Archive for the ‘மூன்றாம் திரு அந்தாதி’ Category

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -54-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 11, 2014

அவதாரிகை –

வடதள சாயி வ்ருத்தாந்தத்தோடு
சேரச் சொல்லலாம் படியான
கிருஷ்ண வ்ருத்தாந்தத்தை
அனுபவிக்கிறார் –

———————————————————————————–

தாளால் சகட்முதைத்துப் பகடுந்தி
கீளா மருதிடை  போய்க் கேழலாய் -மீளாது
மண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப்
பெண்ணகலம்   காதல் பெரிது —–54-

பதவுரை

சகடம்–சகடாஸுரனை
தாளால்–திருவடியாலே
உதைத்து–உதைத் தொழித்தவனாயும்
பகடு–(குவலயாபீட மென்கிற) யானையை
உந்தி–உதைத்துத் தள்ளினவனாயும்
மருது இடைபோய்–மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்று
கீளா–(அம்மரங்களை) முறிந்துவிழச் செய்தவனாயும்
கேழல் ஆய்–வராஹரூபியாய்க் கொண்டு
மீளாது–காரியம் தலைக்கட்டாமல் திரும்பி வருவதில்லை யென்று ஸங்கல்பித்துக் கொண்டு சென்று
அகலம் மண்கீண்ட–அகன்ற பூமியை (அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டுவிடுவித் தெடுத்தவனாயும்
ஓர் மாது உகந்த மார்வற்கு–ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை விரும்பி யிருக்கின்ற திருமார்பை யுடையவனாயுமுள்ள எம்பெருமானுக்கு
பெண் அகலம்–பூமிப் பிராட்டியினுடைய திருமேனியில்
காதல்–ஆசையானது
பெரிது–கரை புரண்டிருப்பது.

—————————————————————————————

வியாக்யானம் –

தாளால் சகட்முதைத்துப் –
திருவடிகளாலே சகடாசூர பஞ்ஜனம் பண்ணி –
திருவடிகள் அளவும் வந்து கிட்டின
சகடத்தை
திருவடிகளாலே தள்ளி –

பகடுந்தி –
குவலயா பீடம் நிரசனம் பண்ணின படி –
கையளவும் வந்து கிட்டின குவலயா பீடத்தை
கையாலே விழ விட்டு –

வழி போக்குக்கு விரோதியான சகடத்தை திருவடிகளாலே தள்ளி –
புகுவாய் நின்ற போதகம் -பெரிய திருமொழி -6-5-6-என்னும் படி –
போய்ப் புகுகிற போதைக்கு இடைஞ்சலாய் நின்ற
குவலயா பீடத்தையும் கையாலே தள்ளினான் ஆய்த்து –

கீளா மருதிடை  போய்க்-
நிர் விவரமான மருதுகளின் நடுவே
வழி கண்டு போய்-

அன்றிக்கே
மரத்தைக் கிழித்துக் கொண்டு போனான் -என்னவுமாம் –

கேழலாய் -மீளாது-
சர்வாதிகனான தான் வராஹ வேஷத்தைக் கொண்டால்
பின்பு அவ்வளவிலே
பர்யவசிக்க இறே அடுப்பது
அதுக்கு மேலே
கேழலாய்த் தன்னை உணர்ந்தான் –
ஸ்ரீ யபதி என்று உணர்ந்தால் செய்யப் போமோ-

மீளாது மண்ணகலம் கீண்டு –
என்று மேலே கூட்டி
மீளாத படிக்கு ஈடாக
பூமியைக் கொண்டு என்றுமாம் –

அங்கோர் மண்ணகலம் கொண்டு –
அவ்விடத்தே பிரளயம் கொண்ட பரப்பை
உடைத்தான பூமியைக் கொண்டு
ஏறினான் ஆய்த்து –

மாதுகந்த மார்வற்குப் –
பெரிய பிராட்டியார் விரும்பும்படியான
மார்வை உடையவன் –

பெண்ணகலம்   காதல் பெரிது –
ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் உண்டான சங்கம்
சாலக் கரை புரண்டு இருந்தது –
பெண்ணகலம்  -என்கிறது -ஸ்ரீ பூமிப் பிராட்டி உடைய திரு மேனியை –
காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை -சிறிய திரு மடல் -என்னக் கடவது இறே –

காதல் பெரிது –
ஸ்ரீ பூமிப் பிராட்டியார் பக்கலிலே
பிச்சேறி இருக்கும் படி –
தன்னை யாசைப் படுவார் விடாயிலும்
மிக்கு இருப்பதே
தான் ஆசைப் படுவார் பக்கல் விடாய் –
அவாப்த சமஸ்த காமன் மகா வராஹமாய்
அண்ட பித்தியில் நின்றும்
பூமியை ஒட்டு விடுவித்து எடுத்து-

பெண்ணகலம்   காதல் பெரிது –
அவள் பக்கல் காதலாலே இறே
அவள் அபிமானித்த
பூமியை எடுத்தது -என்கை –

————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -53-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 11, 2014

அவதாரிகை –

ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமனனோடு
போலியான
வடதள சாயியை அனுபவிக்கிறார் –
எம்பெருமான் படி இதுவான பின்பு
மேல் வீழ்ந்து அனுபவி -என்கிறார் –

துர்க் கடங்களை கடிப்பிக்க வல்லவன்
என்கிறார் –

————————————————————————————

முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை
இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று அங்கோர்
மண்ணலம்  கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்
தண்  அலங்கல் மாலையான் தாள்  —–53-

பதவுரை

மூரி வேலை–பழையதான நீரை யுடைத்தான ஸமுத்தர்திலே
இயன்ற ஸ்ரீபொருந்தியுள்ள
ஆலமரத்து இலையின் மேலால்–ஆலமரத்தின் இலைமீது
பயின்று–நெடுங்காலம் சாய்ந்திருந்தது
அங்கு–அங்கே
மண்–பூமியினுடைய
நலம்–நன்மையை
கொள்–அபஹரித்த
வெள்ளத்து–பிரளய வெள்ளத்திலே
ஓர் மாயம் குழவி ஆய்–ஆச்சரியமான ஒரு குழந்தையாய்
தண் அலங்கல் மாலையான்–குளிர்ந்து அசைகின்ற மாலையை யுடையவனான எம்பெருமானுடைய
தான்–திருவடிகளை
நெஞ்சே–நெஞ்சமே!
முயன்று தொழு–உத்ஸாஹங்கொண்டு வணங்கு.

————————————————————————————-

வியாக்யானம் –

முயன்று தொழு நெஞ்சே –
வரில் பொகடேன் கெடில் தேடேன்  -என்று இராதே நெஞ்சே –
உத்சாஹித்துக் கொண்டு
ஆஸ்ரயிக்கப் பாராய் –

யத்னம் பண்ணி ஆஸ்ரயிக்கப் பாராய் –
ஒரு கை முறிய விழுந்து கொடு நில்லாய் –

மூரி நீர் வேலை –
சஞ்சரியா நின்றுள்ள
நீரை உடைத்தான
சமுத்ரத்திலே –

இயன்ற மரத்தாலிலையின் மேலால் –
அதிலே உண்டான ஆல மரத்தின் உடைய
பவனாய் இருப்பதொரு
ஆலிலையின் மேலே –

பயின்று –
சிரகாலம்  சாய்ந்து அருளி —
மார்கண்டே யாதிகள் பயப்படும்படி –

அங்கோர் மண்ணலம்  கொள் வெள்ளத்து-
அங்கே-பூமியினுடைய
கார்யாகாரத்தை
அழியா நின்றுள்ள
பிரளயத்திலே –

மண் நலம் கொள் வெள்ளம் –
சேதனர்க்கு
போகோபகரணம்
போக ஸ்தானம்
போக்யமான பூமி
அழிந்து மூச்சடங்குகை-

மாயக் குழவியாய்த் –
ஆச்சர்யமான சேஷ்டிதங்களை யுடைய
முக்த்தனானவன் –

தண்  அலங்கல் மாலையான் தாள்  –
ஸ்ரமஹரமாய்
அசைந்து வாரா நின்றுள்ள
மாலையை உடையனான்வன்
திருவடிகளை –

முயன்று தொழு நெஞ்சே –
இவற்றை யடைய வயிற்றிலே
வைக்கிற போது ஒப்பனை குறி அழியாமே யாய்த்து வைத்தது –
ஆலிலையின் மேல் கண் வளர்ந்து அருளுகிற போது
இட்ட தோள் மாலையும்  தானுமாய்க் கிடந்த படி –

யசோதைப் பிராட்டி உண்டோ ஒப்பிக்க –
எல்லாம் ஆச்சர்யமாய் இருப்பதே –

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -52-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 11, 2014

அவதாரிகை –

கீழே ப்ரஸ்துதமான
ராம வ்ருத்தாந்தம் தன்னிலே திரியவும் ஆழங்கால் பட்டுப்
பேசுகிறார் –

கீழே
கலங்கா  பெரு நகரம்  காட்டுவான் -என்றாரே
ருசி உடையாருக்குப் பரமபதம் கொடுக்கும் அத்தனையோ-என்னில் –
ருசி பிறப்பிப்பானும் அவனே –
என்கிறது –

—————————————————————————————

எய்தான் மரா மரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம்மான் மறிய  ஏந்திழைக்காய் -எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று   ——-52-

பதவுரை

இராமன் ஆய்–ஸ்ரீராமனாகத் திருவவதரித்து
மராமரம் ஏழும்–ஸப்த ஸால வ்ருஷங்களையும்
எய்தான்–அம்பு செலுத்தித் துளைத்தான்,
ஏந்து இழைக்கு ஆய்–தரிக்கப்பட்ட ஆபரணங்களை யுடைய பிராட்டிக்காக
அ மான் மறிய–அப்படிப்பட்ட மாரீச மாயா மிருகக்குட்டியை
எய்தான்–பின்சென்றான்,
எய்த்துவும்–அம்புகளைச் செலுத்தினதும்
தென் இலங்கை கோன் வீழ–தென்னிலங்கைக்கு அரசனான இராவணன் முடியும் படியாகவாம்,
முன்–முன்பொரு காலத்திலே
குறள் உரு ஆய்–வாமன ரூபியாய்
சென்று–மாவலியிடத்திற் சென்று
முயன்று–(வடிவழகு காட்டுதல், மழலைச் சொற்களைச் சொல்லுதல் முதலிய) முயற்சிகளைச் செய்து
நிலம் கைக் கொண்டான்–பூமியைக் கைப்பற்றினான்.

——————————————————————————————–

வியாக்யானம் –

எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் –
ஓர் ஆஸ்ரிதனை
விஸ்வசிப்பிக்கைக்காக
சக்கரவர்த்தி திரு மகனாய்க் கொண்டு
அவன் ஒன்றை எய்யக் கோலி
மரா மரங்கள் ஏழும் துளை பட எய்தான் ஆயிற்று –

ருசி இல்லாதாருக்கு ருசியைப் பிறப்பிக்கும் போதும்
ருசி யுடையாருக்குச் செய்யுமா போலே
செய்யும் -என்றபடி –

எய்தான் அம்மான் மறிய  ஏந்திழைக்காய் –
பிராட்டி சொல்லு மறுக்க மாட்டாமையாலே
அந்த மான் புரண்டு விழும்படியாக எய்தான் –
அன்றிக்கே –
மான் மறியை -என்ற பாடம் ஆய்த்தாகில்
இளமான் -என்றாய் -மான் குட்டி என்று பாராதே
கிடீர் எய்தது -அவள் அருளிச் செய்கையாலே –

ஏந்திழைக்காய் —
கண்ணாஞ்சுழலை இடப் பண்ணின அழகு இறே –
புரேவ மே சாறு தத்தி ம நிந்திதாம் -ஆரண்ய -64-78-
இத்தாலும் அவளுடைய ருசியை வர்த்திப்பித்த  படி –

எய்ததுவும் தென்னிலங்கைக் கோன் வீழச்-
எய்தது தெற்கு திக்கில் உண்டான இலங்கைக்கு
நிர்வாஹகனான ராவணனை –
அழகுக்கு இலக்காகாதாரையும்
புக்கு இலக்காக்கின படி –

சென்று குறளுருவாய்  முன்னிலம் கைக் கொண்டான் முயன்று   –
முன்பு குறளுருவாய் சென்று
முயன்று
பூமியைக் கையிலே கொண்டான் –

முன்னிலம் கைக் கொண்டான் முயன்று   –
லோகத்தை யடங்கக் கைக் கொண்டான் –

முயன்று –
கொள்வன் நான் -திருவாய் -3-8-9-
இத்யாதிகள் செய்தவை

இத்தால்
ப்ராப்தி பண்ணா நின்று கொண்ட படி –

———————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -51-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 11, 2014

அவதாரிகை –

இப்படி ஸ்ரீ  கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபன் நிவாரணம்
பண்ணினவன் கிடீர்
நமக்கும் எல்லாம் உபாய பூதனாவான்
என்கிறார் –

ஓர் ஆபத்து நீக்கி விட்ட அளவோ
ஆபத்துக்கள் ஒன்றும் தட்டாதபடி பண்ணி
பரமபதத்திலே செல்ல நடத்துவான் அவனே
என்கிறார் –

சங்கல்ப்பத்தாலே ஆஸ்ரித பஷ பாதம் தோற்றாது என்று இறே மா முதலை கொன்றது
முதலாக விச்செயல்கள் –

——————————————————————————————

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா  பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து ——51-

பதவுரை

அரு வரையால்–ஒருவரால் அசைக்கவும் முடியாததான கோவர்த்தன மலையினால்
ஆநிரைகள்–பசுக் கூட்டங்கள்
காத்தான்–ரக்ஷித்தருளினவன்
அவனே கண்டீர்–அப்பெருமானை யாவன்,
அணி மருதம்–அழகாக நின்று கொண்டிருந்த இரட்டை மருத மரங்களை
சாய்த்தான்–முறித்துத் தள்ளினவனும்
அவனே கண்டீர்–அப் பெருமானே யாவன்,
எய்து–அம்புகளைப் பிரயோகித்து
இலங்காபுரம்–லங்கா பட்டணத்தை
எரித்தான்–எரிய விட்டவனான
அவனே–அப்பெருமானே
கலங்கா பெருநகரம்–ஒருவகைக் கலக்கமுமில்லாத பரம பதத்தை
காட்டுவான்–காட்டித் தருவான்.

——————————————————————————————–

வியாக்யானம் –

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான் –
ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாத மலையைத்
தரித்துக் கொண்டு நின்று
பசுக்களுக்கும் இடையருக்கும்
ஒரு நோவு வாராதபடி நோக்கினவன்
கிடீர் -என்கிறார்

வர்ஷத்தால் நோவுபட்ட
பசுக்கள் ஆதல்
இடையர் ஆதல்
தங்கள் உடைய ரஷணத்துக்கு ப்ரவர்த்தித்தார் உண்டோ –
அப்போது
அவ்விடையரிலே யாதல் பசுக்களிலே யாதல்
சிலர் வந்து ஒரு தலை பற்றின்மை இல்லை -கிடீர்
மலைக் கீழ் ஒதுங்கோம் என்னாத மாத்ரமே –
இவற்றுக்குச் செய்யல் யாவது இல்லை
அவனுக்குச் செய்ய வேண்டுவது இல்லை
ரஷ்ய ரஷக பாவம் தப்பாமையே வேண்டுவது-

அவனே அணி மருதம் சாய்த்தான் –
பருவம் நிரம்பா இருக்கச் செய்தே
தன்னிலே சேர்ந்து நின்ற
யமளார்ஜூனங்களைத் தள்ளினான் அவனே கிடீர்
அப்போது யசோதாதிகளும் ஒருவர் கூட்டுப் பட்டார் இல்லையே

இத்தால்
எல்லா ரஷைக்கும் தானே கடவனாய் இருக்க
அவளுடைய சகாயம் ஒழியவே
தன்னுடைய ரஷையை நடத்தினான் –
என்றபடி –

அவனே -என்று
சஹகாரி நைரபேஷயத்தைச் சொல்லுகிறது –

அவனே கலங்கா  பெரு நகரம் காட்டுவான் கண்டீர் –
நாம் கண்டு ஓரடி இடலாம் என்று
பிரமித்த இடத்துக்கும் அவனே வேண்டின  பின்பு –
நமக்குத் தெரியாத இடத்துக்கு
அவனே என்னும் இடம் சொல்ல வேணுமோ –

அவனே கிடீர் நம் பேற்றுக்கு
சஹாயாந்தர நிரபேஷமான சாதனமும் –
இத் தலையிலும் ஓன்று கண்டல்ல கிடீர் –

கலங்கா  பெரு நகரம் –
ஒருவர் கூறை
எழுவர் உடாத தேசம் –

காட்டுவான் கண்டீர் –
ஏஷா சாத்ருச்யதே -யுத்த -123-55-என்று
அவன் காட்டக் காண்கையிலே
அந்வயம்-
ஸ்வ யத்னத்தாலே காண்பாருக்கு காணப் போகாது  –

இலங்கா புரம் எரித்தான் எய்து –
ப்ரஹ்மாதிகள் உடைய அஸ்த்ரத்துக்கும் அழியாத ஊரை
மூலையடியே அம்பு பறக்கும் படி பண்ணிப்
பின்பு அழியச் செய்தவனும் அவனே -கிடீர் –

இலங்கையை அழித்து பிராட்டியைப் பெறுகைக்கு யத்னம் பண்ணினானும் -அவனே
அவள் ஓர் அம்பு எய்தாளோ-
அறிவில்லாத பசுக்களோடு
அறிவுடைய பிராட்டியோடு
வாசி இல்லை –
அறிவுக்குப் பிரயோஜனம்
தத் தஸ்ய சத்ருசம் பவேத்  -சுந்தர -39-40-என்கைக்கு உடலாயிற்று
அவற்றின் உடைய அஜ்ஞ்ஞதை –
ஆபன் நிவாரணத்தை விலக்காமைக்குப் பரிகரம் ஆயிற்று –

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -50-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 11, 2014

அவதாரிகை –

அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணின
வியாபாரங்களுக்கு ஓர் அவதி இல்லை
என்றதே -கீழே –
அது எங்கே கண்டோம் -என்னில்

ஓர் ஆனைக்காக
பீஷ்மாதிகள் பக்கலிலும் சீறாத சீற்றத்தை
ஒரு நீர்ப் புழுவின் மேலே
பண்ணிற்றிலனோ -என்று
ஆஸ்ரித பஷபாதத்தை
யருளிச் செய்கிறார் –

————————————————————————————

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த வருவித் தடவரைவாய் -ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை   வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் ————50-

பதவுரை

சூழ்ந்த–நிறையச் சாத்தப் பெற்றுள்ள
துழாய் அலங்கல்–திருத்துழாய் மாலையாலே
சோதி–புகர் பெற்ற
மணி முடி–மணிமயமான கிரீடத்தை யுடையனாயும்
அணி நீலம வண்ணத்தவன்–அழகிய நீல நிறத்தை யுடையனாயுமிருக்கிற
மால்–ஸர்வேச்வரன்,
தாழ்ந்த அருவி தடவரை வாய்–பூமியளவும் தாழ்ந்து பெருகுகின்ற அருகிகளையுடைய பெரிய மலையின் கணுள்ள
ஆழ்ந்த மணி நீர் சுனை–ஆழமாய் அழகிய நீரை யுடைத்தான் பொய்கையிலே
வளர்ந்த–(சாபத்தினால்) வளர்ந்து கொண்டிருந்த
மா முதலை–பெரிய முதலையை
கொன்றான்–முடித்தொழித்தான்.

—————————————————————————————–

வியாக்யானம் –

சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால் –
சாத்தின திருத் துழாய் மாலையையும்
ஆதிராஜ்ய ஸூசகமான திரு வபிஷேகத்தையும்
உடைய சர்வேஸ்வரன் –

சூழ்ந்த துழாய் அலங்கல் –
ஆக முதலியாக இட்ட
திருத் துழாய் மாலை –

சோதி மணி முடி –
மிக்க தேஜஸ்சை உடைத்தான
மணிகளை யுடைய முடி –

மால் –
சர்வேஸ்வரன் –

தாழ்ந்த வருவித் தட வரை வாய் –
பூமி யளவும்   வரத் தாழ்ந்த வருவிகளை யுடைத்தான
மலையினுடைய
தாழ்வரை இடத்தே –

ஆழ்ந்த மணி நீர்ச் சுனை   வளர்ந்த –
ஆழ்ந்து நிர்மலமான நீரை உடைத்தாய் இருந்துள்ள
சுனையிலே வளர்ந்த –
பழையதான நீரை உடைத்தான
மடுவிலே
மனுஷ்யர் முகம் காணாத படி வளர்ந்த –

மா முதலை கொன்றான் –
பெரிதான முதலையை நீர்ப் புழு என்று பாராதே
சினத்தோடு கொன்றான் –
பீஷ்மாதிகள் மேலும் விடாத
திரு வாழியை இறே-ஒரு முதலையின் மேலே விட்டது –
அதுக்கடி
ஆஸ்ரித வாத்சல்யம் -இருந்தபடி –

அணி நீல வண்ணத்தவன் –
இத்தை முடித்துப் பின்னை
தன்னிறம் பெறுகிறான் ஆய்த்து –
ஆஸ்ரித விரோதியான முதலை போயிற்றது என்று
ஸ்ரமஹரமான வடிவை உடையவன் –

அணி நீல வண்ணத்தவன் –
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விடாய் தீர்த்த படி –

கொன்றான் –
தன் விடாய் தீர்ந்தான் –

ஆபரண ரூபமான
நீல நிறத்தை யுடையனாய்ச் –
சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடியை உடையனான –
சர்வேஸ்வரன்-
மா முதலை கொன்றான் –

———————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -49-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 11, 2014

அவதாரிகை –

இன்னும் இவ்வளவேயோ
அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணும்
வியாபாரம்
என்கிறார் –

—————————————————————————–

செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -முற்றல்
முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய் மூரிச்
சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —-49-

பதவுரை

பின்னைக்காய்–நப்பின்னைப் பிராட்டிக்காக,
முற்றல் முரி–முதிர்ந்த வலிமையை யுடைய
ஏற்றின்–ரிஷபங்களினுடைய
முன் நின்று–எதிரில் (அஞ்சாதே) நின்று
சூழ்ந்து–(அவற்றைச் சொல்லும் வகையை) ஆலோசித்து
மொய்ம்பு ஒழித்தாய்–(அவற்றின்) மிடுக்கை ஒழித்தவனே!
மூரி–பெரிதாய்
சுரி ஏறு–(உள்ளே) சுழித்தலை யுடைத்தாயுமிருக்கிற
சங்கினாய்–சங்கைத் திருக்கையிலேந்தி யுள்ளவனே! (இப்படியிருக்கிற நீ)
செற்றதுவும்–கை கூசாமல் முடித்துப் போட்டதும்
சேரா இரணியனை–உன்னைச் சேர்த்து வாழ மாட்டாத ஹிரண்யா ஸுரனை
சென்று–(மஹா பலி பக்கலில்) சென்று
ஏற்று–யாசித்து
பெற்றதும்–பெற்றுக் கொண்டதும்
மா நிலம்–பெரிய பூமியை.

————————————————————-

வியாக்யானம் –

செற்றதுவும் சேரா இரணியனைச் –
முடித்ததும்
சர்வதா பொருந்தாத ஆசூர ப்ரக்ருதியான ஹிரண்யனை —
ஆஸ்ரிதரோடு சேராத ஹிரண்யனை -என்றுமாம் –
அவன் இழவுக்காக கொன்றான் -என்றுமாம் –

சென்றேற்றுப் பெற்றதுவும் மா நிலம் –
மகா பலி பக்கலிலே சென்று
நீரேற்று
பெறாதது பெற்றாப் போலே நினைத்து
பெற்றதும் தன்னைதான பூமியை –

பின்னைக்காய் -முற்றல் முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய்
நப்பின்னைப் பிராட்டியைப் பெறுகைக்காக
மிடுக்கை உடைத்தாய் கொண்டு சஞ்சரியா நின்றுள்ள
ருஷபங்களின் முன்னே நின்று
அவற்றின் வலியைப் போக்கினான் -ஆய்த்து-

சூழ்ந்து –
இடம் பார்த்து நின்று –
திண்மையாகவுமாம்   –

முரி-
சஞ்சரிக்கிற –

மூரிச் சுரியேறு சங்கினாய் –
இடைத்தையும் உடைத்தாய்
சுரியையும் உடைத்தாய் உள்ள
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை உடையவன் கிடீர்
சூழ்ந்து முன்னின்று அவற்றை முடித்தான்
தானே கை தொட்டு
விரகாலே செய்தான் -என்கை-

பின்னைக்காய் –
ரசிகத்வத்தாலே
தன்னை அழிய மாறின படி –

———————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -48-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 11, 2014

அவதாரிகை –

நீர் சொல்லுகிறவை எல்லாம்
நாம் அறிகிறிலோமீ-என்ன
பின்னை இவை எல்லாம் செய்தார் ஆர்
என்கிறார் –

—————————————————————————————

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய்
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் -நீ யன்றே
மாவா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த்
தேவாசுரம் பொருதாய் செற்று —–48-

பதவுரை

நீர் ஏற்று–(மாவலிபக்கல்) உதக தானம் வாங்கி
உலகம்–உலகங்களை
அடி அளந்தாய் நீ அன்றே–திருவடியாலளந்தவன் நீயன்றோ?
நின்று–ரக்ஷிப்பதில் நிலைத்து நின்று பசுக் கூட்டங்களை
மேய்த்தாய நீ அன்றே–மேய்த்தவனும் நீயன்றோ?
மா–குதிரை வடிவு கொண்டு வந்த கேசி யென்னுமசுரனுடைய
வாய் உரம்–வாயின் வலிமையை
பிளந்து–ஒழித்தவனும்
மா மருதின் ஊடுபோய்–பெரிய இரட்டை மருத மரங்கனினிடையே தவழ்ந்து அவற்றை முறித்துத் தள்ளினவனும்
தேவாசுரம்–தேவரஸுர யுத்தத்திலே
செற்று–(அசுரர்கள்) அழியச் செய்து
பொருதாய் நீ அன்றே–போர் செய்தவனும் நீயன்றோ?

——————————————————————————————

வியாக்யானம் –

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய் –
உன்னுடைமை பெருகைக்கு
மகா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் சென்று
நீரேற்று ஜகத்தை யடைய
உன் திருவடிகளாலே அளந்து கொண்டே நீ அன்றோ

நானோ இது செய்தேன்
அன்றியே இந்தரனோ –

நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் –
ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
கோலைக் கொண்டு
பசுக்களின் இன்னே போய்
அவற்றை மேய்த்தாய் நீ அன்றோ
இவ்வோபாதி கீழில் அதுவும் –

நீ யன்றே மாவா யுரம் பிளந்து –
நீ அன்றோ கேசி வாயைக் கிழித்துப் பொகட்டாய்
மாவாயுரம் பிளந்து -கேசி வாய் வலி குலையும் படி
அத்தைக் கிழித்துப் பொகட்டான் ஆய்த்து
பசு மேயா நிற்க
வந்த துரிதத்தைப் போக்கின படி  –

மா மருதினூடு போய்த் –
பெரியவான யமளார்ஜுனங்களின் நடுவே
அவை வேர் பறிந்து விழும்படி தவழ்ந்து போய்
அவற்றைத் தப்பினாய் –

தேவாசுரம் பொருதாய் செற்று –
ஜ்ஞான ஹீனமான அசேதனங்களைப் போக்கின அதுவேயோ
சேதனரான விரோதி களையும் போக்கிற்று இலையோ
தேவாசூர சம்ப்ரமத்திலே அசூர வர்க்கத்தை
முடித்துப் பொருதாய் நீ அன்றோ

திரிபுர தஹனம் பண்ணின ருத்ரனை
இவருக்கு தோற்றுகிறது இல்லை
ஸ்ரீ விஷ்ணு ராத்மா பகவத -என்கிற அதுவே  காணும் தோற்றுகிறது-

————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -47-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 11, 2014

அவதாரிகை –

தேவர்கள் உடைய அபேஷிதம் செய்யுமவன் கிடீர்
நம்முடைய விரோதிகளைப் போக்கி
நம்மை அடிமை கொள்ளுவான்
என்கிறார் –

—————————————————————————————

நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா -அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ ——–47-

பதவுரை

நீர் ஏற்று நின்ற பெருமானே–(மாவலி பக்கல்) உதக தானம் வாங்கிக் கொண்டு நின்ற பெருமானே!
உலகு எல்லாம் சென்ற பெருமானை–எல்லா வுலகங்களையும் வியாபித்த பெருமானே!
செம் கண்ணா–செந்தாமரைக் கண்ணனே!
அன்று–முன்பொரு காலத்தில்
துரகம்–குதிரை வடிவு கொண்டு நலிய வந்த கேசினென்னுமசுரனுடைய
வாய்–வாயை
கீண்ட–கீண்டொழித்தவனே!
துழாய் முடியாய்–திருத்துழாயணிந்த திருமுடியை யுடையவனே!
நங்கள்–எங்களுடைய
நரகம் வாய்–நரக மார்க்கத்தை
கீண்டாயும் நீ–அழித்தவனும் நீயே யன்றோ?

—————————————————————————————–

வியாக்யானம் –

நின்ற பெருமானே நீரேற்று –
அவாப்த சமஸ்த காமன் ஆனவன் தான்
மகா பலி பக்கலிலே சென்று –
உதக ஜலத்துக்கு கை ஏற்று கொண்டு
நின்றான் -ஆய்த்து-

நின்ற பெருமானே –
சேஷித்வம் தோன்றும்படி நின்றவனே –

உலகெல்லாம் சென்ற பெருமானே –
அவன் நீர் வார்த்த அநந்தரம்
ஜகத் அடங்கலும் தானே யாம்படி அளந்து கொண்டான் ஆய்த்து
உடையவன் என்று தோன்றும்படி நின்றவனே –

செங்கண்ணா –
இந்த்ரன் கார்யம் செய்து தலைக் கட்டுகையாலே
உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தாலே
சிவந்த திருக் கண்களை யுடையவனே –

அன்று துரக வாய் கீண்ட துழாய் முடியாய் –
ஒப்பனை குறி அழியாது இருக்கச் செய்தே
கேசி வாயைக் கிழித்துப் பொகட்டவனே
வைத்த வளையும்
அசையாமல் கீண்டபடி

நங்கள் நரகவாய் கீண்டாயும் நீ –
ஒரு கேசி வாயைக் கிழித்தது ஆச்சர்யமோ
எங்களுடைய நரகத்தின் வாயைக் கிழித்துப் பொகட்ட உனக்கு –
எங்கள் உடைய சம்சாரத்தின் வாயைக் கிழித்துப் பொகட்டவன் அன்றோ  –
விலஷணர்க்கு சம்சாரம் இறே நரகம் –
நிரயோ யஸ்த்வயா விநா -ஆரண்யம் -30-18-உன்னை பிரிந்து இருப்பது அன்றோ நரகம் -சீதைப் பிராட்டி –

————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -46-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 11, 2014

அவதாரிகை –

திருமலையிலே வந்து
சந்நிஹிதன் ஆனவன்
பிரயோஜனாந்தர பரர் உடைய அபேஷிதமும்
செய்து தலைக் கட்டுமவன் கிடீர்
என்கிறார் –

—————————————————————————————

மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றித்
தலை முகடு தான் ஒரு கை பற்றி -அலை முகட்டு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான் –  ——46–

பதவுரை

பிண்டம் ஆய் நின்ற பிரான்-(ஜகத்துக்கு) மூலகாரணமாக நின்ற எம்பெருமான்,
அன்று–முன்பொரு காலத்தில்,
முகடு மலை–சிகரத்தை யுடைத்தான மந்தர மலையை
மேல் வைத்து–(கூர்ம ரூபியான தன்னுடைய முதுகின் மேலே) வைத்து
வாசுகியை சுற்றி–(அதிலே) வாஸுகி நாகத்தைக் கடை கயிறாக)ச் சுற்றி
தலை முகடு–அதன் தலைப் பாகத்தை
தான் ஒரு கை பற்றி–தான் ஒரு கையாலே பற்றிக் கொண்டு
அலை நீர்–அலையின் திவலைகள்
அண்டம் முகடு போய் தெறிப்ப–அண்டத்தின் மேற்சென்று தெறிக்கும்படியாக
கடல் கடைந்தான்–கடலைக் கடைந்தான்.

—————————————————————————————–

வியாக்யானம் –

மலை முகடு மேல் வைத்து-
ஓங்கின சிகரத்தை யுடைத்தான
மலையைத் தன் மேல் வைத்து

வாசுகியைச் சுற்றித் –
வாசுகி என்கிற பாம்பை அதின் நடுவே கடை கயிறாகச் சுற்றி –

தலை முகடு தான் ஒரு கை பற்றி –
கீழ்க் கடைகிற மலை ஆழாத படி
ஆமையாயத் தாங்கினாப்   போலே
அம்மலை மேல் கொந்தளியாத படியாக
அதின் தலையை ஒரு கையை இட்டு அமுக்கி –

அலை முகட்டு அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்-
கடைகிற போதை
அலையானது அண்ட பித்தியினுடைய உச்சியிலே சென்று தெறிக்கும் படி
அலை மேல் நீர் அண்ட பித்தியிலே போய்த் தெறிப்ப
அன்று கடலைக் கலக்கினவன் –

பிண்டமாய் நின்ற பிரான் –
இதுக்கு பரம காரணம் ஆனவன் –
கட சராவாதி கார்யங்களுக்கு முன்பில் அவஸ்தை யான
மிருத் பிண்டம் போலே
ஏகோஹவை நாராயண ஆஸீத் -என்னும்படியே –

பிரான் –
கார்யமான இவை அழிந்து
தானே யான அன்று
இவற்றுக்கு அடங்க ஹிதம் பார்க்கும் உபகாரகன்
ஜகத் காரண பூதனான பரிவன் -என்றபடி –

பிண்டமாய் நின்ற பிரான் –  கடைந்தான் –
பெற்ற பாவிக்கு ஜீவனம் தேடி விட வேண்டாவோ

பிரான் –
சங்கல்ப்பத்தாலே ரஷிக்கலாய் இருக்க
உடம்பு நோவக் கடல் கடைவதே
என்ன சௌலப்யம் தான் –

——————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -45-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 11, 2014

அவதாரிகை –

பல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் -என்று
பரம பதத்தைக் கலவிருக்கையாக உடையவன் என்று
ப்ரஸ்துதமான வாறே
அவனை ஆஸ்ரயிக்கும் போது கண்ணாலே கண்டு கொள்ள வேணும் –

அவன் நமக்கு ஸூ லபனோ என்னில் –
அக் குறைகள் தீர நமக்காக வன்றோ
திருமலையிலே வந்து சந்நிஹிதனாய்
ஸூலபன் ஆயத்து -என்கிறார் –

———————————————————————————–

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-

பதவுரை

மதம் வேழம்–மத்த கஜமானது
மா பிடியோடு–சிறந்த தன் பேடையோடு
புரிந்து–கலவி செய்து
ஊடி–பிரணய கலஹம் பண்ணி
திரிந்து–(அதனால் பேடையைத் துறந்து) இங்குமங்குந்திரிந்து
சினத்தால் பொருது வெண் கோடு–கோபத்தினால் கரை பொருது வெளுத்த கொம்புகளினின்று
விரிந்த சீர் முத்து–சிறந்த முத்துக்களை
உதிர்க்கும்–வெளிவிடப்பெற்ற
வேங்கடமே–திருமலையே
மேல் ஒருநாள்–முன்னொருநாளில் (வராஹ ரூபியாய்)
மண்–பூமியை
கோடு–கோரப் பல்லின் மீது
கொண்டான்–எடுத்துக் கொண்டு வந்த பெருமானுடைய
மலை–திருமலையாம்.

—————————————————————————————-

வியாக்யானம் –

புரிந்து மத வேழம் –
மதித்து இருந்துள்ள ஆனை யுண்டு -மத்த கஜம் –

மாப் பிடியோடூடித் –
தன்னை நினைத்த படியே கார்யம் கொள்ள வல்ல
ஸ்லாக்கியமான பிடியோடு ஊடி –
இவ்வளவிலேயும் தன்னை ஏவிக் கார்யம் கொள்ள வற்றான பிடி இறே-

புரிந்து –
அநந்தரம்
ஊடல் தீர்ந்து
கலந்து  –

திரிந்து –
அந்தச் செருக்காலே
சஞ்சரியா நிற்கும் –

ஊடி மாப் பிடியோடு –
ஸ்லாக்யதை ஊடுகைக்கு அடி –

திரிந்து-
பூஞ்சோலை வழி இறே சஞ்சரிப்பது –

சினத்தால் பொருது –
அங்கு உண்டான பளிங்குப் பாறையிலே
தன் நிழலைக் கண்டு -பிரதி கஜம் என்று புத்தி பண்ணி
பின்னை அத்தோடே ஒன்றிப் பொருது –
அந்த வீர ஸ்ரீ யடங்கலும் தோற்றும் படி நின்று –

இப் பொருள் அன்றிக்கே –
மத வேழம் மாப் பிடியோடு புரிந்து ஊடி –
பிடியோடு சம்ஸ்லேஷித்து
அநந்தரம்
ஊடி-

திரிந்து சினத்தால் பொருது –
ஊடலாலே பிறந்த சினத்தாலே உலாவி –

சினத்தாலே பொருது –
மலையில் ரத்ன பித்திகளிலே  பொருது
காமாத் குரோத அபிஜாயதே -கீதை-2-62-
மலையோடு பொருகிற படி –

விரிந்த சீர்-
இப்படி பொருகையாலே வீர ஸ்ரீயை யுடைய ஆனை

இத்தால்
கர வதத்தின் அன்று போலே
விஜயம் கண்டு ஊடல் தீர்ந்து அணைக்க வேண்டி
இருக்கை-

விரிந்த சீர் வெண் கோட்டு முத்து உதிர்க்கும் -வேங்கடமே –
வீர ஸ்ரீ யை உடைத்தான வெள்ளைக் கொம்புகளில் உண்டான முத்தை உதிரா நின்ற திருமலை என்று ஜீயர்
விரிந்த சீரை உடைத்தாய்
வெண் கொட்டு முத்தையும் உதிர்க்கும் -என்றுமாம் –

மேலொரு நாள் மண் கோட்டுக் கொண்டான் மலை-
இப்படிப் பட்ட நன்மையை உடைத்தான தேசம் கிடீர்
முன்னொரு நாள் பூமி அடங்கலும் தன் திரு எயிற்றிலே அடக்கினவன் வர்த்திக்கிற திருமலை
ஸ்ரீ வராஹ ரூபியாய் எயிற்றிலே கொண்டவன் உடைய மலை
திரு மலையில் ஆனைகளுக்குச் சேரும் இறே ஸ்ரீ வராஹமான வடிவு
இந்த மத்த கஜத்தின் உடைய ஸ்வரூபமானது
வராஹ ரூபியானவனுடைய செருக்கை ஸ்மரிப்பித்த தாய்த்து
வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து–பெரிய திருமொழி -3-4-3-என்னக் கடவது இறே  –

மலை –
இன்ன மலையை யுடையவன் என்னுமா போலே
அவனுக்கு ஐஸ்வர்யம் ஆகை-

——————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –