வத்தாமனை} எதிர்த்துச் சென்றான். பயங்கர ஆற்றலைக் கொண்ட அந்த ராட்சசன் {கடோத்கசன்}, சிங்க முழக்கமொன்றை முழங்கி, அந்த மோதலில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது, தெய்வீகக் கைவண்ணம் {வேலைப்பாடு} கொண்டதும், எட்டு மணிகளுடன் கூடியதுமான ஒரு பயங்கர அசனியை[12] ஏவினான்.(154-156) எனினும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் வில்லை விட்டுவிட்டுத் தேரில் இருந்து கீழே குதித்து, அதை {அந்த அசனியைப்} பிடித்து, மீண்டும் கடோத்கசன் மீதே அதைத் திருப்பி வீசினான். அதே வேளையில் கடோத்கசன், தன் தேரில் இருந்து வேகமாகக் கீழே இறங்கினான்.(157) பளபளக்கும் பிரகாசம் கொண்ட அந்த உறுதி மிக்க அசனியானது, குதிரைகள், சாரதி, கொடிமரம் ஆகியவற்றோடு கூடிய அந்த ராட்சசனின் வாகனத்தைச் சாம்பலாக்கி, பூமியைத் துளைத்து அவளுக்குள் {பூமிக்குள்} நுழைந்தது.(158) தன் தேரில் இருந்து கீழே குதித்து, தெய்வீகக் கைவண்ணம் கொண்ட அந்தப் பயங்கர அசனியைப் பிடித்த அந்தத் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அருஞ்செயலைக் கண்டு உயிரினங்கள் அனைத்தும் மெச்சின.(159)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன் தேருக்குச் சென்ற அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, இந்திரனின் பெரிய வில்லுக்கு ஒப்பான ஒரு பயங்கர வில்லை எடுத்துக் கொண்டு, சிறப்புமிக்கத் துரோணரின் மகன் மீது கூரிய கணைகள் பலவற்றை ஏவினான்.(160) திருஷ்டத்யும்னனும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான முதன்மையான கணைகள் பலவற்றை அஸ்வத்தாமனின் மார்பில் ஏவினான். பிறகு துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆயிரக்கணக்கான குறுங்கணைகளையும் {பிண்டிபாலங்களையும்}, நீண்ட கணைகளையும் {நாராசங்களையும்} ஏவினான்.(161,162) எனினும், கடோத்கசன் மற்றும் திருஷ்டத்யும்னன் ஆகிய இருவரும், நெருப்பின் தீண்டலுக்கு ஒப்பான தங்கள் கணைகளால் அஸ்வத்தாமனின் கணைகளைத் தாக்கி அவற்றைக் கலங்கடித்தனர். (ஒரு புறத்தில்) மனிதர்களில் சிங்கங்களான அந்த இருவர், (மறுபுறத்தில்) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} என அவர்களுக்கு இடையில் மிகக் கடுமையாக நடைபெற்ற அந்தப் போரானது, ஓ! பாரதக் குலத்தவரே {திருதராஷ்டிரரே}, போராளிகள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது, ஆயிரம் தேர்கள், முன்னூறு யானைகள் மற்றும் ஆறாயிரம் குதிரைகள் ஆகியவற்றுடன் அந்த இடத்திற்குப் பீமசேனன் வந்தான்.(163, 164) எனினும், துரோணரின் அற மகன் {அஸ்வத்தாமன்}, களைப்பறியா ஆற்றலுடன் தொடர்ந்து பீமனின் வீர மகனுடனும் {கடோத்கசனுடனும்}, {பின் தொடர்ந்து வரும்} தொண்டர்களுடன் கூடிய திருஷ்டத்யும்னனுடனும் போரிட்டான்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்நேரத்தில் அத்தகு அருஞ்செயல்களை உயிரினங்கள் அனைத்தில் எவையும் செய்ய முடியாது எனும் அளவுக்குத் துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} வெளிக்காட்டப்பட்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(165-167) பீமசேனன், ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்}, தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, விஜயன் {அர்ஜுனன்} மற்றும் அச்யுதன் {கிருஷ்ணன்} ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குதிரைகள், சாரதிகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றுடன் கூடிய ஒரு முழு அக்ஷௌஹிணி ராட்சசத் துருப்புகளைக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தன் கூரிய கணைகளால் அவன் {அஸ்வத்தாமன்} அழித்தான்.(168,169) நேராகச் செல்லும் (அஸ்வத்தாமனின்) கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட யானைகள், சிகரங்களற்ற மலைகளைப் போலக் கீழே பூமியில் விழுந்தன. வெட்டப்பட்டு நடுங்கிக் கொண்டிருந்த துதிக்கைகளால் விரவிக் கிடந்த பூமியானது நெளியும் பாம்புகளால் நிறைந்திருப்பதைப் போல அழகாகத் தெரிந்தது. தங்கத் தண்டுகள் மற்றும் அரசக் குடைகளால் விரவிக் கிடந்த பூமியானது, யுக முடிவின் போது கோள்கள், நட்சத்திரங்கள், நிலவுகள் மற்றும் சூரியன்கள் பலவற்றால் விரவிக்கிடக்கும் ஆகாயத்தைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.(170, 171)

அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வேகமான ஓடையுடன் கூடிய குருதிப்புனல் ஒன்றை அங்கே ஓடச் செய்தான். யானைகள், குதிரைகள் மற்றும் போராளிகளின் குருதியே அதன் {அந்த ஆற்றின்} நீரானது. நெடிய கொடிமரங்கள் அதன் தவளைகளாகின. பேரிகைகள் அதன் பெரும் ஆமைகளாகின; குடைகள் அதன் அன்ன {அன்னப்பறவை} வரிசையாகின; அபரிமிதமான சாமரங்கள் அதன் நுரைகளாகின; கங்கங்கள், கழுகுகள் ஆகியன அதன் முதலைகளாகின; அபரிமிதமான ஆயுதங்கள் அதன் மீன்களாகின; பெரும் யானைகள் கரையில் கிடக்கும் அதன் கற்கள் மற்றும் பாறைகளாகின; யானைகளும், குதிரைகளும் அதன் சுறாக்களாகின; தேர்கள் அதன் நிலையில்லாத கரைகளாகின; கொடிகள் அதன் அழகிய மர வரிசைகளாகின. கணைகளைத் தன் (சிறு) மீன்களாகக் கொண்ட அந்தப் பயங்கர ஆறு, வேல்கள், ஈட்டிகள், வாள்கள் ஆகியவற்றைத் தன் பாம்புகளாகக் கொண்டிருந்தது; மஜ்ஜை மற்றும் இறைச்சியைச் சேறாகவும், தலையற்ற உடல்களை  மிதக்கும் தெப்பங்களாகவும் கொண்டிருந்தது. (மனிதர்கள் மற்றும் விலங்குகளின்) மயிர்களால் அடைக்கப்பட்ட அஃது அவற்றைப் பாசியாகக் கொண்டிருந்தது. மேலும் அது மருண்டோரை அச்சங்கொள்ளவும், உற்சாகமிழக்கவும் செய்தது. போராளிகளின் ஓலம் அதன் பயங்கர முழக்கமாக இருந்தது. இரத்த அலைகளே அதன் பரப்பில் தெரிந்தன.(172-177) காலாட்படை வீரர்களால் நிறைந்து பயங்கரமாக இருந்த அது, கடலான யமனின் வசிப்பிடத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது.

ராட்சசர்களைக் கொன்ற துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிறகு, தன் கணைகளால் ஹிடிம்பையின் மகனை {கடோத்கசனைப்} பீடிக்கத் தொடங்கினான்.(178) மீண்டும் சினத்தால் நிறைந்தவனும், பலமிக்கவனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, கணைகள் பலவற்றால், விருகோதரன் {பீமன்} மற்றும் பிருஷதன் {துருபதன்} மகன்கள் உள்ளிட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தர்களைத் துளைத்த பிறகு, துருபதன் மகன்களில் ஒருவனான சுரதனைக் {சுருதனைக்} கொன்றான். பிறகும் அவன் {அஸ்வத்தாமன்}, சத்ருஞ்சயன் என்ற பெயர் கொண்ட சுரதனின் தம்பியையும் கொன்றான்.(179,180) மேலும் அவன் {அஸ்வத்தாமன்}, பலானீகன், ஜயானீகன், ஜயன் ஆகியோரையும் கொன்றான். சிங்க முழக்கம் செய்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மீண்டும் கூரிய கணையொன்றால் பிருஷத்ரனையும், அதன் பிறகு செருக்குமிக்கச் சந்திரசேனனையும் கொன்றான். பிறகும் அவன் {அஸ்வத்தாமன்} பத்து கணைகளால் குந்திபோஜனின் பத்து மகன்களைக் கொன்றான்.(181,182) மேலும் அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுருதாயுஷை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான். அவன் {அஸ்வத்தாமன்}, அழகிய சிறகுகளையும், கண்களையும் {!} கொண்ட மூன்று பிற கூரிய கணைகளால் வலிமைமிக்கச் சத்ருஞ்சயனைச் {!} சக்ரனின் {இந்திரனின்} வசிப்பிடத்திற்கு அனுப்பினான் [13].

பிறகு சினத்தால் நிறைந்த அஸ்வத்தாமன், கடுமையானதும், நேரானதுமான ஒரு கணையைத் தன் வில்லின் நாணில் பொருத்தினான்.(183,184) பிறகு அவன் {அஸ்வத்தாமன்}, அந்த நாணைத் தன் காது வரை இழுத்து, கடுமையானதும், யமனின் தண்டத்திற்கு ஒப்பானதுமான அந்தச் சிறந்த கணையால் கடோத்கசனைக் குறிபார்த்து வேகமாக ஏவினான்.(185) அழகிய சிறகுகளைக் கொண்ட அந்த வலிமைமிக்கக் கணை, ஓ! பூமியின் தலைவா {திருதராஷ்டிரரே}, அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} மார்பைத் துளைத்துக் கடந்து சென்று பூமிக்குள் நுழைந்தது. அதன்பேரில் கடோத்கசன் அந்தத் தேரிலேயே கீழே விழுந்தான். அவன் விழுவதைக் கண்டு, அவன் இறந்துவிட்டான் என்று நம்பியவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான திருஷ்டத்யும்னன், துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} முன்னிலையில் இருந்து அவனை {கடோத்கசனை} அகற்றி, மற்றொரு தேரில் அவனைக் கிடத்தச் செய்தான்.(187)

இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யுதிஷ்டிரனின் தேர்ப்படையானது போரில் இருந்து புறமுதுகிட்டது. அப்போது, தன் எதிரிகளை வென்ற துரோணரின் வீர மகன் {அஸ்வத்தமான்} உரக்கச் சிங்க முழக்கமிட்டான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் அனைவராலும், மனிதர்கள் அனைவராலும் அவன் {அஸ்வத்தாமன்} வழிபடப்பட்டான்.(188) நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் இறந்து கிடந்த ராட்சசர்களின் உடல்களால் விரவிக் கிடந்த பூமியானது, மலைச் சிகரங்களால் விரவிக் கிடப்பதைப் போலப் பயங்கரத் தோற்றத்தை அடைந்து கடக்கமுடியாததாக ஆனது.(189) சித்தர்கள், கந்தர்வர்கள், பிசாசர்கள், நாகர்கள், பறவைகள், பித்ருக்கள், அண்டங்காக்கைகள், அங்கே பெரும் எண்ணிக்கையிலான மனித ஊனுண்ணிகள், பேய்கள், அப்சரஸ்கள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைப்} புகழ்வதில் ஒன்று சேர்ந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(190)

யுதிஷ்டிரனை வீழ்த்த முடியாத துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 156-சோமதத்தனை மயக்கமடையச் செய்த சாத்யகியும், பீமசேனனும்; சோமதத்தனின் தந்தையான பாஹ்லீகனைக் கொன்ற பீமன்; திருதராஷ்டிரன் மகன்கள் பத்து பேரைக் கொன்றது; கர்ணனின் தம்பி விருகரதனைக் கொன்றது; காந்தார இளவரசர்களையும் சதசந்திரனையும் கொன்றது; நடுங்கத் தொடங்கிய கௌரவ மன்னர்கள்; எதிரி படையினரைக் கொன்ற யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனுக்கும் துரோணருக்கும் இடையிலான மோதல்; பிரம்மாயுதத்தைப் பயன்படுத்திய துரோணர்; யுதிஷ்டிரனை வீழ்த்த முடியாத துரோணர் அவனைக் கைவிட்டது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துருபதனின் மகன்களும், குந்திபோஜனின் மகன்களும், ஆயிரக்கணக்கான ராட்சசர்களும் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} கொல்லப்படுவதைக் கண்ட யுதிஷ்டிரன், பீமசேனன், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னன், யுயுதானன் {சாத்யகி} ஆகியோர் ஒன்றாகத் திரண்டு தங்கள் இதயங்களைப் போரில் உறுதியாக நிறுத்தினர்.(1,2) அப்போது அந்தப் போரில் சாத்யகியைக் கண்ட சோமதத்தன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மீண்டும் சினத்தால் நிறைந்து, பின்னவனை {சாத்யகியை} அடர்த்தியான கணைமாரியால் மறைத்தான்.(3) வெற்றியை விரும்பிய இரு தரப்பினரான உமது போர்வீரர்களுக்கும், எதிரியுடைவர்களுக்கும் இடையில் கடுமையானதும், காண்பதற்கு மிக அற்புதமானதுமான ஒரு போர் நடந்தது.(4) சாத்யகியின் சார்பாகப் போரிட்ட பீமன், அந்தக் கௌரவ வீரனை {சோமதத்தனைப்} பத்து கணைகளால் துளைத்தான். எனினும் சோமதத்தன் பதிலுக்கு ஒரு நூறு கணைகளால் அந்த வீரனை {பீமனைத்} துளைத்தான்.(5)

அப்போது சினத்தால் நிறைந்த சாத்வதன் {சாத்யகி}, நகுஷனின் மகனான யயாதியின் உயரிய நற்குணங்கள் அனைத்தையும் கொண்டவனும், தன் மகனின் மரணத்தால் பீடிக்கப்பட்டிருந்தவனுமான அந்த முதிய போர்வீரனை {சோமதத்தனை}, இடியின் சக்தியைக் கொண்ட பத்து கூரிய கணைகளால், துளைத்தான். பெரும் பலத்துடன் அவனை {சோமதத்தனைத்} துளைத்த அவன் {சாத்யகி}, மீண்டும் ஏழு கணைகளால் அவனைத் தாக்கினான்.(6,7) பிறகு சாத்யகிக்காகப் போரிட்ட பீமசேனன், புதியதும், கடினமானதும், பயங்கரமானதுமான பரிகம் ஒன்றை சோமதத்தனின் தலை மீது வீசினான்.(8) சாத்யகியும் சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் நெருப்புக்கு ஒப்பான காந்தியையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட ஒரு கூரிய கணையைச் சோமதத்தனின் மார்பில் ஏவினான்.(9) பரிகம் மற்றும் கணை ஆகிய இரண்டும் அடுத்தடுத்து வீர சோமதத்தனின் உடலில் பாய்ந்தன. அதன்பேரில் வலிமைமிக்க அந்தத் தேர்வீரன் கீழே விழுந்தான்.(10)

பாஹ்லீகன், தன் மகன் (சோமதத்தன்) மயக்கத்தில் வீழ்ந்ததைக் கண்டு, மழைக்காலத்து மேகத்தைப் போலக் கணை மாரிகளை இறைத்தபடி சாத்யகியை நோக்கி விரைந்தான்.(11) அப்போது பீமன், சாத்யகிக்காக ஒன்பது கணைகளால் சிறப்புமிக்கப் பாஹ்லீகனைப் பீடித்து, போரின் முன்னணியில் இருந்த அவனைத் {பாஹ்லீகனைத்} துளைத்தான்.(12) அப்போது, பிரதீபனின் வலிமைமிக்க மகன் (பாஹ்லீகன்) கோபத்தால் நிறைந்து, இடியை வீசும் புரந்தரனை {இந்திரனைப்} போலப் பீமனின் மார்பில் ஈட்டி ஒன்றை வீசினான். அதனால் தாக்கப்பட்ட பீமன் (தன் தேரில்) நடுங்கியபடியை மயக்கமடைந்தான். பிறகு, தன் உணர்வுகள் மீண்ட அந்த வலிமைமிக்க வீரன் {பீமன்}, தன் எதிராளியின் {பாஹ்லீகனின்} மீது ஒரு கதாயுதத்தை வீசினான்.(14) பாண்டுவின் மகனால் {பீமனால்} வீசப்பட்ட அந்தக் கதாயுதம் பாஹ்லீகனின் தலையைக் கொய்ததால், மின்னல் தாக்கி வீழ்த்தப்பட்ட மரம் ஒன்றைப் போல அவன் {பாஹ்லீகன்} பூமியில் உயிரற்று கீழே விழுந்தான்.(15)

மனிதர்களில் காளையான அந்த வீரப் பாஹ்லீகன் கொல்லப்பட்டதும், ஆற்றலில் தசரதன் மகனான ராமனுக்கு இணையானவர்களான உமது மகன்களில் பத்து பேர் பீமனைப் பீடிக்கத் தொடங்கினர்.(16) அவர்கள் நாகதத்தன், திருதரதன் {த்ருடரதன்}, வீரபாகு {மஹாபாகு}, அயோபுஜன், திருதன் {த்ருடன்}, சுஹஸ்தன், விரஜஸ், பிரமாதன் {பிரமாதி}, உக்ரன், அனுயாயி ஆகியோராவர்.(17) அவர்களைக் கண்ட பீமசேனன் சினத்தால் நிறைந்தான். பிறகு அவன் {பீமன்}, பெரும் கடினத்தைத் தாங்கவல்ல கணைகள் பலவற்றை எடுத்துக் கொண்டான். அடுத்தடுத்து அவர்களில் ஒவ்வொருவரையும் குறிபார்த்த அவன் {பீமன்}, அவர்கள் மீது அந்தக் கணைகளால் ஏவி, அவர்கள் ஒவ்வொருவரின் முக்கிய அங்கங்களையும் தாக்கினான்.(18) அவற்றால் துளைக்கப்பட்ட அவர்கள், சக்தியையும் உயிரையும் இழந்து, சூறாவளியால் முறிக்கப்பட்டு மலையின் முகடுகளில் இருந்து விழும் நெடிய மரங்களைப் போலத் தங்கள் தேர்களில் இருந்து கீழே விழுந்தனர் [1].(19)

அந்தப் பத்து கணைகளால் உமது மகன்கள் பத்து பேரைக் கொன்ற பீமன், கணைகளின் மாரியால் கர்ணனுக்குப் பிடித்தமான மகனை {விருஷசேனனை} மறைத்தான்.(20) அப்போது கர்ணனின் தம்பியும், கொண்டாடப்படுபவனுமான விருகரதன், பீமனைப் பல கணைகளால் துளைத்தான். எனினும் அந்த வலிமைமிக்கப் பாண்டவன் {பீமன்} அவனை {விருகரதனை} வெற்றிகரமாக வெளியேற்றினான் {கொன்றான்}.(21) அடுத்ததாக உமது மைத்துனர்களில் {சகுனியின் சகோதரர்களில்} ஏழு தேர்வீரர்களைத் தன் கணைகளால் கொன்ற வீரப் பீமன், சதசந்திரனை பூமியில் நசுக்கினான் {கொன்றான்}.(22) வலிமைமிக்கத் தேர்வீரனான சதசந்திரனின் கொலையைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களான சகுனியின் சகோதரர்கள், கவாக்ஷன், சரபன், விபு, சுபகன், பானுதத்தன் ஆகிய ஐந்து வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பீமசேனனை நோக்கி விரைந்து, கூரிய கணைகளால் அவனைத் தாக்கினர். மழையால் தாக்கப்படும் மலை ஒன்றைப் போல இப்படி அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட பீமன் தன் ஐந்து கணைகளால் அந்த வலிமைமிக்க ஐந்து மன்னர்களையும் கொன்றான்.(24) அவ்வீரர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட மன்னர்களில் முதன்மையானோர் பலர் நடுங்கத் தொடங்கினர்.(25)

அப்போது கோபத்தால் நிறைந்த யுதிஷ்டிரன், குடத்தில் பிறந்தவரும் (துரோணரும்), உமது மகன்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது படையணிகளை அழிக்கத் தொடங்கினான்.(26) உண்மையில் யுதிஷ்டிரன், தன் கணைகளால், அம்பஷ்டர்கள், மாலவர்கள், துணிவுமிக்கத் திரிகர்த்தர்கள் மற்றும் சிபிக்கள் ஆகியோரை யமனின் உலகங்களுக்கு அனுப்பத் தொடங்கினான்.(27) அபிஷாஹர்கள், சூரசேனர்கள், பாஹ்லீகர்கள், வசாதிகள் ஆகியோரை வெட்டிய அவன் {யுதிஷ்டிரன்}, பூமியை சதையாலும், குருதியாலும் சகதியாக்கினான்.(28) மேலும் அவன் ஒரு நொடிப்பொழுதிற்குள்ளேயே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் எண்ணிக்கையிலான யௌதேயர்கள், மாலவர்கள், மத்ரகர்கள் ஆகியோரைக் கணைகள் பலவற்றின் மூலம் யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் அனுப்பினான்.(29) அப்போது யுதிஷ்டிரனின் தேரருகே, “கொல்வீர், பிடிப்பீர், கைப்பற்றுவீர், துளைப்பீர், துண்டுகளாக வெட்டுவீர்” என்று எழுந்த உரத்த ஆரவராம் கேட்கப்பட்டது.(30)

இப்படி உமது துருப்புகளை முறியடித்துக் கொன்றுவரும் அவனை {யுதிஷ்டிரனைக்} கண்ட துரோணர், உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டுக் கணை மாரியால் யுதிஷ்டிரனை மறைத்தார்.(31) பெருங்கோபத்தில் நிறைந்திருந்த துரோணர், வாயவ்ய ஆயுதத்தால் யுதிஷ்டிரனைத் தாக்கினார். எனினும் அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அதே போன்ற தன் ஆயுதத்தால் அந்தத் தெய்வீக ஆயுதத்தைக் கலங்கடித்தான். தமது ஆயுதம் கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட பரத்வாஜர் மகன் {துரோணர்}, கோபத்தால் நிறைந்து, பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைக்} கொல்ல விரும்பி வாருணம், யாம்யம், ஆக்நேயம், துவாஷ்டரம், சாவித்ரம் ஆகிய பல்வேறு தெய்வீக ஆயுதங்களை யுதிஷ்டிரன் மீது ஏவினார். எனினும், அறநெறி அறிந்தவனான அந்த வலிய கரங்களைக் கொண்ட பாண்டவன் {யுதிஷ்டிரன்}, குடத்தில் பிறந்தவரால் {துரோணரால்} ஏவப்பட்டவையோ, அல்லது தன்னை நோக்கி ஏவப்பட இருந்தவையோவான அந்த ஆயுதங்கள் அனைத்தையும் அச்சமற்ற வகையில் கலங்கடித்தான். அப்போது தன் சபதத்தை நிறைவேற்ற முயன்று கொண்டிருந்த அந்தக் குடத்தில் பிறந்தவர் {துரோணர்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது மகனின் {துரியோதனனின்} நன்மைக்காகத் தர்மனின் மகனை {யுதிஷ்டிரனைக்} கொல்ல விரும்பி ஐந்திரம், பிராஜாபத்ய ஆயுதங்களை இருப்புக்கு அழைத்தார்.(32-36)

யானை, அல்லது சிங்கத்தின் நடையையும், அகன்ற மார்பையும், அகன்ற சிவந்த கண்களையும், (துரோணரின் சக்திக்கு) சற்றும் குறையாத சக்தியையும் கொண்ட அந்தக் குரு குலத்தில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்}, மாஹேந்திர ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். அதைக்கொண்டே துரோணரின் ஆயுதத்தை அவன் கலங்கடித்தான்.(37) தன் ஆயுதங்கள் அனைத்தும் கலங்கடிக்கப்படுவதைக் கண்ட துரோணர், கோபத்தால் நிறைந்து, யுதிஷ்டிரனின் அழிவை அடைய விரும்பி, பிரம்மாயுதத்தை இருப்புக்கு அழைத்தார்.(38) அடர்த்தியான இருளில் மூழ்கி இருந்த எங்களால் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க முடியவில்லை. அனைத்து உயிரினங்களும் கூட, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் அச்சத்தில் நிறைந்தன.(39) பிரம்மாயுதம் உயர்த்தப்படுவதைக் கண்ட குந்தியின் மகன் யுதிஷ்டிரன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் பிரம்மாயுதத்தைக் கொண்டு அதைக் கலங்கடித்தான்.(40) அப்போது அனைத்து வகைப் போர்முறைகளையும் அறிந்த மனிதர்களில் காளையரான அந்தப் பெரும் வில்லாளிகள் துரோணர் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவரையும் போர்வீரர்களில் முதன்மையான அனைவரும் பாராட்டினர்.(41)

பிறகு, சினத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்த துரோணர், யுதிஷ்டிரனைக் கைவிட்டு வாயவ்யா ஆயுதத்தால் துருபதனின் படைப்பிரிவை எரிக்கத் தொடங்கினார்.(42) பீமசேனனும், சிறப்புமிக்கப் பார்த்தனும் {அர்ஜுனனும்} பார்த்துக் கொண்டிருந்த போதே துரோணரால் கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள், அச்சத்தால் தப்பி ஓடினர்.(43) அப்போது கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும் (அர்ஜுனனும்), பீமசேனனும் தங்கள் துருப்புகள் ஓடுவதைத் தடுத்து, இரு பெரும் தேர்க்கூட்டங்களுடன் பகைவரின் படையோடு திடீரென மோதினர்.(44) பீபத்சு {அர்ஜுனன்} வலதை {வலது பக்கத்தைத்} தாக்க, விருகோதரன் {பீமன்} இடதை {இடது பக்கத்தைத்} தாக்க [2] எனப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, இரு வலிமைமிக்கக் கணை மாரிகளுடன் மோதினார்.(45)அப்போது கைகேயர்கள், சிருஞ்சயர்கள், பெரும் சக்தி கொண்ட பாஞ்சாலர்கள் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மத்ஸ்யர்கள் மற்றும் சாத்வதர்கள் ஆகியோரோடு கூடி அந்தச் சகோதரர்கள் இருவரையும் பின்தொடர்ந்து சென்றனர்.(46) பிறகு கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) கொல்லப்பட்ட அந்தப் பாரதப் படை உறக்கத்தாலும், இருளாலும் பீடிக்கப்பட்டுப் பிளக்கத் தொடங்கியது.(47) துரோணரும் உமது மகனும் {துரியோதனனும்}, அவர்களை அணிதிரட்ட முயன்றனர். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓடிக்கொண்டிருந்த அந்தப் போராளிகள் தடுக்கப்பட முடியாதவர்களாக இருந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(48)

“உமது நாவை அறுப்பேன்!” என்ற கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 157-பாண்டவர்களை வீழ்த்த கர்ணனைத் தூண்டிய துரியோதனன்; அர்ஜுனனைக் கொல்ல சபதமேற்ற கர்ணன்; கர்ணனைக் கண்டித்த கிருபர்; கர்ணனின் மறுமொழி; பாண்டவர்களின் பலத்தை எடுத்துரைத்த கிருபர்; இந்திரன் கொடுத்த சக்தி ஆயுதத்தைக் கிருபருக்கு நினைவுப் படுத்திய கர்ணன்; கிருபரின் நாவை அறுப்பேன் என்று சொன்ன கர்ணன்; மேலும் கிருபரை நிந்தித்த கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சினத்தில் பெருகியிருந்த பாண்டவர்களின் அந்தப் பரந்த படையைக் கண்டு, அதைத் தடுக்கப்பட முடியாததாகக் கருதிய உமது மகன் துரியோதனன், கர்ணனிடம் இவ்வார்த்தைகளில் பேசினான்:(1) “ஓ! நண்பர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனே, உன் நண்பர்களைப் பொறுத்தவரை இப்போது (உன் உதவி மிகவும் தேவைப்படும்) நேரம் வந்துவிட்டது. ஓ! கர்ணா, என் போர்வீரர்கள் அனைவரையும் போரில் காப்பாயாக.(2) சினத்தில் நிறைந்தவர்களும், சீறும் பாம்புகளுக்கு ஒப்பானவர்களுமான பாஞ்சாலர்கள், கைகேயர்கள், மத்ஸ்யர்கள், வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்கள் ஆகியோர் அனைவராலும் இப்போது நமது போராளிகள் அனைத்துப்பக்கங்களிலும் சூழப்பட்டிருக்கின்றனர்.(3) அதோ {பார்}, வெற்றியை விரும்பும் பாண்டவர்கள் மகிழ்ச்சியில் முழங்கிக் கொண்டிருக்கின்றனர். பாஞ்சாலர்களின் பரந்த தேர்ப்படையானது சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலைக் கொண்டுள்ளதாகும்” என்றான் {துரியோதனன்}.(4)

கர்ணன் {துரியோதனனிடம்}, “பார்த்தனை {அர்ஜுனனைக்} காப்பதற்காகப் புரந்தரனே {இந்திரனே} இங்கு வந்தாலும், வேகமாக அவனையும் {இந்திரனையும்} வென்று, அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} நான் கொல்வேன்.(5) {இதை} நான் உண்மையாகவே சொல்கிறேன். ஓ! பாரதா {துரியோதனா}, உற்சாகங்கொள்வாயாக. பாண்டுவின் மகன்களையும், கூடியிருக்கும் அனைத்துப் பாஞ்சாலர்களையும் நான் கொல்வேன்.(6) பாவகனின் {அக்னியின்} மகன் {கார்த்திகேயன்} வாசவனுக்கு {இந்திரனுக்கு} வெற்றியைப் பெற்றுத் தருவதைப் போலவே நானும் உனக்கு வெற்றியைப் பெற்றுத் தருவேன். எதிர்வந்திருக்கும் இந்தப் போரில் உனக்கு ஏற்புடையது எதுவோ, அதையே நான் செய்வேன்.(7) பார்த்தர்கள் அனைவரிலும் பல்குனனே {அர்ஜுனனே} பலவானாவான். சக்ரனின் {இந்திரனின்} கைவண்ணம் {வேலைப்பாடு} கொண்ட மரண ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} அவன் மீது வீசுவேன்.(8) ஓ! கௌரவங்களை அளிப்பவனே {துரியோதனா}, அந்தப் பெரும் வில்லாளி {அர்ஜுனன்} இறந்ததும், அவனது சசோதரர்கள் உன்னிடம் சரணடைவார்கள், அல்லது மீண்டும் காட்டுக்குச் செல்வார்கள்.(9) ஓ! கௌரவ்யா {துரியோதனா}, நான் உயிரோடிருக்கையில் எந்தத் துயரிலும் ஒருபோதும் ஈடுபடாதே. ஒன்று சேர்ந்திருக்கும் பாண்டவர்கள் அனைவரையும், ஒன்றுகூடியிருக்கும் பாஞ்சாலர்கள், கைகேயர்கள் மற்றும் விருஷ்ணிகள் அனைவரையும் போரில் நான் வெல்வேன். என் கணைமாரிகளின் மூலம் அவர்களை முள்ளம்பன்றிகளாக்கி, பூமியை நான் உனக்கு அளிப்பேன்” என்று மறுமொழி கூறினான் {கர்ணன்}.(11)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கர்ணன் இவ்வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சரத்வான் மகன் {கிருபர்}, சிரித்துக் கொண்டே சூதனின் மகனிடம் {கர்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(12) “ஓ! கர்ணா, உன் பேச்சு நன்றாக இருக்கிறது. வார்த்தைகள் மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும் என்றால், ஓ! ராதையின் மகனே {கர்ணா}, உன்னைப் பாதுகாவலனாகக் கொள்ளும் இந்தக் குருக்களில் காளை {துரியோதனன்}, போதுமான அளவு பாதுகாப்பு கொண்டவனாகவே கருதப்படுவான்.(13) ஓ! கர்ணா, குரு தலைவனின் {துரியோதனனின்} முன்னிலையில் நீ அதிகமாகத் தற்புகழ்ச்சி செய்து கொள்கிறாய். ஆனால் உண்மையில் உன் ஆற்றலோ, (தற்புகழ்ச்சி நிறைந்த உனது பேச்சுகளின்) எந்த விளைவுகளோ எப்போதும் காணப்பட்டதில்லை.(14) பாண்டுவின் மகன்களுடன் போரில் நீ மோதுவதைப் பல நேரங்களில் நாங்கள் கண்டிருக்கிறோம். அந்தச் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிலும், ஓ! சூதனின் மகனே {கர்ணா}, பாண்டவர்களால் நீ வெல்லப்பட்டாய்.(15) கந்தர்வர்களால் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} (கைதியாகக்) கொண்டு செல்லப்பட்ட போது, அந்தச் சந்தர்ப்பத்தில் முதல் ஆளாக ஓடிய ஒரே ஆளான உன்னைத் தவிரத் துருப்புகள் அனைத்தும் போரிடவே செய்தன [1].(16)விராடனின் நகரத்திலும், நீயும், உன் தம்பியும் உள்பட ஒன்று சேர்ந்திருந்த கௌரவர்கள் அனைவரும் போரில் பார்த்தனால் வெல்லப்பட்டனர்.(17) பாண்டுவின் மகன்களில் பல்குனன் {அர்ஜுனன்} என்ற ஒரே ஒருவனுக்குக் கூடப் போர்க்களத்தில் நீ இணையாகமாட்டாய். அப்படியிருக்கையில், கிருஷ்ணனைத் தங்களின் தலைமையில் கொண்ட பாண்டு மகன்கள் அனைவரையும் நீ எவ்வாறு வெல்லத் துணிவாய்?(18) ஓ! சூதனின் மகனே {கர்ணா}, நீ மிகவும் அதிகமாகத் தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய். எதையும் சொல்லாமல் நீ போரில் உன்னை ஈடுபடுத்திக் கொள்வாயாக. தற்பெருமையில் ஈடுபடாமல் ஆற்றலை வெளிப்படுத்துவதே நல்லோரின் கடமையாகும்.(19) ஓ! சூதனின் மகனே, ஓ! கர்ணா கூதிர்காலத்தின் வறண்ட மேகங்களைப் போல எப்போதும் முழங்கிக் கொண்டு, பொருட்படுத்தத் தகாதவனாகவே உன்னை நீ காட்டிக்கொள்கிறாய். எனினும், இதை மன்னன் {துரியோதனன்} புரிந்து கொள்ளவில்லை.(20)

ஓ! ராதையின் மகனே {கர்ணா}, பிருதையின் மகனை {அர்ஜுனனைக்} காணும்வரைதான் நீ முழங்கிக் கொண்டிருப்பாய். பார்த்தன் {அர்ஜுனன்} அருகில் வருவதைக் கண்டதும் உன் முழக்கங்கள் அனைத்தும் மறைந்துவிடும்.(21) உண்மையில் நீ பல்குனனின் {அர்ஜுனனின்} கணைகள் அடையும் தொலைவுக்கு வெளியே இருக்கும் வரையே முழங்கிக் கொண்டிருக்கிறாய். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் நீ துளைக்கப்படும்போது, இந்த உனது முழக்கங்கள் மறைந்துவிடுகின்றன.(22) க்ஷத்திரியர்கள் தங்கள் கரங்களின் மூலம் தங்கள் மாண்பைக் காட்டுவர். பிராமணர்கள் பேச்சு மூலமாக {தமது மாண்பைக் காட்டுவர்}; அர்ஜுனன் தன் வில்லின் மூலமாக {தன் மாண்பைக்} காட்டுவான்; ஆனால் கர்ணனோ, ஆகாயத்தில் அவன் கட்டும் கோட்டைகளின் மூலம் {தன் மாண்பைக்} காட்டுவான்.(23) (போரில்) ருத்ரனையே மன நிறைவு கொள்ளச் செய்த அந்தப் பார்த்தனை {அர்ஜுனனைத்} தடுக்கவல்லவன் எவன் இருக்கிறான்?” என்றார் {கிருபர்}.

இப்படிச் சரத்வான் மகனால் {கிருபரால்} கோபம் தூண்டப்பட்டவனும், அடிப்பவர்களில் முதன்மையானவனுமான கர்ணன், கிருபருக்குப் பின்வரும் விதத்தில் பதிலளித்தான்:(24) “வீரர்கள் எப்போதும் மழைக்காலத்து மேகங்களைப் போல முழங்கி, நிலத்தில் இடப்பட்ட விதைகளைப் போல வேகமாகக் கனிகளை {பலன்களைத்} தருவார்கள்.(25) போர்க்களத்தில் பெரும் சுமைகளைத் தங்கள் தோள்களில் ஏற்கும் வீரர்கள், தற்புகழ்ச்சி நிறைந்த பேச்சுகளில் ஈடுபடுவதில் நான் எக்குறையும் காணவில்லை. சுமையைத் தாங்கிக் கொள்ள மனதால் தீர்மானிக்கும் ஒருவனது செயல் நிறைவேறுவதில் விதியே அவனுக்கு உதவி செய்கிறது.(26,27) பெரும் சுமையைச் சுமக்க இதயத்தால் விரும்பும் நான், போதுமான உறுதியை எப்போதும் ஒன்றுதிரட்டுகிறேன்.(28)

ஓ! பிராமணரே {கிருபரே}, போரில் கிருஷ்ணன் மற்றும் சாத்வதர்களுடன் கூடிய பாண்டுவின் மகன்களைக் கொன்ற பிறகு இத்தகு முழக்கங்களில் நான் ஈடுபட்டால் உமக்கென்ன?(29) வீரர்கள் எவரும் கூதிர்க்காலத்து மேகங்களைப் போலக் கனியற்ற {பலன்றற} வகையில் முழங்குவதில்லை. தன் சொந்த வலிமையை அறிந்தே விவேகிகள் முழக்கங்களில் ஈடுபடுகின்றனர்.(30) ஒன்றாகச் சேர்ந்து, உறுதியுடன் போரிட்டு வரும் கிருஷ்ணன் மற்றும் பார்த்தனை {அர்ஜுனனை} இன்றைய போரில் வெல்ல என் இதயத்தில் தீர்மானித்திருக்கிறேன். ஓ! கௌதமரின் மகனே {கிருபரே}, அதற்காகவே நான் முழங்குகிறேன்.(31) ஓ! பிராமணரே {கிருபரே}, என் இந்த முழக்கங்களின் கனியைப் பார்ப்பீராக. போரில் தங்களைப் பின்தொடர்பவர்கள் {தொண்டர்கள்}, கிருஷ்ணன் மற்றும் சாத்வதர்கள் ஆகிய அனைவரோடும் சேர்ந்த பாண்டுவின் மகன்களைக் கொன்று, ஒரு முள்ளும் {எந்த எதிரியும்} இல்லாத முழுப் பூமியை நான் துரியோதனனுக்கு அளிப்பேன்” என்றான் {கர்ணன்}. (32)

கிருபர் {கர்ணனிடம்}, “செயல்கள் இல்லாமல் உன் சிந்தனைகளையே கண்டுபிடித்துச் சொல்லும் உனது இந்தப் பிதற்றல்களை நான் சிறிதும் கணக்கில் கொள்ளவில்லை. நீ எப்போதும் கிருஷ்ணர்கள் {கருப்பர்களான கிருஷ்ணன், அர்ஜுனன்} இருவரையும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனையும் மதிப்பு குறைவாகவே பேசுகிறாய்.(33) ஓ! கர்ணா, போரில் திறம்பெற்ற அவ்விரு வீரர்களைத் தன் தரப்பில் எவன் கொண்டிருக்கிறானோ, அவன் வெற்றி அடைவது உறுதி. உண்மையில், தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், மனிதர்கள், நாகர்கள், பறவைகள் ஆகிய அனைவரும் கவசம் பூண்டு வந்தாலும், கிருஷ்ணனும், அர்ஜுனனும் வீழ்த்தப்பட முடியாதவர்களே. தர்மனின் மகனான யுதிஷ்டிரன், பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாவான். அவன் உண்மைநிறைந்த பேச்சு கொண்டவனாகவும், தற்கட்டுப்பாடு கொண்டவனாகவும் இருக்கிறான். பித்ருக்களையும், தேவர்களையும் அவன் துதிக்கிறான். அவன் {யுதிஷ்டிரன்} உண்மை மற்றும் அறப்பயிற்சிகளில் அர்ப்பணிப்புடன் இருக்கிறான்.

மேலும் அவன் {யுதிஷ்டிரன்} ஆயுதங்களில் திறம்பெற்றவனாகவும் இருக்கிறான். பெரும் நுண்ணறிவு கொண்ட அவன், நன்றியறிவுள்ளவனாகவும் இருக்கிறான்.(34-36) அவனது {யுதிஷ்டிரனது} தம்பியர் அனைவரும் பெரும் வலிமை கொண்டவர்களாகவும், அனைத்து ஆயுதங்களையும் நன்கு பயின்றவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் மூத்தோரின் சேவையில் அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர். ஞானமும், புகழும் கொண்ட அவர்கள் தங்கள் செயல்பாடுகளில் நீதியுள்ளவர்களாக {அறவோராக} இருக்கின்றனர்.(37) அவர்களது சொந்தங்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் இந்திரனின் ஆற்றலைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். தாக்குவதில் திறமையான அவர்கள் அனைவரும் பாண்டவர்களிடம் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றனர்.

திருஷ்டத்யும்னன், சிகண்டி, துர்முக்ஷன் மகனான ஜனமேஜயன் {தௌர்முகி}(38), சந்திரசேனன், மத்திரசேனன், கீர்த்திவர்மன், துருவன், தரன், வசுசந்திரன், சுதேஜனன்,(39) துருபதனின் மகன்கள், வலிமைமிக்க உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனான துருபதன், மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்}, அவர்களுக்காக {பாண்டவர்களுக்காக} உறுதியுடன் போராடும் அவனது {விராடனின்} தம்பியர்(40) அனைவரும், கஜானீகன், சுருதானீகன், வீரபத்திரன், சுதர்சனன், சுருதத்வஜன், பலானீகன், ஜயானீகன், ஜயப்பிரியன்,(41) விஜயன், லப்தலாக்ஷன், ஜயாஸ்வன், காமராஷன், விராடனின் அழகிய சகோதரர்கள்,(42) இரட்டையர் (நகுலன் மற்றும் சகாதேவன்), திரௌபதியின் மகன்கள் (ஐவர்), ராட்சசன் கடோத்கசன் ஆகியோர் அனைவரும் பாண்டவர்களுக்காகவே போரிடுகின்றனர். எனவே, பாண்டுவின் மகன்கள் அழிவைச் சந்திக்கமாட்டார்கள்.(43)

இவர்களும், இன்னும் பிற (வீரர்களின்) கூட்டத்தினர் பலரும் பாண்டுவின் மகன்களுக்காகவே போரிடுகின்றனர். தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடியதும், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களின் குழுக்கள் அனைத்துடன் கூடியதும், யானைகள், பாம்புகள் மற்றும் பிற உயிரினங்கள் அனைத்துடன் கூடியதுமான மொத்த அண்டமே, பீமன் மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகியோரின் ஆயுத ஆற்றலில் அழிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.(44,45) யுதிஷ்டிரனைப் பொறுத்தவரை, கோபம் நிறைந்த தன் கண்களால் மட்டுமே அவனால் மொத்த உலகையும் எரித்துவிட முடியும். ஓ! கர்ணா, அளவிலா வலிமை கொண்ட சௌரியே {கிருஷ்ணனே} யாவருக்காகக் கவசம் பூண்டானோ அந்த எதிரிகளை எவ்வாறு நீ வெல்லத் துணிவாய்? ஓ! சூதனின் மகனே {கர்ணா}, நீ எப்போதும் சௌரியுடன் {கிருஷ்ணனுடன்} போரில் மோதத் துணிகிறாய் என்பது உன் பங்குக்குப் பெரும் மடமையாகும்” என்றார் {கிருபர்}.(46,47)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “(கிருபரால்) இப்படிச் சொல்லப்பட்ட ராதையின் மகனான கர்ணன், ஓ! குரு குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே சரத்வானின் மகனான ஆசான் கிருபரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(48) “ஓ! பிராமணரே {கிருபரே}, பாண்டவர்களைக் குறித்து நீர் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மையே. இவையும், இன்னும் பிற நற்குணங்களும் பாண்டு மகன்களிடம் காணப்படவே செய்கின்றன.(49) பார்த்தர்கள், வாசவனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்களாலும், தைத்தியர்களாலும், யக்ஷர்களாலும், ராட்சசர்களாலும் வெல்லப்பட முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.(50) ஆனாலும், வாசவன் {இந்திரன்} என்னிடம் கொடுத்துள்ள ஈட்டியின் {சக்தியின்} உதவியால் நான் பார்த்தர்களை வெல்வேன். ஓ! பிராமணரே {கிருபரே}, சக்ரனால் {இந்திரனால்} எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஈட்டியானது கலங்கடிக்கப்பட முடியாதது என்பதை நீர் அறிவீர்.(51) அதைக் கொண்டு போரில் நான் சவ்யசச்சினை {அர்ஜுனனைக்} கொல்வேன். அர்ஜுனனின் வீழ்ச்சிக்குப் பிறகு, கிருஷ்ணனும், அர்ஜுனனோடு பிறந்த சகோதரர்களும், அர்ஜுனன் (அவர்களுக்கு உதவி செய்ய) இல்லாமல் பூமியை {பூமியின் அரசுரிமையை} அனுபவிக்க முடியாதவர்களாகவே இருப்பார்கள்.(52) எனவே, அவர்கள் அனைவரும் அழிவையே அடைவார்கள். கடல்களுடன் கூடிய இந்தப் பூமியானவள், குருக்களின் தலைவன் {துரியோதனன்} எந்த முயற்சியையும் செய்யாமலேயே அவனுடைய உடைமையாகவே இருப்பாள்.(53) {நல்ல} கொள்கையால் இவ்வுலகில் அனைத்தும் அடையத்தக்கதே என்பதில் ஐயமில்லை.(54) ஓ! கௌதமரே {கிருபரே}, இதை அறிந்தே நான் இந்த முழக்கங்களில் {கர்ஜனைகளில்} ஈடுபடுகிறேன்.

உம்மைப் பொறுத்தவரை, நீர் முதியவராகவும், பிறப்பால் பிராமணராகவும், போரில் திறனற்றவராகவும் இருக்கிறீர்.(55) பாண்டவர்களிடம் நீர் மிகுந்த பாசம் கொண்டிருக்கிறீர். இதன் காரணமாகவே நீர் என்னை இப்படி அவமதிக்கிறீர். ஓ! பிராமணரே, மீண்டும் இதுபோன்ற வார்த்தைகளை என்னிடம் சொன்னீரெனில், ஓ! இழிந்தவரே {கிருபரே}, என் கத்தியை உருவி உமது நாவை அறுத்துவிடுவேன்.(56) ஓ! பிராமணரே {கிருபரே}, ஓ! தீய புரிதல் கொண்டவரே, துருப்புகள் அனைத்தையும், கௌரவர்களையும் அச்சுறுத்தவே நீர் பாண்டவர்களைப் புகழ விரும்புகிறீர்.(57) ஓ! கௌதமரே {கிருபரே}, இதைப் பொறுத்தவரை, நான் என்ன சொல்கிறேன் என்பதைக் கேளும்.(58) போரில் திறனுடையவர்களான துரியோதனன், துரோணர், சகுனி, துர்முகன், ஜயன், துச்சாசனன், விருஷசேனன், மத்ரர்களின் ஆட்சியாளர் {சல்லியர்}, {கிருபராகிய} நீர், சோமதத்தர், பீமன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விவிம்சதி ஆகிய அனைவரும் இங்கே கவசமணிந்து நிற்கின்றனர்.(59,60) சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலைக் கொண்டிருந்தாலும், போரில் இவர்களை வெல்லத்தக்க எந்த எதிரி இருக்கிறான்? நான் பெயர் சொன்ன வீரர்கள் அனைவரும், ஆயுதங்களில் திறனுடையவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களும், சொர்க்கத்தில் அனுமதி வேண்டுபவர்களும் [2], அறநெறியறிந்தவர்களும், போரில் திறம்பெற்றவர்களுமாவர்.(61) போரில் அவர்கள் தேவர்களையே கொல்லவல்லவர்களாவர். வெற்றியை விரும்பும் துரியோதனனுக்காகக் கவசமணிந்து பாண்டவர்களைக் கொல்வதற்காகப் போர்க்களத்தில் தங்கள் நிலைகளை இவர்கள் ஏற்பார்கள்.(62) வலிமைமிக்க மனிதர்களின் வழக்கில் கூட வெற்றியென்பது விதியைச் சார்ந்தே இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.(63)வலிய கரங்களைக் கொண்ட பீஷ்மரே நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டுக் கிடக்கிறார் எனும்போதும், விகர்ணன், ஜெயத்ரதன்,(64) பூரிஸ்ரவஸ், ஜயன், ஜலசந்தன், சுதக்ஷிணன், தேர்வீரர்களில் முதன்மையான சலன், பெரும் சக்தி கொண்ட பகதத்தன்(65) ஆகிய இவர்களும், தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவர்களும், (பாண்டவர்களைவிட) வலிமைமிக்கவர்களுமான வீரர்கள் அனைவரும், பாண்டவர்களால் கொல்லப்பட்டுப் போர்க்களத்தில் கிடக்கின்றனர்(66) எனும்போதும், ஓ! மனிதர்களில் இழிந்தவரே, இவையாவும் விதியின் விளைவு என்பதைவிட நீர் வேறு என்ன நினைக்கிறீர்? ஓ! பிராமணரே, யாரை நீர் புகழுகிறீரோ, அந்தத் துரியோதனனின் எதிரிகளைப் பொறுத்தவரையும் கூட, அவர்களில் துணிச்சல்மிக்க வீரர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.(67) குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு படைகளும் எண்ணிக்கையில் குறைந்துவருகின்றன.(68) நான் இதில் பாண்டவர்களின் ஆற்றலைக் காணவில்லை. ஓ! மனிதர்களில் இழிந்தவரே, யாரை நீர் வலிமைமிக்கவர்களாக எப்போதும் கருதுகிறீரோ,(69) அவர்களுடன் நான் என் முழு வலிமையைப் பயன்படுத்தித் துரியோதனனின் நன்மைக்காகப் போரில் போராடுவேன். வெற்றியைப் பொறுத்தவரை, அது விதியைச் சார்ந்ததே” என்றான் {கர்ணன்}.(70)

கோபம்நிறைந்த அஸ்வத்தாமன்! – துரோண பர்வம் பகுதி – 158அ-சினம் கொண்ட அஸ்வத்தாமன் கத்தியை ஓங்கி கர்ணனை நிந்திப்பது; அஸ்வத்தாமனைத் தணிவடையச் செய்த துரியோதனன்; கர்ணனைச் சீற்றத்துடன் தாக்கிய பாண்டவர்கள்; தன் எதிரிகளுக்குப் பேரழிவை ஏற்படுத்திய கர்ணன்; கர்ணனுடன் மோத விரைந்து வந்த அர்ஜுனன்; கர்ணனைக் காக்க கௌரவர்களை ஏவிய துரியோதனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தன் மாமன் {கிருபர்}, கடுமையான மற்றும் அவமதிக்கும் வகையிலான வார்த்தைளில் சூதனின் மகனால் {கர்ணனால்} இப்படிச் சொல்லப்படுவதைக் கண்ட அஸ்வத்தாமன், தன் கத்தியை உயர்த்திக் கொண்டு, பின்னவனை {கர்ணனை} நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(1) சீற்றத்தால் நிறைந்திருந்த அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, குரு மன்னன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மதங்கொண்ட யானையை நோக்கிச் செல்லும் சிங்கம் ஒன்றைப் போலக் கர்ணனை நோக்கி விரைந்தான்.(2)

அஸ்வத்தாமன் {கர்ணனிடம்}, “ஓ! மனிதர்களில் இழிந்தவனே {கர்ணா}, அர்ஜுனனிடம் உண்மையில் உள்ள குணங்களையே கிருபர் சொல்லிக் கொண்டிருந்தார். எனினும், தீய புரிதல் கொண்டவனான நீ, துணிவுமிக்க என் மாமனை {கிருபரை} வன்மத்துடன் {கெட்ட நோக்கத்துடன்} நிந்திக்கிறாய்.(3) செருக்கும், துடுக்கும் கொண்ட நீ, உலகத்தின் வில்லாளிகள் எவரையும் போரில் கருதிப்பாராமல் {மதிக்காமல்} உன் ஆற்றலை இன்று தற்புகழ்ச்சி செய்கிறாய்.(4) போரில் உன்னை வென்ற அந்தக் காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, நீ பார்த்துக் கொண்டிருந்த போதே ஜெயத்ரதனைக் கொன்றபோது, உன் ஆற்றல் எங்கே சென்றது? உன் ஆயுதங்கள் எங்கே சென்றன?(5) ஓ! சூதர்களில் இழிந்தவனே, முன்னர்ப் போரில் மகாதேவனையே எதிர்த்தவனை {அர்ஜுனனை} வெல்லப்போவதாக உன் மனதில் வீணான நம்பிக்கை கொள்கிறாய்.(6) தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்டு வந்த போதும், கிருஷ்ணனை மட்டுமே தன் கூட்டாளியாகக் கொண்டவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அர்ஜுனனை வெல்ல முடியவில்லை.(7) ஓ! சூதா {கர்ணா}, இந்த மன்னர்களுடன் கூடிய நீ, உலக வீரர்களில் முதன்மையானவனும், வெல்லப்படாதவனுமான அர்ஜுனனை போரில் வெல்வாய் என எவ்வாறு நம்பிக்கை கொள்கிறாய்?(8) ஓ! தீய ஆன்மா கொண்ட கர்ணா, இன்று (நான் உன்னை என்ன செய்யப் போகிறேன் என்பதைப்) பார். ஓ! மனிதர்களில் இழிந்தவனே, ஓ! இழிந்த அறிவு கொண்டவனே, நான் இப்போது உன் உடலிலிருந்து உன் தலையை வெட்டப் போகிறேன்” என்றான் {அஸ்வத்தாமன்}.(9)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிச் சொன்ன அஸ்வத்தாமன் கர்ணனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான். அப்போது, பெரும் சக்தி கொண்ட மன்னனும் {துரியோதனனும்}, மனிதர்களில் முதன்மையானவரான கிருபரும் அவனை {அஸ்வத்தாமனைப்} பிடித்துக் கொண்டனர்.(10)

அப்போது கர்ணன் {துரியோதனனிடம்}, “தீய புரிதல் கொண்டவனான இந்த இழிந்த பிராமணன் {அஸ்வத்தாமன்}, தன்னைத் துணிச்சல்மிக்கவனாக நினைத்துக் கொண்டு, போரில் தன் ஆற்றல் குறித்துத் தற்புகழ்ச்சி செய்கிறான். ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, அவனை {அஸ்வத்தாமனை} விடு. அவன் என் வலிமையைச் சந்திக்கட்டும்” என்றான்.(11)

அஸ்வத்தாமன் {கர்ணனிடம்}, “ஓ! சூதன் மகனே {கர்ணா}, ஓ! தீய புரிதல் கொண்டவனே, (உன் குற்றமான) இஃது எங்களால் மன்னிக்கப்படுகிறது. எனினும், உன்னில் எழுந்திருக்கும் இந்தச் செருக்கைப் பல்குனன் {அர்ஜுனன்} தணிப்பான்” என்றான்.(12)

துரியோதனன் {அஸ்வத்தாமனிடம்} , “ஓ! அஸ்வத்தாமரே, உமது கோபத்தைத் தணிப்பீராக. ஓ! கௌரவங்களை அளிப்பவரே, மன்னிப்பதே உமக்குத் தகும். ஓ! பாவமற்றவரே, சூதன் மகனிடம் {கர்ணனிடம்} நீர் கோபங்கொள்ளக் கூடாது.(13) உம் மீதும், கர்ணன், கிருபர், துரோணர், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியர்}, சுபலனின் மகன் {சகனி} ஆகியோர் மீதும் பெரும் சுமை இருக்கிறது. ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {அஸ்வத்தாமரே}, உமது கோபத்தை விடுவீராக.(14) அதோ, ராதையின் மகனுடன் {கர்ணனுடன்} போரிட விரும்பி பாண்டவத் துருப்புகள் அனைத்தும் வந்து கொண்டிருக்கின்றன. உண்மையில், ஓ! பிராமணரே, அதோ நம் அனைவரையும் அறைகூவி அழைத்துக் கொண்டே அவர்கள் வருகின்றனர்” என்றான் {துரியோதனன்}.(15)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கடுஞ்சினம் கொண்டிருந்தவனும், இப்படி மன்னனால் தணிக்கப்பட்டவனுமான அந்த உயர் ஆன்ம துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் கோபத்தை அடக்கிக் கொண்டு (கர்ணனை) மன்னித்தான்.(16) அமைதியான மனநிலையையும், உன்னத இதயத்தையும் கொண்ட கிருபர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மென்தன்மை கொண்டவராததால், மீண்டும் அவனிடம் {கர்ணனிடம்} வந்து இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(17) கிருபர், “ஓ! தீய இதயம் கொண்ட சூதன் மகனே {கர்ணா}, (உன் குற்றமான) இஃது எங்களால் மன்னிக்கப்படுகிறது. எனினும், உன்னில் எழுந்திருக்கும் இந்தச் செருக்கைப் பல்குனன் {அர்ஜுனன்} தணிப்பான்” என்றார்.(18)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது பாண்டவர்களும், ஆற்றலுக்காகக் கொண்டாடப்படுபவர்களான பாஞ்சாலர்களும் ஒன்று சேர்ந்து உரக்கக் கூச்சலிட்டபடியே ஆயிரக்கணக்கில் வந்து கொண்டிருந்தனர்.(19) தேர்வீரர்களில் முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனும், தேவர்களுக்கு மத்தியில் உள்ள சக்ரனைப் போல முதன்மையான குருவீரர்கள் பலரால் சூழப்பட்டவனுமான கர்ணனும், தன் கரங்களின் வலிமையை நம்பி வில்லை வளைத்துக் கொண்டு காத்திருந்தான். உரத்த சிங்க முழக்கங்களால் வகைப்படுத்தப்படுவதும், மிகப் பயங்கரமானதுமான ஒரு போர் கர்ணனுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் அப்போது தொடங்கியது.(20,21)

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், தங்கள் ஆற்றலுக்காகக் கொண்டாடப்படுபவர்களான பாஞ்சாலர்களும்,(22) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கர்ணனைக் கண்டு, “அதோ கர்ணன் இருக்கிறான்”, “இந்தக் கடும் போரில் கர்ணன் எங்குப் போனான்”,(23) “ஓ! தீய புரிதல் கொண்டவனே, ஓ! மனிதர்களில் இழிந்தவனே, எங்களுடன் போரிடுவாயாக” என்று உரத்தக் கூச்சலிட்டனர். ராதையின் மகனை {கர்ணனைக்} கண்ட பிறர், கோபத்தால் தங்கள் கண்களை அகல விரித்துக் கொண்டு,(24) “சிறு மதியும், திமிரும் கொண்ட இழிந்தவனான இந்தச் சூதன் மகன் {கர்ணன்}, கூடியிருக்கும் மன்னர்களால் கொல்லப்பட வேண்டும். இவன் வாழ வேண்டிய அவசியம் இல்லை.(25) பாவம் நிறைந்த இந்த மனிதன், பார்த்தர்களுடன் எப்போதும் மிகுந்த பகையுடன் இருக்கிறான். துரியோதனனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படியும் இவனே இந்தத் தீமைகள் அனைத்திற்கும் வேராக இருப்பவன்.(26) இவனைக் கொல்வீராக” என்றனர்.

இத்தகு வார்த்தைகளைச் சொன்ன பெரும் க்ஷத்திரியத் தேர்வீரர்கள், பாண்டுவின் மகனால் தூண்டப்பட்டு, அவனைக் {கர்ணனைக்} கொல்வதற்காக அவனை நோக்கி விரைந்து, அடர்த்தியான கணைமாரியால் அவனை மறைத்தனர். வலிமைமிக்கப் பாண்டவர்கள் அனைவரும் வருவதைக் கண்ட சூதன் மகன் {கர்ணன்} அப்போது நடுங்காதவனாகவும், அச்சங்கொள்ளாதவனுமாக இருந்தான்.(27,28) உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, யமனுக்கு ஒப்பான துருப்புகளின் அற்புதக் கடலைக் கண்டவனும், வலிமைமிக்கவனும், வேகமான கரங்களைக் கொண்டவனும், போரில் வெல்லப்படாதவனும், உமது மகன்களுக்கு நன்மை செய்பவனுமான அந்தக் கர்ணன், கணைகளின் மேகங்களால் அந்தப் படையை அனைத்துப் பக்கங்களிலும் தடுக்கத் தொடங்கினான். பாண்டவர்களும், கணைமாரியை ஏவியபடி அந்த எதிரியுடன் போரிட்டனர்.(29-31) நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் தங்கள் விற்களை அசைத்து வந்த அவர்கள், பழங்காலத்தில் சக்ரனுடன் போரிட்ட தைத்தியர்களைப் போலவே அந்த ராதையின் மகனுடன் {கர்ணனுடன்} போரிட்டனர்.(32) எனினும், வலிமைமிக்கக் கர்ணன், அனைத்துப் பக்கங்களிலும் பூமியின் தலைவர்களால் பொழியப்பட்ட கணைகளை, அடர்த்தியான தன் கணைமாரியால் விலக்கினான்.(33) ஒவ்வொருவரின் அருஞ்செயல்களுக்கும் எதிர்வினையாற்றிய அந்த இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற போரானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற பெரும்போரில் சக்ரனுக்கும் தானவர்களுக்கும் இடையிலான மோதலுக்கு ஒப்பாக இருந்தது.(34)

தன் எதிரிகள் அனைவரும் உறுதியுடன் போரிட்டாலும், போரில் அவனைத் {கர்ணனைத்} தாக்க முடியாத அளவுக்குப் போரிட்ட சூதனின் மகனிடம் அப்போது நாங்கள் கண்ட கரநளினம் மிக அற்புதமானதாக இருந்தது.(35) (பகை) மன்னர்களால் ஏவப்பட்ட கணைகளின் மேகங்களைத் தடுத்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, (தன் எதிரிகளின்) நுகத்தடிகள், ஏர்க்கால்கள், குடைகள், கொடிமரங்கள் மற்றும் குதிரைகள் ஆகியவற்றின் மீது தன் பெயர் பொறிக்கப்பட்ட பயங்கரக் கணைகளை ஏவினான். பிறகு கர்ணனால் பீடிக்கப்பட்ட அந்த மன்னர்கள் தங்கள் பொறுமையை இழந்து,(36,37) குளிரால் பீடிக்கப்பட்ட பசு மந்தையைப் போலக் களத்தில் திரியத் தொடங்கினர். பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள், யானைகள் ஆகியவையும், தேர்வீரர்களும் கர்ணனால் தாக்கப்பட்டு உயிரையிழந்து கீழே விழுவது அங்கே காணப்பட்டது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புறமுதுகிடாத வீரர்களுடைய தலைகள் மற்றும் கரங்களால் அந்த மொத்தக் களமும் விரவி கிடந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இறந்தோர், இறந்து கொண்டிருந்தோர், ஓலமிடும் போர்வீரர்கள் ஆகியோருடன் கூடிய அந்தப் போர்க்களம், யமனின் ஆட்சிப் பகுதிக்குரிய  தன்மையை ஏற்றது.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணனின் ஆற்றலைக் கண்ட துரியோதனன்,(39-41) அஸ்வத்தாமனிடம் சென்று அவனிடம், “கவசம் பூண்ட கர்ணன், (பகை) மன்னர்கள் அனைவருடனும் போரில் ஈடுபடுவதைப் பாரும்.(42) கர்ணனின் கணைகளால் பீடிக்கப்படும் பகைவரின் படை, கார்த்திகேயனின் {முருகனின்} சக்தியால் மூழ்கடிக்கப்பட்ட அசுரர்களின் படையைப் போலவே முறியடிக்கப்படுவதைப் பாரும்.(43) நுண்ணறிவு கொண்ட கர்ணனால் போரில் தன் படை வெல்லப்படுவதைக் கண்ட பீபத்சு {அர்ஜுனன்}, சூதன் மகனை {கர்ணனைக்} கொல்லும் விருப்பத்துடன் அதோ வருகிறான்.(44) எனவே, நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான இந்தச் சூதன் மகனை {கர்ணனைக்} கொல்வதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றான் {துரியோதனன்}.(45)

(இப்படிச் சொல்லப்பட்டவர்களான) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், சல்லியன், பெரும் தேர்வீரனான ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} ஆகியோர் அனைவரும், தைத்திய படையை நோக்கிச் சக்ரன் {இந்திரன்} வருவதைப் போலவே (தங்களை நோக்கி) வரும் குந்தியின் மகனை {அர்ஜுனனைக்} கண்டு, சூதனின் மகனைக் {கர்ணனைக்} காப்பதற்காகப் பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றனர். அதே வேளையில், பாஞ்சாலர்களால் சூழப்பட்ட பீபத்சு {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விருத்திராசுரனை எதிர்த்துச் சென்ற புரந்தரனை {இந்திரனைப்} போலவே கர்ணனை எதிர்த்துச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(46,47)

துரியோதனனைத் தடுத்த அஸ்வத்தாமன்! – துரோண பர்வம் பகுதி – 158ஆ-கர்ணனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்று அவனையும் வில்லற்றவனாக்கிய அர்ஜுனன்; கிருபரின் தேரில் தஞ்சமடைந்த கர்ணன்; கர்ணனை வென்ற அர்ஜுனன்; அர்ஜுனனை எதிர்த்துச் சென்ற துரியோதனன்; துரியோதனனின் உயிரைக் காக்க அஸ்வத்தாமனைத் தூண்டிய கிருபர்; அர்ஜுனனுடன் மோதுவதிலிருந்து துரியோதனனைத் தடுத்த அஸ்வத்தாமன்; பாஞ்சாலர்களையும், சோமகர்களையும் கொல்ல அஸ்வத்தாமனைத் தூண்டிய துரியோதனன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா {சஞ்சயா}, யுக முடிவின்போது தோன்றும் அந்தகனைப் போலத் தெரிந்தவனும், வெறியால் தூண்டப்பட்டவனுமான பல்குனனை {அர்ஜுனனைக்} கண்ட பிறகு, விகர்த்தனன் {சூரியன்} மகனான கர்ணன் அடுத்து என்ன செய்தான்?(48) உண்மையில், வலிமைமிக்கத் தேர்வீரனும், வைகர்த்தனன் மகனுமான கர்ணன் எப்போதும் பார்த்தனை {அர்ஜுனனை} அறைகூவி அழைப்பவனாக இருக்கிறான். உண்மையில் அவன் {கர்ணன்}, பயங்கரமான பீபத்சுவை {அர்ஜுனனை} வெல்லத்தக்கவன் என்று எப்போதும் தன்னைச் சொல்லிக் கொள்கிறான். ஓ! சூதா, எப்போதும் தனக்குக் கொடிய எதிரியாக இருப்பவனை {அர்ஜுனனை} இப்படித் திடீரெனச் சந்தித்தபோது, அந்தப் போர்வீரன் {கர்ணன்} என்ன செய்தான்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(49,50)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “எதிரி யானையை நோக்கி வரும் மற்றொரு யானையைப் போலத் தன்னை நோக்கி வரும் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்ட கர்ணன், அச்சமில்லாமல் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றான்.(51) எனினும் பார்த்தன் {அர்ஜுனன்}, இப்படிப் பெரும் வேகத்தோடு வரும் கர்ணனைத் தங்கச் சிறகுகள் கொண்ட நேரான கணைகளின் மழையால் விரைவாக மறைத்தான். கர்ணனும் தன் கணைகளால் விஜயனை {அர்ஜுனனை} மறைத்தான்.(52) பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீண்டும் கணை மேகங்களால் கர்ணனை மறைத்தான். அப்போது சினத்தால் நிறைந்த கர்ணன், மூன்று கணைகளால் அர்ஜுனனைத் துளைத்தான்.(53) கர்ணனின் கர நளினத்தைக் கண்ட வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

எதிரிகளை அழிப்பவனான அவன் {அர்ஜுனன்}, கல்லில் கூராக்கப்பட்டவையும், சுடர்மிக்க முனைகளைக் கொண்டவையுமான நேரான முப்பது கணைகளைச் சூதனின் மகன் {கர்ணன்} மீது ஏவினான். பெரும் வலிமையையும், சக்தியையும் கொண்ட அவன் {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே, மற்றொரு நீண்ட கணையால் அவனது {கர்ணனின்} இடக்கரத்தின் மணிக்கட்டையும் துளைத்தான். அப்போது, பெரும் பலத்துடன் இப்படித் துளைக்கப்பட்ட அந்தக் கரத்தில் இருந்து கர்ணனின் வில் விழுந்தது.(54-56) கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த வில்லை எடுத்துக் கொண்ட வலிமைமிக்கக் கர்ணன், மீண்டும் பல்குனனை {அர்ஜுனனைக்} கணை மேகங்களால் மறைத்து பெரும் கரநளினத்தை வெளிப்படுத்தினான்.(57) அப்போது சிரித்தபடியே தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சூதன் மகனால் {கர்ணனால்} ஏவப்பட்ட அந்தக் கணை மாரியைத் தன் கணைகளால் கலங்கடித்தான். ஒருவரையொருவர் அணுகிய பெரும் வில்லாளிகளான அவர்கள் இருவரும், ஒருவர் செய்த சாதனைகளுக்கு மற்றவர் எதிர்வினையாற்ற விரும்பி, தொடர்ந்து ஒருவரையொருவர் கணைமாரிகளால் மறைத்தனர்.(59) கர்ணன் மற்றும் அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகியோருக்கிடையில் நடைபெற்ற அந்தப் போரானது, பருவகாலத்தில் உள்ள பெண் யானைக்காக இரு காட்டு யானைகளுக்கு இடையில் நடக்கும் போரைப் போல மிக அற்புதமானதாக இருந்தது.(60)

அப்போது, வலிமைமிக்க வில்லாளியான பார்த்தன் {அர்ஜுனன்}, கர்ணனின் ஆற்றலைக் கண்டு, விரைவாகப் பின்னவனின் {கர்ணனின்} வில்லை அதன் கைப்பிடியில் அறுத்தான்.(61) மேலும் அவன் {அர்ஜுனன்}, பெரும் எண்ணிக்கையிலான பல்லங்களால் சூதன் மகனின் {கர்ணனின்} நான்கு குதிரைகளையும் யமனுலகு அனுப்பிவைத்தான். பிறகும் அந்த எதிரிகளை எரிப்பவன் {அர்ஜுனன்}, கர்ணனுடைய தேரோட்டியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(62) பாண்டு மற்றும் பிருதையின் மகனான அவன் {அர்ஜுனன்}, வில்லற்றவனாக, குதிரையற்றவனாக, சாரதியற்றவனாக இருந்த கர்ணனை நான்கு கணைகளால் துளைத்தான்.(63) மனிதர்களில் காளையான அந்தக் கர்ணன், அக்கணைகளால் பீடிக்கப்பட்டு, குதிரைகளற்ற அந்தத் தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்துக் கிருபருடைய தேரில் ஏறிக் கொண்டான்.(64)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ராதையின் மகன் {கர்ணன்} வெல்லப்பட்டதைக் கண்ட உமது போர்வீரர்கள், அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(65) அவர்கள் ஓடுவதைக் கண்ட மன்னன் துரியோதனன் அவர்களைத் தடுத்து இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(66) “வீரர்களே, ஓடாதீர். க்ஷத்திரியர்களில் காளையரே போரில் நிலைப்பீராக. போரில் பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வதற்காக நானே இப்போது செல்லப் போகிறேன்.(67) கூடியிருக்கும் பாஞ்சாலர்களோடு சேர்த்துப் பார்த்தனை {அர்ஜுனனை} நானே கொல்லப் போகிறேன். காண்டீவதாரியோடு {அர்ஜுனனோடு} இன்று நான் போரிடும்போது,(68) யுக முடிவில் தோன்றும் யமனுக்கு ஒப்பான என் ஆற்றலைப் பார்த்தர்கள் காணப் போகின்றனர். வெட்டுக்கிளிகளின் கூட்டத்திற்கு ஒப்பாக ஏவப்படும் என் ஆயிரக்கணக்கான கணைகளை இன்று பார்த்தர்கள் காண்பார்கள். கோடை காலத்தின் முடிவில் மேகங்களால் பொழியப்படும் மழைத்தாரைகளைப் போன்ற அடர்த்தியான கணைமாரிகளை ஏவியபடி, கையில் வில்லுடன் இருக்கும் என்னைப் போராளிகள் காணப் போகின்றனர். நான் இன்று பார்த்தனை {அர்ஜுனனை}, என் நேரான கணைகளால் வெல்லப் போகிறேன்.(69-71) வீரர்களே, பல்குனன் {அர்ஜுனன்} மீது நீங்கள் கொண்டுள்ள அச்சத்தை விட்டு விட்டுப் போரில் நிலைப்பீராக. மகரங்களின் வசிப்பிடமான கடலால், தன் கரைகளை மீற முடியாதததைப் போல, என் ஆற்றலுடன் மோதப் போகும் பல்குனனால் {அர்ஜுனனால்} அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது” என்றான் {துரியோதனன்}.(72) இப்படிச் சொன்ன மன்னன் {துரியோதனன்}, கோபத்தால் கண்கள் சிவந்து, பெரும் படையால் சூழப்பட்டு, பல்குனனை {அர்ஜுனனை} நோக்கிச் சினத்துடன் சென்றான்.

இப்படிச் சென்ற வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரியோதனனைக் கண்ட சரத்வான் மகன் {கிருபர்},(73,74). அஸ்வத்தாமனை அணுகி இவ்வார்த்தைகளைச் சொன்னார்: “அதோ, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரியோதனன், கோபத்தால் தன் உணர்வுகளை இழந்து,(75) சுடர்மிக்க நெருப்பை நோக்கி விரைய விரும்பும் பூச்சி ஒன்றைப் போல, பல்குனனுடன் போரிட விரும்பி செல்கிறான். மன்னர்களில் முதன்மையான இவன் {துரியோதனன்}, நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பார்த்தனுடனான {அர்ஜுனனுடனான} இந்தப் போரில் தன் உயிரை விடுவதற்கு முன் (மோதலுக்கு விரைவதில் இருந்து) அவனைத் தடுப்பாயாக. பார்த்தனின் கணைகள் செல்லும் தொலைவுக்குள் இல்லாதவரை மட்டுமே துணிவுமிக்க குரு மன்னனால் {துரியோதனனால்} இந்தப் போரில் உயிருடன் இருக்க முடியும். சற்று முன்பே சட்டையுரித்த பாம்புகளுக்கு ஒப்பான பார்த்தனின் {அர்ஜுனனின்} பயங்கரக் கணைகளால் சாம்பலாக எரிக்கப்படுவதற்கு முன் மன்னன் {துரியோதனன்} தடுக்கப்பட வேண்டும். ஓ! கௌரவங்களை அளிப்பவனே {அஸ்வத்தாமா}, நாம் இங்கே இருக்கும்போது, தனக்கெனப் போரிட எவரும் இல்லாதவனைப் போல மன்னனே {துரியோதனனே} போரிடச் செல்வது பெரிதும் முறையற்றதாகத் தெரிகிறது. புலியோடு மோதும் யானையைப் போல, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுடன் (அர்ஜுனனுடன்} போரில் ஈடுபட்டால், இந்தக் குரு வழித்தோன்றலின் {துரியோதனனின்} உயிரானது பெரும் ஆபத்துக்குள்ளாகும்.” என்றார் {கிருபர்}.

தன் தாய்மாமனால் {கிருபரால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்},(76-81) துரியோதனனிடம் விரைந்து சென்று அவனிடம் இந்த வார்த்தகளைச் சொன்னான்: “ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, ஓ! குருவின் வழித்தோன்றலே {துரியோதனா}, நான் உயிரோடு இருக்கையில், உனது நன்மையை எப்போதும் விரும்புபவனான என்னை அலட்சியம் செய்துவிட்டு, போரில் நீ ஈடுபடுவது உனக்குத் தகாது. பார்த்தனை வெல்வது குறித்து நீ கவலைப்படத் தேவையில்லை. பார்த்தனை {அர்ஜுனனை} நான் தடுப்பேன். ஓ! சுயோதனா {துரியோதனா}, இங்கேயே நிற்பாயாக” என்றான் {அஸ்வத்தாமன்}.(82,83)

துரியோதனன் {அஸ்வத்தாமனிடம்} சொன்னான், “ஆசான் (துரோணர்), பாண்டுவின் மகன்களைத் தமது மகன்களைப் போலவே எப்போதும் பாதுகாக்கிறார். நீரும் என் எதிரிகளான அவர்களிடம் எப்போதும் தலையிடுவதில்லை.(84) அல்லது, என் தீப்பேற்றால் கூடப் போரில் உமது ஆற்றல் எப்போதும் கடுமைடையாது இருந்திருக்கலாம். யுதிஷ்டிரன், அல்லது திரௌபதி மீது உமக்குள்ள பாசமும் இதற்குக் காரணமாக இருக்கலாம். உண்மையான காரணத்தை அறியாதவனாக நான் இருக்கிறேன்.(85) என்னை மகிழ்விக்க விரும்பிய என் நண்பர்கள் அனைவரும் வெல்லப்பட்டுத் துயரில் மூழ்குவதால், பேராசை கொண்டவனான எனக்கு ஐயோ {என்னை நிந்திக்க வேண்டும்}.(86) ஓ! கௌதமர் மகளின் {கிருபியின்} மகனே {அஸ்வத்தாமரே}, ஆயுதங்களை அறிந்தவர்களுள் முதன்மையானவரும், போரில் மகேஸ்வரனுக்கு ஒப்பானவருமான உம்மைத் தவிர, எதிரியை அழிக்கத்தகுந்த போர்வீரன் வேறு எவன் இருக்கிறான்?(87) ஓ! அஸ்வத்தாமரே, என்னிடம் மகிழ்ச்சி {கருணை} கொண்டு, என் எதிரிகளை அழிப்பீராக. உமது ஆயுதங்கள் செல்லும் தொலைவுக்குள் நிற்க தேவர்களோ, தானவர்களோ கூடத் தகுந்தவர்களல்லர்.(88)

ஓ! துரோணரின் மகனே {அஸ்வத்தாமரே}, பாஞ்சாலர்களையும், சோமகர்களையும் அவர்களைப் பின்தொடர்ந்து செல்வோருடன் சேர்த்துக் கொல்வீராக. எஞ்சியோரைப் பொறுத்தவரை, உம்மால் பாதுகாக்கப்படும் நாங்கள் அவர்களைக் கொல்வோம்.(89) ஓ! பிராமணரே, பெரும் புகழைக் கொண்ட சோமகர்களும், பாஞ்சாலர்களும் காட்டு நெருப்பைப் போல அதோ என் துருப்புகளுக்கு மத்தியில் திரிகின்றனர்.(90) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்பட்டால், கைகேயர்கள் நம் அனைவரையும் அழித்துவிடுவார்கள் என்பதால் அவர்களையும் {கைகேயர்களையும்} தடுப்பீராக.(91) ஓ! அஸ்வத்தாமரே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, வேகமாக அங்கே செல்வீராக. அந்த அருஞ்செயலை இப்போது நிறைவேற்றுவீரோ, பிறகு நிறைவேற்றுவீரோ, ஓ! ஐயா, அஃது உம்மால் நிறைவேற்றப்பட வேண்டும்.(92) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, பாஞ்சாலர்களின் அழிவுக்காகவே பிறந்தவர் நீர். உமது ஆற்றலை வெளிப்படுத்தி, இவ்வுலகைப் பாஞ்சாலர்களற்றதாகச் செய்யப் போகிறீர்.(93) (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மரியாதைக்குரியவர்கள் இப்படியே {உம்மைக் குறித்துச்} சொல்லியிருக்கின்றனர். அவர்கள் சொன்னபடியே அஃது ஆகட்டும். எனவே, ஓ! மனிதர்களில் புலியே {அஸ்வத்தாமரே}, பாஞ்சாலர்களை, அவர்களைப் பின்தொடர்பவர்கள் அனைவருடன் சேர்த்துக் கொல்வீராக.(94)

வாசவனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களே கூட, உமது ஆயுதங்கள் செல்லும் தொலைவுக்குள் வந்தால் நிலைக்க முடியாது எனும்போது, பார்த்தர்களையும், பாஞ்சாலர்களையும் குறித்து என்ன சொல்வது? இந்த எனது வார்த்தைகள் அனைத்தும் உண்மையே.(95) ஓ! வீரரே {அஸ்வத்தாமரே}, சோமகர்களுடன் சேர்ந்திருக்கும் பாண்டவர்கள், போரில் உமக்கு ஈடாக மாட்டார்கள் என்று நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(96) செல்வீர், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, செல்வீராக. எந்தத் தாமதமும் வேண்டாம். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டுப் பிளந்து ஓடும் நமது படையைப் பாரும்.(97) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! கௌரவங்களை அளிப்பவரே {அஸ்வத்தாமரே}, தெய்வீக சக்தியின் துணையுடன் கூடிய நீர் பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் பீடிக்கத் தகுந்தவராவீர்” என்றான் {துரியோதனன்}.(98)

திருஷ்டத்யும்னனை வென்ற அஸ்வத்தாமன்! – துரோண பர்வம் பகுதி – 159-துரியோதனனுக்குப் பதிலுரைத்து நிந்தித்த அஸ்வத்தாமன்; பாஞ்சாலர்களை முறியடித்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனை எதிர்த்து விரைந்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனும், அஸ்வத்தாமனும் கடுமொழியில் பேசிக் கொள்வது; திருஷ்டத்யும்னனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த கடும் மோதல்; திருஷ்டத்யும்னனை வென்ற அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனிடம் இருந்து தப்பி ஓடிய பாஞ்சாலர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரியோதனனால் இப்படிச் சொல்லப்பட்டவனும், போரில் வீழ்த்த கடினமான போர்வீரனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தைத்தியர்களை அழிப்பதில் ஈடுபட்ட இந்திரனைப் போல எதிரியை அழிப்பதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(1) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அஸ்வத்தாமன் உமது மகனுக்குப் பதிலளிக்கும வகையில், “ஓ! குருவின் வழித்தோன்றலே {துரியோதனா}, இது நீ சொல்வதுபோலத்தான் இருக்கிறது.(2) எனக்கும், என் தந்தைக்கும் {துரோணருக்கும்} எப்போதும் பாண்டவர்கள் அன்புக்குரியவர்களே. அதே போல நாங்கள் இருவரும் அவர்களின் அன்புக்குரியவர்களே. எனினும் போரில் அவ்வாறு இல்லை.(3) எங்கள் உயிரைக் குறித்த கவலையில்லாமல் எங்கள் வலிமையின் அளவுக்கு நாங்கள் அச்சமற்ற வகையில் போரிடுகிறோம். என்னாலும், கர்ணன், சல்லியன், கிருபர், ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} ஆகியோராலும்,(4) ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பாண்டவர்ப்படையை அழித்துவிட முடியும். போரில் நாங்கள் இல்லையென்றால், ஓ! குருக்களில் சிறந்தவனே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, பாண்டவர்களாலும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் குரு படையை அழித்துவிட முடியும். நாங்கள் பாண்டவர்களுடன் எங்கள் சிறப்பான சக்தியைப் பயன்படுத்திப் போரிடுகிறோம், அதே போல அவர்களும், அவர்களுடையதில் சிறந்ததைப் பயன்படுத்தி எங்களோடு போரிடுகிறார்கள்.(5,6)

ஓ! பாரதா {துரியோதனா}, சக்தியோடு மோதும் சக்தி சமன்படுத்தப்படுகிறது {தணிவடைகிறது}. பாண்டு மகன்கள் உயிரோடுள்ள வரையும், பாண்டவப்படை வெல்லப்பட்ட இயலாததாகும்.(7) என்னால் உனக்குச் சொல்லப்படும் இஃது உண்மையானதாகும். பாண்டுவின் மகன்கள் பெரும் வலிமை படைத்தவர்களாவர். மேலும் அவர்கள் தங்களுக்காகப் போரிடுகின்றனர்.(8) ஓ! பாரதா {துரியோதனா}, {அப்படியிருக்கையில்}, ஏன் அவர்களால் உன் துருப்புகளைக் கொல்ல முடியாது. எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, நீ பேராசைமிக்கவனாக இருக்கிறாய். ஓ! கௌரவா {துரியோதனா}, நீ வஞ்சகனாகவும் இருக்கிறாய்.(9) வீணாகப் பிதற்றுபவனாகவும், அனைத்தையும் சந்தேகப்படுபவனாகவும் இருக்கிறாய். இதன் காரணமாகவே, நீ எங்களையும் சந்தேகிக்கிறாய். ஓ! மன்னா {துரியோதனா}, பாவம் நிறைந்த ஆன்மாவாகவும், பாவத்தின் வடிவமாகவும் நீ இருக்கிறாய் என்றே நான் நினைக்கிறேன்.(10) பாவம்நிறைந்த இழிந்த சிந்தனைகளைக் கொண்டிருப்பதாலேயே நீ எங்களையும், பிறரையும் சந்தேகிக்கிறாய். என்னைப் பொறுத்தவரை, உன் நிமித்தமாக உறுதியுடன் போரிடும் நான் என் உயிரையும் விடத் தயாராக இருக்கிறேன்.(11)

ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, நான் இப்போதும் உனக்காகவே போரிடச் செல்கிறேன். நான் எதிரியுடன் போரிட்டு, பெரும் எண்ணிக்கையிலான பகைவர்களைக் கொல்வேன்.(12) பாஞ்சாலர்கள், சோமகர்கள், கைகேயர்கள் ஆகியோருடனும், பாண்டவர்களுடனும், ஓ!எதிரிகளைத் தண்டிப்பவனே, உனக்கு ஏற்புடையதைச் செய்யவே நான் போரிடுவேன்.(13) இன்று என் கணைகளால் எரிக்கப்படும், சேதிகள், பாஞ்சாலர்கள், சோமகர்கள் ஆகியோர், சிங்கத்தால் பீடிக்கப்படும் பசுமந்தையைப் போல அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடுவர்.(14) இன்று, தர்மனின் அரச மகனும் {யுதிஷ்டிரனும்}, சோமகர்கள் அனைவரும் என் ஆற்றலைக் கண்டு, மொத்த உலகமும் அஸ்வத்தாமன்களால் நிறைந்திருப்பதாகக் கருதுவார்கள்.(15) தர்மனின் மகனான யுதிஷ்டிரன், போரில் (என்னால்) கொல்லப்படும் பாஞ்சாலர்களையும், சோமகர்களையும் கண்டு உற்சாகமற்றவனாக ஆவான்.(16) ஓ! பாரதா {துரியோதனா}, போரில் என்னை அணுகும் அனைவரையும் நான் கொல்வேன். ஓ! வீரா {துரியோதனா}, என் கரங்களின் வலிமையால் பீடிக்கப்படும் அவர்களில் எவரும் இன்று என்னிடம் இருந்து உயிருடன் தப்ப முடியாது” என்றான் {அஸ்வத்தாமன்}.(17)

உமது மகன் துரியோதனனிடம் இவ்வாறு சொன்ன அந்த வலிய கரத்தோன் {அஸ்வத்தாமன்} போரிடச் சென்று வில்லாளிகள் அனைவரையும் பீடித்தான்.(18) உயிர்வாழும் அனைவரிலும் முதன்மையான அவன் {அஸ்வத்தாமன்} உமது மகன்களுக்கு ஏற்புடையதைச் செய்ய இப்படியே முயன்றான். அப்போது, கௌதமர் மகளின் {கிருபியின்} மகன் {அஸ்வத்தாமன்}, பாஞ்சாலர்களிடமும், கைகேயர்களிடம்,(19) “வலிமைமிக்கத் தேர்வீரர்களே, அனைவரும் என் உடலைத் தாக்குங்கள். உங்கள் கரங்களின் நளினத்தை வெளிக்காட்டியபடி என்னுடன் உறுதியாகப் போரிடுங்கள்” என்று சொன்னான்.(20)

அவனால் {அஸ்வத்தாமனால்} இவ்வாறு சொல்லப்பட்ட போராளிகள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது ஆயுதமழையைப் பொழிந்தனர்.(21) அம்மழையைக் கலங்கடித்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, திருஷ்டத்யும்னனும், பாண்டுவின் மகன்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் போரில் துணிச்சல்மிக்க வீரர்களில் பத்து பேரை கொன்றான்.(22) அப்போது போரில் கொல்லப்பட்ட பாஞ்சாலர்களும், சோமகர்களும், துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} கைவிட்டு விட்டு அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(23) துணிச்சல்மிக்கப் போர்வீரர்களான பாஞ்சாலர்களும், சோமகர்களும் தப்பி ஓடுவதைக் கண்ட திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} எதிர்த்து விரைந்தான்.(24) மழைநிறைந்த மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான சக்கரச் சடசடப்பொலி கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான தேர்களில் ஏறிவந்தவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், புறமுதுகிடாதவர்களுமான தேர்வீரர்கள் நூறு பேர் சூழச் சென்ற பாஞ்சால மன்னன் மகனான வலிமைமிக்கத் தேர்வீரன் திருஷ்டத்யும்னன், தனது போர் வீரர்கள் கொல்லப்படுவதைக் கண்டு துரோணரின் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்}, இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(25,26) “ஆசானின் மூட மகனே [1], அற்பப் போராளிகளைக் கொல்வதில் யாது பயன்? நீர் வீரரென்றால், என்னோடு போரிடுவீராக.(27) நான் உம்மைக் கொல்வேன். தப்பி ஓடாமல் ஒரு கணம் காத்திருப்பீராக” என்றான்.

இதைச் சொன்னவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னன், பயங்கரமானவையும், கூரியவையும், முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்லவையுமான கணைகள் பலவற்றால் ஆசானின் மகனை {அஸ்வத்தாமனைத்} தாக்கினான். வேகமாகச் செல்லவல்லவையும் தங்கச் சிறகுகளையும், கூரிய முனைகளையும் கொண்டவையும், ஒவ்வொரு எதிரியின் உடலையும் துளைக்கவல்லவையுமான அந்தக் கணைகள், சுதந்திரமாக உலவும் வண்டுகள், தேனைத்தேடி மலர்ந்திருக்கும் மரத்திற்குள் நுழைவதைப் போல, தொடர்ந்த சரமாகச் சென்று அஸ்வத்தாமனின் உடலுக்குள் ஊடுருவின.(28-30) ஆழத்துளைக்கப்பட்டுச் சினத்தில் பெருகி, மிதிக்கப்பட்ட பாம்பைப் போலச் செருக்குடனும், அச்சமற்றும் கையில் வில்லுடன் சென்ற துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} தன் எதிரியிடம் {திருஷ்டத்யும்னனிடம்} (31), “ஓ! திருஷ்டத்யும்னா, என் முன்பிருந்து விலகாமல் ஒருக்கணம் காத்திருப்பாயாக. என் கூரிய கணைகளால் விரைவில் நான் உன்னை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவேன்” என்றான்.(32)

இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பகைவீரர்களை வெல்பவனுமான அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் பெரும் கரநளினத்தை வெளிப்படுத்தி, கணைகளின் மேகங்களால் அனைத்துப் பக்கங்களிலும் பிருஷதனின் மகனை {திருஷ்டத்யும்னனை} மறைத்தான்.(33) இப்படித் துரோணர் மகனால் {அஸ்வத்தாமனின்} (கணைகளால்) அம்மோதலில் மறைக்கப்பட்டவனும், போரில் வீழ்த்தக் கடினமானவனுமான பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, துரோணர் மகனிடம்,(34) “ஓ! பிராமணரே, நீர் என் பிறப்பையோ, என் சபதத்தையோ அறியவில்லை. ஓ! தீய புரிதல் கொண்டவரே, துரோணரை முதலில் கொன்ற பிறகு, நான் உம்மைக் கொல்கிறேன்.(35) துரோணர் இன்னும் உயிரோடு இருப்பதால் நான் இன்று உம்மைக் கொல்ல மாட்டேன். ஓ! தீய புரிதல் கொண்டவரே, இந்த இரவு கடந்து, பொழுது நன்றாக விடிந்ததும், முதலில் உமது தந்தையைப் போரில் கொன்று, பிறகு உம்மையும் ஆவிகளின் உலகத்திற்கு [2] அனுப்புவேன். இதையே நான் விரும்புகிறேன்.(36-37) எனவே, என் எதிரே அதுவரை நின்று பார்த்தர்கள் மீது நீர் கொண்டிருக்கும் வெறுப்பையும், குருக்களிடம் நீர் கொண்ட அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டிக் கொண்டிருப்பீராக. உம்மால் என்னிடம் இருந்து உயிரோடு தப்ப முடியாது(38) ஓ! மனிதர்களில் இழிந்தவரே, எந்தப் பிராமணன், பிராமண நடைமுறைகளைக் கைவிட்டு, க்ஷத்திரிய நடைமுறைகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறானோ, அவன் க்ஷத்திரியர்கள் அனைவராலும் கொல்லத்தகுந்தவன் ஆகிறான்” என்று சொல்லி முழங்கினான் {திருஷ்டத்யும்னன்}.(39)அவமதிக்கும் வகையில் இப்படிக் கடுமொழியில் பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} சொல்லப்பட்ட அந்தப் பிராமணர்களில் சிறந்தவன் (அஸ்வத்தாமன்) தன் சினமனைத்தையும் திரட்டிக் கொண்டு, “நில், நிற்பாயாக” என்று சொல்லித்(40) தன் கண்களாலேயே பிருஷதன் மகனை எரித்துவிடுபவனைப் போல அவனைப் {திருஷ்டத்யும்னனைப்} பார்த்தான். ஒரு பாம்பைப் போல (சீற்றத்துடன்) பெருமூச்சு விட்ட அந்த ஆசானின் மகன் {அஸ்வத்தாமன்}, அப்போது அந்தப் போரில் திருஷ்டத்யும்னனை (கணைமாரியால்) மறைத்தான்.(41) எனினும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், தேர்வீரர்களில் சிறந்தவனும், பாஞ்சாலத் துருப்புகள் அனைத்தாலும் சூழப்பட்டவனுமான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, அந்த மோதலில் துரோணரின் மகனுடைய கணைகளால் இப்படித் தாக்கப்பட்டாலும், தன் சக்தியைச் சார்ந்திருந்து நடுங்காதிருந்தான். பதிலுக்கு அவன் {திருஷ்டத்யும்னன்} பல கணைகளை அஸ்வத்தாமன் மீது ஏவினான்.(42,43) உயிரைப் பணயமாகக் கொண்ட அந்தச் சூதாட்டத்தில் {போரில்} ஈடுபட்ட அந்த வீரர்கள், ஒருவரையொருவர் பொருத்துக் கொள்ள முடியாமல், ஒருவரையொருவர் தடுத்துக் கொண்டு, கணைமாரிகளையும் தடுத்தனர்.(44) மேலும் அந்தப் பெரும் வில்லாளிகள், சுற்றிலும் அடர்த்தியான கணைமாரிகளைப் பொழிந்தனர்.

துரோணர் மற்றும் பிருஷதன் மகன்களுக்கிடையில் அச்சத்தைத் தூண்டும் வகையில் நடைபெற்ற அந்தக் கடும்போரைக் கண்ட சித்தர்கள், சாரணர்கள் மற்றும் வானுலாவும் உயிரினங்கள் ஆகியோர் அவர்களை உயர்வாகப் பாராட்டினர். ஆகாயத்தையும், திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் கணை மேகங்களால் நிறைத்து,(45,46) அடர்த்தியான இருளை உண்டாக்கிய அந்த வீரர்கள் இருவரும் (எங்களால் காணப்படாத நிலையிலேயே) ஒருவரோடொருவர் தொடர்ந்து போரிட்டனர். போரில் நர்த்தனம் செய்பவர்களைப் போலத் தங்கள் விற்களை வட்டமாக வளைத்துக் கொண்டு,(47) ஒருவரையொருவர் கொல்லும் உறுதியான ஆவலோடு இருந்த அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட போர்வீரர்கள், அனைவரின் இதயமும் அச்சங்கொள்ளும் வகையில், குறிப்பிடத்தகுந்த சுறுசுறுப்புடனும், திறனுடனும் அழகாகப் போரிட்டனர்.(48) அந்தப் போரில் ஆயிரக்கணக்கான முதன்மையான போர்வீரர்களால் பாராட்டப்பட்டுக் காட்டில் உள்ள இரு காட்டு யானைகளைப் போல இப்படி உறுதியாகப் போரிட்டுக் கொண்டிருந்த அவர்களைக் கண்ட படைகள் இரண்டும் மகிழ்ச்சியால் நிறைந்தன. சிங்க முழக்கங்கள் அங்கே கேட்கப்பட்டன, போராளிகள் அனைவரும் தங்கள் சங்குகளை முழக்கினர்.(49,50)

நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இசைக்கருவிகள் இசைக்கத் தொடங்கின. மருண்டோரின் அச்சங்களை அதிகரிக்கச் செய்யும் அந்தக் கடும் போரானது,(51) குறுகிய காலத்திற்கு மட்டுமே சமமாக இருந்ததைப் போலத் தெரிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்},  விரைந்து சென்று உயர் ஆன்மப் பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} வில், கொடிமரம், குடை, பார்ஷினி சாரதிகள், முதன்மைச் சாரதி மற்றும் குதிரைகள் நான்கையும் வெட்டினான்.(52,53) பிறகு அளவிலா ஆன்மாக் கொண்ட அந்தப் போர்வீரன் {அஸ்வத்தாமன்}, தன் நேரான கணைகளின் மூலம் பாஞ்சாலர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஓடச் செய்தான்.(54) போரில் வாசவனுக்கு ஒப்பான துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} சாதனைகளைக் கண்ட பாண்டவப் படையானது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அச்சத்தால் நடுங்கத் தொடங்கியது.(55)

துருபதன் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, பல்குனனும் {அர்ஜுனனும்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நூறு பாஞ்சாலர்களை நூறு கணைகளாலும், மூன்று முதன்மையான மனிதர்களை மூன்று கூரிய கணைகளால் கொன்றவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் எதிரில் இருந்த பெரும் எண்ணிக்கையிலான பாஞ்சாலர்களைக் கொன்றான்.(56,57) அப்போது போரில் இப்படிக் கொல்லப்பட்டவர்களான பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும், துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} கைவிட்டு விட்டுத் தங்கள் கிழிந்த கொடிகளுடன் தப்பி ஓடினர்.(58) அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, போரில் தன் எதிரிகளை வென்றுவிட்டு, கோடை காலத்தின் முடிவில் வரும் மேகத் திரள்களைப் போல உரக்க முழங்கினான்.(59) பெரும் எண்ணிக்கையிலான எதிர்களைக் கொன்றுவிட்டு, யுக முடிவின் போது, உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போல அஸ்வத்தாமன் பிரகாசமாகத் தெரிந்தான்.(60) போரில் ஆயிரக்கணக்கான எதிரிகளை வீழ்த்திய பிறகு கௌரவர்கள் அனைவராலும் பாராட்டப்பட்ட துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளை வென்ற தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போல அழகில் சுடர்விட்டெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.(61)

ஓடுபவர்களை அணிதிரட்ட முடியாத துரியோதனன்! – துரோண பர்வம் பகுதி – 160-அஸ்வத்தாமனுடன் மோதிய பாண்டவத் தலைவர்கள்; அஸ்வத்தாமனைக் காக்க துரியோதனனும், துரோணரும் விரைவது; இரு படைகளுக்கும் இடையில் நடைபெற்ற கடும்போர்; பின்வாங்கி ஓடிய தங்கள் துருப்புகளை ஒன்றுதிரட்டிய பீமனும் அர்ஜுனனும்; அர்ஜுனனுக்கு எதிரில் தப்பி ஓடிய கௌரவர்கள்; தங்கள் துருப்புகளைத் தடுக்க முடியாத துரியோதனனும் துரோணரும்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னன் யுதிஷ்டிரனும், பாண்டுவின் மகனான பீமசேனனும் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்தனர்.(1) இதைக் கண்ட மன்னன் துரியோதனன், பரத்வாஜர் மகனின் {துரோணரின்} துணையுடன் அம்மோதலில் பாண்டவர்களை எதிர்த்து விரைந்தான். அப்போது, கடுமையானதும், பயங்கரமானதும், மருண்டோரின் அச்சங்களை அதிகப்படுத்துவதுமான போரொன்று தொடங்கியது.(2) கோபத்துடன் கூடிய யுதிஷ்டிரன், பெரும் எண்ணிக்கையிலான அம்பஷ்டர்கள், மாலவர்கள், வங்கர்கள், சிபிக்கள் மற்றும் திரிகர்த்தர்களை இறந்தோரின் ஆட்சிப்பகுதிகளுக்கு அனுப்பத் தொடங்கினான். பீமனும், அபிஷாஹர்கள், சூரசேனர்கள், போரில் வீழ்த்தக் கடினமான மற்றும் பிற க்ஷத்திரியர்களைச் சிதைத்து, பூமியை இரத்தச் சகதியாக்கினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும் ஆனவன் (அர்ஜுனன்), யௌதேயர்கள், மலையகத்தார், மத்ரகர்கள் மற்றும் மாலவர்களையும் இறந்தோரின் உலகங்களுக்கு அனுப்பினான்.

வேகமாகச் செல்லக்கூடிய கணைகளால் பலமாகத் தாக்கப்பட்ட யானைகள், இரு சிகரங்களைக் கொண்ட மலைகளைப் போலப் பூமியில் கீழே விழத் தொடங்கின.(3-6) நடுக்கத்துடன் நகர்ந்து கொண்டேயிருந்த வெட்டப்பட்ட யானைகளின் துதிக்கைகளால் விரவிக்கிடந்த பூமியானது, நெளியும் பாம்புகளால் மறைக்கப்பட்டதைப் போல அழகாகத் தெரிந்தது.(7) தங்கத்தில் அலங்கரிக்கப்பட்டவையும், விழுந்து கிடந்தவையுமான மன்னர்களின் குடைகளால் மறைக்கப்பட்ட பூமியானது, சூரியன்கள், சந்திரன்கள், நட்சத்திரங்களால் மின்னிக்கொண்டிருக்கும் ஆகாயத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(8)

அதே நேரத்தில், துரோணரின் தேரருகே கடும் ஆரவாரம் எழுந்து, “கொல்வீராக”, “அச்சமற்றுத் தாக்குவீராக”, “துளைப்பீராக”, “துண்டுகளாக வெட்டுவீராக” என்ற இந்த வார்த்தைகள் கேட்கப்பட்டன. எனினும் சினத்தால் நிறைந்த துரோணர், வலிமைமிக்கச் சூறாவளியானது, திரண்டு வரும் மேகத்திரள்களை அழிப்பதைப் போலத் தம்மை நோக்கி வந்த எதிரிகளை, வாயவ்ய ஆயுதத்தின் மூலம் அழிக்கத் தொடங்கினார். இப்படித் துரோணரால் கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள், பீமசேனனும், உயர் ஆன்ம பார்த்தனும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அச்சத்தால் தப்பி ஓடினர்.(9-11)

அப்போது, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும் (அர்ஜுனனும்), பீமசேனனும், ஓடிக் கொண்டிருக்கும் தங்கள் துருப்புகளைத் தடுத்து, பெரும் தேர்ப்படையின் துணையுடன் துரோணரின் பரந்தப் படையைத் தாக்கினர்.(12) பீபத்சு {அர்ஜுனன்} வலதையும், விருகோதரன் {பீமன்} இடதையும் எனத் தாக்கிய அவர்கள் இருவரும் [1], பரத்வாஜரின் மகன் {துரோணர்} மீது இரு கணைமாரிகளைப் பொழிந்தனர்.(13) சிருஞ்சயர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோரில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், மத்ஸ்யர்களுடனும், சோமகர்களுடனும் கூடி, (துரோணருடனான மோதலில்) ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த இரு சகோதரர்களையும் பின்தொடர்ந்து சென்றனர். அதே போல, உமது மகனை {துரியோதனனைச்} சேர்ந்தவர்களும், தாக்குவதில் திறம்பெற்றவர்களும், தேர்வீரர்களில் முதன்மையானோருமான பலர், பெரும் படையின் துணையுடன், (துரோணரை ஆதரிப்பதற்காக) துரோணரின் தேரை நோக்கிச் சென்றனர்.(14,15)அப்போது, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) கொல்லப்பட்ட அந்தப் பாரதப் படையானது, உறக்கத்தால் வெல்லப்பட்டும், அந்த இருளால் பீடிக்கப்பட்டும் பிளக்கத் தொடங்கியது.(16) உமது மகன் {துரியோதனன்} மற்றும் துரோணர் ஆகிய இருவரும் அவர்களை அணிதிரட்ட பெருமுயற்சி செய்தனர்.(17) எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தத் துருப்புகள் ஓடுவதைத் தடுக்க முடியவில்லை. உண்மையில், அந்தப் பரந்த படையானது, பாண்டு மகனின் {அர்ஜுனனின்} கணைகளால் கொல்லப்பட்டு, உலகமே இருளில் மூழ்கியிருந்த அந்த நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடத் தொடங்கியது.(18) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விலங்குகளையும், தாங்கள் ஏறிச் சென்ற வாகனங்களையும் கைவிட்ட மன்னர்கள் பலர், அச்சத்தால் வெல்லப்பட்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.19

சோமதத்தனைக் கொன்ற சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 161-சோமதத்தனை நோக்கிச் சென்ற சாத்யகி, சாத்யகிக்கும், சோமதத்தனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்; சோமதத்தனைக் கொன்ற சாத்யகி; துரோணரைத் தாக்கிய யுதிஷ்டிரன்; துரோணருடன் யுதிஷ்டிரன் போரிடுவதைத் தடுத்த கிருஷ்ணன்; பீமசேனனின் அருகில் நிலைகொண்ட யுதிஷ்டிரன்..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சோமதத்தன் தன் பெரிய வில்லை அசைப்பதைக் கண்ட சாத்யகி, தன் சாரதியிடம், “சோமதத்தனை நோக்கி என்னைக் கொண்டு செல்வாயாக.(1) ஓ! சூதா, குருக்களில் இழிந்தவனும், பாஹ்லீகன் மகனுமான அந்த எதிரியை {சோமதத்தனைக்} கொல்லாமல் நான் இன்று போரில் இருந்து திரும்புவதில்லை என்று உனக்கு நான் உண்மையாகவே சொல்கிறேன்” என்றான்.(2) இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தேரோட்டி, சிந்து இனத்தில் பிறந்தவையும், சங்கு போன்ற வெண்ணிறம் கொண்டவையும், அனைத்து ஆயுதங்களையும் தாங்க வல்லவையும், வேகமானவையுமான அந்தக் குதிரைகளைப் போருக்குத் தூண்டினான்.(3) காற்று, அல்லது மனோ வேகம் கொண்ட அந்தக் குதிரைகள், பழங்காலத்தில் தானவர்களைக் கொல்வதற்காக இந்திரனைச் சுமந்து சென்ற பின்னவனின் {இந்திரனின்} குதிரைகளைப் போல அந்தப் போரில் யுயுதானனை {சாத்யகியைச்} சுமந்து சென்றன.(4)

அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, போரிடுவதற்காக வேகமாக முன்னேறி வருவதைக் கண்ட சோமதத்தன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சமில்லாமல் அவனை நோக்கித் திரும்பினான்.(5) மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமாரிகளை இறைத்த அவன் {சோமதத்தன்}, சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலச் சிநியின் பேரனை {சாத்யகியை} மறைத்தான்.(6) அம்மோதலில் சாத்யகியும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தக் குருக்களின் காளையை {சோமதத்தனை) கணைமாரிகளால் அச்சமில்லாமல் மறைத்தான்.(7) அப்போது சோமதத்தன், அறுபது {60} கணைகளால் அந்த மது குலத்து வீரனின் {சாத்யகியின்} மார்பைத் துளைத்தான். பதிலுக்குச் சாத்யகியும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூர் தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் சோமதத்தனைத் துளைத்தான்.(8) ஒருவரையொருவர் கணைகளால் துளைத்துக் கொண்ட அந்தப் போர்வீரர்கள் இருவரும், வசந்தகாலத்தில் மலர்ந்திருக்கும் இரு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(9)

{மேனி} எங்கும் இரத்தக் கறை படிந்திருந்தவர்களும், குரு மற்றும் விருஷ்ணி குலங்களைச் சேர்ந்த சிறப்புமிக்கவர்களுமான அவ்விரு போர்வீரர்களும், தங்கள் கண்பார்வைகளாலேயே கொன்றுவிடுபவர்களைப் போல ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(10) வட்டமாகச் சுழன்ற தங்கள் தேர்களில் இருந்தவர்களும், பயங்கர முகத்தோற்றங்களைக் கொண்டவர்களுமான அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவர்கள், மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகங்களுக்கு ஒப்பானவர்களாகவே தெரிந்தனர்.(11) தங்கள் உடல்கள் சிதைக்கப்பட்டு, {மேனி} எங்கும் கணைகளால் துளைக்கப்பட்டிருந்த அவர்கள் இரண்டு முள்ளம்பன்றிகளைப் போலத் தெரிந்தனர்.(12) தங்கச் சிறகுகளைக் கொண்ட எண்ணற்ற கணைகளால் துளைக்கப்பட்டிருந்த அந்தப் போர்வீரர்கள் இருவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விட்டிற்பூச்சிகளால் மறைக்கப்பட்ட இரு நெடிய மரங்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(13) அவர்களின் மேல் ஒட்டிக் கொண்டிருந்த சுடர்மிக்கக் கணைகளால் பிரகாசமாகத் தெரிந்த உடல்களுடன் கூடிய அவ்விரு வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அந்தப் போரில் எரியும் பந்தங்களால் அலங்கரிக்கப்பட்ட இரு கோபக்கார யானைகளை போலத் தெரிந்தனர்.(14)

அப்போது அந்தப் போரில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான சோமதத்தன், அர்த்தச்சந்திரக் கணையொன்றால், மாதவனின் {சாத்யகியின்} பெரிய வில்லை அறுத்தான்.(15) மிகத்தேவையான ஒன்றான வேகம் தேவைப்பட்ட அந்த நேரத்தில், பெரும் வேகத்துடன் கூடிய அந்தக் குருவீரன் {சோமதத்தன்}, இருபத்தைந்து கணைகளால் சாத்யகியைத் துளைத்து, மீண்டும் அவனைப் பத்தால் துளைத்தான்.(16) பிறகு சாத்யகி, மேலும் கடினமான ஒரு வில்லை எடுத்துக் கொண்டு, ஐந்து கணைகளால் சோமதத்தனை வேகமாகத் துளைத்தான்.(17) மேலும் ஒரு பல்லத்தை எடுத்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே பாஹ்லீகன் மகனின் {சோமதத்தனின்} தங்கக் கொடிமரத்தை அறுத்தான்.(18) சோமதத்தன் தன் கொடிமரம் வெட்டப்பட்டதைக் கண்டாலும், அச்சமில்லாமல் இருபது கணைகளால் அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியைத்} துளைத்தான்.(19) சாத்வதனும் {சாத்யகியும்} சினத்தால் தூண்டப்பட்டு, அம்மோதலில் க்ஷுரப்ரம் ஒன்றால் சோமதத்தனின் வில்லை அறுத்தான்.(20) மேலும் அவன் {சாத்யகி}, விஷப்பற்களற்ற பாம்பொன்றைப் போல அப்போதிருந்த சோமதத்தனைத் தங்கச் சிறகுகள் கொண்ட நேரான நூறு கணைகளாலும் துளைத்தான்.(21) பெரும்பலங்கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சோமதத்தன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, (கணைமாரியால்) சாத்யகியை மறைக்கத் தொடங்கினான்.(22) சினத்தால் தூண்டப்பட்ட சாத்யகியும், சோமதத்தனைப் பல கணைகளால் துளைதான். பதிலுக்குச் சோமதத்தன், தன் கணை மாரியால் சாத்யகியைப் பீடித்தான்.(23)

அப்போது மோதலுக்கு வந்து சாத்யகியின் சார்பாகப் போரிட்ட பீமன், பத்து கணைகளால் பாஹ்லீகன் மகனை {சோமதத்தனைத்} துளைத்தான். எனினும், சோமதத்தன், கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றால் அச்சமில்லாமல் பீமசேனனைத் தாக்கினான்.(24) பிறகு சினத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, இடியைப் போலக் கடினமானதும், தங்கக் கைப்பிடி கொண்டதும், பயங்கரமானதுமான புதிய பரிகம் ஒன்றை சோமதத்தனின் மார்பைக் குறிபார்த்து ஏவினான்.(25) எனினும் அந்தக் குருவீரன் {சோமதத்தன்}, தன்னை எதிர்த்து வேகமாக வரும் அந்தப் பயங்கரப் பரிகத்தைச் சிரித்துக் கொண்டே இரண்டு துண்டுகளாக வெட்டினான்.(26) இரும்பாலான உறுதிமிக்க அந்தப் பரிகமானது, இப்படி இரண்டாக வெட்டப்பட்டதும், இடியால் பிளக்கப்பட்ட மலையொன்றின் பெரிய சிகரத்தைப் போலக் கீழே விழுந்தது.(27)

அப்போது சாத்யகி, ஓ! மன்னா, அம்மோதலில் ஒரு பல்லத்தால், சோமதத்தனின் வில்லை அறுத்து, மேலும் அவனது விரல்களுக்கு அரணாக இருந்த தோலுறைகளையும் ஐந்து கணைகளால் அறுத்தான்.(28) பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேலும் நான்கு கணைகளால் அந்தக் குரு போர்வீரனின் {சோமதத்தனின்} நான்கு சிறந்த குதிரைகளை யமனின் முன்னிலைக்கு அனுப்பினான். (29) மேலும் அந்தத் தேர்வீரர்களில் புலியானவன் {சாத்யகி} சிரித்துக் கொண்டே மற்றொரு நேரான கணையால், சோமதத்தனுடைய சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து வெட்டினான்.(30) பிறகு அவன் {சாத்யகி}, நெருப்புபோன்ற பிரகாசம் கொண்டதும், கல்லில் கூராக்கப்பட்டதும், எண்ணெயில் முக்கப்பட்டதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதுமான ஒரு பயங்கரக் கணையைச் சோமதத்தன் மீது ஏவினான்.(31) சிநியின் பேரனால் {சாத்யகியால்} ஏவப்பட்ட அந்தச் சிறந்த கடுமையான கணை, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, சோமதத்தனின் மார்பின் மீது ஒரு பருந்தைப் போல வேகமாகப் பாய்ந்தது.(32) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கச் சாத்வதனால் {சாத்யகியால்} ஆழத் துளைக்கப்பட்ட அந்தப் பெரும் தேர்வீரன் சோமதத்தன்,  (தனது தேரில் இருந்து) கீழே விழுந்து இறந்தான்.(33) பெரும் தேர்வீரனான சோமதத்தன் அங்கே கொல்லப்பட்டதைக் கண்ட உமது போர்வீரர்கள், தேர்களின் பெருங்கூட்டத்துடன் யுயுதானனை எதிர்த்து விரைந்தனர்.(34)

அதே வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிரபத்ரகர்கள் அனைவருடனும், பெரும் படையுடனும் கூடிய பாண்டவர்களும், துரோணரின் படையை எதிர்த்து விரைந்தனர்.(35) அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட யுதிஷ்டிரன், பரத்வாஜர் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன் கணைகளால் பின்னவரின் {துரோணரின்} துருப்புகளைத் தாக்கவும், முறியடிக்கவும் தொடங்கினான்.(36) தமது துருப்புகளை இப்படிக் கலங்கடிக்கும் யுதிஷ்டிரனைக் கண்ட துரோணர், கோபத்தால் கண்கள் சிவந்து, அவனை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தார்.(37) பிறகு அந்த ஆசான் {துரோணர்} ஏழு கூரிய கணைகளால் பிருதையின் மகனை {யுதிஷ்டிரனைத்} துளைத்தார். கோபத்தால் தூண்டப்பட்ட யுதிஷ்டிரனும் பதிலுக்கு ஐந்து கணைகளால் ஆசானை {துரோணரைத்} துளைத்தான்.(38)

பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} ஆழத் துளைக்கப்பட்டவரான அந்த வலிமைமிக்க வில்லாளி (துரோணர்), ஒருக்கணம் தன் கடைவாயை நாவால் நனைத்தபடி, யுதிஷ்டிரனின் கொடிமரம் மற்றும் வில் ஆகிய இரண்டையும் வெட்டினார்.(39) பெரு வேகம் தேவைப்பட்ட அந்த நேரத்தில், வில்லறுபட்ட அந்த மன்னர்களில் சிறந்தவன் {யுதிஷ்டிரன்}, போதுமான அளவு உறுதியானதும், கடுமையானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(40) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓராயிரம் கணைகளால், துரோணரின் குதிரைகள், சாரதி, கொடிமரம், தேர் ஆகியவற்றுடன் சேர்த்து அவரையும் {துரோணரையும்} துளைத்தான். இவையாவும் மிக அற்புதமாகத் தெரிந்தன.(41) அந்தக் கணைகளின் தாக்குதல்களால் பெரும் வலியை உணர்ந்தவரும், பிராமணர்களில் காளையுமான அந்தத் துரோணர், கீழே தமது தேர்த்தட்டில் அமர்ந்தார்.(42) பிறகு தன் உணர்வுகள் மீண்டு, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டு, பெரும்சினத்தில் நிறைந்த அந்த ஆசான் {துரோணர்}, வாயவ்ய ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தார்.(43) பிருதையின் வீர மகன் {யுதிஷ்டிரன்}, கையில் வில்லுடன் அம்மோதலில் அச்சமில்லாமல், தான் கொண்டிருந்த அதே போன்ற ஆயுதத்தால் அவ்வாயுதத்தைக் கலங்கடித்தான்.(44) மேலும் அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பிராமணரின் {துரோணரின்} பெரிய வில்லை இரண்டு துண்டுகளாகவும் வெட்டினான். அப்போது க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான துரோணர் மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டார். (45) குரு குலத்தின் காளை (யுதிஷ்டிரன்), பல கூரிய கணைகளால் அந்த வில்லையும் அறுத்தான்.

அப்போது குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம் பேசிய வாசுதேவன் {கிருஷ்ணன்}(46),ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரரே நான் சொல்வதைக் கேளும். ஓ! பாரதர்களில் சிறந்தவரே, துரோணருடன் போரிடுவதை நிறுத்தும்.(47) துரோணர் உம்மைக் கைப்பற்றவே எப்போதும் முயன்று வருகிறார். நீர் அவருடன் போரிடுவது பொருந்தாது என்றே நான் நினைக்கிறேன்.(48) துரோணரின் அழிவுக்காக எவன் படைக்கப்பட்டானோ, அவனே அவரைக் கொல்வான் என்பதில் ஐயமில்லை. ஆசானை {துரோணரை} விட்டுவிட்டு, மன்னன் சுயோதனன் {துரியோதனன்} எங்கிருக்கிறானோ, அங்கே செல்வீராக.(49) மன்னர்கள் மன்னர்களுடனேயே போரிட வேண்டும், மன்னர்களல்லாத இது போன்றோருடன் அவர்கள் போரிட விரும்பக்கூடாது. எனவே, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, சிறு படையின் உதவியுடன் நானும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, மனிதர்களில் புலியான பீமனும் குருக்களுடன் எங்கே போரிட்டுக் கொண்டிருக்கிறோமோ, அங்கே யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவை சூழ வருவீராக” என்றான் {கிருஷ்ணன்}.(50,51)

வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஒருக்கணம் சிந்தித்து, அகல விரித்த வாய்களுடன் கூடிய யமனைப் போல உமது துருப்புகளைக் கொன்றபடி எதிரிகளைக் கொல்பவனான பீமன், எங்கே கடும்போரில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தானோ, அந்தப் போர்க்களப் பகுதிக்குச் சென்றான்.(52,53) கோடைகாலத்தின் முடிவில் முழங்கும் மேகங்களுக்கு ஒப்பாகத் தன் தேரின் சடசடப்பொலியால் பூமியை எதிரொலிக்கச் செய்தபடி சென்றவனும், பாண்டுவின் (மூத்த) மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், பீமனின் பக்கத்தில் நிலைகொண்டு, எதிரியைக் கொல்வதில் ஈடுபட்டான்.(54) துரோணரும், அந்த இரவில் தன் எதிரிகளான பாஞ்சாலர்களை எரிக்கத் தொடங்கினார்” {என்றான் சஞ்சயன்}.(55)

விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட படைகள்! – துரோண பர்வம் பகுதி – 162-படைகளின் உற்சாகமற்ற நிலை; தன் துருப்புகளிடம் விளக்குகளையும், பந்தங்களையும் எடுத்துக்கொள்ளச் சொன்ன துரியோதனன்; பாண்டவர்களின் படையும் விளக்குகளால் ஒளியூட்டப்படுவது; பிரகாசமான போர்க்களத்தின் வர்ணனை..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பூமியானது இருளாலும் புழுதியாலும் மறைக்கப்பட்டுக் கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},(1) களத்தில் நின்றிருந்த போராளிகளால் ஒருவரையொருவர் காண முடியவில்லை. அந்த க்ஷத்திரியர்களில் முதன்மையானோர், அனுமானத்தினாலும், (அவர்கள் சொன்ன), தனிப்பட்ட மற்ற பிற பெயர்களாலும் வழிநடத்தப்பட்டு ஒருவரோடொருவர் போரிட்டனர். தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரின் அந்தப் பயங்கரப் படுகொலை நடந்து கொண்டிருந்தபோது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரோணர், கர்ணன், கிருபர், பீமன், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, சாத்வதன் {சாத்யகி}(2,3) ஆகியோர் {தங்களுக்குள்} ஒருவரையொருவரையும், இருதரப்பின் துருப்புகளையும் பீடித்தனர்.

அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோரால் சுற்றிலும் கொல்லப்பட்ட இரு படைகளின் போராளிகளும்,(4) அந்த இரவு நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர். உண்மையில், முற்றிலும் உற்சாகமற்ற இதயங்களுடன் கூடிய அந்தப் போர்வீரர்கள், அணி பிளந்து அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(5) அப்படி அவர்கள் அனைத்துத் திசைகளிலும் ஓடிச் செல்லும்போதே பெரும் படுகொலைகளுக்கும் ஆட்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆயிரக்கணக்கான முதன்மையான தேர்வீரர்களும் அந்தப் போரில் ஒருவரையொருவர் கொன்றனர்.(6) இருளில் எதையும் காணமுடியாத போராளிகள் தங்கள் உணர்வுகளை இழந்தனர். இவையாவும் உமது மகனின் {துரியோதனனின்} தீய ஆலோசனைகளின் விளைவாகவே நடக்கின்றன. உண்மையில், உலகமே இருளில் மறைக்கப்பட்டிருந்த அந்நேரத்தில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, முதன்மையான தேர்வீரர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும், பீதியால் வெல்லப்பட்டு அந்தப் போரில் தங்கள் உணர்வுகளை இழந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(7)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அவ்விருளால் பீடிக்கப்பட்டும், பாண்டவர்களால் மூர்க்கமாகக் கலங்கடிக்கப்பட்டும், நீங்கள் {உங்கள்} சக்திகளை இழந்திருந்தபோது, உங்களது மனநிலைகள் எவ்வாறு இருந்தன?(8) ஓ! சஞ்சயா, அனைத்தும் இருளில் மூழ்கியிருந்தபோது, பாண்டவத் துருப்புகளும் என்னுடையவையும், மீண்டும் எவ்வாறு கண்களுக்குப் புலப்பட்டன?” என்று கேட்டான்.(9)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது (கௌரவர்களில்) கொல்லப்பட்டோரில் எஞ்சியோர், அவர்களது தலைவர்களின் உத்தரவுகளின் பேரில் மீண்டும் (கச்சிதமாக [அ] நெருக்கமாக) அணி வகுக்கப்பட்டனர்.(10) துரோணர், தம்மை முன்னணியிலும், சல்லியனைப் பின்புறத்திலும் நிலைநிறுத்தினார். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சுபலனின் மகன் சகுனி ஆகியோர் முறையே {அந்தப் படையின்} வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் தங்களை நிறுத்திக் கொண்டனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னன் துரியோதனன், அவ்விரவில் துருப்புகள் அனைத்தையும் பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டான்.(11)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காலாட்படை வீரர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்திய துரியோதனன், அவர்களிடம், “உங்கள் பெரும் ஆயுதங்களை ஒருபுறம் வைத்துவிட்டு, நீங்கள் அனைவரும் உங்கள் கைகளில் சுடர்மிக்க விளக்குகளை எடுத்துக் கொள்வீராக” என்றான்.(12) இப்படி அந்த மன்னர்களில் சிறந்தவனால் {துரியோதனனால்} உத்தரவிடப்பட்டதும், அந்தக் காலாட்படை வீரர்கள் எரியும் விளக்குகளை மகிழ்ச்சியாக ஏந்தினர். வானத்தில் நின்று கொண்டிருந்த தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், தெய்வீக முனிவர்கள், வித்யாதரர்கள் மற்றும் அப்சரசுகளின் பல்வேறு இனக்குழுக்கள்,(13) நாகர்கள், யக்ஷர்கள், உரகர்கள், கின்னரர்கள் ஆகியோரும் மகிழ்ச்சியால் நிறைந்து சுடர்மிக்க விளக்குகளை எடுத்துக் கொண்டனர்.

நறுமணமிக்க எண்ணெயால் நிரப்பப்பட்ட பல விளக்குகள், திசைகளின் புள்ளிகள் மற்றும் துணைப்புள்ளிகளின் பாதுகாவலர்களிடம் {லோகபாலர்களிடம்} இருந்து விழுவது தெரிந்தது.(14) துரியோதனனுக்காகக் குறிப்பாக நாரதர் மற்றும் பர்வதரிடம் இருந்து வரும் அத்தகு விளக்குகள் பல அந்த இருளை விலக்கி ஒளியேற்றுவதாகத் தெரிந்தது [1]. அப்போது நெருக்கமாக அணிவகுக்கப்பட்ட அந்த (கௌரவப்) படையானது, அவ்விரவில், அந்த விளக்குகளின் ஒளியாலும்,(15) (போராளிகளின் மேனியில் இருந்த) விலைமதிப்புமிக்க ஆபரணங்களாலும், ஏவப்படும், அல்லது வீசப்படும் சுடர்மிக்க தெய்வீக ஆயுதங்களாலும் மிகப் பிரகாசமாகத் தெரிந்தது. ஒவ்வொரு தேரின் மீதும் ஐந்து விளக்குகள் வைக்கப்பட்டன, மேலும் மதங்கொண்ட ஒவ்வொரு யானையின் மீதும் மூன்று வைக்கப்பட்டன.(16) ஒவ்வொரு குதிரையின் மீதும் ஒரு பெரிய விளக்கு வைக்கப்பட்டது. இப்படியே அந்தப் படையானது, குரு போர்வீரர்களால் ஒளியூட்டப்பட்டது. குறுகிய காலத்திற்குள் அதனதன் இடங்களில் வைக்கப்பட்ட அந்த விளக்குகள் உமது படைக்கு விரைவாக ஒளியூட்டின.(17)

தங்கள் கைகளில் எண்ணெய் விளக்குகளைக் கொண்ட காலாட்படை வீரர்களால் இப்படி ஒளியூட்டப்பட்ட துருப்புகள் அனைத்தும், இரவு வானில் மின்னல் கீற்றுகளால் ஒளியூட்டப்பட்ட மேகங்களைப் போல அழகாகத் தெரிந்தன.(18) அந்தக் குரு படையானது இப்படி ஒளியூட்டப்பட்ட போது, நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட துரோணர், சுற்றிலும் உள்ள அனைத்தையும் எரித்தபடி தமது தங்கக் கவசத்துடன், சுடர்மிக்கக் கதிர்களைக் கொண்ட நடுப்பகல் சூரியனைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தார்.(19) அவ்விளக்குகளின் ஒளியானது, தங்க ஆபரணங்கள், போராளிகளின் பிரகாசமான மார்புக் கவசங்கள், விற்கள், நன்கு கடினமாக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகியவற்றால் பிரதிபலிக்கப்பட்டது.(20) இழைகளால் கட்டப்பட்டிருந்த கதாயுதங்கள், பிரகாசமான பரிகங்கள், தேர்கள், கணைகள், ஈட்டிகள் ஆகியன செல்லும்போது தங்கள் பிரதிபலிப்பால் விளக்குகளின் கூட்டங்களை {பல மடங்காக} மீண்டும் மீண்டும் உண்டாக்கின.(21)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குடைகள், சாமரங்கள், கத்திகள், சுடர்மிக்கப் பந்தங்கள், தங்க ஆரங்கள் ஆகியன சுழற்றவோ, அசைக்கவோ படும்போது, அவ்வொளியைப் பிரதிபலித்து மிக அழகாகத் தெரிந்தன.(22) அவ்விளக்குகளின் ஒளியால் ஒளியூட்டப்பட்டும், ஆயுதங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றின் பிரதிபலிப்பால் ஒளிவீசிக் கொண்டும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் படையானது காந்தியுடன் சுடர்விட்டது.(23) நன்கு கடினமாக்கப்பட்டவையும், குருதியால் சிவப்பு நிறமடைந்தவையுமான அழகான ஆயுதங்கள், வீரர்களால் வீசப்படும்போது, கோடையின் முடிவில் வானத்தில் தோன்றும் மின்னலின் கீற்றுகளைப் போலச் சுடர்மிக்கப் பிரகாசத்தை உண்டாக்கின.(24) எதிரிகளைத் தாக்கி வீழ்த்துவதற்காக அவர்களை மூர்க்கமாகத் தொடர்ந்து சென்றவர்களும், அவசரமாக விரையும்போது நடுங்கியவர்களுமான போர்வீரர்களின் முகங்கள், காற்றால் தூண்டப்பட்ட மேகத் திரள்களைப் போல அழகாகத் தெரிந்தன.(25) மரங்கள் நிறைந்த காடொன்று தீப்பற்றி எரிகையில், காந்திமிக்கச் சூரியன் உக்கிரமடைவதைப் போல அந்தப் பயங்கர இரவானது கடுமையானதும், ஒளியூட்டப்பட்டதுமான அந்தப் படையால் பிரகாசமடைந்தது.(26)

நமது படை இவ்வாறு ஒளியூட்டப்பட்டதைக் கண்ட பார்த்தர்களும், தங்கள் படைமுழுவதும் உள்ள காலாட்படை வீரர்களை எழுச்சியுறச் செய்து, நம்மைப் போலவே வேகமாகச் செயல்பட்டனர்.(27) ஒவ்வொரு யானையிலும் அவர்கள் ஏழு விளக்குகளை வைத்தனர், ஒவ்வொரு தேரிலும் பத்தை {பத்து விளக்குகளை} வைத்தனர்; ஒவ்வொரு குதிரையின் முதுகிலும் அவர்கள் இரு விளக்குகளை வைத்தனர்; (தங்கள் தேர்களின்) பக்கங்களிலும், பின்புறத்திலும், மேலும் தங்கள் கொடிமரங்களிலும் அவர்கள் பல விளக்குகளை வைத்தனர்.(28) அவர்களது படையின் பக்கங்களிலும், பின்புறத்திலும், முன்புறத்திலும், சுற்றிலும், உள்ளேயும் எனப் பல விளக்குகள் ஒளியூட்டப்பட்டன. குருக்களும் இவ்வாறே செய்ததால், அந்தப் படைகள் இரண்டும் இப்படியே ஒளியூட்டப்பட்டன.(29) அந்தப் படை முழுவதும், யானைகள், தேர்கள் மற்றும் குதிரைப்படை ஆகியவற்றுடன் காலாட்படை கலந்தது. பாண்டு மகனின் படையானது, (காலாட்படை வீரர்களைத் தவிர) தங்கள் கைகளில் சுடர்மிக்கப் பந்தங்களுடன் நின்று கொண்டிருந்த பிறராலும் ஒளியூட்டப்பட்டது.(30) அந்தப் படையானது, நாளை உண்டாக்குபவனின் {சூரியனின்} கண்கவரும் கதிர்களால் ஒளியூட்டப்படுவதைப் போல அந்த விளக்குகளால் இரு மடங்கு ஒளியூட்டப்படு சுடர்மிக்க நெருப்பைப் போலக் கடுமையாகப் பிரகாசித்தது.(31)

அந்த இரு படைகளின் காந்தியும் பூமி, ஆகாயம் மற்றும் திசைப்புள்ளிகள் அனைத்திலும் பரவி பெருகுவதாகத் தெரிந்தது. அந்த ஒளியால் உமது படையும் அவர்களுடையதை {அவர்களது படையைப்} போலத் தனித்தன்மையுடன் காணப்பட்டது.(32) வானத்தை எட்டிய அந்த ஒளியால் விழிப்படைந்த தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், முனிவர்கள், (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் அனைவரும் அங்கே வந்தனர்.(33) அப்போது, தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், முனிவர்கள், (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், அப்சரஸ்கள், தேவலோகத்திற்குள் நுழையப்போகும் கொல்லப்பட்ட வீரர்களின் ஆவிகள் ஆகியோரால் நிறைந்த அந்தப் போர்க்களமானது இரண்டாவது சொர்க்கத்தைப் போலத் தெரிந்தது.(34) விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட தேர்கள், குதிரைகள், யானைகள், கோபக்காரப் போராளிகள், கொல்லப்பட்ட, அல்லது மூர்க்கமாகத் திரியும் குதிரைகள் நிறைந்ததும், அணிவகுக்கப்பட்ட போர்வீரர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றைக் கொண்டதுமான அந்தப் பரந்த படையானது, பழங்காலத்தில் அணிவகுக்கப்பட்ட தேவர்கள் மற்றும் அசுரர்களின் படையைப் போலவே இருந்தது.(35)

தேவர்களைப் போன்ற மனிதர்களுக்கு இடையில் நடந்ததும், சூறாவளியைப் [2] போன்றதுமான அந்த இரவு போரானது, விரையும் ஈட்டிகளைக் கடுங்காற்றாகவும், பெருந்தேர்களை மேகங்களாகவும், குதிரைகள் மற்றும் யானைகளின் கணைப்பொலிகள் மற்றும் பிளிறல்களை முழக்கங்களாகவும், கணைகளை மழையாகவும், போர்வீரர்கள் மற்றும் விலங்குகளின் குருதியையே வெள்ளமாகக் கொண்டிருந்தது.(36) அந்தப் போருக்கு மத்தியில், பிராமணர்களில் முதன்மையான அஸ்வத்தாமன், மழைக்காலத்தின் முடிவில் தன் கடுங்கதிர்களால் அனைத்தையும் எரிக்கும் நடுப்பகல் சூரியனுக்கு ஒப்பாகப் பாண்டவர்களை எரித்துக் கொண்டிருந்தான்” {என்றான் சஞ்சயன்} [3].(37)

துரியோதனனின் ஆணை! – துரோண பர்வம் பகுதி – 163-கௌரவப் படையை அழிக்கத் தொடங்கிய அர்ஜுனன்; திருதராஷ்டிரன் விசாரணை; துரோணரைப் பாதுகாக்கத் தன் தம்பிகளைப் பணித்துத் தன் வீரர்களுக்கு ஆணையிட்ட துரியோதனன்; பயங்கரப் போர் தொடங்கியது…

ஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இருளிலும், புழுதியிலும் மறைக்கப்பட்டிருந்த அந்தப் போர்க்களம் இப்படி ஒளியூட்டப்பட்ட போது, ஒருவரையொருவர் உயிரை எடுக்க விரும்பிய வீரமான போர்வீரர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர்.(1) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரோடொருவர் மோதிக் கொண்டவர்களும், வேல்கள், வாள்கள் மற்றும் பிற ஆயுதங்களைக் கொண்டவர்களுமான அந்தப் போராளிகள், சினத்தின் ஆளுகையால் ஒருவரையொருவர் {முறைத்துப்} பார்த்துக் கொண்டனர்.(2) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எங்கும் சுடர்விட்டுக் கொண்டிருந்த அந்த ஆயிரக்கணக்கான விளக்குகளுடனும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கக் கொடிமரங்களில் நிறுவப்பட்டவையும், நறுமணமிக்க எண்ணெய் ஊற்றப்பட்டவையுமான தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோரின் கண்கவரும் விளக்குகளுடனும் கூடிய அந்தப் போர்க்களமானது, நட்சத்திரங்களால் மினுமினுக்கும் ஆகாயத்தைப்போல இருந்தது.(3,4)

பூமியானது, நூற்றுக்கணக்கான சுடர்மிக்கப் பந்தங்களால் மிக அழகாகத் தெரிந்தது. உண்மையில், அண்ட அழிவின் போது ஏற்படும் காட்டுத்தீயுடன் கூடியதாகவே அந்தப் பூமி தெரிந்தது.(5) சுற்றிலும் இருந்த அந்த விளக்குகளால் திசைப்புள்ளிகள் அனைத்தும் சுடர்விட்டெரிந்து, மழைக்காலத்தின் மாலை வேளையில் விட்டிற்பூச்சிகளால் மறைக்கப்பட்ட மரங்களைப் போலத் தெரிந்தன.(6) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரப்போராளிகள் வீரப்பகைவர்களுடன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்தக் கடும் இரவில், உமது மகனின் {துரியோதனனின்} உத்தரவுக்கிணங்க யானைகள் யானைகளோடும், குதிரைவீரர்கள் குதிரைவீரர்களோடும், தேர்வீரர்கள் தேர்வீரர்களோடும் மகிழ்ச்சியால் நிறைந்து போரில் ஈடுபட்டனர்.(7,8) நால்வகைப் படைப்பிரிவுகளையும் கொண்டவையான அந்த இரண்டு படைகளுக்கும் இடையில் நடந்த மோதல் பயங்கரமடைந்தது. அப்போது அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் அனைவரையும் பலவீனமடையச் செய்தபடியே பெரும் வேகத்துடன் கௌரவப் படைப்பிரிவுகளை அழிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(9)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வெல்லப்பட இயலாதவனான அந்த அர்ஜுனன், கோபத்தால் தூண்டப்பட்டு, (குருக்களின் சாதனைகளைப்) பொறுத்துக் கொள்ள இயலாமல் என் மகனின் {துரியோதனனின்} படைக்குள் ஊடுருவியபோது, உங்கள் மனநிலைகள் எப்படி இருந்தன?(10) உண்மையில், அந்த எதிரிகளை அழிப்பவன் {அர்ஜுனன்} தங்களுக்கு மத்தியில் நுழைந்ததும், {என்} படைவீரர்கள் என்ன நினைத்தனர்? அப்போது பின்பற்றத் தகுந்த நடவடிக்கைகள் எனத் துரியோதனன் எவற்றை நினைத்தான்?(11) அந்த வீரனை {அர்ஜுனனை} எதிர்த்துப் போரிடச் சென்ற அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள் யாவர்? உண்மையில், வெண்குதிரைகளைக் கொண்ட அந்த அர்ஜுனன் (நமது படைக்குள்) நுழைந்த போது, துரோணரைப் பாதுகாத்தவர்கள் யாவர்?(12) துரோணரின் வலது சக்கரத்தையும், இடது சக்கரத்தையும் பாதுகாத்தவர்கள் யாவர்? போரிட்டுக் கொண்டிருந்த அந்த வீரரின் {துரோணரின்} பின்புறத்தைப் பாதுகாத்த வீரர்கள் யாவர்?(13)

உண்மையில் அந்தப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, (தன் பாதையில்) எதிரிகளைக் கொன்றபடி செல்கையில், அவருக்கு முன்னணியில் சென்றவர்கள் யாவர்? வலிமைமிக்கவரும், வெல்லப்படமுடியாத வில்லாளியும், பாஞ்சாலர்களுக்கு மத்தியில் ஊடுருவியவரும்,(14) மனிதர்களில் புலியும், பெரும் வீரம் கொண்டவரும், நர்த்தனம் செய்பவரைப் போலத் தன் தேரின் பாதையில் செல்பவரும், சீற்றமிக்கக் காட்டு நெருப்பைப் போலத் தன் கணைகளின் மூலம் பாஞ்சாலத் தேர்க்கூட்டங்களைப் பெருமளவில் எரித்தவருமான துரோணர்,(15) ஐயோ, தன் மரணத்தை எவ்வாறு சந்தித்தார்? நிதானமானவர்களாகவும், வெல்லப்படாதவர்களாகவும், உற்சாகம் நிறைந்தவர்களாகவும், போரில் வலிமையில் பெருகுபவர்களாகவும் என் எதிரிகளை நீ எப்போதும் சொல்லி வருகிறாய். எனினும், என்னுடையவர்களைக் குறித்து நீ அத்தகு வார்த்தைகளில் சொல்வதில்லை. மறுபுறம், கொல்லப்படுபவர்களாகவும், ஒளி இழந்தவர்களாகவும், முறியடிக்கப்பட்டவர்களாகவும் விவரித்து, எப்போதும் தாங்கள் போரிடும் போர்களில் என் தேர்வீரர்கள் தங்கள் தேர்களை இழப்பதாகச் சொல்கிறாய்” என்றான் {திருதராஷ்டிரன்}.(16,17)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “போரில் முனைப்போடிருந்த துரோணரின் விருப்பங்களைப் புரிந்து கொண்ட துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனக்குக் கீழ்ப்படியும் தம்பிகளான(18) விகர்ணன், சித்திரசேனன், [1] சுபார்சன், துத்தர்ஷமன், தீர்க்கபாகு ஆகியோரிடமும், அவர்களைப் பின் தொடர்ந்து வந்தோரிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(19) “பெரும் வீரமிக்கவர்களே, வீரர்களே, உறுதியான தீர்மானத்தோடு போராடும் நீங்கள் அனைவரும் துரோணரைப் பின்புறத்தில் இருந்து அவரைப் பாதுகாக்க வேண்டும். ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} அவரது வலது சக்கரத்தையும், சலன் அவரது இடதையும் பாதுகாப்பார்கள்” என்றான்.(20) இதைச் சொன்ன உமது மகன் {துரியோதனன்}, முன்னோக்கி நகர்ந்து, எஞ்சியிருந்தவர்களும், துணிவும், வலிமையும் மிக்கவர்களுமான திரிகர்த்த தேர்வீரர்களை முன்னணியில் நிறுத்தியபடி, அவர்களிடம்,(21) “ஆசான் {துரோணர்} கருணைநிறைந்தவராக இருக்கிறார். பாண்டவர்களோ உறுதிமிக்கப் பெரும் தீர்மானத்தோடு போரிடுகின்றனர். போரில் எதிரிகளைக் கொல்லும்போது, ஒன்றாகச் சேர்ந்து அவரை {துரோணரை} நன்கு பாதுகாப்பீராக.(22) துரோணர் போரில் வலிமைமிக்கவராகவும், பெரும் கரநளினமும், பெரும் வீரமும் கொண்டவராக இருக்கிறார். போரில் தேவர்களையே அவரால் வெல்ல முடியும் எனும்போது, பாண்டவர்களையும், சோமகர்களையும் குறித்து என்ன சொல்வது?(23)எனினும், ஒன்றாகச் சேரும் நீங்கள் அனைவரும், இந்தப் பயங்கரப் போரில் பெரும் தீர்மானத்துடன் போராடி, வெல்லப்பட முடியாத துரோணரை அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னனிடம் இருந்து பாதுகாப்பீராக.(24) போரில் துரோணரை வெல்ல பாண்டவப் போர்வீரர்கள் அனைவரிலும் திருஷ்டத்யும்னனைத் தவிர, வேறு எவனையும் நான் காணவில்லை.(25) எனவே, நாம் முழு ஆன்மாவோடு பரத்வாஜரின் மகனை {துரோணரைப்} பாதுகாக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். (நம்மால்) பாதுகாக்கப்படும் அவர், ஒருவர் பின் ஒருவராகச் சோமகர்களையும், சிருஞ்சயர்களையும் நிச்சயம் கொல்வார்.(26) (பாண்டவப்) படைக்குத் தலைமையில் நிற்கும் சிருஞ்சயர்கள் அனைவரும் கொல்லப்பட்டதும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, போரில் திருஷ்டத்யும்னனைக் கொல்வார் என்பதில் ஐயமில்லை.(27) அதே போலவே, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனும், போரில் அர்ஜுனனை வெல்வான். பீமசேனனையும், கவசம் தரித்த பிறரையும் பொறுத்தவரை, அவர்கள் அனைவரையும் போரில் நானே அடக்குவேன்.(28) சக்தியை இழப்பவர்களான பாண்டவர்களில் எஞ்சியோர், பிற போர்வீரர்களால் எளிதாக வீழ்த்தப்படுவார்கள். அதன்பிறகு என் வெற்றி எப்போதும் நீடித்திருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.(29) இந்தக் காரணங்களுக்காக, வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரைப் போரில் பாதுகாப்பீராக” என்றான் {துரியோதனன்}.

ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளைச் சொன்ன உமது மகன் துரியோதனன்,(30) பயங்கர இருளைக் கொண்ட அந்த இரவில் தன் துருப்புகளைப் போரிடத் தூண்டினான். ஓ! பாரதர்களின் தலைவரே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அப்போது, வெற்றி மீது கொண்ட விருப்பத்தால் இயக்கப்பட்ட அவ்விரு படைகளுக்கும் இடையில் ஒரு போர் தொடங்கியது.(31) பல்வேறு விதங்களிலான ஆயுதங்களால், அர்ஜுனன் கௌரவர்களையும், கௌரவர்கள் அர்ஜுனனையும் பீடிக்கத் தொடங்கினர். அந்தப் போரில் நேரான கணைகளின் மழையால், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} பாஞ்சாலர்களின் ஆட்சியாளனையும் {துருபதனையும்}, துரோணர் சிருஞ்சயர்களையும் மறைக்கத் தொடங்கினர். (ஒரு புறத்தில்) பாண்டு மற்றும் பாஞ்சாலத் துருப்புகளும், (மறுபுறத்தில்) கௌரவத் துருப்புகளும் போரில் ஒருவரையொருவர் கொன்ற போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தக் களத்தில் சீற்றமிக்க ஆரவாரம் எழுந்தது. அந்த இரவில் நடைபெற்ற போரானது பயங்கரமானதாகவும், எங்களாலோ, எங்களுக்கு முன் சென்றவர்களாலோ இதற்கு முன் காணப்படாத வகையில் கடுமையானதாகவும் இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(32-35)

யுதிஷ்டிரனை வென்ற கிருதவர்மன்! – துரோண பர்வம் பகுதி – 164-துரோணரை மட்டுமே எதிர்த்துச் செல்லுமாறு தன் படைவீரர்களுக்கு உத்தரவிட்ட யுதிஷ்டிரன்; அந்தப் போரில் யார் யாரை எதிர்த்தது என்று சஞ்சயன் வர்ணிப்பது; கிருதவர்மனுக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையில் நேர்ந்த மோதல்; யுதிஷ்டிரனை வென்ற கிருதவர்மன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கண்மூடித்தனமான படுகொலைகள் நிறைந்த அந்தப் பயங்கரமான இரவுப்போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் மற்றும் சோமகர்களிடம் தர்மனின் மகனான யுதிஷ்டிரன் பேசினான். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், தேர்கள் மற்றும் யானைகளை அழிப்பதற்காகத் தன் துருப்புகளுக்கு உத்தரவிட்ட யுதிஷ்டிரன், அவர்களிடம், “துரோணரைக் கொல்வதற்காக அவரை மட்டுமே எதிர்த்து  செல்வீராக” என்றான்.(1-3) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னனின் {யுதிஷ்டிரனின்} உத்தரவின் பேரில் பாஞ்சாலர்களும், சோமகர்களும், பயங்கரக் கூச்சலிட்டபடியே துரோணரை மட்டுமே எதிர்த்து விரைந்தனர்.(4) சினத்தால் தூண்டப்பட்ட நாங்கள், பதிலுக்கு முழங்கியவாறே, எங்கள் ஆற்றல், துணிவு, வலிமை ஆகியவற்றில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரில் அவர்களை எதிர்த்து விரைந்தோம்.(5)

ஹிருதிகனின் மகனான கிருதவர்மன், மதங்கொண்ட யானையை எதிர்த்து விரையும் மதங்கொண்ட பகை யானையைப் போலத் துரோணரை எதிர்த்துச் சென்று கொண்டிருந்த யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தான்.(6)

சுற்றிலும் கணைமாரியை இறைத்தபடி சென்று கொண்டிருந்த சிநியின் பேரனை {சாத்யகியை} எதிர்த்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் (எதிரிகளை) கலங்கடிக்கும் குரு போர்வீரனான பூரி விரைந்தான்.(7)

விகர்த்தனன் மகனான கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரை அடைய சென்று கொண்டிருந்தவனும், வலிமைமிக்கப் போர்வீரனும், பாண்டுவின் மகனுமான சகாதேவனைத் தடுத்தான்.(8)

அந்தப் போரில் மன்னன் துரியோதனன், யமனைப் போலத் தன் தேரில் சென்று கொண்டிருந்தவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான பீமசேனனை எதிர்த்துத் தானே விரைந்தான்.(9)

சுபலனின் மகனான சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து வகைப் போர்முறைகளையும் அறிந்தவனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான நகுலனை எதிர்த்து வேகமாகச் சென்றான்.(10)

சரத்வானின் மகனான கிருபர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்வீரர்களில் முதன்மையான சிகண்டி தன் தேரில் சென்று கொண்டிருந்த போது, அந்தப் போரில் பின்னவனை {சிகண்டியைத்} தடுத்தார்.(11)

தீவிரமாகப் போட்டியிடும் துச்சாசனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மயில்களைப் போலத் தெரிந்த குதிரைகளால் இழுக்கப்பட்டு, உறுதியான தீர்மானத்துடன் (தன் தேரில்) சென்று கொண்டிருந்த பிரதிவிந்தியனைத் தடுத்தான்.(12)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அஸ்வத்தாமன், நூற்றுக்கணக்கான மாயைகளை அறிந்தவனான ராட்சசன் (கடோத்கசன்) முன்னேறிவந்த போது, பின்னவனை {கடோத்கசனைத்} தடுத்தான்.(13)

விருஷசேனன், அந்தப் போரில் துரோணரைக் கைப்பற்றச் சென்ற துருபதனை, பின்னவனின் {துருபதனின்} துருப்புகள் மற்றும் அவனைப் பின்தொடர்பவர்களுடன் சேர்த்துத் தடுத்தான்.(14)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட மத்ர மன்னன் {சல்லியன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரைக் கொல்வதற்காக வேகமாகச் சென்ற விராடனைத் தடுத்தான்.(15)

அந்தப் போரில் சித்திரசேனன், துரோணரைக் கொல்வதற்காகச் சென்று கொண்டிருந்த நகுலன் மகனான சதானீகன் மீது பல கணைகளை ஏவியும், பெரும் பலத்தைப் பயன்படுத்தியும் பின்னவனை {சதானீகனைத்} தடுத்தான்.

(16) ராட்சசர்களின் இளவரசனான அலம்புசன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்களில் முதன்மையான அர்ஜுனன் முன்னேறிக் கொண்டிருந்த போது, பின்னவனை {அர்ஜுனனைத்} தடுத்தான்.(17)

பாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னன், பெரும் வில்லாளியான துரோணர் எதிரியைக் கொல்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பின்னவரை {துரோணரை} மகிழ்ச்சியாகத் தடுத்தான்.(18) பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களில் அப்படி (துரோணரை எதிர்த்துச்) சென்ற பிறரைப் பொறுத்தவரை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களை உமது படையின் பிற தேர்வீரர்கள் பெரும் பலத்துடன் தடுத்தனர்.(19)

அந்தப் பயங்கரப் போரில் யானைப்பாகர்களோடு {வீரர்களோடு} மோதிய {வேறு} யானைப் பாகர்கள், ஆயிரக்கணக்கில் போரிடத் தொடங்கி, ஒருவரையொருவர் கலங்கடித்தனர்.(20) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த நள்ளிரவில் குதிரைகள் ஒன்றையொன்று நோக்கி மூர்க்கமாக விரைந்தபோது, சிறகுகளைக் கொண்ட மலைகளைப் போலத் தெரிந்தன.(21) ஓ! ஏகாதிபதி (திருதராஷ்டிரரே}, வேல்கள், ஈட்டிகள், வாள்கள் ஆகியவற்றுடன் கூடிய குதிரைவீரர்கள் உரக்கக் கூச்சலிட்டபடியே {வேறு} குதிரைவீரர்களுடன் மோதினர்.(22) கதாயுதங்கள், குறுந்தண்டங்கள் {உலக்கைகள்} மற்றும் பல்வேறு வகைகளிலான பிற ஆயுதங்களோடு கூடிய பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் ஒருவரையொருவர் கொன்று குவித்தனர்.(23)

ஹிருதிகனின் மகனான கிருதவர்மன் கோபத்தால் தூண்டப்பட்டு, பொங்கும் கடலைத் தடுக்கும் கண்டங்களை {கரைகளைப்} போலத் தர்மனின் மகனான யுதிஷ்டிரனைத் தடுத்தான்.(24) எனினும் யுதிஷ்டிரன், ஐந்து கணைகளால் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனைத்} துளைத்து, மீண்டும் இருபதாலும் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்து, அவனிடம் {கிருதவர்மனிடம்}, “நில், நிற்பாயாக” என்றான்.(25) அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட கிருதவர்மன், ஒரு பல்லத்தைக் கொண்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் வில்லை அறுத்து பின்னவனை {யுதிஷ்டிரனை} ஏழு கணைகளால் துளைத்தான்(26) வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பத்து கணைகளால் ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} கரங்களையும், மார்பையும் துளைத்தான்.(27)

அப்போது மதுகுலத்தைச் சேர்ந்த அந்தப் போர்வீரன் {கிருதவர்மன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே} தர்மனின் மகனால் {யுதிஷ்டிரனால்} அந்தப் போரில் துளைக்கப்பட்டு, சினத்தால் நடுங்கியபடியே ஏழு கணைகளால் யுதிஷ்டிரனைப் பீடித்தான்.(28) பிறகு அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் யுதிஷ்டிரன்}, தன் எதிரியின் வில்லை அறுத்து, அவனது {கிருதவர்மனின்} கரங்களை மறைத்திருந்த தோலுறைகளயும் அறுத்து, கல்லில் கூராக்கப்பட்ட ஐந்து கூரிய கணைகளை அவன் {கிருதவர்மனின்} மீதும் ஏவினான்.(29) அந்தக் கடுங்கணைகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும் விலைமதிப்புமிக்கதுமான பின்னவனின் {கிருதவர்மனின்} கவசத்தைத் துளைத்துச் சென்று, எறும்புப்புற்றுக்குள் நுழையும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன.(30) கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மற்றொரு வில்லை எடுத்த கிருதவர்மன், பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} அறுபது {60} கணைகளாலும், மீண்டும் பத்தாலும் துளைத்தான்.(31) அளவிலா ஆன்மா கொண்ட பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தன் பெரிய வில்லைத் தேரில் வைத்துவிட்டு, பாம்புக்கு ஒப்பான ஈட்டி ஒன்றை கிருதவர்மனின் மீது ஏவினான்.(32) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், பாண்டு மகனால் {யுதிஷ்டிரனால்} ஏவப்பட்டதுமான அந்த ஈட்டி, கிருதவர்மனின் வலக்கரத்தைத் துளைத்துச் சென்று பூமிக்குள் நுழைந்தது.(33) அதே வேளையில், பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்} உறுதிமிக்கத் தனது வில்லை எடுத்துக் கொண்டு நேரான கணைகளின் மழையால் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனை} மறைத்தான்.(34)

அப்போது, விருஷ்ணிகளில் பெரும் தேர்வீரனும், துணிவுமிக்கவனுமான கிருதவர்மன் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் யுதிஷ்டிரனைக் குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும், தேரற்றவனாகவும் ஆக்கினான்.(35) அதன் பேரில் பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, ஒரு வாளையும், கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். அப்போது அந்த மதுகுலத்தோன் {கிருதவர்மன்}, அந்தப் போரில் அவ்விரு ஆயுதங்களையும் வெட்டினான்.(36) பிறகு யுதிஷ்டிரன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்ட ஒரு கடும் ஈட்டியை எடுத்து, அந்தப் போரில் சிறப்புமிக்க ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} மீது வேகமாக ஏவினான்.(37) எனினும், ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} சிரித்துக் கொண்டே தன் பெரும் கரநளினத்தை வெளிக்காட்டியபடி, யுதிஷ்டிரனின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட அந்த ஈட்டி தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த போதே அதை இரண்டு துண்டுகளாக வெட்டினான்.(38)

பிறகு அவன் {கிருதவர்மன்}, அம்மோதலில் ஒரு நூறு கணைகளால் தர்மனின் மகனை {யுதிஷ்டிரனை} மறைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {கிருதவர்மன்}, கணைமாரிகளைக் கொண்டு, பின்னவனின் {யுதிஷ்டிரனின்} கவசத்தை அறுத்தான்.(39) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யுதிஷ்டிரனின் கவசமானது, ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} கணைகளால் வெட்டப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்து விழும் ஒரு நட்சத்திரக் கூட்டத்தைப் போல, அவனது உடலில் இருந்து கீழே விழுந்தது.(40) கவசம் அறுபட்டு, தேரையும் இழந்து, கிருதவர்மனின் கணைகளாலும் பீடிக்கப்பட்டட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, போரில் இருந்து விரைவாகப் பின்வாங்கினான்.(41) வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், தர்மனின் மகனான யுதிஷ்டிரனை வென்ற பிறகு, மீண்டும் துரோணருடைய தேரின் சக்கரத்தைப் பாதுகாக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(42)

பீமனால் கொல்லப்பட்டதாக நம்பப்பட்ட துரியோதனன்! – துரோண பர்வம் பகுதி – 165-பூரியின் வில்லைச் சாத்யகியும், சாத்யகியின் வில்லைப் பூரியும் அறுத்தது; பூரியைக் கொன்ற சாத்யகி; சாத்யகியை எதிர்த்து விரைந்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனை எதிர்த்து விரைந்த கடோத்கசன்; கடோத்கசன் அஸ்வத்தாமனுக்கிடையில் நடந்த போர்; அஸ்வத்தாமனை மயக்கமடையச் செய்த கடோத்கசன்; உணர்வுகள் மீண்டு கடோத்கசனை மயக்கமடையச் செய்த அஸ்வத்தாமன்; பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையிலான மோதல்; பீமனின் விற்களை அடுத்தடுத்து வெட்டிய துரியோதனன்; பீமனால் கொல்லப்பட்டதாக நம்பப்பட்ட துரியோதனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பூரி என்பவன், நீர் நிறைந்த தடாகத்தை நோக்கி முன்னேறிச் செல்லும் யானையைப் போல முன்னேறியவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான சிநியின் பேரனை {சாத்யகியைத்} தடுத்தான்.(1) அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, ஐந்து கூரிய கணைகளால் தன் எதிரியின் {பூரியின்} மார்பைத் துளைத்தான். இதனால் பின்னவனுக்கு {பூரிக்கு} குருதி வழியத் தொடங்கியது.(2) அதே போல அம்மோதலில் அந்தக் குரு போர் வீரனும் {பூரியும்}, போரில் வீழ்த்தக் கடினமான வீரனான சிநியின் பேரனைப் பத்து கணைகளால் பெரும் வேகத்துடன் அவனது மார்பில் துளைத்தான்.(3) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் விற்களை முழு அளவுக்கு வளைத்த அந்த வீரர்கள், கோபத்தால் கண்கள் சிவந்து, அம்மோதலில் ஒருவரையொருவர் சிதைக்கத் தொடங்கினர்.(4) சினத்தால் தூண்டப்பட்ட அந்த இருவீரர்களின் கணைமாரிகள், யமனுக்கோ, கதிர்களை இறைக்கும் சூரியனுக்கோ ஒப்பாக மிகப் பயங்கரமாக இருந்தன.(5)

தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் மறைத்தபடியே அந்தப் போரில் அவ்விருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து நின்றனர். சிறிது நேரத்திற்கு அந்தப் போர் சமமாகவே நடந்தது. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட சிநியின் பேரன் {சாத்யகி}, சிரித்துக் கொண்டே சிறப்புமிக்க அந்தக் குரு வீரனின் {பூரியின்} வில்லை அந்தப் போரில் அறுத்தான்.(7) அவனது வில்லை அறுத்ததும், ஒன்பது கூரிய கணைகளால் அவனது {பூரியின்} மார்பைத் துளைத்த சாத்யகி, அவனிடம் {பூரியிடம்}, “நில், நிற்பாயாக” என்றான்.(8) வலிமைமிக்கத் தன் எதிரியால் {சாத்யகியால்} ஆழத் துளைக்கப்பட்ட அந்த எதிரிகளை எரிப்பவன் {பூரி}, விரைவாக மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு அந்தச் சாத்வத வீரனை {சாத்யகியைப்} பதிலுக்குத் துளைத்தான்.(9) மூன்று கணைகளால் சாத்வத வீரனைத் துளைத்த பூரி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே, கூரிய பல்லம் ஒன்றைக் கொண்டு தன் எதிரியின் {சாத்யகியின்} வில்லை அறுத்தான்.(10) தன் வில் அறுபட்டதும், சினத்தால் வெறிபிடித்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மூர்க்கமான ஈட்டியொன்றை பூரியின் அகலமான மார்பின் மீது வீசினான்.(11) அந்த ஈட்டியால் துளைக்கப்பட்ட பூரி, ஆகாயத்தில் இருந்து விழும் சூரியனைப் போலக் குருதியால் நனைந்தபடியே தன் சிறந்த தேரில் இருந்து கீழே விழுந்தான்.(12)

இப்படி அவன் {பூரி} கொல்லப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அஸ்வத்தாமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிநியின் பேரனை {சாத்யகியை} எதிர்த்து மூர்க்கத்துடன் விரைந்தான்.(13) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்யகியிடம் “நில், நிற்பாயாக” என்று சொன்ன அவன் {அஸ்வத்தாமன்}, மேருவின் மார்பில் {சாரலில்} மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல, கணை மாரிகளால் அவனை {சாத்யகியை} மறைத்தான்.(14) சிநியின் பேரனுடைய தேரை நோக்கி அவன் {அஸ்வத்தாமன்} விரைவதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கடோத்கசன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உரக்க முழங்கிய படியே அவனிடம் {அஸ்வத்தாமனிடம்}, “ஓ! துரோணரின் மகனே {அஸ்வத்தாமரே}, நிற்பீர், நிற்பீராக. என்னிடம் இருந்து நீர் உயிருடன் தப்ப இயலாது. (அசுரன்) மஹிஷனைக் கொன்ற ஆறுமுகத்தோனை (கார்த்திகேயனைப்) போல நான் இப்போது உம்மைக் கொல்வேன்.(16) போருக்கான ஆசைகள் அனைத்தையும் நான் இன்று உமது இதயத்தில் இருந்து அகற்றுவேன்” என்றான் {கடோத்கசன்}.

இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான அந்த ராட்சசன் (கடோத்கசன்), கோபத்தால் தாமிரமாகச் சிவந்த கண்களுடன்,(17) யானைகளின் இளவரசனை எதிர்த்து விரையும் சிங்கம் ஒன்றைப் போல, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} எதிர்த்துச் சீற்றத்துடன் விரைந்தான். கடோத்கசன், தன் எதிரியின் மீது ஒரு தேருடைய அக்ஷத்தின் {அச்சின்} அளவுடைய கணைகளை ஏவி,(18) அதைக் கொண்டு, மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் தேர்வீரர்களில் காளையான அவனை {அஸ்வத்தாமனை} மறைத்தான். எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அந்தக் கணைமழை தன்னை அடையும் முன்பே அந்தப் போரில், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற தன் கணைகளைக் கொண்டு அவற்றை விலக்கினான். பிறகு அவன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளைத் தண்டிப்பவனும், ராட்சசர்களின் இளவரசனுமான கடோத்கசனை, வேகமாகச் செல்பவையும் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் ஊடுருவ-வல்லவையுமான நூற்றுக்கணக்கான கூரிய கணைகளால் துளைத்தான். அஸ்வத்தாமனின் அந்தக் கணைகளால் இப்படித் துளைகப்பட்ட அந்த ராட்சசன் {கடோத்கசன்}, அந்தப் போர்க்களத்தில்,(19-21) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் உடலில் முட்கள் விறைத்திருந்த முள்ளம்பன்றியைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.

பிறகு, பீமசேனனின் வீரமகன் {கடோத்கசன்}, சினத்தால் நிறைந்து,(22) இடியின் முழக்கத்துடன் காற்றில் “விஸ்” எனச் செல்லும் கடுங்கணைகள் பலவற்றால் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைச்} சிதைத்தான். மேலும் அவன் {கடோத்கசன்}, கத்தி போன்ற தலை கொண்ட {க்ஷுரப்ரங்கள்} சிலவும், பிறை போன்ற தலை கொண்ட {அர்த்தச்சந்திர பாணங்கள்} சிலவும், நீளமாகவும், கூர்மையாகவும் {நாராசங்கள்} சிலவும், தவளை முகம் போன்ற தலை கொண்ட சிலவும், பன்றியின் காதுகளுக்கு ஒப்பான {வராஹகர்ணங்கள்} சிலவும், முள்கொண்ட {விகர்ணங்கள்} சிலவும், வேறு வகையைச் சேர்ந்த {நாளீகங்கள்} சிலவும் [1] எனப் பல்வேறு வகைகளிலான துல்லியமான கணை மாரிகளை அஸ்வத்தாமன் மீது பொழிந்தான். பெரும் மேகத் திரள்களை விலக்கும் காற்றைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் உணர்வுகள் கலங்காத துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கடுமையானவையும், தாங்கிக் கொள்ள முடியாதவையும், இடியின் முழக்கத்திற்கு ஒப்பான ஒலியைக் கொண்டவையும், தன் மீது தொடர்ச்சியாகப் பாய்ந்தவையுமான அந்த ஒப்பற்ற ஆயுதமழையை மந்திரங்களால் தெய்வீக ஆயுதங்களின் சக்திகளை ஈர்த்திருந்த தனது பயங்கரக் கணைகளால் அழித்தான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பயங்கரமானதும், போர்வீரர்களைப் பிரமிப்பில் நிரப்புவதுமான மற்றொரு மோதலொன்று (ஆயுதங்களே போராளிகளாக) ஆயுதங்களுக்கிடையில் ஆகாயத்தில் நடப்பதாகத் தெரிந்தது.(23-26) அவ்விரு போர்வீரர்களால் ஏவப்பட்ட ஆயுதங்களின் மோதலால் சுற்றிலும் உண்டான தீப்பொறிகளுடன்(27) கூடிய ஆகாயமானது, மாலைவேளையில் விட்டிற்பூச்சிகளின் கூட்டத்தால் ஒளியூட்டப்பட்டது போல அழகாகத் தெரிந்தது. அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, உமது மகன்களுக்கு ஏற்புடையதைச் செய்வதற்காகத் தன் கணைகளால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்து அந்த ராட்சசனை {கடோத்கசனை} மறைத்தான்.(28) அப்போது அடர்த்தியான இருள் கொண்ட அந்த இரவில், சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, பிரகலாதனுக்கும் இடையில் நடந்த மோதலுக்கு ஒப்பாகத் துரோணரின் மகனுக்கும் {அஸ்வத்தாமனுக்கும்}, அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் மீண்டும் ஒரு போர் தொடங்கியது.(29)

அப்போது, சினத்தால் நிறைந்த கடோத்கசன், அந்தப் போரில், யுக நெருப்புக்கு ஒப்பான பத்து கணைகளால் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} மார்பில் தாக்கினான். ராட்சசனால் {கடோத்கசனால்} ஆழத் துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்கத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, காற்றால் அசைக்கப்படும் நெடிய மரம் ஒன்றைப் போல அந்தப் போரில் நடுங்கத் தொடங்கினான். தன்னைத் தாங்கிக் கொள்வதற்காகக் கொடிக்கம்பத்தைப் பிடித்த அவன் {அஸ்வத்தாமன்} அப்படியே மயங்கிப் போனான்.(30-32) அப்போது உமது துருப்புகள் அனைத்தும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும் கதறின. உண்மையில், ஓ! ஏகாதிபதி, உமது போர்வீரர்கள் அனைவரும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} கொல்லப்பட்டதாகவே கருதினர்.(33) அஸ்வத்தாமனை அந்த அவல நிலையில் கண்ட பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும் அந்தப் போரில் உரத்த சிங்க முழக்கங்களைச் செய்தனர்.(34)

பிறகு, எதிரிகளை நொறுக்குபவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அஸ்வத்தாமன் தன் உணர்வுகள் மீண்டு, தன் இடது கையால் வில்லை வலிமையாக வளைத்து, தன் காது வரை வில்லின் நாணை இழுத்துக் கடோத்கசனைக் குறி பார்த்து, யமனுக்கு ஒப்பான பயங்கரக் கணை ஒன்றை விரைவாக ஏவினான்.(35,36) கடுமையானதும், நல்ல சிறகுகளைக் கொண்ட அந்தச் சிறந்த கணையானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} மார்பைத் துளைத்து கடந்து சென்று பூமிக்குள் நுழைந்தது.(37) போரில் தன் ஆற்றலில் செருக்குடைய துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} ஆழத் துளைக்கபட்டவனும், பெரும் பலத்தைக் கொண்டவனுமான அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்}, தன் தேர்த்தட்டில் கீழே அமர்ந்தான்.(38) ஹிடிம்பையின் மகன் தன் உணர்வுகளை இழந்ததைக் கண்டு அச்சமடைந்த அவனது {கடோத்கஜனது} தேரோட்டி, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} முன்னிலையில் இருந்து அவனை {கடோத்கசனை} சுமந்து சென்று, அவனைக் களத்தைவிட்டே விரைவாக அகற்றினான்.(39) இப்படி அந்த மோதலில் ராட்சசர்களின் இளவரசனான கடோத்கசனைத் துளைத்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} உரக்க முழங்கினான்.(40) உமது மகன்களாலும், உமது போர்வீரர்களாலும் வழிபடப்பட்ட அஸ்வத்தாமனின் உடலானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நடுப்பகல் சூரியனைப் போலச் சுடர்விட்டெரிந்தது.(41)

துரோணரின் தேர் முன்பு போரிட்டுக் கொண்டிருந்த பீமசேனனைப் பொறுத்தவரை, மன்னன் துரியோதனன், கூர் தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் தானே அவனைத் {பீமனைத்} துளைத்தான்.(42) எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமசேனன், அவனை {துரியோதனனைப்} ஒன்பது கணைகளால் பதிலுக்குத் துளைத்தான். பிறகு துரியோதனன், இருபத்தைந்து கணைகளால் பீமசேனனைத் துளைத்தான்.(43) அந்தப் போர்க்களத்தில் கணைகளால் ஒருவரையொருவர் மறைத்த அந்தப் போர்வீரர்கள் இருவரும், ஆகாயத்தில் மேகத்தால் மறைக்கப்பட்ட சூரியனையும், சந்திரனையும் போலத் தெரிந்தனர்.(44) அப்போது மன்னன் துரியோதனன், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சிறகுபடைத்த ஐந்து கணைகளால் பீமனைத் துளைத்து, “நில், நிற்பாயாக” என்றான்.(45) பிறகு பீமன், கூரிய கணைகளால் குரு மன்னனுடைய {துரியோதனனுடைய} வில்லையும், அவனது கொடிமரத்தையும் அறுத்து, மேலும் நேரான தொண்ணூறு கணைகளால் அவனையும் {துரியோதனனையும்} துளைத்தான்.(46)

அப்போது சினத்தால் நிறைந்த துரியோதனன், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, உறுதிமிக்க மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, போரின் முன்னணியில் நின்று கொண்டிருந்த பீமசேனனைக் கூர் தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் பீடித்தான். துரியோதனனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளைக் கலங்கடித்த பீமன், இருபத்தைந்து குறுங்கணைகளால் {க்ஷுத்ரகங்களால்} குருமன்னனை {துரியோதனனைத்} துளைத்தான்.(47,48) பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட துரியோதனன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கத்தி முகக் கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் பீமசேனனின் வில்லை அறுத்து, பத்து கணைகளால் பீமனைப் பதிலுக்குத் துளைத்தான். அப்போது மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட பீமசேனன், ஏழு கூரிய கணைகளால் மன்னனை வேகமாகத் துளைத்தான்.(49,50) பெரும் கரநளினத்தை வெளிக்காட்டிய துரியோதனன், அவனது அந்த வில்லையும் அறுத்தான்.(51) இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது எனப் பீமன் எடுத்த விற்களும் அதே போலவே வெட்டப்பட்டன. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெற்றியை விரும்பியவனும், தன் ஆற்றலில் செருக்குடையவனுமான உமது மகன் {துரியோதனன்}, பீமன் ஒரு வில்லை எடுத்ததுமே அதை வெட்டினான்.

தன் விற்கள் மீண்டும் மீண்டும் வெட்டப்படுவதைக் கண்ட பீமன், முழுக்க இரும்பாலானதும், வஜ்ரத்தைப் போன்ற கடினமானதுமான ஈட்டி ஒன்றை அந்தப் போரில் வீசினான்.(52,53) நெருப்பின் தழலைப் போலச் சுடர்விட்ட அந்த ஈட்டி, மிருத்யுவின் சகோதரிக்கு ஒப்பானதாக இருந்தது.(54) எனினும் அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, போர்வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பீமனின் கண்களுக்கு முன்பாகவே, பெண்ணின் குழலைப் பிரிக்கும் வகுட்டைப் போல நேரான கோடாக நெருப்பின் காந்தியுடன் தன்னை நோக்கி ஆகாயத்தினூடாக வந்து கொண்டிருந்த அந்த ஈட்டியை மூன்று துண்டுகளாக வெட்டினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது பீமன்,  கனமானதும், சுடர்விட்டெரிவதுமான கதாயுதம் ஒன்றைச் சுழற்றி, அதைத் துரியோதனனின் தேர் மீது பெரும் பலத்தோடு எறிந்தான். அந்தக் கனமான கதாயுதமானது, அம்மோதலில் உமது மகனின் குதிரைகள், சாரதி மற்றும் தேரையும் விரைவாக நொறுக்கியது. பிறகு உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமனிடம் அச்சங்கொண்டு, மிகக் குறுகலான இடத்தில் தன்னை ஒளித்துக் கொண்டு, சிறப்புமிக்க நந்தகனின் வேறொரு தேரில் ஏறிக் கொண்டான்.(55-58) அப்போது அந்த இருண்ட இரவுக்கு மத்தியில் சுயோதனன் {துரியோதனன்} கொல்லப்பட்டதாகக் கருதிய பீமன், கௌரவர்களை அறைகூவியழைத்து உரக்க சிங்க முழக்கம் செய்தான். 

உமது போர்வீரர்களும் மன்னன் {துரியோதனன்} கொல்லப்பட்டதாகவே கருதினர்.(59) அவர்கள் அனைவரும், “ஓ” என்றும், “ஐயோ” என்று உரக்கக் கதறினார். அச்சமடைந்த அந்தப் போர்வீரர்களின் ஓலங்களையும், உயர் ஆன்ம பீமனின் முழக்கங்களையும் கேட்ட மன்னன் யுதிஷ்டிரனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுயோதனன் கொல்லப்பட்டதாகவே கருதினான்.(61,62) மேலும் பாண்டுவின் அந்த மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, பிருதையின் மகனான விருகோதரன் {பீமன்} இருந்த இடத்திற்கு வேகமாக விரைந்து சென்றான். பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள், மத்ஸ்யர்கள், கைகேயர்கள், சேதிகள் ஆகியோரும் தங்கள் பலம் அனைத்தையும் {திரட்டிக்} கொண்டு, துரோணரைக் கொல்லும் விருப்பதால் வேகமாக முன்னேறினர்.(63) அங்கே துரோணருக்கும் எதிரிக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நடந்தது. இரு தரப்பின் போராளிகளும் அடர்த்தியான இருளில் மறைக்கப்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொன்றனர்” {என்றான் சஞ்சயன்}.(64)

சகாதேவனை வென்ற கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 166-சகாதேவனைத் தடுத்த கர்ணன்; கர்ணனுக்கும் சகாதேவனுக்கும் இடையில் நடந்த மோதல்; சகாதேவனைத் தன் வில்லால் தொட்ட கர்ணன்; சகாதேவனைப் பரிகசித்த கர்ணன்; தன் உயிர்மீது கொண்ட ஆசையைக் கைவிட்ட சகாதேவன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “விகர்த்தனன் மகனான கர்ணன் {வைகர்த்தனன்} [1], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரை அடையும் விருப்பத்தில் முன்னேறிக் கொண்டிருந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சகாதேவனைத் தடுத்தான்.(1) ராதையின் மகனை {கர்ணனை} ஒன்பது கணைகளால் துளைத்த சகாதேவன், மீண்டும் அந்தப் போர்வீரனை {கர்ணனை} ஒன்பது நேரான கணைகளால் துளைத்தான்.(2) பிறகு கர்ணன், ஒரு நூறு கணைகளால் சகாதேவனைப் பதிலுக்குத் துளைத்துத் தன் கர நளினத்தை வெளிக்காட்டியபடியே, நாண்பொருத்தப்பட்ட பின்னவனின் {சகாதேவனின்} வில்லை வெட்டினான்.(3) பிறகு மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட மாத்ரியின் வீர மகன் {சகாதேவன்}, கர்ணனை இருபது கணைகளால் துளைத்தான். அவனது {சகாதேவனின்} இந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(4)அப்போது கர்ணன், நேரான கணைகள் பலவற்றால், சகாதேவனின் குதிரைகளைக் கொன்று, ஒரு பல்லத்தால் பின்னவனின் {சகாதேவனின்} சாரதியையும் விரைவாக யமனுலகுக்கு அனுப்பினான்.(5) தேரற்றவனான சகாதேவன் ஒரு வாளையும், ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். சிரித்துக் கொண்டேயிருந்த கர்ணனால் அந்த ஆயுதங்களும் வெட்டப்பட்டன.(6) அப்போது வலிமைமிக்கச் சகாதேவன், அம்மோதலில், கனமானதும், பயங்கரமானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான கதாயுதம் ஒன்றை விகர்த்தனன் மகனின் {கர்ணனின்} தேரை நோக்கி வீசினான்.(7) பிறகு கர்ணன், தன்னை நோக்கி மூர்க்கமாக வந்து கொண்டிருந்ததும், சகாதேவனால் வீசப்பட்டதுமான அந்தக் கதாயுதத்தைத் தன் கணைகளால் விரைவாக வெட்டி, அதைப் பூமியில் விழச் செய்தான்.(8) தன் கதாயுதம் வெட்டப்படதைக் கண்ட சகாதேவன், கர்ணனின் மீது ஈட்டி ஒன்றை வீசினான். அந்த ஈட்டியும் கர்ணனால் வெட்டப்பட்டது.(9)

அப்போது தன் சிறந்த தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்த அந்த மாத்ரியின் மகன் {சகாதேவன்}, ஒரு தேர்ச்சக்கரத்தை எடுத்துத் தன் எதிரே இருந்த அதிரதன் மகன் {கர்ணன்} மீது வீசினான்.(10) எனினும், அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, உயர்த்தப்பட்ட காலச் சக்கரம் போலத் தன்னை நோக்கி வந்த அந்தச் சக்கரத்தைப் பல்லாயிரம் கணைகளால் வெட்டினான். அந்தச் சக்கரம் வெட்டப்பட்ட போது, கர்ணனைக் குறி பார்த்த சகாதேவன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தன் தேரின் அச்சு {ஏர்க்கால்}, தன் குதிரைகளின் கடிவாளங்கள், தேர்களின் நுகத்தடிகள் ஆகியவற்றையும், யானைகள், குதிரைகள் மற்றும் இறந்து கிடந்த மனித உடல்களின் அங்கங்கள் ஆகியவற்றையும் அவன் {கர்ணன்} மீது வீசினான்.(11,12) கர்ணன் அவையாவையும் தன் கணைகளால் வெட்டினான். ஆயுதங்கள் அனைத்தையும் தான் இழந்துவிட்டதைக் கண்ட மாத்ரியின் மகனான சகாதேவன், கணைகள் பலவற்றால் கர்ணனால் தாக்கப்பட்டுப் போரை விட்டகன்றான்.(13,14)

சிறிது நேரம் அவனை {சகாதேவனைப்} பின்தொடர்ந்த அந்த ராதையின் மகன் {கர்ணன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே},(15) சகாதேவனிடம் சிரித்துக் கொண்டே இந்தக் கொடூர வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! வீரா {சகாதேவா}, போர்க்களத்தில் உன்னைவிட மேம்பட்டவர்களுடன் போரிடாதே.(16) ஓ! மாத்ரியின் மகனே {சகாதேவா}, {உனக்கு} இணையானவர்களுடன் போரிடுவாயாக. என் வார்த்தைகளில் ஐயங்கொள்ளாதே” என்றான். பிறகு தன் வில்லின் நுனியால் அவனை {சகாதேவனைத்} தொட்ட அவன் {கர்ணன்}, மீண்டும் {சகாதேவனிடம்}(17) “அதோ அர்ஜுனன், போரில் உறுதியான தீர்மானத்தோடு குருக்களுடன் போரிடுகிறான். ஓ! மாத்ரியின் மகனே {சகாதேவா}, அங்கே செல்வாயாக, அல்லது நீ விரும்பினால் வீட்டுக்குத் திரும்புவாயாக” என்றான்.(18) அந்த வார்த்தைகளைச் சொன்னவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான கர்ணன், சிரித்துக் கொண்டே, பாஞ்சாலர்களின் மன்னனுடைய துருப்புகளை எதிர்த்துச் சென்றான்.(19)

வலிமைமிக்கத் தேர்வீரனும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனுமான அந்த எதிரிகளைக் கொல்பவன் {கர்ணன்}, மாத்ரியின் மகனை {சகாதேவனைக்} கொல்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தும், குந்தியின் வார்த்தைகளை நினைவில் கொண்டு அவனைக் {சகாதேவனைக்} கொல்லாமல் விட்டான்.(20) பிறகு இதயம் நொந்த சகாதேவன், கணைகளால் பீடிக்கப்பட்டும், கர்ணனின் வார்த்தைகளெனும் ஈட்டிகளால் துளைக்கப்பட்டும், தன் உயிரின் மீதான ஆசையைக் கைவிட்டான்.(21) பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சகாதேவன்}, பாஞ்சாலர்களின் சிறப்புமிக்க இளவரசனனான ஜனமேஜயனின் தேரில் வேகமாக ஏறிக் கொண்டான்” {என்றான் சஞ்சயன்}.(22)

விராடனை மயக்கமடையச் செய்த சல்லியன்! – துரோண பர்வம் பகுதி – 167-விராடனுடன் மோதிய சல்லியன்; சல்லியனால் தேரற்றவனாகச் செய்யப்பட்ட விராடன்; விராடனின் தம்பியான சதாநீகனைக் கொன்ற சல்லியன்; மீண்டும் சல்லியனை எதிர்த்து விரைந்த விராடன்; விராடனை மயக்கமடையச் செய்த சல்லியன்; அர்ஜுனனுக்கும் அலம்புசனுக்கும் இடையிலான மோதல்; அர்ஜுனனால் வெல்லப்பட்ட அலம்புசன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, துரோணரை அடைய வேகமாகச் சென்று கொண்டிருந்த விராடனையும், அவனது துருப்புகளையும் அனைத்துப் பக்கங்களிலும் கணைமேகங்களால் மறைத்தான்.(1) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வில்லாளிகளான அவ்விருவருக்கும் இடையில் நடைற்ற போரானது, பழங்காலத்தில் பலிக்கும் {மகாபலி}, வாசவனுக்கும் {இந்திரனுக்கு} இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக இருந்தது.(2) பெரும் சுறுசுறுப்புடைய மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, ஒரு பெரும்படையின் தலைவனான விராடனை நூறு{100} நேரான கணைகளால் தாக்கினான்.(3) பதிலுக்கு மன்னன் விராடன், ஒன்பது{9} கூரிய கணைகளால் மத்ர ஆட்சியாளனை {சல்லியனைத்} துளைத்து, மீண்டும் எழுபத்து மூன்றாலும் {73}, அதற்கு மேலும் ஒரு நூறாலும் {100} அவனைத் {சல்லியனைத்} துளைத்தான்.(4)

பிறகு, அந்த மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, விராடனின் தேரில் பூட்டப்பட்டிருந்த நான்கு குதிரைகளைக் கொன்று, பின்னவனின் {விராடனின்} குடையையும், கொடிமரத்தையும் இரண்டு கணைகளால் வெட்டி வீழ்த்தினான்.(5) அந்தக் குதிரைகளற்ற தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்த அந்த மன்னன் {விராடன்}, தன் வில்லை வளைத்துக் கூரிய கணைகளை ஏவியபடியே நின்றான்.(6) தன் அண்ணன் குதிரைகளை இழந்ததைக் கண்ட {விராடனின் தம்பியான} சதாநீகன், துருப்புகள் அனைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன் தேரில் ஏறிச் சென்று அவனை {சல்லியனை} விரைவாக அணுகினான்.(7) எனினும் மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, முன்னேறி வரும் சதாநீகனைப் பல கணைகளால் துளைத்து, அவனை {சதாநீகனை} யமனுலகுக்கு அனுப்பி வைத்தான்.(8)

வீரச் சதாநீகன் வீழ்ந்ததும், பெரும்படை ஒன்றின் தலைவனான அந்த விராடன், கொடிமரம் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், வீழ்ந்த வீரனுடையதுமான {சதாநீகனுடையதுமான} அந்தத் தேரில் ஏறிக் கொண்டான்.(9) தன் கண்களை அகல விரித்து, கோபத்தால் ஆற்றல் இரட்டிப்படைந்த விராடன், சிறகுகள் படைத்த கணைகளால் மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} தேரை வேகமாக மறைத்தான்.(10) அப்போது சினத்தால் தூண்டப்பட்ட மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, பெரும்படையொன்றின் தலைவனான விராடனை ஒரு நூறு நேரான கணைகளால் {அவனது} மார்பில் ஆழத் துளைத்தான்.(11) மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளனால் {சல்லியனால்} ஆழத்துளைக்கப்பட்டவனும், பெரும் தேர்வீரனுமான விராடன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தவாறே மயங்கிப் போனான்.(12) அம்மோதலில் கணைகளால் சிதைக்கப்பட்ட அவனைக் {விராடனைக்} கண்ட அவனது சாரதி {போர்க்களத்திற்கு} வெளியே கொண்டு சென்றான். பிறகு அந்தப் பரந்த படையானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போர்க்கள ரத்தினமான அந்தச் சல்லியனின் நூற்றுக்கணக்கான கணைகளால் கொல்லப்பட்டு அந்த இரவில் தப்பி ஓடின.(13)

துருப்புகள் ஓடிப்போவதைக் கண்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சல்லியன் இருந்த அந்த இடத்திற்கு வேகமாக வந்தனர்.(14) அப்போது ராட்சசர்களின் இளவரசனான அலம்புசன் [1], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எட்டுக் குதிரைகளுடன் கூடியதும், குதிரை முகங்களைக் கொண்ட பயங்கரத் தோற்றமுடைய பிசாசங்கள் பூட்டப்பட்டதும், இரத்தச் சிவப்பான கொடிகளைக் கொண்டதும், உருக்கால் ஆனதும், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், கரடித் தோலால் மறைக்கப்பட்டதும், புள்ளிகளுடன் கூடிய சிறகுகளையும், அகல விரித்த கண்களையும் கொண்டு, இடையறாமல் கூச்சலிட்ட பயங்கரமான, கடுந்தோற்றமுடைய கழுகு அமர்ந்திருந்த நெடிய கொடிமரத்தைக் கொண்டதுமான முதன்மையான தேரில் ஏறிக்கொண்டு, {சல்லியனை எதிர்த்து} முன்னேறி வரும் அந்த வீரர்களை {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} எதிர்த்துச் சென்றான்.(15-18) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கரிய மைக்குவியலைப் போலத் தெரிந்த அந்த ராட்சசன் {அலம்புசன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனின் தலைமீது கணைமாரிகளை இறைத்தபடி, சூறாவளியை எதிர்த்து நிற்கும் மேருவைப் போல, முன்னேறி வரும் அர்ஜுனனை எதிர்த்து நின்றான்.(19)அந்த ராட்சசனுக்கும் {அலம்புசனுக்கும்}, அந்த மனிதப் போர்வீரனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போரானது மிகக் கடுமையானதாக இருந்தது.(20) மேலும் அஃது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அங்கே இருந்த பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் நிரப்பியது. மேலும் அது, கழுகுகள், காக்கைகள், அண்டங்காக்கைகள், ஆந்தைகள் {கோட்டான்கள்}, கனகங்கள் {கங்கங்கள்}, நரிகள் ஆகியவற்றையும் மகிழ்ச்சியடையச் செய்தது.(21) அர்ஜுனன் ஆறு கணைகளால் அலம்புசனைத் தாக்கி, பத்து கூரிய கணைகளால் அவனது கொடிமரத்தை அறுத்தான்.(22) மேலும் வேறு சில கணைகளால் அவன் {அர்ஜுனன்}, அவனது சாரதியையும், வேறு சிலவற்றால் அவனது திரிவேணுவையும், மேலும் ஒன்றால் அவனது வில்லையும், வேறு நான்கால் அவனது நான்கு குதிரைகளையும் வெட்டி வீழ்த்தினான்.(23)

அலம்புசன் மற்றொரு வில்லில் நாண்பூட்டினாலும், அர்ஜுனன் அதையும் இரண்டு துண்டுகளாக வெட்டினான். அப்போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்}, நான்கு கூரிய கணைகளால் அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலம்புசனைத்} துளைத்தான். இப்படித் துளைக்கப்பட்ட அந்த ராட்சசன் {அலம்புசன்} அச்சத்தால் {அங்கிருந்து} தப்பி ஓடினான். அவனை வீழ்த்திய அர்ஜுனன், வேகமாகத் துரோணர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றபடியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் மீது பல கணைகளை ஏவினான்.(24,25) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிறப்புமிக்கப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட போராளிகள், சூறாவளியால் கீழே விழும் மரங்களைப் போலக் கீழே தரையில் விழுந்தனர்.(26) பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {அர்ஜுனனால்} இப்படிக் கொல்லப்பட்ட போது, அச்சமடைந்த மான் கூட்டத்தைப் போல அவர்கள் அனைவரும் {அங்கிருந்து} தப்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.(27)

துருபதனை மயக்கமடையச் செய்த விருஷசேனன்! – துரோண பர்வம் பகுதி – 168-சித்திரசேனனுக்கும், சதாநீகனுக்கும் இடையில் நடந்த மோதல்; சித்திரசேனனை வென்ற நகுலன் மகன் சதாநீகன்; கிருதவர்மனின் தேரில் தஞ்சமடைந்த சித்திரசேனன்; விருஷசேனனுக்கும், துருபதனுக்கும் இடையில் நடந்த மோதல்; துருபதனை மயக்கமடையச் செய்த விருஷசேனன்; பாஞ்சாலர்களுக்கு மத்தியில் பெரும் படுகொலைகளை நிகழ்த்திய விருஷசேனன்; துச்சாசனனால் வெல்லப்பட்ட பிரதிவிந்தியன், தன் சகோதரர்களால் காக்கப்படுவது; பிரதிவிந்தியனிடம் இருந்து துச்சாசனனை மீட்க விரைந்து வந்த கௌரவப் படையினர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது மகனான சித்திரசேனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படையைத் தன் கணைகளால் எரித்துக் கொண்டிருந்தவனான (நகுலன் மகன்) சதாநீகனைத் தடுத்தான்.(1) நகுலனின் மகன் {சதாநீகன்} ஐந்து கணைகளால் சித்திரசேனனைத் துளைத்தான். பின்னவன் {சித்திரசேனன்} கூர்த்தீட்டப்பட்ட பத்து கணைகளால் முன்னவனை {சதாநீகனைப்} பதிலுக்குத் துளைத்தான்.(2) மீண்டும் சித்தரசேனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில், ஒன்பது கூரிய கணைகளால் சதானீகனை மார்பில் துளைத்தான்.(3) பிறகு நகுலனின் மகன் {சதாநீகன்}, நேரான கணைகளால் பலவற்றால் சித்திரசேனனின் உடலில் இருந்து அவனது கவசத்தை அறுத்தான். அவனது இந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(4) தன் கவசத்தை இழந்த உமது மகன் {சித்திரசேனன்}, உரிய காலத்தில் சட்டையை உதிர்த்த பாம்பொன்றைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(5)

பிறகு அந்த நகுலனின் மகன் {சதாநீகன்}, அம்மோதலில் போராடிக் கொண்டிருந்த சித்திரசேனனின் கொடிமரத்தையும், அவனது வில்லையும் கூரிய கணைகள் பலவற்றால் வெட்டினான்.(6) அம்மோதலில் வில் அறுபட்டு, தன் கவசத்தையும் இழந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சித்திரசேனன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து எதிரிகளையும் துளைக்கவல்ல மற்றொரு வில்லை எடுத்தான்.(7) பிறகு பாரதர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சித்திரசேனன், நேரான கணைகள் பலவற்றால் நகுலனின் மகனை {சதாநீகனை} வேகமாகத் துளைத்தான்.(8) சினத்தால் தூண்டப்பட்டவனும், வலிமைமிக்கவனுமான சதாநீகன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சித்திரசேனனின் நான்கு குதிரைகளையும், பிறகு அவனது சாரதியையும் கொன்றான்.(9) பெரும் பலம் கொண்ட சிறப்புமிக்கச் சித்திரசேனன், அந்தத் தேரில் இருந்து கீழே குதித்து, இருபத்தைந்து கணைகளால் நகுலனின் மகனை {சதாநீகனைப்} பீடித்தான். பிறகு நகுலனின் மகன் {சதாநீகன்}, அம்மோதலில் இப்படித் தன்னைத் தாக்கிக் கொண்டிருந்த சித்திரசேனனின், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வில்லை அர்த்தச்சந்திரக் கணையொன்றால் வெட்டினான்.(11) வில்லற்று, தேரற்று, குதிரைகளற்று, சாரதியற்றுப் போன சித்திரசேனன் விரைவாக ஹிருதிகனின் சிறப்புமிக்க மகனுடைய {கிருதவர்மனின்} தேரில் ஏறிக் கொண்டான்.(12)

விருஷசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகளின் முன்னணியில் நின்று துரோணரை எதிர்த்துச் சென்ற வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதனை எதிர்த்து நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்தபடியே பெரும் வேகத்துடன் விரைந்தான்.(13) அம்மோதலில் யக்ஞசேனன் {துருபதன்}, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தக் கர்ணன் மகனுடைய {விருஷசேனனின்} கரங்களையும், மார்பையும் அறுபது கணைகளால் துளைத்தான்.(14) பிறகு சினத்தால் தூண்டப்பட்ட விருஷசேனன், தன் தேரில் நின்று கொண்டிருந்த யக்ஞசேனனின் {துருபதனின்} நடு மார்பைப் பல கணைகளால் துளைத்தான்.(15) அந்தக் கணைகளாலும், தங்கள் உடல்களில் ஒட்டிக் கொண்டிருந்த கணைகளாலும் சிதைக்கப்பட்ட அவ்விரு போர்வீரர்களும், முள்விறைத்த இரண்டு முள்ளம்பன்றிகளைப் போல மிக அழகாகத் தெரிந்தனர்.(16) கூரிய முனைகளையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட அந்த நேரான கணைகளால் உண்டான காயங்களின் விளைவால் குருதியில் குளித்த அவர்கள், அந்தப் பயங்கர மோதலில் மிக அழகாகவே தெரிந்தனர்.(17) உண்மையில் அவர்கள் வழங்கிய காட்சியானது, அழகும், பிரகாசமும் கொண்ட கல்ப மரங்கள் இரண்டைப் போன்றோ, மலர்க்கொத்துகளால் செழித்திருக்கும் கின்சுகங்கள் {பலாச மரங்கள்} இரண்டைப் போன்றோ இருந்தது.(18)

அப்போது விருஷசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஒன்பது கணைகளால் துருபதனைத் துளைத்து, மீண்டும் எழுபதாலும், பிறகு மேலும் மூன்று பிற கணைகளாலும் அவனை {துருபதனைத்} துளைத்தான்.(19) பிறகு ஆயிரக்கணக்கான கணைகளை ஏவிய அந்தக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மழைத்தாரைகளைப் பொழியும் மேகம் ஒன்றைப் போல அந்தப் போரில் மிக அழகாகத் தெரிந்தான். பிறகு சினத்தால் எரிந்த துருபதன், கூரியதும், நன்கு கடினமாக்கப்பட்டதுமான ஒரு பல்லத்தைக் கொண்டு விருஷசேனனின் வில்லை இரண்டு துண்டுகளாக வெட்டினான்.(21) பிறகு புதியதும், பலமானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான மற்றொரு வில்லை எடுத்து, பலமானதும், கூராக்கப்பட்டதும், நன்கு கடினமாக்கப்பட்டதும் கூரியதுமான ஒரு பல்லத்தைத் தன் அம்பறாத்தூணியில் இருந்து எடுத்து, அதைத் தன் நாணில் பொருத்திய அவன் {விருஷசேனன்}, துருபதனை நோக்கிக் கவனமாகக் குறிபார்த்து, சோமகர்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியபடி பெரும் சக்தியுடன் அதை {அந்த பல்லத்தை} விடுத்தான்.(22,23) துருபதனின் மார்பைத் துளைத்துக் கடந்த அந்தக் கணை {பல்லம்} பூமியின் பரப்பில் விழுந்தது. பிறகு அந்த (பாஞ்சாலர்களின்) மன்னன் {துருபதன்}, விருஷசேனனின் கணையால் இப்படித் துளைக்கப்பட்டு மயக்கமடைந்தான்.(24) தன் கடமையை நினைவு கூர்ந்த அவனது சாரதி, களத்தை விட்டு வெளியே அவனை {துருபதனைக்} கொண்டு சென்றான்.

பாஞ்சாலர்களின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {துருபதன்} பின்வாங்கியதும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கர இரவில் அந்த (கௌரவப்) படையானது, எதிரியின் கணைகளால் கவசங்கள் வெட்டப்பட்ட துருபதனின் துருப்புகளை எதிர்த்து மூர்க்கமாக விரைந்து சென்றது.(25,26) போராளிகள் அனைவராலும் சுற்றிலும் போடப்பட்ட சுடர்மிக்க நெருப்புகளின் விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மேகங்களற்று, கோள்கள் மற்றும் நட்சத்திரங்களால் மின்னிக்கொண்டிருந்த ஆகாயத்துடன் கூடிய அந்தப் பூமியானது மிக அழகாகத் தெரிந்தது.(27) போராளிகளிடம் இருந்து விழுந்த அங்கதங்களால் பூமியானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மின்னலின் கீற்றுகளுடன் கூடிய மழைக்காலத்து மேகத்திரள்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(28) கர்ணனின் மகன் {விருஷசேனன்} மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்கள், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த பெரும்போரில் இந்திரனைக் கண்ட தானவர்களைப் போல அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(29)

போரில் இப்படி விருஷசேனனால் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்களும், சோமகர்களும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு மிக அழகாகத் தெரிந்தனர்.(30) போரில் அவர்களை வென்ற கர்ணனின் மகன் {விருஷசேனன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நடுவானத்தை அடைந்த சூரியனைப் போல அழகாகத் தெரிந்தான்.(31) கிட்டத்தட்ட உமது தரப்பையும், அவர்களது தரப்பையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மன்னர்கள் அனைவருக்கு மத்தியில், ஒரே பிரகாசமான ஒளிக்கோளைப் போல வீர விருஷசேனன் தெரிந்தான்.(32)  ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரர்கள் பலரையும், சோமகர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் வீழ்த்திய அவன் {விருஷசேனன்}, மன்னன் யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்கு வேகமாக விரைந்தான்.(33)

உமது மகன் துச்சாசனன், போரில் தன் எதிரிகளை எரித்தபடியே (துரோணரை எதிர்த்து) முன்னேறிக் கொண்டிருந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான பிரதிவிந்தியனை எதிர்த்துச் சென்றான்.(34) அவர்களுக்கிடையில் நடைபெற்ற அம்மோதலானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மேகமற்ற ஆகாயத்தில் புதனுக்கும், வெள்ளிக்கும் இடையில் நடக்கும் மோதலைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(35) துச்சாசனன், போரில் கடுஞ்சாதனைகளைச் செய்துவந்த பிரதிவிந்தியனின் நெற்றியில் மூன்று கணைகளால் துளைத்தான்.(36) வலிமைமிக்க வில்லாளியான அந்த உமது மகனால் {துச்சாசனனால்} ஆழத் துளைக்கப்பட்ட பிரதிவிந்தியன், ஓ! ஏகாதிபதி, சிகரத்தைக் கொண்ட ஒரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான்.(37) பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான பிரதிவிந்தியன், மூன்று கணைகளால் துச்சாசனனைத் துளைத்து, மேலும் ஏழால் மீண்டும் அவனைத் துளைத்தான்.(38) அப்போது உமது மகனோ {துச்சாசனனோ}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கணைகள் பலவற்றால் பிரதிவிந்தியனின் குதிரைகளை வீழ்த்தியதால் மிகக் கடினமான சாதனை ஒன்றை அடைந்தான்.(39) மேலும் அவன் {துச்சாசனன்} ஒரு பல்லத்தைக் கொண்டு, பின்னவனின் {பிரதிவிந்தியனின்} சாரதியையும், பிறகு அவனது கொடிமரத்தையும் வீழ்த்தினான். பிறகு அவன் {துச்சாசனன்} வில் தாங்கிய பிரதிவிந்தியனின் தேரை ஆயிரம் துண்டுகளாக வெட்டினான்.(40) சினத்தால் தூண்டப்பட்ட உமது மகன் {துச்சாசனன்}, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, (தன் எதிராளியின் தேருடைய} கொடி, அம்பறாத்தூணிகள், நாண்கயிறுகள், கடிவாளங்கள் ஆகியவற்றைத் தன் நேரான கணைகளால் எண்ணற்ற துண்டுகளாக வெட்டினான்.(41)

தன் தேரை இழந்தவனும், நற்குணம் கொண்டவனுமான பிரதிவிந்தியன், கையில் வில்லுடன், எண்ணற்ற கணைகளை இறைத்தபடி, உமது மகனுடன் {துச்சாசனனுடன்} மோதினான்.(42) பிறகு தன் கரநளினத்தை வெளிக்காட்டிய துச்சாசனன், பிரதிவிந்தியனின் வில்லை அறுத்தான். மேலும் அவன் {துச்சாசனன்} வில்லற்ற தன் எதிராளியை {பிரதிவிந்தியனைப்} பத்து கணைகளால் பீடித்தான்.(43) தங்கள் அண்ணனின் (பிரதிவிந்தியனின்} அந்த அவல நிலையைக் கண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அவனது சகோதரர்கள் அனைவரும், ஒரு பெரும்படையுடன் அந்த இடத்திற்கு மூர்க்கமாக விரைந்தனர்.(44) பிறகு அவன் {பிரதிவிந்தியன்}, {பீமனின் மகனான} சுதசோமனின் பிரகாசமிக்கத் தேரில் ஏறினான். மேலும் அவன் {பிரதிவிந்தியன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு உமது மகனைத் துளைப்பதைத் தொடர்ந்தான்.(45) பிறகு உமது தரப்பைச் சேர்ந்த போர்வீரர்கள் பலர் ஒரு பெரும் படையின் துணையோடு மூர்க்கமாக விரைந்து உமது மகனை (அவனை மீட்பதற்காகச்} சூழ்ந்தனர். அப்போது, அந்த நடு இரவின் பயங்கர வேளையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, யம அரசின் மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில், உமது துருப்புகளுக்கும் அவர்களது துருப்புகளுக்கும் இடையில் கடும்போரொன்று தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(47)

சகுனியை மயக்கமடையச் செய்த நகுலன்! – துரோண பர்வம் பகுதி – 169-சகுனிக்கும் நகுலனுக்கும் இடையில் நடந்த மோதல்; மயக்கமடைந்த நகுலன்; நினைவு மீண்டு சகுனியின் வில்லை அறுத்த நகுலன்; நகுலனால் துளைக்கப்பட்டுக் கீழே விழுந்து மயக்கமடைந்த சகுனி; சிகண்டிக்கும் கிருபருக்கும் இடையில் நடந்த மோதல்; கிருபரின் வில்லை அறுத்த சிகண்டி; சிகண்டியை மயக்கமடையச் செய்த கிருபர்; சிகண்டிக்காகவும், கிருபருக்காகவும் திரண்ட போர்வீரர்களுக்கிடையில் நடந்த பயங்கரப் போர்; பயங்கரமான அந்த இரவு போரில் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளாமலே உறவினர்களைக் கொன்ற போர்வீரர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது படையைத் தாக்கிக் கொண்டிருந்த நகுலனை எதிர்த்து, கோபத்துடனும், பெரும் மூர்க்கத்துடனும் விரைந்து சென்ற சுபலனின் மகன் (சகுனி), அவனிடம் {நகுலனிடம்}, “நில், நிற்பாயாக” என்றான்.(1) ஒருவர் மேல் ஒருவர் சினங்கொண்டவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களுமான அவ்விரு வீரர்களும், தங்கள் விற்களை முழுமையாக வளைத்து, கணைகளை ஏவி, ஒருவரையொருவர் தாக்கினர்.(2) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுபலனின் மகன் {சகுனி}, கணைமாரி ஏவுவதில் நகுலன் வெளிப்படுத்திய அதே அளவு திறனை அம்மோதலில் வெளிப்படுத்தினான்.(3) அந்தப்போரில் கணைகளால் துளைத்துக் கொண்ட அவ்விருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்களது உடலில் முட்கள் விறைத்த இரு முள்ளம்பன்றிகளைப் போல அழகாகத் தெரிந்தனர்.(4)

நேரானமுனைகளையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட கணைகளால் கவசங்கள் வெட்டப்பட்டவர்களும், குருதியில் குளித்தவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும், அந்தப் பயங்கரப் போரில், அழகான, பிரகாசமான இரண்டு கல்ப மரங்களைப் போலவோ, அந்தப் போர்க்களத்தில் மலர்ந்திருக்கும் இரு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலவோ பிரகாசமாகத் தெரிந்தனர்.(5,6) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் கணைகளால் துளைத்த அவ்விரு வீரர்களும், முள் கொண்ட சால்மலி {இலவ} மரங்கள் இரண்டைப் போல அழகாகத் தெரிந்தனர்.(7) கண்கள் சினத்தால் விரிந்து, கடைக்கண் சிவந்து, ஒருவர் மேல் ஒருவர் சரிந்த பார்வைகளை வீசிய அவர்கள், அந்தப் பார்வையாலேயே ஒருவரையொருவர் எரிக்கப் போவதைப் போலத் தெரிந்தது.(8)

அப்போது உமது மைத்துனன் {சகுனி}, கோபத்தால் தூண்டப்பட்டு, சிரித்துக் கொண்டே, கூர்முனைகொண்ட முள்கணை {கர்ணி} ஒன்றால் மாத்ரியின் மகனுடைய {நகுலனின்} மார்பைத் துளைத்தான்.(9) பெரும் வில்லாளியான உமது மைத்துனனால் {சகுனியால்} ஆழத்துளைக்கப்பட்ட நகுலன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தபடியே மயங்கிப் போனான்.(10) செருக்குமிக்கத் தன் எதிரியின் {நகுலனின்} அந்த அவல நிலையைக் கண்ட சகுனி, கோடை முடிவின் மேகங்களைப் போல உரக்க முழங்கினான்.(11) சுயநினைவு மீண்டவனான பாண்டுவின் மகன் நகுலன், வாயை அகல விரித்த காலனைப் போலவே மீண்டும் சுபலனின் மகனை {சகுனியை} எதிர்த்து விரைந்தான்.(12) சினத்தால் எரிந்த அவன் {நகுலன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அறுபது {60} கணைகளால் சகுனியைத் துளைத்து, மீண்டும் ஒரு நூறு நீண்ட கணைகளால் {நாராசங்களால்} அவனை {சகுனியை} மார்பில் துளைத்தான்.(13) பிறகு அவன் {நகுலன்}, கணை பொருத்தப்பட்ட சகுனியின் வில்லைக் கைப்பிடியில் அறுத்து, இரண்டு துண்டுகளாக்கினான். கணப்பொழுதில் அவன் {நகுலன்}, சகுனியின் கொடிமரத்தையும் வெட்டி, அதைக் கீழே பூமியில் விழச் செய்தான்.(14)

பாண்டுவின் மகனான நகுலன், அடுத்ததாக, கூர்முனை கொண்டதும், நன்கு கடினமாக்கப்பட்டதுமான கணை ஒன்றால் சகுனியின் தொடையைத் துளைத்து, வேடன் ஒருவன், சிறகு படைத்த பருந்தொன்றை பூமியில் விழச் செய்வதைப் போல, அவனை {சகுனியை} அவனது தேரில் கீழே விழச் செய்தான்.(15) ஆழத்துளைக்கப்பட்ட சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காமவயப்பட்ட ஒரு மனிதன் {காமுகன் ஒருவன்} தன் தலைவியை {காமுகியைத்} தழுவிக் கொள்வதைப் போலக் கொடிக்கம்பத்தைத் தழுவி கொண்டு, தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(16) கீழே விழுந்து, சுயநினைவை இழந்த உமது மைத்துனனை {சகுனியைக்} கண்ட அவனது சாரதி, ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, விரைவாக அவனைப் போர் முகப்பை விட்டு வெளியே கொண்டு சென்றான்.(17) அப்போது, பார்த்தர்களும், அவர்களைப் பின்தொடர்பவர்கள் அனைவரும் உரக்க முழங்கினர்.(18) தன் எதிரிகளை வென்றவனும், எதிரிகளை எரிப்பவனுமான நகுலன், தன் சாரதியிடம், “துரோணரால் நடத்தப்படும் படைக்கு என்னைக் கொண்டு செல்வாயாக” என்று சொன்னான்.(19) மாத்ரி மகனின் {நகுலனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அவனது சாரதி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணர் இருந்த இடத்திற்குச் சென்றான்.(20)

துரோணரை நோக்கிச் சென்று கொண்டிருந்த வலிமைமிக்கச் சிகண்டியை எதிர்த்து, சரத்வானின் மகனான கிருபர், உறுதியான தீர்மானத்துடனும், பெரும் மூர்க்கத்துடனும் முன்னேறிச் சென்றார்.(21) எதிரிகளைத் தண்டிப்பவனான சிகண்டி, சிரித்துக் கொண்டே, துரோணரின் அருகாமையை நோக்கிச் செல்லும் தன்னை, இப்படி எதிர்த்து வரும் கௌதமர் மகனை {கிருபரை} ஒன்பது கணைகளால் துளைத்தான்.(22) உமது மகன்களுக்கு நன்மை செய்பவரான அந்த ஆசான் (கிருபர்), முதலில் சிகண்டியை ஐந்து கணைகளால் துளைத்து, மீண்டும் அவனை இருபதால் துளைத்தார்.(23) அவர்களுக்கிடையில் நடந்த அந்த மோதலானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் {அசுரன்} சம்பரனுக்கும், தேவர்கள் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த மோதலைப் போல மிகப் பயங்கரமாக இருந்தது.(24) வீரர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், போரில் வெல்லப்பட முடியாதவர்களுமான அவர்கள் இருவரும், கோடையின் முடிவில் ஆகாயத்தை மறைக்கும் மேகங்களைப் போலத் தங்கள் கணைகளால் ஆகாயத்தை மறைத்தனர்.(25) பயங்கரமான அந்த இரவு, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, போரிட்டுக் கொண்டிருந்த வீரப் போராளிகளால் மேலும் பயங்கரமடைந்தது.(26) உண்மையில், அனைத்து வகை அச்சங்களையும் தூண்டும் பயங்கரத்தன்மைகளைக் கொண்ட அந்த இரவு, (அனைத்து உயிரினங்களுக்குமான) மரண இரவாக {காலராத்திரி} ஆனது.

அப்போது சிகண்டி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்த்தச்சந்திரக் கணையொன்றால் கௌதமர் மகனின் {கிருபரின்} பெரிய வில்லை அறுத்து, கூர்த்தீட்டப்பட்ட கணைகளைப் பின்னவர் {கிருபரின்} மீது ஏவினான். கோபத்தால் எரிந்த கிருபர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்பட்டதும், கூர்முனையையும், தங்கக் கைப்பிடியையும் கொண்டதுமான கடுமையான ஓர் ஈட்டியைத் தன் எதிராளியின் {சிகண்டியின்} மீது ஏவினார். எனினும் சிகண்டி, தன்னை நோக்கி வந்த அதை {அந்த ஈட்டியை}, பத்து கணைகளால் வெட்டினான்.(27-29) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்த ஈட்டி (இப்படி வெட்டப்பட்டு) கீழே பூமியில் விழுந்தது. அப்போது மனிதர்களில் முதன்மையான கௌதமர் {கிருபர்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூர்த்தீட்டப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான கணைகளால் சிகண்டியை மறைத்தார்.(30) இப்படி அந்தப் போரில் கௌதமரின் சிறப்புமிக்க மகனால் {கிருபரால்} மறைக்கப்பட்டவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான சிகண்டி தன் தேர்தட்டில் பலவீனமடைந்தான்.(31) சரத்வானின் மகனான கிருபர் அவன் பலவீனமடைந்ததைக் கண்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனைக் {சிகண்டியைக்} கொல்லும் விருப்பத்தால் பல கணைகளால் அவனைத் துளைத்தார்.(32) (பிறகு சிகண்டி தன் சாரதியால் வெளியே கொண்டு செல்லப்பட்டான்). வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த யக்ஞசேனன் மகன் {துருபதன் மகனான சிகண்டி} போரில் பின்வாங்குவதைக் கண்ட பாஞ்சாலர்களும், சோமகர்களும் (அவனைக் காப்பதற்காக) அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(33) அதே போல உமது மகன்களும், பெரும்படையுடன் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரை (கிருபரைச்) சூழ்ந்து கொண்டனர்.(34) அப்போது ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட தேர்வீரர்களுக்கு இடையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} மீண்டும் ஒரு போர் தொடங்கியது.(35)

ஒருவரையொருவர் தாக்கி வீழ்த்தி விரைந்து செல்லும் குதிரைவீரர்கள், யானைகள் ஆகியவற்றின் காரணமாக எழுந்த ஆரவாரமானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மேகங்களின் முழக்கத்தைப் போலப் பேரொலி கொண்டதாக இருந்தது.(36) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களமானது மிகவும் கடுமையானதாகத் தெரிந்தது. விரைந்து சென்ற காலாட்படையின் நடையால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} அச்சத்தால் நடுங்கும் ஒரு பெண்ணைப் போலப் பூமியானவள் நடுங்கத் தொடங்கினாள்.(37) தேர்வீர்கள் தங்கள் தேர்களில் ஏறி மூர்க்கமாக விரைந்து, சிறகு படைத்த பூச்சிகளைப் பிடிக்கும் காக்கைகளைப் போல, ஆயிரக்கணக்கான எதிராளிகளைத் தாக்கினர்.(38) அதே போல, தங்கள் உடல்களில் மதநீர் வழிந்த யானைகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அதே போன்ற யானைகளைப் பின்தொடர்ந்து அவற்றோடு சீற்றத்துடன் மோதின. அதே போலவே, குதிரைவீரர்கள், குதிரைவீரர்களோடும், காலாட் படை வீரர்கள், காலாட்படை வீரர்களோடும் கோபத்துடன் அந்தப் போரில் மோதிக் கொண்டனர்.(39,40)

அந்த நள்ளிரவில், பின்வாங்குபவை, விரைபவை மற்றும் மீண்டும் மோதலுக்கு வருபவை ஆகிய துருப்புகளின் ஒலி செவிடாக்குவதாக இருந்தது. தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றில் வைக்கப்பட்ட சுடர்மிக்க விளக்குகளும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்து விழும் பெரிய விண்கற்களைப் போலத் தெரிந்தன.(41,42) ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட அந்த இரவானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் பகலைப் போலவே இருந்தது.(43) அடர்த்தியான இருளுடன் மோதி, அதை முற்றாக அழிக்கும் சூரியனைப் போலவே, அந்தப் போர்க்களத்தின் அடர்த்தியான இருளானது, அந்தச் சுடர்மிக்க விளக்குகளால் அழிக்கப்பட்டது.(44) உண்மையில், புழுதியாலும், இருளாலும் மறைக்கப்பட்டிருந்த ஆகாயம், பூமி, முக்கிய மற்றும் துணைத் திசைகள் ஆகியவை மீண்டும் அந்த வெளிச்சத்தால் ஒளியூட்டப்பட்டன.(45) ஆயுதங்கள், கவசங்கள், சிறப்புமிக்க வீரர்களின் ஆபரணங்கள் ஆகியவற்றின் ஒளி சுடர்மிக்க அந்த விளக்குகளின் மேலான வெளிச்சத்தில் மறைந்தது.

இரவில் அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போராளிகளில் எவராலும் தங்கள் தரப்பின் போர்வீரர்களையே அறிந்து கொள்ள முடியவில்லை.(46,47) ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அறியாமையால், தந்தை மகனையும், மகன் தந்தையையும், நண்பன் நண்பனையும் கொன்றனர்.(48) உறவினர்கள், உறவினர்களையும், தாய்மாமன்கள் தங்கள் சகோதரிகளின் மகன்களையும், போர்வீரர்கள் தங்கள் தரப்பின் போர்வீரர்களையும் கொன்றனர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளும் கூடத் தங்கள் ஆட்களையே கொன்றனர்.(49) அந்தப் பயங்கர இரவு மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் கருதிப்பாராமல் அனைவரும் சீற்றத்துடன் போரிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(50)

“நாம் அபிமன்யுவை கொன்றது போலவே…!” என்ற கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 170-துரோணரை எதிர்த்து விரைந்த திருஷ்டத்யும்னன்; தன் எதிரிகள் அனைவருடனும் போரிட்ட திருஷ்டத்யும்னன்; துருமசேனனைக் கொன்ற திருஷ்டத்யும்னன்; கர்ணனின் வில்லை அறுத்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைக் காக்க விரைந்த சாத்யகி; விருஷசேனனை மயக்கமடையச் செய்த சாத்யகி; அர்ஜுனனின் நாணொலியையும், தேரொலியையும் கேட்டுக் கலங்கிய கர்ணன்; திருஷ்டத்யும்னனையும், சாத்யகியையும் கொல்ல துரியோதனனுடன் சேர்ந்து ஆலோசித்த கர்ணன்; சாத்யகி மற்றும் திருஷ்டத்யும்னனை அர்ஜுனன் காக்க முடியாதபடி அவனை எதிர்த்துச் செல்லுமாறு சகுனியிடம் சொன்ன துரியோதனன்; பெரும்படையுடன் சாத்யகியைச் சூழ்ந்து கொண்ட கர்ணன் முதலானோர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன், துரோணரை எதிர்த்துச் சென்றான்.(1) தன் உறுதிமிக்க வில்லைப் பற்றிக் கொண்டு, மீண்டும் மீண்டும் நாண்கயிறை இழுத்த அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட துரோணரின் தேரை நோக்கி விரைந்தான்.(2) திருஷ்டத்யும்னன், துரோணரின் அழிவைச் சாதிக்கச் சென்று கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் அவனைச் {திருஷ்டத்யும்னனைச்} சூழ்ந்து கொண்டனர்.(3) ஆசான்களில் முதன்மையானவரான துரோணர் இப்படித் தாக்கப்பட்டதைக் கண்ட உமது மகன்கள், தீர்மானத்துடன் போரில் ஈடுபட்டு அனைத்துப் பக்கங்களில் இருந்தும் துரோணரைக் காத்தனர்.(4) பிறகு, அந்த இரவில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட கடலெனும் இரு துருப்புகளும், சூறாவளியால் மூர்க்கமாகத் தாக்கப்படுபவையும், மிகவும் கலங்கடிக்கப்படும் உயிரினங்களுடன் கூடியவையுமான பயங்கரமான இரண்டு கடல்களைப் போலத் தெரிந்தன.(5)

அப்போது அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஐந்து கணைகளால் துரோணரின் மார்பை விரைவாகத் துளைத்துச் சிங்க முழக்கம் செய்தான்.(6) எனினும் துரோணர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் இருபத்தைந்து கணைகளால் எதிரியைத் துளைத்து, மற்றொரு பல்லத்தால் அவனது {திருஷ்டத்யும்னனின்} பிரகாசமிக்க வில்லையும் அறுத்தார்.(7) துரோணரால் பலமாகத் துளைக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் வில்லை விரைவாக வைத்துவிட்டு, சினத்தால் தன் (கீழ்) உதட்டைக் கடித்தான்.(8) உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட அந்த வீரத் திருஷ்டத்யும்னன், துரோணரின் அழிவைச் சாதிக்க மற்றொரு உறுதிமிக்க வில்லை எடுத்துக் கொண்டான்.(9)

பகைவீரர்களைக் கொல்பவனும், பெருமழகுடன் கூடியவனுமான அந்தப் போர்வீரன் {திருஷ்டத்யும்னன்}, அந்த உறுதிமிக்க வில்லைத் தன் காதுவரை இழுத்து, துரோணரின் உயிரை எடுக்கவல்ல ஒரு பயங்கரக் கணையை ஏவினான்.(10) கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில் வலிமைமிக்க அந்த இளவரசனால் {திருஷ்டத்யும்னனால்} இப்படி ஏவப்பட்ட அந்தக் கணையானது, உதயச் சூரியனைப் போல மொத்தப்படைக்கும் ஒளியூட்டியது.(11) அந்தப் பயங்கரக் கணையைக் கண்ட தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, “துரோணருக்குச் செழிப்புண்டாகட்டும் {மங்கலம் உண்டாகட்டும்}” என்ற வார்த்தைகளைச் சொன்னார்கள்.(12) எனினும் கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கரத்தின் பெரும் நளினத்தை வெளிக்காட்டியபடி, ஆசானின் {துரோணரின்} தேரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தக் கணையைப் பனிரெண்டு துண்டுகளாக வெட்டினான்.(13) திருஷ்டத்யும்னனின் அந்தக் கணையானது, ஓ! மன்னா, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இப்படிப் பல துண்டுகளாக வெட்டப்பட்டு, நஞ்சற்ற பாம்பொன்றைப் போலப் பூமியில் வேகமாக விழுந்தது.(14)

அந்தப் போரில், நேரான தன் கணைகளால் திருஷ்டத்யும்னனின் கணைகளை வெட்டிய கர்ணன், பிறகு, கூரிய கணைகள் பலவற்றால் திருஷ்டத்யும்னனையும் துளைத்தான்.(15) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஐந்தாலும், துரோணர் ஐந்தாலும், சல்லியன் ஒன்பதாலும், துச்சாசனன் மூன்றாலும் அவனை {திருஷ்டத்யும்னனைத்} துளைத்தனர்.(16) துரியோதனன் இருபது கணைகளாலும், சகுனி ஐந்தாலும் அவனை {திருதஷ்டத்யும்னனைத்} துளைத்தனர். உண்மையில் வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரும், அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனை} வேகமாகத் துளைத்தனர்.(17) இப்படியே அவன் {திருஷ்டத்யும்னன்}, துரோணரைக் காக்க முயன்ற அந்த ஏழுவீரர்களாலும் அந்தப் போரில் துளைக்கப்பட்டான். எனினும் அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, அந்த வீரர்கள் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்தான்.(18) உண்மையில் திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரப் போரில் துரோணர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் உமது மகன் {துரியோதனன்} ஆகியோரை வேகமாகத் துளைத்தான்.(19) அந்த வில்லாளியால் {திருஷ்டத்யும்னனால்} இப்படித் துளைக்கப்பட்ட அந்தப் போர்வீரர்கள், ஒன்றாகச் சேர்ந்து போரிட்டு, உரக்க முழங்கியபடியே மீண்டும் அம்மோதலில் திருஷ்டத்யும்னனைத் துளைத்தனர்.(20)

அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட துருமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறகு படைத்த கணை ஒன்றால் அந்தப் பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனைத்} துளைத்து, மேலும் மூன்று பிற கணைகளால் மீண்டும் அவனைத் துளைத்தான்.(21) அந்த இளவரசனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} பேசிய அவன் {துருமசேனன்}, “நில், நிற்பாயாக” என்றான். பிறகு திருஷ்டத்யும்னன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எண்ணெயில் நனைக்கப்பட்டவையும், ஏவப்படுபவரின் உயிரையே எடுக்கவல்லவையுமான மூன்று நேரான கணைகளால் அம்மோதலில் துருமசேனனைப் பதிலுக்குத் துளைத்தான்.(22)  பிறகு அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, பிரகாசமான தங்க குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட துருமசேனனின் தலையை மற்றொரு பல்லத்தால் பின்னவனின் {துருமசேனனின்} உடலில் இருந்து வெட்டினான்.(23) (சினத்தால்) (கீழ்) உதடு கடிக்கப்பட்ட நிலையில் இருந்த அந்தத் தலையானது, பலமான காற்றின் செயல்பாட்டால், குலையில் இருந்து உதிர்ந்து விழும் பழுத்த பனம்பழத்தைப் போலத் தரையில் விழுந்தது.(24)

மீண்டும் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் கூரிய கணைகளால் துளைத்த அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்}, போர் முறைகள் அனைத்தையும் அறிந்த போர்வீரனான ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} வில்லைச் சில பல்லங்களால் அறுத்தான்.(25) கடுஞ்சிங்கம் ஒன்று தன் வால் அறுபட்டத்தைப் பொறுத்துக் கொள்ளாததைப் போல, கர்ணனால் தன் வில் அறுபட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(26) மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட கர்ணன், சினத்தால் கண்கள் சிவந்து, பெருமூச்சு விட்டுக் கொண்டு, வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னனைக் கணை மேகங்களால் மறைத்தான்.(27) சினத்தால் தூண்டப்பட்ட கர்ணனைக் கண்டவர்களும், தேர்வீரர்களில் காளையருமான அந்த ஆறு வீரர்கள், பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனைக்} கொல்லும் விருப்பத்தால் விரைவாக அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(28) உமது தரப்பின் முதன்மையான ஆறு தேர்வீரர்களுக்கு முன்பு நிற்கும் பின்னவனை {திருஷ்டத்யும்னனைக்} கண்ட துருப்புகள் அனைத்தும், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அவன் காலனின் கோரப் பற்களுக்கிடையில் விழுந்துவிட்டதாகவே கருதினர்.(29)

அதே வேளையில் தசார்ஹ குலத்தைச் சேர்ந்த சாத்யகி, தன் கணைகளை இறைத்தபடியே வீரத் திருஷ்டத்யும்னன் போரிட்டுக் கொண்டிருந்த இடத்தை அடைந்தான்.(30) சாத்வத குலத்தின் வெல்லப்பட முடியாத போர்வீரன் வருவதைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்}, அந்தப் போரில் அவனைப் பத்து கணைகளால் துளைத்தான்.(31) பிறகு சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பத்து கணைகளால் கர்ணனைத் துளைத்து, அவனிடம் {கர்ணனிடம்}, “ஓடாமல் என் முன்னே நிற்பாயாக” என்றான்.(32) அப்போது வலிமைமிக்கச் சாத்யகிக்கும், வெல்லப்பட முடியாத கர்ணனுக்கும் இடையில் நடைபெற்ற மோதலானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) பலிக்கும், வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்ததற்கு ஒப்பாக இருந்தது.(33) க்ஷத்திரியர்களில் காளையான அந்தச் சாத்யகி, தன் தேரின் சடசடப்பொலியால் க்ஷத்திரியர்கள் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டே, தாமரைக் கண் கொண்ட கர்ணனை (பல கணைகளால்) துளைத்தான்.(34)

அந்த வலிமைமிக்கச் சூதன் மகன் {கர்ணன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் வில்லின் நாணொலியால் பூமியை நடுங்கச் செய்தபடியே சாத்யகியோடு போரிட்டுக் கொண்டிருந்தான்.(35) உண்மையில் கர்ணன், நீண்டவை {நாராசங்கள்}, முள்பதித்தவை {கர்ணிகள்}, கூர்முனை கொண்டவை {விபாண்டங்கள்}, கன்றின் பல் போன்ற தலை கொண்டவை {வத்ஸதந்தங்கள்}, கத்தி போன்ற தலை கொண்டவை {க்ஷுரங்கள்} போன்ற கணைகளாலும், இன்னும் பிற நூற்றுக்கணக்கான கணைகளாலும் சிநியின் பேரனை {சாத்யகியைப்} பதிலுக்குத் துளைத்தான்.(36) அதே போல விருஷ்ணி குலத்தில் முதன்மையான யுயுதானனும், அந்தப் போரில் கர்ணனைத் தன் கணைகளால் மறைத்தான். ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அந்தப் போர் சமமாகவே நடந்தது.(37) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனைத் தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்ட உமது மகன்கள் அனைவரும் சாத்யகியை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கூரிய கணைகளால் துளைத்தனர்.(38)

அவர்கள் அனைவரின் ஆயுதங்களையும், கர்ணனின் ஆயுதங்களையும் தடுத்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விருஷசேனனை {கர்ணனின் மகனை} வேகமாக நடுமார்பில் துளைத்தான்.(39) அந்தக் கணையால் துளைக்கப்பட்டவனும், பெரும் காந்தி கொண்டவனுமான வீர விருஷசேனன், தன் வில்லை விட்டுவிட்டு வேகமாகத் தன் தேரில் விழுந்தான்.(40) வலிமைமிக்கத் தேர்வீரனான விருஷசேனன் கொல்லப்பட்டதாக நம்பிய கர்ணன், தன் மகன் இறந்த துயரால் எரிந்து, பெரும் பலத்துடன் சாத்யகியைப் பீடிக்கத் தொடங்கினான்.(41) இப்படிக் கர்ணனால் பீடிக்கப்பட்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் யுயுதானன் {சாத்யகி}, பெரும் வேகத்துடன், பல கணைகளால் கர்ணனை மீண்டும் மீண்டும் துளைத்தான்.(42) மீண்டும் கர்ணனைப் பத்து கணைகளாலும், விருஷசேனனை ஐந்தாலும் துளைத்த அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, தந்தை, மகன் ஆகிய இருவரின் தோலுறைகளையும், விற்களையும் அறுத்தான்.(43) பிறகு அந்தப் போர்வீரர்கள் இருவரும், எதிரிகளை அச்சத்தால் தூண்டவல்ல வேறு இரண்டு விற்களுக்கு நாணேற்றி, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கூரிய கணைகளால் யுயுதானனை {சாத்யகியைத்} துளைக்கத் தொடங்கினர்.(44)

வீரர்களுக்கு இப்படி அழிவை ஏற்படுத்திய அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து ஒலிகளையும் விஞ்சும்படி காண்டீவத்தின் ஒலி கேட்கப்பட்டது.(45) அர்ஜுனனுடைய தேரின் சடசடப்பொலியையும், காண்டீவத்தின் நாணொலியையும் கேட்ட சூதனின் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(46) “கௌரவ வீரப் போராளிகளில் முதன்மையானோரையும், வலிமைமிக்க வில்லாளிகள் பலரையும், நமது மொத்த படையையும் கொன்றபடியே அர்ஜுனன் தன் வில்லில் உரத்த நாணொலியை எழுப்புகிறான்.(47) இடியின் முழக்கத்திற்கு ஒப்பான அவனது {அர்ஜுனனின்} தேரின் சடசடப்பொலியும் கேட்கிறது. அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தனக்குத் தகுந்த சாதனைகளை அடைகிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(48) பிருதையின் இந்த மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நமது பெரிய படையைக் கலங்கடித்துவிடுவான். நம் துருப்புகளில் பல ஏற்கனவே பிளந்து கொண்டிருக்கின்றன. எவரும் போரில் நிற்கவில்லை {நிலைக்க முடியவில்லை}.(49) உண்மையில், காற்றால் கலைக்கப்படும் மேகத்திரள்களைப் போல நமது படையும் கலைக்கப்படுகிறது. அர்ஜுனனோடு மோதும் நமது படை, கடலில் படகு பிளப்பதைப் போலப் பிளக்கிறது.(50)

ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, காண்டீவத்தில் இருந்து ஏவப்படும் கணைகளின் விளைவால் போர்க்களத்தில் இருந்து ஓடவோ, கீழே விழவோ செய்யும் முதன்மையான வீரர்களின் உரத்த ஓலங்கள் கேட்கப்படுகின்றன.(51) ஓ! தேர்வீரர்களில் புலியே {துரியோதனா}, ஆகாயத்தில் கேட்கப்படும் இடி முழக்கத்தைப் போல, இந்த நள்ளிரவில், அர்ஜுனனின் தேர் அருகில் துந்துபிகள் மற்றும் கைத்தாளங்களின் ஒலியைக் கேட்பாயாக.(52) அர்ஜுனனின் தேர் அருகே (பீடிக்கப்படும் போராளிகளால்) எழுப்பப்படும் உரத்த ஓலங்களையும், மகத்தான சிங்க முழக்கங்களையும், பல்வேறு பிற ஒலிகளையும் கேட்பாயாக.(53)

எனினும் இங்கே, நம் மத்தியில் சாத்வத குலத்தில் முதன்மையான இந்தச் சாத்யகி இருக்கிறான். இந்த நமது நோக்குப் பொருளை {சாத்யகியைத்} தாக்கி வீழ்த்த முடியுமேயானால், நம் எதிரிகளை அனைவரையும் நம்மால் வெல்ல முடியும்.(54) அதேபோலப் பாஞ்சால மன்னனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்} துரோணரிடம் போரிட்டுக் கொண்டிருக்கிறான். அவன் {திருஷ்டத்யும்னன்}, தேர்வீரர்களில் முதன்மையான பல வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டிருக்கிறான்.(55) நம்மால் சாத்யகியையும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனையும் கொல்ல முடிந்தால், ஓ! மன்னா {துரியோதனா}, வெற்றி நமதே என்பதில் ஐயமிருக்காது.(56)

சுபத்திரையின் மகனுக்கு {அபிமன்யுவுக்குச்} செய்ததைப் போலவே வலிமைமிக்கத் தேர்வீரர்களான இந்த விருஷ்ணி குலமகனையும் {சாத்யகியையும்}, இந்தப் பிருஷதன் மகனையும் {திருஷ்டத்யும்னனையும்} சூழ்ந்து கொண்டு, வீரர்களான இவ்விருரையும் நாம் கொல்ல முயல்வோம் [1].(57) சாத்யகி, குருக்களில் காளையர் பலருடன் போரிட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து, ஓ! பாரதா {துரியோதனா}, சவ்யசச்சின் {அர்ஜுனன்}, நம் முன் துரோணரின் இந்தப் படைப்பிரிவை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்.(58) பலரால் சூழப்பட்ட சாத்யகியைப் பார்த்தனால் {அர்ஜுனனால்} காக்க முடியாதவாறு, அங்கே {அர்ஜுனன் வரும் வழியில்} நமது முதன்மையான தேர்வீரர்களைப் பெருமளவில் அனுப்ப வேண்டும்.(59) மதுகுலத்தின் சாத்யகியை விரைவில் யமனுலகு அனுப்ப, இந்தப் பெரும் வீரர்கள், பெரும் பலத்துடன் கணை மேகங்களை ஏவட்டும்” என்றான் கர்ணன்.(60)

இதையே கர்ணனின் கருத்தாக உறுதிசெய்து கொண்ட உமது மகன் {துரியோதனன்}, விஷ்ணுவிடம் பேசும் இந்திரனைப் போல அந்தப் போரில் சுபலனின் மகனிடம் {சகனியிடம்},(61) “பின்வாங்காத பத்தாயிரம் யானைகள் மற்றும் பத்தாயிரம் தேர்களுடன் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துச் செல்வீராக.(62) துச்சாசனன், துர்விசாஹன், சுபாகு, துஷ்பிரதர்ஷணன் ஆகியோர் பெரும் எண்ணிக்கையிலான காலாட்படையினர் சூழ உம்மைப் பின்தொடர்வார்கள்.(63) ஓ! அம்மானே {மாமனான சகுனியே}, பெரும் வில்லாளிகளான இரு கிருஷ்ணர்களையும் {கருப்பர்களான கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன்களையும்} மற்றும் யுதிஷ்டிரன், நகுலன், சகாதேவன் மற்றும் பாண்டுவின் மகனான பீமனையும் கொல்வீராக.(64) தேவர்களின் வெற்றி இந்திரனைச் சார்ந்திருப்பதைப் போல எனது வெற்றி உம்மையே சார்ந்திருக்கிறது. ஓ! அம்மானே, பாவகனின் {அக்னியின்} மகன் (கார்த்திகேயன்) அசுரர்களைக் கொன்றதைப் போலவே நீர் குந்தியின் மகன்களைக் கொல்வீராக” என்றான் {துரியோதனன்}.(65)

இப்படிச் சொல்லி உமது மகனால் தூண்டப்பட்ட சகுனி, கவசம் தரித்துக் கொண்டு, பெரும்படையாலும், உமது மகன்களாலும் ஆதரிக்கப்பட்டு, பாண்டுவின் மகன்களை எரிப்பதற்காகப் பார்த்தர்களை எதிர்த்துச் சென்றான். அப்போது உமது படைக்கும், எதிரிக்கும் இடையில் ஒரு பெரும்போர் தொடங்கியது.(66,67) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இப்படி) சுபலனின் மகன் {சகுனி} பாண்டவர்களை எதிர்த்துச் சென்ற போது, சூதனின் மகன் {கர்ணன்} ஒரு பெரும்படையின் துணையுடன், பல நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்தபடியே சாத்யகியை எதிர்த்து விரைவாகச் சென்றான். உண்மையில், உமது போர் வீரர்கள் ஒன்றாகக்கூடி சாத்யகியைச் சூழ்ந்து கொண்டனர்.(68,69) அப்போது பரத்வாஜரின் மகன் {துரோணர்}, அந்த நள்ளிரவில் திருஷ்டத்யும்னனின் தேரை எதிர்த்துச் சென்று, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துணிவுமிக்கத் திருஷ்டத்யும்னனுடனும், பாஞ்சாலர்களுடனும் அற்புதமானதும், கடுமையானதுமான ஒரு போரைச் செய்தார்” {என்றான் சஞ்சயன்}.(70)

கௌரவப்படையை முறியடித்த மூவர்! – துரோண பர்வம் பகுதி – 171-துரியோதனனைப் புறமுதுகிடச் செய்த சாத்யகி; தன்னுடன் மோதிய எதிரிகளை முறியடித்த சாத்யகி; சகுனியைத் தேரிழக்கச் செய்த அர்ஜுனன்; கௌரவப் படையை கொன்றழித்த அர்ஜுனன்; துரோணரின் வில்லை அறுத்த திருஷ்டத்யும்னன், துரோணரைத் தடுத்துப் பேரழிவை ஏற்படுத்திய திருஷ்டத்யும்னன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, எளிதில் போரில் வீழ்த்தப்பட முடியாதவர்களும், உமது படையைச் சேர்ந்தவர்களுமான அந்த மன்னர்கள் அனைவரும், ({சாத்யகியின்} சாதனைகளைப்) பொறுத்துக் கொள்ள முடியாமல் யுயுதானனின் {சாத்யகியின்} தேரை எதிர்த்து கோபத்துடன் சென்றனர்.(1) அவர்கள், {ஆயுதங்களால்} நன்கு தரிக்கப்பட்டவையும், தங்கம் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் தேர்களில் ஏறி, குதிரைப் படை மற்றும் யானைப்படை ஆகியவற்றின் துணையுடன் சென்று அந்தச் சாத்வத வீரனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டனர்.(2) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அந்த வீரனை {சாத்யகியை} அறைகூவியழைத்து சிங்க முழக்கங்களைச் செய்தனர்.(3) மதுகுலத்தோனை {சாத்யகியைக்} கொல்ல விரும்பிய அந்தப் பெரும் வீரர்கள், வெல்லப்படமுடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகியின் மீது தங்கள் கூர்முனை கணைகளைப் பொழிந்தனர்.(4)

தன்னை நோக்கி இப்படி வேகமாக வந்து கொண்டிருந்த அவர்களைக் கண்டவனும், எதிரிப்படைகளைக் கொல்பவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி} பல கணைகளை எடுத்துக்கொண்டு அவற்றை ஏவினான்.(5) வீரனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், பெரும் வில்லாளியுமான அந்தச் சாத்யகி, நேரான தன் கடுங்கணைகளால் பலரின் தலைகளைத் துண்டித்தான்.(6) மேலும் அந்த மதுகுலத்தோன் {சாத்யகி}, பல யானைகளின் துதிக்கைகளையும், பல குதிரைகளின் கழுத்துகளையும், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட போர்வீரர்கள் பலரின் கரங்கள் ஆகியவற்றையும் கத்தி முகக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} வெட்டினான்.(7) விழுந்து கிடந்த வெண்சாமரங்கள் மற்றும் வெண்குடைகள் ஆகியவற்றுடன் கூடிய அந்தப் போர்க்களம், ஓ! பாரதரே, கிட்டத்தட்ட நிறைந்து, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, விண்மீன்களுடன் கூடிய ஆகாயத்தைப் போல விளங்கியது.(8) யுயுதானனால் {சாத்யகியால்} போரில் இப்படிக் கொல்லப்பட்ட படையின் ஓலமானது, {நரகத்தில்) பிசாசுகளின் அலறலைப் போலப் பேரொலியாக இருந்தது.(9) அந்த ஆரவாரப் பேரொலியால் பூமி நிறைந்ததால், அந்த இரவானது மேலும் கொடூரமானதாகவும், மேலும் பயங்கரமானதாகவும் ஆனது.(10)

தன் படையானது, யுயுதானனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டு, பிளக்கப்படுவதைக் கண்டும், அந்த நள்ளிரவில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் அந்தப் பயங்கர ஆரவாரத்தைக் கேட்டும்,(11) வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகன்{துரியோதனன்}, தன் தேரோட்டியிடம் மீண்டும் மீண்டும், “இந்த ஆரவாரம் எங்கிருந்து வருகிறதோ அந்த இடத்திற்குக் குதிரைகளைத் தூண்டுவாயாக” என்றான்.(12) பிறகு, உறுதிமிக்க வில்லாளியும், களைப்பினை அறியாதவனும், கரங்களில் பெரும் நளினம் கொண்டவனும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனுமான மன்னன் துரியோதனன், யுயுதானனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தான்.(13) மாதவன் {சாத்யகி}, தன் வில்லை முழுமையாக வளைத்து, குருதி குடிக்கும் கணைகள் பனிரெண்டால் துரியோதனனைத் துளைத்தான்.(14) இப்படி யுயுதானனின் கணைகளால் முதலில் பீடிக்கப்பட்ட துரியோதனன், சினத்தால் தூண்டப்பட்டு அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியைப்} பத்துக் கணைகளால் பதிலுக்குத் துளைத்தான்.(15) அதே வேளையில் பாஞ்சாலர்களுக்கும், உமது துருப்புகள் அனைத்திற்கும் இடையில் நடந்த போர் மிக அற்புமாகக் காட்சியளித்தது.(16)

அப்போது, சிநியின் பேரன் {சாத்யகி}, அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்டு, வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகனை {துரியோதனனை} எண்பது {80} கணைகளால் மார்பில் துளைத்தான்.(17) பிறகு அவன் வேறு பிற கணைகளால் துரியோதனனின் குதிரைகளை யமனுலகு அனுப்பி வைத்தான். அந்த எதிரிகளைக் கொல்பவன் {சாத்யகி}, விரைவாகத் தனது எதிராளியின் {துரியோதனனின்} சாரதியைத் தேரில் இருந்து வீழ்த்தினான்.(18) உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தக் குதிரைகளற்ற தேரில் நின்று கொண்டே சாத்யகியின் தேரை நோக்கி பல கூரிய கணைகளை ஏவினான்.(19) எனினும், பெருங்கர நளினத்தை வெளிப்படுத்திய அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகனால் ஏவப்பட்ட அந்த ஐம்பது கணைகளையும் வெட்டினான்.(20) பிறகு மாதவன் {சாத்யகி}, அம்மோதலில் திடீரென ஒரு பல்லத்தால் உமது மகனின் {துரியோதனனின்} உறுதிமிக்க வில்லை, அதன் கைப்பிடியில் அறுத்தான்.(21) தன் தேர், வில் ஆகியவற்றை இழந்தவனும், பலமிக்க மனிதர்களின் ஆட்சியாளனுமான அவன் {துரியோதனன்}, கிருதவர்மனின் பிரகாசமிக்கத் தேரில் விரைவாக ஏறினான்.(22) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனன் பின்வாங்கியதும்,  அந்த நள்ளிரவில் சிநியின் பேரன் {சாத்யகி}, உமது படையைப் பீடித்து முறியடித்தான்.(23)

அதே வேளையில் சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்லாயிரம் தேர்களாலும், பல்லாயிரம் யானைகளாலும், பல்லாயிரம் குதிரைகளாலும் அனைத்துப் பக்கங்களிலும் அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டு, தீர்மானத்துடன் போரிடத் தொடங்கினான். அவர்களில் பலர் அர்ஜுனனை நோக்கி பெரும் சக்தி கொண்ட தெய்வீக ஆயுதங்களை ஏவினர்.(24,25) உண்மையில் அந்த க்ஷத்திரியர்கள் நிச்சயம் மரணமடைய {மரணமடைவோம் என்ற தீர்மானத்தோடே} அர்ஜுனனோடு போரிட்டனர். எனினும் சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், அந்த ஆயிரக்கணக்கான தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைத் தடுத்து, இறுதியில் அந்த எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தான். சினத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்த சுபலனின் மகன் {சகுனி}, எதிரிகளைக் கொல்பவனான அந்த அர்ஜுனனை இருபது கணைகளால ஆழத் துளைத்தான். மேலும் அவன் நூற்றுக்கணக்கான கணைகளை ஏவி, பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} பெருந்தேரின் முன்னேற்றத்தைத் தடுத்தான்.(26-28) பிறகு அர்ஜுனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அந்தப் போரில் இருபது கணைகளால் சகுனியைத் துளைத்தான். மேலும் அவன் {அர்ஜுனன்}, அந்தப் பெரும் வில்லாளிகளில் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்தான்.(29) தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் தடுத்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இடியின் சக்தியைதக் கொண்ட அற்புதக் கணைகளால் உமது படையின் அந்தப் போர்வீரர்களைக் கொன்றான்.(30)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வெட்டப்பட்ட கணைகள் மற்றும் ஆயிரக்கணக்கான (இறந்தோரின்) உடல்கள் ஆகியவற்றால் விரவிக் கிடந்த பூமியானது, மலர்களால் மறைக்கப்பட்டிருப்பதைப் போலத் தெரிந்தது.(31) உண்மையில், கிரீடங்களாலும், அழகிய மூக்குகளாலும், அழகிய காது குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தவையும், சினத்தால் (கீழ்) உதடுகளைக் கடித்துக் கொண்டிருந்தவையும், கண்களை அகல விரித்தவையும், சூடாமணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தவையும், உயிரோடு இருந்தபோது, ரத்தினங்களால் மகுடம் சூட்டப்பட்டவையும், இனிய வார்த்தைகளைப் பேசியவையுமான க்ஷத்திரியர்களின் தலைகளால் விரவிக் கிடந்த அந்தப் பூமியானது, சம்பக {சம்பங்கி} மலர்கள் பரவிய குன்றுகளால் விரவிக் கிடப்பதைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(32,33) அந்தக் கடும் சாதனையை அடைந்து, ஐந்து நேரான கணைகளால் சகுனியை மீண்டும் துளைத்தவனும், கடும் ஆற்றல் கொண்டவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, சினத்தால் தூண்டப்பட்டு அந்தப் போரில் உலூகனை மீண்டும் ஒருகணையால் தாக்கினான்.(34) அவனது {உலூகனது} தந்தையான சுபலனின் மகன் {சகுனியின்} முன்னிலையிலேயே இப்படி உலூகனைத் துளைத்த அர்ஜுனன், சிங்க முழக்கம் செய்து, அதனால் {அவ்வொலியால்} உலகத்தையே நிறைத்தான். பிறகு அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, சகுனியின் வில்லை அறுத்தான்.(36)

பிறகு அவன் {அர்ஜுனன்}, அவனது {சகுனியின்} நான்கு குதிரைகளையும் யமனுலகு அனுப்பினான். பிறகு அந்தச் சுபலனின் மகன் {சகுனி}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் தேரில் இருந்து குதித்து,(37) விரைவாகச் சென்று {தன் மகனான} உலூகனின் தேரில் ஏறிக் கொண்டான். பிறகு வலிமைமிக்க இரு தேர்வீரர்களான அந்தத் தந்தையும், மகனும் ஒரே தேரில் சென்று,(38) மலையில் மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகங்களைப் போலப் பார்த்தனின் {அர்ஜுனனின்} மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கூரிய கணைகளால் அந்த இரு போர்வீரர்களையும் துளைத்து,(39) பீடித்து உமது துருப்புகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஓடச் செய்தான். காற்றால் அனைத்துப் பக்கங்களிலும் விரட்டப்படும் வலிமைமிக்க மேகத் திரள் ஒன்றைப் போல,(40) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது அந்தப் படை அனைத்துப் பக்கங்களிலும் விரட்டப்பட்டது. உண்மையில் அந்தப் படையானது, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அந்த இரவில் இப்படிக் கொல்லப்பட்டு,(41) (அவர்களது) தலைவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அச்சத்தால் பீடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடியது. தாங்கள் ஏறிச்சென்ற விலங்குகளைப் பலர் கைவிட்டனர், பிறரோ, தங்கள் விலங்குகளை அதிக வேகத்தில் தூண்டி,(42) கடுமையான அந்த இருண்ட நேரத்தில், அச்சத்தால் தூண்டப்பட்டுப் போரில் இருந்து பின்வாங்கினர். இப்படி உமது போர்வீர்ரர்களை வென்ற வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே} மகிழ்ச்சிகரமாகத் தங்கள் சங்குகளை முழக்கினர்.(43)

திருஷ்டத்யும்னன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்ரரே}, மூன்று கணைகளால் துரோணரைத் துளைத்து, கூரிய கணை ஒன்றால் பின்னவருடைய வில்லின் நாணையும் விரைவாக அறுத்தான்.(44) க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான அந்த வீரத் துரோணர், அந்த வில்லைப் பூமியில் தூக்கி வீசிவிட்டு, பெரும் உறுதியும், பலமும் கொண்ட மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டார்.(45) திருஷ்டத்யும்னனை ஐந்து கணைகளால் துளைத்த துரோணர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஐந்து கணைகளால் அவனது சாரதியையும் துளைத்தார்.(46) தன் கணைகளால் துரோணரைத் தடுத்த வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன், அசுரப் படையை அழிக்கும் மகவத்தை {இந்திரனைப்} போல அந்தக் கௌரவப் படையை அழிக்கத் தொடங்கினான்.(47)

உமது மகனின் {துரியோதனின்} படை கொல்லப்பட்ட போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, குருதியையே ஓடையாகக் கொண்ட ஒரு பயங்கர ஆறு அங்கே பாயத் தொடங்கியது.(48) மேலும் அது, இரண்டு படைகளுக்கும் இடையில் மனிதர்களையும், குதிரைகளையும், யானைகளையும் சுமந்து சென்றபடி ஓடிக் கொண்டிருந்தது.(49) அது {அந்த ஆறு}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யமனின் ஆட்சிப்பகுதிகளை நோக்கிப் பாயும் வைதரணீக்கு ஒப்பானதாக இருந்தது. உமது படையைக் கலங்கடித்து அதை முறியடித்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான வீரத் திருஷ்டத்யும்னன், தேவர்களுக்கு மத்தியில் உள்ள சக்ரனை {இந்திரனைப்} போலச் சுடர்விட்டெரிந்தான்.(50) பிறகு திருஷ்டத்யும்னனும், சிகண்டியும் தங்கள் பெரிய சங்குகளை முழக்கினர், அதே போலவே, இரட்டையர்களும் (நகுலனும், சகாதேவனும்), யுயுதானனும் {சாத்யகியும்}, பாண்டுவின் மகனான விருகோதரனும் {பீமனும்{தங்கள் சங்குகளை} முழக்கினார்கள்.(51) உமது தரப்பைச் சேர்ந்தவர்களும், பெரும் சக்தியையுடையவர்களுமான அந்த ஆயிரக்கணக்கான மன்னர்களை வென்ற கடும் போர்வீரர்களான பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்}, கர்ணன், வீரத் துரோணர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, வெற்றியடையும் விருப்பத்தால் சிங்க முழக்கம் செய்தனர்” {என்றான் சஞ்சயன்}.(52,53)

மூர்க்கமாகப் போரிட்ட துரோணரும், கர்ணனும்! – துரோண பர்வம் பகுதி – 172-துரோணர் மற்றும் கர்ணனிடம் கோபத்துடன் பேசிய துரியோதனன்; பாண்டவப் படையை மூர்க்கமாகத் தாக்கிய துரோணரும், கர்ணனும்; ஓடும் துருப்புகளை மீண்டும் அணிதிரட்டிய அர்ஜுனனும், கிருஷ்ணனும்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தச் சிறப்புமிக்க வீரர்களால் கொல்லப்படும் தன் படையானது சிதறடிக்கப்படுவதைக் கண்டவனும், சொற்களை நன்கு அறிந்தவனுமான {பேசத்தெரிந்தவனுமான} உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனிடமும், போரில் வெல்வோர் அனைவரிலும் முதன்மையானவரான துரோணரிடமும் விரைவாகச் சென்று, கோபத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1,2) “சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதைக் கண்டு சினம் கொண்ட உங்கள் இருவராலேயே இந்தப் போர் {இந்த இரவுப் போர்} தொடங்கப்பட்டது.(3) உங்கள் இருவருக்கும் பாண்டவப்படைகளை வெல்லும் சக்தி முழுமையாக இருந்தும், அந்தப் படைகளால் என் படைகள் கொல்லப்படுகையில் நீங்கள் எந்த அக்கறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே.(4) நீங்கள் இருவரும் இப்போது என்னைக் கைவிடுவதாக இருந்தால், அதைத் தொடக்கத்திலே என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். கௌரவங்களை அளிப்பவர்களே, “நாங்கள் இருவரும் போரில் பாண்டு மகன்களை வெல்வோம்” என்ற இந்த வார்த்தைகளையே அப்போது நீங்கள் என்னிடம் சொன்னீர்கள். இந்த உங்கள் வார்த்தைகளைக் கேட்டே நான் இந்த நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தேன். (நீங்கள் வேறு மாதிரியாக என்னிடம் சொல்லியிருந்தால்), வீரப்போராளிகளை இந்த அளவுக்கு அழிக்கவல்லவையான பார்த்தர்களுடனான இந்தப் பகைமைகளை நான் ஒரு போதும் தூண்டியிருக்க மாட்டேன்.(5,6) நான் உங்கள் இருவராலும் கைவிடத் தகாதவன் என்றால், மனிதர்களில் காளையரே, பெரும் ஆற்றலைக் கொண்ட வீரர்களே, நீங்கள் உங்கள் உண்மையான அளவு ஆற்றலுடன் போரிடுவீராக” என்றான் {துரியோதனன்}.(7)

உமது மகனின் {துரியோதனனின்} வார்த்தைக் குறடால் இப்படித் துளைக்கப்பட்ட அந்த வீரர்கள் இருவரும் {துரோணரும், கர்ணனும்}, தடிகளால் விரட்டப்பட்ட இரு பாம்புகளைப் போல மீண்டும் போரில் ஈடுபட்டனர்.(8) தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், உலகின் வில்லாளிகள் அனைவரிலும் மேன்மையானவர்களுமான அவ்விருவரும், சிநியின் பேரனால் {சாத்யகியால்} தலைமை தாங்கப்பட்ட பார்த்தர்களையும், இன்னும் பிறரையும் எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(9) அதே போலப் தங்கள் துருப்புகள் அனைத்துடன் ஒன்றுசேர்ந்த பார்த்தர்களும், தொடர்ந்து முழங்கிக் கொண்டே இருந்த அந்த இரு வீரர்களையும் எதிர்த்து சென்றனர்.(10)

அப்போது, ஆயுதங்கள் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவரும், பெரும் வில்லாளியுமான துரோணர், சினத்தால் தூண்டப்பட்டு, பத்து கணைகளால் அந்தச் சிநிக்களில் காளையை {சாத்யகியத்} துளைத்தார்.(11) கர்ணன் அவனைப் {சாத்யகியைப்} பத்து கணைகளாலும், உமது மகன் {துரியோதனன்} ஏழாலும், விருஷசேனன் பத்தாலும், சுபலனின் மகன் {சகுனி} ஏழாலும் {சாத்யகியைத்} துளைத்தனர்.(12) சிநியின் பேரனை {சாத்யகியைச்} சுற்றியிருந்த கௌரவர்களின் ஊடுருவப்பட முடியாத சுவரில், இவர்களும் நிலைகொண்டு அவனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டனர். அந்தப் போரில் பாண்டவப்படையைக் கொன்றும் வரும் துரோணரைக் கண்ட சோமகர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவரைக் கணை மாரியால் துளைத்தனர்.(13) அப்போது துரோணர், இருளைத் தன் கதிர்களால் அழிக்கும் சூரியனைப் போல க்ஷத்திரியர்களின் உயிரை எடுக்கத் தொடங்கினார்.(14)

அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணரால் கொல்லப்படும்போது ஒருவரையொருவர் அழைத்த பாஞ்சாலர்களுக்கு மத்தியில் உரத்த ஆரவாரத்தை நாங்கள் கேட்டோம். சிலர் தங்கள் மகன்களைக் கைவிட்டும், சிலர் தந்தைகளை, சிலர் சகோதரர்களை, சில மாமன்களை, சிலர் தங்கள் சகோதரியின் மகன்களை, சிலர் நண்பர்களை, சிலர் தங்கள் உற்றார் உறவினரைக் கைவிட்டுவிட்டுத் தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ள வேகமாக ஓடினர்.(15-17) மேலும் சிலர் தங்கள் உணர்வுகளை இழந்து துரோணரை எதிர்த்து ஓடினர். உண்மையில், அப்போது பாண்டவப்படையில் வேறு உலகத்திற்கு அனுப்பப்பட்ட போராளிகள் பலராக இருந்தனர்.(18) அந்தச் சிறப்புமிக்க வீரரால் {துரோணரால்} இப்படிப் பீடிக்கப்பட்ட அந்தப் பாண்டவப் படையினர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விரவில் பீமசேனன், அர்ஜுனன், கிருஷ்ணன், இரட்டையர் {நகுலன் மற்றும் சகாதேவன்}, யுதிஷ்டிரன், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சுடர்மிக்கத் தங்கள் தீப்பந்தங்களைச் சுற்றிலும் எறிந்துவிட்டுத் தப்பி ஓடினர்.(19,20)

உலகம் இருளில் மூழ்கியிருந்ததால், எதையும் காண முடியவில்லை. கௌரவத் துருப்புகளுக்கு மத்தியில் இருந்த விளக்குகளின் காரணமாக எதிரி ஓடுவதை உறுதிசெய்து கொள்ள முடிந்தது.(21) எண்ணற்ற கணைகளை இறைத்தபடியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான துரோணரும், கர்ணனும், ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் படையைப் பின்தொடர்ந்து சென்றனர்.(22) கொல்லப்பட்டு முறியடிக்கப்பட்ட பாஞ்சாலர்களைக் கண்டு உற்சாகத்தை இழந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பல்குனனிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(23) “பாஞ்சாலர்களுடன் கூடிய திருஷ்டத்யும்னனும், சாத்யகியும், கணைகள் பலவற்றை ஏவியபடியே பெரும் வில்லாளிகளான துரோணரையும், கர்ணனையும் எதிர்த்து சென்றனர்.(24) இந்த நமது பெரும்படை (அவர்களின்) கணைமாரியால் பிளக்கப்பட்டு முறியடிக்கப்படுகிறது. அவர்கள் ஓடுவது தடுக்கப்பட வேண்டும் என்றாலும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா} அவர்களை மீண்டும் அணிதிரட்டுவது இயலாததாகும்” என்றான் {கிருஷ்ணன்}.(25)

அந்தப் படை ஓடுவதைக் கண்ட கேசவன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் அந்தத் துருப்புகளிடம், “அச்சத்தால் ஓடாதீர். பாண்டவ வீரர்களே உங்கள் அச்சங்களை விலக்குங்கள்.(26) படைகள் அனைத்தையும் நல்ல முறையில் அணிவகுத்துக் கொண்டு, உயர்த்திய ஆயுதங்களுடன் துரோணரையும், சூதனின் மகனையும் {கர்ணனையும்} எதிர்த்து நிற்பதற்காக நாங்கள் இருவரும் இப்போது செல்கிறோம்” என்றனர்.(27) அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, முன்னேறிச் செல்லும் விருகோதரனை {பீமனைக்} கண்டு, மீண்டும் பாண்டுவின் மகனான அர்ஜுனனிடம் அவனை மகிழ்ச்சி கொள்ளச் செய்வது போல இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(28) “அதோ, போரில் மகிழ்ச்சி கொள்ளும் பீமர், சோமகர்கள் மற்றும் பாண்டவர்களால் சூழபட்டு, வலிமைமிக்கத் தேர்வீரர்களான துரோணரையும் கர்ணனையும் எதிர்த்து வருகிறார்.(29) உன் துருப்புகள் அனைத்தும் உறுதிகொள்ளும் பொருட்டு, ஓ !பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அவராலும் {பீமராலும்}, பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலராலும் ஆதரிக்கப்பட்டு இப்போது போரிடுவாயாக” என்றான் {கிருஷ்ணன்} [1].30 அப்போது மனிதர்களில் புலிகளான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, மதுகுலத்தோன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரும், துரோணரையும், கர்ணனையும் அடைந்து, போரின் முன்னணியில் தங்கள் நிலையை எடுத்துக் கொண்டனர்.”(31)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது, யுதிஷ்டிரனின் அந்தப் பரந்த படையானது, போரில் துரோணரும், கர்ணனும் எந்த இடத்தில் தங்கள் எதிரிகளைக் கலங்கடித்துக் கொண்டிருந்தனரோ அங்கே மீண்டும் போரிடுவதற்காகத் திரும்பியது.(32) சந்திரன் உதிக்கும் வேளையில் பொங்கும் இரு கடல்களுக்கிடையில் நடப்பதைப் போல அந்த நள்ளிரவில் ஒரு கடும் மோதல் நடந்தது.(33) பிறகு உமது படையின் போர்வீரர்கள் தங்கள் கைகளில் இருந்த சுடர்மிக்க விளக்குகளை எறிந்துவிட்டு, அச்சமற்ற வகையில் வெறிகொண்டு பாண்டவர்களுடன் போரிட்டனர்.(34) இருட்டாலும், புழுதியாலும் உலகம் மறைக்கப்பட்டிருந்த அந்தப் பயங்கர இரவில், போராளிகள், தாங்கள் சொன்ன பெயர்களால் வழிநடத்தப்பட்டே ஒருவரோடொருவர் போரிட்டனர்.(35) போரிடும் மன்னர்களால் சொல்லப்பட்ட பெயர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஒரு சுயம்வரத்தில் நடப்பதைப் போலவே கேட்கப்பட்டன.(36)

திடீரெனப் போர்க்களமெங்கும் அமைதி பரவி, அஃது ஒருக்கணம் நீடித்தது. பிறகு வென்ற, வெல்லப்பட்ட கோபக்கார போராளிகளால் உண்டாக்கப்பட்ட உரத்த ஆரவாரம் மீண்டும் கேட்டது.(37) எங்கே சுடர்மிக்க விளக்குகள் தென்பட்டனவோ, ஓ! குருக்களில் காளையே {திருதராஷ்டிரரே}, அங்கே (சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும்) பூச்சிகளைப் போல அந்த வீரர்கள் விரைந்தனர்.(38) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், கௌரவர்களும் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டிருந்த போது, அவர்களைச் சுற்றிலும் இரவின் இருள் அடர்த்தியடைந்திருந்தது” {என்றான் சஞ்சயன்}.(39)

கடோத்கசனைத் தூண்டிய கிருஷ்ணன்! – துரோண பர்வம் பகுதி – 173-கர்ணனுக்கும், திருஷ்டத்யும்னனுக்கும் இடையிலான மோதல்; திருஷ்டத்யும்னனைத் தேரற்றவனாகச் செய்த கர்ணன்; கர்ணனின் குதிரைகளைக் கொன்ற திருஷ்டத்யும்னன்; அர்ஜுனனின் தேரில் ஏறிக் கொண்ட திருஷ்டத்யும்னன்; பாஞ்சாலர்களை முறியடித்த கர்ணன்; கர்ணனின் ஆற்றலைக் கண்டு அஞ்சி அர்ஜுனனிடம் பேசிய யுதிஷ்டிரன்; கிருஷ்ணனின் ஆலோசனை; கடோத்கசனிடம் பேசிய கிருஷ்ணனும், அர்ஜுனனும்; கர்ணனை எதிர்த்து விரைந்த கடோத்கசன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது, பகைவீரர்களைக் கொல்பவனான கர்ணன், போரில் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனைக்} கண்டு, முக்கிய அங்கங்களுக்குள் ஊடுருவவல்ல பத்து கணைகளால் அவனது மார்பைத் தாக்கினான்.(1) அந்தப் பெரும்போரில் திருஷ்டத்யும்னனும் பதிலுக்கு ஐந்து கணைகளால் கர்ணனை வேகமாகத் துளைத்து, அவனிடம், “நில், நிற்பாயாக” என்றான்.(2) அந்தப் பயங்கரப்போரில் ஒருவரையொருவர் கணைமாரிகளால் மறைத்த அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முற்று முழுதாக வளைக்கப்பட்ட தங்கள் விற்களில் இருந்து ஏவப்பட்ட கூரிய கணைகளால் மீண்டும் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர்.(3) அப்போது அந்தப் போரில் கர்ணன், பாஞ்சாலப் போர்வீரர்களில் முதன்மையான திருஷ்டத்யும்னனின் சாரதியையும், நான்கு குதிரைகளையும் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(4) பிறகு அவன் {கர்ணன்}, தன் முதன்மையான எதிரியின் வில்லைக் கூரிய கணைகளால் அறுத்து, மேலும் ஒரு பல்லத்தால் பின்னவனின் {திருஷ்டத்யும்னனின்} சாரதியைத் தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான்.(5)

தேர், குதிரைகள் ஆகியவற்றையும் சாரதியையும் இழந்த வீரத் திருஷ்டத்யும்னன், ஒரு கதாயுதத்தை {பரிகத்தை} எடுத்துக் கொண்டு தன் தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்தான்.(6) கர்ணனின் நேரான கணைகளால் எப்போதும் தாக்கப்பட்டு வந்தாலும், கர்ணனை அணுகிய அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, பின்னவனின் {கர்ணனின்} நான்கு குதிரைகளையும் கொன்றான்.(7) படைகளைக் கொல்பவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, பிறகு, வேகமாகத் திரும்பி தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேரில் விரைவாக ஏறிக் கொண்டான். வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் அந்தத் தேரில் ஏறி, கர்ணனை நோக்கிச் செல்லவே விரும்பினான்.(8) எனினும், தர்மனின் மகன் (யுதிஷ்டிரன்) அவனை {திருஷ்டத்யும்னனை} விலகிச் செல்லச் செய்தான் [1].அப்போது, பெரும் சக்தி கொண்ட கர்ணன், தன் சிங்கமுழக்கங்களுடன் கலந்த உரத்த நாணொலியைத் தன் வில்லில் எழுப்பி, பெரும் சக்தியுடன் தன் சங்கையும் முழக்கினான். பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} போரில் வெல்லப்பட்டதைக் கண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான(9,10) பாஞ்சாலர்களும், சோமகர்களும், சினத்தால் தூண்டப்பட்டு, அனைத்து வகை ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, மரணத்தையே தங்கள் இலட்சியமாகக் கொண்டு, கர்ணனைக் கொல்லும் விருப்பத்தில் அவனை நோக்கிச் சென்றனர். அதே வேளையில், கர்ணனின் சாரதியானவன், சங்கு போல வெண்மையாக இருந்தவையும், பெரும் வேகம் கொண்டவையும், சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், நல்ல பலம்கொண்டவையுமான வேறு பிற குதிரைகளைத் தன் தலைவனின் {கர்ணனின்} தேரில் பூட்டினான்.(11,12) துல்லியமான குறியைக் கொண்ட கர்ணன், வீரத்துடன் போராடி, மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் ஒரு மேகத்தைப் போல, வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்தப் பாஞ்சாலர்களைத் தன் கணைகளால் பீடித்தான். கர்ணனால் இப்படிப் பீடிக்கப்பட்ட அந்தப் பாஞ்சாலப் படையானது, சிங்கத்தால் அச்சமடைந்த பெண் மானைப் போல, அச்சத்துடன் தப்பி ஓடியது.(13,14)

குதிரைவீரர்கள் தங்கள் குதிரைகளில் இருந்து விழுவது அங்கே காணப்பட்டது, யானைப் பாகர்கள் தங்கள் யானைகளில் இருந்தும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} தேர்வீரர்கள் தங்கள் தேர்களில் இருந்தும் சுற்றிலும் விழுந்து கொண்டிருந்தனர். அந்தப் பயங்கரப் போரில் கர்ணன், ஓடிக் கொண்டிருக்கும் போராளிகளின் கரங்கள் மற்றும் காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட சிரங்கள் ஆகியவற்றைத் தன் கத்தி முகக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அறுத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, யானைகள், அல்லது குதிரைகளின் முதுகுகள், அல்லது பூமியில் இருந்த பிறரின் தொடைகளையும் அவன் {கர்ணன்} அறுத்தான்.(15-17) அந்தப் போரில் பல வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தாங்கள் ஓடுகையில் தங்கள் உறுப்புகளை இழந்ததையோ, தங்கள் விலங்குகள் காயமடைந்ததையோ கூட உணரவில்லை. பயங்கரக் கணைகளால் கொல்லப்பட்ட பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும், ஒரு சிறு துரும்பு அசைந்தாலும் (அவர்கள் கொண்ட பேரச்சத்தால்) அது கர்ணன் என்றே எடுத்துக் கொண்டனர்.(18,19) தங்கள் உணர்வுகளை இழந்த அந்தப் போர்வீரர்கள், ஓடிக் கொண்டிருக்கும் தங்கள் நண்பர்களையே கர்ணன் என்று நினைத்து, அவர்களிடம் இருந்து அச்சத்தால் விலகி ஓடினர். கர்ணன், அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை ஏவியபடியே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அணிபிளந்து ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் படையைப் பின்தொடர்ந்து சென்றான். உண்மையில், அந்தப் போரில் தங்கள் உணர்வுகளை இழந்து ஓடிக் கொண்டிருந்த போர்வீரர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.(20-22) சிறப்புமிக்க வீரனான அந்தக் கர்ணனின் வலிமைமிக்க ஆயுதங்களால் இப்படிக் கொல்லப்பட்ட பாஞ்சாலர்களால் எந்த நிலையையும் ஏற்க {எங்கும் நிற்க} இயலவில்லை.(23) துரோணரால் பார்க்க மட்டுமே செய்யப்பட்ட பிறர், அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர் {துரோணரின் பார்வையைக் கண்டே பிறர் ஓடிவிட்டனர்}.

அப்போது தன் படை ஓடுவதைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன்,(24) பின்வாங்குவதே அறிவுடைமை என்று கருதி பல்குனனிடம் {அர்ஜுனனிடம்}, “வில்லுடன் கூடிய ருத்ரனைப் போல அங்கே நின்று கொண்டிருக்கும் வலிமைமிக்க வில்லாளியான கர்ணனைப் பார்.(25) உக்கிர காலமான இந்த நள்ளிரவில், சுடர்மிக்கச் சூரியனைப் போல அனைத்தையும் அவன் {கர்ணன்} எரித்துக் கொண்டிருப்பதைப் பார். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, கர்ணனின் கணைகளால் சிதைக்கப்பட்டவர்களும், ஆதரவற்றவர்களுமான உன் நண்பர்களின் ஓலங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கின்றன. குறிபார்ப்பது மற்றும் தன் கணைகளை விடுவது ஆகிய கர்ணனின் இரண்டு செயல்களுக்கிடையில் எந்த இடைவெளியையும் காணமுடியவில்லை. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இவன் {கர்ணன்} நம் நண்பர்கள் அனைவரையும் அழித்துவிடுவான். ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, உன் தீர்மானத்தின் படி அடுத்து செய்யப்பட வேண்டியதும், செய்யப்படும் நேரம் வாய்த்துவிட்டதுமான கர்ணனின் கொலைக்குத் தேவையானவற்றை இப்போதே செய்வாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.

(யுதிஷ்டிரனால்) இப்படிச் சொல்லப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கிருஷ்ணனிடம்,(26-29) “தர்மனின் அரசமகன் {யுதிஷ்டிரர்}, இன்று கர்ணனின் ஆற்றலைக் கண்டு அஞ்சுகிறார். கர்ணனின் படைப்பிரிவானது (நம்மிடம்) மீண்டும் மீண்டும் இப்படியே நடந்து கொள்ளும்போது, எவ்வழி பின்பற்றப்பட வேண்டுமோ அதை விரைவாகப் பின்பற்றுவாயாக. நமது படை ஓடுகிறது. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, துரோணரால் பிளக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும், கர்ணனால் அச்சுறுத்தப்பட்டும் உள்ள நமது துருப்புகளால் நிற்கவும் இயலவில்லை. கர்ணன் அச்சமற்றுத் திரிவதை நான் காண்கிறேன்.(30-32) நமது தேர்வீரர்களில் முதன்மையானோர் ஓடுகின்றனர். கர்ணன் தன் கூரிய கணைகளை இறைக்கிறான். மனிதனால் உடலில் மிதிக்கப்பட்டு அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாம்பொன்றைப் போல, ஓ! விருஷ்ணி குலத்தின் புலியே {கிருஷ்ணா}, போரின் முன்னணியில் என் கண்களுக்கு முன்பாகவே இவன் {கர்ணன்} இப்படித் திரிவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, ஒன்று நான் அவனைக் {கர்ணனைக்} கொல்வேன், அல்லது அவன் {கர்ணன்} என்னைக் கொல்லட்டும்” என்றான் {அர்ஜுனன்}.(33,34)

வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, மனிதர்களில் புலியும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றலைக் கொண்ட போர்வீரனுமான கர்ணன், தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலவே போரில் திரிவதை நான் காண்கிறேன்.(35) ஓ! தனஞ்சயா, ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, உன்னையும், ராட்சசன் கடோத்கசனையும் தவிரப் போரில் அவனை {கர்ணனை} எதிர்த்துச் செல்ல வல்லவர் எவரும் இல்லை.(36) எனினும், ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, போரில் சூதன் மகனுடன் {கர்ணனுடன்} நீ மோதக்கூடிய நேரம் இன்னும் வாய்க்கவில்லை என்றே நான் கருதுகிறேன்.(37) வாசவனால் {இந்திரனால்} கொடுக்கப்பட்டதும், பெரும் விண்கல்லுக்கு ஒப்பானதும், சூதன் மகனால் {கர்ணனால்} உனக்காகவே கவனமாக வைக்கப்பட்டிருப்பதுமான அந்தச் சுடர்மிக்க ஈட்டியானது, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இன்னும் அவனிடம் {கர்ணனிடம்} இருக்கிறது.(38) தன்னிடம் அந்த ஈட்டியைக் கொண்டுள்ள அவன் {கர்ணன்}, இப்போது பயங்கர வடிவை ஏற்றிருக்கிறான் [2]. கடோத்கசனைப் பொறுத்தவரை, அவன் எப்போதும் உனக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும், உன் நன்மையை விரும்புபவனுமாக இருக்கிறான்.(39) வலிமைமிக்கக் கடோத்கசனே {இப்போது} அந்த ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்துச் செல்லட்டும். தெய்வீக ஆற்றலைக் கொண்ட அவன் {ராட்சசன் கடோத்கசன்} வலிமைமிக்கப் பீமனால் பெறப்பட்டவனாவான்.(40) தெய்வீக ஆயுதங்களும், ராட்சசர்களும், அசுரர்களும் பயன்படுத்தும் ஆயுதங்களும் அவனிடம் {கடோத்கசனிடம்} இருக்கின்றன. அவன் {கடோத்கசன்} கர்ணனை வெல்வான். அதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை” என்றான் {கிருஷ்ணன்}.(41)(கிருஷ்ணனால்) இப்படிச் சொல்லப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, அந்த ராட்சசனை {கடோத்கசனை} அழைத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டரரே}, பின்னவன் {கடோத்கசன்}, கவசந்தரித்துக் கொண்டும், வாள், கணைகள் மற்றும் வில் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டும் விரைவில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} முன்பு வந்து நின்றான்.(42) கிருஷ்ணனையும், பாண்டுவின் மகனான தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} வணங்கிய அவன் {கடோத்கசன்} பெருமையுடன், “இதோ நான் இருக்கிறேன், எனக்கு ஆணையிடுவீராக” என்றான். அப்போது தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, சுடர்மிக்க வாய் {முகம்}, நெருப்பு போன்ற கண்கள், மேகங்களின் நிறத்திலான உடல் ஆகியவற்றைக் கொண்டவனும், ஹிடிம்பையின் மகனுமான அந்த ராட்சசனிடம் {கடோத்கசனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(44) “ஓ! கடோத்கசா, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக. {இப்போது} உன் ஆற்றலை வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. வேறு யாருக்குமில்லை.(45) {துன்பக்கடலில்} மூழ்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களுக்கு இந்தப் போரில் நீ படகாவாயாக. பல்வேறு ஆயுதங்களும், பல வகைகளிலான ராட்சச மாயைகளும் உன்னிடம் இருக்கின்றன.(46) ஓ! ஹிடிம்பையின் மகனே {கடோத்கசா}, மந்தையாளனால் {இடையனால்} அடிக்கப்படும் மாட்டு மந்தையைப் போல, போர்க்களத்தில் பாண்டவர்களின் படை கர்ணனால் அடிக்கப்படுகிறது.(47) அதோ, பெரும் நுண்ணறிவும், உறுதியான ஆற்றலும் கொண்ட வலிமைமிக்க வில்லாளியான கர்ணன், பாண்டவப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் க்ஷத்திரியர்களில் முதன்மையானோரை எரித்து வருகிறான்.(48)

வலிமைமிக்கக் கணைகளைப் பொழியும் அந்த உறுதிமிக்க வில்லாளியின் {கர்ணனின்} முன்பு, நெருப்பு போன்ற அவனது கணைகளால் பீடிக்கப்படும் பாண்டவ வீரர்களால் நிலைக்க முடியவில்லை.(49) இந்த நள்ளிரவில் சூதன் மகனின் {கர்ணனின்} கணை மழையால் பீடிக்கப்படும் பாஞ்சாலர்கள், சிங்கத்தால் பீடிக்கப்படும் மான் கூட்டத்தைப் போல ஓடுகின்றனர்.(50) ஓ! பயங்கர ஆற்றலைக் கொண்டவனே {கடோத்கசா}, போரில் இப்படி ஈடுபட்டுவரும் சூதன் மகனை {கர்ணனைத்} தாக்குப் பிடிக்க உன்னைத் தவிர வேறு எவனுமில்லை.(51) உன் சக்தி மற்றும் வலிமை ஆகியவற்றின் துணை கொண்டு, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கடோத்கசா}, உன் தாய்வழி குலத்திற்கும், உனது தந்தைமாரின் குலத்திற்கும் தகுந்ததைச் சாதிப்பாயாக.(52) இதற்காகவே, ஓ! ஹிடிம்பையின் மகனே {கடோத்கசா}, இடுக்கண்களில் காக்கப்படவே மனிதர்கள் பிள்ளைகளை விரும்புகிறார்கள். இப்போது நீ உன் இரத்த உறவினர்களைக் காப்பாயாக.(53) ஓ! கடோத்கசா, தங்கள் நோக்கங்களை அடைவதற்காகவே தந்தைமார் மகன்களை விரும்புகின்றனர். நன்மையின் தோற்றுவாயான பிள்ளைகள், இங்கேயும், இதன் பிறகும் {இம்மையிலும், மறுமையிலும்} தங்கள் தந்தைமாரைக் காக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.(54) நீ சிறப்புமிக்கவன், போரில் உன் வலிமை பயங்கரமானதும் ஒப்பற்றதுமாகும். போரில் ஈடுபடுகையில் உனக்கு இணையானவர்கள் எவரும் இல்லை.(55)

ஓ! எதிரிகளை எரிப்பவனே {கடோத்கசா}, இவ்விரவில் கர்ணனின் நேரான கணைகளால் முறியடிக்கப்படுபவர்களும், தார்தராஷ்டிரக் கடலில் இப்போது மூழ்கிக் கொண்டிருப்பவர்களுமான பாண்டவர்கள் கரையைப் பாதுகாப்பாக அடைவதற்கு ஏதுவான வழியாக {படகாக} அவர்களுக்கு இருப்பாயாக.(56) இரவில் ராட்சசர்கள், அளவிலா ஆற்றல் கொண்டவர்களாகவும், பெரும் வலிமையும், பெரும் துணிவும் கொண்டவர்களாக இருக்கின்றனர். (அத்தகு நேரத்தில்) அவர்கள் பெரும் வீரமிக்கவர்களும், வீழ்த்தக் கடினமானவர்களுமான போர்வீரர்களாக ஆகின்றனர்.(57) இந்த நள்ளிரவில் உன் மாயைகளின் துணை கொண்டு போரில் கர்ணனைக் கொல்வாயாக. பார்த்தர்களும், திருஷ்டத்யும்னனும் துரோணரை அகற்றுவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.(58)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பீபத்சுவும் {அர்ஜுனனும்}, ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவனான ராட்சசன் கடோத்கசனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(59) “ஓ! கடோத்கசா, நீயும், நீண்ட கரங்களைக் கொண்ட சாத்யகி, பாண்டுவின் மகனான பீமர் ஆகிய மூவரும், நம் போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவர்கள் என்பது என் தீர்மானம்.(60) இந்த இரவில் சென்று கர்ணனுடன் தனிப்போரில் ஈடுபடுவாயாக. வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி உனது பின்புறத்தைப் பாதுகாப்பான். (தேவர்ப்படைத் தலைவன்) ஸ்கந்தனின் {முருகனின்} துணையோடு, பழங்காலத்தில் தாரகனைக் கொன்ற இந்திரனைப் போல இந்தச் சாத்வத வீரனை {சாத்யகியைத்} துணையாகக் கொண்டு, போரில் துணிவுமிக்கக் கர்ணனை நீ கொல்வாயாக” என்றான் {அர்ஜுனன்}.(62)

கடோத்கசன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பாரதரே {அர்ஜுனரே} கர்ணருக்கோ, துரோணருக்கோ, ஆயுதங்களில் சாதித்த சிறப்புமிக்க எந்த க்ஷத்திரியனுக்கோ நான் இணையானவனே.(63) இந்த இரவில் நான் சூதன் மகனுடன் {கர்ணருடன்} மோதப் போகும் போரானது, இவ்வுலகம் நீடித்து உள்ள வரையில் பேசத்தக்கதாக இருக்கும்.(64) இன்றிரவு, துணிச்சல் மிக்கவர் எவரையும், மருட்சியுடையோர் எவரையும், கூப்பிய கரங்களோடு வேண்டுவோர் எவரையும் விட்டு விடாமல், ராட்சச நடைமுறையைக் கைக்கொண்டு, அனைவரையும் கொல்வேன்” என்றான் {கடோத்கசன்}.(65)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, துருப்புகளை அச்சுறுத்தியபடியே அந்தப் பயங்கரப் போரில் கர்ணனை எதிர்த்து விரைந்தான்.(66) மனிதர்களில் புலியான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, சுடர்மிக்க வாயையும் {முகத்தையும்}, சுடர்மிக்கக் குழல்களையும் {கேசத்தையும்} கொண்ட அந்தக் கோபக்காரப் போர்வீரனை {கடோத்கசனை} இன்முகத்துடன் வரவேற்றான்.(67) ஒருவரையொருவர் எதிர்த்து முழங்கிய கர்ணனுக்கும், அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடைபெற்ற அந்தப் போரானது, ஓ! மன்னர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, (பழங்காலத்தில்) இந்திரனுக்கும், பிரகலாதனுக்கும் இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(68)

ஜடாசுரன் மகனைக் கொன்ற கடோத்கசன்! – துரோண பர்வம் பகுதி – 174-கௌரவ முகாமுக்கு ஜடாசுரன் மகன் அலம்புசனின் {அலம்பலனின்} வருகை; அலம்புசனுக்கும் கடோத்கசனுக்கும் இடையில் நடந்த மோதல்; அலம்புசனைக் கொன்ற கடோத்கசன், அலம்புசனின் தலையைத் துரியோதனனின் தேரின் மீது வீசியது; துரியோதனனிடம் பேசிய கடோத்கசன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கடோத்கசனானவன், சூதனின் மகனான கர்ணனைப் போரில் கொல்வதற்காக, அவனது தேரை நோக்கிச் செல்வதைக் கண்ட உமது மகன் துரியோதனன்,(1) {தன் தம்பியான} துச்சாசனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “அந்த ராட்சசன் {கடோத்கசன்}, கர்ணனின் ஆற்றலைக் கண்டு அவனை எதிர்த்துப் போரிட வேகமாகச் செல்கிறான்.(2)

அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {கடோத்கசனைத்} தடுப்பாயாக. விகர்த்தனன் {சூரியன்} மகனான வலிமைமிக்கக் கர்ணன், போரில் அந்த ராட்சசனுடன் எங்கே மோதுகிறானோ அந்த இடத்திற்குப் பெரும்படை சூழச் செல்வாயாக.(3) ஓ! கௌரவங்களை அளிப்பவனே {துச்சாசனா}, துருப்புகள் சூழ மூர்க்கமாக முயன்று, போரில் கர்ணனைக் காப்பாயாக.(4) நமது கவனக்குறைவால் அந்த ராட்சசன் {கடோத்கசன்}, கர்ணனைக் கொல்லாதிருக்கட்டும்” என்றான்.(5)

அதே வேளையில், தாக்குபவர்களில் முதன்மையான ஜடாசுரனின் வலிமைக்க மகன் {அலம்புசன் / அலம்பலன்}, துரியோதனனை அணுகி, அவனிடம், “ஓ! துரியோதனா, உன்னால் ஆணையிடப்படும் நான், போரில் எளிதில் வெல்லப்பட முடியாத போர்வீரர்களும், புகழ்பெற்ற உன் எதிரிகளுமான பாண்டவர்களையும், அவர்களைப் பின்தொடர்வோரையும் கொல்ல விரும்புகிறேன். ராட்சசர்களில் முதன்மையானவரும் வலிமைமிக்கவருமான ஜடாசுரரே என் தந்தையாவார். முன்பொரு சமயம்,(6,7) பிருதையின் {குந்தியின்} அற்ப மகன்கள், ராட்சசர்களைக் கொல்லும் சில மந்திரங்களைச் சொல்லி அவரைக் {ஜடாசுரரைக்} கொன்றனர் [1]. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, இறந்து போன என் தந்தைக்கு {ஜடாசுரருக்கு}, அவரது எதிரிகளின் குருதியையும்,(8) இறைச்சியையும் காணிக்கையளித்து அவரை வழிபட விரும்புகிறேன். {என் தந்தையின் கொலைக்காக நான் பாண்டவர்களைப் பழி வாங்க விரும்புகிறேன்}. {இதற்கு} எனக்கு அனுமதி அளிப்பதே உனக்குத் தகும்” என்றான் {அலம்புசன்}.இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {துரியோதனன்}, மிகவும் மகிழ்ந்து, அவனிடம் {அந்த ஜடாசுரன் மகனான அலம்புசனிடம்}, “துரோணர், கர்ணன் மற்றும் பிறரின் துணையுடன் என் எதிரிகளை வெல்லத்தக்கவனாகவே நான் இருக்கிறேன். எனினும், ஓ! ராட்சசா {அலம்புசா}, என்னால் உத்தரவிடப்படும் நீ, மனிதனுக்குப் பிறந்தவனும், கடுஞ்செயல்களைச் செய்யும் ராட்சசனும், பாண்டவர்களின் நலனில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், எப்போதும் ஆகாயத்தில் நின்று கொண்டு, எங்கள் யானைகள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்களைப் போரில் கொல்பவனுமான கடோத்கசனிடம் போரிட்டு, அப்போரில் அவனைக் கொல்வாயாக.(10,11) ஓ! அவனை {கடோத்கசனை} யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவாயாக” என்றான் {துரியோதனன்}.

“அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி கடோத்கசனைப் போருக்கு அழைத்த(12) அந்த ஜடாசுரன் மகன் {அலம்புசன்}, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களால் அந்தப் பீமசேனன் மகனை {கடோத்கசனை} மறைத்தான். எனினும், அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} தனியனாகவும், ஆதரவற்றவனாகவும் இருந்தாலும், மேகத்திரள்களை அழிக்கும் சூறாவளியைப் போல அலசம்புசனையும் [2], கர்ணனையும், பரந்த குரு படையையும் கலங்கடிக்கத் தொடங்கினான். (கடோத்கச) மாயையின் சக்தியைக் கண்ட அந்த ராட்சசன் அலம்புசன்,(13,14) பல்வேறு வகைகளிலான கணைமாரிகளால் கடோத்கசனை மறைத்தான். பீமசேனன் மகனை {கடோத்கசனைப்} பல கணைகளால் துளைத்த அலம்புசன்,(15) நேரம் எதையும் இழக்காமல், தன் கணைகளால் பாண்டவப் படையைப் பீடிக்கத் தொடங்கினான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனால் {அலம்புசனால்} இப்படிப் பீடிக்கப்பட்ட பாண்டவத் துருப்புகள்,(16) சூறாவளியால் விரட்டப்படும் மேகங்களைப் போல அந்த நள்ளிரவில் அணிபிளந்து தப்பி ஓடின. அதே போலவே, கடோத்கசனின் கணைகளால் சிதைக்கப்பட்ட உமது படையும்,(17) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த நள்ளிரவில் தங்கள் தீப்பந்தங்களைக் கீழே வீசிவிட்டு ஆயிரக்கணக்கில் தப்பி ஓடினர்.அப்போது பெருங்கோபத்தால் தூண்டப்பட்ட அலம்புசன், யானையைத்தாக்கும் பாகனைப் போல, அந்தப் பயங்கரப் போரில் பீமசேனன் மகனை {கடோத்கசனைக்} கணைகள் பலவற்றால் தாக்கினான். பிறகு கடோத்கசன், தனது எதிரியின் {அலம்புசனின்} தேர், சாரதி, மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் நுண்ணியத் துண்டுகளாக வெட்டி, அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சிரித்தான். அப்போது கடோத்கசன், மேருவின் மலைகளில் மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கர்ணன், அலம்புசன் மற்றும் குருக்கள் {கௌரவர்கள்} அனைவரின் மீதும் கணைமாரிகளைப் பொழிந்தான். அந்த ராட்சசனால் பீடிக்கப்பட்ட குரு {கௌரவப்} படையானது மிகவும் கலங்கிப் போனது.(18-21) நால்வகைப்படையணிகளையும் கொண்ட உமது படையானது, ஒன்றையொன்று நெருக்கி நசுக்கத் தொடங்கியது. அப்போது தேரற்றவனாகவும், சாரதியற்றவனாகவும் இருந்த ஜடாசுரன் மகன் {அலம்புசன்},(22) கோபத்தால் நிறைந்து, அந்தப் போரில் தன் கைமுட்டிகளால் கடோத்கசனைத் தாக்கினான். இப்படித் தாக்கப்பட்ட கடோத்கசன்,(23) மரங்கள், கொடிகள், புற்களுடன் கூடிய மலையானது, நிலநடுக்கத்தின் போது நடுங்குவதைப் போல நடுங்கினான்.

பிறகு, சினத்தால் வெறிகொண்ட பீமசேனன் மகன் {கடோத்கசன்}, பரிகத்துக்கு {முட்களுடன் கூடிய கதாயுத்துக்கு} ஒப்பானதும், எதிரியைக் கொல்வதுமான தன் கரத்தை உயர்த்தி, அந்தச் ஜடாசுரன் மகனை {அலம்புசனைக்} கடுமையாகக் குத்தினான். சினத்தால் அவனை {அலம்புசனை} நசுக்கிய அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, விரைவாக அவனைக் கீழே தூக்கி எறிந்து,(24,25) இரண்டு கரங்களாலும் அவனைப் {அலம்புசனைப்} பற்றிக் கொண்டு, பெரும்பலத்துடன் அவனைப் பூமியில் அழுத்தத் தொடங்கினான். பிறகு, கடோத்கசனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எழுந்த அந்த ஜடாசுரன் மகன் {அலம்புசன்},(26) பெரும் மூர்க்கத்துடன் கடோத்கசனைத் தாக்கினான். அந்த அலம்புசனும், ராட்சசனான கடோத்கசனை அந்தப் போரில் இழுத்து கீழே வீசியெறிந்து, சினத்துடன் அவனைப் பூமியின் பரப்பில் நசுக்கத் தொடங்கினான்.

முழங்கிக் கொண்டிருந்தவர்களும், ராட்சசப் போர்வீரர்களுமான கடோத்கசன் மற்றும் அலசம்புசன் ஆகிய அந்த இருவருக்கிடையில் நடந்த போரானது மிகக் கடும் நிலையை அடைந்து, மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தியது. தங்கள் மாய சக்திகளின் மூலம் ஒருவரையொருவர் விஞ்ச முயன்றவர்களும், செருக்குமிக்கவர்களுமான அந்தப் போர்வீரர்கள்,(27-29) இந்திரனையும் விரோசனன் மகனையும் போலப் பெரும் சக்தியுடன் ஒருவரோடு ஒருவர் போரிட்டனர். நெருப்பு மற்றும் கடலாகவும், மேலும், கருடன் மற்றும் தக்ஷகனாகவும்,(30) மேலும், மேகம் மற்றும் சூறாவளியாகவும், பிறகு இடி மற்றும் பெரும் மலையாகவும், மீண்டும் யானை மற்றும் புலியாகவும், பிறகு ராகு மற்றும் சூரியனாகவும்(31) மாறி மாறி, ஒருவரையொருவர் அழிக்க வேண்டி, இப்படியே நூறு வகைகளிலான மாயைகளை வெளிப்படுத்தினர். உண்மையில், அலம்புசனும், கடோத்கசனும், பரிகங்கள், கதாயுதங்கள், வேல்கள், உலக்கைகள், கோடரிகள், குறுகதைகள் {முத்கரங்கள்} மற்றும் மலைச்சிகரங்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கி அற்புதமாகப் போரிட்டனர்.(32,33) பெரும் மாய சக்திகளைக் கொண்டவர்களான அந்த ராட்சசர்களில் முதன்மையானோர் இருவரும், குதிரையின் முதுகில் ஏறியோ, யானையிலோ, காலிலோ, தேரிலோ சென்று ஒருவரோடு ஒருவர் போரிட்டனர்.(34)

அப்போது அலம்புசனைக் கொல்ல விரும்பிய அந்தக் கடோத்கசன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்துடன் உயரப் பறந்து, பிறகு ஒரு பருந்தைப் போலப் பெரும் வேகத்துடன் கீழே இறங்கினான்.(35) தன்னுடன் இப்படிப் போராடிக் கொண்டிருந்தவனும், பெரும் உடல் படைத்தவனுமான அந்த ராட்சச இளவரசனான அலம்புசனைப் பிடித்து, போரில் (அசுரன்) மயனைக் கொன்ற விஷ்ணுவைப் போல அவனைப் பூமியில் நசுக்கினான்.(36) அளவற்ற ஆற்றலைக் கொண்ட கடோத்கசன், அற்புதத் தோற்றத்துடன் கூடிய ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு, சீற்றமும், வலிமையும் கொண்டவனான தன் எதிரியினுடையதும், பயங்கரமாக அலறிக் கொண்டே இருந்ததுமான அவனுடைய {அலம்புசனின்} பயங்கரத் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(37,38) குருதியில் நனைந்த அந்தத் தலையை மயிரோடு பற்றிக் கொண்ட கடோத்கசன், விரைவாகத் துரியோதனனின் தேரை நோக்கிச் சென்றான். (குரு மன்னனை) அணுகிய அந்த வலிமைமிக்க ராட்சசன் {கடோத்கசன்} சிரித்துக் கொண்டே, பயங்கர முகமும், மயிரும் கொண்ட அந்தத் தலையைத் துரியோதனனின் தேரில் வீசினான்.(40)

அப்போது, மழைக்கால மேகங்களைப் போல ஆழமான கடும் முழக்கம் செய்த அவன் {கடோத்கசன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தத் துரியோதனனிடம்,(41) “நீர் எவனுடைய ஆற்றலைப் பார்த்துக் கொண்டிருந்தீரோ அந்த உமது கூட்டாளி {அலம்புசன் [அலம்பலன்]} இப்போது கொல்லப்பட்டான். மேலும் கர்ணன் மற்றும் உமது கொலையையும் நீர் காண்பீர்.(42) அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய இம்மூன்றையும் நோற்பவன் எவனும், மன்னன் ஒருவனையோ, பிராமணன் ஒருவனையோ, பெண் ஒருத்தியையோ வெறுங்கையுடன் காண {செல்லக்} கூடாது[3].(43) கர்ணனை நான் கொல்லும் வரையில் மகிழ்ச்சியாக வாழ்வீராக” என்றான். இவ்வார்த்தைகளைச் சொன்ன அவன் {கடோத்கசன்} நூற்றுக்கணக்கான கூரிய கணைகளைக் கர்ணனின் தலையில் ஏவியபடியே அந்தக் கர்ணனை நோக்கிச் சென்றான்.(44) அதன் பிறகு, அந்த மனிதப் போர்வீரனுக்கும் {கர்ணனுக்கும்}, அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடைபெற்ற போரானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், மிக அற்புதமானதாகவும் இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(45)

கர்ண கடோத்கசக் கடும்போர்! – துரோண பர்வம் பகுதி – 175-கடோத்கசனின் மேனி, கவசம், ஆயுதங்கள் மற்றும் தேர் ஆகியவை குறித்த வர்ணிப்பு; கர்ணனுக்கும் கடோத்கசனுக்கும் இடையிலான கடும் மோதல்; கடோத்கசன் வெளிப்படுத்திய மாயாசக்திகள்; கடோத்கசனின் மாயையை அழித்த கர்ணன்; கர்ணனின் வில்லை அறுத்த கடோத்கசன்; கடோத்கசனின் மாயையை மீண்டும் அழித்த கர்ணன்; கர்ணனைக் கொல்லப்போவதாகச் சொன்ன கடோத்கசன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “உண்மையில், அந்த நள்ளிரவில், விகர்த்தனன் மகன் கர்ணனும், ராட்சசன் கடோத்கசனும் ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட அந்தப் போர் எவ்வாறு நடந்தது?(1) அப்போது அந்தக் கடும் ராட்சசன் {கடோத்கசன்} என்ன தன்மையைப் பெற்றிருந்தான்? என்ன வகைத் தேரில் அவன் ஏறி வந்தான்? மேலும் அவனது குதிரைகள் மற்றும் ஆயுதங்களின் இயல்பு யாவை?(2) அவனது குதிரைகள், அவனது தேரின் கொடிமரம் மற்றும் அவனது வில்லின் அளவுகள் யாவை? என்ன வகைக் கவசத்தை அவன் அணிந்திருந்தான்? மேலும் அவன் என்ன வகையில் தலைப்பாகையை அணிந்திருந்தான்? ஓ! சஞ்சயா, உரைப்பதில் திறனுள்ள நீ, நான் கேட்கும் இவை யாவற்றையும் விரிவாகச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.(3)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இரத்தச் சிவப்பான கண்களைக் கொண்ட கடோத்கசன், மிகப் பெரிய வடிவத்தைக் கொண்டிருந்தான். அவனது {கடோத்கசனது} முகம் தாமிரத்தின் நிறத்தைக் கொண்டிருந்தது. அவனது வயிறு ஒட்டி சரிந்திருந்தது. அவன் உடலின் மயிர்கள் அனைத்தும் மேல் நோக்கி விறைத்துக் கொண்டிருந்தன. அவனது தலை பச்சையாக இருந்தது [1] அவனது காதுகள் அம்புகளைப் போல இருந்தன. அவனது தாடை எலும்புகள் {மோவாய்} பருத்திருந்தன.(4) அவனது வாயானது, காதிலிருந்து {மற்றொரு} காதுவரை விரிந்திருந்தது. அவனது {கடோத்கசனது}  பற்கள் கூர்மையாக இருந்தன, மேலும் அதில் நான்கு {பற்கள்} கூர்மையுடன் உயர்ந்திருந்தன. அவனது நாவும் உதடுகளும் மிக நீளமாகவும், தாமிர வண்ணத்திலும் இருந்தன. அவனது {கடோத்கசனது}  புருவங்கள் நீண்டு பரந்திருந்தன. அவனது மூக்கு பருத்திருந்தது.(5) அவனது {கடோத்கசனது}  உடல் நீலமாகவும், கழுத்து சிவப்பாகவும் இருந்தது. மலைபோல உயரமாக இருந்த அவன் {கடோத்கசன்} பார்ப்பதற்குப் பயங்கரமானவனாக இருந்தான். பெரும் உடற்கட்டு, பெரும் கரங்கள், பெரும் தலை ஆகியவற்றுடன் கூடிய அவன் பெரும் வலிமையைக் கொண்டிருந்தான்.(6)அழகற்றவனும், {தீண்டுவற்குக்} கடும் அங்கங்கள் கொண்டவனுமான அவனது {கடோத்கசனது}  தலையில் இருந்த மயிர் பயங்கர வடிவில் மேல்நோக்கிக் கட்டப்பட்டிருந்தது. அவனது இடை பெருத்திருந்தது, அவனது நாபி ஒடுங்கியிருந்தது. பெரும் உடற்கட்டைக் கொண்டிருந்தாலும் அவனது {கடோத்கசனது} உடலின் சுற்றளவு பெரிதாக {அவன் பருமனாக} இல்லை.(7) அவனது {கடோத்கசனது}  கரங்களின் ஆபரணங்கள் சரியான அளவுகளில் இருந்தன. பெரும் மாயாசக்திகளைக் கொண்டிருந்த அவன் அங்கதங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தான். மலையின் சாரலில் ஒரு நெருப்புக் கோளத்தைப் போல, தன் மார்பில் அவன் மார்புக் கவசத்தை அணிந்திருந்தான்.(8) அவனது {கடோத்கசனது}  தலையில், தங்கத்தாலானதும், பிரகாசமானதும், அழகானதும், அனைத்துப் பகுதிகளிலும் சரியான அளவுகளைக் கொண்டதும், ஒரு வளைவைப் போன்றதுமான ஓர் அழகிய கிரீடம் இருந்தது.(9) அவனது {கடோத்கசனது}  காது குண்டலங்கள் காலைச் சூரியனைப் போலப் பிரகாசமாக இருந்தன, அவனது மாலையானது, தங்கத்தாலானதும், மிகப் பிரகாசமானதாகவும் இருந்தது. அவன் {கடோத்கசன்}, தனது உடலில் பெரும் பிரகாசமுடையதும், பெரிய அளவு உடையதுமான ஒரு வெண்கலக் கவசத்தைக் கொண்டிருந்தான்.(10)

அவனது {கடோத்கசனது}  தேரானது, நூறு கிங்கிணி மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரத்தச் சிவப்புடைய எண்ணற்ற கொடிகள் அவனது கொடிமரத்தில் அசைந்து கொண்டிருந்தன. பிரம்மாண்ட அளவீடுகளைக் கொண்டதும், ஒரு நல்வம் {நானூறு சதுர முழம்} பரப்பளவு கொண்டதுமான அந்தத் தேர் கரடித் தோல்களால் மூடப்பட்டிருந்தது.(11) வலிமைமிக்க அனைத்து ஆயுதங்களையும் கொண்டிருந்த அது, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, ஓர் உயரமான கொடிமரத்தையும், எட்டு சக்கரங்களையும் கொண்டிருந்தது. அதன் சடசடப்பொலி மேகங்களின் கர்ஜனைக்கு ஒப்பாக இருந்தது.(12) சிவந்த கண்களைக் கொண்ட அவனது {கடோத்கசனது}  குதிரைகள், மத யானைகளைப் போல இருந்தன. மேலும் பயங்கரத் தன்மை கொண்டு பல்வேறு வண்ணங்களில் இருந்த அவை பெரும் வேகமும் வலிமையும் கொண்டவையாக இருந்தன.(13) களைப்பு அனைத்துக்கும் மேம்பட்டு, நீண்ட பிடரிமயிர்களால் அலங்கரிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் கனைத்துக் கொண்டே இருந்த அவை அந்த வீரனைப் {கடோத்கசனைப்} போருக்குச் சுமந்து சென்றன.(14) அவனது {கடோத்கசனது}  சாரதியாகச் செயல்பட்ட ஒரு ராட்சசன், பயங்கரமான கண்கள், நெருப்பு போன்ற வாய், சுடர்மிக்கக் காதுகுண்டலங்கள் ஆகியவற்றைக் கொண்டு, அந்தப் போரில் சூரியனின் கதிர்களுக்கு ஒப்பான தனது குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு அவற்றை {குதிரைகளைச்} செலுத்தினான்.(15) அருணனைச் சாரதியாகக் கொண்ட சூரியனைப் போல, அந்தச் சாரதியுடன் அவன் {கடோத்கசன்} போருக்கு வந்தான். பெரும் மேகங்களால் சூழப்பட்ட உயர்ந்த மலையைப் போலத் தெரிந்ததும், வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்ததுமான மிக உயரமான கொடிமரம் ஒன்று அவனது {கடோத்கசனது}  தேரில் நிறுவப்பட்டிருந்தது.(16) இரத்தச் சிவப்பிலானதும், ஊனுண்ணுவதுமான பயங்கரக் கழுகொன்று அதில் அமர்ந்திருந்தது.(17)

இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான நாணொலி கொண்டதும், மிகக் கடினமான நாணைக் கொண்டதும் நீளத்தில் பனிரெண்டு முழங்களும்[2], அகலத்தில் ஒரு முழமும் கொண்டதுமான தன் வில்லைப் பலமாக வளைத்தபடியே அவன் {கடோத்கசன்} வந்தான்.(18) ஒரு தேருடைய அக்ஷத்தின் {ஏர்க்காலின்} அளவுடைய கணைகளால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்த அந்த ராட்சசன் {கடோத்கசன்}, வீரர்களுக்குப் பெரும் அழிவை உண்டாக்கியபடியே அந்த இரவில் கர்ணனை எதிர்த்து விரைந்தான்.(19) தன் தேரில் செருக்குடன் நின்று கொண்டிருந்த அவன் {கடோத்கசன்}, தனது வில்லை வளைத்த போது, அந்த நாணொலியானது இடியின் முழக்கத்திற்கு ஒப்பாக இருந்தது.(20) அவனால் அச்சத்திற்குள்ளான துருப்புகள் அனைத்தும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பொங்கும் கடலின் அலைகளைப் போல நடுக்கத்தை அடைந்தன.(21) பயங்கரக் கண்களை உடையவனும், அச்சத்தை ஏற்படுத்துபவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்} தன்னை எதிர்த்து வருவதைக் கண்ட அந்த ராதையின் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே அவனைத் தடுத்து எதிர்த்து நின்றான்.(22)அந்த ராட்சசனை எதிர்த்துச் சென்ற கர்ணன், யானையை எதிர்க்கும் மற்றொரு யானை போலவோ, காளையை எதிர்க்கும் மற்றொரு காளையைப் போலவோ அவனை மிக அருகில் இருந்து பதிலுக்குத் தாக்கினான்.(23) கர்ணனுக்கும், அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடந்த மோதலானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனுக்கும் சம்பரனுக்கும் இடையில் நடந்த மோதலைப் போலப் பயங்கரத்தை அடைந்தது.(24) அவர்கள் ஒவ்வொருவரும் உரக்க நாணொலியெழுப்பும், உறுதி மிக்க விற்களை எடுத்துக் கொண்டு {தங்களில்} மற்றவனைப் பலமிக்கக் கணைகளால் மறைத்தனர்.(25) முற்று முழுதாக வளைக்கப்பட்ட விற்களில் இருந்து நேரான கணைகளை ஏவிய அவர்கள், வெண்கலத்தால் ஆன அவர்களது கவசங்களைத் துளைத்து ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(26) தங்கள் பற்களைக் கொண்டோ, தந்தங்களைக் கொண்டோ சிதைத்த இரு புலிகளைப் போலவோ, வலிமைமிக்க யானைகளைப் போலவோ அவர்கள் அக்ஷங்களின் அளவைக் கொண்ட ஈட்டிகளாலும் கணைகளாலும் ஒருவரையொருவர் சிதைத்துக் கொள்வதைத் தொடர்ந்தனர்.(27)

ஒருவரையொருவர் கணைகளால் குறிபார்த்து, தங்கள் ஒவ்வொருவரின் உடல்களையும் சிதைத்துக் கொண்டும், கணை மேகங்களால் ஒருவரையொருவர் எரித்துக் கொண்டும் இருந்த அவர்கள், பார்க்கப்பட இயலாதவர்களானார்கள்.(28) கணைகளால் துளைத்துச் சிதைக்கப்பட்ட அங்கங்களுடன், குருதியோடையில் குளித்த அவர்கள், தங்கள் சாரல்களில் செஞ்சுண்ண சிற்றாறுகள் ஓடிக் கொண்டிருக்கும் இரு மலைகளைப் போலத் தெரிந்தனர்.(29) இந்த இரு வலிமைமிக்கத் தேர்வீரர்களும் மூர்க்கமாகப் போராடினாலும், கூர்முனை கணைகளால் அங்கங்களைத் துளைத்தாலும், ஒருவரையொருவர் நடுங்கச் செய்வதில் தோல்வியே கண்டனர்.(30) உயிரையே பணயம் வைத்து ஆடப்படும் விளையாட்டாகத் தெரிந்ததும், கர்ணனுக்கும், ராட்சனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையிலானதுமான அந்த இரவு போரானது, நெடுநேரத்திற்குச் சமமாகவே தொடர்ந்து கொண்டிருந்தது. கூரிய கணைகளைக் குறிபார்த்து, அவற்றைத் தன் முற்று முழுதான பலத்துடன் ஏவிய கடோத்கசனுடைய வில்லின் நாணொலியானது நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இருவரையும் அச்சத்திற்குள்ளாக்கியது.(32)

அந்நேரத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணனால் கடோத்கசனை விஞ்ச முடியவில்லை. ஆயுதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான அவன் {கர்ணன்}, இதைக் கண்டு, தெய்வீக ஆயுதங்களை இருப்புக்கு அழைத்தான்.(33) கர்ணனால் தன் மீது குறிபார்க்கப்படும் தெய்வீக ஆயுதத்தைக் கண்டவனும், ராட்சசர்களில் முதன்மையானவனுமான கடோத்கசன், தன் ராட்சச மாயையை இருப்புக்கு அழைத்தான்.(34) வேல்கள், பெரும்பாறைகள், மலைகள், தண்டங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தவர்களும், பயங்கரத் தோற்றங்களைக் கொண்டவர்களுமான ராட்சசர்களின் பெரும்படையால் சூழப்பட்டவனாக அவன் {கடோத்கசன்} தெரிந்தான்.(35) கடுமையான தன் மரணத்தண்டத்தை ஏந்திவருபவனும், உயிரினங்கள் அனைத்தையும் அழிப்பவனான காலனைப் போலத் (தன் கரங்களில்) உயர்த்திப் பிடிக்கப்பட்ட வலிமைமிக்க ஆயுதத்துடன் முன்னேறி வருபவனுமான கடோத்கசனைக் கண்ட மன்னர்கள் அனைவரும் அச்சத்தால் தாக்கப்பட்டனர்.(36) கடோத்கசனால் செய்யப்பட்ட சிங்க முழக்கங்களால் அச்சமடைந்த யானைகள் சிறுநீரைக் கழித்தன; போராளிகள் அனைவரும் அச்சத்தால் நடுங்கினர்.(37)

அப்போது, அந்த நள்ளிரவின் விளைவால் பெரும் பலத்தை அடைந்த அந்த ராட்சசர்களால் இடையறாமல் பொழியப்பட்ட பாறைகள் மற்றும் கற்களின் அடர்த்தியான மழையானது அனைத்துப் பக்கங்களிலும் விழுந்தது[3].(38) இரும்புச் சக்கரங்கள், புசுண்டிகள், ஈட்டிகள், வேல்கள், சூலங்கள், சதக்னிகள், கோடரிகள் ஆகியனவும் இடையறாமல் தொடர்ச்சியாக விழுத்தொடங்கின.(39). கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரைக் கண்ட மன்னர்கள் அனைவரும், உமது மகன்களும், பிற போராளிகளும் அச்சத்தால் தப்பி ஓடினர்.(40) அவர்களில், தன் ஆயுத சக்தியில் செருக்குடையவனும், உன்னதமான பெருமையை உணர்ந்தவனுமான கர்ணன் மட்டுமே நடுங்காதிருந்தான். உண்மையில் அவன் {கர்ணன்}, கடோத்சகசனால் இருப்புக்கு அழைக்கப்பட்ட அந்த மாயையைத் தன் கணைகளால் அழித்தான்.(41) தன் மாயை அகற்றப்பட்டதைக் கண்ட கடோத்கசன், சினத்தால் நிறைந்து, அந்தச் சூதன் மகனை {கர்ணனைக்} கொல்ல விரும்பி, மரணக் கணைகளை ஏவத் தொடங்கினான்.(42) குருதியில் குளித்த அந்தக் கணைகள், அந்தப் பயங்கரப் போரில் கர்ணனின் உடலின் ஊடாகத் துளைத்துச் சென்று, கோபக்காரப் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன.(43)பிறகு, சினத்தால் நிறைந்தவனும், பெரும் கரநளினத்தைக் கொண்டவனுமான அந்த வீரச் சூதமகன் {கர்ணன்}, கடோத்கசனை விஞ்சி, பத்து கணைகளால் பின்னவனை {கடோத்கசனைத்} துளைத்தான்.(44) அப்போது கடோத்கசன், இப்படிச் சூதன் மகனால் {கர்ணனால்} முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு, ஆயிரம் ஆரங்களைக் கொண்ட ஒரு தெய்வீகச் சக்கரத்தை எடுத்துக் கொண்டான்.(45) அந்தச் சக்கரத்தின் முனையானது கத்தியைப் போலக் கூர்மையாக இருந்தது. காலைச் சூரியனின் காந்தியைக் கொண்டவனும், ஆபரணங்கள் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, அதிரதன் மகனுக்கு {கர்ணனுக்கு} ஒரு முடிவை ஏற்படுத்த விரும்பி அஃதை அவன் மீது வீசினான்.(46) அந்தச் சக்கரம் பெரும் சக்தி கொண்டதாக இருப்பினும், அது பெரும் வலிமையுடன் வீசப்பட்டு இருப்பினும், பேறில்லா மனிதனின் நம்பிக்கைகளையும், காரியங்களையும் போல நோக்கங்கள் கலங்கடிக்கப்பட்டு, கர்ணனின் கணைகளால் துண்டுகளாக வெட்டப்பட்டுக் கீழே விழுந்தது.(47) தன் சக்கரம் கலங்கடிக்கப்பட்டதைக் கண்டு சினத்தால் நிறைந்த கடோத்கசன், சூரியனை மறைக்கும் ராகுவைப் போலக் கணைமாரியால் கர்ணனை மறைத்தான்.(48) எனினும், ருத்ரன், அல்லது இந்திரனின் தம்பி {விஷ்ணு}, அல்லது இந்திரனின் ஆற்றலைக் கொண்ட அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, சிறகுபடைத்த கணைகளால் கடோத்கசனின் தேரை அச்சமில்லாமல் ஒரு கணத்தில் மறைத்தான்.(49)

அப்போது தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கதாயுதத்தைச் சுழற்றிய கடோத்கசன், அதைக் கர்ணனின் மீது வீசினான். எனினும் கர்ணன், தன் கணைகளால் வெட்டி அதைக் கீழே விழச் செய்தான்.(50) பிறகு வானத்திற்குப் பறந்து சென்று, மேகத்திரள்களைப் போல ஆழ முழங்கியவனும், பெரும் உடல் படைத்தவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்}, ஆகாயத்தில் இருந்து மரங்களின் மழையைச் சரியாகப் பொழிந்தான்.(51) பிறகு கர்ணன், மேகத்திரள்களைத் தன் கதிர்களால் துளைக்கும் சூரியனைப் போல, மாயைகளை அறிந்தவனும், வானத்தில் இருந்தவனும், பீமசேனனின் மகனுமான கடோத்கசனைத் தன் கணைகளால் துளைத்தான்.(52) பிறகு கடோத்கசனின் குதிரைகள் அனைத்தையும் கொன்று, அவனது தேரையும் நூறு துண்டுகளாக வெட்டிய கர்ணன், மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போலத் தன் கணைகளைப் பொழியத் தொடங்கினான்.(53) கர்ணனின் கணைகளால் துளைக்கப்படாத இடம் எனக் கடோத்கசனின் உடலில் இரண்டு விரல்கட்டை அகலம் கூட {இடம்} இல்லை. விரைவில் அந்த ராட்சசன் {கடோத்கசன்}, தன் உடலில் முட்கள் விறைத்து நிற்கும் முள்ளம்பன்றி ஒன்றைப் போலத் தெரிந்தான்.(54) கடோத்கசனின் குதிரைகளோ, தேரோ, கொடிமரமோ, ஏன் கடோத்கசனோ கூட எங்களுக்குத் தெரியாத அளவுக்கு அவன் முழுமையாகக் கணைகளால் மறைக்கப்பட்டிருந்தான்.(55)

அப்போது, மாய சக்திகளைக் கொண்ட கடோத்கசன் தன் ஆயுதத்தால் கர்ணனின் தெய்வீக ஆயுதத்தை அழித்து, தன் மாயா சக்திகளின் துணையுடன், அந்தச் சூதன் மகனுடன் {கர்ணனுடன்} போரிடத் தொடங்கினான்.(56) உண்மையில், மாயா சக்தியின் துணையுடனும், பெரும் சுறுசுறுப்பை வெளிப்படுத்திக் கொண்டும் அவன் {கடோத்கசன்} கர்ணனோடு போரிடத் தொடங்கினான். ஆகாயத்தில் கண் காணா இடத்திலிருந்து கணைமாரி பொழிந்தது.(57) பிறகு, பெரும் மாயா சக்திகளைக் கொண்ட அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, ஓ! குருக்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, அந்தச் சக்திகளின் துணையோடு, கடும் வடிவை ஏற்று, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கௌரவர்களை மலைப்படையச் செய்யத் தொடங்கினான்.(58) அந்த வீர ராட்சசன் {கடோத்கசன்}, உக்கிரமான கடும் தலைகள் பலவற்றை ஏற்று {பல தலைகளுடையவனாக மாறி}, சூதன் மகனின் {கர்ணனின்} தெய்வீக ஆயுதங்களை விழுங்கத் தொடங்கினான்.(59) மீண்டும் விரைவில், அந்தப் பெரும் உடல் படைத்த ராட்சசன் {கடோத்கசன்}, தன் உடலில் நூற்றுக்கணக்கான காயங்களுடன், உற்சாகமற்றுக் கிடப்பவனைப் போலவும், களத்தில் இறந்து கிடப்பவனைப் போலவும் தெரிந்தான்.(60)

அப்போது கடோத்கசன் இறந்துவிட்டான் என்று கருதிய கௌரவக் காளையர், (மகிழ்ச்சியால்) உரக்க முழங்கினர். எனினும், விரைவில் அவன் {கடோத்கசன்}, புதிய வடிவங்களை ஏற்று, அனைத்துப் பக்கங்களிலும் திரிவது காணப்பட்டது.(61) பிறகு மீண்டும் அவன் நூறு தலைகளுடனும், நூறு வயிறுகளுடனும் கூடிய மகத்தான வடிவத்தை ஏற்று, மைநாக மலையைப் போலத் தெரிந்தான்[4].(62) மீண்டும் அவன் ஒரு கட்டை விரலின் அளவுக்குச் சிறிய வடிவத்தை எடுத்துப் பொங்கும் கடலின் அலைகளைப் போல முன்னும் பின்னும் நகரவும், உயரப் பறக்கவும் செய்தான்.(64) பிறகு ஆகாயத்தில் இருந்து கீழே இறங்கிய அவன், தன் மாயா சக்திகளின் துணையுடன் திசைகளின் அனைத்துப் புள்ளிகளிலும், வானத்திலும், பூமியிலும் திரிந்து, {பிறகு} கவசம் தரித்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேரில் நிற்பவனாகத் தெரிந்தான்.(65)பிறகு தன் காது குண்டலங்கள் அங்கும் இங்கும் ஆடக் கர்ணனின் தேரை அணுகிய கடோத்கசன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதன் மகனிடம் {கர்ணனிடம்} அச்சமற்ற வகையில்,(66) “ஓ! சூதனின் மகனே {கர்ணரே} சற்றும் பொறுப்பீராக. என்னைத் தவிர்த்துவிட்டு, உம்மால் உயிருடன் எங்கே செல்ல முடியும்? உமது போரிடும் ஆசையை நான் இன்று இந்தப் போர்க்களத்தில் தணிப்பேன்” என்றான்.(67) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், கொடூர ஆற்றலைக் கொண்டவனும், கோபத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்தவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்}, வானத்தில் பறந்து சென்று உரக்கச் சிரித்தான்.(68) ஒரு சிங்கமானது, யானைகளின் இளவரசனைத் தாக்குவதைப் போல அவன் {கடோத்கசன்} ஒரு தேருடைய அக்ஷத்தின் அளவிலான தன் கணைகளின் மழையைப் பொழிந்து கர்ணனைத் தாக்கத் தொடங்கினான்.(69) உண்மையில் அவன், மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போலத் தேர்வீரர்களில் காளையான அந்தக் கர்ணனின் மீது கணை மாரியைப் பொழிந்தான். கர்ணனோ அந்தக் கணைமாரியைத் தொலைவிலிருந்தே அழித்தான்.(70)

கர்ணனால் தன் மாயை அழிக்கப்பட்டதைக் கண்ட கடோத்கசன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மீண்டும் ஒரு மாயையை உண்டாக்கி காணப்பட முடியாதவனாக மறைந்தான்.(71) பிறகு, நெடுமரங்கள் நிறைந்ததும், பல சிகரங்களைக் கொண்டதுமான ஓர் உயரமான மலையாக ஆனான். அந்த மலையில் இருந்து, வேல்கள், சூலங்கள், வாள்கள் மற்றும் கதாயுதங்களின் ஓடையானது இடையறாமல் பாய்ந்து கொண்டிருந்தது.(72) ஆகாயத்தில், கடும் ஆயுதங்களின் ஓடையுடன் கூடிய கரிய மை-குவியலுக்கு ஒப்பான அந்த மலையைக் கண்ட கர்ணன், அதனால் சற்றும் கலக்கமடையவில்லை.(73) சிரித்துக் கொண்டே இருந்த கர்ணன், ஒரு தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். அந்த ஆயுதத்தால் வெட்டப்பட்ட அந்தப் பெரும் மலை அழிக்கப்பட்டது.(74) பிறகு சீற்றமிக்கக் கடோத்கசன், வானவில்லுடன் கூடிய ஒரு நீல மேகமாகி, அந்தச் சூதனின் மகன் {கர்ணனின்} மீது கற்களின் மழையைப் பொழியத் தொடங்கினான்.(75) 

விருஷன் என்றும் அழைக்கப்பட்டவனும், ஆயுதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்த விகர்த்தனன் மகன் கர்ணன், ஒரு வாயவ்ய ஆயுதத்தைக் குறி பார்த்து, அந்தக் காளமேகத்தை அழித்தான்.(76) பிறகு திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் எண்ணற்ற கணைகளால் மறைத்த அவன் {கர்ணன்}, கடோத்கசனால் தன் மீது குறிபார்க்கப்பட்ட ஓர் ஆயுதத்தை அழித்தான்.(77) அப்போது பீமசேனனின் வலிமைமிக்க மகன் {கடோத்கசன்}, அந்தப் போரில் சிரித்துக் கொண்டே, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனுக்கு எதிராக மிகச் சக்தி வாய்ந்த ஒரு மாயையை மீண்டும் இருப்புக்கு அழைத்தான்.(78) சிங்கங்கள், புலிகள், மதங்கொண்ட யானைகள் ஆகியவற்றின் ஆற்றலுக்கு ஒப்பான ஆற்றலைக் கொண்டவர்களும், யானைகளில் ஏறிய சிலரும், தேர்களில் சிலரும், குதிரைகளின் முதுகில் சிலரும்(79-80) எனப் பல்வேறு ஆயுதங்களையும், கவசங்களையும், பல்வேறு வகைகளிலான ஆபரணங்களையும் தரித்து வந்தவர்களுமான அந்தப் பெரும் எண்ணிக்கையிலான ராட்சசர்கள் சூழ, மருத்தர்களால் சூழப்பட்ட வாசவனை {இந்திரனைப்} போலத் தன்னை அச்சமில்லாமல் அணுகுபவனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்தக் கடோத்கசனை மீண்டும் கண்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான கர்ணன் அவனுடன் {கடோத்கசனுடன்} மூர்க்கமாகப் போரிடத் தொடங்கினான்.(81) அப்போது கடோத்கசன், ஐந்து கணைகளால் கர்ணனைத் துளைத்து, மன்னர்கள் அனைவரையும் அச்சத்திற்குள்ளாக்கும் வகையில் உரக்க முழங்கினான்.(82)

மீண்டும் ஓர் அஞ்சலிகாயுதத்தை ஏவிய கடோத்கசன், கர்ணனால் ஏவப்பட்ட கணைமாரியுடன் சேர்த்து, பின்னவனின் {கர்ணனின்} கையில் இருந்த வில்லையும் விரைவாக அறுத்தான். பிறகு உறுதிமிக்கதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதும், இந்திரனின் வில்லைப் போன்று பெரிதாக இருப்பதுமான மற்றொரு வில்லை எடுத்த கர்ணன் அதைப் பெரும் பலத்துடன் வளைத்தான். அப்போது கர்ணன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எதிரியைக் கொல்பவையுமான சில கணைகளை அந்த வானுலாவும் ராட்சசர்களின் மீது ஏவினான். அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவர்களும், அகன்ற மார்புகளை உடையவர்களுமான அந்த ராட்சசர்களின் பெரும்படையானது, சிங்கத்தால் பீடிக்கப்படும் காட்டுயானைகளின் கூட்டத்தைப் போலக் கலக்கமடைவதாகத் தெரிந்தது.(83-86) குதிரைகள், சாரதிகள், யானைகள் ஆகியவற்றுடன் கூடிய அந்த ராட்சசர்களைத் தன் கணைகளால் அழித்த பலமிக்கக் கர்ணன், அண்ட அழிவின் போது உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் தெய்வீக அக்னியைப் போலத் தெரிந்தான்.(87) அந்த ராட்சசப் படையை அழித்த சூதன் மகன் {கர்ணன்}, (அசுரர்களின்) முந்நகரத்தை {திரிப்புரத்தை} எரித்து விட்டு, சொர்க்கத்தில் இருக்கும் தேவன் மகேஸ்வரனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(88)

பாண்டவத் தரப்பைச் சேர்ந்த அந்த ஆயிரக்கணக்கான மன்னர்களில், ஓ! ஐயா, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே},(89) பயங்கர சக்தியும், பலமும் கொண்டவனும், சினத்தால் தூண்டப்பட்டு யமனைப் போலத் தெரிந்தவனும், ராட்சசர்களின் இளவரசனுமான அந்த வலிமைமிக்கக் கடோத்கசனைத் தவிர வேறு எவராலும் கர்ணனைக் {கண்ணால்} காணவும் முடியவில்லை. கோபத்தால் தூண்டப்பட்ட அவனது விழிகள், இரண்டு தீப்பந்தங்களில் இருந்து விழும் சுடர்மிக்க எண்ணெய்யைப் போல, நெருப்பின் தழல்களை வெளியிடுவதாகத் தெரிந்தது.(90,91) உள்ளங்கையால் உள்ளங்கையைத் தட்டி, தன் கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டிருந்த அந்த ராட்சசன் {கடோத்கசன்},(92) யானைகளைப் போலத் தெரிபவையும், பிசாசங்களின் முகத்தைக் கொண்டவையுமான எண்ணற்ற {கோவேறு} கழுதைகள் பூட்டப்பட்டதும், தன் மாயையால் உண்டாக்கப்பட்டதுமான அந்தத் தேரில் மீண்டும் காணப்பட்டான்.(93) கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {கடோத்கசன்} தன் சாரதியிடம், “சூதன் மகனிடம் {கர்ணனிடம்} என்னை அழைத்துச் செல்வாயாக” என்றான். பிறகு அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {கடோத்கசன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனுடன் {கர்ணனுடன்} மீண்டும் தனிப்போரில் ஈடுபடுவதற்காகப் பயங்கரமாகத் தெரிந்த அந்தத் தேரில் சென்றான்.(94)

அந்த ராட்சசன் {கடோத்கசன்}, சினத்தால் தூண்டப்பட்டு, ருத்ரனின் கைவண்ணத்தில் ஆனதும், பயங்கரமானதும், எட்டுச் சக்கரங்களைக் கொண்டதுமான அசனி ஒன்றை அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} மீது வீசினான்.(95) தன் வில்லைத் தன் தேரில் கிடத்திய கர்ணன், பூமியில் கீழே குதித்து அந்த அசனியைப் பிடித்து மீண்டும் அதைக் கடோத்கசனின் மீதே வீசினான்.(96) எனினும் பின்னவன் {கடோத்கசன்}, (அவ்வாயுதம் தன்னை அடையும் முன்பே) தன் தேரில் இருந்து வேகமாகக் குதித்தான். அதே வேளையில் பெரும் பிரகாசமுடைய அந்த அசனியானது, குதிரைகள், சாரதி மற்றும் கொடிமரத்துடன் கூடிய அந்த ராட்சசனின் தேரைச் சாம்பலாக்கி,(97) தேவர்களும் ஆச்சரியத்தால் நிறையும்படி பூமியின் குடல்களுக்குள் {ஆழத்திற்குள்} சென்று மறைந்தது. தன் தேரில் இருந்து குதித்து அந்த அசனியைப் பிடித்த கர்ணனை அனைத்து உயிரினங்களும் பாராட்டின. அந்தச் சாதனையை அடைந்த கர்ணன் மீண்டும் தனது தேரில் ஏறினான்.(98,99) பிறகு, எதிரிகளை எரிப்பவனான அந்தச் சூதன் மகன் {கர்ணன்} தன் கணைகளை ஏவத் தொடங்கினான். உண்மையில், ஓ! கௌரவங்களை அளிப்பவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரப் போரில் கர்ணனால் சாதிக்கப்பட்ட சாதனையானது உயிரினங்கள் அனைத்திலும் எவராலும் சாதிக்க முடியாததாக இருந்தது.

மழைத்தாரைகளால் தாக்கப்படும் மலையைப் போலக் கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட அந்தக் கடோத்கசன்,(100,101) வானத்தில் உருகும் ஆவி வடிவங்களைப் போலக் காட்சியில் இருந்து மீண்டும் மறைந்தான். இம்முறையில் போரிட்டவனும், பெரும் உடல்படைத்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்}, தன் சுறுசுறுப்பின் மூலமாகவும், மாயா சக்திகளின் மூலமும், கர்ணனின் தெய்வீக ஆயுதங்களை அழித்தான். மாயா சக்திகளின் துணையுடன் அந்த ராட்சசனால் தன் ஆயுதங்கள் அழிக்கப்படுவதைக் கண்ட கர்ணன்,(102,103) அச்சத்தையடையாமல் அந்த மனித ஊனுண்ணியிடம் {கடோத்கசனிடம்} தொடர்ந்து போரிட்டான். பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட வலிமைமிக்க அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்},(104) தன்னையே பல பகுதிகளாப் பிரித்து (குரு படையின்) வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் அச்சுறுத்தினான். பிறகு அந்தப் போர்க்களத்தில் சிங்கங்களும், புலிகளும், கழுதைப்புலிகளும், {சிறுத்தைகளும்},(105) தீநாவுகளைக் கொண்ட பாம்புகளும், இரும்பு அலகுகளைக் கொண்ட பறவைகளும் வந்து சேர்ந்தன. கடோத்கசனைப் பொறுத்தவரை, கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளால் தாக்கப்பட்டவனும்,(106) மலைகளின் இளவரசனை (இமயத்தைப்) போலத் தெரிந்தவனுமான அந்தப் பெருவடிவ ராட்சசன் {கடோத்கசன்} அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(107)

பிறகு பல ராட்சசர்கள், பிசாசங்கள், யாதுதானர்களும்[5], பயங்கர முகங்களைக் கொண்டவையும் பெரும் எண்ணிக்கையிலானவையுமான நரிகளும், சிறுத்தைகளும் கர்ணனை விழுங்குவதற்காக அவனை நோக்கி விரைந்தன.(108) இவையாவும் சூதனின் மகனை {கர்ணனை} அச்சுறுத்துவதற்காகப் பயங்கரமாக அலறிக் கொண்டே அவனை {கர்ணனை} அணுகின. அந்தப் பயங்கரமானவைகள் ஒவ்வொன்றையும், அவற்றின் குருதியைக் குடிப்பவையும், வேகமாகச் செல்ல உதவும் இறகுகளைக் கொண்டவையுமான பயங்கரமான கணைகள் பலவற்றால் துளைத்தான். இறுதியாக அவன் {கர்ணன்} ஒரு தெய்வீக ஆயுதத்தைப் பயன்படுத்தி அந்த ராட்சசனின் மாயையை அழித்தான்.(109,110) பிறகு அவன் {கர்ணன்} நேரானவையும், கடுமையானவையுமான சில கணைகளால் கடோத்கசனின் குதிரைகளைத் தாக்கினான். உடைந்த சிதைந்த அங்கங்களுடன் கூடிய அவை {குதிரைகள்}, அந்தக் கணைகளால் தங்கள் முதுகுகள் வெட்டப்பட்டு,(111) கடோத்கசன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கீழே பூமியில் விழுந்தன. அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} தன் மாயை அகற்றப்பட்டதைக் கண்டு, மீண்டும் தன்னைக் காண முடியாதவனாக்கிக் கொண்டு, விகர்த்தனன் மகனான கர்ணனிடம், “நான் இப்போது உம்மை அழிக்கப் போகிறேன்” என்று சொன்னான்”{என்றான் சஞ்சயன்}.(112)

“ஹிடிம்பையைக் கற்பழித்தான் பீமன்!” என்ற அலாயுதன்! – துரோண பர்வம் பகுதி – 176-அலாயுதனின் வருகை; பகன், கிர்மீரன், ஹிடிம்பன் ஆகியோரின் கொலைக்காகப் பீமனைப் பழிவாங்கப் போவதாகத் துரியோதனனிடம் சொன்ன அலாயுதன்; அலாயுதனின் தோற்றம், ஆயுதங்கள் மற்றும் அலங்காரம் குறித்த விவரிப்பு…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கர்ணனுக்கும், ராட்சனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையிலான போர் நடந்து கொண்டிருந்தபோது, ராட்சசர்களின் இளவரசனான வீர அலாயுதன் (களத்தில்) அங்கே தோன்றினான்.(1) ஒரு பெரும் படையின் துணையுடன் அவன் {அந்த அலாயுதன்} துரியோதனனை அணுகினான். உண்மையில், பல்வேறு வடிவங்களையும், பெரும் வீரத்தையும் கொண்ட ஆயிரக்கணக்கான பயங்கர ராட்சசர்கள் பலரால் சூழப்பட்ட அவன் {அலாயுதன்}, (பாண்டவர்களுடனான) பழைய சச்சரவை நினைவு கூர்ந்து (அந்தக் களத்தில்) தோன்றினான்.(2) {முன்பொரு காலத்தில்} அவனது {அலாயுதனின்} உறவினனும், பிராமணர்களை உண்டுவந்தவனுமான {ராட்சசன்} வீர பகன், பெரும் சக்தி படைத்த கிர்மீரன், அவனது நண்பன் ஹிடிம்பன் ஆகியோர் {பீமனால்} கொல்லப்பட்டனர்[1]. அவன் {அந்த அலாயுதன்}, தன் பழைய சச்சரவை அடைகாத்தபடியே நீண்ட காலம் காத்திருந்தான்.(3,4) இரவு போரொன்று இப்போது நடைபெறுவதை அறிந்த அவன் {அலாயுதன்}, பீமனைக் கொல்லும் விருப்பத்தால் உந்தப்பட்டு, மதங்கொண்ட ஒரு யானையைப் போலவோ, கோபக்காரப் பாம்பைப் போலவோ அங்கே வந்தான்.(5)போரை விரும்பிய அவன் {அலாயுதன்}, துரியோதனனிடம், “ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, என் உறவினர்களான பகன், கிர்மீரன் மற்றும் ஹிடிம்பன் ஆகிய ராட்சசர்கள் பீமனால் கொல்லப்பட்டனர் என்பது நீ அறிந்ததே. முன்பு எங்களையும், பிற ராட்சசர்களையும் அலட்சியம் செய்த அவனால் {பீமனால்}, கன்னிப்பெண்ணான ஹிடிம்பை கற்பழிக்கப்பட்டாள்[2] எனும்போது இன்னும் நான் வேறு என்ன சொல்ல வேண்டும்?(6,7) ஓ! மன்னா {துரியோதனா} அந்தப் பீமனைப் பின்தொடர்பவர்கள் அனைவரையும், அவனது குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றோடு சேர்த்து அவனையும் {பீமனையும்}, அந்த ஹிடிம்பையின் மகனையும் {கடோத்கசனையும்}, அவனது நண்பர்களையும் கொல்லவே நான் இங்கே வந்தேன். நான் இன்று குந்தியின் மகன்கள் அனைவரையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, அவர்களுக்கு முன்பு நடந்து வருபவர்களையும் கொல்வேன், அவர்களைப் பின்தொடர்ந்து வருவோர் அனைவருடன் சேர்த்து அவர்களை நான் விழுங்கப் போகிறேன். உன் துருப்புகள் அனைத்தையும் போரில் இருந்து விலகிக் கொள்ள ஆணையிடுவாயாக. பாண்டவர்களோடு நாங்கள் போரிடப் போகிறோம்” என்றான் {அலாயுதன்}.(8-10)அவனது இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான். தன் தம்பியர்கள் அனைவரும் சூழ இருந்த அந்த மன்னன் {துரியோதனன்}, ராட்சசனின் {அந்த அலாயுதனின்} வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு,(11) “உன்னை முன்னிலையில் நிறுத்திக் கொண்டு, நாங்களும் எதிரியோடு போர்புரிவோம். எனது துருப்புகளின் பகை உணர்ச்சி இன்னும் தணியாததால், அவர்கள் அக்கறையில்லாத பார்வையாளர்களாக நிற்க மாட்டார்கள்” என்றான்.(12) அந்த ராட்சசக் காளை {அலாயுதன்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, மனித ஊனுண்ணும் தன் படையின் துணையுடன் பீமனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(13)

சுடர்மிக்க வடிவம் கொண்ட அந்த அலாயுதன், சூரியப் பிரகாசம் கொண்ட தேரில் ஏறி வந்தான். உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தத் தேரானது, கடோத்கசனின் தேரைப் போன்றே இருந்தது.(14) அலாயுதனுடைய தேரின் சடசடப்பொலியும் கடோத்கசனுடையதைப் போலவே ஆழமானதாக இருந்தது; மேலும் அது பல வளைவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்தப் பெரிய தேர் கரடித் தோல்களால் மறைக்கப்பட்டிருந்தது; மேலும் அஃது {அந்த தேர்} ஒரு நல்வம் {நானூறு முழம்} அளவைக் கொண்டிருந்தது.(15) அவனது குதிரைகள், கடோத்கசனுடையவையைப் போன்றே, பெரும் வேகம் கொண்டவையாகவும், வடிவில் யானைகளுக்கு, குரலில் கழுதைகளுக்கு ஒப்பானவையாகவும் இருந்தன. இறைச்சியும், குருதியும் உண்டு வாழ்பவையும் பெரும் வடிவைக் கொண்டவையுமான அவைகளைப் போன்ற நூறு உயிரினங்கள் அவனது {அலாயுதனின்} வாகனத்தில் பூட்டப்பட்டிருந்தன.(16) உண்மையில் அந்தத் தேரின் சடசடப்பொலியானது, கடோத்கசனுடையதைப் போலவே பெருமேகத்தின் ஆழமான முழக்கத்தைக் கொண்டிருந்தது.

அவனது வில்லும், அவனது எதிராளியுடையதை {கடோத்கசனுடையதைப்} போலவே பெரியதாகவும், வலிமையானதாகவும் இருந்தது, மேலும் அதனுடைய நாண்கயிறும் கடினமானதாக இருந்தது.(17) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அவனது கணைகளும், கடோத்கசனுடையவையைப் போன்றே பெரிதானவையாகவும், {தேர்களுடைய} அக்ஷங்களின் அளவுள்ளவையாகவும் இருந்தன. வீர அலாயுதன், கடோத்கசன் அளவுக்கு வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனாக இருந்தான்;(18) சூரியன் அல்லது நெருப்பின் காந்தியைக் கொண்ட அவனது தேரின் கொடிமரத்தில், கடோத்கசனுடையதைப் போலவே கழுகுகளும், அண்டங்காங்ககைகளும் அமர்ந்திருந்தன[3]வடிவில் அவன் கடோத்கசனைவிட அழகாக இருந்தான்; (கோபத்தில்) கலங்கியிருந்த அவனது முகமானது சுடர்மிக்கதாகத் தெரிந்தது.(19) சுடர்மிக்க அங்கதங்கள், சுடர்மிக்கக் கிரீடம், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாலைகள், தலைப்பாகை, வாள் ஆகியவற்றோடு, கதாயுதம், புசுண்டிகள், குறுங்கதாயுதங்கள் {உலக்கைகள்}, கலப்பைகள், வில், கணைகள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு, யானையைப் போன்ற கடினமான கருந்தோலுடன்,(20) நெருப்பின் காந்தி கொண்ட தேரில் ஏறி வந்த அவன் {அலாயுதன்}, பாண்டவப் படையைப் பீடித்து முறியடித்துக் கொண்டிருந்த போது, மின்னலின் கீற்றுகளால் அலங்கரிக்கப்பட்டு வானத்தில் திரியும் மேகத்தைப் போலத் தெரிந்தான்.(21) (அந்த அலாயுதன் போரிட வந்த போது), பெரும் வலிமை கொண்டவர்களும், (வாள் மற்றும்) கேடயம் தரித்துக் கவசம் பூண்டவர்களுமான பாண்டவப் படையின் முக்கிய மன்னர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் போரில் ஈடுபட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(22)

பீமன் அலாயுதன் மோதல்! – துரோண பர்வம் பகுதி – 177-கடோத்கசன் ஏற்படுத்திய அழிவைக் கண்டு, அவனோடு மோதுமாறு அலாயுதனைத் தூண்டிய துரியோதனன்; கர்ணனைக் கைவிட்டு, அலாயுதனை நோக்கிச் சென்ற கடோத்கசன்; அலாயுதனை எதிர்த்து விரைந்த பீமன்; பீமனுக்கும், அலாயுதனுக்கும் இடையில் நடந்த மோதல்; பீமசேனனைக் காக்க கடோத்கசனை அனுப்பிய கிருஷ்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பயங்கரச் செயல்களைப் புரியும் அலாயுதன் போருக்கு வந்ததைக் கண்ட கௌரவர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(1) அதே போலத் துரியோதனனைத் தங்கள் தலைமையில் கொண்ட உமது மகன்களும், கடலைக் கடக்க விரும்பும் தெப்பமற்ற மனிதர்கள், ஒரு தெப்பத்தைச் சந்திப்பதைப் போல (மகிழ்ச்சியால்) நிறைந்தனர்.(2) உண்மையில் குரு படையில் இருந்த மன்னர்கள், இறந்து மீண்டும் பிறந்தவர்களைப் போலத் தங்களைக் கருதிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் அலாயுதனை மரியாதையுடன் வரவேற்றனர்.(3) பயங்கரமானதும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதும், கடுமையானதுமாக இருந்தாலும், காண்பதற்கு இனிமையானதுமான அந்தப் போர் அவ்விரவில் கர்ணனுக்கும், அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது,(4) பிற க்ஷத்திரியர்கள் அனைவருடன் கூடிய பாஞ்சாலர்கள் சிரித்துக் கொண்டே பார்வையாளர்களாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதே வேளையில் உமது படைவீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (தங்கள் தலைவர்களாலும்), துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர் மற்றும் பிறரால் களம் முழுவதும் பாதுகாக்கப்பட்டாலும், “யாவும் தொலைந்தன” என்று உரக்க ஓலமிட்டனர்.(5) உண்மையில், ஹிடிம்பை மகனின் {கடோத்கசனின்} அந்தச் சாதனைகளைக் கண்ட உமது போர்வீரர்கள் அனைவரும் அச்சத்தால் கலங்கி, ஓலங்களிட்டு கிட்டத்தட்ட தங்கள் உணர்வுகளை {சுய நினைவை} இழந்தனர்.(6) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகள் அனைத்தும் கர்ணன் உயிர்வாழ்வான் என்பதில் நம்பிக்கை இழந்தனர்.(7)

அப்போது துரியோதனன், பெரும் துன்பத்தில் வீழ்ந்த கர்ணனைக் கண்டு, அலாயுதனை அழைத்து, அவனிடம்:(8) “அதோ விகர்த்தனன் மகன் கர்ணன், ஹிடிம்பையின் மகனோடு {கடோத்கசனோடு} போரிட்டு, போரில் தன் வலிமைக்கும், ஆற்றலுக்கும் தகுந்த சாதனைகளை அடைந்து வருகிறான்.(9) அந்தப் பீமசேனன் மகனால் {கடோத்கசனால்} பல்வேறு வகைகளிலான ஆயுதங்களால் தாக்கிக் கொல்லப்பட்டு, யானையால் முறிக்கபட்ட மரங்களைப் போல (களத்தில் கிடக்கும்) துணிச்சல்மிக்க மன்னர்களைப் பார்.(10) இந்தப் போரில் என் அரசப் போர்வீரர்கள் அனைவரிலும், ஓ! வீரா {அலாயுதா}, உனது அனுமதியுடன் என்னால் ஒதுக்கப்படும் இந்தப் பங்கு {கடோத்கசனைக் கொல்லும் காரியம்} உன்னுடையதாக இருக்கட்டும். உன் ஆற்றலை வெளிப்படுத்தி, இந்த ராட்சசனைக் கொல்வாயாக.(11) ஓ! எதிரிகளை நசுக்குபவனே, இந்த இழிந்த கடோத்கசன், அவனை நீ முடிப்பதற்கு {கொல்வதற்கு} முன்பே, மாயா சக்திகளின் துணையுடன் விகர்த்தனன் மகனான கர்ணனைக் கொல்லாதிருக்கட்டும்” என்றான் {துரியோதனன்}.(12) மன்னனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், கடும் ஆற்றலையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட அந்த ராட்சசன் {அலாயுதன்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி கடோத்கசனை எதிர்த்து விரைந்தான்.(13)

அப்போது பீமசேனன் மகன் {கடோத்கசன்}, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, கர்ணனைக் கைவிட்டு விட்டு, தன்னை நோக்கி வரும் எதிரியைத் தன் கணைகளால் கலங்கடிக்கத் தொடங்கினான்.(14) பிறகு அந்தக் கோபக்கார ராட்சச இளவரசர்களுக்குள் நடந்த போரானது, பருவ காலத்தில் உள்ள பெண்யானைக்காகக் காட்டில் போரிட்டுக் கொள்ளும் மதங்கொண்ட இரு யானைகளுக்கு ஒப்பாக இருந்தது.(15) அந்த ராட்சசனிடம் இருந்து விடுபட்டவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான கர்ணன், சூரியப்பிரகாசம் கொண்ட தன் தேரில் ஏறி பீமசேனனை எதிர்த்து விரைந்தான்.(16) சிங்கத்துடன் போரிடும் காளை பீடிக்கப்படுவதைப் போல அந்தப் போரில் கடோத்கசன், அலாயுதனுடன் போரிடுவதைக் கண்டவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான பீமன், முன்னேறி வரும் கர்ணனை அலட்சியம் செய்துவிட்டு, கணைமேகங்களை இறைத்தபடியே சூரியப்பிரகாசம் கொண்ட தன் தேரில் அலாயுதனை நோக்கி விரைந்தான்.(17,18) பீமன் முன்னேறுவதைக் கண்ட அலாயுதன், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, கடோத்கசனைக் கைவிட்டுவிட்டு, பீமனை எதிர்த்துச் சென்றான்.(19)

அப்போது ராட்சசர்களை அழிப்பவனான அந்தப் பீமன், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலாயுதனை} நோக்கி மூர்க்கமாக விரைந்து, கணைகளால் அவனை மறைத்தான்.(20) அதே போல எதிரிகளைத் தண்டிப்பவனான அலாயுதனும், கல்லில் கூராக்கப்பட்ட நேரான கணைகளால் அந்தக் குந்தியின் மகனை {பீமனை} மீண்டும் மீண்டும் மறைத்தான்.(21) பயங்கர வடிவங்களைக் கொண்டவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்தவர்களும், உமது மகன்களின் வெற்றியை விரும்பியவர்களுமான வேறு ராட்சசர்கள் அனைவரும் கூடப் பீமசேனனை எதிர்த்து விரைந்தனர்.(22) இப்படி அவர்களால் தாக்கப்பட்ட வலிமைமிக்கப் பீமசேனன், ஐந்து கூரிய கணைகளால் அவர்கள் ஒவ்வொருவரையும் துளைத்தான்.(23) பிறகு, பீமசேனனால் இப்படி வரவேற்கப்பட்டவர்களும், தீய புரிதலைக் கொண்டவர்களுமான அந்த ராட்சசர்கள், உரத்த ஓலமிட்டபடியே அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(24) தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்கள் பீமனால் அச்சுறுத்தப்பட்டதைக் கண்ட அந்த வலிமைமிக்க ராட்சசன் {அலாயுதன்}, பீமனை எதிர்த்து மூர்க்கமாக விரைந்து, கணைகளால் அவனை மறைத்தான்.(25)

பிறகு பீமசேனன், கூர்முனை கணைகளால் அந்தப் போரில் தன் எதிரியை பலவீனமடையச் செய்தான். பீமனால் அவனை {அலாயுதனை} நோக்கி ஏவப்பட்ட கணைகளில், சிலவற்றை அப்போரில் வெட்டிய அலாயுதன், பிறவற்றை {கையில்} பிடித்தான். பிறகு பயங்கர ஆற்றலைக் கொண்ட பீமன், அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலாயுதனை} நிலையாகப் பார்த்து,(26,27) வஜ்ரத்தின் சீற்றத்தைக் கொண்ட கதாயுதம் ஒன்றைப் பெரும் பலத்துடன் அவன் {அலாயுதன்} மீது வீசினான். நெருப்பின் தழலைப் போன்ற அந்தக் கதாயுதமானது, அந்த மனித ஊனுண்ணியை {அலாயுதனை} நோக்கி சென்றபோது,(28) அவன் {அலாயுதன்} தன் கதாயுதம் ஒன்றால் அதைத் தாக்கினான். அதன்பேரில், (முன்னதைக் கலங்கடித்த) பின்னது {அலாயுதனின் கதாயுதமானது} பீமனை நோக்கிச் சென்றது. பிறகு அந்தக் குந்தியின் மகன் {பீமன்}, அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலாயுதனைக்} கணை மழையால் மறைத்தான்.(29) அந்த ராட்சசனோ, கூரிய தன் கணைகளால் பீமனின் அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தான். பிறகு, பயங்கர வடிவங்களைக் கொண்ட அந்த ராட்சசப் போர்வீரர்கள் அனைவரும் (அணிதிரண்டு மீண்டும் போரிட வந்து),(30) தங்கள் தலைவனின் ஆணையின் பேரில் (பீமனுடைய படையின்) யானைகளைக் கொல்லத் தொடங்கினர். பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள், குதிரைகள், (பீமனுடைய படையின்) பெரும் யானைகள் ஆகியவை(31) அந்த ராட்சசர்களால் பெரிதும் பீடிக்கப்பட்டு மிகவும் கலக்கமடைந்தன.

அந்தப் பயங்கரப் போரை (பீமனுக்கும் அந்த ராட்சசர்களுக்கும் இடையிலான அம்மோதலைக்) கண்டவனும்,(32) மனிதர்களில் முதன்மையானவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, இவ்வார்த்தைகளைத் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} சொன்னான்: “அந்த ராட்சசர்களின் இளவரசனிடம் {அலாயுதனிடம்} வசப்படும் வலிமைமிக்கப் பீமரைப் பார்.(33) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, ஏதும் ஆலோசியாமல், விரைவாகப் பீமரைத் தொடர்ந்து செல்வாயாக. அதே வேளையில், திருஷ்டத்யும்னன், சிகண்டி, யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள்,(34) திரௌபதியின் மகன்களோடு சேர்ந்து கொண்டு கர்ணனை எதிர்த்துச் செல்லட்டும். ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நகுலன், சகாதேவன், வீர யுயுதானன் {சாத்யகி} ஆகியோர்,(35) உனது உத்தரவின் பேரில் பிற ராட்சசர்களைக் கொல்லட்டும். உன்னைப் பொறுத்தவரை, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, துரோணரைத் தலைமையில் கொண்ட இந்தப் படைப்பிரிவைத் தடுப்பாயாக. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இப்போது நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆபத்தானது பெரியதாக இருக்கிறது” என்றான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணன் இப்படிச் சொன்னதும், உத்தரவுக்கேற்றபடியே அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோர்,(36,37) விகர்த்தனன் மகனான கர்ணனை எதிர்த்தும், (குருக்களுக்காகப் போரிடும்) பிற ராட்சசர்களை எதிர்த்தும் சென்றனர். பிறகு முற்று முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான சில கணைகளால்,(38) ராட்சசர்களின் அந்த வீர இளவரசன் {அலாயுதன்}, பீமனின் வில்லை அறுத்தான். அடுத்ததாக அந்த வலிமைமிக்க மனித ஊனுண்ணி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சில கூரிய கணைகளால் பின்னவனின் {பீமனின்} குதிரைகளையும், சாரதியையும் கொன்றான். குதிரைகளும், சாரதியும் அற்ற பீமன், தன் தேர்த்தட்டில் இருந்து இறங்கி,(39,40) உரக்க முழங்கியபடியே தன் எதிரியை நோக்கி ஒரு கனமான கதாயுதத்தை வீசினான். அந்தக் கனமான கதாயுதமானது, பயங்கர ஒலியுடன் அந்த மனித ஊனுண்ணியை {அலாயுதன்} நோக்கிச் சென்ற போதே,(41) அவன் {அலாயுதன்} தன் கதாயுதத்தால் அதைக் கலங்கடித்தான். பிறகு பின்னவன் {அலாயுதன்} உரக்க முழங்கினான்.

அந்த ராட்சசர்களின் இளவரசனுடைய {அலம்புசனுடைய} பயங்கரமான, வலிமைமிக்க அருஞ்செயலைக் கண்ட பீமசேனன்,(42) மகிழ்ச்சியால் நிறைந்து மற்றொரு கடும் கதாயுதத்தைப் பிடித்தான். அந்த மனிதப் போர்வீரனுக்கும் {பீமனுக்கும்}, அந்த ராட்சசனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது பயங்கரத்தை அடைந்தது.(43) அவர்களது கதாயுத வீச்சுகளின் மோதலால் பூமியானது பயங்கரமாக நடுங்கியது. தங்கள் கதாயுதங்களைத் தூக்கி எறிந்த அவர்கள் மீண்டும் ஒருவரோடு ஒருவர் போரிட்டனர்.(44) அவர்கள் தங்கள் கைமுட்டிகளை இறுக பற்றிக் கொண்டு இடிமுழக்கம் போன்ற ஒலி கொண்ட குத்துகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். சினத்தால் தூண்டப்பட்ட அவர்கள், தேர் சக்கரங்கள், நுகத்தடிகள், அக்ஷங்கள் {அச்சுகள்}, அதிஸ்தானங்கள் {ஆசனங்கள்}, உபஷ்கரங்கள் ஆகியவற்றையும், இன்னும் தங்கள் வழியில் இருந்த எதையும் எடுத்துகொண்டு ஒருவரோடொருவர் மோதினர். இப்படி ஒருவரோடொருவர் மோதி, குருதியில் நனைந்த அவர்கள் இருவரும், பெரும் வடிவங்களைக் கொண்ட மதங்கொண்ட இரண்டு யானைகளைப் போலத் தெரிந்தனர். அப்போது, பாண்டவர்களின் நன்மையில் எப்போதும் அர்ப்பணிப்புடன் கூடிய ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, அம்மோதலைக் கண்டு, பீமசேனனைக் காப்பதற்காக ஹிடிம்பையின் மகனை {கடோத்கசனை} அனுப்பினான்” {என்றான் சஞ்சயன்}.(45-47)

அலாயுதனைக் கொன்ற கடோத்கசன்! – துரோண பர்வம் பகுதி – 178-அலாயுதனின் ராட்சசர்களைக் கொன்ற பாண்டவத் தலைவர்கள் கர்ணனை எதிர்த்து விரைந்தது; அலாயுதனுக்கும் கடோத்கசனுக்கும் இடையில் நடந்த மோதல்; அலாயுதனின் தலையை வெட்டிய கடோத்கசன்; அலாயுதன் கொல்லப்பட்டதைக் கண்டு கவலையில் நிறைந்த துரியோதனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் போரில் பீமன், அந்த மனித ஊனுண்ணியால் {அலாயுதனால்} தாக்கப்படுவதைக் கண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, கடோத்கசனை அணுகி, அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(1) “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பெரும் காந்தி கொண்டவனே, போரில் துருப்புகள் அனைத்தும், நீயும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பீமர் அந்த ராட்சசர்களால் பலமாகத் தாக்கப்படுவதைப் பார்.(2) தற்சமயம் கர்ணனைக் கைவிட்டுவிட்டு, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கடோத்கசா}, விரைவாக அலாயுதனைக் கொல்வாயாக. கர்ணனை நீ பிறகு கொல்லலாம்” என்றான் {கிருஷ்ணன்}.(3)

அந்த விருஷ்ணி குலத்தோனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட வீரக் கடோத்கசன், கர்ணனைக் கைவிட்டுவிட்டு, மனித ஊனுண்ணிகளின் இளவரசனும், பகனின் தம்பியுமான அந்த அலாயுதனுடன் மோதினான்.(4) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மனித ஊனுண்ணிகளான அலாயுதன் மற்றும் ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} ஆகிய இருவருக்கிடையில் அந்த இரவில் நடந்த போரானது கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது.(5)

அதேவேளையில், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானன் {சாத்யகி}, நகுலன், சகாதேவன் ஆகியோர் பயங்கரத் தோற்றம் கொண்டவர்களும், வில்தரித்துத் தங்களை நோக்கி மூர்க்கமாக விரைந்தவர்களும், அலாயுதனின் போர்வீரர்களுமான வீர ராட்சசர்களைக் கூரிய கணைகளால் துளைத்தனர்.(6,7) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனான பீபத்சு {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை ஏவியபடியே க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் பலரை வீழ்த்தத் தொடங்கினான்.(8) அதே வேளையில், அந்தப் போரில் கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் பலரையும், திருஷ்டத்யும்னன், சிகண்டி மற்றும் பிறரின் தலைமையிலான பாஞ்சாலர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரையும் கலங்கடித்தான்.(9) (கர்ணனால்) கொல்லப்படும் அவர்களைக் கண்டவனும், பயங்கர ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், அந்தப் போரில் தன் கணைகளை ஏவியபடியே கர்ணனை நோக்கி வேகமாக விரைந்தான்.(10) பிறகு, நகுலன், சகாதேவன் ஆகிய அந்தப் போர்வீரர்களும், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகியும், ராட்சசர்களைக் கொன்றுவிட்டு, சூதனின் மகன் {கர்ணன்} இருந்த இடத்திற்குச் சென்றனர்.(11) அவர்கள் அனைவரும் கர்ணனோடு போரிடத் தொடங்கிய அதே வேளையில், பாஞ்சாலர்கள் துரோணரோடு மோதினர்.

அப்போது சினத்தால் தூண்டப்பட்ட அலாயுதன், ஒரு பெரிய பரிகத்தைக் கொண்டு எதிரிகளைத் தண்டிப்பவனான கடோத்கசனை தலையில் தாக்கினான். பெரும் ஆற்றலைக் கொண்ட பீமசேனனின் வலிமைமிக்க மகன் {கடோத்கசன்},(12,13) அந்தப் பரிகத்தின் தாக்குதலால் குறை மயக்க நிலையில் காணப்பட்டு, அசைவற்றவனாகக் கீழே அமர்ந்தான். சுய நினைவு மீண்ட பின்னவன் {கடோத்கசன்}, பிறகு அம்மோதலில், தங்கத்தாலும், நூறு மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டதும், சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிந்ததுமான கதாயுதம் ஒன்றைத் தன் எதிரியின் மீது வீசினான். கடுஞ்சாதனைகளைச் செய்யும் அவனால் பலமாக வீசப்பட்ட அந்தக் கதாயுதம், அலாயுதனின் குதிரைகள், சாரதி மற்றும் உரத்த சடசடப்பொலி கொண்ட அவனது தேர் ஆகியவற்றை நொறுக்கியது. மாயையை அறிந்தவனும், குதிரைகள், சக்கரங்கள், அக்ஷங்கள், கொடிமரம் மற்றும் கூபரம் ஆகிய அனைத்தும் தூள்தூளாக நொறுக்கப்பட்டவனுமான பின்னவன் {அலாயுதன்}, தனது தேரில் இருந்து கீழே குதித்தான். தன் மாயையைப் பயன்படுத்திய அவன் அபரிமிதமான இரத்த மழையைப் பொழிந்தான்.(14-17)

அப்போது வானமானது, மின்னலின் கீற்றுகளுடன் கூடிய கார்மேகத் திரள்களால் பரவியிருப்பதாகத் தெரிந்தது. உரத்த வெடிச்சத்தங்கள் மற்றும் மேகங்களில் உரத்த முழக்கங்களுடன் கூடிய இடி மழையின் ஒலி ஆகியன அப்போது கேட்கப்பட்டன.(18) அந்தப் பயங்கரப் போரில் “சட சட” எனும் உரத்த ஒலியும் கேட்கப்பட்டது. ராட்சசன் அலாயுதனால் உண்டாக்கப்பட்ட அந்த மாயையைக் கண்ட ராட்சசன் கடோத்கசன்,(19) உயரப் பறந்து, தன் மாயையைக் கொண்டு அதை {அலம்புசனின் மாயையை} அழித்தான். மாயா சக்திகளைக் கொண்ட அலாயுதன், தன் மாயையானது தன் எதிரியினுடையதைக் கொண்டு அழிக்கப்பட்டதைக் கண்டு,(20) கடோத்கசன் மீது கனமான கல் மழையைப் பொழியத் தொடங்கினான். பிறகு அவர்கள் இரும்பு பரிகங்கள், சூலங்கள், கதாயுதங்கள், குறுந்தண்டங்கள் {உலக்கைகள்}, சம்மட்டிகள் {முத்கரங்கள்}, பினாகங்கள், வாள்கள், வேல்கள், நீண்ட சூலங்கள், கம்பனங்கள், நீளமாகவும், அகன்ற தலை கொண்டதாகவும் கூரிய கணைகள் {நாராசங்கள் மற்றும் பல்லங்கள்}, போர்க்கோடரிகள், அயாகுதங்கள் {இரும்புத் தடிகள்}, குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, பசுவைப் போன்ற தலைகள் கொண்ட ஆயுதங்கள் {கோசீர்ஷங்கள்} மற்றும் உலூகலங்கள் {உரல்கள்} போன்ற பல்வேறு ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(21-24) மேலும் அவர்கள் இங்குதி {வன்னி மரம்}, பதரி {இலந்தை}, மலர்ந்திருக்கும் கோவிதாரம், பல்க்ஸம் {பலாசம்}, அரிமேதம், பிலாக்ஷம் {கல்லிச்சி}, ஆலம், அரசம் போன்ற மரங்களாலும் மற்றும் பல்வேறு வகைகளிலான உலோகங்களால் {தாதுவகைகளால்} அலங்கரிக்கப்பட்ட பல்வேறு மலைச்சிகரங்களாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(25-27) அந்த மரங்கள் மற்றும் மலைச்சிகரங்களின் மோதலானது, இடிமுழக்கத்தைப் போலப் பேரொலியோடு இருந்தது.

உண்மையில், பீமனின் மகனுக்கும் அலாயுதனுக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் போரானது, ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில், குரங்குகளின் இளவரசர்களான வாலி மற்றும் சுக்ரீவன் ஆகிய இருவருக்கும் இடையில் நடந்ததைப் போல மிகப் பயங்கரமானதாக இருந்தது.(28) பல்வேறு வகைகளிலானவையும், கூரிய கத்திகளைப் போன்ற கடுமையானவையுமான பிற ஆயுதங்கள் மற்றும் கணைகள் ஆகியவற்றால் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பிறகு ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்த அந்த வலிமைமிக்க ராட்சசர்கள், தங்களில் மற்றவரின் மயிரைப் பிடித்தனர்.(29,30) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் உடல்படைத்த அந்தப் போர்வீரர்கள் இருவரும், தங்கள் உடல்களில் உண்டான காயங்களோடும், வழிந்த இரத்தத்தோடும் மழையைப் பொழியும் இரண்டு மேகத் திரள்களைப் போல இருந்தனர்.(31) அப்போது வேகமாக விரைந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, அந்த ராட்சசனை {அலாயுதனை} உயரத் தூக்கிச் சுழற்றி தரையில் அடித்து, {பிறகு} அவனது பெரிய தலையை அறுத்தான்.(32) பிறகு, அந்த வலிமைமிக்கக் கடோத்கசன், இரு காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தலையை எடுத்துக் கொண்டு உரக்க முழங்கினான்.(33) எதிரிகளைத் தண்டிப்பவனும், பெரும் உடல் படைத்தவனுமான அந்தப் பகனின் தம்பி {அலாயுதன்} இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் சிங்க முழக்கமிடத் தொடங்கினர்.(34)

அந்த ராட்சசனின் {அலாயுதனின்} வீழ்ச்சிக்குப் பிறகு, அந்தப் பாண்டவர்கள், ஆயிரக்கணக்கான பேரிகைகளையும், பதினாயிரக்கணக்கான சங்குங்களையும் அடித்து முழக்கினர்.(35) அப்போது அந்த இரவானது பாண்டவர்களின் வெற்றியைத் தெளிவாகக் குறிப்பிட்டது. சுற்றிலும் பந்தங்களால் ஒளியூட்டப்பட்டு, இசைக்கருவிகளால் எதிரொலிக்கப்பட்ட அந்த இரவனாது மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.(36) பிறகு பீமசேனனின் அந்த வலிமைமிக்க மகன் {கடோத்கசன்} கொல்லப்பட்ட அலாயுதனின் தலையைத் துரியோதனன் முன்பாக வீசினான்.(37) வீர அலாயுதன் கொல்லப்பட்டதைக் கண்ட துரியோதனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகள் அனைத்துடன் சேர்ந்து கவலையில் நிறைந்தான்.(38) முந்தைய சச்சரவை நினைவில் கொண்டு துரியோதனனிடம் தானாக வந்த அலாயுதன், அவனிடம் {துரியோதனனிடம்} பீமனைப் போரில் கொல்லப் போவதாகச் சொல்லியிருந்தான்.(39) அந்தக் குரு மன்னனும் {துரியோதனனும்}, பீமனின் கொலை உறுதியானது என்று கருதியும், தன் தம்பிகள் அனைவரும் நீண்ட வாழ்நாளோடு இருப்பார்கள் என்றும் நம்பினான்.(40) அந்த அலாயுதன், பீமசேனன் மகனால் {கடோத்கசனால்} கொல்லப்பட்டதைக் கண்ட மன்னன் {துரியோதனன்}, (தன்னையும், தன் தம்பிகளையும் கொல்வது குறித்த) பீமனின் சபதம் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகவே கருதினான்” {என்றான் சஞ்சயன்}.(41)

கடோத்கசனின் இறுதி மூச்சு! – துரோண பர்வம் பகுதி – 179-கர்ணனுடன் மீண்டும் மோதிய கடோத்கசன்; கர்ணனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்று காட்சியில் இருந்து மறைந்த கடோத்கசன்; கடோத்கசனின் பயங்கரமான இறுதி மாயை; கடோத்கசனால் துரியோதனின் படைக்கு ஏற்பட்ட பேரழிவு; மீண்டும் கர்ணனின் குதிரைகளைக் கொன்ற கடோத்கசன்; வெல்லப்பட முடியாத சக்தி ஆயுதத்தை ஏவி கடோத்கசனைக் கொல்லுமாறு கர்ணனைத் தூண்டிய கௌரவர்கள் சக்தி ஆயுதத்தை ஏவிய கர்ணன்; கொல்லப்பட்டான் கடோத்கசன்; தன் பெருவுடலுடன் கீழே விழுந்த கடோத்கசன் தன் இறுதி மூச்சிலும் ஓர் அக்ஷௌஹிணி கௌரவத் துருப்புகளைக் கொன்றது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அலாயுதனைக் கொன்ற ராட்சசன் கடோத்கசன் மகிழ்ச்சியால் நிறைந்தான். படையின் முன்னணியில் நின்று கொண்டு பல்வேறு வகைகளில் அவன் {கடோத்கசன்} முழக்கமிடத் தொடங்கினான்.(1) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யானைகளையே நடுங்கச் செய்த அந்த உரத்த முழக்கங்களைக் கேட்ட உமது போர்வீரர்களின் இதயங்களில் பேரச்சம் நுழைந்தது.(2) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கர்ணன், பீமசேனனின் வலிமைமிக்க மகன் {கடோத்கசன்} அலாயுதனுடன் போரிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, பாஞ்சாலர்களை எதிர்த்து விரைந்தான்.(3) தன் வில்லை முழுமையாக வளைத்த அவன் {கர்ணன்}, திருஷ்டத்யும்னன் மற்றும் சிகண்டி ஆகியோர் ஒவ்வொருவரையும் உறுதியான, நேரான பத்து கணைகளால் துளைத்தான்.(4) பிறகு, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பெரும் எண்ணிக்கையிலான வேறு பலமான கணைகளால் யுதாமன்யு, உத்தமௌஜஸ் மற்றும் பெரும் தேர்வீரனான சாத்யகி ஆகியோரை நடுங்கச் செய்தான்.(5)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அந்தப் போர்வீரர்கள் கர்ணனைத் தாக்கிக் கொண்டிருந்த போது, வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே அவர்களது விற்களும் காணப்பட்டன.(6) அந்த இரவில், அவர்களது நாண்கயிறுகளின் நாணொலியும், அவர்களது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும், (ஒன்றாகக் கலந்து) கோடையின் முடிவிலான மேகங்களின் முழக்கத்தைப் போல ஆழமான பேரொலியாக இருந்தன.(7) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த இரவுப்போரானது மேகத் திரள்களின் குவியலுக்கு ஒப்பாக இருந்தது. நாண்கயிறுகளின் நாணொலியும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும் அதன் {மேகக்குவியலின்} முழக்கமாக இருந்தன. (போர்வீரர்களின்) விற்கள் அதன் மின்னல் கீற்றுகளாகவும்; கணைமாரிகள் அதன் மழைப்பொழிவாகவும் இருந்தன.(8) மலையைப் போல அசையாமல் நின்றவனும், மலைகளின் இளவரசனுடைய பலத்தைக் கொண்டவனும், எதிரிகளைக் கலங்கடிப்பவனும், விகர்த்தனன் {சூரியனின்} மகனுமான அந்தக் கர்ணன், தன் மீது ஏவப்பட்ட அற்புதமான கணைமழையை அழித்தான்.(9) உமது மகன்களின் நன்மையில் அர்ப்பணிப்புக் கொண்ட அந்த உயர் ஆன்ம வைகர்த்தனன் {கர்ணன்}, அந்தப் போரில் இடியின் சக்தி கொண்ட வேல்களாலும், அழகிய தங்கச் சிறகுகளைக் கொண்ட கூரிய கணைகளாலும் தன் எதிரிகளைத் தாக்கத் தொடங்கினான்.(10) விரைவில் சிலரது கொடிமரங்கள் கர்ணனால் வெட்டப்பட்டன, வேறு சிலரின் உடல்கள் துளைக்கப்பட்டுக் கூரிய கணைகளைக் கொண்டு அவனால் {கர்ணனால்} சிதைக்கப்பட்டன; விரைவில் சிலர் சாரதிகளை இழந்தனர், சிலர் தங்கள் குதிரைகளை இழந்தனர்.(11)

அந்தப் போரில் சூதன் மகனால் {கர்ணனால்} மிகவும் பீடிக்கப்பட்ட பலர், யுதிஷ்டிரனின் படைக்குள் நுழைந்தனர். அவர்கள் அணிபிளக்கப்பட்டுப் புறமுதுகிடக் கட்டாயப்படுத்தப்படுவதைக் கண்ட கடோத்கசகன் சினத்தால் வெறிகொண்டவனானான்.(12) தங்கத்தாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தன் சிறந்த தேரில் ஏறிய அவன் {கடோத்கசன்} உரத்த சிங்க முழக்கம் செய்தபடியே, விகர்த்தனன் {சூரியன்} மகனான கர்ணனை அணுகி, இடியின் சக்தி கொண்ட கணைகளால் அவனைத் துளைத்தான்.(13) அவர்கள் இருவரும், முள்பதித்த கணைகள் {கர்ணிகள்}, துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, தவளைமுகக் கணைகள் {சிலீமுகங்கள்}, நாளீகங்கள், தண்டங்கள், அசனிகள், கன்றின் பல் {வத்ஸதந்தங்கள்}, அல்லது பன்றியின் காது போன்ற தலை கொண்ட கணைகள் {வராஹகர்ணங்கள்}, அகன்ற தலை கொண்ட கணைகள் {பல்லங்கள், விபாண்டங்கள்}, கொம்புகள் போன்ற கூரிய கணைகள் {சிருங்கங்கள்}, கத்திகளைப் போன்ற தலைகளைக் கொண்ட பிற கணைகள் {க்ஷுரப்ரங்கள்} ஆகியவற்றால் ஆகாயத்தை மறைக்கத் தொடங்கினர்.(14)

அந்தக் கணைமாரியால் மறைந்த ஆகாயமானது, அதனூடாகத் தங்கச் சிறகுகளையும், சுடரும் காந்தியையும் கொண்ட கணைகள் கிடைமட்டமாகச் சென்றதன் விளைவால், அழகிய மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதைப் போலக் காட்சியளித்தது.(15) சம ஆற்றல் கொண்ட அவர்கள் ஒவ்வொருவரும், பலமிக்க ஆயுதங்களால் சமமாகவே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அந்தப் போரில் அவ்வீரர்கள் இருவரில் ஒருவரிடமும் {ஒருவர் மேல் ஒருவர்} ஆதிக்கமடைவதற்கான அறிகுறியை எவரும் காணவில்லை.(16) உண்மையில், சூரியன் மகனுக்கும் {கர்ணனுக்கும்}, பீமனின் மகனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போரானது, அடர்த்தியான, கனமான ஆயுத மழையால் வகைப்படுத்தப்பட்டு மிக அழகாகத் தெரிந்தது. மேலும் ஆகாயத்தில் ராகுவுக்கும், சூரியனுக்கும் இடையில நடக்கும் கடும் மோதலைப் போன்ற ஒப்பற்ற காட்சியை அஃது அளித்தது.”(17)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆயுதமறிந்தோர் அனைவரிலும் முதன்மையான அந்தக் கடோத்கசன், கர்ணனைத் தன்னால் விஞ்சமுடியவில்லை என்பதைக் கண்ட போது, கடுமையானதும், வலிமையானதுமான ஆயுதம் ஒன்றை அவன் {கடோத்கசன்} இருப்புக்கு அழைத்தான்.(18) அந்த ஆயுதத்தால், அந்த ராட்சசன் {கடோத்கசன்} முதலில் கர்ணனின் குதிரைகளையும், பிறகு பின்னவனின் {கர்ணனின்} சாரதியையும் கொன்றான். அந்தச் சாதனையை அடைந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} விரைவில் கண்ணுக்குப் புலப்படாதவனாகத் தன்னை ஆக்கிக் கொண்டான்” {என்றான் சஞ்சயன்}.(19)

அப்போது திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வஞ்சக வழிகளில் போரிட்டுக் கொண்டிருந்த அந்த ராட்சசன் {கடோத்கசன்} இப்படி மறைந்த போது, ஓ! சஞ்சயா, என் படையின் போர்வீரர்கள் என்ன நினைத்தனர்?” என்று கேட்டான்.(20)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த ராட்சசன் மறைவதைக் கண்ட கௌரவர்கள் அனைவரும், “வஞ்சகமாகப் போரிடும் அந்த ராட்சசன் {கடோத்கசன்}, அடுத்துத் தோன்றும்போது நிச்சயம் கர்ணனைக் கொன்றுவிடுவான்” என்று உரக்கச் சொன்னார்கள்.(21) ஆயுதப் பயன்பாட்டில் அற்புத நளினத்தைக் கொண்ட கர்ணன், அப்போது கணைமாரிகளால் அனைத்துப் பக்கங்களையும் மறைத்தான். அந்த அடர்த்தியான கணைமாரியால் உண்டான இருளானது, ஆகாயத்தை மறைத்ததால் உயிரினங்கள் அனைத்தும் கண்களுக்குப் புலனாகாதவையாக ஆகின.(22) அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, எப்போது தன் விரல்களால் தனது அம்பறாத்தூணிகளைத் தீண்டினான்? எப்போது நாண்கயிற்றில் தன் அம்புகளைப் பொருத்தினான்? எப்போது குறி பார்த்து அவற்றை ஏவினான்? என்பனவற்றை எவரும் காணமுடியாத அளவுக்கு அவன் {கர்ணன்} வெளிப்படுத்திய கர நளினம் மிகப்பெரியதாக இருந்தது. அப்போது மொத்த ஆகாயமும் கணைகளால் மறைக்கப்பட்டிருப்பதாகத் தெரிந்தது.(23)

பிறகு அந்த ராட்சசனால், கடுமையான, பயங்கரமான ஒரு மாயை ஆகாயத்தில் உண்டாக்கப்பட்டது. சுடர்மிக்க நெருப்பின் கடுந்தழலுக்கு ஒப்பாகத் தோன்றிய சிவப்பு மேகங்களின் திரளை நாங்கள் வானத்தில் கண்டோம்.(24) அந்த மேகத்திலிருந்து, ஓ! குரு மன்னா {திருதராஷ்டிரரே}, மின்னலின் கீற்றுகளும், சுடர்மிக்கப் பந்தங்கள் பலவும் வெளிவந்தன. ஆயிரம் பேரிகைகள் ஒரே சமயத்தில் முழக்கப்படுவதைப் போன்ற பிரம்மாண்டமான ஒலி அதனில் இருந்து வெளிவந்தது.(25) தங்கச் சிறகுகளைக் கொண்ட கணைகள் பலவும், ஈட்டிகள் {சக்திகள்}, வேல்கள், கனமான தண்டங்கள் {உலக்கைகள்}, அதே போன்ற பிற ஆயுதங்கள், போர்க்கோடரிகள், எண்ணெயில் கழுவப்பட்ட {எண்ணெயில் தீட்டப்பட்ட} கத்திகள், சுடர்மிக்க முனைகளைக் கொண்ட கோடரிகள், சூலங்கள்,(26) ஒளிரும் கதிர்களை வெளியிடும் முள்பதித்த கதாயுதங்கள் {பரிகங்கள்}, இரும்பாலான அழகிய கதாயுதங்கள், கூர்முனைகளைக் கொண்ட நீண்ட ஈட்டிகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, இழைகளால் சுற்றிலும் பின்னப்பட்ட கனமான கதாயுதங்கள், சதக்னிகள் ஆகியன அதனில் இருந்து சுற்றிலும் பாய்ந்தன.(27) பெரும் பாறைகள் அதனில் இருந்து விழுந்தன. உரத்த வெடிச்சத்தம் கொண்ட ஆயிரக்கணக்கான வஜ்ரங்களும், நெருப்பின் காந்தியைக் கொண்ட நூற்றுக்கணக்கான சக்கரங்களும், கத்திகளும் அதனில் இருந்து பாய்ந்தன.(28)

கணைமாரிகளை ஏவிக்கொண்டிருந்த கர்ணன், அடர்த்தியானதும், சுடர்மிக்கதுமான ஈட்டிகள், வேல்கள், வாள்கள் மற்றும் கதாயுதங்களின் மழையை அழிக்கத் தவறினான்.(29) அந்தக் கணைகளால் கொல்லப்பட்டு விழுந்த குதிரைகளாலும், வஜ்ரத்தால் தாக்கப்பட்ட வலிமைமிக்க யானைகளாலும், பிற ஆயுதங்களால் உயிரை இழந்த பெரும் தேர்வீரர்களாலும் ஏற்பட்ட பெரும் ஆரவாரமானது பேரொலியாக இருந்தது.(30) அந்தக் கணை மாரியைக் கொண்டு கடோத்கசனால் சுற்றிலும் பீடிக்கப்பட்ட துரியோதனின் படையானது, பெரும் வலியோடு களத்தில் திரிவது காணப்பட்டது.(31) மிகவும் உற்சாகமற்று, “ஓ”, “ஐயோ” என்ற கதறல்களுடன் திரிந்து கொண்டிருந்த அந்தப் படை அழிவடையும் தருணத்தில் இருப்பதாகத் தெரிந்தது. எனினும் தலைவர்கள் தங்கள் இதயத்தின் உன்னதத்தன்மையால், களத்தில் முகம் திருப்பித் தப்பி ஓடாமல் இருந்தனர்.(32) அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} மாயையால் உண்டாக்கப்பட்டதும், மிகப் பயங்கரமானதும் அஞ்சத்தக்கதுமான அந்த வலிமையான ஆயுதங்களின் மழை களத்தில் பாய்வதைக் கண்டும், பரந்த தங்கள் படை இடையறாமல் கொல்லப்படுதவதைக் கண்டும் உமது மகன்கள் பேரச்சம் கொண்டனர்.(33)

நெருப்பைப் போன்ற சுடர்மிக்க நாக்குகளுடன், பயங்கரமாகக் கூச்சலிடும் நரிகள் ஊளையிடத் தொடங்கின. மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூச்சலிடும் ராட்சசர்களைக் கண்ட (கௌரவப்) போர்வீரர்கள் உற்சாகத்தைப் பெரிதும் இழந்தனர்.(34) தீ நாவுகளையும், சுடர்மிக்க வாய்களையும், கூரிய பற்களையும், மலை போன்ற பெரிய வடிவங்களையும் கொண்டு ஆகாயத்தில் ஈட்டிகளைப் பிடித்து நின்ற அந்தப் பயங்கர ராட்சசர்கள், மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் தெரிந்தனர்.(35) அந்தக் கடுங்கணைகளாலும், ஈட்டிகள், வேல்கள், கதாயுதங்கள், சுடர்மிக்கக் காந்தி கொண்ட பரிகங்கள், வஜ்ரங்கள், பினாகங்கள், அசனிகள், சக்கரங்கள், சதக்னிகள் ஆகியவற்றாலும் அந்த (கௌரவத்) துருப்புகள் தாக்கப்பட்டு, நசுக்கப்பட்டு விழத் தொடங்கன.(36) அந்த ராட்சசர்கள், உமது மகனுடைய {துரியோதனனுடைய} போர்வீரர்களின் மீது நீண்ட ஈட்டிகளையும் {சூலங்களையும்}, பாகுகளையும், சதக்னிகளையும், உருக்காலானதும், சணல் இழைகளால் பின்னப்பட்டதுமான ஸ்தூணங்களையும் பொழியத் தொடங்கினர். அப்போது போராளிகள் அனைவரும் மலைப்பை அடைந்தனர்.(37) ஆயுதங்கள் உடைந்து, அல்லது தங்கள் பிடியில் இருந்து ஆயுதங்கள் தளர்ந்த நிலையை அடைந்த வீரப் போர்வீரர்கள், தங்கள் தலைகளை இழந்தும், அல்லது தங்கள் அங்கங்கள் உடைந்தும், போர்க்களத்தில் விழத்தொடங்கினர். பாறைகள் விழுந்ததன் விளைவால், குதிரைகள், யானைகள் மற்றும் தேர்கள் ஆகியன நசுங்கத் தொடங்கின.(38) கடோத்கசனின் மாயா சக்தியால் உண்டான பயங்கர வடிவிலான யாதுதானர்கள், பயந்தவர்களையோ, தஞ்சம் கேட்டவர்களையோ கூட விடாமல் [1] வலிமைமிக்க அடர்த்தியான கணைமாரியைப் பொழிந்தனர்.(39)

காலனால் நடத்தப்பட்ட குருவீரர்களின் அந்தக் கொடூரமான படுகொலையின்போது, அந்த க்ஷத்திரியர்களின் அழிவின் போது, திடீரென அணிபிளந்து வேகமாகத் தப்பி ஓடிய கௌரவப் போர்வீரர்கள்,(40) “கௌரவர்களே ஓடுங்கள். யாவும் தொலைந்தன. இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களே பாண்டவர்களுக்காக நம்மைக் கொல்கின்றனர்” என்று உரக்கக் கூச்சலிட்டனர். அந்நேரத்தில் மூழ்கும் பாரதத் துருப்புகளைக் காக்க எவரும் இருக்கவில்லை.(41) அந்தக் கடும் ஆரவாரம், முறியடிப்பு மற்றும் கௌரவர்களின் அழிவின் போது, எத்தரப்பு என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு {படை} முகாம்கள் தங்கள் தனித்தன்மைகளை இழந்தன.(42) உண்மையில்,படைவீரர்கள் ஒருவருக்கொருவர் எந்தக் கருணையும் பார்க்காத அந்தப் பயங்கர அழிவின் போது, களத்தின் எந்தத் திசையைக் கண்டாலும், அது வெறுமையாகத் தெரிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணன் மட்டுமே அந்த ஆயுத மழையில் மூழ்கிய நிலையில் அங்கே தெரிந்தான்.(43)

அப்போது கர்ணன் அந்த ராட்சசனின் தெய்வீக மாயையுடன் மோதி தன் கணைகளால் ஆகாயத்தை மறைத்தான். பணிவுள்ளவனும், மிகக் கடினமான சாதனைகளைச் செய்பவனும், உன்னதச் செயல்களைப் புரிபவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, அந்தப் போரில் தன் உணர்வுகளை இழக்காதிருந்தான்.(44) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் தன் உணர்வுகளை நிலைக்கச் செய்த கர்ணனை, சைந்தவர்கள் மற்றும் பாஹ்லீகர்கள் அனைவரும் அச்சத்துடன் பார்த்தனர். ராட்சசனின் {கடோத்கசனின்} வெற்றியைக் கண்டவாறே {கண்டாலும்}, அவர்கள் அனைவரும் அவனை {கர்ணனை} வழிபட்டனர்.(45) பிறகு, கடோத்கசனால் ஏவப்பட்டதும், சக்கரங்களுடன் கூடியதுமான ஒரு சதக்னியானது, கர்ணனின் நான்கு குதிரைகளையும் அடுத்தடுத்துக் கொன்றது. உயிர், பற்கள், கண்கள் மற்றும் நாவுகளை இழந்த அவை, மூட்டுகள் மடங்கிப் பூமியில் விழுந்தன.(46) அப்போது குதிரைகளற்ற தன் தேரில் இருந்து கீழே குதித்த கர்ணன், கௌரவப் படை ஓடுவதையும், அந்த ராட்சச மாயையால் தன் தெய்வீக ஆயுதம் கலங்கடிக்கப்பட்டதையும் கண்டு, தன் உணர்வுகளை இழக்காமல், மனத்தை உள்முகமாகத் திருப்பி, அடுத்ததாக என்ன செய்யப்பட வேண்டும் என்று நினைக்கத் தொடங்கினான்.(47)

அந்த நேரத்தில் கர்ணனையும் (ராட்சசனால் உண்டாக்கப்பட்ட) அந்தப் பயங்கர மாயையையும் கண்ட கௌரவர்கள் அனைவரும், “ஓ! கர்ணா, உனது ஈட்டியை {சக்தி ஆயுதத்தைக்} கொண்டு இந்த ராட்சசனை விரைந்து கொல்வாயாக. இந்தக் கௌரவர்களும், தார்தராஷ்டிரர்களும் அழிவின் விளிம்பில் இருக்கின்றனர்.(48) பீமனும், அர்ஜுனனும், நம்மை என்ன செய்வார்கள்? இந்த நள்ளிரவில் நம் அனைவரையும் எரிக்கும் இந்தப் பொல்லாத ராட்சசனைக் கொல்வாயாக. இந்தப் பயங்கர மோதலில் இன்று தப்புபவர்களே போரில் பார்த்தர்களோடு போரிடுவார்கள்.(49) எனவே, வாசவன் {இந்திரன்} உனக்கு அளித்த அந்த ஈட்டியால் {சக்தி ஆயுதத்தால்} இந்தப் பயங்கர ராட்சசனை இப்போது கொல்வாயாக. ஓ! கர்ணா, இந்தப் பெரும்போர்வீரர்கள், இந்தக் கௌரவர்கள், இந்திரனுக்கு ஒப்பான இளவரசர்கள் ஆகியோர் அனைவரும் இந்த இரவு போரில் அழியாதிருக்கட்டும்” என்று கூச்சலிட்டனர்.(50) அந்த நள்ளிரவில், கர்ணன், அந்த ராட்சசன் {கடோத்கசன்} உயிரோடிருப்பதையும், குரு படை அச்சத்தில் பீடிக்கப்பட்டிருப்பதையும் கண்டும், பின்னவர்களின் உரத்த ஓலங்களையும் கேட்டும், தன் ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} ஏவுவதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(51)

கோபக்கார சிங்கம் ஒன்றைப் போலச் சினத்தால் தூண்டப்பட்டவனும், அந்த ராட்சசர்களின் தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனுமான கர்ணன், கடோத்கசனுக்கு அழிவை ஏற்படுத்த விரும்பி, வெற்றியைத் தரும் வெல்லப்பட முடியாத ஈட்டிகளில் {சக்திகளில்} முதன்மையான அந்த ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} எடுத்துக் கொண்டான்.(52) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கொல்வதற்காக வருடக்கணக்கில் சூதன் மகனால் {கர்ணனால்} வழிபடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்ததும், ஈட்டிகளில் முதன்மையானதும், பின்னவனின் {கர்ணனின்} காது குண்டலங்களுக்கு மாற்றாகச் சக்ரனால் {இந்திரனால்} கொடுக்கப்பட்டதும்,(53) இழைகளால் பின்னப்பட்டுச் சுடர்விடும் பயங்கரமான ஏவுகணையும், குருதி தாகம் கொண்டதாகத் தெரிந்ததும், அந்தகனின் நாக்கைப் போன்றதும், அல்லது மிருத்யுவின் சகோதரியைப் போன்றதும், பயங்கரமானதும், பிரகாசமானதுமான அந்த ஈட்டியையே {சக்தி ஆயுதத்தை}, இப்போது வைகர்த்தனன் {கர்ணன்}, அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} மீது ஏவினான்.(54)அற்புதமானதும், சுடர்மிக்கதும், எதிரிகள் ஒவ்வொருவரின் உடலையும் துளைக்கவல்லதுமான அந்த ஆயுதத்தைச் சூதன் மகனின் {கர்ணனின்} கரங்களில் கண்ட ராட்சசன் {கடோத்கசன்}, விந்திய மலைகளின் காலைப் போன்ற பெரும் உடல் அளவை ஏற்று, அச்சத்துடன் தப்பி ஓடத் தொடங்கினான்.(55) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணனின் கரங்களில் அந்த ஈட்டியைக் கண்டவையும், வானத்தில் இருந்தவையுமான உயிரினங்கள் அனைத்தும் உரக்கக் கூச்சலிட்டன. காற்று சீற்றத்துடன் பாயத் தொடங்கியது, உரத்த வெடிச்சத்தத்துடன் கூடிய இடிகள் பூமியின் மீது விழத் தொடங்கின.(56) கடோத்கசனின் சுடர்மிக்க மாயையை அழித்து, சரியாக அவனது மார்பைத் துளைத்துச் சென்ற அந்தப் பிரகாசமான ஈட்டியானது {சக்தி ஆயுதமானது}, அந்த இரவில் வானத்தில் உயரப் பறந்து வான்வெளியின் நட்சத்திரக்கூட்டங்களுக்குள் நுழைந்தது.(57) பல்வேறு அழகிய தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்தி, ராட்சச வீரர்கள் பலருடனும், மனிதப் போர்வீரர்களுடனும் போரிட்ட அந்தக் கடோத்கசன், பயங்கரமாகப் பல்வேறு வகையில் அலறி, சக்ரனின் அந்த ஈட்டியால் {சக்தி ஆயுதத்தால்} உயிரிழந்து கீழே விழுந்தான்.(58)அந்த ராட்சசன் {கடோத்கசன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் எதிரிகளின் அழிவுக்காக மற்றொரு அற்புத சாதனையைச் செய்தான்; அந்நேரத்தில், அந்த ஈட்டியால் இதயம் பிளக்கப்பட்ட அவன் {கடோத்கசன்}, ஒரு வலிமைமிக்க மலையைப் போன்றோ, மேகங்களின் குவியலைப் போன்றோ பிரகாசித்தான்.(59) உண்மையில், பயங்கரச் செயல்களைப் புரியும் அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, அச்சந்தரும் அந்தப் பயங்கர வடிவை ஏற்ற பிறகே கீழே விழுந்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்படி அவன் மடிகையில் உமது படையின் ஒரு பகுதியின் மேல் விழுந்து, அந்தத் துருப்புகளைத் தன் உடலின் கனத்தால் நசுக்கினான்.(60) வேகமாகக் கீழே விழுந்தவனும், மேலும் விரிவடைந்து கொண்டிருந்த பெரும் உடலுடன் கூடியவனுமான அந்த ராட்சசன் {கடோத்கசன்}, பாண்டவர்களுக்கு நன்மை செய்ய விரும்பி, தன் இறுதி மூச்சிலும் ஒரு முழு அக்ஷௌஹிணி அளவிலான உமது துருப்புகளைக் கொன்றான்.(61) அப்போது சிங்க முழக்கங்களாலும், சங்கு முழக்கங்களாலும், பேரிகைகள் மற்றும் முரசுகளின் ஒலியாலும் அங்கே உரத்த ஆரவாரம் எழுந்தது. உண்மையில், கௌரவர்கள், அந்த ராட்சசனின் மாயை அழிக்கப்பட்டதையும், ராட்சசன் கொல்லப்பட்டதையும் கண்டு மகிழ்ச்சியால் பேராரவாரம் செய்தனர்.(62) பிறகு கர்ணன், (அசுரன்} விருத்திரனைக் கொன்ற சக்ரன் {இந்திரன்} மருத்தர்களால் வழிபடப்பட்டது போலக் குருக்களால் வழிபடப்பட்டு, உமது மகனின் {துரியோதனனின்} தேரில் ஏறி, அனைவராலும் பார்க்கப்பட்டவாறே குரு படைக்குள் நுழைந்தான்” {என்றான் சஞ்சயன்}.(63)

கிருஷ்ணசூழ்ச்சிகள்! – துரோண பர்வம் பகுதி – 180-பாண்டவர்களின் துக்கம்; கிருஷ்ணனின் மகிழ்ச்சி; தகாத தருணத்தில் மகிழ்வதன் காரணத்தைக் கிருஷ்ணனிடம் கேட்ட அர்ஜுணன்; கிருஷ்ணனின் பதில்; கிருஷ்ணன், பாண்டவர்களின் எதிரிகள் அனைவரையும், எவ்வாறு படிப்படியாகக் கொல்லச் செய்தான் என்பதை அவனே அர்ஜுனனுக்குச் சொல்வது; சூழ்ச்சியுடன் கொல்லப்பட்ட ராட்சசர்களின் பட்டியலில் கடோத்கசனையும் இணைக்கும் கிருஷ்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிளக்கப்பட்ட மலையைப் போலக் கொல்லப்பட்டுக் கிடக்கும் ஹிடிம்பையின் மகனை {கடோத்கசனைக்} கண்ட பாண்டவர்கள் அனைவரும் துயரால் நிறைந்து, கண்ணீரைச் சொரியத் தொடங்கினர்.(1) வாசுதேவன் {கிருஷ்ணன்} மட்டுமே மகிழ்ச்சியான போக்கைக் கடைப்பிடித்துப் பாண்டவர்களைத் துயருறச் செய்யும் வகையில், சிங்க முழக்கங்கள் செய்யத் தொடங்கினான்.(2) உண்மையில் அவன் {கிருஷ்ணன்}, உரக்க முழங்கிக் கொண்டே அர்ஜுனனைத் தழுவி கொண்டான். குதிரைகளின் கடிவாளங்களைக் கட்டிவிட்டு, சிங்க முழக்கங்களைச் செய்தபடியே(3) அவன் {கிருஷ்ணன்}, புயலால் அசைக்கப்பட்ட மரத்தைப் போல மகிழ்ச்சியான போக்கில் கூத்தாடத் தொடங்கினான். பிறகு மீண்டும் அர்ஜுனனைத் தழுவிக் கொண்டும், மீண்டும் மீண்டும் தன் கக்கங்களைத் தட்டிக் கொண்டும் இருந்தவனும்,(4) பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான அச்யுதன் {கிருஷ்ணன்}, தேர்த்தட்டில் நின்று கொண்டு மீண்டும் முழங்கத் தொடங்கினான்.

கேசவன் {கிருஷ்ணன்} வெளிப்படுத்திய அந்த மகிழ்ச்சிக் குறிகளைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்},(5) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதயத் துயரத்துடன் அவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, உண்மையில், சற்றும் தகாத இந்நேரத்தில், அதுவும் ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} இறந்ததால் கவலையில் இருக்கும் இத்தருணத்தில், பெரும் மகிழ்ச்சியை நீ காட்டுகிறாயே.(6) கடோத்கசன் கொல்லப்பட்டதைக் கண்ட நமது துருப்புகள் அனைத்தும் ஓடுகின்றன.(7) நாங்களும், ஹிடிம்பை மகனின் {கடோத்கசனின்} வீழ்ச்சியால் துயரத்தில் நிறைந்திருக்கோம். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இத்தகு நேரத்தில் நீ இத்தகு மகிழ்ச்சியை அடைவதால், அதற்கு மிக முக்கியக் காரணமேதும் இருக்க வேண்டும்.(8) எனவே, ஓ! உண்மைநிறைந்த மனிதர்களில் முதன்மையானவனே, என்னால் கேட்கப்படும் நீ, (எது காரணம் என்பதில்} எனக்கு உண்மையைச் சொல்வாயாக. உண்மையில், அது ரகசியம் இல்லை என்றால், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, அதை எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்.(9) ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இன்று உன் கனத்தை {பெருமையை [அ] குணத்தை} அழிப்பது எது என்பதை எனக்குச் சொல்வாயாக. உனது இச்செயலானது, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இந்த உனது இதய மகழ்ச்சியானது, வறண்ட கடலைப் போலவோ, இடம்பெயர்ந்த மேருவையைப் போலவோ எனக்குத் தெரிகிறது” என்றான் {அர்ஜுனன்}.(10)

வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “நான் உணரும் மகிழ்ச்சி பெரியதாக இருக்கிறது. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} கேட்பாயாக. நான் உனக்குச் சொல்லப் போவது உன் துயரத்தை உடனே விலக்கி, உன் இதயத்துக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.(11) ஓ! பெருங்காந்தி கொண்டவனே, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, கடோத்கசனின் மூலம் தன் ஈட்டி {சக்தி ஆயுதம்} கலங்கடிக்கப்பட்ட அந்தக் கர்ணன், போரில் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டான் என்பதை அறிந்து கொள்வாயாக.(12) அந்த ஈட்டியுடன் {சக்தி ஆயுதத்துடன்}, போரில் கார்த்திகேயனைப் {முருகனைப்} போலத் தெரியும் அந்தக் கர்ணனின் எதிரில் நிற்கக் கூடிய மனிதன் எவனும் இவ்வுலகில் இல்லை[1].(13) அவனது {கர்ணனது} (இயற்கையான) கவசம் வாங்கப்பட்டது நற்பேறாலேயே. பொய்க்காத அவனது ஈட்டி {சக்தி ஆயுதம்} கடோத்கசனின் மூலம் இப்போது கலங்கடிக்கப்பட்டதும் நற்பேறாலேயே.(14) (இயற்கையான) தனது கவசத்தைப் பூண்டவனும், (இயற்கையான) தனது காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், தன் புலன்களைக் கட்டுப்பாட்டில் கொண்டவனுமான கர்ணனால், தேவர்களுடன கூடிய மூன்று உலகங்களையும் தனியாகவே வென்றுவிட முடியும்.(15) வாசவனோ {இந்திரனோ}, குபேரனோ, நீர்நிலைகளின் தலைவனான வருணனோ, யமனோ கூட அவனை {கர்ணனை} அணுகத் துணிய முடியாது.(16) உண்மையில், அந்த மனிதர்களில் காளை {கர்ணன்}, தனது கவசத்தையும், காது குண்டலங்களையும் கொண்டிருந்தால், காண்டீவத்தை வளைக்கும் உன்னாலோ, சுதர்சனம் என்றழைக்கப்படும் என் சக்கரத்தை உயர்த்தும் என்னாலோ கூடப் போரில் அவனை {கர்ணனை} வெல்ல முடியாது[2].(17)

மாயையின் உதவியோடு கூடிய சக்ரனால் {இந்திரனால்}, உனது நன்மைக்காகவே, கர்ணன் காது குண்டலங்களை இழக்கச் செய்யப்பட்டான். அதுபோலவே பகை நகரங்களை அடக்குபவனான அவன் {கர்ணன்}, தனது (இயற்கை) கவசத்தையும் இழக்கச் செய்யப்பட்டான். உண்மையில், கர்ணன் தன் (இயற்கை) கவசத்தை வெட்டி எடுத்துச் சக்ரனிடம் {இந்திரனிடம்} கொடுத்ததாலேயே அவன் வைகர்த்தனன் என்று அழைக்கப்படலானான்[3].(19) இப்போது, மந்திரத்தால் கடும் நஞ்சு முறிக்கப்பட்ட கோபக்காரப் பாம்பைப் போலவோ, மென் தழல்களைக் கொண்ட நெருப்பைப் போலவோ கர்ணன் எனக்குத் தெரிகிறான்.(20) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, உயர் ஆன்ம சக்ரன் {இந்திரன்}, கர்ணனின் காதுகுண்டலங்களுக்கும், தெய்வீக கவசத்திற்கும் மாற்றாக {தற்போது} கடோத்கசனைக் கொன்ற அந்த ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} எப்போது பின்னவனுக்கு {கர்ணனுக்குக்} கொடுத்தானோ, எப்போது அதை விருஷன் {கர்ணன்} பெற்றானோ, அந்த நேரத்தில் இருந்து போரில் கொல்லப்பட்டவனாகவே நான் {அர்ஜுனனான} உன்னைக் கருதினேன்[4].(21,22) ஆனால், ஓ! பாவமற்றவனே, இப்போதும் அந்த வீரன் {கர்ணன்}, உன்னைத் தவிர வேறு எவனாலும் கொல்லத்தகாதவனாகவே இருக்கிறான் என்பதை நான் உனக்குச் சத்தியமாகச் சொல்கிறேன்.(23}

பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு, உண்மை நிறைந்த பேச்சு, தவ ஈடுபாடு, நோன்புகள் நோற்பு, எதிரிகளிடமும் அன்புடன் இருப்பது போன்ற இந்தக் காரணங்களுக்காகவே கர்ணன் விருஷன் என்று அழைக்கப்படுகிறான்.(24) போரில் வீரத்துடனும், வலிமைமிக்கக் கரங்களுடனும், எப்பொதும் உயர்த்தப்பட்ட வில்லுடனும் கூடிய கர்ணன், காட்டில் யானைக்கூட்டத்தின் தலைமை யானைகளைக் கொல்லும் சிங்கத்தைப் போல, எப்போதும் போர்க்களத்தில் பெரும் தேர்வீரர்களின் செருக்கை அழித்து, யாராலும் பார்க்க முடியாத நடுப்பகல் சூரியனுக்கு ஒப்பாக இருக்கிறான்.(25,26) உனது படையின் போர்வீரர்களில் முதன்மையானோர் மற்றும் சிறப்புமிக்கோர் அனைவருடனும் போரிடும் கர்ணன், ஓ! மனிதர்களில் புலியே, தன் கணை மாரியை ஏவுகையில் ஆயிரம் கதிர்களைக் கொண்ட கூதிர்காலத்துச் சூரியனைப் போலத் தெரிகிறான்.(27) உண்மையில், கோடையின் முடிவில் மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் தன் கணைமாரிகளை இடையறாமல் பொழியும் கர்ணன், தெய்வீக ஆயுதங்களைப் பொழியும் மேகத்தைப் போலத் தெரிகிறான்.(28) அனைத்துப் பக்கங்களிலும் கணைமாரியைப் பொழியும் அவன் {கர்ணன்}, போரில் தேவர்களாலேயே வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான். அவன் {கர்ணன்}, தேவர்களுடன் போரிட்டால், அவர்களின் சதையும், இரத்தமும் களத்தில் அபரிமிதமாக விழும் அளவுக்கு அவர்களைச் சிதைத்துவிடுவான்.(29)

எனினும் ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, தன் கவசங்களையும், காதுகுண்டலங்களையும் இழந்து, வாசவனால் {இந்திரனால்} அவனுக்கு அளிக்கப்பட்ட ஈட்டியையும் {சக்தி ஆயுதத்தையும்} இழந்து இருக்கும் கர்ணன் இப்போது ஒரு {சாதாரண} மனிதன் போன்றவனே (இனியும் அவன் தேவனைப் போன்றவன் அல்ல).(30) அவனைக் {கர்ணனைக்} கொல்வதற்கான ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும். அவனது {கர்ணனது} தேர்ச்சக்கரங்கள் பூமியில் புதையும் போது, அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் நீ, கவனமாக முயன்று, மற்றொரு வேலையில் ஈடுபட்டிருக்கும் அவனை {கர்ணனை}, அந்தப் பரிதாபகரமான நிலையில் கொல்ல வேண்டும். முன்பாகவே நான் அதை உனக்குச் சைகையால் உணர்த்துவேன். அதனால் எச்சரிக்கையடைந்து {விழிப்படையும்} நீ செயல்பட வேண்டும்.(31) {அசுரன்}பலனை வென்றவனும், வஜ்ரத்தைத் தரிப்பவனுமான அந்த வீரர்களில் முதன்மையானவனே {இந்திரனே கூட}, கையில் ஆயுதத்துடன் நிற்பவனும் வெல்லப்பட முடியாதவனுமான கர்ணனைக் கொல்ல இயலாது. உண்மையில், ஓ! அர்ஜுனா, ஜராசந்தன், சேதிகளின் சிறப்புமிக்க ஆட்சியாளன் {சிசுபாலன்}, ஏகலவ்யன் என்ற பெயரும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட அந்த நிஷாதன் ஆகியோரைப் பல்வேறு சூழ்ச்சிகளின் துணை கொண்டு [5], உனது நன்மைக்காகவே ஒருவர்பின் ஒருவராக நான் கொன்றேன். {அப்படியே}, ஹிடிம்பன், கிர்மீரன், ராட்சசர்களில் முதன்மையான பகன், எதிரி துருப்புகளைக் கலங்கடிக்கும் அலாயுதன், எதிரிகளை நசுக்குபவனும், கடும் செயல்களைச் செய்பவனுமான கடோத்கசன் [6] ஆகிய பிற பெரும் ராட்சசர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்” என்றான் {கிருஷ்ணன்}.(32,33)

“கடோத்கசனை நானே கொன்றிருப்பேன்!” என்ற கிருஷ்ணன்! – துரோண பர்வம் பகுதி – 181-முன்பே பலராமனால் ஜராசந்தனின் கதாயுதம் அழிக்கப்பட்டதையும், அவனது வளர்ப்புத்தாயான ஜரை கொல்லப்பட்டதையும் சொன்ன கிருஷ்ணன்; கபடமாக ஏகலவ்யன் கட்டைவிரல் இழக்கச் செய்யப்பட்டது, சிசுபாலன் கொல்லப்பட்டது, ஹிடிம்பன் முதலான ராட்சசர்கள் கொல்லப்பட்டது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய கிருஷ்ணன்; கடோத்கசன் செய்த தீமைகளைச் சொல்லி, தானே அவனைக் கொல்ல வேண்டியிருந்த அவசியத்தை அர்ஜுனனிடம் சொன்ன கிருஷ்ணன்.

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “எங்களுக்கு நன்மை செய்யும்பொருட்டு, ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பூமியின் தலைவர்களான அந்த ஜராசந்தனும், பிறரும் எந்த வழிமுறைகளில் எவ்வாறு கொல்லப்பட்டனர்?” என்று கேட்டான்.(1)

அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “ஜராசந்தன், சேதிகளின் ஆட்சியாளன் {சிசுபாலன்}, நிஷாத மன்னனின் {ஹிரண்யதனுசின்} வலிமைமிக்க மகன் {ஏகலவ்யன்} ஆகியோர் கொல்லப்பட்டாமல் இருந்திருந்தால், அவர்கள் {நமக்குப்} பயங்கரமானவர்களாக இருந்திருப்பார்கள்.(2) துரியோதனன், (தன் தரப்பைத் தழுவும்) அந்த முதன்மையான தேர்வீரர்களைத் தேர்ந்தெடுத்திருப்பான், என்பதில் ஐயமில்லை. அவர்கள் நம்முடன் எப்போதும் பகைமையுடனே இருந்தனர், மேலும் அவர்கள் அனைவரும் கௌரவர்களின் தரப்பையே அடைந்திருப்பார்கள்.(3) அவர்கள் அனைவரும், வீரர்களாகவும், ஆயுதங்களில் சாதித்த வலிமைமிக்க வில்லாளிகளாகவும், போரில் உறுதிமிக்கவர்களாகவும் இருந்தனர். (ஆற்றலில்) தேவர்களைப் போன்ற அவர்கள், திருதராஷ்டிரரின் மகனை {துரியோதனனைப்} பாதுகாத்திருப்பார்கள்.(4). உண்மையில், சூதன் மகன் {கர்ணன்}, ஜராசந்தன், சேதிகளின் ஆட்சியாளன் {சிசுபாலன்}, நிஷாதன் மகன் {ஏகலவ்யன்} ஆகியோர் சுயோதனனின் {துரியோதனனின்} தரப்பை அடைந்து, மொத்த உலகையும் வெற்றி கொண்டிருப்பார்கள்.(5) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, எந்த வழிமுறைகளால் அவர்கள் கொல்லப்பட்டனர் என்பதைக் கேட்பாயாக. உண்மையில் வழிமுறைகளுடன் {உபாயங்களுடன்} செயல்படாவிட்டால், தேவர்களே கூடப் போரில் அவர்களை வெல்ல முடியாது.(6) அவர்களில் ஒவ்வொருவரும், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, லோகபாலர்களின் பாதுகாப்பில் இருக்கும் தேவர்களின் மொத்த படையுடனும் போரிடக் கூடியவர்கள் ஆவர்.(7)

(ஒரு சந்தர்ப்பத்தில்) பலதேவரால் {பலராமரால்} தாக்கப்பட்ட ஜராசந்தன், கோபத்தால் தூண்டப்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் கொல்லவல்ல கதாயுதம் ஒன்றை எங்களை அழிப்பதற்காக {எங்கள் மீது} வீசினான்.(8) நெருப்பின் காந்தியைக் கொண்ட அந்தக் கதாயுதமானது, சக்ரனால் {இந்திரனால்} வீசப்பட்ட வஜ்ரத்தின் மூர்க்கத்துடன், பெண்களின் கூந்தலைப் பிரிக்கும் வகிட்டைப் போல ஆகாயத்தைப் பிரித்துக் கொண்டு, எங்களை நோக்கி {மூர்க்கமாக} வந்து கொண்டிருந்தது.(9) எங்களை நோக்கி அப்படி வந்து கொண்டிருந்த அந்தக் கதாயுதத்தைக் கண்ட ரோஹிணியின் மகன் {பலராமர்}, அதைக் கலங்கடிப்பதற்காக ஸ்தூணகர்ணம் என்று அழைக்கப்படும் ஆயுதத்தை வீசினார்.(10) பலதேவருடைய ஆயுதத்தின் சக்தியால் வலுவிழந்த அந்தக் கதாயுதம், பூமியில் விழுந்து மலைகளையே நடுங்கச் செய்தபடி (அதன் வலிமையால்) அவளை {பூமியைப்} பிளந்தது.(11)

அப்போது ஜரை என்ற பெயரில் பெரும் ஆற்றலைக் கொண்ட ஒரு பயங்கர ராட்சசி இருந்தாள். ஓ! இளவரசே {அர்ஜுனா}, அவளே {அந்த ஜரையே} அந்த எதிரிகளைக் கொல்பவனை {ஜராசந்தனை} ஒருங்கிணைத்தவளாவாள். எனவே, பின்னவன் ஜராசந்தன் என்று அழைக்கப்பட்டான்.(12) ஜராசந்தன் ஒரு குழந்தையின் இரு பாகங்களால் ஆனவனாவான். அந்த இரு பாகங்களையும் ஜரை ஒருங்கிணைத்தாள் என்பதாலேயே அவன் ஜராசந்தன்[1] என்று அழைக்கப்படலானான்.(13) அப்போது பூமிக்குள் இருந்த அந்த ராட்சசப் பெண் {ஜரை}, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அந்தக் கதாயுதம் மற்றும் ஸ்தூணகர்ணம் என்ற ஆயுதம் ஆகியவற்றின் மூலம், தன் மகன் மற்றும் சொந்தங்களுடன் சேர்த்துக் கொல்லப்பட்டாள்.(14) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அந்தப் பெரும்போரில் தன் கதாயுதத்தை இழந்த[2] ஜராசந்தன்,  பின்னர் உன் முன்னிலையில் பீமசேனரால் கொல்லப்பட்டான்.(15) அந்த வீர ஜராசந்தன் தன் கதாயுதத்துடன் நின்றால், ஓ! மனிதர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, இந்திரனின் தலைமையிலான தேவர்களாலேயே கூடப் போரில் அவனைக் {ஜராசந்தனைக்} கொல்ல முடியாது.(16)

கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட நிஷாதன் மகனும் {ஏகலவ்யனும்}, அவனது ஆசானின் நிலையை ஏற்ற துரோணரால் உனது நன்மைக்காகவே கபடமாகத் தனது கட்டைவிரல் இழக்கச் செய்யப்பட்டான்.(17) செருக்கும், நிலையான ஆற்றலும் கொண்ட அந்த நிஷாதன் மகன் {ஏகலவ்யன்}, கையில் தோலுறைகளைப் பூட்டிக் கொண்டு, இரண்டாவது ராமனை {பரசுராமனைப் போலப்} பிரகாசமாகத் தெரிந்தான்.(18) கட்டைவிரலை இழக்காத ஏகலவ்யன், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, {ஒன்றாகச் சேர்ந்திருக்கும்} தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், உரகர்கள் ஆகியோராலும் போரில் வெல்லப்பட முடியாதவனாவான்.(19) உறுதியான பிடி கொண்டவனும், ஆயுதங்களில் சாதித்தவனும், இரவும் பகலும் இடையறாமல் கணையேவக்கூடியவனுமான அவன் {ஏகலவ்யன்}, சாதாரண மனிதர்களால் பார்க்கப்படக்கூட முடியாதவனாக {பார்க்கப்பட முடியாத அளவுகு சக்தியைக் கொண்டு} இருந்தான்.(20) உனது நன்மைக்காவே போர்க்களத்தில் என்னால் அவன் {ஏகலவ்யன்} கொல்லப்பட்டான்.

பெரும் ஆற்றலைக் கொண்ட சேதிகளின் ஆட்சியாளன் {சிசுபாலன்}, உன் கண் முன்பாகவே என்னால் கொல்லப்பட்டான்.(21) அவனும் {சிசுபாலனும்}, ஒன்றுசேர்ந்த தேவர்களாலும், அசுரர்களாலும் போரில் வெல்லப்பட முடியாதவனாகவே இருந்தான். ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, உலகத்தின் நலனை விரும்பி, அவனையும் {சிசுபாலனையும்}, தேவர்களின் பிற எதிரிகளையும் உன் உதவியுடன் கொல்லவே நான் பிறப்பை எடுத்தேன். ஹிடிம்பன், பகன், கிர்மீரன் ஆகியோர் அனைவரும் பீமசேனரால் கொல்லப்பட்டனர்.(23) அந்த ராட்சசர்கள் அனைவரும் ராவணனின் பலத்தைக் கொண்டவர்களாகவும், பிராமணர்கள் மற்றும் வேள்விகளை அழிப்பவர்களாகவும் இருந்தனர். அதே போல, பெரும் மாயா சக்திகளைக் கொண்ட அலாயுதனும் ஹிடிம்பையின் மகனால் {கடோத்கசனால்} கொல்லப்பட்டான்.(24)

ஈட்டியுடன் {சக்திஆயுதத்துடன்} கூடிய கர்ணனின் மூலம் நானே வழிமுறைகளுடன் செயல்பட்டு ஹிடிம்பையின் மகனையும் {கடோத்கசனையும்} கொன்றேன். இந்தப் பெரும்போரில் தன் ஈட்டியை {சக்தி ஆயுதத்தைக்} கொண்டு கர்ணன் அவனைக் {கடோத்கசனைக்} கொல்லாதிருந்தால்,(25) பீமசேனர் மகனான கடோத்கசனை நானே கொல்ல வேண்டி இருந்திருக்கும். உனக்கு நன்மை செய்ய விரும்பியே நான் முன்பே அவனை {கடோத்கசனைக்} கொல்லாதிருந்தேன்.(26) அந்த ராட்சன் {கடோத்கசன்}, பிராமணர்களுக்கும், வேள்விகளுக்கும் எதிரியாக இருந்தான். அவன் {கடோத்கசன்} வேள்விகளை அழிப்பவனாகவும், பாவகர ஆன்மாக் கொண்டவனாகவும் இருந்த காரணத்தால் தான் இவ்வாறு கொல்லப்பட்டான்.(27) ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, அந்தச் செயல்பாட்டையே {கடோத்கசனின் கொலையையே ஒரு} வழிமுறையாகக் கொண்டு, சக்ரனால் {இந்திரனால்} கொடுக்கப்பட்ட ஈட்டியும் {சக்தி ஆயுதமும்} பயனற்றதாகச் செய்யப்பட்டது.

ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நீதியை {அறத்தைக்} கொல்பவர்கள் யாவரும் என்னால் கொல்லத்தக்கவர்களாவர்.(28) நீதியை {அறத்தை} நிலைநிறுத்துவதற்காகவே என்னால் அச்சபதம் செய்யப்பட்டது. வேதங்கள், உண்மை {சத்தியம்}, தற்புலனடக்கம், தூய்மை, நீதி {அறம்}, பணிவு, செழுமை, அறிவு {ஞானம்}, பொறுமை ஆகியவற்றை எங்கே எல்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறதோ,(29) அங்கே எப்போதும் நான் இருப்பேன். கர்ணனைக் கொல்வது குறித்து நீ கவலைகொள்ளத் தேவையில்லை. அவனை {கர்ணனை} நீ கொல்லும் வழிமுறைகளை நான் உனக்குச் சொல்வேன். விருகோதரும் {பீமரும்} சுயோதனனைக் {துரியோதனனைக்} கொல்வதில் வெல்வார்.(31) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அதை அடைய வேண்டிய வழிமுறைகளையும் நான் உனக்குச் சொல்வேன். அதே வேளையில் {இதோ பார்}, பகைவரின் படையால் உண்டாக்கப்படும் ஆரவாரமானது அதிகரித்து வருகிறது.(32) உனது துருப்புகள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடுகின்றன. தங்களது நோக்கங்கள் நிறைவேறிய கௌரவர்கள் உன் படையை அழித்து வருகின்றனர். உண்மையில், தாக்குபவர்கள் அனைவரிலும் முதன்மையான துரோணர் போரில் நம்மை எரித்து வருகிறார்” என்றான் {கிருஷ்ணன்}” {என்றான் சஞ்சயன்}.(33)

உறக்கமற்ற கிருஷ்ணன்! – துரோண பர்வம் பகுதி – 182-அர்ஜுனன் மீது அந்த மரண ஈட்டியை கர்ணன் ஏன் முன்பே ஏவவில்லை என்று கேட்ட திருதராஷ்டிரன்; கிருஷ்ணனின் கொள்கை உறுதியே அதற்குக் காரணம் எனச் சொன்ன சஞ்சயன்; சிறு எதிரிக்கு எதிராக அந்த ஈட்டியைப் பயன்படுத்திய கர்ணன் மற்றும் துரியோதனனின் மடமையால் துயருற்ற திருதராஷ்டிரன்; மரண ஈட்டியை ஏவ கௌரவர்கள் இரவில் தீர்மானித்திருந்தாலும், காலையில் அதை மறந்தனர் என்பதைச் சொன்ன சஞ்சயன்; இதே கேள்வியைக் கிருஷ்ணனிடம் கேட்ட சாத்யகி; கிருஷ்ணனின் பதில்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “நிச்சயம் ஒருவரைக் கொல்லவல்ல ஓர் ஈட்டியை அந்தச் சூதன் மகன் {கர்ணன்} கொண்டிருந்தபோது, பிறர் அனைவரையும் விட்டுவிட்டு, பார்த்தன் {அர்ஜுனன்} மீது ஏன் அவன் அஃதை ஏவவில்லை?(1) அந்த ஈட்டியால் பார்த்தன் {அர்ஜுனன்} கொல்லப்பட்ட பிறகு, சிருஞ்சயர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள். அப்படியிருக்கையில், பல்குனன் {அர்ஜுனன்} இறந்த பிறகு, ஏன் வெற்றி நமதாகாது?(2) போரிட அழைக்கப்பட்டால், அந்த அறைகூவலைத் தான் ஒருபோதும் மறுப்பதில்லை என்ற அளவுக்கு அர்ஜுனன் சபதம் செய்திருக்கிறான். எனவே, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பல்குனனை நிச்சயம் போருக்கு அழைத்திருக்க வேண்டும்.(3)

ஓ! சஞ்சயா, விருஷன் {கர்ணன்}, அந்தப் பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} தனிப்போரில் ஈடுபட்டாலும், சக்ரனால் {இந்திரனால்} தனக்குக் கொடுக்கப்பட்ட அந்த ஈட்டியால் {சக்தி ஆயுதத்தால்} அவனை {அர்ஜுனனை} ஏன் கொல்லவில்லை என்பதை எனக்குச் சொல்வயாக.(4) என் மகன் {துரியோதனன்}, நுண்ணறிவு மற்றும் ஆலோசகர்கள் ஆகிய இரண்டும் அற்றவன் என்பதில் ஐயமில்லை. அந்தப் பொல்லாத பாவி {துரியோதனன்}, தொடர்ச்சியாக எதிரியால் கலங்கடிக்கப்படுகிறான். அப்படியிருக்கையில், தன் எதிரிகளை அவனால் எவ்வாறு வெல்ல முடியும்?(5) உண்மையில், அத்தகு வலிமைகொண்டதும், வெற்றியைத் தரவல்லதுமான அந்த ஈட்டி, ஐயோ, கடோத்கசன் மூலம் வாசுதேவனால் {கிருஷ்ணனால்} பலனற்றதாகச் செய்யப்பட்டதே.(6) உண்மையில், கை முடமான ஒரு முடவனின் கரத்தில் உள்ள கனி {பழம்} பலமிக்கவனால் பறிக்கப்படுவதைப் போலவே, கர்ணனின் கரத்தில் இருந்து அது {அந்த ஈட்டி} பறிக்கப்பட்டிருக்கிறது. இப்படியே அந்த மரண ஈட்டி {சக்தி ஆயுதம்} கடோத்கசனால் கனியற்றதாகச் செய்யப்பட்டது.(7)

பன்றிக்கும் நாய்க்கும் இடையிலான சண்டையில் அவ்விரண்டும் இறந்து போன பிறகு, வேடனே ஆதாயத்தை அடைவதைப் போல, ஓ! கற்றவனே {சஞ்சயா}, கர்ணனுக்கும், ஹிடிம்பையின் மகனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையிலான போரில் ஆதாயமடைந்தத்து வாசுதேவனே {கிருஷ்ணனே} என்று நான் நினைக்கிறேன்.(8) போரில் கடோத்கசன் கர்ணனைக் கொன்றால், அது பாண்டவர்களுக்குப் பெரும் ஆதாயத்தைக் கொடுக்கும். மறுபுறம், கர்ணன் கடோத்கசனைக் கொன்றால், கர்ணனின் ஈட்டி {சக்தி ஆயுதம்} இழக்கப்படுவதன் விளைவால் அதுவும் அவர்களுக்கே பெரும் ஆதாயத்தையே கொடுக்கும். பெரும் ஞானம் கொண்டவனும், மனிதர்களில் சிங்கமுமான அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களின் நன்மைக்கு ஏற்புடையதைச் செய்ய இவ்வழியில் சிந்தித்து, போரில் கர்ணனால் கடோத்கசன் கொல்லப்படும்படி செய்தான்” என்றான் {திருதராஷ்டிரன்}.(9,10)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கர்ணன் அடைய விரும்பிய சாதனையை அறிந்து கொண்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் சக்தி கொண்டவனும், ராட்சசர்களின் இளவரசனுமான கடோத்கசனை அழைத்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, {அவனைக்} கர்ணனுடன் தனிப்போரில் ஈடுபடச் செய்து, பின்னவனின் {கர்ணனின்} மரண ஈட்டியைக் கனியற்றதாகச் செய்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவையாவும் உமது தீய கொள்கையால் விளைந்தனவே.(11,12) ஓ! குருகுலத்தைத் தழைக்கச் செய்பவரே {திருதராஷ்டிரரே}, கிருஷ்ணன், கர்ணனின் கரங்களில் இருந்து வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனை {அர்ஜுனனைக்} காக்காதிருந்தால், நாம் நிச்சயம் வெற்றியை அடைந்திருப்போம்.(13)

உண்மையில், ஓ! திருதராஷ்டிரரே, யோகியரின் தலைவனான அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பார்த்தனை {அர்ஜுனனைக்} காக்காதிருந்தால், தன் குதிரைகள், கொடிமரம், தேர் ஆகியவற்றோடு கூடிய அவன் {அர்ஜுனன்} போரில் அழிவை அடைந்திருப்பான்.(14) பல்வேறு வழிகளில் காக்கப்பட்டு, கிருஷ்ணனின் நல்ல துணையுடன் கூடிய அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளை அணுகி அவர்களை வென்று வருகிறான்.(15) உண்மையில், கிருஷ்ணனே பார்த்தனை {அர்ஜுனனை} அந்த மரண ஈட்டியில் இருந்து பாதுகாத்தான், இல்லையெனில், மரத்தை அழிக்கும் மின்னலை {இடியைப்} போல அவ்வாயுதம் {அந்த சக்தி ஆயுதம்} குந்தியின் மகனை {அர்ஜுனனை} அழித்திருக்கும்” {என்றான் சஞ்சயன்}.(16)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “என் மகன் {துரியோதனன்}, சச்சரவில் விருப்பம் கொண்டவனாவான். அவனது ஆலோசகர்கள், மூடர்களாகவே இருக்கிறார்கள். அவனது {துரியோதனனது} ஞானமும் வீணானதாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே, அர்ஜுனனின் நிச்சய மரணத்திற்கான இந்த உறுதியான வழிமுறைகள் கலங்கடிக்கப்பட்டிருக்கின்றன.(17) ஓ! சூதா {சஞ்சயா}, துரியோதனனோ, ஆயுதம் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான கர்ணனோ, தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது அந்த மரண ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} ஏன் வீசவில்லை?(18) ஓ! கவல்கணன் மகனே {சஞ்சயா}, பெரும் ஞானம் கொண்ட நீயும் இந்தப் பெரும்பொருளை {சக்தி ஆயுதத்தைப் பயன்படுத்துதல் என்ற நோக்கத்தைக்} கர்ணனுக்கு நினைவூட்டாமல் ஏன் மறந்தாய்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(19)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒவ்வொரு இரவும், துரியோதனன், சகுனி, நான் மற்றும் துச்சாசனன் ஆகியோர் {ஆலோசனையின் போது} கவனமாகக் கருத்தில் கொள்ளும் பொருளாக அதுவே {அந்த ஈட்டியே} இருந்தது.(20) (நாங்கள் கர்ணனிடம்), “ஓ! கர்ணா, பிற போர்வீரர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டுத் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கொல்வாயாக. பிறகு நாம் பாண்டுக்களையும், பாஞ்சாலர்களையும் நம் அடிமைகளாகக் கொள்ளும் தலைவர்களாவோம்.(21) அல்லது, பார்த்தன் {அர்ஜுனன்} வீழ்ந்த பிறகு, விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} பாண்டு மகன்களில் ஒருவரை (அவனுடைய {அர்ஜுனனுடைய} இடத்தில் நிறுத்திப் போரிட) நியமித்தானென்றால், அந்தக் கிருஷ்ணனே கொல்லப்பட வேண்டும்.(22)

கிருஷ்ணனே பாண்டவர்களின் ஆணிவேராவான். பார்த்தன் அதனில் {அந்த ஆணி வேரில்} வளர்ந்த மரம் போன்றவனாவான். பிருதையின் {குந்தியின்} பிற மகன்கள் அதன் கிளைகளாவர், அதே வேளையில் பாஞ்சாலர்கள் அதன் இலைகள் என்று அழைக்கப்படலாம்.(23) பாண்டவர்கள் கிருஷ்ணனையே தங்கள் புகலிடமாகக் கொண்டுள்ளனர்; கிருஷ்ணனையே தங்கள் வலிமையாகவும், கிருஷ்ணனையே தங்கள் தலைவனாகவும் அவர்கள் கொண்டுள்ளனர். உண்மையில், நட்சத்திரக்கூட்டங்களுக்கு ஒரு சந்திரனைப் போல, கிருஷ்ணனே அவர்களது மைய ஆதாரமாக இருக்கிறான். எனவே, ஓ! சூதன் மகனே {கர்ணா}, இலைகள், கிளைகள், மரம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, எங்கும், எக்காலத்திலும் கிருஷ்ணனையே பாண்டவர்களின் ஆணிவேர் என்று அறிந்து கொள்வாயாக” என்று {கர்ணனிடம் நாங்கள்} சொன்னோம்.(25)

உண்மையில், கர்ணன், யாதவர்களை மகிழ்விக்கும் அந்தத் தசார்ஹ குலத்தோனை {கிருஷ்ணனைக்} கொன்றிருந்தால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மொத்த உலகமும் உமது கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.(26) உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யாதவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பினரையும் மகிழ்விக்கும் அந்த ஒப்பற்றவன் {கிருஷ்ணன்}, உயிரை இழந்து பூமியில் கிடக்கும்படி செய்யப்பட்டால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மலைகள், கடல்கள் காடுகள் ஆகியவற்றுடன் கூடிய மொத்த உலகமும் உமது மேலாதிக்கத்தைக் கொண்டதாக நிச்சயம் ஆகியிருக்கும்.(27) தேவர்களின் தலைவனும், அளவிலா சக்தி கொண்டவனுமான அந்த ரிஷிகேசனை {கிருஷ்ணனைக்} குறித்த இத்தகு தீர்மானத்துடனேயே நாங்கள் ஒவ்வொரு காலையிலும் எழுந்தோம். எனினும், போரின் போது நாங்கள் எங்கள் தீர்மானத்தை மறந்தோம்.(28)

கேசவனே {கிருஷ்ணனே} குந்தியின் மகனான அர்ஜுனனை எப்போதும் பாதுகாக்கிறான். அவன் {கிருஷ்ணன்} அர்ஜுனனைப் போரில் ஒரு போதும் சூதன் மகன் {கர்ணன்} முன்பு நிறுத்தவில்லை [1].(29) உண்மையில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அச்யுதன் {கிருஷ்ணன்}, நம்மைக் கொண்டே நமது மரண ஈட்டியை எவ்வாறு கனியற்றதாக்குவது என்று சிந்தித்து, பிற முதன்மையான தேர்வீரர்களையே கர்ணனுக்கு முன்பாக நிறுத்தினான் [2].(30) மேலும், உயர் ஆன்ம கிருஷ்ணன், கர்ணனிடம் இருந்து {அர்ஜுனனை} இவ்வகையில் காக்கும்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த முதன்மையானவன் {கிருஷ்ணன்} தன்னைத் தானே ஏன் காத்துக் கொள்ள மாட்டான்?(31) நன்றாகச் சிந்தித்தால், கையில் சக்கரம் தாங்கிய வீரனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} வெல்ல இயன்ற எவனும் மூவுலகிலும் இல்லை என்பதையே நான் காண்கிறேன்”.(32)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தேர்வீரர்களில் புலியும், கலங்கடிக்கப்பட முடியாதவனுமான சாத்யகி, பெரும் தேர்வீரனான கர்ணனைக் குறித்து, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணனிடம், “ஓ! ஜனார்த்தனரே {கிருஷ்ணரே}, அளவில்லா சக்தி கொண்ட அந்த ஈட்டியை {சக்தி ஆயுதத்தைப்} பல்குனர் {அர்ஜுனர்} மீது ஏவ வேண்டும் என்பதே கர்ணனின் உறுதியான தீர்மானமாகும். எனினும், அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, அஃதை ஏன் அவர் {அர்ஜுனர்} மீது ஏவவில்லை” என்று கேட்டான்.(34)

அதற்கு வாசுதேவன் {கிருஷ்ணன் – சாத்யகியிடம்}, “துச்சாசனன், கர்ணன், சகுனி, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, அவர்களின் தலைமையில் நின்ற துரியோதனன் ஆகியோர் அடிக்கடி (இதைக் குறித்துக் கர்ணனிடம் பேசி),(35) “ஓ! கர்ணா, ஓ! பெரும் வில்லாளியே, ஓ! போரில் அளவிலா ஆற்றலைக் கொண்டவனே, ஓ! வெற்றியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவனே {கர்ணனே}, பெரும் தேர்வீரனான குந்தியின் மகன் பார்த்தன், அல்லது தனஞ்சயன் {அர்ஜுனன்} மீதன்றி வேறு எவர் மீதும் இந்த ஈட்டி ஏவப்படக்கூடாது. தேவர்களுக்கு மத்தியில் வாசவனை {இந்திரனைப்} போல அவனே அவர்களில் {பாண்டவர்களில்} மிகவும் கொண்டாடப்படுபவன் ஆவான்.(36,37) அவன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டுவிட்டால், சிருஞ்சயர்களுடன் கூடிய பிற பாண்டவர்கள் அனைவரும் நெருப்பற்ற தேவர்களைப் போல[3] உற்சாகமற்றவர்களாவார்கள்” என்றனர்.(38) “அப்படியே ஆகட்டும்” என்று அஃதை ஏற்றான் கர்ணன். ஓ! சிநிக்களில் காளையே {சாத்யகி}, காண்டீவதாரியை {அர்ஜுனனைக்} கொல்வதே கர்ணனின் இதயத்தில் எப்போதும் இருந்தது.(39) எனினும் நான், ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே {சாத்யகி}, எப்போதும் ராதையின் மகனை {கர்ணனை} மலைக்கச் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன். இதன் காரணமாகவே அவன் {கர்ணன்}, வெண்குதிரைகள் கொண்ட பாண்டு மகனின் {அர்ஜுனனின்} மீது அந்த ஈட்டியை வீசவில்லை.(40)ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே {சாத்யகி}, பல்குனனின் {அர்ஜுனனின்} மரணத்திற்கு ஏதுவான வழிமுறைகளைக் கலங்கடிக்காதவரை {என் விழிகளில்} உறக்கத்தையோ, என் இதயத்தில் மகிழ்ச்சியையோ நான் கொள்ளவில்லை.(41) எனவே, கடோத்கசனின் மூலம் அந்த ஈட்டி பயனற்றதானதைக் கண்ட பிறகே, ஓ! சிநிக்களில் காளையே {சாத்யகி}, மரணத்தின் கோரப் பற்களுக்கிடையில் இருந்து தனஞ்சயன் {அர்ஜுனன்} இன்று மீட்கப்பட்டதாக நான் கருதுகிறேன்.(42) போரில் பீபத்சுவுடைய {அர்ஜுனனுடைய} பாதுகாப்பின் அளவுக்கு என் தந்தை, என் தாய், நீங்கள் {யாதவர்கள்}, என் சகோதரர்கள் ஆகியோரையும், ஏன் என் உயிரையே கூடத் தகுந்ததாக நான் கருதவில்லை.(43)

மூவுலகங்களின் அரசுரிமையை விட மதிப்புமிக்க ஏதாவது இருந்தாலும் கூட, ஓ! சாத்வதா {சாத்யகி}, (என்னோடு அதைப் பகிர்ந்து கொள்ள) பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} இல்லாமல் அதை நான் (அனுபவிக்க) விரும்பவில்லை.(44) எனவே, மரணத்தில் இருந்து மீண்டவனைப் போலத் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டு, ஓ! யுயுதானா {சாத்யகி}, இந்த மகிழ்ச்சிப் போக்கு எனதானது {இப்படி மகிழ்ச்சிக் கூத்தாடுகிறேன்}.(45) இதற்காகவே கர்ணனோடு போரிட நான் அந்த ராட்சசனை {கடோத்கசனை} அனுப்பினேன். இரவில் கர்ணனோடு போரிட்டு தாக்குப்பிடிக்கவல்லவன் {கடோத்கசனைத் தவிர வேறு} எவனும் இருக்கவில்லை” என்றான் {கிருஷ்ணன்}.(46)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தனஞ்சயனின் {அர்ஜுனனின்} நன்மையிலும், அவனுக்கு ஏற்புடையதிலும் எப்போதும் அர்ப்பணிப்புள்ள அந்தத் தேவகியின் மகன் {கிருஷ்ணன்}, அந்தச் சந்தர்ப்பத்தில் சாத்யகியிடம் இப்படியே பேசினான்” {என்றான் சஞ்சயன்}.(47)

யுதிஷ்டிரனுக்கு ஆறுதலளித்த வியாசர்! – துரோண பர்வம் பகுதி – 183-: விதி, தங்கள் சொந்த மடமை மற்றும் கிருஷ்ணனின் கொள்கை ஆகியவையே கௌரவர்களின் தோல்விக்குக் காரணம் எனத் திருதராஷ்டிரன் சொல்வது; கடோத்கசனின் வீழ்ச்சியில் யுதிஷ்டிரனின் துயரம்; கர்ணனை எதிர்த்து கோபத்துடன் விரைந்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனை அணுகி ஆறுதலளித்த வியாசர்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! ஐயா {சஞ்சயா}, கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோரின் இந்தச் செயல்பாட்டையும், குறிப்பாக உனது செயல்பாட்டையும் கொள்கை விதிகளுக்கு முரணானதாக {அநீதியாக} நான் காண்கிறேன்.(1) உண்மையில் அந்த ஈட்டியானது {சக்தி ஆயுதமானது}, போரில் ஒருவனை எப்போதும் கொல்லும் என்பதையும், வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்களாலும் அது தாங்கிக்கொள்ளப் பட முடியாதது, அல்லது கலங்கடிக்கப்பட முடியாதது என்பதையும் நீங்கள் அறிந்திருந்தாலும்,(2) ஓ! சஞ்சயா, தேவகியின் மகனுடனோ {கிருஷ்ணனுடனோ}, பல்குனனுடனோ {அர்ஜுனனுடனோ} முன்பே கர்ணன் போரிட்ட போது, ஏன் அவன் {கர்ணன்} அஃதை ஏவவில்லை?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(3)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஒவ்வொரு நாளும் போரில் இருந்து நாங்கள் அனைவரும் திரும்பியதும், ஓ! ஏகாதிபதி, ஓ! குரு குலத்தில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, இரவில் விவாதித்து, கர்ணனிடம், “ஓ! கர்ணா, நாளை காலையில், ஓ! கர்ணா, இந்த ஈட்டியானது கேசவன் {கிருஷ்ணன்} மீதோ, அர்ஜுனன் மீதோ ஏவப்பட வேண்டும்” என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம் [1].(4,5) எனினும், காலை விடிந்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விதியின் காரணமாகக் கர்ணனும், பிற தேர்வீரர்களும் அந்தத் தீர்மானத்தை மறந்தனர்.(6) கைகளில் அந்த ஈட்டியைக் கொண்டிருந்தும், பார்த்தனையோ {அர்ஜுனனையோ}, தேவகியின் மகனான கிருஷ்ணனையோ கர்ணன் கொல்லவில்லை என்பதால் விதியே உயர்ந்தது என நான் நினைக்கிறேன்.(7) உண்மையில், விதியால் அவனது {கர்ணனின்} அறிவு பீடிக்கப்பட்டதாலேயே, வாசவனின் {இந்திரனின்} மரண ஈட்டியை {சக்தி ஆயுதத்தைத்} தன் கையில் கொண்டிருந்தாலும், தேவர்களின் மாயையில் மயங்கிய அவன் {கர்ணன்}, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, தேவகியின் மகனான கிருஷ்ணனின் அழிவுக்காக அவன் {கிருஷ்ணன்} மீதோ, இந்திரனின் ஆற்றலைக் கொண்ட பார்த்தனின் மீதோ அதை வீசவில்லை” {என்றான் சஞ்சயன்}.(8,9)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “விதியாலும், உங்கள் சொந்த புத்தியாலும், கேசவனாலும் {கிருஷ்ணனாலும்} நீங்கள் அழிவை அடைந்தீர்கள். துரும்பைப் போன்று முக்கியத்துவமற்ற கடோத்கசனைக் கொல்லச் செய்து வாசவனின் {இந்திரனின்} ஈட்டியைத் தொலைத்துவிட்டீர்கள்.(10) இந்தப் பெரும் விவேகமற்ற செயலின் மூலமாக, பிற மன்னர்களைப் போலவே கர்ணனும், என் மகன்களும் ஏற்கனவே யமனின் வசிப்பிடத்திற்குள் நுழைந்துவிட்டார்கள்.(11) ஹிடிம்பை மகனின் {கடோத்கசனின்} வீழ்ச்சிக்குப் பிறகு, குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் மீண்டும் எவ்வாறு போர் நடைபெற்றது என்பதை எனக்கு இப்போது சொல்வாயாக.(12) துரோணரை எதிர்த்து விரைந்தவர்களும், தாக்குவதில் நல்ல திறன் பெற்றவர்களுமான சிருஞ்சயர்களும், பாஞ்சாலர்களும் போரிடுவதற்காக எவ்வாறு அணிவகுத்தனர்?(13) 

பூரிஸ்ரவஸ் மற்றும் தன் உயிரையே துச்சமாக மதித்த ஜெயத்ரதன் ஆகியோரின் கொலையால் கோபத்தால் தூண்டப்பட்டு, கொட்டாவி விடும் புலியைப் போன்றோ, வாயை அகல விரித்திருந்த காலனுக்கோ ஒப்பாக அவர்களை எதிர்த்து, அவர்களது படைக்குள் ஊடுருவிய துரோணரின் தாக்குதலை, பாண்டுக்களும், சிருஞ்சயர்களும் எவ்வாறு தாக்குப் பிடித்தனர்?(14,15) ஓ! ஐயா {சஞ்சயா}, துரோணரைப் பாதுகாத்தவர்களான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கர்ணன், கிருபர் மற்றும் துரியோதனன் தலைமையிலான பிறர் ஆகியோர் என்ன செய்தனர்?(16) ஓ! சஞ்சயா, பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கொல்ல வேண்டிய தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகியோரின் கணைகளை எனது போர்வீரர்கள் அந்தப் போரில் எவ்வாறு மறைத்தனர்?(17) தங்கள் தரப்பு இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களான சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} மரணத்தால் கோபமடைந்தவர்களும், கடோத்கசனின் மரணத்தால் கோபமடைந்தவர்களுமான ஒவ்வொருவரும் அந்த இரவுப்போரை எவ்வாறு போரிட்டனர்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(18)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இரவில் ராட்சசன் கடோத்கசன் கர்ணனால் கொல்லப்பட்டதும், மகிழ்ச்சியால் நிறைந்த உமது துருப்பினர் அனைவரும் உரக்க முழங்கினர்.(19) இரவின் அந்த இருட்டு வேளையில் அவர்கள், பாண்டவத் துருப்புகள் மீது மூர்க்கமாகப் பாய்ந்து அவர்களைக் கொல்லத் தொடங்கினர். இவை யாவற்றையும் கண்ட மன்னன் யுதிஷ்டிரன் பெரிதும் உற்சாகத்தை இழந்தான்.(20)

பிறகு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாண்டு மகன் {யுதிஷ்டிரன்}, பீமசேனனிடம், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {பீமா}, தார்தராஷ்டிரப் படையைத் தடுப்பாயாக.(21) ஹிடிம்பை மகன் {கடோத்கசன்} கொல்லப்பட்டதன் விளைவால், பெரும் மயக்கம் என்னை ஆட்கொள்கிறது” என்றான் {யுதிஷ்டிரன்}. இப்படி அவன் {யுதிஷ்டிரன்}, பீமசேனனிடம் ஆணையிட்டுவிட்டுத் தன் தேரில் அமர்ந்தான்.(22) கண்ணீர் நிறைந்த முகத்துடன் மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, கர்ணனின் ஆற்றலைக் கண்டு பெரிதும் உற்சாகத்தை இழந்தான்.(23)

இந்த அளவுக்குப் பீடிக்கப்பட்ட அவனை {யுதிஷ்டிரனைக்} கண்ட கிருஷ்ணன் இந்த வார்த்தைகளை {அவனிடம்} சொன்னான்: “ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, இத்தகு துயரம் உமதாக வேண்டாம். ஓ! பாரதர்களின் தலைவரே {யுதிஷ்டிரரே}, சாதாரணமானவனைப் போல இப்படி நீர் உற்சாகத்தை இழப்பது உமக்குத் தகாது. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, எழுவீராக, போரிடுவீராக. ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, கனமான சுமையைச்  சுமப்பீராக {பெரும் பொறுப்பை ஏற்பீராக}.(24,25) உற்சாகமற்ற நிலை உம்மை மூழ்கடித்தால், நமது வெற்றி உறுதியற்றதாகவிடும்” என்றான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தர்மனின் மகன் யுதிஷ்டிரன்,(26) தன் கரங்களால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு கிருஷ்ணனிடம், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, கடமையின் சிறந்த பாதையை நான் அறியாதவனல்ல.(27) பிறர் கரங்களில் பெற்ற சேவைகளை {உதவிகளை} மறந்தவன், பிராமணனைக் கொன்றதால் ஏற்படும் கொடும் விளைவுகளை அடைவான். நாங்கள் காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த போது, ஹிடிம்பையின் உயர் ஆன்ம மகன் {கடோத்கசன்} வெறும் குழைந்தையே எனினும்,(28) ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அவன் எங்களுக்குப் பல சேவைகளைச் செய்தான். வெண்குதிரைகளைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, ஆயுதங்களை அடைவதற்காகச் சென்றுவிட்டான் என்பதை அறிந்த(29) அந்தப் பெரும் வில்லாளி (கடோத்கசன்), ஓ! கிருஷ்ணா, காம்யகத்திலிருந்த என்னிடம் வந்தான். தனஞ்சயன் {அர்ஜுனன்} திரும்பி வரும் வரை அவன் {கடோத்கசன்} எங்களோடே வசித்தான்.(30)

அடைவதற்கரிய காடுகளுக்குச் சென்ற போது, களைத்துப் போயிருந்த பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} தன் முதுகில் அவனே {கடோத்கசனே} சுமந்து வந்தான்.(31) ஓ! தலைவா {கிருஷ்ணா}, அவன் அடைந்த சாதனைகள், அவன் போர்முறைகள் அனைத்திலும் திறம்பெற்றவன் என்பதைக் காட்டுகின்றன. உண்மையில், அந்த உயர் ஆன்மா கொண்டவன் {கடோத்கசன்}, என் நன்மைக்காகவே பல கடினமான சாதனைகளை அடைந்தான்.(32) ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, சகாதேவனிடம் நான் இயல்பாகக் கொண்டுள்ளதைப் போன்று, இரு மடங்கு பாசத்தை நான் ராட்சசர்களின் இளவரசனான கடோத்கசன் மீது கொண்டிருந்தேன்.(33) அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன் என்னிடம் அர்ப்பணிப்புடன் இருந்தான். நான் அவனது அன்புக்குரியவனாக இருந்தேன். அவனும் எனக்கு அன்புக்குரியவனாக இருந்தான். ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, இதற்காகவே துயரால் எரிந்து நான் இப்படி உற்சாகத்தை இழந்திருக்கிறேன்.(34)

ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நம் துருப்புகள் கௌரவர்களால் பீடிக்கப்பட்டு முறியடிக்கப்படுவதைப் பார்ப்பாயாக. வலிமைமிக்கத் தேர்வீரர்களான துரோணரும், கர்ணனும் போரில் ஊக்கத்தோடு போரிடுவதைப் பார்ப்பாயாக.(35) மதங்கொண்ட இரு யானைகளால் பரந்த புதர்க்காடு நசுக்கப்படுவதைப் போல இந்த நள்ளிரவில் பாண்டவப்படை நசுக்கப்படுவதைப் பார்ப்பாயாக.(36)

ஓ! மாதவா {கிருஷ்ணா}, பீமசேனனுடைய கரங்களில் வலிமையையும், பார்த்தன் {அர்ஜுனன்} கொண்டிருக்கும் பல்வேறு வகைகளிலான ஆயுதங்களையும் அலட்சியம் செய்தபடியே கௌரவர்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்துகின்றனர் {அல்லவா?}.(37) அதோ, போரில் அந்த ராட்சசனை {கடோத்கசனைக்} கொன்றுவிட்டு, துரோணர், கர்ணன் மற்றும் மன்னன் துரியோதனன் ஆகியோர் உரக்க முழங்குகின்றனர்.(38) ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நாங்களும், நீயும் உயிரோடிருக்கும்போதே, சூதன் மகனோடு {கர்ணனோடு} போரிட்ட ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} கொல்லப்பட்டான்.(39) சவ்யசச்சின் {அர்ஜுனன்} பார்த்துக் கொண்டிருக்கம்போதே, நமக்கு மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்தி, பெரும்பலம் மிக்கப் பீமசேனன் மகனான ராட்சசன் கடோத்கசனைக் கர்ணன் கொன்றுவிட்டான்.(40)

தீய தார்தராஷ்டிரர்களால் அபிமன்யு கொல்லப்பட்ட போது, ஓ! கிருஷ்ணா, வலிமைமிக்கத் தேர்வீரனான சவ்யசச்சின் {அர்ஜுனன்} போர்க்களத்தில் இருக்கவில்லை.(41) நாங்கள் அனைவரும் சிந்துக்களின் சிறப்புமிக்க ஆட்சியாளனால் {ஜெயத்ரதனால்} தடுக்கப்பட்டிருந்தோம். தன் மகனுடன் (அஸ்வத்தாமனுடன்) கூடிய துரோணரே, அந்தச் செயலுக்குக் காரணமாக அமைந்தார்.(42) ஆசானே {துரோணரே} கர்ணனிடம் அபிமன்யுவைக் கொல்வதற்கான வழிமுறைகளைச் சொன்னார். அபிமன்யு வாளுடன் போராடிக் கொண்டிருந்த போது, ஆசானே அந்த ஆயுதத்தை வெட்டினார்.(43) {அபிமன்யு} அத்தகு பரிதாப நிலையில் வீழ்ந்திருந்த போது, கிருதவர்மன், (அந்தப் பிள்ளையின்) குதிரைகளையும், இரண்டு பார்ஷினி சாரதிகளையும் மிகக் கொடூரமாகக் கொன்றான்.(44) அதன்பிறகே பெரும் வில்லாளிகளான பிறர் சுபத்திரையின் மகனைக் {அபிமன்யுவைக்} கொன்றனர். ஓ! கிருஷ்ணா, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} சிறு குற்றத்திற்காகக் காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டான்.

ஓ! யாதவர்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, அச்செயல் {ஜெயத்ரதனின் கொலை} எனக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கவில்லை. எதிரிகளைக் கொல்வது நியாயமென்றால், அது பாண்டவர்களால் அடையப்பட வேண்டுமென்றால்,(46) இதற்கு {அதாவது ஜெயத்ரதனைக் கொல்வதற்கு} முன்பாகத் துரோணரும், கர்ணனும் கொல்லப்பட்டிருக்க வேண்டும். இதையே நான் நினைக்கிறேன். நம் துன்பங்களுக்கு அவ்விருவரே ஆணிவேராக இருக்கின்றனர்.(47) போரில் அவ்விருவரையும் (தன் கூட்டாளிகளாக) அடைந்த சுயோதனன் {துரியோதனன்}, நம்பிக்கையை அடைந்தான் {தைரியமடைந்தான்}. உண்மையில், துரோணரோ, தன்னைப் பின்தொடர்பவர்களுடன் கூடிய சூதன் மகனோ {கர்ணனோ}(48) கொல்லப்பட வேண்டிய போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, இவ்விவகாரத்தில் மிகத் தொலைவான தொடர்பைக் கொண்ட {அதாவது நெருங்கிய தொடர்பற்றச்} சிந்து மன்னனை {ஜெயத்ரதனைக்} கொன்றான். சூதன் மகனை {கர்ணனை} நிச்சயம் நான் தண்டிக்க வேண்டும்.(49) எனவே, ஓ! வீரா {கிருஷ்ணா}, சூதன் மகனை {கர்ணனைக்} கொல்ல இப்போது நான் போரிடப் போகிறேன். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமசேனன் இப்போது துரோணரின் படைப்பிரிவுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறான்” என்று மறுமொழி கூறினான் {யுதிஷ்டிரன்}.(50)

கிருஷ்ணனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன யுதிஷ்டிரன், கர்ணனை எதிர்த்து வேகமாகச் சென்று, உறுதிமிக்கத் தன் வில்லை வளைத்து, தன் சங்கைக் கடுமையாக முழக்கினான்.(51) பிறகு, ஆயிரம் தேர்கள், முன்னூறு யானைகள், ஐயாயிரம் குதிரைகள் ஆகியவற்றுடன் கூடிய பாஞ்சால மற்றும் பிரபத்ரகப் படையொன்றால் சூழப்பட்ட சிகண்டி, அம்மன்னனை {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்து சென்றான். யுதிஷ்டிரனின் தலைமையிலான கவசம் பூண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும், தங்கள் பேரிகைகளையும், சங்குகளையும் முழக்கினர். அந்த நேரத்தில் வலிய கரங்களைக் கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்},(52-54) “அதோ யுதிஷ்டிரர், கோபத்தால் நிறைந்து, சூதன் மகனை {கர்ணனைக்} கொல்ல விரும்பி, பெரும் வேகத்தோடு செல்கிறார். இதில் நீ அவரை {யுதிஷ்டிரரைச்} சார்ந்திருப்பது முறையாகாது” என்றான்.(55) இதைச் சொன்ன ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, குதிரைகளை வேகமாகத் தூண்டினான். உண்மையில் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மன்னனை {யுதிஷ்டிரனைத்} தொடர்ந்து சென்ற போது அவன் {யுதிஷ்டிரன்} மிகத்தொலைவை அடைந்திருந்தான்.(56)

அந்த நேரத்தில் துயரில் பீடிக்கப்பட்டிருந்த மனத்தைக் கொண்டிருந்தவனும், நெருப்பால் எரிக்கப்பட்டது போலத் தெரிந்தவனும், சூதன் மகனை {கர்ணனைக்} கொல்ல விரும்பி வேகமாக விரைந்தவனுமான தர்மனின் மகனான யுதிஷ்டிரனைக் கண்டு, அவனை {யுதிஷ்டிரனை} அணுகிய வியாசர் அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(57) வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “போரில் கர்ணனுடன் மோதியிருப்பினும் பல்குனன் {அர்ஜுனன்} இன்னும் வாழ்வது நற்பேறாலேயே. உண்மையில் கர்ணன், சவ்யசச்சினை {அர்ஜுனனைக்} கொல்லும் விருப்பத்திலேயே தன் ஈட்டியை {சக்தி ஆயுதத்தை}வைத்திருந்தான்.(58) ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, ஜிஷ்ணு {அர்ஜுனன்} கர்ணனுடன் தனிப்போரில் ஈடுபடாதது நற்பேறாலேயே. அந்நிலையில் ஒருவரையொருவர் அறைகூவி அழைக்கும் அவர்கள் தங்கள் தெய்வீக ஆயுதங்களை அனைத்து பக்கங்களிலும் ஏவி இருப்பார்கள்.(59) சூதன் மகனுடைய {கர்ணனுடைய} ஆயுதங்களை அர்ஜுனன் அழித்திருப்பான். பின்னவனால் {அர்ஜுனனால்} பீடிக்கப்படும் முன்னவன் {கர்ணன்}, ஓ! யுதிஷ்டிரா, அந்தப் போரில் நிச்சயம் இந்திரனின் ஈட்டியை வீசியிருப்பான்.(60) ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, (இது நடந்திருந்தால்) உனது துயரம் இன்னும் பெரிதாக இருந்திருக்கும். ஓ! கௌரவங்களை அளிப்பவனே {யுதிஷ்டிரா}, சூதன் மகனால் {கர்ணனால்} போரில் அந்த ராட்சசன் {கடோத்கசன்} கொல்லப்பட்டது நற்பேறாலேயே.(61) உண்மையில், வாசவனின் {இந்திரனின்} ஈட்டியைக் கருவியாக மட்டுமே கொண்டு காலனே கடோத்கசனைக் கொன்றான். ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, போரில் அந்த ராட்சசன் {கடோத்கசன்} உனது நன்மைக்காகவே கொல்லப்பபட்டான்.(62)

ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, கோபவசப்படாதே, உன் இதயத்தைத் துயரில் நிலைநிறுத்தாதே. ஓ! யுதிஷ்டிரா, இதுவே இவ்வுலகின் உயிரினங்கள் அனைத்திற்குமான முடிவாகும்.(63) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உன் தம்பிகளுடனும், (உனது படையின்) சிறப்புமிக்க மன்னர்கள் அனைவருடனும் சேர்ந்து கௌரவர்களுடன் போரிடுவாயாக.(64)

இன்றிலிருந்து ஐந்தாம் நாளில் பூமி உனதாகும். ஓ! மனிதர்களில் புலியே, எப்போதும் அறம் குறித்தே {நல்லதையே} நினைப்பாயாக.(65) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, மகிழ்ச்சியான இதயத்துடன் (அனைத்து உயிரினங்களிடமும்) அன்பு, தவம், ஈகை, பொறுமை மற்றும் உண்மை ஆகியவற்றைப் பயில்வாயாக. நீதி {அறம், தர்மம்} எங்கிருக்குமோ, அங்கே தான் வெற்றியிருக்கும்” என்றார் {வியாசர்}. பாண்டுவின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன வியாசர், அப்போதே அங்கேயே மறைந்து போனார்” {என்றான் சஞ்சயன்}.(66)

கடோத்கசவத பர்வம் முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  துரோண பர்வம்-ஜயத்ரதவத பர்வம் –

October 14, 2025

திருதராஷ்டிரனின் பின்னிரக்கம்! – துரோண பர்வம் பகுதி – 085-அபிமன்யுவின் மறைவுக்கு இரங்கி, துரியோதனனின் நடத்தைக்காக வருந்திய திருதராஷ்டிரன் அதன்பிறகு நடந்த போர்ச்செய்திகளைச் சொல்லும்படி சஞ்சயனைத் தூண்டியது.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அபிமன்யுவின் படுகொலைக்கு அடுத்த நாள், துயராலும் கவலையாலும் பீடிக்கப்பட்ட பாண்டவர்கள் என்ன செய்தனர்? என் வீரர்களில் அவர்களோடு {பாண்டவர்களோடு போரிட்டவர் யாவர்? சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} சாதனைகளை அறிந்தவர்களும், தீங்கைச் செய்தவர்களுமான அந்தக் கௌரவர்கள் எவ்வாறு அச்சமற்றிருந்தனர் என எனக்குச் சொல்வாயாக.

தன் மகன் கொல்லப்பட்டதன் காரணமாகத் துயரில் எரிந்து, அனைத்தையும் அழிக்க மூர்க்கமாக விரையும் காலனைப் போல வந்த அந்த மனிதர்களில் புலியை (அர்ஜுனனைப்) போரில் அவர்கள் எவ்வாறு பார்க்கத் துணிந்தனர்? குரங்குகளின் இளவரசனை {அனுமனைத்} தன் கொடியில் கொண்ட அந்த வீரன், தன் மகனின் மரணத்திற்காகத் துயருற்றுப் போரில் தன் பெரும் வில்லை அசைத்த போது, என் வீரர்கள் என்ன செய்தனர்?

ஓ! சஞ்சயா, துரியோதனனுக்கு என்ன நேர்ந்தது? இன்று ஒரு பெரும் சோகம் எங்களைப் பீடித்திருக்கிறது. மகிழ்ச்சிக் குரல்களை நான் இப்போது கேட்கவில்லை. சிந்து மன்னனின் {ஜெயத்ரதனின்} வசிப்பிடத்தில் காதுகளுக்கு மிகவும் ஏற்புடைய எந்த உற்சாகக் குரல்கள் முன்பு கேட்கப்பட்டனவோ, ஐயோ, இன்று அவை கேட்கப்படவில்லையே. ஐயோ, என் மகன்களின் முகாமில் அவர்களது புகழைப் பாடும் எண்ணற்ற சூதர்கள் மற்றும் மாகதர்களின் பாடல்களும், ஆடல்களும் கேட்கப்படவில்லையே. முன்பெல்லாம் அத்தகு ஒலிகள் அடிக்கடி என் காதுகளை எட்டின. ஐயோ, அவர்கள் துயரில் மூழ்கியிருப்பதாலேயே (அவர்களின் முகாமில்) அத்தகு ஒலிகளை நான் கேட்கவில்லை.

முன்னர், ஓ! சஞ்சயா, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த சோமதத்தனின் வசிப்பிடத்தில் அமர்ந்திருந்தபோது, மகழ்ச்சிகரமான ஒலிகளையே நான் கேட்பேன். ஐயோ, இன்று என் மகன்களின் வசிப்பிடம் துயர ஒலிகள், புலம்பல்கள் ஆகியவற்றை எதிரொலித்து, உயிரையும், சக்தியையும் கொண்ட அனைத்து ஒலிகளையும் இழந்திருப்பதால், நான் இழந்த (அறத்) தகுதிகள் எவ்வளவு? விவிம்சதி, துர்முகன், சித்திரசேனன், விகர்ணன் மற்றும் என் பிற மகன்களின் வீடுகளிலும் முன்பு நான் வழக்கமாகக் கேட்கும் ஒலிகள் கேட்கப்படவில்லையே.

என் மகன்களின் முக்கியப் புகலிடமும், துரோணரின் மகனுமான எந்தப் பெரும் வில்லாளியிடம் {அஸ்வத்தாமனிடம்}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான சீடர்கள் காத்திருந்தார்களோ {பணி செய்தார்களோ}, சர்ச்சைக்குரிய விவாதங்கள் [1], பேச்சுகள், உரையாடல்கள் [2], கிளர்ச்சி தரும் பல்வேறு இசைக்கருவிகள் மற்றும் பல்வேறு விதங்களிலான மகிழ்ச்சிகரமான பாடல்களில் இரவும் பகலும் எவன் இன்புறுவானோ, குருக்கள், பாண்டவர்கள், சாத்வதர்கள் ஆகியோர் பலரால் எவன் வழிபடப்படுகிறானோ, ஐயோ, ஓ சூதா {சஞ்சயா}, அந்தத் துரோண மகனின் {அஸ்வத்தாமனின்} வசிப்பிடத்தில் முன்பு போல ஒலிகள் கேட்கப்படவில்லையே. பெரும் எண்ணிக்கையிலான பாடகர்களும், ஆடற்கலைஞர்களும் அந்த வலிமைமிக்க வில்லாளியான துரோண மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} நெருக்கமாகக் காத்திருப்பார்களே {பணி செய்வார்களே}. ஐயோ, அவனது வசிப்பிடத்தில் அவர்களது ஒலி கேட்கப்படவில்லையே.ஒவ்வொரு மாலைப்பொழுதிலும், விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோரின் முகாமில் எழும் அந்தப் பேரொலி, ஐயோ இப்போது அங்கே கேட்கப்படவில்லையே. கைகேயர்களின் முகாம்களில் வழக்கமாக நடனம் மற்றும் களியாட்டங்களில் ஈடுபடும் அவர்களுடைய வீரர்களின் பெரிய கைத்தடல்களும், பாடலின் பேரொலியும் இன்று கேட்கப்படவில்லையே.

சாத்திரச் சடங்குகளின் புகலிடமான சோமதத்தன் மகனிடம் {பூரிஸ்ரவசிடம்} காத்திருப்போரும் {பணி செய்வோரும்}, வேள்விகளைச் செய்யத்தக்கோருமான புரோகிதர்களின் ஒலிகள் இப்போது கேட்கப்படவில்லையே. விற்கயிறின் நாணொலி, வேத உரைப்பொலி, ஈட்டிகள் வாள்கள் ஆகியவற்றின் ‘விஸ்’ {என்ற} ஒலி, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி ஆகிய ஒலிகள் துரோணரின் வசிப்பிடத்தில் இடையறாமல் கேட்கப்படுமே. ஐயோ, அவ்வொலிகள் இப்போது கேட்கப்படவில்லையே. வழக்கமாக அங்கே எழும் பல்வேறு நாட்டுப் பாடல்களின் பெருக்கம், இசைக்கருவிகளின் பேரொலி ஆகியவை, ஐயோ, இன்று கேட்கப்படவில்லையே.

மங்காப்புகழ் கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அமைதியை விரும்பியும், அனைத்து உயிரினங்களிடம் கருணை கொண்டும் உபப்லாவ்யத்தில் இருந்து வந்த போது, ஓ! சூதா {சஞ்சயா}, தீய துரியோதனனிடம் நான் இதைச் சொன்னேன்: “ஓ! மகனே {துரியோதனா}, வாசுதேவனை {கிருஷ்ணனை} வழியாகக் கொண்டு, பாண்டவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக. ஓ! மகனே, (சமாதானம் செய்து கொள்வதற்கான) நேரம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். ஓ! துரியோதனா, என் ஆணையை மீறாதே. சமாதானம் வேண்டியும், என் நன்மைக்காகவும் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கும் வாசுதவேனை {கிருஷ்ணனை} நீ ஒதுக்கினால், போரில் உனக்கு வெற்றி கிட்டாது” என்றேன்.

எனினும், துரியோதனனின் நன்மைக்காகப் பேசியவனும், வில்லாளிகள் அனைவரில் காளையுமான அந்தத் தாசார்ஹனைத் துரியோதனன் புறக்கணித்தான். இதன் மூலம், தனக்கு அழிவைத் தரக்கூடிய ஒன்றை அவனே தழுவி கொண்டான். காலனின் பிடியில் அகப்பட்ட அந்த எனது தீய மகன் {துரியோதனன்}, துச்சாசனன் மற்றும் கர்ணனைப் பின்பற்றி என் ஆலோசனைகளை நிராகரித்தான். பகடையாட்டத்தை நான் அங்கீகரிக்கவில்லை. விதுரன் அஃதை அங்கீகரிக்கவில்லை. ஓ! சஞ்சயா, சிந்துக்களின் ஆட்சியாளனோ {ஜெயத்ரதனோ}, பீஷ்மரோ, சல்லியனோ, பூரிஸ்ரவசோ, புருமித்ரனோ, ஜயனோ, அஸ்வத்தாமனோ, கிருபரோ, துரோணரோ அஃதை அங்கீகரிக்கவில்லை. இம்மனிதர்களின் ஆலோசனைகளின்படி என் மகன் நடந்து கொண்டிருந்தால், அவன் தன் சொந்தங்களுடனும், நண்பர்களுடனும் எப்போதும் மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வாழ்ந்திருப்பான். மகிழ்ச்சிகரமான இனிய பேச்சைத் தங்கள் சொந்தங்களுக்கும், உயர் பிறப்பாளர்களுக்கும் {நற்குலத்தில் பிறந்தோர்களுக்கும்} ஏற்புடைய வகையில் எப்போதும் பேசுபவர்களும், அனைவராலும் விரும்பப்படுபவர்களும் விவேகிகளுமான பாண்டுவின் மகன்கள் மகிழ்ச்சியை அடையப்போவது உறுதி.

“அறத்தில் தன் கண்ணைச் செலுத்தும் ஒரு மனிதன் எங்கும் எப்போதும் மகிழ்ச்சியையே அடைவான். அப்படிப்பட்ட மனிதன் தன் மரணத்திற்குப் பிறகு நன்மையையும் அருளையும் வெல்வான். தேவையான வலிமையைப் பெற்றிருக்கும் பாண்டவர்கள் பாதிப் பூமியை அனுபவிக்கத் தகுந்தவர்களே. கடல்களைக் கச்சையாகக் கொண்ட பூமி (குருக்களைப் போலவே) அவர்களுக்கும் பரம்பரை உடைமையாகும். அரசுரிமையைக் கொண்ட பாண்டவர்கள் நீதியின் பாதையில் {அறவழியில்} இருந்து எப்போதும் விலகமாட்டார்கள்.

ஓ! குழந்தாய் {துரியோதனா}, பாண்டவர்கள் யாருடைய பேச்சை எப்போதும் கேட்பார்களோ அப்படிப்பட்டவர்களாக, உதாரணத்திற்குச் சல்லியன், சோமதத்தன், உயர் ஆன்ம பீஷ்மர், துரோணர், விகர்ணன், பாஹ்லீகர், கிருபர் மற்றும் வயதால் மதிக்கத்தக்க பாரதர்களில் சிறந்தவர்களான பிறரையும் நான் என் சொந்தங்களாகக் கொண்டிருக்கிறேன். உன் சார்பாகப் பாண்டவர்களிடம் இவர்கள் பேசினால், நன்மைதரும் அந்தப் பரிந்துரைகளின் படி அவர்கள் {பாண்டவர்கள்} நிச்சயம் செயல்படுவார்கள். அல்லது இவர்களில் அவர்களின் தரைப்பைச் சார்ந்து, வேறுமாதிரியாகப் பேசுகிறவர் என எவரை நினைக்கிறாய். கிருஷ்ணன் ஒருபோதும் அறவோரின் பாதையைக் கைவிடமாட்டான். பாண்டவர்கள் அனைவரும் அவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறார்கள். நான் பேசும் அறவார்த்தைகளுக்கு அவ்வீரர்கள் கீழ்ப்படியாமல் இருக்க மாட்டார்கள், ஏனெனில், பாண்டவர்கள் அனைவரும் அற ஆன்மாக்கள்’ என்ற இந்த வார்த்தைகளையும், ஓ! சூதா {சஞ்சயா}, இது போன்ற வார்த்தைகளையும் என் மகனிடம் பரிதாபகரமாகப் புலம்பினேன். மூடனான அவன் {துரியோதனன்} நான் சொன்னதைக் கேட்கவில்லை. இவையாவும் காலத்தின் கோலமெனவே நான் நினைக்கிறேன்.

விருகோதரன் {பீமன்}, அர்ஜுனன், விருஷ்ணி வீரனான சாத்யகி, பாஞ்சாலர்களின் உத்தமௌஜஸ், வெல்லப்பட முடியாத யுதாமன்யு, தடுக்கப்படமுடியாத திருஷ்டத்யும்னன், வீழ்த்தப்படாத சிகண்டி, அஸ்மகர்கள், கேகயர்கள், சோமகர்களின் க்ஷத்ரதர்மன், சேதிகளின் ஆட்சியாளன் {திருஷ்டகேது}, சேகிதானன், காசி ஆட்சியாளனின் மகனான விபு, திரௌபதியின் மகன்கள், விராடன், வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதன், மனிதர்களில் புலிகளான இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்) ஆகியோரும், ஆலோசனை வழங்க மதுசூதனனும் {கிருஷ்ணனும்} எங்கிருக்கிறார்களோ, அவர்களுடன் போரிட்டு உயிரோடு வாழ்வதை எதிர்பார்க்கும் எவன் இவ்வுலகில் இருக்கிறான்?

மேலும், என் எதிரிகள் தெய்வீக ஆயுதங்களை வெளிப்படுத்துகையில் துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி, நான்காமவனான துச்சாசனன் ஆகியோரைத் தவிர்த்து ஐந்தாவதாக வேறு எவரையும் நான் காணாததால், அவர்களை {என் எதிரிகளைத்} தடுப்பதற்கு வேறு எவன் இருக்கிறான்? கவசம் பூண்டு, கையில் கடிவாளத்துடன் விஷ்ணுவையே தங்கள் தேரில் கொண்டவர்களும், அர்ஜுனனைத் தங்கள் போர்வீரனாகக் கொண்டவர்களும் ஒரு போதும் தோற்க முடியாது. அந்த என் புலம்பல்களைத் துரியோதனன் இப்போதும் நினைத்துப் பார்க்க மாட்டானா?

மனிதர்களில் புலியான பீஷ்மர் கொல்லப்பட்டதாக நீ சொன்னாய். தொலைநோக்குப் பார்வை கொண்ட விதுரன் சொன்ன வார்த்தைகளின் கனிகளைக் கண்டு என் மகன்கள் இப்போது புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன். சினியின் பேரனாலும் {சாத்யகியாலும்}, அர்ஜுனனாலும் தன் படை மூழ்கடிக்கப்பட்டதைக் கண்டும், தன் தேர்களின் தட்டுகள் வெறுமையாக இருப்பதைக் கண்டும் என் மகன்கள் புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன். பனிக்காலத்தின் முடிவில், காற்றால் உந்தப்பட்டுப் பெருகும் காட்டுத்தீயானது, உலர்ந்த புற்குவியலை எரிப்பதைப் போலவே தனஞ்சயன் {அர்ஜுனன்} என் துருப்புகளை எரிக்கப்போகிறான்.

ஓ! சஞ்சயா, விவரிப்பதில் நீ நிறைவானவனாக இருக்கிறாய். மாலையில் பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} இழைத்த பெரும் தீங்குக்குப் பிறகு நடந்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. அபிமன்யு கொல்லப்பட்ட போது உங்களின் மனநிலை எவ்வாறு இருந்தது? ஓ! மகனே {சஞ்சயா}, காண்டீவதாரிக்கு {அர்ஜுனனுக்குக்} பெரும் குற்றமிழைத்த என் வீரர்கள், அவனது சாதனைகளைப் போரில் தாங்க இயன்றவர்களாக இல்லை. துரியோதனனால் தீர்மானிக்கப்பட்ட திட்டங்கள் என்ன? கர்ணனால் {தீர்மானிக்கப்பட்ட திட்டங்கள்} என்ன? துச்சாசனனும், சுபலனின் மகனும் {சகுனியும்} என்ன செய்தனர்?

ஓ! மகனே, ஓ! சஞ்சயா, பேராசையின் பாதையில் பயணிப்பவனும், தீய புரிதல் கொண்டவனும், கோபத்தினால் மனம் பிறழ்ந்தவனும், அரசுரிமையை இச்சிப்பவனும், மூடனும், கோபத்தால் அறிவை இழந்தவனுமான தீய துரியோதனனின் தீச்செயல்களாலேயே இந்தப் போர் என் பிள்ளைகள் அனைவரின் மேலும் விழுந்திருக்கிறது.

ஓ! சஞ்சயா, பிறகு துரியோதனனால் ஏற்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை எனக்குச் சொல்வாயாக. அவை தவறான தீர்மானங்களா? இல்லை நல்ல தீர்மானங்களா?” {என்று கேட்டான் திருதராஷ்டிரன்}.

சஞ்சயனின் நிந்தனை! – துரோண பர்வம் பகுதி – 086(போருக்கான காரணமாகத் தன் மகனைப் பழித்த திருதராஷ்டிரனை சஞ்சயன் நிந்தித்தது; அதன் பிறகு நடந்த போரைக் குறித்து விவரிக்கத் தொடங்கியது…)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “என் கண்களால் சாட்சியாகக் கண்ட அனைத்தையும் நான் உமக்குச் சொல்வேன். அமைதியாகக் கேட்பீராக. உமது தவறு பெரியது. (வயலின்) நீர் பாய்ந்து போன பிறகு, அணையானது பயனற்றுப் போவதைப் போலவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது இந்தப் புலம்பல்களும் பயனற்றவையே. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கவலைப்படாதீர். அந்தகனின் ஆச்சரியமான இந்தச் செயல்கள், மீறப்படமுடியாதவையாகும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, இது புதிதல்ல என்பதால் கவலைப்படாதீர்.

குந்தியின் மகனான யுதிஷ்டிரனையும், உமது மகன்களையும் பகடையாட்டத்தில் இருந்து நீர் முன்னர்த் தடுத்திருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது.

அதே போல, போருக்கான நேரம் வந்த போது, சினத்தில் எரிந்த இரு தரப்பையும் நீர் தடுத்திருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது.

அதே போல, கீழ்ப்படியாத துரியோதனனைக் கொல்லும்படி குருக்களை நீர் முன்னர்த் தூண்டியிருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது [1].(“கௌரவர்களின் நன்மையைக் கருதி மூர்க்கனான துரியோதனனை முந்திச் சிறைப்படுத்தியிருப்பீராகில், நீர் பெரும்புகழைப் பெற்றிருப்பீர்”அதே போல, சீருக்கு இடம் கொடுக்காத துரியோதனனின் இருப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் பிற குருக்களை நீர் தூண்டியிருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது” )

(இச்செயல்களில் ஏதேனும் ஒன்றை நீர் செய்திருந்தாலும்), பாண்டவர்கள், பாஞ்சாலர்கள், விருஷ்ணிகள் மற்றும் பிற மன்னர்கள் ஆகியோர் உமது நேர்மையற்ற புத்தியை {பிடிவாதத்தை} ஒருபோதும் அறிந்திருக்க மாட்டார்கள்.

அதே போல, ஒரு தந்தையின் கடமையாகத் துரியோதனனை அறவழியில் நிறுத்தி, அதன்வழியே அவனை {துரியோதனனை} நடக்கச் செய்திருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது.

இந்தப் பூமியில் ஞானிகளில் சிறந்தவராக நீர் இருக்கிறீர். {அப்படிப்பட்ட நீர்}, நித்தியமான அறத்தைக் கைவிட்டு, துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோரின் ஆலோசனைகளை எவ்வாறு பின்பற்றினீர். எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இவ்வுலக) செல்வத்தில் பற்றுள்ள உமது இந்தப் புலம்பல்கள், தேனுடன் கலந்த நஞ்சாகவே எனக்குத் தெரிகிறது. முன்பு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்டிரனையோ, துரோணரையோ கூட உம்மை மதிக்கும் அளவுக்குக் கிருஷ்ணன் மதித்ததில்லை. எனினும், எப்போது மன்னரின் கடமைகளில் இருந்து நீர் வழுவினீர் என்பதை அவன் {கிருஷ்ணன்} அறிந்தானோ அப்போதிலிருந்து உம்மை {அந்த அளவுக்கு} மரியாதையாகக் கருதுவதை நிறுத்திக் கொண்டான். பிருதையின் {குந்தியின்} மகன்களிடம் {பாண்டவர்களிடம்} பல்வேறு கடும் சொற்களை உமது மகன்கள் பேசியிருக்கின்றனர்.

ஓ! அரசுரிமையைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பேச்சுகளின் போது, நீர் உமது மகன்களுக்காகப் பாகுபாடு காட்டினீர். அந்த உமது பாகுபாட்டின் விளைவே உம்மை இப்போது பீடிக்கிறது. ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, பரம்பரை அரசுரிமை இப்போது ஆபத்திலிருக்கிறது {சந்தேகத்திற்கிடமானதாக இருக்கிறது}. (இல்லையெனில்), பிருதையின் {குந்தியின்} மகன்களால் அடக்கப்பட்ட முழு உலகையும் இப்போது அடைவீராக [2]. குருக்கள் அனுபவிக்கும் அரசும், அவர்களின் {குருக்களின்} புகழும் பாண்டுக்களால் {பாண்டு மற்றும் பாண்டவர்களால்} அடையப்பட்டதே. பாண்டுவின் அறம்சார்ந்த மகன்களே அந்த அரசையும், புகழையும் மேலும் பெருக்கினர். எனினும், உம்முடைய தொடர்பாலும், பேராசை கொண்ட நீர் அவர்களது பரம்பரை அரசை அபகரித்துக் கொண்டதாலும், அவர்களது அந்தச் சாதனைகள் (அவர்களுக்குக்) கனியற்றவையாகின [3].(தகப்பன் பாட்டன் வழியாகக் கிடைத்திருந்த ராஜ்யத்தை நீர் சந்தேகத்துக்குள்ளாக்கிவிட்டீர். ஏனெனில், பார்த்தர்களால் ஜயிக்கப்பட்ட பூமி முழுமையும் நீரே அடைந்தீர். முன்பு கௌரவர்களின் ராஜ்யமும், கீர்த்தியும் பாண்டுவினாலேயே தேடப்பட்டன. தர்மத்தை அனுஷ்டிக்கின்றவர்களான பாண்டவர்களாலே மறுபடியும் அவ்விரண்டும் அதிகமாக்கப்பட்டன. இவ்வுலகில் ராஜ்யபோகத்தில் பேராசையுள்ளவரான உம்மாலே பிதாவைச் சேர்ந்த ராஜ்யத்திலிருந்து பாண்டவர்கள் விலகும்படி செய்யப்பட்டமையால், அவர்களுடைய அந்தக் காரியமானது உம்மை அடைந்து மிகவும் பயனற்றதாகிவிட்டது.” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலோ, “உமது மூதாதையரிடம் இருந்து நீரடைந்த அரசுரிமை இப்போது உமது கரங்களில் இருந்து நழுவப் போகிறது; அல்லது பிருதையின் மகன்களிடம் இருந்து அதை நீர் பெறுவீர் (பாண்டவர்கள் உமது மகன்களைக் கொன்று அவர்களிடம் இருந்து அதை நிச்சயம் பறிப்பார்கள்). குருக்களின் ஆட்சிப்பகுதிகளும், அவற்றின் புகழும் பாண்டுவால் அடையப்பட்டு, நன்னடத்தைக் கொண்ட பாண்டுவின் மகன்களால் புகழும், ஆட்சிப்பகுதிகளும் மேலும் பெருகின.  உம்முடைய தொடர்பால் அவர்களது முயற்சிகளனைத்தும் கனியற்றவையாகின. மேலும், பேராசை கொண்ட உம்மால் அவர்களது பரம்பரை அரசுரிமையையும் இழந்தனர்” )

இப்போதோ, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர் தொடங்கிய பிறகு, உமது மகன்களின் பல்வேறு தவறுகளைச் சுட்டிக்காட்டி நீர் அவர்களை நிந்திக்கிறீர். இஃது உமக்குத் தகாது. போரிடும்போது, க்ஷத்திரியர்கள் தங்கள் உயிர்களைக் குறித்துக் கவலை கொள்வதில்லை. உண்மையில் அந்த க்ஷத்திரியர்களில் காளைகள், பார்த்தர்களின் வியூகத்தைத் துளைத்துப் போரிடுகின்றனர். உண்மையில், கிருஷ்ணன், அர்ஜுனன், சாத்யகி மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகியோரால் பாதுகாக்கப்படும் அந்தப் படையுடன் கௌரவர்களைத் தவிர வேறு யார் போரிடத் துணிவர்?

அர்ஜுனனைத் தங்கள் போர்வீரனாகவும், ஜனார்த்தனனை {கிருஷ்ணனைத்} தங்கள் ஆலோசகராகவும், சாத்யகி மற்றும் விருகோதரனை {பீமனைத்} தங்கள் பாதுகாவலர்களாகவும் கொண்டோரை, கௌரவர்களையும், அவர்களின் தலைமையில் பின்தொடர்வோரையும் தவிர வேறு எந்த மனித வில்லாளி எதிர்க்கத் துணிவான்? வீரத்தைக் கொண்டு, க்ஷத்திரியக் கடமைகளை நோற்கும் நட்பு மன்னர்களால் அடையத்தக்க அனைத்தையும், கௌரவர்கள் தரப்பில் உள்ள வீரர்களும் செய்கின்றனர். எனவே, குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய அந்த மனிதர்களில் புலிகளுக்கு இடையில் நடந்த பயங்கரப் போரைக் குறித்த அனைத்தையும் இப்போது கேட்பீராக” {என்றான் சஞ்சயன்}.

துரோணர் அமைத்த கலப்பு வியூகம்! – துரோண பர்வம் பகுதி – 087-பதினான்காம் நாள் போர்த்தொடக்கம்; துரோணர் வியூகம் வகுத்துக் கொண்டிருந்தபோது இருந்த வீரர்களின் நிலை; வீரர்களும் ஜெயத்ரதனும் ஏற்க வேண்டிய நிலைகளை அவர்களுக்குச் சொன்ன துரோணர்; சகட, சக்கர, பத்ம மற்றும் சூசிமுக வியூகங்கள் கலந்த புது வியூகமொன்றை வகுத்த துரோணர்; அந்த வியூகத்தில் வீரர்கள் ஏற்றுக் கொண்ட நிலைகள்..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த இரவு கடந்ததும், ஆயுதங்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான துரோணர், தன் படைப்பிரிவுகள் அனைத்தையும் போருக்கு அணிவகுக்கத் தொடங்கினார். அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்துடன் கதறியவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களுமான கோபக்கார வீரர்களின் பல்வேறு ஒலிகள் அங்கே கேட்கப்பட்டன. சிலர் தங்கள் விற்களை வளைத்தனர், சிலர் தங்கள் கரங்களை வில்லின் நாண்கயிறுகளில் தேய்த்தனர். அவர்களில் பலர் ஆழ்ந்த மூச்சுகளைவிட்டபடியே “அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} எங்கே?” என்று கதறினர்.

சிலர் நன்கு கடினமாக்கப்பட்டவையும், வானத்தின் நிறத்தைக் கொண்டவையும், பெரும் கூர்மை கொண்டவையும் அழகிய பிடிகளுள்ளவையும், உறையிலிருந்து எடுக்கப்பட்டவையுமான வாள்களை உயர வீச (உயர வீசவும், அதை மீண்டும் பிடிக்கவும்) தொடங்கினர். போரை விரும்பிய துணிச்சல்மிக்க வீரர்கள் பலர், பயிற்சியால் அடையப்பட்ட திறனுடன், வாள்வீசுவோர் மற்றும் வில்லாளிகளின் படிமுறை வளர்ச்சியை அங்கே செயல்பாட்டில் காட்டினர். சிலர், மணிகள் நிறைந்தவையும், சந்தனக்குழம்பால் பூசப்பட்டவையும், தங்கம் மற்றும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் கதாயுதங்களைச் சுழற்றியபடியே பாண்டுவின் மகன்களைக் குறித்து விசாரித்தனர்.

செருக்கால் போதையுண்டவர்களும், பருத்த கரங்களைக் கொண்டவர்களுமான சிலர், இந்திரனைக் கௌரவிக்க உயர்த்தப்பட்ட கம்பங்களுக்கு ஒப்பான பரிகங்களால் (கொடிக்கம்பங்களின் காட்டைக் கொண்டு மறைப்பதைப் போல) ஆகாயத்தைத் தடுத்தனர். அழகிய மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களும், போரை விரும்பியவர்களுமான பிறர், பல்வேறு ஆயுதங்களுடன், களத்தின் பல்வேறு பகுதிகளில் நின்றனர். அவர்கள், “அர்ஜுனன் எங்கே? அந்தக் கோவிந்தன் {கிருஷ்ணன்} எங்கே? செருக்குள்ள பீமன் எங்கே? அவர்களது கூட்டாளிகள் எங்கே?” என்றபடியே அவர்களைப் போருக்கு அழைத்தனர்.

அப்போது தன் சங்கை முழக்கி, தன் குதிரைகளை மிக விரைவாகத் தூண்டிய துரோணர் தன் தருப்புகளை அணிவகுத்தபடியே பெரும் வேகத்துடன் இங்குமங்கும் திரிந்தார். போரில் களிப்புற்ற அந்தப் படைப்பிரிவுகள் அனைத்தும் தங்கள் நிலைகளை ஏற்ற பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} ஜெயத்ரதனிடம், “நீ, சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், அஸ்வத்தாமன், சல்லியன், விருஷசேனன், கிருபர் ஆகியோர், நூறாயிரம் {100,000} குதிரைகள், அறுபதாயிரம் {60,000} தேர்கள், மதங்கொண்ட பதினாலாயிரம் {14,000} யானைகள், கவசம் பூண்ட நூற்று இருபதாயிரம் {120,000} காலாட்படை வீரர்கள் ஆகியவற்றுடன் எனக்குப் பின்புறத்தில் இருபது மைல்கள் {ஆறு குரோசங்கள்} தொலைவில் உங்கள் நிலைகள் ஏற்பீர்களாக. அங்கே வாசவனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்களாலும் கூட உன்னைத் தாக்க இயலாது, எனவே, பாண்டவர்களைக் குறித்து என்ன சொல்லப்பட வேண்டும். ஓ! சிந்துக்களின் ஆட்சியாளா {ஜெயத்ரதா}, ஆறுதலடைவாயாக”, என்ற வார்த்தைகளைச் சொன்னார் {துரோணர்}.

சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், (துரோணரால்) இப்படிச் சொல்லப்பட்டதும் ஆறுதலை அடைந்தான். அவன் {ஜெயத்ரதன்}, பெரும் தேர்வீரர்களாலும், கவசம்பூண்டு, கையில் சுருக்குக் கயிறுகளைக் {பாசங்களைக்} கொண்டு மூர்க்கமாகப் போரிடத் தீர்மானித்திருந்த காலாட்படை வீரர்கள் பலராலும் சூழப்பட்டு, துரோணரால் சுட்டப்பட்ட பகுதிக்கு காந்தார வீரர்கள் பலருடன் சென்றான் [1]. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சாமரங்களாலும், தங்க ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயத்ரதனின் குதிரைகள் அனைத்தும் நன்றாக இழுக்கும் திறன் கொண்டவையாகவும் இருந்தன. ஏழாயிரம் {7000} அத்தகு குதிரைகளும், சிந்து இனத்தில் மூவாயிரம் {3000} குதிரைகள் பிறவும் அவனுடன் இருந்தன.(“மனத்தேறுதலையடைந்த சிந்து தேசாதிபதியான ஜயத்ரதன், அந்த மகாரதர்களாலும், கவசமணிந்தவர்களும், சன்னதர்களும் ஈட்டியைக் கையில் பிடித்துக் குதிரையின் மேல் ஏறியிருக்கின்றவர்களுமான குதிரை வீரர்களாலும் சூழப்பட்டுக் காந்தாரர்களுடன் சேர்ந்து அவ்விடம் சென்றான்)

போரிட விரும்பிய உமது மகன் துர்மர்ஷணன், கவசம் பூண்டவையும், பெரும் அளவிலானவையும், கடும் செயல்கள் செய்யக்கூடியவையும், நன்கு பயிற்சி பெற்ற பாகர்களோடு கூடியதுமான மதங்கொண்ட ஆயிரத்து ஐநூறு யானைகளுடன் {1500} துருப்புகள் அனைத்துக்கும் முன்னிலையில் தன்னை நிறுத்திக் கொண்டான். உமது மற்ற மகன்களான துச்சாசனன் மற்றும் விகர்ணன் ஆகியோர் இருவரும், ஜெயத்ரதனின் நோக்கங்களைச் சாதிப்பதற்காக முன்னேறிச் செல்லும் படைகளுக்கு மத்தியில் தங்கள் நிலைகளைக் கொண்டனர்.

பரத்வாஜர் மகனால் {துரோணரால்}, {ஒரு} பகுதி சகடமாகவும், {ஒரு} பகுதி சக்கரமாகவும் அமைக்கப்பட்ட வியூகமானது, முழுமையாக நாற்பத்து எட்டு மைல்கள் நீளமும், அதன் பின்புறத்தின் இருபது மைல்கள் [2] அகலமும் கொண்டிருந்தது. அந்த வியூகத்தின் பின்புறத்தில் தாமரை வடிவித்தில் துளைக்கப்பட முடியாத மற்றொரு வியூகம் {பத்ம வியூகம்} அமைக்கப்படிருந்தது. அந்தத் தாமரைக்குள், சூசீ {ஊசி} என்று அழைக்கப்படும் மற்றுமொரு அடர்த்தியான {நெருக்கமான} வியூகம் அமைக்கப்பட்டிருந்தது. துரோணர், தன் வலிமைமிக்க வியூகத்தை இப்படி அமைத்த பிறகு, தனது நிலையை ஏற்றார்.

அந்தச் சூசியின் {ஊசியின்} வாய்ப்பகுதியில் வலிமைமிக்க வில்லாளியான கிருதவர்மன் தன் நிலையை எடுத்துக் கொண்டான். கிருதவர்மனுக்கு அடுத்ததாக, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, காம்போஜர்களின் ஆட்சியாளனும் {சுதக்ஷிணனும்}, ஜலசந்தனும் [3] நின்றனர். இவர்களுக்கு அடுத்ததாகத் துரியோதனனும், கர்ணனும் நின்றனர். அவர்களுக்குப் பின்னால், அந்தச் சகட வியூகத்தில், அதன் {அந்த வியூகத்தின்} தலையைப் பாதுகாப்பதற்காகப் புறமுதுகிடாத வீரர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் அதில் {அந்த வியூகத்தில்} இருந்தனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்கள் அனைவருக்கும் பின்புறத்தில், ஒரு பெரும் படை சூழ மன்னன் ஜெயத்ரதன் அந்தச் சூசீ {ஊசி} வடிவ வியூகத்தின் ஒரு புறத்தில் நின்றான்.

அந்தச் சகடத்தின் {சகட வியூகத்தின்} நுழைவாயிலில் பரத்வாஜரின் மகன் {துரோணர்} இருந்தார். துரோணருக்குப் பின்னால் அவரைப்பாதுகாக்கும் போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்} இருந்தான். வெண்கவசமும், சிறந்த தலைப்பாகையும், அகன்ற தோளும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட துரோணர் தன் பெரிய வில்லை வளைத்தபடி சினத்தில் இருக்கும் அந்தகனைப் போல நின்றார். அழகிய கொடிமரம், சிவப்பு வேள்விப்பீடம், கருப்பு மான் தோல் ஆகியவற்றுடன் அருளப்பட்டிருந்த துரோணரின் தேரைக் கண்டு கௌரவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.

துரோணரால் அமைக்கப்பட்ட அந்த வியூகம் கொந்தளிக்கும் கடலுக்கு ஒப்பானதாக இருந்ததால், சித்தர்கள், சாரணர்கள் ஆகியோர் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அந்த வியூகமானது, தன் மலைகள், கடல்கள், கானகங்கள் மற்றும் பல பொருட்கள் நிறைந்த முழு உலகத்தையே விழுங்கிவிடும் என அனைத்து உயிர்களும் எண்ணின. தேர்கள், மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் நிறைந்ததும், அற்புதவடிவில் பயங்கரமாக முழங்குவதும், எதிரிகளின் இதயங்களைப் பிளக்கவல்லதும், சகட வடிவிலானதுமான [5] அந்த வலிமைமிக்க வியூகத்தைக் கண்ட மன்னன் துரியோதனன் மகிழ்ச்சியடையத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.

அர்ஜுனன் செய்த போர்! – துரோண பர்வம் பகுதி – 088-அர்ஜுனன் தரப்பிலும் கௌரவர் தரப்பிலும் நேர்ந்த சகுனங்கள்; அர்ஜுனனை எதிர்த்த துர்மர்ஷணன்; அர்ஜுனன் செய்த போர்; அச்சத்தால் ஓடிய கௌரவர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, குரு படைப்பிரிவுகள் (இப்படி) அணிவகுக்கப்பட்டுப் பெரும் ஆரவாரம் எழுந்த பிறகு; பேரிகைகளும், மிருதங்கங்களும் இசைக்கத்தொடங்கி, வீரர்களின் கூச்சலும், இசைக்கருவிகளின் இரைச்சலும் கேட்கத் தொடங்கிய பிறகு; சங்குகள் முழங்கி, மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் பயங்கர ஆரவாரம் எழுந்த பிறகு; போரிடுவதில் விருப்பமுள்ள பாரத வீரர்களால் போர்க்களம் மெதுவாக மறைக்கப்பட்ட பிறகு; ருத்ரம் என்று அழைக்கப்பட்ட காலம் தொடங்கிய பிறகு, அங்கே சவ்யசச்சின் {அர்ஜுனன்} தோன்றினான்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பல்லாயிரக்கணக்கான காக்கைகளும் கருங்காக்கைகளும் அர்ஜுனனின் தேருக்கு முன்பாக விளையாடிக் கொண்டே சென்றன. போருக்கு நாம் செல்லும் போது பயங்கரமாகக் கதறும் பல்வேறு விலங்குகளும், அமங்கலமாகக் காட்சி தரும் நரிகளும் நம் வலப்பக்கத்திலிருந்து ஊளையிட்டன. ஆயிரக்கணக்கான எரிநட்சத்திரங்கள் பேரொலியுடன் விழுந்தன. அந்தப் பயங்கர நிகழ்வின் போது, மொத்த பூமியும் குலுங்கியது. போரின் தொடக்கத்தில் குந்தியின் மகன் {அர்ஜுனன்} வந்த போது, கூழாங்கற்கள் மற்றும் சரளைக் கற்கள் ஆகியவற்றை இறைத்தபடி, திசைகள் அனைத்திலும் இடியுடன் கூடிய வறண்ட காற்று வீசியது.

பிறகு, நகுலனின் மகன் சதானீகன், பிருஷதன் மகன் திருஷ்டத்யும்னன் ஆகிய பெரும் ஞானம் கொண்ட அந்த வீரர்கள் இருவரும், பாண்டவர்களின் பல்வேறு படைப்பிரிவுகளை அணிவகுத்தனர். அப்போது, நூறு தேர்கள், நூறு யானைகள், மூவாயிரம் வீரர்கள், பத்தாயிரம் காலாட்படை வீரர்கள் ஆகியோரோடு ஆயிரத்து ஐநூறு {1500} விற்களின் நீளம் அளவு கொண்ட நிலத்தை மறைத்துக் கொண்ட {தன் படைகளுக்கு எடுத்துக் கொண்ட} உமது மகன் துர்மர்ஷணன், துருப்புகள் அனைத்தின் முன்னணியில் நின்று கொண்டு, “எதிரிகளை எரிப்பவனும், போரில் தாங்கிக் கொள்ளபட முடியாத வீரனுமான அந்தக் காண்டீவதாரியை {அர்ஜுனனை}, பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலவே இன்று நான் தடுக்கப் போகிறேன். பாறைத்திரளை எதிர்க்கும் மற்றொரு பாறைத்திரளைப் போல, சினம் நிறைந்த தனஞ்சயன் {அர்ஜுனன்} என்னோடு மோதுவதை இன்று மக்கள் காணட்டும். போரை விரும்பும் தேர்வீரர்களே, நீங்கள் (சாட்சியாக) இருப்பீர்களாக. என் மதிப்பையும் புகழையும் மேம்படுத்தும் வகையில் ஒன்றாகத் சேர்ந்திருக்கும் பாண்டவர்கள் அனைவரையும் எதிர்த்து நான் தனி ஒருவனாகவே போரிடுவேன்” என்றான் {துர்மர்ஷணன்}. உயர் ஆன்மா கொண்ட உமது உன்னத மகனான அந்தப் பெரும் வில்லாளி {துர்மர்ஷணன்} இதைச் சொல்லிவிட்டு, பெரும் வில்லாளிகள் பலரால் சூழப்பட்டு அங்கேயே நின்றான்.

சினத்தால் தூண்டப்பட்டு நிவாதகவசர்களைக் கொன்றவனும், பலம் பெருகியவனும், எப்போதும் வெல்லும் ஜயனும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனும், தன் பெரும் சபதத்தை அடைய விரும்பியவனும், கவசம் பூண்டு வாள் தரித்தவனும், தங்கக் கீரடத்தை அணிந்தவனும், வெண்மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், வெள்ளுடை தரித்தவனும், அழகிய அங்கதங்களால் தோள்கள் அலங்கரிக்கப்பட்டவனும், காதுகளில் சிறந்த குண்டலங்களைக் கொண்டவனும், தன் முதன்மையான தேரில் ஏறியவனுமான நரன், நாராயணின் துணையுடன், சினங்கொண்ட அந்தகன் போலவோ, இடியுடன் கூடிய வாசவனை {இந்திரனைப்} போலவோ, காலத்தால் உந்தப்பட்டுத் தன் தண்டாயுதத்துடன் இருக்கும் தடுக்கப்பட முடியாத யமனைப் போலவோ, கோபமூட்டப்பட இயலாதவனும், திரிசூலம் தரித்தவனுமான மகாதேவனை {சிவனைப்} போலவோ, தன் சுருக்குக் கயிற்றுடன் {பாசத்துடன்} கூடிய வருணனைப் போலவோ, யுக முடிவின் போது, படைப்புகளை எரிக்க எழுந்த சுடர்மிக்க நெருப்பைப் போலவோ போரில் தன் காண்டீவத்தை அசைத்தபடி எழுஞாயிறை {உதயச் சூரியனைப்} போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான்.

பெரும் ஆற்றலைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அடர்த்தியான கணைமாரி எங்கு விழுமோ, அந்த இடமான தன் படைக்கு முன்னணியில் தன் தேரை நிறுத்தித் தன் சங்கை முழக்கினான் [1]. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {தன் சங்கை} முழக்கியதும், கிருஷ்ணனும், பாஞ்சஜன்யம் என்றழைக்கப்படும் தன் முதன்மையான சங்கைப் பெரும்பலத்துடன் அச்சமற்றவகையில் முழக்கினான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} அந்தச் சங்குகளின் முழக்கத்தினால், உமது படையைச் சேர்ந்த வீரர்கள் அனைவரும் உற்சாகத்தை இழந்து நடுங்கினர். அவ்வொலியின் முடிவில் அவர்களுக்கு மயிர்ச்சிலிர்ப்பு ஏற்பட்டது. இடியினொலியைக் கேட்டு அனைத்துயிர்களும் அச்சத்தால் ஒடுங்குவதைப் போலவே, அந்தச் சங்குகளின் ஓசையால் உமது வீரர்கள் அனைவரும் அச்சத்தை அடைந்தனர். விலங்குகள் அனைத்தும் மலமும், சிறுநீரும் கழித்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த (இரு) சங்குகளின் முழக்கத்தால் கவலையில் நிறைந்த உமது மொத்தப் படையும், அதன் விலங்குகளுடன் சேர்த்துத் தங்கள் பலத்தை இழந்தன. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்களில் சிலர் பயத்தால் தங்கள் புலன்களை இழந்தனர் {மயக்கமுற்றனர்}.

அர்ஜுனனின் கொடியில் இருந்த குரங்கு {அனுமன்} தன் வாயை அகல விரித்து, அதனுடன் {அந்தக் கொடியுடன்} கூடிய பிற உயிரினங்களுடன் பயங்கர ஒலியை உண்டாக்கி உமது துருப்புகளை அச்சுறுத்தியது {அச்சுறுத்தினான்}. பிறகு, உமது வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக மீண்டும் சங்குகள், கொம்புகள், கைத்தாளங்கள் மற்றும் அனகங்கள் ஆகியன முழக்கப்பட்டன. (பிற) இசைக்கருவிகளின் பல்வேறு ஒலிகள், வீரர்களின் கூச்சல்கள், அவர்களின் தோள்தட்டல்கள், (தங்கள் எதிரிகளைச்) சவால் விட்டு அழைத்த பெரும் தேர்வீரர்களால் செய்யப்பட்ட சிங்க முழக்கங்கள் ஆகியவற்றோடு அவ்வொலிகளும் கலந்தது.

மருண்டோரின் அச்சத்தை அதிகரிக்கும் அந்தப் பயங்கர ஆரவாரம் எழுந்த போது, மகிழ்ச்சியால் நிறைந்த அந்தப் பகாசனன் {இந்திரனின்} மகன் {அர்ஜுனன்}, தாசார்ஹ குலத்தோனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான். அர்ஜுனன், “ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, துர்மர்ஷணன் இருக்கும் இடத்திற்குக் குதிரைகளைச் செலுத்துவாயாக. அந்த யானைப்படையினூடாகப் பிளந்து பகைவரின் படைக்குள் நான் ஊடுருவப் போகிறேன்” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான கேசவன், துர்மர்ஷணன் இருக்கும் இடத்திற்குக் குதிரைகளைத் தூண்டினான். தேர்கள், யானைகள் மற்றும் மனிதர்களுக்குப் பேரழிவைத் தந்ததும், ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் தொடங்கியதுமான அந்த மோதல் கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது. அப்போது, பொழியும் மேகத்திற்கு ஒப்பான பார்த்தன் {அர்ஜுனன்}, மலைச்சாரலில் மழையைப் பொழியும் மேகங்களின் திரளைப் போலக் கணைகளின் மாரியால் தன் எதிரிகளை மறைத்தான். பகைவரின் தேர்வீரர்களும், பெரும் கரநளினத்தை வெளிப்படுத்தி, கணைகளின் மேகங்களால் கிருஷ்ணன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் விரைவாக மறைத்தனர்.

அப்போது தன் எதிரிகளால் போரில் இப்படி எதிர்க்கப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்} கோபத்தால் நிறைந்து, தன் கணைகளால் தேர்வீரர்களின் தலைகளை அவர்களது உடல்களில் இருந்து வெட்டத் தொடங்கினான். மேல் உதடுகளால் கடிக்கப்பட்ட கீழுதடுகளுடனும், கோபத்தால் கலங்கிய கண்களுடனும் இருந்த முகங்களைக் கொண்டவையும், காதுகுண்டலங்கள் மற்றும் தலைப்பாகைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமாக அழகிய தலைகள் பூமியில் விரவிக் கிடந்தன. உண்மையில் அப்படிச் சிதறிக் கிடந்த வீரர்களின் தலைகளானவை, பறிக்கப்பட்டு, நசுக்கப்பட்டுக் களத்தில் விரவிக் கிடக்கும் தாமரைக் கூட்டத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன. குருதியின் நிறமேறி (களமெங்கும் அடர்த்தியாகக்) கிடந்த தங்கக் கவசங்கள், மின்னலுடன் கூடிய மேகங்களின் திரள்களைப் போலத் தெரிந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெட்டப்பட்டுப் பூமியில் விழும் தலைகளின் ஒலி, உரிய காலத்தில் பழுத்து விழும் பனம்பழங்களுக்கு ஒப்பானதாக இருந்தது. தலையற்ற முண்டங்கள் சில கையில் வில்லுடனும், உறையில் இருந்து உருவி உயர்த்தப்பட்ட வாள்களுடன் {தலையற்ற முண்டங்கள்} சிலவும் தாக்குவதற்காக எழுந்தன. அர்ஜுனனின் சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களும், அவனை வீழ்த்த விரும்பியவர்களுமான அந்தத் துணிச்சல் மிக்க வீரர்கள், அர்ஜுனனால் எப்போது தங்கள் தலைகள் வெட்டப்பட்டன என்பதைத் தாங்கள் அறியாதிருந்தனர் [2].

குதிரைகளின் தலைகள், யானைகளின் துதிக்கைகள், துணிச்சல்மிக்க வீரர்களின் கைகள் மற்றும் கால்கள் ஆகியவற்றால் பூமி விரவி கிடந்தது. “இவனே பார்த்தன் {அர்ஜுனன்}”, “பார்த்தன் எங்கே?”, “இதோ பார்த்தன்!” என இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையின் வீரர்கள் பார்த்தனைக் {அர்ஜுனனைக்} குறித்த சிந்தனையில் மட்டுமே நிறைந்தனர். காலத்தால் புலன்களை இழந்த {மயக்கமடைந்த} அவர்கள், மொத்த உலகமும் பார்த்தனால் நிறைந்ததாகவே கருதினர். எனவே, அவர்களில் பலர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும், சிலர் தங்களையே தாக்கிக் கொண்டும் அழிந்தனர். துயரக் குரல் எழுப்பிய வீரர்கள் பலர், குருதியால் நனைந்து, தங்கள் புலன்களை இழந்து, பெரும் துன்பத்தால் தங்கள் நண்பர்களையும், சொந்தங்களையும் அழைத்தபடியே பூமியில் விழுந்து கிடந்தனர்.

பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள்}, வேல்கள், ஈட்டிகள், வாள்கள், போர்க்கோடரிகள், நிர்வியூகங்கள் {கூரான கழுமரம் போன்ற ஆயுதங்கள்}, கூன்வாள்கள், விற்கள், தோமரங்கள், கணைகள், கதாயுதங்கள் ஆகியவற்றைக் கொண்டவையும், கவசம்பூண்டு அங்கதங்கள் மற்றும் பிற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், பெரும்பாம்புகளைப் போலத் தெரிந்தவையும், பெரும் கதாயுதங்களுக்கு ஒப்பானவையும், வலிமைமிக்க ஆயுதங்களால் (உடலில் இருந்து) வெட்டப்பட்டவையுமான கரங்கள், பெரும்பலத்துடன் அசைந்து, துடித்து, சினத்தில் குதிப்பதாகத் தெரிந்தது.

அந்தப் போரில் கோபம் நிறைந்து பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றோர் ஒவ்வொருவரும், அந்த வீரனால் மரணத்துக்கு ஒப்பான சில கணைகளால் தங்கள் உடல் துளைக்கப்பட்டு அழிந்தனர். தன் தேர் சென்ற போது, தன் வில்லை வளைத்துக் கொண்டு அதில் ஆடுபவனைப் போலத் தெரிந்த அவனை {அர்ஜுனனைத்} தாக்குவதற்கான ஒரு சிறு வாய்ப்பையும் அங்கிருந்த யாராலும் கணிக்க முடியவில்லை. அவன் {அர்ஜுனன்} தன் கணைகளை எடுத்து, அவற்றை வில்லில் பொருத்தி, அவற்றை ஏவும் வேகம் அவனது எதிரிகள் அனைவரையும் ஆச்சரியத்தில் நிறைத்தது.

உண்மையில், பல்குனன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் யானைகள், யானைப் பாகர்கள், குதிரைகள், குதிரையோட்டிகள், தேர்வீரர்கள், தேரோட்டிகள் ஆகியோரைத் துளைத்தான். அவனது எதிரிகளில், அவன் எதிரில் நின்றவர்களையோ, போரில் போராடியவர்களையோ, சுழன்றவர்களையோ, எவரையும் அந்தப் பாண்டுவின் மகன் கொல்லாமல் விடவில்லை. அடர்த்தியான இருளை அழித்த படி ஆகாயத்தில் எழும் சூரியனைப் போலவே, அர்ஜுனனும் கங்க இறகுகளின் சிறகுகளைக் கொண்ட தன் கணைகளின் மூலம் அந்த யானைப்படையை அழித்தான். யானைகள் பிளக்கப்பட்டு அதில் விழுந்ததால், உமது துருப்புகள் நின்ற அந்தக் களமானது, பிரளயத்தின் போது பெரும் மலைகளால் விரவிக்கிடக்கும் பூமியைப் போலத் தெரிந்தது.

எப்படி நடுப்பகல் சூரியனை அனைத்து உயிரினங்களாலும் காண இயலாதோ, அப்படியே கோபத்தால் தூண்டப்பட்ட தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, போரில் தன் எதிரிகளால் காணப்பட முடியாதவனாக இருந்தான். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, உமது மகனின் துருப்புகள் (தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால்) பீடிக்கப்பட்டு, அச்சத்தால் சிதறி ஓடின. வலிமைமிக்கக் காற்றால் மேகங்களின் திரள்கள் பிளக்கப்பட்டு விரட்டப்படுவதைப் போலவே, அந்தப் படையும், பார்த்தனால் துளைக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது. அந்த வீரன் எதிரியைக் கொன்று கொண்டிருந்த போது, யாராலும் அவனைப் பார்க்க முடியவில்லை.

{சொற்கள் மற்றும் செயல்களாலான} உந்துதல்கள், தங்கள் விற்களின் நுனிகள், ஆழமான உறுமல்கள், உத்தரவால் ஊக்குவிப்பது, கசைகள், அவர்களது விலாக்களில் வெட்டுகள், பயமுறுத்தும் பேச்சு ஆகியவற்றால் தங்கள் வீரர்களைப் பெரும் வேகம் கொள்ளச் செய்த உமது மனிதர்கள், அஃதாவது உமது குதிரைப்படை, உமது தேர்வீரர்கள், மற்றும் உமது காலாட்படை வீரர்கள் ஆகியோர், அர்ஜுனனின் கணைகளால் தாக்கப்பட்டுக் களத்திலிருந்து தப்பி ஓடினர்.

(யானைகளில் சென்ற) சிலர், தங்கள் அங்குசங்களால் அந்தப் பெரும் விலங்குகளின் விலாப்புறங்களைத் தூண்டிய பிறரும், பார்த்தனின் கணைகளால் தாக்கப்பட்ட இன்னும் பல வீரர்களும், ஓடுகையில் பார்த்தனையே {அர்ஜுனனையே} எதிர்த்துச் சென்றனர். உண்மையில் உமது வீரர்கள் அனைவரும் உற்சாகமற்று, சிந்தனை குழம்பியவர்களாகினர்” {என்றான் சஞ்சயன்}.

அர்ஜுனனை எதிர்த்த துச்சாசனன்! – துரோண பர்வம் பகுதி – 089-அர்ஜுனனை எதிர்த்த துச்சாசனன்; அர்ஜுனன் செய்த போர்; மனிதர்களும், யானைகளும், குதிரைகளும் கொல்லப்பட்ட விதம்; துச்சாசனனின் படைப்பிரிவு தோற்றோடி துரோணரிடம் தஞ்சத்தை அடைந்தது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “கிரீடம் தரித்தவனால் (கிரீடியான அர்ஜுனனால்) இப்படிக் கொல்லப்பட்ட என் படையின் முன்னணியினர் பிளந்து ஓடிய போது, அர்ஜுனனை எதிர்த்துச் சென்ற வீரர்கள் யாவர்? (அவர்களில் யாரேனும் அர்ஜுனனிடம் உண்மையில் போரிட்டனரா? அல்லது) அனைவரும் தங்கள் தீர்மானத்தைத் துறந்து, சகட வியூகத்துக்குள் நுழைந்து, கற்சுவரைப் போன்றவரும் அச்சமற்றவருமான துரோணரைத் தஞ்சமடைந்தனரா?” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, இந்திரனின் மகனான அர்ஜுனன், தன் சிறந்த கணைகளைக் கொண்டு எங்கள் படையைப் பிளந்து தொடர்ச்சியாகக் கொல்லத் தொடங்கிய போது, வீரர்களில் பலர் ஒன்று சேர்ந்து கொல்லப்பட்டனர், அல்லது உற்சாகமிழந்து தப்பி ஓடினர். அர்ஜுனனைப் பார்க்கத் திறனுள்ள எவனும் அந்தப் போரில் இல்லை.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகளின் அந்நிலையைக் கண்ட உமது மகன் துச்சாசனன், கோபத்தால் நிறைந்து, அர்ஜுனனை எதிர்த்துப் போரிட விரைந்தான். கடும் ஆற்றலைக் கொண்டவனும், தங்கத்தாலான அழகிய கவசம் தரித்தவனும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகையால் தன் தலை மறைக்கப்பட்டவனுமான அந்த வீரன் {துச்சாசனன்}, மொத்த உலகையே விழுங்கவல்லது போலத் தெரிந்த பெரிய யானைப் படை ஒன்றை அர்ஜுனனைச் சூழச் செய்தான்.

யானைகளின் மணி ஒலியாலும், சங்குகளின் முழக்கத்தாலும், வில் நாண்கயிறுகளின் நாணொலியாலும், யானைகளின் பிளிறலாலும் பூமி, ஆகாயம், திசைகள் ஆகியன அனைத்தும் முழுமையாக நிறைந்ததாகத் தெரிந்தது. அந்தக் காலக்கட்டம் மூர்க்கமானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது. அங்குசங்களால் தூண்டப்பட்ட சிறகுகள் கொண்ட மலைகளைப் போல, கோபத்தால் நிறைந்து, துதிக்கைகளை நீட்டியிருந்த அந்தப் பெரும் விலங்குகள் {யானைகள்} தன்னை நோக்கி வேகமாக விரைவதைக் கண்ட மனிதர்களில் சிங்கமான அந்தத் தனஞ்சயன், சிங்கமுழக்கமொன்றைச் செய்து, தன் கணைகளால் அந்த யானைப்படையைத் துளைக்கவும் கொல்லவும் தொடங்கினான்.

அந்தக் கிரீடம் தரித்தவன் (கிரீடியான அர்ஜுனன்), மலை போன்ற அலைகளைக் கொண்டவையும், பெருங்காற்றால் கொந்தளித்தவையுமான ஆழ்ந்த கடலைத் துளைத்துச் செல்லும் மகரத்தைப் போல, அந்த யானைப்படையைத் துளைத்துச் சென்றான். உண்மையில், அண்டப்பேரழிவின் நாளன்று {பிரளயத்தின் போது}, திசை மற்றும் கால விதிகளை மீறி எழுந்து அனைத்தையும் எரிக்கும் சூரியனுக்கு ஒப்பாகப் பகைவரின் நகரங்களை அடக்குபவனான பார்த்தன் அனைத்துப் பக்கங்களிலும் காணப்பட்டான்.

குதிரைகளின் குளம்பொலிகள், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி, போராளிகளின் கூச்சல், வில் நாண்கயிறுகளின் நாணொலி, பல்வேறு இசைக்கருவிகளின் ஒலி, பாஞ்சஜன்யம், தேவதத்தம் மற்றும் காண்டீவத்தின் முழக்கம் ஆகியவற்றின் விளைவால் மனிதர்களும் யானைகளும் உற்சாகமிழந்து, தங்கள் புலன் உணர்வுகளையும் இழந்தனர். கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} கணைகளால் மனிதர்களும், யானைகளும் பிளக்கப்பட்டனர். அந்தப் போரில் எண்ணிக்கையில் ஆயிரமாயிரமாகக் காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால், அந்த யானைகள் தங்கள் உடலெங்கும் துளைக்கப்பட்டன. கிரீடம் தரித்தவனால் (கிரீடியான அர்ஜுனனால்) இப்படிச் சிதைக்கப்பட்ட போது, அவை {அந்த யானைகள்} சிறகுகளை இழந்த மலைகளைப் போலப் பூமியில் பேரொலியுடன் இடையறாமல் விழுந்து கொண்டிருந்தன. தாடை, அல்லது கும்பங்கள், அல்லது கன்னப்பொட்டு ஆகியவற்றில் நாராசங்களால் தாக்கப்பட்ட அவை, நாரைகளின் அலறலுக்கு ஒப்பாக அலறின.

அப்போது, கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்), யானைகளின் கழுத்தில் நின்ற வீரர்களின் தலைகளைத் தன் நேரான கணைகளால் அறுக்கத் தொடங்கினான். குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அத்தலைகள், பார்த்தனால் தேவர்களுக்குக் காணிக்கையளிக்கப்படும் தாமரைகளின் கூட்டத்துக்கு ஒப்பாக இடையறாமல் பூமியில் விழுந்து கொண்டிருந்தன. யானைகள் களத்தில் திரிகையில், கவசமிழந்து, காயங்களால் பீடிக்கப்பட்டு, குருதியால் நனைந்து, தீட்டப்பட்ட ஓவியங்களைப் போலத் தெரிந்த பல வீரர்கள் அவற்றின் {அந்த யானைகளின்} உடல்களில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. சில சந்தர்ப்பங்களில், (காண்டீவத்திலிருந்து) நன்கு ஏவப்பட்டவையும், அழகிய இறகுகளுடன் கூடிய சிறகு படைத்த ஒரே கணையால் துளைக்கப்பட்டு, இரண்டு அல்லது மூன்று வீரர்கள் பூமியில் விழுந்தனர்.

நாராசங்களால் ஆழத்துளைக்கப்பட்ட பல யானைகள், ஏதோ சில இயற்கை மீறலினால் காடுகள் நிறைந்த மலைகள் விழுவதைப் போல, தங்கள் முதுகுகளில் இருந்த பாகர்களோடும், தங்கள் வாயில் இரத்தம் கக்கியபடியும் கீழே விழுந்தன. பார்த்தன் {அர்ஜுனன்}, தன்னை எதிர்த்த தேர்வீரர்களின் வில்லின் நாண்கயிறுகள், கொடிமரங்கள், விற்கள், ஏர்க்கால்கள், நுகத்தடிகள் ஆகியவற்றைத் தன் நேரான கணைகளால் சுக்குநூறாக வெட்டினான். அர்ஜுனன் எப்போது தன் கணைகளை எடுத்தான், அவற்றை எப்போது வில்லின் நாணில் பொருத்தினான், எப்போது நாணை இழுத்தான், எப்போது அதை விடுத்தான் என்பதை யாராலும் காண முடியவில்லை. காணப்பட்டதெல்லாம், எப்போதும் வட்டமாக வளைக்கப்பட்ட வில்லுடன் அந்தப் பார்த்தன் தன் தேரில் ஆடுவதைப் போலத் தெரிந்ததுதான். நாராசங்களால் ஆழத்துளைக்கப்பட்ட யானைகள், தாங்கள் தாக்கப்பட்ட உடனேயே, தங்கள் வாய்களில் இருந்து இரத்தத்தைக் கக்கியபடி பூமியில் விழுந்தன.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும் அழிவுக்கும் மத்தியில், எண்ணிலடங்கா தலையற்ற முண்டங்கள் எழுந்து நிற்பது தெரிந்தது. விற்களைப் பிடித்திருந்தவையும், தோலுறை அணிந்த விரல்களைக் கொண்டவையும், வாள்களைப் பிடித்திருந்தவையும், அங்கதங்கள் மற்றுப் பிற தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான கரங்கள், உடல்களில் இருந்து வெட்டப்பட்டுச் சிதறிக் கிடப்பது தெரிந்தது. எண்ணிலடங்கா உபஷ்கரங்கள், அதிஸ்தானங்கள், ஏர்க்கால்கள், கிரீடங்கள், உடைந்த தேர்ச்சக்கரங்கள், நொறுங்கிய அக்ஷகள் {அச்சுகள்}, நுகத்தடிகள், கேடயங்கள் ஆகியவையும், விற்களைத் தரித்திருந்த வீரர்கள், மலர்மால்களை, ஆபரணங்கள், ஆடைகள் மற்றும் விழுந்த கொடிமரங்கள் ஆகியவையும் அந்தப் போர்க்களத்தில் விரவிக் கிடந்தன.

கொல்லப்பட்ட யானைகள் மற்றும் குதிரைகள், க்ஷத்திரியர்களின் விழுந்த உடல்கள் ஆகியவற்றின் விளைவால் பூமியானது பயங்கரமாகக் காட்சியளித்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்) இப்படிக் கொல்லப்பட்ட துச்சாசனனின் படைகள் தப்பி ஓடின. அந்தக் கணைகளால் பெரிதும் பீடிக்கப்பட்ட அவர்களது தலைவன் துச்சாசனனே, அச்சத்தால் பீடிக்கப்பட்டுச் சகட வியூகத்தில் தன் படைப்பிரிவுடன் நுழைந்து, துரோணரைத் தன்னைக் காப்பவராகக் கொண்டான்” {என்றான் சஞ்சயன்}.

நாண்கயிறு அறுபட்ட அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 090-துரோணரிடம் ஆசிகளை வேண்டி அனுமதி கோரிய அர்ஜுனன்; அர்ஜுனனின் நாண்கயிறை அறுத்த துரோணர்; துரோணருடன் போரிட்டு வியூகத்துக்குள் நுழைந்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துச்சாசனன் படையை அழித்த வலிமைமிக்கத் தேர்வீரனான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அடைய விரும்பி துரோணரின் படைப்பிரிவை எதிர்த்து விரைந்தான். வியூகத்தின் முகப்பில் நின்று கொண்டிருந்த துரோணரை அணுகிய பார்த்தன், கிருஷ்ணனின் வேண்டுகோளுக்கிணங்கி, கரங்களைக் கூப்பியபடி துரோணரிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! பிராமணரே, என் நன்மையை விரும்பி, சுவஸ்தி என்று சொல்லி என்னை ஆசீர்வதிப்பீராக. உமது அருளால் நான் இந்தப் பிளக்கமுடியாத வியூகத்தைப் பிளக்க விரும்புகிறேன். நீர் எனக்குத் தந்தையைப் போன்றவர், அல்லது நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரையோ, கிருஷ்ணனையோ போன்றவர். இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஓ! ஐயா, ஓ! பாவமற்றவரே, ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே, அஸ்வத்தாமன் எவ்வாறு உம்மால் பாதுகாக்கத் தகுந்தவரோ, அவ்வாறே நானும் உம்மால் பாதுகாக்கப்படத் தகுந்தவனே. ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {துரோணரே}, உமது அருளால் போரில் நான் சிந்து ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்ல விரும்புகிறேன். ஓ! தலைவரே {துரோணரே}, என் உறுதிமொழி நிறைவேறும்படி செய்வீராக” என்றான் {அர்ஜுனன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படி அவனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்ட ஆசான் {துரோணர்} புன்னகையுடனே, “ஓ! பீபத்சு {அர்ஜுனா}, என்னை வெல்லாமல், உன்னால் ஜெயத்ரதனை வெல்ல இயலாது” என்று மறுமொழி கூறினார். இவ்வளவே சொன்ன துரோணர், புன்னகைத்தபடியே அவனது {அர்ஜுனனுடைய} தேர், குதிரைகள், கொடிமரம் ஆகியவற்றையும் மற்றும் தேரோட்டியையும் {கிருஷ்ணனையும்} கூரிய கணைகளின் மழையால் மறைத்தார். துரோணரின் கணைமழையைத் தன் கணைகளால் கலங்கடித்த அர்ஜுனன், மேலும் வலிமைமிக்கப் பயங்கரக் கணைகளை ஏவியபடியே துரோணரை எதிர்த்து விரைந்தான். க்ஷத்திரியக் கடமைகளை நோற்ற அர்ஜுனன், அந்தப் போரில் ஒன்பது கணைகளால் துரோணரைத் துளைத்தான்.

அர்ஜுனனின் கணைகளைத் தன் கணைகளால் அறுத்த துரோணர், பிறகு, விஷத்திற்கோ, நெருப்புக்கோ ஒப்பான பல கணைகளால் கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரையும் துளைத்தார். பிறகு அர்ஜுனன், தன் கணைகளால் துரோணரின் வில்லை அறுக்க நினைத்துக் கொண்டிருந்த போது, பெரும் வீரம் கொண்ட பின்னவர் {துரோணர்}, சிறப்புமிக்கப் பார்த்தனின் {அர்ஜுனனின்} வில்லின் நாண்கயிற்றை அச்சமற்றவகையில் விரைவாக அறுத்தார். மேலும் பல்குனனின் {அர்ஜுனனின்} குதிரைகளையும், கொடிமரத்தையும், தேரோட்டியையும் துளைத்தார். வீரமிக்கத் துரோணர் சிரித்துக் கொண்டே தன் கணைகளால் பல்குனனையும் {அர்ஜுனனையும்} மறைத்தார்.

அதேவேளையில், ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையான அந்தப் பார்த்தன், தன் பெரிய வில்லில் புதிய நாணேற்றி, தன் ஆசானுக்கும் மேம்பட்டவனாக, ஏதோ ஒரே ஒரு கணையை ஏவுபவனைப் போல அறுநூறு {600} கணைகளை விரைவாக ஏவினான். மேலும் அவன் எழுநூறு {700} கணைகளையும், பிறகு தடுக்கப்படமுடியாத ஆயிரம் {1000} கணைகளையும் அதன் பிறகு பத்தாயிரம் {10000} பிற கணைகளையும் ஏவினான். இவை அனைத்தும் துரோணரின் வியூகத்தில் இருந்த வீரர்கள் பலரைக் கொன்றன. வலிமைமிக்கவனும், சாதித்தவனும், போர்க்கலையின் அனைத்து வழிமுறைகளையும் அறிந்தவனுமான அந்தப் பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட பல மனிதர்களும், குதிரைகள் மற்றும் யானைகள் பலவும் உயிரிழந்து விழுந்தன.

இடியால் தளர்ந்த மலைகளின் கொடுமுடிகளைப் போலவோ, காற்றால் விரட்டப்படும் மேகங்களின் திரள்களைப் போலவோ, நெருப்பால் எரிந்துவிழும் பெரிய வீடுகளைப் போலவோ யானைகள் கீழே விழுந்தன. அர்ஜுனனின் கணைகளால் தாக்கப்பட்டு, இமயச்சாரலில் நீரூற்றின் பலத்தால் தாக்கப்பட்டு விழும் அன்னங்களைப் போலவே, ஆயிரக்கணக்கான குதிரைகள் விழுந்தன. யுக முடிவில் எழும் சூரியன் தன் கதிர்களால் பெரும் அளவு நீரை வற்ற செய்வதைப் போலவே, அந்தப் பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்}, தன் ஆயுதங்கள் மற்றும் கணைகளின் மழையால் பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்கள், குதிரைகள், யானைகள் மற்றும் காலாட்படை வீரர்களைக் கொன்றான்.

பிறகு சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலவே, அந்தத் துரோண மேகம், தன் கணைகளின் மழையால், கதிர்கள் என்ற அடர்த்தியான கணை மழையால் குருக்களில் முதன்மையானோரை அந்தப் போரில் எரித்துக் கொண்டிருந்த அந்தப் பாண்டவச் சூரியனை {அர்ஜுனனை} மறைத்தது. அப்போது ஆசான் {துரோணர்}, எதிரியின் உயிர்க்குருதியைக் குடிக்க வல்ல ஒரு நாராசத்தால் பெரும் பலத்துடன் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} மார்பைத் தாக்கினார். பலமிழந்த அர்ஜுனன், நிலநடுக்கத்தின் போது நடுங்கும் ஒரு மலையைப் போலவே அங்கமெல்லாம் நடுக்கமடைந்தான். எனினும், மீண்டும் துணிவை அடைந்த பீபத்சு {அர்ஜுனன்} சிறகு படைத்த கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்தான். பிறகு துரோணர் ஐந்து கணைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனைத்} தாக்கினார். மேலும் அவர் எழுபத்து மூன்று கணைகளால் அர்ஜுனனையும், மூன்றால் அவனது கொடிமரத்தையும் தாக்கினார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரமிக்கத் துரோணர் தம் சீடனைவிட மேம்பட்டவராகக் கண்ணிமைப்பதற்குள் தம் கணைமாரியால் அர்ஜுனனைக் கண்ணுக்குப் புலப்படாதபடி செய்தார். துரோணரின் கணைகள் தொடர்ச்சியான சரமாகப் பாய்வதையும், அவரது வில்லானது தொடர்ச்சியாக வட்டமாக வளைக்கப்பட்டு அற்புதமாகக் காட்சியளிப்பதையும் நாங்கள் கண்டோம். அந்தப் போரில் துரோணரால் ஏவப்பட்டவையும், கங்க இறகுகளால் சிறகமைந்தவையுமான அந்த எண்ணற்ற கணைகள் தனஞ்சயன் மீதும், வாசுதேவன் மீதும் இடையறாமல் பாய்ந்தன. துரோணருக்கும், பாண்டுவின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போரைக் கண்டவனும், பெரும் புத்திசாலியுமான வாசுதேவன் {கிருஷ்ணன்} (முக்கியப்) பணி நிறைவேறச் சிந்திக்கத் தொடங்கினான் [1].

பிறகு வாசுதேவன் தனஞ்சயனிடம் இந்த வார்த்தைகளில், “ஓ! பார்த்தா, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நாம் காலத்தை வீணடிக்கக்கூடாது. இதைவிட மிக முக்கியப் பணி நமக்காகக் காத்திருப்பதால் நாம் துரோணரைத் தவிர்த்துவிட்டுச் செல்ல வேண்டும்” என்றான். அதற்கு மறுமொழியாகப் பார்த்தன் கிருஷ்ணனிடம், “ஓ! கேசவா {கிருஷ்ணா} நீ விரும்பியவாறே ஆகட்டும்” என்றான். பிறகு அர்ஜுனன். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரோணரைத் தங்கள் வலப்புறம் நிறுத்தி அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

அப்போது துரோணர் அர்ஜுனனிடம், “ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நீ எங்கே செல்கிறாய். உன் எதிரியை வெல்லும் வரை நீ (போரை) நிறுத்துவதில்லை என்பது உண்மையில்லையா?” என்று கேட்டார். அதற்கு அர்ஜுனன், “நீர் என் எதிரியல்ல எனது ஆசானாவீர். நான் உமது சீடன், எனவே, உமது மகனைப் போன்றவன். மேலும், போரில் உம்மை வெல்லும் மனிதன் எவனும் இந்த மொத்த உலகிலும் இல்லை” என்றான் {அர்ஜுனன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவ்வார்த்தைகளைச் சொன்ன வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீபத்சு {அர்ஜுனன்}, ஜெயத்ரதனைக் கொல்ல விரும்பி, (கௌரவத்) துருப்புகளை எதிர்த்து வேகமாகச் சென்றான். அப்படி அவன் உமது படையில் ஊடுருவிய போது, உயர் ஆன்ம பாஞ்சால இளவரசர்களான யுதாமன்யுவும், உத்தமௌஜசும் அவனது {அர்ஜுனனது} சக்கரங்களின் பாதுகாவலர்களாக அவனைப் பின்தொடர்ந்து சென்றனர். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்வத குலத்துக் கிருதவர்மன், காம்போஜர்களின் ஆட்சியாளன் {சுதக்ஷிணன்}, சுருதாயுஸ் [2] ஆகியோர் முன்னேறிச் செல்லும் தனஞ்செயனை {அர்ஜுனனை} எதிர்க்கத் தொடங்கினர். மேலும் இவர்கள் தங்களைப் பின்தொடர்ந்து வருபவர்களாகப் பத்தாயிரம் தேர்வீரர்களைக் கொண்டிருந்தனர்.

அபீஷாஹர்கள், சூரசேனர்கள், சிபிக்கள், வசாதிகள் மாவேல்லகர்கள், லலித்தர்கள், கைகேயர்கள், மத்ரகர்கள், நாராயணக் கோபாலர்கள் ஆகியோரும், பெரும் துணிச்சல்மிக்கவர்கள் என்று கருதப்பட்டவர்களும், தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்தவர்களும், முன்பு கர்ணனால் வெல்லப்பட்டவர்களுமான காம்போஜர்களின் பல்வேறு இனங்களும், பரத்வாஜரின் மகனை {துரோணரைத்} தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்டு, தன் மகனின் மரணத்தால் துயரில் எரிபவனும், அனைத்தையும் அழிக்கும் யமனுக்கு ஒப்பானவனும், கவசம் பூண்டவனும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனும், அடர்ந்த போரில் உயிரை விடத் துணிந்தவனும், பெரும் ஆற்றலைக் கொண்ட வலிமைமிக்க வில்லாளியும், மனிதர்களில் புலியும், யானை மந்தையின் மதங்கொண்ட தலைவனுக்கு ஒப்பானவனும், பகைவர் படை மொத்தத்தையும் விழுங்கத் தயாராக இருப்பவனாகத் தெரிந்தவனுமான அந்தக் கோபக்கார வீரனான அர்ஜுனனைத் தடுப்பதற்காக விரைந்தனர். பிறகு, ஒரு புறம் அந்தப் போராளிகள் அனைவரும், மறுபுறம் அர்ஜுனன் என அவர்களுக்கிடையில் தொடங்கிய போரானது மிகக் கடுமையானதாகவும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. ஜெயத்ரதனைக் கொல்லச்செல்லும் அந்த மனிதர்களில் காளையை {அர்ஜுனனை}, கடும் நோயைத் தடுக்கும் மருந்துகளைப் போல அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தடுத்தனர்” {என்றான் சஞ்சயன்}.

சுருதாயுதனின் வரம்! – துரோண பர்வம் பகுதி – 091-எதிரிகளின் படையை நடுங்கச் செய்த அர்ஜுனன்; பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தியது; கிருதவர்மனுடன் மோதி வாய்ப்பிருந்தும் அவனைக் கொல்லாமல் விட்டது; மன்னன் சுருதாயுதனின் வரலாறு; சுருதாயுதன் பெற்றிருந்த வரம்; சுருதாயுதன் கொல்லப்பட்டது; அர்ஜுனனை மயக்கமடையச் செய்த காம்போஜ மன்னன் சுதக்ஷிணன்; சுதக்ஷிணன் கொல்லப்பட்டது..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டவனும், பெரும் வலிமையும் ஆற்றலும் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்} துரோணரால் பின்தொடரப்பட்டான். எனினும் அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, எண்ணற்ற ஒளிக்கதிர்களை இறைக்கும் சூரியனுக்கு ஒப்பாகத் தன் கூரிய கணைகளை இறைத்து, உடலை எரிக்கும் நோய்களைப் போல அந்தப் படையைச் சிதறடித்தான். குதிரைகள் துளைக்கப்பட்டன, தேர்கள் உடைக்கப்பட்டு, தேரோட்டிகள் சிதைக்கப்பட்டு, யானைகள் வீழ்த்தப்பட்டன. குடைகள் வெட்டித் தள்ளப்பட்டன, வாகனங்கள் தங்கள் சக்கரங்களை இழந்தன. கணைகளால் மிகவும் பீடிக்கப்பட்ட போராளிகள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர். ஒருவரோடொருவர் மோதும்படியாக அந்த வீரர்களுக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த அந்தக் கடும்போர் இப்படியே நடந்தது. எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் தன் நேரான கணைகளால் பகைவரின் படையைத் தொடர்ச்சியாக நடுங்கச் செய்தான். உண்மையில் உறுதியான அர்ப்பணிப்பு கொண்டவனும், வெண் குதிரைகளைக் கொண்டவனுமான அர்ஜுனன், தன் உறுதிமொழியை நிறைவேற்றும் பொருட்டுத் தேர்வீரர்களில் முதன்மையானவரும், சிவப்பு குதிரைகளைக் கொண்டவருமான துரோணரை எதிர்த்து விரைந்தான்.

அப்போது ஆசான் துரோணர், உயிர்நிலைகளையே அடையவல்ல இருபத்தைந்து நேரான கணைகளால் வலிமைமிக்க வில்லாளியான தன் சீடன் அர்ஜுனனைத் தாக்கினார். அதன்பேரில் ஆயுதங்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான பீபத்சு {அர்ஜுனன்}, தன்னை நோக்கி ஏவப்பட்ட எதிர்க்கணைகளைக் கலங்கடிக்கவல்ல கணைகளை ஏவியபடி துரோணரை எதிர்த்து விரைந்தான். அளவிலா ஆன்மா கொண்ட அர்ஜுனன் பிரம்ம ஆயுதத்தை இருப்புக்கு அழைத்துத் துரோணரால் தன் மீது விரைவாக ஏவப்பட்ட கணைகளை {பல்லங்களைத்} தன் நேரான கணைகளால் {பல்லங்களால்} கலங்கடித்தான் [1]. அர்ஜுனன் இளமை கொண்டவனாக, மிக மூர்க்கமாகப் போராடுபவனாக இருந்தாலும், ஒரு கணையாலும் துரோணரைத் துளைக்க முடியாததால் நாங்கள் கண்ட துரோணரின் திறம் மிக அற்புதமானதாக இருந்தது. மேகங்களின் திரள்கள் மழைத்தாரைகளைப் பொழிவதைப் போலத் துரோண மேகமானது, பார்த்த மலையின் மீது மழையைப் பொழிந்தது. பெரும் சக்தியைக் கொண்ட அர்ஜுனன், பிரம்மாயுதத்தை அழைத்து, அந்தக் கணை மழையை வரவேற்று, அந்தக் கணைகளைத் தன் கணைகளால் அறுத்தான்.

பிறகு துரோணர், வெண் குதிரைகளைக் கொண்ட பார்த்தனை இருபத்தைந்து கணைகளால் பீடித்தார். மேலும் அவர் {துரோணர்}, எழுபது கணைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனை} அவனது கரங்களிலும் மார்பிலும் தாக்கினார். பெரும் நுண்ணறிவு கொண்ட பார்த்தன், தொடர்ச்சியாகக் கூரிய கணைகளை ஏவிக்கொண்டிருந்த ஆசானை {துரோணரை} அந்தப் போரில் சிரித்துக் கொண்டே தடுத்தான். துரோணரால் இப்படித் தாக்கப்பட்ட போது, தேர்வீரர்களில் முதன்மையான அந்த இருவரும், பெருகும் யுக நெருப்புக்கு ஒப்பான அந்த வெல்லப்படமுடியாத வீரரை {துரோணரைத்} தவிர்த்தனர். துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கூரிய கணைகளைத் தவிர்த்தவனும், மலர்மாலைகளை அணிந்தவனும், குந்தியின் மகனுமான அந்தக் கிரீடம் தரித்தவன் {கிரீடியான அர்ஜுனன்}, போஜர்களின் படையைப் படுகொலை செய்யத் தொடங்கினான். உண்மையில், அசையாத மைநாக மலையைப் போல நின்ற வெல்லப்பட முடியாத அந்தத் துரோணரைத் தவிர்த்த அர்ஜுனன், கிருதவர்மனுக்கும், காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணனுக்கும் இடையில் தன் நிலையை எடுத்துக் கொண்டான்.

அப்போது மனிதர்களில் புலியான அந்தப் போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்}, வெல்லப்பட முடியாதவனும், குரு வழித்தோன்றல்களில் முதன்மையானவனுமான அவன் {அர்ஜுனன்} மீது கங்க இறகுகளால் சிறகு அமைந்த பத்து கணைகளால் நிதானமாகத் துளைத்தான். பிறகு அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நூறு கணைகளால் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்தான். மேலும் மூன்று பிற கணைகளால் அவனை {கிருதவர்மனைத்} துளைத்த அவன் {அர்ஜுனன்}, அந்தச் சாத்வத குலத்து வீரனை {கிருதவர்மனைப்} பிரம்மிக்கச் செய்தான். போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்}, சிரித்துக் கொண்டே பார்த்தன் மற்றும் வாசுதேவன் ஆகியோர் ஒவ்வொருவரையும் இருபத்தைந்து கணைகளாலும் துளைத்தான். அப்போது கிருதவர்மனின் வில்லை வெட்டிய அர்ஜுனன், சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட நெருப்புக்கோ, கடும் நஞ்சு கொண்ட கோபக்காரப் பாம்புகளுக்கோ ஒப்பான இருப்பத்தொரு கணைகளால் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்தான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், மற்றொரு வில்லை எடுத்து ஐந்து கூரிய கணைகளால் அர்ஜுனனை மார்பில் துளைத்தான். பிறகு மேலும் ஐந்து கூரிய கணைகளால் மீண்டும் பார்த்தனைத் துளைத்தான். பார்த்தனும் {அர்ஜுனனும்} பதிலுக்கு ஒன்பது கணைகளால் அவனது {கிருதவர்மனின்} நடுமார்பில் துளைத்தான்.

குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கிருதவர்மனின் தேருக்கு முன்பு தடுக்கப்பட்டிருப்பதைக் கண்ட விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்}, காலமேதும் வீணாகக் கூடாது என்று நினைத்தான். பிறகு கிருஷ்ணன், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “கிருதவர்மனுக்கு எந்தக் கருணையும் காட்டாதே! (அவனுடன் கொண்ட) உறவுமுறையைக் கருதாமல் அவனை நொறுக்கிக் கொல்வாயாக!” என்றான். பிறகு அர்ஜுனன் தன் கணைகளால் கிருதவர்மனை மலைக்கச் செய்து, தன் வேகமான குதிரைகளால் காம்போஜ படைப்பிரிவினரிடம் சென்றான். வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன் காம்போஜப் படைக்குள் ஊடுருவியதைக் கண்ட கிருதவர்மன் கோபத்தால் நிறைந்தான். பிறகு அவன் {கிருதவர்மன்}, தன் வில்லை எடுத்து அதில் கணைகளைப் பொருத்திப் பாஞ்சால இளவரசர்கள் இருவருடன் மோதினான். உண்மையில் கிருதவர்மன், அர்ஜுனனின் சக்கரங்களைப் பாதுகாத்துப் பின்தொடர்ந்த இரு பாஞ்சால இளவரசர்களையும் தன் கணைகளால் தடுத்து நிறுத்தினான்.

பிறகு, போஜர்களின் ஆட்சியாளனான கிருதவர்மன் யுதாமன்யுவை மூன்று கணைகளாலும், உத்தமௌஜசை நான்கு கணைகளாலும் அவர்கள் இருவரையும் கூரியக் கணைகளால் துளைத்தான். பதிலுக்கு அந்த இளவரசர்கள் இருவரில் ஒவ்வொருவரும் அவனைப் {கிருதவர்மனைப்} பத்து கணைகளால் துளைத்தனர். அதற்கு மேலும், யுதாமன்யு மூன்று கணைகளையும், உத்தமௌஜஸ் மூன்று கணைகளையும் ஏவி கிருதவர்மனின் கொடிமரத்தையும் வில்லையும் அறுத்தனர். அப்போது மற்றொரு வில்லை எடுத்த அந்த ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, சினத்தால் மதங்கொண்டு, அவ்விரு வீரர்களின் விற்களையும் இழக்கச் செய்து, அவர்களைக் கணைகளால் மறைத்தான். பிறகு வேறு இரு விற்களை எடுத்து நாணேற்றிய அந்த இரு வீரர்களும் கிருதவர்மனைத் துளைக்கத் தொடங்கினர்.

அதே வேளையில் பீபத்சு {அர்ஜுனன்} பகைவரின் படைக்குள் ஊடுருவினான். ஆனால் கிருதவர்மனால் தடுக்கப்பட்ட அந்த இளவரசர்கள் இருவரும் கடுமையாகப் போராடினாலும் திருதராஷ்டிரப் படைக்குள் நுழைய முடியவில்லை. வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன், அந்தப் போரில் தன்னை எதிர்த்த படைப்பிரிவுகளை விரைவாகப் பீடித்தான். எனினும் அந்த எதிரிகளைக் கொல்பவன் {அர்ஜுனன்}, தன் அருகில் அகப்பட்டிருந்த கிருதவர்மனைக் கொல்லவில்லை.

அப்படிச் செல்லும் பார்த்தனைக் {அர்ஜுனனைக்} கண்ட மன்னன் சுருதாயுதன், கோபத்தால் நிறைந்து, தன் பெரிய வில்லை அசைத்துக் கொண்டு அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தான். அவன் {சுருதாயுதன்} பார்த்தனை மூன்று கணைகளாலும், ஜனார்த்தனனை எழுபதாலும் துளைத்தான். மேலும் அவன் {சுருதாயுதன்} கத்தி போன்ற தலை கொண்ட மிகக் கூரிய கணை ஒன்றால் பார்த்தனின் கொடிமரத்தைத் தாக்கினான். பிறகு, கோபத்தால் நிறைந்த அர்ஜுனன், (பாகன் ஒருவன்) அங்குசத்தால் வலிமைமிக்க யானையைத் தாக்குவதைப் போல, தன் எதிராளியை நேரான தொண்ணூறு {90} கணைகளால் ஆழத் துளைத்தான். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுருதாயுதனால், பாண்டு மகனின் ஆற்றல்மிக்க அந்தச் செயல்பாட்டைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் பதிலுக்கு அர்ஜுனனை எழுபத்தேழு கணைகளால் {நாராசங்களால்} துளைத்தான்.

அப்போது அர்ஜுனன், சுருதாயுதனனின் வில்லையும், அதன் பிறகு அவனது அம்பறாத்தூணியையும் அறுத்து, மேலும் கோபத்துடன் நேரான எழுபது கணைகளால் அவனது மார்பைத் தாக்கினான். பிறகு, கோபத்தால் தன் புலன்களை இழந்த மன்னன் சுருதாயுதன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஒன்பது கணைகளால் வாசவன் மகனின் {இந்திரன் மகன் அர்ஜுனனின்}} கரங்களிலும், மார்பிலும் அடித்தான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவனான அர்ஜுனன் சிரித்துக் கொண்டே பல்லாயிரம் கணைகளால் சுருதாயுதனைப் பீடித்தான். மேலும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அர்ஜுனன்}, பின்னவனின் {சுருதாயுதனின்} குதிரைகளையும், தேரோட்டியையும் விரைவாகக் கொன்றான். பெரும் பலம் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, எழுபது கணைகளால் தன் எதிரியைத் துளைத்தான். பிறகு வீரமன்னன் சுருதாயுதன் குதிரைகளற்ற அந்தத் தேரைக் கைவிட்டு, அம்மோதலில் தன் கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தான்.

வருணனின் மகனான வீர மன்னன் சுருதாயுதன், குளிர்ந்த நீரைக் கொண்டதும், பர்ணாசை [2] என்றழைக்கப்படுவதுமான பெரும் நதியையே தன் தாயாகக் கொண்டவனும் ஆவான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனது {சுருதாயுதன்} அன்னை தன் மகனுக்காக வருணனிடம், “இந்த எனது மகன் {சுருதாயுதன்} பூமியில் கொல்லப்படாதவனாக இருக்கட்டும்” என்று வேண்டினாள். (அவளிடம்) மனம் நிறைந்த வருணன், “எதன் காரணமாக இந்த உனது மகன் எதிரிகளால் பூமியில் கொல்லப்பட முடியாதவனாக ஆவானோ, அந்த வரமாக உயர்ந்த நன்மையைச் செய்யும் ஒரு தெய்வீக ஆயுதத்தை நான் அவனுக்கு {சுருதாயுதனுக்கு} அளிக்கிறேன். எந்த மனிதனும் மரணமில்லா நிலையைப் பெற முடியாது. ஓ! ஆறுகளில் முதன்மையானவளே {பர்ணாசையே}, பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது. எனினும் இந்தப் பிள்ளை, இந்த ஆயுதத்தின் சக்தியால் போரில் தன் எதிரிகளால் வெல்லப்பட முடியாதவனாக எப்போதும் இருப்பான். எனவே, உனது இதய நோய் அகலட்டும்” என்றான் {வருணன்}. இவ்வார்த்தைகளைச் சொன்ன வருணன் மந்திரங்களுடன் சேர்த்து ஒரு கதாயுதத்தைக் கொடுத்தான். அந்தக் கதாயுதத்தை அடைந்த சுருதாயுதன் பூமியில் வெல்லப்பட முடியாதவனாக இருந்தான். எனினும், சிறப்புமிக்கவனான நீர்நிலைகளின் தலைவன் {வருணன்}, அவனிடம் {சுருதாயுதனிடம்}, “இந்தக் கதாயுதம் போரில் ஈடுபடாதவன் மீது ஏவப்படக்கூடாது. அத்தகு மனிதன் மேல் ஏவப்பட்டால், அது திரும்பி, உன் மீதே பாயும். ஓ! சிறப்புமிக்கப் பிள்ளாய், (அப்படி ஏவப்பட்டால்), அஃது எதிர்த்திசையில் சென்று, ஏவிய மனிதனையே கொல்லும்” என்றான் {வருணன்}.அவனுடைய வேளை வந்ததால், சுருதாயுதன் அந்தக் கட்டளையை மீறியதாகத் தெரிந்தது. வீரர்களைக் கொல்லும் அந்தக் கதாயுதத்தால் அவன் {சுருதாயுதன்} ஜனார்த்தனனை {கிருஷ்ணனைத்} தாக்கினான். வீரக் கிருஷ்ணன் அந்தக் கதாயுதத்தை நன்கு வளர்ந்த தன் பருத்த தோள்கள் ஒன்றில் ஏற்றான். விந்திய மலையை அசைக்கத் தவறிய காற்றைப் போல, அது சௌரியை {கிருஷ்ணனை} அசைக்கத் தவறியது. அந்தக் கதாயுதம் ஸ்ருதாயுதனையே நோக்கித் திரும்பி, மந்திரவாதியின் தவறான மந்திரம் அவனேயே காயப்படுத்துவதைப் போல, தன் தேரில் நின்றிருந்த அந்தத் துணிச்சல்மிக்கக் கோபக்கார மன்னனைத் தாக்கிக் கொன்றதால் அந்த வீரன் பூமியில் விழுந்தான். கதாயுதம் திரும்பி சுருதாயுதனைக் கொன்றதையும், எதிரிகளைத் தண்டிப்பவனான சுருதாயுதன் தன் ஆயுதத்தாலேயே கொல்லப்பட்டதையும் கண்ட துருப்புகளுக்கு மத்தியில் “ஐயோ” என்றும், “ஓ” என்றும் கூச்சல்கள் எழுந்தன [3].

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுருதாயுதன், போரில் ஈடுபடாத ஜனார்த்தன் மீது அந்தக் கதாயுதத்தை ஏவியதால், ஏவிய அவனையே அது கொன்றுவிட்டது. மேலும் அந்தச் சுருதாயுதன் வருணன் சொன்ன விதத்திலேயே களத்தில் அழிந்தான். உயிரை இழந்த அவன் வில்லாளிகள் அனைவரின் கண்கள் முன்பாகவே பூமியில் விழுந்தான். அப்படி விழுந்த போது, பர்ணாசையின் அன்புக்குரிய அந்த மகன் {சுருதாயுதன்}, கிளை பரப்பியிருந்த ஒரு நெடும் ஆலமரம் காற்றால் விழுந்து கிடந்ததைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான். எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தச் சுருதாயுதன் கொல்லப்பட்டதைக் கண்டு துருப்புகள் அனைத்தும், முக்கிய வீரர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடினர்.

அப்போது காம்போஜர்களின் ஆட்சியாளனுடைய மகனான துணிச்சல்மிக்கச் சுதக்ஷிணன், தன் வேகமான குதிரைகளை எதிரிகளைக் கொல்பவனான பல்குனனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராக விரைவாகச் செலுத்தினான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்} அவன் {சுதஷிணன்} மீது ஏழு கணைகளை ஏவினான். அந்த வீரனின் உடலைக் கடந்து சென்ற அந்தக் கணைகள் பூமியில் நுழைந்தன. போரில் காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட சுதக்ஷிணன், பதிலுக்கு அர்ஜுனனைக் கங்க இறகுகளால் சிறகமைந்த பத்துக் கணைகளால் துளைத்தான். வாசுதேவனை மூன்று கணைகளால் துளைத்த அவன், மேலும் ஐந்தால் பார்த்தனைத் துளைத்தான்.

அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சுதக்ஷிணனின் வில்லை அறுத்துப் பின்னவனின் {சுதக்ஷிணனின்} கொடிமரத்தையும் வெட்டி வீழ்த்தினான். பாண்டுவின் மகன், பெரும் கூர்மை கொண்ட பல்லங்கள் இரண்டால் தன் எதிராளியைத் துளைத்தான். எனினும், சுதக்ஷிணன், மீண்டும் மூன்று கணைகளால் பார்த்தனைத் துளைத்து சிங்க முழக்கம் செய்தான். பிறகு, கோபத்தால் நிறைந்த துணிச்சல் மிக்கச் சுதக்ஷிணன், முழுக்க இரும்பாலானதும், மணிகளால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு பயங்கர ஈட்டியைக் காண்டீவதாரியின் {அர்ஜுனன்} மீது ஏவினான். பெரும் எரிநட்சத்திரத்தைப் போலச் சுடர்விட்ட அந்த ஈட்டி, தீப்பொறிகளைக் கக்கிக் கொண்டு வலிமைமிக்க அந்தத் தேர்வீரனை {அர்ஜுனனைத்} துளைத்துச் சென்று பூமியில் விழுந்தது. அந்த ஈட்டியால் ஆழமாகத் தாக்கப்பட்டு மயக்கமடைந்த அர்ஜுனன், மிக விரைவாகவே {மயக்கத்திலிருந்து} மீண்டான்.

பிறகு வலிமையும், சக்தியும், காண இயலா சாதனைகளும் கொண்ட வீரனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் கடைவாயை நாவால் நனைத்தபடி, கங்க இறகுகளால் சிறகமைந்த பதினான்கு கணைகளால் தன் எதிரியை அவனது குதிரைகள், கொடிமரம், வில், தேரோட்டி ஆகியவற்றோடு துளைத்தான். மேலும் பார்த்தன், எண்ணற்ற பிற கணைகளால் சுதக்ஷிணனின் தேரைச் சுக்குநூறாக வெட்டினான். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் காரியமும், ஆற்றலும் கலங்கடிக்கப்பட்டவனான காம்போஜர்களின் இளவரசனான சுதக்ஷிணனின் மார்பை ஒரு கணையால் துளைத்தான். காம்போஜர்களின் துணிச்சல்மிக்க அந்த இளவரசன் {சுதக்ஷிணன்}, தன் கவசம் பிளக்கப்பட்டு, அங்கங்கள் பலவீனமடைந்து, தன் கிரீடமும், அங்கதங்களும் நழுவ, இயந்திரத்தில் இருந்து வீசப்பட்ட இந்திரக் கம்பம் {இந்திரத்வஜம்} போலத் தலை குப்புற பூமியில் விழுந்தான்.

வசந்தகாலத்தில், மலைமுகட்டில், அழகிய கிளைகளுடன் நன்கு வளர்ந்திருக்கும் அழகிய கர்ணிகார (கோங்கு) மரம், காற்றினால் ஒடிக்கப்பட்டுக் கீழே விழுந்து கிடப்பதைப் போல, விலைமதிப்புமிக்கப் படுக்கையையும், விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்படத்  தகுந்த அந்தக் காம்போஜர்களின் இளவரசன் {சுதக்ஷிணன்} உயிரை இழந்து வெறுந்தரையில் கிடந்தான். அழகுமிக்கவனும், தாமிர நிறக் கண்களைக் கொண்டவனும், நெருப்பின் காந்தியைக் கொண்ட தங்க மாலையைத் தலையில் சூடியவனும், காம்போஜர்களின் ஆட்சியாளனுடைய மகனுமான அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சுதக்ஷிணன், பார்த்தனின் கணைகளால் வீழ்த்தப்பட்டு, சமமுகடு கொண்ட அழகிய மலையைப் போல உயிரையிழந்து பூமியில் கிடந்தான். சுருதாயுதனும், காம்போஜ இளவரசனான சுதக்ஷிணனும் கொல்லப்பட்டதைக் கண்ட உமது மகனின் துருப்புகள் அனைத்தும் தப்பி ஓடின” {என்றான் சஞ்சயன்}.

அம்பஷ்டர்களின் மன்னன் சுருதாயுஸ்! – துரோண பர்வம் பகுதி – 092-அர்ஜுனனை மயக்கமடையச் செய்த சுருதாயுசும், அச்யுதாயுசும்; சுருதாயுஸ், அச்யுதாயுஸ் அவர்களது மகன்கள் ஆகியோரை அர்ஜுனன் கொன்றது; மிலேச்சர்களைக் கொன்று விரட்டிய அர்ஜுனன்; அம்பஷடர்களின் மன்னனான மற்றொரு சுருதாயுசைக் கொன்றது..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சுதக்ஷிணன் மற்றும் வீரச் சுருதாயுதன் ஆகியோர் வீழ்ந்த பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் நிறைந்த உமது வீரர்கள் பார்த்தனை {அர்ஜுனனை} நோக்கி வேகமாக விரைந்தனர். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அபிஷாஹர்கள், சூரசேனர்கள், சிபிக்கள், வசாதிகள் ஆகியோர் தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது கணைமாரியை இறைக்கத் தொடங்கினர். பிறகு பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அறுநூறு கணைகளின் மூலம் அவர்களை எரித்தான். அதன்பேரில் அந்த வீரர்கள் புலியைக் கண்ட சிறு விலங்குகளைப் போல அச்சத்தால் தப்பி ஓடினர். மீண்டும் திரும்பி வந்த அவர்கள், போரில் தங்களை வீழ்த்துபவனும், எதிரிகளைக் கொல்பவனுமான பார்த்தனைச் சூழ்ந்து கொண்டனர். தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன்னை நோக்கி இப்படி விரைந்து வந்த போராளிகளின் தலைகளையும், கரங்களையும் காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் விரைவாக அறுத்தான். வீழ்ந்த தலைகளால் நிரப்பப்படாத இடமென்று அந்தப் போர்க்களத்தில் ஓர் அங்குலம் கூடக் காணப்படவில்லை. களத்தில் பறந்து திரிந்த காக்கைகள், கழுகுகள், அண்டங்காக்கைகள் ஆகியவற்றின் கூட்டங்கள் ஒரு மேகத்திரையை ஏற்படுத்தின. இப்படித் தங்கள் மனிதர்கள் கொல்லப்படுவதைக் கண்ட சுருதாயுஸ் மற்றும் அச்யுதாயுஸ் {அசுருதாயுஸ்} ஆகிய இருவரும் கோபத்தால் நிறைந்தனர். அவர்கள் தனஞ்சயனுடன் {அர்ஜுனனுடன்} மூர்க்கமாக மோதுவதைத் தொடர்ந்தனர்.

பெரும் வலிமையும், செருக்கும், வீரமும், நல்ல பிறப்பும், கரங்களில் பலமும் கொண்ட அந்த வில்லாளிகள் இருவரும் {சுருதாயுஸ் மற்றும் அச்யுதாயுஸ் ஆகியோர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் புகழை வெல்ல விரும்பியும், உமது மகனின் {துரியோதனனின்} நிமித்தமாகவும், அர்ஜுனனின் அழிவுக்காகவும், வலது புறத்திலிருந்தும், இடது புறத்திலிருந்தும் பின்னவன் {அர்ஜுனன்} மேல் தங்கள் கணைமாரியைப் பொழிந்தனர். இரு மேகத்திரள்கள் ஒரு தடாகத்தை நிறைப்பதைப் போல, அந்தக் கோபக்கார வீரர்கள், நேரான ஓராயிரம் கணைகளால் அர்ஜுனனை மறைத்தனர். பிறகு தேர்வீரர்களில் முதன்மையானவனான அந்தச் சுருதாயுஸ் கோபத்தால் நிறைந்து, நன்கு கடினமாக்கப்பட்ட வேல் ஒன்றால் தனஞ்சயனைத் தாக்கினான்.

எதிரிகளை நொறுக்குபவனான அர்ஜுனன், தன் வலிமைமிக்க எதிரியால் {சுருதாயுஸால்} அந்தப் போரில் ஆழத் துளைக்கப்பட்டு, (அதனால்) கேசவனையும் {கிருஷ்ணனையும்} மலைக்கச் செய்யும் வகையில் மயக்கமடைந்தான். அதேவேளையில், வலிமைமிக்கத் தேர்வீரனான அச்யுதாயுஸ் கூர்முனை கொண்ட சூலமொன்றால் அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைப்} பலமாகத் தாக்கினான். அதனால் ஆழத் துளைக்கப்பட்ட பார்த்தன், தன் கொடிக்கம்பத்தைப் பற்றியபடி தன்னைத் தாங்கிக் கொண்டான். அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனஞ்சயன் {அர்ஜுனன்} உயிரிழந்தான் என்ற நம்பிக்கையில் துருப்புகள் அனைத்தும் சிங்க முழக்கமிட்டன. புலன்களை இழந்த பார்த்தனைக் கண்டு கிருஷ்ணனும் துயரத்தால் எரிந்தான். பிறகு கேசவன் ஆறுதல் வார்த்தைகளால் தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தேற்றினான்.

அப்போது, தேர்வீரர்களில் முதன்மையான அவர்கள் (சுருதாயுசும், அச்யுதாயுசும்) சரியான இலக்குடன் அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தங்கள் கணை மாரியைப் பொழிந்து, தங்கள் தேர், தேர் சக்கரங்கள், கூபரங்கள், குதிரைகள், கொடிக்கம்பம், கொடி ஆகியவற்றோடு கூடிய தனஞ்சயனையும், விருஷ்ணி குலத்து வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} கண்ணுக்குப் புலப்படாமல் ஆகும்படி செய்தார்கள். இவையாவும் அற்புதமாகத்தெரிந்தன. அதேவேளையில், பீபத்சு {அர்ஜுனன்}, யமனின் வசிப்பிடத்தில் இருந்து திரும்பி வந்தவனைப் போல மெதுவாகத் தன்னுணர்வு மீண்டான். கணைகளால் மறைக்கப்பட்ட கேசவனோடு கூடிய தன் தேரையும், சுடர்மிக்க இரு நெருப்புகளைப் போலத் தன் முன் நின்ற அந்த எதிராளிகள் இருவரைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான பார்த்தன், சக்ரனின் {இந்திரனின்} பெயரைக் கொண்ட ஆயுதத்தை {ஐந்திராயுதத்தை} இருப்புக்கு அழைத்தான். அவ்வாயுதத்தில் இருந்து ஆயிரக்கணக்கான நேர்க்கணைகள் பாய்ந்தன. அந்தக் கணைகள் வலிமைமிக்க வில்லாளிகளான அந்தச் சுருதாயுசையும், அச்யுதாயுசையும் தாக்கின.

பார்த்தனால் துளைக்கப்பட்ட பின்னவர்களால் {சுருதாயுஸ் மற்றும் அச்யுதாயுசால்} ஏவப்பட்ட கணைகளும் ஆகாயத்தில் பாய்ந்தன. அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அக்கணைகளைத் தன் கணைகளின் பலத்தால் விரைவாகக் கலங்கடித்து, வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் மோதியபடியே களத்தில் திரியத் தொடங்கினான். அதே வேளையில் சுருதாயுசும், அச்யுதாயுசும் அர்ஜுனனின் கணை மாரியால் தங்கள் கரங்களையும் தலைகளையும் இழந்தனர். அவர்கள், காற்றால் முறிந்து விழுந்த இரண்டு நெடுமரங்களைப் போலப் பூமியில் விழுந்தனர். கடல் வற்றிப் போனதைக் கண்டால் மனிதர்கள் என்ன உணர்ச்சியை அடைவார்களோ அதே போன்ற ஆச்சரியத்தைச் சுருதாயுசின் மரணமும், அச்யுதாயுசின் படுகொலையும் ஏற்படுத்தின.

பிறகு அந்த இளவரசர்கள் இருவரையும் பின்தொடர்ந்து வந்த ஐம்பது தேர்வீரர்களையும் கொன்ற பார்த்தன் {அர்ஜுனன்}, தேர்வீரர்களில் முதன்மையானோர் பலரைக் கொன்ற படியே பாரதப் படையை எதிர்த்துச் சென்றான். சுருதாயுசும், அச்யுதாயுசும் கொல்லப்பட்டதைக் கண்ட அவர்களது மகன்களும், மனிதர்களில் முதன்மையானோருமான நியாதாயுஸ் {நியுதாயு} மற்றும் தீர்க்காயுஸ் {தீர்க்காயு} ஆகியோர், ஓ! பாரதரே, சினத்தால் நிறைந்து, தங்கள் தந்தைமாருக்கு நேர்ந்த பேரழிவால் மிகவும் துன்புற்று, பல்வேறு வகைகளிலான கணைகளை இறைத்தபடியே குந்தியினை மகனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தனர். சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், நேரான கணைகளின் மூலம் ஒருக்கணத்தில் அவர்கள் இருவரையும் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான்.

தாமரைகள் நிறைந்த தடாகத்தின் நீரைக் கலங்கடிக்கும் ஒரு யானையைப் போலத் தார்தராஷ்டிரப் படையணிகளைக் கலங்கடித்துக் கொண்டிருந்த பார்த்தனை {அர்ஜுனனை} (குரு படையில் இருந்த) க்ஷத்திரியக் காளையரால் தடுக்க முடியவில்லை. பிறகு, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கர்களில் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களான ஆயிரக்கணக்கான யானைப்பாகர்கள், சினத்தால் நிறைந்து, தங்கள் யானைப் படையுடன் பாண்டுவின் மகனைச் சூழ்ந்து கொண்டனர். துரியோதனனால் தூண்டப்பட்ட மேற்கு மற்றும் தெற்கின் மன்னர்கள் பலரும், கலிங்கர்களின் ஆட்சியாளனால் [1] தலைமை தாங்கப்பட்ட வேறு பலரும் மலைகளைப் போன்ற தங்கள் யானைகளுடன் அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டனர்.எனினும் பார்த்தன் {அர்ஜுனன்}, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால், அப்படி முன்னேறி வருபவர்களும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அந்தப் போராளிகளின் தலைகளையும், கரங்களையும் விரைவாக அறுத்தான். அந்தத் தலைகளாலும், அங்கதங்களால் அலங்கரிக்கபட்ட கரங்களாலும் விரவிக் கிடந்த போர்க்களமானது, பாம்புகளால் பின்னிப் பிணைக்கப்பட்ட தங்கக் கற்களைப் போலத் தெரிந்தது. வீரர்களின் கரங்கள் அப்படி வெட்டப்பட்டு வீழ்ந்த போது, மரங்களில் இருந்து விழும் பறவைகளைப் போல அவை தெரிந்தன. ஆயிரக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்ட யானைகள், (தங்கள் காயங்களில்) குருதி பெருக்கியபடி, மழைக்காலங்களில் செம்மண் கலந்த நீர் வழியும் மலைகளைப் போலத் தெரிந்தன. பார்த்தனின் {அர்ஜுனனின்} கூரிய கணைகளால் கொல்லப்பட்ட பிறர் அந்தக் களத்தில் விழுந்து கிடந்தனர்.

பல்வேறு வகைகளிலான கோர வடிவங்களுடனும், பல்வேறு ஆடைகளை உடுத்தி, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டும், யானைகளில் இருந்த மிலேச்சர்கள் பலர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்வேறு வகைகளிலான கணைகளால் உயிரை இழந்து தாங்கள் கிடந்த களத்தில் பிரகாசமாகத் தெரிந்தனர். பாதங்களால் முடுக்கிய தங்கள் பாகர்களுடன் ஆயிரக்கணக்கான யானைகள், பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்டு இரத்தம் கக்கின, அல்லது வலியால் பிளிறின, அல்லது கீழே விழுந்தன, அல்லது அனைத்துத் திசைகளிலும் கட்டுப்பாடில்லாமல் ஓடின. பெரும் அச்சமடைந்த பல யானைகள், தங்கள் மனிதர்களையே மிதித்து நசுக்கிக் கொன்றன. கடும் நஞ்சைக் கொண்ட பாம்புகளைப் போலக் கடுமையானவையும், அதிகப்படியாக வைக்கப்படிருந்தவையுமான இன்னும் பல யானைகளும் அதையே செய்தன.

யவனர்கள், பாரடர்கள் [2], சகர்கள், பாஹ்லிகர்கள், கடும் கண்களைக் கொண்டவர்களும், யமனின் தூதுவர்கள் போன்றவர்கள், தாக்குவதில் சாதித்தவர்களும், அசுரர்களின் மாய சக்திகளை அறிந்தவர்களும், (வசிஷ்டருடைய) பசுக்குப் பிறந்தவர்களுமான மிலேச்சர்கள், தார்வாதிசாரர்கள், தரதர்கள், புண்டரர்கள் ஆகியோர் ஆயிரக்கணக்கானோர் கூட்டமாகச் சேர்ந்து எண்ணற்ற படையை அமைத்துக் கொண்டு தங்கள் கூரிய கணை மழையைப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது பொழியத் தொடங்கினர். போர்க்கலையின் பல்வேறு முறைகளை அறிந்தவர்களான அந்த மிலேச்சர்கள் தங்கள் கணைகளால் அர்ஜுனனை மறைத்தனர். அர்ஜுனனும் அவர்கள் மீது தன் கணைகளை விரைவாகப் பொழிந்தான். காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகள் ஆகாயத்தில் சென்ற போது வெட்டுக்கிளிக் கூட்டங்களைப் போலத் தெரிந்தன. உண்மையில் தனஞ்சயன், மேகங்கள் உண்டாக்குவதைப் போன்ற ஒரு நிழலை துருப்புகளின் மீது உண்டாக்கி, தலையை முழுமையாக மழித்தவர்களும், பாதி மழித்தவர்களும், சடாமுடியால் மறைத்துக் கொண்டவர்களும், தூய்மையற்ற பழக்கங்களைக் கொண்டவர்களும், கோணல் முகம் கொண்டவர்களுமான மிலேச்சர்கள் அனைவரையும் தன் ஆயுதங்களின் பலத்தால் கொன்றான். அந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட அந்த மலைவாசிகளும், அந்த மலைக் குகை வாசிகளும் அச்சத்தால் தப்பி ஓடினர்.அண்டங்காக்கைகள், கங்கங்கள் {கழுகுகள்}, ஓநாய்கள் ஆகியன பெரும் மகிழ்ச்சியுடன் பார்த்தனின் {அர்ஜுனனின்} கூரிய கணைகளால் களத்தில் வீழ்த்தப்பட்ட யானைகள், குதிரைகள் மற்றும் அவற்றின் மிலேச்ச சாரதிகளின் குருதியைக் குடித்தன. உண்மையில் அர்ஜுனன், குருதியை ஓடையாகக் கொண்ட ஒரு கடும் நதியை அங்கே பாயச் செய்தான். (கொல்லப்பட்ட) காலாட்படையினர், குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியன அதன் கரைகளாக அமைந்தன. பொழியப்பட்ட கணைமாரிகள் அதன் படகுகளாகின, போராளிகளின் மயிர்கள் அதன் பாசிகளாகவும், புல்தரைகளாகவும் அமைந்தன. வீரர்களின் கரங்களில் இருந்து வெட்டப்பட்ட விரல்கள் அதன் சிறு மீன்களாக அமைந்தன. அந்த ஆறானது யுக முடிவில் உள்ள பயங்கர யமனைப் போலத் தெரிந்தது. அந்தக் குருதிப் புனல் யமலோகத்தை நோக்கியே பாய்ந்தது. கொல்லப்பட்ட யானைகளின் உடல்கள் அதில் மிதந்திருந்தபடியே அதன் ஓட்டத்தைத் தடுத்தன. இந்திரன், பெருமழையைப் பொழியும் காலத்தில் மேடு பள்ளங்களைச் சமமாக மறைப்பதைப் போலவே, க்ஷத்திரியர்கள், யானைகள், குதிரைகள், அவற்றின் சாரதிகளின் இரத்தம் பூமி முழுவதையும் மறைத்தது.

அந்த க்ஷத்திரியர்களில் காளை {அர்ஜுனன்}, ஆறாயிரம் குதிரைவீரர்களையும், க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் ஆயிரம் பேரையும் அப்போரில் மரணத்தின் கோரப் பற்களுக்கிடையே அனுப்பி வைத்தான். நன்கு தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான யானைகள் கணைகளால் துளைக்கப்பட்டு, இடியால் தாக்கப்பட்ட மலைகளைப் போலக் களத்தில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்தன. மேலும் அர்ஜுனன், மதங்கொண்ட யானையொன்று காட்டுச் செடிகளை நசுக்குவதைப் போலக் குதிரைகள், தேர்வீரர்கள் மற்றும் யானைகளைக் கொன்றபடியே களத்தில் திரிந்து கொண்டிருந்தான். காற்றால் உந்தப்பட்ட காட்டுத் தீயானது, மரங்கள், கொடிகள், செடிகள், விறகு, புற்கள் ஆகியவற்றுடன் கூடிய அடர்ந்த காட்டை எரிப்பதைப் போலவே, பாண்டுவின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்} எனும் நெருப்பானவன், கணைகளைத் தன் {அந்நெருப்பின்} தழல்களாகக் கொண்டு, காற்றான கிருஷ்ணனால் தூண்டப்பட்டு, கோபத்துடன் உமது வீரர்கள் எனும் காட்டை எரித்தான். தேர்களின் தட்டுகளை வெறுமையாக்கி, பூமியை மனித உடல்களால் விரவச் செய்த தனஞ்சயன், பெரும் மனிதக் கூட்டத்திற்கு மத்தியில் கையில் வில்லுடன் ஆடுபவனைப் போலத் தெரிந்தான். இடியின் பலத்தைக் கொண்ட தன் கணைகளால் பூமியை இரத்தத்தால் நனைத்த தனஞ்சயன் கோபத்தால் தூண்டப்பட்டுப் பாரதப் படைக்குள் ஊடுருவினான்.

அப்படி அவன் செல்கையில் அம்பஷ்டர்களின் ஆட்சியாளனான சுருதாயுஸ் அவனைத் தடுத்தான். அப்போது அர்ஜுனன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போரில் போராடிக்கொண்டிருந்த சுருதாயுசின் குதிரைகளைக் கங்க சிறகுகளைக் கொண்ட கூர்மையான கணைகளால் விரைவாக வீழ்த்தினான். மேலும் பார்த்தன், பிற கணைகளால் தன் எதிராளியின் வில்லையும் வெட்டிவிட்டுக் களத்தில் திரிந்து கொண்டிருந்தான். கோபத்தால் நிலைகுலைந்த கண்களைக் கொண்ட அந்த அம்பஷ்டர்களின் ஆட்சியாளன் {சுருதாயுஸ்}, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, கேசவனையும் {கிருஷ்ணனையும்} போரில் அணுகினான். பிறகு கோபத்தால் நிறைந்த அவன் {சுருதாயுஸ்}, தன் கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு அதன் வீச்சுகளால் (அர்ஜுனன் செல்லும்) தேரைத் தடுத்து, கேசவனையும் {கிருஷ்ணனையும்} தாக்கினான்.

பிறகு, பகைவர்களைக் கொல்பவனான அர்ஜுனன், அந்தக் கதாயுதத்தால் கேசவன் தாக்கப்பட்டதைக் கண்டு கோபத்தால் நிறைந்தான். அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த வீரன் {அர்ஜுனன்}, உதயசூரியனை மறைக்கும் மேகங்களைப் போலத் தேர்வீரர்களில் முதன்மையானவனும், கதாயுததாரியுமான அந்த அம்பஷ்டர்களின் ஆட்சியாளனை {சுருதாயுசைத்} தங்கச் சிறகுகளைக் கொண்ட தன் கணைகளால் மறைத்தான். பிறகு பார்த்தன் {அர்ஜுனன்}, அந்த உயர் ஆன்ம வீரனின் கதாயுதத்தைக் கணைகள் பிறவற்றால் தூள்தூளாக வெட்டி கிட்டத்தட்ட அதைத் தூசாக்கினான். இவை அனைத்தையும் காண மிக அற்புதமாகத் தெரிந்தது.

அந்தக் கதாயுதம் சுக்குநூறாக வெட்டப்பட்டதைக் கண்ட அந்த அம்பஷ்டர்களின் ஆட்சியாளன் {சுருதாயுஸ்}, மற்றொரு பெரிய கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அர்ஜுனனையும், கேசவனையும் மீண்டும் மீண்டும் தாக்கினான். அப்போது அர்ஜுனன், கதாயுதத்தை உயர்த்திப் பிடித்திருந்தவையும், இந்திரனின் கொடிமரங்களைப் போன்றவையுமான சுருதாயுசின் கரங்களைக் கூரிய அர்த்தச்சந்திர கணைகள் இரண்டால் வெட்டி, சிறகுபடைத்த மற்றொரு கணையால் அந்த வீரனின் {சுருதாயுசின்} தலையையும் அறுத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்படிக் கொல்லப்பட்ட சுருதாயுஸ் [3], இந்திரனின் நெடும் கொடிமரமானது இயந்திரத்தில் கட்டப்பட்டிருக்கும் நாண்கள் வெட்டப்பட்டு விழுவதைப் போலப் பேரொலியால் பூமியை நிறைத்தபடியே கீழே விழுந்தான். அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, தேர்க்கூட்டங்களாலும், நூற்றுக்கணக்கான யானைகள் மற்றும் தேர்களாலும் சூழப்பட்ட பார்த்தன், மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போலக் காணப்பட முடியாதவனானான்” {என்றான் சஞ்சயன்}.

துரியோதனனுக்கு கவசம் பூட்டிய துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 093-துரோணரை நிந்தித்த துரியோதனன்; அவனது கவலை; தன் நிலையை விளக்கிய துரோணர்; அவர் சொன்ன விருத்திரன் கதை; தான் அந்தக் கவசத்தை அடைந்த கதையைச் சொன்னது; கவசத்தை துரியோதனனுக்கு அளித்து அவனை அர்ஜுனனுக்கு எதிராக அனுப்பியது..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “குந்தியின் மகன் {அர்ஜுனன்}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்லும் விருப்பத்தால் உந்தப்பட்டு, துரோணர் மற்றும் போஜர்களின் தடுக்கப்படமுடியாத படைப்பிரிவுகளைப் பிளந்து சென்ற பிறகு, காம்போஜ ஆட்சியாளனின் வாரிசான இளவரசன் சுதக்ஷிணன் கொல்லப்பட்ட பிறகு, அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்} வீர சுருதாயுதனைக் கொன்ற பிறகு, (குரு) படையணியினர் தப்பி ஓடி அனைத்துப் பக்கங்களிலும் குழப்பம் நேரிட்ட போது, அப்படிப் பிளக்கப்பட்ட தன் படையைக் கண்ட உமது மகன் {துரியோதனன்} துரோணரிடம் சென்றான்.

துரோணரிடம் விரைவாக வந்த துரியோதனன், “அந்த மனிதர்களில் புலி (அர்ஜுனன்), இந்தப் பரந்த படையை நொறுக்கிவிட்டு, ஏற்கனவே அதைக் கடந்து சென்றுவிட்டான். உமது அறிவின் துணை கொண்டும், {நமக்கு ஏற்பட்ட} பயங்கரமான பேரழிவைக் கருத்தில் கொண்டும், அர்ஜுனனைக் கொல்வதற்கு அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திப்பீராக. நீர் அருளபட்டிருப்பீராக, அந்த மனிதர்களில் புலி {அர்ஜுனன்} ஜெயத்ரதனைக் கொல்வதில் வெல்லாத வகையில் நடவடிக்கைகளை எடுப்பீராக. நீரே எங்கள் ஒரே புகலிடம்.

சீற்றம் கொண்ட காட்டுத்தீயானது உலர்ந்த புற்கள் மற்றும் வைக்கோல் குவியல்களை எரிப்பது போல, தனஞ்சய நெருப்பானது, அவனது கோபம் என்ற காற்றால் உந்தப்பட்டு, புற்களையும், வைக்கோலையும் போல என் துருப்புகளை எரிக்கிறது. ஓ! எதிரிகளை எரிப்பவரே, குந்தியின் மகன் {அர்ஜுனன்}, இந்தப் படையைப் பிளந்து அதைக் கடந்து போவதைக் கண்டு, ஜெயத்ரதனைப் பாதுகாத்துவரும் வீரர்கள் (பார்த்தனைத் தடுக்கும் தங்கள் திறனில்) ஐயமுறுகின்றனர். ஓ! பிரம்மத்தை அறிந்தோரில் முதன்மையானவரே {துரோணரே}, துரோணரை மீறித் தனஞ்சயனால் உயிருடன் செல்வதில் வெல்ல முடியாது என்பதே மன்னர்களின் முடிவான தீர்மானமாக இருந்தது. எனினும், ஓ! பெரும் காந்தி கொண்டவரே, நீர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது படைப்பிரிவைப் பார்த்தன் {அர்ஜுனன்} பிளந்து செல்கிறான் என்றால், நான் என் படையை மிகப் பலவீனமானதாகவே கருதுகிறேன். உண்மையில் எனக்குத் துருப்புகளே இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவரே {துரோணரே}, பாண்டவர்களின் நன்மையில் நீர் அர்ப்பணிப்பு கொண்டவர் என்பதை நான் அறிவேன். ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பதில் நான் என் அறிவை இழக்கிறேன். என் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி நான் உம்மை நிறைவு கொள்ளச் செய்யவும் முயல்கிறேன். எனினும், நீர் இவையாவையும் மனத்தில் தாங்கவில்லை {நினைத்துப் பார்க்கவில்லை}. ஓ! அளவிலா ஆற்றலுடையவரே, நாங்கள் உமக்கு அர்ப்பணிப்புடன் இருந்தாலும், நீர் எங்கள் நன்மையை நாட மறுக்கிறீர். நீர் எப்போதும் பாண்டவர்களிடம் மகிழ்ந்து, எப்போதும் எங்களுக்குத் தீமை செய்வதிலேயே ஈடுபடுகிறீர். உமது வாழ்வாதாரத்தை எங்களிடம் பெற்றாலும், எங்களுக்குத் தீமை செய்வதிலேயே நீர் ஈடுபடுகிறீர். தேனில் முக்கியக் கத்தி நீர் என்பதை நான் அறியாமல் இருந்துவிட்டேன்.

பாண்டவர்களை அவமதித்துத் தடுப்பதாக நீர் எனக்கு வரமளித்திருக்காவிடில், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போவதை நான் தடுத்திருக்கவே மாட்டேன். உமது பாதுகாப்பை எதிர்பார்த்து, சிந்துக்களின் ஆட்சியாளனுக்கு உறுதியளித்த நான் மூடனே, மேலும், என் மடமையால், நான் அவனை {ஜெயத்ரதனை} யமனுக்குப் பலியாகக் காணிக்கை அளித்துவிட்டேன். யமனின் கோரப்பற்களுக்கிடையே நுழைந்த மனிதன் கூடத் தப்பலாம், ஆனால் எப்போது தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கரங்களுக்கு அருகில் வருகிறானோ, அப்போது ஜெயத்ரதனால் தப்ப முடியாது. ஓ! சிவப்பு குதிரைகளைக் கொண்டவரே, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} காக்கப்படத் தேவையானவற்றைச் செய்வீராக. அல்லலுற்றவனான என் பிதற்றல்களைக் கேட்டு கோபங்கொள்ளாதீர், ஓ!, சிந்துக்களின் ஆட்சியாளனைப் பாதுகாப்பீராக” என்றான் {துரியோதனன்}.

அதற்குத் துரோணர் {துரியோதனனிடம்}, “உன் வார்த்தைகளில் நான் எந்தக் குற்றத்தையும் காணவில்லை. அஸ்வத்தாமனைப் போலவே நீ எனது அன்புக்குரியவன். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, என் சொற்களின்படி இப்போது செயல்படுவாயாக. கிருஷ்ணன், தேரோட்டிகள் அனைவரிலும் முதன்மையானவன் ஆவான். அவனது குதிரைகளோ, அவ்வினத்தில் முதன்மையானவையாகும். சிறு இடைவெளி கிடைத்தாலும், தனஞ்சயன் {அர்ஜுனன்} அதன் வழியாக வெகு விரைவாகக் கடந்து விடுவான். கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்) அப்படிச் செல்கையில், அவனது {அர்ஜுனனது} வில்லில் இருந்து ஏவப்படும் எண்ணற்ற கணைகள் அவனது  தேரிலிருந்து முழுமையாக இரண்டு மைல்கள் தொலைவுக்குச் செல்வதை நீ காணவில்லையா [1]? வயது முதிர்ந்ததனால், அவ்வளவு வேகமாகச் செல்ல என்னால் முடியவில்லை.மேலும், பார்த்தர்களின் மொத்தப் படையும் இப்போது நமக்கு முன்னிலையில் நெருங்கி இருக்கிறது. யுதிஷ்டிரனும் என்னால் பிடிக்கப்பட வேண்டும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, அப்படியே வில்லாளிகள் அனைவருக்கு முன்னிலையிலும், க்ஷத்திரியர்கள் அனைவருக்கு மத்தியிலும் என்னால் உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஓ! மன்னா, தனஞ்சயனால் {அர்ஜுனனால்} கைவிடப்பட்டுத் தன் துருப்புகளின் முகப்பில் இப்போது அவன் {யுதிஷ்டிரன்} இருக்கிறான். எனவே, நான் நமது வியூகத்தின் வாயிலைக் கைவிட்டு பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} போரிட மாட்டேன். குலத்திலும், செயல்பாடுகளிலும் உனக்கு இணையானவனும், தனியனுமான அந்த உன் எதிரியுடன் {அர்ஜுனனுடன்}, முறையான உதவி பெற்றவனான நீயே போரிட வேண்டும். அஞ்சாதே. சென்று அவனுடன் போரிடுவாயாக. நீ உலகத்தின் ஆட்சியாளன். நீயே மன்னன், நீயே வீரன். புகழைக் கொண்ட நீ, (உன் எதிரிகளை) வெல்வதில் சாதித்தவனாவாய். ஓ! பகை நகரங்களை அடக்கும் துணிவுள்ளவனே, பிருதையின் மகனான தனஞ்சயன் இருக்கும் இடத்திற்கு நீயே செல்வாயாக” என்றார் {துரோணர்}.

அதற்குத் துரியோதனன் {துரோணரிடம்}, “ஓ! ஆசானே, ஆயுதம் தரித்தோர் அனைவரிலும் முதன்மையான உம்மையே மீறிச் சென்ற தனஞ்சயனை {அர்ஜுனனை} என்னால் எவ்வாறு தடுக்க முடியும்? வஜ்ரதாரியான தேவர்களின் தலைவனே {இந்திரன்} கூடப் போரில் வெல்லப்படலாமேயன்றி, பகைநகரங்களை அடக்குபவனான அர்ஜுனனைப் போரில் வெல்ல முடியாது. போஜர்களின் ஆட்சியாளனான ஹிருதிகனின் மகன் (கிருதவர்மன்), தேவனுக்கு இணையான நீர் ஆகிய இருவரும் எவனுடைய ஆயுதங்களின் பலத்தால் வெல்லப்பட்டீர்களோ, எவனால் சுருதாயுசும், சுதக்ஷிணனும், மன்னன் சுருதாயுசும் கொல்லப்பட்டனரோ, எவனால் சுருதாயுசும் [2], அச்யுதாயுசும், மிலேச்சர்களின் கூட்டமும் கொல்லப்பட்டனரோ, அனைத்தையும் எரிக்கும் நெருப்புப் போன்றவனும், ஆயுதங்களின் தலைவனாகச் சாதித்தவனுமான அந்தச் சிறப்புமிக்கப் பாண்டுவின் மகனுடன் {அர்ஜுனனுடன்} போரில் எவ்வாறு நான் மோதுவேன்? மேலும் இன்று அவனோடு {அர்ஜுனனோடு} போரிடத் தகுந்தவன் என்று என்னை எவ்வாறு நீர் நினைக்கிறீர்? ஓர் அடிமையைப் போல நான் உம்மையே நம்பி இருக்கிறேன். என் புகழைக் காப்பீராக [3]” என்றான் {துரியோதனன்}.துரோணர் {துரியோதனனிடம்}, “ஓ! குரு குலத்தோனே {துரியோதனா}, தனஞ்சயன் {அர்ஜுனன்} தடுக்கப்பட முடியாதவன் என்று நீ சொல்வது உண்மையே. எனினும், நீ அவனைத் தாங்க இயலும்படி நான் செய்யப் போகிறேன். வாசுதேவன் {கிருஷ்ணன்} பார்த்துக் கொண்டிருக்கும் போதே, குந்தியின் மகன் {அர்ஜுனன்} உன்னால் தடுக்கப்படும் அந்த அற்புத செயலை இவ்வுலகில் உள்ள வில்லாளிகள் அனைவரும் காணட்டும். ஓ! மன்னா {துரியோதனா}, மனிதனால் பயன்படுத்தும் எந்த ஆயுதத்தாலும் போரில் உன்னைத் தாக்க முடியாதவாறு இந்த உனது தங்கக் கவசத்தை உன் உடலில் நான் கட்டப்போகிறேன். அசுரர்கள், தேவர்கள், யக்ஷர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோருடனும், மனிதர்கள் அனைவருடனும் கூடிய மூன்று உலகங்களும் இன்று உன்னுடன் போரிட்டாலும், உனக்கு அச்சம் தேவையில்லை. கிருஷ்ணனாலோ, குந்தியின் மகனாலோ {அர்ஜுனனாலோ}, போரில் ஆயுதம் தரித்த பிறர் எவராலோ இந்த உனது கவசத்தைக் கணைகளால் பிளக்க முடியாது. இந்தக் கவசத்தைத் தரித்துக் கொண்டு, கோபக்கார அர்ஜுனனை இன்றைய போரில் விரைவாக எதிர்த்துச் செல்வாயாக. அவனால் உன்னைத் தாங்கிக் கொள்ள இயலாது” என்றார் {துரோணர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இவ்வார்த்தைகளைச் சொன்னவரும், பிரம்மத்தை அறிந்தோரில் முதன்மையானவருமான துரோணர், நீரைத் தொட்டு, முறையான மந்திரங்களை உச்சரித்து, அந்தப் பயங்கரப் போரில் உமது மகன் துரியோதனனின் வெற்றிக்காக அவனது உடலில் மிக அற்புதமான பிரகாசமான கவசத்தை விரைவாகக் கட்டி (அச்செயலால்) மனிதர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் [4].துரோணர் {துரியோதனனிடம்}, “வேதங்களும், பிரம்மனும், பிராமணர்களும் உன்னை ஆசீர்வதிக்கட்டும். ஓ! பாரதா {துரியோதனா}, ஊர்வனவற்றில் அனைத்து உயர்ந்த வகுப்புகளும் {மேன்மையான பாம்புகளும்} ஆசீர்வாதத்திற்கு ஆதாரமாக உனக்கு அமையட்டும். யயாதி, நகுஷன், துந்துமாரன், பகீரதன் மற்றும் பிற அரச முனிகளும் உனக்கு எவை நன்மையோ, அவையனைத்தையும் செய்யட்டும். ஒரு காலை மட்டுமே கொண்ட உயிரினங்களிடமிருந்தும், பல கால்களைக் கொண்டவற்றிடமிருந்து உனக்கு ஆசிகள் கிடைக்கட்டும். கால்களே இல்லாத உயிரினங்களிடம் இருந்தும் இந்தப் பெரும்போரில் உனக்கு ஆசிகள் கிடைக்கட்டும். சுவாஹா, சுவாதா, சச்சி ஆகியோர் அனைவரும் உனக்கு எது நன்மையோ அதைச் செய்யட்டும்.

ஓ! பாவமற்றவனே, லட்சுமியும், அருந்ததியும் உனக்கு எது நன்மையோ அதைச் செய்யட்டும். அசிதர், தேவலர், விஸ்வாமித்ரர், அங்கிரஸ், வசிஷ்டர், கசியபர் ஆகியோரும் உனக்கு எது நன்மையோ அதைச் செய்யட்டும். தாத்ரி, உலகங்களின் தலைவன், திசைகள் மற்றும் அதன் ஆட்சியாளர்கள் {திக்பாலர்கள்}, ஆறு முகம் கொண்ட கார்த்திகேயன் {முருகன்} ஆகியோர் அனைவரும் உனக்கு எது நன்மையோ அதை அளிக்கட்டும். தெய்வீக விவஸ்வான் உனக்கு முழுமையான நன்மையைச் செய்யட்டும். நான்கு திக்குகளின் நான்கு யானைகளும் {திக் கஜங்களும்}, பூமியும், ஆகாயமும், கோள்களும், பூமிக்கு அடியில் அவளைத் (தன் தலையில்) தாங்கும் பாம்புகளில் முதன்மையான சேஷனும் உனக்கு எது நன்மையோ அதை அளிக்கட்டும்.

ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனனே}, முன்பொரு காலத்தில் விருத்திரன் என்ற பெயர் கொண்ட அசுரன் போரில் தன் ஆற்றலை வெளிப்படுத்தித் தேவர்களில் சிறந்தவர்களைப் போரில் வென்றான். ஆயிரமாயிரமாக எண்ணிக்கையில் இருந்தவர்களும், சொர்க்கலோகவாசிகளுமான பின்னவர்கள் {தேவர்கள்} அனைவரும், சிதைந்த உடல்களுடன், பலத்தையும் சக்தியையும் இழந்து, பெரும் அசுரனான விருத்திரனுக்கு அஞ்சி, இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்டு பிரம்மனிடம் சென்று அவனது பாதுகாப்பை நாடினார்கள். அந்தத் தேவர்கள், “ஓ! தேவர்களில் சிறந்தவரே, ஓ! தேவர்களில் முதன்மையானவரே {பிரம்மரே}, விருத்திரனால் இப்போது நொறுக்கப்படும் தேவர்களுக்கு நீர் புகலிடமாவீராக. உண்மையில் இந்தப் பெரும் அச்சத்திலிருந்து எங்களைப் பாதுகாப்பீராக” என்றனர்.

அதற்குப் பிரம்மன் தன்னருகே இருந்த விஷ்ணுவிடமும், உற்சாகமற்றிருந்தவர்களும், சக்ரனின் {இந்திரனின்} தலைமையில் இருந்தவர்களுமான அந்தத் தேவர்களில் சிறந்தவர்களிடமும் உண்மை நிறைந்த இவ்வார்த்தைகளைப் பேசினான்: “உண்மையில், இந்திரனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களும், பிராமணர்களும் எப்போதும் என்னால் பாதுகாக்கப்பட வேண்டும். விருத்திரன் எதிலிருந்து உண்டாக்கப்பட்டானோ அந்தத் துவஷ்டிரியின் {த்வஷ்டாவின்} சக்தி வெல்லப்பட முடியாததாகும். தேவர்களே, முற்காலத்தில் பத்து லட்சம் வருடங்களுக்குத் தவத்துறவுகளைச் செய்த துவஷ்டிரி, மகேஸ்வரனிடம் அனுமதி பெற்று விருத்திரனை உண்டாக்கினான். உங்களுடைய அந்த வலிமைமிக்க எதிரி {விருத்திரன்}, தேவர்களுக்குத் தேவனின் {சிவனின்} அருளினால் உங்களைத் தாக்குவதில் வென்றான். சங்கரனிருக்கும் {சிவன்} இடத்திற்குச் செல்லாமல் உங்களால் தெய்வீக ஹரனைக் காண முடியாது. அந்தத் தேவனைக் {சிவனைக்} கண்ட பிறகே உங்களால் விருத்திரனை வெல்ல முடியும். எனவே நீங்கள் தாமதிக்காமல் மந்தர மலைகளுக்குச் செல்வீராக. தவத்துறவுகளின் தோற்றமானவனும் {தவத்துறவுகைளத் தோற்றுவித்தவனும்}, தக்ஷனின் வேள்வியை அழித்தவனும், பிநாகையைத் தாங்குபவனும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், பகனேத்திரன் [5] என்று அழைக்கப்பட்ட அசுரனைக் கொன்றவனுமான அவன் {சிவன்} அங்கேயே இருக்கிறான்” என்றான் {பிரம்மன்}.பிரம்மனால் இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள், பிரம்மனின் துணையுடன் மந்தரத்திற்குச் சென்று, சக்தியின் குவியலும், கோடி சூரியன்களின் பிரகாசத்தைக் கொண்டவனுமான அந்த உயர்ந்த தேவனை {ஈஸ்வரனைக்} கண்டனர். தேவர்களைக் கண்ட மகேஸ்வரன், அவர்களை வரவேற்று, தான் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென விசாரித்தான். “ஜோதியானவனைக் {ray person} கண்டது ஒருபோதும் கனியற்றதாகாது. உங்கள் விருப்பங்கள் கனிவது இதிலிருந்து தொடங்கட்டும் [6]” என்றான். இப்படி அவனால் சொல்லப்பட்ட சொர்க்கவாசிகள், “விருத்திரனால் எங்கள் சக்தியை நாங்கள் இழந்தோம். நீ சொர்க்கவாசிகளின் புகலிடமாவாயாக. ஓ! தலைவா, அவனது அடிகளால் தாக்கப்பட்டு, காயம்பட்ட எங்களது உடல்களைக் காண்பாயாக. ஓ! மகேஸ்வரா, நீ எங்களது புகலிடமாவாயாக” என்றனர் {தேவர்கள்}.தேவர்களுக்குத் தேவன் என்று சொல்லப்படும் சர்வன் {சிவன்}, “தேவர்களே, பெரும் பலம் நிறைந்ததும், பயங்கரமானதும், தவத்தகுதியற்றவர்களால் தடுக்கப்படமுடியாததுமான இந்தச் செயல்பாடு {விருத்திரன்} எவ்வாறு (தேவ தச்சனான) துவஷ்டிரியின் சக்தியில் இருந்து உதித்துத் தோன்றியது என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னைப் பொறுத்தவரை, சொர்க்கவாசிகளுக்கு என் உதவியைக் கொடுப்பது நிச்சயம் என் கடமையாகும். ஓ! சக்ரா {இந்திரா}, என் உடலில் இருந்து இந்தப் பிராகசமிக்கக் கவசத்தை எடுப்பாயாக. ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, மனத்தில் இந்த மந்திரங்களைச் சொல்லி அஃதை அணிந்து கொள்வாயாக” என்றான் {சிவன்}.

துரோணர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைச் சொன்ன வரமளிப்பவன் (சிவன்), (அணிந்து கொள்பவன் உச்சரிக்க வேண்டிய) மந்திரங்களுடன் அந்தக் கவசத்தை அளித்தான். அந்தக் கவசத்தால் பாதுகாக்கப்பட்ட சக்ரன் {இந்திரன்}, போரில் விருத்திரனை எதிர்த்துச் சென்றான். அந்தப் பயங்கரப் போரில் பல்வேறு விதங்களிலான ஆயுதங்கள் அவன் {இந்திரன்} மீது ஏவப்பட்டாலும், அந்தக் கவசத்தின் இணைப்புகள் பிளக்கப்படவில்லை. அதன்பிறகு, தேவர்களின் தலைவன் {இந்திரன்} விருத்திரனைக் கொன்றதும், மந்திரங்களால் அமைக்கப்பட்ட இணைப்புகளை உடைய அந்தக் கவசத்தை அங்கிரசிடம் கொடுத்தான். அங்கிரஸ், தன் மகனும், மந்திரங்கள் அனைத்தையும் அறிந்தவருமான பிருஹஸ்பதியிடம் அந்த மந்திரங்களைக் கொடுத்தார். பிருஹஸ்பதி அந்த அறிவைப் பெரும் நுண்ணறிவு கொண்ட அக்னிவேஸ்யரிடம் அளித்தார். அக்னிவேஸ்யர் அஃதை எனக்கு அளித்தார், அந்த மந்திரங்களின் துணை கொண்டே, ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, நான் உன் உடலைப் பாதுகாப்பதற்காக, இந்தக் கவசத்தை உன் உடலில் பூட்டுகிறேன்” {என்றார் துரோணர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்த வார்த்தைகளைச் சொன்னவரும், ஆசான்களில் காளையுமான துரோணர், பெரும் பிரகாசம் கொண்ட உமது மகனிடம் மீண்டும் பேசினார், “ஓ! மன்னா {துரியோதனா}, இந்தக் கவசத்தின் துண்டுகளைப் பிரம்ம நாணின் துணை கொண்டு இணைத்து, உன் உடலில் நான் பூட்டுகிறேன். பழங்காலத்தில், போரில் பிரம்மனே இதை விஷ்ணுவுக்குப் பூட்டியிருக்கிறான். தாரகையைக் கடத்தியதன் விளைவாக ஏற்பட்ட போரில் இந்திரனுக்கு இந்தக் கவசத்தைப் பூட்டிய பிரம்மனைப் போலவே, நான் இஃதை உனக்குப் பூட்டுகிறேன்” என்றார் {துரோணர்}.

இப்படியே, துரோணர் அந்தக் கவசத்தை மந்திரங்களுடன் துரியோதனன் மேல் பூட்டி, அம்மன்னனை {துரியோதனனைப்} போருக்கு அனுப்பினார். வலிமைமிக்கக் கரங்களையும், தாக்குவதில் சாதனையும் கொண்ட அம்மன்னன் {துரியோதனன்}, உயர் ஆன்ம ஆசானால் {துரோணரால்} கவசம்பூட்டப்பட்டு, பெரும் ஆற்றலைக் கொண்ட மதங்கொண்ட ஆயிரம் யானைகள், நூறாயிரம் குதிரைகள் மற்றும் பல வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் அர்ஜுனனின் தேரை நோக்கிச் சென்றான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மன்னன், பல்வேறு விதங்களிலான இசைக்கருவிகளின் ஒலியுடன், விருசோனனின் மகனைப் (பழங்காலத்தின் பலி சக்கரவர்த்தியைப்) போலத் தன் எதிரியை எதிர்த்துச் சென்றான். அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஆழங்காண இயலாத கடலைப் போலச் செல்லும் குரு மன்னனை {துரியோதனனைக்} கண்ட உமது துருப்புகளுக்கு மத்தியில் பெரும் ஆரவாரம் எழுந்தது” {என்றான் சஞ்சயன்}.

சஞ்சயனும் போரிட்டான்! – துரோண பர்வம் பகுதி – 094-துரோணரின் படைக்கும் பாண்டவப்படைக்கும் இடையில் நடந்த மோதல்; துரோணரோடு மோதிய திருஷ்டத்யும்னன் கௌரவப் படையை மூன்றாகப் பிரித்தது; போர்க்களத்தில் நடந்த நூற்றுக்கணக்கான தனிப்போர்கள்; இதை விவரித்துக் கொண்டிருந்த சஞ்சயனும், சேகிதானனுடன் தான் போரிட்டதாகச் சொல்வது; படையின் பின்புறத்தில் அஸ்வத்தாமனாலும், கர்ணனாலும் பாதுகாக்கப்பட்ட ஜெயத்ரதன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},  கௌரவப் படையைப் பிளந்து சென்ற பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் விருஷ்ணிகுலத்தோன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரையும் மனிதர்களில் காளையான அந்தத் துரியோதனன் பின் தொடர்ந்து சென்ற பிறகு, பாண்டவர்கள் சோமகர்களுடன் சேர்ந்து கொண்டு, பெரும் ஆரவாரத்துடன் துரோணரை எதிர்த்து வேகமாக விரைந்தனர். பிறகு (அவர்களுக்கும் துரோணரின் துருப்புகளுக்கும் இடையில்) போர் தொடங்கியது. குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையே வியூகத்தின் முகப்பில் நடந்த அந்தப் போரானது, கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. அக்காட்சி காண்போரை வியக்கச் செய்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியன் அப்போது உச்சிவானில் இருந்தான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உண்மையில் அம்மோதலானது இதற்கு முன்னர் நாம் காணாதவாறும், கேட்காதவாறும் இருந்தது.

திருஷ்டத்யும்னன் தலைமையிலானவர்களும், தாக்குவதில் சாதித்தவர்களுமான பார்த்தர்கள் அனைவரும், முறையாக அணிவகுத்துச் சென்று, துரோணரின் துருப்புகளைக் கணைமாரியால் மறைத்தனர். ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவரான துரோணரை எங்களுக்கு முன்பு நிறுத்திக் கொண்ட நாங்களும், பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} திரட்டப்பட்டிருந்த அந்தப் பார்த்தர்களை எங்கள் கணைகளால் மறைத்தோம். தேர்களால் அலங்கரிக்கப்பட்டவையும், அழகாகத் தெரிந்தவையுமான அந்தப் படைகள் இரண்டும், கோடைகால வானில், எதிர்க்காற்றுகளால் ஒன்றையொன்று நோக்கி ஈர்க்கப்படும் இரு பெரும் மேகத் திரள்களைப் போலத் தோன்றின. தங்களுக்குள் மோதிக் கொண்ட அவ்விரு படைகளும், மழைக்காலத்தில் நீர் பெருகும் கங்கை மற்றும் யமுனை ஆறுகளைப் போலத் தங்கள் வேகத்தை அதிகரித்தன.

தன் முன் வீசும் பல்வேறு விதங்களிலான ஆயுதங்களைக் காற்றாகக் கொண்டதும், யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுடன் கூடியதும், வீரர்கள் தரித்த கதாயுதங்களை மின்னலாகக் கொண்டதுமான குரு படையாலான அந்த வலிமைமிக்கக் கடும் மேகம், துரோணப் புயலால் உந்தப்பட்டு, இடையறாத கணைப் பொழிவெனும் தன் மழைத்தாரைகளைப் பொழிந்து, எரிந்து கொண்டிருந்த பாண்டவ நெருப்பை அணைக்க முற்பட்டது. கோடைகாலத்தில் கடலைக் கலங்கடிக்கும் ஒரு பயங்கரச் சூறாவளியைப் போலப் பிராமணர்களில் சிறந்த அந்தத் துரோணர் பாண்டவப்படையைக் கலங்கடித்தார். பெரும் ஆவேசத்துடன் தங்களை {போரில்} ஈடுபடுத்திக் கொண்ட பாண்டவர்கள், பலமான அணையைத் துடைத்தழிப்பதற்காக அதை நோக்கிப் பாயும் வலிமைமிக்க நீர்த்தாரைகளைப் போலத் துரோணரின் படையைப் பிளப்பதற்காக, அவரையே நோக்கி விரைந்தனர். எனினும் துரோணர், அந்தப் போரில் சீற்றத்துடன் {தம் படையை நோக்கி} வந்த பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் மற்றும் கேகயர்களை மிகக் கடும் நீரோட்டத்தைத் தடுத்து நிற்கும் அசையாத மலையொன்றைப் போலத் தடுத்தார். பெரும் பலத்தையும், வீரத்தையும் கொண்ட பிற மன்னர்கள் பலரும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பாண்டவர்களைத் தாக்கி, அவர்களைத் தடுக்கத் தொடங்கினர்.

மனிதர்களில் புலியான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, பகைவர் படையைப் பிளப்பதற்காகப் பாண்டவர்களுடன் சேர்ந்து துரோணரைத் தொடர்ச்சியாகத் தாக்கத் தொடங்கினான். உண்மையில் துரோணர், தம் கணைகளைப் பிருஷதன் மகன் மீது பொழிந்த போது, பின்னவனும் {திருஷ்டத்யும்னனும்} துரோணரின் மேல் தன் கணைகளைப் பொழிந்தான். தன் முன் வீசும் கத்திகள் மற்றும் வாள்கள் எனும் காற்றோடு கூடியதும், ஈட்டிகள், வேல்கள், ரிஷ்டிகள் ஆகியவற்றால் சூழப்பட்டதும், நாண்கயிறு எனும் மின்னலைக் கொண்டதும், (நாணொலியாகிய) வில்லொலியைத் தன் முழக்கங்களாகக் கொண்டதுமான திருஷ்டத்யும்ன மேகமானது, அனைத்துப் பக்கங்களிலும் ஆயுதங்களின் தாரைகளெனும் கல்மழையைப் பொழிந்தது.

தேர்வீரர்களில் முதன்மையானவர்களையும், பெரும் எண்ணிக்கையிலான குதிரைகளையும் கொன்ற அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, (தன் கணைமாரியால்) பகைவீரர்களின் படைப்பிரிவுகளுக்குள் பிரளயத்தைத் தோற்றுவிப்பதாகத் தெரிந்தது. மேலும் அந்தப் பிருஷதன் மகன், தன் கணைகளால் வீரர்களைத் தாக்கி, எதன் வழியாகச் செல்ல விரும்பினானோ, பாண்டவப் படைப்பிரிவினருக்கும் மத்தியில் இருந்த அந்தப் பாதைகள் அனைத்தில் இருந்தும் துரோணரை விரட்டினான். அந்தப் போரில் துரோணர் கடுமையாக முயன்றாலும், அவரது படையானது திருஷ்டத்யும்னனோடு மோதி மூன்று வரிசைகளாகப் பிரிந்தது. அதில் ஒன்று போஜர்களின் ஆட்சியாளனான கிருதவர்மனை நோக்கியும், மற்றொன்று ஜலசந்தனை நோக்கியும், {மூன்றாவதகாப்} பாண்டவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டவர்கள் துரோணரை நோக்கியும் சென்றனர். தேர்வீரர்களில் முதன்மையான துரோணர் தம் துருப்புகளை மீண்டும் மீண்டும் ஒருங்கிணைத்தார். வலிமைமிக்க வீரரனான திருஷ்டத்யும்னனோ அடிக்கடி தாக்கி அவற்றைப் பிரித்துக் கொண்டிருந்தான்.

உண்மையில் மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருந்த தார்தராஷ்டிரப் படை, மந்தையாளனால் பாதுகாக்கப்படாத பசு மந்தையானது இரை தேடும் விலங்குகளால் கொல்லப்படுவதைப் போலப் பாண்டவர்களாலும், சிருஞ்சயர்களாலும் மூர்க்கமாகக் கொல்லப்பட்டது. அந்தப் பயங்கரப் போரில், திருஷ்டத்யும்னனால் மலைக்கச் செய்யப்பட்ட வீரர்களைக் காலன் ஏற்கனவே விழுங்கிவிட்டதாகவே மக்கள் நினைத்தனர்.

தீய மன்னனின் நாட்டைப் பஞ்சம், நோய்கள் ஆகியவையும், திருடர்களும் அழிப்பதைப் போலவே, உமது படையும் பாண்டவர்களால் பீடிக்கப்பட்டது. ஆயுதங்கள் மற்றும் வீரர்களின் மேல் சூரியக் கதிர்கள் விழுந்ததாலும், படைவீரர்களால் எழுப்பப்பட்ட புழுதியாலும், அனைவரின் கண்களும் துன்புற்றன. அந்தப் பயங்கரப் போரில் கௌரவப் படையானது பாண்டவர்களால் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதால், கோபத்தில் நிறைந்த துரோணர், தம் கணைகளால் பாஞ்சாலர்களை எரிக்கத் தொடங்கினார். இந்தப்படையணிகளை நசுக்குவதிலும், தம் கணைகளால் {அவற்றைக்} கொல்வதிலும் ஈடுபட்டிருந்த துரோணரின் வடிவமானது சுடர்மிக்க யுகநெருப்பைப் போன்றாகியது. அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {துரோணர்}, அந்தப் போரில் தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கணையால் மட்டுமே துளைத்தார். அப்போதங்கே, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளைத் தாங்கிக்கொள்ளவல்ல வீரர்கள் எவரும் பாண்டவப் படையில் இல்லை.

சூரியனின் கதிர்களால் எரிக்கப்பட்டும், துரோணரின் கணைகளால் வெடித்தும், அந்தப் பாண்டவப் படைப்பிரிவுகள் களத்திலேயே சுழலத் தொடங்கின. அதே போல உமது படையும், பிருஷதன் மகனால் கொல்லப்பட்டு நெருப்பில் இருக்கும் உலர்ந்த காட்டைப் போல அனைத்து இடங்களிலும் எரிவதாகத் தெரிந்தது. துரோணர், திருஷ்டத்யும்னன் ஆகிய இருவரும், அந்த இரு படைகளையும் கொன்று கொண்டிருந்தபோது, தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்த இரு படையின் வீரர்களும், தங்கள் ஆற்றலின் எல்லை வரை சென்று எங்கும் போரிட்டுக் கொண்டிருந்தனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உமது படையிலோ, எதிரியின் படையிலோ அச்சத்தால் போரில் இருந்து ஓடிய ஒரு வீரனும் இருக்கவில்லை.

விவிம்சதி, சித்திரசேனன் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான விகர்ணன் ஆகிய உடன்பிறந்த சகோதரர்கள், குந்தியின் மகனான பீமசேனனால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டனர். அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், பெரும் ஆற்றலைக் கொண்ட க்ஷேமதூர்த்தி ஆகியோர் (பீமசேனனுக்கு எதிராகப் போரிட்ட) உமது மகன்கள் மூவரையும் ஆதரித்தனர்.

பெரும் சக்தியும், உன்னதக் குல பிறப்பும் கொண்ட மன்னன் பாஹ்லீகன், தன் துருப்புகளுடனும், ஆலோசகர்களுடனும் {அமைச்சர்களுடனும்} சேர்ந்து திரௌபதியின் மகன்களைத் தடுத்தான். சைப்யன், கோவாசனர்களின் தலைவனான சைப்யன் [1], ஆயிரம் முதன்மையான வீரர்களுடன் சேர்ந்து கொண்டு, பெரும் ஆற்றலைக் கொண்டவனான காசிகளின் மன்னனுடைய மகனை எதிர்த்து அவனைத் தடுத்தான். மத்ரர்களின் ஆட்சியாளனான மன்னன் சல்லியன், சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பானவனும் குந்தியின் மகனுமான அரசன் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்டான்.துணிச்சலும், கோபமும் நிறைந்தவனான துச்சாசனன், தன் படைப்பிரிவுகளால் முறையாக ஆதரிக்கப்பட்டு, தேர்வீரர்களில் முதன்மையான சாத்யகியை அந்தப் போரில் கோபத்துடன் எதிர்த்து சென்றான். என் துருப்புகளுடன் கூடிய நான், கவசம்பூண்டு கொண்டு, ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, நானூறு முதன்மையான வில்லாளிகளால் ஆதரிக்கப்பட்டுச் சேகிதானனைத் தடுத்தேன் [2]. சகுனியோ, விற்கள், ஈட்டிகள், வாள்கள் தரித்த எழுநூறு காந்தார வீரர்களுடன்  மாத்ரியின் மகனை (சகாதேவனைத்) தடுத்தான்.இருபெரும் வில்லாளிகளான அவந்தியின் விந்தனும் அனுவிந்தனும் தங்கள் நண்பனுக்காக (துரியோதனனுக்காகத்) தங்கள் ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு, தங்கள் உயிர்களைத் துச்சமாகக் கருதி, மத்ஸ்யர்களின் மன்னனான விராடனுடன் மோதினார்கள். மூர்க்கமாக முயன்ற மன்னன் பாஹ்லீகன் [3], எதிரிகள் அனைவரையும் தடுக்க வல்ல வீரனும், வெல்லப்படாதவனும், வலிமைமிக்கவனுமான யக்ஞசேனன் மகன் சிகண்டியைத் தடுத்தான். அவந்தியின் தலைவன் [4], சௌவீரர்களோடும், குரூரமான பிரபத்ரகர்களோடும் சேர்ந்து, பாஞ்சாலர்களின் இளவரசனான கோபக்காரத் திருஷ்டத்யும்னனைத் தடுத்தான். அலம்புசன், குரூர செயல்களைச் செய்பவனும், துணிவுமிக்கவனும், கோபத்தோடு போரிடச் சென்றவனுமான ராட்சசன் கடோத்கசனை எதிர்த்து வேகமாக விரைந்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான குந்திபோஜன், ஒரு பெரும் படையின் துணை கொண்டு, கடும் முகம் கொண்டவனும், ராட்சசர்களின் இளவரசனுமான அலம்புசனைத் தடுத்தான்.இப்படியே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படை வீரர்களுக்கும் அவர்களது படைவீரர்களுக்கும் இடையில் நூற்றுக்கணக்கான தனிப் போர்கள் நடைபெற்றன. சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பொறுத்தவரை, வில்லாளிகளில் முதன்மையானோர் பலராலும், எண்ணிக்கையில் தங்களுடன் கிருபரையும் கொண்ட தேர்வீரர்களாலும் பாதுகாக்கப்பட்டு, மொத்தப் படையின் பின்புறத்திலேயே அவன் {ஜெயத்ரதன்} தொடர்ந்து நீடித்தான். மேலும், அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன், முதன்மையான இருவீரர்களான துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைத்} தன் வலப்புறத்திலும், சூதனின் மகனை {கர்ணனைத்} தன் இடப்புறத்திலும் தன் சக்கரங்களின் பாதுகாவலர்களாகக் கொண்டிருந்தான். மேலும் தன் பின்புறத்தைப் பாதுகாப்பதற்காகச் சோமதத்தன் தலைமையிலானவர்களும், நீதி அறிந்தவர்களும், போரில் சாதித்த வலிமைமிக்க வில்லாளிகளுமான கிருபர், விருஷசேனன், சலன் மற்றும் வெல்லப்பட முடியாத சல்லியன் [5] முதலிய எண்ணற்ற வீரர்களைக் கொண்டிருந்தான். குருவீரர்கள், சிந்துக்களின் ஆட்சியாளனைப் பாதுகாப்புக்காக இவ்வேற்பாடுகளைச் செய்துவிட்டு (பாண்டவர்களுடன்) போரிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.

புறமுதுகிட்ட சகுனி! – துரோண பர்வம் பகுதி – 095-துரோணரோடு மோதிய பாண்டவப்படையினர்; விராடனுடன் விந்தானுவிந்தர்களும், சிகண்டி மற்றும் திரௌபதியின் மகன்களோடு பாஹ்லீகனும், காசி இளவரசனோடு சைப்யனும், சாத்யகியோடு துச்சாசனனும், குந்திபோஜன் மற்றும் கடோத்கசனோடு அலம்புசனும், நகுலன் மற்றும் சகாதேவனோடு சகுனியும், யுதிஷ்டிரனோடு சல்லியனும், பீமசேனனுடன் விவிம்சதி, சித்திரசேனன் மற்றும் விகர்ணன் ஆகியோர் மோதியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா, குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்த அற்புதமான போரை விவரமாகச் சொல்கிறேன் கேளும். தமது வியூகத்தின் வாயிலில் {முகப்பில்} நின்று கொண்டிருந்த பரத்வாஜரின் மகனை {துரோணரை} அணுகிய பார்த்தர்கள், துரோணரின் படைப்பிரிவைப் பிளப்பதற்காக மூர்க்கமாகப் போரிட்டனர். துரோணரும் தம் படைகளின் துணையுடன், தமது வியூகத்தைப் பாதுகாக்க விரும்பி, புகழடைய முயன்று கொண்டிருந்த பார்த்தர்களுடன் போரிட்டார்.

கோபத்தால் தூண்டப்பட்ட அவந்தியின் விந்தனும், அனுவிந்தனும், உமது மகனுக்கு {துரியோதனனுக்கு} நன்மை செய்ய விரும்பி, பத்து கணைகளால் விராடனைத் தாக்கினர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விராடனும், போரில் பெரும் ஆற்றலுடன் திகழ்ந்த அவ்வீரர்கள் இருவரையும் அணுகி, அவர்களுடனும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்தவர்களுடனும் போரிட்டான். அவர்களுக்குள் நடைபெற்றதும், எல்லைகடந்த கடுமை கொண்டதுமான அந்தப் போரில் இரத்தம் தண்ணீராக ஓடியது. காட்டில் சிங்கத்திற்கும், மதங்கொண்ட, வலிமைமிக்க இரு யானைகளுக்கு இடையில் நேரும் மோதலுக்கு ஒப்பாக அஃது இருந்தது.

யக்ஞசேனனின் {துருபதனின்} வலிமைமிக்க மகன் {சிகண்டி}, உயிர்நிலைகளையே துளைக்கவல்ல, கடுமையான, கூரிய கணைகளால் அந்தப் போரில் மன்னன் பாஹ்லீகனைப் பலமாகத் தாக்கினான். கோபத்தால் நிறைந்த பாஹ்லீகனும், தங்கச் சிறகுகளைக் கொண்டவரையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான ஒன்பது நேரான கணைகளால் யக்ஞசேனன் மகனை {சிகண்டியை} ஆழமாகத் துளைத்தான். அடர்த்தியான கணைகள் மற்றும் ஈட்டிகளின் மழையுடன் அவ்வீரர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் போரானது மிகக் கடுமையடைந்தது. மருண்டோரின் அச்சங்களையும், வீரர்களின் இன்பத்தையும் அஃது அதிகரித்தது. அவர்களால் ஏவப்பட்ட கணைகள் ஆகாயத்தையும், திசைப்புள்ளிகள் அனைத்தையும் முழுமையாக மறைத்து, எதுவும் தெளிவாகக் காணமுடியாதபடி ஆக்கின.

துருப்புகளுக்குத் தலைமையில் நின்ற கோவாசனர்களின் மன்னன் சைப்பியன், அந்தப் போரில், யானையொன்று மற்றொரு யானையோடு போரிடுவதைப் போல வலிமைமிக்கத் தேர்வீரனான காசிகளின் இளவரசனோடு போரிட்டான். பாஹ்லீகர்களின் மன்னன் கோபத்தால் தூண்டப்பட்டு, ஐந்து புலன்களுக்கு எதிராகப் போராடும் மனத்தைப் போல வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரௌபதியின் மகன்கள் ஐயவரை எதிர்த்துப் போரிட்டான். அந்த இளவரசர்கள் ஐவரும், ஓ! உடல்படைத்தோரில் முதன்மையானவரே, உடலோடு எப்போதும் போராடும் புலன்நுகர்பொருட்களைப் போல அனைத்துப் பங்கங்களில் இருந்தும் தங்கள் கணைகளை ஏவி, அந்த எதிரியோடு {பாஹ்லீகனோடு} போரிட்டனர்.

உமது மகன் துச்சாசனன், கூர்முனைகள் கொண்ட ஒன்பது நேரான கணைகளால் விருஷ்ணி குலத்து சாத்யகியைத் தாக்கினான். பெரும் வில்லாளியான அந்தப் பலவானால் {துச்சாசனனால்} ஆழத் துளைக்கப்பட்டவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்டவனுமான சாத்யகி தன் புலனுணர்வை ஓரளவுக்கு இழந்தான் {சிறிது மயக்கமடைந்தான்}. விரைவில் தேற்றமடைந்த அந்த விருஷ்ணி குலத்தோன் {சாத்யகி}, கங்க இறகுகளிலான சிறகமைந்த பத்து கணைகளால் அந்த வலிமைமிக்க வில்லாளியான உமது மகனை {துச்சாசனனை} விரைவாகத் துளைத்தான். ஒருவரையொருவர் ஆழமாகத் துளைத்துக் கொண்டு, தங்கள் ஒவ்வொருவரின் கணைகளாலும் பீடிக்கப்பட்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போல அபாரமாகத் தெரிந்தனர்.

குந்திபோஜனின் கணைகளால் பீடிக்கப்பட்ட {ராட்சசன்} அலம்புசன், கோபத்தால் நிறைந்து அழகாகப் பூத்துக் குலுங்கும் கின்சுகத்தை {பலாச மரத்தைப்} போலத் தெரிந்தான். பிறகு அந்த ராட்சசன், பல கணைகளால் குந்திபோஜனைத் துளைத்துத் தன் படையின் தலைமையில் நின்று பயங்கரக் கூச்சல்களையிட்டான். அந்த வீரர்கள் அந்தப் போரில் தங்களுக்குள் மோதிக் கொண்ட போது, பழங்காலத்தின் சக்ரனையும் {இந்திரனையும்}, அசுரன் ஜம்பனையும் போலத் துருப்புகள் அனைத்திற்கும் தெரிந்தனர். மாத்ரியின் மகன்கள் இருவரும் {நகுலனும், சகாதேவனும்}, கோபத்தால் நிறைந்து, தங்களுக்கு எதிராகப் பெரும் குற்றமிழைத்திருந்த காந்தார இளவரசன் சகுனியைத் தங்கள் கணைகளால் கடுமையாகத் தாக்கினர்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே நடந்த படுகொலைகள் பயங்கரமானவையாக இருந்தன. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உம்மால் தோற்றுவிக்கப்பட்டு, கர்ணனால் வளர்க்கப்பட்டு, உமது மகன்களால் பாதுகாக்கப்பட்டதுமான (பாண்டவர்களின்) கோப நெருப்பு இப்போது பெருகி மொத்த உலகத்தையும் எரிக்கத் தயாராக இருக்கிறது. பாண்டு மகன்கள் இருவரின் கணைகளால் களத்தைவிட்டு புறங்காட்டி ஓட நிர்பந்திப்பட்ட சகுனி தன் ஆற்றலை வெளிப்படுத்த இயலாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருந்தான். அவன் புறமுதுகிட்டதைக் கண்டவர்களும் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்தப் பாண்டுவின் மகன்கள் இருவரும் {நகுல, சகாதேவர்கள்}, பெரும் மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகத் திரள்களைப் போல அவன் {சகுனி} மீது மீண்டும் தங்கள் கணைகளைப் பொழிந்தனர். எண்ணற்ற நேரான கணைகளால் தாக்கப்பட்ட அந்தச் சுபலனின் மகன் {சகுனி}, வேகமான தன் குதிரைகளால் சுமக்கப்பட்டுத் துரோணரின் படைப்பிரிவை நோக்கி ஓடினான்.

துணிச்சல்மிக்கக் கடோத்கசன், அந்தப் போரில் ராட்சசன் அலம்புசனை நோக்கி தன்னால் இயன்றதைவிடச் சற்றே குறைவான மூர்க்கத்துடன் விரைந்தான். பழங்காலத்தில் ராமனுக்கும், ராவணனுக்கும் இடையில் நடந்ததைப் போல அந்த இருவருக்கிடையில் நடந்த அந்தப் போர் காண்பதற்கு அச்சமூட்டுவதாக இருந்தது. மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் போரில் ஐநூறு கணைகளால் மத்ரர்களின் ஆட்சியாளனைத் {சல்லியனைத்} துளைத்துவிட்டு, மேலும் ஏழாலும் அவனை மீண்டும் துளைத்தான். அதன்பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் அசுரன் சம்பரனுக்கும் தேவர்கள் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக அவர்களுக்குள் நடந்த மிக அற்புதமான போரானது தொடங்கியது. உமது மகன்களான விவிம்சதி, சித்திரசேனன் மற்றும் விகர்ணன் ஆகியோர் பெரும் படை சூழ பீமசேனனுடன் போரிட்டனர்” {என்றான் சஞ்சயன்} [1].

திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 096-பீமசேனன் ஜலசந்தனையும், யுதிஷ்டிரன் கிருதவர்மனையும், திருஷ்டத்யும்னன் துரோணரையும் எதிர்த்து விரைந்தது. துரோணரும் திருஷ்டத்யும்னனும் ஏற்படுத்திய பேரழிவு; போர்க்களத்தின் வர்ணனை; துரோணரின் மரணக்கணையில் இருந்து திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் அந்தக் கடும்போர் தொடங்கிய போது, மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருந்த கௌரவர்களை எதிர்த்துப் பாண்டவர்கள் விரைந்தனர். அந்தப் போரில் பீமசேனன் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜலசந்தனை எதிர்த்தும், யுதிஷ்டிரன் தன் துருப்புகளின் தலைமையில் நின்று கிருதவர்மனை எதிர்த்தும் விரைந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன், சூரியன் தன் கதிர்களை ஏவுவதைப் போலே தன் கணைகளை இறைத்தபடி துரோணரை எதிர்த்து விரைந்தான். அப்போது, போரிடும் ஆவலுடன் கோபத்தால் நிறைந்திருந்த குருக்கள் மற்றும் பாண்டவர்களின் வில்லாளிகள் அனைவருக்கும் இடையில் அந்தப் போர் தொடங்கியது.

வீரர்கள் அனைவரும் அச்சமற்ற வகையில் ஒருவருடன் ஒருவர் போரிட்டதால் பயங்கரப் படுகொலைகள் நேர்ந்த போது, வலிமைமிக்கத் துரோணர் பாஞ்சாலர்களின் வலிமைமிக்க இளவரசனுடன் {திருஷ்டத்யும்னனுடன்} போரிட்டார். அம்மோதலில் அவர் {துரோணர்} ஏவிய கணைகளின் மேகங்கள் காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் நிறைத்தன. துரோணரும், பாஞ்சாலர்களின் இளவரசனும், தாமரைக்காட்டுக்கு ஒப்பாகத் தெரியும்படி ஆயிரக்கணக்கில் மனிதர்களின் தலைகளை வெட்டி போர்க்களத்தில் அவற்றை {தலைகளை} இறைத்தனர்.

ஒவ்வொரு படைப்பிரிவிலும், ஆடைகள், ஆபரணங்கள், ஆயுதங்கள், கொடிமரங்கள், கவசங்கள் ஆகியன விரைவில் தரையில் விரவிக் கிடந்தன. குருதிக் கறை படிந்த தங்கக் கவசங்கள் மின்னலுடன் கூடிய மேகங்களைப் போலத் தெரிந்தன. வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறர், முழுமையாக ஆறு முழ நீளம் கொண்ட தங்கள் பெரிய விற்களை வளைத்தபடி தங்கள் கணைகளால் யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களை வீழ்த்தினர். துணிவுள்ள உயர் ஆன்ம வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற அந்தப் பயங்கர ஆயுத மோதலில், வாள்கள், கேடயங்கள், விற்கள், தலைகள், கவசங்கள் ஆகியன எங்கும் விரவி கிடப்பது காணப்பட்டது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} எண்ணற்ற தலையில்லா முண்டங்கள், போர்க்களத்தின் மத்தியில் எழும்புவது காணப்பட்டது. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கழுகுகள், கங்கங்கள், நரிகள் ஆகியவையும், ஊனுண்ணும் விலங்குகள் பிறவும், வீழ்ந்துவிட்ட மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் சதையை உண்டு, அவற்றின் குருதியைக் குடித்து, அல்லது அவற்றின் மயிர்களைப் பிடித்து இழுத்து, அல்லது அவற்றின் மஜ்ஜையை நக்கி, அல்லது அவற்றைக் கொத்தி, அவற்றின் உடல்களையும், அறுபட்ட அங்கங்களையும் இழுத்துக் கொண்டு, அல்லது அவற்றின் தலைகளைத் தரையில் உருட்டிக் கொண்டும் அங்கே இருந்தன.

போரில் திறம்வாய்ந்தவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களுமான போர்வீரர்கள், போரிட உறுதியாகத் தீர்மானித்து, புகழை மட்டுமே வேண்டி அந்தப் போரில் தீவிரமாகப் போரிட்டனர். களத்ததில் திரிந்த போராளிகள் பலர், வாள்வீரர்களின் பல்வேறு பரிமாணங்களைச் செய்து காட்டினர். போர்க்களத்தில் நுழைந்த மனிதர்கள் சினத்தால் நிறைந்து, கத்திகள், ஈட்டிகள், வேல்கள், சூலங்கள், போர்க்கோடரிகள், கதாயுதங்கள், பரிகங்கள் மற்றும் பிற வகை ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியும், வெறுங்கைகளாலும் கூட ஒருவரையொருவர் கொன்றனர். தேர்வீரர்கள் தேர்வீரர்களுடனும், குதிரைவீரர்கள், குதிரைவீரர்களுடனும், யானைகள், முதன்மையான யானைகளுடனும், காலாட்படை வீரர்கள் காலாட்படைவீரர்களுடனும் போரிட்டனர். முற்றிலும் பித்துப் பிடித்த மதங்கொண்ட யானைகள் பல உரக்கப் பிளிறிக் கொண்டு, விளையாட்டுக்களங்களில் செய்வதைப் போல ஒன்றையொன்று கொன்றன.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் கருதிப்பாராமல் போராளிகளுக்குள் நடைபெற்ற அந்தப் போரில், திருஷ்டத்யும்னன் தன் குதிரைகளோடு துரோணரின் குதிரைகளைக் கலக்க {மோதச்} செய்தான். காற்றின் வேகத்தைக் கொண்டவையும், புறாக்களின் வெண்மையைக் கொண்டவையும் {திருஷ்டத்யும்னனின் குதிரைகளும்}, இரத்தச் சிவப்பானவையுமான {துரோணரின் குதிரைகளுமான} அந்தக் குதிரைகள் போரில் ஒன்றோடொன்று கலந்து மிக அழகாகத் தெரிந்தன. உண்மையில் அவை, மின்னலோடு கூடிய மேகங்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பகைவீரர்களைக் கொல்பவனும், பிருஷதன் மகனுமான வீர திருஷ்டத்யும்னன், மிக அருகே வந்துவிட்ட துரோணரைக் கண்டு, தன் வில்லை விட்டுவிட்டு, கடுஞ்சாதனையைச் செய்வதற்காகத் தன் வாளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். அவன் {திருஷ்டத்யும்னன்} துரோணருடைய தேரின் ஏற்காலைப் பிடித்து அதற்குள் {துரோணரின் தேருக்குள்} நுழைந்தான். அவன் சில வேளைகளில் நுகத்தடியின் மத்தியிலும், சில வேளைகளில் அதன் இணைப்புகளிலும், சில வேளைகளில் குதிரைகளுக்குப் பின்பும் நின்றான். அப்படி அவன் {திருஷ்டத்யும்னன்} கையில் வாளுடன், துரோணரின் சிவப்பு குதிரைகளின் முதுகில் விரைவாக ஏறி நகர்ந்து கொண்டிருந்த போது, பின்னவரால் {துரோணரால்} அவனைத் தாக்குவதற்குத் தகுந்த வாய்ப்பைக் கண்டறியமுடியவில்லை. இவை அனைத்தும் எங்களுக்கு அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தன. உண்மையில், உணவு மீது கொண்ட விருப்பத்தின் காரணமாகப் பருந்தானது காட்டுக்குள் பாய்வதைப் போலவே துரோணரின் அழிவுக்காகத் தன் தேரில் இருந்து பாய்ந்த திருஷ்டத்யும்னனின் பாய்ச்சலும் தெரிந்தது.

அப்போது துரோணர், நூறு சந்திரன்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த துருபதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} கேடயத்தை ஒரு நூறு கணைகளால் அறுத்து, மேலும் பத்து கணைகளால் அவனது வாளையும் அறுத்தார். பிறகு அந்த வலிமைமிக்கத் துரோணர், அறுபத்துநான்கு கணைகளால் தம் எதிராளியின் குதிரைகளைக் கொன்றார். மேலும் இரண்டு பல்லங்களால் பின்னவனின் {திருஷ்டத்யும்னனின்} கொடிமரத்தையும் குடையையும் அறுத்து, பிறகு அவனது பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் கொன்றார். மேலும் பெரும் வேகத்தோடு தம் வில்லின் நாணைத் தமது காது வரை இழுத்து, (எதிரியின் மீது) வஜ்ரத்தை வீசும் வஜ்ரதாரியைப் போல அவன் {திருஷ்டத்யும்னன்} மீது மரணக் கணையொன்றை ஏவினார்.

ஆனால், சாத்யகி, பதினான்கு கூரிய கணைகளால் துரோணரின் அந்த மரணக்கணையை அறுத்தான். இப்படியே அந்த விருஷ்ணி வீரன் {சாத்யகி}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, காட்டு மன்னனிடம் {சிங்கத்திடம்} அகப்பட்ட மானைப் போல, ஆசான்களில் முதன்மையான அந்த மனிதர்களில் சிங்கத்திடம் {துரோணரிடம்} அகப்பட்ட திருஷ்டத்யும்னனை மீட்டான். இப்படியே அந்தச் சிநிக்களின் காளை {சாத்யகி}, பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனைக்} காத்தான். அந்தப் பயங்கரப் போரில் பாஞ்சாலர்களின் இளவரசனைக் காத்த சாத்யகியைக் கண்ட துரோணர், அவன் {சாத்யகி} மீது இருபத்தாறு கணைகளை விரைவாக ஏவினார். சிநியின் பேரனும் {சாத்யகியும்}, துரோணர் சிருஞ்சயர்களை விழுங்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பதிலுக்கு இருபத்தாறு கணைகளால் பின்னவரின் {துரோணரின்} நடுமார்பில் துளைத்தான். அப்போது துரோணரை அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி} எதிர்த்துச் சென்ற போது, வெற்றியை விரும்பிய பாஞ்சாலத் தேர்வீரர்கள் அனைவரும், திருஷ்டத்யும்னனைப்  போரில் இருந்து விரைவாக விலக்கிச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.

சாத்யகியின் ஆற்றலை வியந்த துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 097-சாத்யகிக்கும் துரோணருக்கும் இடையில் நடந்த மோதல்; துரோணரின் விற்களை மீண்டும் மீண்டும் வெட்டிய சாத்யகி; சாத்யகியின் திறனை மனத்தில் மெச்சிய துரோணர்; துரோணரும் சாத்யகியும் தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்தியது; கடுமையாக நடந்த போர்; சாத்யகியைக் காக்க பாண்டவர்களும், துரோணரைக் காக்க கௌரவர்களும் விரைந்தது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அப்படி விருஷ்ணி குலத்தில் முதன்மையானவனான யுயுதானனால் {சாத்யகியால்} துரோணரின் கணைகள் வெட்டப்பட்டு, திருஷ்டத்யும்னன் காக்கப்பட்ட பிறகு, ஓ! சஞ்சயா, பெரும் வில்லாளியும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவருமான துரோணர், மனிதர்களில் புலியான சிநியின் பேரனை {சாத்யகியை} என்ன செய்தார்?” என்று கேட்டான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, கோபத்தைத் தன் நஞ்சாகவும், வளைக்கப்பட்ட வில்லை தன் அகன்று விரிந்த வாயாகவும், கூரிய கணைகளைத் தன் பற்களாகவும், நாராசங்களைத் தன் நச்சுப் பற்களாகவும் கொண்டு, சினத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்து, நீண்ட மூச்சுகளை விடும் ஒரு பெரும் பாம்பைப் போல இருந்தவரும், மனிதர்களில் வலிமைமிக்க வீரருமான துரோணர், தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளை இறைத்தபடி, வானத்திலோ, பெரும் மலையொன்றின் உச்சியிலோ எழுவதைப் {பறப்பதைப்} போல பெரும் வேகம் கொண்ட தமது சிவப்புக் குதிரைகளால் சுமக்கப்பட்டு, யுயுதானனை {சாத்யகியை} நோக்கி விரைந்தார்.

பகை நகரங்களை அடக்குபவனும், போரில் வெல்லப்பட முடியாதவனுமான அந்த சிநி குலத்து வீரன் {சாத்யகி}, கணைமாரியை மழையாகவும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியை முழக்கமாகவும், நன்கு வளைக்கப்பட்ட வில்லை ஒலியாகவும், நாராசங்களை மின்னல் கீற்றுகளாகவும், ஈட்டிகளையும் வாள்களையும் இடியாகவும், கோபத்தைக் காற்றாகவும் கொண்ட அந்தத் துரோண மேகமானது, குதிரைகளெனும் புயலால் தூண்டப்பட்டுத் தன்னை நோக்கி வருவதைக் கண்டு புன்னகைத்தபடியே தன் தேரோட்டியிடம், “ஓ! சூதா, தன் {பிராமண} வகைக்கான கடமைகளில் இருந்து நழுவியவரும், திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} புகலிடம் ஆனவரும், (குரு) மன்னர்களின் துயரங்கள் மற்றும் அச்சங்களைப் போக்குபவரும், இளவரசர்கள் அனைவரின் ஆசானும், தன் ஆற்றலில் எப்போதும் தற்புகழ்ச்சி செய்யும் வீரருமான அந்த வீரப் பிராமணரை {துரோணரை} எதிர்த்து, குதிரைகளை மிக வேகமாக முடுக்கியபடி மகிழ்ச்சியாகவும், வேகமாகவும், செல்வாயாக” என்றான்.

அப்போது அந்த மதுகுலத்தவனுக்கு {சாத்யகிக்கு} சொந்தமானவையும், வெள்ளிநிறமும், காற்றின் வேகமும் கொண்டவையுமான அந்தச் சிறந்த குதிரைகள் துரோணரை நோக்கி விரைவாகச் சென்றன. பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவர்களான துரோணர் மற்றும் சிநியின் பேரன் {சாத்யகி} ஆகிய அவ்விருவரும் ஆயிரக்கணக்கான கணைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு தங்களுக்குள் போரிட்டனர். மனிதர்களில் காளையரான அவ்விருவரும் தங்கள் கணை மழையால் ஆகாயத்தை நிறைத்தனர். உண்மையில் அவ்வீரர்கள் இருவரும் தங்கள் கணைகளால் திசைப்புள்ளிகள் பத்தையும் {10} மறைத்தனர்.  மேலும் அவர்கள் கோடை காலத்தின் முடிவில் (பூமியில்) தங்கள் உள்ளடக்கம் முழுவதையும் பொழியும் இரு மேகங்களைப் போலத் தங்கள் கணைகளை ஒருவரின் மேலொருவர் பொழிந்தனர். அப்போது சூரியன் காணப்படவில்லை. காற்றும் வீசவில்லை.  ஆகாயத்தை அந்தக் கணைமாரி நிறைத்ததன் விளைவாக அவ்வீரர்களால் உண்டாக்கப்பட்ட அடர்த்தியான இருள் தொடர்ந்து நீடித்தது. அவ்விருள், துரோணர் மற்றும் சிநியின் பேரனால் {சாத்யகியால்} அங்கே உண்டாக்கப்பட்ட போது, கணையேவுதலை இருவரில் எவரும் நிறுத்தியதை யாரும் காணவில்லை. ஆயுதங்களை ஏவுவதில் அவ்விருவரும் வேகம் கொண்டவர்களாக இருந்தனர், மேலும் அவ்விருவரும் மனிதர்களில் காளையராகவே காணப்பட்டனர். அந்த இருவராலும் ஏவப்பட்ட கணைத்தாரைகளால் உண்டான ஒலியானது, சக்ரனால் {இந்திரனால்} ஏவப்பட்ட வஜ்ரத்துக்கு {இடிக்கு} ஒப்பானதாகக் கேட்கப்பட்டது.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நாராசங்களால் துளைக்கப்பட்ட வீரர்களின் வடிவங்களானவை, கடும் நஞ்சுமிக்க பாம்புகளால் கடிக்கப்பட்ட வேறு பாம்புகளைப் போலவே தெரிந்தன [1]. துணிச்சல்மிக்க வீரர்கள், மலை முகடுகளில் விழும் இடியின் ஒலிக்கு ஒப்பாக, விற்களின் நாணொலிகளையும், தங்கள் உள்ளங்கையின் ஒலிகளையும் தொடர்ச்சியாகக் கேட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விரு வீரர்களின் தேர்களும், குதிரைகளும், தேரோட்டிகளும் தங்கச்சிறகுகள் கொண்ட கணைகளால் துளைக்கப்பட்டுக் காண்பதற்கு அழகாகத் தெரிந்தன. சட்டையுரித்த, கடும் நஞ்சுமிக்க பாம்புகளைப் போலத் தெரிந்தவையும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிரகாசமாக, நேராக இருந்தவையுமான கணைகளின்மாரி கடுமையானதாக இருந்தது. அவ்விருவரின் குடைகளும், கொடிமரங்களும் வெட்டப்பட்டன.  குருதியில் நனைந்த அவ்விருவரும் வெற்றியின் நம்பிக்கையால் தூண்டப்பட்டிருந்தனர். அங்கங்கள் ஒவ்வொன்றிலும் குருதி வழிந்த அவர்கள், உடல்களில் மதநீர் வழியும் இரு யானைகளுக்கு ஒப்பாகத் தெரிந்தனர். மேலும் அவர்கள் மரணக் கணைகளைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதையும் தொடர்ந்தனர்.

எவரும் எந்த ஒலியையும் வெளியிடாததால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, படைவீரர்களின் முழக்கங்கள், கூச்சல்கள் மற்றும் பிற ஒலிகள், சங்கொலிகள், துந்துபிகளின் ஒலிகள் ஆகியவை நின்றன. உண்மையில் அனைத்துப் படைப்பிரிவுகளும் அமைதியடைந்தன, வீரர்கள் அனைவரும் போரிடுவதை நிறுத்தினர். ஆவல் கொண்ட மக்கள், அந்தத் தனிப்போரின் பார்வையாளர்களானார்கள். தேர்வீரர்கள், யானைப்பாகர்கள், குதிரைவீரர்கள், காலாட்படைவீரர்கள் ஆகியோர் மனிதர்களில் காளையரான அவ்விருவரையும் சூழ்ந்து கொண்டு அம்மோதலையே நிலைத்த கண்களுடன் சாட்சியாகக் கண்டனர். யானை படைப்பிரிவுகளும், குதிரைப்படைப்பிரிவுகளும், தேர்ப்பிரிவுகளும் அசையாமல் நின்றன. வியூகத்தில் நின்றிருந்தாலும் அனைவரும் அசையாமலேயே நின்றனர்.

பலவண்ணங்களிலான முத்துக்கள், பவளங்கள் ஆகியவற்றைக் கொண்டவையும், தங்கத்தால் நிறைந்தவையும், கொடிமரங்கள், ஆபரணங்கள், தங்கத்தாலான கவசங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், வெற்றிக் கொடிகளுடனும், யானைகளின் அலங்காரத்துணிகளுடனும், மெல்லிய கம்பளங்கள், தீட்டப்பட்ட பளபளப்பான ஆயுதங்கள், குதிரைகளின் தலையில் அலங்காரமாக தங்கம் மற்றும் வெள்ளியாலான சாமரங்கள், யானையின் மத்தகத்திலுள்ள மாலைகள், தந்தவளையங்கள் ஆகியவற்றுடன் இருந்தவையுமான குரு மற்றும் பாண்டவப் படைகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} கோடையின் நெருக்கத்தில் கொக்கு வரிசைகளாலும், விட்டில்பூச்சிக் கூட்டங்களாலும் நிறைந்து, வானவில்லோடும், மின்னல்களோடும் இருந்த மேகக்கூட்டங்களைப் போலக் காணப்பட்டன. நம் மனிதர்கள் மற்றும் யுதிஷ்டிரனுடையோர் ஆகிய இரு தரப்பினரும், யுயுதானன் {சாத்யகி} மற்றும் துரோணருக்கு இடையிலான அந்தப் போரைக் கண்டனர்; பிரம்மனின் தலைமையிலான தேவர்களும், சோமனும், சித்தர்களும், சாரணர்களும், வித்யாதரர்களும், பெரும்பாம்புகளும் கூட வானுலாவும் தேர்களான முதன்மையான தங்கள் தேர்களில் இருந்தபடியே அந்தப் போரைக் கண்டனர். மனிதர்களில் சிங்கங்களான அவர்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு பல்வேறு வகைகளில் முன் நகர்ந்தும், பின்நகர்ந்தும் போரிடுவதைக் கண்ட பார்வையாளர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.

பெரும் பலம் கொண்ட துரோணர் மற்றும் சாத்யகி ஆகிய இருவரும், ஆயுதப் பயன்பாட்டில் தங்கள் கரங்களின் நளினத்தை வெளிக்காட்டியபடி கணைகளால் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர். அப்போது தாசார்ஹ குலத்தோன் {சாத்யகி} அந்தப் போரில் தன் வலிமைமிக்க கணைகளால், சிறப்புமிக்க துரோணரின் கணைகளையும், மேலும் ஒரே கணத்தில் அவரது வில்லையும் அறுத்தான். எனினும், கண் இமைக்கும் நேரத்திற்குள்ளாக, பரத்வாஜர் மகன் {துரோணர்} மற்றொரு வில்லை எடுத்து அதற்கு நாண்பூட்டினார். அந்த வில்லும் சாத்யகியால் வெட்டப்பட்டது. துரோணர் மேலும் விரைவாக கையில் வேறொரு வில்லுடன் காத்திருந்தார். எனினும் எப்போதும் போலவே துரோணர் தன் வில்லில் நாண்பூட்டியதும் சாத்யகி அதை வெட்டினான். இப்படியே அவன் {சாத்யகி} பதினாறு முறை செய்தான் {துரோணரின் விற்களை வெட்டினான்}.

போரில் மனித செயலுக்கு அப்பாற்பட்ட யுயுதானனின் செயலைக் கண்ட துரோணர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் மனத்திற்குள், “சாத்வதர்களில் முதன்மையானவனிடம் {சாத்யகியிடம்} நான் காணும் இந்த ஆயுத பலமானது, ராமன் {பரசுராமர்?}, தனஞ்சயன் {அர்ஜுனன்}, கார்த்தவீரியன் மற்றும் மனிதர்களில் புலியான பீஷ்மர் ஆகியோரிடம் மட்டுமே உள்ள பலமாகும்” என்று நினைத்தார். எனவே, பரத்வாஜரின் மகன் {துரோணர்}, சாத்யகியின் ஆற்றலை மனத்துக்குள் மெச்சினார். வாசவனுக்கு {இந்திரனுக்கு} இணையான கர நளினத்தைக் கொண்டவரும், ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் தலையானவருமான அந்த மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர் {துரோணர்}, மாதவனிடம் {கிருஷ்ணனிடம்} மிகவும் மனம் நிறைந்தார். வாசவனைத் தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களும் அதனால் மனம் நிறைந்தனர். ஓ! ஏகாதிபதி, தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோரும், சித்தர்கள் மற்றும் சாரணர்களும், என்னதான் துரோணரால் இயன்ற சாதனைகளை அறிந்திருந்தாலும் விரைவாக நகரும் யுயுதானனின் கர நளினத்தைப் போல அதற்கு முன் கண்டதே இல்லை.

பிறகு, க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரும், ஆயுதங்களை அறிந்தோரில் முதன்மையானவருமான துரோணர் மற்றுமொரு வில்லை எடுத்துக் கொண்டு சில ஆயுதங்களைக் குறி பார்த்தார். எனினும், சாத்யகி, அவ்வாயுதங்கள் அனைத்தையும் தன் ஆயுதங்களின் மாயையாலும், சிலவற்றைத் தன் கூரிய கணைகளாலும் கலங்கடித்தான். இவையாவும் மிக அற்புதமாகத் தெரிந்தன. உமது போர்வீரர்களுக்கு மத்தியில், திறனைத் தீர்மானிக்கும் வீரர்களாக இருப்போர், போரில் வேறு எவராலும் செய்ய இயலாததும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதும், பெரும் திறனை வெளிப்படுத்துவதுமான அவனது {சாத்யகியின்} சாதனையைக் கண்டு மெச்சினர்.

சாத்யகி, துரோணர் ஏவிய அதே கணைகளையே ஏவினான். இதைக் கண்டவரும், எதிரிகளை எரிப்பவருமான ஆசான் {துரோணர்}, எப்போதையும் விட குறைந்த துணிவுடனேயே போரிட்டார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, படையறிவியலின் ஆசானான அவர் {துரோணர்}, கோபத்தால் நிறைந்து, யுயுதானனின் அழிவுக்காகத் தெய்வீக ஆயுதங்களை இருப்புக்கு அழைத்தார். எதிரியைக் கொல்லும் பயங்கரமான ஆக்நேய ஆயுதத்தைக் கண்ட வலிமைமிக்க வில்லாளியான சாத்யகி வருணாயுதம் என்ற மற்றொரு தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். இருவரும் தெய்வீக ஆயுதங்களை எடுப்பதைக் கண்டு “ஓ”, என்றும் “ஐயோ” என்றும் அலறல்கள் அங்கே எழுந்தன. வானில் செல்லும் உயிரினங்களும் கூட அதன் ஊடாகச் செல்லவில்லை {பறவைகளும் வானத்தில் பறக்கவில்லை}. வாருணம் மற்றும் ஆக்நேயம் ஆகிய இரண்டு ஆயுதங்களும் கணைகளோடு ஒட்டி ஏவப்பட்டு ஒன்றையொன்று எதிர்த்து பயனற்றதாகின [2]. சரியாக அதே வேளையில் சூரியன் தன் வழியைக் கீழ்நோக்கிக் கடந்தான் {உச்சியில் இருந்து சாய்ந்தான்}.அப்போது பாண்டுவின் மகன்களான மன்னன் யுதிஷ்டிரன், பீமசேனன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் சாத்யகியைப் பாதுகாக்க விரும்பி, மத்ஸ்யர்கள் மற்றும் சால்வேய துருப்புகளுடன் {சால்வத் துருப்புகளுடன்} சேர்ந்து துரோணரை நோக்கி வேகமாக விரைந்தனர் [3]. பிறகு துச்சாசனன் தலைமையிலான ஆயிரம் இளவரசர்கள், எதிரிகளால் சூழப்பட்ட துரோணரை நோக்கி (அவரைப் பாதுகாப்பதற்காக) வேகமாக விரைந்தனர். அப்போது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களுக்கும், உமது வில்லாளிகளுக்கும் இடையில் ஒரு கடும்போர் தொடங்கியது. பூமியானது புழுதியாலும், (இருதரப்பிலும்) ஏவப்பட்ட கணைகளின் மழையாலும் மறைந்தது. அனைத்தும் இப்படி மறைக்கப்பட்டதால், அதற்கு மேல் எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. உண்மையில், துருப்புகள் புழுதியில் மூழ்கியபோது, போரானது (மனிதர்களையோ, விதிகளையோ) முற்றிலும் கருதிப்பாராமல் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.

விந்தானுவிந்தர்களைக் கொன்ற அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 098-ஜெயத்ரதன் இருந்த இடத்தை நோக்கிச் சென்ற கிருஷ்ணார்ஜுனர்கள்; அர்ஜுனனின் குதிரைகள் களைப்படைந்திருப்பதைக் கண்டு அர்ஜுனனை அணுகிய விந்தனும், அனுவிந்தனும்; விந்தனையும், அனுவிந்தனையும் கொன்ற அர்ஜுனன்; குதிரைகளின் களைப்பைப் போக்கத் தேரிலிருந்து கிருஷ்ணன் அவற்றை அவிழ்த்தது; க்ஷத்திரியர்கள் பலரை எதிர்த்துத் தரையில் நின்று தனியாகப் போராடிய அர்ஜுனன், குதிரைகளுக்காக ஒரு தடாகத்தையும், அம்புகளாலான ஒரு கூடத்தையும் உண்டாக்கியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சூரியன் அஸ்த மலைகளின் முகடுகளை நோக்கித் தன் கீழ்நோக்குப் பயணத்திற்குத் திரும்பிய போது, ஆகாயமே புழுதியால் மறைந்திருந்த போது, சூரியக் கதிர்களின் வெப்பம் தணிந்த போது, அந்தப் பகல் பொழுது வேகமாக மங்கத் {மறையத்} தொடங்கியது. படைவீரர்களைப் பொறுத்தவரை, வெற்றியை விரும்பிய அவர்களில் சிலர் ஓய்ந்திருந்தனர், சிலர் போரிட்டனர், சிலர் மோதலுக்குத் திரும்பினர். வெற்றி நம்பிக்கையால் தூண்டப்பட்ட துருப்புகள் இப்படிப் போரிட்டுக் கொண்டிருந்தபோது, அர்ஜுனனும், வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} இருந்த இடத்தை நோக்கிச் சென்றனர்.

குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தன் கணைகளின் மூலம், (எதிரி படைவீரர்களின் ஊடாக) தன் தேருக்கு வேண்டிய அளவு போதுமான வழியை உண்டாக்கினான். இவ்வழியிலேயே ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} (தேரை வழிநடத்திச்) சென்றான். பாண்டுவின் உயர் ஆன்ம மகன் {அர்ஜுனன்} எங்கே சென்றானோ, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே உமது துருப்புகள் பிளந்து வழிவிட்டன. பெரும் சக்தியைக் கொண்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} பல்வேறு வகையான சுழல் நகர்வுகளை {மண்டலகதிகளைக்} காட்டித் தன் தேரோட்டும் திறனை வெளிப்படுத்தினான்.

{அர்ஜுனனின்} பெயர் பொறிக்கப்பட்டவையும், நன்கு கடினமாக்கப்பட்டவையும், யுகநெருப்புக்கு ஒப்பானவையும், நரம்புகளால் {இழைகளால்} கட்டப்பட்டவையும், நேரான முட்டுகள் {அழுந்திய கணுக்கள்} கொண்டவையும், தொலைதூரம் செல்லக்கூடியவையும், மூங்கிலாலோ (மூங்கில்பிளவுகள் அல்லது அவற்றின் கிளைகளாலோ), முழுக்க இரும்பினாலோ ஆனவையுமான அர்ஜுனனின் கணைகள், அந்தப் போரில், பல்வேறு எதிரிகளின் உயிரை எடுத்து, (அங்கே இரை தேடி கூடியிருந்த) பறவைகளுடன் சேர்ந்து உயிரினங்களின் குருதியைக் குடித்தன. அர்ஜுனன் தன் தேரில் நின்று தன் கணைகளை முழுமையாக இரண்டு மைல்கள் {ஒரு குரோச} தூரம் ஏவி, அந்தக் கணைகள் தன் எதிரிகளைத் துளைத்து, {அவர்களை மேலுலகத்திற்கு} அனுப்பிய போது அந்த இடத்திற்கு அந்தத் தேரே வந்துவிட்டது [1]. கருடன், அல்லது காற்றின் வேகத்தைக் கொண்டவையும், நுகத்தடிகளைச் சுமந்தவையுமான அந்தக் குதிரைகளால் சுமக்கப்பட்ட ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, உலகமே வியக்கும் வகையில் தேரை வேகமாகச் செலுத்தினான். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியனின் தேரோ, ருத்திரனுடையதோ, வைஸ்ரவணனுடையதோ {குபேரனுடைய தேரோ} கூட அவ்வளவு வேகம் சென்றதில்லை. மனம் விரும்பிய வேகத்தில் அர்ஜுனனின் தேர் சென்றதைப் போல, போரில் வேறு யாருடைய தேரும் அதற்கு முன்பு சென்றதில்லை.

ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பகைவர்களைக் கொல்பவனான கேசவன் {கிருஷ்ணன்}, அந்தப் போருக்கான தேரை எடுத்துக் கொண்டு குதிரைகளை முடுக்கி (பகைவரின்) துருப்புகளினூடாகவே சென்றான். அந்தத் தேர்க்கூட்டங்களுக்கு மத்தியில் பெரும் சிரமத்தோடு அர்ஜுனனின் தேரை இழுத்து வந்த அந்தச் சிறந்த குதிரைகள், போரில் மகிழும் பல வீரர்களின் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டுப் பசி, தாகம் மற்றும் களைப்பு ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருந்தன. எனினும் அவை, இறந்த குதிரைகள் மற்றும் மனிதர்களின் உடல்கள், உடைந்த தேர்கள், ஆயிரக்கணக்கான மலைகளைப் போலத் தெரிந்த இறந்த யானைகளின் உடல்கள் ஆகியவற்றின் மேல் ஏறிச் சென்றாலும், அடிக்கடி அழகாக வளையமாகச் சுழன்றன {மண்டல கதிகளை வெடிக்காட்டின}.

அதே வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவந்தியின் வீரச் சகோதரர்கள் இருவரும் (விந்தனும், அனுவிந்தனும்), தங்கள் படைகளின் தலைமையில் நின்று கொண்டு, அர்ஜுனனின் குதிரைகள் களைத்திருப்பதைக் கண்டு அவனுடன் மோதினர். மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள், அர்ஜுனனை அறுபத்துநான்கு {64} கணைகளாலும், ஜனார்த்தனனை எழுபதாலும் {70}, (அர்ஜுனனின் தேரிலிருந்த) நான்கு குதிரைகளை ஒரு நூறு {100} கணைகளாலும் துளைத்தனர். ஓ! மன்னா, கோபத்தால் நிறைந்தவனும், உடலின் முக்கியப் பகுதிகளைக் குறித்த அறிவுடையவனுமான அர்ஜனன், உயிர்நிலைகளையே ஊடுருவவல்லவையான ஒன்பது நேரான கணைகளால் அந்தப் போரில் அவ்விருவரையும் தாக்கினான். அதன்பேரில், அந்தச் சகோதரர்கள் இருவரும், சினத்தால் நிறைந்து, பீபத்சு {அர்ஜுனன்} மற்றும் கேசவனைக் கணைமாரியால் மறைத்து சிங்க முழக்கம் செய்தனர்.

வெண்குதிரைகளைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, அப்போது இரு பல்லங்களைக் கொண்டு, அவ்விரு சகோதரர்களின் அழகிய விற்களையும், தங்கம் போலப் பிரகாசிக்கும் அவர்களது கொடிமரங்களையும் அந்தப் போரில் விரைவாக அறுத்தான். ஓ! மன்னா, வேறு விற்களை எடுத்துக் கொண்ட விந்தனும், அனுவிந்தனும், கோபத்தால் தூண்டப்பட்டுத் தங்கள் கணைகளால் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கலங்கடிக்கத் தொடங்கினர். பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, பெருங்கோபத்தை அடைந்து, இரு கணைகளைக் கொண்டு தன் எதிரிகளின் இரு விற்களையும் மீண்டும் வேகமாக வெட்டினான். மேலும் அர்ஜுனன், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான மேலும் சில கணைகளால் அவர்களது குதிரைகள், தேரோட்டிகள் மற்றும் அவர்களது பின்புறத்தைப் பாதுகாத்த போராளிகள் இருவர் மற்றும் அவர்களைத் தொடர்ந்து வந்தோர் ஆகியோரைக் கொன்றான். பிறகு, கத்தி போன்ற கூர்மையுள்ள மேலும் ஒரு பல்லத்தினால் {அவர்களில்} மூத்த சகோதரனின் {விந்தனின்} தலையை வெட்டியதால், அவன் {விந்தன்}, காற்றினால் முறிந்த மரத்தைப் போல உயிரை இழந்து கீழே பூமியில் விழுந்தான்.

பெரும் ஆற்றலைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான அனுவிந்தன், குதிரைகளற்ற தேரில் கொல்லப்பட்டுக் கிடக்கும் விந்தனைக் கண்டு ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டான். பிறகு, விந்தனின் தம்பியான அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {அனுவிந்தன்}, தன் அண்ணனின் கொலைக்குப் பழிவாங்குவதற்காகக் கையில் கதாயுதத்துடன் ஆடிக் கொண்டே சென்றான். சினத்தால் நிறைந்த அனுவிந்தன், அந்தக் கதாயுதத்தைக் கொண்டு வாசுதேவனின் முன் நெற்றியைத் தாக்கினான். எனினும் நடுங்காத பின்னவன் {கிருஷ்ணன்}, மைநாக மலையைப் போல அசையாதிருந்தான். அப்போது அர்ஜுனன், ஆறு கணைகளைக் கொண்டு, அவனது கழுத்து, இரு கால்கள், இரு கரங்கள் மற்றும் சிரம் ஆகியவற்றை அறுத்தான். இப்படி (துண்டுகளாக அறுபட்ட) அனுவிந்தனின் அங்கங்கள் பல மலைகளைப் போலக் கீழே விழுந்திருந்தன.

அவ்விருவரையும் பின்தொடர்ந்து வந்தவர்கள், அவர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு, சினத்தால் நிறைந்து, நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்தபடி (அர்ஜுனனை நோக்கி) விரைந்தனர். அவர்களை விரைவாகக் கொன்ற அர்ஜுனன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பனிக்காலத்தின் முடிவில் காட்டை எரிக்கும் நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். சற்றே சிரமத்துடன் அத்துருப்புகளைக் கடந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, மேகங்களுக்கிடையில் மறைந்திருந்து, அவற்றை மீறி வெளிவந்த உதயச் சூரியனைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான். அவனைக் {அர்ஜுனனைக்} கண்ட கௌரவர்கள் அச்சத்தால் நிறைந்தனர். ஆனால் விரைவாக மீண்ட அவர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவன் {அர்ஜுனன்} களைத்திருப்பதையும், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} இன்னும் தொலைவிலேயே இருப்பதையும் புரிந்து கொண்டு, அவனை நோக்கி மீண்டும் மகிழ்ச்சியாக விரைந்து, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனைச் சூழ்ந்து கொண்டு சிங்க முழக்கமிட்டனர்.கோபத்தில் நிறைந்திருந்த அவர்களைக் கண்டவனும், மனிதர்களில் காளையுமான அர்ஜுனன் புன்னகைத்தபடியே, தாசார்ஹ குலத்தோனிடம் {கிருஷ்ணனிடம்} மென் சொற்களில், “நம் குதிரைகள் கணைகளால் பீடிக்கப்பட்ட களைத்திருக்கின்றன. சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} இன்னும் தொலைவிலேயே இருக்கிறான். இப்போது செய்வதற்குச் சிறந்தது என நீ எதை நினைக்கிறாய்? ஓ! கிருஷ்ணா, எனக்கு உண்மையாகச் சொல்வாயாக. மனிதர்களில் நீயே எப்போதும் விவேகியாவாய். பாண்டவர்கள் உன்னையே தங்கள் கண்களாகக் கொண்டு, போரில் தங்கள் எதிரிகளை வெல்வார்கள். அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்று நான் நினைப்பதை உண்மையாக நான் உனக்குச் சொல்கிறேன். ஓ! மாதவா, குதிரைகளை நுகத்தடியில் இருந்து அவிழ்த்து, அவற்றின் {உடல்களில் தைத்திருக்கும்} கணைகளைப் பிடுங்குவாயாக” என்றான் {அர்ஜுனன்}. பார்த்தனால் இப்படிச் சொல்லப்பட்ட கேசவன், “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நானும் நீ வெளிப்படுத்திய கருத்தையே கொண்டிருக்கிறேன்” என்றான். அப்போது அர்ஜுனன், “ஓ! கேசவா {கிருஷ்ணா}, மொத்த படையையும் நான் தடுத்துக் கொண்டிருக்கிறேன். அடுத்ததாகச் செய்யப்பட வேண்டியது எதுவோ, அதை நீ முறையாகச் செய்வாயாக” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தன் தேர்த்தட்டில் இருந்து இறங்கிய தனஞ்சயன், தன் வில்லான காண்டீவத்தை எடுத்துக் கொண்டு அசையாத மலையென அங்கே நின்றான். தனஞ்சயன் தரையில் நிற்பதைக் கண்டு, அதை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதிய க்ஷத்திரியர்கள், வெற்றியின் மீது கொண்ட விருப்பத்தால் உரக்க முழங்கியபடியே அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தனர். தனியாக நின்று கொண்டிருந்த அவனைப் பெரும் தேர்க்கூட்டங்களால் சூழ்ந்து கொண்ட அனைவரும், தங்கள் விற்களை வளைத்து, அவன் {அர்ஜுனன்} மீது தங்கள் கணைகளை மழையாகப் பொழிந்தனர். கோபத்தில் நிறைந்திருந்த அவர்கள் பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை ஏவி சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலத் தங்கள் கணைகளால் பார்த்தனை முழுமையாக மறைத்தனர். சிங்கத்தை நோக்கி விரையும் மதங்கொண்ட யானைகளைப் போலப் பெரும் க்ஷத்திரியர்கள் அனைவரும் மனிதர்களில் சிங்கமான அந்த க்ஷத்திரியக் காளையை {அர்ஜுனனை} எதிர்த்து மூர்க்கமாக விரைந்தனர்.

சினத்தால் நிறைந்த பார்த்தன் {அர்ஜுனன்}, எண்ணற்ற வீரர்களைத் தடுப்பதில் தனியாக வென்ற போது, நாங்கள் கண்ட அவனது கர வலிமை மிகப் பெரியதாக இருந்தது. பலம் நிறைந்த பார்த்தன், தன் ஆயுதங்களால் எதிரியின் ஆயுதங்களைக் கலங்கடித்து, எண்ணற்ற கணைகளால் அவர்கள் அனைவரையும் விரைவாக மறைத்தான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த அடர்த்தியான கணைகள் மழையாகப் பொழிந்து மோதியதன் விளைவாக, ஆகாயத்தின் அந்தப் பகுதியில், தீப்பொறிகளை இடையறாது வெளியிடும் நெருப்பொன்று உண்டானது. போரில் வெற்றியை விரும்பியவர்களும், குருதியில் நனைந்து பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த குதிரைகள் மற்றும் பேரொலியுடன் பிளிறியபடியே எதிரிகளைக் கலங்கடிக்கும் மதங்கொண்ட யானைகள் ஆகியவற்றின் துணையுடன் கூடியவர்களும், கோபத்தால் நிறைந்தவர்களும், ஒரு பொதுநோக்கில் ஒன்றிணைந்தவர்களும், பெரும் வில்லாளிகளுமான அந்த எண்ணற்ற பகைவீரர்கள் அனைவராலும் அங்கே அந்தச் சூழல் மிகவும் வெப்பமடைந்தது [2].கணைகளை நீரோட்டமாகவும், கொடிமரங்களைச் சுழல்களாகவும், யானைகளை முதலைகளாகவும், காலாட்படை வீரர்களை எண்ணற்ற மீன்களாகவும், சங்கொலிகள் மற்றும் பேரிகை ஒலிகளை முழக்கமாகவும், தேர்களைப் பொங்கும் அலைகளாகவும், போராளிகளின் தலைக்கவசங்களை ஆமைகளாகவும், குடைகள் மற்றும் கொடிகளை நுரையாகவும், கொல்லப்பட்ட யானைகளின் உடல்களைத் தன் பாறைகளாகவும் கொண்டிருப்பதும், அகன்றதும், கடக்க முடியாததும், கலங்கடிக்கப்பட முடியாததுமான அந்தத் தேர்களின் எல்லையற்ற பெருங்கடலைத் தன் கணைகளால் ஒரு கரையைப் போலத் தடுத்துக் கொண்டிருந்தான்.பிறகு, அந்தப் போர் நடந்து கொண்டிருக்கும்போதே, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் அன்பு நண்பனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனனிடம் அச்சமற்ற வகையில், “ஓ! அர்ஜுனா, குதிரைகள் நீரருந்த இங்கே இந்தப் போர்க்களத்தில் எந்தக் கிணறும் இல்லை. குதிரைகள் குடிப்பதற்கே நீரை விரும்புகின்றன, குளிப்பதற்காக அல்ல” என்றான். வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், அர்ஜுனன் மகழ்ச்சியாக, “இதோ இருக்கிறது” என்று சொல்லி, ஓர் ஆயுதத்தைக் கொண்டு பூமியைத் துளைத்து, குதிரைகள் நீரருந்த ஒரு சிறந்த தடாகத்தை உண்டாக்கினான்.

சக்கரவாகங்களால் அலங்கரிக்கப்பட்ட அத்தடாகத்தில் அன்னங்களும், வாத்துகளும், நிறைந்திருந்தன. அகலமாகவும், தெளிந்த நீர் நிறைந்திருந்ததாகவும் இருந்த அது, முழுதும் மலர்ந்த நல்ல வகைத் தாமரைகளால் நிறைந்திருந்தது. மேலும் அதில் பல்வேறு வகைகளிலான மீன்களும் இருந்தன. ஆழத்தில் அடியற்றதான அது, பல முனிவர்களால் அடையப்படுவதாக இருந்தது.ஒரு கணத்தில் அங்கே உண்டாக்கப்பட்ட அத்தடாகத்தைக் காண தெய்வீக முனிவரான நாரதர் வந்தார்.

(தெய்வீகத் தச்சனான) துவஷ்டிரியை {த்வஷ்டாவைப்} போல அற்புதச் செயல்களைச் செய்யவல்ல பார்த்தன் {அர்ஜுனன்}, கணைகளையே விட்டங்களாகவும், மச்சுகளாகவும் {கைமரங்களாகவும்}, தூண்களாகவும், மேற்கூரைகளாகவும் கொண்ட கணைமயமான ஒரு கூடத்தையும் அங்கே உண்டாக்கினான். பார்த்தனால் உண்டாக்கப்பட்ட கணைமயமான அந்தக் கூடத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்த கோவிந்தன் {கிருஷ்ணன்}, புன்னகைத்தபடியே, “நன்று, நன்று” என்று சொன்னான்” {என்றான் சஞ்சயன்}.

குதிரைகளின் களைப்பகற்றிய கிருஷ்ணன்! – துரோண பர்வம் பகுதி – 099-காலாளாகத் தனியாக நின்று பகைவீரர்களைத் தடுத்த அர்ஜுனன்; குதிரைகளில் தைத்த கணைகளைப் பிடுங்கி, அவற்றின் களைப்பையும், வலியையும் போக்கி மீண்டும் தேரில் பூட்டிய கிருஷ்ணன்; வேகமாகச் சென்ற கிருஷ்ணார்ஜுனர்களைத் தடுக்க முடியாத கௌரவர்கள்; அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்ற துரியோதனன்

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உயர் ஆன்மக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} நீரை உண்டாக்கிய பிறகு, பகைவரின் படையை அவன் {அர்ஜுனன்} தடுக்கத் தொடங்கி, கணைமயமான கூடத்தைக் கட்டியதும், பெரும் காந்தி கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, தேரில் இருந்து இறங்கி, கணைகளால் துளைத்துச் சிதைக்கப்பட்ட குதிரைகளை நுகத்திலிருந்து அவிழ்த்தான். எப்போதும் கண்டிராத அக்காட்சியைக் கண்டதால், சித்தர்கள், சாரணர்கள் மற்றும் போர்வீரர்கள் அனைவராலும் கரவொலியுடன் எழுப்பப்பட்ட ஆரவாரப் பேரொலி அங்கே கேட்கப்பட்டது. காலாளாக நின்று போரிட்ட குந்தியின் மகனை {அர்ஜுனனை} (ஒன்றுகூடியிருந்த) வலிமைமிக்கத் தேர்வீரர்களால் எதிர்க்க இயலவில்லை. இவையாவும் மிக அற்புதமாகத் தெரிந்தது.

கூட்டம் கூட்டமாகத் தேர்களும், எண்ணற்ற யானைகளும், குதிரைகளும் தன்னை நோக்கி விரைந்தாலும், தன் எதிரிகள் அனைவருடன் போரில் ஈடுபட்ட பார்த்தன் {அர்ஜுனன்} எந்த அச்சத்தையும் உணரவில்லை. (பகை) மன்னர்கள், அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது தங்கள் கணைமாரியைப் பொழிந்தனர். எனினும், பகைவீரர்களைக் கொல்பவனும், அற ஆன்மா கொண்டவனுமான அந்த வாசவன் மகன் {அர்ஜுனன்} எவ்வித கவலையையும் உணரவில்லை. உண்மையில் அந்த வீரப் பார்த்தன் {அர்ஜுனன்}, பெருங்கடலானது, தன்னில் பாயும் நூற்றுக்கணக்கான ஆறுகளை ஏற்பதைப் போலத் தன்னை நோக்கி வரும் நூற்றுக்கணக்கான கணைமாரிகளையும், கதாயுதங்களையும், வேல்களையும் ஏற்றான். 

பார்த்தன் {அர்ஜுனன்}, அந்த முதன்மையான மன்னர்களால் தன்னை நோக்கி ஏவப்பட்ட முதன்மையான கணைகளை மூர்க்கமான வலிமை கொண்ட தன் ஆயுதங்கள் மற்றும் தன் கரப் பலத்தின் மூலம் வரவேற்றான். அவன் {அர்ஜுனன்}, தரையில் தனியாக நின்றிருந்தாலும், பேராசை எனும் ஒரு தவறானது சாதனைகள் அனைத்தையும் அழிப்பதைப் போலத் தேர்களில் இருந்த அந்த மன்னர்கள் அனைவரையும் கலங்கடிப்பதில் வென்றான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் பார்த்தன் ஆகிய இருவரின் அற்புதம் நிறைந்த ஆற்றலைக் கண்டு புகழ்ந்த கௌரவர்கள், “போரில் பார்த்தனும் {அர்ஜுனனும்}, கோவிந்தனும் {கிருஷ்ணனும்} குதிரைகளை நுகத்திலிருந்து அவிழ்த்ததைக் காட்டிலும் அற்புதம் நிறைந்த செயல் உலகில் வேறு எது இருக்கிறது? அல்லது இருக்கப் போகிறது? போரில் கடும் சக்தியையும், பெரும் நம்பிக்கையையும் காட்டும் இந்த மனிதர்களில் சிறந்தவர்கள் நம்மைப் பெரும் எண்ணங்களால் ஊக்கப்படுத்துகின்றனர்” என்றனர் [1].ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, அந்தப் போர்க்களத்தில் கணைகளாலான கூடத்தை அர்ஜுனன் உண்டாக்கியபிறகு, உமது துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஏதோ பெண்களின் சபையில் தான் இருப்பதைப் போல மிகுந்த நம்பிக்கையுடன் புன்னகைத்தபடியே குதிரைகளை அதற்குள் அழைத்துச் சென்றான். குதிரைகளைச் சீர்செய்வதில் நல்ல திறம்பெற்ற கிருஷ்ணன், அவற்றின் {குதிரைகளின்} களைப்பு, வலி, நுரை தள்ளுதல், நடுக்கம், காயங்கள் ஆகியவற்றை நீக்கினான். பிறகு அவற்றில் இருந்த கணைகளைப் பிடுங்கி, தன் கைகளால் அக்குதிரைகளைத் தேய்த்து, அவற்றை முறையாகத் துள்ளி நடக்கச் செய்து, அவற்றை {நீரைக்} குடிக்க வைத்தான். அவற்றைக் குடிக்கச் செய்து, அவற்றின் களைப்பு மற்றும் வலியைப் போக்கிய அவன் {கிருஷ்ணன்}, மீண்டும் அவற்றை {குதிரைகளைத்} தேர்களில் முதன்மையான அந்தத் தேரின் நுகத்தில் கவனமாகப் பூட்டினான்.

பிறகு, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தச் சௌரி {கிருஷ்ணன்}, அர்ஜுனனோடு சேர்ந்து அந்தத் தேரில் ஏறி பெரும் வேகத்தில் சென்றான். தேர்வீரர்களில் முதன்மையானவனுக்கு {அர்ஜுனனுக்குச்} சொந்தமானதும், தாகம் தணிக்கப்பட்ட குதிரைகள் மீண்டும் பூட்டப்பட்டதுமான அந்தத் தேரைக் கண்ட குருபடையின் முதன்மையானவர்கள் மீண்டும் உற்சாகமிழந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நச்சுப்பற்கள் பிடுங்கப்பட்ட பாம்புகளைப் போலவே அவர்கள் பெருமூச்சுவிட்டனர். அவர்கள், “ஓ!, ஐயோ, நமக்கு ஐயோ {நாம் கெட்டோம்}! க்ஷத்திரியர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கவசம் பூண்ட பார்த்தன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரும், மரப்பாவையுடன் {பொம்மையுடன்} விளையாடும் பிள்ளையைப் போல மிக எளிதாக அதே தேரில் சென்றுவிட்டனரே. உண்மையில், எதிரிகளை எரிப்பவர்களான அவர்கள், மன்னர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி, நம் முழக்கங்களாலும், போரிடும் போராளிகளாலும் தடுக்கப்படாமல் சென்றுவிட்டனரே” என்றனர்.

அவர்கள் சென்றுவிட்டதைக் கண்ட போர் வீரர்கள் பிறர், “கௌரவர்களே, கிருஷ்ணனையும், கிரீடம் தரித்தவனையும் ({கிரீடியான} அர்ஜுனனையும்) கொல்ல விரைவீராக. (நம்) வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குதிரைகளைத் தன் தேரில் பூட்டிய தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} போரில் நம்மைக் கொன்று ஜெயத்ரதனை நோக்கிச் செல்கிறான்” என்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களில் பூமியின் சில தலைவர்கள், போரில் இதற்கு முன் எப்போதும் கண்டிராத மிக அற்புதமான நிகழ்வைக் கண்டு, “ஐயோ, துரியோதனனின் தவறால், மன்னன் திருதராஷ்டிரரின் போர்வீரர்களான இந்த க்ஷத்திரியர்களும், மொத்த உலகமும், பெரும் துயரில் விழுந்து அழிவை அடைகின்றனரே. மன்னன் துரியோதனன் இதைப் புரிந்து கொள்ளவில்லையே” என்றனர். இப்படியே பல க்ஷத்திரியர்கள் பேசினர். ஓ! பாரதரே, இன்னும் பிறரோ, “சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஏற்கனவே யமனுலகு அனுப்பப்பட்டுவிட்டான். குறுகிய பார்வை கொண்டவனும், வழிமுறைகளை அறியாதவனுமான துரியோதனன், அந்த மன்னனுக்கு {ஜெயத்ரதனுக்கு} என்ன செய்ய வேண்டுமோ அதை இப்போது செய்யட்டும் [2]” என்றனர்.அதே வேளையில், மேற்கு {அஸ்த} மலைகளை நோக்கி நகரும் சூரியனைக் கண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தாகம் தணிக்கப்பட்ட தன் குதிரைகளில், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} நோக்கி பெரும் வேகத்துடன் சென்றான். ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரன் {அர்ஜுனன்}, அந்தகனைப் போலக் கோபத்துடன் சென்ற போது, (குரு) வீரர்களால் அவனைத் தடுக்க முடியவில்லை. எதிரிகளை எரிப்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஜெயத்ரதனை அடையச் சென்ற போது, (தன் முன்னிருந்த) வீரர்களை முறியடித்து, மான்கூட்டத்தைக் கலங்கடிக்கும் ஒரு சிங்கத்தைப் போல அந்தப் படையைக் கலங்கடித்தான்.

பகைவரின் படைக்குள் ஊடுருவிய தாசார்ஹ குலத்தோன், குதிரைகளைப் பெரும் வேகத்தில் தூண்டி, மேகங்களின் நிறத்தைக் கொண்ட தன் சங்கான பாஞ்சஜன்யத்தை முழக்கினான். காற்றின் வேகம் கொண்ட குதிரைகள் அந்தத் தேரை விரைவாக இழுத்ததால், குந்தியின் மகனால் {அர்ஜுனனால்} எதிரில் ஏவப்பட்ட கணைகள் அவனுக்குப் பின்னால் விழத் தொடங்கின [3]. சினத்தால் நிறைந்த மன்னர்கள் மற்றும் க்ஷத்திரியர்கள் பலரும், ஜெயத்ரதனைக் கொல்ல விரும்பிய தனஞ்சயனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர். அந்தப் பெரும் போரில் ஒருக்கணம் நின்ற அந்த மனிதர்களில் காளையை (அர்ஜுனனை) நோக்கி (குரு) வீரர்கள் இப்படி விரைந்தபோது, துரியோதனனும் பார்த்தனை {அர்ஜுனனும்} விரைவாகப் பின்தொடர்ந்து சென்றான். மேகங்களின் முழக்கங்களுக்கு ஒப்பான சடசடப்பொலி கொண்டதும், குரங்கைத் தாங்கியிருக்கும் பயங்கரக் கொடி மரம் பொருத்தப்பட்டிருந்ததும், காற்றில் மிதக்கும் கொடியைக் கொண்டதுமான {அர்ஜுனனின்} தேரைக் கண்ட {பகை} வீரர்கள் பலரும் மிகவும் உற்சாகமிழந்தனர். (போராளிகளால் எழுப்பப்பட்ட) புழுதியால் கிட்டத்தட்ட முழுமையாகச் சூரியன் மறைக்கப்பட்ட போது, கணைகளால் பீடிக்கப்பட்ட (குரு) வீரர்களால், அந்தப் போரில் இரு கிருஷ்ணர்களையும் {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} பார்க்கக்கூட முடியவில்லை” {என்றான் சஞ்சயன்}.

ஜெயத்ரதனைக் கண்ட கிருஷ்ணார்ஜுனர்கள்! – துரோண பர்வம் பகுதி – 100-அர்ஜுனனைக் கண்டு தப்பி ஓடிய கௌரவர்கள் வெட்கமடைந்து திரும்பி வந்தது; தேர்க்கூட்டத்தில் இருந்து வெளியே வந்த கிருஷ்ணார்ஜுனர்கள்; நம்பிக்கையிழந்த கௌரவர்கள்; ஜெயத்ரதனைக் நோக்கி கிருஷ்ணனும் அர்ஜுனனும் விரைந்தது; விரைந்து வந்த துரியோதனன் கிருஷ்ணனைத் தாண்டி சென்று திரும்பிப் பார்த்தது; கௌரவர்களின் மகிழ்ச்சி…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஏற்கனவே பல படைப்பிரிவுகளைப் பிளந்துத் தங்கள் படைக்குள்ளும் ஊடுருவிவிட்டதைக் கண்ட உமது படையின் {கௌரவப்படையின்} மன்னர்கள் அச்சத்தால் தப்பி ஓடினர். எனினும் அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள், சிறிது நேரத்திலேயே, சினத்தாலும், வெட்கத்தாலும் நிறைந்து, தங்கள் வலிமையால் உந்தப்பட்டு, நிதானமாக குவிந்த மனத்தை அடைந்து தனஞ்சயனை {அர்ஜுனனை} நோக்கிச் சென்றனர். ஆனால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தாலும், பழியுணர்ச்சியாலும் நிரம்பிப் போரில் பாண்டுவின் மகனை எதிர்த்துச் சென்ற அவர்கள் பெருங்கடலில் இருந்து ஆறுகள் திரும்பாததைப் போலத் திரும்பவில்லை. இதைக் கண்டு போரிலிருந்து ஓடிய இழிந்த க்ஷத்திரியர்கள் பலர், வேதங்களிடமிருந்து விலகிச் செல்லும் நாத்திகர்களைப் போலப் பாவத்துக்கும், நரகத்துக்கும் ஆட்பட்டனர் [1].தேர்களின் கூட்டத்தை மீறிய மனிதர்களில் காளையரான அவ்விருவரும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்}, ராகுவின் வாயிலிருந்து விடுபட்ட சூரியனையும் சந்திரனையும் போல அதை {தேர்க்கூட்டத்தை} விட்டு இறுதியாக வெளியே வந்தனர். உண்மையில், தங்கள் களைப்பு விலகி, அந்தப் பரந்த படையைப் பிளந்த அந்த இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்களும்}, பலமான வலையைக் கடந்த இரு மீன்களைப் போலத் தெரிந்தனர். அடர்த்தியான ஆயுத மழையால் தடுக்கப்பட்டதும், ஊடுருவ முடியாததுமான துரோணரின் படைப்பிரிவின் ஊடாகப் பலத்துடன் கடந்து சென்ற அந்த உயர் ஆன்ம வீரர்கள் இருவரும், (ஆகாயத்தில் தோன்றும்) யுகச் சூரியன்களைப் போலத் தெரிந்தனர். ஆயுதங்களின் அடர்த்தியான மழையின் ஊடாகப் பிளந்து சென்று, உடனடி ஆபத்திலிருந்து விடுபட்ட அந்த உயர் ஆன்ம வீரர்கள், அடர்த்தியான தங்கள் ஆயுதங்களின் மேகங்களால் ஆகாயத்தை மறைத்து, காட்டுத் தீயில் இருந்து தப்பியவர்கள் போலவோ, மகரத்தின் வாயில் இருந்து தப்பிய இரு மீன்களைப் போலவோ தெரிந்தனர். மேலும் அவர்கள் பெருங்கடலைக் கலங்கடிக்கும் இரு மகரங்களைப் போல அந்த (குரு) படையைக் கலங்கடித்தனர்.

பார்த்தனும் {அர்ஜுனனும்}, கிருஷ்ணனும் துரோணரின் படைப்பிரிவுக்கு மத்தியில் இருக்கையில், உமது வீரர்களும், உமது மகன்களும் அவ்விருவராலும் அதை விட்டு வெளிவர இயலாது என்றே நினைத்தனர். எனினும், ஓ! ஏகாதிபதி, பெரும் காந்தி கொண்ட அவ்விரு வீரர்களும், துரோணரின் படைப்பிரிவை விட்டு வெளிவந்ததைக் கண்ட பிறகு, ஜெயத்ரதனின் உயிரில் {ஜெயத்ரதன் உயிர்வாழ்வான் என்று} அதற்கு மேலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. அந்த இரு கிருஷ்ணர்களும் துரோணரிடமிருந்தும், ஹிருதிகன் மகனிடம் {கிருதவர்மனிடம்} இருந்தும் தப்ப முடியாது என்று அவர்கள் நம்பியதால், ஓ! மன்னா, அதுவரை அவர்களுக்கு ஜெயத்ரதனின் உயிர் மீது பலமான நம்பிக்கையிருந்தது. ஓ! ஏகாதிபதி, எதிரிகளை எரிப்பவர்களான அவ்விருவரும், கிட்டத்தட்ட கடக்கப்பட முடியாத துரோணரின் படைப்பிரிவையும், போஜர்களின் படைப்பிரிவையும் கடந்து அந்த நம்பிக்கையைத் தகர்த்தனர். எனவே, அந்தப் படைகளைக் கடந்து சென்று சுடர்விடும் இரு நெருப்புகளைப் போல இருந்த அவர்களைக் கண்ட உம்மவர்கள் நம்பிக்கை இழந்து, அதற்கு மேலும் ஜெயத்ரதன் உயிரின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை.

பிறகு, அச்சமற்ற வீரர்களும், எதிரிகளின் அச்சத்தை அதிகரிப்பவர்களுமான கிருஷ்ணன் மற்றும் தனஞ்சயன் ஆகிய இருவரும், ஜெயத்ரதனைக் கொல்வது குறித்துத் தங்களுக்குள் பேசத் தொடங்கினர்.

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்},
 “தார்தராஷ்டிரத் தேர்வீரர்களில் முதன்மையான ஆறு பேருக்கு மத்தியில் ஜெயத்ரதன் நிறுத்தப்பட்டிருக்கிறான். எனினும், அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} என்னால் காணப்பட்டதும், அவன் என்னிடம் இருந்து தப்பமாட்டான். தேவர்கள் அனைவருடன் கூடிய சக்ரனே {இந்திரனே} போரில் அவனுக்கு {ஜெயத்ரதனுக்குப்} பாதுகாவலனாக இருந்தாலும் நம்மால் அவன் கொல்லப்படுவான்” என்றான் {அர்ஜுனன்}. இப்படியே அந்த இரு கிருஷ்ணர்களும் பேசிக்கொண்டனர். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் ஆட்சியாளனைத் {ஜெயத்ரதனைத்} தேடிக் கொண்டிருக்கையில் இப்படியே அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். (அவர்கள் சொன்னதைக் கேட்ட) உமது மகன்கள் உரக்க ஓலமிட்டனர் [2].வேக நடை கொண்ட தாகமிக்க இரு யானைகள், பாலைவனத்தைக் கடந்து, நீர் குடித்துப் புத்துணர்ச்சியடைந்ததைப் போலவே எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும் இருந்தனர். மரணத்திற்கு எட்டாதவர்களும், முதுமை தளர்ச்சிக்கு மேம்பட்டவர்களுமான {இளைஞர்களுமான} அவர்கள், புலிகள், சிங்கங்கள் மற்றும் யானைகள் நிறைந்த ஒரு மலைநாட்டைக் கடந்த இரு வணிகர்களைப் போலத் தெரிந்தனர் [3]. உண்மையில் (துரோணர் மற்றும் கிருதவர்மனிடம் இருந்து) விடுபட்ட அவர்களைக் கண்ட உமது வீரர்கள், பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கிருஷ்ணன் ஆகியோரின் முக நிறத்தைப் பயங்கரமாகக் கருதினர்; உம்மவர்கள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உரக்க ஓலமிட்டனர்.கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கோ, சுடர்மிக்க நெருப்புக்கோ ஒப்பான துரோணரிடம் இருந்தும், பூமியின் தலைவர்களான பிறரிடமிருந்தும் விடுபட்ட பார்த்தனும், கிருஷ்ணனும், சுடர்மிக்க இரு சூரியன்களைப் போலத் தெரிந்தனர். உண்மையில், எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், பெருங்கடலுக்கு ஒப்பான துரோணரின் படைப்பிரிவில் இருந்து விடுபட்டு, மிக ஆழமான கடலைக் கடந்து இன்பத்தில் நிறைந்திருக்கும் மனிதர்களைப் போலத் தெரிந்தனர். துரோணர் மற்றும் ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} பாதுகாக்கப்பட்ட படைப்பிரிவுகளின் அடர்த்தியான ஆயுத மழையில் இருந்து விடுபட்ட கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், இந்திரனையோ, அக்னியையோ போலச் சுடர்மிகும் பிரகாசத்துடன் தெரிந்தனர். பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கூரிய கணைகளால் துளைக்கப்பட்ட இரு கிருஷ்ணர்களும், தங்கள் உடல்களில் இரத்தம் வழிய, மலர்ந்திருக்கும் கர்ணிகரங்களால் {கோங்கு மரங்கள்} நிறைந்த இரு மலைகளைப் போலத் தெரிந்தனர்.

துரோணரை முதலையாகவும், ஈட்டிகளைச் சீற்றமிக்கப் பாம்புகளாகவும், கணைகளை மகரங்களாகவும், க்ஷத்திரியர்களை ஆழமான நீராகவும் கொண்ட அகலமான தடாகத்தைக் கடந்து, விற்களின் நாணொலிகளையும், உள்ளங்கை ஒலிகளையும் இடிகளாகக் கொண்டதும், கதாயுதங்களையும், வாள்களையும் மின்னல்கீற்றுகளாகக் கொண்டதும், துரோணரின் ஆயுதங்களால் ஆனதுமான அந்த மேகத்தில் இருந்து வெளியே வந்த பார்த்தனும் {அர்ஜுனனும்}, கிருஷ்ணனும், இருளில் இருந்து விடுபட்ட சூரியனையும், சந்திரனையும் போலத் தெரிந்தனர். வலிமைமிக்கவர்களும், புகழ்மிக்க வில்லாளிகளுமான அவ்விரு கிருஷ்ணர்களும் துரோணரின் ஆயுதங்களால் தடுக்கப்பட்ட பகுதிகளைக் கடந்ததும், மழைக்காலங்களில் நீர் நிறைந்திருப்பவையும், முதலைகள் நிறைந்தவையும், பெருங்கடலைத் தங்களில் ஆறாவதாகக் கொண்டவையுமான (சதத்ரூ, விபாசை, இரவி {இராவதீ}, சந்திரபாகை, விதஸ்தை ஆகிய) ஐந்து ஆறுகளைத் தங்கள் கரங்களின் உதவியால் கடந்து வந்த மனிதர்களைப் போல அனைத்து உயிர்களும் அவர்களைக் {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} கருதின [4].தங்களுக்கு அதிகத் தொலைவில் இல்லாத ஜெயத்ரதனைக் கொல்ல விரும்பி {அவன் மீது} கண்களைச் செலுத்திய அவ்விரு வீரர்களும், ருரு மானின் மீது பாயும் விருப்பத்தில் காத்திருந்த புலிகளைப் போலத் தெரிந்தனர். ஓ! ஏகாதிபதி, ஜெயத்ரதரன் ஏற்கனவே கொல்லப்பட்டவன் என்று உமது வீரர்கள் கருதுமளவிற்கு அவர்களது {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனுடைய} முகத்தின் நிறம் இருந்தது. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, சிவந்த கண்களைக் கொண்டவர்களும், ஒன்றாக இருந்தவர்களுமான கிருஷ்ணனும், பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்} ஜெயத்ரதனைக் கண்டதும் மகிழ்ச்சியால் நிறைந்து மீண்டும் மீண்டும் முழங்கினர். உண்மையில், ஓ! ஏகாதிபதி, கையில் கடிவாளத்துடன் நின்ற சௌரி {கிருஷ்ணன்} மற்றும் வில்லுடன் இருந்த பார்த்தன் ஆகியோரின் காந்தி சூரியனையோ, நெருப்பையோ போன்றிருந்தது. துரோணரின் படைப்பிரிவில் இருந்து விடுபட்டு, சிந்துக்களின் ஆட்சியாளனைக் கண்டதால், சதைத்துண்டுகளைக் கண்ட இரு பருந்துகளைப் போல அவர்கள் இன்புற்றனர். சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} வெகுதொலைவில் இல்லை என்பதைக் கண்ட அவர்கள், இறைச்சித் துண்டை நோக்கிப் பாயும் பருந்துகள் இரண்டைப் போல அவனை {ஜெயத்ரதனை} நோக்கிக் கோபத்துடன் விரைந்தனர்.

ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, ரிஷிகேசனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் (துரோணரின் படைப்பிரிவை) மீறியதைக் கண்டவனும், துரோணரால் கவசம் பூட்டப்பட்டவனும், குதிரைகளைச் சீராக்குவதையும், அவற்றை வழிநடத்துவதையும் நன்கறிந்தவனும், உமது வீர மகனுமான மன்னன் துரியோதனன், சிந்துக்களின் பாதுகாப்புக்காகத் தனித்தேரில் விரைந்தான். ஓ! மன்னா, வலிமைமிக்க வில்லாளிகளான கிருஷ்ணனையும், பார்த்தனையும் {அர்ஜுனனையும்} தாண்டிச் சென்ற உமது மகன் {துரியோதனன்}, தாமரைக் கண்களைக் கொண்ட கேசவனை {கிருஷ்ணனை} நோக்கித் திரும்பினான். தனஞ்சயனை {அர்ஜுனனை} உமது மகன் {துரியோதனன்} தாண்டிச் சென்றதும், உமது துருப்புகளுக்கு மத்தியில் பல்வேறு இசைக்கருவிகளும் மகிழ்ச்சிகரமாக முழக்கப்பட்டன. இரு கிருஷ்ணர்களின் எதிரே நின்ற துரியோதனனைக் கண்டு சங்கொலிகளுடன் கலந்து சிங்க முழக்கங்கள் செய்யப்பட்டன. ஓ! மன்னா, சுடர்மிக்க நெருப்புகளுக்கு ஒப்பாக ஜெயத்ரதனின் பாதுகாவலர்களாக நின்றவர்களும், போரில் உமது மகனை {துரியோதனனைக்} கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தனர். ஓ! ஏகாதிபதி, துரியோதனன் தன்னைப் பின்தொடர்பவர்களுடன் சேர்ந்து தங்களைக் கடந்து {மீறிச்} சென்றதைக் கண்ட கிருஷ்ணன், அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொன்னான்” {என்றான் சஞ்சயன்}.

துரியோதனனின் செருக்கு! – துரோண பர்வம் பகுதி – 101-துரியோதனனின் பலத்தையும், அவன் பாண்டவர்களுக்குச் செய்த தீமைகளையும் அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் நினைவுப்படுத்தியது; துரியோதனனைக் கொல்ல அர்ஜுனனை ஏவிய கிருஷ்ணன்; அர்ஜுனனிடம் துரியோதனன் பேசியது…

வாசுதேவன் {கிருஷ்ணன் – அர்ஜுனனிடம்}, “ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, நம்மைக் கடந்து செல்லும் இந்தச் சுயோதனனைப் {துரியோதனனைப்} பார். நான் இதை உயர்ந்த அற்புதமாகக் கருதுகிறேன். இவனுக்கு {துரியோதனனுக்கு} இணையான தேர்வீரன் எவனும் இல்லை. இவனது கணைகள் தொலைதூரம் செல்கின்றன. இவன் பெரும் வில்லாளியாக இருக்கிறான். இவன் ஆயுதங்களை அறிந்தவனென்பதால், போரில் இவனை வெல்வது மிகக் கடினமாகும். திருதராஷ்டிரரின் வலிமைமிக்க மகன் {துரியோதனன்} தாக்குவதில் கடுமை கொண்டவனாவான், மேலும் அனைத்து போர்முறைகளையும் அறிந்தவனும் ஆவான். பெரும் ஆடம்பரத்தில் வளர்ந்த இவன் தேர்வீரர்களில் முதன்மையானவர்களாலும் உயர்வாகக் கருதப்படுகிறான் [1].ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நன்கு சாதித்தவனான இவன் {துரியோதனன்} எப்போதும் பாண்டவர்களை வெறுக்கிறான். ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, இந்தக் காரணங்களுக்காகவே நீ இவனுடன் {துரியோதனனுடன்} இப்போது போரிட வேண்டும் என நான் நினைக்கிறேன். பகடையில் பணயம் போல, {போரில்} வெற்றியோ, தோல்வியோ அஃது இவனைச் சார்ந்தே இருக்கிறது. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ நீண்ட நாட்களாகக் கொண்டிருக்கும் கோபமெனும் நஞ்சை இவன் {துரியோதனன்} மீது கக்குவாயாக. பாண்டவர்களுக்கு இழைக்கப்பட்ட தவறுகள் அனைத்திற்கும் வேர் இந்த வலிமைமிக்கத் தேர்வீரனே {துரியோதனனே} ஆவான். இவன் இப்போது உன் கணைகள் அடையும் தொலைவிற்குள் இருக்கிறான். உன் வெற்றியைக் கவனிப்பாயாக.

அரசாட்சியை விரும்புபவனான மன்னன் துரியோதனன் உன்னுடன் போருக்கு ஏன் வந்தான்? இவன் உன் கணைகள் அடையும் தொலைவில் இப்போது வந்திருப்பது நற்பேறாலேயே. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, எதனால் இவனது உயிரை எடுக்கமுடியுமோ அதைச் செய்வாயாக. செழிப்பில் செருக்குக் கொண்டு உணர்வுகளை இழந்திருக்கும் இவன் {துரியோதனன்}, எந்தத் துயரையும் எப்போதும் உணர்ந்ததில்லை. ஓ! மனிதர்களில் காளையே {அர்ஜுனா}, இவன் {துரியோதன்} போரில் உன் ஆற்றலை அறியமாட்டான். உண்மையில் தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோருடன் கூடிய மூன்று உலகங்களும் போரில் உன்னை வெல்லத் துணியாது. எனவே, தனியனான துரியோதனனைக் குறித்து என்ன சொல்வது?

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உன் தேரின் அருகே இவன் வந்திருப்பது நற்பேறாலேயே. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனனே} விருத்திரனைக் கொன்ற புரந்திரனை {இந்திரனைப்} போல இவனைக் {துரியோதனனைக்} கொல்வாயாக. ஓ! பாவமற்றவனே, இந்தத் துரியோதனனே உனக்குத் தீமை செய்ய முயன்றவன். மன்னர் யுதிஷ்டிரரை இவன் வஞ்சகத்தால் ஏமாற்றினான். ஓ! மரியாதைகளை அளிப்பவனே {அர்ஜுனா}, நீங்கள் அனைவரும் பாவமற்றவர்களாக இருப்பதால், பாவ ஆன்மா கொண்ட இந்த இளவரசன் {துரியோதனன்} எப்போதும் அவருக்கு {யுதிஷ்டிரருக்குப்} பல்வேறு தீச்செயல்களைச் செய்தான். ஓ! பார்த்தா, போரில் உன்னதத் தீர்மானத்தைக் கொண்ட நீ, பேராசையின் வடிவமானவனும், எப்போதும் கோபம் நிறைந்தவனும், எப்போதும் கொடூரமாக இருப்பவனுமான இந்தத் தீயவனை எந்த மனவுறுத்தலும் இல்லாமல் கொல்வாயாக. ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வஞ்சகத்தால் உங்கள் அரசை இழந்ததையும், காடுகளுக்கு நாடு கடத்தப்பட்டதையும், கிருஷ்ணைக்கு {கருப்பியான திரௌபதிக்கு} நேர்ந்த தீங்குகளையும் நினைவுகூர்ந்து உனது ஆற்றலை வெளிப்படுத்துவாயாக.

உன் நோக்கத்தைத் தடுக்க முயலும் இவன் {துரியோதனன்} உன் எதிரே நிற்பது நல்பேறாலேயே. இவன் போரில் உன்னுடன் போரிட வேண்டும் என்பதை இன்று இவன் அறிந்ததும் நற்பேறாலேயே. நீ விரும்பாமலே உன் நோக்கங்கள் அனைத்தும் கனிந்து மகுடம் சூடப்போவதும் நற்பேறாலேயே. எனவே, பார்த்தா {அர்ஜுனா}, பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரில், அசுரன் ஜம்பனை {ஜம்பாசுரனைக்} கொன்ற இந்திரனைப் போல நீ, தன் குலத்தில் இழிந்தவனான இந்தத் திருதராஷ்டிர மகனை {துரியோதனனைக்} கொல்வாயாக. இவனை {துரியோதனனை} நீ கொன்றுவிட்டால், தலைவனில்லாத இப்படையைப் பிளந்துவிடலாம். தீய ஆன்மாக் கொண்ட இழிந்தவர்களின் இந்த வேரை அறுத்துவிடுவாயாக. இந்தப் பகைமையில் அவப்ரீதம் [2] இப்போது செய்யப்படட்டும்” என்றான் {கிருஷ்ணன்}.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிச் சொல்லப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்}, “அப்படியே ஆகட்டும். இஃது என்னால் செய்யப்பட வேண்டும். பிற அனைத்தையும் அலட்சியம் செய்துவிட்டு, துரியோதனன் எங்கிருக்கிறானோ அங்கே செல்வாயாக. போரில் என் ஆற்றலை வெளிப்படுத்தி, தன் பக்கத்தில் ஒரு முள்ளும் இல்லாமல் இவ்வளவு நீண்ட காலத்திற்கு அரசாட்சியை அனுபவித்த அந்த இழிந்தவனின் {துரியோதனனின்} தலையை நான் அறுப்பேன். ஓ! கேசவா, தலைமயிரைப் பிடித்து இழுத்து வந்த வடிவில், அந்தத் தீங்குக்குத் தகாத திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்குப் பழி தீர்ப்பதில் நான் வெல்ல மாட்டேனா?” என்று மறுமொழி கூறினான் {அர்ஜுனன்}.

இப்படித் தங்களுக்குக்குள் பேசிக்கொண்ட இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்களும்}, மன்னன் துரியோதனனைப் பிடிக்க விரும்பி, மகிழ்ச்சியால் நிறைந்து, தங்கள் சிறந்த வெண்குதிரைகளைத் தூண்டினர். உமது மகனை {துரியோதனனைப்} பொறுத்த வரை, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்துச் சூழ்நிலையிலும் அச்சத்திற்கு ஆட்படுவான் என்று கணிக்கப்பட்ட அவன் {துரியோதனன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பார்த்தன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரின் முன்னிலைக்கு வந்தும் எந்த அச்சமும் கொள்ளவில்லை. அர்ஜுனனையும், ரிஷிகேசனையும் {கிருஷ்ணனையும்} தடுப்பதற்காக அவன் {துரியோதனன்} எதிர்த்துச் சென்றதால், உமது தரப்பில் அங்கே இருந்த க்ஷத்திரியர்கள் அப்போது அவனை மெச்சினர். உண்மையில், போரில் மன்னனைக் கண்டதும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மொத்த குரு படையும் பேரொலியுடன் செய்த ஆரவாரம் அங்கே கேட்கப்பட்டது. பயங்கரமான ஆரவாரம் அங்கே எழுந்த போது, தன் எதிரியைக் கடுமையாக ஒடுக்கிய உமது மகன் {துரியோதனன்}, அவனது {அர்ஜுனனின்} முன்னேற்றத்தைத் தடுத்தான்.

வில்தரித்திருந்த உமது மகனால் தடுக்கப்பட்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, சினத்தால் நிறைந்தான். எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தத் துரியோதனனும் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} பெரும் கோபம் கொண்டான். ஒருவர் மேலொருவர் கோபம் கொண்ட துரியோதனன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் கண்டவர்களும், கடும் வடிவங்களைக் கொண்டவர்களுமான க்ஷத்திரியர்கள் அனைவரும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவர்களையே பார்க்கத் தொடங்கினர். ஓ! ஐயா, பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரும் சினத்தால் நிறைந்திருப்பதைக் கண்டவனும், போரை விரும்பியவனுமான உமது மகன் {துரியோதனன்}, புன்னகைத்தபடியே அவர்களைச் சவாலுக்கழைத்தான்.

அப்போது தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} மகிழ்ச்சியால் நிறைந்தான், மேலும் பாண்டுவின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} உற்சாகமடைந்தான். பேரொலியுடன் முழங்கிய அவ்விருவரும் தங்கள் முதன்மையான சங்குகளை முழக்கினர். அவர்கள் இப்படி உற்சாகங்கொள்வதைக் கண்ட கௌரவர்கள் அனைவரும் உமது மகனின் உயிரில் {உமது மகன் துரியோதனன் உயிர்வாழ்வான் என்பதில்} நம்பிக்கையிழந்தனர். உண்மையில் கௌரவர்கள் அனைவரும், மேலும் எதிரிகளில் பலரும், துயரத்தை அடைந்து, (புனித) நெருப்பின் வாயில் ஏற்கனவே ஊற்றப்பட்ட ஆகுதியாகவே உமது மகனைக் கருதினர். கிருஷ்ணனும், அந்தப் பாண்டவனும் {அர்ஜுனனும்} இவ்வளவு உற்சாகங்கொள்வதைக் கண்ட உமது போர்வீரர்கள், அச்சத்தால் பீடிக்கப்பட்டு, “மன்னன் மாண்டான்”, “மன்னன் மாண்டான்” என்று உரக்கக் கதறினர். வீரர்களின் உரத்த கதறலைக் கேட்ட துரியோதனன், “உங்கள் அச்சங்கள் விலகட்டும். இவ்விரு கிருஷ்ணர்களையும் நான் மரணலோகத்திற்கு அனுப்புவேன்” என்றான்.

தன் வீரர்கள் அனைவரிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், வெற்றியை எதிர்பார்த்தவனுமான மன்னன் துரியோதனன், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} கோபத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ பாண்டுவால் பெறப்பட்டவனானால், நீயும் கேசவனும் {கிருஷ்ணனும்} கொண்ட தெய்வீக மற்றும் உலகம் சார்ந்த ஆயுதங்கள் அனைத்தையும் காலந்தாழ்த்தாமல் என் மீது செலுத்துவாயாக. நான் உன் ஆண்மையைக் காண விரும்புகிறேன். நாங்கள் காணாத உன் சாதனைகள் பலவற்றைக் குறித்து மக்கள் பேசுகிறார்கள். பெரும் வீரம் கொண்ட பலரால் பாராட்டப்பட்டவையும், நீ அடைந்தவையுமான அந்தச் சாதனைகளை என்னிடம் காட்டுவாயாக” என்றான் {துரியோதனன்}.

துரியோதனனை வென்ற அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 102-கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் தாக்கிய துரியோதனன்; அர்ஜுனனின் கணைகள் துரியோதனனின் கவசத்தைத் துளைக்காதது; அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; துரியோதனன் மீது தெய்வீகக் கணைகளை அர்ஜுனன் ஏவவும் அதை வெட்டிய அஸ்வத்தாமன்; துரியோதனனைத் தேரிழந்தவனாக்கி அந்தக் கூட்டத்தில் இருந்து கிருஷ்ணனும் அர்ஜுனனும் வெளிப்பட்டது; அவர்களைக் கண்டு கோபம் கொண்ட ஜெயத்ரதனின் பாதுகாவலர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இந்த வார்த்தைகளைச் சொன்ன மன்னன் துரியோதனன், பெரும் வேகம் கொண்டவையும், உயிர்நிலைகளையே ஊடுருவவல்லவையுமான மூன்று கணைகளால் அர்ஜுனனைத் துளைத்தான். மேலும் நான்கைக் கொண்டு {நான்கு கணைகளால்} தன் எதிரியின் நான்கு குதிரைகளையும் துளைத்தான். மேலும் அவன் {துரியோதனன்} வாசுதேவனின் {கிருஷ்ணனின்} நடுமார்பைப் பத்து கணைகளால் துளைத்து, ஒரு பல்லத்தைக் [1] கொண்டு பின்னவனின் {கிருஷ்ணனின்} கையிலிருந்த சாட்டையைத் தரையில் வீழ்த்தினான். நிதானமாக இருந்த பார்த்தன் {அர்ஜுனன்}, ஒருக்கணத்தையும் இழக்காமல், கல்லில் கூராக்கப்பட்டவையும், அழகிய இறகுகளைக் கொண்டவையுமான பதினான்கு கணைகளை அவன் {துரியோதனன்} மீது ஏவினான். எனினும், அந்தக் கணைகள் அனைத்தையும், துரியோதனனின் கவசம் தடுத்து நிறுத்தியது. அவை கனியற்று {பலனற்றுப்} போனதைக் கண்ட பார்த்தன் கூர்முனை கொண்ட பதினான்கு கணைகளை மீண்டும் அவன் {துரியோதனன்} மீது ஏவினான். இவையும் துரியோதனனின் கவசத்தால் தடுக்கப்பட்டன.பகை வீரர்களைக் கொல்பவனான அந்தக் கிருஷ்ணன் இருபத்தெட்டு கணைகளும் பலனற்றுப் போனதைக் கண்டு, அர்ஜுனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “மலைகள் அசைவதைப் போல இதற்கு முன் காணாத ஒரு காட்சியை நான் காண்கிறேன். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் ஏவப்படும் கணைகள் பலனற்றுப் போகின்றன. ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, உன் காண்டீவம் சக்தியை இழந்துவிட்டதா? உனது {கைப்} பிடியின் வலிமையும், உனது கரங்களின் பலமும் எப்போதையும் விடக் குறைந்துவிட்டதா? இது துரியோதனனுடனான இறுதிச் சந்திப்பாக ஆகாதா? ஓ! பார்த்தா, நான் உன்னிடம் கேட்பதை எனக்குச் சொல்வாயாக. ஓ! பார்த்தா, ஒரு சிறு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் துரியோதனனின் தேர் முன்பு விழும் உன் கணைகள் அனைத்தையும் கண்டு நான் பெரிதும் ஆச்சரியப்படுகிறேன். ஐயோ, இடியின் வலிமையைக் கொண்டவையும், எதிரிகளின் உடல்களை எப்போதும் துளைப்பவையுமான இந்த உன் பயங்கரக் கணைகள் அனைத்தும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தத் தவறுகின்றன என்றால் என்ன பேறின்மையாக {துரதிர்ஷ்டமாக} இஃது இருக்கும்?” {என்றான் கிருஷ்ணன்}.

அர்ஜுனன், “ஓ! கிருஷ்ணா, துரியோதனன் உடலில் உள்ள இந்தக் கவசம் துரோணரால் பூட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இது போலப் பூட்டப்பட்டிருக்கும் கவசத்தை என் ஆயுதங்களால் ஊடுருவ முடியாது. ஓ! கிருஷ்ணா, இந்தக் கவசத்தில், மூன்று உலகங்களின் வலிமையும் உட்பொதிந்திருக்கிறது {மறைந்திருக்கிறது}. இதைத் துரோணர் மட்டுமே அறிவார், மனிதர்களில் சிறந்த அவரிடம் இருந்தே நானும் அதைக் கற்றேன். இந்தக் கவசமானது என் ஆயுதங்களால் துளைக்கப்படக்கூடியதல்ல. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, மகவத்தாலேயே {இந்திரனாலேயே} தன் இடியைக் {வஜ்ரத்தைக்} கொண்டு இதைப் பிளந்துவிட முடியாது. ஓ! கிருஷ்ணா, இவை அனைத்தையும் அறிந்தவனான நீ, என்னை ஏன் குழப்ப முயல்கிறாய்? ஓ! கேசவா {கிருஷ்ணா}, மூவுலகங்களிலும் நேர்ந்தவை, {அவற்றில்} இப்போது இருப்பவை, எதிர்காலத்தின் கருவறையில் இருப்பவை ஆகிய அனைத்தையும் நீ அறிவாய். உண்மையில், ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இவற்றை உன்னைவிடச் சிறப்பாக அறிந்தவன் வேறு எவனும் இல்லை.

ஓ! கிருஷ்ணா, துரோணரால் பூட்டப்பட்ட கவசத்துடன் இருக்கும் இந்தத் துரியோதனன், இந்தக் கவசத்தை அணிந்திருப்பதாலேயே போரில் அச்சமற்றவனாக நிற்கிறான். எனினும், ஓ! மாதவா, இந்தக் கவசத்தை அணிந்தவன் என்ன செய்ய வேண்டும் என்பதை இவன் அறியவில்லை. ஒரு பெண்ணைப் போலவே இவன் அஃதை அணிந்திருக்கிறான். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, என் கரங்களின் வலிமையையும், என் வில்லின் வலிமையையும் இப்போது பார். அத்தகு கவசத்தால் பாதுகாக்கப்பட்டிருந்தாலும் இந்தக் குரு இளவரசனை {துரியோதனனை} நான் வெல்வேன்.

தேவர்களின் தலைவர் {பிரம்மன்}, இந்தப் பிரகாசமிக்கக் கவசத்தை அங்கிரசுக்குக் கொடுத்தார். பின்னவரிடம் இருந்து பிருஹஸ்பதி அதை அடைந்தார். பிருஹஸ்பதியிடமிருந்து அதைப் புரந்தரன் {இந்திரன்} அடைந்தான் [2]. தேவர்களின் தலைவன், அஃதை அணியும்போது சொல்லப்பட்ட வேண்டிய மந்திரங்களுடன் என்னிடம் கொடுத்தான். பிரம்மரால் உண்டாக்கப்பட்ட இந்தக் கவசம் தெய்வீகமானதாக இருந்தாலும், என் கணைகளால் தாக்கப்படும் இந்த இழிந்த துரியோதனன் அதனால் {அந்தக் கவசத்தால்} பாதுகாக்கப்படமாட்டான்” என்றான் {அர்ஜுனன்}.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவ்வார்த்தைகளைச் சொன்ன அர்ஜுனன் {மானவாயுத} மந்திரங்களால் சில கணைகளை ஊக்கப்படுத்தி அவற்றைத் தனது வில்லின் நாணில் பொருத்தி {வில்லை} வளைக்கத் தொடங்கினான். அப்படி அவன் {அர்ஜுனன்} வில்லின் நாணை இழுத்த போது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அனைத்து ஆயுதங்களையும் கலங்கடிக்கவல்ல ஓர் ஆயுதத்தால் அவற்றை வெட்டினான் [3]. பிரம்மத்தை உச்சரிப்பவனால் (அஸ்வத்தாமனால்} அந்தக் கணைகள் தொலைவிலிருந்து இப்படிச் செயலிழக்கச் செய்யப்பட்டதைக் கண்டவனும், வெண்ணிறக் குதிரைகளைக் கொண்டவனுமான அர்ஜுனன், ஆச்சரியத்தால் நிறைந்து, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} “ஓ! ஜனார்த்தனா, இந்த ஆயுதத்தை இருமுறை என்னால் பயன்படுத்த முடியாது, ஏனெனில், என்னையும், என் துருப்புகளையுமே அது கொல்லும்” என்றான்.அதே வேளையில் துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, அந்தப் போரில் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான ஒன்பது கணைகளால் அந்தக் கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} ஒவ்வொருவரையும் துளைத்தான். மேலும் அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, தனது கணைகளைக் கிருஷ்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது மழையாகப் பொழிந்தான். (தங்கள் மன்னனால் ஏவப்பட்ட) கணைமாரியைக் கண்ட உமது வீரர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். அவர்கள் இசைக்கருவிகளை இசைத்து, சிங்க முழக்கங்களைச் செய்தனர்.

அப்போது அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, தன் கடைவாயை நாவால் நனைத்தான். தன் கண்களைத் தன் எதிரியின் உடல் மீது செலுத்தியும், அந்த ஊடுருவப்பட முடியாத கவசத்தில் நன்கு மறைக்கப்படாத எந்த ஒரு பகுதியையும் அவன் காணவில்லை. பிறகு, மரணத்திற்கு ஒப்பானவையும் கூர்முனை கொண்டவையுமான சில கணைகளைத் தன் வில்லில் இருந்து நன்கு ஏவிய அர்ஜுனன், தன் எதிராளியின் {துரியோதனனின்} குதிரைகளையும், அதற்கடுத்த அவனது பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் கொன்றான். அதன் பிறகு வீரப் பார்த்தன், துரியோதனனின் வில்லையும், அவனது விரல்களில் உள்ள தோலுறைகளையும் அறுத்தான். பிறகு அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் எதிரியின் தேரைத் துண்டு துண்டாக வெட்டத் தொடங்கினான். மேலும் அவன் {அர்ஜுனன்}, கூரிய கணைகள் இரண்டால் துரியோதனனைத் தேரற்றவனாக்கினான். பிறகு அர்ஜனன், அந்தக் குருமன்னனின் உள்ளங்கைகள் இரண்டையும் துளைத்தான்.

அந்தப் பெரும் வில்லாளியானவன் {துரியோதனன்}, தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டுப் பெரும் துயரில் விழுவதைக் கண்ட வீரர்கள் பலர், அவனை மீட்க விரும்பி அந்த இடத்திற்கு விரைந்தனர். பல்லாயிரம் தேர்கள், ஆயுதங்களுடன் கூடிய யானைகள் மற்றும் குதிரைகள், கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், பெரும் எண்ணிக்கையிலானவர்களுமான காலாட்படை வீரர்கள் எனப் பெரும் கூட்டத்தால் சூழப்பட்டதால், அவர்களின் தேரோ, அர்ஜுனன் மற்றும் கோவிந்தன் {கிருஷ்ணன்} ஆகியோர் இருந்த தேரோ அதற்கு மேலும் காணப்படவில்லை.

அப்போது அர்ஜுனன், தன் ஆயுதங்களின் வலிமையால் அந்தக் கூட்டத்தைக் கொல்லத் தொடங்கினான். நூற்றுக்கணக்கான தேர்வீரர்களும், யானைகளும் அங்கங்களை இழந்து களத்தில் வெகு விரைவாக விழுந்தனர். கொல்லப்பட்டோ, கொல்லப்படுவதாலோ அந்தச் சிறந்த தேரை அடைய அவர்கள் தவறினர். உண்மையில், அர்ஜுனன் சென்ற தேரானது, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் இரண்டு மைல்கள் நீளத்திற்குப் படைகளால் முற்றுகையிடப்பட்டதால் அசைவில்லாமல் நின்று கொண்டிருந்தது.

அப்போது அந்த விருஷ்ணி வீரன் (கிருஷ்ணன்), நேரத்தை எடுத்துக் கொள்ளாமல் அர்ஜுனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “நான் என் சங்கை முழக்கப் போகிறேன்; நீ விரைவாக உனது வில்லைப் பெரும்பலத்துடன் வளைப்பாயாக” {என்றான் கிருஷ்ணன்}. அப்படிச் சொல்லப்பட்ட அர்ஜுனன் தன் வில்லான காண்டீவத்தைப் பெரும்பலத்துடன் வளைத்து, தன் விரல்களால் வில்லின் நாணை இழுத்து பேரோலியை உண்டாக்கி, அடர்த்தியான கணை மழைகளைப் பொழிந்து எதிரிகளைக் கொல்லத் தொடங்கினான். அதேவேளையில், புழுதியால் முகம் மறைக்கப்பட்டிருந்த கேசவன் {கிருஷ்ணன்}, தன் சங்கான பாஞ்சஜன்யத்தைப் பேரொலியுடன் மிகப் பலமாக முழக்கினான். பலமாகவோ, பலவீனமாகவோ இருந்த குருவீரர்கள் அனைவரும், அந்தச் சங்கொலியாலும், காண்டீவத்தின் நாணொலியாலும் கீழே தரையில் விழுந்தனர்.

அந்த மோதலில் இருந்து விடுபட்ட அர்ஜுனனின் தேரானது, காற்றால் இயக்கப்பட்ட மேகத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது. ஜெயத்ரதனின் பாதுகாவலர்களும், அவர்களைப் பின்தொடர்பவர்களும் (அர்ஜுனனைக் கண்டு) சினத்தால் நிறைந்தனர். உண்மையில் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாப்பவர்களான அந்த வலிமைமிக்க வில்லாளிகள், பார்த்தனைத் திடீரெனக் கண்டதால், பேரொலியை எழுப்பி அவ்வொலியால் பூமியை நிறைத்தனர். அவர்களது கணைகளின் “விஸ்” என்ற ஒலி கடும் ஒலிகள் பிறவற்றோடும், அவர்களது சங்கொலிகளோடும் கலந்து ஒலித்தன. மேலும் அந்த உயர் ஆன்ம வீரர்கள் சிங்க முழக்கங்களையும் செய்தனர்.

உமது துருப்புகளால் எழுப்பப்பட்ட பயங்கர ஆரவாரத்தைக் கேட்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} தங்கள் சங்குகளை முழக்கினர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மலைகள், கடல்கள், தீவுகள், பாதாள உலகங்கள் ஆகியவற்றைக் கொண்ட பூமாதேவி அவர்களது (சங்குகளின்) பேரொலியால் நிறைந்ததாகக் காணப்பட்டது. உண்மையில், ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்த ஒலியானது திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்து, இருபடைகளிலும் எதிரொலித்தது. பிறகு, கிருஷ்ணனையும், தனஞ்சயனையும் கண்ட உமது தேர்வீரர்கள் மிகவும் அச்சமடைந்தனர். எனினும் விரைவாக மீண்ட அவர்கள் தங்கள் செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். உண்மையில், உமது படையின் பெரும் தேர்வீரர்கள், மிகவும் அருளப்பட்ட மனிதர்களான அந்த இரு கிருஷ்ணர்களையும் {இரு கருப்பர்களையும்} கண்டு, கவசம் பூண்டவர்களான அவர்கள் விரைந்தனர். இப்படி முன்வந்த காட்சி மிகவும் அற்புதமான ஒன்றாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.

ஜெயத்ரதனின் பாதுகாவலர்களுடன் கடும்போர்! – துரோண பர்வம் பகுதி – 103-அர்ஜுனனை எதிர்த்த எட்டு மகாரதர்கள்; பயங்கரச் சங்கொலிகள்; கிருஷ்ணார்ஜுனர்களின் சங்கொலிகள் கௌரவர்களை அச்சுறுத்தியது; காயம்பட்ட கிருஷ்ணனைக் கண்டு கோபமூண்ட அர்ஜுனன் கௌரவர்களைத் துளைத்தது; கௌரவர்களைப் பந்தாடிய அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “விருஷ்ணி மற்றும் அந்தகருள் முதன்மையானவனையும் {கிருஷ்ணனையும்}, குரு குலத்தவரில் முதன்மையானவையும் {அர்ஜுனனையும்} கண்ட உடனேயே, உமது வீரர்களில் முதன்மையடைய முயன்ற ஒவ்வொருவரும் நேரத்தை இழக்கமால், அவர்களைக் கொல்லும் விருப்பத்தில் எதிர்த்துச் சென்றனர்.

விஜயனும் {அர்ஜுனனும்} அந்தத் தன் எதிரிகளை எதிர்த்து விரைந்தான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், புலித்தோலால் மறைக்கப்பட்டவையும், ஆழ்ந்த சடசடப்பொலியை உண்டாக்குபவையும், சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பானவையுமான தங்கள் பெரும் தேர்களில் சென்ற அவர்கள், தங்கப்பிடி கொண்டவையும், பிரகாசத்தால் பார்க்கப்பட முடியாதவையுமான விற்களை ஏந்தி, உரக்க கூச்சலிட்டுக் கொண்டு, கோபக்கார குதிரைகளால் இழுக்கப்பட்டுத் திசைகளின் பத்துப் புள்ளிகளுக்கும் ஒளியூட்டியபடி விரைந்தனர்.

பூரிஸ்ரவஸ், சலன், கர்ணன், விருஷசேனன், ஜெயத்ரதன், கிருபர், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மற்றும் தேர்வீரர்களில் முதன்மையான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகிய அந்தப் பெரும் தேர்வீரர்களான எட்டு பேரும், ஏதோ வானத்தை விழுங்கிவிடுவதைப் போல, புலித்தோலால் மறைக்கப்பட்டவையும், தங்கச் சந்திரன்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் அற்புதத் தேர்களால் திசைகளில் பத்து புள்ளிகளுக்கும் ஒளியூட்டியபடிய சென்றனர்.

கவசம் பூண்டு, கோபத்தால் நிறைந்து, மேகங்களின் திரள்களின் முழக்கங்களுக்கு ஒப்பான சடசடப்பொலி கொண்ட தங்கள் தேர்களில் ஏறி, கூரிய கணைகளின் மழையால் அனைத்துப் பக்கங்களிலும் அர்ஜுனனை மறைத்தனர். பெரும் வேகம் கொண்டவையும், சிறந்த இனத்தைச் சேர்ந்தவையுமான அழகிய குதிரைகளால் தாங்கப்பட்ட அந்தப் பெரும் தேர்வீரர்கள், திசைப்புள்ளிகளை ஒளியூட்டியபோது பிரகாசமாகத் தெரிந்தனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, மலைப்பகுதிகளைச் சேர்ந்த சிலவும், நதிகளைச் சேர்ந்த சிலவும், சிந்துக்களின் நாட்டைச் சேர்ந்த சிலவும் எனப் பல்வேறு நாடுகள், பல்வேறு இனங்களைச் சேர்ந்தவையும், பெரும் வேகம் கொண்டவையுமான முதன்மையான குதிரைகளால் இழுக்கப்பட்ட தேர்களைக் கொண்ட குருக்களில் முதன்மையான தேர்வீரர்கள் பலர், உமது மகனை {துரியோதனனை} மீட்க விரும்பி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேரை நோக்கி விரைந்தனர். ஓ! மன்னா, மனிதர்களில் முதன்மையான அவர்கள், தங்கள் சங்குகளை எடுத்து முழக்கி, ஆகாயத்தையும், கடல்களுடன் கூடிய பூமாதேவியையும் {அவற்றின் ஒலியால்} நிறைத்தனர்.

அப்போது தேவர்களில் முதன்மையானோரான அந்த வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} கூடப் பூமியில் முதன்மையான தங்கள் சங்குகளை முழக்கினர். குந்தியின் மகன் {அர்ஜுனன்} தேவதத்தத்தையும், கேசவன் பாஞ்சஜன்யத்தையும் முழக்கினர். தனஞ்சயனால் {அர்ஜுனனால்} வெளியிடப்பட்ட தேவதத்தத்தின் வெடிப்பொலியானது, பூமியையும், ஆகாயத்தையும், திசைகளின் பத்து புள்ளிகளையும் நிறைத்தது. வாசுதேவனால் முழக்கப்பட்ட பாஞ்சஜன்யமும் அனைத்து ஒலிகளையும் விஞ்சி வானத்தையும் பூமியையும் நிறைத்தது.

மருண்டோருக்கு அச்சத்தையும், துணிவுள்ளோருக்கு உற்சாகத்தையும் தூண்டிய அந்தக் கடுமையான பயங்கரமான ஒலி தொடர்ந்த போது, பேரிகைகள், ஜர்ஜரங்கள், ஆனகங்கள், மிருதங்கங்கள் ஆகியன ஆயிரக்கணக்கில் முழக்கப்பட்ட போது, ஓ! பெரும் மன்னா, குரு தரப்பால் அழைக்கப்பட்டவர்களும், தனஞ்சயனின் நன்மையில் அக்கரையுள்ளவர்களும், சினத்தால் நிறைந்தவர்களுமான அந்தப் பெரும் வில்லாளிகளாலேயே கூட அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரின் சங்குகளின் உரத்த வெடிப்பொலிகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தங்கள் தங்கள் துருப்புகளால் ஆதரிக்கப்பட்ட பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மன்னர்களும், கேசவன் மற்றும் அர்ஜுனனின் வெடிப்பொலிகளுக்குத் தங்கள் வெடிப்பொலிகளால் பதில் சொல்ல விரும்பி, சினத்தால் தங்கள் பெரும் சங்குகளை முழக்கினர். அந்தச் சங்கொலிகளால் தூண்டப்பட்டு முன் நகர்ந்த குரு படையின் தேர் வீரர்களும், யானைகளும், குதிரைகளும், கவலையாலும், அச்சத்தாலும் நிறைந்திருந்தன. உண்மையில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தப் படையில் இருந்தோர் ஏதோ நோயுற்றவர்களைப் போலவே {மந்தமாகக்} காணப்பட்டனர்.

துணிவுமிக்க அந்த வீரர்களால் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனால்} முழக்கப்பட்ட அந்தச் சங்கொலியின் எதிரொலியால் கலங்கடிக்கப்பட்ட குரு படையானது, இடியொலியின் எதிரொலியால் (ஏதோ ஓர் இயற்கையான நடுக்கத்தின் மூலம்) கீழே விழுந்த ஆகாயம் போல இருந்தது [1]. ஓ! ஏகாதிபதி, அந்த உரத்த ஆரவாரமானது, பத்து புள்ளிகளிலும் எதிரொலித்து, யுக முடிவின் போது அனைத்துயிர்களையும் அச்சுறுத்தும் முக்கிய நிகழ்வுகளைப் போல அந்த {கௌரவப்} படையை அச்சுறுத்தியது.பிறகு துரியோதனன், ஜெயத்ரதனின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட அந்த எட்டு பெரும் தேர்வீரர்கள் ஆகிய அனைவரும் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} எழுபத்துமூன்று கணைகளால் வாசுதேவனையும், மூன்று பல்லங்களால் அர்ஜுனனையும், மேலும் ஐந்து பிற கணைகளால் அவனது கொடிமரத்தையும், (நான்கு) குதிரைகளையும் தாக்கினான்.

ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} துளைக்கப்பட்டதைக் கண்ட அர்ஜுனன், சினத்தால் நிறைந்து, நூறு கணைகளால் அஸ்வத்தாமனைத் தாக்கினான். பிறகு கர்ணனைப் பத்து கணைகளாலும், விருஷசேனனை மூன்றாலும் துளைத்த வீரத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, சல்லியனுக்குச் சொந்தமானதும், நாணில் பொருத்தப்பட்ட கணைகளுடன் கூடியதுமான வில்லையும் கைப்பிடிக்கும் இடத்தில் அறுத்தான். பிறகு சல்லியன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} துளைத்தான்.

பூரிஸ்ரவஸ், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான மூன்று கணைகளால் அவனை {அர்ஜுனனைத்} துளைத்தான். கர்ணன், இருபத்துமூன்று கணைகளாலும், விருஷசேனன் ஏழு கணைகளாலும் அவனைத் துளைத்தனர். ஜெயத்ரதன் எழுபத்து மூன்று கணைகளாலும், கிருபர் பத்தாலும் அர்ஜுனனைத் துளைத்தனர். அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனும் {சல்லியனும்} பத்துக் கணைகளால் பல்குனனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அறுபது கணைகளால் அவனைத் துளைத்தான். அவன் மீண்டும் ஒரு முறை பார்த்தனை ஐந்து கணைகளாலும், வாசுதேவனை இருபது கணைகளாலும் துளைத்தான்.

மனிதர்களில் புலியும், வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான அர்ஜுனன், தன் கரநளினத்தை வெளிக்காட்டும்படி அவ்வீரர்கள் ஒவ்வொருவரையும் பதிலுக்குத் துளைத்தான். கர்ணனை பனிரெண்டு கணைகளாலும், விருஷசேனனை மூன்றாலும் துளைத்த பார்த்தன், சல்லியனின் வில்லை அதன் கைப்பிடியில் அறுத்தான். மேலும் சோமதத்தன் மகனை {பூரிஸ்ரவசை} மூன்று கணைகளாலும், சல்லியனைப் பத்தாலும் துளைத்த பார்த்தன் {அர்ஜுனன்}, கிருபரை இருபத்தைந்து கணைகளாலும், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} நூறாலும் துளைத்தான், மேலும் அவன் எழுபது கணைகளால் துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்} தாக்கினான்.

அப்போது சினத்தால் நிறைந்த பூரிஸ்ரவஸ், கிருஷ்ணனின் கையில் இருந்த சாட்டையை அறுத்து, இருபத்து மூன்று கணைகளால் அர்ஜுனனைத் தாக்கினான். பிறகு வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன், சினத்தால் நிறைந்து, வலிமைமிக்கச் சூறாவளியொன்று மேகத்திரள்களைக் கிழிப்பதைப் போல நூற்றுக்கணக்கான கணைகளால் தன் எதிரிகளான அவர்களைச் சிதைத்தான்” {என்றான் சஞ்சயன்}.

பத்துக் கொடிமரங்கள்! – துரோண பர்வம் பகுதி – 104-அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ணன், கிருபர், விருஷசேனன், சல்லியன், ஜெயத்ரதன், பூரிஸ்ரவஸ், சலன், துரியோதனன் ஆகிய பத்து வீரர்களின் கொடிமரங்கள் குறித்த வர்ணனை; அவர்களுக்கிடையில் மூண்ட போர்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, பெரும் அழகுடன் பிரகாசித்தவையும், (அந்தப் போரில்) பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் நமது வீரர்களுக்குச் சொந்தமானவையுமான பல்வேறு வகைகளிலான கொடிமரங்களைக் குறித்து எனக்கு விவரிப்பாயாக” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த உயர் ஆன்ம வீரர்களின் பல்வேறு வகைகளிலான கொடிமரங்களைக் குறித்துக் கேளும். அவற்றின் வடிவங்களையும், பெயர்களையும் நான் விவரிப்பதைக் கேளும். உண்மையில், ஓ! மன்னா, அந்த முதன்மையான தேர்வீரர்களின் தேர்களில் நெருப்புத் தழல்களைப் போலச் சுடர்விட்டு ஒளிர்ந்த பல்வேறு வகைகளிலான கொடிமரங்கள் காணப்பட்டன. தங்கத்தால் ஆனவையாகவோ, தங்கத்தால் அலங்கரிக்கப் பட்டவையாகவோ, தங்க இழைகளால் இழைக்கப்பட்டவையாகவோ இருந்தவையும், தங்க மலையை (மேருவைப்) போலத் தெரிந்தவையுமான பல்வேறு வகைகளிலான கொடிமங்கள் அங்கே உயர்ந்த அழகுடன் காணப்பட்டன.

வீரர்களுடைய அந்தக் கொடிமரங்கள் அனைத்திலும் சிறந்த கொடிகளும் இணைக்கப்பட்டிருந்தன. உண்மையில், சுற்றிலும் பல்வேறு வண்ணங்களிலான கொடிகளைக் கொண்ட கொடிமரங்களான அவை, மிகவும் அழகாகத் தெரிந்தன. மேலும், காற்றால் அசைந்த அந்தக் கொடிகள், விளையாட்டரங்கில் ஆடும் அழகிய பெண்களைப் போலத் தெரிந்தன. வானவில்லின் காந்தியைக் கொண்டவையும், அந்தத் தேர்வீரர்களுக்குச் சொந்தமானவையுமான கொடிகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தென்றலில் அசைந்தபடியே அவர்களின் தேர்களை அலங்கரித்தன.

சிங்கத்தைப் போலக் கடுமுகமுடைய குரங்கின் அடையாளத்தைக் தாங்கிய அர்ஜுனனின் கொடிமரமானது, அந்தப் போரில் அச்சத்தை ஊட்டுவதாக இருந்தது. ஓ! மன்னா, முதன்மையான குரங்கைத் தாங்கியதும், பல்வேறு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டதுமான காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} அந்தக் கொடிமரம் குரு படையை அச்சுறுத்திக் கொண்டிருந்தது.

அதே போல, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிங்கவாலை உச்சியில் கொண்டதும், உதயச் சூரியனின் பிரகாசத்துடன் கூடியதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வானவில்லின் காந்தியைக் கொண்டதுமான துரோண மகனின் {அஸ்வத்தாமனின்} கொடிமரமானது, தென்றலில் மிதந்தபடியும், குரு வீரர்களில் முதன்மையானோரின் மகிழ்ச்சியைத் தூண்டியபடியும் உயரத்தில் இருப்பதை நாங்கள் கண்டோம்.

அதிரதன் மகனின் {கர்ணனின்} கொடிமரமானது, தங்கத்தாலான யானை வடத்தை அடையாளமாக {கொடியாகத்} தாங்கியிருந்தது. ஓ! மன்னா, அந்தப் போரில் அஃது {அந்தக் கொடியானது} ஆகாயம் முழுமையையும் நிறைப்பதாகத் தெரிந்தது. தங்கத்தாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தக் கொடியானது, போரில் கர்ணனின் கொடிமரத்தில் இணைக்கப்பட்டு, காற்றால் அசைக்கப்பட்டு, அவனது தேரில் நடனமாடுவதைப் போலத் தெரிந்தது.

பாண்டவர்களின் ஆசானும், தவத்துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்த பிராமணரும், கௌதமரின் மகனுமான கிருபர், சிறந்த காளைமாடு ஒன்றைத் தம் அடையாளமாகக் {கொடியாகக்} கொண்டிருந்தார். ஓ! மன்னா, மூன்று நகரங்களை அழித்தவன் [1] தன் காளையுடன் பிரகாசிப்பதைப் போலக் காளைமாட்டுடன் கூடிய அந்த உயர் ஆன்மா {கிருபர்} பிரகாசமாகத் தெரிந்தார்.

விருஷசேனன், {தன் தேரில் உள்ள கொடிமரத்தில்} தங்கத்தாலானதும், ரத்தினங்கள் மற்றும் மணிகளால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு மயிலைக் கொண்டிருந்தான். அது {அந்த மயில்} எப்போதும் படையின் முகப்பை அலங்கரித்துக் கரைந்து கொண்டிருப்பதைப் போல அவனது {விருஷசேனனது} கொடிமரத்தில் இருந்தது. அந்த மயிலோடு கூடிய உயர் ஆன்ம விருஷசேனனின் தேரானது, ஓ! மன்னா, ஒப்பற்ற மயிலோடு கூடியதும், தங்கத்தாலான அழகிய கலப்பை முனையோடு {கொழுவோடு} கூடியதும், நெருப்புத் தழலைப் போலத் தெரிந்ததுமான(தேவர்களின் படைத்தலைவன்) ஸ்கந்தனின் {முருகனின்} தேரைப் போல ஒளிர்ந்தது. ஓ! ஐயா, அந்த உழுமுனையானது {கலப்பை முனையானது} அவனது தேரில் பிரகாசமாகத் தெரிந்தது.

மத்ரர்களின் ஆட்சியாளனான சல்லியன், தன் கொடிமர உச்சியில் அழகுடன் கூடியவளும், அனைத்து வித்துகளையும் உண்டாக்கவல்லவளுமான சோளத்தின் தலைமைத் தேவியின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம் [2].சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனுடைய} கொடிமரத்தின் உச்சியை ஒரு வெள்ளிப் பன்றி அலங்கரித்திருந்தது. தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அது, வெண்மையான ஸ்படிகத்தின் காந்தியைக் கொண்டிருந்தது. தன் கொடியில் அந்த வெள்ளி அடையாளத்தைக் கொண்ட சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் ஈடுபட்டிருந்த சூரியனைப் போலப் பிரகாசித்தான் [3].வேள்விகளுக்கு அர்ப்பணிப்புடன் இருந்த சோமதத்தன் மகனுடைய {பூரிஸ்ரவஸின்} கொடிமரமானது, வேள்வி மரத்தை {யூபத்தை} அடையாளமாகத் தாங்கியிருந்தது. அது சூரியனைப் போறோ, சந்திரனைப் போன்ற ஒளிர்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஓ! மன்னா, தங்கத்தாலான சோமதத்த மகனின் வேள்விமரமானது, ராஜசூயம் என்றழைக்கப்படும் முதன்மையான வேள்வியின் போது எழுப்பப்படும் உயரமான மரத்தைப் {யூபத்தைப்} போன்றே பிரகாசமாகத் தெரிந்தது.

ஓ! ஏகாதிபதி, சலனின் கொடிமரமானது [4], தங்கத்தாலான மயில்களால் அனைத்துப் பக்கங்களிலும் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு பெரும் வெள்ளி யானையைத் தாங்கியிருந்தது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தக் கொடிமரமானது, தேவமன்னனின் {இந்திரனின்} படையை அலங்கரிக்கும் பெரிய வெள்ளை யானையை {ஐராவதத்தைப்} போல உமது துருப்புகளை அலங்கரித்தது.தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த மன்னன் துரியோதனனின் கொடிமரத்தில், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்று இருந்தது. அவ்வீரனின் {துரியோதனனின்} சிறந்த தேரில் ஓ! மன்னா, ஒரு நூறு மணிகளின் கிண்கிணி ஒலியுடன் கூடிய அந்தக் கொடிமரம் இருந்தது. ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி, குருக்களில் காளையான உமது மகன் {துரியோதனன்}, உயரமான அந்தக் கொடிமரத்துடன் போரில் பிரகாசமாகத் தெரிந்தான். உமது படைப்பிரிவுகளில் இந்த ஒன்பது கொடிமரங்களே [5] உயர நின்றன. அங்கே தெரிந்த பத்தாவது கொடிமரமானது, பெரும் குரங்கால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் கொடிமரமே ஆகும். அந்தக் கொடிமரத்தைக் கொண்ட அர்ஜுனன், (தன் சிகரத்தில்) சுடர்மிக்க நெருப்பைக் கொண்ட இமயத்தைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவர்களான வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர், அர்ஜுனனைத் தடுப்பதற்காகத் தங்கள் அழகிய, பிரகாசமான, பெரிய விற்களை எடுத்துக் கொண்டனர். அதேபோல, ஓ! மன்னா, தெய்வீக சாதனைகளைச் செய்தவனான பார்த்தனும் {அர்ஜுனன்}, உமது தீய கொள்கையின் விளைவால் எதிரிகளை அழிக்கும் வில்லான தன் காண்டீவத்தை எடுத்துக் கொண்டான். உமது குற்றத்தின் காரணமாக, ஓ! மன்னா, அரசவீரர்கள் பலர் அந்தப் போரில் கொல்லப்பட்டனர். (உமது மகனின்) அழைப்பால் பல்வேறு பகுதிகளில் இருந்து மனிதர்களின் ஆட்சியாளர்கள் வந்திருந்தனர். அவர்களோடு சேர்த்து பல குதிரைகளும், பல யானைகளும் அழிந்தன.

(ஒரு புறத்தில்) துரியோதனனின் தலைமையிலான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களும், மறுபுறத்தில் அந்தப் பாண்டவர்களில் காளையும் {அர்ஜுனனும்} உரக்க முழங்கியபடி மோதலைத் தொடங்கினர். ஒன்றாகச் சேர்ந்திருந்த அந்த வீரர்கள் அனைவருடன், அச்சமற்ற வகையில் தனியாக மோதியவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான அந்தக் குந்தி மகனால் அங்கே அடையப்பட்ட சாதனை மிக அற்புதமானதாக இருந்தது. சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வதற்காக, மனிதர்களில் புலிகளான அவர்கள் அனைவரையும் வீழ்த்த விரும்பியவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அவ்வீரன் {அர்ஜுனன்}, தன் வில்லான காண்டீவத்தை வளைத்த போது பிரகாசமாகத் தெரிந்தான்.

ஆயிரக்கணக்கில் கணைகளை ஏவியவனும், எதிரிகளை எரிப்பவனும், மனிதர்களில் புலியுமான அந்த அர்ஜுனன், (தன் கணைமாரியின் மூலம்) அந்த வீரர்கள் அனைவரையும் மறையச் செய்தான். மனிதர்களில் புலிகளான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களும் தங்கள் பங்குக்கு, அனைத்துப் பக்கங்களில் இருந்து ஏவப்பட்ட தங்கள் கணைகளின் மேகங்களால் பார்த்தனை {அர்ஜுனனை} மறையச் செய்தனர். குருகுலத்துக் காளையான அர்ஜுனன், மனிதர்களில் சிங்கங்களான அவர்களின் கணைகளால் மறைக்கப்பட்டதைக் கண்டு, உமது துருப்புகளால் ஆரவாரப் பேரொலி எழுப்பப்பட்டது” {என்றான் சஞ்சயன்}.

பின்வாங்கிய யுதிஷ்டிரன்! – துரோண பர்வம் பகுதி – 105-துரோணரை எதிர்த்த பாஞ்சாலர்கள்; வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்போர்கள்; யுதிஷ்டிரனுக்கும் துரோணருக்கும் இடையில் ஏற்பட்ட போர்; யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்ற துரோணர்; களத்தைவிட்டுப் பின்வாங்கிய யுதிஷ்டிரன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைத்}, தன் பார்வை படும் தொலைவில் அர்ஜுனன் அடைந்த பிறகு, குருக்களுடன் மோதிய பாஞ்சாலர்கள், பரத்வாஜர் மகனை {துரோணரைத்} தாக்கினார்களா?” என்று கேட்டான்.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த நாளின் பிற்பகல் வேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் போரில் {அந்தப் போர் எனும் சூதாட்டத்தில்}, (ஒவ்வொருவரும் போரிட்டு வெல்வதற்கோ, தோற்பதற்கோ ஏற்ற வகையில்) துரோணரே பந்தயப் பொருளானார். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்கள் உற்சாகத்துடன் உரக்க முழங்கியபடியே அடர்த்தியான கணை மழைகளை ஏவினர். உண்மையில், பாஞ்சாலர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் நடந்த அந்த மோதலானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பானதாகவும், கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், மிக அற்புதமானதாகவும் இருந்தது. பாண்டவர்களுடன் கூடிய பாஞ்சாலர்கள் அனைவரும் துரோணரின் வியூகத்தைப் பிளக்க விரும்பி, அவரது தேரை அடைந்து, வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றைப் பயன்படுத்தினர். தேர்வீரர்கள், தங்கள் தேர்களில் நின்றபடியே, தங்களுக்கு அடியில் இருந்த பூமியை நடுங்கச் செய்து, கணை மழையைப் பொழிந்து, துரோணரின் தேரை நோக்கிப் பெரும் வேகத்துடன் விரைந்தனர்.

கைகேயர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான பிருஹத்க்ஷத்ரன், இடிக்கு ஒப்பான பலத்தைக் கொண்ட கூரிய கணைகளை இடையறாமல் இறைத்தபடியே துரோணரை நோக்கிச் சென்றான். பெரும் புகழைக் கொண்ட க்ஷேமதூர்த்தி [1], ஆயிரக்கணக்கான கூரிய கணைகளை ஏவியபடியே பிருஹத்க்ஷத்ரனை எதிர்த்து வேகமாக விரைந்தான். இதைக் கண்டவனும், பெரும் வலிமை கொண்டவனும், சேதிக்களில் காளையுமான திருஷ்டகேது, அசுரன் சம்பரனை எதிர்த்துச் செல்லும் மகேந்திரனைப் போல க்ஷேமதூர்த்தியை எதிர்த்து விரைந்தான். வாயை அகல விரித்த யமனைப் போல, பெரும் மூர்க்கத்துடன் விரையும் அவனை {திருஷ்டகேதுவைக்} கண்ட வலிமைமிக்க வில்லாளியான வீரதன்வான் [2] பெரும் வேகத்துடன் அவனை {திருஷ்டகேதுவை} எதிர்த்துச் சென்றான்.வெற்றியில் உள்ள விருப்பத்தால், தன் படைப்பிரிவின் தலைமையில் நின்ற மன்னன் யுதிஷ்டிரன், வீரத் துரோணரால் தடுக்கப்பட்டான். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்ட உமது மகன் விகர்ணன், போரில் சாதித்தவனும், பெரும் ஆற்றலைக் கொண்ட வீரனுமான நகுலனை எதிர்த்து விரைந்தான். எதிரிகளை எரிப்பவனான துர்முகன், முன்னேறி வரும் சகாதேவனை வேகமாகச் செல்லும் பல்லாயிரம் கணைகளால் மறைத்தான். வீர வியாக்ரதத்தன் [3], மனிதர்களில் புலியான சாத்யகியைத் தன் கூர்முனைக் கணைகளால் மீண்டும் மீண்டும் நடுங்கச் செய்தான். கோபத்துடன் கூடிய சோமதத்தன் மகன் {சலன்} [4], மனிதர்களில் புலிகளும், பெரும் தேர்வீரர்களுமான திரௌபதியின் மகன்களை (ஐவரை) வலிமைமிக்கக் கணைகளை ஏவி தடுத்தான். வலிமைமிக்கத் தேர்வீரனும், பயங்கர முகத் தோற்றம் கொண்டவனுமான ரிஷ்யசிருங்கன் மகன் {ஆர்ஸ்யசிருங்கியின் மகனான} (ராட்சசன் அலம்புசன்), கோபத்தால் நிறைந்து முன்னேறிவரும் பீமசேனனைத் தடுத்தான். மனிதனுக்கும், ராட்சசனுக்கும் இடையில் நடைபெற்ற அந்த மோதலானது, பழங்காலத்தில் ராமனுக்கும், ராவணனுக்கு இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக இருந்தது.அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாரதர்களின் தலைவனான யுதிஷ்டிரன், தொண்ணூறு நேரான கணைகளால் துரோணரின் முக்கிய அங்கங்கள் அனைத்திலும் தாக்கினான். குந்தியின் புகழ்பெற்ற மகனால் {யுதிஷ்டிரனால்} சினமூட்டப்பட்ட துரோணர், ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, பதிலுக்கு, இருபத்தைந்து கணைகளால் அவனது நடுமார்பைத் தாக்கினார். துரோணர், அனைத்து வில்லாளிகளும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனது {யுதிஷ்டிரனின்} குதிரைகள், தேரோட்டி, கொடிமரம் ஆகியவற்றை இருபது கணைகளால் மீண்டும் தாக்கினார்.

பெரும் கரநளினத்தை வெளிப்படுத்தியவனும், அற ஆன்மா கொண்டவனுமான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, துரோணரால் ஏவப்பட்ட கணைமாரியைத் தன் கணைமாரியால் கலங்கடித்தான். அப்போது பெரும் வில்லாளியான துரோணர், சினத்தால் நிறைந்து, உயர் ஆன்மா கொண்டவனும் நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனின் வில்லை வெட்டினார். பிறகு அந்தப் பெரும் வில்லாளி (பரத்வாஜரின் மகன் {துரோணர்}), வில்லற்ற யுதிஷ்டிரனை பல்லாயிரம் கணைகளால் விரைவாக மறைத்தார். பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணைகளால் மன்னன் {யுதிஷ்டிரன்} மறைக்கப்பட்டதைக் கண்ட அனைவரும், யுதிஷ்டிரன் இறந்தான் என்று நினைத்தனர், சிலரோ துரோணருக்கு முன்னிலையில் மன்னன் {யுதிஷ்டிரன்} தப்பிவிட்டான் என்று நினைத்தனர். ஓ! மன்னா, பலர், “ஐயோ, அந்த உயர் ஆன்ம பிராமணரால் {துரோணரால்} மன்னன் {யுதிஷ்டிரன்} கொல்லப்பட்டான்” என்று கதறினர்.

அப்போது, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பெரும் துயரத்தில் வீழ்ந்து, அந்தப் போரில் பரத்வாஜர் மகனால் {துரோணரால்} வெட்டப்பட அந்த வில்லை எறிந்துவிட்டு, சிறந்ததும், பிரகாசமானதும், கடினமானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான். மேலும் அந்த வீரன் {யுதிஷ்டிரன்}, ஆயிரக்கணக்கில் துரோணரால் ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் அம்மோதலில் அறுத்தான். இவையாவும் அற்புதமாகத் தெரிந்தன. அந்தக் கணைகளை வெட்டிய யுதிஷ்டிரன், ஓ! மன்னா, கோபத்தால் கண்கள் சிவந்து, அந்தப் போரில் மலையையே பிளக்கவல்ல ஓர் ஈட்டியை எடுத்துக் கொண்டான். தங்கப்பிடி கொண்டதும், அச்சந்தரும் தோற்றத்தைக் கொண்டதும், தன்னுடன் எட்டு மணிகள் இணைக்கப்பட்டதும், மிகப் பயங்கரமானதுமான அஃதை {அந்த ஈட்டியை} யுதிஷ்டிரன் எடுத்துக் கொண்டு உரக்க முழங்கினான். ஓ! பாரதரே, அந்த முழக்கத்தால், அந்தப் பாண்டுவின் மகன் அனைத்து உயிரினங்களையும் அச்சமடையச் செய்தான். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் உயர்த்தப்பட்ட அந்த ஈட்டியைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும், ஒரே மனத்துடன், “துரோணருக்கு நன்மை விளையட்டும்” என்றன.

மன்னனின் கரங்களில் இருந்து வீசப்பட்ட அந்தக் கணையானது, சட்டையுரித்து விடுபடும் பாம்புக்கு ஒப்பாக, ஆகாயத்தையும், திசைகள் மற்றும் துணைத்திசைகள் அனைத்துக்கும் ஒளியூட்டியபடியே கடும் வாய்க் கொண்ட ஒரு பெண்பாம்பைப் போலத் துரோணரை நோக்கிச் சென்றது. தன்னை நோக்கி மூர்க்கமாக வரும் அதைக் கண்டவரும், ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவருமான துரோணர், ஓ! மன்னா, பிரம்மம் என்றழைக்கப்பட்ட ஆயுதத்தை {பிரம்மாயுதத்தை} இருப்புக்கு அழைத்தார். பயங்கரத் தோற்றம் கொண்ட அந்த ஈட்டியைத் தூசியாகப் பொடி செய்த அவ்வாயுதம் {பிரம்மாஸ்திரம்}, பாண்டுவின் ஒப்பற்ற மகனுடைய {யுதிஷ்டிரனின்} தேரை நோக்கிச் சென்றது. அப்போது, ஓ! ஐயா, பெரும் விவேகம் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனும் {மற்றொரு} பிரம்மாயுதத்தை அழைத்துத் தன்னை நோக்கி வரும் அவ்வாயுதத்தை {துரோணரின் பிரம்மாயுதத்தைக்} கலங்கடித்தான்.

பிறகு அந்தப் போரில் துரோணரை ஐந்து நேரான கணைகளால் துளைத்த அவன் {யுதிஷ்டிரன்}, கத்தி முனை கொண்ட கணை ஒன்றால், துரோணரின் பெரும் வில்லையும் அறுத்தான். க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான துரோணர், அந்த உடைந்த வில்லை எறிந்துவிட்டு, ஓ! ஐயா, தர்மனின் மகனை {யுதிஷ்டிரனை} நோக்கி கதாயுதம் ஒன்றைப் பெரும் சக்தியுடன் வீசினார். தன்னை நோக்கி மூர்க்கமாக விரைந்து வந்த அந்தக் கதாயுதத்தைக் கண்ட யுதிஷ்டிரன், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து தானும் ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டான். பெரும் சக்தியுடன் வீசப்பட்ட அவ்விரு கதாயுதங்களும் நடுவானில் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு, தங்கள் மோதலால் தீப்பொறிகளை உண்டாக்கியபடி கீழே பூமியில் விழுந்தன.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அப்போது சீற்றத்தால் நிறைந்த துரோணர், கூர்முனை கொண்ட நான்கு சிறந்த கணைகளால் யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்றார். இந்திரன் மீது கொண்ட மதிப்பால் நடப்பட்ட மரத்திற்கு {இந்திரத்வஜத்திற்கு} இணையான மன்னனின் {யுதிஷ்டிரனின்} வில்லையும் மற்றொரு பல்லத்தால் அறுத்தார். ஓ! பாரதக் குலத்தின் காளையே, குதிரைகளற்ற அந்தத் தேரில் இருந்து கீழே வேகமாகக் குதித்த மன்னன் யுதிஷ்டிரன், கைகளை உயர்த்தியபடி ஆயுதமேதும் இல்லாமல் நின்றான். தேரற்றவனாகவும், குறிப்பாக ஆயுதங்களற்றவனாகவும் இருந்த அவனை {யுதிஷ்டிரனைக்} கண்ட துரோணர், ஓ! தலைவா, தமது எதிரிகளையும், மொத்த படையையும் மலைக்கச் செய்தார். தன் வாக்குறுதியில் உறுதியானவரும், பெரும் கரநளினம் கொண்டவருமான துரோணர், மானை நோக்கிச் செல்லும் சீற்றமிக்கச் சிங்கத்தைப் போலக் கூரிய கணைமாரியை ஏவியபடி மன்னனை நோக்கி விரைந்தார்.

எதிரிகளைக் கொல்பவரான துரோணர், அவனை {யுதிஷ்டிரனை} நோக்கி விரைவதைக் கண்டு, “ஓ” என்றும், “ஐயோ” என்றும் பாண்டவப் படையில் கூச்சல்கள் எழுந்தன. பலர், “பரத்வாஜர் மகனால் {துரோணரால்} மன்னன் {யுதிஷ்டிரன்} கொல்லப்பட்டான்” என்று கதறினர். ஓ! பாரதரே, இவ்வகையான உரத்த ஓலங்களே பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில் கேட்கப்பட்டன. அதே வேளையில், குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன், சகாதேவனின் தேரில் ஏறிக்கொண்டு, வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டுக் களத்தைவிட்டுப் பின்வாங்கினான்” {என்றான் சஞ்சயன்}.

சாத்யகிக்கு அஞ்சிய வீரர்கள்! – துரோண பர்வம் பகுதி – 106-க்ஷேமதூர்த்தியைக் கொன்ற கைகேயப் பிருஹத்க்ஷத்ரன்; திரிகர்த்த வீரதன்வானைக் கொன்ற திருஷ்டகேது; துரியோதனனின் தம்பியான துர்முகனைத் தேரிழக்கச் செய்த சகாதேவன், திரிகர்த்த மன்னன் சுசர்மனின் மகனான நிரமித்ரனைக் கொன்றது; விகர்ணனை வென்ற நகுலன்; மகத வியாக்ரதத்தனைக் கொன்ற சாத்யகி, மகத வீரர்கள் அனைவரையும் கொன்றது; சாத்யகியுடன் போரிட அஞ்சிய வீரர்கள்; சாத்யகியை நோக்கி விரைந்த துரோணர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, க்ஷேமதூர்த்தி [1], {தன்னை நோக்கி} முன்னேறி வருபவனும், பெரும் வீரம் கொண்டவனும், கைகேகயர்களின் இளவரசனுமான பிருஹத்க்ஷத்ரனைப் பல கணைகளால் மார்பில் துளைத்தான். அப்போது மன்னன் பிருஹத்க்ஷத்ரன், ஓ! ஏகாதிபதி, துரோணரின் படைப்பிரிவின் ஊடாகப் பிளந்து செல்ல விரும்பி, தொண்ணூறு நேரான கணைகளால் தன் எதிராளியை {க்ஷேமதூர்த்தியை} வேகமாகத் தாக்கினான். எனினும், சினத்தால் நிறைந்த க்ஷேமதூர்த்தி நன்கு கடினமாக்கப்பட்ட கூரிய பல்லம் ஒன்றால் கைகேயர்களின் இளவரசனுடைய {பிருஹத்க்ஷத்ரனின்} வில்லை அறுத்தான். அப்படி அவனது வில்லை வெட்டிய க்ஷேமதூர்த்தி, அம்மோதலில், நேரான கூரிய கணை ஒன்றால் வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான அவனை {பிருஹத்க்ஷத்ரனை} வேகமாகத் துளைத்தான்.அப்போது மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, (தன் எதிரியைப் பார்த்துப்) புன்னகைத்த பிருஹத்க்ஷத்ரன், விரைவில், வலிமைமிக்கத் தேர்வீரனான க்ஷேமதூர்த்தியைக் குதிரைகளற்றவனாகவும், தேரோட்டியற்றவனாகவும், தேரற்றவனாகவும் ஆக்கினான். மேலும் அவன் {பிருஹத்க்ஷத்ரன்}, நன்கு கடினமாக்கப்பட்டதும், கூர்மையானதுமான மற்றொரு பல்லத்தைக் கொண்டு, காது குண்டலங்களால் சுடர்விட்ட தன் அரசெதிராளியின் {க்ஷேமதூர்த்தியின்} தலையை உடலில் இருந்து வெட்டினான். கேசத்தாலும், கிரீடத்தாலும் அருளப்பட்ட அந்தத் தலை திடீரென வெட்டப்பட்டுப் பூமியில் விழுந்த போது, வானத்தில் இருந்து விழுந்த நட்சத்திரத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது. வலிமைமிக்கத் தேர்வீரனான பிருஹத்க்ஷத்ரன் தன் எதிரியைக் கொன்று மகிழ்ச்சியால் நிறைந்து, பார்த்தர்களின் நிமித்தமாக உமது துருப்புகளின் மேல் பெரும் சக்தியுடன் பாய்ந்தான்.

பெரும் ஆற்றலைக் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான வீரதன்வான் [2] துரோணரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த திருஷ்டகேதுவைத் தடுத்தான். கணைகளையே தங்கள் நச்சுப் பற்களாகக் கொண்டு, ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட அந்த வீரர்கள் இருவரும், பெரும் சுறுசுறுப்புடன் பல்லாயிரம் கணைகளால், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். உண்மையில், மனிதர்களில் புலிகளான அவ்விருவரும், ஆழ்ந்த காடுகளுக்குள் இரு தலைமை யானைகள் சீற்றத்துடன் மோதிக்கொள்வதைப் போலத் தங்களுக்குள் போரிட்டனர். பெரும் சக்தியைக் கொண்ட அவர்கள் இருவரும், மலைக்குகையொன்றில் மோதிக் கொள்ளும் கோபம்கொண்ட இரு புலிகளைப் போல மற்றவனைக் கொல்ல விரும்பத்துடனே போரிட்டனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அம்மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது. காணத்தகுந்த அது {அம்மோதல்} மிக அற்புதமானதாக இருந்தது. பெரும் எண்ணிக்கையிலான சித்தர்களும், சாரணர்களுமே கூட அற்புதத்திற்காகக் காத்திருக்கும் கண்களுடன் அதைக் கண்டனர்.அப்போது வீரதன்வான், ஓ! பாரதரே, சினத்துடன் சிரித்தவாறே, பல்லங்களைக் கொண்டு திருஷ்டகேதுவின் வில்லை இரண்டாக அறுத்தான். சேதிகளின் ஆட்சியாளனான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {திருஷ்டகேது}, உடைந்த வில்லை எறிந்துவிட்டு, இரும்பாலானதும், தங்கப் பிடியைக் கொண்டதுமான கடும் ஈட்டி ஒன்றை எடுத்துக் கொண்டான். ஓ! பாரதரே, கடும் சக்தி கொண்ட அந்த ஈட்டியைத் தன் கரங்களால் வீரதன்வானின் தேரை நோக்கிச் சாய்த்த திருஷ்டகேது அதைக் கவனமாகவும், பெரும் பலத்துடனும் ஏவினான். வீரர்களைக் கொல்லும் அந்த ஈட்டியால் பெரும்பலத்துடன் தாக்கப்பட்டு, இதயம் துளைக்கப்பட்ட வீரதன்வான், வேகமாகத் தன் தேரில் இருந்து கீழே பூமியில் விழுந்தான். திரிகர்த்தர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான அவ்வீரன் {வீரதன்வான்} வீழ்ந்ததும், ஓ! தலைவா, பாண்டவர்களால் உமது படை பிளக்கப்பட்டது.

(உமது மகன்) துர்முகன், அறுபது கணைகளைச் சகாதேவன் மீது ஏவி, அந்தப் போரில் பாண்டுவின் மகனை {சகாதேவனைச்} சவாலுக்கழைப்பதற்காக உரக்க முழங்கினான். அப்போது, சினத்தால் நிறைந்த மாத்ரியின் மகன் {சகாதேவன்}, சிரித்துக் கொண்டே சகோதரனைத் தாக்கும் சகோதரனாகக் கூரிய கணைகள் பலவற்றால் துர்முகனைத் துளைத்தான். வலிமைமிக்கத் துர்முகன், மூர்க்கத்துடன் போரிடுவதைக் கண்ட சகாதேவன், ஓ! பாரதரே, ஒன்பது கணைகளால் மீண்டும் அவனைத் {துர்முகனைத்} தாக்கினான். பெரும்பலம் கொண்ட சகாதேவன், ஒரு பல்லத்தால் துர்முகனின் கொடிமரத்தை வெட்டி, மேலும் நான்கு கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் தாக்கி வீழ்த்தினான். மேலும் நன்கு கடினமாக்கப்பட்ட, கூரிய மற்றொரு பல்லத்தைக் கொண்டு, காதுகுண்டலங்களால் ஒளிர்ந்து கொண்டிருந்த துர்முகனின் தேரோட்டியுடைய தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான். மேலும் ஒரு க்ஷுரப்ரத்தால் துர்முகனின் பெரிய வில்லை அறுத்த சகாதேவன், அந்தப் போரில் ஐந்து கணைகளால் துர்முகனையும் துளைத்தான்.

குதிரைகளற்ற அந்தத் தேரில் இருந்து அச்சமற்றவகையில் கீழே குதித்த துர்முகன், ஓ! பாரதரே, நிரமித்ரனின் தேரில் ஏறிக் கொண்டான். பிறகு சினத்தால் நிறைந்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்தச் சகாதேவன், அந்தப் பெரும்போரில் தன் படைக்கு மத்தியில் இருந்த நிரமித்ரனை ஒரு பல்லத்தால் கொன்றான். அதன்பேரில், திரிகர்த்தர்களின் ஆட்சியாளனுடைய {சுசர்மனின்} மகனான நிரமித்ரன், உமது படையைப் பெரும் துயரத்தில் பீடிக்கச் செய்து தன் தேரில் இருந்து கீழே விழுந்தான். அவனைக் {நிரமித்ரனைக்} கொன்றதும், வலிமைமிக்க (ராட்சசன்) கரனைக் கொன்ற தசரதன் மகன் ராமனைப் போல வலிமைமிக்கச் சகாதேவன் பிரகாசமாகத் தெரிந்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த இளவரசன் நிரமித்ரன் கொல்லப்பட்டதைக் கண்டு, ஓ! ஏகாதிபதி, திர்கர்த்த வீரர்களுக்கு மத்தியில் “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும் உரத்த கதறல்கள் எழுந்தன.

நகுலன், ஓ! மன்னா, பெரிய கண்களைக் கொண்ட உமது மகன் விகர்ணனை ஒருக்கணத்தில் வென்றான். இது மிக அற்புதமானதாகத் தெரிந்தது.

வியாக்ரதத்தன் [3], தன் படைப்பிரிவுக்கு மத்தியில் இருந்த சாத்யகியின் குதிரைகள், தேரோட்டி மற்றும் கொடிமரம் ஆகியவற்றைத் தன் நேரான கணைகளால் கண்ணுக்குப் புலப்படாதபடி மறைத்தான். சிநியின் துணிச்சல்மிக்கப் பேரன், பெரும் கரநளினத்துடன் அக்கணைகளைக் கலங்கடித்துத் தன் கணைகளின் மூலம் வியாக்ரதத்தனை, அவனது குதிரைகள், தேரோட்டி மற்றும் கொடிமரத்தோடு சேர்த்து வீழ்த்தினான். ஓ!தலைவா {திருதராஷ்டிரா}, அந்த மகதர்களின் இளவரசனுடைய {வியாக்ரதத்தனின்} வீழ்ச்சிக்குப் பிறகு, தீவிரத்துடன் போராடிக் கொண்டிருந்த மகதர்கள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் யுயுதானனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தனர்.அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், தங்கள் கணைகளையும், வேல்களையும் ஆயிரக்கணக்கில் இறைத்தபடியும், அந்தப் போரில் பிண்டிபாலங்கள், பராசங்கள், முத்கரங்கள், உலக்கைகள் ஆகியவற்றைக் கொண்டும், சாத்வத குலத்தின் வெல்லப்பட முடியாத அந்த வீரனுடன் {சாத்யகியுடன்} போரிட்டனர். பெரும் வலிமையைக் கொண்டவனும், மனிதர்களில் காளையும், வெல்லப்படமுடியாதவனுமான சாத்யகி, சிரித்துக் கொண்டே மிக எளிமையாக அவர்கள் அனைவரையும் வென்றான். மகதர்கள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டனர். எஞ்சிய மிகச் சிலரும் களத்தைவிட்டுத் தப்பி ஓடினர்.

ஓ! தலைவா, ஏற்கனவே யுயுதானனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டிருந்த உமது படையானது, இதைக் கண்டு பிளந்து ஓடியது. மது குலத்தில் முதன்மையானவனும், சிறந்த வீரனுமான அவன் {சாத்யகி}, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் உமது துருப்பினரைக் கொன்று, தன் வில்லை அசைத்தபடியே பிரகாசித்துக் கொண்டிருந்தான். ஓ! மன்னா, இப்படியே அந்தப் படை, சாத்வத குலத்தைச் சேர்ந்த அந்த உயர் ஆன்மாவால் {சாத்யகியால்} முறியடிக்கப்பட்டது. உண்மையில், நீண்ட கரங்களைக் கொண்ட அந்த வீரன் {சாத்யகியின்} மீது கொண்ட அச்சத்தால், போரிடுவதற்காக எவனும் அவனை அணுகவில்லை. அப்போது சினத்தால் நிறைந்த துரோணர், தன் கண்களை உருட்டியபடி, கலங்கடிக்கப்பட முடியாத சாதனைகளைக் கொண்ட சாத்யகியை நோக்கி மூர்க்கமாக விரைந்தார்” {என்றான் சஞ்சயன்}.

அலம்புசனை விரட்டிய பீமன்! – துரோண பர்வம் பகுதி – 107-சோமதத்தன் மகன் சலனுக்கும், திரௌபதியின் மகன்கள் ஐவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; சலனைக் கொன்ற சகாதேவன் மகன் சுருதசேனன்; பீமனைத் தாக்கி மயக்கமடையச் செய்த ராட்சசன் அலம்புசன்; சேதிகள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோரைக் கொன்ற அலம்புசன்; பீமன் பயன்படுத்திய த்வஷ்டாஸ்த்திரம்; பீமனிடம் இருந்து தப்பி ஓடிய அலம்புசன்; மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவப் படை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சோமதத்தனின் சிறப்புமிக்க மகன் {சலன்}, பெரும் வில்லாளிகளான திரௌபதி மகன்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளாலும், மீண்டும் ஏழு கணைகளாலும் துளைத்தான். ஓ! தலைவா, அந்தக் கடும் வீரனினால் மிகவும் பீடிக்கப்பட்ட அவர்கள், என்ன செய்வதென்று அறியாமல் சிறிது நேரம் மலைத்தனர். பிறகு எதிரிகளை நசுக்குபவனும், நகுலனின் மகனுமான சதானீகன், மனிதர்களில் காளையான அந்தச் சோமதத்தன் மகனை {சலனை} இரண்டு கணைகளால் துளைத்து, மகிழ்ச்சியால் உரக்க முழக்கமிட்டான். தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்த பிற சகோதரர்கள் ஒவ்வொருவரும் மூன்று {மும்மூன்று} நேரான கணைகளால் அந்தக் கோபக்கார சோமதத்தன் மகனை {சலனை} வேகமாகத் துளைத்தனர்.

அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சோமதத்தனின் சிறப்புமிக்க மகன் {சலன்}, அவர்கள் மீது ஐந்து கணைகளை ஏவி, அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு கணையால் மார்பில் துளைத்தான். பிறகு, இப்படி அந்த உயர் ஆன்ம வீரனின் {சலனின்} கணைகளால் துளைக்கப்பட்ட அந்தச் சகோதரர்கள் ஐவரும் அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் {சலனைச்} சூழ்ந்து கொண்டு, தங்கள் கணைகளால் அவனை ஆழமாகத் துளைக்கத் தொடங்கினர்.

சினத்தால் நிறைந்த அர்ஜுனனின் மகன் {சுருதகர்மன்}, கூரிய கணைகளால், சௌமதத்தியின் {சலனின்} நான்கு குதிரைகளையும் யமலோகம் அனுப்பினான். பீமசேனனின் மகன் {சுதசோமன்}, சிறப்புமிக்கச் சோமதத்த மகனின் {சலனின்} வில்லை அறுத்து உரக்க முழங்கியபடியே, தன் எதிரியைக் கூரிய கணைகள் பலவற்றால் துளைத்தான். யுதிஷ்டிரனின் மகன் {பிரதிவிந்தியன்} சௌமதத்தியின் {சலனின்} கொடிமரத்தை அறுத்து, பூமியில் வீழ்த்திய அதே நேரத்தில், நகுலனின் மகன் {சதானீகன்}, எதிரியின் தேரோட்டியை அவனது {சலனது} இருக்கையில் இருந்து கீழே வீழ்த்தினான். பிறகு, சகாதேவன் மகன் {சுருதசேனன்}, தன் சகோதரர்களின் விளைவால் எதிரி களத்தை விட்டு நகரப்போவதை உறுதிசெய்து கொண்டு, க்ஷுரப்ரம் ஒன்றால் அந்தச் சிறப்புமிக்க வீரனின் {சலனின்} தலையை அறுத்தான். தங்கத்தாலான காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தலை, பூமியில் விழுந்து, யுக முடிவின் போது எழும் பிரகாசமான சூரியனைப் போல அந்தக் களத்தை அலங்கரித்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்ம சோமதத்தன் மகனுடைய {சலனின்} தலை இப்படித் தரையில் விழுந்ததைக் கண்ட உமது துருப்புகள் அச்சமடைந்து அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடின.

அந்தப் போரில், சினத்தால் நிறைந்திருந்த ராட்சசன் அலம்புசன், (ராமனின் தம்பியான) லக்ஷ்மணனுடன் போரிட்ட ராவணனின் மகனை (இந்திரஜித்தைப்) போல, வலிமைமிக்கப் பீமசேனனுடன் போரிட்டான். ராட்சசனும் {அலம்புசனும்}, மனித வீரனும் {பீமசேனனும்} போரில் ஈடுபடுவதைக் கண்ட அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சி மற்றும் ஆச்சரியம் ஆகிய இரண்டையும் அடைந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டிருந்த பீமன், கோபம் நிறைந்த ராட்சச இளவரசனான அந்த ரிஷ்யசிருங்கன் மகனை (அலம்புசனை) ஒன்பது கூரிய கணைகளால் துளைத்தான். இப்படிப் போரில் துளைக்கப்பட்ட அந்த ராட்சசன், உரத்த பயங்கர ஒலியை எழுப்பி, தன்னைப் பின்தொடர்பவர்கள் அனைவருடன் சேர்ந்து பீமனை எதிர்த்து விரைந்தான்.

நேரான ஐந்து கணைகளால் பீமனைத் துளைத்த அவன் {அலம்புசன்}, அந்தப் போரில் பீமனை ஆதரித்த முப்பது தேர்களை வேகமாக அழித்தான். மேலும் பீமசேனனின் நானாறு {400} தேர்களை அழித்த அந்த ராட்சசன் {அலம்புசன்}, சிறகுகள் கொண்ட கணைகளால் பீமசேனனையும் துளைத்தான். அந்த ராட்சசனால் ஆழத்துளைக்கப்பட்டவனான வலிமைமிக்கப் பீமன், மயக்கமடைந்து கீழே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான். பிறகு, தன் உணர்வுகள் மீண்ட அந்தக் காற்று தேவனின் மகன் {வாயுவின் மகனான பீமன்}, சினத்தால் நிறைந்தான். மிகக் கடியதையும் தாங்கவல்லதும், சிறப்பானதும், பயங்கரமானதுமான தன் வில்லை வளைத்த அவன் {பீமன்}, கூரிய கணைகளால் அலம்புசனின் உடலில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் பீடித்தான். அதன்பேரில், கறுத்த பெரும் மைக்குவியலுக்கு ஒப்பான அந்த ராட்சசன் {அலம்புசன்}, ஓ! மன்னா, மலர்ந்திருக்கும் கின்சுகத்தைப் {பலாச மரத்தைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.

அந்தப் போரில் பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளால் தாக்கப்படும்போது, சிறப்புமிக்கப் பாண்டவனால் {பீமனால்} தன் சகோதரன் (பகன்) கொல்லப்பட்டதை அந்த ராட்சசன் {அலம்புசன்} நினைவுகூர்ந்தான். பிறகு பயங்கர வடிவத்தை ஏற்ற அவன் {அலம்புசன்}, பீமனிடம், “ஓ! பார்த்தா {பீமா}, இந்தப் போரில் சிறிது நேரம் காத்திரு {நிற்பாயாக}. என் ஆற்றலை இன்று பார்ப்பாயாக. ஓ! தீய புரிதல் {கெட்ட புத்தி} கொண்டவனே, ராட்சசர்களில் முதன்மையான வலிமைமிக்கப் பகன் என் சகோதரனாவான். அவன் உன்னால் கொல்லப்பட்டான் என்பது உண்மையே. ஆனால், அஃது என் கண்களுக்கு அப்பால் நடந்தது” என்றான். பீமனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன அலம்புசன், கண்ணுக்குப் புலப்படாத நிலையை அடைந்து, அடர்த்தியான கணைமாரியால் பீமசேனனை மறைக்கத் தொடங்கினான். இப்படி ராட்சசன் {அலம்புசன்} மறைந்து போனதால், ஓ! ஏகாதிபதி, நேரான கணைகளால் ஆகாயத்தையே மறைத்தான் பீமன்.

இப்படிப் பீமனால் பீடிக்கப்பட்ட அலம்புசன், விரைவில் தன் தேருக்குத் திரும்பினான். மீண்டும் விரைவில் பூமியின் குடல்களுக்குள் நுழைந்த அவன் {அலம்புசன்}, மீண்டுமொருமுறை சிறுத்து {வடிவம் சுருங்கி} திடீரென வானத்தில் பறந்தான். கணக்கிலடங்கா வடிவங்களை அலம்புசன் ஏற்றான். இதோ நுட்பமானவனாக {சிறிய உருவம் கொண்டவனாக}, இதோ பெரியவனாக, இதோ ஒட்டுமொத்தமான திரளாக என மாறிய அவன் {ராட்சசன் அலம்புசன்} மேகங்களைப் போல முழங்கத் தொடங்கினான். மேலும் அவன் பல்வேறு வகைகளான வார்த்தைகளையும், பேச்சுகளையும் சுற்றிலும் உதிர்த்தான். ஆகாயத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கணைத்தாரைகள், ஈட்டிகள், குணபங்கள், வேல்கள், பரிகங்கள், பிண்டிபாலங்கள், பட்டசங்கள், வாள்கள், இடிகள் {வஜ்ரங்கள்} ஆகியவையும் விழுந்தன.

ராட்சசனால் {அலம்புசனால்} உண்டாக்கப்பட்ட அந்தப் பயங்கரக் கணை மழையானது, போர்க்களத்தில் பாண்டு மகனின் {பீமனின்} துருப்புகளைக் கொன்றது. அந்தக் கணை மழையின் விளைவால் யானைகள் பலவும், குதிரைகள் பலவும் கொல்லப்பட்டன, ஓ! மன்னா, காலாட்படை வீரர்கள் பலரும் கொல்லப்பட்டனர். குருதியை நீராகவும், தேர்களை நீர்ச்சுழல்களாகவும் கொண்ட ஆறு ஒன்று அங்கே உண்டானது. அதில் நிறைந்திருந்த யானைகள் அதன் முதலைகளாகின. தேர்வீரர்களின் குடைகள் அதன் அன்னங்களாகின, விலங்குகளின் சதையும், ஊனீரும் அதன் சகதிகளாகின. (வெட்டப்பட்டு) அங்கே நிறைந்திருந்த மனிதர்களின் கரங்கள் அதன் பாம்புகளாகின. பல ராட்சசர்களாலும், பிற மனித உன்னிகளாலும் அது மொய்க்கப்பட்டது. ஓ! மன்னா, சேதிகளையும், பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும் அது {அந்த ஆறு} அடித்துக் கொண்டு போனது.

ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் அச்சமற்று உலவும் அவனையும் {அலம்புசனையும்}, அவனது ஆற்றலையும் கண்ட பாண்டவர்கள் கவலையால் நிறைந்தனர்; அப்போது உமது துருப்புகளின் இதயங்கள் மகிழ்ச்சியால் நிறைந்தன. உமது துருப்புகளுக்கு மத்தியில் எழுந்த இசைக்கருவிகளின் பயங்கரமான உரத்த ஒலிகள் மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்குவதாக இருந்தன. மனிதர்களின் உள்ளங்கை ஒலிகளைத் தாங்கிக் கொள்ள முடியாத பாம்பைப் போல, உமது துருப்புகளின் அந்த ஆரவாரப் பேரொலியை பாண்டுவின் மகனால் {பீமனால்} தாங்கிக் கொள்ள முடியவில்லை.

சினத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்து, அனைத்தையும் எரித்துவிடும் நெருப்பு போன்ற பார்வையுடன் கூடிய அந்தக் காற்று தேவனின் மகன் {பீமன்}, துவஷ்ட்ரி என்ற பெயர் கொண்ட ஆயுதத்தைத் துவஷ்ட்ரியைப் போலவே குறி பார்த்தான் [1]. அவ்வாயுதத்தின் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கணைகள் உண்டாகின. அக்கணைகளின் விளைவாக, உமது துருப்புகளுக்கு மத்தியில் ஓர் உலகளாவிய அழிவு தென்பட்டது. போரில் பீமசேனனால் ஏவப்பட்ட அவ்வாயுதம், ராட்சசனால் {அலம்புசனால்} உண்டாக்கப்பட்ட திறன்மிக்க மாயையை அழித்து, அந்த ராட்சசனையும் பெரிதும் பீடித்தது. பீமசேனனால் தன் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் தாக்கப்பட்ட அந்த ராட்சசன் {அலம்புசன்}, பீமசேனனைக் கைவிட்டுவிட்டுத் துரோணரின் படைப்பிரிவை நோக்கித் தப்பி ஓடினான். அந்த ராட்சச இளவரசன் {அலம்புசன்}, உயர் ஆன்ம பீமனால் தோற்கடிக்கப்பட்டதும், பாண்டவர்கள் தங்கள் சிங்க முழக்கங்களால் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் எதிரொலிக்கச் செய்தனர். மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள், போரில் பிரகலாதன் தோற்றதும், சக்ரனை {இந்திரனை} வழிபட்ட மருத்துக்களைப் போல, மருத்தனின் வலிமைமிக்க மகனை {பீமனை} வழிபட்டனர்” {என்றான் சஞ்சயன்}.

அலம்புசனைக் கொன்ற கடோத்கசன்! – துரோண பர்வம் பகுதி – 108-கடோத்கசனுக்கும் அலம்புசனுக்கும் இடையில் ஏற்பட்ட போர்; மாயைகளைப் பயன்படுத்திப் போரிட்ட ராட்சசர்கள்; அந்த ராட்சசர்களுக்கிடையில் நடைபெற்ற போரில் தலையிட்ட பாண்டவ வீரர்கள்; தன் தேரில் இருந்து அலம்புசனின் தேருக்குப் பறந்து சென்ற கடோத்கசன்; அலம்புசன் கொல்லப்பட்டது

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பீமனிடம் இருந்து தப்பி ஓடிய அலம்புசன், களத்தின் மற்றொரு பகுதியில் போரில் அச்சமற்று உலவினான். இப்படி அவன் {அலம்புசன்} போரில் அச்சமற்று உலவி கொண்டிருந்த போது, ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} அவனை நோக்கி மூர்க்கமாக விரைந்து, கூரிய கணைகளால் அவனைத் துளைத்தான். ராட்சசர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கிடையில் நடைபெற்ற போரானது மிகப் பயங்கரமாக மாறியது. (பழங்காலத்தின்) சக்ரனையும் {இந்திரனையும்}, சம்பரனையும் போல அவ்விருவரும் மாயைகளை இருப்புக்கு அழைத்தனர்.

சினத்தால் தூண்டப்பட்ட அலம்புசன், கடோத்கசனைத் தாக்கினான். உண்மையில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக ராட்சசர்களில் முதன்மையான அவ்விருவருக்கும் இடையிலான மோதல் இருந்தது. கடோத்கசன், இருபது நாராசங்களால் அலம்புசனின் மார்பைத் துளைத்து மீண்டும் மீண்டும் ஒரு சிங்கத்தைப் போல முழங்கினான். ஓ! மன்னா, சிரித்துக் கொண்டே அலம்புசனும், வெல்லப்படாத ஹிடிம்பையின் மகனை {கடோத்கசனை} மீண்டும் மீண்டும் துளைத்து மொத்த ஆகாயத்தையும் நிறைக்கும்படி மகிழ்ச்சியால் உரத்த முழக்கங்களை இட்டான்.

பிறகு, பெரும் வலிமை கொண்டவர்களும் ராட்சசர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும் சினத்தால் நிறைந்தனர். தங்கள் மாய சக்திகளை வெளிப்படுத்தியபடி தங்களுக்குள் போரிட்டுக்கொண்ட அவர்களில் ஒருவராலும் தங்களில் மற்றவன் மேல் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் நூறு மாயைகளை உண்டாக்கி மற்றவனை மலைக்கச் செய்தனர். மாயைகளை உண்டாக்குவதில் சாதித்தவர்களான அவ்விருவரில், ஓ! மன்னா, கடோத்கசன் வெளிப்படுத்திய மாயைகள் அனைத்தும் அப்போரில், அது போன்றே மாயைகளை உண்டாக்கிய அலம்புசனால் அழிக்கப்பட்டன. மாயைகளை உண்டாக்குவதில் சாதித்தவனான ராட்சச இளவரசன் அலம்புசன், அப்படிப் போரிடுவதைக் கண்ட பாண்டவர்கள் கவலையால் நிறைந்து, அவனைச் சுற்றி தேர்வீரர்களில் முதன்மையானோர் பலரை நிற்கச் செய்தனர்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமசேனனும், பிறர் அனைவரும், அவனை {அலம்புசனை} எதிர்த்துச் சினத்துடன் விரைந்தனர். ஓ! ஐயா, எண்ணற்ற தேர்களால் அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சுற்றி வளைத்த அவர்கள், காட்டில் மனிதர்கள் கொள்ளிக்கட்டைகளுடன் ஒரு யானையைச் சூழ்ந்து கொள்வதைப் போல அனைத்துப் பக்கங்களிலும் கணைகளால் அவனை அடைத்தனர். அவனோ {அலம்புசனோ}, தன் ஆயுதங்களின் மாயையால் அந்தக் கணை மழையைக் கலங்கடித்து, காட்டுத்தீயில் இருந்து விடுபட்ட யானையைப் போல, அந்தத் தேர்களின் நெருக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான்.

அப்போது, இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பான நாணொலியைக் கொண்ட தன் பயங்கர வில்லை வளைத்த அவன் {அலம்புசன்}, வாயுத் தேவனின் மகனை {பீமனை} இருபத்தைந்து கணைகளாலும், பீமனின் மகனை {கடோத்கசனை} ஐந்தாலும், யுதிஷ்டிரனை மூன்றாலும், சகாதேவனை ஏழாலும், நகுலனை எழுபத்துமூன்றாலும், திரௌபதி மகன்கள் ஐவரில் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளாலும் துளைத்து உரத்த முழக்கம் செய்தான். பிறகு, பீமசேனன் ஒன்பது கணைகளாலும், சகாதேவன் ஐந்தாலும் பதிலுக்கு அவனைத் துளைத்தனர். யுதிஷ்டிரன் அந்த ராட்சசனை {அலம்புசனை} ஒரு நூறு கணைகளால் துளைத்தான். நகுலன் அவனை மூன்று கணைகளால் துளைத்தான்.

ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, ஐநூறு கணைகளால் அவனை {அலம்புசனைத்} துளைத்தான். அந்த வலிமைமிக்க வீரன் {கடோத்கசன்}, எழுபது கணைகளால் மீண்டும் ஒரு முறை அலம்புசனைத் துளைத்து உரக்க முழங்கினான். ஓ மன்னா, கடோத்கசனின் அந்த உரத்த முழக்கத்தால், மலைகள், காடுகள், மரங்கள் மற்றும் நீர்நிலைகளுடன் கூடிய பூமாதேவி நடுங்கினாள். பெரும் வில்லாளிகளும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அவர்களால் அனைத்துப் பக்கங்களிலும் ஆழத் துளைக்கப்பட்ட அலம்புசன், பதிலுக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் துளைத்தான். அப்போது, ஓ! பாரதர்களில் தலைவரே {திருதராஷ்டிரரே}, ராட்சசனான அந்த ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, அந்தப் போரில் கோபக்கார ராட்சசனான மற்றொருவனை {அலம்புசனை} பல கணைகளால் துளைத்தான். ஆழத் துளைக்கப்பட்டவனும், ராட்சசர்களில் வலிமைமிக்க இளவரசனுமான அந்த அலம்புசன், தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கணக்கிலடங்காக் கணைகளை விரைவாக ஏவினான். முற்றிலும் நேராக இருந்த அந்தக் கணைகள் அனைத்தும், மலைச்சிகரத்திற்குள் நுழையும் பெரும்பலங்கொண்ட கோபக்காரப் பாம்புகளைப் போலக் கடோத்கசனின் உடலுக்குள் நுழைந்தன.

அப்போது துயரத்தால் நிறைந்த பாண்டவர்களும், ஹிடிம்பையின் மகனான கடோத்கசனும், ஓ! மன்னா, தங்கள் எதிரியின் மீது அனைத்துப் பக்கங்களில் இருந்து கூரிய கணை மேகங்களை ஏவினர். வெற்றியை விரும்பிய பாண்டவர்களால் அந்தப் போரில் இப்படித் தாக்கப்பட்ட அலம்புசன் அழிவுடையவனே, ஆகையால் அவனுக்கு {அலம்புசனுக்கு} என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது, போரில் மகிழ்பவனான வலிமைமிக்கப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, அலம்புசனின் அந்நிலையைக் கண்டு, அவனுடைய அழிவில் தன் இதயத்தை நிறுத்தினான். அவன் {கடோத்கசன்}, எரிந்த மலைச்சிகரத்திற்கோ, சிதறிப்போன கறுத்த மைக்குவியலுக்கோ ஒப்பாக இருந்த அந்த ராட்சச இளவரசனுடைய {அலம்புசனுடைய} தேரை நோக்கி மிக மூர்க்கமாக விரைந்தான்.

கோபத்தால் தூண்டப்பட்ட ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, தன் தேரில் இருந்து அலம்புசனின் தேருக்குப் பறந்து சென்று, பின்னவனை {அலம்புசனைப்} பிடித்தான். பிறகு அவன் {கடோத்சகசன்}, கருடன் பாம்பொன்றைத் தூக்குவது போல அவனை {அலம்புசனைத்} தேரில் இருந்து தூக்கினான். இப்படித் தன் கரங்களால் அவனை {அலம்புசனை} இழுத்த அவன் {கடோத்கசன்}, மீண்டும் மீண்டும் சுழற்றத் தொடங்கி, ஒரு மனிதன் பானையொன்றைப் பாறை மீது வீசித் துண்டுகளாக நொறுக்குவதைப் போல, அவனைப் பூமியில் வீசிச் சிதறச் செய்தான். பலம், சுறுசுறுப்பு, பெரும் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்ட அந்தப் பீமசேனன் மகன் {கடோத்கசன்}, போரில் கோபத்தால் தூண்டப்பட்டுத் துருப்புகள் அனைத்தின் அச்சத்தையும் தூண்டினான்.

இவ்வாறு அச்சந்தரும் ராட்சசனான அலம்புசன், அங்கங்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு, எலும்புகள் துண்டு துண்டாகப் போகும்படி வீரக் கடோத்கசனால் கொல்லப்பட்டது, நெடிய சால மரம் ஒன்று காற்றால் வேரோடு சாய்க்கப்பட்டதற்கு ஒப்பாக இருந்தது. அந்த இரவு உலாவியின் {அலம்புசனின்} படுகொலையால் பார்த்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் சிங்க முழக்கங்களைச் செய்தபடி தங்கள் ஆடைகளை அசைத்தனர். எனினும், ஓ! ஏகாதிபதி, ராட்சசர்களில் வலிமைமிக்க இளவரசனான அலம்புசன் கொல்லப்பட்டு, நொறுங்கிய மலை போலக் கிடப்பதைக் கண்ட துணிச்சல்மிக்க உமது வீரர்கள், “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும் கதறினர்.

ஆவல் கொண்ட மனிதர்கள், (மேலும் எரிய முடியாத) கரித்துண்டைப் போல, பூமியில் ஆதரவற்றுக் கிடக்கும் அந்த ராட்சசனைக் காணச் சென்றனர். அப்போது, வலிமைமிக்க உயிரினங்களில் முதன்மையானவனும், ராட்சசனுமான கடோத்கசன், இப்படித் தன் எதிரியைக் கொன்றதும், (அசுரன்) வலனைக் கொன்ற வாசவனை {இந்திரனைப்} போல உரக்க முழங்கினான். மிகக் கடினமான சாதனையைச் செய்த கடோத்கசன், தன் தந்தைமாராலும், தன் உறவினர்களாலும் மிகவும் புகழப்பட்டான். உண்மையில் அலம்புசக் கனியொன்றைப் போல அந்த அலம்புசனை வீழ்த்திய அவன் {கடோத்கசன்} தன் நண்பர்களோடு சேர்ந்து மிகவும் மகிச்சியடைந்தான். அங்கே (பாண்டவப் படையில்), பல்வேறு வகைகளிலான கணைகளின் ஒலிகளாலும், சங்கொலிகளாலும் பெரும் ஆரவாரம் எழுந்தது. அவ்வொலியைக் கேட்ட கௌரவர்களும் பதிலுக்கு உரத்த முழக்கங்களைச் செய்து, அதன் எதிரொலிகளால் முழுப் பூமியையும் நிறைத்தனர்” {என்றான் சஞ்சயன்} [1].

சாத்யகியின் பெருமையைச் சொன்ன யுதிஷ்டிரன்! – துரோண பர்வம் பகுதி – 109-சாத்யகிக்கும் துரோணருக்கும் இடையில் நடந்த போர்; சாத்யகியை மீட்க திருஷ்டத்யும்னனையும், தன் படை வீரர்களையும் ஏவிய யுதிஷ்டிரன்; துரோணரின் பராக்கிரமம்; பாஞ்சஜன்யத்தின் ஒலியைக் கேட்டும், காண்டீவத்தின் ஒலியைக் கேட்காததால் அர்ஜுனனின் நிலையறியாது கலக்கமுற்ற யுதிஷ்டிரன்; சாத்யகியின் பெருமைகளைப் பட்டியலிட்ட யுதிஷ்டிரன், அர்ஜுனனின் உதவிக்குச் செல்லுமாறு அவனைப் பணித்தது..

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, போரில் பரத்வாஜர் மகனை {துரோணரை} எதிர்த்து யுயுதானன் {சாத்யகி} எவ்வாறு விரைந்தான் என்பதை எனக்குச் சொல்வாயாக. அதைக் கேட்பதற்கு நான் பெரும் ஆவல் கொண்டிருக்கிறேன்” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பேரறிவாளரே {திருதராஷ்டிரரே}, துரோணருக்கும், யுயுதானன் {சாத்யகி} தலைமையிலான பாண்டவர்களுக்கும் இடையில் நடைபெற்றதும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதுமான போரைக் குறித்துக் கேட்பீராக.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, யுயுதானனால் (குரு) படையினர் கொல்லப்படுவதைக் கண்ட துரோணர், சாத்யகி என்ற பெயராலும் அழைக்கப்படும் அந்த வீரனை நோக்கி விரைந்தார். சாத்யகி, இப்படித் தன்னை நோக்கி வரும் வலிமைமிக்க வீரரான பரத்வாஜர் மகனை {துரோணரை} இருபத்தைந்து க்ஷுத்ரகங்களால் {சிறு கணைகளால்} துளைத்தான். போரில் பெரும் ஆற்றலைக் கொண்ட துரோணரும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கூரானவையுமான ஐந்து கணைகளால் தீர்மானமான குறியோடு யுயுதானனை விரைவாகத் துளைத்தார். பெரும் வலிமை கொண்ட அந்தப் பெரும் வில்லாளி {துரோணர்}, சினத்தால் நிறைந்து, நேரான கணைகள் பலவற்றால் அந்தச் சாத்வத குல வீரனை {சாத்யகியை} மீண்டும் பீடித்தார்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இப்படி அந்தப் போரில் பரத்வாஜர் மகனால் {துரோணரால்} தாக்கப்பட்ட சாத்யகி, {அடுத்ததாக} தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதவனாக இருந்தான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கணக்கற்ற கூர்முனை கணைகளை ஏவிய பரத்வாஜர் மகனைக் {துரோணரைக்} கண்டு யுயுதானனின் முகம் மகிழ்ச்சியற்றதாக ஆனது. ஓ! மன்னா, சாத்யகி அந்நிலையிலிருப்பதைக் கண்ட உமது மகன்களும், {உமது} துருப்பினரும், மிகவும் மகிழ்ச்சியடைந்து மீண்டும் மீண்டும் சிங்க முழக்கம் செய்தனர்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கர ஆரவாரத்தைக் கேட்டும், இப்படிப் பீடிக்கப்படும் மதுகுலத்து வீரனை {சாத்யகியைக்} கண்டும், மன்னன் யுதிஷ்டிரன், தன் படைவீரர்களிடம், “விருஷ்ணிகளுள் முதன்மையானவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், துணிச்சல் மிக்கவனுமான சாத்யகியைச் சூரியனை விழுங்கும் ராகுவைப் போல வீரத் துரோணர் விழுங்கப் போகிறார். சாத்யகி போரிட்டுக் கொண்டிருக்கும் இடத்திற்கு விரைந்து செல்வீராக” என்றான்.

பிறகு, மன்னன் யுதிஷ்டிரன், பாஞ்சால குலத்துத் திருஷ்டத்யும்னனிடம், “துரோணரை நோக்கி வேகமாக விரைவாயாக. ஓ! பிருஷதன் மகனே {திருஷ்டத்யும்னா}, ஏன் நிற்கிறாய்? துரோணரிடமிருந்து நமக்கு எழுந்திருக்கும் பெரும் ஆபத்தை நீ காணவில்லையா? துரோணர் பெரும் வில்லாளியாவார். கயிற்றில் கட்டப்பட்ட பறவையுடன் விளையாடும் ஒரு சிறுவனைப் போல அவர் யுயுதானனுடன் {சாத்யகியுடன்} போரில் விளையாடிக் கொண்டிருக்கிறார். பீமசேனன் தலைமையிலான நீங்கள் அனைவரும், பிறரின் துணையுடன் சாத்யகியின் தேர் எங்கிருக்கிறதோ அங்கே செல்வீராக. உனக்குப் பின்னால் நான் என் துருப்புகளுடன் பின்தொடர்ந்து வருவேன். யமனின் கோரப்பற்களுக்கிடையில் ஏற்கனவே இருக்கும் சாத்யகியை இன்று மீட்பாயாக” என்றான்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளைச் சொன்ன மன்னன் யுதிஷ்டிரன், யுயுதானனுக்காகத் துரோணரை நோக்கி தன் அனைத்துத் துருப்புகளுடன் விரைந்தான். {திருதராஷ்டிரரே} நீர் அருளப்பட்டிருப்பீராக, துரோணருடன் மட்டுமே போரிட்ட பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகியோர் அனைவராலும் அங்கே உண்டாக்கப்பட்ட ஆரவாரமானது பெரிதாக இருந்தது. ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பரத்வாஜர் மகனை {துரோணரை}, ஒன்றாகச் சேர்ந்து அணுகிய அவர்கள், கங்கங்கள் மற்றும் மயில்களில் இறகுகளைக் கொண்டவையும், கூர்முனையைக் கொண்டவையுமான கணைகளின் மழையால் {அவரை} மறைத்தனர்.

எனினும் துரோணர், ஓர் இல்லறத்தான், தங்கள் சுயவிருப்பத்துடன் வரும் விருந்தினரை ஆசனத்துடனும், நீருடனும் வரவேற்பதைப் போலவே புன்னகையுடன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே], (விருந்து கொடுக்கும் நல்லோரின்) வீடுகளில் விருந்தோம்பலுடன் வரவேற்கப்படும் விருந்தினரைப் போலவே, வில் தரித்திருக்கும் பரத்வாஜர்மகனின் {துரோணரின்} கணைகளால் அவ்வீரர்கள் நிறைவுற்றனர்.

ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, ஆயிரம் கதிர்களுடன் கூடிய நடுப்பகல் சூரியனுக்கு ஒப்பான அந்தப் பரத்வாஜர் மகனை {துரோணரை}, அவர்களில் எவராலும் பார்க்கக்கூட முடியவில்லை. உண்மையில், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான அந்தத் துரோணர், எரியும் கதிர்களால் (கீழே உள்ள அனைத்தையும்) எரிக்கும் சூரியனைப் போல அந்த வில்லாளிகள் அனைவரையும் தமது கணைகளின் மாரியால் எரித்தார். இப்படித் துரோணரால் தாக்கப்பட்ட பாண்டவர்களும், சிருஞ்சயர்களும், ஓ! மன்னா, புதைக் குழியில் மூழ்கும் யானைகளைப் போல எந்தப் பாதுகாவலரையும் காணவில்லை.

துரோணரின் வலிமைமிக்கக் கணைகள் (ஆகாயத்தின் ஊடாகச்) செல்லும்போது, சுற்றிலும் உள்ள அனைத்தையும் வெடிக்கச் செய்யும் சூரியனின் கதிர்களைப் போலத் தெரிந்தன. அந்த மோதலில், பாஞ்சாலர்களில் மகாரதர்களாக அறியப்பட்டவர்களும், திருஷ்டத்யும்னனால் (அவ்வாறே) அங்கீகரிக்கப் பட்டவர்களுமான இருபத்தைந்து போர்வீரர்கள் துரோணரால் கொல்லப்பட்டனர். துணிச்சல்மிக்கத் துரோணர், அந்த முதன்மையான வீரர்களை அடுத்தடுத்துக் கொல்வதைப் பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்களின் துருப்புகளில் இருந்த மனிதர்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். கேகயர்களில் போர்வீரர்கள் நூறு பேரைக் கொன்று, அனைத்துப் பக்கங்களிலும் அவர்களை முறியடித்த துரோணர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வாயை அகலமாக விரித்திருக்கும் யமனைப் போல நின்றார். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரோணர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணகான பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள், மத்ஸ்யர்கள், கேகயர்கள் ஆகியோரை வென்றார். துரோணரின் கணைகளின் மூலம் துளைக்கப்பட்ட அவர்களால் உண்டான ஆரவாரமானது, காட்டுத்தீயால் சூழப்பட்ட காட்டுவாசிகள் உண்டாக்கும் ஆரவாரத்துக்கு ஒப்பானதாக இருந்தது. தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகியோர், “பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் தங்கள் அனைத்துத் துருப்புகளுடனும் தப்பி ஓடுவதைப் பாருங்கள்” என்று சொன்னார்கள். உண்மையில், போரில் துரோணர் சோமகர்களைக் கொல்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவரை எதிர்த்துச் செல்ல எவனும் துணியவில்லை, அவரைத் {துரோணரைத்} துளைப்பதில் எவனும் வெல்லவில்லை.

பெரும் வீரர்களுக்கு அழிவைத் தரும் அந்தப் பயங்கர மோதல் தொடர்ந்த போது, பிருதையின் மகன் (யுதிஷ்டிரன்), பாஞ்சஜன்யத்தின் ஒலியைத் திடீரெனக் கேட்டான். வாசுதேவனால் {கிருஷ்ணனால்} முழக்கப்பட்ட அந்தச் சிறந்த சங்கு {பாஞ்சஜன்யம்} உரத்த வெடிப்பொலிகளை வெளியிட்டது. உண்மையில், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாப்போர் {அனைவரும்} போரிட்டுக் கொண்டிருந்த போது, அர்ஜுனனின் தேருக்கு முன்பாகத் தார்தராஷ்டிரர்கள் முழங்கிக் கொண்டிருந்த போது, காண்டீவத்தின் நாணொலி கேட்கப்படவில்லை. பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்} மீண்டும் மீண்டும் மயங்கி, “சங்குகளின் இளவரசன் (பாஞ்சஜன்யம்) இத்தகு வெடிப்பொலிகளை வெளியிடுவதாலும், மகிழ்ச்சியால் நிறைந்த கௌரவர்களும் இடையறாமல் இத்தகு கூச்சல்களில் ஈடுபடுவதாலும், பார்த்தன் {அர்ஜுனன்} முற்றிலும் நலமாக இல்லை என்பதில் ஐயமில்லை” என்று நினைத்தான்.

கவலையான இதயத்துடன் இப்படி நினைத்த குந்தியின் மகன் அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, கண்ணீரால் தடைப்பட்ட குரலுடன், சாத்வத குலத்தோனிடம் (சாத்யகியிடம்) இவ்வார்த்தைகளைச் சொன்னான். மன்னன் யுதிஷ்டிரன், மீண்டும் மீண்டும் மலைப்படைந்தாலும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் பார்வையை {அறிவை} இழக்கவில்லை. சிநியின் பேரனிடம் {சாத்யகியிடம்} பேசிய அந்தக் குலக்காளை (யுதிஷ்டிரன்), “ஓ! சிநியின் பேரனே {சைநேய, சாத்யகி}, துயரில் இருக்கும் நண்பர்களுக்கு எது நித்திய கடமையென்று {அறமென்று} பழங்காலத்தில் நல்லோர் (நண்பர்களுக்குக்) குறிப்பிட்டனரோ, அதற்கான காலம் இப்போது வந்திருக்கிறது. ஓ! சினிக்களில் காளையே {சிநிபுங்கவ}, ஓ! சாத்யகி, என்னுள் நினைத்துப் பார்க்கையில், என் போர்வீரர்கள் அனைவருக்கு மத்தியிலும், எங்களுக்கு நன்மையை விரும்புவதில் உன்னைவிடப் பெரியவன் எவனையும் நான் காணவில்லை.

எவன் எப்போதும் பாசத்துடன் இருக்கிறானோ, எவன் எப்போதும் கீழ்ப்படிகிறானோ, அவனே துயர காலங்களில் முக்கியமான காரியங்களுக்கு நியமிக்கப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். பாண்டவர்களின் புகலிடமாக எப்போதும் இருக்கும் கேசவன் {கிருஷ்ணன்} எப்படியோ, ஓ! விருஷ்ணி குலத்தோனே {சாத்யகி}, ஆற்றலில் கேசவனைப் போல இருக்கும் நீயும் {எங்களுக்கு} அப்படியே. எனவே, {இப்போது} உன் மீது சுமை ஒன்றைக் கிடத்தப் போகிறேன். என் நோக்கத்தை வீணாக்குவது உனக்குத் தகாது. அர்ஜுனன், உனக்குச் சகோதரனும், நண்பனும், ஆசானுமாவான், ஓ! மனிதர்களில் காளையே {சாத்யகி}, இந்தப் போரில், துயரமான இந்தக் காலத்தில், அவனுக்கு {அர்ஜுனனுக்கு} {உன்} உதவியைக் கொடுப்பாயாக.

நீ உண்மைக்கு {சத்தியத்துக்கு} அர்ப்பணிப்புள்ளவன். நீ ஒரு வீரன். நண்பர்களின் அச்சங்களைப் போக்குபவனாகவும் நீ இருக்கிறாய். ஓ! வீரா, உன் செயல்களின் விளைவால், நீ பேச்சில் உண்மை நிறைந்தவனாக இவ்வுலகில் கொண்டாடப்படுகிறாய். ஓ! சிநியின் பேரனே {சாத்யகி}, போரில் நண்பர்களுக்காகப் போரிட்டுத் தன் உடலைத் துறப்பவன் எவனோ, அவன் முழு உலகையும் பிராமணர்களுக்குத் தானமளித்தவனுக்கு இணையானவன் ஆவான். முறையான சடங்குகளுடன் முழுப் பூமியையும் பிராமணர்களுக்குத் தானமாக அளித்துச் சொர்க்கத்திற்குச் சென்ற பல்வேறு மன்னர்களைக் குறித்து நாம் கேட்டிருக்கிறோம். ஓ! நல்லான்மா கொண்டோனே, ஓ! தலைவா {சாத்யகி}, நீ அர்ஜுனனுக்கு உதவி உன் உயிரை ஆபத்துக்குள்ளாக்குவதால், முழுப் பூமியையும் (பிராமணர்களுக்குத்) தானமளித்தவனோ, அதைவிட உயர்ந்ததைச் செய்தவனோ அடையும் கனியை {பலனை} அடைவாயாக எனக் கரங்கள் கூப்பி உன்னை இரந்து கேட்கிறேன்.

(நண்பர்களுக்காக) எப்போதும் போரில் தன் உயிரை விட விரும்புபவனான கிருஷ்ணன் ஒருவனே, நண்பர்களின் அச்சங்களை விலக்குபவனாக இருக்கிறான். {அவ்வகையில்}, ஓ! சாத்யகி, நீயே இரண்டாமவன். புகழில் கொண்ட விருப்பத்தால் போரில் வீரமாக முயலும் வீரனுக்கு, மற்றொரு வீரனாலேயே உதவ முடியும். சாதாரண மனிதனால் அப்படிச் செய்ய முடியாது. இக்காரியத்தில், உன்னைத்தவிர வேறு யார் அர்ஜுனனைக் காக்க முடியும்? ஒரு சந்தர்ப்பத்தில், உனது எண்ணிலடங்கா சாதனைகளை மெச்சிய அர்ஜுனன், மீண்டும் மீண்டும் அவற்றை உரைத்து எனக்குப் பெரும் இன்பத்தை அளித்தான். பெரும் கரநளினம் கொண்டவன் நீ என்றும், போர்க்கலையின் வகைகள் அனைத்தையும் அறிந்தவன் நீ என்றும், பெரும் சுறுசுறுப்பையும், பெரும் ஆற்றலையும் கொண்டவன் நீ என்றும் உன்னைக் குறித்து அவன் {அர்ஜுனன்} சொல்லியிருக்கிறான்.

அவன் {அர்ஜுனன்}, “சாத்யகி பெரும் ஞானம் கொண்டவனாவான், அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவனாவான், ஒரு வீரனாவான், போரில் எப்போதும் அவன் மலைக்கமாட்டான். அகன்ற கழுத்தையும், அகன்ற மார்பையும், வலிமைமிக்கக் கரங்களையும், அகன்ற தாடைகளையும் {மோவாய்களையும்}, பெரும் பலத்தையும், பெரும் ஆற்றலையும் கொண்டவனான சாத்யகி ஓர் உயர் ஆன்ம மகாரதனாவான். அவன் {சாத்யகி} எனது சீடனும், நண்பனுமாவான்; நான் அவனது அன்புக்குரியவனாகவும், அவன் எனது அன்புக்குரியவனாகவும் இருக்கிறோம். என் கூட்டாளியாகும் அந்த யுயுதானன் {சாத்யகி}, கௌரவர்களை நொறுக்கப் போகிறான். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, போர்க்களத்தில் நமக்குத் துணையாகக் கவசம்பூண்டவர்களான கேசவன் {கிருஷ்ணன்}, ராமர் {பரசுராமர்}, அநிருத்தன், வலிமைமிக்கத் தேர்வீரனான பிரத்யும்னன், கதன், சாரணன், சாம்பன் ஆகியோரும், விருஷ்ணிகள் அனைவரும் இருந்தாலும், நான், தனக்கு இணையில்லாதவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், மனிதர்களில் புலியுமான அந்தச் சாத்யகியையே நமக்குத் துணையாக நியமிப்பேன்” என்றான் {அர்ஜுனன்}.

துவைத வனத்தில், நீ இல்லாத நிலையில், உன்னுடைய தகுதிகளை நல்லோரின் சபையில் உண்மையாக விவரித்தபோது, இதையே தனஞ்சயன் {அர்ஜுனன்} என்னிடம் சொன்னான். ஓ! விருஷ்ணி குலத்தோனே {சாத்யகி}, தனஞ்சயன், நான் மற்றும் பீமன் ஆகியோரின் எதிர்பார்ப்பைப் பொய்ப்பிப்பது உனக்குத் தகாது. பல்வேறு தீர்த்தங்களுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, நான் துவாரகைக்குச் சென்றேன்; அங்கே அர்ஜுனனிடம் நீ கொண்டிருக்கும் மரியாதையைக் கண்டேன். ஓ! சிநியின் பேரனே, உபப்லாவ்யத்தில் நாங்கள் இருந்த போது, உன்னைப் போல எங்களிடம் அத்தகு பாசம் காட்டியவர் வேறு எவரையும் நான் காணவில்லை. நீ நற்குலத்தில் பிறந்தவனாகவும், எங்களிடம் மரியாதை கொண்டவனாகவும் இருக்கிறாய். எனவே, எவன் உனக்கு நண்பனாகவும், ஆசானாகவும் இருக்கிறானோ அவனுக்கு அன்பு காட்டுதற்கு, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பெரும் வில்லாளியே, உனது நட்பாலும், ஆற்றலாலும், உயர்குடி பிறப்பாலும், உண்மையாலும் தகுந்த வழியில் செயல்படுவதே உனக்குத் தகும்.

ஓ! மது குலத்தோனே {சாத்யகியே}, துரோணரால் கவசம் அணிவிக்கப்பட்ட துரியோதனன், திடீரென அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்றிருக்கிறான். அதற்கு முன்னரே, கௌரவர்களில் பெரும் தேர்வீரர்கள் பிறரும் அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்றிருக்கின்றனர். அர்ஜுனனின் தேருக்கு எதிராக உரத்த ஆரவாரம் கேட்கப்படுகிறது. ஓ! சிநியின் பேரனே, ஓ! மரியாதைகளை அளிப்பவனே, விரைவாக அங்கே செல்வதே உனக்குத் தகும்.

துரோணர் உன்னை எதிர்த்து வந்தால், நன்கு ஆயுதம் தரித்திருக்கும் பீமசேனனும் நாங்களும், எங்கள் அனைத்துப் படைகளும் சேர்ந்து அவரைத் தடுப்போம். ஓ! சிநியின் பேரனே, போரில் பாரதத் துருப்புகள் ஓடுவதையும், அப்படி அவர்கள் ஓடுகையில், உரத்த ஓலங்களிடுவதையும் காண்பாயாக. அலைகள் நிறைந்த பெருங்கடலையே கலங்கடிக்கும் வலிமைமிக்கச் சூறாவளியைப் போல, ஓ! ஐயா, அந்தத் தார்தராஷ்டிரப் படை சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கலங்கடிக்கப்படுகிறது. எண்ணற்ற தேர்கள், மனிதர்கள் மற்றும் குதிரைகள் ஆகியவை வேகமாக நகர்வதால், (களமெங்கும்) தூசிப்படலம் படிப்படியாக எழுவதைப் பார். பகைவர்களின் கூட்டத்தைக் கொல்பவனான பல்குனன் {அர்ஜுனன்}, பரிகங்கள், வேல்கள் ஆகியவற்றைத் தரித்தவர்களும், தங்கள் படையணிகளில் பல குதிரைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான சிந்து-சௌவீரர்களால் சூழப்படுவதைப் பார். இந்தப் படையை வெல்லாமல், ஜெயத்ரதனை வெல்வது முடியாது. இந்த வீரர்கள், சிந்துக்களின் அட்சியாளனுக்காகத் {ஜெயத்ரதனுக்காகத்} தங்கள் உயிரை விடவும் தயாராக இருக்கின்றனர். கணைகள், ஈட்டிகள், நெடிய கொடிமரங்கள் ஆகியவற்றால் தடித்து, குதிரைகளும், யானைகளும் நிறைந்திருப்பதுமான வெல்லப்பட முடியாத தார்தராஷ்டிரப்படை அங்கே நிற்பதைப் பார்.

அவர்களது பேரிகைகளின் ஒலிகளையும், அவர்களது சங்குகளின் உரத்த முழக்கத்தையும், அவர்களால் முழங்கப்படும் பேராற்றல்மிக்கச் சிங்க முழக்கத்தையும், அவர்களது தேர்ச்சக்கர்களின் சடசடப்பொலிகளையும் கேட்பாயாக. அவர்களது யானைகளின் பிளிறல்களையும், அவர்களது காலாட்படை வீரர்களின் கனமான நடையொலிகளையும், பூமியையைக் குலுக்குவதாகத் தெரியுமளவுக்கு விரைந்து வரும் அவர்களது குதிரைப்படையின் நடையொலிகளையும் கேட்பாயாக. அவனுக்கு {அர்ஜுனனுக்கு} முன்னால் ஜெயத்ரதனின் படைப்பிரிவும், பின்னால் துரோணரின் படைப்பிரிவும் நிற்கின்றன. தேவர்களின் தலைவனையே பீடிக்க வல்ல அவனது {அர்ஜுனனது} எதிரிகளின் எண்ணிக்கை பெரிதாக இருக்கிறது. அடியற்ற ஆழம் கொண்ட அந்தப் படையில் மூழ்கும் அர்ஜுனன், தன் உயிரையே இழக்கக்கூடும். போரில் அவன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டால், என்னைப் போன்ற ஒருவனால் எப்படி வாழ முடியும்? நீ உயிரோடிருக்கையில் இத்தகு பேரிடர் எனக்கு வரலாமா?

கருநீல நிறமும், வயதால் இளமையும், சுருள் முடியும் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மிக அழகானவனாவான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஆயுதங்களின் பயன்பாட்டில் சுறுசுறுப்பானவனும், போர்க்கலையின் ஒவ்வொரு வகையை அறிந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அர்ஜுனன், சூரிய உதயத்தின் போது அந்தப் பாரதப் படைக்குள் ஊடுருவினான். இதோ பகல் முடியப் போகிறது. ஓ! விருஷ்ணி குலத்தோனே, அவன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்பதை நான் அறியவில்லை. பரந்த குருப் படை பெருங்கடலைப் போல இருக்கிறது. ஓ! ஐயா, பீபத்சு {அர்ஜுனன்} அதற்குள் தன்னந்தனியாகவே நுழைந்தான். அந்தப் படையானது, போரில் தேவர்களாலும் தடுக்கப்பட முடியாததாக இருக்கிறது. இன்றைய போரில், என் தீர்மானத்தைத் தெளிவாகக் கொள்வதில் நான் தவறுகிறேன் {போரில் எனக்குப் புத்தி செல்லவில்லை}. பெரும் வலிமை கொண்ட துரோணரும் எனது படைகளைப் பீடிக்கிறார். ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, அந்த மறுபிறப்பாளர் {பிராமணரான துரோணர்} எவ்வாறு போரில் உலவுகிறார் என்பதை நீயே பார்க்கிறாய்.

ஒன்றாகத் திரண்டு நிற்கும் பல பணிகளில், எதை முதலில் கவனிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் நீ நல்ல திறம்பெற்றவனாகவும் இருக்கிறாய். ஓ! மரியாதைகளை அளிப்பவனே {சாத்யகி}, அனைத்திலும் எது முக்கியமான பணியோ, அதைச் சுறுசுறுப்புடன் சாதிப்பதே உனக்குத் தகும். இந்தப் பணிகள் அனைத்திலும், நம் கவனத்தைக் கோரும் இதுவே (அர்ஜுனனுக்கு உதவும் பணியே) முதன்மையானது என நான் நினைகிறேன். போரில் அர்ஜுனனை மீட்பதையே முதலில் மேற்கொள்ள வேண்டும். தாசார்ஹ குலோத்தனை {கிருஷ்ணனைக்} குறித்து நான் வருந்தவில்லை. இந்த அண்டத்தின் தலைவனும், பாதுகாவலனும் அவனே {கிருஷ்ணனே}. ஓ! ஐயா, ஒன்றாகச் சேர்ந்திருக்கும் மூன்று உலகங்களையும், அந்த மனிதர்களில் புலியால் {கிருஷ்ணனால்} வெல்ல முடியும் என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். எனவே, பலவீனமான இந்தத் திருதராஷ்டிரப் படையைக் குறித்து நான் என்ன சொல்ல வேண்டும்?

எனினும், ஓ! விருஷ்ணி குலத்தோனே {வார்ஷ்ணேய, சாத்யகி}, அர்ஜுனன் இந்தப் போரில் கணக்கிலடங்காதவர்களால் பீடிக்கப்படுகிறான். அவன் உயிரை விடக்கூடும். அதற்காகவே நான் இவ்வளவு உற்சாகமற்றவனாக இருக்கிறேன். ஓ!, உன்னைப் போன்ற மனிதர்கள், அவனைப் போன்றவனைப் பின் தொடர வேண்டும் என்பதால், இத்தகு காலத்தில் என்னைப் போன்ற ஒருவனால் தூண்டப்பட்டு, அவன் {அர்ஜுனன்} சென்ற பாதையிலேயே செல்வாயாக. விருஷ்ணி குலத்தின் முதன்மையானோரில் இருவர் அதிரதர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள், ஓ! சாத்வதா {சாத்யகி}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பிரத்யும்னனும், இவ்வளவு புகழைப் பெற்ற நீயுமே ஆவீர்கள். ஆயுதங்களில் நாராயணனுக்கும், பலத்தில் சங்கர்ஷணருக்கும் {பலராமருக்கும்} நீ இணையானவனாவாய். துணிச்சலில், ஓ! மனிதர்களில் புலியே, நீ பீஷ்மரையும், துரோணரையும், போரில் சாதித்த அனைவரையும் விஞ்சி, தனஞ்சயனுக்கு இணையானவனாக இருக்கிறாய். ஓ! மனிதர்களில் புலியே, ஓ! மாதவா {சாத்யகி}, ஞானிகள், “சாத்யகியால் அடையப்பட முடியாதது எதுவுமில்லை” என்று உன்னைக் குறித்துப் பேசுகின்றனர்.

எனவே, ஓ! பெரும்பலம் கொண்டவனே {சாத்யகி}, அர்ஜுனன், நான் மற்றும் இங்கே இருக்கும் அனைவரது விருப்பங்களுக்குக் கீழ்ப்படிந்து, நான் உன்னிடம் சொன்னதைச் செய்வாயாக. ஓ !வலிய கரங்களைக் கொண்டவனே, அந்த விருப்பத்தை வீணாக்குவது உனக்குத் தகாது. உன் உயிரையே துச்சமாக மதித்து, போரில் ஒரு வீரனைப் போல நீ உலவுவாயாக. ஓ! சிநியின் பேரனே, தாசார்ஹ குலத்தின் கொழுந்துகள் போரில் உயிர்களைக் குறித்து எப்போதும் கவலைப் பட்டதில்லை. கோழைகள் மற்றும் இழிந்தவர்களின் நடைமுறைகளான போரைத் தவிர்ப்பது, அல்லது மண்மதில்களுக்குப் பின்னாலிருந்து போரிடுவது, அல்லது போரில் இருந்து ஓடுவது {புறங்காட்டுவது} ஆகியவற்றைத் தாசார்ஹர்கள் ஒருபோதும் செய்ததில்லை.

ஓ! சிநிக்களில் காளையே, நல்லான்மா {அற ஆன்மா} கொண்ட அர்ஜுனன் உனக்கு மூத்தவனாவான். வாசுதேவனோ {கிருஷ்ணனோ}, உனக்கும், புத்திசாலியான அர்ஜுனனுக்கும் மூத்தவனாவான். இவ்விரு காரணங்களில் என் கண்களைச் செலுத்தியே நான் உன்னிடம் இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன். நான் சொல்லும் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதே, நான், உனக்கு மூத்தோருக்கெல்லாம் மூத்தவனாவேன். நான் உன்னிடம் எதைச் சொல்கிறேனோ, அர்ஜுனனாலும் அஃது அங்கீகரிக்கப்பட்டதே ஆகும். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். தனஞ்சயன் {அர்ஜுனன்} எந்த இடத்தில் இருக்கிறானோ அங்கே செல்வாயாக. ஓ! கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே, இந்த என் வார்த்தைகளைக் கேட்டு, திருதராஷ்டிரரின் தீய மகனுடைய {துரியோதனனின்} இந்தப் படைக்குள் ஊடுருவுவாயாக. முறையாக இதனுள் ஊடுருவி, ஓ! சாத்வதா {சாத்யகி}, பெரும் தேர்வீரர்களுடன் மோதி, உனக்குத் தகுந்த அருஞ்செயல்களை வெளிப்படுத்துவாயாக” என்று {யுதிஷ்டிரன்} சொன்னான்” {என்றான் சஞ்சயன்}.

சாத்யகி, யுதிஷ்டிரன் உரையாடல்! – துரோண பர்வம் பகுதி – 110-யுதிஷ்டிரனின் பாதுகாப்புக்காகவே அர்ஜுனனால் தான் நியமிக்கப்பட்டிருப்பதாக யுதிஷ்டிரனிடம் சொன்ன சாத்யகி; யுதிஷ்டிரனின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் அர்ஜுனனை நோக்கிச் செல்லப்போவதில்லை என்ற சாத்யகி; யுதிஷ்டிரன் சொன்ன சமாதானம்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “முழுப் பாசத்தைக் கொண்டதும், ஏற்புடையதும், இனியவொலிகளால் நிரம்பியதும், மனத்திற்கு உகந்ததும், மகிழ்ச்சிகராமனதும், நியாயமானதுமான இவ்வார்தைகளை நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் சொன்னதும், ஓ! பாரதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} மறுமொழியாக, சிநிக்களில் காளையான அந்தச் சாத்யகி, “ஓ! மங்கா மகிமை கொண்டவரே {யுதிஷ்டிரரே}, நீதி நிறைந்ததும் {நியாயமானதும்}, மகிழ்ச்சிகரமானதும், பல்குனரின் {அர்ஜுனரின்} புகழுக்கு ஏற்றதுமான நீர் சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் கேட்டேன். உண்மையில் இத்தகு நேரத்தில், ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, (உமக்கு) அர்ப்பணிப்புள்ள என்னைப் போன்ற ஒருவனைக் காண்கையில், பார்த்தருக்கு நீர் கட்டளையிடுவதைப் போலவே அவனுக்கும் கட்டளையிடுவதே உமக்குத் தகும். என்னைப் பொறுத்தவரை, தனஞ்சயருக்காக {அர்ஜுனருக்காக} என் உயிரையும் விட நான் தயாராக இருக்கிறேன். மேலும், நீர் கட்டளையிட்டால், இந்தப் போரில் எந்தக் காரியைத்தைத் தான் நான் செய்யமாட்டேன்? இந்தப் பலவீனமான (திருதராஷ்டிரப்) படையைக் குறித்து நான் என்ன சொல்வேன்? ஓ! மனிதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, உம்மால் தூண்டப்பட்டால், தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடிய மூன்று உலகங்களோடும் போரிட நான் தயாராக இருக்கிறேன்.

இன்று நான் சுயோதனனின் மொத்தப் படையுடனும் போரிட்டுப் போரில் அதை வெல்வேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். பாதுகாப்புடன் இருக்கும் தனஞ்சயரை {அர்ஜுனரை}, பாதுகாப்பாக அடையும் நான், ஓ! மன்னா, ஜெயத்ரதன் கொல்லப்பட்ட பிறகே உமது முன்னிலைக்குத் திரும்புவேன். எனினும், ஓ! மன்னா, வாசுதேவர் {கிருஷ்ணர்} மற்றும் புத்திசாலியான அர்ஜுனர் ஆகியோர் சொன்ன வார்த்தைகளைக் குறித்து நான் உமக்குச் சொல்ல வேண்டும். நமது போர்வீரர்கள் அனைவரின் மத்தியிலும், வாசுதேவர் {கிருஷ்ணர்} கேட்டுக் கொண்டிருக்கும்போது, அர்ஜுனர் என்னை உறுதியுடன் (உறுதிமிக்க இவ்வார்த்தைகளால்) மீண்டும் மீண்டும் வேண்டிக் கொண்டோர்.

{அர்ஜுனர்}, “ஓ! மாதவா {சாத்யகி}, இன்று நான் ஜெயத்ரதனைக் கொல்லும் வரை, போரில் மேன்மையான தீர்மானத்துடன் மன்னரை {யுதிஷ்டிரரைக்} கவனமாகப் பாதுகாப்பாயாக. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {சாத்யகி}, உன்னிடமோ, பெரும் தேர்வீரனான பிரத்யும்னனிடமோ ஏகாதிபதியை {யுதிஷ்டிரரின் பாதுகாப்பை} ஒப்படைத்தால், கவலையற்ற இதயத்துடன் ஜெயத்ரதனை நோக்கிச் செல்வேன். குருக்களில் முதன்மையானவராகக் கருதப்படும் போர்வீரரானத் துரோணர் எவ்வாறு போரிடுவார் என்பதை நீ அறிவாய். ஓ! தலைவா {சாத்யகி}, அனைவருக்கு முன்னிலையிலும் அவர் ஏற்ற உறுதிமொழியையும் நீ அறிவாய். அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, மன்னரை {யுதிஷ்டிரரைக்} கைப்பற்ற எப்போதும் ஆவலாக இருக்கிறார். போரில் அவர் {துரோணர்}, மன்னர் யுதிஷ்டிரரைப் பீடிக்கத் தகுந்தவராவார்.

மனிதர்களில் சிறந்தவரும், நீதிமானுமான மன்னர் யுதிஷ்டிரரின் பாதுகாப்பில் உன்னை நியமித்துவிட்டு, நான் இன்று ஜெயத்ரதனை அழிக்கச் செல்வேன். ஓ! மாதவா {சாத்யகி}, ஜெயத்ரதனைக் கொன்றுவிட்டு நான் விரைவில் திரும்புவேன். நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரைப் பலவந்தமாகக் கைப்பற்றுவதில் துரோணர் வெல்லாதவாறு நீ பார்த்துக் கொள்வாயாக. ஓ! மாதவா, பரத்வாஜர் மகனால் {துரோணரால்} யுதிஷ்டிரர் கைப்பற்றப்பட்டால், ஜெயத்ரதனைக் கொல்வதில் என்னால் வெல்ல முடியாது, என் துயரமும் அதிகமாகும். மனிதர்களில் சிறந்தவரும், பாண்டுவின் உண்மை நிறைந்த மகனுமான அவர் {யுதிஷ்டிரர்} கைப்பற்றப்பட்டால், நான் மீண்டும் காட்டுக்கே செல்வேன் என்பது தெளிவானதாகும் {நிச்சயமாகும்}. எனவே, சினத்தால் தூண்டப்பட்ட துரோணர், போரில் யுதிஷ்டிரரைப் பிடிப்பதில் வென்றுவிட்டால், ஜெயத்ரதனை நான் வென்றாலும், அஃது எந்தப் பலனையும் உண்டாக்காது என்பது வெளிப்படையானது. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! மாதவா {சாத்யகி}, எனவே, எனக்கு ஏற்புடையதைச் செய்வதற்காகவும், எனது வெற்றி மற்றும் புகழுக்காவும், போரில் மன்னரை {யுதிஷ்டிரரைக்} காப்பாயாக” என்றார் {அர்ஜுனர்}.

எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பரத்வாஜர் மகன் {துரோணர்} மூலம் தொடரும் அச்சத்தின் விளைவாக, சவ்யசச்சின் {அர்ஜுனர்} உம்மை {பாதுகாப்பதை} என்னிடம் நம்பிக்கையின் பேரில் ஒப்படைத்தார். ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, ருக்மினியின் மகனை (பிரத்யும்னனைத்) தவிரப் போரில் துரோணருக்குப் பொருத்தமான வேறு எவனும் இல்லை என்பதை நானே தினமும் பார்க்கிறேன். புத்திசாலியான பரத்வாஜரின் மகனுக்குப் போரில் நானும் பொருத்தமானவனாகவே கருதப்படுகிறேன். எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, என் மதிப்பை நானே பொய்த்துக் கொள்வதோ, எனது ஆசான் (அர்ஜுனரின்) கட்டளைகளை அலட்சியம் செய்வதோ, உம்மை விட்டு அகல்வதோ கூடாது என்பது தெளிவாகிறது. ஊடுருவமுடியாத கவசம்பூண்டிருக்கும் ஆசான் (துரோணர்), தன் கரநளினத்தின் விளைவால் போரில் உம்மை அடைந்து, சிறு பறவையுடன் {விளையாடும்} சிறுவனைப் போல உம்முடன் விளையாடுவார்.

மகரக் கொடி தாங்கிய கிருஷ்ணரின் மகன் {பிரத்யும்னன்} இங்கே இருந்தால், அர்ஜுனரைப் போலவே அவன் உம்மைப் பாதுகாப்பான் என்பதால், அவனிடம் {உம்மை பாதுகாக்கும் பணியை} ஒப்படைத்திருக்க முடியும். {ஆனால் இப்போதோ}, நீரே உம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கும். நான் சென்றுவிட்டால், உம்மைப் பாதுகாப்பது யார்? நான் அர்ஜுனரிடம் செல்லும்போது, துரோணரை எதிர்த்துச் செல்லக்கூடியவர் யார்? ஓ! மன்னா,  அர்ஜுனனைக் குறித்த அச்சமேதும் இன்று உமதாக வேண்டாம். எந்தச் சுமை எவ்வளவு கனமானதாக இருந்தாலும் அவர் ஒருபோதும் {அர்ஜுனர்} உற்சாகமிழப்பதில்லை.

அவருக்கு {அர்ஜுனருக்கு} எதிரான போர்வீரர்களான சௌவீரகர்கள், சிந்தவப் பௌரவர்கள், வடக்கத்தியர், தெற்கத்தியர், கர்ணனின் தலைமையிலானோர் ஆகியோரின் தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வந்தாலும் அர்ஜுனருக்குப் பதினாறில் ஒரு பங்குக்கும் அவர்கள் ஈடாகமாட்டார்கள். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், அனைத்து ராட்சச இனங்கள், கின்னரர்கள், பெரும்பாம்புகள், உண்மையில் அசைவன, அசையாதன ஆகிய அனைத்தையும் கொண்ட மொத்த உலகமும் அவருக்கு எதிராக ஒன்றாகத் திரண்டு எழுந்தாலும், போரில் அர்ஜுனருக்கு அவர்கள் ஈடாகமாட்டார்கள். ஓ! மன்னா, இஃதை அறிந்து கொண்டு தனஞ்சயர் நிமித்தமான உமது அச்சத்தை விலக்குவீராக. கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவர்களும், பெரும் வில்லாளிகளுமான வீரக் கிருஷ்ணர்கள் {வீர கருப்பர்கள்} இருவரும் எங்கிருக்கிறார்களோ, அங்கே அவர்களது நோக்கத்திற்குச் சிறு தடங்கலும் ஏற்பட முடியாது.

உமது தம்பியின் {அர்ஜுனரின்} தெய்வீக வலிமை, ஆயுதங்களில் சாதனை, வளம், போரில் கோபம், நன்றியுணர்வு மற்றும் கருணையை நினைத்துப் பாரும். ஓ! மன்னா, அர்ஜுனரிடம் செல்வதற்காக நான் இந்த இடத்தைவிட்டு அகன்றால், போரில் துரோணர் வெளிக்காட்டப் போகும் ஆயுதங்களின் அற்புத அறிவையும் நினைத்துப் பாரும். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஆசான் {துரோணர்} உம்மைக் கைப்பற்றுவதில் பேராவல் கொண்டிருக்கிறார். மேலும், ஓ! மன்னா, ஓ! பாரதரே, தன் உறுதிமொழிக்கு நன்மை செய்வதையும் ஆவலுடன் விரும்புகிறார். ஓ! மன்னா, உமது பாதுகாப்பில் கவனமாக இருப்பீராக. நான் சென்ற பிறகு உம்மைப் பாதுகாப்பவர் யார்? யாரிடம் நம்பிக்கை வைத்து, பிருதையின் மகனான பல்குனரை {குந்தியின் மகன் அர்ஜுனரை} நோக்கி நான் செல்வது? {அந்த நம்பிக்கைக்குரிய} அவர் யார்? ஓ! பெரும் மன்னா, ஓ! குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, இந்தப் பெரும்போரில் உம்மை எவரிடமாவது ஒப்படைக்காமல், நிச்சயம் நான் அர்ஜுனரிடம் செல்ல மாட்டேன் என்பதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஓ! புத்திசாலி மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, ஓ! மன்னா, உமது நுண்ணறிவின் துணை கொண்டு, அனைத்துக் கண்ணோட்டங்களில் இருந்தும் சிந்தித்து, உயர்ந்த நன்மையைத் தரவல்லது எது என்பதை உறுதி செய்த பிறகு எனக்குக் கட்டளையிடுவீராக” என்றான் {சாத்யகி}.

இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் {சாத்யகியிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! மாதவா, நீ சொன்னது போலவே தான் இருக்கிறது. எனினும், ஓ! ஐயா, இவையனைத்தாலும் கூட, என் இதயம் அர்ஜுனன் நிமித்தமாக அமைதியை அடையவில்லை. என்னைப் பாதுகாத்துக் கொள்வதில் பெரும் முன்னெச்சரிக்கைகளை நான் எடுத்துக் கொள்வேன். என்னால் ஆணையிடப்படும் நீ தனஞ்சயன் {அர்ஜுனன்} எங்கே சென்றானோ அங்கே செல்வாயாக. போரில், என் பாதுகாப்புடன், அர்ஜுனனை நோக்கி நீ செல்ல வேண்டிய அவசியத்தை {ஒப்பிட்டு} என் புத்தியால் ஆராய்ந்தால் பின்னதே எனக்கு விரும்பத்தக்கதாக இருக்கிறது. எனவே, தனஞ்சயன் எங்குச் சென்றானோ அங்கே செல்ல நீ தயாராவாயாக.

வலிமைமிக்கப் பீமன் என்னைப் பாதுகாப்பான். தன் உடன் பிறந்த தம்பிகளுடன் கூடிய பிருஷதன் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, வலிமைமிக்க மன்னர்கள் அனைவரும், திரௌபதியின் மகன்களும் என்னைப் பாதுகாப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஓ! ஐயா, கேகயச் சகோதரர்கள் ஐவர், ராட்சசன் கடோத்கசன், விராடன், துருபதன், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, பெரும் பலத்தைக் கொண்ட திருஷ்டகேது, குந்திபோஜன், நகுலன், சகாதேவன், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் ஆகிய இவர்கள் அனைவரும் என்னை மிகக் கவனமாகப் பாதுகாப்பார்கள் என்பதிலும் ஐயமில்லை. தன் துருப்புகளுக்குத் தலைமையில் இருக்கும் துரோணராலும், கிருதவர்மனாலும் கூட, போரில் நம்மைத் தாக்குவதிலோ, என்னைப் பீடிப்பதிலோ வெல்ல முடியாது.

எதிரிகளை எரிப்பவனான திருஷ்டத்யும்னன், தன் ஆற்றலை வெளிப்படுத்தி, கடலைத் தடுக்கும் கரையைப் போலக் கோபக்காரத் துரோணரைத் தடுப்பான். பகைவர்களைக் கொல்பவனான பிருஷதன் மகன் எங்கிருக்கிறானோ, அங்கே துரோணரால் நமது துருப்புகளைப் பலவந்தமாக மீறிச் செல்ல முடியாது. இந்தத் திருஷ்டத்யும்னன், கவசம் பூண்டவரும், வில், கணைகள், வாள் ஆகியவற்றைத் தரித்தவரும், விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவருமான துரோணரின் அழிவுக்காகவே நெருப்பில் இருந்து உதித்தவனாவான். ஓ! சிநியின் பேரனே {சாத்யகி}, என்னைக் குறித்து வருத்தப்படாமல், கவலையற்ற இதயத்துடன் செல்வாயாக. போரில் திருஷ்டத்யுமனன், கோபக்காரத் துரோணரைத் தடுப்பான்” {என்றான் சஞ்சயன்}.

கைராதகமது உண்ட சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 111-யுதிஷ்டிரனின் வார்த்தைகளை ஏற்ற சாத்யகி; தான் கடக்க வேண்டிய தொலைவையும், வீரர்களையும், படைகளையும் யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக் காட்டியது; தனக்கு வேண்டிய ஆயுதங்கள் மற்றும் ஏற்பாடுகளை யுதிஷ்டிரனிடம் கேட்டது; நீராடி, மங்கலச் சடங்குகளைச் செய்து, கைராதகம் மற்றும் தேன் குடித்து ஸ்நாதக பிராமணர்களின் ஆசிகளைப் பெற்றுப் புறப்பட்ட சாத்யகி; சாத்யகியைப் பின்தொடர்ந்து சென்ற பீமன்; பீமனைத் தடுத்து யுதிஷ்டிரனின் பாதுகாப்புக்கு நிற்குமாறு சாத்யகி வேண்டியது; பீமன் திரும்பியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சிநி குலத்துக் காளை {சாத்யகி}, மன்னனை {யுதிஷ்டிரனை} விட்டு தான் நீங்கிச் சென்றால் அர்ஜுனன் செய்யப்போகும் கண்டனத்திற்கு அஞ்சினான். எனினும், (யுதிஷ்டிரனுக்குக் கீழ்ப்படியாவிட்டால்) மக்கள் நிச்சயம் அதைக் கோழைத்தனமெனச் சுட்டிக்காட்டுவார்கள், என்பதைக் கண்ட அவன் {சாத்யகி}, தனக்குள்ளேயே, “அர்ஜுனரிடம் செல்வதற்கு நான் அஞ்சுகிறேன் என மக்கள் சொல்ல வேண்டாம்” என்று சொன்னான்.

இதைக் குறித்து மீண்டும் மீண்டும் சிந்தித்தவனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், மனிதர்களில் காளையுமான அந்தச் சாத்யகி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, உமது பாதுகாப்பிற்கு இவ்வேற்பாடுகள் போதுமானது எனத் தாம் கருதினால், உமது உத்தரவை ஏற்று நான் பீபத்சுவிடம் {அர்ஜுனரிடம்} செல்வேன். ஓ! மன்னா, எனக்குப் பல்குனரை {அர்ஜுனரை} விட அன்புக்குரிய வேறு எவரும் இந்த மூன்று உலகத்தில் இல்லை என்பதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஓ! மதிப்பு அளிப்பவரே, {உமது} உத்தரவின் பேரில், நான் அவரது பாதையைத் தொடர்ந்து செல்வேன். உமக்காக என்னால் செய்யத்தகாதது என்று எதுவுமில்லை. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, என் ஆசானின் {அர்ஜுனரின்} கட்டளைகள் எனக்கு எப்போதும் கனமானதே.

ஆனால், ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, உமது கட்டளைகளோ, எனக்கு அதைவிடக் கனமாதே {மேன்மையானதே}. உமது சகோதரர்களான [1] கிருஷ்ணரும், தனஞ்சயரும் {அர்ஜுனரும்}, உமக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்கின்றனர். ஓ! தலைவா, அர்ஜுனருக்காக உமது உத்தரவுகளை என் சிரம் மேல் கொண்டு, ஓ! மனிதர்களில் காளையே, ஊடுருவமுடியாத இந்தப் படையை நான் பிளந்து செல்வேன். கடலுக்குள் உலாவும் மீனைப் போல, துரோணரின் இந்தப் படைக்குள் கோபத்துடன் உலவும் நான், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கர்ணன் மற்றும் கிருபர் ஆகிய முதன்மையான தேர்வீரர்களால் பாதுகாக்கப்பட்டு, தன் துருப்புகளை நம்பிக்கொண்டு, பாண்டுவின் மகன் {அர்ஜுனர்} மீது கொண்ட அச்சத்துடன் ஜெயத்ரதன் எங்கே நிற்கிறானோ அங்கே நான் செல்வேன்.ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இங்கிருந்து செல்லும் தொலைவு மூன்று யோஜனைகளாகும் [2]. பார்த்தர் {அர்ஜுனர்}, ஜெயத்ரதனைக் கொல்லத் தயாராக இருக்கும் அந்த இடத்தை நினைத்துப் பார்க்கிறேன். பார்த்தர் மூன்று யோஜனைகள் தொலைவில் இருந்தாலும், அவரது பாதையை நான் நெஞ்சுரத்துடன் தொடர்ந்து சென்று, ஜெயத்ரதன் கொல்லப்படும் வரை அவருடனேயே {அர்ஜுனருடனேயே} இருப்பேன். மூத்தவர்களின் கட்டளைகள் இல்லாமல் போரிடச் செல்பவன் எவன் இருக்கிறான்? மேலும் உம்மால் கட்டளையிடப்பட்டதைப் போலக் கட்டளையிடப்பட்டும், போரிடமால் இருக்க என்னைப் போன்ற ஒருவனால் எப்படி முடியும்?ஓ! தலைவா, நான் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை நான் அறிவேன். பெருங்கடலைப் போன்றதும், கலப்பைகள், ஈட்டிகள், கதாயுதங்கள், பராசங்கள், கேடயங்கள், வாள்கள், ரிஷ்டிகள், வேல்கள், முதன்மையான கணைகள் ஆகியவற்றால் நிறைந்த இந்தப் படை எனும் பெருங்கடலை நான் இன்று கலங்கடிப்பேன். இதோ நீர் காணும் இந்த யானைப்படை, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அஞ்சனம் என்ற இனப்பெயரைக் கொண்டவையும், பெரும் ஆற்றலைக் கொண்டவையும், பெரும் எண்ணிக்கையிலான மிலேச்சர்களால் நடத்தப்படுபவையும் {மிலேச்ச பாகர்களைக் கொண்டவையும்}, தாக்குவதில் சிறந்தவையும், போரில் மகிழ்ச்சி கொள்பவையும், மேகங்களில் இருந்து பொழியும் மழையைப் போலத் தங்கள் மதநீரை பெருக்குபவையும், தங்கள் முதுகில் இருப்போரால் தூண்டப்பட்டாலும் எப்போதும் பின்வாங்காதவையுமான ஆயிரம் யானைகளைக் கொண்டதாகும். ஓ! மன்னா, கொல்லப்படாமல் இவற்றை வெல்ல முடியாது.

மேலும், இதோ நீர் காணும் ஆயிரக்கணக்கான தேர் வீரர்கள் அனைவரும், அரசப் பரம்பரையில் பிறந்தவர்களும், மகாரதர்களுமாவர். இவர்கள் ருக்மரதர்கள் [3] என்று அழைக்கப்படுகிறார்கள். ஓ! ஏகாதிபதி, ஆயுதங்களிலும், தேரில் இருந்து போரிடுவதிலும், யானைகளின் முதுகில் இருந்து போரிடுவதிலும் இவர்கள் சாதித்தவர்களாவர். ஆயுத அறிவியலில் மேன்மையான தேர்ச்சி பெற்ற இவர்கள், தங்கள் முஷ்டிகளால் போரிடுவதிலும் சாதித்தவர்களாவர். கதாயுதம் கொண்டு போரிடுவதில் திறம்பெற்ற இவர்கள், கைச்சண்டைக் கலையிலும் மேன்மையான தேர்ச்சி பெற்றவர்களாவர். மேலும் இவர்கள் கத்தியைக் கொண்டு தாக்குவதிலும், வாள் மற்றும் கேடயத்தோடு எதிரியின் மீது பாய்வதிலும் இணையான சாதுர்யம் கொண்டவர்களாவர்.துணிச்சலும், கல்வியும் கொண்ட இவர்கள் பகைமையால் தூண்டப்பட்டவர்களாக இருக்கின்றனர். ஓ! மன்னா, ஒவ்வொரு நாளும் இவர்கள் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களைப் போரில் வெல்கின்றனர். கர்ணனால் ஆணையிடப்படும் இவர்கள், துச்சாசனனுக்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கின்றனர். வாசுதேவரே {கிருஷ்ணரே} கூட இவர்களைப் பெரும் தேர்வீரர்களென மெச்சுகிறார். எப்போதும் கர்ணனின் நன்மையை வேண்டும் இவர்கள், அவனுக்குக் {கர்ணனுக்குக்} கீழ்ப்படிந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஓ! மன்னா, கர்ணனின் உத்தரவின் பேரால், அர்ஜுனருடன் போரிடுவதில் இருந்து இவர்கள் திரும்பியிருப்பதால், களைப்பில்லாதவர்களாக, சிரமத்தை அடையாதவர்களாக, ஊடுருவ முடியாத கவசங்களைப் பூண்டு, வலுவான விற்களைத் தரித்துக் கொண்டு, துரியோதனனாலும் ஆணையிடப்பட்டு வந்திருக்கும் இந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், நிச்சயம் எனக்காகவே காத்திருக்கிறார்கள். ஓ! கௌரவரே, உமது நன்மைக்காக இவர்களை நொறுக்கிய பிறகு, சவ்யசச்சினுடைய {அர்ஜுனருடைய} பாதையை நான் பின்தொடர்ந்து செல்வேன்.

கவசம்பூண்டவையும், கிராதர்களால் செலுத்தப்படுபவையும், ஆபரணங்கள் பூண்டவையுமாக அதோ நீர் காணும் எழுநூறு {700} பிற யானைகளும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, முன்பொரு சமயம், தன் உயிரை விரும்பிய கிராதர்களின் மன்னனால் {சுமணனால்} [4], பல வேலைக்காரர்களையும் அவற்றின் வரிசையில் சேர்த்துச் சவ்யசச்சினிடம் {அர்ஜுனனிடம்} கொடுக்கப்பட்டவையாகும். ஓ! மன்னா, முன்னர் இவை உமது பணியில் ஈடுபட நியமிக்கப்படிருந்தன. உமக்கு எதிராக இவை இப்போது போரிடுவதால், காலம் கொண்டுவரும் ஏற்றத்தாழ்வுகளைக் காண்பீராக. போரில் வீழ்த்துவதற்குக் கடினமான கிராதர்களால் இந்த யானைகள் செலுத்தப்படுகின்றன. அக்னி குலத்தில் உதித்த இவர்கள் அனைவரும் யானைகளில் இருந்து போரிடுவதில் சாதித்தவர்களாவர். முன்னர் இவர்கள் அனைவரும் போரில் சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வெல்லப்பட்டவர்களுமாவர். இப்போது அவர்கள், துரியோதனனின் உத்தரவுகளின் பேரில் எனக்காகக் கவனமாகக் காத்திருக்கின்றனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, போரில் வீழ்த்தக் கடினமான இந்தக் கிராதர்களை என் கணைகளால் கொன்ற பிறகு, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்லும் நோக்கோடு உள்ள அர்ஜுனரின் பாதையை நான் பின்தொடர்ந்து செல்வேன்.அஞ்சனம் [5] என்ற குலத்தில் உதித்தவையும், ஊடுருவ முடியாத தோலைக் கொண்டவையும், நன்கு பயிற்சியளிக்கப்பட்டவையும், அலங்கரிக்கப்பட்டவையும், வாயில் மத நீர் ஒழுகுபவையும், முழுதாகத் தங்கக்கவசத்தால் நன்கு அலங்கரிக்கப்பட்டவையும், ஐராவதத்திற்கே ஒப்பானவையுமான அந்தப் பெரும் யானைகள் (வேறு யானைகள்), போரில் பெரும் வல்லமைமிக்கவையாகும். வடக்கு மலைகளில் இருந்து வந்திருக்கும் இவை, உறுதியான அங்கங்களைக் கொண்டவர்களும், போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களும், எஃகு கவசங்களை அணிந்தவர்களும், சீற்றமிக்கவர்களுமான கள்வர்களால் செலுத்தப்படுகின்றன. அங்கே அவர்களில், பசுவுக்குப் பிறந்தவர்களும், குரங்குக்குப் பிறந்தவர்களும், பல்வேறு பிற உயிரினங்களுக்குப் பிறந்தவர்களும், மனிதர்களுக்குப் பிறந்தவர்களும் இருக்கின்றனர். பாவம்நிறைந்தவர்களான மிலேச்சர்களாலான அந்தப் படைப்பிரிவு, புகையின் நிறத்தைக் கொண்டதாகத் தூரத்தில் தெரிகிறது.இவர்களையும், எண்ணிலடங்கா க்ஷத்திரியர்களையும், கிருபரையும், தேர்வீரர்களில் முதன்மையான துரோணரையும், சிந்துக்களின் ஆட்சியாளனையும் {ஜெயத்ரதனையும்}, கர்ணனையும் அடைந்த அவன் {துரியோதனன்}, பாண்டவர்களை மிக எளிதாக நினைக்கிறான். விதியால் உந்தப்பட்ட அவன் {துரியோதனன்}, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனாக {கிருதார்த்தனாகத்} தன்னைக் கருதிக் கொள்கிறான். எனினும், என்னால் பெயர் குறிப்பிட்ட இவர்கள் அனைவரும் இன்று எனது கணைகள் அடையும் தொலைவிலேயே இருப்பார்கள். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, அவர்கள் மனோவேகம் கொண்டவர்களாகவே இருந்தாலும் என்னிடம் இருந்து அவர்கள் தப்ப மாட்டார்கள். பிறரின் ஆற்றலைச் சார்ந்தே இருக்கும் இளவரசனான அந்தத் துரியோதனனால் எப்போதும் மதிக்கப்படும் இந்த வீரர்கள், என் கணை மேகங்களால் பீடிக்கப்பட்டு அழிவைச் சந்திப்பார்கள்.

ஓ! மன்னா, தங்கக் கொடிமரங்களைக் கொண்டவர்களாக, தடுப்பதற்குக் கடினமானவர்களாக அதோ நீர் காணும் அந்தத் தேர்வீரர்கள் பிறர் காம்போஜர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள், துணிச்சல்மிக்கவர்களாகவும், சாதித்தவர்களாகவும், ஆயுதங்களின் அறிவியலில் உறுதியான அர்ப்பணிப்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் நன்மையை விரும்பும் அவர்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் உறுதியுடனும் இருக்கிறார்கள். ஓ! பாரதரே, முழுமையாக ஓர் அக்ஷௌஹிணி அளவுக்கு இருக்கும் அந்தக் கோபக்காரப் போர்வீரர்கள், குருவீரர்களால் நன்கு பாதுகாக்கப்பட்டு, எனக்காகவே கவனமாக நிற்கின்றனர் {காத்திருக்கின்றனர்}. ஓ! மன்னா, அவர்கள் தங்கள் கண்களை என்மேல் கொண்டு விழிப்புடனே இருக்கின்றனர். வைக்கோல் குவியலை அழிக்கும் நெருப்பைப் போலவே அவர்கள் அனைவரையும் நான் நிச்சயம் அழிப்பேன்.

எனவே, ஓ! மன்னா, தேர்களைத் தயார் செய்வோர், என் தேரில் உரிய இடங்களில் அம்பறாத்தூணிகளையும், தேவையான அனைத்தையும் வைப்பார்களாக. உண்மையில், இத்தகு பயங்கரப் போரில் பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை நிச்சயம் எடுத்துச் செல்ல வேண்டும். கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான காம்போஜர்களுடன் நான் மோதப் போவதால், படை அறிவியலின் பேராசிரியர்கள் அறிவுறுத்துவதை விட ஐந்து மடங்கு அளவுக்கு (தேவையான ஆயுதங்களால்) தேர் நிரப்பப்பட வேண்டும். போர்க்கலையின் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டவர்களும், கடும் நஞ்சுக்கு ஒப்பானவர்களும், தாக்குவதில் சாதித்தவர்களும், துரியோதனனால் எப்போதும் நன்கு நடத்தப்படுபவர்களும், துரியோதனனின் நன்மையையே நோக்கமாகக் கொண்டவர்களுமான கிராதர்களுடன் நான் மோத வேண்டும். சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலுக்கு நிகரான ஆற்றலைக் கொண்டவர்களும், நெருப்பைப் போன்ற கொடூரம் கொண்டவர்களும் சுடர்மிக்கக் காட்டுநெருப்பைப் போல அணைப்பதற்குக் கடினமானவர்களுமான சகர்களோடும் நான் மோத வேண்டும். உண்மையில், தடுப்பதற்குக் கடினமான பல போர்வீரர்களுடன் இந்தப் போரில் நான் மோத வேண்டும். இதனால், நல்ல இனத்தைச் சேர்ந்தவையும், மங்கலக் குறிகளைக் கொண்டவையும், நன்கு அறியப்பட்டவையுமான குதிரைகள், அவற்றின் தாகம் தணிக்கப்பட்டு, முறையாகச் சீரமைக்கப்பட்ட பிறகு என் தேரில் பூட்டப்பட வேண்டும்” என்றான் {சாத்யகி}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இதன் பிறகு யுதிஷ்டிரன், கணைகளாலும், பல்வேறு வகையான ஆயுதங்களாலும் நிறைந்த அம்பறாத்தூணிகளையும், உண்மையில், தேவையான அனைத்தையும், சாத்யகியின் தேரில் இடம்பெறச் செய்தான். பிறகு, நன்கு சேணம்பூட்டப்பட்ட அவனது சிறந்த குதிரைகள் நான்கையும், நுகத்தில் இருந்து விடுவித்த மனிதர்கள், தங்க நிறம் கொண்டவையும், நன்கு பயிற்சி அளிக்கப்பட்டவையும், பெரும் வேகம் கொண்டவையும், உற்சாகமானவையும், நன்கு அடிபணிபவையுமான அவ்விலங்குகளைக் {நீர்} குடிக்கவும், நடக்கவும், குளிக்கவும், உண்ணவும் செய்து, தங்க ஆரங்களால் அவற்றை அலங்கரித்து, அவற்றின் {உடல்களிலிருந்த} கணைகளைப் பிடுங்கி மீண்டும் அவனது தேரின் நுகத்தில் முறையாகப் பூட்டினர். அந்தத் தேரில் தங்கப் பிடரிமயிர்களைக் கொண்ட சிங்கம் பொறிக்கப்பட்ட ஒரு நெடிய கொடிமரம் நிறுவப்பட்டது. ஆயுதங்களின் அதிக எடையைத் தாங்கிக் கொண்டிருந்த அந்த வாகனத்தில் அந்தக் கொடிமரத்தைச் சுற்றி வெண்மேகங்களைப் போன்ற நிறத்தில் கொடிகளும் பொருத்தப்பட்டன. தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் குதிரைகளை அந்தத் தேரின் நுகத்தில் பூட்டிய பிறகு, தேரோட்டியும், சாத்யகியின் அன்புக்குரிய {உயிர்} நண்பனுமான தாருகன் தம்பி {முகுந்தன்} [6] வந்து, வாசவனிடம் {இந்திரன்} தேர் தயாராக இருப்பதாகச் சொல்லவந்த மாதலி போலப் பின்னவனிடம் {சாத்யகியிடம்} தேர் தயாராக இருப்பதாகச் சொன்னான்.பிறகு நீராடி தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, மங்கலச் சடங்குகள் அனைத்தையும் செய்த சாத்யகி, தனக்கு ஆசிகள் கூறிய ஸ்நாதகப் பிராமணர்கள் ஆயிரம்பேருக்கு தங்க நிஷ்கங்களைக் கொடுத்தான். அந்த ஆசிகளால் அருளப்பட்டவனும், அழகர்களில் முதன்மையானவனும், வழிபடத்தகுந்த வீரனுமான அந்தச் சாத்யகி, கைராதம் {கைராதகம்} [7] மற்றும் தேனைக் குடித்து, போதையால் சிவந்த கண்கள் உருளப் பிரகாசமாக ஒளிர்ந்தான். பிறகு, வெண்கலக் கண்ணாடியை [8] தொட்டு, பெரும் மகிழ்ச்சியால் நிறைந்து, தன் சக்தி இரட்டிப்படைந்தவனான அவன் {சாத்யகி} சுடர்மிக்க நெருப்பாகத் தெரிந்தான். தன் தோள்களில் வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்ட அந்த முதன்மையான தேர்வீரன் {சாத்யகி}, கவசம்பூண்டு, ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, மறுபிறப்பாளர்களைக் {பிராமணர்களைக்} கொண்டு நிவர்த்திச் சடங்குகளையும் செய்து கொண்டான். அழகான கன்னியர் அவன் {சாத்யகி} மீது பொரிகளையும் நறுமணப் பொருட்களையும், மலர் மாலைகளையும் பொழிந்து அவனைக் கௌரவித்தனர். பிறகு அந்த வீரன், தன் கரங்களைக் கூப்பி யுதிஷ்டிரனின் பாதங்களை வணங்கினான், பின்னவனும் {யுதிஷ்டிரனும்} அவனை உச்சி முகர்ந்தான். இந்த முறைமைகள் அனைத்தையும் செய்த அவன் {சாத்யகி} தன் முதன்மையான தேரில் ஏறினான்.அப்போது, உற்சாகமானவையும், வலுவானவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையும், வெல்லப்பட முடியாதவையும், சிந்து இனத்தைச் சேர்ந்தவையுமான குதிரைகள், அவனை {சாத்யகியை} அந்த வெற்றித் தேரில் சுமந்து சென்றன. அதேபோலப் பீமசேனனும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் கௌரவிக்கப்பட்டு, அந்த ஏகாதிபதியை {யுதிஷ்டிரனை} மரியாதையாக வணங்கிய பிறகு சாத்யகியுடன் புறப்பட்டான். எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும் உமது படைக்குள் ஊடுருவப் போகும் வேளையில், அவர்களது எதிரிகளான உமது துருப்புகள், துரோணரைத் தங்கள் தலைமையில் கொண்டு அசையாதிருந்தன.

அப்போது சாத்யகி, கவசம்பூண்டு தன்னைப் பின்தொடர்ந்து வரும் பீமனைக் கண்டு, அந்த வீரனை {பீமனை} வணங்கி, அவனிடம் இந்த இனிமையான வார்த்தைகளைப் பேசினான். உண்மையில், வீரச் சாத்யகி ஒவ்வொரு அங்கத்திலும் இன்பத்தால் நிறைந்து பீமனிடம், “ஓ! பீமரே, மன்னரை நீர் பாதுகாக்க வேண்டும். அனைத்தையும் விட இதுவே உமது மேலான கடமையாகும். காலம் வந்துவிட்ட படையான இதை {இந்த எதிரிப் படையை} நான் பிளந்து செல்லப் போகிறேன். இப்போதும், எப்போதும் மன்னரின் பாதுகாப்பே உமது மேலான கடமையாகும். ஓ! பீமரே, நீர் எனது ஆற்றலை அறிவீர், {எனவே} எனது நன்மையை விரும்பித் திரும்புவீராக” என்றான் {சாத்யகி}. சாத்யகி இப்படிச் சொன்னதைக் கேட்ட பீமன், “{அப்படியெனில்} உன் நோக்கத்தின் வெற்றிக்காக நீ செல்வாயாக. ஓ! மனிதர்களில் சிறந்தவனே {சாத்யகியே}, நான் மன்னரைப் பாதுகாப்பேன்” என்று மறுமொழி கூறினான். இப்படிச் சொல்லப்பட்ட அந்த மதுகுலத்தோன் {சாத்யகி}, பீமனிடம், “ஓ! பிருதையின் மகனே {பீமரே}, திரும்பிச் செல்வீராக. இப்படி என் தகுதிகளால் {புண்ணியங்களால்} வெல்லப்பட்ட நீர் இன்று என் விருப்பங்களுக்குக் கீழ்ப்படிவதால் எனது வெற்றி உறுதியானதாகும். உண்மையில், ஓ! பீமரே, இந்த மங்கலச் சகுனங்கள் அனைத்தும் என் வெற்றியை உறுதி செய்கின்றன. பாண்டுவின் உயர் ஆன்ம மகனால் {அர்ஜுனரால்} சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்ட பிறகு நான் அற ஆன்மா கொண்ட மன்னர் யுதிஷ்டிரரைத் தழுவுவேன்” என்று பதில் கூறினான் {சாத்யகி}.

பீமனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி, அந்தச் சிறந்த போர்வீரனைத் தழுவி விடைபெற்றுக் கொண்ட அவன் {சாத்யகி}, மான்கூட்டத்தைக் காணும் ஒரு புலியைப் போல உமது துருப்புகளின் மேல் கண்களைச் செலுத்தினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையை இப்படிப் பார்த்த அவனைக் கண்ட உமது துருப்புகள் மீண்டும் மலைப்படைந்து, பயங்கரமாக நடுங்கத் தொடங்கின. பிறகு, ஓ! மன்னா, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் ஆணைக்கிணங்க அர்ஜுனனைக் காண விரும்பிய சாத்யகி, தீடீரென உமது துருப்புகளை எதிர்த்து மோதினான்” {என்றான் சஞ்சயன்}.

கிருதவர்மனைக் கடந்த சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 112-சாத்யகிக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த வீரர்கள்; சாத்யகியைக் கண்டு ஓடிய கௌரவ வீரர்கள்; சாத்யகியுடன் மோதிய துரோணர்; துரோணரைத் தவிர்த்துச் சென்ற சாத்யகி, சாத்யகிக்கும் கிருதவர்மனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; கிருதவர்மனின் தேரோட்டியைக் கொன்று போஜர்களின் படைப்பிரிவில் இருந்து வெளியேறிய சாத்யகி; துரோணர் சாத்யகியைப் பின்தொடர்ந்தது; காம்போஜர்களை அடைந்த சாத்யகி…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யுயுதானன் {சாத்யகி}, போரிடும் விருப்பத்தால் உமது துருப்புகளை எதிர்த்துச் சென்றபோது, மன்னன் யுதிஷ்டிரன், துரோணரின் தேரை அடைவதற்காக, யுயுதானனைத் தன் படை சூழப் பின்தொடர்ந்து சென்றான். பிறகு, பாஞ்சலர்களின் மன்னனுடைய மகனும் வெல்லப்பட முடியாத வீரனுமான திருஷ்டத்யும்னனும், மன்னன் வசுதானனும் [1], பாண்டவப் படையிடம் பேரொலியுடன், “போரில் வெல்லப்பட முடியாத வீரனான சாத்யகி (கௌரவப் படையின் ஊடாக) எளிமையாகக் கடந்து செல்வதற்கு ஏதுவாக {உதவிட} வாருங்கள், விரைவாகத் தாக்குங்கள், எதிரியை எதிர்த்து விரையுங்கள். வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர் அவனை வெல்லப் போராடுவார்கள்” என்று சொன்னார்கள். இதைச் சொன்ன (பாண்டவப் படையின்) பெரும் தேர்வீரர்கள், தங்கள் எதிரிகளின் மீது மூர்க்கமாகப் பாய்ந்தனர். உண்மையில் அவர்கள் அனைவரும், “சாத்யகியை வெல்ல முயல்வோரை நாங்கள் வெல்வோம்” என்று சொல்லிக் கொண்டே விரைந்தனர்.அப்போது சாத்யகியின் தேரருகே உரத்த ஆரவாரம் கேட்டது. எனினும், உமது மகனின் {துரியோதனனின்} படையானது சாத்யகியின் கணைகளால் மறைக்கப்பட்டுத் தப்பி ஓடியது. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்வத குலத்தோனால் {சாத்யகியால்} அந்தப் படை, போராடும் நூறு குழுக்களாகப் பிளக்கப்பட்டது. அந்தப் படை அப்படிப் பிளந்த போது, வலிமைமிக்கத் தேர்வீரனான சிநி (சிநியின் பேரன் {சாத்யகி}), எதிரியின் படைப்பிரிவின் முகப்பில் இருந்த வீரமிக்கப் பெரும் வில்லாளிகள் எழுவரை நொறுக்கினான். மேலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுடர்விடும் நெருப்பின் தழல்களுக்கு ஒப்பான தன் கணைகளால் அவன் {சாத்யகி} பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மன்னர்களையும், பிற வீரர்கள் பலரையும் யமலோகத்திற்கு அனுப்பி வைத்தான். சிலநேரங்களில் அவன் {சாத்யகி}, ஒரே கணையால் நூறு வீரர்களையும், சில நேரங்களில் நூறு கணைகளால் ஒரே ஒரு வீரனையும் துளைத்தான்.

உயிரினங்களை அழிக்கும் பெரும் ருத்ரனைப் போல அவன் {சாத்யகி} யானைப் பாகர்களையும், குதிரைகள் மற்றும் தேரோட்டிகளுடன் கூடிய தேர்வீரர்களையும் கொன்றான். இத்தகு கரநளினத்தை வெளிக்காட்டி, இத்தகு கணை மேகங்களைப் பொழிந்த சாத்யகியை எதிர்த்துச் செல்ல உமது துருப்புகளில் எவரும் துணியவில்லை. நீண்ட கரங்களைக் கொண்ட அந்த வீரனால் {சாத்யகியால்} தரையில் நசுக்கப்பட்டுப் பீதியடைந்திருந்த அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள் அனைவரும், செருக்கு மிக்க அந்த வீரன் {சாத்யகி} பார்த்துக் கொண்டிருக்கும்போதே களத்தைவிட்டுச் சென்றனர். அவன் {சாத்யகி} தனி ஒருவனாக இருந்தாலும், பலராகக் கண்ட அவர்கள், அவனது சக்தியால் மலைப்படைந்தனர்.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் பரவிக்கிடந்தவையான நொறுங்கிய தேர்கள், உடைந்த நீடங்கள் [2] மற்றும் சக்கரங்கள், விழுந்த குடைகள், கொடிமரங்கள், இருசுக்கட்டைகள், கொடிகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகைகள், தோள்வளைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், சந்தனம் பூசப்பட்டவையுமான கரங்கள், ஓ! மன்னா, யானையின் துதிக்கைக்கு ஒப்பானவையும், பாம்புகளின் ஒடுங்கிய உடலைப் போன்றவையுமான மனிதத் தொடைகள், காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், அகன்ற பெரிய கண்களையும் சந்திரனுக்கு ஒப்பான அழகையும் கொண்ட வீரர்களின் முகங்கள் ஆகியவற்றால் பூமி மிக அழகாகத் தெரிந்தது. பல்வேறு முறைகளில் அறுக்கப்பட்டு விழுந்து கிடக்கும் பெரும் உடல் கொண்ட யானைகளுடன், மலைகளால் பரவியிருக்கும் ஒரு பெரிய சமவெளியைப் போன்று அந்தத் தரையானது மிக அழகாகத் தெரிந்தது. நீண்ட கரங்களைக் கொண்ட அந்த வீரனால் {சாத்யகியால்} நொறுக்கப்பட்டு, கொல்லப்பட்டு, தரையில் விழுந்து கிடக்கும் குதிரைகள், தங்கத்தால் மெருகூட்டப்பட்டவையும், முத்துக்களின் வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் அழகிய கடிவாளங்களோடும், அழகிய வடிவம் மற்றும் அமைப்புடன் கூடிய தங்கள் கவசங்களோடும் மிக அழகாகத் தெரிந்தன. பல்வேறு வகைகளிலான உமது துருப்பினரைக் கொன்ற அந்தச் சாத்வத குலத்தோன் {சாத்யகி}, உமது படையைக் கலங்கடித்து முறியடித்த படியே உமது படைக்குள் நுழைந்தான்.சாத்யகி, முன்பு தனஞ்சயன் {அர்ஜுனன்} சென்ற அதே வழியில் தானும் செல்ல விரும்பினான். அப்போது துரோணர் வந்து அவனைத் {சாத்யகியைத்} தடுத்தார். பரத்வாஜர் மகனுடன் {துரோணருடன்} மோதிய யுயுதானன் {சாத்யகி}, சினத்தால் நிறைந்து, கரையில் மோதியும் நிற்காத பெரும் வெள்ளமென நிற்காமல் சென்றான். எனினும் துரோணர், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானனை அந்தப் போரில் தடுத்து, உயிர் நிலைகளையே ஊடுருவவல்ல ஐந்து கூரிய கணைகளால் அவனைத் துளைத்தார். இருப்பினும், அந்தப் போரில் சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கல்லில் கூராக்கப்பட்டவையும், கங்கம் மற்றும் மயிலின் இறகுகளைக் கொண்டவையும், தங்கச் சிறகுகளைத் தரித்தவையுமான ஏழு கணைகளால் துரோணரைத் துளைத்தான். பிறகு துரோணர், சாத்யகியையும், அவனது குதிரைகளையும், தேரோட்டிகளையும் ஆறு கணைகளால் பீடித்தார்.

வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானனால் துரோணரின் அந்தச் சாதனையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சிங்க முழக்கமிட்ட அவன் {சாத்யகி}, பத்துக் கணைகளாலும், பிறகு ஆறாலும், பிறகும் வேறு எட்டு கணைகளாலும் துரோணரைத் துளைத்தான். மேலும் யுயுதானன், மீண்டும் துரோணரைப் பத்துக் கணைகளாலும், அவரது தேரோட்டியை ஒன்றாலும், அவரது நான்கு குதிரைகளை நான்கு கணைகளாலும் துளைத்தான். மேலும் சாத்யகி, மற்றுமொரு கணையால், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, துரோணரின் கொடிமரத்தையும் தாக்கினான். பிறகு துரோணர், வேகமாகச் செல்பவையும், விட்டில் பூச்சிகளைப் போல எண்ணிக்கையில் கணக்கற்றவையுமான கணைகளால் சாத்யகியையும், அவனது தேர், குதிரைகள், தேரோட்டி, கொடிமரம் ஆகியவற்றையும் விரைவாக மறைத்தார். அதே போல யுயுதானனும், பெரும் வேகம் கொண்ட கணக்கற்ற கணைகளால் அச்சமற்ற வகையில் துரோணரை மறைத்தான்.

அப்போது துரோணர், யுயுதானனிடம், “உன் ஆசான் (அர்ஜுனன்), அவனுடன் போரிட்டுக் கொண்டிருந்த என்னைத் தவிர்த்துவிட்டு, என் பக்கவாட்டின் வழியாக ஒரு கோழையைப் [3] போலப் போரை விட்டுச் சென்றுவிட்டான். ஓ! மது குலத்தோனே {சாத்யகி}, உன் ஆசானைப் போலவே நீயும் இந்தப் போரில் என்னை விரைவாகத் தவிர்க்கவில்லையெனில், என்னுடன் போரிடும் நீ இன்று உயிருடன் தப்ப முடியாது” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட சாத்யகி {துரோணரிடம்}, “நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் உத்தரவின் பேரில் தனஞ்சயரின் பாதையை நான் பின்தொடர்ந்து செல்கிறேன். ஓ! பிராமணரே, நீர் அருளப்பட்டிருப்பீராக, (நான் உம்முடன் போரிட்டால்) நான் நேரத்தை இழக்க நேரிடும். ஒரு சீடனானவன் தன் ஆசான் நடந்த வழியிலேயே எப்போதும் நடக்க வேண்டும். எனவே, நான் என் ஆசான் நடந்த பாதையையே பின்பற்றிச் செல்வேன்” என்றான்.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவ்வளவே சொன்ன அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஓ! மன்னா, ஆசானை {துரோணரைத்} தவிர்த்துவிட்டுத் திடீரென முன்னேறிச் சென்றான். அவன் {சாத்யகி} தன் தேரோட்டியிடம் {முகுந்தனிடம்}, துரோணர் அனைத்து வகைகளிலும் எனது முன்னேற்றத்தைத் தடுக்கவே முனைவார். ஓ! சூதா, இந்த என் முக்கியமான வார்த்தைகளைக் கேட்டுப் போரில் கவனமாகச் செல்வாயாக. அங்கே பெரும் காந்திமிக்க அவந்திகளின் படை தெரிகிறது. அதற்கு அடுத்ததாகத் தெற்கத்தியரின் வலிமைமிக்கப் படை இருக்கிறது. அதற்கு அடுத்து, பாஹ்லீகர்களின் பெரும்படை இருக்கிறது. பாஹ்லீகர்களுக்குப் பக்கத்தில், கர்ணனின் உத்தரவின் பேரில் போரிடும் தீர்மானத்துடன் இருக்கும் வலிமைமிக்கப் படை இருக்கிறது.

ஓ! தேரோட்டியே இந்தப் படைகள் அனைத்தும் தங்களுக்குள் ஒவ்வொரு வகையில் வேறுபாடுகளைக் கொண்டவை, ஆனால் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் அவை போர்க்களத்தில் ஒன்றையொன்று காத்துக் கொள்ளவும் செய்கின்றன. இந்தப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை அடைந்து குதிரைகளை உற்சாகமாகச் செலுத்துவாயாக. உண்மையில், குதிரைகள் சகித்துக்கொள்ளக்கூடிய வேகத்தில் அவற்றைச் செலுத்தி, ஓ! தேரோட்டியே, ஆயுதங்களை உயர்த்திய கரங்களுடன் கூடிய பாஹ்லீகர்களும், பலவேறு நாடுகளைச் சேர்ந்த காலாட்படை வீரர்கள், வரிசையாக நிற்கும் யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களுடன் கூடிய படைப்பிரிவுகளுடன், சூதன் மகனின் {கர்ணனின்} தலைமையில் நிற்கும் எண்ணற்ற தெற்கத்தியர்களும் எங்கே இருக்கிறார்களோ, அங்கே என்னைக் கொண்டு செல்வாயாக” என்றான் {சாத்யகி}.

தன் தேரோட்டியிடம் இவ்வளவே சொல்லி, அந்தப் பிராமணரை (துரோணரைத்) தவிர்த்துவிட்டுச் சென்ற அவன் {சாத்யகி}, கடுமையானதும், வலிமையானதுமான கர்ணனின் இரு படைப்பிரிவுகளுக்கு ஊடான திறந்தவெளியின் வழியே கடந்து செல்லும்படி தன் தேரோட்டியிடம் சொன்னான். எனினும் கோபத்தால் தூண்டப்பட்ட துரோணர், எண்ணற்ற கணைகளை அவன் {சாத்யகி} மீது ஏவிபடியே பின்னால் இருந்து அவனைத் தொடர்ந்து சென்றார். உண்மையில் அந்த ஆசான் {துரோணர்}, திரும்பிப் பார்க்கும் விருப்பம் ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருந்தவனும், உயர்ந்த அருளைக் கொண்டவனுமான யுயுதானனை நெருக்கமாகவே பின்தொடர்ந்தார்.

கர்ணனின் பெரும்படையைத் தன் கூரிய கணைகளால் தாக்கிய சாத்யகி, அளவில்லாததும், பரந்திருந்ததுமான பாரதர்களின் படைக்குள் ஊடுருவினான். எனினும் யுயுதானன் {சாத்யகி}, அந்தப் படைக்குள் நுழைந்த போது (அவனை எதிர்த்து நின்ற) துருப்புகள் தப்பி ஓடின. இதன்காரணமாகக் கோபம் நிறைந்த கிருதவர்மன், சாத்யகியைத் தடுப்பதற்காக முன்வந்தான். முன்னேறிவரும் கிருதவர்மனை ஆறு கணைகளால் தாக்கிய வீரச் சாத்யகி, மேலும் நான்கு கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் விரைவாகக் கொன்றான் [4]. மீண்டும் அவன் {சாத்யகி}, வேறு நான்கு கணைகளால் கிருதவர்மனின் நடுமார்பைத் துளைத்தான். அவன், பெரும் வேகம் கொண்ட, நேரான பதினாறு கணைகளால் மீண்டும் கிருதவர்மனின் நடுமார்பைத் துளைத்தான்.ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரர்ரே}, இப்படி அந்தச் சாத்வத குலத்தோனின் {சாத்யகியின்} கடும் சக்தி கொண்ட பல கணைகளால் மோதப்பட்ட கிருதவர்மனால் அவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானதும், காற்றின் வேகத்தைக் கொண்டதுமான வத்ஸதந்தத்தை {கன்றின் பல்லுக்கு ஒப்பான முனை கொண்ட கணையைக்} குறி பார்த்த அவன் {கிருதவர்மன்}, தன் வில்லின் நாணைத் தன் காது வரை இழுத்து சாத்யகியின் மார்பைத் துளைத்தான். அழகிய சிறகுகளைக் கொண்ட அந்தக் கணை, அவனது கவசத்தையும், உடலையும் ஊடுருவிச் சென்று இரத்தக் கறையுடன் பூமிக்குள் நுழைந்தது. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரர்ரே}, உயர்ந்த ஆயுதங்களைக் கொண்ட வீரனான அந்தக் கிருதவர்மன், கணைகள் பலவற்றை ஏவி, கணைகள் பொருத்தப்பட்ட சாத்யகியின் வில்லை அறுத்தான். அந்தப் போரில், சினத்தால் நிறைந்த அவன் {கிருதவர்மன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் கூர்மையைக் கொண்ட பத்து கணைகளால் கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகியின் நடுமார்பைத் துளைத்தான்-தன் வில் உடைந்த காரணத்தால், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையான சாத்யகி, கிருதவர்மனின் வலது கை மீது ஓர் ஈட்டியை ஏவினான். வலுவான {வேறொரு} வில்லொன்றை எடுத்து வளைத்த யுயுதானன், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகளைத் தன் எதிரியின் மீது விரைவாக ஏவி, அந்தக் கணை மழையால் கிருதவர்மனையும், அவனது தேரையும் முழுமையாக மறைத்தான். இப்படி ஹிருதிகனின் மகனை {கிருதவர்மனை} மறைத்த சாத்யகி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஒரு பல்லத்தால் எதிரியின் தேரோட்டியுடைய தலையை அவனது உடலில் இருந்து துண்டித்தான். இப்படிக் கொல்லப்பட்ட அந்த ஹிருதிகன் மகனுடைய தேரோட்டி அந்தப் பெரும் தேரில் இருந்து கீழே விழுந்தான். இதன் காரணமாக, தேரோட்டியை இழந்த கிருதவர்மனின் குதிரைகள் [5] பெரும் வேகத்துடன் தப்பி ஓடின.பெரும் கலக்கமடைந்த அந்தப் போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்} தானே அக்குதிரைகளைத் தடுத்தான். வீரம் கொண்ட அந்தப் போர்வீரன் {கிருதவர்மன்}, கையில் வில்லுடன் தன் தேரில் (போருக்குத் தயாராக) நின்றான். இந்தச் சாதனையைக் கண்ட அவனது {கிருதவர்மனது} துருப்புகள் அஃதை உயர்வாகப் பாராட்டின. குறுகிய காலத்திற்கு ஓய்ந்திருந்த கிருதவர்மன், பிறகு தன் நல்ல குதிரைகளைத் தூண்டினான். அச்சமற்ற அவன் {கிருதவர்மன்}, தன் எதிரிகளைப் பெரும் அச்சங்கொள்ளச் செய்தான். எனினும், அந்நேரத்தில் சாத்யகி அவனைத் தாண்டிச் சென்றுவிட்டான். எனவே இப்போது கிருதவர்மன், சாத்யகியைத் தொடர்ந்து செல்லாமல் பீமசேனனை எதிர்த்து விரைந்தான்.

இப்படியே போஜர்களின் படைப்பிரிவை விட்டு வெளியேறிய சாத்யகி, காம்போஜர்களின் வலிமைமிக்கப் படைப்பிரிவை நோக்கிப் பெரும் வேகத்தோடு சென்றான். அங்கே துணிச்சல்மிக்கவர்களும், வலிமைமிக்கவர்களுமான அந்தத் தேர்வீரர்களால் தடுக்கப்பட்டவனும், தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான யுயுதானனால் ஓர் அடியும் நகர முடியவில்லை. அதேவேளையில், தன் துருப்புகளை உரிய இடங்களில் நிறுத்திய துரோணர், அவர்களைப் பாதுகாக்கும் சுமையைப் போஜர்களின் ஆட்சியாளனிடம் {கிருதவர்மனிடம்} ஒப்படைத்துவிட்டு, போரிடும் ஆசையால் உறுதியான தீர்மானத்தைச் செய்து கொண்டு, யுயுதானனை நோக்கி பெரும் வேகத்துடன் விரைந்தார்.

இப்படித் யுயுதானனைப் பின்னாலிருந்து தொடர்ந்து செல்லும் துரோணரைக் கண்ட பாண்டவப் படையின் முதன்மையான வீரர்கள் உற்சாகத்துடன் அவரைத் தடுக்கத் தொடங்கினர். எனினும் பீமசேனனின் தலைமையிலான பாஞ்சாலர்கள் அனைவரும், தேர்வீரர்களில் முதன்மையான ஹிருதிகன் மகனை {கிருதவர்மனை} அணுகி மகிழ்ச்சியற்றவர்களாக ஆனார்கள். ஓ! மன்னா, தன் ஆற்றலை வெளிப்படுத்திய வீரக் கிருதவர்மன், சிறிது உற்சாகமற்றவர்களாக இருந்தாலும், பெரும் வீரியத்துடனேயே போரிட்டு வந்த அந்த வீரர்கள் அனைவரையும் தடுத்தான். அச்சமற்ற அவன் {கிருதவர்மன்}, தன் கணைமழையின் மூலம் தன் எதிரிகளின் விலங்குகளைப் பலவீனமடையச் செய்தான். எனினும், (பாண்டவப் படையின்) துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், போஜர்களின் ஆட்சியாளனால் {கிருதவர்மனால்} இப்படிப் பீடிக்கப்பட்டாலும், பெரும்புகழுக்காகப் போராடும் உயர் பிறப்புக் கொண்ட படைவீரர்களைப் போல அந்தப் போஜப்படையை எதிர்த்துப் போரிடத் தீர்மானித்தனர்” {என்றான் சஞ்சயன்}.

கிருதவர்மனைக் கடக்க முடியாத பாண்டவர்கள்! – துரோண பர்வம் பகுதி – 113-தன் படைகளின் தோல்வியைக் கேட்டுத் துயரடைந்த திருதராஷ்டிரன்; திருதராஷ்டிரனை நிந்தித்த சஞ்சயன்; பாண்டவர்கள் அனைவரையும் தனி ஒருவனாகவே தடுத்த கிருதவர்மனின் ஆற்றல்; பீமனின் வில்லையும் கொடிமரத்தையும் வெட்டி அவனைத் தாக்கி நடுங்கச் செய்த கிருதவர்மன்; சிகண்டியின் வில்லை அறுத்து, அவனைத் தாக்கி மயக்கமடையச் செய்து களத்தைவிட்டே விரட்டியது; பாண்டவப் படை சிதறி ஓடியது.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “நமது படையும் தலையாயச் சிறப்புகள் பலவற்றைக் கொண்டுள்ளது. மேன்மையானதாகவும் அது கருதப்படுகிறது. ஓ! சஞ்சயா, அறிவியலின் விதிகளின் படி சமமாக அணிவகுக்கப்பட்டுள்ள அதுவும் {படையும்} எண்ணற்றவர்களைக் கொண்டதாகவே இருக்கிறது [1]. எப்போதும் நம்மால் நன்றாக நடத்தப்படும் அது, நமக்கு அர்ப்பணிப்புள்ளதாகவே எப்போதும் இருக்கிறது. பரந்த எண்ணிக்கையின் பலம், அதற்கு ஓர் அற்புதத் தன்மையை அளிக்கிறது. முன்பே அதன் ஆற்றல் சோதிக்கப்பட்டுள்ளது.

படைவீரர்கள் மிக முதிர்ந்தவர்களாகவோ, மிக இளமையானவர்களாகவோ இல்லை. அவர்கள் மெலிவாகவோ, பருமனாகவோ இல்லை. நன்கு வளர்க்கப்பட்ட பலமான உடற்கட்டுகளையும், சுறுசுறுப்பையும் கொண்ட அவர்கள், நோயிலிருந்து விடுபட்டவர்களாகவே இருக்கின்றனர். கவசம் பூண்டிருக்கும் அவர்கள், நன்கு ஆயுதங்களைத் தரித்திருக்கின்றனர். அனைத்து வகையான ஆயுதப் பயிற்சிகளிலும் அவர்கள் அர்ப்பணிப்புள்ளவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள், யானைகளின் முதுகுகளில் ஏறவும், இறங்கவும், முன் நகரவும், பின்நகரவும், திறனுடன் தாக்கவும், அணிவகுக்கவும், பின்வாங்கவும் திறன்மிக்கவர்களாகவே இருக்கின்றனர். யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களை நடத்துவதில் அவர்கள் அடிக்கடி சோதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், பரம்பரைக்காவோ {பிறப்பின் அடிப்படையிலோ}, உதவிசெய்வதற்காகவோ, உறவுமுறைக்காகவோ இல்லாமல் {தேர்ந்தெடுக்கப்படாமல்}, முறையாக ஆய்வு செய்யப்பட்ட {தேர்ந்தெடுக்கப்பட்ட} பிறகே ஊதியத்தால் மகிழ்விக்கப்படுகின்றனர். அவர்கள், தானாக வந்த கும்பலல்ல, ஊதியமில்லாமல் என் படைக்குள் அனுமதிக்கப்பட்டவர்களுமல்ல. நல்ல பிறப்பு கொண்டவர்களையும், மரியாதைக்குரிய மனிதர்களையும் கொண்டிருக்கும் எனது படை, நன்கு உண்டு, மனநிறைவுடனும், பணிவுடனும் இருக்கிறது. அவர்களுக்குப் போதுமான அளவுக்கு வெகுமதிகள் அளிக்கப்படுகின்றன. அவர்கள் அனைவரும் புகழ்பெற்றவர்களாகவும், நுண்ணறிவு மிக்கவர்களாகவும் இருக்கின்றனர். மேலும் அவர்கள், ஓ! மகனே {சஞ்சயா}, லோகபாலர்களுக்கு ஒப்பானவர்களும், மனிதர்களில் சிறந்தவர்களுமான நமது முதன்மையான ஆலோசகர்கள் மற்றும் நியாயமான செயல்களைச் செய்யும் பிறரால் பாதுகாக்கப்படுகின்றனர். நமக்கு ஏற்புடையதைச் செய்ய முயலும் எண்ணற்ற பூமியின் ஆட்சியாளர்களும், தங்கள் படைகள் மற்றும் தொண்டர்களுடன் நமது தரப்பை அடைந்தவர்களும் அவர்களைப் பாதுகாக்கின்றனர்.

உண்மையில், நமது படையானது, அனைத்துத் திசைகளில் இருந்து பாயும் எண்ணற்ற ஆறுகளின் நீரால் நிறைந்த பரந்த பெருங்கடலுக்கு ஒப்பானதாகும். குதிரைகள், தேர்கள் நிறைந்த அது {நமது படை}, சிறகுகளற்றதாக இருப்பினும், சிறகு படைத்த காற்று வாசிகளுக்கு {பறவைகளுக்கு} ஒப்பாகவே இருக்கிறது. குமடுகளில் மதநீர் ஒழுகும் யானைகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதாகவும் அது தெரிகிறது. எனவே, இத்தகு படையே கொல்லப்படுகிறதெனில், விதியைத் தவிர இது வேறு என்னவாக இருக்க முடியும்?

(பெருங்கடலைப் போன்ற அதற்கு) பெரும் எண்ணிக்கையிலான போராளிகள் ஓயாமால் பாயும் அதன் நீராகவும், குதிரைகளும், பிற விலங்குகளும் அதன் பயங்கர அலைகளாவும் ஆகின்றன. எண்ணற்ற வாள்கள், கதாயுதங்கள், ஈட்டிகள், கணைகள் மற்றும் வேல்கள், அதன் (அந்தப் பெருங்கடலில் செயல்படும்) துடுப்புகளாகின்றன. (போர்வீரர்களின்) கொடிமரங்கள், ஆபரணங்கள், முத்துக்கள், இரத்தினங்கள் ஆகியன அதை அலங்கரிக்கும் தாமரைகளாகின்றன. விரைந்து செல்லும் குதிரைகளும், யானைகளும், மூர்க்கத்துடன் அதைக் கலங்கடிக்கும் காற்றாகின்றன. துரோணர் அந்தப் பெருங்கடலின் அடியற்ற குகையாகவும் {ஆழமான பாதாளமாகவும்}, கிருதவர்மன் அதன் சுழலாகவும் ஆகின்றனர். ஜலசந்தன் அதன் வலிமைமிக்க முதலையாகிறான், கர்ணன் சக்தியாலும் செருக்காலும் அதைப் பெருக வைக்கும் சந்திரோதயம் ஆகிறான்.

அந்தப் பாண்டவக் காளை {அர்ஜுனன்}, பெருங்கடலைப் போலப் பரந்திருக்கும் எனது படையின் ஊடாக அதைப் பிளந்து தனது தனித்தேரில் வேகமாகச் சென்றான், யுயுதானனும் {சாத்யகியும்} அவனைப் பின்தொடர்ந்து சென்றான் எனும்போது, ஓ! சஞ்சயா, சவ்யசச்சினும் {அர்ஜுனனும்}, சாத்வத குலத்தின் அந்த முதன்மையான தேர்வீரனும் {சாத்யகியும்}, எஞ்சியிருக்கும் என் துருப்புகளைக்கூட உயிரோடு விடும் எந்த வாய்ப்பையும் நான் காணவில்லை. மிகவும் சுறுசுறுப்பான அந்த வீரர்கள் இருவரும் (முன்னணியில் நிறுத்தப்பட்டிருந்த படைப்பிரிவுகளைப்) பிளந்து சென்றதைக் கண்டும், காண்டீவத்தின் கணைகள் அடையும் தொலைவுக்குள் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} இருப்பதைப் பார்த்தும், விதியால் உந்தப்பட்ட கௌரவனால் {துரியோதனனால்} உண்மையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அந்நேரத்தில், அனைவரும் தீவிரமாகப் போரிட்டுக் கொண்டிருந்த போது அவர்களுக்கு {கௌரவர்களுக்கு} என்ன நேர்ந்தது?

ஓ! ஐயா {சஞ்சயா}, கூடியிருக்கும் குருக்களைக் காலனால் விழுங்கப்பட்டவர்களாகவே நான் கருதுகிறேன். உண்மையில், போரில் அவர்களது ஆற்றலானது, முன்பொருகாலத்தில் இருந்ததைப் போல இப்போது காணப்படவே இல்லை. கிருஷ்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {ஆர்ஜுனன்} ஆகிய இருவரும் காயம்படாமலே (குரு) படைக்குள் நுழைந்துவிட்டனர். ஓ! சஞ்சயா, அவர்களைத் தடுக்கவல்லவர்கள் எவனும் அந்தப் படையில் இல்லை. பெரும் தேர்வீரர்களாக இருக்கும் போராளிகள் பலரும், ஆய்வுக்குப் பிறகே எங்களால் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அவரவருக்குத் தகுந்த ஊதியத்தாலும், மற்றும் பிறர் இனிய பேச்சாலும் (எங்களால்) கௌரவிக்கப்பட்டனர். ஓ! மகனே, என் துருப்புகளில் நல்ல பதவிகளால் (அவனுக்குக் கொடுக்கப்பட்டு) கௌரவிக்கப்படாதவன் எவனும் இல்லை. ஒவ்வொருவனும் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தையும், அவனது சேவைகளின் தன்மைக்கேற்ற பங்கீடுகளையும் பெறுகிறான்.

என் படையில், ஓ! சஞ்சயா, போரில் திறமையற்ற எவனும் இல்லை, {அவனுக்குத்} தகுந்த ஊதியத்தை விடக் குறைவாகப் பெறுபவன் எவனும் இல்லை, அல்லது எந்த ஊதியமும் பெறாதவன் என எவனும் இல்லை. படைவீரர்கள், என் சக்திக்குத் தக்கபடி பரிசுகளாலும், கௌரவங்களாலும், ஆசனங்களாலும் எப்போதும் வணங்கப்படுகின்றனர். என் மகன்களாலும், என் உறவினர்களாலும், என் நண்பர்களாலும் இதே நடத்தையே அவர்களிடம் பின்பற்றப்படுகின்றன. எனினும், சவ்யசச்சின் {அர்ஜுனன்} வந்த உடனேயே, அவனாலும், சிநியின் பேரனாலும் {சாத்யகியாலும்} அவர்கள் வெல்லப்படுகின்றனரெனில் விதியைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? அவர்களைப் பாதுகாப்பவர்களும், பாதுகாவலர்களால் பாதுகாக்கப்படுபவர்களும் அதே வழியில் பின்தொடர்ந்து செல்கின்றனர். ஜெயத்ரதனுக்கு முன்பாக அர்ஜுனன் வந்ததைக் கண்டு, மூடனான என் மகனால் {துரியோதனனால்} என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? சாத்யகியும் படைக்குள் நுழைவதைக் கண்ட துரியோதனன், அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தது என எந்த நடவடிக்கையைச் சிந்தித்தான்? உண்மையில், அனைத்து ஆயுதங்களின் தீண்டலுக்கும் அப்பாற்பட்டவர்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும் என் படைக்குள் நுழைவதைக் கண்டு, போரில் என் போர்வீரர்களால் என்ன தீர்மானம் எடுக்கப்பட்டது?

தாசார்ஹ குலத்தோனான கிருஷ்ணன், சிநி குலத்துக் காளை {சாத்யகி} ஆகிய இருவரும் அர்ஜுனனின் காரியத்தில் ஈடுபடுவதைக் கண்ட என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன். சாத்வதன் {சாத்யகி}, அர்ஜுனன் ஆகிய இருவரும் என் படையின் ஊடாகக் கடந்து செல்வதையும், குருக்கள் தப்பி ஓடுவதையும் பார்த்த என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

தங்கள் தேர்வீரர்கள் எதிரியை அடக்குவதில் நம்பிக்கை இழந்து திரும்புவதையும், களத்தில் இருந்து ஓடுவதற்கு அவர்களது இதயத்தை நிலைநிறுத்துவதையும் பார்த்த என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

தங்கள் ஆயிரக்கணக்கான குதிரைகள், யானைகள், தேர்கள் ஆகியனவும், வீரப் போராளிகளும் களத்தைவிட்டுக் கவலையுடன் ஓடுவதால் என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

அர்ஜுனனின் கணைகளால் பீடிக்கப்பட்டு ஓடும் பெரும் யானைகள் பலவற்றையும், வீழ்ந்தவை மற்றும் விழுபவை ஆகிய பிறவற்றையும் பார்த்து என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

சாத்யகி மற்றும் பார்த்தனால் சாரதிகளை இழுந்த குதிரைகளையும், தேர்களை இழந்த போர்வீரர்களையும் கண்டு, என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

மாதவன் {கிருஷ்ணன்} மற்றும் பார்த்தனால் {அர்ஜுனன்} பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள் கொல்லப்படுவதாலும், முறியடிக்கப்படுவதாலும் என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

பெரும் எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள் அனைத்துத் திசைகளிலும் ஓடுவதைக் கண்டு, வெற்றியில் நம்பிக்கையிழந்த என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

ஒருக்கணமும் வெல்லப்படாமல், துரோணரின் படைப்பிரிவின் ஊடாகக் கடந்து சென்ற அவ்விரு வீரர்களையும் கண்ட என் மகன்கள் துயரால் நிறைந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

ஓ மகனே {சஞ்சயா}, மங்கா மகிமை கொண்ட இரு வீரர்களான அந்தக் கிருஷ்ணன், தனஞ்சயன் ஆகிய இருவரும் சாத்வதனும் {சாத்யகியும்} சேர்ந்து என் படைக்குள் ஊடுருவியதைக் கேட்டு நான் மலைத்திருக்கிறேன்.

சிநிக்களில் முதன்மையான அந்தத் தேர்வீரன் {சாத்யகி}, என் படைக்குள் நுழைந்து, போஜர்களின் படைப்பிரிவைக் கடந்து சென்றதும் கௌரவர்கள் என்ன செய்தனர்? ஓ! சஞ்சயா, களத்தில் பாண்டவர்களைப் பீடித்த துரோணர் எங்கே இருந்தாரோ, அவ்விடத்தில் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக. வலிமைமிக்கத் துரோணர், மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், ஆயுதங்களில் சாதித்தவரும், போரில் வீழ்த்தப்பட முடியாதவரும் ஆவார். போரில் அந்தப் பெரும் வில்லாளியைப் பாஞ்சாலர்களால் எவ்வாறு துளைக்க முடிந்தது? தனஞ்சயனின் {அர்ஜுனனின்} வெற்றியை விரும்பும் பாஞ்சாலர்கள், துரோணரைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் எதிரிகளாவர். வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரும் [2] அவர்களைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் எதிரியாவான். ஓ! சஞ்சயா, விவரித்துக் கூறுவதில் நீ திறமைமிக்கவனாக இருக்கிறாய். எனவே, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வதற்கு அர்ஜுனன் என்ன செய்தான் என்பதைக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உமது குற்றத்தின் விளைவாகவே இந்தத் துயரத்தை அடைந்திருக்கும் நீர், ஓ! வீரரே, அற்ப மனிதனைப் போல இத்தகு புலம்பல்களில் ஈடுபடக்கூடாது. முன்னர், விதுரருடன் சேர்த்து, உமது நலன்விரும்பிகள் பலரும், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகன்களைக் கைவிடாதீர்” என்று உம்மிடம் சொன்னார்கள். அவர்களின் வார்த்தைகளை நீர் கருதிப் பார்க்கவில்லை {கேட்கவில்லை}. நலன் விரும்பிகளான நண்பர்களின் ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளாத ஒரு மனிதன், பெரும் துயரத்தில் விழுந்து உம்மைப் போலவே அழுவான். முன்னர்த் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, சமாதானத்தை உம்மிடம் இரந்து வேண்டினான். இவையனைத்துக்குப் பிறகும், உலகப்புகழ்பெற்ற கிருஷ்ணன் தனது வேண்டுதலை அடையவில்லை. ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அனைத்து உலகங்களின் பலமிக்கத் தலைவனும் {இறைவனும்}, அனைத்து உலகங்களிலும் உள்ள அனைத்தின் உண்மையை அறிந்தவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, உமது மதிப்பற்ற தன்மையையும், பாண்டவர்களிடம் நீர் கொண்ட பொறாமையையும் உறுதி செய்து கொண்டு, பாண்டவர்களிடம் நீர் கொண்ட தீய நோக்கங்களைப் புரிந்து கொண்டு, மனக்குழப்பத்துடன் கூடிய உமது புலம்பல்களையும் கேட்டு, குருக்களுக்கு மத்தியில் போரின் தழலைச் சுடர்விட்டு எரியச் செய்தான். உமது குற்றத்தாலேயே {முற்றாக அனைத்தையும் அழிக்கும்} இந்தப் பேரழிவு உம்மை அடைந்திருக்கிறது.

ஓ! கௌரவங்களை அளிப்பவரே {திருதராஷ்டிரரே}, துரியோதனன் மேல் குற்றத்தை சுமத்துவது உமக்குத் தகாது. இந்த நிகழ்வுகளின் வளர்ச்சியில், தொடக்கத்திலோ, நடுவிலோ, முடிவிலோ உமது நல்ல தகுதிகள் {உம்முடைய நல்ல செய்கைகள் என்று} ஏதும் காணப்படவில்லை. இந்தத் தோல்வி முற்றிலும் உம்மால் ஏற்பட்டதே ஆகும். எனவே, இவ்வுலகின் உண்மையை அறியும் நீர் அமைதியை அடைந்து, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் ஏற்பட்டதற்கு ஒப்பான இந்தக் கடும்போர் எப்படி நடந்தது என்பதைக் கேட்பீராக.

கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி} உமது படைக்குள் நுழைந்ததும், பீமசேனனின் தலைமையிலான பார்த்தர்களும் உமது துருப்புகளை எதிர்த்து விரைந்தனர். எனினும், அந்தப் போரில் பாண்டவர்கள் சீற்றத்துடனும், கோபத்துடனும், தங்களைப் பின்தொடர்வோருடன் சேர்ந்து உமது படையை இப்படி எதிர்த்தபோது, வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன் அவர்களைத் தனி ஒருவனாகவே தடுத்தான். துள்ளும் அலைகளைத் தடுக்கும் கரையைப் போலவே ஹிருதிகன் மகனும் {கிருதவர்மனும்} அந்தப் போரில் பாண்டவர்களின் துருப்புகளைத் தடுத்தான். ஒன்றாகச் சேர்ந்திருக்கும் பார்த்தர்களால், தனி ஒருவனான தன்னைக் கடக்க முடியாமல் செய்த அந்த ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} ஆற்றலை அற்புதமானதாக நாங்கள் கண்டோம்.

அப்போது வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், மூன்று கணைகளால் கிருதவர்மனைத் துளைத்துத் தன் சங்கை முழக்கி பாண்டவர்கள் அனைவரையும் மகிழச் செய்தான். பிறகு சகாதேவன், இருபது கணைகளாலும், நீதிமானான யுதிஷ்டிரன் ஐந்தாலும், நகுலன் நூறாலும் அந்த ஹிருதிகன் மகனைத் துளைத்தனர். திரௌபதியின் மகன்கள் எழுபத்துமூன்று கணைகளாலும், கடோத்கசன் ஏழாலும் அவனைத் துளைத்தனர். விராடன், துருபதன், துருபதன் மகன் (திருஷ்டத்யும்னன்) ஆகியோர் ஒவ்வொருவரும் அவனை ஐந்து கணைகளால் துளைத்தனர். சிகண்டி ஐந்தால் ஒரு முறையும், மீண்டும் சிரித்துக் கொண்டே இருபத்தைந்து கணைகளால் ஒரு முறையும் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்தான்.

அப்போது கிருதவர்மன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும் தேர்வீரர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளாலும், பீமனை ஏழாலும் துளைத்தான். மேலும் அந்த ஹிருதிகன் மகன் பீமனின் தேரில் இருந்து பின்னவனின் {பீமனின்} கொடிமரம் மற்றும் வில் ஆகிய இரண்டையும் வீழ்த்தினான். பிறகு, பெரும் வேகம் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {கிருதவர்மன்}, வில்லறுபட்ட பீமனை எழுபது கூரிய கணைகளால் கோபத்துடன் அவனது மார்பைத் தாக்கினான். வலிமைமிக்கப் பீமன், ஹிருதிகன் மகனின் {ஹார்த்திக்யனான கிருதவர்மனின்} சிறப்புமிக்கக் கணைகளால் ஆழத்துளைக்கப்பட்டு, நிலநடுக்கத்தில் நடுங்கும் மலை ஒன்றைப் போலத் தன் தேரில் நடுங்கினான். பீமசேனனை அந்நிலையில் கண்டவர்களும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் தலைமையிலானவர்களுமான பார்த்தர்கள், ஓ! மன்னா, கிருதவர்மனின் மீது பல கணைகளை ஏவி அவனைப் பீடித்தனர். தேர்க்கூட்டங்களால் அந்தப் போர்வீரனை {கிருதவர்மனைச்} சூழ்ந்து கொண்ட அவர்கள், ஓ! ஐயா, அந்தப் போரில் வாயுத் தேவனின் மகனை {பீமனைக்} காக்க விரும்பி மகிழ்ச்சியாகத் தங்கள் கணைகளால் அவனை {கிருதவர்மனைத்} துளைக்கத் தொடங்கினர்.

சுயநினைவு மீண்ட வலிமைமிக்கப் பீமசேனன், அந்தப் போரில் எஃகால் ஆனதும், தங்கப்பிடியைக் கொண்டதுமான ஓர் ஈட்டி எடுத்துக் கொண்டு, தன் தேரில் இருந்து, கிருதவர்மனின் தேர் மீது பெரும் வேகத்துடன் வீசினான். சட்டை உரிந்த பாம்புக்கு ஒப்பானதும், கடுமையாகத் தெரிந்ததுமான அந்த ஈட்டி, பீமனின் கரங்களில் இருந்து வீசப்பட்டதும், அது கிருதவர்மனை நோக்கிச் சுடரொளியுடன் சென்றது. யுகநெருப்பின் காந்தியைக் கொண்ட அந்த ஈட்டி, தன்னை நோக்கி வருவதைக் கண்ட ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, இரண்டு கணைகளால் அதை இரண்டாகத் துண்டித்தான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த ஈட்டி, இப்படித் துண்டிக்கப்பட்டதும், ஓ! மன்னா, ஆகாயத்தில் இருந்து விழும் பெரிய விண்கல்லைப் போலப் பத்துத் திசைப்புள்ளிகளுக்கும் ஒளியூட்டியபடி கீழே பூமியில் அது விழுந்தது. தன் ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட பீமன் கோபத்தால் சுடர்விட்டு எரிந்தான்.

பிறகு மேலும் கடினமானதும், உரத்த நாணொலி கொண்டதுமான மற்றொரு வில்லை எடுத்த பீமசேனன், கோபத்தால் நிறைந்து, அந்தப் போரில் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனைத்} தாக்கினான். பிறகு, ஓ! மன்னா, பயங்கர வலிமை கொண்ட பீமன், ஓ! ஏகாதிபதி, உமது தீய கொள்கையின் {ஆலோசனையின்} விளைவால், ஐந்து கணைகளைக் கொண்டு கிருதவர்மனின் நடுமார்பைத் தாக்கினான். பிறகு, பீமசேனனால் அங்கங்களெங்கும் சிதைக்கப்பட்ட அந்தப் போஜ ஆட்சியாளன் {கிருதவர்மன்}, ஓ! ஐயா, மலர்களால் நிறைந்த சிவப்பு அசோகத்தை {அசோக மரத்தைப்} போல அந்தக் களத்தில் ஒளிர்ந்தான். வலிமைமிக்க வில்லாளியான அந்தக் கிருதவர்மன், சினத்தால் நிறைந்து, புன்னகைத்துக் கொண்டே, மூன்று கணைகளால் பீமசேனனை வலுவாகத் தாக்கிய பிறகு, போரில் தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெரும் தேர்வீரர்கள் ஒவ்வொருவரையும் பதிலுக்கு மூன்று {மும்மூன்று} கணைகளால் துளைத்தான். பின்னவர்களில் ஒவ்வொருவரும் அவனை {கிருதவர்மனைப்} பதிலுக்கு ஏழு {ஏழு ஏழு} கணைகளால் துளைத்தனர்.

அப்போது வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சாத்வத குலத்தோன் {கிருதவர்மன்}, சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் புன்னகைத்துக் கொண்டே ஒரு க்ஷுரப்ரத்தினால் சிகண்டியின் வில்லை அறுத்தான். பிறகு சிகண்டி, வெட்டப்பட்ட தன் வில்லைக் கண்டு, ஒரு வாளையும், நாறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு பிரகாசமான கேடயத்தையும் விரைவாக எடுத்துக் கொண்டான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் பெரிய கேடயத்தைச் சுழற்றிய சிகண்டி, அந்த வாளை கிருதவர்மனின் தேரை நோக்கி எறிந்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கணை பொருத்தப்பட்ட கிருதவர்மனின் வில்லை வெட்டிய அந்தப் பெரிய வாளானது, ஆகாயத்திலிருந்து தளர்ந்து விழுந்த பிரகாசமான ஒளிக்கோளைப் போலக் கீழே பூமியில் விழுந்தது. அதேவேளையில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அந்தப் போரில் கிருதவர்மனைத் தங்கள் கணைகளால் விரைவாகவும் ஆழமாகவும் துளைத்தனர். பிறகு பகைவீரர்களைக் கொல்பவனான ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, ஒடிந்த வில்லை வீசி எறிந்துவிட்டு, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பாண்டவர்களில் ஒவ்வொருவரையும் மூன்று நேரான கணைகளால் துளைத்தான். அவன், சிகண்டியை முதலில் மூன்று கணைகளாலும், பிறகு ஐந்தாலும் துளைத்தான். பிறகு சிறப்புமிக்கச் சிகண்டி மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, வேகமாகச் செல்லக் கூடியவையும், ஆமையின் நகங்களைப் போன்ற [3] தலைகளைக் கொண்டவையுமான பல கணைகளால் ஹிருதிகன் மகனைத் தடுத்தான்.அப்போது அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்ட ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, ஓ! மன்னா, வலிமைமிக்கத் தேர்வீரனும், போரில் சிறப்புமிக்கப் பீஷ்மரின் வீழ்ச்சிக்குக் காரணமானவனுமான அந்த யக்ஞசேனன் மகனை {சிகண்டியை} நோக்கி மூர்க்கமாக விரைந்தான். உண்மையில், வீரக் கிருதவர்மன் தன் வலிமையை வெளிக்காட்டியபடி ஒரு புலியானது யானை ஒன்றை நோக்கிச் செல்வதைப் போலச் சிகண்டியை நோக்கி விரைந்தான். பிறகு, பெரும் யானைகள் இரண்டிற்கோ, சுடர்மிக்க நெருப்புகள் இரண்டிற்கோ ஒப்பானவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான அந்த இருவரும் கணைகளின் மேகங்களால் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். அவர்கள் தங்கள் விற்களில் சிறந்த வில்லை எடுத்துக் கொண்டு, தங்கள் கணைகளைக் குறிபார்த்து, கதிர்களைப் பொழியும் இரு சூரியன்களைப் போல நூற்றுக்கணக்கானவற்றை {கணைகளை} ஏவினர். வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவ்விருவரும் தங்கள் கூரிய கணைகளால் ஒருவரையொருவர் எரித்து, யுக முடிவில் தோன்றும் இரு சூரியன்களைப் போலப் பிரகாசத்துடன் ஒளிர்ந்தனர்.

கிருதவர்மன் அந்தப் போரில், வலிமைமிக்கத் தேர்வீரனான யக்ஞசேனன் மகனை {சிகண்டியை} எழுபத்துமூன்று கணைகளாலும், பிறகும் ஏழு கணைகளாலும் துளைத்தான். இப்படி ஆழத்துளைக்கப்பட்ட சிகண்டி, தன் வில்லையும், கணைகளையும் வீசிவிட்டு, மயக்கத்துக்கு ஆட்பட்டு, கீழே தன் தேர்த்தட்டில் வலியுடன் அமர்ந்தான். அந்த வீரன் {சிகண்டி} மயங்கியதைக் கண்ட உமது துருப்பினர், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, தங்கள் ஆடைகளைக் காற்றில் அசைத்தனர். ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} கணைகளால் இப்படிப் பீடிக்கப்பட்ட சிகண்டியைக் கண்ட அவனது தேரோட்டி, விரைவாக அவனைக் களத்திற்கு வெளியே {தேரில்} சுமந்து சென்றான். சிகண்டி தன் தேர்த்தட்டில் உணர்வற்றுக் கிடப்பதைக் கண்ட பார்த்தர்கள், அந்தப் போரில் கிருதவர்மனை தேர்க்கூட்டங்களால் விரைவாகச் சூழ்ந்து கொண்டனர்.

வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், தனியொருவனாகப் பார்த்தர்கள் அனைவரையும், அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் தடுத்து மிக அற்புதமான சாதனையை அடைந்தான். இப்படியே பார்த்தர்களை வென்ற அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {கிருதவர்மன்}, அதன் பிறகு, சேதிகளையும், பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும், கேகயர்களையும் எனப் பெரும் ஆற்றலைக் கொண்ட அனைவரையும் வென்றான். இப்படி ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} கொல்லப்பட்ட அந்தப் பாண்டவப் படைகள், போரில் நிதானமாக நிற்க இயலாமல் அனைத்துத் திசைகளிலும் ஓடத் தொடங்கின. பீமசேனன் தலைமையிலான பாண்டுவின் மகன்களை வென்ற ஹிருதிகன் மகன், போரில் சுடர்மிக்க நெருப்பைப் போல நின்றான். கணைத்தாரைகளால் பீடிக்கப்பட்டவர்களும், போரில் ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} வீழ்த்தப்பட்டவர்களுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அவனை {கிருதவர்மனை} நேரில் சந்திக்கத் துணியவில்லை” {என்றான் சஞ்சயன்}.

ஜலசந்தனைக் கொன்ற சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 114-பாண்டவர்களைப் பீடித்த கிருதவர்மனைக் கண்டு திரும்பி வந்த சாத்யகி கிருதவர்மனை வீழ்த்தியது; யானைப்படையுடன் சாத்யகியைச் சூழ்ந்து கொண்ட ஜலசந்தன்; ஜலசந்தனின் கரங்களையும் தலையையும் வெட்டிக் கொன்ற சாத்யகி…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிதறாத கவனத்துடன் கேட்பீராக. அந்தப்படை உயர் ஆன்ம ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} முறியடிக்கப்பட்டு, பார்த்தர்கள் வெட்கத்தால் அவமானமடைந்து, உமது துருப்புகள் மகிழ்ச்சியில் குதூகலித்த போது, அடியற்றத் துன்பக் கடலில் மூழ்கிப் பாதுகாப்பை வேண்டிக் கொண்டிருந்த பாண்டவர்களுக்கு எவன் பாதுகாவலனாவானோ அந்த வீரனான சிநியின் பேரன் {சாத்யகி}, அந்தப் பயங்கரப் போரில் உமது படையால் உண்டாக்கப்பட்ட அந்தக் கடும் ஆரவாரத்தைக் கேட்டு விரைவாகத் திரும்பி கிருதவர்மனை எதிர்த்து வந்தான்.

ஹிருதிகன் மகனான கிருதவர்மன், கோபத்தால் தூண்டப்பட்டுக் கூரிய கணை மேகங்களால் சிநியின் பேரனை {சாத்யகியை} மறைத்தான். இதனால் சாத்யகியும் சினத்தால் தூண்டப்பட்டான். பிறகு அந்தச் சிநியின் பேரன் அம்மோதலில் ஒரு கூரிய பல்லத்தையும், நான்கு பிற கணைகளையும் கிருதவர்மனின் மீது விரைவாக ஏவினான். அந்த நான்கு கணைகள் கிருதவர்மனின் குதிரைகளைக் [1] கொன்றன. மற்றொன்று {பல்லம்} கிருதவர்மனின் வில்லை அறுத்தது. பிறகு சாத்யகி தன் எதிரியின் தேரோட்டியைத் துளைத்து, தன் எதிராளியின் படைகளைப் பீடிப்பதற்காகப் பின்னவனின் {கிருதவர்மனின்} பின்புறத்தைக் காத்தவர்களைக் கூரிய கணைகள் பலவற்றால் துளைத்தான். சாத்யகியின் கணைகளால் பீடிக்கப்பட்ட அந்தப் பகைவரின் படைப்பிரிவுகள் சிதறின. அதன்பேரில் கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகி தன் வழியே விரைவாகச் சென்றான்.ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வீரம் கொண்ட அந்த வீரன் {சாத்யகி} உமது துருப்புகளை என்ன செய்தான் என்பதைக் கேட்பீராக. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணரின் படைப்பிரிவாலான பெருங்கடலைக் கடந்து, போரில் கிருதவர்மனை வென்றதால் மகிழ்ச்சியால் நிறைந்த அந்த வீரன் {சாத்யகி}, தன் தேரோட்டியிடம், “அச்சமில்லாமல் மெதுவாகச் செல்வாயாக” என்றான். எனினும், தேர்கள், குதிரைகள், யானைகள், காலாட்படைவீரர்கள் ஆகியவற்றால் நிறைந்த அந்த உமது படையைக் கண்ட சாத்யகி, மீண்டும் தன் தேரோட்டியிடம், “துரோணரின் படைக்கு இடது பக்கத்தில் நீ காண்பதும், மேகங்களைப் போன்ற கரிய நிறத்தில் தெரிவதுமான பெரிய படைப்பிரிவானது (எதிரியின்) யானைகளைக் கொண்டிருக்கிறது. ருக்மரதன் [2] அதன் தலைவனாக இருக்கிறான். ஓ! தேரோட்டியே {முகுந்தா}, அதிகம் இருக்கும் அந்த யானைகள் போரில் தடுப்பதற்கு மிகக் கடினமானவையாகும். துரியோதனனால் தூண்டப்பட்ட அவர்கள், தங்கள் உயிரையும் விடத் துணிந்து எனக்காகக் காத்திருக்கின்றனர். திரிகர்த்தர்களின் நாட்டைச் சேர்ந்த அந்தப் போராளிகள் அனைவரும், அரச பிறவி கொண்டவர்களும், பெரும் வில்லாளிகளும், போரில் பெரும் ஆற்றலை வெளிப்படுத்த வல்லவர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களையுடைய சிறப்புமிக்கத் தேர்வீரர்களுமாவர். துணிச்சல்மிக்க அந்தவீரர்கள் என்னுடன் போரிடும் விருப்பத்தால் காத்திருக்கின்றனர். ஓ! தேரோட்டியே {முகுந்தா}, விரைவாகக் குதிரைகளைத் தூண்டி, என்னை அங்கே கொண்டு செல்வாயாக. பரத்வாஜர் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே திரிகர்த்தர்களுடன் நான் போரிடுவேன்” என்றான் {சாத்யகி}.

இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தேரோட்டியானவன் {முகுந்தன்}, சாத்வதனின் {சாத்யகியின்} விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்து மெதுவாகச் சென்றான். கொடிமரம் பொருத்தப்பட்டதும், சூரியனின் காந்தியைக் கொண்டதுமான அந்தப் பிரகாசமான தேரில் பூட்டப்பட்டிருந்தவையும், சாரதிக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையும், குந்த {குருக்கத்தி} மலர், அல்லது நிலவு, அல்லது வெள்ளியைப் போன்று வெண்மையாக இருந்தவையுமான அந்தச் சிறந்த குதிரைகள் அவனை {சாத்யகியை} (அந்த இடத்திற்குச்) சுமந்து சென்றன. சங்கின் நிறத்திலான அந்த அற்புதக் குதிரைகளால் இழுக்கப்பட்டு அவன் போரிட முன்னேறிய போது, அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், எளிதாக அனைத்தையும் துளைக்கவல்லவையும், பல்வேறு வகைகளிலான கணைகளை இறைத்தபடி தங்கள் யானைகளுடன் அவனை {சாத்யகியை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.

கோடையின் முடிவில் மலைச்சாரலில் மழைத்தாரைகளைப் பொழியும் பெரிய மேகங்களைப் போல அந்தச் சாத்வதனும் {சாத்யகியும்}, தன் கூரிய கணைகளை ஏவியபடி அந்த யானைப் படைப்பிரிவுடன் போரிட்டான். சிநிக்களில் முதன்மையானவனால் {சாத்யகியால்} ஏவப்பட்டவையும், இடியின் தீண்டலுக்கு ஒப்பானவையுமான அந்தக் கணைகளால் கொல்லப்பட்ட அந்த யானைகள், தங்கள் தந்தங்கள் முறிந்து, உடல்கள் குருதியால் நனைந்து, தலைகளும், மத்தகங்களும் பிளக்கப்பட்டு, காதுகள், முகங்கள் மற்றும் துதிக்கைகள் துண்டிக்கப்பட்டு, பாகர்களை இழந்து களத்தில் இருந்து தப்பி ஓடத் தொடங்கின. அவை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கொடிமரங்கள் வெட்டப்பட்டு, பாகர்கள் கொல்லப்பட்டு, கம்பளங்கள் தளர்ந்து அனைத்துத் திசைகளிலும் ஓடிச்சென்றன. அவற்றில் பல, ஓ! ஏகாதிபதி, சாத்வதனின் {சாத்யகியின்} நாராசங்கள் [3], வத்சதந்தங்கள் [4], பல்லங்கள் [5], அஞ்சலிகங்கள், க்ஷுரப்ரங்கள் [6], அர்த்தச்சந்திரக்கணைகள் [7] ஆகியவற்றால் சிதைக்கப்பட்டுத் தங்கள் உடல்களில் குருதி பாய, மலமும் சிறுநீரும் கழித்து, பலவிதமாகக் கதறி, மேகங்களின் ஆழ்ந்த முழக்கத்தைப் போலப் பேரொலிகளை வெளியிட்டபடியே ஓடின. அவற்றில் சில சுழன்றன, சில நொண்டின {தடுமாறின}, சில கீழே விழுந்தன, சில உற்சாகமற்று வாட்டமடைந்தன. சூரியன், அல்லது நெருப்புக்கு ஒப்பான யுயுதானனின் {சாத்யகியின்} கணைகளால் இப்படிப் பீடிக்கப்பட்ட அந்த யானைப்படைப்பிரிவு அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடியது.அந்த யானைப்படைப்பிரிவு அழிக்கப்பட்ட பிறகு, வலிமைமிக்க ஜலசந்தன், நிதானமாக முயன்று, வெண்குதிரைகளால் இழுக்கப்பட்ட யுயுதானனின் தேரின் முன்பு தன் யானையை வழிநடத்திச் சென்றான். தங்க அங்கதங்கள், காது குண்டலங்கள், கிரீடம் ஆகியவற்றைச் சூடியவனும், சிவந்த சந்தனக் குழம்பை {மேனியில்} பூசியிருந்தவனும், சுடர்மிக்கத் தங்க ஆரத்தைத் தன் தலையில் சூடியிருந்தவனும், மார்புக் கவசத்தால் மார்பு மறைக்கப்பட்டவனும், தன் கழுத்தில் (பிரகாசமான) தங்க ஆரத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், பாவமற்ற ஆன்மா கொண்டவனுமான அந்த வீரன் {ஜலசந்தன்}, ஓ! மன்னா, தன் யானையின் தலையில் அமர்ந்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் வில்லை அசைத்துக் கொண்டு, மின்னலின் சக்தி ஊட்டப்பட்ட மேகத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.

துள்ளும் கடலைத் தடுக்கும் கரையைப் போலச் சாத்யகி, இத்தகு சீற்றத்துடன் தன்னை அணுகிய அந்த மகதர்களின் ஆட்சியாளனுடைய {ஜலசந்தனுடைய} சிறந்த யானையைத் தடுத்தான். வலிமைமிக்க ஜலசந்தன், யுயுதானனின் சிறந்த கணைகளால் யானை தடுக்கப்பட்டதைக் கண்டு சினத்தால் நிறைந்தான். அப்போது, ஓ மன்னா, கோபமூட்டப்பட்ட அந்த ஜலசந்தன், சில கணைகளால் சிநியின் பேரனுடைய அகன்ற மார்பைப் பெரும்பலத்துடன் துளைத்தான். அந்த விருஷ்ணி வீரன் {சாத்யகி} வில்லை வளைத்துக் கொண்டிருந்த போது, அவன் {ஜலசந்தன்} நன்கு கடினமாக்கப்பட்ட மற்றொரு கூரிய பல்லத்தால் அதை அறுத்தான். பிறகு, ஓ! பாரதரே, சிரித்துக் கொண்டே இருந்த மகதர்களின் வீர ஆட்சியாளன் {ஜலசந்தன்}, வில்லற்ற சாத்யகியை ஐந்து கூரிய கணைகளால் துளைத்தான். எனினும், வீரத்தையும், வலிமைமிக்கக் கரத்தையும் கொண்ட சாத்யகி, ஜலசந்தனின் கணைகள் பலவற்றால் துளைக்கப்பட்டாலும், கிஞ்சிற்றும் நடுங்கவில்லை. இவையாவும் அற்புதமாகத் தெரிந்தன.

அப்போது வலிமைமிக்க யுயுதானன் எவ்வித அச்சமுமின்றி (தான் பயன்படுத்த வேண்டிய) கணைகளைக் குறித்துச் சிந்தித்தான். மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட அவன் {சாத்யகி}, ஜலசந்தனிடம், “நில், நிற்பாயாக!” என்றான். இவ்வளவே சொன்ன சிநியின் பேரன் {சாத்யகி}, சிரித்துக் கொண்டே அறுபது {60} கணகளால் அவனது {ஜலசந்தனின்} அகன்ற மார்பை ஆழத் துளைத்தான். மேலும் பெருங்கூர்மை கொண்ட மற்றொரு க்ஷுரப்ரத்தால் ஜலசந்தனின் வில்லைக் கைப்பிடியில் அறுத்து, மேலும் மூன்று கணைகளால் அவன் ஜலசந்தனையும் துளைத்தான். பிறகு ஜலசந்தன் கணை பொருத்தப்பட்ட அந்த வில்லை எறிந்துவிட்டு, ஓ! ஐயா, சாத்யகியின் மீது வேல் ஒன்றை வீசினான். அந்தக் கடும்போரில் மாதவனின் {சாத்யகியின்} இடது கரத்தைத் துளைத்துச் சென்ற அந்தப் பயங்கர வேலானது, சீறும் பெரும் பாம்பொன்றைப் போலப் பூமிக்குள் நுழைந்தது. இப்படி இடது கரத்தில் துளைக்கப்பட்டவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, முப்பது கூரிய கணைகளால் ஜலசந்தனைத் தாக்கினான். பிறகு வலிமைமிக்க ஜலசந்தன் தன் கத்தியையும், காளைத் தோலாலானதும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டதுமான பெரிய கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, கத்தியைச் சிறிது நேரம் சுழற்றிய பிறகு அந்தச் சாத்வதனின் மேல் அதை வீசினான். சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} வில்லை அறுத்த அந்தக் கத்தி, நெருப்புக்கோளத்தின் பிரகாசத்துடன் கீழே பூமியில் விழுந்து கிடப்பது தெரிந்தது.

பிறகு அந்த யுயுதானன் {சாத்யகி}, எவரையும் துளைக்கவல்லதும், சாலமரத்தின் கிளையைப் போலப் பெரிதானதும், இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான நாணொலியைக் கொண்டதுமான மற்றொரு வில்லை எடுத்து வளைத்து, சினத்தால் நிறைந்து, ஜலசந்தனை ஒற்றைக் கணையால் துளைத்தான். மது குலத்தில் முதன்மையானவனான அந்தச் சாத்யகி, சிரித்துக் கொண்டே, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜலசந்தனின் கரங்களிரண்டையும் இரு க்ஷுரப்ரங்களால் அறுத்தான். அதன்பேரில், இரு பரிகங்களைப் {முள் பதித்த கதாயுதங்கள்} போலத் தெரிந்த அந்தக் கரங்கள் இரண்டும், மலையில் இருந்து விழும் ஐந்து தலை பாம்புகளைப் போல அந்த முதன்மையான யானையிலிருந்து கீழே விழுந்தன. பிறகு சாத்யகி, அழகிய பற்களைக் கொண்டதும், அழகிய காதுகுண்டலகள் இரண்டால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுமான தன் எதிராளியின் {ஜலசந்தனின்} பெரிய தலையை மூன்றாவது க்ஷுரப்ரத்தால் அறுத்தான். அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சிரம் மற்றும் கரங்களற்ற உடல் ஜலசந்தனின் யானையைக் குருதியில் நனைய செய்தது. 

ஓ! மன்னா, போரில் ஜலசந்தனைக் கொன்ற அந்தச் சாத்வதன் {சாத்யகி}, விரைவாக அந்த யானையின் முதுகில் இருந்த மர அமைப்பை {அம்பாரியைக்} கீழே தள்ளினான். குருதியில் குளித்த ஜலசந்தனின் யானை, தன் முதுகில் தொங்கும் அந்த விலைமதிப்புமிக்க ஆசனத்தைச் சுமந்து சென்றது. சாத்வதனின் கணைகளால் பீடிக்கப்பட்ட அந்தப் பெரும் விலங்கு, வலியால் கடுமையாகப் பிளிறிக் கொண்டே மூர்க்கமாக ஓடி நட்புப் படைப்பிரிவுகளை நசுக்கியது. பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த விருஷ்ணிகளில் காளையால் {சாத்யகியால்} ஜலசந்தன் கொல்லப்பட்டதைக் கண்ட உமது துருப்புகளுக்குள் ஓலங்கள் எழுந்தன. உமது வீரர்கள் புறமுதுகிட்டு அனைத்துத் திசைகளிலும் ஓடினர். உண்மையில் எதிரியின் வெற்றியால் கவலையடைந்த அவர்கள் தங்கள் இதயங்களைத் தப்பி ஓடுவதில் நிலைநிறுத்தினர். அதேவேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வில் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான துரோணர், வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானனை {சாத்யகியை} அணுகினார். குருக்களில் காளையர் {கௌரவர்கள்} பலர், (சினத்திலும் செருக்கிலும்) பெருகும் சிநிக்களின் காளையைக் {சாத்யகியைக்} கண்டு துரோணருடன் சேர்ந்து சீற்றத்துடன் அவனை நோக்கி விரைந்தனர். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போருக்கு ஒப்பாக, (ஒரு புறத்தில்) குருக்களையும், துரோணரையும், மற்றும் (மறுபுறத்தில்) யுயுதானனையும் கொண்ட ஒரு போர் {அங்கே} தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.

கிருதவர்மனை வீழ்த்திய சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 115-சாத்யகியைத் தாக்கிய கௌரவ வீரர்கள்; அனைவரையும் பதிலுக்குத் துளைத்த சாத்யகி; துரியோதனனுக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட போர்; துரியோதனனின் வில்லை இருமுறை வெட்டி, கொடிமரத்தையும் வெட்டி, குதிரைகளையும் தேரோட்டியையும் கொன்று அவனை வீழ்த்திய சாத்யகி; கிருதவர்மனுக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட போர்; கிருதவர்மனை வீழ்த்தி முன்னேறிச் சென்ற சாத்யகி…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தாக்குவதில் சிறந்த அந்த வீரர்கள் அனைவரும் கணைகளின் மேகங்களைக் கவனமாக ஏவியபடியே யுயுதானனுடன் {சாத்யகியுடன்} மோதினர். துரோணர், பெரும் கூர்மை கொண்ட எழுபத்தேழு {77} கணைகளால் அவனைத் {சாத்யகியைத்} தாக்கினார். துர்மர்ஷணன் பனிரெண்டாலும் {12}, துஸ்ஸஹன் [1] பத்து {10} கணைகளாலும் அவனை {சாத்யகியைத்} தாக்கினர். விகர்ணனும், கங்க {பறவையின்} இறகுகளைக் கொண்ட முப்பது {30} கூரிய கணைகளால் அவனது {சாத்யகியின்} இடப்பக்கத்திலும், நடுமார்பிலும் துளைத்தான். துர்முகன் பத்து {10} கணைகளாலும், துச்சாசனன் எட்டாலும் {8}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனன் இரண்டு {2} கணைகளாலும் அவனை {சாத்யகியைத்} துளைத்தனர். அந்தப் போரில், ஓ! மன்னா, துரியோதனனும், பிற வீரர்கள் பலரும் அந்த வலிமைமிக்க வில்லாளியை {சாத்யகியை} அடர்த்தியான கணைமாரியால் துளைத்தனர்.-வலிமைமிக்க வில்லாளிகளான உமது மகன்களால் அனைத்துப் பக்கங்களிலும் தடுக்கப்பட்டாலும், அந்த விருஷ்ணி குலத்து யுயுதானன், அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகத் தனது நேரான கணைகளால் துளைத்தான். உண்மையில் அவன் {சாத்யகி}, பரத்வாஜர் மகனை {துரோணரை} மூன்று கணைகளாலும், துஸ்ஸஹனை [2] ஒன்பதாலும், விகர்ணனை இருபத்தைந்தாலும், சித்திரசேனனை ஏழாலும், துர்மர்ஷணனை பனிரெண்டாலும், விவிம்சதியை எட்டாலும், சத்தியவிரதனை ஒன்பதாலும், விஜயனைப் பத்துக் கணைகளாலும் துளைத்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான ருக்மாங்கதனையும் துளைத்த சாத்யகி, தன் வில்லை அசைத்துக் கொண்டே உமது மகனை (துரியோதனனை) எதிர்த்து வேகமாகச் சென்றான். யுயுதானன், மனிதர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மொத்த உலகிலும் உள்ள தேர்வீரர்களில் பெரியவனான அந்த மன்னனை {துரியோதனனைத்} தன் கணைகளால் ஆழத் துளைத்தான். பிறகு அவ்விருவருக்கும் இடையில் ஒரு போர் தொடங்கியது.அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களில் {இருவரில்} ஒவ்வொருவனும் அந்தப் போரில் எண்ணற்ற கணைகளைக் குறி பார்த்தும், கூரிய கணைகளை ஏவியும், மற்றவனை மறைத்தனர். குரு மன்னனால் {துரியோதனனால்} துளைக்கப்பட்ட சாத்யகி, சந்தன மரம் ஒன்று பாலைச் சுரப்பது போல, தன் மேனியெங்கும் குருதி பெருகியோட மிகப் பிரகாசமாகத் தெரிந்தான். உமது மகனும் {துரியோதனனும்}, அந்தச் சாத்வதனின் {சாத்யகியின்} கணைமேகங்களால் துளைக்கப்பட்டு, தங்கத்தால் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, (வேள்வியில்) நிறுவப்பட்ட ஒரு வேள்விக் கம்பை {யூபஸ்தம்பத்தைப்} போலவே அழகாகத் தெரிந்தான்.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் மாதவன் {சாத்யகி}, சிரித்துக் கொண்டே குரு மன்னனின் {துரியோதனனின்} வில்லை ஒரு க்ஷுரப்ரத்தினால் வெட்டினான். அதன் பிறகு அவன் {சாத்யகி}, வில்லற்ற அம்மன்னனை எண்ணற்ற கணைகளால் துளைத்தான். பெரும் சுறுசுறுப்புக் கொண்ட அந்த எதிரியின் {சாத்யகியின்} கணைகளால் துளைக்கப்பட்ட அந்த மன்னனால் {துரியோதனனால்}, எதிரியின் இந்த வெற்றிக் குறியீட்டைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்போது துரியோதனன், தங்கப் பிடி கொண்ட மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்டு, சாத்யகியை ஒரு நூறு கணைகளால் வேகமாகத் துளைத்தான். வில்தரித்த உமது வலிமைமிக்க மகனால் {துரியோதனனால்} ஆழத் துளைக்கப்பட்ட யுயுதானன், கோபத்தால் தூண்டப்பட்டு உமது மகனைப் பீடிக்கத் தொடங்கினான்.

மன்னன் {துரியோதனன்} இப்படிப் பீடிக்கப்படுவதைக் கண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்கள், பெரும் பலத்துடன் அடர்த்தியான கணைமாரிகளை ஏவியபடியே சாத்யகியை மறைத்தனர். அந்த வலிமைமிக்க வில்லாளிகளான உமது மகன்களின் கூட்டத்தால் யுயுதானன் {சாத்யகி} இப்படி மூழ்கடிக்கப்பட்டபோது, அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்துகணைகளாலும், மீண்டுமொருமுறை ஏழு கணைகளாலும் அவன் {சாத்யகி} துளைத்தான். அவன், எட்டு வேகமானக் கணைகளால் துரியோதனனைத் துளைத்த பிறகு, சிரித்துக் கொண்டே, எதிரிகள் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் பின்னவனின் {துரியோதனனின்} வில்லை அறுத்தான். மேலும் சில கணைகளால் அவன் {சாத்யகி}, ஆபரணங்களோடு கூடிய யானையால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் மன்னனின் {துரியோதனனின்} கொடிமரத்தையும் வீழ்த்தினான். பிறகு, நான்கு கணைகளால் துரியோதனனின் குதிரைகள் நான்கையும் கொன்ற அந்தச் சிறப்புவாய்ந்த சாத்யகி, மன்னனின் தேரோட்டியையும் ஒரு க்ஷுரப்ரத்தால் வீழ்த்தினான். யுயுதானன், இன்பத்தில் நிறைந்த அதேவேளையில், உயிர்நிலைகளையே ஊடுருவவல்ல பல கணைகளைக் கொண்டு வலிமைமிக்கத் தேர்வீரனான குரு மன்னனை {துரியோதனனைத்} துளைத்தான். பிறகு, ஓ! மன்னா, உமது மகன் {துரியோதனன்}, அந்தப் போரில் சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} அந்தச் சிறந்த கணைகளால் இப்படித் தாக்கப்பட்ட போது திடீரெனத் தப்பி ஓடினான். அம்மன்னன் {துரியோதனன்}, வில்தரித்த சித்திரசேனனின் தேரில் வேகமாக ஏறிக் கொண்டான். போரில் சாத்யகியால் இப்படித் தாக்கப்பட்டு, ராகுவால் விழுங்கப்படும்போது ஆகாயத்தில் சிறுக்கும் சோமனை {சந்திரனை} போன்றநிலையை அடைந்த மன்னனைக் கண்டு குரு படையின் அனைத்துப் பகுதிகளிலும் துயரக் குரல்கள் எழுந்தன.

அந்த ஆரவாரத்தைக் கேட்ட வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், பலமிக்க மாதவன் {சாத்யகி} போரிட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு வேகமாகச் சென்றான். கிருதவர்மன், தன் வில்லை அசைத்துக் கொண்டும், தன் குதிரைகளைத் தூண்டிக் கொண்டும், தன் தேரோட்டியை, “வேகமாகச் செல்வாயாக, வேகமாகச் செல்வாயாக” என்று சொல்லி தூண்டிக் கொண்டும் சென்றான். வாயை அகல விரித்த யமனைப் போலத் தன்னை நோக்கி விரையும் கிருதவர்மனைக் கண்ட யுயுதானன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேரோட்டியிடம் {முகுந்தனிடம்}, “கணைகளைத் தரித்திருக்கும் அந்தக் கிருதவர்மன், என்னை நோக்கியே தன் தேரில் வேகமாக விரைந்து வருகிறான்” என்றான் [3]. பிறகு, மிக வேகமாகத் தூண்டப்பட்ட தன் குதிரைகளுடன் முறையாகத் தயாரிக்கப்பட்டிருந்த தன் தேரில் சென்ற சாத்யகி, வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான அந்தப் போஜர்களின் ஆட்சியாளனிடம் {கிருதவர்மனிடம்} வந்தான்.அப்போது, மனிதர்களில் புலிகளும், சினத்தால் தூண்டப்பட்டவர்களும், நெருப்புக்குக்கு ஒப்பானவர்களுமான அவ்விருவரும், பெரும் சுறுசுறுப்பைக்கொண்ட இரு புலிகளைப் போல ஒருவரோடொருவர் மோதினர். கிருதவர்மன், சிநியின் பேரனை {சாத்யகியைக்} கூர் தீட்டப்பட்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையுமான இருபத்தாறு கணைகளாலும், பின்னவனின் தேரோட்டியை {முகுந்தனை} ஐந்து கணைகளாலும் துளைத்தான். போரில் திறம்வாய்ந்தவனான அந்த ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, சிறந்தவையும், சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், நன்கு பழக்கப்பட்டவையுமான சாத்யகியின் நான்கு குதிரைகளையும் வலிமைமிக்க நான்கு கணைகளால் துளைத்தான்.

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தைக் கொண்டவனும், தங்கக் கவசம் பூண்டவனுமான கிருதவர்மன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பிடி கொண்ட தன் உறுதியான வில்லை அசைத்துக் கொண்டு, தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் யுயுதானனைத் தடுத்தான். அப்போது அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, தனஞ்சயனைக் காணவிரும்பி, பெரும் சுறுசுறுப்புடன் கிருதவர்மன் மீது எட்டுக் கணைகளை ஏவினான். எதிரிகளை எரிப்பவனும், வெல்லப்பட முடியாத வீரனுமான அவன் {கிருதவர்மன்}. வலிமைமிக்க அந்த எதிரியால் {சாத்யகியால்} ஆழத்துளைக்கப்பட்டு, நிலநடுக்கத்தில் நடுங்கும் மலையொன்றைப் போல நடுங்கத் தொடங்கினான். இதன்பிறகு, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகி, அறுபத்துமூன்று கணைகளால் கிருதவர்மனின் நான்கு குதிரைகளையும், ஏழால் அவனது தேரோட்டியையும் விரைவாகத் துளைத்தான். பிறகு சாத்யகி, யமதண்டத்திற்கோ, கோபம் கொண்ட பாம்புக்கோ ஒப்பானதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதுமான மற்றொரு கணையைக் குறிபார்த்துக் கிருதவர்மனைத் துளைத்தான். அந்தப் பயங்கரக் கணையானது, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன் எதிரியின் பிரகாசமான கவசத்தைத் துளைத்து ஊடுருவி, இரத்தக் கறையுடன் பூமிக்குள் நுழைந்தது.

சாத்வதனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டு, அந்தப் போரில் குருதியில் குளித்த கிருதவர்மன், கணையோடு கூடிய தன் வில்லை எறிந்துவிட்டுத் தன் தேரிலேயே விழுந்தான். அளவற்ற ஆற்றலைக் கொண்டவனும், மனிதர்களில் காளையுமான அந்தச் சிங்கப் பல் வீரன் {கிருதவர்மன்}, சாத்யகியின் கணைகளால் பீடிக்கப்பட்டு, முழங்காலால் மண்டியிட்டு கீழே தன் தேர்த்தட்டில் விழுந்தான். சாத்யகி, பழங்காலத்தின் ஆயிரங்கை அர்ஜுனனுக்கோ {கார்த்தவீரியார்ஜுனனுக்கோ}, அளவிலா வல்லமை கொண்ட பெருங்கடலுக்கோ ஒப்பான அந்தக் கிருதவர்மனைத் தடுத்துவிட்டு முன்னேறிச் சென்றான்.

வாள்கள், ஈட்டிகள், விற்கள், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்கள் ஆகியவற்றால் நிறைந்த கிருதவர்மனின் படைப்பிரிவைக் கடந்து, நூற்றுக்கணக்கிலான முதன்மையான க்ஷத்திரியர்களின் குருதி சிந்திய விளைவால் பயங்கரமாக இருந்த அந்தக் களத்தைவிட்டு வெளியேறிய அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, அசுரவியூகத்தினூடாகச் செல்லும் விருத்திரனைக் கொன்றவனைப் {இந்திரனைப்} போலத் துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே முன்னேறிச் சென்றான். அதேவேளையில், வலிமைமிக்க ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, மற்றொரு பெரிய வில்லை எடுத்துப் போரில் பாண்டவர்களைத் தடுத்துக் கொண்டு, தான் இருந்த இடத்திலேயே நின்று கொண்டான்” {என்றான் சஞ்சயன்}.

துரோணரை வென்ற சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 116-துரோணருக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; சாத்யகியின் வில்லை அறுத்த துரோணர்; சாத்யகியின் தேரோட்டியை மயக்கமடையச் செய்தது; தன் தேரைத் தானே செலுத்திய சாத்யகி, துரோணரின் தேரோட்டியைக் கொன்றது; துரோணரை வியூகத்தின் வாயிலுக்கே மீண்டும் இட்டுச் சென்ற குதிரைகள்; துரோணர் சாத்யகியைப் பின்தொடராமல் அங்கேயே நிலைகொண்டது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இந்த இடங்களில் சிநியின் பேரனால் {சாத்யகியால்} (குரு) படை துரத்தியடிக்கப்படும்போது, அவனைப் பரத்வாஜர்மகன் {துரோணர்} அடர்த்தியான கணைமழையால் மறைத்தார். துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கையில் துரோணருக்கும், சாத்வதனுக்கும் {சாத்யகிக்கும்} இடையில் நடந்த மோதலானது, (பழங்காலத்தில்) பலிக்கும் {பலிச்சக்கரவர்த்திக்கும்} வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்ததைப் போல மிகக் கடுமையானதாக இருந்தது. அப்போது துரோணர், முழுக்க இரும்பாலானவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான மூன்று அழகிய கணைகளால் சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} நெற்றியைத் துளைத்தார். இப்படி அந்த நேரான கணைகளால் நெற்றியில் துளைக்கப்பட்ட யுயுதானன் {சாத்யகி}, ஓ! மன்னா, மூன்று முகடுகளைக் கொண்ட மலையொன்றைப் போல அழகாகத் தெரிந்தான்.

{ஏதாவதொரு} சந்தர்ப்பத்திற்காக எப்போதும் விழிப்புடன் இருக்கும் அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, இந்திரனுடைய வஜ்ரத்தின் முழக்கத்திற்கு ஒப்பானவையான பிற கணைகள் பலவற்றை அந்தப் போரில் சாத்யகியின் மீது ஏவினார். உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனான அந்தத் தாசார்ஹ குலத்தோன் {சாத்யகி}, துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகள் அனைத்தையும், அழகிய சிறகுகள் கொண்ட தன் இரண்டு கணைகளால் வெட்டினான். (சாத்யகியின்) அந்தக் கரநளினத்தைக் கண்ட துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திடீரென முப்பது {30} கணைகளால் அந்தச் சிநிக்களின் காளையை {சாத்யகியைத்} துளைத்தார். யுயுதானனின் கரநளினத்தைத் தமது கரநளினத்தால் விஞ்சிய துரோணர், மீண்டுமொரு முறை பின்னவனை {சாத்யகியை} ஐம்பது {50} கணைகளாலும், மேலும் ஒரு நூறு {100} கணைகளாலும் துளைத்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},உண்மையில் {உடலைச்} சிதைப்பவையான அக்கணைகள்,  எறும்புப் புற்றில் இருந்து கோபத்துடன் வெளியேறும் சீற்றமிக்கப் பாம்புகளைப் போலத் துரோணரின் தேரில் இருந்து வெளியேறின. அதே போல, யுயுதானனால் {சாத்யகியால்} நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஏவப்பட்டவையான குருதியைக் குடிக்கும் கணைகளும் துரோணரை மறைத்தன. எனினும், மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரால் {துரோணரால்} வெளிப்படுத்தப்பட்ட கரநளினத்திற்கும், சாத்வத குலத்தோனால் {சாத்யகியால்} வெளிப்படுத்தப்பட்டதற்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் நாங்கள் காணவில்லை. உண்மையில் மனிதர்களில் காளையரான அவ்விருவரும் ஒரு வகையில் இணையானவராகவே இருந்தனர்.

அப்போது, கோபத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, நேரான ஒன்பது கணைகளால் துரோணரைத் தாக்கினான். மேலும் அவன் {சாத்யகி} கூரிய கணைகள் பலவற்றால் துரோணரின் கொடிமரத்தையும் தாக்கினான். பரத்வாஜர் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவன் {சாத்யகி} பின்னவரின் {துரோணரின்} தேரோட்டியை நூறு கணைகளால் துளைத்தான். யுயுதானனால் வெளிப்படுத்தப்பட்ட கரநளினத்தைக் கண்டவரும், வலிமைமிக்கத் தேர்வீரருமான துரோணர், எழுபது கணைகளால் யுயுதானனின் தேரோட்டியைத் துளைத்து, மூன்றால் அவனது (நான்கு) குதிரைகளையும் துளைத்து, ஒற்றைக் கணை ஒன்றால் மாதவனின் {சாத்யகியின்} தேரில் நின்ற கொடிமரத்தையும் வெட்டினார். இறகுகளையும், தங்கத்தாலான சிறகுகளையும் கொண்ட மற்றொரு பல்லத்தால் அந்தப் போரில் மதுகுலத்தின் சிறப்புமிக்க வீரனுடைய {சாத்யகியின்} வில்லையும் அறுத்தார்.

அதன்பேரில் வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, கோபத்தால் தூண்டப்பட்டு, அவ்வில்லை வீசிவிட்டு, ஒரு பெரிய கதாயுதத்தை அந்தப் பரத்வாஜரின் மகன் மீது வீசினான். எனினும் துரோணர், இரும்பாலானதும், இழைகளால் கட்டப்பட்டதும், தன்னை நோக்கி மூர்க்கமாக வந்ததுமான அந்தக் கதாயுதத்தைப் பல்வேறு வடிவங்களிலான கணைகள் பலவற்றால் தடுத்தார். அப்போது கலங்கடிக்கப்பட முடியாதவனான சாத்யகி மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, கல்லில் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றால் பரத்வாஜரின் வீர மகனை {துரோணரைத்} துளைத்தான். அந்தப் போரில் அதைக் கொண்டு துரோணரைத் துளைத்த யுயுதானன் சிங்கமுழக்கமும் செய்தான். எனினும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான துரோணரால் அந்த முழக்கத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இரும்பாலானதும் தங்கக் கைப்பிடி கொண்டதுமான ஓர் ஈட்டியை எடுத்த துரோணர், அதை மாதவனுடைய {சாத்யகியின்} தேரின் மீது வேகமாக ஏவினார். எனினும், காலனைப் போல மரணத்தைக் கொடுக்கும் அந்த ஈட்டியானது, சிநியின் பேரனைத் {சாத்யகியைத்} தீண்டாமல், பின்னவனின் {சாத்யகியின்} தேரைத் துளைத்துச் சென்று, கடும் ஒலியுடன் பூமிக்குள் நுழைந்தது. பிறகு அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஓ! மன்னா, சிறகுகள் கொண்ட கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்தான். அவரது வலக்கரத்தைத் தாக்கிய அந்தச் சாத்யகி, ஓ! பாரதக் குலத்தின் காளையே, உண்மையில் அவரைப் பெரிதும் பீடித்தான். அந்தப் போரில் துரோணரும், ஓ! மன்னா, அர்த்தச்சந்திரக் கணையொன்றால் மாதவனின் {சாத்யகியின்} பெரிய வில்லை வெட்டி, பின்னவனின் தேரோட்டியை ஓர் ஈட்டியால் [1] தாக்கினார். அந்த ஈட்டியால் தாக்கப்பட்ட யுயுதானனின் தேரோட்டி மயக்கமடைந்து, சிறிது நேரத்திற்குத் தேர்த்தட்டில் அசைவற்றவனாகக் கிடந்தான்.அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனக்குச் சாரதியாகத் தானே செயல்பட்ட சாத்யகி, கடிவாளங்களையும் தானே பிடித்துக் கொண்டு துரோணருடனும் தொடர்ந்து போரிட்டத்தால், மனிதசக்திக்கு அப்பாற்பட்ட சாதனையை அடைந்தான். பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானன், அந்தப் போரில் ஒரு நூறு கணைகளால் அந்தப் பிராமணரை {துரோணரைத்} தாக்கி, ஓ! ஏகாதிபதி, தான் அடைந்த சாதனையால் மிகவும் மகிழ்ந்தான். அப்போது துரோணர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் மீது ஐந்து கணைகளை ஏவினார். அந்தப் போரில், சாத்யகியின் கவசத்தைத் துளைத்த அந்தக் கடுங்கணைகள் அவனது குருதியைக் குடித்தன. அச்சந்தரும் அந்தக் கணைகளால் இப்படித் துளைக்கப்பட்ட சாத்யகி கோபத்தால் தூண்டப்பட்டான். பதிலுக்கு அந்த வீரன் {சாத்யகி}, தங்கத் தேரைக் கொண்ட அவர் {துரோணர்} மீது கணைகள் பலவற்றை ஏவினான்.

பிறகு ஓர் ஒற்றைக் கணையால் துரோணரின் தேரோட்டியைப் பூமியில் வீழ்த்திய அவன் {சாத்யகி}, தன் கணைகளால் தன் எதிராளியின் சாரதியற்றக் குதிரைகளைத் தப்பி ஓடும்படி செய்தான். அதன் பேரில் அந்தத் தேரானது, ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு {அந்தக் குதிரைகளால்} இழுத்துச் செல்லப்பட்டது. உண்மையில், துரோணரின் பிரகாசமான தேரானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியனின் நகர்வைப் போல அந்தப் போர்க்களத்தில் ஆயிரம் முறை சுழலத் தொடங்கியது. அப்போது, (கௌரவப் படையின்) மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும், “ஓடுவீர், விரைவீர், துரோணரின் குதிரைகளைப் பிடிப்பீர்” என்று உரக்க ஆரவாரம் செய்தனர். அந்தப் போரில் சாத்யகியை விரைவாகத் தவிர்த்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணர் எங்கிருந்தாரோ அந்த இடத்திற்கு விரைந்தனர். சாத்யகியின் கணைகளால் பீடிக்கப்பட்டு ஓடிச் செல்லும் அந்தத் தேர்வீரர்களைக் கண்ட உமது துருப்புகள் மீண்டும் பிளந்து, மிகவும் உற்சாகமற்றவையாக ஆகின.

அதேவேளையில், துரோணர், விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான அந்தக் குதிரைகளால் சுமக்கப்பட்டு, வியூகத்தின் வாயிலுக்கே மீண்டும் சென்று அங்கேயே நிலையாக நின்று கொண்டார். பரத்வாஜரின் வீரமகன் {துரோணர்}, (தாமில்லாத போது) பாண்டவர்களாலும், பாஞ்சாலர்களாலும் பிளக்கப்பட்ட வியூகத்தைக் கண்டு, சிநியின் பேரனைப் பின்தொடர எந்த முயற்சியும் செய்யாமல், (பிளக்கப்பட்ட) தமது வியூகத்தைத் தாமே காப்பதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். பிறகு, பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் தடுத்த அந்தத் துரோண நெருப்பு, கோபத்தால் சுடர்விட்டெரிந்து அங்கேயே நின்று, யுக முடிவில் எழும் சூரியனைப் போல அனைத்தையும் எரித்தது” {என்றான் சஞ்சயன்}. 

சுதர்சனனைக் கொன்ற சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 117-கௌரவர்கள் எவராலும் தடுக்கப்பட முடியாமல் களத்தில் முன்னேறிய சாத்யகி; இடையில் வந்த மன்னன் சுதர்சனன்; சுதர்சனனின் தேரோட்டியையும், சுதர்சனனையும் கொன்ற சாத்யகி; வீரர்களின் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரோணரையும், ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} தலைமையிலான உமது படையின் போர்வீரர்கள் பிறரையும் வென்றவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, சிரித்துக் கொண்டே தன் தேரோட்டியிடம் {முகுந்தனிடம்}, “ஓ! சூதா {முகுந்தா}, கேசவராலும் {கிருஷ்ணராலும்}, பல்குனராலும் {அர்ஜுனராலும்} ஏற்கனவே நமது எதிரிகள் எரிக்கப்பட்டிருக்கின்றனர். (மீண்டும்) அவர்களை வெல்வதற்கான (மேம்போக்கான) ஒரு வழியாக மட்டுமே நாம் இருக்கிறோம். தேவர்களுடைய தலைவனின் {இந்திரனின்} மகனான அந்த மனிதர்களில் காளையால் {அர்ஜுனரால்} ஏற்கனவே கொல்லப்பட்டு மாண்டவர்களையே நாம் கொல்கிறோம்” என்றான்.

சிநிக்களில் காளையும், வில்லாளிகளில் முதன்மையானவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்த வலிமைமிக்க வீரன் {சாத்யகி}, தன் தேரோட்டியிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, சுற்றிலும் தன் கணைகளைப் பெரும்பலத்துடன் இறைத்து, அந்தப் பயங்கரப் போரில் இரைதேடிச் செல்லும் பருந்தைப் போலவே சென்றான். குரு வீரர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனைத் {சாத்யகியைத்} தாக்கினாலும், சந்திரன் அல்லது சங்கின் வெண்மையைக் கொண்ட அந்தச் சிறந்த குதிரைகளால் தாங்கப்பட்டு, கௌரவப்படைப்பிரிவுகளைத் துளைத்துச் சென்றவனும், ஆயிரங்கதிரோனான சூரியனுக்கு ஒப்பானவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனை {சாத்யகியைத்} தடுப்பதில் அவர்களால் {குரு வீரர்களால்} வெல்ல முடியவில்லை. உண்மையில், குறையற்ற வலிமை கொண்டவனும், ஆயிரம் கண்களைக் கொண்டவனுக்கு {இந்திரனுக்கு} இணையான வீரம் கொண்டவனும், கூதிர் காலச் சூரியனைப் போல ஆகாயத்தில் தெரிபவனும், தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகியை, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது தரப்பில் போரிட்டவர்களில் ஒருவனாலும் தடுக்க முடியவில்லை.

அப்போது, போர்க்கலையின் அனைத்து முறைகளை அறிந்தவனும், தங்கக் கவசம் அணிந்திருந்தவனும், வில் மற்றும் கணைகளைத் தரித்திருந்தவனும், சினத்தால் நிறைந்தவனும், மன்னர்களில் முதன்மையானவனுமான சுதர்சனன் [1], விரைந்து வரும் சாத்யகியை எதிர்த்து, அவன் {சாத்யகி} செல்வதைத் தடுக்க முயன்றான். பிறகு அவர்களுக்கு ஏற்பட்ட மோதலானது மிகக் கடுமையானதாக இருந்தது. உமது வீரர்கள் மற்றும் சோமகர்கள் ஆகிய இருதரப்பினரும் அந்த மோதலை விருத்திரனுக்கும் வாசவனுக்கும் இடையிலான மோதலைப் போலப் புகழ்ந்தனர். அந்தப் போரில் சுதர்சனன், நூற்றுக்கணக்கான கூர்மையான கணைகளால் அந்தச் சாத்வதர்களில் முதன்மையானவனை {சாத்யகியைத்} துளைக்க முயன்றான். அவை சாத்யகியை அடைவதற்கு முன்பே {சாத்யகியால்} வெட்டப்பட்டன. அதே போலத் தன் முதன்மையான தேரில் நின்ற சுதர்சனனும், இந்திரனுக்கு ஒப்பான சாத்யகியால் அவன் மீது ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் தன் சிறந்த கணைகளால் இரண்டு மூன்று துண்டுகளாக வெட்டினான்.சாத்யகியுடைய கணைகளின் சக்தியால் தன் கணைகள் கலங்கடிக்கப்படுவதைக் கண்டவனும், கடும் சக்தி கொண்டவனுமான சுதர்சனன், (தன் எதிரியை) எரித்துவிடுபவனைப் போலக் கோபத்துடன், தங்கச் சிறகுகள் கொண்ட அழகிய கணைகளை எவினான். பிறகும் அவன் {சுதர்சனன்}, நெருப்புக்கு ஒப்பானவையும், தங்கச் சிறகுகள் கொண்டவையும், தன் வில்லின் நாணைக் காதுவரை இழுத்து ஏவப்பட்டவையுமான மூன்று அழகிய கணைகளால் தன் எதிரியை மீண்டும் துளைத்தான். சாத்யகியின் கவசத்தைப் பிளந்த அவை, பின்னவனின் {சாத்யகியின்} உடலுக்குள் ஊடுருவின.

அதே போலவே அவன் (இளவரசனான சுதர்சனன்), சுடர்மிக்க நான்கு பிற கணைகளைக் குறிபார்த்து, அவற்றைக் கொண்டு, வெள்ளிநிறம் போல வெண்மையாக இருந்த சாத்யகியின் நான்கு குதிரைகளைத் தாக்கினான். அவனால் {சுதர்சனனால்} இப்படிப் பீடிக்கப்பட்டவனும், இந்திரனுக்கு இணையான ஆற்றலையும் பெரும் சுறுசுறுப்பையும் கொண்டவனுமான சிநியின் பேரன் {சாத்யகி}, தன் கூரிய கணைகளால் சுதர்சனனின் குதிரைகளைக் கொன்று உரக்க முழங்கினான். பிறகு சக்ரனின் {இந்திரனின்} வஜ்ரத்துக்கு ஒப்பான ஒரு பல்லத்தால் சுதர்சனனின் தேரோட்டியுடைய தலையை வெட்டிய அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, யுக நெருப்புக்கு ஒப்பான க்ஷுரப்ரம் ஒன்றால், ஓ! மன்னா, பழங்காலத்தில் போரில் வலிமைமிக்கப் பலனின் தலையைப் பலவந்தமாக வெட்டிய வஜ்ரதாரியைப் {இந்திரனைப்} போலக் காது குண்டலங்களைக் கொண்டதும், முழு நிலவுக்கு ஒப்பானதும், மிகப் பிரகாசமான முகத்தால் அலங்கரிக்கப்பட்டதும் சுதர்சனனின் தலையை அவனது உடலில் இருந்து வெட்டினான். பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட அந்த யது குலத்து உயர் ஆன்மக் காளை {சாத்யகி}, இப்படி அந்த அரசபேரனை {சுதர்சனனைக்} கொன்று, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்து, தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான்.

பிறகு, மனிதர்களில் வீரனான அந்த யுயுதானன் {சாத்யகி}, தனக்கு முன் சென்ற அர்ஜுனனின் பாதையிலேயே சென்று, (அப்படிச் செல்கையில்) உமது துருப்புகள் அனைத்தையும் தன் கணைகளின் மேகங்களால் தடுத்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியபடி அந்தச் சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட அதே தேரில் சென்றான். அவன் {சாத்யகி}, தன் வழியில் உள்ள அனைத்தையும் எரித்துச் செல்லும் காட்டுத் தீயைப் போலத் தன் கணைகள் அடையும் தொலைவில் இருந்த எதிரிகள் அனைவரையும் எரித்ததால், அங்கே இருந்த முதன்மையான வீரர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, அவனால் {சாத்யகியால்} அடையப்பட்ட முதன்மையான அதிசய சாதனைகளைப் பாராட்டினர்” {என்றான் சஞ்சயன்}.

யவனர்களை வீழ்த்திய சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 118-அச்சமில்லாமல் முன்னேறுமாறு தேரோட்டியை அறிவுறுத்திய சாத்யகி; சாத்யகியின் பெருமைகளைச் சொன்ன தேரோட்டி; யவனர்களின் தோற்றம் பற்றிய குறிப்புகள்; யவனர்கள், காம்போஜர்கள் முதலியோரை வீழ்த்திய சாத்யகி…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “[1] விருஷ்ணி குலத்துவீரனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான உயர் ஆன்ம சாத்யகி, சுதர்சனனைக் கொன்ற பிறகு மீண்டும் தன் தேரோட்டியிடம் {முகுந்தனிடம்}, “தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றால் நிறைந்ததும், கணைகள் மற்றும் ஈட்டிகளாலான அலைகளைக் கொண்டதும், வாள்கள், கத்திகளாலான மீன்களைக் கொண்டதும், கதாயுதங்களாலான முதலைகளைக் கொண்டதும், கணைகளின் ‘விஸ்’ ஒலிகளையும், பல்வேறு ஆயுதங்களின் மோதலையும் முழக்கமாகக் கொண்டதும், உயிரை அழிக்கக்கூடிய கடுமையான பெருங்கடலானதும், பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளால் எதிரொலிக்கப்படுவதும், வெற்றிவீரர்களுக்கு இனிமையற்றதும் தாங்க முடியாததுமான தீண்டலைக் கொடுப்பதும், ஜலசந்தனின் படையைச் சேர்ந்த கடுமையான மனித ஊனுண்ணிகளால் [2] பாதுகாக்கப்பட்ட வரம்புகளைக் கொண்டதும், கிட்டத்தட்ட கடக்க முடியாத பெருங்கடலுமான துரோணரின் படைப்பிரிவையே கடந்த பிறகு, ஆழமற்ற நீரைக் கொண்ட சிறு ஓடையைப் போல வியூகத்தில் எஞ்சியிருக்கும் பகுதியைக் கடப்பது எளிதானது என்றே நான் நினைக்கிறேன்.எனவே, அச்சமில்லாமல் குதிரைகளைச் செலுத்துவாயாக. நான் சவ்யசச்சினுக்கு {அர்ஜுனருக்கு} மிக அருகில் இருப்பதாகவே நினைக்கிறேன். வெல்லப்பட முடியாத துரோணரையும், அவரைப் பின்தொடர்பவர்களையும், போர்வீரர்களில் முதன்மையான அந்த ஹிருதிகன் மகனையும் {கிருதவர்மனையும்} வென்ற பிறகு தனஞ்சயரிடம் {அர்ஜுனரிடம்} இருந்து நான் தொலைவில் இருக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். எண்ணற்ற எதிரிகளை என் எதிரில் கண்டாலும் என் இதயத்திற்கு அச்சமேற்படுவதில்லை. எனக்கு இவர்கள் சுடர்மிகும் காட்டுத்தீயில் உள்ள வைக்கோல், அல்லது புற்குவியலைப் போன்றவர்களே.

பாண்டவர்களில் முதன்மையான அந்தக் கிரீடம் தரித்தவர் (அர்ஜுனர்) சென்ற பாதையானது, பெரும் எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள், குதிரைகள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியன கொல்லப்பட்டு கிடப்பதால் சமமற்றிருப்பதைக் காண்பாயாக. அந்த உயர் ஆன்மப் போர்வீரரால் {அர்ஜுனரால்} முறியடிக்கப்பட்ட கௌரவப் படையானது ஓடுவதைக் காண்பாயாக. ஓ! தேரோட்டியே, புறமுதுக்கிட்டோடும் தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளால் எழுப்பப்படும் கரும்பழுப்புப் புழுதியைக் காண்பாயாக. கிருஷ்ணரைத் தன் தேரோட்டியாகக் கொண்டவரும், வெண்குதிரைகளைக் கொண்டவருமான அர்ஜுனர் எனக்கு மிக அருகில் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அளவற்ற சக்தியைக் கொண்டதும், புகழ்பெற்றதுமான காண்டீவத்தின் நாணொலி கேட்கப்படுவதை உற்றுக் கேட்பாயாக. என் பார்வையில் தோன்றும் சகுனங்களின் தன்மைகளால், சூரியன் மறைவதற்குள் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அர்ஜுனர் கொல்வார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

எங்கே பகைவர்களின் படையணிகள் இருக்கின்றனவோ, எங்கே துரியோதனனைத் தலைவனாகக் கொண்டவர்களும், தங்கள் கரங்களில் தோலுறைக் கவசம் பூண்டவர்களும் இருக்கின்றனரோ, எங்கே, கவசம் பூண்டவர்களும், குரூரமான செயல்களைச் செய்பவர்களும், போரில் வீழ்த்துவதற்குக் கடினமானவர்களுமான காம்போஜர்களும், கணைகளையும், விற்களையும், தரித்துத் தாக்குவதில் திறன்வாய்ந்தவர்களான யவனர்களும், சகர்களும், தரதர்களும், பர்ப்பரர்களும், தாம்ரலிப்தர்கர்களும், பற்பல ஆயுதங்களைக் கையில் கொண்ட பல மிலேச்சர்களும் இருக்கின்றனரோ அங்கே, (மீண்டும் சொல்கிறேன்) எங்கே துரியோதனனைத் தலைவனாகக் கொண்டவர்களும், தங்கள் கரங்களில் தோலுறைக் கவசம் பூண்டவர்களும் என்னுடன் போரிடும் விருப்பத்தால் தூண்டப்பட்டு என்னை எதிர்பார்த்துக் காத்து நிற்கின்றனரோ அங்கே {அவ்விடத்திற்கு} குதிரைகளின் வலிமையைக் குன்றச் செய்யாதபடிக்கு மெதுவாக அவற்றை {குதிரைகளைத்} தூண்டுவாயாக. ஓ! சூதா, தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரில் உள்ள இந்தப் போராளிகள் அனைவரையும் நான் போரில் கொன்றதும், இந்தக் கடுங்காட்டை ஏற்கனவே கடந்துவிட்டதாகக் கருதுவாயாக” என்றான் {சாத்யகி}.

இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தேரோட்டி {முகுந்தன்}, “ஓ! விருஷ்ணி குலத்தோனே {சாத்யகியே}, ஓ! கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே {சாத்யகியே}, நான் அச்சமேதும் கொள்ளவில்லை. நீ கடுங்கோபத்தைக் கொண்ட ஜமதக்னியின் மகனையோ {பரசுராமரையோ}, தேர்வீரர்களில் முதன்மையான துரோணரையோ, மத்ரர்களின் ஆட்சியாளனையோ {சல்லியனையோ} உன்னெதிரில் கொண்டிருந்தாலும், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நான் உனது பாதுகாப்பு நிழலின் கீழ் இருக்கும்வரை என் இதயத்துக்குள் அச்சம் நுழையாது. ஓ! எதிரிகளைக் கொல்பவனே {சாத்யகி}, கவசம் பூண்டவர்களும், குரூரமான செயல்களைச் செய்பவர்களும், போரில் வீழ்த்துவதற்குக் கடினமானவர்களுமான காம்போஜர்களும், கணைகளையும், விற்களையும், தரித்துத் தாக்குவதில் திறன்வாய்ந்தவர்களான யவனர்களும், சகர்களும், தரதர்களும், பர்ப்பரர்களும், தாம்ரலிப்தர்கர்களும், பற்பல ஆயுதங்களைக் கையில் கொண்ட பல மிலேச்சர்களும் உன்னால் ஏற்கனவே வீழ்த்தப்பட்டுவிட்டனர். எந்தப் போரிலும் இதற்கு முன்னர் நான் ஒருபோதும் அச்சத்தை உணர்ந்ததில்லை. எனவே, ஓ! பெரும் துணிவு கொண்டவனே, துயர்மிகுந்த இப்பிணக்கில் [3] நான் ஏன் அச்சமெதையும் அடையப் போகிறேன்? நீண்ட {வாழ்} நாட்களால் அருளப்பட்டவனே {சாத்யகி}, நான் உன்னைத் தனஞ்சயன் {அர்ஜுனன்} இருக்குமிடத்திற்கு எவ்வழியில் அழைத்துச் செல்ல வேண்டும்? ஓ! விருஷ்ணி குலத்தோனே, யாவரின் மேல் நீ கோபம் கொண்டிருக்கிறாய்? (எதிரியை எதிர்த்து) உனது ஆற்றலை வெளிப்படுத்துபவனும், யுகத்தின் முடிவில் தோன்றும் அந்தகனுக்கு ஒப்பான ஆற்றலைக் கொண்டவனுமான உன்னைக் கண்டு இந்தப்போரில் இருந்து ஓடப்போகிறவர்கள் யாவர்? ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, மன்னன் வைவஸ்வதன் இன்று யாவரை நினைக்கிறான்?” என்று கேட்டான் {தேரோட்டி முகுந்தன்}.சாத்யகி {தேரோட்டி முகுந்தனிடம்}, “தானவர்களை அழிக்கும் வாசவனை {இந்திரனைப்} போல, நான் சிரங்கள் மழிக்கப்பட்ட {மொட்டைத் தலையர்களான} இந்தப் போர்வீரர்களைக் கொல்வேன். இந்தக் காம்போஜர்களைக் கொல்வதால் நான் எனது உறுதிமொழியை நிறைவேற்றுவேன். அங்கே {யவனர்களிடமும், காம்போஜர்களிடமும்} என்னை அழைத்துச் செல்வாயாக. இவர்களுக்கு மத்தியில் ஒரு பேரழிவை உண்டாக்கிவிட்டு, இன்று நான் பாண்டுவின் அன்பு மகனிடம் {அர்ஜுனரிடம்} செல்வேன். மழிக்கப்பட்ட சிரங்களைக் கொண்ட {மொட்டையர்களான} இந்த மிலேச்சர்களின் படைப்பிரிவை முற்றாக அழித்து, மொத்த கௌரவப்படையையும் நான் இன்று பெரும் துன்பத்தில் ஆழ்த்தும்போது, சுயோதனனைத் {துரியோதனனைத்} தங்கள் தலைமையில் கொண்ட கௌரவர்கள் எனது ஆற்றலை காண்பார்கள். போரில் என்னால் சிதைக்கப்பட்டு, பிளக்கப்படும் கௌரவப்படையின் உரத்த ஓலங்களைக் கேட்டு சுயோதனன் {துரியோதனன்} இன்று வருந்துவான். எனது ஆசானும், வெண்குதிரைகளைக் கொண்டவருமான உயர் ஆன்ம பாண்டவரிடம் {அர்ஜுனரிடம்}, அவரிடமிருந்து நான் அடைந்த ஆயுதத் திறனை இன்று காட்டுவேன். என் கணைகளால் இன்று கொல்லப்படும் ஆயிரக்கணக்கான முதன்மையான போர்வீரர்களைக் கண்டு மன்னன் துரியோதனன் பெரும் துயரில் மூழ்குவான்.

என் எதிரிகளின் மீது கணைகளை ஏவுவதற்காக நாணை நான் இழுக்கும்போது, என் கரங்களில் நெருப்புக்கோளத்திற்கு {கொள்ளிவட்டத்திற்கு} ஒப்பான வில்லைக் கௌரவர்கள் இன்று காண்பார்கள். கோபத்துடன் கூடிய நான், முதன்மையான குரு வீரர்களைக் கொல்லும்போது, சுயோதனன் இரண்டு அர்ஜுனர்களை இன்று காண்பான். இன்றைய பெரும்போரில் என்னால் கொல்லப்படும் ஆயிரக்கணக்கான மன்னர்களைக் கண்டு, மன்னன் துரியோதனன் துயரால் நிறையப் போகிறான். இன்று ஆயிரக்கணக்கான மன்னர்களைக் கொன்று, உயர் ஆன்மாக்களான பாண்டுவின் அரச மகன்கள் {பாண்டவர்கள்} மீது கொண்ட என் அன்பையும், அர்ப்பணிப்பையும் {பக்தியையும்} நான் காட்டப் போகிறேன். எனது வலிமை, சக்தி, (பாண்டவர்களிடம்) நான் கொண்ட நன்றியுணர்வு ஆகியவற்றின் அளவை இன்று கௌரவர்கள் அறிந்து கொள்வார்கள்” என்றான் {சாத்யகி}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தேரோட்டி, இனிய நடையையும், சந்திரனின் நிறத்தையும் கொண்ட அந்த நன்கு பழக்கப்படுத்தப்பட்ட குதிரைகளை அவற்றின் உச்சபட்ச வேகத்திற்குத் தூண்டினான். காற்று, அல்லது மனத்தின் வேகத்தைக் கொண்ட அந்தச் சிறந்த விலங்குகள் வானத்தையே விழுங்கிவிடுவதைப் போல அந்த யவனர்கள் இருந்த இடத்திற்கு யுயுதானனை {சாத்யகியைச்} சுமந்து சென்றன. பெரும் எண்ணிக்கையிலானவர்களும், கரநளினம் கொண்டவர்களுமான யவனர்கள், புறமுதுகிடாதவனான சாத்யகியை அணுகி கணைமாரியால் அவனை மறைத்தனர். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விரைவாகச் சென்ற சாத்யகி, யவனர்களின் அந்தக் கணைகள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் தன் நேரான கணைகளால் வெட்டினான்.

பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட யுயுதானன் {சாத்யகி}, பெருங்கூர்மையும், தங்கச் சிறகுகளும், கழுகின் இறகுகளும் கொண்டவையுமான தன் நேரான கணைகளால் யவனர்களின் கரங்களையும், சிரங்களையும் அறுத்தான். மேலும் அக்கணைகளில் பல, இரும்பு மற்றும் பித்தளையால் ஆன அவர்களின் கவசங்களைத் துளைத்துச்சென்று பூமிக்குள் நுழைந்தன. அந்தப் போரில் துணிச்சல்மிக்கச் சாத்யகியால் தாக்கப்பட்ட மிலேச்சர்கள், உயிரை இழந்து நூற்றுக்கணக்கில் கீழே பூமியில் விழத் தொடங்கினர். தன் வில்லை முழுமையாக வளைத்த அந்த வீரன் {சாத்யகி}, தொடர்ச்சியான சரமாகத் தன் கணைகளை ஏவி, ஐந்து, ஆறு, ஏழு அல்லது எட்டு யவனர்களை ஒரே நேரத்தில் கொல்லத் தொடங்கினான். ஆயிரக்கணக்கான காம்போஜர்களும், சகர்களும், பர்ப்பரர்களும் அதே போலவே சாத்யகியால் கொல்லப்பட்டனர். உண்மையில் உமது துருப்புகளில் பேரழிவை உண்டாக்கிய அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, சதையாலும் குருதியாலும் சேறாக்கியபடி பூமியைக் கடக்கமுடியாததாகச் செய்தான்.

அந்தக் கள்வர்களின் தலைப்பாகைளும், நீண்ட தாடிகளின் விளைவால் இறகுகளற்ற பறவையைப் போலத் தெரிந்த அவர்களின் மழிக்கப்பட்ட தலைகளும், போர்க்களமெங்கும் விரவிக் கிடந்தன. உண்மையில், எங்கும் குருதிக் கறைகளைக் கொண்ட தலையற்ற உடல்களால் மறைக்கப்பட்டிருந்த அந்தப் போர்க்களமானது, தாமிர மேகங்களால் மறைக்கப்பட்ட ஆகாயத்தைப் போல அழகாகத் தெரிந்தது. இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட அந்தச் சாத்வதனின் {சாத்யகியின்} நேரான கணைகளால் கொல்லப்பட்ட அந்த யவனர்கள் பூமியின் பரப்பையே மறைத்தனர். சாத்வதனால் போரில் வெல்லப்பட்டவர்களும் கவசம் தரித்தவர்களுமான துருப்பினரில் எஞ்சியிருந்தோர் சிலர், தங்கள் உயிர்கள் பறிக்கப்படும் சமயத்தில் உற்சாகமற்றவர்களாகி, பிளந்து, சவுக்குகளாலும், சாட்டைகளாலும் தங்கள் குதிரைகளை உச்சபட்ச வேகத்தில் தூண்டி அச்சத்துடன் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வெல்லப்பட முடியாத காம்போஜப் படையையும், யவனர்களின் படையையும், சகர்களின் பெரும்படையையும் முறியடித்து உமது படைக்குள் ஊடுருவியவனும், மனிதர்களில் புலியும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, “{விரைந்து} செல்வாயாக”  என்று சொல்லி தன் தேரோட்டியைத் தூண்டினான். வேறு எவராலும் இதற்கு முன்னர் அடையமுடியாத அவனது சாதனையை அந்தப் போரில் கண்ட சாரணர்களும், கந்தர்வர்களும் அவனை மிகவும் பாராட்டினர். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாரணர்களும், ஏன் உமது போர்வீரர்களே கூட அர்ஜுனனுக்கு உதவி செய்ய முன்னேறிச் செல்லும் யுயுதானனைக் (அவனது வீரத்தைக்) கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.

துரியோதனனை வீழ்த்திய சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 119-கௌரவத் துருப்புகளை அச்சுறுத்திய சாத்யகி; சாத்யகியைச் சூழ்ந்து கொண்ட கௌரவர்கள்; தன் தேரோட்டியிடம் மீண்டும் பேசிய சாத்யகி; பயங்கரப் போர்; அர்ஜுனனே ஏற்படுத்தாத பேரழிவை ஏற்படுத்திய சாத்யகி; துரியோதனனின் தேரோட்டியைக் கொன்றது; துரியோதனனின் தேர் களத்தைவிட்டு வெளியே இழுத்துச் செல்லப்பட்டது; சாத்யகியை வழிபட்ட கௌரவத் துருப்புகள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “யவனர்கள் மற்றும் காம்போஜர்களை வீழ்த்தியவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான யுயுதானன் {சாத்யகி}, நேராக உமது துருப்புகளுக்கு மத்தியில் அர்ஜுனனை நோக்கிச் சென்றான். அழகிய பற்களைக் கொண்டவனும், சிறந்த கவசத்தைப் பூண்டிருந்தவனும், அழகிய கொடிமரத்தைக் கொண்டிருந்தவனுமான அந்த மனிதர்களில் புலி (சாத்யகி), மான்களைக் கொல்லும் வேடுவனைப் போலக் கௌரவத் துருப்புகளைக் கொன்று அவர்களை அச்சங்கொள்ளச் செய்தான்.

தன் தேரில் சென்ற அவன் {சாத்யகி}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்டதும், மிகக் கடினமானதும், தங்க நிலவுகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் வில்லைப் பெரும் பலத்துடன் அசைத்தான். தங்க அங்கதங்களைக் கொண்ட தன் கரங்களுடனும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தலைப்பாகையுடனும், தங்கக் கவசம் அணிந்த தன் உடலுடனும், தங்கத்தால் மெருகூட்டப்பட்ட தன் கொடிமரம் மற்றும் வில்லுடனும் மேருவின் சிகரத்தைப் போல அவன் ஒளிர்ந்தான். இப்படி ஒளிர்ந்த அவன், தன் கையில் அந்த வட்டமான வில்லுடன் கூதிர் காலத்தில் தோன்றிய மற்றொரு சூரியனைப் போலத் தெரிந்தான். காளையின் கண்கள், நடை மற்றும் தோள்களைக் கொண்ட அந்த மனிதர்களில் காளை {சாத்யகி}, மாட்டுக் கொட்டகையில் உள்ள ஒரு காளையைப் போல உமது துருப்புகளுக்கு மத்தியில் தெரிந்தான்.

தன் மந்தையின் மத்தியில் செருக்குடன் நிற்கும் மதங்கொண்ட யானைக்கு ஒப்பானவனும், அதன் நடையைக் கொண்டவனுமான அவனை {சாத்யகியைக்} கொல்ல விரும்பி, யானை மந்தையின் மதங்கொண்ட தலைவனை {தலைமை யானையை} அணுகும் ஒரு புலியைப் போல உமது போர்வீரர்கள் அவனை அணுகினர். உண்மையில், அவன் {சாத்யகி} துரோணரின் படைப்பிரிவையும், கடக்க முடியாத போஜர்களின் படைப்பிரிவையும் கடந்த பிறகு, ஜலசந்தனின் துருப்புகள், காம்போஜர்கள் படை ஆகியவற்றைக் கொண்ட கடலை அவன் {சாத்யகி} கடந்த பிறகு, ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} எனும் முதலையிடமிருந்து அவன் தப்பிய பிறகு, பெருங்கடலைப் போன்ற அந்தப் படையை அவன் கடந்த பிறகு, உமது படையின் தேர்வீரர்கள் பலர் கோபத்தால் தூண்டப்பட்டு அந்தச் சாத்யகியைச் சூழ்ந்து கொண்டனர்.

சாத்யகி முன்னேறிச் செல்கையில், துரியோதனன், சித்திரசேனன், துச்சாசனன், விவிம்சதி, சகுனி, துஸ்ஸஹன், இளமை நிறைந்த துர்த்தர்ஷணன், கிராதன் மற்றும் ஆயுதங்களை நன்கறிந்தவர்களும், வீழ்த்துவதற்குக் கடினமானவர்களுமான பிற துணிச்சல் மிக்கவர்கள் பலரும் அவனைப் {சாத்யகியைப்} பின்னால் இருந்து தொடர்ந்து சென்றனர். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அப்போது உமது துருப்புகளுக்கு மத்தியில் எழுந்த ஆரவாரமானது, பெருங்காற்றால் சீறும் முழு அலைகளைக் கொண்ட பெருங்கடலைப் போலப் பேரொலி கொண்டதாக இருந்தது.

தன்னை நோக்கி விரையும் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் கண்ட அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி} தன் தேரோட்டியிடம் {முகுந்தனிடம்}, “மெதுவாகச் செல்வாயாக. ஓ! சாரதியே, பௌர்ணமியில் உச்சபட்ச உயரத்தை அடைந்து பெருகி வரும் பெருங்கடலைத் தடுக்கும் கரையைப் போல, ஓ! தேரோட்டியே, இந்தப் பெரும்போரில் (சினமும், செருக்கும்) பெருகியதும், யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்படை வீரர்கள் நிறைந்ததும், தன் தேர்களின் ஆழ்ந்த முழக்கத்தால் திசைகளின் பத்து புள்ளிகளையும் நிறைத்தபடி என்னை நோக்கி வேகமாக விரைவதும், பூமி, வானம், ஏன் கடல்களையே நடுங்கச் செய்வதுமான இந்தத் துருப்புகளின் கடலை நான் தடுப்பேன். ஓ! தேரோட்டியே, இந்திரனுக்கு இணையான என் ஆற்றலை இந்தப் பெரும்போரில் நீ காண்பாயாக. என் கூரிய கணைகளால் இந்தப் பகைவரின் படையை நான் எரிக்கப் போகிறேன். இந்தக் காலாட்படை வீரர்கள், குதிரைவீரர்கள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியன ஆயிரக்கணக்கில் என்னால் கொல்லப்படுவதையும், சீற்றமிக்க என் கணைகளால் அவர்களது உடல்கள் துளைக்கப்படுவதையும் காண்பாயாக” என்றான் {சாத்யகி}.

இவ்வார்த்தைகளைச் சாத்யகி (தன் தேரோட்டியிடம்) சொன்ன போது, போரிட விரும்பிய அந்தப் போராளிகள், அளவிலா ஆற்றலைக் கொண்ட அவனுக்கு முன்பாக வேகமாக வந்தனர். அவர்கள், “கொல்வீர், விரைவீர், நிற்பீர், காண்பீர், காண்பீர்” என்று சொல்லிக் கொண்டே பேரொலியை உண்டாக்கினர். இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர்களில், சாத்யகி, தன் கூரிய கணைகளின் மூலம் முன்னூறு {300} குதிரைவீரர்களையும், நானூறு {400} யானை வீரர்களையும் கொன்றான். (ஒரு பக்கத்தில்) ஒன்று சேர்ந்திருந்த வில்லாளிகள், (மறு பக்கத்தில்) சாத்யகி ஆகியோருக்கிடையில் இருந்த ஆயுதங்களின் பாதையானது {போரானது}, (பழங்காலதில்) தேவர்களுக்கு அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பாக மிகவும் மூர்க்கமானதாக இருந்தது. {அப்போது} ஒரு பயங்கரப் போர் தொடங்கியது.

சிநியின் பேரன் {சாத்யகி}, மேகங்களின் திரள்களைப் போலத் தெரிந்த உமது மகனின் {துரியோதனனின்} படையை, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தன் கணைகளால் வரவேற்றான். அந்தப் போரில் தன் கணை மழையால் அனைத்துப் பக்கங்களையும் நிறைந்தவனும், வீரமிக்கவனுமான அந்த வீரன் {சாத்யகி}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அச்சமற்றவகையில் பெரும் எண்ணிக்கையில் உமது துருப்புகளைக் கொன்றான். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் எந்தக் கணையும் {இலக்கை} தவறவில்லை, ஓ! மன்னா, அங்கே நான் கண்ட காட்சி மிக அற்புதமானதாக இருந்தது. தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றால் நிறைந்ததும், காலாட்படை வீரர்கள் என்ற முழு அலைகளால் ஆனதுமான அந்தத் துருப்புகளின் கடலானது, சாத்யகி என்ற அந்தக் கரையைத் தொட்டதும் அசையாமல் நின்றது.

சாத்யகியின் கணைகளால் மீண்டும் மீண்டும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கொல்லப்பட்டதும், பீதியடைந்திருந்த போராளிகள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக் கொண்டதுமான அந்தப் படையானது, குளிர்காலத்தின் உறைய வைக்கும் வெடிப்புகளால் பீடிக்கப்பட்டதைப் போல அங்கேயும், இங்கேயும் திரிந்தது. யுயுதானனால் தாக்கப்படாத காலாட்படை வீரர்களையோ, தேர்வீரர்களையோ, யானைகளையோ, குதிரைவீரர்களையோ, குதிரைகளையோ நாங்கள் காணவில்லை. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளுக்குச் சாத்யகி ஏற்படுத்திய பேரழிவைப் போல, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பல்குனன் {அர்ஜுனன்} கூட ஏற்படுத்தவில்லை. பெரும் கரநளினம் கொண்டவனும், மனிதர்களில் காளையும், களங்கமற்றவனுமான அந்தச் சிநியின் பேரன், தன் உச்சபட்ச திறனை வெளிப்படுத்திபடி அர்ஜுனனையே விஞ்சிப் போரிட்டான்.

அப்போது மன்னன் துரியோதனன், மூன்று கூரிய கணைகளால் அந்தச் சாத்வதனின் {சாத்யகியின்} தேரோட்டியையும் {முகுந்தனையும்}, நான்கு கணைகளால் அவனது {சாத்யகியின்} நான்கு குதிரைகளையும் துளைத்தான். மேலும் அவன் {துரியோதனன்} மூன்று கணைகளாலும், மீண்டும் எட்டு கணைகளாலும் சாத்யகியையும் துளைத்தான். துச்சாசனன், பதினாறு கணைகளால் அந்தச் சிநிக்களில் காளையைத் துளைத்தான். சகுனி, இருபத்தைந்து கணைகளாலும், சித்திரசேனன் ஐந்தாலும் சாத்யகியைத் துளைத்தனர். துஸ்ஸஹன், பதினைந்து கணைகளால் சாத்யகியின் மார்பைத் துளைத்தான். பிறகு, இப்படி அவர்களின் கணைகளால் தாக்கப்பட்ட அந்த விருஷ்ணிகளில் காளை {சாத்யகி}, ஓ! ஏகாதிபதி, அவர்களில் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் செருக்குடன் துளைத்தான்.

பெரும் சக்தி கொண்ட கணைகளால் தன் எதிரிகள் அனைவரையும் ஆழத் துளைத்தனும், பெரும் சுறுசுறுப்பையும் ஆற்றலையும் கொண்டவனுமான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஒரு பருந்தின் வேகத்துடன் அந்தக் களத்தில் திரிந்தான். சுபலன் மகனின் {சகுனியின்} வில்லையும், அவனது கையை மறைத்த தோலுறையையும் அவன் வெட்டினான். யுயுதானன் {சாத்யகி}, மூன்று கணைகளால் துரியோதனனின் நடுமார்பைத் துளைத்தான். மேலும், அவன் {சாத்யகி} சித்திரசேனனை நூறு கணைகாளலும், துஸ்ஸஹனை பத்தாலும் துளைத்தான். பிறகு அந்தச் சிநி குலத்துக் காளை இருபது கணைகளால் துச்சாசனனைத் துளைத்தான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட உமது மைத்துனன் (சகுனி), எட்டு கணைகளாலும், ஐந்தால் மீண்டுமொரு முறையும் சாத்யகியைத் துளைத்தான். துச்சாசனன் மூன்று கணைகளால் அவனைத் {சாத்யகியைத்} துளைத்தான். ஓ! மன்னா, துர்முகன் பனிரெண்டு கணைகளால் சாத்யகியைத் துளைத்தான்., எழுபத்துமூன்று கணைகளால் மாதவனை {சாத்யகியைத்} துளைத்த துரியோதனன், மூன்று கூரிய கணைகளால் அவனது தேரோட்டியை {முகுந்தனைத்} துளைத்தான். அப்போது சாத்யகி, போரில் ஒன்றாக மூர்க்கத்துடன் போரிட்ட அந்தத் துணிச்சல்மிக்க, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஒவ்வொருவரையும் மூன்று {மும்மூன்று} கணைகளால் பதிலுக்குத் துளைத்தான்.

பிறகு, அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் (யுயுதானன் {சாத்யகி}) ஒரு பல்லத்தால் உமது மகனின் {துரியோதனனின்} தேரோட்டியை விரைவாகத் தாக்கினான், அதன் பேரில், பின்னவன் {தேரோட்டி} உயிரையிழந்து கீழே பூமியில் விழுந்தான். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, தேரோட்டி வீழ்ந்ததும், உமது மகனின் {துரியோதனனின்} தேரானது அதில் பூட்டப்பட்டிருந்தவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான குதிரைகளால் போர்க்களத்திற்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களும், பிற வீரர்களும், மன்னனின் {துரியோதனனின்} தேரில் தங்கள் கண்களை நிலைக்கச் செய்து, நூற்றுக்கணக்கில் தப்பி ஓடினர். உமது படை தப்பி ஓடுவதைக் கண்ட சாத்யகி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டு, கூர்முனை கொண்ட கணைகளின் மழையால் அந்தப் படையை மறைத்தான்.

எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் இருந்த உமது போராளிகள் அனைவரையும் முறியடித்த சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனின் தேரை நோக்கி முன்னேறிச் சென்றான். உண்மையில், யுயுதானன் {சாத்யகி} கணைகளை ஏவுவதையும், தனது தேரோட்டியைப் பாதுகாப்பதையும், போரில் தானே போரிடுவதையும் கண்ட உமது துருப்புகள் அவனை {சாத்யகியை} வழிபட்டன” {என்றான் சஞ்சயன்}.

மலைவாசிகளை வீழ்த்திய சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 120-சாத்யகியின் திறனை வியந்த திருதராஷ்டிரன்; சாத்யகிக்கு எதிராக மலைநாட்டினரைத் தூண்டிய துச்சாசனன்; சாத்யகியால் கொல்லப்பட்ட யானைகளும், குதிரைகளும், வீரர்களும்; கற்களைக் கொண்டு போரிடும் மலைவாசிகளின் போர்முறை; சாத்யகியால் கொல்லப்பட்ட மலைவாசிகள்; துரோணரும் அவரது தேரோட்டியும் பேசிக்கொண்டது; சாத்யகிக்கு அஞ்சி துரோணரை நோக்கி ஓடி வந்த கௌரவர்கள்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சிநியின் பேரன் {சாத்யகி}, அந்தப் பெரும்படையைக் கலங்கடித்தபடியே அர்ஜுனனை நோக்கிச் செல்வதைக் கண்டு, ஓ! சஞ்சயா, உண்மையில் வெட்கங்கெட்டவர்களான என் மகன்கள் என்ன செய்தனர்? சவ்யசச்சினுக்கு {அர்ஜுனனுக்கு} இணையானவனான அந்த யுயுதானன் {சாத்யகி} தங்கள் எதிரில் இருந்த போது, உண்மையில் மரணத்தின் விளிம்பில் இருந்த அந்த இழிந்தவர்களால் போரில் எப்படித் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்ய முடிந்தது? போரில் வெல்லப்பட்ட அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் என்ன செய்தனர்? உலகம் பரந்த புகழைக் கொண்ட சாத்யகியால், உண்மையில், போரில் எப்படி அவர்களைக் கடந்து செல்ல முடிந்தது? ஓ! சஞ்சயா, என் மகன்கள் உயிரோடிருக்கையிலேயே அந்தச் சிநியின் பேரனால் {சாத்யகியால்} எப்படிப் போரிட முடிந்தது? இவை யாவையும் எனக்குச் சொல்வாயாக. ஓ! ஐயா {சஞ்சயா}, உன்னிடமிருந்து கேட்டவாறே, ஒருவனுக்கும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான பலருக்கும் இடையில் நடந்த அம்மோதல் மிக அற்புதமானாதாகவே இருக்கிறது.

ஓ! சூதா {சஞ்சயா}, சாத்வத குல வீரனான தனி ஒருவனால் {சாத்யகியால்}, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர் கொல்லப்பட்டதால் விதியானது இப்போது என் மகன்களுக்குச் சாதமானதாக இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஐயோ, ஓ! சஞ்சயா, கோபத்தால் தூண்டப்பட்ட யுயுதானன் {சாத்யகி} என்ற ஒற்றை வீரனுக்குக்கூட என் படை இணையானதாக இல்லையே. {அப்படியிருக்கையில்} பாண்டவர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை. ஆயுதங்களில் திறன்மிக்கவரும், போர்க்கலையின் முறைகள் அனைத்தையும் அறிந்தவரான துரோணரையே போரில் வென்ற சாத்யகி, சிறு {அற்ப} விலங்குகளைக் கொல்லும் ஒரு சிங்கத்தைப் போல என் மகன்களைக் கொன்றுவிடுவான். போரில் மூர்க்கமாகப் போரிட்டும் கிருதவர்மன் முதலிய எண்ணற்ற வீரர்களால் யுயுதானனைக் கொல்ல முடியவில்லையே. பின்னவன் {சாத்யகி} என் மகன்களைக் கொன்றுவிடுவான் என்பதில் ஐயமில்லை. சிநியின் புகழ்பெற்ற பேரன் போரிட்டது போலப் பல்குனனேகூட {அர்ஜுனனேகூட} போரிடவில்லை” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தீய ஆலோசனைகளாலும், துரியோதனனின் செயல்களாலுமே இவை யாவும் வந்தன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நான் உம்மிடம் சொல்லப் போவதைக் கவனமாகக் கேட்பீராக.

உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரில், சம்சப்தகர்கள் அனைவரும் கடுமையாகப் போரிடத் தீர்மானித்து மீண்டும் திரண்டனர். துரியோதனன் தலைமையில் மூவாயிரம் {3000} வில்லாளிகளும், சகர்கள், காம்போஜர்கள், பாஹ்லீகர்கள், யவனர்கள், பாரடர்கள் [1], கலிங்கர்கள், தங்கணர்கள், அம்பஷ்டர்கள், பிசாசர்கள் {பைசாசர்கள்}, பர்ப்பரர்கள், சினத்தால் தூண்டப்பட்டு, கற்களை ஆயுதமாக ஏந்திய மலை நாட்டினர் ஆகியோர் அனைவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுடர்மிக்க நெருப்பை எதிர்க்கும் விட்டிற்பூச்சிகளைப் போல அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தனர். அதே போல, ஓ! மன்னா, ஐநூறு {500} வீரர்களான பிறரும் சாத்யகியை எதிர்த்து விரைந்தனர். ஆயிரம் {1000} தேர்களையும், பெரும் தேர்வீரர்களான நூறு பேரையும், ஆயிரம் {1000} யானைகளையும், இரண்டாயிரம் {2000} வீரர்களையும், எண்ணற்ற காலாட்படை வீரர்களையும் கொண்ட மற்றொரு பெரிய படையும் சிநியின் பேரனை எதிர்த்து விரைந்தது.ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துச்சாசனன், “அவனை {சாத்யகியைக்} கொல்வீராக” என்று சொல்லி அந்த வீரர்கள் அனைவரையும் தூண்டியபடியே சாத்யகியைச் சூழ்ந்து கொண்டான். அந்த எண்ணிலடங்கா எதிரிகளுடன், தனி ஒருவனாக அச்சமற்றவகையில் போராடிய சிநியின் பேரனுடைய நடத்தை மகத்தானதாகவும், அற்புதமானதாகவும் இருப்பதை நாங்கள் கண்டோம். அவன் {சாத்யகி}, தேர்வீரர்கள் அடங்கிய அந்த மொத்த படையையும், அந்த யானைப் படையையும், அந்தக் குதிரைவீரர்கள் அனைவரையும், கள்வர்களின் அந்தப் படை முழுவதையும் கொன்றான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, நட்சத்திரங்களால் மினுமினுக்கும் கூதிர்காலத்து ஆகாயத்தைப் போல, அந்தப் போர்க்களமானது, உடைந்த தேர்ச்சக்கரங்கள், அவனது {சாத்யகியின்} வலிமைமிக்க ஆயுதங்களால் நொறுக்கப்பட்ட எண்ணற்ற அக்ஷங்கள் {ஏர்க்கால்கள்}, துண்டுகளாகக் குறைக்கப்பட்ட அழகிய தேர் அச்சுக்கள், நசுங்கிய யானைகள், வீழ்ந்த கொடிமரங்கள், சிதறிக் கிடக்கும் கவசங்கள் மற்றும் கேடயங்கள், மாலைகள், ஆபரணங்கள், ஆடைகள், அனுஷ்கரங்கள் {இருசுக்கட்டைகள்} ஆகியவற்றால் விரவி கிடந்தது [2].ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, யானைகளில் முதன்மையானவை பலவும், ஓ! மன்னா, மலைகளைப் போலப் பெரியவையும், அஞ்சனம், வாமனம், மற்றும் பிற இனங்களில் பிறந்த முதன்மையான யானைகள் பலவும், உயிரையிழந்து தரையில் கிடந்தன [3]. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சாத்யகியால், வனாயு, மலைநாடு, காம்போஜம், பாஹ்லீக இனங்களைச் சேர்ந்த முதன்மையான பல குதிரைகள் கொல்லப்பட்டன. அந்தச் சிநியின் பேரன், பல்வேறு மாநிலங்களில் பிறந்தவர்களும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுமான காலாட்படை வீரர்களை நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொன்றான்.அந்தப் படைவீரர்கள் இப்படிக் கொல்லப்பட்டு வருகையில் கள்வர்களிடம் பேசிய துச்சாசனன், “அறநெறியறியா வீரர்களே போரிடுவீராக! ஏன் பின்வாங்குகிறீர்?” என்றான். தன் வார்த்தைகளைக் கேளாமல் ஓடிச் செல்லும் அவர்களைக் கண்டவனும், உமது மகனுமான துச்சாசனன், கற்களைக் கொண்டு போரிடுவதில் திறம்பெற்றவர்களான துணிச்சல் மிக்க அந்த மலைவாசிகளிடம், “கற்களைக் கொண்டு போரிடுவதில் நீங்கள் சாதித்தவர்களாக இருக்கிறீர்கள். எனவே நிற்பீராக. அந்த வீரன் {சாத்யகி} போரிடும் விருப்பத்துடன் இருப்பினும், அவன் {சாத்யகி} உங்கள் போர் முறையை அறியாதவனாவான். கௌரவர்கள் அனைவரும் இந்தப் போர்முறையை அறியாதவர்களாகவே இருக்கின்றனர். சாத்யகியை நோக்கி விரைவீர். அஞ்சாதீர். சாத்யகியால் உங்களை அணுக இயலாது” என்று சொல்லி அவர்களைத் {மலைவாசிகளைத்} தூண்டினான்.

இப்படித் தூண்டப்பட்டவர்களும், கற்களைக் கொண்டு போரிடும் முறையை அறிந்தவர்களும், மலைவாசிகளுமான அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும், மன்னனை நோக்கி விரையும் அமைச்சர்களைப் போலவே அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியை} நோக்கி விரைந்தனர். பிறகு அந்த மலைவாசிகள், யானைகளின் தலையைப் போன்று பெரிய அளவிலான கற்களைத் தங்கள் கரங்களில் உயர்த்தியபடியே அந்தப் போரில் யுயுதானனுக்கு எதிராக நின்றனர். உமது மகனால் {துச்சாசனனால்} தூண்டப்பட்ட பிறரும், ஏவுகணைகளைத் தரித்துக் கொண்டு அந்தச் சாத்வதனை {சாத்யகியைக்} கொல்லும் விருப்பத்தில், பின்னவனை {சாத்யகியை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.

அப்போது சாத்யகி, கற்களைக் கொண்டு போரிடும் விருப்பத்தால் தன்னை நோக்கி விரைந்து வரும் அவ்வீரர்களைக் குறிபார்த்து, அவர்கள் மேல் கூரிய கணைகளை ஏவினான். அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, பாம்புகளைப் போன்று தெரிந்த அந்தக் கணைகளால், அந்த மலைவாசிகள் வீசிய கற்களின் அடர்த்தியான மழையைத் துண்டுகளாக வெட்டினான். சுடர்மிக்க விட்டிற்பூச்சிகளைப் போலத் தெரிந்த அந்தக் கற்களின் துண்டுகள், பல போராளிகளைக் கொன்றன. அதன்பேரில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, “ஓ!” என்றும், “ஐயோ” என்றும் அந்தக் களத்தில் கதறல்கள் எழுந்தன. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் கரங்களில் பெரும் கற்களை உயர்த்திப் பிடித்திருந்த துணிச்சல் மிக்க ஐநூறு {500} போர் வீரர்களின் கரங்களும் வெட்டப்பட்டுக் கீழே தரையில் கிடந்தன. மேலும் முழுமையாக ஆயிரம் {1000} பேரும், அதன் பிறகு ஒரு நூறாயிரம் {1,00,000} பேரும், கற்களைப் பிடித்திருந்த நிலையிலேயே தங்கள் கரங்கள் வெட்டப்பட்டுச் சாத்யகியை அணுகமுடியாமல் கீழே விழுந்தனர். உண்மையில் சாத்யகி, கற்களைக் கொண்டு போரிட்ட அந்த வீரர்களில் பல்லாயிரக் கணக்கானோரைக் கொன்றான். இவையாவும் மிக அற்புதமாகத் தெரிந்தது.

பிறகு அவர்களில் பலர் மீண்டும் போரிடத் திரும்பி கற்களின் மாரியைச் சாத்யகியின் மீது பொழிந்தனர். வாள்கள் மற்றும் வேல்கள் தரித்த தரதர்கள், தங்கணர்கள், கசர்கள், லம்பகர்கள், புளிந்தர்கள் ஆகியோரில் பலர் அவன் {சாத்யகியின்} மீது தங்கள் ஆயுதங்களை வீசினர். எனினும், ஆயுதப் பயன்பாடுகளை நன்கறிவந்தனான சாத்யகி, அந்தக் கற்களையும், ஆயுதங்களையும் தன் கணைகளால் வெட்டினான். சாத்யகியின் கூரிய கணைகள் துளைத்து, ஆகாயத்தில் உடைக்கப்பட்ட அந்தக் கற்கள் உண்டாக்கிய அந்தக் கடும் ஒலியால் அச்சமடைந்த பல தேர்வீரர்களும், குதிரைகளும், யானைகளும் போரில் இருந்து ஓடின. அந்தக் கற்களின் துண்டுகளால் தாக்கப்பட்ட மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியன, குளவிகளால் கடிபட்டதைப் போல உணர்ந்து போரில் நிற்க முடியாதவர்களாக ஆனார்கள். (சாத்யகியைத் தாக்கிய) யானைகளில் எஞ்சியவை சில குருதியால் நனைந்து, தங்கள் தலைகளும், கும்பங்களும் பிளக்கப்பட்டு யுயுதானனுடைய தேரின் அருகில் இருந்து தப்பி ஓடின. அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மாதவனால் {சாத்யகியால்} இப்படிக் கலங்கடிக்கப்பட்ட உமது துருப்புகளுக்கு மத்தியில் அலைகள் நிரம்பிய பெருங்கடலைப் போல ஆரவாரம் எழுந்தது.

அந்தப் பெரும் ஆரவாரத்தைக் கேட்ட துரோணர், தன் தேரோட்டியிடம், “ஓ! சூதா, சாத்வத குலத்தைச் சேர்ந்த அந்தப் பெரும் தேர்வீரன் {சாத்யகி}, கோபத்தால் தூண்டப்பட்டு நம் படையைப் பல்வேறு துண்டுகளாகச் சிதறடித்து, அந்தகனைப் போலவே களத்தில் திரிந்து கொண்டிருக்கிறான். இந்தச் சீற்றமிகு ஆரவாரம் வரும் இடத்திற்குத் தேரைச் செலுத்துவாயாக. யுயுதானன், கற்களைக் கொண்டு போரிடும் மலைவாசிகளுடன் போரிடுகிறான் என்பதில் ஐயமில்லை. நமது தேர்வீரர்களும், மூர்க்கமாக ஓடும் குதிரைகளால் சுமந்து செல்லப்படுவது காணப்படுகிறது. ஆயுதங்களற்றவர்களாகவும், கவசமற்றவர்களாகவும் காயமடைந்தவர்களாகவும் இருக்கும் அவர்களில் பலர் கீழே விழுகின்றனர். இந்தக் குதிரைகள் மூர்க்கமாக ஓடிக் கொண்டிருப்பதால் தேரோட்டிகள் அவற்றைத் தடுக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்” என்றார் {துரோணர்}.

பரத்வாஜர் மகனின் {துரோணரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட தேரோட்டி, ஆயுதங்கள் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான அந்தத் துரோணரிடம், “ஓ! நீண்ட நாட்களால் {ஆயுளால்} அருளப்பட்டவரே, கௌரவத் துருப்புகள் ஓடுகின்றன. (எதிரியால்) முறியடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் ஓடிக்கொண்டிருக்கும் நமது போர்வீரர்களைக் காண்பீராக. மேலும், ஒன்று கூடியிருப்பவர்களான பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் உம்மைக் கொல்லும் விருப்பத்தால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்து வருகின்றனர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, இப்பணிகளில் {இவ்விரு பணிகளில்}, கவனத்தைக் கோரும் முதன்மையான பணி யாது என்பதை நீர் தீர்மானிப்பீராக. (முன்னேறி வரும்) பாண்டவப் படையைச் சந்திக்க நாம் இங்கே நிற்க வேண்டுமா? அல்லது (சாத்யகியை நோக்கிச்) நாம் செல்ல வேண்டுமா? சாத்யகியைப் பொறுத்தவரை, இப்போது அவன் நம்மிடம் இருந்து வெகு தொலைவில் இருக்கிறான்” என்றான் {துரோணரின் தேரோட்டி}.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தத் தேரோட்டி இப்படிப் பரத்வாஜர் மகனிடம் {துரோணரிடம்} பேசிக் கொண்டிருக்கையில், பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்களைக் கொன்றபடி சிநியின் பேரன் {சாத்யகி} அங்கே திடீரெனத் தோன்றினான். அந்தப் போரில் உமது துருப்புகள் இப்படி யுயுதானனால் கொல்லப்படுகையில், யுயுதானனுடைய தேரின் அருகே இருந்து துரோணரின் படைப்பிரிவை நோக்கி அவை ஓடின. அதேபோலவே, எந்தப் (பிற) தேர்வீரர்களோடு சேர்ந்து துச்சாசனன் சென்றானோ, அவர்கள் அனைவரும், துரோணரின் தேர் காணப்பட்ட அந்த இடத்திற்கே பீதியடைந்து விரைந்து வந்தனர்” {என்றான் சஞ்சயன்}.

துரோணரின் தலையைச் சீவப் பாய்ந்த திருஷ்டத்யும்னன்! – துரோண பர்வம் பகுதி – 121-துச்சாசனன் செய்த தீமைகளைச் சொல்லி அவனை நிந்தித்த துரோணர்; சாத்யகியை எதிர்த்துச் சென்ற துச்சாசனன்; பாஞ்சால இளவரசன் வீரகேதுவைக் கொன்ற துரோணர்; பாஞ்சால இளவரசர்களான மேலும் நால்வரை கொன்ற துரோணர்; துரோணரை மயக்கமடையச் செய்த திருஷ்டத்யும்னன்; துரோணரின் தலையை வெட்டி வீழ்த்த எண்ணியது; மயக்கத்தில் இருந்து மீண்ட துரோணர் வைதஸ்திகக் கணைகளால் திருஷ்டத்யும்னனைப் பீடித்தது; திருஷ்டத்யும்னனின் தேரோட்டியைக் கொன்று, அவனைக் களத்தைவிட்டே விரட்டிய துரோணர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துச்சாசனனின் தேர் தன்னருகே நிற்பதைக் கண்ட பரத்வாஜர் மகன் {துரோணர்}, துச்சாசனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! துச்சாசனா, இந்தத் தேர்கள் அனைத்தும் ஏன் {தப்பி} ஓடுகின்றன? மன்னன் {துரியோதனன்} நலமாக இருக்கிறானா? சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} உயிருடன் இருக்கிறானா? நீயோ ஓர் இளவரசன். நீ மன்னனின் தம்பியுமாவாய். மேலும் நீ ஒரு வலிமைமிக்கத் தேர்வீரனும் ஆவாய். {அப்படியிருக்க} போரில் இருந்து ஏன் நீ ஓடுகிறாய்? (உன் அண்ணனின் அரியணையைப் பாதுகாத்து) பட்டத்து இளவரசனாவாயாக. {உன் அண்ணனை ராஜனாக்கி, நீ யுவராஜனாவாயாக}.

திரௌபதியிடம் நீ முன்னர், “பகடையில் எங்களால் வெல்லப்பட்ட நீ எங்களின் அடிமையாவாய். உன் கணவர்களுக்குக் கட்டுப்பட்டிராமல் கற்பை நீ ஒதுக்கித் தள்ளுவாயாக. என் அண்ணனான மன்னனின் {துரியோதனனின்} ஆடைகளைச் சுமப்பவளாக இருப்பாயாக. உன் கணவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். அவர்கள் எள்ளுப்பதர்களைப் போலப் பயனற்றவர்களேயாவர்” என்று சொன்னாய்.  துச்சாசனா, இவ்வார்த்தைகளைச் சொன்ன நீ, இப்போது போரில் இருந்து ஏன் ஓடுகிறாய்? பாஞ்சாலர்களுடனும், பாண்டவர்களுடனும் கடும் பகைமையை நீயே தூண்டிவிட்டு, தனி ஒருவனான சாத்யகியின் முன்னால் போரிட ஏன் அஞ்சுகிறாய்? சூதாட்ட நிகழ்வில் பகடையை எடுத்த போது, உன்னால் கையாளப்பட்ட பகடையானது விரைவில் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கடுங்கணைகளாக மாறும் என்பதை நீ உணரவில்லையா? தூற்றும் அடைமொழிகள் பலவற்றை முன்னர்ப் பாண்டவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியவன் நீயே. திரௌபதியின் துயரங்கள் உன்னையே வேராகக் {வேர்} கொண்டிருக்கின்றன {திரௌபதியின் துயரங்களுக்குக் காரணமானவன் நீயே}.

உனது செருக்கும், திமிரும், தற்பெருமையும் இப்போது எங்கே? கடும் நஞ்சுமிக்கப் பயங்கரப் பாம்புகளான அந்தப் பாண்டவர்களைச் சினமூட்டிவிட்டு ஏன் நீ ஓடுகிறாய்? சுயோதனனின் {துரியோதனனின்} துணிச்சல்மிக்கத் தம்பியான நீ ஓடுவதில் தீவிரமாய் இருக்கிறாய் என்பதில் ஐயமேயில்லை. ஓ! வீரா {துச்சாசனா}, முறியடிக்கப்பட்டுப் பீதியடைந்திருக்கும் இந்தக் கௌரவப் படையை உன் சொந்தக் கரங்களின் சக்தியை நம்பி நீயே இன்று பாதுகாக்க வேண்டும் [1]. எனினும், இதைச் செய்யாமல் அச்சத்தால் போரைக் கைவிட்டு உன் எதிரிகளின் இன்பத்தையே நீ அதிகரிக்கிறாய். ஓ! எதிரிகளைக் கொல்பவனே, உன் படைக்குத் தலைவனான நீயே இப்படி ஓடும்போது, வேறு யார்தான் போரில் நிலைப்பார்கள்? புகலிடமாக இருக்க வேண்டிய நீயே அஞ்சினால், யார்தான் அஞ்சாமலிருப்பார்கள்?சாத்வத குலத்தின் தனியொரு போர்வீரனுடன் {சாத்யகியிடம்} போரிட்ட பிறகு, போரில் இருந்து ஓடுவதற்கே உன் இதயம் விரும்புகிறது. எனினும், ஓ! கௌரவா {துச்சாசனா}, போரில் காண்டீவதாரியை {அர்ஜுனனை}, அல்லது பீமசேனனை, அல்லது இரட்டையர்களை (நகுலன் மற்றும் சகாதேவனை) நீ காண நேர்ந்தால் என்ன செய்வாய்? எதற்கு அஞ்சி நீ ஓடுவதில் பாதுகாப்பைத் தேடுகிறாயோ, அந்தச் சாத்யகியின் கணைகள், சூரியனுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான காந்தி கொண்ட பல்குனனுடையவைக்கு {அர்ஜுனனின் கணைகளுக்கு} போரில் ஒருபோதும் ஈடானவையல்ல. ஓடுவதில் உன் இதயம் உறுதியாக இருக்கிறது என்றால், சமாதானத்தை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்கு இந்தப் பூமியின் அரசுரிமை கொடுக்கப்படட்டும்.

தங்கள் சட்டைகளில் இருந்து விடுபட்ட பாம்புகளுக்கு ஒப்பான பல்குனனின் {அர்ஜுனனின்} கணைகள் உன் உடலுக்குள் நுழையும் முன் பாண்டவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக. உயர் ஆன்ம பார்த்தர்கள், போரில் உன் நூறு சகோதரர்களைக் கொன்று பலவந்தமாகப் பூமியைப் பறிப்பதற்கு முன் பாண்டவர்களுடன் சாமாதானத்தை அடைவாயாக. மன்னன் யுதிஷ்டிரனும், போரில் மகிழ்பவனான கிருஷ்ணனும் கோபமடைவதற்கு முன் பாண்டவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக. வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன் இந்தப் பரந்த படைக்குள் ஊடுருவி, உன் சகோதரர்களைப் பிடிப்பதற்கு முன் பாண்டவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக.

முன்னர்ப் பீஷ்மர் உன் அண்ணனான சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, “பாண்டவர்கள் போரில் வெல்லப்பட முடியாதவர்களாவர். ஓ! இனியவனே, அவர்களுடன் சமாதானத்தை அடைவாயாக” என்றார் [2]. எனினும், தீயவனான உன் அண்ணன் சுயோதனன் அதைச் செய்யவில்லை [3]. எனவே, உன் இதயத்தைப் போரில் உறுதியாக நிலைக்கச் செய்து பாண்டவர்களுடன் கடுமையாகப் போரிடுவாயாக. சாத்யகி இருக்கும் இடத்திற்கு உன் தேரில் விரைந்து செல்வாயாக. ஓ! பாரதா {துச்சாசனா}, நீ இல்லாமல் இந்தப் படை ஓடிவிடும். போரில் கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகியுடன் உனக்காக {உன் நலனுக்காகப்} போரிடுவாயாக” என்றார் {துரோணர்}.(துரோணரால்) இப்படிச் சொல்லப்பட்ட உமது மகன் {துச்சாசனன்} மறுமொழியாக ஒரு வார்த்தையையும் சொல்லவில்லை. துச்சாசனன், (பரத்வாஜர் மகனின் {துரோணரின்}) வார்த்தைகளைக் கேட்காதது போலப் போலியாகக் காட்டிக் கொண்டு, சாத்யகி இருக்கும் இடத்திற்குச் சென்றான். புறமுதுகிடாத மிலேச்சர்களின் பெரும்படையுடன் போரில் சாத்யகியிடம் வந்த துச்சாசனன், அவ்வீரனுடன் கடுமையாகப் போரிட்டான்.

தேர்வீரர்களில் முதன்மையான துரோணரும் கோபத்தால் தூண்டப்பட்டு, பாஞ்சாலர்களையும், பாண்டவர்களையும் எதிர்த்து மிதமான வேகத்துடன் விரைந்தார். அந்தப் போரில் பாண்டவப்படையின் மத்தியில் ஊடுருவிய துரோணர், அவர்களது போர்வீரர்களை, நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் நசுக்கினார். அந்தப் போரில் துரோணர், தன் பெயரை அறிவித்துக் கொண்டு பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் மற்றும் மத்ஸ்யர்களுக்கு மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்தினார்.

பாஞ்சாலர்களின் ஆட்சியாளனுடைய {துருபதனின்} மகனான சிறப்புமிக்க வீரகேது, பாண்டவப் படையணிகளை வெல்வதில் ஈடுபட்டிருந்த பரத்வாஜர் மகனை {துரோணரை} எதிர்த்து விரைந்தான். துரோணரை ஐந்து கணைகளால் துளைத்த அவ்விளவரசன் {வீரகேது}, ஒரு கணையால் துரோணரின் கொடிமரத்தையும், ஏழால் அவரது தேரோட்டியையும் துளைத்தான். துரோணர் மிகக் கடுமையாக முயன்றாலும், பாஞ்சாலர்களின் இளவரசனை {வீரகேதுவை} அணுக முடியாதபடிக்கு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அப்போரில் நான் கண்ட காட்சி மிக அற்புதமானதாக இருந்தது. பிறகு, ஓ! ஐயா, பாஞ்சாலர்கள், போரில் துரோணர் தடுக்கப்பட்டதைக் கண்டு, மன்னன் யுதிஷ்டிரனின் வெற்றியை விரும்பி, அவரை {துரோணரை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். ஓ! மன்னா,  நெருப்பு போன்ற கணைகள், பலமான வேல்கள் மற்றும் பல்வேறு விதங்களிலான ஆயுதங்களின் மழையால் அந்தப் போர்வீரர்கள் துரோணரை மறைத்தனர். ஆகாயத்தில் மேகத்திரள்களை விரட்டும் காற்றைப் போன்ற தன் எண்ணற்ற கணைகளால் அந்த அடர்த்தியான ஆயுத மழையைக் கலங்கடித்த துரோணர் மிகப் பிரகாசமாகத் தெரிந்தார்.

பிறகு பகைவீரர்களைக் கொல்பவரான அவர் (பரத்வாஜரின் மகன்), சூரியன் அல்லது நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட கடுங்கணை ஒன்றை வீரகேதுவின் தேரை நோக்கிக் குறிவைத்தார். அந்தக் கணையானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாஞ்சால இளவரசனை {வீரகேதுவைத்} துளைத்துச் சென்று, குருதியில் குளித்து, நெருப்பின் தழலைப் போலச் சுடர்விட்டுக் கொண்டு வேகமாகப் பூமிக்குள் நுழைந்தது. பாஞ்சாலர்களின் இளவரசன் {வீரகேது}, காற்றால் வேரோடு முறிந்து மலைச்சிகரத்தில் இருந்து கீழே விழும் சண்பக மரத்தைப் போலத் தனது தேரில் இருந்து கீழே வேகமாக விழுந்தான். பெரும் வில்லாளியும், பெரும் வலிமை கொண்டவனுமான அந்த இளவரசனின் {வீரகேதுவின்} வீழ்ச்சியை அடுத்து, துரோணரை அனைத்துப் பக்கங்களிலும் பாஞ்சாலர்கள் விரைவாகச் சூழ்ந்து கொண்டனர்.

சித்திரகேது, சூதன்வான், சித்திரவர்மன், சித்திரரதன் ஆகியோர் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (கொல்லப்பட்ட) தங்கள் சகோதரனின் {வீரகேதுவின்} நிமித்தமாகத் துயரால் பீடிக்கப்பட்டு, கோடையின் முடிவில் (பொழியும்) மேகங்களைப் போல (அவரை நோக்கி) கணைகளை ஏவியபடி, அந்தப் பரத்வாஜர் மகனுடன் {துரோணருடன்} போரிடும் விருப்பத்தால் ஒன்றாகச் சேர்ந்து அவரை {துரோணரை} எதிர்த்து விரைந்தனர். அரச பரம்பரையைச் சேர்ந்த வலிமைமிக்க அந்தத் தேர்வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் தாக்கப்பட்ட அந்தப் பிராமணர்களில் காளை {துரோணர்}, தன் சக்தி மற்றும் கோபம் அனைத்தையும், அவர்களின் அழிவுக்காக ஒன்றாகத் திரட்டினார். பிறகு துரோணர் அவர்கள் மீது கணைகளின் மாரியை ஏவினார். முற்றாக வளைந்திருந்த துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அவரது கணைகளால் தாக்கப்பட்ட அந்த இளவரசர்கள், ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, குழம்பிப் போய் என்ன செய்வது என்பதை அறியாதிருந்தார்கள்.

ஓ! பாரதரே, கோபக்காரத் துரோணர், அந்த இளவரசர்கள் மலைத்துப் போயிருப்பதைக் கண்டு, புன்னகைத்துக் கொண்டே அந்தப் போரில் அவர்களது குதிரைகள், தேரோட்டிகள், தேர்கள் ஆகியவற்றை அவர்களை இழக்கச் செய்தார். பிறகு பரத்வாஜரின் சிறப்புமிக்க மகன் {துரோணர்}, தமது கூரிய கணைகளாலும், பல்லங்களாலும், மரத்தில் இருந்து கொய்யப்படும் மலர்களைப் போல அவர்களது தலைகளைக் கொய்தார். உயிரை இழந்த அந்த இளவரசர்கள், ஓ! பெருங்காந்தி கொண்ட மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் கொல்லப்பட்டு விழுந்த தைத்தியர்களையும், தானவர்களையும் போலத் தங்கள் தேர்களில் இருந்து கீழே பூமியில் விழுந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜரின் அந்த வீரமகன் {துரோணர்} போரில் அவர்களைக் கொன்ற பிறகு வெல்லப்பட முடியாததும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்டதுமான தமது வில்லை அசைத்தார்.

பாஞ்சாலர்களில் தேவர்களுக்கே ஒப்பானவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அவர்கள் {சகோதரர்கள்} கொல்லப்பட்டதைக் கண்ட திருஷ்டத்யும்னன் சினத்தால் தூண்டப்பட்டு அந்தப் போரில் கண்ணீரைச் சிந்தினான். கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {திருஷ்டத்யும்னன்} அம்மோதலில் துரோணரின் தேரை எதிர்த்து விரைந்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பாஞ்சால இளவரசனின் கணைகளால் மறைக்கப்பட்ட துரோணரைக் கண்டு அங்கே திடீரெனத் துன்பக் கதறல்கள் எழுந்தன. உயரான்ம பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} முற்றாக மறைக்கப்பட்டாலும், துரோணர் எந்த வலியையும் உணரவில்லை. மறுபுறம் சிரித்துக் கொண்டே போரிடுவதையே அவர் தொடர்ந்தார். பிறகு சினத்தால் சீறிய அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, நேரான கணைகள் பலவற்றால் துரோணரின் மார்பைத் தாக்கினான்.

அந்த வலிமைமிக்க வீரனால் {திருஷ்டத்யும்னனால்} ஆழத் துளைக்கப்பட்ட பரத்வாஜரின் சிறப்புமிக்க மகன் {துரோணர்}, கீழே தன் தேர்த்தட்டில் அமர்ந்து மயக்கத்தில் வீழ்ந்தார். அவரை {துரோணரை} அந்நிலையில் கண்டவனும், பெரும் ஆற்றலையும், சக்தியையும் கொண்டவனுமான திருஷ்டத்யும்னன் தன் வில்லை வைத்துவிட்டு, விரைவாக ஒரு வாளை எடுத்துக் கொண்டான். அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் வேகமாகத் தன் தேரில் இருந்து கீழே குதித்து, கோபத்தில் கண்கள் சிவந்து, துரோணரின் தலையை அவரது உடலில் இருந்து வெட்டி வீழ்த்தும் விருப்பத்தால் உந்தப்பட்டு, அந்தப் பரத்வாஜரின் {துரோணரின்} தேரில் ஏறினான். அதேவேளையில் தன் புலனுணர்வு மீண்டு, தமது வில்லை எடுத்துக் கொண்ட வீரத் துரோணர், கொல்லும் விருப்பத்தால் தமக்கு வெகு அருகில் வந்துவிட்ட திருஷ்டத்யும்னனைக் கண்டு, ஒரு சாண் அளவு நீளமே கொண்டவையும், நெருக்கத்தில் உள்ளோரிடம் போரிடத் தகுந்தவையுமான கணைகளால் {வைதஸ்திகம் என்ற கணைகளால்} அந்த வலிமைமிக்கத் தேர்வீரனைத் துளைக்கத் தொடங்கினார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு சாண் அளவு நீளமே கொண்டவையும், நெருக்கமான போருக்குத் தகுந்தவையுமான அந்தக் கணைகளைத் துரோணர் அறிந்திருந்தார். அவற்றைக் கொண்டு திருஷ்டத்யும்னனை பலவீனமடையச் செய்வதிலும் வென்றார்.

வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னன், பெரும் எண்ணிக்கையிலான அந்தக் கணைகளால் தாக்கப்பட்டுத் துரோணரின் தேரில் இருந்து கீழே விரைவாகக் குதித்தான். பிறகு தன் வேகம் கலங்கடிக்கப்பட்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்}, தன் தேரில் ஏறிக்கொண்டு மீண்டும் தன் பெரிய வில்லை எடுத்துக் கொண்டான். பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் மீண்டும் அந்தப் போரில் துரோணரைத் துளைக்கத் தொடங்கினான். துரோணரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தமது கணைகளால் பிருஷதன் மகனைத் {துருபதன் மகன் திருஷ்டத்யும்னனைத்} துளைக்கத் தொடங்கினார்.

போர் வழிமுறைகளை அறிந்த அந்த இருவரும், தங்கள் தேர்களில் பல்வேறு அசைவுகளை வெளிக்காட்டியபடியும், தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் சிதைத்தபடியும் களத்தில் திரிந்தனர். போர்வீரர்களின் மனங்களை மலைக்கச் செய்த துரோணரும், பிருஷதன் மகனும் மழைக்காலத்தில் (மழைத்தாரைகளைப் பொழியும்) வலிமைமிக்க இரு மேகங்களைப் போலத் தங்கள் கணை மாரியைப் பொழிந்தனர். மேலும் அந்தச் சிறப்புமிக்க வீரர்கள் தங்கள் கணைகளால் ஆகாயத்தையும், திசைப்புள்ளிகளையும், பூமியையும் நிறைத்தனர். அனைத்து உயிரினங்களும், க்ஷத்திரியர்களும், அங்கே இருந்த பிற போராளிகள் அனைவரும், ஓ! மன்னா, அவர்களுக்கிடையில் நடைபெற்ற போரை உயர்வாகப் பாராட்டினர்.

ஓ! மன்னா, பாஞ்சாலர்கள், “துரோணர் போரில் திருஷ்டத்யும்னனுடன் மோதி நமக்கு அடிபணியப் போகிறார் என்பதில் ஐயமில்லை” என்று உரக்கப் பேசினர். அப்போது துரோணர், கனிந்த கனியொன்றை மரத்தில் இருந்து கொய்யும் ஒரு மனிதனைப் போல அந்தப் போரில் திருஷ்டத்யும்னனின் தேரோட்டியின் தலையை வேகமாகக் கொய்தார். பிறகு, ஓ! மன்னா, உயர் ஆன்ம திருஷ்டத்யும்னனின் குதிரைகள் {களத்தைவிட்டு} ஓடிச் சென்றன. அந்தக் குதிரைகள் திருஷ்டத்யும்னனைக் களத்தைவிட்டு சுமந்து சென்றதும், பெரும் ஆற்றலைக் கொண்ட துரோணர், அந்தப் போரில் பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும் முறியடிக்கத் தொடங்கினார். பாண்டுக்களையும், பாஞ்சாலர்களையும் வென்றவரும், பெரும் ஆற்றலைக் கொண்டவரும், எதிரிகளைத் தண்டிப்பவருமான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} மீண்டும் வியூகத்தின் மத்தியில் தன் நிலையையே ஏற்று நின்றார். ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும் போரில் அவரை {துரோணரை} வெல்லத் துணியவில்லை” {என்றான் சஞ்சயன்}.

துச்சாசனனைக் கொல்லாமல் விட்ட சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 122-சாத்யகியை எதிர்த்துச் சென்ற துச்சாசனன்; சாத்யகிக்கும் துச்சாசனுக்கும் இடையில் ஏற்பட்ட கடும்போர்; திரிகர்த்தர்களைச் சாத்யகிக்கு எதிராகத் தூண்டிய துரியோதனன்; பீமசேனனின் சபதத்தை நினைவுகூர்ந்து துச்சாசனனைக் கொல்லாமல் விட்ட சாத்யகி…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் துச்சாசனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மழைத்தாரைகளைப் பொழியும் பெரும் மேகத்தைப் போல ஆயிரக்கணக்கான கணைகளை இறைத்தபடி சிநியின் பேரனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தான். அறுபது கணைகளாலும், பிறகு பதினாறு கணைகளாலும் சாத்யகியைத் துளைத்த அவன் {துச்சாசனன்}, போரில் மைநாக மலையைப் போல அசையாமல் நின்ற அந்த வீரனை {சாத்யகியை} நடுங்கச் செய்வதில் தவறினான். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பெரும் தேர்க்கூட்டங்களின் துணையுடன் சென்ற அந்தப் பாரதக் குலத்தின் முதன்மையானவன் {துச்சாசனன்}, எண்ணற்ற கணைகளை ஏவியபடி மேகங்களைப் போன்ற ஆழ்ந்த முழக்கங்களால் திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் நிறைத்தான்.

போரிட வரும் அந்தக் கௌரவனை {துச்சாசனனைக்} கண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான சாத்யகி, அவனை {துச்சாசனனை} நோக்கி விரைந்து, தன் கணைகளால் அவனை மறைத்தான். துச்சாசனனுக்கு முன்னணியில் இருந்தோர் அனைவரும் இப்படி அந்தக் கணை மழையால் மறைக்கப்பட்டு உமது மகன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அச்சத்தால் தப்பி ஓடினர். அவர்கள் ஓடிய பிறகு, ஓ! ஏகாதிபதி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன் துச்சாசனன், போரில் அச்சமற்று நீடித்தபடியே கணைகளால் சாத்யகியைப் பீடிக்கத் தொடங்கினான். அந்தப் போரில் துச்சாசனன், நான்கு கணைகளால் சாத்யகியின் நான்கு குதிரைகளையும், மூன்றால் அவனது தேரோட்டியையும், ஒரு நூறு கணைகளால் சாத்யகியையும் துளைத்து முழக்கம் செய்தான்.

அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட மாதவன் {சாத்யகி}, தன் நேரான கணைகளின் மூலமாகத் துச்சாசனனின் தேரையும், சாரதியையும், கொடிமரத்தையும், துச்சாசனனையும் விரைவாகக் கண்ணுக்குப் புலப்படாதபடி செய்தான். உண்மையில் சாத்யகி, துணிச்சல்மிக்கத் துச்சாசனனை கணைகளாலேயே மறைத்துவிட்டான். ஒரு சிலந்தியானது தன் இழைகளின் மூலம் ஒரு கொசுவைத், தான் அடையும் தொலைவிற்குள் சிக்கச் செய்வதைப் போலவே அந்த எதிரிகளை வெல்பவனும் {சாத்யகியும்} தன் கணைகளால் துச்சாசனனை வேகமாக மறைத்தான்.

அப்போது, மன்னன் துரியோதனன், இப்படிக் கணைகளால் மறைக்கப்பட்ட துச்சாசனனைக் கண்டு, யுயுதானனின் {சாத்யகியின்} தேரை நோக்கித் திரிகர்த்தர்களின் படை ஒன்றைத் தூண்டினான். கடுஞ்செயல் புரிபவர்களும், போரில் சாதித்தவர்களும், எண்ணிக்கையில் மூவாயிரமாக இருந்தவர்களுமான அந்தத் திரிகர்த்த தேர்வீரர்கள் யுயுதானனை நோக்கிச் சென்றனர். போரிட உறுதியாகத் தீர்மானித்தவர்களும், புறமுதுகிடுவதில்லை என்று உறுதியேற்றவர்களுமான அவர்கள் அனைவரும் பெரும் தேர்க்கூட்டங்களுடன் யுயுதானனைச் சூழ்ந்து கொண்டனர். எனினும், யுயுதானன், தன்னை நோக்கிப் போரிட வந்த அந்தப் படையின் முன்னணியில் இருந்தவர்களும், தன் மீது கணைமாரிகளை ஏவியவர்களுமான ஐநூறு முதன்மையான வீரர்களைத் தாக்கி வீழ்த்தினான். சிநிக்களில் முதன்மையானவனின் {சாத்யகியின்} கணைகளால் விரைவாகக் கொல்லப்பட்ட அவர்கள் {திரிகர்த்தர்கள்}, சூறாவளியால் வேருடன் சாய்க்கப்பட்டு மலையுச்சியில் இருந்து விழும் நெடிய மரங்களைப் போலக் கீழே விழுந்தனர்.

ஓ! ஏகாதிபதி, சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} கணைகளால் சிதைக்கப்பட்ட யானைகளாலும், வீழ்ந்த கொடிமரங்களாலும், கிழிக்கப்பட்டு, குதறப்பட்டு, குருதியில் புரண்டு கொண்டிருந்தவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகளாலும் விரவிக் கிடந்த அந்தப் போர்க்களமானது, ஓ! மன்னா, மலர்ந்திருக்கும் கின்சுகங்களால் {பலாச மரங்களால்} நிறைந்திருக்கும் ஒரு சமவெளியைப் போல அழகாகத் தெரிந்தது. இப்படி யுயுதானனால் {சாத்யகியால்} கொல்லப்பட்ட உமது போர்வீரர்கள், சேற்றில் {புதைகுழியில்} மூழ்கும் யானைகளைப் போல ஒரு பாதுகாவலனை அறியத் தவறின. பிறகு அவர்களில் அனைவரும், பறவைகளின் இளவரசன் {கருடன்} மீது கொண்ட அச்சத்தால் பொந்துகளை நோக்கித் திரும்பும் பெரும்பாம்புகளைப் போலத் துரோணரின் தேர் இருந்த இடத்தை நோக்கித் திரும்பினர். கடும் விஷமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தன் கணைகளால் அந்த ஐநூறு {500} துணிச்சல்மிக்க வீரர்களைக் கொன்ற பிறகு, அந்த வீரன் {சாத்யகி}, தனஞ்சயன் {அர்ஜுனன்} இருந்த இடத்தை நோக்கி மெதுவாகச் சென்றான்.

அந்த மனிதர்களில் முதன்மையானவன் {சாத்யகி} இப்படிச் சென்ற போது, உமது மகன் துச்சாசனன் ஒன்பது நேரான கணைகளால் அவனை {சாத்யகியை} வேகமாகத் துளைத்தான். பிறகு அந்த வலிமைமிக்க வில்லாளி (யுயுதானன்) கழுகின் இறகையும், தங்கச் சிறகுகளையும், கொண்ட ஐந்து நேரான கூரிய கணைகளால் துச்சாசனனைப் பதிலுக்குத் துளைத்தான். அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துச்சாசனன் சிரித்துக் கொண்டே மூன்று கணைகளாலும், மீண்டும் ஐந்து கணைகளாலும் சாத்யகியைத் துளைத்தான். ஐந்து கணைகளால் உமது மகனைத் {துச்சாசனனைத்} தாக்கிய அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, அவனது வில்லையும் வெட்டிவிட்டு அர்ஜுனனை நோக்கிச் சிரித்துக் கொண்டே சென்றான். பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட துச்சாசனன், அப்படிச் சென்று கொண்டிருந்த அந்த விருஷ்ணி வீரனை {சாத்யகியைக்} கொல்ல விரும்பி, முழுக்க இரும்பாலான ஓர் ஈட்டியை அவன் மீது வீசினான். எனினும் சாத்யகி, கங்க இறகுகளைக் கொண்ட தன் கணைகளால் உமது மகனின் {துச்சாசனனின்} அந்தக் கடும் ஈட்டியை வெட்டினான்.

ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, பிறகு மற்றொரு வில்லை எடுத்த உமது மகன் {துச்சாசனன்}, சில கணைகளால் சாத்யகியைத் துளைத்து விட்டு உரத்த முழக்கம் செய்தான். அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, அந்தப் போரில் உமது மகனை மலைக்கச்செய்து, நெருப்பின் தழல்களுக்கு ஒப்பான சில கணைகளால் அவனது {துச்சாசனனின்} நடு மார்பைத் துளைத்தான். மேலும் முழுக்க இரும்பாலானவையும், கூர்முனை கொண்டவையுமான எட்டு கணைகளால் துச்சாசனனைத் துளைத்தான். எனினும் துச்சாசனன், பதிலுக்கு இருபது கணைகளால் சாத்யகியைத் துளைத்தான்.

அப்போது, உயர்ந்த அருளைக் கொண்ட சாத்யகி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மூன்று நேரான கணைகளால் துச்சானனின் நடுமார்பை {மீண்டும்} துளைத்தான். பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானன் சில நேரான கணைகளால் துச்சாசனனின் குதிரைகளைக் கொன்றான்; கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {சாத்யகி} மேலும் சில நேரான கணைகால் பின்னவனின் {துச்சாசனனின்} தேரோட்டியையும் கொன்றான். பிறகு அவன் {சாத்யகி} ஒரு பல்லத்தைக் கொண்டு உமது மகனின் வில்லை வெட்டி, ஐந்து கணைகளைக் கொண்டு தோலாலான அவனது {துச்சாசனனின்} கையுறைகளையும் அறுத்தான். உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனான சாத்யகி, இரு பல்லங்களைக் கொண்டு துச்சாசனனின் கொடிமரத்தையும், அவனது தேரில் உள்ள மரத்தாலான சுழல்தண்டுகளையும் {ரதசக்திகளையும்} வெட்டினான். பிறகு அவன் எண்ணற்ற கூரிய கணைகளால் உமது மகனின்  {துச்சாசனனின்}பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் கொன்றான்.

அப்போது, வில்லற்று, தேரற்று, குதிரைகளற்று, சாரதிகளற்று இருந்த பின்னவன் {துச்சாசனன்}, திரிகர்த்தப் போர்வீரர்களின் தலைவனால் அவனது தேரில் ஏற்றிக் கொள்ளப்பட்டான். பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரனான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஒருக்கணம் அவனைப் {துச்சாசனனைப்} பின்தொடர்ந்து சென்று, பின்னர்ப் பீமசேனனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து அவனைக் {துச்சாசனனைக்} கொல்லாமல் நின்றான். உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போரில் உமது மகன்கள் அனைவரையும் அழிப்பதாகச் சபைக்கு மத்தியில் பீமசேனன் உறுதியேற்றிருந்தான். பிறகு, ஓ! தலைவரே {திருதராஷ்டிரரே}, இப்படித் துச்சாசனனை வென்ற சாத்யகி, ஓ! மன்னா, தனக்கு முன்பே தனஞ்சயன் {அர்ஜுனன்} சென்ற பாதையின் வழியே விரைவாகச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.

துரியோதனனின் ஆற்றல்! – துரோண பர்வம் பகுதி – 123-கௌரவர்களைத் திக்குமுக்காடச் செய்த பாண்டவ வீரர்கள்; பாண்டவப் படைக்குள் ஊடுருவி, அப்படையைக் கலங்கடித்த துரியோதனன்; துரியோதனனின் வில்லை அறுத்த யுதிஷ்டிரன்; பாஞ்சாலர்களுடன் மோதிய துரோணர்; அர்ஜுனன் இருந்த இடத்தில் எழுந்த ஆரவாரம்..

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, (அர்ஜுனனை நோக்கிச்) சாத்யகி சென்ற போது, அவனைக் கொல்வதற்கோ, தடுப்பதற்கோ என் படையில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் எவரும் இல்லையா? கலங்கடிக்கப்பட இயலாத ஆற்றலையும், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான ஆற்றலையும் கொண்ட அவன் {சாத்யகி}, தானவர்களுக்கு மத்தியில் பெரும் இந்திரனைப் போலத் தனியொருவனாகவே போரில் சாதனைகளை அடைந்துவிட்டான். அல்லது, ஒருவேளை சாத்யகி சென்ற பாதை வெறுமையாக இருந்ததா? ஐயோ, உண்மையான ஆற்றலைக் கொண்ட அவன் {சாத்யகி} தனி ஒருவனாகவே எண்ணற்ற தேர்களை நசுக்கிவிட்டானே! ஓ! சஞ்சயா, சிநியின் பேரன் {சாத்யகி}, போரில் தன்னோடு போராடிக் கொண்டிருந்த பரந்த படையின் ஊடாகத் தனியொருவனாக எப்படிக் கடந்து சென்றான் என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படைவீரர்கள் ஆகியவற்றால் நிறைந்த உமது படையின் கடும் முயற்சிகளும் ஆரவாரமும் யுக முடிவில் காணப்படுவதற்கு ஒப்பாக இருந்தன. ஓ! கௌரவங்களை அளிப்பவரே {திருதராஷ்டிரரே}, கூடியிருந்த உமது படையானது (தினமும்) கூட்டமாகத் திரளும் போது, அந்த உமது படையைப் போன்று மற்றொரு கூட்டமானது பூமியில் இதற்கு முன் இருந்ததில்லை என்றே எனக்குத் தோன்றியது. அங்கே வந்த தேவர்களும், சாரணர்களும், “இந்தக் கூட்டம் இதன் வகையில் பூமியில் இறுதியானதாக இருக்கும்” என்றனர். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஜெயத்ரதன் கொல்லப்பட்ட நாளில் துரோணரால் அமைக்கப்பட்டதைப் போல அதற்கு முன் அப்படியொரு வியூகம் அமைக்கப்பட்டதில்லை. போரில் ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்த போது, பெரும் கூட்டமாக இருந்த அந்தப் படைவீரர்களின் ஆரவாரமானது சூறாவளியால் கொந்தளித்த பெருங்கடலுக்கு ஒப்பானதாக இருந்தது. ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது படையிலும், பாண்டவர்களின் படையிலும் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் மன்னர்கள் இருந்தனர். போரில் ஈடுபடும்போது கடும் செயல்களைச் செய்யும் அந்தக் கோபக்கார வீரர்களால் உண்டாக்கப்பட்ட ஒலியானது பிரமாண்டமானதாகவும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.

அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீமசேனன், திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோர், “வருவீராக, தாக்குவீராக, விரைவீராக. துணிச்சல்மிக்க மாதவனும் {சாத்யகியும்}, அர்ஜுனனும் பகைவரின் படைக்குள் நுழைந்து விட்டனர். ஜெயத்ரதனின் தேர் அருகே அவர்கள் எளிதில் செல்ல என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வீராக” என்று உரக்கக் கூச்சலிட்டனர். இதைச் சொல்லியே அவர்கள் படைவீரர்களைத் தூண்டினர். மேலும் அவர்கள், “சாத்யகியும், அர்ஜுனனும் கொல்லப்பட்டால், குருக்கள் தங்கள் நோக்கங்களை அடைவர், நாமோ வீழ்த்தப்படுவோம். எனவே அனைவரும் ஒன்று சேர்ந்து பெருங்கடலைப் போன்ற இந்த (எதிரிப்) படையைக் கடலைக் கலங்கடிக்கும் மூர்க்கமான காற்றைப் போல வேகமாகக் கலங்கடிப்பீராக” என்றனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனன், பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்} ஆகியோரால் தூண்டப்பட்ட போர்வீரர்கள், தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்துக் கௌரவர்களைத் திக்குமுக்காடச் செய்தனர். பெரும் சக்தியைக் கொண்ட அவர்கள் அனைவரும் போரில் மரணத்தை விரும்பி, ஆயுதங்களின் விளிம்பிலோ, முனையிலோ சொர்க்கத்தை எதிர்பார்த்துத் தங்கள் நண்பர்களுக்காகப் போரிடுவதில் தங்கள் உயிர்களைக் குறித்துக் கிஞ்சிற்றும் கருதிப்பார்க்கவில்லை.

அதேபோல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்களும் பெரும் புகழை விரும்பியும், போரில் உன்னதத் தீர்மானத்தைக் கொண்டும், போரிடும் உறுதியுடன் களத்தில் நின்றனர். கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில் சாத்யகி அனைத்துப் போராளிகளையும் வென்று அர்ஜுனனை நோக்கிச் சென்றான். போர்வீரர்களின் கவசங்களில் பிரதிபலித்த சூரியனின் கதிர்களால் போராளிகள் தங்கள் விழிகளை அவற்றில் இருந்து விலக்காமல் இருந்தனர்.

துரியோதனனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} போரில் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த உயர் ஆன்ம பாண்டவர்களின் வலிமைமிக்கப் படைக்குள் ஊடுருவினான். ஒரு பக்கத்தில் அவனையும் {துரியோதனனையும்}, மறுபக்கத்தில் பிறரையும் கொண்டு அவர்களுக்கிடையில் நடந்த அந்த மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது. அந்நிகழ்வின் போது நேர்ந்த பேரழிவு பெரியதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அந்தப் பாண்டவப் படை இப்படிப் போருக்குச் சென்ற போது, அதற்குள் ஊடுருவிய துரியோதனன் பெரும் துயரில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஓ! சூதா, அவன் {துரியோதனன்} களத்தில் புறமுதுகிடவில்லை என நான் நம்புகிறேன். பயங்கரப் போரில் தனி ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த அம்மோதல், அதிலும் அந்தத் தனி ஒருவன் {துரியோதனன்} மன்னன் எனும்போது அஃது {அம்மோதல்} ஒவ்வாதது எனவே எனக்குத் தோன்றுகிறது. அதையும்தவிர, பெரும் ஆடம்பரத்திலும், செல்வத்திலும், உடைமைகளிலும் வளர்க்கப்பட்ட துரியோதனன் மனிதர்களின் மன்னனுமாவான். தனியொருவனாகப் பலருடன் மோதிய அவன் {துரியோதனன்} போரிடுவதில் இருந்து புறமுதுகிடவில்லை என்றே நான் நம்புகிறேன்” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனி ஒருவனுக்கும், பலருக்கும் இடையில் நடந்த அம்மோதலில், உமது மகன் {துரியோதனன்} செய்த அற்புதமான போரை நான் உரைக்கையில் நீர் கேட்பீராக. உண்மையில், ஒரு யானையால் தடாகத்தில் உள்ள தாமரைக்கூட்டங்கள் கலங்கடிக்கப்படுவதைப் போல அந்தப் போரில் துரியோதனனால் பாண்டவப்படை கலங்கடிக்கப்பட்டது. அந்தப் படை உமது மகனால் {துரியோதனனால்} இப்படிக் கலங்கடிக்கப்படவதைக் கண்ட பாஞ்சாலர்கள், பீமசேனனின் தலைமையில் அங்கே விரைந்தனர்.

துரியோதனன், பத்து கணைகளால் பீமசேனனையும், மூன்றால் {மும்மூன்றால்} இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய} ஒவ்வொருவரையும், ஏழால் மன்னன் யுதிஷ்டிரனையும் துளைத்தான். மேலும் அவன் விராடனையும், துருபதனையும் ஆறு கணைகளாலும், சிகண்டியை நூறாலும் துளைத்தான். திருஷ்டத்யும்னனை இருபது கணைகளால் துளைத்த அவன் {துரியோதனன்}, திரௌபதியின் மகன்கள் ஐவரில் ஒவ்வொருவரையும் மூன்று {மும்மூன்று} கணைகளால் தாக்கினான். அவன் {துரியோதனன்}, உயிரினங்களைக் கோபத்தில் கொல்லும் யமனைப் போலவே அந்தப் போரில் யானைகள் மற்றும் தேர்வீரர்கள் உள்ளடங்கிய, நூற்றுக்கணக்கான பிற போராளிகளைத் தன் கடுங்கணைகளால் வெட்டினான். பண்பட்ட பயிற்சியால் ஏற்பட்ட தன் திறனின் விளைவாகவும், தன் ஆயுதங்களின் பலத்தாலும் அவன் {துரியோதனன்} தனது எதிரிகளைத் தாக்கி வீழ்த்துவதில் ஈடுபட்டிருக்கையில், குறிபார்க்கும்போதோ, தன் கணைகளைத் தொடுக்கும்போதோ இடையறாமல் தன் வில்லை வட்டமாக வளைத்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவன் {துரியோதனன்} தெரிந்தான். உண்மையில் அவன் {துரியோதனன்} தன் எதிரிகளைக் கொல்வதில் ஈடுபட்டிருக்கையில், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடியைக் கொண்ட அவனது உறுதிமிக்க வில்லானது, எப்போதும் வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே மக்களால் காணப்பட்டது.

அப்போது மன்னன் யுதிஷ்டிரன், உமது மகன் {துரியோதனன்} போரில் போராடிக் கொண்டிருந்தபோது, ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, பின்னவனின் வில்லை இரு பல்லங்களால் அறுத்தான். மேலும் யுதிஷ்டிரன் சிறப்பானவையும், முதன்மையானவையுமான பத்து கணைகளால் அவனையும் {துரியோதனனையும்} ஆழத் துளைத்தான். எனினும் அந்தக் கணைகள் துரியோதனனின் கவசங்களைத் [1] தொட்டதும் விரைவில் துண்டுகளாக நொறுங்கின. பிறகு, விருத்திரனைக் கொன்ற சக்ரனைப் பழங்காலத்தில் தேவர்களும், பெரும் முனிவர்களும் சூழ்ந்து கொண்டதைப் போல மகிழ்ச்சியால் நிறைந்த பார்த்தர்கள் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்டனர்.பிறகு, உமது வீர மகன் {துரியோதனன்} மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்டிரனிடம், “நில், நிற்பாயாக” என்று சொல்லி அவனை {யுதிஷ்டிரனை} எதிர்த்து விரைந்தான். பெரும்போரில் இப்படி முன்னேறும் உமது மகனை {துரியோதனனைக்} கண்ட பாஞ்சாலர்கள், மகிழ்ச்சியாக, வெற்றியில் நம்பிக்கையுடன் அவனை வரவேற்க முன்னேறினர். அப்போது (குரு) மன்னனை {துரியோதனனைக்} காக்க விரும்பிய துரோணர், விரைந்து வருபவர்களான பாஞ்சாலர்களைச் சூறாவளியால் விரட்டப்படும் மழைநிறைந்த மேகத் திரள்களை ஏற்கும் ஒரு மலையைப் போல வரவேற்றார்.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களுக்கும், உமது வீரர்களுக்கும் இடையில் அங்கே நிகழ்ந்த போரானது, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, மிகக் கடுமையானதாகவும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. (யுக முடிவில் ஏற்படும்) ருத்ரனின் விளையாட்டுக்கு ஒப்பாக அனைத்து உயிரினங்களுக்கும் அங்கே ஏற்பட்ட பேரழிவு பயங்கரமானதாக இருந்தது. அப்போது, தனஞ்சயன் {அர்ஜுனன்} இருந்த இடத்தில் பெரும் ஆரவாராம் ஒன்று எழுந்தது. அவ்வாரவாரமானது, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பிற ஒலிகளுக்கெல்லாம் மேலாக எழுந்து மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கியது. இப்படியே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, அர்ஜுனனுக்கும், உமது வில்லாளிகளுக்கும் இடையிலான போர் நடந்தது. இப்படியே உமது படைக்கு மத்தியில் சாத்யகிக்கும், உம்மவர்களுக்கும் இடையிலான போரும் நடந்தது. மேலும் இப்படியே துரோணருக்கும், அவரது எதிரிகளுக்கும் இடையிலான போரும் வியூகத்தின் வாயிலில் தொடர்ந்தது. உண்மையில், ஓ! பூமியின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன், துரோணர், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் அனைவரும் கோபத்தால் தூண்டப்பட்டிருந்த போது இப்படியே அந்தப் பேரழிவும் பூமியில் தொடர்ந்தது” {என்றான் சஞ்சயன்}. 

துரோணரின் ஆற்றல்! – துரோண பர்வம் பகுதி – 124-துரோணரைத் தாக்கிய கேகய இளவரசன் பிருஹத்க்ஷத்திரன் கொல்லப்பட்டது; துரோணரை எதிர்த்துத் தாக்கிய சிசுபாலன் மகனான திருஷ்டகேதுவும், திருஷ்டத்யும்னன் மகனான க்ஷத்திரதர்மனும் கொல்லப்பட்டது; தேரோட்டியை இழந்த சேகிதானன் குதிரைகளால் களத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டது; துரோணரின் வயது மற்றும் நிறம் பற்றிய குறிப்பு; துரியோதனனை நிந்தித்த துருபதன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த நாளின் பிற்பகலில் மேகங்களைப் போன்ற ஆழ்ந்த முழக்கங்களால் வகைப்படுத்தபட்ட ஒரு பயங்கரப்போரானது துரோணருக்கும், சோமகர்களுக்கும் இடையில் மீண்டும் நடந்தது. மனிதர்களில் முதன்மையான துரோணர், சிவப்புக் குதிரைகளுடன் கூடிய தமது தேரில் ஏறிப் போரிடும் நோக்கோடு பாண்டவர்களை எதிர்த்து மிதமான வேகத்தில் விரைந்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வில்லாளியும், வலிமையும், பலமும் கொண்டவரும், சிறப்புமிக்கக் குடம் ஒன்றில் பிறந்த வீரரும், உமக்கு ஏற்புடையதைச் செய்வதில் ஈடுபடுபவருமான பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அழகிய சிறகுகளைக் கொண்ட தமது கூரிய கணைகளால், முதன்மையான தேர்வீரர்கள் பலரைத் தாக்கி வீழ்த்தியபடி அந்தப் போரில் விளையாடுவதாகவே தெரிந்தது.

அப்போது, கைகேயர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனும், ஐந்து சகோதரர்களில் மூத்தவனும், போரில் தடுக்கப்பட முடியாதவனுமான பிருஹத்க்ஷத்திரன் அவரை {துரோணரை} எதிர்த்து விரைந்தான். கூரிய கணைகள் பலவற்றை ஏவிய அவன் {பிருஹத்க்ஷத்திரன்}, கந்தமாதன மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் பெரும் மேகத் திரள்களைப் போல ஆசானை {துரோணரைப்} பெரிதும் பீடித்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட துரோணர், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பதினைந்து கணைகளை அவன் {பிருஹத்க்ஷத்திரன்} மீது ஏவினார். எனினும், அந்தக் கேகயர்களின் இளவரசன் {பிருஹத்க்ஷத்திரன்}, கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளைப் போன்றவையும், துரோணரால் ஏவப்பட்டவையுமான அந்தக் கணைகள் ஒவ்வொன்றையும் தன் ஐந்து கணைகளால் மகிழ்ச்சியாக வெட்டினான். அவனால் {பிருஹத்க்ஷத்திரனால்} வெளிப்படுத்தப்பட்ட கரநளினத்தைக் கண்ட அந்தப் பிராமணர்களில் காளை {துரோணர்}, எட்டு நேரான கணைகளை அவன் {பிருஹத்க்ஷத்திரன்} மீது ஏவினார். துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகள், தன்னை நோக்கி வேகமாக வருவதைக் கண்ட பிருஹத்க்ஷத்திரன், அந்தப் போரில் தன் கூரிய கணைகள் பலவற்றால் அவற்றைத் தடுத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஹத்க்ஷத்திரனால் மிகக் கடினமான காரியம் அடையப்பட்டதைக் கண்ட உமது துருப்புகள் ஆச்சரியத்தில் நிறைந்தன.

அப்போது பிருஹத்க்ஷத்திரனை மெச்சிய துரோணர், அந்தப் போரில், தடுக்கப்பட முடியாத, பிரம்மம் என்று அழைக்கப்பட்ட தெய்வீக ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்தார். கேகயர்களின் இளவரசன் {பிருஹத்க்ஷத்திரன்} போரில் துரோணரால் பிரம்மாயுதம் ஏவப்பட்டதைக் கண்டு, ஓ! ஏகாதிபதி, அதைத் தன் பிரம்மாயுதத்தால் கலங்கடித்தான். இப்படி அவ்வாயுதம் கலங்கடிக்கப்பட்ட பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பிருஹத்க்ஷத்திரன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அறுபது கணைகளால் அந்தப் பிராமணரை {துரோணரைத்} துளைத்தான். அப்போது, மனிதர்களில் முதன்மையானவரான துரோணர், பலமிக்கக் கணையொன்றால் கேகயர்களின் இளவரசனை துளைத்ததில், அது பின்னவனின் {பிருஹத்க்ஷத்திரனின்} கவசத்தை ஊடுருவி (அவனது உடலைக்கடந்து) பூமிக்குள் நுழைந்தது. அந்தப் போரில், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கருநாகமொன்று எறும்புப் புற்றைத் துளைத்துச் செல்வதைப் போலவே, அந்தக் கணை கேகய இளவரசனின் உடலைத் துளைத்துச் சென்று பூமிக்குள் நுழைந்தது.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணரின் கணைகளால் ஆழத்துளைக்கப்பட்ட அந்தக் கேகயர்களின் இளவரசன் {பிருஹத்க்ஷத்திரன்}, சினத்தால் நிறைந்து, தன் அழகிய கண்களை உருட்டியபடி, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும் கல்லில் கூராக்கப்பட்டவையுமான எழுபது கணைகளால் துரோணரைத் துளைத்தான். மற்றொரு கணையால் துரோணரின் தேரோட்டியுடைய முக்கியப் பகுதிகளைப் பெரிதும் பீடித்தான். ஓ! ஐயா, பிருஹத்க்ஷத்திரனின் கணைகளால் துளைக்கப்பட்ட துரோணர், கேகயர்களின் இளவரசனுடைய தேரின் மீது கூரிய கணைகளின் மழையைப் பொழிந்தார். வலிமைமிக்கத் தேர்வீரனான பிருஹத்க்ஷத்திரனை நிதானத்தை இழக்கச் செய்த துரோணர், பிறகு சிறகுகள் படைத்த நான்கு கணைகளால் முன்னவனின் {பிருஹத்க்ஷத்திரனின்} நான்கு குதிரைகளைக் கொன்றார். மற்றொரு கணையால் அவர், பிருஹத்க்ஷத்திரனின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து விழச் செய்தார். மேலும் இரு கணைகளால் தம் எதிரியின் கொடிமரம், குடை ஆகியவற்றைப் பூமியில் வீழ்த்திய அந்தப் பிராமணர்களில் காளை {துரோணர்}, தமது வில்லில் இருந்து நன்கு ஏவப்பட்ட மூன்றாவது கணையொன்றால் பிருஹத்க்ஷத்திரனையும் மார்பில் துளைத்தார். அதன்பேரில், இப்படி மார்பில் தாக்கப்பட்ட பின்னவன் {பிருஹத்க்ஷத்திரன்} தன் தேரில் இருந்து கீழே விழுந்தான்.

பிருஹத்க்ஷத்திரனின் படுகொலையின் பேரில் சினத்தால் நிறைந்த கைகேயர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான சிசுபாலன் மகன் {திருஷ்டகேது}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேரோட்டியிடம், “ஓ! தேரோட்டியே, கவசம் தரித்தவரும், கைகேய மற்றும் பாஞ்சாலப் படைகளைக் கொல்வதில் ஈடுபடுபவருமான துரோணர் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக” என்றான். அவனது {திருஷ்டகேதுவின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தேரோட்டி, விரைவில் அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனைக் காம்போஜ இனத்தைச் சேர்ந்த வேகமான குதிரைகளில் துரோணரிடம் அழைத்துச் சென்றான். அப்போது சேதிகளில் காளையான அந்தத் திருஷ்டகேது, வலிமையில் பெருகி, சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும் பூச்சியைப் போலவே தன் அழிவுக்காகத் துரோணரை நோக்கி விரைந்தான். விரைவில் அவன் துரோணரையும், அவரது குதிரைகளையும், தேரையும், கொடிமரத்தையும் அறுபது கணைகளால் துளைத்தான். உறங்கும் புலியை எழுப்பும் ஒருவனைப் போல மீண்டும் அவன் {திருஷ்டகேது}, பிற கூரிய கணைகள் பலவற்றால் அவரை மீண்டும் தாக்கினான். பிறகு துரோணர், கழுகின் இறகுகளைக் கொண்ட கூரிய க்ஷுரப்ரம் ஒன்றால் அந்தப் போரில் போராடிக் கொண்டிருந்த அந்தப் போர்வீரனின் {திருஷ்டகேதுவின்} வில்லை நடுவில் அறுத்தார். அப்போது மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட பலமிக்கத் தேர்வீரனான அந்தச் சிசுபாலன் மகன் {திருஷ்டகேது}, கங்கங்கள் மற்றும் மயில்களின் இறகுகளாலான சிறகுகள் கொண்ட கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்தான். பிறகு துரோணர் நான்கு கணைகளால் திருஷ்டகேதுவின் நான்கு குதிரைகளைக் கொன்று, சிரித்துக் கொண்டே பின்னவனின் {திருஷ்டகேதுவின்} தேரோட்டியுடைய தலையை அவனது உடலில் இருந்து அறுத்தார். பிறகும் அவர் இருபத்தைந்து கணைகளால் திருஷ்டகேதுவையும் துளைத்தார்.

அப்போது, அந்தச் சேதிகளின் இளவரசன் {திருஷ்டகேது}, விரைவாகத் தன் தேரில் இருந்து கீழே குதித்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, ஒரு கோபக்காரப் பாம்பைப் போல அதைப் பரத்வாஜரின் மகன் {துரோணர்} மீது வீசினான். இரும்பின் பலத்தைக் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தக் கனமான கதாயுதம், மரணத்தைப் போலத் தன்னை நோக்கி வருவதைக் கண்ட பரத்வாஜர் மகன் {துரோணர்}, பல்லாயிரம் கூரிய கணைகளால் அதை வெட்டினார். பல கணைகளைக் கொண்டு பரத்வாஜர் மகனால் {துரோணரால்} வெட்டப்பட்ட அந்தக் கதாயுதம், ஓ! ஐயா, ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, தன்னொலியால் பூமியில் எதிரொலித்தபடி கீழே விழுந்தது. தன் கதாயுதம் கலங்கடிக்கப்பட்டதைக் கண்டவனும், கோபம் நிறைந்தவனும், துணிச்சல்காரனுமான திருஷ்டகேது ஒரு வேலையும் {வேல்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஈட்டியையும் ஏவினான். அந்த வேலை ஐந்து கணைகளால் வெட்டிய துரோணர், மேலும் ஐந்து கணைகளால் அந்த ஈட்டியையும் வெட்டினார். அந்த ஏவுகணைகள் இரண்டும் இப்படி வெட்டப்பட்டு, கருடனால் கிழித்துச் சிதைக்கப்பட்ட இரு பாம்புகளைப் போலக் கீழே பூமியில் விழுந்தன.

அப்போது பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, அந்தப் போரில், பரத்வாஜரின் அழிவுக்காகவே போரிட்டுக் கொண்டிருந்த திருஷ்டகேதுவை அழிப்பதற்காக அவன் மேல் கூரிய கணை ஒன்றை ஏவினார். அந்தக் கணையானது, அளவிலா சக்தி கொண்ட திருஷ்டகேதுவின் கவசத்தையும், மார்பையும் துளைத்துக் கடந்து, தாமரைகள் நிறைந்த தடாகத்தில் பாயும் ஓர் அன்னத்தைப் போலப் பூமிக்குள் நுழைந்தது. பசியுடன் கூடிய காடையானது சிறு பூச்சி ஒன்றை விழுங்குவதைப் போலவே வீரத் துரோணரும் அந்தப் போரில் திருஷ்டகேதுவை விழுங்கினார் {கொன்றார்}. சேதிகளின் ஆட்சியாளனுடைய {திருஷ்டகேதுவின்} கொலையை அடுத்து, உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனான அவனது மகன், கோபத்தால் தூண்டப்பட்டு, தன் தந்தையின் சுமையைச் சுமக்க முனைந்தான். துரோணர் சிரித்துக் கொண்டே, வலிமைமிக்கப் பெரிய புலியொன்று ஆழ்ந்த கானகத்தில் ஒரு மான்குட்டியைக் கொல்வதைப் போலத் தன் கணைகளால் அவனையும் யமலோகம் அனுப்பி வைத்தார்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இப்படிப் பாண்டவர்கள் {அளவில்} குறைக்கப்பட்டபோது, ஜராசந்தனின் வீர மகன் {சகாதேவன்} துரோணரை நோக்கி விரைந்தான். சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல அவன் தன் கணைகளின் மாரியால் விரைவாக வலிமைமிக்கத் துரோணரை கண்ணுக்குப் புலப்படமுடியாதவராகச் செய்தான். அவனது கரநளினத்தைக் கண்டவரும், க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவருமான துரோணர், தம் கணைகளை நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஏவினார். அந்தப் போரில் தனது தேரில் நின்றிருந்த, அந்த முதன்மையான தேர்வீரனை {ஜராசந்தன் மகனான சகாதேவனை} (தமது கணைகளால்) மறைத்த அந்தத் துரோணர், வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஜராசந்தன் மகனை {சகாதேவனை} விரைவாகக் கொன்றார். உண்மையில், யமனுக்கு ஒப்பான அந்தத் துரோணர், உயிரினங்களுக்கு நேரம் நேர்கையில் அவற்றை விழுங்கும் அந்தகனைப் போலவே தன்னை அணுகிய அனைவரையும் விழுங்கினார் {கொன்றார்}.

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் தன் பெயரை அறிவித்துக் கொண்ட துரோணர், பல்லாயிரம் கணைகளால் பாண்டவர்களை மறைத்தார். துரோணரால் ஏவப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவரையும், அவரது பெயர் பொறிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள், போரில் நூற்றுக்கணக்கான மனிதர்களையும், யானைகளையும், குதிரைகளையும் கொன்றன. சக்ரனால் {இந்திரனால்} கொல்லப்பட்ட அசுரர்களைப் போலத் துரோணரால் இப்படிக் கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள், குளிரால் பீடிக்கப்பட்ட பசுமந்தையைப் போல நடுங்கத் தொடங்கின. உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டவப்படை இப்படித் துரோணரால் கொல்லப்பட்ட போது, மிகப் பரிதாபகரமான துயர ஓலம் அங்கிருந்து எழுந்தது. சூரியனால் சுட்டெரிக்கப்பட்டும், அந்தக் கணைகளால் கொல்லப்பட்டும் பாஞ்சாலர்கள் கவலையில் நிறைந்தனர். அந்தப் போரில் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணைமழையால் மலைத்துப்போன பாஞ்சாலர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், முதலைகளால் தொடை கவ்வப்பட்டவர்களைப் போலவே தங்களை உணர்ந்தனர்.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சேதிகள், சிருஞ்சயர்கள், காசிகள், கோசலர்கள் ஆகியோர் போரிடும் விருப்பத்தால் பரத்வாஜர் மகனை எதிர்த்து மகிழ்ச்சியாக விரைந்தனர். சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர், “துரோணர் கொல்லப்படுகிறார், துரோணர் கொல்லப்படுகிறார்” என்றனர். இவ்வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே அவர்கள் அந்த வீரரை {துரோணரை} நோக்கி விரைந்தனர். உண்மையில், அந்தச் சிறப்புமிக்கத் துரோணரை யமனுலகுக்கு அனுப்ப விரும்பிய அந்த மனிதர்களில் புலிகள் அனைவரும் தங்கள் உச்சபட்ச வலிமையை அவர் {துரோணரின்} மேல் செலுத்தினர். அப்போது பரத்வாஜரின் மகன் {துரோணர்}, போரில் மூர்க்கமாகப் போராடிக் கொண்டிருந்த துணிச்சல் மிக்க வீரர்களை, அதிலும் குறிப்பாகச் சேதிகளில் முதன்மையானோரைத் தமது கணைகளால் இறந்தோருடைய மன்னனின் {யமனின்} முன்னிலைக்கு அனுப்பினார்.

சேதிகளில் முதன்மையானோர் அழிக்கப்பட்ட பிறகு, துரோணரின் கணைகளால் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்கள் நடுங்கத் தொடங்கினர். துரோணரின் அந்த அருஞ்செயல்களைக் கண்ட அவர்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமசேனனையும், திருஷ்டத்யும்னனையும் உரக்க அழைத்து, “இந்தப் பிராமணர் {துரோணர்} கடுமையான தவங்களைப் பயின்று, பெரும் தவத்தகுதியை அடைந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. போரில் சினத்தால் தூண்டப்பட்டிருக்கும் இவர் {துரோணர்} க்ஷத்திரியர்களில் முதன்மையானோரை எரிக்கிறார். ஒரு க்ஷத்திரியனின் கடமை போராகும்; ஒரு பிராமணருக்கு {அந்தக் கடமையானது} உயர்ந்த தவமாகும். தவத்தகுதியும், கல்வியும் கொண்ட ஒரு பிராமணர், தன் பார்வையாலேயே அனைத்தையும் எரிக்கும் வல்லமை பெற்றவராவார். க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் பலர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கடக்க முடியாதவையும், கடுமையான நெருப்பைப் போன்றவையுமான துரோணரின் ஆயுதங்களை அடைந்து வெடித்து எரிகின்றனர். சிறப்புமிக்கத் துரோணர், தமதளவிலான வலிமை, துணிவு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றால் அனைத்து உயிரினங்களையும் மலைக்கச் செய்து, நமது துருப்புகளைக் கொன்று வருகிறார்” என்றனர் {பாஞ்சால வீரர்கள்}.

அவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், க்ஷத்திரியக் கடமைகளை முறையாகப் பின்பற்றுபவனுமான வலிமைமிக்க க்ஷத்திரதர்மன், அம்பு பொருத்தப்பட்ட துரோணரின் வில்லை அர்த்தச்சந்திரக் கணையொன்றால் கோபத்துடன் அறுத்தான். க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான துரோணர், மேலும் கோபமடைந்து, தாம் எறிந்த {முறிந்த} வில்லை விடக் கடினமானதும், பிரகாசமானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டார். பகைவரின் படையணிகளை அழிக்கும் கூர்முனைக் கணையொன்றை அதில் பொருத்திய ஆசான் {துரோணர்}, பெரும்பலத்துடன் தமது வில்லின் நாணைக் காதுவரை இழுத்து அந்த இளவரசனின் மீது ஏவினார். அந்தக் கணையானது க்ஷத்திரதர்மனைக் கொன்றுவிட்டு பூமிக்குள் நுழைந்தது. மார்பு பிளக்கப்பட்ட அவன் {க்ஷத்திரதர்மன்} தனது வாகனத்தில் இருந்து கீழே பூமியில் விழுந்தான். திருஷ்டத்யும்னனுடைய மகனின் கொலையை அடுத்து (பாண்டவத்) துருப்புகள் நடுங்கத் தொடங்கின.

அப்போது வலிமைமிக்கச் சேகிதானன் துரோணரின் மீது பாய்ந்தான். பத்து கணைகளால் துரோணரைத் துளைத்த அவன், மேலும் ஒரு கணையால் அவரது நடுமார்பைத் துளைத்தான். மேலும் அவன் {சேகிதானன்} நான்கு கணைகளால் துரோணரின் தேரோட்டியையும், மேலும் நான்கால் அவரது நான்கு குதிரைகளையும் துளைத்தான். பிறகு ஆசான் {துரோணர்} பதினாறு கணைகளால் சேகிதானனின் வலக்கரத்தைத் துளைத்து, பதினாறால் அவனது கொடிமரத்தையும், ஏழால் அவனது தேரோட்டியையும் துளைத்தார். தேரோட்டி கொல்லப்பட்டதும், சேகிதானனின் குதிரைகள் அந்தத் தேரைத் தங்களுக்கும் பின்னால் இழுத்துக் கொண்டு தப்பி ஓடின. சேகிதானனின் குதிரைகள் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} கணைகளால் துளைக்கப்பட்டதையும், சாரதியை இழந்த அவனது தேரையும் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் பெரும் அச்சத்தால் நிறைந்தனர். பிறகு துரோணர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போரில் ஒன்றுசேர்ந்திருந்த பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும் அனைத்துப் பக்கங்களிலும் முறியடித்துக் கொண்டு மிகப் பிரகாசமாகத் தெரிந்தார்.

முழுதாக எண்பத்தைந்து வயதும்கரிய நிற மேனியும், காது வரை தொங்கிய வெண்மயிரும் கொண்டவரான மதிப்புக்குரிய துரோணர், தன் தேரில் ஏறி பதினாறு வயது இளைஞனைப் போலப் போரில் திரிந்து கொண்டிருந்தார் [1]. உண்மையில் எதிரிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் அச்சமற்று திரிந்து எதிரியைக் கொல்லும் துரோணரை, வஜ்ரதாரியான இந்திரனேயன்றி வேறு யாருமில்லை என்றே கருதினர். அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான துருபதன், “பசியுடன் கூடிய புலியொன்று சிறு விலங்குகளைக் கொல்வதைப் போல இவர் {துரோணர்} க்ஷத்திரியர்களைக் கொன்றுவருகிறார். பாவியும், தீய ஆன்மா கொண்டவனுமான துரியோதனன், (தனது அடுத்த உலகாக) மிக மோசமான உலகங்களையே அடைவான் என்பது உறுதியானதாகும். அவனது பேராசையின் காரணமாகவே க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் பலர், போரில் கொல்லப்பட்டுக் குருதியில் புரண்டு, நாய்களுக்கும் நரிகளுக்கும் உணவாகிச் சிதைந்த காளைகளைப் போலக் களத்தில் கிடக்கின்றனர்” என்றான். இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுக்குத் தலைவனுமான துருபதன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பார்த்தர்களைத் தனக்குத் தலைமையில் நிறுத்திக் கொண்டு, துரோணரை நோக்கி வேகமாக விரைந்தான்” {என்றான் சஞ்சயன்}.

“நான் உன் அண்ணன்!” என்ற யுதிஷ்டிரன்! – துரோண பர்வம் பகுதி – 125-போரின் நிலை கண்டு கலங்கிய யுதிஷ்டிரன் சிந்திக்கத் தொடங்கியது; அர்ஜுனனையும், சாத்யகியையும் காணாமல் கவலையடைந்த யுதிஷ்டிரன் பீமனின் பெருமைகளை நினைத்துப் பார்த்தது; யுதிஷ்டிரனைக் கண்டு கலங்கிய பீமன்; அர்ஜுனனையும், சாத்யகியையும் தேடிச் செல்லுமாறு பீமனைப் பணித்த யுதிஷ்டிரன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டவர்களின் படை இப்படி அனைத்துப் பக்கங்களிலும் கலங்கடிக்கப்பட்ட போது, பார்த்தர்களும், பாஞ்சாலர்களும் வெகு தொலைவுக்குத் திரும்பி ஓடினர். மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதும், யுக முடிவில் ஏற்படுவதைப் போல உலகளாவிய பேரழிவை ஏற்படுத்திய அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்த போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உண்மையில் துரோணர் மீண்டும் மீண்டும் சிங்க முழக்கங்களிட்ட போது, பாஞ்சாலர்கள் பலவீனப்படுத்தப்பட்டுப் பாண்டவர்கள் கொல்லப்பட்ட போது, அந்தப் போரில் ஏற்படும் துயருக்கு எந்தப் புகலிடத்தையும் காணத்தவறிய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காரியம் எப்படி முடியப்போகிறது எனச் சிந்திக்கத் தொடங்கினான்.

சவ்யசச்சினை {அர்ஜுனனைக்} காண எதிர்பார்த்துச் சுற்றிலும் கண்களைச் செலுத்தினாலும், யுதிஷ்டிரன், அந்தப் பிருதையின் {குந்தியின்} மகனையோ {அர்ஜுனனையோ}, மாதவனையோ {சாத்யகியையோ} காணவில்லை. மனிதர்களில் புலியும், குரங்குக் கொடியோனுமான அந்த அர்ஜுனனைக் காணாமல், காண்டீவத்தின் நாணொலியைக் கேட்காமல் அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} கவலையில் நிறைந்தான். மேலும், விருஷ்ணிகளின் தேர்வீரர்களில் முதன்மையான சாத்யகியையும் காணாமல், மன்னன் யுதிஷ்டிரன் அதே போன்ற கவலையையே அடைந்தான். உண்மையில், மனிதர்களில் முதன்மையான அவ்விருவரையும் காணாத யுதிஷ்டிரன் அமைதி எதையும் அடையவில்லை. உயர் ஆன்மாவும், வலிமைமிமிக்கக் கரங்களையும் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், உலகின் தீச்சொல்லிற்கு அஞ்சி சாத்யகியின் தேரை நினைக்கத் தொடங்கினான்.

‘உண்மையான ஆற்றலைக் கொண்டவனும், நண்பர்களின் அச்சங்களை விலக்குபவனும், சிநியின் பேரனுமான சாத்யகி, என்னால் அர்ஜுனனின் பாதையில் {அவனைப் பின்தொடர்ந்து} அனுப்பப்பட்டான். முன்பு எனக்கு ஒரு கவலையே இருந்தது, இப்போது இரண்டைக் கொண்டிருக்கிறேன். சாத்யகி மற்றும் பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரைக் குறித்த செய்திகளையும் நான் பெற வேண்டும். அர்ஜுனனின் பாதையில் பின்தொடர்ந்து செல்ல சாத்யகியை அனுப்பிய பிறகு, இப்போது சாத்யகியின் பாதையில் யாரை அனுப்புவேன்? நான் யுயுதானனை {சாத்யகியைக்} குறித்து விசாரிக்காமல் {தேடாமல்}, என் தம்பி {அர்ஜுனன்} குறித்து மட்டுமே அனைத்து வழிகளிலும் அறிய முயன்றால் {தேடினால்} உலகத்தோர் என்னை நிந்திப்பர்.

அவர்கள், “தர்மனின் மகனான யுதிஷ்டிரன், தன் தம்பியை {அர்ஜுனனை மட்டும்} விசாரித்தான், தவறாத ஆற்றலைக் கொண்டவனும், விருஷ்ணி குலத்து வீரனுமான சாத்யகியை விதியின் வசத்தில் விட்டுவிட்டான்” என்பார்கள். எனவே, உலக்கத்தோர் நிந்தனைக்கு அஞ்சும் நான், பிருதையின் {குந்தியின்} மகனான விருகோதரனை {பீமனை} உயர் ஆன்ம சாத்யகியின் பாதையில் அனுப்ப வேண்டும். சாத்வத குலத்தின் வெல்லப்படாத விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} மேல் நான் கொண்ட அன்பு, எதிரிகளைக் கொல்பவனான அர்ஜுனன் மேல் கொண்ட என் அன்புக்குச் சற்றும் குறைந்ததல்ல. மேலும் சிநிக்களை மகிழ்விப்பவனான அவன், பெரும் பணியில் என்னால் ஈடுபடுத்தப்பட்டான். எனினும் அந்த வலிமைமிக்க வீரன் {சாத்யகி}, ஒரு நண்பனின் வேண்டுகோளுக்காகவோ, கௌரவத்திற்காகவோ பெருங்கடலுக்குள் புகும் ஒரு மகரத்தைப் போலப் பாரதப் படைக்குள் ஊடுருவினான். பெரும் நுண்ணறிவு கொண்ட அந்த விருஷ்ணி வீரனை எதிர்த்து ஒன்றுகூடிப் போரிடும் பின்வாங்காத வீரர்களின் ஒலி பெரிதாக இருப்பதை நான் கேட்கிறேன். அவனுக்கு அவர்கள் அதிகமானவர்களே என்பதில் ஐயமில்லை. எனவே, அவனைக் காக்க நான் நினைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

வலிமைமிக்கவர்களான அவ்விரு தேர் வீரர்களும் எங்கிருக்கிறார்களோ அங்கே வில்தரித்தவனும், பாண்டுவின் மகனுமான பீமசேனன் செல்ல வேண்டும் என்றே எனக்குத் தெரிகிறது. பீமனால் தாங்கிக் கொள்ள முடியாதது என இவ்வுலகில் ஏதும் இல்லை. தீர்மானத்துடன் அவன் {பீமன்} போராடினால், உலகில் உள்ள வில்லாளிகள் அனைவருக்கும் போரில் அவன் இணையானவனாவான். தன் கரத்தின் பலத்தை நம்பியே அவனால் {பீமனால்} அனைத்து எதிரிகளையும் எதிர்த்து நிற்க முடியும். அந்த உயர்ஆன்ம போர்வீரனுடைய {பீமனுடைய} கரங்களின் பலத்தைக் கொண்டே நாம் வனவாசத்தில் இருந்து மீண்டு வந்தோம். போரில் நாம் எப்போதும் வெல்லப்பட முடியாதவர்களாக இருக்கிறோம். எனவே, பாண்டுவின் மகனான பீமசேனன் சாத்யகியிடம் சென்றால், சாத்யகி மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் உண்மையான உதவியைப் பெறுவார்கள். சாத்யகி மற்றும் பல்குனனைக் {அர்ஜுனனைக்} குறித்து நான் எந்தக் கவலையும் அடைய வேண்டியதில்லை என்பதிலும் ஐயமில்லை. அவ்விருவரும் ஆயுதங்களில் சாதித்தவர்களாவர், மேலும் வாசுதேவனே {கிருஷ்ணனே} அவர்களைப் பாதுகாக்கிறான். (இவ்வளவு இருந்தும், அவர்கள் குறித்து நான் கவலையையடைகிறேன்). நிச்சயம் நான் என் கவலையை விலக்க முயலவேண்டும். எனவே, சாத்யகியைப் பின்தொடர்ந்து செல்லும்படி பீமனை நான் அனுப்ப வேண்டும். இதைச் செய்த பிறகே, சாத்யகியைக் காக்கும் என் ஏற்பாடுகள் முழுமையடைந்ததாக என்னால் கருத முடியும்” என்று நினைத்தான் {யுதிஷ்டிரன்}.

மனதில் இதைத் தீர்மானித்துக் கொண்ட தர்மனின் மகனான யுதிஷ்டிரன், தன் தேரோட்டியிடம், “பீமனிடம் என்னை அழைத்துச் செல்வாயாக” என்றான். குதிரைகளின் தன்மைகள் நன்கறிந்தவனான அந்தத் தேரோட்டி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் ஆணையைக் கேட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தேரை பீமன் இருக்கும் இடத்திற்குக் கொண்டு சென்றான். பீமனின் முன்னிலையை அடைந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அத்தருணத்தை நினைத்து துயரால் நிலையழிந்து, பல்வேறு கோரிக்கைகளால் பீமனை நெருக்கினான். உண்மையில், துயரில் நிறைந்த அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} பீமனிடம் பேசினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குந்தியின் மகனான யுதிஷ்டிரன், இந்த வார்த்தைகளையே அவனிடம் {பீமனிடம் சொன்னான்}, “ஓ! பீமா, தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய அனைவரையும் எதிர்த்து ஒரே தேரில் சென்று வென்ற அர்ஜுனனின் கொடிமரத்தை நான் காணவில்லை” என்றான்.

அப்போது பீமசேனன், இத்தகு பரிதாப நிலையில் இருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம், “இப்படி உற்சாகமற்றதன்மையால் பீடிக்கப்பட்ட உமது வார்த்தைகளை இதற்கு முன்னர் எப்போதுமே நான் கேட்டதோ, கண்டதோ இல்லை. உண்மையில், முன்னர் நாம் துயரால் பீடிக்கப்பட்ட போது, நீரே எங்களுக்கு ஆறுதலளித்தீர். எழுவீர், ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, எழுவீராக, நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்? ஓ! கௌரவங்களை அளிப்பவரே, என்னால் செய்ய முடியாததென ஏதுமில்லை. ஓ! குருகுலத்தின் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, உமது ஆணைகள் யாவை என்பதை எனக்குச் சொல்வீராக. உமது இதயத்தைத் துயரில் நிலைக்கச் செய்யாதீர்” என்றான்.

கவலை நிறைந்த முகத்துடனும், கண்ணீரில் குளித்த கண்களுடனும் கூடிய மன்னன் {யுதிஷ்டிரன்}, கருநாகமொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டே பீமசேனனிடம், “உலகம் பரந்த புகழைக் கொண்ட வாசுதேவனால் கோபத்துடன் முழக்கப்படும் சங்கான பாஞ்சஜன்யத்தின் வெடிப்பொலிகள் கேட்கப்படுகின்றன. இதன் மூலம், உன் தம்பியான தனஞ்சயன் {அர்ஜுனன்}, களத்தில் உயிரையிழந்து கிடக்கிறான் என்றே தெரிகிறது. அர்ஜுனன் கொல்லப்பட்டதும் ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} போரிடுகிறான் என்பதில் ஐயமில்லை. எவனுடைய ஆற்றலால் பாண்டவர்கள் உயிரோடிருக்கிறார்களோ, தேவர்கள், ஆயிரங்கண்களைக் கொண்ட தங்கள் தலைவனை {இந்திரனை} நோக்கித் திரும்புவதைப் போல, நமக்கு அச்சம் நேரும் காலங்களிலெல்லாம் நாம் எவனை நோக்கித் திரும்புவோமோ அந்தப் பெரும் வலிமைமிக்க வீரன் {அர்ஜுனன்}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைத்} தேடி பாரதப் படைக்குள் ஊடுருவினான்.

அவன் {அர்ஜுனன்} சென்றான் என்பதை நான் அறிவேன், ஓ! பீமா, ஆனால் அவன் {அர்ஜுனன்} இன்னும் திரும்பவில்லை. நிறத்தால் கறுமையும், வயதால் இளமையும், சுருள் முடியும் கொண்டவனும், வலிமைமிக்க மிக அழகிய தேர்வீரனும், அகன்ற மார்பு, நீண்ட கரங்கள், மதயானைக்கு ஒப்பான நடை ஆகியவற்றைக் கொண்டவனும், சக்கரத்தைப் போன்றவையும், புடம்போட்ட தாமிரத்தின் நிறத்தாலானவையுமான கண்களைக் கொண்டவனுமான அந்த உன் தம்பி {அர்ஜுனன்} எதிரிகளின் அச்சங்களை அதிகரித்தான். நீ அருளப்பட்டிருப்பாயாக, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, இதுவே என் துயரின் காரணம். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அர்ஜுனனுக்காகவும், சாத்வதனுக்காகவும், தெளிந்த நெய் காணிக்கையால் ஊட்டப்படும் சுடர்மிக்க நெருப்பைப் போல என் துன்பம் அதிகரிக்கிறது. நான் அவனது {அர்ஜுனனது} கொடிமரத்தைக் காணவில்லை. இதனாலேயே நான் கவலையால் மலைத்துப் போகிறேன். அவன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டிருப்பான் என்பதிலும், போரில் திறன்மிக்கக் கிருஷ்ணன் போரிடுகிறான் என்பதிலும் ஐயமில்லை. மனிதர்களில் புலியும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சாத்வதனும் {சாத்யகியும்} கொல்லப்பட்டிருப்பான் என்பதிலும் ஐயமில்லை. ஐயோ, சாத்யகி, வலிமைமிக்கத் தேர்வீரனான உன் தம்பியைப் பின்தொடர்ந்தே சென்றான். சாத்யகியைக் காணாமலும் துயரால் நான் மலைத்துப் போகிறேன்.

எனவே, ஓ! குந்தியின் மகனே {பீமா}, உண்மையில், என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவது உன் கடமை என நீ நினைத்தால், வலிமையும், சக்தியும் கொண்ட தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, சாத்யகியும் எங்கிருக்கின்றனரோ அங்கே செல்வாயாக. நான் உன் அண்ணன் என்பதை நினைவில் கொள்வாயாக. அர்ஜுனனை விடச் சாத்யகியே உனக்கு அன்புக்குரியவன் என நீ நினைப்பாயாக. ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே பீமா}, சாத்யகி எனக்கு நன்மை செய்ய விரும்பி இழிந்தோரால் நடக்க முடியாத அர்ஜுனனின் பாதையைப் பின்தொடர்ந்து சென்றிருக்கிறான். இரு கிருஷ்ணர்களையும் {அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இரு கருப்பர்களையும்} சாத்வத குலத்தின் சாத்யகியையும் நலமாகவும், முழுமையாகவும் கண்டதும், ஓ! பாண்டுவின் மகனே {பீமா} சிங்க முழக்கம் எழுப்பிச் செய்தியை எனக்கு அனுப்புவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}. 

தம்பிகள் பதினொருவரைக் கொன்ற பீமன்! – துரோண பர்வம் பகுதி – 126-யுதிஷ்டிரனின் பாதுகாப்பை திருஷ்டத்யும்னனிடம் ஒப்படைத்த பீமன்; வெற்றிக் குறிக்கும் சகுனங்களைக் கண்ட பீமன்; துரோணரை அடைந்த பீமன் அவரை அவமதித்த பீமன்; பீமனை எதிர்த்த கௌரவச் சகோதரர்கள்; துரியோதனன் தம்பிகளில் பதினோரு பேரைக் கொன்ற பீமன்; துரோணரின் படைப்பிரிவை மீண்டும் அடைந்த பீமன்…

பீமன் {யுதிஷ்டிரனிடம்}, “முன்னர் எந்தத் தேர் பிரம்மன், ஈசானன், இந்திரன், வருணன் ஆகியோரை (போருக்குத்) தாங்கிச்சென்றதோ, அதே தேரில் ஏறியே இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்களான, அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணன்} சென்றிருக்கின்றனர். {எனவே} அவர்களுக்கு எந்த ஆபத்திலும் அச்சமேற்படாது. எனினும், உமது ஆணையை என் சிரம் மேல் கொண்டு இதோ நான் செல்கிறேன். வருந்தாதீர். அந்த மனிதர்களில் புலிகளைச் சந்தித்ததும், உமக்குத் தகவலை அனுப்புகிறேன்” என்றான் {பீமன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இந்த வார்த்தைகளைச் சொன்ன வலிமைமிக்கப் பீமன், திருஷ்டத்யும்னனிடமும், (பாண்டவக் காரியத்திற்காகப் போராடும்) இன்னும் பிற நண்பர்களிடமும் மீண்டும் மீண்டும் {சொல்லி} யுதிஷ்டிரனை {யுதிஷ்டிரனின் பாதுகாப்பை} ஒப்படைத்துவிட்டுப் புறப்படத் தொடங்கினான். உண்மையில், வலிமையும் பலமும் கொண்ட அந்தப் பீமசேனன், திருஷ்டத்யும்னனிடம், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {திருஷ்டத்யும்னா}, வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர், தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் எப்படி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரைப் பிடிக்க எப்போதும் விழிப்புடனே இருக்கிறார் என்பது நீ அறிந்ததே. உண்மையில், ஓ! பிருஷதன் மகனே {திருஷ்டத்யும்னா}, மன்னரைக் {யுதிஷ்டிரரைக்} காக்கும் என் கடமைக்கு மேலாக (அர்ஜுனன் மற்றும் சாத்யகியிடம்) நான் செல்லவே கூடாது. எனினும், மன்னர் யுதிஷ்டிரரே என்னைப் போகுமாறு உத்தரவிட்டிருக்கிறார், {எனவே} நான் அவருடன் {யுதிஷ்டிரருடன்} முரண்படத் துணிய மாட்டேன். மரணத்தின் விளிம்பில் உள்ள சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} எங்கிருக்கிறானோ அங்கே நான் செல்வேன். முழுமையான வாய்மையுடன் {மனநேர்மையுடன்} [1] என் தம்பி (அர்ஜுனன்) மற்றும் பெரும் நுண்ணறிவைக் கொண்ட சாத்யகி ஆகியோரின் வார்த்தைகளின் படியே நான் செயல்பட வேண்டும். எனவே, இன்று நீ பிருதையின் {குந்தியின்} மகனான யுதிஷ்டிரரைப் பாதுகாக்க கடுந்தீர்மானத்துடன் போரிட வேண்டும். அனைத்துப் பணிகளை விடவும் போரில் இதுவே உனது உயர்ந்த கடமையாகும்” என்றான் {பீமன்}ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விருகோதரனால் {பீமனால்} இப்படிச் சொல்லப்பட்ட திருஷ்டத்யும்னன், “உமது விருப்பத்தை நான் செய்வேன். ஓ! பிருதையின் மகனே {பீமரே}, எவ்வகையிலான கவலையுமில்லாமல் செல்வீராக. போரில் திருஷ்டத்யும்னனைக் கொல்லாமல், துரோணரால் மன்னர் யுதிஷ்டிரரைப் போரில் அவமதிக்க {கீழ்ப்படுத்த} முடியாது” என்றான்.

இப்படியே பாண்டுவின் அரச மகனை {யுதிஷ்டிரனை} திருஷ்டத்யும்னனிடம் ஒப்படைத்துவிட்டு, தன் அண்ணனை வணங்கிய பீமசேனன், பல்குனன் {அர்ஜுனன்} எங்கிருந்தானோ அவ்விடத்தை நோக்கிச் சென்றான். எனினும், அவனை {பீமனை} அனுப்புவதற்கு முன்னர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பீமசேனனைக் கட்டித்தழுவி, அவனது உச்சியை முகர்ந்து, அவனுக்கு நல்லாசிகளை வழங்கினான். பிறகு அந்த வீரன் {பீமன்}, பிராமணர்கள் பலரை வலம் வந்து, வழிபாட்டாலும், தானங்களாலும் {பிராமணர்களை} மனநிறைவு செய்து, எட்டு மங்கலப் பொருட்களைத் [2] தொட்டு, கைராதகத் தேனைப் பருகியதால், போதையால் கடைக்கண்கள் சிவந்து, தன் வலிமை இரட்டிப்பானதை உணர்ந்தான் [3]. பிராமணர்கள் அவனுக்குப் {பீமனுக்குப்} பரிகாரச் சடங்குகளைச் செய்தனர். வெற்றியைக் குறிக்கும் பல்வேறு சகுனங்கள் அவனை {பீமனை} வரவேற்றன. அவற்றைக் கண்ட அவன் {பீமன்} தான் எதிர்பார்க்கும் வெற்றியால் மகிழ்ச்சியை உணர்ந்தான். அவனது வெற்றியைக் குறிக்கும்படி சாதகமான காற்றும் வீசத் தொடங்கியது.தேர்வீரர்களில் முதன்மையானவனும், கவசந்தரித்தவனும், காதுகுண்டலங்கள் மற்றும் அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், தோலுரைகளால் தன் கைகள் மறைக்கப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன் தன் அற்புதத் தேரில் ஏறினான். எஃகால் ஆனதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அவனது {பீமனது} விலையுயர்ந்த கவசமானது, மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகத்தைப் போலவே தெரிந்தது. மஞ்சள், சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை ஆடைகளால் அவனது {பீமனது} உடல் அழகாக மறைக்கப்பட்டிருந்தது. கழுத்தையும் பாதுகாத்த வண்ணமயமான மார்புக்கவத்தை {கண்டஸூத்திரத்தை} அணிந்திருந்த பீமசேனன், வானவில்லால் அலங்கரிக்கப்பட்ட மேகத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். போரிடும் விருப்பத்தால் உமது துருப்புகளுக்கு எதிராகப் பீமசேனன் புறப்படும் சமயத்தில், {கிருஷ்ணனின் சங்கான} பாஞ்சஜன்யத்தின் கடும் வெடிப்பொலிகள் மீண்டும் கேட்கப்பட்டன.

மூவுலகங்களையும் அச்சத்தில் நிறைக்க வல்ல பயங்கரமான வெடிப்பொலிகளை உரக்கக் கேட்ட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் பீமசேனனிடம், “அங்கே, விருஷ்ணி வீரன் {கிருஷ்ணன்} தன் சங்கைக் கடுமையாக முழங்குகிறான். உண்மையில் அந்தச் சங்குகளின் இளவரசன் {பாஞ்சஜன்யம்} தன்னொலியால் பூமியையும் ஆகாயத்தையும் நிறைக்கிறான். சவ்யசச்சின் {அர்ஜுனன்} பெரும் துயரில் வீழ்ந்திருக்கிறான் என்பதிலும், சங்கு மற்றும் கதாயுதம் தரித்தவன் {கிருஷ்ணன்} குருக்கள் அனைவருடனும் போரிடுகிறான் என்பதிலும் ஐயமில்லை. மதிப்புக்குரிய குந்தியும், திரௌபதியும், சுபத்திரையும், தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து இன்று மங்கலமற்ற சகுனங்களையே அதிகமாகக் காண்பார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே, ஓ! பீமா, தனஞ்சயன் {அர்ஜுனன்} எங்கிருக்கிறானோ அங்கே வேகமாகச் செல்வாயாக. தனஞ்சயனைக் காண வேண்டும் என்ற என் (நிறைவற்ற) விருப்பத்தாலும், சாத்வதனின் {சாத்யகியின்} காரணமாகவும், ஓ! பார்த்தா {பீமா}, திசைகளின் புள்ளிகள் அனைத்தும் என் கண்களுக்கு வெறுமையாகத் தெரிகின்றன” என்றான் {யுதிஷ்டிரன்}.

தனக்கு மூத்தவனால் {யுதிஷ்டிரனால்} மீண்டும் மீண்டும் தூண்டப்பட்டவனும், பாண்டுவின் வீர மகனுமான பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கைகளில் தோலுறையை அணிந்து கொண்டு தன் வில்லை எடுத்துக் கொண்டான். தன் அண்ணனின் {யுதிஷ்டிரனின்} நன்மையில் அர்ப்பணிப்புள்ளவனும், தன் அண்ணனால் தூண்டப்பட்ட தம்பியுமான பீமசேனன் துந்துபிகளை முழக்கச் செய்தான். தன் சங்கையும் பலமாக ஊதிய பீமன், சிங்க முழக்கங்களைச் செய்தபடியே தன் வில்லில் நாணொலியை எழுப்பத் தொடங்கினான். அந்தச் சிங்க முழக்கங்களால் பகை வீரர்களுடைய இதயங்களின் ஊக்கத்தைக் கெடுத்த அவன் {பீமன்}, பயங்கரமான வடிவத்தை ஏற்றுத் தன் எதிரிகளை நோக்கி விரைந்தான். வேகமானவையும், நன்கு பழக்கப்பட்டவையும், கடுமையான கனைப்பொலிகளைக் கொண்டவையும், முதன்மையான இனத்தைச் சேர்ந்தவையுமான குதிரைகள் அவனைச் {பீமனைச்} சுமந்து சென்றன. காற்று அல்லது மனோ வேகத்தைக் கொண்ட அவற்றின் கடிவாளங்கள் {பீமனின் தேரோட்டியான} விசோகனால் பற்றப்பட்டிருந்தன. அப்போது அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் பீமன்}, தன் வில்லின் நாணை பெரும் பலத்துடன் இழுத்து, அங்கே இருந்த போராளிகளைத் துளைத்தும், சிதைத்தும், பகைவருடைய வியூகத்தின் தலையை {முகப்பை} நசுக்கத் தொடங்கினான். அப்படி அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரன் {பீமன்} சென்ற போது, மகவத்தை {இந்திரனைப்} பின்தொடரும் தேவர்களைப் போலத் துணிச்சல்மிக்கவர்களான பாஞ்சாலர்களும், சோமகர்களும் அவனுக்குப் {பீமனுக்குப்} பின்னால் தொடர்ந்து சென்றனர்.

அப்போது சகோதரர்களான துச்சாசனன், சித்திரசேனன், குண்டபேதி, விவிம்சதி, துர்முகன், துஸ்ஸஹன், {விகர்ணன்}, சலன், விந்தன், அனுவிந்தன், சுமுகன், தீர்க்கபாகு, சுதர்சனன், {பிருந்தாரகன் [மந்துரகஸ்]}, சுஹஸ்தன், சுஷேணன், தீர்க்கலோசனன், அபயன், ரௌத்ரகர்மன், சுவர்மன், துர்விமோசனன் ஆகியோர் {21 இருபத்தொருவரும்} [4] பீமசேனனைச் சூழ்ந்து கொண்டனர். முதன்மையான தேர்வீரர்களும், பிரகாசமாகத் தெரிந்தவர்களுமான இந்த வீரர்கள் அனைவரும், உறுதியுடன் போரிடும் தீர்மானத்துடன், தங்கள் துருப்புகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோருடன் சேர்ந்து பீமசேனனை எதிர்த்து விரைந்தனர்.வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனும், குந்தியின் மகனுமான அந்த வீரப் பீமசேனன் இப்படிச் சூழப்பட்டதும், அவர்கள் மீது தன் கண்களைச் செலுத்தி, சிறு விலங்குகளை எதிர்க்கும் சிங்கத்தின் வேகத்துடன் அவர்களை எதிர்த்து விரைந்தான். அவ்வீரர்கள், வலிமைமிக்க தெய்வீக ஆயுதங்களை வெளிப்படுத்தி உதயச் சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலக் கணைகளால் பீமனை மறைத்தனர். வேகத்துடன் அவ்வீரர்கள் அனைவரையும் கடந்த பீமசேனன், துரோணரின் படைப்பிரிவை எதிர்த்து விரைந்து, தன் எதிரே இருந்த யானைப் படையைக் கணைமாரியால் மறைத்தான். வாயு தேவனின் மகன் {பீமன்} தன் கணைகளால் சிதைத்ததும், அந்த யானை படைப்பிரிவு கிட்டத்தட்ட நேரமேதும் எடுத்துக் கொள்ளாமல் அனைத்துத் திசைகளிலும் சிதறியது. உண்மையில், காட்டில் சரபத்தின் முழக்கத்தைக் கேட்டு அஞ்சும் விலங்குகளைப் போல, அந்த யானைகள் அனைத்தும் பயங்கரமாகப் பிளிறிக் கொண்டே தப்பி ஓடின. அந்தக் களத்தை வேகமாகக் கடந்த அவன் {பீமன்} துரோணரின் படைப்பிரிவை அடைந்தான்.

அப்போது அந்த ஆசான் {துரோணர்}, பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போல அவனது {பீமனது} வழியைத் தடுத்தார். சிரித்துக் கொண்டே அவர் {துரோணர்}, ஒரு கணையால் பாண்டுவின் மகனுடைய முன்நெற்றியைத் தாக்கினார். அதன்பேரில், அந்தப் பாண்டுவின் மகன் மேல்நோக்குக் கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். அந்த ஆசான் {துரோணர்}, முன்னர்ப் பல்குனன் {அர்ஜுனன்} செய்ததைப் போலப் பீமனும் தன்னிடம் மரியாதை காட்டுவான் என்று நினைத்தார். விருகோதரனிடம் {பீமனிடம்} பேசிய அவர் {துரோணர்}, “ஓ! பீமசேனா, போரில் உன் எதிரியான என்னை வெல்லாமல், பகைவரின் படைக்குள் நுழைவது உன் சக்திக்கு அப்பாற்பட்டது. கிருஷ்ணனுடன் கூடிய உன் தம்பி {அர்ஜுனன்} என் அனுமதியுடன் இந்தப் படைக்குள் நுழைந்தாலும், அப்படிச் செய்வதில் உன்னால் வெல்ல முடியாது” என்றார்.

ஆசானின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அச்சமற்ற பீமன், கோபத்தால் தூண்டப்பட்டு, ரத்தம், அல்லது புடம்போட்ட தாமிரத்தைப் போன்ற சிவந்த கண்களுடன் துரோணரிடம் மறுமொழியாக, “ஓ! இழிந்த பிராமணரே {பிரம்மபந்துவே}, உமது அனுமதியுடன் இந்தப் படைக்குள் நுழையும் அவசியம் அர்ஜுனனுக்கு இல்லை. அவன் வெல்லப்பட முடியாதவனாவான். சக்ரனின் {இந்திரனின்} தலைமையிலான படைக்குள்ளேயே அவனால் {பீமனால்} ஊடுருவ முடியும். அவன் {அர்ஜுனன்} உம்மை மரியாதையுடன் வணங்கியிருந்தால், அஃது உம்மைக் கௌரவப் படுத்துவதற்காக மட்டுமே ஆகும். ஆனால், ஓ! துரோணரே, நான் அர்ஜுனனைப் போன்று கருணையுள்ளவன் அல்ல என நீர் என்னை அறிவீராக. மறுபுறம் நான் உமது எதிரியான பீமசேனன் ஆவேன். நாங்கள் உம்மைத் தந்தையாகவும், ஆசானாகவும், நண்பராகவும் கருதுகிறோம். எங்களை நாங்கள் உமது மகன்களாகவே காண்கிறோம். அப்படி நினைத்தே நாங்கள் உம்மிடம் எப்போதும் பணிவாக நடக்கிறோம். எனினும், இன்று இத்தகு வார்த்தைகளை நீர் எங்களிடம் பயன்படுத்தும்போது, அவை அனைத்தும் மாறிவிட்டதாகவே தெரிகிறது. நீர் உம்மை எங்களது எதிரியாகக் கருதிக் கொண்டால், நீர் நினைப்பது போல அப்படியே ஆகட்டும். பீமனைத் தவிர வேறு எவனுமாக இல்லாத நான், ஓர் எதிரியிடம் எப்படி நான் நடந்து கொள்ள வேண்டுமோ அப்படியே தற்போது உம்மிடம் நடந்து கொள்வேன்” என்றான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்ன பீமன், தன் கதாயுதத்தைச் சுழற்றிக் கொண்டு, மரணக்கோலைச் சுழற்றும் யமனைப் போல அதைத் துரோணரின் மீது வீசினான். எனினும், துரோணர் (தன் பாதுகாப்பை நிச்சயித்துக் கொள்ளும் வகையில்) விரைவாகத் தன் தேரில் இருந்து கீழே குதித்தார். அந்தக் கதாயுதமோ குதிரைகள், தேரோட்டி மற்றும் கொடிமரத்துடன் கூடிய துரோணரின் தேரைப் பூமியில் நசுக்கித் தரைமட்டமாக்கியது. பிறகு மரங்களைப் பலத்துடன் நசுக்கும் சூறாவளியைப் போல அந்தப் பீமன் எண்ணற்ற போர்வீரர்களை நசுக்கினான். அப்போது உமது மகன்கள், அந்த முதன்மையான தேர்வீரனை {பீமனை} மீண்டும் சூழ்ந்து கொண்டனர். அதேவேளையில், தாக்குபவர்களில் முதன்மையான துரோணர் மற்றொரு தேரில் ஏறிக் கொண்டு, வியூகத்தின் வாயிலுக்குச் சென்று போரில் அங்கேயே நிலைகொண்டார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்ட கோபக்கார பீமன், தன் முன்னே இருந்த தேர்ப்படையைத் தன் கணை மாரியால் மறைத்தான். பிறகு, போரில் இப்படித் தாக்கப்பட்டவர்களும், பெரும் பலத்தைக் கொண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான உமது மகன்கள் வெற்றி மீது கொண்ட விருப்பத்தால் பீமனுடன் போரிட்டனர்.

அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட துச்சாசனன், பீமசேனனைக் கொல்ல விரும்பி, முழுக்க இரும்பாலான கூரிய ஈட்டி ஒன்றை அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} மீது வீசினான். எனினும் பீமன், உமது மகனால் {துச்சாசனனால்} ஏவப்பட்டுத் தன்னை நோக்கி வந்த அந்தக் கடும் ஈட்டியை இரண்டாக வெட்டினான். இச்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது. பிறகு அந்த வலிமைமிக்கப் பாண்டுவின் மகன் {பீமன்}, மூன்று கூரிய கணைகள் பிறவற்றால் குண்டபேதி, சுஷேணன், தீர்க்கநேத்திரன் ஆகிய மூன்று சகோதரர்களைக் கொன்றான். மேலும் அவனுடன் {பீமனுடன்} போரிட்ட உமது வீர மகன்களுக்கு மத்தியில், குருக்களின் புகழை அதிகரிப்பவனான வீரப் பிருந்தாரகனைப் பீமன் கொன்றான். பிறகு பீமன், மேலும் மூன்று கணைகள் பிறவற்றால், அபயன், ரௌத்ரகர்மன் மற்றும் துர்விமோசனன் ஆகிய உமது மூன்று மகன்களைக் கொன்றான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்க வீரனால் இப்படிக் கொல்லப்பட்ட உமது மகன்கள், எதிரிகளைத் தாக்குபவனான பீமனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். பிறகு அவர்கள், கோடையின் முடிவில் மலைச் சாரலில் மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போல அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர். படைகளைக் கொல்பவனான அந்தப் பாண்டுவின் வாரிசு {பீமன்}, கல்மழையை ஏற்கும் ஒரு மலையைப் போல அந்தக் கணை மாரியை ஏற்றான். உண்மையில் அந்த வீரப் பீமன் எந்த வலியையும் உணரவில்லை. பிறகு அந்தக் குந்தியின் மகன் {பீமன்} சிரித்துக் கொண்டே, உமது மகன்களான விந்தன், அனுவிந்தன், சுவர்மன் ஆகியோரைத் தன் கணைகளின் மூலம் யமலோகத்திற்கு அனுப்பி வைத்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} உமது வீர மகன் சுதர்சனை அந்தப் போரில் விரைவாகத் துளைத்தான். அதன்பேரில் பின்னவன் கீழே விழுந்து இறந்தான் [5].குறுகிய காலத்திற்குள் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் பார்வைகளை அந்தத் தேர்படையின் மீது செலுத்தி, தன் கணைகளின் மூலம் அஃதை அனைத்துத் திசைகளிலும் ஓடச் செய்தான். தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியையோ, உரத்த முழக்கத்தையோ கேட்டு அஞ்சும் மான்கூட்டத்தைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகன்கள், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டுத் திடீரெனப் பிளந்து தப்பி ஓடினர். எனினும் அந்தக் குந்தியின் மகன் {பீமன்} உமது மகன்களின் அந்தப் பெரும்படையைத் தொடர்ந்து சென்று, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் கௌரவர்களைத் துளைக்கத் தொடங்கினான்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் இப்படிக் கொல்லப்பட்ட உமது படைவீரர்கள், அந்தப் பாண்டுவின் மகனை {பீமனைத்} தவிர்த்துவிட்டுத் தங்கள் சிறந்த குதிரைகளை மிக வேகமாகத் தூண்டி போரைவிட்டுத் தப்பி ஓடினர். பிறகு, வலிமைமிக்கப் பீமசேனன், போரில் அவர்களை வென்று சிங்க முழக்கங்கள் செய்து, தன் அக்குள்களை {தோள்களைத்} தட்டி பேரொலியை உண்டாக்கினான். மேலும் வலிமைமிக்கப் பீமசேனன், தன் உள்ளங்கைகளாலும் கடும் ஒலியை உண்டாக்கி, அதனால் தேர்ப்படையையும், அதிலிருந்த முதன்மையான தேர்வீரர்களையும் அச்சுறுத்தி (அவனால் வெல்லப்பட்ட) அந்தத் தேர்ப்படையைக் கடந்து துரோணரின் படைப்பிரிவை நோக்கிச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.

அர்ஜுனனைக் கண்ட பீமன்! – துரோண பர்வம் பகுதி – 127-துரோணரின் கணைமாரியைக் கலங்கடித்துக் கௌரவப் படையினரை அழித்த பீமன்; துரோணரின் தேரை வீசியெறிந்து உடைத்தது; கிருதவர்மனின் படையைக் கலங்கடித்துக் கடந்து சென்றது; போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சாத்யகியைக் கண்டது; அர்ஜுனன் போர்புரிந்து கொண்டிருப்பதைக் கண்ட பீமன் மாமுழக்கம் செய்தது; பீமன் மற்றும் அர்ஜுனனின் முழக்கங்களைக் கேட்டுச் செய்தியை உணர்ந்து கொண்ட யுதிஷ்டிரன் பீமனை மெச்சி சிந்தனையில் ஆழ்ந்து அந்த எண்ணங்களை வார்த்தைகளாக்கியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டுவின் மகன் {பீமன்} அந்தத் தேர்ப்படையைக் கடந்ததும், அவனது வழியைத் தடுக்க விரும்பிய ஆசான் துரோணர், சிரித்துக் கொண்டே கணை மாரிகளால் அவனை {பீமனை} மறைத்தார். துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளைக் குடித்து விடுபவனைப் போலத் தன் மாய சக்திகளால் மலைக்கச் செய்த பீமசேனன், தன் தம்பியரை (உமது மகன்களை) எதிர்த்து விரைந்தான். பிறகு, உமது மகன்களால் தூண்டப்பட்ட பெரும் வில்லாளிகளான மன்னர்கள் பலர் மூர்க்கமாக விரைந்து அவனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டனர்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களால் சூழப்பட்ட பீமன் சிரித்துக் கொண்டும், சிங்க முழக்கம் செய்து கொண்டும், படையணிகளை அழிக்கவல்ல ஒரு கடும் கதாயுதத்தை எடுத்து அவர்கள் மீது வீசினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனால் வீசப்பட்ட இந்திரனின் வஜ்ரத்தை {இடியைப்} போலவே கடினமான பலத்தைக் கொண்ட அந்தக் கதாயுதமானது, போரில் உமது படைவீரர்களை நசுக்கியது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அது பேரொலியால் மொத்த உலகையும் நிறைப்பதாகத் தெரிந்தது. காந்தியால் சுடர்விட்ட அந்தக் கடும் கதாயுதமானது உமது மகன்களை அச்சுறுத்தியது. மூர்க்கமாகச் செல்வதும், மின்னலின் கீற்றுகளைக் கொண்டதுமான அந்தக் கதாயுதம் தங்களை நோக்கி வருவதைக் கண்ட உமது வீரர்கள் பயங்கரமாகக் கதறியபடியே தப்பி ஓடினர். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தக் கடும் கதாயுதத்தின் பொறுத்துக் கொள்ள முடியாத ஒலியால் மனிதர்கள் பலர் தாங்கள் எங்கே நின்றனரோ அங்கேயே விழுந்தனர், தேர்வீரர்கள் பலரும் தங்கள் தேர்களில் இருந்து கீழே விழுந்தனர். கதாயுதம் தரித்த பீமசேனனால் கொல்லப்பட்ட உமது வீரர்கள், புலியால் தாக்கப்பட்ட மான்களைப் போல அச்சங்கொண்டு போரிடுவதில் இருந்து தப்பி ஓடினர்.

குந்தியின் மகன் {பீமன்}, வீரமிக்கத் தன் எதிரிகளைப் போரில் முறியடித்து, அழகிய இறகுகளைக் கொண்ட கருடனைப் போல அந்தப் படையை வேகமாகக் கடந்து சென்றான். தேர்ப்படைத் தலைவர்களின் தலைவனான அந்தப் பீமசேனன், இத்தகு பேரழிவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகன் {துரோணர்} அவனை {பீமனை} நோக்கி விரைந்தார். துரோணர் தன் கணை மாரிகளால் பீமனைத் தடுத்து, பாண்டவர்களை அச்சுறுத்தும் வகையில் திடீரெனச் சிங்க முழக்கம் செய்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணருக்கும், உயர் ஆன்ம பீமனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது உக்கிரமானதாகவும், பயங்கரமானதாகவும், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த மோதலுக்கு ஒப்பானதாகவும் இருந்தது. துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கூரிய கணைகளால், அந்தப் போரில் வீரமிக்கப் போர்வீரர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்பட்டனர்.

தன் தேரில் இருந்து கீழே குதித்த அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கண்களை மூடிக் கொண்டு, துரோணரின் தேரை நோக்கிப் பெரும் வேகத்துடன் காலாளாகவே விரைந்தான். உண்மையில், ஒரு காளையானது கடும் மழைப்பொழிவை எளிதாகத் தாங்கிக் கொள்வதைப் போலவே அந்த மனிதர்களில் புலியான பீமனும், துரோணரின வில்லில் இருந்து வந்த அந்தக் கணை மழையைப் பொறுத்துக் கொண்டான் [1]. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரால் தாக்கப்பட்ட அந்த வலிமைமிக்கப் பீமன், துரோணருடைய தேரின் ஏர்க்காலைப் பிடித்துப் பெரும் பலத்துடன் கீழே வீசி எறிந்தான். ஓ! மன்னா, போரில் துரோணர் இப்படிக் கீழே தூக்கி வீசப்பட்டாலும் மற்றொரு தேரில் விரைவாக ஏறிக் கொண்டு, அந்நேரத்தில் தன் தேரோட்டியைப் பெரும் வேகத்துடன் தன் குதிரைகளைத் தூண்டச்செய்து, வியூகத்தின் வாயிலை நோக்கிச் சென்றார். ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் அடையப்பட்ட அந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது [2].

பிறகு, அந்த வலிமைமிக்கப் பீமன் தன் தேரில் ஏறிக் கொண்டு, உமது மகனின் படையை நோக்கி வேகமாக விரைந்தான். வரிசையான மரங்களை நசுக்கும் சூறாவளியைப் போலவே அவன் {பீமன்} போரில் க்ஷத்திரியர்களை நசுக்கினான். உண்மையில் பீமன், பொங்கும் கடலைத் தடுக்கும் மலையைப் போலவே பகைவரின் போர்வீரர்களைத் தடுத்தான். ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} காக்கப்பட்ட போஜத் துருப்புகளிடம் வந்த பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதைப் பெரிதும் தரைமட்டமாக்கிவிட்டு அதைக் கடந்து சென்றான். பகைவரின் படைவீரர்களைத் தன் உள்ளங்கைகளின் தட்டொலிகளால் அச்சுறுத்திய பீமன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, காளைக்கூட்டத்தை வெல்லும் ஒரு புலியைப் போல அவர்கள் அனைவரையும் வென்றான். போஜப்படைப் பிரிவையும், காம்போஜர்களுடையவையையும், போரில் சாதித்தவர்களான எண்ணற்ற மிலேச்ச இனங்களையும் கடந்து சென்று, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி போரில் ஈடுபடுவதைக் கண்ட அந்தக் குந்தியின் மகனான பீமசேனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனஞ்சயனைக் {அர்ஜுனனைக்} காணும் விருப்பத்தால் பெரும் வேகத்துடனும், தீர்மானத்துடனும் முன்னேறிச் சென்றான்.

அந்தப் போரில் உமது வீரர்கள் அனைவரையும் மீறிச் சென்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான். மனிதர்களில் புலியான அந்த வீரப் பீமன், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்லத் தன் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அர்ஜுனனைக் கண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மழைக்காலங்களில் முழங்கும் மேகங்களைப்போல மாமுழக்கம் செய்தான். முழங்கிக் கொண்டிருந்த அந்தப் பீமசேனனின் பேரொலியானது, ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, போருக்கு மத்தியில் இருந்த அர்ஜுனன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவராலும் கேட்கப்பட்டது. வலிமைமிக்கப் பீமனின் அந்த முழக்கங்களை அடுத்தடுத்துக் கேட்ட அந்த வீரர்கள் இருவரும், விருகோதரனை {பீமனைக்} காணும் விருப்பத்தால் மீண்டும் மீண்டும் முழங்கினர். பிறகு, அர்ஜுனனும், மாதவனும் {கிருஷ்ணனும்}, முழங்கிக் கொண்டிருக்கும் இரு காளைகளைப் போலப் பெருமுழக்கம் செய்தபடியே போரில் திரிந்தனர். 

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனனின் அம்முழக்கத்தையும், வில் தரித்த பல்குனனின் {அர்ஜுனனின்} முழக்கத்தையும் கேட்ட தர்மனின் மகனான யுதிஷ்டிரன், பெரும் மனநிறைவை அடைந்தான். பீமன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் இவ்வொலிகளைக் கேட்டு மன்னன் யுதிஷ்டிரன் தன் துயரத்தில் இருந்து விடுபட்டான். மேலும் அந்தத் தலைவனான யுதிஷ்டிரன், போரில் தனஞ்சயன் வெற்றியடைய மீண்டும் மீண்டும் வாழ்த்தினான். மூர்க்கமான பீமன் இப்படி முழங்கிக் கொண்டிருந்த போது, வலிய கரங்களைக் கொண்டவனும், அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன், சிறிது நேரம் புன்னகைத்தபடியே சிந்தித்து, தன் இதயத்தில் எழுந்த எண்ணங்களுக்கு {பின்வரும்} இந்த வார்த்தைகளைக் கொடுத்தான், “ஓ! பீமா, நீ எனக்கு உண்மையாகவே செய்தியை அனுப்பிவிட்டாய். உனக்கு மூத்தவனின் {உன் அண்ணனின்} கட்டளைகளுக்கு உண்மையில் நீ கீழ்ப்படிருந்திருக்கிறாய். ஓ! பாண்டுவின் மகனே {பீமனே}, உன்னை எதிரியாகக் கொண்டோர் வெற்றியை அடையவே முடியாது.

இடது கையாலும் வில் ஏவவல்ல தனஞ்சயன் {அர்ஜுனன்} நற்பேறாலேயே உயிரோடிருக்கிறான். கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட வீரச் சாத்யகியும் நற்பேறாலேயே பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்கிறான். வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரின் இந்த முழக்கங்களை நற்பேறாலேயே நான் கேட்கிறேன். போரில் சக்ரனையே {இந்திரனையே} வென்று, வேள்விக் காணிக்கைகளைத் தாங்கிச் செல்பவனை {அக்னியை} மனம் நிறையச் செய்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்தப் பல்குனன் {அர்ஜுனன்} நற்பேறாலேயே இந்தப் போரில் உயிருடன் இருக்கிறான். எவனுடைய கரங்களின் வலிமையால் நாம் அனைவரும் உயிருடன் இருக்கிறோமோ, எதிரிப் படைகளைக் கொல்பவனான அந்தப் பல்குனன் நற்பேறாலேயே உயிரோடிருக்கிறான். ஒரே வில்லின் துணையைக் கொண்ட எவனால் தேவர்களாலும் வீழ்தப்பட முடியாத தானவர்களான நிவாதகவசர்கள் வெல்லப்பட்டனரோ அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்} நற்பேறாலேயே உயிருடன் இருக்கிறான். விராடனின் பசுக்களைப் பிடித்துச் செல்ல மத்ஸ்ய நகரத்தில் ஒன்று கூடிய கௌரவர்கள் அனைவரையும் எவன் வென்றோனோ அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்} நற்பேறாலேயே உயிரோடிருக்கிறான். பதினாலாயிரம் {14000} காலகேயர்களைத் தன் கரங்களின் வலிமையால் எவன் கொன்றானோ அந்தப் பார்த்தன் நற்பேறாலேயே உயிருடன் இருக்கிறான். துரியோதனனுக்காகக் கந்தர்வர்களின் வலிமைமிக்க மன்னனை {சித்திரசேனனைத்} தன் ஆயுதங்களின் சக்தியால் எவன் வென்றானோ அந்தப் பார்த்தன் நற்பேறாலேயே உயிரோடிருக்கிறான். கிரீடத்தாலும், (தங்க) மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டவனும், பெரும் பலத்தைக் கொண்டவனும், (தன் தேரில் பூட்டப்பட்ட) வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனையே தன் தேரோட்டியாகக் கொண்டவனும், எப்போதும் எனது அன்புக்குரியவனுமான அந்தப் பல்குனன் {அர்ஜுனன்} நற்பேறாலேயே உயிருடன் இருக்கிறான்.

தன் மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் துயரில் எரிபவனும், மிகக் கடினமான சாதனையைச் செய்து கொண்டிருப்பவனும், ஐயோ, செய்த சபதத்தால் ஜெயத்ரதனைக் கொல்ல எவன் இப்போதும் முயல்கிறானோ, அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, போரில் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வதில் வெல்வானா? வாசுதேவனால் {கிருஷ்ணனால்} பாதுகாக்கப்பட்டு, சூரியன் மறைவதற்குள் தன் சபதத்தை நிறைவேற்றப் போகும் அர்ஜுனனை நான் மீண்டும் காண்பேனா? துரியோதனனின் நன்மையில் அர்ப்பணிப்புள்ள சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, பல்குனனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டுத் தன் எதிரிகளை மகிழ்விப்பானா? போரில் சிந்துக்களின் ஆட்சியாளன் கொல்லப்படுவதைக் காணும் மன்னன் துரியோதனன் நம்முடன் சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வானா? போரில் பீமசேனனால் தன் தம்பிகள் கொல்லப்படுவதைக் காணும் தீய துரியோதனன் நம்முடன் சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வானா? பெரும் போர் வீரர்கள் பிறர் பூமியின் பரப்பில் விழுந்து கிடப்பதைக் கண்டு தீய துரியோதனன் வருத்தத்தை அடைவானா? பீஷ்மர் ஒருவரின் தியாகத்தோடு நமது பகைமைகள் ஒழியாதா? (அவனிடமும், நம்மிடமும் இன்னும் மீந்து) எஞ்சியிருப்பவர்களைக் காப்பதற்காகச் சுயோதனன் {துரியோதனன்} நம்முடன் சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வானா?” {என்றான் யுதிஷ்டிரன்}. கருணையால் நிறைந்திருந்த மன்னன் யுதிஷ்டிரனின் மனதை இவ்வகையான பல்வேறு எண்ணங்களே கடந்து சென்றன. அதே வேளையில், (பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும்) இடையில் கடுஞ்சீற்றத்துடனும், உக்கிரமாகவும் போர் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.

கர்ணனை வென்ற பீமன்! – துரோண பர்வம் பகுதி – 128-அனைவரையும்விடப் பீமனுக்கே அதிகம் அஞ்சிய திருதராஷ்டிரன்; பீமனை எதிர்த்த கர்ணன்; கர்ணனின் வில்லை அறுத்தது; கர்ணனின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்றது; விருஷசேனனின் தேரில் ஏறிக்கொண்ட கர்ணன்; பீமனால் வெல்லப்பட்ட கர்ணன் மீண்டும் பீமனிடம் மோதியது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “மேகங்கள், அல்லது இடியின் முழக்கத்தைப் போல, வலிமைமிக்கப் பீமசேனன் ஆழமாக முழங்கியபோது, (நமது தரப்பில்) எந்த வீரர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர்? போரில் சீற்றமுள்ள பீமசேனனின் முன்பு நிற்கவல்ல எந்தப் போர்வீரனையும் மூவுலகங்களிலும் நான் காணவில்லை. ஓ! மகனே {சஞ்சயா}, காலனுக்கு ஒப்பாகக் கதாயுதத்தைத் தரித்து நிற்கும் பீமசேனனுக்கு எதிரில் போர்க்களத்தில் நிலைக்கவல்ல எவனையும் நான் காணவில்லை. தேரைத் தேராலும், யானையை யானையாலும் [1] அழிக்கும் அந்தப் பீமனை எதிர்த்துச் சக்ரனை {இந்திரனைத்} தவிர வேறு எவனால் நிற்க முடியும்? சினத்தால் தூண்டப்பட்டு, என் மகன்களைக் கொல்வதில் ஈடுபடும் பீமசேனனை எதிர்த்துத் துரியோதனனின் நன்மையில் அர்ப்பணிப்புள்ளோரில் எவனால் போரில் நிற்க முடியும்? உலர்ந்த இலைகளையும், வைக்கோலையும் எரிக்கும் காட்டுத்தீயைப் போல என் மகன்களை எரிப்பதில் ஈடுபடும் பீமசேனனின் முன்பு நின்ற மனிதர்கள் யாவர்? அனைத்து உயிரினங்களையும் வெட்டி வீழ்த்தும் மற்றொரு காலனைப் போலப் பீமன் என் மகன்களை ஒருவர் பின் ஒருவராகக் கொல்வதைக் கண்டு அவனைப் போரில் சூழ்ந்து கொண்டவர் யாவர்? நான் பீமனிடம் கொள்ளும் அச்சத்தைப் போல அர்ஜுனனிடமோ, கிருஷ்ணனிடமோ, சாத்யகியிடமோ, அல்லது வேள்வி நெருப்பில் பிறந்தவனிடமோ (திருஷ்டத்யும்னனிடமோ) பெரும் அச்சத்தைக் கொள்ளவில்லை. ஓ! சஞ்சயா, என் மகன்களை எரிக்கும் பீமனெனும் சுடர்மிகும் நெருப்பை எதிர்த்து விரைந்த அந்த வீரர்கள் யாவர் என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்கத் தேர்வீரனான பீமசேனன் இப்படி முழக்கங்களை வெளியிட்டபோது, அவற்றைத் தாங்கிக் கொள்ள முடியாத வலிமைமிக்கக் கர்ணன், தன் வில்லைப் பெரும் பலத்துடன் வளைத்து, பெருங்கூச்சலிட்டபடி அவனை {பீமனை} நோக்கி விரைந்தான். உண்மையில், போரை விரும்பிய வலிமைமிக்கக் கர்ணன், தன் பலத்தை வெளிப்படுத்திச் சூறாவளியைத் தாக்குப்பிடிக்கும் நெடிய மரமொன்றைப் போலப் பீமனின் வழியைத் தடை செய்தான். வீரப் பீமனும், தன் முன்னிலையில் விகர்த்தனன் மகனை {கர்ணனைக்} கண்டு திடீரெனக் கோபத்தில் சுடர்விட்டு, கல்லில் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றைப் பெரும்பலத்துடன் அவன் {கர்ணன்} மீது ஏவினான். அந்தக் கணைகள் அனைத்தையும் ஏற்ற கர்ணன் பதிலுக்குப் பலவற்றையும் ஏவினான். பீமனுக்கும், கர்ணனுக்கும் இடையிலான அம்மோதலில், அவர்களது உள்ளங்கைகளின் தட்டல் ஒலிகளைக் கேட்ட போராளிகள், தேர்வீரர்கள், குதிரைவீரர்கள் ஆகியோர் அனைவரின் அங்கங்களும் நடுங்கத் தொடங்கின. உண்மையில், அந்தப் போர்க்களத்தில் பீமசேனனின் பயங்கர முழக்கங்களைக் கேட்டு, அவ்வொலிகள் மொத்த பூமியையும், ஆகாயத்தையும் நிறைப்பதாக க்ஷத்திரியர்களில் முதன்மையான அனைவரும் கருதினர்.

உயர் ஆன்ம பாண்டு மகனால் {பீமனால்} வெளியிடப்பட்ட கடுமுழக்கங்களால், அந்தப் போரில் போர்வீரர்கள் அனைவரின் விற்களும் பூமியில் விழுந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துணிச்சலையிழந்த குதிரைகளும், யானைகளும் சிறுநீரும், மலமும் கழித்தன [2]. அச்சம்நிறைந்த பல்வேறு தீய சகுனங்கள் அப்போது தோன்றின. பீமனுக்கும், கர்ணனுக்கும் இடையிலான அந்தப் பயங்கர மோதலின் போது, கழுகுகள் மற்றும் கங்கங்களின் {பருந்துகளின்} கூட்டங்களால் ஆகாயம் மறைக்கப்பட்டது. கர்ணன் இருபது கணைகளால் பீமனைத் தாக்கி, ஐந்தால் பின்னவனின் தேரோட்டியை {விசோகனை} வேகமாகத் துளைத்தான். வலிமைமிக்கவனும், சுறுசுறுப்பானவனுமான பீமன் அந்தப் போரில் புன்னகைத்தபடியே, கர்ணனின் மீது அறுபத்துநான்கு {64} கணைகளை ஏவினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு கர்ணன் அவன் மீது நான்கு கணைகளை ஏவினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமன் அவற்றைத் தன் நேரான கணைகளால் பல துண்டுகளாக வெட்டித் தன் கரநளினத்தை வெளிக்காட்டினான். பிறகு கர்ணன் அடர்த்தியான கணைகளின் மாரியால் அவனை {பீமனை} மறைத்தான். எனினும், இப்படிக் கர்ணனால் மறைக்கப்பட்ட வலிமைமிக்கப் பாண்டு மகன் {பீமன்}, கர்ணனின் வில்லைக் கைப்பிடியில் அறுத்து, பிறகு பத்து நேரான கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.

பயங்கரச் செய்கைகளைச் செய்யும் வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சூத மகன் {கர்ணன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு அதில் விரைவாக நாணேற்றி அந்தப் போரில் பீமனை (பல கணைகளால்) துளைத்தான். அப்போது சினத்தால் தூண்டப்பட்ட பீமன், மூன்று நேரான கணைகளால் சூத மகனின் {கர்ணனின்} மார்பை பெரும்பலத்துடன் தாக்கினான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மூன்று நெடிய சிகரங்களைக் கொண்ட ஒரு மலையைப் போலக் கர்ணன், தன் மார்பில் ஒட்டிய அந்தக் கணைகளுடன் அழகாகத் தெரிந்தான். வலிமைமிக்கக் கணைகளால் இப்படித் துளைக்கப்பட்டதும், மலையின் சாரலில் வழியும் செஞ்சுண்ணாம்பின் நீர்த்தாரைகளைப் போல அவனது {கர்ணனது} காயங்களில் இருந்து குருதி பாயத் தொடங்கியது. பெரும்பலத்துடன் ஏவப்பட்ட அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்ட கர்ணன் சற்றே கலக்கமடைந்தான். தன் வில்லில் ஒரு கணையைப் பொருத்திய அவன் {கர்ணன்}, ஓ! ஐயா, மீண்டும் பீமனைத் துளைத்தான். பிறகு மீண்டும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கணைகளையும் அவன் ஏவத் தொடங்கினான்.

அந்த உறுதிமிக்க வில்லாளியான கர்ணனின் கணைகளால் திடீரென மறைக்கப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, சிரித்துக் கொண்டே கர்ணனுடைய வில்லின் நாணை அறுத்தான். பிறகு அவன் {பீமன்}, ஒரு பல்லத்தால், கர்ணனின் தேரோட்டியை யமனுலகு அனுப்பினான். வலிமைமிக்கத் தேர்வீரனான பீமன், கர்ணனின் நான்கு குதிரைகளையும் உயிரிழக்கச் செய்தான். பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகளற்ற தன் தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்து, விருஷசேனனின் தேரில் ஏறிக் கொண்டான்.

அப்போது, வீரப் பீமசேனன், போரில் கர்ணனை வென்ற பிறகு, மேகங்களின் முழக்கத்தைப் போன்ற ஆழமான பெருங்கூச்சலையிட்டான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அம்முழக்கத்தைக் கேட்ட யுதிஷ்டிரன், பீமசேனனால் கர்ணன் வெல்லப்பட்டதை அறிந்து மிகவும் மனம் நிறைந்தான். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பாண்டவப் படையின் போராளிகள் தங்கள் சங்குகளை ஊதினர். அவர்களது எதிரிகளான உமது போர்வீரர்கள் அவ்வொலியைக் கேட்டு உரக்க முழங்கினர். அர்ஜுனன் காண்டீவத்தை வளைத்தான், கிருஷ்ணன் பாஞ்சஜன்யத்தை ஊதினான். எனினும் இவ்வொலிகள் அனைத்தையும் மூழ்கடித்த பீமனின் முழக்கம், ஓ! மன்னா, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போராளிகள் அனைவராலும் கேட்கப்பட்டது. பிறகு, கர்ணன் மற்றும் பீமன் ஆகிய அந்தப் போர்வீரர்கள் இருவரும் நேரான கணைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். எனினும் ராதையின் மகன் {கர்ணன்} மென்மையாகக் கணைகளை ஏவினான், பாண்டுவின் மகனோ {பீமனோ}, பெரும்பலத்துடன் ஏவினான்” {என்றான் சஞ்சயன்} [3].

“மகாராஜரே, அசுரர்களுடைய பெரிய சேனையிலிருந்த தாரகாசுரனை நோக்கி சுப்ரம்மண்யர் எதிர்த்தது போலப் பீமனும் சூரியகுமாரனான கர்ணனை எதிர்த்தான். பயங்கரமான செய்கையுள்ளவர்களான அவ்விருவருக்கும் இவ்வாறான பெரும்போர் நடந்தது. பீமசேனன் பெரிதான அம்புமழையினால் அவனைத் தடுத்துக் கொண்டு அம்புகளால் அவனுடைய சாரதியையும், நான்கு குதிரைகளையும் அடித்தான். ஐயா, பீமன் கணுக்கள் படிந்துள்ள பல்லங்களால் அவனுடைய துவசத்தையும், கொடிச்சீலையையும் அறுத்து ரதத்தையும் சக்ரரக்ஷகர்களையும் நாசஞ்செய்தான். அரசரே, ரதிகர்களுள் சிறந்தவனும், பலசாலியுமான கர்ணனும், பீமசேனனால் நடுங்கும்படி செய்யப்பட்டவனாகக் கத்தியும் கேடகத்தையும் கையிற்பிடித்துப் பீமனை எதிர்த்தான். ஐயா, பீமன் அந்தக் கத்தியைக் கேடகத்தோடு வெட்டினான். மகாராஜரே, துரியோதனன், பீமனால் கர்ணன் அனேக அம்புகளாலே பீடிக்கப்பட்டதைக் கண்டு துச்சலனைப் பார்த்து, “கர்ணன் கஷ்டமான நிலைமையை அடைந்துவிட்டதைப் பார். சீக்கிரமாக அவனுக்கு ரதத்தைக் கொடு” என்று சொன்னான். இவ்வாறு அரசன் சொல்லியதைக் கேட்ட துச்சலன், பிறகு, கர்ணனுடைய சமீபத்தில் ஓடிவந்தான். மகாரதனான கர்ணனும், துச்சலனுடைய ரதத்தில் ஏறிக் கொண்டான். அவ்விருவரையும் பிருதையின் புத்ரனான பீமன் விரைவாக நெருங்கிப் பத்துப் பாணங்களாலடித்து மறுபடியும் கர்ணனை அடித்துத் துச்சலனுடைய தலையையுமறுத்தான். ஐயா, பீமசேனனால் துச்சலன் கொல்லப்பட்டதைப் பார்த்துக் கர்ணன் அவனுடைய வில்லை எடுத்துப் பாண்டவனையடித்தான். வீரர்களும் மகாபலசாலிகளும், சத்துருக்களுடைய மத்தியில் பலனும் இந்திரனும் போலப் பரஸ்பரம் போர்புரிந்தார்கள். மகாபலசாலியும் பிருதா புத்திரனுமான பீமன் அட்டகாசஞ்செய்து கொண்டு குதிரைகளையும் சாரதியையுமடித்த அடிக்கடி கர்ணனையெதிர்த்தான். பிறகு, யுத்த பூமியில் பீமன் போர் புரிகையில் அச்சேனை குழப்பமுற்றது. யாதொன்றும் அறியப்படவில்லை”

துரியோதனனும், பாஞ்சால இளவரசர்களும்! – துரோண பர்வம் பகுதி – 129-துரோணரை நோக்கிச் சென்ற துரியோதனன், அவரிடம் வைத்த கோரிக்கை; ஜெயத்ரதனைப் பாதுகாக்கத் துரியோதனனை ஏவிய துரோணர்; துரியோதனனுக்கும், பாஞ்சால இளவரசர்களுக்கும் இடையில் நடைபெற்ற போர்; பாஞ்சால இளவரசர்களின் தேரைத் தன் கதாயுதத்தால் நொறுக்கிய துரியோதனன், சல்லியனின் தேரில் ஏறிச் சென்றது; பாஞ்சால இளவரசர்கள் அர்ஜுனனை நோக்கிச் சென்றது.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “(இப்படி) அந்தப் படை முறியடிக்கப்பட்டு, அர்ஜுனன், பீமசேனன் ஆகிய அனைவரும் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} நோக்கிச் சென்ற பிறகு, உமது மகன் (துரியோதனன்) துரோணரை நோக்கிச் சென்றான். தனி ஒருவனாகத் தன் தேரில் ஆசானிடம் {துரோணரிடம்} சென்ற துரியோதனன், வழியெங்கும் பல்வேறு கடமைகளைக் குறித்துச் சிந்தித்தபடியே சென்றான். காற்று அல்லது மனோ வேகம் கொண்ட உமது மகனின் {துரியோதனனின்} தேரானது, துரோணரை நோக்கிப் பெரும் வேகத்தோடு சென்றது.

கோபத்தால் சிவந்த கண்களுடன் கூடிய உமது மகன் {துரியோதனன்}, ஆசானிடம் {துரோணரிடம்}, “ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவரே {துரோணரே}, அர்ஜுனன், பீமசேனன் மற்றும் வெல்லப்படாத சாத்யகி ஆகியோரும், வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரும், நமது துருப்புகள் அனைத்தையும் வீழ்த்தி, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அணுகுவதில் வென்றுவிட்டனர். உண்மையில், வெல்லப்படாதவர்களாகவே இருக்கும் வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் துருப்புகள் அனைத்தையும் வென்ற பிறகு அங்கேயும் போரிடுகின்றனர். ஓ! கௌரவங்களை அளிப்பவரே {துரோணரே}, சாத்யகி மற்றும் பீமன் ஆகிய இருவராலும் உம்மை எப்படிக் கடக்க முடிந்தது? ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே {துரோணரே}, சாத்வதன் {சாத்யகி}, அர்ஜுனன் மற்றும் பீமசேனனிடம் நீர் அடைந்த தோல்வியானது இவ்வுலகில் கடல் வறண்டு போவதைப் போல மிக ஆச்சரியமானதாகும். மக்கள், “ஆயுத அறிவியலில் கரைகண்டவரான துரோணர் உண்மையில் எவ்வாறு வெல்லப்பட முடியும்?” என்று உரக்கக் கேட்கின்றனர். இவ்வாறே வீரர்கள் அனைவரும் உம்மை மதிப்பு குறைவாகப் பேசுகின்றனர்.

ஓ! மனிதர்களில் புலியே {துரோணரே}, தொடர்ச்சியாக மூன்று வீரர்கள் உம்மைக் கடந்து சென்றனர் என்றால், நல்லூழற்ற எனக்குப் போரில் அழிவு நிச்சயமே. எனினும், இவையாவும் நடந்தும், இக்காரியத்தில் எங்களுக்குக் காத்திருப்பது என்ன என்பதில் நீர் சொல்லவேண்டியதை எங்களுக்குச் சொல்வீராக. எது நடந்ததோ அது கடந்து போனதாகும் {கடந்த காலமாகும்}. ஓ! கௌரவங்களை அளிப்பவரே, எஞ்சியிருப்பது {இனி செய்ய வேண்டியது} என்ன என்பதை இப்போது சிந்திப்பீராக. அடுத்ததாக, சிந்துக்களின் ஆட்சியாளனுக்காக {ஜெயத்ரதனுக்காகத்} தற்சமயம் என்ன செய்ய வேண்டும் என்பதை விரைவாகச் சொல்வீராக, நீர் எதைச் சொல்வீரோ, அது வேகமாகவும், முறையாகவும் செய்யப்படும்” என்றான் {துரியோதனன்}.

துரோணர் {துரியோதனனிடம்}, “ஓ! பெரும் மன்னா {துரியோதனா}, இப்போது எது செய்யப்பட வேண்டும் என்பதை மிகவும் சிந்தித்து, நான் உன்னிடம் சொல்வதைக் கேட்பாயாக. இப்போது வரை பாண்டவர்களின் பெரும் தேர்வீரர்களில் மூவர் மட்டுமே நம்மைக் கடந்து சென்றிருக்கின்றனர். அந்த மூவருக்கு முன்னால் நமக்கு எவ்வளவு அச்சமிருந்ததோ, அவர்களுக்குப் பின்னாலும் நாம் அவ்வளவு அஞ்சவேண்டியிருக்கிறது [1]. எனினும், எங்கே கிருஷ்ணனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} இருக்கின்றனரோ, அங்கே நமது அச்சம் பெரிதாக இருக்க வேண்டும். பாரதப் படையானது முன்னாலும், பின்னாலும் என இருபுறமும் தாக்கப்படுகிறது. இந்நேரத்தில் சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனுடைய} பாதுகாப்பே நமது முதல் கடமை என நான் நினைக்கிறேன். தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} அஞ்சுபவனான ஜெயத்ரதன் நம்மால் பாதுகாக்கப்படுவதே அனைத்தையும் விடத் தகுந்ததாகும்.

வீர யுயுதானன் {சாத்யகி} மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரும் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} எதிர்த்துச் சென்றிருக்கின்றனர். இவையாவும் சகுனியின் புத்தியில் தோன்றிய பகடையாட்டத்தாலேயே வந்திருக்கின்றன. (சூதாட்ட) சபையில் வெற்றியோ, தோல்வியோ ஏற்படவில்லை. இப்போது நாம் ஈடுபடும் இவ்விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் ஏற்படும். சகுனி, குற்றமில்லாத எந்தப் பொருட்களைக் கொண்டு குருக்களின் சபையில் முன்பு விளையாடினானோ, எதை அவன் {சகுனி} பகடையே என்று கருதினானோ, அவையே உண்மையில் வெல்லப்பட முடியாதவையான கணைகளாக இருக்கின்றன. உண்மையில், ஓ! ஐயா {துரியோதனா}, கௌரவர்கள் கூடியிருந்த அந்த இடத்தில் இருந்தது பகடையல்ல, ஆனால் அஃது உங்கள் உடல்களைச் சிதைக்கவல்ல பயங்கரமான கணைகளாகும்.

எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, தற்போது இந்தப் போர் விளையாட்டில், போராளிகளே சூதாடிகள் என்றும், இந்தக் கணைகளே பகடையென்றும், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, சிந்துக்களின் ஆட்சியாளனே பணயம் என்றும் ஐயமில்லாமல் அறிவாயாக. உண்மையில் எதிரியுடனான நமது இன்றைய விளையாட்டில், ஜெயத்ரதனே பெரும்பணயமாவான். எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில், நாம் அனைவரும் நம் உயிரையே துச்சமாக மதித்து, போரில் சிந்துக்களின் ஆட்சியாளனுடைய பாதுகாப்புக்கான முறையான ஏற்பாடுகளைச் செய்வோமாக. தற்போது நாம் ஈடுபடும் விளையாட்டில், எங்குச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} பெரும் வில்லாளிகளால் பாதுகாக்கப்படுகிறானோ, அங்கேயே நாம் வெற்றியையோ, தோல்வியையோ அடைவோம். எனவே, வேகமாக அங்கே சென்று (ஜெயத்ரதனின்) பாதுகாவலர்களைக் காப்பாயாக. என்னைப் பொறுத்தவரை, பிறரை (ஜெயத்ரதனின் முன்னிலைக்கு) அனுப்பவும், ஒன்றுகூடியிருக்கும் பாஞ்சாலர்கள், பாண்டுக்கள், சிருஞ்சயர்கள் ஆகியோரைத் தடுக்கவும் நான் இங்கேயே நிற்பேன்” என்றார் {துரோணர்}.

ஆசானால் {துரோணரால்} இப்படி ஆணையிடப்பட்ட துரியோதனன், கடும் பணிக்கான (சாதனைக்காக) உறுதியான தீர்மானத்தை எடுத்து, தன்னைப் பின்தொடர்பவர்களுடன் ({துரோணரால்} சுட்டிக்காட்டப்பட்ட இடத்திற்கு) வேகமாகச் சென்றான். அர்ஜுனனின் தேர்ச்சக்கரங்களைப் பாதுகாப்பவர்களும், பாஞ்சால இளவரசர்களுமான யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இருவரும், அந்நேரத்தில் சவ்யசச்சினை {அர்ஜுனனை} நோக்கி குரு அணிவகுப்பின் ஓரங்களில் முன்னேறிச் சென்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முன்பு போரிடும் விருப்பத்தால் அர்ஜுனன் உமது படைக்குள் ஊடுருவிய போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இளவரசர்களான அந்த இருவரின் முன்னேற்றத்தைக் கிருதவர்மன் தடுத்தான் என்பதை நீர் நினைவில் கொண்டிருக்கலாம். இப்போதோ குரு மன்னன் {துரியோதனன்} தன் படையின் ஓரங்களில் செல்லும் அவர்களைக் கண்டான். பாரதக் குலத்தின் வலிமைமிக்கத் துரியோதனன், இப்படி மூர்க்கமாக விரைந்து வரும் அவ்விரு சகோதரர்களுடனும் கடும்போரில் ஈடுபடச் சற்றும் தாமதிக்கவில்லை.

க்ஷத்திரியர்களில் முதன்மையானோரும், புகழ்பெற்றவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அவ்விருவரும், வளைக்கப்பட்ட தங்கள் விற்களுடன் அந்தப் போரில் துரியோதனனை எதிர்த்து விரைந்தனர். யுதாமன்யு இருபது {20} கணைகளால் துரியோதனனையும், நான்கு கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் துளைத்தான். எனினும், துரியோதனன் ஒரே கணையால் யுதாமன்யுவின் கொடிமரத்தை அறுத்தான். பிறகு உமது மகன் {துரியோதனன்} மற்றொரு கணையால் முன்னவனின் {யுதாமன்யுவின்} வில்லையும் அறுத்தான். அதன் பிறகும் அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, ஒரு பல்லத்தைக் கொண்டு யுதாமன்யுவின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான். பிறகும் அவன் நான்கு கணைகளால் பின்னவனின் {யுதாமன்யுவின்} நான்கு குதிரைகளைத் துளைத்தான். அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட யுதாமன்யு, அந்தப் போரில் உமது மகனின் {துரியோதனனின்} நடு மார்பில் முப்பது {30} கணைகளை வேகமாக ஏவினான்.

கோபத்தால் தூண்டப்பட்ட உத்தமௌஜஸும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணைகளைக் கொண்டு துரியோதனனின் தேரோட்டியைத் துளைத்து, அவனை {தேரோட்டியை} யமனுலகு அனுப்பி வைத்தான். பிறகு துரியோதனனும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களின் இளவரசனான உத்தமௌஜஸின் நான்கு குதிரைகளையும், இரண்டு பார்ஷினி தேரோட்டிகளையும் கொன்றான். அப்போது அந்தப் போரில் குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும் ஆன உத்தமௌஜஸ் தன் சகோதரனான யுதாமன்யுவின் தேரில் வேகமாக ஏறினான். தன் சகோதரனின் தேரில் ஏறிய அவன் {உத்தமௌஜஸ்}, கணைகள் பலவற்றால் துரியோதனனின் குதிரைகளைத் தாக்கினான். இதனால் கொல்லப்பட்ட அக்குதிரைகள் கீழே பூமியில் விழுந்தன. அவனது {துரியோதனனின்} குதிரைகள் விழுந்ததும், வீர யுதாமன்யு ஒரு வலிமைமிக்க ஆயுதத்தால் துரியோதனனின் வில்லை விரைவாக அறுத்து, மேலும் (மற்றொரு கணையால்) தோலாலான அவனது கையுறைகளையும் அறுத்தான்.

மனிதர்களில் காளையான உமது மகன் {துரியோதனன்}, குதிரைகளற்ற, சாரதியற்ற தேரில் இருந்து கீழே குதித்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு பாஞ்சால இளவரசர்கள் இருவரையும் எதிர்த்துச் சென்றான். இப்படிக் கோபத்தில் முன்னேறி வரும் பகை நகரங்களை அழிப்பவனை {துரியோதனனைக்} கண்டு, யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இருவரும் தங்கள் தேர்த்தட்டில் இருந்து கீழே குதித்தனர். அப்போது கதாயுதம் தரித்த துரியோதனன், தங்கத்தால் அலங்கரிக்கபட்டதும், குதிரைகள், தேரோட்டி மற்றும் கொடிமரத்துடன் கூடியதுமான அந்தத் தேரை அக்கதாயுதத்தால் பூமிக்குள் அழுத்தினான். எதிரிகளை எரிப்பவனான உமது மகன் {துரியோதனன்}, அந்தத் தேரை நொறுக்கிய பிறகு, குதிரைகளும், சாரதியுமற்ற அவன், மத்ரர்களின் மன்னனுடைய {சல்லியனின்} தேரில் விரைவாக ஏறினான். அதே வேளையில், வலிமைமிக்க இரு தேர்வீரர்களான, அந்தப் பாஞ்சால இளவசர்களில் முதன்மையான இருவரும் வேறு இரு தேர்களில் ஏறிக் கொண்டு அர்ஜுனனை நோக்கிச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.

மீண்டும் பீமனிடம் தோற்ற கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 130-கர்ணனுக்கு அஞ்சி உறங்காமல் தவித்த யுதிஷ்டிரன்; அர்ஜுனனிடம் சென்ற பீமனை மீண்டும் தடுத்து, அவனுக்கு அறைகூவல் விடுத்த கர்ணன்; கர்ணனின் அலட்சியம்; மூர்க்கத்துடன் போரிட்ட பீமன்; கர்ணனின் வில்லை மீண்டும் அறுத்தது; கர்ணனின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்று அவனையும் மார்பில் துளைத்தது; மற்றொரு தேரை அடைந்த கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதான அந்தப் போரில் போராளிகள் அனைவரும் கவலையில் நிறைந்து, பெரிதும் பீடிக்கப்பட்டிருந்த போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த ராதையின் மகன் {கர்ணன்}, காட்டில் மதங்கொண்ட யானையை எதிர்த்துச் செல்லும் மற்றொரு யானையைப் போலப் பீமனை எதிர்த்துச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “பெரும்பலம் கொண்டவர்களான பீமன் மற்றும் கர்ணன் ஆகிய வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவருக்கிடையில் அர்ஜுனனின் தேருக்கு அருகில் நடந்த அந்தப் போர் எவ்வாறு நடந்தது? இதற்கு முன்பு ஒரு முறை கர்ணன் போரில் பீமசேனனால் வெல்லப்பட்டான். எனவே, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனால் மீண்டும் பீமனை எதிர்த்து எவ்வாறு செல்ல முடிந்தது? பூமியின் தேர்வீரர்களில் மிகப் பெரியவனாக அறியப்படும் வலிமைமிக்கப் போர் வீரனான சூதனின் மகனை {கர்ணனை} எதிர்த்து பீமனாலும் எவ்வாறு செல்ல முடியும்? தர்மனின் மகனான யுதிஷ்டிரன், பீஷ்மரையும், துரோணரையும் வெற்றிகொண்ட நிலையில், வில்லாளியான கர்ணனிடம் கொண்ட அச்சத்தினளவிற்கு வேறு எவரிடமும் அச்சம்கொள்ளவில்லை. உண்மையில், அவன் {யுதிஷ்டிரன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனை நினைத்துக் கொண்டே, அச்சத்தால் தன் இரவுகளை உறக்கமில்லாமல் கழிக்கிறான். பிறகு, போரில் அந்தச் சூதனின் மகனிடம் {கர்ணனிடம்} பீமனால் எவ்வாறு மோத முடியும்? உண்மையில், ஓ! சஞ்சயா, போரில் பின்வாங்காதவனும், சக்தியுடன் கூடிய பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புள்ள வீரனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்தக் கர்ணனோடு பீமனால் எவ்வாறு போரிட முடியும்?

உண்மையில், அர்ஜுனனின் தேரருகே நடந்த அம்மோதலில் சூதனின் மகன் {கர்ணன்} மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய அவ்விரு வீரர்களும், எவ்வாறு ஒருவரோடொருவர் போரிட்டனர்? மேலும், (பாண்டவர்களுடனான) தன் சகோதரநிலை குறித்து முன்பே தெரிவிக்கப்பட்ட அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} கருணையுள்ளவனுமாவான். குந்தியிடம் தான் சொன்ன வார்த்தைகளை நினைவுகூர்ந்தால் [1], அவனால் {கர்ணனால்} எவ்வாறு பீமனுடன் போரிட முடியும்? பீமனைப் பொறுத்தவரையும் கூட, முன்பு சூதனின் மகனால் {கர்ணனால்} தன் மீது திணிக்கப்பட்ட தீங்குகள் அனைத்தையும் நினைவுகூர்ந்த அந்த வீரன் {பீமன்}, போரில் கர்ணனுடன் எவ்வாறு போரிட்டான்? ஓ! சூதா {சஞ்சயா}, என் மகன் துரியோதனன், கர்ணன் பாண்டவர்கள் அனைவரையும் போரில் வென்று விடுவான் என நம்புகிறான். இழிந்தவனான என் மகன் போரில் எவனிடம் வெற்றி இருக்கிறது என நம்புகிறானோ அவன் {கர்ணன்}, பயங்கரச் செயல்களைச் செய்யும் பீமசேனனுடன் எவ்வாறு போரிட்டான்? என் மகன்கள் எவனை நம்பி அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் (பாண்டுவின் மகன்களுடன் {பாண்டவர்களுடன்}) பகைமை கொண்டனரோ, அந்தச் சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} பீமன் எவ்வாறு போரிட்டான்? உண்மையில் அவனால் {கர்ணனால்} செய்யப்பட்ட பல்வேறு தீங்குகள் மற்றும் காயங்களை நினைவுகூர்ந்த பீமன் அந்தச் சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} எவ்வாறு போரிட்டான்? உண்மையில், முன்னர் ஒரே தேரில் தனியாகச் சென்று மொத்த உலகை அடக்கியவனும், பெரும் வீரம் கொண்டவனுமான அந்தச் சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} பீமனால் எவ்வாறு போரிட முடிந்தது? (இயற்கையான) இரு காதுகுண்டலங்களுடன் பிறந்தவனான அந்தச் சூதனின் மகனுடன் பீமன் எவ்வாறு போரிட்டான்? ஓ! சஞ்சயா, விவரிப்பதில் நீ திறனுள்ளவனாக இருக்கிறாய். எனவே, அவ்விருவருக்கும் இடையில் நடைபெற்ற போரையும், அவர்களில் வெற்றி அடைந்தவர் யார் என்பதையும் எனக்கு விரிவாகச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பீமசேனன், ராதையின் மகனை {கர்ணனை} விட்டுவிட்டு, கிருஷ்ணன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இரு வீரர்களும் எங்குள்ளனரோ அங்கே செல்ல விரும்பினான். எனினும், ராதையின் மகன் {கர்ணன்}, அவனை {பீமனை} நோக்கி விரைந்து சென்ற போதே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல அடர்த்தியான கணைமாரியால் அவனை {பீமனை} மறைத்தான்.

முழுதும் மலர்ந்த முளரியை {தாமரையைப்} போல அழகிய முகமுடையவனும், முறுவலால் மிளிர்ந்தவனுமான {சிரிப்பால் பிரகாசித்தவனுமான} வலிமைமிக்க அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, பீமசேனன் சென்றபோது பின்னவனை {பீமனை} அறைகூவி அழைத்தான். கர்ணன், “ஓ! பீமா, போரிடுவது எவ்வாறு என்பதை நீ அறிவாய் என நான் கனவிலும் நினைக்கவில்லை. பிறகு, அர்ஜுனனைச் சந்திக்கும் விருப்பத்தால் ஏன் எனக்கு நீ முதுகைக் காட்டுகிறாய்? ஓ! பாண்டவர்களை மகிழ்விப்பவனே, குந்தியின் மகன் ஒருவனுக்கு இது சற்றும் பொருந்தாது. எனவே, நீ எங்கிருக்கிறாயோ அங்கேயே நின்று உன் கணைகளால் என்னை மறைப்பாயாக” என்றான் {கர்ணன்}.

கர்ணனின் அந்த அறைகூவலைக் கேட்ட பீமசேனன் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தன் தேரை சற்றே நகர்த்தி, அந்தச் சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} {மீண்டும்} போரிடத் தொடங்கினான். சிறப்புமிக்கப் பீமசேனன் நேரான கணைமேகங்களைப் பொழிந்தான். கர்ணனைக் கொல்வதால் அந்தப் பகைமைகளுக்கு முடிவைக் கொண்டு வர விரும்பிய பீமன், கவசம் பூண்டவனும், அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவனும், தனக்கு எதிரில் நின்று தனிப்போரில் ஈடுபடுபவனுமான அந்த வீரனை {கர்ணனை} பலவீனமடையச் செய்யத் தொடங்கினான். எண்ணற்ற கௌரவர்களைக் கொன்ற பிறகு, ஓ! ஐயா, எதிரிகளை எரிப்பவனும், பாண்டுவின் கோபக்கார மகனும், வலிமைமிக்கவனுமான பீமன், கர்ணனின் மீது பல்வேறு கடும் கணைமாரிகளைப் பொழிந்தான். பெரும்பலம் கொண்ட அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, மதயானையின் நடையைக் கொண்ட அந்ந வீரனால் {பீமனால்} தொடுக்கப்பட்ட கணைமாரிகள் அனைத்தையும் தன் ஆயுதங்களின் சக்தியால் விழுங்கினான்.

அறிவின் உதவியைக் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான அந்தக் கர்ணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (படை அறிவியலின்) ஆசானைப் போல அந்தப் போரில் திரியத் தொடங்கினான். ராதையின் கோபக்கார மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே இருந்தது, பெரும் சீற்றத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த பீமசேனனுக்குத் தன்னைக் கேலி செய்வதைப் போலத் தெரிந்தது. தங்களுக்கிடையிலான அந்தப் போரை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பார்த்துக் கொண்டிருந்த துணிச்சல்மிக்க வீரர்கள் பலருக்கு மத்தியில் குந்தியின் மகனால் {பீமனால்} கர்ணனின் சிரிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பெரும் யானையை அங்குசத்தால் தாக்கும் பாகனைப் போலச் சினத்தால் தூண்டப்பட்ட வலிமைமிக்கப் பீமன், அடையும் தொலைவுக்குள் தன்னால் கொண்டுவரப்பட்ட கர்ணனின் நடுமார்பை வத்சதந்தங்கள் {கன்றின் பற்களைப் போன்ற தலை கொண்ட கணைகள்} பலவற்றால் துளைத்தான்.

மீண்டும் பீமசேனன், தங்கமயமானவையும், அழகிய சிறகுகளுடையவையும், கூர்முனை கொண்டவையும், நன்கு ஏவப்பட்டவையுமான எழுபத்துமூன்று [?] கணைகளால் சூத மகனின் வண்ணமயமான கவசத்தைத் துளைத்தான். {பிறகு அந்த வீரக் கர்ணன், தங்க விரிப்புகளுடன் கூடியவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான பீமனின் குதிரைகள்} ஒவ்வொன்றையும் ஐந்து கணைகளால் {துளைத்தான்} [2]. விரைவில் கண்ணிமைப்பதற்குள் கர்ணனால் உண்டாக்கப்பட்ட கணைகளின் வலை பீமனின் தேரில் காணப்பட்டது. உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகளானவை, கொடிமரம், தேரோட்டி மற்றும் அந்தப் பாண்டவனுடன் {பீமனுடன்} கூடிய அந்தத் தேரை முழுமையாக மறைத்தது. பிறகு கர்ணன், பீமனின் ஊடுருவமுடியாத கவசத்தை அறுபத்துநான்கு கணைகளால் துளைத்தான். சினத்தால் தூண்டப்பட்ட அவன் {கர்ணன்}, உயிர்நிலைகளையே ஊடுருவவல்ல நேரான கணைகள் பலவற்றால் பார்த்தனையே {பீமனையே} துளைத்தான்.

எனினும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட விருகோதரன் {பீமன்}, கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகளை அலட்சியம் செய்தபடியே அச்சமில்லாமல் அந்தச் சூதனின் மகனை {கர்ணனை} தாக்கினான். கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான கணைகளால் துளைக்கப்பட்ட பீமன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் எந்த வலியையும் உணரவில்லை. பிறகு அந்த வீரப் பீமன், அம்மோதலில் கடும் சக்தி கொண்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையுமான முப்பத்திரண்டு பல்லங்களால் கர்ணனைத் துளைத்தான். எனினும், கர்ணன், ஜெயத்ரதனைக் கொல்ல விரும்பியவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமசேனனைத் தன் கணைகளால் பதிலுக்குப் பெரும் அலட்சியத்துடனேயே மறைத்தான். உண்மையில் அம்மோதலில், ராதையின் மகன் {கர்ணன்}, பீமனுடன் மென்மையாகவே போரிட்டான், அதே வேளையில் பீமனோ, அவனது {கர்ணனின்} முந்தைய தீங்குகளை நினைவுகூர்ந்து அவனுடன் மூர்க்கமாகப் போரிட்டான்.

கோபக்கார பீமனால் கர்ணனின் அலட்சியத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உண்மையில் அந்த எதிரிகளைக் கொல்பவன் {பீமன்}, ராதையின் மகன் மீது கணை மாரிகளை விரைவாக ஏவினான். அம்மோதலில் பீமசேனனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள், கொஞ்சும் பறவைகளைப் போலக் கர்ணனின் அங்கங்கள் யாவிலும் பாய்ந்தன. பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கூர்முனை மற்றும் தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அக்கணைகள், சுடர்மிக்க நெருப்பை மறைக்கும் பூச்சிகளின் கூட்டத்தைப் போல ராதையின் மகனை {கர்ணனை} மறைத்தன. எனினும் கர்ணன், ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பதிலுக்குக் கடுங்கணைகளின் மாரியைப் பொழிந்தான். அப்போது விருகோதரன் {பீமன்}, அந்தப் போர்க்கள ரத்தினத்தால் {கர்ணனால்} ஏவப்பட்டவையும், வஜ்ரத்திற்கு ஒப்பானவையுமான அந்தக் கணைகள் தன்னை அடைவதற்கு முன்பே பல்லங்கள் பலவற்றால் அவற்றை வெட்டினான். எதிரிகளைத் தண்டிப்பவனும், விகர்த்தனன் {சூரியன்} மகனுமான கர்ணன், ஓ! பாரதரே, மீண்டும் பீமசேனனைத் தன் கணைமாரியால் மறைத்தான்.

அப்போது ஓ! பாரதரே, அம்மோதலில் கணைகளால் துளைக்கப்பட்ட பீமனை, தன் உடலில் நிமிர்ந்து நிற்கும் முட்களுடன் கூடிய முள்ளம்பன்றிக்கு ஒப்பாக நாங்கள் கண்டோம். தன் கதிர்களைப் பிடித்திருக்கும் சூரியனைப் போலவே அந்தப் போரில் வீரப் பீமன், கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அக்கணைகளைப் பிடித்திருந்தான். குருதியில் குளித்த அனைத்து அங்கங்களுடன் கூடிய பீமசேனன், வசந்தகாலத்தில் மலர்களின் சுமையால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அசோக மரத்தைப் போலப் பிரகாசத்துடன் தெரிந்தான். அந்தப் போரில் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கர்ணனின் அந்த நடத்தையை வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

கோபத்தில் சுழன்ற கண்களுடன் கூடிய அவன் {பீமன்} இருபத்தைந்து நாராசங்களால் கர்ணனைத் துளைத்தான். அதன்பேரில் கர்ணன், (தன் பக்கங்களில் தொங்கும்) கடும் நஞ்சுமிக்கப் பாம்புகள் பலவற்றுடன் கூடிய ஒரு வெண்மலையைப் போலத் தெரிந்தான். தெய்வீக ஆற்றலைக் கொண்ட பீமசேனன், அப்போரில் தன் உயிரையும் விடத் தயாராக இருந்த சூதனின் மகனை {கர்ணனை} ஆறு கணைகளாலும், பிறகு எட்டு கணைகளாலும் துளைத்தான். பிறகு வீரப் பீமசேனன் சிரித்துக் கொண்டே மற்றொரு கணையால் கர்ணனின் வில்லை மீண்டும் விரைவாக அறுத்தான். மேலும் அவன் {பீமன்} தன் கணைகளால் கர்ணனின் நான்கு குதிரைகளையும், பிறகு அவனது தேரோட்டியையும் கொன்று, அதன் பிறகு, சூரியப்பிரகாசம் கொண்ட எண்ணற்ற நாராசங்களால் கர்ணனின் மார்பையும் துளைத்தான். சிறகுகள் படைத்த அக்கணைகள் கர்ணனின் உடலினூடாக ஊடுருவி, மேகங்களின் ஊடாகத் துளைத்துச் செல்லும் சூரியனின் கதிர்களைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. தன் ஆண்மையில் செருக்குக் கொண்டிருந்தாலும், கணைகளால் பீடிக்கப்பட்டு, தன் வில்லும் அறுபட்ட கர்ணன் பெரும் வலியை உணர்ந்து மற்றொரு தேருக்குச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.

கர்ணன் பீமனுக்கிடையில் பயங்கரப் போர்! – துரோண பர்வம் பகுதி – 131-மற்றொரு தேரில் ஏறி பீமனை எதிர்த்து மீண்டும் விரைந்த கர்ணன்; கர்ணனுக்கும், பீமனுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர்; கர்ணனாலும், திருதராஷ்டிரன் மகன்களாலும் பாண்டவர்கள் இதுவரை அடைந்த துன்பங்களை எண்ணிப் பார்த்து மூர்க்கத்துடன் போரிட்ட பீமன்; கௌரவப் படையில் ஏற்பட்ட பேரழிவு…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, என் மகன்கள் எவனிடம் வெற்றிக்கான தங்கள் நம்பிக்கைகள் அனைத்தையும் கொண்டுள்ளனரோ அந்தக் கர்ணன் களத்தில் இருந்து புறங்காட்டிச் செல்வதைக் கண்டு, உண்மையில் துரியோதனன் என்ன சொன்னான்?(1) உண்மையில், தன் சக்தியில் பெருமை கொண்ட பீமன் எவ்வாறு போரிட்டான்? கர்ணனும் இதன் பிறகு, ஓ! மகனே {சஞ்சயா}, அந்தப் போரில் சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பான பீமசேனனைக் கண்டு என்ன செய்தான்?” என்றான் {திருதராஷ்டிரன்}.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “முறையாக அமைக்கப்பட்ட மற்றொரு தேரில் ஏறிய கர்ணன், சூறாவளியால் கொந்தளிக்கும் கடலின் சீற்றத்துடன் பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்து மீண்டும் விரைந்தான்.(3) சினத்தால் தூண்டப்பட்ட அந்த அதிரதன் மகனை {கர்ணனைக்} கண்ட உமது மகன்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (கர்ண) நெருப்பில் ஏற்கனவே ஊற்றப்பட்ட காணிக்கையாகவே {ஆகுதியாகவே) பீமசேனனைக் கருதினர்.(4) வில்நாண் கயிற்றின் சீற்றமிக்க நாணொலி மற்றும் தன் உள்ளங்கைகளின் பயங்கர ஒலிகள் ஆகியவற்றுடன் கூடிய ராதையின் மகன் {கர்ணன்}, பீமசேனனின் தேரை நோக்கி அடர்த்தியான கணைமாரியை ஏவினான்.(5)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வீரக் கர்ணனுக்கும், உயர் ஆன்ம பீமனுக்கும் இடையில் மீண்டும் ஒரு பயங்கரமான மோதல் நடந்தது.(6) கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களுமான அவ்விரு போர் வீரர்களும், (கோபம்நிறைந்த) தங்கள் பார்வையாலேயே ஒருவரையொருவர் எரித்துவிடத் தீர்மானித்தவர்களைப் போல ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(7) கோபத்தால் சிவந்திருந்த கண்களுடன் கூடிய அவ்விருவரும், இரண்டு பாம்புகளைப் போலச் சீற்றத்துடன் மூச்சுவிட்டனர். எதிரிகளைத் தண்டிப்பவர்களும், பெரும் வீரம் கொண்டவர்களுமான அவ்விருவரும் ஒருவரையொருவர் அணுகி சிதைத்தனர்.(8) உண்மையில் அவர்கள், பெரும் சுறுசுறுப்புக் கொண்ட இரு பருந்துகளைப் போல, அல்லது கோபத்தால் தூண்டப்பட்ட இரு சரபங்களைப் போல ஒருவரோடொருவர் போரிட்டனர்.(9)

அப்போது எதிரிகளைத் தண்டிப்பவனான பீமன், பகடையாட்டத்தின் போதும், நாடுகடத்தப்பட்டுக் காட்டில் இருந்தபோதும், விராடனின் நகரத்தில் வசித்த போதும் தான் பட்ட துன்பங்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்தும்,(10) செழிப்பிலும், ரத்தினங்களிலும் பெருகியிருந்த தங்கள் அரசு உமது மகன்களால் களவாடப்பட்டது, உம்மாலும், சூதனின் மகனாலும் {கர்ணனாலும்} பாண்டவர்களுக்கு எண்ணற்ற தீங்குகள் இழைக்கப்பட்டது ஆகியவற்றை மனதில் கொண்டும்,(11) அப்பாவியான குந்தியை நீர் அவளது மகன்களுடன் சேர்த்து எரிக்கச் சதி செய்த உண்மையை நினைத்தும், சபைக்கு மத்தியில் அந்த இழிந்தவர்களின் {திருதராஷ்டிரன், திருதராஷ்டிரன் மகன்கள் மற்றும் கர்ணன் ஆகியோரின்} கைகளில் கிருஷ்ணை {திரௌபதி} அடைந்த இன்னல்கள்,(12) துச்சாசனனால் அவளது குழல்கள் பற்றப்பட்டது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கர்ணன், “உன் கணவர்கள் இறந்துவிட்டதால் {கணவனற்றவளானதால்}, நீ மற்றொரு கணவனைக் கொள்வாயாக; நரகத்தில் மூழ்கிவிட்ட பிருதையின் {குந்தியின்} மகன்கள் எள்ளுப்பதர்களைப் போன்றவர்களாவர்” என்ற அளவுக்குப் பேசிய பேச்சு ஆகியவற்றை நினைவுப்படுத்திக் கொண்டும்,(13, 14) ஓ! குருவின் மகனே {திருதராஷ்டிரரே}, உமது முன்னிலையில் கௌரவர்கள் உதிர்த்த பிற வார்த்தைகள், உமது மகன்கள் கிருஷ்ணையைத் {திரௌபதியைத்} தங்கள் அடிமையாய் அடைந்து அனுபவிக்க விரும்பிய உண்மை,(15) பாண்டுவின் மகன்கள் மான் தோலுடுத்தி காட்டுக்குச் செல்ல முற்படுகையில், கர்ணன் அவர்களிடம் பேசிய கடுஞ்சொற்கள்,(16) கோபம் நிறைந்தவனும், செழிப்பாக இருந்தவனும், மூடனுமான உமது மகன் {துரியோதனன்}, வருந்திக்கொண்டிருந்த பிருதையின் {குந்தியின்} மகன்களை வெறும் புற்களாக நினைத்து மகிழ்ச்சியோடு தற்புகழ்ச்சியில் ஈடுபட்டது ஆகியவற்றை நினைவுகூர்ந்தும்,(17) உண்மையில் அறம்சார்ந்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்தப் பீமன் இவற்றையும், குழந்தை பருவத்தில் இருந்து தானடைந்த இன்னல்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்து, தன் உயிரையே துச்சமாக மதித்தான்.(18)

பாரதக் குலத்தின் புலியான அந்த விருகோதரன் {பீமன்}, தங்கமயமான கைப்பிடி கொண்டதும், வெல்லமுடியாததும், வல்லமைமிக்கதுமான தனது வில்லை வளைத்து, தன் உயிரை முற்றிலும் துச்சமாக மதித்து, கர்ணனை எதிர்த்து விரைந்தான்.(19) அந்தப் பீமன், கல்லில் கூராக்கப்பட்ட பிரகாசமான கணைமாரியை ஏவி சூரியனின் ஒளியையே மறைத்தான்.(20) எனினும் அந்த அதிரதன் மகன் {கர்ணன்} சிரித்துக் கொண்டே, கல்லில் கூராக்கப்பட்டவையும், சிறகுபடைத்தவையுமான தன் கணைகளால், பீமசேனனின் அந்தக் கணைமாரியை விரைவாகக் கலங்கடித்தான்.(21) பிறகு, பெரும் பலமும், வலிமைமிக்கக் கரங்களும் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான அதிரதன் மகன் {கர்ணன்}, ஒன்பது கூரிய கணைகளால் பீமனைத் துளைத்தான்.(22) அங்குசத்தால் தாக்கப்பட்ட யானையைப் போல அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட விருகோதரன் {பீமன்}, அச்சமற்ற வகையில் அந்தச் சூதனின் மகனை {கர்ணனை} எதிர்த்து விரைந்தான்.(23) எனினும் கோபத்துடன் கூடிய கர்ணன், மதம் கொண்ட யானையை எதிர்த்து விரையும் மற்றொரு மதங்கொண்ட யானையைப் போல, வேகமாகவும், சக்தியுடனும் தன்னை நோக்கி இப்படி விரைந்துவரும் அந்தப் பாண்டவக் காளையை {பீமனை} எதிர்த்து விரைந்தான்.(24)

நூறு பேரிகைகளின் ஒலிக்கு ஒப்பான வெடிப்பொலி கொண்ட தன் சங்கை முழங்கிய கர்ணன், ஆர்ப்பரிக்கும் கடலைப் போலப் பீமனை ஆதரித்து வந்த படையை மகிழ்ச்சியாகக் கலங்கடித்தான்.(25) யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படை வீரர்களைக் கொண்ட தனது படை கர்ணனால் இப்படிக் கலங்கடிக்கப்படுவதைக் கண்ட பீமன், முன்னவனை {கர்ணனை} அணுகி தன் கணைகளால் அவனை மறைத்தான்.(26) பிறகு கர்ணன் அன்னங்களின் நிறங்கொண்ட தன் குதிரைகளை, கரடிகளின் நிறங்கொண்ட பீமனுடையவையுடன் {பீமனின் குதிரைகளுடன்} கலக்கச் செய்து, தன் கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனை {பீமனை} மறைத்தான்.(27) கரடிகளின் நிறத்தையும், காற்றின் வேகத்தையும் கொண்ட அக்குதிரைகள், அன்னங்களின் நிறத்தைக் கொண்ட கர்ணனுடையவையுடன் {கர்ணனின் குதிரைகளுடன்} கலந்ததைக் கண்டு உமது துருப்புகளுக்கு மத்தியில் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூச்சல்கள் எழுந்தன.(28) காற்றின் வேகத்தைக் கொண்ட அக்குதிரைகள் இப்படி ஒன்றாகக் கலந்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் ஒன்று கலந்திருக்கும் வெள்ளை மற்றும் கருப்பு மேகங்களைப் போல மிக அழகாகத் தெரிந்தன.(29)

கர்ணன் மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரும் கோபத்தால் தூண்டப்பட்டிருப்பதைக் கண்ட உமது படையின் பெரும் தேர்வீரர்கள் அச்சத்தால் நடுங்கத் தொடங்கினர்.(30) அவர்கள் போரிட்ட போர்க்களமானது விரைவில் யமனின் கொற்றங்களைப் போலப் பயங்கரமாக மாறியது. உண்மையில் அஃது, ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இறந்தோரின் மன்னனுடைய {யமனின்} நகரத்தைப் போலக் காண்பதற்கு மிகப் பயங்கரமாக மாறியது.(31) உமது படையின் பெரும் தேர்வீரர்கள், ஏதோ விளையாட்டுக் களத்தின் பார்வையாளர்களைப் போல அக்காட்சியைப் பார்த்தும், அந்தப் பயங்கர மோதலில் அந்த இருவரில் எவரும் மற்றவர் மேல் ஆதிக்கம் பெறுவதைக் காணவில்லை.(32) ஓ! மன்னா, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்கள், உம்முடைய மற்றும் உமது மகன்களின் தீய கொள்கையின் விளைவால் அவ்விரு வீரர்களின் வலிமைமிக்க ஆயுதங்களின் மோதல்களையும், அந்தக் கலப்பையும் மட்டுமே கண்டனர்.(33) எதிரிகளைக் கொல்பவர்களான அவ்விருவரும் தங்கள் கூரிய கணைகளால் ஒருவரையொருவர் மறைப்பதையே தொடர்ந்தனர். அற்புத ஆற்றலைக் கொண்ட அவ்விருவரும் தங்கள் கணைமாரியால் ஆகாயத்தையே நிறைத்தனர்.(34)

வலிமைமிக்க அவ்விரு தேர்வீரர்களும் ஒருவரையொருவர் உயிரை எடுக்க விரும்பி ஒருவரின் மேல் ஒருவர் கூரிய கணைகளை ஏவிக்கொண்டு, மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகங்களைப் போலப் பார்ப்பதற்கு மிக அழகாக மாறினர்.(35) எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணைகளை ஏவி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுடர்மிக்க விண்கற்களைக் கொண்டுள்ளதைப் போல ஆகாயத்தைப் பிரகாசமாக்கினர்.(36) அவ்விரு வீரர்களாலும் ஏவப்பட்டவையும், கழுகின் இறகுகளைக் கொண்டவையுமான அக்கணைகள், கூதிர்காலத்து வானில் திரியும் உற்சாகமான நாரைகளின் வரிசைகளைப் போலத் தெரிந்தன.(37)

அதேவேளையில், , கிருஷ்ணனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {பீமன்}, சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} போரில் ஈடுபடுவதைக் கண்டு, அந்தச் சுமையானது பீமன் தாங்கிக் கொள்வதற்கு மிகப் பெரியது எனக் கருதினர்.(38) ஒருவரின் கணைகளை மற்றவர் கலங்கடிப்பதற்காகக் கர்ணனும், பீமனும் ஒருவர் மேல் ஒருவர் இக்கணைகளை ஏவியபோது, யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்கள் பலர் இதனால் தாக்கப்பட்டு உயிரை இழந்து கீழே விழுந்தனர்.(39) எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் அப்படி விழுந்ததன் விளைவாலும், விழுந்த உயிரினங்கள் உயிரை இழந்ததாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் படையில் ஒரு பேரழிவு ஏற்பட்டது.(40) விரைவில் அந்தப் போர்க்களமானது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் ஆகியவற்றின் உயிரற்ற உடல்களால் மறைக்கப்பட்டது” {என்றான் சஞ்சயன்}.(41)

பீமனால் மலைத்த கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 132-பீமனைப் புகழ்ந்த திருதராஷ்டிரன்; கர்ணனை மீண்டும் குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும் ஆக்கிய பீமன்; கர்ணனைக் காக்கத் தன் தம்பி துர்ஜயனை அனுப்பிய துரியோதனன்; கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே துர்ஜயனைக் கொன்ற பீமன்; துயரால் அழுத கர்ணன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “பீமசேனன், கர்ணனுடன் போரிடுவதில் செயல்பாட்டு ஒருமையுடனும், சக்தியுடனும் வென்றதால், நான் அவனது ஆற்றலை மிக அற்புதமானதாகக் கருதுகிறேன்.(1) உண்மையில், ஓ! சஞ்சயா, யக்ஷர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களுடன் கூடிய தேவர்களையே தடுக்க வல்லவனும், அனைத்து வகை ஆயுதங்களையும் தரித்தவனுமான அந்தக் கர்ணனால், சுடர்மிகு பிரகாசத்துடன் கூடியவனும், பாண்டுவின் மகனுமான பீமனைப் போரில் ஏன் வெல்ல முடியவில்லை என்பதை எனக்குச் சொல்வாயாக.(2,3) உயிரையே பணயமாக வைத்த அவர்களுக்குள் அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதைச் சொல்வாயாக. அவ்விருவருக்குள்ளான மோதலில், உண்மையில், இருவருக்கும் வெற்றி அடையத்தக்க தொலைவிலேயே இருக்கிறது, அதே போல இருவரும் தோற்கவும் வாய்ப்பிருக்கிறது [1].(4)ஓ! சூதா {சஞ்சயா}, போரில் கர்ணனை அடைந்த என் மகன் சுயோதனன் {துரியோதனன்}, கோவிந்தன் {கிருஷ்ணன்} மற்றும் சாத்வதர்களுடன் கூடிய பிருதையின் {குந்தியின்} மகன்களை எப்போதும் வெல்லத் துணிகிறான்.(5) எனினும், பயங்கரச் செயல்களைச் செய்யும் பீமசேனனால் போரில் கர்ணன் அடையும் தொடர் தோல்விகளைக் கேட்டு, எனக்கு மயக்கமே வருவதாகத் தெரிகிறது.(6) என் மகனின் {துரியோதனனின்} தீய கொள்கையின் விளைவால் கௌரவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகவே நான் நினைக்கிறேன். வலிமைமிக்க வில்லாளிகளான பிருதையின் {குந்தியின்} மகன்களை வெல்வதில் கர்ணன் வெற்றி அடையவே மாட்டான்.(7) கர்ணன், பாண்டுவின் மகன்களுடன் போரிட்ட அனைத்துப் போர்களிலும், பின்னவர்களே {பாண்டவர்களே} அவனை {கர்ணனை} எந்த மாற்றமும் இல்லாமல் களத்தில் தோல்வியடையச் செய்திருக்கின்றனர்.(8) உண்மையில் அந்தப் பாண்டவர்கள், ஓ! மகனே {சஞ்சயா}, வாசவனை {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவர்களாவர். ஐயோ, என் தீய மகன் துரியோதனன் இஃதை அறியவில்லையே.(9) கருவூலங்களின் தலைவனை {குபேரனைப்} போல இருக்கும் பிருதையின் {குந்தியின்} மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} செல்வத்தைக் களவாடிய சிறுமதி கொண்ட என் மகன் {துரியோதனன்}, (மலைகளில்) தேனைத் தேடுபவனைப் போல வீழ்ச்சியைக் காணாதிருக்கிறான்.(10) வஞ்சகம் அறிந்த அவன் {துரியோதனன்}, அதைத் திரும்பப் பெற இயலாத அளவுக்குத் தன்னுடையது எனக் கருதி, எபோதும் பாண்டவர்களை அவமதிக்கிறான் [2].(11) தூய்மையற்ற ஆன்மா கொண்ட நானும், உயர் ஆன்ம பாண்டுவின் மகன்கள் அறநெறி நோற்பவர்களாக இருப்பினும், என் பிள்ளைகளின் மீது கொண்ட பாசத்தால் மனவுறுத்தல் கொள்ளவில்லை.(12)பெரும் தொலைநோக்குப் பார்வை கொண்டவனும், பிருதையின் மகனுமான யுதிஷ்டிரன், சமாதானத்தை விரும்புபவனாகவே தன்னை எப்போதும் காட்டிக் கொண்டான். எனினும் என் மகன்கள் அவனைத்  {யுதிஷ்டிரனைத்} திறனற்றவனாகக் கருதி, அவனை இகழ்ந்தனர்.(13) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமசேனன், அந்தத் துயரங்கள் அனைத்தையும் (பாண்டவர்களால் தாக்குப்பிடிக்கப்பட்ட) தீங்குகள் அனைத்தையும் மனத்தில் கொண்டு, சூதன் மகனுடன் {கர்ணனுடன்} போரிட்டான்.(14) எனவே, ஓ! சஞ்சயா, போர்வீரர்களில் முதன்மையான பீமன் மற்றும் கர்ணன் ஆகிய இருவரும், ஒருவர் உயிரை மற்றவர் எடுக்க விரும்பி, தங்களுக்குள் எவ்வாறு போரிட்டனர் என்பதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(15)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்றையொன்று கொல்லவிரும்பிய இரண்டு காட்டு யானைகளுக்கு ஒப்பாகக் கர்ணனுக்கும், பீமனுக்கும் இடையிலான போர் எவ்வாறு நடந்தது என்பதைக் கேட்பீராக.(16) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட விகர்த்தனன் மகன் {கர்ணன்}, தன் ஆற்றலை முன்னெடுத்து, எதிரிகளைத் தண்டிப்பவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான கோபக்கார பீமனை முப்பது கணைகளால் துளைத்தான்.(17) உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த விகர்த்தனன் மகன் {கர்ணன்}, கூர்முனை கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பெரும் வேகம் கொண்டவையுமான கணைகள் பலவற்றால் பீமனைத் தாக்கினான்.(18) எனினும், பீமன், தன்னைத் தாக்குவதில் கர்ணன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மூன்று கணைகளால் பின்னவனின் {கர்ணனின்} வில்லை அறுத்தான். மேலும் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஒரு பல்லத்தைக் கொண்டு கர்ணனின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து கீழே பூமியில் விழ வைத்தான்.(19)

அப்போது, பீமனைக் கொல்ல விரும்பிய விகர்த்தனன் மகன், தங்கம் மற்றும் வைடூரியக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட ஈட்டி ஒன்றை ஏந்தினான்.(20) காலனின் இரண்டாவது ஈட்டியைப் போல இருந்த அந்தக் கடும் ஈட்டியைப் பிடித்து உயர்த்திக் குறி பார்த்த ராதையின் மகன் {கர்ணன்}, பீமனின் உயிரை எடுக்கப் போதுமான பலத்துடன் அதைப் பீமசேனன் மீது ஏவினான். பெரும்பலம் கொண்ட அந்த ராதையின் மகன் {கர்ணன்}, வஜ்ரத்தை {இடியை} ஏவும் இந்திரனைப் போல அந்த ஈட்டியை ஏவி பெருமுழக்கம் செய்தான். அம்முழக்கத்தைக் கேட்ட உமது மகன்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(21-23) எனினும் பீமன், கர்ணனின் கரங்களில் இருந்து வீசப்பட்டதும், நெருப்பு, அல்லது சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதுமான அவ்வீட்டியை ஏழு கணைகளைக் கொண்டு ஆகாயத்திலேயே வெட்டினான்.(24) அப்போதுதான் சட்டையுரிந்து வந்த பாம்புக்கு ஒப்பான அவ்வீட்டியை வெட்டிய பீமன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனுடைய உயிரை எடுக்கப் பார்ப்பவனைப் போலப் பெரும் கோபத்துடன் அந்தப் போரில், மயிலின் இறகுகள் மற்றும் தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், ஒவ்வொன்றும் யமனின் கோலுக்கு ஒப்பானவையுமான பல கணைகளை ஏவினான்.(25, 26)

பெரும் சக்தியைக் கொண்ட கர்ணனும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்ட மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்டு, அதைப் பலத்துடன் வளைத்துக் கணைகள் பலவற்றை ஏவினான்.(27) எனினும், பாண்டுவின் மகன் {பீமன்}, ஒன்பது நேரான கணைகளால் அக்கணைகள் அனைத்தையும் வெட்டினான். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, வசுசேனனால் {கர்ணனால்} ஏவப்பட்ட அந்த வலிமைமிக்கக் கணைகளை வெட்டிய பீமன், ஓ! ஏகாதிபதி, ஒரு சிங்கத்தைப் போலப் பெருமுழக்கம் செய்தான். பருவ காலத்தில் பசுவுக்காக முழங்கும் வலிமைமிக்க இரு காளைகளைப் போல, அல்லது ஒரே இறைச்சித் துண்டுக்காக முழங்கும் இரு புலிகளைப் போல, அடுத்தவனின் மட்டுமீறிய தாமதத்தைக் காண விரும்பி அவர்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(28-30) சில நேரங்களில் அவர்கள் மாட்டுக் கொட்டகையிலுள்ள இரு வலிமைமிக்கக் காளைகளைப் போல ஒருவரையொருவர் கோபக் கண்களால் பார்த்துக் கொண்டனர். பிறகு இரு பெரும் யானைகள் தங்கள் தந்தங்களின் கூர்முனைகளைக் கொண்டு ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போல, முழுதாக வளைத்து இழுக்கப்பட்ட தங்கள் வில்லில் இருந்து கணைகளை ஏவி ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் கணை மாரியால் ஒருவரையொருவர் எரித்த அவர்கள், பெரும் கோபத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, ஒருவரின் மேலொருவர் தங்கள் ஆற்றலைச் செலுத்தினர். (31,32) சிலநேரங்களில் ஒருவரை நோக்கி ஒருவர் சிரித்துக் கொண்டும், சில நேரங்களில் ஒருவரையொருவர் நிந்தித்துக் கொண்டும், சில நேரங்களில் தங்கள் சங்குகளை முழங்கிக் கொண்டும் அவர்கள் ஒருவரோடொருவர் போர் புரிந்தனர்.(33)

அப்போது பீமன், கர்ணனின் வில்லைக் கைப்பிடியில் அறுத்து, சங்கு போன்ற வெண்மையாக இருந்த பின்னவனின் {கர்ணனின்} குதிரைகளைத் தன் கணைகளின் மூலம் யமனுலகு அனுப்பினான்.(34) மேலும் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் எதிரியின் {கர்ணனின்} தேரோட்டியையும் அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான். பிறகு, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாக ஆக்கப்பட்டு, அந்தப் போரில் (கணைகளால்) மறைக்கப்பட்டிருந்த விகர்த்தனன் மகன் கர்ணன், பெரும் துன்பத்தில் மூழ்கினான். பீமனின் கணைமாரியால் மலைத்துப் போன அவன் {கர்ணன்}, என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(35, 36)

துன்பம் நிறைந்த அவல நிலையில் கர்ணன் நிறுத்தப்பட்டதைக் கண்ட மன்னன் துரியோதனன், கோபத்தால் நடுங்கி, (தன் தம்பியான) துர்ஜயனிடம், “ஓ! துர்ஜயா, செல்வாயாக. அங்கே அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ராதையின் மகனை {கர்ணனை} விழுங்கப் போகிறான். அந்தத் தாடியற்ற அலியை {பீமனை} விரைவாகக் கொன்று, கர்ணனை வலுப்படுத்துவாயாக” என்றான்.(37, 38) இப்படிச் சொல்லப்பட்ட உமது மகன் துர்ஜயன், துரியோதனனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி (கர்ணனுடன்) போரில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த பீமசேனனை நோக்கி விரைந்து கணைகளால் அவனை {பீமனை} மறைத்தான்.(39) அந்தத் துர்ஜயன், பீமனை ஒன்பது கணைகளாலும், அவனது குதிரைகளை எட்டாலும், அவனது சாரதியை ஆறாலும், அவனது கொடிமரத்தை மூன்றாலும் தாக்கி, மீண்டும் பீமனை ஏழாலும் {ஏழு கணைகளாலும்} தாக்கினான்.(40)

அப்போது, கோபத்தால் தூண்டப்பட்ட பீமசேனன், தன் கணைகளால் துர்ஜயனின் உயிர் நிலைகளையும், அவனது குதிரைகளையும், சாரதியையும் துளைத்து, அவர்களை யமனுலகு அனுப்பி வைத்தான் [3].(41) அப்போது துயரால் அழுத கர்ணன், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், பாம்பைப் போல நெளிந்தபடி பூமியில் கிடந்த அந்த உமது மகனை {துர்ஜயனை} வலம்வந்தான்.(42) பீமன், தனது கொடிய எதிரியான கர்ணனைத் தேரற்றவனாகச் செய்த பிறகு, சிரித்துக் கொண்டே கணைகளால் அவனை மறைத்து, எண்ணற்ற கூர்முனைகளைக் கொண்ட சதாக்னியைப் போல அவனை ஆக்கினான்.(43) எனினும், எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த அதிரதன் கர்ணன், இப்படிக் கணைகளால் துளைக்கப்பட்டிருந்தாலும், அந்தப் போரில் தன்னுடன் போரிடும் பீமனைத் தவிர்க்கவில்லை” {என்றான் சஞ்சயன்}.(44)

போரை விட்டோடிய கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 133-பீமனால் தோற்கடிக்கப்பட்டுத் தேரை இழந்த கர்ணன், மற்றொரு தேரில் ஏறி வந்து மீண்டும் பீமனுடன் மோதியது; மீண்டும் தேரையிழந்த கர்ணன்; துரியோதனன் தன் தம்பி துர்முகனிடம் கர்ணனுக்குத் தேரளிக்கும்படி அனுப்பியது; துர்முகனைக் கொன்ற பீமன்; கர்ணனுக்கும் பீமனுக்கும் இடையில் நடந்த கடும்போர்; பீமனின் வலிமையால் பீடிக்கப்பட்டுப் போர்க்களத்தை விட்டு ஓடிய கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பீமனால் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டவனான தேரற்ற கர்ணன், மற்றொரு தேரில் ஏறிக் கொண்டு, பாண்டுவின் மகனை {பீமனை} வேகமாகத் துளைக்க ஆரம்பித்தான். (1) தங்கள் தந்தங்களால் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் இரு பெரும் யானைகளைப் போல அவர்கள், முழுதாக வளைத்து இழுக்கப்பட்ட தங்கள் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(2) அப்போது கணைப்பொழிவால் பீமனைத் தாக்கி பெருமுழக்கம் செய்த கர்ணன், மீண்டும் அவனை {பீமனை} மார்பில் தாக்கினான்.(3) எனினும் பதிலுக்குப் பீமன், பத்து நேரான கணைகளால் கர்ணனைத் தாக்கி, மீண்டும் அவனை {கர்ணனை} இருபது நேரான கணைகளால் தாக்கினான்.(4) பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணன் ஒன்பது கணைகளால் பீமனின் நடுமார்பைத் துளைத்து, ஒரு கூரிய கணையால் பின்னவனின் {பீமனின்} கொடிமரத்தையும் தாக்கினான்.(5) பதிலுக்குப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் பீமன்}, வலிமைமிக்க யானையை அங்குசத்தால் தாக்கும் பாகனைப் போல, அல்லது குதிரையைச் சாட்டையால் தாக்கும் சாரதியைப் போலக் கர்ணனை அறுபத்து மூன்று {63} கணைகளால் துளைத்தான்.(6)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {பீமனால்} ஆழத்துளைக்கப்பட்ட வீரக் கர்ணன், நாவால் தன் கடைவாயை நனைத்து, சினத்தால் கண்கள் சிவந்தான்.(7) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணன், வஜ்ரத்தை ஏவும் இந்திரனைப் போல, பீமசேனனின் அழிவுக்காக அனைத்தையும் துளைக்கவல்ல ஒரு கணையை அவன் {பீமன்} மீது ஏவினான்.(8) அழகிய இறகுகளைக் கொண்டதும், சூதன் மகனின் {கர்ணனின்} வில்லில் இருந்து ஏவப்பட்டதுமான அந்தக் கணை, அந்தப் போரில் பார்த்தனை {பீமனைத்} துளைத்துச் சென்று பூமிக்குள் ஆழ மூழ்கியது.(9)

அப்போது கோபத்தால் கண்கள் சிவந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன் ஒருக்கணமும் சிந்தியாமல், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், முழுதாக நான்கு முழம் நீளம் கொண்டதும், சக்தியில் இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பானதும், ஆறு பக்கங்களைக் கொண்டதுமான கனமிக்க ஒரு கதாயுதத்தை அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} மீது வீசினான். உண்மையில், இந்திரன் தன் வஜ்ரத்தால் அசுரர்களைக் கொல்வதைப் போலக் கோபத்தால் தூண்டப்பட்ட அந்தப் பாரதக் குலத்துக் காளை {பீமன்}, நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையும், முதன்மையான இனத்தைச் சேர்ந்தவையுமான அதிரதன் மகனின் {கர்ணனின்} குதிரைகளை அக்கதாயுதத்தாலேயே கொன்றான். பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், க்ஷுரப்ரங்கள் இரண்டைக் கொண்டு கர்ணனின் கொடிமரத்தை அறுத்தான்.(10-12) பிறகு அவன் {பீமன்}, பெரும் எண்ணிக்கையிலான கணைகளைக் கொண்டு தன் எதிரியின் {கர்ணனின்} தேரோட்டியைக் கொன்றான். குதிரைகளற்ற, சாரதியற்ற, கொடிமரமற்ற அந்தத் தேரைக் கைவிட்ட கர்ணன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியற்ற நிலையிலேயே தன் வில்லை வளைத்தபடி பூமியில் நின்றான். தேரை இழந்தாலும் தொடர்ந்து எதிரியைத் தடுத்த அந்த ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} நாங்கள் கண்ட ஆற்றலானது மிக அற்புதமானதாக இருந்தது.(13-14)

மனிதர்களில் முதன்மையான அந்த அதிரதன் மகன் {கர்ணன்} தேரிழந்து இருப்பதைக் கண்ட துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (தன் தம்பியான) துர்முகனிடம், “ஓ! துர்முகா, ராதையின் மகன் {கர்ணன்}, பீமசேனனால் தன் தேரை இழந்திருக்கிறான்.(15-16) ஓ! பாரதா {துர்முகா} அந்த வலிமைமிக்கத் தேர்வீரனுக்கு {கர்ணனுக்கு} ஒரு தேரை அளிப்பாயாக” என்றான். துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் துர்முகன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}(17), கர்ணனை நோக்கி வேகமாக விரைந்து, தன் கணைகளால் பீமனை மறைத்தான். அந்தப் போரில் துர்முகன், சூதனின் மகனை ஆதரிக்க விரும்புவதைக் கண்ட(18) வாயு தேவனின் மகன் {பீமன்} மகிழ்ச்சியால் நிறைந்து தன் கடைவாயை {நாவால்} நனைக்கத் தொடங்கினான். பிறகு தன் கணைகளால் சிறிது நேரம் கர்ணனைத் தடுத்த(19) அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, விரைவாகத் துர்முகனை நோக்கித் தன் தேரைச் செலுத்தினான். அக்கணத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூர் முனை கொண்ட ஒன்பது நேரான(20) கணைகளால் பீமன் துர்முகனை யமலோகம் அனுப்பிவைத்தான் [1].துர்முகன் கொல்லப்பட்டதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இளவரசனின் {துர்முகனின்} தேரில் ஏறிய அதிரதன் மகன் {கர்ணன்} சூரியனைப் போலச் சுடர்விட்டபடி பிரகாசமாகத் தெரிந்தான். (கணைகளால்) தன் முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டு, குருதியால் குளித்த மேனியுடன் களத்தில் கிடக்கும் துர்முகனைக் கண்ட கர்ணன், கண்ணீர் நிறைந்த கண்களுடன் போரிடுவதிலிருந்து ஒருக்கணம் விலகினான். வீழ்ந்த அந்த இளவரசனை {துர்முகனை} வலம்வந்து, அவனை {துர்முகனை} அங்கேயே விட்ட(21-23) வீரக் கர்ணன், நீண்ட நெடிய அனல்மூச்சுகளை விட்டு {அடுத்து} என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கழுகின் இறகுகளைக் கொண்ட பதினான்கு {14} நாராசங்களைச் சூதனின் மகன் {கர்ணன்} மீது ஏவினான். தங்கச் சிறகுள் மற்றும் பெரும் சக்தி ஆகியவற்றைக் கொண்டனவும், குருதியைக் குடிப்பனவுமான அக்கணைகள், பத்து திசைப்புள்ளிகளுக்கும் ஒளியூட்டியபடியே ஆகாயத்தில் பறந்து சென்று சூதன் மகனின் {கர்ணனின்} கவசத்தைத் துளைத்து அவனது உயிர்க்குருதியைக் குடித்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},(24-26) காலனால் ஏவப்பட்டுப் பொந்துக்குள் தங்கள் பாதி உடல்கள் நுழைந்த நிலையிலிருக்கும் கோபக்காரப் பாம்புகளைப் போல, ஓ! ஏகாதிபதி, அவை {அந்தக் கணைகள்} அவனது உடலை ஊடுருவி பூமிக்குள் மூழ்கிப் பிரகாசமாகத் தெரிந்தன.(27)

அப்போது அந்த ராதையின் மகன் {கர்ணன்} ஒருக்கணமும் சிந்தியாமல், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பதினான்கு கடுங்கணைகளால் பதிலுக்குப் பீமனைத் துளைத்தான். கடும் சிறகுகளைக் கொண்ட அந்தக் கணைகள் பீமனின் வலக்கரத்தைத் துளைத்தபடி(28, 29) மரத்தோப்புக்குள் நுழையும் பறவைகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. பூமியைத் அக்கணைகள், அஸ்த மலைகளுக்குச் செல்லும் சூரியனின் சுடர்மிக்கக் கதிர்களைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தன.(30) அந்தப் போரில் அனைத்தையும் துளைக்கவல்ல அக்கணைகளால் துளைக்கப்பட்ட பீமன்(31), நீரோடைகளை வெளியிடும் ஒரு மலையைப் போல அபரிமிதமான இரத்த ஓடைகளைச் சிந்தத் தொடங்கினான். பிறகு பீமன் கருடனின் வேகத்தைக் கொண்ட மூன்று கணைகளால் சூதன் மகனை {கர்ணனைப்} பதிலுக்குத் துளைத்து, மேலும் பின்னவனின் {கர்ணனின்} தேரோட்டியையும் ஏழு கணைகளால் துளைத்தான்.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனின் வலிமையால் இப்படிப் பீடிக்கப்பட்ட கர்ணன், மிகவும் துன்புற்றவனானான்.(32-33) பிறகு அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரன் {கர்ணன்}, போரைக் கைவிட்டு, வேகமான தன் குதிரைகளால் சுமக்கப்பட்டுத் தப்பி ஓடினான் [2]. எனினும், அதிரதனான பீமன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் வில்லை வளைத்தபடியே அந்தப் போரில் நிலைத்து, சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}(34)

கௌரவர்கள் ஐவரைக் கொன்ற பீமன்! – துரோண பர்வம் பகுதி – 134-கர்ணன் மற்றும் அவனை நம்பிய துரியோதனன் ஆகியோரைக் குறித்து சஞ்சயனிடம் புலம்பி, பீமனின் ஆற்றலை வியந்த திருதராஷ்டிரன்; திருதராஷ்டிரனை நிந்தித்த சஞ்சயன்; கர்ணனின் தோல்வியைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத துரியோதனின் தம்பிகள் ஐவர் பீமனை எதிர்த்துச் சென்றது; அவர்களைக் கண்ட கர்ணன் மீண்டும் திரும்பிப் பீமனுடன் போரிட்டது; கர்ணனைத் தடுத்துக் கொண்டே அந்தக் கௌரவர்கள் ஐவரையும் கொன்ற பீமன்; கர்ணனைக் கோபத்துடன் வெறித்துப் பார்த்த பீமன்..

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “விதியே உயர்ந்தது என நான் நினைக்கிறேன். அதிரதன் மகன் {கர்ணன்} தீர்மானத்துடன் போரிட்டாலும், பாண்டுவின் மகனை {பீமனை} வெல்ல முடியாததால், அந்தப் பயனற்ற முயற்சிக்கு ஐயோ.(1) கோவிந்தனோடு {கிருஷ்ணனோடு} கூடிய பார்த்தர்கள் அனைவரையும் போரில் வெல்லத்தக்கவனாகக் கர்ணன் தற்புகழ்ச்சி செய்கிறான். “கர்ணனைப் போன்ற மற்றொரு போர்வீரனை இவ்வுலகில் நான் கண்டதில்லை” என்று துரியோதனன் பேசுவதை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். (2)

உண்மையில், ஓ! சூதா {சஞ்சயா}, முன்னர்த் துரியோதனன் என்னிடம், “கர்ணன், வலிமைமிக்க வீரனும், உறுதிமிக்க வில்லாளியும், களைப்பனைத்திற்கும் அப்பாற்பட்டவனுமாவான். அந்த வசுசேனனை {கர்ணனை} நான் என் கூட்டாளியாகக் கொண்டால், தேவர்களே எனக்கு ஈடாகமாட்டார்கள் எனும்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பலவீனமானவர்களும், கொடூரர்களுமான பாண்டுவின் மகன்களைக் குறித்து என்ன சொல்ல வேண்டும்?” என்று {துரியோதனன்} சொல்வது வழக்கம். எனவே, ஓ! சஞ்சயா, தோற்கடிக்கப்பட்டு, விஷத்தை இழந்த பாம்பைப் போலத் தெரிந்த கர்ணன், போரில் இருந்து ஓடியதைக் கண்ட துரியோதனன் என்ன சொன்னான் என்பதை எனக்குச் சொல்வாயாக. ஐயோ, உணர்வுகளை இழந்தவனான துரியோதனன், சுடர்மிக்க நெருப்புக்குள் அனுப்பப்படும் ஒரு பூச்சியைப் போல, போரை அதிகம் அறியாதவனும், உதவியற்றவனுமான துர்முகனை அந்தப் பயங்கர மோதலுக்குள் அனுப்பினானே.

ஓ! சஞ்சயா, அஸ்வத்தாமன், மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, கிருபர் ஆகியோர் ஒன்றுசேர்ந்தாலும், பீமசேனனின் எதிரே நிற்க முடியாதே. பத்தாயிரம் {10000} யானைகளுக்கு இணையான பயங்கர வலிமை மற்றும் மருத்தனின் சக்தி ஆகியவற்றைக் கொண்ட பீமனையும், அவனது கொடூர நோக்கங்களையும் அவர்களும் {அஸ்வத்தாமன், சல்லியன் மற்றும் கிருபர் ஆகியோரும்} அறிவார்கள். பீமனின் வலிமை, கோபம், சக்தி ஆகியவற்றை அறிந்த அந்தப் போர் வீரர்கள், யுக முடிவில் தோன்றும் யமனுக்கு ஒப்பானவனும், கொடூர செயல்களைச் செய்பவனுமான அந்த வீரனின் {பீமனின்} கோபத்தைத் தூண்டுவார்களா? சூதனின் மகனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான கர்ணன் மட்டுமே, தன் கரங்களின் ஆற்றலை நம்பி, பீமசேனனை அலட்சியமாகக் கருதி அவனுடன் போரிட்டதாகத் தெரிகிறது.(3-10)

புரந்தரன் {இந்திரன்} ஓர் அசுரனை வென்றதைப் போலக் கர்ணனைப் போரில் வென்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, போரில் வேறு எவராலும் வெல்லப்பட முடியாதவனாகவே இருக்கிறான். துரோணரையே கலங்கடித்து, அர்ஜுனனைத் தேடி என் படைக்குள் தனியாக நுழைந்த அந்தப் பீமனை, உயிர்வாழும் நம்பிக்கை கொண்ட எவன் அணுகுவான்? உண்மையில், ஓ! சஞ்சயா, பீமனின் முகத்துக்கு நேராக நிற்கும் துணிவு கொண்ட வேறு எவன் இருக்கிறான்?(11-13) கையில் உயர்த்தப்பட்ட வஜ்ரத்துடன் கூடிய பெரும் இந்திரனின் முன்பு நிற்க அசுரர்களில் எவன் துணிவான்? [1] ஒரு மனிதன், இறந்தவர்களின் மன்னனுடைய {யமனின்} வசிப்பிடத்தில் நுழைந்த பிறகும் திரும்பலாம்.(14) ஆயினும், எவனாலும் பீமசேனனிடம் மோதிவிட்டு திரும்ப முடியாது. பலவீனமான ஆற்றலுடனும், அறிவில்லாமலும், கோபக்கார பீமசேனனை எதிர்த்துச் செல்வோர் சுடர்மிக்க நெருப்பில் விழும் பூச்சிகளைப் போன்றவராவர்.-கோபமும், மூர்க்கமும் கொண்ட பீமன், என் மகன்களைக் கொல்வது குறித்துக் குருக்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே சபையில் சொன்னதை நினைவுகூர்ந்தும், கர்ணனின் தோல்வியைக் கண்டும், அச்சத்தாலேயே துச்சாசனனும், அவனது தம்பிகளும் பீமனுடன் மோதவில்லை என்பதில் ஐயமில்லை.(15-17) ஓ! சஞ்சயா, “கர்ணனும், துச்சாசனனும், நானும் போரில் பாண்டவர்களை வெல்வோம்” என்று (இவ்வார்த்தைகளை) மீண்டும் மீண்டும் சபையில் சொன்ன அந்த என் தீய மகன் {துரியோதனன்}, கிருஷ்ணனுக்குப் பொருத்தமானதை [2] மறுத்ததன் விளைவால், பீமனால் கர்ணன் வீழ்த்தப்பட்டதையும், அவனது தேரை இழக்கச் செய்ததையும் கண்டு துயரால் எரிக்கப்படுகிறான் என்பதில் ஐயமில்லை.(18, 19) கவசம்பூண்ட தனது தம்பிகள், தன் குற்றத்தின் விளைவால் போரில் பீமசேனனால் கொல்லப்படுவதைக் கண்டு, என் மகன் {துரியோதனன்} துயரால் எரிகிறான் என்பதில் ஐயமில்லை.(20)கோபத்தால் தூண்டப்பட்டவனும், பயங்கர ஆயுதங்களைத் தரித்தவனும், போரில் காலனைப் போலவே நிற்பவனும், பாண்டுவின் மகனுமான பீமனை உயிரில் விருப்பமுள்ள எவன்தான் பகைமையுடன் எதிர்த்துச் செல்வான்?(21) வடவாக்னியின் கோரப்பற்களுக்கிடையில் இருந்து ஒரு மனிதன் தப்பிவிடலாம், ஆனால், பீமனின் முகத்துக்கு எதிரில் இருந்து எவனாலும் தப்ப முடியாது என்றே நான் நம்புகிறேன்.(23) உண்மையில், பார்த்தனோ, பாஞ்சாலர்களோ, கேசவனோ, சாத்யகியோ போரில் கோபத்தால் தூண்டப்படும்போது, அவர்கள் (தங்கள்) உயிரைக் குறித்துக் கிஞ்சிற்றும் கவலை கொள்வதில்லை. ஐயோ, ஓ! சூதா {சஞ்சயா} என் மகன்களின் உயிர்கள் ஆபத்தில் இருக்கின்றவே” என்றான் {திருதராஷ்டிரன்}.(24)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, தற்போதைய பேரழிவைக் கருத்தில் கொண்டு இப்படித் துயருறும் நீரே இவ்வுலகத்தின் அழிவுக்கான வேர் {காரணம்} என்பதில் ஐயமில்லை.(25) உமது மகன்களின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்த நீரே இந்தக் கடும் பகைமையைத் தூண்டியவராவீர். (நலம் விரும்பும் நண்பர்களால்) தூண்டப்பட்டாலும், மரணமடைய விதிக்கப்பட்ட மனிதனைப் போல உகந்த மருந்தை நீர் ஏற்க மறுத்தீர்.(26) ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, செரிக்கப்பட முடியாத மிகக் கடுமையான நஞ்சைப் பருகிய நீர், இப்போது அதன் விளைவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வீராக.(27) போராளிகள் தங்களால் முடிந்த வரை சக்தியுடன் போரிடுகின்றனர்; இருப்பினும் அவர்களை நீர் நிந்திக்கிறீரே. எனினும், போர் எவ்வாறு நடந்தது என்பதை விளக்கிச் சொல்கிறேன் கேளும்.(28)

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் கர்ணன் வீழ்த்தப்பட்டதைக் கண்டவர்களும், பெரும் வில்லாளிகளும், உடன் பிறந்தவர்களுமான உமது ஐந்து மகன்களால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(29) அவர்கள், துர்மர்ஷணன், துஸ்ஸஹன், துர்மதன், துர்த்தரன், ஜயன் ஆவர். அழகிய கவசங்களைப் பூண்டிருந்த அவர்கள் அனைவரும் பாண்டுவின் மகனை எதிர்த்து விரைந்தனர்.(30) அனைத்துப் பக்கங்களிலும் விருகோதரனை {பீமனைச்} சூழ்ந்து கொண்ட அவர்கள், வெட்டுக்கிளிகளின் கூட்டங்களைப் போலத் தெரிந்த தங்கள் கணைகளால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தனர்.(31) எனினும், பீமன் அந்தப் போரில் இப்படித் திடீரெனத் தன்னை எதிர்த்து விரைபவர்களும், தெய்வீக அழகுடையவர்களுமான அந்த இளவரசர்களைச் சிரித்துக் கொண்டே வரவேற்றான்.(32)

பீமசேனனை எதிர்த்து முன்னேறும் உமது மகன்களைக் கண்டவனும், ராதையின் மகனுமான கர்ணன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், கூர் முனை கொண்டவையுமான கணைகளை ஏவியபடியே அந்த வலிமைமிக்கப் போர்வீரனை {பீமனை} எதிர்த்து விரைந்தான்.(33) பீமன், உமது மகன்களால் தடுக்கப்பட்டாலும் கர்ணனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(34) பிறகு கர்ணனைச் சூழ்ந்து கொண்ட குருக்கள் {கௌரவர்கள்}, நேரான கணைகளின் மழையால் பீமசேனனை மறைத்தனர்.(35) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உறுதிமிக்க வில்லைத் தரித்திருந்த பீமன், மனிதர்களில் காளையரான அவர்கள் அனைவரையும், அவர்களது, குதிரைகள் மற்றும் தேரோட்டிகளுடன் சேர்த்து இருபத்தைந்து {25} கணைகளால் யமனுலகுக்கு அனுப்பி வைத்தான் [3].(36) தங்கள் தேரோட்டிகளுடன் தங்கள் தேர்களில் இருந்து விழுந்த அவர்களது உயிரற்ற வடிவங்கள் {உடல்கள்}, சூறாவளியால் வேருடன் சாய்க்கப்பட்டவையும், பல்வேறு நிறங்களிலான கனமான மலர்களுடன் கூடியவையுமான பெரிய மரங்களைப் போலத் தெரிந்தன.(37)அதிரதன் மகனை {கர்ணனைத்} தடுத்துக் கொண்டே உமது மகன்களைக் கொன்ற பீமசேனனின் ஆற்றலை நாங்கள் மிக அற்புதமானதாகக் கண்டோம்.(38) கூரிய கணைகளைக் கொண்டு பீமனால் அனைத்துப் பக்கங்களிலும் தடுக்கப்பட்ட சூதனின் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனைப் பார்க்க மட்டுமே செய்தான்.(39) கோபத்தால் கண்கள் சிவந்த பீமசேனனும், உறுதிமிக்கத் தன் வில்லை வளைத்தபடியே கர்ணனின் மீது தன் கோபப் பார்வைகளைச் செலுத்தத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(40)

பீமனிடம் மீண்டும் புறமுதுகிட்ட கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 135-தன்னையே குற்றவாளியாகக் கருதிய கர்ணன்; கர்ணனின் வில்லை அறுத்து, அவனது குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்ற பீமன்; மீண்டும் கர்ணனின் வில்லை அறுத்தது; பீமனின் கவசத்தை அறுத்த கர்ணன்; பீமசேனனிடம் மீண்டும் புறமுதுகிட்ட கர்ணன்; பீமன் மீது தன் தம்பிகளை ஏவிய துரியோதனன்; அவர்களில் எழுவரைக் கொன்ற பீமன்; விதுரனின் வார்த்தைகளை நினைத்த கர்ணன்; கர்ணனின் கவசத்தை அறுத்த பீமன்;பீமனுக்கும் கர்ணனுக்கும் இடையில் மீண்டும் ஏற்பட்ட கடும் மோதல்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது மகன்கள் (களத்தில்) நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைக் கண்டு, பெரும் ஆற்றலைக் கொண்ட கர்ணன், பெரும் கோபத்தால் நிறைந்து, தன் உயிரில் நம்பிக்கையற்றவனானான்.(1) அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, பீமனால் தன் கண்களுக்கு எதிரிலேயே போரில் கொல்லப்பட்ட உமது மகன்களைக் கண்டு தன்னையே குற்றவாளியாகக் கருதினான்.(2) அப்போது பீமசேனன், முன்னர்க் கர்ணனால் இழைக்கப்பட்ட தீமைகளை நினைவுகூர்ந்து, சினத்தால் நிறைந்து, திட்டமிட்ட கவனத்தோடு {பாதுகாப்போடு} கூரிய கணைகள் பலவற்றால் கர்ணனைத் துளைக்கத் தொடங்கினான்.(3)


பிறகு கர்ணன், சிரித்துக் கொண்டே ஐந்து கணைகளால் பீமனைத் துளைத்து, தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான எழுபது கணைகளால் மீண்டும் அவனை {பீமனைத்} துளைத்தான்.(4) கர்ணனால் ஏவப்பட்ட அக்கணைகளை அலட்சியம் செய்த விருகோதரன் {பீமன்}, நேரான ஒரு நூறு {100} கணைகளால் அந்தப் போரில் ராதையின் மகனை {கர்ணனைத்} துளைத்தான்.(5) மீண்டும் ஐந்து கூரிய கணைகளால் அவனது முக்கிய அங்கங்களைத் துளைத்த பீமன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஒரு பல்லத்தைக் கொண்டு அந்தச் சூத மகனின் {கர்ணனின்} வில்லை அறுத்தான்.(6) பிறகு மகிழ்ச்சியற்றவனான கர்ணன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, தன் கணைகளால் அனைத்துப் பக்கங்களிலும் பீமசேனனை மறைத்தான்.(7)

அப்போது பீமன், கர்ணனின் குதிரைகள் மற்றும் தேரோட்டியைக் கொன்று, இப்படியே கர்ணனின் அருஞ்செயல்களுக்கு எதிர்வினையாற்றி உரத்த சிரிப்பொன்றைச் சிரித்தான்.(8) பிறகு மனிதர்களில் காளையான அந்தப் பீமன், தன் கணைகளால் கர்ணனின் வில்லை அறுத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உரத்த நாணொலி கொண்டதும், கைப்பிடியில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்த வில்லானது (அவனது {கர்ணனின்} கரங்களில் இருந்து) கீழே விழுந்தது.(9) அப்போது வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன் தன் தேரில் இருந்து இறங்கி அந்தப் போரில் ஒரு கதாயுதத்தை எடுத்து, அதைப் பீமனின் மீது கோபத்துடன் வீசினான்.(10) ஓ மன்னா, தன்னை நோக்கி வேகமாக வரும் அந்தக் கதாயுதத்தைக் கண்ட விருகோதரன் {பீமன்}, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதைத் தன் கணைகளால் தடுத்தான்.(11)

பிறகு, பெரும் ஆற்றலைக் கொடையாகக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, சூதன் மகனின் {கர்ணனின்} உயிரை எடுக்க விரும்பி, பெரும் சுறுசுறுப்புடன் முயன்று, பின்னவன் {கர்ணன்} மீது ஓராயிரம் கணைகளை ஏவினான்.(12) எனினும் கர்ணன், அந்தப் போரில், அந்தக் கணைகள் அனைத்தையும் தடுத்து, தன் கணைகளால் பீமனின் கவசத்தை அறுத்தான்.(13) பிறகு அவன் {கர்ணன்}, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இருபத்தைந்து குறுங்கணைகளால் பீமனைத் துளைத்தான். இவை யாவும் காண மிக அற்புதமாக இருந்தன.(14) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட பீமன், ஒன்பது நேரான கணைகளை அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} மீது ஏவினான்.(15) கர்ணனின் கவசத்தையும், வலக்கரத்தையும் துளைத்துச் சென்ற அந்தக் கூரிய கணைகள், எறும்புப் புற்றுக்குள் நுழையும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. (16) பீமசேனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைமாரியால் மறைக்கப்பட்ட கர்ணன், மீண்டும் பீமசேனனிடம் புறமுதுகிட்டான்.(17)

சூதனின் மகன் {கர்ணன்} புறமுதுகிடுவதையும், குந்தியின் மகனுடைய {பீமனின்} கணைகளால் எங்கும் மறைக்கப்பட்டுக் காலாளாக ஓடுவதையும் கண்ட துரியோதனன்,(18) {தன் தம்பிகளிடம்} “ராதையின் மகனுடைய {கர்ணனின்} தேரை நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்து விரைந்து செல்வீராக” என்றான். பிறகு, ஓ! மன்னா, தங்கள் அண்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியமடைந்த உமது மகன்கள், கணை மாரியை ஏவியபடியே போரில் பாண்டுவின் மகனை {பீமனை} நோக்கி விரைந்தனர்.(19) அவர்கள் {துரியோதனனின் அந்தத் தம்பிகள்}, சித்ரன், உபசித்ரன், சித்ராக்ஷன் [1], சாருசித்ரன், சராஸனன், சித்ராயுதன், சித்ரவர்மன் ஆகியோராவர். அவர்கள் அனைவரும் போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்தவர்களாக இருந்தனர். எனினும், வலிமைமிக்கத் தேர்வீரனான பீமசேனன், இப்படித் தன்னை எதிர்த்து விரைந்து வரும் அந்த உமது மகன்கள் ஒவ்வொருவரையும் ஒரே கணையால் {ஒவ்வொரு கணைகளால்} வீழ்த்தினான். உயிரை இழந்த அவர்கள், சூறாவளியால் வேரோடு சாய்க்கப்பட்ட மரங்களைப் போலக் கீழே பூமியில் விழுந்தனர் [2].(20-22)வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்த உமது மகன்கள் அனைவரும் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அழுகை நிறைந்த முகத்துடன், விதுரனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.(23) முறையான சாதனங்களுடன் கூடிய மற்றொரு தேரில் ஏறியவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான கர்ணன், போரில் பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்து வேகமாகச் சென்றான்.(24) தங்கச் சிறகுகளுடன் கூடிய கூரிய கணைகளால் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்ட அவ்விரு வீரர்களும், சூரியனின் கதிர்கள் ஊடுருவிய இரு மேகத் திரள்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(25)

அப்போது சினத்தால் தூண்டப்பட்ட பாண்டுவின் மகன் {பீமன்}, பெரும் கூர்மை மற்றும் கடும் சக்தியைக் கொண்ட முப்பத்தாறு {36} பல்லங்களால் சூதன் மகனின் {கர்ணனின்} கவசத்தை அறுத்தான்.(26) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சூதனின் மகனும் {கர்ணனும்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஐம்பது நேரான கணைகளால் குந்தியின் மகனை {பீமனைத்} துளைத்தான்.(27) செஞ்சந்தனக் குழம்பைத் தங்கள் மேனியில் பூசியிருந்த அவ்விரு வீரர்களும், கணைகளால் ஒருவருக்கொருவர் பல காயங்களை உண்டாக்கி சிந்திய குருதியால் மறைக்கப்பட்டு, உதயச் சூரியனையும், சந்திரனையும் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(28) கணைகளால் அறுக்கப்பட்ட கவசங்களுடன் தங்கள் உடல்கள் குருதியால் மறைக்கப்பட்டிருந்த கர்ணனும், பீமனும், தங்கள் சட்டைகளில் இருந்து அப்போதுதான் விடுபட்ட இரு பாம்புகளைப் போலத் தெரிந்தனர்.(29) உண்மையில், தங்கள் பற்களால் ஒன்றையொன்று சிதைத்துக் கொள்ளும் இரு புலிகளைப் போல மனிதர்களில் புலிகளான அவ்விருவரும், தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர். மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகத் திரள்களைப் போல அவ்விரு வீரர்களும் தங்கள் கணைகளை இடையறாமல் பொழிந்தனர்.(30)

எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், தங்கள் தந்த முனைகளால் ஒன்றையொன்று கிழித்துக் கொள்ளும் இரு யானைகளைப் போலத் தங்கள் கணைகளால் தங்கள் ஒவ்வொருவரின் உடல்களையும் கிழித்துக் கொண்டனர்.(31) ஒருவரை நோக்கி ஒருவர் முழங்கி தங்கள் கணைகளை ஒருவர் மேல் ஒருவர் பொழிந்த முதன்மையான அவ்விரு தேர்வீரர்களும், தங்கள் தேர்களைக் கொண்டு வட்டங்களாலான அழகிய தடங்களை உண்டாக்கச் செய்து ஒருவரோடொருவர் விளையாடுவதாகத் தெரிந்தது.(32) அவர்கள், பருவகாலத்தில் உள்ள பசுவின் முன்னிலையில் ஒன்றை நோக்கி ஒன்று முழங்கும் வலிமைமிக்க இரு காளைகளுக்கு ஒப்பாக இருந்தனர். உண்மையில், மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவரும், பெரும் ஆற்றலைக் கொண்ட வலிமைமிக்க இரு சிங்களைப் போலவே தெரிந்தனர்.(33) கோபத்தால் சிவந்த தங்கள் கண்களால் ஒருவரையொருவர் நோக்கியவர்களும், பெரும் சக்தியைக் கொண்டவர்களுமான அவ்விரு போர்வீரர்களும், சக்ரனையும் {இந்திரனையும்}, விரோசனன் மகனையும் {பிரகலாதனையும்} போலப் போரிட்டனர்.(34)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், வில்லைத் தன்னிரு கரங்களால் வளைத்தபோது, மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகம் ஒன்றைப் போலவே தெரிந்தான்.(35) பிறகு வில்லின் நாணொலியைத் தன் இடியொலியாகவும், இடையறாத கணை மாரியைத் தன் மழைப்பொழிவாகவும் கொண்ட அந்த வலிமைமிக்கப் பீம மேகம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கர்ண மலையை மறைத்தது.(36) பயங்கர ஆற்றலைக் கொண்டவனும் பாண்டுவின் மகனுமான அந்தப் பீமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மீண்டும் ஒரு முறை தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட ஓராயிரம் கணைகளால் கர்ணனை மறைத்தான்.(37) கங்க இறகுகளால் அமைந்த சிறகுகளைக் கொண்ட கணைகளைக் கொண்டு அவன் {பீமன்} கர்ணனை மறைத்த போது, உமது மகன்கள் இயல்புக்கு மீறிய அவனது ஆற்றலைக் கண்டனர்.(38)

பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, சிறப்புமிக்கக் கேசவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, சாத்யகிக்கும், (அர்ஜுனன் தேருடைய இரண்டு) சக்கரங்களைப் பாதுகாப்பவர்களான இருவருக்கும் (யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகியோருக்கும்) மகிழ்ச்சியை ஊட்டியபடி, இப்படியே பீமன் கர்ணனுடன் போரிட்டான்.(39) பீமனின் ஆற்றல், கரங்களின் வலிமை, விடாமுயற்சி ஆகியவற்றை அறிந்தவர்களான உமது மகன்கள் அனைவரும் மகிழ்ச்சியற்றவர்களானார்கள்” {என்றான் சஞ்சயன்}.(40)

விகர்ணனுக்காக மிகவும் வருந்திய பீமன்! – துரோண பர்வம் பகுதி – 136-கடுமையாகப் போரிட்ட பீமனும், கர்ணனும்; பீமனின் ஆற்றலைக் கண்டு கௌரவர்களும், பாண்டவர்களும் மெச்சியது; கர்ணனைக் காக்க தன் தம்பிகளில் எழுவரை அனுப்பிய துரியோதனன்; அந்த எழுவரையும் கொன்ற பீமன், விகர்ணனுக்காக வருந்தியது; பீமனின் முழக்கத்தைக் கேட்டு செய்தியை அறிந்து மகிழ்ந்த யுதிஷ்டிரன்; விதுரனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த துரியோதனன்; திருதராஷ்டிரனை நிந்தித்த சஞ்சயன்..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பீமசேனனுடைய வில்லின் நாணொலியையும், அவனது உள்ளங்கையொலிகளையும் கேட்டு, மதங்கொண்ட எதிராளியின் முழக்கங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத மற்றொரு மதங்கொண்ட யானையைப்போல ராதையின் மகனால் {கர்ணனால்} அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(1) பீமசேனனின் முன்னிலையில் இருந்து ஒரு கணம் அகன்ற கர்ணன், பீமசேனனால் கொல்லப்பட்ட உமது மகன்களின் மீது கண்களைச் செலுத்தினான்.(2) ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே} அவர்களைக் கண்ட கர்ணன் உற்சாகத்தை இழந்து துயரில் மூழ்கினான். நெடிய  பெரும் அனல் மூச்சுகளைவிட்ட அவன் {கர்ணன்}, மீண்டும் பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்துச் சென்றான்.(3)

தாமிரம் போன்ற சிவந்த கண்களுடன், வலிமைமிக்கப் பாம்பொன்றைப் போலக் கோபத்தில் பெருமூச்சுவிட்ட கர்ணன் தன் கணைகளை ஏவிய போது, கதிர்களை இறைக்கும் சூரியனைப் போலவே மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.(4) உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சூரியனில் இருந்து பரவும் கதிர்களுக்கு ஒப்பாகக் கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் விருகோதரன் {பீமன்} மறைக்கப்பட்டான்.(5) மயிலின் இறகுகளைக் கொண்ட அந்த அழகிய கணைகள், கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டு, உறங்குவதற்காக மரத்திற்குள் நுழையும் பறவைகளைப் போல, பீமனுடைய உடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஊடுருவின.(6)

உண்மையில், தங்கச் சிறகுகளைக் கொண்ட அந்தக் கணைகள், கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டு, நாரைகளின் தொடர்ச்சியான வரிசைகளுக்கு ஒப்பாக இடையறாமல் பாய்ந்தன.(7) அதிரதன் மகனால் ஏவப்பட்ட கணைகள் ஒரு வில்லில் இருந்து மட்டும் வெளியேறுவதாகத் தெரியாமல், கொடிமரம், குடை, ஏர்க்கால், நுகத்தடி மற்றும் தேர்த்தட்டு ஆகியவற்றில் இருந்தும் பாய்வதைப் போலத் தெரியும் அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் இருந்தன.(8) உண்மையில், அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, மூர்க்கமான சக்தி கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், கழுகின் இறகுகளைக் கொண்டவையுமானத் தன் வானுலாவும் கணைகளால் மொத்த ஆகாயத்தையும் நிறைக்கும் வகையில் அவற்றை ஏவினான்.(9)

(இப்படி) வெறியால் தூண்டப்பட்டு, காலனைப் போலத் தன்னை நோக்கி விரைந்து வரும் அவனை {கர்ணனைக்} கண்ட விருகோதரன் {பீமன்}, தன் உயிரைக் குறித்து முற்றிலும் கவலைப்படாமல், தன் எதிரியிலும் மேன்மையடைந்து ஒன்பது கணைகளால் அவனைத் {கர்ணனைத்} துளைத்தான்.(10) கர்ணனின் தடுக்கப்பட முடியாத மூர்க்கத்தையும், அந்த அடர்த்தியான கணைமழையையும் கண்ட பீமன், பெரும் ஆற்றலைக் கொண்டவனாதலால், அச்சத்தால் நடுங்கவில்லை.(11)

பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அதிரதன் மகனின் {கர்ணனின்} கணைப்பொழிவுக்கு எதிர்வினையாக, இருபது கூரிய கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.(12) உண்மையில், பிருதையின் மகன் {பீமன்} முன்னர்ச் சூதனின் மகனால் {கர்ணனால்} எப்படி மறைக்கப்பட்டானோ, அதே போலவே பின்னவன் {கர்ணன்} இப்போது அந்தப் போரில் முன்னவனால் {பீமனால்} மறைக்கப்பட்டான்.(13) போரில் பீமசேனனின் ஆற்றலைக் கண்ட உமது போர்வீரர்களும், சாரணர்களும் கூட மகிழ்ச்சியால் நிறைந்து அவனைப் புகழ்ந்தனர்.(14) கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பிலிருந்தும், பூரிஸ்ரவஸ், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, ஜெயத்ரதன், உத்தமௌஜஸ், யுதாமன்யு, சாத்யகி, கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனன்(15) ஆகிய இந்தப் பெரும் தேர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, “நன்று, நன்று” என்று சொல்லி சிங்க முழக்கம் செய்தனர்.(16)

மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் அந்தக் கடுமுழுக்கம் எழுந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகனான துரியோதனன், மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரிடமும், குறிப்பாகத் தன்னுடன் பிறந்த தம்பிகளிடம் இவ்வார்த்தைகளை விரைவாகச் சொன்னான். “அருளப்பட்டிருப்பீராக, விருகோதரனிடம் {பீமனிடமிருந்து} இருந்து கர்ணனைக் காப்பதற்காக அவனிடம் {கர்ணனிடம்} விரைவீராக, இல்லையெனில், பீமனின் வில்லில் இருந்து ஏவப்படும் கணைகளே ராதையின் மகனை {கர்ணனைக்} கொன்றுவிடும். வலிமைமிக்க வில்லாளிகளே சூதனின் மகனை {கர்ணனைக்} காக்க முயல்வீராக” {என்றான் துரியோதனன்}.(17-19).

இப்படித் துரியோதனனால் கட்டளையிடப்பட்டதும், அவனது {துரியோதனனின்} தம்பியரில் எழுவர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கோபத்தில் பீமசேனனை நோக்கி விரைந்து, அனைத்துப் பக்கங்களிலும் அவனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டனர்.(20) குந்தியின் மகனை அணுகிய அவர்கள், மழைக்காலங்களில் மலையின் சாரலில் மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமாரிகளால் அவனை {பீமனை} மறைத்தனர்.(21) கோபத்தில் தூண்டப்பட்டவர்களான அந்தப் பெரும் தேர்வீரர்கள் எழுவரும், ஓ! மன்னா, பிரளயத்தின் போது சந்திரனைப் பீடிக்கும் ஏழு கோள்களைப் போலப் பீமசேனனைப் பீடிக்கத் தொடங்கினர்.(22)

அப்போது குந்தியின் மகன் {பீமன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் அழகிய வில்லைப் பெரும்பலத்துடன் வளைத்து, அதை உறுதியாகப் பிடித்து,(23) தன் எதிரிகளும் மனிதர்கள்தான் என்பதை அறிந்து, ஏழு கணைகளைக் குறி பார்த்தான். பெருஞ்சினத்துடன் கூடிய அந்தத் தலைவன் பீமன், சூரியக் கதிர்களைப் போன்ற அந்தப் பிரகாசமான கணைகளை அவர்கள் மீது ஏவினான்.(24) உண்மையில், முந்தைய தீங்குகளை நினைவுகூர்ந்த பீமசேனன், உமது மகன்களான அவர்களின் உடல்களில் இருந்து உயிரைப் பிரித்தெடுக்கும் வகையில் அந்தக் கணைகளை ஏவினான்.(25)

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அந்தக் கணைகள், பீமசேனனால் ஏவப்பட்டு, அந்தப் பாரத இளவரசர்களின் உடல்களைத் துளைத்து வானத்தில் பறந்து சென்றன.(26) உண்மையில், தங்கச் சிறகுகளைக் கொண்ட அந்தக் கணைகள், உமது மகன்களின் இதயங்களைத் துளைத்து ஆகாயத்தில் சென்ற போது, சிறந்த இறகுகளைக் கொண்ட பறவைகளைப் போல அழகாகத் தெரிந்தன.(27) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, குருதியால் எங்கும் நனைந்திருந்த அக்கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் குருதியைக் குடித்த பிறகு, அவர்களின் உடலைக் கடந்து சென்றன.(28) அந்தக் கணைகளால் முக்கிய உறுப்புகள் துளைக்கப்பட்ட அவர்கள், மலைகளின் செங்குத்துப் பாறைகளில் வளரும் நெடிய மரங்கள் யானைகளால் முறிக்கப்பட்டதைப் போலத் தங்கள் தேர்களில் இருந்து கீழே பூமியில் விழுந்தனர்.(29) இப்படிக் கொல்லப்பட்ட உமது ஏழு மகன்கள், சத்ருஞ்சயன், சத்ருஸஹன், சித்ரன், சித்ராயுதன். த்ருடன், சித்ரசேனன், விகர்ணன் ஆகியோராவர் [1].(30)

பாண்டுவின் மகனான விருகோதரன் {பீமன்}, இப்படிக் கொல்லப்பட்ட உமது மகன்கள் அனைவரிலும், தன் அன்புக்குரிய விகர்ணனுக்காக வருந்தி, கடும் துக்கத்தை அடைந்தான்.(31) அந்தப் பீமன், “போரில் என்னால் நீங்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்று இப்படியே என்னால் சபதமேற்கப்பட்டது. ஓ! விகர்ணா, அதற்காகவே, நீயும் கொல்லப்படலாயிற்று. {இங்கே} என் சபதமே நிறைவேற்றப்பட்டதாயிற்று.(32) ஓ! வீரா {விகர்ணா}, ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை மனதில் தாங்கியே நீ போரிட வந்தாய். எங்களுக்கு, அதிலும் குறிப்பாக மன்னனுக்கு (எங்கள் அண்ணனுக்கு) {யுதிஷ்டிரனுக்கு} நன்மை செய்வதில் நீ எப்போதும் ஈடுபட்டு வந்தாய்.(33) எனவே, ஒப்பற்றவனான உனக்காக நான் வருந்துவது முறையாதல் அரிதே {முறையாகாது}” என்றான் {பீமன்} [2].அவ்விளவரசர்களைக் கொன்ற பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ராதையின் மகன் {கர்ணன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} பயங்கரமான சிங்கமுழக்கம் ஒன்றைச் செய்தான்.(34) வீரப் பீமனின் அந்தப் பெருங்கூச்சலானது, ஓ! பாரதரே, அந்தப் போரில் அவனது வெற்றியை நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்குத் தெரிவித்தது. உண்மையில், வில் தரித்த அந்தப் பீமனின் மகத்தான கூச்சலைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் போருக்கு மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.(35, 36) மகிழ்ச்சியடைந்த அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} பிறகு, ஓ! மன்னா, தன் தம்பியின் சிங்க முழக்கத்தை, துந்துபிகள் மற்றும் பிற இசைக்கருவிகளின் ஒலிகளோடு வரவேற்றான். ஏற்றுக் கொள்ளப்பட்ட குறியீட்டடின்படி விருகோதரன் {பீமன்} அந்தச் செய்தியை அனுப்பிய பிறகு, ஆயுதங்களை அறிந்தோரில் முதன்மையான அந்த யுதிஷ்டிரன், மகிழ்ச்சியால் நிறைந்து போரில் துரோணரை எதிர்த்து விரைந்தான்.

மறுபுறம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் முப்பத்தொருவர் [3] கொல்லப்பட்டதைக் கண்ட துரியோதனன், “விதுரர் பேசிய நன்மையான வார்த்தைகள் இப்போது உணரப்படுகின்றன” என்று விதுரரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.(37-40) இப்படி நினைத்த மன்னன் துரியோதனனால் தான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய முடியவில்லை. பகடையாட்டத்தின் போது, மூடனும், தீயவனுமான உமது மகன் {துரியோதனன்}, (தன் பக்கத்தில் இருந்த) கர்ணனுடன் சேர்ந்து, பாஞ்சால இளவரசியை {திரௌபதியைச்} சபைக்கு அழைத்துவரச் செய்து, அவளிடம் பேசியதும், அதே இடத்தில் உமது முன்னிலையில்(41, 42) கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணையே {திரௌபதியே}, பாண்டவர்கள் தொலைந்தனர், அவர்கள் நிலையான நரகத்திற்குள் மூழ்கிவிட்டனர். எனவே நீ வேறு கணவர்களைத் தேர்ந்தெடுப்பாயாக” என்ற அளவுக்குக் கர்ணனால் பேசப்பட்ட கடும் வார்த்தைகளும், ஐயோ, அவை அனைத்தின் கனியும் {பலனும்} இப்போது வெளிப்படுகின்றன.(43, 44)

மேலும், ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, கோபம் நிறைந்த உமது மகன்கள், அந்த உயர் ஆன்மா கொண்டோரான பாண்டுவின் மகன்களிடம் எள்ளுப்பதர்கள் போன்ற பல்வேறு கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினர். (இப்படி விளைந்த) கோப நெருப்பைப் பதிமூன்று {13} வருடங்கள் தடுத்திருந்த பீமசேனன் இப்போது அதை {கோப நெருப்பைக்} கக்கியபடியே, உமது மகன்களுக்கு அழிவை ஏற்படுத்துகிறான்.(45-46) ஏராளமாகப் புலம்பிய விதுரர், சமாதானத்தை நோக்கி உம்மை இட்டுச் செல்வதில் தவறினார். ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அவை அனைத்தின் கனியையும் உமது மகன்களுடன் சேர்ந்து அனுபவிப்பீராக.(47) நீர் முதியவராகவும், பொறுமையுள்ளவராகவும், அனைத்துச் செயல்களின் விளைவுகளை முன்னறியவல்லவராகவும் இருக்கிறீர். அப்படியிருந்தும், நீர் உமது நலன்விரும்பிகளின் ஆலோசனைகளைப் பின்பற்ற மறுத்ததால், இவையாவும் விதியின் பயன் என்றே தெரிகிறது.(48) ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே} வருந்தாதீர். இவையாவும் உமது பெரும் தவறால் விளைந்தவையே. உமது மகன்களின் அழிவுக்கு நீரே காரணமாவீர் என்பதே எனது கருத்தாகும்.(49)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விகர்ணனும், பெரும் ஆற்றலைக் கொண்ட சித்திரசேனனும் வீழ்ந்துவிட்டனர். உமது மகன்களில் முதன்மையான பல வலிமைமிக்கத் தேர்வீரர்களும் கூட வீழ்ந்துவிட்டனர்.(50) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, பீமன், தன் பார்வை செல்லும் தொலைவில் வந்த உமது பிற மகன்களையும் விரைவாகக் கொன்றான்.(51) பாண்டுவின் மகனான பீமனாலும், விருஷனாலும் (கர்ணனாலும்) ஏவப்பட்ட கணைகளால் நமது படையில் ஆயிரக்கணக்கானோர் எரிக்கப்படுவதை உம்மால் மட்டுமே நான் காண நேர்ந்தது” {என்றான் சஞ்சயன்}.(52)

கர்ணனும் பீமனும் ஏற்படுத்திய பேரழிவு! – துரோண பர்வம் பகுதி – 137-பீமனுக்கும் கர்ணனுக்கும் இடையில் தொடர்ந்த போர்; இருவராலும் உண்டாக்கப்பட்ட பேரழிவு; சாரணர்களும் சித்தர்களும் அவ்விரு போர்வீரர்களின் வீரத்தையும், திறனையும் வியந்து பாராட்டியது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா, ஓ! சஞ்சயா, இந்தத் துன்பகரமான விளைவு, நிச்சயமாக என் தீய கொள்கையின் காரணமாக எங்களை அடைந்தது என்றே நான் நினைக்கிறேன்.(1) நடந்தது நடந்ததுதான் என்றே இதுவரை நான் நினைத்து வந்தேன். ஆனால், ஓ! சஞ்சயா, இப்போது நான் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?[1](2) ஓ சஞ்சயா, நான் மீண்டும் அமைதியை அடைகிறேன். எனவே, என் தீய கொள்கைகளைக் காரணமாகக் கொண்ட இந்த வீரர்களின் படுகொலை எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றன என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான்.(3)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்டவர்களான கர்ணன் மற்றும் பீமன் ஆகிய இருவரும் மழை நிறைந்த இரு மேகங்களைப் போலத் தங்கள் கணைமாரிகளைப் பொழிவதைத் தொடர்ந்தனர்(4) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், பீமனின் பெயர் பொறிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள் கர்ணனை அணுகி, அவனது உயிரையே துளைத்துவிடுவன போல, அவனது உடலுக்குள் ஊடுருவின.(5) அதே போல அந்தப் போரில் பீமனும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் இருந்தவையுமான கர்ணனின் கணைகளால் மறைக்கப்பட்டான்.(6) அவர்களது கணைகளை அனைத்துப் பக்கங்களிலும் பாயும் வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெருங்கடலுக்கு ஒப்பாகத் துருப்புகளுக்கு மத்தியில் கலக்கம் உண்டானது.(7) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பாகப் பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் உமது படையின் போராளிகளில் பலர் உயிரை இழந்தனர்.(8)

மனிதர்களின் உடல்களோடு கலந்து விழுந்து கிடந்த யானைகள், குதிரைகள் ஆகியவற்றால் பரவிக் கிடந்த போர்க்களமானது, சூறாவளியால் முறிக்கப்பட்ட மரங்கள் சிதறிக் கிடக்கும் ஒரு பாதையைப் போலத் தெரிந்தது.(9) பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் போரில் கொல்லப்பட்ட உமது போர்வீரர்கள், “இஃது என்ன?” என்று சொன்னபடியே தப்பி ஓடினர்.(10) உண்மையில், சிந்துக்கள், சௌவீரர்கள், கௌரவர்கள் ஆகியோரைக் கொண்ட அந்தப் படை, கர்ணன் மற்றும் பீமன் ஆகிய இருவரின் மூர்க்கமான கணைகளாலும் பீடிக்கப்பட்டு, பெரும் தொலைவிற்கு அகற்றப்பட்டனர்.(11) துணிச்சல்மிக்க அந்தப் படைவீரர்களில் எஞ்சியோரும், தங்கள் குதிரைகள் மற்றும் யானைகள் கொல்லப்பட்டு, கர்ணன் மற்றும் பீமன் ஆகிய இருவரின் அருகாமையை விட்டகன்று, அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(12) (மேலும் அவர்கள்), “பீமன் மற்றும் கர்ணன் ஆகிய இருவரால் ஏவப்பட்ட கணைகளும் நம் படைகளையே கொல்வதால், உண்மையில், பார்த்தர்களுக்காகத் தேவர்களே நம்மை மலைக்கச் செய்கின்றனர்” என்றனர்.(13) இவ்வார்த்தைகளைச் சொன்ன உமது துருப்பினர், அச்சத்தால் பீடிக்கப்பட்டு (கர்ணன் மற்றும் பீமன் ஆகியோரின்) கணைகள் அடையும் தொலைவைத் தவிர்த்து, வெகுதொலைவில் இருந்து அந்த மோதலைக் கண்டனர்.(14)

அப்போது, வீரர்களின் மகிழ்ச்சியையும், மருண்டோரின் அச்சத்தையும் அதிகரிக்கும் வகையில் அந்தப் போர்க்களத்தில் ஒரு பயங்கர ஆறு பாயத் தொடங்கியது.(15) மேலும் அது யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் குருதியால் உண்டானதாக இருந்தது. மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் உயிரற்ற உடல்கள்,(16) கொடிக்கம்பங்கள், தேர்த்தட்டுகள் {இருசுக்கட்டைகள்} ஆகியவற்றாலும், தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் அலங்காரப் பொருட்கள், உடைந்து போன தேர்கள், சக்கரங்கள், அக்ஷங்கள் {அச்சுகள்}, கூபரங்கள் {ஏர்க்கால்கள்}(17) ஆகியவற்றாலும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பெரும் நாணொலி கொண்டவையுமான விற்கள், கர்ணன் மற்றும் பீமனால் ஏவப்பட்டவையும், சட்டையுதிர்த்த பாம்புகளுக்கு ஒப்பானவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான ஆயிரக்கணக்கான கணைகள், நாராசங்கள், எண்ணற்ற வேல்கள், ஈட்டிகள், கத்திகள், போர்க்கோடரிகள்,(18,19) கதாயுதங்கள், தண்டங்கள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கோடரிகள், பல்வேறு வடிவங்களிலான தண்டங்கள், ஈட்டிகள், பரிகங்கள்,(20), அழகிய சதாக்னிகள் ஆகியவற்றாலும் மறைக்கப்பட்டுப் பூமியானது பிரகாசமாகத் தெரிந்தது. தங்கத்தாலான காது குண்டலங்கள், ஆரங்கள், (மணிக்கட்டுகளில் இருந்து) தளர்ந்து விழுந்த கைவளைகள், வளையங்கள், கிரீடங்களில் அணியப்படும் மதிப்புமிக்க ரத்தினங்கள், தலைப்பாகைகள், தலைக்கவசங்கள், பல்வேறு வகைகளிலான தங்க ஆபரணங்கள், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, கவசங்கள், தோலுறைகள், யானைகளின் கயிறுகள், (தங்கள் நிலைகளில் இருந்து தவறிய) குடைகள், சாமரங்கள், விசிறிகள், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் துளைக்கப்பட்ட உடல்கள், குருதிக் கறையுடன் கூடிய கணைகள், தங்கள் நிலைகளில் இருந்து தளர்ந்து விழுந்து கிடந்த பல்வேறு பிற பொருட்கள் ஆகியவற்றால் விரவிக் கிடந்த அந்தப் போர்க்களமானது, நட்சத்திரங்கள் சிதறிக்கிடக்கும் ஆகாயத்தைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.

அற்புதம் நிறைந்தவையும், நினைத்துப் பார்க்க முடியாதவையும், மனித சக்திக்கு அப்பாற்பட்டவையுமான அவ்விரு வீரர்களின் சாதனைகளைக் கண்டு சாரணர்களும், சித்தர்களும் மிகவும் ஆச்சரியமடைந்தனர். காற்றைத் தன் கூட்டாளியாகக் கொண்ட சுடர்மிக்கக் காட்டுத் தீயானது (பரந்து கிடக்கும்) உலர்ந்த புற்குவியலின் ஊடாகச் செல்வதைப் போலவே பீமனிடம் சினம் கொண்ட அதிரதன் மகனும் {கர்ணனும்}, அந்தப் போரில் சீற்றத்துடன் திரிந்தான் [2]. அவ்விருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டிருந்தபோது, நாணற்காடுகளை நசுக்கும் இரு யானைகளைப் போல எண்ணற்ற கொடிமரங்களையும், தேர்களையும் வீழ்த்தி, குதிரைகள், மனிதர்கள் மற்றும் யானைகள் ஆகியவற்றைக் கொன்றனர்.(21-27) ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையானது மேகத் திரள்களைப் போலத் தெரிந்தது, மேலும், கர்ணன் மற்றும் பீமனால் அந்தப் போரில் விளைந்த பேரழிவு பெரியதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(28)

தேருக்குள் ஒளிந்து கொண்ட கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 138அ-பீமனின் குதிரைகளைக் கொன்ற கர்ணன், கர்ணனால் துளைக்கப்பட்டு யுதாமன்யுவின் தேரில் தஞ்சமடைந்த பீமனின் தேரோட்டி; பீமனின் ஆயுதங்களை அறுத்த கர்ணன்; கர்ணனைப் பிடிப்பதற்காக அவனது தேர் மீது பாய்ந்து ஏறிய பீமன்; தேருக்குள் ஒளிந்து கொண்ட கர்ணன்; அனைவராலும் பீமனின் சாதனை மெச்சப்படுவது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மூன்று கணைகளால் பீமனைத் துளைத்து, அவன் மீது எண்ணற்ற அழகிய கணைகளைப் பொழிந்தான்.(1) பாண்டுவின் மகனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன், இப்படிச் சூதன் மகனால் {கர்ணனால்} தாக்கப்பட்டாலும், வலிக்கு உண்டான எந்த அறிகுறிகளையும் காட்டாமல், (கணைகளால்) துளைக்கப்பட்ட மலையைப் போல அசையாதிருந்தான்.(2) பதிலுக்கு அந்தப் போரில் அவன் {பீமன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, எண்ணெய் தேய்க்கப்பட்டதும், பெரும் கூர்மை கொண்டதும், சிறப்பான கடினத்தன்மை கொண்டதுமான ஒரு கர்ணியை {முட்கள் பதிக்கப்பட்ட கணை} கர்ணனின் காதில் ஆழத் துளைத்தான்.(3) (அக்கணையால்) அவன் {பீமன்}, அழகியதும் பெரியதுமான கர்ணனின் காதுகுண்டலங்களைப் பூமியில் வீழ்த்தினான். அது {காது குண்டலம்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் பிரகாசம் கொண்ட நட்சத்திரம் ஒன்று ஆகாயத்தில் இருந்து விழுவதைப் போலக் கீழே விழுந்தது.(4)

கோபத்தால் தூண்டப்பட்ட விருகோதரன் {பீமன்}, பிறகு சிரித்துக் கொண்டே, மற்றொரு பல்லத்தால் சூதன் மகனின் {கர்ணனின்} நடுமார்பை ஆழத் துளைத்தான்.(5) மீண்டும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், அந்தப் போரில், சற்று முன்பே சட்டையுரித்த கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போலத் தெரிந்தவையான பத்து நாராசங்களை விரைவாக ஏவினான்.(6) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீமனால் ஏவப்பட்ட அக்கணைகள், கர்ணனின் நெற்றியைத் தாக்கி, எறும்புப் புற்றுக்குள் நுழையும் பாம்புகளைப் போல அதற்குள் {நெற்றிக்குள்} நுழைந்தன.(7) நெற்றில் ஒட்டிக் கொண்ட {தைத்திருந்த} கணைகளால் அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, முன்பு கருநெய்தல்மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புருவங்களோடு கூடியவனாக இருந்ததைப் போலவே அழகாகத் தெரிந்தான் [1].(8)சுறுசுறுப்பான குந்தியின் மகனால் {பீமனால்} ஆழத்துளைக்கப்பட்ட கர்ணன், தேரின் ஏர்க்காலைப் பிடித்துக் கொண்டு தன் கண்களை மூடினான் {மயங்கினான்}.(9) எனினும், விரைவில் சுயநினைவு மீண்டவனும், எதிரிகளை எரிப்பவனுமான அந்தக் கர்ணன், குருதியில் குளித்த தன் உடலுடன், சினத்தால் வெறிபிடித்தவனானான்.(10) அந்த உறுதிமிக்க வில்லாளியால் {பீமனால்} இப்படிப் பீடிக்கப்பட்டதன் விளைவால் சினத்தால் மதங்கொண்டவனும், பெரும் மூர்க்கம் கொண்டவனுமான கர்ணன், பீமசேனனின் தேரை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(11)

பிறகு, ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கவனும், கோபம் நிறைந்தவனுமான கர்ணன், சினத்தால் மதங்கொண்டு, கழுகின் இறகுகளால் சிறகமைந்த நூறு கணைகளைப் பீமசேனனின் மீது ஏவினான்.(12) எனினும் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் எதிரியை {கர்ணனை} அலட்சியம் செய்து, அவனது சக்தியை வெறுமையாக்கி, அவன் மீது கடுங்கணைகளின் மழையைப் பொழியத் தொடங்கினான்.(13) அப்போது கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்டு, ஓ! எதிரிகளை எரிப்பவரே, கோபத்தின் வடிவமாக இருந்த அந்தப் பாண்டுவின் மகனுடைய {பீமனுடைய} மார்பில் ஒன்பது கணைகளால் தாக்கினான்.(14) கொடூரப் பற்களைக் கொண்ட இரு புலிகளுக்கு ஒப்பாக (கணைகள் தரித்திருந்த) மனிதர்களில் புலிகளான அவ்விருவரும் அப்போரில் வலிமைமிக்க இரு மேகத் திரள்களைப் போலத் தங்கள் கணைமாரியை ஒருவரின் மேல் மற்றவர் பொழிந்தனர்.(15) அவர்கள், தங்கள் உள்ளங்கை ஒலிகளாலும், பல்வேறு வகைகளிலான கணைமாரிகளாலும் ஒருவரையொருவர் அச்சுறுத்த முயன்றனர்.(16) சினத்தால் தூண்டப்பட்ட அவ்விருவரும், அந்தப் போரில் அடுத்தவரின் சாதனைகளுக்கு எதிர்வினையாற்ற முனைந்தனர். அப்போது பகைவீரர்களைக் கொல்பவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒரு க்ஷுரப்ரத்தைக் கொண்டு சூதன் மகனின் வில்லை அறுத்துப் பெருங்கூச்சல் செய்தான் [2]. உடைந்த அவ்வில்லை எறிந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, இன்னும் பலமான, கடினமான மற்றொரு வில்லை எடுத்துக்கொண்டான்.(17, 18)குரு, சௌவீர மற்றும் சிந்து வீரர்கள் கொல்லப்படுவதைக் கண்டும், சிதறிக் கிடக்கும் கவசங்கள், கொடிமரங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றால் அந்தப் பூமியானது மறைக்கப்பட்டிருப்பதைக் குறித்துக் கொண்டும், அனைத்துப் பக்கங்களிலும், யானைகள், காலாட்படை வீரர்கள், குதிரைவீரர்கள் மற்றும் தேர்வீரர்களின் உயிரற்ற உடல்களையும் கண்டும் அந்தச் சூத மகனின் {கர்ணனின்} உடலானது கோபத்தால் பிரகாசத்துடன் சுடர்விட்டு எரிந்தது.(19,20) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் உறுதியான வில்லை வளைத்த அந்த ராதையின் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனின் மீது தன் கோபப் பார்வைகளை வீசினான்.(21) சினத்தால் மதங்கொண்ட அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, தன் கணைகளை ஏவிய போது, நடுப்பகலில் பளபளக்கும் கதிர்களைக் கொண்ட கூதிர்காலத்துச் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(22) தன் கரங்களால் கணையை எடுக்கும்போதும், அதை வில்லின் நாணில் பொருத்தும்போதும், நாண்கயிற்றை இழுக்கும்போதும், அதை {கணையை} விடுக்கும்போதும், அந்தச் செயல்களுக்கு இடையில் எவராலும் எந்த இடைவெளியையும் காண முடியவில்லை. இப்படிக் கர்ணன் வலப்பக்கமாகவும், இடப்பக்கமாகவும் கணைகளை ஏவுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவனது வில்லானது ஒரு பயங்கர நெருப்பு வளையத்தைப் போல இடையறாமல் வட்டமாக வளைக்கப்பட்டிருந்தது. கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையுமான கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}  திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் மறைத்து சூரியனின் ஒளியையே இருளச் செய்தன.(23-26)

கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அந்தக் கணைகளின் எண்ணற்ற கூட்டங்கள் ஆகாயத்தில் காணப்பட்டன. உண்மையில், அதிரதன் மகனின் {கர்ணனின்} வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகள் நாரைகளின் வரிசைகளைப் போல ஆகாயத்தில் அழகாகத் தெரிந்தன.(27-28) அந்த அதிரதன் மகன் ஏவிய கணைகள் அனைத்தும், கழுகின் இறகுகளைக் கொண்டவையாகவும், கல்லில் கூராக்கப்பட்டவையாகவும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையாகவும், சுடர்மிக்க முனைகளைக் கொண்டவையாகவும் இருந்தன. அவனது வில்லின் சக்தியால் உந்தப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள் பீமனின் தேரை நோக்கி இடையறாமல் பாய்ந்து கொண்டிருந்தன.(29-30) உண்மையில், கர்ணனால் ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள், ஆகாயத்தில் ஆயிரக்கணக்கில் பாய்ந்த போது, அடுத்தடுத்துச் செல்லும் வெட்டுக் கிளிகளின் {விட்டிற்பூச்சிக்} கூட்டங்களைப் போல அழகாகத் தெரிந்தன. அதிரதன் மகனின் {கர்ணனின்} வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகள், ஆகாயத்தில் சென்றபோது, தொடர்ந்து செல்லும் ஒரே நீண்ட கணை ஒன்றைப் போல வானத்தில் தெரிந்தன. மழைத்தாரைகளால் மலையை மறைக்கும் மேகமொன்றைப் போல, சினத்தால் தூண்டப்பட்ட கர்ணன், கணைமாரியால் பீமனை மறைத்தான்.(31-33)

அப்போது பொங்கும் கடலுக்கு ஒப்பான அந்தக் கணைமாரியை அலட்சியம் செய்துவிட்டுக் கர்ணனை எதிர்த்து பீமன் விரைந்ததால், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் துருப்புகளுடன் கூடிய உமது மகன்கள், பின்னவனின் {பீமனின்} வலிமை, சக்தி, ஆற்றல் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றைக் கண்டனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்ட உறுதிமிக்க வில்லைத் தரித்திருந்தான்.(34-36)

அவன் {பீமன்}, தொடர்ந்து வட்டமாக வளைக்கப்பட்ட இந்திரனின் வில்லைப் போலத் தெரியும்படி அதை {வில்லை} விரைவாக வளைத்தான். அதிலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்த கணைகள் மொத்த ஆகாயத்தையும் நிறைப்பனவாகத் தெரிந்தன.(37)

பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அந்த நேரான கணைகள், வானத்தில் ஒரு தொடர்ச்சியான கோடு ஒன்றை உண்டாக்கியதால் அவை தங்க மாலையொன்றைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தன.(38)

ஆகாயத்தில் பரவியிருந்த (கர்ணனின்) கணைமாரியானது, பீமசேனனின் கணைகளால் தாக்கப்பட்டு, துண்டுகளாகச் சிதறடிக்கப்பட்டுக் கீழே பூமியில் வீழ்ந்தன.(39) அப்போது, தங்கச் சிறகுகள் கொண்டவையும், வேகமாகச் செல்பவையும், ஒன்றோடு ஒன்று மோதி நெருப்புப் பொறிகளை உண்டாக்குபவையும், கர்ணன் மற்றும் பீமசேனன் ஆகிய இருவருடையவையுமான அந்தக் கணை மாரிகளால் வானம் மறைக்கப்பட்டது. அப்போது சூரியன் மறைக்கப்பட்டது, காற்றும் வீசாமல் நின்றது.(40,41) உண்மையில், இப்படி அந்தக் கணைகளால் ஆகாயம் மறைக்கப்பட்ட போது, எதையுமே காணமுடியவில்லை. பிறகு அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, உயர் ஆன்மப் பீமனின் சக்தியை அலட்சியம் செய்து, பிற கணைகளைக் கொண்டு பீமனை முழுமையாக மறைத்து, அவனிலும் மேன்மையடைய முயன்றான். பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவ்விருவரால் ஏவப்பட்ட கணைமாரிகள் எதிர் காற்றுகள் இரண்டைப் போல ஒன்றோடொன்று மோதுவதாகத் தெரிந்தன.(42,43) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவரின் கணைமாரிகளும் மோதிக் கொண்டதன் விளைவால், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, வானத்தில் ஒரு காட்டுத் தீ உண்டானதாகத் தெரிந்தது.(44)

அப்போது கர்ணன், பீமனைக் கொல்லவிரும்பி, கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கொல்லனின் கரங்களால் பளபளப்பாக்கப் பட்டவையுமான பல கணைகளைச் சினத்தால் அவன் {பீமன்} மீது ஏவினான். எனினும் பீமன், அக்கணைகள் ஒவ்வொன்றையும் தன் கணைகளால் மூன்று துண்டுகளாக அறுத்து, கர்ணனினும் மேன்மையடைந்து, “நில், நில்!” என்று கூச்சலிட்டான்.(45,46) கோபம் நிறைந்தவனும், வலிமைமிக்கவனுமான பாண்டுவின் மகன் {பீமன்}, அனைத்தையும் எரிக்கும் காட்டுத்தீயைப் போலச் சினத்தால் மீண்டும் கடும் கணைகளை ஏவினான். அவர்களது தோல் கையுறைகளின் மீது வில்லின் நாண்கயிறுகள் தாக்கியதன் விளைவாகப் பேரொலிகள் உண்டாகின.(47,48) அவர்களது உள்ளங்கை ஒலிகளும் பேரொலிகளாகின, அவர்களது சிங்க முழக்கங்கள் பயங்கரமாகின, அவர்களது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகளும், அவர்களது வில்லின் நாணொலிகளும் கடுமையாகின.(49) ஒருவரையொருவர் கொல்ல விரும்பிய கர்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {பீமன்} ஆகியோரது ஆற்றல்களைக் காணவிரும்பிய போராளிகள் அனைவரும் போரிடுவதை நிறுத்தினர்.(50) தெய்வீக முனிவர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள் ஆகியோர், “நன்று, நன்று!” என்று சொல்லி பாராட்டினர். வித்யாதரர்களின் இனக்குழுக்கள் அவர்கள் மீது மலர்மாரியைச் சொரிந்தனர்.(51)

அப்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், கடும் ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், தன் ஆயுதங்களால், எதிரியின் ஆயுதங்களைக் கலங்கடித்துப் பல கணைகளால் சூதனின் மகனை {கர்ணனைத்} துளைத்தான்.(52) பெரும் வலிமையைக் கொண்ட கர்ணனும், பீமசேனனின் கணைகளைக் கலங்கடித்து, அந்தப் போரில் அவன் {பீமன்} மீது ஒன்பது நாராசங்களை ஏவினான்.(53) எனினும் பீமன், அதே அளவிலான பல கணைகளால் அக்கணைகளை ஆகாயத்தில் வெட்டி, அவனிடம் {கர்ணனிடம்}, “நில், நில்” என்றான்.(54)

பிறகு வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரப் பீமன், சினத்தால் தூண்டப்பட்டு, யமன் அல்லது காலனின் தண்டத்திற்கு ஒப்பான கணையொன்றை அதிரதன் மகன் {கர்ணன்} மீது ஏவினான்.(55) எனினும், பெரும் ஆற்றலைக் கொண்ட ராதையின் மகன் {கர்ணன்} சிரித்துக் கொண்டே பாண்டுமகனின் அந்தக்கணை ஆகாயத்தில் வரும்போதே அதை மூன்று கணைகளால் வெட்டினான்.(56) பாண்டுவின் மகன் {பீமன்}, கடுங்கணைகளின் மழையை மீண்டும் பொழிந்தான். எனினும் கர்ணன், பீமனின் அந்தக் கணைகள் அனைத்தையும் அச்சமற்ற வகையில் ஏற்றான்.(57)

சினத்தால் தூண்டப்பட்டவனும், சூதனின் மகனுமான கர்ணன், தன் ஆயுதங்களின் சக்தியாலும், தன் நேரான கணைகளைக் கொண்டும் அம்மோதலில் போரிட்டுக் கொண்டிருந்த பீமனின் அம்பறாத்தூணிகள் இரண்டையும், வில்லின் நாண்கயிற்றையும், அவனது {பீமனது} குதிரைகளின் கடிவாளங்களையும் அறுத்தான். பிறகு அவனது {பீமனது} குதிரைகளையும் கொன்ற கர்ணன், ஐந்து கணைகளைக் கொண்டு பீமனின் தேரோட்டியையும் துளைத்தான்.(58,59) அந்தத் தேரோட்டி வேகமாக யுதாமன்யுவின் தேரை நோக்கி ஓடிச் சென்றான். அப்போது சினத்தால் தூண்டப்பட்டவனும், யுக நெருப்பின் காந்திக்கு ஒப்பானவனுமான ராதையின் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே பீமனின் கொடிக்கம்பத்தையும், அவனது கொடியையையும் வீழ்த்தினான்.

தன் வில்லை இழந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன் தேர்வீரர்கள் பயன்படுத்தும் ஓர் ஈட்டியை எடுத்துக் கொண்டான்.(60,61) கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {பீமன்}, அதைத் தன் கரங்களில் சுழற்றியபடியே பெரும் பலத்துடன் கர்ணனின் தேர் மீது எறிந்தான். பிறகு, இப்படி அவ்வீட்டி {பீமனால்} வீசப்பட்டதும், அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், விண்கோளைப் போலப் பிரகாசத்துடன் தன்னை நோக்கி வந்ததுமான அதைப் பத்து கணைகளால் அறுத்தான். அதன்பேரில் அவ்வீட்டி, போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்தவனும், தன் நண்பர்களுக்காகப் போரிடுபவனும், சூதனின் மகனுமான கர்ணனின் அந்தக் கூரிய கணைகளால் பத்து துண்டுகளாக வெட்டப்பட்டுக் கீழே விழுந்தது.

பிறகு மரணம் அல்லது வெற்றியை அடைய விரும்பிய குந்தியின் மகன் {பீமன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கேடயம் ஒன்றையும், வாள் ஒன்றையும் எடுத்துக் கொண்டான்.(62-64) எனினும் கர்ணன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே பீமனின் அந்தப் பிரகாசமான கேடயத்தைக் கடும் கணைகள் பலவற்றால் வெட்டினான். தேரிழந்த பீமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேடயத்தையும் இழந்து, சினத்தால் வெறிபிடித்தவனானான்.(65,66) வேகமாக அவன் {பீமன்}, வலிமையான தன் வாளைக் கர்ணனின் தேர் மீது ஏறிந்தான். அந்தப் பெரிய வாளானது, நாண் பொருத்தப்பட்ட சூதன் மகனின் வில்லை அறுத்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வானத்தில் இருந்து விழும் கோபக்காரப் பாம்பைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(67)

அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்ட அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே, எதிரியை அழிப்பதும், வலுவான நாண்கயிறு கொண்டதும், தான் இழந்ததை {முந்தைய வில்லை} விடக் கடினமானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான். குந்தியின் மகனை {பீமனைக்} கொல்ல விரும்பிய கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகளையும், பெரும் சக்தியையும் கொண்ட ஆயிரக்கணக்கான கணைகளை ஏவத் தொடங்கினான்.(68,69)

கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகளால் தாக்கப்பட்டவனும் வலிமைமிக்கவனுமான பீமன், கர்ணனின் இதயத்தை வேதனையால் நிறைக்கும்படி வானத்தில் எம்பி {கர்ணனின் தேரின் மேல்} குதித்தான்.(70) போரில் வெற்றியை விரும்பிய பீமனின் நடத்தையைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்}, தேருக்குள் ஒளிந்து கொண்டு அவனை {பீமனை} ஏமாற்றினான்.(71) கலங்கிய {பயந்த} இதயத்துடன் கர்ணன் தேர்த்தட்டில் தன்னை மறைத்துக் கொண்டதைக் கண்ட பீமன், கர்ணனின் கொடிக்கம்பத்தைப் பிடித்துக் கொண்டு பூமியில் {தரையில் அவனுக்காகக்} காத்திருந்தான் [3].(72) கருடன் ஒரு பாம்பைக் கவர்ந்து செல்வதைப் போலவே கர்ணனை அவனது தேரில் இருந்து கவரச் சென்ற பீமனின் அந்த முயற்சியைக் குருக்கள் {கௌரவர்கள்} மற்றும் சாரணர்கள் அனைவரும் பாராட்டினர். பீமன் தன் தேரை இழந்து, தன் வில்லும் வெட்டப்பட்டிருந்தாலும், (உடைந்த) தன் தேரை விட்டு, தன் வகைக்கான {க்ஷத்திரியக்} கடமைகளை நோற்றுப் போரில் நிலையாக நின்றான்” {என்றான் சஞ்சயன்}.(73,74)

கர்ணனையும், அஸ்வத்தாமனையும் விரட்டிய அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 138ஆ-ஆயுதங்கள் தீர்ந்து போனதால் கர்ணனிடம் இருந்து பின்வாங்கிய பீமன்; கொல்லப்பட்ட யானைகளின் உடல்களைக் கொண்டு கர்ணனிடம் தன்னைத் தற்காத்துக் கொண்ட பீமன்; அர்ஜுனனின் சபதத்திற்காகப் பீமனும், குந்தியின் வார்த்தைகளுக்காகக் கர்ணனும் ஒருவரையொருவர் கொல்லாமல் விட்டது; வில்லின் நுனியால் பீமனைத் தீண்டிய கர்ணன்; பீமனை நிந்தித்த கர்ணன்; பீமனின் மறுமொழி; கர்ணனையும், அஸ்வத்தாமனையும் விரட்டிய அர்ஜுனன்..

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “பிறகு ராதையின் மகன் {கர்ணன்}, கோபத்தால் அம்மோதலில் போருக்காகக் காத்திருந்த பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்துச் சென்றான். பிறகு, அறைகூவி அழைத்து ஒருவரையொருவர் அணுகிய அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அந்த மனிதர்களில் காளையரான இருவரும், கோடையின் முடிவில் தோன்றும் மேகங்களைப் போல ஒருவரையொருவர் நோக்கி முழங்கினர்.(75,76) மேலும் போரில் ஒருவரையொருவர் பொறுத்துக் கொள்ள முடியாமல், அங்கே அந்தச் சினங்கொண்ட சிங்கங்கள் இருவருக்கும் மத்தியில் தோன்றிய ஆயுதப் பாதையானது {போரானது}, பழங்காலத்தில் தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக இருந்தது.

எனினும் ஆயுதக் கையிருப்புத் தீர்ந்து போன குந்தியின் மகன் {பீமன்}, (பின்வாங்க வேண்டிய கட்டாயமேற்பட்டதால்) கர்ணனால் தொடரப்பட்டான். அர்ஜுனனால் கொல்லப்பட்டுப் பெரும் மலைகளைப் போல (அருகில்) கிடக்கும் யானைகளைக் கண்ட ஆயுதங்களற்ற பீமசேனன், கர்ணனின் தேருடைய முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக அவற்றின் {கொல்லப்பட்ட யானைகளின்} மத்தியில் நுழைந்தான்.(79) அந்த யானைத் திரளை அணுகி, தேர் அணுக முடியாத வகையில் அவற்றுக்கு மத்தியில் சென்று தன்னுயிரைக் காத்துக் கொள்ள விரும்பிய பாண்டுவின் மகன் {பீமன்}, ராதையின் மகனைத் {கர்ணனைத்} தாக்குவதிலிருந்து விலகினான் (80). உறைவிடத்தை விரும்பியவனும், பகை நகரங்களை அடக்குபவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தனஞ்சயனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட ஒரு யானையைக் கந்தமாதன சிகரத்தைத் தூக்கிய ஹனுமனைப் போல உயரத் தூக்கி அங்கேயே காத்திருந்தான்.(81) எனினும் கர்ணன், பீமன் பிடித்திருந்த அந்த யானையைத் தன் கணைகளால் வெட்டினான்.(82) அதன்பேரில் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அந்த யானையின் பிணத்துடைய துண்டுகளையும், தேர்ச்சக்கரங்களையும், குதிரைகளையும் கர்ணனின் மீது வீசினான். உண்மையில், சினத்தால் தூண்டப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, களத்தில் கிடப்பவற்றில் தான் கண்ட அனைத்தையும் எடுத்து கர்ணனின் மீது வீசினான்.(83) எனினும் கர்ணன், இப்படித் தன் மீது வீசப்பட்ட அந்தப் பொருட்கள் ஒவ்வொன்றையும் தன் கூரிய கணைகளால் வெட்டினான்.(84)

பீமனும், இடியின் பலத்தைக் கொண்ட தன் கடும் கைமுட்டிகளை உயர்த்திக் கொண்டு சூதனின் மகனை {கர்ணனைக்} கொல்ல விரும்பினான். எனினும் விரைவில் அர்ஜுனனின் சபதத்தை நினைவுகூர்ந்தான்.(85) எனவே, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, திறன்கொண்டவனாகவே இருப்பினும், சவ்யசச்சின் {அர்ஜுனன்} ஏற்ற உறுதிமொழியைப் பொய்ப்பிக்காதிருக்க விரும்பி கர்ணனை உயிரை எடுக்காமல் இருந்தான். எனினும், சூதனின் மகன் {கர்ணன்}, துன்புற்றுக் கொண்டிருந்த பீமனைத் தன் கூரிய கணைகளால் மீண்டும் மீண்டும் உணர்வை இழக்கச் செய்தான்.(87) ஆனால், குந்தியின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த கர்ணன், ஆயுதமற்ற பீமனின் உயிரை எடுக்காமல் இருந்தான். வேகமாக {பீமனை} அணுகிய கர்ணன், தன் வில்லின் நுனியால் அவனை {பீமனைத்} தீண்டினான் {தொட்டான்}.(88) எனினும் வில்லால் தீண்டப்பட்ட போது, சினத்தால் தூண்டப்பட்டு ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்ட அவன் {பீமன்}, கர்ணனின் வில்லைப் பறித்து, அதைக் கொண்டே அவனது {கர்ணனின்} தலையைத் தாக்கினான்.(89)

பீமசேனனால் தாக்கப்பட்ட ராதையின் மகன் {கர்ணன்}, கோபத்தால் கண்கள் சிவந்து, சிரித்துக் கொண்டே, “தாடியற்ற அலியே”, “அறியாமை கொண்ட மூடா”, பெருந்தீனிக்காரா” என்ற இவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொன்னான்.(90) மேலும் கர்ணன், “ஆயுதங்களில் திறனில்லாமல் என்னுடன் போரிடாதே. போரில் பின்தங்கியிருக்கும் நீ ஒரு குழந்தையே.(92) ஓ! பாண்டுவின் மகனே {பீமா}, எங்கே உணவும், பானமும் அதிகம் இருக்கிறதோ, ஓ! இழிந்தவனே, அங்கே நீ இருக்க வேண்டுமேயன்றி போரில் ஒருக்காலும் இல்லை.(92) நீ போரில் திறனற்றவனாக இருப்பதால், ஓ! பீமா, கிழங்குகள், மலர்கள் மற்றும் கனிகளை உண்டு, நோன்புகளையும், தவங்களையும், பயின்று காடுகளிலேயே உன் வாழ்வைக் கழிப்பாயாக.(93) போருக்கும், முனி வாழ்வின் தவத்தன்மைக்கு இடையில் பெரும் வேறுபாடு இருக்கிறது. எனவே, ஓ! விருகோதரா {பீமா}, காட்டுக்குச் செல்வாயாக. ஓ! குழந்தாய், போரில் ஈடுபடும் தகுதி உனக்கில்லை. காடுகளில் வாழ்வதற்கான இயல்பான திறனே உனக்கு இருக்கிறது.(94) ஓ! விருகோதரா, வீட்டிலுள்ள சமையற்கலைஞர்கள், பணியாட்கள், அடிமைகள் ஆகியோரை வேகமாகத் தூண்டி, உன் விருந்துக்காகக் கோபத்துடன் அவர்களை நிந்திக்க மட்டுமே நீ தகுந்தவனாவாய்.(95) அல்லது, ஓ! பீமா, ஓ! மூட அறிவு கொண்டவனே, முனிவர்களின் வாழ்வு முறையை ஏற்றுக் கொண்டு, (உன் உணவுக்காக) உன் கனிகளைச் சேகரிப்பாயாக. ஓ! குந்தியின் மகனே {பீமா}, போரில் நீ திறனற்றவனாக இருப்பதால் காடுகளுக்குச் செல்வாயாக.(96) கனிகளையும், கிழங்குகளையும் தேர்ந்தெடுத்தல் {உண்பது}, அல்லது, விருந்தினருக்குப் பணிவிடை செய்தல் ஆகியவற்றில் ஈடுபடுபவனான நீ, ஓ! விருகோதரா {பீமா}, எந்த ஆயுத வழியிலும் {எந்தப் போரிலும்} பங்கெடுப்பதற்குத் திறனற்றவனாவாய் என்றே நான் நினைக்கிறேன்” என்று சொன்னான் {கர்ணன்}.(97)

மேலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனது {பீமனின்} இளவயதில் அவனுக்கு {பீமனுக்கு} இழைக்கப்பட்ட தீங்குகள் அனைத்தையும் கடுஞ்சொற்களால் கர்ணன் நினைவுப்படுத்தினான்.(98) மேலும் அவன் {பீமன்} அங்கே பலவீனமாக நிற்கையில், கர்ணன் மீண்டும் அவனை {பீமனை} வில்லால் தீண்டினான். விருஷன் {கர்ணன்} சிரித்துக் கொண்டே மீண்டும் பீமனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(99) “ஓ! ஐயா {பீமா}, நீ பிறரிடம் போரிடலாம், ஆனால் என் போன்றவனிடம் ஒருபோதும் முடியாது. எங்களைப் போன்றோரிடம் போரிட நேருவோர் இதையும், இன்னும் பிறவற்றையும் சந்திக்க வேண்டிவரும்.(100) கிருஷ்ணர்கள் {கருப்பர்களான அர்ஜுனனும், கிருஷ்ணனும்} இருவரும் எங்கிருக்கிறார்களோ அங்கே செல்வாயாக. போரில் அவர்கள் உன்னைக் காப்பார்கள். அல்லது, ஓ! குந்தியின் மகனே {பீமா}, வீட்டுக்குச் செல்வாயாக. உன்னைப் போன்ற ஒரு குழந்தைக்குப் போரில் என்ன வேலை இருக்கிறது?” {என்றான் கர்ணன்}.(101)

கர்ணனின் கடுஞ்சொற்களைக் கேட்டு உரக்கச் சிரித்த பீமசேனன், அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இவ்வார்த்தைகளை அவனிடம் {கர்ணனிடம்} சொன்னான்.(102) “ஓ! பொல்லாதவனே {கர்ணா}, என்னால் நீ மீண்டும் மீண்டும் வெல்லப்பட்டாய். இத்தகு வீணான தற்புகழ்ச்சியில் உன்னால் எவ்வாறு ஈடுபட முடிகிறது? பழங்காலத்தவர்கள் இவ்வுலகில் பெரும் இந்திரனின் வெற்றியையும் தோல்வியையும் கூடக் கண்டிருக்கின்றனர்.(103) ஓ! இழி பிறப்பு கொண்டவனே, வெறுங்கையால் தடகள {உடல்திறன்} மோதலில் {மல்யுத்தத்தில்} என்னுடன் ஈடுபடுவாயாக. பெரும் உடற்கட்டைக் கொண்ட வலிமைமிக்கக் கீசகனைக் கொன்றவாறே, மன்னர்கள் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போது நான் உன்னையும் கொல்வேன்” {என்றான் பீமன்}. (104)

பீமனின் நோக்கத்தைப் புரிந்து கொண்டவனும், நுண்ணறிவு கொண்ட மனிதர்களில் முதன்மையானவனுமான கர்ணன், வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அம்மோதலில் இருந்து விலகினான்.(105) உண்மையில், பீமனைத் தேரற்றவனாகச் செய்த கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விருஷ்ணிகளில் சிங்கம் (கிருஷ்ணன்) மற்றும் உயர் ஆன்ம பார்த்தன் {அர்ஜுனன்} ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இத்தகு தற்புகழ்ச்சி மொழியில் அவனை {பீமனை} நிந்தித்தான்.(106)

அப்போது அந்தக் குரங்குக் கொடியோன் (அர்ஜுனன்), கேசவனால் {கிருஷ்ணனால்} தூண்டப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கல்லில் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றைச் சூதனின் மகன் {கர்ணன்} மீது ஏவினான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பார்த்தனின் {அர்ஜுனனின்} கரங்களால் ஏவப்பட்டவையும், காண்டீவத்தில் இருந்து வெளிப்பட்டவையுமான அக்கணைகள், கிரௌஞ்ச மலைகளுக்குள் செல்லும் நாரைகளைப் போலக் கர்ணனின் உடலுக்குள் நுழைந்தன. காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையும், பல பாம்புகளைப் போலக் கர்ணனின் உடலுக்குள் நுழைந்தவையுமான அக்கணைகளுடன்கூடிய அந்தச் சூதனின் மகனை {கர்ணனைப்} பீமசேனனின் அருகில் இருந்து தனஞ்சயன் {அர்ஜுனன்} விரட்டினான்.(107-109) பீமனால் வில் வெட்டப்பட்டவனும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டவனுமான கர்ணன், பீமனிடமிருந்து தன் பெரும் தேரில் தப்பி ஓடினான்.(110) பீமசேனனும், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் தேரில் ஏறிக் கொண்டு, தன் தம்பியும், பாண்டுவின் மகனுமான சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} ஆற்றலை நினைத்து அந்தப் போரில் முன்னேறிச் சென்றான்.(111)

அப்போது கோபத்தால் கண்கள் சிவந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, கர்ணனைக் குறி பார்த்து, மரணத்தைத்தூண்டும் காலனைப் போன்ற ஒரு கணையை வேகமாக ஏவினான். காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணை, பெரும்பாம்பைத் தேடி ஆகாயத்தில் செல்லும் கருடனைப் போலக் கர்ணனை நோக்கி வேகமாகச் சென்றது. எனினும் வலிமைமிக்கத் தேர்வீரனான துரோண மகன் {அஸ்வத்தாமன்}, தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது கொண்ட அச்சத்தில் இருந்து கர்ணனைக் காக்க விரும்பி அதை நடுவானிலேயே வெட்டினான். அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், அறுபத்து நான்கு {64} கணைகளால் துரோண மகனை {அஸ்வத்தாமனைத்} துளைத்து, அவனிடம், “ஓ! அஸ்வத்தாமரே, ஒருக்கணம் நிற்பீராக. தப்பி ஓடாதீர்” என்றான்.(112-115) எனினும், அந்தத் துரோண மகன் {அஸ்வத்தாமன்}, தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டு, மதங்கொண்ட யானைகளும், தேர்க்கூட்டங்களும் நிறைந்த கௌரவப் படைப்பிரிவுக்குள் வேகமாக நுழைந்தான்.

அப்போது அந்த வலிமைமிக்கக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, காண்டீவத்தின் நாணொலியால், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடிகளைக் கொண்ட மற்ற விற்களின் நாணொலிகளை மூழ்கடித்தான். பிறகு வலிமைமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, வெகு தொலைவுக்குப் பின்வாங்கிச் சென்றிராத துரோண மகனை {அஸ்வத்தாமனைப்} பின்னாலே தொடர்ந்து சென்று, வழியெங்கும் தன் கணைகளால் அவனை அச்சுறுத்தினான். கங்கங்கள் மற்றும் மயில்களின் இறகுகளாலான சிறகுகளைக் கொண்ட தன் கணைகளால் மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களைத் துளைத்த அர்ஜுனன், அந்தப் படையையே கலங்கடிக்கத் தொடங்கினான். உண்மையில், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, இந்திரனின் மகனான பார்த்தன் {அர்ஜுனன்}, குதிரைகள், யானைகள் மற்றும் மனிதர்களால் நிறைந்த அந்தப் படையை அழிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(116-120)

மன்னன் அலம்புசனைக் கொன்ற சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 139-திருதராஷ்டிரன் கவலை; சாத்யகிக்கும் அலம்புசனுக்கும் இடையில் நடந்த மோதல்; அலம்புசனைக் கொன்ற சாத்யகி; துச்சாசனன் தலைமையிலான திருதராஷ்டிர மகன்கள் சாத்யகியை எதிர்த்து விரைந்தது; அவர்கள் அனைவரையும் தடுத்த சாத்யகி, துச்சாசனனைக் குதிரைகளற்றவனாக ஆக்கியது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, சுடர்மிக்க என்புகழ் நாளுக்கு நாள் மங்குகிறது. என் போர்வீரர்களில் மிகப் பலர் வீழ்ந்துவிட்டனர். இவையாவும் காலத்தால் கொண்டுவரப்பட்ட எதிர்வினைகளால் ஏற்படுகின்றன என நான் நினைக்கிறேன்.(1) துரோணராலும், கர்ணனாலும் பாதுகாக்கப்படுவதும், அதன் காரணமாகத் தேவர்களாலும் ஊடுருவப்பட முடியாததுமான என் படைக்குள் சினத்தால் தூண்டப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} நுழைந்துவிட்டான்.(2) கிருஷ்ணன் மற்றும் பீமன் என்ற சுடர்மிக்க இரு சக்திகளுடனும், சிநிக்களின் காளையுடனும் {சாத்யகியுடனும்} இணைந்ததால், அவனது {அர்ஜுனனின்} ஆற்றல் பெருகியிருக்கிறது.(3) தனஞ்சயனின் {அர்ஜுனனின்} நுழைவைக் கேட்டதில் இருந்து, உலர்ந்த புற்குவியலை எரிக்கும் நெருப்பைப் போலத் துயரம் என் இதயத்தை எரிக்கிறது.

இந்தப் பூமியின் மன்னர்கள் அனைவரும், அவர்களோடு கூடிய சிந்துக்களின் ஆட்சியாளனும் {ஜெயத்ரதனும்} பொல்லாத விதியால் {தீயூழால்} பாதிக்கப்படுவதை நான் காண்கிறேன்.(4) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுக்கு (அர்ஜுனனுக்குத்) தீங்கிழைத்துவிட்டு, அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} அர்ஜுனனின் பார்வையில் படும்போது, தன் உயிரை {அவனால்} எவ்வாறு காத்துக் கொள்ள முடியும்?(5) இந்தச் சூழ்நிலையைப் பார்க்கையில், ஓ! சஞ்சயா, சிந்துக்களின் ஆட்சியாளன் ஏற்கனவே இறந்துவிட்டதாகவே நான் ஊகிக்கிறேன். எனினும், அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக. விவரிப்பதில் நீ திறன்கொண்டவனாக இருக்கிறாய், ஓ! சஞ்சயா, தாமரைகள் நிறைந்த தடாகத்துக்குள் பாயும் ஒரு யானையைப் போலத் திடமான தீர்மானத்துடன் தனஞ்சயனுக்காகப் {அர்ஜுனனுக்காக} போராட, அந்தப் பரந்த படைக்குள் மீண்டும் மீண்டும் அதனைக் கலங்கடித்தபடி நுழைந்தவனும், விருஷ்ணி வீரனுமான சாத்யகி எவ்வாறு போரிட்டான் என்பதை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.(7,8)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் முதன்மையான அந்தப் பீமன், பல வீரர்களுக்கு மத்தியில் கர்ணனின் கணைகளால் பீடிக்கப்பட்டுச் சென்று கொண்டிருப்பதைக் கண்ட அந்தச் சிநிக்களில் முதன்மையான போர்வீரன் {சாத்யகி}, தன் தேரில் அவனைப் {பீமனைப்} பின் தொடர்ந்து சென்றான்.(9) கோடையின் முடிவில் {தோன்றும்} கார்முகில்களைப் போலக் கர்ஜித்துக் கொண்டும், கூதிர்காலத்துக் கதிரவனைப் போலக் கதிரொளி வீசிக் கொண்டும் சென்ற அவன் {சாத்யகி}, தன் உறுதிமிக்க வில்லால் உமது மகனின் {துரியோதனனின்} படையைத் கொல்லத் தொடங்கி, அதை {அந்தப் படையை} மீண்டும் மீண்டும் நடுங்கச் செய்தான்.(10) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அந்த மதுகுலத்தின் முதன்மையானவன் {சாத்யகி}, வெள்ளி நிறக் குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில், முழங்கிக் கொண்டே களத்தில் இப்படிச் சென்று கொண்டிருந்தபோது, உமது போர்வீரர்களில் எவராலும் அவனது {சாத்யகியின்} முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.(11)

அப்போது மன்னர்களில் முதன்மையானவனும், போரில் எப்போதும் பின்வாங்கதவனும், வில் தரித்துத் தங்கக் கவசம் பூண்டவனுமான அலம்புசன் [1], சினத்தால் தூண்டப்பட்டு, மதுகுலத்தின் முதன்மையான போர்வீரனான அந்தச் சாத்யகியின் முன்னேற்றத்தை விரைந்து சென்று தடுத்தான்.(12) பிறகு அவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலானது, ஓ! பாரதே {திருதராஷ்டிரரே}, இது வரை எப்போதும் நடக்காததைப் போல இருந்தது. போரிடுவதை நிறுத்திய எதிரிகளும், உமது வீரர்கள் அனைவரும், போரின் ரத்தினங்களான அவ்விருவரின் மோதலைக் காணும் பார்வையாளர்கள் ஆனார்கள்.(13)அப்போது மன்னர்களில் முதன்மையானவனான அந்த அலம்புசன், பத்து கணைகளால் மிகப் பலமாகச் சாத்யகியைத் துளைத்தான். எனினும், அந்தச் சிநி குலத்துக் காளை {சாத்யகி}, அந்தக் கணைகள் யாவும் தன்னை அடையும் முன்பே அவற்றைத் தன் கணைகளால் வெட்டினான்.(14) மீண்டும் அலம்புசன், அழகிய சிறகுகளைக் கொண்டவையும், நெருப்பு போலச் சுடர்விடுபவையும், காதுவரை இழுக்கப்பட்டுத் தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான மூன்று கூரிய கணைகளால் சாத்யகியைத் தாக்கினான். இவை சாத்யகியின் கவசத்தைத் துளைத்து, அவனது உடலுக்குள் ஊடுருவின.(15) நெருப்பு அல்லது காற்றின் சக்தியுடன் கூடிய அந்தச் சுடர்மிக்கக் கூரிய கணைகளால் சாத்யகியைத் துளைத்த பிறகு, அந்த அலம்புசன், வெள்ளியைப் போல வெண்மையாக இருந்த சாத்யகியின் குதிரைகளை நான்கு கணைகளால் மிகப்பலமாகத் தாக்கினான்.

அவனால் {அலம்புசனால்} இப்படித் தாக்கப்பட்டவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், சக்கரதாரியை (கேசவனை {கிருஷ்ணனைப்}) போன்றவனுமான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, பெரும் வேகம் கொண்ட நான்கு கணைகளால் அலம்புசனின் நான்கு குதிரைகளைக் கொன்றான்.(17) அலம்புசனது தேரோட்டியின் தலையை வெட்டிய பிறகு, அவன் {சாத்யகி}, யுக நெருப்பைப் போன்ற கடுமையான ஒரு பல்லத்தால், முழு நிலவைப் போல அழகானதும், சிறந்த காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான அலம்புசனின் தலையைப் அவனின்  உடலில் இருந்து வெட்டினான்.(18) பல மன்னர்களின் வழித்தோன்றலான {ராஜவம்சத்தில் பிறந்தவனான} அவனை {அலம்புசனைக்} கொன்ற பிறகு, பகைவரின் படைகளைக் கலங்கடிக்கவல்ல வீரனான அந்த யதுக்களின் காளை {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரியின் துருப்புகளைத் தடுத்தபடியே அர்ஜுனனை நோக்கிச் சென்றான்.(19)

உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்படி அந்த விருஷ்ணி வீரன் {சாத்யகி}, அர்ஜுனனை அடுத்து எதிரியின் மத்தியில் சென்ற போது, சேர்ந்திருக்கும் மேகத் திரள்களைச் சிதறடிக்கும் சூறாவளியைப் போலத் தன் கணைகளால் குரு படையை மீண்டும் மீண்டும் அழித்தபடியே காணப்பட்டான்.(20) அந்த மனிதர்களில் காளை {சாத்யகி} எங்கெல்லாம் செல்ல விரும்பினானோ அங்கெல்லாம், சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், நன்கு பயிற்சி அளிக்கப்பட்டவையும், வசப்படுத்தப்பட்டவையும், பசுவின் பால், அல்லது குருக்கத்தி மலர், அல்லது நிலவு, அல்லது பனியைப் போன்ற வெண்மையானவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகளால் அவன் {சாத்யகி} சுமந்து செல்லப்பட்டான்.(21)

அப்போது, ஓ! ஆஜமீட குலத்தைச் சேர்ந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது படையின் பிற வீரர்களோடு ஒன்று சேர்ந்த உமது மகன்கள், போர்வீரர்களில் முதன்மையான அந்தத் துச்சாசனனைத் தங்கள் தலைமையாகக் கொண்டு, சாத்யகியை எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(22) படைப்பிரிவுகளின் தலைவர்களான அவர்கள், அந்தப் போரில் சிநியின் பேரனை {சாத்யகியை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு, அவனைத் தாக்கத் தொடங்கினர். சாத்வதர்களில் முதன்மையான அந்த வீரச் சாத்யகியும், கணை மாரிகளால் அவர்கள் யாவரையும் தடுத்தான்.(23) தன் கடுங்கணைகளால் அவர்கள் அனைவரையும் தடுத்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்தச் சிநியின் பேரன், ஓ! ஆஜமீடரே {திருதராஷ்டிரரே}, தன் வில்லைப் பலமாக உயர்த்தி, துச்சாசனனின் குதிரைகளைக் கொன்றான். அப்போது அந்தப் போரில் அர்ஜுனனும், கிருஷ்ணனும், அந்த மனிதர்களில் முதன்மையானவனை {சாத்யகியைக்} கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(24)

சாத்யகியைக் கண்ட கிருஷ்ணார்ஜுனர்கள்! – துரோண பர்வம் பகுதி – 140-சாத்யகியிடம் இருந்து தப்பி ஓடிய திரிகர்த்தர்கள்; சூரசேனர்கள், கலிங்கர்கள் ஆகியோரைக் கடந்து அர்ஜுனனை நோக்கிச் சென்ற சாத்யகி; சாத்யகியைப் புகழ்ந்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரன் மீது கொண்ட கவலையின் நிமித்தமாகச் சாத்யகியின் வருகையால் மகிழாத அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது, தங்கக் கொடிமரங்களைக் கொண்டவர்களான திரிகர்த்த நாட்டின் பெரும் வில்லாளிகள், சாதனைக்குத் தகுந்த அனைத்து பெரும் செயல்களையும் சாதித்த போர்வீரனும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} வெற்றியை விரும்பி, கடல் போன்று எல்லையற்ற அந்தப் படைக்குள் ஊடுருவி, துச்சாசனனின் தேரை எதிர்த்து விரைந்து வருபவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான சாத்யகியை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர் .(1, 2)

தேர்களின் பெருங்கூட்டத்தால் அனைத்துப் பக்கங்களிலும் அவனது {சாத்யகியினது} வழியைத் தடுத்த அந்தப் பெரும் வில்லாளிகள், சினத்தால் தூண்டப்பட்டுக் கணைமாரியால் அவனை {சாத்யகியை} மறைத்தனர்.(3)

கரைகளற்ற கடலுக்கு ஒப்பானதும், உள்ளங்கையொலிகளால் நிறைக்கப்பட்டதும், வாள்கள், ஈட்டிகள் மற்றும் கதாயுதங்கள் ஆகியவை நிரம்பியதுமான அந்தப் பாரதப் படைக்கு மத்தியில் ஊடுருவிச் சென்றவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, அந்தப் போரில் பிரகாசமாக ஒளிர்ந்தவர்களும், தன் எதிரிகளுமான அந்த ஐம்பது {50} (திரிகர்த்த) இளவரசர்களையும் தனியாகவே வென்றான்.(4,5)

போரில், அந்நிகழ்வின் போது, சிநியின் பேரனுடைய {சத்யகியின்} நடத்தை மிக அற்புதமாக இருந்ததை நாங்கள் கண்டோம். மேற்கில் அவனைக் {சாத்யகியைக்} கண்டவுடனேயே கிழக்கிலும் அவனைக் கண்டோம் என்ற அளவுக்கு அவனது (நகர்வுகளின்) நளினம் மிகச் சிறப்பாக இருந்தது.(6)

நூறு போர்வீர்களைத் தனக்குள் கொண்டவனைப் போல, வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் மேற்கிலும், இன்னும் பிற துணைத் திசைகளிலும் ஆடிக்கொண்டே திரிபவனாக அந்த வீரன் {சாத்யகி} தெரிந்தான்.(7)

சிங்கத்தின் விளையாட்டு நடையுடன் கூடிய சாத்யகியைக் கண்ட திரிகர்த்த வீரர்கள், அவனது ஆற்றலைத் தாங்கிக் கொள்ள முடியாமல், தங்கள் படையை (தங்கள் நாட்டினரின் படைப்பிரிவுகளை) நோக்கி தப்பி ஓடினர்.(8)

அப்போது சூரசேனர்களில் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் யானையை அங்குசத்தால் தாக்கும் பாகனைப் போலத் தங்கள் கணைமாரிகளால் சாத்யகியைத் தாக்கி அவனைத் தடுக்க முயன்றனர்.(9)

நினைத்துப் பார்க்க முடியாத அளவு ஆற்றலைக் கொண்ட வீரனான அந்த உயர் ஆன்ம சாத்யகி, அவர்களுடன் குறுகிய காலம் போராடிய பிறகு, கலிங்கர்களுடன் போரிடத் தொடங்கினான்.(10)

பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகி, கடக்கப்பட முடியாத அந்தக் கலிங்கப் படைப்பிரிவைக் கடந்து, பிருதையின் {குந்தியிப்} மகனான தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அருகே சென்றான்.(11) நீரில் நீந்திக் களைத்தவன் நிலத்தை அடைவதைப் போல யுயுதானன் {சாத்யகி}, மனிதர்களில் புலியான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டு ஆறுதல் அடைந்தான்.(12)

அவன் {சாத்யகி} வருவதைக் கண்ட கேசவன் {கிருஷ்ணன்}, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அதோ சிநியின் பேரன் {சாத்யகி} உன்னைத் தேடி வருகிறான்.(13)

ஓ! கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே {அர்ஜுனா}, அவன் {சாத்யகி} உன் சீடனும், நண்பனுமாவான். அந்த மனிதர்களில் காளை {சாத்யகி}, போர் வீரர்கள் அனைவரையும் துரும்பாகக் கருதி அவர்களை வென்றிருக்கிறான்.(14)

உன் உயிரைப் போல உன் அன்புக்குரியவனான அந்தச் சாத்யகி, ஓ! கிரீடி {அர்ஜுனா}, கௌரவப் போர்வீரர்களுக்குப் பயங்கரக் காயங்களை ஏற்படுத்தியபடியே உன்னிடம் வருகிறான்.(15)

இந்தச் சாத்யகி, ஓ! பல்குனா {அர்ஜுனா}, தன் கணைகளால் துரோணரையும், போஜ குலத்தின் கிருதவர்மனையும் நசுக்கிய பிறகு உன்னிடம் வருகிறான்.(16)

ஓ! பல்குனா {அர்ஜுனா}, ஆயுதங்களில் திறன் கொண்டவனும், துணிச்சல்மிக்கவனுமான இந்தச் சாத்யகி, யுதிஷ்டிரரின் நன்மையைக் கருதி, போர்வீரர்களில் முதன்மையானோர் பலரைக் கொன்றுவிட்டு உன்னிடம் வருகிறான்.(17)

ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வலிமைமிக்கச் சாத்யகி, (கௌரவத்) துருப்புகளுக்கு மத்தியில் அடைவதற்கு மிக அரிய சாதனைகளைச் செய்துவிட்டு, உன்னைக் காணவிரும்பி இதோ உன்னிடம் வருகிறான்.(18)

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, போரில் தனித்தேரில் {தனியாக} வந்த சாத்யகி, ஆசானின் {துரோணரின்} தலைமையிலான வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலருடன் போரிட்டுவிட்டு உன்னிடம் வருகிறான்.(19)

ஓ! பார்த்தா, தர்மனின் மகனால் {யுதிஷ்டிரரால்} அனுப்பப்பட்ட இந்தச் சாத்யகி, தன் சொந்த கரங்களின் வலிமையை நம்பி கௌரவப் படையைப் பிளந்து கொண்டு உன்னிடம் வருகிறான்.(20)

ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, எவனுக்கு ஒப்பாகக் கௌரவர்களில் எந்தப் போர்வீரனும் இல்லையோ, போரில் வெல்லப்பட முடியாதவனான அந்தச் சாத்யகி உன்னிடம் வருகிறான்.(21)

இந்தச் சாத்யகி, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, கணக்கற்ற போர்வீரர்களைக் கொன்றுவிட்டு, பசுக்கூட்டத்தின் மத்தியில் இருந்து வரும் சிங்கத்தைப் போல, கௌரவத் துருப்புகளுக்கு மத்தியில் இருந்து விடுபட்டு உன்னிடம் வருகிறான்(22).

இந்தச் சாத்யகி, ஓ! பார்த்தா{அர்ஜுனா}, ஆயிரக்கணக்கான மன்னர்களின் தாமரை மலர்களைப் போன்ற அழகான முகங்களைப் பூமியில் பரவச் செய்தபடி உன்னிடம் வருகிறான்.(23)

தம்பிகளுடன் கூடிய துரியோதனனைப் போரில் வென்ற சாத்யகி, ஜலசந்தனைக் கொன்றுவிட்டு விரைவாக வருகிறான்.(24) கௌரவர்களைத் துரும்பாகக் கருதிய சாத்யகி, குருதியைச் சேறாகக் கொண்ட இரத்த ஆற்றை உண்டாக்கிவிட்டு உன்னிடம் வருகிறான்” என்றான் {கிருஷ்ணன்}.(25)

மகிழ்ச்சியற்ற அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான். “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, சாத்யகியின் வருகை எனக்குச் சிறிதும் ஏற்புடையதாக இல்லை.(26)

ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் எவ்வாறு இருக்கிறார் என்பதை நான் அறியவில்லை. இப்போது அவர் {யுதிஷ்டிரர்} சாத்வதனிடம் {சாத்யகியிடம்} இருந்து பிரிந்திருப்பதால், அவர் {யுதிஷ்டிரர்} உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று நான் ஐயுறுகிறேன்.(27)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, இந்தச் சாத்யகி மன்னரை {யுதிஷ்டிரரைப்} பாதுகாத்திருக்க வேண்டும். ஓ! கிருஷ்ணா, அப்படியிருக்கையில் யுதிஷ்டிரரை விட்டு விட்டு என்னைத் தேடி இவன் ஏன் வருகிறான்?(28)

ஆகவே, மன்னர் {யுதிஷ்டிரர்} துரோணரிடம் கைவிடப்பட்டிருக்கிறார். சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} இன்னும் கொல்லப்படவில்லை. அதோ, பூரிஸ்ரவஸ் சாத்யகியை எதிர்த்துப் போரிடச் செல்கிறான்.(29)

ஜெயத்ரதன் நிமித்தமாக என்மீது கனமான சுமை உள்ளது. மன்னர் {யுதிஷ்டிரர்} எவ்வாறு இருக்கிறார் என்பதை நான் அறியவேண்டும், சாத்யகியையும் நான் பாதுகாக்க வேண்டும்.(30)

மேலும், ஜெயத்ரதனையும் நான் கொல்ல வேண்டும். சூரியனோ கீழே சாய்கிறான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகியைப் பொறுத்தவரை, அவன் களைத்திருக்கிறான், அவனது ஆயுதங்களும் தீர்ந்துவிட்டன.(31)

ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவனது குதிரைகளும், அவற்றின் சாரதியும் கூடக் களைத்துப் போயிருக்கின்றனர். மறுபுறம், பூரிஸ்ரவசோ களைப்பற்றவனாக இருக்கிறான். ஓ! கேசவா {கிருஷ்ணா}, அவன் {பூரிஸ்ரவஸ்} தனக்குப் பின்னால் அவனை ஆதரிப்பவர்களையும் கொண்டிருக்கிறான்.(32)

இம்மோதலில் சாத்யகிக்கு வெற்றி அடைவானா? கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், சிநிக்களில் காளையும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தச் சாத்யகி, பெருங்கடலையே கடந்த பிறகு, பசுவின் குளம்படியை [1] (தன் முன்} அடைந்து அடிபணிந்துவிடுவானா?(33)குருக்களில் முதன்மையானவனும், ஆயுதங்களில் திறம் கொண்டவனுமான அந்தப் பூரிஸ்ரவசுடன் மோதி, சாத்யகி நற்பேறை அடைவானா? ஓ! கேசவா, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் செய்த பிழை என்றே இதை நான் கருதுகிறேன்.(34, 35)

அவர் {யுதிஷ்டிரர்}, ஆசானை {துரோணரைக்} குறித்த அச்சமனைத்தையும் கைவிட்டு (தன் பக்கத்தில் இருந்த) சாத்யகியை அனுப்பியிருக்கிறார். வானுலாவும் பருந்தொன்று இறைச்சித் துண்டை நோக்கி செல்வதைப் போலவே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரைப் பிடிக்கவே துரோணர் எப்போதும் முயல்வார். ஆபத்துகள் அனைத்தில் இருந்தும் மன்னர் {யுதிஷ்டிரர்} விடுபட்டிருப்பாரா?” {என்றான் அர்ஜுனன்}.(36)

பூரிஸ்ரவஸின் கரத்தைத் துண்டித்த அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 141-சாத்யகியை எதிர்த்த பூரிஸ்ரவஸ்; சாத்யகியிடம் பேசிய பூரிஸ்ரவஸ்; பூரிஸ்ரவஸுக்கு சாத்யகியின் மறுமொழி; பூரிஸ்ரவஸுக்கும், சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; களைத்துப் போயிருந்தவனும், புத்துணர்வுடன் கூடிய பூரிஸ்ரவஸை எதிர்த்துப் போரிட்டவனுமானச் சாத்யகியைக் காக்க அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; பூரிஸ்ரவஸிடம் அடங்கிய சாத்யகி; பூரிஸ்ரவஸின் ஒரு கரத்தைத் துண்டித்த அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் வெல்லப்பட முடியாத அந்தச் சாத்வதன் {சாத்யகி} (அர்ஜுனனை நோக்கி) வருவதைக் கண்டவனும், சினமடைந்தவனுமான பூரிஸ்ரவஸ், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திடீரென அவனை {சாத்யகியை} நோக்கிச் சென்றான்.(1) பிறகு அந்தக் குரு குலத்தோன் {பூரிஸ்ரவஸ்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சிநி குலத்துக் காளையிடம் {சாத்யகியிடம்}, “நற்பேறின் நிமித்தமாகவே இன்று நீ என் பார்வை அடையும் தொலைவுக்குள் வந்திருக்கிறாய்.(2) எப்போதும் என் மனதில் கொண்டிருந்த விருப்பத்தை இந்தப் போரில் நான் இன்று அடையப் போகிறேன். நீ போரில் இருந்து ஓடாமலிருந்தால், நீ உயிருடன் தப்ப மாட்டாய்.(3) {நீ கொண்ட} வீரத்தில் எப்போதும் செருக்குடையவனான உன்னை இன்று போரில் கொன்று, ஓ! தாசார்ஹ குலத்தோனே {சாத்யகி}, குரு மன்னன் சுயோதனனை {துரியோதனனை} நான் மகிழச் செய்யப் போகிறேன்.(4)

என் கணைகளால் எரிக்கப்பட்டுப் போர்க்களத்தில் கிடக்கும் உன்னை வீரர்களான கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் இன்று சேர்ந்திருந்து காண்பார்கள்.(5) உன்னை இந்தப் படைக்குள் ஊடுருவச் செய்தவனான தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, என்னால் நீ கொல்லப்பட்டதைக் கேட்டு, வெட்கத்தில் மூழ்கப் போகிறான்.(6) இன்று நீ கொல்லப்பட்டு, குருதியால் மறைக்கப்பட்டு, பூமியில் கிடப்பதைப் பார்க்கையில், பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, என் ஆற்றலை அறிந்து கொள்வான்.(7) பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போரில், சக்ரன் மற்றும் பலியின் மோதலைப் போலவே உன்னுடன் {இப்போது} நேரப்போகும் இந்த மோதலை எப்போதுமே நான் விரும்பி வந்தேன்.(8) ஓ! சாத்வதா {சாத்யகி} இன்று நான் உனக்குப் பயங்கரப் போரைத் தருவேன். அப்போதுதான், உண்மையில் என் சக்தி, வலிமை மற்றும் ஆண்மை ஆகியவற்றை நீ புரிந்து கொள்வாய்.(9)

போரில் என்னால் கொல்லப்படும் நீ, ராமனின் தம்பியான லட்சுமணனால் கொல்லப்பட்ட ராவணனின் மகனை (இந்திரஜித்தைப்) போல இன்று யமனுலகை அடையப் போகிறாய்.(10) இன்று உன் கொலையைப் பார்க்கும் கிருஷ்ணன், பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோர், ஓ! மது குலத்தோனே {சாத்யகி}, மனத்தளர்ச்சியடைந்து போரைக் கைவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை.(11) கூரிய கணைகளால் இன்று உனக்கு மரணத்தை ஏற்படுத்தி, ஓ! மாதவா {சாத்யகி}, போரில் உன்னால் கொல்லப்பட்டோர் அனைவரின் மனைவிமாரையும் மகிழச் செய்யப் போகிறேன்.(12) என் பார்வையின் இலக்குக்குள் வந்த நீ, சிங்கத்தின் பார்வை தொலைவுக்குள் வந்த சிறு மானைப் போல என்னிடம் இருந்து தப்ப மாட்டாய்” என்றான் {பூரிஸ்ரவஸ்}.(13)

அவனது {பூரிஸ்ரவஸ்ஸின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட யுயுதானன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே அவனுக்குப் {பூரிஸ்ரவஸ்ஸுக்குப்} பதிலளிக்கும் வகையில், “ஓ! குரு குலத்தோனே {பூரிஸ்ரவஸ்ஸே}, போரில் நான் எப்போதும் அச்சங்கொண்டதில்லை.(14) உன் வார்த்தைகளால் மட்டுமே என்னை அச்சுறுத்துவதில் உன்னால் வெல்ல முடியாது. எவன் என்னை ஆயுதங்களை இழக்கச் செய்வதில் வெல்வானோ, அவனாலேயே போரில் என்னைக் கொல்ல முடியும்.(15) எவன் போரில் என்னைக் கொல்வானோ, அவன் இனி வரப்போகும் காலம் முழுவதும் (எதிரிகளைக்) கொன்று கொண்டிருப்பான் [1]. வீணான வார்த்தைகளைக் கொண்டு நீண்ட மூச்சுடன் தற்பெருமை பேசுபவது எதற்குப் பயன்படும்? நீ சொல்வதைச் செயலில் சாதிப்பாயாக.(16) கூதிர்காலத்துக் கார்முகில்களின் கர்ஜனையைப் போலவே உன் சொற்களும் கனியற்றவையாகவே தெரிகின்றன. ஓ! வீரா {பூரிஸ்ரவஸ்}, உன் முழக்கங்களைக் கேட்டு, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.(17) ஓ குரு குலத்தோனே {பூரிஸ்ரவஸ்} நீண்ட நாட்களாக உன்னால் விரும்பப்பட்ட அந்த மோதல் இன்று நடக்கட்டும். ஓ! ஐயா {பூரிஸ்ரவஸ்} உன்னுடனான மோதலை விரும்பும் என் இதயத்தால், தாமதத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(18) ஓ! இழிந்தவனே, உன்னைக் கொல்லாமல் நான் போரில் இருந்து திரும்பேன்” என்றான் {சாத்யகி}. இத்தகு வார்த்தைகளால் ஒருவரையொருவர் நிந்தித்துக் கொண்ட மனிதர்களில் காளையரான அவ்விருவரும், பெருங்கோபத்தால் தூண்டப்பட்டு, ஒருவரின் உயிரை மற்றவர் எடுக்க விரும்பி, ஒருவரையொருவர் போரில் தாக்கிக் கொண்டனர்.(19)பெரும் வலிமை கொண்ட அந்தப் பெரும் வில்லாளிகள் இருவரும், ஒருவரையொருவர் அறைகூவியழைத்து, பருவ காலத்தில் உள்ள பெண்யானைக்காக மதங்கொண்ட இரண்டு கோபக்கார யானைகள் மோதுவதைப் போலப் போரில் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(20) எதிரிகளைத் தண்டிப்பவர்களான பூரிஸ்ரவஸ் மற்றும் சாத்யகி ஆகிய இருவரும், மேகத்திரள்கள் இரண்டைப் போல ஒருவர் மீதொருவர் அடர்த்தியான கணைமாரிகளைப் பொழிந்தனர்.(21) அப்போது, அந்தச் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, வேகமாகச் செல்லும் கணைகளால் சிநியின் பேரனை {சாத்யகியை} மறைத்து, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, பின்னவனை {சாத்யகியைக்} கொல்லும் விருப்பத்தால் மீண்டும் அவனைப் {சாத்யகியைப்} பல கணைகளால் துளைத்தான்.(22)

பத்து கணைகளால் சாத்யகியைத் துளைத்த அந்தச் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, அந்தச் சிநிக்களின் காளைக்கு {சாத்யகிக்கு} அழிவை ஏற்படுத்தும் விருப்பத்தால் அவன் மீது கூரிய கணைகள் பலவற்றை ஏவினான். எனினும் சாத்யகி, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, தன் ஆயுதங்களின் சக்தியால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உண்மையில் பூரிஸ்ரவஸின் கணைகளில் எவையும் தன்னை அடையும் முன்பே அவை அனைத்தையும் ஆகாயத்திலேயே அறுத்தான். நற்குலத்தில் பிறந்தவர்களும், முறையே குருக்கள் மற்றும் விருஷ்ணிகள் ஆகியோரின் புகழை அதிகரித்தவர்களுமான அவ்விரு போர்வீரர்களும் இப்படியே ஒருவர் மீதொருவர் தங்கள் கணை மாரியைப் பொழிந்தனர். தங்கள் நகங்களைக் கொண்டு போரிடும் இரு புலிகள், அல்லது தங்கள் தந்தங்களைக் கொண்டு போரிடும் இரு பெரும் யானைகளைப் போன்றே அவர்கள், தேர்வீரர்கள் பயன்படுத்துபவையான கணைகளாலும், ஈட்டிகளாலும் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(23-26) ஒருவரையொருவர் அங்கங்களைச் சிதைத்துக் கொண்டு, தங்கள் காயங்களில் குருதிப் பெருக்கெடுத்த அந்தப் போர்வீரர்கள் இருவரும், தங்கள் உயிரையே பணயம் வைத்து சூதாடி, ஒருவரையொருவர் தடுத்துக் கொண்டும், ஒருவரையொருவர் குழப்பிக் கொண்டும் இருந்தனர்.(27)

சிறந்த சாதனைகளைக் கொண்டவர்களும், முறையாகக் குருக்கள் மற்றும் விருஷ்ணிகளின் புகழை அதிகரிப்பவர்களுமான அந்த வீரர்கள், யானைக் கூட்டங்களின் தலைமையானைகளில் இரண்டைப் போல இப்படியே ஒருவருடனொருவர் போரிட்டனர்.(28) உண்மையில், உயர்ந்த உலகங்களை அடைய ஆசைப்பட்ட போர்வீரர்களான அவ்விருவரும், பிரம்ம லோகத்தை விரைவில் அடைய விரும்பி ஒருவரையொருவர் எதிர்த்து முழங்கினர். உண்மையில் மகிழ்ச்சியில் நிறைந்திருந்த சாத்யகியும், சோமதத்தன் மகனும் {பூரிஸ்ரவஸும்}, திருதராஷ்டிரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தங்கள் கணைமாரிகளால் ஒருவரையொருவர் மறைக்கத் தொடங்கினர். அங்கே இருந்த மக்கள், அவ்விரு போர்வீரர்களுக்கு இடையில் நடந்த அந்த மோதல், பருவ காலத்தில் உள்ள பெண் யானைக்காக இரு தலைமை யானைகள் போரிடுவதைப் போலவே இருப்பதைக் கண்டனர் [2].(29-31)பிறகு அந்தத் தேரற்ற போராளிகள் ஒவ்வொருவரும் மற்றவரின் குதிரைகளைக் கொன்று, மற்றவரின் விற்களை அறுத்த பிறகு, வாள்களைக் கொண்டு அந்தப் பயங்கரப்போரில் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(32) அவர்கள், அழகியவையும், பெரியவையும், பிரகாசமானவையும், காளையின் தோலால் செய்யப்பட்டவையுமான இரண்டு அழகிய கேடயங்களை எடுத்துக் கொண்டும், உறையிலிருந்து இரு வாள்களை உருவிக் கொண்டும் போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.(33) எதிரிகளைக் கலங்கடிப்பவர்களும், சினத்தால் தூண்டப்பட்டவர்களுமான அவர்கள், மண்டலகதிகளைப் பின்பற்றியும், பிறவகைகளிலான முறையான நகர்வுகளைச் செய்தும், தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(34) வாள்களை ஏந்தி, பிரகாசமான கவசம் பூண்டு, மார்புக்கவசங்கள் மற்றும் அங்கதங்களால் {தோள்வளைகளால்} அலங்கரிக்கப்பட்டிருந்தவர்களான புகழ்பெற்ற அந்தப் போர்வீரர்கள் இருவரும், பல்வேறு வகைகளிலான நகர்வுகளை வெளிப்படுத்தினர்.(35) அவர்கள் சக்கரமாகச் சுழன்று, உயரக் குதித்து, பக்கவாட்டில் உந்தித் தள்ளி, முந்தித் தாவி, முன்னோக்கியும் மேல்நோக்கியும் விரைந்தனர் [3].(36) எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள், தங்கள் வாள்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அவர்கள் ஒவ்வொரும் மற்றவனின் தவறுகளுக்காக ஆவலாகக் காத்திருந்தனர். அழகாகத் தாவிய அவ்வீரர்கள் இருவரும், தங்கள் பயிற்சி, நகர்வு நளினம் மற்றும் திறம் ஆகியவற்றை வெளிக்காட்டினர்.(37) போர்வீரர்களில் முதன்மையான அவர்கள், அந்தப் போரில் திறம்பட ஒருவரையொருவர் குத்தத் தொடங்கினர்.(38) ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒருக்கணம் ஓய்வெடுத்தனர்.(39)அந்த மனிதர்களில் புலிகளான இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கள் ஒவ்வொருவரின் கேடயங்களையும் தங்கள் வாள்களால் துண்டு துண்டாக வெட்டி மற்போரில் ஈடுபட்டனர்.(40) அகன்ற மார்புகள் மற்றும் நீண்ட கரங்களைக் கொண்டவர்களும், மற்போரில் திறம் கொண்டவர்களுமான அவர்கள் இருவரும், பரிகாயுதங்களுக்கு ஒப்பான இரும்பு போன்ற தங்கள் கரங்களைக் கொண்டு ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(41) தங்கள் கரங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும், தங்கள் ஒவ்வொருவரின் கரங்களைப் பற்றிக் கொண்டும் இருந்த அவர்கள் தங்கள் கரங்களால் மற்றவரின் கழுத்தையும் பிடித்தனர்.(42) அப்படி அந்த வீரர்கள் போரிட்டுக் கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலைச்சாரலில் விழும் இடிக்கு ஒப்பாக அந்தப் போரில் அவர்களால் உண்டாக்கப்பட்ட ஒலி பயங்கரமான பேரொலியாக இருந்தது.(43)

முறைப்படி குருக்கள் மற்றும் சாத்வத குலங்களின் போர்வீரர்களில் முதன்மையானவர்களும், சிறப்புமிக்கவர்களுமான அவ்விருவரும், தங்கள் தந்தங்களின் முனைகளைக் கொண்டு ஒன்றோடொன்று மோதும் இரு யானைகள், அல்லது தங்கள் கொம்புகளைக் கொண்டு மோதும் இரு காளைகளைப் போலவே, சில நேரங்களில் ஒருவரையொருவர் கரங்களால் கட்டியும், சில நேரங்களில் தங்கள் தலைகளால் ஒருவரையொருவர் தாக்கியும், சில நேரங்களில் தங்கள் கால்களால் ஒருவரையொருவர் பின்னியும், சில நேங்களில் தங்கள் நகங்களால் ஒருவரையொருவர் கிள்ளியும், சில நேரங்களில் ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டியும், சில நேரங்களில் தங்கள் கால்களால் மற்றவரின் இடுப்பைச் சுற்றிப் பின்னியும், சில நேரங்களில் தரையில் உருண்டும், சில நேரங்களில் முன்னேறியும், சில நேரங்களில் பின்வாங்கியும், சிலநேரங்களில் ஒருவரையொருவர் அறைகூவி அழைத்தும், சில நேரங்களில் ஒருவரையொருவர் கீழே தூக்கி வீசியும், சில நேரங்களில் எழுந்து கொண்டும், சில நேரங்களில் உயரத் தாவிக் கொண்டும் இருந்தனர்.(44-46) உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கப் போராளிகளான அவ்விருவரும் அவ்வகை மோதல்களின் இயல்புக்குத் தகுந்த முப்பத்திரண்டு விதமான தனிப்பட்ட திறன்கள் மற்றும் செயல்கள் ஆகிய {செயல்திறன்கள்} அனைத்தையும் அந்தப் போரில் வெளிக்காட்டினர்.(47)

பூரிஸ்ரவஸுடனான மோதலில் அந்தச் சாத்வதனின் {சாத்யகியின்} ஆயுதங்கள் தீர்ந்து போன போது, அர்ஜுனனிடம் வாசுதேவன் {கிருஷ்ணன்}, “வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனும், தேரை இழந்தவனுமான சாத்யகி போரில் ஈடுபடுவதைப் பார்.(48) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அவன் {சாத்யகி}, உன்னைத் தேடியே பாரதப் படைகளைப் பிளந்து அதற்குள் நுழைந்தான். பெரும் சக்தி கொண்ட பாரத வீரர்கள் அனைவருடனும் அவன் போரிட்டான்.(49) வேள்விக்கொடைகளைப் பெருமளவில் அளிப்பவனான பூரிஸ்ரவஸ், அந்தப் போர்வீரர்களில் முதன்மையானவன் {சாத்யகி} சோர்வும், களைப்பும் அடைந்திருக்கும்போது மோதுகிறான். போரிடும் விருப்பம் கொண்ட பூரிஸ்ரவஸ், முன்னேறி வரும் சாத்யகியோடு [4] மோதப் போகிறான் {பீமனோடும் என்றிருக்கிறது}. ஓ! அர்ஜுனா, இம்மோதல் சமமற்றதாவே {நியாயமற்றதாகவே} இருக்கும்” என்றான் {கிருஷ்ணன்}.(50)அப்போது போரில் வெல்லப்பட முடியாத போர்வீரனான பூரிஸ்ரவஸ், சினத்தால் தூண்டப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மதங்கொண்ட எதிராளியைத் தாக்கும் மற்றொரு மதங்கொண்ட யானையைப் போலச் சாத்யகியை மூர்க்கமாகத் தாக்கினான் [5].(51) கோபத்தால் தூண்டப்பட்டுத் தங்கள் தேர்களிலிருந்த அந்த முதன்மையான தேர்வீரர்கள் இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் தங்கள் மோதலைக் கண்டு கொண்டிருந்த போதே போரிட்டனர் [6].(52)அப்போது வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணன், அர்ஜுனனிடம், “விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களில் புலியானவன் {சாத்யகி}, சோமதத்தன் மகனுக்கு {பூரிஸ்ரவஸுக்கு} அடங்குவதைப் பார்.(53) மிகக் கடினமான சாதனைகளை அடைந்த அவன் {சாத்யகி}, முயற்சியால் களைத்துப்போய்த் தன் தேரை இழந்தான். ஓ! அர்ஜுனா, உன் வீரச் சீடன் சாத்யகியைக் காப்பாயாக.(54) ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, மனிதர்களில் முதன்மையான அவன் {சாத்யகி}, வேள்விகளில் அர்ப்பணிப்புள்ள பூரிஸ்ரவஸுக்கு உன் நிமித்தமாக அடிபணியாதிருக்கும்படி பார்த்துக் கொள்வாயாக. ஓ !பலம் வாய்ந்தவனே {அர்ஜுனா}, தேவையானதை விரைந்து செய்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(55)

தனஞ்சயன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, “காட்டில் மதங்கொண்ட யானையொன்று வலிமைமிக்கச் சிங்கத்துடன் விளையாடுவதைப் போல அந்தக் குருக்களில் காளையும் {பூரிஸ்ரவஸும்}, அந்த விருஷ்ணிகளில் முதன்மையானவனும் {சாத்யகியும்} ஒருவருடனொருவர் விளையாடுவதைப் பார்” என்றான்.(56) பாண்டுவின் மகனான தனஞ்சயன் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போதே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பூரிஸ்ரவஸ் தீவிரமாக முயன்று, சாத்யகியைத் தாக்கி, அவனைத் தரையில் கிடத்தியதால், துருப்புகளுக்கு மத்தியில் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூச்சல்கள் எழுந்தன.(57,58) யானையை இழுத்துச் செல்லும் சிங்கத்தைப் போல, குரு குலத்தில் முதன்மையானவனும், வேள்விகளில் அபரிமிதமாகக் கொடையளிப்பவனுமான அந்தப் பூரிஸ்ரவஸ், அந்தச் சாத்வதர்களில் முதன்மையானவனை {சாத்யகியை} இழுத்துச் சென்ற போது, அந்தப் போரில் மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.(59)

பிறகு அம்மோதலில் தன் உறையில் இருந்து வாளை உருவிய பூரிஸ்ரவஸ், சாத்யகியின் தலைமுடியைப் பிடித்திழுத்து, தன் காலால் அவனது மார்பைத் தாக்கினான்.(60) பிறகு பூரிஸ்ரவஸ், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட சாத்யகியின் தலையை அவனது உடலில் இருந்து துண்டிக்க எத்தனித்தான். அப்போது அந்தச் சாத்வத வீரனின் {சாத்யகியின்} தலையானது, அதன் முடியை {குடுமியைப்} பிடித்திருந்த பூரிஸ்ரவஸின் கரத்தோடு சேர்ந்து கழியைச் சுற்றும் குயவனின் {மண் பாண்டம் செய்பவரின்} சக்கரம் போலச் சிறிது நேரம் வேகமாகச் சுழன்றது.(61,62)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சாத்வதன் {சாத்யகி}, போரில் பூரிஸ்ரவஸால் இப்படி இழுத்துச் செல்லப்படுவதைக் கண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} மீண்டும் அர்ஜுனனிடம், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களில் புலியும், உன் சீடனும், வில்லாளித்தன்மையில் {விற்திறமையில்} உனக்குச் சற்றும் குறைவில்லாதவனுமான அவன் {சாத்யகி}, சோமதத்தன் மகனுக்கு {பூரிஸ்ரவஸுக்கு} அடங்கிவிட்டான்.(64) ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இந்தப் பூரிஸ்ரவஸ், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட விருஷ்ணி வீரன் சாத்யகியை இப்படி மீறியிருப்பதால், பின்னவனின் {சாத்யகியின்} பெயரே பொய்யாகப் போகிறது [7]” என்றான் {கிருஷ்ணன்}.(65)வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அந்தப் போரில் பூரிஸ்ரவஸை மனதினால் வழிபட்டான்.(66) அவன் {அர்ஜுனன்} “குருக்களின் புகழை அதிகரிப்பவனான பூரிஸ்ரவஸ், விளையாட்டில் இழுப்பதைப் போலப் போரில் சாத்யகியை இழுக்கிறான் என்பதில் நான் மகிழ்கிறேன்.(67) விருஷ்ணி குல வீரர்களில் முதன்மையானவனான சாத்யகியைக் கொல்லாமல், பெரும் யானையை இழுத்துச் செல்லும் வலிமைமிக்கச் சிங்கத்தைப் போல இந்தக் குரு போர்வீரன் {பூரிஸ்ரவஸ்} அவனை {சாத்யகியை} இழுத்துச்செல்ல மட்டுமே செய்கிறான்” என்று நினைத்தான் {அர்ஜுனன்}.(68)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருதையின் {குந்தியின்} மகனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அர்ஜுனன், அந்தக் குரு {கௌரவப்} போர்வீரனை {பூரிஸ்ரவஸை} இப்படியே மனதால் பாராட்டிவிட்டு, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}(69), “ஓ! மாதவா {கிருஷ்ணா}, என் கண்கள் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} மீது நிலைத்திருந்ததால், என்னால் சாத்யகியைக் காண முடியவில்லை. எனினும், அந்த யாதவப் போர்வீரனுக்காக {சாத்யகிக்காக} நான் மிகக் கடினமான சாதனையையும் செய்வேன்” என்று மறுமொழி கூறினான்.(70)

வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்குப்} பணிந்து இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கூரிய க்ஷுரப்ரம் {கத்தி போன்ற தலை கொண்ட கணை} ஒன்றைக் காண்டீவத்தில் பொருத்தினான்.(71) பார்த்தனின் {அர்ஜுனனின்} கரங்களால் ஏவப்பட்டதும், ஆகாயத்தில் இருந்து சுடர்விட்டபடி விழும் கண்கவரும் விண்கல்லுக்கு ஒப்பானதுமான அந்தக் கணை, வாளைத் தன் பிடியில் கொண்டிருந்ததும், அங்கதத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுமான அந்தக் குரு போர்வீரனின் {பூரிஸ்ரவஸின்} கரத்தைத் துண்டித்தது” என்றான் {சஞ்சயன்}.(72)

பூரிஸ்ரவஸைக் கொன்ற சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 142-நியாயமற்ற காரியத்தைச் செய்ததாக அர்ஜுனனைக் கடிந்து கொண்ட பூரிஸ்ரவஸ்; தன் செயல்பாட்டை நியாயப்படுத்திய அர்ஜுனன்; அர்ஜுனனின் நியாயத்தைக் கேட்டு அமைதியடைந்த பூரிஸ்ரவஸ்; பூரிஸ்ரவஸுக்கு அருள் வழங்கிய கிருஷ்ணன்; பிராயோபவேசத்தில் அமர்ந்திருந்த பூரிஸ்ரவஸைக் கொன்ற சாத்யகி; தன் செய்கையை நியாயப்படுத்திய சாத்யகி…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அங்கதத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வாளைத் தன் பிடியில் கொண்டிருந்ததுமான (பூரிஸ்ரவஸின்) அந்தக் கரம் (இப்படி வெட்டப்பட்டு), அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் துயரத்தை அளிக்கும் வகையில் கீழே பூமியில் விழுந்தது.(1) உண்மையில், சாத்யகியின் தலையை வெட்ட இருந்த {பூரிஸ்ரவஸின்} அந்தக் கரம், {பூரிஸ்ரவஸின் கண்களுக்குக்} காணப்படாத அர்ஜுனனால் வெட்டப்பட்டு, ஐந்து தலை கொண்ட பாம்பொன்றைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(2) பார்த்தனால் {அர்ஜுனனால்} தான் திறனறுபட்டதைக் கண்ட அந்தக் குரு {கௌரவப்} போர்வீரன் {பூரிஸ்ரவஸ்}, சாத்யகியிடம் இருந்த பிடியைக் கைவிட்டுக் கோபத்தால் நிறைந்து பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} கடிந்து பேசினான்.(3)

பூரிஸ்ரவஸ் {அர்ஜுனனிடம்}, “ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, என்னால் காணப்படாதவனாகவும், என்னுடன் (போரில்) ஈடுபடாதவனுமாக இருந்த நீ, என் கரத்தை வெட்டியதால் ஈவிரக்கமற்ற கொடூரமான காரியத்தைச் செய்திருக்கிறாய்.(4) தர்மனின் அரசமகனான யுதிஷ்டிரனிடம், “பூரிஸ்ரவஸ், போரில் வேறொருவனுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் என்னால் கொல்லப்பட்டான்” என்று நீ சொல்ல வேண்டியிருக்காதா?(5) உயர் ஆன்ம இந்திரனாலோ, ருத்ரனாலோ, துரோணராலோ, கிருபராலோ உனக்கு இப்படிப்பட்ட ஆயுதப் பயன்பாடு கற்றுக் கொடுக்கப்பட்டதா?(6) இவ்வுலகில் யாவரையும் விட ஆயுதங்களின் பயன்பாடு குறித்த விதிகளை நன்கறிந்தவன் நீயே. அப்படியிருக்கையில், போரில் உன்னுடன் ஈடுபடாத ஒரு போர்வீரனின் கரத்தை ஏன் நீ வெட்டினாய்?(7) கவனிக்காதவனையோ, பயந்தவனையோ, தேரற்றவனாக ஆக்கப்பட்டவனையோ, உயிரை, அல்லது பாதுகாப்பை இரந்து {கெஞ்சிக்} கேட்பவனையோ, துயரில் வீழ்ந்தவனையோ நீதிமான்கள் ஒரு போதும் தாக்குவதில்லை.(8) அப்படியிருக்கையில், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இழிந்தவனுக்கே தகுந்ததும், பொல்லாதவனால் மட்டுமே செய்யப்படுவதுமான இந்தப் பாவம் நிறைந்த, மிகவும் தகுதியற்ற செயலை ஏன் நீ செய்தாய்?(9) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, மரியாதைக்குரிய ஒருவன், மரியாதைக்குரிய செயலை எளிதாகச் செய்துவிடுவான். எனினும், மதிப்பற்ற ஒரு செயலைச் செய்வது மதிப்புமிக்க ஒருவனுக்கு மிகக் கடினமாகும்.(10) யாருடன் ஒரு மனிதன் திரிகிறானோ, அவனது நடத்தையையே அவன் விரைவில் பிடித்துக் கொள்வான். ஓ! பார்த்தா, இதுவே உன்னில் காணப்படுகிறது.(11) நல்ல நடத்தையைக் கொண்டவனாக, சிறந்த நோன்புகளை நோற்றவனாக, அரசபரம்பரையைச் சேர்ந்தவனாக, அதிலும் குறிப்பாக குரு குலத்தில் பிறந்தவனாக இருப்பினும், க்ஷத்திரிய கடமைகளில் இருந்து எவ்வாறு நீ விலகினாய்?(12) விருஷ்ணி போர்வீரனுக்காக {சாத்யகிக்காக} நீ செய்த இந்த அற்பச் செயல் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} ஆலோசனைகளுக்கு இணக்கமாகவே செய்யப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. உன்னைப் போன்ற ஒருவனுக்கு இத்தகு செயல் பொருந்தாது.(13) வேறொருவனுடன் போரில் ஈடுபட்டுக் கவனமற்று இருக்கும் ஒருவனுக்கு, கிருஷ்ணனின் நண்பனைத் தவிர வேறு எவனால் இத்தகு குற்றத்தை இழைக்க முடியும்?(14) பாவச்செயல்களிலேயே எப்போதும் ஈடுபடுபவர்களான விருஷ்ணிகளும், அந்தகர்களும், நிந்திக்கத்தக்க நடத்தைக்கு இயல்பிலேயே அடிமையான தீய க்ஷத்திரியர்களாவர். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உனக்கு முன்மாதிரியாக அவர்களை ஏன் நீ கொண்டாய்? [1] [2]” என்றான் {பூரிஸ்ரவஸ்}.15-போரில் இப்படிக் கேட்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, பூரிஸ்ரவஸுக்கு மறுமொழியாக, “ஓ! தலைவா {பூரிஸ்ரவஸ்}, மூடத்தனமான இவ்வார்த்தைகள் யாவும் உன்னால் சொல்லப்படுவதால், உடல் பலவீனத்தினால் ஒருவனது அறிவும் சிதைகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது [3].(16) ரிஷிகேசனையும் {கிருஷ்ணனையும்}, என்னையும் நீ நன்றாக அறிந்தாலும், உன்னால் எவ்வாறு எங்களை இப்படிக் கடிந்து கொள்ள முடிகிறது? போர்விதிகளையும், சாத்திரங்களின் பொருள் அனைத்தையும் அறிந்த நான், பாவச்செயல் எதையும் செய்ய மாட்டேன்.(17) இதை நன்றாக அறிந்தும், என்னை நீ நிந்திக்கிறாய். தொண்டர்கள், சகோதரர்கள், தந்தைமார், மகன்கள், உறவினர்கள், சொந்தங்கள், தோழர்கள், நண்பர்கள் ஆகியோரால் சூழப்பட்டவர்களாகவே க்ஷத்திரியர்கள் பகைவரோடு போரிடச் செல்வார்கள்.(18) அப்படித் தங்களைப் பின்தொடர்வோரை (பின்தொடர்வோரின் பலத்தை) நம்பியே அவர்கள் போரிடவும் செய்வார்கள்.(19) அப்படியிருக்கையில், என் சீடனும், அன்புக்குரிய சொந்தக்காரனும், விடுவதற்கு அரிதான உயிரையே துச்சமாக மதித்து எங்களுக்காகப் போரிடுபவனுமான சாத்யகியை நான் ஏன் காக்கக் கூடாது? [4](20) ஓ! மன்னா {பூரிஸ்ரவஸ்}, போரில் வெல்லப்பட முடியாதவனான சாத்யகி என் வலக்கரமாவான்.-போருக்குச் செல்லும் ஒருவன் தன்னை மட்டுமே பாதுகாத்துக் கொள்வது தகாது.(21) ஓ! மன்னா {பூரிஸ்ரவஸ்}, வேறொருவனின் காரியத்தில் ஈடுபடும் ஒருவன், (அந்த வேறொருவனால்) பாதுகாக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட மனிதர்கள் பாதுகாக்கப்படுவதால், போரின் தொடர்ச்சியில் மன்னனும் பாதுகாக்கப்படுகிறான்.(22) பெரும்போரில், சாத்யகி கொல்லப்படப்போகும் தருணத்தில், (அவனைக் காக்க முயற்சி செய்யாமல்) நான் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தால், என்னுடைய அத்தகைய புறக்கணிப்பின் காரணமாக ஏற்படும் சாத்யகியின் மரணத்தால் நான் பாவத்தையே அடைவேன்.(23) நான் சாத்யகியைக் காத்ததற்காக என்னிடம் ஏன் நீ கோபம் கொள்கிறாய்? ஓ! மன்னா {பூரிஸ்ரவஸ்}, “வேறொருவனிடம் போரிட்டுக் கொண்டிருந்தாலும், உன்னால் நான் அங்கம் சிதைக்கப்பட்டேன்” என்று நீ என்னைக் கடிந்து கொள்கிறாய். அக்காரியத்தில் தவறாகத் தீர்மானித்தேன் என்றே நான் பதிலளிப்பேன்.

தேர்கள் மற்றும் யானைகள் நிரம்பியதும், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்கள் மிகுந்ததும், கடும் சிங்க முழக்கங்களை எதிரொலிப்பதும், அகன்ற கடலுக்கு ஒப்பானதுமான படைக்கு மத்தியில், சில நேரங்களில் என் கவசத்தை அசைத்துக் கொண்டும், சில நேரங்களில் என் தேரில் ஏறிச் சென்றும், சில நேரங்களில் வில்லின் நாணை இழுத்துக் கொண்டும், நான் என் எதிரிகளோடு போரிட்டுக் கொண்டிருந்தேன். ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கு மத்தியில், அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி} ஒரே ஒருவனுடன் மட்டுமே போரில் ஈடுபடுவது எப்படிச் சாத்தியம் [5]?பலருடன் போரிட்ட அந்தச் சாத்யகி, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரை வென்று களைத்துப் போயிருந்தான்.(24-28) அவனது விலங்குகளும் {குதிரைகளும்} களைத்திருந்தன. ஆயுதங்களால் பீடிக்கப்பட்டிருந்த அவனும் {சாத்யகியும்} உற்சாகமற்றவனாகவே இருந்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகியை அப்படிப்பட்ட சூழ்நிலையில் வென்று, அவனை உன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, உனது மேன்மையை நீ வெளிக்காட்ட முனைந்தாய்.(29) அந்தப் போரில் உன் வாளால் சாத்யகியின் தலையை வெட்டவும் நீ விரும்பினாய்.(30) அந்நிலைக்குக் குறைக்கப்பட்ட சாத்யகியை என்னால் அலட்சியமாகப் பார்க்க முடியாது [6]. (அடுத்தவனுக்குத் தீங்கிழைக்கையில்) உன்னைக் குறித்துக் {உன் பாதுகாப்பில்} கவனமில்லாமல் இருந்ததால், உன்னையே நீ நிந்தித்துக் கொள்ள வேண்டும். உண்மையில், ஓ! வீரா {பூரிஸ்ரவஸ்}, உன்னைச் சார்ந்த ஒருவனிடம் நீ எவ்வாறு நடந்து கொள்வாய்?” என்று கேட்டான் {அர்ஜுனன்}.(31)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படி (அர்ஜுனனால்) சொல்லப்பட்டவனும், வலிய கரங்கொண்டவனும், சிறப்பானவனும், வேள்விக்கம்பத்தை {யூபத்தைத்} தன் கொடியில் பொறித்திருந்தவனுமான பூரிஸ்ரவஸ், யுயுதானனை {சாத்யகியைக்} கைவிட்டு, பிராயம் என்ற நோன்பின்படி {பிராயோபவேசம் செய்து} [7] இறக்க விரும்பினான்.(32) பல நற்செயல்களால் புகழ்பெற்றவனான அவன் {பூரிஸ்ரவஸ்}, பிரம்ம லோகத்தை அடைய விரும்பி தன் இடக்கையால் அம்புப்படுக்கையைப் {கணைகளாலான ஆசனத்தைப்} பரப்பி, அவற்றைப் {அம்புகளைப்} பாதுகாக்கும் தெய்வத்தின் மீது கவனமாகத் தன் உணர்வுகளை நிலைக்கச் செய்தான்.(33) தன் பார்வையைச் சூரியனிலும், தூய்மையான தன் இதயத்தைச் சந்திரனிலும் நிலைக்கச் செய்து, பெரும் உபநிஷதத்தை (மஹா உபநிஷத் மந்திரங்களை) நினைத்த பூரிஸ்ரவஸ் யோகத்தை மேற்கொண்டு பேசுவதை நிறுத்தினான் [8].(34)அப்போது படைகள் அனைத்திலும் இருந்த மனிதர்கள் யாவரும் கிருஷ்ணனையும், தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} நிந்தித்து, மனிதர்களில் காளையான அந்தப் பூரிஸ்ரவஸைப் பாராட்டினர்.(35) நிந்திக்கப்பட்டாலும், அந்தக் கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} இருவரும் (இறந்து கொண்டிருக்கும் அந்த வீரனுக்கு {பூரிஸ்ரவஸுக்கு}) ஏற்பில்லாத எந்த ஒரு வார்த்தையையும் பேசவில்லை. யூபக்கொடி கொண்ட பூரிஸ்ரவஸும், தான் இப்படிப் புகழப்படுவதால் எந்த இன்பத்தையும் உணரவில்லை.(36) அப்போது, பல்குனன் என்றும் அழைக்கப்படும் பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, உமது மகன்கள் இவ்வகையில் பேசுவதைப் பொறுத்துக் கொள்ள இயலாதவனாகவும், அவர்களின் வார்த்தைகளையும், பூரிஸ்ரவஸின் வார்த்தைகளையும் மனத்தில் கொண்டும், துயரத்துடனும், கோபமற்ற இதயத்துடனும், அவர்கள் அனைவருக்கும் நினைவூட்டும்படி இவ்வார்த்தைகளைச் சொன்னான்.{37, 38) அவன் {அர்ஜுனன்}, “மன்னர்கள் அனைவரும், என் பெருநோன்பான {மகாவிரதமான} ‘எங்கள் தரப்பினர் எவரும் என் கணைகளின் எல்லைக்குள் உள்ள வரையில், அவர்களைக் கொல்வதில் எவராலும் வெல்ல முடியாது’ என்பதை {என்ற என் சபதத்தை} அறிவர்.(39) ஓ யூபக் கொடியோனே {பூரிஸ்ரவஸ்}, இதை நினைவுகூரும் நீ என்னை நிந்தித்தல் தகாது. அறநெறி எதுவென அறியாத ஒருவன், பிறரை நிந்திப்பது முறையாகாது.(40) போரில் நன்கு ஆயுதம் தரித்திருந்த நீ, (ஆயுதமற்ற) சாத்யகியை கொல்லப்போகும் தருணத்தில், நான் உனது கரத்தை வெட்டியது அறநெறிக்கு முரணானதல்ல.(41) ஆனால், ஓ! ஐயா {பூரிஸ்ரவஸ்}, ஆயுதமற்றவனும், தேரை இழந்தவனும், கவசம் நழுவியவனும், வெறும் பாலகனே ஆனவனுமான அபிமன்யுவின் கொலையை நேர்மையான எந்த மனிதன்தான் பாராட்டுவான்?” என்றான் {அர்ஜுனன்}.(42)

இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்ட பூரிஸ்ரவஸ் தன் தலையால் தரையைத் தொட்டு, (வெட்டப்பட்டிருந்த தன் வலக்கரத்தை) தன் இடக்கரத்தால் காணிக்கையளித்தான் {அர்ஜுனன் எதிரில் போட்டான்}.(43) கண்கவரும் பிரகாசத்தைக் கொண்டவனும், யூபக் கொடியோனுமான பூரிஸ்ரவஸ், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டுத் தன் தலையைத் தொங்கப் போட்டவாறே அமைதியாக இருந்தான்.(44) அப்போது அர்ஜுனன், “ஓ! சலனின் அண்ணனே, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரிடமோ, வலிமைமிக்கோர் அனைவரிலும் முதன்மையான அந்தப் பீமரிடமோ, நகுலனிடமோ, சகாதேவனிடமோ நான் கொண்டுள்ள அன்புக்கு இணையாகவே நான் உன்னிடமும் {அன்பு} கொண்டுள்ளேன்.(45) என்னாலும், சிறப்புமிக்கக் கிருஷ்ணனாலும் கட்டளையிடப்படும் நீ, உசீநரனின் மகனான சிபி எங்கே இருக்கிறானோ, அந்த நல்லோரின் உலகங்களுக்குச் செல்வாயாக” என்றான் {அர்ஜுனன்}.(46) வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, “வேள்விகளையும், அக்னிஹோத்திரங்களையும் நீ தொடர்ச்சியாகச் செய்திருக்கிறாய். எனவே, காந்தியால் எப்போதும் சுடர்விடுவதும், பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட முதன்மையான தேவர்களாலும் விரும்பப்படுவதுமான என் தூய உலகங்களுக்குத் தாமதமில்லாமல் சென்று, எனக்கு இணையானவனாகி, கருடனால் சுமக்கப்படுவாயாக” என்றான்.(47)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “சோமதத்தன் மகனால் {பூரிஸ்ரவஸால்} விடுவிக்கப்பட்ட சிநியின் பேரன் {சாத்யகி}, எழுந்திருந்து, தன் வாளை உருவி கொண்டு, பூரிஸ்ரவஸின் சிரத்தைக் கொய்ய விரும்பினான்.(48) உண்மையில், வேள்விகளில் அபரிமிதமாகக் கொடையளித்தவனும், போரில் உணர்வுகள் அற்றுப் போனவனும், பாண்டுவின் மகனால் முன்பே கிட்டத்தட்ட கொல்லப்பட்டவனும், வெட்டப்பட்ட கையுடன் அமர்ந்திருந்தவனும், துதிக்கையற்ற யானைக்கு ஒப்பாக இருந்தவனும், சலனின் அண்ணனுமான பாவமற்ற அந்தப் பூரிஸ்ரவஸைச் சாத்யகி கொல்ல விரும்பினான்.(49) போர்வீரர்கள் அனைவரும் (அவனது நோக்கத்திற்காகப்) அவனை உரக்க நிந்தித்தனர். படைவீரர்கள் மறுத்துக் கூச்சலிட்டுக் கொண்டிருந்த போதும், கிருஷ்ணன், உயர் ஆன்ம பார்த்தன் {அர்ஜுனன்}, பீமன், (அர்ஜுனனுடைய தேரின்) இருசக்கரங்களையும் பாதுகாத்தவர்கள் (யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ்), அஸ்வத்தாமன், கிருபர், கர்ணன், விருஷசேனன் ஆகியோராலும், சிந்துக்களின் ஆட்சியாளனாலும் {ஜெயத்ரதனாலும்} கூடத் தடுக்கப்பட்ட போதிலும், அறிவை இழந்தவனான சாத்யகி, நோன்பை நோற்றுக் கொண்டிருந்த பூரிஸ்ரவஸைக் கொன்றான்.(50-52) உண்மையில், பார்த்தனால் {அர்ஜுனனால்} கை அறுபட்டவனும், தன் ஆன்மாவை உடலில் இருந்து விடுவிக்கப் பிராயத்தில் {பிராயம் என்ற நோன்பில்} அமர்ந்திருந்தவனுமான அந்தக் குரு போர்வீரனின் தலையைத் தன் வாளால் அறுத்தான் சாத்யகி.(53)

பார்த்தனால் முன்பே கிட்டத்தட்ட கொல்லப்பட்டவனான அந்தக் குருகுலத்தைத் தழைக்க வைத்தவனை {பூரிஸ்ரவஸைக்} கொன்றதற்காகச் சாத்யகியைப் போர்வீரர்கள் மெச்சவில்லை.(54) அந்தப் போரில் சக்ரனை {இந்திரனைப்} போன்ற பூரிஸ்ரவஸ், பிராய நோன்பை நோற்று அமர்ந்திருக்கையில் கொல்லப்பட்டதைக் கண்டும், அவனால் சாதிக்கப்பட்ட செயல்களால் வியப்படைந்தும், சித்தர்கள், சாரணர்கள், அங்கே இருந்த மனிதர்கள், ஏன் தேவர்களும் கூட அவனை {பூரிஸ்ரவஸைப்} புகழத் தொடங்கினர்.(55) உமது வீரர்களும் இக்காரியத்தை வாதிட்டுக் கொண்டே, “இது விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} தவறன்று. ஏற்கனவே விதிக்கப்பட்டதே நடந்திருக்கிறது. எனவே, நாம் கோபமடைய வேண்டாம். கோபமே மனிதர்களின் கவலைகளுக்குக் காரணமாக இருக்கிறது.(56,57) விருஷ்ணி வீரனால் {சாத்யகியால்} பூரிஸ்ரவஸ் கொல்லப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. இது {இக்குற்றம்} யாருடையது, அல்லது யாருடையதில்லை என்று ஆராய்வது பயனற்றதாகும். சாத்யகியே போரில் பூரிஸ்ரவஸின் மரணத்திற்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று படைப்பாளன் {பிரம்மன்} விதித்திருக்கிறான்” என்றனர்.(58)

சாத்யகி, “பாவிகளான கௌரவர்களே, நீதி {அறம் / தர்மம்} என்ற ஆடையை மேலுக்குப் போர்த்திக் கொண்டு, இந்தப் பூரிஸ்ரவஸ் கொல்லப்படத்தகாதவன் என்று என்னிடம் நீங்கள் அறச்சொற்களில் {தர்ம வாதங்கள்} பேசுகிறீர்கள்.(59) எனினும், ஆயுதங்களை இழந்திருந்த பாலகனான சுபத்திரையின் மைந்தனை {அபிமன்யுவை} நீங்கள் கொன்ற போது உங்கள் நீதி {அறம்} எங்கே சென்றது?(60) ‘போரில், உயிரோடு என்னைக் கீழே தூக்கிப் போட்டுச் சினத்துடன் தன் காலால் எவன் என்னைத் தாக்குவானோ, அவன் தவத்தைச் செய்பவனாகவே இருப்பினும், அந்தப் பகைவன் என்னால் கொல்லப்படுவான்’ என நான் ஒரு குறிப்பிட்ட அளவு அகந்தையோடு சபதம் செய்திருக்கிறேன்.(61) கைகளோடும், கண்களோடும், முழுவதும் நலமாக மோதலில் போராடிக் கொண்டிருந்த என்னை இறந்தவன் என்றே நீங்கள் கருதினீர்கள். அஃது உங்கள் மூடத்தனமே. குருக்களில் காளையரே, என்னால் சாதிக்கப்பட்ட பூரிஸ்ரவஸின் படுகொலை முற்றிலும் முறையானதே. எனினும் பார்த்தர் {அர்ஜுனர்}, என் மீது கொண்ட பற்றாலும், (தன் தரப்பில் உள்ள அனைவரையும் பாதுகாக்கும்படி) தான் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றும்பொருட்டும் வாளைப் பிடித்திருந்த இவனது {பூரிஸ்ரவஸின்} கரத்தை வெட்டி என் புகழைக் களவாடிவிட்டார்.(64) எது விதிக்கப்பட்டுள்ளதோ அது நடக்கவே வேண்டும். இங்கே விதியே வேலை செய்கிறது. போர் நடந்து கொண்டிருக்கும்போதே பூரிஸ்ரவஸ் கொல்லப்பட்டிருக்கிறான். {இதில்} நான் என்ன பாவத்தை இழைத்துவிட்டேன்?(65) பழங்காலத்தில் பூமியில் வால்மிகி “ஓ! குரங்கே, பெண்கள் கொல்லப்படக்கூடாது என நீ சொல்கிறாய்.(66) எனினும், மனிதர்கள் எப்போதும் எதிரிகளுக்கு வலியை {துன்பத்தைக்} கொடுப்பதை உறுதியான கவனத்துடன் {பாதுகாப்புடன்} எக்காலத்திலும் சாதிக்க வேண்டும்” என இவ்வரிகளைப் பாடியுள்ளார்” என்றான் {சாத்யகி} [9].(67)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “சாத்யகி இவ்வார்த்தைகளைப் பேசிய பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களிலோ, கௌரவர்களிலோ எவரும் எதையும் பேசவில்லை. மறுபுறம் அவர்கள் பூரிஸ்ரவஸை மனத்தால் புகழ்ந்தனர்.(68) காட்டில் வாழும் தவசிக்கோ, பெரும் வேள்வியில் மந்திரங்களால் தூய்மையடைந்த ஒருவனுக்கோ ஒப்பானவனும், ஆயிரக்கணக்கான தங்க நாணயங்களைக் கொடையாக அளித்தவனுமான சிறப்புமிக்கச் சோமதத்தன் மகனின் {பூரிஸ்ரவஸின்} படுகொலையை எவரும் மெச்சவில்லை.(69) அழகிய நீலக் குழல்களால் அருளப்பட்டதும், புறாக்களைப் போலச் சிவந்த கண்களைக் கொண்டதுமான அவ்வீரனின் {பூரிஸ்ரவஸின்} தலையானது, குதிரை வேள்வியில் {அஸ்வமேதயாகத்தில்} அறுக்கப்பட்டு வேள்விப்பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் குதிரையின் தலையைப் போலத் தெரிந்தது [10].(70) தன் ஆற்றலாலும், ஆயுத முனையில் தான் அடைந்த மரணத்தாலும் புனிதமடைந்தவனும், எவ்வரத்துக்கும் தகுந்தவனும், வரங்களை அளிப்பவனுமான பூரிஸ்ரவஸ், அந்தப் பெரும்போரில் தன் உடலைத் துறந்து, தன் அறங்களால் {நற்பண்புகளால்} ஆகாயத்தை நிறைத்தபடியே உயர்ந்த உலகங்களுக்குச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(71)

தேவகியின் சுயம்வரத்தால் ஏற்பட்ட பகை! – துரோண பர்வம் பகுதி – 143-பூரிஸ்ரவஸிடம் சாத்யகி அடைந்த தோல்வியின் காரணத்தை விசாரித்த திருதராஷ்டிரன்; தேவகியின் சுயம்வரத்தில் சிநியால் அவமதிக்கப்பட்ட சோமதத்தன்; சிநியின் வழித்தோன்றலைத் தன் வழித்தோன்றல் அவமதிக்க மகாதேவனிடம் வரம் பெற்ற சோமதத்தன்; விருஷ்ணி வீரர்களின் புகழைச் சொன்ன சஞ்சயன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “துரோணர், ராதையின் மகன் {கர்ணன்}, விகர்ணன், கிருதவர்மன் ஆகியோரால் வெல்லப்படாதவனும், போரில் எப்போதும் தடுக்கப்படாதவனும், யுதிஷ்டிரனிடம் உறுதியளித்துவிட்டுக் கௌரவத் துருப்புகளின் கடலைக் கடந்தவனுமான வீரச் சாத்யகி, குரு போர்வீரனான பூரிஸ்ரவசால் அவமதிக்கப்பட்டு, பலவந்தமாக எவ்வாறு தரையில் தூக்கி வீசி எறியப்பட்டான்?” என்று கேட்டான்.(1, 2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் சிநியின் பேரனின் {சாத்யகியின்} தோற்றத்தையும், பூரிஸ்ரவஸ் எவ்வாறு தோன்றினான் என்பதையும் கேட்பீராக. இஃது உமது ஐயங்களை விளக்கும்.(3) அத்ரி, சோமனை மகனாகக் கொண்டார். சோமனின் மகன் புதன் என்று அழைக்கப்பட்டான். புதனுக்கு, பெரும் இந்திரனின் காந்தியைக் கொண்டவனும், புரூரவஸ் என்று அழைக்கப்பட்டவனுமான ஒரு மகன் இருந்தான்.(4) புரூரவஸுக்கு ஆயுஷ் என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். ஆயுஷ், நகுஷனை மகனாகக் கொண்டான். நகுஷன், தேவர்களுக்கு இணையான அரசமுனியான யயாதியைத் தன் மகனாகக் கொண்டான்.(5) யயாதி, தேவயானியின் மூலம் யதுவைத் தன் மூத்த மகனாகக் கொண்டான். இந்த யதுவின் குலத்தில் தேவமீடன் [1] என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான்.(6) யது குலத்தின் தேவமீடனுக்கு மூவுலகங்களிலும் புகழப்பட்ட சூரன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். சூரன், மனிதர்களில் முதன்மையானவனும், கொண்டாடப்படுபவனுமான வசுதேவனைத் தன் மகனாகக் கொண்டான்.(7) விற்திறனில் முதன்மையான சூரன், போரில் கார்த்தவீரியனுக்கு இணையானவனாக இருந்தான். அந்தச் சூரனின் குலத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரனின் பலத்துக்கு இணையான சிநி பிறந்தான்.(8)அந்த நேரத்தில்தான், ஓ! மன்னா {திருதராஸ்டிரரே}, க்ஷத்திரியர்கள் அனைவரும் இருந்த, உயர் ஆன்ம தேவகனுடைய மகளின் {தேவகியின்} சுயம்வரம் நடந்தது.(9) அந்தச் சுயம்வரத்தில் மன்னர்கள் அனைவரையும் வென்ற சிநி, வசுதேவனுக்காக இளவரசி தேவகியைத் தன் தேரில் விரைவாகக் கடத்திச் சென்றான்.(10) இளவரசி தேவகியை சிநியின் தேரில் கண்டவனும், மனிதர்களில் காளையும், துணிச்சல்மிக்கவனும், வலிமையும், சக்தியும் கொண்டவனுமான சோமதத்தனால் அந்தக் காட்சியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(11) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விருவருக்கும் இடையில் அரை நாள் நீடித்ததும், பார்ப்பதற்கு அழகானதும், அற்புதமானதுமான போரொன்று நடந்தது. வலிமைமிக்க அவ்விரு மனிதர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரானது மற்போர் மோதலாக இருந்தது. மனிதர்களில் காளையான சோமதத்தன், சிநியால் பலவந்தமாகப் பூமியில் தூக்கி வீசப்பட்டான்.(12) தன் வாளை உயர்த்தி, அவனது முடியைப் பற்றிய சிநி, சுற்றிலும் பார்வையாளர்களாக நின்றுகொண்டிருந்த ஆயிரக்கணக்கான மன்னர்களுக்கு மத்தியில், தன் எதிரியை {சோமதத்தனைத்} தன் காலால் தாக்கினான் {மிதித்தான்}.(13) பிறகு இறுதியாகக் கருணையால் அவன் {சிநி}, “பிழைப்பாயாக” என்று சொல்லி அவனை {சோமதத்தனை} விட்டான்.(14)

சிநியால் அந்நிலைக்குக் குறைக்கப்பட்ட சோமதத்தன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கோபவசப்பட்டு, மகாதேவனின் அருளை வேண்டி, அவனுக்குத் தன் துதிகளைச் செலுத்தத் தொடங்கினான். வரமளிக்கும் தெய்வங்கள் அனைத்திலும் பெரும் தலைவனான மகாதேவன் {சிவன்}, அவனிடம் {சோமதத்தனிடம்} மனம் நிறைந்து, அவன் விரும்பிய வரத்தை வேண்டும்படி கேட்டுக் கொண்டான். அரசனான சோமதத்தன் பிறகு பின்வரும் வரத்தை வேண்டினான்,(16) அஃதாவது, “ஓ! தெய்வீகத் தலைவா {மகாதேவா}, ஆயிரக்கணக்கான மன்னர்களுக்கு மத்தியில் சிநியின் மகனைத் தாக்கி, போரில் அவனைத் தன் காலால் தாக்கும் ஒரு மகனை நான் விரும்புகிறேன்” என்றான்.(17) சோமதத்தனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தெய்வம் {சிவன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அங்கேயே அப்போதே மறைந்துவிட்டான்.(18) அவ்வரக் கொடையின் விளைவாக, அதன் தொடர்ச்சியாக, மிக உயர்ந்த தர்ம சிந்தனையுள்ள பூரிஸ்ரவஸை மகனாக அடைந்தான், இதன் காரணமாகவே, சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, சிநியின் வழித்தோன்றலை {சாத்யகியைப்} போரில் தூக்கி வீசி, மொத்த படையின் கண்களுக்கு எதிராகவே அவனைத் தன் காலால் தாக்கினான் {மிதித்தான்}.(19) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் கேட்டது குறித்து நான் இப்போது உமக்குச் சொல்லிவிட்டேன்.(20)

உண்மையில், அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, மனிதர்களில் முதன்மையானோராலும் கூட வெல்லப்பட்ட முடியாதவனே. விருஷ்ணி வீரர்கள் அனைவரும், போரில் துல்லியமான குறி கொண்டவர்களாவர், மேலும் அவர்கள் போர்க்கலையின் அனைத்து வழிமுறைகளையும் அறிந்தவர்களுமாவர்.(21) அவர்கள் தேவர்களையும், தானவர்களையும், கந்தர்வர்களையும் வெல்பவர்களாவர். அவர்கள் ஒருபோதும் கலக்கமடைவதில்லை. அவர்கள் தங்கள் சொந்த சக்தியை நம்பியே எப்போதும் போரிடுபவர்களாவர். அவர்கள் ஒருபோதும் பிறரைச் சார்ந்திருப்பதில்லை.(22) ஓ! தலைவரே {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் விருஷ்ணிகளுக்கு இணையாக எவரும் காணப்படவில்லை. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, விருஷ்ணிகளின் வலிமைக்கு இணையானவர்களாக ஒருவரும் இருந்ததுமில்லை, இருக்கவும் இல்லை, இருக்கப் போவதும் இல்லை.(23) அவர்கள் தங்கள் சொந்தங்களை ஒரு போதும் அவமதிப்பதில்லை. வயதால் மதிப்புடையவர்களின் கட்டளைகளுக்கு அவர்கள் எப்போதும் கீழ்ப்படிபவர்களாகவே இருக்கின்றனர்.

தேவர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், உரகர்களும், ராட்சசர்களும் கூட விருஷ்ணி வீரர்களை வெல்ல முடியாது எனும்போது, போரில் மனிதர்களைக் குறித்து என்ன சொல்லப்படமுடியும்?(24) பிராமணர்கள், அல்லது தங்கள் ஆசான்கள், அல்லது தங்கள் சொந்தங்களின் உடைமைகளில் அவர்கள் ஒருபோதும் ஆசை கொண்டதில்லை.(25) துயர்மிக்க எந்தச் சந்தர்ப்பத்திலாவது அவர்களுக்கு உதவி செய்வோரின் உடைமைகளிலும் அவர்கள் ஒருபோதும் ஆசை கொண்டதில்லை. பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புடனும், பேச்சில் உண்மையுடனும் உள்ள அவர்கள்,செல்வந்தர்களாக இருப்பினும் ஒருபோதும் செருக்கை வெளிக்காட்டுவதில்லை.(26) 

பலவான்களையும் பலவீனர்களாகக் கருதும் விருஷ்ணிகள், அவர்களைத் துயரங்களில் இருந்து மீட்கிறார்கள். தேவர்களுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் விருஷ்ணிகள் சுயக்கட்டுப்பாடு மற்றும் தர்ம சிந்தனை கொண்டவர்களாகவும், செருக்கில் இருந்து விடுபட்டவர்களாகவும் இருக்கின்றனர்.(27) இதன் காரணமாகவே விருஷ்ணிகளின் ஆற்றல் ஒருபோதும் கலங்கடிக்கப்படுவதில்லை. ஒரு மனிதன் மேரு மலைகளை அகற்றிவிடலாம், அல்லது பெருங்கடலையே கூடக் கடந்து விடலாம்.(28) ஆனால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} விருஷ்ணிகளிடம் மோதி, அவர்களை மீறுதல் எவனாலும் முடியாது. ஓ! தலைவரே {திருதராஷ்டிரரே}, எதைக் குறித்து உமக்கு ஐயங்கள் இருந்தனவோ, அதைக் குறித்த அனைத்தையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன். எனினும், ஓ! குருக்களின் மன்னா, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கைகளின் விளைவாகவே இவை யாவும் நடைபெறுகின்றன” {என்றான் சஞ்சயன்}.(29)

கர்ணனைக் காத்த அஸ்வத்தாமன்! – துரோண பர்வம் பகுதி – 144-ஜெயத்ரதனின் தேரை நோக்கி முன்னேறிய அர்ஜுனன்; ஜெயத்ரதனைப் பாதுகாக்கக் கர்ணனைத் தூண்டிய துரியோதனன்; அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்ட ஜெயத்ரதன் உள்ளிட்ட கௌரவர்கள்; அர்ஜுனனுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான கடும் மோதல்; கர்ணனைக் குதிரைகளற்றவனாக, தேரற்றவனாக, சாரதியற்றவனாக ஆக்கிய அர்ஜுனன்; கர்ணனைக் காத்த அஸ்வத்தாமன்; தன் எதிரிகள் அனைவரையும் தடுத்துப் பேரழிவை ஏற்படுத்திய அர்ஜுனன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அந்தச் சூழ்நிலையில் குரு போர்வீரனான பூரிஸ்ரவஸ் கொல்லப்பட்ட பிறகு, ஓ! சஞ்சயா, எவ்வாறு போர் நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான்.(1)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பூரிஸ்ரவஸ் மறு உலகத்திற்குச் சென்ற பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், வாசுதேவனிடம்,(2) “ஓ! கிருஷ்ணா, குதிரைகளைப் பெரும் வேகத்தில் தூண்டி மன்னன் ஜெயத்ரதன் இருக்குமிடத்திற்கு என்னை அழைத்துச் செல்வாயாக. ஓ! பாவமற்றவனே {கிருஷ்ணா}, என் சபதத்தை உண்மையாக்குவதே உனக்குத் தகும்.(3) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, சூரியன் அஸ்த மலைகளை நோக்கி வேகமாகச் செல்கிறான். ஓ! மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, இந்தப் பெரும் பணியை நான் அடைய வேண்டும். மேலும் சிந்துக்களின் ஆட்சியாளனோ {ஜெயத்ரதனோ}, குரு படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரால் பாதுகாக்கப்படுகிறான். எனவே, ஓ! கிருஷ்ணா, சூரியன் மறைவதற்குள் ஜெயத்ரதனைக் கொல்லும் வகையில் குதிரைகளைத் தூண்டி, என் சபதத்தை உண்மையாக்குவாயாக” என்று சொல்லி {கிருஷ்ணனைத்} தூண்டினான்.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன், கர்ணன், விருஷசேனன், மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, அஸ்வத்தாமன், கிருபர் போன்ற குரு {கௌரவப்} படையின் தலைவர்கள் பலர், எவனுடைய கணைகள் எப்போதும் கலங்கடிக்கப்பட்டதில்லையோ, எவன் பெரும் வேகம் கொண்ட குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் செல்கிறானோ அந்த அர்ஜுனனை நோக்கி வேகமாக விரைந்தனர். எனினும் பீபத்சு {அர்ஜுனன்}, தன் எதிரில் நின்று கொண்டிருந்த சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அடைந்து, அவன் மீது தன் பார்வையைச் செலுத்தி, கோபத்தால் சுடர்விட்ட தனது கண்களால் அவனை எரிக்கப்போவது போலத் தெரிந்தான்.(4-9)

அப்போது மன்னன் துரியோதனன், ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} விரைவாகப் பேசினான். உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் சுயோதனன் {துரியோதனன்}, கர்ணனிடம்,(10,11) “ஓ! விகர்த்தனன் மகனே {கர்ணா}, இறுதியாகப் போருக்கான அந்தக் காலம் வந்துவிட்டது. ஓ! உயர் ஆன்மாவே, உன் வலிமையை வெளிப்படுத்துவாயாக. ஓ! கர்ணா, அர்ஜுனனால் ஜெயத்ரதன் கொல்லப்படாதவாறு செயல்படுவாயாக.(12) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பகல் முடியப் போகிறது. எதிரியைக் கணை மேகங்களால் தாக்குவாயாக. பகல் பொழுது முடிந்தால், ஓ! கர்ணா, நிச்சயம் வெற்றி நமதே.(13) சூரியன் மறைவது வரை சிந்துக்களின் ஆட்சியாளன் பாதுகாக்கப்பட்டால், பிறகு சபதம் பொய்யாக்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்} சுடர்மிக்க நெருப்பில் நுழைவான்.(14)

பிறகு, ஓ! கௌரவங்களை அளிப்பவனே {கர்ணா}, அர்ஜுனனின் சகோதரர்களால், அர்ஜுனன் இல்லாத உலகில் ஒருக்கணமும் வாழ இயலாது.(15) பாண்டுவின் மகன்கள் இறந்ததும், ஓ! கர்ணா, மலைகள், நீர்நிலைகள், காடுகளுடன் கூடிய மொத்த பூமியையும், நம் தரப்பில் எந்த முள்ளும் இல்லாமல் நான் அனுபவிக்கலாம்.(16) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, எதைச் செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது என்பதை உறுதி செய்து கொள்ளாமலே, போரில் இச்சபதத்தைச் செய்த பார்த்தன் {அர்ஜுனன்}, தவறான வழியைத் தீர்மானித்ததால் விதியாலேயே பீடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.(17) ஓ! கர்ணா, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் அழிவுக்காகவே ஜெயத்ரதனைக் கொல்வது குறித்த இந்தச் சபதத்தைச் செய்திருக்கிறான் என்பதில் ஐயமில்லை.(18)

ஓ! ராதையின் மகனே {கர்ணா}, நீ உயிரோடிருக்கையில், சிந்துக்களின் ஆட்சியாளனைச் சூரியன் அஸ்த மலைகளை அடைவதற்கு முன் பல்குனனால் {அர்ஜுனனால்} எவ்வாறு கொல்ல முடியும்?(19)

மத்ர மன்னனாலும், சிறப்புமிக்கக் கிருபராலும் ஜெயத்ரதன் பாதுகாக்கப்படும்போது, பின்னவனை {ஜெயத்ரதனைத்} தனஞ்சயனால் {அர்ஜுனனால்} எவ்வாறு கொல்ல முடியும்?(20)

துரோணராலும், என்னாலும், துச்சாசனனாலும் பாதுகாக்கப்படும் ஜெயத்ரதனை அடைய விதியால் தூண்டப்பட்டவனாகத் தெரியும் பீபத்சுவால் {அர்ஜுனனால்} எவ்வாறு முடியும்?(21)

போரில் ஈடுபடும் வீரர்கள் பலராவர். சூரியனோ வானத்தின் கீழே சாய்கிறான். ஓ! கௌரவங்களை அளிப்பவனே {கர்ணா}, பார்த்தனால் {அர்ஜுனனால்} போரில் ஜெயத்ரதனை நெருங்கக்கூட முடியாது.(22)

எனவே, ஓ! கர்ணா, என்னோடும், துணிவும், வலிமையும் மிக்கப் பிற தேர்வீரர்களோடும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, கிருபர் ஆகியோரோடும் சேர்ந்து, பெரும் உறுதியோடும், தீர்மானத்தோடும் முயற்சி செய்து போரில் பார்த்தனோடு {அர்ஜுனனோடு} போரிடுவாயாக” என்றான் {துரியோதனன்}.(23)

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இப்படி உமது மகனால் சொல்லப்பட்ட ராதையின் மகன் {கர்ணன்}, குருக்களில் முதன்மையான துரியோதனனிடம் இவ்வார்த்தைகளை மறுமொழியாகக் கூறினான்:(24) “மூர்க்கமாகத் தாக்கவல்லவனும், துணிவுமிக்க வில்லாளியுமான பீமசேனனின் தொடர்ச்சியான கணைமாரியால் போரில் எனது உடல் ஆழமாகத் துளைக்கப்பட்டிருக்கிறது. ஓ! கௌரவங்களை அளிப்பவனே {துரியோதனா}, என்னைப் போன்ற ஒருவன் இங்கே இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்னும் நான் போரில் இருக்கிறேன்.(25, 26) பீமசேனனின் பலமிக்கக் கணைகளால் எரிக்கப்பட்ட என் அங்கங்கள் அனைத்தும் சித்திரவதையை அனுபவிக்கின்றன. எனினும், இவையாவும் இருந்தாலும், நான் என் சக்திகளில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரிடுவேன். என் வாழ்வே {நான் வாழ்வதே} உனக்காகத்தான்.(27) பாண்டுவின் மகன்களில் முதன்மையான இவன் {அர்ஜுனன்}, சிந்துக்களின் ஆட்சியாளனைக் கொல்லாத வகையில் நான் சிறப்பாக முயற்சி செய்வேன். என் கூரிய கணைகளை நான் ஏவிப் போரிடும் வரையில், தன் இடது கையாலும் வில்லை வளைக்கவல்ல வீரத் தனஞ்சயனால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அடைவதில் வெல்ல முடியாது.(28) ஓ! குரு குலத்தோனே {துரியோதனா}, உன்னிடம் அன்பும் பற்றும் கொண்டவனும், எப்போதும் உனது நன்மையை வேண்டுபவனுமான ஒருவன் என்னவெல்லாம் செய்வானோ, அவை அனைத்தும் என்னால் செய்யப்படும்.(29) வெற்றியைப் பொறுத்தவரை, அது விதியைப் பொறுத்தே அமையும். இன்றைய போரில் நான், ஓ! மன்னா {துரியோதனா}, சிந்துக்களின் ஆட்சியாளனுக்காகவும் {ஜெயத்ரதனுக்காகவும்}, உனது நன்மையை அடைவதற்காகவும் என்னால் முடிந்த மட்டும் முயல்வேன்.(30) எனினும், வெற்றியானது விதியைப் பொறுத்தே அமையும். ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, என் ஆண்மையைச் சார்ந்து உனக்காக நான் இன்று அர்ஜுனனுடன் போரிடுவேன்.(31) எனினும், வெற்றியானது விதியைப் பொறுத்தே அமையும். ஓ குருக்களின் தலைவா {துரியோதனா}, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் எனக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெறப்போகும் கடும்போரை இன்று துருப்புகள் அனைத்தும் காணட்டும்” என்றான் {கர்ணன்}.

இப்படிப் போரில் கர்ணனும், குரு மன்னனும் {துரியோதனனும்} ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, அர்ஜுனன், தன் கூரிய கணைகளால் உமது படையைக் கொல்லத் தொடங்கினான்.(32, 33) பெருங்கூர்மை கொண்ட தன் பல்லங்களால் அவன் {அர்ஜுனன்}, பரிகங்கள் {முள் பதித்த தண்டாயுதங்கள்}, அல்லது யானைகளின் துதிக்கைகளைப் போலிருக்கும் பின்வாங்காத வீரர்களின் கரங்களை அந்தப் போரில் வெட்டத் தொடங்கினான். மேலும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரன் {அர்ஜுனன்}, தன் கூரிய கணைகளால் அவர்களது சிரங்களையும் அறுத்தான்.(34, 35) மேலும் அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, யானைகளின் துதிக்கைகளையும், குதிரைகளின் கழுத்துகளையும், சுற்றிலும் உள்ள தேர்களின் அக்ஷங்களையும் {ஏர்க்கால்களையும்}, ஈட்டிகள் மற்றும் வேல்களை ஏந்திய இரத்தக் கறை கொண்ட குதிரைவீரர்களையும் க்ஷுரப்ரங்களால் இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக அறுத்தான். குதிரைகள், முதன்மையான யானைகள், கொடிமரங்கள், குடைகள், விற்கள், சாமரங்கள், தலைகள் ஆகியன அனைத்துப் பக்கங்களிலும் வேகமாக விழத்தொடங்கின.(36, 37) வைக்கோல் பொதியை எரிக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போல உமது படையை எரித்த பார்த்தன் {அர்ஜுனன்}, விரைவில் பூமியைக் குருதியால் மறைத்தான்.(38) வலிமைமிக்கவனும், வெல்லப்பட முடியாதவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, அந்த உமது படையில் மிகப்பெரிய படுகொலைகளைச் செய்து விரைவில் சிந்துக்களின் ஆட்சியாளனை அடைந்தான்.

பீமசேனன் மற்றும் சாத்வதனால் {சாத்யகியால்} பாதுகாக்கப்பட்ட பீபத்சு {அர்ஜுனன்}, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(39, 40) பல்குனனை {அர்ஜுனனை} அந்நிலையில் கண்ட மனிதர்களில் காளையரான உமது படையின் வலிமைமிக்க வில்லாளிகளால் அவனை {அர்ஜுனனைப்} பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்போது, கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், சிந்து மன்னனுக்காக {ஜெயத்ரதனுக்காகப்} போரிட்டுக் கொண்டிருந்தவர்களுமான துரியோதனன், கர்ணன், விருஷசேனன், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அஸ்வத்தாமன், கிருபர் ஆகியோரும், ஏன் சிந்துக்களின் ஆட்சியாளனும் {ஜெயத்ரதனும்} கூடக் கிரீடம் தரித்தவனான அர்ஜுனனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.(41-43) போரில் திறன்வாய்ந்த அந்தப் போர்வீரர்கள் அனைவரும், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைத்} தங்கள் பின்னால் நிறுத்திக் கொண்டு, அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் கொல்ல விரும்பி, போரை நன்கறிந்த வீரனும், தன் தேர் செல்லும் வழியெங்கும் நர்த்தனம் செய்து கொண்டிருந்தவனும், வில்லின் நாணொலியாலும், தன் உள்ளங்கையாலும் கடும் ஒலிகளை உண்டாக்கியவனும், வாயை அகல விரித்திருக்கும் யமனுக்கு ஒப்பானவனுமான பார்த்தனை {அர்ஜுனனை} அச்சமற்ற வகையில் சூழ்ந்து கொண்டனர்.(44, 45)

அப்போது வானத்தில் சூரியன் சிவப்பு நிறத்தை ஏற்றான். அவன் {சூரியன்} (வேகமாக) மறைய விரும்பிய கௌரவ வீரர்கள், பாம்பின் உடல்களுக்கு ஒப்பான (கூம்பு போன்ற) கரங்களால் தங்கள் விற்களை வளைத்து, சூரியனின் கதிர்களுக்கு ஒப்பான தங்கள் நூற்றுக்கணக்கான கணைகளைப் பல்குனனை {அர்ஜுனனை} நோக்கி ஏவினர்.(46) இப்படித் தன்னை நோக்கி ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும், இரண்டு, மூன்று அல்லது எட்டு துண்டுகளாக வெட்டியவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், போரில் வெல்லப்படாதவனுமான அர்ஜுனன், அம்மோதலில் அவர்கள் அனைவரையும் துளைத்தான். சிங்கத்தின் வாலைத் தன் கொடியில் அடையாளமாகப் பொறித்திருக்கும் அஸ்வத்தாமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் வலிமையை வெளிக்காட்டிக்கொண்டு அர்ஜுனனைத் தடுக்கத் தொடங்கினான்.(47, 48) உண்மையில் அந்தச் சரத்வான் மகளின் {கிருபியின்} மகன் {அஸ்வத்தாமன்}, பார்த்தனைப் பத்து கணைகளாலும், வாசுதேவனை {கிருஷ்ணனை} ஏழாலும் துளைத்து, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாத்தபடியே, அர்ஜுனனின் பாதையில் நின்றான்.

பிறகு, குருக்களில் முதன்மையானவர்கள் பலரும், பெரும் தேர்வீரர்கள் அனைவரும் பெரும் தேர்க்கூட்டங்களால் அர்ஜுனனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். தங்கள் விற்களை வளைத்து, கணக்கிலடங்கா கணைகளை ஏவிய அவர்கள், உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரில், சிந்துக்களின் ஆட்சியாளனைக் காக்கத் தொடங்கினர்.(50, 51) அப்போது நாங்கள் துணிச்சல்மிக்கப் பார்த்தனின் கர வலிமையையும், அவனது கணைகளின் வற்றாத தன்மையையும், அவனது காண்டீவத்தின் வலிமையையும் கண்டோம்.(52) தன் ஆயுதங்களால் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் கிருபரின் ஆயுதங்களைக் கலங்கடித்த அவன் {அர்ஜுனன்}, அந்தப் போர்வீரர்களில் ஒவ்வொருவரையும் ஒன்பது கணைகளால் துளைத்தான்.(53)

அப்போது அவனைத் {அர்ஜுனனைத்} துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} இருபத்தைந்து கணைகளாலும், விருஷசேனன் ஏழாலும், துரியோதனன் இருபதாலும், கர்ணனும் சால்வனும் {சல்லியனும்} மூன்றாலும் துளைத்தனர்.(54) அவர்கள் அனைவரும் அவனை {அர்ஜுனனை} நோக்கி முழங்கி, அடிக்கடி அவனைத் துளப்பதைத் தொடர்ந்தனர்.(55) தங்கள் விற்களை அசைத்துக் கொண்டே அவர்கள் அவனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர். விரைவில் அவர்கள் தங்கள் தேர்களை அர்ஜுனனைச் சுற்றி வரிசையாக நிறுத்தினர்.(56) சூரியன் (வேகமாக) மறைய விரும்பியவர்களும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களுமான கௌரவப் படையின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அர்ஜுனனை நோக்கி முழங்கத் தொடங்கி, தங்கள் விற்களை அசைத்துக் கொண்டே மலையில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலக் கூரிய கணைமாரியால் அவனை மறைத்தனர்.(57) கனமான தண்டாயுதங்களுக்கு ஒப்பான கரங்களைக் கொண்ட அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் தெய்வீக ஆயுதங்களைத் தனஞ்சயன் {அர்ஜுனன்} உடலின் மீது அந்தச் சந்தர்ப்பத்தில் வெளிக்காட்டினர். வலிமைமிக்கவனும் வெல்லப்பட முடியாதவனும், கலங்கடிக்கப்பட முடியாதவனுமான தனஞ்சயன், உமது படையில் மிகப்பெரிய படுகொலைகளை நிகழ்த்தியபடியே சிந்துக்களின் ஆட்சியாளனிடம் {ஜெயத்ரதனிடம்} வந்தான்.(58, 59) எனினும் கர்ணன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} பீமசேனனும், சாத்வதனும் {சாத்யகியும்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தப் போரில் தன் கணைகளால் அவனை {அர்ஜுனனைத்} தடுத்தான்.(60)

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தப் போர்க்களத்தில் சூதன் மகனை {கர்ணனைப்} பத்து கணைகளால் பதிலுக்குத் துளைத்தான். அப்போது சாத்வதன் {சாத்யகி}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மூன்று கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.(61, 62) பீமசேனன் மூன்று கணைகளாலும், பார்த்தன் {அர்ஜுனன்} மீண்டும் ஏழு கணைகளாலும் அவனைத் {கர்ணனைத்} துளைத்தனர். வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், பிறகு, அந்த மூன்று போர்வீரர்களில் ஒவ்வொருவரையும் அறுபது {60} கணைகளால் துளைத்தான்.(63) இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (ஒரு புறத்தில்) கர்ணன் தனியாகவும், (மறுபுறத்தில்) பலருக்கும் இடையில் அந்தப் போர் நடந்தது. அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்டு மூன்று பெரும் தேர்வீரர்களையும் தனியாக அவன் {கர்ணன்} தடுத்ததால், அப்போது நாங்கள் கண்ட சூதன் மகனின் {கர்ணனின்} ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(64)

அப்போது வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பல்குனன் {அர்ஜுனன்}, அந்தப் போரில், ஒரு நூறு {100} கணைகளால், விகர்த்தனன் மகனான கர்ணனின் அங்கங்கள் அனைத்தையும் துளைத்தான். குருதியில் குளித்த அனைத்து அங்கங்களுடன் கூடியவனும், பெரும் ஆற்றலும், துணிச்சலும் கொண்டவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பதிலுக்கு ஐம்பது {50} கணைகளால் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான்.(65, 66) அந்தப் போரில் அவனால் {கர்ணனால்} வெளிக்காட்டப்பட்ட கர நளினத்தைக் கண்டு அதை அர்ஜுனனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(67) அவனது வில்லை அறுத்த வீரனான பிருதையின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, கர்ணனின் நடு மார்பில் ஒன்பது கணைகளால் விரைவாகத் துளைத்தான். பிறகு தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்தப் போரில் வேகம் தேவைப்பட்ட நேரத்தில் சூரியப் பிரகாசம் கொண்ட கணையொன்றைப் பெரும் வேகத்தோடு கர்ணனின் அழிவுக்காக ஏவினான்.(68, 69) எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அந்தக் கணை (கர்ணனை நோக்கி) மூர்க்கமாகச் சென்ற போது, அர்த்தச்சந்திரக்கணை ஒன்றால் அதை வெட்டினான். இப்படி அஸ்வத்தாமனால் வெட்டப்பட்ட அந்தக் கணை கீழே பூமியில் விழுந்தது.(70)

பிறகு பெரும் ஆற்றலைக் கொண்ட சூதனின் மகன் {கர்ணன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பல்லாயிரம் கணைகளால் பாண்டுவின் மகன் {அர்ஜுனனை} மறைத்தான்.(71) எனினும் பார்த்தன் {அர்ஜுனன்}, விட்டிற்பூச்சிகளை விரட்டும் காற்றைப் போலக் கர்ணனின் வில்லில் இருந்து வந்த அந்த அசாதாரணக் கணை மாரியைத் தன் கணைகளால் விலக்கினான்(72). அப்போது அர்ஜுனன், தன் கரநளினத்தை வெளிப்படுத்தித் துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் கணைகளால் அந்தப் போரில் கர்ணனை மறைத்தான்.(73) படைகளைக் கொல்பவனான கர்ணனும், அர்ஜுனனின் அருஞ்செயலுக்கு எதிர்வினையாற்ற விரும்பி, பல்லாயிரம் கணைகளால் அர்ஜுனனை மறைத்தான்.(74) ஒன்றையொன்று நோக்கி முழங்கும் இரு காளைகளைப் போல மனிதர்களில் சிங்கங்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், நேரான கணைகளின் மேகங்களால் ஆகாயத்தையே மறைத்தனர்.(75) அடுத்தவர் கணை மாரியால் கண்ணுக்குப் புலப்படாமல் போன அவர்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் தாக்குவதைத் தொடர்ந்தனர். ஒருவரையொருவர் நோக்கி முழங்கி, “நான் பார்த்தன், காத்திருப்பாயாக”, அல்லது “நான் கர்ணன், ஓ! பல்குனா {அர்ஜுனா}, காத்திருப்பாயாக” என்ற வார்த்தைக் கணைகளால் அவர்கள் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர். உண்மையில், அவ்விரு வீரர்களும் ஒருவருடனொருவர் அழகாகப் போரிட்டு, தங்கள் பெரும் சுறுசுறுப்பையும், திறனையும் வெளிக்காட்டினர்.(76, 77) அவர்களால் அளிக்கப்பட்ட காட்சியால், அந்தப் போரில் போர்வீரர்கள் அனைவரும் பார்வையாளர்களாக ஆனார்கள். சித்தர்கள், சாரணர்கள், பன்னகர்கள் ஆகியோரால் மெச்சப்பட்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் கொல்ல விரும்பி, ஒருவரோடொருவர் போரிட்டனர்.(78)

அப்போது துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்களிடம், “ராதையின் மகனை {கர்ணனைக்} கவனமாகப் பாதுகாப்பீராக. அர்ஜுனனைக் கொல்லாமல் அவன் போரில் இருந்து விலக மாட்டான். இது விருஷனே {கர்ணனே} என்னிடம் சொன்னதாகும்” என்றான்.(79, 80) அதே வேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனின் ஆற்றலைக் கண்டவனும், வெண்குதிரைகளைக் கொண்டவனுமான அர்ஜுனன், காதுவரை இழுக்கப்பட்ட வில்லில் இருந்து ஏவப்பட்ட நான்கு கணைகளால், கர்ணனின் நான்கு குதிரைகளை யமனின் ஆட்சிப்பகுதிக்கு அனுப்பி வைத்தான். மேலும் அவன், ஒரு பல்லத்தால் கர்ணனின் தேரோட்டியையும் அவனது தேரில் இருந்து வீழ்த்தினான்.(81, 82) உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே கணைகளின் மேகங்களால் அவன் கர்ணனை மறைத்தான். இப்படிக் கணைகளால் மறைக்கப்பட்டு, குதிரைகளற்று, சாரதியற்றுப் போன கர்ணன், அந்தக் கணைமாரியால் மலைப்படைந்து, என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(83)

அவன் {கர்ணன்} தேரற்றவனாக்கப்பட்டதைக் கண்ட அஸ்வத்தாமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனைத் {கர்ணனைத்} தன் தேரில் ஏறச் செய்து அர்ஜுனனுடனான போரைத் தொடர்ந்தான். பிறகு மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, குந்தியின் மகனை {அர்ஜுனனை} முப்பது கணைகளால் துளைத்தான்.(84, 85) சரத்வானின் மகன் {கிருபர்}, இருபது கணைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனைத்} துளைத்தார். மேலும் அவர் {கிருபர்}, பனிரெண்டு கணைகளால் தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} தாக்கினார். சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, கிருஷ்ணனையும், பார்த்தனையும் {அர்ஜுனனையும்} நான்கு கணைகளாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விருஷசேனன் அவர்கள் ஒவ்வொருவரையும் ஏழு கணைகளாலும் துளைத்தனர்.(87) குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} அவர்கள் அனைவரையும் பதிலுக்குத் துளைத்தான். உண்மையில் பார்த்தன் {அர்ஜுனன்}, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} அறுபத்துநான்கு {64} கணைகளாலும், மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} நூறாலும் {100}, சிந்து மன்னனை {ஜெயத்ரதனை} பத்து பல்லங்களாலும், விருஷசேனனை மூன்று கணைகளாலும், சரத்வானின் மகனை {கிருபரை} இருபதாலும் {20} துளைத்துப் பெருங்கூச்சலிட்டான்.(88, 89) சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} சபதத்தைக் கலங்கடிக்க விரும்பிய உமது போர்வீரர்கள், கோபத்தால் தூண்டப்பட்டு, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தனஞ்சயனை {அர்ஜுனனை} நோக்கி வேகமாக விரைந்தனர்.(90)

அப்போது அர்ஜுனன், தார்தராஷ்டிரர்களை அச்சுறுத்தும் வகையில், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் வாருண ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். எனினும், விலைமதிப்புமிக்கத் தேர்களில் இருந்த கௌரவர்கள், கணைமாரிகளைப் பொழிந்து கொண்டு பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றனர்.(91) ஆனால், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிரீடத்தாலும், தங்க மாலையாலும் அலங்கரிக்கப்பட்ட இளவரசனான அந்த அர்ஜுனன், பெரும் குழப்பத்துடன் கூடியதும், மலைக்கச் செய்வதுமான அந்தக் கடுமையான போரின் போது ஒரு போதும் தன் உணர்வுகளை இழக்கவில்லை. மறுபுறம், அவன் {அர்ஜுனன்} தொடர்ந்து தன் கணைகளின் மாரியைப் பொழிந்து கொண்டிருந்தான்.(92) அரசாங்கத்தை மீட்க விரும்பி, குருக்களின் விளைவாகப் பனிரெண்டு {12} வருடங்கள் அனுபவித்த தீங்குகள் அனைத்தையும் நினைவுகூர்ந்தவனும், உயர் ஆன்மா கொண்டவனும், அளவிட முடியாதவனுமான அர்ஜுனன், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் இருளச் செய்தான்.(93) ஆகாயம் எரிகற்களால் எரிந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது. வானத்தில் இருந்து இறங்கிய எண்ணற்ற காகங்கள் (இறந்து போன போராளிகளின்) உடல்களைக் கொத்தின. அதே வேளையில் அர்ஜுனன், பழுப்பு நிற நாண் கொண்டு பினாகையால் அசுரர்களைக் கொன்ற மகாதேவனை {சிவனைப்} போலக் காண்டீவத்தால் எதிர்களைக் கொல்வதைத் தொடர்ந்தான்.(94)

அப்போது எதிரிகளை அடக்குபவனான சிறப்புமிக்கக் கிரீடி {அர்ஜுனன்}, தன் உறுதிமிக்க வில்லால் எதிரியின் கணைகளை விலக்கி, முதன்மையான தங்கள் குதிரைகளிலும், யானைகளிலும் ஏறியிருந்த குருக்களில் முதன்மையானோர் பலரைத் தன் கணைகளால் கொன்றான்.(95) பிறகு, கனமான கதாயுதங்கள், இரும்பாலான தண்டாயுதங்கள், வாள்கள், ஈட்டிகள் மற்றும் பல்வேறு விதங்களிலான பிற பலமிக்க ஆயுதங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்ட மன்னர்கள் பலர், பயங்கரத் தோற்றங்களை ஏற்று, அந்தப் போரில் பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்துத் திடீரென விரைந்தனர்.(96) பிறகு அர்ஜுனன், இந்திரனின் வில்லுக்கு ஒப்பானதும், யுக முடிவின் போது திரளும் மேகங்களின் முழக்கங்களைப் போல உரத்த நாணொலி கொண்டதும், தன் உறுதிமிக்க வில்லுமான காண்டீவத்தைத் தன் கரங்களால் வளைத்துச் சிரித்துக் கொண்டே உமது துருப்புகளை எரித்தபடியே யமனுடைய அரசாங்கத்தின் மக்கள் தொகையை அதிகரித்தான்.(97) உண்மையில் அந்த வீரன் {அர்ஜுனன்}, அப்படிக் கோபத்துடன் வந்த அந்தப் போர்வீரர்களை, அவர்களது தேர்கள், யானைகள், காலாட்படை வீரர்கள் மற்றும் அவர்களை ஆதரித்த வில்லாளிகளோடு சேர்த்து கரங்களற்றவர்களாகவும், உயிரற்றவர்களாகவும் செய்து, இப்படியே யமனின் ஆட்சிப் பகுதிகளுடைய மக்கள் தொகையை அதிகரித்தான்” {என்றான் சஞ்சயன்} [1].(98)

ஜெயத்ரதனைக் கொன்ற அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 145-அர்ஜுனனுடன் துணிச்சலோடு போரிட்ட ஜெயத்ரதன்; ஜெயத்ரதனின் கொடிமரத்தை வெட்டி, அவனது சாரதியைக் கொன்ற அர்ஜுனன்; வலிமைமிக்கத் தேர்வீரர்களுக்கு மத்தியில் நிறுத்தப்பட்ட ஜெயத்ரதன்; யோக சக்தியால் சூரியனை மறைத்த கிருஷ்ணன்; ஜெயத்ரதனின் தலையை வெட்ட அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; மனித சக்திக்கு அப்பாற்பட்ட அர்ஜுனனின் வீரம்; விருத்தக்ஷத்திரனின் கதையை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்; ஜெயத்ரதனின் தலையை வெட்டிய அர்ஜுனன்; விருத்தக்ஷத்திரனின் தலை சுக்குநூறாகச் சிதறியது; இருளை விலக்கியக் கிருஷ்ணன்; பயங்கரக் கூச்சலால் யுதிஷ்டிரனுக்குச் செய்தி அனுப்பிய பீமசேனன்..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தனஞ்சயன் {அர்ஜுனன்} தன் வில்லை வளைத்தபோது யமனின் உரத்த அழைப்புக்கோ, இந்திரனுடைய வஜ்ரத்தின் பயங்கர முழக்கத்துக்கோ ஒப்பான நாணொலியைக் கேட்ட அந்த உமது படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மீன்கள் மற்றும் மகரங்களுடன் கூடிய கடல் நீரானது, யுக முடிவில் எழும் சூறாவளியால் சீற்றத்துடன் அடிக்கப்பட்டு, மலை போன்ற அலைகளாக உடைவதைப் போல மிகவும் கலங்கியது. அப்போது பிருதையின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஒரே நேரத்தில் திசைகள் அனைத்திலும் இருப்பவனைப் போலத் தன் அற்புத ஆயுதங்களை வெளிப்படுத்தியபடியே அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தான்.(1-3) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {அர்ஜுனன்} எப்போது தன் கணைகளை எடுக்கிறான், எப்போது அவற்றை வில்லின் நாணில் பொருத்துகிறான், எப்போது வில்லை வளைக்கிறான், எப்போது அவற்றை விடுகிறான் என்பதை நாங்கள் காண முடியாத அளவுக்கு அவனது கரநளினம் {கரலாகவம்} இருந்தது. பிறகு அந்த வலிய கரங்களைக் கொண்டவன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டு, வெல்லப்பட முடியாத ஐந்திர ஆயுதத்தை {ஐந்திராஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்துப் பாரதர்கள் அனைவரையும் அச்சுறுத்தினான். தெய்வீக ஆயுதங்களின் சக்தியுள்ள மந்திரங்களால் ஈர்க்கப்பட்டு, நெருப்பு போன்ற வாய்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சுடர்மிக்கக் கணைகள் அதிலிருந்து {அந்த ஐந்திராஸ்திரத்தில் இருந்து} பாய்ந்தன. நெருப்புக்கோ, சூரியனின் கதிர்களுக்கோ ஒப்பான அந்தக் கணைகள், கடும் மூர்க்கத்துடன் விரைந்ததால், மின்னும் எரிக்கோள்களால் நிறைந்திருப்பதைப் போல ஆகாயம் காண முடியாததாக ஆனது.(4-7)

கௌவர்களின் கணைகளால் உண்டானதும், மற்றவரால் கற்பனையிலும் கூட அகற்றப்பட முடியாததுமான அந்த இருளை {சஸ்திராந்தகாரத்தை}, களத்தில் தன் ஆற்றலை வெளிப்படுத்தியபடி திரிந்து கொண்டிருந்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அதிகாலையில் சூரியன் இரவின் இருளைத் தன் கதிர்களால் விரைவாக அகற்றுவதைப் போலத் தெய்வீக ஆயுதங்களின் சக்தியுடன் கூடிய மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட தன் கணைகளால் {அந்த இருளை} அழித்தான்.(8, 9) , சூரியன் தன் வெப்பக் கதிர்களால் குளங்கள் மற்றும் தடாகங்களில் உள்ள நீரை உறிஞ்சுவதைப் போல அந்தப் பலமிக்க அர்ஜுனன், சுடர்மிக்கத் தன் கணைகளால் உமது போர்வீரர்களின் உயிர்களை உறிஞ்சினான்.(10) உண்மையில், சூரியனின் கதிர்கள் பூமியை மறைப்பதைப் போல (அர்ஜுனனால் ஏவப்பட்ட) தெய்வீக ஆயுதங்களின் சக்தியுடன் கூடிய அந்தக் கணைகளின் மாரி அந்தப் பகைவரின் படையை மறைத்தன.(11) (தனஞ்சயனால்) ஏவப்பட்ட கடுஞ்சக்தி கொண்ட பிற கணைகள் உயிர் நண்பர்களைப் போல (பகை) வீரர்களின் இதயங்களுக்குள் வேகமாக நுழைந்தன.(12) உண்மையில், அந்தப் போரில் அர்ஜுனனுக்கு எதிரில் வந்த அந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் அனைவரும், சுடர்மிக்க நெருப்பை அணுகிய பூச்சிகளைப் போல அழிந்தனர்.(13) இப்படித் தன் எதிரிகளின் உயிர்களையும், அவர்களது புகழையும் நசுக்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, உடல் கொண்டு வந்த யமனைப் போலவே அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தான்.(14)

பார்த்தன் {அர்ஜுனன்}, கிரீடங்களால் அலங்கரிக்கப்பட்ட தன் எதிரிகளின் தலைகள், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட அவர்களின் பருத்த கரங்கள், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட காதுகள் ஆகியவற்றைத் தன் கணைகளால் அறுத்தான்.(15) யானைப்பாகர்களின் ஈட்டிகளுடன் கூடியவையும், குதிரைவீரர்களின் வேல்களுடன் கூடியவையும், காலாட்படைவீரர்களின் கேடயங்களுடன் கூடியவையும், தேர்வீர்களின் விற்களுடன் கூடியவையும், தேரோட்டிகளின் சவுக்கு மற்றும் சாட்டைகளுடன் கூடியவையுமான கரங்களை அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அறுத்தான்.(16, 17) உண்மையில், தன்னொளியுடன் சுடர்விடும் முனை கொண்ட கணைகளுடன் கூடிய அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, இடையறாத பொறிகள் மற்றும் எழுதழல்களுடன் கூடிய சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(18)  ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், தேவர்களின் தலைவனுக்கே {இந்திரனுக்கே} இணையான வீரனும், மனிதர்களில் காளையும், ஒரே நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் தன் வலிமைமிக்க ஆயுதங்களை இறைத்தபடியே தன் தேரில் தான் செல்லும் வழியெங்கும் நர்த்தனம் செய்தபடி காணப்படுபவனும், தன் வில்லின் நாண்கயிறாலும் உள்ளங்கைகளாலும் செவிடாகும்படி ஒலியெழுப்பக்கூடியவனும், எரிக்கும் கதிர்களுடன் ஆகாயத்தில் இருக்கும் நடுப்பகல் சூரியனுக்கு ஒப்பானவனுமான அந்தத் தனஞ்சயனைப் {அர்ஜுனனைத்} தங்கள் பலம் அனைத்தையும் திரட்டிக் கொண்ட பகை மன்னர்கள் அனைவராலும் பார்க்ககூட முடியவில்லை.(19-21)

சுடர்மிக்க முனைகளைக் கொண்ட தன் கணைகளுடன் கூடியவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், மழைக்காலங்களில் வானவில்லால் அலங்கரிக்கப்பட்ட மழைநிறைந்த மேகங்களின் வலிமைமிக்கத் திரளைப் போல அழகாகத் தெரிந்தான்.(22) வலிமைமிக்க ஆயுதங்களின் அந்தப் பலமான வெள்ளத்தை ஜிஷ்ணு {அர்ஜுனன்} பாயச் செய்த போது, போர்வீரர்களின் காளையரான பலர் தாங்க முடியாத அந்தப் பயங்கரமான வெள்ளத்தில் மூழ்கினர்.(23) துதிக்கைகளோ, தந்தங்களோ வெட்டப்பட்ட மதங்கொண்ட யானைகள், குளம்புகளையோ, கழுத்துகளையோ இழந்த குதிரைகள், துண்டு துண்டாகக் குறைந்து போன தேர்கள், குடல்கள் வெளியேறிய போர்வீரர்கள், கால்களோ, பிற அங்கங்களோ வெட்டப்பட்ட பிறர், முற்றிலும் அசையாமலோ, சுயநினைவின்றி அசைந்து கொண்டோ கிடந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான உடல்கள் ஆகியவை விரவி கிடந்ததும், பார்த்தன் {அர்ஜுனன்} போரிட்டுக் கொண்டிருந்ததும், யமனே ஆசைப்படும் இடத்துக்கு ஒப்பானதும், மருண்டோரின் அச்சத்தை அதிகப்படுத்துவதும், பழங்காலத்தில் ருத்ரன் {சிவன்} உயிரினங்களை அழித்த போது, அவன் {சிவன்} விளையாடிய மைதானம் போன்றதுமான அந்தப் பரந்த களத்தை நாங்கள் கண்டோம்.(24-27) க்ஷுரப்ரங்களில் {கத்தி போன்ற முனை கொண்ட கணைகளில்} வெட்டப்பட்ட யானைகளின் துதிக்கைகளால் விரவிக் கிடந்த அந்தக் களத்தில் சில பகுதிகள், பாம்புகளால் விரவிக் கிடப்பதைப் போலத் தெரிந்தன. அதே போல வெட்டப்பட்ட போர்வீரர்களின் தலைகளால் மறைக்கப்பட்ட பகுதிகள், தாமரை மலர் மாலைகளால் விரவிக் கிடப்பதைப் போலத் தெரிந்தன. பல வண்ணங்களிலான அழகிய தலைக்கவசங்கள், மகுடங்கள், கேயூரங்கள், அங்கதங்கள், காது குண்டலங்களுடனும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டட கவசங்களுடனும், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் {தங்க} இழைகள், பிற ஆபரணங்களுடனும், அங்கேயும் இங்கேயும் சிதறிக் கிடந்த நூற்றுக்கணக்கான கிரீடங்களுடனும் பூமியானவள் புதுமணப்பெண்ணைப் போல மிக அழகாகத் தெரிந்தாள்.

அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்}, அச்சமிக்கப் பொருள்களால் நிறைந்து, மருண்டோரின் அச்சங்களை அதிகரிக்கும் வகையில் வைதரணீக்கு ஒப்பாகப் பாய்வதும், சீற்றமிக்கதுமான ஒரு பயங்கர ஆற்றை {நதியை} அங்கே உண்டாக்கினான். (மனிதர்கள் மற்றும் விலங்குகளின்) மஜ்ஜையும் கொழுப்பும் அதன்  சகதியாகின. குருதி அதன் ஓடையாகியது. உறுப்புகளாலும், எலும்புகளாலும் நிறைந்திருந்த அஃது அடியற்ற ஆழம் கொண்டதாக இருந்தது. உயிரினங்களின் மயிர்கள் அதன் பாசிகளும், புற்களுமாகின. சிரங்களும், கரங்களும் அதன் கரைகளில் உள்ள கற்களாகின. கொடிமரங்கள், பலவண்ணங்களிலான கொடிகள் ஆகியவற்றால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. குடைகளும், விற்களும் அதன் அலைகளாகின. உயிரிழந்த பெரும் யானைகளின் உடல்களால் அது நிறைந்திருந்தது. தேர்க்கூட்டங்கள் அதன் பரப்பில் மிதக்கும் நூற்றுக்கணக்கான தெப்பங்களாகின. கணக்கிலடங்கா குதிரைகளின் சடலங்கள் அதன் கரைகளாகின. பாம்புகளைப் போலத் தெரிந்த தேர்களின் அக்ஷங்கள், கூபரங்கள், தோமரங்கள், வாள்கள், ஈட்டிகள், போர்க்கோடரிகள், கணைகள் ஆகியவற்றின் விளைவால் அது கடப்பதற்குக் கடினமானதாக இருந்தது. அண்டங்காக்கைகளும், கங்கப் பறவைகளும் அதன் முதலைகளாகின. நரிகள் அதன் மகரங்களாக அமைந்து அதைப் பயங்கரமாக்கின. கடும் கழுகுகள் அதன் சுறாக்களாகின. துள்ளித் திரியும் பேய்களாலும், பிசாசங்களாலும், ஆயிரக்கணக்கான பிறவகை ஆவிகளாலும் அது நிறைந்திருந்தது [1]. மேலும் அதில் உயிரற்ற போர்வீரர்களின் கணக்கிலடங்கா உடல்கள் மிதந்தன. யமனுக்கு ஒப்பான முகத்தோற்றம் கொண்ட அந்த அர்ஜுனனின் ஆற்றலைக் கண்டு, அந்தப் போர்க்களத்தில் இதற்கு முன் எப்போதும் நேராத அளவுக்குக் குருக்கள் பீதியை அடைந்தனர்.(28-38)பிறகு, அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் ஆயுதங்களால் பகைவீரர்களைக் கலங்கடித்துக் கடும் சாதனைகளை அடைவதில் ஈடுபட்டு, அவன் {அர்ஜுனன்} கடுஞ்சாதனைகளைச் செய்யும் போர்வீரன் என அனைவரையும் உணரச் செய்தான்.(39) அப்போது, அர்ஜுனன் தேர்வீரர்களில் முதன்மையான அனைவரையும் விஞ்சி நின்றான்.(40) ஆகாயத்தில் எரிக்கும் கதிர்களைக் கொண்ட நடுப்பகல் சூரியனைப் போல, உயிரினங்கள் ஏதாலும் அவனைப் பார்க்கக்கூட முடியவில்லை.(41) அந்தப் போரில் அந்தச் சிறப்புமிக்க வீரனின் {அர்ஜுனனின்} வில்லான காண்டீவத்திலிருந்து வெளிப்பட்ட கணைகள், ஆகாயத்தில் நாரைகளின் வரிசைக்கு ஒப்பாக எங்களுக்குத் தெரிந்தன.(42) அந்த வீரர்கள் அனைவரின் ஆயுதங்களையும் தன் ஆயுதங்களால் கலங்கடித்து, தான் ஈடுபட்ட பயங்கரச் சாதனைகளால் தன்னைக் கடுஞ்சாதனைகள் கொண்ட போர்வீரனாகக் காட்டிக் கொண்ட அர்ஜுனன், ஜெயத்ரதனைக் கொல்ல விரும்பி, தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரையும் விஞ்சி அவர்கள் அனைவரையும் தன் கணைகளால் மலைக்கச் செய்தான்.(44) கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை ஏவியபடி, அந்தப் போர்க்களத்தில் பெரும் வேகத்துடன் திரிந்து அழகாகக் காட்சியளித்தான்.(45) அந்தச் சிறப்புமிக்க வீரனின் {அர்ஜுனனின்} நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகள் வானத்தினூடாகத் தொடர்ந்து செல்வது ஆகாயத்தில் காணப்பட்டது.(46) அந்த வலிமைமிக்க வில்லாளி {அர்ஜுனன்} எப்போது தன் கணைகளை எடுத்தான், உண்மையில் அந்தப் பாண்டுவின் மகன் எப்போது அதைக் குறிபார்த்தான், எப்போது அதை விடுத்தான் என்பதை எங்களால் கவனிக்கவே முடியவில்லை.(47)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கணைகளால் திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் நிறைத்து, போரில் தேர்வீரர்கள் அனைவரையும் பீடித்த அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, ஜெயத்ரதனை நோக்கிச் சென்று, அவனை {ஜெயத்ரதனை} அறுபத்துநான்கு {64} நேரான கணைகளால் துளைத்தான்.(48) பிறகு, ஜெயத்ரதனை நோக்கிச் சென்ற அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்ட குருவீரர்கள் அனைவரும் போரில் இருந்து விலகினர்.(49) உண்மையில், அந்த வீரர்கள் ஜெயத்ரதனின் உயிரில் {ஜெயத்ரதன் உயிருடன் தப்புவான் என்ற} நம்பிக்கையற்றுப் போனார்கள். அந்தக் கடும்போரில் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்த உமது வீரர்களில் ஒவ்வொருவரும், ஓ! தலைவரே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனின் கணையால் தங்கள் உடலில் ஆழத் துளைக்கப்பட்டனர்.(50) வலிமைமிக்கத் தேர்வீரனும், வெற்றியாளர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனன், நெருப்பு போலச் சுடர்விட்ட தன் கணைகளால், உமது படையைத் தலைகளற்ற உடல்களின் {கபந்தங்களின்} [2] கூட்டமாக மாற்றினான். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குந்தியின் மகன் {அர்ஜுனன்}, இப்படியே நால்வகைப் படைப்பிரிவுகளுடன் கூடிய உமது படையில் முழுக் குழப்பத்தை ஏற்படுத்தி, ஜெயத்ரதனை நோக்கி முன்னேறினான். மேலும் அவன் {அர்ஜுனன்} துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} ஐம்பது கணைகளாலும், விருஷசேனனை {கர்ணனின் மகனை} மூன்றாலும் துளைத்தான்.(51-53) அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, ஒன்பது கணைகளால் கிருபரை மென்மையாகத் தாக்கினான். மேலும் அவன், சல்லியனைப் பதினாறு கணைகளாலும், கர்ணனை முப்பத்திரண்டாலும் துளைத்தான்.(54) அதற்கு மேலும் அவன், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அறுபத்துநான்கு கணைகளால் துளைத்து சிங்க முழக்கம் செய்தான்.எனினும், காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கணைகளால் இப்படித் துளைக்கப்பட்ட சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, அங்குசத்தால் துளைக்கப்பட்ட யானையொன்றைப் போல அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சினத்தால் நிறைந்தான்.(55) பன்றிக் கொடியைத் தாங்கிய அவன் {ஜெயத்ரதன்}, முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கொல்லனின் கைகளால் பளபளப்பாக்கப்பட்டவையும், கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், கழுகின் சிறகுகளைக் கொண்டவையுமான நேரான கணைகள் பலவற்றைப் பல்குனனின் {அர்ஜுனனின்} தேர் மீது விரைவாக ஏவினான்.(56, 57) பிறகு கோவிந்தனை {கிருஷ்ணனை} மூன்று கணைகளால் துளைத்த அவன் {ஜெயத்ரதன்}, அர்ஜுனனை ஆறால் {6 கணைகளால்} தாக்கினான். பிறகு அவன் {ஜெயத்ரதன்} எட்டு கணைகளால் அர்ஜுனனின் குதிரைகளையும், மற்றொன்றால் அவனது கொடிமரத்தையும் துளைத்தான்.(58) அப்போது அர்ஜுனன், சிந்துக்களின் ஆட்சியாளனால் {ஜெயத்ரதனால்} ஏவப்பட்ட கூரிய கணைகளைக் கலங்கடித்த அதே வேளையில், இரண்டு கணைகளால் ஜெயத்ரதனுடைய தேரோட்டியின் தலையையும், நன்கு அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தையும் அறுத்தான். வெட்டப்பட்டு, துளைக்கப்பட்டு, கணைகளால் தாக்கப்பட்ட அந்தக் கொடிமரம், நெருப்பின் தழல் ஒன்றைப் போலக் கீழே விழுந்தது. அதே வேளையில் சூரியனும் வேகமாகக் கீழே இறங்கினான்.(59-61)

அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} விரைவாக, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, வலிமையும், வீரமும் மிக்க ஆறு தேர்வீரர்களுக்கு மத்தியில் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்.(62) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, அந்த ஜெயத்ரதனும், அங்கே அச்சத்துடன் காத்திருக்கிறான். ஓ! மனிதர்களில் காளையே {அர்ஜுனா}, தடையின்றி நீ முயன்றாலும், அந்த ஆறு தேர்வீரர்களையும் போரில் வெல்லாமல் உன்னால் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்லவே முடியாது. எனவே, நான் யோகத்தை {யோக சக்தியைப்} பயன்படுத்திச் சூரியனை மறைக்கப் போகிறேன். (அதன் விளைவாக) சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} சூரியன் மறைவதைக் காண்பான். ஓ! தலைவா {அர்ஜுனா}, உயிரை விரும்புபவனான அந்தப் பொல்லாதவன், தன் அழிவுக்காகவே மகிழ்ச்சியை அடைந்து, அதற்கு மேலும் தன்னை மறைத்துக் கொள்ள மாட்டான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஓ! குருக்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, நீ அவனைத் {ஜெயத்ரதனைத்} தாக்க வேண்டும்.(65-66)

சூரியன் உண்மையாகவே மறைந்துவிட்டான் என்று எண்ணி நீ உன் ஊக்கமான முயற்சியைக் கைவிட்டுவிடாதே” என்றான் {கிருஷ்ணன்}. இந்த வார்த்தைகளைக் கேட்ட பீபத்சு {அர்ஜுனன்}, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்றான்.(67)

அப்போது ஹரி என்றும் அழைக்கப்படுபவனும், தவச் சக்திகளைக் கொண்டவனும், தவசிகள் அனைவரின் தலைவனுமான கிருஷ்ணன், யோகத்தைப் பயன்படுத்தி, சூரியனை மறைப்பதற்காக இருளை உண்டாக்கினான் [3].(68)

கிருஷ்ணன் இருளை உண்டாக்கிய போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்கள், சூரியன் மறைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு, பார்த்தன் {அர்ஜுனன்} தன் உயிரை விடப்போகிறான் என்ற மகிழ்ச்சியில் நிறைந்தனர்.(69)
உண்மையில், உமது போர்வீரர்கள், சூரியனைக் காணாது மகிழ்ச்சியிலேயே நிறைந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் தலைகளைத் திருப்பிக் கொண்டு நின்றனர். மன்னன் ஜெயத்ரதனும் அதே மனநிலையில்தான் இருந்தான். இப்படி அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணன் மீண்டும் தனஞ்சயனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, உன் மீது கொண்ட அச்சத்தை விட்டு, சிந்துக்களின் வீர ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} சூரியனைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காண்பாயாக.(72) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, பொல்லாத ஆன்மா கொண்ட அவனை {ஜெயத்ரதனைக் கொல்ல} இதுவே தகுந்த நேரம். விரைவாக அவனது தலையை அறுத்து உனது சபதத்தை உண்மையாக்குவாயாக” என்றான் [4].(73)இப்படிக் கேசவனால் {கிருஷ்ணனால்} சொல்லப்பட்ட அந்தப் பாண்டுவின் வீர மகன் {அர்ஜுனன்}, காந்தியில் சூரியனுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான தன் கணைகளால் உமது படையைக் கொல்லத் தொடங்கினான்.(74) மேலும் அவன் {அர்ஜுனன்} கிருபரை இருபது கணைகளாலும், கர்ணனை ஐம்பதாலும் துளைத்தான். சல்லியன், துரியோதனன் ஆகியோர் ஒவ்வொருவரையும் ஆறு கணைகளால் அவன் தாக்கினான்.(75) மேலும் அவன் {அர்ஜுனன்} விருஷசேனனை எட்டு கணைகளாலும், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அறுபது {60} கணைகளாலும் துளைத்தான். மேலும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையின் பிற போர்வீரர்களைத் தன் கணைகளால் தாக்கியபடியே ஜெயத்ரதனை எதிர்த்து விரைந்தான். தழல் நாக்கை விரித்துப் பரவும் நெருப்பைப் போலத் தங்கள் முன்னிலையில் அவனைக் {அர்ஜுனனைக்} கண்ட ஜெயத்ரதனின் பாதுகாவலர்கள் மிகவும் குழம்பினர்.(76, 77) பிறகு வெற்றியை விரும்பிய உமது போர்வீரர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் இந்திரனின் மகனை {அர்ஜுனனைக்} கணைத்தாரைகளால் குளிப்பாட்டினர்.(78) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், குருவின் வெற்றிகொள்ளப்படாத வழித்தோன்றலுமான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, இடைவிடாத கணை மழையால் மறைக்கப்பட்டுச் சினத்தால் நிறைந்தான்.(79)

அப்போது, மனிதர்களில் புலியான அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, உமது படையைக் கொல்ல விரும்பி, அடர்த்தியான கணை வலைகளை உண்டாக்கினான். பிறகு, அவ்வீரனால் {அர்ஜுனனால்} போரில் கொல்லப்பட்ட உமது போர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சத்தால் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கைவிட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.(80, 81)

இரு மனிதர்களாகச் சேர்ந்து ஓடும் எவரையும் காண முடியாத வகையில் அவர்கள் அப்படி {தனித்தனியாகத்} தப்பி ஓடினர். குந்தியின் மகனிடம் {அர்ஜுனனிடம்} நாங்கள் அப்போது கண்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(82) உண்மையில் அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரன் {அர்ஜுனன்} அப்போது செய்ததைப் போல இதுவரை செய்யப்பட்டதும் இல்லை, இனி செய்யப்படப் போவதும் இல்லை. உயிரினங்களைக் கொல்லும் ருத்ரனைப் போலத் தனஞ்சயன், யானைகள், யானைப் பாகர்கள், குதிரைகள், குதிரை சாரதிகள், (தேர்வீரர்கள்) மற்றும் தேரோட்டிகள் ஆகியோரைக் கொன்றான். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்படாத எந்த ஒரு யானையையோ, குதிரையையோ, மனிதப் போர்வீரனையோ நான் அந்தப் போரில் காணவில்லை.(83-84)

புழுதியாலும், இருளாலும் பார்வை தடைபட்ட உமது வீரர்களால் ஒருவரையொருவர் வேறுபடுத்திக்காண முடியாமல் முற்றிலும் உற்சாகத்தை இழந்தனர்.(85)

விதியால் உந்தப்பட்டும், கணைகளால் தங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டும், வெட்டப்பட்டும் இருந்த உமது படை வீரர்கள், விழவோ, நொண்டித் திரியவோ தொடங்கினர்.(86) அவர்களில் சிலர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, செயல் இழந்தனர், சிலரோ மரணம் ஏற்பட்டதைப் போல இருண்டனர் {நிறம் மங்கினர்}. யுக முடிவில் உயிரினங்கள் கொல்லப்படுவதற்கு ஒப்பாக நடந்த அந்தப் பயங்கரப் பேரழிவின் போது, வெகுசிலரே தப்ப முடிந்த மூர்க்கமான அந்தக் கொடூரப் போரில் சிந்திய குருதி பூமியை நனைத்தது, பூமியில் எழுந்த புழுதியானது அப்படிச் சிந்திய குருதி மழை மற்றும் களத்தில் வீசிய வேகமான காற்று ஆகியவற்றின் விளைவால் மறைந்து போனது. தேர்ச்சக்கரங்களின் மத்திய பகுதி வரை மூழ்கும் அளவுக்கு அந்த இரத்த மழை ஆழமாக இருந்தது.(88, 89)

பெரும் வேகத்தைக் கொண்டவையும், மதங்கொண்டவையுமான உமது படையின் ஆயிரக்கணக்கான யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் பாகர்கள் கொல்லப்பட்டு, அங்கங்கள் சிதைக்கப்பட்டு, வலியால் கதறிக்கொண்டு நட்புப் படையணிகளைத் தங்கள் நடையால் நசுக்கியபடியே தப்பி ஓடின.(90) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாரதிகளை இழந்த குதிரைகளும், காலாட்படை வீரர்களும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்டு, அச்சத்துடன் தப்பி ஓடினர்.(91) உண்மையில் உமது படைவீரர்கள், கலைந்த கேசங்களுடன், தங்கள் கவசங்களை இழந்து, தங்கள் காயங்களில் இரத்தப் பெருக்கெடுத்து, அச்சத்தால் போர்க்களத்தை விட்டே தப்பி ஓடினர். ஒரு சிலர், ஏதோ தங்கள் கீழ் உறுப்புகள் {கால்கள்} முதலைகளால் பற்றப்பட்டதைப் போல அசையும் சக்தியை இழந்து களத்தில் கிடந்தனர்.(92, 93) வேறு சிலரோ, கொல்லப்பட்ட யானைகளின் உடல்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டனர்.

இப்படி உமது படையை முறியடித்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாத்தோரைப் பயங்கரக் கணைகளால் தாக்கத் தொடங்கினான். அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} தன் கணை மாரியால் கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், சல்லியன், விருஷசேனன், துரியோதனன் ஆகியோரை மறைத்தான். எப்போது அர்ஜுனன் தன் கணைகளை எடுத்தான், எப்போது அவற்றை வில்லின் நாணில் பொருத்தினான், எப்போது வில்லை வளைத்தான், எப்போது அவற்றைத் தொடுத்தான் என்பதை எவராலும் கவனிக்க முடியாத அளவுக்கு அவனுடைய {அர்ஜுனனின்} வேகம் இருந்தது. உண்மையில் எதிரியைத் தாக்கும்போது, அவனது வில்லானது இடைவிடாமல் வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது.(95-97) அவனது கணைகளும் இடைவிடாமல் அவனது வில்லில் இருந்து வெளிப்பட்டு அனைத்துத் திசைகளிலும் இறைக்கப்படுவதும் காணப்பட்டது.

அப்போது கர்ணனின் வில்லையும், விருஷசேனனுடையதையும் வெட்டிய அர்ஜுனன், ஒரு பல்லத்தால் சல்லியனின் தேரோட்டியும் அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான்.(98) பிறகு வெற்றியாளர்களில் முதன்மையான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, மாமனும் மைத்துனனுமாக உறவுமுறை கொண்ட கிருபரையும், அஸ்வத்தாமனையும் பல கணைகளால் ஆழமாகத் துளைத்தான். இப்படி உமது படையின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை மிகவும் பீடித்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, நெருப்பு போன்ற காந்தி கொண்ட பயங்கரக் கணையொன்றை எடுத்தான்.(99, 100) இந்திரனின் வஜ்ரத்தைப் போலத் தெரிந்ததும், தெய்வீக மந்திரங்களால் ஈர்க்கப்பட்டதுமான அந்த உறுதி மிக்கக் கணை, எந்தக் கடுமையையும் தாங்கவல்லதாக இருந்தது.(101) மேலும் அது நறுமணப் பொருட்களாலும், மலர்மாலைகளாலும் எப்போதும் வழிபடப்பட்டதாக இருந்தது. (மந்திரங்களின் துணையுடன்) வஜ்ரத்தின் சக்தியால் அதை ஈர்த்தவனும், குருவின் வழித்தோன்றலும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த அர்ஜுனன், காண்டீவத்தில் அதைப் பொருத்தினான்.(102) நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட அந்தக் கணை வில்லின் நாணில் பொருத்தப்பட்டபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஆகாயத்தில் உரத்த கூச்சல்கள் கேட்கப்பட்டன.(103)அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, மீண்டும் அர்ஜுனனிடம் விரைவாகப் பேசினான், “ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, தீய ஆன்மா கொண்ட சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} தலையை விரைவாக அறுப்பாயாக. சூரியன் அஸ்த மலைகளை அடையப் போகிறான். எனினும், ஜெயத்ரதனின் கொலை குறித்து நான் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கேட்பாயாக. உலகம் அனைத்திலும் அறியப்படும் விருத்தக்ஷத்திரன் ஜெயத்ரதனின் தந்தையாவான்.(105) நெடுங்காலத்திற்குப் பிறகே அவன் {விருத்தக்ஷத்திரன்}, எதிரிகளைக் கொல்பவனான ஜெயத்ரதனைத் தன் மகனாக அடைந்தான். (அந்த மகன் பிறந்த போது) வடிவமற்ற கண்ணுக்குத் தெரியாத குரல் ஒன்று, மேகங்கள் அல்லது துந்துபியைப் போன்ற ஆழ்ந்த ஒலியுடன் விருத்தக்ஷத்திரனிடம், “இந்த உனது மகன் {ஜெயத்ரதன்}, ஓ! தலைவா {விருத்தக்ஷத்திரா}, குருதியாலும், நடத்தையாலும், சுயக்கட்டுப்பாட்டாலும், இன்னும் பிற குணங்களாலும், இவ்வுலகின் இரு குலங்களுக்கு (சூரியன் மற்றும் சந்திர குலங்களுக்குத்) தகுந்தவனாவான். க்ஷத்திரியர்களில் முதன்மையடையும் அவன் {ஜெயத்ரதன்}, வீரர்களால் எப்போதும் வழிபடப்படுபவனாக இருப்பான்.(107-109) ஆனால் போரில் போராடிக் கொண்டிருக்கையில், க்ஷத்திரியர்களில் காளையும், உலகில் பகட்டானவனுமான ஒருவன், கோபத்தால் தூண்டப்பட்டு இவனது தலையை அறுப்பான்” என்றது.(110) பகைவர்களைத் தண்டிப்பவனான அந்தச் சிந்துக்களின் (பழைய) ஆட்சியாளன் {விருத்தக்ஷத்திரன்} இவ்வார்த்தைகளைக் கேட்டுச் சில காலம் சிந்தித்தான். தன் மகன் மீது கொண்ட அளவுகடந்த பாசத்தால் அவன் {விருத்தக்ஷத்திரன்} தன் சொந்தங்கள் அனைவரையும் அழைத்து அவர்களிடம்,(111) “எந்த மனிதன் போரில் போராடிக் கொண்டிருக்கும் என் மகனின் {ஜெயத்ரதனின்} தலையைப் பூமியில் விழச் செய்வானோ, அவன் பெரும் சுமையைச் சுமப்பான், அந்த மனிதனின் தலை நிச்சயம் நூறு துண்டுகளாகச் சிதறும் என நான் சொல்கிறேன்” என்றான்.(12)

இவ்வார்த்தைகளைச் சொல்லி, ஜெயத்ரதனை அரியணையில் நிறுவிய விருத்தக்ஷத்திரன் காடுகளுக்குச் சென்று தவத்துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான்.(113) ஓ! குரங்குக் கொடியோனே {அர்ஜுனா}, பெரும் சக்தி கொண்ட அவன் {விருத்தக்ஷத்திரன்} இப்போதும் கூட இதே சமந்தபஞ்சகத்துக்கு {குருசேத்திரத்திற்கு} வெளியே கடுந்தவத்தைச் செய்து கொண்டிருக்கிறான். எனவே, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, இந்தப் பயங்கரப் போரில் ஜெயத்ரதனின் தலையை வெட்டும் நீ, ஓ! பாரதா {அர்ஜுனா}, அற்புதச் செயல்களைச் செய்யும் உனது கடுமையான தெய்வீக ஆயுதத்தைக் கொண்டு, ஓ! வாயு தேவன் மகனின் {பீமனின்} தம்பியே {அர்ஜுனா}, காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தத் தலையை {ஜெயத்ரதனின் தலையை} விரைவாக அந்த விருத்தக்ஷத்திரனின் மடியிலேயே விழச் செய்வாயாக. ஜெயத்ரதனின் தலையை நீ பூமியில் வீழ்த்தினால், உன் தலை நூறு துண்டுகளாகச் சிதறும் என்பதில் ஐயமில்லை.(116, 117) தெய்வீக ஆயுதத்தின் துணை கொண்டு, பூமியின் தலைவனான அந்த முதிய சித்து மன்னன் {விருத்தக்ஷத்திரன்} அறியாத வண்ணம் இச்செயலைச் செய்வாயாக. உண்மையில், ஓ! வாசவனின் {இந்திரனின்} மகனே, ஓ! அர்ஜுனா, மூன்று உலகங்களிலும் உன்னால் அடைய முடியாததோ, செய்ய முடியாததோ  எதுவுமில்லை” என்றான் {கிருஷ்ணன்}.

(கிருஷ்ணனின்) இவ்வார்த்தைகளைக் கேட்டத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கடைவாயை நாவால் நனைத்தபடி, இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பான தீண்டலைக் கொண்டதும், மந்திரங்களால் ஈர்க்கப்பட்டதும், தெய்வீக ஆயுதமாக {அஸ்திரமாக} மாற்றப்பட்டதும், கடினங்கள் எதையும் தாங்கவல்லதும், நறுமணப் பொருட்களையும், மாலைகளையும் கொண்டு எப்போதும் வழிபடப்பட்டதும் ஜெயத்ரதனைக் கொல்லத் தன்னால் எடுக்கப்பட்டதுமான அந்தக் கணையை விரைவாக ஏவினான். காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணை வேகமாகச் சென்று, மரத்தின் உச்சியில் இருக்கும் சிறு பறவையைக் கவர்ந்து செல்லும் ஒரு பருந்தைப் போல ஜெயத்ரதனின் தலையைக் கவர்ந்து சென்றது. அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்} தன் கணைகளைக் கொண்டு அந்தத் தலையை (கீழே விழாதபடிக்கு) ஆகாயத்திலேயே செலுத்திக் கொண்டிருந்தான்.(118-123) தன் எதிரிகள் கவலையையும், தன் நண்பர்கள் மகிழ்ச்சியையும் அடையும்படி செய்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் கணைகளை மீண்டும் மீண்டும் அந்தத் தலையின் மீது ஏவி அதை {அந்தத் தலையைச்} சமந்தபஞ்சகத்தின் எல்லைகளுக்கு அப்பால் செலுத்தினான்.(124)

அதேவேளையில் உமது மருமகனின் {ஜெயத்ரதனின்} தந்தையும், பெரும் சக்தியைக் கொண்டவனுமான மன்னன் விருத்தக்ஷத்திரன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தன் மாலைவேளை வேண்டுதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(125) அமர்ந்த நிலையில் தன் வேண்டுதல்களைச் சொல்லிக் கொண்டிருந்த விருத்தக்ஷத்திரனின் மடியில் கருங்குழல்களாலும், காது குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த ஜெயத்ரதனின் தலை விழுந்தது. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தலை தன் மடியில் வீசப்பட்டது மன்னன் விருத்தக்ஷத்திரனால் காணப்படவில்லை. எனினும், பின்னவன் {விருத்தக்ஷத்திரன்} தன் வேண்டுதலைகள் முடித்து எழுந்த போது, திடீரென அது கீழே பூமியில் விழுந்தது. ஜெயத்ரதனின் தலையானது கீழே பூமியில் விழுந்தபோது, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, அந்த முதிய விருத்தக்ஷத்திரனின் தலை நூறு துண்டுகளாகச் சிதறியது. இந்தக் காட்சியைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும் ஆச்சரியத்தால் நிறைந்தன.(126-130). அவர்கள் அனைவரும் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, வலிமைமிக்கப் பீபத்சுவையும் {அர்ஜுனனையும்} புகழ்ந்தனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} அந்த இருள் விலக்கிக் கொள்ளப்பட்டது.(131) அதன் பிறகே தொண்டர்களோடு கூடிய உமது மகன்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} தாங்கள் கண்ட அந்த இருள் வாசுதேவனால் உண்டாக்கப்பட்ட மாயையே என்பதை அறியவந்தனர். இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மருமகனான சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, எட்டு அக்ஷௌஹிணிகளைக் கொல்லச் செய்து {கொல்லப்பட காரணமாக அமைந்து}, நினைத்துப் பார்க்க முடியாத சக்தியைக் கொண்ட பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டான். சிந்துக்களின் ஆட்சியாளனான ஜெயத்ரதன் கொல்லப்பட்டதைக் கண்டு கவலையடைந்த உமது மகன்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது.(132-134) பார்த்தனால் {அர்ஜுனனால்} ஜெயத்ரதன் கொல்லப்பட்டதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேசவன் {கிருஷ்ணன்} தன் சங்கை முழக்கினான், எதிரிகளை எரிப்பவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த அர்ஜுனனும் தனது சங்கை முழக்கினான்.(135) பீமசேனனும், அந்தப் போரில் யுதிஷ்டிரனுக்குச் செய்தியை அனுப்புபவனைப் போல, பேராற்றலுடன் கூடிய சிங்க முழக்கத்தால் ஆகாயத்தை நிறைத்தான்.(136) அந்தப் பிரம்மாண்டமான கூச்சலைக் கேட்டவனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன், உயர் ஆன்ம பல்குனனால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதைப் புரிந்து கொண்டான்.(137) துந்துபி ஒலிகளாலும், பிற கருவிகளாலும் தன் படையின் போர்வீரர்களுக்கு மகிழ்ச்சியூட்டிய அவன் {யுதிஷ்டிரன்} போரிடும் விருப்பத்தால் பரத்வாஜர் மகனை {துரோணரை} எதிர்த்துச் சென்றான்.(138)

அதன் பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியன் மறைந்ததும், துரோணருக்கும், சோமகர்களுக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பயங்கரப் போர் தொடங்கியது. பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கொல்ல விரும்பிய அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் {சோமகர்கள்}, ஜெயத்ரதன் வீழ்ந்த பிறகு, முடிந்த மட்டும் முயன்று அவருடன் {துரோணருடன்} போரிட்டனர். உண்மையில், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொன்று வெற்றியடைந்த பிறகு, அந்த வெற்றியால் போதை கொண்டு துரோணருடன் போரிட்டனர்.(139-141) அர்ஜுனனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னன் ஜெயத்ரதனைக் கொன்ற பிறகு, உமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலருடன் போரிட்டான்.(142) உண்மையில், கிரீடத்தாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, தன் முந்தைய சபதத்தைச் சாதித்த பிறகு, தானவர்களை அழிக்கும் தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலவோ, இருளை அழிக்கும் சூரியனைப் போலவோ தன் எதிரிகளை அழிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.143

கர்ணனை வென்ற சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 146-அர்ஜுனனுடன் கோபத்தோடு மோதிய கிருபர்; இறந்ததைப் போலத் தேரில் மயங்கிக் கிடந்த கிருபரைக் கண்டு வருந்திய அர்ஜனன்; அர்ஜுனனிடம் இருந்து தப்பி ஓடிய அஸ்வத்தாமன்; கர்ணனுக்கும், சாத்யகிக்கும் இடையிலான மோதல்; கர்ணனின் தேரோட்டியையும் குதிரைகளையும் கொன்ற சாத்யகி; கர்ணனைக் காக்க விரைந்தோர் அனைவரையும் வென்ற சாத்யகி, அர்ஜுனனின் சபதத்தை நினைவுகூர்ந்து கர்ணனைக் கொல்லாமல் விட்ட சாத்யகி..

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, சிந்துக்களின் வீர ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} அர்ஜுனனால் கொல்லப்பட்ட பிறகு எனது போர் வீரர்கள் என்ன செய்தனர் என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான்.(1)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, போரில் பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டதைக் கண்ட சரத்வானின் மகன் கிருபர், கோபவசப்பட்டு, அடர்த்தியான கணை மழையால் அந்தப் பாண்டுவின் மகனை மறைத்தார்.(2) துரோணரின் மகனும் {அஸ்வத்தாமனும்}, பிருதையின் {குந்தியின்} மகனான பல்குனனை {அர்ஜுனனை} எதிர்த்துத் தன் தேரில் விரைந்தான்.(3) தேர்வீரர்களில் முதன்மையான அவ்விருவரும், தங்கள் தேர்களில் எதிர்த்திசையில் இருந்து தங்கள் கூரிய கணைகளைப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது பொழியத் தொடங்கினர்.(4) தேர்வீரர்களில் முதன்மையான அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், (கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோரின்) கணை மழைகளால் பீடிக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்தான்.(5) எனினும், தன் ஆசானையும் (கிருபரையும்), (மற்றொரு ஆசானான) துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்} கொல்ல விரும்பாதவனும், குந்தியின் மகனுமான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தானே ஆயுதங்களின் ஆசானைப் போலச் செயல்படத் தொடங்கினான்.(6)

தன் ஆயுதங்களால் அஸ்வத்தாமன் மற்றும் கிருபர் ஆகிய இருவரின் ஆயுதங்களைக் கலங்கடித்த அவன் {அர்ஜுனன்}, அவர்களைக் கொல்ல விரும்பாமல் மெதுவாகச் செல்லும் கணைகளை அவர்கள் மீது ஏவினான்.(7) எனினும், ஜெயனால் {அர்ஜுனால்} (மெதுவாகவே) ஏவப்பட்ட அக்கணைகள், கிருபரையும், அவரது மருமகனையும் {அஸ்வத்தாமனையும்} பெரும்பலத்துடன் தாக்கித் தங்கள் எண்ணிக்கையில் விளைவாக அவ்விருவருக்கும் பெரும் வலியை உண்டு பண்ணின.(8) பிறகு, சரத்வானின் மகன் {கிருபர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்படி அர்ஜுனனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, பலம் அனைத்தையும் இழந்து, தன் தேர்த்தட்டில் மயங்கி விழுந்தார்.(9) கணைகளால் பீடிக்கப்பட்ட தன் தலைவர் உணர்வுகளை இழந்ததைப் புரிந்து கொண்டு, அவர் {கிருபர்} இறந்துவிட்டார் என்று நம்பிய கிருபரின் தேரோட்டி, கிருபரை போருக்கு {போர்க்களத்திற்கு} வெளியே தேரில் கொண்டு சென்றான்.(10) சரத்வானின் மகனான கிருபர் இப்படிப் போருக்கு வெளியே கொண்டு செல்லப்பட்ட பிறகு, அஸ்வத்தாமனும், பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} கொண்ட அச்சத்தால் அவனிடம் இருந்து தப்பி ஓடினான்.(11)

அப்போது வலிமைமிக்க வில்லாளியான பார்த்தன் {அர்ஜுனன்}, சரத்வானின் மகன் {கிருபர்} கணைகளால் பீடிக்கப்பட்டு மயங்கியதைக் கண்டு, தன் தேரில் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபடத் தொடங்கினான்.(12) கண்ணீர் நிறைந்த முகத்துடனும், இரக்கம் கொண்ட இதயத்துடனும் கூடிய அவன் {அர்ஜுனன்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “பெரும் ஞானம் கொண்ட விதுரர், இழிந்தவனும், தன் குலத்தை அழிப்பவனுமான சுயோதனன் {துரியோதனன்} பிறந்த போது, திருதராஷ்டிரரிடம், “தன் குலத்தின் இழிந்தவனான இவன் {துரியோதனன்} விரைவில் கொல்லப்பட வேண்டும்.(13, 14) இவனால் குருகுலத்தில் முதன்மையானோருக்கு பேரிடர் நேரப்போகிறது” என்றார். ஐயோ, உண்மையைப் பேசும் விதுரரின் வார்த்தைகள் உண்மையாகிவிட்டனவே.(15) அவனது {துரியோதனின்} நிமித்தமாகவே என் ஆசான் {பீஷ்மர்} அம்புப்படுக்கையில் கிடப்பதை நான் காண்கிறேன். க்ஷத்திரிய நடைமுறைக்கு ஐயோ. என் வலிமைக்கும், ஆற்றலுக்கும் ஐயோ.(16) என்னைப் போல வேறு எவன் தான் ஒரு பிராமணரிடம், அதுவும் தன் ஆசானிடமே போரிடுவான்? கிருபர் ஒரு முனிவரின் மகனாவார்; அவர் எனது ஆசானுமாவர்; மேலும் அவர் துரோணரின் அன்பு நண்பருமாவார்.(17) ஐயோ, அவர் என் கணைகளால் பீடிக்கப்பட்டுத் தன் தேர்த்தட்டில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கிறாரே. விரும்பாமலே நான் என் கணைகளால் அவரை நசுக்கிவிட்டேனே.(18) தன் தேர்த்தட்டில் உணர்வற்றுக் கிடக்கும் அவர் {கிருபர்} {கிருபர்}, என் இதயத்தை மிகவும் வலிக்கச் செய்கிறார். கணைகளால் அவர் என்னைப் பீடித்திருந்தாலும், பளபளக்கும் காந்தி கொண்ட அந்தப் போர் வீரரை (பதிலுக்குத் தாக்காமல், அவரை) நான் பார்த்துக் கொண்டு மட்டுமே இருந்திருக்க வேண்டும்.(19) எண்ணற்ற என் கணைகளால் தாக்கப்பட்ட அவர் {கிருபர்}, அனைத்து உயிரினங்களின் வழியிலேயே சென்றுவிட்டார். அதனால் என் மகனின் {அபிமன்யுவின்} கொலையைவிட எனக்கு அதிக வலியைத் தந்துவிட்டார்.(20)

ஓ! கிருஷ்ணா, இப்படிப் பரிதாபகரமாகத் தன் தேரில் உணர்வற்று கிடக்கும் அவர் எந்நிலைக்குக் குறைக்கப்பட்டுவிட்டார் என்பதைப் பார். தங்கள் ஆசான்களிடம் அறிவை அடைந்த பிறகு விருப்பத்திற்குரிய பொருட்களை அவர்களுக்குக் கொடுக்கும் மனிதர்களில் காளையர் தெய்வீகத் தன்மையை அடைகின்றனர். மறுபுறம், தங்கள் ஆசான்களிடம் அறிவை அடைந்துவிட்டு, அவர்களைத் தாக்கும் மனிதர்களில் இழிந்தோரான அந்தத் தீய மனிதர்கள் நரகத்திற்கே செல்வார்கள்.(21, 22) நான் செய்திருக்கும் இச்செயல் என்னை நரகத்திற்கே வழிநடத்தும் என்பதில் ஐயமில்லை.(23) கிருபரின் பாதங்களில் ஆயுத அறிவியலை நான் படித்துக் கொண்டிருந்த அந்நாட்களில், அவர் {கிருபர்} என்னிடம்,(24) “ஓ! குரு குலத்தோனே {அர்ஜுனா}, உன் ஆசானை ஒரு போதும் தாக்காதே” என்று சொன்னார். என் கணைகளால் கிருபரை நான் தாக்கியதால், நீதிமானும், உயர் ஆன்மா கொண்டவருமான என் ஆசானின் {கிருபரின்} அந்தக் கட்டளைக்கு நான் கீழ் படியவில்லை.(25) பின்வாங்காதவரும், கௌதமரின் வழிபடத்தகுந்த மகனுமான அந்த வீரரை {கிருபரை} நான் வணங்குகிறேன்.(26) ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நான் அவரைத் தாக்கியதால் எனக்கு ஐயோ {என்னை இகழவே வேண்டும்}” என்றான் {அர்ஜுனன்}.

இப்படிச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, கிருபருக்காகப் புலம்பிக் கொண்டிருந்த போது, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்} அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தான்.(27) இப்படி ராதையின் மகன் {கர்ணன்}, அர்ஜுனனின் தேரை நோக்கி விரைவதைக் கண்ட பாஞ்சால இளவரசர்களும், சாத்யகியும் திடீரென அவனை {கர்ணனை} நோக்கி விரைந்தனர்.(28) வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தன் {அர்ஜுனன்}, ராதையின் மகன் {கர்ணன்} முன்னேறி வருவதைக் கண்டு, தேவகியின் மகனிடம் {கிருஷ்ணனிடம்} புன்னகைத்துக் கொண்டே,(29) “அதோ அதிரதன் மகன் {கர்ணன்}, சாத்யகியின் தேரை எதிர்த்து வருகிறான்.(30) போரில் பூரிஸ்ரவஸின் கொலையை அவனால் {கர்ணனால்} தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதில் ஐயமில்லை [1]. ஓ! ஜனார்த்தனா, கர்ணன் எங்கே வருகிறானோ, அங்கே என் குதிரைகளைத் தூண்டுவாயாக.(31) அந்த விருஷன் (கர்ணன்), சாத்வத வீரனை {சாத்யகியைப்} பூரிஸ்ரவஸின் வழியை அடையச் செய்ய வேண்டாம்” என்றான் {அர்ஜுனன்}.சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} இவ்வாறு சொல்லப்பட்டவனும் வலிமைமிக்கக் கரங்களையும், பெரும் சக்தியையும் கொண்டவனுமான கேசவன் {கிருஷ்ணன்} சந்தர்ப்பத்திற்கு ஏற்ற இவ்வார்த்தைகளை மறுமொழியாகக் கூறினான்(32): “ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகியானவன், தனியாகவே கர்ணனுக்கு இணையானவனாவான்.(33) அப்படியிருக்கையில் துருபதனின் இரு மகன்களுடன் சேர்ந்திருக்கும் இந்தச் சாத்வதர்களில் காளை {சாத்யகி} எவ்வளவு மேன்மையாக இருப்பான்? ஓ! பார்த்தா {அர்ஜுனா}, தற்போது நீ கர்ணனுடன் போரிடுவது முறையாகாது.(34) பின்னவன் {கர்ணன்}, வாசவன் {இந்திரன்} அவனுக்குக் கொடுத்த கடும் எரிக்கோளைப் போன்ற சுடர்மிக்க ஈட்டி {சக்தி} ஒன்றைத் தன்னிடம் வைத்திருக்கிறான். ஓ! பகைவீரர்களைக் கொல்பவனே {அர்ஜுனா}, அவன் {கர்ணன்} அதை மரியாதையுடன் வழிபட்டு உனக்காகவே அதைத் தன்னிடம் வைத்திருக்கிறான்.(35) எனவே கர்ணன் சாத்வத வீரனை {சாத்யகியை} எதிர்த்துச் சுதந்திரமாகச்செல்லட்டும். ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, எப்போது நீ உன் கூரிய கணைகளால் அவனை {கர்ணனை} அவனது தேரில் இருந்து தள்ள வேண்டுமோ அந்தக் காலத்தை, அந்தப் பொல்லாதவனின் நேரத்தை நான் அறிவேன்” என்றான் {கிருஷ்ணன்} [2]” {என்றான் சஞ்சயன்}.(36)திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ சஞ்சயா, பூரிஸ்ரவஸ் மற்றும் சிந்துக்களின் ஆட்சியாளன் ஆகியோரின் வீழ்ச்சிக்குப் பிறகு, வீரக் கர்ணனுக்கும், விருஷ்ணி குலத்தோனான சாத்யகிக்கும் இடையில் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்குச் சொல்வயாக. சாத்யகியோ {பூரிஸ்ரவஸால்} தேரற்றவனாக்கப்பட்டான். {அப்படியிருக்கையில்} அவன் எந்தத் தேரில் ஏறிச் சென்றான்? (அர்ஜுனனின் தேர்ச்) சக்கரங்களைப் பாதுகாப்போரான அந்தப் பாஞ்சால இளவரசர்கள் இருவரும் (யுதாமன்யுவும், உத்தமௌஜஸும்} எவ்வாறு போரிட்டனர்?” என்று கேட்டான்.(37, 38)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அந்தப் பயங்கரப் போரில் நடைபெற்ற யாவையும் உமக்கு விளக்கிச் சொல்கிறேன். உமது தீய நடத்தையை (தீய நடத்தையின் விளைகளைப்) பொறுமையாகக் கேட்பீராக.(39) மோதல் நடைபெறுவதற்கு வெகு முன்பே, யூபக் கொடியோனால் (பூரிஸ்ரவஸால்) வீரச் சாத்யகி வெல்லப்படுவான் என்பதைக் கிருஷ்ணன் தன் இதயத்தில் அறிந்திருந்தான்.(40)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடந்ததையும், நடக்கப்போவதையும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அறிவான். அதன் காரணமாக, தன் தேரோட்டியான தாருகனை அழைத்த அவன் {கிருஷ்ணன்}, அவனிடம் {தாருகனிடம்}, “நாளை என் தேர் தயாராக இருக்கட்டும்” என்றான்.(41) இதையே அந்த வலிமைமிக்கவன் {கிருஷ்ணன்} கட்டளையிட்டான். தேவர்களோ, கந்தர்வர்களோ, யக்ஷர்களோ, உரகர்களோ, ராட்சசர்களோ, மனிதர்களோ அந்த இரு கிருஷ்ணர்களையும் {இரு கருப்பர்களையும்} வெல்லத் தகுந்தவர்கள் அல்ல.(42) பாட்டனை {பிரம்மனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களும், சித்தர்களும், இவ்விருவரின் ஒப்பிலா ஆற்றலை அறிவார்கள்.(43) எனினும், போரை நடந்தவாறே இப்போது கேட்பீராக.

தேரற்ற சாத்யகியையும், போருக்குத் தயாராக இருக்கும் கர்ணனையும் கண்ட மாதவன் {கிருஷ்ணன்}, ரிஷப ஸ்வரத்தில் [3] பேரொலியுடன் சங்கை முழக்கினான்.(44) (கேசவனின்) சங்கொலியைக் கேட்டுப் பொருளைப் புரிந்து கொண்ட தாருகன், பெரிய கொடிமரத்தைக் கொண்ட அந்தத் தேரைக் கேசவனிடம் கொண்டு சென்றான்.(45)

சிநியின் பேரன் {சாத்யகி}, கேசவனின் {கிருஷ்ணனின்} அனுமதியுடன், பிரகாசத்தில் சுடர்மிக்க நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பானதும், தாருகனால் வழிநடத்தப்பட்டதுமான அந்தத் தேரில் ஏறினான்.(46) தெய்வீக வாகனத்திற்கு ஒப்பானதும், விரும்பிய இடத்திற்குச் செல்லவல்லதும், சைப்யம், சுக்ரீவம், மேகபுஸ்பம் மற்றும் வலாஹகம் ஆகிய முதன்மையான குதிரைகள் பூட்டப்பட்டதும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தத் தேரில் ஏறிய சாத்யகி, கணக்கிலடங்கா கணைகளை இறைத்தபடி ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்து விரைந்தான்.(47, 48) (அர்ஜுனனின்) தேர்ச்சக்கரங்களின் இரு பாதுகாவலர்களான யுதாமன்யுவும், உத்தமௌஜஸும் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தேரைக் கைவிட்டு, ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்துச் சென்றனர்.(49) ராதையின் மகனும் {கர்ணனும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் கணைமாரியை ஏவியபடி, வெல்லப்படாத சிநியின் பேரனை எதிர்த்து அந்தப் போரில் விரைந்தான்.(50)அவர்களுக்கிடையில் நடைபெற்ற போரானது இதற்கு முன்னர்ப் பூமியிலோ, சொர்க்கத்திலோ, தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், உரகர்கள் அல்லது ராட்சசர்களுக்கு மத்தியிலோ கூட நடைபெற்றதாகக் கேள்விப்பட்டதில்லை என்ற அளவக்கு இருந்தது. தேர்கள், குதிரைகள், மனிதர்கள், யானைகள் ஆகியவற்றைக் கொண்ட மொத்த படையும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த இரு போர்வீரர்களின் மலைக்கத்தக்க செயல்களைக் கண்டு போரிடுவதைக் கைவிட்டது.(51, 52) அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இரு மானுட வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற மனித சக்திக்கு அப்பாற்பட்ட அந்தப் போரையும், தேரை வழிநடத்தும் தாருகனின் திறனையும் கண்டு அமைதியான பார்வையாளர்களாக இருந்தனர்.(53) உண்மையில் தாருகன், தேரில் நின்று கொண்டு, அந்த வாகனத்தை முன்னோக்கியும், பின்னோக்கியும், பக்கவாட்டில் சென்றும், வட்டமாகச் சுழன்றும், ஒரே அடியாக நிறுத்தியும் வழிநடத்திய போது, அவனது திறனைக் கண்ட அனைவரும் வியப்படைந்தனர். ஆகாயத்திலிருந்த தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோர், கர்ணனுக்கும் சிநியின் பேரனுக்கும் {சாத்யகிக்கும்} இடையில் நடைபெற்ற போரை ஊன்றிக் கவனித்து வந்தனர்.(54, 55) பெரும் வலிமை கொண்ட அந்தப் போர்வீரர்கள் இருவரும், ஒருவரையொருவர் அறைகூவியழைத்து, தங்கள் ஒவ்வொருவரின் நண்பர்களுக்காகவும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர்.(56)

தேவனைப் போலத் தெரிந்த கர்ணனும், யுயுதானனும் {சாத்யகியும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரின்மேல் ஒருவர் கணைமாரிகளைப் பொழிந்தனர்.(57) உண்மையில், தன் கணைப்பொழிவால் சிநியின் பேரனை {சாத்யகியைக்} கலங்கடித்த கர்ணனால், (சாத்யகியால்} குரு வீரன் ஜலசந்தனின் [4] கொலையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(58) துயரால் நிறைந்து, பெரும்பாம்பொன்றைப் போலப் பெருமூச்சு விட்ட கர்ணன், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் சிநியின் பேரன் {சாத்யகி} மீது கோபப் பார்வைகளை வீசிக்கொண்டு, அதனாலேயே அவனை எரித்து விடுபவனைப் போல அவனை நோக்கி மூர்க்கமாக மீண்டும் மீண்டும் விரைந்தான்.(59) சினத்தால் நிறைந்திருந்த அவனை {கர்ணனைக்} கண்ட சாத்யகி, (பகை யானையைத்) தன் தந்தங்களால் துளைக்கும் யானையொன்றைப் போல, அடர்த்தியான கணைமாரிகளை ஏவி பதிலுக்கு அவனைத் {கர்ணனைத்} துளைத்தான்.(60) புலிகளின் சுறுசுறுப்பையும், ஒப்பற்ற ஆற்றலையும் கொண்ட மனிதர்களில் புலிகளான அவ்விருவரும், அந்தப் போரில் ஒருவரையொருவர் மூர்க்கமாகச் சிதைத்துக் கொண்டனர்.(61)அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, முழுக்க இரும்பாலான கணைகளால், எதிரிகளைத் தண்டிப்பவனான கர்ணனின் அங்கங்களனைத்திலும் மீண்டும் மீண்டும் துளைத்தான். மேலும் ஒரு பல்லத்தால் அவன் கர்ணனின் தேரோட்டியை அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான்.(62, 63) மேலும் அவன் {சாத்யகி} தன் கூரிய கணைகளால், வெண்ணிறத்தைக் கொண்ட அதிரதன் மகனின் {கர்ணனின்} நான்கு குதிரைகளையும் கொன்றான். மேலும் ஒரு நூறு கணைகளால் கர்ணனின் கொடிமரத்தை நூறு துண்டுகளாக அறுத்த அந்த மனிதர்களில் காளை {சாத்யகி}, உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே கர்ணனைத் தேரற்றவனாகச் செய்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்கள் அனைவரும் உற்சாகத்தை இழந்தனர்.(64, 65)

அப்போது கர்ணனின் மகனான விருஷசேனன், மத்ர ஆட்சியாளனான சல்லியன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.(66) பிறகு எதையும் காண முடியாத ஒரு குழப்பம் தோன்றியது. உண்மையில், வீரக் கர்ணன், சாத்யகியால் தேரற்றவனாக்கப்பட்ட போது, துருப்புகள் அனைத்தின் மத்தியிலும், “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூச்சல்கள் எழுந்தன(67).

சாத்வதனின் {சாத்யகியின்} கணைகளால் துளைக்கப்பட்ட கர்ணனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குழந்தை பருவத்தில் இருந்து உமது மகனுடன் கொண்ட தன் நட்பை நினைவு கூர்ந்து, துரியோதனனுக்கு அரசுரிமையை அளிப்பதாகத் தான் செய்த உறுதிமொழியை உண்மையாக்க முயன்று, மிகவும் பலவீனமடைந்து, பெருமூச்சுவிட்டுக் கொண்டே துரியோதனனின் தேரில் ஏறினான்.(68, 69)

கர்ணன் தேரற்றவனாக்கப்பட்ட பிறகு, ஓ! மன்னா, சுயக்கட்டுப்பாடு கொண்டவனும், பீமசேனனின் சபதத்தைப் பொய்யாக்க விரும்பாதவனுமான சாத்யகியால், துச்சாசனன் தலைமையிலான உமது துணிச்சல்மிக்க மகன்கள் கொல்லப்படாதிருந்தனர். முன்னர்ப் பார்த்தனால் {அர்ஜுனனால்} (கர்ணனைக் கொல்வது குறித்து) செய்யப்பட்ட சபதத்தையும் பொய்யாக்க விரும்பாத சாத்யகி, வெறுமனே அவர்களைத் தேரற்றவர்களாக்கி மிகவும் பலவீனர்களாக்கினானே ஒழிய அவர்களைக் கொல்லவில்லை.(70, 71) உண்மையில், உமது மகன்களைக் கொல்வதாகப் பீமன் சபதம் செய்திருந்தான், மேலும் இரண்டாம் பகடையாட்டத்தின் போது கர்ணனைக் கொல்வதாகப் பார்த்தனும் {அர்ஜுனனும்} சபதம் செய்திருந்தான்.(72) கர்ணனின் தலைமையிலான அந்தப் போர் வீரர்கள் அனைவரும், சாத்யகியைக் கொல்லப் பலமான முயற்சிகளைச் செய்தாலும், அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோர் அவனைக் {சாத்யகியைக்} கொல்வதில் தோற்றனர்.(73) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருதவர்மன், வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறர், நூற்றக்கணக்கான க்ஷத்திரியர்களின் முதன்மையானோர் ஆகியோர் அனைவரையும் தன் ஒரே வில்லைக் கொண்டு சாத்யகி வெற்றி கொண்டான்.(74) அந்த வீரன் {சாத்யகி}, நீதிமனான மன்னன் யுதிஷ்டிரனின் நலனையும், சொர்க்கத்தையும் அடைய விரும்பியே போரிட்டான்.(75) உண்மையில், எதிரிகளை நசுக்குபவனான அந்தச் சாத்யகி, சக்தியில் இரு கிருஷ்ணர்களுக்கும் {இரு கருப்பர்களுக்கும்} இணையானவனாக இருந்தான். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அவன் {சாத்யகி} சிரித்துக் கொண்டே உமது துருப்புகள் அனைத்தையும் வெற்றி கொண்டான்.(76) இவ்வுலகில், கிருஷ்ணன், பார்த்தன் {அர்ஜுனன்}, சாத்யகி ஆகிய மூவர் மட்டுமே வலிமைமிக்க வில்லாளிகளாவர். நான்காவதாக ஒருவன் காணப்படவில்லை” {என்றான் சஞ்சயன்}.(77)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “தாருகனைச் சாரதியாகக் கொண்டதும் வெல்லப்பட முடியாததுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தேரில் ஏறியவனும், தன் கரவலிமையில் செருக்குடையவனும், போரில் வாசுதேவனுக்கே {கிருஷ்ணனுக்கே} நிகரானவனுமான சாத்யகி கர்ணனைத் தேரற்றவனாகச் செய்தான். சாத்யகி (கர்ணனனுடனான மோதல் முடிந்த பிறகு) வேறு ஏதேனும் தேரில் ஏறினானா?(78, 79) ஓ! சஞ்சயா, நான் இதைக் கேட்க விரும்புகிறேன். உரைப்பதில் நீ திறனுள்ளவனாக இருக்கிறாய். தாங்கிக் கொள்ளப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனாகச் சாத்யகியை நான் கருதுகிறேன். ஓ! சஞ்சயா அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.(80)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அஃது எப்படி நடந்தது என்பதைக் கேட்பீராக. நுண்ணறிவு கொண்ட தாருகனின் தம்பி, தேவைக்குரிய அனைத்தையும் கொண்ட மற்றொரு தேரைச் சாத்யகியிடம் கொண்டு வந்தான்.(81) இரும்பு, தங்கம் மற்றும் பட்டுப் பட்டைகளில் இணைக்கப்பட்ட ஏர்க்காலைக் கொண்டதும், ஆயிரம் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டதும், கொடிகளால் அலங்கரிக்கப்பட்டதும், சிங்க வடிவம் பொறிக்கப்பட்ட கொடிமரம் கொண்டதும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையும் காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான குதிரைகள் பூட்டப்பட்டதும், மேக முழக்கத்தைப் போல ஆழமான சடசடப்பொலி கொண்டதுமான தேர் அவனிடம் {சாத்யகியிடம்} கொண்டு வரப்பட்டது.(82, 83) அதில் ஏறிய சிநியின் பேரன் {சாத்யகி}, உமது துருப்புகளுக்கு எதிராக விரைந்தான். அதே வேளையில் தாருகன் முன்பைப் போலவே கேசவன் {கிருஷ்ணன்} பக்கத்தில் சென்றான்.(84)

கர்ணனுக்கும், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, சிறந்த இனத்தில் பிறந்தவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், சங்கு, அல்லது பசுவின் பால் போன்ற வெண் நிறத்தைக் கொண்டவையுமான வேகமானக் குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு புதிய தேர் கொண்டு வரப்பட்டது. அதன் காக்ஷமும், கொடிமரமும் தங்கத்தாலானவையாக இருந்தன. கொடிகள், இயந்திரங்கள் ஆகியவற்றைக் கொண்ட அந்த முதன்மையான தேர் ஒரு சிறந்த சாரதியையும் கொண்டிருந்தது. மேலும் அஃது அனைத்து வகை ஆயுதங்களையும் தன்னகத்தே அபரிமிதமாகக் கொண்டிருந்தது. அந்தத் தேரில் ஏறி, கர்ணனும் தன் எதிரிகளை எதிர்த்து விரைந்தான். நீர் கேட்ட அனைத்தையும் நான் இப்போது சொல்லிவிட்டனே.(85-87)

எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கையால் விளைந்த அழிவை (அழிவின் அளவை) அறிந்து கொள்வீராக. உமது மகன்களில் முப்பத்தோரு {31} பேர் பீமசேனனால் கொல்லப்பட்டனர் [5].(88) துர்முகனை முதன்மையாகக் கொண்ட அவர்கள் அனைவரும் போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்தவர்களாக இருந்தனர். சாத்யகியும், அர்ஜுனனும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே} பீஷ்மர் மற்றும் பகதத்தன் முதலான நூற்றுக்கணக்கான வீரர்களைக் கொன்றிருக்கின்றனர். இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} உமது தீய ஆலோசனைகளின் காரணமாக அழிவு தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(89, 90)

அர்ஜுனன் ஏற்ற மற்றொரு சபதம்! – துரோண பர்வம் பகுதி – 147-கர்ணனால் அவமதிக்கப்பட்ட பீமன், அவனைக் கொல்ல வேண்டி அர்ஜுனனிடம் கேட்டது; ஆண்மை நிறைந்த வார்த்தைகளால் கர்ணனை நிந்தித்த அர்ஜுனன்; கர்ணனின் முன்னிலையில் கர்ணனின் மகனைக் கொல்வதாகச் சபதமேற்ற அர்ஜுனன்; ஜெயத்ரதன் கொலைக்காக அர்ஜுனனை வாழ்த்திய கிருஷ்ணன்; கிருஷ்ணனின் மகிமைக்கு தன் வெற்றியை அர்ப்பணித்த அர்ஜுனன்; அந்த நாளின் விளைவுகளை அர்ஜுனனுக்குச் சுட்டிக் காட்டிய அர்ஜுனன்.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “போரில், அவர்கள் {பாண்டவர்கள்} தரப்பிலும், என் தரப்பிலும் {கௌரவர்கள் தரப்பிலும்} உள்ள வீரர்களின் நிலை இவ்வாறு இருந்த போது, பீமன் என்ன செய்தான்? ஓ! சஞ்சயா, யாவையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(1)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பீமசேனன் தேரற்றவனாக்கப்பட்ட பிறகு, கர்ணனின் வார்த்தைகளால் பீடிக்கப்பட்ட அந்த வீரன் {பீமன்}, சினத்தால் நிறைந்து பல்குனனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே கர்ணன் என்னிடம் மீண்டும் மீண்டும், “அலியே, மூடனே, பெருந்தீனிக்காரா, ஆயுதங்களில் திறனற்றவனே, குழந்தாய், போரின் சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாத நீ போரிடாதே” என்று சொன்னான். என்னிடம் அப்படிச் சொல்பவன் என்னால் கொல்லப்பட வேண்டும். ஓ! பாரதா {அர்ஜுனா}, கர்ணன் அந்த வார்த்தைகளை என்னிடம் சொல்லியிருக்கிறான்.(2-4) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நான் உன்னுடன் சேர்ந்து ஏற்ற உறுதிமொழியை {சபதத்தை} நீ அறிவாய். என்னால் அப்போது சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூர்வாயாக. ஓ! மனிதர்களில் சிறந்தவனே, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, உன் சபதத்தைப் போலவே என் சபதமும் பொய்யாக்கப்படாதவாறு நடந்து கொள்வாயாக. ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} எதனால் என் சபதம் உண்மையாகுமோ அதைச் செய்வாயாக.(5, 6)

பீமனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், அளக்க முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான அர்ஜுனன், அந்தப் போரில் கர்ணனின் அருகில் சென்று,(7) “ஓ! கர்ணா, நீ தவறான பார்வையைக் கொண்டிருக்கிறாய். ஓ! சூதனின் மகனே {கர்ணா}, உன்னை நீயே புகழ்ந்து கொள்கிறாய். தீய புரிதல் கொண்டவனே, இப்போது நான் உன்னிடம் சொல்வதைக் கேட்பாயாக.(8) வீரர்கள் போரில் வெற்றி, அல்லது தோல்வி என்ற இரண்டையே அடைகிறார்கள். ஓ! ராதையின் மகனே {கர்ணா}, இவைகளில் இரண்டும் நிச்சயமற்றவையே. போரில் ஈடுபடும் இந்திரனுக்கே வேறு கதி கிடையாது. யுயுதானனால் {சாத்யகியால்} தேரற்றவனாக்கப்பட்டு, உணர்வுகளை இழந்த நீ கிட்டத்தட்ட மருணத்தருவாயில் இருந்தாய். எனினும், உன்னைக் கொல்வதாக நான் ஏற்றிருந்த சபதத்தை நினைவுகூர்ந்த அந்த வீரன் {சாத்யகி}, உன் உயிரை எடுக்காமலேயே உன்னை விட்டான்.(10) பீமசேனரை தேரற்றவனாக்குவதில் நீ வென்றாய் என்பது உண்மையே. எனினும், ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அவ்வீரரை {பீமரை} நீ இகழ்ந்தது பாவச் செயலாகும்.(11) உண்மையான நேர்மையும், துணிச்சலும் கொண்ட மனிதர்களில் காளையர், ஓர் எதிரியை வெற்றிக் கொண்டால், தற்புகழ்ந்து கொள்ளவோ, எவரையும் இகழ்ந்து பேசவோ மாட்டார்கள்.(12) எனினும், உன் அறிவு அற்பமானதே. இதன் காரணமாகவே, ஓ! சூதனின் மகனே {கர்ணா}, நீ இத்தகு பேச்சுகளில் ஈடுபடுகிறாய். மேலும், பெரும் ஆற்றல் மற்றும் வீரம் கொண்டவரும், நேர்மையான செயல்பாடுகளுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவரும், போராடிக் கொண்டிருந்தவருமான பீமசேனர் குறித்த உன் தூற்றும் அடைமொழிகள் எதுவுமே உண்மைக்கு இயைந்தவையாக இல்லை. கேசவனும் {கிருஷ்ணனும்}, நானும், இந்தத் துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருந்தபோதே, பீமசேனரால் போரில் நீ பல முறை தேரற்றவனாகச் செய்யப்பட்டாய்.(13, 14) எனினும் அந்தப் பாண்டுவின் மகன் {பீமர்}, உன்னிடம் கடுமையான வார்த்தை ஒன்றைக் கூடச் சொல்லவில்லை.(15)

எனினும், விருகோதரிடம் {பீமரிடம்} நீ கடுமையான வார்த்தைகள் பலவற்றைச் சொன்னதாலும், என் பார்வைக்கு அப்பால் பிறருடன் சேர்ந்து சுபத்திரையின் மகனைக் {அபிமன்யுவைக்} கொன்றதாலும், அந்த உன் குற்றங்களுக்கான கனியை {பலனை} நீ இன்றே அடையப் போகிறாய்.(16)

ஓ! பொல்லாதவனே {கர்ணா}, உன் அழிவுக்காகத்தான் நீ அபிமன்யுவின் வில்லை அறுத்தாய்.(17) ஓ! அற்ப அறிவைக் கொண்டவனே {கர்ணா}, அதற்காகவே நீ, உன் தொண்டர்கள், படைகள், விலங்குகள் அனைத்துடன் சேர்த்து என்னால் கொல்லப்படுவாய். பேரிடர் உனக்கு நேரப்போவதால், நீ செய்ய வேண்டிய அனைத்துச் செயல்களையும் இப்போதே செய்து கொள்வாயாக.(18) போரில் நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே விருஷசேனனை {உன் மகனை} நான் கொல்வேன். மூடத்தனத்தால் என்னை எதிர்க்கப்போகும் மன்னர்கள் அனைவரையும் நான் யமனுலகுக்கு அனுப்பி வைப்பேன்.(19) என் ஆயுதத்தின் மீது கையைவைத்து இதை நான் உண்மையாகவே {சத்தியமாகச்} சொல்கிறேன். ஞானமற்றவனும், அகங்காரம் நிறைந்தவனும், மூடனுமான நீ போர்க்களத்தில் {வீழ்ந்து} கிடக்கும் போது, உன்னைக் கண்டு, மனங்கசந்து தீயத் துரியோதனன் புலம்பல்களில் ஈடுபடுவான் என்று நான் சொல்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.

கர்ணனின் மகனை {விருஷசேனனைக்} கொல்வதாக அர்ஜுனன் சபதமேற்றபோது, தேர்வீரர்களுக்கு மத்தியில் பேரோலியுடன் கூடிய மிகப் பெரிய ஆரவராம் எழுந்தது.(20, 21) அச்சம் நிறைந்த அவ்வேளையில் எங்கும் குழப்பம் நிலவியபோது, ஆயிரம் கதிர்களைக் கொண்ட சூரியன், ஒளியிழந்த கதிர்களுடன் அஸ்த மலைக்குள் நுழைந்தான்.(22) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரின் முன்னணியில் நின்ற ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, சபதத்தை நிறைவேற்றிய அர்ஜுனனை வாரி அணைத்துக் கொண்டு,(23) அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! ஜிஷ்ணு {அர்ஜுனா}, உன் பெரும் சபதம் நிறைவேற்றப்பட்டது நற்பேறாலேயே.(24) பொல்லாதவனான விருத்தக்ஷத்திரனும், அவனது மகனும் {ஜெயத்ரதனும்} கொல்லப்பட்டது நற்பேறாலேயே. ஓ! பாரதா {அர்ஜுனா}, இந்தத் தார்தராஷ்டிரப் படையுடன் தேவர்களின் படைத்தலைவனே {முருகனே} போரிட்டாலும், ஓ! ஜிஷ்ணு {அர்ஜுனா}, அவன் தன் உணர்வுகளை இழந்திருப்பான்.(25) இதில் எந்த ஐயமும் இல்லை. ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, மூவுலகிலும் இந்தப் படையுடன் போரிடக்கூடியவனாக உன்னைத் தவிர வேறு எவனையும் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

உனக்கு இணையாகவோ, மேன்மையாகவோ பெரும் ஆற்றலைக் கொண்டவர்களான அரசப் போர்வீரர்கள் பலர், துரியோதனனின் கட்டளையின் பேரில் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். கவசம் பூண்டவர்களான அவர்களாலும் போரில் கோபம் நிறைந்த உன்னை அணுகவே முடியாது.(26-28) உன் சக்தியும், வலிமையும், ருத்ரனுக்கோ, சக்ரனுக்கோ {இந்திரனுக்கோ}, யமனுக்கோ நிகரானவை. ஓ! ஏதிரிகளை எரிப்பவனே, யாருடைய ஆதரவும் இல்லாமல், தனியாகப் போரில் இன்று நீ வெளிப்படுத்திய இத்தகு ஆற்றலை வெளிப்படுத்த இயன்றவன் வேறு எவனும் இல்லை.(29) தீய ஆன்மா கொண்ட கர்ணன் தன் தொண்டர்களுடன் கொல்லப்படும்போது மீண்டும் உன்னை நான் இப்படிப் பாராட்டுவேன். உன் எதிரி வெல்லப்பட்டுக் கொல்லப்படும்போது, நான் இப்படியே உன்னைப் போற்றுவேன்” என்றான் {கிருஷ்ணன்}.

அவனிடம் {கிருஷ்ணனிடம்} மறுமொழியாக அர்ஜுனன், “ஓ! மாதவா {கிருஷ்ணா}, தேவர்களும் சாதிக்கக் கடினமான இந்தச் சபதமானது, உன் அருளாலேயே என்னால் நிறைவேற்றப்பட்டது.(30, 31) ஓ! கேசவா {கிருஷ்ணா}, உன்னைத் தலைவனாகக் கொண்டோரின் வெற்றியானது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றே அல்ல.(32) உன் அருளால் யுதிஷ்டிரர் முழுப் பூமியையும் அடைவார். ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, இவை யாவும் உன் சக்தியாலேயே நடக்கின்றன. ஓ! தலைவா {கிருஷ்ணா}, இந்த வெற்றி உனதாகும்.(33) ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, எங்கள் செழிப்பு உனது பொறுப்பு, நாங்கள் உன் பணியாட்களே” என்றான் {அர்ஜுனன்}. இப்படிச் சொல்லப்பட்ட கிருஷ்ணன் மெல்லப் புன்னகைத்தபடியே மெதுவாகக் குதிரைகளைத் தூண்டினான். மேலும் அவன் சென்ற வழியெங்கும் பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குக்} கொடூரக் காட்சிகள் நிறைந்த போர்க்களத்தைக் காட்டிக் கொண்டே வந்தான்.(34)

அப்போது கிருஷ்ணன் {அர்ஜுனனிடம்}, “போரில் வெற்றியையோ, உலகப்புகழையோ விரும்பிய வீர மன்னர்கள் பலர் கணைகளால் தாக்கப்பட்டுப் பூமியில் கிடக்கின்றனர்.(35) அவர்களது ஆயுதங்களும், ஆபரணங்களும் சிதறடிக்கப்பட்டும், அவர்களது குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவை சிதைக்கப்பட்டும், உடைக்கப்பட்டும் கிடக்கின்றன. கவசங்கள் துளைக்கப்பட்டோ, பிளக்கப்பட்டோ அவர்கள் பெரும் துன்பத்தை அடைந்தனர்.(36) அவர்களில் சிலர் இன்னும் உயிருடன் இருக்கின்றனர், சிலரோ இறந்து விட்டனர். எனினும் அப்படி மாண்டோரும் கூடத் தங்கள் காந்தியின் விளைவால் இன்னும் உயிருடன் இருப்பவர்களைப் போலவே தெரிகின்றனர்.(37) தங்கச் சிறகுகளைக் கொண்ட அவர்களது கணைகளாலும், தாக்குவதற்கும், தற்காத்துக் கொள்வதற்கும் பயன்படும் அவர்களது எண்ணற்ற பிற ஆயுதங்களாலும், (உயிரை இழந்த) அவர்களது விலங்குகளாலும் பூமியானது மறைக்கப்பட்டிருப்பதைப் பார்.(38) உண்மையில், கவசங்கள், ரத்தின ஆரங்கள், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அவர்களது தலைகளாலும், தலைக்கவசங்கள், கிரீடங்கள், மலர் மாலைகள், மகுடங்களில் உள்ள கற்கள், கண்டசூத்ரங்கள் {கழுத்தணிகள்}, அங்கதங்கள் {தோள்வளைகள்}, தங்கப்பட்டைகள் மற்றும் பல்வேறு பிற அழகிய ஆபரணங்களாலும் பூமியானது பிரகாசமாகத் தெரிகிறது.(39, 40)

அனுகர்ஷங்கள் {இருசுக்கட்டைகள்}, அம்பறாத்தூணிகள், கொடிமரங்கள், கொடிகள், உபஷ்கரங்கள் {தேரிலுள்ள பிற பொருட்கள்}, அதிஷ்தானங்கள் {பீடங்கள்}, கணைகள், தேர்களின் {கோபுர} முகடுகள், உடைந்த சக்கரங்கள், பெரும் எண்ணிக்கையிலான அழகிய அக்ஷங்கள் {ஏர்க்கால்கள்}, நுகத்தடிகள், குதிரைகளின் கடிவாளங்கள், கச்சைகள், விற்கள், அம்புகள், யானைகளின் அம்பாரிகள், பரிங்கங்கள், அங்குசங்கள், ஈட்டிகள், பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள்}, தோமரங்கள், சூலங்கள், குந்தங்கள், தண்டாயுதங்கள், சதாக்னிகள், புசுண்டிகள், வாள்கள், கோடரிகள், குறுகிய கனமானத் தண்டாயுதங்கள், உலக்கைகள், கதாயுதங்கள், குணபங்கள் {ஒரு வகை ஈட்டிகள்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சாட்டைகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மணிகள், பெரும் யானைகளின் பல்வேறு விதமான ஆபரணங்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல்களில் இருந்து நுழுவிய மலர்மாலைகள், விலையுயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள் ஆகிவற்றால் விரவிக் கிடந்த பூமியானது, கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் விரவிக்கிடக்கும் கூதிர்காலத்து ஆகாயத்தைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தது. பூமிக்காகக் கொல்லப்பட்ட பூமியின் தலைவர்கள், அன்புக்குரிய மனைவியை அணைத்துக் கொள்வதைப் போலப் பூமியைத் தங்கள் அங்கங்களால் தழுவியபடி உறங்கிக் கொண்டிருந்தனர்.

மலைகள் தங்கள் குகைகள் மற்றும் பிளவுகளில் சுண்ணாம்பை உதிர்ப்பதைப் போல, ஐராவதத்திற்கு ஒப்பானவையும், மலைகளைப் போலப் பெரியவையுமான இந்த யானைகள், ஆயுதங்களால் தங்கள் உடல்களில் உண்டான பிளவுகளில் அபரிமிதமாகக் குருதியைச் சிந்துகின்றன.(41-49) ஓ! வீரா {அர்ஜுனா}, கணைகளால் பீடிக்கப்பட்டுத் தரையில் கிடக்கும் அந்தப் பெரும் உயிரினங்கள் நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார். தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டுத் தரையில் கிடக்கும் அந்தக் குதிரைகளையும் பார்.(50) ஓ! பார்த்தா {அர்ஜுனா}, சாரதியற்றவையும், தேரோட்டியற்றவையும், ஒரு காலத்தில் தெய்வீக வாகனங்களுக்கோ, மாலை வானில் தோன்றும் ஆவி வடிவங்களுக்கோ {கந்தர்வ மாளிகைகளுக்கோ} ஒப்பாக இருந்தவையுமான அந்தத் தேர்கள், ஓ! தலைவா {அர்ஜுனா}, துண்டுகளாக வெட்டப்பட்ட கொடிமரங்கள், கொடிகள், அக்ஷங்கள், நுகத்தடிகள் ஆகியவற்றுடனும், உடைந்த ஏர்க்கால்கள் மற்றும் முகடுகளுடனும் இப்போது தரையில் கிடப்பதைப் பார்.(51, 52) ஓ! வீரா {அர்ஜுனா}, விற்கள் மற்றும் கேடயங்களைத் தாங்கிய காலாட்படை வீரர்களும், நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்பட்டுக் குருதியில் குளித்துப் புழுதி படிந்த தங்கள் குழல்களுடன் {கேசங்களுடன்}, தங்கள் அனைத்து அங்கங்களாலும் பூமியைத் தழுவியபடி பூமியில் கிடப்பதைப் பார்.(53)

ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, அந்தப் போர்வீரர்களின் உடல்கள் உன் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டிருப்பதைப் பார்.(54) சாமரங்கள், விசிறிகள், குடைகள், கொடிமரங்கள், குதிரைகள், தேர்கள், யானைகள், பல்வேறு வகையான விரிப்புகள், குதிரைகளின் கடிவாளங்கள், அழகிய ஆடைகள், விலைமதிப்புமிக்க (தேர்களின்) வரூதங்கள், சித்திர வேலைப்பாடுகளுள்ள திரைச்சீலைகள் ஆகியவற்றால் விரவிக் கிடக்கும் இந்தப் பூமியைப் பார்.(55, 56) இடியால் தாக்கப்பட்டு மலையின் முகடுகளில் இருந்து விழும் சிங்கங்களைப் போல, போர்வீரர்கள் பலர், நன்கு ஆயுதம் தரிக்கப்பட்ட யானைகளின் முதுகுகளில் இருந்து விழுந்து, தாங்கள் ஏறி வந்த அந்த விலங்குகளுடனேயே கிடப்பதைப் பார்.(57) (தாங்கள் ஏறி வந்த) குதிரைகள், (தாங்கள் பிடித்திருந்து) விற்கள் ஆகியவற்றோடு கலந்து பெரும் எண்ணிக்கையிலான குதிரைவீரர்களும், காலாட்படை வீரர்கள், குருதியால் மறைக்கப்பட்டுக் களத்தில் விழுந்து கிடப்பதைப் பார்.(58)

ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்ட யானைகள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்களால் மறைக்கப்பட்டதும், அபரிமிதமான இரத்தம், கொழுப்பு மற்றும் அழுகிய இறைச்சியினால் உண்டான சேறில் மகிழும் நாய்கள், ஓநாய்கள், பிசாசங்கள் மற்றும் பல்வேறு இரவு உலாவிகள் திரிவதுமான பூமியின் பரப்புப் பயங்கரமாக இருப்பதைப் பார்.(59) ஓ! பலமிக்கவனே {அர்ஜுனா}, புகழை அதிகரிப்பதான இந்தப் போர்க்கள அருஞ்செயலானது உன்னாலோ, பெரும் போரில் தைத்தியர்களையும், தானவர்களையும் கொல்லும் தேவர்களின் தலைவனான இந்திரனாலோ மட்டுமே அடையத்தக்கதாகும்” என்றான் {கிருஷ்ணன்}.(60)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனான அர்ஜுனனுக்கு இப்படியே போர்க்களத்தைக் காட்டிவந்த கிருஷ்ணன், தன் சங்கான பாஞ்சஜன்யத்தை முழக்கி, (பதிலுக்குத் தங்கள் தங்கள் சங்குகளை முழக்கிய) பாண்டவப்படையின் வீரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்.(61) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட வீரனுக்கு {அர்ஜுனனுக்குப்} போர்க்களத்தைக் காட்டியதும், எதிரிகளைக் கொல்பவனான அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பாண்டுவின் மகனான அஜாதசத்ருவிடம் {யுதிஷ்டிரனிடம்} விரைவாகச் சென்று, ஜெயத்ரதனின் கொலையைக் குறித்து அவனுக்குத் தெரிவித்தான்” {என்றான் சஞ்சயன்}.(62)

யுதிஷ்டிரனின் ஆனந்தக் கண்ணீர்! – துரோண பர்வம் பகுதி – 148-யுதிஷ்டிரனிடம் திரும்பி வந்த கிருஷ்ணனும் அர்ஜுனனும்; யுதிஷ்டிரனின் வெற்றிக்காக வாழ்த்திய கிருஷ்ணன்; கிருஷ்ணனின் அருளால் வெற்றி கிட்டியதாகக் கூறிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் கிருஷ்ணத் துதி; பீமனையும், சாத்யகியையும் ஆரத்தழுவி, வாழ்த்தி, ஆனந்தக் கண்ணீரை வடித்த யுதிஷ்டிரன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட பிறகு, கிருஷ்ணன், தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரனிடம் சென்று, மகிழ்ச்சியான இதயத்துடன் பின்னவனை {யுதிஷ்டிரனை} வழிபட்டான்.(1) மேலும் அவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, உமது வளம் அதிகரிப்பது நற்பேறாலேயே. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, உமது எதிரி {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டான். உமது தம்பி {அர்ஜுனன்} அவனது சபத்தை நிறைவேற்றியது நற்பேறாலேயே” என்றான்.(2)

பகை நகரங்களை அடக்குபவனான கிருஷ்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்து, தன் தேரில் இருந்து கீழே இறங்கினான்.(3) ஆனந்தக் கண்ணீரால் நிரம்பிய கண்களுடன் இரு கிருஷ்ணர்களையும் {இரு கருப்பர்களான வாசுதேவன் மற்றும் அர்ஜுனனையும்} தழுவி கொண்ட அவன் {யுதிஷ்டிரன்}, பிரகாசமானதும், தாமரை போன்றதுமான தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு,(4) வாசுதேவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, பாண்டுவின் மகனான தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், “வலிமைமிக்கத் தேர்வீரர்களே, பணியை நிறைவேற்றிய உங்கள் இருவரையும் நற்பேறாலேயே நான் காண்கிறேன்.(5) பாவம் நிறைந்த இழிந்தவனான அந்தச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டது நற்பேறாலேயே. கிருஷ்ணர்களே, பெரும் மகிழ்ச்சியால் என்னை நிறைய வைக்கும் செயலை நற்பேறாலேயே நீங்கள் செய்தீர்கள்.(6) 

நம் எதிரிகள் துன்பக்கடலில் மூழ்கியிருப்பது நற்பேறாலேயே. ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, அனைத்து உலகங்களின் தலைவன் {இறைவன்} நீயே. உன்னைத் தங்கள் பாதுகாவலராகக் கொண்டோரால் இந்த மூவுலகிலும் அடைய முடியாத சாதனை எதுவும் இல்லை. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, பழங்காலத்தில் தானவர்களை வென்ற இந்திரனைப் போல, உன் அருளால் நாங்கள் எங்கள் எதிரிகளை வெல்வோம்.(7, 8) 


ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நீ எவரிடம் மனநிறைவு கொள்கிறாயோ, ஓ! கௌரவங்களை அளிப்பவனே, அவர்கள் உலகத்தை வெல்வதோ, மூவுலகங்களை வெல்வதோ நிச்சயம் சாத்தியமே.(9) ஓ! தேவர்களின் தலைவா {கிருஷ்ணா}, நீ யாரிடம் மனநிறைவு கொண்டுள்ளாயோ, ஓ! கௌரவங்களை அளிப்பவனே, அவர்கள் போரில் தோல்வியையோ எந்தப் பாவத்தையோ அடைய மாட்டார்கள்.(10)

ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, சக்ரன் {இந்திரன்} தேவர்களின் தலைவனானது உன் அருளாலேயே.(11) அந்த அருளப்பட்டவன் {இந்திரன்}, போர்க்களத்தில் மூவுலகங்களின் அரசுரிமையையும் அடைந்தது உன் அருளாலேயே. ஓ! தேவர்களின் தலைவா {கிருஷ்ணா}, பின்னவன் {இந்திரன்} இறவா நிலையை அடைந்ததும், ஓ! கிருஷ்ணா, நித்தியமான (அருள்) உலகங்களை அனுபவிப்பதும் உன் அருளாலேயே (12) ஓ! எதிரிகளைக் கொல்பவனே, உன் அருளால் உண்டான ஆற்றலைக் கொண்டு ஆயிரக்கணக்கான தைத்தியர்களைக் கொன்ற சக்ரன் {இந்திரன்}, தேவர்களின் தலைமைப் பொறுப்பை அடைந்தான்.(13) ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றைக் கொண்ட இந்த அண்டம், ஓ! வீரா {கிருஷ்ணா} அதன் பாதையில் இருந்து நழுவாமல் வேண்டுதல்களிலும், ஹோமங்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருப்பது உன் அருளாலேயே.(14) தொடக்கத்தில் இருளில் முழ்கியிருந்த இந்த அண்டம் முழுவதும ஒரே நீர்ப்பரப்பே இருந்தது.(15) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! மனிதர்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, இந்த அண்டம் உன் அருளாலேயே வெளிப்பட்டது.

உலகங்கள் அனைத்தின் படைப்பாளன் நீயே, பரமாத்மா நீயே, மாற்றமில்லாதவன் நீயே.(16) ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, உன்னைக் கண்டவர் எவரும் ஒருபோதும் குழம்புவதில்லை. பரம்பொருள் நீயே, தேவர்களின் தேவன் நீயே, அழிவற்றவன் நீயே.(17) ஓ! தேவர்களின் தலைவா {கிருஷ்ணா}, உன்னைப் புகலிடமாகக் கொண்டோர் ஒரு போதும் குழம்புவதில்லை. அனைத்து உலகங்களையும் படைப்பவனும், மாற்றமில்லாதவனும், ஆதி அந்தம் இல்லாதவனுமான தெய்வீகமானவன் நீயே.(18) ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, உனக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள் எப்போதும் அனைத்துச் சிரமங்களையும் கடப்பார்கள். பரமனும் {ஆதி முதல்வனும்}, பழமையானவனும், தெய்வீகமானவனும் {தெய்வீகப் புருஷனும்}, உயர்ந்தவையனைத்திலும் உயர்ந்தவனும் நீயே.(19) பரமனான உன்னை அடைந்தவன் எவனோ, அவன் உயர்ந்த வளத்தை அடைய விதிக்கப்பட்டிருக்கிறான். நான்கு வேதங்களிலும் பாடப்படுபவன் நீயே. நான்கு வேதங்களும் உன்னையே பாடுகின்றன.(20)

ஓ! உயர் ஆன்மா கொண்டோனே {கிருஷ்ணா}, உன் உறைவிடத்தை நாடி ஒப்பற்ற வளத்தை நான் அடைவேன். பரம்பொருள் நீயே, உயர்ந்த தேவர்களின் தேவன் நீயே, சிறகு படைத்த உயிரினங்களின் தலைவன் நீயே, மனிதர்கள் அனைவரின் தலைவன் நீயே.(21) 

அனைத்தினுக்கும் உயர்ந்த தலைவன் நீயே. ஓ! இருப்போரில் சிறந்தவனே {கிருஷ்ணா}, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! பலமிக்கவனே, தலைவனும், தலைவர்களுக்குத் தலைவன் நீயே. ஓ! மாதவா {கிருஷ்ணா}, வளமே உனதாகட்டும்.(22) 

ஓ! அகன்ற கண்களை உடையவனே, ஓ! அண்ட ஆன்மாவே, அனைத்துப் பொருட்களின் தொடக்கம் நீயே. எவன் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} நண்பனோ, எவன் தனஞ்சயனின் நன்மையில் ஈடுபடுபவனோ அவன், தனஞ்சயனின் பாதுகாவலனான உன்னையே அடைந்து மகிழ்ச்சியை அடைவான்” என்றான் {யுதிஷ்டிரன்}.(23)

இப்படி அவனால் சொல்லப்பட்டவர்களும், உயர் ஆன்மா கொண்டவர்களுமான கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், பூமியின் தலைவனான அந்த மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} மகிழ்ச்சியாக,(24) “பாவம் நிறைந்த மன்னனான ஜெயத்ரதன், உமது கோபம் எனும் நெருப்பாலேயே எரிக்கப்பட்டான்.(25) ஓ! பலமிக்கவரே, தார்தராஷ்டிரப் படையானது பெரியதாகவும், செருக்கு நிறைந்ததாகவும் இருப்பினும், ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, தாக்குதலுக்குள்ளாகியும், கொல்லப்பட்டும் அழிக்கப்பட்டு வருகிறது.(26) ஓ! எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, உமது கோபத்தின் விளைவாலேயே கௌரவர்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர். ஓ! வீரரே, கண்களால் மட்டுமே கொன்றுவிடக்கூடியவரான உம்மைக் கோபமூட்டிய தீய மனம் கொண்ட சுயோதனன் {துரியோதனன்}, தன் நண்பர்களுடனும், தன் சொந்தங்களுடனும் சேர்ந்து போரில் உயிரை விடப் போகிறான்.

உமது கோபத்தின் விளைவால் முன்பே கொல்லப்பட்டவரும், தேவர்களலேயே தாக்கப்பட்டவரும், குருக்களின் பாட்டனுமான வெல்லப்பட முடியாத பீஷ்மர், இப்போது கணைப்படுக்கையில் கிடக்கிறார்.(27, 28) ஓ! எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, உம்மை எதிரியாகக் கொண்டோரால் போரில் வெற்றியடையமுடியாது, ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, மரணமும் அவர்களுக்காகக் காத்திருக்கிறது.(29) ஓ! எதிரிகளை எரிப்பவரே {யுதிஷ்டிரரே}, எவனிடம் நீர் கோபம் கொள்கிறீரோ, அவன் தன் உயிர், அன்புக்குரியோர், பிள்ளைகள், பல்வேறு வகையான அருள்நிலைகள் ஆகியவற்றை விரைவில் இழப்பான்.(30) ஓ! எதிரிகளை எரிப்பவரே, மன்னர்களின் கடமைகளை நோற்பவரான நீர் கௌரவர்களிடம் கோபம் கொண்டிருக்கிறீர் எனும்போது, அவர்கள் {கௌரவர்கள்}, தங்கள் மகன்கள், விலங்குகள் மற்றும் சொந்தங்களோடு ஏற்கனவே வீழ்ந்து விட்டனர் என்றே நான் கருதுகிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.(31)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கணைகளால் சிதைக்கப்பட்டவர்களான பீமன் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகிய இருவரும் தங்களுக்கு மூத்தவனை {யுதிஷ்டிரனை} வணங்கினர். வலிமைமிக்க வில்லாளிகளான அவ்விருவரும், பாஞ்சாலர்கள் சூழ கீழே தரையில் அமர்ந்தனர்.(32, 33) அவ்விரு வீரர்களும் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதையும், வந்திருந்து கூப்பிய கரங்களுடன் இருப்பதையும் கண்ட குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, அவர்கள் இருவரையும் வாழ்த்தி,(34) “வீரர்களே, துரோணரே வெல்லப்பட முடியாத முதலையாகவும், ஹிருதிகன் மகனே {கிருதவர்மனே} கடும் சுறாவாகவும் உள்ள கடலெனும் (பகைவரின்) துருப்புகளில் இருந்து நீங்கள் இருவரும் உயிரோடு தப்பி வந்தது நற்பேறாலேயே. பூமியின் மன்னர்கள் அனைவரும் (உங்கள் இருவராலும்) வெல்லப்பட்டது நற்பேறாலேயே.(35) வெற்றிகரமானவர்களாக உங்கள் இருவரையும் நான் காண்பது நற்பேறாலேயே. துரோணரும், வலிமைமிக்கத் தேர்வீரனான ஹிருதிகன் மகனும் {கிருதவர்மனும்} போரில் வெல்லப்பட்டதும் நற்பேறாலேயே.(36)

விகர்ணிகளால் {முள் பதிக்கப்பட்ட கணைகளால்} போரில் கர்ணன் வெல்லப்பட்டது நற்பேறாலேயே. மனிதர்களில் காளையரே, உங்கள் இருவராலும் போரில் இருந்து சல்லியன் புறமுதுகிடச் செய்யப்பட்டது நற்பேறாலேயே. (37) தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், போரில் நல்ல திறம் கொண்டவர்களுமான நீங்கள் இருவரும், போரில் இருந்து பாதுகாப்பாகவும், நலமாகவும் திரும்பி வந்ததை நான் காண்பது நற்பேறாலேயே.(38) வீரர்களே, என்னைக் கௌரவிக்கும் விருப்பத்தால் உந்தப்பட்டு, போருக்குச் சென்றவர்களான நீங்கள், என் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து, கடலெனும் துருப்புகளைக் கடந்து வந்திருப்பதை நான் காண்பது நற்பேறாலேயே.(39) போரில் மகிழ்பவர்கள் நீங்கள். போரில் புறமுதுகிடாதவர்கள் நீங்கள். எனக்கு உயிரைப் போன்றவர்கள் நீங்கள். உங்கள் இருவரையும் நான் காண்பது நற்பேறாலேயே” என்றான் {யுதிஷ்டிரன்}.(40)

இதைச் சொன்ன அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் புலிகளான அந்த யுயுதானன் {சாத்யகி}, மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரையும் ஆரத் தழுவி கொண்டு ஆனந்தக் கண்ணீரை உதிர்த்தான்.(41) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மொத்த பாண்டவப் படையும் உற்சாகமடைந்து மகிழ்ச்சியில் நிறைந்தன. மேலும் அவர்கள் அனைவரும் மீண்டும் தங்கள் இதயங்களைப் போரில் நிலைநிறுத்தினர்” {என்றான் சஞ்சயன்}.(42)

துரியோதனனின் கண்ணீர்! – துரோண பர்வம் பகுதி – 149-ஜெயத்ரதன் கொலையால் துரியோதனன் அடைந்த மனச்சோர்வு; அர்ஜுனனுக்கு ஒப்பான வீரன் ஒருவனும் இவ்வுலகில் இல்லை என்று கருதிய துரியோதனன் கர்ணனிடம் நம்பிக்கை இழந்தது; உற்சாகமற்றவனாகக் கண்ணீருடன் துரோணரிடம் பேசிய துரியோதனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} வீழ்ந்த பிறகு, கண்ணீர்த்துளிகளால் நனைந்த தன் முகத்துடன், உற்சாகத்தை இழந்த உமது மகன் சுயோதனன் {துரியோதனன்}, தன் எதிரிகளை வெல்வதில் நம்பிக்கையிழந்தான்.(1) துயரால் நிறைந்து, பற்கள் உடைந்த பாம்பொன்றைப் போல வெப்பப் பெருமூச்சுகளை விட்டவனும், உலகம் முழுமைக்கும் குற்றமிழைத்தவனுமான உமது மகன் {துரியோதனன்}, மனங்கசந்து சிறுமையை அனுபவித்தான்.(2) அந்தப் போரில், ஜிஷ்ணு {அர்ஜுனன்}, பீமசேனன், சாத்வதன் {சாத்யகி} ஆகியோர் செய்த பயங்கரமான பெரிய படுகொலைகளைக் கண்டு, நிறம் மங்கியவனும், இளைத்தவனும், மனந்தளர்ந்தவனுமான அவனது {துரியோதனனின்} கண்கள் கண்ணீரால் நிறைந்தன.(3) அப்போது அவன் {துரியோதனன்} அர்ஜுனனுக்கு ஒப்பாக இவ்வுலகில் எந்த வீரனும் இல்லை என்று நினைத்தான்.(4) கோபமடைந்திருக்கும் அர்ஜுனனுக்கு எதிரில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, துரோணரோ, ராதையின் மகனோ {கர்ணனோ}, அஸ்வத்தாமனோ, கிருபரோ நிற்கத்தகுந்தவர்கள் அல்ல.(5)

சுயோதனன் {துரியோதனன்} தனக்குள்ளேயே, “பார்த்தன் {அர்ஜுனன்}, என் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் போரில் வென்று, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொன்றான். அவனை {அர்ஜுனனை} எவராலும் தடுக்க முடியவில்லை.(6) இந்த எனது பரந்த படையானது, பாண்டவர்களால் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. எவராலும், ஏன் புரந்தரனாலும் {இந்திரனாலும்} கூட என் படையைக் காக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன்.(7) எவனை நம்பி நான் இந்தப் போர்ப்பாதையில் ஈடுபட்டேனோ, ஐயோ, அந்தக் கர்ணன் போரில் வீழ்த்தப்பட்டு ஜெயத்ரதனும் கொல்லப்பட்டான்.(8) என்னிடம் சமாதானம் பேச வந்த கிருஷ்ணனை, நான் எவனுடைய சக்தியை நம்பி துரும்பாகக் கருதினேனோ அந்தக் கர்ணன், ஐயோ அந்தக் கர்ணன் போரில் வெல்லப்பட்டான்” என்று நினைத்தான்.(9)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் இதயத்துக்குள்ளேயே இப்படி வருந்தியவனும், மொத்த உலகத்திற்கும் எதிராகக் குற்றமிழைத்தவனுமான அவன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரோணரைக் காண்பதற்காக அவரிடம் சென்றான்.(10) துரோணரிடம் சென்ற அவன் {துரியோதனன்}, குருக்களின் பேரழிவையும், தன் எதிரிகளின் வெற்றியையும், தார்தராஷ்டிரர்கள் அடைந்திருக்கும் படுபயங்கர ஆபத்தையும் அவரிடம் சொன்னான்.(11)

சுயோதனன் {துரியோதனன்}, “ஓ! ஆசானே {துரோணரே}, இந்த மன்னர்களின் மாபெரும் அழிவைக் காண்பீராக. என் பாட்டனான வீரப் பீஷ்மரை நமது தலைமையில் நிறுத்தி நான் போரிட வந்தேன்.(12) அவரைக் {பீஷ்மரைக்} கொன்ற சிகண்டி, தனது ஆசை நிறைவடைந்து, மற்றொரு வெற்றிக்கான பேராசையில் துருப்புகள் அனைத்திற்கும் முன்னணியில் நின்று கொண்டிருக்கிறான் [1].(13) உமது மற்றொரு சீடனும், வெல்லப்பட முடியாதவனுமான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, ஏழு அக்ஷௌஹிணி துருப்புகளைக் [2] கொன்று, மன்னன் ஜெயத்ரதனையும் யமனுலகுக்கு அனுப்பிவிட்டான்.(14) ஓ! ஆசானே {திருதராஷ்டிரரே}, எனக்கு வெற்றியை விரும்பி, எனக்கு நன்மை செய்வதிலேயே எப்போதும் ஈடுபட்டு, யமனின் வசிப்பிடத்திற்குச் சென்ற என் கூட்டாளிகளுக்கு நான் பட்ட கடனில் இருந்து எப்படி நான் மீளப்போகிறேன்?(15) தங்கள் உலக வளத்தையெல்லாம் கைவிட்டு, பூமியின் அரசுரிமையை எனக்களிக்க விரும்பிய அந்தப் பூமியின் தலைவர்கள், இப்போது பூமியில் கிடக்கின்றனர்.(16) உண்மையில், நானொரு கோழையே. நண்பர்களின் இத்தகு படுகொலைக்குக் காரணமான நான், நூறு குதிரை வேள்விகளைச் செய்தாலும் புனிதமடைவேன் என்று நினைக்கவும் துணிய மாட்டேன்.(17) நான் பேராசைக்காரன், பாவம் நிறைந்தவன், மேலும் நீதிக்கு எதிராக நடந்தவனுமாவேன். வெற்றியடையும் விருப்பம் கொண்டிருந்த இந்தப் பூமியின் தலைவர்கள், என் செயல்களால் மட்டுமே யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(18) நடத்தையில் பாவியும், உட்பகையைத் தோற்றுவித்தவனுமான எனக்கு, பூமியானவள் இந்த மன்னர்களுக்கு முன்னிலையில் (மூழ்கும் வகையில்) ஏன் ஒரு துளையைத் தர மறுக்கிறாள் [3].(19)ஐயோ, இரத்தச்சிவப்புடைய கண்களைக் கொண்டவரும், மறு உலகை வெற்றிக் கொண்ட வெல்லப்பட முடியாத வீரருமான பாட்டன் {பீஷ்மர்} என்னைச் சந்திக்கும்போது, மன்னர்களுக்கு மத்தியில் என்னிடம் என்ன சொல்வார்.(20) வலிமைமிக்க வில்லாளியான அந்த ஜலசந்தன், சாத்யகியால் கொல்லப்பட்டதைப் பாரும். அந்தப் பெரும் தேர்வீரன் {ஜலசந்தன்}, தன் உயிரை விடத் தயாராக, என் நிமித்தமாகப் போருக்குச் செருக்குடன் வந்தான்.(21) காம்போஜர்களின் ஆட்சியாளனும் {சுதக்ஷிணனும்}, அலம்புசனும், என்னுடைய இன்னும் பல கூட்டாளிகளும் கொல்லப்பட்டதைக் கண்டும் என் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதால் எதை நான் அடையப் போகிறேன்?(22)

அந்தப் புறமுதுகிடாத வீரர்கள், என் நிமித்தமாகப் போரிட்டு, என் எதிரிகளை வெல்வதற்காகத் தங்களால் முடிந்த அளவு சக்தியுடன் போராடி தங்கள் உயிரையே விட்டனர்.(23) ஓ! எதிரிகளை எரிப்பவரே {துரோணரே}, நான் இன்று என் முழு வலிமையைப் பயன்படுத்தி அவர்களிடம் பட்ட கடனிலிருந்து விடுபட்டு, யமுனைக்குச் சென்று நீர்க்காணிக்கைகள் செலுத்தி அவர்களை நிறைவு செய்யப் போகிறேன்.(24) ஓ! ஆயுதம் தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவரே {துரோணரே}, ஒன்று பாஞ்சாலர்களையும், பாண்டவர்களையும் கொன்று மன அமைதியை அடைவேன், அல்லது போரில் அவர்களால் கொல்லப்பட்டு, என் கூட்டாளிகள் சென்ற உலகங்களுக்கே நானும் செல்வேன் என்று நான் செய்திருக்கும் நற்செயல்கள் மீதும், நான் கொண்டிருக்கும் ஆற்றலின் மீதும், என் மகன்களின் மீதும் ஆணையிட்டு உமக்கு நான் உண்மையாகவே சொல்கிறேன்.(25, 26) என் பொருட்டுப் போரில் ஈடுபட்ட அந்த மனிதர்களில் காளையர், அர்ஜுனனால் கொல்லப்பட்டு எங்கே சென்றார்களோ அங்கே நிச்சயம் நானும் செல்வேன்.(27) நாம் நமது கூட்டாளிகளை நன்கு பாதுகாக்கவில்லை என்பதைக் கண்டு, நம்மோடு நீடித்திருக்க அவர்கள் {நமது கூட்டாளிகள்} விரும்பவில்லை. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, இப்போது அவர்கள் நம்மைவிடப் பாண்டவர்களையே உகந்தவர்களாகக் கருதுகின்றனர் [4].(28) அர்ஜுனன் உமது சீடன் என்பதாலும், அவனிடம் நீர் கனிவுடன் நடந்து கொள்வதாலும், துல்லிய இலக்கைக் கொண்ட நீரே போரில் நமக்கு அழிவை விதித்திருக்கிறீர்.(29) இதன் காரணமாகவே, நமக்கு வெற்றியைப் பெற்றுத் தர முயன்றோர் அனைவரும் கொல்லப்பட்டனர். இப்போது நமது வெற்றியைக் கர்ணன் மட்டுமே விரும்புவதாகத் தெரிகிறது.(30)முறையாகச் சோதிக்காமல் ஒருவனை நண்பனாக ஏற்று, நண்பர்களால் சாதிக்கப்பட வேண்டிய காரியங்களில் அவனை ஈடுபடுத்தும் பலவீனமான {மந்த} அறிவைக் கொண்ட மனிதன் தீங்கை அடைவது நிச்சயம்.(31) இப்படியே எனது இந்த விவகாரமும் என் நண்பர்களில் சிறந்தோரால் நிர்வகிக்கப்பட்டது [5]நான் பேராசைக்காரன், பாவம் நிறைந்தவன், கோணல் புத்தி கொண்டவன் மற்றும் தணிக்க முடியாத பொருளாசை கொண்டவனுமானவேன்.(32) ஐயோ, மன்னன் ஜெயத்ரதன் கொல்லப்பட்டான், மேலும் பெரும் சக்தி கொண்ட சோமதத்தன் மகனும் {பூரிஸ்ரவஸும்}, அபிஷாஹர்களும், சூரசேனர்களும், சிபிக்களும், வசாதிகளும் கொல்லப்பட்டனர்.(33) அந்த மனிதர்களில் காளையர் எனக்காகப் போரில் ஈடுபட்டிருந்த போது அர்ஜுனனால் கொல்லப்பட்டு எங்குச் சென்றார்களோ அங்கேயே நானும் இன்று செல்லப் போகிறேன்.(34) அந்த மனிதர்களில் காளையர் இல்லாத நிலையில் உயிர்வாழும் தேவையேதும் எனக்கு இல்லை. ஓ! பாண்டு மகன்களின் ஆசானே {துரோணரே}, எனக்கு இதில் {இக்காரியத்தில்} அனுமதி அளிப்பீராக” என்றான் {துரியோதனன்}” {என்றான் சஞ்சயன்}.(35)

துரோணரின் மறுமொழி! – துரோண பர்வம் பகுதி – 150-துரியோதனனுக்குத் துரோணர் சொன்ன மறுமொழி; கவசத்தைக் களையும் முன் பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வதாகச் சபதமேற்ற துரோணர்; அஸ்வத்தாமனுக்குத் தன் இறுதிச் செய்தியைச் சொல்லுமாறு துரியோதனனைப் பணித்த துரோணர்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} போரில் கொல்லப்பட்ட பிறகு, பூரிஸ்ரவஸ் வீழ்ச்சிக்குப் பிறகு, உங்கள் மனநிலை எப்படி இருந்தது?(1) குருக்களின் மத்தியில் துரியோதனன் இப்படித் துரோணரிடம் பேசியபிறகு, ஆசான் {துரோணர்} அவனிடம் {துரியோதனனிடம்} என்ன சொன்னார்? ஓ! சஞ்சயா இவை யாவையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பூரிஸ்ரவஸ் மற்றும் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோர் கொல்லப்பட்ட பிறகு, உமது துருப்புகளுக்கு மத்தியில் உரத்த ஓலம் எழுந்தது(3).

எந்த ஆலோசனைகளின் விளைவால் நூற்றுக்கணக்கான மனிதத் தலைவர்கள் கொல்லப்பட்டனரோ, உமது மகனின் {துரியோதனனின்} அந்த ஆலோசனைகளை அவர்கள் அனைவரும் அலட்சியம் செய்தனர்.(4) துரோணரைப் பொறுத்தவரை, அவர் உமது மகனின் அந்த வார்த்தைகளைக் கேட்டுத் துயரால் நிறைந்தார். சிறிது நேரம் சிந்தித்த அவர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் துன்பத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(5)

துரோணர் {துரியோதனனிடம்}, “ஓ! துரியோதனா, வார்த்தைக் கணைகளால் என்னை ஏன் இப்படித் துளைக்கிறாய்? அர்ஜுனனைப் போரில் வீழ்த்துவது இயலாது என முன்பே நான் உன்னிடம் சொன்னேன்.(6) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் {அர்ஜுனனால்} பாதுகாக்கப்பட்ட சிகண்டி பீஷ்மரைக் கொன்றான். ஓ! குரு குலத்தோனே {துரியோதனா}, அந்த அருஞ்செயலால் போரில் அர்ஜுனனின் ஆற்றல் நன்கு சோதிக்கப்பட்டது.(7) தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாத பீஷ்மர் உண்மையில் போரில் எப்போது கொல்லப்பட்டாரோ, அப்போதே பாரதப் படை அழிந்து விட்டது என்பதை நான் அறிவேன்.(8)  மூவுலகில் உள்ளோர் அனைவரிலும் மிக முதன்மையான வீரர் என நாம் கருதிய அவரே {பீஷ்மரே} வீழ்ந்த பிறகு, வேறு யாரை நாம் நம்ப முடியும்?

ஓ! ஐயா {துரியோதனா}, முன்னர்க் குருக்களின் சபையில் சகுனி விளையாடியது பகடைகளல்ல, அவை எதிரிகளைக் கொல்லவல்ல கூரிய கணைகள்.(10) ஓ! ஐயா, ஜெயனால் {அர்ஜுனனால்} ஏவப்படும் அந்தக் கணைகளே {பகடைக் கணைகளே} இப்போது நம்மைக் கொல்கின்றன. அவற்றை அப்படியே விதுரன் உருவகப்படுத்தியிருந்தாலும், நீ இன்னும் அவற்றை அவ்வாறு புரிந்து கொள்ளவில்லை.(11) ஞானியும், உயர் ஆன்மா கொண்டவனுமான விதுரன், கண்ணீர் நிறைந்த கண்களுடன் உன்னிடம் சொன்ன அந்த வார்த்தைகளை, அமைதியைப் பரிந்துரைத்த அந்த நன்மையான வார்த்தைகளை அப்போது நீ கேட்கவில்லை.(12) அவன் {விதுரன்} முன்னறிவித்த அந்தப் பேரிடர் இப்போது வந்திருக்கிறது. ஓ! துரியோதனா, விதுரனின் வார்த்தைகளுக்கு நீ கீழ்ப்படியாததன் விளைவாலேயே, {அவன் முன்னறிவித்த} அந்தப் பயங்கரமான படுகொலைகள் இப்போது நேருகின்றன.(13) மூட புத்தி கொண்ட எந்த மனிதன், நம்பிக்கைக்குரிய நண்பர்களின் வணங்கத்தக்க சொற்களை அலட்சியம் செய்து, தன் சொந்தக் கருத்தைப் பின்பற்றுவானோ, அவன் விரைவில் இழிந்த பரிதாப நிலையில் வீழ்வான்.(14)

ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, நற்குலத்தில் பிறந்தவளும், அனைத்து அறங்களையும் பயில்பவளுமான கிருஷ்ணையை {திரௌபதியை} எங்கள் கண்களுக்கு முன்பாகவே குருக்களின் சபைக்கு இழுத்து வந்த உனது அந்தப் பாவகரச் செயலின் கனியே உனக்கு நேர்ந்திருக்கும் இந்தப் பெருந்தீமையாகும். கிருஷ்ணை {திரௌபதி} அப்படி நடத்தப்படத் தகாதவளாவாள்.(15-16) வஞ்சகத்தால் பகடையில் பாண்டவர்களை வென்ற நீ, அவர்களை மான் தோல் உடுத்தச் செய்து காடுகளுக்குள் அனுப்பினாய்.(17) எப்போதும் அறப்பயிற்சிகளில் {நல்ல செயல்களில்} ஈடுபடுபவர்களும், என் சொந்த மகன்களையே போன்றவர்களுமான அந்த இளவரசர்களுக்கு {பாண்டவர்களுக்கு} என்னைத்தவிர இவ்வுலகில் வேறு எந்தப் பிராமணன் தீங்கிழைக்க முனைவான்?(18)

திருதராஷ்டிரன் சம்மதத்துடன், குரு சபையின் மத்தியில் சகுனியை உன் உதவியாளனாகக் கொண்ட நீ, பாண்டவர்களின் கடுஞ்சினத்தைத் தூண்டினாய்.(19) துச்சாசனனுடன் சேர்ந்து கொண்டு கர்ணனும் அந்தக் கோபத்தை அதிகரிக்கச் செய்தான். விதுரனின் வார்த்தைகளை அலட்சியம் செய்து நீயேகூட மீண்டும் மீண்டும் அதை அதிகரிக்கச் செய்தாய்.(20) நீங்கள் அனைவரும் சிந்துக்களின் ஆட்சியாளனின் அருகில் நிற்கத் தீர்மானித்து உறுதியான பாதுகாப்புடன் அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டீர்கள். பிறகு ஏன் நீங்கள் அனைவரும் வெல்லப்பட்டீர்கள்? மேலும் ஏன் ஜெயத்ரதன் கொல்லப்பட்டான்?(21) ஓ! கௌரவ்யா {துரியோதனா}, நீயும், கர்ணன், கிருபர், சல்லியன், அஸ்வத்தாமன் ஆகியோரும் உயிருடன் இருக்கையில் சிந்துக்களின் ஆட்சியாளன் எவ்வாறு கொல்லப்பட்டான்.(22) (உன் தரப்பில் உள்ள) மன்னர்கள், சிந்துக்களின் ஆட்சியாளனைக் காப்பதற்காகச் சீற்றத்துடன் தங்கள் சக்தி அனைத்தையும் வெளிப்படுத்தினர். பிறகு ஏன் அவர்களுக்கு மத்தியிலேயே ஜெயத்ரதன் கொல்லப்பட்டான்?(23) அர்ஜுனனின் கைகளில் இருந்து தன்னைப் பாதுகாக்க ஜெயத்ரதன் என்னை நம்பி எதிர்பார்த்தான்.(24) எனினும், அவன் எதிர்பார்த்த பாதுகாப்பை அவன் அடையவில்லை. எனக்கே எந்தப் பாதுகாப்பும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.(25)

சிகண்டியோடு கூடிய பாஞ்சாலர்களைக் கொல்வதில் வெல்லாதவரை, திருஷ்டத்யும்னப் புழுதியில் மூழ்குபவனைப் போலவே என்னை நான் உணர்கிறேன்.(26) {இப்படி} நானும் துயரில் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டும், ஓ! பாரதா {துரியோதனா}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} காப்பதில் தவறி விட்டு, உன் வார்த்தைக் கணைகளால் என்னை ஏன் நீ துளைக்கிறாய்?(27) போரில் களைக்காதவரும், துல்லியமான இலக்கைக் கொண்டவருமான பீஷ்மரின் தங்கக் கொடிமரத்தை இனி உன்னால் காண முடியாது. அப்படியிருக்கையில் எப்படி நீ வெற்றியில் நம்பிக்கைக் கொள்கிறாய்?(28) இந்த அளவுக்கு நிறைய வலிமைமிக்கத் தேர்வீரர்களுக்கு மத்தியில், சிந்துக்களின் ஆட்சியாளனும், பூரிஸ்ரவஸும் கொல்லப்பட்டிருக்கும் போது, முடிவு எவ்வாறு இருக்கும் என நீ நினைக்கிறாய்?(29) ஓ! மன்னா {துரியோதனா}, வெல்லப்படக் கடினமான கிருபர் இன்னும் உயிரோடிருக்கிறார். ஜெயத்ரதனின் பாதையைப் பின்பற்றாமல் இருந்ததற்காக நான் அவரை உயர்வாகப் போற்றுகிறேன்.(30) (போரில்) மிகக் கடினமான சாதனைகளை அடையும் வீரரும், வாசவனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்களாலேயே போரில் கொல்லப்பட முடியாதவருமான பீஷ்மர், ஓ! கௌரவ்யா {துரியோதனா}, நீயும், உன் தம்பி துச்சாசனனும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்ட போது, ஓ! மன்னா {துரியோதனா}, பூமியே உன்னைக் கைவிட்டதாக நான் நினைத்தேன்.(31, 32)

ஓ! திருதராஷ்டிரன் மகனே {துரியோதனா}, போரில் உன் நன்மையை அடைவதற்காகவே, பாஞ்சாலர்கள் அனைவரையும கொல்லாமல் நான் என் கவசத்தைக் களைய மாட்டேன்.(34) ஓ! மன்னா {துரியோதனா}, போரிட்டுக் கொண்டிருக்கும் என் மகன் அஸ்வத்தாமனிடம் சென்று, அவனது உயிரே ஆபத்துக்குள்ளானாலும், சோமகர்களை மட்டும் அவன் விட்டு விடக்கூடாது என்று சொல்வாயாக [2].(35) மேலும் அவனிடம் {அஸ்வத்தாமனிடம்}, “உன் தந்தையிடம் பெற்ற ஆணைகள் அனைத்தையும் நீ கடைப்பிடிப்பாயாக. பணிவு, சுயக்கட்டுப்பாடு, உண்மை மற்றும் {கபடமற்ற} நேர்மை ஆகிய செயல்களில் நீ உறுதியாக இருப்பாயாக.(36) அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதில், அறத்தையும், பொருளையும் புறக்கணிக்காமல், அற ஆதிக்கம் கொண்ட செய்களையே எப்போதும் நீ செய்வாயாக.(37) பிராமணர்களை எப்போதும் பரிசுகளால் நிறைவு செய்வாயாக. அவர்கள் அனைவரும் உன் வழிபாட்டுக்குத் தகுந்தவர்களாவர். அவர்களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் எதையும் நீ செய்யாதிருப்பாயாக. அவர்கள் நெருப்பின் தழல்களைப் போன்றவர்களாவர்” என்றும் {அஸ்வத்தாமனிடம் நீ} சொல்ல வேண்டும்.(38)

என்னைப் பொறுத்தவரை, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {துரியோதனா}, வார்த்தைக் கணைகளால் உன்னால் துளைக்கப்படும் நான், பெரும்போர் புரிவதற்காகப் பகைவரின் படைக்குள் ஊடுருவுவேன்.(39) உன்னால் முடியுமென்றால், ஓ! துரியோதனா, போய் அந்தத் துருப்புகளைக் காப்பாயாக. குருக்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகிய இருவரும் கோபமாக இருக்கின்றனர். அவர்கள் இரவிலும் போர்புரிவார்கள்” என்றார் {துரோணர்}.(40) இவ்வார்த்தைகளைச் சொன்ன துரோணர், விண்மீன்களின் ஒளியைத் தன் ஒளியால் மீறி மறைக்கும் சூரியனைப் போல க்ஷத்திரியர்களின் சக்தியைத் தன் சக்தியால் மீறுவதற்காகப் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றார்” என்றான் {சஞ்சயன்}.(41)

“விதி வலியது!” என்ற கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 151-துரோணரின் நேர்மையைச் சந்தேகித்துக் கர்ணனிடம் பேசிய துரியோதனன்; துரியோதனனின் சந்தேகங்களை நீக்கிய கர்ணன்; குருக்களின் தோல்விக்கு விதியே காரணம் என்று சொன்ன கர்ணன்..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “இப்படித் துரோணரால் தூண்டப்பட்ட மன்னன் துரியோதனன், சினத்தால் தூண்டப்பட்டுப் போரில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(1) பிறகு உமது மகன் துரியோதனன் கர்ணனிடம், “போரில் போராடிக் கொண்டிருந்த சிறப்புமிக்கத் துரோணரும், இன்னும் பல முதன்மையான போர்வீரர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கிருஷ்ணனை மட்டுமே உதவிக்குக் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவன் {கிரீடியான அர்ஜுனன்}, தேவர்களாலும் ஊடுருவமுடியாத அளவுக்கு, ஆசானால் {துரோணரால்} அமைக்கப்பட்ட வியூகத்தைப் பிளந்து, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொன்றுவிட்டதைக் காண்பாயாக.(2, 3)

ஓ! ராதையின் மகனே {கர்ணா}, மூர்க்கமாக முயன்று கொண்டிருந்த சிறப்புமிக்கத் துரோணரும், நானும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சிங்கத்தால் கொல்லப்பட்ட சிறு விலங்குகளின் கூட்டத்தைப் போல, எவருடைய உதவியுமில்லாத பார்த்தனால் {அர்ஜுனனால்} போரில் கொல்லப்பட்டு, பூமியில் கிடக்கும் பல முதன்மையான மன்னர்களைப் பார்ப்பாயாக.(4, 5) சக்ரனின் {இந்திரனின்} மகன் {அர்ஜுனன்} என் படையைச் சிறிதே எஞ்சியிருக்கும் அளவுக்குக் குறைத்துவிட்டான். உண்மையில், போரில் துரோணரால் தடுக்கப்பட்டும், சிந்துக்களின் ஆட்சியாளனைக் கொன்று பல்குனனால் {அர்ஜுனனால்} தன் சபதத்தை எப்படி நிறைவேற்ற முடிந்தது?(6)  துரோணர் விரும்பவில்லையெனில், ஓ! வீரா {கர்ணா}, போராடிக் கொண்டிருக்கும் தன் ஆசானை {துரோணரை} மீறி, ஊடுருவ முடியாத அந்த வியூகத்தைப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} எவ்வாறு பிளக்க முடியும்?

உண்மையில், பல்குனன் {அர்ஜுனன்}, சிறப்பு மிக்க ஆசானின் {துரோணரின்} பெரும் அன்புக்குரியவனாவான்.(7,8)  இதன் காரணமாகவே பின்னவர் {துரோணர்}, அவனுடன் போரிடாமலேயே அவனை நுழைய அனுமதித்திருக்கிறார். என் பேறின்மையைப் பார். எதிரிகளை எரிப்பவரான துரோணர், முதலில் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைப்} பாதுகாப்பதாக உறுதியளித்துவிட்டுக் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனை வியூகத்துக்குள் நுழைய அனுமதித்துவிட்டார். தொடக்கத்திலேயே சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} அவனது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல அனுமதி அளித்திருந்தால், இத்தகு பயங்கரப் பேரழிவு நடந்திருக்காது {ஜெயத்ரதன் அழிந்திருக்க மாட்டான்}. ஐயோ, தன் உயிரைக் காத்துக் கொள்ளும் நம்பிக்கையில் ஜெயத்ரதன் வீடு திரும்ப விரும்பினான்.(9-11) போரில் பாதுகாப்பதாகத் துரோணரிடம் வாக்குறுதி பெற்ற மூடனான நானே அவன் {ஜெயத்ரதன்} செல்வதைத் தடுத்தேன் [1]. ஐயோ, இன்று சித்திரசேனனின் தலைமையிலான என் சகோதரர்கள் அனைவரும், இழிந்தவர்களான நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அழிந்து விட்டனர்” என்றான் {துரியோதனன்}.(12)

அதற்குக் கர்ணன் {துரியோதனனிடம்}, “ஆசானை {துரோணரைப்} பழிக்காதே. அந்தப் பிராமணர் தன் சக்தி, பலம் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தித் தன் உயிரையும் துச்சமாக மதித்துப் போராடிவருகிறார்.(13) வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன் ஆசானை {துரோணரை} மீறி நம் வியூகத்தைப் பிளந்ததில் அவரிடம் {துரோணரிடம்} சிறு குற்றமும் இருக்க முடியாது.(14) ஆயுதங்களை {அஸ்திரங்களை} அறிந்தவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனுமான பல்குனன் {அர்ஜுனன்} இளமையுடன் கூடியவன்; அவன் ஆயுதங்கள் அனைத்திலும் தேர்ச்சியுடைய வீரன்; அவன் தன் வேகமான இயக்கத்துக்காகத் தனித்தன்மையுடன் அறியப்படுபவனுமாவான். தெய்வீக ஆயுதங்களைத் தரித்தவனும், கிருஷ்ணனின் கைகளில் இருக்கும் கடிவாளங்களுடன் கூடிய குதிரைகள் பூட்டப்பட்டதும், குரங்குக் கொடி கொண்டதுமான தன் தேரில் ஏறியவனும், ஊடுவமுடியாத கவசம் பூண்டவனும், மங்கா வலிமை கொண்ட தன் தெய்வீக வில்லான காண்டீவத்தை எடுத்துக் கொண்டவனுமான வீர அர்ஜுனன், தன் கரங்களின் வலிமையில் உண்டான செருக்குடன்,  கூரிய கணைகளை இறைத்தபடியே துரோணரை மீறினான்.  இஃதில் எந்த ஆச்சரியமுமில்லை.(15-17)

மறுபுறம் ஆசானோ {துரோணரோ}, ஓ! மன்னா {துரியோதனா}, வயதால் முதிர்ந்தவரும், வேகமாகச் செல்ல முடியாதவரும் ஆவார். மேலும் அவர் {துரோணர்}, ஓ! மன்னா {துரியோதனா}, நீண்ட நேரம் கரங்களைப் பயன்படுத்த முடியாதவராவார்.(18) இதனாலேயே, வெண் குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான பல்குனன் {அர்ஜுனன்}, ஆசானை மீறிச் செல்வதில் வென்றான். இந்தக் காரணத்திற்காகவே, துரோணரிடம் நான் எந்தக் குற்றத்தையும் காணவில்லை.(19) இவை யாவையும் பார்த்தால், வெண் குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன், நமது வியூகத்தைப் பிளந்து துரோணரை மீறிச் சென்றதில், பின்னவர் {துரோணர்} என்னதான் ஆயுதங்களில் திறன் பெற்றவராக இருப்பினும், போரில் பாண்டவர்களை வெல்ல இயலாதவர் என்பது தெரிகிறது.(20)

விதியால் நிர்ணயிக்கப்பட்டது எதுவும் மாறாக நடக்காது என்றே நான் நினைக்கிறேன். எனவே, ஓ! சுயோதனா {துரியோதனா}, நமது சக்தியால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் பயன்படுத்தி நாம் போரிட்டிருந்தாலும், போரில் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்டதால் விதியே அனைத்திலும் வலியது என்பது தெரிகிறது.(21) உன்னோடு சேர்ந்து நாம் அனைவரும் நம்மால் முடிந்த அளவு சக்தியைப் பயன்படுத்திப் போர்க்களத்தில் முயன்றோம்.(22) எனினும் நம் முயற்சிகளைக் கலங்கடித்த விதியானது நம்மிடம் புன்னகைக்கவில்லை.

வஞ்சகம், ஆற்றல் ஆகிய இரண்டையும் பயன்படுத்திப் பாண்டவர்களுக்குத் தீங்கிழைக்க நாம் எப்போதும் முயன்றிருக்கிறோம்.(23)  விதியால் பீடிக்கப்பட்ட மனிதன் எந்தக் காரியத்தைச் செய்தாலும், ஓ! மன்னா {துரியோதனா}, அம்மனிதன் எவ்வளவுதான் முயன்றாலும் விதியால் அது {அக்காரியம்} கலங்கடிக்கப்படும்.(24) உண்மையில், விடாமுயற்சியுடன் கூடிய ஒரு மனிதன் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அஃது அனைத்தையும் எப்போதும் அச்சமற்ற வகையில் செய்ய வேண்டும். வெற்றி விதியைச் சார்ந்தே இருக்கும்.(25)

ஓ பாரதா {துரியோதனா}, வஞ்சகதைக் கொண்டும், நஞ்சைப் பயன்படுத்தியும் பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்கள் பாண்டவர்கள்} வஞ்சிக்கப்பட்டார்கள். அவர்கள் அரக்கு மாளிகையில் எரிக்கப்பட்டார்கள். அவர்கள் பகடையில் வெல்லப்பட்டார்கள்.(26) ஆட்சிக்கலைகளின் ஆணைகளுக்கிணங்க {ராஜநீதிக்கிணங்க} அவர்கள் காடுகளுக்குள் நாடுகடத்தப்பட்டார்கள். இவை யாவையும் நம்மால் கவனமாகச் செய்யப்பட்டாலும், விதியால் அவை கலங்கடிக்கப்படுகின்றன.(27) ஓ! மன்னா {துரியோதனா}. விதியை ஒன்றுமில்லாததாக்கி உறுதியான தீர்மானத்துடன் போரிடுவாயாக.

சிறந்த ஆற்றலுடன் போராடும் உனக்கும் அவர்களுக்கும் இடையில், எத்தரப்பு மற்றதை விஞ்சுகிறதோ அதற்கு விதி அனுகூலமாகலாம்.(28)  மேன்மையான அறிவின் உதவியுடன் பாண்டவர்களால் எந்த விவேகமான வழிகளும் பின்பற்றப்படவில்லை. அல்லது, ஓ! வீரா {துரியோதனா}, அறிவில்லாத எந்தக் காரியத்தையும் விவேகமில்லாமல் நீயும் செய்யவில்லை. (29)
செயல்களின் விளைவுகளை விவேகமானது, அல்லது விவேகமற்றது என்று விதியே நிர்ணயிக்கிறது. தன் காரியங்களையே நோக்கமாகக் கொண்ட விதியானது, அனைத்தும் உறங்கும்போது விழித்துக் கொண்டிருக்கிறது.(30)
உன் படை பெரியது, உனது போர்வீரர்களும் பலராவர். இப்படியே போர் தொடங்கியது.(31) அவர்களது படை சிறியதாக இருந்தும், நன்கு தாக்கக்கூடிய மனிதர்களுடன் கூடிய உனது பெரிய படை மிகவும் குறைக்கப்பட்டது. நம் முயற்சிகள் அனைத்தையும் கலங்கடிப்பது விதியின் செயலே என நான் அஞ்சுகிறேன்” என்றான் {கர்ணன்}.(32)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரிடுவதற்காகப் பாண்டவப் படைப்பிரிவுகள் தென்பட்டன.(33) பிறகு, உமது வீரர்களுக்கும், அவர்களுக்கும் இடையில் தேர்களும், யானைகளும் ஒன்றுடனொன்று மோதிய பயங்கரமான போர் ஒன்று நடந்தது. எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவையாவும் உமது தீய கொள்கையினாலேயே நடந்தன” {என்றான் சஞ்சயன்}.(34)

ஜயத்ரதவத பர்வம் முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  துரோண பர்வம்-அபிமன்யு வத பர்வம் –

October 14, 2025

யுதிஷ்டிரனின் புலம்பல்! – துரோண பர்வம் பகுதி – 049-அபிமன்யு இறந்ததும் போர்க்களத்தை விட்டு அகன்ற வீரர்கள் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து அமர்தல்; யுதிஷ்டிரனின் புலம்பல்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தேர்ப்படைகளின் தலைவனும், சுபத்திரையின் மகனுமான அந்த வீரன் {அபிமன்யு} கொல்லப்பட்ட பிறகு, பாண்டவ வீரர்கள் தங்கள் தேர்களை விட்டு, தங்கள் கவசங்களைக் களைந்து, தங்கள் விற்களை ஒருபுறமாக வீசிவிட்டு மன்னன் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து அமர்ந்தனர். (இறந்து போன) அபிமன்யுவின் மீது தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்து, தங்கள் சோகத்தையே அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

உண்மையில், தன் தம்பியின் {அர்ஜுனனின்} வீரமகனான வலிமைமிக்கத் தேர்வீரன் அபிமன்யுவின் வீழ்ச்சியால் சோகத்தால் நிரம்பிய மன்னன் யுதிஷ்டிரன், (இப்படிப்பட்ட) புலம்பல்களிலேயே ஈடுபட்டான்: “ஐயோ, என் நலனை அடைய விரும்பிய அபிமன்யு, படை வீரர்களால் நிறைந்ததும், துரோணரால் அமைக்கப்பட்டதுமான அந்த வியூகத்தைப் பிளந்தானே. பெரும் துணிவுள்ளவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களும், போரில் எளிதாக வெல்லப்பட முடியாதவர்களும், போரில் அவனுடன் {அபிமன்யுவுடன்} மோதியவர்களுமான வலிமைமிக்க வில்லாளிகள் முறியடிக்கப்பட்டு, புறமுதுகிடச் செய்யப்பட்டனரே. கருணையற்ற நம் எதிரியான துச்சானனுடன் போரில் மோதிய அவன் {அபிமன்யு}, அந்த வீரனின் {துச்சாசனனின்} புலன்களை இழக்கச் செய்து {மயக்கமடையச் செய்து}, களத்தில் இருந்தே அவனை ஓடச் செய்தானே.

ஐயோ, அர்ஜுனனின் வீரமகன் {அபிமன்யு}, துரோணப் படை எனும் பரந்த கடலைக் கடந்த பிறகு, துச்சாசனன் மகனுடன் மோதி யமனின் வசிப்பிடத்திற்கு விருந்தினனாகச் சென்றுவிட்டானே. அபிமன்யு கொல்லப்பட்ட பிறகு, அர்ஜுனன் மீதும், தனக்குப் பிடித்த மகனை இழந்த அருளப்பட்ட சுபத்திரை மீதும் நான் எவ்வாறு என் கண்களைச் செலுத்துவேன். பொருளற்ற {முட்டாள் தனமான}, ஒத்திசைவற்ற, முறையற்ற எந்த வார்த்தைகளை நாம் இன்று ரிஷிகேசனிடமும் {கிருஷ்ணனிடமும்}, தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்} சொல்லப் போகிறோம்? நன்மையை அடைய விரும்பியும், வெற்றியை எதிர்பார்த்தும் சுபத்திரைக்கும், கேசவனுக்கும், அர்ஜுனனுக்கும் நானே இந்தப் பெரும் தீங்கைச் செய்துவிட்டேனே.

பேராசை கொண்ட ஒருவன், தனது தவறுகளை ஒருபோதும் காணமாட்டான். தேனைச் சேகரிப்போர் தங்களுக்கு முன் இருக்கும் வீழ்ச்சியை {பெரும் பள்ளத்தைக்} காண்பதில்லை; நானும் அவர்களைப் போலவே இருக்கிறேன். எவன் பாலகனோ, எவனுக்கு (நல்ல) உணவு, வாகனங்கள், படுக்கைகள், ஆபரணங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமோ, அவனையே நம் படையின் முன்னிலையில் நிறுத்தினோமே. இளம் வயதுடையவனும், போரில் தேர்ச்சி அடையாதவனுமான ஒரு பாலகனுக்குப் பெரும் ஆபத்தான இது போன்ற ஒரு சூழலில் நன்மை எப்படி விளையும்? தன் தலைவனின் ஏவலைச் செய்ய மறுக்காமல், திறமையில் {மனவுறுதியில்} செருக்குடைய ஒரு குதிரையைப் போல, அவன் {அபிமன்யு} தன்னையே தியாகம் செய்து கொண்டானே.

ஐயோ, கோபத்தால் நிறைந்திருக்கும் அர்ஜுனனின் சோகப் பார்வையில் வெடித்து, நாமும் இன்று வெறுந்தரையில் நம்மைக் கிடத்திக் கொள்ளப் போகிறோம். பரந்தமனம், நுண்ணறிவு, பணிவு, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, அழகு, வலிமை, நன்கு வளர்க்கப்பட்ட அழகிய அங்கங்கள், உயர்ந்தோரிடம் மரியாதை, வீரம், அன்பு, உண்மையில் அர்ப்பணிப்பு, மகத்தான சாதனைகள் ஆகியவற்றைக் கொண்ட தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அருஞ்செயல்களுக்காகத் தேவர்களே கூட அவனைப் புகழ்கின்றனர். அந்த வீரன் {அர்ஜுனன்}, இந்திரனின் எதிரிகளும், ஹிரண்யபுரத்தைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டவர்களுமான நிவாதகவசர்களையும், காலகேயர்களையும் கொன்றான். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவன் {அர்ஜுனன்}, பௌலோமர்களையும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தோரையும் கொன்றான். பெரும் வலிமையைக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, புகலிடம் கேட்பவர்களான தீராச் சினமுடைய எதிரிகளுக்கும் புகலிடத்தை அளிப்பவன் ஆவான் [1]. ஐயோ, அப்படிப்பட்ட ஒருவனின் மகனை {அபிமன்யுவை} இன்று நம்மால் ஆபத்தில் இருந்து காக்க முடியவில்லையே.தார்தராஷ்டிரர்கள் பெரும் பலத்தைக் கொண்டவர்களாக இருப்பினும் ஒரு பெரும் அச்சம் அவர்களை நிறைக்கிறது. தன் மகனின் {அபிமன்யுவின்} கொலையால் சினமூளும் பார்த்தன் {அர்ஜுனன்}, இந்தக் கௌரவர்களை நிர்மூலமாக்கப் போகிறான். தன் சொந்த குலம் மற்றும் தன் ஆதரவாளர்களை அழிப்பவனும், தீய ஆலோசகர்கள் மற்றும் தீய மனம் கொண்டவனுமான துரியோதனன், கௌரவப்படை நிர்மூலமாக்கப்படுவதைக் கண்டு கவலையால் தன் உயிரை விடப் போகிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஒப்பற்ற சக்தி மற்றும் ஆற்றலைக் கொண்டவனும், இந்திரனின் மகனுக்கு மகனுமான இவன் {அபிமன்யு} போர்க்களத்தில் கிடப்பதைக் காணும் எனக்கு, வெற்றியோ, அரசுரிமையோ, சாகாத்தன்மையோ, தேவர்களுடன் வசிப்பதோ கூடச் சிறு மகிழ்ச்சியையும் தராது” என்றான் {யுதிஷ்டிரன்}” {என்றான் சஞ்சயன்}.

யுதிஷ்டிரனைத் தேற்ற வந்த வியாசர்! – துரோண பர்வம் பகுதி – 050-யுதிஷ்டிரனிடம் வந்த வியாசர்; அபிமன்யுவைக் குறித்துச் சொல்லிப் புலம்பி, மரணத்தைக் குறித்த தன் சந்தேகத்தை வியாசரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; நாரதருக்கும் அகம்பனனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய வியாசர்; மகனை இழந்த மன்னன் அகம்பனன்; அகம்பனனின் துயர் நீக்க வந்த நாரதர்; மரணத்தைக் குறித்து அகம்பனனுக்கு விளக்குவதற்காகப் பிரம்மன் மற்றும் சிவன் குறித்த நிகழ்வொன்றை நாரதர் சொல்ல ஆரம்பித்தது..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “குந்தியின் மகனான யுதிஷ்டிரன், இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பெரும் முனிவரான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} அவனிடம் வந்தார். முறையாக வணங்கி அவரை அமரச் செய்த யுதிஷ்டிரன், தன் தம்பி மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் சோகத்தில் பீடிக்கப்பட்டு, “ஐயோ, வலிமைமிக்க வில்லாளிகள் பலருடன் போராடிய சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, அநீதியில் {மறத்தில்} பற்றுடைய பெரும் தேர்வீரர்கள் பலரால் சூழப்பட்டுக் களத்திலே கொல்லப்பட்டானே. பகைவீரர்களைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, வயதால் குழந்தையாகவும் {பாலகனாகவும்}, குழந்தைத்தனமான புரிதல் கொண்டவனாகவுமே இருந்தான். வெறிகொண்ட முரண்களுக்கு {எதிரிகளுக்கு} எதிராக அவன் போரில் ஈடுபட்டான்.

போரில் எங்களுக்கு ஒரு பாதையைத் திறக்குமாறு {துரோணரின் வியூகத்தைப் பிளக்குமாறு} நானே அவனைக் கேட்டுக் கொண்டேன். பகைவரின் படையினுள் அவன் ஊடுருவினான். ஆனால், சிந்துக்களின் ஆட்சியாளனால் {ஜெயத்ரதனால்} தடுக்கப்பட்ட எங்களால் அவனை {அபிமன்யுவைப்} பின்தொடர்ந்து செல்ல முடியவில்லை. ஐயோ, போரைத் தங்கள் தொழிலாகக் கொண்டோர், தங்களுக்கு இணையான எதிராளிகளுடனேயே எப்போதும் போரிடுவர். எனினும், பகைவர்கள் அபிமன்யுவுடன் மோதிய போரோ, மிகவும் சமமற்ற ஒன்றாக இருந்தது. அதுவே என்னைப் பெரிதும் சோகத்தில் ஆழ்த்தி, என்னிடம் கண்ணீரை வரவழைக்கிறது. இதைச் சிந்திக்கும் நான், என் மன அமைதியை மீட்பதில் தோற்கிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “சிறப்புமிக்க வியாசர், துன்பத்தை ஏற்று, இருப்பை இழந்து இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த யுதிஷ்டிரனிடம், இவ்வார்த்தைச் சொன்னார். வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, ஓ! பெரும் விவேகியே, அறிவின் கிளைகள் அனைத்திலும் தேர்ச்சியுடையவனே, உன்னைப் போன்றோர், பேரிடர்களால் மலைப்பதில்லை. இந்தத் துணிவுமிக்க இளைஞன் {அபிமன்யு}, எண்ணற்ற எதிரிகளைக் கொன்றுவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்திருக்கிறான். உண்மையில், அந்த மனிதர்களில் சிறந்தவன் {அபிமன்யு}, (குழந்தையாகவே இருப்பினும்), வயதால் முதிர்ந்தவனைப் போலவே செயல்பட்டிருக்கிறான். ஓ! யுதிஷ்டிரா, இவ்விதியானது மீறப்பட முடியாததாகும். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, காலனானவன், தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் அனைவரையும் (எந்த விதிவிலக்குமில்லாமல்) எடுத்துக் கொள்கிறான்” என்றார் {வியாசர்}.

அதற்கு யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஐயோ, உணர்வுகளை இழந்து, தங்கள் படைகளுக்கு மத்தியில் கொல்லப்பட்டு வெற்றுப் பூமியில் கிடக்கும் இந்தப் பூமியின் தலைவர்கள் பெரும் வலிமையைக் கொண்டிருந்தனரே. (இவர்களின் வர்க்கத்தைச் சேர்ந்த {க்ஷத்திரியர்கள்}) பிறரும் பத்தாயிரம் யானைகளின் பலத்திற்கு இணையான பலத்தைக் கொண்டிருந்தனரே. மேலும் பிறரோ, காற்றின் வேகத்தையும் பலத்தையும் கொண்டிருந்தனரே. அவர் அனைவரும் தங்கள் சொந்த வர்க்கத்தினராலேயே {க்ஷத்திரியர்களாலேயே} கொல்லப்பட்டுப் போரில் அழிந்தனர். (தங்கள் சொந்த வர்க்கத்தைத் தவிர) இவர்களைப் போரில் கொல்லும் வேறு எந்த மனிதனையும் நான் காணவில்லை. பெரும் ஆற்றலைக் கொண்ட இவர்கள் பெரும் சக்தியையும் பெரும் வலிமையையும் கொண்டிருந்தனர்.

ஐயோ, தாங்கள் வெல்வோம் என்று தங்கள் இதயங்களில் பொதிந்த உறுதியான நம்பிக்கையுடன் தினமும் போருக்கு வந்தவர்களான இவர்கள், ஐயோ பெரும் விவேகிகளாக இருந்திருப்பினும், (ஆயுதங்களால்) தாக்கப்பட்டு உயிரை இழந்து களத்தில் கிடக்கின்றனரே. பயங்கர ஆற்றலைக் கொண்ட இந்தப் பூமியின் தலைவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் இறந்துவிட்டதால், மரணம் என்ற வார்த்தையின் முக்கியத்துவம் இன்று புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. செருக்கிழந்து எதிரிகளுக்கு அடிபணிந்த இந்த வீரர்கள் இப்போது அசைவற்று கிடக்கின்றனர். பல இளவரசர்கள், கோபத்தால் நிறைந்து, (தங்கள் எதிரிகளின் கோபம் என்ற) நெருப்புக்கு முன்பு பலியாகினர்.

’மரணம் {மிருத்யு} எங்கே இருக்கிறது?’ என்ற பெரும் ஐயம் என்னை ஆட்கொள்கிறது. மரணம் {மிருத்யு} யாருடையது (யாருடைய வாரிசு)? மரணம்  என்பது எது? ஏன் மரணம் உயிரினங்களை எடுத்துக் கொள்கிறது? ஓ! பாட்டா, ஓ! தேவனுக்கு ஒப்பானவரே {வியாசரே}, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்றான் {யுதிஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அவரிடம் இப்படிக் கேட்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் அளிப்பதற்காக, அந்தச் சிறப்புமிக்க முனிவர் {வியாசர்}, அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார். வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “கையிலிருக்கும் இந்தக் காரியம் தொடர்பாக, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில் நாரதர் அகம்பனனிடம் சொன்ன இந்தப் புராதனக் கதையே மேற்கோளாகச் சுட்டப்படுகிறது.

மன்னன் அகம்பனன் [1] இவ்வுலகில் இருந்த போது, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தன் மகனின் மரணத்தால் தாங்கமுடியாத சோகத்தில் பெரிதும் பீடிக்கப்பட்டதை நான் அறிந்திருக்கிறேன். மரணத்தின் தோற்றம் குறித்த இந்த அற்புதக் கதையை நான் இப்போது சொல்லப் போகிறேன். ஓ! ஐயா, இந்தப் புராதன வரலாற்றை நான் உரைக்கையில் நீ கேட்பாயாக. இவ்வரலாறானது உண்மையில் அற்புதமானதாகும். இது வாழ்வின் காலத்தை அதிகரிக்கிறது, சோகத்தைக் கொல்கிறது, உடல் நலத்துக்கும் {ஆரோக்கியத்திற்கும்} உகந்ததாக இருக்கிறது. புனிதமான இது, பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளை {பாவங்களை} அழித்து, மங்கலமான பொருட்கள் அனைத்திலும் மங்கலமானதாக இருக்கிறது. உண்மையில், இந்த வரலாறும் வேதங்களைப் படிப்பது போன்றதே ஆகும். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நீண்ட வாழ்நாள் கொண்ட பிள்ளைகளையும், தங்கள் நன்மையையும் விரும்பும் முதன்மையான மன்னர்களால், காலையில் தினந்தோறும் இது {இவ்வரலாறு} கேட்கப்பட வேண்டும்.(இராமாயணத்தில் வரும் அகம்பனன் என்ற அசுரனும் இந்த மன்னனும் வெவ்வேறானவர்கள் .)ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில், அகம்பனன் என்ற பெயர் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான். ஒருமுறை, போர்க்களத்தில், தன் எதிரிகளால் சூழப்பட்ட அவன் {அகம்பனன்}, கிட்டத்தட்ட அவர்களால் அடக்கப்பட்டான். அவனுக்கு, ஹரி என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். வலிமையில் நாராயணனுக்கே இணையான பின்னவன் {ஹரி}, மிக அழகானவனாகவும், ஆயுதங்களில் சாதித்தவனாகவும், பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவனாகவும், வலிமை கொண்டவனாகவும், போரில் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையானவனாகவும் இருந்தான் [2].(மிகுந்த காந்தியுள்ள அந்த ஹரி, போரில் அந்த நிலைமையை அடைந்திருக்கும் தன் தந்தையைக் கண்டு, மரணத்தைக் குறித்துச் சிந்தியாமல் எதிரிகளுக்கு மத்தியில் நுழைந்தான்”)

போர்க்களத்தில் எண்ணற்ற எதிரிகளால் சூழப்பட்ட அவன் {ஹரி}, அவ்வீரர்கள் மீதும், தன்னைச் சூழ்ந்து கொண்ட யானைகளின் மீதும் ஆயிரக்கணக்கான கணைகளை ஏவினான். போரில் கடினமான பல சாதனைகளை அடைந்த அந்த எதிரிகளைக் கொல்பவன் {ஹரி}, ஓ! யுதிஷ்டிரா, படைக்கு மத்தியிலேயே இறுதியில் கொல்லப்பட்டான்.

மன்னன் அகம்பனன், தன் மகனுக்கான ஈமக்கடன்களைச் செய்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டான் [3]. எனினும், தன் மகனுக்காகப் பகலும் இரவும் வருந்திய அந்த மன்னன் {அகம்பனன்}, தன் மன மகிழ்ச்சியை மீண்டும் அடைவதில் தோல்வியுற்றான். தன் மகனின் மரணத்தால் அவன் அடைந்திருக்கும் துயரம் குறித்துத் தெரிந்து கொண்ட தெய்வீக முனிவர் நாரதர் அவனிடம் {அகம்பனனிடம்} வந்தார். தெய்வீக முனிவரைக் கண்ட அந்த அருளப்பட்ட மன்னன் {அகம்பனன்}, எதிரிகளிடம் தான் அடைந்த தோல்வியையும், தன் மகனின் கொலையையும், தனக்கு நேர்ந்த அனைத்தையும் பின்னவருக்கு {நாரதருக்குச்} சொன்னான்.

மன்னன் {அகம்பனன் நாரதரிடம்}, “என் மகன் பெரும் சக்தி கொண்டவனாகவும், காந்தியில் இந்திரனுக்கோ, விஷ்ணுவுக்கோ இணையானவனாகவும் இருந்தான். வலிமைமிக்க என் மகன், எண்ணற்ற எதிரிகளை எதிர்த்துக் களத்தில் தன் ஆற்றலை வெளிப்படுத்திய பிறகு இறுதியில் கொல்லப்பட்டான். ஓ! சிறப்புமிக்கவரே, இந்த மரணம் {மிருத்யு} என்பது யார்/எது? அதன் சக்தி, பலம் மற்றும் ஆற்றலின் அளவுதான் என்ன? ஓ! புத்திசாலிகளில் முதன்மையானவரே {நாரதரே}, இது குறித்த அனைத்தையும் நான் உண்மையாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான் {அகம்பனன்}.

அவனது இவ்வார்த்தைகளைக் கேட்டவரும், வரங்கொடுக்கும் தேவருமான அந்த நாரதர், மகனின் மரணத்தால் உண்டாகும் துயரை அழிப்பதற்கான பின்வரும் விரிவான வரலாற்றை உரைத்தார்.

நாரதர் {அகம்பனனிடம்} சொன்னார், “ஓ! வலிமைமிக்க மன்னா, ஓ! ஏகாதிபதி {அகம்பனா}, என்னால் கேட்கப்பட்டதைப் போலவே சரியாக {நான் உரைக்கப்போகும்} இந்த நீண்ட வரலாற்றைக் கேட்பாயாக. தொடக்கத்தில் பாட்டனான பிரம்மன் அனைத்து உயிர்களையும் படைத்தான். வலிய சக்தி படைத்த அவன் {பிரம்மன்}, படைப்புகளானவை அழிவின் எந்தக் குறியீடுகளையும் கொண்டிருக்கவில்லை என்பதைக் கண்டான். எனவே, ஓ! மன்னா {அகம்பனா}, அண்டத்தின் அழிவைக் குறித்துப் படைப்பாளன் {பிரம்மன்} சிந்திக்கத் தொடங்கினான். ஓ! ஏகாதிபதி {அகம்பனா}, அக்காரியம் குறித்துச் சிந்திந்த படைப்பாளன் {பிரம்மன்}, அழிவுக்கான எந்த வழியையும் கண்டுபிடிக்கத் தவறினான். அப்போது அவன் கோபமடைந்தான். அந்தக் கோபத்தின் விளைவாக வானத்தில் இருந்து ஒரு நெருப்பு எழுந்தது. அந்த நெருப்பு, அண்டத்தில் உள்ள அனைத்தையும் எரிப்பதற்காக அனைத்துத் திசைகளிலும் பரவியது. பிறகு, சொர்க்கம், வானம், பூமி ஆகிய அனைத்தும் நெருப்பால் நிறைந்தன. இப்படியே, படைப்பாளன் {பிரம்மன்}, அசைவன மற்றும் அசையான ஆகியவற்றைக் கொண்ட இந்த அண்டம் முழுமையையும் எரிக்கத் தொடங்கினான். அதன்காரணமாக, அசைவன, அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

உண்மையில், வலிமைமிக்க அந்தப் பிரம்மன், தன் கோபத்தின் பலத்தால் அனைத்தையும் அச்சுறுத்தும்வகையில் இவை அனைத்தையும் செய்தான். பிறகு, தலையில் சடாமுடி கொண்டவனும், இரவு உலாவிகள் அனைவரின் தலைவனும், ஸ்தாணு அல்லது சிவன் என்றும் அழைக்கப்பட்டவனுமான ஹரன், தேவர்களுக்குத் தலைவனான தெய்வீகப் பிரம்மனை வேண்டினான். அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்யும் விருப்பத்தால் (பிரம்மனின் காலில்) அந்த ஸ்தாணு விழுந்த போது [3], துறவிகளில் சிறந்தவர்களின் உயர்ந்த தேவனான அவன் {பிரம்மன்}, சுடர்மிக்கக் காந்தியுடன், “ஓ! விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறத் தகுந்தவனே {ஸ்தாணுவே}, உன் எந்த விருப்பத்தை நாம் சாதிக்க வேண்டும்? ஓ! எம் விருப்பத்தில் பிறந்தவனே, உனக்கு ஏற்புடைய அனைத்தையும் நாம் செய்வோம். ஓ! ஸ்தாணுவே, உன் விருப்பமென்ன? எமக்குச் சொல்வாயாக” என்றான் {பிரம்மன்}.

மரணதேவியான மிருத்யுவின் தோற்றம்! – துரோண பர்வம் பகுதி – 051-கோபத்தைத் தணிக்கும்படி பிரம்மனிடம் கோரிய ஸ்தாணு; பிரம்மனின் புலன்வாசல்களில் இருந்து வெளிப்பட்ட மரணதேவி; தென்திசை நோக்கிச் சென்ற மரணதேவி அழுதது; அவளது கண்ணீரைக் கைகளில் ஏந்திய பிரம்மன்…

ஸ்தாணு {சிவன் பிரம்மனிடம்}, “ஓ! தலைவா {பிரம்மனே}, பல்வேறு உயிரினங்களை நீ பெரும் கவனத்துடன் படைத்திருக்கிறாய். உண்மையில் பல்வேறு விதங்களிலான உயிரினங்களும் உன்னாலேயே படைக்கப்பட்டு, உன்னாலேயே வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த உயிரினங்களே இப்போது உன் நெருப்பின் மூலம் எரிக்கப்படுகின்றன. இதைக் காணும் நான் இரக்கத்தால் {கருணையால்} நிறைகிறேன். ஓ! ஒப்பற்ற தலைவா {பிரம்மனே}, அருள் பாலிப்பாயாக” என்றான் {ஸ்தாணு-சிவன்}.

அதற்குப் பிரம்மன் {சிவனிடம்}, “அண்டத்தை அழிக்க வேண்டும் என்ற எந்த விருப்பமும் எனக்கில்லை, நான் பூமியின் நன்மையையே விரும்பினேன், அதற்காகவே இந்தக் கோபம் என்னை ஆட்கொண்டது. உயிரினங்களின் பாரத்தால் பீடிக்கப்பட்ட பூமாதேவி, தன்னில் இருக்கும் உயிரினங்களை அழிக்கும்படி என்னை எப்போதும் தூண்டிவந்தாள். எனினும், அவளால் தூண்டப்பட்ட என்னால் எல்லையற்ற படைப்பை அழிப்பதற்கான எந்த வழிகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனாலே இந்தக் கோபம் என்னை ஆட்கொண்டது” என்றான் {பிரம்மன்}.

ருத்ரன் {சிவன் பிரம்மனிடம்}, “அருள்பாலிப்பாயாக. ஓ! அண்டத்தின் தலைவா {பிரம்மனே}, உயிரினங்களின் அழிவுக்காகக் கோபத்தை வளர்க்காதே. உயிர்களில் அசைவன, அசையாதன எதுவும் இனியும் அழிய வேண்டாம். ஓ! ஒப்பற்றவனே, வரப்போவது {எதிர்காலம்}, வந்தது {கடந்த காலம்}, இருப்பது {நிகழ்காலம்} ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த அண்டம் உன் கருணையால் நீடிக்கட்டும். ஓ! தலைவா {பிரம்மனே}, கோபத்தால் நீ சுடர்விட்டெரிகிறாய். அந்த உனது கோபத்தில் இருந்து நெருப்பு போன்ற ஒரு பொருள் இருப்பில் எழுந்தது {தோன்றியது}. அந்நெருப்பே இப்போது மலைகளையும், மரங்களையும், ஆறுகளையும், அனைத்து வகை மூலிகைகளையும் {தாவரங்களையும்} புற்களையும் எரிக்கிறது. உண்மையில், அந்நெருப்பு, அசைவன, அசையாதன ஆகியவற்றைக் கொண்ட அண்டத்தை நிர்மூலமாக்குகிறது. அண்டத்தின் அசைவன மற்றும் அசையாதன ஆகியவை சாம்பலாகக் குறைக்கப்படுகின்றன. ஓ! ஒப்பற்றவனே அருள்பாலிப்பாயாக. கோபப்படாதே. நான் கேட்கும் வரம் இதுவே.

ஓ! தெய்வீகமானவனே {பிரம்மனே}, உனக்குச் சொந்தமானவையும் படைக்கப்பட்டவையுமான இந்தப் பொருட்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. எனவே, உன் கோபம் தணியட்டும். அஃது {கோப நெருப்பு} உனக்குள்ளேயே அழிந்து போகட்டும். நன்மை செய்யும் விருப்பத்துடன் உனது கண்களை உன் உயிரினங்களின் மேல் செலுத்துவாயாக. உயிரைக் கொண்ட உயிரினங்கள் அழிந்துவிடாதபடி செயல்படுவாயாக. தங்கள் உற்பத்தி சக்திகள் பலவீனப்பட்டு இந்த உயிரினங்கள் அழிந்து போக வேண்டாம். ஓ! உலகங்களைப் படைத்தவனே {பிரம்மனே} நீயே என்னை அவர்களது பாதுகாவலனாக நியமித்தாய். ஓ! அண்டத்தின் தலைவா {பிரம்மனே}, அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றைக் கொண்ட இந்த அண்டம் அழியாதிருக்கட்டும். நீ அருள்பாலிப்பவனாவே இருக்கிறாய், அதற்காகவே நான் இவ்வார்த்தைகளை உன்னிடம் சொல்கிறேன்” என்றான் {ருத்ரன்}.

நாரதர் {அகம்பனனிடம்} தொடர்ந்தார், “(மகாதேவனின்) இவ்வார்த்தைகளைக் கேட்ட தெய்வீகப் பிரம்மன், உயிரினங்களுக்கு நன்மை செய்ய விரும்பி, தன்னுள் எழுந்த கோபத்தைத் தனக்குள்ளேயே நிறுத்தினான். அந்த நெருப்பை அணைத்தவனும், உலகத்திற்கு நன்மை செய்யும் தெய்வீகமானவனும், பெரும் தலைவனுமான அவன் {பிரம்மன்}, உற்பத்திக்கும், விடுதலைக்கும் {முக்திக்கும்} உண்டான கடமைகளை அறிவித்தான் {சிருஷ்டிக்கும், மோக்ஷத்திற்கும் காரணமான கர்மாவை உண்டாக்கினான்}.

அந்த உயர்ந்த தேவன் {பிரம்மன்}, தன் கோபத்தினால் உண்டான நெருப்பை அணைத்த போது, அவனது பல்வேறு புலன்களின் கதவுகளில் இருந்து, கருப்பு, சிவப்பு, பழுப்பு ஆகிய நிறங்களைக் கொண்டவளாகவும், நாக்கு, முகம் மற்றும் கண்கள் சிவந்தவளாகவும், இரண்டு சிறந்த குண்டலங்களாலும், பல்வேறு பிரகாசமான ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளுமாக ஒரு பெண் தோன்றினாள். அவனது {பிரம்மனின்} உடலில் இருந்து வெளிப்பட்ட அவள், அண்டத்தின் தலைவர்களான அவ்விருவரையும் கண்டு சிரித்தபடியே, தென்பகுதியை நோக்கிச் சென்றாள். அப்போது உலகங்களின் படைப்பையும், அழிவையும் கட்டுப்படுத்துபவனான பிரம்மன், அவளை மரணம் {மிருத்யு} என்ற பெயரால் அழைத்தான்.

ஓ! மன்னா {அகம்பனா}, பிரம்மன் அவளிடம் {மிருத்யுவிடம்}, “இந்த என் உயிரினங்களைக் கொல்வாயாக. (அண்டத்தின்) அழிவுக்காக உண்டான என் கோபத்தில் இருந்தே நீ பிறந்திருக்கிறாய். எனவே என் கட்டளையின் பேரில் இதைச் செய்து, முட்டாள்களும், ஞானிகளும் அடங்கிய உயிரினங்கள் அனைத்தையும் கொல்வாயாக. இதைச் செய்வதால் நீ நன்மையை அடைவாய்” என்றான் {பிரம்மன்}.

அவனால் {பிரம்மனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், மரணம் {மிருத்யு} என்று அழைக்கப்பட்ட அந்தத் தாமரைப் பெண் {மிருத்யு} ஆழமாகச் சிந்தித்து, பிறகு ஆதரவற்றவளாக இனிமையான குரலில் உரக்க அழுதாள். பாட்டன் {பிரம்மன்}, அவள் உதிர்த்த கண்ணீரை உயிரினங்கள் அனைத்தின் நன்மைக்காகத் தன் கைகள் இரண்டால் பிடித்துக் கொண்டு, இந்த வார்த்தைகளால் அவளிடம் மன்றாடத் தொடங்கினான்” {என்றார் நாரதர்}. 

பிரம்மன் மரணதேவி உரையாடல்! – துரோண பர்வம் பகுதி – 052-பிரம்மனிடம் உயிர்களைக் கொல்ல முடியாது என்று சொன்ன மரணதேவி; பல கோடி வருடங்களாகக் கடுந்தவம் செய்த மரணதேவி; பாவம் சேராத வரத்தை பிரம்மனிடம் பெற்ற மரணதேவி உயிரினங்களின் உயிரை எடுக்க ஒப்புக் கொண்டது; நாரதர் சொன்ன கதையைக் கேட்டு அகம்பனன் மனம் நிறைந்தது; யுதிஷ்டிரனை அறிவுறுத்திய வியாசர்…

நாரதர் {அகம்பனனிடம்} சொன்னார், “அந்த ஆதரவற்ற பெண் {மிருத்யு}, தன் கவலையைத் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு, கொடிபோல அடக்கத்துடன் பணிந்து, படைப்பின் தலைவனிடம் {பிரம்மனிடம்} கூப்பிய கரங்களுடன் பேசினாள். அவள் {மிருத்யு, பிரம்மனிடம்}, “ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, உம்மால் படைக்கப்பட்ட பெண்ணான நான், இந்தச் செயல் குரூரமானது, தீமையானது எனத் தெரிந்திருந்தும் இத்தகு செயலை நான் எவ்வாறு செய்வேன்? அநீதிக்கு {அதர்மத்திற்கு} நான் பெரிதும் அஞ்சுகிறேன். ஓ! தெய்வீகத் தலைவரே {பிரம்மரே}, அருள்பாலிப்பீராக. மகன்கள், நண்பர்கள், சகோதரர்கள், தந்தைமார், கணவன்மார் ஆகியோர் எப்போதும் ஒருவருக்கொருவர் அன்புக்குரியவர்களாக இருக்கின்றனர்; (நான் அவர்களைக் கொன்றால்), இந்த இழப்புகளால் பாதிக்கப்படுவோர் எனக்குத் தீங்கிழைக்க முயல்வர் {தீமையை நினைப்பார்கள்}. அதற்காகவே நான் அஞ்சுகிறேன். துக்கத்தால் பீடிக்கப்பட்ட கண்களில் இருந்து வடியும் கண்ணீரும், அழுது புலம்புவோரும் எனக்கு அச்சத்தையே ஊட்டுகின்றனர். ஓ! தலைவா {பிரம்மரே}, நான் உமது பாதுகாப்பை நாடுகிறேன். ஓ! தெய்வீகமானவரே, ஓ! தேவர்களில் முதன்மையானவரே {பிரம்மரே}, நான் யமனின் வசிப்பிடத்திற்குச் செல்ல மாட்டேன். ஓ! வரங்களை அளிப்பவரே, நான் என் சிரம் தாழ்த்திக் கரங்களைக் கூப்பி உமது கருணையை வேண்டுகிறேன். ஓ! உலகங்களின் பாட்டனே {பிரம்மரே}, இந்த {என்} விருப்பத்தை (சாதிக்கவே} நான் உம்மிடம் வேண்டுகிறேன். ஓ! படைக்கப்பட்ட பொருள்களின் தலைவரே {பிரம்மரே}, உமது அனுமதியுடன் நான் தவத்துறவுகளை மேற்கொள்ள விரும்புகிறேன். ஓ! தெய்வீகமானவரே, ஓ! பெரும் தலைவா {பிரம்மரே}, இந்த வரத்தை எனக்கு அருள்வீராக. உம்மால் அனுமதிக்கப்படும் நான், தேனுகரின் அற்புத ஆசிரமத்திற்குச் செல்வேன். உம்மைத் துதிப்பதில் ஈடுபட்டு, அங்கே நான் கடுந்தவங்களை மேற்கொள்வேன். ஓ! தேவர்களின் தலைவா {பிரம்மரே}, கவலையால் அழும் உயிரினங்களுடைய அன்புக்குரியோரின் உயிர் மூச்சை என்னால் எடுக்க இயலாது. அநீதியில் {அதர்மத்தில்} இருந்து என்னைக் காப்பீராக” என்றாள் {மரணதேவி மிருத்யு}.

பிரம்மன் {மரணதேவி மிருத்யுவிடம்}, “ஓ! மரணமே {மிருத்யுவே}, உயிரினங்களின் அழிவை அடைவதற்காகவே நீ கருதப்பட்டாய் {படைக்கப்பட்டாய்}. எதையும் சிந்திக்காமல் சென்று உயிரினங்கள் அனைத்தையும் கொல்வாயாக. இதுவே செய்யப்பட வேண்டும், இது வேறுவிதமாகாது. என் உத்தரவின் படியே செய்வாயாக. இவ்வுலகத்தில் எவரும் உன்னிடம் எந்தக் குறையும் காணமாட்டார்கள்” என்றான்.

நாரதர் {அகம்பனனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பெண் {மிருத்யு}, மிகவும் அச்சமடைந்தவளானாள். பிரம்மனின் முகத்தைப் பார்த்தவாறே அவள் கூப்பிய கரங்களுடன் நின்று கொண்டிருந்தாள். உயிரினங்களுக்கு நன்மை செய்ய விரும்பிய அவள் {மிருத்யு}, அவர்களின் அழிவில் தன் இதயத்தை நிலைநிறுத்தவில்லை. அனைத்து உயிர்களின் தலைவனுக்கும் தலைவனான அந்தத் தெய்வீகப் பிரம்மனும் அமைதியுடனே நீடித்தான். பிறகு அந்தப் பாட்டன் {பிரம்மன்} தன்னிடமே மனநிறைவு கொண்டான். அவன், படைப்புகள் அனைத்தின் மீதும் தன் கண்களைச் செலுத்திப் புன்னகைத்தான். எனவே, உயிரினங்கள் அகால மரணத்தால் பாதிக்கப்படாமல் முன்பு போலவே வாழத் தொடங்கின. வெல்லப்பட முடியாத அந்தச் சிறந்த தலைவன் {பிரம்மன்}, தன் கோபத்தை விட்டதன் பேரில், அந்தக் காரிகை, விவேகமுள்ள அந்தத் தேவனின் முன்னிலையில் இருந்து சென்றாள்.

உயிரினங்களை அழிக்க ஒப்பாமல் பிரம்மனை விட்டகன்றவளும், மரணம் {மிருத்யு} என்று அழைக்கப்பட்டவளுமான அந்தக் காரிகை {மிருத்யு}, தேனுகம் என்று அழைக்கப்பட்ட ஆசிரமத்திற்கு விரைவாகச் சென்றாள். அங்கே சென்ற அவள் {மிருத்யு}, சிறந்த மற்றும் உயர்ந்த தவ நோன்புகளைப் பயின்றாள். அங்கே அவள், உயிரினங்களின் மேல் கொண்ட கருணையாலும், அவற்றுக்கு நன்மை செய்யும் விருப்பத்தாலும், தன் புலன்களுக்குப் பிடித்தமான பொருட்களில் இருந்து அவற்றை முழுதும் விலக்கி, ஆயிரத்து அறுநூறு கோடி {Sixteen Billion = 1,600,00,00,000} வருடங்களும், அதற்கு மேலும் ஐயாயிரம் கோடி {five times ten billions = 5,000,00,00,000} வருடங்களும் ஒற்றைக்காலில் நின்றாள். ஓ! மன்னா {அகம்பனா}, மேலும் அவள், இருபத்தோராயிரம் கோடி {one and twenty times ten billions = 21,000,00,00,000} வருடங்களுக்கு மீண்டும் ஒற்றைக் காலில் {மற்றொரு காலில்} நின்றாள். பிறகு அவள் {மிருத்யு}, நூறு லட்சம் கோடி வருடங்கள் {ten times ten thousand billions = 100,00,000,00,00,000} (பூமியின்) உயிரினங்களோடு உலவிக் கொண்டிருந்தாள். அடுத்ததாக, குளிர்ந்த தூய நீரைக் கொண்ட நந்தையை {நந்தை நதியை} அடைந்து, அந்நீரிலேயே எட்டாயிரம் {8,000} வருடங்களைக் கடத்தினாள். நந்தையில் கடும் நோன்புகளை நோற்ற அவள், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டாள் [1].

அடுத்ததாக அவள், நோன்புகளை நோற்பதற்காகப் புனிதமான அனைத்திலும் முதன்மையான கௌசிகிக்கு {கௌசிகி நதிக்குச்} சென்றாள். காற்றையும், நீரையும் மட்டுமே கொண்டு வாழ்ந்து, அங்கே தவம் பயின்று, பிறகு, பஞ்சகங்கைக்கும், அடுத்ததாக வேதசகத்திற்கும் சென்ற அந்தத் தூய்மையடைந்த காரிகை {மிருத்யு}, பல்வேறு விதங்களிலான கடுந்தவங்களால் தன் உடலை மெலியச் செய்தாள். அடுத்ததாகக் கங்கைக்கும், அங்கிருந்து பெரும் மேருவுக்கும் சென்ற அவள் {மிருத்யு}, தன் உயிர்மூச்சை நிறுத்தி, கல்லைப் போல அசைவற்றவளாக இருந்தாள். பிறகு, இனிமையானவளும், மங்கலமானவளுமான அந்தப் பெண், (பழங்காலத்தில்) தேவர்கள் தங்கள் வேள்வியைச் செய்த இமயத்தின் உச்சிக்குச் சென்று, நூறு கோடி {a billion = 100,00,00,000} வருடங்களுக்குத் தன் பாதத்தின் கட்டைவிரலில் நின்றிருந்தாள். அதன்பிறகு, புஷ்கரை, கோகர்ணம், நைமிசம், மலையம் ஆகியவற்றுக்குச் சென்ற அவள் {மிருத்யு}, தன் இதயத்துக்கு ஏற்புடைய தவங்களைப் பயின்று தன் உடலை மெலியச் செய்தாள். வேறு எந்தத் தேவனையும் ஏற்காமல், பாட்டனிடம் {பிரம்மனிடம்} உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்த அவள் {மிருத்யு}, அனைத்து வழிகளிலும் பிரம்மனை நிறைவுகொள்ளச் செய்தே வாழ்ந்தாள்.

பிறகு உலகங்களின் மாறாத படைப்பாளன் {பிரம்மன்}, மனநிறைவு கொண்டு, மகிழ்ச்சியான மெல்லிய இதயத்துடன் அவளிடம் {பிரம்மன் மிருத்யுவிடம்}, “ஓ! மரணமே {மிருத்யு}, இவ்வளவு கடுமையான தவங்களை நீ ஏன் மேற்கொள்கிறாய்?” என்று கேட்டான். இப்படிச்சொல்லப்பட்ட மரணதேவி {மிருத்யு}, தெய்வீகப் பாட்டனிடம் {பிரம்மனிடம்}, “ஓ தலைவா {பிரம்மரே}, உயிரினங்கள் உடல் நலத்துடன் வாழ்கின்றன. அவை ஒன்றுக்கொன்று சொற்களாலும் தீங்கிழைப்பதில்லை. அவற்றை நான் கொல்ல முடியாது. ஓ! தலைவா {பிரம்மரே}, நான் இவ்வரத்தை உம்மிடம் பெற விரும்புகிறேன். நான் பாவத்துக்கு அஞ்சுகிறேன். அதற்காகவே நான் தவத்துறவுகளில் ஈடுபடுகிறேன். ஓ! அருளப்பட்டவரே {பிரம்மரே}, எப்போதும் என் அச்சங்கள் விலகுமாறு செய்யும். துயரத்தில் இருக்கும் பெண்ணான நான், எந்தக் குற்றமும் இல்லாதிருக்கிறேன். நான் உம்மை இரந்து கேட்கிறேன் என்னைப் பாதுகாப்பீராக” என்றாள் {மிருத்யு}.

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிந்த தெய்வீகப் பிரம்மன் அவளிடம் {மிருத்யுவிடம்}, “ஓ! மரணமே {மிருத்யுவே}, இந்த உயிரினங்களைக் கொல்வதால் நீ எந்தப் பாவத்தையும் செய்தவள் ஆகமாட்டாய். ஓ! இனியவளே, என் வார்த்தைகள் பொய்க்காது. எனவே, ஓ! மங்கலக்காரிகையே {மிருத்யுவே}, இந்த நால்வகை உயிரினங்களையும் கொல்வாயாக. நிலைத்த அறம் எப்போதும் உனதாகட்டும். லோகபாலனான யமனும், பல்வேறு நோய்களும் உனக்கு உதவி செய்பவர்களாகட்டும். பாவத்தில் இருந்து விடுபட்டு, முற்றிலும் தூய்மையடையும் நீ மகிமை அடையும் வகையில் நானும், தேவர்களனைவரும் உனக்கு வரங்களை அளிப்போம்” என்றான் {பிரம்மன்}.

இப்படிச் சொல்லப்பட்ட அந்த மங்கை {மிருத்யு}, ஓ! ஏகாதிபதி {அகம்பனா}, தன் கரங்களைக் கூப்பியபடி, தனக்கு அருள் வேண்டி, அவனிடம் {பிரம்மனிடம்} தன் சிரம் தாழ்த்தி, “ஓ! தலைவா {பிரம்மரே}, “இது நானில்லாமல் நடைபெறாது என்றால், உமது உத்தரவு என் சிரம் மேல் வைக்கப்படட்டும். எனினும், நான் சொல்வதைக் கேளும். பேராசை, கோபம், வன்மம் {தீய நோக்கம்}, பொறாமை, சண்டை, மூடத்தனம், வெட்கமின்மை ஆகியனவும் மற்றும் இன்னும் பிற கடுமையான உணர்வுகளும், உடல்கொண்ட அனைத்து உயிரினங்களின் உடல்களையும் பிளக்கட்டும்” என்றாள் {மிருத்யு} [2].பிரம்மன் {மரணதேவி மிருத்யுவிடம்}, “ஓ! மரணமே {மிருத்யுவே}, நீ சொன்னது போலவே இருக்கும். அதேவேளையில், உயிரினங்களை முறையாகக் கொல்வாயாக. ஓ! மங்கலமானவளே, பாவம் உனதாகாது, அது போலவே உன்னைக் காயப்படுத்த நான் முயல மாட்டேன் {உனக்கு நான் தீங்கிழைக்க மாட்டேன்}. என் கரங்களில் இருக்கும் உனது கண்ணீர்த் துளிகளே, உயிரினங்களில் நோய்களாக எழும். அவை மனிதர்களைக் கொல்லும்; மனிதர்கள் கொல்லப்பட்டால், அந்தப் பாவம் உனதாகாது. எனவே, அஞ்சாதே, உண்மையில், பாவம் உனதாகாது. நீதிக்கு {அறத்திற்கு} அர்ப்பணிப்புடன், உன் கடமையை நோற்று {செய்து}, (உயிரினங்கள்) அனைத்தையும் நீ ஆள்வாயாக. எனவே, நீ இந்த உயிரினங்களின் உயிர்களை எப்போதும் எடுப்பாயாக. ஆசை, கோபம் ஆகிய இரண்டையும் விட்டுவிட்டு, உயிரினங்கள் அனைத்தின் உயிரையும் நீ எடுப்பாயாக. இதுவே உனது நிலைத்த {அழியா} அறமாகட்டும். தீய நடத்தை கொண்டோரை பாவமே கொல்லும். என் கட்டளையின்படி செயல்பட்டு, உன்னை நீ சுத்த படுத்திக் கொள்வாயாக. தீயோரை அவர்களது பாவங்களில் மூழ்கடிப்பவள் நீயாகவே இருப்பாய். எனவே, ஆசை, கோபம் ஆகிய இரண்டையும் விட்டுவிட்டு, உயிர் கொண்ட இந்த உயிரினங்களைக் கொல்வாயாக” என்றான் {பிரம்மன்}.

நாரதர் {அகம்பனனிடம்} தொடர்ந்தார், “அந்தக் காரிகை {மிருத்யு}, தான் மரணம் என்ற பெயரால் (தொடர்ந்து) அழைக்கப்படுவதைக் கண்டு (வேறுவிதமாகச் செயல்பட) அஞ்சினாள். மேலும், பிரம்மனின் சாபத்துக்கும் அஞ்சிய அவள், “சரி” என்று சொன்னாள். வேறுவிதமாகச் செய்ய முடியாத அவள், ஆசை, கோபம் ஆகியவற்றைத் துறந்து, உயிரினங்களின் (அழிவுக்) காலம் வந்த போது, அவற்றின் உயிரை எடுக்கத் தொடங்கினாள். உயிரினங்களுக்கு மட்டுமே மரணம் ஏற்படுகிறது. வாழும் உயிரினங்களிலிருந்து நோய்களும் எழுகின்றன. நோய் என்பது உயிரினங்களின் இயல்பற்ற நிலையே. அதனால் {நோயால்} அவை வலியை உணர்கின்றன {துன்புறுகின்றன}. எனவே, உயிரினங்கள் இறந்த பிறகு, கனியற்ற {பலனற்ற} துயரத்தில் நீ ஈடுபடாதே. உயிரினங்கள் இறந்ததும், புலன்களும் அவற்றோடு (அடுத்த உலகத்திற்குச்) செல்கின்றன. தங்களுக்கு உரிய இயக்கங்களை அடையும் அவை (அந்த உயிரினங்கள் மீண்டும் பிறக்கும் போது) மீண்டும் வருகின்றன. இப்படியே, ஓ! உயிரினங்களில் சிங்கமே {அகம்பனா}, தேவர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் அங்கே சென்று மனிதர்களைப் போலவே செயல்படும் [3].பயங்கர முழக்கங்களும், பெரும் பலமும் கொண்டு, அச்சுறுத்தும் வகையில் உள்ள காற்றானது, எங்கும் இருக்கிறது, எல்லையில்லா சக்தியைக் கொண்டிருக்கிறது. வாழும் உயிரினங்களின் உடல்களை இந்தக் காற்றே பிளக்கின்றது. இக்காரியத்தில் அது {காற்று}, எந்தச் செயலாற்றலையும் வெளிப்படுத்தாது, அதே போல அதன் {உடலின்} இயக்கங்களையும் நிறுத்திவிடாது; (ஆனால் அஃதை {உடலின் இயக்கத்தை நிறுத்துவதை} இயல்பாகவே செய்யும்). தேவர்கள் அனைவரும் கூட மனிதர்களின் பெயர்களைத் தங்களோடு இணைத்துள்ளனர் [4].எனவே, ஓ! மன்னர்களில் சிங்கமே {அகம்பனா}, உன் மகனுக்காக வருந்தாதே! உன் மகன் {ஹரி}, வீரர்களுக்குச் சொந்தமான மகிழ்ச்சிகரமான உலகங்களை அடைந்து, நித்திய மகிழ்ச்சியில் தன் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறான். சோகங்கள் அனைத்தையும் துறந்த அவன், நீதிமான்களின் {தர்மவான்களின்} தோழமையை அடைந்திருக்கிறான். மரணம் என்பது படைப்பாளனாலேயே உயிரினங்கள் அனைத்திற்கும் விதிக்கப்பட்டிருக்கிறது. அவற்றின் காலம் வந்ததும், உயிரினங்கள் முறையாகக் கொல்லப்படுகின்றன. உயிரினங்களின் மரணம் என்பது அந்த உயிரினங்களிலேயே எழுகிறது. உயிரினங்கள் தங்களைத் தாங்களே கொல்கின்றன. தண்டத்தைத் தரித்து வந்து மரணதேவி யாரையும் கொல்வதில்லை. எனவே, பிரம்மனாலேயை விதிக்கப்பட்டது என்பதால் மரணம் தவிர்க்க முடியாததே என்பதை அறிந்த ஞானியர், இறந்து போன உயிரினங்களுக்காக எப்போதும் வருந்துவதில்லை. உயர்ந்த தேவனாலேயே {பிரம்மனாலேயே} இந்த மரணம் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொண்டு, இறந்து போன உன் மகனுக்காக வருந்துவதைத் தாமதமில்லாமல் விடுவாயாக” {என்றார் நாரதர்}.

வியாசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “நாரதரால் சொல்லப்பட்ட இந்தப் பயங்கர வார்த்தைகளைக் கேட்ட மன்னன் அகம்பனன், தன் நண்பரிடம் {அகம்பனன், நாரதரிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! முனிவர்களில் முதன்மையானவரே {நாரதரே} என் கவலை தீர்ந்தது. நான் மனநிறைவை அடைந்தேன். இந்த வரலாற்றை உம்மிடம் இருந்து கேட்ட நான், உம்மிடம் நன்றியுள்ளவனாக உம்மை வழிபடுகிறேன்” என்றான் {அகம்பனன்}. மன்னனால் இப்படிச் சொல்லப்பட்டவரும், மேன்மையான முனிவர்களில் முதன்மையானவரும், அளவிலா ஆன்மாக் கொண்டவருமான அந்தத் தெய்வீகத் துறவி {நாரதர்}, பிறகு, நந்தவக் காட்டுக்குச் {அசோக வனத்திற்குச்} சென்றார்.

அடுத்தவர் கேட்பதற்காக இந்த வரலாற்றை அடிக்கடி உரைத்தலும், இந்த வரலாற்றை அடிக்கடி கேட்டலும், தூய்மைப்படுத்துவதாகவும், புகழுக்கும், சொர்க்கத்திற்கும் வழிநடத்துவதாகவும், பாராட்டத் தகுந்ததாகவும் கருதப்படுகிறது. மேலும் இது, {கேட்பவர் [அ] சொல்பவரின்} வாழ்நாளின் காலத்தையும் {ஆயுளையும்} அதிகரிக்கிறது.

ஓ! யுதிஷ்டிரா, பொருளுள்ள இந்தக் கதையைக் கேட்டு, க்ஷத்திரியர்களின் கடமைகளையும், வீரர்களால் அடையத்தக்க உயர்ந்த (அருள்) நிலைகளையும் எண்ணி உனது துயரத்தைவிடுவாயாக. வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்த அபிமன்யு, வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, (எண்ணிலா) எதிரிகளால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்தையே அடைந்திருக்கிறான். பெரும் வில்லாளியான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அபிமன்யு}, களத்தில் போராடியபடியே, வாள், கதாயுதம், ஈட்டி மற்றும் வில்லால் தாக்குண்டு வீழ்ந்தான். சோமனிலிருந்து எழுந்த அவன், தன் அசுத்தங்கள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டதால், சந்திரனின் சாரத்தில் மறைந்துவிட்டான். எனவே, ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, உன் மனோபலம் அனைத்தையும் திரட்டிக் கொண்டு, உன் புலன்களைச் செயலிழக்க விடாமல், உன் தம்பிகளுடன் கூடி ஊக்கத்துடனும் விரைவாகவும் போரிடச் செல்வாயாக” {என்றார் வியாசர்}.

மரணத்திற்கு வருந்தாதே! – துரோண பர்வம் பகுதி – 053, 054, 055-மரண தேவியின் கதையைக் கேட்டு திருப்தியடையாத யுதிஷ்டிரனுக்கு வியாசர் மேலும் ஒரு நிகழ்வைச் சொல்வது; மன்னன் சிருஞ்சயனுக்குப் பிறந்த சுவர்ணஷ்டீவின்; சுவர்ணஷ்டீவினைக் கொன்ற கள்வர்கள்; மகனின் மறைவால் வருந்திய சிருஞ்சயன், சிருஞ்சயனுக்கு மன்னன் மருத்தனின் கதையைச் சொன்ன நாரதர்; மரணத்தைக் குறித்து ஏன் வருந்தக்கூடாது என்பதற்குச் சிருஞ்சயனிடம் நாரதர் சொன்ன விளக்கம்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மரணத்தின் {மரணதேவியின்} பிறப்பையும், அவளது விசித்திரமான செயல்பாடுகளையும் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், மீண்டும் வியாசரிடம் பணிவுடன் இந்த வார்த்தைகளைப் பேசினான்.

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “நற்பேறுபெற்ற நாடுகளில், நீதிமிக்கச் செயல்களைச் செய்பவர்களும், ஆற்றலில் இந்திரனுக்கே நிகரானவர்களுமாகப் பல மன்னர்கள் இருந்திருக்கின்றனர். ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே, வியாசரே}, அரசமுனிகளான அவர்கள் பாவமற்றவர்களாகவும், உண்மையைப் பேசுபவர்களாகவும் இருந்தனர். பழங்காலத்தின் அந்த அரச முனிகளால் செய்யப்பட்ட சாதனைகளைக் கனமான வார்த்தைகளால் சொல்லி என்னை ஆறுதலடையச் செய்வீராக. அவர்களால் அளிக்கப்பட்ட வேள்விக் கொடைகள் என்ன? அதைச் செய்தவர்களான அறம்செய்யும் உயர் ஆன்ம அரச முனிகள் யாவர்? ஓ! சிறப்புமிக்கவரே {வியாசரே}, இவையாவையும் எனக்குச் சொல்வீராக” என்றான் {யுதிஷ்டிரன்} [1].வியாசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சுவித்யன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். அவனுக்குச் சிருஞ்சயன் என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். முனிவர்களான நாரதரும், பர்வதரும் அவனது நண்பர்களாக இருந்தனர். ஒருநாள், அந்தத் துறவிகள் இருவரும், சிருஞ்சயனைச் சந்திப்பதர்காக அவனது அரண்மனைக்கு வந்தனர். சிருஞ்சயனால் முறையாக வழிபடப்பட்ட அவர்கள் அவனிடம் {சிருஞ்சயனிடம்} மனம்நிறைந்து அவனுடனேயே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

ஒரு சமயம், அந்த இரு துறவிகளுடனும் சிருஞ்சயன் சுகமாக அமர்ந்திருந்த போது, இனிய புன்னகை கொண்ட அவனது அழகிய மகள் அவனிடம் வந்தாள். தன் மகளால் மரியாதையுடன் வணங்கப்பட்ட சிருஞ்சயன், அந்தப் பெண்ணின் அருகில் நின்று கொண்டு அவள் விரும்பிய வகையிலேயே முறையான வாழ்த்துகளைச் சொன்னான். அந்தக் கன்னிகையைக் கண்ட பர்வதர் புன்னகையுடன் சிருஞ்சயனிடம், “துருதுரு பார்வையையும், மங்கலக் குறிகள் அனைத்தையும் கொண்ட இந்தக் கன்னிகை யாருடைய மகள்? இவள் சூரியனின் ஒளியா? அல்லது அக்னியின் தழலா? அல்லது ஸ்ரீதேவி, ஹ்ரீதேவி, கீர்த்தி, த்ருதி, புஷ்டி, சித்தி ஆகியோரா? அல்லது சோமனின் ஒளியா?” என்று கேட்டார்.

அந்தத் தெய்வீக முனிவர் (பர்வதர்) இந்த வார்த்தைகளைக் கேட்டதும், மன்னன் சிருஞ்சயன் {பர்வத முனிவரிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே {பர்வதரே}, இந்தப் பெண் எனது மகளாவாள். இவள் என் ஆசிகளை இரந்து கேட்கிறாள்” என்று பதிலுரைத்தான். அப்போது நாரதர் மன்னன் சிருஞ்சயனிடம், “ஓ! ஏகாதிபதி {சிருஞ்சயா}, (உனக்கு) பெரும் நன்மையை நீ விரும்பினால், இந்த உன் மகளை மனைவியாக எனக்கு அளிப்பாயாக” என்றார். (முனிவரின் முன்மொழிவால்) மகிழ்ந்த சிருஞ்சயன், நாரதரிடம், “நான் உமக்கு அவளை அளிக்கிறேன்” என்றான்.

இதற்கு, மற்றொரு முனிவரான பர்வதர், நாரதரிடம் கோபத்துடன், “என் இதயத்துக்குள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தக் காரிகையை, உமது மனைவியாக நீர் கொள்கிறீர். ஓ! பிராமணரே, இதை நீர் செய்ததால், உம் விருப்பப்படி உம்மால் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது” என்றார். இப்படி அவரால் {பர்வதரால்} சொல்லப்பட்ட நாரதர், “கணவனின் {மணமகனின்} இதயம் {மனம்}, (அது சம்பந்தமான) பேச்சு, (கொடுப்பவரின்) சம்மதம், (இருவரின்) பேச்சுகள், நீர் தெளித்துக் கொடுக்கப்படும் உண்மையான தானம், (மணமகளின் கைப்) பற்றுவதற்கு விதிக்கப்பட்டவை (மந்திரங்களை உரைத்தல்) – ஆகிய இந்த அறிகுறிகளே ஒரு கணவனை அமைக்கின்றன என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சடங்கே கூட முழுமையாகாது. ஏழு எட்டுகள் {அடிகள்} வைத்து (ஒரு மணமகள், மணமகனை வலம் வருதல்) இவற்றில் (இவை அனைத்திற்கும் மேலாக) முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவையில்லாமல் (திருமணம் குறித்த) உமது காரியம் அடையப்பட்டதாகாது. {இவற்றை அறிந்தும்} நீர் சபித்திருக்கிறீர். எனவே, நீரும் என்னைவிட்டுவிட்டுச் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது [2]” என்று பதிலுக்குச் சபித்தார் {நாரதர்}. இப்படி ஒருவரையொருவர் சபித்துக் கொண்ட அந்த முனிவர்கள் இருவரும் தொடர்ந்து அங்கேயே வாழ்ந்தனர்.

அதே வேளையில், ஒரு மகனை (அடைய) விரும்பிய மன்னன் சிருஞ்சயன், சுத்தப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன், தன் சக்தியால் முடிந்தவரை,  உணவும், ஆடைகளும் கவனத்துடன் வழங்கி பிராமணர்களை மகிழ்ச்சிப்படுத்தத் தொடங்கினான். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, வேதங்களைப் படிப்பதில் அர்ப்பணிப்புடையவர்களும், சாத்திரங்களை அவற்றின் பிரிவுகளுடன் முழுவதும் அறிந்தவர்களுமான அந்தப் பிராமணர்களில் முதன்மையானோர், மகனை அடைய விரும்பிய அந்த ஏகாதிபதியிடம் {சிருஞ்சயனிடம்} மனம் நிறைந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக நாரதரிடம் வந்து, அவரிடம், “இந்த மன்னன் விரும்பியவாறு அவனுக்கு ஒரு மகனைக் கொடுப்பீராக” என்றனர். இப்படி அந்தப் பிராமணர்களால் சொல்லப்பட்ட நாரதர், அவர்களிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார். பிறகு, அந்தத் தெய்வீக முனிவர் {நாரதர்} சிருஞ்சயனிடம், “ஓ! அரசமுனியே {சிருஞ்சயா}, பிராமணர்கள் மனம் நிறைந்து உனக்கு ஒரு மகனை விரும்புகிறார்கள். நீ அருளப்பட்டிருப்பாயாக, நீ விரும்பும் வகையிலான மகனை வரமாகக் கேட்பாயாக” என்றார்.

இப்படி அவரால் சொல்லப்பட்ட அந்த மன்னன், கூப்பிய கரங்களுடன், அனைத்தையும் சாதிப்பவனும், புகழ்பெற்றவனும், மகிமைநிறைந்த சாதனைகளைச் செய்பவனும், பெரும் சக்தி கொண்டவனும், எதிரிகள் அனைவரையும் தண்டிக்க இயன்றவனுமான ஒரு மகனைக் கேட்டான். மேலும், அவன் {சிருஞ்சயன்}, அந்தக் குழந்தையின் சிறுநீர், மலம், சளி, வியர்வை ஆகியவை தங்கமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டான். சரியான காலத்தில் அந்த மன்னனுக்கு ஒரு மகன் பிறந்தான், அவன் சுவர்ணஷ்டீவின் என்று பூமியில் பெயரிடப்பட்டான் {அழைக்கப்பட்டான்}. மேலும் அந்த வரத்தின் விளைவாக அந்தக் குழந்தை (தன் தந்தையின்) எல்லைகள் அனைத்தையும் மீறி செல்வத்தைப் பெருக்கத் தொடங்கினான். மன்னன் சிருஞ்சயன் தனக்கு விருப்பப்பட்ட பொருட்கள் அனைத்தையும் தங்கத்திலேயே செய்தான். அவனது வீடுகள், சுவர்கள், கோட்டைகள், (அவனது ஆட்சிப்பகுதிக்குள் உள்ள) பிராமணர்கள் அனைவரின் வீடுகள், அவனது படுக்கைகள், வாகனங்கள், தட்டுகள், குடங்கள், குடுவைகள், அவனுக்குச் சொந்தமான இடங்கள், மேலும் அவனது கருவிகள் அனைத்தும், அரண்மனைக்கு உள்ளும் புறமும் இருந்த பாத்திரங்கள் ஆகிய அனைத்தும் தங்கத்தாலேயே செய்யப்பட்டன. அந்த நேரத்தில் அவனது {தங்க} கையிருப்பும் அதிகரித்தது.

இளவரசனைக் குறித்துக் கேள்விப்பட்ட சில கள்வர்கள் ஒன்றுகூடி, அவன் அப்படி {செழிப்பாக} இருப்பதைக் கண்டு, அந்த மன்னனுக்குத் தீங்கிழைக்க முனைந்தனர். அவர்களில் சிலர், “நாம் மன்னனின் மகனையே கைப்பற்றுவோம். அவனே அவனது தந்தையின் தங்கச்சுரங்கமாவான். எனவே, அதை {அவனை} நோக்கிய நாம் முயல்வோம்.“ என்றனர். பிறகு, பேராசையால் தூண்டப்பட்ட அந்தக் கள்வர்கள் மன்னனின் அரண்மனைக்குள் ஊடுருவி, இளவரசன் சுவர்ணஷ்டீவினைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்றனர்.

இப்படி அவனைக் கைப்பற்றிய பிறகு காட்டுக்குத் தூக்கிச் சென்ற அந்த அறிவற்ற மூடர்கள், பேராசையால் உந்தப்பட்டு, அவனை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதை அறியாமல், அவன் உடலைத் துண்டு துண்டாக வெட்டி அவனை {சுவர்ணஷ்டீவினை} அங்கேயே கொன்றனர். எனினும், அவனிடம் தங்கம் எதையும் அவர்கள் காணவில்லை. இளவரசன் கொல்லப்பட்ட பிறகு, முனிவரின் வரத்தால் அடையப்பட்ட தங்கம் அனைத்தும் மறைந்தன. அறியாமை கொண்டவர்களும், அறிவற்றவர்களுமான அந்தக் கள்வர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இப்படி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட அவர்கள் அழிந்தனர், அவர்களோடு சேர்ந்து பூமியில் இருந்த அந்த அற்புத இளவரசனும் அழிந்தான். தீச்செயல்களைச் செய்த அம்மனிதர்கள் கற்பனைக்கெட்டாத பயங்கர நரகத்தில் மூழ்கினர்.

முனிவரின் வரத்தால் அடையப்பட்ட தன் மகன் கொல்லப்பட்டதைக் கண்ட பெரும் துறவியான மன்னன் சிருஞ்சயன், கவலையால் ஆழப் பீடிக்கப்பட்டு, பரிதாபகரமான குரலில் அழுது புலம்பத் தொடங்கினான். தன் மகனின் நிமித்தமாகப் பீடிக்கப்பட்ட மன்னன் {சிருஞ்சயன்}, இப்படி அழுவதைக் கண்ட தெய்வீக முனிவரான நாரதர், அவன் முன்னிலையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். ஓ! யுதிஷ்டிரா, துயரத்தால் பீடிக்கப்பட்டு, புலன்களை இழந்து இப்படிப்பட்ட பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மன்னனை {சிருஞ்சயனை} அணுகி, அந்தச் சிருஞ்சயனிடம் நாரதர் என்ன சொன்னார் என்பதைக் கேட்பாயாக.

நாரதர் {சிருஞ்சயனிடம்}, “சிருஞ்சயா, பிரம்மத்தை உச்சரிப்பவர்களான நாங்கள் உன் இல்லத்தில் வாழ்ந்தும், உன் விருப்பங்கள் ஈடேறாமல் இறக்கப் போகிறாய். ஓ! சிருஞ்சயா, அவிக்ஷித்தின் மகன் மருத்தனும் இறக்க வேண்டியிருந்தது என்று நாம் கேள்வி படுகிறோம். பிருஹஸ்பதியிடம் கோபம்   கொண்ட அவன் {மருத்தன்} சம்வர்த்தரைக் கொண்டு தன் பெரும் வேள்விகளைச் செய்தான். அந்த அரசமுனியிடம் {மருத்தனிடம்}, சிறப்பு மிக்கத் தலைவனே (மகாதேவனே), இமயத்தின் தங்கப் பீடபூமியின் வடிவில் செல்வத்தைக் கொடுத்தான். (அந்தச் செல்வத்தைக் கொண்டு) மன்னன் மருத்தன் பல்வேறு வேள்விகளைச் செய்தான்.

இந்திரனின் துணையுடனும், பிருஹஸ்பதியின் தலைமையிலும் தேவர்களில் பல்வேறு இனங்களான அந்த அண்டப் படைப்பாளர்கள், தன் வேள்விகளை முடித்த அவனிடம் வழக்கமாக வந்து கொண்டிருந்தனர். அவனது வேள்வி மண்டபத்தில் இருந்த விரிப்புகள் மற்றும் அறைகலன்கள் அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டவையாக இருந்தன. உணவை விரும்பிய மறுபிறப்பாள {பிராமண} வர்க்கங்கள் அனைவரும், தங்கள் விருப்பத்துக்கு உகந்த சுத்தமான உணவை மனநிறைவுடன் அவனது வேள்விகளில் உண்டனர். அவனது வேள்விகள் அனைத்திலும், பால், தயிர், தெளிந்த நெய், தேன், பிறவகைகளிலான உணவுகள், உண்ணக்கூடியவை அனைத்திலும் சிறந்தவை, ஆடைகள், விலைமதிப்பின் காரணமாக {தவறாக} விரும்பப்படும் ஆபரணங்கள் ஆகியவை வேதங்களை முழுமையாக அறிந்த பிராமணர்களை மனம்நிறையச் செய்தன. மன்னன் மருத்தனின் அரண்மனையில் தேவர்களே உணவைப் பரிமாறுபவர்களாக இருந்தனர். அவிக்ஷித்தின் மகனான அந்த அரசமுனிக்கு {மருத்தனுக்கு}, விஸ்வதேவர்களே சேவகர்களாக இருந்தனர். தெளிந்த நெய்யால் காணிக்கையளிக்கப்பட்ட சொர்க்கவாசிகள் அவனிடம் மனநிறைவு கொண்டனர். (அதனால்) மனம் நிறைந்த அவர்கள், தங்கள் பங்குக்கு, அந்தப் பலமிக்க ஆட்சியாளனின் {மருத்தனின்} பயிர் செல்வத்தை அபரிமிதமான மழைப்பொழிவால் அதிகரித்தனர்.

அவன் {மருத்தன்} எப்போதும், முனிவர்கள், பிதுர்கள், தேவர்கள் ஆகியோர் நிறைவடையும் வகையில் காணிக்கைகளை அளித்தும், பிரம்மச்சரியம், வேத கல்வி, ஈமக்கடன் சடங்குகள் ஆகியவற்றை நோற்றும் அனைத்து விதமான தானங்களை அளித்தும் அவர்களை மகிழ்வூட்டினான். அவனது படுக்கைகள், விரிப்புகள், வாகனங்கள், கொடுப்பதற்குக் கடினமான அவனது பரந்த தங்கக் கிடங்குகள் ஆகியவையும், உண்மையில் சொல்லப்படாத அவனது செல்வங்களும் தன்னார்வத்துடன் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டாதல் சக்ரனே {இந்திரனே} அவனுக்கு நன்மையை விரும்பினான். அவனது குடிகள் {குடிமக்கள்} (அவனால்) மகிழ்ச்சிப்படுத்தப்பட்டனர். எப்போதும் அர்ப்பணிப்போடு {பக்தியோடு} செயல்பட்ட அவன் {மருத்தன்}, (இறுதியில்) தான் அடைந்த அறத் தகுதிகளின் மூலம் அழியாமல் நிலைக்கும் அருள் உலகங்களை அடைந்தான். மன்னன் மருத்தன், தன் பிள்ளைகள், அமைச்சர்கள், மனைவியர், வழித்தோன்றல்கள், சொந்தங்கள் ஆகியோருடனும், இளமையுடனும் ஆயிரம் வருடங்களுக்குத் தன் நாட்டை ஆண்டான். ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களால் (தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றில்) உனக்கும் உன் மகனுக்கும் {சுவர்ணஷ்டீக்கும்} மிக மேன்மையான அத்தகு மன்னனே {மருத்தனே} இறந்தான் எனும்போது, ஓ! சுவைத்யா {சுவித்யனின் மகனே சிருஞ்சயா}, எந்த வேள்வியோ, எந்த வேள்விக் கொடையோ செய்யாத உன் மகனைக் குறித்து வருந்தாதே” என்றார் {நாரதர்}.

மன்னன் சுஹோத்திரன்! – துரோண பர்வம் பகுதி – 056-மன்னன் சுஹோத்திரனின் கதையைச் சொன்ன நாரதர்; சுஹோத்திரன் செய்த வேள்விகள் மற்றும் கொடைகள்; அவன் நாட்டின் செழிப்பு; அவனது மரணம்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, மன்னன் சுஹோத்ரனும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அவன் {மன்னன் சுஹோத்திரன்} வீரர்களில் முதன்மையானவனாகவும், போரில் வெல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான். அவனைக் காண தேவர்களே வந்தனர். அறத்தால் தன் அரசை அடைந்த அவன் {சுஹோத்திரன்}, தன் நன்மைக்காக ரித்விக்குகள், அரண்மனைப் புரோகிதர்கள் மற்றும் பிராமணர்களின் அறிவுரைகளை நாடி, அவர்களை விசாரித்து, அவர்களது உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்து வந்தான். தன் குடிகளைக் காக்கும் கடமையை நன்கு அறிந்த மன்னன் சுஹோத்திரன் அறம் மற்றும் ஈகையுடன், வேள்விகள் செய்து, எதிரிகளை அடக்கித் தன் செல்வத்தைப் பெருக்க விரும்பினான்.

அவன் சாத்திர விதிகளைப் பின்பற்றித் தேவர்களை வணங்கினான். தன் கணைகளின் மூலம் அவன் {சுஹோத்ரன்} தன் எதிரிகளை வீழ்த்தினான். தன் சிறந்த சாதனைகளின் மூலம் அவன் உயிரினங்கள் அனைத்தையும் நிறைவு கொள்ளச் செய்தான். அவன் {சுஹோத்ரன்}, மிலேச்சர்களிடம் இருந்தும், காட்டுக் கள்வர்களிடமும் இருந்தும் பூமாதேவியை விடுவித்து, அவளை ஆண்டான்.

மேகங்களின் தேவன் {இந்திரன்}, அவனிடம் {அவனது நாட்டில்} வருடா வருடம் தங்கத்தையே மழையாகப் பொழிந்தான். எனவே, அந்தப் பழங்காலத்தில், (அவனுடைய நாட்டில் உள்ள) ஆறுகளில் தங்கமே (நீராகப்) பாய்ந்தது. மேலும் அஃது {ஆறுகளில் உள்ள தங்கம்} அனைவரும் பயன்படுத்தும்படி திறந்தே இருந்தது. மேகங்களின் தேவன் {இந்திரன்} அவனது {சுஹோத்ரனின்} நாட்டில் {குருஜாங்கலத்தில்}, பெரும் எண்ணிக்கையிலான முதலைகள், நண்டுகள், பல்வேறு இனங்களிலான மீன்கள், விருப்பத்துக்குகந்த எண்ணற்ற பல்வேறு பொருட்கள் ஆகியவை அனைத்தையும் தங்கமயமாகவே பொழிந்தான்.அந்த மன்னனின் {சுஹோத்ரனின்} ஆட்சிப் பகுதிகளில் இருந்த செயற்கைத் தடாகங்கள் ஒவ்வொன்றும் இரண்டு மைல்கள் நீளத்திற்கு [1] இருந்தன. மன்னன் சுஹோத்திரன், ஆயிரக்கணக்கான குள்ளர்கள், கூன்முதுகர்கள் [2], முதலைகள், மகரங்கள், ஆமைகள் ஆகியவை அனைத்தும் தங்கமயமாகவே இருப்பதைக் கண்டு அதிசயித்தான். அரசமுனியான அந்தச் சுஹோத்ரன், குருஜாங்கலத்தில் ஒரு வேள்வியைச் செய்து தங்கத்தாலான அந்த அளவற்ற செல்வத்தை, வேள்வி முடியுமுன்பே பிராமணர்களுக்குத் தானமாகக் கொடுத்தான்-ஆயிரம் குதிரை வேள்விகள் {அஸ்வமேதயாகங்கள்}, நூறு ராஜசூயங்கள், பல புனிதமான க்ஷத்திரிய வேள்விகள் ஆகியவற்றைச் செய்து, பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளை அளித்து, குறிப்பிட்ட விருப்பங்களுக்காகச் செய்பவையும் கிட்டத்தட்ட எண்ணற்றவையுமானத் தன் தினச் சடங்குகளைச் செய்த அந்த மன்னன் {சஹோத்ரன்}, இறுதியில் மிகவும் விரும்பத்தக்க ஒரு முடிவை அடைந்தான்.

ஓ சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு}மிகவும் மேம்பட்டவனுமான அந்த மன்னனே {சுஹோத்திரனே} இறந்தான் எனும்போது,  எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக, “ஓ சுவைதியா, ஓ சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மன்னன் பௌரவன்! – துரோண பர்வம் பகுதி – 057-மன்னன் பௌரவனின் கதையைச் சொன்ன நாரதர்; பௌரவன் செய்த வேள்விகள் மற்றும் கொடைகள்; அவனது மரணம்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, வீர மன்னன் பௌரவனும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அந்த மன்னன் {பௌரவன்}, வெண்ணிறம் கொண்ட ஆயிரம் {1000} குதிரைகளை ஆயிரம் {1000} முறை தானமளித்திருக்கிறான். அந்த அரசமுனியால் {பௌரவனால்} நடத்தப்பட்ட குதிரைவேள்வியில், சிக்ஷை மற்றும் அக்ஷரங்களின் விதிகளை நன்கறிந்தவர்களான [1] எண்ணற்ற பிராமணக் கல்விமான்கள் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்தனர். வேதங்கள், அறிவு, நோன்புகள் ஆகியவற்றால் தூய்மையடைந்து, பரந்த மனப்பான்மையும், இனிய தோற்றமும் கொண்ட இந்தப் பிராமணர்கள், மன்னனிடம் இருந்து, ஆடைகள், வீடுகள், சிறந்த படுக்கைகள், விரிப்புகள், வாகனங்கள், இழுவைக் கால்நடைகள் ஆகியவை போன்ற விலையுயர்ந்த தானங்களைப் பெற்று, தேர்ந்தவர்களும், வேடிக்கை செய்ய எப்போதும் முனைபவர்களும், (தங்களுக்குரிய கலைகளை) நன்கறிந்தவர்களுமான நடிகர்கள், ஆடற்கலைஞர்கள், பாடகர்கள் ஆகியோரால் எப்போதும் மகிழ்விக்கப்பட்டனர்.

அவன் {பௌரவன்}, தனது ஒவ்வொரு வேள்வியிலும், தங்கள் உடல்களில் மதநீர் ஒழுகுபவையும், பொன்மயமான பிரகாசம் கொண்டவையுமான பத்தாயிரம் {10000} யானைகளையும், கொடிமரங்கள் மற்றும் கொடிகளுடன் கூடிய தங்கத்தாலான தேர்களையும் சரியான நேரத்தில் வேள்விக்கொடைகளாகக் கொடுத்தான்.

தங்க ஆபரணங்கள் பூண்ட ஆயிரம் {1000} கன்னியர், ஏறிப்பயணிக்கத் தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவை, வீடுகள், வயல்கள், நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும், நூற்றுக்கணக்கான பசுக்கள், பொன்னால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இடையர்கள் ஆகியவற்றையும் வேள்விப் பரிசுகளாக அவன் {பௌரவன்} தானமளித்தான். கடந்த கால வரலாற்றை அறிந்தோர், “தங்கக் கொம்புகள், வெள்ளிக் குளம்புகள், வெண்கலப் பால்குடங்கள் ஆகியவற்றைக் கொண்டவையும், கன்றுகளுடன் கூடியவையுமான பசுக்கள், எண்ணற்ற வகையில், வேலைக்காரிகள், வேலைக்காரர்கள், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடுகள் ஆகியவற்றையும், பல்வேறு வகை ரத்தினங்கள், மலைபோன்ற பலவகை உணவுகளையும் மன்னன் பௌரவன் அந்த வேள்வியில் அளித்தான்” என்ற இந்தப் பாடலைப் பாடுகின்றனர் [2].வேள்விகள் செய்பவனான அந்த அங்கர்களின் மன்னன் {பௌரவன்}, விருப்பத்திற்குரிய பொருள்கள் அனைத்தையும் தரவல்லவையும், தன் சொந்த வர்க்கத்திற்குத் தகுந்தவையும், அவற்றின் தன்மையின் வரிசைப்படியும் பல மங்கல வேள்விகளைச் செய்தான்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கும் மேம்பட்டவனான அத்தகு மன்னனே {அந்தப் பௌரவனே} இறந்தான். அவன் உனக்கும் மேம்பட்டவன் ஆதலால், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கும்} மிகவும் மேம்பட்டவனாவான். உன் மகன் {சுவர்ணஷ்டீவின்} எந்த வேள்வியையும் செய்ததில்லை, வேள்விக் கொடை எதையும் அளித்ததும் இல்லை எனும்போது, “ஓ! சுவைதியா, ஓ சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மன்னன் சிபி! – துரோண பர்வம் பகுதி – 058-உசீநரனின் மகனான மன்னன் சிபியின் கதையைச் சொன்ன நாரதர்; சிபி செய்த வேள்விகள் மற்றும் கொடைகள்; அவன் ருத்ரனிடம் அடைந்த வரம்; அவனது மரணம்

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, உசீநரனின் மகனான சிபியும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அந்த மன்னன் {சிபி}, பூமியைச் சுற்றிலும் தோல் கச்சையால் சுற்றியதைப் போல, மலைகள், தீவுகள், கடல்கள், காடுகள் ஆகியவற்றுடன் கூடிய பூமியைத் தன் தேரின் சடசடப்பொலியால் எதிரொலிக்கச் செய்தான். எதிரிகளை வெல்பவனான மன்னன் சிபி, எப்போதும் தன் முதன்மையான எதிரிகளைக் கொன்று வந்தான். அவன் {சிபி}, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளை அளித்துப் பல வேள்விகளைச் செய்தான். பெரும் ஆற்றலும், பெரும் நுண்ணறிவும் கொண்ட அந்த ஏகாதிபதி {சிபி} மகத்தான செல்வத்தை அடைந்தான். போரிலோ அவன் க்ஷத்திரியர்கள் அனைவரின் பாராட்டுதலையும் வென்றான்.

முழுப் பூமியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவன் {சிபி}, ஆயிரங்கோடி தங்க நிக்ஷங்களையும், பல யானைகள், குதிரைகள் மற்றும் பிற வகை விலங்குகளையும், மிகையான தானியங்களையும், பல மான்கள் மற்றும் ஆடுகளையும் (வேள்விக் கொடையாகக்) கொடுத்து பெரும் புண்ணியத்தை அடையச்செய்யும் குதிரை வேள்விகள் பலவற்றை எந்தத் தடங்கலுமின்றிச் செய்தான். மன்னன் சிபி, பல்வேறு வகை நிலங்களைக் கொண்ட புனிதமான பூமியை பிராமணர்களுக்குக் கொடுத்தான்.

உண்மையில் உசீநரனின் மகனான சிபி, பூமியில் விழுந்த மழைத்துளிகளின் எண்ணிக்கை அளவுக்கோ, ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை அளவுக்கோ, மணற்துகள்களின் எண்ணிக்கையின் அளவுக்கோ, மேரு என்று அழைக்கப்படும் மலையில் அமைந்த பாறைகளின் எண்ணிக்கையின் அளவுக்கோ, ரத்தினங்களின் அளவுக்கோ, பெருங்கடலில் உள்ள (நீர்வாழ்) விலங்குகள் அளவுக்கோ பசுக்களைத் தானமளித்தான். மன்னன் சிபி சுமந்ததைப் போன்ற சுமைகளைச் சுமக்க இயன்ற வேறு எந்த மன்னனையும் படைப்பாளனே சந்தித்ததில்லை; அல்லது கடந்த காலத்திலோ, நிகழ்காலத்திலோ, எதிர்காலத்திலோ கூடச் சந்திக்கமாட்டான்.

அனைத்துவகைச் சடங்குகளையும் கொண்ட வேள்விகள் பலவற்றை மன்னன் சிபி செய்தான். அவ்வேள்விகளில், யூபஸ்தம்பங்கள், விரிப்புகள், வீடுகள், சுவர்கள், வளைவுகள் அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டவையாக இருந்தன. {அங்கே} இனிமையான சுவையும், முற்றான தூய்மையும் கொண்ட உணவும் நீரும் அபரிமிதமாக வைக்கப்பட்டிருந்தன. அங்கே சென்ற பிராமணர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரமாகவே எண்ணப்பட முடியும். அனைத்து வகை உணவுப் பொருட்களும் நிரம்பியிருந்த அந்த இடத்தில், தானமளிக்கப்படுகிறது, எடுத்துக் கொள்ளுங்கள் என்ற ஏற்புடைய வார்த்தைகள் மட்டுமே கேட்கப்பட்டன. பாலும், தயிரும், பெரும் தடாகங்களில் திரட்டப்பட்டன.

“விரும்பியவாறு குளியுங்கள், குடியுங்கள், உண்ணுங்கள்” என்ற வார்த்தைகள் மட்டுமே அங்கே கேட்கப்பட்டன. அவனது நீதிமிக்கச் செயல்களால் {தர்ம செயல்களால்} மனம்நிறைந்த ருத்ரன் {சிவன்}, சிபிக்கு, “கொடுக்கக் கொடுக்க, உன் செல்வமும், உன் அர்ப்பணிப்பும், உன் புகழும், உன் அறச்செயல்களும், உயிரினங்கள் அனைத்திடமும் நீ காட்டும் அன்பும், (நீ அடையப் போகும்) சொர்க்கமும் வற்றாததாக {குறையாததாக} இருக்கட்டும்” என்ற வரத்தை அளித்தான். விரும்பக்கூடிய இந்த வரங்கள் அனைத்தையும் அடைந்த சிபியும் கூட, அவன் காலம் வந்ததும், இந்த உலகத்தைவிட்டுச் சொர்க்கம் சென்றான்.

ஓ! சிருஞ்சயா, உனக்கு மேம்பட்டவன் ஆதலால், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனான அவனே {அந்தச் சிபியே} இறந்தான் எனும்போது. எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

ராமராஜ்ஜியம்! – துரோண பர்வம் பகுதி – 059-தசரதனின் மகனான ராமனின் கதையைச் சொன்ன நாரதர்; அசுரர்களையும் ராவணனையும் கொன்ற ராமன்; அவன் செய்த வேள்விகள்; அநீதியான போக்கு, பேராசை, அறியாமை, பிணி ஆகியவையற்ற ராமராஜ்ஜியத்தின் மகிமை; ராமன் சொர்க்கம் புகுந்தது…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, தசரதனின் மகனான ராமனும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம்.

தன் மடியில் பிறந்த மக்களிடம் {பிள்ளைகளிடம்} மகிழ்ச்சி கொள்ளும் ஒரு தந்தையைப் போல அவனது குடிமக்கள் அவனிடம் மகிழ்ச்சி கொண்டனர். அளவிலா சக்தி கொண்ட அவனிடம் {ராமனிடம்} எண்ணற்ற நற்குணங்களும் இருந்தன. லக்ஷ்மணனின் அண்ணனான அந்த மங்காப் புகழ் கொண்ட ராமன், தனது தந்தையின் கட்டளையின் பேரில், தன் மனைவியுடன் {சீதையுடன்} பதினான்கு ஆண்டுக் காலம் காட்டில் வாழ்ந்தான். அந்த மனிதர்களில் காளை {ராமன்}, துறவிகளின் பாதுகாப்புக்காக ஜனஸ்தானத்தில் பதினாலாயிரம் ராட்சசர்களைக் கொன்றான். அங்கே {ஜனஸ்தானத்தில்} வசித்தபோது, ராவணன் என்று அழைக்கப்பட்ட ராட்சசன், அவனையும் {ராமனையும்}, அவனது தோழனையும் (லக்ஷ்மணனையும்) வஞ்சித்து, விதேஹ இளவரசியான அவனது {ராமனது} மனைவியை {சீதாவை} அபகரித்துச் சென்றான்.

முக்கண்ணன் (மகாதேவன்), பழங்காலத்தில் (அசுரன்) அந்தகனைக் கொன்றதைப் போலக் கோபத்தில் ராமன், அதற்கு முன் எந்த எதிரியிடமும் வீழாத புலஸ்திய குலத்தின் குற்றவாளியைப் {இராவணனைப்} போரில் கொன்றான். உண்மையில் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ராமன், தேவர்களும் அசுரர்களும் சேர்ந்தாலும் கொல்லப்பட முடியாதவனும், தேவர்கள் மற்றும் பிராமணர்களுக்கு முள்ளாக இருந்த இழிந்தவனும், புலஸ்திய குலத்தின் வழித்தோன்றலுமான அந்த ராட்சசனை {இராவணனை}, அவனது சொந்தங்கள், அவனைப் பின்தொடர்பவர்கள் ஆகியோரோடு சேர்த்துப் போரில் கொன்றான்.

தன் குடிகளைக் கருணையோடு நடத்தியதன் விளைவாக, ராமனைத் தேவர்களும் வழிபட்டனர். தன் சாதனைகளால் முழுப் பூமியையும் நிறைத்த அவன் {ராமன்} தெய்வீக முனிவர்களாலும் மிகவும் புகழப்பட்டான். அனைத்து உயிரினங்களிடமும் கருணையோடிருந்த அந்த மன்னன் {ராமன்}, பல்வேறு நாடுகளை அடைந்து, தன் குடிகளை அறத்தோடு பாதுகாத்து, எந்தத் தடங்கலும் இல்லாத ஒரு பெரும் வேள்வியை நடத்தினான். அந்தத் தலைவன் ராமன், நூறு குதிரை வேள்விகளையும், ஜாரூத்யம் என்றழைக்கப்படும் பெரும் வேள்வியையும் நடத்தினான். தெளிந்த நெய்யை நீர்க்காணிக்கையாகச் செலுத்தி இந்திரனை அவன் மகிழ்வித்தான் [1]. இப்படிப்பட்ட தன் செயல்களால் ராமன், உயிரினங்களுக்கு நேரும் பசி, தாகம் மற்றும் அனைத்து நோய்களையும் வென்றான். அனைத்துச் சாதனைகளையும் கொண்ட அவன் {ராமன்}, தன் சக்தியாலேயே எப்போதும் சுடர்விட்டுப் பிரகாசித்தான். உண்மையில், தசரதனின் மகனான அந்த ராமன், உயிரினங்கள் அனைத்தையும் விடப் பெரிதும் பிரகாசித்தான்.ராமன் தன் நாட்டை ஆண்டபோது, முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகியோர் அனைவரும் பூமியில் ஒன்றாகவே வாழ்ந்தனர். உயிரினங்களின் வாழ்வும் வேறுமாதிரியாகவில்லை {பலவீனமடையவில்லை}. ராமன் தன் நாட்டை ஆண்ட போது, பிராணன், அபானன், சமானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகளும், இன்னும் பிறவும் [2] தங்கள் செயல்பாடுகளை {சரியாகச்} செய்தன. ஒளிக்கோள்கள் அனைத்தும் பிரகாசமாக ஒளிர்ந்தன. பேரிடர் ஏதும் நேரவில்லை-அவனது குடிமக்கள் நீண்ட வாழ்நாளோடு வாழ்ந்தனர். இளமையில் எவரும் மாளவில்லை. இதனால் மிக்க நிறைவு கொண்ட சொர்க்கவாசிகள் {தேவர்கள்}, நான்கு வேதங்களின் {விதிகளின்} படி, மனிதர்களால் அவர்களுக்குக் காணிக்கை அளிக்கப்படும் நெய், உணவு ஆகியவற்றை அடைந்தனர். அவனது {ராமனின்} ஆட்சிப்பகுதிகளில் ஈக்களோ, கொசுக்களோ, இரைதேடும் விலங்குகளோ, நஞ்சுமிக்க ஊர்வனவோ எதுவும் இல்லை [3]. அநீதியான போக்கு, பேராசை, அறியாமை ஆகியவற்றைக் கொண்ட எவரும் அங்கு இல்லை. அனைத்து (நான்கு) வகைக் குடிமக்களும், நீதிமிக்க இனிமையான செயல்பாடுகளிலேயே ஈடுபட்டனர்.-அதே வேளையில், ஜனஸ்தானத்தில் பிதுர்களுக்கு வழங்கப்படும் காணிக்கைகளையும், தேவர்களை வழிபடுவதையும் தடுத்துக் கொண்டிருந்த ராட்சசர்களைக் கொன்ற தலைவன் ராமன், அந்தக் காணிக்கைகளும், வழிபாடுகளும் மீண்டும் பிதுர்களுக்கும், தேவர்களுக்கும் அளிக்கப்படும்படி ஆவன செய்தான். மனிதர்கள் ஒவ்வொருவரும் ஆயிரம் பிள்ளைகளால் அருளப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளைத் தங்கள் வாழ்நாளாகக் கொண்டு வாழ்ந்தனர். முதியவர்கள் தங்களின் இளையவர்களுக்கு எப்போதும் சிராத்தம் செய்ததில்லை [4].இளமையான வடிவமும், அடர்நீல நிறமும், சிவந்த கண்களும், மதயானையின் நடையும், கால் முட்டுகளை அடையும் கரங்களும் {மிக நீண்ட கைகள்}, சிங்கம் போன்ற அழகிய, பெரிய தோள்களும், பெரும் பலமும் கொண்ட ராமன், அனைத்து உயிர்களாலும் அன்புடன் விரும்பப்பட்டு, பதினோராயிரம் {11,000} ஆண்டுகளுக்குத் தன் நாட்டை ஆண்டான். அவனது {ராமனது} குடிமக்கள் எப்போதும் அவனது பெயரை உச்சரித்தனர். ராமன் தன் நாட்டை ஆண்டுகொண்டிருந்த போது உலகமே மிக அழகாக ஆனது. இறுதியாகப் பூமியில் தன் குலவழியைக் கொண்ட எட்டு வீடுகளை நிறுவிய பிறகு [5], தன் நால்வகைக் குடிகளையும் [6] தன்னுடன் அழைத்துக் கொண்டு சொர்க்கத்திற்குச் சென்றான்.ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {ராமனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மன்னன் பகீரதன்! – துரோண பர்வம் பகுதி – 060-பகீரதனின் கதையைச் சொன்ன நாரதர்; கங்கையை மகளாய் அடைந்த பகீரதன்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, மன்னன் பகீரதனும் இறந்ததாகவே நாம் கேட்டிருக்கிறோம். கங்கையின் கரைகளைத் தங்கத்தால் ஆன படித்துறைகளால் மறைத்து, அவற்றைத் தன் பெயரால் “பாகீரதம்” [1] என்று அழைக்கச் செய்தான்.மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரையும் விஞ்சிய அவன் {பகீரதன்}, தங்க அபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஆயிரம் {1000} காரிகையரை பிராமணர்களுக்கு ஆயிரம் முறை தானமளித்தான். அந்தக் காரிகையர் அனைவரும் தேர்களில் இருந்தனர். ஒவ்வொரு தேரிலும் நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு தேருக்குப் பின்பும் நூறு {100} பசுக்கள் இருந்தன. ஒவ்வொரு பசுவுக்கு பின்பும் (பல) செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் இருந்தன.

மன்னன் பகீரதன், தன் வேள்விகளில் அபரிமிதமான பரிசுகளைக் கொடுத்தான். அந்தக் காரணத்துக்காகவே பெரும் மனிதக் கூட்டம் அங்கே கூடியது. இதனால் பீடிக்கப்பட்ட கங்கை வலியை மிகுதியாக உணர்ந்து, “என்னைக் காப்பாயாக” என்று சொல்லி அவனது {பகீரதனின்} மடியில் அமர்ந்தாள். பழங்காலத்தில் இப்படிக் கங்கை அவனது மடியில் அமர்ந்ததால், எப்படித் தெய்வீக நர்த்தகி ஊர்வசி அவனது மகளாக அறியப்பட்டாளோ, அதே போல அவளும் {கங்கையும்} அவனது {பகீரதனது} பெயரால் {பாகீரதி என்று} அழைக்கப்பட்டாள். மன்னனின் மகளான அவள் {கங்கை}, (ஒரு மகனைப் போல அவனது மூதாதையருக்கு முக்தி அளித்ததன் விளைவாக) அவனது மகனாகவும் [2] ஆனாள்.இனிமையான பேச்சும், தெய்வீக ஒளியும் கொண்ட கந்தர்வர்கள் மனம்நிறைந்து போய், முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகியோர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இவை யாவையும் பாடினர். இப்படியே, ஓ! சிருஞ்சயா, பெருங்கடலை அடையும் கங்கா தேவி, (பிராமணர்களுக்கு) அபரிமிதமான பரிசுகளுடன் வேள்விகளை நடத்தியவனும், இக்ஷ்வாகுவின் வழித்தோன்றலுமான தலைவன் பகீரதனைத் தன் தந்தையாகத் தேர்ந்தெடுத்தாள்.

அவனது வேள்விகள் எப்போதும் இந்திரனின் தலைமையான தேவர்களால் (அவர்களின் இருப்பால்) அருளப்பட்டிருந்தன. தேவர்கள், அந்த வேள்விகளுக்கு உதவும் பொருட்டுத் தடைகள் அனைத்தையும் அகற்றித் தங்களுக்குரிய பங்குகளைப் பெற்றுக் கொண்டனர்.

பெரும் தவத்தகுதியைக் கொண்ட பகீரதன், பிராமணர்கள் விரும்பிய நன்மைகளை, அவர்களை அசையவிடாமல், அவர்கள் எங்கிருந்து கேட்டனரோ அங்கேயே கொடுத்தான். பிராமணர்களுக்குக் கொடுக்கமுடியாதது என அவனிடம் ஏதும் இருக்கவில்லை. அனைவரும் தாங்கள் ஆசைப்பட்ட அனைத்தையும் அவனிடம் பெற்றுக் கொண்டனர்.

இறுதியாக அந்த மன்னன் {பகீரதன்}, பிராமணர்களின் அருள் மூலமாகப் பிரம்ம லோகத்திற்கு உயர்ந்தான். சூரியனின் கதிர்களிலேயே வாழ்ந்த முனிவர்கள் எந்நோக்கத்திற்காகச் சூரியனிடமும், சூரியனின் அதிதேவதையிடமும் {பணிவிடை செய்யக்} காத்திருந்தனரோ, அதே நோக்கத்திற்காக மூவுலகங்களின் ரத்தினமான தலைவன் பகீரதனுக்காகவும் அவர்கள் காத்திருந்தனர் [3].ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கும்} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {பகீரதனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மன்னன் திலீபன்! – துரோண பர்வம் பகுதி – 061-மன்னன் திலீபனின் கதையைச் சொன்ன நாரதர்; திலீபனின் பெருமை; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, ஹபிலனின் {Havila or Hvala} மகனான திலீபனும் [1] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அவனது {திலீபனின்} நூற்றுக்கணக்கான வேள்விகளில், உண்மை அறிவை உறுதியாகக் கொண்டவர்களும், வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்புள்ளவர்களும், குழந்தைகளாலும், பிள்ளைகளின் குழந்தைகளாலும் அருளப்பட்டவர்களுமான பிராமணர்கள் எண்ணிக்கையில் ஆயிரமாயிரமாக இருந்தனர்.

பல்வேறு வேள்விகளைச் செய்த மன்னன் திலீபன், புதையல்களால் {செல்வங்களால்} நிறைந்த இந்தப் பூமியைப் பிராமணர்களுக்குத் தானமளித்தான். திலீபனின் வேள்விகளில் அமைக்கப்பட்ட சாலைகள் அனைத்தும் தங்கத்தாலானவையாக இருந்தன [2]. இந்திரனின் தலைமையிலான தேவர்களே கூட, அவனையே {திலீபனையே} தர்மனாகக் கருதி அவனிடம் வந்தனர். அவனது {திலீபனது} வேள்விக்கம்புகளின் மேல் மற்றும் கீழ் வளையங்கள் {யூபத்தின் சஷாலம் ப்ரஷாலம் என்ற இரண்டு வளையங்களும்} தங்கத்தாலானவையாக இருந்தன. அவனது வேள்விகளில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் பிற உணவுகளை {ரகக் காண்டவங்களை Raga-Khandavas} உண்ட பலர் சாலையில் படுத்துக் கிடந்தனர் [3].திலீபன் நீரில் போரிடும்போது, அவனது தேர்ச்சக்கரங்கள் இரண்டும் எப்போதும் நீரில் மூழ்கியதில்லை. இது மிக ஆச்சரியமானதாகவும் வேறு எந்த மன்னர்களுக்கும் நேராததாகவும் இருந்தது. உறுதிமிக்க வில்லாளியும், எப்போதும் உண்மை பேசுபவனும், தன் வேள்விகளில் அபரிமிதமான பரிசுகளைத் தானமளிப்பவனுமான மன்னன் திலீபனை எவரும் கண்டாலே கூட, அவர்கள் சொர்க்கத்திற்கு உயர்வதில் வென்றனர் {சொர்க்கத்தையே அடைந்தனர்}. கட்வாங்கன் {Khattanga or Khattwanga என்றும் அழைக்கப்பட்ட திலீபனின் வசிப்பிடத்தில், “வேதம் ஓதும் ஒலி, விற்களின் நாணொலி, குடிப்பீர், மகிழ்வீர், உண்பீர்” என்ற இந்த ஐந்து ஒலிகள் எப்போதும் கேட்டுக் கொண்டே இருந்தன.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {திலீபனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மன்னன் மாந்தாதா! – துரோண பர்வம் பகுதி – 062-மன்னன் மாந்தாதாவின் கதையைச் சொன்ன நாரதர்; மாந்தாதா பிறந்த விதம்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, யுவனாஸ்வன் மகனான மாந்தாதாவும் [1] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அந்த மன்னன் தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் வீழ்த்தியவனாவான். தேவர்களான அசுவினி இரட்டையர்கள், அவனை {மாந்தாதாவை} அவனது தந்தையின் {யுவனாஸ்வனின்} கருவறையில் இருந்து அறுவை சிகிச்சையின் மூலம் வெளியே எடுத்தனர்.-ஒரு சமயம் மன்னன் யுவனாஸ்வன், காட்டில் மானைத் துரத்திச் சென்ற போது, மிகவும் தாகமடைந்தான், அவனது குதிரைகளும் மிகவும் களைத்துப் போயிருந்தன. {தூரத்தில்} புகைச்சுருளைக் கண்ட அம்மன்னன் {யுவனாஸ்வன்}, (அதனைப் பின்பற்றி) ஒரு வேள்விசாலையை அடைந்து, அங்கே சிதறிக் கிடந்த புனிதமான வேள்வி நெய்யைக் குடித்தான் [2]. (இதனால் அந்த மன்னன் கருவுற்றான்). குழந்தையைக் கொண்டிருக்கும் அந்த மன்னன் யுவனாஸ்வனைக் கண்டு, தேவர்களில் சிறந்த மருத்துவர்களான அசுவினி இரட்டையர்கள்,  அவனது கருவறையில் இருந்து அந்தக் குழந்தையை வெளிக்கொணர்ந்தனர்.-தன் தந்தையின் {யுவனாஸ்வனின்} மடியில் தெய்வீகப் பிரகாசத்துடன் இருந்த அந்தக் குழந்தையை {மாந்தாதாவைக்} கண்ட தேவர்கள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர், “இந்தக் குழந்தை எதனால் {எதை உண்டு} வாழும்?” என்று வினவினர். அப்போது வாசவன் {இந்திரன்}, “குழந்தை என் விரல்களை உறிஞ்சட்டும்” என்றான். அதன் பேரில், அமுதம் போன்ற இனிமையான பாலை இந்திரனின் விரல்கள் சுரந்தன. இந்திரன் தன் கருணையால், “இவன், தன் பலத்தை என்னிடமே பெற்றுக் கொள்வான்” என்று சொல்லி அவனிடம் {மந்தாதாவிடம்} அன்பு கொண்டதால் தேவர்கள் அந்தக் குழந்தைக்கு மாந்தாதா என்று பெயரிட்டனர் [3]. பிறகு, உயர் ஆன்ம இந்திரனின் கரங்களில் இருந்து யுவனாஸ்வன் மகனுடைய {மந்தாதாவினுடைய} வாயில் தாரை தாரையாகப் பாலும், தெளிந்த நெய்யும் கொட்டின.அந்தச் சிறுவன் {மாந்தாதா}, இந்திரனின் கரத்தைத் தொடர்ச்சியாக உறிஞ்சி, அதன் மூலமே வளர்ந்தான். பனிரெண்டு {12} நாட்களிலேயே அவன் {மந்தாதா} பனிரெண்டு {12} முழ உயரத்தையும், பெரும் ஆற்றலையும் அடைந்தான் [4]. அவன் முழு உலகத்தையும் ஒரே நாளில் வென்றான். அறம் சார்ந்த ஆன்மாவும், பெரும் புத்திக்கூர்மையும் கொண்டு, வீரனாகவும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும், தன் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவனுமாக இருந்த அந்த மாந்தாதா, தன் வில்லைக் கொண்டு, ஜனமேஜயன், சூதன்வான், ஜயன் {கயன்}, சுனன் {பூரு} [5], பிருஹத்ரதன், நிருகன் ஆகியோரை வென்றான். சூரியன் உதிக்கும் மலைக்கும் {உதய மலைக்கும்}, அவன் {சூரியன்} மறையும் மலைக்கும் {அஸ்த மலைக்கும்} இடையில் கிடக்கும் நிலம் மாந்தாதாவின் ஆட்சிப்பகுதி {மாந்தாதாக்ஷேத்ரம்} என்றே இந்நாள் வரை அறியப்படுகிறது.நூறு குதிரை வேள்விகளையும், நூறு ராஜசூய வேள்விகளையும் செய்த அவன் {மாந்தாதா}, ஓ! ஏகாதிபதி {சிருஞ்சயா}, பத்து யோஜனை நீளமும், ஒரு யோஜனை அகலமும் உள்ள தங்கத்தாலான ரோகித மீன்களைக் பிராமணர்களுக்குத் தானமளித்தான் [6]. பிராமணர்களை உபசரித்த பிறகு, (அவனது வேள்விகளுக்கு வந்த) பிறர், சுவையான உணவு மற்றும் பல வகைத் தின்பண்டங்களாலான மலைகளை உண்டு, மேலும் {தங்களுக்குக் கிடைத்த} பங்களிப்புகளாலும் மனம் நிறைந்தனர். பெரும் அளவிலான உணவு, தின்பண்டங்கள், பானங்கள் ஆகியவையும், அரிசிகளாலான {சோற்று} மலைகளும் பார்ப்பதற்கு அழகாகத் தெரிந்தன. தெளிந்த நெய்யைத் தடாகங்களாகவும், பல்வேறு வகைகளிலான ரசங்களைத் தங்கள் சேறாகவும், தயிரைத் தங்கள் நுரையாகவும், பாயசங்களைத் தங்கள் நீராகவும் கொண்டு அழகாகத் தெரிந்த பல {பான} ஆறுகள், தேனையும் பாலையும் வீசிக்கொண்டு, உணவுப் பொருள்களாலான திடமான மலைகளைச் சுற்றி வளைத்தன.

தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், பாம்புகள் மற்றும் பறவைகளும், வேதங்களையும் அவற்றின் கிளைகளையும் {அங்கங்களையும்} அறிந்த பிராமணர்கள் பலரும், முனிவர்கள் பலரும் அவனது {மாந்தாதாவின்} வேள்விக்கு வந்தனர். அங்கே இருந்தவருள் கற்றறியாதவர்களாக எவரும் இல்லை. ஆழி சூழ் உலகையும் {கடல்களால் சூழப்பட்ட உலகத்தையும்}, செல்வங்கள் அனைத்தையும் பிராமணர்களுக்கு அளித்த மன்னன் மாந்தாதா, இறுதியாகத் திசைப்புள்ளிகள் அனைத்தையும் தன் புகழால் நிறைத்தபடி, அறவோர் உலகங்களை அடைந்து, சூரியனைப் போல மறைந்து போனான்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {மாந்தாதாவே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மன்னன் யயாதி! – துரோண பர்வம் பகுதி – 063-மன்னன் யயாதின் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; ஆசைகளைத் துறந்த யயாதி காட்டுக்குச் சென்றது; அவனது மரணம்

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, நகுஷனின் மகனான யயாதியும் [1] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். நூறு ராஜசூயங்களையும், நூறு குதிரை வேள்விகளையும், ஆயிரம் பௌண்டரீகங்களையும், நூறு வாஜபேயங்களையும், ஆயிரம் அதிராத்திரங்களையும், எண்ணிலடங்கா சாதுர்மாஸ்யங்களையும், பல்வேறு அக்நிஷ்டோமங்களையும், இன்னும் பலவித வேள்விகள் பிறவற்றையும் அவன் செய்தான். அவை அனைத்திலும் பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளைக் கொடுத்தான்.மிலேச்சர்கள், பிராமணர்களை வெறுப்போர் ஆகியோரிடம் பூமியில் நிலைத்திருந்த செல்வங்கள் அனைத்தையும் முதலில் எண்ணிப் பார்த்த அவன் {யயாதி}, {அவற்றைக் கவர்ந்து} பிராமணர்களுக்கு அவற்றைத் தானமாகக் கொடுத்தான். தேவர்களும் அசுரர்களும் போருக்காக அணிவகுத்த போது, மன்னன் யயாதி தேவர்களுக்கு உதவி செய்தான்.

பூமியை நான்கு பகுதிகளாகப் பிரித்த அவன் {யயாதி}, அவற்றை நான்கு மனிதர்களுக்குத் தானமளித்தான். பல்வேறு வேள்விகளைச் செய்து, (தன் மனைவியரான) உசனஸின் {சுக்கிரனின்} மகளான தேவயானியிடமும், சர்மிஷ்டையிடமும் சிறந்த வாரிசுகளைப் பெற்றவனும், தேவனைப் போன்றவனுமான மன்னன் யயாதி, தெய்வீகச் சோலைகளில் இரண்டாவது வாசவனை {இந்திரனைப்} போலத் தன் விருப்பப்படித் திரிந்தான்.

வேதங்கள் அனைத்தையும் அறிந்த அவன் {யயாதி}, ஆசைகளில் ஈடுபட்டாலும் கூட நிறைவடையாத நிலையைக் கண்டு, தன் மனைவியரிடம், “இந்தப் பூமியில் நெல், கோதுமை {தானியம்}, தங்கம், விலங்குகள், பெண்கள் ஆகியவை எவ்வளவு உண்டோ, அவ்வளவும் கூட {எதுவும்} ஒரு மனிதனுக்குப் போதுமானதாக இருக்காது {நிறைவைத் தராது}. இதையெண்ணும் ஒருவன், மனநிறைவை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று சொல்லிக் காட்டுக்குச் சென்றான். இப்படியே தன் விருப்பங்கள் அனைத்தையும் துறந்து மனநிறைவை அடைந்த தலைவன் யயாதி, (தன் மகனை {பூருவை}), அரியாசனத்தில் நிறுவிவிட்டுக் காட்டுச் சென்றான்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {யயாதியே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மன்னன் அம்பரீஷன்! – துரோண பர்வம் பகுதி – 064-மன்னன் அம்பரீஷன் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த போர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…

நாரதர் {சஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, நாபாகனின் மகனான அம்பரீஷனும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அவன் {அம்பரீஷன்} தனி ஒருவனாகவே ஆயிரம் மன்னர்களுடன் ஆயிரம் முறை போரிட்டிருக்கிறான். வெற்றியை விரும்பியவர்களும், ஆயுதங்களை அறிந்தவர்களுமான அந்த எதிரிகள், கடுஞ்சொற்களைக் கூறிக்கொண்டு அனைத்துப் புறங்களில் இருந்தும் அவனை {அம்பரீஷனை} எதிர்த்துப் போருக்கு விரைந்தனர்.

அவன் {அம்பரீஷன்}, தன் பலம், சுறுசுறுப்பு, பயிற்சியின் மூலம் தான் அடைந்த திறம் ஆகியவற்றின் துணையாலும், தன் ஆயுதங்களின் சக்தியாலும், அந்த எதிரிகளின் குடைகள், ஆயுதங்கள், கொடிமரங்கள், தேர்கள், வேல்கள் ஆகியவற்றை வெட்டித் தன் துயரைக் களைந்து கொண்டான். தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பிய அம்மனிதர்கள் {அந்த எதிரிகள்}, தங்கள் கவசங்களைக் களைந்து, (கருணைக்காக) அவனை {அம்பரீஷனை} வேண்டிக் கொண்டனர். “எங்களை நாங்கள் உம்மிடம் அளிக்கிறோம் {சரணடைகிறோம்}” என்று சொல்லி அவர்கள் அவனது பாதுகாப்பை வேண்டினர்.

அவர்களை அடக்கி, முழு உலகத்தையும் வென்ற அவன் {அம்பரீஷன்}, ஓ! பாவமற்றவனே {சிருஞ்சயா}, சிறந்த வகையிலான நூறு வேள்விகளைச் சாத்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளின்படி செய்தான். (அவ்வேள்விகளில்) அனைத்து வகையிலும் இனிமையான தரம் கொண்ட உணவுவகைகள், பெரும் எண்ணிக்கையிலான மக்களால் உண்ணப்பட்டது. அவ்வேள்விகளில், பிராமணர்கள் மரியாதையுடன் வழிபடப்பட்டு, பெரிதும் நிறைவு செய்யப்பட்டனர். இன்பண்டங்கள் {மோதகங்கள்}, பூரிகள், அப்பளங்கள், சுவைமிகுந்த பெரிய முறுக்குகள், தேன்குழல்கள், மாக்கலந்த தயிர்ப்பச்சடிகள், பல்வேறு ருசியுள்ள தின்பண்டங்கள், பல்வேறு வகைகளிலான ரசங்கள், பல்வேறு தானியங்கள் கலந்த சோறு, சர்க்கரைப் பொங்கல், நன்கு தயாரிக்கப்பட்ட வாசனைமிகுந்த மென்மையான பணியாரங்கள், தெளிந்த நெய், தேன், பால், நீர், இனிய மோர், இனிமையான சுவை கொண்ட கனிகள் மற்றும் கிழங்குகள் ஆகியவற்றை மறுபிறப்பாள {பிராமண} வர்க்கத்தினர் உண்டனர்.

மேலும் மது பழக்கம் கொண்டவர்கள், இன்பமடையவேண்டி பல்வேறு வகைகளில் தயாரிக்கப்பட்டிருந்த போதையூட்டும் பானங்களை அதற்குரிய நேரத்தில் குடித்துத் தங்கள் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு பாடினர். தாங்கள் குடித்தவற்றால் அதீதமாகப் போதையுண்ட சிலரைத் தவிர ஆடிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் அம்பரீஷனைப் புகழ்ந்து பாடிக் கொண்டுமிருந்தனர். அதேவேளையில் பிறரோ {அதீத போதையுண்டவர்கள்}, தங்களை நிலையாக நிறுத்திக் கொள்ள முடியாமல் பூமியில் விழுந்தனர் [1].அவ்வேள்விகளில் மன்னன் அம்பரீஷன், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மன்னர்களின் நாடுகளை (தன்னால் வேள்விகளில் நியமிக்கப்பட்டிருந்த) நூறு லட்சம் {10 Million – 10,000,000} புரோகிதர்களுக்குத் தானமளித்தான். பல்வேறு வகையான வேள்விகளைச் செய்து முடித்த அந்த மன்னன் {அம்பரீஷன்}, புனித நீராடிய மணிமுடி கொண்டவர்களும், தங்கக் கவசமணிந்திருந்தவர்களும், தங்கள் தலைக்குமேலே வெண்குடை கொண்டவர்களும், தங்கத் தேரில் அமர்ந்திருந்தவர்களும், அற்புத ஆடைகள் அணிந்திருந்தவர்களும், தொண்டர்கள் பலரைக் கொண்டவர்களும், செங்கோலைக் கொண்டவர்களும், பொக்கிஷங்களையுடையவர்களுமான பெரும் எண்ணிக்கையிலான இளவரசர்களையும், மன்னர்களையும் பிராமணர்களுக்குத் தானமாக அளித்தான்.

அவன் செய்ததைக் கண்டப் பெரும் முனிவர்கள் மிகவும் மகிழ்ந்து, “தாராளக் கொடை தரும் மன்னன் அம்பரீஷன் இப்போது செய்வதைப் போல, கடந்த காலத்து மனிதர்களில் எவரும் செய்ததில்லை, எதிர்காலத்திலும் எவராலும் செய்ய முடியாது” என்றனர்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {அம்பரீஷனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மன்னன் சசபிந்து! – துரோண பர்வம் பகுதி – 065-மன்னன் சசபிந்துவின் கதையைச் சொன்ன நாரதர்; அவனுடைய மனைவிகளும், பிள்ளைகளும்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, மன்னன் சசபிந்துவும் {Sasavindu} [1] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். பெரும் அழகும், கலங்கடிக்கமுடியாத ஆற்றலும் கொண்ட அவன் {சசபிந்து}, பல்வேறு வேள்விகளைச் செய்தான். அந்த உயர் ஆன்ம ஏகாதிபதி {சசபிந்து} நூறாயிரம் {ஒரு லட்சம்- 100,000} மனைவியரைக் கொண்டிருந்தான். அந்த மனைவியர் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் {1000} மகன்கள் பிறந்தனர்.அந்த இளவரசர்கள் அனைவரும் பெரும் ஆற்றல் கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் கோடிக்கணக்கான வேள்விகளைச் செய்தனர். வேதங்களை அறிந்தோரான அம்மன்னர்கள் {சசபிந்துவின் பிள்ளைகள்} முதன்மையான வேள்விகள் பலவற்றைச் செய்தனர். (போர் நேரும் போதெல்லாம்) அவர்கள் அனைவரும் தங்கக் கவசங்களைப் பூண்டனர். அவர்கள் அனைவரும் சிறந்த வில்லாளிகளாகவும் இருந்தனர். சசபிந்துவுக்குப் பிறந்த இந்த இளவரசர்கள் அனைவரும் குதிரை வேள்விகளையும் செய்தனர்.

அவர்களது தந்தையான {சசபிந்து}, தான் செய்த குதிரை வேள்விகளில், தன் மகன்களான அவர்கள் அனைவரையும் (வேள்விக் கொடைகளாக) பிராமணர்களுக்குத் தானம் செய்தான். அந்த இளவரசர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னால் நூறு நூறாகத் தேர்களும், யானைகளும், தங்க ஆபரணங்கள் பூண்ட அழகிய கன்னிகையரும் இருந்தனர். ஒவ்வொரு கன்னிகையுடன் நூறு யானைகளும்; ஒவ்வொரு யானையுடன் நூறு தேர்களும், ஒவ்வொரு தேருடன் தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட நூறு குதிரைகளும் இருந்தன. அந்தக் குதிரைகள் ஒவ்வொன்றுடனும் ஆயிரம் பசுக்களும், ஒவ்வொரு பசுவுடன் ஐம்பது ஆடுகளும் இருந்தன.

உயர்வாக அருளப்பட்டிருந்த சசபிந்து, அந்தப் பெரும் குதிரை வேள்வியில் தன் அளவிலா செல்வங்களைப் பிராமணர்களுக்குத் தானமளித்தான். அவனுடைய பிற குதிரை வேள்விகளில், மரத்தினால் எவ்வளவு வேள்விக்கம்புகள் {யூபஸ்தம்பங்கள்} இருந்தனவோ, அவற்றை விட எண்ணிக்கையில் இரண்டு மடங்கு அதிகமாக, தங்கத்தாலான வேள்விக்கம்புகளை அந்தப் பெரும் குதிரை வேள்வியில் ஊன்றச் செய்தான். இரண்டு மைல்கள் உயரத்திற்கு உணவுகளாலும், பானகங்களாலும் ஆன மலைகள் அங்கே இருந்தன. அவனது குதிரை வேள்வி முடிந்த போது, உணவாலும், பானகங்களாலும் ஆன அது போன்ற பதிமூன்று மலைகள் (கைப்படாமல்) மிஞ்சின [2]. அவனது நாடு, நன்கு உண்டு, மனநிறைவுடன் இருந்த மக்களால் நிறைந்திருந்தது. அது {அந்த நாடு} தீமையான அத்துமீறல்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டிருந்தது, மக்களும் முற்றான மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். {தன் நாட்டைப்} பல நீண்ட வருடங்களுக்கு ஆட்சி செய்த சசபிந்து, இறுதியாகச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {சசபிந்துவே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மன்னன் கயன்! – துரோண பர்வம் பகுதி – 066-மன்னன் கயனின் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, அமார்த்தரயசின் {Amartarayas} [1] மகன் கயனும் [2] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அந்த மன்னன் {கயன்}, வேள்வி நெருப்பில் காணிக்கையாக ஊற்றப்படும் தெளிந்த நெய்யில் எஞ்சுவதைத் தவிர வேறு எதையும் நூறு ஆண்டுகள் உண்ணாதிருந்தான். (அவனது பெரும் அர்ப்பணிப்பின் சான்றால் மனம் நிறைந்த) அக்னி அவனுக்கு ஒரு வரத்தை அளிக்க முன்வந்தான்.கயன், “தவத்துறவுகளாலும், பிரம்மச்சரியம் பயில்வதன் மூலமும், நோன்புகள், விதிகள் மற்றும் எனக்கு மேன்மையானவர்களின் அருளின் மூலமும் வேதங்களைக் குறித்த முற்றான அறிவை நான் அடைய விரும்புகிறேன் [3]. என் வகைக்குரிய {க்ஷத்திரியக்} கடமைகளைச் செய்து, பிறருக்கு எந்தத் தீங்கையும் செய்யாமல் வற்றாத செல்வத்தை அடைய விரும்புகிறேன். பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புடன் எப்போதும் பரிசளிக்கவும் விரும்புகிறேன். என் வகையைச் சேர்ந்த {க்ஷத்திரிய} மனைவியரிடமே நான் மகன்களைப் பெற வேண்டுமே அன்றி வேறெவரிடமும் வேண்டாம். அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} உணவைத் தானமளிக்க என்னால் இயல வேண்டும். என் இதயம் எப்போதும் அறத்திலேயே {நீதியிலேயே} மகிழ்வடைய வேண்டும். ஓ! உயர்வான தூய்மையாளனே (அக்னியே), அறத்தகுதியை {புண்ணியங்களை} ஈட்ட நான் செயல்களில் ஈடுபடும்போது எந்த இடையூறும் என்னை அணுகாதிருக்கட்டும்” என்று கேட்டான் {கயன்}. “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன அக்னி அங்கேயே அப்போதே மறைந்தான்.தான் கேட்ட அனைத்தையும் அடைந்த கயன், நியாயமான போரில் தன் எதிரிகளை அடக்கினான். பிறகு மன்னன் கயன், முழுமையாக நூறு வருடங்களுக்கு, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளுடனும், சாதுர்மாஸ்யங்கள் என்று அழைக்கப்படும் நோன்புகளுடனும் இன்னும் பிறவற்றுடனும் பல்வேறு வகைகளிளான வேள்விகளைச் செய்தான்.

ஒரு நூற்றாண்டில் ஒவ்வொரு வருடமும், அந்த மன்னன் {கயன்} (தன் வேள்விகளின் முடிவில்) எழுந்து (பிராமணர்களுக்கு) நூற்று அறுபதாயிரம் {1,60,000 ஒரு லட்சத்து அறுபதாயிரம்} பசுக்களையும், பத்தாயிரம் குதிரைகளையும், ஒரு கோடி தங்கத்தையும் (நிஷ்கங்களையும்) கொடுத்தான். ஒவ்வொரு நட்சத்திரத்தின் போதும் அவன் {கயன்} அந்தச் சந்தர்ப்பத்திற்கு விதிக்கப்பட்ட பரிசுகளைத் தானமளித்தான். உண்மையில் அந்த மன்னன் {கயன்} மற்றொரு சோமனைப் போலவோ, மற்றுமொரு அங்கீரசைப் போலவோ பல்வேறு வேள்விகளைச் செய்தான்.

மன்னன் கயன், அவனது பெரும் குதிரை வேள்வியில் ஒரு தங்கப் பூமியை உண்டாக்கி அவளை {அந்தப் பூமியைப்} பிராமணர்களுக்குத் தானமளித்தான். அவ்வேள்வியில் மன்னன் கயனின் வேள்விக்கம்புகள் {யூபஸ்தூபங்கள்} அனைத்தும் தங்கத்தாலானவையாக, மிகுந்த விலைமதிப்புள்ளனவையாக, அனைத்து உயிர்களுக்கும் இன்பமளிக்கும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையாக இருந்தன. அனைத்து ஆசைகளையும் கொல்ல {அழிக்க} இயன்ற கயன், மனம் நிறைந்திருந்த பிராமணர்களுக்கும், பிற மக்களுக்கும் அந்த வேள்விக்கம்புகளை {யூபஸ்தம்பங்களைக்} கொடுத்தான்.

பெருங்கடல், காடுகள், தீவுகள், ஆறுகள், நீர்நிலைகள், நகரங்கள், மாகாணங்கள், சொர்க்கம் ஆகியவற்றில் வசித்த ஆண் மற்றும் பெண் உயிரினங்களில் பல்வேறு வர்க்கங்களைச் சார்ந்தவர் அனைவரும் கயனின் வேள்விகளில் விநியோகிக்கப்பட்ட செல்வத்தாலும் உணவாலும் மிகவும் மனம்நிறைந்தனர். அவர்கள் அனைவரும், “கயனின் இந்த வேள்வியைப் போல வேறு எந்த வேள்வியும் கிடையாது” என்றனர். கயனின் வேள்விப்பீடமானது முப்பது யோஜனைகள் நீளமும், இருபத்தாறு யோஜனைகள் அகலமும், இருபது யோஜனைகள் உயரமும் கொண்டதாக இருந்தது. மேலும் அது முற்றிலும் தங்கத்தாலானதாகவும், முத்துகள், வைரங்கள் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தது. அவன் {கயன்} இந்த வேள்விப்பீடத்தையும், ஆடைகளையும், ஆபரணங்களையும் பிராமணர்களுக்குத் தானமளித்தான்.

அந்த மகத்தான ஏகாதிபதி {கயன்} (சாத்திரங்களில்) சொல்லப்பட்டுள்ள பிறவகைப் பரிசுகளையும் பிராமணர்களுக்குத் தானமளித்தான். அந்த வேள்வியின் முடிவில், ஆடைகளையும், ஆபரணங்களையும் தவிர, இருபத்தைந்து உணவு மலைகளும், பல தடாகங்களும், சுவைமிக்கச் சாறுகள் கொண்ட பானகங்களால் அழகாகப் பாய்ந்து கொண்டிருந்த பல ஓடைகளும் தொடப்படாமல் எஞ்சின. அந்த வேள்வியின் புண்ணியத்தின் விளைவாக, மூவுலகிலும் கயன் நன்றாக அறியப்பட்டான். அந்த வேள்வியின் காரணமாகவே நித்தியமான ஆலமரமும், புனிதமான பிரம்மசரசும் இருக்கின்றன.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {கயனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மன்னன் ரந்திதேவன்! – துரோண பர்வம் பகுதி – 067-மன்னன் ரந்திதேவனின் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, சங்கிருதியின் [1] மகன் ரந்திதேவனும் [2] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அந்த உயர் ஆன்ம மன்னன் {ரந்திதேவன்}, தன் வீட்டுக்கு {அரண்மனைக்கு} விருந்தினர்களாக வரும் பிராமணர்களுக்கு, அமிர்தத்தைப் போன்ற சிறந்த உணவை இரவிலும், பகலிலும் பரிமாறுவதற்காக இருநூறாயிரம் {இரண்டு லட்சம் 2,00,000} சமையற்கலைஞர்களைக் கொண்டிருந்தான்.அந்த மன்னன் {ரந்திதேவன்}, நியாயமான வழிகளில் ஈட்டிய தன் செல்வத்தைப் பிராமணர்களுக்குத் தானமளித்தான். வேதங்களைக் கற்ற அவன், தன் எதிரிகளை நியாயமான போரின் மூலம் அடக்கினான். கடும் நோன்புகளை நோற்று, முறையான வேள்விகளைச் செய்வதில் எப்போதும் ஈடுபடும் அவனிடம் {ரந்திதேவனிடம்}, சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பும் எண்ணற்ற விலங்குகள் தானாக வந்து சேர்ந்தன [3]. அந்த மன்னனின் {ரந்திதேவனின்} அக்னிஹோத்ரத்தில் பலியிடப்படும் விலங்குகளின் பெரும் எண்ணிக்கையால், அவனது மடைப்பள்ளியில் {சமையலறையில்} தேக்கப்படும் தோற்குவியல்களில் இருந்து பாயும் சுரப்புகள் உண்மையான ஆறு ஒன்றையே உண்டாக்கிய காரணத்தால், அது {அந்த ஆறு} சர்மண்வதி என்று அழைக்கப்படலாயிற்று [4].“நான் உமக்கு நிஷ்கங்களைக் கொடுக்கிறேன்”, “நான் உமக்கு நிஷ்கங்களைக் கொடுக்கிறேன்” என்ற வார்த்தைகளையே அவன் இடையறாது உச்சரித்துக் கொண்டு, பிராமணர்களுக்குப் பிரகாசமான தங்கத்தாலான நிஷ்கங்களை {பொன் நாணயங்களை} இடையறாமல் தானமளித்துக் கொண்டிருந்தான். “நான் உமக்குக் கொடுக்கிறேன்”, “நான் உமக்குக் கொடுக்கிறேன்” என்ற இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே ஆயிரக்கணக்கான நிஷ்கங்களை அவன் தானமளித்தான். பிராமணர்களிடம் மென்மையான வார்த்தைகளைப் பேசும் அவன், மீண்டும் மீண்டும் நிஷ்கங்களைத் தானமளித்தான்.

ஒரே நாளில் இது போன்ற ஒரு கோடி நாணயங்களைத் தானமளித்த பிறகு, தான் மிகக் குறைவாகவே தானமளித்திருப்பதாக அவன் எண்ணினான். எனவே, மீண்டும் மீண்டும் அவன் தானமளித்துக் கொண்டிருந்தான். அவன் தானமளித்த அளவுக்குத் தானமளிக்க இயன்றவன் வேறு எவன் இருக்கிறான்? அந்த மன்னன் {ரந்திதேவன்}, “பிராமணர்களின் கைகளில் நான் செல்வத்தைக் கொடுக்கவில்லை என்றால் [5], நிலையான பெரும் துயரம் எனதாகும் என்பதில் ஐயமில்லை” என்று எண்ணியே செல்வத்தைத் தானமளித்தான்.-அவன் {ரந்திதேவன்}, நூறாண்டுகளில் ஒவ்வொரு அரைத்திங்களிலும் {பக்ஷத்திலும்}, ஆயிரம் பிராமணர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கக் காளையையும், அதைத் தொடர்ந்து நூறு பசுக்களையும், நிஷ்கங்களில் எண்ணூறு துண்டுகளையும் கொடுத்தான் [6]. அவனது அக்னிஹோத்ரத்திற்குத் தேவைப்பட்ட பொருட்கள் அனைத்தையும், அவனது பிற வேள்விகளுக்குத் தேவைப்பட்டவை அனைத்தையும், காருகங்கள் {கமண்டலங்கள்}, நீர்க்குடங்கள், தட்டுகள், படுக்கைகள், விரிப்புகள், வாகனங்கள், மாளிகைகள், வீடுகள், பல்வேறு விதங்களிலான மரங்கள், பல்வேறு விதங்களிலான உணவுப் பொருட்கள் உட்பட அனைத்தையும் அவன் {ரந்திதேவன்} முனிவர்களுக்குத் தானமளித்தான். ரந்திதேவன் கொண்டிருந்த உடைமைகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் தங்கத்தாலானவையாகவே இருந்தன.பழங்காலத்து வரலாறுகளை அறிந்தோர், மனிதசக்திக்கு அப்பாற்பட்ட ரந்திதேவனின் செல்வாக்கைக் கண்டு, “இப்படித் திரண்டிருக்கும் செல்வத்தை நாங்கள் குபேரனின் வசிப்பிடத்திலும் கண்டதில்லை எனும்போது, மனிதர்களைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?” என்ற பாடலைப் பாடினர். வியந்து போன மக்களும், “ரந்திதேவனின் நாடும் தங்கத்தாலானதுதான் ஐயமில்லை” என்று பேசிக் கொண்டனர் [7].ரந்திதேவனின் வசிப்பிடத்தில் விருந்தினர்கள் கூடியிருக்கும் அத்தகு இரவுகளில், (அவர்களுக்கு உணவிடுவதற்காக) இருபத்தோராயிரம் பசுக்கள் [8] பலியிடப்பட்டன. எனினும், குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அரச சமயற்கலைஞர்கள், “நீங்கள் விரும்பிய அளவுக்கு ரசத்தைப் பருகுங்கள், பிற நாட்களில் உள்ளதைப் போல இன்று இறைச்சி அதிகமில்லை” என்று சொல்ல வேண்டியிருந்தது.ரந்திதேவனுக்குச் சொந்தமாக எஞ்சியிருந்த தங்கத்தையும், தன் வேள்விகளில் ஒன்று நடந்து கொண்டிருந்த போது, அந்த எஞ்சியதையும் பிராமணர்களுக்குத் தானமளித்தான். நெருப்பில் காணிக்கையாகத் தெளிந்த நெய் ஊற்றப்படும்போது, அவன் {ரந்திதேவன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவற்றைத் தேவர்களும், சிராத்தங்களில் அளிக்கப்படும் உணவைப் பிதுர்களும் பெற்றுக் கொண்டனர். மேன்மையான பிராமணர்கள் அனைவரும் அவர்களது விருப்பங்கள் அனைத்தையும் {அவற்றால் நிறைவடையும் வழிகளை} அவனிடம் அடைந்தனர்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {ரந்திதேவனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மாமன்னன் பரதன்! – துரோண பர்வம் பகுதி – 068-துஷ்யந்தனின் மகனான மாமன்னன் பரதனின் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, துஷ்யந்தனின் [1] மகன் பரதனும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். குழந்தையாக அவன் {பரதன்} காட்டில் வாழும் போதே, பிறரால் செய்ய முடியாத சாதனைகளைச் செய்தான். பெரும் பலம் கொண்ட அவன் {பரதன்}, பனி போன்று வெள்ளையாகவும், பற்களையும், நகங்களையும் ஆயுதங்களாகக் கொண்டவையுமான சிங்கங்களின் ஆற்றலை இழக்கச் செய்து, அவற்றை இழுத்து வந்து (தன் விருப்பப்படி) கட்டிப்போட்டான். மேலும் அவன் {பரதன்}, (சிங்கங்களை விட) இரக்கமற்றவையும், மூர்க்கமானவையுமான புலிகளையும் அடக்கி, அவற்றைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.பெரும் வலிமைமிக்க இரைதேடும் பிற விலங்குகளையும், மனோசிலை {சிவப்பு ஈயம் [அ] அரிதாரம்} பூசப்பட்டு, பிற திரவக் கனிமங்களால் கறையேறிய பற்களுடனும், தந்தங்களுடனும் கூடிய பெரும் யானைகளையும் பிடித்து, அவற்றைத் தன் கட்டுக்குள் கொண்டுவந்து, அவற்றின் வாய்களை வறண்டு போகச்செய்தான், அல்லது அவற்றைப் புறமுதுகிட்டோடும்படி விரட்டினான். பெரும் வலிமை கொண்ட அவன் {பரதன்}, எருமைகளில் வலிமைமிக்க எருமைகளை இழுத்து வந்தான். தன் பலத்தின் விளைவால் அவன் {பரதன்}, செருக்குமிக்கச் சிங்கங்களையும், வலிமைமிக்கச் சிருமரங்களையும் {மான்களையும்}, கொம்பு படைத்த காண்டாமிருகங்களையும், இன்னும் பிற விலங்குகளையும் நூற்றுக்கணக்கில் அடக்கினான். அவற்றின் கழுத்தைக் கட்டி, கிட்டத்தட்ட அவை உயிரைவிடும் அளவுக்கு நசுக்கிய பிறகு, அவற்றை அவன் விட்டான் {விடுவித்தான்}. அவனது அந்தச் சாதனைகளுக்காகவே (அவனோடு வாழ்ந்த) மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் அவனைச் சர்வதமனன் (அனைத்தையும் கட்டுப்படுத்துவபன்) என்று அழைத்து வந்தனர். இறுதியில், அவன் அவ்வழியில் விலங்குகளுக்குக் கொடுமை செய்வதை அவனது தாய் {சகுந்தலை} தடுத்தாள்.

பெரும் ஆற்றலைக் கொண்ட அவன் {பரதன்}, யமுனையாற்றங்கரையில் நூறு குதிரை வேள்விகளைச் செய்தான், பிறகு, சரஸ்வதி ஆற்றங்கரையில் அது போன்ற முன்னூறும், கங்கை ஆற்றங்கரையில் நானூறும் {குதிரை வேள்விகளும்} செய்தான். இவ்வேள்விகளைச் செய்த பிறகு, அவன் {பரதன்}, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளை வழங்கி, மீண்டும் ஆயிரம் குதிரை வேள்விகளையும், நூறு ராஜசூயங்களையும், பெரும் வேள்விகளையும் செய்தான். மேலும், பிற வேள்விகளான அக்நிஷ்டோமம், அதிராத்ரம், உக்தியம், விஸ்வஜித் ஆகியவற்றையும், அவைகளுடன் ஆயிரமாயிரம் {பத்து லட்சம்} வாஜபேயங்களையும் எந்த இடையூறுமின்றிச் செய்து முடித்தான். இவை அனைத்தையும் செய்து முடித்த அந்தச் சகுந்தலையின் மகன் {பரதன்}, பிராமணர்களுக்குச் செல்வங்களைப் பரிசளித்து அவர்களை மனம்நிறையச் செய்தான்.

பெரும் புகழ் படைத்த அந்தப் பரதன், (தன் தாயான சகுந்தலையைத் தன் மகளாகவே வளர்த்த) கண்வருக்கு, மிகத் தூய்மையான {ஜம்பூநதம் என்ற} தங்கத்தாலான பத்து லட்சம் கோடி {பத்தாயிரம் பில்லியன் 10000,000,000,000} நாணயங்களைக் கொடுத்தான். இந்திரனின் தலைமையிலான தேவர்களும், பிராமணர்களும் அவனது வேள்விக்கு வந்து, நூறு வியாமங்கள் [2] அகலம் கொண்டதும் முற்றிலும் தங்கத்தாலானதுமான அவனது வேள்விக்கம்பை {யூபஸ்தம்பத்தை} நிறுவினர்.உன்னத ஆன்மா கொண்டவனும், எதிரிகள் அனைவரையும் வெல்பவனும், எதிரியால் வெல்லப்பட முடியாத ஏகாதிபதியும், பேரரசனுமான அந்தப் பரதன், அழகிய குதிரைகளையும், யானைகள், தேர்கள், தங்கத்தாலும், அனைத்து வகை அழகிய ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேர்கள், ஒட்டகங்கள், ஆடுகள், செம்மறியாடுகள், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள், செல்வங்கள், தானியங்கள், கன்றுகளுடன் கூடிய கறவை மாடுகள், கிராமங்கள், வயல்கள், பல்வேறு விதங்களிலான ஆடைகள் ஆகியவற்றையும், லட்சக் கணக்காகவும் கோடிக்கணக்காவும் பிராமணர்களுக்குத் தானமளித்தான்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {மாமன்னன் பரதனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

மாமன்னன் பிருது! – துரோண பர்வம் பகுதி – 069-வேனனின் மகனான மன்னன் பிருதுவின் கதையைச் சொன்ன நாரதர்; உழவற்ற புராதனச் சமுதாயம்; பிருது செய்த பெரும் குதிரை வேள்வி; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “ஓ! சிருஞ்சயா, வேனனின் மகனான மன்னன் பிருதுவும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அவன் செய்த ராஜசூய வேள்வியில், பெரும் முனிவர்கள் அவனை (உலகின்) பேரரசனாக நிறுவினார்கள். அவன் {பிருது} அனைவரையும் வீழ்த்தினான், அவனது சாதனைகள் (உலகமெங்கிலும்) அறியப்பட்டன. இதன் காரணமாக அவன் பிருது (கொண்டாடப்படுபவன்) என்று அழைக்கப்பட்டான். மனிதர்கள் அனைவரையும் காயங்கள் மற்றும் தீங்குகளில் இருந்து காத்ததனால், அவன் உண்மையான க்ஷத்திரியனானான் [1]. வேனனின் மகனான பிருதுவைக் கண்ட அவனது குடிகள் அனைவரும், “நாங்கள் இவனிடம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றனர். தன் குடிமக்களிடம் அவன் அடைந்த இந்தப் பாசத்தின் விளைவால் அவன் “ராஜா” என்று அழைக்கப்பட்டான் [2].பிருதுவின் காலத்தில், உழாமலே பூமியானது போதுமான பயிர்களை விளைவித்தது. மேலும் பசுக்கள் அனைத்தும், அவற்றைத் தொடும்போதெல்லாம் பாலைச் சுரந்தன. தாமரைகள் அனைத்தும் தேனால் நிரம்பியிருந்தன. குசப் புற்கள் {தர்ப்பை} அனைத்தும் தங்கத்தாலானவையாக, தீண்டுதற்கு இனிமையானவையாக, பின்னும் காண்பதற்கும் இனிமையானவையாக இருந்தன. பிருதுவின் குடிகள் அனைவரும் தங்கள் ஆடைகளையும், தாங்கள் கிடக்கும் படுக்கைகளையும் அந்தப் புற்களிலேயே உண்டாக்கினர் [3]. கனிகள் அனைத்தும் மென்மையானவையாகவும், இனிமையானவையாகவும், (சுவையில்) அமுதத்துக்கு நிகரானவையாகவும் இருந்தன. இவையனைத்தும் அவனது குடிகளின் உணவாகின. அவர்களில் யாரும் பட்டினியால் வாடவில்லை.பிருதுவின் காலத்தில் மனிதர்கள் அனைவரும் {உடல்} நலம் கொண்டவர்களாகவும், இதயம் மகிழ்ந்தவர்களாகவும் இருந்தனர். அவர்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றத்தில் மகுடம் சூடின {நிறைவேறின}. அவர்கள் அஞ்சுவதற்கு ஏதும் இருக்கவில்லை. மரங்களிலோ, குகைகளிலோ அவர்கள் விரும்பியபடியே வசித்தனர். அவனது {பிருதுவின்} ஆட்சிப்பகுதிகள் மாகாணங்களாகவும், நகரங்களாகவும் பிரிக்கப்படாமல் இருந்தன. மக்கள் தாங்கள் ஒவ்வொருவரும் விரும்பியபடி மகிழ்ச்சியாகவும், இன்பமாகவும் வாழ்ந்தனர்.

மன்னன் பிருது கடலுக்குச் சென்ற போது, அலைகள் {கல்லைப் போலத்} திடமாகின. மலைகளும், அவன் அவற்றைக் கடந்து செல்வதற்காகத் திறப்புகளை {வழிகளை} அளித்தன. அவனது தேரின் கொடி மரம் (எதனாலும் தடுக்கப்பட்டு) எப்போதும் உடைந்ததில்லை.

ஒரு சமயம், காட்டிலுள்ள உயர்ந்த மரங்கள், மலைகள், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், பாம்புகள், முனிவரெழுவர் {சப்தரிஷிகள்}, அப்சரசுகள், பிதுர்கள் ஆகியோர் அனைவரும் சேர்ந்து, சுகமாக வீற்றிருந்த பிருதுவிடம் வந்து, அவனிடம், “நீயே எங்கள் பேரரசன், நீயே எங்கள் மன்னன், நீயே எங்களைப் பாதுகாப்பவனும், தந்தையும் ஆவாய். நீயே எங்கள் தலைவன். எனவே, ஓ! பெரும் மன்னா {பிருதுவே}, மன நிறைவுடன் நாங்கள் எப்போதும் மகிழ்ந்திருக்கும்படி எங்கள் இதயங்கள் விரும்பும் வரங்களை அளிப்பாயாக” என்றனர். அவர்களிடம் வேனனின் மகனான பிருது, “அப்படியே ஆகட்டும்” என்றான் [4].

“குடிகளால் வேண்டப்பட்ட பலசாலியான பேரரசன் பிருது, தன் குடிகளுக்கு நன்மை செய்யக் கருதி வில்லையும், கணைகளையும் கையில் கொண்டு பூமியை நோக்கி ஓடி வந்தான். பிறகு பூமியானது அவனிடத்தில் உண்டான அச்சத்தால், ஒரு பசுவின் வடிவத்தைக் கொண்டு வேகமாக ஓடியது. 

பிருதுவோ, கையில் வில்லை எடுத்துக் கொண்டு பூமியைப் பின்தொடர்ந்து ஓடினான். பிரம்மலோகம் முதலான உலகங்களை அடைந்தும் விடாமல் விரட்டிய பிருதுவைக் கண்ட பூமி, பிருதுவிடமே சரண்டைந்து, அவனிடம், “மன்னா, இந்த அநீயை நீ செய்யத்தக்கவனல்ல. நானில்லாமல் உன் குடிகளை நீ எப்படிக் காக்கப் போகிறாய்?” என்று சொன்னாள். அதற்குப் பிருது, “ஒருவன் தனக்காகவோ, பிறனுக்காகவோ, ஒன்றையோ, பல உயிர்களையோ வாங்கினால் {கொன்றால்}, அதில் பாதகம் ஒன்றுமில்லை. பெண்ணே, எவன் கொல்லப்பட்டால் பலர் மகிழ்வுடன் செழிப்பார்களோ, அவன் கொல்லப்பட்டால் களங்கமில்லை. அவனைக் கொன்றவனால் பாவம் அனுபவிக்கப்பட மாட்டாது. நான் சொல்லும்படி நீ செய்யவில்லை என்றால், குடிகளைக் காப்பதற்காக நான் உன்னைக் கொல்வேன். நானே குடிகளைக்காத்துக் கொள்வேன். சிறந்தவளே, நீ சக்தியுடையவள் என்றால், என் நல்ல வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு எப்போதும் குடிகள் காப்பாற்றுவாயாக. எனக்கு மகளாக இருக்கும் நிலைமையையும் நீ அடைவாயாக. இப்படி நீ செய்வாயாகில் நான் இந்தப் பயங்கரக் கணையை விலக்கிக் கொள்வேன்” என்றான். 

பூதேவி, “ஓ! பகைவரைக் கொல்பவனே, பெரும் மன்னா, அனைத்தையும் செய்வேன். அன்புடைய நான், எந்தக் கன்றின் வழியாகப் பாலைப் பெருக்குவேனோ, அப்படிப்பட்ட கன்றை நீ பார்ப்பாயாக. ஓ! அனைத்தையும் அறிந்தவனே, எப்படி நான் என்னிடம் சுரக்கும் பாலை அனைத்து இடங்களுக்கும் பரவும்படி செய்வேனோ, அவ்வாறே என் தோற்றத்தையும் சமமாகச் செய்வாயாக” என்றாள். 

அப்போது பிருது நான்கு பக்கங்களிலும் கற்குவியல்களை விலக்கித் தள்ளினான். அதனால் மலைகள் உடைக்கப்பட்டன. ஓ! மன்னா {சிருஞ்சயா}, படைப்பின் தொடக்கத்தில் பூமண்டலம் மேடு பள்ளமாயிருக்கும் காலத்தில், நகரங்களும், கிராமங்களும் பிரிப்பு ஏற்படவில்லை. பயிர்கள், பசுகாத்தல், உழவு, வர்த்தகம் ஆகியவை இல்லை. அந்தப் பிருது ஆளும் காலத்திலேயே இவையனைத்தும் உண்டாகின. எந்த இடத்தில் பூமி சமமாகியதோ, அந்த இடத்தில் எல்லாம் குடிகள் தங்கள் முயற்சியினால் குடியிருப்புகளை அமைத்துக் கொள்ள விரும்பின. அதனால், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொன்ன பிருது அஜகவமெனும் வில்லையும், ஒப்பற்றவையும், கோரமுமான கணைகளையும் எடுத்து ஆலோசித்துபடி பூமியைப் பார்த்து, “பூமியே! இங்கு வா; இவைகளுக்கு {இந்த என் குடிகள்} விருப்பப்பட்ட பாலைச் சீக்கிரமாகக் கறப்பாயாக. என் கட்டளையை மீறி நடந்தால், உன்னை நான் என் கணைகளால் அழிப்பேன்” என்றான். 

பூதேவி, தன் நன்மையை ஆலோசித்து, “கன்றையும், பாத்திரங்களையும், பாலைகள் நீ கட்டளையிடுவாயாக. ஐயா, எவனுக்கு எது விருப்பமோ, அஃது அனைத்தையும் பிறகு நான் கொடுப்பேன். வீரனே, நான் உனக்கு மகளாக வேண்டும்” என்று சொன்னாள். பிருதுவும், “அவ்வாறே ஆகட்டும்” என்றான்”

பிறகு அஜகவம் [5] என்ற தன் வில்லை எடுத்த அவன் {பிருது}, அதுவரை இல்லாத பயங்கரமான சில கணைகளை எடுத்துக் கொண்டு ஒருக்கணம் சிந்தித்தான். பிறகு அவன் பூமியிடம், “ஓ! பூமியே, விரைவாக வந்து, இவர்கள் {இந்தக் குடிகள்} விரும்பும் பாலைத் தருவாயாக. அதன் மூலம் நான் அவர்கள் கேட்கும் உணவைக் கொடுப்பேன். நீ அருளப்பட்டிருப்பாயாக.” என்று சொன்னான். அவனால் இப்படிக் கேட்கப்பட்ட பூமி, “ஓ! வீரனே, நீ என்னை உனது மகளாகக் கருதுவதே தகும்” என்றாள். பிருது, “அப்படியே ஆகட்டும்” என்றான். பிறகு அந்தப் பெரும் தவசி {பிருது}, தன் ஆசைகளைக் கட்டுக்குள் கொண்டு, (பூமியைக் கறப்பதற்கு) அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான். (உயிரினங்களின் மொத்தக் கூட்டமும் பூமியைக் கறக்கத் தொடங்கின).

அனைத்திலும் முதலாக, காட்டில் உள்ள நெடும் மரங்கள் அவளைக் கறப்பதற்காக எழுந்தன. அப்போது, பூமி, ஒரு கன்றையும், கறப்பவனையும், (பாலைப் பிடிக்க) பாத்திரத்தையும் எதிர்பார்த்து முழுப் பாசத்துடன் நின்றாள். அப்போது, பூத்திருக்கும் ஆச்சா {சால} மரம் கன்றானது, ஆல {இறலி}மரம் கறப்பவரானது, பிளக்கும் மொட்டுகள் பாலானது, மங்கலமான அத்திமரம் பாத்திரமானது.

(அடுத்ததாக, மலைகள் அவளை {பூமியைக்} கறந்தன). சூரியன் உதிக்கும் கிழக்கு மலை {உதய மலை} கன்றானது; மலைகளின் இளவரசனான மேரு கறப்பவனானது; பல்வேறு ரத்தினங்களும், மூலிகைகளும் பாலாகின; கற்கள் {பாறைகள்} (அந்தப் பாலைத் தாங்கும்) பாத்திரங்களாகின.

அடுத்ததாக, தேவர்களில் ஒருவன் கறப்பவனானான். சக்தியையும், பலத்தையும் அளிக்கவல்ல அனைத்துப் பொருட்களும் ஆசைப்பட்ட பாலகின [6].

பிறகு, அசுரர்கள் பூமியைக் கறந்தனர். மதுவைத் தங்கள் பாலாகப் பெற்றனர். சுடப்படாத பானையைத் தங்கள் பாத்திரமாகப் பயன்படுத்தினர். அந்தச் செயல்பாட்டில் துவிமுர்தன் கறப்பவனானான். விரோசனன் கன்றானான் [7].மனிதர்கள், பூமியை உழவுக்காகவும் {வேளாண்மைக்காகவும்}, பயிர்களுக்காகவும் கறந்தனர். சுயம்புவான மனு அவர்களது கன்றானான், பிருதுவே கறப்பவனானான்.

அடுத்ததாகப் பாம்புகள் நஞ்சையே பாலாகப் பூமியிடம் கறந்தன. சுரைக்காயைப் பாத்திரமாகப் பயன்படுத்தின. திருதராஷ்டிரன் கறப்பவனாகவும், தக்ஷகன் கன்றாகவும் இருந்தான்.

தங்கள் ஆணையாலேயே [8] அனைத்தையும் உண்டாக்கவல்ல முனிவரெழுவர் {சப்தரிஷிகள்}, வேதங்களையே பாலாகப் பூமியிடம் கறந்தனர். பிருஹஸ்பதி கறப்பவனானான், சந்தஸ் பாத்திரமானது, சிறப்புமிக்கச் சோமன் கன்றானான்.யக்ஷர்கள் [9], தாங்கள் விரும்பும் போது காட்சியில் இருந்து மறையும் {அந்தர்த்தான} சக்தியை சுடப்படாத பானையில் பூமியிடம் இருந்து கறந்தனர். வைஸ்ரவணன் (குபேரன்) கறப்பவனானான், விருஷத்வஜன் அவர்களது கன்றான்.கந்தர்வர்களும், அப்சரசுகள் தாமரை இலையைப் பாத்திரமாகக் கொண்டு நறுமணத் திரவியங்கள் அனைத்தையும் கறந்தனர். சித்திரரதன் அவர்களது கன்றான், வலிமைமிக்க விஸ்வருசி கறப்பவனானான்.

பிதுர்கள், வெள்ளிப்பாத்திரத்தில் சுவாகாவைத் தங்கள் பாலாகக் கறந்தனர். விவஸ்வானின் {சூரியனின்} மகன் யமன் அவர்களது கன்றானான், (அழிப்பவனான) அந்தகனே கறப்பவனானான்.

இப்படி அந்த உயிரினங்களின் கூட்டங்கள், தாங்கள் ஒவ்வொருவரும் விரும்பிய பாலை பூமியிடம் கறந்தனர். அவர்களால் நியமிக்கப்பட்ட கன்றுகளும், பாத்திரங்களும் எப்போதும் தெரியும் வகையில், இந்நாள் வரை அப்படியே நீடிக்கின்றன.

வேனனின் மகனான வலிமைமிக்கப் பிருது, உயிரினங்கள் அனைத்தும் தங்கள் இதயங்களால் விரும்பிய பரிசுகளைக் கொடுத்து, அவற்றை மனம் நிறையச் செய்து, பல்வேறு வேள்விகளைச் செய்தான். பூமியில் மண்ணால் செய்யப்பட்ட அனைத்தையும் தங்கமாகச் செய்து, அவைகளை ஒரு பெரும் குதிரை வேள்வியில் பிராமணர்களுக்குத் தானமளித்தான். அந்த மன்னன் {பிருது} அறுபத்தாறாயிரம் யானைகளைத் தங்கத்தால் செய்து, அவை அனைத்தையும் பிராமணர்களுக்குத் தானமளித்தான். அந்த மன்னன் {பிருது}, மணிகள், ரத்தினங்கள், தங்கம் ஆகியவற்றால் இந்த முழுப் பூமியையும் அலங்கரித்து, அவளையும் பிராமணர்களுக்குத் தானமளித்தான்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {பிருதுவே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.

பரசுராமரும் இறப்பார்! – துரோண பர்வம் பகுதி – 070-ஜமதக்னியின் மகனான பரசுராமரின் கதையைச் சொன்ன நாரதர்; இருபத்தோரு முறை உலகை க்ஷத்திரியர்களற்றதாகச் செய்த பரசுராமர்; அவர் செய்த வேள்விகள்; அவர் அளித்த கொடைகள்; அவரும் இறப்பார் என்று சொன்ன நாரதர்…

நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், “வீரர்கள் அனைவராலும் வழிபடப்படும் வீரரும், பெரும் புகழைக் கொண்டவரும், ஜமதக்னியின் மகனும், பெரும் தவசியுமான ராமரும் {பரசுராமரும்} (தன் வாழ்நாள் காலத்தில்) மனநிறைவடையாமலே உயிரை இழக்கப் போகிறார். அவர் {பரசுராமர்}, பூமியில் உள்ள தீமைகள் அனைத்தையும் வேரோடு அழித்துவிட்டு, புராதன யுகத்தை {மீண்டும்} ஏற்படச் செய்தவராவார். நிகரற்ற செழிப்பை அடைந்த அவரிடம் எந்தக் களங்கமும் காணப்படவில்லை. க்ஷத்திரியர்களால் தன் தந்தை கொல்லப்பட்டு, தன் கன்று திருடப்பட்ட பிறகு, அதுவரை எந்த எதிரியிடமும் தோற்காத கார்த்தவீரியனை எந்தத் தற்புகழ்ச்சியும் செய்யாமல் கொன்றார்.

ஏற்கனவே மரணத்தின் கோரப்பற்களுக்கிடையில் இருந்த ஆறு லட்சத்து நாற்பதாயிரம் {6,40,000} க்ஷத்திரியர்களைத் தன் வில்லால் கொன்றார். அந்தப் படுகொலையில், பிராமணர்களை வெறுப்பவர்களான தந்தகூர நாட்டைச் சேர்ந்த பதினாலாயிரம் க்ஷத்திரியர்களைக் கொன்றார். உலக்கையினால் ஆயிரம் பேரையும், வாளால் ஆயிரம் பேரையும், தூக்கிட்டு {மரத்தில் சுருக்கிட்டு} ஆயிரம் பேரையும் கொன்றார் [1].

விவேகியான ஜமதக்னி மகன் {பரசுராமர்}, தன் தந்தையின் படுகொலையைக் கண்டு சினம் கொண்டதால், தங்கள் தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளுடன் கூடிய வீரமிக்கப் போர்வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டுக் கிடந்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் ராமர் {பரசுராமர்}, பத்தாயிரம் {10000} க்ஷத்திரியர்களைத் தன் கோடரியால் கொன்றார். (தன் எதிரிகள்) பேசிய மூர்க்கமான பேச்சுகளை அவரால் அமைதியாகத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பிராமணர்களில் முதன்மையானோரில் பலர், எப்போதெல்லாம் பிருகு குலத்தின் ராமர் பெயரைச் சொல்லித் துன்பக் குரலை எழுப்பினரோ, அப்போதெல்லாம் அந்த ஜமதக்னியின் வீர மகன் {பரசுராமர்}, ஆயிரமாயிரமாக இருந்த காஸ்மீரர்கள், தரதர்கள், குந்திகள், க்ஷுத்ரகர்கள், மாலவர்கள், அங்கர்கள், வங்கர்கள், கலிங்கர்கள், விதேஹர்கள், தாம்ரலிப்தகர்கள், ரக்ஷோவாஹர்கள், வீதஹோத்ரர்கள், திரிகர்த்தர்கள், மார்த்திகாவதர்கள், சிபிக்கள் ஆகியோர் அனைவரையும் தன் கூர்மையான கணைகளால் கொன்றார்.

மாகாணத்துக்கு மாகாணம் அடுத்தடுத்து சென்று க்ஷத்திரியர்களை ஆயிரக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் இப்படியே கொன்றார். குருதிப்பெருவெள்ளத்தை உண்டாக்கி, இந்திரகோபங்களைப் போலவோ, பந்துஜீவம் {Vandujiva} என்ற காட்டுப்பழத்தைப் போலவோ சிவப்பான குருதியால் பல தடாகங்களை நிறைத்து [2], (பூமியின்) பதினெட்டுத் தீவுகள் அனைத்தையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்த அந்தப் பிருகுகுல மகன் {பரசுராமர்}, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளை வழங்கிப் பெரும் புண்ணியத்தைத் தரும் நூறு வேள்விகளைச் செய்தார்.

ஜமதக்னியின் மகனான ராமர் {பரசுராமர்}, விதிப்படி அமைக்கப்பட்டதும், முழுவதும் தங்கத்தாலானதும், பதினெட்டு நாளங்கள் உயரம் {முப்பத்திரண்டு முழம்} கொண்டதுமான வேள்விப்பீடத்தையும், பல்வேறு விதங்களிலான ரத்தினங்கள் மற்றும் கற்கள் நிறைந்ததும், நூற்றுக்கணக்கான கொடிமரங்களால் அலங்கரிக்கப்பட்டதும், வீட்டு மற்றும் காட்டு விலங்குகளால் நிறைந்ததுமான இந்தப் பூமியையும் கசியபருக்கு வேள்விக் கொடையாக அளித்தார். மேலும் ராமர் {பரசுராமர்}, அவருக்கு {கசியபருக்கு} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மகத்தான யானைகளையும் அளித்தார். உண்மையில், பூமியைக் கள்வர்கள் அனைவரிடமும் இருந்து விடுவித்து, அவளை {பூமாதேவியை} அருள் நிறைந்த நேர்மையான மனிதர்களால் நிறைத்த ராமர் {பரசுராமர்}, தனது பெரும் குதிரை வேள்வியில் கசியபருக்கு அவளை {பூமியைத்} தானமாக அளித்தார்.

இருபத்தோரு முறை பூமியை க்ஷத்திரியர்களற்றதாக்கி, நூற்றுக்கணக்கான வேள்விகளைச் செய்த அந்தப் பலங்கொண்ட வீரர் {பரசுராமர்}, அவளை {பூமியைப்} பிராமணர்களுக்குத் தானமளித்தார். ஏழு தீவுகளுடன் கூடிய இந்தப் பூமியை மரீசிக்குக் {மரீசியின் மகனான கசியபருக்குக்} கொடுத்தார். அப்போது கசியபர் ராமரிடம் {பரசுராமரிடம்}, “என் உத்தரவின் பேரில் இந்தப் பூமியை விட்டுப் போவாயாக” என்றார். கசியபரின் வார்த்தையின் பேரில், அந்தப் பிராமணரின் {கசியபரின்} உத்தரவுக்குக் கீழ்ப்படிய விரும்பிய அந்தப் போர்வீரர்களில் முதன்மையானவர் {பரசுராமர்}, தன் கணைகளால் பெருங்கடலையே ஒதுங்கச் செய்து, மகேந்திரம் என்று அழைக்கப்பட்ட மலைகளில் சிறந்த மலைக்குச் சென்று அங்கேயே தொடர்ந்து வாழத் தொடங்கினார்.

இத்தகு எண்ணிலா குணங்களைக் கொண்டவரும், பெரும் காந்தியைக் கொண்டவரும், பிருகுக்களின் {பிருகு குலத்தவரின்} புகழை அதிகரித்தவருமான அந்தப் புகழ்பெற்ற ஜமதக்னியின் மகனே கூட இறக்கவே செய்வார். அவர் உன் மகனுக்கும் {சுவர்ணஷ்டீவினுக்கும்} மேம்பட்டவராவார் (மேம்பட்டவரான அவரும் இறப்பார்). எனவே, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக} நீ வருந்தாதே. நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவர்களும், மனிதர்களில் முதன்மையானோருமான இவர்கள் யாவரும் இறந்தார்கள், ஓ! சிருஞ்சயா, இவர்களைப் போன்றோரும் இறப்பார்கள்” {என்றார் நாரதர்}.

யுதிஷ்டிரனின் கவலை! – துரோண பர்வம் பகுதி – 071-நாரதரின் விளக்கத்தால் நிறைவடைந்த சிருஞ்சயன்; சிருஞ்சயன் மகனை உயிர்மீட்டளித்த நாரதர்; அபிமன்யுவின் நற்கதியைச் சொல்லி அவனை மீட்க முடியாது என யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; தனஞ்செயனை நினைத்து வருந்திய யுதிஷ்டிரன்…

வியாசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “(கேட்பவரின்) வாழ்நாளை அதிகரிக்க வல்லவையான இந்தப் பதினாறு {16} மன்னர்களின் புனிதமான வரலாற்றைக் கேட்ட பிறகு, மன்னன் சிருஞ்சயன் எதையும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். சிறப்புமிக்க முனிவரான நாரதர், இப்படி அமைதியாக அமர்ந்திருந்த அவனிடம் {சிருஞ்சயனிடம்}, “ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே {சிருஞ்சயா}, என்னால் உரைக்கப்பட்ட வரலாறுகளைக் கேட்டாயா? அவற்றின் கருத்துகளை நீ புரிந்து கொண்டாயா? அல்லது சூத்திர மனைவியைக் கொண்ட மறுபிறப்பாளர் {பிராமணர்} ஒருவரால் செய்யப்பட்ட சிராத்தம் போல அவை அனைத்தும் தொலைந்தனவா?” என்று கேட்டார் {நாரதர்}.

இப்படிச் சொல்லப்பட்ட சிருஞ்சயன் கூப்பிய கரங்களுடன் {நாரதரிடம்}, “ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே {நாரதரே}, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளை வழங்கிப் பெரும் வேள்விகளைச் செய்திருக்கும் பழங்காலத்தின் இந்த அரச முனிகள் அனைவரின் புகழத்தக்க அற்புதமான வரலாறுகளையும் கேட்டுச் சூரியனின் கதிர்களால் விலகிய இருளைப் போல என் துன்பமனைத்தும் அற்புதமான வகையில் மறைந்தன. நான் இப்போது என் பாவங்களனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தேன், இப்போது நான் எந்த வலியையும் உணரவில்லை {துன்பமடையவில்லை}. நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று {நாரதரிடம்} பதிலுரைத்தான் {சிருஞ்சயன்}.

நாரதர் {சிருஞ்சயனிடம்}, “உன் துன்பம் விலகியது நற்பேறாலேயே. நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக. நீ கேட்கும் அனைத்தையும் நீ அடைவாய். உண்மையற்ற எதையும் நாம் சொல்வதில்லை” என்றார்.

சிருஞ்சயன் {நாரதரிடம்}, “ஓ! புனிதமானவரே {நாரதரே}, நீர் என்னிடம் நிறைவுடன் இருக்கிறீர் என்பதிலேயே நான் மகிழ்கிறேன் {நிறைவடைகிறேன்}. ஓ! புனிதமானவரே, நீர் எவனுடன் நிறைவுடன் இருக்கிறீரோ, அவனால் இங்கே அடையமுடியாதது எதுவுமில்லை” என்றான்.

நாரதர் {சிருஞ்சயனிடம்}, “வேள்வியில் கொல்லப்படும் விலங்கைப் போலக் கள்வர்களால் வீணாகக் கொல்லப்பட்ட உன் மகனைக் {சுவர்ணஷ்டீவினைக்} கடினமான நரகத்தில் இருந்து மீட்டு மீண்டும் உனக்குத் தருகிறேன்” என்று சொன்னார்.

வியாசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பிறகு, (துயரில் வாடும் தந்தையிடம் {சிருஞ்சயனிடம்}) மனம் நிறைந்த முனிவரால் {நாரதரால்} அளிக்கப்பட்ட பிள்ளையான அந்தச் சிருஞ்சயன் மகன் {சுவர்ணஷ்டீவின்} அற்புதமான காந்தி கொண்டவனாக, குபேரனின் மகனுக்கு ஒப்பானவனுமாகத் தோன்றினான். மன்னன் சிருஞ்சயன் மீண்டும் தன் மகனைச் சந்தித்ததால் மிகவும் மகிழ்ந்தான். மேலும் அவன் புண்ணியத்தைத் தரும் பல வேள்விகளைச் செய்து அந்த வேள்விகளின் முடிவில் அபரிமிதமான வேள்விக் கொடைகளைத் தானமளித்தான்.

அந்தச் சிருஞ்சயன் மகன் {சுவர்ணஷ்டீவின்} தான் பிறந்த நோக்கத்தை நிறைவேற்றவில்லை. அவன் எந்த வேள்வியையும் செய்யவில்லை, மேலும் அவனுக்குப் பிள்ளையும் இல்லை. துணிச்சலற்ற நிலையில், போரில் அல்லாமல் இரங்கத்தக்க வகையில் அவன் அழிந்தான். இதன் காரணமாகவே அவனை மீண்டும் உயிரோடு கொண்டு வர முடிந்தது. அபிமன்யுவைப் பொறுத்தவரை அவன் துணிச்சல்மிக்கவனாகவும், வீரம் நிறைந்தவனாகவும் இருந்தான். தன் வாழ்வின் நோக்கங்களை நிறைவு செய்த அந்தச் சுபத்திரையின் துணிச்சல் மிக்க மகன் {அபிமன்யு}, தன் எதிரிகளை ஆயிரக்கணக்கில் சிதறடித்து, போர்க்களத்தில் விழுந்து இந்த உலகத்தைவிட்டுச் சென்றான் [1].

{வேறு எதனாலும்} அடைவதற்கரியதும், பிரம்மச்சரியம், ஞானம், சாத்திர அறிவு, முதன்மையான வேள்விகள் ஆகியவற்றால் அடையத்தக்கதுமான உலகங்களை உன் மகன் {அபிமன்யு} அடைந்தான். தங்கள் அறச்செயல்களின் மூலம் சொர்க்கத்தை அடையவே எப்போதும் அறிவாளிகள் விரும்புவர். சொர்க்கத்தில் வாழ்பவர்கள் இந்த உலகத்தை விரும்ப மாட்டார்கள். எனவே, விரும்பிய எந்தப் பொருளும் அர்ஜுனன் மகனால் {அபிமன்யுவால்} அடையப்படாமல் இல்லை ஆகையால், போரில் கொல்லப்பட்டு இப்போது சொர்க்கத்தில் வசித்து வரும் அவனை {அபிமன்யுவை} மீண்டும் உலகத்திற்குக் கொண்டு வர முடியாது.

கண்களை மூடி ஆழமான சிந்தனையில் உள்ள யோகியரோ, பெரும் வேள்விகளைச் செய்தவர்களோ, பெரும் தவத்தகுதியைக் கொண்டோரோ அடையும் நிலையான இலக்கை உன் மகன் {அபிமன்யு} அடைந்துவிட்டான். மரணத்திற்குப் பிறகு புது உடலை அடைந்த அந்த வீரன் {அபிமன்யு}, அழியாத கதிர்களால் ஆன தன்னொளியுடன் ஒரு மன்னனைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். உண்மையில், மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} அனைவராலும் விரும்பப்படுவதும் சந்திரனின் சாரம் கொண்டதுமான தன் சொந்த உடலையே அபிமன்யு மீண்டும் அடைந்திருக்கிறான். உன் துயரத்திற்கு அவன் தகுந்தவனல்ல. இஃதை அறிந்து, அமைதியடைந்து உன் எதிரிகளைக் கொல்வாயாக. மனோபலம் உனதாகட்டும்.

ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கே நமது துயரம் தேவைப்படுகிறது, சொர்க்கத்தை அடைந்தவர்களுக்கு அது தேவைப்படாது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வாழ்ந்து கொண்டிருப்போர் எவனுக்காக {இறந்து போன யாருக்காக} வருந்துகிறார்களோ, அவனது பாவங்கள் அதிகரிக்கின்றன. எனவே, விவேகியான ஒருவன், வருந்துவதைக் கைவிட்டு, (இறந்து போனவரின்) நன்மைக்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன், (இறந்தவனின்) இன்பம், மகிமை மற்றும் மகிழ்ச்சியைக் குறித்தே சிந்திக்க வேண்டும். இஃதை அறிந்த ஞானியர், துயரம் வலி மிகுந்தது என்பதால் துயருறுவதில் ஈடுபடுவதில்லை. இஃதை உண்மையென அறிந்து கொண்டு எழுவாயாக! (உன் நோக்கத்தை அடைய) முயற்சிப்பாயாக! வருந்தாதே.

மரணத்தின் {மரணதேவியின்} தோற்றத்தையும், அவளது ஒப்பற்ற நோன்புகளையும், அனைத்து உயிர்களிடமும் அவள் கொண்ட பாரபட்சமற்ற நடத்தையை நீ கேட்டாய். செழிப்பு நிலையில்லாதது என்பதை நீ கேட்டாய். சிருஞ்சயனின் இறந்த போன மகன் {சுவர்ணஷ்டீவின்} மீட்கப்பட்டான் என்பதையும் நீ கேட்டாய். ஓ! கல்விமானான மன்னா {யுதிஷ்டிரா}, வருந்தாதே. அமைதி உனதாகட்டும். நான் செல்கிறேன்!” என்று சொன்ன அந்தப் புனிதமான வியாசர், அங்கேயே அப்போதே மறைந்து போனார்.

பேச்சின் தலைவரும், மேகமூண்ட ஆகாயத்தின் நிறத்தைக் கொண்டவரும், புத்திமான்களுள் முதன்மையானவரும், புனிதமானவருமான அந்த வியாசர் சென்றதும், யுதிஷ்டிரன், அறவழிகளில் செல்வத்தை அடைந்தவர்களும், சக்தியில் பெரும் இந்திரனுக்கே நிகரானவர்களுமான பழங்காலத்தின் பெரும் ஏகாதிபதிகளான இவர்கள் அனைவரின் வேள்வித்தகுதி மற்றும் செழிப்பைக் கேட்டதன் விளைவாக ஆறுதலை அடைந்து, அந்த ஒப்பற்ற மனிதர்களை மனப்பூர்வமாகப் பாராட்டி துன்பத்தில் இருந்து விடுபட்டான். எனினும், துக்கம் நிறைந்த இதயத்தோடு கூடிய அவன் {யுதிஷ்டிரன்}, “தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} என்ன சொல்லப் போகிறோம்?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்” {என்றான் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}.

அபிமன்யுவத பர்வம் முற்றும்


——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  துரோண பர்வம்-அபிமன்யு வத பர்வம் -பதிமூன்றாம் நாள் போர்-

October 14, 2025

தேவர்களே ஊடுருவ முடியாத வியூகம்! – துரோண பர்வம் பகுதி – 031-பனிரெண்டாம் நாளை தோற்றதாகக் கருதிய கௌரவ வீரர்கள்; எரிச்சலும் கோபமும் கொண்ட துரியோதனன் துரோணரிடம் பேசியது; பாண்டவர்களின் வீரர்களில் முதன்மையான ஒருவரைக் கொல்வதாகத் துரியோதனனிடம் சூளுரைத்த துரோணர்; பதிமூன்றாம் நாள் போரில் சக்கர வியூகம் அமைத்த துரோணர்; நாளின் இறுதியில் அபிமன்யு கொல்லப்பட்டதாகத் திருதராஷ்டிரனிடம் சொல்லும் சஞ்சயன்; திருதராஷ்டிரன் அடைந்த துயரம்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “முதலில் அளவிலா ஆற்றல் கொண்ட அர்ஜுனனால் {தாங்கள்} பிளக்கப்பட்டதாலும், யுதிஷ்டிரன் நன்கு பாதுகாக்கப்பட்டதால், துரோணர் செய்திருந்த சபதம் தோல்வி அடைந்த காரணத்தாலும் உமது வீரர்கள் தோற்கடிக்கப்பட்டதாகவே கருதப்பட்டனர். புழுதி படிந்தும் பிளந்திருந்த கவசங்களுடனுமிருந்த  அவர்கள் அனைவரும் சுற்றிலும் தங்கள் கண்களை ஆவலாகச் சுழலவிட்டனர். உறுதியான இலக்கைக் கொண்ட தங்கள் எதிரிகளால் வீழ்த்தப்பட்டு, போரில் அவர்களால் {எதிரிகளால்} அவமதிக்கப்பட்ட அவர்கள் {கௌரவ வீரர்கள்}, துரோணரின் சம்மதத்தின் பேரில் களத்தில் இருந்து திரும்பினர். அப்படித் திரும்பிக் கொண்டிருக்கையில், உயிர்களனைத்தும் பல்குனனின் {அர்ஜுனனின்} எண்ணற்ற தகுதிகளைப் புகழ்வதையும், அனைவரும் அர்ஜுனனிடம் கேசவன் {கிருஷ்ணன்} கொண்ட நட்பைப் பேசுவதையும் அவர்கள் கேட்டனர். சம்பவங்களின் கோர்வையை நினைவு கூர்ந்த அவர்கள், சாபத்தில் வீழ்ந்த மனிதரைப் போல முற்றான அமைதி கொண்டு அந்த இரவைக் கழித்தனர் [1].அடுத்த நாள் காலையில், துரியோதனன், தங்கள் எதிரியின் செழிப்பைக் கண்டு இதய உற்சாகத்தைப் பெரிதும் இழந்து, எரிச்சலாலும், கோபத்தாலும் இந்த வார்த்தைகளைத் துரோணரிடம் சொன்னான். பேச்சில் திறமையுள்ள அந்த மன்னன் {துரியோதனன்}, எதிரி அடைந்த வெற்றியை எண்ணி சினத்தால் நிறைந்து, துருப்புகள் அனைத்தும் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {பிராமணோத்தமரே}, உம்மால் அழிக்கப்பட வேண்டிய மனிதர்களால் இன்று நீர் எங்களைத் தாழ்த்திவிட்டீர் {கீழான நிலைக்குக் கொண்டுவந்து விட்டீர்} என்பதில் ஐயமில்லை. அடையத்தக்க தூரத்தில் யுதிஷ்டிரனைக் கொண்டிருந்தும், இன்று அவனை நீர் பிடிக்கவில்லை. போரில் உம்மால் பிடிக்கத்தக்க அந்த எதிரி, உமது பார்வையில் ஒரு முறை பட்டாலே, தேவர்களாலேயே உதவப்பட்டு, பாண்டவர்களால் பாதுகாக்கப்பட்டாலும் கூட அவன் உம்மிடம் இருந்து தப்புவது இயலாதே. மனம் நிறைந்திருந்த நீர் எனக்கு ஒரு வரத்தை அளித்தீர்; எனினும், இப்போதோ அதன் படி செயல்படாமலிருக்கிறீர். (உம்மைப் போன்ற) உன்னதர்கள், தங்களிடம் அர்ப்பணிப்புக் கொண்ட ஒருவனின் நம்பிக்கைகளை ஒருபோதும் பொய்யாக்குவதில்லை” என்றான் {துரியோதனன்}.

துரியோதனனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} நாணிக் குறுகினார். மன்னனிடம் {துரியோதனனிடம்} அவர் {துரோணர்}, “என்னை நீ இப்படி நினைப்பது உனக்குத் தகாது. உனக்கு ஏற்புடையதைச் சாதிக்கவே நான் எப்போதும் முயல்கிறேன். கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்படும் படையைத் தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள், ராட்சசர்கள் ஆகியோருடன் கூடிய மூன்று உலகங்களாலும் வீழ்த்த இயலாது. அண்டத்தை உண்டாக்கிய கோவிந்தன் எங்கிருக்கிறானோ, அர்ஜுனன் தலைவனாக எங்கிருக்கிறானோ, அங்கே முக்கண் மகாதேவனைத் தவிர வேறு எவனுடைய பலம் செல்லுபடியாகும்? ஓ! ஐயா {துரியோதனா}, நான் இஃதை இன்று உனக்கு உண்மையாகவே சொல்கிறேன், இது வேறுவகையிலாகாது.

இன்று நான், பாண்டவ வீரர்களில் முதன்மையான ஒரு வலிமைமிக்கத் தேர்வீரனைக் கொல்வேன். இன்று நான், தேவர்களாலும் ஊடுருவமுடியாத ஒரு வியூகத்தை அமைப்பேன். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, எவ்வழிகளிலாவது அர்ஜுனனை களத்திலிருந்து {வெளியே} கொண்டு செல்வாயாக. அவன் அறியாததோ, போரில் அடையமுடியாததோ யாதொன்றும் இல்லை. {உலகத்தாரால்} போரைக் குறித்து {இதுவரை} அறியப்பட்ட அனைத்தையும் அவன் பல்வேறு இடங்களில் இருந்து அடைந்திருக்கிறான்” என்றார் {துரோணர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “துரோணர் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, மீண்டும் போரிடுவதற்காக அர்ஜுனனைச் சவாலுக்கழைத்த சம்சப்தகர்கள், களத்தின் தென் பகுதிக்கு அவனை {அர்ஜுனனைக்} கொண்டு சென்றனர். பிறகு, எப்போதும் பார்க்கப்படாத, கேள்விப்படாத வகையில் அர்ஜுனனுக்கும், அவனுடைய எதிரிகளுக்கும் {சம்சப்தகர்களுக்கும்} இடையிலான அந்த மோதல் இருந்தது.

மறுபுறம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணர் அமைத்த வியூகமானது பிரகாசிப்பதாகத் தெரிந்தது. உண்மையில், உச்சியை அடைந்து, (கீழிருக்கும் அனைத்தையும்) எரிக்கும் சூரியனைப் போல அந்த வியூகமானது பார்க்கப்பட முடியாததாக இருந்தது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அபிமன்யு, தன் தந்தையுடைய மூத்த அண்ணனின் {யுதிஷ்டிரனின்} உத்தரவின் பேரில், போரில் ஊடுருவ முடியாத அந்தச் சக்கர வியூகத்தின் பல இடங்களைத் துளைத்தான். மிகக் கடினமான அருஞ்செயல்களைச் செய்து, ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்ற அவன் {அபிமன்யு}, (இறுதியில்) ஒன்று சேர்ந்திருந்த ஆறு வீரர்களால் {ஒரே நேரத்தில்} எதிர்க்கப்பட்டான். ஓ! பூமியின் தலைவா, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே} இறுதியாக அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, துச்சாசனன் மகனிடம் [2] பலியாகி தன் உயிரை விட்டான். இதனால் நாங்கள் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தோம், பாண்டவர்களோ பெரும் துன்பத்தில் நிறைந்தனர். சுபத்திரையின் மகன் {அபிமன்யு} கொல்லப்பட்ட பிறகு, நம் துருப்புகள் இரவு ஓய்வுக்காகப் பின்வாங்கப்பட்டன {திரும்ப அழைக்கப்பட்டன}” {என்றான் சஞ்சயன்} [3].திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, இளமையை அடையாதவனும், மனிதர்களில் சிங்கத்தின் {அர்ஜுனனின்} மகனுமான அவன் (அபிமன்யு) கொல்லப்பட்டதைக் கேட்டு என் இதயம் தூள் தூளாக நொறுங்குகிறது. உண்மையில், ஆட்சி உரிமையை விரும்பும் துணிச்சல்மிக்க மனிதர்கள், மனவுறுத்தல் ஏதுமின்றி ஒரு குழந்தையின் மீது ஆயுதங்களை ஏவத்தக்க வகையில் சட்டம் இயற்றுபவர்களால் {தர்மகர்த்தாக்களால்} ஏற்படுத்தப்பட்ட க்ஷத்திரியர்களின் கடமைகள் கொடூரமானவையே. ஓ! கவல்கணன் மைந்தா {சஞ்சயா}, ஆடம்பரமாக வளர்க்கப்பட்டிருந்தாலும் அச்சமற்ற வகையில் களத்தில் திரிந்த அந்தக் குழந்தையை {அபிமன்யுவை}, ஆயுதங்களில் சாதித்தவர்களான இத்தனை பல வீரர்கள் சேர்ந்து எவ்வாறு கொன்றார்கள் என்பதை எனக்குச் சொல்வாயாக. ஓ! சஞ்சயா, போரில் நம் தேர் அணிவகுப்பினுள் ஊடுருவிய அளவிலா சக்தி கொண்ட சுபத்திரையின் மகனிடம் {அபிமன்யுவிடம்} நம் வீரர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் என்னிடம் கேட்கும் சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} படுகொலையை {வதத்தை} விரிவாகச் சொல்கிறேன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கவனமாகக் கேட்பீராக. நம் படையணிகளுக்குள் ஊடுருவிய அந்த இளைஞன் {அபிமன்யு}, தன் ஆயுதங்களுடன் எவ்வாறு விளையாடினான் என்பதையும், வெற்றி பெறும் நம்பிக்கையால் ஈர்க்கப்பட்ட நமது படையின் தடுக்கப்பட முடியாத வீரர்கள் அனைவரும் அவனால் {அபின்யுவால்} எவ்வாறு பீடிக்கப்பட்டனர் என்பதையும் இப்போது நான் உமக்குச் சொல்கிறேன். செடிகள், மூலிகைகள், மரங்கள் ஆகியன நிறைந்த காட்டில், {காட்டுத்} தீயால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்ட காட்டுவாசிகள் அனைவரையும்போல, உமது படையின் வீரர்கள் அனைவரும் அச்சத்தால் நிறைந்தனர்” {என்றான் சஞ்சயன்}. 

சக்கர வியூகம்! – துரோண பர்வம் பகுதி – 032-பாண்டவர்கள் ஒவ்வொருவரின் தகுதிகளையும், கிருஷ்ணனின் பெருமையையும் எடுத்துச் சொல்லும் சஞ்சயன்; துரோணர் அமைத்த சக்கர {பத்ம} வியூகம்; அந்த வியூகத்தில் கௌரவ வீரர்கள் ஒவ்வொருவரும் நின்ற நிலைகளைக் குறித்த வர்ணனை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் கடுஞ்செயல்களைச் செய்பவர்களும், களைப்பனைத்துக்கும் மேம்பட்டவர்களும், சாதனைகளால் தங்களை நிரூபித்துக் கொள்பவர்களுமான பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} ஐவரும், கிருஷ்ணனுடன் கூடி தேவர்களாலும் தடுக்கப்பட முடியாதவர்களாக இருக்கின்றனர்.

நீதி, செயல்கள், பரம்பரை, நுண்ணறிவு {புத்திக்கூர்மை}, சாதனைகள், புகழ், செழிப்பு ஆகியவற்றில் யுதிஷ்டிரனைப் போன்ற வேறொரு மனிதன் இருந்ததில்லை, இனி இருக்கப்போவதுமில்லை. உண்மைக்கும் {சத்தியத்துக்கும்}, நீதிக்கும் அர்ப்பணிப்புடன், ஆசைகளைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், பிராமணர்களை வழிபடுவதன் விளைவாலும், அது போன்ற இயல்புடைய பிற அறங்களாலும் {சிறப்பு குணங்களாலும்} எப்போதும் சொர்க்கத்தில் இன்புறுகிறான்.

யுக முடிவின் {ஊழிக்காலத்து} அந்தகன், ஜமதக்னியின் வீர மகன் (ராமர்) {பரசுராமர்}, தன் தேரிலுள்ள பீமசேனன் ஆகிய மூவரும் ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இணையானவர்களாகவே சொல்லப்படுகின்றனர்.

போரில் தன் உறுதிமொழிகளை எப்போதும் அடையும் காண்டீவதாரியான பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} பூமியில் சரியான இணை {ஒப்புவமை} ஒன்றையும் நான் காணவில்லை.

மேன்மையானவர்களிடம் மதிப்பு {குருபக்தி}, ஆலோசனைகளை வெளியிடாமை, பணிவு, சுயக்கட்டுப்பாடு, மெய்ந்நலம் {மேனியழகு}, துணிச்சல் ஆகிய ஆறும் எப்போதும் நகுலனிடம் இருக்கின்றன.

சாத்திரங்களில் அறிவு, ஈர்க்கும் தன்மை {இனிமை}, பண்பில் இனிமை {கம்பீரம்}, நீதி, ஆற்றல் ஆகிவற்றில் அசுவினிகளுக்கே இணையானவனாக வீர சகாதேவன் இருக்கிறான்.

கிருஷ்ணனிடமும், பாண்டவர்களிடம் உள்ள உன்னதக் குணங்கள் அனைத்தின் கூட்டும் அபிமன்யுவிடம் மட்டுமே காணப்படுகிறது. உறுதியில் யுதிஷ்டிரனுக்கு இணையானவனாக, நடத்தையில் கிருஷ்ணனுக்கும், சாதனைகளில் பயங்கரச் செயல் புரியும் பீமசேனனுக்கும் இணையானவனாக இருந்த அவன் {அபிமன்யு}, மேனி அழகு, ஆற்றல், சாத்திர அறிவு ஆகியவற்றில் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} இணையானவனாக இருந்தான். பணிவிலோ, அவன் சகாதேவன் மற்றும் நகுலனுக்கு இணையானவனாக இருந்தான்” என்றான் {சஞ்சயன்} [1].திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா {சஞ்சயா}, வெல்லப்பட முடியாத சுபத்திரையின் மகன் அபிமன்யு போர்க்களத்தில் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உறுதியுடனிருப்பீராக. தாங்க முடியாத உமது சோகத்தைத் தாங்கிக் கொள்வீராக. உமது சொந்தங்களின் பெரும்படுகொலைகளைக் குறித்து உம்மிடம் நான் சொல்லப் போகிறேன்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆசான் {துரோணர்} பெரும் சக்கர வியூகத்தை [2] அமைத்தார். அதில் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையான (நமது தரப்பின்) மன்னர்கள் அனைவரும் நிறுத்தப்பட்டனர். சூரியப் பிரகாசத்தைக் கொண்ட இளவரசர்கள் அனைவரும் {அந்த வியூகத்தின்} நுழைவாயிலிலேயே நிறுத்தப்பட்டனர் [3]. (ஒருவரோடொருவர் சேர்ந்து நிற்போம் என்று) அவர்கள் அனைவரும் உறுதி மொழிகளை ஏற்றிருந்தனர். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களை அவர்கள் அனைவரும் கொண்டிருந்தனர். சிவப்பு ஆடைகளையும், சிவப்பு ஆபரணங்களையும் அவர்கள் அனைவரும் அணிந்திருந்தனர். சிவப்பு கொடிகளையும் அவர்கள் அனைவரும் கொண்டிருந்தனர், மேலும் தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, சந்தனக் குழம்பையும், நறுமணமிக்க வேறு தைலங்களையும் {காரகில் சாந்துகளையும்} பூசிக் கொண்டு பூமாலை அணிந்தவர்களாக அவர்கள் அனைவரும் இருந்தனர். போரிட விரும்பிய அவர்கள் ஒரே அமைப்பாகச் செயல்பட்டு, அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} நோக்கி விரைந்தனர். உறுதியான வில்லாளிகளான அவர்கள் அனைவரும் எண்ணிக்கையில் பத்தாயிரம் பேராக இருந்தனர். இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவரோடொருவர் இரக்கம் கொண்டு, வீரச்செயல்களில் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக்கொண்டு, ஒருவரையொருவர் விஞ்ச விரும்பி, ஒருவருக்கொருவர் நன்மை செய்யத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அவர்கள் அனைவரும் உமது அழகிய பேரன் லக்ஷ்மணனைத் {துரியோதனன் மகனைத்} தலைமையில் கொண்டு போரிடச் சென்றனர்.ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனன் தன் படைகளுக்கு மத்தியில் நின்றிருந்தான். அந்த மன்னன் {துரியோதனன்}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான கர்ணன், துச்சாசனன், கிருபர் ஆகியோரால் சூழப்பட்டுத் தன் தலைக்கு மேல் உயர்த்திப் பிடிக்கப்பட்ட குடையைக் கொண்டிருந்தான். காட்டெருதின் வாலால் {சாமரம்} வீசப்பட்ட அவன் {துரியோதனன்} தேவர்களின் தலைவனைப் {இந்திரனைப்} போலப் பிரகாசித்தான்.

அந்தப் படையின் தலைமையில் இருந்த படைத்தலைவரான துரோணர் உதயசூரியனைப் போலத் தெரிந்தார். அங்கே பெரும் மேனி அழகைக் கொண்ட சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} மேருவின் முகட்டைப் போல அசையாதவனாக நின்றான். அஸ்வத்தாமனின் தலைமையில் நின்றவர்களும், தேவர்களுக்கு ஒப்பானவர்களுமான உமது மகன்கள் முப்பது {30} பேர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} பக்கத்தில் நின்றனர். பிறகு, ஜெயத்ரதனின் விலாப்புறத்தில், சூதாடியான காந்தார ஆட்சியாளன் (சகுனி), சல்லியன் மற்றும் பூரிஸ்ரவஸ் ஆகிய வலிமைமிக்கத் தேர்வீரர்கள் நின்றனர். பிறகு, உமது படைவீரர்களுக்கும், எதிரிகளுடையவர்களுக்கும் இடையில் கடுமையானதும், மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்துவதுமான போர் தொடங்கியது. மரணத்தையே இலக்காகக் கொண்டு இரு தரப்பும் போரிட்டன” {என்றான் சஞ்சயன்}. 

வியூகத்தைப் பிளப்பாய் அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 033-சக்கர வியூகத்தை எதிர்த்து விரைந்து துரோணரால் பீடிக்கப்பட்ட பாண்டவப் படை; அந்த வியூகத்தைப் பிளக்குமாறு அபிமன்யுவை ஏவிய யுதிஷ்டிரன்; வியூகத்தை விட்டு வெளியே வரத்தெரியாது என்ற அபிமன்யு; யுதிஷ்டிரனும், பீமனும் கூறிய உறுதிமொழிகள்; துரோணரின் படையை நோக்கி விரைந்த அபிமன்யு…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, பரத்வாஜர் மகனால் {துரோணரால்} பாதுகாக்கப்பட்ட அந்த வெல்லப்பட முடியாத வியூகத்தை {சக்கரவியூகத்தைப்}பீமசேனனின் தலைமையில் பார்த்தர்கள் {பாண்டவர்கள்} அணுகினார்கள். சாத்யகி, சேகிதானன், பிருஷதன் {துருபதன்} மகனான திருஷ்டத்யும்னன், பெரும் ஆற்றலைக் கொண்ட குந்திபோஜன், வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதன், அர்ஜுனன் மகன் (அபிமன்யு), {திருஷ்டத்யும்னன் மகன்} க்ஷத்ரதர்மன், {கைகேய இளவரசனனான} வீர பிருஹத்ஷத்ரன், சேதிகளின் ஆட்சியாளன் திருஷ்டகேது, மாத்ரியின் இரட்டை மகன்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்), கடோத்கசன், பலம்நிறைந்த {பாஞ்சால இளவரசன்} யுதாமன்யு, வெல்லப்படாத சிகண்டி, தடுக்கப்பட முடியாத {பாஞ்சால இளவரசன்} உத்தமௌஜஸ், வலிமைமிக்கத் தேர்வீரனான விராடன், கோபத்தால் தூண்டப்பட்ட திரௌபதியின் மகன்கள் ஐவர், சிசுபாலனின் வீரமகன் {சுகேது}, வலிமையும் சக்தியும் கொண்ட கைகேயர்கள், ஆயிரக்கணக்கான சிருஞ்சயர்கள் ஆகிய இவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களும், போரில் தடுக்கப்படக் கடினமானவர்களுமான இன்னும் பிறரும், போரிட விரும்பி தங்களைப் பின்தொடர்வோருக்குத் தலைமையேற்றுப் பரத்வாஜரின் மகனை {துரோணரை} எதிர்த்து விரைந்தனர்.

எனினும், பரத்வாஜரின் வீரமகனோ {துரோணரோ}, அவ்வீரர்கள் தன்னருகே வந்ததும் அடர்த்தியான கணைகளின் மழையால் அச்சமற்ற வகையில் அவர்கள் அனைவரையும் தடுத்தார். நீரின் வலிமைமிக்க அலைகள், ஊடுருவமுடியாத மலையை எதிர்த்துச் செல்வதைப் போலவோ, பொங்கி வரும் கடலானது கரைகளை அணுகுவதைப் போலவோ சென்ற அந்த வீரர்கள் துரோணரால் தடுக்கப்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் பீடிக்கப்பட்ட பாண்டவர்கள், அவரின் முன்னிலையில் நிற்க முடியாதவர்களானார்கள். நாங்கள் கண்ட துரோணரின் பலமானது மிக அற்புதமாக இருந்தது, பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் அவரை {துரோணரை} அணுகுவதில் தோல்வியை அடைந்தனர்.

சினத்தால் முன்னேறும் துரோணரைக் கண்ட யுதிஷ்டிரன், அவரது முன்னேற்றத்தைத் தடுக்கப் பல்வேறு வழிகளைச் சிந்தித்தான். இறுதியாக, துரோணர் யாராலும் தடுப்பட முடியாதவர் என்று கருதிய யுதிஷ்டிரன், தாங்கிக் கொள்ள முடியாத அந்தக் கனமான சுமையைச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு} மீது வைத்தான். பகைவீரர்களைக் கொல்பவனும், வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} குறையாதவனும், அர்ஜுனனின் சக்திக்கு மேம்பட்டவனுமான அபிமன்யுவிடம் பேசிய மன்னன் {யுதிஷ்டிரன்}, “ஓ! குழந்தாய் {அபிமன்யு}, (சம்சப்தகர்களிடம் இருந்து) திரும்பி வரும் அர்ஜுனன் நம்மை நிந்திக்காத வகையில் செயல்படுவாயாக. சக்கரவியூகத்தைப் பிளப்பது எவ்வாறு என்பதை நாங்கள் அறியோம். அவ்வியூகத்தை நீயோ, அர்ஜுனனோ, கிருஷ்ணனோ, பிரத்யும்னனோதான் பிளக்க முடியும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அபிமன்யு}, (அந்த அருஞ்செயலைச் செய்ய) ஐந்தாவதாக வேறு எந்த மனிதனும் காணப்படவில்லை. ஓ! குழந்தாய், ஓ! அபிமன்யு, உனது தந்தைமாரும், உனது மாமன்மாரும், இந்தத் துருப்புகள் அனைத்தும் உன்னிடம் இருந்து கேட்பது எதுவோ, அந்த வரத்தை அளிப்பதே உனக்குத் தகும். உனது ஆயுதங்களை விரைவாக எடுத்துக் கொண்டு, துரோணரின் இந்த வியூகத்தை அழிப்பாயாக, இல்லையெனில், {சம்சப்தகர்களுடனான} போரில் இருந்து திரும்பி வரும் அர்ஜுனன் நம் அனைவரையும் நிந்திப்பான்” என்றான் {யுதிஷ்டிரன்}.

அதற்கு அபிமன்யு, “என் தந்தைமாருக்கு வெற்றியை விரும்பும் நான், போரில் துரோணரால் அமைக்கப்பட்ட அந்த உறுதியான, கடுமையான, முதன்மையான வியூகத்தினுள் {சக்கரவியூகத்தினுள்} விரைவில் ஊடுருவுவேன். இவ்வகை வியூகத்தைத் {சக்கரவியூகத்தைத்} தாக்கும் (அதற்குள் ஊடுருவும்) முறை என் தந்தையால் எனக்குக் கற்றுத்தரப்பட்டிருக்கிறது. எனினும், {அங்கே} எவ்வித ஆபத்தாவது எனக்கு நேர்ந்தால், என்னால் அதை {வியூகத்தை} விட்டு வெளியே வர இயலாது [1]” என்றான் {அபிமன்யு}.

யுதிஷ்டிரன் {அபிமன்யுவிடம்}, “ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே {அபிமன்யு} இந்த வியூகத்தை ஒரு முறை பிளந்து, எங்களுக்கு வழியை ஏற்படுத்திவிடுவாயாக. நீ செல்லும் பாதையிலேயே நாங்கள் அனைவரும் உன்னைப் பின்தொடர்ந்து வருவோம். போரில் நீ தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} இணையானவனாவாய். நீ உள்ளே நுழைவதைக் காணும் நாங்கள், உன்னைப் பின்தொடர்ந்து வந்து, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உன்னைப் பாதுகாப்போம்” என்றான் {யுதிஷ்டிரன்}.

பீமன் {அபிமன்யுவிடம்}, “நானும் உன்னைப் பின்தொடர்வேன். மேலும், திருஷ்டத்யும்னன், சாத்யகி, பாஞ்சாலர்கள், பிரபத்ரகர்கள் ஆகியோரும் பின்தொடர்ந்து வருவார்கள். உன்னால் ஒரு முறை வியூகம் பிளக்கப்பட்ட பிறகு, மீண்டும் மீண்டும் அதற்குள் நுழைந்து, அதனுள் இருக்கும் போர்வீரர்களில் முதன்மையானோரை நாங்கள் கொல்வோம்” என்றான் {பீமன்}.

அபிமன்யு, “சுடர்மிகும் நெருப்புக்குள் நுழையும் கோபம் நிறைந்த பூச்சியைப் போல, துரோணரின் வெல்லப்பட முடியாத இந்த வியூகத்தை நான் ஊடுருவுவேன். (என் தந்தையின் குலம் மற்றும் தாயின் குலம் ஆகிய) இரண்டு குலங்களுக்கும் நன்மையைத் தரும் செயலை நான் இன்று செய்வேன். என் தாய்க்கும் {சுபத்திரைக்கும்}, என் தாய்மாமனுக்கும் {கிருஷ்ணனுக்கும்} இனிமையானதை நான் செய்வேன் [2]. உதவியற்ற {தன்னந்தனி} சிறுவனான என்னால் தொடர்ந்து கொல்லப்படும் பெரும் எண்ணிக்கையிலான பகை வீரர் கூட்டங்களை இன்று அனைத்து உயிர்களும் காணும். இன்று என்னுடன் மோதி, எவராவது உயிருடன் தப்பினால், பார்த்தருக்கும் {அர்ஜுனருக்கும்}, சுபத்திரைக்கும் பிறந்தவன் என என்னை நான் கருத மாட்டேன். தனி ஒருவனாகத் தேரில் செல்லும் என்னால், க்ஷத்திரிய குலத்தைப் போரில் எட்டு துண்டுகளாக வெட்ட முடியாமல் போனால் அர்ஜுனனின் மகனாக என்னை நான் கருத மாட்டேன்” என்றான் {அபிமன்யு} [3].யுதிஷ்டிரன் {அபிமன்யுவிடம்}, “மனிதர்களில் புலிகளும், கடும் வலிமை கொண்ட பெரும் வில்லாளிகளும், சாத்யர்கள், ருத்திரர்கள், மருத்துக்கள் ஆகியோருக்கு ஒப்பானவர்களும், ஆற்றலில் வசுக்களையோ, அக்னியையோ, ஆதித்தியனையோ போன்றவர்களால் பாதுகாக்கப்படும் நீ, துரோணரின் வெல்லப்பட முடியாத இந்த வியூகத்தைத் துளைக்கத் துணிவாயாக. மேலும், ஓ! சுபத்திரையின் மைந்தா {அபிமன்யு}, நீ இவ்வாறு பேசுவதால் உனது பலமும் பெருகட்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}.

யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அபிமன்யு, தன் தேரோட்டியான சுமித்திரனிடம் “துரோணரின் படையை நோக்கி விரைவாகக் குதிரைகளைத் தூண்டுவாயாக” என்று ஆணையிட்டான்” {என்றான் சஞ்சயன்}.

வியூகத்தைப் பிளந்த அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 034-அபிமன்யுவைப் போரிட வேண்டாம் என்று தடுத்த தேரோட்டி சுமித்ரன்; துரோணரின் தலைமையிலான வீரர்களுடன் மோதிய அபிமன்யு; துரோணரின் கண்ணெதிரிலேயே வியூகத்தைப் பிளந்த அபிமன்யு; கௌரவப் படைக்குப் பேரழிவை ஏற்படுத்திய அபிமன்யு; களத்தைவிட்டு ஓடிய கௌரவப் படையின் போர்வீரர்கள்

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “புத்திக்கூர்மை கொண்ட யுதிஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரின் வியூகத்தை நோக்கித் தன் தேரோட்டியைத் தூண்டினான். “செல்வீர், செல்வீர்” என்று அபிமன்யுவால் தூண்டப்பட்ட அந்தத் தேரோட்டி {சுமித்ரன்}, அவனிடம் {அபிமன்யுவிடம்}, “ஓ! நீண்ட ஆயுளைக் கொண்டவனே, பாண்டவர்களால் உன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் சுமையானது மிகக் கனமானதாகும். அஃதை உன்னால் தாங்க முடியுமா? முடியாதா? என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே நீ போரில் ஈடுபட வேண்டும். ஆசான் துரோணரோ மேன்மையான ஆயுதங்களை ஆழப் புரிந்தவரும், (போரில்) சாதித்தவருமாவார். நீயோ, பெரும் ஆடம்பரத்துடன் வளர்க்கப்பட்டு, போருக்கு பழக்கமில்லாதவனாக இருக்கிறாய்” என்றான் {தேரோட்டி சுமித்ரன்}.

இந்த வார்த்தைகளைக் கேட்ட அபிமன்யு, தன் தேரோட்டியிடம் சிரித்துக் கொண்டே, “ஓ! தேரோட்டியே, யார் இந்தத் துரோணர்? மேலும், க்ஷத்திரியர்களின் இந்தப் பரந்த கூட்டம்தான் என்ன? தேவர்கள் அனைவரின் உதவியோடு, சக்ரனே {இந்திரனே} தன் ஐராவதத்தில் வந்தாலும், போரில் நான் மோதுவேன். நான் இந்த க்ஷத்திரியர்கள் அனைவரையும் குறித்துச் சிறு கவலையும் கொள்ளவில்லை. பகைவரின் இந்தப் படை என்னில் பதினாறில் ஒரு பங்குக்கும் சமமாகாது. ஓ! சூதரின் மகனே {சுமித்திரரே}, விஷ்ணுவையே {கிருஷ்ணரையே} தாய்மாமனாகவும், அண்டத்தை வெல்லும் அர்ஜுனரை என் தந்தையாகவும் கொண்டு, போரில் ஒரு பகைவனாக இருக்கும் என் இதயத்தில் அச்சம் நுழைய முடியாது” என்றான்.

பிறகும் அபிமன்யு, அந்தத் தேரோட்டியின் {சுமித்ரனின்} வார்த்தைகளை அலட்சியம் செய்து, பின்னவனைத் {தேரோட்டியைத்} தூண்டும் வகையில், “துரோணரை நோக்கி வேகமாகச் செல்வீராக” என்றான். இப்படி ஆணையிடப்பட்ட தேரோட்டி, சிறிதும் உற்சாகமற்ற இதயத்துடன், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அபிமன்யுவின் மூன்று வயதான குதிரைகளைத் தூண்டினான். துரோணரின் படையை நோக்கி சுமித்ரனால் தூண்டப்பட்ட அந்தப் புரவிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வேகத்துடனும், ஆற்றலுடனும் துரோணரையே நோக்கி விரைந்தன.

(தங்களை நோக்கி) அவ்வழியில் அவன் {அபிமன்யு} வருவதைக் கண்ட துரோணரின் தலைமையிலான கௌரவர்கள் அனைவரும் அவனை எதிர்த்துச் சென்றனர். மேலும், பாண்டவர்களும் அவனைப் {அபிமன்யுவைப்} பின்னால் தொடர்ந்து சென்றனர். அர்ஜுனனுக்கும் மேம்பட்டவனும், தங்கக் கவசம் பூண்டவனும், கோங்கு மரம் பொறித்த சிறந்த கொடிரமரத்தைக் கொண்டவனுமான அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, யானைகளின் மந்தையைத் தாக்கும் சிங்கக் குட்டியைப் போலப் போரிட விரும்பி, துரோணரின் தலைமையிலான போர்வீரர்களுடன் அச்சமற்றவகையில் மோதினான். மகிழ்ச்சியால் நிறைந்த அந்தப் போர் வீரர்கள், அபிமன்யு தங்கள் வியூகத்தைத் {சக்கரவியூகத்தைத்} துளைக்க முயன்ற அந்த வேளையில் அவனை {அபிமன்யுவைத்} தாக்கத் தொடங்கினர். கங்கையின் நீரோட்டம் பெருங்கடலில் கலக்கும் இடத்தில் நீர்ச்சுழி காணப்படுவதைப் போல, அங்கே {போர்க்களத்தில்} ஒரு கணம் கொந்தளிப்பு உண்டானது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு போராடும் வீரர்களிடையில் அங்கே தொடங்கிய போரானது, கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் மாறியது.

அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருக்கையில், அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, துரோணர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த வியூகத்தைப் {சக்கரவியுகத்தைப்} பிளந்து அதற்குள் ஊடுருவினான். பிறகு, மகிழ்ச்சியால் நிறைந்த {உமது படையின்} பெரும் எண்ணிக்கையிலான யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படையினர், இப்படி எதிரியின் மத்தியில் ஊடுருவி வந்த அந்த வலிமைமிக்கப் போர்வீரனை {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டு, அவனைத் தாக்கத் தொடங்கினர். பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகள், கொக்கரிப்புகள், அக்குள் தட்டல்கள், முழக்கங்கள், கூச்சல்கள், சிம்ம கர்ஜனைகள், “நில், காத்திரு” என்ற ஒலிகள், குழப்பமான கடுங்குரல்கள், “போகாதே, நில், என்னிடம் வா” என்ற அலறல்கள், “இவன், இதோ நான், பகைவன்” என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட ஒலிகள், யானைகளின் பிளிறல்கள், மணிகள் மற்றும் ஆபரணங்களின் கிங்கிணியோசைகள், வெடித்த சிரிப்புகள், குதிரைக் குளம்பு மற்றும் தேரின் {தேர்ச்சக்கரங்களின்} சடசடப்பொலிகள் ஆகியவற்றுடன் [பூமியை எதிரொலிக்கும்படி செய்து கொண்டு], அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} நோக்கி அந்த (கௌரவப்) போர்வீரர்கள் விரைந்தனர்.

எனினும், பெரும் கர நளினமும் {லாவகமும்}, உடலின் முக்கிய அங்கங்களின் அறிவையும் கொண்ட அந்த வலிமைமிக்க வீரன் {அபிமன்யு}, முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்ல ஆயுதங்களை வேகமாக ஏவி, முன்னேறி வரும் அந்தப் போர்வீரர்களைக் கொன்றான். பல்வேறு விதங்களிலான கூரிய கணைகளால் கொல்லப்பட்ட அந்தப் போர் வீரர்கள் முற்றிலும் ஆதரவற்றவர்களாகி சுடர்மிக்க நெருப்பில் விழும் பூச்சிகளைப் போலப் போர்க்களத்தில் அபிமன்யுவிடம் தொடர்ச்சியாக விழுந்தனர்.

பிறகு, வேள்வி ஒன்றில், புரோகிதர்கள் வேள்வி மேடையைக் குசப்புற்களால் {தர்ப்பைகளால்} பரப்புவதைப் போல, அபிமன்யு, அவர்களுடைய உடல்களையும், உடலின் உறுப்புகளையும் போர்க்களத்தில் பரப்பினான். மேலும் அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, அவ்வீரர்களின் கரங்களை ஆயிரக்கணக்கில் வெட்டி வீழ்த்தினான். அவற்றில் {அந்தக் கரங்களில்} சில உடும்புத்தோலாலான கையுறைகளையும், சில விற்களையும் கணைகளையும் கொண்டிருந்தன, சில {கரங்கள்} வாள்களையோ, கேடயங்களையோ, அங்குசங்களையோ, கடிவாளங்களையோ கொண்டிருந்தன; மேலும் சில வேல்களையும், போர்க்கோடரிகளையும் கொண்டிருந்தன. சில கதாயுதங்களையோ, இரும்பு குண்டுகளையோ {பந்துகளையோ}, ஈட்டிகளையோ கொண்டிருந்தன; சில ரிஷ்டிகளையும், கவைக்கோல்களையும், கோடரிகளையும் கொண்டிருந்தன. சில பிண்டிபாலங்களையோ {குறுங்கணைகளையோ}, பரிகங்களையோ {முள் பதிக்கப்பட்ட தண்டாயுதங்களையோ}, கணைகளையோ, கம்பனங்களையோ பிடித்திருந்தன. சில சாட்டைகளையும், மகத்தான சங்குகளையும், பராசங்களையும், கசகிரகங்களையும் கொண்டிருந்தன. சில முத்கரங்களையும், சில பிறவகை ஏவுகணைகளையும் கொண்டிருந்தன. சில சுருக்குக் கயிறுகளையும் {பாசங்களையும்}, சில கனமான தண்டங்களையும், சில கற்களையும் கொண்டிருந்தன. அந்தக் கரங்கள் அனைத்தும் கைவளையங்களால் அலங்கரிக்கபட்டும், இனிமையான நறுமணப் பொருட்கள் மற்றும் தைலங்களால் பூசப்பட்டுமிருந்தன. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கருடனால் கொல்லப்பட்ட ஐந்து தலை நாகங்களைப் போலக் குருதி பூசப்பட்டிருந்த அந்தக் கரங்களின் பிரகாசத்தால் அந்தப் போர்க்களமே அழகானது.

அழகிய மூக்குகள், முகங்கள், மயிர் ஆகியவற்றைக் கொண்டு, பருக்களில்லாமல் அழகிய குண்டலங்களைக் கொண்ட எதிரிகளின் எண்ணற்ற தலைகளைப் பல்குனன் மகன் {அபிமன்யு} போர்க்களத்தில் பரப்பினான். கோபத்துடன் பற்களால் உதடுகளைக் கடித்திருந்ததால், அவை {அந்தத் தலைகள்} அனைத்திலும் அதிகமாக இரத்தம் பாய்ந்து கொண்டிருந்தது. அழகிய மாலைகள், கிரீடங்கள், தலைப்பாகைகள், மணிகள், ரத்தினங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுச் சூரியச்சந்திரர்களுக்கு இணையான காந்தியைக் கொண்டு, தண்டை இழந்த தாமரைப் மலரைப் போல அவை {அந்தத் தலைகள்} தெரிந்தன. பல நறுமணப்பொருட்களால் மணத்துடன் இருந்த அவை, உயிரோடிருந்தவரை ஏற்புடைய நன்மையான வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தன.

ஆகாயத்தின் நீர் மாளிகைகளைப் போலத் தெரிந்தவையும், நன்கு தயாரிக்கப்பட்டவையும், முன்னிலையில் ஏர்க்கால்களையும், சிறந்த மூங்கில் சட்டங்களையும் கொண்டவையும், கொடிமரங்கள் நிறுவப்பட்டு அழகாகத் தெரிந்தவையுமான பல்வேறு தேர்கள், தங்கள் ஜங்கங்கள் {ஏர்க்காலைத் தாங்கும் அண்டை மரங்கள்}, குபரங்கள் {சக்கரங்களின் விளிம்புகள்}, நேமிகள் {ஆரக்கால்}, தசனங்கள் {சக்கரங்களில் உள்ள குடம்}, சக்கரங்கள், கொடிமரங்கள் மற்றும் தேர்த்தட்டு ஆகியவற்றை இழந்தன. அவற்றில் இருந்த போருக்கான கருவிகள் அனைத்தும் நொறுக்கப்பட்டன. அவற்றை மறைத்த விலையுயர்ந்த விரிப்புகள் பறந்து சென்றன, அவற்றில் இருந்த போர்வீரர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.

{இப்படி} தன் முன் வந்த அனைத்தையும் தன் கணைகளால் சிதைத்த அபிமன்யு அனைத்துப் பக்கங்களிலும் திரிவதாகத் தெரிந்தது. தன் கூரிய கணைகளால் யானை வீரர்களையும், கொடிமரங்கள், அங்குசங்கள், கொடிகள், அம்பறாத்தூணிகள், கவசங்கள், கச்சைகள், கழுத்தணிகள், விரிப்புகள், மணிகள், துதிக்கைகள், தந்தங்கள் ஆகியவற்றோடு கூடிய யானைகளையும், யானைகளைப் பின்பக்கத்தில் இருந்து பாதுகாத்த காலாட்படை வீரர்களையும் அவன் {அபிமன்யு} துண்டுகளாக வெட்டினான்.

வனாயு, மலைநாடுகள், காம்போஜம், பாஹ்லீகம் ஆகியவற்றில் பிறந்தவையும், அசைவற்ற வால்கள், காதுகள், கண்கள் ஆகியவற்றைக் கொண்டவையும், உறுதியானவையும், பெரும் வேகமுடையவையும், நன்கு பழக்கப்பட்டவையும், வாள்கள், வேல்கள் ஆகியவற்றைத் தரித்த சாதனைவீரர்களால் செலுத்தப்பட்டவையுமான குதிரைகள், தங்கள் அழகிய வால்களில் உள்ள சிறந்த ஆபரணங்களை இழந்தவையாகத் தெரிந்தன. அவை பலவற்றில் நாக்குகள் மற்றும் கண்கள் அவற்றின் இடத்தில் இருந்து தெறித்து, வெளியில் நரம்புகள் புடைத்து, ஈரல்கள் பிதுங்கியிருந்தன. அவற்றின் முதுகில் இருந்த சாரதிகள் உயிரற்று அவற்றின் பக்கத்திலேயே கிடந்தனர். அவற்றை அலங்கரித்த மணி வரிசைகள் அனைத்தும் நொறுங்கிக் கிடந்தன. இப்படிக் களத்தில் பரவிக் கிடந்த அவை {குதிரைகள்}, ராட்சசர்களுக்கும், இரைதேடும் விலங்குகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்தன. கவசங்களும், (தங்கள் உடல்களை மறைக்கும்) தோலுறைகளும் பிளக்கப்பட்ட அவை கழித்த மலஜலங்களால் நனைந்திருந்தன. இப்படியே உமது படையின் குதிரைகளில் முதன்மையானவை பலவற்றைக் கொன்ற அபிமன்யு பிரகாசமாகத் தெரிந்தான்.

நினைத்தும் பார்க்க முடியாத பழங்காலத்தின் விபுவை {விஷ்ணுவைப்} போல மிகக் கடினமான சாதனையைத் தனியாக அடைந்த அபிமன்யு, பயங்கரமான அசுரப் படையை நசுக்கிய அளவிலா சக்தி கொண்ட முக்கண்ணனை (மகாதேவனைப்) போல, உமது படையின் மூன்று வகை (தேர்கள், யானைகள், குதிரைகள்) படையை நசுக்கினான். உண்மையில், அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, தன் எதிரிகளால் தாங்கிக் கொள்ள முடியாத சாதனைகளைப் போரில் அடைந்து, உமது படையின் காலாட்படை வீரர்களின் பெரும்பிரிவை எங்கும் சிதைத்தான்.

(தேவர்ப்படைத்தலைவன்) ஸ்கந்தனால் {முருகனால்} அழிக்கப்பட்ட அசுரப்படையைப் போல, தனி ஒருவனான சுபத்ரை மகனின் {அபிமன்யுவின்} கூரிய கணைகளால் இப்படிப் பேரழிவுக்கு உள்ளான உமது சேனையைக் கண்ட உமது வீரர்களும், உமது மகன்களும் அனைத்துப் பக்கங்களையும் வெறித்துப் பார்த்தனர். அவர்கள் வாய்கள் வரண்டன; அவர்களின் கண்கள் ஓய்வற்றவையாகின; அவர்களின் உடல்கள் வியர்வையால் மறைந்தன; அவர்களுக்கு மயிர்ச்சிலிர்ப்பும் உண்டாயிற்று. எதிரியை வீழ்த்தும் நம்பிக்கையை இழந்த அவர்கள், களத்தை விட்டு ஓடுவதில் தங்கள் இதயங்களை நிலைநாட்டினர். தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ள விரும்பிய அவர்கள், ஒருவரையொருவர் பேர் சொல்லியும், குடும்பப் பெயர்களைச் சொல்லியும் அழைத்து, காயம்பட்டுக் களத்தில் கிடந்த தங்கள் மகன்கள், தந்தைமார், சகோதரர்கள், சொந்தங்கள், திருமணத்தால் உண்டான உறவினர்கள் ஆகியோரைக் கைவிட்டு, தங்கள் குதிரைகளையும், யானைகளையும் (மிக வேகமாகத்) தூண்டி தப்பி ஓட முயற்சித்தனர்” {என்றான் சஞ்சயன்}.

சல்லியனை மயக்கமடையச் செய்த அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 035-அபிமன்யுவை எதிர்த்த துரியோதனன்; துரியோதனனைக் காத்த கௌரவப் படை; அஸ்மகன் மகனைக் கொன்ற அபிமன்யு; கர்ணனை நடுங்கச்செய்தல்; மேலும் மூவரைக் கொல்வது; மற்றும் சல்லியனோடு மோதி, அவனை மயக்கமடையச் செய்வது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அளவிலா சக்தி கொண்ட சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} தன் படை முறியடிக்கப்படுவதைக் கண்ட துரியோதனன், சினத்தால் நிறைந்து, முன்னவனை {அபிமன்யுவை} எதிர்த்துத் தானே சென்றான். போரில் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நோக்கி மன்னன் {துரியோதனன்} திரும்புவதைக் கண்ட துரோணர், (கௌரவப்) போர்வீரர்கள் அனைவரிடமும், “மன்னனைக் காப்பீராக. வீர அபிமன்யு, நமக்கு முன்னிலையில், தான் குறிவைக்கும் அனைவரையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொன்று வருகிறான். எனவே, அவனை {அபிமன்யுவை} எதிர்த்து, அச்சமில்லாமல் வேகமாக விரைந்து, குரு மன்னனை {துரியோதனனைக்} காப்பீராக” என்றார் {துரோணர்}.

எப்போதும் வெற்றியால் அருளப்பட்டவர்களும், நன்றியுணர்வும், வலிமையும் மிக்கவர்களுமான போர்வீரர்கள் பலர், துரியோதனனின் நன்மையைத் தங்கள் இதயத்தில் கொண்டு, அச்சத்துடன் உமது மகனை {துரியோதனனைச்} சூழ்ந்து கொண்டனர். துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், கர்ணன், கிருதவர்மன், சுபலனின் மகனான பிருஹத்பலன் {சகுனியின் சகோதரன்}, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, {சோமதத்தன் மகன்களான} பூரி மற்றும் பூரிஸ்ரவஸ், {பாஹ்லீக நாட்டு} சலன், பௌரவன், {கர்ணனின் மகன்} விருஷசேனன் ஆகியோர் கூரிய கணைகளை ஏவிக்கொண்டு, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} அந்தக் கணை மழையின் மூலம் தடுத்தனர். அந்தக் கணை மழையின் மூலம் அவனை {அபிமன்யுவைக்} குழப்பிய அவர்கள் துரியோதனனை மீட்டனர்.

எனினும் அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, {உணவுக்} கவளத்தைத் தன் வாயிலிருந்து பறித்தது போன்ற அந்தச் செயலைப் பொறுத்துக் கொள்ளவில்லை. அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களையும், அவர்களது தேரோட்டிகள் மற்றும் குதிரைகளையும் அடர்த்தியான கணை மழையால் மறைத்து, அவர்களைப் புறமுதுகிடச் செய்து சிங்க முழக்கம் செய்தான். இரையைத் தேடி பசியுடன் செல்லும் சிங்கத்தைப் போன்ற அவனது {அபிமன்யுவின்} கர்ஜனையைக் கேட்டு, துரோணரின் தலைமையிலான அந்தத் தேர்வீரர்கள், கோபத்துடன் அதைப் பொறுத்துக் கொள்ளவில்லை. பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் அவனை {அபிமன்யுவை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்ட அவர்கள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவன் மீது பல்வேறு விதங்களிலான கணைகளை மழையாகப் பொழிந்தனர். எனினும் உமது பேரன் {அபிமன்யு}, கூரிய கணைகளின் மூலம் அவற்றை (அவற்றில் எதுவும் தன்னை அடையும் முன்பே) ஆகாயத்திலேயே வெட்டிய பிறகு, தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் துளைத்தான். அவனது அந்த அருஞ்செயலைக் காண மிக அற்புதமானதாக இருந்தது.

கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான அவனின் {அபிமன்யுவின்} கணைகளின் மூலம் அவனால் இப்படித் தூண்டப்பட்ட அவர்கள், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைக்} கொல்லவிரும்பி, புறமுதுகிடாத அவனைச் சூழ்ந்து கொண்டனர். எனினும், அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலத் தனியாகவே, அந்த (கௌரவத்) துருப்புகளெனும் கடலைத் தன் கணைகளின் மூலம் தடுத்தான். அபிமன்யுவும் அவனைச் சார்ந்தவர்களும் ஒரு புறமும், அந்த வீரர்கள் அனைவரும் ஒரு புறமும் என ஒருவரையொருவர் தாக்கி இப்படிப் போரிட்டுக் கொண்டிருந்த அந்த வீரர்களில் ஒருவரும் களத்தில் புறங்காட்டவில்லை.

கடுமையான அந்தப் பயங்கரப் போரில் துஸ்ஸகன் ஒன்பது கணைகளால் அபிமன்யுவைத் துளைத்தான். துச்சாசனன் பனிரெண்டு கணைகளால் அவனைத் துளைத்தான்; சரத்வானின் மகனான கிருபர் மூன்றால் அவனைத் துளைத்தார். துரோணர், கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பான பதினேழு கணைகளால் அவனைத் துளைத்தார். விவிம்சதி எழுபது கணைகளாலும், கிருதவர்மன் ஏழு கணைகளால் அவனைத் துளைத்தனர். பூரிஸ்ரவஸ் மூன்று கணைகளாலும், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஆறாலும் அவனைத் துளைத்தனர். சகுனி இரண்டாலும், மன்னன் துரியோதனன் மூன்று கணைகளாலும் அவனைத் துளைத்தனர்.

எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேரில் நர்த்தனம் செய்பவனைப் போலத் தெரிந்த வீர அபிமன்யு, அந்த வீரர்கள் ஒவ்வொருவரையும் மூன்று {மூன்று மூன்று} கணைகளால் துளைத்தான். பிறகு அபிமன்யு, அவனை அச்சுறுத்த முயன்ற உமது மகன்களின் விளைவால், சினத்தால் நிறைந்து, பண்பாலும் பயிற்சியாலும் அவன் அடைந்த அற்புத பலத்தை வெளிப்படுத்தினான். கருடன் அல்லது காற்றின் வேகத்தைக் கொண்டவையும், கடிவாளம் பிடித்தவரின் விருப்பங்களுக்குக் கீழ்ப்படிபவையும், நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையுமான தன் குதிரைகளால் சுமக்கப்பட்ட அவன் {அபிமன்யு}, விரைவாக அஸ்மகனின் வாரிசைத் [1] தடுத்தான் [2]. பெரும் பலம் கொண்ட அந்த அழகிய அஸ்மகன் மகன், அவன் {அபிமன்யுவின்} முன்னிலையிலேயே நின்று, பத்து கணைகளால் அவனைத் துளைத்து, “நில், நில்” என்று சொன்னான். அபிமன்யுவோ, சிரித்துக் கொண்டே, பத்து கணைகளைக் கொண்டு, முன்னவனின் {அஸ்மகன் மகனின்} குதிரைகள், தேரோட்டி, கொடிமரம், இரண்டு கரங்கள், வில், தலை ஆகியவை கீழே பூமியில் விழும்படி செய்தான். அஸ்மகர்களின் வீர அட்சியாளன் இப்படிச் சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} கொல்லப்பட்ட பிறகு, நடுக்கமுற்ற அவனது {அஸ்மகன் மகனின்} படை களத்தில் இருந்து தப்பி ஓடத் தொடங்கியது.

பிறகு, கர்ணன், கிருபர், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, காந்தாரர்களின் ஆட்சியாளன் {சகுனி}, சலன், சல்லியன், பூரிஸ்ரவஸ், {துரியோதனன் தம்பி} கிராதன், சோமதத்தன், {துரியோதனன் தம்பி} விவிம்சதி, {கர்ணனின் மகன்} விருஷசேனன், சுஷேனன், குண்டபேதி, பிரதர்த்தனன், பிருந்தாரகன், லலித்தன், பிரபாகு, தீர்க்கலோசனன் {தாருக்கலோசனன்} [3], கோபம் கொண்ட துரியோதனன் ஆகியோர் அவன் {அபிமன்யு} மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர்.அந்தப் பெரும் வில்லாளிகளின் நேரான கணைகளால் அதீதமாகத் துளைக்கப்பட்ட அபிமன்யு, கவசமனைத்தையும், உடலையும் துளைக்கவல்ல கணைகளைக் கர்ணன் மீது ஏவினான். கர்ணனின் கவசத்தைத் துளைத்து, பிறகு அவனது உடலையும் துளைத்த அந்தக் கணை, பிறகு எறும்புப்புற்றைத் துளைத்துச் செல்லும் பாம்பைப் போலப் பூமிக்குள் நுழைந்தது. ஆழத் துளைக்கப்பட்ட கர்ணன் பெரும் வலியை உணர்ந்து முற்றிலும் ஆதரவற்றவனாக ஆனான் {மனத்தளர்ச்சியடைந்தான்}. உண்மையில் கர்ணன், நிலநடுக்கத்தின் போதான மலை ஒன்றைப் போல நடுங்கத் தொடங்கினான்.

பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனனின் வலிமைமிக்க மகன் {அபிமன்யு}, பெரும் கூர்மையைக் கொண்ட வேறு மூன்று கணைகளால் சுஷேனன், தீர்க்கலோசனன், குண்டபேதி ஆகிய மூன்று வீரர்களைக் கொன்றான். அதே வேளையில், (அதிர்ச்சியில் இருந்து மீண்ட) கர்ணன், இருபத்தைந்து கணைகளால் அபிமன்யுவைத் துளைத்தான். அஸ்வத்தாமன் இருபதாலும், கிருதவர்மன் ஏழாலும் அவனைத் தாக்கினர். சினத்தால் நிறைந்த அந்தச் சக்ரன்மகனின் {இந்திரன் மகனான அர்ஜுனனின்} மகன் {அபிமன்யு}, கணைகளையே எங்கும் நிறைத்தபடி களத்தில் திரிந்து கொண்டிருந்தான். சுருக்குக் கயிற்றைத் {பாசத்தைத்} தரித்த யமனைப் போலவே துருப்புகள் அனைத்தும் அவனை {அபிமன்யுவை} கருதின.

பிறகு அவன் {அபிமன்யு}, தன் அருகே வர நேர்ந்த சல்லியனின் மேல் தன் கணை மழையை இறைத்தான். பிறகு அந்த வலிமைமிக்கப் போர்வீரன் {அபிமன்யு} பெருமுழக்கம் முழங்கி, அதனால் உமது துருப்புகளை அச்சுறுத்தினான். அதேவேளையில், ஆயுதங்களில் சாதித்த அபிமன்யுவால் துளைக்கப்பட்டு, தன் முக்கிய அங்கங்களில் ஊடுருவிய அந்த நேரான கணைகளோடு கூடிய சல்லியன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தபடியே மயக்கமடைந்தான்.

சுபத்திரையின் கொண்டாடப்படும் மகனால் {அபிமன்யுவால்} இப்படித் துளைக்கப்பட்ட சல்லியனைக் கண்ட துருப்புகள் அனைத்தும், பரத்வாஜரின் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே தப்பி ஓடின. வலிமைமிக்கத் தேர்வீரனான சல்லியன், தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் இப்படி மறைக்கப்பட்டதைக் கண்ட உமது படையினர், சிங்கத்தால் தாக்கப்பட்ட மான்கூட்டத்தை {விலங்குகளைப்} போலத் தப்பி ஓடின. போரில் (தனது வீரம் மற்றும் திறமை ஆகியவற்றுக்காகப்} புகழப்பட்டு, பிதுர்கள், தேவர்கள், சாரணர்கள், சித்தர்கள், யக்ஷர்கள், பூமியிலுள்ள பல்வேறு வகையிலான உயிரினங்களின் கூட்டங்களால் கொண்டாடப்பட்டு, தெளிந்த நெய்யினால் ஊட்டப்பட்ட நெருப்பு {ஹோமம் செய்யப்பட்ட அக்னி} போல அந்த அபிமன்யு மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.

தேர்ப்படையைப் புறமுதுகிடச் செய்த அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 036-சல்லியனின் தம்பியைக் கொன்ற அபிமன்யு; அபிமன்யுவை அச்சுறுத்திய மத்ரர்களின் படை; கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் அளித்த ஆயுதங்களை ஏவிய அபிமன்யு; புறமுதுகிட்டோடிய கௌரவர்களின் தேர்ப்படை..

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, நம் வில்லாளிகளில் முதன்மையானோரை இப்படித் தன் நேரான கணைகளால் கலங்கடித்துக் கொண்டிருந்த போது, அவனைத் தடுக்க முயன்ற எனது படையின் வீரர்கள் யாவர்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜரின் மகனால் {துரோணரால்} பாதுகாக்கப்பட்ட (கௌரவத்) தேர்ப்படைகளைப் பிளப்பதில் ஈடுபட்டவனும் இளமை நிறைந்தவனுமான {பாலகனுமான} அபிமன்யுவின் போராற்றல் குறித்துக் கேளும். சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} கணைகளால் மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} முடக்கப்பட்டதைக் கண்ட சல்லியனின் தம்பி, கோபத்தால் நிறைந்து, தன் கணைகளை இறைத்தபடி அபிமன்யுவை எதிர்த்து முன்னேறினான். எனினும், பெரும் கரநளினம் கொண்ட அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, தன் எதிராளியின்{சல்லியன் தம்பியின்} தலை, தேரோட்டி, அவனது திரிவேணு, (தேரில் உள்ள) இருக்கை, அவனது தேர்ச்சக்கரங்கள், அவனது ஏர்க்கால்கள், கணைகள், அம்பறாத்தூணி, தேர்த்தட்டு, அவனது கொடி மற்றும் அவனது தேரில் இருந்த போருக்கான பிற பொருட்கள் அனைத்தையும் தன் கணைகளின் மூலம் வெட்டினான். அவனைக் {அபிமன்யுவைக்} காண முடியாத அளவுக்கு அவனது இயக்கங்கள் மிக வேகமாக இருந்தன. போர்க்களத்தின் ரத்தினங்கள் அனைவரின் தலைவனும், முதன்மையானவனுமான அவன் {சல்லியனின் தம்பி}, வலிமைமிக்கப் புயலால் வேரோடு சாய்க்கப்பட்ட பெரும் மலையென உயிரை இழந்து கீழே தரையில் விழுந்தான். அவனைப் பின்தொடர்ந்தவர்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.

அர்ஜுனன் மகனின் {அபிமன்யுவின்} அந்த அருஞ்செயலைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும் மிகவும் மகிழ்ந்து, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, “நன்று, நன்று” என்ற பேரொலிகளால் அவனை உற்சாகப்படுத்தின.

சல்லியனின் தம்பி இப்படிக் கொல்லப்பட்டதும், அவனைப் பின்தொடர்ந்தவர்கள் {மத்ரப் படைவீரர்கள்} பலர், தங்கள் குடும்பப் பெயர்கள், வசிப்பிடங்கள் மற்றும் பெயர்களை உரக்க அறிவித்து, சினத்தால் நிறைந்து, பல்வேறு ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} எதிர்த்து விரைந்தனர். சிலர் தேர்களிலும், சிலர் குதிரைகளிலும், சிலர் யானைகளிலும், இன்னும் சிலர் கால்களாலும் {காலாட்படையாகவும்} சென்றனர். அவர்கள் அனைவரும் கடும்பலம் கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் {மத்ரப் படையினர்}, தங்கள் கணைகளின் “விஸ்” ஒலி, தங்கள் தேர்ச்சக்கரங்களின் ஆழ்ந்த முழக்கங்கள், கடுங்கூக்குரல்கள், கதறல்கள், கூச்சல்கள், சிங்க முழக்கங்கள், நாண்கயிற்றின் உரத்த நாணொலிகள், தங்கள் உள்ளங்கைத் தட்டொலிகள் ஆகியவற்றால் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} அச்சுறுத்தியபடியே {அவனை நோக்கி} விரைந்தனர். அவர்கள் {அபிமன்யுவிடம்}, “நீ எங்களிடம் இருந்து இன்று உயிருடன் தப்ப மாட்டாய்” என்றனர். இப்படி அவர்கள் {மத்ரப் படைவீரர்கள்} சொன்னதைக் கேட்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, சிரித்துக் கொண்டே, அவர்களில் தன்னை முதலில் துளைத்தவனைத் தன் கணைகளால் துளைத்தான்.

அர்ஜுனனின் வீர மகன் {அபிமன்யு}, அழகும், பெரும் வேகமும் கொண்ட பல்வேறு ஆயுதங்களை வெளிப்படுத்திக் கொண்டு அவர்களுடன் மிதமாகவே போரிட்டான். வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} இருந்து தான் பெற்றிருந்த ஆயுதங்களையும், தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து தான் பெற்றிருந்த ஆயுதங்களையும், வாசுதேவனும், தனஞ்சயனும் பயன்படுத்தும் அதே வழியில் வெளிப்படுத்தினான். தான் சுமக்கும் கனமான சுமையை அலட்சியம் செய்த அவன் {அபிமன்யு}, அச்சமனைத்தையும் விட்டுத் தன் கணைகளை மீண்டும் மீண்டும் ஏவினான். குறிபார்ப்பதற்கும், கணையொன்றை விடுவதற்கும் இடையில் எந்த இடைவெளியையும் {அவனிடம்} காண முடியவில்லை. நடுங்கிக் கொண்டிருக்கும் அவனது வில், கூதிர்காலச் சூரியனின் சுடர்மிக்க வட்டிலைப் போல வட்டமாக வளைக்கப்படுவது மட்டுமே அனைத்துப் பக்கங்களிலும் காணப்பட்டது.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனது {அபிமன்யுவனது} வில்லின் நாணொலி மற்றும் அவனது உள்ளங்கைத் தட்டொலி ஆகியவற்றை, இடியுடன் கூடிய மேகங்கள் முழங்கி எதிரொலிப்பதைப் போல நாங்கள் கேட்டோம். பணிவு, கோபம், மேன்மையானவர்களுக்கு மரியாதை, மிகுந்த அழகு ஆகியவற்றைக் கொண்ட அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, பகைவீரர்கள் மீது கொண்ட மரியாதையின் காரணமாக அவர்களுடன் மிதமாகவே போரிட்டான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மழைக்காலம் முடிந்ததும் வரும் கூதிர்காலத்தின் பகலை உண்டாக்குபவனைப் போல அவன் {அபிமன்யு}, மென்மையாகத் தொடங்கிப் பின் படிப்படியாகக் கடுமையடைந்தான். சூரியன் தன் கதிர்களை வெளியிடுவதைப் போலக் கோபத்தால் நிறைந்த அபிமன்யு, தங்கச்சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கணைகளை ஏவினான். பரத்வாஜரின் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தக் கொண்டாடப்படும் வீரன் {அபிமன்யு}, கௌரவப்படையின் தேர்ப்பிரிவை பல்வேறு விதங்களிலான கணைகளால் மறைத்தான். அதன்பேரில், இப்படிப் பீடிக்கப்பட்ட அந்தப்படை , அபிமன்யுவின் கணைகளால் களத்தில் புறமுதுக்கிட்டோடின” {என்றான் சஞ்சயன்}.

அபிமன்யுவைக் கண்டு மகிழ்ந்த துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 037-அபிமன்யு செய்த கடும்போர்; அபிமன்யுவைக் கண்டு கிருபரிடம் மெச்சிய துரோணர்; அபிமன்யுவைக் கொல்ல கௌரவர்களைத் தூண்டிய துரியோதனன்; அபிமன்யுவைக் கொல்லப் போவதாகச் சொன்ன துச்சாசனன்; அபிமன்யுவுக்கும் துச்சாசனனுக்கும் இடையில் ஏற்பட்ட போர்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, என் மகனின் படை முழுவதையும் தனியாளாகத் தடுத்ததைக் கேட்டு, வெட்கம், மனநிறைவு ஆகிய பல்வேறு உணர்வுகளால் என் இதயம் கலங்குகிறது. ஓ! கவல்கணன் மைந்தா {சஞ்சயா}, அசுரப்படையுடன் மோதிய ஸ்கந்தனைப் {முருகனைப்} போலத் தெரியும் இளமைநிறைந்த அபிமன்யுவின் மோதலைக் குறித்து விவரமாக மீண்டும் எனக்கு அனைத்தையும் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஒருவனுக்கும், பலருக்கும் இடையில் நடந்த அந்தப் பயங்கர மோதலை, அந்தக் கடும்போரை அது நடந்தது போலவே நான் உமக்கு உரைக்கிறேன்.

தன் தேரில் ஏறிய அபிமன்யு, எதிரிகளைத் தண்டிப்பவர்களும், பெரும் வீரம் கொண்டவர்களும், தங்கள் தேர்களில் இருந்தவர்களுமான உமது படையின் போர்வீரர்கள் மீது தன் கணைகளைப் பெரும் துணிச்சலுடன் பொழிந்தான். அவன் {அபிமன்யு}, நெருப்பு வளையம் போல வேகமாகச் சுழன்று, துரோணர், கர்ணன், கிருபர், சல்லியன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, போஜகுலத்தின் கிருதவர்மன், பிருஹத்பலன், துரியோதனன், சோமதத்தன், வலிமைமிக்கச் சகுனி, பல்வேறு மன்னர்கள், பல்வேறு இளவரசர்கள், பல்வேறு அணிகளிலான துருப்பினர் ஆகியோரைத் {தன் கணைகளால்} துளைத்தான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேன்மையான ஆயுதங்களின் மூலம் தன் எதிரிகளைக் கொல்வதில் ஈடுபட்டவனும், வலிமையும் சக்தியும் கொண்டவனுமான சுபத்திரையின் வீரமகன் {அபிமன்யு}, எங்கும் இருப்பவனாகத் தெரிந்தான். அளவிலா சக்தி கொண்ட சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} நடத்தையைக் கண்ட உமது துருப்புகள் மீண்டும் மீண்டும் நடுங்கின.

அப்போது பெரும் ஞானியான பரத்வாஜர் மகன் {துரோணர்}, போரில் பெரும் திறம் கொண்ட அந்தப் போர்வீரனைக் {அபிமன்யுவைக்} கண்டு, மகிழ்ச்சியால் தன் கண்களை அகல விரித்து, கிருபரிடம் வந்து, {தன் பேச்சால்} உமது மகனின் {துரியோதனனின்} உயிரையே நசுக்கத்தக்க வகையில் அவரிடம் {கிருபரிடம்} பின்வரும் வார்த்தைகளைச் சொன்னார், “பார்த்தர்களுக்குத் தலைமையில் நிற்கும் இளமை நிறைந்த சுபத்திரை மகன் {அபிமன்யு}, தன் நண்பர்கள் அனைவருக்கும், மன்னன் யுதிஷ்டிரன், நகுலன், சகாதேவன், பாண்டுவின் மகனான பீமசேனன் ஆகியோருக்கும், தன் சொந்தங்கள் அனைவருக்கும், திருமணத்தால் உண்டான உறவினர்களுக்கும், போரில் கலந்து கொள்ளாமல் பார்வையாளர்களாக மட்டும் இந்தப் போரைக் கண்டு வருபவர்களுக்கும் மகிழ்வூட்டியபடியே அதோ வருகிறான். இந்தப் போரில் அவனுக்கு {அபிமன்யுவிற்கு} நிகராக எந்த வில்லாளியையும் நான் கருதவில்லை. அவன் {அபிமன்யு} மட்டும் விரும்பினானென்றால், இந்தப் பரந்த படையையே அவனால் கொல்ல முடியும். வேறு ஏதோ காரணத்திற்காக அவன் அதை விரும்பவில்லை என்றே தெரிகிறது” என்றார் {துரோணர்}.

துரோணர், அவர் உணர்ந்த மனநிறைவை நன்கு வெளிப்படுத்தும்படி சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் {துரியோதனன்}, அபிமன்யுவிடம் கொண்ட கோபத்துடனும் லேசாகச் சிரித்தபடியும் துரோணரைப் பார்த்தான். உண்மையில் துரியோதனன், கர்ணன், மன்னன் பாஹ்லீகன், துச்சாசனன், மத்ரர்களின் ஆட்சியாளன், உமது படையின் வலிமைமிக்கத்தேர்வீரர்கள் வேறு பலர் ஆகியோரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான், “பிரம்மத்தை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரான க்ஷத்திரிய குலத்தினர் அனைவரின் ஆசான் {துரோணர்}, உணர்வு மழுக்கத்தால் இந்த அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைக்} கொல்ல விரும்பவில்லை. போரில் ஆசானிடம் {துரோணரிடம்} எவனும் உயிரோடு தப்ப முடியாது. ஆசானை {துரோணரை} எதிர்த்து யமனே அவரது எதிரியாக வந்தாலும் அவனும் {எமனும்} அவரிடம் தப்ப முடியாது. ஓ! நண்பர்களே, வேறு எந்த மனிதனையும் குறித்து நான் என்ன சொல்வேன்? இதை நான் உண்மையாகவே சொல்கிறேன். இவனோ அர்ஜுனன் மகனாக இருக்கிறான், அர்ஜுனனோ ஆசானின் {துரோணரின்} சீடனாக இருக்கிறான். இதற்காகவே ஆசான் {துரோணர்} இந்த இளைஞனை {சிறுவனைக்} காக்க விரும்புகிறார். சீடர்கள், மகன்கள், அவர்களது மகன்கள் {பேரர்கள்} ஆகியோர் அறம் சார்ந்தோரின் {நல்லோரின்} அன்புக்குரியவர்களாகவே எப்போதும் இருக்கிறார்கள். துரோணரால் பாதுகாக்கப்படும் இந்த இளமைநிறைந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு} தன்னைப் பேராண்மை கொண்டவனாகக் கருதிக் கொள்கிறான். தன்னைத் தானே உயர்வாக மதித்துக் கொள்ளும் அவன் {அபிமன்யு} மூடன் மட்டுமே. எனவே, தாமதமில்லாமல் அவனை நசுக்குவீர்களாக” என்றான் {துரியோதனன்}.

குரு மன்னனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் போர்வீரர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்டு, தங்கள் எதிரியைக் கொல்ல விரும்பி, துரோணர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சாத்வத குலமகள் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நோக்கி விரைந்தனர்.

குறிப்பாக, குருக்களில் புலியான துச்சாசனன், துரியோதனனின் அந்த வார்த்தைகளைக் கேட்டு, பின்னவனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! ஏகாதிபதி {துரியோதனரே}, பாண்டவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பாஞ்சாலர்களின் கண்களுக்கு முன்பாகவே நான் அவனைக் கொல்வேன் என்று நான் உமக்குச் சொல்கிறேன். சூரியனை விழுங்கும் ராகுவைப் போல, நான் இன்று சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நிச்சயமாக விழுங்குவேன்” என்று பதிலுரைத்தான் {துச்சாசனன்}.

குரு மன்னனிடம் {துரியோதனனிடம்} மீண்டும் உரக்கப் பேசிய துச்சாசனன், “பெரும் வீணர்களான இரண்டு கிருஷ்ணர்களும் {கருப்பர்களான வாசுதேவனும், அர்ஜுனனும்}, என்னால் சுபத்திரையின் மகன் {அபிமன்யு} கொல்லப்பட்டான் என்பதைக் கேட்டு, மனிதர்களின் உலகை விட்டு இறந்தோருடைய ஆவிகளின் உலகத்திற்குச் {யமலோகத்திற்குச்} செல்வார்கள் என்பதில் ஐயமில்லை. பாண்டுவின் மனைவியருக்குப் பிறந்த பிற மகன்களும், இரண்டு கிருஷ்ணர்களின் மரணத்தைக் கேட்டுத் தங்கள் நண்பர்கள் அனைவருடன் சேர்ந்து துக்கத்தால் தங்கள் உயிரை ஒரே நாளில் விடுவார்கள் என்பதும் தெளிவு. எனவே, இந்த உமது ஒரு பகைவன் {அபிமன்யு} கொல்லப்பட்டால், உமது எதிரிகள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்பது தெளிவாகிறது. ஓ! மன்னா {துரியோதனரே}, எனக்கு நன்மையை விரும்புவீராக, இதோ நான் உமது எதிரியைக் கொல்லப் போகிறேன்” என்றான் {துச்சாசனன்}.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்த வார்த்தைகளைச் சொன்ன உமது மகன் துச்சாசனன், சினத்தால் நிறைந்து, உரக்க முழங்கியபடியே சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} எதிர்த்து விரைந்து கணை மழையால் அவனை {அபிமன்யுவை} மறைத்தான். பிறகு அபிமன்யு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, தன்னை நோக்கி கோபத்துடன் முன்னேறும் உமது மகனை கூர் முனைகளைக் கொண்ட இருப்பத்தாறு கணைகளால் வரவேற்றான். எனினும், சினத்தால் நிறைந்து, மதங்கொண்ட யானையைப் போலத் தெரிந்த துச்சாசனன், அந்தப் போரில் சுபத்திரையின் மகனான அபிமன்யுவுடன் தீவிரமாகப் போரிட்டான். தேர்ப்போரில் நிபுணர்களான அவ்விருவரும், இடப்புறம் ஒருவரும், வலப்புறம் மற்றவரும் எனத் தங்கள் தேர்களில் வட்டமாகச் சுழன்று போரிட்டனர். பிறகு அந்தப் போர்வீரர்கள், தங்கள் பணவங்கள், மிருதங்கங்கள், துந்துபிக்கள், கிரகசங்கள், பெரும் ஆனகங்கள், பேரிகைகள் மற்றும் ஜர்ஜரங்கள் ஆகியவற்றுடன் தங்கள் சிங்க முழக்கங்களையும் கலந்து, உப்புநீரின் கொள்ளிடமான பெருங்கடலில் இருந்து எழும் ஒலியைப் போலச் செவிடாக்கும்படி ஒலியை எழுப்பினர்” {என்றான் சஞ்சயன்}.

துச்சாசனனை மயக்கமடையச் செய்த அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 038-துச்சாசனனை நிந்தித்த அபிமன்யு; துச்சாசனனைத் தாக்கி மயக்கமடையச் செய்தது; கர்ணனிடம் பேசிய துரியோதனன்; கர்ணனுக்கு அபிமன்யுவுக்கும் இடையில் ஏற்பட்ட போர்; கர்ணனின் வில்லை அறுத்த அபிமன்யு; அபிமன்யுவை எதிர்த்த கர்ணனின் தம்பி…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, கணைகளால் சிதைக்கப்பட்ட அங்கங்களுடன் கூடியவனும், நுண்ணறிவு கொண்டவனுமான அபிமன்யு, தன் முன்பு நின்று கொண்டிருந்த தன் எதிரியான துச்சாசனனிடம் சிரித்துக் கொண்டே, “தற்புகழ்ச்சிகளை மோகத்துடன் சச்சரவு செய்பவர் எவரோ, நீதிகள் அனைத்தையும் எப்போதும் கைவிடுபர் எவரோ, குரூரருமானவர் எவரோ, அந்த வீண் வீரர் போரில் என் முன்பு நிற்பதை நற்பேறாலேயே நான் காண்கிறேன். (குருக்களின்) சபையில், மன்னர் திருதராஷ்டிரர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, உமது கடுமுரையால் மன்னர் யுதிஷ்டிரரை நீர் கோபப்படுத்தினீர். பகடையில் மோசடியையும், சுபலன் மகனின் {சகுனியின்} திறனையும் நம்பிய நீர், வெற்றியால் பித்துப் பிடித்து, பீமரிடம் பலவாறு பிதற்றினீர். அந்தச் சிறப்புமிக்கோரின் கோபத்தினால், இறுதியாக நீர் உமது நடத்தையின் கனியை அடையப்போகிறீர். ஓ! தீய புரிதல் கொண்டவரே {துச்சாசனரே}, பிறர் உடைமைகளைத் திருடியது, கோபம், அமைதியை வெறுத்தது, பேராசை, அறியாமை, (சொந்தங்களுடன்) பகை, அநீதி, துன்புறுத்தல், கடும் வில்லாளிகளான என் தந்தைமாரின் அரசை அவர்களை இழக்கச் செய்தது மற்றும் உமது கடும் மனோ நிலை ஆகியவற்றிற்கான கனியை {பலனைத்} தாமதமில்லாமல் பெறுவீராக. 

மொத்தப் படையும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இன்று என் கணைகளால் நான் உம்மைத் தண்டிக்கப் போகிறேன். உமக்கெதிராகக் கொண்டிருக்கும் கோபச்சுமையை இன்று நான் இறக்கி வைக்கப் போகிறேன். கோபம் கொண்ட கிருஷ்ணைக்கும் {அன்னை திரௌபதிக்கும்}, உம்மைத் தண்டிக்கும் சந்தர்ப்பத்திற்காக எப்போதும் ஏங்கும் என் தந்தைக்கும் {அர்ஜுனருக்கும்} நான் பட்ட கடனிலிருந்து இன்று நான் விடுபடப் போகிறேன். ஓ! கௌரவரே {துச்சாசனரே}, பீமருக்கு நான் பட்ட கடனிலிருந்தும் இன்று நான் விடுபடுவேன். உண்மையில் போரை நீர் கைவிடவில்லையெனில், உயிரோடு என்னிடம் இருந்து தப்ப மாட்டீர்” என்றான் {அபிமன்யு}.

இந்த வார்த்தைகளைச் சொன்னவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்த வீரன் {அபிமன்யு}, துச்சாசனனை அடுத்த உலகத்திற்கு அனுப்பவல்லதும், யமன், அல்லது அக்னி, அல்லது வாயுத்தேவனின் காந்தியைக் கொண்டதுமான கணையொன்றை குறிபார்த்தான். துச்சாசனனின் மார்பை விரைவாக அணுகிய அந்தக் கணை, அவனது தோள்ப்பூட்டில் பாய்ந்து, எறும்புப் புற்றுக்குள் செல்லும் பாம்பைப் போல, {கணையின்} சிறகுகள் வரை அவனது உடலுக்குள் ஊடுருவியது. மேலும் விரைவாக அபிமன்யு நெருப்பின் தீண்டலைக் கொண்டவையும், முழுமையாக வளைக்கப்பட்ட வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான இருபத்தைந்து கணைகளால் மீண்டும் அவனைத் தாக்கினான். ஆழமாகத் துளைக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்த துச்சாசனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேர்த்தட்டில் அமர்ந்தவாறே மயக்கமடைந்தான். இப்படிச் சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} கணைகளால் பீடிக்கப்பட்டுத் தன் உணர்வுகளை இழந்த துச்சாசனன், அவனது தேரோட்டியால் போருக்கு மத்தியில் இருந்து வேகமாக வெளியே சுமந்து செல்லப்பட்டான்.

இதைக் கண்டவர்களான பாண்டவர்கள், திரௌபதியின் மகன்கள் ஐவர், விராடன், பாஞ்சாலர்கள், கேகயர்கள் ஆகியோர் சிங்க முழக்கம் செய்தனர். மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவத் துருப்புகள் பல்வேறு இசைக்கருவிகளை அடிக்கவும் முழக்கவும் செய்தனர். சுபத்ரை மகனின் {அபிமன்யுவின்} அந்த அருஞ்செயலைக் கண்ட அவர்கள் மகிழ்ச்சியால் சிரித்தனர். யமன், மாருதன், சக்ரன் {இந்திரன்}, அசுவினி இரட்டையர் ஆகியோரின் உருவங்களைத் தங்கள் கொடிகளில் கொண்ட (ஐந்து) திரௌபதி மகன்கள், சாத்யகி, சேகிதானன், திருஷ்டத்யும்னன், சிகண்டி, கேகயர்கள், திருஷ்டகேது, மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவர்கள் ஆகிய அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தீராச்சினமும், செருக்குமுடைய தங்கள் எதிரி {துச்சாசனன்} இப்படி வீழ்த்தப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் துரோணரின் வியூகத்தைத் துளைக்கும் விருப்பத்துடன் வேகமாக விரைந்தனர். பிறகு, வெற்றி அடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டவர்களும், புறமுதுகிடாதவர்களுமான அந்தப் போர்வீரர்களுக்கும், எதிரியின் போர்வீரர்களுக்கும் இடையில் பயங்கரப் போர் ஒன்று நடைபெற்றது.

அந்தப் பயங்கரப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ராதையின் மகனுடன் {கர்ணனுடன்} பேசிய துரியோதனன், “எரிக்கும் சூரியனுக்கு ஓப்பான வீரத் துச்சாசனன், போரில் எதிரியைக் கொல்ல முயன்று இறுதியில் அபிமன்யுவுக்கு அடிபணிந்ததைப் பார். சினத்தால் தூண்டப்பட்டு வலிமைமிக்கக் கடுஞ்சிங்கங்களாகத் தெரியும் பாண்டவர்களும், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைக்} காக்க விரும்பி நம்மை நோக்கி விரைகின்றனர்” என்றான்.

இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன் சினங்கொண்டு, உமது மகனுக்கு {துரியோதனனுக்கு} நன்மை செய்ய விரும்பி, வெல்லப்பட முடியாத அபிமன்யுவின் மேல் கூரிய கணைகளை மழையாகப் பொழிந்தான். வீரக் கர்ணன், தன் எதிரியை {அபிமன்யுவை} அவமதிக்கும் வகையில், போர்க்களத்தில் பின்னவனை {எதிரியான அபிமன்யுவைப்} பின் தொடர்ந்து வருவரையும் பெரும் கூர்மை கொண்ட சிறந்த கணைகள் பலவற்றால் துளைத்தான். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரை எதிர்த்துச் செல்ல விரும்பிய உயர் ஆன்ம அபிமன்யு, எழுபத்துமூன்று கணைகளால் ராதையின் மகனை {கர்ணனைத்} துளைத்தான்.

கௌரவப் படையின் தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரையும் பீடித்துக் கொண்டிருந்தவனும், இந்திரனின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு} மகனுமான அபிமன்யு, துரோணரிடம் செல்வதைத் தடுப்பதில் உமது படையில் எந்தத் தேர்வீரனும் அந்நேரத்தில் வெல்லவில்லை. வில்லாளிகள் அனைவரிலும் பெருமதிப்புக்கு உரியவனான கர்ணன், வெற்றியடைய விரும்பி, தன் சிறந்த ஆயுதங்களை எடுத்து நூற்றுக்கணக்கான கணைகளால் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைத்} துளைத்தான். ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவனும், {பரசு} ராமரின் வீரச் சீடனுமான அவன் {கர்ணன்}, எதிரிகளால் தோற்கடிக்கப்பட முடியாத அபிமன்யுவைத் தன் ஆயுதங்களின் மூலம் இப்படிப் பீடித்தான்.

ஆயுத மழையால் ராதையின் மகனால் {கர்ணனால்} போரில் பீடிக்கப்பட்டாலும், (ஆற்றலில்) தேவர்களையே ஒத்திருந்த அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு} எந்த வலியையும் உணரவில்லை. அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையுமான தன் கணைகளைக் கொண்டு வீரப் போர்வீரர்கள் பலரின் விற்களை வெட்டி, பதிலுக்குக் கர்ணனைப் பீடிக்கத் தொடங்கினான். அபிமன்யு சிரித்துக் கொண்டே, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், வட்டமாக வளைக்கப்பட்ட வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான கணைகளால் கர்ணனின் குடை, கொடிமரம், தேரோட்டி மற்றும் குதிரைகளை விரைவாக வெட்டினான்.

பிறகு கர்ணன் அபிமன்யுவின் மேல் ஐந்து நேரான கணைகளை ஏவினான். எனினும், பல்குனன் மகனோ {அபிமன்யுவோ} அவற்றை அச்சமற்றவகையில் வரவேற்றான். பெரும் வீரமும் தீரமும் கொண்ட பின்னவன் {அபிமன்யு}, ஒரே ஒரு கணையால் கர்ணனின் வில் மற்றும் கொடிமரத்தை வெட்டி ஒரு கணத்தில் அவற்றைக் கீழே தரையில் விழச் செய்தான். இத்தகு துயரில் இருக்கும் கர்ணனைக் கண்ட அவனது தம்பி {கர்ணனின் தம்பி}, பெரும் பலத்துடன் வில்லை வளைத்துக் கொண்டு, சுபத்திரையின் மகனை எதிர்த்து வேகமாகச் சென்றான். பிறகு பார்த்தர்களும், அவர்களைப் பின்தொடர்பவர்களும், உரக்க கர்ஜித்துத் தங்கள் இசைக்கருவிகளை முழக்கி சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} (அவனது வீரத்திற்காக} மெச்சினார்கள்” {என்றான் சஞ்சயன்}.

கர்ணனைப் புறமுதுகிடச் செய்த அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 039-கர்ணனின் தம்பியைக் கொன்று, கர்ணனைப் புறமுதுகிடச் செய்த அபிமன்யு; அபிமன்யு செய்த கடும்போர்; போர்க்களத்தின் நிலவரம் …

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உரக்க முழங்கி வந்த கர்ணனின் தம்பி [1], கையில் வில்லுடன், மீண்டும் மீண்டும் நாண் கயிற்றை இழுத்த படியே விரைவாகத் தன்னை அந்தச் சிறந்த இரு வீரர்களுக்கு மத்தியில் நிறுத்திக் கொண்டான். மேலும் அந்தக் கர்ணனின் தம்பி, சிரித்துக் கொண்டே, வெல்லப்பட முடியாத அபிமன்யுவின் குடை, கொடிமரம், தேரோட்டி மற்றும் குதிரைகளைப் பத்து கணைகளால் துளைத்தான். மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளை அபிமன்யு தன் தந்தையை {அர்ஜுனனைப்} போலவும், பாட்டனைப் போலவும் ஏற்கெனவே அடைந்திருந்தாலும், அந்தக் கணைகளால் அவன் {அபிமன்யு} இப்படிப் பீடிக்கப்பட்டதைக் கண்ட உமது படையின் போர்வீரர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.-அப்போது, வில்லைப் பலமாக வளைத்த அபிமன்யு, சிரித்துக் கொண்டே, தன் எதிராளியின் {கர்ணன் தம்பியின்} தலையைச் சிறகு படைத்த கணை ஒன்றால் அறுத்தான். உடலில் இருந்து அறுக்கப்பட்ட அந்தத் தலை கீழே பூமியில் விழுந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோங்கு மரம் ஒன்று உலுக்கப்பட்டு, மலையின் உச்சியிலிருந்து காற்றால் தூக்கி வீசப்பட்டதைப் போலத் தன் தம்பி கொல்லப்பட்டு வீழ்த்தப்படுவதைக் கண்ட கர்ணன் வலியால் நிறைந்தான். அதேவேளையில், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் கணைகளின் மூலம் கர்ணனைக் களத்தில் இருந்து ஓடச் செய்து பெரும் வில்லாளிகள் பிறரை எதிர்த்து வேகமாக விரைந்தான் [2]. பிறகு, கடும் சக்தியும், பெரும் புகழும் கொண்ட அபிமன்யு, கோபத்தால் நிறைந்து, யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்கள் நிறைந்த பல்வேறு படையணிகளைக் கொண்ட அந்தப் படையைப் பிளந்தான். கர்ணனைப் பொறுத்தவரை, அபிமன்யுவின் எண்ணிலடங்கா கணைகளால் பீடிக்கப்பட்ட அவன், வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டுக் களத்தில் இருந்து தப்பி ஓடினான். பிறகு அந்தக் கௌரவப்படை உடைந்தது [3].விட்டிற்பூச்சிகளின் கூட்டத்தைப் போலவோ, அடர்த்தியான மழைப்பொழிவைப் போலவோ இருந்த அபிமன்யுவின் கணைகளால் ஆகாயம் மறைக்கப்பட்ட போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, {யாராலும்} எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அபிமன்யுவின் கூரிய கணைகளால் இப்படிக் கொல்லப்பட்ட உமது போர்வீரர்களில் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைத்} தவிரப் போர்க்களத்தில் வேறு எவனும் நீடிக்கவில்லை.

பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் காளையான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் சங்கை முழக்கியபடி பாரதப் படையின் மீது வேகமாகப் பாய்ந்தான். உலர்ந்த வைக்கோலுக்கு மத்தியில் வீசப்பட்ட எரியும் கொள்ளியைப் போல, அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, கௌரவப் படையினூடாக விரைவாகத் திரிந்து தன் எதிரிகளை எரிக்க ஆரம்பித்தான். அவர்களின் வியூகத்தைத் {சக்கரவியூகத்தைத்}  துளைத்த அவன் {அபிமன்யு}, தன் கூரிய கணைகளால் தேர்களையும், யானைகளையும், குதிரைகளையும், மனிதர்களையும் சிதைத்து, போர்க்களத்தைத் தலையற்ற முண்டங்களால் நிறைத்தான்.

சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} வில்லில் இருந்து ஏவப்பட்ட சிறந்த கணைகளால் வெட்டப்பட்ட கௌரவப் போர்வீரர்கள் தப்பி ஓடினர், அப்படி ஓடுகையில், தங்கள் முன்பு நின்ற தங்கள் தோழர்களைக் கொன்றபடியே ஓடினர். கல்லில் கூராக்கப்பட்டவையும், பயங்கர விளைவுகளை ஏற்படுத்துபவையுமான அந்த எண்ணற்றக் கடுங்கணைகள், தேர்வீரர்களையும், யானைகளையும், குதிரைகளையும் கொன்றபடி களத்தில் வேகமாகப் பாய்ந்தன.

அங்கதங்களுடனும், தங்க ஆபரணங்கள் பிறவற்றுடனும் இருந்த தோள்களும், தோலுறைகளால் மறைக்கப்பட்ட கரங்களும், கணைகளும், விற்களும், உடல்களும், குண்டலங்கள் மற்றும் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட தலைகளும் களத்தில் ஆயிரக்கணக்கில் கிடந்தன. ஆயிரக்கணக்கான உபஷ்கரங்கள் {கருவிகள்}, அதிஸ்தானங்கள் {இருக்கைப் பீடங்கள்}, நீண்ட ஏர்க்கால்கள், முறிந்த அக்ஷங்கள் {அச்சுகள்}, உடைந்த சக்கரங்கள், நுகத்தடிகள் ஆகியவற்றால் தடுக்கப்பட்டு, ஈட்டிகள், விற்கள், வாள்கள், விழுந்த கொடிமரங்கள், கேடயங்கள், விற்கள் ஆகியவை எங்கும் கிடக்க, கொல்லப்பட்ட க்ஷத்திரியர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றின் உடல்களுடன் மிகப் பயங்கரமாகத் தெரிந்த அந்தப் போர்களமானது விரைவில் கடக்கப்பட முடியாததாக மாறியது.

ஒருவரை ஒருவர் அழைத்த இளவரசர்கள், அபிமன்யுவால் கொல்லப்பட்ட போது உண்டாகிய ஒலி செவிடாக்குவதாகவும், மருண்டோரின் அச்சங்களை அதிகப்படுத்துவதாகவும் இருந்தது. ஓ! பாரதர்களில் தலைவரே {திருதராஷ்டிரரே}, அந்த ஒலிகள் திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்தன. (கௌரவத்) துருப்புகளை எதிர்த்து விரைந்த சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, முதன்மையான தேர்வீரர்களையும், குதிரைகளையும், யானைகளையும் கொன்றான். தன் எதிரிகளை விரைவாக எரித்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, உலர்ந்த வைக்கோலுக்கு மத்தியில் விளையாடும் நெருப்பைப் போலப் பாரதப் படைக்கு மத்தியில் திரிவது தெரிந்தது.

நம் துருப்புகளால் சூழப்பட்டுப் புழுதியால் மறைக்கப்பட்ட அவன் {அபிமன்யு}, களத்தில் முக்கிய மற்றும் துணைத் திசைகள் அனைத்திலும் திரிந்து கொண்டிருக்கையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} எங்களில் எவராலும் அந்தப் போர் வீரனை {அபிமன்யுவைப்} பார்க்க முடியவில்லை. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவன் {அபிமன்யு}, கிட்டத்தட்ட தொடர்ச்சியாகக் குதிரைகள், யானைகள் மற்றும் மனிதப் போர்வீரர்கள் ஆகியோரின் உயிரை எடுத்தான். அதன் பிறகு உடனே (அங்கிருந்து வெளிப்படும்) அவனை நாங்கள் கண்டோம். உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (தன் கதிர்களால் அனைத்தையும் எரிக்கும்) உச்சிவானத்துச் சூரியனைப் போல அவன் {அபிமன்யு} தன் எதிரிகளை எரித்துக் கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம். வாசவனுக்கு {இந்திரனுக்கு} இணையானவனும், வாசவனின் மகனுக்கு மகனுமான அபிமன்யு (பகைவரின்) படைக்கு மத்தியில் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.

ஜெயத்ரதனுக்கு வரமளித்த மகாதேவன் ! – துரோண பர்வம் பகுதி – 040-அபிமன்யுவைப் பின்தொடர்ந்து சென்ற பாண்டவ வீரர்கள்; பாண்டவர்களைத் தடுத்த ஜெயத்ரதன்; முற்காலத்தில் ஜெயத்ரதன் செய்த தவம்; ஜெயத்ரதனுக்கு வரமளித்த மகாதேவன்; முந்தைய வரத்தின் பலனாகப் பாண்டவர்களைப் போர்க்களத்தில் தடுத்த ஜெயத்ரதன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வயதால் வெறும் குழந்தையும் {பாலனும்}, பெரும் ஆடம்பரத்துடன் வளர்க்கப்பட்டவனும், தன் கரங்களின் வலிமையில் செருக்குடையவனும், போரில் சாதித்தவனும், பெரும் வீரம் கொண்டவனும், தன் குலத்தைத் தழைக்க வைப்பவனும், தன் உயிரைவிடத் தயாராக இருந்தவனுமான அந்த அபிமன்யு, உற்சாகமும் தீரமும் கொண்ட அவனது மூன்று வயது குதிரைகளால் சுமக்கப்பட்டுக் கௌரவப் படைக்குள் ஊடுருவிய போது, அந்த அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} யுதிஷ்டிரப் படையின் பெரும் தேர்வீரர்கள் எவரேனும் பின்தொடர்ந்து சென்றனரா?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “யுதிஷ்டிரன், பீமசேனன், சிகண்டி, சாத்யகி, இரட்டையர்களான நகுலன் மற்றும் சகாதேவன், திருஷ்டத்யும்னன், விராடன், துருபதன், கேகயன்{ர்கள்}, திருஷ்டகேது ஆகியோர் அனைவரும், மத்ஸ்ய வீரர்களும் கோபத்தால் நிறைந்து போருக்கு விரைந்தனர். உண்மையில், எதிரிகளைத் தாக்குபவர்களான அபிமன்யுவின் தந்தைமாரும், தாய்மாமன்களும், அபிமன்யுவைக் காக்க விரும்பி, போருக்காக அணிவகுத்து, அவன் {அபிமன்யு, வியூகத்தைப் பிளந்து} உண்டாக்கிய அதே பாதையில் சென்றனர். அவ்வீரர்கள் விரைந்து வருவதைக் கண்ட உமது துருப்புகள் போரில் இருந்து பின்வாங்கின.

அப்போது, பெரும் சக்தி கொண்ட உமது மருமகன் {ஜெயத்ரதன்}, போரில் இருந்து உமது அந்தப் பெரும்படை திரும்புவதைக் கண்டு, அவர்களை அணிதிரட்டுவதற்காக விரைந்தான். உண்மையில், சிந்துக்களின் ஆட்சியாளனான மன்னன் ஜெயத்ரதன், தங்கள் மகனைக் காக்க விரும்பிய பார்த்தர்களையும், அவர்களைப் பின் தொடர்பவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினான். கடுமையானவனும், பெரும் வில்லாளியுமான அந்த விருத்தக்ஷத்திரன் மகன் {ஜெயத்ரதன்}, தெய்வீக ஆயுதங்களை இருப்புக்கு அழைத்து, பள்ளத்தாக்கில் விளையாடும் யானையைப் போலப் பாண்டவர்களைத் தடுத்தான்” {என்றான் சஞ்சயன்}.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சஞ்சயா, தங்கள் மகனைக் காக்க விரும்பிய கோபக்காரப் பாண்டவர்களைத் தனி ஒருவனாகத் தடுத்து நின்ற சிந்துக்களின் ஆட்சியாளன் மீது கனமான சுமை ஏற்றப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். சிந்துக்கள் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} வலிமையும், வீரமும் மிக அற்புதமானது என்று நான் நினைக்கிறேன். அந்த உயர் ஆன்ம வீரனின் ஆற்றலையும், அவன் அந்த முதன்மையான அருஞ்செயல்களை எப்படிச் சாதித்தான் என்பதையும் எனக்குச் சொல்வாயாக. அவன் {ஜெயத்ரதன்}, கோபத்தால் தூண்டப்பட்டிருந்த பாண்டவர்களைத் தடுப்பதில் வென்றது எதன் விளைவாக? அவன் என்ன தானங்களைச் செய்தான்? என்ன நீர்க்காணிக்கைகளை ஊற்றினான் {என்ன ஆகுதி செய்தான்}? என்ன வேள்விகளைச் செய்தான்? என்ன தவத்துறவுகளை மேற்கொண்டான்? [1]” என்று கேட்டான்.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஜெயத்ரதன், திரௌபதியை அவமதித்த நிகழ்வின் போது, பீமசேனனால் அவன் வீழ்த்தப்பட்டான். தான் பட்ட அவமானத்தை ஆழமாக உணர்ந்த அந்த மன்னன் {ஜெயத்ரதன்}, ஒரு வரத்தை விரும்பி கடும் தவத்தைச் செய்தான். புலன்களுக்கு விருப்பமான பொருட்களில் இருந்து அவற்றை {புலன்களை} விலக்கி, பசி, தாகம் மற்றும் வெப்பத்தைத் தாங்கிக் கொண்ட அவன் {ஜெயத்ரதன்}, புடைக்கும் நரம்புகள் தெரியும்வண்ணம் தன் உடலைக் குறைத்தான். வேதங்களின் அழியாத வார்த்தைகளை உச்சரித்த அவன் {ஜெயத்ரதன்}, தெய்வமான மகாதேவனுக்கு {சிவனுக்குத்} தன் வழிபாட்டைச் செலுத்தினான். தன்னை வழிபடுவோரிடம் {தன் பக்தர்களிடம்} எப்போதும் கருணை கொண்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {சிவன்}, இறுதியாக அவனிடம் {ஜெயத்ரதனிடம்} அன்புகூர்ந்தான்.

உண்மையில், சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனுடைய} கனவில் தோன்றிய ஹரன் {சிவன்}, அவனிடம் {ஜெயத்ரதனிடம்}, “நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக. ஓ! ஜெயத்ரதா, நான் உன்னிடம் மனம்நிறைந்தேன். நீ எதை விரும்புகிறாய்?” என்று கேட்டான். மஹாதேவனால் {சிவனால்} இப்படிக் கேட்கப்பட்ட சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், கூப்பிய கரங்களுடனும், ஒடுங்கிய ஆன்மாவுடனும் அவனை {சிவனைப்} பணிந்து, “தனித்தேரில் ஒருவனாக இருக்கும் நான், பயங்கர சக்தியும் ஆற்றலும் கொண்ட பாண்டு மகன்கள் அனைவரையும் போரில் தடுக்க வேண்டும்” என்று கேட்டான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அவன் கேட்ட வரம் இதுவேயாகும்.

இப்படி வேண்டப்பட்டதும், ஜெயத்ரதனிடம் அந்த முதன்மையான தேவன் {சிவன்}, “ஓ! இனியவனே, நான் {அந்த} வரத்தை அளிக்கிறேன். பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தவிர, பாண்டுவின் மற்ற நான்கு மகன்களையும் போரில் நீ தடுப்பாய் [2]” என்றான். “அப்படியே ஆகட்டும்” என்று தேவர்களின் தலைவனிடம் {சிவனிடம்} சொன்ன ஜெயத்ரதன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிறகு தன் குறைத்தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தான்.தான் பெற்ற வரம் மற்றும் தன் தெய்வீக ஆயுதங்களின் பலம் ஆகியவற்றின் விளைவாக, அந்த ஜெயத்ரதன், தனியொருவனாகவே, பாண்டவர்களின் மொத்தப்படையையும் தடுத்து நிறுத்தினான். அவனது நாண்கயிற்றின் நாணொலியும், உள்ளங்கைகளின் தட்டொலியும் {தலத்வனியும்} பகைவரின் படையில் அச்சத்தைத் தோற்றுவித்த அதே வேளையில், உமது துருப்புகளை மகிழ்ச்சியில் நிறைத்தன. சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஏற்றுக் கொண்ட சுமையைக் கண்ட (குரு படையின்) க்ஷத்திரியர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, களத்தில் யுதிஷ்டிரனின் படை இருந்த இடத்திற்கு உரத்த ஆரவாரத்துடன் விரைந்தனர்” {என்றான் சஞ்சயன்}. 

உடைந்த வியூகத்தை அடைத்த ஜெயத்ரதன்! – துரோண பர்வம் பகுதி – 041-ஜெயத்ரதனின் அற்றல் குறித்து விவரித்த சஞ்சயன்; ஜெயத்ரதனோடு மோதிய யுதிஷ்டிரனும் பீமனும்; அபிமன்யுவால் பிளக்கப்பட்ட வியூகத்தை அடைத்த ஜெயத்ரதன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனுடைய} ஆற்றலைக் குறித்து நீர் என்னைக் கேட்டீர். அவன் {ஜெயத்ரதன்} பாண்டவர்களோடு எவ்வாறு போரிட்டான் என்பதை விவரிக்கிறேன் கேளும். நன்கு பழக்கப்பட்டவையும், மனோவேகம் கொண்டவையும், தேரோட்டியின் கட்டளைகளுக்குக் கீழ்படிபவையும் சிந்து இனத்தைச் சேர்ந்தவையுமான பெரிய குதிரைகள் (அச்சந்தர்ப்பத்தில்} அவனைச் சுமந்தன. முறையாகத் தயாரிக்கப்பட்டிருந்த அவனது தேர், ஆகாயத்தின் நீர் மாளிகையை {மேகத்தைப்} போலத் தெரிந்தது. வெள்ளியிலான பெரிய பன்றியின் உருவத்தைத் தாங்கியிருந்த அவனது கொடிமரம் மிக அழகாகத் தெரிந்தது. அரசக் குறியீடுகளான வெண் குடை, கொடிகள், அவனுக்கு {ஜெயத்ரதனுக்கு} விசிறுவதற்காகப் பயன்பட்ட காட்டெருதின் வால்கள் {சாமரங்கள்} ஆகியவற்றோடு அவன் ஆகாயத்தில் இருக்கும் சந்திரனைப் போல ஒளிர்ந்தான். இரும்பாலான அவனது தேர்க்கூடு முத்துக்களாலும், வைரங்களாலும், ரத்தினங்களாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆகாயத்தில் சிதறிக் கிடக்கும் ஒளிக்கோள்கள் போல அது பிரகாசாமாகத் தெரிந்தது.

தன் பெரிய வில்லை வளைத்து எண்ணற்ற கணைகளை இறைத்த அவன் {ஜெயத்ரதன்}, எங்கெல்லாம் அர்ஜுனன் மகன் {அபிமன்யு} அந்த வியூகத்தில் {சக்கரவியூகத்தில்} பிளவுகளை {திறப்புகளை} உண்டாக்கினானோ, அந்த இடங்களை மீண்டும் அடைத்தான். அவன் {ஜெயத்ரதன்}, மூன்று கணைகளால் சாத்யகியையும், விருகோதரனை {பீமனை} எட்டாலும் துளைத்தான்; திருஷ்டத்யும்னனை அறுபது கணைகளால் துளைத்த அவன், கூரிய கணைகள் ஐந்தால் துருபதனையும், பத்தால் சிகண்டியையும் துளைத்தான். இருபது கணைகளால் கைகேயர்களைத் துளைத்த ஜெயத்ரதன், திரௌபதி மகன்கள் ஐவரில் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்தான். மேலும் எழுபது கணைகளால் யுதிஷ்டிரனைத் துளைத்த சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, அடர்த்தியான கணை மழையால் பாண்டவப் படையின் பிற வீரர்களைத் துளைத்தான். அவனது {ஜெயத்ரதனின்} அந்த அருஞ்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது.

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஜெயத்ரதனின் வில்லைக் குறிபார்த்த தர்மனின் வீர மகன் {யுதிஷ்டிரன்}, நன்கு கடினமாகப்பட்ட பளபளக்கும் கணையொன்றால் அஃதை அறுத்தான். எனினும், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மற்றொரு வில்லை எடுத்த சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, பார்த்தனை (யுதிஷ்டிரனைப்) பத்து கணைகளால் துளைத்து, மற்றவர்கள் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் தாக்கினான்.

ஜெயத்ரன் வெளிப்படுத்திய கரநளினத்தைக் குறித்துக் கொண்ட பீமன், மூன்று பல்லங்களால் அவனது {ஜெயத்ரதனது} வில், கொடிமரம் மற்றும் குடையை அறுத்தான். பிறகு மற்றொரு வில்லை எடுத்த வலிமைமிக்க ஜெயத்ரதன், அதில் நாணேற்றி பீமனின் கொடிமரம், வில் மற்றும் குதிரைகளை வீழ்த்தினான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வில்லறுந்த பீமசேனன், குதிரைகள் கொல்லப்பட்ட அந்தச் சிறந்த தேரில் இருந்து கீழே குதித்து, மலையின் உச்சிக்குக் குதித்து ஏறும் சிங்கத்தைப் போல, சாத்யகியின் தேரில் ஏறினான்.

இதைக் கண்ட உமது துருப்புகள் மகிழ்ச்சியால் நிறைந்தன. அவர்கள், “நன்று! நன்று” என்று உரக்க முழங்கினார்கள். மேலும் அவர்கள் சிந்துக்கள் ஆட்சியாளனின் {ஜெயத்ரதனின்} அந்த அருஞ்செயலை மீண்டும் மீண்டும் மெச்சினார்கள். உண்மையில், சேர்ந்திருக்கும் பாண்டவர்கள் அனைவரையும், கோபத்தால் தூண்டப்பட்டுத் தனி ஒருவனாகத் தடுத்த அவனது அந்த அருஞ்செயலை உயிர்களனைத்தும் உயர்வாக மெச்சின.

சுபத்திரையின் மகன் {அபிமன்யு} எண்ணற்ற போர்வீரர்களையும் யானைகளையும் கொன்று பாண்டவர்களுக்காக ஏற்படுத்திய பாதை, சிந்துக்களின் ஆட்சியாளனால் {ஜெயத்ரதனால்} நிரப்பப்பட்டது {அடைக்கப்பட்டது}. உண்மையில், வீரர்களான மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள், கைகேயர்கள், பாண்டவர்கள் ஆகியோர் தீவிரமாக முயன்று ஜெயத்ரதனின் முன்னிலையை அடைந்தாலும், அவர்கள் ஒருவராலும் அவனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. துரோணரால் அமைக்கப்பட்ட அந்த வியூகத்தைத் {சக்கரவியூகத்தைத்} துளைக்க முயன்ற உமது எதிரிகளில் ஒவ்வொருவரும், (மகாதேவனிடம்) பெற்ற வரத்தின் விளைவால் சிந்துக்களின் ஆட்சியாளனால் {ஜெயத்ரதனால்} தடுக்கப்பட்டனர்” {என்றான் சஞ்சயன்}.

வசாதீயனைக் கொன்ற அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 042-தேரோட்டியைக் கொன்று விருஷசேனனைக் களத்தை விட்டு விரட்டிய அபிமன்யு; வசாதீயனைக் கொன்றது; கௌரவ வீரர்களை மூர்க்கமாகத் தாக்கி களத்தை உயிரற்ற சடலங்களாலும் போர்க்கருவிகளாலும் நிறைத்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வெற்றியை விரும்பிய பாண்டவர்களைச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} தடுத்தபோது, உமது துருப்புகளுக்கும், எதிரியின் துருப்புகளுக்கும் இடையில் நடைபெற்ற போரானது அச்சந்தரும் வகையில் இருந்தது. வெல்லப்பட முடியாதவனும், இலக்கில் துல்லியம், வலிமை, சக்தி ஆகியவற்றைக் கொண்டவனுமான அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, பெருங்கடலைக் கலங்கடிக்கும் மகரத்தைப் போலக் (கௌரவ) வியூகத்திற்குள் {சக்கரவியூகத்திற்குள} ஊடுருவி அதைக் கலங்கடித்தான். எதிரிகளைத் தண்டிப்பவனும், தன் கணை மழையால் இப்படிப் பகைவரின் படையைக் கலங்கடித்துக் கொண்டிருந்தவனுமான சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை}, கௌரவப் படையின் முக்கிய வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தரத்துக்கும், முன்னுரிமைக்கும் தக்கபடி {வரிசை முறைப்படி} எதிர்த்து விரைந்தனர்.

பெரும் பலத்துடன் தங்கள் கணை மழையை இறைத்த அந்த அளவிலா சக்தி கொண்டவர்கள் ஒரு புறமும், தனியனான அபிமன்யு ஒருபுறமும் என நடந்த அந்த மோதல் அச்சந்தருவதாகவே இருந்தது. தேர்க்கூட்டங்களுடன் கூடிய அவ்வெதிரிகளால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்ட அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, {கர்ணன் மகனான} விருஷசேனனின் தேரோட்டியைக் கொன்று, அவனது வில்லையும் அறுத்தான். பிறகு, வலிமைமிக்க அந்த அபிமன்யு தன் நேரான கணைகளால் விருஷசேனனின்  குதிரைகளைத் துளைத்தான். காற்றின் வேகத்தைக் கொண்ட அந்தக் குதிரைகள், இதனால், போர்க்களத்திற்கு வெளியே விருஷசேனனைச் சுமந்து சென்றன.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அபிமன்யுவின் தேரோட்டி, அந்த நெருக்கமான போரில் இருந்து, களத்தின் வேறு பகுதிக்குக் கொண்டு சென்று அவனது தேரை விடுவித்துக் கொண்டான். (இந்த அருஞ்செயலைக்) கண்ட எண்ணற்ற தேர்வீரர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து “நன்று! நன்று!” என்றனர்.

சிங்கத்தைப் போன்ற அபிமன்யு, தன் கணைகளால் எதிரிகளைக் கோபத்துடன் கொல்வதைக் கண்ட வசாதீயன் {வஸாதீயன்} [1], தூரத்தில் இருந்து முன்னேறி வந்து, பெரும்பலத்துடன் அவன் மீது வேகமாகப் பாய்ந்தான். பின்னவன் {வசாதீயன்}, தங்கச் சிறகுகள் கொண்ட அறுபது கணைகளால் அபிமன்யுவைத் துளைத்து, அவனிடம் {வசாதீயன் அபிமன்யுவிடம்}, “நான் உயிரோடு உள்ளவரை, உன்னால் உயிருடன் தப்ப முடியாது” என்றான். அவன் {வசாதீயன்} இரும்புக் கவசத்தை அணிந்திருந்தாலும், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}  நீண்ட தூரம் செல்லும் கணை ஒன்றால் அவனது மார்பைத் துளைத்தான். அதன் பேரில் வசாதீயன் உயிரை இழந்து கீழே பூமியில் விழுந்தான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} வசாதீயன் கொல்லப்பட்டதைக் கண்ட க்ஷத்திரியக் காளையர் பலர், கோபத்தால் நிறைந்து, உமது பேரனை {அபிமன்யுவைக்} கொல்ல விரும்பி, அவனைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள், பல்வேறு விதங்களிலான தங்கள் எண்ணற்ற விற்களை வளைத்தபடியே அவனை அணுகினர். அதன் பிறகு, சுபத்திரையின் மகனுக்கும் {அபிமன்யுவுக்கும்}, அவனது எதிரிகளுக்கும் இடையில் நடைபெற்ற போரானது மிகக் கடுமையானதாக இருந்தது.

கோபத்தால் நிறைந்த பல்குனன் மகன் {அபிமன்யு}, அவர்களின் விற்கள், கணைகள், அவர்களது உடலின் பல்வேறு அங்கங்கள், குண்டலங்களாலும், மலர்மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்களது தலைகள் ஆகியவற்றை வெட்டி வீழ்த்தினான்.

பல்வேறு தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தவையும், வாள்கள், பரிகங்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றைக் கொண்டவையும், தோல் கையுறைகள் அணிந்த விரல்களுடன் கூடியவையுமான {வீரர்களின்} கரங்கள் வெட்டப்பட்டு அங்கே காணப்பட்டது. மலர்மாலைகள், ஆபரணங்கள், ஆடைகள், விழுந்திருக்கும் கொடிமரங்கள், கவசங்கள், கேடயங்கள, தங்க ஆரங்கள், கிரீடங்கள், குடைகள், சாமரங்கள், உபஷ்கரங்கள் {பிற கருவிகள்}, அதிஸ்தானங்கள் {தேர்வீரர் அமரும் பீடங்கள்}, தண்டகங்கள் {ஏர்க்கால்கள்}, வந்தூரங்கள் {தேரோட்டி அமரும் பீடங்கள்}, நொறுக்கப்பட்ட அக்ஷங்கள் {அச்சுக்கள்}, ஆயிரக்கணக்கில் உடைந்து கிடந்த சக்கரங்கள் மற்றும் நுகத்தடிகள், அனுகரஷங்கள் {அண்டைமரங்கள்}, கொடிகள், தேரோட்டிகள், குதிரைகள், உடைக்கப்பட்ட தேர்கள், கொல்லப்பட்ட யானைகள் மற்றும் குதிரைகள் ஆகியவை பூமியில் பரவிக் கிடந்தன.

வெற்றியில் உள்ள விருப்பத்தால் ஈர்க்கப்பட்டவர்களும், (உயிரோடு இருந்த போது) வீரத்துடன் கூடிய க்ஷத்திரியர்களுமான பல்வேறு மாநிலங்களின் ஆட்சியாளர்கள் கொல்லப்பட்டு {அவர்களின் உடல்களால்} பரவிக் கிடந்த போர்க்களமானது அச்சந்தரும் காட்சியை அளித்தது.

அபிமன்யு கோபத்துடன் போர்க்களத்தின் அனைத்துத் திசைகளிலும் திரிந்த போது, அவனது வடிவமே காணப்படாமல் போனது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அவனது கவசம், அவனது ஆபரணங்கள், வில், கணைகள் ஆகியவை மட்டுமே காணப்பட்டன. உண்மையில், அவன் தன் கணைகளால் பகை வீரர்களைக் கொன்று வருகையில், அவர்களுக்கு மத்தியில் சூரியனைப் போலச் சுடர்மிகும் பிரகாசத்துட்ன இருந்த அவனை, எவராலும் தங்கள் கண்களால் காண முடியவில்லை” {என்றான் சஞ்சயன்}

அபிமன்யுவிடம் புறமுதுகிட்ட துரியோதனன்! – துரோண பர்வம் பகுதி – 043-சத்தியசிரசைப் பீடித்த அபிமன்யு; அபிமன்யுவை நோக்கி விரைந்த ருக்மரதன்; அபிமன்யுவைப் பீடித்த ருக்மரதனின் நண்பர்கள்; நூற்றுக்கணக்கான இளவரசர்களைக் கொன்ற அபிமன்யு; அச்சத்தால் நிறைந்து அபிமன்யுவை எதிர்த்த துரியோதனன் புறமுதுகிட வேண்டிவந்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துணிவுமிக்க வீரர்களின் உயிரை எடுப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, அண்ட அழிவின் தொடக்கத்தில் அனைத்து உயிரினங்களின் உயிரையும் எடுக்கும் யமனுக்கு ஒப்பானவனாக இருந்தான். சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான ஆற்றலைக் கொண்ட சக்ரனின் மகனுக்கு மகனான அந்த வலிமைமிக்க அபிமன்யு, கௌரவப் படையைக் கலங்கடித்துக் கொண்டு மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கௌரவப் படைக்குள் ஊடுருவியவனும், யமனுக்கு ஒப்பானவனும், க்ஷத்திரியர்களில் முதன்மையானோரை அழிப்பவனுமான அவன் {அபிமன்யு}, சீற்றமிக்கப் புலியொன்று மானொன்றைப் பிடிப்பதைப் போலச் சத்தியசிரவசைப் பிடித்தான். சத்தியசிரவஸ் [1] அவனால் {அபிமன்யுவால்} பிடிக்கப்பட்டதைக் கண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர் பல்வேறு விதங்களிலான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அவனை {அபிமன்யுவை} நோக்கி விரைந்தனர்.உண்மையில், க்ஷத்திரியர்களில் காளையரான அவர்கள், பகையுணர்வின் காரணமாக, அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைக்} கொல்ல விரும்பி, “நான் முதலில் செல்கிறேன், நான் முதலில் செல்கிறேன்” என்று சொல்லிக் கொண்டு அவனை நோக்கி விரைந்தனர். கடலில் உள்ள திமிங்கலம் ஒன்று சிறுமீன்களின் கூட்டத்தை மிக எளிமையாகப் பிடிப்பதைப் போலவே, அபிமன்யுவும் விரைந்துவரும் அந்த க்ஷத்திரியர்களின் மொத்த படையணியையும் வரவேற்றான் {எதிர்த்தான்}. கடலை அடையும் நதிகள் திரும்பாததைப் போலவே, பின்வாங்காத அந்த க்ஷத்திரியர்களில் எவரும் அபிமன்யுவை அடைந்த பிறகு திரும்பவில்லை. வலிமைமிக்கச் சூறாவளியில் அகப்பட்டு, பலமான காற்றால் உண்டான பீதியால் பீடிக்கப்பட்டுப் பெருங்கடலில் தூக்கி வீசப்படும் (படகு குழுவினருடன்) படகைப் போல அந்தப் படை சுழன்றது.

அப்போது, மத்ரர்கள் ஆட்சியாளனுடைய {சல்லியனின்} மகனான வலிமைமிக்க ருக்மரதன், பீதியடைந்த துருப்புகளுக்கு நம்பிக்கையளிப்பதற்காக அச்சமற்ற வகையில், “வீரர்களே, அஞ்சாதீர்! நான் இங்கிருக்கும்போது, அபிமன்யுவினால் என்ன {செய்ய முடியும்}? இவனை நான் உயிருடன் பிடிப்பேன் என்பதில் ஐயங்கொள்ளாதீர்” என்றான். இவ்வார்த்தைகளைக் சொன்ன அந்த வீர இளவரசன் {ருக்மரதன்}, நன்கு தயாரிக்கப்பட்ட தன் அழகான தேரால் சுமக்கப்பட்டு அபிமன்யுவை நோக்கி விரைந்தான். மூன்று கணைகளால் அபிமன்யுவின் மார்பையும், மூன்றால் வலது கரத்தையும், மேலும் மூன்றால் இடது கரத்தையும் துளைத்த அவன் பெருமுழக்கம் முழங்கினான். எனினும் பல்குனன் மகனோ {அபிமன்யுவோ}, அவனது {ருக்மரதனின்} வில்லையும், அவனது வலது மற்றும் இடது கரங்களையும், அழகான கண்களும், புருவங்களும் கூடிய அவனது {ருக்மரதனது} தலையையும் விரைவாகப் பூமியில் வீழ்த்தினான்.

தன் எதிரியை {அபிமன்யுவை} எரிக்கவோ, உயிருடன் பிடிக்கவோ சபதம் செய்திருந்தவனும், சல்லியனின் மதிப்பு மிக்க மகனுமான அந்த ருக்மரதன், சுபத்திரையின் சிறப்புமிக்க மகனால் {அபிமன்யுவால்} கொல்லப்பட்டதைக் கண்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களைக் கொண்டவர்களும் போரில் எளிதாக வீழ்த்தப்பட முடியாதவர்களும், சல்லியன் மகனின் {ருக்மரதனின்} நண்பர்களுமான இளவரசர்கள் பலர் {அபிமன்யுவை எதிர்த்துப்} போரிட வந்தனர். முழுதாக ஆறு முழம் நீளமுள்ள தங்கள் விற்களை வளைத்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அர்ஜுனனின் மகன் {அபிமன்யு} மீது தங்கள் கணைமாரியைப் பொழிந்த படி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

தனியாக இருப்பவனும், துணிவுமிக்கவனும், வெல்லப்பட முடியாதவனுமான சுபத்திரையின் மகனுடன் {அபிமன்யுவுடன்}, இளமையும், பலமும், பயிற்சியால் அடையப்பட்ட திறனும், வீரமும் கொண்ட அந்தக் கோபக்கார இளவரசர்கள் அனைவரும் மோதி கணைகளின் மழையால் அவனை மறைப்பதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்த துரியோதனன், ஏற்கனவே யமனின் வசிப்பிடத்திற்குச் சென்ற ஒரு விருந்தினன் என்றே அபிமன்யுவைக் கருதினான். கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாகவே, அந்த இளவரசர்கள், பல்வேறு வடிவங்களும், பெரும் வேகமும், தங்கச் சிறகுகளும் கொண்ட தங்கள் கணைகளின் மூலம் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைக்} காண முடியாதபடி செய்தனர் {மறைத்தனர்}. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவனையும் {அபிமன்யுவையும்}, அவனது கொடிமரத்தையும், அவனது தேரையும் வெட்டுக்கிளிகள் நிறைந்த மரங்களைப் போலக் கண்டோம் [2].ஆழத்துளைக்கப்பட்ட அவன் {அபிமன்யு}, அங்குசத்தால் தாக்கப்பட்ட யானை ஒன்றைப் போலச் சினத்தால் நிறைந்தான். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பிறகு அவன் {அபிமன்யு}, காந்தர்வ ஆயுதத்தையும், அதன் தொடர்ச்சியான மாயையையும் {காந்தர்வாஸ்திரத்தையும், ரதம் சம்பந்தமான மாயையையும்} பயன்படுத்தினான். தவத்துறவுகள் பயின்ற அர்ஜுனன், அந்த ஆயுதத்தைக் கந்தர்வனான தும்புருவிடம் இருந்தும், {கந்தர்வர்கள்} பிறரிடம் இருந்தும் {தும்புரு முதலான கந்தர்வர்களிடம் இருந்து} அடைந்திருந்தான். அபிமன்யு, இப்போது அந்த ஆயுதத்தைக் கொண்டே தன் எதிரிகளைக் குழப்பினான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் ஆயுதங்களை விரைவாக வெளிப்படுத்திய அவன் {அபிமன்யு}, அந்தப் போரில் நெருப்பு வளையம் போலச் சுழன்று, சில நேரங்களில் தனி நபராகவும், சில நேரங்களில் நூற்றுக்கணக்கானோராகவும், சில நேரங்களில் ஆயிரக்கணக்கானோராகவும் காட்சியளித்தான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் ஆயுதங்களுடைய விளைவின் மூலம் உண்டான மாயைக் கொண்டு வழிநடத்தப்பட்ட தன் தேரின் திறமையால் தன் எதிரிகளைக் குழப்பிய அவன் {அபிமன்யு}, (தன்னை எதிர்த்த) மன்னர்களின் உடல்களை நூறு துண்டுகளாக வெட்டினான். அவனது {அபிமன்யுவனது} கூரிய கணைகளின் விளைவால், உயிரினங்களின் உயிர்கள் வாங்கப்பட்டன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களின் உடல்கள் கீழே பூமியில் விழுகையில், அவை {உயிர்கள்} மறு உலகத்தை அடைந்தன.

அவர்களின் விற்கள், குதிரைகள், தேரோட்டிகள், கொடிமரங்கள், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்கள், தலைகள் ஆகியவற்றைப் பல்குனன் மகன் {அபிமன்யு} தன் கூரிய கணைகளால் அறுத்தான். ஐந்து வயதான மாமரங்களைக் கொண்ட {மாமரத்} தோப்பு ஒன்று, சரியாகக் கனி தாங்கும் சமயத்தில் (புயலால்) வீழ்த்தப்படுவதைப் போல, அந்த நூறு இளவரசர்களும் சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} கொன்று வீழ்த்தப்பட்டனர்.

அனைத்து ஆடம்பரங்களுடன் வளர்க்கப்பட்டவர்களும், கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளுக்கு ஒப்பானவர்களும் இளமைநிறைந்தவர்களுமான அவ்விளவரசர்கள் அனைவரும் தனி ஒருவனான அபிமன்யுவால் கொல்லப்பட்டதைக் கண்ட துரியோதனன் அச்சத்தால் நிறைந்தான். (தன்) தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோர் நொறுக்கப்பட்டதைக் கண்ட அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, கோபத்துடன் அபிமன்யுவை எதிர்த்து வேகமாகச் சென்றான். அவர்களுக்கிடையில் குறுகிய காலமே நீடித்த அந்த முடிக்கப்படாத போர் மிக உக்கிரமடைந்தது. பிறகு, அபிமன்யுவின் கணைகளால் பீடிக்கப்பட்ட உமது மகன் {துரியோதனன்} போரில் இருந்து புறமுதுகிட வேண்டியிருந்தது” {என்றான் சஞ்சயன்} [3].

லக்ஷ்மணனைக் கொன்ற அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 044-அபிமன்யுவை எதிர்த்த எட்டு வீரர்கள்; அவர்களைத் தாக்கிய அபிமன்யு; துரியோதனனையும், துரியோதனன் மகனையும் சேர்த்து பத்து வீரர்களாக அபிமன்யுவைத் தாக்கிய கௌரவர்கள்; துரியோதனன் மகன் லக்ஷ்மணனைக் கொன்ற அபிமன்யு; அபிமன்யுவைச் சூழ்ந்த கொண்ட ஆறு வீரர்கள்; அவர்களை வீழ்த்தி ஜெயத்ரதனிடம் சென்ற அபிமன்யு; அபிமன்யுவைத் தடுத்த கிராதன்; அபிமன்யுவால் கொல்லப்பட்ட கிராதனின் மகன்..

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா {சஞ்சயா}, {தனி} ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த அந்தப் பயங்கரமான கடும்போரைக் குறித்தும், சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} ஆற்றலைச் சொல்லும் நிகழ்வான அந்தச் சிறப்புமிக்கவனின் வெற்றியைக் குறித்தும் நீ எவற்றைச் சொல்கிறாயோ, அவை மிக அற்புதமானதெனவும், கிட்டத்தட்ட நம்பமுடியாததெனவும் நீ எனக்குச் சொல்கிறாய். எனினும், நீதியை {அறத்தைத்} தங்கள் புகலிடமாகக் கொண்டோரின் வழக்கில், அவற்றை நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமாக நான் கருதவில்லை. நூறு இளவரசர்கள் கொல்லப்பட்டு, துரியோதனன் அடித்து விரட்டப்பட்ட பிறகு, சுபத்திரையின் மகனுக்கு {அபிமன்யுவுக்கு} எதிராக என் படையைச் சேர்ந்த போர்வீரர்கள் என்ன வழியை மேற்கொண்டனர்?” என்று கேட்டான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அவர்களின் வாய்கள் உலர்ந்தன; கண்கள் ஓய்வற்றதாகின {சஞ்சலமடைந்தன}; அவர்களது உடலை வியர்வை மூடியது; அவர்களின் மயிர்கள் சில்லிட்டு நின்றன {அவர்களுக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது}. தங்கள் எதிரியை வீழ்த்துவதில் நம்பிக்கையிழந்த அவர்கள் களத்தை விட்டு ஓடத் தயாரானார்கள். காயம்பட்ட தங்கள் சகோதரர்கள், தந்தைமார், மகன்கள், நண்பர்கள், திருமணத்தால் ஏற்பட்ட உறவினர்கள், சொந்தங்கள் ஆகியோரைக் கைவிட்டுத் தங்கள் குதிரைகளையும் யானைகளையும் மிக வேகமாகச் செலுத்தி தப்பி ஓடினர்.

அவர்கள் பிளக்கப்பட்டு முறியடிக்கப்பட்டதைக் கண்ட துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிருஹத்பலன், கிருபர், துரியோதனன், கர்ணன், கிருதவர்மன், சுபலனின் மகன் (சகுனி) ஆகியோர் வெற்றி கொள்ளப்பட முடியாத சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} எதிர்த்து பெரும் கோபத்துடன் விரைந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே உமது பேரனால் {அபிமன்யுவால்} தாக்கப்பட்டு, விரட்டப்பட்டனர்.

ஆடம்பரத்தில் வளர்ந்தவனும், கணைகளில் சாதித்தவனும், பெரும் சக்தி கொண்டவனும், அனுபவமின்மை மற்றும் செருக்கின் விளைவால் அச்சமற்றவனாக இருந்தவனுமான லக்ஷ்மணன் மட்டுமே, தனி ஒரு வீரனாக அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} அப்போது எதிர்த்துச் சென்றான். தன் மகனைக் {லக்ஷ்மணனைக்} குறித்துக் கவலைப்பட்ட அவனது தந்தை (துரியோதனன்) அவனைப் பின்தொடர்ந்து செல்வதற்காகத் திரும்பினான். வலிமைமிக்கத் தேர்வீரர்களான பிறரும் துரியோதனனைப் பின்தொடர்வதற்காகத் திரும்பினர். பிறகு, அவர்கள் அனைவரும், மலையின் சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமழையால் அபிமன்யுவை நனைத்தனர். எனினும், அபிமன்யு, தன்னந்தனியாகவே, அனைத்துத் திசைகளிலும் வீசும் உலர்ந்த காற்று, கூடியிருக்கும் மேகங்களின் திரள்களை அழிப்பதைப் போல அவர்களை நசுக்கத் தொடங்கினான்.

சினங்கொண்ட யானையொன்று மற்றொரு யானையோடு மோதுவதைப் போலவே அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, பெரும் அழகு கொண்டவனும், பெரும் துணிவு கொண்டவனும், தன் தந்தையின் அருகே வளைக்கப்பட்ட வில்லுடன் நின்றவனும், அனைத்து ஆடம்பரங்களுடனும் வளர்க்கப்பட்டவனும், யக்ஷர்களின் இரண்டாவது இளவரசனுக்கு {குபேரனின் மகனுக்கு} ஒப்பானவனும், வெல்லப்பட முடியாதவனுமான உமது பேரன் லக்ஷ்மணனுடன் மோதினான். பகைவீரர்களைக் கொல்பவனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, லக்ஷ்மணனோடு மோதித் தன் கூரிய கணைகளால் அவனது கரங்கள் இரண்டையும் மார்பையும் தாக்கினான்.

உமது பேரனான வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த அபிமன்யு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (தடியால்) தாக்கப்பட்ட பாம்பைப் போலச் சினத்தால் நிறைந்து, உமது (மற்றொரு) பேரனிடம் {லக்ஷ்மணனிடம்} “விரைவில் அடுத்த உலகத்திற்குச் செல்லவிருப்பதால், நீ இவ்வுலகை நன்றாகப் பார்த்துக் கொள்வாயாக. உன் சொந்தங்களின் பார்வைக்கு முன்பாகவே, நான் உன்னை யமலோகத்திற்கு அனுப்புவேன்” என்றான்.

பகைவீரர்களைக் கொல்பவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, இப்படிச் சொல்லிவிட்டு, அப்போதுதான் சட்டை உரித்து வந்த பாம்புக்கு ஒப்பான ஒரு பல்லத்தை எடுத்தான். அபிமன்யுவின் கரங்களால் ஏவப்பட்ட அந்தக் கணையானது, அழகிய மூக்கு, அழகிய புருவங்கள், அழகாகத் தெரியும் சுருள் முடி ஆகியவற்றைக் கொண்டவனும், குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதுவனுமான லக்ஷ்மணனின் அழகிய தலையைத் துண்டித்தது. லக்ஷ்மணன் கொல்லப்பட்டதைக் கண்ட உமது துருப்புகள், “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூச்சலிட்டன.

தன் அன்புக்குரிய மகன் கொல்லப்பட்டதால் துரியோதனன் சினத்தால் நிறைந்தான். க்ஷத்திரியர்களில் காளையான அவன் {துரியோதனன்}, “இவனைக் கொல்வீர்” என உரக்கச் சொல்லி, தனக்குக் கீழிருந்த க்ஷத்திரியர்களைத் தூண்டினான். பிறகு, துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிருஹத்பலன், ஹிருதிகனின் மகனான கிருதவர்மன் ஆகிய ஆறு வீரர்கள் அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களைக் கூரிய கணைகளால் துளைத்துத் தன்னிடம் இருந்து விரட்டிய {அவர்களைப் புறங்காட்டி ஓடச் செய்த} அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, ஜெயத்ரதனின் பரந்த படையின் மேல் பெரும் வேகத்துடனும் மூர்க்கத்துடனும் பாய்ந்தான்.

அதன்பேரில், கவசமணிந்தவர்களான கலிங்கர்கள், நிஷாதர்கள், கிராதனின் வீர மகன் [1] ஆகியோர் தங்கள் யானைப் படையின் மூலம் அவனது பாதையைத் தடுத்து, அவனைச் சூழ்ந்து கொண்டனர். அதன்பிறகு, பல்குனன் மகனுக்கும் {அபிமன்யுவுக்கும்}, அந்த வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரானது மூர்க்கமானதாகவும், கடுமையானதாகவும் இருந்தது. பிறகு, அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, ஆகாயத்தில் திரண்டிருக்கும் மேகக்கூட்டங்களை அனைத்துத் திசையிலும் செல்லும் காற்றானது அழிப்பதைப் போல அந்த யானைப் படையை அழிக்கத் தொடங்கினான்.அப்போது அந்தக் கிராதன் {கிராதன் மகன்}, கணைகளின் மழையால் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} மறைத்தான். அதேவேளையில், துரோணர் தலைமையிலான பிற தேர்வீரர்களும் களத்திற்குத் திரும்பி கூர்மையும் வலிமையும் மிக்க ஆயுதங்களை இறைத்தபடி அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தனர். அவ்வாயுதங்கள் அனைத்தையும் தன் கணைகளால் தடுத்த அர்ஜுனன் மகன், தன் எதிராளியைக் கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, பெரும் வேகத்தோடு ஏவப்பட்ட தடையற்ற கணைகளின் மழையால் கிராதனின் மகனைப் பீடிக்கத் தொடங்கினான்.

பின்னவனின் {கிராதன் மகனின்} வில், கணைகள், தோள்வளைகள், ஆயுதங்கள், கிரீடத்துடன் கூடிய தலை, குடை, கொடிமரம், தேரோட்டி, குதிரைகள் ஆகிய அனைத்தையும் அபிமன்யு வெட்டி வீழ்த்தினான். உன்னதப் பரம்பரை, நன்னடத்தை, சாத்திர அறிவு, பெரும் பலம், புகழ், ஆயுத பலம் ஆகியவற்றைக் கொண்ட அந்தக் கிராதனின் மகன் கொல்லப்பட்ட போது, வீரப் போராளிகள் பிறரில் கிட்டத்தட்ட அனைவரும் போரைவிட்டுத் திரும்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.

பிருஹத்பலனைக் கொன்ற அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 045-அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்ட ஆறுவீரர்கள்; ஜெயத்ரதன் தலைமையில் யுதிஷ்டிரனை எதிர்த்த கௌரவவீரர்கள்; பிருந்தாரகனைக் கொன்ற அபிமன்யு; தன்னைச் சூழ்ந்து கொண்ட ஆறு வீரர்களையும் தாக்கியது; கோசல மன்னன் பிருஹத்பலனைக் கொன்ற அபிமன்யு…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வெல்லப்பட முடியாதவனும், போரில் புறமுதுகிடாதவனுமான அந்த இளமைநிறைந்த சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, மூன்று வயதே ஆன பெரும் பலம் கொண்ட சிறந்த குதிரைகளால் சுமக்கப்பட்டு, நமது வியூகத்தைப் பிளந்த பின்பு, வெளிப்படையாக ஆகாயத்தில் நடப்பவன் போலத் தன் பரம்பரைக்குத் தகுந்த சாதனைகளை அடைவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவனைச் {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்ட என்படையின் வீரர்கள் யாவர்?” என்று கேட்டான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டு குலத்தின் அபிமன்யு, நம் வியூகத்தில் ஊடுருவிய பிறகு, தன் கூரிய கணைகளால் மன்னர்கள் அனைவரையும் போரில் இருந்து புறமுதுகிடச் செய்தான். அப்போது, துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிருஹத்பலன், ஹிருதிகனின் மகனான கிருதவர்மன், கர்ணன் ஆகிய ஆறு வீரர்களும் அவனைச் {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர். உமது படையின் மற்ற போராளிகளைப் பொறுத்தவரை, (பாண்டவர்களைத் தடுக்கும்) கனமான சுமையை ஏற்றுக் கொண்ட ஜெயத்ரதனைக் கண்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனை ஆதரிப்பதற்காக யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தனர். பெரும் பலம் கொண்ட அவர்களில் பலர், முழுமையாக ஆறு முழம் நீளம் கொண்ட தங்கள் விற்களை வளைத்தபடி, மழைத்தாரைகளைக் கொட்டுவதைப் போலச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு} மீது தங்கள் கணை மழையைப் பொழிந்தனர். எனினும், பகைவீரர்களைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, கல்வியின் அனைத்துக்கிளைகளையும் அறிந்த அந்தப் பெரும் வில்லாளிகள் அனைவரையும் தன் கணைகளாலேயே முடக்கினான்.

அவன் {அபிமன்யு}, ஐம்பது கணைகளால் துரோணரையும், இருபதால் பிருஹத்பலனையும் துளைத்தான். எண்பது கணைகளால் கிருதவர்மனையும், அறுபதால் கிருபரையும் அவன் துளைத்தான். மேலும் அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளும், பெரும் வேகமும் கொண்டவையுமான பத்து கணைகளால் அஸ்வத்தாமனைத் துளைத்தான். மேலும், அந்தப் பல்குனன் மகன் {அபிமன்யு}, பிரகாசமானதும், நன்கு கடினமாக்கப்பட்டதும், பெரும் சக்தி கொண்டதுமான கர்ணி {சிறகுகளைக் கொண்ட கணை} ஒன்றால் தன் எதிரிகளின் மத்தியில் இருந்த கர்ணனுடைய காதுகளில் ஒன்றைத் [1] துளைத்தான். கிருபரின் தேரில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளையும், அவரது பார்ஷினி தேரோட்டிகளையும் வீழ்த்திய அபிமன்யு, பத்து கணைகளால் கிருபரின் நடுமார்பைத் துளைத்தான்.பிறகு வலிமைமிக்க அந்த அபிமன்யு, உமது வீர மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குருக்களின் புகழை அதிகரிப்பவனும், துணிவுமிக்கவனுமான பிருந்தாரகனைக் [2] கொன்றான். இப்படி அபிமன்யு, அவனது எதிரிகளில் முதன்மையான வீரர்களை ஒருவர் பின் ஒருவராக அச்சமற்ற வகையில் கொன்று வரும்போது, துரோணரின் மகனான அஸ்வத்தாமன் இருபத்தைந்து க்ஷுத்ரகங்களால் {குறுங்கணைகளால்} அவனைத் {அபிமன்யுவைத்} துளைத்தான். எனினும், அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு} தார்தராஷ்டிரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கூர்மையாக்கப்பட்ட கணைகளால் அஸ்வத்தாமனை பதிலுக்கு விரைவாகத் துளைத்தான். எனினும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} பெரும் வேகமுடைய மிகக் கூர்மையான அறுபது கடுங்கணைகளால் அபிமன்யுவைத் துளைத்தாலும், பின்னவன் {அபிமன்யு} மைநாக மலையைப் போல அசையாமல் நின்றதால் அவனை நடுங்கச் செய்வதில் தோல்வியுற்றான். பெரும் சக்தியும் வலிமையும் கொண்ட அபிமன்யு, தங்கச் சிறகுகளைக் கொண்ட நேரான எழுபத்து மூன்று கணைகளால் தன் எதிராளியை {அஸ்வத்தாமனைத்} துளைத்தான்.அப்போது, தன் மகனைக் காக்கவிரும்பிய துரோணர், நூறு கணைகளால் அபிமன்யுவைத் துளைத்தார். அஸ்வத்தாமன், தன் தந்தையைக் காக்க விரும்பி அறுபது கணைகளால் அவனைத் {அபிமன்யுவைத்} துளைத்தான். இருபத்திரண்டு பல்லங்களால் கர்ணன் அவனைத் துளைத்தான். பதினான்கால் கிருதவர்மன் அவனைத் துளைத்தான். அது போன்ற ஐம்பது கணைகளால் பிருஹத்பலன் அவனைத் துளைத்தான். சரத்வானின் மகனான கிருபரோ பத்து கணைகளால் துளைத்தார். எனினும், அபிமன்யு, அவர்கள் ஒவ்வொரையும் பத்து {பத்து பத்து} கணைகளால் துளைத்தான்.

கோசலத்தின் ஆட்சியாளன் {பிருஹத்பலன்} ஒரு கர்ணியால் அபிமன்யுவை அவனது மார்பில் அடித்தான். எனினும் அபிமன்யுவோ, தன் எதிராளியின் குதிரைகள், கொடிமரம், வில் மற்றும் தேரோட்டியை விரைவாகப் பூமியில் சாய்த்தான். இப்படித் தன் தேரை இழந்த அந்தக் கோசல ஆட்சியாளன் {பிருஹத்பலன்}, குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அபிமன்யுவின் அழகிய தலையை அவனது உடலில் இருந்து துண்டிக்க விரும்பி ஒரு வாளை எடுத்தான். அப்போது அபிமன்யு, கோசலர்களின் ஆட்சியாளனான மன்னன் பிருஹத்பலனின் மார்பை ஒரு பலமான கணையால் துளைத்தான். இதனால் பின்னவன் {பிருஹத்பலன்} இதயம் பிளக்கப்பட்டுக் கீழே விழுந்தான். இதைக் கண்டு, அணிவகுப்புப் பிளக்கப்பட்ட சிறப்புமிக்க மன்னர்கள் பத்தாயிரம் பேர் தப்பி ஓடினர். வாள்கள், விற்கள் ஆகியவற்றைத் தரித்திருந்த அம்மன்னர்கள், (மன்னன் துரியோதனனின் விருப்பத்திற்கு) மாறான {அமங்கலமான} வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே தப்பி ஓடினர். இப்படிப் பிருஹத்பலனைக் கொன்ற சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, மழையைப் போன்ற அடர்த்தியான தன் கணை மழையால் உமது வீரர்களான அந்தப் பெரும் வில்லாளிகளை முடக்கியபடி போரில் திரிந்து கொண்டிருந்தான்” {என்றான் சஞ்சயன்}.

தேரை இழந்த அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 046-கௌரவ வீரர்கள் பலரைக் கொன்ற அபிமன்யு; அபிமன்யுவிடம் இருந்து துச்சாசனன் மகனைக் காத்த அஸ்வத்தாமன்; துரோணருடன் கர்ணன் செய்த ஆலோசனை; வில், தேர், வாள், கேடயம் ஆகியவற்றை இழந்த அபிமன்யு, தேர்ச்சக்கரத்துடன் துரோணரிடம் விரைந்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பல்குனன் மகன் {அபிமன்யு}, கர்ணனின் காதை [1] மீண்டும் ஒரு கர்ணியால் துளைத்து, மேலும் அவனைக் {கர்ணனைக்} கோபமூட்டும் வகையில் ஐம்பது பிற கணைகளால் அவனைத் துளைத்தான். ராதையின் மகனும் {கர்ணனும்} பதிலுக்குப் பல கணைகளால் அபிமன்யுவைத் துளைத்தான். அம்புகளால் முழுவதும் மறைக்கப்பட்ட அபிமன்யு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மிக அழகாகத் தெரிந்தான். சினத்தால் நிறைந்த அவன் {அபிமன்யு} கர்ணனைக் குருதியில் குளிக்க வைத்தான். கணைகளால் சிதைக்கப்பட்டுக் குருதியால் மறைக்கப்பட்டிருந்த துணிவுமிக்கக் கர்ணனும் மிகவும் பிரகாசித்தான். கணைகளால் துளைக்கப்பட்டு, குருதியில் குளித்திருந்த அவ்விரு சிறப்புமிக்க வீரர்களும், மலர்ந்திருக்கும் இரண்டு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போல இருந்தனர்.

பிறகு, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, போர்க்கலையின் அனைத்து வகைகளையும் அறிந்தவர்களான கர்ணனின் துணிச்சல் மிக்க ஆலோசகர்கள் அறுவரை, அவர்களது குதிரைகள், தேரோட்டி மற்றும் தேர்கள் ஆகியவற்றோடு சேர்த்துக் கொன்றான். பெரும் வில்லாளிகளான பிறரைப் பொறுத்தவரை, அபிமன்யு, பதிலுக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் அச்சமற்றவகையில் துளைத்தான். அவனது அந்த அருஞ்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது.

அடுத்ததாக மகதர்களின் ஆட்சியாளனுடைய மகனைக் கொன்ற அபிமன்யு, நேரான ஆறு கணைகளால் இளமைநிறைந்த அஸ்வகேதுவை அவனது நான்கு குதிரைகள் மற்றும் தேரோட்டியோடு சேர்த்துக் கொன்றான் [2]. பிறகு, யானைப் பொறிக்கப்பட்ட கொடி கொண்டவனும், போஜ இளவரசனுமான மார்த்திகாவதனை {மார்த்திகாவதகனை} க்ஷுரப்ரம் ஒன்றினால் கொன்ற அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை இறைத்தபடியே உரத்த ஆரவாரம் செய்தான். அப்போது துச்சாசனன் மகன் [3], நான்கு கணைகளால் அபிமன்யுவின் நான்கு குதிரைகளையும், ஒன்றால் தேரோட்டியையும், பத்து கணைகளால் அபிமன்யுவையும் துளைத்தான். அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, வேகமான பத்து கணைகளால் துச்சாசனன் மகனைத் துளைத்து, கோபத்தால் கண்கள் சிவந்து, அவனிடம் உரத்த குரலில், “உன் தந்தை {துச்சாசனன்} போரைக் கைவிட்டு கோழையைப் போல ஓடினார். போரிடுவது எவ்வாறு என்பதை நீ அறிந்திருப்பது நன்றே. எனினும், நீ இன்று உயிருடன் தப்பமாட்டாய்” என்றான் {அபிமன்யு}.இதைச் சொன்ன அபிமன்யு, கொல்லன் கையால் பளபளப்பாக்கப்பட்ட நாராசம் {நீண்ட கணை} ஒன்றை, எதிரியின் {துச்சாசனன் மகன்} மீது ஏவினான். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அந்தக் கணையைத் தன் கணைகள் மூன்றைக் கொண்டு அறுத்தான். அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, அஸ்வத்தாமனை விட்டுவிட்டுச் சல்லியனைத் தாக்கினான். அவனோ {சல்லியனோ} பதிலுக்கு அச்சமற்றவகையில், கழுகிறகுகள் கொண்ட ஒன்பது கணைகளால் அவனை {அபிமன்யுவை} மார்பில் துளைத்தான் [4]. இந்த அருஞ்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது. பிறகு, அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, சல்லியனின் வில்லை அறுத்து, அவனது பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் கொன்றான். மேலும் அபிமன்யு, முழுவதும் இரும்பாலான அறுபது கணைகளால் சல்லியனையும் துளைத்தான். அதன் பேரில் பின்னவன் {சல்லியன்}, குதிரைகளற்ற தன் தேரைவிட்டுவிட்டு மற்றொரு தேரில் ஏறினான்.பிறகு அபிமன்யு, போர்வீரர்களான சத்ருஞ்சயன், சந்திரகேது, மகாமேகன் {மேகவேகன்}, சுவர்ச்சஸ், சூர்யபாசன் ஆகிய ஐவரைக் கொன்றான். பிறகு அவன் சுபலனின் மகனையும் {சகுனியையும்} துளைத்தான். அபிமன்யுவை மூன்று கணைகளால் துளைத்த பின்னவன் {சகுனி}, துரியோதனனிடம், “நாம் அனைவரும் சேர்ந்து இவனை நொறுக்குவோம், இல்லையெனில், தனியாகவே இவன் நம் அனைவரையும் கொன்றுவிடுவான். ஓ! மன்னா {துரியோதனா}, துரோணர், கிருபர் மற்றும் பிறரின் ஆலோசனைகளைக் கேட்டு இவனைக் கொல்லும் வழி குறித்துச் சிந்திப்பாயாக” என்றான் {சகுனி}.

விகர்த்தனன் {சூரியன்} மகனான கர்ணன், துரோணரிடம், “அபிமன்யு எங்கள் அனைவரையும் நொறுக்குகிறான். அவனைக் கொல்லும் வழியை எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டான். இப்படிக் கேட்கப்பட்டவரும், வலிமைமிக்க வில்லாளியுமான துரோணர், அவர்கள் அனைவரிடமும், “விழிப்புணர்வுடன் அவனைக் கவனித்ததில், உங்களில் எவராலும் அந்த இளைஞனிடம் {அபிமன்யுவிடம்} எந்தக் குறையையும் {தவறையும்} கண்டுபிடிக்க முடிந்ததா? அவன் {அபிமன்யு} அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருக்கிறான். இருப்பினும், உங்களில் எவராலும் அவனிடம் ஒரு சின்ன ஓட்டையையாவது கண்டுபிடிக்க முடிந்ததா? மனிதர்களில் சிங்கமான இந்த அர்ஜுனன் மகனின் {அபிமன்யுவின்} கர நளினத்தையும், நகர்வு வேகத்தையும் பாருங்கள். அவனது தேர்த்தடத்தில், வட்டமாக வளைக்கப்பட்ட அவனுடைய வில்லை மட்டுமே காண முடிகிறது, அவ்வளவு விரைவாக அவன் தன் கணைகளைக் குறிப் பார்க்கிறான், அவ்வளவு வேகமாக அவன் அவற்றை ஏவுகிறான்.

பகைவீரர்களைக் கொல்பவனான இந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் கணைகளால் என் உயிர் மூச்சையே பீடித்துப் பிரம்மிக்கச் செய்தாலும், உண்மையில், அவன் என்னை மனம்நிறையச் செய்கிறான். கோபத்தால் நிறைந்தவர்களான வலிமைமிக்கத் தேர்வீரர்களால் கூட, அவனிடம் எந்தக் குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, போர்க்களத்தில் திரிந்து கொண்டிருக்கும் இந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, என்னைப் பெரிதும் மனம் நிறையச் செய்கிறான். காண்டீவதாரிக்கும் {அர்ஜுனனுக்கும்}, போரில் தன் வலிமைமிக்கக் கணைகளால் அடிவானத்தின் புள்ளிகள் அனைத்தையும் நிரப்பிப் பெரும் கரநளினத்தை வெளிப்படுத்தும் இவனுக்கும் {அபிமன்யுவுக்கும்} இடையில் நான் எந்த வேறுபாட்டையும் காணவில்லை” என்றார் {துரோணர்}.

இவ்வார்த்தைகளைக் கேட்ட கர்ணன், அர்ஜுனன் மகனின் {அபிமன்யுவின்} கணைகளால் பீடிக்கப்பட்டுத் துரோணரிடம் மீண்டும் ஒருமுறை, “அபிமன்யுவின் கணைகளால் அதீதமாகப் பீடிக்கப்பட்டிருக்கும் நான், (ஒரு போர் வீரனாக) இங்கு நிற்க வேண்டும் என்பதற்காகவே போரில் நிற்கிறேன். உண்மையில், பெரும் சக்தி கொண்ட இவனது கணைகள் மிக மூர்க்கமானவையாக இருக்கின்றன. நெருப்பின் சக்தியைக் கொண்ட இந்தப் பயங்கரமான கணைகள் என் இதயத்தைப் பலவீனப்படுத்துகின்றன” என்றான் {கர்ணன்}.

பிறகு ஆசான் {துரோணர்}, புன்னகையுடன், மெதுவாகக் கர்ணனிடம், “அபிமன்யு இளைஞன், அவன் ஆற்றல் பெரியதே. அவனது கவசமோ ஊடுருவப்பட முடியாததாக {பிளக்கப்பட முடியாததாக} இருக்கிறது. தற்காப்புக்காகக் கவசம் அணியும் முறையை, இவனது தந்தைக்கு {அர்ஜுனனுக்கு} நான் புகட்டியிருக்கிறேன். பகை நகரங்களை அடிபணியச் செய்யும் இவன் {அபிமன்யு}, (கவசமணியும்) மொத்த அறிவியலையும் {சாத்திரத்தையும்} நிச்சயமாக அறிந்திருக்கிறான். எனினும், நன்றாக ஏவப்படும் கணைகளால், அவனது வில்லையும், நாண்கயிற்றையும், குதிரைகளின் கடிவாளங்களையும், குதிரைகளையும், இரண்டு பார்ஷினி தேரோட்டிகளையும் நீ வெட்டலாம். ஓ! வலிமைமிக்க வில்லாளியே, ஓ! ராதையின் மகனே {கர்ணா}, உன்னால் முடியும் என்றால் நீ இதைச் செய்யலாம். (இவ்வழிகளால்) அவனைப் போரிலிருந்து புறங்காட்டச் செய்த பிறகு {பின்னாலிருந்து} [5] அவனைத் தாக்கலாம். கையில் வில்லுடன் கூடிய அவனைத் தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து வந்தாலும் வீழ்த்த முடியாது. நீ விரும்பினால் அவனைத் தேரையும், வில்லையும் இழக்கச் செய்வாயாக” என்றார் {துரோணர்}.ஆசானின் {துரோணரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட விகர்த்தனன் மகன் {கர்ணன்}, பெரும் சுறுசுறுப்புடன் {கணைகளை} ஏவிக் கொண்டிருந்த அபிமன்யுவின் வில்லை {அவன் பார்க்காத போது பின்புறத்தில் இருந்து} [6], தன் கணைகளால் விரைவாக வெட்டினான். போஜ குலத்தைச் சேர்ந்தவன் (கிருதவர்மன்} [7], அவனது குதிரைகளைக் கொன்றான், கிருபரோ அவனது பார்ஷினி தேரோட்டிகள் இருவரைக் கொன்றார். பிறரோ, அவன் {அபிமன்யு} தன் வில்லை இழந்த பிறகு, அவன் மேல் தங்கள் கணை மழையைப் பொழிந்தனர்.வேகம் மிக அவசியமாகத் தேவைப்பட்ட நேரத்தில், பெரும் வேகத்தோடு போரிட்ட அந்தப் பெரும் தேர்வீரர்கள் அறுவரும், அவர்களோடு தனி ஒருவனாகப் போராடிக் கொண்டு, கவனமற்று இருந்த அந்த இளைஞனை {அபிமன்யுவைத்} தங்கள் கணை மாரியால் விரைவாக மறைத்தனர். வில்லற்றவனாக, தேரற்றவனாக இருப்பினும், (போர்வீரனாகத்) தன் கடமையில் கண்கொண்ட அழகிய அபிமன்யு, ஒரு வாளையும், ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டு வானத்தில் குதித்தான். அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, பெரும் பலத்தையும், பெரும் சுறுசுறுப்பையும் காட்டிக் கொண்டு, கௌசிகம் என்று அழைக்கப்பட்ட நடையையும், பிறவற்றையும் {பிற நடைகளையும்} விளக்கிக் கொண்டு, சிறகு படைத்த உயிரினங்களின் இளவரசனை {கருடனைப்} போல வானத்தில் மூர்க்கமாகத் திரிந்தான் [8].அபிமன்யுவின் {சிறு} தாமதத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த வலிமைமிக்க வில்லாளிகள், “கையில் வாளோடு என் மீது இவன் பாயப் போகிறான்” என்ற எண்ணத்தோடு, தங்கள் பார்வையை மேலே செலுத்தியபடியே, அந்தப் போரில் அவனைத் துளைக்கத் தொடங்கினர்.

வலிமையும், சக்தியும் கொண்டவரும், எதிரிகளை வெல்பவருமான துரோணர் ஒரு கூரிய கணையைக் கொண்டு ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அபிமன்யுவின் வாள் கைப்பிடியை விரைவாக அறுத்தார். ராதையின் மகனான கர்ணன், கூரிய கணைகளால் அவனது அற்புத கேடயத்தை அறுத்தான். இப்படித் தன் வாளையும் கேடயத்தையும் இழந்த அவன், பலமான உடல் உறுப்புகளுடனே ஆகாயத்தில் இருந்து கீழே பூமிக்கு வந்தான். பிறகு ஒரு தேர்ச்சக்கரத்தை எடுத்துக் கொண்ட அவன் {அபிமன்யு}, கோபத்துடன் துரோணரை எதிர்த்து விரைந்தான். தேர்ச்சக்கரங்களில் உள்ள புழுதியால் பிரகாசித்த உடலுடன், உயர்த்தப்பட்ட தன் கரங்களில் தேர்ச்சக்கரத்தைப் பிடித்துக் கொண்டு, (சக்கரத்துன் கூடிய) வாசுதேவனைப் போலவே மிக அழகாகத் தெரிந்த அந்த அபிமன்யு, சிறிது நேரத்திலேயே அந்தப் போரில் பயங்கர மூர்க்கமாக மாறினான். (அவனது காயங்களில் இருந்து) வடிந்த குருதியால் நனைந்த தன் ஆடைகளுடன், சுருக்கமற்ற புருவங்களுடன், சிங்க முழக்கம் முழங்கியவனும், அளவிலா சக்தி கொண்டவனுமான தலைவன் அபிமன்யு, அந்தப் போர்க்களத்தில் அந்த மன்னர்களுக்கு மத்தியில் மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.

அதர்மமாகக் கொல்லப்பட்ட வீர அபிமன்யு! – துரோண பர்வம் பகுதி – 047-அபிமன்யு கொண்டிருந்த சக்கரம் உடைக்கப்பட்டது; கதாயுதத்துடன் போராடிய அபிமன்யு; அஸ்வத்தாமனின் குதிரைகளையும், தேரோட்டிகளையும் கொன்ற அபிமன்யு; சகுனியின் மகன் காளிகேயனைக் கொன்ற அபிமன்யு; துச்சாசனன் மகனின் தேரை நொறுக்கி குதிரைகளைக் கொன்ற அபிமன்யு; அபிமன்யுவுக்கும், துச்சாசனன் மகனுக்கும் இடையில் நடைபெற்ற கதாயுத்தம்; களைத்துப் போயிருந்த அபிமன்யுவைக் கொன்ற துச்சாசனன் மகன்; அநீதியை உணர்த்திய அசரீரி; படையைத் தூண்டிய யுதிஷ்டிரன்

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “விஷ்ணுவின் தங்கைக்கு {சுபத்திரைக்கு} மகிழ்ச்சியை அளிப்பவனும், விஷ்ணுவின் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டவனுமான {விஷ்ணுவின் ஆயுதமான சக்கரத்தைப் போன்று, தேர்ச்சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டவனுமான} அந்த அதிரதன் {பெரும் தேர் வீரன் அபிமன்யு}, போர்க்களத்தில் மிக அழகாகத் தெரிந்தான், மேலும் அவன் இரண்டாவது ஜனார்த்தனனை {கிருஷ்ணனைப்} போலவே தெரிந்தான். மயிர் நுனிகள் காற்றில் ஆட, அந்த உயர்ந்த ஆயுதத்தைக் {தேர்ச்சக்கரத்தைக்} கையில் உயர்த்தியபடி இருந்த அவனது {அபிமன்யுவின்} உடல், தேவர்களே கூடப் பார்க்க முடியாததாக {பிரகாசமாக} இருந்தது. கையில் சக்கரத்துடன் கூடிய அவனைக் கண்ட மன்னர்கள், கவலையால் நிறைந்து அந்தச் சக்கரத்தை நூறு துண்டுகளாக வெட்டிப் போட்டனர் [1].பிறகு, பெரும் தேர்வீரனான அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, வலிமைமிக்கக் கதாயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டான். எதிரிகளால், தன் வில், தேர், வாள் ஆகியவற்றை இழந்து, அவர்களாலேயே தனது சக்கரத்தையும் இழந்தவனான வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அபிமன்யு (கையில் கதாயுதத்துடன்) அஸ்வத்தாமனை நோக்கி விரைந்தான்.

சுடர்மிக்க வஜ்ரத்தைப் போன்று தெரிந்த அந்த உயர்த்தப்பட்ட கதாயுதத்தைக் கண்ட மனிதர்களில் புலியான அஸ்வத்தாமன், தன் தேரில் இருந்து வேகமாக இறங்கி, (அபிமன்யுவைத் தவிர்ப்பதற்காக) மூன்று (நீண்ட) எட்டுகளை {நடை அடிகளை} வைத்தான். அஸ்வத்தாமனின் குதிரைகளையும், பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் அந்தக் கதாயுதத்தால் கொன்ற சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, எங்கும் கணைகளால் துளைக்கப்பட்டு, ஒரு முள்ளம்பன்றியைப் போலக் காட்சியளித்தான். பிறகு அந்த வீரன் {அபிமன்யு}, சுபலனின் மகனான காளிகேயனை பூமியில் அழுத்தி {கொன்று}, அவனைப் பின்தொடர்ந்து வந்த எழுபத்தேழு காந்தார வீரர்களையும் கொன்றான். அடுத்ததாக அவன் {அபிமன்யு}, பிரம்ம வசாதீய குலத்தைச் சேர்ந்த பத்து தேர்வீரர்களையும், அதன் பிறகு பத்து பெரிய யானைகளையும் கொன்றான்.

அடுத்ததாகத் துச்சாசனன் மகனின் தேரை நோக்கிச் சென்ற அவன் {அபிமன்யு}, அவனது தேரை நொறுக்கி, குதிரைகளையும் பூமியில் நசுக்கினான். பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, துச்சாசனனின் அந்த வெல்லப்பட முடியாத மகன், ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அபிமன்யுவை நோக்கி “நில், நில்” என்று சொல்லிக் கொண்டே விரைந்தான். சகோதரர்களான அந்த வீரர்கள் இருவரும் உயர்த்தப்பட்ட கதாயுதங்களுடன், பழங்காலத்தின் முக்கண்ணனையும் (மகாதேவனையும்), (அசுரன்) அந்தகனையும் போல, ஒருவரையொருவர் கொல்ல விரும்பி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். எதிரிகளைத் தண்டிப்போரான அவ்விருவரும், தங்கள் கதாயுத நுனிகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, இந்திரனை மகிழ்விக்க எழுப்பட்ட இரண்டு கொடிமரங்கள் விழுவதைப் போலப் பூமியில் விழுந்தனர்.

குருக்களின் புகழை மேம்படுத்துபவனான அந்தத் துச்சாசனன் மகன்[2], முதலில் எழுந்து, எழும்பும் நிலையில் இருந்த அபிமன்யுவின் உச்சந்தலையில் தன் கதாயுதத்தால் அடித்தான். அந்த அடியின் பலத்தால் நிலை குலைந்ததாலும், இதுவரை அவன் அடைந்திருந்த களைப்பினாலும், பகைவரின் படையினரைக் கொல்லும் அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் உணர்வுகளை இழந்து பூமியில் விழுந்தான். தடாகத்தில் உள்ள தாமரைத் தண்டுகளை யானையொன்று கலங்கடிப்பது போல, மொத்த படையையும் கலங்கடித்த ஒருவன் {அபிமன்யு}, இப்படியே, அந்தப் போரில் பலரால் கொல்லப்பட்டான். கொல்லப்பட்டுக் களத்தில் கிடந்த அந்த வீர அபிமன்யு, வேடர்களால் கொல்லப்பட்ட காட்டு யானையைப் போலத் தெரிந்தான். பிறகு, உமது துருப்பினர் விழுந்த அந்த வீரனை {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர்.கோடை காலத்தில் முழுக் காட்டையும் எரித்துவிட்டுத் வெப்பம் தணிந்த நெருப்பைப் போலவோ, மலையின் முகடுகளை நொறுக்கிவிட்டுச் சீற்றம் தணிந்த புயலைப் போலவோ, பாரதப் படையை வெப்பத்தால் எரித்துவிட்டு, மேற்கு மலைகளை {அஸ்த மலையை} அடைந்திருக்கும் சூரியனைப் போலவோ, ராகுவால் விழுங்கப்பட்ட சோமனை {சந்திரனைப்} போலவோ, நீர் வற்றிப் போன பெருங்கடலைப் போலவோ அவன் {அபிமன்யு} தெரிந்தான். முழு நிலவின் காந்தியுடன் கூடிய முகத்தைக் கொண்டவனும், அண்டங்காக்கையின் இறகுகளைப் போன்ற கருப்புநிற இமை மயிர்களின் விளைவால் அழகிய கண்களைக் கொண்டவனுமான அபிமன்யு, வெறுந்தரையில் விழுந்து கிடப்பதைக் கண்ட உமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பெரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர். மேலும் அவர்கள் மீண்டும் மீண்டும் சிங்க முழக்கம் முழங்கினர். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவ வீரர்களின் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்த அதே வேளையில், உமது துருப்பினர் மகிழ்ச்சிப் பரவசத்தில் திளைந்தனர்.

ஆகாயத்தில் இருந்து விழுந்த நிலவைப் போலக் களத்தில் கிடக்கும் வீர அபிமன்யுவைக் கண்ட பல்வேறு உயிரினங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்தபடியே, “ஐயோ, இவன் {அபிமன்யு} தனி ஒருவனாகப் போரிடுகையில், துரோணராலும், கர்ணனாலும் தலைமை தாங்கப்பட்ட தார்தராஷ்டிரப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அறுவரால் கொல்லப்பட்டுக் களத்தில் கிடக்கிறானே. நாங்கள் காணும் இந்தச் செயல் அநீதியானதே {அறமன்று}” என்றன. அவ்வீரன் கொல்லப்பட்டதும், நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கும் ஆகாயம் நிலவுடன் இருப்பதைப் போலப் பூமியானது மிகப் பிரகாசமாக இருந்தது. உண்மையில், பூமியானது இரத்த அலைகளால் மறைக்கப்பட்டுத் தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் விரவி கிடந்தது.

குண்டலங்களாலும், பெரும் மதிப்புமிக்கப் பல்வேறு தலைப்பாகைகளாலும் அலங்கரிக்கப்பட்ட வீரர்களின் அழகிய தலைகள், கொடிகள், சாமரங்கள், அழகிய விரிப்புகள், ரத்தினங்கள் பொறிக்கப்பட்ட பெரும் திறன்வாய்ந்த ஆயுதங்கள், தேர்கள், குதிரைகள், மனிதர்கள் மற்றும் யானைகளின் பிரகாசமான ஆபரணங்கள், சட்டையுரிந்த பாம்புகளைப் போலத் தெரிந்தவையும், நன்கு கடினமாக்கப்பட்டவையுமான கூரிய வாள்கள், விற்கள், உடைந்த ஈட்டிகள், ரிஷ்டிகள், வேல்கள், கம்பனங்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களால் பரவிக் கிடந்த அவள் {பூமி} அழகிய வடிவத்தை ஏற்றாள்.

சுபத்திரையின் மகனால் வீழ்த்தப்பட்டு, உயிரையிழந்தோ, உயிரையிழக்கும் தருவாயிலோ தங்கள் சாரதிகளுடன் இரத்தத்தில் புரண்டு கிடந்த குதிரைகளின் விளைவாகப் பல இடங்களில் பூமி கடக்க முடியாததாக இருந்தது. கவசங்கள், ஆயுதங்கள் மற்றும் கொடிமரங்கள் தரித்தவையும், மலைகளைப் போன்றவையுமான யானைகள், இரும்பு அங்குசங்களாலும், கணைகளாலும் நொறுக்கப்பட்டுக் கிடக்க, குதிரைகள், தேரோட்டிகள், தேர்வீரர்கள் ஆகியோரை இழந்த சிறந்த தேர்கள், யானைகளால் நசுக்கப்பட்டுப் பரவிக் கிடக்க, பூமியானது கலக்கப்பட்ட தடாகங்களைப் போலத் தெரிய, பல்வேறு ஆயுதங்களைத் தரித்த பெரும் எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள் தரையில் இறந்து கிடக்க, அந்தப் போர்க்களமானது பயங்கரத் தோற்றத்தை ஏற்று, மருண்டோரின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்தியது. சூரியனைப் போன்றோ, நிலவைப் போன்றோ பிரகாசமான அபிமன்யு தரையில் கிடப்பதைக் கண்ட உமது துருப்புகள் மகிழ்ச்சிப் பரவசத்தில் திளைத்தன, அதே வேளையில் பாண்டவர்கள் துயரால் நிறைந்தனர்.

பாலகனே ஆன இளமை நிறைந்த அபிமன்யு வீழ்ந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னன் யுதிஷ்டிரன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாண்டவப் படையணிகள் தப்பி ஓடின. சுபத்திரையின் மகன் {அபிமன்யு} வீழ்ந்ததும் பிளந்து ஓடிய தன் படையைக் கண்ட யுதிஷ்டிரன், துணிவுமிக்கத் தன் வீரர்களிடம், “போரில் பின்வாங்காது உயிரை இழந்த வீர அபிமன்யு நிச்சயம் சொர்க்கத்தையே அடைந்திருக்கிறான். எனவே நில்லுங்கள், அஞ்சாதீர், நாம் நம் எதிரிகளை வீழ்த்துவோம்” என்றான் {யுதிஷ்டிரன்}.

பெரும் சக்தியும், பெரும் காந்தியும் கொண்டவனும், வீரர்களில் முதன்மையானவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், துயரில் இருந்த தன் வீரர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லி அவர்களது திகைப்பை அகற்ற முயன்றான். மன்னன் {யுதிஷ்டிரன் தொடர்ந்தான்}, “போரில் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான பகை இளவரசர்களை முதலில் கொன்று, அதன் பிறகே அர்ஜுனன் மகன் {அபிமன்யு} தன் உயிரை விட்டான். கோசல மன்னனின் பத்தாயிரம் வீரர்களைக் கொன்றவனும், கிருஷ்ணனையோ, அர்ஜுனனையோ போன்றவனுமான அபிமன்யு நிச்சயம் இந்திரனின் உலகத்திற்குச் சென்றிருப்பான். தேர்கள், குதிரைகள், மனிதர்கள், யானைகளை ஆயிரக்கணக்கில் கொன்ற அவன் {அபிமன்யு}, தான் செய்ததில் மனம் நிறையவேயில்லை. எனவே, அவனைப் போலவே புண்ணியமிக்கச் செயல்களை நாம் செய்ய வேண்டுமேயன்றி, நிச்சயம் அவனுக்காக வருந்தக் கூடாது. நீதிமான்களின் பிரகாசமான உலகங்களுக்கும், புண்ணியச் செயல்களால் மனிதர்கள் அடையும் உலகங்களுக்குமே அவன் சென்றிருக்கிறான்” என்றான் {யுதிஷ்டிரன்}” {என்றான் சஞ்சயன்}.

பயங்கரப் போர்க்களம்! – துரோண பர்வம் பகுதி – 048-அபிமன்யு இறந்ததும் படைகள் பாசறைக்குத் திரும்பியது; போர்க்களத்தின் வர்ணனை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அவர்களின் {பாண்டவர்களின்} முதன்மையான வீரர்களில் ஒருவனை {அபிமன்யுவை} இப்படிக் கொன்ற பிறகு, அவர்களின் கணைகளால் பீடிக்கப்பட்டிருந்த நாங்கள், குருதியில் நனைந்தபடியே மாலை வேளையில் எங்கள் பாசறைக்குத் திரும்பினோம். எதிரியால் உறுதியாக வெறித்துப் பார்க்கப்பட்ட நாங்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கடும் இழப்பை அடைந்து, கிட்டத்தட்ட நினைவுகளை இழக்கும் தருவாயில் போர்க்களத்தைவிட்டு மெல்ல வெளியேறினோம். அப்போது பகலுக்கும் இரவுக்கும் இடைப்பட்ட அற்புதமான நேரமும் வந்தது. நரிகளின் அமங்கலமான ஊளைகளையும் நாங்கள் கேட்டோம்.

மேற்கு மலைகளை {அஸ்த மலையை} அடைந்த சூரியன், தாமரை இதழ்களைப் போன்ற வெளிர் சிவப்பு நிறத்தில் கீழே அடிவானத்தில் மூழ்கிக் கொண்டிருந்தான். அவன் {சூரியன்}, எங்கள் வாள்கள், கணைகள், ரிஷ்டிகள், தேரின் வரூதங்கள், கேடயங்கள் மற்றும் ஆபரணங்களில் இருந்த காந்தியையும் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டான். ஆகாயத்தையும், பூமியையும் ஒரே நிறம் கொள்ளச் செய்த சூரியன் தனக்குப் பிடித்தமான நெருப்பின் வடிவத்தை ஏற்றான் {அக்னி ஸ்வரூபமான சரீரத்தை அடைந்தான்}.

தங்கள் முதுகில் இருந்த கொடிமரங்கள், அங்குசங்கள் மற்றும் பாகர்கள் விழுந்து கிடக்க, இடியால் பிளக்கப்பட்ட மேகமுடி கொண்ட மலைமுகடுகளைப் போல, உயிரை இழந்து கிடந்த எண்ணற்ற யானைகளின் அசைவற்ற உடல்கள் போர்களமெங்கும் பரவிக் கிடந்தன. தங்கள் வீரர்கள், தேரோட்டிகள், ஆபரணங்கள், குதிரைகள், கொடிமரங்கள், கொடிகள் ஆகியவை நசுங்கி, உடைந்து, கிழிந்து போய்த் துண்டுகளாக நொறுங்கிக் கிடக்கும் பெருந்தேர்களுடன் பூமியானது அழகாகத் தெரிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பெருந்தேர்கள், எதிரியின் கணைகளால் தங்கள் உயிர்களை இழந்த உயிரினங்களைப் போலத் தெரிந்தன.

விலையுயர்ந்த பொறிகள் மற்றும் பல்வேறு விதங்களிலான விரிப்புகளுடன் கூடிய பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள் மற்றும் சாரதிகள் தங்கள் கண்கள், பற்கள், நரம்புகள், நாக்கு ஆகியன தங்கள் இடங்களில் இருந்து பிதுங்கி உயிரற்றுக் கிடந்ததால் அந்தப் போர்க்களம் கொடூரமான பயங்கரத் தன்மையை அடைந்தது. விலையுயர்ந்த கவசங்கள், ஆபரணங்கள், ஆடைகள், ஆயுதங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்த உயிரிழந்த மனிதர்கள், விலையுயர்ந்த படுக்கைகள் மற்றும் விரிப்புகளுக்குத் தாங்கள் தகுந்தோரெனினும், கொல்லப்பட்ட குதிரைகள், யானைகள் மற்றும் உடைந்த தேர்களுடன் முற்றிலும் ஆதரவற்றோராக வெறுந்தரையில் கிடந்தனர்.

அந்தப் போர்க்களத்தில் நாய்கள், நரிகள், காக்கைகள், கொக்குகள், ஊனுண்ணும் பிற பறவைகள், ஓநாய்கள், கழுதைப்புலிகள், அண்டங்காக்கைகள், உணவைக் குடிக்கும் பிற உயிரினங்கள், பல்வேறு இனங்களைச் சேர்ந்த அனைத்து ராட்சசர்கள், பெரும் எண்ணிக்கையிலான பிசாசங்கள் ஆகியன, பிணங்களின் தோலைக் கிழித்து, அவற்றின் கொழுப்பையும், இரத்தத்தையும், மஜ்ஜையையும் குடித்து, அவற்றின் இறைச்சியை உண்ணத் தொடங்கின. மேலும் அவை, அழுகிய பிணங்களின் சுரப்புகளை உறிஞ்சத் தொடங்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான சடலங்களை இழுத்துச் சென்ற ராட்சசர்கள் கொடூரமாகச் சிரித்துக் கொண்டே உரக்கப் பாடினர்.

முதன்மையான தேர்வீரர்களால், வைதரணீயைப் போலக் கடப்பதற்குக் கடினமான பயங்கர நதியொன்று அங்கே உண்டாக்கப்பட்டது. அதன் நீர் (விழுந்த உயிரினங்களின்) குருதியால் அமைந்தது. தேர்கள் அதன் தெப்பங்களாகின, யானைகள் அதன் பாறைகளாகின, மனிதர்களின் தலைகள் அதன் சிறு கற்களாகின. (கொல்லப்பட்ட குதிரைகள், யானைகள், மனிதர்கள் ஆகியோரின்) சதைகள் அதன் சேறானது. பல்வேறு விதங்களிலான விலையுயர்ந்த ஆயுதங்கள் (அந்த ஆற்றில் மிதக்கவோ, அதன் கரைகளில் கிடக்கவோ செய்யும்) மலர் மாலைகளாகின. இறந்தோரின் உலங்கங்களுக்கு உயிரினங்களை இழுத்துச் செல்லும் அந்தப் பயங்கர ஆறானது போர்க்களத்தின் நடுவில் மூர்க்கமாகப் பாய்ந்து கொண்டிருந்தது.

வெறுப்பூட்டும் பயங்கரத் தோற்றங்களைக் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான பிசாசங்கள், அந்த ஓடையில் குடித்தும், உண்டும் மகிழ்ந்தன. அதே உணவை உண்ட நாய்கள், நரிகள் மற்றும் ஊனுண்ணும் பறவைகள் ஆகியன, {மற்ற} உயிரினங்களின் அச்சத்தைத் தூண்டும் வகையில் தங்கள் பெரும் களியாட்டத்தை அங்கே நிகழ்த்தின.

மனிதச் சடலங்கள் எழுந்து நடனமாடத் தொடங்கும் இடமும், யமனுடைய ஆட்சிப்பகுதியைப் பெருகச் செய்வதும், இப்படிப் பயங்கரமாகக் காட்சயளிப்பதுமான அந்தப் போர்க்களத்தை வெறித்துப் பார்த்தப் போர்வீரர்கள், விலையுயர்ந்த தன் ஆபரணங்கள் சிதறிக்கிடக்க, தெளிந்த நெய்யால் மேலும் நனைக்கப்படாத பீடத்தில் உள்ள வேள்வி நெருப்பைப் போலக் களத்தில் கிடப்பவனும், சக்ரனுக்கு ஒப்பானவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அபிமன்யுவைக் கண்டவாறே அதைவிட்டு {போர்க்களத்தைவிட்டு} மெதுவாக வெளியேறினர்” {என்றான் சஞ்சயன்}.

பதிமூன்றாம் நாள் போர் முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  துரோண பர்வம்-சம்சப்தகவத பர்வம் -பன்னிரெண்டாம் நாள் போர்-

October 14, 2025

திரிகர்த்தர்களின் உறுதிமொழி! – துரோண பர்வம் பகுதி – 017-யுதிஷ்டிரனைப் பிடிக்கும் வழி கூறிய துரோணர்; அர்ஜுனனைத் தானே எதிர்ப்பதாகச் சபதமேற்ற திரிகர்த்த மன்னன் சுசர்மன்; திரிகர்த்தர்களின் உறுதிமொழி; அர்ஜுனனைப் போருக்கழைத்த திரிகர்த்தர்கள்; யுதிஷ்டிரனைக் காக்க சத்தியஜித்தை நிறுத்திவிட்டு ஸம்சப்தகர்களை எதிர்த்த அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இரண்டு படைகளின் துருப்புகளும் தங்கள் பாசறைகளுக்குச் சென்ற பிறகு, அவர்கள் அங்கம் வகித்த படைப்பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகளுக்குத் தக்கபடி முறையாகத் தங்கள் தங்கள் இடங்களை அடைந்தனர். துருப்புகளைப் பின்வாங்கச் செய்த பிறகு, உற்சாகமற்ற மனத்துடன் கூடிய துரோணர், துரியோதனனைக் கண்டு வெட்கத்தால் இவ்வார்த்தைகளைச் சொன்னார்: “தனஞ்சயன் {அர்ஜுனன்} யுதிஷ்டிரனிடம் இருக்கையில், தேவர்களாலும் கூடப் போரில் அவன் {யுதிஷ்டிரன்} பிடிக்கப்பட முடியாதவனாவான் என்று நான் ஏற்கனவே உன்னிடம் சொன்னேன். போரில் பார்த்தன் {அர்ஜுனன்} மீது நீங்கள் அனைவரும் பாய்ந்தீர்கள், இருப்பினும் அவன் உங்கள் முயற்சிகளை அனைத்தையும் சலிக்கச் செய்தான். நான் சொல்வதில் ஐயங்கொள்ளாதே, கிருஷ்ணனும், பாண்டுவின் மகனும் (அர்ஜுனனும்) வெல்லப்பட முடியாதவர்களே. எனினும், வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனை எவ்வழியிலாவது (யுதிஷ்டிரனின் பக்கத்தில் இருந்து) விலக்க முடியுமென்றால், ஓ! மன்னா {துரியோதனா}, பிறகு யுதிஷ்டிரன் விரைவில் உன் கட்டுப்பாட்டின் கீழ் வருவான்.

யாரேனும் ஒருவர் அவனை (அர்ஜுனனைப்) போரில் சவாலுக்கழைத்து, களத்தின் வேறு ஏதாவது ஒரு பகுதிக்கு அவனை இழுத்துச் செல்ல வேண்டும். குந்தியின் மகன் {அர்ஜுனன்} அவனை வீழ்த்தாமல் திரும்ப மாட்டான். அதே வேளையில், அர்ஜுனன் இல்லாத அந்தப் பொழுதில், ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, திருஷ்டத்யும்னன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாண்டவப் படைக்குள் ஊடுருவி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை நான் பிடிப்பேன். இப்படியே, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, தர்மனின் மகனான யுதிஷ்டிரனையும், அவனது தொண்டர்களையும் கட்டுப்பாட்டின் கீழ் நான் கொண்டு வருவேன் என்பதில் ஐயமில்லை. அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, போரில் ஒருக்கணமாவது என் முன்னிலையில் நின்றானானால், களத்தில் இருந்து அவனை நான் சிறைப்பிடித்துக் கொண்டுவருவேன். (பாண்டவப் படையை வீழ்த்தி அடையும்) வெற்றியை விட அந்த அருஞ்செயல் மிகவும் நன்மை தருவதாக இருக்கும் [1]” என்றார் {துரோணர்}.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “துரோணரின் அவ்வார்த்தைகளைக் கேட்ட திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனது தம்பிகளுடன் சேர்ந்து இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! மன்னா {துரியோதனா}, காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} நாங்கள் எப்போதும் அவமதிக்கப்பட்டே வந்திருக்கிறோம். ஓ! பாரதக் குலத்தில் காளையே {துரியோதனா}, நாங்கள் அவனுக்கு எத்தீங்கையும் செய்யாதிருப்பினும், அவன் எப்போதும் எங்களைக் காயப்படுத்தியே வந்தான். அந்தப் பல்வேறு அவமதிப்பு நிகழ்வுகள் அனைத்தையும் நினைத்து நினைத்து கோபத்தால் எரியும் நாங்கள் இரவில் தூங்க முடியாமல் இருக்கிறோம்.

நற்பேறினால், அந்த அர்ஜுனன் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு எங்கள் முன்னிலையில் நிற்பான். எனவே, எது எங்கள் இதயத்தில் இருக்கிறதோ, எதைச் சாதிக்க நாங்கள் முயல்கிறோமோ; எது உனக்கு ஏற்புடையதாக இருக்குமோ, எது எங்களுக்குப் புகழைக் கொண்டு வருமோ, அதை இப்போதே அடைய நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். களத்திற்கு வெளியே அழைத்துச் சென்று அவனைக் {அர்ஜுனனைக்} கொல்வோம். இன்றே இந்தப் பூமி அர்ஜுனன் இல்லாததாகவோ, அல்லது திரிகர்த்தர்கள் இல்லாததாகவோ போகட்டும். உன் முன்னிலையில் இந்த உறுதிமொழியை நாங்கள் உண்மையாக ஏற்கிறோம். இந்த எங்கள் சபதம் பொய்க்கப்போவதில்லை” என்றான் {சுசர்மன்}.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சத்தியரதன், சத்தியவர்மன், சத்தியவிரதன், சத்தியேஷு, சத்தியகர்மன்ஆகிய ஐந்து சகோதரர்களும் ஒன்று சேர்ந்து இது போலவே சொல்லிப் போர்க்களத்தில் உறுதியேற்று, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பத்தாயிரம் {10,000} தேர்களோடு (துரியோதனன் முன்னிலையில்) வந்தனர். மாலவர்களும், ஆயிரம் தேர்களோடு கூடிய துண்டிகேரர்களும், மாவேல்லகர்கள், லலித்தர்கள், மத்திரகர்கள் மற்றும் தன் சகோதரர்கள், பல்வேறு ஆட்சிப்பகுதிகளைச் சேர்ந்த பத்தாயிரம் தேர்கள் ஆகியவற்றுடன் கூடிய மனிதர்களில் புலியான பிரஸ்தல ஆட்சியாளன் சுசர்மனும் உறுதியேற்க முன்வந்தனர். பிறகு நெருப்பைக் கொண்டு வந்த அவர்கள் ஒவ்வொருவரும், தனக்கென்று ஒன்றைப் பற்ற வைத்து, குசப்புல்லாலான ஆடைகளையும், அழகிய கவசங்களையும் அணிந்தனர்.

கவசந்தரித்து, தெளிந்த நெய்யில் குளித்து, குசப்புல் ஆடைகளை அணிந்து, தங்கள் வில்லின் நாண்கயிறுகளைக் கச்சையாகப் {அரைஞாணாகப்} பயன்படுத்தியவர்களும், பிராமணர்களுக்கு நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கில் தானங்களை வழங்கியவர்களும், பல வேள்விகளைச் செய்தவர்களும், குழந்தைகளால் அருளப்பட்டவர்களும், மறுமையில் அருளப்பட்ட உலகங்களுக்குத் தகுந்தவர்களும், இவ்வுலகில் செய்ய வேண்டியவை ஏதுமில்லாதவர்களும், போரில் தங்கள் உயிர்களை விடத் தயாராக இருந்தவர்களும், புகழையும், வெற்றியையும் அடையத் தங்கள் ஆன்மாக்களை அர்ப்பணித்தவர்களும், வேள்விகளாலும், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடை அளிப்பதாலும், சடங்குகளாலும், இவற்றுக்கெல்லாம் தலைமையாகப் பிரம்மச்சரியம் மற்றும் வேத கல்வியாலும் மட்டுமே அடைய முடிந்த (மறுமையின்) உலகங்களை நல்ல போரின் மூலம் விரைவில் அடைய விரும்புபவர்களும், தங்கம், பசுக்கள், ஆடைகள் ஆகியவற்றைக் கொடுத்துப் பிராமணர்களை மனநிறைவு கொள்ளச் செய்தவர்களுமான அவ்வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் அன்பாகப் பேசிக் கொண்டு நெருப்பை மூட்டி, போரில் அந்தச் சபதத்தை ஏற்றனர். அந்த நெருப்புகளின் முன்னிலையில், உறுதியான தீர்மானத்துடன் அந்தச் சபதத்தை அவர்கள் ஏற்றனர்.

தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கொல்வதாகச் சபதம் செய்த அவர்கள் {திரிகர்த்தர்கள் [சம்சப்தகர்கள்]}, பேரொலியுடன், “தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கொல்லாமல் களத்தில் இருந்து நாங்கள் திரும்பினாலோ, அவனால் வீழ்த்தப்பட்டு, அச்சத்தால் நாங்கள் புறமுதுக்கிட்டாலோ, எந்த நோன்பையும் எப்போதும் நோற்காதோர், மது குடிப்பவன், ஆசானின் மனைவியிடம் ஒழுக்கங்கெட்ட தொடர்பு கொண்டோர், பிராமணனின் உடைமையைத் திருடுவோர், மன்னனின் நிபந்தனையை நிறைவேற்றாமல் அவன் தந்த பரிசை அனுபவிப்பவன், பாதுகாப்பு நாடியவனைக் கைவிட்டவன், தன்னிடம் உதவி கேட்டவனைக் கொல்பவன், வீட்டைக் கொளுத்துவோர், பசுவைக் கொல்வோர், அடுத்தவருக்குத் தீங்கிழைப்போர், பிராமணர்களிடம் பகைமை பாராட்டுவோர், தன் மனைவியின் பருவ காலத்தில் மூடத்தனத்தால் அவளது துணையை நாடாதோர், தங்கள் முன்னோர்களுக்கான சிரார்த்த தினத்தில் பெண்ணின் துணையை நாடுவோர், தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வோர், நம்பிக்கையுடன் அடைக்கலமாகப் பிறர் கொடுத்த பொருளை அபகரிப்போர், கல்வியை அழிப்போர், அலிகளோடு {ஆண்மையற்றோரோடு} போர்புரிவோர், இழிந்தோரை அண்டுவோர், நாத்திகர்கள், (புனித) நெருப்பையும், தாயையும், தந்தையையும் கைவிடுவோர், பாவங்கள் நிறைந்தோர் ஆகியோர் எந்த உலகங்களை அடைவார்களோ அந்த உலகங்கள் எங்களுடையவையாகும். அதேபோல, உலகில் அடைவதற்கு மிகக் கடினமான சாதனைகளைப் போரில் அடைந்தோமாகில் மிகவும் விருப்பத்திற்குரிய உலகங்களை நாங்கள் அடைவோம் என்பதில் ஐயமில்லை” என்றனர்.

இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தின் தென்பகுதியை நோக்கி அர்ஜுனனை அழைத்தபடி, போருக்கு அணிவகுத்துச் சென்றனர்.

மனிதர்களில் புலியும், பகை நகரங்களை அடக்குபவனுமான அர்ஜுனன், இப்படி அவர்களால் சவாலுக்கழைக்கப்பட்டதும், சற்றும் தாமதிக்காமல் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: {அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம்}, “அழைக்கப்பட்டால், நான் எப்போதும் புறமுதுகிடுவதில்லை. இஃது என் உறுதியான நோன்பாகும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, வெற்றி அல்லது மரணம் என்ற உறுதியேற்றிருக்கும் இம்மனிதர்கள் {சம்சப்தகர்கள்} பெரும் போருக்காக என்னை அழைக்கிறார்கள். தன் தம்பிகளோடு கூடிய இந்தச் சுசர்மன் என்னைப் போருக்கு அழைக்கிறான். அவனையும் அவனது தொண்டர்களையும் கொல்ல எனக்கு அனுமதியளிப்பதே உமக்குத் தகும். ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, இந்தச் சவாலை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த எதிரிகள் போரில் (ஏற்கனவே) கொல்லப்பட்டதாக அறிவீராக என்று நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.

யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, “ஓ! குழந்தாய் {அர்ஜுனா}, துரோணர் எதை அடையத் தீர்மானித்திருக்கிறார் என்ற விபரத்தை நீ கேட்டிருக்கிறாய். அந்த அவரது தீர்மானம் பயனற்றதாகும் வகையில் நீ செயல்படுவாயாக. துரோணர் பெரும் வலிமைகொண்டவராவார். ஆயுதங்களை நன்கறிந்த அவர், களைப்புக்கு மேலான {களைப்படையாத} வீரராவார். ஓ! வலிமைமிக்கத் தேர்வீரனே {அர்ஜுனா}, அவரே {துரோணரே} என்னைப் பிடிக்கச் சபதமேற்றிருக்கிறார்” என்றான் {யுதிஷ்டிரன்}.

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இன்று இந்த {பாஞ்சால இளவரசன்} சத்தியஜித் போரில் உமது பாதுகாவலனாவான். சத்தியஜித் உயிரோடிருக்கும்வரை, ஆசானால் {துரோணரால்} ஒருபோதும் தன் விருப்பத்தை அடைய முடியாது. எனினும், ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, மனிதர்களில் புலியான இந்தச் சத்தியஜித் போரில் கொல்லப்பட்டால், நமது வீரர்கள் அனைவரும் உம்மைச் சூழ்ந்திருந்தாலும் களத்தில் நீர் நீடித்திருக்கக் கூடாது [2]” என்றான் {அர்ஜுனன்}.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு மன்னன் யுதிஷ்டிரன் (அர்ஜுனன் வேண்டிய) விடுப்பை (அவனுக்கு) அளித்தான். மேலும் அவன் {யுதிஷ்டிரனிடம்}, அர்ஜுனனைத் தழுவிக்கொண்டு பாசத்துடன் அவனைப் பார்த்தான். மேலும் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} பல்வேறு வாழ்த்துகளை {ஆசீர்வாதங்களை} அவனுக்குத் தெரிவித்தான். (யுதிஷ்டிரனின் பாதுகாப்புக்கான) இந்த ஏற்பாட்டைச் செய்த வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, பசி கொண்ட சிங்கம் தன் பசியைப் போக்குவதற்காக மான் கூட்டத்தை நோக்கிச் செல்வதைப் போல, திரிகர்த்தர்களை எதிர்த்து வெளியே சென்றான். அப்போது (யுதிஷ்டிரனின் பக்கத்தில்) அர்ஜுனன் இல்லாததால் மகிழ்ச்சியில் நிறைந்த துரியோதனனின் துருப்புகள், யுதிஷ்டிரனைப் பிடிப்பதில் தீவிரமடைந்தன. பிறகு இரு படைகளும், மழைக்காலத்தில் நீர் நிறைந்த இரு நதிகளான கங்கையும் சரயுவும் போலப் பெரும் மூர்க்கத்துடன் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன” {என்றான் சஞ்சயன்}.

சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 018-சம்சப்தகர்களை அணுகிய அர்ஜுனன்; அர்ஜுனனின் சங்கு முழக்கத்தைக் கேட்டு அஞ்சிய திரிகர்த்தர்கள்; சுதன்வானைக் கொன்ற அர்ஜுனன்; பீதியடைந்த திரிகர்த்தர்கள் துரியோதனின் படையை நோக்கி ஓடியது; ஓடியவர்களைத் தடுத்து அவர்களைப் போருக்குத் திருப்பிய சுசர்மன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, மகிழ்ச்சியால் நிறைந்த சம்சப்தகர்கள் [1], அர்த்தச்சந்திர வடிவத்தில் தங்கள் வியூகத்தை அமைத்து, சமமான நிலத்தில் தங்கள் தேர்களுடன் நின்றனர். அந்த மனிதர்களில் புலிகள் {சம்சப்தகர்கள்}, தங்களை நோக்கி கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்) வருவதைக் கண்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, உரக்கக் கூச்சலிட்டனர். அவ்வொலி வானத்தையும், முக்கியத் திசைகள் மற்றும் துணைத்திசைகள் அனைத்தையும் நிறைத்தது. மனிதர்களால் மட்டும் மறைக்கப்பட்ட களமாக இருந்ததால், அஃது எதிரொலிகள் எதையும் உண்டாக்கவில்லை.

அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதை உறுதிசெய்து கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, சிறு புன்னகையுடன், கிருஷ்ணனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! தேவகியைத் தாயாகக் கொண்டவனே {தேவகீநந்தனா, கிருஷ்ணா}, போரில் அழியப் போகும் அந்தத் திரிகர்த்தர்கள், தாங்கள் அழ வேண்டிய இந்த நேரத்தில் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதைப் பார். அல்லது, கோழைகளால் அடையவே முடியாத சிறந்த உலகங்களை இவர்கள் அடையப் போவதால் இஃது அவர்கள் மகிழ வேண்டிய காலமே என்பதிலும் ஐயமில்லைதான்” {என்றான் அர்ஜுனன்}.

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன அர்ஜுனன், போரில் அணிவகுத்து நிற்கும் திரிகர்த்தர்களின் படையணிகளிடம் வந்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தேவதத்தம் என்று அழைக்கப்பட்டதுமான தன் சங்கை எடுத்து பெரும்பலத்துடன் ஊதி, அதன் ஒலியால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்தான். அவ்வொலியால் பீதியடைந்த அந்தச் சம்சப்தகர்களின் தேர்ப்படை செயலிழந்து போய், போரில் அசைவற்று நின்றது. அவர்களது விலங்குகள் {குதிரைகள்} அனைத்தும் கண்களை அகலவிரித்துக் கொண்டு, காதுகள், கழுத்துகள் மற்றும் உதடுகள் செயலற்று, கால்கள் அசைவற்று நின்றன. மேலும் அவை சிறுநீர் கழித்தன, குருதியையும் கக்கின.

பிறகு சுயநினைவு மீண்ட பிறகு, தங்கள் படையணிகளை முறையான வரிசையில் நிறுத்திய அவர்கள், ஒரே சமயத்தில் தங்கள் கணைகள் அனைத்தையும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது ஏவினர். பெரும் வேகத்துடன் தன் ஆற்றலை வெளிக்காட்டவல்ல அர்ஜுனன், அந்த ஆயிரக்கணக்கான கணைகளும் தன்னை வந்து அடையும் முன்பே பதினைந்து [2] கணைகளால் அவற்றை வெட்டினான். பிறகு அவர்கள் ஒவ்வொருவரும், அர்ஜுனனைப் பத்து {பத்து பத்து} கணைகளால் துளைத்தனர். பார்த்தன் {அர்ஜுனன்} அவர்களை மூன்று {மும்மூன்று} கணைகளால் துளைத்தான். பிறகு அவர்கள் ஒவ்வொருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனை {அர்ஜுனனை} ஐந்து {ஐந்தைந்து} கணைகளால் துளைத்தனர். பெரும் ஆற்றலைக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, அவர்கள் ஒவ்வொருவரையும் இரண்டு {இரண்டிரண்டு} கணைகளால் துளைத்தான்.

மீண்டும் கோபத்தால் தூண்டப்பட்ட அவர்கள், தடாகத்தில் மேகங்கள் தடையில்லாமல் பொழிவதைப் போல அர்ஜுனன் மற்றும் கேசவன் {கிருஷ்ணன்} மீது எண்ணற்ற கணைகளை விரைவாகப் பொழிந்தனர். பிறகு அந்த ஆயிரக்கணக்கான கணைகளும், காட்டில் பூத்திருக்கும் மரங்களில் வண்டுக்கூட்டங்கள் விழுவதைப் போல அர்ஜுனன் மீது விழுந்தன. கடினமானதும், பலமானதுமான அர்ஜுனனின் கிரீடம் முப்பது கணைகளால் ஆழமாகத் துளைக்கப்பட்டது. தங்கச் சிறகுகளைக் கொண்ட அந்தக் கணைகள் அவனது கிரீடத்தில் இருந்ததால், அர்ஜுனன், ஏதோ தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனைப் போலவும், (புதிதாக) உதித்த சூரியனைப் போலவும் ஒளிர்ந்தான்.

பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பிறகு அந்தப் போரில், சுபாகுவின் கையுறையை ஒரு பல்லத்தால் அறுத்து, சுதர்மன் மற்றும் சுதன்வானையும் மறைத்தான். சுபாகுவோ பத்து கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான் [3]. தன் கொடியில் சிறந்த குரங்கு வடிவத்தைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, பதிலுக்குப் பல கணைகளால் அவர்கள் அனைவரையும் துளைத்து, மேலும் சில பல்லங்களால் தங்கத்தாலான அவர்களது கொடிமரங்களையும் வெட்டினான். சுதன்வானின் வில்லையும் அறுத்த அவன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் பின்னவனின் {சுதன்வானின்} குதிரைகளையும் கொன்றான். பிறகு, தலைப்பாகையால் அருளப்பட்ட பின்னவனின் {சுதன்வானின்} தலையையும் அவனது உடலில் இருந்து வெட்டி வீழ்த்தினான்.

அந்த வீரனின் {சுதன்வானின்} வீழ்ச்சியில், அவனது தொண்டர்கள் {அவனைப் பின்தொடர்ந்து வந்தவர்கள்} பீதியடைந்தனர். பீதியால் தாக்குண்ட அவர்கள் அனைவரும், துரியோதனனின் படைகள் இருந்த இடத்திற்குத் தப்பி ஓடினர். பிறகு வாசவனின் {இந்திரனின்} மகன் {அர்ஜுனன்}, கோபத்தால் நிறைந்து, சூரியன் தன் தடையற்ற கதிர்களால் இருளை அழிப்பதைப் போலத் தன் இடைவிடாத கணைகளின் மழையால் அந்த வலிமைமிக்கப்படையைத் தாக்கத் {அழிக்கத்} தொடங்கினான். பிறகு, அந்தப் படை உடைந்து அனைத்துப் பக்கங்களிலும் உருகி ஓட, அர்ஜுனன் கோபத்தால் நிறைந்தபோது, திரிகர்த்தர்கள் அச்சத்தால் தாக்குண்டனர். பார்த்தனின் {அர்ஜுனனின்} நேரான கணைகளால் கொல்லப்பட்ட போது, பீதியடைந்த மான்கூட்டத்தைப் போலத் தங்கள் உணர்வுகளை இழந்த அவர்கள், தாங்கள் நின்ற இடத்திலேயே நீடித்தனர்.

பிறகு சினத்தால் நிறைந்த திரிகர்த்தர்களின் மன்னன் {சுசர்மன்}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களிடம், “வீரர்களே, தப்பி ஓடாதீர்! அச்சமுறுவது உங்களுக்குத் தகாது. துருப்புகள் அனைத்தின் பார்வையிலும் பயங்கர நிலைப்பாடுகளை எடுத்து {சபதம் செய்து} இங்கே வந்த பிறகு, துரியோதனனின் படைத்தலைவர்களிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்? போரில் இத்தகு (கோழைத்தனமான) செயலைச் செய்வதால், உலகத்தின் பரிகாசத்திற்கு நாம் ஆளாக மாட்டோமா? எனவே, அனைவரும் நிற்பீராக. உங்கள் பலத்துக்குத் தக்கபடி போரிடுவீராக” என்றான் {சுசர்மன்}.

இப்படிச் சொல்லப்பட்ட அந்த வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் மகிழ்ச்சியுறச் செய்தபடி, மீண்டும் மீண்டும் உரத்த கூச்சலிட்டுக் கொண்டு தங்கள் சங்குகளை முழங்கினர். பிறகு அந்தச் சம்சப்தகர்கள், காலனையே மங்கச் செய்யத் தீர்மானித்திருந்த நாராயணக் கோபாலர்களுடன் மீண்டும் களத்திற்குத் திரும்பினர்” {என்றான் சஞ்சயன்}.

“பார்த்தா! நீ உயிரோடிருக்கிறாயா?” என்ற கிருஷ்ணன்! – துரோண பர்வம் பகுதி – 019-களத்திற்குத் திரும்பிய சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்; அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் கணைகளால் மறைத்த நாராயணர்கள்; கிருஷ்ணார்ஜுனர்கள் மாண்டார்கள் என்று கொண்டாடிய நாராயணர்கள்; அர்ஜுனனைக் காணாத கிருஷ்ணன் அவன் உயிரோடிருக்கிறானா என வினவியது; களத்தில் அர்ஜுனன் ஆடிய ருத்ரதாண்டவம்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “களத்திற்கு மீண்டும் திரும்பி வந்த சம்சப்தகர்களைக் கண்ட அர்ஜுனன், உயர் ஆன்ம வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, குதிரைகளைச் சம்சப்தகர்களை நோக்கித் தூண்டுவாயாக. இவர்கள் உயிரோடுள்ளவரை போரைக் கைவிடமாட்டார்கள். இதையே {என்றே} நான் நினைக்கிறேன். இன்று என் கரங்களின் பயங்கர வலிமையையும், எனது வில்லின் வலிமையையும் நீ சாட்சியாகக் காண்பாயாக. (யுக முடிவில்) உயிரினங்களைக் கொல்லும் ருத்திரனைப் போல, நான் இவர்கள் அனைவரையும் இன்று கொல்வேன்” என்றான் {அர்ஜுனன்}.

வெல்லப்பட முடியாதவனான கிருஷ்ணன், இவ்வார்த்தைகளைக் கேட்டுப் புன்னகைத்து, மங்கலகரமான பேச்சுகளால் அர்ஜுனனுக்கு மகிழ்வூட்டி, அவன் {அர்ஜுனன்} செல்ல விரும்பிய இடங்களுக்கெல்லாம் அவனை இட்டுச் சென்றான். அந்தத் தேரானது, வெண்குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்ட போது, ஆகாயத்தில் செல்லும் தெய்வீகத் தேரைப் {விமானம்} போலவே மிகவும் பிரகாசமானதாக இருந்தது. அது {அந்தத் தேர்}, பழங்காலத்தில் நடந்த தேவாசுரப் போரில் சக்ரனின் {இந்திரனின்} தேரைப் போல வட்டமான நகர்வுகளையும், முன்னோக்கியும், பின்னோக்கியும் எனப் பல்வேறு வகைகளிலான பிற நகர்வுகளையும் வெளிப்படுத்தியது.

பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட நாராயணர்கள், பல்வேறு விதமான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, கணை மழையால் தனஞ்சயனை {அர்ஜுனனை} மறைத்து, அவனைச் சூழ்ந்து கொண்டனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, விரைவில் அவர்கள் குந்தியின் மகனையும் {அர்ஜுனனையும்}, கிருஷ்ணனையும் சேர்த்து அந்தப் போரில் கண்ணுக்குப் புலப்படாத வகையில் முழுமையாக மறைத்துவிட்டனர். பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட பல்குனன் {அர்ஜுனன்}, தன் சக்தியை இரட்டிப்பாக்கி, (காண்டீவத்தின்) நாணை விரைவாகத் தேய்த்துப் போரில் காண்டீவத்தைப் (உறுதியாகப்) பற்றினான்.

பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, உறுதியான கோபக்குறியீடான சுருக்கங்களைத் தன் புருவத்தில் தோன்றச் செய்து {புருவங்களை நெறித்து}, தேவதத்தம் என்று அழைக்கப்படும் தன் மகத்தான சங்கை ஊதி, பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளைக் கொல்லவல்ல துவஷ்டிரா {துவஷ்டா} [1] என்று அழைக்கப்படும் ஆயுதத்தை ஏவினான். அதன் பேரில், ஆயிரக்கணக்கான தனித்தனி வடிவங்கள் (அர்ஜுனனாகவும், வாசுதேவனாகவும் {கிருஷ்ணனாகவும்} அங்கே தோன்றத் தொடங்கின. அர்ஜுனன் வடிவிலான அந்தப் பல்வேறு வடிவங்களால் குழம்பிய துருப்புகள், ஒவ்வொருவரையும் அர்ஜுனனாகவே கருதி தங்களுக்குள் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.

“இவன் அர்ஜுனன்!”, “இவன் கோவிந்தன்!”, “இவர்கள் பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்}, யது குலத்தோனும் {கிருஷ்ணனும்} ஆவர்!” இப்படியே சொல்லிக் கொண்டு, தங்கள் புலன்களை இழந்த அவர்கள் {நாராயணர்கள்}, அந்தப் போரில் ஒருவரை ஒருவர் கொன்றனர். உண்மையில் அந்த வீரர்கள் (ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட போது) பூத்திருக்கும் கின்சுகங்களைப் {பலாச மரங்களைப்} போல அழகாகத் தெரிந்தனர் [2]. அவர்களால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளையும் எரித்த அந்த (வலிமைமிக்க ஆயுதம்) அவ்வீரர்களை யமலோகம் அனுப்பியது.

பிறகு பீபத்சு {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே தன் கணைகளால், லலித்தர்களையும், மாலவர்களையும், மாவேல்லகர்களையும், திரிகர்த்த வீரர்களையும் நசுக்கினான். விதியால் தூண்டப்பட்ட அந்த க்ஷத்திரியர்கள் அந்த வீரனால் {அர்ஜுனனால்} இப்படிக் கொல்லப்பட்ட போது, அவர்கள் பார்த்தன் {அர்ஜுனன்} மீது பல்வேறு விதங்களிலான கணை மழைகளைப் பொழிந்தனர். அந்தப் பயங்கரக் கணைகளின் மழைகளில் மூழ்கியதால் அர்ஜுனனையோ, அவனது தேரையோ, கேசவனையோ {கிருஷ்ணனையோ} அதற்கு மேலும் காண முடியவில்லை.

இலக்கைத் தாக்கும் தங்கள் கணைகளைக் கண்ட அவர்கள் {நாராயணர்கள்} மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இரு கிருஷ்ணர்களும் {அர்ஜுனனும், கிருஷ்ணனும்} ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டதாகக் கருதிய அவர்கள், மகிழ்ச்சிகரமாகத் தங்கள் ஆடைகளைக் காற்றில் அசைத்தனர். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்கள் ஆயிரக்கணக்கான பேரிகைகளையும், மிருதங்கங்களையும் அடித்துத் தங்கள் சங்குகளையும் ஊதி சிங்க முழக்கங்களிட்டனர்.

பிறகு கிருஷ்ணன், வியர்வையில் நனைந்து, மிகவும் பலவீனமடைந்து அர்ஜுனனிடம், “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ எங்கிருக்கிறாய்? உன்னை நான் காணவில்லை. ஓ! எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, நீ உயிரோடிருக்கிறாயா?” என்றான் {கிருஷ்ணன்}.

அவனது {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளால் பொழியப்பட்ட அந்தக் கணை மழையை, வாயவ்ய ஆயுதத்தின் {வாயவ்யாஸ்திரத்தின்} மூலம் மிக வேகமாக விலக்கினான். பிறகு (அந்த வலிமைமிக்க ஆயுதத்தின் அதி தேவதையான} சிறப்புமிக்க வாயு, ஏதோ அந்தச் சம்சப்தகர்கள் மரங்களின் உலர்ந்த இலைகளைப் போலக் குதிரைகள், யானைகள், தேர்கள் மற்றும் ஆயுதங்களுடன் கூடிய அவர்களின் கூட்டங்களை அடித்துச் சென்றான். காற்றால் அடித்துச் செல்லப்பட்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மரங்களில் இருந்து பறந்து செல்லும் பறவை கூட்டங்களைப் போல மிக அழகாகத் தெரிந்தனர்.

இப்படி அவர்களைப் பீடித்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, கூரிய கணைகளால் அவர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பெரும் வேகத்தோடு தாக்கினான். தன் பல்லங்களின் மூலம் அவன் {அர்ஜுனன்}, அவர்களது தலைகளையும், ஆயுதங்களைப் பிடித்திருந்த அவர்களது கரங்களையும் வெட்டினான். அவன் {அர்ஜுனன்} தன் கணைகளால் யானைத் துதிக்கைகளுக்கு ஒப்பான அவர்களது தொடைகளைத் தரையில் வீழ்த்தினான். சிலர் தங்கள் முதுகுகளிலும், கரங்களிலும், கண்களிலும் காயம்பட்டனர்.

இப்படியே, தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளின் பல்வேறு அங்கங்களையும், வானத்தில் இருக்கும் நீர் மாளிகைகளைப் {கந்தர்வ நகரங்களைப் [மேகங்களைப்]} போலத் தெரிபவையும், விதிப்படி தயாரித்து அலங்கரிக்கப்பட்டவையுமான {அவர்களின்} தேர்களையும் இழக்கச் செய்தான். மேலும் அவன் {அர்ஜுனன்}, தன் கணைகளின் மூலம் அவர்களது சாரதிகளையும் {தேரோட்டிகளையும்}, குதிரைகளையும், யானைகளையும் துண்டுகளாக வெட்டினான். பல இடங்களில் கொடிமரங்கள் வெட்டப்பட்ட தேர்க்கூட்டங்கள் தலையற்ற பனைமரக் காடுகளைப் போலத் தெரிந்தன. சிறந்த ஆயுதங்கள், கொடிகள், அங்குசங்கள், கொடிமரங்கள் ஆகியவற்றுடன் கூடிய யானைகள், சக்ரனின் {இந்திரனின்} இடியால் பிளக்கப்பட்ட காடுகள் நிறைந்த மலைகளைப் போல விழுந்தன. சாமரங்கள் போலத் தெரியும் வால்கள் கொண்டவையும், கவசங்களால் மறைக்கப்பட்டவையும், நரம்புகளும், கண்களும் வெளியே புடைத்தவையுமான குதிரைகள், பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் கொல்லப்பட்டுத் தங்கள் சாரதிகளுடன் சேர்ந்து தரையில் உருண்டன.

அர்ஜுனனின் கணைகள் மூலம் கொல்லப்பட்டு, {இதுவரை} தங்கள் நகங்களாகவே இருந்த வாள்களை அதற்கு மேலும் பிடிக்க முடியாமல், தங்கள் கவசங்கள் கிழிபட்டு, எலும்புகளின் இணைப்புகள் உடைபட்டு, முக்கிய அங்கங்கள் பிளக்கப்பட்டிருந்த காலாட்படை வீரர்கள், போர்க்களத்தில் ஆதரவற்ற நிலையில் கிடந்தனர். அந்த வீரர்கள் கொல்லப்பட்டதன் விளைவால், அல்லது அவர்கள் கொல்லப்படும்போது, வீழ்த்தப்படும்போது, வீழும்போது, நிற்கும்போது, அல்லது அவர்கள் சுழற்றப்படும்போது அந்தப் போர்க்களம் பயங்கர வடிவத்தை ஏற்றது. (அர்ஜுனனின் கணைகள் உண்டாக்கிய) உதிர மழையின் மூலம் காற்றில் எழுந்த புழுதி தணிந்தது. நூற்றுக்கணக்கான தலையற்ற உடல்களால் விரவிக்கிடந்த பூமி கடக்க முடியாததானது.

அந்தப் போரில் பீபத்சுவின் {அர்ஜுனனின்} தேரானது, யுக முடிவில் அனைத்து உயிரினங்களையும் அழிப்பதில் ஈடுபடும் ருத்திரனின் தேரைப் போலக் கடுமையாக ஒளிர்ந்தது. இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்படும்போதும், அவ்வீரர்கள், தங்கள் குதிரைகள், தேர்கள், பெரும் துன்பத்தில் இருந்த தங்கள் யானைகள் ஆகியவற்றுடன் அவனை {அர்ஜுனனை} எதிர்ப்பதை நிறுத்தவில்லை; ஒருவர் பின் ஒருவராக உயிரை இழந்தாலும், அவர்கள் சக்ரனின் {இந்திரனின்} விருந்தினர்கள் ஆனார்கள். உயிரிழந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் விரவிக் கிடந்த அந்தப் போர்க்களமானது, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, இறந்த உயிரினங்களின் ஆவிகளால் நிறைந்த யமலோகம் போலப் பயங்கரமானதாகத் தெரிந்தது.

அர்ஜுனன் (சம்சப்தகர்களுடன்) சீற்றத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த அதே வேளையில், துரோணர், போருக்காக அணிவகுக்கப்பட்ட தன் படைகளின் தலைமையில் நின்றபடி, யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தார். தாக்குவதில் சிறந்தவர்களும், முறையாக அணிவகுக்கப்பட்டவர்களுமான பல வீரர்கள், யுதிஷ்டிரனைப் பிடிக்கும் விருப்பத்தால், செயலூக்கத்துடன் அவரைப் {துரோணரைப்} பின்தொடர்ந்து சென்றனர். அதன் பிறகு நேர்ந்த போரானது, மிகக் கடுமையானதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.

யுதிஷ்டிரனை நெருங்கிய துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 020-பனிரெண்டாம் நாள் போரில் கருட வியூகம் அமைத்த துரோணர்; அர்த்தச்சந்திர வியூகம் அமைத்த யுதிஷ்டிரன்; கௌரவப்படையின் அந்த வியூகத்தில் எந்தெந்த நிலைகளில் யார் யார் நின்றனர் என்ற குறிப்பு; கௌரவ வியூகத்தில் பகதத்தன் ஏற்ற நிலை; திருஷ்டத்யும்னனிடம் பேசிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனிடம் உறுதி கூறிய திருஷ்டத்யும்னன் துரோணரைத் தடுத்தது; திருஷ்டத்யும்னனுக்கும் துர்முகனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; களத்தின் பயங்கர நிலவரம்; யுதிஷ்டிரனை நெருங்கிய துரோணர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்} இரவைக் கழித்ததும், சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, “நான் உன்னவன் [1]சம்சப்தகர்களுடன் பார்த்தன் {அர்ஜுனன்} மோதுவதற்கான ஏற்பாடுகளை நான் செய்துவிட்டேன் [2]” என்றார்.

பார்த்தன் {அர்ஜுனன்} சம்சப்தகர்களைக் கொல்வதற்காக வெளியே சென்ற பிறகு, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, துரோணர், போருக்காக அணிவகுக்கப்பட்ட தன் துருப்புகளின் தலைமையில் நின்றபடி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைப் பிடிக்க முன்னேறினார். துரோணர் தன் படைகளைக் கருட வடிவில் {கருட வியூகத்தில்} அணிவகுத்திருப்பதைக் கண்ட யுதிஷ்டிரன், தன் துருப்புகளை அரை வட்ட வடிவில் {அர்த்தச்சந்திர வியூகத்தில்} எதிரணிவகுத்தான்.

அந்தக் கருடனின் வாய்ப்பகுதியில் வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரே நின்றார். தன் உடன் பிறந்த தம்பிகளால் சூழப்பட்ட மன்னன் துரியோதனன் அதன் தலையாக அமைந்தான். கிருதவர்மனும், சிறப்புமிக்கக் கிருபரும் அந்தக் கருடனின் இரு கண்களாக அமைந்தனர். பூதசர்மன், க்ஷேமசர்மன், வீரமிக்கக் கரகாக்ஷன், கலிங்கர்கள், சிங்களர்கள், கிழக்கத்தியர்கள், சூத்திரர்கள், ஆபிரர்கள், தசேரகர்கள், சகர்கள், யவனர்கள், காம்போஜர்கள், ஹம்சபதர்கள், சூரசேனர்கள், தரதர்கள், மத்திரர்கள், காலிகேயர்கள் ஆகியோரும், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்படைகள் ஆகியவற்றுடன் கூடி அதன் {அந்தக் கருட வியூகத்தின்} கழுத்தில் நின்றனர்.

ஒரு முழு அக்ஷௌஹிணியால் சூழப்பட்ட பூரிஸ்ரவஸ், சல்லியன், சோமதத்தன், பாஹ்லிகன் ஆகிய இந்த வீரர்கள் வலது சிறகில் தங்கள் நிலைகளை எடுத்தனர். அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன் ஆகியோர் துரோணரின் மகனான அஸ்வத்தாமனுக்கு முன்பு இடது சிறகில் நின்றனர். (அந்தக் கருடனின்) பின்புறத்தில் கலிங்கர்கள், அம்பஷ்டர்கள், மகதர்கள், பௌண்டரர்கள், மத்ரகர்கள், காந்தாரர்கள், சகுனர்கள், கிழக்கத்தியர்கள், மலைவாசிகள் மற்றும் வசாதிகள் ஆகியோர் இருந்தனர்.

{கருட வியூகத்தின்} வாலில், விகர்த்தனன் மகன் கர்ணன், தன் மகன்கள், சொந்தங்கள், நண்பர்கள் ஆகியோருடன் பல்வேறு நாடுகளால் உண்டான ஒரு பெரிய படையால் சூழப்பட்டு நின்றான். போரில் சாதித்தவர்களான ஜெயத்ரதன், பீமரதன், சம்பாதி, ரிஷபன், ஜயன், போஜர்கள், பூமிஞ்சயன், விருஷன், கிராதன், நிஷாதர்களின் வலிமைமிக்க ஆட்சியாளன் ஆகியோர் ஆனைவரும் பெரிய படை ஒன்றால் சூழப்பட்டவர்களாகப் பிரம்மலோகத்தைத் தங்கள் கண்களின் முன் கொண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வியூகத்தின் இதயப்பகுதியில் நின்றனர்.

துரோணரால் அமைக்கப்பட்ட அந்த வியூகமானது அதன் காலாட்படைவீரர்கள், குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளின் விளைவாக (போருக்கு அது முன்னேறியபோது) புயலால் கொந்தளிக்கும் கடல் போல நிலையற்றதாக இருந்தது. கோடை காலத்தில் {கோடை காலத்தின் முடிவில்} மின்னலுடன் முழங்கும் மேகங்கள் அனைத்துப் புறங்களில் இருந்தும் (வானத்தில்) விரைவதைப் போல, போரை விரும்பிய வீரர்கள், அந்த வியூகத்தின் சிறகுகளிலிருந்தும் பக்கங்களிலிருந்தும் போரிடத் தொடங்கினர்.

பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, முறையாக ஆயத்தம் செய்யப்பட்ட தன் யானையின் மீதேறி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உதயச் சூரியனைப் போல அந்தப் படையின் மத்தியில் பிரகாசமாகத் தெரிந்தான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தன் தலைக்கு மேலே வெண்குடை கொண்ட அவன் {பகதத்தன்} கிருத்திகை நட்சத்திரக்கூட்டத்துடன் கூடிய முழு நிலவைப் போலத் தெரிந்தான். மது போன்ற கசிவினால் குருடானதும், கறுமாக்கல் திரளைப் போலத் தெரிந்ததுமான அந்த யானை பெரும் மேகங்களால் (மேகங்கள் மழை பொழிவதால்) துவைக்கப்பட்ட பெரும் மலையைப் போலப் பிரகாசித்தது. அந்தப் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, தேவர்களால் சூழப்பட்ட சக்ரனை {இந்திரனைப்} போலவே, பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்த மலை நாடுகளைச் சேர்ந்த வீர மன்னர்கள் பலரால் சூழப்பட்டிருந்தான்.

பிறகு யுதிஷ்டிரன், போரில் எதிரிகளால் வீழ்த்தப்பட முடியாத மனித சக்திக்கு மீறிய வியூகத்தைக் கண்டு பிருஷதன் மகனிடம் {யுதிஷ்டிரன் திருஷ்டத்யும்னனிடம்}, “ஓ! தலைவா, ஓ! புறாக்களைப் போன்ற வெண்ணிற குதிரைகளைக் கொண்டவனே {திருஷ்டத்யும்னா}, அந்தப் பிராமணரால் {துரோணரால்} நான் சிறைபடாதிருக்கத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்வாயாக” என்றான்.

திருஷ்டத்யும்னன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, துரோணர் எவ்வளவுதான் முயன்றாலும் நீர் அவர் வசத்தை அடைய மாட்டீர். நான் உயிரோடுள்ளவரை, ஓ! குருகுலத்தவரே {யுதிஷ்டிரரே}, நீர் எந்தக் கவலையையும் உணர்வது தகாது. எந்தச் சூழ்நிலையிலும் போரில் என்னைத் துரோணரால் வீழ்த்த இயலாது” என்றான் {திருஷ்டத்யும்னன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “புறாக்களின் நிறத்திலான குதிரைகளையுடைய வலிமைமிக்கத் துருபதன் மகன் {திருஷ்டத்யும்னன்} இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, தன் கணைகளை இறைத்தபடி துரோணரை நோக்கி விரைந்தான். தனக்கு முன்பு திருஷ்டத்யும்னன் வடிவில் நின்ற அந்தத் தீய சகுனத்தைக் கண்ட துரோணர் மகிழ்ச்சியற்றவரானார் [3].எதிரிகளை நசுக்குபவனான உமது மகன் துர்முகன் இதைக் கண்டு, துரோணருக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பி, திருஷ்டத்யும்னனைத் தடுக்கத் தொடங்கினான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துணிச்சல் மிக்கப் பிருஷதன் மகனுக்கும் {திருஷ்டத்யும்னனுக்கும்}, உமது மகன் துர்முகனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது பயங்கரமானதாகவும், கடுமையானதாகவும் இருந்தது. அப்போது பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, கணைகளின் மழையால் துர்முகனை விரைவாக மறைத்து அடர்த்தியான கணை மழையால் பரத்வாஜரின் மகனையும் {துரோணரையும்} தடுத்தான். துரோணர் தடுக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் துர்முகன், பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி வேகமாக விரைந்து பல்வேறு விதங்களிலான கணைகளின் மழையால் அவனைக் குழப்பினான்.

பாஞ்சால இளவரசனும் {திருஷ்டத்யும்னனும்}, குருகுலத்தில் முதன்மையானவனும் {துர்முகனும்} போரிட்டுக் கொண்டிருக்கையில், துரோணர், யுதிஷ்டிரனுடைய படையின் பல பகுதிகளை எரித்தார். காற்றினால் மேகங்களின் திரள் பல்வேறு திசைகளில் சிதறிப் போவதைப் போலவே, யுதிஷ்டிரனின் படையும் துரோணரால் களத்தின் பல பகுதிகளுக்குச் சிதறடிக்கப்பட்டது. குறுகிய காலத்திற்கு மட்டுமே அந்தப் போர் ஒரு இயல்பான மோதலைப் போலத் தெரிந்தது.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யாருக்கும் எந்தக் கருணையும் காட்டாத மதங்கொண்ட இரு மனிதர்களுக்கு இடையிலான மோதலாக அது மாறியது. அதற்கு மேலும் போராளிகளால் தங்கள் மனிதர்களுக்கும், எதிரிகளுக்கும் இடையில் வேறுபாட்டைக் காண முடியவில்லை. அனுமானங்கள் மற்றும் குறிச்சொற்களால் வழிநடத்தப்பட்ட போர்வீரர்களால் அந்தப் போர் தொடர்ந்து நடந்தது. அவர்களின் {அந்த வீரர்களின்} தலைப்பாகைகள், கழுத்தணிகள் மற்றும் பிற ஆபரணங்களில் உள்ள ரத்தினங்கள் {சூடாரத்தினங்கள்}, கவசங்கள் ஆகியவற்றில் சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுந்து விளையாடுவதாகத் தெரிந்தது. படபடக்கும் கொடிகளுடன் கூடிய தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியன கொக்குகளுடன் கூடிய மேகங்களின் திரள்களுக்கு ஒப்பானவையாக அந்தப் போரில் தெரிந்தன.

மனிதர்கள் மனிதர்களைக் கொன்றனர், கடும் உலோகம் கொண்ட குதிரைகள் குதிரைகளைக் கொன்றன, தேர்வீரர்கள் தேர்வீரர்களைக் கொன்றனர், யானைகள் யானைகளையே கொன்றன.

விரைவில், உயர்ந்த கொடிமரங்களைத் தங்கள் முதுகில் கொண்ட யானைகளுக்கும் , (அவற்றை நோக்கி விரையும்) வலிமையான எதிராளிகளுக்கும் {யானைகளுக்கும்} இடையில் பயங்கரமானதும், கடுமையானதுமான மோதல் நடந்தது. அந்தப் பெரும் உயிரினங்கள் {யானைகள்}, தங்கள் உடல்களோடு எதிராளிகளின் உடலைத் தேய்த்தது, (தங்கள் தந்தங்களால்) ஒன்றை மற்றொன்று கிழித்தது, எண்ணற்ற தந்தங்கள் {பிற} தந்தங்களோடு உராய்ந்தது ஆகிய அனைத்தின் விளைவால் புகையுடன் கூடிய நெருப்பு உண்டாயிற்று. (தங்கள் முதுகில் இருந்த) கொடிமரங்கள் வெட்டப்பட்ட அந்த யானைகள், அவற்றின் தந்தங்களில் உண்டான நெருப்புகளின் விளைவால், ஆகாயத்தில் மின்னலுடன் கூடிய மேகங்களின் திரள்களைப் போலத் தெரிந்தன.

(பகை யானைகளால்) இழுக்கப்படுபவை, முழங்குபவை, கீழே விழுபவை ஆகிய யானைகளால் விரவிக் கிடந்த பூமியானது, மேகங்களால் நிறைந்த கூதிர்கால வானத்தைப் போல அழகாகத் தெரிந்தது. கணைகள் மற்றும் வேல்களின் மழையால் கொல்லப்படும்போது அந்த யானைகளின் முழக்கம், மழைக்காலத்தின் மேகங்களின் முழக்கங்களுக்கு ஒப்பாக ஒலித்தன. வேல்கள் மற்றும் கணைகளால் காயம் அடைந்த பெரும் யானைகள் சில பீதியடைந்திருந்தன.

அந்த உயிரினங்களில் சில பெரும் அலறலோடு களத்தை விட்டு ஓடின. பிற யானைகளின் தந்தங்களால் தாக்கப்பட்ட சில, யுக முடிவில் அனைத்தையும் அழிக்கும் மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பாகத் துன்பத்தில் அலறின. பெரும் எதிராளிகளிடம் புறமுதுகிட்ட சில, கூரிய அங்குசங்கள் மூலம் தூண்டப்பட்டு மீண்டும் களத்திற்குத் திரும்பின. பகையணிகளை நசுக்கிய அவை தங்கள் வழியில் வந்த எவரையும் கொல்லத் தொடங்கின. யானைப்பாகர்களின் கணைகள் மற்றும் வேல்களால் தாக்கப்பட்ட {மற்ற} யானைப்பாகர்கள், தங்கள் கரங்களில் இருந்த ஆயுதங்கள் மற்றும் அங்குசங்கள் நழுவத் தங்கள் விலங்குகளின் முதுகுகளில் இருந்து கீழே விழுந்தனர்.

தங்கள் முதுகில் பாகர்கள் இல்லாத பல யானைகள் பெரும் திரள்களில் இருந்து பிரிந்த மேகங்களைப் போல அங்கேயும் இங்கேயும் திரிந்து ஒன்றோடொன்று மோதி கீழே விழுந்தன. பெரும் யானைகள் சில தங்கள் முதுகில் கொல்லப்பட்ட அல்லது வீழ்த்தப்பட்ட வீரர்களை, அல்லது ஆயுதங்களை நழுவவிட்டோரைச் சுமந்து கொண்டு தனியாக அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருந்தன [4]. அந்தப் படுகொலைகளுக்கு மத்தியில், தாக்கப்பட்டோ, வேல்கள், வாள்கள் அல்லது போர்க்கோடரிகளால் தாக்கப்படும்போதோ துன்பப் பேரொலிகளை வெளியிட்டபடியே அந்தப் பயங்கரப் படுகொலையில் சில யானைகள் வீழ்ந்தன.

மலைகளைப் போன்ற பெரும் உடல்களைக் கொண்ட அந்த உயிரினங்கள் திடீரெனச் சுற்றிலும் விழுவதால் தாக்கப்பட்ட பூமியானது நடுங்கிக் கொண்டே ஒலிகளை வெளியிட்டது. பாகன்களோடு சேர்த்துக் கொல்லப்பட்ட அந்த யானைகள், தங்கள் முதுகுகளில் கொடிமரங்களுடன் கிடந்த போது, பூமியானது மலைகளால் விரவிக் கிடப்பதைப் போல அழகாகத் தெரிந்தது. நீண்ட கணைகளால் {நாராசங்களால்} தாக்கப்பட்ட சில யானைகள் கொக்குகளைப் போல அலறியபடியும், நண்பர்கள் மற்றும் எதிரிகளைத் தங்கள் நடையால் நசுக்கிக் கொன்றபடியும் அனைத்துத் திசைகளிலும் ஓடின.

யானைகள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்கள் ஆகியோரின் எண்ணற்ற உடல்களால் மறைக்கப்பட்டிருந்த பூமியானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரத்தமும் சதையும் சேர்ந்த சேறானது. சக்கரங்களுடன் கூடிய தேர்களும், சக்கரங்களற்ற பலவும், யானைகளின் தந்த முனைகளால் நசுக்கப்பட்டு, அவற்றில் {அந்தத் தேர்களில்} இருந்த வீரர்களோடு சேர்த்து அவற்றால் {அந்த யானைகளால்} தூக்கி வீசப்பட்டன. வீரர்களை இழந்த தேர்கள் காணப்பட்டன. ஓட்டுநர்கள் இல்லாத குதிரைகளும், யானைகளும் காயங்களால் பீடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் ஓடிக் கொண்டிருந்தன.

எந்த வேறுபாடும் காணமுடியாத அளவுக்கு அங்கே நடந்த போர் மிகக் கடுமையானதாக இருந்ததால் அங்கே தந்தை தனது மகனைக் கொன்றான், மகன் தனது தந்தையைக் கொன்றான். கணுக்கால் ஆழம் கொண்ட இரத்தச் சேற்றில் மூழ்கிய மனிதர்கள், சுடர்மிகும் காட்டுத்தீயால் விழுங்கப்பட்ட அடிப்பாகங்களைக் கொண்ட உயர்ந்த மரங்களைப் போலத் தெரிந்தனர். ஆடைகள், கவசங்கள், குடைகள், கொடிமரங்கள் ஆகியவை குருதியால் நனைந்திருந்தன. களத்தில் இருந்த அனைத்தும் இரத்தம் கலந்தவையாகவே தெரிந்தன. பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்ட குதிரைகள், தேர்கள், மனிதர்கள் ஆகியவை தேர்ச்சக்கரங்கள் உருள்வதால் மீண்டும் மீண்டும் துண்டுகளாக வெட்டப்பட்டன.

யானைகளை ஓடையாகக் கொண்டதும், கொல்லப்பட்ட மனிதர்களை மிதக்கும் பாசிகளாகக் கொண்டதும், தேர்களைச் சுழல்களாகக் கொண்டதுமான அந்தத் துருப்புகள் எனும் கடல் மிகக் கடுமையானதாகவும் பயங்கரமானதாவும் தெரிந்தது. குதிரைகள், யானைகள் என்ற பெரிய மரக்கலங்களைக் கொண்ட வீரர்கள், தங்கள் செல்வமாக வெற்றியை விரும்பி, அந்தக் கடலில் குதித்து, மூழ்குவதற்குப் பதிலாக, தங்கள் எதிரிகளின் உணர்வுகளை இழக்கச் செய்தனர். தனிப்பட்ட அடையாளங்களைக் {கொடிகளைக்} கொண்ட அந்த வீரர்கள் அனைவரும், கணை மழைகளால் மறைக்கப்பட்ட போது, அவர்களில் எவரும் தங்கள் அடையாளங்களை {கொடிகளை} இழந்தாலும் உற்சாகத்தை இழக்கவில்லை.

அந்தப் பயங்கரப் போரில் தனது எதிரிகளின் அறிவைக் குழப்பிய துரோணர் (இறுதியாக) யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தார்” {என்றான் சஞ்சயன்}.

பாஞ்சால இளவரசர்களைக் கொன்ற துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 021-கணை மழையால் யுதிஷ்டிரனை வரவேற்ற துரோணர்; துரோணரைத் தடுத்த சத்யஜித்தும் விருகனும்; விருகனையும், சத்தியஜித்தையும் கொன்ற துரோணர்; விராடனின் தம்பியான சதானீகனைக் கொன்ற துரோணர்; துரோணர் உண்டாக்கிய குருதிப்புனல்; திருடசேனன் க்ஷேமன், வசுதேவன் {வசுதானன்}, பாஞ்சாலன்; {சுசித்ரன்}, ஆகியோரைக் கொன்ற துரோணர்; துரோணரிடமிருந்து தப்பி ஓடிய யுதிஷ்டிரன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு துரோணர், அச்சமற்ற வகையில் யுதிஷ்டிரன் தன்னை நெருங்குவதைக் கண்டு, அடர்த்தியான கணைகளின் மழையால் அவனை {யுதிஷ்டிரனை} வரவேற்றார். யானைக்கூட்டத்தின் தலைவன் வலிமைமிக்கச் சிங்கத்தால் தாக்கப்படும்போது, {மற்ற} யானைகள் அலறுவதைப் போல யுதிஷ்டிரப்படையின் துருப்புகளுக்கு மத்தியில் பேரொலி எழுந்தது.

துரோணரைக் கண்டவனும், துணிச்சல்மிக்கவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்டவனுமான சத்தியஜித், யுதிஷ்டிரனைப் பிடிக்க விரும்பிய ஆசானை {துரோணரை} நோக்கி விரைந்தான். பெரும் வலிமைமிக்க ஆசானும் {துரோணரும்}, பாஞ்சால இளவரசனும் {சத்தியஜித்தும்}, இந்திரனையும், பலியையும் போல அடுத்தவர் துருப்புகளை கலங்கடித்தபடி ஒருவரோடொருவர் போரிட்டனர். பிறகு, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்ட சத்தியஜித் வலிமைமிக்க ஆயுதம் {அஸ்திரம்} ஒன்றைத் தூண்டிக் கூர்முனைக் கணைகளால் துரோணரைத் துளைத்தான். மேலும் சத்தியஜித் துரோணரின் தேரோட்டியின் மீது, பாம்பின் விஷத்தைப் போல மரணத்தைத் தரக்கூடியவையும், காலனைப் போலத் தெரிபவையுமான ஐந்து கணைகளை ஏவினான். இப்படித் தாக்கப்பட்ட தேரோட்டி தன் உணர்வுகளை இழந்தான்.

உடனே சத்தியஜித், துரோணரின் குதிரைகளைப் பத்து கணைகளால் துளைத்தான்; மேலும் சினத்தால் நிறைந்த அவன் {சத்தியஜித்} அவரது {துரோணரின்} பார்ஷினி ஓட்டுநர்கள் [1] {இருவரையும்} ஒவ்வொருவரையும் பத்து {பத்துப் பத்து} கணைகளால் துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {சத்தியஜித்}, எதிரிகளை நசுக்குபவரான துரோணரின் கொடிமரத்தை வெட்டினான். பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவரான துரோணர், போரில் தன் எதிரியின் இந்த அருஞ்செயல்களைக் கண்டு, அவனை {சத்தியஜித்யை} அடுத்த உலகத்திற்கு அனுப்ப மனத்தில் தீர்மானித்தார் [2]. பிறகு தனது துருப்புகளின் தலைமையில் இருந்த அவன் {சத்தியஜித்} தன் தேரில் {அந்தக் களத்தை} வட்டமாகச் சுழன்றான். சத்தியஜித்தின் கணை பொருத்தப்பட்ட வில்லை அறுத்த ஆசான் {துரோணர்}, விரைவாக உயிர் நிலைகளையே ஊடுருவவல்ல பத்து கணைகளால் அவனைத் துளைத்தார். அதன்பேரில், மற்றொரு வில்லை எடுத்த வீரமிக்கச் சத்தியஜித், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கங்கப் பறவையின் இறகுகளால் சிறகமைந்த முப்பது கணைகளால் துரோணரைத் தாக்கினான் [3].சத்தியஜித்தால் போரில் (இப்படி) எதிர்க்கப்பட்ட துரோணரைக் கண்ட பாண்டவர்கள், மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்துத் தங்கள் ஆடைகளை அசைத்தனர். பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட வலிமைமிக்க விருகன், அறுபது {60} கணைகளால் துரோணரை நடுமார்பில் துளைத்தான். அந்த அருஞ்செயல் பெரும் அற்புதமானதாகத் தெரிந்தது.

பிறகு, பெரும் வேகமுடையவரும், வலிமைமிக்கத் தேர்வீரரும், (தன் எதிரிகளின்) கணை மழைகளால் மறைக்கப்பட்டவருமான துரோணர், தன் கண்களை அகல விரித்துத் தன் சக்தி அனைத்தையும் திரட்டினார். பிறகு, சத்தியஜித் மற்றும் விருகன் ஆகிய இருவரின் விற்களையும் அறுத்த துரோணர், ஆறு கணைகளால் விருகனை அவனது தேரோட்டி மற்றும் குதிரைகளுடன் சேர்த்துக் கொன்றார். கடினமான மற்றொரு வில்லை எடுத்த சத்தியஜித், துரோணரை அவரது குதிரைகள், அவரது தேரோட்டி மற்றும் அவரது கொடிமரம் ஆகியவற்றோடு சேர்த்துத் துளைத்தான்.

பாஞ்சாலர்களின் இளவரசனால் {சத்தியஜித்தால்} போரில் இப்படிப் பீடிக்கப்பட்ட துரோணரால் அந்தச் செயலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் {துரோணர்}, தன் எதிரியின் அழிவுக்காக (அவன் மீது) தன் கணைகளை விரைவாக ஏவினார். பிறகு துரோணர் தன் எதிராளியின் குதிரைகள், கொடிமரங்கள், அவனது வில்லின் கைப்பிடி மற்றும் அவனது பார்ஷினி ஓட்டுநர்கள் இருவர் ஆகியோரை இடையறாத கணைகளால் மறைத்தார். ஆனால் (இப்படி) மீண்டும் மீண்டும் அவனது வில் வெட்டப்பட்டாலும், உயர்வான ஆயுதங்களை அறிந்த அந்தப் பாஞ்சால இளவரசன் {சத்தியஜித்}, சிவப்பு குதிரைகளைக் கொண்டவரிடம் {துரோணரிடம்} தொடர்ந்து போரிட்டான். அந்தப் பயங்கரப் போரில் சத்யஜித் சக்தியில் பெருகுவதைக் கண்ட துரோணர், அந்தச் சிறப்புமிக்க வீரனின் {சத்தியஜித்தின்} தலையை அர்த்தச்சந்திரக் கணை ஒன்றினால் வெட்டி வீழ்த்தினார்.

போராளிகளில் முதன்மையானவனும், பாஞ்சாலர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனுமான அவன் {சத்தியஜித்} படுகொலை செய்யப்பட்டதும், துரோணர் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக வேகமான குதிரைகளின் மூலம் (சுமக்கப்பட்ட) யுதிஷ்டிரன் தப்பி ஓடினான் [4].பிறகு, பாஞ்சாலர்கள், கேகயர்கள், மத்ஸ்யர்கள், சேதிகள், காரூஷர்கள், கோசலர்கள் ஆகியோர் துரோணரைக் கண்டு, யுதிஷ்டிரனை மீட்க விரும்பி , அவரை {துரோணரை} நோக்கி விரைந்தனர். எனினும், பெரும் எண்ணிக்கையிலான பகைவர்களைக் கொல்பவரான துரோணர், யுதிஷ்டிரனைப் பிடிக்க விரும்பி, பஞ்சுக் குவியலை எரிக்கும் நெருப்பைப் போல அந்தப் படைப்பிரிவுகளை எரிக்கத் தொடங்கினார்.

பிறகு, மத்ஸ்யர்கள் ஆட்சியாளனுடைய {விராடனின்} தம்பியான சதானீகன், அந்தப் (பாண்டவப் படை) பிரிவுகளை இப்படி இடையறாமல் அழிப்பதில் ஈடுபடும் துரோணரை நோக்கி விரைந்தான். சதானீகன், கொல்லனின் கைகளால் பளபளப்பாக்கப்பட்டுச் சூரியனின் கதிர்களைப் போலப் பிரகாசமாக இருந்த ஆறு கணைகளால் துரோணருடன் சேர்த்து அவரது தேரோட்டியையும், குதிரைகளையும் துளைத்துப் பெருமுழக்கம் செய்தான்.

அந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்டு [5], அடைவதற்கு அரிதானதைச் சாதிக்க முயன்ற அவன் {சதானீகன்}, வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜரின் மகனை {துரோரணை} கணைகளின் மழைகளால் மறைத்தான். பிறகு துரோணர், தன்னை நோக்கி ஆர்ப்பரிப்பவனும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான சதானீகனின் தலையைக் கத்தி போன்ற கூர்மையானதொரு கணையால் அவனது உடலிலிருந்து விரைவாக அறுத்தார். அதன்பேரில், மத்ஸ்ய வீரர்கள் அனைவரும் தப்பி ஓடினர்.மத்ஸ்யர்களை வீழ்த்திய பிறகு, அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, சேதிகள், காரூசர்கள், கைகேயர்கள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் பாண்டவர்களையும் மீண்டும் மீண்டும் வீழ்த்தினார். தங்கத்தேரைக் கொண்டவரும், சினத்தால் தூண்டப்பட்டவருமான அந்த வீரர் {துரோணர்}, காட்டை எரிக்கும் நெருப்பைப் போலத் தங்கள் படைப்பிரிவுகளை எரிப்பதைக் கண்ட சிருஞ்சயர்கள் (அச்சத்தால்) நடுங்கினர்.

பெரும் சுறுசுறுப்புக் கொண்டு எதிரியை இடையறாமல் கொல்லும் அவர் {துரோணர்} தன் வில்லை வளைக்கும்போது உண்டாகும் நாணொலி திசைகள் அனைத்திலும் கேட்கப்பட்டன. பெரும் கர நளினம் {லாவகம்} கொண்ட அந்த வீரரால் {துரோணரால்} ஏவப்பட்ட கடுங்கணைகள் யானைகளையும், குதிரைகளையும், காலாட்படை வீரர்களையும், தேர்வீரர்களையும், யானைப் பாகன்களையும் நசுக்கின. கோடை காலத்தில் கடும் காற்றுடன் கூடிய வலிமைமிக்க மேகத் திரள்கள் முழக்கத்துடன் கல்மாரியைப் பொழிவதைப் போலவே, துரோணரும் எதிரிகளின் இதயத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கணைமாரியைப் பொழிந்தார். வலிமைமிக்க வீரரும், பெரும் வில்லாளியும், நண்பர்களின் அச்சங்களை விலக்குபவருமான அவர் {துரோணர்}, (பகை) கூட்டத்தைக் (களத்தில்) கலங்கடித்தபடியே திசைகள் அனைத்திலும் திரிந்து கொண்டிருந்தார். அளக்க இயலாத சக்தி கொண்ட துரோணரின் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வில்லானது, மேகங்களுடன் கூடிய மின்னலின் கீற்றுகள் போலத் திசைகள் அனைத்திலும் காணப்பட்டது. போரில் அவர் திரிந்து கொண்டிருந்த போது, அவரது கொடியில் உள்ள அழகிய பீடமானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிகரத்திற்கோ, இமயத்திற்கோ ஒப்பானதாகத் தெரிந்தது.

பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில் துரோணர் உண்டாக்கிய படுகொலையானது, தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவராலும் புகழப்படும் விஷ்ணுவால் தைத்திய படைக்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்டதைப் போலவே பெரிதானதாக இருந்தது. வீரரும், பேச்சில் உண்மையுடையவரும், பெரும் விவேகமும், வலிமையும் கொண்டவரும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலையுடையவருமான துரோணர், கடுமையானதும், மருண்டோரை அஞ்சச் செய்வதுமான நதி ஒன்றை அங்கே பாயச் செய்தார்.

கவசங்களே அதன் அலைகளாகின, கொடிமரங்கள் அதன் சுழல்களாகின. (அது பாய்கையில்) பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களைச் சுமந்து சென்றது. யானைகளும், குதிரைகளும் அதன் பெரும் முதலைகளாகின, வாள்கள் அதன் மீன்களாகின. அது {அந்த ஆறு} கடக்கப்பட முடியாததாக இருந்தது. துணிவுமிக்க வீரர்களின் எலும்புகள் அதன் கூழாங்கற்களாகின, பேரிகைகளும், முரசங்களும் அதன் ஆமைகளாகின. கேடயங்களும், கவசங்களும் அதன் படகுகளாகின, வீரர்களின் தலைமயிர் பாசியும் புற்களுமாகின. அம்புகள் அதன் சிற்றலைகளாகவும், விற்கள் அதன் நீரோட்டமாகவும் அமைந்தன. போராளிகளின் கரங்கள் அதன் பாம்புகளாகின. கடும் நீரோட்டத்தைக் கொண்ட ஆறு அந்தப் போர்க்களமெங்கும் ஓடி குருக்கள், சிருஞ்சயர்கள் ஆகிய இருவரையும் அடித்துச் சென்றது. மனிதர்களின் தலைகள் அதன் கற்களாகின, அவர்களின் தொடைகள் அதன் மீன்களாகின. கதாயுதங்கள் (பலர் கடக்க முயன்ற) தெப்பங்களாகின. தலைப்பாகைகள் அதன் பரப்பை மறைத்த நுரைகளாகின, (விலங்குகளின்) குடல்கள் அதன் பாம்புகளாகின. கடுமையான (தோற்றத்தைக் கொண்ட) அது வீரர்களை (அடுத்த உலகத்திற்கு) அடித்துச் சென்றது. குருதியும், சதையும் அதன் சகதிகளாகின. யானைகள் அதன் முதலைகளாகவும், கொடிமரங்கள் (அதன் கரைகளில் நிற்கும்) மரங்களாகின. ஆயிரக்கணக்கான க்ஷத்திரியர்கள் அதில் மூழ்கினர். குதிரைவீரர்கள், யானை வீரர்கள் ஆகியோர் அதன் சுறாக்களாகினர், கடுமையான (இறந்தோரின்) உடல்கள் அடைத்துக் கொண்டிருக்க அது கடப்பதற்கு மிகக் கடினமானதாக ஆனது. அந்த ஆறு யமலோகத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. ராட்சசர்கள், நாய்கள் மற்றும் நரிகளால் அது நிறைந்திருந்தது. சுற்றிலும் கடுமையான மனித ஊனுண்ணிகளால் அது மொய்க்கப்பட்டிருந்தது.

பிறகு, குந்தி மகனின் தலைமையிலான பாண்டவ வீரர்கள் பலர், காலனைப் போலவே தங்கள் படைப்பிரிவுகளை எரித்துக் கொண்டிருந்த வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரை நோக்கி விரைந்து, அனைத்துப் பக்கங்களிலும் அவரைச் சூழ்ந்து கொண்டனர். உண்மையில், சூரியன் தன் கதிர்களால் உலகை எரிப்பதைப் போலத் தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் எரித்துக் கொண்டிருந்த துரோணரை அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள் முழுமையாகச் சூழ்ந்து கொண்டனர்.

பிறகு, உயர்த்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட உமது படையின் மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும் பெரும் வில்லாளியான அந்த வீரரை {துரோணரை} ஆதரிப்பதற்காக அவரை நோக்கி விரைந்தனர்.

சிகண்டி, ஐந்து நேரான கணைகளால் துரோணரைத் துளைத்தான். க்ஷத்ரதர்மன் இருபது கணைகளாலும், வசுதேவன் [6] ஐந்தாலும் அவரைத் துளைத்தனர். உத்தமௌஜஸ் மூன்று கணைகளாலும், க்ஷத்ரதேவன் ஐந்தாலும் அவரைத் துளைத்தனர். அந்தப் போரில் சாத்யகி நூறு கணைகளாலும், யுதாமன்யு எட்டாலும் அவரைத் துளைத்தனர். யுதிஷ்டிரன் பனிரெண்டு கணைகளாலும், திருஷ்டத்யும்னன் பத்தாலும், சேகிதானன் மூன்றாலும் துரோணரைத் துளைத்தனர்.மதங்கொண்ட யானைக்கு ஒப்பானவரும், கலங்கடிக்கப்பட முடியாத நோக்கைக் கொண்டவருமான துரோணர் (பாண்டவர்களின்) தேர்ப்படையை அணுகி திருடசேனனை வீழ்த்தினார். பிறகு, அச்சமற்ற வகையில் போரிட்டுக் கொண்டிருந்த மன்னன் க்ஷேமனை அணுகி ஒன்பது கணைகளால் அவனைத் தாக்கினார். அதன் பேரில், உயிரிழந்த க்ஷேமன் தன் தேரில் இருந்து கீழே விழுந்தான். (பகை) துருப்புகளின் மத்தியில் சென்ற அவர் {துரோணர்}, அனைத்துத் திசைகளிலும் திரிந்து தானே பாதுகாப்பில்லாதபோது, மற்றவரைப் பாதுகாத்தார். பிறகு அவர் {துரோணர்} பனிரெண்டு கணைகளால் சிகண்டியையும், இருபதால் உத்தமௌஜஸையும் துளைத்தார். மேலும் அவர் {துரோணர்}, பல்லம் ஒன்றினால் வசுதேவனை {வசுதானனாக இருக்க வேண்டும்} யமனுலகிற்கு அனுப்பினார். மேலும் அவர் {துரோணர்}, எண்பது கணைகளால் க்ஷேமவர்மனையும், இருபத்தாறால் சுதக்ஷிணனையும் துளைத்தார். மேலும் அவர் {துரோணர்}, பல்லம் ஒன்றினால் க்ஷத்ரதேவனை அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினார். தங்கத் தேர் கொண்ட துரோணர், அறுபத்துநான்கு கணைகளால் யுதாமன்யுவையும், முப்பதால் சாத்யகியையும் துளைத்து, யுதிஷ்டிரனை விரைவாக அணுகினார். அப்போது, மன்னர்களில் சிறந்த யுதிஷ்டிரன், வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டபடி ஆசானிடம் இருந்து விரைவாகத் தப்பி ஓடினான் [7].பிறகு, பாஞ்சாலன் துரோணரை நோக்கி விரைந்தான். அந்த இளவரசனின் வில்லை வெட்டிய துரோணர், அவனது குதிரைகளுடனும், தேரோட்டியுடனும் சேர்த்து அவனைக் {பாஞ்சாலனைக்} கொன்றார். உயிரிழந்த அந்த இளவரசன் ஆகாயத்தில் இருந்து தளர்ந்து விழும் ஒளிக்கோளைப் போலத் தன் தேரில் இருந்து பூமியில் விழுந்தான் [8].அந்தப் பாஞ்சாலர்களின் சிறப்புமிக்க இளவரசன் விழுந்ததன் பேரில், “துரோணரைக் கொல்லுங்கள், துரோணரைக் கொல்லுங்கள்” என்ற உரத்த அலறல் அங்கே கேட்டது. வலிமைமிக்கத் துரோணர், சினத்தால் தூண்டப்பட்டிருந்த பாஞ்சாலர்கள், கைகேயர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரையும் நசுக்கத் தொடங்கினார். பிறகு குருக்களால் ஆதரிக்கப்பட்ட துரோணர், சாத்யகியையும், சேகிதானன் மகனையும், சேனாபிந்துவையும், சுவர்ச்சஸையும் இன்னும் எண்ணற்ற பிற மன்னர்களையும் வீழ்த்தினார்.

ஓ! மன்னா, அந்தப் பெரும்போரில் வெற்றியை அடைந்த உமது வீரர்கள், திசைகள் அனைத்திலும் தப்பி ஓடிய பாண்டவர்களைக் {பாண்டவ வீரர்களைக்} கொன்றனர். இந்திரனால் கொல்லப்பட்ட தானவர்களைப் போல அனைத்துப் பக்கங்களிலும் இப்படிக் கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள், கைகேயர்கள், மத்ஸ்யர்கள் ஆகியோர் (அச்சத்தால்) நடுங்கத் தொடங்கினர்” {என்றான் சஞ்சயன்}.

துரியோதனனைத் திருத்திய கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 022-துரோணரின் ஆற்றலைக் கண்டு மகிழ்ந்த துரியோதனன் பாண்டவர்களை அவமதித்துப் பேசியது; பாண்டவர்களை அவமதிப்பது தகாது என்று சொல்லி அவர்களைப் புகழ்ந்த கர்ணன்..

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அந்தப் பயங்கரப் போரில் பரத்வாஜர் மகனால் {துரோணரால்} பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் பிளக்கப்பட்டபோது, யாரேனும் ஒருவனாவது போரில் துரோணரை அணுகினானா? ஐயோ, கொட்டாவி விடும் புலியைப் போலவோ, மதப்பெருக்குக் கொண்ட யானையைப் போலவோ போரில் நிற்பவரும், போரில் தன் உயிரை விடத் தயாராக இருப்பவரும், நன்கு ஆயுதம் தரித்தவரும், அனைத்து வகைப் போர்களையும் அறிந்தவரும், பெரும் வில்லாளியும், மனிதர்களில் புலியும், எதிரிகளின் அச்சத்தை அதிகரிப்பவரும், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்தவரும், துரியோதனனுக்கு எப்போதும் நன்மை செய்ய விரும்புபவருமான துரோணர் தன் துருப்புகளுக்குத் தலைமையில் நிற்பதைக் கண்டு, அற்பர்களால் முடியாத, மனிதர்களில் முதன்மையானோருக்கு மட்டும் தனித்தன்மையான, க்ஷத்திரியர்களின் புகழை மேம்படுத்துவதான போரைச்செய்ய, ஐயோ மெச்சத்தகுந்த உறுதியான தீர்மானத்துடன் அவரை அணுகக்கூடிய மனிதன் எவனும் இல்லையா? ஓ! சஞ்சயா, தன் படைகளின் தலைமையில் நிற்கும் பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கண்டு, அவரை அணுகிய அந்த வீரர்கள் யாவர் என்று எனக்குச் சொல்வாயாக [1]” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாஞ்சாலர்கள், பாண்டவர்கள், மத்ஸ்யர்கள், சிருஞ்சயர்கள், சேதிகள், கேகயர்கள் ஆகியோர் துரோணரின் கணைகளால் போரில் பிளக்கப்பட்டு, இப்படி முறியடிக்கப்பட்டதைக் கண்டும், புயலால் கலங்கடிக்கப்பட்ட பெருங்கடலின் பயங்கரமான அலைகளால் நிலை தடுமாறும் மரக்கலங்களைப் போலத் துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட வேகமான கணைகளின் மழையால் களத்தில் இருந்து இப்படி விரட்டப்பட்ட அவர்களைக் கண்டும் சிங்க முழக்கங்களாலும், பல்வேறு கருவிகளால் உண்டாக்கப்பட்ட ஒலிகளாலும், (பகைவரின் {பாண்டவப்} படையில் உள்ள) தேர்கள், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்களை அனைத்துப் பக்கங்களிலிருந்தும் கௌரவர்கள் தாக்கத் தொடங்கினர்.

(வேகமாக ஓடும் பாண்டவ வீரர்களான) அவர்களைக் கண்ட மன்னன் துரியோதனன், தன் உறவினர்கள் மற்றும் சொந்தங்கள் சூழ தன் படைகளுக்கு மத்தியில் நின்று கொண்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, சிரித்துக் கொண்டே கர்ணனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.

துரியோதனன் {கர்ணனிடம்}, “ஓ! ராதையின் மகனே {கர்ணா}, “சிங்கத்தால் அச்சுறுத்தப்பட்ட காட்டுமான்கூட்டத்தைப் போல, அந்த உறுதி மிக்க வில்லாளியின் (துரோணரின்) கணைகளால் பிளக்கப்பட்ட பாஞ்சாலர்களைப் பார். இவர்கள் மீண்டும் போருக்கு வர மாட்டார்கள் என நினைக்கிறேன். புயலால் பிளக்கப்பட்ட வலிமைமிக்க மரங்களைப் போலத் துரோணரால் இவர்கள் பிளக்கப்பட்டிருக்கின்றனர். அந்த உயர் ஆன்ம வீரரின் {துரோணரின்} தங்கச் சிறகுள்ள கணைகளால் பீடிக்கப்பட்டவர்கள் தப்பி ஓடுகிறார்கள், இவர்களில் இருவராகச் சேர்ந்திருப்பவர் எவரும் இல்லை. உண்மையில், அவர்கள் சுழல்களால் களமெங்கும் இழுத்துச் செல்லப்படுவது போலத் தெரிகிறது.

கௌரவர்களாலும், உயர் ஆன்ம துரோணரால் தடுக்கப்படும் அவர்கள், காட்டுத் தீக்கு மத்தியில் உள்ள யானைகளைப் (யானைக்கூட்டத்தைப்) போல ஒருவருடன் ஒருவர் நெருங்கிப் பதுங்குகின்றனர். மலர்ந்திருக்கும் மரங்கள் வண்டுக்கூட்டங்களால் ஊடுருவப்படுவதைப் போலத் துரோணரின் கணைகளால் துளைக்கப்பட்ட இந்த வீரர்கள் களத்தை விட்டுத் தப்பி ஓடுகையில் ஒருவரை ஒருவர் நெருங்கிப் பதுங்குகின்றனர். {அதோ} கோபம் நிறைந்த பீமன், பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களால் கைவிடப்பட்டு, அங்கே என் வீரர்களால் சூழப்பட்டிருப்பது எனக்குப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஓ! கர்ணா, அந்தத் தீயவன் {பீமன்}, இன்று உலகத்தைத் துரோணர் நிறைந்ததாகவே காண்பான். அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, உயிர் மற்றும் அரசாட்சியின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டான் என்பதில் ஐயமில்லை” என்றான் {துரியோதனன்}.

கர்ணன் {துரியோதனனிடம்}, “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன் {பீமன்}, தான் உயிரோடிருக்கும்வரை போரை நிச்சயம் கைவிட மாட்டான். ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, இந்த (நமது) சிங்க முழக்கங்களையும் அவன் {பீமன்} பொறுக்க மாட்டான். அதே போல, பாண்டவர்களும் போரில் தோற்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் துணிவுள்ளவர்களும், பெரும்கோபங்கொண்டவர்களும், ஆயுதங்களை அறிந்தவர்களும், போரில் தடுக்கப்படக் கடினமானவர்களும் ஆவர்.

அவர்களை நஞ்சூட்டவும், எரிக்கவும் நாம் செய்த முயற்சிகளால் அவர்களுக்கு ஏற்பட்ட துயரங்களையும், பகடை விளையாட்டால் எழுந்த துயரங்களையும் நினைவுகூர்ந்தும், அவர்கள் நாடு கடத்தப்பட்டுக் காட்டில் இருந்ததை மனத்தில் கொண்டும், பாண்டவர்கள் போரைக் கைவிடமாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், அளவிலா சக்தி கொண்டவனுமான விருகோதரன் {பீமன்} (போரிடுவதற்காக) ஏற்கனவே திரும்பிவிட்டான். அந்தக் குந்தியின் மகன் {பீமன்}, நம் தேர்வீரர்களில் முதன்மையானோர் பலரை நிச்சயம் கொல்வான். வாளாலும், வில்லாலும், ஈட்டியாலும், குதிரைகளாலும், யானைகளாலும், மனிதர்களாலும், தேர்களாலும் [2], முழுக்க இரும்பாலான அவனது கதாயுதத்தாலும், (நம் படைவீரர்களைக்) கூட்டம் கூட்டமாக அவன் {பீமன்} கொல்வான்.

சத்தியஜித்தால் [3] தலைமை தாங்கப்பட்ட தேர்வீரர்கள் பிறர், பாஞ்சாலர்கள், கேகயர்கள், மத்ஸ்யர்கள், குறிப்பாகப் பாண்டவர்கள் அவனை {பீமனைப்} பின்தொடர்கிறார்கள். அவர்கள் அனைவரும் துணிச்சல்மிக்கவர்களும், பெரும் வலிமை மற்றும் ஆற்றலைக் கொண்டவர்களுமாவர். மேலும், கோபத்துடன் பீமனால் வழிநடத்தப்படும் அவர்கள் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமாவர். குலத்தின் காளைகளான அவர்கள், சூரியனைச் சூழ்ந்திருக்கும் மேகங்களைப் போல, அனைத்துப் பக்கங்களிலும் விருகோதரனைச் {பீமனைச்} சூழ்ந்து கொண்டு, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் துரோணரை அணுகத் தொடங்குகின்றனர் [4].

மரணத் தருவாயிலுள்ள விட்டிற்பூச்சிகள், சுடர்மிக்க விளக்கைத் தாக்குவதைப் போல, ஒரே பொருளைக் கவனமாக நோக்கும் இவர்கள் {ஒரே வழியில் செல்லும் இந்தப் பாண்டவர்கள்} பாதுகாப்பில்லாத துரோணரை நிச்சயம் பீடிப்பார்கள். ஆயுதங்களை நன்கறிந்தவர்களான அவர்கள் துரோணரைத் தடுக்க நிச்சயம் தகுந்தவர்களே. பரத்வாஜர் மகனின் {துரோணரின்} மேல் இப்போது இருப்பது கனமான சுமை என்றே நான் நினைக்கிறேன். துரோணர் இருக்கும் இடத்திற்கு நாம் வேகமாகச் செல்வோமாக. வலிமைமிக்க யானையைக் கொல்லும் ஓநாய்களைப் போல முறையான நோன்புகளைக் கொண்ட அவரை {துரோணரை} அவர்கள் {பாண்டவர்கள்} கொல்லாதிருக்கட்டும்” என்றான் {கர்ணன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ராதேயனின் {கர்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன், பிறகு, தன் தம்பிகளுடன் சேர்ந்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணருடைய தேரை நோக்கி முன்னேறினான். துரோணரை மட்டுமே கொல்லும் விருப்பத்தால் செயலூக்கத்துடன் வந்த பாண்டவ வீரர்கள் அனைவரும், பல்வேறு நிறங்களிலான சிறந்த குதிரைகளால் இழுக்கப்பட்ட தங்கள் தேர்களில் போருக்குத் திரும்பும் ஒலி அங்கே செவிடாக்குவதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.

பாண்டிய மன்னன் சாரங்கத்வஜன்! – துரோண பர்வம் பகுதி – 023அ-துரோணரை எதிர்த்துச் சென்றோர் கொண்ட குதிரைகளைக் குறித்துச் சஞ்சயன் விளக்கிச் சொன்னது; பாண்டிய மன்னன் சாரங்கத்வஜனின் வரலாறு சுருக்கம்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, கோபத்தால் தூண்டப்பட்டு, பீமசேனனின் தலைமையில் துரோணரை எதிர்த்துச் சென்றோர் அனைவருடைய தேர்களின் தனிப்பட்ட குறியீடுகளை எனக்குச் சொல்வாயாக” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “(மான் போன்ற) புள்ளிகளாலான நிறத்தைக் கொண்ட குதிரைகளால் [1] (இழுக்கப்பட்ட தேரில்) விருகோதரன் {பீமன்} முன்னேறுவதைக் கண்ட துணிச்சல் மிக்கச் சிநியின் பேரன் (சாத்யகி) வெள்ளிநிறத்தாலான குதிரைகளால் சுமக்கப்பட்டு முன்னேறினான்.

எதிர்க்கப்பட முடியாதவனும், சினத்தால் தூண்டப்பட்டவனுமான யுதாமன்யு {வெண்மை, நீலம் சிவப்பு நிறங்கள் எனப்} பல வண்ண வேறுபாடுகளைக் கொண்ட சிறந்த குதிரைகளால் சுமக்கப்பட்டுத் துரோணரை எதிர்த்துச் சென்றான்.

பாஞ்சால மன்னன் {துருபதன்} மகனான திருஷ்டத்யும்னன், புறாக்களின் நிறத்தையும் {வெண்மை மற்றும் கருமை நிறம்}, தங்க ஒப்பனைகளைக் கொண்டவையும் மிக வேகமானவையுமான குதிரைகளால் சுமக்கப்பட்டுச் சென்றான்.

தன் தந்தையைக் காக்க விரும்பியவனும், அவனுக்கு முழுமையான வெற்றியை விரும்பியவனும், முறையான நோன்புகளைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னனின் மகன் க்ஷத்ரதர்மன் சிவப்பு குதிரைகளால் சுமக்கப்பட்டுச் சென்றான்.

சிகண்டியின் மகன் க்ஷத்ரதேவன், நன்கு அலங்கரிக்கப்பட்டவையும் தாமரை இதழ்களின் நிறத்தைக் கொண்டவையும், தூய வெண் கண்களைக் கொண்டவையுமான குதிரைகளைத் தூண்டியபடி (துரோணரை எதிர்த்துச்) சென்றான் [2].காம்போஜ இனத்தைச் சேர்ந்தவையும், பச்சைக்கிளியின் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான அழகிய குதிரைகள் நகுலனைச் சுமந்தபடியே உமது படையை நோக்கி வேகமாக ஓடின.

மேகங்களைப் போன்ற கருமை நிறம் கொண்ட கோபக்காரக் குதிரைகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கணைகளால் குறிபார்த்தபடி நிற்கும் வெல்லப்பட முடியாத துரோணரை எதிர்த்து உத்தமௌஜஸைச் சுமந்து சென்றன.

காற்றைப் போன்ற வேகம் கொண்டவையும், {தித்திரி என்ற பறவையைப் போன்ற} பலவண்ண வேறுபாடுகளைக் கொண்டவையுமான குதிரைகள், உயர்த்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட சகாதேவனை அந்தக் கடும்போருக்குச் சுமந்து சென்றன.

பெரும் மூர்க்கம் கொண்டவையும், காற்றைப் போன்ற வேகத்தைக் கொண்டவையும், தந்த நிறத்தாலானவையும், கழுத்தில் கருப்பு நிற பிடரி மயிர் கொண்டவையுமான குதிரைகள் அந்த மனிதர்களில் புலியான யுதிஷ்டிரனைச் சுமந்து சென்றன. காற்றின் வேகம் கொண்டவையும், தங்க ஒப்பனையால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் குதிரைகளில் சுமக்கப்பட்ட வீரர்கள் பலர் யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து சென்றனர்.

தன் தலைக்குப் பின் தங்கக் குடை ஏந்தப்பட்டவனும், (யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்த) படைவீரர்கள் அனைவராலும் சூழப்பட்டவனுமான பாஞ்சாலர்களின் அரசத் தலைவன் துருபதன் மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்குப்} பின்னே இருந்தான். மன்னர்கள் அனைவரிலும் சிறந்த வில்லாளியான சௌதாபி {துருபதன்}, அனைத்து ஒலிகளையும் தாங்கிக் கொள்ளவல்ல அழகிய குதிரைகளால் சுமக்கப்பட்டுச் சென்றான் [3].பெரும் தேர்வீரர்கள் அனைவருடன் விராடன் முன்னவனை {துருபதனைத்} தொடர்ந்தான்.

தங்கள் தங்கள் துருப்புகளால் சூழப்பட்ட கைகேயர்கள், சிகண்டி, திருஷ்டகேது ஆகியோர் மத்ஸ்யர்களின் ஆட்சியாளனை {விராடனைப்} பின் தொடர்ந்து வந்தனர்.

விராடனைச் சுமந்து கொண்டிருந்தவையும், பாதிரி மலர்களின் (வெளிர் சிவப்பு) வண்ணத்திலானவையுமான சிறந்த குதிரைகள் மிக அழகாகத் தெரிந்தன.

மஞ்சள் நிறத்திலானவையும், தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான வேகமான குதிரைகள் மத்ஸ்யர்களின் அரசத் தலைவனும், எதிரிகளைக் கொல்பவனுமான விராடனின் மகனை (உத்தரனை) மிக வேகமாகச் சுமந்து சென்றன [4].ஐந்து கேகயச் சகோதரர்களும் அடர் சிவப்பு {இந்திர கோபக பூச்சியின்} நிறத்திலான குதிரைகளால் சுமக்கப்பட்டனர். தங்கம் போன்ற காந்தியைக் கொண்டவர்களும், சிவப்புக் கொடிமரங்களைக் கொண்டவர்களும், தங்க ஆரமணிந்தவர்களும், போரில் சாதித்தவர்களுமான அந்த வீரர்கள் {கேகயச் சகோதரர்கள்} அனைவரும், கவசங்களை அணிந்து கொண்டு மேகங்களைப் போலவே கணைகளின் மழையைப் பொழிந்து கொண்டு சென்றனர்.

தும்புருவால் கொடையாக அளிக்கப்பட்டவையும், சுடப்படாத மண்பானையின் நிறம் கொண்டவையுமான சிறந்த குதிரைகள் அளவிலா சக்தி கொண்ட பாஞ்சால இளவரசன் சிகண்டியைச் சுமந்தன. மொத்தமாக, பாஞ்சால குலத்தின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பனிரெண்டாயிரம் {12000} பேர் போருக்குச் சென்றனர். அவற்றில், ஆறாயிரம் {6000} பேர் சிகண்டியைப் பின்தொடர்ந்தனர்.

மான் போலப் பலவித நிறங்களைக் கொண்ட உற்சாகமான குதிரைகள் மனிதர்களில் புலியான சிசுபாலனின் மகனை {திருஷ்டகேதுவைச்} சுமந்தன. பெரும் பலம் கொண்டவனும், போரில் வீழ்த்தப்படக் கடினமானவனும், சேதிகளில் காளையுமான திருஷ்டகேது பல்வேறு வண்ணங்களைக் கொண்ட காம்போஜக் குதிரைகளால் சுமக்கப்பட்டான்.

சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், அழகிய அங்கங்களைக் கொண்டவையும் வைக்கோலும், புகையும் கலந்த நிறமுள்ளவையுமான சிறந்த குதிரைகள் கைகேய இளவரசனான பிருஹத்க்ஷத்ரனை வேகமாகச் சுமந்து சென்றன.

தூய வெண்கண்களைக் கொண்டவையும், தாமரையின் நிறத்தைக் கொண்டவையும், பால்ஹீகர்களின் நாட்டில் பிறந்தவையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகள் சிகண்டியின் மகனான துணிச்சல்மிக்க க்ஷத்ரதேவனைச் சுமந்து சென்றன [5].தங்க ஒப்பனைகளால் அலங்கரிக்கப்பட்டு, சிவப்புப் பட்டின் வண்ணம் கொண்ட அமைதியான குதிரைகள் போரில் எதிரிகளைக் கொல்பவனான சேனாபிந்துவைச் சுமந்தன.

கொக்குகளின் நிறம் கொண்ட சிறந்த குதிரைகள், இளமை நிறைந்தவனும், மென்மையானவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான காசிகள் மன்னனின் {அபிபூவின்} மகனைப் {விபுவைப்} போரில் சுமந்தன.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மனோ வேகம் கொண்டவையும், ஓட்டுநருக்கு மிகவும் கீழ்ப்படிந்து நடப்பவையும், கருப்புக் கழுத்துகள் கொண்டவையுமான வெண்ணிறக் குதிரைகள் இளவரசன் பிரதிவிந்தியனைச் சுமந்தன.

அர்ஜுனன் மகனான சுதசோமனை [6] {உளுந்துப் பூ போன்ற} வெளிர்மஞ்சள் நிறம் கொண்ட குதிரைகள் சுமந்தன. சுதசோமனை அர்ஜுனன் சோமனிடம் {சந்திரனிடம்} இருந்து அடைந்தான். உதயேந்து என்ற பெயரில் அழைக்கப்படும் குருக்களின் நகரத்தில் அவன் {சுதசோமன்} பிறந்தான். ஆயிரம் சந்திரன்களின் காந்தியைக் கொண்ட அவன் சோமகர்களின் சபையில் பெரும் புகழை வென்றதால் சுதசோமன் என்று அழைக்கப்படலானான்.சால மலர்களைப் போன்றோ, காலைச் சூரியனைப் போன்றோ நிறம் கொண்ட குதிரைகள், அனைத்துப் புகழுக்கும் தகுந்த நகுலனின் மகன் சதானீகனைச் சுமந்தன.

தங்க ஒப்பனைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், மயில் கழுத்தின் நிறத்திலானவையுமான குதிரைகள் மனிதர்களில் புலியும், (பீமனின் மூலமான) [7] திரௌபதியின் மகனுமான சுருதகர்மனைச் சுமந்தன.மீன்கொத்திகளின் {காடையுடைய சிறகின்} நிறத்திலான சிறந்த குதிரைகள், கல்விக்கடலான பார்த்தனைப் போன்றவனான திரௌபதியின் மகன் சுருதகீர்த்தியை [8] அந்தப் போரில் சுமந்தன.போரில் கிருஷ்ணனுக்கும், பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்} ஒன்றரை மடங்கு மேலானவன் என்று கருதப்பட்ட இளைஞனான அபிமன்யுவைப் மஞ்சள்பழுப்பு நிறக் குதிரைகள் சுமந்தன.

திருதராஷ்டிர மகன்களுக்கு மத்தியில் (தன் சகோதரர்களைக் கைவிட்டு) பாண்டவர்களின் தரப்பை அடைந்த ஒரே வீரனான யுயுத்சுவைப் போரில் {தாமரை நிறத்தாலான} பெரும் குதிரைகள் சுமந்தன.

பருத்தவையும், நன்கு அலங்கரிக்கப்பட்டவையும் (உலர்ந்த) நெற்கதிரின் நிறத்தாலானவையுமான குதிரைகள் அந்தப் பயங்கரப் போரில் பெரும் சுறுசுறுப்புடன் இருந்த வார்த்தக்ஷேமியைச் சுமந்தன.

கருப்புக் கால்களைக் கொண்டவையும், தங்கத்தாலான மார்புக் கவசங்கள் தரித்தவையும், ஓட்டுநருக்கு மிகவும் கீழ்ப்படிபவையுமான குதிரைகள் இளமை நிரம்பிய சௌசித்தியைப் போரில் சுமந்தன.

தங்கக் கவசங்களால் முதுகு மறைக்கப்பட்டவையும், தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், சிவப்புப் பட்டின் நிறத்தாலானவையுமான குதிரைகள் ஸ்ரேணிமானைச் சுமந்தன [9].சிவப்பு நிறத்தாலான குதிரைகள், தெய்வீக வேதங்களையும், ஆயுத அறிவியலிலும் சாதித்து முன்னேறும் சத்யத்ருதியைச் சுமந்தன.

(பாண்டவப் படையின்) படைத்தலைவனும், துரோணரைத் தன் பங்காகக் கொண்ட பாஞ்சாலனுமான திருஷ்டத்யுமனன், புறாக்களின் வண்ணத்திலான குதிரைகளால் சுமக்கப்பட்டான்.

சத்யத்ருதி, சௌசித்தி, ஸ்ரேணிமான், வசுதானன் [10], காசி ஆட்சியாளனின் {அபிபூவின்} மகன் விபு ஆகியோர் அவனை {திருஷ்டத்யும்னனைப்} பின்தொடர்ந்தனர். இவர்கள் தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், காம்போஜ இனத்தில் சிறந்தவையுமான வேகமான குதிரைகளைக் கொண்டிருந்தனர்.யமனுக்கோ, வைஸ்ரவணனுக்கோ {குபேரனுக்கோ} ஒப்பான இவர்கள் ஒவ்வொருவரும், பகையணியின் வீரர்களின் இதயங்களை அச்சத்தால் பீடித்தப்படி போரில் முன்னேறிச் சென்றனர்.

காம்போஜ நாட்டைச் சேர்ந்தவர்களும், எண்ணிக்கையில் ஆறாயிரம் {6000} கொண்டவர்களுமான பிரபத்ரகர்கள், ஒன்றாகவே சாகத் தீர்மானித்து ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பல்வேறு நிறங்களிலான சிறந்த குதிரைகளைக் கொண்டவையுமான தேர்களில், விற்களை வளைத்துத் தங்கள் கணைகளின் மழைகளால் எதிரிகளை நடுங்கச் செய்தபடி திருஷ்டத்யும்னனைப் பின்தொடர்ந்தனர்.

அழகிய தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும் பழுப்புப் பட்டு நிறம் கொண்டவையுமான சிறந்த குதிரைகள் சேகிதானனை உற்சாகமாகச் சுமந்தன.

அர்ஜுனனின் தாய்மாமனும், குந்தி போஜன் [11] என்றும் அழைக்கப்பட்டவனுமான புருஜித் வானவில்லின் நிறைத்தாலான சிறந்த குதிரைகளால் சுமக்கப்பட்டு வந்தான்.நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட வானத்தின் நிறம் கொண்ட குதிரைகள் போரில் மன்னன் ரோசமானனைச் சுமந்தன [12].சிவப்பு மானின் {முயல் இரத்த} நிறத்தாலானவையும், தங்கள் உடல்களில் வெள்ளை இழைகளைக் கொண்டவையுமான குதிரைகள், கோபதியின் மகனான பாஞ்சால இளவரசன் சிங்கசேனனைச் சுமந்தன.

பாஞ்சாலர்களில் புலியான ஜனமேஜயன் என்ற பெயரால் அறியப்பட்டவன், எள்ளு மலர்களின் நிறத்தாலான சிறந்த குதிரைகளைக் கொண்டிருந்தான்.

வேகமுள்ளவையும், பெரியவையும், அடர்நீல நிறம் கொண்டவையும் தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், தயிர் நிறத்தாலான முதுகைக் கொண்டவையும், சந்திரனின் நிறத்தாலான முகங்களைக் கொண்டவையுமான குதிரைகள் பெரும் வேகத்துடன் பாஞ்சாலர்களின் ஆட்சியாளனை {துருபதனைச்} சுமந்து சென்றன.

அழகிய தலைகளைக் கொண்டவையும், துணிச்சல்மிக்கவையும், நாணல் தண்டுகளைப் போன்றவையும் (வெண்மையானவையும்), ஆகாயத்துக்கோ, தாமரைக்கோ ஒப்பான காந்தியைக் கொண்டவையுமான குதிரைகள் தண்டதாரனைச் சுமந்தன.

வெளிர் பழுப்பு நிறம் கொண்டவையும், எலியைப் போன்ற நிறத்தை முதுகில் கொண்டவையும், செருக்கால் கழுத்துகள் உயர்த்தப்பட்டவையுமான குதிரைகள் போரில் வியாக்கிரதத்தனைச் சுமந்தன.

கருப்புப் புள்ளிகளைக் கொண்ட குதிரைகள் மனிதர்களில் புலியும், பாஞ்சால இளவரசனுமான சுதன்வானைச் சுமந்தன.

இந்திரனின் இடிக்கு {வஜ்ரத்துக்கு} ஒப்பாகப் பெரும் மூர்க்கம் {வேகம்} கொண்டவையும், இந்திரகோபகங்களின் நிறம் கொண்டவையும், பலவண்ணங்களில் திட்டுக்களைக் கொண்டவையுமான அழகிய குதிரைகள் சித்திராயுதனைச் சுமந்தன.

தங்க ஆரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், சக்கரவாகப் பறவையின் நிறம் கொண்ட வயிறுகளைக் கொண்டவையுமான குதிரைகள் கோசலர்கள் மன்னனின் மகன் சுக்ஷத்திரனைச் சுமந்தன.

அழகியவையும், பெரும் உடல்படைத்தவையும், பலவண்ணங்களைக் கொண்டவையும், மிகுந்த பணிவுள்ளவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான உயரமான குதிரைகள் போரில் சாதித்தவனான சத்யதிருதியைச் சுமந்தன.

சுக்லன், ஒரே வெள்ளி நிறத்தாலான கொடிமரம், கவசம், வில் மற்றும் குதிரைகளுடன் போரில் முன்னேறினான்.

கடற்கரைப் பகுதிகளில் பிறந்தவையும், சந்திரனைப் போன்ற வெண்ணிறம் கொண்டவையுமான குதிரைகள், கடும் சக்தி கொண்டவனான சமுத்ரசேனன் மகன் சந்திரசேனனைச் சுமந்தன.

நீலத் தாமரையின் நிறம் கொண்டவையும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், அழகிய மலர்மாலைகள் தரித்தவையுமான மேன்மையான குதிரைகள் போரில் அழகிய தேரைக் கொண்ட சைப்யனைச் {சிபியின் மகனான சித்திரரதனைச்} சுமந்தன.

கலாய மலரின் நிறம் கொண்டவையும், வெள்ளை மற்றும் சிவப்பு இழைகளைக் கொண்டவையுமான குதிரைகள் போரில் தடுப்பதற்குக் கடினமான ரதசேனனைச் சுமந்தன.

மனிதர்களில் துணிச்சல்மிக்கவன் என்று கருதப்படுபவனும் படச்சரர்களை {அசுரர்களைக்} கொன்றவனுமான அந்த மன்னனை {?} வெள்ளைக் குதிரைகள் சுமந்தன.

கின்சுக {பலாச மர} மலர்களின் நிறம் கொண்ட குதிரைகள், அழகிய மாலைகள் தரித்தவனும், அழகிய கவசம், ஆயுதங்கள் மற்றும் கொடிமரத்தைக் கொண்டவனுமான சித்திராயுதனைச் சுமந்தன.

ஒரே நீல நிறம் கொண்ட குதிரைகள், கொடி, வில், கவசம் மற்றும் கொடிமரத்துடன் மன்னன் நீலன் போரில் முன்னேறினான்.

பல்வேறு விதமான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட வரூதம் {தேர்க்கூடு}, கொடிமரம் ஆகியவற்றைக் கொண்டவனும் அழகிய குதிரைகளையும், கொடியையும் கொண்ட சித்திரன் போரில் முன்னேறினான்.

தாமரை நிறத்தாலான சிறந்த குதிரைகள், ரோசமானனின் மகன் ஹேமவர்ணனைச் சுமந்தன.

அனைத்து வகை ஆயுதங்களைத் தாங்கவல்லவையும், போரில் துணிச்சல்மிக்கச் சாதனைகளைச் செய்தவையும், நாணலின் நிறத்தாலான முதுகெலும்பு பத்திகள் கொண்டவையும், வெண்ணிற விறைப்பைகள் கொண்டவையும், கோழி முட்டையின் நிறம் கொண்டவையுமான குதிரைகள் தண்டகேதுவைச் சுமந்தன.

வலிமைமிக்கவனும், சக்தியைச் செல்வமாகக் கொண்டவனுமான பாண்டியர்களின் மன்னன் சாரங்கத்வஜன், வைடூரியக் கற்களாலான கவசத்தைத் தரித்துக் கொண்டு, தன் சிறந்த வில்லை வளைத்தபடி, சந்திரக் கதிர்களின் நிறத்தாலான குதிரைகளில் துரோணரை நோக்கி முன்னேறினான். அவனது நாடு {பாண்டிய நாடு} படையெடுக்கப்பட்டு, அவனது சொந்தங்கள் தப்பி ஓடிய போது, அந்தப்போரில் கிருஷ்ணனால் அவனது {சாரங்கத்வஜனின்} தந்தை கொல்லப்பட்டான். பிறகு, பீஷ்மர், துரோணர், ராமர் {பரசுராமர்}, கிருபர் ஆகியோரிடம் இருந்து ஆயுதங்களை {அஸ்திரங்களை} அடைந்த இளவரசன் சாரங்கத்வஜன், ஆயுதங்களில் {அஸ்திரங்களில்}ருக்மி, கர்ணன், அர்ஜுனன் மற்றும் அச்யுதனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையானவனாக ஆனான். பிறகு அவன் துவாரகை நகரத்தை அழித்து, முழு உலகத்தையும் {தனக்கு} அடிபணியச் செய்ய விரும்பினான். எனினும், அவனுக்கு நன்மை செய்ய விரும்பிய விவேகமுள்ள அவனது நண்பர்கள், அவ்வழிக்கு எதிராக அவனுக்கு ஆலோசனை வழங்கினர். அவன் {சாரங்கத்வஜன்}, பழியெண்ணங்கள் அனைத்தையும் கைவிட்டுவிட்டுத் தன் ஆட்சிப்பகுதிகளை இப்போது ஆண்டுவருகிறான். பாண்டியர்களின் மன்னனான அந்தச் சாரங்கத்வஜனைப் பின்தொடர்ந்த முக்கியத் தேர்வீரர்கள் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் {1,40,000} பேரை அட்ரூஸ மலரின் {Atrusa flower}{?} நிறம் {பித்தளையின் நிறமாக இருக்க வேண்டும்} கொண்ட குதிரைகள் சுமந்தன [13].பல்வேறு வண்ணங்களிலானவையும், பல்வேறு விதங்களிலான சக்திகளைக் கொண்டவையுமான குதிரைகள், வீரனான கடோத்கசனைச் சுமந்தன.

பெரும் அளவிலானவையும், வலிமைமிக்கவையும், அரட்டா இனத்தைச் சேர்ந்தவையுமான குதிரைகள், பாரதர்கள் அனைவரின் கருத்துகளையும் ஒதுக்கி, யுதிஷ்டிரன் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தன் விருப்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} சென்றவனும், தங்கத் தேரில் இருந்தவனும், கண்கள் சிவந்தவனுமான வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பிருஹந்தனைச் சுமந்தன.

தங்க நிறத்திலான மேன்மையான குதிரைகள் மன்னர்களில் முதன்மையான அறம் சார்ந்த யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து சென்றன. 

மன்னர்களின் கொடிமரங்கள்! – துரோண பர்வம் பகுதி – 023ஆ-வீரர்கள் ஒவ்வொருவரும் கொண்ட கொடிமரங்களின் தன்மைகள் குறித்து விவரித்துச் சொன்ன சஞ்சயன்; பாண்டவர்கள் கொண்டிருந்த விற்களின் பெயர்கள்; களத்தில் ஆங்காங்கே நடைபெற்ற தனிப்போர்கள் குறித்த வர்ணனை: நகுலனின் மகன் சதானீகனால் கொல்லப்பட்ட பூதகர்மன்; துரியோதனனின் தம்பி பீமரதனால் கொல்லப்பட்ட சால்வன்…

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “தெய்வீக வடிவங்களைக் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான பிரபத்ரகர்கள், பல்வேறு சிறந்த நிறங்களிலான குதிரைகளில் போரிட முன்னேறினர். தங்கக் கொடிமரங்களைக் கொண்ட அவர்கள் அனைவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மூர்க்கமாகப் போராடத் தயாராக இந்திரனின் தலைமையிலான சொர்க்கவாசிகளின் அம்சங்களை அணிந்து பீமசேனனுடன் முன்னேறினர். ஒன்று கூடியிருந்த அந்தப் பிரபத்ரகர்களின் கூட்டம் திருஷ்டத்யும்னனால் மிகவும் விரும்பப்பட்டது.

எனினும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகன் {துரோணர்}, வீரர்கள் அனைவரையும் காந்தியில் விஞ்சினார். அவரது கொடிமரமானது, மேலே கருப்பு மானின் தோல் {கிருஷ்ணாஜினம் கொடி} படபடக்க, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அதில் இருந்த அழகிய நீர்க்குடத்துடன் {கமண்டலத்துடன்} மிக அழகாகத் தெரிந்தது.

பீமசேனனின் கொடிமரமானது, வைடூரியத்தாலான கண்களைக் கொண்டதும், வெள்ளியாலானதுமான பெரிய சிங்கத்தைக் கொடியில் கொண்டு மிகவும் பிரகாசமாகத் தெரிந்தது.

பெரும் சக்தியுடைய யுதிஷ்டிரனின் கொடிமரமானது, கோள்கள் சூழ இருக்கும் தங்கச் சந்திரனைக் கொடியில் கொண்டு மிக அழகாகத் தெரிந்தது. நந்தம் மற்றும் உபநந்தம் என்று அழைக்கப்பட்ட அழகிய இரண்டு பெரிய மிருதங்கங்கள் அதனுடன் கட்டப்பட்டிருந்தன. இயந்திரங்களால் இயக்கப்பட்ட இவை [1] கேட்பவர் அனைவரின் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும் சிறந்த இசையை உண்டாக்கின.எதிரிகளை அச்சுறுத்தும் வகையில் உயரமானதும் கடுமையானதுமான நகுலனின் தேரில் பொருத்தப்பட்டிருந்த கொடிமரமானது, தங்கத்தாலான முதுகைக் கொண்ட சரபத்தைக் கொடியில் தாங்கியிருந்தது.

மணிகளுடன் கூடிய அழகிய வெள்ளி அன்னப்பறவையும், எதிரியின் துயரத்தை அதிகரிக்கும் பயங்கரமான கொடியும் சகாதேவனின் கொடிமரத்தில் காணப்பட்டது.

திரௌபதியின் மகன்கள் ஐவரின் கொடிமரங்களும் தர்மன், மாருதன், சக்ரன் {இந்திரன்}, அசுவினி இரட்டையர்கள் ஆகியோரின் அற்புதமான வடிவங்களைக் கொண்ட கொடியைச் சுமந்திருந்தன.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இளைஞனான அபிமன்யுவின் தேரில் புடம்போட்ட தங்கம் போலப் பிரகாசிக்கும் தங்க மயிலைத் தாங்கிய கொடியைக் கொண்ட அற்புதக் கொடிமரம் ஒன்று இருந்தது.

கடோத்கசனின் கொடிமரத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஒரு கழுகு பிரகாசமாக மின்னியது, அவனது குதிரைகள், பழங்காலத்தின் ராவணனுடைய குதிரைகளைப் போல நினைத்த இடங்களுக்குச் செல்ல வல்லவையாக இருந்தன.

யுதிஷ்டிரனின் கரங்களில் மஹேந்திரம் என்று அழைக்கப்படும் தெய்வீக வில் இருந்தது, பீமசேனனின் கைகளிலோ, ஓ! மன்னா வாயவ்யம் என்று அழைக்கப்படும் தெய்வீக வில் இருந்தது. மூன்று உலகங்களின் பாதுகாப்புக்காகப் பிரம்மன் ஒரு வில்லைப் படைத்தான். அந்த அழிக்கமுடியாத தெய்வீக வில்லை {காண்டீவத்தைப்} பல்குனன் {அர்ஜுனன்} கொண்டிருந்தான். வைஷ்ணவ வில்லை நகுலன் கொண்டிருந்தான், அஸ்வினம் என்றழைக்கப்படும் வில்லைச் சகாதேவன் கொண்டிருந்தான்.

பௌலஸ்தியம் என்றழைக்கப்படும் பயங்கரமான தெய்வீக வில்லைக் கடோத்கசன் கொண்டிருந்தான்.

திரௌபதியின் மகன்கள் ஐவரால் கொள்ளப்பட்ட விற்களில் ரத்தினங்களான ஐந்து விற்களும் முறையே, ரௌத்ரம் {ருத்திரன்}, ஆக்னேயம் {அக்னி}, கௌபேரயம் {குபேரன்}, யமயம் {யமன்}, கிரிசம் {கிரிசன்} என்று அழைக்கப்பட்டன. ரௌத்ரம் என்று அழைக்கப்பட்டதும், விற்களில் சிறந்ததுமான அற்புதமான வில்லானது ரோஹிணியின் மகனால் {பலராமனால்} பெறப்பட்டது, பின்னவன் {பலராமன்}, உயர் ஆன்ம சுபத்திரையின் மகனிடம் {அபிமன்யுவிடம்} மனநிறைவு கொண்டு அவனுக்கே {அபிமன்யுவுக்கே} அஃதை அளித்தான்.

துணிச்சல் மிக்க வீரர்களுக்குச் சொந்தமான இவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இன்னும் பல கொடிமரங்கள் அனைத்தும் அவர்களது எதிரிகளின் அச்சத்தை அதிகரிப்பனவாகவே இருந்தன.

துரோணரால் தலைமைதாங்கப்பட்ட படையானது, எண்ணிக்கையில் ஒரு கோழையையேனும் கொள்ளாமல், ஓ! ஏகாதபதி {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தைத் தடுக்கும் வகையில் ஒன்றாக உயர்ந்த எண்ணற்ற கொடிமரங்களுடன் இருந்ததைக் காண, ஓவியம் தீட்டும் துணியில் உள்ள படங்களைப் போலவே இருந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரில் துரோணரை நோக்கி விரையும் துணிச்சல் மிக்க வீரர்களின் பெயர்களையும், அவர்களது வம்சாவளியையும் {கோத்திரங்களையும்}, ஒரு சுயம்வரத்தில் கேட்கப்படுவதைப் போலவே நாங்கள் அங்கே கேட்டோம் [2] [3].

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சஞ்சயா, விருகோதரனை {பீமனைத்} தலைமையாகக் கொண்டு போரிட வந்த இந்த மன்னர்கள் தேவர்களுடைய படையையும் துன்பமடையச் செய்வார்கள். மனிதன் அதிர்ஷ்டங்களுடன் கூடியவனாகப் பிறக்கிறான். அந்த அதிர்ஷ்டத்திலேயே பற்பலவிதமான எல்லாப் பயன்பாடுகளும் காணப்படுகின்றன. யுதிஷ்டிரன் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டு நீண்ட காலம் சடையும், மான்தோலும் தரித்து வனத்தில் திரிந்து கொண்டிருந்தான்; பின்பு உலகத்தாலறியப்படவும் இல்லை. அந்த யுதிஷ்டிரனே என் பிள்ளைகளின் அழிவின் பொருட்டுப் பெரிய படையையும் போர்க்களத்திற்குத் திருப்பிக் கொண்டு வந்துவிட்டான். இது தெய்வ செயலேயன்றி வேறென்ன?

மனிதன் புண்ணியத்தோடு சேர்ந்தே பிறக்கிறானென்பது நிச்சயம். அந்த மனிதன் தான் விரும்பாமலே அந்தப் புண்ணியத்தினால் இழுக்கப்படுகிறான். சூதாட்டமாகிய துயரத்தை அடைந்து யுதிஷ்டிரன் துன்பப்படுத்தப்பட்டானல்லவா? அந்த யுதிஷ்டிரனே மறுபடியும் அதிர்ஷ்டத்தினால் நண்பர்களைப் பெற்றான். ஓ! சூதா {சஞ்சயா}, முற்காலத்தில் புத்தியில்லாதவனான துரியோதனன் என்னை நோக்கி, “ஐயா, கேகயர்களிற்பாதியும், காசிகளில் பாதியும், கோசல நாட்டவரும், சேதி நாட்டவரில் பாதியும் இன்னும் மற்றுள்ள நாட்டவர்களும் என்னையே அடைந்துவிட்டனர். எனக்கு மிகுதியான பூமியிருக்கிறது. தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அவ்வளவு இல்லை” என்று சொன்னான். அந்தப் படையால் நன்றாகக் காக்கப்பட்ட துரோணர் போர்க்களத்தில் திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார். அதிர்ஷ்டத்தைத் தவிர வேறென்ன இருக்கிறது.

பெரும் கைவன்மையுள்ளவரும், போரைக் கொண்டாடுபவரும், அஸ்திரவித்தைகளின் கரைகள் அனைத்தையும் கண்டவருமான துரோணரை மன்னர்களுக்கிடையில் எவ்விதமான எதிரி அடைந்தான்? மிகுந்த துயரத்தை அடைந்த நான் மிக்க மோசத்தை அடைந்தேன். பீஷ்மரும் துரோணரும் கொல்லப்பட்டார்கள் என்பதைக் கேட்டு நான் உயிரோடிருப்பதற்கு விரும்பவில்லை.

அப்பா! சூத! என்னை மகனிடம் பேராசையுள்ளவன் என்று நன்கு அறிந்த விதுரன் சொன்னவையெல்லாம் என்னாலும், துரியோதனனாலும் அடையப்பட்டன. அப்பா! கொடூரனான துரியோதனனை மட்டும் இழந்து மற்ற மகன்களை மிச்சமாக்க விரும்புவேனாகில் அனைவரும் மரணத்தை அடைய மாட்டார்கள். எந்த மனிதன் தர்மத்தைவிட்டுப் பொருளைப் பிரதானமாகக் கொள்வானோ அவன் இவ்வுலகத்தில் குறைவை அடைகிறான்; அற்பத்தன்மையையும் அடைகிறான்.

இப்போதும் அழிவடைந்த இந்த நாடு, துரோணர் கொல்லப்பட்டும் கூட மிகுந்திருக்கப் போவதாக நான் எண்ணவில்லை. பொறுமையுடையவர்களும், மனிதர்களில் சிறந்தவர்களுமான எவர்களை எப்பொழுதும் அண்டிப் பிழைக்கிறோமோ அப்படிப்பட்ட பொறுப்புள்ள துரோணரும் பீஷ்மரும் காலம் சென்ற பிறகு, (நம்மவர்கள்) எவ்விதமாக மிகுந்திருப்பார்கள்? எவ்வாறு போர் நடந்ததென்பதை விளக்கமாகவே எனக்குச் சொல். எவர்கள் போரிட்டார்கள்? எவர்கள் தடுத்தனர்? எந்த அற்பர்கள் பயத்தால் ஓடினர்? வலிமைமிக்கத் தேர்வீரனான தனஞ்சயன் {அர்ஜுனன்} எதை எதைச் செய்தானோ அதை அதையும் எனக்குச் சொல். எதிரியாய் இருக்கும் அந்த அர்ஜுனனிடத்திலும் அந்த விருகோதரனிடத்திலும் {பீமனிடத்திலும்} நமக்கு அதிகப் பயமுண்டு. சஞ்சயா! பாண்டவர்கள் (போரிடத்} திரும்பியவந்தவுடன் மிகுந்திருக்கிற என்னுடைய படையை மிகவும் பயங்கரமாகக் கேடு எவ்விதம் விளைந்ததோ அதையும் எனக்குச் சொல். அப்பா, அப்பொழுது (பகைவர்கள்) திரும்பி வந்திருக்கும் காலத்தில் உங்களுடைய மனம் எவ்விதமிருந்தது? நம்மைச் சேர்ந்தவர்களுள் வீரர்களான எவர்கள், அங்கே அவர்களை எதிர்த்தனர்” என்றான் {திருதராஷ்டிரன்}.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “பாண்டவர்கள் போருக்குத் திரும்பி வந்தவுடன், மேகங்களால் சூரியன் மறைக்கப்படுவது போல அந்தப் பாண்டவ வீரர்களால் துரோணர் மறைக்கப்படுவது கண்டு எங்களுக்குப் பெரிய அச்சமுண்டாயிற்று. மேலும், அவர்களால் மேலே எழுப்பிவிடப்பட்ட அதிகமான தூசியானது உம்முடைய படையை மறைத்துவிட்டது. பிறகு, பார்வையானது தடைப்பட்ட பொழுது துரோணரை மாண்டவராகவே நாங்கள் எண்ணினோம். கொடூரமான காரியத்தைச் செய்ய எண்ணங்கொண்டவர்களும், பெரிய வில்லையுடையவர்களும், வீரர்களுமான அந்தப் பாண்டவ வீரர்களைக் கண்டு துரியோதனன், “மன்னர்களே, நீங்கள் உங்களுடைய ஆற்றலுக்கும், ஊக்கத்துக்கும், ஆண்மைக்கும் தக்கபடி, பாண்டவர்களுடைய சேனையைத் தகுந்த உபாயத்தோடு தடுத்து யுத்தம் செய்யுங்கள்” என்று சொல்லி விரைவாகத் தன் படையை ஏவினான்.

பிறகு, உம்முடைய குமாரனான துர்மர்ஷணன், தூரத்தில் பீமசேனனைக் கண்டு துரோணருடைய உயிரைக் காப்பாற்ற விரும்பியவனாக (அவன் மீது) அம்புகளை இறைத்துக் கொண்டு எதிர்த்து வந்து போர்க்களத்தில் யமன் போலக் கோபங்கொண்டு அம்புகளாலே அவனையும் {பீமனையும்} மூடினான். அந்தத் துர்மர்ஷணனையும் பீமன் அம்புகளால் துன்பமடையும்படி செய்தான். அப்போது கைகலந்த பெரிய போர் நடந்தது. கற்றறிந்தவர்களும் அடிக்கும் திறமையுள்ளவர்களுமான அந்தச் சூரர்கள் அரசனான துரியோதனனால் கட்டளையிடப்பட்டு நாட்டையும், மரணப் பயத்தையும் விட்டுப் போர்க்களத்தில் எதிரிகளை எதிர்த்து நின்றனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருதவர்மனாவன், துரோணரை எதிர்க்க எண்ணங்கொண்டு வருகின்றவனும், போரில் பிரகாசிப்பவனும், சினியின் பேரனுமான சாத்யகியைத் தடுத்தான். கோபங்கொண்டவனும், சினியின் பேரனுமான சாத்யகி, கோபங்கொண்ட அந்தக் கிருதவர்மனை கணைமாரியால் தடுத்தான். மதங்கொண்ட யானை மதங்கொண்ட யானையை எதிர்ப்பது போல, கிருதவர்மனும் சாத்யகியை எதிர்த்தான்.

பயங்கரமான வில்லையுடைய சிந்து மன்னனான ஜெயத்ரதன், முயற்சியுள்ளவனாக வருகின்ற மகாவில்லாளியான க்ஷத்ரவர்மனைக் கூர்மையான அம்புகளாலே துரோணரிடத்தில் செல்லவொட்டாமல் தடுத்தான். க்ஷத்ரவர்மனோ, சிந்துக்களின் மன்னுடைய {ஜெயத்ரதனுடைய} கொடியையும், வில்லையும் அறுத்துக் கோபங்கொண்டு பத்துக் கணைகளாலே உயிர்நிலைகள் அனைத்தையும் அடித்தான். பிறகு அந்தச் சைந்தவன் {ஜெயத்ரதன்} கைத்தேர்ச்சியுள்ளவன் போல வேறு வில்லை எடுத்துப் போர்க்களத்தில் முழுவதும் இரும்பினாற் செய்த அம்புகளாலே க்ஷத்ரவர்மாவை அடித்தான்

பாண்டவர்களின் நன்மைக்காக முயற்சி செய்பவனும், பெரும் தேர்வீரனும், பரதக் குலத்தில் தோன்றியவனும், வீரனுமான யுயுத்சுவை,  சுபாகு முயற்சியோடு துரோணரிடத்தினின்று தடுத்தான். யுயுத்சு, பிரயோகம் செய்கின்ற சுபாகுவின் வில்லோடும், அம்புகளோடுக் கூடியவைகளும் பரிகாயுதம் போன்றவைகளுமான இரண்டு கைகளையும் அராவித் துவைந்தவைகளான இரண்டு பாணங்களால் வெட்டினான்.

பாண்டவர்களுள் சிறந்தவனும், தர்மாத்மாவுமான மன்னன் யுதிஷ்டிரனை மத்ர மன்னன் சல்லியன், பொங்கிவரும் பெருங்கடலைக் கரை தடுப்பது போலத் தடுத்தான். யுதிஷ்டிரனோ உயிர்நிலைகளைப் பிளக்கின்ற பல கணைகளை அவன் மீது இறைத்தான். மத்ர மன்னனானவன் அறுபத்து நான்கு {64} கணைகளால் அந்தத் தர்மனின் மகனை அடித்து அதிகமாகச் சிம்மநாதம் செய்தான். பாண்டவர்களுள் மூத்தவனான யுதிஷ்டிரன் அடிக்கடி சிம்மநாதம் செய்யும் மத்ர நாட்டு மன்னனின் {சல்லியனின்} கொடிமரத்தையும், வில்லையும் இரண்டு கணைகளே அறுத்தான். பிறகு மக்கள் பேரொலி எழுப்பினர்.

அவ்வாறே, பாஹ்லிக நாட்டு மன்னன், படையோடு சேர்ந்து, படையோடு கூடி ஓடி வரும் மன்னன் துருபதனை அம்புகளால் தடுத்தான். படையை உடையவர்களும், வயதில் முதிர்ந்தவர்களுமான அவ்விருவருக்கும் மதப்பெருக்குள்ளவைகளும் பெரிய யூதபதிகளுமான இரண்டு யானைகளுக்கு யுத்தம் நேருவது போலக் கோரமான அவ்வித யுத்தம் நடந்தது” பிறகு அரசனான துருபதன், ஒரு வலிமைமிக்கப் படைப்பிரிவின் தலைமையில் இருந்த அவரை {துரோணரை} எதிர்த்து விரைந்தான். தங்கள் தங்கள் படைகளின் தலைமையில் இருந்த அந்த இரண்டு கிழவர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலானது, இரண்டு யானைக்கூட்டங்களில் உள்ள மதப்பெருக்குடைய வலிமைமிக்கத் தலைமையானைகள் இரண்டுக்கு இடையில் ஏற்படும் மோதலைப் போலப் பயங்கரமாக இருந்தது.

அவந்தியின் விந்தனும், அனுவிந்தனும், பழங்காலத்தில் இந்திரனும், அக்னியும், (அசுரன்) பலியுடன் மோதியதைப் போலத் தன் படைகளுக்குத் தலைமையில் இருந்த மத்ஸ்யர்களின் ஆட்சியாளன் விராடனுடன் மோதினர். குதிரைகளும், தேர்வீரர்களும், யானைகளும் மிகவும் அச்சமற்ற வகையில் ஈடுபட்ட மோதலான மத்ஸ்யர்களுக்கும், கேகயர்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் பயங்கர மோதல், பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பானதாக இருந்தது.

நகுலனின் மகனான சதானீகன் கணைமாரியை இறைத்தபடி முன்னேறியபோது, சபாபதி என்றும் அழைக்கப்பட்ட பூதகர்மன் {!} [4] துரோணரிடம் இருந்து அவனை {சதானீகனை} விலக்கியே வைத்தான். பிறகு அந்த நகுலனின் வாரிசானவன் {சதானீகன்}, பெரும் கூர்மையுள்ள மூன்று பல்லங்களால் அந்தப் போரில் பூதகர்மனின் இரு கரங்களையும் அவனது தலையையும் இழக்கச் செய்தான்.பெரும் ஆற்றலைக் கொண்ட {பீமனின் மகன்} சுதசோமன் கணைகளின் மாரியை இறைத்தபடி துரோணரை நோக்கி முன்னேறியபோது, விவிம்சதி அவனைத் தடுத்தான். எனினும், கோபத்தால் தூண்டப்பட்ட சுதசோமன், தனது சிற்றப்பன் விவிம்சதியை நேரான கணைகளால் துளைத்து, கவசம் பூண்டு மோதலுக்குத் தயாராக நின்றான்.

(துரியோதனனின் தம்பியான) பீமரதன், முழுவதும் இரும்பாலான மிக வேகமான ஆறு கூரிய கணைகளால் சால்வனை {!} [5] அவனது குதிரைகளோடும், தேரோட்டியோடும் யமனுலகு அனுப்பிவைத்தான்.{துரியோதனனின் தம்பி} சித்திரசேனனின் மகன் [6], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மயில்களைப் போலத் தெரிந்த குதிரைகளால் தாங்கப்பட்ட உமது பேரன் சுருதகர்மனை எதிர்த்தான். போரில் வீழ்ப்பட்ட கடினமானவர்களான உமது பேரர்கள் இருவரும், தங்கள் தங்கள் தந்தையரின் நோக்கங்களின் வெற்றிக்காக ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பி தீவிரமாகப் போரிட்டனர்.

[6] இங்கே உமது மகன் சித்திரசேனன் என இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வேறொரு பதிப்பில் அப்படியே இருக்கிறது.

அந்தப் பயங்கரப்போரில் முன்னணியில் நின்று கொண்டிருந்த பிரதிவிந்தியனைக் கண்ட துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்), தன் தந்தையின் கௌரவத்தைக் காக்க விரும்பி, முன்னவனை {பிரதிவிந்தியனைத்} தன் கணைகளால் தடுத்தான். பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட பிரதிவிந்தியன், சிங்க வால் கொடியைச் சுமந்த கொடிமரத்தைக் கொண்டவனும், தன் தந்தைக்காகப் போரிடுபவனுமான அஸ்வத்தாமனைக் கூரிய கணைகள் பலவற்றால் துளைத்தான். திரௌபதியின் (மூத்த) மகன் {பிரதிவிந்தியன்}, ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, விதைக்கும் காலத்தில் மண்ணில் விதைகளைத் தூவும் உழவனைப் போலத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மீது கணைகளின் மாரியை இறைத்தான்.

துச்சாசனனின் மகன் {துர்மர்ஷனன்}, வலிமைமிக்கத் தேர்வீரனும், திரௌபதியின் மூலமான அர்ஜுனன் மகனுமான சுருதகீர்த்தித் துரோணரை நோக்கி விரைந்த போது, பின்னவனை {சுருதகீர்த்தியைத்} தடுத்தான். எனினும் அர்ஜுனனுக்கே இணையானவனான அந்த அர்ஜுனன் மகன் {சுருதகீர்த்தி}, பெரும் கூர்மை கொண்ட பல்லங்கள் மூன்றினால் முன்னவனின் {துச்சாசனன் மகனின்} வில், கொடிமரம் மற்றும் தேரோட்டியை வெட்டி துரோணரை எதிர்த்து விரைந்தான்.

துரியோதனனின் மகன் லக்ஷ்மணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரண்டு படைகளாலும் துணிச்சல் மிக்கோரில் துணிச்சல்மிக்கவன் என்று கருதப்பட்ட படச்சரர்களைக் கொன்றவனைத் {!} [7] தடுத்தான். எனினும், பின்னவன், லக்ஷ்மணனின் வில் மற்றும் கொடி மரம் ஆகிய இரண்டையும் அறுத்து, அவன் மீது கணைகள் பலவற்றைப் பொழிந்து காந்தியுடன் சுடர்விட்டான்.பெரும் விவேகியான இளமைநிறைந்த விகர்ணன், அந்தப் போரில் யக்ஞசேனனின் {துருபதனின்} இளமை நிறைந்த மகன் சிகண்டி முன்னேறிய போது பின்னவனை {சிகண்டியைத்} தடுத்தான். யக்ஞசேனன் மகனோ கணைகளின் மழையால் முன்னவனை {விகர்ணனை} மறைத்தான்.

{துரியோதனன் தம்பியான} அங்கதன், அந்தப் போரில் துரோணரை நோக்கி விரைந்த {பாஞ்சால} வீரன் உத்தமௌஜஸ்சை கணைமாரியால் தடுத்தான். மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கிடையில் நடந்த மோதலானது அச்சம்நிறைந்ததாக இருந்தது, அது {அம்மோதல்} அவ்விருவரையும், துருப்புகளையும் பேரார்வத்தால் நிரப்பியது.

பெரும் வில்லாளியும், பெரும் வலிமைகொண்டவனுமான {துரியோதனன் தம்பி} துர்முகன், துரோணரை நோக்கிப் புருஜித் {குந்திபோஜன்} முன்னேறியபோது, தன் கணைகளால் பின்னவனை {புருஜித்தைத்} தடுத்தான். புருஜித் ஒரு நாராசத்தால் {நீண்ட கணையால்} துர்முகனை அவனது புருவங்களுக்கு இடையில் தாக்கினான். அதன்பேரில், துர்முகனின் முகமானது தண்டுடன் கூடிய தாமரையைப் போல அழகாகத் தெரிந்தது.

கர்ணன், சிவப்புக் கொடிமரங்களைக் கொண்டோரும், துரோணரை நோக்கிச் சென்றோருமான, கேகயச் சகோதரர்கள் ஐவரைத் தன் கணைகளின் மாரியால் தடுத்தான். கர்ணனின் கணை மாரியால் எரிக்கப்பட்ட அந்த ஐந்து சகோதரர்களும் தங்கள் கணைகளால் கர்ணனை மறைத்தனர். பதிலுக்குக் கர்ணனோ கணை மாரியால் அவர்களை மீண்டும் மீண்டும் மறைத்தான். கணைகளால் மறைக்கப்பட்ட கர்ணனோ, அந்த ஐந்து சகோதரர்களோ அவர்களது குதிரைகள், தேரோட்டிகள், கொடிமரங்கள் மற்றும் தேர்கள் ஆகியவையோ காணப்படவில்லை {கணைகளால் மறைக்கப்பட்டதால் கண்களுக்குப் புலனாகவில்லை}.

உமது மகன்களான துர்ஜயன், ஜயன் மற்றும் விஜயன் ஆகியோர், {மகிஷ்மதியின் ஆட்சியாளன்} நீலன், காசிகளின் ஆட்சியாளன் {அபிபூ}, {மகத மன்னன்} ஜெயத்சேனன் ஆகிய மூவரை எதிர்த்துத் தடுத்தனர். அந்த வீரர்களுக்கிடையிலான மோதல் உக்கிரமடைந்து, சிங்கம், புலி மற்றும் ஓநாய் ஒருபுறத்திலும், கரடி, எருமைக்கடா, காளை ஆகியன மறுபுறத்திலும் இருந்து போரிட்டது போலப் பார்ப்பவர்களின் இதயங்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டின.

சகோதரர்களான க்ஷேமதூர்த்தி மற்றும் பிருஹந்தன் ஆகியோர், துரோணரை எதிர்த்துச் சாத்வத குலத்தின் சாத்யகி சென்ற போது, தங்கள் கூரிய கணைகளால் பின்னவனை {சாத்யகியைச்} சிதைத்தனர். அவர்கள் இருவர் ஒரு புறத்திலும், சாத்யகி மறுபுறத்திலும் நின்று அவர்களுக்குள் நடைபெற்ற போரானது காட்டில் ஒரு சிங்கத்திற்கும், இரண்டு வலிமைமிக்க யானைகளுக்கும் இடையில் நடைபெறும் மோதலைப் போலக் காண்பதற்கு மிக அற்புதமாக இருந்தது.

கோபத்தால் தூண்டப்பட்டவனும், பல வீரர்களைத் துளைத்துக் கொண்டிருந்தவனுமான சேதிகளின் மன்னனை {திருஷ்டகேதுவை}, போரில் எப்போதும் மகிழ்பவனான மன்னன் அம்பஷ்டன் துரோணரிடம் இருந்து விலக்கி வைத்தான். பிறகு மன்னன் அம்பஷ்டன், எலும்புகளையே ஊடுருவவல்ல ஒரு நீண்ட கணையால் தன் எதிராளியை {திருஷ்டகேதுவைத்} துளைத்தான். அதன் பேரில் பின்னவன் {திருஷ்டகேது}, வில் மற்றும் கணையில் இருந்த தன் பிடி தளரத் தன் தேரில் இருந்து கீழே தரையில் விழுந்தான்.

சரத்வானின் மகனான உன்னதமான கிருபர், (போரில்) கோபத்தின் வடிவமான விருஷ்ணி குலத்தின் வார்த்தக்ஷேமியை குறுங்கணைகள் பலவற்றால் அடித்தார். போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்த வீரர்களான கிருபரும் வார்த்தக்ஷேமியும் ஒருவரோடொருவர் மோதிக்கொள்வதைக் கண்டவர்கள் அதிலேயே தங்கள் கவனம் குவிந்ததால் வேறு எதையும் கவனிக்க முடியாதவர்கள் ஆனார்கள்.

துரோணரின் மகிமையை மேம்படுத்துபவனான சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, பெரும் சுறுசுறுப்புடைய மன்னன் மணிமான் போரிட வந்த போது பின்னவனை {மணிமானைத்} தடுத்தான். பிறகு மணிமான், அந்தச் சோமதத்தன் மகனின் {பூரிஸ்ரவசின்} நாண்கயிறு, கொடிமரம், கொடி, தேரோட்டி, குடை ஆகியவற்றை அறுத்து, அவற்றைப் பின்னவனின் {பூரிஸ்ரவசின்} தேரில் இருந்து விழச் செய்தான். தன் கொடிமரத்தில் வேள்விப்பீடக் கொடியைக் கொண்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்தச் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, தன் தேரில் இருந்து விரைவாகக் கீழே குதித்துத் தன் பெரும் வாள்களைக் கொண்டு தன் எதிராளியின் {மணிமானின்} குதிரைகள், தேரோட்டி, கொடிமரம் மற்றும் தேரை வெட்டி வீழ்த்தினான். பிறகு தன் தேரில் மீண்டும் ஏறிய அவன் {பூரிஸ்ரவஸ்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, தன் குதிரைகளைத் தானே செலுத்திக் கொண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} அந்தப் பாண்டவப் படையை எரிக்கத் தொடங்கினான்.

சாதிக்கத் தகுதிவாய்ந்த (கர்ணனின் மகன்) விருஷசேனன், அசுரர்களை அடிக்க அவர்களைப் பின்தொடரும் இந்திரனைப் போலப் போரிட விரையும் மன்னன் பாண்டவனை {?} [8] கணைகளின் மழையால் தடுத்தான்.கதாயுதங்கள், பரிகங்கள், வாள்கள், கோடரிகள், கற்கள், குறுந்தடிகள், உலக்கைகள், சக்கரங்கள், பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள்}, போர்க்கோடரிகள் [9] ஆகியவற்றையும், புழுதி, காற்று, நெருப்பு, நீர், சாம்பல், செங்கற்கட்டிகள், வைக்கோல், மரங்கள் ஆகியவற்றையும் கொண்டு பீடித்து, அடித்து, உடைத்து, கொன்று, எதிரியை முறியடித்து, பகையணிகளின் மீது அவற்றை {மேற்கண்ட ஆயுதங்கள்} வீசிக் கொண்டும், அவர்களை அச்சுறுத்திக் கொண்டும், துரோணரைப் பிடிக்கும் விருப்பத்தோடு அங்கே கடோத்கசன் வந்தான். எனினும், சினத்தால் தூண்டப்பட்ட ராட்சசன் அலம்புசன், பல்வேறு ஆயுதங்களாலும், பல்வேறு போர்க்கருவிகளாலும் அவனை {கடோத்கசனை} எதிர்கொண்டான். ராட்சசர்களில் முதன்மையான அவ்விருவருக்கும் நடந்த போரானது பழங்காலத்தில் சம்பரனுக்கும், தேவர்களின் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக இருந்தது.நீர் அருளப்பட்டிருப்பீராக, இப்படியே அந்தப் பயங்கரப் போருக்கு மத்தியில் உமது படையைச் சேர்ந்த தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோருக்கும் அவர்களுடையவர்களுக்கும் இடையில் நூற்றுக்கணக்கான தனிப்போர்கள் நடந்தன. துரோணரை அழிப்பது, {துரோணரை} பாதுகாப்பது என்பதைக் குறியாகக் கொண்ட அந்த வீரர்களுக்கு இடையில் அப்போது நடந்த இது போன்ற ஒரு போரானது, உண்மையில், அதற்கு முன்னர்ப் பார்க்கப்பட்டதோ, கேள்விப்படப்பட்டதோ கிடையாது. உண்மையில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, களத்தின் பகுதிகள் அனைத்திலும் காணப்பட்ட மோதல்கள் பலவாகும், அவற்றில் சில பயங்கரமானதாகவும், சில அழகானதாகவும், சில மிகக் கடுமையானதாகவும் இருந்தன” {என்றான் சஞ்சயன்}.

கிழவன் பகதத்தனும்! யானை சுப்ரதீகமும்!! – துரோண பர்வம் பகுதி – 024-துரியோதனன் யானைப்படையுடன் சேர்ந்து பீமனை எதிர்த்தது; துரியோதனனின் வில்லையும், கொடியையும் அறுத்த பீமன்; அங்க மன்னனைக் கொன்ற பீமன்; பீமனைத் தடுத்த பகதத்தன்; சுப்ரதீகத்தின் துதிக்கைகளில் சிக்கிய பீமன், அதனிடம் இருந்து தப்பித்தது; பீமன் கொல்லப்பட்டதாக நினைத்த யுதிஷ்டிரன்; தசார்ணனைக் கொன்ற பகதத்தன்; சாத்யகியின் தேரைத் தூக்கி வீசி பீமனின் குதிரைகளை விரட்டிய சுப்ரதீகம்; ருசிபர்வனைக் கொன்ற பகதத்தன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “இப்படித் துருப்புகள் போரிட்டுக் கொண்டு, தனித்தனிப் பிரிவுகளில் ஒன்றையொன்று எதிர்த்துச் சென்ற போது, பெரும் சுறுசுறுப்புக் கொண்ட பார்த்தனும் {அர்ஜுனனும்}, எனது படையின் போர்வீரர்களும் எவ்வாறு போரிட்டனர்? மேலும் அர்ஜுனன், தேர்வீரர்களான சம்சப்தகர்களை என்ன செய்தான்? மேலும், ஓ! சஞ்சயா, சம்சப்தகர்கள் பதிலுக்கு அர்ஜுனனை என்ன செய்தனர்” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துருப்புகள் இப்படிப் போரில் ஈடுபட்டு ஒன்றையொன்று எதிர்த்துச் சென்ற போது, உமது மகன் துரியோதனன் தன் யானைப் படையை வழிநடத்திக் கொண்டு பீமசேனனைத் தானே எதிர்த்து விரைந்தான். யானையொன்று மற்றொரு யானையை அழைப்பது போலவும், காளையொன்று மற்றொரு காளையை அழைப்பது போலவும், மன்னனாலேயே {துரியோதனனாலேயே} அழைக்கப்பட்ட பீமசேனன், கௌரவப் படையின் அந்த யானைப்பிரிவை எதிர்த்து விரைந்தான்.

போரில் திறம் பெற்றவனும், வலிமைமிக்கப் பெரும் கரங்களைக் கொண்டவனுமான பிருதையின் மகன் {பீமன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த யானைப்பிரிவை விரைவாகப் பிளந்தான். தங்கள் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள புண்களில் ஊனீர் வடிபவையும், மலை போன்றவையுமான அந்தப் பெரும் யானைகள் பீமசேனனின் கணைகளால் சிதைக்கப்பட்டுப் புறமுதுகிடச் செய்யப்பட்டன.

உண்மையில், காற்று எழும்போது மேகத்திரள்களை விரட்டுவதைப் போலவே, அந்தப் பவனன் மகன் {பீமன்} கௌரவர்களின் அந்த யானைப் படையை முறியடித்தான். அந்த யானைகளின் மீது தன் கணைகளை ஏவிய பீமன், தன் கதிர்களால் உலகத்தில் உள்ள அனைத்தையும் தாக்கும் உதயச் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். பீமனின் கணைகளால் பீடிக்கப்பட்ட யானைகள் குருதியால் மறைக்கப்பட்டு, ஆகாயத்தில் சூரியக்கதிர்களால் ஊடுருவப்பட்ட மேகத்திரள்களைப் போல அழகாகத் தெரிந்தன.

பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட துரியோதனன், தன் யானைகளுக்கு மத்தியில் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த அந்த வாயுத்தேவன் மகனை {பீமனைக்} கூரிய கணைகளால் துளைத்தான். பிறகு, கோபத்தால் கண்கள் சிவந்த பீமன், மன்னனை {துரியோதனனை} யமலோகத்திற்கு அனுப்ப விரும்பி, கூரிய கணைகள் பலவற்றால் அவனை விரைவாகத் துளைத்தான். மேனியெங்கும் கணைகளால் சிதைக்கப்பட்ட துரியோதனன், சினத்தால் தூண்டப்பட்டு, சிரித்துக் கொண்டே, சூரியக் கதிர்களின் பிரகாசத்தை உடைய கணைகள் பலவற்றால் பாண்டுவின் மகனான பீமனைத் துளைத்தான். பிறகு, பாண்டுவின் மகன் {பீமன்}, பல்லங்கள் இரண்டால் துரியோதனனின் வில்லையும், பல்வேறு ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், யானை ஆபரணத்தைக் [1] கொண்டதுமான கொடிமரத்தையும் விரைவாக வெட்டிவீழ்த்தினான்.

பீமனால் துரியோதனன் இப்படிப் பீடிக்கப்படுவதைக் கண்டு, ஓ! ஐயா, அங்கர்களின் ஆட்சியாளன் [2] பாண்டுவின் மகனை {பீமனைப்} பீடிப்பதற்காக அங்கே வந்தான். அதன் பேரில் பீமசேனன் அப்படி உரத்த முழக்கங்களுடன் முன்னேறி வரும் அந்த யானைகளின் இளவரசனை ஒரு நாராசத்தால் அதன் கும்பங்கள் இரண்டுக்கு இடையில் ஆழமாகத் துளைத்தான். அதன் உடலினூடாக ஊடுருவிச் சென்ற அந்தக் கணை பூமியில் ஆழமாக மூழ்கியது. இதன் பேரில் இடியால் பிளக்கப்பட்ட மலையைப் போல அந்த யானை கீழே விழுந்தது. அந்த யானை அப்படி விழுந்த போது, அதனுடன் சேர்ந்து அந்த மிலேச்ச மன்னனும் விழுந்தான். ஆனால் பெரும் சுறுசுறுப்புடைய விருகோதரனோ {பீமனோ}, தன் எதிராளி கீழே விழுவதற்கு முன்னரே ஒரு பல்லத்தால் அவனது தலையை அறுத்தான். அங்கர்களின் வீர ஆட்சியாளன் விழுந்த போது, அவனது படைப்பிரிவுகள் தப்பி ஓடின. பீதியால் தாக்குண்ட குதிரைகள், யானைகள், தேர்வீரர்கள் ஆகியோர் அப்படித் தப்பி ஓடுகையில் காலாட்படை வீரர்களை நசுக்கினர்.இப்படிப் பிளக்கப்பட்ட அந்தத் துருப்புகள், அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடிய போது, பீமனை எதிர்த்து பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} தன் யானையின் மேல் ஏறி வந்தான். துதிக்கை மற்றும் (முன்னங்) கால்கள் இரண்டும் சுருக்கப்பட்டு, சினத்தால் நிறைந்து, கண்களை உருட்டிக் கொண்டு வந்த அந்த யானை அந்தப் பாண்டுவின் மகனை {பீமனை} (சுடர்மிகும் நெருப்பைப் போல) எரிப்பதாகத் தெரிந்தது. குதிரை பூட்டப்பட்ட விருகோதரனின் {பீமனின்} தேரை அது தூசியாகப் பொடி செய்தது.

பிறகு அஞ்சலிகாபேதம் {அஞ்சலிகா வேதம்} என்ற அறிவியலை அறிந்ததால், பீமன் முன்னோக்கி ஓடி அந்த யானையின் உடலுக்கு அடியில் பதுங்கினான். உண்மையில், அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} தப்பி ஓடவில்லை. யானையின் உடலுக்குக் கீழே பதுங்கிய அவன் {பீமன்}, தன் வெறுங்கைகளால் அதை {யானையை} அடிக்கடி தாக்கத் தொடங்கினான். தன்னைக் கொல்ல முனையும் அந்த வெல்லப்பட முடியாத யானையை அவன் அடித்தான். அதன் பேரில் பின்னது {அந்த யானை} குயவனின் சக்கரத்தைப் போல விரைவாகச் சுழலத் தொடங்கியது.

பத்தாயிரம் {10000} யானைகளின் பலத்தைக் கொண்ட அருளப்பட்ட விருகோதரன் {பீமன்} இப்படி அந்த யானையைத் தாக்கிய பிறகு, அந்தச் சுப்ரதீகத்தின் உடலை விட்டு வெளியே வந்து, பின்னதை {சுப்ரதீகம் என்ற அந்த யானையை} எதிர்த்து நின்றான். பிறகு {அந்த யானை} சுப்ரதீகம் பீமனைத் தன் துதிக்கைகளால் பிடித்துத் தன் முட்டிக்கால்களால் அவனைக் கீழே வீசி எறிந்தது. உண்மையில், அவனைக் கழுத்தோடு சேர்த்துப் பிடித்த அந்த யானை அவனைக் கொல்ல விரும்பியது. அந்த யானையின் துதிக்கையைத் திருகிய பீமன், அதன் கட்டில் {பிடியில்} இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, மீண்டும் அந்தப் பெரும் உயிரினத்துடைய உடலின் அடியில் பதுங்கினான். தன் படையைச் சேர்ந்த பகையானையின் வருகையை எதிர்பார்த்த அவன் {பீமன்} அங்கேயே காத்திருந்தான். பிறகு அந்த விலங்கின் உடலுக்கு அடியில் இருந்து வெளிப்பட்ட பீமன், பெரும் வேகத்துடன் ஓடிச் சென்றான்.

“ஐயோ, அந்த யானையால் பீமன் கொல்லப்பட்டான்” என்று துருப்புகள் அனைத்தும் பேரொலியை உண்டாக்கின. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த யானையால் பீதியடைந்த பாண்டவப் படை விருகோதரன் எங்குக் காத்திருந்தானோ அங்கே திடீரென ஓடின. அதே வேளையில் பீமன் கொல்லப்பட்டான் என்று நினைத்த மன்னன் யுதிஷ்டிரன், பாஞ்சாலர்களின் உதவியுடன் பகதத்தனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டான். எண்ணற்ற தேர்களால் அவனைச் சூழ்ந்து கொண்டவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான மன்னன் யுதிஷ்டிரன், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கூரிய கணைகளால் பகதத்தனை மறைத்தான். பிறகு, மலையகப் பகுதிகளின் மன்னனான அந்தப் பகதத்தன், தன் இரும்பு அங்குசத்தால் அந்தக் கணைமாரியைத் தடுத்து, தன் யானையின் மூலம் பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் ஆகிய இருவரையும் எரிக்கத் தொடங்கினான்.

உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கிழவனான பகதத்தன் தன் யானையைக் கொண்டு அடைந்த அந்தச் சாதனை மிக அற்புதமானதாக நாங்கள் கண்டோம். பிறகு, மதப்பெருக்குடைய வேகமான யானையின் மீது வந்த தசார்ணர்களின் ஆட்சியாளன் {சுதர்மன்}, சுப்ரதீகத்தின் விலாவைத் தாக்குவதற்காகப் பிராக்ஜோதிஷ மன்னனை {பகதத்தனை} எதிர்த்து விரைந்தான். பயங்கர வடிவிலான அந்த இரு யானைகளுக்கும் இடையில் நடைபெற்ற போரானது பழங்காலத்தில் காடுகள் அடர்ந்த சிறகு படைத்த மலைகள் இரண்டுக்கு இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பானதாக இருந்தது. பகதத்தனின் யானையானது {சுப்ரதீகம்} சுழன்று விலகி, தசார்ணர்களின் மன்னனுடைய யானையைத் தாக்கி, பின்னதன் விலாவைப் பிளந்து அதைக் கொன்றது. அப்போது பகதத்தன் சூரியக் கதிர்களைப் போன்று பிரகாசமான ஏழு வேல்களை எடுத்து, யானையில் இருந்து விழப்போகின்ற தனது (மனித) எதிரியை {தசார்ண மன்னன் சுதர்மனைக்} கொன்றான்.

(பல கணைகளால்) மன்னன் பகதத்தனைத் துளைத்த யுதிஷ்டிரன், பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் அவனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டான். அந்தத் தேர்வீரர்கள் அனைவரும் தன்னைச் சூழத் தன் யானையில் இருந்த அவன் {பகதத்தன்}, அடர்ந்த காட்டுக்கு மத்தியில் மலை முகட்டில் உள்ள சுடர்மிகும் நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். தன் மீது கணைகளை மழையாகப் பொழிந்த கடும் வில்லாளிகளால் செலுத்தப்பட்ட அந்தத் தேர் அணிவகுப்பின் மத்தியில் அவன் {பகதத்தன்} அச்சமில்லாமல் நின்றான்.

பிறகு அந்தப் பிராக்ஜோதிஷ மன்னன் {பகதத்தன்}, (தன் கட்டைவிரலால்) தனது யானையை அழுத்தி, யுயுதானனுடைய {சாத்யகியின்} தேரை நோக்கி அதைத் தூண்டினான் [3]. அந்த மகத்தான யானை {சுப்ரதீகம்}, சினியின் பேரனுடைய {சாத்யகியின்} தேரைப் பற்றிப் பெரும் வேகத்துடன் தூரமாக வீசி எறிந்தது. எனினும், யுயுதானன் சரியான நேரத்தில் விலகித் தப்பினான். அவனது தேரோட்டியும், அந்தத் தேரில் பூட்டப்பட்டிருந்த சிந்து இனத்தைச் சேர்ந்த பெரிய குதிரைகளைக் கைவிட்டுச் சாத்யகியை விரைவாகப் பின்தொடர்ந்து, பின்னவன் {சாத்யகி} எங்கு நின்றானோ அங்கேயே நின்றான்.

அதே வேளையில் அந்த யானை அந்தத் தேர்களின் வளையத்திற்குள் இருந்து வெளியே வந்து (தன் வழியைத் தடுக்க முயன்ற) மன்னர்கள் அனைவரையும் கீழே வீசத் தொடங்கியது. அதிவேகமாகச் செல்லும் அந்த யானையினால் அச்சமடைந்த அந்த மனிதர்களில் காளையர், போர்க்களத்தில் அந்த ஒரு யானையே பலவாகப் பெருகிவிட்டதாகக் கருதினர். உண்மையில், அந்தத் தனது யானையின் மீதிருந்த பகதத்தன், ஐராவதத்தின் மேலிருக்கும் தேவர்களின் தலைவன் {இந்திரன்} (பழங்காலத்தில்) தானவர்களை அடித்து வீழ்த்தியதைப் போலப் பாண்டவர்களை {பாண்டவ வீரர்களை} அடித்து வீழ்த்தத் தொடங்கினான். பாஞ்சாலர்கள் அனைத்துத் திசைகளிலும் ஓடிய போது அவர்களாலும், அவர்களின் யானைகள் மற்றும் குதிரைகளாலும் எழுந்த பயங்கரமான ஒலி அச்சம் நிறைந்த பேரொலியாக இருந்தது.

அந்தப் பாண்டவத் துருப்புகள் இப்படிப் பகதத்தனால் அழிக்கப்பட்ட போது, சினத்தால் தூண்டப்பட்ட பீமன், பிராக்ஜோதிஷ ஆட்சியாளனை {பகதத்தனை} எதிர்த்து மீண்டும் விரைந்தான். பிறகு, பின்னவனின் {பகதத்தனின்} யானை {சுப்ரதீகம்}, முன்னேறி வரும் பீமனின் குதிரைகளைத் தன் துதிக்கையால் நீரைப் பீய்ச்சி நனைத்து அச்சுறுத்தியது. அதன்பேரில் அந்த விலங்குகள் {குதிரைகள்} பீமனைக் களத்தைவிட்டு வெளியே சுமந்து சென்றன.

பிறகு, கிருதியின் மகனான ருசிபர்வன் {?}, தன் தேரில் ஏறி, கணைமழையை இறைத்தபடி காலனைப் போல முன்னேறி பகதத்தனை எதிர்த்து வேகமாக விரைந்தான். அப்போது மலைப்பகுதிகளின் ஆட்சியாளனும், அழகிய அங்கங்களைக் கொண்டவனுமான அந்தப் பகதத்தன், நேரான கணையொன்றால் ருசிபர்வனை யமனுலகிற்கு அனுப்பினான். வீரனான ருசிபர்வன் வீழ்ந்த பிறகு, சுபத்ரையின் மகன் {அபிமன்யு}, திரௌபதியின் மகன்கள், சேகிதானான், திருஷ்டகேது, யுயுத்சு ஆகியோர் அந்த யானையை {சுப்ரதீகத்தைப்} பீடிக்கத் தொடங்கினர்.

அந்த யானையைக் கொல்ல விரும்பிய அந்த வீரர்கள் அனைவரும், பேரொலியை எழுப்பிக் கொண்டு, மேகங்கள் மழையைப் பொழிந்து பூமியை நனைப்பதைப் போலத் தங்கள் கணை மழையை அந்த விலங்கின் {யானையின்} மீது பொழிந்தனர். திறமைமிக்கப் பாகனான பகதத்தனால் குதிகாலாலும், மாவெட்டியாலும் {அங்குசத்தாலும்}, கால்கட்டைவிரலாலும் தூண்டப்பட்ட அந்த விலங்கு {யானை} தன் துதிக்கையை நீட்டிக் கொண்டு நிலைத்த {அசைவற்றிருக்கும்} காதுகளோடும், கண்களோடும் விரைவாக ஓடியது.

யுயுத்சுவின் குதிரைகளை மிதித்துக் கீழே தள்ளிய அந்த விலங்கு {யானை சுப்தரதீகம்} {அவனது} தேரோட்டியையும் கொன்றது. அதன்பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யுயுத்சு தன் தேரைக் கைவிட்டு விரைவாகத் தப்பி ஓடினான். பிறகு அந்த யானைகளின் இளவரசனை {சுப்ரதீகத்தைக்} கொல்ல விரும்பிய பாண்டவ வீரர்கள் பேரொலியை எழுப்பிக் கொண்டு கணைகளின் மழையால் அதை விரைவாக மறைத்தனர். அந்த நேரத்தில் சினத்தால் தூண்டப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, சுபத்ரை மகனின் {அபிமன்யுவின்} தேரை எதிர்த்து விரைந்தான். அதேவேளையில், தன் யானையில் இருந்த மன்னன் பகதத்தன் எதிரி மீது கணைகளை ஏவி கொண்டு, பூமியை நோக்கித் தன் கதிர்களை இறைக்கும் சூரியைனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.

பிறகு அர்ஜுனன் மகன் {அபிமன்யு} பனிரெண்டு கணைகளாலும், யுயுத்சு பத்தாலும், திரௌபதியின் மகன்கள் ஒவ்வொருவரும் மூன்று {மூன்று மூன்று} கணைகளாலும் அவனை {பகதத்தனைத்} துளைத்தனர், திருஷ்டகேது மூன்று கணைகளால் அவனைத் துளைத்தான் [4]. பெரும் கவனத்துடன் ஏவப்பட்ட அந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட அந்த யானை, சூரியக் கதிர்களால் ஊடுருவப்பட்ட பெரும் மேகத் திரளைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது. எதிரியின் அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்ட அந்த யானை {சுப்ரதீகம்}, அதன் பாகனால் {பகதத்தனால்} திறமையுடனும், வீரத்துடனும் தூண்டப்பட்டு, தன் விலாக்களின் பக்கம் உள்ள பகை வீரர்களை வீசத் தொடங்கியது.காட்டில் தன் மந்தையைத் தடியால் ஓட்டும் மாட்டிடையனைப் போல, பகதத்தன் மீண்டும் மீண்டும் பாண்டவப் படையைத் தாக்கினான். பருந்துகளால் தாக்கப்பட்டுக் கரைந்து கொண்டே விரைவாகப் பின்வாங்கும் காக்கைகளைப் போல, பெரும் வேகத்தோடு ஓடிக் கொண்டிருந்த பாண்டவத்துருப்புகளுக்கு மத்தியில் குழப்பமான உரத்த ஒலி கேட்கப்பட்டது. தன் பாகனின் {பகதத்தனின்} அங்குசத்தால் தாக்கப்பட்ட அந்த யானைகளின் இளவரசன் {சுப்ரதீகம்}, முற்காலத்தில் இருந்த சிறகுகள் படைத்த மலைக்கு ஒப்பானதாக இருந்தது. கொந்தளிக்கும் பெருங்கடலைக் கண்டு அஞ்சும் வணிகர்களைப் போல, அப்போது அது {அந்த யானை} எதிரியின் இதயங்களை அச்சத்தால் நிரப்பியது.

அச்சத்தால் ஓடிக்கொண்டிருந்த யானைகள், தேர்வீரர்கள், குதிரைகள் ஆகியோர் அப்படி ஓடிக் கொண்டிருந்தபோதே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவை ஏற்படுத்திய பயங்கரமான ஆரவாரம், அந்தப் போரில், பூமி, வானம், சொர்க்கம், திசைகள் மற்றும் துணைத்திசைகள் ஆகியவற்றை நிறைத்தது. யானைகளில் முதன்மையான அந்த யானையில் அமர்ந்திருந்த மன்னன் பகதத்தன், தேவர்களால் நன்கு பாதுகாக்கப்பட்ட போரில், தேவர்களின் படைக்குள் பழங்காலத்தில் ஊடுருவிய அசுரன் விரோசனனைப் போலப் பகைவர்களின் படைக்குள் ஊடுருவினான். பயங்கரக் காற்று வீசத் தொடங்கியது; புழுதி மேகம் வானத்தையும் துருப்புகளையும் மறைத்தன; களமெங்கும் திரிந்த அந்தத் தனி யானைப் பலவாகப் பெருகிவிட்டதாக மக்கள் கருதினர்” {என்றான் சஞ்சயன்}.

பார்த்தனின் செயலை வியந்த மாதவன்! – துரோண பர்வம் பகுதி – 025-பகதத்தனைக் கொல்வதாக உறுதியேற்று அவனிடம் விரைந்த அர்ஜுனனை சம்சப்தகர்கள் போருக்கு அழைப்பது; பகதத்தனை விட்டுச் சம்சப்தகர்களிடம் திரும்பிய அர்ஜுனன்; போரில் தாக்கப்பட்டு மயக்கமடைந்த கிருஷ்ணன்; பிரம்மாஸ்திரத்தை ஏவிய அர்ஜுனன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; அர்ஜுனனின் செயலை எண்ணி வியந்த கிருஷ்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் அர்ஜுனனின் அருஞ்செயல்களைக் குறித்து நீர் என்னைக் கேட்டீர். ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே} போரில் பார்த்தன் {அர்ஜுனன்} எதை அடைந்தான் என்பதைக் கேளும். களத்தில் பகதத்தன் பெரும் சாதனைகளைச் செய்த போது, துருப்புகளுக்கிடையில் ஏற்பட்ட அலறலைக் கேட்டும், எழுந்த புழுதியைக் கண்டும், குந்தியின்மகன் {அர்ஜுனன்} கிருஷ்ணனிடம், “ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} தன் யானையில் பெரும் வேகத்தோடு போருக்கு முன்னேறுவதாகத் தெரிகிறது. நாம் கேட்கும் இந்த உரத்த ஆரவாரம் அவனால் {பகதத்தனால்} ஏற்பட்டதாகவே இருக்க வேண்டும். யானையின் முதுகில் இருந்து போரிட்டு {பகையணியைக்} கலங்கடிக்கும் கலையை நன்கறிந்தவனும், போரில் இந்திரனுக்குச் சற்றும் குறையாதவனுமான அவன் {பகதத்தன்} உலகில் உள்ள யானை வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவன் என நான் நினைக்கிறேன்.

மேலும் அவனது யானையும் {சுப்ரதீகமும்} போரில் மோதுவதற்கு எதிரியற்ற முதன்மையான யானையாகும். பெரும் திறமை கொண்டதும், களைப்பனைத்துக்கும் மேலானதுமான அது {அந்த யானை}, ஆயுதங்கள் எதையும் பொருட்படுத்தாது. ஓ! பாவமற்றவனே {கிருஷ்ணனா}, அனைத்து ஆயுதங்களையும் தாங்க வல்லதும், நெருப்பின் தீண்டலைக் கொண்டதுமான அஃது {அந்த யானை} ஒன்றே தனியாக இன்று பாண்டவப் படையை அழித்துவிடும். நம்மிருவரைத் தவிர அந்த உயிரினத்தைத் தடுக்கவல்லவர் வேறு யாருமில்லை. எனவே, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} இருக்கும் இடத்திற்கு விரைவாகச் செல்வாயாக. தன் யானையுடைய பலத்தின் விளைவால் போரில் செருக்குடையவனும், தன் வயதின் விளைவால் ஆணவம் கொண்டவனுமான அவனை {பகதத்தனை} பலனைக் {பலாசுரனைக்} கொன்றவனிடம் {இந்திரனிடம்} விருந்தினனாக இன்றே அனுப்புவேன்” என்றான் {அர்ஜுனன்}.

அர்ஜுனனின் இந்த வார்த்தைகளால் கிருஷ்ணன், பாண்டவப் படையணிகளைப் பிளந்து கொண்டிருக்கும் பகதத்தன் இருக்கும் இடத்திற்கு முன்னேறத் தொடங்கினான். அர்ஜுனன், பகதத்தனை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, பதினாலாயிரம் {14000} எண்ணிக்கையிலான வலிமைமிக்கச் சம்சப்தகத் தேர்வீரர்களும், வாசுதேவனை {கிருஷ்ணனை} வழக்கமாகப் பின்தொடரும் பத்தாயிரம் கோபாலர்கள் அல்லது நாராயணர்களும், களத்ததிற்குத் திரும்பி அவனைப் போருக்கு அழைத்தனர் [1].

{ஒருபுறம்} பகதத்தனால் பிளக்கப்படும் பாண்டவப் படையைக் கண்டும், மறுபுறம் சம்சப்தகர்களால் அழைக்கப்பட்டும், அர்ஜுனனின் இதயம் இரண்டாகப் பிரிந்தது. அவன் {அர்ஜுனன்}, “சம்சப்தகர்களுடன் போரிட இந்த இடத்திற்குத் திரும்புவது, அல்லது யுதிஷ்டிரரிடம் செல்வது ஆகிய இந்த இரண்டு செயல்களில் இன்று எது எனக்குச் சிறந்தது?” என்று எண்ணத் தொடங்கினான். தன் புரிதலின் துணை கொண்டு சிந்தித்த அவனது {அர்ஜுனனின்} இதயம் இறுதியாக, ஓ! குரு குலத்தைத் தழைக்க வைப்பவரே {திருதராஷ்டிரரே}, சம்சப்தகர்களைக் கொல்வதில் உறுதியாக நிலைத்தது.

குரங்குகளில் முதன்மையானதைத் தன் கொடியில் கொண்ட அந்த இந்திரனின் மகன் (அர்ஜுனன்), தனியாகப் போரில் ஆயிரக்கணக்கான தேர்வீரர்களைக் கொல்ல விரும்பித் திடீரெனத் திரும்பினான். அர்ஜுனனைக் கொல்ல துரியோதனன், கர்ணன் ஆகிய இருவரும் நினைத்ததும் இதுவே. இதற்காகவே அவர்கள் இந்த இரட்டை மோதலுக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தனர். பாண்டுவின் மகனும் தன் இதயத்தை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் அலைபாயவிட்டான், ஆனால், இறுதியில், போர்வீரர்களில் முதன்மையான சம்சப்தகர்களைக் கொல்லத் தீர்மானித்துத் தன் எதிரிகளின் நோக்கத்தைக் கலங்கடித்தான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்களான வலிமைமிக்கச் சம்சப்தகர்கள் ஆயிரக்கணக்கான நேரான கணைகளை அர்ஜுனன் மீது ஏவினர். அந்தக் கணைகளால் மறைக்கப்பட்ட குந்தியின் மகனான பார்த்தனோ {அர்ஜுனனோ}, ஜனார்த்தனன் என்று அழைக்கப்படும் கிருஷ்ணனோ, குதிரைகளோ, அந்தத் தேரோ காணப்படவில்லை {கண்ணுக்குப் புலப்படவில்லை}. அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} தன் புலன்களை இழந்து, பெரிதும் வியர்த்தான். அதன் பேரில் பிரம்மாயுதத்தை ஏவிய பார்த்தன் {அர்ஜுனன்}, கிட்டத்தட்ட அவர்கள் அனைவரையும் அழித்தான்.

வில்லின் நாண்கயிறுகளைப் பிடித்துக் கொண்டும், விற்களையும், கணைகளையும் கொண்ட நூற்றுக்கணக்கான கரங்களும், நூறு நூறான கொடிமரங்களும், குதிரைகளும் கீழே தரையில் விழுந்தன, மேலும், தேரோட்டிகளும், தேர்வீரர்களும் விழுந்தனர். காடுகள் அடர்ந்து வளர்ந்த முதன்மையான மலைகளுக்கும், மேகத் திரள்களுக்கும் ஒப்பானவையும், நன்றாகப் பழக்கப்பட்டவையுமான பெரும் யானைகள் பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டும், தங்கள் பாகன்களை இழந்தும் பூமியில் விழுந்தன. பாகர்களைத் தங்கள் முதுகுகளில் கொண்ட பல யானைகள், அர்ஜுனனின் கணைகளால் நசுக்கப்பட்டு, தங்கள் முதுகில் உள்ள சித்திரவேலைப்பாடுகளைக் கொண்ட துணிகள் வெட்டப்பட்டு, தங்கள் அம்பாரிகள் உடைக்கப்பட்டு உயிரை இழந்து கீழே விழுந்தன.

கிரீடியின் {அர்ஜுனனின்} பல்லங்களால் வெட்டப்பட்ட மனிதர்களுடைய கரங்கள், வாள்கள், வேல்கள், கத்திகள், நகங்கள், முத்கரம், போர்க்கோடரி ஆகியவற்றைப் பிடித்த நிலையிலேயே கீழே விழுந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காலைச்சூரியனைப் போன்றோ, தாமரையைப் போன்றோ, சந்திரனைப் போன்றோ இருந்த அழகிய தலைகள் அர்ஜுனனின் கணைகளால் வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தன. சினத்தில் இப்படிப் பல்வேறு வகைகளிலான மரணக் கணைகளால் எதிரியைக் கொல்வதில் பல்குனன் {அர்ஜுனன்} ஈடுபட்டபோது, அந்தப் படை எரிவது போலத் தெரிந்தது. தண்டுகளுடன் கூடிய தாமரைகளை நசுக்கும் யானையைப் போல அந்தப் படையை நசுக்கும் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்ட அனைத்து உயிரினங்களும், “நன்று, நன்று” என்று சொல்லி அவனை மெச்சின.

வாசவனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான பார்த்தனின் அந்தச் சாதனையைக் கண்ட மாதவன் {கிருஷ்ணன்} மிகவும் ஆச்சரியமடைந்து, கூப்பிய கரங்களுடன் அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ அடைந்திருக்கும் சாதனையைச் சக்ரனாலோ {இந்திரனாலோ}, யமனாலோ, பொக்கிஷங்களின் தலைவனாலோ {குபேரனாலோ} செய்ய முடியாது என்றே நான் நினைக்கிறேன். இன்று வலிமைமிக்கச் சம்சப்தக வீரர்கள் அனைவரையும் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வீழ்த்தியதை நான் கண்டேன்” என்றான் {கிருஷ்ணன்}.

பார்த்தன் {அர்ஜுனன்}, போரில் ஈடுபட்ட சம்சப்தகர்களைக் கொன்ற பிறகு, கிருஷ்ணனிடம், “பகதத்தனிடம் செல்வாயாக” என்றான்” {என்றான் சஞ்சயன்}.

வாய்ப்பைப் பயன்படுத்தாத அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 026-அர்ஜுனனைச் சவாலுக்கழைத்த சுசர்மன்; சுசர்மனின் தம்பிகளைக் கொன்ற அர்ஜுனன்; சுசர்மனை மயக்கமடையச் செய்து கௌரவர்களை நோக்கி முன்னேறிய அர்ஜுனன்; பகதத்தன் அர்ஜுனன் மோதல்; தேரைத் திருப்பி சுப்ரதீகத்தைக் கொல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கிருஷ்ணன்; நியாயமான போரைக் கருதி அந்த வாய்ப்பைப் பயன்படுத்தாத அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பார்த்தனின் {அர்ஜுனனின்} விருப்பத்தின் பேரில் கிருஷ்ணன், தங்கக் கவசத்தால் மறைக்கப்பட்டவையும், மனோவேகம் கொண்டவையுமான அவனது வெண்குதிரைகளைத் துரோணரின் படைப்பிரிவுகளை நோக்கித் தூண்டினான். இப்படி அந்தக் குருக்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, துரோணரால் அதீதமாகப் பீடிகப்பட்ட தன் சகோதரர்களை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, {அர்ஜுனனோடு} போரிட விரும்பிய சுசர்மன் தன் தம்பிகளோடு அவனைப் பின்தொடர்ந்தான்.

பிறகு எப்போதும் வெல்பவனான அர்ஜுனன், கிருஷ்ணனிடம், “ஓ! மங்காத மகிமை கொண்டவனே {அச்யுதா, கிருஷ்ணா}, இங்கே தன் தம்பிகளோடு கூடிய சுசர்மன் போருக்குச் சவால் விடுக்கிறான். ஓ! எதிரிகளைக் கொல்பவனே {கிருஷ்ணா}, வடக்கில் நமது படை (துரோணரால்) பிளக்கப்படுகிறது. நான் இதைச் செய்ய வேண்டுமா, அதைச் செய்ய வேண்டுமா என இந்தச் சம்சப்தகர்களின் விளைவால் இன்று என் இதயம் அலைபாய்கிறது. நான் இப்போது சம்சப்தகர்களைக் கொல்வேனா? அல்லது ஏற்கனவே எதிரிகளால் பீடிக்கப்படும் என் துருப்புகளைத் தீங்கிலிருந்து காப்பேனா? நான், ’இவற்றில் எது எனக்குச் சிறந்தது?’ என்றே நினைக்கிறேன் என அறிவாயாக” என்றான் {அர்ஜுனன்}.

இப்படி அவனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, தேரைத் திருப்பிக் கொண்டு, அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்} இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். அப்போது அர்ஜுனன் ஏழு கணைகளால் சுசர்மனைத் துளைத்து, மேலும் இரண்டு கூரிய கணைகளால் அவனது வில்லையும், கொடிமரத்தையும் அறுத்தான். பிறகு அவன் {அர்ஜுனன்}, ஆறு கணைகளைக் கொண்டு திரிகர்த்த மன்னனின் {சுசர்மனின்} தம்பிகளை விரைவாக யமலோகம் அனுப்பிவைத்தான் [1].

பிறகு சுசர்மன், அர்ஜுனனைக் குறிபார்த்து முழுக்க இரும்பாலானதும், பாம்பு போலத் தெரிந்ததுமான ஈட்டி ஒன்றை அவன் {அர்ஜுனன்} மீது எறிந்தான், வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} குறி பார்த்து, அவன் மீது வேல் ஒன்றை எறிந்தான். மூன்று கணைகளால் அந்த ஈட்டியையும், மேலும் மூன்று கணைகளால் அந்த வேலையும் அறுத்த அர்ஜுனன், தன் கணைகளின் மாரியால் இருந்த சுசர்மனை, அவனைத் தேரிலேயே புலன்களை இழக்கச் செய்தான்.

பிறகு, மழையைப் பொழியும் வாசவனை {இந்திரனைப்} போலக் கணைகளின் மாரியை இறைத்தபடி (உமது படைப்பிரிவை நோக்கி) மூர்க்கமாக அவன் {அர்ஜுனன்} முன்னேறியபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளில் எவரும் எதிர்க்கத் துணியவில்லை. முன்னேறிச் செல்லும்போதே வைக்கோல் குவியலை எரிக்கும் நெருப்பைப் போலத் தன் கணைகளால் கௌரவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் எரித்தபடி தனஞ்சயன் {அர்ஜுனன்} முன்னேறினான். உயிர்வாழும் உயிரினமொன்று நெருப்பின் தீண்டலைத் தாங்கிக் கொள்ள முடியாததைப் போல, புத்திசாலியான அந்தக் குந்தியின் மகனுடைய {அர்ஜுனனின்} தடுக்கப்பட முடியாத வேகத்தை உமது துருப்புகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

உண்மையில், அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் பகைவரின் படையை மூழ்கடித்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (தன் இரையின் மீது) பாயும் கருடனைப் போல, பிராக்ஜோதிஷர்களின் மன்னனிடம் {பகதத்தனிடம்} வந்தான். தன் முடிவை அடைவதற்கு வஞ்சகமான பகடையாட்டத்தின் உதவியை நாடிய உமது மகனின் {துரியோதனனின்} பிழைக்காகவும், க்ஷத்திரியர்களை அழிப்பதின் பொருட்டும், அவன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, {பாவமற்ற} அப்பாவிப் பாண்டவர்களுக்குப் போரில் நன்மையைச் செய்வதும், எதிரிகள் அனைவருக்கும் கேடுவிளைவிப்பதுமான காண்டீவத்தைத் தன் கைகளில் பிடித்தான்.

இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} கலங்கடிக்கப்பட்ட உமது படை, ஓ !மன்னா, பாறையின் மீது மோதிய படகைப் போலப் பிளந்தது. பிறகு, துணிச்சல்மிக்கவர்களும், வெற்றியைக் கைப்பற்றும் உறுதியான தீர்மானத்துடன் கூடியவர்களுமான பத்தாயிரம் {10000} வில்லாளிகள் (அர்ஜுனனுடன் மோதுவதற்காக) முன்னேறினர். அச்சமற்ற இதயங்களைக் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும் அவனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர். போரில் எவ்வளவு கனமான எந்தச் சுமையையும் தாங்க வல்ல பார்த்தன் {அர்ஜுனன்} அந்தக் கனமான சுமையை அடைந்தான். மதங்கொண்ட அறுபது வயது கோபக்கார யானை ஒன்று தாமரைக்கூட்டங்களை நசுக்குவதைப் போலவே, பார்த்தனும் {அர்ஜுனனும்} அந்த உமது படைப்பிரிவை நசுக்கினான்.

அந்தப் படைப்பிரிவு இப்படி நசுக்கப்பட்டபோது, மன்னன் பகதத்தன், அதே யானையில் {சுப்ரதீகத்தில்} அர்ஜுனனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான். அதன் பேரில் மனிதர்களில் புலியான தனஞ்சயன் {அர்ஜுனன்} தன் தேரில் இருந்த படியே பகதத்தனை வரவேற்றான். அர்ஜுனன் தேருக்கும், பகதத்தன் யானைக்கும் இடையில் நடந்த மோதலானது அதீத கடுமையும் தீவிரமும் கொண்டதாக இருந்தது. அறிவியல் விதிகளின்படி {சாத்திர விதிப்படி} தயாரிக்கப்பட்ட தன் தேரில் ஒருவனும், தன் யானையில் மற்றவனும் என, வீரர்களான பகதத்தன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் களத்தில் திரிந்தனர்.

அப்போது பகதத்தன், மேகத்திரள்களைப் போலத் தெரிந்த தன் யானையில் இருந்து கொண்டு, தலைவன் இந்திரனைப் போலத் தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது கணை மாரியைப் பொழிந்தான். எனினும் வாசவனின் {இந்திரனின்} வீரமகன் {அர்ஜுனன்}, பகதத்தனின் அந்தக் கணை மாரி தன்னை அடையும் முன்பே அவற்றைத் தன் கணைகளால் வெட்டினான். பிறகு பிராக்ஜோதிஷர்களின் மன்னன் {பகதத்தன்} அர்ஜுனனின் கணைமாரியைக் கலங்கடித்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரையும் கணைகள் பலவற்றால் தாக்கினான். கணைகளின் அடர்த்தியான மழையால் அவர்கள் இருவரையும் மூழ்கடித்த பகதத்தன், கிருஷ்ணனையும் பார்த்தனையும் {அர்ஜுனனையும்} அழிப்பதற்காகத் தன் யானையைத் தூண்டினான்.

அந்தகனைப் போல முன்னேறி வரும் அந்தக் கோபக்கார யானையைக் கண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அந்த யானை தன் இடப்பக்கத்தில் இருக்குமாறு தன் தேரை விரைவாக நகர்த்தினான். தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு}, அந்தப் பெரும் யானையை, அதன் முதுகில் உள்ள பாகனோடு {பகதத்தனோடு} சேர்த்துக் கொல்ல இப்படிப்பட்ட வாய்ப்புக் கிடைத்தாலும், நியாயமான {நல்ல} போரின் விதிகளை நினைவுகூர்ந்த அவன் {அர்ஜுனன்}, அதை {அந்த வாய்ப்பைப்} பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை [2]. எனினும், அந்த யானை {சுப்ரதீகம்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிற யானைகளையும், தேர்களையும், குதிரைகளையும் அடைந்து, அவையனைத்தையும் யமலோகத்திற்கு அனுப்பியது. இதைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} சினத்தால் நிறைந்தான்” {என்றான் சஞ்சயன்}.

கொல்லப்பட்டான் பகதத்தன்! – துரோண பர்வம் பகுதி – 027-கிருஷ்ணனைத் தாக்கிய பகதத்தன்; சுப்ரதீகத்தின் கவசத்தைப் பிளந்த அர்ஜுனன்; வைஷ்ணவாஸ்திரத்தை ஏவிய பகதத்தன்; அர்ஜுனனை மறைத்து வைஷ்ணவாஸ்திரத்தை மார்பில் தாங்கிய கிருஷ்ணன்; அந்த ஆயுதம் பகதத்தனுக்குக் கிடைத்த வரலாற்றைச் சொன்ன கிருஷ்ணன்; சுப்ரதீகத்தைக் கொன்ற அர்ஜுனன்; பகதத்தனைக் கொன்ற அர்ஜுனன்.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சினத்தால் தூண்டப்பட்ட பாண்டுவின் மகன் பார்த்தன் {அர்ஜுனன்}, பகதத்தனை என்ன செய்தான்? அதே போல, பிராக்ஜோதிஷர்களின் மன்னனும் {பகதத்தனும்} பார்த்தனை என்ன செய்தான்? ஓ! சஞ்சயா, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பார்த்தனும் {அர்ஜுனனும்}, கிருஷ்ணனும் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளனிடம் இப்படிப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவர்கள் காலனின் கோரப் பற்களுக்கிடையே இருப்பதாகவே உயிரினங்கள் அனைத்தும் கருதின. உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் யானையின் கழுத்தில் இருந்த பகதத்தன், தங்கள் தேரில் இருந்த கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} இருவர் மீதும் கணைகளின் மாரியை இறைத்தான்.

கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், முழுவதும் இரும்பாலானவையும், முழுவதும் வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான கணைகள் பலவற்றால் அவன் {பகதத்தன்}, தேவகியின் மைந்தனை {கிருஷ்ணனைத்} துளைத்தான். நெருப்பின் தீண்டலைக் கொண்டவையும், அழகிய இறகுகளால் அலங்கரிக்கப்பட்டவையும், பகதத்தனால் ஏவப்பட்டவையுமான அந்தக் கணைகள் தேவகியின் மகனை {கிருஷ்ணனை} ஊடுருவி பூமிக்குள் நுழைந்தன.

அப்போது, பார்த்தன் {அர்ஜுனன்}, அந்தப் பகதத்தனின் வில்லை அறுத்து, அடுத்ததாக அவனது யானையைப் பக்கத்தில் இருந்து {விலாப்புறத்தில்} பாதுகாத்த வீரனையும் கொன்று, ஏதோ விளையாடிக் கொண்டிருப்பவனைப் போல அவனோடு {பகதத்தனோடு} போரிட்டான். பிறகு பகதத்தன், சூரியக் கதிர்களைப் போன்று பிரகாசித்தவையும், கூர்முனை கொண்டவையுமான பதினான்கு வேல்களை அவன் {அர்ஜுனன்} மீது ஏவினான். எனினும், அர்ஜுனன் அந்த வேல்கள் ஒவ்வொன்றையும் மூன்று {மூன்று மூன்று} துண்டுகளாக வெட்டிப் போட்டான்.

பிறகு அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, அடர்த்தியான கணைமாரியின் மூலம் அந்த யானையின் கவசத்தைப் பிளந்து தளர்த்தினான். இப்படி வெட்டப்பட்ட அந்தக் கவசம் கீழே பூமியில் விழுந்தது. கவசம் பிளக்கப்பட்ட அந்த யானை {சுப்ரதீகம்}, அர்ஜுனன் ஏவிய கணைகளால் அதீதமாகப் பீடிக்கப்பட்டு, மார்பில் பாயும் நீர்க்கோடுகளுடன், மேகங்கள் எனும் ஆடையை இழந்த மலைகளின் இளவரசனைப் போலத் தெரிந்தது [1].

பிறகு பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும் முழுதும் இரும்பாலானதுமான ஈட்டி ஒன்றை வாசுதேவன் மீது ஏவினான். அந்த ஈட்டியை அர்ஜுனன் இரண்டாக வெட்டினான். பிறகு அந்த மன்னனின் {பகதத்தனின்} கொடிமரத்தையும், குடையையும் தன் கணைகளால் அறுத்த அர்ஜுனன், சிரித்துக் கொண்டே விரைவாக அந்த மலைப்பகுதிகளின் ஆட்சியாளனை {[பர்வதேசுவரன்] பகதத்தனைப்} பத்து கணைகளால் துளைத்தான். கங்கப்பறவையின் இறகுகளாலான அழகிய சிறகுகளைக் கொண்ட அர்ஜுனனின் அந்தக் கணைகளால் ஆழத்துளைக்கப்பட்ட பகதத்தன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} அதிகக் கோபம் கொண்டான்.

பிறகு அவன் {பகதத்தன்}, அர்ஜுனன் மீது சில வேல்களை ஏவிவிட்டு உரக்கக் கர்ஜித்தான். அந்த வேல்களின் விளைவால் அர்ஜுனனின் கிரீடம் {பின்புறமாகத்} திருப்பப்பட்டது. தன் கிரீடத்தைச் சரியாகப் பொருத்திய அர்ஜுனன், அந்தப் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளனிடம் {பகதத்தனிடம்}, “இந்த உலகத்தை நன்றாகப் பார்த்துக் கொள்” என்றான். அவனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட பகதத்தன் சினத்தால் நிறைந்து, பிரகாசமான வில்லொன்றை எடுத்து, அந்தப் பாண்டவன் {அர்ஜுனன்} மற்றும் கோவிந்தன் {கிருஷ்ணன்} ஆகிய இருவர் மீதும் தன் கணைமாரியைப் பொழிந்தான்.

பிறகு அவனது {பகதத்தனின்} வில்லையும், அம்பறாத்தூணிகளையும் வெட்டிய பார்த்தன் {அர்ஜுனன்}, எழுபத்திரண்டு கணைகளால் விரைவாக அவனைத் தாக்கி, {அவற்றால்} அவனது முக்கிய அங்கங்களைப் பீடிக்கச் செய்தான். இப்படித் துளைக்கப்பட்ட அவன் {பகதத்தன்} அதீதமான வலியை உணர்ந்தான். சினத்தால் நிறைந்த அவன் {பகதத்தன்}, தன் அங்குசத்தை மந்திரங்களால் வைஷ்ணவ ஆயுதமாக மாற்றி, அதை அர்ஜுனன் மார்பின் மீது ஏவினான் [2]. கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனை மறைத்துக் கொண்டு, பகதத்தனால் ஏவப்பட்ட அந்த அனைத்தையும் கொல்லும் ஆயுதத்தை {வைஷ்ணவாஸ்திரத்தைத்} தன் மார்பிலே ஏற்றான். அதன் பேரில் அந்த ஆயுதமானது கேசவனின் {கிருஷ்ணனின்} மார்பில் வெற்றி மாலையாக விழுந்தது.பிறகு உற்சாகமற்ற அர்ஜுனன், கேசவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! பாவமற்றவனே, ஓ! தாமரைக்கண்ணா {கிருஷ்ணா}, போரிடாமல் என் குதிரைகளை மட்டுமே வழிநடத்தப் போவதாக நீ சொல்லியிருக்கிறாய். பிறகு, ஏன் நீ உன் வாக்குறுதியை மீறுகிறாய்? நான் துயரத்தில் மூழ்கினாலோ, கலங்கடிக்க முடியாதவனானாலோ, எதிரியைத் தடுக்கவோ, ஆயுதத்தைத் தடுக்கவோ முடியாதவனானாலோ, நீ அவ்வாறு செயல்படலாமே அன்றி நான் இப்படி நிற்கும்போதல்ல. வில்லுடனும், கணைகளுடனும் இருக்கும் நான், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் ஆகியவர்களுடன் கூடிய இந்த உலகங்களையே வெல்லத்தகுந்தவன் என்பதை நீ அறிவாயே” என்றான் {அர்ஜுனன்}.

அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! பார்த்தா, ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, இரகசியமும், பழைய வரலாறுமான இதை உள்ளபடியே கேட்பாயாக. உலகங்களைப் பாதுகாப்பதில் நித்தியமாக ஈடுபடும் எனக்கு நான்கு வடிவங்கள் இருக்கின்றன. என்னையே பிரித்துக் கொண்டு நான் உலகங்களுக்கு நன்மையைச் செய்கிறேன். பூமியில் தங்கி தவத்துறவுப் பயிற்சிகளில் ஈடுபடுவது எனது வடிவத்தில் {மூர்த்திகளில்} ஒன்றாகும் [3]. உலகத்தில் ஏற்படும் நல்ல மற்றும் தீயச் செயல்களை {சாட்சியாக இருந்து} காண்பது {காணும் வடிவம்} மற்றொன்றாகும். மனிதர்களில் உலகத்திற்கு வந்து செயலில் ஈடுபடுவது எனது மூன்றாவது வடிவமாகும் [4]. எனது நான்காவது வடிவம் ஆயிரம் வருடங்கள் உறங்கிக் கிடப்பதாகும் [5]. ஆயிர வருட முடிவில் உறக்கத்தில் இருந்து விழிக்கும் எனது வடிவம், அப்படி விழித்த உடனேயே தகுந்தோருக்கு சிறந்த வரங்களை அருள்கிறது.(ஒரு சமயத்தில்) காலம் வந்துவிட்டது என்பதை அறிந்த பூமாதேவி (அவளது மகன்) நரகனுக்காக என்னிடம் வரமொன்றைக் கேட்டாள். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அந்த வரம் யாது என்பதைக் கேட்பாயாக. “வைஷ்ணவ ஆயுதத்தை அடையும் எனது மகன் {நரகன்} தேவர்களாலும், அசுரர்களாலும் கொல்லத்தகாதவன் ஆக வேண்டும். அந்த ஆயுதத்தை எனக்கு அருள்வதே உமக்குத் தகும்” என்று கேட்டாள். பழங்காலத்தில் அவளது வேண்டுதலைக் கேட்ட நானும், தலைமையானதும், தவறிழைக்காததுமான {தவறாததுமான} வைஷ்ணவாயுதத்தைப் பூமியின் மகனுக்கு {நரகனுக்குக்} கொடுத்தேன். அந்த நேரத்தில் நான் இவ்வார்த்தைகளையும் சொன்னேன், “ஓ! பூமியே {பூமாதேவியே}, நரகனைப் பாதுகாப்பதில் இந்த ஆயுதம் தவறாததாக இருக்கட்டும். அவனை யாராலும் கொல்ல இயலாது. இந்த ஆயுதத்தால் பாதுகாக்கப்படும் உனது மகன் {நரகன்}, அனைத்து உலகங்களிலும் வெல்லப்பட முடியாதவனாக எப்போதும் இருந்து கொண்டு, எதிரிப்படைகள் அனைத்தையும் நசுக்குவான்” {என்றேன்}. தன் விருப்பம் ஈடேறிய அந்தப் புத்திசாலி தேவியும் {பூமாதேவியும்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லிச் சென்றுவிட்டாள். நரகனும் வெல்லப்படமுடியாதவனாக, எப்போதும் தன் எதிரிகளை எரித்தான் [6].

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அந்த நரகனிடம் இருந்தே இந்த எனது ஆயுதத்தைப் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} அடைந்திருக்கிறான். ஓ! ஐயா {அர்ஜுனா}, இந்திரன், ருத்ரன் ஆகியோரையும் சேர்த்து இவ்வுலகில் இந்த ஆயுதத்தால் கொல்லத்தகாதவர் எவரும் இல்லை. எனவே, உனக்காகவே நான் என் வாக்குறுதியை மீறி அதைக் {வைஷ்ணவாஸ்திரத்தைக்} கலங்கடித்தேன். அந்தப் பெரும் அசுரன் {பகத்தன்} இப்போது அந்தத் தலைமையான ஆயுதத்தை இழந்திருக்கிறான். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, முன்பு, உலகங்களின் நன்மையைக் கருதி அசுரன் நரகனை நான் கொன்றது போலவே, தேவர்களுக்குப் பகைவனும், வெல்லப்பட முடியாத உனது எதிரியுமான பகதத்தனை இப்போது நீ கொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.

உயர் ஆன்ம கேசவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கூராக்கப்பட்ட கணைகளாலான மேகத்தில் திடீரெனப் பகதத்தனை மூழ்கடித்தான். பிறகு, வலிமைமிக்கக் கரங்களையும், உயர் ஆன்மாவையும் கொண்ட அர்ஜுனன், தன் எதிரியின் யானையுடைய முன்நெற்றிக் கும்பங்களுக்கு இடையில் நாராசமொன்றை அச்சமற்றவகையில் அடித்தான். மலையைப் பிளக்கும் இடியைப் போல யானையைப் பிளந்த அந்தக் கணை, எறும்புப் புற்றுக்குள் ஊடுருவும் பாம்பைப் போல அதன் உடலில் ஊடருவி விலாப்புறம் வரை சென்றது. பகதத்தனால் மீண்டும் மீண்டும் தூண்டப்பட்டாலும், ஓர் ஏழை மனிதனின் {தரித்திரனின்} மனைவியானவள், அவளது தலைவனுக்குக் கீழ்ப்படியாதது போலவே அந்த யானையும் கீழ்ப்படிய மறுத்தது. அங்கங்கள் செயலிழந்த அது {அந்த யானை}, தன் தந்தங்களால் பூமியை முட்டியபடி கீழே விழுந்தது. துன்பக்குரலில் அலறிய அந்தப் பெரும் யானை தன் ஆவியையும் விட்டது [7].

பிறகு, அந்தப் பாண்டுவின் மகன் பிறைவடிவத் தலைக் கொண்ட நேரான கணை {அர்த்தச்சந்திரக் கணை} ஒன்றால் மன்னன் பகதத்தனின் மார்பைத் துளைத்தான். கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்) தன் மார்பில் துளைக்கப்பட்ட மன்னன் பகதத்தன் உயிரை இழந்து தன் வில்லையும், கணைகளையும் நழுவவிட்டான். அவனுக்கு {பகதத்தனுக்குத்} தலைப்பாகையாக இருந்த மதிப்பு மிக்கத் துணியானது, தண்டைப் பலமாகத் தாக்கியதும், தாமரையில் இருந்து விழும் {தாமரை} இதழ் ஒன்றைப் போல அவனது தலையில் இருந்து தளர்ந்து விழுந்தது. பொன்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அவனும் {பகதத்தனும்}, மலர்ந்திருக்கும் கின்சுகமானது {பலாச மரமானது}, காற்றின் வேகத்தில் முறிந்து மலையின் உச்சியில் இருந்து விழுவதைப் போலத் தங்க அம்பாரிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் பெரும் யானையில் இருந்து கீழே விழுந்தான். ஆற்றலில் இந்திரனுக்கு ஒப்பானவனும், இந்திரனின் நண்பனுமான அந்த ஏகாதிபதியை {பகதத்தனைக்} கொன்ற இந்திரனின் மகன், வலிமைமிக்கக் காற்றானது வரிசையான மரங்களை முறிப்பதைப் போல வெற்றியடையும் நம்பிக்கையில் இருந்து உமது படையின் பிற வீரர்களையும் பிளந்தான்” {என்றான் சஞ்சயன்}.

சகுனியின் மாயைகளை அகற்றிய அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 028-பகதத்தனை வலம் வந்த அர்ஜுனன்; அர்ஜுனனைத் தாக்கிய சகுனியின் தம்பிகளான விருஷகனும், அசலனும்; விருஷகனையும் அசலனையும் கொன்ற அர்ஜுனன்; சகுனி செய்த மாயைகள்; மாயைகளை அழித்த அர்ஜுனன்; பின்வாங்கிய சகுனி; காந்தாரர்களை அழித்த அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பெரும் சக்தி கொண்டவனும், இந்திரனுக்கு எப்போதும் பிடித்தமானவனும், அவனது {இந்திரனின்} நண்பனுமான பகதத்தனைக் கொன்ற பிறகு, பார்த்தன் {அர்ஜுனன்} அவனை வலம் வந்தான். அப்போது, பகை நகரங்களை அடக்குபவர்களும், காந்தார மன்னனின் {சுபலனின்} மகன்களுமான விருஷகன் மற்றும் அசலன் ஆகிய சகோதரர்கள் இருவரும் போரில் அர்ஜுனனைப் பீடிக்கத் தொடங்கினர். அந்த வீர வில்லாளிகள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து, பெரும் வேகம் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கணைகளைக் கொண்டு அர்ஜுனனைப் பின்னாலிருந்தும் முன்னாலிருந்தும் ஆழமாகத் துளைக்க ஆரம்பித்தனர்.

அப்போது அர்ஜுனன், கூரிய கணைகளால் சுபலனின் மகனான விருஷகனின் குதிரைகள், தேரோட்டி, வில், குடை, கொடிமரம் மற்றும் தேர் ஆகியவற்றைத் துண்டுகளாக வெட்டினான். மேலும் அர்ஜுனன், கணைகளின் மேகத்தாலும், பல்வேறு ஆயுதங்கள் பிறவற்றாலும் சுபலனின் மகனுடைய {விருஷகனின்} தலைமையில் இருந்த காந்தாரத் துருப்புகளை மீண்டும் கடுமையாகப் பீடித்தான். பிறகு சினத்தால் நிறைந்த அர்ஜுனன், உயர்த்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட வீரக் காந்தாரர்கள் ஐநூறு {500} பேரைத் தன் கணைகளின் மூலம் யமலோகம் அனுப்பினான். அப்போது அந்த வலிமைமிக்க வீரன் {விருஷகன்}, குதிரைகள் கொல்லப்பட்ட {தன்} தேரில் இருந்து விரைவாகக் கீழிறங்கி, தன் சகோதரனின் {அசலனின்} தேரில் ஏறி மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.

பிறகு, சகோதரர்களான விருஷகன் மற்றும் அசலன் ஆகிய இருவரும் ஒரே தேரில் ஏறிக் கணைகளின் மழையால் பீபத்சுவை {அர்ஜுனனை} இடையறாமல் துளைக்கத் தொடங்கினர். திருமணப் பந்தத்தால் {உமது மனைவி காந்தாரியால்} உமக்கு உறவினர்களான விருஷகன் மற்றும் அசலன் ஆகிய அந்த உயர் ஆன்ம இளவரசர்கள், பழங்காலத்தில் விருத்திரனோ, பலனோ இந்திரனைத் தாக்கியது போல மிகக் கடுமையாகப் பார்த்தனை {அர்ஜுனனைத்} தாக்கினர். குறி தவறாத அந்தக் காந்தார இளவரசர்கள் இருவரும் காயமடையாமலேயே, வியர்வையை உண்டாக்கும் {சூரியக்} கதிர்களால் உலகைப் பீடிக்கும் கோடை காலத்தின் இரண்டு மாதங்களைப் போலப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} மீண்டும் தாக்கத் தொடங்கினர். அப்போது அர்ஜுனன், மனிதர்களில் புலிகளும், ஒரே தேரில் அருகருகில் இருந்தவர்களுமான விருஷகன் மற்றும் அசலன் ஆகிய அந்த இளவரசர்களை, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} ஒரே கணையால் கொன்றான். பிறகு, கண்கள் சிவந்தவர்களும், சிங்கத்தைப் போன்றவர்களும், வலிமைமிக்கக் கரங்களையும், ஒரே குணங்களையும் கொண்ட இரத்தச் சகோதரர்களுமான அந்த வீரர்கள் இருவரும், அந்தத் தேரில் இருந்து ஒன்றாகவே கீழே விழுந்தனர். நண்பர்களின் அன்புக்குரிய அவர்களது உடல்கள், கீழே பூமியின் மீது விழுந்து, சுற்றிலும் புனிதமான புகழைப் பரப்பியபடி அங்கே கிடந்தன. துணிச்சல்மிக்கவர்களும் புறமுதுகிடாதவர்களுமான தங்கள் தாய்மாமன்கள் இப்படி அர்ஜுனனால் கொல்லப்பட்டதைக் கண்ட உமது மகன்கள், ஓ! ஏகாதிபதி, அவன் {அர்ஜுனன்} மீது பல ஆயுதங்களை மழையாகப் பொழிந்தனர் [1].

பல்வேறு விதங்களிலான நூறு மாயைகளை அறிந்தவனான சகுனியும், தன் சகோதரர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு அந்த இரு கிருஷ்ணர்களையும் {இரு கருப்பர்களையும்} குழப்புவதற்காக மாயைகளை உண்டாக்கினான். அர்ஜுனன் மீது அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தடிகள், இரும்பு குண்டுகள் {பந்துகள்}, கற்கள், சதக்னிகள், ஈட்டிகள், கதாயுதங்கள், பரிகங்கள், நீண்ட கத்திகள், வேல்கள், முத்கரங்கள், கோடரிகள் {பட்டசங்கள்}, கம்பனங்கள், வாள்கள், ஆணிகள் {நகரங்கள்}, குறும் உலக்கைகள், போர்க்கோடரிகள், க்ஷுரங்கள் {கத்தி போன்றவை}, கூரிய பல்லங்கள் {க்ஷுரப்ரங்கள்}, நாளீகங்கள், வத்ஸதந்தங்கள், அஸ்திஸந்திகள் {எலும்பு போன்ற தலைகளைக் கண்ட கணைகள்}, சக்கரங்கள், பாம்புத் தலை கொண்ட கணைகள், பராசங்கள் ஆகியவையும் இன்னும் பல ஆயுதங்களும் விழுந்தன. கழுதைகள், ஒட்டகங்கள், எருமைக்கடாக்கள், புலிகள், சிங்கங்கள், மான்கள், சிறுத்தைகள், கரடிகள், ஓநாய்கள், கழுகுகள், குரங்குகள், பல்வேறு விதங்களிலான பாம்புகள், பலவிதமான ராட்சசர்கள், காக்கை கூட்டங்கள் ஆகியன அனைத்தும் பசியுடனும், சினத்தால் தூண்டப்பட்டும் அர்ஜுனனை நோக்கி ஓடின.

அப்போது, தெய்வீக ஆயுதங்களை அறிந்த வீரனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, கணை மேகங்களை ஏவி அவை அனைத்தையும் எதிர்த்தடித்தான். சிறந்த பலமான கணைகளின் மூலம் அந்த வீரனால் {அர்ஜுனனால்} எதிர்த்தடிக்கப்பட்ட அவர்கள் {காந்தாரர்கள்}, உரக்கக் கதறிய படியே உயிரிழந்து கீழே விழுந்தனர். பிறகு அடர்த்தியான இருள் தோன்றி அர்ஜுனனின் தேரை மறைத்தது, அந்த இருளுக்குள் இருந்து கடும் குரல்கள் அர்ஜுனனை நிந்தித்தன. எனினும், பின்னவன் {அர்ஜுனன்}, ஜியோதிஷ்கம் என்ற அழைக்கப்பட்ட ஆயுதங்களின் மூலம் அந்த அடர்த்தியான பயங்கரமான இருளை விலக்கினான். அந்த இருள் விலக்கப்பட்ட போது, பயங்கரமான நீரலைகள் தோன்றின. அந்த நீரை வற்ற செய்வதற்காக அர்ஜுனன் ஆதித்யம் என்றழைக்கப்பட்ட ஆயுதத்தைப் பயன்படுத்தினான். அந்த ஆயுதத்தின் விளைவாக அந்த நீர் அனைத்தும் கிட்டத்தட்ட வற்ற செய்யப்பட்டது. சுபலனால் {சகுனியால்} மீண்டும் மீண்டும் உண்டாக்கப்பட்ட பல்வேறு மாயைகளை அர்ஜுனன் சிரித்துக் கொண்டே தன் ஆயுதங்களின் பலத்தால் அழித்தான் [2]. அவனது {சகுனியின்} மாயைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு அர்ஜுனனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, அச்சங்கொண்ட சகுனி தன் வேகமான குதிரைகளின் உதவியோடு இழிந்த பாவியைப் போலத் தப்பி ஓடினான்.

அப்போது, ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்த அர்ஜுனன், தன் கரங்களின் அதீத நளினத்தை {லாகவத்தை} எதிரிகளுக்கு எடுத்துக் காட்டியபடி, அந்தக் கௌரவப் படையின் மீது அம்புகளின் மேகங்களைப் பொழிந்தான். இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட உமது மகனின் படை, மலையால் தடுக்கப்பட்ட கங்கையின் நீரூற்று இரண்டு ஓடைகளாகப் பிரிவதைப் போலப் பிரிந்தது. அந்த ஓடைகளில் ஒன்று, ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே} துரோணரை நோக்கிச் சென்றது, மற்றொன்றோ உரத்த கதறலுடன் துரியோதனனை நோக்கிச் சென்றது. அப்போது அடர்த்தியாக எழுந்த புழுதியானது துருப்புகள் அனைத்தையும் மறைத்தது. எங்களால் அர்ஜுனனைக் காண முடியவில்லை. காண்டீவத்தின் நாணொலி மட்டுமே களத்திற்கு வெளியே {வடக்குப் பகுதியில்} எங்களால் கேட்கப்பட்டது. உண்மையில், அந்தக் காண்டீவ நாணொலியானது, சங்கொலிகள், பேரிகைகளின் ஒலிகள் மற்றும் பிற கருவிகளின் ஒலிகள் ஆகியவற்றுக்கும் மேலெழுந்து எங்களுக்குக் கேட்டது.

பிறகு களத்தின் தென்பகுதியில் போர் வீரர்களில் முதன்மையானோர் ஒரு புறமும், அர்ஜுனன் மறுபுறமும் நிற்க ஒரு கடும்போர் அங்கே நடந்தது. எனினும், நான் துரோணரைப் பின்தொடர்ந்து சென்றேன். யுதிஷ்டிரனின் பல்வேறு படைப்பிரிவுகள் களத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எதிரியை அடித்தன. உமது படையின் பல்வேறு பிரிவுகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கோடைகாலக் காற்றானது, ஆகாயத்தின் மேகத்திரள்களை அழிப்பதைப் போல அர்ஜுனனைத் தாக்கின. உண்மையில் அடர்த்தியான மழையைப் பொழியும் வாசவனை {இந்திரனைப்} போலக் கணைகளின் மேகங்களை இறைத்தபடி அர்ஜுனன் வந்த போது, மனிதர்களில் புலியான அந்தக் கடும் வில்லாளியை {அர்ஜுனனைத்} தடுப்பதற்கு உமது படையில் எவரும் இல்லை. பார்த்தனால் {அர்ஜுனனால்} தாக்கப்பட்ட உமது வீரர்கள் பெரும் வலியை உணர்ந்தனர். {அப்படி வலியை உணர்ந்த} அவர்கள் தப்பி ஓடினர். அப்படித் தப்பி ஓடும்போது தங்கள் எண்ணிக்கையிலேயே {தங்கள் படையினரிலேயே} அவர்கள் பலரைக் கொன்றனர்.

கங்கப் பறவையின் {கழுகின்} இறகுகளால் ஆன சிறகுகளைக் கொண்டவையும், அனைத்து உடல்களையும் ஊடுருவவல்லவையுமான கணைகள் அர்ஜுனனால் ஏவப்பட்டு, விட்டிற்பூச்சிக்கூட்டங்களைப் போல அனைத்துப் பக்கங்களையும் மறைத்தபடி பாய்ந்தன. குதிரைகள், தேர்வீரர்கள், யானைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரைத் துளைத்த அந்தக் கணைகள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, {அவற்றை ஊடுருவி} எறும்புப் புற்றுக்களுக்குள் நுழையும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் புகுந்தன. {அதன்பிறகு} அர்ஜுனன், யானை, குதிரை அல்லது மனிதன் என எவர் மீதும் {இரண்டாவது முறையாக} கணைகளை ஏவவில்லை. ஒரே ஒரு கணையால் {மட்டும்} தாக்கப்பட்ட இவை ஒவ்வொன்றும் கடுமையாகப் பீடிக்கப்பட்டு உயிரிழந்து கீழே விழுந்தன.

கொல்லப்பட்ட மனிதர்கள், யானைகள், கணைகளால் அடிக்கப்பட்ட குதிரைகள் என அனைத்தாலும் விரவி கிடந்ததும், நாய்கள், நரிகள் ஆகியவற்றின் ஊளைகளால் எதிரொலித்ததுமான அந்தப் போர்க்களம் விசித்திரமாகவும் பயங்கரமாகவும் காட்சியளித்தது. அந்தக் கணைகளால் வலியை உணர்ந்தவனான தந்தை {தன்} மகனைக் கைவிட்டான், நண்பன் மற்றொரு நண்பனையும், மகன் தந்தையையும் கைவிட்டனர். உண்மையில், ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதையே நோக்கமாகக் கொண்டனர். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்ட வீரர்கள் பலர், தங்களைச் சுமந்த விலங்குகளையே கூடக் கைவிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.

நீலனைக் கொன்ற அஸ்வத்தாமன்! – துரோண பர்வம் பகுதி – 029-அணிபிளந்து ஓடிய கௌரவப் படை; துரோணரை மையமாகக் கொண்டு நடைபெற்ற போர்; துரோணருக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையிலான பயங்கரப் போர்; நீலனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையிலான போர்; நீலனைக் கொன்ற அஸ்வத்தாமன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, (என்னுடைய) அந்தப் படைப்பிரிவுகள் பிளக்கப்பட்டு, முறியடிக்கப்பட்டு, நீங்கள் அனைவரும் களத்தில் இருந்து வேகமாகப் பின்வாங்கியபோது, உங்கள் மனங்களின் நிலை எப்படி இருந்தது? {இப்படி} பிளக்கப்பட்டு, நிற்பதற்குக் கூட ஓர் இடத்தைக் காணாமல் ஓடும் படையணியினரை மீண்டும் அணிதிரட்டுவது எப்போதும் மிகக் கடினமானதே. ஓ! சஞ்சயா, அது குறித்து அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, [உமது துருப்புகள் பிளக்கப்பட்டாலும்], உமது மகனுக்கு {துரியோதனனுக்கு} நன்மை செய்யும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட உலகின் முதன்மையான வீரர்கள் பலர், தங்கள் புகழைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத் துரோணரைப் பின்தொடர்ந்தனர். அந்தப் பயங்கர நகர்வில் உயர்த்தப்பட்ட ஆயுதங்களுடன் பாண்டவத் துருப்புகளை எதிர்த்த அவர்கள், நல்ல சாதனைகளை அடைந்து, யுதிஷ்டிரனை அணுகக்கூடிய தூரத்திலேயே வைத்துக் கொண்டு, அச்சமற்ற வகையில் தங்கள் படைத்தலைவரைத் {துரோணரைத்} தொடர்ந்தனர்.

பெரும் சக்தி கொண்ட பீமசேனன், வீர சாத்யகி, திருஷ்டத்யும்னன் ஆகியோரின் ஒரு பிழையைக் கூடத் {தங்களுக்குச்} சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்தக் கௌரவத் தலைவர்கள் பாண்டவப் படையின் மீது பாய்ந்தனர். “துரோணர், துரோணர்!” என்று சொல்லிப் பாஞ்சாலர்கள் தங்கள் துருப்புகளைத் தூண்டினர். எனினும், உமது மகன்களோ, “துரோணரைக் கொல்லப்பட விடாதீர்” என்று சொல்லி குருக்கள் அனைவரையும் தூண்டினர்.

“துரோணரைக் கொல்வீர்”, “துரோணரைக் கொல்வீர்” என்று சொல்லி ஒரு தரப்பும், “துரோணரைக் கொல்லப்பட விடாதீர்”, “துரோணரைக் கொல்லப்பட விடாதீர்” என்று சொல்லி அடுத்ததும் {அடுத்த தரப்பும்} எனத் துரோணரைத் தங்கள் பந்தயப் பொருளாகக் கொண்டு குருக்களும், பாண்டவர்களும் சூதாடுவதாகத் தெரிந்தது. பாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னன், துரோணர் யாரை நசுக்க முயன்றாரோ, அந்தப் பாஞ்சாலர் தேர்வீரர்கள் அனைவரும் இருந்த தரப்புக்குச் சென்றான்.

இப்படியே, போரிடுதவற்காக ஒருவன் {தன்} எதிரிகளைத் தேர்ந்தெடுப்பதில் எந்த விதியும் அனுசரிக்கப்படவில்லை. அந்தப் போர் பயங்கரமாக மாறியது. வீரர்களை எதிர் கொண்ட வீரர்கள் உரத்த முழக்கங்களைச் செய்தனர். பாண்டவர்களை அவர்களது எதிரிகளால் நடுங்கச் செய்ய இயலவில்லை. மறுபுறம், தங்கள் துயரங்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்த பின்னவர்கள் {பாண்டவர்கள்} தங்கள் எதிரிகளின் படையணியினரை நடுங்கச் செய்தனர். தன்மானம் கொண்டவர்களாக இருப்பினும், சினத்தாலும், பழிவாங்கும் உணர்ச்சியாலும் உற்சாகங்கொண்ட அவர்கள் {பாண்டவர்கள்}, பலத்தாலும் சக்தியாலும் தூண்டப்பட்டுத் துரோணரைக் கொல்வதற்காகத் தங்கள் உயிரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் அந்தப் பயங்கரப் போரை அணுகினர்.

உயிரையே பணயமாகக் கொண்டு கடும்போரில் விளையாடிய அளவில்லா சக்தி படைத்த அவ்வீரர்களுக்குள் நடந்த அந்த மோதலானது, வச்சிரத்திற்கு எதிரான இரும்பின் மோதலை ஒத்திருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் நடைபெறும் கடும்போரைப் போல இதற்கு முன்னர்த் தாங்கள் பார்த்ததாகவோ, கேட்டதாகவோ வயதில் மிக முதிர்ந்த மனிதர்களாலும் எண்ண முடிவில்லை. பெரும் படுகொலைகளைக் கண்ட அம்மோதலில், அந்தப் பெரும்படையின் எடையால் பீடிக்கப்பட்ட பூமியானது நடுங்கத் தொடங்கியது. எதிரியால் கலங்கடிக்கப்பட்டு, தூக்கிவீசப்பட்ட அந்தக் குரு படை உண்டாக்கிய பயங்கர ஒலி, ஆகாயத்தையே முடக்கிப் பாண்டவப்படைக்குள்ளும் ஊடுருவியது.

போர்க்களத்தில் திரிந்த துரோணர், பாண்டவப் படைப்பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரிடம் வந்து, கூர்மையான தன் கணைகளால் அவர்களைப் பிளந்தார். அற்புதமான சாதனைகளைக் கொண்ட துரோணரால் இப்படி அவர்கள் நசுக்கப்பட்ட போது, பாண்டவப்படையின் தலைவன் திருஷ்டத்யும்னன், சினத்தால் நிறைந்து துரோணரைத் தானே தடுத்தான். துரோணருக்கும், பாஞ்சாலர்களின் இளவரசனுக்கும் {திருஷ்டத்யும்னனுக்கும்} இடையில் நடந்த அந்த மோதலானது மிக அற்புதமானதாக இருந்ததை நாங்கள் கண்டோம். அஃது {அம்மோதல்} ஈடு இணையற்றது என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.

அப்போது, நெருப்புக்கு ஒப்பானவனாகத் தன் கணைகளையே தீப்பொறிகளாகவும், தன் வில்லையே தீச்சுடராகவும் கொண்ட {அநூப நாட்டு ஆட்சியாளன்} நீலன், உலர்ந்த புற்குவியலை எரிக்கும் காட்டுத்தீயைப் போல, குரு படைகளை எரிக்கத் தொடங்கினான். துரோணரின் வீரமகன் {அஸ்வத்தாமன்}, நீலனோடு ஒரு மோதலை முன்பிலிருந்தே விரும்பியதால், துருப்புகளை எரித்தபடியே பின்னவன் {நீலன்} வந்த போது, அவனிடம் சிரித்துக் கொண்டே, கண்ணியமான வார்த்தைகளால், “ஓ! நீலா, சாதாரணப் படைவீரர்கள் பலரை உன் கணைகளின் தீச்சுடர்களால் எரிப்பதால் நீ ஈட்டப் போவது {ஈட்டப்போகும் பயன்} என்ன? உதவியற்ற என்னிடம் நீ போரிடுவாயாக, சினத்தால் நிறைந்து என்னைத் தாக்குவாயாக” என்றான் {அஸ்வத்தாமன்}.

இப்படிச் சொல்லப்பட்டதும், முற்றாக மலர்ந்த தாமரையின் காந்திக்கு ஒப்பான பிரகாசமான முகத்தைக் கொண்ட நீலன், தாமரைக் கூட்டங்களுக்கு ஒப்பான உடலையும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும் கொண்ட அஸ்வத்தாமனைத் தன் கணைகளால் துளைத்தான். திடீரென நீலனால் ஆழத் துளைக்கப்பட்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மூன்று பல்லங்களைக் கொண்டு தன் எதிராளியின் {நீலனின்} வில், கொடிமரம் மற்றும் குடையை அறுத்தான். அப்போது, தன் தேரில் இருந்து விரைவாகக் குதித்த நீலன், ஒரு சிறந்த வாளையும் கேடயத்தையும் கொண்டு, (தன் நகங்களால், தன் இரையைத் தூக்கிச் செல்லும்) ஒரு பறவையைப் போல, அஸ்வத்தாமனின் உடலில் இருந்து அவனது தலையைத் துண்டிக்க விரும்பினான். எனினும், ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, இறகுகள் கொண்ட கணை ஒன்றின் மூலமாக, அழகான மூக்கால் அருளப்பட்டதும், சிறந்த குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதும், உயர்ந்த தோள்களில் இருந்ததுமான தன் எதிராளியின் {நீலனின்} தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.

அப்போது, முழு நிலவின் காந்திக்கு ஒப்பான பிரகாசமான முகமும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களும், தாமரைக்கு ஒப்பான நிறமும் கொண்ட அந்த உயரமான வீரன் {நீலன்} இப்படியே கொல்லப்பட்டுக் கீழே பூமியில் விழுந்தான். சுடர்மிகு சக்தி கொண்ட நீலன், ஆசானின் மகனால் {அஸ்வத்தாமனால்} இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட பாண்டவப் படை, பெரும் துயரத்தால் நிறைந்து நடுங்கத் தொடங்கியது. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களின் பெரும் தேர்வீரர்கள் அனைவரும், “ஐயோ, போர்க்களத்தின் தென்பகுதியில், இந்திரனின் மகன் (அர்ஜுனன்), எஞ்சியுள்ள சம்சப்தகர்களையும், நாராயணப் படையையும் கொல்வதில் ஈடுபட்டு வரும்போது, எதிரியிடம் இருந்து நம்மைக் காக்க அந்த வலிமைமிக்க வீரனால் {அர்ஜுனனால்} எப்படி இயலும்?” என்று நினைத்தனர்” {என்றான் சஞ்சயன்}.

சாத்யகியிடம் இருந்து மீட்கப்பட்ட கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 030-கௌரவர்களோடு போராடிய பீமன்; பீமனுக்குக் கிடைத்த உதவி; சம்சப்தகர்களைக் கொன்றுவிட்டுத் திரும்பி, கர்ணனின் தம்பிகளான சத்ருஞ்சயன் விபாடன் ஆகியோரைக் கொன்ற அர்ஜுனன்; கர்ணனை ஆதரித்த போராளிகளைக் கொன்ற பீமன்; சர்மவர்மன் மற்றும் பிருஹத்க்ஷத்ரன் ஆகியோரைக் கொன்ற திருஷ்டத்யும்னன்; கர்ணனின் வில்லை அறுத்த சாத்யகி; சாத்யகியிடம் இருந்து காக்கப்பட்ட கர்ணன்; கௌரவர்களிடம் இருந்து காக்கப்பட்ட சாத்யகி; பனிரெண்டாம் நாள் போர் முடிவு..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “எனினும், தன் படை கொல்லப்படுவதை விருகோதரனால் {பீமனால்} பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் {பீமன்}, பாஹ்லீகனை அறுபது {60} கணைகளாலும், கர்ணனைப் பத்தாலும் {10} தாக்கினான். பிறகு துரோணர், பீமனைக் கொல்ல விரும்பி, கூர்முனை கொண்ட நேரான கணைகள் பலவற்றால் பின்னவனை {பீமனை} அவனது உயிர் நிலைகளில் தாக்கினார். நேரத்தை மேலும் கொடுக்க விரும்பாத அவர் {துரோணர்}, தீயின் தீண்டலுக்கு ஒப்பானவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவையுமான இருபத்தாறு {26} கணைகளால் அவனை {பீமனை} மீண்டும் தாக்கினார். பிறகு, கர்ணன் பனிரெண்டு {12} கணைகளாலும் அஸ்வத்தாமன் ஏழாலும் {7}, மன்னன் துரியோதனன் ஆறாலும் {6} அவனைத் {பீமனைத்} துளைத்தனர். வலிமைமிக்கப் பீமசேனனும் பதிலுக்கு அவர்கள் அனைவரையும் துளைத்தான். அவன் {பீமன்}, துரோணரை ஐம்பது {50} கணைகளாலும், கர்ணனைப் பத்தாலும் {10} தாக்கினான். துரியோதனனைப் பனிரெண்டு {12} கணைகளாலும், துரோணரை எட்டாலும் {8} துளைத்த அவன் {பீமன்}, உரக்க முழங்கியபடியே அந்தப்போரில் ஈடுபட்டான்.

தங்கள் உயிரைக் குறித்த கவலையில்லாமல் வீரர்கள் எதில் போரிட்டார்களோ, மரணம் என்பது அடைவதற்கு எளிதானதாக எதில் இருந்ததோ, அந்த மோதலில், அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, பீமனைக் காக்கத் தூண்டி பல வீரர்களை அனுப்பினான். அவளவிலா சக்தி கொண்ட வீரர்களான மாத்ரி மற்றும் பாண்டுவின் மகன்கள் இருவரும் {நகுலனும், சகாதேவனும்}, யுயுதானன் தலைமையிலான பிறரும், பீமசேனனின் பக்கத்தை விரைவாக அடைந்தனர். சினத்தால் நிறைந்து ஒன்றாகச் சேர்ந்த அந்த மனிதர்களில் காளையர், வில்லாளிகளில் முதன்மையானோர் பலரால் பாதுகாக்கப்பட்ட துரோணரின் படையைப் பிளக்க விரும்பி போருக்கு முன்னேறினர். உண்மையில், வலிமைமிக்க சக்தி கொண்ட அந்தப் பெரும் தேர்வீரர்களான பீமனும், பிறரும், துரோணரின் படை மீது மூர்க்கமாகப் பாய்ந்தனர்.

எனினும், தேர்வீரர்களில் முதன்மையான துரோணரோ, போரில் சாதித்தவர்களும், பெரும்பலங்கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்த வீரர்கள் அனைவரையும் எந்தக் கவலையுமின்றி வரவேற்றார் {எதிர்த்தார்}. தங்கள் நாடுகளைக் கருதிப் பாராமல், மரணத்தைக் குறித்த அச்சங்களை அனைத்தையும் கைவிட்ட உமது படையின் வீரர்களும் பாண்டவர்களை எதிர்த்து முன்னேறினர். குதிரைவீரர்கள் குதிரைவீரர்களுடன் மோதினர், தேர்வீரர்கள் தேர்வீரர்களுடன் மோதினர். அந்தப் போரில் ஈட்டிகளுக்கு எதிராக ஈட்டிகளும், வாள்களுக்கு எதிராக வாள்களும், கோடரிகளுக்கு எதிராகக் கோடரிகளும் மோதின. வாள்களுக்கு இடையில் அங்கே நடைபெற்ற கடும் மோதல் பயங்கரப் படுகொலைகளை {பேரழிகளை} உண்டாக்கியது. யானைகளோடு யானைகள் மோதியதன் விளைவாக அந்தப் போரானது மிகவும் உக்கிரமடைந்தது.

சிலர் யானைகளின் முதுகுகளில் இருந்து விழுந்தனர், சிலர் குதிரைகளின் முதுகுகளில் இருந்து தலை குப்புற விழுந்தனர். கணைகளால் துளைக்கப்பட்ட வேறு சிலர், தேர்களில் இருந்து கீழே விழுந்தனர். அந்தக் கடும் மோதலில், கவசமிழந்த ஒருவன் கீழே விழுகையில், யானையொன்று அவனது மார்பில் தாக்குவதையோ, அவனது தலையை நசுக்குவதையோ காண முடிந்தது. களத்தில் விழும் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் யானைகளால் நசுக்கப்படுவது களமெங்கும் காணப்பட்டது. பல யானைகள் (தாங்கள் விழுகையில்) தங்கள் தந்தங்களால் பூமியைத் துளைத்த போது, பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் அதனால் கிழிக்கப்படுவதும் காணப்பட்டது. கணைகளால் தங்கள் துதிக்கைகள் தாக்கப்பட்ட பல யானைகள், நூற்றுக்கணக்கான மனிதர்களைக் கிழித்துக் கொண்டும், நசுக்கிக் கொண்டும் களமெங்கும் திரிந்தன. சில யானைகள், கீழே விழுந்த வீரர்கள், குதிரைகள், கருப்பு இரும்புக் கவசங்களால் மறைக்கப்பட்ட யானைகள் ஆகியவற்றை, ஏதோ அவை அடர்த்தியான கோரைப்புற்கள் மட்டுமே என்பதைப் போல நசுக்குவதும் காணப்பட்டது.

பணிவால் அலங்கரிக்கப்பட்ட மன்னர்கள் பலர், தங்கள் காலம் வந்ததும், கழுகின் இறகுகளை மேல்விரிப்பாகக் கொண்ட வலிநிறைந்த படுக்கைகளில் (இறுதி உறக்கத்திற்காகத்) தங்களைக் கிடத்திக் கொண்டனர். போருக்குத் தன் தேரில் முன்னேறிய தந்தை தன் மகனைக் கொன்றான்; மகனும், வெறியால் மரியாதை அனைத்தையும் இழந்து போரில் தன் தந்தையை அணுகினான். தேர்களின் சக்கரங்கள் உடைக்கப்பட்டன; கொடிகள் கிழிக்கப்பட்டன; குடைகள் கீழே பூமியில் விழுந்தன. உடைந்த ஏர்க்கால்களை இழுத்துக் கொண்டே குதிரைகள் ஓடின. வாள்களைப் பிடித்த கரங்களும், குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளும் கீழே விழுந்தன. வலிமைமிக்க யானைகளால் இழுத்துச் செல்லப்பட்ட தேர்கள் தரையில் வீசி எறியப்பட்டுத் தூள்தூளாக மாறின. யானைகளால் கடுமையாகக் காயம் பட்ட குதிரைகள் தங்கள் சாரதிகளுடன் விழுந்தன. எவனும் எவனுக்கும் எந்த மரியாதையையும் காட்டாதபடியே அந்தக் கடும்போர் தொடர்ந்தது.

“ஓ! தந்தையே!…, ஓ! மகனே!…. நண்பா நீ எங்கிருக்கிறாய்?… நில்!….. நீ எங்கே செல்கிறாய்?…. தாக்குவாயாக!…. கொண்டுவா… இவனைக் கொல்வாயாக” இவ்விதமானவையும், பலவிதமானவையுமான அலறல்கள், சிரிப்போடும், கூச்சலோடும், முழக்கங்களோடும் அங்கே கேட்கப்பட்டன. மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியோரின் இரத்தங்கள் ஒன்று கலந்தன. {அதனால்} பூமியின் புழுதி மறைந்தது. மருண்டோர் அனைவரின் இதயங்களும் உற்சாகமிழந்தன {அச்சம் கொண்டோர் மயக்கமடைந்தனர்}.

இங்கே ஒரு வீரன் தன் தேர்ச்சக்கரத்தை மற்றொரு வீரரனின் தேர்ச்சக்கரத்தோடு சிக்கச் செய்து, மற்ற ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாத வகையில் மிக அருகில் சென்று, தன் கதாயுதத்தின் மூலமாக அடுத்தவனின் தலையைச் நொறுக்கினான். பாதுகாப்பற்ற இடத்தில் பாதுகாப்பை விரும்பிய துணிச்சல்மிக்கப் போராளிகளோ, ஒருவரையொருவர் மயிர் பிடித்திழுத்து, கைமுட்டிகள், பற்கள் மற்றும் நகங்களால் மூர்க்கமாகப் போரிட்டனர். இங்கே வாளை உயர்த்திப் பிடித்த ஒரு வீரனின் கரம் வெட்டப்பட்டது, அங்கே வில் அல்லது கணை, அல்லது அங்குசத்தைப் பிடித்திருந்த மற்றொரு வீரனின் கரம் வெட்டப்பட்டது. இங்கே ஒருவன் மற்றொருவனை உரக்க அழைத்தான். அங்கே மற்றொருவன் களத்திற்குத் தன் புறம் காட்டினான். இங்கே ஒருவன் தன் அருகில் மற்றவனை வர வைத்து அவனது உடலில் இருந்த தலையை வெட்டினான். அங்கே மற்றொருவன் எதிரியை நோக்கி உரத்த கூச்சலிட்டபடி விரைந்தான். இங்கே ஒருவன் மற்றவனின் முழக்கத்தால் அச்சத்தால் நிறைந்தான். அங்கே மற்றொருவன் நண்பனையோ, எதிரியையோ கூரிய கணைகளால் கொன்றான். இங்கே மலை போன்ற பெரிய யானை ஒன்று, நாராசத்தால் கொல்லப்பட்டுக் கோடை காலத்தில் நதியில் இருக்கும் சமமான தீவொன்றைப் போலக் களத்தில் விழுந்து கிடந்தது. அங்கே யானை ஒன்று, தன் சாரலில் சிற்றோடை பாயும் மலை ஒன்றைப் போலத் தன் மேனியில் வியர்வை வழிய குதிரைகள் மற்றும் தேரோட்டியுடன் கூடிய தேர்விரனைக் களத்தில் மிதித்து நசுக்கியது.

ஆயுதங்களில் சாதித்த துணிச்சல்மிக்க வீரர்கள் இரத்தத்தால் நனைந்த படி ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதைக் கண்டு, மருண்டவர்களும், பலவீனமான இதயங்களைக் கொண்டவர்களும் தங்கள் புலனுணர்வுகளை இழந்தனர். உண்மையில் அனைவரும் உற்சாகம் இழந்தனர். அதற்கு மேலும் எதையும் வேறுபடுத்திக் காண முடியவில்லை. துருப்புகளால் எழுப்பப்பட்ட புழுதியில் மூழ்கி அந்தப் போர் உக்கிரமடைந்தது.

அப்போது, பாண்டவப்படைகளின் தலைவன் {திருஷ்டத்யும்னன்}, “இதுவே நேரம்” என்று சொல்லி, எப்போதும் பெரும் சுறுசுறுப்புடைய அந்த வீரர்களிடம் பாண்டவர்களை {பாண்டவ வீரர்களை} விரைவாக வழிநடத்திச் சென்றான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாண்டவர்கள் அவனது கட்டளைகளுக்குப் பணிந்து, (கௌரவப் படையை) அடித்தபடியே, தடாகத்தை நோக்கிச் செல்லும் அன்னங்களைப் போலத் துரோணரின் தேரை நோக்கிச் சென்றனர். “அவரைப் பிடிப்பீராக”, “ஓடாதீர்”, “அஞ்சாதீர்”, “துண்டுகளாக வெட்டுவீராக” என்று ஆர்ப்பரித்த குரல்களே துரோணரின் தேர் அருகில் கேட்கப்பட்டன. துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மன்னன் ஜெயத்ரதன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், சல்லியன் ஆகியோர் அந்த வீரர்களை {எதிர்த்தனர்} வரவேற்றனர். எனினும், தடுக்கப்பட, வெல்லப்பட முடியாத வீரர்களும், உன்னதமான உணர்வுகளால் ஈர்க்கப்பட்டவர்களுமான {அறப்போரில் நாட்டம் கொண்டவர்களுமான} பாஞ்சாலர்களும், பாண்டவர்களும், கணைகளால் பீடிக்கப்பட்டாலும் கூட, துரோணரைத் தவிர்க்காதிருந்தனர் {துரோணரை விடவில்லை}. அப்போது, சினத்தால் தூண்டப்பட்ட துரோணர், நூற்றுக்கணக்கான கணைகளை ஏவி, சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்களுக்கு மத்தியில் ஒரு பெரும் அழிவை உண்டாக்கினார். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவரது நாணொலியும், அவரது உள்ளங்கை தட்டல் ஒலிகளும் அனைத்துப் பக்கங்களிலும் கேட்கப்பட்டன. இடியின் முழக்கத்திற்கு ஒப்பாக இருந்த அவை அனைவரின் இதயங்களையும் அச்சத்தால் பீடித்தன.

அதேவேளையில், பெரும் எண்ணிக்கையிலான சம்சப்தகர்களை வீழ்த்திய ஜிஷ்ணு {அர்ஜுனன்}, துரோணர் எங்கே பாண்டவத் துருப்புகளைக் கலங்கடித்துக் கொண்டிருந்தாரோ அந்த இடத்திற்கு விரைவாக வந்தான். சம்சப்தகர்களைக் கொன்ற பல்குனன் {அர்ஜுனன்}, குருதியையே நீராகவும், கணைகளையே சுழல்களாகவும் அலைகளாகவும் கொண்ட பெரும் தடாகங்களைக் கடந்தபடியே அங்கே வந்தான். சூரியனுக்கு ஒப்பான காந்தியைக் கொண்ட அர்ஜுனனின் அடையாளமும், பிரகாசத்தால் சுடர்விடுவதுமான அவனது குரங்குக் கொடியை நாங்கள் கண்டோம். யுகத்தின் முடிவில் எழும் சூரியனைப் போலவே, தன் ஆயுதங்கள் எனும் கதிர்களின் மூலம் சம்சப்தகர்கள் எனும் கடலை வற்ற செய்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பிறகு குருக்களையும் {கௌரவர்களையும்} தகர்த்தான். உண்மையில், யுகமுடிவில் தோன்றி அனைத்து உயிர்களையும் எரிக்கும் நெருப்பைப் போலவே தன் ஆயுதங்களால் குருக்கள் அனைவரையும் அர்ஜுனன் எரித்தான்.

ஆயிரக்கணக்கான கணைகளின் மூலம் அவனால் {அர்ஜுனனால்} தாக்கப்பட்ட யானை வீரர்கள், குதிரைவீரர்கள், தேர்வீரர்கள் ஆகியோர் கலைந்த கேசங்களுடன் கீழே பூமியில் விழுந்தனர். அந்தக் கணை மாரியால் அதீதமாகப் பீடிக்கப்பட்ட சிலர் துன்பக் குரலை வெளியிட்டனர். வேறு சிலர் பெருமுழக்கம் செய்தனர். பார்த்தனின் கணைகளால் தாக்கப்பட்ட சிலரோ உயிரையிழந்து கீழே விழுந்தனர். (நல்ல வீரர்களின் நடத்தைகளை) நினைவில் கொண்ட அர்ஜுனன், எதிரிகளில் கீழே விழுந்த போராளியையோ, பின்வாங்குபவரையோ {புறமுதுகிடுபவரையோ}, போரிட விரும்பாதவரையோ தாக்காதிருந்தான். தங்கள் தேர்களை இழந்து ஆச்சரியத்தில் நிறைந்த கௌரவர்களில் கிட்டத்தட்ட அனைவரும், களத்தில் இருந்து பின்வாங்கி, “ஓ” என்றும், “ஐயோ” என்றும் அலறிக்கொண்டு, (பாதுகாப்புக்காகக்) கர்ணனை அழைத்தனர்.

குருக்களால் உண்டாக்கப்பட்ட அந்த ஆரவாரத்தைக் கேட்டு {அவர்களைப்} பாதுகாக்க விரும்பிய அதிரதன் மகன் (கர்ணன்), “அஞ்சாதீர்” என்ற வார்த்தைகளை உரக்கச் சொல்லித் துருப்புகளுக்கு உறுதிகூறியபடி அர்ஜுனனை எதிர்கொள்ளச் சென்றான். பிறகு, பாரதர்கள் அனைவரையும் மகிழ்விப்பவனும், பாரதத் தேர்வீரர்களிலும், ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவனுமான அவன் (கர்ணன்), ஆக்னேய ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான் {மந்திரத்தால் தூண்டினான்}. எனினும் அர்ஜுனன், தன் கணை மழையின் மூலமாக, சுடர்மிக்க வில்லையும், பிரகாசமான கணைகளையும் கொண்ட வீரனான ராதையின் மகன் {கர்ணன்} ஏவிய கணைகளின் கூட்டத்தைக் கலங்கடித்தான் [1]. அதேபோல, அதிரதனின் மகனும் {கர்ணனும்}, உயர்ந்த சக்தியைக் கொண்ட அர்ஜுனனின் கணைகளைக் கலங்கடித்தான். இப்படி, அர்ஜுனனின் ஆயுதங்களைத் தன் ஆயுதங்களால் தடுத்த கர்ணன், பெருமுழக்கங்கள் செய்தபடியே தன் எதிராளியின் {அர்ஜுனனின்} மீது கணைகள் பலவற்றை ஏவினான்.

அப்போது, திருஷ்டத்யும்னன், பீமன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் அனைவரும் கர்ணனை அணுகி, மூன்று {மூன்று மூன்று} நேரான கணைகளால் அவர்கள் ஒவ்வொருவரும் {கர்ணனைத்} துளைத்தனர். எனினும், ராதையின் மகன் {கர்ணன்}, தன் கணை மழையால் அர்ஜுனனின் ஆயுதங்களைத் தடுத்துவிட்டு, மூன்று கூரிய கணைகளால் அந்த மூன்று வீரர்களின் {திருஷ்டத்யும்னன், பீமன் மற்றும் சாத்யகி ஆகியோரின்} விற்களை அறுத்தான். தங்கள் விற்கள் அறுபட்ட அவர்கள் நஞ்சற்ற பாம்புகளைப் போலத் தெரிந்தனர். தங்கள் தங்கள் தேர்களில் இருந்து எதிரியை நோக்கி ஈட்டிகளை வீசிய அவர்கள் {மூவரும்} சிங்க முழக்கமிட்டனர். பெரும் காந்தியும், மூர்க்கமும் கொண்டவையும், பாம்புகளைப் போலத் தெரிந்தவையுமான அந்தக் கடும் ஈட்டிகள், அவர்களின் வலிய கரங்களால் வீசப்பட்டு, கர்ணனின் தேரை நோக்கி மூர்க்கமாகச் சென்றன. மூன்று நேரான கணைகளால் அந்த ஈட்டிகள் ஒவ்வொன்றையும் வெட்டிய அந்த வலிமைமிக்கக் கர்ணன், அதே நேரத்தில் பார்த்தனின் {அர்ஜுனனின்} மீதும் பல கணைகளை விரைந்து ஏவி உரத்த முழக்கத்தைச் செய்தான்.

அப்போது அர்ஜுனன், ஏழு கணைகளால் கர்ணனைத் துளைத்துத் தன் கூரிய கணைகளால் பின்னவனின் {கர்ணனின்} தம்பியைக் கொன்றான். இப்படியே, ஆறு கணைகளால் சத்ருஞ்சயனைக் கொன்ற பார்த்தன் {அர்ஜுனன்}, மேலும் ஒரு பல்லத்தினால், தன் தேரில் நின்று கொண்டிருந்த விபாடனின் தலையை வெட்டினான். திருதராஷ்டிரர்களும், சூதனின் மகனும் {கர்ணனும்} பார்த்துக் கொண்டிருந்தபோதே, எவருடைய உதவியும் இல்லாத {தனி ஒருவனான} அர்ஜுனனால் பின்னவனின் {கர்ணனின்} தம்பிகள் மூவர் [2] கொல்லப்பட்டனர்.-அப்போது, இரண்டாவது கருடனைப் போலத் தன் தேரில் இருந்து குதித்த பீமன், கர்ணனை ஆதரித்தோரில் பதினைந்து போராளிகளைத் தன் சிறந்த வாளால் கொன்றான். மீண்டும் தன் தேரில் ஏறிக் கொண்டு வேறு வில்லை எடுத்த பீமன், பத்து {10} கணைகளால் கர்ணனையும் ஐந்தால் அவனது தேரோட்டியையும் குதிரைகளையும் துளைத்தான்.

திருஷ்டத்யும்னனும் ஒரு வாளையும், பிரகாசமான ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, சர்மவர்மனையும் [3], நிஷாதர்களின் ஆட்சியாளனான பிருஹத்க்ஷத்ரனையும் கொன்றான். பிறகு, தன் தேரில் ஏறிய அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} வேறு வில்லை எடுத்துக் கொண்டு எழுபத்து மூன்று {73} கணைகளால் கர்ணனைத் துளைத்து உரக்க முழங்கினான்.

இந்திரனுக்கு இணையான சிநியின் பேரனும் {சாத்யகியும்}, வேறு வில்லை எடுத்துக் கொண்டு அறுபத்துநான்கு {64} கணைகளால் சூதனின் மகனை {கர்ணனைத்} துளைத்து சிங்கம்போலக் கர்ஜித்தான். மேலும், நன்கு ஏவப்பட்ட இரண்டு கணைகளால் கர்ணனின் வில்லை அறுத்த அவன் {சாத்யகி}, மீண்டும் மூன்று கணைகளால் கர்ணனின் கரங்களையும் மார்பையும் துளைத்தான். மன்னன் துரியோதனன், துரோணர் மற்றும் ஜெயத்ரதன் ஆகியோர், சாத்யகி எனும் பெருங்கடலில் மூழ்கும் நிலையில் இருந்த கர்ணனைக் காப்பாற்றினர். எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கானவர்களும், அடிப்பதில் சாதித்தவர்களுமான உமது படையின் காலாட்படை வீரர்கள், குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகிய அனைத்தும், (தன்னைத் தாக்குபவர்களை) கர்ணன் அச்சுறுத்திக் கொண்டிருந்த இடத்திற்கு விரைந்தனர் [4]. பிறகு, திருஷ்டத்யும்னன், பீமன், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் அந்தப் போரில் சாத்யகியைக் காக்கத் தொடங்கினர்.உமது படை, எதிரியின் படை ஆகியவற்றைச் சேர்ந்த வில்லாளிகளின் அழிவுக்கான அந்தக் கடும்போர் இப்படியே நடந்தது. போராளிகள் அனைவரும் தங்கள் உயிரைக் குறித்த கவலையில்லாமல் போரிட்டனர். காலாட்படை, தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியன தேர்களுடனும், காலாட்படையுடனும் போரிட்டன. தேர்வீரர்கள், யானைகளோடும், காலாட்படைவீரர்களோடும், குதிரைகளோடும், தேர்களோடும் போரிட்டனர், காலாட்படை வீரர்களோ தேர்களோடும் யானைகளோடும் போரிட்டனர். மேலும் குதிரைகள் குதிரைகளோடும், யானைகள் யானைகளோடும், காலாட்படை வீரர்கள், காலாட்படைவீரர்களோடும் போரிடுவதும் காணப்பட்டது [5]. இப்படியே, மனித ஊனுண்ணிகள் மற்றும் இறைச்சியுண்ணும் விலங்குகளின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில், ஒருவரையொருவர் அச்சமற்ற வகையில் எதிர்த்த உயர் ஆன்ம மனிதர்களுக்கு இடையில் பெரும் குழப்பத்தால் குறிக்கப்பட்ட அந்தப் போர் நடைபெற்றது. உண்மையில் அது யமனின் ஆட்சிப்பகுதியில் உள்ளோர் எண்ணிக்கையைப் பெருக்கிற்று.

பெரும் எண்ணிக்கையிலான யானைகள், தேர்கள், காலாட்படை வீரர்கள் குதிரைகள் ஆகியன, மனிதர்கள், தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றால் அழிக்கப்பட்டன. யானைகள் யானைகளால் கொல்லப்பட்டன, தேர் வீரர்கள், உயர்த்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட தேர்வீரர்களாலும், குதிரைகள் குதிரைகளாலும், பெரும் எண்ணிக்கையிலான காலாட்படைவீரர்களாலும் கொல்லப்பட்டனர். யானைகள் தேர்களாலும், பெரும் குதிரைகள் பெரும் யானைகளாலும், மனிதர்கள் குதிரைகளாலும், குதிரைகள் தேர்வீரர்களில் முதன்மையானோராலும் கொல்லப்பட்டன. நாக்குகள் வெளியே தள்ளியபடியும், பற்களும், கண்களும் தங்கள் இடங்களில் இருந்து பெயர்ந்த நிலையிலும், கவசங்களும், ஆபரணங்களும் தூசியாக நசுக்கப்பட்ட நிலையிலும் கொல்லப்பட்ட உயிரினங்கள் கீழே களத்தில் விழுந்தன. மேலும், பயங்கர முகத்தோற்றம் கொண்ட சிலர், பல்வேறு சிறந்த ஆயுதங்களைக் கொண்ட வேறு சிலரால் தாக்கபட்டும், பூமியில் வீசப்பட்டும், குதிரைகள் மற்றும் யானைகளின் மிதியால் பூமியில் அழுத்தப்பட்டும், கனமான தேர்கள் மற்றும் தேர்ச்சக்கரங்களால் சிதைக்கப்பட்டும் சித்திரவதையை அடைந்தனர்.

இரைதேடும் விலங்குகள், இறைச்சியுண்ணும் பறவைகள், மனித ஊணுண்ணிகள் ஆகியோருக்கு மகிழ்வதைத் தரும் அந்தக் கடும் பேரழிவு நடந்து கொண்டிருந்த போது, கோபத்தால் நிறைந்த வலிமைமிக்கப் போராளிகள், தங்கள் சக்தி அனைத்தையும் வெளிப்படுத்தியபடியும், ஒருவரையொருவர் கொன்றபடியும் களமெங்கும் திரிந்தனர். பிறகு, அந்த இரண்டு படைகளும் பிளக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டதும், குருதியில் நனைந்த போர்வீரர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மேற்கு {அஸ்த} மலைகளில் உள்ள தன் அறைகளுக்குச் சூரியன் சென்ற அதே வேளையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் படைகள் இரண்டும் தங்களுக்குரிய பாசறைகளில் ஓய மெதுவாகச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.

பன்னிரெண்டாம் நாள் போர் முற்றிற்று

சம்சப்தகவத பர்வம் முற்றிற்று

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  துரோண பர்வம்-ஸ்ரீ துரோணாபிஷேக பர்வம்-பதினோராம் நாள் போர்-

October 14, 2025

கர்ணனை நினைத்த கௌரவர்கள்! – துரோண பர்வம் பகுதி – 001-கௌரவர்களின் நிலை குறித்து வினவிய ஜனமேஜயன்; பதிலளித்த வைசம்பாயனர்; கௌரவர்களின் செயல்பாடுகளை விவரித்த சஞ்சயன்; கர்ணனின் சூளுரை; கர்ணனை அழைத்த கௌரவர்கள்; திருதராஷ்டிரன் கேள்வி…

ஜனமேஜயன் {வியாசரின் சீடரான வைசம்பாயனரிடம்} , “ஓ! மறுபிறப்பாள முனிவரே {பிராமண முனிவரே வைசம்பாயனரே}, ஒப்பற்ற வீரமும், பலமும், வலிமையும், சக்தியும், ஆற்றலும் கொண்ட தனது தந்தையான தேவவிரதர் {பீஷ்மர்}, பாஞ்சாலர்களின் இளவரசனான சிகண்டியால் கொல்லப்பட்டதைக் கேட்டுக் கண்ணீரால் குளித்த கண்களுடன் கூடிய வலிமைமிக்க மன்னன் திருதராஷ்டிரர் உண்மையில் என்ன செய்தார்? ஓ! சிறப்புமிக்கவரே {வைசம்பாயனரே}, பீஷ்மர், துரோணர் மற்றும் பிற பெரும் தேர்வீரர்களின் மூலம், வலிமைமிக்க வில்லாளிகளான பாண்டுவின் மகன்களை வீழ்த்தி அரசுரிமையைப் பெற விரும்பினான் அவரது மகன் (துரியோதனன்). ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே {வைசம்பாயனரே}, வில்லாளிகள் அனைவரின் அந்தத் தலைவர் {பீஷ்மர்} கொல்லப்பட்ட பிறகு, அந்தக் குரு குலத்தோன் {துரியோதனன்} செய்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான் {ஜனமேஜயன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தன் தந்தை {பீஷ்மர்} கொல்லப்பட்டதைக் கேட்ட குரு குலத்தின் மன்னன் திருதராஷ்டிரன், கவலை மற்றும் துயரத்தால் நிறைந்து மன அமைதியை அடைந்தானில்லை. அக்கவலையால், அந்தக் குரு குலத்தோன் {திருதராஷ்டிரன்} இவ்வாறு வருந்திக் கொண்டிருந்தபோது, தூய ஆன்மா கொண்ட {தேரோட்டி}கவல்கணன் மகன் {சஞ்சயன்} மீண்டும் அவனிடம் {திருதராஷ்டிரனிடம்} வந்தான். பிறகு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், அவ்விரவில் {குருக்ஷேத்திர} முகாமில் இருந்து யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} திரும்பியிருந்த சஞ்சயனிடம் பேசினான். பீஷ்மரின் வீழ்ச்சியைக் கேட்டதன் விளைவால் உற்சாகமற்ற இதயத்துடனும், தன் மகன்களின் வெற்றியை விரும்பியும், பெருந்துயரத்துடனும் அவன் {திருதராஷ்டிரன்} இப்புலம்பல்களில் ஈடுபட்டான் {இவ்வாறு புலம்பினான்}.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “பயங்கர ஆற்றலைப் படைத்த உயர் ஆன்ம பீஷ்மருக்காக அழுத பிறகு, ஓ! மகனே {சஞ்சயா}, விதியால் உந்தப்பட்ட கௌவர்கள் அடுத்ததாக என்ன செய்தனர்? வெல்லப்பட முடியாத அந்த உயர் ஆன்ம வீரர் {பீஷ்மர்} கொல்லப்பட்டதும், துன்பக்கடலில் மூழ்கியிருந்த அந்தக் கௌரவர்கள் உண்மையில் என்ன செய்தனர்? ஓ! சஞ்சயா, பெருகியிருந்ததும், உயர் திறம் பெற்றதுமான அந்த உயர் ஆன்ம பாண்டவர்களின் படை, உண்மையில் மூவுலகங்களுக்கும் கூரிய {கூர்மையான} அச்சத்தைத் தூண்டவே செய்யும். எனவே, ஓ! சஞ்சயா, அந்தக் குரு குலத்துக் காளையான தேவவிரதர் {பீஷ்மர்} வீழ்ந்ததும், ({அங்கே} கூடியிருந்த) மன்னர்கள் என்ன செய்தனர் என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் தேவவிரதர் கொல்லப்பட்டதும் உமது மகன்கள் என்ன செய்தனர் என்பதை நான் சொல்லும்போதே சிதறாத கவனத்துடன் கேட்பீராக.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்ட பீஷ்மர் கொல்லப்பட்டதும், உமது வீரர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பினரும் (நிலைமையைக் குறித்து) தனித்தனியே சிந்திக்கலாயினர். க்ஷத்திரிய வகையின் கடமைகளை நினைவுகூர்ந்த அவர்கள் {இரு தரப்பினரும்}, ஆச்சரியத்தாலும், இன்பத்தாலும் நிறைந்தனர்; ஆனாலும், தங்கள் {க்ஷத்திரிய} வகையின் கடமைகளின் படி நடக்கும் அவர்கள் அனைவரும், அந்த உயர் ஆன்ம வீரரை {பீஷ்மரை} வணங்கினர். பிறகு அந்த மனிதர்களில் புலிகள், அளவிலா ஆற்றலைக் கொண்ட பீஷ்மருக்காக நேரான கணைகளால் ஆன தலையணையும், படுக்கையும் அமைத்தனர். பீஷ்மரின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டு, தங்களுக்குள் (இனிய விவாதங்களால்) பேசிக்கொண்டனர். பிறகு கங்கையின் மைந்தரிடம் {பீஷ்மரிடம்} விடை பெற்றுக் கொண்டு, அவரை வலம் வந்து, கோபத்தால் சிவந்த கண்களுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட அந்த க்ஷத்திரியர்கள், விதியால் உந்தப்பட்டு மீண்டும் ஒருவரை எதிர்த்து ஒருவர் போரிட்டனர்.

பிறகு, உமது படையின் பிரிவுகளும், பகைவருடையவையும் எக்காளங்களின் முழக்கத்தோடும், பேரிகையொலிகளோடும் வெளியே அணிவகுத்து வந்தன. கங்கை மைந்தரின் {பீஷ்மரின்} வீழ்ச்சிக்குப் பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நாளின் சிறந்த பகுதி கடந்த போது, கோபத்தின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டவர்களும், விதியால் இதயம் பீடிக்கப்பட்டவர்களும், உயர் ஆன்ம பீஷ்மரின் ஏற்கத்தகுந்த வார்த்தைகளை அலட்சியம் செய்தவர்களுமான அந்தப் பாரதக் குலத்தின் முதன்மையானோர் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு பெரும் வேகத்தோடு வெளியே சென்றனர்.

உமது மற்றும் உமது மகனின் மூடத்தனங்களின் விளைவாலும், சந்தனு மகனின் {பீஷ்மரின்} படுகொலையாலும், மன்னர்கள் அனைவருடன் கூடிய கௌரவர்கள் காலனால் அழைக்கப்பட்டவர்கள் போலவே தெரிந்தனர். தேவவிரதரை {பீஷ்மரை} இழந்த கௌரவர்கள், பெரும் துயரத்தால் நிறைந்து, இரை தேடும் விலங்குகள் நிறைந்த கானகத்தில், மந்தையாளன் இல்லாத வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளின் மந்தைகளைப் போலத் தெரிந்தனர்.

உண்மையில், அந்தப் பாரதக் குல முதன்மையானவரின் {பீஷ்மரின்} வீழ்ச்சிக்குப் பிறகு, விண்மீன்களற்ற ஆகாயம் போலவோ, காற்றில்லாத வானம் போலவோ, பயிர்களற்ற பூமி போலவோ, தூய இலக்கணமில்லாத சிதைந்த உரையைப் போலவோ [1], பழங்காலத்தில் பலிக்குப் {பலிச்சக்கரவர்த்திக்குப்} பிறகு தாக்குதலுக்குட்படுத்தப்பட்டு, வீழ்த்தப்பட்ட அசுரப்படையைப் போலவோ, கணவனை இழந்த அழகிய காரிகையைப் போலவோ [2], நீர் வற்றிய ஆற்றைப் போலவோ, தன் துணையை இழந்து, காட்டில் ஓநாய்களால் சூழப்பட்ட பெண்மானைப் போலவோ, சரபத்தால் [3] கொல்லப்பட்ட சிங்கத்துடன் கூடிய பெரிய மலைக்குகையைப் போலவோ அந்தக் குரு படை தெரிந்தது. உண்மையில், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, கங்கை மைந்தரின் {பீஷ்மரின்} வீழ்ச்சிக்குப்பிறகு, பாரதப் படையானது, கடலின் நடுவில் அனைத்துப் புறங்களிலும் வீசும் பெருங்காற்றால் புரட்டப்படும் சிறு படகைப் போல இருந்தது.வலிமைமிக்கவர்களும், தப்பாத குறி கொண்டவர்களுமான வீரப் பாண்டவர்களால் பெரிதும் பீடிக்கப்பட்ட அந்தக் கௌரவப் படை, கலங்கியிருந்த அதன் குதிரைகள், தேர்வீரர்கள் மற்றும் யானைகளுடன், ஆதரவற்றுப் பீதியடைந்து மிகவும் கலக்கமுற்றிருந்தது. அச்சமடைந்திருந்த மன்னர்களும், சாதாரணப் படைவீரர்களும், தேவவிரதரை {பீஷ்மரை} இழந்த அந்தப் படையில், அதற்கு மேலும் ஒருவரையொருவர் நம்பாமல் உலகத்தின் பாதாள லோகத்திற்கு மூழ்குவதாகத் தெரிந்தது.

பிறகு அந்தக் கௌரவர்கள், தேவவிரதருக்கு {பீஷ்மருக்கு} இணையான கர்ணனை உண்மையில் நினைவுகூர்ந்தனர். ஆயுதங்களைத் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையானவனும், (கல்வி மற்றும் தவத் துறவுகளில்) விருந்தினன் போல ஒளிர்பவனுமான அவனிடம் {கர்ணனிடம்} அனைவரின் இதயங்களும் திரும்பின. துயரைக் களைய இயன்ற நண்பன் ஒருவனை நோக்கித் துன்பத்தில் இருக்கும் ஒரு மனிதன் திரும்புவதைப் போல, அனைத்து இதயங்களும் அவனை {கர்ணனை} நோக்கித் திரும்பின.

மேலும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த மன்னர்கள், “கர்ணா! கர்ணா!” என்று கூச்சலிட்டுக் கொண்டே, “நமது நண்பனும், சூதனின் மகனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்} போரில் உயிரை விட எப்போதும் தயாராக இருப்பவனாவான். பெரும் புகழைக் கொண்ட கர்ணன், தன் தொண்டர்களுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து இந்தப் பத்து நாட்களும் போரிடாதிருந்தான். ஓ! அவனை விரைவாக அழைப்பீராக” என்றனர் [4].மனிதர்களில் காளையான அவன் {கர்ணன்}, இரண்டு மகாரதர்களுக்கு இணையானவனாக இருந்தாலும், க்ஷத்திரியர்கள் அனைவரின் முன்னிலையில் வீரமும் வலிமையும் மிக்கத் தேர்வீரர்களைக் குறிப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பீஷ்மரால் அர்த்த ரதன் {தேர்வீரர்களில் பாதித் திறன் கொண்டவன்} என்று வலிய கரங்களைக் கொண்ட அந்த வீரன் {கர்ணன்} வகுக்கப்பட்டான். (ரதர்கள் மற்றும் அதிரதர்கள் அனைவரிலும்) முதன்மையான அவன் {கர்ணன்}, வீரர்கள் அனைவராலும் மதிக்கப்படும் அவன் {கர்ணன்}, யமன், குபேரன், வருணன், இந்திரன் ஆகியோரோடும் போரிடத் துணிந்தவனான அவன் {கர்ணன்}, ரதர்கள், அதிரதர்கள் ஆகியோர் எண்ணப்பட்டபோதும் இப்படியே {பீஷ்மரால் அர்த்த ரதன் என்று} வகுக்கப்பட்டான்.

இதனால் ஏற்பட்ட கோபத்தால் அவன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கங்கையின் மைந்தரிடம் {பீஷ்மரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! குரு குலத்தவரே {பீஷ்மரே}, நீர் வாழும் காலம் வரை, நான் போரிடேன்! எனினும், பெரும்போரில் பாண்டுவின் மகன்களைக் கொல்வதில் நீர் வென்றால், ஓ! கௌரவரே {பீஷ்மரே}, துரியோதனனின் அனுமதியுடன் நான் காடுகளில் ஓயச் செல்வேன். மறுபுறம், ஓ! பீஷ்மரே, பாண்டவர்களால் கொல்லப்பட்டு நீர் சொர்க்கத்தை அடைந்தாலோ, அதன் பிறகு, தனித்தேரில் செல்லும் நான், பெரும் தேர்வீரர்களாக உம்மால் கருதப்படும் அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் கொல்வேன்” {என்றான் கர்ணன்}. பெரும் புகழையும் வலிய கரங்களையும் கொண்ட கர்ணன், இதைச் சொல்லிவிட்டு, உமது மகனின் {துரியோதனனின்} அனுமதியுடன் முதல் பத்து நாட்கள் போரிடாதிருந்தான்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போரில் பெரும் ஆற்றலும் அளவிலா வலிமையும் கொண்டவரான பீஷ்மர், யுதிஷ்டிரனின் படை வீரர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களைக் கொன்றார். எனினும், குறி தவறாதவரும், பெரும் சக்தி கொண்டவருமான அந்த வீரர் {பீஷ்மர்} கொல்லப்பட்ட போது, ஆற்றைக் கடக்க விரும்புபவர்கள் படகை நினைப்பதைப் போல, உமது மகன்களும் கர்ணனை நினைத்தனர். உமது வீரர்களும், உமது மகன்களும் மன்னர்கள் அனைவருடன் சேர்ந்து கொண்டு “கர்ணா!” என்று கூச்சலிட்டனர். மேலும் அவர்கள் அனைவரும், “உன் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான நேரம் இதுவே” என்றனர்.

ஜமதக்னியின் மகனிடம் {பரசுராமரிடம்} இருந்து ஆயுதங்களின் அறிவைப் பெற்றவனும், தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான கர்ணனை நோக்கி எங்கள் இதயங்கள் திரும்பின. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆபத்துகளில் இருந்து தேவர்களைக் காக்கும் கோவிந்தனை {கிருஷ்ணனைப்} போலவே, பெரும் ஆபத்துகளில் இருந்து நம்மைப் பாதுகாக்க வல்லவன் அவனே {கர்ணனே}” {என்றான் சஞ்சயன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படி மீண்டும் மீண்டும் கர்ணனைப் புகழ்ந்து கொண்டிருந்த சஞ்சயனிடம், பெரும்பாம்பொன்றைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த திருதராஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “நீங்கள் அனைவரும் சூத சாதியைச் சேர்ந்த வீரனான ராதையின் மகனை {கர்ணனைப்} போரில் தன் உயிரையும் விடத் தயாராக இருந்தவனாகக் கண்டதால் உங்கள் அனைவரின் இதயங்களும் விகர்த்தனன் மகனான கர்ணனை நோக்கித் திரும்பின [என்று நான் புரிந்து கொள்கிறேன்]. கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட அந்த வீரன் {கர்ணன்}, ஆபத்தில் இருந்து விடுபட விரும்பியவர்களும், அச்சம் மற்றும் துயரால் பீடிக்கப்பட்டவர்களுமான துரியோதனன் மற்றும் அவனது தம்பிகளின் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கவில்லை என நான் நம்புகிறேன். கௌரவர்களின் புகலிடமாக இருந்த பீஷ்மர் கொல்லப்பட்ட போது, வில்லாளிகளில் முதன்மையான கர்ணனால் {பீஷ்மரை இழந்ததால் ஏற்பட்ட} அந்த இடைவெளியை நிரப்புவதில் வெல்ல முடிந்ததா? அந்த இடைவெளியை நிரப்பினாலும், கர்ணனால் எதிரியை அச்சத்தால் நிரப்ப முடிந்ததா? வெற்றி குறித்த என் மகன்களின் நம்பிக்கைகளுக்குக் கனிகளை {பலன்களைக்} கொண்டு அவனால் {கர்ணனால்} மகுடம் சூட்ட முடியுமா?” {என்று கேட்டான் திருதராஷ்டிரன்}.

கர்ணனின் புறப்பாடு! – துரோண பர்வம் பகுதி – 002-கௌரவப் படைவீரர்களுக்கு ஆறுதல் கூறிய கர்ணன்; படைவீரர்கள் மத்தியில் கர்ணன் செய்த சூளுரை; போருக்குப் புறப்படத் தயாரான கர்ணன்; வேண்டிய உபகரணங்களைத் தன் தேரோட்டியிடம் கேட்ட கர்ணன்; பீஷ்மர் இருக்குமிடம் சென்ற கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, பீஷ்மர் கொல்லப்பட்டதை அறிந்த சூத சாதியைச் சேர்ந்த அதிரதன் மகன் {கர்ணன்}, துயரத்தில் விழுந்திருந்ததும், அடியற்ற கடலில் மூழ்கும் படகுக்கு ஒப்பானதுமான உமது மகனின் {துரியோதனனின்} படையை, ஒரு சகோதரனைப் போலக் காக்க விரும்பினான். [உண்மையில்], ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளைக் கலங்கடிப்பவனும், வில் தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவனுமான கர்ணன், வலிமைமிக்கத் தேர்வீரரும், மனிதர்களில் முதன்மையானவரும், மங்காப் புகழ் கொண்ட வீரருமான சந்தனுவின் மகன் {பீஷ்மர்} (அவரது தேரிலிருந்து) வீழ்த்தப்பட்டதைக் கேள்விப்பட்டு (போர்க்களத்திற்கு) விரைந்து வந்தான். தேர்வீரர்களில் சிறந்தவரான பீஷ்மர் எதிரியால் கொல்லப்பட்ட பிறகு, தன் பிள்ளைகளைக் காக்க விரும்பும் தந்தையைப் போல, கடலில் மூழ்கும் படகுக்கு ஒப்பான அந்தப் படையைக் காக்க விரும்பி கர்ணன் அங்கே வந்தான்.

கர்ணன் (படைவீரர்களிடம்), “உறுதி, புத்திக்கூர்மை, ஆற்றல், வீரியம், உண்மை, தற்கட்டுப்பாடு, வீரர்களின் அனைத்து அறங்கள், தெய்வீக ஆயுதங்கள், பணிவு, அடக்கம், ஏற்புடைய பேச்சு, தீமையில் இருந்து விடுதலை ஆகியவற்றைக் கொண்ட அந்தப் பீஷ்மர், சந்திரனில் லட்சுமி இருப்பது போல இத்தகைய குணங்களை நிரந்தரமாகப் பெற்றவரும், எப்போதும் நன்றியுடன் இருந்தவரும், பிராமணர்களின் எதிரிகளைக் கொல்பவருமான அந்தப் பீஷ்மர், ஐயோ, பகை வீரர்களைக் கொல்பவரான அந்தப் பீஷ்மர் எப்போது தன் விடுதலையை {மரணத்தை} அடைந்தாரோ, அப்போதே பிற வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாகவே நான் கருதுகிறேன்.

செயலுடன் (பொருள்கள் அனைத்தும்) கொண்ட நிலையான தொடர்பின் விளைவால், இவ்வுலகில் அழிவில்லாதது என எதுவும் இருப்பதில்லை. {வினைப்பயன் என்பது நிலையற்றதாகையால், ஒரு பொருளும் இவ்வுலகில் அழிவில்லாமல் இருப்பதில்லை}. உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரே கொல்லப்பட்டாரெனில், சூரியன் நாளை உதிப்பான் என எவன்தான் உறுதியாகச் சொல்வான்? வசுக்களின் ஆற்றலுக்கு இணையான ஆற்றலைக் கொண்டவரும், வசுக்களின் சக்தியால் பிறந்தவரும், பூமியின் ஆட்சியாளருமான அவர் {பீஷ்மர்} மீண்டும் வசுக்களுடன் இணைந்துவிட்டார், எனவே, உங்கள் உடைமைகளுக்காகவும், பிள்ளைகளுக்காகவும், இந்தப் பூமிக்காவும், குருக்களுக்காகவும், இந்தப் படைக்காகவும் துயரடைவீராக [1].சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பெரும் வலிமைமிக்கவரும், வரமளிக்கும் வீரரும், உலகத்தின் தலைவரும், பெரும் சக்தியைக் கொண்டவருமான சந்தனுவின் மகன் {பீஷ்மர்} வீழ்ந்ததும், அதன் தொடர்ச்சியாகப் பாரதர்கள் வீழ்ந்ததும், உற்சாகமற்ற இதயத்துடன் கூடிய கர்ணன், கண்ணீரால் நிறைந்த கண்களுடன் (தார்தராஷ்டிரர்களுக்கு) ஆறுதல் சொல்லத் தொடங்கினான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ராதையின் மகனுடைய {கர்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட உமது மகன்களும் உமது துருப்புகளும் உரக்க அழத்தொடங்கி, அந்த அழுகையின் பேரொலியால் அதிக வருத்தத்தை அடைந்து கண்ணீரை அதிகமாக வடித்தனர் [2]. எனினும், அந்தப் பயங்கரப் போர் மீண்டும் தொடங்கி, மன்னர்களால் தூண்டப்பட்ட கௌரவப் படைப்பிரிவுகள் பேரொலியோடு மீண்டும் முழங்கிய போது, வலிமைமிக்கத் தேர்வீரர்களில் காளையான கர்ணன், (கௌரவப் படையின்) பெரும் தேர்வீரர்களிடம் பேசி, அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கும் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:

{கர்ணன்}, “நிலையற்ற இந்த உலகில் (காலனின் {மரணத்தின்} கோரப் பற்களை நோக்கியே) அனைத்தும் {அனைத்துப் பொருட்களும்} தொடர்ந்து வலம் வருகின்றன. இஃதை எண்ணி, அனைத்தையும் குறுகிய காலம் கொண்டவையே என நான் கருதுகிறேன். எனினும், நீங்கள் அனைவரும் இங்கிருந்த போதே, மலைபோல அசையாமல் நிற்கும் குருக்களில் காளையான பீஷ்மர் எவ்வாறு தனது தேரில் இருந்து வீசப்பட்டார்? வலிமைமிக்கத் தேர்வீரரான சந்தனுவின் மகன் {பீஷ்மர்} வீழ்த்தப்பட்டு, (ஆகாயத்தில் இருந்து) விழுந்த சூரியனைப் போல இப்போது தரையில் கிடக்கிறார் என்றால், மலைக்காற்றைத் தாங்கவொண்ணா மரங்களைப் போலவே, குரு மன்னர்கள் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கிஞ்சிற்றும் தாங்க இயன்றவர்கள் இல்லை [3].எனினும், இப்போது அந்த உயர் ஆன்மா கொண்டவர் {பீஷ்மர்} செய்ததைப் போலவே, {படையின்} முதன்மையான வீரர்கள் எதிரியால் கொல்லப்பட்டதும், உற்சாகமற்ற முகங்களைக் கொண்டதுமான ஆதரவற்ற இந்தக் குரு படையை நான் காப்பேன். இந்தச் சுமை இப்போது என் பொறுப்பாகட்டும். அந்த வீரர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்} போரில் கொல்லப்பட்டதால் இந்த அண்டமே நிலையற்றதென நான் காண்கிறேன். {எனவே}, போருக்கு நான் ஏன் அஞ்ச வேண்டும்? ஆகவே, களத்தில் திரிந்த படியே என் நேரான கணைகளால் அந்தக் குரு குலக் காளைகளை (பாண்டவர்களை) நான் யமலோகம் அனுப்புவேன். இவ்வுலகில் புகழையே உயர்ந்த நோக்கமாகக் கருதும் நான், போரில் அவர்களை {பாண்டவர்களை} கொல்வேன், அல்லது எதிரியால் கொல்லப்பட்டுக் களத்தில் உறங்குவேன்.

யுதிஷ்டிரன், உறுதியும், புத்திக்கூர்மையும், அறமும், வலிமையும் கொண்டவனாவான். விருகோதரன் {பீமன்}, ஆற்றலில் நூறு யானைகளுக்கு இணையானவனாவான், அர்ஜுனனோ இளமையானவனாகவும், தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} மகனாகவும் இருக்கிறான். எனவே, அந்தப் பாண்டவப் படை தேவர்களாலும் எளிதாக வீழ்த்தப்பட முடியாததாகும். யமனுக்கு நிகரான இரட்டையர்கள் {நகுலனும், சகாதேவனும்} எந்தப் படையில் இருக்கிறார்களோ, தேவகியின் மகனும் {கிருஷ்ணனும்}, சாத்யகியும் எந்தப் படையில் இருக்கிறார்களோ, அந்தப் படை காலனின் {மரணத்தின்} கோரப் பற்களைப் போன்றதாகும். அஃதை அணுகும் எந்தக் கோழையும் உயிருடன் திரும்ப மாட்டான்.

பெருகியிருக்கும் தவச் சக்தியை தவத் துறவுகளாலேயே விவேகிகள் எதிர்கொள்வதைப் போல, படையும் {சக்தியும்} படையாலேயே {சக்தியாலேயே} எதிர்க்கப்பட வேண்டும். எதிரியை எதிர்த்து, என் தரப்பைக் காப்பதில் என் மனத்தில் உறுதியடைந்திருக்கிறேன். ஓ! தேரோட்டியே, அன்று நான் எதிரியின் வல்லமையைத் தடுத்து, போர்க்களத்தை அடைந்ததுமே அவனை வீழ்த்தப் போகிறேன். இந்த உள் {குடும்பப்} பகையை நான் பொறுக்க மாட்டேன். துருப்புகள் பிளக்கப்படும்போது, அணிவகுக்க (உதவ) முயற்சி செய்யும் ஒருவனே நண்பனாவான் {நான் அந்தச் சிறந்த நண்பனாகவே இருப்பேன்}.

ஒன்று, நான் ஒரு நேர்மையான மனிதனுக்குத் தகுந்த நீதிமிக்கச் சாதனையை அடைவேன், அல்லது என் உயிரைத் துறந்து பீஷ்மரைத் தொடர்வேன். ஒன்று, நான் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் என் எதிரிகள் அனைவரையும் கொல்வேன், அல்லது அவர்களால் கொல்லப்பட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் உலகங்களுக்குச் செல்வேன்.

ஓ! தேரோட்டியே, பெண்களும், குழந்தைகளும் உதவிக்காகக் கூச்சலிடும்போதோ, துரியோதனனின் ஆற்றல் தடுக்கப்படும்போதோ நான் இதையே செய்ய வேண்டும் என்பதை நான் அறிவேன் [4]. எனவே, எதிரியை நான் இன்று வெல்வேன். இந்தப் பயங்கரப் போரில் என் உயிரைக் குறித்துக் கவலை கொள்ளாமல், குருக்களைப் பாதுகாக்கும் நான், பாண்டுவின் மகன்களைக் கொல்வேன். என் எதிரிகள் அனைவரையும் ஒன்றாகச் சேர்த்துப் போரில் கொல்லும் நான், திருதராஷ்டிரர் மகனுக்கு {துரியோதனனுக்கு} (மறுப்பதற்கிடமில்லா) அரசுரிமையை அளிப்பேன்.தங்கத்தாலானதும், பிரகாசமானதும், ரத்தினங்கள் மற்றும் கற்களோடு ஒளிர்வதுமான அழகிய என் கவசம் எனக்குப் பூட்டப் படலாம்; சூரியனுக்கு இணையான பிரகாசம் கொண்ட என் தலைக்கவசமும் {கிரீடமும்}, விற்களும், நெருப்பு, நஞ்சு அல்லது பாம்புகளுக்கு ஒப்பான என் கணைகளும் தரிக்கப்படலாம். (என் தேரில்) உரிய இடங்களில் பதினாறு {16} அம்பறாத்தூணிகள் கட்டப்படட்டும், மேலும் சிறந்த விற்கள் பலவும் கொண்டு வரப்படட்டும். கணைகள், ஈட்டிகள், கனமான கதாயுதங்கள், பல்வேறு வண்ணங்களில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட என் சங்கு ஆகியவை தயாராகட்டும்.

பல்வேறு வண்ணங்களிலானதும், சிறந்ததும் தங்கத்தாலானதும், தாமரையின் பிரகாசத்தைக் கொண்டதும், யானை கட்டும் சங்கிலி பொறிக்கப்பட்ட {கொடியைக் கொண்டதுமான} என் அழகிய கொடிமரம், மென்மையான துணியால் துடைக்கப்பட்டு, அற்புதமான மாலைகளாலும், மெல்லிய இழைகளாலும் அலங்கரிப்பட்டு என்னிடம் கொண்டு வரப்படட்டும். ஓ! தேரோட்டியின் மகனே, பழுப்பு மேகங்களின் நிறத்தாலானவையும், மெலிதாக இல்லாதவையும் {பருத்தவையும்}, மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட நீரில் குளித்தவையும், பிரகாசமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான வேகமான குதிரைகள் சிலவும் என்னிடம் விரைவாகக் கொண்டுவரப்படட்டும்.

தங்க மாலைகளாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், சூரியனையோ, சந்திரனையோ போலப் பிரகாசமானதும், ஆயுதங்கள், மற்றும் சிறந்த விலங்குகள் பூட்டப்பட்டுத் தேவையான அனைத்தையும் கொண்டதுமான சிறந்த தேர் ஒன்றும் என்னிடம் விரைவாகக் கொண்டுவரப்படட்டும். பெரும் தாங்கும் திறனைக் கொண்ட பல சிறந்த விற்களும், (எதிரியைத்) தாக்க வல்ல சிறந்த நாண்கயிறுகள் பலவும், பெரியதும், கணைகள் நிறைந்ததுமான அம்பறாத்தூணிகள் சிலவும், என் உடலுக்கான கவசங்கள் சிலவும் என்னிடம் விரைவாகக் கொண்டுவரப்படட்டும். தயிர்க்கடைசல்கள் நிறைந்தவையும், பித்தளை மற்றும் தங்கத்தாலானவையுமான குடங்களும், வெளியே செல்லும் சந்தர்ப்பங்களில் தேவைப்படும் (மங்கலமான) பொருட்கள் அனைத்தும் என்னிடம் விரைவாகக் கொண்டுவரப்படட்டும். மலர்களாலான மாலைகள் கொண்டுவரப்படட்டும், அவை என் உடலின் (தகுந்த) அங்கங்களில் சூடப்படட்டும். வெற்றிக்கான பேரிகைகள் முழங்கப்படட்டும்.

ஓ! தேரோட்டியே, கிரீடியும் (அர்ஜுனனும்), விருகோதரனும் {பீமனும்}, தர்மனின் மகனும் (யுதிஷ்டிரனும்), இரட்டையர்களும் {நகுலனும், சகாதேவனும்} எங்கிருக்கிறார்களோ, அந்த இடத்திற்கு விரைவாகச் செல்வாயாக. அவர்களோடு போரில் மோதி, ஒன்று நான் அவர்களைக் கொல்வேன், அல்லது எதிரிகளான அவர்களால் கொல்லப்படும் நான் பீஷ்மரைப் பின்தொடர்வேன். அர்ஜுனன், வாசுதேவன் {கிருஷ்ணன்}, சாத்யகி, சிருஞ்சயர்கள் ஆகியோரைக் கொண்ட அந்தப் படை மன்னர்களால் வெல்லப்படமுடியாதது என நான் நினைக்கிறேன். அனைத்தையும் அழிக்கும் காலனே, முரட்டுத்தனமான கண்காணிப்புடன் கிரீடியை {அர்ஜுனனைப்} பாதுகாத்தாலும், அவனுடன் மோதி அவனைக் கொல்வேன், அல்லது பீஷ்மரின் வழியில் நானும் யமனுலகு செல்வேன். அவ்வீரர்களுக்கு மத்தியில் நானே செல்வேன் என்று நிச்சயமாக நான் சொல்கிறேன். உட்பகையைத் தூண்டாதோரும், என்னிடம் பலவீனமான பற்று கொள்ளாதோரும், நீதியற்ற ஆன்மா கொள்ளாதோருமே (மன்னர்களே) எனக்குக் கூட்டாளிகளாவர்[5]” {என்றான் கர்ணன்}.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “சிறந்த ஏர்க்காலைக் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், மங்கலகரமானதும், கொடிமரத்துடன் கூடியதும், காற்றின் வேகத்தைக் கொண்ட சிறந்த குதிரைகள் பூட்டப்பட்டதும், பெரும் பலம் கொண்டதும், விலையுயர்ந்ததுமான சிறந்த தேரைச் செலுத்திய கர்ணன் வெற்றிக்காக (போரிடச்) சென்றான்.

இந்திரனை வழிபடும் தேவர்களைப் போலக் குரு தேர்வீரர்களில் முதன்மையானோரால் வழிபடப்பட்டவனும், சூரியனைப் போல அளவிலா சக்தி கொண்டவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான அந்தக் கடும் வில்லாளி {கர்ணன்}, தங்கம், ரத்தினம் மற்றும் கற்களால் அலங்கரிக்கப்பட்டதும், சிறந்த கொடிமரத்தைக் கொண்டதும், சிறந்த குதிரைகள் பூட்டப்பட்டதும், மேகங்களின் முழக்கத்திற்கு இணையான சடசடப்பொலி கொண்டதுமான தேரில், போர்க்களத்தின் எவ்விடத்தில் அந்தப் பாரதக் குலக்காளை (பீஷ்மர்) இயற்கைக்கான தன் கடனைச் செலுத்தினாரோ {ஆன்ம விடுதலையை விரும்பி உயிர் துறந்தாரோ} அந்த இடத்திற்குச் சென்றான். நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட அழகான மேனியுடன் கூடியவனும், பெரும் வில்லாளியும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, தெய்வீகத் தேரைச் செலுத்தும் தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போல, நெருப்பின் ஒளியைக் கொண்ட தன் அழகிய தேரில் ஏறி ஒளிர்ந்தான்.

அர்ஜுனனின் புகழ் சொன்ன கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 003- பீஷ்மர் இருக்குமிடம் சென்ற கர்ணன்; பீஷ்மரிடம் அர்ஜுனனின் பெருமைகளைச் சொல்லி, போரிட அனுமதி வேண்டிய கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “க்ஷத்திரியர்கள் அனைவரையும் கொல்பவரும், நீதிமிக்க ஆன்மாவும், அளவிலா சக்தியும் கொண்ட வீரரும், பெரும் வில்லாளியும், தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} (தன் தேரில் இருந்து) வீழ்த்தப்பட்டவருமான மதிப்புக்குரிய பாட்டன் பீஷ்மர், வலிமைமிக்கக் காற்றால் வற்ற செய்யப்பட்ட பரந்த பெரும் கடலைப் போலக் கணைகளின் படுக்கையில் கிடப்பதைக் கண்டு, உமது மகன்களுக்கு வெற்றி மீதான நம்பிக்கையும், மன அமைதியும் அவர்களது கவசங்களோடு காணாமல் போனது.

அடியற்ற பெருங்கடலைக் கடக்க முயன்று அதில் மூழ்குபவர்களுக்கு ஒரு தீவாக எவர் இருந்தாரோ அவரை {பீஷ்மரை} கண்டு, யமுனையின் ஊற்று போலத் தொடர்ச்சியான கணைகளால் அனைத்துப் பக்கங்களிலும் எவர் சூழப்பட்டிருந்தாரோ அந்த வீரரை {பீஷ்மரை} கண்டு, பெரும் இந்திரனால் பூமியில் தள்ளப்பட்ட தாங்க முடியாத சக்தி கொண்ட மைநாக மலையைப் போல எவர் இருந்தாரோ அந்த வீரரை, ஆகாயத்திலிருந்து பூமியில் விழுந்திருக்கும் சூரியனைப் போல எவர் கிடந்தாரோ அந்த வீரரை, பழங்காலத்தில் விருத்திரனிடம் வீழ்ந்துக் காணப்படா நிலையில் இருந்த இந்திரனைப் போல எவர் இருந்தாரோ அவரை, போர் வீரர்கள் அனைவரின் புலன்களையும் எவர் மயங்கச் செய்தாரோ அவரை, போராளிகள் அனைவரிலும் முதன்மையான அவரை, வில்லாளிகள் அனைவருக்கும் அடையாளமான {கொடி போன்ற} அவரை, மனிதர்களில் காளையும், வீரரும், உமது தந்தையுமான அந்தப் பீஷ்மர், போரில் வீழ்த்தப்பட்டு, அர்ஜுனனின் கணைகளால் மறைக்கப்பட்டு, வீரப் படுக்கையில் கிடக்கும் அந்தப் பாரதர்களின் பாட்டனைக் கண்டு, துயரால் நிறைந்து, கிட்டத்தட்ட உணர்வற்ற நிலையில் இருந்த அந்த அதிரதன் மகன் (கர்ணன்), பெரும் பாசத்துடன் தன் தேரில் இருந்து இறங்கினான். (சோகத்தால்) பீடிக்கப்பட்டு, கண்ணீரால் கலங்கிய கண்களுடன் இருந்த அவன் {கர்ணன்} கால்நடையாக {நடந்தே} சென்றான்.

கூப்பிய கரங்களுடன் அவரை {பீஷ்மரை} வணங்கிய அவன் {கர்ணன்}, அவரிடம் {பீஷ்மரிடம்}, “நான் கர்ணன்! நீர் அருளப்பட்டிருப்பீராக! ஓ! பாரதரே {பீஷ்மரே}, புனிதமான, மங்கலகரமான வார்த்தைகளை என்னிடம் பேசுவீராக, கண்களைத் திறந்து என்னைக் காண்பீராக. முதிர்ந்தவரும், மரியாதைக்குரியவரும், அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான நீரே கொல்லப்பட்டுத் தரையில் கிடைப்பதால், எந்த மனிதனும் தன் நற்செயல்களின் கனிகளை {புண்ணியப் பலன்களை} இவ்வுலகில் அனுபவிக்கமாட்டான் என்பது நிச்சயமாகிறது.

ஓ! குருக்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, அவர்களில் {குருக்களில்} கருவூலத்தை நிரப்புவதிலும், ஆலோசனைகள் கூறுவதிலும், துருப்புகளைப் போர்வியூகத்தில் அணிவகுக்கச் செய்வதிலும், ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும் (உம்மைப் போல) வேறு யாரையும் நான் காணவில்லை. ஐயோ, நீதிமிக்கப் புரிதல் கொண்ட ஒருவர், ஆபத்துகள் அனைத்திலும் குருக்களை எப்போதும் பாதுகாக்கும் ஒருவர், எண்ணற்ற போர்வீரர்களைக் கொண்ட ஒருவர் பித்ருக்களின் உலகிற்குச் செல்கிறார். இந்நாளிலிருந்து, ஓ! பாரதர்களின் தலைவரே {பீஷ்மரே}, கோபத்தில் தூண்டப்படும் பாண்டவர்கள் மான்களைக் கொல்லும் புலிகளைப் போலக் குருக்களைக் கொல்லப் போகின்றனர்.

இன்று, காண்டீவ நாணொலியின் சக்தியை அறியும் கௌரவர்கள், வஜ்ரதாரியை {இந்திரனை} அச்சத்துடன் கருதும் அசுரர்களைப் போல, இன்று சவ்யசச்சினை {அர்ஜுனனைக்} மதிக்கப் போகின்றனர் [1]. இன்று காண்டீவத்தில் இருந்து ஏவப்படும் கணைகளின் இடிக்கொப்பான ஒலி, குருக்களையும், பிற மன்னர்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தப்போகிறது. இன்று, ஓ! வீரரே {பீஷ்மரே}, கொடுந்தழல்களாலான நெருப்பு ஒரு காட்டை எரிப்பது போல, கிரீடியின் {அர்ஜுனனின்} கணைகள் தார்தராஷ்டிரர்களை எரிக்கும்.

காற்றும் நெருப்பும் சேர்ந்து காட்டின் எந்தப் பகுதிகளிலெல்லாம் செல்லுமோ, அப்பகுதிகளிலுள்ள செடிகள், கொடிகள் மற்றும் மரங்கள் அனைத்தையும் அவை எரிக்கின்றன. பார்த்தன் {அர்ஜுனன்}, பற்றியெரியும் நெருப்பைப் போன்றவன் என்பதில் ஐயமில்லை, ஓ! மனிதர்களில் புலியே {பீஷ்மரே}, கிருஷ்ணன் காற்றைப் போன்றவன் என்பதிலும் ஐயமில்லை. ஓ! பாரதரே {பீஷ்மரே}, பாஞ்சஜன்யத்தின் முழக்கத்தையும், காண்டீவத்தின் நாணொலியையும் கேட்கும் கௌரவத் துருப்புகள் அனைத்தும் அச்சத்தால் நிறையப் போகின்றன.

அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {அர்ஜுனன்} (மன்னர்களை நோக்கி) முன்னேறும்போது, அவனுக்குச் சொந்தமானதும், குரங்குக் கொடிக் கொண்டதுமான அந்தத் தேரின் சடசடப்பொலியை {பீஷ்மரான} நீரில்லாமல் அவர்களால் {மன்னர்களால்} தாங்கிக் கொள்ள இயலாது. விவேகிகளால் விவரிக்கப்படுவதைப் போல மனிசக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளைக் கொண்ட அர்ஜுனனை எதிர்க்க உம்மைத் தவிர மன்னர்களில் வேறு யார் தகுந்தவர்?

உயர் ஆன்மாவான முக்கண்ணனோடு (மகாதேவனோடு) அவன் {அர்ஜுனன்} செய்த போர் மனித சக்திக்கு அப்பாற்பட்டதே. அவன் {அர்ஜுனன்}, புனிதமற்ற ஆன்மாக்களையுடையவர்களால் அடையப்பட முடியாத வரத்தை அவனிடம் {சிவனிடம்} இருந்தே அடைந்திருகிறான். மேலும், போரில் மகிழ்பவனான மாதவனால் {கிருஷ்ணனால்} அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} பாதுகாக்கப்படுகிறான்.

தேவர்கள் மற்றும் தானவர்களால் வழிபடப்படுபவரும், க்ஷத்திரிய குலத்தை அழித்தவரும், போரில் ராமரையே {பரசுராமரையே} வீழ்த்தியவரும், பெரும் சக்தி கொண்டவருமான உம்மாலேயே எவன் முன்பு வெல்லப்படவில்லையோ, அவனை {அர்ஜுனனைப்} போரில் வெல்ல வேறு எவன் தகுந்தவனாவான்.

போர்க்களத்தில் வீரர்களில் முதன்மையான அந்தப் பாண்டுவின் மகனோடு {அர்ஜுனனோடு} ஒப்பிடப்பட முடியாதவனான நான், வெறும் பார்வையாலேயே தன் எதிரிகளைக் கொல்பவனும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானவனும், துணிவுமிக்கவனுமான அந்தக் கடும் வீரனை {அர்ஜுனனை}, என் ஆயுதங்களின் சக்தியால் உமது அனுமதியின் பேரில் கொல்லத்தகுந்தவனாவேன்” என்றான் {கர்ணன்}” {என்றான் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}.

கௌரவர்களுக்கு ஊக்கமளித்த கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 004-கர்ணனுக்கு அனுமதி அளித்த பீஷ்மர்; களத்திற்கு வந்து கௌரவர்களுக்கு ஊக்கமளித்த கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இப்படிப் பேசிக் கொண்டிருந்த அவனிடம் {கர்ணனிடம்}, முதிர்ந்தவரான குரு பாட்டன் {பீஷ்மர்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், காலம் மற்றும் இடம் ஆகிய இரண்டிற்கும் ஏற்றவகையில் இவ்வார்த்தைகளைச் சொன்னார் {பீஷ்மர் கர்ணனிடம்}: “ஆறுகளுக்குப் பெருங்கடலும், அனைத்து ஒளிரும் கோள்களுக்குச் சூரியனும், உண்மைக்கு நேர்மையானவர்களும் {நல்லோரும்}, விதைகளுக்கு வளமான நிலமும், அனைத்து உயிரினங்களுக்கு மேகங்களும் போலவே உன் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீ இருப்பாயாக. ஆயிரங்கண் கொண்டவனை {இந்திரனைச்} சார்ந்த தேவர்கள் போலவே உன் சொந்தங்கள் உன்னைச் சார்ந்து இருக்கட்டும் [1]. உன் எதிரிகளை அவமதிப்பவனாகவும், உன் நண்பர்களின் இன்பத்தை அதிகரிப்பவனாகவும் நீ இருப்பாயாக. சொர்க்கவாசிகளுக்கு விஷ்ணுவைப் போலவே கௌரவர்களுக்கு நீ இருப்பாயாக.

திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்புடையதைச் செய்ய விரும்பிய நீ, ஓ! கர்ணா, ராஜபுரத்திற்குச் சென்று, உன் கரங்களின் வல்லமை மற்றும் ஆற்றலினால் காம்போஜர்களை வீழ்த்தினாய். கிரிவ்ரஜத்தில் தங்கியிருந்த நக்னஜித் முதலான மன்னர்கள் பலர், அம்பஷ்டர்கள், விதேஹர்கள், கந்தர்வர்கள் [2] ஆகியோர் அனைவரும் உன்னால் வீழ்த்தப்பட்டனர். ஓ! கர்ணா, இமயத்தின் காட்டரண்களில் வசிப்போரான மூர்க்கமாகப் போரிடும் கிராதர்கள், உன்னால் முன்பொரு சமயம், துரியோதனனின் ஆளுகைக்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்கப்பட்டனர். அதே போல, உத்கலர்கள், மேகலர்கள், பௌண்ட்ரர்கள், கலிங்கர்கள், ஆந்திரர்கள், நிஷாதர்கள், திரிகர்த்தர்கள், பாஹ்லீகர்கள் ஆகியோர் அனைவரும் உன்னால் போரில் வீழ்த்தப்பட்டனர்.

ஓ! கர்ணா, துரியோதனனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் உந்தப்பட்ட நீ, பிற நாடுகள் பலவற்றிலும், ஓ! வீரா, பெரும் சக்தி கொண்ட பல மன்னர்களையும், குலங்களையும் வீழ்த்தினாய். ஓ! குழந்தாய் {கர்ணா}, சொந்தங்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்குத் துரியோதனன் எப்படியோ, அப்படியே நீயும் கௌரவர்கள் அனைவருக்கும் புகலிடமாக இருப்பாயாக. மங்கலகரமான வார்த்தைகளால் நான் உனக்கு உத்தரவிடுகிறேன், போ! எதிரிகளுடன் போரிடுவாயாக. போரில் குருக்களை வழிநடத்தி வெற்றியை துரியோதனனுக்கு அளிப்பாயாக. துரியோதனனைப் போலவே நீயும் எங்களது பேரனே {எங்களுக்குப் பேரன் போன்றவனே}. விதிப்படி துரியோதனனுக்கு நாங்கள் அனைவரும் எப்படியோ அப்படியே உனக்கும் ஆகிறோம்.

ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {கர்ணா}, ஒரே கருவில் பிறந்தோர் உறவைவிட, நேர்மையாளர்களிடம் நேர்மையாளர்கள் {நல்லோருடன் நல்லோர்} கொள்ளும் தோழமையே மேன்மையானது என்று விவேகிகள் சொல்கின்றனர். எனவே குருக்களுடன் நீ கொண்ட உறவை பொய்யாக்காமல், கௌரவப் படையை உனதாகவே கருதி, துரியோதனனைப் போலவே அதைப் பாதுகாப்பாயாக” {என்றார் பீஷ்மர்}.

இவ்வார்த்தைகளைக் கேட்ட விகர்த்தனன் {சூரியன்} மகன் கர்ணன், பீஷ்மரின் பாதத்தை வணங்கி, (அவரிடம் விடைபெற்று) கௌரவ வில்லாளிகள் அனைவரும் இருக்கும் இடத்திற்கு வந்தான். பரந்திருந்த அந்தப் பெரும் படையின் ஒப்பற்ற முகாமைக் கண்ட அவன் {கர்ணன்}, நல்ல ஆயுதங்களைத் தரித்தோரும், அகன்ற மார்புகளை உடையோருமான அந்த வீரர்களை (ஊக்க வார்த்தைகளால்) உற்சாகப்படுத்தத் தொடங்கினான். துரியோதனன் தலைமையிலான கௌரவர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.

வலிய கரங்களும், உயர் ஆன்மாவும் கொண்ட கர்ணன், போருக்காக, அந்த முழுப் படையின் தலைமையில் தன்னை நிறுத்திக் கொண்டதைக் கண்ட கௌரவர்கள் உரத்த கூச்சல்களாலும், {தங்கள்} கக்கங்களைத் {தோள்களைத்} தட்டும் ஒலிகளாலும், சிங்க முழக்கங்களாலும், விற்களின் நாணொலிகளாலும், இன்னும் பிற பல்வேறு ஒலிகளாலும் அவனை {கர்ணனை} வரவேற்றனர்” {என்றான் சஞ்சயன்}.

துரோணரை முன்மொழிந்த கர்ணன்! – துரோண பர்வம் பகுதி – 005-படைத்தலைவரை நியமிப்பதில் கர்ணனின் ஆலோசனையைக் கேட்ட துரியோதனன்; துரோணரை முன்மொழிந்த கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மனிதர்களில் புலியான கர்ணன் தன் தேரில் ஏறுவதைக் கண்ட துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்து இவ்வார்த்தைகளைச் சொன்னான், “உன்னால் பாதுகாக்கப்படும் இந்தப் படை, இப்போது உரிய தலைவனைக் கொண்டிருக்கிறது என நான் நினைக்கிறேன். எனினும், எது முறையானதோ, எது நமது சக்திக்குட்பட்டதோ, அஃது இப்போது தீர்மானிக்கப்பட வேண்டும்” என்றான் {துரியோதனன்}.

கர்ணன் {துரியோதனனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, மன்னர்களில் விவேகி என்பதால் நீயே எங்களுக்கு அதைச் சொல்வாயாக. ஒருவன் எதைக் காண்கிறானோ, அந்தக் காரியத்தை, நிச்சயம் வேறு ஒருவனால் சிறப்பாகக் காண முடியாது. {தலைவன் செய்ய வேண்டிய காரியத்தை, அவனை விடச் சிறப்பாக வேறு எவனும் அறியமாட்டான்}. நீ என்ன சொல்லப் போகிறாய் என்பதைக் கேட்க மன்னர்கள் அனைவரும் விரும்புகின்றனர். தகாத வார்த்தைகள் எதையும் நீ உச்சரிக்க மாட்டாய் என்ற உறுதி எனக்கு இருக்கிறது” என்றான் {கர்ணன்}.

துரியோதனன் {கர்ணனிடம்}, “வயது, ஆற்றல், கல்வி ஆகியவற்றைக் கொண்ட பீஷ்மர், நம் வீரர்கள் அனைவராலும் ஆதரிக்கப்பட்டு {இதுவரை} நமது படையின் தலைவராக இருந்தார். ஓ! கர்ணா, பெரும் மகிமையைக் கொண்ட அந்த உயர் ஆன்மா {பீஷ்மர்}, பெரும் எண்ணிக்கையிலான என் எதிரிகளைக் கொன்று, பத்து நாட்களாக நன்றாகப் போரிட்டு நம்மைக் காத்தார். அடைவதற்கு மிக அரிதான சாதனைகளை அவர் அடைந்தார். ஆனால் இப்போதோ அவர் {பீஷ்மர்} சொர்க்கத்திற்கு உயர இருக்கிறார். ஓ! கர்ணா, அவருக்குப் பிறகு நமது படைத்தலைவராக இருக்கத் தகுந்தவர் என யாரை நீ நினைக்கிறாய்?

கடலில் படகோட்டி இல்லாத படகைப் போல, ஓ! போரில் முதன்மையானவனே {கர்ணா}, போரில் படைத்தலைவனில்லாத ஒரு படை, போரில் குறுகிய காலம் கூட நிலைக்க முடியாது. உண்மையில், படகோட்டி இல்லாத படகைப் போலவோ, தேரோட்டி இல்லாத தேர் போலவோ தலைவனில்லாத படை அச்சத்தால் பீடிக்கப்பட்டு எங்கே வேண்டுமானாலும் செல்லக்கூடும் {சிதறி ஓடக்கூடும்}. தான் செல்லும் நாட்டின் வழிகளை அறியாத வணிகன் அனைத்து வகைத் துயர்களிலும் விழுவதைப் போலவே, தலைவனில்லாத படையும் அனைத்து வகைத் துயருக்கும் வெளிப்பட்டு நிற்கும்.

எனவே, நமது படையின் உயர் ஆன்ம வீரர்களுக்கு மத்தியில், சந்தனுவின் மகனுக்குப் {பீஷ்மருக்குப்} பின்பு தலைவராக இருக்கத் தகுந்த ஒருவரைக் கண்டுபிடிப்பாயாக. போரில் தகுந்த தலைவராக யாரை நீ கருதுகிறாயோ, அவரையே நாம் அனைவரும் சேர்ந்து தலைவராக்குவோம் என்பதில் ஐயமில்லை” என்றான் {துரியோதனன்}.

கர்ணன் {துரியோதனனிடம்}, “மனிதர்களில் முதன்மையான இவர்கள் அனைவரும் உயர் ஆன்மா கொண்டோரே. இவர்களில் ஒவ்வொருவரும் நமது தலைவராக இருக்கத் தகுந்தவரே. {அதில்} சிறு சோதனைக்குக் கூட இங்கு அவசியமில்லை. உன்னதமான பரம்பரைகளைச் சேர்ந்த இவர்கள், தாக்கும் கலைகளையும் அறிந்திருக்கின்றர். ஆற்றலும், புத்திக் கூர்மையும் கொண்ட இவர்கள் அனைவரும், போரில் பின்வாங்காதவர்களாகவும், விவேகம் கொண்டவர்களாகவும், சாத்திரங்களை அறிந்தோராகவும், கவனம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

எனினும், ஒரே நேரத்தில் அனைவரும் தலைவர்களாக இருக்க முடியாது. எவரிடம் சிறப்புத் தகுதிகள் இருக்கின்றனவோ, அந்த ஒருவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இவர்கள் அனைவரும் தங்களை ஒருவருக்கொருவர் இணையானவர்களாகவே கருதுகின்றனர். எனவே இவர்களில் எவராவது ஒருவர் கௌரவிக்கப்பட்டால் {தலைவனாக்கப்பட்டால்} மற்றவர்கள் அதிருப்தி கொள்வர்; அதற்கு மேலும் அவர்கள் உனக்கு நன்மை செய்ய விரும்பி போரிட மாட்டார்கள் என்பதும் தெளிவானதாகும்.

எனினும், இந்த வீரர்கள் அனைவருக்கும் (ஆயுதங்களில்) ஆசானுமான இவர் {துரோணர்}, வயதில் முதிர்ந்தவராகவும், மரியாதைக்குத் தகுந்தவருமாக இருக்கிறார். எனவே, ஆயுதங்கள் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான இந்தத் துரோணரே தலைவராக்கப்பட வேண்டும். பிரம்மத்தை அறிந்தோரில் முதன்மையானவரும், சுக்ரனுக்கோ, பிருஹஸ்பதிக்கோ இணையானவரான வெல்லப்பட முடியாத இந்தத் துரோணர் இங்கே இருக்கையில், தலைவராகத் தகுந்தவன் வேறு எவன் இருக்கிறான்?

ஓ! பாரதா {துரியோதனா}, உன் படையில் உள்ள மன்னர்கள் அனைவரிலும், துரோணரைப் பின்தொடர்ந்து போருக்குச் செல்லாத ஒரு வீரனும் இருக்க மாட்டான் [1]. படைத்தலைவர்கள் அனைவரிலும், ஆயுததாரிகள் அனைவரிலும், புத்திசாலி மனிதர்கள் அனைவரிலும் இந்தத் துரோணர் முதன்மையானவர் ஆவார். அதையும் தவிர, ஓ! மன்னா {துரியோதனா}, இவர் (ஆயுதங்களில்) உனது ஆசானாகவும் இருக்கிறார்.எனவே, ஓ! துரியோதனா, அசுரர்களை வீழ்த்துவதற்காக, போரில் கார்த்திகேயனை {முருகனைத்} தங்கள் தலைவனாக்கிய தேவர்களைப் போல, தாமதமில்லாமல், இவரை உனது படைகளுக்குத் தலைவராகக் கொள்வாயாக” என்றான் {கர்ணன்}” {என்றான் சஞ்சயன்}. 

துரோணரை வேண்டிய துரியோதனன்! – துரோண பர்வம் பகுதி – 006-படைத்தலைவராகும்படி துரோணரை வேண்டிய துரியோதனன்; துரியோதனனின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்த கௌரவப் படையினர்..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கர்ணன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன், துருப்புகளுக்கு மத்தியில் நின்றிருந்த துரோணரிடம் இதைச் சொன்னான்.

துரியோதனன் {துரோணரிடம்}, “உமது பிறப்பு வகையின் மேன்மை, நீர் பிறந்த உன்னதக் குலம், உமது கல்வி, வயது, புத்திக்கூர்மை, ஆற்றல், திறன், வெல்லப்பட இயலாத தன்மை, உலகக் காரியங்களின் உமது அறிவு, கொள்கை, தன்னை வென்ற தன்மை, உமது தவத்துறவு, உமது நன்றியறிதல், அனைத்து அறங்களிலும் மேன்மை ஆகியவற்றைக் கொண்ட உம்மைப் போல நல்ல தலைவராகத் தகுந்தவர் இம்மன்னர்களில் வேறு யாருமில்லை. எனவே, தேவர்களைக் காக்கும் வாசவனை {இந்திரனைப்} போல எங்களை நீர் காப்பீராக.

ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {துரோணரே}, உம்மைத் தலைவராகக் கொண்டு எங்கள் எதிரிகளை வீழ்த்த நாங்கள் விரும்புகிறோம். ருத்ரர்களில் காபாலி போலவும், வசுக்களில் பாவகன் போலவும், யக்ஷர்களில் குபேரன் போலவும், மருத்துக்களில் வாசவன் {இந்திரன்} போலவும், பிராமணர்களில் வசிஷ்டர் போலவும், ஒளிக்கோள்களில் சூரியன் போலவும், பித்ருக்களில் யமன் போலவும், நீர்வாழ்வனவற்றில் வருணன் போலவும், விண்மீன்களில் நிலைவைப் போலவும், திதியின் மகன்களில் உசனஸ் போலவும், படைத் தலைவர்கள் அனைவரிலும் முதன்மையானவராக நீர் இருக்கிறீர். எனவே, நீர் எங்கள் தலைவராவீராக.

ஓ! பாவமற்றவரே {துரோணரே}, இந்தப் பதினோரு {11} அக்ஷௌஹிணி படைகளும் உமது ஆணைகளுக்குக் கீழ்ப்படியட்டும். இத்துருப்புகளை வியூகத்தில் அணிவகுத்து, தானவர்களைக் கொல்லும் இந்திரனைப் போல நம் எதிரிகளை நீர் கொல்வீராக. தேவர்களின் படைகளுக்குத் தலைமையில் செல்லும் பாவகனின் மகனை (கார்த்திகேயனைப்) போல, எங்கள் அனைவருக்கும் தலைமையில் நீர் செல்வீராக. தலைமைக் காளையைப் பின்தொடர்ந்து செல்லும் காளைகளைப் போல, போரில் நாங்கள் உம்மைப் பின்தொடர்வோம் [1]. கடுமையானவரும், பெரும் வில்லாளியுமான நீர், எங்களுக்குத் தலைமையில் நின்று வில்வளைப்பதைக் கண்டால் அர்ஜுனன் தாக்கமாட்டான். ஓ! மனிதர்களில் புலியே {துரோணரே}, நீர் எங்கள் தலைவரானால், தொண்டர்கள் மற்றும் உறவினர்களுடன் கூடிய யுதிஷ்டிரனை நான் போரில் வீழ்த்துவேன் என்பதில் ஐயமில்லை” என்றான் {துரியோதனன்}.சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “துரியோதனன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, (கௌரவப் படையின்) மன்னர்கள் அனைவரும் “துரோணருக்கு வெற்றி” என்று கூச்சலிட்டனர். மேலும் அவர்கள் தங்கள் சிங்க முழக்கங்களால் உமது மகனை {துரியோதனனை} இன்புறச் செய்தனர். மகிழ்ச்சியால் நிறைந்த துருப்புகளும், துரியோதனனைத் தங்கள் தலைமையில் கொண்டு, பெரும்புகழை வெல்ல விரும்பி, அந்த அந்தணர்களில் சிறந்தவரை {துரோணரைப்} புகழத் தொடங்கினர். பிறகு, துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.

படைத்தலைவரானார் துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 007-திருஷ்டத்யும்னனைத் தன்னால் கொல்ல இயலாது என்று சொன்ன துரோணர்; படைத்தலைவராக நிறுவப்பட்ட துரோணர்; மகிழ்ச்சியடைந்த கௌரவப் படை; பதினோராம் நாள் போர் தொடங்கியது; கௌரவர்கள் சகட வியூகமும், பாண்டவர்கள் கிரௌஞ்ச வியூகமும் அமைத்துப் போரிட்டது; போரில் ஒருவரையொருவர் நேருக்கு நேர் கண்ட அர்ஜுனனும் கர்ணனும்; கௌரவத் தரப்பில் காணப்பட்ட தீய சகுனங்கள்; பாண்டவப் படையை நோக்கி விரைந்த துரோணர்; கௌரவப் படையைக் கலங்கடித்த திருஷ்டத்யும்னன்; பாண்டவப் படையை மீண்டும் மீண்டும் பிளந்த துரோணர்…

துரோணர் {துரியோதனனிடம்}, “ஆறு அங்கங்களுடன் கூடிய வேதத்தை நானறிவேன். மனித விவகாரங்களின் அறிவியலையும் {தண்டநீதியையும்} நானறிவேன். சைப்ய ஆயுதத்தையும், பல்வேறு வகைகளிலான பிற ஆயுதங்களையும் நானறிவேன். வெற்றியில் விருப்பம் கொண்டு, என்னிடம் எந்தக் குணங்கள் இருக்கின்றன என உன்னால் கூறப்பட்டனவோ அவையனைத்தையும் உண்மையில் வெளிப்படுத்த முயற்சி செய்து பாண்டவர்களோடு நான் போர்புரிவேன். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, என்னால் பிருஷதன் மகனை {துருபதன் மகன் திருஷ்டத்யும்னனைக்} கொல்ல இயலாது. ஓ! மனிதர்களில் காளையே {துரியோதனா}, அவன் {திருஷ்டத்யும்னன்},  என்னைக் கொல்லவே படைக்கப்பட்டவனாவான். நான் பாண்டவர்களுடன் போரிட்டுக் கொண்டே சோமகர்களைக் கொல்வேன். பாண்டவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் மகிழ்ச்சியான இதயங்களோடு என்னுடன் போரிட மாட்டார்கள்” என்றார் {துரோணர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படித் துரோணரால் அனுமதிக்கப்பட்ட உமது மகன் {துரியோதனான்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்திரங்களில் பரிந்துரைக்கப்படும் சடங்குகளின் படி துரோணரைப் படைத்தலைவராகச் செய்தான். துரியோதனனால் தலைமைதாங்கப்பட்ட (கௌரவப் படையின்) மன்னர்கள், பழங்காலத்தில் இந்திரனால் தலைமை தாங்கப்பட்ட தேவர்கள், ஸ்கந்தனைப் {முருகனை தேவர்களின் படைத்தலைவனாகப்} பதவியேற்கச் {அபிஷேகம்} செய்ததைப் போல, படைகளின் தலைவராகத் துரோணரைப் பதவியேற்கச் செய்தனர். துரோணரைத் தலைமையில் நிறுவியதும், பேரிகைகளின் ஒலிகளிலும், சங்குகளின் உரத்த முழக்கத்திலும் படையின் மகிழ்ச்சி வெளிப்பட்டது.

பிறகு, ஒரு பண்டிகை நாளில் காதுகளுக்கு இனிமையான வாழ்த்துகளைக் கேட்பது போன்ற கூச்சல்களாலும், ஜெயம் என்று சொல்லும் பிராமணர்களில் முதன்மையானோரின் கூச்சல்களாலும், மனம் நிறைந்த பிராமணர்களின் மங்கலகரமான வழிபாட்டாலும், கோமாளிகளின் {நடிகர்களின்} நடனத்தாலும் துரோணர் முறையாகக் கௌரவிக்கப்பட்டார். மேலும், அந்தக் கௌரவப் போர்வீரர்கள் பாண்டவர்கள் ஏற்கனவே வீழ்த்தப்பட்டதாகவே கருதினர்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு, அந்த வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்}, தலைமைப் பொறுப்பை அடைந்து, போருக்காகத் துருப்புகளை வியூகத்தில் அணிவகுக்கச் செய்து, எதிரியுடன் போரிட விரும்பி உமது மகன்களுடன் புறப்பட்டார். கவசம் தரித்தவர்களான சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, கலிங்கர்களின் தலைவன் {சுருதாயுதன்}, உமது மகன் விகர்ணன் ஆகியோர் (துரோணரின்) வலப்பக்கத்தில் நின்றனர். சகுனி, காந்தாரக் குலத்தைச் சேர்ந்தோரும், பளபளக்கும் வேல்களால் போரிடுவோருமான குதிரை வீரர்களில் முதன்மையானோர் பலரோடும் சேர்ந்து அவர்களுக்கு {ஜெயத்ரதன் முதலானோருக்கு} ஆதரவாகச் செயல்படச் சென்றான். கிருபர், கிருதவர்மன், சித்திரசேனன், துச்சாசனன் தலைமையிலான விவிம்சதி ஆகியோர்{துரோணரின்} இடப்பக்கத்தைப் பாதுகாக்க கடுமையாக முயன்றனர். சுதக்ஷிணன் தலைமையிலான காம்போஜர்கள், சகர்கள், யவனர்கள் ஆகியோர் பெரும் வேகம் கொண்ட குதிரைகளோடு பின்னவர்களை {கிருபர் முதலானோரை} ஆதரிக்கச் சென்றனர்.

மத்ரர்கள், திரிகர்த்தர்கள், அம்பஷ்டர்கள், மேற்கத்தியர்கள், வடக்கத்தியர்கள், மாலவர்கள், சூரசேனர்கள், சூத்ரர்கள், மலதர்கள், சௌவீரர்கள், கைதவர்கள், கிழக்கத்தியர்கள், தெற்கத்தியர்கள் ஆகியோர் உமது மகனையும் (துரியோதனனையும்), சூதனின் மகனையும் (கர்ணனையும்) தங்கள் தலைமையில் நிறுத்தி, {படையின்} பின்பக்க காவலாக அமைந்தனர் [1]. வில்லாளிகளின் தலைமையில் சென்ற விகர்த்தனன் மகன் கர்ணன் (முன்னேறும்) படைக்குப் பலத்தைக் கூட்டி, அந்தப் படையின் வீரர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தான். சுடர்மிக்கதும், பெரியதும், உயரமானதும், யானை கட்டும் கயிறு பொறிக்கப்பட்டதுமான அவனது கொடிமரம், அவனது படைப்பிரிவுகளை மகிழ்ச்சியூட்டும்படி, சூரியப்பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

கர்ணனைக் கண்ட யாரும், பீஷ்மரின் மரணத்தால் ஏற்பட்ட பேரிடரைக் கருதவில்லை. குருக்களோடு சேர்ந்த மன்னர்கள் அனைவரும் துயரில் இருந்து விடுபட்டனர். பெரும் எண்ணிக்கையிலான வீரர்கள் ஒன்றுகூடி, தங்களுக்குள், “கர்ணனைக் களத்தில் காணும் பாண்டவர்களால் போரில் நிற்க இயலாது. உண்மையில், கர்ணன், வாசவனைத் {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களையே கூடப் போரில் வீழ்த்தக் கூடியவனாவான். எனவே, சக்தியும் ஆற்றலுமற்ற பாண்டுவின் மகன்களைக் குறித்து என்ன சொல்வது? வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீஷ்மர், போரில் பார்த்தர்களைத் தப்ப விட்டார். எனினும், கர்ணன் தன் கூரிய கணைகளால் போரில் அவர்களைக் கொல்வான்” என்றனர்.

இப்படி ஒருவரோடொருவர் பேசிக்கொண்ட அவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து, ராதையின் மகனை {கர்ணனை} வழிபட்டபடியும், பாராட்டியபடியும் முன்னேறிச் சென்றனர். நமது படையைப் பொறுத்தவரை, துரோணரால் அது சகட (வாகன) வடிவில் அணிவகுக்கப்பட்டது; அதே வேளையில் நம் எதிரிகளின் வியூகமோ, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் மகிழ்ச்சியோடிருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் அது கிரௌஞ்ச (நாரை) வடிவத்தில் அணிவகுக்கப்பட்டது.

அவர்களது வியூகத்தின் தலைமையில் மனிதர்களில் முதன்மையானோரான விஷ்ணு {கிருஷ்ணன்}, தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் குரங்கின் வடிவம் பொறிக்கப்பட்ட தங்கள் கொடியைப் பறக்கவிட்டபடி நின்றனர். படை முழுமைக்கும் திமிலைப் போன்றதும், வில்லாளிகள் அனைவருக்கும் புகலிடமானதும், அளவிலா சக்தி கொண்டதுமான பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்தக் கொடி, வானத்தில் மிதந்த போதே, உயர் ஆன்ம யுதிஷ்டிரனின் படை முழுமைக்கும் ஒளியூட்டுவதைப் போலத் தெரிந்தது. பெரும் புத்திக் கூர்மை கொண்ட பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்தக் கொடி யுக முடிவில் உலகத்தை எரிப்பதற்காக உதிக்கும் சுடர்மிக்கச் சூரியனை ஒத்திருப்பதாகத் தெரிந்தது.

வில்லாளிகளுக்கு மத்தியில் அர்ஜுனன் முதன்மையானவன்; விற்களுக்கு மத்தியில் காண்டீவம் முதன்மையானது; உயிரினங்களுக்கு மத்தியில் வாசுதேவனே முதன்மையானவன்; அனைத்து வகைச் சக்கரங்களுக்கும் மத்தியில் சுதர்சனமே முதன்மையானது. சக்தியின் பண்புருவங்களான இந்த நான்கையும் சுமந்து கொண்டு, வெண் குதிரைகள் பூட்டப்பட்ட அந்தத் தேர், (தாக்குவதற்காக) உயர்த்தப்பட்ட மூர்க்கமான சக்கரத்தைப் போல, (எதிரி) படையின் முன்னணியில் தன் நிலையை ஏற்றது.

கர்ணன் உமது படையின் முகப்பிலும், தனஞ்சயன் {அர்ஜுனன்} பகையணியின் முகப்பிலும் என இப்படியே மனிதர்களில் முதன்மையான அவ்விருவரும் தங்கள் தங்கள் படைகளின் முகப்பில் நின்றனர். கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பியவர்களுமான கர்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகியோர் அந்தப் போரில் ஒருவரையொருவர் பார்த்தனர்.

பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்}, பெரும் வேகத்துடன் போரில் முன்னேறியபோது, பூமியானது பேரொலியுடன் அழுது நடுங்குவதாகத் தெரிந்தது. பழுப்பு நிறத்தாலான பட்டு கவிகைக்கு ஒப்பானதும், காற்றால் எழுப்பப்பட்டதுமான அடர்த்தியான புழுதியானது வானத்தையும் சூரியனையும் மறைத்தது. ஆகாயம் மேகமற்றதாக இருப்பினும், இறைச்சித்துண்டுகள், எலும்புகள் மற்றும் இரத்தத்தாலான மழை பொழிந்தது. ஆயிரக்கணக்கான கழுகுகள் {கிருத்ரங்கள்}, பருந்துகள், கொக்குகள், கங்கங்கள் {ஸ்யேனங்கள் – ஒரு வகைக் கழுகு}, காக்கைகள் ஆகியன (கௌரவத்) துருப்புகளின் மீது தொடர்ந்து விழத் தொடங்கின. பேரொலியுடன் நரிகள் ஊளையிட்டன; மூர்க்கமானவையும் பயங்கரமானவையுமான பறவைகள் பல இறைச்சியுண்டு, இரத்தம் குடிக்கும் விருப்பத்தால் உமது படைக்கு இடதுபுறத்தில் சுற்றின [2], பேரொலியோடும், நடுக்கத்தோடும் கூடியவையும், சுடர்மிக்கவையுமான பல எரி கோள்கள், (வானத்துக்கு) ஒளியூட்டியபடி, தங்கள் வாலினால் பெரும் பகுதிகளைச் சூழ்ந்து கொண்டு பிரகாசத்துடன் களத்தில் விழுந்தன. (கௌரவப்) படையின் தலைவர் {துரோணர்} புறப்பட்டபோது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சூரியனின் அகன்ற வட்டில் இடியோசைகளுடன் கூடிய மின்னலின் கீற்றுகளை வெளியிடுவதாகத் தெரிந்தது. கடுமையானதும், வீரர்களின் அழிவைக் குறிப்பதான இவையும், இன்னும் பல சகுனங்களும் போரின் போது காணப்பட்டன.

பிறகு, ஒருவரையொருவர் கொல்ல விரும்பிய குருக்கள் மற்றும் பாண்டவர்களின் துருப்புகளுக்கு இடையிலான மோதல் தொடங்கியது. அங்கே எழுந்த ஆரவாரத்தின் பேரொலி முழுப் பூமியையும் நிறைப்பதாகத் தெரிந்தது. ஒருவரோடொருவர் சினம் கொண்டவர்களும், தாக்குவதில் திறம் கொண்டவர்களுமான பாண்டவர்களும், கௌரவர்களும், வெற்றியின் மீது கொண்ட விருப்பத்தால் கூரிய ஆயுதங்கள் கொண்டு ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.

பிறகு, சுடர்மிக்கப் பிரகாசத்தைக் கொண்ட அந்தப் பெரும் வில்லாளி {துரோணர்}, நூற்றுக்கணக்கான கூரிய கணைகளை இறைத்தபடி பெரும் மூர்க்கத்துடன் பாண்டவத் துருப்புகளை நோக்கி விரைந்தார். துரோணர் தங்களை நோக்கி விரைவதைக் கண்ட பாண்டவர்களும், சிருஞ்சயர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மாரிக்கு மேல் மாரியாக (தனித்துவமான தொகுப்புகளாலான) கணைகளைக் கொண்டு அவரை வரவேற்றனர். துரோணரால் கலங்கடிக்கப்பட்டு, பிளக்கப்பட்ட பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்களின் அந்தப் பெரும்படை, காற்றால் பிளக்கப்பட்ட கொக்கு வரிசைகளைப் போல உடைந்தனர். அந்தப் போரில் தெய்வீக ஆயுதங்கள் பலவற்றைத் தூண்டி அழைத்த துரோணர், குறுகிய காலத்திற்குள்ளாகவே பாண்டவர்களையும், சிருஞ்சயர்களையும் பீடித்தார்.

திருஷ்டத்யும்னன் தலைமையிலான பாஞ்சாலர்கள், வாசவனால் {இந்திரனால்} கொல்லப்பட்ட தானவர்களைப் போலத் துரோணரால் கொல்லப்பட்டு அந்தப் போரில் நடுங்கினர். பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனும், தெய்வீக ஆயுதங்களை அறிந்த வீரனுமான அந்த யக்ஞசேனன் மகன் (திருஷ்டத்யும்னன்), துரோணரின் படைப்பிரிவில் பல இடங்களைத் தன் கணை மாரியால் பிளந்தான். அந்த வலிமைமிக்கப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன் கணைமாரியால் துரோணரின் கணை மாரியை கலங்கடித்துக் குருக்களுக்கு மத்தியில் பெரும் படுகொலைகளைச் செய்தான்.

போரில் {சிதறி ஓடிய} தன் மக்களுக்குப் பின் சென்ற வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரோணர், அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி விரைந்தார். கோபத்தால் தூண்டப்பட்ட மகவத் {இந்திரன்}, பெரும் சக்தியுடன் தன் கணைமாரியைத் தானவர்கள் மீது பொழிந்ததைப் போல அவர் {துரோணர்}, பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} மீது அடர்த்தியான கணைமாரியைப் பொழிந்தார். துரோணரின் கணைகளால் அசைக்கப்பட்ட பாண்டவர்களும், சிருஞ்சயர்களும், சிங்கத்தால் தாக்கப்பட்ட சிறு விலங்கின் கூட்டத்தைப் போல மீண்டும் மீண்டும் உடைந்தனர். வலிமைமிக்கத் துரோணர், அந்தப் பாண்டவப் படையை நெருப்பு வளையமாகச் சுற்றினர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவை அனைத்தையும் காண அற்புதமாக இருந்தது.

வானத்தில் காணப்படும் {கந்தர்வ} நகரத்துக்கு ஒப்பானதும், (படைகளின்) அறிவியலில் {சாத்திரங்களில்} கண்டபடி தேவையான அனைத்துப் பொருட்களுடன் அமைக்கப்பட்டதும், காற்றில் மிதக்கும் கொடியைக் கொண்டதும், சடசடப்பொலியைக் களத்தில் எதிரொலிக்கச் செய்வதும், (நன்கு) தூண்டப்பட்ட குதிரைகளைக் கொண்டதும், ஸ்படிகம் போன்ற பிரகாசமான கொடிமரத்தைக் கொண்டதும், பகைவரின் இதயங்களில் நடுக்கத்தை ஏற்படுத்துவதுமான தன் சிறந்த தேரில் சென்ற துரோணர் அவர்களுக்கு {எதிரி படையினரின்} மத்தியில் பெரும் படுகொலைகளைச் செய்தார்” {என்றான் சஞ்சயன்}.

துரோணர் கொல்லப்பட்டார்! – துரோண பர்வம் பகுதி – 008-துரோணர் உண்டாக்கிய அழிவு; துரோணரைத் தடுக்கும்படி பாண்டவர்களைத் தூண்டிய யுதிஷ்டிரன்; பாண்டவப்படையைக் கலங்கடித்த துரோணர் திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “குதிரைகள், {அவற்றைச்} செலுத்துபவர்கள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியவற்றை இப்படிக் கொல்லும் துரோணரைக் கண்ட பாண்டவர்கள், கவலைக்குள்ளாகாமல் அவரை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர் [1]. பிறகு, திருஷ்டத்யும்னன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரிடம் பேசிய மன்னன் யுதிஷ்டிரன், அவர்களிடம், “அந்தக் குடத்தில் பிறந்தவர் (துரோணர்), நம் ஆட்களால் அனைத்துப் பக்கங்களிலும் கவனமாகச் சூழப்பட்டுத் தடுக்கப்படட்டும்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான அர்ஜுனனும், பிருஷதன் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, தங்கள் தொண்டர்களுடன் சேர்ந்து, துரோணர் வந்ததும் அவர்கள் அனைவரும் பின்னவரை {துரோணரை} வரவேற்றனர் {எதிர்த்தனர்}.

மகிழ்ச்சியால் நிறைந்திருந்த கேகய இளவரசர்கள், பீமசேனன், சுபத்ரையின் மகன் {அபிமன்யு}, கடோத்கசன், யுதிஷ்டிரன், இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்), மத்ஸ்யர்களின் ஆட்சியாளன் {விராடன்}, துருபதன் மகன், திரௌபதியின் மகன்கள் (ஐவர்), திருஷ்டகேது, சாத்யகி, கோபம் நிறைந்த சித்திரசேனன், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுத்சு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டு மகன்களை {பாண்டவர்களைப்} பின்தொடர்ந்த பிற மன்னர்கள் ஆகியோர் அனைவரும் தங்கள் குலத்துக்கும் {குலப்பெருமைக்கும்} ஆற்றலுக்கும் தக்கபடி பல்வேறு சாதனைகளை அடைந்தனர். அந்தப் பாண்டவ வீரர்களால் அந்தப் போரில் காக்கப்படும் படையைக் கண்ட பரத்வாஜர் மகன் {துரோணர்}, கோபத்தால் தன் கண்களைத் திருப்பி, அதன் மீது தன் பார்வையைச் செலுத்தினார்.

சினத்தால் தூண்டப்பட்டவரும், போரில் வெல்லப்பட முடியாதவருமான அந்த வீரர் {துரோணர்}, தன் தேரில் நின்றபடியே, பெரும் மேகத்திரள்களை அழிக்கும் சூறாவளியைப் போல அந்தப் பாண்டவப் படையை எரித்தார். தேர்வீரர்கள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், யானைகள் ஆகியவற்றின் மீது அனைத்துப் பக்கங்களிலும் விரைந்த துரோணர், வயதில் கனம் கொண்டிருந்தாலும் ஓர் இளைஞனைப் போலக் களத்தில் மூர்க்கமாகத் திரிந்தார். காற்றைப் போல வேகமானவையும், அற்புத இனத்தைச் சேர்ந்தவையும், இரத்தத்தால் நனைந்தவையுமான அவரது {துரோணரது} சிவந்த குதிரைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அழகான தோற்றத்தை அடைந்தது.

முறையாக நோன்புகளை நோற்கும் அந்த வீரர் {துரோணர்}, கோபத்தால் தூண்டப்பட்டு யமனைப் போல அவர்களை அழிப்பதைக் கண்ட யுதிஷ்டிரனின் படைவீரர்கள் அனைத்துப்பக்கங்களிலும் தப்பி ஓடினர். சிலர் தப்பி ஓடினர், சிலர் திரும்பினர், சிலர் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர், மேலும் சிலர் அந்தக் களத்திலேயே நின்றனர், அவர்கள் உண்டாக்கிய ஒலி கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது. வீரர்களிடம் மகிழ்ச்சியை உண்டாக்கி, மருண்டவர்களிடம் அச்சத்தை உண்டாக்கிய அவ்வொலி முழு வானத்தையும் பூமியையும் நிறைத்தது.

மீண்டும் அந்தப் போரில் தன் பெயரை அறிவித்துக் கொண்ட துரோணர், எதிரிகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்தபடி தன்னை மிகக் கடுமையானவராக அமைத்துக் கொண்டார். உண்மையில், அந்த வலிமைமிக்கத் துரோணர் முதிர்ந்தவராக இருப்பினும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இளைஞனைப் போலச் செயல்பட்டு, பாண்டுமகனின் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் காலனைப் போலத் திரிந்து கொண்டிருந்தார். தலைகளையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கடங்களையும் துண்டித்த அந்தக் கடும் வீரர் {துரோணர்}, தேர்த்தட்டுகள் பலவற்றை வெறுமையானவை ஆக்கி சிங்க முழக்கமிட்டார்.

அவரது {துரோணரது} மகிழ்ச்சி ஆரவாரத்தின் விளைவாகவும், அவரது கணைகளின் சக்தியாலும், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, குளிரால் பீடிக்கப்பட்ட மாட்டு மந்தையைப் போல (எதிரிப் படையின்) வீரர்கள் நடுங்கினர். அவரது தேரின் சடசடப்பொலியின் விளைவாகவும், அவரது நாண் கயிற்றின் ஒலியாலும், அவரது வில்லின் நாணொலியாலும் மொத்த ஆகாயமே பேரொலியால் எதிரொலித்தது. அந்த வீரரின் {துரோணரின்} கணைகள், அவரது வில்லில் இருந்து ஆயிரக்கணக்கில் ஏவப்பட்டு, {அடிவானின்} திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்தபடி, (எதிரியின்) யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படை மீது பொழிந்தன.

பிறகு, பெரும் சக்தி கொண்ட வில்லைத் தரித்திருந்தவரும், தழல்களை ஆயுதங்களாகக் கொண்ட நெருப்புக்கு ஒப்பானவருமான துரோணரைப் பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் துணிவுடன் அணுகினர். அவர் {துரோணர்}, அவர்களது யானைகள், காலாட்படைவீரர்கள் மற்றும் குதிரைகளுடன் அவர்களை யமலோகம் அனுப்பத் தொடங்கினார். அந்தத் துரோணர் பூமியை இரத்தச் சகதியாக்கினார்.

தன் வலிமைமிக்க ஆயுதங்களை இறைத்தபடி, அனைத்துப் பக்கங்களிலும் அடர்த்தியான தன் கணைகளை ஏவியபடி இருந்த துரோணர், விரைவில் தன் கணைமாரியைத் தவிர வேறேதும் தெரியாதவாறு {அடிவானின்} திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தார். காலாட்படைவீரர்கள், தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுக்கிடையே துரோணரின் கணைகளைத் தவிர வேறேதும் காணப்படவில்லை. தேர்களுக்கு மத்தியில் மின்னலின் கீற்றுகள் அசைவதைப் போல அவரது தேரின் கொடிமரம் மட்டுமே காணப்பட்டது [2]. தளர்வுக்கு உட்படுத்த முடியாத ஆன்மா கொண்ட {மனம் தளராத} துரோணர், வில்லையும் கணைகளையும் தரித்துக் கொண்டு, கேகய இளவரசர்கள் ஐவரையும், பாஞ்சாலர்களின் ஆட்சியாளனையும் {துருபதனையும்} பீடித்து, யுதிஷ்டிரனின் படைப்பிரிவை எதிர்த்து விரைந்தார்.பிறகு, பீமசேனன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, சிநியின் பேரன் {சாத்யகி}, துருபதன் மகன்கள், காசியின் ஆட்சியாளனான சைப்யன் மகன் [3], சிபி மகிழ்ச்சியுடனும் உரத்த முழக்கங்களுடனும் தங்கள் கணைகளால் அவரை {துரோணரை} மறைத்தனர். தங்கச் சிறகுகளால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகள் துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்டு, அந்த வீரர்களின் இளம் குதிரைகள் மற்றும் யானைகளின் உடலைத் துளைத்து, தங்கள் சிறகுகளை இரத்தத்தால் பூசிக் கொண்டு பூமிக்குள் நுழைந்தன. கணைகளால் துளைக்கப்பட்டு வீழ்ந்திருக்கும் போர்வீரர்களின் கூட்டங்கள், தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவை விரவிக் கிடந்த அந்தப் போர்க்களமானது, கார்மேகத் திரள்களால் மறைக்கப்பட்ட ஆகாயம் போலத் தெரிந்தது.பிறகு துரோணர், உமது மகன்களின் செழிப்பை விரும்பி, சாத்யகி, பீமன், தனஞ்சயன், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, துருபதன், காசியின் ஆட்சியாளன் ஆகியோரின் படைப்பிரிவுகளை நசுக்கி, போரில் பல்வேறு வீரர்களைத் தரையில் வீழ்த்தினார். உண்மையில், அந்த உயர் ஆன்ம வீரர் {துரோணர்} இவற்றையும் இன்னும் பல சாதனைகளையும் அடைந்து, ஓ! குருக்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, யுகத்தின் முடிவில் எழும் சூரியனைப் போல உலகத்தை எரித்துவிட்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} சொர்க்கத்திற்குச் சென்றார். பகைக்கூட்டங்களைக் கலங்கடிப்பவரும், தங்கத் தேரைக் கொண்டவருமான அந்த வீரர் {துரோணர்}, பெரும் சாதனைகளை அடைந்து, போரில் பாண்டவ வீரர்களின் கூட்டத்தை ஆயிரக்கணக்கில் கொன்று, இறுதியாகத் திருஷ்டத்யும்னனால் தானே கொல்லப்பட்டார்.

உண்மையில், துணிச்சல் மிக்கவர்களும், புறமுதுகிடாதவர்களுமான இரண்டு {2} அக்ஷௌஹிணிக்கு [4] மேலான படை வீரர்களைக் கொன்றவரும், புத்திக்கூர்மை மிக்கவருமான அந்த வீரர் {துரோணர்}, இறுதியாக உயர்ந்த நிலையை அடைந்தார். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அடைவதற்கு அரிதான மிகக் கடினமான சாதனைகளை அடைந்த அவர் {துரோணர்}, இறுதியில் கொடுஞ்செயல்புரிந்த பாஞ்சாலர்களாலும் பாண்டவர்களாலும் கொல்லப்பட்டார்.போரில் ஆசான் {துரோணர்} கொல்லப்பட்ட போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அனைத்து உயிரினங்கள் மற்றும் துருப்புகள் அனைத்தின் உரத்த ஆரவாரம் ஆகாயத்தில் எழுந்தது. “ஓ! இது நிந்திக்கத்தக்கது” என்ற உயிரினங்களின் கதறல் வானத்திலும், பூமியிலும், இவைகளுக்கு இடைப்பட்ட இடைவெளியிலும், திசைகள் மற்றும் துணைத்திசைகளிலும் எதிரொலித்துக் கேட்கப்பட்டது. தேவர்கள், பித்ருக்கள், அவரது {துரோணரின்} நண்பர்கள் ஆகிய அனைவரும் அந்த வலிமைமிக்க வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்} இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்டனர். வெற்றி அடைந்த பாண்டவர்கள் சிங்க முழக்கங்கள் செய்தனர். அவர்களது உரத்த கூச்சலால் பூமியே நடுங்கியது” {என்றான் சஞ்சயன்}.

உணர்வுகளை இழந்த திருதராஷ்டிரன்! – துரோண பர்வம் பகுதி – 009-துரோணரின் பெருமைகளைச் சொல்லி வருந்திய திருதராஷ்டிரன், தன் உணர்வுகளை இழந்து மயங்கியது..

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் அதிகமாக ஆயுதங்களை அறிந்த துரோணரைப் பாண்டவர்களும் சிருஞ்சயர்களும் போரில் எவ்வாறு கொன்றனர்? (போரிடும் சமயத்தில்) அவரது தேர் உடைந்ததா? (எதிரியைத்) தாக்கும்போது அவரது வில் ஒடிந்ததா? அல்லது, துரோணர் கவனக்குறைவாக இருந்த நேரத்தில் அவர் தனது மரண அடியைப் பெற்றாரா?

ஓ! குழந்தாய் {சஞ்சயா}, எதிரிகளால் அவமதிக்கத் தகாத வீரரும், தங்கச் சிறகுகள் கொண்ட அடர்த்தியான கணைகளின் மாரியை இறைப்பவரும், கர நளினம் {லாகவம்} கொண்டவரும், பிராமணர்களில் முதன்மையானவரும், அனைத்தையும் சாதித்தவரும், போர்க்கலையின் அனைத்து வகைகளையும் அறிந்தவரும், பெரும் தூரத்திற்குத் தன் கணைகளை ஏவவல்லவரும், தற்கட்டுப்பாடு கொண்டவரும், ஆயுதங்களின் பயன்பாட்டில் பெரும் திறம்பெற்றவரும், தெய்வீக ஆயுதங்களைத் தரித்தவரும், மங்காத புகழ் கொண்டவரும், எப்போதும் கவனம் நிறைந்தவரும், போரில் கடுஞ்சாதனைகளை அடைந்தவருமான அந்த வலிமைமிக்க வீரரை {துரோணரைப்} பாஞ்சால இளவரசனான அந்தப் பிருஷதன் மகன் (துருபதன் மகன் திருஷ்டத்யும்னன்) எவ்வாறு கொன்றான்?

நால்வகை ஆயுதங்களைக் கொண்டவரான அந்த வீரர், ஐயோ!, வில்லாளித்தன்மை கொண்ட அந்தத் துரோணர் கொல்லப்பட்டார் என்று நீ சொல்வதாலும், உயர் ஆன்ம பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்}, துணிச்சல்மிக்கத் துரோணரே கொல்லப்பட்டாரென்பதாலும், முயற்சியை விட விதியே வலிமையானது என வெளிப்படையாக எனக்குத் தெரிகிறது. புலித் தோல்களால் மூடப்பட்டதும், பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டதுமான தனது பிரகாசமான தேரில் செல்லும் அந்த வீரர் {துரோணர்} கொல்லப்பட்டதைக் கேட்டு என்னால் துயரைப் போக்க முடியவில்லை.

ஓ! சஞ்சயா, இழிந்தவனான நான், துரோணர் கொல்லப்பட்டதைக் கேட்டும் உயிரோடிருப்பதால், பிறரின் துன்பத்தில் விளைந்த துயரத்தால் எவனும் இறப்பதில்லை என்பதில் ஐயமில்லை. விதியே அனைத்திலும் வலியது என்றும், முயற்சி கனியற்றது {பலனற்றது} என்றும் நான் கருதுகிறேன். துரோணரின் மரணத்தைக் கேட்டும், நூறு துண்டுகளாக என் இதயம் உடைந்து போகாததால் கடுமையாக இருக்கும் அது {என் இதயம்} நிச்சயம் இரும்பாலானதே. வேதங்கள், எதிர்காலத்தை அறியும் உளவியல், வில்லாளித்தன்மை ஆகியவற்றின் கல்வியைப் பெற விரும்பி எவருக்காகப் பிராமணர்களும், இளவரசர்களும் காத்திருந்தார்களோ, ஐயோ, அவர் {துரோணர்} எவ்வாறு காலனால் எடுத்துக் கொள்ளப்பட்டார்?

பெருங்கடல் வறண்டு போவதைப் போலவோ, மேரு அதன் இடத்தில் இருந்து பெயர்க்கப்படுவதைப் போலவோ, அல்லது ஆகாயத்தில் இருந்து சூரியன் வீழ்வதைப் போலவோ ஆன துரோணரின் வீழ்ச்சியை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தீயோரை ஒடுக்குபவராகவும், நல்லோரைக் காப்பவராகவும் அவர் இருந்தார்.

இழிந்த துரியோதனனுக்காகத் தன் உயிரை எவர் கொடுத்தாரோ, எவருடைய ஆற்றலால் என் தீய மகன்களுக்கு வெற்றியில் விருப்பம் உண்டானதோ, எவருடைய புத்திக்கூர்மை பிருஹஸ்பதி அல்லது உசனஸுக்கு {சுக்ராச்சாரியருக்கு} இணையானதோ, ஐயோ, அந்த எதிரிகளை எரிப்பவர் {துரோணர்} எவ்வாறு கொல்லப்பட்டார்? [1].

சிவப்பு நிறத்தாலானவையும், தங்க வலையால் மூடப்பட்டவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையும், போரில் எந்த ஆயுதத்தாலும் தாக்கப்பட முடியாதவையும், பெரும் பலம் கொண்டவையும், உற்சாகமாகக் கனைப்பவையும், நன்கு பயிற்சியளிக்கப்பட்டவையும், சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், அவரது {துரோணரின்} தேரில் பூட்டப்பட்டிருந்தவையும், அந்த வாகனத்தைச் சிறப்பாக இழுத்தவையும், போர்க்களத்தின் மத்தியில் எப்போதும் பாதுகாப்பாக இருந்தவையுமான அவரது பெரிய குதிரைகள் பலவீனமடைந்து மயக்கமுற்றனவா? போரில், சங்கொலிகள் மற்றும் பேரிகையொலிகளைக் கேட்டு முழங்கும் யானைகளின் பிளிறல்களைப் பொறுமையாகத் தாங்கிக் கொண்டு, விற்களின் நாணொலி, கணைகள் மற்றும் பிற ஆயுதங்களின் மழை ஆகியவற்றால் நடுங்காது, தங்கள் தோற்றத்தாலேயே எதிரியின் வீழ்ச்சியை முன்னறிவித்துக் கொண்டு, (கடும் உழைப்பின் விளைவால்) எப்போதும் பெருமூச்சு விடாமல், களைப்பு மற்றும் வலிகள் அனைத்திற்கும் மேலாக இருந்தவையான பரத்வாஜர் மகனின் {துரோணரின்} தேரை இழுத்த அந்த வேகமான குதிரைகள் எவ்வாறு வீழ்த்தப்பட்டன? அத்தகு குதிரைகளே அவரது தங்கத் தேரில் பூட்டப்பட்டிருந்தன. அத்தகு குதிரைகளே அந்த நரவீரர்களில் {human heroes} முதன்மையானவரால் {துரோணரால்} அதில் {அந்தத் தேரில்} பூட்டப்பட்டது.

பசுந்தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் சிறந்த தேரில் ஏறிய அவரால் {துரோணரால்}, ஓ! மகனே {சஞ்சயா}, ஏன் பாண்டவப் படை எனும் கடலைக் கடக்க முடியவில்லை? எந்த வீரர், பிற வீரர்களிடம் எப்போதும் கண்ணீரை வரவழைப்பாரோ, எவருடைய (ஆயுத) அறிவை உலகின் வில்லாளிகள் அனைவரும் நம்பி இருந்தனரோ, அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} போரில் அடைந்த சாதனை என்ன? உண்மையில் {சத்தியத்தில்} உறுதியான பற்று கொண்டவரும், பெரும் வலிமை கொண்டவருமான துரோணர், உண்மையில் போரில் என்ன செய்தார்?

சொர்க்கத்தில் உள்ள சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானவரும், வீரர்களில் முதல்வரும், வில்தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவரும், கடும் சாதனைகளை அடைந்தவருமான அவருடன் {துரோணருடன்} மோதிய தேர்வீரர்கள் யாவர்? தங்கத் தேரைக் கொண்டவரும், பெரும் வலிமையும் பலமும் கொண்டவரும், தெய்வீக ஆயுதங்களை இருப்புக்குத் தூண்டி அழைப்பவருமான அவரை {துரோணரைக்} கண்டதும் பாண்டவர்கள் தப்பி ஓடினார்களா? அல்லது நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகளுடன் கூடி, பாஞ்சால இளவரசனை (திருஷ்டத்யும்னனைத்) தன் கட்டுக் கயிறாகக் கொண்டு [2] அனைத்துப் பக்கங்களிலும் தன் துருப்புகளால் துரோணரைச் சூழ்ந்து கொண்டு அவரைத் தாக்கினானா?

பார்த்தன் {அர்ஜுனன்}, தன் நேரான கணைகளால் பிற தேர்வீரர்களைத் தடுத்திருக்க வேண்டும், அதன்பிறகே பாவச்செயல்களைப் புரியும் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} துரோணரைச் சூழ்ந்திருக்க வேண்டும். அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்ட மூர்க்கமான திருஷ்டத்யும்னனைத் தவிர அந்த வலிமைமிக்க வீரருக்கு {துரோணருக்கு} மரணத்தைக் கொடுக்கக்கூடிய வேறு எந்த வீரனையும் நான் காணவில்லை. கேகயர்கள், சேதிகள், கரூசர்கள், மத்ஸ்யர்கள் மற்றும் பிற மன்னர்கள், பாம்பை மொய்க்கும் எறும்புகளைப் போல ஆசானை {துரோணரைச்} சூழ்ந்திருந்த போது, அவர் {துரோணர்} ஏதோ ஒரு கடுமையான சாதனையில் ஈடுபட்டிருக்கும்போதே இழிந்தவனான திருஷ்டத்யும்னன் அவரைக் கொன்றிருப்பான் என்று தெரிகிறது. இதுவே என் எண்ணம்.

வேதங்களையும், அதன் அங்கங்களையும், ஐந்தாவதான (ஐந்தாவது வேதமான) வரலாறுகளையும் {புராணங்களையும்} கற்று, ஆறுகளுக்குக் கடலைப் போலப் பிராமணர்களுக்குப் புகலிடமாக இருந்த அந்த எதிரிகளை எரிப்பவர் எவரோ, பிராமணர் மற்றும் க்ஷத்திரியர் என இருவகையில் வாழ்ந்தவர் எவரோ, ஐயோ! வயதால் முதிர்ந்த அந்தப் பிராமணர் {துரோணர்} ஆயுத முனையில் எவ்வாறு தன் முடிவைச் சந்தித்திருக்க முடியும்? பெருமைமிகுந்தவராக இருப்பினும், என் காரணமாக அவர் அவமானத்தையும், துன்பத்தையும் அடைய நேர்ந்ததே. தகாதவராக இருப்பினும் அவர் குந்தி மகனின் {அர்ஜுனனின்} கைகளால் தன் நடத்தைக்கான கனியை அடைந்தார் [3]. உலகத்தில் வில் தரிப்போர் அனைவரும் எவரது சாதனைகளை நம்பியிருக்கிறார்களோ, உண்மையை உறுதியாகப் பின்பற்றுபவரும், பெரும் திறன் கொண்டவருமான அந்த வீரர் {துரோணர்}, ஐயோ, செல்வத்தை விரும்பும் நபர்களால் எவ்வாறு கொல்லப்பட முடியும்?பெரும் வலிமையும், பெரும் சக்தியும் கொண்டு சொர்க்கத்தில் உள்ள சக்ரனை {இந்திரனைப்} போல உலகத்தில் முதன்மையான அவர் {துரோணர்}, ஐயோ, சிறுமீனால் கொல்லப்படும் திமிங்கலத்தைப் போலப் பார்த்தர்களால் {பாண்டவர்களால்} எவ்வாறு கொல்லப்பட முடியும்? வெற்றியை விரும்பும் எந்த வீரனும் எவரிடம் உயிரோடு தப்ப முடியாதோ, வேத அன்பை விரும்புவோரின் வேத ஒலி, வில்லாளித்தன்மையில் திறத்தை விரும்புவோரின் விற்களால் உண்டான நாணொலி ஆகிய இரண்டும் எவரிடம் நீங்காதிருந்ததோ, ஒருபோதும் உற்சாகமிழக்காமல் எவர் இருந்தாரோ, ஐயோ, செழிப்பைக் கொண்டவரும், போரில் வீழ்த்தப்பட முடியாதவருமான அந்த வீரர், சிங்கத்திற்கோ, யானைக்கோ ஒப்பான ஆற்றலைக் கொண்ட அந்த வீரர் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் இறந்தார் என்ற கருத்தையே என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை [4]. எவருடைய புகழ் மங்கவில்லையோ, எவருடைய வலிமை அவமதிக்கப்பட்டதில்லையோ அந்த வெல்லப்பட முடியாத வீரரை {துரோணரை}, மனிதர்களில் முதன்மையானோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} போரில் எவ்வாறு கொல்ல முடியும்?துரோணருக்கு முன்பும், அவருக்குப் பக்கத்திலும் நின்று அவரைப் பாதுகாத்தபடி போரிட்டவர்கள் யாவர்? அடைவதற்குக் கடினமான அந்த முடிவை அடையும்போது, அவருக்குப் பின்புறத்தில் சென்றவர்கள் யாவர்? துரோணரின் வலது மற்றும் இடது சக்கரங்களைப் பாதுகாத்த உயர் ஆன்ம வீரர்கள் யாவர்? போரில் அந்த வீரர் {துரோணர்} போராடிக்கொண்டிருந்த போது அவருக்கு முன்னிலையில் இருந்தவர் யாவர்? அந்தச் சந்தர்ப்பத்தில், தங்கள் உயிரையே விடத்துணிந்து, முகத்துக்கு முகமாக மரணத்தைச் சந்தித்தவர்கள் யாவர்? துரோணரின் போரில் இறுதிப் பயணத்தில் சென்ற வீரர்கள் யாவர்?

துரோணரின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அந்த க்ஷத்திரியர்களில் எவராவது தங்களைப் பொய்யர்களாக நிரூபித்துக் கொண்டு அந்த வீரரை {துரோணரைப்} போரில் கைவிட்டனரா? அப்படிக் கைவிடப்பட்டுத் தனியாக இருந்தபோது எதிரியால் அவர் {துரோணர்} கொல்லப்பட்டாரா? பெரும் ஆபத்திலேயே இருந்தாலும் அச்சத்தால் போரில் எப்போதும் புறமுதுகிடாதவர் துரோணர். அப்படியிருக்கையில் எதிரியால் அவர் எவ்வாறு கொல்லப்பட்டார்?

ஓ! சஞ்சயா, பெரும் துன்பத்தில் இருந்தாலும் கூட, ஒரு சிறப்பு மிகுந்த மனிதன் தன் வலிமையின் அளவுக்குத் தக்க தன் ஆற்றலைப் பயன்படுத்துவான். இவையாவும் துரோணரிடம் இருந்தன. ஓ! குழந்தாய் {சஞ்சயா}, நான் என் புலனுணர்வை இழக்கிறேன். இந்த உரையாடல் சிறிது நேரம் நிற்கட்டும். என் உணர்வுகள் மீண்ட பிறகு, ஓ! சஞ்சயா, மீண்டும் உன்னை நான் கேட்கிறேன்” {என்றான் திருதராஷ்டிரன்}.

திருதராஷ்டிரனின் விசாரணை! – துரோண பர்வம் பகுதி – 010-தன் படைவீரர்களில் யார் யார், பாண்டவர்களில் யார் யாரைத் துரோணரை அணுகவிடாமல் தடுத்தனர் எனச் சஞ்சயனிடம் கேட்கும் திருதராஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சூத மகனிடம் {சஞ்சயனிடம்} இப்படிப் பேசிய திருதராஷ்டிரன், அதீத துயரத்தால் இதயம் பீடிக்கப்பட்டும், தன் மகனின் {துரியோதனனின்} வெற்றியில் நம்பிக்கையிழந்தும் தரையில் விழுந்தான். உணர்வுகளை இழந்து கீழே விழுந்த அவனைக் {திருதராஷ்டிரனைக்} கண்ட அவனது பணியாட்கள் {தாதிகள்}, அவனுக்கு விசிறிவிட்டுக் கொண்டே நறுமணமிக்கக் குளிர்ந்த நீரை அவன் மீது தெளித்தனர். அவன் {திருதராஷ்டிரன்} விழுந்ததைக் கண்ட பாரதப் பெண்மணிகள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டு தங்கள் கைகளால் அவனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} மென்மையாகத் தடவிக் கொடுத்தனர். கண்ணீரால் தடைபட்ட குரலுடன், அந்த அரசப் பெண்மணிகள் தரையில் இருந்த மன்னனை மெதுவாக எழுப்பி அவனை {திருதராஷ்டிரனை} அவனது ஆசனத்தில் இருத்தினார்கள். மன்னன் {திருதராஷ்டிரன்} இருக்கையில் இருந்தாலும் மயக்கத்தின் ஆதிக்கத்திலேயே தொடர்ந்து நீடித்தான். அவனைச் சுற்றி நின்று அவர்கள் விசிறிவிட்ட போது, அவன் {திருதராஷ்டிரன்} முற்றிலும் அசைவற்று இருந்தான். பிறகு, அந்த ஏகாதிபதியின் {திருதராஷ்டிரனின்} உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டு, அவன் மெல்ல தனது உணர்வுகளை மீண்டும் பெற்றான். பிறகு, அவன் {திருதராஷ்டிரன்}, சூத சாதியைச் சேர்ந்த கவல்கணன் மகனிடம் {சஞ்சயனிடம்}, போரில் நேர்ந்த சம்பவங்கள் குறித்து மீண்டும் விசாரிக்க ஆரம்பித்தான்.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “தன் ஒளியால் இருளை விலக்கும் உதயச் சூரியனைப் போன்றவனும், கோபம் கொண்ட மதயானையைப் போல எதிரியை எதிர்த்து வேகமாக விரைபவனும், பெண் யானையோடு சேருவதற்காகப் பகை யானையை எதிர்த்துச் செல்லும் மதயானையைப் போன்றவனும், பகைக்கூட்டங்களின் படைத்தலைவர்களால் வெல்லப்பட முடியாதவனுமான அந்த அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்} வந்த போது, துரோணரிடம் செல்ல விடாமல் அவனைத் தடுத்த (என் படையின்) வீரர்கள் யாவர்?

மனிதர்களில் முதன்மையானவனும், போரில் என் படையின் துணிச்சல்மிக்க வீரர்கள் பலரைக் கொன்றவனும், வலிமைமிக்கக் கரங்களையும், புத்திக்கூர்மையையும், கலங்கடிக்கமுடியாத ஆற்றலையும் படைத்த வீரமிக்க இளவரசனும், எவரின் துணையுமின்றித் தன் பார்வையால் மட்டுமே துரியோதனனின் மொத்த படையையும் எரிக்கவல்லவனும், வெற்றியில் விருப்பம் கொண்டவனும், வில்லாளியும், மங்காப் புகழ் கொண்ட வீரனும், முழு உலகத்திலும் தற்கட்டுப்பாடு கொண்ட ஏகாதிபதி என்று மதிக்கப்படுபவனான அந்த வீரனை {யுதிஷ்டிரனைச்} சூழ்ந்து {அவனைத் தடுத்த} (என் படையின்) வீரர்கள் யாவர்?

வெல்லப்பட முடியாத இளவரசனும், மங்காப் புகழ் கொண்ட வில்லாளியும், மனிதர்களில் புலியும், குந்தியின் மகனும், எதிரியை எதிர்த்து எப்போதும் பெரும் சாதனைகளைச் செய்யும் வலிமைமிக்க வீரனும், பெரும் உடற்கட்டும், பெரும் துணிவும் கொண்ட வீரனும், பத்தாயிரம் {10000} யானைகளுக்கு நிகரான பலத்தைக் கொண்டவனுமான அந்தப் பீமசேனன் பெரும் வேகத்துடன் துரோணரிடம் வந்த போது, ஓ! என் படையை நோக்கி விரைந்து வந்த அவனைச் சூழ்ந்து கொண்ட என் படையின் துணிச்சல்மிக்கப் போராளிகள் யாவர்?

மேகங்களின் திரளைப் போலத் தெரிபவனும், மேகங்களைப் போலவே இடிகளை வெளியிடுபவனும், மழை பொழியும் இந்திரனைப் போலவே கணைமாரி பொழிபவனும், தன் உள்ளங்கைகளின் தட்டல்கள் மற்றும் தன் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி ஆகியவற்றால் திசைகள் அனைத்தையும் எதிரொலிக்கச் செய்பவனும், மின்னலின் கீற்றைப் போன்ற வில்லைக் கொண்டவனும், தன் சக்கரங்களின் சடசடப்பொலியையே முழக்கங்களாகக் கொண்ட மேகத்துக்கு ஒப்பான தேரைக் கொண்டவனும், தன் கணைகளின் “விஸ்” ஒலியாலே மிகக் கடுமையானவனாகத் தெரிபவனும், பயங்கரமான மேகத்துக்கொப்பான கோபத்தைக் கொண்டவனும், புயலைப் போன்றோ, மேகத்தைப் போன்ற வேகத்தைக் கொண்டவனும், எதிரியின் முக்கிய அங்கங்களையே எப்போதும் துளைப்பவனும், கணைகளைத் தரித்துக் கொண்டு பயங்கரமாகத் தோன்றுபவனும், காலனைப் போலவே திசைகள் அனைத்தையும் மனிதக் குருதியால் குளிக்க வைப்பவனும், கடுமுழுக்கம் செய்பவனும், பயங்கர முகத்தோற்றம் கொண்டவனும், காண்டீவத்தைத் தரித்துக் கொண்டு, துரியோதனன் தலைமையிலான என் வீரர்களின் மேல் கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையும், கழுகிறகுகளால் ஆனவையுமான கணைகளைத் தொடர்ச்சியாகப் பொழிபவனும், பெரும் புத்திக்கூர்மை கொண்ட வீரனும், பெரும் சக்தி கொண்ட தேர்வீரனுமான அந்தப் பீபத்சு {அர்ஜுனன்} உங்களிடம் வந்த போது, ஐயோ, உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

பெரும் குரங்கைத் தன் கொடியில் கொண்ட அந்த வீரன், அடர்த்தியான கணை மழையால் ஆகாயத்தைத் தடுத்தபோது, அந்தப் பார்த்தனை {அர்ஜுனனைக்} கண்ட உங்கள் மன நிலை எப்படி இருந்தது? அர்ஜுனன், தான் வரும் வழியிலேயே கடும் சாதனைகளை அடைந்து, காண்டீவத்தின் நாணொலியால் உங்கள் துருப்புகளைக் கொன்றபடி உங்களை எதிர்த்தானா? சூறாவளியானது சேர்ந்திருக்கும் மேகத்திரள்களை அழிப்பதைப் போலவோ, நாணற்காடுகளை அவற்றின் ஊடாகப் பாய்ந்து சாய்ப்பதைப் போலவோ தனஞ்சயன் {அர்ஜுனன்} [1] உங்கள் உயிர்களை எடுத்தானா? காண்டீவதாரியை {அர்ஜுன்னைப்} போரில் தாங்கிக் கொள்ள வல்ல மனிதன் எவன் இருக்கிறான்? (பகையணியின்) படையின் முகப்பில் இவன் {அர்ஜுனன்} இருக்கிறான் என்று கேட்டாலே, ஒவ்வொரு எதிரியின் இதயமும் இரண்டாகப் பிளந்து விடுமே!துருப்புகள் நடுங்கி, வீரர்களே கூட அச்சத்தால் பீடிக்கப்பட்ட அந்தப் போரில், துரோணரைக் கைவிடாமல் இருந்தோர் யாவர்? அச்சத்தால் அவரை {துரோணரைக்} கைவிட்ட கோழைகள் யாவர்? போரில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட போராளிகளையும் வீழ்த்திய தனஞ்சயனின் {அர்ஜுனனின்} வடிவத்தில் வந்த காலனை {மரணத்தை} உயிருக்குக் கிஞ்சிற்றும் அஞ்சாமல் முகத்துக்கு முகம் நேராகச் சந்தித்தோர் யாவர்? மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான காண்டீவ ஒலியையும், வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் வரும் அந்த வீரனின் {அர்ஜுனனின்} வேகத்தையும் என் துருப்புகள் தாங்க இயன்றவையல்ல. விஷ்ணுவை {கிருஷ்ணனைத்} தேரோட்டியாகவும், தனஞ்சயனை {அர்ஜுனனைப்} போர் வீரனாகவும் கொண்ட அந்தத் தேர், தேவர்களும் அசுரர்களும் ஒன்று சேர்ந்தாலும் வீழ்த்தப்பட முடியாதது என்றே நான் கருதுகிறேன்.

மென்மையானவனும், இளைஞனும், துணிச்சல்மிக்கவனும், மிக அழகிய முகத் தோற்றம் கொண்டவனும், புத்திக்கூர்மை, திறம் மற்றும் விவேகத்தைக் கொடையாகக் கொண்டவனும், போரில் கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான நகுலன், பேரொலியுடன் பகைவீரர்கள் அனைவரையும் பீடித்து, துரோணரை நோக்கி விரைந்த போது, அவனை {நகுலனைச்} சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?

கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புக்கு ஒப்பானவனும், வெண் குதிரைகளைக் கொண்டவனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், மெச்சத்தகுந்த நோன்புகளை நோற்பவனும், தன் காரியங்களில் கலங்கடிக்கப்பட முடியாதவனும், அடக்கத்தைக் கொடையாகக் கொண்டவனும், போரில் வீழ்த்தப்பட முடியாதவனுமான சகாதேவன் நம்மிடம் வந்தபோது, அவனை {சகாதேவனைச்} சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?

சௌவீர மன்னனின் பெரும்படையை நொறுக்கி, சீரான அங்கங்களைக் கொண்ட அழகிய போஜக் கன்னிகையைத் தன் மனைவியாகக் கொண்டவனும், மனிதர்களில் காளையும், உண்மை, உறுதி, துணிச்சல் மற்றும் பிரம்மச்சரியத்தை எப்போதும் கொண்டவனும், பெரும் வலிமையைக் கொடையாகக் கொண்டவனும், எப்போதும் உண்மை பயில்பவனும், எப்போதும் உற்சாகமிழக்காதவனும், வெல்லப்பட முடியாதவனும், போரில் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையானவனும், அவனாலேயே {கிருஷ்ணனாலேயே} தன்னைப் போன்ற இரண்டாமவன் என்று கருதப்பட்டவனும், தனஞ்சயன் {அர்ஜுனன்} அளித்த கல்வியால் கணைகளைப் பயன்படுத்துவதில் முதன்மையானவனும், ஆயுதங்களில் பார்த்தனுக்கே {அர்ஜுனனுக்கே} இணையான போர்வீரனும், யுயுதானன் என்று அழைக்கப்பட்டவனுமான அந்தச் சாத்யகி, ஓ!, துரோணரை அணுகமுடியாதபடி தடுத்த (என் படை) வீரர்கள் யாவர்?

விருஷ்ணிகளில் முதன்மையான வீரனும், வில்லாளிகள் அனைவரிலும் பெரும் துணிச்சல் கொண்டவனும், ஆயுதங்களில் (அதன் பயன்பாட்டிலும், அறிவிலும்) ராமருக்கு {பரசுராமருக்கு} இணையானவனுமான அந்தச் சாத்வத குலத்தவனிடம் {சாத்யகியிடம்} ஆற்றல், புகழ், உண்மை {சத்தியம்}, உறுதி, புத்திக்கூர்மை, வீரத்தன்மை, பிரம்மஞானம், உயர்ந்த ஆயுதங்கள் ஆகியன கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} நிலைபெற்றிருக்கும் மூவுலகங்களைப் போல நிலைபெற்றிருக்கின்றன. இந்தச் சாதனைகள் அனைத்தையும் கொண்டவனும், தேவர்களாலேயே தடுக்கப்பட முடியாதவனும், பெரும் வில்லாளியுமான அந்தச் சாத்யகியைச் சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?

பாஞ்சாலர்களில் முதன்மையானவனும், வீரமும், உயர்பிறப்பும் கொண்டவனும், உயர் பிறப்பைக் கொண்ட வீரர்கள் அனைவருக்கும் பிடித்தமானவனும், போரில் நற்செயல்களையே செய்பவனும், அர்ஜுனனின் நன்மையில் எப்போதும் ஈடுபடும் இளவரசனும், என் தீமைக்காகவே பிறந்தவனும், யமனுக்கோ, வைஸ்ரவணனுக்கோ {குபேரனுக்கோ}, ஆதித்யனுக்கோ, மகேந்திரனுக்கோ, வருணனுக்கோ இணையானவனும், பெரும் தேர்வீரனாகக் {மாகரதனாகக்} கருதப்படும் இளவரசனும், போரின் களத்தில் தன் உயிரையே விடத் துணிந்தவனுமான உத்தமௌஜஸ்ஸை, ஓ!, சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?

சேதிகளில் தனி வீரனாக வெளிப்பட்டு, அவர்களைக் {சேதிகளைக்} கைவிட்டு பாண்டவர்களின் தரப்பை அரவணைத்த திருஷ்டகேது, துரோணரை நோக்கி விரைந்த போது, அவனை எதிர்த்தவர்கள் (என் படைவீரர்களில்) யாவர்?

கிரிவ்ராஜத்தில் [2] பாதுகாப்பாக இருந்த இளவரசன் துர்ஜயனைக் கொன்ற துணிச்சல்மிக்கக் கேதுமான், துரோணரை அணுகமுடியாதபடி தடுத்த (என் படை) வீரர்கள் யாவர்?மனிதர்களில் புலியும், தன் (மேனியின்) ஆண்மை மற்றும் பெண்மையின் தகுதிகளையும், தகுதியின்மைகளையும் அறிந்தவனும் [3]யக்ஞசேனன் {துருபதன்} மகனும், போரில் உயர் ஆன்ம பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்தவனுமான சிகண்டி துரோணரை நோக்கி விரைந்த போது அவனைச் சூழ்ந்து கொண்ட (என் படையின்) வீரர்கள் யாவர்?விருஷ்ணி குலத்தின் முதன்மையான வீரனும், வில்லாளிகள் அனைவரின் தலைவனும், தனஞ்சயனை {அர்ஜுனனை} விடப் பெரும் அளவுக்கான சாதனைகள் அனைத்தையும் கொண்ட துணிவுமிக்க வீரனும், ஆயுதங்கள், உண்மை, பிரம்மச்சரியம் ஆகிவற்றை எப்போதும் கொண்டவனும், சக்தியில் வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, பலத்தில் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கும்} இணையானவனும், ஆதித்யனுக்கு இணையான காந்தியைக் கொண்டவனும், பிருஹஸ்பதிக்கு இணையான புத்தியைக் கொண்டவனும், வாயை அகலத் திறந்த காலனுக்கு ஒப்பானவனுமான அந்த உயர் ஆன்ம அபிமன்யு, துரோணரை நோக்கி விரைந்த போது, அவனைச் சூழ்ந்து கொண்ட (என் படையின்) வீரர்கள் யாவர்? பயங்கர அறிவு கொண்ட இளைஞனும், பகையணி வீரர்களைக் கொல்பவனுமான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஓ!, துரோணரை நோக்கி விரைந்த போது உங்கள் மன நிலை எப்படி இருந்தது?

மனிதர்களில் புலிகளான திரௌபதியின் மகன்கள், கடலை நோக்கிச் செல்லும் ஆறுகளைப் போலப் போரில் துரோணரை எதிர்த்து விரைந்த போது அவர்களைச் சூழ்ந்து கொண்ட வீரர்கள் யாவர்?

பனிரெண்டு வயதிலேயே (குழந்தைத்தனமான) விளையாட்டுகள் அனைத்தையும் கைவிட்ட பிள்ளைகளும், சிறப்பு மிக்க நோன்புகளை நோற்றவர்களும், ஆயுதங்களுக்காகப் பீஷ்மரிடம் காத்திருந்தவர்களும், திருஷ்டத்யும்னனின் வீர மகன்களுமான க்ஷத்ரஞ்சயன், க்ஷத்ரதேவன், கர்வத்தைப் போக்கும் க்ஷத்ரவர்மன், மனதன் ஆகியோர், ஓ, துரோணரை அணுகாதபடித் தடுத்தது யார்?

போரில் நூறு தேர்வீரர்களுக்கும் மேன்மையானவனாக விருஷ்ணிகளால் கருதப்படும் சேகிதானன் துரோணரை அணுகாதபடி, ஓ!, அந்தப் பெரும் வில்லாளியைத் தடுத்தது யார்? [4]அறம்சார்ந்தோரும், ஆற்றல் கொண்டோரும், தடுக்கப்பட முடியாதோரும், இந்திரகோபகம் என்றழைக்கப்படும் பூச்சிகளின் நிறத்துக்கு ஒப்பானோரும், சிவப்புக் கவசங்கள், சிவப்பு ஆயுதங்கள் மற்றும் சிவப்பு கொடிகளைக் கொண்டோரும், பாண்டவர்களுக்குத் தாய்வழி முறையில் தம்பிகளும் [5], பின்னவர்களின் வெற்றியை எப்போதும் விரும்புபவர்களுமான கேகயச் சகோதரர்கள் ஐவர், துரோணரைக் கொல்ல விரும்பி அவரை நோக்கி விரைந்த போது, அந்த வீரமிக்க இளவரசர்களை, ஓ!, சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?போரின் தலைவனும், வில்லாளிகளில் முதன்மையானவனும், குறிதவறா வீரனும், பெரும் பலம் கொண்டவனும், வாரணாவதத்தில் எவனைக் கொல்ல விரும்பி கோபம் நிறைந்த மன்னர்கள் பலர் சேர்ந்து ஆறு மாதங்கள் ஒன்றாகப் போரிட்டும் வீழ்த்தப்பட முடியாதவனான மனிதர்களில் புலியும், (சுயம்வரத்தில்) ஒரு கன்னியை மனைவியாக அடைய விரும்பி வலிமைமிக்கத் தேர்வீரனான காசியின் இளவரசனை ஒரு பல்லத்தினால் வாரணாசி போரில் வீழ்த்தியவனுமான யுயுத்சுவை, ஓ!, தடுத்த (என் படையின்) வீரன் யார்?

பாண்டவர்களின் ஆலோசகர்களின் தலைவனும், துரியோதனனுக்குத் தீமை செய்வதில் ஈடுபடுபவனும், துரோணரின் அழிவுக்காக உண்டாக்கப்பட்டவனுமான திருஷ்டத்யும்னன், போரில் என் வீரர்கள் அனைவரையும் எரித்து என் படையணிகள் அனைத்தையும் உடைத்துக் கொண்டு துரோணரை நோக்கிச் சென்ற போது, அந்த வலிமைமிக்க வில்லாளியை {திருஷ்டத்யும்னனை}, ஓ!, சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?

ஆயுதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், துருபதன் மடியிலேயே வளர்க்கப்பட்டவனும், (அர்ஜுனனின்) ஆயுதங்களால் பாதுகாக்கப்பட்டவனுமான சிகண்டியை [6], ஓ!, துரோணரை அணுகவிடாதபடித் தடுத்த (என் படை) வீரர்கள் யாவர்?இந்தப் பூமியைத் தன் தேரின் சடசடப்பொலியால் தோல்கச்சையாகச் சுற்றியவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், எதிரிகளைக் கொல்வோர் அனைவரிலும் முதன்மையானவனும், சிறந்த உணவு, பானம் மற்றும் கொடைகளை அபரிமிதமாக அளித்துப் பத்து குதிரை வேள்விகளை {அஸ்வமேத யாகங்களைத்} தடையில்லாமல் செய்தவனும், தன் குடிமக்களைத் தன் பிள்ளைகளைப் போல எண்ணி ஆண்டவனும், கங்கையின் ஓடையில் உள்ள மணற்துகள்களைப் போல எண்ணிலாத பசுகளை வேள்விகளில் தானமாக அளித்தவனும், வேறு யாராலும் செய்யப்படாத, இனியும் செய்ய முடியாத சாதனைகளைச் செய்தவனும், கடுமையான சாதனைகளைச் செய்த பிறகு “உசீநரன் மகனுக்கு இணையாக, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூவுலகத்திலும் வேறு இரண்டாம் உயிரினத்தை நாங்கள் காண வில்லை. மனிதர்களால் அடையப்பட முடியாத (மறுமையில்) உலகங்களை அடைந்தோரிலும் இவனைப் போல எவனும் இல்லை. இனியும் இருக்க மாட்டான்” என்று தேவர்களாலேயே சொல்லப்பட்டவனும், உசீநரன் மகனின் பேரனுமான அந்தச் சைப்யன் (துரோணரிடம்) வந்த போது, ஓ, (என் படைகளுக்கு மத்தியில்) தடுத்தவர் யார்?

மத்ஸ்யர்களின் மன்னனான விராடனின் தேர்ப் பிரிவானது போரில் துரோணரை அடைந்த போது, அதைச் சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?

என் மகன்களுக்கு முள்ளாக இருந்தவனும், பாண்டவர்களின் வெற்றியை எப்போதும் விரும்பும் வீரனும், பெரும் மாய சக்திகளையும், பெரும் பலம் மற்றும் ஆற்றலையும் கொண்ட வீர ராட்சசனும், ஒரே நாளில் பீமனுக்குப் பிறந்தவனும் [7], யாரிடம் நான் பெரும் அச்சங்களைக் கொண்டிருந்தேனோ அந்தப் பெரும் உடல் கொண்ட ராட்சசன் கடோத்கசனைத் துரோணரிடம் அணுகமுடியாதபடிச் செய்தவன் யார்?ஓ! சஞ்சயா, யாருக்காக இவர்களும் இன்னும் பலரும் போர்க்களத்தில் தங்கள் உயிரையே விடத் தயாராக இருக்கிறார்களோ அவர்களால் எதைத்தான் வெல்லமுடியாது?

சார்ங்கம் {சாரங்கம்} என்று அழைக்கப்படும் வில்லைத் தரிப்பவனும், உயிரினங்கள் அனைத்திலும் பெரியவனும் ஆனவனே {கிருஷ்ணனே} அவர்களுக்குப் {பாண்டவர்களுக்குப்} புகலிடமாகவும், நன்மை செய்பவனாகவும் இருக்கும்போது, அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன்கள் தோல்வியைச் சந்திப்பது எவ்வாறு? உண்மையில், வாசுதேவன் {கிருஷ்ணன்} உலகங்கங்கள் அனைத்தின் பெரும் ஆசானும், அனைத்தின் தலைவனும், நிச்சயமானவனும் ஆவான். தெய்வீக ஆன்மாவும் எல்லையில்லா சக்தியும் கொண்ட {அந்த} நாராயணனே போரில் மனிதர்களுக்குப் புகலிடமாவான். விவேகிகள் அவனது தெய்வீகச் செயல்களை உரைக்கின்றனர். எனது உறுதியை மீட்பதற்காக நானும் அவை அனைத்தையும் அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} உரைப்பேன்” {என்றான் திருதராஷ்டிரன்}.

கிருஷ்ணன் பெருமை சொன்ன திருதராஷ்டிரன்! – துரோண பர்வம் பகுதி – 011- கிருஷ்ணனின் வரலாற்றை நினைவுகூர்ந்த திருதராஷ்டிரன் தன் மகன்களின் நிலையை எண்ணி வருந்தியது

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, கோவிந்தன் {கிருஷ்ணன்} வேறு எந்த மனிதனாலும் சாதிக்க முடியாத அருஞ்செயல்களைச் செய்தான், அந்த வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தெய்வீகச் செயல்களைக் கேட்பாயாக.

ஓ! சஞ்சயா, மாட்டிடையன் (நந்தன்) குடும்பத்தில் வளர்க்கப்பட்ட அந்த உயர் ஆன்மா கொண்டவன் {கிருஷ்ணன்}, சிறுவனாக இருந்தபோதே தன் கரங்களின் வலிமையை மூவுலகங்களும் அறியச் செய்தான்.

பலத்தில் (தெய்வீக குதிரையான) உச்சைஸ்வனுக்கு இணையானவனும், காற்றின் வேகத்தைக் கொண்டவனும், யமுனையின் (கரைகளில் உள்ள) காடுகளில் வாழ்ந்தவனுமான ஹயராஜனைக் [1] கொன்றான்.பசுக்களுக்குக் காலனாக எழுந்தவனும், பயங்கரச் செயல்கள் புரிபவனும், காளையின் வடிவில் இருந்தவனுமான தானவனைத் {ரிஷபனைத்} தன் வெறும் கைகள் இரண்டால் தன் குழந்தைப் பருவத்திலேயே கொன்றான்.

தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன் {கிருஷ்ணன்}, பிரலம்பன், ஜம்பன், பீடன் மற்றும் தேவர்களுக்குப் பயங்கரனாக இருந்த முரண் ஆகிய வலிமைமிக்க அசுரர்களையும் கொன்றான்.

அதுபோலவே ஜராசந்தனால் பாதுகாக்கப்பட்ட பயங்கர சக்தி கொண்ட கம்சனும், அவனது தொண்டர்களும், தன்னாற்றலின் துணையை மட்டுமே [2] கொண்ட கிருஷ்ணனால் போரில் கொல்லப்பட்டனர்.போரில் பெரும் வல்லமையும் ஆற்றலும் கொண்டவனும், ஒரு முழு அக்ஷௌஹிணியின் தலைவனும், போஜர்களின் மன்னனும், கம்சனின் இரண்டாவது தம்பியும், சூரசேனர்களின் மன்னனுமான சுநாமன், எதிரிகளைக் கொல்பவனும், பலதேவனைத் தனக்கு அடுத்தவனாகக் கொண்டவனுமான அந்தக் கிருஷ்ணனால் அவனுடைய துருப்புகளுடன் சேர்த்துப் போரில் எரிக்கப்பட்டான்.

பெரும் கோபம் கொண்ட இருபிறப்பாள முனிவர் {துர்வாசர்}, {கிருஷ்ணனின்} (ஆராதனையில் மனம் நிறைந்து) அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} வரங்களை அளித்தார்.

தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், பெரும் துணிச்சல் மிக்கவனுமான கிருஷ்ணன், ஒரு சுயம்வரத்தில் மன்னர்கள் அனைவரையும் வீழ்த்தி, காந்தாரர்கள் மன்னனின் மகளைக் கவர்ந்தான். கோபம் கொண்ட அந்த மன்னர்களை, ஏதோ அவர்கள் பிறப்பால் குதிரைகளைப் போல அவன் {கிருஷ்ணன்}, தன் திருமணத் தேரில் பூட்டிச் சாட்டையால் காயப்படுத்தினான்.

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, வேறொருவனை {பீமனைக்} கருவியாகப் பயன்படுத்தி ஒரு முழு அக்ஷௌஹிணி துருப்புகளுக்குத் தலைவனான ஜராசந்தனைக் கொல்லச் செய்தான் [3].வலிமைமிக்கக் கிருஷ்ணன், மன்னர்களின் தலைவனான சேதிகளின் வீர மன்னனையும் {சிசுபாலனையும்}, ஏதோ ஒரு விலங்கை {கொல்வதைப்} போல, ஆர்க்கியம் சம்பந்தமாகப் பின்னவன் சச்சரவை ஏற்படுத்திய சந்தர்ப்பத்தில் கொன்றான்.

தன் ஆற்றலை வெளிப்படுத்திய மாதவன் {கிருஷ்ணன்} ஆகாயத்தில் இருந்ததும், சால்வனால் காக்கப்பட்டதும், நாட முடியாததுமான “சௌபம்” என்று அழைக்கப்பட்ட தைத்திய நகரத்தைக் கடலுக்குள் வீசினான்.

அங்கர்கள், வங்கர்கள், கலிங்கர்கள், மகதர்கள், காசிகள், கோசலர்கள், வாத்சியர்கள், கார்க்யர்கள், பௌண்டரர்கள் ஆகிய இவர்களை அனைவரையும் அவன் {கிருஷ்ணன்} போரில் வீழ்த்தினான்.

அவந்திகள், தெற்கத்தியர்கள், மலைவாசிகள், தசேரகர்கள், காஸ்மீரர்கள், ஔரஷிகர்கள், பிசாசர்கள், சமுத்கலர்கள், காம்போஜர்கள், வாடதானர்கள், சோழர்கள், பாண்டியர்கள், ஓ! சஞ்சயா, திர்கர்த்தர்கள், மாலவர்கள், வீழ்த்துவதற்குக் கடினமான தரதர்கள், பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்த வந்த கசர்கள், சகர்கள், தொண்டர்களுடன் கூடிய யவனர்கள் ஆகியோர் அனைவரும் அந்தத் தாமரைக் கண்ணனால் {கிருஷ்ணனால்} வீழ்த்தப்பட்டனர்.

பழங்காலத்தில் அனைத்து வகை நீர்வாழ் உயிரினங்களாலும் சூழப்பட்ட கடலில் புகுந்து நீரின் ஆழத்திற்குள் இருந்த வருணனையும் போரில் வென்றான்.

அந்த ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, பாதாளத்தின் ஆழங்களில் வாழ்ந்த பஞ்சஜன்யனைப் (பஞ்சஜன்யன் என்ற பெயர் கொண்ட தானவனைப்} போரில் கொன்று பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்படும் தெய்வீக சங்கை அடைந்தான்.

வலிமைமிக்கவனான கேசவன் {கிருஷ்ணன்}, பார்த்தனோடு {அர்ஜுனனோடு} சேர்ந்து காண்டவ வனத்தில் அக்னியை மனம் நிறையச் செய்து, வெல்லப்படமுடியாத நெருப்பாயுதத்தையும் {ஆக்னேயாஸ்திரத்தையும்}, (சுதர்சனம் என்றழைக்கப்படும்} சக்கரத்தையும் பெற்றான்.

வீரனான கிருஷ்ணன், கருடன் மீதேறிச் சென்று அமராவதியை (அமராவதிவாசிகளை} அச்சுறுத்தி மகேந்திரனிடம் இருந்து {இந்திரனின் அரண்மனையில் இருந்து} பாரிஜாதத்தை {பாரிஜாதம் என்றழைக்கப்பட்ட தெய்வீக மலரைக்} [4] கொண்டு வந்தான். கிருஷ்ணனின் ஆற்றலை அறிந்த சக்ரன் {இந்திரன்} அச்செயலை அமைதியாகப் பொறுத்தான்.மன்னர்களில், கிருஷ்ணனால் வீழ்த்தப்பட்டாத எவரும் இருப்பதாக நாம் கேட்டதில்லை.

ஓ! சஞ்சயா, என் சபையில் அந்தக் கமலக்கண்ணன் செய்த அற்புதமான செயலை அவனைத் தவிர இவ்வுலகத்தில் வேறு எவன் செய்யத்தகுந்தவன்?

அர்ப்பணிப்பால் {பக்தியால்} சரணமடைந்த நான், கிருஷ்ணனை ஈசுவரனாகக் கண்ட காரணத்தினால், (அந்த அருஞ்செயலைக் குறித்த) அனைத்தும் என்னால் நன்கு அறியப்பட்டது. ஓ! சஞ்சயா, அதைச் சாட்சியாக என் கண்களால் கண்ட என்னால், பெரும் சக்தியும், பெரும் புத்திக்கூர்மையும் கொண்ட ரிஷிகேசனுடைய (முடிவற்ற) சாதனைகளின் எல்லையைக் காண இயலவில்லை.

கதன், சாம்பன், பிரத்யும்னன், விதூரதன், [5] சாருதேஷ்ணன், சாரணன், உல்முகன், நிசடன், வீரனான ஜில்லிபப்ரு, பிருது, விபிருது, சமீகன், அரிமேஜயன் ஆகிய இவர்களும், தாக்குவதில் சாதித்தவர்களான இன்னும் பிற வலிமைமிக்க விருஷ்ணி வீரர்களும், விருஷ்ணி வீரனான அந்த உயர் ஆன்ம கேசவனால் {கிருஷ்ணனால்} அழைக்கப்படும்போது, பாண்டவப் படையில் தங்கள் நிலைகளை எடுத்துப் போர்க்களத்தில் நிற்பார்கள். பிறகு (என் தரப்பில்) அனைத்தும் பெரும் ஆபத்துக்குள்ளாகும். இதுவே என் எண்ணம்.ஜனார்த்தனன் எங்கே இருக்கிறானோ, அங்கே பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவனும், கைலாச சிகரத்திற்கு ஒப்பானவனும், காட்டு மலர்களாலான மாலைகளை அணிந்தவனும், கலப்பையை ஆயுதமாகத் தரித்தவனுமான வீர ராமன் {பலராமன்} இருப்பான்.

ஓ! சஞ்சயா, அனைவருக்கும் தந்தை அந்த வாசுதேவன் என மறுபிறப்பாளர்கள் எவனைச் சொல்கிறார்களோ, அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} பாண்டவர்களுக்காகப் போரிடுவானா? ஓ! மகனே, ஓ! சஞ்சயா, பாண்டவர்களுக்காக அவன் கவசம் தரித்தானெனில், அவனது எதிராளியாக இருக்க நம்மில் ஒருவரும் இல்லை.

கௌரவர்கள், பாண்டவர்களை வீழ்த்த நேர்ந்தால், அந்த விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்}, பின்னவர்களுக்காக {பாண்டவர்களுக்காக} தன் வலிமைமிக்க ஆயுதத்தை எடுப்பான். அந்த மனிதர்களில் புலி, அந்த வலிமைமிக்கவன் {கிருஷ்ணன்}, போரில் மன்னர்கள் அனைவரையும், கௌரவர்களையும் கொன்று குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} முழு உலகத்தையும் கொடுப்பான். ரிஷிகேசனை {கிருஷ்ணனைத்} தேரோட்டியாகவும், தனஞ்சயனை {அர்ஜுனனை} அதன் போராளியாகவும் கொண்ட தேரை, வேறு எந்தத் தேரால் போரில் எதிர்க்க முடியும்? எவ்வழியிலும் குருக்களால் {கௌரவர்களால்} வெற்றியை அடைய முடியாது. எனவே, அந்தப் போர் எவ்வாறு நடைபெற்றது என்பது அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக.

அர்ஜுனன், கேசவனின் {கிருஷ்ணனின்} உயிராவான், மேலும் கிருஷ்ணனே எப்போதும் வெற்றியாவான், கிருஷ்ணனிலேயே எப்போதும் புகழும் இருக்கிறது. அனைத்து உலகங்களிலும் பீபத்சு {அர்ஜுனன்} வெல்லப்படமுடியாதவனாவான். கேசவனிலேயே முடிவில்லாத புண்ணியங்கள் அதிகமாக இருக்கிறது. மூடனான துரியோதனன் விதியின் காரணமாகக் கிருஷ்ணனை, அந்தக் கேசவனை அறியாததால், தன் முன்னே காலனின் பாசத்தை {சுருக்குக் கயிற்றைக்} கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஐயோ, தாசார்ஹ குலத்தோனான கிருஷ்ணனையும், பாண்டுவின் மகனான அர்ஜுனனையும் துரியோதனன் அறியவில்லை.

இந்த உயர் ஆன்மாக்கள் புராதனத் தேவர்களாவர். அவர்களே நரனும், நாராயணனுமாவர். உண்மையில் அவர்கள் ஒரே ஆன்மாவைக் கொண்டவர்களாகயிருப்பினும், பூமியில் அவர்கள் தனித்தனி வடிவம் கொண்டவர்களாக மனிதர்களால் காணப்படுகிறார்கள். உலகம் பரந்த புகழைக் கொண்ட இந்த வெல்லப்பட முடியாத இணை நினைத்தால், தங்கள் மனத்தாலேயே இந்தப் படையை அழித்துவிட முடியும். அவர்கள் கொண்ட மனிதநேயத்தின் விளைவாலேயே அவர்கள் அதை {அழிவை} விரும்பவில்லை [6].பீஷ்மரின் மரணம் மற்றும், உயர் ஆன்ம துரோணரின் கொலை ஆகியன யுகமே மாறிவிட்டதைப் போல உணர்வுகளைப் புரட்டுகின்றன. உண்மையில், பிரம்மச்சரியத்தாலோ, வேதங்களின் கல்வியாலோ, (அறச்) சடங்குகளாலோ, ஆயுதங்களாலோ எவனாலும் மரணத்தைத் தவிர்க்க இயலாது. போரில் வெல்லப்பட முடியாதவர்களும், உலகங்கள் அனைத்திலும் மதிக்கப்படுபவர்களும், ஆயுதங்களை அறிந்த வீரர்களுமான பீஷ்மர் மற்றும் துரோணரின் கொலையைக் கேட்டும், ஓ! சஞ்சயா, நான் இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறேன்?

பீஷ்மர் மற்றும் துரோணரின் மரணத்தின் விளைவாக, ஓ! சஞ்சயா, யுதிஷ்டிரனின் எந்தச் செழிப்பைக் கண்டு நாங்கள் பொறாமை கொண்டோமோ, அதையே இனிமேல் நாங்கள் சார்ந்து வாழ வேண்டியிருக்கும். உண்மையில், என் செயல்களின் விளைவாலேயே குருக்களுக்கு இந்த அழிவு நேர்ந்திருக்கிறது. ஓ! சூதா {சஞ்சயா}, அழிவடையக் கனிந்திருக்கும் இவர்களைக் கொல்ல புல்லும் இடியாக மாறும் [7]. எந்த யுதிஷ்டிரனின் கோபத்தால் பீஷ்மரும், துரோணரும் வீழ்ந்தனரோ அந்த யுதிஷ்டிரன் அடையப்போகும் உலகம் முடிவிலான செழிப்பைக் கொண்டது. அவனது {யுதிஷ்டிரனது} மனநிலையின் விளைவாலேயே நல்லோர் யுதிஷ்டிரனின் தரப்பை அடைந்து என் மகனுக்கு {துரியோதனனுக்குப்} பகையாகினர்.அனைத்தையும் அழிக்க வந்த குரூரமான அந்தக் காலத்தை {யாராலும்} வெற்றி கொள்ள முடியாது. புத்திமான்களால் ஒருவிதமாகக் கணக்கிடப்பட்ட காரியங்களும் கூட, விதியால் வேறு விதமாக நிகழ்கின்றன. இதுவே என் எண்ணம். எனவே, தவிர்க்க முடியாததும், மிகக் கடுமையான சோக நினைவைத் தரக்கூடியதும், (நம்மால்) கடக்க முடியாததுமான இந்தப் பயங்கரப் பேரிடர் நிகழ்ந்த போது நடந்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” {என்றான் திருதராஷ்டிரன்}. 

வரமளித்த துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 012-துரியோதனனுக்கு வரமொன்றை அளிப்பதாகச் சொன்ன துரோணர்; யுதிஷ்டிரனை உயிரோடு பிடிக்க வேண்டிய துரியோதனன்; வரமளித்த துரோணர்; துரோணரின் உறுதியை படையினரிடம் வெளிப்படுத்திய துரியோதனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சரி, என் கண்களால் அனைத்தையும் கண்டவாறே, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களால் கொல்லப்பட்ட துரோணர் எப்படி வீழ்ந்தார் என்பதை நான் உமக்கு விவரிப்பேன்.

துருப்புகளின் தலைமைப் பொறுப்பை அடைந்த வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்}, உமது மகனிடம் {துரியோதனனிடம்} துருப்புகள் அனைத்தின் மத்தியில் இவ்வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! மன்னா {துரியோதனா}, கௌரவர்களில் காளையான கடலுக்குச்செல்பவள் (கங்கையின்) மகனுக்கு {பீஷ்மருக்குப்} பிறகு, துருப்புகளின் தலைமைப் பொறுப்பில் உடனே நிறுவி என்னை மதித்த உனது செயலுக்குத் தகுந்த கனியை {பயனை} நீ அடைவாய். உனது எந்தக் காரியத்தை நான் இப்போது அடைய வேண்டும்? நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக” {என்றார் துரோணர்}.

பிறகு, கர்ணன், துச்சாசனன் மற்றும் பிறரிடம் ஆலோசித்த மன்னன் துரியோதனன், வெல்லப்பட முடியாத வீரரும், வெற்றியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான ஆசானிடம் {துரோணரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், “நீர் எனக்கு ஒரு வரத்தை அளிப்பதாக இருந்தால், தேர்வீரர்களில் முதன்மையான யுதிஷ்டிரனை உயிருடன் பிடித்து, இங்கே என்னிடம் கொண்டு வருவீராக” {என்றான் துரியோதனன்}.

பிறகு, அந்தக் குருக்களின் ஆசான், உமது மகனின் {துரியோதனனின்} அவ்வார்த்தைகளைக் கேட்டுத் துருப்புகள் அனைத்தையும் மகிழ்விக்கும் வண்ணம் அவனுக்கு {துரியோதனனுக்குப்} பின்வரும் பதிலைச் சொன்னார், “எவனைக் கைப்பற்றுவதை நீ விரும்புகிறாயோ, அந்தக் குந்தியின் மகன் (யுதிஷ்டிரன்) பாராட்டுக்குரியவன். ஓ! வீழ்த்தப்படக் கடினமானவனே {துரியோதனா}, வேறு எந்த வரத்தையோ, (உதராணமாக) அவனது கொலையையோ நீ கேட்கவில்லை. ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, எக்காரணத்திற்காக நீ அவனது மரணத்தை விரும்பவில்லை? ஓ! துரியோதனா, கொள்கையில் அறியாமை கொண்டவனல்ல நீ என்பதில் ஐயமில்லை. எனவே, யுதிஷ்டிரனின் மரணத்தை ஏன் நீ வேண்டவில்லை? நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அவனது மரணத்தை விரும்பும் எந்த எதிரியையும் கொண்டிருக்கவில்லை என்பது பெரும் ஆச்சரியமானதாகும். அவன் உயிரோடிருக்க நீ விரும்புகிறாயானால், (ஒன்று) உன் குலத்தை அழிவிலிருந்து பாதுகாக்க முயல்கிறாய், அல்லது, ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, போரில் பாண்டவர்களை வீழ்த்தி அவர்கள் நாட்டை அவர்களுக்கே கொடுத்து (அவர்களுடன்) சகோதர உறவை நிறுவ விரும்புகிறாய். அந்தப் புத்திசாலி இளவரசனின் {யுதிஷ்டிரனின்} பிறப்பு மங்கலகரமானது. நீயே கூட அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} பாசம் கொண்டிருப்பதால், அவன் அஜாதசத்ரு (எதிரிகளற்றவன்) என்று உண்மையாகவே அழைக்கப்படுகிறான்” {என்றார் துரோணர்}.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரால் இப்படிச் சொல்லப்பட்டதும், உமது மகனின் {துரியோதனனின்} நெஞ்சில் எப்போதும் இருக்கும் உணர்ச்சியானது திடீரெனத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பிருஹஸ்பதியைப் போன்றோராலும் கூடத் தங்கள் முக உணர்ச்சிகளை மூடிமறைக்க முடியாது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதனால், மகிழ்ச்சியால் நிறைந்த உமது மகன் {துரியோதனன்}, இந்த வார்த்தைகளைச் சொன்னான்,

{துரியோதனன் துரோணரிடம்},
 “போரில் குந்தியின் மகனை {யுதிஷ்டிரனைக்} கொல்வதால், ஓ! ஆசானே {துரோணரே}, வெற்றி எனதாகாது. யுதிஷ்டிரன் கொல்லப்பட்டால், பிறகு நம் அனைவரையும் பார்த்தன் {அர்ஜுனன்} கொன்றுவிடுவான் என்பதில் ஐயமில்லை. மேலும், அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் தேவர்களாலும் கொல்ல முடியாது. அவ்வழக்கில், அவர்களில் பிழைக்கும் ஒருவனும் கூட நம் அனைவரையும் அழித்துவிடுவான் [1]. எனினும், யுதிஷ்டிரன் தன் உறுதிமொழிகளில் உண்மைநிறைந்தவனாவான். அவனை {யுதிஷ்டிரனை} இங்கே (உயிருடன்) கொண்டு வந்து, மீண்டும் ஒருமுறை பகடையில் வீழ்த்தினால், பாண்டவர்கள் அனைவரும் யுதிஷ்டிரனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்கள் ஆகையால், அவர்கள் மீண்டும் ஒருமுறை காட்டுக்குச் செல்வார்கள். அப்படிப்பட்ட ஒரு வெற்றியே நீடித்த ஒன்று எனத் தெளிவாகத் தெரிகிறது. இதற்காகவே நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் கொலையை எவ்வழியிலும் நான் விரும்பவில்லை” {என்றான் துரியோதனன்}.பொருளாதாய அறிவியலின் {அர்த்த தத்துவங்களின்} உண்மைகளை அறிந்தவரும், பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்டவருமான துரோணர், துரியோதனனின் இந்தக் குறுக்குப் புத்தியை உறுதிசெய்து கொண்டு, சிறிது நேரம் சிந்தித்துப் பின்வரும் வழியில் அந்த வரத்தைக் கட்டுப்படுத்தி அவனுக்கு அளித்தார்.

துரோணர் {துரியோதனிடம்}, “வீரனான அர்ஜுனன், யுதிஷ்டிரனைப் போரில் பாதுகாக்கவில்லை எனில், அந்த மூத்த பாண்டவன் {யுதிஷ்டிரன்} ஏற்கனவே உன் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டதாக நினைத்துக் கொள்வாயாக. பார்த்தனை {அர்ஜுனனைப்} பொறுத்தவரை, இந்திரனின் தலைமையிலான தேவர்கள் மற்றும் அசுரர்களால் கூடப் போரில் அவனை எதிர்க்க இயலாது. இதன் காரணமாகவே, நீ செய்யச் சொல்லி என்னிடம் கேட்பதை நான் செய்யத் துணியேன்.

அர்ஜுனன் சீடன் என்பதிலும், ஆயுதங்களில் நானே அவனது முதல் ஆசான் என்பதிலும் ஐயமில்லை. எனினும், அவன் இளமையானவன், பெரும் நற்பேறைக் கொண்டவன், மேலும் (தன் நோக்கங்களைச் சாதிக்க) அதிகப்படியாக முனைபவனுமாவான். மேலும், அவன் {அர்ஜுனன்} இந்திரன் மற்றும் ருத்ரனிடமிருந்த பல ஆயுதங்களை அடைந்திருக்கிறான். {இவை} தவிரவும், அவன் உன்னால் {கோபம்} தூண்டப்பட்டவனாகவும் இருக்கிறான். எனவே, நீ என்னிடம் கேட்டதைச் செய்ய நான் துணியேன்.

செயல்படுத்தக்கூடிய எவ்வழியிலாவது அர்ஜுனன் போரில் இருந்து நீக்கப்படட்டும். பார்த்தன் {அர்ஜுனன்} விலக்கப்பட்டதும், மன்னன் யுதிஷ்டிரன் ஏற்கனவே வீழ்ந்துவிட்டதாக நீ கருதலாம். ஓ! மனிதர்களில் காளையே {துரியோதனா}, அவனை {யுதிஷ்டிரனைக்} கொல்வதில் அல்ல, அவனைக் கைப்பற்றுவதிலேயே வெற்றி இருக்கிறது. தந்திரத்தால் கூட அவனைக் கைப்பற்றுவது சாதிக்கப்படலாம்.

உண்மையில், மனிதர்களில் புலியான குந்திமகன் தனஞ்சயன் {அர்ஜுனன்} களத்தில் இருந்து விலக்கப்பட்டால், உண்மைக்கும், நீதிக்கும் தன்னை அர்ப்பணித்திருக்கும் அம்மன்னன் {யுதிஷ்டிரன்} போரில் என் முன்னிலையில் ஒருக்கணம் நின்றாலும் கூட அவனைக் கைப்பற்றி இன்றே அவனை உன் கட்டுப்பாட்டின் கீழ் நான் கொண்டு வருவேன் என்பதில் ஐயமில்லை. எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, பல்குனனின் {அர்ஜுனனின்} முன்னிலையில் இந்திரனின் தலைமையிலான தேவர்கள் மற்றும் அசுரர்களாலும் கூடப் போரில் யுதிஷ்டிரன் பிடிக்க இயலாதவனாவான்” என்றார் {துரோணர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்த வரம்புகளுக்கு உடன்பட்டு மன்னனை {யுதிஷ்டிரனைக்} கைப்பற்றுவதாகத் துரோணர் உறுதியளித்தாலும், உமது முட்டாள் மகன்கள், யுதிஷ்டிரன் ஏற்கனவே பிடிபட்டதாகவே கருதினர். பாண்டவர்களிடம் துரோணர் கொண்ட சார்பு நிலையை {பாரபட்சத்தை} உமது மகன் (துரியோதனன்) அறிவான். எனவே, துரோணரைத் தன் உறுதிமொழியில் நிலைக்கச் செய்யும் பொருட்டு, அவன் {துரியோதனன்} அந்த ஆலோசனைகளை வெளியிட்டான். பிறகு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, துரோணர் (மூத்த) பாண்டவனை {யுதிஷ்டிரனைக்} கைப்பற்றுவதாக வாக்குறுதி அளித்த அந்தச் செய்தி, துரியோதனனால் அவனது துருப்பினர் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது {பிரகடனப்படுத்தப்பட்டது}” {என்றான் சஞ்சயன்}.

அர்ஜுனனின் உறுதிமொழி! – துரோண பர்வம் பகுதி – 013-துரோணரின் உறுதிமொழியை அறிந்த யுதிஷ்டிரன்; பாண்டவர்கள் ஆலோசனை; யுதிஷ்டிரனைத் தேற்றிய அர்ஜுனன்; போரின் தொடக்கமும், துரோணரின் ஆற்றலும்

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த வரம்புகளுக்கு உட்பட்டு மன்னனை {யுதிஷ்டிரனைப்} பிடிக்கத் துரோணர் உறுதியளித்த பிறகு, உமது துருப்பினர், யுதிஷ்டிரன் பிடிபடபோவதைக் ({துரோணரின் அந்த உறுதிமொழியைக்) கேட்டுச் சங்கொலிகள் மற்றும் தங்கள் கணைகளின் “விஸ்” ஒலிகள் ஆகியவற்றுடன் கலந்து தங்கள் சிங்க முழக்கங்களைப் பலவாறு வெளியிட்டனர். எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகனின் {துரோணரின்} நோக்கம் குறித்த அனைத்தையும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தன் ஒற்றர்கள் மூலம் விரைவில் விரிவாக அறிந்தான்.

பிறகு தன் சகோதரர்கள் அனைவரையும், தன் படையின் பிற மன்னர்கள் அனைவரையும் அழைத்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, துரோணரின் நோக்கத்தைக் குறித்துக் கேட்டாய். எனவே, அக்காரியம் சாதிக்கப்படுவதைத் தடுக்கத் தக்க நடவடிக்கைகளைப் பின்பற்றுவோமாக. எதிரிகளைக் கலங்கடிப்பவரான துரோணர் தன் உறுதிமொழியை வரம்புகளுக்குட்பட்டுச் செய்திருக்கிறார் என்பது உண்மையே, எனினும், ஓ! பெரும் வில்லாளியே {அர்ஜுனனே}, அவை {அந்த வரம்புகள்} உன்னைச் சார்ந்தவையே. எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, துரியோதனன், தன் விருப்பத்தின் கனியை {பலனை} துரோணரிடம் அடையாதவாறு நீ இன்று என் அருகிலேயே நின்று போரிடுவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “எப்படி ஒருபோதும் என்னால் எனது ஆசானை {துரோணரைக்} கொல்ல முடியாதோ, அப்பட்டியே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உம்மையும் என்னால் விட இயலாது. ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, என் ஆசானை {துரோணரை} எதிர்த்துப் போரிடுவதைக் காட்டிலும் நான் போரில் என் உயிரையே விட்டுவிடுவேன் [1]. இந்தத் திருதராஷ்டிர மகன் {துரியோதனன்}, போரில் உம்மைக் கைப்பற்றி, அரசுரிமையை அடைய விரும்புகிறான். இவ்வுலகில் அவன் அந்த விருப்பத்தின் கனியை {பலனை} ஒருபோதும் அடையப் போவதில்லை. நட்சத்திரங்களுடன் கூடிய ஆகாயம் விழலாம், பூமி துண்டுகளாகச் சிதறிப் போகலாம், எனினும், நிச்சயம் நான் உயிரோடுள்ளவரை உம்மைப் பிடிப்பதில் துரோணரால் வெல்லவே முடியாது.

வஜ்ரதாரி {இந்திரன்}, அல்லது விஷ்ணுவின் தலைமையிலான தேவர்களே அவருக்கு {துரோணருக்குப்} போரில் உதவினாலும், களத்தில் உம்மைக் கைப்பற்றுவதில் அவரால் {துரோணரால்} வெல்லவே முடியாது. நான் உயிரோடுள்ளவரை, ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, அவர் {துரோணர்} ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவரே ஆனாலும், அந்தத் துரோணரிடம் நீர் அச்சங்கொள்வது உமக்குத் தகாது. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, என் உறுதிமொழிகள் ஒருபோதும் நிறைவடையாமல் இருந்ததில்லை என்பதையும் நான் உமக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

எப்போதும் நான் பொய்மை ஏதும் பேசியிருப்பதாக எனக்கு நினைவில்லை.

எப்போதும் நான் வீழ்த்தப்பட்டதாகவும் எனக்கு நினைவில்லை.

எப்போதும் நான் ஓர் உறுதிமொழியைச் செய்துவிட்டு, அதில் ஒரு பகுதியை நிறைவேற்றாமல் இருந்ததாக எனக்கு நினைவில்லை” என்றான் {அர்ஜுனன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு பாண்டவ முகாமில், சங்குகள், பேரிகைகள், படகங்கள், மிருதங்கங்கள் ஆகியன ஒலிக்கப்பட்டு முழங்கின. உயர் ஆன்ம பாண்டவர்கள் சிங்க முழக்கங்களைச் செய்தனர். இவையும், அவர்களது வில்லின் பயங்கர நாணொலிகளும், உள்ளங்கை தட்டல்களும் சொர்க்கத்தையே எட்டின. பாண்டுவின் வலிமைமிக்க மகன்களின் முகாமில் இருந்து எழுந்த உரத்த சங்கொலிகளைக் கேட்டு, உமது படைப்பிரிவுகளிலும் பல்வேறு கருவிகள் இசைக்கப்பட்டன. பிறகு உமது படைப்பிரிவுகளும், அவர்களுடையனவும் போருக்காக அணிவகுக்கப்பட்டன. பிறகு போரை விரும்பிய அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து மெதுவாக முன்னேறினர். பாண்டவர்கள், குருக்கள் {கௌரவர்கள்}, துரோணர் மற்றும் பாஞ்சாலர்களுக்கு இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வண்ணம் கடுமையான ஒரு போர் தொடங்கியது.

சிருஞ்சயர்கள் கடுமையாகப் போரிட்டாலும், துரோணரால் பாதுகாக்கப்பட்ட அந்தப் படையை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. அதே போல, தாக்குவதில் திறம்பெற்ற உமது மகனின் {துரியோதனனின்} வலிமைமிக்கத் தேர்வீரர்களாலும், கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்பட்ட பாண்டவப் படையை வீழ்த்த முடியவில்லை. துரோணர் மற்றும் அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்ட அவ்விரு படைகளும், இரவின் அமைதியில் பூத்துக் குலுங்கும் இரு காடுகளைப் போலச் செயலற்று நிற்பதாகத் தெரிந்தது.

பிறகு, தங்கத் தேரைக் கொண்டவர் (துரோணர்), சூரியனைப் போன்ற பெரும் காந்தியைக் கொண்டு, பாண்டவர்களின் படையணிகளை நசுக்கியபடி, தான் விரும்பியவாறெல்லாம் அவர்கள் மத்தியில் திரிந்தார். பாண்டவர்களும், சிருஞ்சயர்களும், தாங்கள் கொண்ட அச்சத்தால், பெரும் வேகத்தோடு விரைவாக முன்னேறி வந்த அந்தத் தனி வீரரை {துரோணரை} பலராகக் கருதினர். அவரால் ஏவப்பட்ட பயங்கரக் கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களிலும் பாய்ந்து பாண்டு மகனின் படையை அச்சுறுத்தின. உண்மையில் துரோணர், நூற்றுக்கணக்கான கிரணங்களுடன் கூடிய நடுநாள் சூரியனைப் போலவே தெரிந்தார்.

இந்திரனைக் காண இயலாத தானவர்களைப் போல, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கோபம் நிறைந்த பரத்வாஜர் மகனை {துரோணரைக்) காண பாண்டவர்களில் ஒருவராலும் இயலவில்லை. பிறகு பரத்வாஜரின் வீர மகன்{துரோணர்}, (பகைவர்) துருப்புகளைக் குழப்பியபடி, கூரிய கணைகளால் திருஷ்டத்யும்னன் படைப்பிரைவை வேகமாக எரிக்கத் தொடங்கினார். தன் நேரான கணைகளால் திசைகள் அனைத்தையும் மறைத்துத் தடுத்த அவர், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} இருந்த பாண்டவப் படையை நசுக்கத் தொடங்கினார்” {என்றான் சஞ்சயன்}.

அபிமன்யுவின் ஆற்றல்! – துரோண பர்வம் பகுதி – 014-துரோணர் செய்த போர்; வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்போர்கள்; ஜெயத்ரதனால் அபிமன்யுவிடம் இருந்து உயிர்தப்பிய பௌரவன்; ஜெயத்ரதனை வீழ்த்திய அபிமன்யு; அபிமன்யுவின் ஆற்றல்; சல்லியன் அபிமன்யு மோதல்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டவப்படையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய துரோணர், (காட்டு) மரங்களை எரிக்கும் தீயைப் போல அதனூடே {பாண்டவப்படையினூடே} திரிந்து கொண்டிருந்தார். தங்கத்தேரைக் கொண்ட அந்தக் கோபக்கார வீரர் {துரோணர்} பெருகும் காட்டுத்தீயைப் போலத் தங்கள் படையணிகளை எரிப்பதைக் கண்ட சிருஞ்சயர்கள் (அச்சத்தால்) நடுங்கினர். பெரும் சுறுசுறுப்புடைய அந்த வீரரால் {துரோணரால்} தொடர்ந்து வளைக்கப்பட்ட வில் உண்டாக்கிய நாணொலியானது இடியின் முழக்கத்திற்கு ஒப்பாக அந்தப் போரில் கேட்கப்பட்டது. கர நளினம் {லாகவம்} கொண்ட துரோணரால் ஏவப்பட்ட கடுங்கணைகள், யானைகள் மற்றும் குதிரைகளுடன் கூடிய தேர்வீரர்களையும், குதிரைவீரர்களையும், யானைவீரர்களையும், காலாட்படை வீரர்களையும் நசுக்கத் தொடங்கின.

வேனிற்காலத்தின் முடிவில் முழங்கும் மேகங்கள் காற்றின் உதவியோடு ஆலங்கட்டிகளைப் பொழிவதைப் போலக் கணைகளைப் பொழிந்த அவர் {துரோணர்}, எதிரியின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்தினார். (பகையணிகளின் ஊடாகத்) திரிந்து துருப்புகளைக் கலங்கடித்த வலிமைமிக்கத் துரோணர், எதிரியிடம் இயல்புக்குமீறிய அச்சத்தை அதிகமாக்கினார். வேகமாக நகரும் அவரது தேரில், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வில் கார்மேகத் திரளுக்கு மத்தியில் மின்னலின் கீற்றுக்கு ஒப்பாக அடிக்கடி தென்பட்டது.

உண்மையில் {சத்தியத்தில்} உறுதியானவரும், விவேகம் கொண்டவரும், நீதிக்கு எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவருமான அந்த வீரர் {துரோணர்} யுகத்தின் முடிவில் தென்படும் கோப ஊற்றாலான பயங்கர ஆறு ஒன்றை அங்கே பாயச் செய்தார். துரோணருடைய கோபத்தின் வேகத்தில் இருந்த அந்த ஆற்றின் ஊற்றுக் கண் ஊனுண்ணும் உயிரினங்களால் மொய்க்கப்பட்டிருந்தது. போராளிகள் அதன் முழுப் பரப்பிலான அலைகளாக இருந்தனர். வீரமிக்கப் போர்வீரர்கள் அதன் ஊற்றால் வேர்கள் தின்னப்பட்டு, அதன் கரைகளில் நிற்கும் மரங்களாக இருந்தனர்.

அந்தப் போரில் சிந்தப்பட்ட குருதி அதன் நீரானது, தேர்கள் அதன் நீர்ச்சுழலாகவும், யானைகளும் குதிரைகளும் அதன் கரைகளாகவும் அமைந்தன. கவசங்கள் அதன் அல்லிகளாகவும், உயிரினங்களின் இறைச்சி அதன் படுகையில் உள்ள சகதியாகவும் இருந்தன. (வீழ்ந்த விலங்குகள் மற்றும் மனிதர்களின்) கொழுப்பு, மஜ்ஜை, எலும்புகள் அதன் மணற்பரப்பாகவும், தலைப்பாகைகள் அதன் நுரைகளாகவும் அமைந்தன. மேலும் அங்கே நடைபெற்ற போரானது அதன் பரப்புக்கு மேலுள்ள கவிகையாகியது. வேல்கள் எனும் மீன்களால் அது நிறைந்திருந்தது. பெரும் எண்ணிக்கையில் (கொல்லப்பட்ட) மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகள் ஆகியவற்றின் விளைவால் (அதில் விழுந்ததால்) அஃது அடைவதற்கரிதானதாக இருந்தது.

ஏவப்பட்ட கணையின் வேகம் அதன் நீரூற்றாக இருந்தது. கொல்லப்பட்ட உடல்கள் அதில் மிதக்கும் மரங்களாகின. தேர்கள் அதன் ஆமைகளாகின. தலைகள், அதன் கரைகளில் சிதறிக் கிடக்கும் கற்களாகின, வாள்கள் மீன்களாக அபரிமிதமாக இருந்தன. தேர்களும், யானைகளும், அதன் தடாகங்களாகின. மேலும் அது பல்வேறு ஒப்பனைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அதன் நூற்றுக்கணக்கான நீர்ச்சுழல்களாகினர். பூமியின் புழுதி அதன் அலைவரிசைகளாகின. பெரும் சக்தி கொண்டோரால் எளிதில் கடக்கத்தக்கதாகவும், மருண்டவர்களால் கடக்கமுடியாததாகவும் அஃது இருந்தது.

உயிரற்ற உடல்களின் குவியல்கள் அதன் ஓட்டத்தைத் தடுக்கும் மணற்படுகைகளாகின. கங்கங்கள், கழுகுகள் மற்றும் இரைதேடும் பிற பறவைகள் மொய்க்கும் இடமாக அஃது இருந்தது. ஆயிரக்கணக்கான வலிமைமிக்கத் தேர்வீரர்களை அது யமலோகத்திற்கு அடித்துச் சென்றது. நீண்ட ஈட்டிகள் அதன் பாம்புகளாக அதில் பரவிக் கிடந்தன. உயிருடன் இருந்த போராளிகள் அதன் நீர்களில் விளையாடும் நீர்வாழ் உயிரிகளாகினர். கிழிந்த குடைகள் அதன் பெரிய அன்னங்களாகின. கிரீடங்கள் அதை அலங்கரித்த (சிறு) பறவைகளாகின. சக்கரங்கள் அதன் ஆமைகளாகவும், கதாயுதங்கள் அதன் முதலைகளாகவும், கணைகள் அதன் சிறு மீன்களாகவும் இருந்தன. காகங்கள், கழுகுகள் மற்றும் நரிகளின் பொழுதுபோக்கிடமாக அஃது இருந்தது.

ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்த ஆறு போரில் துரோணரால் கொல்லப்பட்ட உயிரினங்களை நூற்றுக்கணக்கில் பித்ருலோகத்திற்கு அழைத்துச் சென்றது. (அதில் மிதக்கும்) நூற்றுக்கணக்கான உடல்களால் தடுக்கப்பட்ட அது (கொல்லப்பட்ட வீரர்கள் மற்றும் விலங்குகளின்) முடிகளைப் பாசிகளாகவும், புற்களாகவும் கொண்டிருந்தது. துரோணர் அங்கே ஓடச்செய்த ஆறு இப்படியே மருண்டோரின் அச்சத்தை அதிகப்படுத்துவதாக இருந்தது.

அங்கேயும் இங்கேயும் எனத் துரோணர் பகையணியை இப்படிக் கலங்கடித்துக் கொண்டிருந்தபோது, யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவ வீரர்கள் அந்த வீரரை {துரோணரை} நோக்கி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் விரைந்து சென்றனர். அவர்கள் இப்படி (துரோணரை நோக்கி) விரைவதைக் கண்ட உறுதியான ஆற்றல் கொண்ட உமது படையின் துணிச்சல்மிகு போராளிகள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்தனர். அதன்பிறகு அங்கே தொடர்ந்த போரானது மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

நூறு வகைகளிலான வஞ்சனைகள் நிறைந்த சகுனி, சகாதேவனை நோக்கி விரைந்து, கூர்முனைக் கணைகள் பலவற்றால் பின்னவனின் {சகாதேவனின்} தேரோட்டி, கொடிமரம் மற்றும் தேரினைத் துளைத்தான். எனினும், அதிகமாகத் தூண்டப்படாத சகாதேவன், கூரிய கணைகளால் சுபலனின் கொடிமரம், வில், தேரோட்டி மற்றும் தேர் ஆகியவற்றை வெட்டி, அறுபது {60} கணைகளால் சுபலனையும் {சகுனியையும்} துளைத்தான். அதன் பேரில், சுபலனின் மகன் {சகுனி}, கதாயுதத்தை எடுத்துக் கொண்டு தன் சிறந்த தேரில் இருந்து கீழே குதித்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சகாதேவனின் தேரோட்டியைப் பின்னவனின் {சகாதேவனின்} தேரில் இருந்து கீழே வீழ்த்தினான். பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் தேரை இழந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் {சகுனியும், சகாதேவனும்} இருவரும் கதாயுதத்தைத் தரித்துக் கொண்டு, மலைகளின் முகடுகள் இரண்டைப் போலப் போரில் விளையாடினர்.

துரோணர், பாஞ்சாலர்களின் ஆட்சியாளனை {துருபதனைப்} பத்துக் கணைகளால் துளைத்துவிட்டுப் பதிலுக்குப் பின்னவனால் {துருபதனால்} பல கணைகளால் துளைக்கப்பட்டார். பிறகு, மீண்டும் பின்னவன் {துருபதன்} துரோணரால் பெரும் எண்ணிக்கையிலான கணைகளால் துளைக்கப்பட்டான் [1].பீமசேனன் கூரிய கணைகளால் விவிம்சதியைத் துளைத்தான். எனினும் பின்னவன் {விவிம்சதி}, இப்படித் துளைக்கப்பட்டாலும் நடுங்காதிருந்தது பெரும் ஆச்சரியமாகத் தெரிந்தது. பிறகு விவிம்சதி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, திடீரெனப் பீமசேனனை அவனது குதிரைகளையும், கொடியையும், வில்லையும் இழக்கச் செய்தான். அதன்பேரில் துருப்புகள் அனைத்தும் அந்தச் சாதனைக்காக அவனை {விவிம்சதியை} வழிபட்டன. எனினும், வீரபீமசேனன், போரில் தன் எதிரி ஆற்றலை வெளிப்படுத்துவதைப் பொறுத்துக் கொள்ளவில்லை. எனவே, தன் கதாயுதத்தால், விவிம்சதியின் நன்கு பயிற்சியைப் பெற்ற குதிரைகளைக் கொன்றான். பிறகு வலிமைமிக்க விவிம்சதி, (வாளோடு கூடிய) ஒரு கேடயத்தை எடுத்துக் கொண்டு, குதிரைகள் கொல்லப்பட்ட தனது தேரில் இருந்து கீழே குதித்து, மதங்கொண்ட எதிராளியை {யானையை} எதிர்த்து விரையும் மதங்கொண்ட யானையைப் போலப் பீமசேனனை எதிர்த்து விரைந்தான்.

வீர சல்லியன், சரசம் செய்பவனைப் போலச் சிரித்துக் கொண்டே தன் அன்புக்குரிய மருமகனான நகுலனின்கோபத்தைத் தூண்டுவதற்காகப் பல கணைகளால் அவனை {நகுலனைத்} துளைத்தான். எனினும், வீர நகுலன், தன் மாமனின் {சல்லியனின்} குதிரைகள், குடை, கொடிமரம், தேரோட்டி மற்றும் வில் ஆகியவற்றை வெட்டி தன் சங்கை முழக்கினான்.

{சேதி மன்னன்} திருஷ்டகேது, கிருபருடன் {போரில்} ஈடுபட்டு, பின்னவர் {கிருபர்} தன்னை நோக்கி ஏவிய பல்வேறு வகைகளிலான கணைகளை வெட்டி, பிறகு, எழுபது{70} கணைகளால் கிருபரைத் துளைத்தான். பிறகும், மூன்று கணைகளால் கிருபரின் கொடிமரத்திலுள்ள பொறியை {கொடியை} அவன் வெட்டினான். எனினும், கிருபர், அடர்த்தியான கணை மழையால் அவனை {திருஷ்டகேதுவை} எதிர்க்கத் தொடங்கினார். இவ்வழியில் திருஷ்டகேதுவைத் தடுத்த அந்தப் பிராமணர் {கிருபர்}, அவனுடன் {தொடர்ந்து} போரிட்டுக் கொண்டிருந்தார்.

சாத்யகி, சிரித்துக் கொண்டே ஒரு நாராசத்தைக் கொண்டு கிருதவர்மனின் நடு மார்பைத் துளைத்தான். மேலும் எழுபது {70} கணைகளால் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்த அவன் {சாத்யகி} மீண்டும் பிறவற்றால் அவனைத் {கிருதவர்மனைத்} துளைத்தான். எனினும் அந்தப் போஜப் போர்வீரன் {கிருதவர்மன்}, கூர்முனைகளைக் கொண்ட எழுபது கணைகளால் சாத்யகியைப் பதிலுக்குத் துளைத்தான். வேகமாகச் செல்லும் காற்று ஒரு மலையை அசைப்பதில் தோற்பதைப் போல, கிருதவர்மனால் சாத்யகியை அசைக்கவோ, அவனை நடுங்கச் செய்யவோ இயலவில்லை.

{துரியோதனன் தம்பியான} சேனாபதி, {பாண்டவத் தரப்பின்} சுசர்மனை அவனது முக்கிய அங்கங்களில் ஆழமாகத் தாக்கினான். சுசர்மனும் ஒரு வேலால் தன் எதிராளியின் தோள்ப்பூட்டில் தாக்கினான் [2].விராடன், பெரும் சக்தி கொண்ட மத்ஸ்ய வீரர்களின் உதவியால், அந்தப் போரில் விகர்த்தனன் மகனை {கர்ணனைத்} தடுத்தான். (மத்ஸ்ய மன்னனின்) அந்தச் சாதனை மிகவும் அற்புதமானதாகத் தெரிந்தது. சூத மகனின் {கர்ணனின்} பங்குக்கு, அவன் தனியாகவே தன் நேரான கணைகளின் மூலம் மொத்தப்படையையும் தடுத்ததால், அது பெரும் வீரச் செயலாகக் கருதப்பட்டது.

மன்னன் துருபதன், பகதத்தனோடு {போரில்} ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அந்த இருவீரர்களுக்கு இடையில் நடைபெற்ற அந்தப் போரானது காண்பதற்கு மிக அழகாக இருந்தது [3]. மனிதர்களில் காளையான பகதத்தன், நேரான கணைகள் பலவற்றால், மன்னன் துருபதன், அவனது தேரோட்டி, கொடிமரம் மற்றும் தேர் ஆகியவற்றைத் துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட துருபதனோ, ஒரு நேரான கணையால் அந்த வலிமைமிக்கத் தேர்வீரனின் {பகதத்தனின்} நடு மார்பைத் துளைத்தான்.

ஆயுதங்களை அறிந்த பூமியின் போர்வீரர்களில் முதன்மையான சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்} மற்றும் சிகண்டி ஆகியோர் இருவரும் கடும்போரில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டது உயிரினங்கள் அனைத்தையும் அச்சத்தால் நடுங்கச் செய்தது. வீர பூரிஸ்ரவஸ், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யக்ஞசேனன் மகனான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் சிகண்டியை அடர்த்தியான கணைமழையால் மறைத்தான். பிறகு, ஓ!ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட சிகண்டி, தொண்ணூறு {90} கணைகளால் சோமதத்தன் மகனை {பூரிஸ்ரவசைத்} துளைத்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனை {பூரிஸ்ரவசை} நடுங்கச் செய்தான்.

கடும் செயல்களைப் புரியும் ராட்சசர்களான ஹிடிம்பையின் மகனும் {கடோத்கசனும்}, அலம்புசனும், ஒருவரையொருவர் வீழ்த்த விரும்பி, மிக அற்புதமாகப் போரிட்டனர். நூறு மாயைகளை உண்டாக்கவல்லவர்களும், செருக்கு பெருகியவர்களுமான அவ்விருவரும், தங்கள் மாய சக்திகளை நம்பி ஒருவரையொருவர் வீழ்த்த விரும்பி தங்களுக்குள் மிக அற்புதமாகப் போரிட்டனர்.

மூர்க்கமான சேகிதானன், அனுவிந்தனோடு போரிட்டான். சில நேரங்களில் மறைந்து பெரும் அற்புதங்களை ஏற்படுத்தியபடியே அவர்கள் களத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.

{துரியோதனன் மகன்} லக்ஷ்மணன், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் (அசுரன்) ஹிரண்யாக்ஷனோடு போரிட்ட விஷ்ணுவைப் போலவே , {திருஷ்டத்யும்னன் மகன்} க்ஷத்ரதேவனோடு கடுமையாகப் போரிட்டான்.

பௌரவன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வேகமான தன் குதிரைகளோடு கூடிய தேரில் வந்து, அபிமன்யுவை நோக்கி முழங்கினான். பெரும் வலிமை கொண்ட அந்தப் பௌரவன் போரிட விரும்பி அபிமன்யுவை நோக்கி விரைந்தான். பிறகு எதிரிகளைத் தண்டிப்பவனான அபிமன்யு அந்த எதிரியோடு {பௌரவனோடு} கடுமையாகப் போரிட்டான். பௌரவன் அடர்த்தியான கணை மழையால் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} மறைத்தான். அதன் பேரில், அர்ஜுனனின் மகன் {அபிமன்யு}, தன் எதிராளியின் {பௌரவனின்} கொடிமரம், குடை மற்றும் வில் ஆகியவற்றைப் பூமியில் வீழ்த்தினான். பிறகு ஏழு கணைகளால் பௌரவனைத் துளைத்த சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஐந்து கணைகளால் பின்னவனின் {பௌரவனின்} தேரோட்டி மற்றும் குதிரைகளைத் துளைத்தான். இப்படித் தன் துருப்புகளை மகிழ்ச்சியடையச் செய்த அவன் {அபிமன்யு}, சிங்கம் போல மீண்டும் மீண்டும் கர்ஜனை செய்தான்.

பிறகு அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, பௌரவனின் உயிரை நிச்சயம் எடுக்க வல்ல கணை ஒன்றை தன் வில்லின் நாணில் விரைவாகப் பொருத்தினான். எனினும் அபிமன்யுவின் வில்லின் நாணில் பொருத்தப்பட்ட அந்தக் கணையின் பயங்கரத் தோற்றத்தைக் கண்ட ஹ்ருதிகன் மகன் {கிருதவர்மன்}, இரண்டு கணைகளால் அந்த வில்லையும், கணையையும் அறுத்தான். பிறகு, பகைவர்களைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, உடைந்த வில்லை வீசியெறிந்து, பளபளக்கும் வாள் ஒன்றையும், கேடயம் ஒன்றையும் எடுத்துக் கொண்டான். பல நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கேடயத்தைப் பெரும் வேகத்தோடு சுழற்றி, அந்த வாளையும் சுழற்றியபடியே தன் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டு அவன் {அபிமன்யு} களத்தில் திரிந்து கொண்டிருந்தான்.

தன் முன்னே அவற்றை {கேடயத்தையும் வாளையும்} சுழற்றிக் கொண்டும், பிறகு அவற்றை உயர்த்திச் சுழற்றியும், அவற்றை அசைத்தும் {உதறியும்}, உயரக் குதித்தும் அவ்வாயுதங்களை அவன் கையாண்ட விதத்தால், தாக்கும் மற்றும் தற்காக்கும் அந்த ஆயுதங்களுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் (அவனிடம்) காண முடியவில்லை. பிறகு, திடீரெனப் பௌரவனின் தேர் ஏர்க்காலில் குதித்து ஏறிய அவன் {அபிமன்யு} உரக்க முழங்கினான். பிறகு அவனது தேரில் ஏறிய அவன் {அபிமன்யு}, பௌரவனின் தலைமயிறைப் பிடித்துக் கொண்டு, ஓர் உதையால் பின்னவனின் {பௌரவனின்} தேரோட்டியைக் கொன்று, தன் வாள் வீச்சால் அவனது கொடிமரத்தையும் வீழ்த்தினான். அந்தப் பௌரவனைப் பொறுத்தவரை, நீரைக் கலக்கி கடலின் அடியில் உள்ள பாம்பை உயர்த்தும் கருடனைப் போல அபிமன்யு அவனை {பௌரவனை} உயர்த்தினான்.

அதன் பேரில், மன்னர்கள் அனைவரும், சிங்கத்தால் கொல்லப்படும் தருணத்தில் உணர்வுகளை இழந்து நிற்கும் எருதைப் போலக் கலைந்த தலைமயிறோடு கூடிய (ஆதரவற்று நின்ற) பௌரவனைக் கண்டனர். இப்படிக் கிடத்தப்பட்ட பௌரவன், அர்ஜுனன் மகனின் {அபிமன்யுவின்} வசத்தில் அகப்பட்டு, ஆதரவற்ற நிலையில் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்ட ஜெயத்ரதனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு வாளையும், மயில் பொறிக்கப்பட்டு வரிசையான சிறு மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்ட ஜெயத்ரதன், தன் தேரில் இருந்து கீழே குதித்து உரக்க முழங்கினான். பிறகு, சுபத்திரையின் மகன் (அபிமன்யு), சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கண்டு, பௌரவனை விட்டுவிட்டு, பின்னவனின் தேரில் இருந்து ஒரு பருந்தைப் போல உயரக் குதித்து, பூமியில் விரைவாக இறங்கினான்.

அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, தன் எதிரிகளால் ஏவப்பட்ட வேல்கள், பட்டிசங்கள் மற்றும் வாள்களைத் தன் வாளினால் வெட்டவோ, தன் கேடயத்தால் விலக்கவோ செய்தான். இப்படித் தன் கரங்களின் வலிமையை வீரர்கள் அனைவருக்கும் காட்டிய அந்த வலிமைமிக்க (வீர) அபிமன்யு, மீண்டும் தன் பெரிய வாளையும், கேடயத்தையும் உயர்த்தி, தன் தந்தையின் {அர்ஜுனனின்} உறுதியான எதிரியான விருத்தக்ஷத்திரன் மகனை {ஜெயத்ரதனை} நோக்கி, யானையை எதிர்த்துச் செல்லும் புலியைப் போலச் சென்றான். புலியும் சிங்கமும் தங்கள் பற்களாலும், நகங்களாலும் தாக்கிக் கொள்வதைப் போல ஒருவரை ஒருவர் அணுகிய அவர்கள் தங்கள் வாள்களால் தாக்கிக் கொண்டனர்.

சுழன்று வீசுதல் {அபிகாதம்}, வாள்களை இறக்குதல் {ஸ்ம்பாதம்} மற்றும் கேடயங்களை இறக்குதல் {நிபாதம்} ஆகியவற்றைப் பொறுத்தவரை, அந்த மனிதர்களில் சிங்கங்களான இருவருக்குள்ளும் எந்த வேறுபாட்டையும் யாராலும் காண முடியவில்லை [4]. வெளிநோக்கியும், உள்நோக்கியும் அழகாக நகர்ந்து அந்த இரு வீரர்களும் சிறகுகள் படைத்த இரு மலைகளைப் போலத் தெரிந்தனர். ஜெயத்ரதன், புகழ்பெற்ற அபிமன்யு அவனை நோக்கி வாளை வீசிய போது பின்னவனின் {அபிமன்யுவின்} கேடயத்தைத் தாக்கினான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஜெயத்ரதனின் பெரிய வாளானது, தங்கத் தகட்டால் மறைக்கப்பட்ட அபிமன்யுவின் கேடயத்தில் சிக்கிக் கொண்டு, அதைச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} பலமாக உருவ முயற்சித்த போது உடைந்தது.

தன் வாள் உடைந்ததைக் கண்ட ஜெயத்ரதன், விரைவாக ஆறு எட்டுகள் பின்வாங்கி, கண் இமைக்கும் நேரத்திற்குள் தன் தேரில் ஏறுவது தெரிந்தது [5]. பிறகு, வாள் போர் முடிந்ததும் அர்ஜுனனின் மகனும் {அபிமன்யுவும்} தன் சிறந்த தேரில் ஏறினான். குரு படையின் மன்னர்கள் பலர் ஒன்று சேர்ந்து அனைத்துப் பக்கங்களிலும் அவனை {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர். எனினும், அந்த வலிமைமிக்க அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, ஜெயத்ரதனைப் பார்த்துக் கொண்டே தன் வாளையும், கேடயத்தையும் சுழற்றி உரக்க கர்ஜித்தான். சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} வீழ்த்தியவனும், பகை வீரர்களைக் கொல்பவனுமான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, பிறகு, உலகை எரிக்கும் சூரியனைப் போலக் கௌரவப் படையின் அந்தப் பிரிவை எரிக்கத் தொடங்கினான்.

பிறகு அந்தப் போரில் சல்லியன், முழுக்க இரும்பாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், நெருப்புத் தழலின் சுடருக்கு ஒப்பானதுமான கடும் ஈட்டி ஒன்றை அவன் {அபிமன்யு} மீது வீசினான். அதன் பேரில், அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, மேலிருந்து விழும் வலிமைமிக்கப் பாம்பைப் பிடிக்கும் கருடனைப் போல அந்த ஈட்டியை உயரக் குதித்துப் பிடித்தான். இப்படி அதைப் {ஈட்டியைப்} பிடித்த அபிமன்யு தன் வாளை உறையில் இருந்து எடுத்தான். அளவிலா சக்தி கொண்ட அந்தப் போர்வீரனின் {அபிமன்யுவின்} வலிமையையும் பெரும் சுறுசுறுப்பையும் சாட்சியாகக் கண்ட மன்னர்கள் அனைவரும் சேர்ந்து சிங்க கர்ஜனை செய்தனர்.

பிறகு, பகைவீரர்களைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் கரங்களின் வலிமையைக் கொண்டு, பெரும் காந்தியுடன் கூடியதும், வைடூரியக் கற்களால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்த ஈட்டியைச் சல்லியன் மீதே ஏவினான். சமீபத்தில் சட்டை உரித்த பாம்புக்கு ஒப்பான அந்த ஈட்டி, சல்லியனின் தேரை அடைந்து, பின்னவனின் {சல்லியனின்} தேரோட்டியைக் கொன்று, அவனையும் அந்த வாகனத்தின் தட்டில் இருந்து கீழே விழச் செய்தது. பிறகு, விராடன், துருபதன், திருஷ்டகேது, யுதிஷ்டிரன், சாத்யகி, கேகயன், பீமன், திருஷ்டத்யும்னன், சிகண்டி, இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்), திரௌபதியின் மகன்கள் ஐவர் ஆகியோர் அனைவரும், “அருமை! அருமை!” என்று சொல்லி வியந்தனர். பின்வாங்காதவனான அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} மகிழ்விக்கும் வண்ணம், கணைகள் ஏவும் பல்வேறு விதங்களிலான ஒலிகளும், சிங்க முழக்கங்கள் பலவும் அங்கே எழுந்தன.

எனினும், எதிரியின் வெற்றிக்கான அறிகுறிகளை உமது மகன்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிறகு, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைத்} திடீரெனச் சூழ்ந்த அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலையின் சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைகளின் மாரியால் அவனை {அபிமன்யுவை} மறைத்தனர். பிறகு எதிரிகளைக் கொல்பவனான அர்தாயனி {ரிதாயனன் மகன்} (சல்லியன்), உமது மகன்களுக்கு நன்மையை விரும்பி, தன் தேரோட்டி வீழ்ந்ததையும் நினைவுகூர்ந்து, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} எதிர்த்து சினத்துடன் விரைந்தான்” {என்றான் சஞ்சயன்}.

சல்லியனை வீழ்த்திய பீமன்! – துரோண பர்வம் பகுதி – 015-சல்லியனை நோக்கி விரைந்த பீமனும், அபிமன்யுவும்; அபிமன்யுவை விலகி நிற்கச் செய்த பீமன்; பீமனுக்கும் சல்லியனுக்கும் இடையில் நடந்த கடும் கதாயுத்தம்; பீமனின் அடியால் மயக்கமடைந்த சல்லியன்; சல்லியனைத் தூக்கிச் சென்ற கிருதவர்மன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, சிறந்த தனிப்போர்கள் பலவற்றை நீ எனக்கு விவரித்தாய். அவற்றைக் கேட்கும் நான், கண் கொண்டோரிடம் பொறாமை கொள்கிறேன். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் (பழங்காலத்தில்) நடந்ததற்கு ஒப்பாகக் குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் நடக்கும் இந்தப் போர் மிக அற்புதமானது என மனிதர்கள் அனைவராலும் பேசப்படும். கிளர்ச்சியூட்டும் இந்தப் போரைக் குறித்த உனது விவரிப்பைக் கேட்பதால் நான் நிறைவடையவில்லை. எனவே, அர்தாயனிக்கும் (சல்லியனுக்கும்), சுபத்திரையின் மகனுக்கும் {அபிமன்யுவுக்கும்} இடையில் நடைபெற்ற மோதலை எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தனது ஓட்டுனர் {தேரோட்டி} கொல்லப்பட்டதைக் கண்ட சல்லியன், முழுவதும் இரும்பாலான கதாயுதம் ஒன்றை உயர்த்தியபடி, தன் சிறந்த தேரில் இருந்து சினத்துடன் கீழே குதித்தான். பீமன் கனமான தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, யுகநெருப்புக்கோ, தண்டாயுதத்துடன் கூடிய காலனுக்கோ ஒப்பாக இருந்த சல்லியனை நோக்கி வேகமாக விரைந்தான். சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} வானத்தின் இடிக்கு {வஜ்ராயுதத்துக்கு} ஒப்பான தன் மகத்தான கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, சல்லியனிடம், “வாரும், வாரும்!” என்று சொன்னான். எனினும், பீமன் மிகவும் முயன்று அவனை {அபிமன்யுவை} ஒதுங்கி நிற்கச் சொல்லித் தடுத்தான். வீர பீமசேனன், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} ஒதுங்கி நிற்குமாறு தடுத்த பிறகு, போரில் சல்லியனை அணுகி, மலையென அசையாது நின்றான்.

மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளனும் {சல்லியனும்}, பீமசேனனைக் கண்டு, யானையை நோக்கிச் செல்லும் புலியைப் போல அவனை {பீமனை} நோக்கிச் சென்றான். பிறகு, ஆயிரக்கணக்கான எக்காள ஒலிகளும், சங்கு முழக்கங்களும், சிங்க முழக்கங்களும், பேரிகையொலிகளும் அங்கே கேட்டன. ஒருவரையொருவர் நோக்கி விரையும் நூற்றுக்கணக்கான பாண்டவ மற்றும் கௌரவ வீரர்களுக்கு மத்தியில், “நன்று, நன்று” என்ற கூக்குரல்கள் எழுந்தன.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் அனைவருக்கும் மத்தியில் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைத்} தவிரப் போரில் பீமசேனனின் வலிமையைத் தாங்கத் துணிந்தவன் வேறு எவனும் இல்லை; அவ்வாறே சிறப்புமிக்கச் சல்லியனின் கதாயுத வேகத்தைப் போரில் தாங்கவும், விருகோதரனைத் {பீமனைத்} தவிர இவ்வுலகில் வேறு எவன் துணிவான்? தங்கக் கம்பிகள் கலந்த இழைச்சரங்களால் கட்டப்பட்டதும், தன் அழகால் பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்வூட்டவல்லதுமான பீமனின் மகத்தான கதாயுதம், அவனால் {பீமனால்} ஏந்தப்பட்டுப் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவ்வாறே வட்டமாகச் சுழன்று கொண்டிருந்த சல்லியனின் கதாயுதமும், சுடர்மிகும் மின்னலின் கீற்றைப் போலவே தெரிந்தது.

காளைகளைப் போல முழங்கிய அவ்விருவரும் {பீமனும், சல்லியனும்}, வட்டமாகச் சுழன்று கொண்டிருந்தனர் {மண்டல கதிகளோடு சஞ்சரித்தனர்}. சற்றே சாய்ந்த தங்கள் கதாயுதங்களுடன் நின்று கொண்டிருந்த சல்லியன் மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரும் கொம்புகள் கொண்ட காளைகளைப் போலவே தெரிந்தனர். வட்டமாகச் சுழல்வதையோ, தங்கள் கதாயுதங்களால் தாக்குவதையோ பொறுத்தவரை மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கும் இடையில் நடைபெற்ற அந்த மோதல் அனைத்து வழியிலும் சமமானதாகவே இருந்தது.

பீமசேனன் தன் கதாயுதத்தைக் கொண்டு தாக்கியதால், சல்லியனின் மகத்தான கதாயுதம், கடும் நெருப்புப் பொறிகளை வெளியிட்டுக் கொண்டே விரைவில் துண்டுகளாக உடைந்தது. அதே போலவே, பீமசேனனின் கதாயுதமும், எதிரியால் {சல்லியனால்} தாக்கப்பட்டு, மழைக்காலத்தின் மாலைப்பொழுதில் மின்மினிப்பூச்சிகளால் மறைக்கப்பட்ட அழகிய மரம் போலத் தெரிந்தது.

அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} வீசப்பட்ட கதாயுதம், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (சுற்றிப் பறக்கையில்) அடிக்கடி நெருப்புப் பொறிகளை வெளியிட்டபடியே ஆகாயத்தில் ஒளிவீசியது. அதே போலவே, எதிரியை நோக்கி பீமசேனன் வீசிய கதாயுதம், (ஆகாயத்தில் இருந்து) கீழே விழும் கடும் எரிக்கோளைப் போல அவனது {பீமனது} எதிரிப் படையை எரித்தது. கதாயுதங்களில் சிறந்தவையான அவை இரண்டும் ஒன்றையொன்று தாக்கியபடி, பெருமூச்சுவிடும் பெண்பாம்புகளுக்கு ஒப்பாக நெருப்பு கீற்றுகளைக் கக்கின.

வட்டமாகச் சுழன்று கொண்டிருந்த வலிமைமிக்க அவ்வீரர்கள் இருவரும், தங்கள் நகங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் பெரும் புலிகள் இரண்டைப் போலவோ, தங்கள் தந்தங்களால் தாக்கிக் கொள்ளும் வலிமைமிக்க யானைகள் இரண்டைப் போலவோ கதாயுதங்களில் முதன்மையான அவை இரண்டாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். விரைவில் இரத்தத்தால் மறைக்கப்பட்ட அந்தச் சிறப்புவாய்ந்த வீரர்கள் இருவரும் மலர்ந்திருக்கும் இரண்டு பலாச மரங்களுக்கு ஒப்பாகத் தெரிந்தனர்.

மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவராலும் தரிக்கப்பட்ட கதாயுதங்களின் அடிகள் {தாக்குதல்களின் ஒலி} இந்திரனின் இடியைப் போன்று அனைத்துப் பக்கங்களிலும் கேட்கப்பட்டன. கதாயுதத்தைக் கொண்டு மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} இடப்பக்கத்திலும், வலப்பக்கத்திலும் தாக்கப்பட்ட பீமன், இடியால் பிளக்கப்படும் மலையைப் போலக் கிஞ்சிற்றும் அசையாது {நடுங்காது} நின்றான். அதேபோல, கதாயுதம் கொண்டு பீமனால் தாக்கப்பட்ட மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளனும் {சல்லியனும்} இடியால் தாக்கப்படும் மலையைப் போலப் பொறுமையாக நின்றான்.

பெரும் வேகம் கொண்ட அவ்விருவரும் உயர்த்தப்பட்ட தங்கள் கதாயுதங்களுடன் நெருக்கமான வட்டங்களில் சுழன்று ஒருவரின் மேல் ஒருவர் பாய்ந்தனர். விரைவாக ஒருவரையொருவர் அணுகி, எட்டு எட்டுகள் வைத்து, யானைகள் இரண்டைப் போல ஒருவரின் மேல் ஒருவர் பாய்ந்த அவர்கள் முழுமையாக இரும்பாலான அந்தத் தங்கள் கதாயுதங்களால் திடீரென ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அவ்வீரர்கள் இருவரும், அடுத்தவரின் வேகம் மற்றும் தங்கள் கதாயுதங்களின் தாக்குதல் பலம் ஆகியவற்றின் விளைவால் ஒரே சமயத்தில் இந்திரத்வஜங்கள் இரண்டைப் போலக் கீழே விழுந்தனர்.

பிறகு தன் உணர்வுகளை இழந்து, பெருமூச்சுவிட்டபடி களத்தில் கிடந்த சல்லியனை வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன் விரைவாக அணுகினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கதாயுதத்தால் பலமாகத் தாக்கப்பட்டு, பாம்பு போலப் புரண்டு கொண்டு, உணர்வுகளை இழந்து மயக்கத்தில் இருந்த அவனைக் {சல்லியனைக்} கண்ட வலிமைமிக்கத் தேர்வீரன் கிருதவர்மன், அந்த மத்ர ஆட்சியாளனை {சல்லியனைத்} தன் தேரில் ஏற்றி, களத்தை விட்டு அவனை {சல்லியனை} விரைவாகச் சுமந்து சென்றான். குடிகாரனைப் போலச் சுற்றிக் கொண்டிருந்த வலிய கரங்களைக் கொண்ட வீரப் பீமன், கண் இமைக்கும் நேரத்திற்குள், கையில் கதாயுதத்துடன் எழுந்து நின்றான்.

பிறகு, உமது மகன்கள், போரில் இருந்து விலகிய மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைக்} கண்டு தங்கள் யானைகள், காலாட்படைவீரர்கள், குதிரைப்படை மற்றும் தேர்களுடன் சேர்ந்து நடுங்கத் தொடங்கினர். வெற்றியை விரும்பும் பாண்டவர்களால் கலங்கடிக்கப்பட்ட உமது படையின் வீரர்கள், அச்சத்தால் பீடிக்கப்பட்டு, காற்றால் விரட்டப்படும் மேகத் திரள்களைப் போல அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடினர்.

திருதராஷ்டிரர்களை வீழ்த்திய வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுடர்மிகும் நெருப்பைப் போல அந்தப் போரில் பிரகாசமாகத் தெரிந்தனர். மகிழ்ச்சியால் குதூகலித்த அவர்கள் சிங்க முழக்கங்கள் செய்தபடியே தங்கள் சங்குகளை முழக்கினர். மேலும், அவர்கள் தங்கள் மட்டுகங்கள், பேரிகைகள், மிருதங்கங்கள் {பெரிய முரசங்கள், பணவங்கள், ஆனகங்கள், துந்துபிகள், நிர்ஜரிகள்} ஆகியவற்றையும் இன்னும் பிற இசைக்கருவிகளையும் முழக்கினர்” {என்றான் சஞ்சயன்}

துரோணரைத் தடுத்த அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 016-கர்ணனின் மகன் விருஷசேனனுக்கும், நகுலனின் மகன் சதானீகனுக்கும் இடையில் நடந்த போர்; சாத்யகியின் மகன் யுகந்தரன் துரோணரால் வீழ்த்தப்பட்டது; வியாக்ரதத்தன், சிங்கசேனன் ஆகியோர் துரோணரால் கொல்லப்பட்டது; யுதிஷ்டிரனைப் பிடிக்க முயன்ற துரோணர்; அதைத் தடுத்த அர்ஜுனன்..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது படை அதீதமாகப் பிளக்கப்பட்டதைக் கண்ட வீர விருஷசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் ஆயுதங்களின் மாய சக்திகளை வெளிப்படுத்திக் கொண்டு தனியொருவனாகவே அதை {அந்தப் படையைப்} பாதுகாத்தான். அந்தப் போரில் விருஷசேனனால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகள் அனைத்துத் திசைகளிலும் சென்று, மனிதர்கள், குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளைத் துளைத்தன. அவனால் ஏவப்பட்ட சுடர்மிகும் பிரகாசம் கொண்ட வலிமைமிக்கக் கணைகள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோடை காலத்தின் சூரியக் கதிர்களைப் போல ஆயிரக்கணக்கில் சென்றன. அவற்றால் பீடிக்கப்பட்டு நசுக்கப்பட்ட தேர்வீரர்கள் மற்றும் குதிரை வீரர்கள் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காற்றால் முறிந்த மரங்களைப் போலத் திடீரெனக் கீழே பூமியில் விழுந்தனர்.

வலிமைமிக்கத் தேர்வீரனான விருஷசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளை அப்போரில் ஆயிரக்கணக்கில் வீழ்த்தினான். களத்தில் அச்சமற்ற வகையில் திரியும் அந்தத் தனி வீரனைக் கண்ட (பாண்டவப் படையின்) மன்னர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். நகுலனின் மகனான சதானீகன் விருஷசேனனை நோக்கி விரைந்து, உயிர்நிலைகளையே ஊடுருவவல்ல பத்து கணைகளால் அவனைத் {விருஷசேனனைத்} துளைத்தான்.

எனினும், கர்ணனின் மகன் {விருஷசேனன்}, அவனது {சதானீகனின்} வில்லை வெட்டி, அவனது கொடிமரத்தையும் வீழ்த்தினான். அதன்பேரில், திரௌபதியின் பிற மகன்கள், தங்கள் சகோதரனை மீட்க விரும்பி அவனை {சதானீகனை} நோக்கி விரைந்தனர். விரைவில் அவர்கள் தங்கள் கணை மழையால் கர்ணனின் மகனை {விருஷசேனனை} மறைத்தனர். (கர்ணனின் மகனை) இப்படித் தாக்கும் அவர்களை எதிர்த்து, துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்) தலைமையிலான தேர் வீரர்கள் பலர் விரைந்தனர். அவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மலையின் சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலப் பல்வேறு வகைகளிலான கணைகளைக் கொண்டு அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரௌபதியின் மகன்களை விரைவில் மறைத்தனர். அதன் பேரில், பாண்டவர்கள், தங்கள் மகன்களின் மீது கொண்ட பாசத்தால், அப்படித் தாக்குபவர்களை விரைவாக எதிர்கொண்டனர்.

பிறகு, உமது துருப்புகளுக்கும், பாண்டவர்களின் துருப்புகளுக்கும் இடையில் நடைபெற்ற போரானது; மிகக் கடுமையானதாகவும், தேவர்களுக்கும் தானவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பாக மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. இப்படியே, வீரர்களான கௌரவர்களும், பாண்டவர்களும், சினத்தால் தூண்டப்பட்டு (மூர்க்கமாக) ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, பழைய குற்றங்களுக்காக ஒருவர் மேல் ஒருவர் கொண்ட பகையுடன் போரிட்டனர். (அவர்களைத் தூண்டும்) கோபத்தின் விளைவாக அளவற்ற சக்தியுடன் தென்பட்ட அந்த வீரர்களின் உடல்கள், வானத்தில் போரிடும் கருடனுக்கும், (வலிமைமிக்க) நாகங்களுக்கும் ஒப்பானவையாக இருந்தன.

பீமன், கர்ணன், கிருபர், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, சாத்யகி ஆகியோரைக் கொண்ட அந்தப் போர்க்களம், யுக முடிவில் அனைத்தையும் அழிக்க உதிக்கும் சூரியனின் பிரகாசத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. வலிமைமிக்க எதிரிகளுடன் போரில் ஈடுபடும் வலிமைமிக்க மனிதர்களுக்கு இடையில் நடப்பதும், அனைவரும் மிகக் கடுமையாக ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதுமான அந்தப் போர், பழங்காலத்தில் தானவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பாக இருந்தது. பிறகு, பொங்கும் கடலைப் போன்ற உரத்த முழக்கங்களுடன் கூடிய யுதிஷ்டிரனின் படை, உமது படையின் பெரும் தேர்வீரர்கள் தப்பி ஓடியதால், உமது துருப்புகளைக் கொல்லத் தொடங்கினர். (கௌரவப்) படை உடைந்ததையும், எதிரியால் அதீதமாகச் சிதைக்கப்பட்டதையும் கண்ட துரோணர், “வீரர்களே, நீங்கள் ஓட வேண்டாம்” என்றார் [1].

பிறகு, சிவப்புக் குதிரைகளை உடைய அவர் (துரோணர்), கோபத்தால் தூண்டப்பட்டு, நான்கு {4} தந்தங்களைக் கொண்ட (கடும்) யானையொன்றைப் போலப் பாண்டவப் படைக்குள் ஊடுருவி, யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தார். அப்போது, யுதிஷ்டிரன், கங்க இறகுகள் கொண்ட கூரான கணைகள் பலவற்றால் ஆசானை {துரோணரைத்} துளைத்தான்; எனினும், துரோணர், யுதிஷ்டிரனின் வில்லை வெட்டி, அவனை நோக்கி மூர்க்கமாக விரைந்தார். அப்போது, யுதிஷ்டிரனின் தேர் சக்கரங்களைப் பாதுகாத்தப் பாஞ்சாலர்களின் புகழ்பெற்ற இளவரசன் குமாரன், அப்படி முன்னேறி வரும் துரோணரைப் பொங்கும் கடலை வரவேற்கும் கரையைப் போல வரவேற்றான். பிராமணர்களில் காளையான அந்தத் துரோணர் குமாரனால் தடுக்கப்பட்டதைக் கண்டு, “நன்று, நன்று!” என்ற கூக்குரலுடன் கூடிய சிங்க முழக்கங்கள் அங்கே கேட்கப்பட்டன.

பிறகு அந்தப் பெரும் போரில் சினத்தால் தூண்டப்பட்ட குமாரன், ஒரு கணையால் துரோணரை மார்பில் துளைத்து, சிங்க முழக்கங்களைச் செய்தான். வலிமைமிக்கவனும், பெரும் கர நளினம் கொண்டவனும், களைப்பை வென்றவனுமான குமாரன் இப்படியே போரில் துரோணரைத் தடுத்து, பல்லாயிரக்கணக்கான கணைகளால் அவரைத் துளைத்தான். பிறகு அந்த மனிதர்களில் காளை (துரோணர்), யுதிஷ்டிரனின் தேர்ச்சக்கரங்களைப் பாதுகாப்பவனும், அறம்சார்ந்த நோன்புகளை நோற்பவனும், மந்திரங்களிலும், ஆயுதங்களிலும் சாதித்தவனுமான அந்த வீரன் குமாரனைக் கொன்றார் [2].

பிறகு (பாண்டவப்) படைக்கு மத்தியில் ஊடுருவி, அனைத்துப் பக்கங்களிலும் திரிந்த மனிதர்களில் காளையான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} உமது துருப்புகளைப் பாதுகாப்பவரானார். சிகண்டியைப் பனிரெண்டு {12} கணைகளாலும், உத்தமௌஜசை இருபதாலும் {20}, நகுலனை ஐந்தாலும் {5}, சகாதேவனை ஏழாலும் {7}, யுதிஷ்டிரனை பனிரெண்டாலும் {12}, திரௌபதியின் (ஐந்து) மகன்கள் ஒவ்வொருவரையும் மூன்றாலும் {3}, சாத்யகியை ஐந்தாலும் {5}, மத்ஸ்யர்களின் ஆட்சியாளனை பத்து {10} கணைகளாலும் துளைத்து, அந்தப் போரில் மொத்த படையையும் கலங்கடித்து, (பாண்டவ) வீரர்களில் முதன்மையானோரை எதிர்த்து ஒருவர் பின் ஒருவராக விரைந்தார். பிறகு, குந்தியின் மகனான யுதிஷ்டிரனைப் பிடிக்க விரும்பி அவனை எதிர்த்து முன்னேறினார்.

அப்போது {சாத்யகியின் மகன்} யுகந்தரன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புயலால் கலங்கடிக்கப்பட்டு ஆத்திரத்தோடு கூடிய கடலுக்கு ஒப்பாகச் சினத்தால் நிறைந்திருந்த வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜர் மகனை {துரோணரைத்} தடுத்தான். எனினும், நேரான கணைகள் பலவற்றால் யுதிஷ்டிரனைத் துளைத்த அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, ஒரு பல்லத்தினால் யுகந்தரனை அவனது தேர்த்தட்டிலிருந்து விழச் செய்தார்.

பிறகு, விராடன், துருபதன், கைகேய இளவரசர்கள், சாத்யகி, சிபி, பாஞ்சாலர்களின் இளவரசனான வியாக்ரதத்தன், வீரமான சிங்கசேனன் ஆகியோரும் இன்னும் பிறரும், யுதிஷ்டிரனை மீட்க விரும்பி, எண்ணிலா கணைகளை இறைத்து, துரோணரின் வழியில் இடையூறு செய்த படி அனைத்துப் பக்கங்களிலும் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

பாஞ்சாலர்களின் இளவரசனான வியாக்ரதத்தன், கூர்முனை கொண்டு ஐம்பது {50} கணைகளால் துரோணரைத் துளைத்ததால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகள் பெருங்கூச்சலிட்டன. சிங்கசேனனும், அந்த வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரை விரைவாகத் துளைத்து, வலிமைமிக்கத் தேர்வீரர்களின் இதயங்களை அச்சத்தால் பீடிக்கச் செய்து மகிழ்ச்சியால் முழக்கமிட்டான்; பிறகு தன் கண்களை அகல விரித்த துரோணர், தன் வில்லின் நாணைத் தேய்த்து, தன் உள்ளங்கைகளைத் தட்டி பேரொலியை உண்டாக்கி பின்னவனை {சிங்கசேனனை} எதிர்த்து விரைந்தார். பிறகு, தன் ஆற்றலை வெளிப்படுத்திய பரத்வாஜரின் வலிமைமிக்க மகன் {துரோணர்}, இரண்டு பல்லங்களால் காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சிங்கசேனன் மற்றும் வியாக்ரதத்தன் ஆகிய இருவரின் தலைகளை அவர்களது உடல்களிலிருந்து துண்டித்தார்.

தன் கணைமாரிகளால் பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறரையும் பீடித்த அவர் {துரோணர்}, அனைத்தையும் அழிக்கும் காலனைப் போலவே யுதிஷ்டிரனின் தேருக்கு முன்பாக நின்றார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முறையான நோன்புகளைக் கொண்ட அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு}, அருகில் இப்படி நின்ற போது, “மன்னர் கொல்லப்பட்டார்” என்ற அளவுக்கு யுதிஷ்டிரனின் படை வீரர்களுக்கு மத்தியில் ஆரவாரம் கேட்கப்பட்டது. அங்கே இருந்த வீரர்கள் அனைவரும், துரோணரின் ஆற்றலைக் கண்டு, “இன்று திருதராஷ்டிரனின் அரச மகன் {துரியோதனன்} வெற்றி மகுடம் சூட்டப்படுவான். இந்தக் கணமே யுதிஷ்டிரனைப் பிடிக்கும் துரோணர், மகிழ்ச்சியால் நிறைந்து நம்மிடமும் துரியோதனனின் முன்னிலைக்கும் வரப் போகிறார்” என்றனர்.

உமது வீரர்கள் இத்தகு பேச்சுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, குந்தியின் மகன் (அர்ஜுனன்), தன் தேரின் சடசடப்பொலியால் (ஆகாயத்தை) நிறைத்தபடி விரைவாக அங்கே வந்தான். அப்படி அவன் {அர்ஜுனன்} வந்த போதே, அவன் செய்த படுகொலைகளால் குருதியெனும் நீருள்ளதும், தேர்களெனும் சுழல்களுள்ளதும், துணிவுமிக்க வீரர்களின் எலும்புகள் மற்றும் உடல்கள் நிறைந்ததும், இறந்தோரின் ஆவிகள் வசிக்கும் இடத்திற்கு உயிரினங்களைச் சுமந்து செல்வதுமான ஒரு நதியை அங்கே உண்டாக்கினான். குருக்களை முறியடித்த படி அங்கே வந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கணைகளின் மாரிகளெனும் நுரை கொண்டதும், ஈட்டிகள் மற்றும் பிற ஆயுதங்களின் வடிவிலான மீன்களால் நிறைந்ததுமான அந்த நதியை வேகமாகக் கடந்தான். அந்தக் கிரீடம் தரித்தவன் (அர்ஜுனன்}, அடர்த்தியான கணைகளின் வலையால் துரோணரின் படைப்பிரிவுகளை மறைத்து (துரோணரைப் பின் தொடர்வோரின்) உணர்வுகளைக் குழப்பியபடி திடீரென அங்கே வந்தான்.

இடைவிடாமல் வில்லின் நாணில் தன் கணைகளைப் பொருத்தி, விரைவாக அவற்றை ஏவிய குந்தியின் புகழ்பெற்ற மகனின் {அர்ஜுனனின்} இந்தச் செயல்கள் இரண்டுக்கும் இடையில் காலங்கழிதல் எதையும் எவனால் காண முடியவில்லை. அடர்த்தியான கணைகளின் திரள் ஒன்றாகவே அனைத்தும் தெரிந்ததால், அதற்கு மேலும் (நான்கு முக்கிய) திசைகளுக்கோ, மேலுள்ள ஆகாயத்துக்கோ, பூமிக்கோ எந்த வேறு பாட்டையும் காண முடியவில்லை. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் காண்டீவதாரி {அர்ஜுனன்}, தன் கணைகளின் மூலம் அடர்த்தியான இருளை உண்டாக்கியபோது, அந்தப் போரில் எதையும் காண முடியவில்லை. சரியாக அப்போதே, புழுதி மேகத்தால் சூழப்பட்ட சூரியனும் மறைந்தான். அதற்கு மேலும், நண்பனுக்கும் எதிரிக்கும் உள்ள வேறுபாட்டைக் காண முடியவில்லை.

பிறகு, துரோணரும், துரியோதனனும் தங்கள் துருப்புகளைப் பின் வாங்கச் செய்தனர். எதிரி அச்சங்கொண்டதையும், தொடர்ந்து போரிட விரும்பாததையும் உறுதி செய்து கொண்ட பீபத்சுவும் {அர்ஜுனனும்}, மெதுவாகத் தன் துருப்புகளைப் பின்வாங்கச் செய்தான். பிறகு, மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவர்களும், சிருஞ்சயர்களும், பாஞ்சாலர்களும் சூரியனைப் புகழும் முனிவர்களைப் போலத் தங்கள் இனிய உரைகளால் பார்த்தனை {அர்ஜுனனைப்} புகழ்ந்தனர்.

இப்படித் தன் எதிரிகளை வீழ்த்திய தனஞ்சயன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சியால் நிறைந்து, தன் தோழனான கேசவனுடன் {கிருஷ்ணனுடன்}, மொத்த படைக்கும் பின்னே தன் பாசறைக்கு ஓயச் சென்றான். இந்திரநீலங்கள், பத்மராகங்கள், தங்கம், வெள்ளி, வைரங்கள், பவழங்கள், படிகங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட தன் அழகிய தேரில் நின்ற அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆகாயத்தில் உள்ள சந்திரனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.

பதினோராம் நாள் போர் முற்றும்

துரோணாபிஷேக பர்வம் முற்றும்

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்