Archive for October, 2025

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்திரீ பர்வம்-ஸ்திரீ விலாப பர்வம் -ஸ்ராத்த பர்வம் -ஜலப்ரதானிக உப பர்வம்-

October 15, 2025

மன்னர்களின் சிரார்த்தம்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 26-காந்தாரிக்குப் பதிலுரைத்த கிருஷ்ணன்; போரில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையையும்; அவர்கள் அடைந்த கதியையும் யுதிஷ்டிரனிடம் விசாரித்த திருதராஷ்டிரன்; போரில் வீழ்ந்த வீரர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்யுமாறு ஆணையிட்ட யுதிஷ்டிரன்; ஈமக் காரியங்களைச் செய்த விதுரன்…

“அப்போது அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “எழு, ஓ! காந்தாரி, உன் இதயத்தைத் துயரில் நிலைநிறுத்தாமல் எழுவாயாக. உன் குற்றத்தாலேயே இந்தப் பரந்த பேரழிவு ஏற்பட்டிருக்கிறது.(1) உன் மகன் துரியோதனன், தீய ஆன்மாக் கொண்டவனாகவும், பொறாமைக் குணம் கொண்டவனாகவும், ஆணவம் நிறைந்தவனாகவும் இருந்தான். அவனது {துரியோதனனது} தீச்செயல்களை மெச்சிக் கொண்டு, அவற்றை நல்லவையாக நீ கருதுகிறாய்.(2) பகைமைகளின் உடல்வடிவமான அவன், மிகக் கொடூரனாகவும், பெரியோரின் சொல்லுக்குக் கீழ்ப்படியாதவனாகவும் இருந்தான். உன் குற்றங்கள் அனைத்தையும் என் மேல் ஏன் நீ சுமத்துகிறாய்?(3) இறந்தவனுக்காகவோ, தொலைந்தவனுக்காகவோ, ஏற்கனவே நேர்ந்துவிட்ட எதற்காகவோ வருந்தும் ஒருவன் மேலும் துயரத்தையே அடைகிறான். துயரத்தில் ஈடுபடுவதால் அஃது இருமடங்காகப் பெருகுகிறது.(4) மறுபிறப்பாள {பிராமண} வகையைச் சேர்ந்த ஒரு பெண், தவப்பயிற்சிகளுக்கான வாரிசைப் பெறுகிறாள்; மாடு சுமையைக் சுமப்பதற்கான {காளையை} வாரிசைப் பெறுகிறது. பெண்குதிரையானது வேகமாக ஓடும் வாரிசை {குதிரையைப்} பெறுகிறது, சூத்திரப் பெண்ணானவள், பணிவிடை செய்பவர்களை வாரிசாகப் பெறுகிறாள், வைசியப் பெண்ணானவள், கால்நடை காப்பவர்களை வாரிசாகப் பெறுகிறாள். எனினும், உன்னைப் போன்ற இளவரசியோ, கொல்லப்படுவதற்காகவே மகன்களைப் பெறுகிறாள் {மரணத்தை விரும்பும் க்ஷத்திரியனை வாரிசாகப் பெறுகிறாள்}” என்றான் {கிருஷ்ணன்}”.(5)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தனக்கு ஏற்பில்லாத வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட காந்தாரியின் இதயம் துயரால் மிகவும் கலக்கமடைந்தாலும் அமைதியாகவே அவள் இருந்தாள்.(6)

எனினும் அரசமுனியான திருதராஷ்டிரன், மடமையினால் எழும் துயரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நீதிமானான யுதிஷ்டிரனிடம் விசாரிக்கும் வகையில்,(7) “ஓ! பாண்டுவின் மகனே, இந்தப் போரில் வீழ்ந்தவர்களின் எண்ணிக்கையையும், உயிரோடு தப்பியவர்களின் எண்ணிக்கையையும் நீ அறிந்திருந்தால் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(8)

யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}“இந்தப் போரில் நூற்று அறுபத்தாறு கோடியே, இருபதாயிரம் {166,00,20,000} பேர் [1] கொல்லப்பட்டனர்.(9) தப்பிய வீரர்கள், இருபத்துநாலாயிரத்து நூற்று அறுபத்தைந்து {24,165} பேராவர்” என்றான்.(10)

[1] கங்குலியில் ‘One billion six hundred and sixty millions and twenty thousand men” என்று இருக்கிறது. அதாவது மேற்கத்திய எண்முறையின் படி 1,660,020,000 ஆகும். இந்திய எண்முறையின் படி, 166,00,20,000 ஆகும். கும்பகோணம் பதிப்பில், “அரசரே, இந்த யுத்தத்தில் பத்துகோடி வீரர்களும், இருபதினாயிரம் வீரர்களும், அறுபத்தாறு கோடி வீரர்களும் கொல்லப்பட்டார்கள், ராஜேந்திரரே, பாரதரே, காணாமற்போன வீரர்களின் தொகை பதினாலாயிரமும் வேறு பதினாலாயிரமும் நூறாயிரமும் அறுபதினாயிரமுமாம்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் “One billion, twenty thousand and sixty-six crore.. The total is thus 1,660,020,000” என்றிருக்கிறது. ஒருவேளை இது குதிரைகள், யானைகள், பிற விலங்குகள் அடங்கிய தொகையாகவும் இருக்கலாம். இந்தியாவின் இன்றைய மக்கள் தொகை 134,35,65,000 ஆகும்.

திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, நீ அனைத்தையும் அறிந்தவனாக இருப்பதால், மனிதர்களில் முதன்மையானோரான அவர்கள் என்ன கதியை அடைந்தார்கள் என்பதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(11)

யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, “உண்மை ஆற்றலைக் கொண்ட அந்தப் போர்வீரர்கள், அந்தக் கடும் போர்க்களத்தில் தங்கள் உடல்களை உற்சாகமாகக் கைவிட்டு, இந்திரலோகத்தை அடைந்தனர்.(12) மரணம் தவிர்க்க முடியாதது என்பதை அறிந்த அவர்களில், உற்சாகமாக அதை {மரணத்தைச்} சந்தித்தவர்கள், கந்தர்வர்களின் தோழமையை அடைந்தனர்.(13) போர்க்களத்தில் இருந்து புறமுதுகிடும்போதோ, இடத்தை {உயிர்வாழ} இரந்து கேட்ட போதோ ஆயுத முனைகளில் வீழ்ந்த போர்வீரர்கள் குஹ்யர்களின் உலகை அடைந்தனர்.(14) க்ஷத்திரியத்தன்மையின் கடமைகளை நோற்று, போரில் இருந்து தப்புவது இழுக்கெனக் கருதி, எதிரிகளை எதிர்த்துச் செல்லும்போது கூரிய ஆயுதங்களால் சிதைக்கப்பட்டு வீழ்ந்தவர்கள் அனைவரும் பிரகாசமான வடிவை ஏற்றுப் பிரம்மலோகத்தை அடைந்தனர்.(15,16) எஞ்சிய போர்வீரர்கள், புறப்போர்க்களத்தில் எவ்வாறோ இறந்தவர்கள் உத்தரக் குருக்களின் உலகை அடைந்தனர்” என்றான்.(17)

திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மகனே, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனைப் போலவே, அறிவின் எந்தச் சக்தியைக் கொண்டு நீ இவற்றையெல்லாம் காண்கிறாய்? ஓ! வலிய கரங்கொண்டோனே, நான் கேட்கத்தகுந்தவன் என நினைத்தால் நீ எனக்கு இதைச் சொல்வாயாக” என்று கேட்டான்.(18)

யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, “உமது கட்டளையின் பேரில் நான் காட்டில் திரிந்து கொண்டிருக்கையில், புனிதமான இடங்களுக்குப் பயணப்பட்ட நிகழ்வின்போது {தீர்த்தயாத்திரை செய்த போது}, நான் இந்த வரத்தை அடைந்தேன். லோமசர் என்ற தெய்வீக முனிவரைச் சந்தித்து, அவரிடம் இருந்து ஆன்மப் பார்வை என்ற வரத்தை அடைந்தேன்.(19) மேலும் மற்றொரு பழைய நிகழ்வின் போது, நான் அறிவின் சக்தியால் இரண்டாம் பார்வையை நான் அடைந்தேன்” என்றான்.(20)

திருதராஷ்டிரன் {யுதிஷ்டிரனிடம்}, “நண்பர்களற்றவர்கள் உடையதும், நண்பர்கள் உள்ளவர்களுடையதுமான உடல்களை முறையான சடங்குகளுடன் நமது மக்கள் எரிப்பது அவசியம் இல்லையா?(21) கவனிக்க யாருமற்றவர்களையும், புனித நெருப்பற்றவர்களையும் நாம் என்ன செய்வது? நமக்காகப் பல கடமைகள் காத்திருக்கின்றன. நாம் யாருடைய (இறுதிச்) சடங்குகளைச் செய்ய வேண்டும்?(22) ஓ! யுதிஷ்டிரா, இப்போது கழுகுகளாலும், பறவைகளாலும் இழுத்து உடல் கிழிக்கப்படுபவர்கள், தங்கள் செயல்களின் தகுதியால் {புண்ணியத்தால்} அடைய வேண்டிய அருள் உலகங்களை அடைய வேண்டாமா?” என்று கேட்டான்”.(23)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொல்லப்பட்ட பெரும் ஞானியான யுதிஷ்டிரன், (கௌரவர்களின் புரோகிதரான) சுதர்மன், தௌமியர், சூத வகையைச் சேர்ந்த சஞ்சயன்,(24) பெரும் ஞானியான விதுரன், குரு குலத்தின் யுயுத்சு, இந்திரசேனன் தலைமையிலான தன் அனைத்துப் பணியாட்கள், தன்னோடிருந்த அனைத்துச் சூதர்கள் ஆகியோரை அழைத்து,(25) “கவனித்துக் கொள்ள ஆளில்லாமல் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் உடல்கள் அழிவடையாமல் இருக்க {அழுகாமல் இருக்க}, அவர்களுக்கான ஈமச் சடங்குகளை முறையாக நடத்தச் செய்யுங்கள்.(26) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுடைய ஆணையின் பேரில், விதுரன், சஞ்சயன், சுதர்மன், தௌமியர், இந்திரசேனன் மற்றும் பிறரால்,(27) இத்தகு நிகழ்வுகளில் பயன்படும் சந்தனக்கட்டைகள், வேறு வகைக் கட்டைகள் {அகிற்கட்டைகள், காலீயகக் கட்டைகள்}, தெளிந்த நெய், எண்ணெய், நறுமணப் பொருட்கள், விலைமதிப்புமிக்கப் பட்டாடைகள், அனைத்து வகைத் துணிகள்(28), உலர்ந்த மரங்களின் {கட்டைகளின்} பெருங்குவியல்கள், முறிந்த தேர்கள், பல்வேறு ஆயுதங்கள் ஆகியவற்றைச் சேகரித்து,(29) முறையாக ஈமச்சிதைகள் அமைக்கப்பட்டு, கொல்லப்பட்ட மன்னர்களுக்குரிய சடங்குகள் அவரவர்க்கான முறையான வரிசையில் செய்யப்பட்டு, தாமதமில்லாமல் {அச்சிதை} எரியூட்டப்பட்டது.(30)

சுடர்மிக்க அந்த நெருப்புகளில், தெளிந்த நெய்த்தாரைகளை ஊற்றி, துரியோதனன், அவனது நூறு சகோதரர்கள், சல்லியன், சலன், மன்னன் பூரிஸ்ரவஸ்,(31) ஓ! பாரதா {ஜனமேஜயா} மன்னன் ஜெயத்ரதன், அபிமன்யு, துச்சாசனன் மகன், {துரியோதனனின் மகனான} லக்ஷ்மணன், மன்னன் திருஷ்டகேது, பிருஹந்தன், சோமதத்தன், நூற்றுக் கணக்கான சிருஞ்சயர்கள், மன்னன் க்ஷேமதன்வன், விராடன், துருபதன், பாஞ்சாலர்களின் இளவரசன் சிகண்டி, பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், வீர யுதாமன்யு, உத்தமௌஜஸ், கோசலர்களின் ஆட்சியாளன் {பிருஹத்பலன்}, திரௌபதியின் மகன்கள், சுபலனின் மகனான சகுனி, அசலன், விருஷகன், மன்னன் பகதத்தன், கர்ணன், பெருங்கோபம் கொண்ட அவனது {கர்ணனின்} மகன் {விருஷசேனன்}}, பெரும் வில்லாளிகளான கேகய இளவரசர்கள், வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரிகர்த்தர்கள், ராட்சசர்களின் இளவரசனான கடோத்கசன், பகனின் சகோதரன், ராட்சசர்களில் முதன்மையானவனான அலம்புசன், மன்னன் ஜலசந்தன், மற்றும் பிற நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மன்னர்கள் ஆகியோரின் உடல்கள் எரியூட்டப்பட்டன.(32-38)

இறந்தோரில் சிறப்புமிக்கச் சிலருக்கு பித்ருமேத சடங்குகளும், சிலருக்கும் சாமப்பாடல்கள் {சாமவேதப் பாடல்கள்} உரைப்பும், சிலருக்கு இறந்தோரைக் குறித்த புலம்பல்களும் நடந்தன.(39) சாமங்கள் மற்றும் ரிக்குகளின் உரத்த ஒலியாலும், பெண்களின் ஓலங்களாலும் அவ்விரவில் அனைத்து உயிரினங்களும் திகைப்படைந்தன.(40) புகையற்றவையாக, பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த ஈமச்சிதை நெருப்புகள், ஆகாயத்தில் மேகங்களால் மறைக்கப்பட்ட ஒளிக்கோள்களைப் போலத் தெரிந்தன.(41) பல்வேறு மாகாணங்களில் இருந்து வந்து இறந்திருந்தோரில், முற்றிலும் நண்பர்களற்றவர்களாக இருந்தவர்களின் உடல்கள், ஆயிரக்கணக்கான குவியல்களாகக் குவிக்கப்பட்டு, யுதிஷ்டிரனின் ஆணையின் பேரிலும், விதுரனின் மூலமும், நல்விருப்பத்தினாலும் அன்பினாலும் உந்தப்பட்டு, வேகமாகச் செயல்படும் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களால் {தன்னார்வத் தொண்டர்களால்} உலர்ந்த விறகால் அமைக்கப்பட்ட சிதையில் எரிக்கப்பட்டன.(42,43) இறுதிச்சடங்குகளைச் செய்யச் செய்த குரு மன்னன் யுதிஷ்டிரன், திருதராஷ்டிரனைத் தன் தலைமையில் கொண்டு, கங்கையாற்றை நோக்கிச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(44)

கர்ணன் உங்கள் அண்ணன்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 27-கங்கையின் கரைக்கு நீர்க்கடன்களைச் செய்ய வந்த குருக்கள்; கர்ணன் பாண்டவர்களின் அண்ணன் என்ற உண்மையைத் துயரத்துடன் பாண்டவர்களுக்குச் சொன்ன குந்தி; பெருங்கலக்கமடைந்த பாண்டவர்கள்; யுதிஷ்டிரனின் புலம்பல்; கர்ணனின் குடும்பத்தை வரவழைத்து அவர்களோடு சேர்ந்து நீர்க்கடனைச் செய்த யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “புனித நீர் நிரம்பியதும், பல தடாகங்கள் அடங்கியதும், உயர்ந்த, அகன்ற கரைகளைக் கொண்டதும், பரந்த படுகையைக் கொண்டதுமான மங்கலக் கங்கையை அடைந்த அவர்கள், தங்கள் ஆபரணங்கள், மேலாடைகள், கச்சைகள் மற்றும் இடைக்கச்சைகளைக் களைந்தனர். பெருந்துயரால் பீடிக்கப்பட்டு அழுது கொண்டிருந்த குரு குலப் பெண்கள், தங்கள் தந்தைமார், பேரர்கள், சகோதரர்கள், உறவினர்கள், மகன்கள், மதிப்புக்குரிய பெரியோர்கள், கணவர்கள் ஆகியோருக்கு நீர்த்தர்ப்பணம் செய்தார்கள். கடமைகளை அறிந்த அவர்கள், தங்கள் நண்பர்களுக்காகவும் நீர்ச்சடங்கைச் செய்தனர்.(1-3) அந்த வீரர்களின் மனைவியர், தங்கள் வீரத் தலைவர்களுக்கான இந்தச் சடங்கைச் செய்த போது, (பலரின் பாதங்களால் உண்டான) பாதைகள் மறைந்து போனாலும், அந்த ஓடைக் கடப்பதற்கு எளிதானதாகவே இருந்தது.(4) அந்த ஓடையின் கரைகள், வீரர்களின் துணைவர்களால் {மனைவியரால்} நிறைந்து, அகன்ற பெருங்கடலைப் போலக் கவலையை வெளிப்படுத்தும் வகையில் காட்சியளித்தது.(5)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அடுக்கடுக்காக ஏற்பட்ட துயரத்தின் காரணமாகத் திடீரென அழுத குந்தி, தன் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} இந்த மென்மையான வார்த்தைகளில்,(6) “பாண்டவர்களே, தேர்ப்படைப்பிரிவுகளின் தலைவர்களுக்குத் தலைவனும், வீரத்தின் அனைத்து நற்குறிகளையும் கொண்டவனும், தனித்துவமான போர்வீரனும், பெரும் வில்லாளியும், போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டவனும்,(7) ராதைக்குப் பிறந்த சூதப் பிள்ளை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பவனும், படைகளுக்கு மத்தியில் சூரியனைப் போலவே ஒளிர்ந்து கொண்டிருந்தவனுனும்,(8) உங்களையும், உங்கள் தொண்டர்களையும் எதிர்த்துப் போரிட்டவனும், துரியோதனனின் படைக்குத் தலைமை தாங்கியபோது பிரகாசமாகத் தெரிந்தவனும்,(9) சக்தியில் தனக்கு இந்தப் பூமியில் ஒப்பில்லாதவனும், உயிரைவிடப் புகழே பெரிதென நினைத்தவனும்,(10) உண்மைக்கு உறுதியுடன் இருந்தவனும், களைப்பில்லா போர்வீரனும், களைப்பை ஒருபோதும் அடையாதவனுமான அந்த வீரன் உங்கள் அண்ணனாவான். பகலின் தேவன் {சூரியன்} மூலம் முன்பு எனக்குப் பிறந்த உங்கள் அண்ணனுக்கு நீர்க்காணிக்கைகளைச் செலுத்துவீராக. அந்த வீரன் காதுகுண்டலங்களுடனும், கவசங்களுடன் பிறந்து, சூரியனின் காந்தியைக் கொண்டிருந்தான்” என்றாள் {குந்தி}.(11,12)

தங்கள் தாய் சொன்ன வலிநிறைந்த இந்த வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்கள் கர்ணனுக்கான தங்கள் துயரத்தை வெளிப்படுத்த தொடங்கினர். உண்மையில், அவர்கள் எப்போதையும் விட அதிகம் பீடிக்கப்பட்டவர்களானார்கள்.(13) பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தவனும், மனிதர்களில் புலியுமான வீர யுதிஷ்டிரன், “கணைகளையே தன் அலைகளாகக் கொண்டு, தன் நெடுங்கொடிமரத்தையே சுழியாகக் கொண்டு,(14) தன் வலிய இரு கரங்களையே பெரும் முதலைகளாகக் கொண்டு, தன் உள்ளங்கையொலிகளையே, புயலின் முழக்கமாகக் கொண்டு, தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தவிர வேறு எவனாலும் தாங்கிக் கொள்ள முடியாத பெருங்கடலாக இருந்தானே அந்தக் கர்ணன், ஓ! தாயே {குந்தியே}, அந்த வீரனின் {கர்ணனின்} தாய் நீதானா? தேவர்களுக்கு ஒப்பான அந்த மகன், முந்தைய நாட்களிலேயே உனக்கு எவ்வாறு உண்டானான்?(15,16) அவனது கரங்களின் சக்தி எங்கள் அனைவரையும் எரித்தது. ஓ! தாயே, துணியின் மடிப்புகளுக்குள் நெருப்பை மறைப்பவளைப் போல, எவ்வாறு நீ அவனை மறைத்தாய்? {எவ்வாறு எங்களிடம் நீ சொல்லாமலிருந்தாய்?}(17)

காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} வலிமையை நாங்கள் வழிபடுவதைப் போலவே, தார்தராஷ்டிரர்கள், அவனது கரங்களின் வலிமையை எப்போதும் வழிபட்டு வந்தனர்.(18) வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனும், தேர்வீரர்களில் முதல்வனும், போரில் பூமியின் தலைவர்கள் அனைவரின் ஒன்றுபட்ட சக்தியைத் தாங்கிக் கொண்டவனுமான அவன் {கர்ணன்}, எவ்வாறு உனது மகனானான்? அந்த ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவன் எங்கள் அண்ணனா? அற்புத ஆற்றலைக் கொண்ட அந்தப் பிள்ளையை நீ எவ்வாறு வளர்த்தாய்?(20) ஐயோ, இக்காரியம் உன்னால் மறைக்கப்பட்டதன் விளைவால் நாங்கள் என்ன காரியம் செய்துவிட்டோம்? கர்ணனின் இறப்பால் நாங்கள் எங்கள் நண்பர்கள் அனைவருடன் பெரிதும் பீடிக்கப்பட்டோம்.(21) அபிமன்யு, திரௌபதியின் மகன்கள் ஆகியோரின் இறப்பும், பாஞ்சாலர்கள் மற்றும் குருக்களின் அழிவும் ஏற்படுத்திய துயரத்தைவிடக் கர்ணன் இறந்ததற்காக நான் உணரும் இந்தத் துயரமானது நூறு மடங்கு பெரியதாகும். நெருப்பில் வீசப்பட்ட மனிதனைப்போலக் கர்ணனை நினைத்து நான் துயரால் எரிந்து கொண்டிருக்கிறேன்.(22,23) சொர்க்கத்தையும் சேர்த்து எதுவும் எங்களால் அடையப்பட முடியாததல்ல. ஐயோ, {நீ முன்பே சொல்லியிருந்தால்} குருக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தியிருந்த இந்தப் பெரும்படுகொலைகள் நிகழ்ந்திருக்காது” என்றான் {யுதிஷ்டிரன்}.(24)

இதுபோன்ற புலம்பல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அதிகத் துன்பத்தால் உரக்க ஓலமிட்டான். பிறகு அந்தப் பலமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, இறந்து போன தன் அண்ணனுக்காக {கர்ணனுக்காக} நீர்க்காணிக்கைகளைச் செலுத்தினான்.(25) அப்போது அந்த ஆற்றின் கரையில் கூட்டமாக இருந்த பெண்கள் அனைவரும் திடீரெனத் துன்பத்தால் உரக்க ஓலமிட்டனர்.(26) நுண்ணறிவு கொண்டவனும், குருக்களின் மன்னனுமான யுதிஷ்டிரன், கர்ணனின் மனைவியரையும், அவனது குடும்பத்தையும் தனக்கு முன்பு கொண்டு வரச்செய்தான்.(27) அற ஆன்மா கொண்ட அவன் {யுதிஷ்டிரன்}, தன் அண்ணனுக்கான {கர்ணனுக்கான} நீர்க்கடனை அவர்களுடன் சேர்ந்து செய்தான். அந்தச் சடங்கை முடித்த அம்மன்னன், கங்கையின் நீரிலிருந்து உணர்வுகள் கலங்கிய நிலையில் எழுந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(28)

ஜலப்ரதானிக உபபர்வம் முற்றும்

ஸ்திரீ பர்வம் முற்றிற்று

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் — ஸ்திரீ பர்வம்-ஸ்திரீ விலாப பர்வம்-

October 15, 2025

கிருஷ்ணனிடம் புலம்பிய காந்தாரி! – ஸ்திரீ பர்வம் பகுதி – 16-ஞானக்கண்ணால் போர்க்களத்தைக் கண்ட காந்தாரி; காந்தாரிக்கு ஞானக்கண் அளித்த வியாசர்; சோகத்தில் அழும் தன் மருமகள்களைக் கிருஷ்ணனுக்குக் காட்டிய காந்தாரி; களநிலவரத்தைக் கிருஷ்ணனுக்கு வர்ணித்து அழுது புலம்பியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன காந்தாரி, போர்க்களத்தில் இருந்து தொலைவாக இருந்த அந்த இடத்தில் நின்று கொண்டு, தன் ஞானக்கண்ணால் குருக்களின் படுகொலையைக் கண்டாள்.(1) தன் தலைவனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} அர்ப்பணிப்புடன் இருந்த அந்த உயர்ந்த அருளைக் கொண்ட பெண்மணி {காந்தாரி}, எப்போதும் உயர்ந்த நோன்புகளை நோற்று வந்தாள். கடுந்தவங்களைச் செய்து கொண்டிருந்த அவள், எப்போதும் உண்மை நிறைந்த பேச்சைக் கொண்டிருந்தாள்.(2) புனிதச் செயல்களைச் செய்யும் பெருமுனிவர் வியாசரால் கொடுக்கப்பட்ட வரத்தின் விளைவால், அவள் ஆன்ம அறிவையும் சக்தியையும் கொண்டவளானாள். அப்போது அந்தப் பெருமாட்டி பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டாள்.(3) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்தக் குரு குல பெருமாட்டி {காந்தாரி}, அருகில் இருந்து பார்ப்பவளைப் போல, காணப்பயங்கரமானவையும், அற்புதக் காட்சிகள் நிறைந்தவையுமான போராளிகளில் முதன்மையானவர்களுடைய போர்க்களத்தைத் தொலைவிலிருந்தே கண்டாள்.(4) எலும்புகளும், தலைமுடியும் எங்கும் சிதறிக் கிடக்க, குருதியோடையால் மறைக்கப்பட்டிருந்த அந்தக் களம், அனைத்துப் பக்கங்களிலும் ஆயிரமாயிரம் சடலங்களால் விரவப்பட்டுக் கிடந்தது.(5)

யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள் மற்றும் பிறவகைப் போராளிகளின் குருதியால் மறைக்கப்பட்டிருந்த அதில், தலையற்ற முண்டங்களும், உடல்களற்ற தலைகளும் நிறைந்திருந்தன.(6) மேலும் அது {அந்தப் போர்க்களமானது}, யானைகள், குதிரைகள், ஆண்கள், பெண்கள், நரிகள், நாரைகள், அண்டங்காக்கைகள், கங்கங்கள், காக்கைகள் ஆகியவற்றின் ஒலிகளை எதிரொலித்துக் கொண்டிருந்தது.(7) மனித ஊனுண்ணும் ராட்சசர்களின் விளையாட்டுக்களமாக அஃது இருந்தது. அன்றில்களும், கழுகுகளும் நிறைந்த அதில் நரிக்கூட்டங்களின் மங்கலமற்ற ஒலி எதிரொலித்துக் கொண்டிருந்தது.(8)

பிறகு வியாசரின் ஆணையின் பேரில் மன்னன் திருதராஷ்டிரன், யுதிஷ்டிரன் தலைமையிலான பாண்டுவின் மகன்கள் அனைவருடனும், வாசுதேவனுடனும் {கிருஷ்ணனுடனும்} மற்றும் குரு பெண்கள் அனைவருடனும் போர்க்களத்தை நோக்கிச் சென்றான்.(9,10) தங்கள் தலைவர்களை இழந்தவர்களான அந்தப் பெண்கள், குருக்ஷேத்திரத்தை அடைந்து, கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கும் தங்கள் சகோதரர்கள், மகன்கள், தந்தைமார் மற்றும் கணவர்கள் ஆகியோர் இரைதேடும் விலங்குகளாலும், நரிகள், அண்டங்காக்கைகள், காக்கைகள், பேய்கள் {பூதங்கள்}, பிசாசங்கள், ராட்சசர்கள் மற்றும் இன்னும்பிற இரவு உலாவிகளாலும் உண்ணப்படுவதைக் கண்டனர்.(11,12)

ருத்திரனின் விளையாட்டுக் களத்தில் காணப்படும் காட்சிகளுக்கு ஒப்பான அந்தப் பேரழிவைக் கண்ட பெண்கள், உரக்கக் கதறியபடியே தங்கள் விலைமதிப்புமிக்க வாகனங்களில் இருந்து வேகமாகக் கீழிறங்கினர். தாங்கள் இதுவரை கண்டிராத காட்சியைக் கண்ட அந்தப் பாரதக் குலப் பெண்கள், தங்கள் அங்கங்களில் பலம் குறைவதை உணர்ந்து, கீழே தரையில் விழுந்தனர்.(14) வேறு சிலரோ, தங்கள் புலனுணர்வுகளை இழந்து மயக்கமடைந்தனர். உண்மையில், பாஞ்சாலப் பெண்களும், குருகுலப் பெண்களும் சொல்லொண்ணாத் துயரில் மூழ்கினர்.(15) அனைத்துக் கடமைகளையும் அறிந்தவளான அந்தச் சுபலன் மகள் {காந்தாரி}, துயரில் பீடிக்கப்பட்ட பெண்களின் கூச்சலை அனைத்துப் பக்கங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருந்த அந்தப் பயங்கரக் களத்தைக் கண்டு,(16) மனிதர்களில் முதன்மையானவனும், தாமரைக் கண்ணனுமான கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினாள்.

குருக்களின் முற்றான அழிவைக் கண்டு, அக்காட்சியால் துயரத்தில் நிறைந்த அவள் {காந்தரி – கிருஷ்ணனிடம்}, இவ்வார்த்தைகளைச் சொன்னாள்:(17) “ஓ! தாமரைக்கண் மாதவா {கிருஷ்ணா}, என் இந்த மருமகள்களைப் பார். தங்கள் தலைவர்களை இழந்து, கலைந்த கேசங்களுடன், பெண் அன்றில் கூட்டத்தைப் போல, துயரால் இவர்கள் பரிதாபகரமாகக் கதறுவதைப் பார்.(18) சடலங்களை அடைந்த அவர்கள், அந்தப் பெரும் பாரதத் தலைவர்களின் நினைவுகளைத் திரும்பச் சொல்கிறார்கள். அவர்கள் தங்கள் மகன்கள், சகோதரர்கள், தந்தைமார் மற்றும் கணவர்களை நோக்கிப் பெருங்கூட்டமாக அங்கேயும், இங்கேயும் ஓடுகிறார்கள்.(19) ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, தங்கள் பிள்ளைகளை இழந்தவர்களும், வீரர்களின் தாய்மாருமான அவர்கள் அனைவராலும் இந்தக்களமே மறைக்கப்பட்டிருப்பதைப் பார். அதோ அந்தப் பகுதிகள், துணைவர்களை இழந்தவர்களும், வீரர்களின் துணைவர்களுமான {மனைவிகளுமான} அவர்களால் மறைக்கப்பட்டிருப்பதைப் பார்.(20) மனிதர்களில் புலிகளான பீஷ்மர், கர்ணன், அபிமன்யு, துரோணர், துருபதன், சல்லியன் ஆகியோரால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்தப் போர்க்களமானது சுடர்மிக்க நெருப்புகளைக் கொண்டிருப்பதைப் போலத் தெரிவதைப் பார்.(21), உயரான்மப் போர்வீரர்களின் தங்கக் கவசங்கள், விலைமதிப்புமிக்க ரத்தினங்கள், அங்கதங்கள், கேயூரங்கள் மற்றும் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்.(22) வீரர்களின் கையில் இருந்து வீசப்பட்ட ஈட்டிகள் {சக்திகள்} மற்றும் முள்பதிக்கப்பட்ட தண்டங்கள் {பரிகங்கள்} ஆகியவற்றாலும், வாள்கள், பல்வேறு வகைகளிலான கூரிய கணைகள் மற்றும் விற்கள் ஆகியவற்றாலும் அது விரவப்பட்டுக் கிடப்பதைப் பார்.(23)

ஒன்றாகக் கூடியிருக்கும் இரைதேடும் விலங்குகள் நின்றுகொண்டோ, விளையாடிக் கொண்டோ, கிடந்த நிலையிலோ தாங்கள் விரும்பியபடி இருக்கின்றன.(24) ஓ! பலமிக்க வீரா, போர்க்களம் இவ்வாறே இருக்கிறது. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இக்காட்சியால் நான் துயரில் எரிந்து கொண்டிருக்கிறேன். ஓ! மதுசூதனா(அனைத்தும் எவற்றால் உண்டானவையோ) அந்த ஐம்பூதங்களே {பஞ்சபூதங்களே} பாஞ்சாலர்களையும், குருக்களையும் அழித்திருக்கின்றன என நான் நினைக்கிறேன்.(26) கடுமைநிறைந்த கழுகுகளும், ஆயிரக்கணக்கான பிற பறவைகளும், குருதிதோய்ந்த உடல்களின் கவசங்களைப் பிடித்து இழுத்து அவற்றை விழுங்குகின்றன.(27) ஜெயத்ரதன், கர்ணன், துரோணர், பீஷ்மர், அபிமன்யு போன்ற வீரர்கள் இறப்பார்கள் என்று எவர் கருதியிருப்பார்கள்?(28) ஐயோ, ஓ! மதுசூதனா, கொல்லப்பட முடியாதவர்களாக இருப்பினும் அவர்களும் கொல்லப்பட்டார்கள். கழுகுகளும், கங்கங்களும், அண்டங்காக்கைகளும், பருந்துகளும், நாய்களும், நரிகளும் அவர்களை உண்கின்றன.(29)

அதோ அங்கே, துரியோதனன் தரப்பில் போரிட்டவர்களும், கோபத்தில் களம் புகுந்தவர்களுமான அந்த மனிதர்களில் புலிகள், அணைந்த நெருப்புகளைப் போல இப்போது கீழே விழுந்து கிடக்கின்றனர்.(30) அவர்கள் அனைவரும் மென்மையான, தூய்மையான படுக்கையில் உறங்கத் தகுந்தவர்களாவர். ஐயோ, ஆனால் அவர்கள் இடரில் மூழ்கி இன்று வெறுந்தரையில் உறங்குகிறார்கள்.(31) அவர்களது புகழைப் பாடும் துதிபாடிகளால் முன்பு எப்போதும் அவர்கள் மகிழ்விக்கப்பட்டார்கள். {அப்படிப்பட்ட} அவர்கள், இப்போது, நரிகளின் கடுமையான மங்கலமற்ற ஊளையைக் கேட்கின்றனர்.(32) அங்கங்களில் சந்தனக்குழம்பையும், ஜவ்வாது பொடியையும் பூசிக்கொண்டு, விலைமதிப்புமிக்கப் படுக்கைகளில் முன்பு உறங்கிய அந்தச் சிறப்புமிக்க வீரர்கள், ஐயோ, இப்போது புழுதியில் உறங்குகின்றனர்.(33) இந்தக் கழுகுகளும், ஓநாய்களும், அண்டங்காக்கைகளுமே இப்போது அவர்களது ஆபரணங்களாகியிருக்கின்றன. மீண்டும் மீண்டும் மங்கலமற்ற கடும் இரைச்சலை உண்டாக்கும் அந்த உயிரினங்கள் இப்போது அவர்களின் உடல்களை இழுத்துச் செல்கின்றன.(34) போரில் திளைப்பவர்களும், உற்சாகமிக்கவர்களாகத் தெரிபவர்களுமான அந்த வீரர்கள், ஏதோ இன்னும் உயிரோடு இருப்பதைப் போலத் தங்களின் அருகில் கூரிய கணைகளையும், நன்கு கடினமாக்கப்பட்ட வாள்களையும், பிரகாசமான கதாயுதங்களையும் கொண்டிருக்கின்றனர்.(35)

அழகையும், நல்ல நிறத்தையும், கொண்டவர்களும், தங்க மாலையால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான முதன்மையான வீரர்கள் பலரும், தரையில் உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.(36) பருத்த கரங்களைக் கொண்ட வேறு சிலர், ஏதோ தங்கள் அன்புக்குரிய மனைவியரைத் தழுவிக் கொள்வதைப் போலக் கதாயுதங்களைத் தழுவிக் கொண்டு உறங்குகின்றனர்.(37) கவசம் பூண்ட இன்னும் சிலர், தங்கள் கரங்களில் பிரகாசமான ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றனர். ஓ! ஜனார்த்தனா, இரைதேடும் விலங்குகள் அவர்கள் இன்னும் உயிரோடு இருப்பதாகக் கருதி அவர்களைச் சிதைக்காமல் இருக்கின்றன.(38) கழுத்துகளில் பசும்பொன்னாலான அழகிய மாலைகளை அணிந்திருக்கும் வேறு சில சிறப்புமிக்க வீரர்கள், அனைத்துப் பக்கங்களிலும் சிதறிக் கிடந்து, ஊனுண்ணும் விலங்குகளால் இழுத்துச் செல்லப்படுகின்றனர்.(39) அதோ அங்கே, ஆயிரக்கணக்கான கடும் நரிகள், மரணத்தால் அசையாமல் கிடக்கும் சிறப்புமிக்க வீரர்கள் பலரின் கழுத்தைச் சுற்றியிருக்கும் தங்க ஆரங்களை இழுத்துக் கொண்டிருக்கின்றன.(40)

ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட துதிபாடிகள் பலரின் பாடல்களாலும், துதிகளாலும் முன்பு மகிழ்விக்கப்பட்ட அவர்கள்,(41) இப்போது துயரால் பீடிக்கப்பட்டு, அவர்களைச் சூழ்ந்து அமர்ந்து கொண்டு அழுது புலம்பும் அழகிய பெண்களால் சூழப்பட்டிருக்கிறார்கள்.(42) அந்த அழகிய பெண்களின் முகங்கள் மங்கியிருந்தாலும், செந்தாமரைகளின் கூட்டத்தைப் போல இன்னும் ஒளியுடனேயே இருந்தன.(43) அந்தக் குரு மங்கையர் தங்கள் தங்கள் தொண்டச்சிகளுடனும், தோழிகளுடனும் சேர்ந்து அழுவதை நிறுத்திவிட்டனர். அவர்கள் அனைவரும் கவலையில் நிறைந்துள்ளனர். சோகத்தில் மூழ்கியிருக்கும் அவர்கள் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(44) கோபத்துடன் அழுது புலம்பிக் கொண்டிருக்கும் அந்த அழகிகளின் முகங்கள், காலைச் சூரியனைப் போவோ, தங்கத்தைப் போலவோ, புடம்போட்ட தாமிரத்தைப் போலவோ பிரகாசமாக இருக்கின்றன.(45)

முற்றுபெறாத பொருள் கொண்ட தங்கள் ஒவ்வொருவரின் புலம்பல்களையும் கேட்ட அம்மங்கையரால், அனைத்துப் பக்கத்திலும் இருந்து வெடித்த உரத்த துயர ஓலங்களின் விளைவாக அவற்றின் பொருளை உணர்ந்து கொள்ள முடியவில்லை.(46) அவர்களில் சிலர், நீண்ட பெருமூச்சுகளைவிட்டு, மீண்டும் மீண்டும் புலம்பல்களில் ஈடுபட்டுத் துயரால் திகைப்படைந்து தங்கள் உயிரையே விடுகின்றனர்.(47) அவர்களில் பலர், (தங்கள் மகன்கள், கணவர்கள், அல்லது தந்தைமாரின்) உடல்களைக் கண்டு அழுது, உரக்க ஓலமிடுகின்றனர். வேறு சிலர் தங்கள் மென்மையான கரங்களால் தங்கள் தலைகளில் அடித்துக் கொள்கின்றனர்.(48) பூமியானது, துண்டிக்கப்பட்ட தலைகள், கரங்கள் மற்றும் பிற அங்கங்கள் ஒன்று கலந்த நிலையில் விரவப்பட்டு, பெருங்குவியல்களாகச் சேர்ந்து, இந்தப் பேரிடரின் அடையாளங்களோடு மிகப் பிரகாசமாகத் தெரிகிறது.(49) பேரழகைக் கொண்ட தலையற்ற முண்டங்கள் பலவற்றையும், உடல்களற்ற தலைகள் பலவற்றையும் கண்ட அந்த அழகிகள், உணர்விழந்து போய் நீண்ட நேரமாகத் தரையில் கிடக்கின்றனர்.(50)

குறிப்பிட்ட தலைகளைக் குறிப்பிட்ட உடல்களுடன் பொருத்திப் பார்க்கும் அப்பெண்கள், துயரால் உணர்விழந்து மீண்டும் தங்கள் தவறுகளைக் கண்டு, “இஃது இவருடையதல்ல” என்று சொல்லி மீண்டும் மிகுந்த துன்பத்துடன் அழுகின்றனர்.(51) வேறு சிலர், கணைகளால் துண்டிக்கப்பட்ட கரங்களையும், தொடைகளையும், கால்களையும் ஒன்றாக இணைத்து, (மீட்கப்பட்ட அந்த வடிவங்களைக் கண்டு) மீண்டும் மீண்டும் தங்கள் உணர்வுகளை இழக்கின்றனர்.(52) பாரத மங்கையர் சிலர், விலங்குகள், பறவைகளால் சிதைக்கப்பட்டு, தலைகள் வெட்டப்பட்டிருந்த தங்கள் தலைவர்களின் உடல்களைக் கண்டு, அவற்றை அடையாளம் காண முடியாமல் தவிக்கின்றனர்.(53) வேறு சிலரோ, ஓ! மதுசூதனா, எதிரிகளால் கொல்லப்பட்ட தங்கள் சகோதரர்கள், தந்தைமார், மகன்கள் மற்றும் கணவர்களைக் கண்டு, தங்கள் கரங்களால் தங்கள் தலைகளை அடித்துக் கொள்கின்றனர்.(54)

சதை மற்றும் குருதியால் சகதியாகி இருக்கும் பூமியானது, இன்னும் வாளைப் பிடியில் கொண்டிருக்கும் கரங்களாலும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளாலும் கடக்கப்பட முடியாததாக இருக்கிறது.(55) சிறு துயரையும் இதற்கு முன்பு அனுபவித்திராத அந்தக் களங்கமற்ற மங்கையர், தங்கள் சகோதர்கள், தந்தைமார், மகன்கள் ஆகியோர் களத்தில் பரவிக் கிடப்பதைக் கண்டு இப்போது சொல்லொணாத் துயரத்தில் மூழ்கியிருக்கின்றனர்.(56) ஓ! ஜனார்த்தனா, சிறந்த பிடரியால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அழகிய குதிரைக் குட்டிகளுக்கு ஒப்பானவர்களான திருதராஷ்டிரர் மருமகள்களைப் பார்.(57) ஓ! கேசவா, அழகிய வடிவங்களைக் கொண்ட அந்த மங்கையர் இத்தகு தன்மையை அடைந்திருப்பதைக் காண்பதைவிடச் சோகமான காட்சி எனக்கு வேறு என்ன இருக்க முடியும்?(58) ஓ! கேசவா, என் மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் எதிரிகளால் கொல்லப்பட்டதை நான் காண்பதால், நான் என் முந்தைய பிறவிகளில் பெரும்பாவங்களை இழைத்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை” {என்றாள் காந்தாரி}.(59) துயரால் இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காந்தாரியின் கண்கள் தன் மகன் (துரியோதனனின்) மேல் விழுந்தது” {என்றார் வைசம்பாயனர்}.(59)

பானுமதியின் நிலை! – ஸ்திரீ பர்வம் பகுதி – 17-துரியோதனனின் உடலைக் கண்டு கதறி விழுந்த காந்தாரி; தன் மகனின் உடலைக் கண்ணீரால் நனைத்தது; ஆதரவற்ற திருதராஷ்டிரனுக்காக வருந்தியது; துரியோதனனின் மனைவியான பானுமதியின் நிலையைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணனிடம் புலம்பிய காந்தாரி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “காந்தாரி, துரியோதனனைக் கண்டதும், துயரால் தன் உணர்வுகளை இழந்து, வேரோடு சாய்க்கப்பட்ட வாழை மரத்தைப் போலத் திடீரெனப் பூமியில் விழுந்தாள்.(1) விரைவில் தன் உணர்வுகள் மீண்ட அவள், குருதியில் மறைந்து வெறுந்தரையில் கிடக்கும் தன் மகனைக் கண்டு மீண்டும் மீண்டும் உரக்க ஓலமிட்டபடியே அழத் தொடங்கினாள்.(2) தன் மகனை ஆரத்தழுவி கொண்ட காந்தாரி, அவனுக்காகப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டாள். துயரால் பீடிக்கப்பட்டவளும், அதிகமான புலன்கலக்கம் அடைந்தவளுமான அந்தக் குரு குல ராணி {காந்தாரி}, “ஐயோ, ஓ! மகனே”, “ஐயோ, ஓ! மகனே” என்று சொல்லி அழுதாள்.(3) கவலையால் எரிந்த அந்த ராணி, பருத்த, அகன்ற தோள்களைக் கொண்டவனும், மாலைகளாலும், கழுத்தணிகளாலும் அலங்கரிக்கப்பட்டவனுமான தன் மகனின் {துரியோதனனின்} உடலைத் தன் கண்ணீரால் நனைத்தாள்.

அருகே நின்றிருந்த ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்} அவள் {காந்தாரி},(4) “ஓ! பலமிக்கவனே, ஓ! விருஷ்ணி குலத்தோனே, இந்தக் குலத்திற்கு அழிவை ஏற்படுத்திய இந்தப் போரின் தொடக்கத்தில், இந்த மன்னர்களில் முதன்மையானவன் {துரியோதனன்} என்னிடம், “ஓ! தாயே, இந்த உட்பூசலில் எனக்கு வெற்றியை விரும்புவாயாக” என்றான். அவன் இவ்வார்த்தைகளை என்னிடம் சொன்னபோது, ஓ! மனிதர்களில் புலியே, பேரிடர் எங்களை அணுகியதை அறிந்த நான், அவனிடம் {துரியோதனனிடம்}“எங்கே அறமிருக்கிறதோ, அங்கேயே வெற்றியுமிருக்கும்.(6) ஓ! மகனே, உன் இதயம் போரில் நிலைத்திருப்பதால், ஆயுதங்களால் ({ஆயுதங்களைப்} பயன்படுத்தி) அடையும் உலகை தேவர்களைப் போலவே நீ அடைவாயாக ({அடைந்து} அங்கே விளையாடிக் கொண்டிருப்பாயாக)” என்றேன்.(7) இவையே நான் அவனிடம் சொன்ன வார்த்தைகளாகும். இதன் காரணமாக நான் என் மகனுக்காக வருந்தவில்லை. எனினும், நண்பர்களையும், சொந்தங்களையும் இழந்து ஆதரவற்றவராக இருக்கும் திருதராஷ்டிரருக்காகவே நான் வருந்துகிறேன்.(8) ஓ! மாதவா, தேர்வீரர்களில் முதன்மையானவனும், கோபம் நிறைந்தவனும், ஆயுதங்களில் திறன்மிக்கவனும், போரில் தடுக்கப்பட முடியாதவனுமான என் மகன் {துரியோதனன்} வீரர்களின் படுக்கையில் உறங்குவதைப் பார்.(9) காலத்தால் கொண்டுவரப்பட்ட மாறுபாடுகளைப் பார். பழங்காலத்தில் மகுடம் தரித்தோர் அனைவரின் தலைகளிலும் நடந்து சென்ற இந்த எதிரிகளை எரிப்பவன், இப்போது புழுதியில் உறங்குகிறான்.(10)

வீரர்களுக்கான படுக்கையில் உறங்கும் வீரத் துரியோதனன், அடைதற்கு மிக அரிய கதியையே அடைந்திருக்கிறான் என்பதில் ஐயமில்லை.(11) முன்பு, பேரழகுப் பெண்கள் புடைசூழ அமர்ந்திருந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, இப்போது வீரர்களின் படுக்கையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு மங்கலமற்ற நரிகள் திளைக்கின்றன.(12) முன்பு, மகிழ்ச்சிப்படுத்துவதற்காக ஒருவரோடொருவர் போட்டிப் போட்டுக் கொண்ட மன்னர்களால் சூழப்பட்ட இவன், இப்போது கழுகுகளால் சூழப்பட்டுத் தரையில் கிடக்கிறான்.(13) முன்பு, அழகிய பெண்களால் அழகிய விசிறிகளைக் கொண்டு விசிறப்பட்டவன், இப்போது (ஊனுண்ணும்) பறவைகளின் சிறகடிப்பால் விசிறப்படுகிறான்.(14) பெரும் பலத்தையும், உண்மை ஆற்றலையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட இந்த இளவரசன் {துரியோதனன்}, போரில் பீமசேனனால் கொல்லப்பட்டு, சிங்கத்தால் கொல்லப்பட்ட ஒரு யானையைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறான்.(15)

ஓ! கிருஷ்ணா, பீமசேனனின் கதாயுதத்தால் கொல்லப்பட்டு, குருதியில் மறைந்து, வெறுந்தரையில் கிடக்கும் துரியோதனனைப் பார்.(16) ஓ! கேசவா, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட எவன், பதினோரு {11} அக்ஷௌஹிணி துருப்புகளைத் திரட்டினானோ, அவன் தன் தீயக் கொள்கையின் {தீய புத்தியின்} விளைவால் இப்போது கொல்லப்பட்டுக் கிடக்கிறான்.(17) ஐயோ, பெரும் வில்லாளியான, இந்த வலிமைமிக்கத் தேர்வீரன், பீமசேனனால் கொல்லப்பட்டு, சிங்கத்தால் கொல்லப்பட்ட ஒரு புலியைப் போல இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறான்.(18) அலட்சியம் செய்பவனும், மூடனுமான இந்தத் தீய இளவரசன் {துரியோதனன்}, விதுரன் மற்றும் தன் தந்தையை {திருதராஷ்டிரரை} அலட்சியம் செய்து, பெரியோரை அவமதித்ததன் விளைவாகவே மரணத்திற்கு அடிபணிந்திருக்கிறான்.(19) எவன் எந்த எதிரியுமில்லாமல் பதிமூன்று {13} ஆண்டுகள் இந்தப் பூமியை ஆண்டானோ, ஐயோ, என் மகனான அந்த இளவரசன், எதிரிகளால் கொல்லப்பட்டு இன்று வெறுந்தரையில் உறங்குகிறான்.(20)

ஓ! கிருஷ்ணா, சிறிது காலத்திற்கு முன்புதான் யானைகள், பசுக்கள் மற்றும் குதிரைகள் நிறைந்த பூமியானது, துரியோதனனால் ஆளப்படுவதை நான் கண்டேன்.(21) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இன்றோ, யானைகள், பசுக்கள் மற்றும் குதிரைகளற்று வேறொருவனால் அவள் {பூமி} ஆளப்படுவதை நான் காணப் போகிறேன். ஓ! மாதவா, நான் உயிர்வாழ வேண்டிய தேவை என்ன இருக்கிறது?(22) கொல்லப்பட்ட வீரர்களின் அருகில் இந்த அழகிய பெண்களின அழுது கொண்டிருக்கும் காட்சியே என் மகன் கொல்லப்பட்டதைக் காட்டிலும் அதிகத் துன்பத்தைத் தருவதைப் பார்.(23) ஓ! கிருஷ்ணா, லக்ஷ்மணனின் தாயும், பெரும் இடையைக் கொண்டவளும், கலைந்த கேசத்துடன் இருப்பவளும், தங்கமயமான வேள்விப்பீடத்திற்கு ஒப்பானவளுமான துரியோதனனின் அன்புக்குரிய மனைவியை {பானுமதியைப்}[1] பார்.(24) பெரும் நுண்ணறிவைக் கொண்ட இந்தக் காரிகை, தன் வலிமைமிக்கத் தலைவன் {துரியோதனன்} உயிரோடிருந்த போது, தன் தலைவனின் அழகிய கரங்களின் அணைப்பிற்குள் விளையாடிக் கொண்டிருந்தாள்.(25)போரில் கொல்லப்பட்ட என் மகனையும், பேரப்பிள்ளையையும் கண்டும், உண்மையில் என் இதயம் நூறு துண்டுகளாக ஏன் நொறுங்கவில்லை?(26) ஐயோ, அந்தக் களங்கமற்ற மங்கை {பானுமதி}, குருதியால் மறைந்திருக்கும் தன் மகனை (மகனின் தலையை) முகர்ந்து பார்க்கிறாள். மேலும், அழகிய தொடைகளைக் கொண்டவளான அந்த மங்கை, தன் அழகிய கரத்தால் துரியோதனனின் உடலை மென்மையாகத் தடவுகிறாள்.(27) ஒரு நேரம் தன் தலைவனுக்காகவும் {துரியோதனனுக்காகவும்}, மறுநேரம் தன் மகனுக்காகவும் {லக்ஷ்மணனுக்காகவும்} அவள் {பானுமதி} கவலையுறுகிறாள். ஒரே நேரம் அவள் தன் தலைவனையும், மறுநேரம் தன் மகனையும் பார்க்கிறாள்.(28) ஓ! மாதவா, தன் கரங்களால் தன் தலையை அடித்துக் கொண்டு, குருக்களின் மன்னனான தன் வீரத் துணைவனின் மார்பில் அவள் விழுவதைப் பார்.(29) தாமரையின் இதழ்களைப் போன்ற நிறத்தைக் கொண்டவளான அவள், ஒரு தாமரையைப் போலவே அழகாக இருக்கிறாள். நற்பேறற்ற அந்த இளவரசி இப்போது தன் மகனின் முகத்தையும், இப்போது தன் தலைவனின் முகத்தையும் தடவுகிறாள்.(30) சாத்திரங்களும், சுருதிகளும் உண்மையென்றால், ஆயுதப் பயன்பாட்டால் ஒருவன் வெல்லும் (அருள் நிறைந்த) உலகங்களையும் இந்த மன்னனும் {துரியோதனனும்} அடைந்திருப்பான் என்பதில் ஐயமில்லை” என்றாள் {காந்தாரி}.(31)

துச்சாசனனைக் கண்ட காந்தாரி! – ஸ்திரீ பர்வம் பகுதி – 18-தன் மருமகள்களின் பரிதாபகரமான நிலையைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக்காட்டிய காந்தாரி; துச்சாசனனைக் கொன்று அவனுடைய உயிர்க்குருதியைக் குடித்த பீமனை நினைத்தது; துச்சாசனன் செய்த தீமையைச் சொன்னது; பீமனைக் குறித்துத் துரியோதனனுக்குத் தான் எச்சரித்ததைக் கிருஷ்ணனிடம் நினைவுகூர்ந்த காந்தாரி…

காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “ஓ! மாதவா, (போர்முயற்சியில்) களைப்படைய இயலாத என் மகன்கள் நூறு பேரும், போரில் பீமசேனனின் கதாயுதத்தால் கொல்லப்பட்டனர்.(1) என் மகன்களை இழந்தவர்களான இளம் வயதுடைய என் மருமகள்கள், கலைந்த கேசங்களுடன் இன்று போர்க்களத்தில் திரிவதே எனக்குப் பெரும் துயரை அளிக்கிறது.(2) ஐயோ, பல ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கால்களுடன், சிறந்த மாளிகைகளின் உப்பரிகைகளிலேயே நடந்த இவர்கள், இப்போது, பெருந்துயரால் இதயம் பீடிக்கப்பட்ட நிலையில், குருதியால் சகதியாகியிருக்கும் இந்தக் கடும்பூமியைத் தங்கள் கால்களால் தீண்டுகின்றனர்.(3) கவலையில் சுழலும் இவர்கள், பெருஞ்சிரமத்துடன் கழுகுகளையும், நரிகளையும், காகங்களையும் விரட்டிக் கொண்டு, மதுவால் வெறியேற்றப்பட்டவர்களைப் போலத் திரிந்து கொண்டிருக்கின்றனர்[1].(4) பழுதற்ற அங்கங்களைக் கொண்டவர்களும், கொடியிடை கொண்டவர்களுமான இந்த மங்கையர், இந்தப் பயங்கரப் பேரழிவைக் கண்டு, துயரத்தில் மூழ்கிக் கீழே விழுவதைப் பார்.(5)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, லக்ஷ்மணனின் தாயான இந்த இளவரசியை {பானுமதியைக்} கண்டு என் இதயம் துயரத்தால் பிளக்கிறது.(6) அழகிய கரங்களைக் கொண்ட இந்த மங்கையரில் சிலர், வெறுந்தரையில் இறந்து கிடப்பவர்களான தங்கள் சகோதரர்களையும், சிலர் தங்கள் கணவர்களையும், சிலர் தங்கள் மகன்களையும் கண்டு, கொல்லப்பட்டவர்களின் கரங்களைப் பற்றிக் கொண்டு கீழே விழுகின்றனர்.(7) ஓ! வெல்லப்படாதவனே, இந்தப் பயங்கரப் பேரழிவைக் கண்டு கதறி அழும் முதிய மற்றும் நடுத்தர வயது பெண்களின் ஓலத்தைக் கேட்பாயாக.(8) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, அந்தக் காரிகையர், களைப்பால் மயங்கி, உடைந்த தேர்க்கூடுகளில் தங்களைத் தாங்கிக் கொண்டு ஓய்வதைப் பார்.(9) ஓ! கிருஷ்ணா, அவர்களில் சிலர், அழகிய மூக்கு மற்றும் காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதும், துண்டிக்கப்பட்டதுமான தங்கள் சொந்தக்காரனின் தலையை எடுத்துக் கொண்டு துயரில் நிற்பதைப் பார்.(10)

ஓ! பாவமற்றவனே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அவர்களுடையவர்களும், சிறுமதி கொண்டவளான என்னுடையவர்களுமான உறவினர்கள் மற்றும் சொந்தங்கள் அனைவரும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதால், நாங்கள் எங்கள் முந்தைய பிறவியில் பெரும்பாவங்களைச் செய்திருக்க வேண்டும். ஓ! விருஷ்ணி குலத்தோனே, நியாயமானவையாகவோ, நியாயமற்றவையாகவோ இருக்கும் எங்கள் செயல்பாடுகள் பலமில்லாமல் போகாது.(11,12) ஓ! மாதவா, அழகிய முலைகளையும், வயிற்றையும் கொண்டவர்களும், நற்குடியில் பிறந்தவர்களும், பணிவுடையவர்களும், கரிய இமை முடிகளைக் கொண்டவர்களும், தங்கள் தலைகளில் கருங்குழலைக் கொண்டவர்களும், இனிய குரலைக் கொண்டவர்களும், அன்னப்பறவைகளைப் போல அன்பானவர்களுமான அந்த இளம்பெண்கள், பெருந்துயரத்தால் தங்கள் புலனுணர்வுகளை இழந்து, நாரைக் கூட்டத்தைப் போலப் பரிதாபகரமாக அழுவதைப் பார்.(13,14) ஓ! தாமரைக்கண் வீரா, முற்றுமுழுதாக மலர்ந்திருக்கும் தாமரைகளுக்கு ஒப்பான அவர்களுடைய அழகிய முகங்கள் சூரியனால் எரிக்கப்படுவதைப் பார்.(15)

ஐயோ, ஓ! வாசுதேவா {கிருஷ்ணா}, செருக்குடையவர்களும், மதங்கொண்ட யானைகளைப் போன்ற ஆற்றலைக் கொண்டவர்களுமான என் பிள்ளைகளின் மனைவியர், இப்போது பொதுமக்களின் வெறித்த பார்வைக்கு வெளிப்பட்டு நிற்கின்றனர்.(16) ஓ! கோவிந்தா, என் மகன்களுக்குச் சொந்தமானவையான, நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட கேடயங்கள், சூரியப் பிரகாசத்துடன் கூடிய கொடிமரங்கள், தங்கக் கவசங்கள், கழுத்தணிகள், தங்கத்தாலான மார்புக் கவசங்கள், தலைக்கவசங்கள் ஆகியன, தெளிந்த நெய்யிலான நீர்க்காணிக்கைகள் {ஆகுதிகள்} ஊற்றப்பட்டு, காந்தியுடன் சுடர்விட்டெரியும் வேள்வி நெருப்புகளைப் போலப் பூமியில் சிதறிக் கிடப்பதைப் பார்.(17,18) பீமனால் வீழ்த்தப்பட்டு, எதிரிகளைக் கொல்லும் அந்த வீரனால் அங்கமெல்லாம் உள்ள குருதி குடிக்கப்பட்டு அங்கே துச்சாசனன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.(19) ஓ! மாதவா, பகடையாட்டத்தின் போது உண்டான தன் துயரங்களை நினைத்துப் பார்த்த திரௌபதியினால் தூண்டப்பட்டு, பீமனின் கதாயுதத்தால் கொல்லப்பட்ட என் மற்றொரு மகனை {துச்சாசனனைப்} பார்.(20)

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, தன் அண்ணனுக்கும் {துரியோதனனுக்கும்}, கர்ணனுக்கும் ஏற்புடையதைச் செய்ய விரும்பிய இந்தத் துச்சாசனன், பகடையில் வெல்லப்பட்ட அந்தப் பாஞ்சால இளவரசியிடம் {திரௌபதியிடம்}, சபைக்கு மத்தியில் வைத்து, “நீ இப்போது ஓர் அடிமையின் மனைவியாவாய். ஓ! பெண்ணே, சகாதேவன், நகுலன் மற்றும் அர்ஜுனனுடன் இப்போது நீ எங்கள் வீட்டுக்குள் நுழைவாயாக” என்றான்[2].(21,22) ஓ!கிருஷ்ணா, அச்சந்தர்ப்பத்தில் நான் மன்னன் துரியோதனனிடம், “ஓ! மகனே {துரியோதனா}, (உன் தரப்பில் இருந்து) கோபம் நிறைந்தவனான சகுனியைக் கைவிடுவாயாக.(23) உன் தாய்மாமன் மிகத் தீய ஆன்மாக் கொண்டவனும், சச்சரவை அதிகம் விரும்புபவனுமாக இருக்கிறான். ஓ! மகனே, தாமதமில்லாமல் அவனைக் கைவிட்டு, பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்வாயாக.(24) ஓ! சிறு மதி கொண்டோனே, கோபம் நிறைந்த பீமசேனனைக் குறித்து நீ நினைத்துப் பார்க்கவில்லை. எரிப்பந்தங்களைக் கொண்டு யானையைத் தாக்கும் மனிதனைப் போல நீ உன் வார்த்தைகளெனும் கணைகளால் அவனைத் {பீமனைத்} துளைக்கிறாய்” என்றேன்.(25)ஐயோ, என் வார்த்தைகளை அலட்சியம் செய்த அவன் {துரியோதனன்}, பெருங்காளையின் மீது விஷத்தைக் கக்கும் பாம்பொன்றைப் போலத் தன் வார்த்தை நஞ்சை அவன் {பீமன்} மீதும், ஏற்கனவே சொல்லீட்டிகளால் துளைக்கப்பட்டிருந்த அவர்கள் {பாண்டவர்கள்} மீதும் கக்கினான்.(26) அதோ அங்கே சிங்கத்தால் கொல்லப்பட்ட பெரும் யானையொன்றைப் போல, பீமசேனனால் கொல்லப்பட்டுத் தன் பருத்த கரங்கள் இரண்டையும் விரித்தபடியே துச்சாசனன் உறங்கிக் கொடிருக்கிறான்.(27) பெருங்கோபம் கொண்டவனான பீமசேனனோ, தன் எதிரியின் {துச்சாசனனின்} குருதியைப் போரில் குடித்து மிகப் பயங்கரமான செயலைச்செய்துவிட்டான்” என்றாள் {காந்தாரி}.(28)

மகன்களுக்காகப் புலம்பிய காந்தாரி! – ஸ்திரீ பர்வம் பகுதி – 19- தன் மகன்களான விகர்ணன், துர்முகன், சித்திரசேனன், விவிம்சதி, துஸ்ஸகன் ஆகியோரைச் சுட்டிக்காட்டி, அவர்களது அவல நிலையையும், அவர்களது பெருமையையும் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி…

காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “ஓ! மாதவா, ஞானியரால் மெச்சப்பட்ட என் மகன் விகர்ணன், பீமனால் கொல்லப்பட்டுப் பயங்கரமாகச் சிதைந்த நிலையில் வெறுந்தரையில் கிடக்கிறான்.(1) ஓ! மதுசூதனா, உயிரை இழந்து (கொல்லப்பட்ட) யானைகளுக்கு மத்தியில் கிடக்கும் விகர்ணன், நீல மேகங்களால் சூழப்பட்ட கூதிர் கால வானத்தத்தில் இருக்கும் சந்திரனைப் போல இருக்கிறான்.(2) தோலுரை பூட்டப்பட்டதும், தொடர்ந்து வில்லேந்துவதால் வடு நிறைந்ததுமான அவனது {விகர்ணனின்} அகன்ற உள்ளங்கையை உண்ணும் விருப்பத்தால் கழுகுகளால் அது கடுமையாகத் துளைக்கப்பட்டிருக்கிறது.(3) ஓ! மாதவா, ஆதரவற்றவளான அவனது மனைவி, அழுகும் பிணத்தை உண்ண விரும்பும் அந்தக் கழுகுகளைச் சிரமத்துடன் விரட்டிக் கொண்டிருக்கிறாள்.(4) ஓ! மாதவா, ஓ! மனிதர்களில் காளையே, இளமை நிறைந்தவனும், துணிச்சல்மிக்கவனும், அழகனும், ஆடம்பரத்திலேயே வளர்க்கப்பட்டவனும், அனைத்து வகை இன்பங்களுக்குத் தகுந்தவனுமான அந்த விகர்ணன், இப்போது புழுதிக்கு மத்தியில் உறங்கிக் கொண்டிருக்கிறான்.(5) துணிக்கோல் கணைகளாலும் {கர்ணிகளாலும்}, முள்பதித்த கணைகளாலும் {நாராசங்களாலும்}, நாளீங்களாலும் அவனது முக்கியப் பகுதிகள் அனைத்தும் துளைக்கப்பட்டிருந்தாலும், அந்தச் சிறந்த பாரதக் குலத்தவனின் அழகு அவனைக் கைவிடவில்லை.(6)

எதிரிகளின் பெருங்கூட்டத்தைக் கொல்பவனான என் மகன் துர்முகன், சபதத்தை நிறைவேற்றுபவனான வீரப் பீமசேனனால் கொல்லப்பட்டு, எதிரியை நோக்கிய முகத்துடன் அதோ உறங்கிக் கொண்டிருக்கிறான்.(7) ஓ! கிருஷ்ணா, ஓ! குழந்தாய், இரைதேடும் விலங்குகளால் அவனது பாதிமுகம் உண்ணப்பட்டிருந்தாலும், ஏழாம் நாள் வளர்பிறைச் சந்திரனைப் போல அஃது அழகாகத் தெரிகிறது.(8) ஓ! கிருஷ்ணா, நான் சொன்னது போலவே இருக்கும் என் வீர மகனின் {துர்முகனின்} முகத்தைப் பார். அந்த என் மகன் எதிரிகளால் கொல்லப்பட்டு, எவ்வாறு இப்படிப் புழுதியை உண்ணும்படி செய்யப்படலாம்?(9) ஓ! இனியவனே, ஓ! தேவலோகத்தை வெல்பவனே, எவன் முன்னிலையில் எந்த எதிரியாலும் நிற்க முடியாதோ, அந்தத் துர்முகன் எவ்வாறு எதிரிகளால் கொல்லப்படலாம்?(10)

ஓ! மதுசூதனா, வில்லாளிகள் அனைவருக்கும் உதாரண வீரனும், திருதராஷ்டிரரின் மற்றொரு மகனுமான சித்திரசேனன், இதோ கொல்லப்பட்டுத் தரையில் கிடப்பதைப் பார்.(11) மலர்களாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட அவனது அழகிய வடிவத்தைச் சுற்றிலும், துயரத்தால் பீடிக்கப்பட்டு, பரிதாபகரமாக அழுது கொண்டு, இரைதேடும் விலங்குகளுடன் இப்போது அமர்ந்திருக்கும் அந்த இளம்பெண்களைப் பார்.(12) ஓ! கிருஷ்ணா, அந்தப் பெண்கள் வெளியிடும் உரத்தத் துன்ப ஓலங்களும், இரை தேடும் விலங்குகளின் இரைச்சலும், முழக்கங்களும் எனக்கு மிக ஆச்சரியமானவையாகத் தெரிகின்றன.(13)

ஓ! மாதவா, இளமை நிறைந்தவனும், அழகனும், எப்போதும் மிக அழகிய பெண்களால் கவனித்துக் கொள்ளப்பட்டவனுமான என் மகன் விவிம்சதி, புழுதிக் கறையுடன் அதோ உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்.(14) அவனது கவசம் கணைகளால் துளைக்கப்பட்டிருக்கிறது. பேரிடருக்கு மத்தியில் கொல்லப்பட்ட அந்த வீர விவிம்சதியை, ஐயோ, இப்போது கழுகுகள் சூழ்ந்து {அவனை உண்பதற்காகக்} காத்திருக்கின்றன.(15) போரில் பாண்டவப் படையணிக்குள் ஊடுருவிய அந்த வீரன், பெருமைக்குரிய க்ஷத்திரியனின் படுக்கையில் இப்போது கிடக்கிறான்.(16) ஓ! கிருஷ்ணா, சிறந்த மூக்காலும், அழகிய புருவங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, சந்திரனுக்கு ஒப்பாக, புன்னகையுடனும், பேரழகுடனும் கூடிய அவனது {விவிம்சதியின்} முகத்தைப் பார்.(17) கந்தர்வனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தெய்வீக மங்கையரைப் போல முன்பெல்லாம், பெரும் எண்ணிக்கையிலான மிக அழகிய பெண்கள் அவனுக்காகக் காத்திருப்பார்கள்.(18)

எதிரிகளைக் கொல்லும் வீரனும், சபைகளின் ரத்தினமும், தடுக்கப்பட முடியாத போர்வீரனும், எதிரிகளைத் தடுப்பவனுமான என் மகன் துஸ்ஸஹனை எவரால் தாங்கிக் கொள்ள முடியும்?(19) கணைகளால் மறைக்கப்பட்டிருக்கும் துஸ்ஸஹனின் உடலானது, மலர்ந்திருக்கும் கர்ணீகரங்களால் {கோங்கு மரங்களால்} நிறைந்திருக்கும் ஒரு மலையைப் போலப் பிரகாசமாகத் தெரிகிறது.(20) தங்க மாலையுடனும், பிரகாசமான கவசத்துடனும் கூடிய துஸ்ஸஹன், உயிரையிழந்திருந்தாலும், ஒரு வெண்மலையையோ, நெருப்பையோ போன்று பிரகாசமாகத் தெரிகிறான்” என்றாள் {காந்தாரி}.(21)

பரிதாபமாக அழுத உத்தரை! – ஸ்திரீ பர்வம் பகுதி – 20-உத்தரை அழுதுகொண்டிருப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; அபிமன்யுவின் பெருமைகளைச் சொல்லி அழுத உத்தரை; உத்தரையை இழுத்துச் சென்ற மத்ஸ்யக் குலப் பெண்கள்; விராடன் இறந்து கிடப்பதைக் கண்டு அந்தப் பெண்களும் பெருந்துக்கத்தால் பீடிக்கப்படுவது; அபிமன்யுவைப் போன்றே மேலும் பல இளைஞர்கள் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கிருஷ்ணனிடம் சொன்ன காந்தாரி…

காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “ஓ! கேசவா {கிருஷ்ணா}, “எவன் அவனது தந்தையையும் {அர்ஜுனனையும்}, உன்னையும் விட வலிமையிலும், துணிவிலும் ஒன்றரை மடங்கு மேம்பட்டவனாகக் கருதப்பட்டானோ, எவன் செருக்குமிக்கதும், சீற்றமிக்கதுமான ஒரு சிங்கத்துக்கு ஒப்பானவனாக இருந்தானோ,(1) எவன் எந்தவொரு தொண்டனுமில்லாமல், தனியொருவனாக ஊடுருவப்பட முடியாத எனது மகனின் {துரியோதனனின்} வியூகத்தை ஊடுருவினானோ, எவன் பலருக்குக் காலனாகத் தன்னை நிரூபித்துக் கொண்டானோ, ஐயோ, அவன் {அந்த அபிமன்யு} இப்போது மரணத்திற்கு அடிபணிந்து இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறான்.(2) ஓ! கிருஷ்ணா, அளவிலா சக்தி கொண்ட வீரனும், அர்ஜுனனின் மகனுமான அபிமன்யு இறந்த பிறகும்கூட அவனது ஒளி மங்காமல் இருப்பதை நான் காண்கிறேன்.(3) அங்கே விராடனின் மகளும், காண்டீவதாரியின் மருமகளும், களங்கமற்ற அழகுடையவளுமான அந்தப் பெண் {உத்தரை}, தன் வீரக் கணவனைக் கண்டு, துயரத்தில் மூழ்கி புலம்பிக் கொண்டிருக்கிறாள்.(4)

ஓ! கிருஷ்ணா, விராடனின் மகளான அந்த {அபிமன்யுவின்} இளம் மனைவி, தன் தலைவனை அணுகி, அவனைத் தன் கரங்களால் மென்மையாகத் தடவிக் கொண்டிருக்கிறாள்.(5) உயர்ந்த நுண்ணறிவையும், பெரும் அழகையும் கொண்ட அந்தப் பெண், முன்பெல்லாம் தேனூட்டப்பட்ட மதுவால் {மத்வீகமது} வெறியூட்டப்பட்டு, வெட்கத்துடன் தன் தலைவனைத் தழுவிக் கொண்டு, முற்றாக மலர்ந்த தாமரைக்கு ஒப்பானதும், சங்கு போன்று மூன்று கோடுகளுடன் கூடிய கழுத்தால் தாங்கிக் கொள்ளப்பட்டதுமான சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} முகத்தில் முத்தமிடுவாள்[1].(6,7) ஓ! வீரா, தன் தலைவனின் கவசத்தைக் கழற்றும் அந்தக் காரிகை {உத்தரை}, தன் துணைவனின் குருதிதோய்ந்த உடலை இப்போது வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.(8)ஓ! கிருஷ்ணா, அந்தப் பெண் {உத்தரை}, தன் தலைவனைக் கண்டு, {உன்னை நோக்கி} உன்னிடம், “ஓ! தாமரைக் கண்ணா, உமக்கு ஒப்பான கண்களைக் கொண்ட இந்த வீரர் கொல்லப்பட்டார்.(9) ஓ! பாவமற்றவரே, வலிமையிலும், சக்தியிலும், ஆற்றலிலும் இவர் உமக்கு இணையானவராக இருந்தார். அழகிலும் இவர் உமக்கு ஒப்பானவரே. இருப்பினும் எதிரியால் கொல்லப்பட்டு வெறுந்தரையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்” என்கிறாள்.(10) பிறகு தன் தலைவனிடம் {அபிமன்யுவிடம்} பேசும் அந்தக் காரிகை, “அனைத்து ஆடம்பரங்களுடனும் நீர் வளர்க்கப்பட்டீர். ரங்கு மானின் மென்மையான தோலிலேயே நீர் உறங்குவீர். ஐயோ, இப்படி இன்று வெறுந்தரையில் கிடக்கும் உமது உடல் வலியை உணரவில்லையா?(11) தங்க அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், யானைகளின் துதிக்கைகள் இரண்டுக்கு ஒப்பானவையும், வில்லை அடிக்கடி பயன்படுத்துவதால் கடினமடைந்த தோலால் மூடப்பட்டிருப்பவையுமான உமது பருத்த கரங்களை விரித்துக் கொண்டு, ஓ! தலைவா, பயிற்சிக்கூடத்தில் அதிகப் பயிற்சியினால் களைப்படைந்தவரைப் போலவே அமைதியாக உறங்குகிறீர். ஐயோ, இவ்வாறு அழுது கொண்டிருக்கும் என்னிடம் நீர் ஏன் பேசாமலிருக்கிறீர்?(12,13) நான் உமக்கு எக்குற்றமும் இழைத்ததாக எனக்கு நினைவில்லையே. பிறகு ஏன் என்னிடம் நீர் பேசாமலிருக்கிறீர்? முன்பெல்லாம், தொலைவிலேயே என்னைக் கண்டாலும் பேசுவீரே.(14) ஓ! மதிப்புக்குரிய ஐயா, பெரும் மதிப்பிற்குரிய சுபத்திரையையும், தேவர்களுக்கு ஒப்பான இந்த உமது தந்தைமாரையும், துயரால் அழுது கொண்டிருக்கும் பாவியான என்னையும் விட்டுவிட்டு நீர் எங்கே செல்லப் போகிறீர்?” என்று சொல்லி அழுகிறாள்.(15)

ஓ! கிருஷ்ணா, அந்த அழகிய காரிகை {உத்தரை}, குருதி தோய்ந்த தன் தலைவனின் குழல்களைத் திரட்டி, அவனது தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, அவன் உயிரோடிருப்பதைப் போல அவனிடம் {பின்வருமாறு} பேசிக் கொண்டிருக்கிறாள்.(16) அவள் {உத்தரை அபிமன்யுவிடம்}, “வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தங்கை {சுபத்திரை} மகனும், காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} மகனுமான உம்மை, போருக்கு மத்தியில் அந்தப் பெரும் தேர்வீரர்களால் எவ்வாறு கொல்ல முடிந்தது?(17) ஐயோ, யாவரால் நீர் உயிரை இழக்கச் செய்யப்பட்டீரோ, தீச்செயல்களைச் செய்பவர்களான அந்தக் கிருபர், கர்ணர், ஜெயத்ரதர், துரோணர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்} உள்ளிட்ட போர்வீரர்களுக்கு ஐயோ.(18) இளம் வயதுடைய போர்வீரரான உம்மைச் சூழ்ந்து கொண்டு, என்னைத் துன்புறுத்த உம்மைக் கொன்ற அந்த நேரத்தில், அந்தப் பெரும் தேர்வீரர்களின் மனநிலை எவ்வாறு இருந்தது? {அவர்களுடைய மனம் எவ்வாறு உம்மைக் கொல்லத் துணிந்தது}(19) ஓ! வீரரே, பல பாதுகாவலர்களைக் கொண்ட நீர், பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆதரவற்றவராக எவ்வாறு கொல்லப்பட்டீர்?(20)

ஓ! வீரரே {அபிமன்யுவே}, ஒன்று சேர்ந்த பலரால் போரில் நீர் கொல்லப்பட்டதைக் கண்டும், மனிதர்களில் புலியும், பாண்டுவின் மகனுமான உமது தந்தையால் {அர்ஜுனரால்} எவ்வாறு உயிரின் சுமையைத் தாங்கிக் கொள்ள முடிகிறது?(21) ஓ! தாமரைக் கண்ணைக் கொண்டவரே, உம்மை இழந்த பிறகு, பரந்த நாட்டை அடைந்ததோ, எதிரிகளை வீழ்த்தியதோ பார்த்தர்களுக்கு எந்த மகிழ்ச்சியையும் தராது.(22) ஆயுதங்களைப் பயன்படுத்தி அடையப்படும் அருள் உலகங்களுக்கு, நானும் அறம் மற்றும் தற்புலனடக்கப் பயிற்சிகளால் வெகு விரைவில் வந்துவிடுவேன்.(23) போரில் கொல்லப்பட்ட உம்மைக் கண்ட பிறகும், பாவியான நான் இன்னும் மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதால், நேரம் வராதபோது சாக முடியாது என்பது தெரிகிறது.(24) ஓ! மனிதர்களில் புலியே, பித்ருக்களின் உலகத்திற்குச் சென்று, புன்னகையுடன் கலந்த இனிய வார்த்தைகளை என்னிடம் போல வேறு யாரிடம் இப்போது நீர் பேசுவீர்?(25)

உமது பேரழகாலும், புன்னகை கலந்த உமது மென்மையான வார்த்தைகளாலும் சொர்க்கத்தின் அப்சரஸ்களுடைய இதயங்களை நீர் கலங்கடிப்பீர் என்பதில் ஐயமில்லை.(26) ஓ! சுபத்திரையின் மகனே, அறச்செயல்கள் புரிந்தோருக்காக ஒதுக்கப்படும் உலகங்களை அடைந்து, அந்த அப்சரஸ்களுடன் இப்போது நீர் கலக்கப் போகிறீர். அவர்களுடன் விளையாடும்போது, நான் உமக்குச் செய்த நற்செயல்களைச் சிற்சில நேரங்களிலாவது நினைத்துப் பார்ப்பீராக.(27) ஓ! வீரரே {அபிமன்யுவே}, {திருமணம் செய்து} ஏழாம் மாதத்தில் நீர் உயிரை இழந்திருப்பதால், இவ்வுலகத்தில் என்னுடனான உமது இணைப்பு ஆறு மாதங்களுக்கே[2] விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது” {என உத்தரை அபிமன்யுவோடு பேசிக் கொண்டிருக்கிறாள்}.(28)ஓ! கிருஷ்ணா, தன் நோக்கங்கள் அனைத்தும் கலங்கடிக்கப்பட்டு இவ்வாறு புலம்பிக்கொண்டிருப்பவளும், துன்பத்தால் பீடிக்கப்பட்டிருப்பவளுமான உத்தரையை மத்ஸ்ய அரசக் குடும்பத்தின் பெண்கள் இழுத்துச் செல்கின்றனர்.(29) உத்தரையை இழுத்துச் செல்லும் அந்தப் பெண்களும், கொல்லப்பட்ட விராடனைக் கண்டு அந்தப் பெண்ணைவிட {உத்தரையைவிட} அதிகம் பீடிக்கப்பட்டு உரத்த ஓலமிட்டு அழுது கொண்டிருக்கின்றனர்.(30) துரோணரின் கணைகளாலும், ஆயுதங்களாலும் சிதைக்கப்பட்டு, குருதியால் மறைக்கப்பட்டிருந்த விராடன், அலறும் கழுகுகள், ஊளையிடும் நரிகள் மற்றும் கரையும் காகங்களால் சூழப்பட்டுத் தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறான்.(31) கரிய கண்களைக் கொண்ட அந்த மங்கையர், இன்பமாக அலறிக் கொண்டிருந்த ஊனுண்ணும் பறவைகள் அமர்ந்திருந்ததும், நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்ததுமான மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} உடலைப் புரட்ட முயற்சிக்கின்றனர். துயரால் மிகவும் பீடிக்கப்பட்டுப் பலவீனமடைந்திருக்கும் அவர்களால் தாங்கள் நினைத்ததைச் செய்ய முடியவில்லை {விராடனின் உடலைப் புரட்ட முடியவில்லை}.(32) சூரியனால் எரிக்கப்பட்டு, முயற்சியால் களைப்படைந்திருக்கும் அவர்களது முகங்கள் நிறமற்றவையாக மங்கியிருக்கின்றன.(33) ஓ! மாதவா, அபிமன்யுவைத் தவிர்த்து, {விராட இளவரசனான} உத்தரன், காம்போஜ இளவரசனான சுதக்ஷிணன், அழகன் லக்ஷ்மணன் ஆகிய மற்ற பிள்ளைகள் அனைவரும் கூடப் போர்க்களத்தில் {இவ்வாறே} கிடப்பதைப் பார்” என்றாள் {காந்தாரி}.(34)

ஊனுண்ணும் உயிரினங்களால் உண்ணப்பட்ட கர்ணனின் உடல்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 21-கர்ணனின் உடலைக் கண்டு, கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; கர்ணனின் மனைவிகளான விருஷசேனனின் தாயும், சுஷேனனின் தாயும் வந்து அழுதது; விலங்குகளால் உண்ணப்பட்டு எஞ்சியிருந்த கர்ணனின் உடலைக் கண்ட அவனது மனைவிகள் …

காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “பெரும் வில்லாளியும், வலிமைமிக்கவனுமான கர்ணன் அங்கே தரையில் கிடக்கிறான். போரில் அவன் சுடர்மிக்க நெருப்பைப் போன்றவனாக இருந்தான். எனினும், அந்த நெருப்பு, பார்த்தனின் {அர்ஜுனனின்} சக்தியால் அணைக்கப்பட்டது.(1) பல அதிரதர்களைக் கொன்றவனான அந்த விகர்த்தனன் மகன் கர்ணன், குருதியில் நனைந்தபடி, வெறுந்தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடப்பதைப் பார்.(2) கோபம் நிறைந்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அவன், பெரும் வில்லாளியாகவும், வலிமைமிக்கத் தேர்வீரனாகவும் இருந்தான். அவன், காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} போரில் கொல்லப்பட்டு, இப்போது தரையில் உறங்கிக் கொண்டிருக்கிறான்.(3) வலிமைமிக்கத் தேர்வீரர்களான என் மகன்கள், யானை மந்தையானது தங்கள் தலைவனை முன்னணியில் கொண்டு போரிடுவதைப் போலப் பாண்டவர்களிடம் கொண்ட அச்சத்தினால், கர்ணனைத் தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்டு போரிட்டனர்.(4) ஐயோ, சிங்கத்தால் கொல்லப்பட்ட ஒரு புலியைப் போலவோ, மதங்கொண்ட யானையால் கொல்லப்பட்ட மற்றொரு யானையைப் போலவோ அந்தப் போர்வீரன் {கர்ணன்}, சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டிருக்கிறான்.(5)

ஓ! மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, கலைந்த கேசத்துடன், உரத்தத் துன்ப ஓலத்துடனும், ஒன்றுகூடியிருப்பவர்களான அந்தப் போர்வீரனின் மனைவியர், வீழ்ந்துவிட்ட அந்த வீரனைச் சுற்றிலும் அமர்ந்திருக்கின்றனர்.(6) அந்தப் போர்வீரனைக் குறித்த எண்ணங்களால் உண்டான கவலையில் நிறைந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்கு, {கர்ணன் மீது கொண்ட அச்சத்தால்} பதிமூன்று ஆண்டுகளாகக் கண்சிமிட்டும் நேர உறக்கமும் கிட்டவில்லை.(7) போரில் பகைவர்களால் தடுக்கப்பட முடியாதவனும், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவனுமான மகவத்தை {இந்திரனைப்} போலவே, கர்ணனும், அண்ட முடிவில் கடுந்தழல்களுடன் அனைத்தையும் எரிக்கும் நெருப்பைப் போன்றவனாகவும், அசையாமல் நிற்கும் இமயத்தைப் போன்றவனாகவும் இருந்தான்.(8) ஓ! மாதவா {கிருஷ்ணா}, அந்த வீரனே திருதராஷ்டிரர் மகனின் பாதுகாவலனாகவும் இருந்தான். ஐயோ, காற்றால் வீழ்த்தப்பட்ட மரத்தைப் போலவே அவன் இப்போது உயிரையிழந்து வெறுந்தரையில் கிடக்கிறான்.(9)

கர்ணனின் மனைவியான, விருஷசேனனின் தாய், பரிதாபகரமாக அழுது புலம்பி தரையில் விழுவதைப் பார்.(10) அவள் இப்போது, “உனது ஆசானின் {பரசுராமரின்} சாபம் உம்மைப் பின்தொடர்ந்தது என்பதில் ஐயமில்லை. உமது தேரின் சக்கரம் பூமியால் விழுங்கப்பட்டபோது, கொடூரனான தனஞ்சயன் {அர்ஜுனன்} உமது தலையை ஒரு கணையால் அறுத்துவிட்டான்.(11) ஐயோ, வீரத்திற்கும் திறனுக்கும் ஐயோ” என்று சொல்கிறாள்.

சுஷேனனின் தாயான {மற்றொரு} மங்கை, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், துணிச்சல்மிக்கவனுமான கர்ணன், இடுப்பில் சுற்றிய தங்கக் கச்சையுடன் தரையில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைக் கண்டு மிகவும் பீடிக்கப்பட்டவளாக, துன்பத்தால் கதறியபடியே, தன் உணர்வுகளை இழந்து கீழே விழுகிறாள்.(12)

ஊனுண்ணும் உயிரினங்கள் அந்தச் சிறப்புமிக்க வீரனின் {கர்ணனின்} உடலை உண்டு, அதை {அவ்வுடலை} மிகச் சிறிய அளவாகக் குறைத்தன[1]. தேய்பிறையின் பதினாலாம் இரவில் வரும் நிலவைப் போன்ற அந்தக் காட்சி மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. தன் மகனின் {சுஷேனின்} மரணத்தால் துயரில் எரிந்து கொண்டிருந்த அவள், தன் தலைவனின் {கர்ணனின்} அருகில் வந்து அவனது முகத்தை முகர்கிறாள்” என்றாள் {காந்தாரி}.(14)

காட்டுக்கு இழுத்துச் செல்லப்பட்ட ஜெயத்ரதனின் உடல்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 22-அவந்தியின் மன்னன் மற்றும் பிரதீபனின் மகனான பாஹ்லீகர் ஆகியோர் இறந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; ஜெயத்ரதன் பாண்டவர்களால் மன்னிக்கப்பட்டதையும், பிறகு அவர்களுடைய மகனைக் கொன்றதால் அவனை மன்னிக்காததையும் சொன்னது; துச்சலையில் நிலையை எடுத்துரைத்த காந்தாரி…

காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “பீமசேனனால் கொல்லப்பட்டு, அவந்தியின் தலைவன் இங்கே கிடப்பதைப் பார். கழுகுகள், நரிகள் மற்றும் காகங்கள் அந்த வீரனை உண்கின்றன. அவன் பல நண்பர்களைக் கொண்டவனென்றாலும் இப்போதோ முற்றிலும் நண்பர்களற்றவனாகக் கிடக்கிறான்.(1) ஓ! மதுசூதனா, எதிரிகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய அந்தப் போர்வீரன், இப்போது குருதியால் மறைக்கப்பட்டு வீரனின் படுக்கையில் கிடப்பதைப் பார்.(2) நரிகள், கங்கங்கள் மற்றும் பல்வேறு ஊனுண்ணும் பிற உயிரினங்களும் அவனை இப்போது இழுத்துக் கொண்டிருக்கின்றன. காலத்தால் கொண்டவரப்பட்ட மாறுபாடுகளைப் பார்.(3) உயிரோடிருக்கும்போது எதிரிகளைப் பயங்கரமாகக் கொல்பவனும், இப்போது வீரனின் படுக்கையில் கிடப்பவனுமான அவனைச் சுற்றிலும் அவனது மனைவியர் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து கொண்டு துயருடன் அழுதுகொண்டிருக்கின்றனர்.(4)

பிரதீபரின் மகனும், பெரும் சக்தி கொண்டவரும், வலிமைமிக்க வில்லாளியுமான பாஹ்லீகர், ஓர் அகன்ற தலைக் கணையால் கொல்லப்பட்டு, உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு புலியைப் போல இப்போது தரையில் கிடக்கிறார்.(5) உயிரை இழந்திருந்தாலும், அவரது முகத்தின் நிறமானது, வளர்பிறையின் பதினைந்தாவது நாளில் முழுமையானதாக எழும் சந்திரனைப் போலவே இன்னும் மிகப் பிரகாசமாக இருக்கிறது.(6)

தன் மகனின் மரணம் குறித்த துயரத்தால் எரிந்தும், தன் நோன்பை நிறைவேற்ற விரும்பியும், அந்த இந்திரனின் மகன் (அர்ஜுனன்}, அங்கே அந்தப் பிருஹத்க்ஷத்திரனின் மகனை {ஜெயத்ரதனைக்} கொன்றான்.(7) சிறப்புமிக்கத் துரோணரால் பாதுகாக்கப்பட்ட ஜெயத்ரதன், தன் சபதத்தை நிறைவேற்ற விரும்பிய பார்த்தனால் {அர்ஜுனனால்}, பதினோரு அக்ஷௌஹிணிகளின் துருப்புகளை ஊடுருவிவந்து கொல்லப்பட்டான்.(8) ஓ! ஜனார்த்தனா, மங்கலமற்ற கழுகுகள், செருக்கும் சக்தியும் நிறைந்தவனும், சிந்து-சௌவீரர்களின் தலைவனுமான ஜெயத்ரதனை உண்கின்றன.(9) ஓ! அச்யுதா, அர்ப்பணிப்புமிக்க அவனது மனைவிகள் காக்க முயன்றாலும், ஊனுண்ணும் உயிரினங்கள் அருகில் இருக்கும் காட்டுக்கு அவனது உடலை இழுத்துச் செல்கின்றன.(10) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், சிந்துக்கள் மற்றும் சௌரவீரர்களின் தலைவனுமான அவனது {ஜெயத்ரதனின்} காம்போஜ மற்றும், யவன மனைவியர், (அந்தக் காட்டு விலங்குகளிடம் இருந்து) அவனைப் பாதுகாக்கின்றனர்.(11)

ஓ! ஜனார்த்தனா, கேகயர்கள் துணையுடன் அவன் {ஜெயத்ரதன்} திரௌபதியை அபகரிக்க முயற்சித்த போதே அவன் பாண்டவர்களால் கொல்லத்தக்கவனானான்.(12) எனினும், துச்சலையின் மீது கொண்ட மதிப்பால் அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் அவனை {ஜெயத்ரதனை} விடுவித்தனர். ஓ! கிருஷ்ணா, மீண்டும் துச்சலையின் மீது அதே மதிப்பை ஏன் அவர்கள் காட்டவில்லை?(13) இளம் வயதையுடைந்த அந்த என் மகள் {துச்சலை} இப்போது அழுது கொண்டிருக்கிறாள். அவள், தன் கரங்களால் தன் உடலை அடித்துக் கொண்டு, பாண்டவர்களை நிந்தித்துக் கொண்டிருக்கிறாள்[1].(14) ஓ! கிருஷ்ணா, இளம் வயதையுடைய என் மகள் {துச்சலை} விதவையாகவும், என் மருமகள்கள் அனைவரும் தலைவர்களற்றவர்களாகவும் செய்யப்பட்டதைவிட வேறு என்ன பெரிய துயரம் எனக்கு இருக்க முடியும்?(15)ஐயோ, ஐயோ, என் மகள் துச்சலை, துயரம் மற்றும் அச்சமனைத்தையும் கைவிட்டு, தன் கணவனின் தலையைத் தேடி அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்.(16) தங்கள் மகனை {அபிமன்யுவைக்} காக்க விரும்பிய பாண்டவர்கள் அனைவரையும் எவன் தடுத்து நிறுத்தினானோ, எவன் ஒரு பரந்த படையைக் கொல்லும் காரணமாக அமைந்தானோ, அவன் {ஜெயத்ரதன்}, இறுதியாக மரணத்திற்கு அடிபணிந்தான்.(17) ஐயோ, சந்திரனைப் போன்ற அழகிய முகங்களைக் கொண்ட அவனது மனைவியர், மதங்கொண்ட யானைக்கு ஒப்பானவனான அந்தத் தடுக்கப்பட முடியாத வீரனைச் சுற்றிலும் அமர்ந்து, அழுதுகொன்றிருக்கின்றனர்” என்றாள் {காந்தாரி}.(18)

துரோணரின் பாதங்களை இழுத்துச் சென்ற நரிகள்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 23-சல்லியன், பகதத்தன், பீஷ்மர், துரோணர் ஆகியோர் வீழ்ந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; அவர்கள் ஒவ்வொருவரின் பெருமையையும் சொன்னது; துரோணர் ஈமச்சிதையிலிடப்பட்டு அவருக்கான இறுதிச்சடங்குகள் நடைபெறுவதைக் கிருஷ்ணனுக்குச் சொன்ன காந்தாரி …

காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “ஓ! ஐயா, நகுலனின் தாய்மாமனான சல்லியன், பக்திமானும், அறவோனுமான யுதிஷ்டிரனால் போரில் கொல்லப்பட்டு அங்கே கிடக்கிறான்.(1) ஓ! மனிதர்களில் காளையே, அவன் {சல்லியன்} எப்போதும் உனக்கு இணையானவன் என்று சொல்லி தற்பெருமை பேசிக் கொள்வான். அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} உயிரையிழந்து கிடக்கிறான்.(2) போரில் கர்ணனின் சாரதி நிலைய ஏற்றபோது அவன் {சல்லியன்}, பாண்டு மகன்களின் வெற்றிக்காகக் கர்ணனின் சக்தியைக் குறைக்க முயன்றான்.(3) ஐயோ, ஐயோ, சந்திரனைப் போன்று அழகானதும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களால் அலங்கரிக்கப்பட்டதுமான சல்லியனின் மென்மையான முகம், காகங்களால் உண்ணப்படுவதைப் பார்.(4) ஓ! கிருஷ்ணா, புடம்போட்ட தங்கத்தின் நிறத்தில் இருக்கும் அம்மன்னனின் {சல்லியனின்} நாவு, அவனது வாயிலிருந்து வெளியேறி, ஊனுண்ணும் பறவைகளால் உண்ணப்படுகிறது.(5)

மத்ர அரசக் குடும்பத்தின் மங்கையர், யுதிஷ்டிரனால் உயிரை இழக்கச் செய்யப்பட்டவனும், சபைகளின் ரத்தினமுமாமான அம்மன்னனின் {சல்லியனின்} உடலைச் சுற்றி அமர்ந்து கொண்டு துன்பத்தால் உரக்க ஓலமிட்டனர்.(6) அந்தப் பெண்கள், பருவகாலத்தில் இருக்கும் பெண்யானைக் கூட்டமானது, சகதியில் மூழ்கும் தங்கள் தலைவனைச் சுற்றி இருப்பதைப் போல வீழ்ந்துவிட்ட அந்த வீரனைச் சுற்றிலும் அமர்ந்திருக்கின்றனர்.(7,8) துணிச்சல்மிக்கவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், அந்தச் சல்லியன், கணைகளால் உடல் சிதைக்கப்பட்டு, வீரர்களுக்கான படுக்கையில் நீண்டு கிடக்கிறான்.(9)

பேராற்றலைக் கொண்டவனும், மலை நாட்டு ஆட்சியாளனும், யானை அங்குசம் தரிப்போர் அனைவரில் முதன்மையானவனுமான மன்னன் பகதத்தரும், உயிரை இழந்து அங்கே தரையில் கிடக்கிறார்.(10) அவர் தலையில் அணிந்திருக்கும் தங்கமாலை இன்னும் பிரகாசமாக இருப்பதைப் பார். இரைதேடும் விலங்குகளால் அவனது உடல் உண்ணப்பட்டாலும், அந்த மாலையானது இன்னும் அவரது தலையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.(11) இந்த மன்னனுக்கும் {பகதத்தனுக்கும்} பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த போரானது, சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, அசுரன் விருத்திரனுக்கும் இடையில் நடந்ததைப் போல மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மிகக் கடுமையானதாக இருந்தது.(12) அந்த வலிய கரத்தோன், பிருதையின் மகனான தனஞ்சயனுடன் போரிட்டு, அவனைப் பெருஞ்சிக்கலில் ஆழ்த்தி, இறுதியில் தன் எதிராளியால் கொல்லப்பட்டார்.(13)

வீரத்திலும், சக்தியிலும் இவ்வுலகத்தில் ஒப்பில்லாதவரும், போரில் பயங்கரச் சாதனைகளை அடைந்தவருமான பீஷ்மர் உயிரை போகக் கிடக்கிறார்.(14) ஓ! கிருஷ்ணா, சூரியப் பிரகாசம் கொண்ட அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, யுகத்தின் முடிவில் ஆகாயத்தில் இருந்து விழுந்த சூரியனைப் போலப் பூமியில் நீண்டு கிடப்பதைப் பார்.(15) ஓ! கேசவா, போரில் தன் ஆயுதங்களின் நெருப்பால் எதிரிகளை எரித்தவரும், வீரமிக்கவரும், மனிதர்களில் சூரியனுமான அந்த வீரர், உண்மையான சூரியனைப் போலவே மாலையில் மறைந்தார்.(16) ஓ! கிருஷ்ணா, கடமையறிவில் {தன் பெரியப்பாவான} தேவாபிக்கு இணையான அந்த வீரர் {பீஷ்மர்}, வீரர்களுக்குத் தகுந்த கணைகளின் படுக்கையில் இப்போது கிடப்பதைப் பார்.(17) நாணற்கட்டில் கிடக்கும் தெய்வீக ஸ்கந்தனைப் போல, முள்பதித்த மற்றும் முள் பதிக்கப்படாத கணைகளாலான {கர்ணிகள் மற்றும் நாளீகங்களாலான} அவரது சிறந்த படுக்கையில் நீண்டு கிடக்கிறார்.(18) உண்மையில், கங்கையின் மைந்தன், தன் படுக்கைக்கான அன்பளிப்பாகக் காண்டீவதாரியால் கொடுக்கப்பட்டதும், மூன்று கணைகளாலானதுமான சிறந்த தலையணையில் தன் தலையைச் சாய்த்துக் கிடக்கிறார்.(19) தன் தந்தையின் {சந்தனுவின்} ஆணைகளுக்குக் கீழ்ப்படிவதற்காக {தன் தந்தையின் விருப்பம் நிறைவேறுவதற்காக} இந்தச் சிறந்தவர் தன் உயிர்நீரை மேலெழுப்பினார். ஓ! மாதவா, போரில் ஒப்பற்றவரான அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} இதோ இங்கே கிடக்கிறார்.(20)

அற ஆன்மா கொண்டவரும், ஈருலகங்கள் சம்பந்தமான தன் அறிவின் துணையுடன் அனைத்துக் கடமைகளையும் அறிந்தவருமான அந்த வீரர், இறப்புக்குரிய மனிதராக இருந்தும், இறவாதவரைப் போலத் தன் உயிரை இன்னும் பிடித்துக் கொண்டிருக்கிறார்.(21) கணைகளால் தாக்கப்பட்ட சந்தனுவின் மகன் {பீஷ்மர்} கிடக்கும் இன்று, கல்வி, ஆற்றல் மற்றும் போரில் அடையத்தக்க பெருஞ்சாதனைகளைக் கொண்ட வேறு எந்த மனிதனும் இவ்வுலகில் இல்லை என்று தெரிகிறது.(22) பேச்சில் உண்மையுள்ளவராக இருந்த இந்த அறமும், நீதியும் மிக்க வீரர் {பீஷ்மர்}, பாண்டவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டதும், தன் மரணத்திற்கான வழியைத் தானே சொன்னார்.(23) ஐயோ, அருகிக் கிடந்த குரு பரம்பரையை எவர் மீட்டாரோ, பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கவர், குருக்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு இவ்வுலகைவிட்டுச் செல்கிறார்.(24) ஓ! மாதவா, தேவனுக்கு ஒப்பானவரும், மனிதர்களில் காளையுமான தேவவிரதர் {பீஷ்மர்} சொர்க்கத்திற்குச் சென்ற பிறகு, குருக்கள் அறம் குறித்தும், கடமை {நீதிகள்} குறித்தும் யாரிடம் கேட்பார்கள்?(25)

பிராமணர்களில் முதன்மையானவரும், அர்ஜுனன், சாத்யகி மற்றும் குருக்களின் ஆசானுமான துரோணர், தரையில் கிடப்பதைப் பார்.(26) ஓ! மாதவா {கிருஷ்ணா}, அந்தத் துரோணர், பெருஞ்சக்தி கொண்டவராகவும், தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போன்றோ, பிருகு குலத்தின் சுக்கிரனைப் போன்றோ நால்வகை ஆயுதங்களையும் அறிந்தவராக இருந்தார்.(27) அவரது அருளாலேயே, பாண்டுவின் மகனான பீபத்சு {அர்ஜுனன்} மிகக்கடுஞ்சாதனைகளை அடைந்தான். {அப்படிப்பட்ட} அவர் உயிரை இழந்து இப்போது தரையில் கிடக்கிறார். (இறுதியில்) ஆயுதங்கள் அவரது உத்தரவுக்கு ஏற்ப இருப்புக்கு வர மறுத்தன.(28) அவரைத் தலைமையில் கொண்டே கௌரவர்கள் பாண்டவர்களை அறைகூவியழைத்தனர். ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான அவர், இறுதியில் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டார்.(29) அனைத்துத் திசைகளிலும் தன் எதிரிகளை எரித்தபடியே போரில் அவர் திரிந்த போது, அவரது போக்கு காட்டுத்தீக்கு ஒப்பானதாக இருந்தது. ஐயோ, உயிரை இழந்த அவர் அணைந்த நெருப்பைப் போல இப்போது தரையில் கிடக்கிறார்.(30)

வில்லின் கைப்பிடி இன்னும் அவரது {துரோணரது} பிடியில் இருக்கிறது[1]. ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவரது விரல்கள் இன்னும் தோலுரைகளுடன் இருக்கின்றன. கொல்லப்பட்டாலும் அவர் இன்னும் உயிருடன் இருப்பவரைப் போலே இருக்கிறார்.(31) ஓ! கேசவா, நான்கு வேதங்களும், அனைத்து வகை ஆயுதங்களும் எவ்வாறு தலைவன் பிரஜாபதியைக் கைவிடவில்லையோ அவ்வாறே இந்த வீரரையும் கைவிடவில்லை.(32) துதிகள் அனைத்திற்கும் தகுந்தவையும், பாணர்கள் மற்றும் துதிபாடிகளால் உண்மையில் துதிக்கப்படுபவையும், சீடர்களால் வழிபடப்படுபவையுமான அவரது {துரோணரது} மங்கலப் பாதங்கள், இப்போது நரிகளால் இழுத்துச் செல்லப்படுகின்றன.(33) ஓ! மாதவா, துயரால் புலனுணர்வுகளை இழந்த கிருபி, துருபதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} கொல்லப்பட்ட துரோணரைத் துயரத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.(34) துயரால் பீடிக்கப்பட்டிருக்கும் அந்த மங்கை {கிருபி}, கலைந்த கேசத்துடன், தலையைத் தொங்கப் போட்டப்படி பூமியில் விழுவதைப் பார்.(35) தலையில் சடாமுடி தரித்தவர்களான பிரம்மச்சாரிகள் பலர், திருஷ்டத்யும்னனின் கணைகளால் ஊடுருவி பிளக்கப்பட்ட கவசத்துடன் கூடிய துரோணரின் உடலைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.(36)சிறப்புமிக்கவளும், மென்மையானவளுமான கிருபி, உற்சாகமற்றவளாக, துயரில் பீடிக்கப்பட்டவளாக, போரில் கொல்லப்பட்ட தன் தலைவனின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய முயல்கிறாள்.(37) சாமங்களை {சாமவேதத்தை} உரைப்பவர்கள், துரோணரின் உடலை ஈமச்சிதையில் நிறுத்தி, உரிய சடங்குகளுடன் நெருப்பை மூட்டி, (நன்கறியப்பட்ட) மூன்று சாமங்களைப் பாடிக் கொண்டிருக்கின்றனர்.(38) ஓ! மாதவா, தலையில் சடாமுடி தரித்திருக்கும் அந்தப் பிரம்மச்சாரிகள், அந்தப் பிராமணரின் {துரோணரின்} ஈமச்சிதையில் விற்கள், ஈட்டிகள், தேர்க்கூடுகள் ஆகியவற்றைக் குவிக்கின்றனர்.(39) பெருஞ்சக்திகொண்ட அந்த வீரர் {துரோணர்}, பல்வேறு வகைக் கணைகளைத் திரட்டிக் கொண்டு இருந்த அவற்றில் எரிக்கப்படுகிறார். உண்மையில் அவர்கள், சிதையில் அவரை அமர்த்தி, பாடவும், அழவும் செய்கின்றனர்.(40) வேறு சிலர், இத்தகு சூழ்நிலைகளில் உரைக்கப்படும் (நன்கறியப்பட்ட) மூன்று சாமங்களை உரைக்கின்றனர். நெருப்பில் நெருப்பாக அந்நெருப்பில் துரோணரை எரித்தவர்களும்,(41) மறுபிறப்பாள {பிராமண} வகையைச் சார்ந்தவர்களுமான அவரது {துரோணரது} சீடர்கள், அந்தச் சிதைக்கு இடப்புறமாக, கிருபியைத் தங்கள் தலைமையில் கொண்டு கங்கைக் கரையை நோக்கிச் செல்கின்றனர்[2]” என்றாள் {காந்தாரி}.(42)(துரோணரின் இறுதிச்சடங்கில் அஸ்வத்தாமன் பங்குபெறவில்லை என்பது இங்கே தெரிகிறது. பெண்ணான கிருபி, ஈமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்கிறாள்.)

சகுனியிடம் அச்சங்கொள்கிறேன்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 24-பூரிஸ்ரவஸ், சோமதத்தன் மற்றும் சகுனி ஆகியோர் இறந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; பூரிஸ்ரவஸின் தாய் மற்றும் அவனது மனைவியர் ஆகியோரின் அழுகையை விவரித்துச் சொன்னது; சகுனி இறந்தாலும், அவனைக் குறித்து அஞ்சுவதாகக் கிருஷ்ணனிடம் சொன்ன காந்தாரி …

காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “யுயுதானனால் {சாத்யகியால்} கொல்லப்பட்ட சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, பெரும் எண்ணிக்கையிலான பறவைகளால் கொத்திக் கிழிக்கப்படுவதைப் பார்.(1) ஓ! ஜனார்த்தனா, (அங்கே கிடக்கும்) சோமதத்தன், தன் மகனின் மரணத்தால் துயரில் எரிந்து பெரும் வில்லாளியான யுயுதானனை {சாத்யகியை} நிந்தித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.(2) களங்கமற்ற பெண்ணும், துயரில் மூழ்கிருப்பவளுமான பூரிஸ்ரவஸின் தாய், அங்கே தன் தலைவன் சோமதத்தனிடம்,(3) “ஓ! மன்னா, யுகமுடிவில் நேரும் காட்சிகளுக்கு ஒப்பான குருக்களின் நிர்மூலத்தையும், பாரதர்களுக்கு ஏற்பட்ட இந்தப் பேரழிவையும் நீர் காணாதது நற்பேற்றாலேயே.(4) கொடியில் வேள்விக்கம்பத்தை {யூபத்தைக்} கொண்டவனும், அனைவருக்கும் பெருங்கொடைகள் கொடுக்கப்பட்ட எண்ணற்ற வேள்விகளைச் செய்தவனுமான உமது வீர மகன் {பூரிஸ்ரவஸ்} போர்க்களத்தில் கொல்லப்படுவதை நீர் காணாததும் நற்பேற்றாலேயே.(5)

கடலுக்கு மத்தியில் நாரைக்கூட்டம் கதறுவதைப் போல, இந்தப் பேரழிவுக்கு மத்தியில் அச்சம்நிறைந்திருப்பவர்களான உமது மருமகள்கள் துயரத்துடன் கதறுவதை நீர் கேட்காததும் நற்பேற்றாலேயே.(6) ஒற்றையாடை உடுத்தியிருப்பவர்களும், கருகுழல்கள் கலைந்தவர்களும், கணவர்கள் மற்றும் மகன்களை இழந்தவர்களான உமது மருமகள்கள், அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(7) அர்ஜுனனால் வீழ்த்தப்பட்டுக் கரங்களை இழந்தவனும், உமது மகனுமான அந்த மனிதர்களில் புலி {பூரிஸ்ரவஸ்}, இரைதேடும் விலங்குகளால் இப்போது விழுங்கப்படுவதை நீர் காணாதது நற்பேற்றாலேயே.(8) போரில் கொல்லப்பட்ட உமது மகன் சலனையும், உயிரை இழந்த பூரிஸ்ரவஸையும், துயரில் மூழ்கி விதவைகளாகியிருக்கும் உமது மருமகள்களையும் இன்று நீர் காணாதது உமது நற்பேற்றாலேயே.(9) வேள்விக்கம்பத்தைத் தன் கொடிமரத்தில் கொண்டிருந்த அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரனின் தங்கக் குடை கிழிக்கப்பட்டு, அவனது தேர்த்தட்டில் நொறுக்கப்பட்டிருப்பதை நீர் காணாததும் நற்பேற்றாலேயே” என்கிறாள் {பூரிஸ்ரவஸின் தாய்}.(10)

பூரிஸ்ரவஸின் கருங்கண் மனைவியர், சாத்யகியால் கொல்லப்பட்ட தங்கள் தலைவனைச் சூழ்ந்து கொண்டு அங்கே பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.(11) ஓ! கேசவா {கிருஷ்ணா}, தங்கள் தலைவன் கொல்லப்பட்ட துயரால் பீடிக்கப்பட்டு, பயங்கரப் புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அம்மங்கையர், தரையை நோக்கிய முகங்களுடன் பூமியில் விழுந்து, மெதுவாக உன்னை அணுகுகின்றனர். அவர்கள்,(12) “ஐயோ, தூய செயல்பாடுகளைக் கொண்ட அர்ஜுனன், வேள்வி செய்வதில் அர்ப்பணிப்புள்ளவரான இந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர் {பூரிஸ்ரவஸ்} கவனமில்லாமல் இருந்தபோது, அவரது கரங்களைத் தாக்கி வீழ்த்தி இத்தகு நிந்திக்கத்தக்க செயலை ஏன் செய்தான்? ஐயோ, பிராய நோன்பை நோற்று அமர்ந்திருந்தவரும், தன்னடக்கம் கொண்டவருமான அந்த மனிதரின் உயிரை எடுத்ததன் மூலம் சாத்யகி இன்னும் அதிகப் பாவத்தைச் செய்திருக்கிறான்.(14) ஐயோ, ஓ! நேர்மையாளரே {அறவோனே}, நியாயமற்ற {அதர்மமான} முறையில் இரண்டு எதிரிகளால் கொல்லப்பட்டு, நீர் தரையில் கிடக்கிறீர்” என்கின்றனர். ஓ! மாதவா, பூரிஸ்ரவஸின் இரு மனைவியரும் இவ்வாறே துயரத்தால் உரக்க அழுகின்றனர்.(15)

அங்கே, கொடியிடை கொண்டோரான அந்தப் போர்வீரனின் மனைவியர், வெட்டப்பட்ட தன் தலைவனின் கரத்தைத் தங்கள் மடியில் வைத்துக் கொண்டு கடுமையாக அழுகின்றனர்.(16) அவர்களில் ஒருத்தி, “அழகிய பெண்களின் இடுப்புக்கச்சைக்குள் புகுந்து, பருத்த முலைகளைக் கசக்கி, தொப்பு, தொடைகள் மற்றும் இடைகளைத் தீண்டி, அவர்களால் உடுத்தப்படும் அரைக்கச்சின் முடிச்சுகளைத் தளர்த்தும் அந்தக் கரம் இதோ.(17) எதிரிகளைக் கொன்று, நண்பர்களின் அச்சத்தை அகற்றி, ஆயிரம் பசுக்களைக் கொடையளித்து, போரில் க்ஷத்திரியர்களை நிர்மூலமாக்கிய அந்தக் கரம் இதோ.(18) களங்கமில்லாச் செயல்களைச் செய்யும் அர்ஜுனன், வேறொருவருடன் போரிட்டுக் கவனமில்லாமல் இருந்த உமது கரத்தை, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வெட்டினான்.(19) ஓ! ஜனார்த்தனா, சபைகளுக்கு மத்தியில் பேசும்போது, அர்ஜுனனின் இந்தப் பெரும் சாதனையை எவ்வாறு நீ சொல்லப் போகிறாய்? அந்தக் கிரீடியே {அர்ஜுனனே} கூட என்ன சொல்லப் போகிறான்?” என்கிறாள்.(20) அந்தப் பெண்களில் முதன்மையானவள் {தன் புலம்பல்களை}, உன்னை இவ்வாறு நிந்தித்துவிட்டு, இறுதியாக நிறுத்திக் கொண்டாள். அந்தப் பெண்மணியின் சக்காளத்திகள், அவள் ஏதோ தங்கள் மருமகளைப் போல அவளுடன் சேர்ந்து பரிதாபகரமாக ஒப்பாரியிடுகின்றனர்.(21)

கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்டவனும், காந்தாரர்களின் தலைவனுமான வலிமைமிக்கச் சகுனி, சகோதரியின் மகனால் கொல்லப்படும் தாய்மாமனாக, சகாதேவனால் கொல்லப்பட்டு இதோ கிடக்கிறான்.(22) முன்பெல்லாம் தங்கக் கைப்பிடிகளைக் கொண்ட இரு விசிறிகளால் இவன் எப்போதும் விசிறப்படுவான். ஐயோ, இப்போது நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் அவன் {சகுனி}, பறவைகளின் சிறகடிப்பால் விசிறப்படுகிறான்.(23) இவன் {சகுனி} நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வடிவங்களை ஏற்பவனாவான். எனினும், பெரும் மாயசக்திகளைக் கொண்ட இவனது மாயைகள் அனைத்தும், பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} சக்தியால் எரிக்கப்பட்டுவிட்டன.(24) வஞ்சகத்தில் திறன்மிக்க அவன் {சகுனி}, தன் மாய சக்தியால் சபையில் யுதிஷ்டிரனை வென்று, பரந்த நாட்டை வென்றான். எனினும், இப்போது அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} சகுனியின் உயிர்மூச்சையே வென்றுவிட்டான்.(25)

ஓ! கிருஷ்ணா, பெரும் எண்ணிக்கையிலான பறவைகள் இப்போது சகுனியைச் சுற்றி அமர்ந்திருப்பதைப் பார். பகடையில் திறன் மிக்க இவன் {சகுனி}, ஐயோ, அத்திறனை என் மகன்களின் அழிவுக்காகவே அடைந்திருக்கிறான்.(26) என் பிள்ளைகளுக்கும், இந்தச் சகுனிக்கும், இவனைப் பின்தொடர்ந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் அழிவை உண்டாக்கிய பாண்டவர்களுடனான இந்தப் பகைமையெனும் நெருப்பு இவனாலேயே {இந்தச் சகுனியாலேயே} தூண்டப்பட்டது.(27) ஓ! பலமிக்கவனே, ஆயுதம் பயன்படுத்துவதன் மூலம் என் மகன்கள் அடைந்ததைப் போலவே, தீயவனாக இருப்பினும், ஆயுதங்களைப் பயன்படுத்தி {அழிந்ததால்} அருள் உலகங்கள் பலவற்றை இவனும் அடைந்துவிட்டான்.(28) ஓ! மதுசூதனா, இந்தக் கோணல்புத்திக்காரன் {சகுனி}, நம்பிக்கையுள்ளவர்களும், பாகுபாடற்றவர்களுமான என் பிள்ளைகளுக்குள், அங்கேயும் சச்சரவை உண்டாக்கி விடக்கூடாதே என்பதே என் அச்சமாக இருக்கிறது” என்றாள் {காந்தாரி}.(29)

கிருஷ்ணனைச் சபித்த காந்தாரி! – ஸ்திரீ பர்வம் பகுதி – 25- காம்போஜ மன்னன் சுதக்ஷிணன், கலிங்க மன்னன் சுருதாயுஷ், மகத மன்னன் ஜயத்சேனன், கோசல மன்னன் பிருஹத்பலன் திருஷ்டத்யும்னனின் மகன்கள், கேகேயச் சகோதரர்கள் ஐவர், பாஞ்சால மன்னன் துருபதன், சேதி நாட்டு மன்னன் திருஷ்டகேது, திருஷ்டகேதுவின் மகன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் இறந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; தன் மகன்கள் எரிக்கப்படப் போவதை நினைத்து மயக்கமடைந்து கீழே விழுந்தது; பேரழிவைத் தடுக்காமல் அலட்சியமாக இருந்ததற்காகக் கிருஷ்ணனைச் சபித்த காந்தாரி; சாபத்தை மயக்கப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட கிருஷ்ணன்…

காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “ஓ! மாதவா, காம்போஜ படுக்கைவிரிப்பில் சுகமாகக் கிடக்கத்தகுந்தவனும், காம்போஜர்களின் தடுக்கப்பட முடியாத ஆட்சியாளனும், காளையின் கழுத்தைக் கொண்டவனுமான இந்த வீரன் {காம்போஜ மன்னன் சுதக்ஷிணன்}, புழுதிக்கு மத்தியில் கிடப்பதைப் பார்.(1) பெரும் துயரில் பீடிக்கப்பட்டிருக்கும் அவனது மனைவி, முன்பு சந்தனக்குழம்பால் பூசப்பட்டதும், இப்போது குருதி படிந்திருப்பதுமான அவனது கரத்தைக் கண்டு அழுது கொண்டிருக்கிறாள்.(2) 

உண்மையில் அந்த அழகி, “அழகிய உள்ளங்கைகளாலும், அருள்நிறைந்த விரல்களாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பவையும், அணைக்கையில் ஒருபோதும் ஒரு கணமும் இன்பம் என்னைவிட்டு விலகாதபடி செய்தவையுமான இந்த உமது இரு கரங்களும், இப்போதும் இரு பரிகங்களுக்கு ஒப்பானவையாகவே இருக்கின்றன.(3) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {சுதஷிணரே}, உம்மை இழந்திருக்கும் நான் என்ன கதியை அடையப்போகிறேன்” என்று சொல்கிறாள். இனிய மெல்லிய குரலைக் கொண்ட அந்தக் காம்போஜ ராணி, உணர்ச்சிகளுடன் நடுங்கியவாறே ஆதரவற்றவளாக அழுது கொண்டிருக்கிறாள்.(4) அங்கே இருக்கும் அழகிய பெண்களின் கூட்டத்தைப் பார். தேவர்களால் அணியப்படும் மாலைகள் சூரியனுக்கு வெளிப்பட்டாலும் அழகாக இருப்பது போலத் துன்பத்தால் களைப்படைந்தாலும், வெப்பத்தால் வாட்டப்பட்டாலும் அவர்களது வடிவங்களின் அழகு குலையவில்லை.(5)

ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இரண்டு அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் வலிமைமிக்கக் கரங்களுடன் கூடிய கலிங்கர்களின் வீர ஆட்சியாளன் {சுருதாயுஷ்} தரையில் கிடப்பதைப் பார்.(6)

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, மகத ஆட்சியாளனான ஜயத்சேனனைச் சுற்றி நின்று அழும் அந்த மகதப் பெண்களைப் பார்.(7) அகன்ற விழிகளையும், இனிய குரலையும் கொண்ட அந்தப் பெண்களின் அழகான மற்றும் மென்மையான ஓலங்கள் என் இதயத்தை அதிகம் திகைப்படைச் செய்கின்றன.(8) ஆபரணங்கள் அனைத்தும் தளர்ந்த நிலையில் துயரால் பீடிக்கப்பட்டு அழுது கொண்டிருப்பவர்களும், விலைமதிப்புமிக்கப் படுக்கைகளில் ஓய்வெடுக்கத் தகுந்தவர்களுமான அந்த மகதப் பெண்கள், ஐயோ, இப்போது வெறுந்தரையில் கிடக்கின்றனர்.(9)

மேலும், கோசலர்களின் ஆட்சியாளனும், தங்கள் தலைவனுமான இளவரசன் பிருஹத்பலனைச் சுற்றியிருக்கும் வேறு சில பெண்கள், உரத்த ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.(10) அபிமன்யுவால்கரங்களின் முழு வலிமையுடன் துளைக்கப்பட்ட கணைகளை, அவனது {பிருஹத்பலனின்} உடலில் இருந்து பிடுங்கும் அந்தப் பெண்கள், மீண்டும் மீண்டும் மயங்கி விழுங்கின்றனர்.(11) ஓ! மாதவா, களைப்பாலும், சூரியனின் கதிர்களாலும் பீடிக்கப்படும் அந்த அழகிய பெண்களின் முகங்கள் இப்போது ஒளிமங்கிய தாமரைகளைப் போலத் தெரிகின்றன.(12)

இளம்வயதுடையவர்களும், தங்க மாலைகள் மற்றும் அழகிய அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும் துணிச்சல்மிக்கவர்களுமான திருஷ்டத்யும்னனின் மகன்கள், துரோணரால் கொல்லப்பட்டு அங்கே கிடக்கின்றனர்.(13) சுடர்மிக்க நெருப்பில் விழும் பூச்சிகளைப் போல அவர்கள் அனைவரும், நெருப்பறையைப் போன்ற தேரையும், தழல்களேயான விற்களையும், விறகுகளேயான கணைகள், ஈட்டிகள் மற்றும் கதாயுதங்களையும் கொண்ட துரோணரின் மேல் பாய்ந்து எரிக்கப்பட்டனர்.(14)

அதே போலவே, பெரும் துணிவைக் கொண்டவர்களும், அழகிய அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான ஐந்து கேகேய சகோதரர்களும், துரோணரை நோக்கித் திரும்பிய அவர்களின் முகங்களுடன் அவரால் {துரோணரால்} கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கின்றர்.(15) புடம்போட்ட தங்கத்தின் காந்தியைக் கொண்டவையும், தங்கத்தாலானவையுமான கவசங்கள், கொடிமரங்கள், தேர்கள், மாலைகள் சுடர்மிக்கப் பல நெருப்புகளைப் போலப் பூமியில் பிரகாசமான ஒளியைச் சிந்துகின்றன.(16)

ஓ! மாதவா {கிருஷ்ணன்}, துரோணரால் வீழ்த்தப்பட்ட மன்னன் துருபதன், ஒரு பெருஞ்சிங்கத்தால் கொல்லப்பட்டுக் காட்டில் கிடக்கும் வலிமைமிக்க யானையைப் போல அங்கே கிடப்பதைப் பார்.(17) ஓ! தாமரைக்கண்ணா, வெண்மையான நிறம் கொண்ட பாஞ்சாலர்களின் மன்னனுடைய பிரகாசமான குடையானது, கூதிர்கால ஆகாயத்தின் சந்திரனைப் போல இருக்கிறது.(18) அந்த முதிய மன்னனின் மனைவியரும், மருமகள்களும், துயரால் பீடிக்கப்பட்டு, ஈமச்சிதையில் அவனது {துருபதனது} உடலை எரித்துவிட்டு, அந்தச் சிதையைத் தங்கள் வலப்பக்கம் கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்.(19)

அதோ அங்கே, உணர்வுகளை இழந்தவர்களான அந்தப் பெண்கள், துரோணரால் கொல்லப்பட்டவனும், பெரும் வில்லாளியும், துணிச்சல்மிக்கவனும், சேதிகளில் காளையுமான திருஷ்டகேதுவை அகற்றிக் கொண்டிருக்கின்றனர்.(20) ஓ! மதுசூதனா, எதிரிகளை நொறுக்குபவனான இந்தப் பெரும் வில்லாளி {திருஷ்டகேது}, துரோணரின் பல ஆயுதங்களைக் கலங்கடித்துவிட்டு, காற்றால் வேரோடு பிடுங்கப்பட்ட ஒரு மரத்தைப் போல உயிரை இழந்து இங்கே கிடக்கிறான்.(21) ஐயோ, துணிச்சல்மிக்கச் சேதிகளின் ஆட்சியாளனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான இந்தத் திருஷ்டகேது, ஆயிரக்கணக்கான எதிரிகளைக் கொன்றுவிட்டு, தானே உயிரையிழந்து இங்கே கிடக்கிறான்.(22) ஓ! ரிஷிகேசா, சேதிகளின் ஆட்சியாளனுடைய உடல் ஊனுண்ணும் பறவைகளால் கிழிக்கப்பட்டாலும், இன்னும் அழகிய குழல்களுடனும், அழகிய காது குண்டலங்களுடனும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அதை {அந்த உடலைச்} சுற்றி அவனுடைய மனைவியர் அமர்ந்திருக்கின்றனர்.(23) அந்தப் பெண்களில் முதன்மையானோர், தசார்ஹ குலத்தில் பிறந்த அந்த வீர திருஷ்டகேதுவின் நெடிய உடலைத் தங்கள் மடியில் கிடத்திக் கொண்டு, சோகத்தால் அழுது கொண்டிருக்கின்றனர்.(24)

ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, அழகிய குழல்களையும், சிறந்த காது குண்டலங்களையும் கொண்டவனும், துரோணரின் கணைகளால் போரில் கொல்லப்பட்ட திருஷ்டகேதுவின் மகனைப் பார்.(25) அவன், தன் தந்தை எதிரிகளுடன் போரிட்ட போது ஒருபோதும் அவனை விட்டு அகவில்லை. ஓ! மதுசூதனா, மரணத்தில்கூட அவன் தன் வீரத் தந்தையை விட்டு அகலவில்லை பார்.(26)

அதே போலவே, பகைவர்களைக் கொல்பவனான எனது மகனின் {துரியோதனின்} மகனும் {பேரனும்}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான லக்ஷ்மணனும் அவனது தந்தையான துரியோதனனைப் பின்தொடர்ந்து சென்றுவிட்டான்.(27)

ஓ! கேசவா {கிருஷ்ணா}, இளவேனில் காலத்தில் பூத்துக் குலுங்கும் இரு சால மரங்கள் புயலால் வீழ்த்தப்பட்டதைப் போல அவந்தியின் இரு சகோதரர்களான விந்தனும் அனுவிந்தனும் போரக்களத்தில் கிடப்பதைப் பார்.(28) தங்கக் கவசம் பூண்டவர்களும், தங்க அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், வாள்கள் மற்றும் விற்களை இன்னும் தரித்திருப்பவர்களுமாக அவர்கள் கிடக்கிறார்கள். காளை போன்ற கண்களைக் கொண்டவர்களும், பிரகாசமான மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அவர்கள் இருவரும் போர்க்களத்தில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறார்கள்.(29)

பாண்டவர்களும், நீயும், துரோணர், பீஷ்மர், விகர்த்தனன் மகன் கர்ணன், கிருபர்,(30) துரியோதனன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான ஜெயத்ரதன், சோமதத்தன், விகர்ணன், துணிச்சல்மிக்கவனான கிருதவர்மன் ஆகியோரிடமிருந்து தப்பியிருப்பதால் நீங்கள் நிச்சயம் கொல்லப்பட முடியாதவர்களே.(31) காலத்தால் கொண்டுவரப்பட்ட மறுபாடுகளைப் பார். ஆயுதபலத்தால் தேவர்களையே கொல்லவல்லவர்களான அந்த மனிதர்களில் காளையர், இறுதியில் அவர்களே கொல்லப்பட்டவர்கள் ஆனார்கள்.(32) ஓ! மாதவா, மனிதர்களில் காளையரான இந்த வீரர்கள் க்ஷத்திரியப் போர்வீரர்களால் கொல்லப்பட்டதால், விதியால் கொண்டு வர முடியாத எதுவும் இல்லை என்பதில் ஐயமில்லை.(33) ஓ! கிருஷ்ணா, உபப்லாவ்யத்தில் இருந்து நீ தூது வெல்லாமல் சென்ற போதே, பெருஞ்சுறுசுறுப்பைக் கொண்டவர்களான என் மகன்கள் கொல்லப்பட்டார்கள் (என நான் கருதினேன்).(34) சந்தனுவின் மகனும் {பீஷ்மரும்}, விதுரனும், “உன் பிள்ளைகளிடம் பாசங்கொள்வதை நிறுத்துவாயாக” என்றனர்.(35) அம்மனிதர்கள் சொன்ன எதுவும் நடக்காமல் போகாது. ஓ! ஜனார்த்தனா, என் மகன்கள் விரைவில் சாம்பலாக எரிக்கப்படப் போகிறார்கள்” என்றாள் {காந்தாரி}”.(36)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இந்த வார்த்தைகளைச் சொன்ன காந்தாரி, துயரால் தன் உணர்வுகளை இழந்து பூமியில் விழுந்தாள். தன் உறுதியைக் கைவிட்ட அவள், துயரால் தன் உணர்வுகளை இழந்தவளானாள்.(37) தன் மகன்களின் மரணத்தால் கவலையாலும், கோபத்தாலும் நிறைந்த அவள் {காந்தாரி}, கலங்கிய இதயத்துடன் கிருஷ்ணனே அனைத்துக் குற்றத்திற்கும் காரணமென்றாள்.

அந்தக் காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும் எரிக்கப்பட்டுவிட்டனர். ஓ! ஜனார்த்தனா, அவர்கள் இவ்வாறு நிர்மூலத்தையடைந்தபோது, நீ ஏன் அவர்களிடம் அக்கறையற்றவனாக இருந்தாய்?(39) பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களையும், பெரும் படையையும் கொண்டவனான நீ, இந்தப் படுகொலையைத் தடுக்க வல்லவனாக இருந்தாய். நீ நாநலமிக்கவனாகவும் {பேச்சுச் சாமர்த்தியம் கொண்டவனாகவும்}, (அமைதியைக் கொண்டு வரும்) சக்தி படைத்தவனாகவும் இருந்தாய்.(40) ஓ! மதுசூதனா, ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, இந்த அண்டப்பேரழிவின் {மொத்த அழிவின்} போது, வேண்டுமென்றே நீ அலட்சியமாக இருந்ததால், இந்தச் செயலின் கனியை நீ அறுவடை செய்ய வேண்டும்.(41) ஓ! சக்கரத்தையும், கதாயுதத்தையும் தரிப்பவனே, என் கணவரிடம் கடமையுணர்வுடன் காத்திருந்ததால் {பணிவிடை செய்ததால்}, நான் அடைந்திருப்பதும், அடைவதற்கரிதானதுமான அந்த சிறு தகுதியை {புண்ணியத்தைக்} கொண்டு, நான் உன்னைச் சபிக்கப் போகிறேன்.(42) ஓ! கோவிந்தா, குருக்களும், பாண்டவர்களும் ஒருவரையொருவர் கொன்ற போது, நீ அகற்றையற்றவனாக இருந்ததால், நீயே உன் சொந்த உறவினர்களைக் கொல்பவனாவாய்.(43) ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இன்றிலிருந்து முப்பத்தாறு {36} வருடங்களில், உன் உறவினர்களையும், நண்பர்களையும், மகன்களையும் நீயே கொல்லச் செய்த பிறகு, காட்டிற்குள், அருவருப்பான முறையில் நீ அழிவையடைவாய்.(44) மகன்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் இழந்த இந்தப் பாரதக் குலப் பெண்களைப் போலவே, உன் குலத்தின் பெண்களும் அழுது புலம்புவார்கள்” என்று சபித்தாள் {காந்தாரி}”.(45)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைக் கேட்ட உயரான்ம வாசுதேவன் {கிருஷ்ணன்}, மதிப்புக்குரிய காந்தாரியிடம் பேசும் வகையில், மயக்கப் புன்னகையுடன் இந்த வார்த்தைகளை அவளிடம் சொன்னான்,(46) “என்னைத் தவிர இவ்வுலகில் விருஷ்ணிகளை அழிக்கவல்லவர்கள் எவரும் இல்லை. இதை நான் நன்கறிவேன். அதைக் கொண்டுவரவே நான் முயற்சிப்பேன். ஓ! அற்புத நோன்புகளைக் கொண்டவளே, இவ்வாறு சபித்ததால், அப்பணியை நிறைவேற்றவே நீ எனக்கு உதவியிருக்கிறாய்.(47) விருஷ்ணிகள், மனிதர்களாலோ, தேவர்களாலோ, தானவர்களாலோ யாராலும் கொல்லப்பட முடியாதவர்கள். எனவே, அந்த யாதவர்களே ஒருவரையொருவர் வீழ்த்துவார்கள்” என்றான்.(48) தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} இந்த வார்த்தைகளைச் சொன்னதும், பாண்டவர்கள் திகைப்படைந்தனர். கவலையால் நிறைந்த அவர்கள் அனைவரும், உயிரில் நம்பிக்கையற்றவர்களானார்கள்” {என்றார் வைசம்பாயனர்}.(49)

ஸ்திரீ உபபர்வம் முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் — ஸ்திரீ பர்வம்-ஜலப்ரதானிக உப பர்வம் —

October 15, 2025

களங்காணப் புறப்பட்ட அரசமகளிர்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 10-அரச மகளிரை அழைத்துக் கொண்டு போர்க்களத்திற்குச் செல்லத் தீர்மானித்த திருதராஷ்டிரன்; குருகுலப் பெண்களைத் தேரில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்த விதுரன்; அரச குடும்பமும், பெரும் எண்ணிக்கையிலான குடிமக்களுக்கும் ஹஸ்தினாபுரத்தை விட்டுப் புறப்பட்டது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்தப் பாரதக் குலத்தின் காளை (திருதராஷ்டிரன்), விதுரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டுத் தன் தேரை ஆயத்தம் செய்ய ஆணையிட்டான்.(1) மன்னன் {திருதராஷ்டிரன்} மீண்டும் {விதுரனிடம்}, “காந்தாரியையும், பாரதக்குல பெண்கள் அனைவரையும் தாமதிக்காமல் இங்கே கொண்டு வருவாயாக. குந்தியையும், அவளுடன் உள்ள பிற பெண்கள் அனைவரையும் இங்கே கொண்டு வருவாயாக” என்றான்.(2) நீதிமிக்க ஆன்மா கொண்ட திருதராஷ்டிரன், ஒவ்வொரு கடமையையும் அறிந்த விதுரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி, கவலையால் உணர்வுகளை இழந்து தன் தேரில் ஏறினான்.(3) அப்போது, தன் மகன்களின் மரணத்தின் நிமித்தமான துயரால் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரி, தன் தலைவனின் {திருதராஷ்டிரனின்} ஆணையினால், குந்தி மற்றும் அரச குடும்பத்தின் பிற மகளிரின் துணையுடன், பின்னவன் {திருதராஷ்டிரன்} தனக்காகக் காத்திருந்த இடத்திற்கு வந்தாள்.(4) பெருந்துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள் ஒன்றாக மன்னனிடம் வந்து சேர்ந்தனர். அவர்கள் சந்தித்தபோது, ஒருவரையொருவர் கைவிரித்து அழைத்து, கவலையால் உரத்த ஓலமிட்டனர்.(5)

விதுரன், அந்தப் பெண்களைவிட அதிகம் பீடிக்கப்பட்டிருந்தாலும், அவர்களைத் தேற்றத் தொடங்கினான். அழுதுகொண்டிருந்த அந்த அழகிய பெண்களின் அருகில் ஆயத்தமாக இருந்த தேரில் ஏற்றி, (அவர்களுடன் சேர்ந்து) நகரத்தைவிட்டுப் புறப்பட்டான்.(6) அந்நேரத்தில் ஒவ்வொரு குருவின் {குருகுலத்தோன் ஒவ்வொருவனின்} வீட்டிலும் துன்ப ஓலம் எழுந்தது. பிள்ளைகளுடன் சேர்த்து மொத்த நகரமும் பெருந்துயரால் பீடிக்கப்பட்டிருந்தது.(7) இதற்கு முன்பு தேவர்களாலேயே {கண்கொண்டு} காணப்படாத மங்கையர், தங்கள் தலைவர்களை இழந்து ஆதரவற்றவர்களாகி இப்போது பொது மக்களால் காணப்பட்டனர். அவர்கள் அழகிய குழல்கள் கலைந்தவர்களாக, ஆபரணங்களற்றவர்களாக, உடுப்பாக ஒற்றையாடையை அணிந்திருந்த அந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் மிகத் துயரத்துடன் அவ்வாறு சென்றனர்.(9) உண்மையில் அவர்கள், தங்கள் தலைவன் வீழ்ந்ததும் மலைக்குகைகளில் இருந்து வெளிவரும் புள்ளிமான் கூட்டத்தைப் போல வெண்மலைகளுக்கு ஒப்பான தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர்.(10)

அந்த அழகிய பெண்கள், கேளிக்கை வட்டாரங்களில் பெண் குதிரைக்குட்டிக் கூட்டங்களைப் போலவும், அடுத்தடுத்த வானம்பாடிக் கூட்டங்களாகவும் கவலையால் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தனர்.(11) ஒருவரையொருவர் கரங்கள் பற்றிக் கொண்ட அவர்கள், தங்கள் மகன்கள், சகோதரர்கள் மற்றும் தந்தைமாருக்காக உரத்த ஓலமிட்டனர். யுக முடிவின் போது நேரும் அண்ட அழிவுக்காட்சியை அது வெளிப்படுத்துவதாக இருந்தது.(12) துயரால் தங்கள் புலனுணர்வுகளை இழந்த அவர்கள், புலம்பிக் கொண்டும், அழுதுகொண்டும், அங்கேயே இங்கேயும் ஓடிக்கொண்டும், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருந்தனர்.(13) தங்கள் பாலினத் தோழிகளின் முன்னிலையிலேயே முன்பெல்லாம் வெட்கப்படும் அந்தப் பெண்டிர், இப்போது மிகக் குறைவாகவே உடுத்தியிருந்த நிலையில் தங்கள் மாமியார்கள் முன்னிலையில் தோன்றியும் வெட்கமடையாதிருந்தனர்.(14) முன்பெல்லாம் வருந்தத்தக்க சிறு காரணங்களுக்காகவும் ஒருவருயொருவர் தேற்றிக் கொண்ட அவர்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா} இப்போதோ, துயரால் திகைப்படைந்து, ஒருவரையொருவர் கண்ணெடுத்துப் பார்ப்பதையும் தவிர்த்தனர்.(15)

மன்னன் {திருதராஷ்டிரன்}, ஓலமிட்டுக்கொண்டிருக்கும் அந்த ஆயிரக்கணக்கான பெண்களால் சூழப்பட்டு, நகரைவிட்டுப் புறப்பட்டு, போர்க்களத்தை நோக்கி வேகமாகச் சென்றான்.(16) கலைஞர்கள் {சிற்பிகள்}, வணிகர்கள் {வியாபாரிகள்}, வைசியர்கள், அனைத்து வகை இயந்திரக் கைவினைஞர்கள் ஆகியோரும் {வேலை செய்து பிழைக்கும் மற்ற அனைவரும்} நகரத்தில் இருந்து புறப்பட்டு மன்னனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(17) குருக்களை மூழ்கடித்திருக்கும் அந்த முற்றான அழிவால் பீடிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்டிர், சோகமாக அழுததால், அவர்களுக்கு மத்தியில் எழுந்த ஓலமானது அனைத்து உலகங்களையும் துளைப்பதாகத் தெரிந்தது.(18) அந்த ஓலத்தைக் கேட்ட அனைத்து உயிரினங்களும், யுக முடிவில் நெருப்பு எழுந்து அனைத்தையும் எரிக்கும் அண்ட அழிவுக்கான நேரம் வந்துவிட்டதென நினைத்தன.(19) ஓ! மன்னா, குருவின் {குருகுலத்தோனான திருதராஷ்டிரனின்} வீட்டிற்கு அர்ப்பணிப்புள்ள குடிமக்களும், தங்கள் ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த அழிவால் தங்கள் இதயங்கள் துயரில் நிறைய, அந்தப் பெண்களைப் போலவே உரக்க ஓலமிட்டனர்” {என்றார் வைசம்பாயனர்}.(20)

அரசக்குடும்பத்தை வழியில் சந்தித்த மூவர்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 11-தன் மகனின் படையில் எஞ்சியிருக்கும் மூன்று வீரர்களை வழியில் சந்தித்த திருதராஷ்டிரன்; துரியோதனன் நியாயமற்ற முறையில் கொல்லப்பட்டதைக் காந்தாரிக்குச் சொன்ன கிருபர்; பாண்டவர்களிடம் கொண்ட அச்சத்தால் கிருபர், அஸ்வத்தாமன் மற்றும் கிருதவர்மன் ஆகியோர், காந்தாரியிடமும், திருதராஷ்டிரனிடமும் விடைபெற்றுக் கொண்டு சென்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “திருதராஷ்டிரன், இரண்டு மைல்கள் {ஒரு குரோச தொலைவு} செல்வதற்குள், சரத்வான் மகனான கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் கிருதவர்மன் ஆகியோரைச் சந்ததித்தான்.(1) பெரும் சக்தி கொண்டவனும், பார்வையற்றவனுமான அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} அம்மூவரும் கண்டதும், துயரால் பெருமூச்சுவிட்டபடியும், கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அழுதுகொண்டும், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அடைதற்கரிய சாதனைகளைச் செய்த உமது அரசமகன் {துரியோதனன்}, தன் தொண்டர்களுடன் இந்திரலோகம் சென்றுவிட்டான்.(3) துரியோதனனின் படையில் நாங்கள் மூன்று தேர்வீரர்கள் மட்டுமே உயிரோடு தப்பினோம். ஓ! பாரதக் குலத்தின் காளையே, பிறரனைவரும் அழிந்துவிட்டனர்” என்றனர்.(4)

மன்னனிடம் அவர்கள் இதைச் சொன்னதும், சரத்வான் மகனான கிருபர், துயரால் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரியிடம், இவ்வார்த்தைகளைச் சொன்னார்,(5) “உன் மகன்கள், போரில் அச்சமில்லாமல் போரிட்டு, பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளை வீழ்த்தி, வீரர்களுக்குத் தகுந்த சாதனைகளைச் செய்து கொண்டிருந்தபோது வீழ்ந்தனர்.(6) அவர்கள், ஆயுதங்களைப் பயன்படுத்தி அடையும் பிரகாசமான உலகங்களை அடைந்து, பிரகாசமான வடிவங்களை ஏற்று விளையாடிக் கொண்டிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.(7) அவர்களில் எந்த வீரனும் போரில் புறமுதுகிடவில்லை. அனைவரும் ஆயுதம் தீர்ந்தோ, ஆயுதமுனையினாலோ வீழ்ந்தனர். அவர்களில் எவரும் தங்கள் கரங்களைக் கூப்பித் தஞ்சம் கேட்கவில்லை {சரணடையவில்லை}.(8) ஆயுதங்கள் தீர்ந்தோ, ஆயுதங்களின் முனையிலோ போரில் மரணத்தை அடைவது க்ஷத்திரியன் அடையும் உயர்ந்த கதி என்று சொல்லப்படுகிறது.(9) ஓ! ராணி {காந்தாரி}, அவர்களின் எதிரிகளான பாண்டவர்களும் அதிக நற்பேற்றைப் பெறவில்லை. அஸ்வத்தாமன் தலைமையில் நாங்கள் என்ன செய்தோம் என்பதைக் கேட்பாயாக.(10)

உன் மகன் துரியோதனன், பீமனால் நியாயமற்ற வகையில் கொல்லப்பட்டான் என்பதை அறிந்த நாங்கள், உறக்கத்தில் புதைந்திருந்த பாண்டவர்களின் முகாமில் புகுந்து அவர்கள் அனைவரையும் கொன்றோம்.(11) பாஞ்சாலர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். உண்மையில் துருபதனின் மகன்கள் அனைவரும், திரௌபதியின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(12) நம் பகைவரின் மகன்களுக்கு இந்தப் பேரழிவைச் செய்துவிட்டு, போரில் அவர்கள் முன்பு நிற்க இயலாததால் இப்போது தப்பிச் செல்கிறோம்.(13) நம் எதிரிகளான பாண்டவர்கள் அனைவரும் வீரர்களும், வலிமைமிக்க வில்லாளிகளுமாவர். சினத்தால் நிறையும் அவர்கள், பழிதீர்ப்பதற்காக எங்களை அடைய விரைவில் வருவார்கள்.(14) ஓ! சிறப்புமிக்கப் பெண்மணியே, தங்கள் மகன்கள் கொல்லப்பட்டதைக் கேட்டு, சினத்தால் மதங்கொள்பவர்களும் வீரர்களுமான அந்த மனிதர்களில் காளைகள் {பாண்டவர்கள்} வேகமாக எங்கள் தடத்தைப் பின்தொடர்ந்து வருவார்கள்.(15)

(உறங்கும் முகாமுக்குள்) பேரழிவை ஏற்படுத்திய நாங்கள் {இங்கே} நிற்பதற்கும் துணியமாட்டோம். ஓ! ராணியே {காந்தாரியே}, எங்களுக்கு விடைகொடுப்பாயாக. உன் இதயத்தைக் கவலையில் ஆழ்த்துவது உனக்குத் தகாது.(16) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீயும் எங்களுக்கு விடைகொடுப்பாயாக. மன உரம் அனைத்தையும் {உதவிக்கு} அழைப்பாயாக. க்ஷத்திரியக் கடமைகளை அதன் உயர்ந்த வடிவில் நோற்பாயாக” என்றார் {கிருபர்}.(17)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, கிருபர், கிருதவர்மன் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர், பெரும் ஞானம் கொண்ட மன்னன் திருதராஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அவனை வலம் வந்து,(18) அவனிடமிருந்து தங்கள் கண்களை அகற்ற முடியாமல், தங்கள் குதிரைகளைத் தூண்டி கங்கைக்கரையை நோக்கிச் சென்றனர்.(19) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவ்விடத்தைவிட்டு அகன்ற அந்தப் பெருந்தேர்வீரர்கள், இதயங்கள் கவலையில் மூழ்கிய நிலையிலேயே, ஒருவரிடமிருந்து ஒருவர் விடைபெற்றுக் கொண்டு, பிரிந்து சென்றனர்.(20)

சரத்வான் மகனான கிருபர் ஹஸ்தினாபுரத்திற்கும்; ஹிருதிகனின் மகன் {கிருதவர்மன்} தன் நாட்டுக்கும்; துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} வியாசரின் ஆசிரமத்திற்கும் புறப்பட்டுச் சென்றனர்.(21) இவ்வாறே, பாண்டுவின் உயரான்ம மகன்களுக்குக் குற்றமிழைத்த அவ்வீரர்கள், அச்சத்தால் பீடிக்கப்பட்டும், ஒருவரின் மீது மற்றவர் பார்வையைச் செலுத்திக் கொண்டும் தாங்கள் விரும்பிய இடத்திற்குச் சென்றனர்.(22) இவ்வாறு மன்னனைச் சந்தித்தவர்களும், துணிச்சமிக்கவர்களுமான அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, சூரியன் உதிக்கும் முன்பே தாங்கள் தேர்ந்தெடுத்த இடங்களுக்குச் சென்றனர்.(23) ஓ! மன்னா {ஜனமேஜயா}, இதற்குப் பின்னரே, பெரும் தேர்வீரர்களான பாண்டுவின் மகன்கள் துரோணரின் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} மோதி, தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி (ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல) அவனை வென்றனர்” {என்றார் வைசம்பாயனர்}.(24)

திருதராஷ்டிரத் தழுவல்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 12-திருதராஷ்டிரன் நகரத்தைவிட்டுப் புறப்பட்டதை அறிந்து அவனைச் சந்திக்கப் புறப்பட்ட யுதிஷ்டிரன்; அவனை அடைந்து வணங்கியது; யுதிஷ்டிரனை ஆரத்தழுவிய திருதராஷ்டிரன்; பீமனை நொறுக்குவதாக எண்ணிக் கிருஷ்ணனால் கொடுக்கப்பட்ட இரும்புப் பதுமையைத் தூள் தூளாக்கிய திருதராஷ்டிரன்; முடிவை ஏற்றுக் கொள்ளுமாறு திருதராஷ்டிரனிடம் சொன்ன கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “போர்வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகு, யுதிஷ்டிரன், தன் பெரியப்பாவான திருதராஷ்டிரன், யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தைவிட்டு {ஹஸ்தினாபுரத்தை விட்டுத்} புறப்பட்டதைக் கேள்விப்பட்டான்.(1) ஓ! மன்னா {ஜனமேஜயா}, மகன்கள் கொல்லப்பட்ட துயரத்தில் இருந்த யுதிஷ்டிரன், தன் (நூறு) மகன்களின் படுகொலையால் துயரில் முழ்கி, கவலையில் நிறைந்திருக்கும் தன் பெரியப்பாவைச் சந்திக்கத் தன் தம்பிகளுடன் புறப்பட்டான்.(2) அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, உயரான்ம வீரனும், தசார்ஹ குலத்தோனுமான கிருஷ்ணனாலும், யுயுதானனாலும் {சாத்யகியாலும்}, யுயுத்சுவாலும் பின்தொடரப்பட்டான்.(3) துயரில் எரிந்து கொண்டிருந்த திரௌபதியும், தன்னுடன் இருந்த பாஞ்சாலப் பெண்களின் துணையுடன், தன் தலைவனை {யுதிஷ்டிரனைக்} கவலையோடு பின்தொடர்ந்து சென்றாள்.(4) யுதிஷ்டிரன், ஓ! மன்னா, துயரால் பீடிக்கப்பட்டு, பெண் அன்றில் கூட்டத்தைப் போல அழுது கொண்டிருக்கும் பாரத மகளிர்க்கூட்டத்தைக் கங்கைக் கரையின் அருகில் கண்டான்.(5)

மன்னன் {யுதிஷ்டிரன்}, ஏற்புடைய மற்றும் ஏற்கமுடியாத அனைத்துவகை வார்த்தைகளையும் சொல்லி அழுது புலம்பிக் கொண்டும், துயரால் தங்கள் கரங்களை உயர்த்திக் கொண்டும் வந்த அந்த ஆயிரக்கணக்கான மகளிரால் சூழப்பட்டு,(6) “தந்தைமார், சகோதரர்கள், ஆசான்கள், மகன்கள் மற்றும் நண்பர்களைக் கொன்ற அந்த நீதிமிக்க மன்னன் எங்கே? அவனது உண்மையும், கருணையும் எங்கே?(7) ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே {யுதிஷ்டிரா}, துரோணரையும், உன் பாட்டனான பீஷ்மரையும், {மைத்துனனான} ஜெயத்ரதனையும் கொன்றபிறகாவது உன் இதயம் அமைதி அடைந்ததா?(8) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உன் தந்தைமாரும், சகோதரர்களும், தடுக்கப்பட முடியாத அபிமன்யுவும், திரௌபதியின் மகன்களும் இவ்வாறு கொல்லப்பட்டதைக் கண்ட பிறகும், உனக்கு அரசுரிமைக்கான தேவை என்ன இருக்கிறது?” {என்று அவர்களால் கேட்கப்பட்டான்}.(9)

வலிய கரங்களைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், பெண் அன்றில்களைப் போலக் கதறிக்கொண்டிருந்த அந்த மங்கையரைக் கடந்து சென்று, தன் பெரியப்பாவின் {திருதராஷ்டிரரின்} பாதங்களை வணங்கினான்.(10) எதிரிகளைக் கொல்பவர்களான பாண்டவர்கள், முறைப்படி தங்கள் பெரியப்பாவை வணங்கி, தங்கள் பெயரைச் சொல்லி அவனிடம் தங்களை அறிவித்துக் கொண்டனர்.(11) தன் மகன்களின் படுகொலையால் துயரில் மிகவும் பீடிக்கப்பட்டிருந்த திருதராஷ்டிரன், அந்தப் படுகொலைக்குக் காரணமான பாண்டுவின் மூத்த மகனை {யுதிஷ்டிரனை}, விருப்பமில்லாமலேயே தழுவிக் கொண்டான்.(12) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை ஆரத்தழுவி, சில ஆறுதல் வார்த்தைகளைச்சொன்ன பிறகு, தீய ஆன்மா கொண்டவனான அந்தத் திருதராஷ்டிரன், தன்னை அணுகும் அனைத்தையும் எரித்துவிடும் சுடர்மிக்க நெருப்பைப் போலப் பீமனைத் தேடினான்.(13) உண்மையில், அவனது துயரெனும் காற்றால் தூண்டப்பட்ட கோபமெனும் நெருப்பானது, பீமக் காட்டை எரிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிந்தது.(14)

பீமனிடம் அவன் கொண்டிருக்கும் தீய நோக்கங்களை உறுதி செய்து கொண்ட கிருஷ்ணன், உண்மையான பீமனை இழுத்துவிட்டு, அந்த முதிய மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} இரும்பாலான இரண்டாம் பாண்டவனின் {பீமனின்} சிலையைக் கொடுத்தான்.(15) பெரும் நுண்ணறிவைக் கொண்ட கிருஷ்ணன், தொடக்கத்திலேயே திருதராஷ்டிரனின் நோக்கங்களைப் புரிந்து கொண்டு, அவற்றைக் கலங்கடிப்பதற்காகவே இந்தச் சூழ்ச்சியைச் செய்தான்.(16) பெரும் பலம் கொண்டவனான மன்னன் திருதராஷ்டிரன், தன்னிரு கரங்களாலும் அந்த இரும்பு பீமனைப் பற்றிக் கொண்டு, இரத்தமும், சதையுமான உண்மையான பீமனாகவே கருதி அதைத் துண்டுகளாக நொறுக்கினான்.(17) பத்தாயிரம் {10000} யானைகளுக்கு இணையான வலிமையைக் கொண்ட அம்மன்னன் {திருதராஷ்டிரன்} அந்தச் சிலையைத் துண்டு துண்டானச் சிதறல்களாக்கினான். எனினும், தன் மார்பும் குறிப்பிட்ட அளவுக்குக் காயமடைந்ததால் {மிகவும் நசுக்கப்பட்டதால்} அவன் ரத்தம் கக்கத் தொடங்கினான்.(18) குருதியில் மறைந்திருந்த அந்த மன்னன், மலர்களின் சுமையை உச்சியில் கொண்டிருக்கும் பாரிஜாத மரத்தைப் போலக் கீழே தரையில் விழுந்தான்.(19) கல்விமானும், அவனது தேரோட்டியும், கவல்கணன் மகனுமான சஞ்சயன் அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} உயர்த்தி, ஆறுதல் சொல்லித் தேற்றி, “இவ்வாறு செயல்படாதீர்” என்றான்.(20)

பிறகு, தன் கோபத்தைக் கைவிட்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, தன் இயல்பான நிலையை அடைந்து, துயரால் நிறைந்து, “ஐயோ, ஓ! பீமா, ஐயோ, ஓ! பீமா!” என்று சொல்லி உரக்க அழத்தொடங்கினான்.(21) அவன் இன்னும் கோபத்தின் ஆளுகையில் இல்லை என்பதையும், பீமனைக் கொன்றதால் உண்மையாக வருந்துவதையும் (தான் நம்பியவாறே)[1] புரிந்து கொண்டவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னான்,(22) “ஓ! திருதராஷ்டிரரே, நீர் பீமசேனரைக் கொல்லவில்லை என்பதால் வருந்தாதீர். ஓ! மன்னா, நீர் நொறுக்கியது ஓர் இரும்பு சிலையே.(23) ஓ! பாரதக் குலத்தின் காளையே, நீர் சினத்தால் நிறைந்திருக்கிறீர் என்பதைப் புரிந்து கொண்ட நான், குந்தியின் மகனை {பீமரைக்} காலனின் கோரப் பற்களுக்கிடையில் இருந்து இழுத்துவிட்டேன்.(24) ஓ! மன்னர்களில் புலியே, உடல்வலுவில் உமக்கு இணையாக எவனும் இல்லை. ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, உமது கரங்களின் அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள இங்கே எவன் இருக்கிறான்?(25)உண்மையில், காலனுடன் மோதி எவனும் உயிருடன் தப்ப முடியாது என்பதைப் போலவே, உமது அணைப்புக்குள் இருந்து பாதுகாப்பாக எவனாலும் வெளியேற முடியாது.(26) அதன் காரணமாகவே, உமது மகனால் {துரியோதனனால் கதாயுதப் பயிற்சிக்காகச்} செய்யப்பட்ட பீமரின் இந்தச் சிலையை உமக்காகவே தயாராக வைத்திருந்தேன்.(27) உமது மகன்களின் மரணத்தால் உண்டான துயரின் மூலம் உமது மனம் நீதியில் இருந்து விழுந்துவிட்டது. ஓ! பெரும் மன்னா, இதன் காரணமாகவே நீர் பீமசேனரைக் கொல்ல முயன்றீர்.(28) எனினும், ஓ! மன்னா, பீமரைக் கொல்வது உமக்கு ஒரு நன்மையையும் செய்யாது. ஓ! ஏகாதிபதி, அதனால் உமது மகன்கள் பிழைத்து வர மாட்டார்கள்.(29) எனவே, உமது இதயத்தைத் துயரில் நிலைநிறுத்தாமல், அமைதியை எட்டும் நோக்கில் எங்களால் எது செய்யப்பட்டதோ அஃதை ஏற்றுக்கொள்வீராக {அங்கீகரிப்பீராக}” என்றான் {கிருஷ்ணன்}”.(30)

கோபம் அகன்ற திருதராஷ்டிரன்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 13-பீமனிடம் கோபத்தை வளர்ப்பதற்காகத் திருதராஷ்டிரனைக் கடிந்துரைத்த கிருஷ்ணன்; கோபத்தை விட்டு தன் தம்பியின் பிள்ளைகளை ஒருவர்பின் ஒருவராகத் தழுவிக் கொண்ட திருதராஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அப்போது சில பெண்பணியாட்கள் மன்னனைக் கழுவி விட அங்கே வந்தனர். அவன் முறையாகத் தூய்மைப்படுத்தப்பட்ட பிறகு, மதுசூதனன் {கிருஷ்ணன்}, அவனிடம் {திருதராஷ்டிரனிடம்} மீண்டும்,(1) “ஓ! மன்னா, நீர் வேதங்களையும், பல்வேறு சாத்திரங்களையும் படித்திருக்கிறீர். பழைய வரலாறுகள் அனைத்தையும், மன்னர்களின் கடமைகள் குறித்த அனைத்தையும் நீ கேட்டிருக்கிறீர்.(2) கல்விமானான நீர் பெரும் ஞானம் கொண்டவராகவும், பலம் மற்றும் பலவீனத்துக்குத் தகுந்தவராகவும் இருக்கிறீர். உமக்கு நேர்ந்தவை அனைத்தும் உமது தவறுகளின் விளைவே எனும்போது இத்தகு கோபத்தை ஏன் வளர்க்கிறீர்?(3) போருக்கு முன்பே நான் உம்மிடம் பேசினேன். ஓ! பாரதரே, பீஷ்மர், துரோணர், விதுரர், சஞ்சயன் ஆகியோரும் உம்மிடம் பேசினர். எனினும், நீர் எங்கள் அறிவுரையைப் பின்பற்றவில்லை.(4) உண்மையில், எங்களால் பரிந்துரைக்கப்பட்டாலும், உமக்கும், உமது பலம் மற்றும் துணிவுக்கும் பாண்டவர்கள் மேம்பட்டவர்கள் என்பதை அறிந்து, நாங்கள் சொன்ன ஆலோசனைகளின் படி நீர் செயல்படவில்லை.(5)

தன் குறைகளைக் காணவல்லவனும், கால, நேர வேறுபாடுகளை அறியவல்லவனுமான மன்னன் பெருஞ்செழிப்பை அடைகிறான்.(6) எனினும், எந்த மனிதன் நலன்விரும்பிகளால் ஆலோசனை கூறப்பட்டும், அவர்களது நல்ல {இனிமையான}, அல்லது தீய {கசப்பான} வார்த்தைகளை ஏற்கவில்லையோ, அவன் தன் தீய கொள்கையின் விளைவால் உண்டாகும் துயரை அடைந்து துன்பப்படுகிறான்.(7) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இப்போது வாழ்வின் வேறு வழியைக் காண்பீராக. நீர் உமது ஆன்மாவைக் கட்டுப்படுத்தாமல், துரியோதனனின் ஆளுகைக்குள் இருந்து உம்மைத் துன்புறுத்திக் கொண்டீர்.(8) உமக்கு நேர்ந்திருப்பவை உமது தவறாலேயே உம்மை அடைந்தன. பிறகு ஏன் நீர் பீமரைக் கொல்ல முயல்கிறீர்? உமது சொந்த தவறுகளை நினைத்துப் பார்த்து, உமது கோபத்தை இப்போது அடக்குவீராக.(9) அற்பனான எவன் செருக்கினால் பாஞ்சால இளவரசியை {திரௌபதியைச்} சபைக்குக் கொண்டு வந்தானோ, அவன் நியாயமாகப் பழி தீர்க்கப்படவே பீமசேனரால் கொல்லப்பட்டான்.(10) உமது சொந்த செயல்பாடுகளையும், தீய ஆன்மா கொண்ட உமது மகனின் {துரியோதனனின்} செயல்பாடுகளையும் பார்ப்பீராக. பாண்டுவின் மகன்கள் முற்றிலும் அப்பாவிகளாவர். இருப்பினும், அவர்கள் உம்மாலும், அவனாலும் {துரியோதனனாலும்} மிகக் கொடூரமாக நடத்தப்பட்டார்கள்” என்றான் {கிருஷ்ணன்}”.(11)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கிருஷ்ணனால் இவ்வாறு உண்மை சொல்லப்பட்ட பிறகு, மன்னன் திருதராஷ்டிரன் அந்தத் தேவகியின் மகனிடம் {கிருஷ்ணனிடம்} மறுமொழியாக,(12) “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ சொன்னது போலத்தான் இருக்கிறது. ஓ! மாதவா, நீ சொல்வது முற்றிலும் உண்மையே. ஓ! அற ஆன்மாவே, பிள்ளை பாசமே என்னை அறத்திலிருந்து விழச் செய்தது.(13) மனிதர்களில் புலியும், உண்மை ஆற்றல் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான பீமன், என் அணைப்புக்குள் வராமல் உன்னால் பாதுகாக்கப்பட்டது நற்பேற்றாலேயே.(14) இருப்பினும், நான் இப்போது கோபத்திலிருந்தும், நோயிலிருந்தும் விடுபட்டிருக்கிறேன். ஓ! மாதவா, வீரனான அந்தப் பாண்டுவின் இரண்டாம் மகனை {பீமனைத்} தழுவிக் கொள்ளும் விருப்பத்தால் ஆவலடைந்திருக்கிறேன்.(15) மன்னர்கள் அனைவரும் இறந்து, என் பிள்ளைகளும் இல்லையென்றான பிறகு, என் நல்வாழ்வும், மகிழ்ச்சியும் பாண்டுவின் மகன்களைச் சார்ந்தே இருக்கப் போகிறது” என்றான் {திருதராஷ்டிரன்}.(16) இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த முதிய மன்னன், அற்புத உடற்கட்டுகளைக் கொண்டோரான பீமன், தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரையும், மனிதர்களில் முதன்மையானவர்களான மாத்ரியின் மகன்கள் {நகுலன், சகாதேவன்} இருவரையும் தழுவியழுது, ஆறுதலடைந்து, அவர்களை வாழ்த்தியருளினான்” {என்றார் வைசம்பாயனர்}.(17)

காந்தாரியின் கோபம்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 14-யுதிஷ்டிரனைச் சபிக்க நினைத்திருந்த காந்தாரி; தீடீரென அங்கே வந்த வியாசர் அவளது கோபத்தைத் தணிக்க ஆலோசனை கூறுவது; அவரது ஆலோசனையை ஏற்றுக் கொண்ட காந்தாரி, பீமனின் அநியாயத்தைச் சுட்டிக்காட்டியது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “திருதராஷ்டிரனால் ஆணையிடப்பட்ட குரு குலக் காளைகளான அந்தப் பாண்டவச் சகோதரர்கள், கேசவனின் {கிருஷ்ணனின்} துணையுடன் காந்தாரியைக் காணச் சென்றனர்.(1) களங்கமற்றவளான காந்தாரி, தன் நூறு மகன்களின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தன் எதிரிகள் அனைவரையும் கொன்றதை நினைவுகூர்ந்து அவனைச் {யுதிஷ்டிரனைச்} சபிக்க விரும்பினாள்.(2) சத்தியவதியின் மகன் {வியாசர்}, பாண்டவர்களிடம் அவள் கொண்டிருக்கும் தீய நோக்கங்களைப் புரிந்த கொண்டு, தொடக்கத்திலேயே அதற்கு எதிர்வினையாற்றத் தனக்குள் தீர்மானித்தார்.(3) மனோவேகத்தில் தாம் விரும்பும் இடத்திற்குச் செல்ல வல்ல அந்தப் பெரும் முனிவர் {வியாசர்}, கங்கையின் புனிதமான தெளிந்த நீரால் தம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.(4) ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்தையும் தமது ஆன்மப் பார்வையால் பார்க்க வல்ல அந்தத் தவசி {வியாசர்}, தன் மனத்தை அதை நோக்கிச் செலுத்தி அங்கே தோன்றினார்.(5)

பெரும் தவத்தகுதியைக் கொண்டவரும், எப்போதும் உயிரினங்களின் நன்மையையே நோக்கமாகக் கொண்டவருமான அந்த முனிவர் {வியாசர்}, சரியான நேரத்தில் தன் மருமகளிடம் {காந்தாரியிடம்},(6) “சபிப்பதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாதே. மறுபுறம் உன் மன்னிப்பைக் காட்ட {வழங்க} அதைப் பயன்படுத்துவாயாக {பொறுமை காட்டுவாயாக}. ஓ! காந்தாரி, நீ பாண்டவர்களிடம் கோபங்கொள்ளக் கூடாது. உன் இதயத்தை அமைதியில் நிலைநிறுத்துவாயாக. உன் உதடுகளிலிருந்து உதிரப்போகும் வார்த்தைகளைத் தடுப்பாயாக. என் அறிவுரையைக் கேட்பாயாக.(7) வெற்றியை விரும்பிய உன் மகன் {துரியோதனன்}, பதினெட்டு நாட்கள் நீடித்த அந்தப் போரின் போது ஒவ்வொருநாளும்[1] உன்னிடம், “ஓ! தாயே, எதிரிகளுடன் போரிடப் போகும் எனக்கு அருள்புரிவாயாக” என்று வேண்டினான்.(8) வெற்றியை விரும்பிய உனது மகன் ஒவ்வொரு நாளும் இவ்வார்த்தைகளால் இரந்து கேட்டுக் கொண்டும், நீ அவனுக்கு எப்போதும் கொடுத்த பதில், “எங்கே அறமிருக்கிறதோ, அங்கே வெற்றியுமிருக்கும்” என்பதாகும்.(9)ஓ! காந்தாரி, நீ சொன்ன வார்த்தைகள் ஏதும் பொய்த்ததாக எனக்கு நினைவில்லை. எனவே, துரியோதனனால் வேண்டிக் கேட்டுக் கொள்ளப்பட்டு, நீ சொன்ன அந்த வார்த்தைகளும் பொய்க்க முடியாது. நீ எப்போதும் அனைத்து உயிரினங்களின் நன்மையிலேயே ஈடுபட்டிருக்கிறாய்.(10) க்ஷத்திரியர்களின் அந்தப் பயங்கரப் போரில் அடுத்தக் கரையை அடைந்த பாண்டுவின் மகன்களே நிச்சயமாக வென்றிருக்கிறார்கள், {அவர்களிடமே} அறத்தின் அளவும் அதிகமாக இருக்கிறது.(11) நீ முன்பு மன்னிக்கும் அறத்தை {பொறுமையை} நோற்று வந்தாய். அஃதை இப்போது ஏன் நீ நோற்கக்கூடாது? ஓ! அறமறிந்தவளே, அநீதியை அடக்குவாயாக. எங்கே அறமிருக்கிறதோ, அங்கேதான் வெற்றியுமிருக்கும்.(12) ஓ! காந்தாரி, உன் அறத்தையும், நீ பேசிய வார்த்தைகளையும் நினைவுகூர்ந்து உன் கோபத்தை அடக்குவாயாக. ஓ! அழகாகப் பேசுபவளே, வேறுவகையில் செயல்படாதே” என்றார் {வியாசர்}.(13)

இவ்வார்த்தைகளைக் கேட்ட காந்தாரி {வியாசரிடம்}, “ஓ! புனிதமானவரே, பாண்டவர்களிடம் நான் எந்தக் கோபமும் கொள்ளவில்லை, அவர்கள் அழிய வேண்டும் என்று விரும்பவுமில்லை. எனினும், என் மகன்களின் மரணத்தால் ஏற்பட்ட துயரின் விளைவாக, என் இதயம் மிகப் பலத்த கலக்கத்தையடைகிறது.(14) குந்தி எவ்வளவு கவனமாகப் பாண்டவர்களைப் பாதுகாக்கிறாளோ, அதே அளவு நானும் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், நான் பாதுகாக்கும் அளவுக்குத் திருதராஷ்டிரரும் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் நான் அறிவேன்.(15) துரியோதனன் மற்றும் சுபலரின் மகனான சகுனி ஆகியோரின் குற்றத்தின் மூலமும், கர்ணன் மற்றும் துச்சாசனன் ஆகியோரின் செயல்பாடுகளின் மூலமும், குருக்களின் இந்த முற்றான அழிவு நடைபெற்றிருக்கிறது.(16) இக்காரியத்தில், பீபத்சு {அர்ஜுனன்} மீதோ, பிருதையின் மகனான விருகோதரன் {பீமன்} மீதோ, நகுலன் மீதோ, சகாதேவன் மீதோ, யுதிஷ்டிரன் மீதோ சிறு பழியையும் இணைத்துச் சொல்ல முடியாது.(17)

ஆணவம் மற்றும் செருக்குடன் கூடிய கௌரவர்கள், போரில் ஈடுபடும்போது, (அவர்களின் உதவிக்கு வந்த) பலருடன் சேர்ந்து வீழ்ந்திருக்கிறார்கள். இதனால் நான் வருத்தமடையவில்லை.(18) ஆனால், வாசுதேவன் {கிருஷ்ணன்} முன்னிலையில், பீமனால் செய்யப்பட்ட ஒரு காரியம் (என் சினதைத் தூண்டும்படி} இருக்கிறது. உயர் ஆன்ம விருகோதரன் {பீமன்}, ஒரு பயங்கரக் கதாயுதப் போருக்குத் துரியோதனனை அறைகூவி அழைத்து விட்டு,(19) போரில் பல்வேறு வகைகளில் திரியும்போது, அவனை {பீமனை} விட என் மகன் {துரியோதனன்} திறனில் மேன்மையானவன் என்பதை அறிந்து, உந்திக்கு {தொப்புளுக்குக்} கீழே தாக்கினான்.(20) இதுவே என் கோபத்தைத் தூண்டுகிறது. கடமைகள் {தர்மங்கள்} அனைத்தையும் அறிந்த உயரான்ம மனிதர்களால் தீர்மானிக்கப்பட்ட கடமைகளை, வீரர்கள் தங்கள் உயிர்களுக்காக ஏன் கைவிடுகிறார்கள்?[2]” என்று கேட்டாள் {காந்தாரி}”.(21)

யுதிஷ்டிரனின் கால்கட்டைவிரல்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 15-காந்தாரியிடம் பேசிய பீமன், நியாயமற்ற முறையில் துரியோதனனைக் கொன்ற தன் குற்றத்தைக் குறைத்துச் சொன்னது; துச்சாசனனின் குருதியைக் குடித்த செயலைப் பீமனுக்குச் சுட்டிக்காட்டி அவனைக் கண்டித்த காந்தாரி; தன் தம்பியின் குருதியை உண்மையில் குடிக்கவில்லை என்றும், கர்ணன் மட்டுமே அஃதை அறிவான் என்றும் சொன்ன பீமன்; காந்தாரியிடம் பணிந்த யுதிஷ்டிரன்; காந்தாரியின் கண்கள் யுதிஷ்டிரனின் கால் கட்டைவிரல் நகத்தை எரித்தது; தங்கள் தாயைச் சந்தித்த பாண்டவர்கள்; திரௌபதியோடு சேர்ந்து அழுத குந்தி; திரௌபதிக்கு ஆறுதலளித்த காந்தாரி …

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “காந்தாரியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமசேனன், பயந்தவன் போலத் தெரிந்து, அவளை ஆறுதல் படுத்த இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “அந்தச் செயல் நேர்மையானதோ, நேர்மையற்றதோ, அஃது அச்சத்தினாலும், என்னைக் காத்துக் கொள்ளும் நோக்குடனுமே செய்யப்பட்டது. எனவே, என்னை இப்போது மன்னிப்பதே உனக்குத் தகும்.(2) உன் வலிமைமிக்க மைந்தன் {துரியோதனன்}, நேர்மையான நல்ல போரில், எவராலும் கொல்லப்பட முடியாதவனாக இருந்தான். துரியோதனனே முன்பு நியாயமற்ற வகையில் யுதிஷ்டிரரை வென்றான்[1]. இதன் காரணமாகவே நான் நியாயமற்றதைச் செய்தேன். அவன் எப்போதும் எங்களிடம் வஞ்சகமாகவே நடந்து கொண்டான். இதன் காரணமாகவே நான் நியாயமற்ற செயலைச் செய்ய வேண்டியிருந்தது.(4) உன் மகனே, அவனது தரப்பில் கொல்லப்படாமல் எஞ்சிய ஒரே வீரன். அந்த வீர இளவரசன் {துரியோதனன்} என்னைக் கதாயுத்ததில் கொல்லாமல் இருக்கவும், மீண்டும் எங்களை அவன் நாட்டை இழக்கச்செய்யாமல் இருக்கவும் நான் அவ்வழியில் செயல்பட்டேன்.(5)

பாஞ்சால இளவரசி {திரௌபதி} தன் பருவ காலத்தில் ஒற்றையாடை உடுத்தியிருந்தபோது, உன் மகன் அவளிடம் சொன்ன அனைத்தையும் நீ அறிவாய்.(6) சுயோதனனை {துரியோதனனை} ஒழிக்காமல், கடல்களுடன் கூடிய மொத்த பூமியையும் எங்களால் அமைதியாக ஆள முடியாது. இதன் காரணமாகவே நான் அவ்வழியில் செயல்பட்டேன்.(7) உன் மகன் எங்களுக்குப் பல தீங்குகளைச் செய்தான். சபைக்கு மத்தியில் வைத்து அவன் தன் இடது தொடையைத் திரௌபதிக்குக் காட்டினான்.(8) அந்தத் தீய நடத்தைக்காகவே அப்போதே உன் மகன் எங்களால் கொல்லத்தக்கவனாவான். எனினும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் ஆணையின் பேரிலும், ஏற்கப்பட்ட ஒப்பந்தத்தின் படியும் நாங்கள் எங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டோம்.(9) ஓ! ராணி, இவ்வழிகளில் உன் மகன் {துரியோதனன்} எங்களுடன் தீராப் பகைமையைத் தூண்டிக் கொண்டிருந்தான். (உன் மகனால் விரட்டப்பட்டு) நாங்கள் காட்டில் அடைந்த பாடு மிகப் பெரியதாகும். இவையனைத்தையும் நினைவுகூர்ந்தே நான் அவ்வழியில் செயல்பட்டேன்.(10) போரில் துரியோதனனைக் கொன்றதன் மூலம் நாங்கள் எங்கள் பகைமைகளின் முடிவை அடைந்துவிட்டோம். யுதிஷ்டிரர் தமது நாட்டை மீண்டும் அடைந்துவிட்டார். நாங்களும் கோபத்திலிருந்து விடுபட்டோம்[2]” என்றான்.(11)பீமனின் வார்த்தைகளைக் கேட்ட காந்தாரி, “(போர்த்திறனில்) இவ்வாறு என் மகனை நீ புகழ்வதாலேயே, அவன் இத்தகு மரணத்திற்குத் தகாதவனாவான். எனினும், நீ என்னிடம் சொன்ன அனைத்தையும் அவன் செய்திருக்கிறான். {அது ஒருபுறம்} இருப்பினும், ஓ! பாரதா, விருஷசேனன் நகுலனை, அவனது குதிரைகளை இழக்கச் செய்தபோது, நீ போரில் துச்சாசனனது உடலின் குருதியைக் குடித்தாய்.(13) அத்தகு கொடூரச் செயல் நல்லோரால் நிந்திக்கப்படுகிறது. மிக இழிந்த ஒருவனுக்கே அது தகும். ஓ! விருகோதரா {பீமா}, அப்போது நீ செய்தது தீச்செயலே. இஃது உனக்குத் தகாது” என்றாள்.(14)

பீமன் {காந்தாரியிடம்}, “அந்நியனின் குருதியைக் குடிப்பதும் முறையாகாது, அப்படியிருக்கையில், ஒருவனுடைய சொந்த இரத்தத்தைக் குடிப்பதைப் பற்றி என்ன சொல்ல முடியும்? ஒருவனின் தம்பி, ஒருவனின் சுயமே ஆவான். அவர்களுக்குள் எந்த வேறுபாடும் கிடையாது.(15) எனினும், ஓ! தாயே, (நான் குடித்ததாகக் கருதப்படும்) குருதி, என் உதடுகளையும், பற்களையும் தாண்டவில்லை. கர்ணன் இதை நன்கறிவான். என் கைகள் மட்டுமே (துச்சாசனனின்) குருதியால் பூசப்பட்டிருந்தது.(16) போரில் விருஷசேனன், நகுலனைக் குதிரைகளை இழக்கச் செய்ததைக் கண்டு, மகிழ்ச்சியடைந்த (கௌரவ) சகோதரர்களை நான் பீதியால் நிறையச் செய்தேன்.(17) பகடையாட்டத்திற்குப் பிறகு, திரௌபதியின் குழல்கள் பற்றப்பட்டபோது, நான் சினத்தால் சில குறிப்பிட்ட வார்த்தைகளைச் சொன்னேன். அவ்வார்த்தைகள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன.(18) அந்தச் சபதத்தை நான் நிறைவேற்றாமல் இருந்திருந்தால், நான் நாளெல்லாம் க்ஷத்திரியக் கடமைகளில் தவறியவனாகக் கருதப்பட்டிருப்பேன். ஓ! ராணி, இதன் காரணமாகவே நான் அச்செயலைச் செய்தேன்.(19) ஓ! காந்தாரி, என்னிடம் களங்கம் காண்பது உனக்குத் தகாது. முன் நாட்களில் உன் மகன்களைத் தடுக்காமல், அப்பாவிகளான எங்கள் மீது எந்தக் களங்கத்தையும் காண்பதும் உனக்குத் தகாது” என்றான்.(20)

காந்தாரி {பீமனிடம்}, “ஓ! குழந்தாய் {பீமா}, எவராலும் வெல்லப்படாத நீ, இந்த முதிய மனிதரின் {திருதராஷ்டிரரின்} நூறு மகன்களைக் கொன்றிருக்கிறாய். ஓ!, குற்றங்கள் குறைந்தவர்களும், நாட்டை இழந்தவர்களுமான இந்த முதிர்ந்த இணையின் {தம்பதியரின்} ஒரேயொரு மகனையாவது நீ ஏன் எஞ்சவிடவில்லை?(21) ஒரேயொரு ஊன்றுகோலைக் கூட இந்தக் குருட்டு இணைக்கு நீ ஏன் விட்டு வைக்கவில்லை? ஓ! குழந்தாய், என் பிள்ளைகள் அனைவரையும் கொன்று, பிறகும் நீ காயமில்லாமல் வாழ்ந்தாய் என்றாலும், (அவர்களைக் கொல்லும்போது) நீ நீதியின் பாதையைப் பின்பற்றியிருந்தால் எனக்கு எந்தத் துயரமும் இல்லை” என்றாள்”.(23)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன காந்தாரி, தன் மகன்கள், தன் பேரப்பிள்ளைகள் அனைவரும் கொல்லப்பட்டதால் கோபத்தில் நிறைந்தவளாக, யுதிஷ்டிரனை விசாரிக்கும் வகையில், “எங்கே மன்னன் {யுதிஷ்டிரன்}?” என்று கேட்டாள்.(24) அவள் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், மன்னன் யுதிஷ்டிரன், நடுங்கிக் கொண்டே, கூப்பிய கரங்களுடன் அவளை {காந்தாரியை} அணுகி, அவளிடம் இந்த மென்மையான வார்த்தைகளைச் சொன்னான்,(25) “ஓ! தேவி, உன் மகன்களைக் கொன்ற கொடூரனான யுதிஷ்டிரன் இங்கே இருக்கிறேன். நானே இந்த அண்டத்தின் அழிவுக்குக் காரணமாக இருப்பதால் உன் சாபங்களுக்கு நான் தகுந்தவனே. ஓ!, என்னைச் சபிப்பாயாக.(26) உயிர், நாடு, செல்வம் ஆகியவற்றின் எந்தத் தேவையும் இனியும் எனக்கு இல்லை. இத்தகு நண்பர்களைக் கொல்லச் செய்த நான், பெரும் மூடனாகவும், நண்பர்களை வெறுப்பவனாகவுமே என்னை நிரூபித்துக் கொண்டேன்” என்றான்.(27)

அச்சத்தில் மூழ்கி இவ்வார்த்தைகளைப் பேசியவனும், காந்தாரியின் அருகில் நின்றவனுமான யுதிஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, அவள் {காந்தாரி} நீண்ட பெருமூச்சுகளை விட்டபடியே ஒன்றும் சொல்லாதிருந்தாள்.(28) அறவிதிகளை அறிந்தவளும், பெரும் முன்னறிதிறனைக் கொண்டவளுமான அந்தக் குரு ராணி {காந்தாரி}, தன் பாதத்தில் விழ முன்னோக்கிக் குனிந்த இளவரசன் யுதிஷ்டிரனின் {கால்} கட்டை விரலில் தன் கண்களை மறைத்திருந்த துணியின் ஊடாக அவற்றை {தன் கண்களைச்} செலுத்தினாள். இதனால், முன்பு மிக அழகிய நகங்களைக் கொண்டிருந்த மன்னனின் கட்டைவிரல் புண்ணுள்ள நகத்தைக் கொண்டததானது[3].(29,30) இதைக் கண்ட அர்ஜுனன் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} பின்புறத்திற்கு நகர்ந்து சென்றான் {ஒளிந்து கொண்டான்}, பாண்டுவின் பிற மகன்களும் அமைதியிழந்தவர்களாக அடுத்தடுத்த இடத்திற்கு நகர்ந்து சென்றனர்.(31)

பிறகு காந்தாரி, தன் கோபத்தைக் கைவிட்டு, ஒரு தாயைப் போலப் பாண்டவர்களுக்கு ஆறுதலளித்தாள். அகன்ற மார்புகளைக் கொண்ட அந்த வீரர்கள் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு, வீரர்களைப் பெற்றவளான தங்கள் தாயிடம் {குந்தியிடம்} சென்றனர்.(32) நீண்ட காலத்திற்குப் பிறக் தன் மகன்களைக் கண்ட குந்தி, அவர்களின் நிமித்தமாகக் கவலையில் நிறைந்து, தன் முகத்தைத் துணியால் மறைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள். தன் பிள்ளைகளோடு சேர்ந்து சிறிது நேரம் அழுதபிறகு, பல ஆயுதங்களால் அவர்களின் உடல்களில் ஏற்பட்டிருந்த காயங்களையும், வடுக்களையும் கண்டாள்.(34) பிறகு அவள், மீண்டும் மீண்டும் அவர்களைத் தழுவி கொண்டு, தன் ஒவ்வொரு மகனையும், அன்பாகத் தட்டிக் கொடுத்தாள். பிறகு அவள் {குந்தி}, பிள்ளைகள் அனைவரையும் இழந்தவளும், வெறுந்தரையில் கிடந்து பரிதாபகரமாகப் புலம்பிக் கொண்டிருப்பவளுமான திரௌபதியைக் கண்டு, துக்கத்தால் பீடிக்கப்பட்டு அவளோடு சேர்ந்து அழுதாள்.(35)

அப்போது திரௌபதி {குந்தியிடம்}, “ஓ! மதிப்புக்குரிய பெருமாட்டியே, அபிமன்யுவுடன் சேர்த்து உன் பேரப்பிள்ளைகள் அனைவரும் எங்கே சென்றுவிட்டனர்? உன்னை இத்தகு துயரத்தில் கண்டும் அவர்கள் ஏன் உன் முன்பு தோன்றாமல் தாமதிக்கின்றனர்? பிள்ளைகளை இழந்த எனக்கு {அடையப்பட்டிருக்கும்} நாட்டால் என்ன தேவையிருக்கிறது {நாட்டால் என்ன ஆகப்போகிறது}?” என்று கேட்டாள்.(36) துயரத்தில் பீடிக்கப்பட்டு இவ்வாறு அழுதுகொண்டிருக்கும் பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} உயர்த்திய பிருதை {குந்தி}, அகன்ற கண்களைக் கொண்ட அந்தப் பெண்ணுக்கு {திரௌபதிக்கு} ஆறுதலளிக்கத் தொடங்கினாள்.(37) பிறகு குந்தி, பாஞ்சால இளவரசியுடன், தன் மகன்களைப் பின்தொடர்ந்து சென்று, தானே பெருந்துயரில் இருந்தாலும், துயரில் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரியை நோக்கிச் சென்றாள்.(38)

அந்தச் சிறப்புமிக்கப் பெண்மணி {குந்தி} தன் மருமகளுடன் {திரௌபதியுடன்} இருப்பதை அறிந்த காந்தாரி, அவளிடம் {திரௌபதியிடம்}, “ஓ! மகளே, வருந்தாதே.(39) உன்னைப்போலவே நானும் துயரில் பீடிக்கப்பட்டிருப்பதைப் பார்.(39) இந்த அண்ட அழிவானது, தடுக்கப்பட முடியாத காலத்தின் வழியால் கொண்டுவரப்பட்டது என நான் நினைக்கிறேன். தவிர்க்கப்பட முடியாத இந்தப் பயங்கரப் படுகொலை வேண்டுமென்றே மனிதர்களால் செய்யப்பட்டதில்லை.(40) கிருஷ்ணனின் அமைதிக்கான தூது தோல்வியுற்றபோது, பெரும் ஞானியான விதுரரால் முன்னறிந்து சொல்லப்பட்டவையே இப்போது நடந்திருக்கின்றன.(41) எனவே, தவிர்க்க முடியாத இக்காரியத்திற்காக, அதிலும் குறிப்பாக அது நேர்ந்த பிறகு நீ வருந்தாதே. போரில் கொல்லப்பட்டவர்களுக்காக வருந்தக்கூடாது.(42) நானும் உன்னோடு சேர்ந்து அதே இக்கட்டான சூழ்நிலையிலேயே இருக்கிறேன். (நீயே இவ்வாறு நடந்து கொண்டால்) யார் எங்களுக்கு ஆறுதல் சொல்வது? என் தவறாலேயே இந்த முதன்மையான குலம் அழிவையடைந்தது” என்றாள் {காந்தாரி}”.(43)

ஜலப்ரதானிக உப பர்வம் முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் — ஸ்திரீ பர்வம்-ஜலப்ரதானிக உப பர்வம்-விசோக உப பர்வம்–

October 15, 2025

திருதராஷ்டிரனைத் தேற்றிய சஞ்சயன்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 01-பிறகு என்ன நடந்தது என வைசம்பாயனரிடம் விசாரித்த ஜனமேஜயன்; திருதராஷ்டிரனின் துயரம்; திருதராஷ்டிரனின் புலம்பல்; இறந்தோருக்கான ஈமச்சடங்குகளைச் செய்யுமாறு சொன்ன சஞ்சயன்; சஞ்சயனின் கடிந்துரையும், தேற்றமும்; விதுரன் பேசத் தொடங்கியது…(விசோகம் என்றால் துயர முடிவு, அல்லது துயரத்தில் இருந்து விடுதலை என்பது பொருளாகும். இந்தப் பர்வத்தில் விதுரன் திருதராஷ்டிரன் துயர்களைய முயற்சி செய்வதால் இப்பர்வத்திற்கு இந்தப் பெயர்.)

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! தவசியே {வைசம்பாயனரே}, துரியோதனனும், போர்வீரர்கள் அனைவரும் வீழ்ந்த பிறகு, செய்தியை அடைந்த மன்னன் திருதராஷ்டிரன் என்ன செய்தான்?(1) உயரான்ம குரு மன்னனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன் என்ன செய்தான்? எஞ்சிய மூவரான கிருபரும், மற்றவர்களும் என்ன செய்தனர்?(2) அஸ்வத்தாமனின் சாதனைகள் குறித்த அனைத்தையும் நான் கேட்டுவிட்டேன். அவர்கள் ஒருவருக்கொருவர் சபித்த கடிந்துரைகளுக்குப் பிறகு என்ன நடந்தது என்பதை எனக்குச் சொல்வீராக. பார்வையற்ற முதிய மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்குச்} சஞ்சயன் சொன்ன அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னன் திருதராஷ்டிரன், தனது நூறு மகன்களையும் இழந்த பிறகு, அதன் காரணமாகத் துயரால் பீடிக்கப்பட்டு, உற்சாகமற்றவனாக, கவலையில் மூழ்கி, பேசும் சக்தியை இழந்தவனாகக் கிளைகள் ஒடிந்த மரத்தைப் போலத் தெரிந்தான்.(4)

பெரும் ஞானத்தைக் கொண்டவனான சஞ்சயன் அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} அணுகி, அவனிடம், “ஓ! ஏகாதிபதி, நீர் ஏன் வருந்துகிறீர்? துயரம் எக்காரியத்தையம் செய்யாது.(5) ஓ! மன்னா, பதினெட்டு {18}அக்ஷௌஹிணி போராளிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். வெறித்துப் போயிருக்கும் பூமியானது இப்போது கிட்டத்தட்ட வெறுமையாகவே இருக்கிறது.(6) பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுமான மன்னர்கள் அனைவரும், உமது மகனுடன் சேர்ந்து தங்கள் உயிரை விட்டனர்.(7) இப்போது விதிப்படி செய்ய வேண்டியது, உமது தந்தைமார், மகன்கள், பேரப்பிள்ளைகள், சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் ஆசான்களுக்கான ஈமச் சடங்குகளே ஆகும்” என்றான் {சஞ்சயன்}”.(8)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மகன்கள், அமைச்சர்கள் மற்றும் தன் நண்பர்கள் அனைவரையும் இழந்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான மன்னன் திருதராஷ்டிரன், காற்றால் வேரோடு பிடுங்கப்பட்ட ஒரு மரத்தைப் போலத் திடீரெனக் கீழே பூமியில் விழுந்தான்.(9)

{அப்போது} திருதராஷ்டிரன், “மகன்கள், அமைச்சர்கள் மற்றும் என் நண்பர்கள் அனைவரையும் இழந்த நான், நிச்சயம் கவலையுடன் பூமியில் திரியப் போகிறேன்.(10) முதுமையால் பீடிக்கப்பட்டு, சொந்தங்கள், நண்பர்கள் ஆகியோரை இழந்து, சிறகுகளற்ற பறவைக்கு ஒப்பாக இருக்கும் எனக்கு உயிர் வாழும் தேவை என்ன இருக்கிறது?(11) ஓ! பெரும் ஞானியே, கண்களை இழந்தவனான நான், ஒளியிழந்த நட்சத்திரத்தைப் போலவே இப்போது நாட்டை இழந்து, சொந்தங்களை இழந்து ஒளியில்லாமல் இருக்கிறேன்.(12) நண்பர்களும், ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, தெய்வீக முனிவரான நாரதர், தீவில் பிறந்தவரான கிருஷ்ணர் {வியாசர்} ஆகியோரும் ஆலோசனைகளைச் சொன்ன போது, அவற்றை நான் பின்பற்றவில்லை.(13) சபைக்கு மத்தியில் வைத்து கிருஷ்ணன், “ஓ! மன்னா, பகைமைகளை நிறுத்துவோம். உமது மகனே {துரியோதனனே} மொத்த நாட்டையும் எடுத்துக் கொள்ளட்டும். (பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களை மட்டுமே கொடுப்பீராக)” என்று எனக்கு நன்மையானதைச் சொன்னான். மூடனான நான் அந்த அறிவுரையைப் பின்பற்றாததால் இப்போது, எரிச்சலூட்டத்தக்க இந்தக் கவலையை அடைந்தேன்.(14)

பீஷ்மரின் நீதிமிக்க ஆலோசனைகளை நான் கேட்கவில்லை. ஐயோ, ஒரு காளையைப் போன்ற முழங்கும் துரியோதனனின் படுகொலையைக் கேட்டும்,(15) துச்சாசனனின் மரணம், கர்ணனின் அழிவு, துரோணச் சூரியனின் மறைவு ஆகியவற்றைக் கேட்டும் என் இதயம் துண்டுகளாக நொறுங்காமல் இருக்கிறதே.(16) ஓ! சஞ்சயா, முந்தைய நாட்களில் நான் செய்த எந்தத் தீச்செயலின் விளைவாக இன்று துன்புறுகிறேன் என்பதை என்னால் நினைவுகூரமுடியவில்லை.(17) விதிவகுக்கும் உயர்ந்தவன் {பிரம்மன்}, இந்த அளவுக்குத் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள விதித்திருக்கிறான் என்றால் நான் முந்தைய பிறவிகளில் பெரும்பாவங்களைச் செய்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.(18) என் சொந்தங்கள் அனைவரின் இந்த அழிவும், என் நலன் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவரின் இந்த நிர்மூலமும், விதியின் பலத்தாலேயே இந்த முதிர்வயதில் என்னை வந்தடைந்திருக்கிறது. இழிந்தவனான என்னைவிட இந்த உலகத்தில் வேறு எந்த மனிதன் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கிறான்?(19) நிலை இவ்வாறு இருப்பதால், உறுதிமிக்கத் தீர்மானத்துடன், பிரம்மலோகத்திற்கு இட்டுச்செல்லும் நீண்ட வழியில் நான் செல்வதை இந்த நாளே பாண்டவர்கள் பார்க்கட்டும்”[1] என்றான்”.(20)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மன்னன் திருதராஷ்டிரன் இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவனது துயரத்தை அகற்றுவதற்காகப் பின்வரும் வார்த்தைகளைச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது துயரத்தைக் கைவிடுவீராக. பெரியோரின் உதடுகளின் மூலம் வேதங்களையும், பல்வேறு சாத்திரங்கள் மற்றும் புனிதமான ஆகமங்களின் தீர்மானங்களையும் நீர் கேட்டிருக்கிறீர். சிருஞ்சயன், தன் மகனுடைய மரணத்தின் நிமித்தமாகப் பீடிக்கப்பட்டிருந்தபோது, அவனிடம் தவசிகள் சொன்ன அந்த வார்த்தைகளையும் நீர் கேட்டிருக்கிறீர்.(22) உமது மகன் {துரியோதனன்}, இளமையில் பிறக்கும் {தோன்றும்} செருக்கை {கொழுப்பை} அடைந்தபோது, நலன்விரும்பிகளால் உமக்குச் சொல்லப்பட்ட ஆலோசனைகளை நீர் ஏற்க மறுத்தீர். கனியை விரும்பிய நீர், உமக்கான உண்மையான நன்மை எதுவோ, அதைப் பேராசையினால் செய்யாமல் இருந்தீர்.(23) {அந்த} உமது அறிவே ஒரு கூரிய வாளைப் போல {இப்போது} உம்மைக் காயப்படுத்தியிருக்கிறது. பொதுவாகவே தீய நடத்தை கொண்டோரின் துணையையே நீர் நாடினீர்.(24) உமது மகன் {துரியோதனன்}, தன் ஆலோசகர்களாகத் துச்சாசனன், தீய ஆன்மாவான ராதையின் மகன் {கர்ணன்}, அதே அளவுக்குத் தீயவனான சகுனி, மூட புத்தி கொண்ட சித்திரசேனன், சல்லியன்[2] ஆகியோரையே கொண்டிருந்தான். உமது மகன் (தன் சொந்த நடத்தையினாலேயே) மொத்த உலகத்தையும் தன் எதிரியாக்கிக் கொண்டான்.(25)ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஓ! மன்னா, குருக்களின் மரியாதைக்குரிய தலைவரான பீஷ்மர், காந்தாரி, விதுரர், துரோணர், சரத்வான் மகனான கிருபர், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணன், நுண்ணறிவு கொண்ட நாரதர், இன்னும் பல முனிவர்கள் மற்றும் அளவிடமுடியாத சக்தி கொண்ட வியாசர் ஆகியோரின் வார்த்தைகளுக்கு உமது மகன் கீழ்ப்படியவில்லை.(26,27) உமது மகன் {துரியோதனன்} ஆற்றல் படைத்தவனாக இருப்பினும், அவன் சிறு மதி கொண்டவனாகவும், செருக்குடையவனாகவும், எப்போதும் போரை விரும்புபவனாகவும், தீயவனாகவும், வெறிகொண்ட மூர்க்கனாகவும், நிறைவற்றவனாகவும் இருந்தான்.(28) நீரோ கற்றறிந்தவராகவும், நுண்ணறிவு கொண்டவராகவும், எப்போதும் உண்மை பேசுபவராகவும் இருக்கிறீர். உம்மைப் போன்ற நேர்மையாளர்களும், அறிவாளிகளும் துயரத்தால் ஒருபோதும் திகைக்கமாட்டார்கள்.(29) {உமது மகன்களில்} எவரும் அறங்கருதவில்லை. போர் என்ற ஒற்றை வார்த்தையே அவர்களது உதடுகளில் இருந்தன. அதன் காரணமாகவே க்ஷத்திரிய வகையினர் முற்றாக அழிக்கப்பட்டு, உமது எதிரிகளின் புகழ் பெருகியிருக்கிறது.(30)

நடுவருக்கான இடத்தில் இருந்த நீரோ, நலம்பேணும் அறிவுரை என ஒரு வார்த்தையும் சொல்லாதிருந்தீர். அப்பணிக்குத் தகாத நீர், தராசுகளைச் சமமாக நிறுத்தவில்லை.(31) ஒவ்வொரு மனிதனும், தான் ஏற்கனவே செய்த ஏதோ ஒன்றுக்காக வருந்த வேண்டிய தேவையில்லாமல் தொடக்கத்திலிருந்தே நன்மையான செயல்களையே {முறைப்படி} செய்ய வேண்டும்.(32) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் துரியோதனன் மீது கொண்ட பாசத்தால் நீர் அவனுக்கு ஏற்புடையதையே செய்தீர். அதற்காகவே இப்போது நீர் வருந்த வேண்டியிருக்கிறது. எனினும், நீர் துயரத்துக்கு ஆட்படுவது உமக்குத் தகாது.(33) பள்ளத்தைக் கவனியாமல் தேனை நோக்கி மட்டுமே கண்களைச் செலுத்தும் மனிதன், தேனின் மீது தான் கொண்ட பேராசையின் மூலமே அழிவை அடைகிறான். அத்தகு மனிதன் உம்மைப் போலவே வருந்த வேண்டியிருக்கும்.(34) துயரப்படும் மனிதன் ஒருபோதும் செழிப்பை வெல்வதில்லை. துயரப்படுவதால் ஒருவன் தன் ஆசைகளின் கனிகளையே இழக்கிறான். மேலும் நமது விருப்பத்திற்குரிய பொருட்களை அடைவதற்கு அந்தத் துயரமே தடையாக இருக்கிறது. துயரத்தில் மூழ்குபவன் தன் முக்தியையும் {விடுதலையையும்} இழக்கிறான்.(35)

எரியும் கரியைத் தன் உடுப்பில் மறைக்கும் ஒரு மனிதன், அதற்குள் முடுக்கப்படும் நெருப்பினால் எரிக்கப்பட்டுத் தான் அடைந்த காயங்களுக்காக வருந்துவானானால், அவன் மூடன் என்றே அழைக்கப்படுவான்.(36) நீரும், உமது மகனும், உங்கள் வார்த்தைகளால் பார்த்த-நெருப்பை {அர்ஜுன நெருப்பைத்} விசிறி, உங்கள் பேராசையின் விளைவால் உண்டான செயல்களால் தெளிந்த நெய்யை {அந்நெருப்பில்} ஊற்றி, அந்நெருப்பைச் சுடர்விட்டெரியச் செய்து, அஃதை எரிக்கும் தழல்களாக்கினீர்கள்.(37) அந்நெருப்பு இவ்வாறு சுடர்விட்டபோது, உமது மகன்கள் பூச்சிகளைப் போல அதில் விழுந்தனர். எனினும், எதிரியின் கணைகள் எனும் நெருப்பில் எரிந்தவர்களான அவர்களுக்காக இப்போது நீர் வருந்துவது தகாது.(38) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்போது நீர் கொண்டிருக்கும் அழுகைக்கறை கொண்ட முகமானது, சாத்திரங்களால் அங்கீகரிக்கப்படவோ, நல்லோரால் புகழப்படவோ இல்லை.(39) நெருப்புப் பொறிகளைப் போன்ற இந்தக் கண்ணீர்த்துளிகள் யாருக்காகச் சிந்தப்படுகின்றனவோ, இறந்தோரான அவர்களையே அவை எரிக்கும். உமது துயரை அறிவினால் கொன்று, உமது பலத்தால் எழுவீராக” {என்றான் சஞ்சயன்}.(40) இவ்வாறே உயரான்ம சஞ்சயனால் அம்மன்னன் {திருதராஷ்டிரன்} தேற்றப்பட்டான். ஓ! எதிரிகளை எரிப்பவனே {ஜனமேஜயா}, அப்போது, விதுரன் தன் பேரறிவை வெளிப்படுத்தும் வகையில் மீண்டும் அம்மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} பேசினான்” {என்றார் வைசம்பாயனர்}.(41)

திருதராஷ்டிரனைத் தேற்றிய விதுரன்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 02-முதிய மன்னனுக்கு ஆறுதலளித்த விதுரன்; கொல்லப்பட்டவர்கள் சொர்க்கத்தையும், கொலை செய்தவர்கள் புகழையும் அடைவார்கள் எனவே கவலை கொள்வது தகாது எனத் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன விதுரன்; காலத்தின் வலிமை, வாழ்வின் நிலையாமை, ஞானத்தின் மேன்மை, முற்பிறவிச் செயல்களின் விளைவுகள் ஆகியவற்றைச் சொன்ன விதுரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஜனமேஜயா, விதுரன், விசித்திரவீரியன் மகனிடம் {திருதராஷ்டிரனிடம்} சொன்ன அமுதம் போன்ற எந்த வார்த்தைகள் அந்த மனிதர்களில் காளையை {திருதராஷ்டிரனை} மகிழ்ச்சியடைச் செய்தனவோ அவற்றைக் கேட்பாயாக.(1)

விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா! எழுவீராக. ஏன் பூமியில் கிடக்கிறீர்? உம்மைத் தாங்கிக் கொள்வீராக. ஓ! மன்னா, இதுவே உயிரினங்கள் அனைத்தின் இறுதி முடிவாகும்.(2) ஒன்றாகத் திரளும் அனைத்தும் முடிவில் அழிவையே அடைகிறது; உயர்ந்து செல்லும் அனைத்தும் விழப்போவது உறுதி. சேர்வது முடிவில் பிரிவது உறுதி; உயிரானது முடிவில் இறப்பது உறுதி.(3) ஓ! பாரதரே, வீரன் மற்றும் கோழை ஆகிய இருவரையும் யமன் இழுத்துச் செல்கிறான். ஓ! க்ஷத்திரியர்களில் காளையே, பிறகு ஏன் க்ஷத்திரியர்கள் போரில் ஈடுபட மாட்டார்கள்?(4) போரிடாதவனும் மாள்வதைக் காண்கிறோம். மேலும், போரிடுபவன் உயிர் தப்புவதையும் காண்கிறோம். எனினும், ஓ! மன்னா, நேரம் வரும்போது எவரும் தப்ப முடியாது.(5)

வாழும் உயிரினங்களைப் பொறுத்தவரையில், அவை முதலில் {ஆதியில்} இருப்பிலில்லை. இறுதியில் மீண்டும் அவை இருப்பில் இல்லாமல் போகின்றன. இதில் {நடுவில் மட்டுமே இருக்கும் ஒன்றில்} துயர் கொள்ள என்ன இருக்கிறது?(6) துயரில் ஈடுபடும் மனிதன் இறந்தவனைச் சந்திப்பதில் வெல்வதில்லை. துயரில் ஈடுபடுவதாலேயே ஒருவன் தானே சாவதில்லை. உலகத்தின் வழி இவ்வாறிருக்கையில், ஏன் நீர் துயரில் ஈடுபடுகிறீர்?(7) அனைத்துயிர்களையும், ஏன் தேவர்களையும் கூடக் காலன் இழுத்துச் செல்கிறான். ஓ! குருக்களில் சிறந்தவரே, காலத்திற்கு அன்புக்குரியவனோ, வெறுப்புக்குரியவனோ எவனும் கிடையாது.(8) புல்லின் நுனிகள் அனைத்தையும் கிழிக்கும் காற்றைப் போலவே, காலமும் அனைத்து உயிரினங்களையும் தன் வசப்படுத்துகிறது.(9) ஒரே இடத்தை நோக்கிச் செல்லும் வணிகக்கூட்டத்தின் உறுப்பினர்களைப் போலவே அனைத்து உயிரினங்களும் இருக்கின்றன. (அனைத்தையும் காலன் சந்திக்கும்போது) அவன் {காலன்} எவரை முதலில் சந்திக்கிறான் என்பது பெரிய காரியம் இல்லை {எவனுக்குக் காலம் வருகிறதோ அவன் முந்திச் செல்கிறான்}.(10)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் கொல்லப்பட்டவர்களைக் குறித்துத் துயருறுவது உமக்குத் தகாது. சாத்திரங்களுக்கு ஏதேனும் அதிகாரம் இருக்குமெனில், அவர்கள் அனைவரும் உயர்ந்த முடிவையே அடைந்திருக்க வேண்டும்.(11) அவர்கள் அனைவரும் வேதங்களை நன்கறிந்தவர்கள்; அவர்கள் அனைவரும் நோன்புகள் நோற்றவர்கள். எதிரியை முகத்துக்கு நேராகச் சந்தித்தே அவர்கள் அனைவரும் மரணத்தைச் சந்தித்திருக்கிறார்கள். இதில் கவலை கொள்ள என்ன இருக்கிறது?(12) (பிறப்பதற்கு முன்பு) அவர்கள் கண்ணுக்குத் தெரியாதவர்களாக இருந்தார்கள். அறியப்படாத அவ்விடத்தில் இருந்து வந்த அவர்கள் மீண்டும் காணப்படாமலேயே கண்ணுக்குத் தெரியாமல் போகிறார்கள். அவர்கள் உம்முடையவர்களல்ல; நீரும் அவர்களுடையவரல்ல. பிறகு இத்தகு மறைவால் என்ன கவலை ஏற்பட முடியும்?(13) கொல்லப்பட்ட ஒருவன் சொர்க்கத்தை வெல்கிறான் {அடைகிறான்}. கொலையைச் செய்தவனால் புகழ் வெல்லப்படுகிறது {அடையப்படுகிறது}. நம்மைப் பொறுத்தவரை, இவ்விரண்டும் {சொர்க்கமும், புகழும்} பெரும் தகுதியையே {புண்ணியத்தையே} தருகின்றன. எனவே, போரானது பலனற்றதில்லை.(14) இந்திரன், அனைத்து விருப்பங்களையும் அருளவல்ல உலகங்களை அவர்களுக்குக் கொடுப்பான் என்பதில் ஐயமில்லை. ஓ! மனிதர்களில் காளையே, அவர்கள் இந்திரனின் விருந்தினர்களாவர்.(15)

போரில் கொல்லப்பட்ட வீரர்கள் சொர்க்கத்திற்குச் செல்வதைவிட, அபரிமிதமான கொடைகளைக் கொண்ட வேள்விகளாலோ, தவங்களாலோ, கல்வியாலோ ஒரு மனிதன் சொர்க்கத்திற்கு வேகமாகச் செல்ல முடியாது.(16) வேள்வி நெருப்பைக் கொண்டிருக்கும் பகைவீரர்களின் உடல்களில் அவர்கள் தங்கள் கணை ஆகுதிகளைப் பொழிகிறார்கள். பெருஞ்சக்தி கொண்ட அவர்கள், பதிலுக்கு (தங்கள் எதிரிகளால் அவர்கள் மீது ஊற்றப்படும்) கணை ஆகுதிகளைப் தாங்கிக் கொள்கிறார்கள்.(17) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் ஒரு க்ஷத்திரியனுக்கு, போரைவிடச் சொர்க்கத்திற்குச் செல்லும் சிறந்த பாதை வேறேதும் இல்லை என நான் உமக்குச் சொல்கிறேன்.(18) அவர்கள் அனைவரும் உயர் ஆன்ம க்ஷத்திரியர்களும், துணிச்சல் கொண்டவர்களும், சபைகளின் ரத்தினங்களுமாவர். அவர்கள் உயர்ந்த அருள்நிலையை அடைந்திருக்கின்றனர். அவர்கள் நாம் கவலைகொள்ளத்தக்க மனிதர்களல்லர்.(19) ஓ! மனிதர்களில் காளையே, உம்மை நீரே தேற்றிக் கொண்டு, கவலையை விடுவீராக. செயல்கள் அனைத்தையும் கைவிட்டு, கவலையில் மூழ்குவது உமக்குத் தகாது.(20)

இவ்வுலகில் ஆயிரக்கணக்கான தாய்மாரும், தந்தைமாரும், மகன்களும், மனைவியரும் இருக்கின்றனர். அவர்கள் யாருடையவர்கள்? நாம் யாருடையவர்கள்?(21) கவலையில் இருந்து நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான காரணங்கள் எழுகின்றன. அந்த ஆயிரக்கணக்கான காரணங்களும் அச்சத்தையே உண்டாக்குகின்றன. எனினும், இவை அறியாமை கொண்டோரையே பாதிக்கும்; ஞானியருக்கோ அவை ஒன்றுமில்லை.(22) ஓ! குருக்களில் சிறந்தவரே, காலத்திற்கு அன்புக்குரியவரோ, வெறுப்புக்குரியவரோ எவருமில்லை. அனைவரையும் சமமாகவே காலம் இழுத்துச் செல்கிறது. காலமே அனைத்துயிரையும் வாழச் செய்கிறது. காலமே அனைத்தையும் அழிக்கவும் செய்கிறது. அனைவரும் உறங்கும்போது, காலம் மட்டுமே விழித்துக் கொண்டிருக்கிறது. காலம் தடுக்கப்பட முடியாததாகும்.(24) இளமை, அழகு, உயிர், உடைமைகள், உடல்நலம், நண்பர்களின் தோழமை ஆகிய அனைத்தும் நிலையற்றவையே. ஞானியாக இருப்பவன் இவை எவற்றிலும் ஒருபோதும் நாட்டங்கொள்ள மாட்டான்.(25)

உலகளாவிய {அனைவருக்கும் பொதுவான} ஒன்றுக்காக வருந்துவது உமக்குத் தகாது. துயரில் ஈடுபடுவதால் ஒருவன் இறக்கலாம். ஆனால் துயரமானது, அதில் ஈடுபடுவதால் ஒருபோதும் கனமற்றதாகாது.(26) நீர் உமதுதுயரைக் கனமானதாக உணர்ந்தால், அதில் ஈடுபடாமல் அதற்குப் பதலடியைக் கொடுக்க வேண்டும். துயரத்தில் ஈடுபடாமல் இருப்பதே துயரத்திற்கான மருந்தாகும்.(27) அதிலேயே வசிப்பதால் ஒருவன் அதைக் குறைக்க முடியாது. மறுபுறம் அதில் ஈடுபடுவதால் அது வளரவே செய்கிறது. தீமை நேரும்போதோ, அன்புக்குரிய ஒன்றை இழக்கும் நிலையிலோ துயரில் மனம் பீடிக்கப்படுபவர்கள் சிறுமதி கொண்டோரே.(28) உமது இதயம் எதில் வசித்திருக்கிறதோ {எதை விரும்புகிறதோ}, அது பொருளோ, அறமோ, இன்பமோ கிடையாது(29). மனநிறைவற்றவர்கள், செல்வத்தை அடைவதில் நேரும் திருப்பத்தின் இணக்கத்தில் திகைப்படைகிறார்கள். ஒருவனது உடலின் துயரமானது, மருந்தால் கொல்லப்படுவதைப் போலவே, அவன் மனத்துயரத்தை ஞானத்தால் கொல்ல வேண்டும். ஞானமே இந்தச் சக்தியைக் கொண்டிருக்கிறது. எனினும், மூடர்களால் மன அமைதியை அடையவே முடியாது.(30,31)

முந்தைய வாழ்வின் செயல்பாடுகள் ஒரு மனிதனை நெருக்கமாகப் பின்தொடர்ந்து, அவன் எங்கே கிடக்கிறானோ அங்கேயே கிடந்து, எங்கே தங்குகிறானோ அங்கேயே தங்கி, அவன் ஓடும்போது அவனுடனேயே ஓடுகிறது.(32) வாழ்வின் அச்சூழல்களில் ஒருவன் நல்லதாகவோ, அல்லதாகவோ செயல்பட்டிருந்தால், அவன் அதே போன்ற சூழ்நிலைகளில் இன்புறவோ, துன்புறவோ செய்கிறான்.(33) ஒருவன் செயல்களைச் செய்யும் (உடல் அமைப்புகளில்) அவ்வடிவங்களில் அவன் அதேபோன்ற வடிவங்களின் பலன்களால் இன்புறவோ, துன்புறவோ செய்கிறான்.(34) ஒருவன் தானே தனது நண்பனாவான், அதே போலவே அவனே அவனுக்கு எதிரியுமாவான். ஒருவன் தானே தன் நல்ல மற்றும் தீய செயல்பாடுகளின் சாட்சியாக இருக்கிறான்.(35) நற்செயல்களில் இருந்து இன்பநிலையெழுகிறது, தீச்செயல்களில் இருந்து பாவகரச் செயல்களே எழுகின்றன. ஒருவன் எப்போதும் தன் செயல்பாடுகளின் கனிகளையே அடைவான்.(36) ஓ! மன்னா, உம்மைப் போன்ற புத்திசாலி மனிதர்கள், அறிவால் அங்கீகரிக்கப்படாததும், அடிவேரையே (அறம் மற்றும் இன்பத்தைத்) தாக்குவதுமான பாவகரமான பெருங்குற்றங்களில் ஒருபோதும் மூழ்குவதில்லை” என்றான் {விதுரன்}.(37)

மண்குடமும் மனித வாழ்வும்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 03-விதுரனின் இனிய உரையாடலைத் தொடரும்படி கேட்டுக் கொண்ட திருதராஷ்டிரன்; மனித வாழவின் நிலையாமையை மீண்டும் எடுத்துச் சொன்ன விதுரன்…

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “ஓ! பெரும் ஞானியே, உன் வார்த்தைகளால் என் துயரம் விலகுகிறது. எனினும், நீ மீண்டும் பேசுவதை நான் கேட்க விரும்புகிறேன்.(1) உண்மையில், தீயவை சேர்வதாலும், விருப்பத்திற்குரிய பொருட்களை இழப்பதாலும் பிறக்கும் மனத்துயரத்தில் இருந்து ஞானியர் எவ்வாறு விடுபடுகின்றனர்” என்று கேட்டான்.(2)

விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஒருவன் துயரம் மற்றும் மகிழ்ச்சியில் இருந்து எவ்வழிகளில் தப்ப முடியுமோ அவற்றின் மூலமே, துயரம் மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டையும் அடக்கி ஒரு ஞானி அமைதியை அடைகிறான்.(3) ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, எந்தப் பொருட்களுக்காக நாம் கவலையடைகிறோமோ அவை அனைத்தும், குறுகிய காலத்தைக் கொண்டவையே {நிலையில்லாதவையே}. இவ்வுலகம் பலத்தைப் பொறுத்துக்கொள்ளாத ஒரு வாழை மரத்தைப் போல இருக்கிறது.(4)

ஞானி மற்றும் மூடன், பணக்காரன் மற்றும் ஏழை ஆகியோர் அனைவரும், சதை இழந்த உடல்களுடனும், வெறும் எலும்புகளுடனும், வாடி வதங்கிய தசைகளுடனும் {நரம்புகளுடனும்}, கவலையற்றுச் சுடலைகளில் {சுடுகாடுகளில்} உறங்கும்போது, அவர்களில் எவரின் தனிப்பட்ட அடையாளங்களைக் கண்டு அவர்களின் பிறப்பு மற்றும் அழகின் தன்மைகளை உயிர்பிழைத்திருப்போரால் உறுதிசெய்ய முடியும்? (மரணமடைந்ததும் அனைவரும் சமமே எனும்போது), எப்போதும் (இவ்வுலகப் பொருட்களால்) வஞ்சிக்கப்படும் அறிவைக் கொண்ட மனிதர்கள், ஒருவருக்கொருவர் பதவி மற்றும் நிலைகளில் {அந்தஸ்துகளில்} ஏன் ஆசை கொள்கிறார்கள்?(5,6) மனிதர்களின் உடல்கள் வீடுகளைப் போன்றன எனக் கல்விமான்கள் சொல்கின்றனர். காலம் வரும்போது இவை அழிக்கப்படுகின்றன. எனினும், ஒருவன் {ஆன்மா} அழிவில்லாதவனாக இருக்கிறான்.(7) ஒரு மனிதன், பழையதாகவோ, புதியதாகவோ இருக்கும் தன் ஆடையைக் களைந்து, மற்றொரு ஆடையை அணிவதைப் போலவே உடல்படைத்த அனைவரின் உடல்களும் அவர்களால் களையப்படுகின்றன.(8) ஓ! விசித்திரவீரியன் மகனே {திருதராஷ்டிரனே}, உயிரினங்கள் இன்பம் அல்லது துன்பத்தைத் தங்கள் செயல்களின் கனியாகவே அடைகின்றன.(9)

மண்குடங்களில் சில, குயவனின் சக்கரத்தில் இருக்கும்போதே நொறுங்குகின்றன, சில ஓரளவே வடிவங்கொள்ளும்போதும், சில நல்ல வடிவத்தை அடையும்போதும், சில சக்கரத்தில் இருந்து அகற்றும்போதும், சில கொண்டு செல்லப்படும்போதும், சில கொண்டு செல்லப்பட்ட பிறகும், சில ஈரமாக இருக்கும் போதும், சில உலர்ந்திருக்கும்போதும், சில சுடப்பட்ட பிறகும், சில உலையில் இருந்து எடுக்கப்படும்போதும், சில உலையில் இருந்து எடுக்கப்பட்ட பிறகும், சில பயன்படுத்தப்படும்போதும் நொறுங்குவதைப் போலவே உடல்படைத்த உயிரினங்களின் உடல்களும் அழிகின்றன.(11-13) சிலர் கருவறையில் இருக்கும்போதே அழிவை அடைகின்றனர், சிலர் கருவறையை விட்டு வெளியேறியதும், சிலர் வெளியேறிய அடுத்த நாள், சிலர் அரை மாதம் சென்றோ, ஒரு மாதத்திலோ, சிலர் நடு வயதிலும், சிலர் முதிர் வயதிலும் அழிவை அடைகின்றனர்.(14-15)

உயிரினங்கள் தங்கள் முந்தைய வாழ்வுகளில் செய்த செயல்களுக்கு ஏற்பவே பிறக்கவோ, இறக்கவோ செய்கின்றனர். உலகத்தின் வழி இவ்வாறு இருக்கும்போது, நீர் ஏன் துயரத்தில் ஈடுபடுகிறீர்?(16) மனிதர்கள், நீர்விளையாட்டில் நீந்தும் போது, சில வேளைகளில் மூழ்குவதையும், சில வேளைகளிலும் மேலெழுவதையும் போலவே உயிரினங்களும் வாழ்வெனும் ஓடையில் மூழ்கி மேலெழுகின்றன. ஞானம் குறைந்தவர்கள், தங்கள் செயல்களின் விளைவாலேயே துன்புறவோ, அழிவடையவோ செய்கின்றனர்.(17,18) எனினும், வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்ய விரும்பி அறம் நோற்கும் ஞானியர், இவ்வுலகில் உயிரினங்களுடைய தோற்றத்தின் உண்மையான இயல்பை அறிந்து, இறுதியாக உயர்ந்த முடிவை அடைகின்றனர்” என்றான் {விதுரன்}.(19)

தோற்றம், வளர்ச்சி மற்றும் மறைவு! – ஸ்திரீ பர்வம் பகுதி – 04-உயிரானது கருவறையில் வசிக்கும் முறையையும், பிறந்து அடையும் துன்பத்தையும், அதன் இறப்பையும் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன விதுரன்…

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “ஓ! பேசுபவர்களில் முதன்மையானவனே, இவ்வுலகெனும் அடர்க்காடு எவ்வாறு அறியப்பட வேண்டும்? இதை நான் கேட்க விரும்புகிறேன். இதைக் கேட்கும் எனக்கு நீ சொல்வாயாக” என்று கேட்டான்.(1)

விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “உயிரினங்களின் செயல்பாடுகள் அனைத்தையும் நான் அவற்றின் முதல் கருத்தறிப்பிலிருந்தே விளக்குகிறேன். தொடக்கத்தில் அது {உயிரானது} குருதி மற்றும் உயிர்நீரின் கலவையில் {சுக்லசோணிதத்தில்} வாழ்கிறது. அதன் பிறகு அது மெல்ல மெல்ல வளர்கிறது. ஐந்து மாதங்கள் கடந்ததும் அது வடிவத்தை ஏற்கிறது.(2) அடுத்தாக {ஆறாம் மாதத்தில்} அங்கங்கள் அனைத்தும் வளர்ந்த நிலையில் முதிர்கருவாகி, சதையும், குருதியும் கலந்த தூய்மையற்ற ஓரிடத்தில் வாழ்கிறது.(3) பிறகு, காற்றின் செயல்பாட்டின் மூலம், அதன் அடி உறுப்புகள் தலைகீழாக மாறி, தலையானது கீழே வருகிறது. இந்நிலையிலேயே கருப்பையின் வாயிலை அடைந்து, பல்வேறு துன்பங்களை அனுபவிக்கிறது.(4) கருப்பைச் சுருங்கி விரிவதன் விளைவாலும், தன் முந்தைய செயல்பாடுகள் அனைத்தின் விளைவாலும் அந்த உயிரினம் வெளியே வருகிறது. அதன் பிறகு அது தன்னை நோக்கி விரைந்து வரும் இவ்வுலகின் தீமைகளை எதிர்கொள்கிறது. இறைச்சியை நுகர்ந்து வரும் நாய்களைப் போல இடர்கள் அதை நோக்கி வருகின்றன.(5)

அதன்பிறகு, அது தன் முந்தைய செயல்களில் கட்டுப்பட்டிருக்கும்போது, பல்வேறு நோய்கள் அதை அணுகுகின்றன.(6) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புலனுணர்வுகள், பெண்கள், செல்வம், மற்றும் வாழ்வின் பிற இனிய பொருட்களில்ல் கட்டுப்பட்டிருக்கும் அதைப் {மனித ஆண் உயிரினத்தைப்} பல்வேறு தீமைகள் அணுகுகின்றன.(7) இதனால் பிடிக்கப்படும் அது {அவன்} ஒரு போதும் மகிழ்ச்சியை அடைவதில்லை. அந்தப் பருவத்தில், நன்மையான, அல்லது தவறான தன் செயல்களின் கனிகளை அடைவதில் அது {அவன்} தவறுகிறது {தவறுகிறான்}. எனினும் சிந்தனையில் தங்களின் இதயங்களை நிலைக்கச் செய்பவர்கள், தங்கள் ஆன்மாக்களைப் பாதுகாப்பதில் வெற்றியடைகிறார்கள்.(8) தன் புலன்களால் ஆளப்படும் ஒருவன், தன் வாயிலில் வந்திருக்கும் காலனை அறிவதில்லை. இறுதியாக, யமனின் தூதர்களால் இழுக்கப்படும் அவன், குறித்த நேரத்தில் தன் அழிவைச் சந்திக்கிறான்.(9) புலன்களின் கலக்கத்தால் அவன் செய்த நன்மையோ, தீமையோ, தொடக்கத்தில் செய்யப்படுபவையே. இவற்றின் கனிகளால் இன்புறவோ, துன்புறவோ செய்யும் அவன், தற்கொலைக்குச் சமமான தன் செயல்பாடுகளில் மீண்டும் அலட்சியம் கொள்கிறான்.(10)

ஐயோ, உலகம் வஞ்சிக்கப்பட்டு, பேராசையானது அதை {உலகத்தைத்} தன் ஆளுகையின் கீழ் கொண்டு வருகிறது. பேராசை, கோபம், அச்சம் ஆகியவற்றால் அறிவை இழக்கும் ஒருவன் தன்னையே உணர்வதில்லை.(11) தனது பிறப்பின் {குலவழியின்} பெருமையால் இன்பத்தில் நிறையும் ஒருவன், உயர்பிறப்பாளர்களையும் இழிவுசெய்கிறான். செல்வத்தின் செருக்கால் பெருகும் அவன், ஏழைகளை ஏளனம் செய்வதும் காணப்படுகிறது.(12) ஒருவன் அடுத்தவரை அறியாமை கொண்ட மூடர்களாகக் கருதுகிறான், அனால், தன்னைக் குறித்து ஆராய்வதேயில்லை.(13)

ஞானிகளும், ஞானமற்றவர்களும், செல்வந்தரும், செல்வமற்றவர்களும், உயர்ந்த பிறவியும், தாழ்ந்த பிறவியும், மதிக்கப்படுபவர்களும், மதிக்கப்படாதவர்களும்,(14) என அனைவரும், சதையற்றதும், வற்றிய தசைகளால் இணைக்கப்படும் வெறும் எலும்புகளை மட்டுமே கொண்டதுமான உடல்களுடன், இறந்தோரின் இடத்திற்குச் சென்று, அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபடும்போது,(15) மேற்கண்டவர்களின் பிறப்பையும், அழகையும் குறித்து எந்த அடையாளங்களைக் கொண்டு உறுதி செய்ய முடியும்?(16)

இதே வகையிலேயே அனைவரும், வெறுந்தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறார்கள் எனும்போது, ஏன் மனிதர்கள் தங்கள் புலனுணர்வை மறந்து, ஒருவரையொருவர் வஞ்சிக்க விரும்ப வேண்டும்?(17) ஒருவன் (சாத்திரங்களில் இருக்கும்) இந்தச் சொலவடையை {பழமொழியை [ஸ்ருதியைத்]} தன் கண்களால் கண்டோ, பிறரிடம் இருந்து கேட்டோ இந்த நிலையற்ற உலக வாழ்வில் தொடக்கக் காலத்திலிருந்தே அறத்தைப் பின்பற்றிவந்தால், அவன் உயர்ந்த முடிவை {கதியை} அடைகிறான்.(18) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இவையாவற்றையும் கற்றவன், எந்த வழிகளில் உண்மையைப் பின்பற்றிச் சென்றாலும், அவற்றில் அவன் வெற்றியடைகிறான்” என்றான் {விதுரன்}.(19)

இடர்களும் தேனும்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 05-இடர்களுக்கு மத்தியிலும், பேராபத்திலும் கூட மனிதன் உயிர்வாழும் ஆசைகொண்டிருப்பதை உவமையின் மூலம் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன விதுரன்…

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “கடமைகளெனும் அடர்க்காட்டைப் பாதுகாப்பாகக் கடக்க அறிவாற்றும் வழிமுறைகள் குறித்த அனைத்தையும் எனக்கு விபரமாகச் சொல்வாயாக” என்று கேட்டான்.(1)விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “தான்தோன்றியை {சுயம்புவை} வணங்கி, உமது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, வாழ்வெனும் அடர்க்காட்டைக் குறித்துப் பெருந்தவசிகள் என்ன சொல்கின்றனர் என்பதை நான் உமக்குச் சொல்கிறேன்.(2)

பேருலகில் வாழும் ஒரு குறிப்பிட்ட பிராமணன், ஒரு சந்தர்ப்பத்தில், அடைவதற்கரியதும், இரைதேடும் விலங்குகள் நிறைந்ததுமான ஒரு பெரிய காட்டை அடைந்தான்.(3) அஃது உரக்க முழங்கிக் கொண்டிருக்கும் சிங்கங்கள், புலிகள் மற்றும் யானைகளைப் போலத் தெரியும் பிற விலங்குகள் ஆகியவற்றால் அனைத்துப் பக்கங்களிலும் நிறைந்திருந்தது. யமனே அச்சங்கொள்ளும் வகையில் அந்தக் காடு பயங்கரத் தன்மையை அடைந்திருந்தது.(4) ஓ! ஏதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே} அந்தக் காட்டைக் கண்ட அந்தப் பிராமணரின் இதயம் அதிகக் கலக்கத்தை அடைந்தது. ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, அவருக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது, மேலும் அச்சத்திற்கான பிற அடையாளங்கள் அனைத்தும் அவரில் வெளிப்பட்டன.(5)

அதற்குள் {காட்டுக்குள்} நுழைந்த அவன், திசைப்புள்ளிகள் அனைத்திலும் தன் கண்களைச் செலுத்திக் கொண்டு, யாரேனும் ஒருவரின் பாதுகாப்பை நாடுவதற்காக அங்கேயும், இங்கேயும் ஓடத் தொடங்கினான்.(6) அவன், அந்தப் பயங்கர உயிரினங்களிடம் இருந்து தப்பும் விருப்பத்தால் அச்சத்துடன் ஓடிக் கொண்டிருந்தான். எனினும் அவன், அவற்றிடம் இருந்து தொலைவாகச் செல்லவோ, அவற்றின் முன்னிலையில் இருந்து விடுபடவோ தவறினான்.(7) அப்போது அவன், அந்தப் பயங்கரக்காடானது ஒரு பெரிய வலையால் சூழப்பட்டிருப்பதையும், {அந்தக் காட்டுக்கு வெளிப்புறத்தில்} அங்கே அச்சத்தையேற்படுத்தக்கூடிய ஒரு பெண் தன் கரங்களை விரித்தபடி நின்றிருப்பதையும் கண்டான்.(8) அந்தப் பெரும் காடானது, நெடும்பாறைகளைப் போல நெடியவையும், சொர்க்கத்தையே {வானத்தையே} தொட்டுக்கொண்டிருந்தவையும், பயங்கர வடிவைக் கொண்டவையுமான ஐந்து தலை பாம்புகள் பலவற்றாலும் சூழப்பட்டிருந்தது.(9) அதற்குள் {அந்தக் காட்டுக்குள்} புற்களால் சூழப்பட்டதும், செடிகொடிகளால் சுற்றிலும் மறைக்கப்பட்டிருந்ததுமான ஒரு குழி {கிணறு} இருந்தது.(10)

அந்தப் பிராமணன் இவ்வாறு திரிந்து கொண்டிருந்த போது, கண்களுக்குப் புலப்படாத அந்தக் குழிக்குள் விழுந்தான். ஒன்றொடொன்றாகப் பின்னிப் பிணைந்து கிண்ட அந்தக் கொடிகளின் பின்னலில் அகப்பட்டுக் கொண்ட அவன், பலாமரத்தின் கனியை {பலாப்பழத்தைப்} போல அதில் தொங்கிக் கொண்டிருந்தான். கால் மேலாகவும், தலை கீழாகவும் அங்கேயே அவன் தொங்கிக் கொண்டிருந்தான்.(11,12) அந்நிலையிலேயே பல்வேறு இன்னல்கள் அவனை மூழ்கடித்தன. அவன் அந்தக் குழிக்குள் வலிமைமிக்கப் பெரும் பாம்பொன்றைக் கண்டான். மேலும் அவன் அந்தக் குழியின் வாயிலருகே ஒரு பெரும் யானை நிற்பதையும் கஙண்டான்.(13) கரிய நிறம் கொண்ட அந்த யானையானது, ஆறு முகங்களையும், பனிரெண்டு கால்களையும் கொண்டிருந்தது. மேலும் அந்த விலங்கு {யானை} கொடிகளாலும், மரங்களாலும் மறைக்கப்பட்டிருந்த அந்தக் குழியை நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருந்தது.(14) (அந்தக் குழியின் வாயருகே இருந்த) மரத்தின் கிளைகளில் பயங்கர வடிவிலான தேனீக்கள் தங்கள் கூட்டில் சேகரிக்கப்பட்ட தேனைக் குடிப்பதற்காக அங்கே பெருமளவில் மொய்த்து கொண்டிருந்தன.(15)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்துயிர்களுக்கும் இனியதாக இருப்பினும், குழந்தைகளை மட்டுமே ஈர்க்கும் அந்தத் தேனை அவை {அந்தத் தேனீக்கள்} மீண்டும் மீண்டும் விரும்பின.(16) (கூட்டில் சேகரிக்கப்பட்ட) அந்தத் தேனானது, பல ஊற்றுகளாகக் கீழே வழிந்தது. குழிக்குள் தொங்கிக் கொண்டிருந்த அம்மனிதன் அதைத் தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்தான்.(17) இத்தகு துயரகரமான நிலையில் அந்தத் தேனைக் குடித்தாலும், அவனது தாகம் அடங்கவில்லை. மீண்டும் மீண்டும் தாகம் தனியாத அவன் மேலும் மேலும் தேனை விரும்பினான்.(18) ஓ! மன்னா, அப்போது அவன் உயிரைக் குறித்துக் கவலையடையாமல் இருந்தான். அப்படிப்பட்ட அவ்விடத்தில்கூட அம்மனிதன் உயிர்வாழும் நம்பிக்கையுடனேயே இருந்தான். கருப்பு மற்றும் வெள்ளை எலிகள் பல, அம்மரத்தின் வேர்களை உண்டு கொண்டிருந்தன.(19)

இரைதேடும் விலங்குகளிடமும், காட்டின் வெளிப்புறத்தில் இருக்கும் அந்தப் பெண்ணிடமும், அந்தக் கிணற்றின் அடியில் இருக்கும் பாம்பிடமும், உயரத்தில் நிற்கும் அந்த யானையிடமும்,(20) எலிகளின் செயல்பாட்டால் கீழேவிழ இருக்கும் மரத்திடமும், தேனைச் சுவைப்பதற்காகப் பறந்து கொண்டிருந்த அந்தத் தேனீக்களிடமும் அவனுக்கு அச்சமிருந்தது.(21) அந்தக் காட்டில் தன் புலனுணர்வுகளை இழந்திருக்கும் அந்த அவல நிலையிலும், அவன் தன் வாழ்வை நீட்டிப்பதில் உள்ள நம்பிக்கையை {உயிரோடு வாழும் நம்பிக்கையை} ஒருபோதும் இழக்கவில்லை” {என்றான் விதுரன்}.(22)

விதுரனின் உவமை விளக்கம்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 06-தான் சொன்ன கதை ஓர் உவமையென்றும், அந்த உவமைக்கான விளக்கத்தையும் சொன்ன விதுரன்…

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “ஐயோ, அம்மனிதனின் துயரம் மிகப்பெரியது, அவனது வாழ்வு முறையும் வலி நிறைந்ததே. ஓ! பேசுபவர்களில் முதன்மையானவனே, வாழ்வுக்கான அவனது ஈடுபாடு எங்கிருந்தது? மேலும் அவனது இன்பம் எங்கிருந்தது? {அவன் அங்கே எவ்வாறு இன்புற்றிருக்க முடியும்?}(1) அந்த மனிதன் வசித்து வந்ததும், அறம்பயில்வதற்கு அனுகூலமற்றதுமான அந்த இடம் எங்கிருக்கிறது? ஓ!, அம்மனிதன் அந்தப் பெரும் பயங்கரங்களில் இருந்து எவ்வாறு விடுபடுவான்?(2) இவையனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. அப்போது அவனுக்காக நாம் முறையாக முயற்சி செய்யலாம். அவனை மீட்கும் வழியில் கிடக்கும் கடினத்தன்மையை நினைத்து நான் பெரிதும் இரங்குகிறேன் {கருணை கொள்கிறேன்}” என்றான்.(3)

விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, மோக்ஷதர்மத்தை {வீடுபேற்றை} அறிந்தோர் இதை ஓர் உவமையணியாகக் குறிப்பிடுவார்கள். இதை முறையாகப் புரிந்து கொள்ளும் மனிதன், அதன் பிறகு அருள் உலகங்களை அடைவான்.(4) காடுகளாக விளக்கப்படுவது பேருலகமாகும். அதற்குள் அளவான இடத்துடன் கூடிய அடைதற்கரிய காடானது ஒருவனின் சொந்த வாழ்வாகும்.(5) இரைதேடும் விலங்குகளாகச் சொல்லப்படுவது (நம்மை ஆட்கொள்ளும்) நோய்களாகும். பெரும் உடலுடன் அந்தக் காட்டில் வசிக்கும் பெண்ணானவள்,(6) நிறத்தையும், அழகையும் அழிக்கும் முதுமையாக ஞானியரால் காணப்படுகிறாள். குழியாக {கிணறாகச்} சொல்லப்படுவது உடல், அல்லது உடல்கொண்ட உயிரினங்களின் உடற்கட்டாகும்.(7) அந்தக் குழியின் அடியில் வசிக்கும் பெரும்பாம்பானது, உடல்கொண்ட அனைத்து உயிரினங்களையும் அழிக்கும் காலமாகும். உண்மையில், அதுவே அண்டத்தை அழிக்கிறது.(8) 

அம்மனிதன் அகப்பட அந்தக்குழியில் வளர்ந்திருக்கும் செடிகொடிகளே, ஒவ்வொரு உயிரினமும் பேணி வளர்க்கும் உயிர்மீது கொண்ட {உயிர்வாழும்} விருப்பமாகும்.(9) ஓ! மன்னா, குழியின் வாயிலில் நிற்கும் மரத்தை நோக்கி வரும் ஆறு தலை யானையானது, வருடம் எனச் சொல்லப்படுகிறது. அதன் ஆறு முகங்கள் பருவகாலங்களையும், பனிரெண்டு கால்கள் பனிரெண்டு மாதங்களையும் குறிக்கின்றன.(10) மரத்தை உண்ணும் வெள்ளை மற்றும் கருப்பெலிகள், உயிரினங்களின் வாழ்நாளைக் குறைக்கும் பகல்களும், இரவுகளுமாகும். தேனீக்களாகச் சொல்லப்படுபவை நமது ஆசைகளே ஆகும்.(11) தேனைச் சொட்டும் எண்ணற்ற ஓடைகள், நமது ஆசைகளின் நிறைவால் கிட்டும் இன்பங்களாகும். மனிதர்கள் அதற்கே {இன்பங்களுக்கே} அடிமைகளாக இருக்கின்றனர்.(12) வாழ்வின் போக்கை இவ்வாறே ஞானியர் அறிகின்றனர். அந்த ஞானத்தினாலேயே அவர்கள் அவற்றின் கட்டுகளை அறுத்து வெற்றியடைகின்றனர்” என்றான் {சஞ்சயன்}.(13)

அஹிம்சையே பேரறம் என்ற விதுரன்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 07-அமுதத்துக்கு நிகரான விதுரனின் வார்த்தைகளை மீண்டும் கேட்க விரும்பிய திருதராஷ்டிரன்; மனிதனை ஆட்கொள்ளும் நோய்கள், முதுமை ஆகியவற்றையும், அவற்றிலிருந்து ஞானிகள் எவ்வாறு தப்புகின்றனர் என்பதையும், புலனுணர்வுகளின் நுகர்வால் வாழ்நாள் குறைவதையும், மறுபிறவி அடையாமையே மனிதனுக்கு வேண்டிய விடுதலை என்பதையும், அஃதை அடைவதற்கு வேள்விகளை விடவும், நோன்புகளைவிடவும் அஹிம்சையே முக்கியமானது என்பதையும் திருதராஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன விதுரன்…

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “நீ சொன்ன இந்த உவமை அற்புதமானது. நிச்சயமாக, நீ உண்மையை அறிந்திருக்கிறாய். அமுதம் போன்ற உன் பேச்சைக் கேட்ட பிறகும், இன்னும் உன்னிடம் நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(1)

விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, உலகக் கட்டுகளில் இருந்து ஞானியர் தங்களை விடுவித்துக் கொள்ளும் அறிவின் வழிமுறைகளைக் குறித்து மீண்டும் விவரமாகச் சொல்கிறேன் கேட்பீராக.(2) ஓ! மன்னா, நீண்ட தொலைவுக்குப் பயணம் செய்யும் ஒரு மனிதன், களைப்படையும்போது சில நேரங்களில் நிற்க வேண்டியிருக்கும்,(3) அதேபோலவே, ஓ! பாரதரே, சிறுமதிகொண்டவர்கள், வாழ்வின் நீண்ட வழியில் பயணித்து, கருவறையில் மீண்டும் மீண்டும் பிறத்தல் என்ற வடிவில் அடிக்கடி நின்றுவிடுகின்றனர். எனினும், ஞானியர் அந்தக் கடனிலிருந்து விடுபடுகின்றனர்.(4) சாத்திரங்களை அறிந்தோர் இதன் காரணமாகவே வாழ்வை நீண்ட வழி பயணமென்று விவரிக்கின்றனர். ஞானியரும், கடினங்கள் நிறைந்த வாழ்வின் சுழற்சியை ஒரு காடாகவே சொல்கின்றனர்.(5)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உயிரினங்கள் அசைவனவாகவோ, அசையாதனவாகவோ இருப்பினும் அவை இவ்வுலகிற்கு மீண்டும் மீண்டும் திரும்ப வேண்டும். ஞானிகள் மட்டுமே தப்புவார்கள்.(6) மனம் மற்றும் உடல் சம்பந்தமாக மனிதர்களுக்கு நேரும் நோய்கள், புலன்படுபவையாகவோ, புலன்படாதவையாகவோ இருப்பினும், ஞானியர் அவற்றை இரைதேடும் விலங்குகளாகவே சொல்லியிருக்கின்றனர்(7) ஓ! பாரதரே, மனிதர்கள் எப்போதும் அவற்றால் பீடிக்கப்பட்டுத் தடுக்கப்படுகிறார்கள் {துன்புற்றுப் பயணத்தைத் தொடராமல் நிற்கின்றனர்}. மேலும் அவர்களின் சொந்த செயல்பாடுகளையே பிரதிபலிக்கும் அந்த இரைதேடும் விலங்குகள் {நோய்கள்}, அந்தச் சிறுமதியாளர்களிடம் எந்தக் கவலையையும் உண்டாக்குவதில்லை.(8) ஓ! ஏகாதிபதி, ஒரு மனிதன் எவ்வாறாவது நோய்களில் இருந்து விடுபட்டால், பிறகு அழகை அழிக்கக்கூடிய முதுமை அவனை வெல்கிறது.(9) அம்மனிதன் ஒலி, வடிவம், சுவை, தீண்டல், மணம் என்ற புலனுணர்வுகளுக்குரிய பொருட்களின் சேற்றில் மூழ்கி அவனைப் பாதுகாக்க ஏதுமின்றி அங்கேயே {அந்தச் சேற்றிலேயே விழுந்து} கிடக்கிறான்.(10) அதேவேளையில், வருடங்கள், பருவகாலங்கள், மாதங்கள், அரைமாதங்கள் {பக்ஷங்கள்}, பகல்கள், இரவுகள் ஆகியன அடுத்தடுத்து வந்து அழகைக் கெடுத்து, அவனுக்காக ஒதுக்கப்பட்ட காலத்தைக் குறைக்கின்றன.(11) இவை அனைத்தும் காலனின் தூதர்களே. எனினும், சிறுமதி படைத்தோர் அவற்றை இவ்வாறு அறிவதில்லை. உயிரினங்கள் அனைத்தையும் அவற்றின் செயல்பாடுகளின் மூலமே விதியைச்சமைப்பவன் ஆள்கிறான் என ஞானியர் சொல்கின்றனர்.(12)

ஓர் உயிரினத்தின் உடல் தேர் என்றழைக்கப்படுகிறது. வாழ்வின் கொள்கையே {புத்தியே} அதன் {அந்தத் தேரின்} சாரதியாகும். புலன்களே குதிரைகளாகும். நமது செயல்களும், அறிவுமே அதன் கடிவாளங்களாகும்.(13) ஓடிக்கொண்டிருக்கும் அக்குதிரைகளைப் பின்தொடர்ந்து செல்வோர், மறுபிறப்பெனும் சுழற்சிக்குள் இவ்வுலகிற்கு மீண்டும் மீண்டும் வர வேண்டும்.(14) எனினும், தன் அறிவால் அவற்றைக் கட்டுப்படுத்தும் தன்னடக்கத்துடன் கூடிய ஒருவன் அவ்வாறு மீண்டும் வருவதில்லை.(15) உண்மையான சக்கரம் போலவே சுழலும் வாழ்வெனும் சக்கரத்தில் திரிந்தும் திகைப்படையாதோர், உண்மையில் மறுபிறப்பெனும் சுழற்சியில் திரிவதில்லை.(16) ஞானம் கொண்ட ஒருவன், மறுபிறப்பெனும் கடனைத் தவிர்க்க நிச்சயம் முயற்சிக்க வேண்டும். ஒருவன் இதில் அலட்சியமாக இருக்கக்கூடாது, அலட்சியமே மீண்டும் மீண்டும் நம்மை அதில் {மறுபிறப்பெனும் கடலில்} ஆழ்த்தும்.(17)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, கோபம் மற்றும் பேராசையை அடக்கி, உள்ளடக்கத்துடனும், உண்மை நிறைந்த பேச்சுடனும், இருக்கும் ஒரு மனிதனே அமைதியை அடைவதில் வெல்கிறான்.(18) திகைப்படையும் மூடரின் உடலானது யமனின் தேர் என்று அழைக்கப்படுகிறது. ஓ! மன்னா, அத்தகு மனிதன் நீர் அடைந்ததையே அடைவான்.(19) ஓ! பாரதரே, நாட்டையும், நண்பர்கள் மற்றும் பிள்ளைகள் ஆகியோரையும் இழப்பதும், இது போன்ற இழப்புகளும், ஆசையின் ஆதிக்கத்தில் இருப்பவனையே மூழ்கடிக்கும்.(20) ஞானியான ஒருவன், பெருந்துன்பங்கள் அனைத்திற்கும், அறிவெனும் மருந்தை இட வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மா கொண்ட ஒரு மனிதன், உண்மையில் நன்மைதரக்கூடியதும், கிட்டத்தட்ட அடையமுடியாததுமான ஞானமருந்தை அடைந்து கவலை என்றழைக்கப்படும் மிக முக்கிய நோயை உண்மையில் கொன்றுவிடுவான் {குணப்படுத்துவான்}.(21) துயரத்தில் இருக்கும் ஒரு மனிதனை, தன்னடக்கமுள்ள அவனது ஆன்மாவாலான்றி, ஆற்றலாலோ, செல்வத்தாலோ, நண்பர்களாலோ, நலன் விரும்பிகளாலோ {நோயிலிருந்து} குணப்படுத்த முடியாது. எனவே, ஓ! பாரதரே, அனைத்துத் தீங்குகளையும் செய்யாமலிருக்கும், அல்லது அனைத்து உயிரினங்களிடமும் நட்புடனிருக்கும் பெருங்கடமையை {அஹிம்சையைப்} பன்பற்றி நன்னடத்தையை நோற்பீராக.(22)

தற்கட்டுப்பாடு, துறவு, கவனக்குவிப்பு ஆகியவையே பிரம்மத்தின் மூன்று குதிரைகளாகும். இந்தக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும் தன்னான்மா எனும் தேரில் செல்லும் ஒருவன், நன்னடத்தை எனும் கடிவாளத்தின் துணை கொண்டு, மரணம் குறித்த அச்சமனைத்தையும் விட்டு, அதை {அந்தத் தேரைச்} செலுத்திச் பிரம்மலோகத்தை அடைகிறான்.(23) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, எந்த மனிதன் தீங்கிழையாமையை அனைத்து உயிரினங்களுக்கும் உறுதி செய்கிறானோ, அவன் அருளாளனான விஷ்ணுவின் உயர்ந்த உலகங்களுக்குச் செல்கிறான்.(24) உயிரினங்கள் அனைத்திற்கும் தீங்கிழையாமையை உறுதி செய்வதால் ஒருவன் அடையும் கனியை, ஆயிரம் வேள்விகளாலோ, தினநோன்புகளாலோ அடையமுடியாது.(25) அனைத்துப் பொருட்களிலும் தன்னை {சுயத்தை} விட அன்புக்குரியது வேறு எதுவுமில்லை. ஓ! பாரதரே, மரணத்தை எந்த உயிரினமும் விரும்புவதில்லை. எனவே, அனைவருக்கும் கருணை காட்டப்பட வேண்டும்.(26) பல்வேறு வகைத் தவறுகளால், தங்கள் சொந்த அறிவெனும் வலையிலேயே சிக்கும், தீயோரும், நல்லோரும் மீண்டும் மீண்டும் உலகத்தில் திரிய நேர்கிறது. எனினும், நுண்ணியப் பார்வை கொண்ட ஞானியரே பிரம்மத்துடன் ஒன்றுகலந்துவிடுகின்றனர்” {என்றான் விதுரன்}”.(27)

தேவரகசியம்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 08-மயக்கமடைந்து கீழே விழுந்த திருதராஷ்டிரன்; போரில் நேர்ந்த படுகொலைக்கான கமுக்கமான வரலாற்றை விளக்கி திருதராஷ்டிரனைத் தேற்றிய வியாசர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விதுரனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகும், தன் மகன்களின் மரணம் குறித்த துயரத்தால் பீடிக்கப்பட்ட குருக்களின் தலைவன் {திருதராஷ்டிரன்}, உணர்விழந்தவனாகக் கீழே தரையில் விழுந்தான்.(1) அவனது நண்பர்களும், தீவில் பிறந்தவரான {துவைபாயனரான} வியாசரும், விதுரன் மற்றும் சஞ்சயன் ஆகியோரும், நலன்விரும்பிகள் பிறரும், வாயில் காப்போரும், அவனது நம்பிக்கையைப் பெற்றோரும், அவன் விழுந்த நிலையைக் கண்டு,(2) அவனது உடலில் குளிர்ந்த நீரைத் தெளித்து, பனை ஓலைகளால் விசிறிவிட்டுத் தங்கள் கரங்களால் அவனை மெல்லத் தடவினர். அந்நிலையிலேயே நீண்ட நேரம் கிடந்த மன்னனை {திருதராஷ்டிரனை} அவர்கள் தேற்றினர்.(3)

நீண்ட நேரத்திற்குப் பிறகு உணர்வுகள் மீண்டவனான அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, தன் மகன்களின் மரணம் குறித்த துயரில் மூழ்கி, நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தான்.(4) பிறகு அவன் {திருதராஷ்டிரன்}, “மனதநேயத்துக்கு ஐயோ, மனித உடலுக்கு ஐயோ, மனிதத்தன்மையாலேயே இவ்வாழ்வு அடிக்கடி துயரங்களை அனுபவிக்கிறது.(5) ஐயோ, மகன்கள், செல்வங்கள், சொந்தங்கள் மற்றும் உறவினர்களின் இழப்பால் ஒருவன் அனுபவிப்பது, நஞ்சையோ, நெருப்பையோ போன்ற பெருந்துயரமாகும்.(6) துயரம் அங்கங்களை எரிக்கிறது, அதனால் நமது ஞானமும் அழிகிறது. அத்துயரத்தில் மூழ்கும் ஒருவனுக்கு மரணமே சிறந்ததாகும்.(7) தீப்பேற்றால் நான் அடைந்திருக்கும் துயரமும் அவ்வாறானதே. உயிரை விடுவதைவிட வேறு எந்தவகையிலும் அது முடிவுபெறாது என நான் காண்கிறேன். எனவே, ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே, இந்த நாளே நான் என் உயிருக்கு முடிவுகட்டப் போகிறேன்” என்றான் {திருதராஷ்டிரன்}.(8) உயரான்மா கொண்டவரும், பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான தன் தந்தையிடம் {வியாசரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன திருதராஷ்டிரன், துயரில் மூழ்கியவனாகத் திகைப்படைந்தான் {மயக்கமடைந்தான்}. ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அம்மன்னன், தன் துன்பங்களை நினைத்துப் பார்த்துப் பேச்சற்றவனானான்.(9) இவ்வார்த்தைகளைக் கேட்ட பலமிக்க வியாசர், பிள்ளைகளின் மரணத்தினால் உண்டான துயரத்தில் பீடிக்கப்பட்டிருந்த தன் மகனிடம் {திருதராஷ்டிரனிடம்} இவ்வாறு {பின்வருமாறு} பேசினார்.(10)

வியாசர் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரா, நான் சொல்வதைக் கேள். ஓ! பலமிக்கவனே, நீ! கல்விமானும், பெரும் நுண்ணறிவு கொண்டவனும், கடமைகளைப் புரிந்து கொள்வதில் திறன் கொண்டவனும் ஆவாய்.(11) ஓ! எதிரிகளை எரிப்பவனே, அறியத்தக்கது எதையும் நீ அறியாதவனில்லை. மரணமடைய விதிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் நிலையாமையை நீ அறிவாய் என்பதில் ஐயமில்லை.(12) ஓ! பாரதா, உயிரினங்களுடன் கூடிய உலகம் {ஜீவலோகம்} நிலையற்றது, இவ்வுலகமே நிலையானதில்லை, உயிரானது நிச்சயம் மரணத்தினால்தான் முடிவுக்கு வரும் எனும்போது, நீ ஏன் துயருறுகிறாய்?(13) ஓ! மன்னா, காலத்தால் கொண்டவரப்பட்டு ஒன்றுதிரண்ட உண்மைகள், உன் கண்களுக்கு முன்பாக, உன் மகனையே {துரியோதனனையே} இந்தப் பகைமைக்குக் காரணமாக்கின.(14)

ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, குருக்களின் அழிவு தவிர்க்கப்பட முடியாதது. உயர்ந்த முடிவை அடைந்திருக்கும் அவ்வீரர்களைக் குறித்து நீ ஏன் வருந்துகிறாய்?(15) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உயரான்ம விதுரன் அனைத்தையும் அறிவான். ஓ! மன்னா, தன் வலிமை முழுவதையும் பயன்படுத்தி அவன் {விதுரன்} அமைதியைக் கொண்டு வர முயன்றான்.(16) ஒருவன் அழிவில்லாமைக்காகப் போராடினாலும், விதியால் வகுக்கப்பட்ட பாதையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது என் கருத்தாகும்.(17) தேவர்களால் தீர்மானிக்கப்பட்ட பாதை என்னால் நேரடியாகக் கேட்கப்பட்டது. உன் மன அமைதிக்காக அதை நான் உனக்குச் சொல்கிறேன்.(18)

ஒரு காலத்தில் நான், எக்களைப்புமின்றி வெகு வேகமாக இந்திரனின் சபையை அடைந்தேன். அங்கே சொர்க்கவாசிகள் அனைவரும் ஒன்றாகக் கூடியிருப்பதைக் கண்டேன்.(19) ஓ! பாவமற்றவனே, அங்கே நாரதரின் தலைமையில் தெய்வீக முனிவர்கள் அனைவரும் இருந்தனர். ஓ! ஏகாதிபதி, அங்கே (உடல் வடிவத்துடன் கூடிய) பூமாதேவியையும் கண்டேன்.(20) ஒரு குறிப்பிட்ட காரியத்தின் நிறைவுக்காகவே அவள் தேவர்களிடம் வந்திருந்தாள். தேவர்களை அணுகிய அவள் {பூமாதேவி},(21) “அருளப்பட்டவர்களே, நீங்கள் எனக்காகச் செய்ய வேண்டியது அனைத்தையும், பிரம்மனின் வசிப்பிடத்தில் வைத்து நீங்கள் ஏற்கனவே உறுதி கூறினீர்கள். அது விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்” என்றாள்.(22)

உலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவனான விஷ்ணு, அவளது வார்த்தைகளைக் கேட்டு, அந்தத் தெய்வீகச் சபைக்கு மத்தியில் சிரித்துக் கொண்டே,(23) “துரியோதனன் என்ற பெயரில் அறியப்படுபவனான திருதராஷ்டிர மகன்களில் மூத்தவன் உன் காரியத்தை நிறைவேற்றுவான். அம்மன்னனின் மூலமே உனது நோக்கம் நிறைவேறும்.(24) குருக்களத்தில் {குருக்ஷேத்திரத்தில்} மன்னர்கள் பலர் அவனுக்காக ஒன்று கூடுவார்கள். தாக்கவல்ல அவர்கள், கடும் ஆயுதங்களெனும் கருவிகள் மூலம் ஒருவரையொருவர் கொல்லச் செய்வார்கள்.(25) ஓ! தேவி, அப்போதைய போரில் உன் சுமை குறைக்கப்படும். ஓ! அழகியே, வேகமாக உன் இடத்திற்குச் சென்று, உயிரினங்களைச் சுமப்பதைத் தொடர்வாயாக” என்றான்.(26)

இப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காந்தாரியின் கருவறையில் பிறந்தவனான உன் மகன் துரியோதனன், அண்ட அழிவை உண்டாக்கும் நோக்குடன் உதித்த கலியின் {கலிகாலத்தின்} ஒரு பகுதியாவான் என்பதை உன்னால் புரிந்து கொள்ள முடியும்.(27) பழிவுணர்ச்சி, அமைதியின்மை, பெருங்கோபம் ஆகியவற்றைக் கொண்டவனாகவும், நிறைவடையக் கடினமானவனாகவும் அவன் இருந்தான். விதியின் ஆதிக்கத்தால் அவனது சகோதரர்களும், அவனைப் போலவே மாறினார்கள்.(28) சகுனி அவனது தாய்மாமனாகவும், கர்ணன் அவனது பெரும் நண்பனாகவும் ஆனார்கள். அந்த அழிவு வேலைக்குத் துணைபுரியவே பல்வேறு மன்னர்கள் பூமியில் பிறந்தார்கள்.(29) மன்னன் எவ்வழியோ, குடிகளும் அவ்வழியே. மன்னன் நேர்மையானவனாக இருந்தால், அவனது ஆட்சிப்பகுதியில் நேர்மையற்றவர்களும், நேர்மையாளர்களாக ஆவார்கள்.(30) பணியாட்கள் தங்கள் தலைவர்களின் தகுதிகள் மற்றும் குறைகளால் பாதிப்பை அடைகிறார்கள் என்பதில் ஐயமில்லை {பணியாட்கள் தங்கள் தலைவர்களின் குணங்களையே அடைகிறார்கள்}. ஓ! மன்னா, உன் மகன்கள் ஒரு தீய மன்னனை அடைந்து அழிவை அடைந்தார்கள். ஓ! ஏகாதிபதி அவர்களுக்காக வருந்தாதே. துயருறக் காரணமேதுமில்லை.(32)

ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, {இதுவரை} நடந்தவற்றில் பாண்டவர்கள் சிறு தவறையும் செய்யவில்லை. உன் மகன்கள் அனைவரும் தீய ஆன்மாக்களைக் கொண்டோராக இருந்தனர். அவர்களே உலகத்திற்கு இந்த அழிவைச் செய்தனர்.(33) நீ அருளப்பட்டிருப்பாயாக. ராஜசூய வேள்வியின் போது யுதிஷ்டிரனின் சபையில் நாரதர்,(34) “பாண்டவர்களும், கௌரவர்களும் ஒருவரோடொருவர் மோதி, அழிவைச் சந்திப்பார்கள். ஓ! குந்தியின் மகனே, நீ செய்ய வேண்டியதைச் செய்வாயாக” என்றார் {நாரதர்}.(35) நாரதரின் வார்த்தைகளைக் கேட்டுப் பாண்டவர்கள் துயரால் நிறைந்தார்கள். இவ்வாறே நான் தேவர்களின் அழிவில்லா ரகசியத்தை உனக்குச் சொல்லிவிட்டேன்.(36)  தேவர்களால் விதிக்கப்பட்ட அத்தனையும் நடந்தது என்பதால், இஃது உன் துயரத்தை அழித்து, உன் உயிர்மூச்சில் அன்பை மீட்டெடுத்து, பாண்டவர்களிடம் பாசம் கொள்ளச் செய்யும்.(37)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {திருதராஷ்டிரனே}, இவையனைத்தும் சில காலத்திற்கு முன்பே நான் அறிந்தேன். வேள்விகளில் முதன்மையான ராஜசூயத்தின்போது, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் நான் இதைப் பேசவும் செய்தேன்.(38) நான் அவனிடம் கமுக்கமாக இவையனைத்தையும் சொன்னபோது, அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} கௌரவர்களுடனான அமைதியைப் பாதுகாக்க தன்னாலான சிறந்த முயற்சியைச் செய்தான். எனினும், தேவர்களால் விதிக்கப்பட்ட அது (அவனால் கலங்கடிக்கப்பட முடியாத அளவுக்கு) சக்தி வாய்ந்ததாக இருந்தது.(39) எவ்வாறாயினும், ஓ! மன்னா, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் யமனின் செயலைக் கலங்கடிக்கவல்லவையல்ல.(40)

ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, நீ அறத்தில் அர்ப்பணிப்பு கொண்டவனும், மேன்மையான நுண்ணறிவைக் கொண்டவனுமாவாய். அனைத்துயிரினங்களுக்கும் எது வழி, எது வழியில்லை என்பதையும் நீ அறிவாய்.(41) மன்னன் யுதிஷ்டிரன், நீ துயரால் எரிவதையும், அடிக்கடி உன் உணர்வுகளை இழப்பதையும் {மயங்கி விழுவதையும்} அறிந்தால், தன் உயிர்மூச்சையே விட்டுவிடுவான்.(42) அவன் எப்போதும் கருணையுள்ளவனாகவும், ஞானம் கொண்டவனாகவும் இருக்கிறான். இழிந்த உயிரினங்கள் அனைத்திடமும் கூட அவன் தன் அன்பை விரிவடையச் செய்கிறான். ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி, அவன் {யுதிஷ்டிரன்} உன்னிடம் கருணைகொள்ளாதிருக்க என்ன சாத்தியம்?(43) என் ஆணையின் பேரிலும், தவிர்க்க முடியாத விதியை அறிந்தும், பாண்டவர்களிடம் அன்பு கொண்டு உன் உயிரைத் தாங்கிக் கொள்வாயாக.(44) இவ்வாறு நீ வாழ்ந்தால், உன் புகழ் உலகமெங்கும் பரவும். அனைத்துக் கடமைகளின் அறிவை அடைந்து, பலவருடங்களின் தவத் தகுதியை நீ அடைவாய்.(45) ஓ! மன்னா, உன் மகன்களின் மரணத்தால் உன் இதயத்தில் எழுந்திருக்கும் இந்தத் துயரமெனும் சுடர்மிக்க நெருப்பானது, ஞானமெனும் நீரால் எப்போதும் அணைக்கப்பட வேண்டும்” {என்றார் வியாசர்}.(46)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அளவிலா ஆன்மா கொண்டவரான வியாசரின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிறிது நேரம் சிந்தித்த திருதராஷ்டிரன்,(47) “ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே {தந்தையே}, நான் துயரெனும் பெருங்கனத்தால் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கிறேன். என் புலனுணர்வுகள் என்னை அடிக்கடி கைவிடுகின்றன, என்னால் என்னையே தாங்கிக் கொள்ள முடியவில்லை.(48) எனினும், தேவர்களால் விதிக்கப்பட்டதைக் குறித்த உமது வார்த்தைகளைக் கேட்டதால், என் உயிர்மூச்சை விட நினைக்காமலும், துயரில் ஈடுபடாமலும் வாழ்வேன்” என்றான்.(49) சத்தியவதியின் மகனான வியாசர், ஓ! ஏகாதிபதி, திருதராஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு அங்கேயே அப்போதே மறைந்து போனார்” {என்றார் வைசம்பாயனர்}.(50)

திருதராஷ்டிரனை மீண்டும் தேற்றிய விதுரன்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 09-முதிய மன்னனுக்கு ஆறுதலளித்த விதுரன்; கொல்லப்பட்டவர்கள் சொர்க்கத்தையும், கொலை செய்தவர்கள் புகழையும் அடைவார்கள் எனவே கவலை கொள்வது தகாது எனத் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன விதுரன்; காலனின் வலிமை, வாழ்வின் நிலையாமை ஆகியவற்றைச் சொன்ன விதுரன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாள {பிராமண} முனிவரே, புனிதமான வியாசர் சென்ற பிறகு, மன்னன் திருதராஷ்டிரன் என்ன செய்தான்? எனக்கு இதைச் சொல்வதே உமக்குத் தகும்.(1) மேலும் குரு மன்னான மன்னனும், உயரான்மாவுமான தர்மன் மகன் {யுதிஷ்டிரன்} என்ன செய்தான்? கிருபர் முதலான மூவரும் என்ன செய்தனர்.(2) அஸ்வத்தாமனின் செயல்களையும், ஒருவருக்கொருவர் சாபங்களைப் பழித்துரைத்ததையும் நான் கேட்டேன். அடுத்ததாக நடந்ததையும், (முதிர்ந்த மன்னனிடம்) அடுத்து சஞ்சயன் என்ன சொன்னான் என்பதையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(30)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “துரியோதனன் கொல்லப்பட்டு, துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்ட பிறகு, தன் ஆன்மப் பார்வையை இழந்த சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் திரும்ப வந்தான்.(4)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்து வந்தவர்களும், பல்வேறு மக்களின் மன்னர்களும் என அனைவரும் உமது மகன்களுடன் சேர்ந்து இறந்தோரின் உலகத்தை அடைந்தனர்.(5) ஓ மன்னா, (அமைதிக்காக) தொடர்ந்து வேண்டிக் கொள்ளப்பட்டவனும், ஆனால் (பாண்டவர்களைக் கொன்று) தன் பகைமையை முடிக்க வேண்டும் என எப்போதும் விரும்பியவனுமான உமது மகன் {துரியோதனன்} இவ்வுலகத்தை நிர்மூலமாகச் செய்தான்.(60) ஓ! மன்னா, உமது மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் தந்தைமார் ஆகியோரின் ஈமச் சடங்குகளை முறைப்படி செய்ய ஏற்பாடு செய்வீராக” என்றான்”.(7)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சஞ்சயனின் இந்தப் பயங்கர வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, கீழே பூமியில் விழுந்து, உயிரை இழந்தவனைப் போல அசைவற்றுக் கிடந்தான்.(8)

கடமைகள் அனைத்தையும் அறிந்தவனான விதுரன், பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} அணுகி, இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(9) “ஓ! மன்னா, ஏன் இவ்வாறு கீழே கிடக்கிறீர்? எழுவீராக. ஓ! பாரதக் குலத்தின் காளையே, வருந்தாதீர். ஓ! பூமியின் தலைவரே, அனைத்துயிர்களின் இறுதியான முடிவும் இதுவேயாகும்.(10) முதலில் உயிரினங்கள் இருப்பில் இல்லாதிருந்தன. ஓ!பாரதரே, நடுவிலோ, அவை இருப்பில் இருந்தன. இறுதியிலும், அவை இருப்பில் இல்லாமல் போகின்றன. இவை யாவற்றிலும் என்ன கவலையைக் கொள்ள முடியும்?(11) துயரில் ஈடுபடுவதால், இறந்தோர் திரும்பி வருவதில்லை. துயரில் ஈடுபடுவதால் ஒருவன் தானே இறப்பதுமில்லை. உலகத்தின் வழி இவ்வாறிருக்கையில், ஏன் நீர் துயரில் ஈடுபடுகிறீர்?(12) போரில் ஈடுபடாமலேயே ஒருவன் இறக்கலாம். போரில் ஈடுபட்ட பிறகும் ஒருவன் உயிரோடு தப்பலாம். ஆனால், ஓ! மன்னா, காலன் வரும்போது ஒருவனால் தப்ப முடியாது.(13)

அனைத்து வகை உயிரினங்களையும் காலன் இழுத்துச் செல்கிறான். ஓ! குருக்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, காலனுக்கு அன்புக்குரியவனோ, வெறுப்புக்குரியவனோ எவனும் கிடையாது.(14) ஓ! பாரதக் குலத்தின் காளையே புல்லின் நுனிகள் அனைத்தையும் கிழிக்கும் காற்றைப் போலவே, காலனின் ஆதிக்கத்திற்குள் அனைத்து உயிரினங்களும் வருகின்றன.(15) ஒரே இடத்தை நோக்கிச் செல்லும் வணிகக்கூட்டத்தின் உறுப்பினர்களைப் போலவே அனைத்து உயிரினங்களும் இருக்கின்றன. வேறொருவனுக்குச் சிறிது முன்பாகவே காலன் ஒருவனைச் சந்திக்கிறான் என்றால் அதில் வருந்துவதற்கான காரணம் என்ன இருக்கிறது?(16) மேலும் ஓ! மன்னா, போரில் வீழ்ந்த சிறப்புமிக்கவர்கள் அனைவரும் சொர்க்கத்திற்கே சென்றிருப்பதால், அவர்கள் உமது துயரத்திற்குரிய பொருட்கள் அல்லர்.(17) போரில் துணிவுடன் இருந்த வீரர்களைவிட அபரிமிதமான கொடைகளைக் கொண்ட வேள்விகளாலோ, தவங்களாலோ, அறிவாலோ ஒரு மனிதன் சொர்க்கத்திற்கு எளிதாகச் செல்ல முடியாது.(18)

அவர்கள் அனைவரும் வேதங்களை நன்கறிந்தவர்கள்; அவர்கள் அனைவரும் நோன்புகள் நோற்றவர்கள். எதிரியை முகத்துக்கு நேராகச் சந்தித்தே அவர்கள் அனைவரும் மரணத்தைச் சந்தித்திருக்கிறார்கள். இதில் கவலை கொள்ள என்ன இருக்கிறது?(19) அவர்கள், நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவதைப் போலத் துணிச்சல்மிக்க எதிரிகளின் உடல்களில் தங்கள் கணை ஆகுதிகளைப் பொழிந்தார்கள். மனிதர்களில் முதன்மையானோரான அவர்கள், பதிலுக்குத் தங்கள் மீது ஊற்றப்படும் கணை ஆகுதிகளைப் தாங்கிக் கொண்டனர்.(20) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் ஒரு க்ஷத்திரியனுக்கு, போரைவிடச் சொர்க்கத்திற்குச் செல்லும் சிறந்த பாதை வேறேதும் இல்லை என நான் உமக்குச் சொல்கிறேன்.(21) அவர்கள் அனைவரும் உயர் ஆன்ம க்ஷத்திரியர்களும், துணிச்சல் கொண்டவர்களும், சபைகளின் ரத்தினங்களுமாவர். அவர்கள் உயர்ந்த அருள்நிலையை அடைந்திருக்கின்றனர். அவர்கள் நாம் கவலைகொள்ளத்தக்க மனிதர்களல்லர்.(22) ஓ! மனிதர்களில் காளையே, உம்மை நீரே தேற்றிக் கொண்டு, கவலையை விடுவீராக. செயல்கள் அனைத்தையும் கைவிட்டு, கவலையில் மூழ்குவது உமக்குத் தகாது” {என்றான் விதுரன்}[1].(23)

விசோக உபபர்வம் முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –சௌப்திக பர்வம்–ஐஷீக உப பர்வம்–

October 15, 2025

அழுது புலம்பிய யுதிஷ்டிரன்! – சௌப்திக பர்வம் பகுதி – 10-யுதிஷ்டிரனுக்கு நடந்த செய்தியைச் சொன்ன திருஷ்டத்யும்னனின் சாரதி; திரௌபதியை அழைத்து வர நகுலனை அனுப்பிய யுதிஷ்டிரன்; முகாமை அடைந்து, மாண்டு கிடக்கும் தன் தரப்பினரைக் கண்டு அழுது புலம்பிய யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} சொன்னார், “அந்த இரவு கழிந்ததும், திருஷ்டத்யும்னனின் சாரதியானவன், உறங்கும் வேளையில் ஏற்பட்ட அந்தப் பேரழிவைக் குறித்த செய்தியை மன்னன் யுதிஷ்டிரனுக்குத் தெரிவித்தான்.(1)

அந்தச் சாரதி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, “தங்கள் முகாமில் கவனமற்றவர்களாகவும், நம்பிக்கையுடனும் உறங்கிக் கொண்டிருந்த திரௌபதியின் மகன்களும், துருபதனின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(2) ஓ! மன்னா, இரவு வேளையில் உமது முகாமானது, கொடூரர்களான கிருதவர்மன், கோதமரின் மகன் கிருபர் மற்றும் பாவம் நிறைந்த அஸ்வத்தாமன் ஆகியோரால் நிர்மூலமாக்கப்பட்டது.(3) அம்மனிதர்கள், வேல்கள், ஈட்டிகள் மற்றுப் போர்க்கோடரிகளைக் கொண்டு ஆயிரக்கணக்கான மனிதர்கள், யானைகள், குதிரைகள் அடங்கிய உமது படையை அழித்துவிட்டனர்.(4) கோடரியால் வெட்டி வீழ்த்தப்பட்ட காட்டைப் போல உமது படை கொல்லப்பட்டபோது, உமது முகாமில் இருந்து உரத்த ஓலம் கேட்டது.(5) ஓ! ஏகாதிபதி, அந்தப் பரந்த படையில் நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கிறேன். ஓ! அற ஆன்மாவே, கிருதவர்மன் கவனமற்றிருந்த வேளையில் மிகுந்த சிரமத்திற்கிடையில் நான் தப்பித்து வந்தேன்” என்றான்.(6)

குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, (எதிரிகளை எதிர்த்துச் செல்கையில் அவர்களைத்) தாங்கிக் கொள்ள இயன்றவனானாலும், இந்தத் தீயச் செய்தியைக் கேட்டு, தன் மகன்களை இழந்ததால் ஏற்பட்ட துயரத்தில் பீடிக்கப்பட்டுக் கீழே பூமியில் விழுந்தான்.(7) சாத்யகி, முன்னே வந்து மன்னனைப் பிடித்துக் கொண்டான். பீமசேனன், அர்ஜுனன், மாத்ரியின் இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரும் தங்கள் கரங்களை நீட்டினர் {நீட்டி யுதிஷ்டிரனைப் பிடித்துக் கொண்டனர்}.(8)

அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, புலனுணர்வு மீண்டு, சோகத்துடனும், தடுமாற்றத்துடனும் இவ்வார்த்தைகளைச் சொல்லிப் பெரும் துயரத்தால் அழுது புலம்பினான்: “ஐயோ, எதிரியை வென்றும், இறுதியில் நாமே வெல்லப்பட்டோம் {வீழ்ந்தோம்}.(9) ஆன்மப் பார்வை கொண்டவர்களால் கூட நிகழ்வுகளின் வழியை அறிவது கடினமே. வெல்லப்பட்ட எதிரி, வெற்றியடைந்துவிட்டான். மேலும், நாமோ வெற்றியடைந்தும், வெல்லப்பட்டோம் {வீழ்த்தப்பட்டோம்}.(10) சகோதரர்கள், நண்பர்கள், தந்தைமார், மகன்கள், நலன் விரும்பிகள், சொந்தங்கள், அமைச்சர்கள் ஆகியோர் அனைவரையும் வென்று இறுதியில் நாமே வெல்லப்பட்டோம்.(11) அவலம் செழிப்பாகத் தெரிகிறது, செழிப்பு அவலமாகத் தெரிகிறது. இந்த நமது வெற்றியானது, தோல்வியின் வடிவத்தையே ஏற்றிருக்கிறது. எனவே நமது வெற்றி தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.(12) வெற்றியையடைந்தும், துயரமடைந்த அற்பனாக நான் துயரத்தையே அடைகிறேன். பிறகு, எவ்வாறு இதை என்னால் வெற்றியாகக் கருத முடியும்? உண்மையில், நான் எதிரியால் இரண்டு மடங்கு வீழ்த்தப்பட்டிருக்கிறேன்.(13) யாருக்காகச் சொந்தங்கள் மற்றும் நண்பர்களைக் கொன்று வெற்றிக்காகப் பாவமிழைத்தோமோ, ஐயோ, அவர்கள் வெற்றி மகுடம் சூடிக்கொண்டு, வீழ்த்தப்பட்டவர்களான கவனம் நிறைந்த எதிரிகளால் வெல்லப்பட்டனர்.(14)

முள்பதித்த கணைகள், நாளீகங்கள் ஆகியவற்றைத் தன் பற்களாகவும், வாளையே தன் நாவாகவும், நாணொலி தரும் நாண்கயிற்றுடன் கூடிய வில்லையே தன் வாயாகவும், உள்ளங்கையொலிகளையே தன் முழக்கமாகவும் கொண்டவனும், போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவனும், மனிதர்களில் சிங்கமுமான கோபக்காரக் கர்ணனிடம் இருந்தே தப்பித்தவர்கள், ஐயோ!, கவனக்குறைவினால் கொல்லப்பட்டார்கள்.(15,16) தேர்களையே ஆழமான தடாகங்களாகவும், கணைமாரியே அலைகளாகவும், போர்வீரர்களின் ஆபரணங்களே ரத்தினங்களாகவும், தேர்க்குதிரைகளையே விலங்குகளாகவும், ஈட்டிகள் மற்றும் வாள்களையே மீன்களாகவும், யானைகளேயே முதலைகளாகவும், விற்களையே பெரும் நீர்ச்சுழிகளாகவும், வலிமைமையிக்க ஆயுதங்களையே நுரையாகவும், போர் அடையாளத்தையே சக்தியில் பெரும் சந்திரோதயமாகவும், நாண்கயிற்றின் நாணொலி மற்றும் உள்ளங்கையொலிகளையே முழக்கங்களாகவும் கொண்ட துரோணப் பெருங்கடலைத் தங்கள் சிறந்த ஆயுதங்களாலான படகால் கடந்த இந்த இளவரசர்கள், ஐயோ கவனக்குறைவினால் கொல்லப்பட்டார்கள்.(17,18) இவ்வுலகின் மனிதர்களைப் பொறுத்தவரையில் கவனக்குறைவைவிட மரணத்திற்கான சக்திமிக்கக் காரணம் வேறு எதுவுமில்லை. கவனமற்ற மனிதனை செழுமையானது அனைத்துப் பக்கங்களிலும் கைவிடுகிறது, மேலும் அனைத்து வகை அவலங்களும் அவனை மூழ்கடிக்கின்றன.(19)

{பீஷ்மரின்} தேரில் நின்றதும், சிறந்த நுனி கொண்டதுமான உயர்ந்த கொடிமரத்தில் இருந்த புகைவிரிப்பானது {கொடியானது} அந்தப் பீஷ்ம நெருப்பை, பிழையற்றதாகக் காட்டியது. கணைகளே அதன் தழல்களாயின, கோபமே அதை வீசிப்பெருக்கும் காற்றானது. உறுதிமிக்க வில்லின் நாணொலியும், உள்ளங்கையொலியும் அந்நெருப்பின் முழக்கமானது. கவசமும், பல்வேறு வகை ஆயுதங்களும் அதற்குள் ஊற்றப்படும் ஹோமக் காணிக்கைகள் ஆகின. பகைவரின் பரந்த படையானது அந்த நெருப்பால் எரிக்கப்படும் உலர்ந்த காட்டுப்புல்லானது. ஐயோ, பயங்கர சக்தியுடன் கூடிய {பீஷ்மரெனும்} அந்தக் கடும் நெருப்பையும் தாங்கிக் கொண்டவர்கள், இறுதியில் கவனக் குறைவால் வீழ்ந்தனர்.(20,21) கவனக்குறைவுள்ளவன், ஞானத்தையோ, தவத்தையோ, செழிப்பையோ, பெரும்புகழையோ ஒருபோதும் அடையமுடியாது.(22)

நமது எதிரிகளில் எஞ்சியிருக்கும் சிலர், உண்மையில் இந்திரனைப் போன்றவர்களான அம்மன்னர்களின் மகன்கள் மற்றும் பேரர்கள் பலரை நமது கவனக்குறைவினால் கொன்றுவிட்டனர். ஐயோ, விலைமதிப்புமிக்கக் கப்பல்களில் செல்லும் வணிகர்களைப் போல, பெருங்கடலைக் கடந்த பிறகு, கவனக்குறைவினால் ஒரு சிறு ஓடையில் அழிந்தனர்.(23) யாருடைய உடல்கள் இப்போது வெறுந்தரையில் கிடக்கின்றனவோ, அவர்கள் பொறாமையுள்ள அந்த இழிந்தவர்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்தையே அடைந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. எனினும், இளவரசி கிருஷ்ணைக்காகவே {திரௌபதிக்காகவே} வருந்துகிறேன்.(24) அவள் {திரௌபதி}, தன் சகோதரர்கள், மகன்கள் மற்றும் மதிப்பிற்குரிய தந்தையான பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்} ஆகியோரின் படுகொலையைக் கேட்டு உணர்வற்றுப் பூமியில் விழப் போகிறாள் என்பதில் ஐயமில்லை. அவள், துயரால் உடல்மெலிந்து மீண்டும் எழும்ப மாட்டாள்.(25) இத்தகு துன்பத்தின் விளைவால் உண்டாகும் துயரைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், மகிழ்ச்சிக்குத் தகுந்தவளான அவள் எந்த அவல நிலையை அடைவாள்? மகன்கள் மற்றும் சகோதரர்களின் படுகொலையால் இதயம் பிளக்கப்படும் அவள், நெருப்பில் எரிபவளாக ஆகப்போகிறாள்” என்றான்.(26)

ஆழமான துயரால் இத்தகு புலம்பல்களில் ஈடுபட்ட அந்தக் குரு குல மன்னன் {யுதிஷ்டிரன்}, பிறகு நகுலனிடம், “செல்வாயாக, சென்று, நற்பேறற்றவளான இளவரசி திரௌபதியையும், அவளது தாய்வழி உறவினர்களையும் அழைத்து வா” என்றான்.(27)

நீதியில் யமனுக்கு இணையான அம்மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆணையைக் கீழ்ப்படிந்து ஏற்ற நகுலன், பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மனைவியர் அனைவருடன் {தன் தாய்மாருடன்} திரௌபதி எங்குத் தங்கியிருந்தாளோ அந்த இடத்திற்குத் தன் தேரில் வேகமாகச் சென்றான்.(28) யுதிஷ்டிரன், மாத்ரியின் மகனை {நகுலனை} அனுப்பிவிட்டு, துயரால் நொறுங்கி, கண்களில் கண்ணீருடன், எங்குத் தன் மகன்கள் போரிட்டார்களோ, எங்குப் பல்வேறு வகை உயிரினங்கள் இன்னும் மொய்த்துக் கொண்டிருந்தனவோ, அந்தக் களத்திற்குத் தன் நண்பர்கள் துணையுடன் சென்றான்.(29) கடுங்காட்சிகள் நிறைந்த அந்தச் சபிக்கப்பட்ட களத்திற்குள் நுழைந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, குருதியில் மறைந்து, உடல்கள் சிதைக்கப்பட்டு, உடல்களில் இருந்து தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தரையில் கிடப்பவர்களான தன் மகன்கள், நலன்விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் கண்டான்.(30) நீதியாளர்களில் முதன்மையான யுதிஷ்டிரன், அவர்களை அந்த அவலநிலையில் கண்டு ஆழமாகத் துயரடைந்தான். பிறகு அந்தக் குருக்களின் தலைவன் {யுதிஷ்டிரன்}, தன் தொண்டர்களுடன் சேர்ந்து உரக்க அழுது, புலன் உணர்வுகளை இழந்து கீழே பூமியில் விழுந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(31)

பிராயத்தில் அமர்ந்த திரௌபதி! – சௌப்திக பர்வம் பகுதி – 11– திரௌபதியை யுதிஷ்டிரனிடம் அழைத்து வந்த நகுலன்; மயக்கமடைந்த திரௌபதி; அஸ்வத்தாமனைப் பாண்டவர்கள் கொல்லவில்லையெனில் பிராயத்தில் அமரப்போவதாகத் தீர்மானித்த திரௌபதி; அவளுக்கு ஆறுதல் சொன்ன யுதிஷ்டிரன்; அஸ்வத்தாமனைக் கொன்று அவனுடைய தலையிலுள்ள மணியைக் கொண்டு வரச் சொன்ன திரௌபதி; நகுலனைச் சாரதியாகக் கொண்டு அஸ்வத்தாமனைக் கொல்லப் புறப்பட்ட பீமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஜனமேஜயா, போரில் தனது மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கொல்லப்பட்டதைக் கண்ட மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆன்மா பெருந்துயரில் மூழ்கியது.(1) அந்த மகன்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் கூட்டாளிகளை நினைத்துப் பார்த்ததும் அந்தச் சிறப்புமிக்க ஏகாதிபதியை ஆழமான சோகம் ஆட்கொண்டது.(2) உணர்வற்று நடுங்கிக் கொண்டிருந்த அவனுடைய கண்கள் கண்ணீரால் குளித்தன. அப்போது அவனது நண்பர்களும் கவலையில் மூழ்கியிருந்தாலும், அவனுக்கு ஆறுதல் சொல்லத் தொடங்கினர்.(3) அந்நேரத்தில் {தன் அண்ணனின்} குற்றேவல்களை நிறைவேற்றுவதில் திறம் கொண்டவனான நகுலன், பெரும் துயரில் இருந்த இளவரசி கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்}, சூரியப் பிரகாசம் கொண்ட தனது தேரில் அங்கே வந்து சேர்ந்தான்.(4) 

அவள் {திரௌபதி இதுவரை} உபப்லாவ்யத்தில் வசித்திருந்தாள். அவள் {திரொபதி}, தன் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்ற இதயம் பிளக்கும் செய்தியைக் கேட்டு மிகவும் கலக்கமடைந்திருந்தாள்.(5) காற்றால் அசைக்கப்பட்ட வாழையைப் போல நடுங்கிய அந்த இளவரசி கிருஷ்ணை {திரௌபதி}, யுதிஷ்டிரனின் முன்னிலைக்கு வந்து, துயரால் பீடிக்கப்பட்டுக் கீழே விழுந்தாள்.(6) முற்றாக மலர்ந்த இரு தாமரைகளுக்கு ஒப்பான கண்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவளது முகம், இருளால் மூடப்பட்ட சூரியனைப் போலத் துயரால் கறுத்திருந்தது.(7) கோபம் நிறைந்தவனும், கலங்கடிக்க முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான விருகோதரன் {பீமன்}, பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் அவளைக் {திரௌபதியைக்} கண்டு வேகமாகச் சென்று, அவளை உயர்த்தி {எழச் செய்து}, தன் கரங்களால் அவளை {ஆறுதலாகப்} பிடித்துக் கொண்டான்.(8)

பீமசேனனால் ஆறுதலளிக்கபட்ட அந்த அழகிய மங்கை {திரௌபதி} அழத் தொடங்கி, தன் சகோதரர்களுடன் கூடியவனான பாண்டு மகன்களில் மூத்தவனிடம் {யுதிஷ்டிரனிடம்},(9) “ஓ! ஏகாதிபதி, க்ஷத்திரியக் கடமைகளை நோற்ற உமது துணிச்சல்மிக்க மகன்களின் படுகொலைக்குப் பின்பு, நீர் மொத்த பூமியையும் அடைந்து அதை {பூமியை} அனுபவிக்கப் போவது நற்பேற்றாலேயே.(10) ஓ@ பிருதையின் {குந்தியின்} மைந்தரே {யுதிஷ்டிரரே}, மொத்த பூமியையும் அடைந்துவிட்டோம் என்ற நினைப்பில் நீர் மகிழ்ச்சியாக இருப்பதும் நற்பேற்றாலேயே. மதங்கொண்ட யானைக்கு ஒப்பான நடையைக் கொண்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு} குறித்து நீர் சிந்திக்காததும் நற்பேற்றாலேயே. உபப்லாவ்யத்தில் வசித்த என்னைப் போலல்லாமல், க்ஷத்திரியக் கடமைகளை நோற்றுக் கொல்லப்பட்ட உமது வீர மகன்களை நீர் எண்ணாதிருப்பதும் நற்பேற்றாலேயே.(12) ஓ! பிருதையின் மைந்தரே, உறங்கிக் கொண்டிருந்த அந்த வீரர்கள், பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவனான துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} படுகொலை செய்யப்பட்டதைக் கேட்டு, ஏதோ நெருப்பின் மத்தியில் இருப்பவளைப் போல, துயரம் என்னை எரித்துக் கொண்டிருக்கிறது.(13) போரில் உமது ஆற்றலை வெளிப்படுத்தி, பாவச் செயல்கள் புரியும் அந்த இழிந்தவன் {அஸ்வத்தாமன்} மற்றும் அவனது தொண்டர்கள் அனைவரின் உயிர்களையும் நீர் எடுக்காமல், அந்தத் துரோணர் மகனைத் தனது பாவச்செயலுக்கான கனியை அறுவடை செய்ய வைக்காமல் இருந்தால், பாண்டவர்களே, கேளுங்கள், நான் இங்கே பிராயத்தில் அமரப் போகிறேன்” என்றாள் {திரௌபதி}.(14,15)

யக்ஞசேனன் மகளும், ஆதரவற்றவளுமான கிருஷ்ணை {திரௌபதி}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, பாண்டு மகனில் மூத்தவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனின் அருகில் அமர்ந்தாள்.(16) நீதிமிக்க ஆன்மா கொண்டவனான அரசமுனி யுதிஷ்டிரன், தன் அன்புக்குரிய ராணி {திரௌபதி} பிராயத்தில் அமர்வதைக் கண்டு, அவளிடம், “ஓ! மங்கலமான பெண்ணே {கல்யாணி}, ஓ! அறநெறிகளை அறிந்தவளே, உன் மகன்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உன்னதமான இறப்பை நேர்மையாகச் {க்ஷத்திரிய முறைக்கேற்ப} சந்தித்தனர். அவர்களுக்காக நீ வருந்துவது தகாது.(17,18) ஓ! அழகிய இளவரசி, துரோணர் மகனைப் பொறுத்தவரை, அவர் தொலைதூரக் காட்டுக்குச் சென்றுவிட்டார். ஓ! பெண்ணே, போரில் அவருடைய வீழ்ச்சியை உன்னால் எவ்வாறு உறுதிசெய்ய முடியும்?” என்று கேட்டான்.(19)

திரௌபதி {யுதிஷ்டிரனிடம்}, “துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் தலையில் ஒரு ரத்தினத்துடனேயே {மணியுடனே} பிறந்தான் என நான் கேட்டிருக்கிறேன். போரில் அந்த இழிந்தவனைக் கொன்ற பிறகு, என்னிடம் கொண்டு வரப்படும் அந்த ரத்தினத்தை {மணியை} நான் காண்பேன். ஓ மன்னா, அந்த ரத்தினத்தை உமது தலையில் சூட்டிய பிறகே நான் என் உயிரைத் தாங்கிக் கொள்ளவேன். இதுவே எனது தீர்மானம்” என்று பதிலுரைத்தாள்.(20)

பாண்டுவின் அரசமகனிடம் {யுதிஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, பீமசேனனை அணுகி, உயர்ந்த நோக்கம் கொண்ட இந்த வார்த்தைகளை அவனிடம் {பீமனிடம்} சொன்னாள்:(21) “ஓ! பீமரே, க்ஷத்திரியக் கடமைகளை நினைவுகூர்ந்து, நீர் என்னைக் காப்பதே உமக்குத் தகும். சம்பரனைக் கொன்ற மகவத்தை {இந்திரனைப்} போல, பாவச்செயல்களைச் செய்யும் அம்மனிதனை {அஸ்வத்தாமனைக்} கொல்வீராக.(22) இவ்வுலகில் உமது ஆற்றலுக்கு இணையானவர்கள் வேறு எவரும் இல்லை. வாரணாவத நகரில் பேரிடர் நேர்ந்த சமயத்தில் நீர் எவ்வாறு பார்த்தர்கள் அனைவரின் புகலிடமாக இருந்தீர் என்பது உலகம் முழுவதும் நன்றாக அறியப்பட்டிருக்கிறது.(23) மேலும் ஹிடிம்பனால் நாம் பார்க்கப்பட்டபோதும்,[1] அதே வழியில் நீரே எங்கள் புகலிடமானீர்.(24) மகவத் {இந்திரன்} (தன் மனைவியான) புலோமனின் மகளை {பௌலோமி [அ] சச்சியைக்] காத்தது போலவே, விராட நகரத்தில் நீர் என்னைப் பேரிடரில் {கீசகனிடம்} இருந்து காத்தீர்[1].(25) ஓ! பார்த்தரே {பீமரே}, ஓ! எதிரிகளைக் கொல்பவரே, முன் நாட்களில் நீர் அடைந்த அந்தப் பெரும் சாதனைகளைப் போலவே, இப்போது துரோணர் மகனை {அஸ்வத்தாமனைக்} கொன்று மகிழ்ச்சியடைவீராக” {என்றாள் திரௌபதி}.(26)பெரும் வலிமைமிக்கவனும், குந்தியின் மகனுமான பீமசேனனால், அந்த இளவரசியின் {திரௌபதியின்} இவ்வார்த்தைகளையும், பரிதாபகரமான இன்னும் வேறு புலம்பல்களையும் கேட்டுப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(27) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் பெருந்தேரில் ஏறிய அவன் {பீமன்}, நாண்கயிற்றில் கணை பொருத்தப்பட்ட தன் அழகிய வில்லையும் எடுத்துக் கொண்டான்.(28) நகுலனைத் தன் தேரோட்டியாகச் செய்து கொண்டும், துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} கொல்லும் தீர்மானத்துடனும், தன் வில்லை வளைக்கத் தொடங்கி, தாமதமில்லாமல் தன் குதிரைகளைத் தூண்டச் செய்தான்.(29) ஓ! மனிதர்களில் புலியே, காற்றின் வேகத்தைக் கொண்ட அக்குதிரைகள் இவ்வாறு தூண்டப்பட்டுப் பெரும் வேகத்தில் சென்றன.(30) பெரும் வீரமும், மங்காத சக்தியும் கொண்ட பீமன், பாண்டவ முகாமில் இருந்து புறப்பட்டு, அஸ்வத்தாமனின் வாகனத்தடத்தைப் பின்தொடர்ந்தபடியே பெரும் வேகத்தில் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(31)

கிருஷ்ணச் சக்கரம் கேட்ட அஸ்வத்தாமன்! – சௌப்திக பர்வம் பகுதி – 12-அஸ்வத்தாமன் பிரம்மாயுதத்தைக் கொண்டவனாதலால் பீமனின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு யுதிஷ்டிரனை வேண்டிய கிருஷ்ணன்; அஸ்வத்தாமன் பிரம்மாயுதத்தை அடைந்த வரலாறு; கிருஷ்ணனின் சக்கரத்தை அடைவதற்காகத் துவாரகை சென்ற அஸ்வத்தாமனின் துணிபு; அவனால் சக்கரத்தை உயர்த்த இயலாமை; கிருஷ்ணனின் கடிந்துரை; பீமனைப் பாதுகாக்க யுதிஷ்டிரனிடம் வேண்டிய கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தடுக்கப்படமுடியாதவனான பீமசேனன் புறப்பட்டதும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனான அந்த யதுகுலத்தின் காளை {கிருஷ்ணன்}, குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம்,(1) “ஓ! பாண்டுவின் மைந்தரே {யுதிஷ்டிரரே}, உமது தம்பி, தன் மகன்களின் படுகொலைகளால் உண்டான துயரத்தில் மூழ்கி, துரோணரின் மகனை {அஸ்வத்தாமரைக்} கொல்லும் விருப்பத்தில் போரிடத் தனியொருவராகச் செல்கிறார்.(2) ஓ! பாரதக் குலத்தின் காளையே, உமது தம்பியர் அனைவரிலும், பீமரே உமக்கு அன்பானவர். அவர் பெரும் ஆபத்தில் வீழ்ந்தும், நீர் ஏன் இன்னும் காக்க முயலவில்லை?(3) பகை நகரங்களை அடக்கவல்ல துரோணர், தன் மகனுக்கு {அஸ்வத்தாமருக்கு} அறிவித்த பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதமானது, மொத்த உலகத்தையும் எரிக்கவல்லதாகும்.(4) சிறப்புமிக்கவரும், உயர்ந்த அருளைக் கொண்டவரும், வில்தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவருமான அந்த ஆசான் {துரோணர்}, அந்த ஆயுதத்தைத்தான் மகிழ்ச்சியுடன் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்குக்} கொடுத்தார்.(5)

அதைத் தாங்கிக்கொள்ள முடியாதவரான அவருடைய {துரோணருடைய} ஒரே மகன் {அஸ்வத்தாமர்}, அஃதை {பிரம்மசிரத்தை} அவரிடம் இரந்து கேட்டார். அவர் {துரோணர்}, தமக்கு விருப்பமில்லாமலேயே அவ்வாயுதத்தின் அறிவை அஸ்வத்தாமருக்குப் புகட்டினார்.(6) சிறப்புமிக்கத் துரோணர், தன் மகனின் மன உலைவை {சஞ்சலத்தை} அறிந்திருந்தார். கடமைகள் அனைத்தையும் அறிந்தவரான அந்த ஆசான் அவருக்குக் கட்டளையாக,(7) “ஓ! குழந்தாய், போருக்கு மத்தியில் நீ பெரும் ஆபத்தைச் சந்தித்தாலும், இவ்வாயுதத்தை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது, அதிலும் குறிப்பாக மனிதர்களை எதிர்த்துப் பயன்படுத்தக்கூடாது” என்று சொன்னார்.(8) இவ்வாறே ஆசான் துரோணர் தன் மகனிடம் சொன்னார். அவர் {துரோணர்}, சிறிது நேர் கழித்து மீண்டும் அவரிடம் {அஸ்வத்தாமரிடம்}, “ஓ! மனிதர்களில் காளையே, நீ நீதியின் பாதையில் நடக்கமாட்டாய் என்று தெரிகிறது” என்றார்.(9) தன் தந்தையின் இந்தக் கசப்பான வார்த்தைகளைக் கேட்டவரும், தீய ஆன்மா கொண்டவருமான அஸ்வத்தாமர், அனைத்து வகைச் செழிப்பையும் அடையும் {அடைய முடியாத} மனத்தளர்ச்சியுடன், துயரத்தில் பூமியெங்கும் திரியத் தொடங்கினார்.(10)

ஓ! குருக்களின் தலைவரே {யுதிஷ்டிரரே}, நீங்கள் காட்டில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, துவாரகைக்கு வந்த அவர் {அஸ்வத்தாமர்}, விருஷ்ணிகளால் வழிபடப்பட்டுத் தன் வசிப்பிடத்தை அங்கே அமைத்துக் கொண்டார்.(11) அவர், துவாரகையில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட பிறகு, ஒரு நாள், தோழனற்றவனாகவும், அருகே யாருமில்லாதவனாகவும் கடற்கரையில் இருந்த என்னிடம் வந்து, சிரித்துக் கொண்டே,(12) “ஓ! கிருஷ்ணா, ஓ! தாசார்ஹா, தேவர்களாலும், கந்தர்வர்களாலும் வழிபடப்படுவதும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட, பாரதர்களின் ஆசானான என் தந்தை {துரோணர்}, கடுந்தவங்களுக்குப் பிறகு அகஸ்தியரிடம் இருந்து அடைந்ததுமான பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதமானது, என் தந்தையிடம் இருப்பது போலவே, இப்போது என்னிடமும் இருக்கிறது.(13,14) ஓ! யதுகுலத்தில் முதன்மையானவனே, அந்தத் தெய்வீக ஆயுதத்தைப் பெற்றுக் கொண்டு, போரில் எதிரிகள் அனைவரையும் கொல்லவல்ல உனது சக்கரத்தை எனக்குக் கொடுப்பாயாக” என்று கேட்டார்.(15)

கரங்களைக் கூப்பிக் கொண்டு பெரும்பிதற்றல் செய்து, இவ்வாறு அவர் என்னிடம் எனது சக்கரத்தைக் கேட்டபோது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, நான் அவரை மகிழ்விக்க விரும்பி, அவரிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னேன்,(16) “தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள் ஆகியோர் அனைவரும், பறவைகள், பாம்புகள் ஆகிய அனைத்தும் ஒன்றுகூடினாலும், என் சக்தியின் நூறில் ஒரு பங்குக்கும் அஃது இணையாகாது.(17) நான் இந்த வில்லையும், இந்த ஈட்டியையும் {சக்தியையும்}, இந்தச் சக்கரத்தையும், இந்தக் கதாயுதத்தையும் கொண்டிருக்கிறேன். என்னிடம் இருக்கும் இவற்றில், நீர் எதை விரும்பினாலும், நான் அஃதை உமக்குக் கொடுப்பேன். நீர் கொடுக்க விரும்பும் ஆயுதத்தைக் கொடுக்காமலே, இந்த என் ஆயுதங்களில் நீர் எதையெடுக்க வல்லவரோ, அஃதை எடுத்துக் கொண்டு, போரில் பயன்படுத்திக் கொள்வீராக” என்றேன்.(19) இவ்வாறு சொல்லப்பட்டதும், என்னை அறைகூவி அழைப்பதைப் போலத் துரோணரின் அந்தச் சிறப்புமிக்க மகன் {அஸ்வத்தாமன்}, இரும்பாலானதும், ஆயிரம் ஆரங்களைக் கொண்டதும், வஜ்ரத்தைப் போன்று கடினமானதும், சிறப்புமிக்கக் குழியை {நடுத்துவாரத்தைக்} கொண்டதுமான என் சக்கரத்தை என்னிடம் இருந்து வேண்டினார்.(20)

நான் அவரிடம், “எடுத்துக் கொள்ளும்” என்று சொன்னேன். இவ்வாறு சொல்லப்பட்டதும், திடீரென எழுந்த அவர், தன் இடக்கையால் அச்சக்கரத்தைப் பற்றினார்.(21) இருப்பினும், அந்த ஆயுதத்தை அது கிடந்த இடத்தில் இருந்து அவரால் அசைக்கவும் முடியவில்லை. பிறகு அவர் அதை வலக்கரத்தால் பற்ற ஆயத்தமானார்.(22) பிறகு அவர், உறுதியாக அதைப் பற்றிக் கொண்டு, தன் பலமனைத்தையும் வெளிப்படுத்தினாலும் அதைத் தரிக்கவோ, அசைக்கவோ முடியவில்லை. இதனால் அந்தத் துரோணரின் மகன் சோகத்தில் நிறைந்தார். ஓ! பாரதரே, முயற்சியால் களைத்தபிறகே அவர் {அஃதை எடுப்பதை} நிறுத்தினார்.(23,24)

அந்நோக்கத்தில் இருந்து தமது இதயத்தை விலக்கியப் பிறகு, உணர்வற்றவராகவும், கவலை கொண்டவராகவும் இருந்த அஸ்வத்தாமரிடம் நான்,(25) “ஓ! பிராமணரே, எவன் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகக் கருதப்படுகிறானோ, எவன் காண்டீவத்தைத் தரித்திருக்கிறானோ, எவன் வெண்குதிரைகளைத் தன் தேரில் பூட்டியிருக்கிறானோ, எந்த வீரன் தன் கொடிமரத்தில் குரங்குகளின் இளவரசனைப் பொறித்திருக்கிறானோ,(26) எந்த வீரன், தேவர்களின் தேவனும், நீலமிடறு கொண்டவனும், உமையின் தலைவனுமான பெரும் சங்கரனிடமே மல்யுத்தம் செய்து வெல்ல விரும்பினானோ,(27) எந்தப் பல்குனனைத் தவிரப் பூமியில் எனக்கு வேறு அன்புக்குரிய நண்பவன் எவனும் இல்லையோ, எந்த நண்பனுக்கு என் மனைவியர் மற்றும் பிள்ளைகள் உட்பட எதையும் நான் கொடுப்பேனோ,(28) அந்த என் அன்புக்குரிய நண்பனான, களங்கமற்ற செயல்களையுடைய பார்த்தன் {அர்ஜுனன்} கூட என்னிடம் இத்தகு வார்த்தைகளை ஒருபோதும் சொன்னதில்லை.(29)

தவத்துறவுகளின் மூலமும், இமய மலைச்சாரலில் பனிரெண்டு வருடங்கள் கடுந்தவம் செய்தும் எந்த மகனை அடைந்தேனோ,(30) எவன் சனத்குமாரனின் ஒரு பகுதியோ, என்னைப் போலவே கடும் நோன்புகளை நோற்றவளான என் மனைவி ருக்மிணியிடம் என்னால் எவன் பெறப்பட்டானோ,(31) அந்தப் பெருஞ்சக்தி கொண்ட எனது மகன் பிரத்யும்னன் கூட, சிறுமதி கொண்ட உம்மைப் போல, பொருட்களில் சிறந்ததும், ஒப்பற்றதுமான இந்தச் சக்கரத்தை ஒருபோதும் என்னிடம் கேட்டதில்லை.(32) பெரும் வலிமையைக் கொண்ட ராமர் {பலராமர்}, ஒருபோதும் இத்தகு வார்த்தைகளை என்னிடம் பேசியதில்லை. கதனோ, சாம்பனோ நீர் கேட்டதை ஒருபோதும் கேட்டதில்லை.(33) துவாரகையில் வசிக்கும் விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களின் பெருந்தேர்வீரர்களில் எவரும் என்னிடம் நீர் கேட்டதைக் கேட்டதில்லை.(34) நீர் பாரதர்களுடைய ஆசானின் {துரோணரின்} மகனாவீர். யாதவர்கள் அனைவராலும் நீர் உயர்வாக மதிக்கப்படுகிறீர். ஓ! தேர்வீரர்களில் முதன்மையானவரே, நான் கேட்கிறேன், இவ்வாயுதத்தைப் பயன்படுத்தி நீர் யாருடன் போரிடப்போகிறீர்?” என்று கேட்டேன்.(35)

இவ்வாறு என்னால் சொல்லப்பட்ட துரோணர் மகன், “ஓ! கிருஷ்ணா, ஓ மங்கா மகிமை கொண்டவனே, உன்னை வணங்கிய பிறகு, உன்னிடம் போரிட வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. ஓ! கிருஷ்ணா, தேவர்கள் மற்றும் தானவர்களால் புகழப்படும் உன் சக்கரத்தை அதற்காகவே நான் வேண்டினேன். நான் அஃதை அடைந்திருந்தால், இவ்வுலகில் வெல்லப்பட முடியாதவனாக ஆகியிருப்பேன்.(37) ஓ! கேசவா, ஓ! கோவிந்தா, கிட்டத்தட்ட அடையமுடியாத என் விருப்பத்தை அடைய முடியாமலே நான் உன்னை விட்டுச் செல்லப் போகிறேன். இப்போது என்னிடம் நல்வார்த்தைகளைப் பேசுவாயாக.(38) பயங்கரமான மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான நீ ,இந்தப் பயங்கரமான ஆயுதத்தைத் தரித்திருக்கிறாய். இவ்வாயுதத்தால் நீ ஒப்பற்றவனாக இருக்கிறாய். இவ்வுலகில் இதைத்தரிக்கவல்லவன் எவனுமில்லை” என்றார்.(39)

என்னிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, பிறகு, குதிரை இணைகள் {ஜோடிகள்} பலவற்றையும், அதிகச் செல்வத்தையும், பல்வேறு வகை ரத்தினங்களையும் பெற்றுக் கொண்டு துவாரகையை விட்டகன்றார்.(40) அவர் கோபம்நிறைந்தவராகவும், தீய ஆன்மா கொண்டவராகவும், மன அமைதியற்றவராகவும், மிகக் கொடூரராகவும் இருக்கிறார். பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதத்தை அவர் அறிந்திருக்கிறார். விருகோதரர் {பீமர்} அவரிடம் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்” என்றான் {கிருஷ்ணன்}”.(41)

பிரம்மசிரமேவிய அஸ்வத்தாமன்! – சௌப்திக பர்வம் பகுதி – 13-கிருஷ்ணனுடன் சேர்ந்து பீமனைப் பின்தொடர்ந்த பாண்டவர்கள்; நிற்குமாறு அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டும் நிற்காத பீமன்; வியாசருடன் அமர்ந்திருக்கும் அஸ்வத்தாமனைக் கண்ட பாண்டவர்கள்; பிரம்மசிர ஆயுதத்தை வெளியிட்ட அஸ்வத்தாமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், யாதவர்கள் அனைவரையும் மகிழ்விப்பவனுமான அவன் {கிருஷ்ணன்}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, வலிமைமிக்க அனைத்து வகை ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருக்கும் தன் அற்புதத் தேரில் ஏறிக் கொண்டான்.(1) தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், காம்போஜ இனத்தைச் சேர்ந்த முதன்மையானவையுமான குதிரைகளில் ஈரிணைகள் {இரண்டு ஜோடிகள்} அவ்வாகனத்தில் பூட்டப்பட்டிருந்தன. அந்தச் சிறந்த தேரின் தூரம் {ஏர்க்கால்} காலைச் சூரியனின் நிறத்தில் இருந்தது.(2) {அந்த ஏர்க்காலின்} வலப்புறத்தில் சைவியம் என்றறியப்பட்ட குதிரையும், இடப்புறத்தில் சுக்ரீவமும்; பார்ஷினியில் {பின்புறத்தில்} மேகபுஷ்பம் மற்றும் வலாஹகம் என்றழைக்கப்பட்ட இரு குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன.(3) அந்தத் தேரில், ரத்திரங்கள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீகத் தச்சனால் {விஸ்வகர்மனால்} செய்யப்பட்டதுமான தெய்வீகக் கொடிமரமொன்று மாயனை (விஷ்ணுவைப்) போலவே உயர்ந்து நின்றிருந்தது.(4) அந்தக் கொடிமரத்தின் நுனியில் வினதையின் மகன் (கருடன்) பெருங்காந்தியுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். உண்மையில், அந்தப் பாம்புகளின் எதிரியானவன் {கருடன்}, உண்மையின் உடல்வடிவமான {சத்தியரூபியான} கேசவனின் {கிருஷ்ணனின்} கொடிமர உச்சியில் அமர்ந்திருந்தான்.(5)

வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான ரிஷிகேசன் {கிருஷ்ணன்} அத்தேரில் ஏறிக்கொண்டான். அவனை அடுத்து தடுத்தற்கரிய சாதனைகளைக் கொண்ட அர்ஜுனனும், குருக்களின் மன்னனான யுதிஷ்டிரனும் அதே வாகனத்தில் ஏறினார்கள்.(6) சாரங்கம் என்றழைக்கப்படும் வில்லைத் தரிக்கும் தசார்ஹ குலத்தோனின் {கிருஷ்ணனின்} அருகில் அத்தேரில் அமர்ந்திருந்த பாண்டுவின் மகன்கள் இருவரும், வாசவனின் {இந்திரனின்} அருகில் அமர்ந்திருக்கும் அசுவினி இரட்டையர்களைப் போல மிக அழகாகத் தெரிந்தனர்.(7) அந்தத் தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, உலகமனைத்தாலும் புகழப்படும் தன் தேரில் அவர்களை ஏறச் செய்து, பெரும் வேகம் கொண்ட அந்த முதன்மையான குதிரைகளைத் தூண்டினான்.(8) பாண்டு மகன்கள் இருவராலும், அந்த யாதவக் காளையாலும் {கிருஷ்ணனாலும்} செலுத்தப்பட்ட அந்தச் சிறந்த வாகனத்தில் இருந்த குதிரைகள் அவர்களை ஏற்றிக் கொண்ட பிறகு திடீரெனப் பறந்தன.(9) அந்தச் சாரங்கபாணியை {கிருஷ்ணனை} அவ்விலங்குகள் பெரும் வேகத்தோடு சுமந்து சென்ற போது, அவற்றின் விரைவால் ஏற்பட்ட ஒலியானது, காற்றின் ஊடாகச் செல்லும் பறவைகளின் ஒலியைப் போலப் பேரொலியாக இருந்தது.(10)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பெரும் வேகத்தில் சென்ற அவர்கள், விரைவாகத் தாங்கள் பின்தொடர்ந்து சென்ற வலிமைமிக்க வில்லாளியான பீமசேனனை அடைந்தனர்.(11) அந்தப் பெருந்தேர்வீரர்கள் பீமனைச் சந்தித்தாலும், எதிரியை நோக்கி மூர்க்கமாகச் செல்பவனும், கோபத்தில் நிறைந்தவனுமான அந்தக் குந்தியின் மகனைத் {பீமனைத்} தடுக்கத் தவறினர்.(12) சிறப்புமிக்கவர்களும், உறுதியானவர்களுமான அந்த வில்லாளிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவன் {பீமன்}, பகீரதனால் கீழே கொண்டுவரப்பட்ட ஆற்றின் {கங்கையாற்றின்} கரையை, மிக வேகமாகச் செல்லும் தன் குதிரைகளின் மூலம் அடைந்தான்.(13) அங்கே நீர் முனையின் {கரையின்} அருகில், உயர் ஆன்மா கொண்டவரும், சிறப்புமிக்கவரும், கரிய நிறத்தவரும், தீவில் பிறந்தவருமான வியாசர் பல முனிவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருப்பதைக் கண்டான்.(14) மேலும் அவன் {பீமன்}, புழுதியால் மறைக்கப்பட்டவனும், குசப்புல்லாலான ஆடை உடுத்தியவனும், தெளிந்த நெய்யை மேனியெங்கும் பூசிக்கொண்டிருந்தவனும், தீச்செயல்கள் புரிபவனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அங்கே அவரின் {வியாசரின்} அருகில் அமர்ந்திருப்பதையும் கண்டான்.(15)

வலிமைக்கக் கரங்களைக் கொண்ட குந்தியின் மகன் பீமசேனன், அஸ்வத்தாமனை நோக்கி விரைந்து, கணை பொருத்தப்பட்ட தன் வில்லை எடுத்து, “நில், நிற்பாயாக” என்றான்.(16) கையில் வில்லுடன் தன்னை நோக்கி வரும் அந்தப் பயங்கர வில்லாளியையும் {பீமனையும்}, ஜனார்த்தனனின் {கிருஷ்ணனின்} தேரிலிருந்த அவனது சகோதரர்கள் இருவரையும் {யுதிஷ்டிரன் மற்றும் அர்ஜுனனையும்} கண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்},(17) மிகுந்த கலக்கத்தை அடைந்து, தன் நேரம் வந்ததென நினைத்தான். தளர்வடையா ஆன்மா கொண்ட அவன் {அஸ்வத்தாமன்}, (தன் தந்தையிடம் இருந்து தான் அடைந்த) அந்த உயர்ந்த ஆயுதத்தை {பிரம்மசிரத்தை} தன் மனத்தில் அழைத்தான்.(18) பிறகு அவன் {அஸ்வத்தாமன்}, தன் இடக்கையால் ஒரு புல்லை {சீழ்கீர்க்கையை {நாணற்புல்லை}} எடுத்தான். 

பெரும்துன்பத்தில் வீழ்ந்த அவன் {அஸ்வத்தாமன்}, அந்தப் புல்லை உரிய மந்திரங்களுடன் ஈர்த்து, அதைப் பலமிக்க அந்தத் தெய்வீக ஆயுதமாக {பிரம்மசிரமாக} மாற்றினான்.(19) (பாண்டவர்களின்) கணைகளையும், தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட அவர்களையும் {பாண்டவர்களையும்} காணப்பொறுக்காத அவன் {அஸ்வத்தாமன்}, கோபத்தால், “பாண்டவர்களின் அழிவுக்காக” என்ற இந்தப் பயங்கரமான வார்த்தைகளைச் சொன்னான்.(20) ஓ! மன்னர்களில் புலியே {ஜனமேஜயா}, துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்} இவ்வார்த்தைகளைச் சொல்லி, அனைத்துலகங்களும் திகைக்கும் வகையில் அவ்வாயுதத்தை ஏவினான்.(21) யுகத்தின் முடிவில் அனைத்தையும் அழிக்கும் யமனைப் போல, மூவுலகங்களையும் எரிக்கவல்லதாகத் தெரிந்த அந்தப் புல்லில் இருந்து நெருப்புண்டானது” {என்றார் வைசம்பாயனர்}.(22)

நெருப்புகளுக்கிடையில் நாரதரும், வியாசரும்! – சௌப்திக பர்வம் பகுதி – 14-அர்ஜுனன் தன் பிரம்மாயுதத்தை ஏவியது; இயற்கையில் தோன்றிய இயல்புக்குமீறிய சகுனங்கள்; அவ்விரு ஆயுதங்களின் மூலம் உண்டான இரு நெருப்புகளுக்கிடையில் மூவுலகங்களைக் காப்பதற்காக நின்ற நாரதரும், வியாசரும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, மிகத் தொடக்கத்திலேயே துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} நோக்கத்தைக் குறிப்புகளால் அறிந்து கொண்டான். அர்ஜுனனிடம் அவன் {கிருஷ்ணன்},(1) “ஓ! அர்ஜுனா, ஓ! பாண்டுவின் மகனே, உன் நினைவில் இருப்பதும், துரோணரால் உனக்குப் புகட்டப்பட்ட அறிவுமான அந்தத் தெய்வீக ஆயுதத்தை {பிரம்மாயுதத்தைப்} பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது.(2) ஓ! பாரதா {அர்ஜுனா}, உன்னையும், உன் சகோதர்களையும் காப்பதற்காக, அனைத்து ஆயுதங்களையும் தணிக்கவல்லதான அவ்வாயுதத்தை இப்போரில் ஏவுவாயாக” என்றான்.(3) கேசவனால் {கிருஷ்ணனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், பகைவீரர்களைக் கொல்பவனான அர்ஜுனன், நாண்கயிற்றில் கணை பொருத்தப்பட்ட தன் வில்லை எடுத்துக் கொண்டு, வேகமாகத் தன் தேரில் இருந்து இறங்கினான்.(4) தனது ஆசானின் மகனுக்கும் {அஸ்வத்தாமனுக்கும்}, தனக்கும், தன் சகோதரர்களுக்கும் நன்மையை விரும்பிய அந்த எதிரிகளை எரிப்பவன் {அர்ஜுனன்},(5) தேவர்கள் அனைவரையும் வணங்கி, பெரியோர் அனைவரையும் வணங்கி, உலகங்கள் அனைத்தின் நன்மையைச் சிந்தித்து, “அஸ்வத்தாமரின் ஆயுதம் இவ்வாயுதத்தால் தணிக்கப்படட்டும்” என்ற வார்த்தைகளைச் சொல்லி அவ்வாயுதத்தை ஏவினான்.(6)

காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} ஏவப்பட்ட அவ்வாயுதமானது, யுக முடிவில் தோன்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்பைப் போலக் கடுந்தழல்களுடன் எரிந்தது.(7) அதே போலவே, கடுஞ்சக்தி கொண்டவனான துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} ஏவப்பட்ட ஆயுதமும், பெரும் நெருப்புப்பந்தைப் போலப் பயங்கரத் தழல்களுடன் சுடர்விட்டெரிந்தது.(8) எண்ணற்ற இடிமுழக்கங்கள் கேட்டன; ஆயிரக்கணக்கான எரிநட்சத்திரங்கள் விழுந்தன; உயிரினங்கள் அனைத்தும் பேரச்சத்தால் ஈர்க்கப்பட்டன.(9) ஒலியால் நிறைந்திருப்பதாகத் தெரிந்த மொத்த ஆகாயமும், அந்நெருப்பின் தழல்களுடன் பயங்கரத் தன்மையை அடைந்தது. மலைகள், நீர் நிலைகள் மற்றும் மரங்களுடன் கூடிய மொத்த பூமியும் நடுங்கியது.(10)

அப்போது, அனைத்து உயிரினங்களின் ஆன்மாவான நாரதர், பாரத இளவரசர்கள் அனைவரின் பாட்டன் (வியாசர்) ஆகிய இருபெரும் முனிவர்களும், மூவுலகங்களையும் எரிக்கும் அவ்விரு ஆயுதங்களையும் கண்டு, அங்கே தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர். அந்த இரு முனிவர்களும், அஸ்வத்தாமன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இரு வீரர்களையும் அமைதிப்படுத்த முயன்றனர்.(11,12) கடமைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், உயிரினங்கள் அனைத்தின் நன்மையை விரும்பியவர்களும், பெருஞ்சக்தியைக் கொண்டவர்களுமான அவ்விரு தவசிகளும், சுடர்மிக்க அவ்விரு ஆயுதங்களுக்கு மத்தியில் நின்றனர்.(13) எந்தச் சக்தியிலும் மூழ்க இயலாதவர்களான அந்தச் சிறப்பு மிக்க முனிவர்கள் இருவரும், அவ்விரு ஆயுதங்களுக்கிடையில் சுடர்மிக்க இரு நெருப்புகளைப் போலத் தங்களை நிறுத்திக் கொண்டனர்.(14) உயிருடன் கூடிய எவ்வுயிரினத்தாலும் தடுக்கப்பட முடியாதவர்களும், தேவர்கள் மற்றும் தானவர்களால் துதிக்கப்படுபவர்களுமான அவ்விருவரும், அவ்விரு ஆயுதங்களின் சக்தியை தணிக்கும் வகையில், உலகமனைத்துக்கும் நன்மை செய்ய இவ்வழியில் செயல்பட்டனர்.(15)

அவ்விரு முனிவர்கள், “இந்தப் போரில் வீழ்ந்த பெருந்தேர்வீரர்கள், பல்வேறு வகை ஆயுதங்களை அறிந்திருந்தனர். எனினும் அவர்கள், மனிதர்கள் மீது இத்தகு ஆயுதத்தை ஒருபோதும் ஏவியதில்லை. வீரர்களே, நீங்கள் செய்திருக்கும் இந்த மூர்க்கச் செயல் என்ன தெரியுமா?” என்று கேட்டனர்”.(16)

ஆயுதத்தைத் திருப்ப முடியாத அஸ்வத்தாமன்! – சௌப்திக பர்வம் பகுதி – 15-தன் ஆயுதத்தை விலக்கித் திருப்பிக் கொண்ட அர்ஜுனன்; தன் ஆயுதத்தை விலக்கிக் கொள்ள முடியாத அஸ்வத்தாமன், அதைப் பாண்டவப் பெண்களின் கருவறையை நோக்கிச் செலுத்துவது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மனிதர்களில் புலியே, நெருப்பைப் போன்ற காந்தியைக் கொண்ட அவ்விரு முனிவர்களையும் கண்டவுடனேயே, தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் தெய்வீகக் கணையைத் திரும்பிப் பெறத் தீர்மானித்தான்.(1) கரங்களைக் கூப்பிக் கொண்ட அவன், அம்முனிவர்களிடம், “நான் இவ்வாயுதத்தைப் பயன்படுத்தும் போது, “(எதிரியின்) அந்த ஆயுதம் தணிவடையட்டும்” என்று சொல்லியே ஏவினேன்.(2) நான் இந்த உயர்ந்த ஆயுதத்தைத் திரும்பப் பெற்றால், பாவம் நிறைந்த செயல்களைச் செய்யும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, தன் ஆயுதத்தின் சக்தியால் எங்கள் அனைவரையும் எரித்துவிடுவார் என்பதில் ஐயமில்லை.(3) நீங்கள் இருவரும் தேவர்களைப் போன்றவர்களாவீர். எங்கள் நன்மையையும், மூன்று உலகங்களின் நன்மையையும் பாதுகாக்கும்படியான ஏதாவது வழிமுறையை ஆலோசிப்பதே உங்களுக்குத் தகும்” என்றான்.(4)

இந்த வார்த்தைகளைச் சொன்ன தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் ஆயுதத்தைத் திருப்பிக் கொண்டான். போரில் அவ்வாயுதத்தைத் திருப்புவது தேவர்களுக்கே மிகக் கடினமான செயலாகும்.(5) ஒரு முறை ஏவப்பட்ட அந்த உயர்ந்த ஆயுதத்தைப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} தவிர, மஹேந்திரனாலும் திருப்பமுடியாது.(6) அவ்வாயுதம் பிரம்ம சக்தியில் பிறந்ததாகும். தூய்மையற்ற ஆன்மா கொண்ட எந்த மனிதனாலும் அதைத் திருப்ப முடியாது. பிரம்மச்சரிய வாழ்வுமுறையை நோற்கும் ஒருவனால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.(7) பிரம்மச்சரிய நோன்பைப் பயிலாத ஒருவன், அஃதை ஏவிய பிறகு மீண்டும் திருப்பினால், அனைத்துக் கருவிகளுடன் சேர்த்து, அவனுடைய {ஏவியவனின்} தலையையும் அது தாக்கி வீழ்த்தும்.(8) அர்ஜுனன் ஒரு பிரம்மச்சாரியும், நோன்புகளை நோற்பவனுமாவான். கிட்டத்தட்ட அடையமுடியாத ஆயுதத்தை அடைந்த அவன் {அர்ஜுனன்}, பெரும் ஆபத்தான சூழ்நிலையில் மூழ்கியிருந்தபோதும், ஒருபோதும் அதைப் பயன்படுத்தவில்லை.(9) உண்மை நோன்பை நோற்பவனும், பெரும் வீரம் கொண்டவனும், பிரம்மச்சாரியின் வாழ்வுமுறையை நோற்பவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பணிவுடையவனாகவும், பெரியோர் அனைவருக்கும் கீழ்ப்படிந்தவனாகவும் இருந்தான். இதன் காரணமாகவே அவனால் அவ்வாயுதத்தைத் திருப்பிக் கொள்ள முடிந்தது.(11)

ஆனால் துரோணரின் மகனோ {அஸ்வத்தாமனோ}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த உயர்ந்த ஆயுதத்தைப் போரில் திரும்பப் பெற முடியாமல், தீவில் பிறந்தவரான முனிவரிடம் {வியாசரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(12) “ஓ! தவசியே, பேராபத்தால் அச்சமடைந்தும், என் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பியும், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகவும் நான் இந்த ஆயுதத்தை ஏவினேன்.(13) ஓ! புனிதமானவரே {வியாசரே}, பொய் நடத்தை கொண்ட இந்தப் பீமசேனன், போரில் திருதராஷ்டிரர் மகனைக் {துரியோதனனைக்} கொன்றபோது பாவம் நிறைந்த செயலைச் செய்தான்.(14) ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, அதன் காரணமாகவே தூய்மையற்ற ஆன்மா கொண்டவனான நான் இந்த ஆயுதத்தை ஏவினேன். எனினும், இப்போது இதை நான் திரும்பப் பெறத் துணிய மாட்டேன்.(15) பாண்டவர்களின் அழிவுக்காகவே, தடுத்தற்கரிய இந்தத் தெய்வீக ஆயுதத்தை நெருப்பின் சக்தியால் ஈர்த்து நான் ஏவினேன்.(16) பாண்டவர்களின் அழிவுக்காகத் திட்டமிட்டு ஏவப்பட்டதே இந்த ஆயுதம். எனவே, அது பாண்டு மகன்கள் அனைவரின் உயிரையும் எடுக்கும்.(17) ஓ! மறுபிறப்பாளரே, கோபத்தால் நான் இந்தப் பாவம் நிறைந்த செயலைச் செய்துவிட்டேன். பாண்டவர்களின் அழிவுக்காகவே போரில் நான் இவ்வாயுதத்தை இருப்புக்கு அழைத்தேன்” என்றான் {அஸ்வத்தாமன்}.(18)

வியாசர் {அஸ்வத்தாமனிடம்}, “ஓ! குழந்தாய் {அஸ்வத்தாமா}, பிருதையின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதத்தை அறிந்தவனாவான். கோபத்தாலோ, போரில் உன்னை அழிக்கவோ அவன் அந்த ஆயுதத்தை ஏவவில்லை.(19) மறுபுறம், உன் ஆயுதத்தைக் கலங்கடிக்கவே அவன் அதைப் பயன்படுதிதனான். மேலும் அவன் {அர்ஜுனன்} அதைத் திரும்பவும் பெற்றான்.(20) உன் தந்தை கற்பித்ததன் மூலம் பிரம்ம ஆயுதத்தையே அடைந்தும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிடவில்லை.(21) அர்ஜுனன் அந்த அளவுக்குப் பொறுமையும், அந்த அளவுக்கு நேர்மையும் கொண்டிருக்கிறான். மேலும் அவன் அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவனாவான். அப்படிப்பட்ட ஒரு மனிதனை, அவனது சகோதரர்களுடன் சேர்த்து அழிக்க நீ ஏன் முயல்கிறாய்?(22) பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதமானது எந்த இடத்தில் வைத்து, மற்றொரு உயர்ந்த ஆயுதத்தால் கலங்கடிக்கப்படுமோ, அந்த இடத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு சொட்டு நீரையும் மேகங்கள் பொழியாது. அக்காலத்தில் அங்கே பஞ்சமேற்படும்.(23)

இக்காரணத்திற்காகவே, சக்தியைக் கொண்டவனாகவே இருந்தாலும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான இந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, வாழும் உயிரினங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் உனது ஆயுதத்தை அவனது ஆயுதத்தால் கலங்கடிக்கவில்லை.(24) பாண்டவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; நீயும் பாதுகாக்கப்பட வேண்டும்; இந்த நாடும் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இந்த உனது தெய்வீக ஆயுதத்தைத் திரும்ப அழைப்பாயாக.(25) உன் இதயத்தில் இருந்து இந்தக் கோபத்தை அகற்றி, பாண்டவர்களைப் பாதுகாப்பாக இருக்கச் செய்வாயாக. அரச முனியான யுதிஷ்டிரன், பாவம் நிறைந்த எச்செயலையும் செய்து வெற்றியடைய ஒருபோதும் விரும்பமாட்டான்[1].(26) உன் தலையில் இருக்கும் அந்த மணியைக் கொடுப்பாயாக. பாண்டவர்கள் அதை {மணியை} எடுத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக உனக்கு உன் உயிரைத் தருவார்கள்” என்றார் {வியாசர்}.(27)துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, “பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இதுவரை ஈட்டியிருக்கும் செல்வங்கள் அனைத்தையும் விட இந்த எனது மணி விலைமதிப்புமிக்கதாகும். இந்த மணியைச் சூடியவனுக்கு ஆயுதங்கள், நோய் மற்றும் பசி ஆகியவற்றிடமிருந்து எப்போதும் அச்சமேற்படாது. தேவர்கள், தானவர்கள் மற்றும் நாகர்களிடம் அவன் அச்சங்கொள்ளத் தேவையில்லை.(29) ராட்சசர்கள் மற்றும் கள்வர்களிடமும் அவன் அச்சங்கொள்ள மாட்டான். எவ்வழியிலும் நான் அதைப் பிரிந்திருக்க முடியாது.(30) இருப்பினும், ஓ! புனிதமானவரே, நீர் எதைச் செய்யச் சொல்கிறீரோ அஃது என்னால் செய்யப்பட வேண்டும். இதோ எனது மணி. இதோ நான். எனினும், (மரண ஆயுதத்தால் ஈர்க்கப்பட்டிருக்கும்) இப்புல்லானது,(31) உயர்வானதும், வலிமைமிக்கதும், கலங்கடிக்கப்பட முடியாத ஆயுதமாகவும் இருப்பதால், இது பாண்டவப் பெண்களின் கருவறைகளில் பாயும். ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே- வியாசரே}, இவ்வாயுதத்தை ஒருமுறை ஏவியபிறகு என்னால் திரும்பப் பெற முடியாது.(32) நான் இப்போது இந்த ஆயுதத்தைப் பாண்டவப் பெண்களின் கருவறைகளில் வீசப் போகிறேன். ஓ! புனிதமானவரே, உமது ஆணைகளைப் பொறுத்தவரையில், வேறு விதங்களில் நான் அவற்றுக்கு நிச்சயம் கீழ்ப்படிவேன்” என்றான் {அஸ்வத்தாமன்}.(33)

வியாசர், “இவ்வாறே செய். எனினும், ஓ! பாவமற்றவனே, வேறு எந்த நோக்கத்திலும் புத்தியைச் செலுத்தாதே. இவ்வாயுதத்தைப் பாண்டவப் பெண்களின் கருவறைகளில் வீசி ஒழிவடைவாயாக {அனைத்தையும் நிறுத்துவாயாக}” என்றார்”.(34)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தீவில் பிறந்தவரின் {துவைபாயனரான வியாசரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட துரோணரின் மகன், அந்த ஆயுதத்தைப் பாண்டவப் பெண்களின் கருவறைகளில் வீசினான்”.(36)

மூவாயிரம் வருடங்கள் திரிவீர்! – சௌப்திக பர்வம் பகுதி – 16-கருவை மீட்பேன் என்று சொன்ன கிருஷ்ணன்; அஸ்வத்தாமனைச் சபித்தது; கிருஷ்ணனின் சாபத்தை அங்கீகரித்த வியாசர்; சாபத்தை ஏற்றுக் கொண்டு, தன் தலையில் இருந்த மணியைக் கொடுத்த அஸ்வத்தாமன்; திரௌபதியிடம் திரும்பிச் சென்ற பாண்டவர்கள்; திரௌபதியிடம் மணியைக் கொடுத்த பீமன்; அம்மணியைத் தலையில் சூடிக்கொள்ளுமாறு யுதிஷ்டிரனிடம் சொன்ன திரௌபதி…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாவம் நிறைந்த செயல்களைச் செய்யும் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} (பாண்டவப் பெண்களின் கருவறையில்) அவ்வாயுதம் ஏவப்படப்போவதை அறிந்த ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, உற்சாகம் நிறைந்த இவ்வார்த்தைகளை அவனிடம் {அஸ்வத்தாமனிடம்} சொன்னான்:(1) “பக்தி நோன்புகளை நோற்கும் ஒரு குறிப்பிட்ட பிராமணர், இப்போது அர்ஜுனனின் மருமகளாக இருப்பவளான விராடனின் மகள் {உத்தரை} உபப்லாவ்யத்தில் இருக்கும்போது அவளைக் கண்டு,(2) “குரு குலம் அருகிப் போகும்போது உனக்கு ஒரு மகன் பிறப்பான். இந்தக் காரணத்திற்காக அந்த உன் மகன் பரீக்ஷித் என்ற பெயரால் அழைக்கப்படுவான்” என்றார்.(3) அந்தப் பக்திமானின் வார்த்தைகள் உண்மையாகும். பாண்டவர்கள் பரீக்ஷித் என்ற பெயரில் ஒரு மகனை {பேரனை} அடைவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.(4)

சாத்வத குலத்தில் முதன்மையானவனான கோவிந்தன் {கிருஷ்ணன்} இவ்வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கோபத்தால் நிறைந்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அவனிடம் {கிருஷ்ணனிடம்} மறுமொழியாக,(5) “ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாண்டவர்களிடம் நீ கொண்ட ஒருதலைச் சார்பினால் சொல்லப்படும் இது நடக்காது. ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, என் வார்த்தைகள் நிறைவேறும்.(6) என்னால் உயரத்தப்பட்ட என் ஆயுதம் {ஐஷீகம் [நாணற்புல்லாலான பிரம்மசிரம்]}, நீ எந்தக் கருவைக் காக்க விரும்புகிறாயோ, விராடன் மகளின் {உத்தரையின்} கருவறையில் உள்ள அந்தக் கருவின் மேலேயே விழும்” என்றான்.(7)

அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “இந்த வலிமைமிக்க ஆயுதத்தின் பாய்ச்சல் கனியற்றதாகாது. அந்தக் கரு மாளும். மாண்டதே மீண்டும் உயிரை அடைந்து நீண்ட வாழ்வைப் பெறும்.(8) உம்மைப் பொறுத்தவரையில், ஞானிகள் அனைவரும் உம்மைக் கோழையாகவும், இழிந்த பாவியாகவும் அறிவார்கள். எப்போதும் பாவம் நிறைந்த செயல்களிலேயே ஈடுபடும் நீர் பிள்ளைகளைக் கொல்லும் கொலையாளியாவீர். இக்காரணத்திற்காக, இந்த உமது பாவங்களுக்குரிய கனியை நீர் தாங்கவே வேண்டும்.(9) எந்தத் தோழனும் இல்லாமல், பேசுவதற்கு எவருமில்லாமல் இப்பூமியில் மூவாயிரம் {3000} வருடங்கள் நீர் திரிந்து கொண்டிருப்பீர்[1].(10) தனியொருவராகவும், உம்மருகே எவரும் இல்லாத நிலையிலும் நீர் பல்வேறு நாடுகளில் திரிந்து கொண்டிருப்பீர். ஓ! இழிந்தவரே {அஸ்வத்தாமரே}, மனிதர்களுக்கு மத்தியில் உமக்கு இடமேதும் கிடையாது.(11) சீழ் மற்றும் குருதியின் முடைநாற்றம் உம்மிலிருந்து வெளிப்படும், மேலும் அடைதற்கரிய காடுகளும், அச்சந்தரும் முட்புதர்களும்தான் உமது வசிப்பிடங்களாகும். ஓ! பாவம் நிறைந்த ஆன்மா கொண்டவரே {அஸ்வத்தாமரே}, நோய்கள் அனைத்தின் கனத்துடன் நீர் பூமியில் திரிந்து கொண்டிருப்பீர்.(12)வீரப் பரீக்ஷித் வயதை அடைந்து, வேதங்களை அறிந்து, பக்தி நோன்புகளை நோற்று, சரத்வான் மகனிடம் {கிருபரிடம்} இருந்து ஆயுதங்கள் அனைத்தையும் அடைவான்.(13) நீதிமிக்க ஆன்மாக் கொண்ட அந்த மன்னன் {பரீக்ஷித்}, உயர்ந்த ஆயுதங்கள் அனைத்தின் அறிவையும் அடைந்து, க்ஷத்திரியக் கடமைகள் அனைத்தையும் அறிந்து, அறுபது {60} ஆண்டுகளுக்குப் பூமியை ஆள்வான்.(14) மேலும், ஓ! தீய ஆன்மா கொண்டவரே, உமது கண்களுக்கு முன்பாகவே அந்தப் பிள்ளை {பரீக்ஷித்} குருக்களின் வலிமைமிக்க மன்னனாவான்.(15) உமது ஆயுதநெருப்பின் சக்தியால் எரிக்கப்பட்டாலும் நான் அவனை மீட்பேன். ஓ மனிதர்களில் இழிந்தவரே, என் தவங்கள் மற்றும் என் உண்மையின் சக்தியை நீர் காண்பீராக” என்றான் {கிருஷ்ணன்}.(16)

வியாசர் {அஸ்வத்தாமனிடம்}, “மிகக் கொடூரமான இந்தச் செயலைச் செய்து, எங்களை அவமதித்ததாலும், (பிறப்பால்) நல்ல பிராமணனாக இருந்தாலும், உன் நடத்தை இவ்வாறு இருப்பதாலும்,(17) தேவகியின் மகன் {கிருஷ்ணன்} சொன்ன அந்தச் சிறந்த வார்த்தைகள், க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றும் உன் வழக்கில் உணரப்படும் என்பதில் ஐயமில்லை” என்றார்.(18)

அஸ்வத்தாமன் {வியாசரிடம்}, “ஓ! புனிதமானவரே, மனிதர்கள் அனைவரின் மத்தியில் உம்முடன் நான் வாழ்ந்து வருவேன். மனிதர்களில் முதன்மையானவனும், சிறப்புமிக்கவனுமான இவனது வார்த்தைகள் உண்மையாகட்டும்” என்றான்”.(19)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் மணியை உயர் ஆன்மப் பாண்டவர்களிடம் கொடுத்துவிட்டு, அவர்களது கண்களுக்கு முன்பாகவே உற்சாகமில்லாமல் காட்டுக்குள் சென்றான்.(20) தங்கள் எதிரிகள் அனைவரையும் தண்டித்துக் கொன்றுவிட்ட பாண்டவர்கள், கோவிந்தனையும் {கிருஷ்ணனையும்}, தீவில் பிறந்த கிருஷ்ணரையும் {துவைபானரான வியாசரையும்}, பெருந்தவசியான நாரதரையும் முன்னிட்டுக் கொண்டு, அஸ்வத்தாமனுடன் பிறந்த அந்த மணியை எடுத்துக் கொண்டு, பிராய நோன்பை நோற்று அமர்ந்திருந்த நுண்ணறிவு கொண்ட திரௌபதியிடம் வேகமாகத் திரும்பி வந்தனர்”.(21,22)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்}, காற்றின் வேகத்திற்கு ஒப்பான சிறந்த குதிரைகளால் சுமக்கப்பட்டு, தசார்ஹ குலத்தோனையும் {கிருஷ்ணனையும்} உடனழைத்துக் கொண்டு, தங்கள் முகாமுக்குத் திரும்பினர்.(23) தங்கள் தேர்களில் இருந்து வேகமாகக் கீழிறங்கியவர்களும், அதிகத் துயருடன் இருந்தவர்களுமான அந்தப் பெருந்தேர்வீரர்கள், துருபதன் மகளான கிருஷ்ணை {திரௌபதி} துயரத்தால் பீடிக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.(24) கிருஷ்ணனுடன் கூடிய பாண்டவர்கள், சோகம் மற்றும் துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்தவளும், உற்சாகமற்றவளுமான அந்த இளவரசியை {திரௌபதியை} அணுகி, அவளைச் சுற்றி அமர்ந்தனர்.(25)

அப்போது, மன்னனின் {யுதிஷ்டிரனின்} அன்புக்குரியவனும், வலிமைமிக்கவனுமான பீமசேனன், அந்தத் தெய்வீக மணியை அவளிடம் {திரௌபதியிடம்} கொடுத்து, இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(26) “ஓ! இனிமையான மங்கையே இந்த மணி உனதானது. உன் மகன்களைக் கொன்றவன் வெல்லப்பட்டான். உன் கவலையை விட்டு எழுந்து, ஒரு க்ஷத்திரியப் பெண்ணுக்குரிய கடமைகளை நினைவுகூர்வாயாக.(27) ஓ! கரிய கண்களைக் கொண்டவளே, ஓ! மருண்ட பெண்ணே, வாசுதேவன் (உபப்லாவ்யத்திலிருந்து) தூதுசெல்லப் புறப்பட்டபோது, அந்த மதுசூதனனிடம் இந்த வார்த்தைகளையே நீ சொன்னாய்:(28) “ஓ! கோவிந்தா, மன்னர் {யுதிஷ்டிரர்} அமைதியை விரும்புவதால், நான் கணவர்கள் இல்லாதவள். நான் மகன்களோ, சகோதரர்களோ இல்லாதவள். நீயும் {என்னைப் பொறுத்தவரையில்} உயிரோடில்லை” என்றாய்.(29) 

இந்தக் கசந்த வார்த்தைகளையே நீ மனிதர்களில் முதன்மையானவனான கிருஷ்ணனிடம் சொன்னாய். க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு மிகவும் ஏற்புடைய அந்த வார்த்தைகளை நீ நினைவுகூர்வதே உனக்குத் தகும்.(30) அரசுரிமைக்கான நமது வழியில் தடையாக இருந்த இழிந்த துரியோதனன் கொல்லப்பட்டான். துச்சாசனனின் உயிர்க்குருதியை நான் குடித்துவிட்டேன்.(31) நம் எதிரிகளுக்கு நாம் பட்ட கடனைச் செலுத்திவிட்டோம். மனிதர்கள் பேசும்போது, இனியும் நம்மை நிந்திக்க முடியாது. துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} வென்றாலும், அவன் பிராமணன் என்பதாலும், இறந்துவிட்ட நமது ஆசானுக்கு {துரோணருக்கு} மரியாதை காட்ட வேண்டும் என்பதாலும் அவனை விடுவித்துவிட்டோம்.(32) ஓ! தேவி, அவனது புகழ் அழிக்கப்பட்டது, அவனது உடல் மட்டுமே எஞ்சியிருக்கிறது. தன் மணியை இழந்த அவன், இப்பூமியில் ஆயுதங்களற்றவனாகத் திரியப் போகிறான்” என்றான் {பீமன்}.(33)

திரௌபதி, “நாம் காயம் பிழைத்த காரணத்தால், நாம் அடைந்த கடனை மட்டுமே திரும்பச் செலுத்த நான் விரும்பினேன். ஆசானின் மகன் {அஸ்வத்தாமர்}, அந்த ஆசானை {துரோணரைப்} போலவே எனது மரியாதைக்குரியவராவார்.(34) ஓ! பாரதரே {பீமரே}, இந்த மணியை மன்னர் {யுதிஷ்டிரர்} தன் தலையில் சூடிக் கொள்ளட்டும்” என்றாள். அப்போது அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, திரௌபதியின் விருப்பப்படியே அந்த மணியை எடுத்து, ஆசானின் பரிசென அதைக் கருதி அதைத் தன் தலையில் சூடினான்.(35) சிறப்பானதும், தெய்வீகமானதுமான அந்த மணியைத் தன் தலையில் சூடிய அந்தப் பலமிக்க மன்னன் {யுதிஷ்டிரன்}, தனக்கு மேலே சந்திரனைக் கொண்ட ஒரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான்.(36) இளவரசி திரௌபதி, தன் மகன்களின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டிருந்தாலும், மனோபலம் கொண்டவளான அவள், தன் நோன்பை {பிராய நோன்பைக்} கைவிட்டாள். பிறகு மன்னன் யுதிஷ்டிரன், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணனிடம் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(37)

பிரம்மனால் படைக்கப்பட்ட மற்றொரு படைப்பாளன்! – சௌப்திக பர்வம் பகுதி – 17-தனியொருவனாக இருந்து கொண்டு அஸ்வத்தாமனால் பலரை எவ்வாறு கொல்ல முடிந்தது என்று கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷடிரன்; மஹாதேவனின் மகிமை குறித்துச் சொல்லத் தொடங்கிய கிருஷ்ணன்; உயிரினங்களைப் படைக்குமாறு சிவனிடம் சொன்ன பிரம்மன்; சிவன் தவம் செய்தது; அந்நேரத்தில் மற்றொருவனை உண்டாக்கி உயிரினங்களைப் படைக்கச் செய்த பிரம்மன்; தவம் நிறைந்து திரும்பிய சிவன் கோபம் கொண்டு மஞ்சவான் மலைக்குச் சென்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “உறங்கும் வேளையில், அந்த மூன்று தேர்வீரர்களால் துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்ட பிறகு, பெருந்துயரில் இருந்த யுதிஷ்டிரன், தசார்ஹ குலோத்தனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1) “ஓ! கிருஷ்ணா, பாவம் நிறைந்தவரும், இழிந்தவரும், போரில் பெருந்திறமற்றவருமான அஸ்வத்தாமரால் வலிமைமிக்கத் தேர்வீரர்களான என் மகன்கள் அனைவரையும் எவ்வாறு கொல்ல முடிந்தது?(2) அதே போலவே, ஆயுதங்களில் சாதித்தவர்களும், பேராற்றல் கொண்டவர்களும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எதிரிகளுடன் போரிட வல்லவர்களுமான துருபதன் பிள்ளைகள் அனைவரையும் அந்தத் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமரால்} எவ்வாறு கொல்ல முடிந்தது?(3) எவனுடைய முன்பு, பெரும் வில்லாளியான துரோணராலேயே தோன்ற முடியாதோ அந்த முதன்மையான தேர்வீரனான திருஷ்டத்யும்னனை அவரால் எவ்வாறு கொல்ல முடிந்தது?(4) ஓ! மனிதர்களில் காளையே, போரில் நம் மக்கள் அனைவரையும் தனியொருவராகக் கொல்லவதற்கு அந்த ஆசான் மகனால் {அஸ்வத்தாமரால்} என்ன காரியம் செய்யப்பட்டது?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(5)

அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “உண்மையில், அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, தேவர்கள் அனைவரிலும் உயர்ந்தவனும், நித்தியமானவனுமான மஹாதேவனின் உதவியை நாடினார். இதன் காரணமாகவே, இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான போர்வீரர்களைத் தனியொருவராக அவரால் கொல்ல முடிந்தது.(6) மஹாதேவன் நிறைவுகொண்டால், அவனால் அழிவின்மையையும் {மரணமில்லா பெருவாழ்வை} அளிக்க முடியும். கிரிசனால் {சிவனால்} இந்திரனையே தடுக்குமளவுக்குப் பெரும் வீரத்தை அளிக்க முடியும்.(7) ஓ! பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நான் உண்மையில் மஹாதேவனை {உள்ளபடியே} அறிவேன். பழங்காலத்தில் அவன் செய்த பல்வேறு செயல்களையும் நான் அறிவேன்.(8) ஓ! பாரதரே, அவனே உயிரினங்கள் அனைத்தின் தொடக்கமும், நடுவும், முடிவும் ஆவான். இந்த மொத்த அண்டமே அவனது சக்தியின் மூலமே இயங்கி அசைகிறது.(9)

பலமிக்கப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, உயிரினங்களைப் படைக்க விரும்பி ருத்திரனைக் கண்டான்; அந்தப் பெரும்பாட்டன் அவனிடம், “தாமதமில்லாமல் உயிரினங்களைப் படைப்பாயாக” என்றான்.(10) இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்ட செஞ்சடை ருத்திரன் {சிவன்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, நீரில் மூழ்கி, உயிரினங்களின் குறைகளை உணரும் வரை நீண்ட காலத்திற்குத் தவம் பயின்றான்.(11) ருத்திரனை எதிர்பார்த்து மிக நீண்ட காலம் காத்திருந்த பெரும்பாட்டன் {பிரம்மன்}, தன் விருப்பத்தின்படியான ஆணையொன்றால் அனைத்து வகை உயிரினங்களின் படைப்பாளனாக வேறொருவனை இருப்புக்கு அழைத்தான்.(12) நீருக்குள் மூழ்கியிருக்கும் கிரிசனை {சிவனைக்} கண்ட அவன் {இரண்டாமவன்}, தன் தந்தையிடம், “எனக்கு முன்பு எந்த உயிரினமும் பிறக்கவில்லையென்றால் நான் உயிரினங்களைப் படைப்பேன்” என்றான்.(13) அதற்கு அவனது தந்தை, அவனிடம், “உன்னைத் தவிர்த்து முதலில் பிறந்த வேறொருவனும் இல்லை. இந்த ஸ்தாணு, நீரில் மூழ்கியிருக்கிறான். எந்தக் கவலையுமின்றிச் சென்று உயிரினங்களைப் படைப்பாயாக” என்றான்.(14) அவன் {இரண்டாமவன்}, இந்த நால்வகை உயிரினங்கள் அனைத்தையும் படைத்த தக்ஷனை முதலாகக் கொண்ட உயிரினங்கள் பலவற்றைப் படைத்தான்.(15)

எனினும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அவர்கள் படைக்கப்பட்ட உடனேயே பசியால் பீடிக்கப்பட்டு, தங்கள் தந்தையையே உண்ண விரும்பி அவனை நோக்கி ஓடினர்.(16) அதன் பேரில் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட அந்த இரண்டாமவன், தன் வாரிசுகளிடம் இருந்து பாதுகாக்கப்பட விரும்பி, அவனை {பிரம்மனை} நோக்கி ஓடினான். அவன் அந்தப் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, இவர்களிடம் இருந்து என்னைப் பாதுகாப்பீராக, இந்த உயிரினங்களுக்கு நிர்ணயிக்கப்படும் உணவை அவர்கள் உண்ணட்டும்” என்றான்.(17) அப்போது பெரும்பாட்டன், செடிகொடிகளையும், காய்கறிகளையும் அவர்களது உணவாக நிர்ணயித்து, பலமிக்கவர்களுக்கு {பலமிக்க உயிரினங்களின்} வாழ்வாதாரமாக {உணவாக} பலவீனர்களை {பலமற்ற உயிரினங்களை} நிர்ணயித்தான்.(18) புதிதாகப் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் இவ்வாறு தங்களுக்கு ஊட்டப்பண்பு {வாழ்வாதாரம்} நிர்ணயிக்கப்பட்டதும், தங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று, மகிழ்ச்சியுடன் தங்கள் தங்கள் வகைக்கான இனங்களுடன் கூடி {புணர்ந்து} பெருகினர்.(19) அந்த உயிரினங்கள் பெருகி, பெரும்பாட்டனும் நிறைவடைந்ததும், முதலில் பிறந்தவன் நீரில் இருந்து எழுந்து, உயிரோட்டத்துடன் கூடிய படைப்பைக் கண்டான்.(20)

அவன் {ருத்திரன்}, பல்வேறு வகை உயிரினங்கள் படைக்கப்பட்டுவிட்டதையும், அவை தங்கள் சக்தியாலேயே பல்கி பெருகிவிட்டதையும் கண்டான். இக்காட்சியால் கோபமடைந்த ருத்திரன், தன் பிறப்புறுப்பை {லிங்கத்தைப்} பூமியின் குடல்களுக்குள் மறையும்படி செய்தான். மங்காதவனான பிரம்மன் அவனிடம் மென்மையான வார்த்தைகளில்,(21,22) “ஓ! சர்வா, இவ்வளவு காலம் நீருக்குள் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? என்ன காரணத்தினால் உனது பிறப்புறுப்பை {லிங்கத்தை} பூமியின் குடல்களுக்குள் காணாமல் போகச் செய்தாய்?” என்று கேட்டான்.(23) இவ்வாறு கேட்கப்பட்ட அந்த அண்டத்தின் தலைவன் {சிவன்}, கோபத்துடன் தலைவன் பிரம்மனிடம், “இந்த உயிரினங்கள் அனைத்தையும் வேறு எவனோ படைத்திருக்கிறான். பிறகு இந்த என் அங்கமானது என்ன நோக்கத்தை நிறைவேற்றப் போகிறது?[1](24) ஓ! பெரும்பாட்டனே, கடுந்தவத்தின் மூலம் நான் இந்த உயிரினங்கள் அனைத்திற்கான உணவைப் படைத்திருக்கிறேன். இந்தச் செடிகொடிகளும், அவற்றை உண்டு உயிர்வாழ்வோரைப் போலவே பல்கிப் பெருகும்” என்றான்.(25)இந்த வார்த்தைகளைச் சொன்ன பவன், உற்சாகமற்றவனாகவும் கோபத்துடனும் மிகக் கடும் தங்களைப் பயில்வதற்காக {இமயமலைச் சாரலில் உள்ள} முஞ்சவான் மலைகளின் அடிவாரத்திற்குச் சென்றான்” {என்றான் கிருஷ்ணன்}.(26)

ருத்திர உதவி! – சௌப்திக பர்வம் பகுதி – 18-கிருதயுக முடிவில் தேவர்கள் செய்த பெரும் வேள்வி; வேள்வியை அழித்த ருத்திரன்; ருத்திரனின் உதவியின் மூலம் வெற்றியை அடைந்த அஸ்வத்தாமன்…

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “கிருத யுகம் {தேவயுகம்} கடந்ததும், ஒரு வேள்வியைச் செய்ய விரும்பிய தேவர்கள், அதற்கு வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி முறையான ஆயத்தங்களைச் செய்தனர்.(1) தெளிந்த நெய்யையும், தேவைப்படும் வேறு பொருட்களையும் சேகரித்தனர். அவர்கள், தங்கள் வேள்விக்குத் தேவையான பொருட்கள் என்ன என்பதை மட்டும் திட்டமிடாமல், வேள்விக்கொடைகளில் தங்களுக்குச் சேர வேண்டிய பங்குகளைக் குறித்தும் தீர்மானித்துக் கொண்டனர்.(2) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உண்மையில் ருத்திரனை அறியாத தேவர்கள், அந்தத் தெய்வீக ஸ்தாணுவுக்கு எந்தப் பங்கையும் ஒதுக்கவில்லை.(3) மான்தோல் உடுத்துபவனான ஸ்தாணு, வேள்விக் கொடைகளில் தனக்கு எந்தப் பங்கையும் தேவர்கள் ஒதுக்காததைக் கண்டு, அந்த வேள்வியை அழிக்க விரும்பி, அந்நோக்கத்திற்காக ஒரு வில்லைக் கட்டமைத்தான்.(4) வேள்விகள், லோக வேள்வி, தனிச்சிறப்புகளடங்கிய சடங்குகளுடன் கூடிய வேள்வி {கிரியா வேள்வி}, அழிவில்லாத இல்லற வேள்வி {கிருஹ வேள்வி}, ஐந்து மூலகப் பொருட்கள் மற்றும் அவற்றின் சேர்மங்களில் இன்புற்று மனிதன் நிறைவை அடக்கிய வேள்வி {பஞ்சபந்ரு வேள்வி} என நான்கு வகை வேள்விகள் இருக்கின்றன. இந்த நால்வகை வேள்விகளின் மூலமே இந்த அண்டம் உதித்தது[1].(5)முதல் மற்றும் நான்காம் வகை வேள்விகளின் பொருட்களைக் கொண்டு கபர்தின் {அடர்ச்சடையன் சிவன்} அந்த வில்லைக் கட்டமைத்தான். அந்த வில்லானது ஐந்து முழம்[2] நீளம் இருந்தது.(6) ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, புனித (மந்திரமான) வஷட்காரமே அதன் நாண்கயிறானது. வேள்வியின் நான்கு அங்கங்கள் அந்த வில்லின் அலங்காரங்களாகின.(7) பிறகு சினத்தால் நிறைந்த மஹாதேவன் அந்த வில்லை எடுத்துக் கொண்டு, தேவர்கள் வேள்வி செய்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றான். பிரம்மச்சாரியைப் போல உடுத்தியவனும், வில்லைத் தரித்திருந்தவனும் மங்காதவனுமான ருத்திரன் அங்கே வந்ததைக் கண்ட பூமாதேவி, அச்சத்தால் சுருங்கி, தன் மலைகளுடன் நடுங்கத் தொடங்கினாள்.(9) காற்று அசைவதை நிறுத்தியது, நெருப்பு மூட்டப்பட்டால் சுடர்விட்டெரியவில்லை. ஆகாயத்தின் நட்சத்திரங்கள் கவலையால் ஒழுங்கற்ற வழிகளில் திரியத் தொடங்கின.(10) சூரியனின் ஒளி குறைந்தது. சந்திரவட்டில் தன் அழகை இழந்தது. மொத்த ஆகாயமும் அடர்த்தியான இருளில் மூழ்கியது.(11)துயரில் மூழ்கிய தேவர்கள் என்ன செய்வது என்பதை அறியாதிருந்தனர். அவர்களது வேள்வி சுடர்விட்டெரிவது நின்றது. தேவர்கள் அனைவரும் பீதியடைந்தனர்.(12) அப்போது ருத்திரன், அந்த வேள்வியுடைய உடல்வடிவத்தின் இதயத்தைக் கடுங்கணையொன்றால் துளைத்தான். உடல் வடிவம் கொண்ட வேள்வியானது, மானின் வடிவத்தையேற்று, நெருப்பு தேவனுடன் {அக்னியுடன்} தப்பி ஓடியது.(13) அவ்வடிவில் சொர்க்கத்தை அடைந்த அவன் {வேள்வியானவன்} அழகால் சுடர்விட்டெரிந்தான். எனினும், ஓ! யுதிஷ்டிரரே, ருத்திரன் அவனை ஆகாயத்தில் பின்தொடர்ந்து சென்றான்.(14) வேள்வியானவன் தப்பி ஓடியபிறகு, தேவங்கள் தங்கள் ஒளியை இழந்தனர். தங்கள் உணர்வுகளை இழந்தவர்களான தேவர்கள் திகைப்படைந்திருந்தனர்.(15)

அப்போது முக்கண்ணனான மஹாதேவன், தன் வில்லைக் கொண்டு, சாவித்ரியின் கரங்களைச் சினத்தால் முறித்து, பகனின் கண்களையும், பூஷ்ணனின் {பூஷாவின்} பற்களையும் பிடுங்கினான்.(16) பிறகு தேவர்களும், அந்த வேள்வியின் பல்வேறு அங்கங்கள் அனைத்தும் தப்பி ஓடின. அவர்களில் சிலர் தப்பி ஓட முயலும்போது சுழன்று உணர்வுகளையற்றுக் கீழே விழுந்தனர்.(17) நீல மிடறு கொண்ட ருத்திரன் இவ்வாறு அவர்களைக் கலங்கடித்து, தன் வில்லின் நுனியைச் சுழற்றி அவர்களை முடக்கி உரக்கச் சிரித்தான்.(18) தேவர்கள் அப்போது பெருங்கூச்சலிட்டனர். அவர்களின் ஆணையின் பேரில் அந்த வில்லின் நாண்கயிறு அறுந்தது. நாண்கயிறு அறுந்ததும், அந்த வில்லானது ஒரு கோடாக நெடுக விரிந்தது.(19) பிறகு தேவர்கள், வில்லற்றவனாக இருந்த அந்தத் தேவர்களின் தேவனை {சிவனை}, {மான்வடிவில்} உடல் கொண்ட வேள்வியானவனுடன் அணுகி, அந்தப் பலமிக்க மஹாதேவனின் பாதுகாப்பை நாடி, அவனை நிறைவுகொள்ளச் செய்ய முயன்றனர்.(20)

நிறைவையடைந்த அந்தப் பெருந்தேவன் தன் கோபத்தை நீருக்குள் எறிந்தான். ஓ! மன்னா, அந்தக் கோபமானது நெருப்பின் வடிவத்தை ஏற்று, அந்த நீர்த்தனிமத்தை எரிப்பதிலேயே எப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.(21) பிறகு அவன் சாவித்ரிக்கு {சூரியனுக்கு} அவனது கரங்களையும், பகனுக்கு அவனது கண்களையும், பூஷ்ணனுக்கு {பூஷாவுக்கு} அவனது பற்களையும் மீண்டும் கொடுத்தான். ஓ! பாண்டவரே {யுதிஷ்டிரரே}, பிறகு அவன் வேள்விகளையும் மீண்டும் நிறுவினான்.(22) உலகமானது மீண்டும் பாதுகாப்பானதாகவும், நலமானதாகவும் மாறியது. தேவர்கள், அந்தப் பெருந்தெய்வத்தின் {சிவனின்} பங்காகத் தெளிந்த நெய்க்காணிக்கைகள் அனைத்தையும் ஒதுக்கினர்.(23) ஓ! ஏகாதிபதி, மஹாதேவன் கோபமடைந்த போது, மொத்த உலகமும் இவ்வாறே கலங்கியது; அவன் நிறைவடைந்தபோதோ அனைத்தும் பாதுகாப்பானவை ஆகின. பெருஞ்சக்தி கொண்ட அந்த மஹாதேவனே அஸ்வத்தாமரால் நிறைவுகொள்ளச் செய்யப்பட்டான்.(24) இதன் காரணமாகவே வலிமைமிக்க வில்லாளிகளான அந்த உமது மகன்களை அந்தப் போர்வீரரால் கொல்ல முடிந்தது. இதன் காரணமாகவே, பாஞ்சாலர்களையும், அவர்களது தொண்டர்கள் அனைவரையும் அவரால் கொல்லமுடிந்தது.(25) உமது மனத்தில் இவற்றை நினைக்காதீர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அக்காரியத்தைச் செயவில்லை. அது மஹாதேவனின் அருளாலேயே செய்யப்பட்டது. இப்போது அடுத்ததாகச் செய்ய வேண்டியதைச் செய்வீராக” என்றான் {கிருஷ்ணன்}” {என்றார் வைசம்பாயனர்}.(26)

ஐஷீக உபபர்வம் முற்றும்

சௌப்திக பர்வம் முற்றிற்று

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –சௌப்திக பர்வம்–சௌப்திக உபபர்வம்–

October 15, 2025

ஆந்தையும் காக்கைகளும்! – சௌப்திக பர்வம் பகுதி – 01-ஆலமரத்தினடியில் அமர்ந்த மூவர்; ஆந்தையொன்று காக்கைகள் பலவற்றைக் கொல்வதைக் கண்ட அஸ்வத்தாமன்; கிருபரையும், கிருதவர்மனையும் விழித்தெழச் செய்து ஆலோசனை கேட்ட அஸ்வத்தாமன்…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த வீரர்கள் {கிருபர், அஸ்வத்தாமன் மற்றும் கிருதவர்மன் ஆகியோர்} ஒன்றாகச் சேர்ந்து தெற்கு திசையை நோக்கிச் சென்றனர். சூரியன் மறையும் நேரத்தில் அவர்கள் (குரு) முகாமின் அருகாமையிலான ஓர் இடத்தை அடைந்தனர்.(1) {பாண்டவர்களைக் குறித்த} அச்சத்தால் மிகவும் பீடிக்கப்பட்ட நிலையில் தங்கள் விலங்குகளை {தங்கள் தேர்களில் இருந்து} விடுவித்தனர். பிறகு ஒரு காட்டை அடைந்து அதற்குள் கமுக்கமாக நுழைந்தனர்.(2) அவர்கள் (குரு) முகாமுக்கு, வெகு தொலைவில் அல்லாமல் அருகிலேயே தங்கினர். பல கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு, சிதைக்கப்பட்டிருந்த அவர்கள் பாண்டவர்களைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டே சூடான நெடுமூச்சுகளைவிட்டுக் கொண்டிருந்தனர்.(3) பிறகு, வெற்றிபெற்ற பாண்டவர்களின் உரத்த கூச்சலைக் கேட்ட அவர்கள், தாங்கள் பின்தொடரப்படுவோம் என்று அஞ்சி கிழக்கு திசையை நோக்கித் தப்பி ஓடினர்.(4) சிறிது நேரம் சென்றதும், அவர்களது விலங்குகளும் களைத்து, அவர்களும் தாகத்தை அடைந்தனர். கோபத்தாலும், பழியுணர்ச்சியாலும் நிறைந்த அந்தப் பெரும் வில்லாளிகள், மன்னனின் படுகொலையால் (உண்டான துயரத்தில்) எரிந்து, அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். எனினும், அவர்கள் சிறிது நேரம் {ஒரு முகூர்த்த காலத்திற்குப் பேசாமல்} ஓய்வெடுத்தனர்” {என்றான் சஞ்சயன்}.(5)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்டவனான எனது மகனை {துரியோதனனை} வீழ்த்திய பீமனின் அருஞ்செயல் நம்பத்தகாததாக இருக்கிறது.(6) ஆண்மையின் உச்சத்தில் இருந்தவனும், வஜ்ரம் போன்ற உடற்கட்டைக் கொண்டவனுமான அவன், எந்த உயிரினத்தாலும் கொல்லப்பட முடியாதவனாவான். ஐயோ, அப்படிப்பட்ட என் மகனே கூடப் போரில் பாண்டவர்களால் வீழ்த்தப்பட்டானே. ஓ! சஞ்சயா, எனது நூறு {100} மகன்களின் படுகொலையைக் கேட்ட பிறகும் ஆயிரந்துண்டுகளாகப் பிளக்காமல் இருக்கும் என் இதயம் வஜ்ரத்தாலானது என்பதில் ஐயமில்லை. ஐயோ, பிள்ளைகளை இழந்த முதிர்ந்த தம்பதியரான என் நிலையும், என் மனைவியின் {காந்தாரியின்} நிலையும் எவ்வளவும் பரிதாபமாக இருக்கப் போகிறதோ. பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} ஆட்சிப்பகுதியில் வசிக்க நான் துணியமாட்டேன்.(7-10)

மன்னனின் தந்தையும், மன்னனுமான என்னால், பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} கீழ்ப்படிந்த அடிமையாக[1] என் நாட்களை எவ்வாறு கழிக்க முடியும்?(11) மொத்த பூமியிலும் அதிகாரம் செலுத்தி, அனைவரின் தலைக்கு மேலும் இருந்த நான், ஓ! சஞ்சயா, இப்போது எவ்வாறு இழிந்த நிலையிலான அடிமையாக {பணியாளாக} வாழ முடியும்?(12) ஓ! சஞ்சயா, தனியொருவனாக முழுமையாக என் நூறு மகன்களைக் கொன்றவனான பீமனின் வார்த்தைகளை என்னால் எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடியும்?(13) உயர் ஆன்ம விதுரனின்  வார்த்தைகள் என்னால் உணரப்படுகின்றன. ஐயோ, ஓ! சஞ்சயா, அந்த வார்த்தைகளை நான் கேட்கவில்லையே.(14) எனினும், என் மகன் துரியோதனன் நியாயமற்ற வகையில் தாக்கி வீழ்த்தப்பட்ட பிறகு, கிருதவர்மன், கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் என்ன செய்தனர்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(15)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா, அவர்கள் வெகு தொலைவுக்குச் செல்லும் முன்பே, மரங்களும், செடிகொடிகளும் நிறைந்த அடர்ந்த கானகம் ஒன்றைக் கண்டு நின்றனர்.(16) அவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, தாகம் தணிக்கப்பட்ட தங்கள் சிறந்த குதிரைகளால் இழுக்கப்பட்ட தேர்களில் அந்தப் பெரும் காட்டிற்குள் நுழைந்தனர்.(17) அந்தக் காடானது, பல்வேறு வகை விலங்குகளும், பல்வேறு இனப் பறவைகளும் நிறைந்ததாக இருந்தது. பல மரங்களாலும், செடிகொடிகளாலும் மறைக்கப்பட்டிருந்த அஃது, ஊனுண்ணும் எண்ணற்ற உயிரினங்களால் மொய்க்கப்பட்டிருந்தது.(18) பல தடாகங்களால் மறைக்கப்பட்டு, பல்வேறு வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அது, நீலத் தாமரைகள் {கருநெய்தல் மலர்கள்} நிறைந்த பல ஓடைகளைக் கொண்டிருந்தது.(19) அந்த அடர்ந்த காட்டுக்குள் நுழைந்த அவர்கள் தங்கள் கண்களைச் சுற்றிலும் செலுத்து, ஆயிரங்கிளைகளைக் கொண்டிருந்த ஒரு பெரும் ஆலமரத்தைக் கண்டனர்.(20)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் முதன்மையான அந்தப் பெரும் தேர்வீரர்கள், அந்த ஆலமரத்தின் நிழலுக்குச் சென்று, அந்தக் காட்டில் அதுவே பெரிய மரம் என்பதைக் கண்டனர்.(21) தங்கள் தேர்களில் இருந்து இறங்கி, தங்கள் விலங்குகளை {குதிரைகளை} விடுவித்த அவர்கள், முறையாகத் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தங்கள் மாலைநேர வேண்டுதல்களைச் சொன்னார்கள்[2]. சூரியன் அஸ்த மலைகளை அடைந்ததும், அண்டத்தின் தாயான இரவும் வந்தாள்.(23) கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் விரவிக் கிடந்த ஆகாயமானது, சித்திர வேலைப்பாடுகளால் அமைந்த ஒரு துணியைப் போல ஒளிர்ந்து, மிக உயர்ந்த இனிமையான காட்சியைத் தந்தது.(24) பகலில் திரிவோர் உறக்கத்தின் ஆளுகைக்குள் இருக்கும்போது, இரவில் திரியும் உயிரினங்கள் தங்கள் விருப்பம்போல ஊளையிடவும், கதறவும் தொடங்கின.(25)-இரவில் திரியும் விலங்குகளின் ஒலி பயங்கரமாக இருந்தது. ஊனுண்ணும் விலங்கினங்கள் மகிழ்ச்சியில் நிறைந்ததும், இரவு அடர்ந்து பயங்கரத் தன்மையை அடைந்தது.(26) அந்த நேரத்தில், துயரிலும், கவலையிலும் நிறைந்தவர்களான கிருதவர்மன், கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் அனைவரும் ஒன்றாக அமர்ந்தனர்.(27) அந்த ஆலமரத்திற்கடியில் அமர்ந்த அவர்கள், குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருதரப்புக்கும் நடந்த அழிவைக் குறித்துத் தங்கள் கவலையை வெளிப்படுத்த தொடங்கினர்.(28) உறக்கத்தின் கனத்தை உணர்ந்த அவர்கள், வெறுந்தரையிலேயே தங்களைக் கிடத்திக் கொண்டனர். அவர்கள் கணைகளால் பெரிதும் சிதைக்கப்பட்டவர்களாகவும், மிகவும் களைத்துப்போனவர்களாகவும் இருந்தனர்.(29) பெருந்தேர்வீரர்களான கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் இருவரும் உறக்கத்திற்கு அடிபணிந்தனர். மகிழ்ச்சிக்குத் தகுந்தவர்களும் துயருக்குத் தகாதவர்களுமான அவர்கள் வெறுந்தரையிலேயே நெடுஞ்சாண் கிடையாக நீண்டு கிடந்தனர்.(30)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உண்மையில், விலைமதிப்புமிக்கப் படுக்கைகளிலேயே எப்போதும் உறங்கியவர்களான அவர்கள் இருவரும், களைப்பாலும், துயரத்தாலும் பீடிக்கப்பட்டு ஆதரவற்ற மனிதர்களைப் போல வெறுந்தரையில் கிடந்தனர்.(31) எனினும், கோபம் மற்றும் பழியுணர்ச்சியின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டவனான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தூங்க முடியாமல் ஒரு பாம்பைப் போல மூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.(32) சினத்தில் எரிந்து கொண்டிருந்த அவனால் உறக்கத்திற்காகத் தனி விழியைத் தட்டக்கூட முடியவில்லை. வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான அவன், அந்தப் பயங்கரக் காட்டின் அனைத்துப் பக்கங்களிலும் தன் விழிகளைச் செலுத்தினான்.(33) அந்தப் பெருந்தேர் வீரன் {அஸ்வத்தாமன்}, பல்வேறு வகை உயிரினங்கள் நிறைந்த அந்தக் காட்டை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, காக்கைகள் நிறைந்த ஒரு பெரும் ஆலமரத்தைக் கண்டான்.(34) அந்த ஆலமரத்தில் ஆயிரக்கணக்கான காக்கைகள் அவ்விரவில் வசித்திருந்தன. ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, அருகில் இருந்த மற்ற காக்கையிடமிருந்து தனித்தனியாகப் பிரிந்து இருந்த அந்தக் காக்கைகள் ஒவ்வொன்றும் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தன.(35)

எனினும், அனைத்துப் பக்கங்களிலும் அப்பறவைகள் பாதுகாப்பாக உறங்கிக் கொண்டிருந்தபோது, பயங்கரத் தன்மை கொண்ட ஆந்தையொன்று {கோட்டான்} அங்கே தோன்றியதை அஸ்வத்தாமன் கண்டான்.(36) பச்சை நிறக் கண்களையும், பழுப்பு நிற இறகுகளையும் கொண்டதும், பெரும் உடல் படைத்ததும், அச்சந்தரும் வகையில் அலறிக் கொண்டிருந்ததுமான அதன் மூக்கு {அலகு} மிகப் பெரியதாகவும், அதன் நகங்கள் மீக நீண்டவையாகவும் இருந்தன. மேலும் அது வந்த வேகமானது கருடனுக்கு ஒப்பானதாக இருந்தது.(37) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இறகுபடைத்த அந்த உயிரினம் {ஆந்தை}, மென்மையான ஒலியையெழுப்பியபடியே அந்த ஆலமரத்தின் கிளைகளைக் கமுக்கமாக அணுகியது.(38) காக்கைகளைக் கொல்வதான அந்த வானுலாவி {ஆந்தை}, அந்த ஆலமரத்தின் கிளைகளில் ஒன்றில் இறங்கி, உறங்கிக் கொண்டிருக்கும் தன் எதிரிகளைப் பெரும் எண்ணிக்கையில் கொன்றது.(39) அது, தன் கூரிய நகங்களால் சிலவற்றின் சிறகுகளைக் கிழித்து, சிலவற்றின் தலைகளை வெட்டி, பலவற்றின் கால்களை முறித்தது. பெரும்பலம் கொண்ட அது தன் கண்ணெதிரே வீழ்ந்த பலவற்றைக் கொன்றது.(40)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அனைத்துப்பக்கங்களிலும் அடர்த்தியாக விரிந்த ஆலமரத்தின் கிளைகளால் மறைக்கப்பட்டிருந்த அந்தத் தரையானது, கொல்லப்பட்ட காக்கைகளின் அங்கங்கள் மற்றும் உடல்களால் நிறைந்தது.(41) பகைவர்களைக் கொல்லும் ஒருவன், தன் விருப்பப்படி பகைவர்களிடம் நடந்து கொண்ட பிறகு மகிழ்வதைப் போலவே காக்கைகளைக் கொன்ற அந்த ஆந்தையும் மகிழ்ச்சியால் நிறைந்தது.(42) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, உயர்ந்த பரிந்துரையாக இரவில் அந்த ஆந்தையால் செய்யப்பட்ட அந்தச் செயலைக் கண்டு, அந்த உதாரணத்தின் ஒளியில் தன் செயல்பாட்டை அமைத்துக் கொள்ள விரும்பி, அதைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான்.(43)

அவன் தனக்குள், “இந்த ஆந்தையானது, போரில் எனக்கொரு பாடத்தைக் கற்பித்திருக்கிறது. எதிரியை அழிக்க முயலும் நான், செயல்படுவதற்குரிய நேரம் வந்துவிட்டது.(44) வெற்றியாளர்களான பாண்டவர்கள் என்னால் கொல்லப்பட முடியாதவர்களாக இருக்கின்றனர். வலிமையையும், விடாமுயற்சியையும் கொண்ட அவர்கள் இலக்கில் துல்லியமும், தாக்குவதில் திறமும் கொண்டிருக்கின்றனர்.(45) எனினும், அவர்களைக் கொல்வதாக மன்னனின் {துரியோதனனின்} முன்னிலையில் நான் சூளுரைத்திருக்கிறேன். சுடர்மிக்க நெருப்புக்குள் விரைந்து செல்லும் ஒரு பூச்சியைப் போலவே, தன்னழிவுக்கான செயலையே இவ்வாறு நான் சூளுரைத்திருக்கிறேன்.(46) நான் அவர்களோடு நியாயமான முறையில் போரிட்டால், நான் என் உயிரை விட வேண்டியதிருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், வஞ்சச் செயல் ஒன்றால் வெற்றி எனதானால், என் எதிரிகள் பேரழிவை அடையக் கூடும்.(47) உறுதியற்ற வழிமுறைகளைவிட, உறுதியான வழிமுறைகளையே சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் மெச்சுகின்றனர்.(48)

இச்செயலால் எத்தகு நிந்தனையும், இழிபெயரும் நேர்ந்தாலும், க்ஷத்திரிய நடைமுறைகளை நோற்கும் ஒரு மனிதன் இதைச் செய்தே ஆக வேண்டும்.(49) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்ட பாண்டவர்கள், ஒவ்வொரு தருணத்திலும், மிக இழிவான, நிந்தனைக்குரிய, வஞ்சகம் நிறைந்த செயல்களையே மீண்டும் மீண்டும் செய்து வந்தனர்.(50) இக்காரியத்தைப் பொறுத்தவரை, உண்மையைக் காண்பவர்களும், அறம் நோற்பவர்களுமான மனிதர்களால் பாடப்பட்ட உண்மை நிறைந்த குறிப்பிட்ட புராதன வரிகள் கேட்கப்பட்டிருக்கின்றன.(51) அந்த வரிகள் {சுலோகங்கள்}, “எதிரியின் படையினர், களைத்திருந்தாலும், ஆயுதங்களால் காயமடைந்திருந்தாலும், உண்டு கொண்டிருந்தாலும், ஓய்ந்திருந்தாலும், தங்கள் முகாமில் இருந்தாலும் அவர்கள் தாக்கப்பட வேண்டும்.(52) அதே போலவே, அவர்கள் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்தாலும், தலைவர்களற்றவர்களாக இருந்தாலும், பிளந்திருந்தாலும், பிழை செய்த தோற்றத்திலிருந்தாலும் அவர்களிடம் அதே வழிமுறையே பின்பற்றப்பட வேண்டும்” என்று சொல்கின்றன” என்று நினைத்தான் {அஸ்வத்தாமன்}.(53)

இவ்வழியில் சிந்தித்தவனான துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் கொல்லும் தீர்மானத்தை அடைந்தான்.(54) இந்தத் தீய தீர்மானத்தை அமைத்துக் கொண்டு, மீண்டும் மீண்டும் அதைச் செய்வதாகத் தனக்குள் உறுதிப்படுத்திக் கொண்ட அவன், தனது தாய்மாமன் {கிருபர்} மற்றும் போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்} ஆகிய இருவரையும் விழித்தெழச் செய்தான்.(55) சிறப்புமிக்கவர்களும், வலிமைமிக்கவர்களுமான கிருபர் மற்றும் போஜத் தலைவன் {கிருதவர்மன்} ஆகியோர் இருவரும் உறக்கத்திலிருந்து விழித்து, அஸ்வத்தாமனின் திட்டத்தைக் கேட்டனர். வெட்கத்தால் நிறைந்த அவர்கள் இருவரும், தகுந்த மறுமொழியைக் கொடுக்காதிருந்தனர்.(56)

சிறிது நேரம் சிந்தித்த அஸ்வத்தாமன், கண்ணீர் நிறைந்த கண்களுடன், “எவனுக்காக நாம் பாண்டவர்களிடம் பகைமை கொண்டோமோ, பெரும் வலிமை கொண்டவனும், வீரனுமான அந்த மன்னன் துரியோதனன் கொல்லப்பட்டான். பதினோரு அக்ஷௌஹிணி துருப்புகளின் தலைவனாக இருந்தாலும், யாருமற்றவனாகவும், தனியனாகவும் இருந்த அந்தக் களங்கமற்ற ஆற்றலையுடைய வீரன், பீமசேனனாலும், போரில் ஒன்றுகூடியவர்களும், பெரும் எண்ணிக்கையிலானவர்களுமான இழிந்தோர் பலராலும் தாக்கி வீழ்த்தப்பட்டான்.(57,58) புனித நீராட்டைப் பெற்றதும், மணிமுடி தரித்ததுமான ஒருவனுடைய தலையைத் தனது காலால் தீண்டியதன் மூலம், தீயவனான விருகோதரனால் {பீமனால்} மற்றுமொரு தீய செயல் செய்யப்பட்டிருக்கிறது.(59) பாஞ்சாலர்கள் உரக்க முழங்கிக் கொண்டும், கூச்சலிட்டுக் கொண்டும், உரத்தச் சிரிப்பை வெடித்துச் சிரித்துக் கொண்டுமிருக்கின்றனர். மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள், தங்கள் சங்குகளையும், பேரிகைகளையும் முழக்கிக் கொண்டிருக்கின்றனர்.(60) காதுகளுக்கு அச்சத்தைத் தருவதும், சங்கொலிகளுடன் கலந்ததுமான அவர்களது இசைக்கருவிகளின் உரத்த ஒலியானது, காற்றினால் பரவும்படி செய்யப்பட்டுத் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் நிறைத்துக் கொண்டிருக்கிறது.(61) அவர்களது குதிரைகளின் கனைப்பொலிகளும், யானைகளின் பிளிறலும், போர்வீரர்களின் முழக்கமும் உரத்த ஆரவாரத்தை ஏற்படுத்துகின்றன.(62)

மகிழ்ச்சியால் நிறைந்த போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடங்களை நோக்கி அணிவகுத்துச் செல்லும்போது காதுகளைச் செவிடாக்கும் வகையில் உண்டாகும் ஒலியும், அச்சத்தை ஏற்படுத்தும் அவர்களது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும் கிழக்கில் இருக்கும் நம்மை வந்தடைகிறது.(63) தார்தராஷ்டிரர்களில் நாம் மூவர் மட்டுமே அந்தப் பேரழிவிலிருந்து உயிரோடு எஞ்சியிருக்கிறோம் என்ற அளவுக்கும் பாண்டவர்களால் தார்தராஷ்டிரர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பேரழிவானது மிகப் பெரியதாகும்.(64) சிலர் நூறு யானைகளின் பலத்தைக் கொண்டவர்களாகவும், சிலர் அனைத்து ஆயுதங்களில் திறன் பெற்றவர்களாகவும் இருந்தனர். காலம் கொண்டு வந்த மாறுபாடுகளின் தருணமாகவே நான் இதைக் கருதுகிறேன்.(65) உண்மையில், அத்தகு செயல்கள் இந்த முடிவுக்கே வழிவகுக்கும். உண்மையில், பாண்டவர்கள் கடினமான சாதனைகளை அடைந்திருந்தாலும், அந்தச் சாதனைகளின் விளைவு இஃதாகவே இருக்க வேண்டும்[3].(66) திகைப்பினால் {மயக்கத்தினால்} உங்கள் அறிவு உங்களை விட்டு அகலாமல் இருக்குமேயானால், ஆபத்து நிறைந்த இந்த முக்கியக் காரியத்தில் நாம் என்ன செய்தால் சரியாக இருக்கும் என்பதைச் சொல்வீராக” என்றான் {அஸ்வத்தாமன்}.(67)

கிருபர் சொன்ன நல்லாலோசனை! – சௌப்திக பர்வம் பகுதி – 02- அஸ்வத்தாமனால் கேட்கப்பட்ட கிருபர், செயலின் வெற்றி தோல்வி எதனால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதைச் சொல்வது; துரியோதனனின் தீச்செயல்களையும், அதனால் தங்களுக்கு ஏற்பட்ட பேரிடரையும் எடுத்துச் சொல்வது; கிருபர் அஸ்வத்தாமனுக்குச் சொன்ன நல்லாலோசனை…

கிருபர் {அஸ்வத்தாமனிடம்}, “ஓ! பலமிக்கவனே {அஸ்வத்தாமா}, நீ சொன்னதனைத்தையும் நாங்கள் கேட்டோம். எனினும், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, என் வார்த்தைகள் சிலவற்றையும் கேட்பாயாக.(1) விதி மற்றும் முயற்சி ஆகிய இந்த இரண்டு சக்திகளுக்கும் மனிதர்கள் அனைவரும் கட்டுப்பட்டு, அவற்றால் ஆளப்படுகிறார்கள்.(2) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, விதியின் விளைவால் மட்டுமே, அல்லது முயற்சியால் மட்டுமே நமது செயல்பாடுகள் வெற்றியை அடைவதில்லை. அவ்விரண்டின் ஒருங்கிணைப்பிலேயே வெற்றி எழுகிறது.(3) உயர்ந்தவை மற்றும் இழிந்தவை ஆகிய நோக்கங்கள் அனைத்தும் இவ்விரண்டின் ஒருங்கிணைப்பைச் சார்ந்தே இருக்கின்றன. இந்த உலகம் முழுவதிலும், மனிதர்கள் செயல்படுவதும், செயலைத் தவிர்ப்பதும் இவ்விரண்டின் மூலமே நடக்கிறது.(4)

மலையின் மீது மழையைப் பொழியும் மேகங்களால் என்ன விளைவு உண்டாகிறது? உழப்பட்ட நிலத்தில் பொழிவதால் என்ன விளைவுகள் உண்டாகவில்லை?(5) எங்கே விதி மங்கலமாக இல்லாமல், முயற்சி இருக்கிறதோ, எங்கே விதி மங்கலமாயிருந்தும் முயற்சி இல்லையோ அவ்விரண்டு இடங்களும் கனியற்றவையாகும் {பலனற்றவையாகும்}. (அவ்விரண்டின் ஒருங்கிணைப்பு குறித்து) நான் முன்பே சொன்னதுதான் உண்மை[1].(6) நன்கு உழப்பட்ட மண்ணை மழையானது முறையாக நனைத்தால் வித்துகள் பெரும் விளைவுகளை உண்டாக்குகின்றன. மனிதவெற்றியானது இவ்வியல்பைக் கொண்டதே.(7) சிலவேளைகளில், விதியானது, நிகழ்வுகளின் வழிகளைத் தீர்மானித்துக் கொண்டு, (முயற்சிக்காகக் காத்திராமல்) தானே செயல்படுகிறது. இவை அனைத்திற்காகவும்தான், ஞானிகள் திறனின் துணை கொண்டு முயற்சியில் {உழைப்பில்} ஈடுபடுகிறார்கள்.(8) ஓ! மனிதர்களில் காளையே, மனித செயல்களின் அனைத்து நோக்கங்களும், இவ்விரண்டின் துணையாலேயே நிறைவேறுகின்றன. இவ்விரண்டின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டே மனிதர்கள் உழைப்பதாகவோ, {உழைப்பைத்} தவிர்ப்பதாகவோ காணப்படுகிறார்கள்.(9) முயற்சியானது செய்யப்படலாம். ஆனால், அம்முயற்சி விதியின் மூலமே வெற்றியை அடைகிறது. விதியின் விளைவாலேயே, முயற்சியை நம்பி ஒருவன், தன்னைச் செயலில் ஈடுபடுத்திக் கொண்டு வெற்றியை அடைகிறான்.(10)

எனினும், முயற்சியானது, தகுந்த மனிதர்களால் செய்யப்பட்டு, நன்கு நடைமுறைப்படுத்தப்பட்டாலும், விதியின் இசைவின்றிக் கனியை உண்டாக்காமல் போவதும் இவ்வுலகில் காணப்படுகிது.(11) எனவே, மனிதர்களில் சோம்பேறிகளும், அறிவற்றவர்களும்தான் முயற்சியை {உழைப்பை} ஏற்க மறுக்கின்றனர். எனினும், இது ஞானியரின் கருத்தல்ல.(12) செய்யப்பட்ட செயலானது கனியை உண்டாக்காமல் போவது பொதுவாக இவ்வுலகில் காணப்படவில்லை. மேலும், செயலின்மையானது, பெருந்துன்பத்தை உண்டாக்குவதையும் காணமுடிகிறது.(13) எந்த முயற்சியும் செய்யாமல் ஒன்றை அடைபவனும், முயன்ற பிறகு எதையும் அடையாதவனையும் காண முடிவதில்லை.(14) செயலில் எப்போதும் மும்முரமாக இருப்பவன், தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ளவல்லவனாவான். மறுபுறம், சோம்பேறியோ ஒருபோதும் மகிழ்வை அடையமாட்டான். மனிதர்களின் இவ்வுலகில், செயலுக்கு அடிமையாக இருப்போர், எப்போதும் நன்மையை ஈட்டும் விருப்பத்தால் தூண்டப்பட்டவர்களாகவே பொதுவாகக் காணப்படுகிறார்கள்[2].(15)செயலில் அர்ப்பணிப்புக் கொண்ட ஒருவன், தன் நோக்கத்தை அடைவதில் வெற்றி கொண்டாலோ, தன் செயல்களுக்கான கனியை அடையத் தவறினாலோ, எவ்வகையிலும் அவன் நிந்திக்கத்தகுந்தவனாக மாட்டான்.(16) எந்தச் செயலையும் செய்யாமல், செயலின் கனிகளை அனுபவித்துக் கொண்டு, இவ்வுலகில் ஆடம்பரமாகக் காணப்படும் ஒருவன், கேலிக்கும், வெறுப்புக்கும் உள்ளாவது பொதுவாகவே காணப்படுகிறது.(17) செயலைக் குறித்த இவ்விதியை அலட்சியம் செய்யும் ஒருவன், வேறுவகையில் வாழ்வதால், தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது. இதுவே நுண்ணறிவைக் கொண்டோரின் கருத்தாகும்.(18) விதியிருந்தும் கடும் முயற்சியில்லாமை மற்றும் கடும் முயற்சியிருந்தும் விதியில்லாமை ஆகிய இவ்விரண்டு காரணங்களின் விளைவாகவே முயற்சிகள் கனிகளை உண்டாக்குவதில்லை[3].(19) முயற்சியில்லாமல் இவ்வுலகில் எச்செயலும் வெற்றியடையாது. எனினும், தேவர்களை வணங்கி, செயல்பாட்டில் அர்ப்பணிப்பு, திறம் ஆகியவற்றைக் கொண்டு, தன் நோக்கங்களின் நிறைவை வேண்டும் ஒருவன் ஒருபோதும் வீழ்வதில்லை {வெற்றியடையாமல் போவதில்லை}.(20)வெற்றியை விரும்பும் ஒருவன், பெரியோருக்குப் பணிவிடை செய்து, தனக்கு நன்மையானதை வேண்டி, அவர்களது நல்ல ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவனுக்கும் அதே நிலையே ஏற்படுகிறது {அவனும் வெற்றியடையாமல் போவதில்லை}.(21) ஒருவன் முயற்சியில் ஈடுபடும்போது, பெரியோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனிதர்களின் ஆலோசனைகளை எப்போதும் வேண்டிக் கேட்க வேண்டும். இம்மனிதர்களே பிழையற்ற வழிமுறைகளின் வேர்களாவர், மேலும் வெற்றியானது வழிமுறைகளையே நம்பி இருக்கிறது.(22) பெரியோரின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, முயற்சியில் ஈடுபடும் ஒருவன், அம்முயற்சிகளில் இருந்து அபரிமிதமான கனிகளை அறுவடை செய்கிறான்.(23) மதிப்பில்லாமல், (தனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க வல்ல) யாரையும் மதிக்காமல் இருக்கும் மனிதன், விருப்பம், கோபம், அச்சம், பேராசை ஆகியவற்றால் உந்தப்பட்டு, தன் நோக்கங்களின் நிறைவை வேண்டும் போது, விரைவாகத் தன் செழிப்பை இழக்கிறான்.(24)

பொருளில் பேராசை கொண்டவனும், முன்னறிதிறமற்றவனுமான துரியோதனன், ஆலோசனைகளை ஏற்காமல், செரிக்க முடியாத திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மூடத்தனமான முயற்சியைத் தொடங்கினான்.(25) தனது நலன்விரும்பிகள் அனைவரையும் அலட்சியம் செய்து, {அவர்களால்} தடுக்கப்பட்டும், தீயவர்களின் ஆலோசனையை மட்டுமே ஏற்று, நல்ல குணங்கள் அனைத்திலும் தனக்கு மேம்பட்டவர்களான பாண்டவர்களிடம் பகைமை கொண்டான்.(26) தொடக்கத்திலிருந்தே அவன் மிகத் தீயவனாகவே இருந்தான். அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. நண்பர்கள் கேட்டுக் கொண்டதை அவன் செய்யவில்லை. அவை அனைத்தின் காரணமாகவே அவன் இப்போது பேரிடருக்கு மத்தியில் துயரில் எரிந்து கொண்டிருக்கிறான்.(27) நம்மைப் பொறுத்தவரை, அந்த இழிந்த பாவியை நாம் பின்பற்றியதால் நம்மையும் இந்தப் பேரிடர் வந்தடைந்தது.(28) இந்தப் பேரிடர் என் அறிவை எரிக்கிறது. சிந்தனையில் மூழ்கினாலும், நமக்கான நன்மையைக் காண்பதில் நான் தவறுகிறேன்.(29)

{மயக்கத்தினால்} திகைப்படைந்திருக்கும் ஒருவன், தன் நண்பர்களின் ஆலோசனையைக் கேட்க வேண்டும். அத்தகு நண்பர்களிலேயே அவன், தன் அறிவையும், பணிவையும், செழிப்பையும் கொண்டிருக்கிறான்.(30) ஒருவனின் செயல்பாடுகள் அவர்களிலேயே வேர்விட்டிருக்க வேண்டும்[4]. நுண்ணறிவுமிக்க நண்பர்கள் சொன்ன ஆலோசனைகளைக் கேட்டுத் தங்கள் அறிவைக் கொண்டு தீர்மானித்து அவற்றை {அந்தச் செயல்பாடுகளைச்} செய்ய வேண்டும்.(31) எனவே, திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் உயர் ஆன்ம விதுரனிடம் சென்று நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் கேட்போம்.(32) நம்மால் கேட்கப்பட்டதும் அவர்கள் என்ன சொல்வார்களோ, அது நமது நன்மைக்கானதாகவே இருக்கும். அவர்கள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். இதுவே எனது உறுதியான தீர்மானமாகும்.(33) நன்கு முயற்சி செய்தும் செயல்கள் வெற்றிபெறாத மனிதர்கள், விதியால் பீடிக்கப்பட்டவர்களாகவே கருதப்படவேண்டும் என்பதில் ஐயமில்லை” என்றார் {கிருபர்}”.(34)

அஸ்வத்தாமனின் கொடூரத் திட்டம்! – சௌப்திக பர்வம் பகுதி – 03-கிருபரை மறைமுகமாக நிந்தித்த அஸ்வத்தாமன்; தன் ஆதங்கத்தைக் கிருதவர்மனிடமும், கிருபரிடமும் சொன்னது; அன்றைய இரவில் தான் செய்யப் போகும் கோரச் செயலை அவ்விருவருக்கும் எடுத்துச் சொன்னது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மங்கலமானவையும், அறம் மற்றும் பொருள் நிரம்பியவையுமான கிருபரின் வார்த்தைகளைக் கேட்ட அஸ்வத்தாமன் கவலையிலும், துயரத்திலும் மூழ்கினான்.(1) சுடர்மிக்க நெருப்பைப் போலத் துயரத்தில் எரிந்த அவன், ஒரு தீய தீர்மானத்தை அமைத்துக் கொண்டு, அவர்கள் இருவரிடமும் {கிருபர் மற்றும் கிருதவர்மனிடம்},(2) “வெவ்வேறு மனிதர்களிடம் உள்ள அறிவுப்புலம் வெவ்வேறானவையே. எனினும், ஒவ்வொரு மனிதனும், தன்னறிவில் மகிழ்ச்சி கொள்கிறான்.(3) ஒவ்வொரு மனிதனும் பிறரைவிடத் தன்னை அதிக அறிவு கொண்டவனான கருதிக் கொள்கிறான். ஒவ்வொருவனும் தன்னறிவை மதித்து, அதன்படியே பெரிதாக அதைப் புகழ்ந்து கொள்கிறான்.(4) ஒவ்வொருவரும் தன் ஞானத்தைப் புகழத்தக்க ஒன்றாகக் கருதுகிறான். ஒவ்வொருவனும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிறரின் ஞானத்தைப் பழித்து, தனதை நல்லதாகச் சொல்கிறான்.(5)

பல்வேறு கருத்துகள் இருந்தாலும், ஏதாவது அடையப்படாத நோக்கத்தை ஏற்கும் தீர்மானத்துடன் கூடிய மனிதர்கள், நிறைவை அடைந்து ஒருவரையொருவர் புகழ்ந்து கொள்கிறார்கள்.(6) மேலும் அதே மனிதர்களின் தீர்மானங்கள், காலத்தின் ஆளுகையால் மாறுபட்டு ஒருவரையொருவர் எதிர்க்கவும் செய்கிறார்கள்.(7) மிகவும் குறிப்பாக, மனித அறிவுகளின் பன்முகத்தன்மையின் விளைவால் அறிவு மயக்கமடையும்போது தீர்மானங்கள் வேறுபடுகின்றன[1].(8) ஒரு திறன்மிக்க மருத்துவர், ஒரு நோயை முறையாகக் கண்டறிந்து, அதைக் குணப்படுத்துவதற்காகத் தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு மருந்தைப் பரிந்துரைப்பது போலவே,(9) மனிதர்கள், தங்கள் செயல்களை நிறைவேற்றுவதற்காகத் தங்கள் ஞானத்தின் {அறிவின்} துணையுடன் தங்கள் அறிவைப் {புத்தியைப்} பயன்படுத்துகின்றனர். அவர்கள் செய்வதும் பிறரால் ஏற்கப்படுவதில்லை.(10)இளைஞன் ஒருவன், ஒருவகை அறிவைக் கொண்டிருக்கிறான். அவனே நடுவயதை அடையும்போது, அதே அறிவுக்கு இணங்குவதில்லை, முதுமையில் வேறு வகை அறிவே அவனுக்கு ஏற்புடையதாகிறது.(11) ஓ! போஜர்களின் தலைவா {கிருதவர்மா}, பயங்கரத் துன்பத்தில் வீழும்போதோ, பெருஞ்செழிப்பையடையும்போதோ, ஒருவனது அறிவு மிகவும் பீடிக்கப்படுவதாகத் தெரிகிறது.(12) அதே மனிதன், ஞானமில்லாமையால் {அறிவில்லாமையால்} வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு அறிவை {புத்தியைக்} கொண்டிருக்கிறான். ஒரு நேரத்தில் ஏற்புடைய அறிவானது, வேறு நேரத்தில் முற்றாக மாறுகிறது.(13) எனினும், ஒருவனின் ஞானத்திற்குத் தக்க தீர்மானத்தை அடைந்த பிறகு, சிறப்பான அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றவே முயற்சிக்க வேண்டும். எனவே, அத்தகு தீர்மானமானது அவனை முயற்சி செய்யத் தூண்ட வேண்டும்.(14) ஓ! போஜர்களின் தலைவா, மரணத்தைத் தரக்கூடிய காரியங்களில் கூட, அவற்றைத் தங்களால் அடைய முடியும் என்ற நம்பிக்கையில் மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகச் செயல்படத் தொடங்குகின்றனர்.(15)

தங்கள் தீர்மானங்களையும், ஞானத்தையும் நம்பும் மனிதர்கள் அனைவரும், பல்வேறு நோக்கங்களை நல்லவையாக அறிந்து அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர்.(16) நமக்கு ஏற்பட்ட பேரிடரின் விளைவால் இன்று என் மனத்தை ஆக்கிரமித்த தீர்மானத்தை, என் துயரத்தை அகற்றவல்ல ஒன்றாகக் கருதுகிறேன். உங்கள் இருவருக்கும் அதைச் சொல்கிறேன்.(17) படைப்பாளன், உயிரினங்களைப் படைத்து அவை ஒவ்வொன்றிற்கும் உரிய தொழிலையும் நிர்ணயித்திருக்கிறான். பல்வேறு வகைகளை {வர்ணங்களைப்} பொறுத்தவரையில், அவன் ஒவ்வொன்றுக்கும் சிறப்பான பங்கைக் கொடுத்திருக்கிறான்.(18) பிராமணர்களுக்கு அனைத்துப் பொருட்களிலும் முதன்மையான வேதத்தை நிர்ணயித்திருக்கிறான். க்ஷத்திரியர்களுக்கு மேன்மையான சக்தியை நிர்ணயித்திருக்கிறான். வைசியர்களுக்குத் திறனையும், சூத்திரர்களுக்கு மூவகை வர்க்கங்களுக்குத் தொண்டாற்றும் கடமையையும் நிர்ணயித்திருக்கிறான்.(19) எனவே தன்னடக்கம் இல்லாத ஒரு பிராமணன் நிந்திக்கத் தகுந்தவனாவான். சக்தியற்ற க்ஷத்திரியன் இழிந்தவனாவான். திறனற்ற வைசியனும் (வேறு வகையினரிடம்) பணிவில்லாத சூத்திரனும் இகழத்தக்கவர்களாவார்கள்.(20)

போற்றுதலுக்குரிய உயர்ந்த பிராமணர்களின் குடும்பத்தில் நான் பிறந்தேன். எனினும், தீப்பேற்றால் நான் க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றுபவனானேன்.(21) க்ஷத்திரியக் கடமைகளை அறிந்தவனானதால், இப்போது நான் பிராமணர்களின் கடமையைப் பின்பற்றி (இத்தகு தீங்குகளில் தன்னடக்கத்துடன்) உயர்ந்த நோக்கத்தை அடைந்தால், அவ்வழி பெருமைக்குத் தகுந்ததாக இராது.(22) நான் போரில் சிறந்த வில்லையும், சிறந்த ஆயுதங்களையும் தரிக்கிறேன். என் தந்தையின் படுகொலைக்கு நான் பழிதீர்க்கவில்லை என்றால், மனிதர்களுக்கு மத்தியில் என்னால் எவ்வாறு வாயைத் திறக்க முடியும்?(23) எனவே நான், எந்தத் தயக்கமும் இல்லாமல் க்ஷத்திரியக் கடமைகளை மதித்து என் உயர் ஆன்மத் தந்தை {துரோணர்} மற்றும் மன்னனின் {துரியோதனனின்} அடிச்சுவட்டில் இன்று நடக்கப் போகிறேன்.(24) வெற்றியால் ஊக்கமடைந்திருக்கும் பாஞ்சாலர்கள், தங்கள் கவசங்களை அகற்றி, தாங்கள் அடைந்த வெற்றியை எண்ணி மகிழ்ச்சியடைந்து, களைப்படைந்தவர்களாக இன்றிரவு நம்பிக்கையுடன் உறங்குவார்கள்.(25)

அவர்கள் இவ்விரவில் தங்கள் முகாமில் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் போது, நான் அந்த முகாமில் பயங்கரத் தாக்குதலை நடத்தப் போகிறேன்.(26) தானவர்களைக் கொல்லும் மகவத்தை {இந்திரனைப்} போல நான், தங்கள் முகாமில் உணர்வற்றவர்களாக இறந்தவர்கள் போல உறங்கிக் கொண்டிருக்கும் அவர்களைத் தாக்கி, என் ஆற்றலை வெளிப்படுத்தி அவர்கள் அனைவரையும் கொல்லப் போகிறேன்.(27) வைக்கோல் குவியலை எரிக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போலத் தங்கள் தலைவனான திருஷ்டத்யும்னனின் தலைமையில் ஒரே இடத்தில் கூடியிருக்கும் அவர்கள் அனைவரையும் நான் கொல்லப் போகிறேன். ஓ! மனிதர்களில் சிறந்தவனே {கிருதவர்மா}, அந்தப் பாஞ்சாலர்களைக் கொன்று நான் மன அமைதியை அடையப் போகிறேன்.(28) அந்தப் படுகொலையில் ஈடுபடும்போது, உயிரினங்களுக்கு மத்தியில் திரியும் பினாகைதாரியான ருத்திரனைப் போல நான் அவர்களுக்கு மத்தியில் திரியப் போகிறேன்.(29) இன்று பாஞ்சாலர்கள் அனைவரையும் வெட்டிக் கொன்ற பிறகு, மகிழ்ச்சியுடன் நான் போரில் பாண்டுவின் மகன்களைப் பீடிக்கப் போகிறேன்.(30)

ஒருவர் பின் ஒருவராக அவர்களது உயிர்களை எடுத்து, பாஞ்சாலர்கள் அனைவரின் உடல்களையும் பூமியில் விரவிக் கிடக்கச் செய்து, என் தந்தைக்கு {துரோணருக்கு} நான் பட்டிருக்கும் கடனை அடைக்கப் போகிறேன்.(31) நான் இன்று, துரியோதனன், கர்ணன், பீஷ்மர், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோர் சென்ற கடினமான பாதையில் பாஞ்சாலர்களைப் பின்தொடரச் செய்யப் போகிறேன்.(32) என் வலிமையை வெளிப்படுத்தி, ஏதாவது ஒரு விலங்கின் தலையைப் போலப் பாஞ்சாலர்களின் மன்னனான திருஷ்டத்யும்னனின் தலையை முறிக்கப் போகிறேன்.(33) ஓ !கோதமரின் மகனே {கிருபரே}, உறங்கிக் கொண்டிருக்கும் பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்களின் மகன்களை இன்றைய இரவு போரில் என் கூரிய வாளால் வெட்டப் போகிறேன்.(34) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே {கிருபரே}, இன்றிரவு உறக்கத்தில் மூழ்கியிருக்கும் பாஞ்சாலப்படையை நிர்மூலமாக்கி, என் கடமையைச் செய்தவனாக என்னைக் கருதிக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை அடையப் போகிறேன்” என்றான் {அஸ்வத்தாமன்}.(35)

கிருபர் அஸ்வத்தாமன் உரையாடல்! – சௌப்திக பர்வம் பகுதி – 04-காலையில் போரிடலாம் என்று அஸ்வத்தாமனுக்குச் சொன்ன கிருபர்; தன் இதய வேதனை எத்தகையது என்று கிருபருக்கு எடுத்துரைத்த அஸ்வத்தாமன்…

கிருபர் {அஸ்வத்தாமனிடம்}, “ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உன் இதயம் இன்று பழிவாங்குவதில் நிலைத்திருப்பது நற்பேறாலேயே[1]. வஜ்ரபாணியாலேயே {இந்திரனாலேயே} கூட இன்று உன்னைத் தடுக்க முடியாது.(1) எனினும், காலையில் நாங்கள் இருவரும் உனக்குத் துணையாக வருகிறோம். உனது கவசத்தை அகற்றி, உனது கொடிமரத்தை இறக்கி இன்றிரவு ஓய்வெடுப்பாயாக.(2) நீ எதிரியை எதிர்த்துச் செல்லும்போது, கவசம் பூண்டவர்களான நானும், சாத்வத குலத்தின் கிருதவர்மனும், எங்கள் தேர்களைச் செலுத்திக் கொண்டு உனக்குத் துணையாக வருகிறோம்.(3) ஓ! தேர்வீரர்களில் முதன்மையானவனே, நாம் ஒற்றுமையுடன் நம் ஆற்றலை வெளிப்படுத்தி, நாளைய போரின் அழுத்தத்தில் எதிரிகளான பாஞ்சாலர்களைக் கொல்வோம்.(4) உன் ஆற்றலை வெளிப்படுத்தினால் அந்த அருஞ்செயலை அடைய நீ தகுந்தவனே. எனவே இவ்விரவில் ஓய்ந்திருப்பாயாக. நீ பல இரவுகளாக விழித்திருக்கிறாய்.(5)ஓ! கௌரவங்களை அளிப்பவனே {அஸ்வத்தாமா}, உறங்கி, ஓய்வெடுத்து, சிறிது புத்துணர்வை அடைந்த பிறகு, நீ போரில் எதிரியோடு மோதுவாயாக. அப்போது, நீ எதிரியைக் கொல்வாய் என்பதில் ஐயமில்லை.(6) ஓ! தேர்வீரர்களில் முதல்வனே, முதன்மையான ஆயுதங்களுடன் இருக்கும் உன்னை, தேவர்களில் வாசவனே {இந்திரனே} கூட வெல்லத் துணிய மாட்டான்.(7) கிருபனின் துணையுடனும், கிருதவர்மனால் பாதுகாக்கப்பட்டும் செல்லும் துரோணரின் மகனோடு, அவன் தேவர்களின் தலைவனாகவே இருந்தாலும் கூட எவன் போரிடுவான்?(8) எனவே, இவ்விரவில் உறங்கி ஓய்வெடுத்து, களைப்பையுதறிய பிறகு, நாளை காலையில் நாம் எதிரியைக் கொல்வோம்.(9) நீ தெய்வீக ஆயுதங்களில் திறன் கொண்டவன். நானும் அவ்வாறே என்பதில் ஐயமில்லை. இந்தச் சாத்வதக் குலத்து வீரன் {கிருதவர்மன்}, போரில் எப்போதும் திறன் கொண்ட வலிமைமிக்க வில்லாளியாக இருக்கிறான்.(10)

ஓ! {மரு}மகனே {அஸ்வத்தாமனே}, நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, நம் வலிமையைப் போரில் வெளிப்படுத்தி, கூடியிருப்பவர்களான நம் எதிரிகளைக் கொல்வதில் வெல்வோம். உன் கவலைகளை அகற்றி, இவ்விரவில் ஓய்ந்து, மகிழ்ச்சியாக உறங்குவாயாக.(11) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, நீ எதிரிகளை எதிர்த்து உன் தேரில் செல்லும்போது, விற்களைத் தரித்தவர்களும், எதிரிகளை எரிக்கவல்லவர்களுமான நானும் கிருதவர்மனும் கவசத்தைப் பூண்டு கொண்டு உன்னைப் பின்தொடர்வோம்.(12) எதிரிகளின் முகாமுக்குச் செல்லும் நீ, போரில் உன் பெயரை அறிவித்துக் கொண்டு, அவர்களைப் படுகொலை செய்வாயாக.(13) நாளை காலையில் தெளிவான வெளிச்சத்தில், பெரும் அசுரர்களைக் கொன்ற சக்ரனை {இந்திரனைப்} போல நீ அவர்களுக்கு மத்தியில் பெரும் படுகொலைகளைச் செய்து விளையாடுவாயாக.(14) தானவர்களைக் கொல்பவன் {இந்திரன்}, சினத்தால் தானவப் படையைக் கொல்வதைப் போல நீயும் பாஞ்சாலப்படையை வெல்லத் தகுதவனே.(15)

போரில் என்னோடு சேர்ந்தும், கிருதவர்மனால் பாதுகாக்கப்பட்டும் இருக்கும் நீ வஜ்ரபாணியாலேயே தாக்குப்பிடித்துக் கொள்ளப்பட முடியாதவனாவாய்.(16) நானோ, கிருதவர்மனோ, பாண்டுக்களை வெல்லாமல் போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.(17) கோபக்காரப் பாஞ்சாலர்களைப் பாண்டவர்களோடு சேர்த்துக் கொல்வோம், அல்லது அவர்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்திற்குச் செல்வோம்.(18) எங்கள் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் நாங்கள் இருவரும் நாளை காலையில் போரில் உனக்கு உதவிபுரிவோம். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! பாவமற்றவனே, நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன்” என்றார் {கிருபர்}.(19)

ஓ! மன்னா, தன் தாய்மாமனால் இந்த நன்மையான வார்த்தைகள் சொல்லப்பட்ட போது, அஸ்வத்தாமன் சினத்தில் சிவந்த கண்களுடன், தன் மாமனுக்குப் பதிலளிக்கும் வகையில்,(20) “துன்பத்திலோ, சினத்தின் வசத்திலோ, காமத்தின் ஆதிக்கத்திலோ இருப்பவனும், செல்வத்தை அடைவதற்காக எப்போதும் திட்டங்களைச் சுழற்றும் இதயத்தைக் கொண்டவனுமான ஒருவனால் எங்கு உறக்கத்தை அடைய முடியும்?(21) இந்த நான்கு காரணங்களும் என் வழக்கில் இருப்பதைக் காண்பீராக. இவற்றில் எந்த ஒன்றும் உறக்கத்தை அழித்துவிடும்.(22) தன் தந்தையின் படுகொலையை எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒருவனுடைய இதயத்தின் துயரம் எவ்வளவு பெரியதாக இருக்கும்? இப்போது என் இதயம் இரவும், பகலுமாக எரிந்து கொண்டிருக்கிறது. நான் அமைதியை அடையத் தவறுகிறேன்.(23) குறிப்பாக என் தந்தை, அந்தப் பாவிகளால் எவ்வழியில் கொல்லப்பட்டார் என்பதை நீங்கள் அனைவரும் கண்டீர்கள். அந்தப் படுகொலையைக் குறித்த எண்ணமே என் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் பிளக்கின்றன.(24) பாஞ்சாலர்கள் என் தந்தையைக் கொன்றதாகச் சொல்வதைக் கேட்டும் என்னைப் போன்ற ஒருவனால் எவ்வாறு ஒரு கணமும் வாழமுடியும்?(25)

போரில் திருஷ்டத்யும்னனைக் கொல்லாமல் என் உயிரைத் தாங்கிக் கொள்ளும் எண்ணத்தையேகூட என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என் தந்தை {துரோணர்} படுகொலை செய்யப்பட்டதன் விளைவால் அவனும் {திருஷ்டத்யும்னனும்}, அவனுடன் சேர்ந்திருப்போரும் என்னால் கொல்லத்தக்கவர்களாகிறார்கள்.(26) முறிந்த தொடைகளுடன் கிடக்கும் மன்னனின் {துரியோதனனின்} புலம்பல்களைக் கேட்ட பிறகும், எரியாத கடும் இதயம் கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள்?(27) முறிந்த தொடைகளுடன் கூடிய மன்னனால் {துரியோதனனால்} சொல்லப்பட்ட அத்தகு வார்த்தைகளைக் கேட்ட பிறகும், கண்ணீரால் நிறையாத கருணையற்றவர்கள் யார் இருக்கிறார்கள்?(28) நான் எத்தரப்பினரைச் சேர்ந்தேனோ, அவர்கள் வெல்லப்பட்டார்கள். விரைந்து வரும் நீரானது கடலை அதிகரிப்பது போல இந்த என் எண்ணமே என் கவலையை அதிகரிக்கிறது.(29)

ஓ! மாமா {கிருபரே}, வாசுதேவனாலும் {கிருஷ்ணனாலும்}, அர்ஜுனனாலும் பாதுகாக்கப்படும் அவர்கள் மஹேந்திரனாலும் தடுக்கப்பட முடியாதவர்களாவர் என்று நான் கருதுகிறேன்.(30) என் இதயத்தில் எழும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவனாக நான் இருக்கிறேன். என் கோபத்தைத் தணிக்கக்கூடிய மனிதன் எவனையும் நான் இவ்வுலகில் காணவில்லை.(31) என் நண்பர்களின் தோல்வியையும், பாண்டவர்களின் வெற்றியையும் தூதர்கள் எனக்குத் தெரிவித்தார்கள். அஃது என் இதயத்தை எரிக்கிறது.(32) எனினும், என் எதிரிகள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அவர்களைக் கொன்ற பிறகு, ஓய்வெடுத்துக் கொண்டு, கவலையில்லாமல் உறங்குவேன்” என்றான் {அஸ்வத்தாமன்}.(33)

வாயிலை அடைந்த அஸ்வத்தாமன்! – சௌப்திக பர்வம் பகுதி – 05-உறங்குபவர்களைக் கொல்வது முறையாகாது என்று தடுத்த கிருபர்; அதை மறுத்து இரவிலேயே அவர்களைக் கொல்லப்போவதாகச் சொன்ன அஸ்வத்தாமன்; கிருபரும், கிருதவர்மனும் அஸ்வத்தாமனைப் பின்தொடர்ந்து சென்றது…

கிருபர் {அஸ்வத்தாமனிடம்}, “ஒருவன் பெரியோரிடம் கடமையுணர்வுடன் பணிசெய்பவனாக இருப்பினும், அறிவற்றவனாகவோ, தன் ஆசைகளைக் கட்டுக்குள் வைக்காதவனாகவோ இருப்பின், அவனால் அறக்கருத்துகள் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது. இதுவே என் கருத்து.(1) அதேபோலவே, பணிவில்லாத அறிவாளியும், அறக்கருத்துகளைப் புரிந்து கொள்ளத் தவறுகிறான்.(2) துணிச்சல் கொண்ட ஒரு மனிதன், அறிவற்றவனானால், தன் வாழ்நாள் முழுவதும் கல்விமான்களிடம் பணிவிடை செய்தாலும், (கறியிலேயே {குழம்பிலேயே} மூழ்கியிருந்தாலும்) கறிச்சுவையறியாத மரக்கரண்டியைப்[1] போலவே தன் கடமைகளை அறிவதில் தவறுவான்.(3) எனினும், ஞானியான ஒரு மனிதன் கல்விமானிடம் ஒரு கணம் பணிசெய்தாலும், (கறியைத் தீண்டியதும்) கறிச்சுவையறியும் நாவைப் போலத் தன் கடமைகளை அறிவதில் வெல்கிறான்.(4) அறிவைக் கொண்ட மனிதன், பெரியோரிடம் பணிவிடை செய்து, தன் ஆசைகளைக் கட்டுக்குள் வைத்து, அறநெறிகளின் விதிகளை அறிவதில் வென்று, அனைவராலும் ஏற்கப்பட்டவற்றில் ஒருபோதும் சச்சரவு கொள்ள மாட்டான்.(5)அடங்காதவனும், தொடர்பற்றவனும், தீய ஆன்மா கொண்டவனுமான பாவி, விதியை அலட்சியம் செய்து, தன்னலத்தை நாடினால் பாவத்தையே இழைக்கிறான்.(6) நலம்விரும்பிகள் தனது நண்பனைப் பாவத்தில் இருந்து தடுப்பார்கள். {அவ்வாறு} தடுக்கப்படும் ஒருவன் செழிப்பை வெல்கிறான். வேறுவகையில் செய்பவன் அவல நிலையையே அறுவடை செய்கிறான்.(7) மூளை கலங்கிய ஒருவன், ஆறுதல் தரும் வார்த்தைகளால் தடுக்கப்படுவதைப் போலவே, ஒரு நண்பனும் அவனது நலன்விரும்பிகளால் தடுக்கப்பட வேண்டும். அவ்வாறு தடுக்கப்படுபவன் ஒரு போதும் அவல நிலைக்கு இரையாகமாட்டான்.(8) ஒரு நல்ல நண்பன் தீச்செயலைச் செய்யப்போகும்போது, ஞானம் கொண்ட அவனது நலன் விரும்பிகள் தங்கள் சக்தி கொண்ட மட்டும் மீண்டும் மீண்டும் அவனைத் தடுக்க முயல வேண்டும்.(9) ஓ! {மரு}மகனே {அஸ்வத்தாமனே}, உண்மையில் எது நன்மையானது என்பதில் உனது இதயத்தை நிலைக்கச் செய்து, உன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, பின்னால் நீ வருத்தப்படாத வகையில், நான் சொல்வதைச் செய்வாயாக.(10)

உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களைக் கொல்வது அறவிதிகளுக்கு ஏற்ப இவ்வுலகில் மெச்சப்படுவதில்லை. தங்கள் ஆயுதங்களை வைத்துவிட்டவர்கள், தங்கள் தேர்கள் மற்றும் குதிரைகளில் இருந்து இறங்கியவர்கள் ஆகியோரின் வழக்கிலும் {அவர்கள் கொல்லப்படுவதும்} அவ்வாறே {மெச்சப்படுவதில்லை}.(11) “நாங்கள் உன்னவர்கள்” என்று சொல்பவர்கள், சரணடைந்தவர்கள், கேசம் கலைந்தவர்கள், தாங்கள் ஏறிவந்த விலங்குகள் கொல்லப்பட்டவர்கள், தேர்கள் நொறுக்கப்பட்டவர்கள் ஆகியோரும் கொல்லத்தகாதவர்களே.(12) ஓ! தலைவா {அஸ்வத்தாமா}, பாஞ்சாலர்கள் அனைவரும் தங்கள் கவசங்களை அகற்றிவிட்டு இவ்விரவில் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பார்கள். நம்பிக்கையுடன் உறக்கத்தில் மூழ்கியிருப்பவர்கள், இறந்த மனிதர்களைப் போன்றவர்களாவர்.(13) கோணல்புத்தி கொண்ட எந்த மனிதன் அவர்களிடம் அப்போது பகைமை கொள்வானோ, அவன் தன்னைக் காத்துக் கொள்ள ஒரு தெப்பமும் இல்லாதவனாக ஆழமான எல்லையற்ற நரகில் மூழ்கிப் போவான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(14) இவ்வுலகில் நீ ஆயுதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகக் கொண்டாடப்படுகிறாய். ஒரு சிறு மீறலையும் நீ இதுவரை செய்ததில்லை.(15) அடுத்தச் சூரிய உதயத்தில், அனைத்துப் பொருட்களையும் ஒளி கண்டடையும்போது, பிரகாசம் கொண்ட இரண்டாவது சூரியனைப் போலப் போரில் நீ உன் எதிரிகளை வெல்வாயாக.(16) உன்னைப் போன்ற ஒருவனிடம் இருக்கத் தகாததும், நிந்திக்கத்தக்கதுமான இந்தச் செயலானது, வெண்பரப்பில் சிவப்புப் புள்ளியைப் போலத் தெரியும். இதுவே என் கருத்தாகும்” என்றார் {கிருபர்}.(17)

அஸ்வத்தாமன் {கிருபரிடம்}, “ஓ! அம்மானே {தாய்மாமனே}, நீர் சொல்வது போலத்தான் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. எனினும், அறமெனும் அணையானது இதற்கு முன்பே பாண்டவர்களால் நூறு துண்டுகளாக நொறுக்கப்பட்டுவிட்டது.(13) மன்னர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, உமது கண்களுக்கும் முன்பாகவே, ஆயுதங்களைக் கீழே வைத்த என் தந்தை {துரோணர்}, திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார்.(19) தேர்வீரர்களில் முதன்மையானவனான கர்ணனும், தன் தேர்ச்சக்கரம் பூமியில் புதைந்து, பெரும் துயரில் மூழ்கியிருந்தபோது, காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டான்.(20) அதேபோலவே, சந்தனுவின் மைந்தனான பீஷ்மரும், தன் ஆயுதங்களைக் கீழே வைத்து, ஆயுதமற்றவராக ஆன பிறகு, சிகண்டியைத் தன் முன்னிலையில் கொண்ட அர்ஜுனனால் கொல்லப்பட்டார்.(21) 

அதே போலவே, வலிமைமிக்க வில்லாளியான பூரிஸ்ரவஸ், போர்க்களத்தில் பிராய நோன்பை நோற்றுக் கொண்டிருந்தபோது, மன்னர்கள் அனைவரின் கதறல்களையும் அலட்சியம் செய்தபடியே யுயுதானனால் {சாத்யகியால்} கொல்லப்பட்டார்.(22) பீமனோடு கதாயுதப் போரில் மோதிய துரியோதனனும், பூமியின் தலைவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவனால் {பீமனால்} நியாயமற்ற வகையில் கொல்லப்பட்டான்.(23) தன்னைச் சுற்றி நின்ற பெரும் எண்ணிக்கையிலான வலிமைமிக்கத் தேர்வீரர்களுக்கு மத்தியில் மன்னன் {துரியோதனன்} தனியொருவனாக நின்று கொண்டிருந்தான். அத்தகு சூழ்நிலையிலேயே அந்த மனிதர்களில் புலியானவன் {துரியோதனன்}, பீமசேனனால் கொல்லப்பட்டான்.(24) செய்தி சொல்லும் தூதர்கள் மூலமாக அறிந்தவையும், தொடைகள் முறிந்து பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்த மன்னனுடையவையுமான அந்தப் புலம்பல்களைக் கேட்டு என் இதயத்தின் மையப் பகுதியே பிளக்கிறது.(25)

அறமெனும் அணையை முறித்தவர்களும், நியாயமற்றவர்களும், பாவிகளுமான பாஞ்சாலர்களும் அத்தகையவர்களே {வஞ்சகர்களே}. கருதுகோள்கள் அனைத்தையும் மீறியவர்களான அவர்களை நீர் ஏன் நிந்திக்கவில்லை.(26) இரவில் உறக்கத்தில் புதைந்திருப்பவர்களும், என் தந்தையைக் கொன்றவர்களுமான பாஞ்சாலர்களைக் கொன்ற பிறகு, அடுத்த வாழ்வில் {ஜென்மத்தில்} நான் ஒரு புழுவாகவோ, சிறகு படைத்த பூச்சியாகவோ பிறந்தாலும் எனக்குக் கவலையில்லை.(27) நான் எதைத் தீர்மானித்திருக்கிறேனோ, அஃதை நிறைவேற்ற என்னை அது விரைவுகொள்ளச் செய்கிறது. அதனால் பரபரப்பாக இருக்கும் நான் எவ்வாறு உறக்கத்தையோ, மகிழ்ச்சியையோ அடைய முடியும்?(28) அவர்களை அழிக்க நான் அமைத்திருக்கும் இந்தத் தீர்மானத்தைக் கலங்கடிக்கவல்லவன் இன்னும் பிறக்கவில்லை, இனிமேலும் பிறக்க மாட்டான்” என்றான் {அஸ்வத்தாமன்}”.(29)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளைச் சொன்ன துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, ஒரு மூலையில் இருந்த தன் தேரில் குதிரைகளைப் பூட்டித் தன் எதிரிகள் இருக்கும் திசையை நோக்கிப் புறப்பட்டான்.(30)

அப்போது, உயர் ஆன்மா கொண்டவர்களான போஜனும் {கிருதவர்மனும்}, சரத்வான் மகனும் {கிருபரும்} அவனிடம் {அஸ்வத்தாமனிடம்}, “உன் தேரில் ஏன் குதிரைகளைப் பூட்டுகிறாய்? நீ என்ன செய்யப் போகிறாய்?(31) ஓ! மனிதர்களில் காளையே, நாளை உன்னோடு வருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உன் துன்ப துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். எங்களிடம் நம்பிக்கையின்மை கொள்வது உனக்குத் தகாது” என்றனர்.(32)

தன் தந்தையின் படுகொலையை நினைவுகூர்ந்த அஸ்வத்தாமன், தான் செய்யத் தீர்மானித்திருக்கும் செயலை உண்மையாக அவர்களிடம் சினத்துடன் சொன்னான்.(33) அவன், “நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான போர்வீரர்களைத் தன் கூரிய கணைகளால் கொன்ற என் தந்தை {துரோணர்}, தமது ஆயுதங்களைக் கீழே வைத்தபிறகு திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார்.(34) அவன் {திருஷ்டத்யும்னன்} தன் கவசத்தை அகற்றி இருக்கும் அதே நிலையில், இன்று நான் அவனைக் கொல்லப் போகிறேன். பாஞ்சால மன்னனின் பாவம் நிறைந்த மகனை ஒரு பாவச்செயலால் இன்று கொல்லப் போகிறேன்.(35) ஆயுதங்களால் கொல்லப்பட்டோர் ஈட்டும் உலகங்களைப் பாவியான அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்} அடையாதவாறு, ஒருவிலங்கைப் போல அவனைக் கொல்ல நான் தீர்மானித்திருக்கிறேன்.(36) தாமதமில்லாமல் உங்கள் கவசங்களை அணிவீராக, உங்கள் விற்களையும், வாள்களையும் எடுத்துக் கொள்வீராக. தேர்வீரர்களில் முதன்மையானவர்களே, எதிரிகளை எரிப்பவர்களே, எனக்காக இங்கேயே காத்திருப்பீராக” என்றான் {அஸ்வத்தாமன்}.(37)

இவ்வார்த்தைகளைச் சொன்ன அஸ்வத்தாமன், தன் தேரில் ஏறிக் கொண்டு, எதிரியிருக்கும் திசையை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் இருவரும் அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.(38) அந்த மூவரும் எதிரியை எதிர்த்துச் சென்றபோது, தெளிந்த நெய்யூட்டப்பட்ட சுடர்மிக்க மூன்று வேள்வி நெருப்புகளைப் போல ஒளிர்ந்தனர்.(39) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அவர்கள், முகாமில் உறங்கிக் கொண்டிருந்தவர்களான பாஞ்சாலர்களை நோக்கிச் சென்றார்கள். வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, {முகாமின்} வாயிலை அடைந்ததும் நின்றான்” {என்றான் சஞ்சயன்}.(40)

வாயிலைக் காத்த பூதம்! – சௌப்திக பர்வம் பகுதி – 06-முகாமின் வாயிலை அடைந்த அஸ்வத்தாமன்; அங்கே ஒரு பெரும்பூதத்தைக் கண்டது; அஸ்வத்தாமன் ஏவிய ஆயுதங்கள் அனைத்தையும் அந்தப் பூதம் விழுங்கியது; மஹாதேவனைத் துதிக்க நினைத்த அஸ்வத்தாமன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, முகாமின் வாயிலில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} நின்றதைக் கண்டதும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் இருவரும் என்ன செய்தனர். இதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(1)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கிருதவர்மனையும், வலிமைமிக்கத் தேர்வீரரான கிருபரையும் அழைத்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சினத்தால் நிறைந்து முகாமின் வாயிலை அணுகினான்.(2) அங்கே, பெரும் உடற்கட்டைக் கொண்டதும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தவல்லதும், சூரியன் அல்லது சந்திரனின் பிரகாசத்தைக் கொண்டதுமான ஒரு பூதமானவன் அவ்வாயிலைப் பாதுகாப்பதைக் கண்டான்.(3) அவனது {அந்தப் பூதத்தின்} இடுப்பைச் சுற்றி குருதி சொட்டும் புலித்தோல் இருந்தது. மேலும் அவன் கருப்பு மானை {மானின் தோலை} மேலாடையாக அணிந்திருந்தான். அவன் ஒரு பெரும்பாம்பைத் தன் புனித நூலாக அணிந்திருந்தான்.(4) நீண்டவையாகவும், பருத்தவையாகவும் இருந்த அவனது கரங்கள் பல வகையிலான ஆயுதங்களை உயர்த்திப் பிடித்திருந்தன. அவன் தனது தோள்களைச் சுற்றிலும் ஒரு பெரும்பாம்பை அங்கதமாக {தோள்வளையாக} அணிந்திருந்தான். அவனது வாய் நெருப்பின் தழல்களுடன் எரிந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(5)

அவனது பற்கள் அவனது முகத்தைக் காணப் பயங்கரமானதாகச் செய்தன. அவனது வாய் திறந்திருந்ததாகவும், அச்சந்தருவதாகவும் இருந்தது. அவனது முகமானது ஆயிரக்கணக்கான அழகிய விழிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவனது உடலும், ஆடைகளும் வர்ணிக்க இயலாதவையாக இருந்தன. அவனைக் கண்டால் மலைகளே கூட ஆயிரந்துண்டுகளாகச் சிதறிவிடும்.(7) அவனது வாய், மூக்கு, காதுகள் மற்றும் அந்த ஆயிரக்கணக்கான கண்கள் ஆகியவற்றில் இருந்து சுடர்மிக்க நெருப்பின் தழல்கள் வெளிப்படுவதாகத் தெரிந்தது.(8) அந்தச் சுடர்மிக்கத் தழல்களில் சங்குகள், சக்கரங்கள் மற்றும் கதாயுதங்கள் ஆகியவற்றுடன் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ரிஷிகேசர்கள் {கிருஷ்ணர்கள்} வெளிப்பட்டார்கள்.(9) மொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் அந்த இயல்புக்குமீறிய பூதமானவனைக் கண்ட துரோணர் மகன், எந்தக் கலக்கமும் அடையாமல், தெய்வீக ஆயுதங்களின் மழையால் அவனை  மறைத்தான். எனினும் அந்தப் பூதமானவன், துரோணர் மகனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள் அனைத்தையும் விழுங்கினான்.(10) கடல்நீரை விழுங்கும் வடவா நெருப்பைப் போல, அந்தப் பூதமானவன், துரோணர் மகன் ஏவிய கணைகள் அனைத்தையும் விழுங்கினான்.(11)

தன் கணைமாரி கனியற்றதானதைக் கண்ட அஸ்வத்தாமன், நெருப்பின் தழலைப் போன்ற ஒரு நீண்ட ஈட்டியை {ரதசக்தியை} அவன் மீது ஏவினான்.(12) சுடர்மிக்க முனையைக் கொண்ட அந்த ஈட்டியானது, அந்தப் பூதத்தின் மீது மோதி, யுகமுடிவின்போது, ஒரு பெரும் எரிநட்சத்திரமானது {உற்கையானது} சூரியன் மீது மோதி உடைந்து, ஆகாயத்தில் இருந்து விழுவதைப் போலத் துண்டுகளாக நொறுங்கி விழுந்தது.(13) அப்போது, ஒரு கணத்தையும் இழக்காத அஸ்வத்தாமன், வானின் வண்ணத்தைக் கொண்டதும், தங்கக் கைப்பிடியைக் கொண்டதுமான தன் சிறந்த வாளை உறையில் இருந்து உருவினான். அந்த வாளும், பொந்துக்குள் இருந்து வெளிப்படும் சுடர்மிக்கப் பாம்பைப் போல வெளியே வந்தது.(14) பிறகு, துரோணரின் அந்தப் புத்திசாலி மகன் {அஸ்வத்தாமன்}, அந்தச் சிறந்த வாளை அந்தப் பூதத்தின் மீது வீசினான். அந்தப் பூதத்தை அடைந்த அந்த ஆயுதமானது, பொந்துக்குள் மறையும் கீரிப்பிள்ளையைப் போல, அவனது உடலுக்குள்ளேயே மறைந்து போனது.(15) அப்போது சினத்தில் நிறைந்த துரோணரின் மகன், இந்திரனைக் கௌரவிக்க நிறுவப்படும் கம்பின் {இந்திரத்வஜத்தின்} அளவு உள்ள ஒரு சுடர்மிக்கக் கதாயுதத்தை ஏவினான். அந்தப் பூதமானவன் அதையும் விழுங்கினான்.(16) இறுதியாக, தன் ஆயுதங்கள் அனைத்தும் தீர்ந்து போன அஸ்வத்தாமன், சுற்றிலும் தன் கண்களைச் சுழல விட்டு, மொத்த ஆகாயமும் ஜனார்த்தனின் {கிருஷ்ணனின்} உருவங்களால் அடர்த்தியாக நிறைந்திருப்பதைக் கண்டான்.(17)

ஆயுதங்களை இழந்தவனான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அந்த அற்புதக் காட்சியைக் கண்டு, கிருபரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து, துயரமடைந்து, {தனக்குள்ளேயே}, “அறிவுரை கூறும் நண்பர்களின் நன்மையான வார்த்தைகளைக் கேட்காத ஒருவன், நலன்விரும்பிகள் இருவரை அலட்சியம் செய்த மூடனான என்னைப் போலவே, பேரிடரில் மூழ்கி வருந்த வேண்டியிருக்கும்.(19) சாத்திரங்களில் சுட்டப்பட்டுள்ள வழியை அலட்சியம் செய்து, தன் எதிரிகளைக் கொல்ல முயலும் மூடன், அறத்தின் பாதையில் இருந்து நழுவி, பாவமெனும் பாதையற்ற காட்டில் தொலைந்து போகிறான்.(20) பசுக்கள், பிராமணர்கள், மன்னர்கள், பெண்கள், நண்பர்கள், தன் தாய், தன் ஆசான், பலவீனன், மடையன், குருடன், உறங்கிக் கொண்டிருக்கும் மனிதன், பயந்த மனிதன், உறக்கத்திலிருந்து அப்போதே எழுந்தவன், போதையில் இருப்பவன், பைத்தியக்காரன், மூளையற்றவன் ஆகியோர் மீது ஒருவன் ஆயுதங்களை ஏவக்கூடாது. பழங்காலத்தின் ஆசான்கள் எப்போதும் இந்த உண்மையை மனிதர்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.(21,22) எனினும் நான், சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள அழிவில்லாத வழியை அலட்சியம் செய்து, தவறான பாதையில் நடந்து, இந்தப் பயங்கரத் துயரில் விழுந்திருக்கிறேன்.(23)

ஒரு பெரும் செயலை அடைய முயன்று, அச்சத்தால் ஒருவன் விழுவதை {விலகிப் போவதைப்} பயங்கரப் பேரிடராக ஞானியர் அழைக்கின்றனர்.(24) என் திறன் மற்றும் வலிமையை மட்டுமே வெளிப்படுத்தி, என்னால் நான் கொண்ட சபதத்தை நிறைவேற்ற முடியவில்லை. விதியை விட மனிதமுயற்சி எதிர்பார்த்த பலனைத் தரும் என்று ஒருபோதும் கருதப்படுவதில்லை.(25) தொடங்கப்பட்ட மனிதசெயலெதுவும் விதியால் வெல்லவில்லையென்றால், அதைச் செய்பவன், அறப்பாதையில் இருந்து நழுவி, பாவமெனும் காட்டில் தொலைந்து போகிறவன் ஆகிறான்.(26) ஒரு செயலைத் தொடங்கிவிட்டு, அச்சத்தால் ஒருவன் விலகும்போது அந்தத் தோல்வியை மடமை என்று தவசிகள் சொல்கின்றனர்.(27) என் செயலுடைய தீய தன்மையின் விளைவால் இந்தப் பேரிடர் எனக்கு வந்திருக்கிறது. அல்லது துரோணரின் மகன், போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்கும் நிலை ஏற்பட்டிருக்காது.(28) மேலும், நான் என் முன்னே காணும் இந்தப் பூதமானவன், மிக அற்புதமானவனாக இருக்கிறான். உயர்த்தப்பட்ட தெய்வீக தண்டத்தைப் போலவே அவன் இங்கே நின்று கொண்டிருக்கிறான். இன்னும் ஆழமாகச் சிந்தித்தாலும், இந்தப் பூதத்தை என்னால் அடையாளம் காண முடியவில்லை.(29)

நியாயமற்ற வகையில் நான் அடைய முயன்ற பாவம் நிறைந்த என் தீர்மானத்தின் பயங்கரக் கனியே இந்தப் பூதம் என்பதில் ஐயமில்லை. இவன் என் தீர்மானத்தைக் கலங்கடிக்கவே இங்கே நின்று கொண்டிருக்கிறான்.(30) எனவே, போரில் இருந்து நான் விலகுவது விதியால் விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. விதி என் நோக்கத்திற்குச் சாதகமாகாத வரையில் அஃதை என்னால் நிறைவேற்ற முடியாது.(31) எனவே, இந்நேரத்தில் நான் பலமிக்க மஹாதேவனின் பாதுகாப்பை நாடப்போகிறேன். என் முன்பாக உயர்த்தப்பட்டிருப்பதும், அச்சந்தருவதுமான இந்தத் தெய்வீகத் தண்டத்தை அவன் விலக்குவான்.(32) நன்மையனைத்தின் ஊற்றுக்கண்ணும், கபர்தின் {கபர்தி = அடர்ச்சடையன்} என்றும் அழைக்கப்படுபவனும், மனித மண்டையோடுகளின் மாலையால் அலங்கரிக்கப்பட்டவனும், பகனின் கண்களைப் பிடுங்கியவனும், ருத்ரன் என்றும், ஹரன் என்றும் அழைக்கப்படுபவனும், உமையின் தலைவனுமான அந்தத் தேவனை {சிவனை} நான் சரணடையப் போகிறேன்.(33) தவத்துறவுகள் மற்றும் ஆற்றலில் அவன் தேவர்கள் அனைவரையும் விஞ்சி நிற்பவனாவான். எனவே, திரிசூலபாணியான அந்தக் கிரிசனின் {சிவனின்} பாதுகாப்பை நான் நாடப்போகிறேன்” என்றான் {அஸ்வத்தாமன்}”.(34)

மஹாதேவன் நுழைந்தான்! – சௌப்திக பர்வம் பகுதி – 07-அஸ்வத்தாமனின் மஹாதேவத் துதி; அவன் முன்னே தோன்றிய தங்கமயமான வேள்விப் பீடம்; அஸ்வத்தாமன் சொன்ன ஸர்வபூதோபஹாரத் துதி; இயல்புக்குமீறிய பல பூதங்கள் தோன்றியது; தன்னையே காணிக்கையாக்கிய அஸ்வத்தாமன்; அங்கே தோன்றிய மஹாதேவன் பாஞ்சாலர்களைக் காத்த காரணத்தைச் சொன்னது; அஸ்வத்தாமனுக்கு ஒரு வாளைக் கொடுத்து, அவனையும் தன் சக்தியால் நிறைத்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இவ்வாறு சிந்தித்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் தேர்த்தட்டில் இருந்து கீழே இறங்கி, அந்த உயர்ந்த தலைவனுக்கு {சிவனுக்குத்} தலைவணங்கி நின்றான்.(1) அவன் {அஸ்வத்தாமன்}, “கடுமையானவன், ஸ்தாணு, சிவன், ருத்திரன், சர்வன், ஈசானன், ஈஸ்வரன், கிரிசன் என்று அழைக்கப்படுபவனும், அண்டத்தின் படைப்பாளனும், தலைவனுமான வரங்கொடுக்கும் தேவனும்;(2) நீலமிடறு கொண்டவனும், பிறப்பற்றவனும், சங்கரன் என்று அழைக்கப்படுபவனும், தக்ஷனின் வேள்வியை அழித்தவனும், ஹரன் என்று அழைக்கப்படுபவனும், அண்டமே வடிவானவனும், முக்கண்ணனும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும், உமையின் தலைவனும்;(3) சுடலைகளில் வசிப்பவனும், சக்தியில் பெருகுபவனும், பல்வேறு பூதகணங்களின் தலைவனும், அழியாத செழிப்பு மற்றும் சக்தியைக் கொண்டவனும்; மண்டையோட்டு நுனியுடன் கூடிய தண்டத்தைத் தரிப்பவனும், ருத்திரன் என்று அழைக்கப்படுபவனும், தலையில் சடாமுடி தரிப்பவனும், பிரம்மச்சாரியுமான தேவனின் {சிவனின்} பாதுகாப்பை நான் நாடுகிறேன்.(4), அற்பசக்தியே கொண்டவனான நான், தூய்மைப்படுத்த கடினமானதான என் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, திரிபுரத்தை அழித்தவனைத் துதித்து என்னையே பலியாகக் காணிக்கை அளிக்கிறேன்[1].(5)துதிக்கப்படும் நீ துதிகளுக்குத் தகுந்தவனே, உன் மகிமையை நான் துதிக்கிறேன்.

கலங்காத நோக்கங்கள் கொண்டவன் நீ.

தோலாடை உடுத்தியவன் நீ, செஞ்சடை கொண்டவன் நீ;

நீலத் தொண்டை கொண்டவன் நீ;

தாங்கிக்கொள்ளப்பட முடியாதவன் நீ;

தடுக்கப்பட முடியாதவன் நீ.(6)

தூய்மையானவன் நீ;

பிரம்மனைப் படைத்தவன் நீ;

பிரம்மமும் நீ;

பிரம்மச்சாரியும் நீ;

நோன்புகளை நோற்பவன் நீ;

தவத்துறவுகளில் அர்ப்பணிப்புள்ளவன் நீ;

அளவில்லாதவன் நீ;

தவசிகள் அனைவரின் புகலிடம் நீ;(7)

பல்வேறு வடிவினன் நீ;

பல்வேறு பூதகணங்களின் தலைவன் நீ;

முக்கண்ணன் நீ;

தோழர்கள் {பாரிஷதர்கள்} என்றழைக்கப்படும் பூதங்களுக்கு அன்பானவன் நீ;

பொக்கிஷத் தலைவனால் {குபேரனால்} எப்போதும் காணப்படுபவன் நீ;

கௌரியின் இதயத்துக்கு அன்பானவன் நீ;(8)

குமாரனின் {முருகனின்} தந்தை நீ;

பழுப்பானவன் நீ;

சிறந்த காளைக் கொடியைக் கொண்டவன் நீ;

நுண்ணிய ஆடை உடுத்தியவன் நீ;

மிகக் கடுமையானவன் நீ;

உமையைப் போற்றும் ஆவல் கொண்டவன் நீ;(9)

உயர்ந்தவை அனைத்திற்கும் உயர்ந்தவன் நீ;

தன்னை விட உயர்ந்தவை ஏதுமில்லாதவன் நீ;

ஆயுதங்களைத் தரித்திருப்பவன் நீ;

அளக்கமுடியாதவன் நீ,

அனைத்துப் பகுதிகளையும் பாதுகாப்பவன் நீ;(10)

தங்கக் கவசம் பூண்டவன் நீ;

தெய்வீகமானவன் நீ;

புருவத்தில் ஆபரணமாக நிலவைக் கொண்டவன் நீ.

ஓ! தேவா, குவிந்த கவனத்துடன் நான் உன்னிடம் பாதுகாப்பை நாடுகின்றேன்.(11)

கடப்பதற்கு அரிதான இந்த அச்சந்தரும் துயரில் இருந்து வெளியேறுவதில் வெற்றிபெற, தூய்மையிலும் தூய்மையானவனான உனக்கு, (ஐம்)பூதங்களாலான என் உடலைக் காணிக்கையளிக்கிறேன்” என்றான் {என்று துதித்தான் அஸ்வத்தாமன்}.(12)

தன் நோக்கத்தை அடையும் விருப்பத்தின் விளைவால் ஏற்பட்ட அவனது இந்தத் தீர்மானத்தை அறிந்து, துரோணரின் உயர் ஆன்ம மகனின் {அஸ்வத்தாமனின்} முன்பு தங்கமயமான ஒரு வேள்விப் பீடம் தோன்றியது.(13) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வேள்விப்பீடத்தில், முக்கிய மற்றும் துணைத் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் நிறைத்தபடியே பிரகாசத்துடன் சுடர்மிக்க நெருப்பு தோன்றியது.(14) சுடர்மிக்க வாய்களையும், கண்களையும் கொண்டவர்களும், பல கால்களையும், தலைகளையும், கரங்களையும் கொண்டவர்களும், ரத்தினங்கள் பதிக்கப்பட்ட அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், உயர்த்தப்பட்ட கரங்களுடன் கூடியவர்களும், யானைகளையும், மலைகளையும் போலத் தெரிந்தவர்களுமான பல்வேறு வலிமைமிக்கப் பூதகணங்கள் அங்கே தோன்றினர். அவர்களின் முகங்கள், முயல்கள், பன்றிகள், ஒட்டகங்கள், குதிரைகள், நரிகள் மற்றும் மாடுகளைப் போன்றும்,(15,16) கரடிகள், பூனைகள், புலிகள், சிறுத்தைகள், காக்கைகள், குரங்குகள் மற்றும் கிளிகளைப் போன்றும் இருந்தன.(17) சிலரின் முகங்கள் பெரும்பாம்புகளைப் போலவும், சிலரின் முகங்கள் வாத்துகளைப் போலவும் இருந்தன. ஓ! பாரதரே, சிலரின் முகங்கள் மரங்கொத்திகள், காடைகள்,(18) ஆமைகள், முதலைகள், கடற்பன்றிகள் {சிம்சுமாரங்கள்}, பெரும் சுறாக்கள், திமிங்கலங்கள்,(19) சிங்கங்கள், நாரைகள், புறாக்கள், யானைகள் மற்றும் நீர்க்காக்கைகளைப் போல இருந்தன.(20)

கருங்காக்கைகள், பருந்துகள் போன்ற முகங்களுடன் சிலரும் இருந்தனர். சிலருக்குக் கைகளில் காதுகள் இருந்தன, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிலர் ஆயிரம் கண்களைக் கொண்டிருந்தனர். சிலர் பெரும் வயிறுகளைப் படைத்தவர்களாக இருந்தனர். சிலர் சதையே இல்லாமல் இருந்தனர்.(21) ஓ! மன்னா, சிலருக்குத் தலைகள் இல்லை, ஓ! பாரதரே, சிலருக்கு கரடிகளைப் போன்ற முகங்கள் இருந்தன. சிலரின் கண்கள் நெருப்பைப் போலவும், சிலரின் நிறம் நெருப்பைப் போலவும் இருந்தன.(22) சிலரின் தலைகளிலும், உடல்களிலும் இருந்த முடிகள் சுடர்விட்டுக் கொண்டிருந்தன. சிலர் நான்கு கரங்களைக் கொண்டவர்களாக இருந்தனர். ஓ! மன்னா, சிலரின் முகங்கள் வெள்ளாடுகளையும், செம்மறி ஆடுகளைப் போலவும் இருந்தன.(23) சிலரின் நிறம் சங்குகளைப் போல இருந்தது, சிலரின் முகங்கள் சங்குகளைப் போல இருந்தன, சிலரின் காதுகளும் சங்குகளைப் போல இருந்தன. சங்குகளாலான மாலைகளைச் சிலர் அணிந்திருந்தனர். சிலரின் குரல்கள் சங்கொலியைப் போல இருந்தன.(24) சிலர் மெலிந்த வயிறுகளைக் கொண்டிருந்தனர்; சிலர் நான்கு பற்களைக் கொண்டிருந்தனர்; சிலர் நான்கு நாக்குகளைக் கொண்டிருந்தனர், சிலர் அம்பைகளைப் போன்ற காதுகளைக் கொண்டிருந்தனர். சிலரின் புருவங்களில் கிரீடங்கள் இருந்தன.(25)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிலர் புல்லிழைகளைத் தங்கள் உடல்களில் கொண்டிருந்தனர். சிலரின் முடி சுருள்முடியாக இருந்தது. சிலர் துணியாலான மகுடங்களை அணிந்திருந்தனர், சிலர் சிறு மகுடங்களை அணிந்திருந்தனர். சிலர் அழகான முகங்களைக் கொண்டிருந்தனர், சிலர் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.(26) தாமரைகளாலான ஆபரணங்களைச் சிலர் அணிந்திருந்தனர், மலர்களால் சிலர் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் {பூதங்கள்} நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் இருந்தனர்.(27) சிலர் சதக்னிகளையும், சிலர் வஜ்ரத்தையும், சிலர் தங்கள் கரங்களில் முசலங்களையும் கொண்டிருந்தனர். ஓ! பாரதரே, சிலர் புசுண்டிகளையும், சிலர் சுருக்குக் கயிறுகளையும், சிலர் கதாயுதங்களையும் தங்கள் கைகளில் கொண்டிருந்தனர்.(28) சிலரின் முதுகுகளில் சிறந்த கணைகளைக் கொண்ட அம்பறாத்தூணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் அனைவரும் போரில் கடுமையானவர்களாக இருந்தனர். கொடிகள் மற்றும் மணிகளுடன் கூடிய கொடிமரத்தைச் சிலர் கொண்டிருந்தனர், சிலர் போர்க்கோடரிகளைத் தரித்திருந்தனர்.(29) சிலர் உயர்த்தப்பட்ட தங்கள் கரங்களில் பெரும் சுருக்குக் கயிறுகளைக் கொண்டிருந்தனர். சிலர் தண்டாயுதங்களையும், தடிகளையும் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் கரங்களில் பருமனான கம்புகளைக் கொண்டிருந்தனர், சிலர் வாள்களைக் கொண்டிருந்தனர். சிலர், தங்கள் கிரீடங்களில் நிமிர்ந்த தலை கொண்ட பாம்புகளைக் கொண்டிருந்தனர்.(30)

சிலர், அங்கதங்களுக்குப் பதிலாக (தங்கள் தோள்களைச் சுற்றிலும்) பெரும்பாம்புகளை அணிந்திருந்தனர். சிலர் அழகிய ஆபரணங்களைத் தங்கள் மேனியில் அணிந்திருந்தனர். சிலர் புழுதி படிந்தவர்களாகவும், சிலர் சகதி பூசப்பட்டவர்களாகவும் இருந்தனர். அனைவரும் வெள்ளை உடையும், துணியும் அணிந்திருந்தனர். சிலரின் அங்கங்கள் நீல நிறத்தில் இருந்தன, வேறு சிலரின் அங்கங்களோ பழுப்பு நிறத்திலிருந்தன. அங்கே இருந்த சிலர் தாடியற்றவர்களாக இருந்தனர்.(31) தோழர்கள் {பாரிஷதர்கள்} என்றழைக்கப்பட்ட அவர்கள், தங்க நிறம் கொண்டவர்களாக, மகிழ்ச்சியில் நிறைந்தவர்களாக, பேரிகைகள், சங்கங்கள், மிருதங்கங்கள், ஜர்ஜரங்கள், ஆனகங்கள் கோமுகங்கள் ஆகியவற்றை இசைத்துக் கொண்டிருந்தனர்.(32) சிலர் பாடினர், சிலர் உரத்த ஒலிகளை வெளியிட்டவாறே ஆடிக் கொண்டிருந்தனர், சிலர் தாவினர், குறுக்கே பாய்ந்னர்.(33) பெரும் வேகம் கொண்ட அவர்கள், உரத்த முழக்கங்களைச் செய்தபடியே ஆசையால் மதங்கொண்ட பெரும் யானைகளைப் போலத் தங்கள் தலையில் இருந்த முடிகள் பறக்க மிக மூர்க்கமாக ஓடினர்.(34) அச்சந்தரும் பயங்கர முகங்களுடனும், வேல்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றைத் தரித்தும் இருந்த அவர்கள், பல்வேறு வண்ணங்களில் ஆடைகள் உடுத்தியவர்களாக, அழகிய மாலைகள் மற்றும் களிம்புகளால் அலங்கரிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.(35)

ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அங்கதங்களைக் கொண்டவர்களும், உயர்த்தப்பட்ட கரங்களைக் கொண்டவர்களுமான அவர்கள், பெரும் துணிவையும் கொண்டவர்களாக இருந்தனர். எதிரிகள் அனைவரையும் பலவந்தமாகக் கொல்லவல்ல அவர்கள், ஆற்றலில் தடுக்கப்பட முடியாதவர்களாக இருந்தனர்.((36) இரத்தம், கொழுப்பு மற்றும் விலங்குப் பொருள் ஆகியவற்றைக் குடிப்பவர்களான அவர்கள், விலங்குகளின் இறைச்சியையும், உள்ளுறுப்புகளையும் உண்டு வாழ்ந்து வந்தனர். சிலர் தங்கள் தலைக்கு மேலே நெடு குடுமியாகத் தங்கள் சடைகளைக் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் தலைகளில் ஒற்றைக் குடுமியைக் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் காதுகளில் வளையங்களை அணிந்திருந்தனர். சிலர், சமைப்பதற்குப் பயன்படுத்தும் மண்பாண்டங்களைப் போன்ற வயிறுகளைக் கொண்டிருந்தனர்.(37) சிலர், உடற்கட்டில் மிகக் கட்டையானவர்களாகவும், சிலர் மிக உயர்ந்தவர்களாகவும் இருந்தனர். சிலர் நெடியவர்களாகவும், மூர்க்கர்களாகவும் இருந்தனர். சிலர் பயங்கரத் தன்மைகளைக் கொண்டிருந்தனர். சிலர் பெரிய உதடுகளைக் கொண்டிருந்தனர், சிலரின் பிறப்புறுப்புகள் மிக நீண்டவையாக இருந்தன.(38) சிலர், விலைமதிப்புமிக்கவையும், பல்வேறு வகைகளிலானவையுமான மகுடங்களைத் தங்கள் தலையில் சூடியிருந்தனர்; சிலர் வழுக்கைத் தலையர்களாக இருந்தனர், சிலர் சடாமுடியால் மறைக்கப்பட்ட தலையைக் கொண்டவர்களாக இருந்தனர். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றை ஆகாயத்தில் இருந்து பூமிக்குக் கொண்டவர வல்லவர்களாகவும், படைக்கப்பட்ட நான்கு வகையினரையும் அழிக்கவல்லவர்களாகவும் இருந்தனர்.(39) அச்சம் என்பது என்ன என்றே அவர்கள் அறியாதவர்களாகவும், ஹரனின் கடுஞ்சினத்தைத் தாங்கிக் கொள்ள வல்லவர்களாகவும் இருந்தனர்.(40)

அவர்கள் எப்போதும் தங்கள் விருப்பப்படி செயல்படுபவர்களாகவும், மூவுலங்களின் தலைவனுக்குத் தலைவர்களாகவும் இருந்தனர். எப்போதும் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபட்ட அவர்கள், பேச்சில் முற்றான திறம் கொண்டவர்களாகவும், செருக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களாகவும் இருந்தனர்.(41) எட்டு வகைத் தெய்வீக செல்வங்களைப் பெற்ற அவர்கள் எப்போதும் செருக்கற்றவர்களாகவே இருந்தனர். தெய்வீக ஹரன், அவர்களின் அருஞ்செயல்களால் எப்போதும் ஆச்சரியத்தில் நிறைந்தபடியே இருக்கிறான்.(42) அவர்கள் மஹாதேவனை அர்ப்பணிப்புடன் வழிபடுபவர்களாவர். மனம், சொல், மற்றும் செயல் ஆகியவற்றைக் கொண்டு அவர்களால் துதிக்கப்படும் அந்தப் பெரும் தேவன் {சிவன்}, தன்னை வழிபடுவோரை {அந்த பூதகணங்களைத்} தன் மடியில் பிறந்த பிள்ளைகளைப் போலவே கருதி மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் அவர்களைப் பாதுகாக்கிறான்.(43) சினத்தால் நிறைந்த அவர்கள், பிரம்மத்தை வெறுப்போர் அனைவரின் குருதியையும், கொழுப்பையும் எப்போதும் குடிக்கின்றனர். அவர்கள் நால் வகைச் சுவையுடன் கூடிய சோமச்சாற்றையும் எப்போதும் குடிக்கின்றனர்.(44) வேதம் ஓதி, பிரம்மச்சரியத்துடனும், தவத்துறவுகளுடனும், தன்னடக்கத்துடனும் திரிசூலபாணியான அந்தத் தேவனைத் துதிக்கும் அவர்கள், அந்தப் பவனையே {சிவனையே} தங்கள் தோழனாக அடைந்திருக்கின்றனர்.(45) கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றின் தலைவனும், பார்வதியின் தலைவனுமான அந்தத் தெய்வீக மஹேஸ்வரன், தன் இயல்பையே கொண்டவர்களும், பல்வேறு இனக்குழுக்களைச் சார்ந்தவர்களுமான அந்த வலிமைமிக்கப் பூதங்களுடனே எப்போதும் உண்கிறான்.(46)

{அப்படிப்பட்ட} அவர்கள், பல்வேறு வகை இசைக்கருவிகளின் ஒலியாலும், சிரிப்பொலியாலும், உரத்த முழக்கங்களாலும், கூச்சல்களாலும், சிங்க முழக்கங்களாலும் அண்டத்தை எதிரொலிக்கச் செய்தபடியே அஸ்வத்தாமனை அணுகினர்.(47) மஹாதேவனின் புகழைச் சொல்லியபடியும், சுற்றிலும் பிரகாசமாக ஒளியைப் பரப்பியபடியும், அஸ்வத்தாமனின் மதிப்பையும், உயர்ஆன்ம ஹரனின் மகிமையையும் பெருக்கியபடியும், அஸ்வத்தாமனின் சக்தியின் எல்லையை உறுதி செய்து கொள்ள விரும்பியும், உறங்கும் நேரத்தில் படுகொலையைக் காண விரும்பியும்,(48) அந்த விநோதமான பூதக்கூட்டம், பயங்கரமான, கடுமையான தண்டங்கள், நெருப்புச் சக்கரங்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் வந்தனர்.(49) தங்களைப் பார்ப்பதாலேயே மூவுலகங்களையும் அச்சங்கொள்ளச் செய்ய வல்லவர்களாக அவர்கள் இருந்தனர். எனினும், வலிமைமிக்க அஸ்வத்தாமன் அவர்களைக் கண்டும் எந்த அச்சமும் கொள்ளவில்லை.(50)

அப்போது, வில்தரித்திருந்தவனும், உடும்பின் தோலாலான விரலுறைகளை விரல்களுக்கு அணிந்திருந்தவனுமான அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன்னையே மஹாதேவனுக்குக் காணிக்கையாக {பலியாக} அளித்தான்.(51) ஓ! பாரதரே அந்த வேள்விச் செயல்பாட்டில், விற்களே விறகுகளாகின, கூரிய கணைகளே கரண்டிகளாகின, பெரும் வலிமை கொண்ட அவனது ஆன்மாவே நீர்க்காணிக்கையானது.(52) வீரமும் கோபமும் நிறைந்த அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} உரிய மந்திரங்களைச் சொல்லி, தன் ஆன்மாவையே பலியாகக் காணிக்கையளித்தான்.(53) அஸ்வத்தாமன், கடுஞ்செயல்புரிபவனான ருத்திரனைக் கடும் சடங்குகளால் துதித்து, கூப்பிய கரங்களுடன் அந்த உயர் ஆன்மத் தேவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(54)

அஸ்வத்தாமன் {ருத்ரனிடம்}, “ஓ! தேவா, அங்கிரச குலத்தில் உதித்த நான், இந்த நெருப்பில் என் ஆன்மாவை நீர்க்காணிக்கையாக ஊற்றப்போகிறேன் {ஹோமம் செய்யப் போகிறேன்}. ஓ! தலைவா, இந்தப் பலியை ஏற்பாயாக.(55) ஓ! அண்டத்தின் ஆன்மாவே, துயர்மிக்க இந்த நேரத்தில், உன்னிடம் கொண்ட பக்தியால், தியானத்தில் குவிந்த இதயத்துடன் என்னையே வேள்விப் பலியாக உனக்குக் காணிக்கையளிக்கிறேன்.(56) அனைத்து உயிரினங்களும் உன்னிலிருக்கின்றன, அனைத்து உயிரினங்களிலும் நீ இருக்கிறாய். உயர்ந்த குணங்கள் அனைத்தின் ஒருமை உன்னில் நேர்கிறது.(57) ஓ! தலைவா, அனைத்துயிர்களுக்கும் புகலிடமாய் இருப்பவனே, என் எதிரிகளை வீழ்த்த முடியாதவனாக இருப்பதால் நான் உனக்கான நீர்க்காணிக்கையாக {ஆகுதியாகக்} காத்திருக்கிறேன். ஓ! தேவா, என்னை ஏற்பாயாக” என்றான்.(58)

இவ்வார்த்தைகளைச் சொன்ன துரோணர் மகன், அந்த வேள்விப் பீடத்தில், பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த நெருப்பில் தன்னையே பலியாகக் காணிக்கையளித்து, சுடர்மிக்க நெருப்புக்குள் நுழைந்தான்.(59) அசையாமல் உயர்த்திய கரங்களுடன், தன்னையே காணிக்கையளித்த அவனைக் கண்ட தெய்வீக மஹாதேவன் {சிவன்}, சிரித்துக் கொண்டே அங்கே தோன்றி,(60) “தூய்மையான செயல்களைச் செய்யும் கிருஷ்ணன், உண்மை, தூய்மை, நேர்மை, பொறுப்புதுறப்பு, தவத்துறவு, நோன்புகள், மன்னிப்பு {பொறுமை}, அர்ப்பணிப்பு {பக்தி}, பொறுமை, எண்ணம் செயல் ஆகியவற்றால்(61) என்னை முறையாகத் துதித்திருக்கிறான். இதன் காரணமாக, கிருஷ்ணனைவிட எனது அன்புக்குரியவன் வேறு எவனும் இல்லை.(62) அவனை மதிப்பதற்காகவே, அவனது வார்த்தைகளின் படி, பாஞ்சாலர்களைக் காப்பதற்காகப் பல்வேறு வகை மாயைகளை நான் வெளிப்படுத்தினேன்.(63) பாஞ்சாலர்களைப் பாதுகாத்ததால் நான் அவனை {கிருஷ்ணனை} மதித்தேன். எனினும் அவர்கள் காலத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்வின் காலமும் தீர்ந்துவிட்டது” என்றான் {சிவன்}.(64)

உயர் ஆன்ம அஸ்வத்தாமனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன மஹாதேவன், பளபளப்பான சிறந்த வாளொன்றை அஸ்வத்தாமனிடம் கொடுத்து, அவனது உடலுக்குள் நுழைந்தான்.(65) அந்தத் தெய்வீகமானவனால் நிறைக்கப்பட்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} சக்தியில் சுடர்விட்டெரிந்தான். அந்தப் பரமனிமிருந்து பெறப்பட்ட சக்தியின் விளைவால் அவன் போரில் பெரும் பலம்மிக்கவனாக ஆனான்.(66) அவன் {அஸ்வத்தாமன்} புறப்பட்டபோது, தன் எதிரிகளின் முகாமுக்குள் நுழையும் தலைவன் மஹாதேவனைப் போலவே, கண்ணுக்குத் தெரியாத பல பூதங்களும், ராட்சசர்களும் அவனுக்கு வலப்பக்கத்திலும், இடப்பக்கத்தில் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.(67)

அஸ்வத்தாமன் செய்த படுகொலைகள்! – சௌப்திக பர்வம் பகுதி – 08அ-கிருபரையும், கிருதவர்மனையும் வாயிலில் அமர்த்திவிட்டு முகாமுக்குள் நுழைந்த அஸ்வத்தாமன்; திருஷ்டத்யும்னனைத் தாக்கிக் கொன்றது; ருத்திர ஆயுதத்தைக் கொண்டு பாஞ்சாலர்களைக் கொன்றது. உறங்கிக் கொண்டிருந்த உத்தமௌஜஸைக் கொன்றது; திரௌபதியின் மகன்களைக் கொன்றது; சிகண்டியை இரண்டாகப் பிளந்து கொன்றது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} பகைவரின் முகாமை நோக்கிச் சென்ற போது, அச்சத்தால் கிருபரும், போஜனும் {கிருதவர்மனும்} நின்று விட்டார்களா?(1) பெரும் தேர்வீரர்களான அவர்கள் இருவரும், கோரமான காவலர்களால் தடுக்கப்பட்டு, எதிராளிகள் தடுக்கப்பட முடியாதவர்கள் என்று கருதி கமுக்கமாகத் தப்பி ஓடவில்லையா?(2) அல்லது சோமகர்கள் மற்றும் பாண்டவர்களின் முகாமை கலங்கடித்துக் கொண்டிருந்தபோது, துரியோதனன் சென்ற உயர்ந்த மகிமையான வழியிலேயே சென்றுவிட்டார்களா?(3) அந்த வீரர்கள் பாஞ்சாலர்களால் கொல்லப்பட்டு வெறுந்தரையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்களா? அவர்கள் சாதனை ஏதும் செய்தார்களா? ஓ! சஞ்சயா, இவையாவையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(4)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உயரான்ம துரோணர்மகன் {அஸ்வத்தாமன்} முகாமை நோக்கிச் சென்றபோது, கிருபரும், கிருதவர்மனும் வாயிலில் காத்திருந்தனர்.(5) ஓ! மன்னா, தங்களையும் {இம்முயற்சியில்} ஈடுபடுத்திக் கொள்ளத் தயாராக இருக்கும் அவர்களைக் கண்ட அஸ்வத்தாமன், மகிழ்ச்சியில் நிறைந்து, அவர்களிடம் கிசுகிசுக்கும் தொனியில், “முயற்சி செய்தால், க்ஷத்திரியர்கள் அனைவரையும் கொல்லத்தக்கவர்கள் நீங்கள்.(6) எனவே, எஞ்சியிருக்கும் இந்தப் (பாண்டவப்) படையை என்ன சொல்வது? அதிலும் குறிப்பாக உறக்கத்தில் புதைக்கப்பட்டிருக்கும் போது அஃதை என்ன சொல்வது?(7) நான் முகாமுக்குள் நுழைந்து யமனைப் போலத் திரியப் போகிறேன். எம்மனிதனும் உயிரோடு தப்பிச் செல்லாத வகையில் நீங்கள் செயல்படுவீர்கள் என்று நான் உறுதி கொள்கிறேன்” என்றான்.(8) துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} இவ்வார்த்தைகைச் சொல்லிவிட்டு, பார்த்தர்களின் பரந்த முகாமுக்குள் நுழைந்தான். அச்சமனைத்தையும் உதறிவிட்டு, எங்கே கதவு இல்லையோ அந்த இடத்தின் வழியாக அதற்குள் ஊடுருவினான்.(9) வலிய கரங்களைக் கொண்ட அந்த வீரன், முகாமுக்குள் நுழைந்ததும், அடையாளங்களால் வழிநடத்தப்பட்டு மெதுவாகத் திருஷ்டத்யும்னனின் இருப்பிடத்தை நோக்கிச் சென்றான்.(10)

சாதனைகளைச் செய்திருந்த பாஞ்சாலர்கள் போரால் மிகவும் களைத்திருந்தனர். ஒன்றாகக் கூடிய அவர்கள், ஒருவருக்கொருவர் அருகருகே நம்பிக்கையுடன் உறங்கிக் கொண்டிருந்தனர்.(11) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரின் மகன், திருஷ்டத்யும்னனின் அறைக்குள் நுழைந்து, தன் எதிரே உறங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பாஞ்சால இளவரசனைக் கண்டான்.(12) விலைமதிப்புமிக்கதும், சிறந்ததுமான கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த அழகிய பட்டு விரிப்பில் அவன் கிடந்தான். அந்தப் படுக்கையில் சிறந்த மலர்க்குவியல்கள் தூவப்பட்டு, தூபப்பொடிகளால் அது நறுமணமூட்டப்பட்டிருந்தது.(13) ஓ! மன்னா, அஸ்வத்தாமன், நம்பிக்கையுடனும், அச்சமில்லாமலும் தன் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த அந்த உயர் ஆன்ம இளவரசனை {திருஷ்டத்யும்னனை} உதைத்து, அவனை விழித்தெழச் செய்தான்.(14) போரில் தடுக்கப்பட முடியாதவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான அந்த இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, அந்த உதையை உணர்ந்து, உறக்கத்தில் இருந்து விழித்து, தன் முன்னே நிற்கும் துரோணரின் மகனை அறிந்து கொண்டான்.(15)

அவன் தன் படுக்கையில் இருந்து எழுந்தபோதே, வலிமைமிக்க அஸ்வத்தாமன் அவனது {திருஷ்டத்யும்னனின்} தலைமுடியைப் பிடித்து, தன் கரங்களால் அவனைப் பூமியில் அழுத்தத் தொடங்கினான். இவ்வாறு அஸ்வத்தாமனால் பெரும்பலத்துடன் அழுத்தப்பட்ட அந்த இளவரசன், அச்சத்தாலும், உறக்கக் கலக்கத்தாலும் அந்நேரத்தில் தன் பலத்தை வெளிப்படுத்த முடியாதவனாக இருந்தான்.(17) ஓ! மன்னா, தன் பலி {திருஷ்டத்யும்னன்} அலறித் துடித்துக் கொண்டிருந்தபோது, தன் காலால் அவனது தொண்டை மற்றும் மார்பில் மிதித்த துரோணரின் மகன், ஒரு விலங்கைப் போலக் கருதி அவனைக் கொல்ல முயற்சித்தான்.(18)

அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} தன் நகங்களால் அஸ்வத்தாமனைக் கிழித்து, இறுதியாக மெதுவாக, “ஓ! ஆசான் மகனே, தாமதிக்காதீர் என்னை ஆயுதத்தால் கொல்வீராக. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, உமது செயலின் மூலமாக என்னை நீதியாளர்களின் {நல்லோரின்} உலகத்தை அடையச் செய்வீராக” என்றான்.(19) எதிரிகளைக் கொல்பவனான அந்தப் பாஞ்சால மன்னின் மகன் இவ்வளவே சொன்னபோது, அந்த வலிமைமிக்க வீரனின் பலத்தால் தாக்கப்பட்டு அமைதியடைந்தான்.(20) தெளிவில்லாத அந்த ஒலிகளைக் {திருஷ்டத்யும்னனின் குரலைக்} கேட்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, “ஓ! உன் குலத்தில் இழிந்தவனே, ஆசான்களைக் கொன்றோருக்கு எவ்வுலகமும் கிடையாது. ஓ! தீய புரிதல் {துர்ப்புத்தி} கொண்டவனே, நீ எந்த ஆயுதத்தாலும் கொல்லப்படத் தகுந்தவனல்ல” என்றான்.(21) அப்படிச் சொன்னவாறே சினத்தில் நிறைந்த அஸ்வத்தாமன், தன் குதிகால்களின் வலிமையான உதைகளால் தன் பலியின் {பலியாடான திருஷ்டத்யும்னனின்} முக்கிய அங்கங்களைத் தாக்கத் தொடங்கி, மதங்கொண்ட யானையைக் கொல்லும் சிங்கத்தைப் போலத் தன் எதிரியைக் கொன்றான்[1].(22)ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்} கொல்லப்படும்போது கதறியதைக் கேட்டு, பாசறையில் இருந்த அவனது மனைவியரும், பாதுகாவலர்கள் அனைவரும் விழித்தெழுந்தனர்.(23) மனித சக்திக்கு அப்பாற்பட்ட பலத்துடன் யாரோ ஒருவன் இளவரசனை நொறுக்குவதைக் கண்ட அவர்கள், தாக்குபவன் இயற்கையைக் கடந்த உயிரினம் {பூதம்} எனக் கருதி அச்சத்தால் கதறாமல் இருந்தனர்.(24) பெரும் சக்தி கொண்டவனான அஸ்வத்தாமன், இத்தகு வழியில் அவனை {திருஷ்டத்யும்னை} யமலோகம் அனுப்பி வைத்துவிட்டு, வெளியே சென்று, தன் அழகிய தேரில் ஏறி நின்றான்.(25) உண்மையில், ஓ! மன்னா, திருஷ்டத்யும்னனின் வசிப்பிடத்தில் இருந்து வெளிய வந்த அஸ்வத்தாமன், தன் முழக்கங்களால், திசைப்புள்ளிகள் அனைத்தையும் எதிரொலிக்கச் செய்தபடியே தன் எதிரிகளைக் கொல்வதற்காக முகாமின் பிற பகுதிகளுக்குச் சென்றான்.(26)

வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} சென்ற பிறகு, பெண்களும், பாதுகாவலர்கள் அனைவரும், துன்பத்தால் உரக்க ஓலமிட்டனர்.(27) தங்கள் மன்னன் கொல்லப்பட்டதைக் கண்ட திருஷ்டத்யும்னனின் மனைவியர் அனைவரும், பெரும் சோகத்தால் நிறைந்து உரக்க அழுதனர்.(28) வலிமைமிக்க க்ஷத்திரியர்கள் பலர், அந்த ஓலத்தைக் கேட்டு விழித்தெழுந்து, தங்கள் கவசங்களைப் பூட்டிக் கொண்டு, அந்தக் கூச்சலின் காரணத்தை விசாரிக்க அங்கே வந்தனர்.(29) அஸ்வத்தாமனைக் கண்டு பீதியடைந்திருந்த அந்த மங்கையர், தாமதமில்லாமல் அவனைப் பின்தொடருமாறு பரிதாபகரமான தொனியில் அம்மனிதர்களைக் கேட்டுக் கொண்டனர்.(30) அவர்கள், “அவன் ராட்சசனோ? மனிதனோ? அவன் யாரென்று நாங்கள் அறியவில்லை. பாஞ்சால மன்னனை {திருஷ்டத்யும்னனைக்} கொன்றுவிட்டு அவன் இங்கே இருக்கிறான்” என்றனர்.(31) இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த முதன்மையான போர்வீரர்கள் திடீரெனத் துரோணரின் மகனைச் {அஸ்வத்தாமனைச்} சூழ்ந்து கொண்டனர். பின்னவனோ {அஸ்வத்தாமனோ}, அவர்கள் அனைவரையும் ருத்திர ஆயுதத்தின் மூலம் கொன்றான்.(32)

திருஷ்டத்யும்னனையும், அவனது தொண்டர்களையும் கொன்ற பிறகு, படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் உத்தமௌஜஸை அவன் {அஸ்வத்தாமன்} கண்டான்.(33) தன் காலால் அவனது தொண்டையையும், மார்பையும் தாக்கிய துரோணரின் மகன், அந்தப் பெரும் வீரன் {உத்தமௌஜஸ்} வலியால் துடித்துக் கொண்டிருக்கும்போதே கொன்றான்.(34) அங்கே வந்த யுதாமன்யு, தன் தோழன் ஒரு ராட்சசனால் கொல்லப்பட்டான் என்று நம்பி, ஒரு கதாயுதத்தால் வேகமாகத் துரோணரின் மகனைத் தாக்கினான்.(35) அவனை {யுதாமன்யுவை} நோக்கி விரைந்து சென்ற அஸ்வத்தாமன், அவனைப் பிடித்துத் தரையில் சாய்த்து, அவன் உரக்கக் கதறிக் கொண்டிருக்கும்போதே ஒரு விலங்கைக் கொல்வதைப் போல அவனைக் {யுதாமன்யுவைக்} கொன்றான்.(36) இவ்வாறு யுதாமன்யுவைக் கொன்ற அந்த வீரன், உறங்கிக் கொண்டிருந்தவர்களும், மன்னனைச் சேர்ந்தவர்களுமான பிற தேர்வீரர்கள் அனைவரையும் எதிர்த்துச் சென்றான்.(37) அவன், நடுங்கிக் கூச்சலிட்டவர்களான அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் வேள்வியில் விலங்குகளைக் கொல்வதைப் போலக் கொன்றான். அப்போது அவன், தன் வாளை எடுத்துக் கொண்டு வேறு பலரையும் கொன்றான்.(38)

வாளைப் பயன்படுத்துவதில் சாதித்தவனான அஸ்வத்தாமன் ஒன்றன்பின் ஒன்றாக முகாமின் பல்வேறு பாதைகளில் சென்று, பல்வேறு குல்மங்களைக் கண்டு, அவற்றுக்குள் உறங்கிக் கொண்டிருந்தவர்களும், ஆயுதமற்றவர்களும், களைத்தவர்களுமான போர்வீரர்களைக் கணப்பொழுதுக்குள் கொன்றான்.(39) அந்தச் சிறந்த வாளைக் கொண்டு அவன் போராளிகளையும், குதிரைகளையும், யானைகளையும் வெட்டிச் சாய்த்தான். மேனியெங்கும் குருதியால் நனைந்திருந்த அவன் {அஸ்வத்தாமன்}, காலத்தால் நியமிக்கப்பட்ட அந்தகனைப் போலவே அப்போது தெரிந்தான்.(40) {வலது, இடது அசைவுகள் மற்றும் சுழற்றுதல் ஆகிய} தன் மூவகை வாள்வீச்சுகளால் மீண்டும் மீண்டும் தன் எதிரிகளை நடுங்கச் செய்த அஸ்வத்தாமன் குருதியில் குளித்தவனானான்.(41) குருதியில் நனையும், சுடர்மிக்க வாளுடன் போரில் திரிந்து கொண்டிருந்த அவனது வடிவம், மனித சக்திக்கு அப்பாற்பட்ட பயங்கரமானதாக இருந்தது.(42)

ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்தவர்கள், (சுற்றிலும் தாங்கள் கேட்ட) உரத்த ஒலியால் திகைப்படைந்தனர். துரோணரின் மகனைக் {அஸ்வத்தாமனைக்} கண்ட அவர்கள், ஒருவரையொருவர் முகங்களைப் பார்த்துக் கொண்டு (அச்சத்தால்) நடுங்கினர்.(43) அந்த எதிரிகளை நொறுக்குபவனின் வடிவத்தைக் கண்ட க்ஷத்திரியர்கள், அவனை ராட்சசனாகக் கருதி தங்கள் கண்களை மூடிக் கொண்டனர்.(44) பயங்கர வடிவத்துடன் யமனைப் போல முகாமுக்குள் திரிந்து கொண்டிருந்த அவன், இறுதியாகத் திரௌபதியின் மகன்களையும், எஞ்சிய சோமகர்களையும் கண்டான்.(45) ஒலியைக் கேட்டு அஞ்சியவர்களும், திருஷ்டத்யும்னன் கொல்லப்பட்டதை அறிந்தவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்தத் திரௌபதியின் மகன்கள், விற்களைத்தரித்துக் கொண்டு, அச்சமில்லாமல் துரோணரின் மகன் மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர்.(46) அவர்களது ஒலியால் விழித்தெழுந்த சிகண்டியின் தலைமையிலான பிரபத்ரகர்கள், தங்கள் கணைகளால் துரோணர் மகனைக் கலங்கடிக்கத் தொடங்கினர்.(47) துரோணரின் மகன் தன் மீது கணைகளைப் பொழியும் அவர்களைக் கண்டு உரக்க முழங்கி, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் கொல்லும் விருப்பம் கொண்டான்.(48) தன் தந்தையின் மரணத்தை நினைத்துப் பார்த்த அஸ்வத்தாமன் சினத்தால் நிறைந்தான். அவன், தன் தேர்த்தட்டில் இருந்து இறங்கி (தன் எதிரிகளை எதிர்த்து) மூர்க்கமாக விரைந்தான்.(49) வலிமைமிக்கவனான அஸ்வத்தாமன், பளபளப்பானதும், ஆயிரம் சந்திரன்களால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் கேடயத்தையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் பெரிய வாளையும் எடுத்துக் கொண்டு, திரௌபதியின் மகன்களை எதிர்த்து விரைந்து, தன் ஆயுதத்தால் அவர்களைக் வீழ்த்தத் தொடங்கினான்.(50)

அப்போது அந்த மனிதர்களில் புலி {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சந்தரும் போரில் {அந்தவாளால், யுதிஷ்டிரனின் மகனான} பிரதிவிந்தியனை வயிற்றில் தாக்கினான். அதன்பேரின் அவன் {பிரதிவிந்தியன்} கீழே விழுந்து தன் உயிரை இழந்தான்.(51) வீரனான {பீமன் மகன்} சுதசோமன், ஈட்டியினால் துரோணர் மகனைத் துளைத்து, வாளை உயர்த்திக் கொண்டு அவனை நோக்கி விரைந்து சென்றான்.(52) எனினும், அஸ்வத்தாமன், கையில் வாளுடன் கூடிய சுதசோமனின் கரங்களை வெட்டி, மீண்டும் அவனை விலாப்புறத்தில் தாக்கினான். இதனால் சுதசோமன் உயிரை இழந்து கீழே விழுந்தான்[2].(53) நகுலனின் மகனான சதானீகன், தன் இரு கரங்களாலும் ஒரு தேர்ச்சக்கரத்தை எடுத்துக் கொண்டு, அஸ்வத்தாமனின் மார்பைத் தாக்கினான்.(54) மறுபிறப்பாளனான அஸ்வத்தாமன், தேர்ச்சக்கரத்தை சதானீகன் வீசியபிறகு, வன்மையுடன் அவனைத் தாக்கினான். மிகவும் கலங்கிப் போன நகுலனின் மகன் பூமியில் விழுந்தான். அப்போது துரோணரின் மகன் அவனுடைய {சதானீகனின்} தலையை அறுத்தான்.(55)அப்போது {அர்ஜுனன் மகன்} சுருதகர்மன், ஒரு பரிகத்தை எடுத்துக்கொண்டு அஸ்வத்தாமனைத் தாக்கினான். துரோணர் மகனை நோக்கி மூர்க்கமாக விரைந்து, அவனது இடது நெற்றியில் பலமாகத் தாக்கினான்.(56) அப்போது அஸ்வத்தாமன் தன் சிறந்த வாளால் சுருதகர்மனின் முகத்தைத் தாக்கினான். அவன் {சுருதகர்மன்}, தன் உணர்வுகளை இழந்து, {கோரமாக} முகம் சிதைந்தவனாக உயிரை இழந்து பூமியில் விழுந்தான்.(57) பெரும் தேர்வீரனும், {சகாதேவனின் மகன்} வீரனுமான சுருதகீர்த்தி இவ்வொலியைக் கேட்டு அங்கே வந்து, அஸ்வத்தாமன் மீது கணைமாரியைப் பொழிந்தான்.(58) தன் கேடயத்தால் அந்தக் கணைமாரிகளைக் கலங்கடித்த அஸ்வத்தாமன், காதுகுண்டலங்களுடன் அலங்கரிக்கப்பட்ட தன் எதிரியின் {சுருதகீர்த்தியின்} தலையை அவனது உடலில் இருந்து துண்டித்தான்.(59)

பீஷ்மரைக் கொன்றவனான வலிமைமிக்கச் சிகண்டி, பிரபத்ரகர்கள் அனைவருடன் சேர்ந்து, பல்வேறு ஆயுதங்களுடன் அனைத்துப் பக்கங்களிலும் அஸ்வத்தாமனைத் தாக்கினான். சிகண்டி, ஒரு கணையால் அஸ்வத்தாமனின் புருவங்களுக்கு மத்தியில் தாக்கினான்.(60) இதனால் சினத்தால் நிறைந்தவனும், பெரும் வலிமை கொண்டவனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சிகண்டியை அணுகி, தன் வாளால் அவனை இரண்டு துண்டுகளாக வெட்டிப் போட்டான்.(61) சிகண்டியைக் கொன்ற பிறகு சினத்தால் நிறைந்தவனான அஸ்வத்தாமன், வேறு பிரபத்ரகர்களை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான். அவன் எஞ்சியிருந்த விராடப் படையை எதிர்த்தும் சென்றான்.(62) பெரும் பலம் கொண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஒருவர் பின் ஒருவராகத் துருபதனின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரைத் தனியாக்கி அவர்களுக்கு மத்தியில் பேரழிவை நிகழ்த்தினான்.(63) வாளைப் பயன்படுத்துவதில் சாதித்தவனான அஸ்வத்தாமன், பிற போராளிகளை எதிர்த்து விரைந்து தன் சிறந்த வாளால் அவர்களை வெட்டி வீழ்த்தினான்.(64)

பாண்டவ முகாமைச் சேர்ந்தவர்கள், கரிய உருவம் கொண்டவளும், குருதி வழியும் வாய் மற்றும் கண்களுடன் கூடியவளும், சிவப்பு மாலை அணிந்தவளும், சிவப்பு வண்ண சந்தனத்தைப் பூசியிருந்தவளும், சிவப்புத் துணியாலான ஒற்றையாடையை உடுத்தியவளும், கையில் சுருக்குக் கயிற்றுடன் கூடியவளும், கிழவிக்கு ஒப்பாகத் தோன்றியவளும், பொலிவிழந்த குரலில் பாடுபவளும், தங்கள் கண்களுக்கு முன்னே முழுமையாக நிற்பவளும், தடித்த கயிற்றில் மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் அனைத்தையும் கட்டி இழுத்துச் செல்பவளுமாக உடல் கொண்டு வந்த அந்தக் கால இரவை {காளராத்ரியைக்} கண்டனர்.(65,66) அவள், கலைந்த கேசத்தைக் கொண்டவர்களும், கயிற்றில் ஒன்றாகக் கட்டப்பட்டவர்களுமான பல்வேறு வகைப் பூதங்களையும், ஆயுதங்களை இழந்த பல வலிமைமிக்கத் தேர்வீரர்களையும் கொண்டு செல்பவளாகத் தெரிந்தாள்.(67) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வேறு நாட்களில், பாண்டவ முகாமைச் சேர்ந்த அந்த முதன்மையான போர்வீரர்கள், உறங்கிக் கொண்டிருக்கும் போராளிகளையும், அவர்களைப் பின்னால் இருந்து தாக்கும் துரோணரின் மகனையும் வழிகாட்டி அழைத்துச் செல்லும் அந்த வடிவத்தை {காளராத்ரியைத்} தங்கள் கனவுகளில் வழக்கமாகக் கண்டு வந்தனர்.(68) அந்தப் பாண்டவப் படைவீரர்கள், முதலில் குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் போர் தொடங்கிய போதிலிருந்தே ஒவ்வொரு நாள் இரவிலும், அந்தப் பெண்ணையும், துரோணரின் மகனையும் தங்கள் கனவுகளில் கண்டு வந்தனர்.(69) முன்பே விதியால் பீடிக்கப்பட்ட அவர்கள் இப்போது அச்சந்தரும் வகையில் முழங்கி பீதியடையச் செய்த துரோணரின்  மகனால் {அஸ்வத்தாமனால்} தாக்கப்பட்டனர்.(70) விதியால் பீடிக்கப்பட்டவர்களும், பாண்டவ முகாமைச் சேர்ந்தவர்களுமான அந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் தங்கள் கனவில் ஏற்கனவே கண்டவற்றை நினைத்துப் பார்த்து, இப்போது தாங்கள் காண்பதை அடையாளம் கண்டனர்” {என்றான் சஞ்சயன்}.(71)

அஸ்வத்தாமனின் கோரச் செயல்! – சௌப்திக பர்வம் பகுதி – 08ஆ-உறக்கத்திலிருந்து எழுந்து போரிட வந்த அனைவரையும் கொன்ற அஸ்வத்தாமன்; தப்பி ஓட முயன்ற போர்வீரர்களை வாயிலில் நின்ற கிருபரும், கிருதவர்மனும் கொன்றது; பாண்டவ மூகாமை அவர்கள் எரித்தது; அஸ்வத்தாமன் இதை ஏன் முன்பே செய்யவில்லை என்று கேட்ட திருதராஷ்டிரன்; பாண்டவர்கள், கிருஷ்ணன் ஆகியோர் இல்லாமையும், போர்வீரர்களின் உறக்கமும் தான் அஸ்வத்தாமனின் வெற்றிக்குக் காரணம் என்று சொன்ன சஞ்சயன்; துரியோதனனைத் தேடிச்சென்ற அஸ்வத்தாமன்…

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அவ்வாறு ஏற்பட்ட ஒலியின் காரணமாக, முகாமில் இருந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாண்டவ வில்லாளிகள் தங்கள் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டனர்.(72) காலத்தால் விடுவிக்கப்பட்ட அந்தகனைப் போல அஸ்வத்தாமன், அவர்களில் சிலரின் கால்களையும், சிலரது இடைகளையும் வெட்டி, சிலரது விலாப்புறங்களைத் துளைத்துத் திரிந்து கொண்டிருந்தான்.(73) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, வடிவமற்றவர்களாக நொறுக்கப்பட்டோ, யானைகள் மற்றும் குதிரைகளால் மிதிக்கப்பட்டோ கிடந்த மனிதர்கள் பூமியை மறைத்துக் கொண்டு, பெரும் துன்பத்தில் கதறிக் கொண்டிருந்தனர்.(74) பலர், “இஃது என்ன? இவன் எவன்? ஏன் இந்த ஒலி? இதைச் செய்தவன் எவன்?” என்று உரக்கக் கதறினர். இவ்வாறு அவர்கள் கதறிக் கொண்டிருந்தபோது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அவர்களைக் கொல்லும் காலனானான்.(75)

தாக்குபவர்களில் முதன்மையானவனான அந்தத் துரோணரின் மகன், கவசம் மற்றும் ஆயுதங்களற்றவர்களாக இருந்த பாண்டுக்கள் மற்றும் சிருஞ்சயர்களை யமலோகத்திற்கு அனுப்பி வைத்தான்.(76) பலர், அவ்வொலியால் பீடிக்கப்பட்ட உறக்கத்தில் இருந்து எழுந்தனர். அச்சத்தால் பீடிக்கப்பட்டும், உறக்கத்தால் குருடாகவும், தங்கள் புலனுணர்வுகளை இழந்து இருந்த அந்தப் போர்வீரர்கள் (அஸ்வத்தாமனின் சீற்றத்திற்கு முன்னால்) காணாமல் போனார்கள்.(77) பலரின் தொடைகள் முடக்கப்பட்டன. தங்கள் சக்தி முழுவதையும் தொலைக்கும் அளவுக்குப் பலர் திகைப்பை அடைந்திருந்தனர். அச்சத்தால் பீடிக்கப்பட்டுக் கதறிக் கொண்டிருந்த அவர்கள், ஒருவரையொருவர் கொல்லத் தொடங்கினர்.(78) துரோணரின் மகன், பயங்கரச் சடசடப்பொலியைக் கொண்ட தன் தேரில் மீண்டும் ஏறித் தன் வில்லை எடுத்துக் கொண்டு பலரைத் தன் கணைகளால் யமலோகம் அனுப்பி வைத்தான்.(79) உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த, துணிச்சல்மிக்க, மனிதர்களில் முதன்மையான வேறு போர்வீரர்கள், அஸ்வத்தாமனை நெருங்கும் முன்பே அவனால் கொல்லபட்டு, இவ்வாறே அந்தக் கால இரவுக்கு {கால ராத்ரிக்குப்} பலியாகக் காணிக்கையளிக்கப்பட்டனர்.(80)

அந்த முதன்மையான தேரால் பலரை நசுக்கியவண்ணம், முகாமில் திரிந்து கொண்டிருந்த அவன் {அஸ்வத்தாமன்}, தன் கணைமாரிகளால் மீண்டும் மீண்டும் எதிரிகளை மறைத்துக் கொண்டிருந்தான்.(81) பிறகு மீண்டும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட தன் அழகிய கேடயத்தையும், ஆகாயத்தின் நிறத்தைக் கொண்ட தன் வாளையும் எடுத்துக் கொண்டு எதிரிகளின் மத்தியில் திரிந்தான்.(82) பெரும் தடாகத்தைக் கலங்கடிக்கும் யானையைப் போலப் போரில் தடுக்கப்பட முடியாதவனான துரோணரின் மகன் பாண்டவ முகாமைக் கலங்கடித்தான்.(83) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்வொலியால் விழித்தெழுந்த போர்வீரர்கள் பலர், அப்போதும் உறக்கத்தாலும், அச்சத்தாலும் பீடிக்கப்பட்டு, மதிமயக்கத்துடன் அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தனர்.(84) பலர் கடுந்தொனியில் கதறினார், இன்னும் பலர் தொடர்பற்ற சொற்களைப் பிதற்றினர். பலர், தங்கள் ஆயுதங்களையும், கவசங்களையும் அடையத் தவறினர்.(85)

பலரது கேசங்கள் கலைந்திருந்தன, பலர் ஒருவரையொருவர் அடையாளங்காண தவறினர். உறக்கத்தில் இருந்து எழுந்த பலர் களைத்துப் போய்க் கீழே விழுந்தனர்; சிலர் காரணம் ஏதும் அறியாமல் இங்கேயும், அங்கேயும் திரிந்து கொண்டிருந்தனர்.(86) யானைகள், குதிரைகள் ஆகியன தங்கள் கட்டுகளை அறுத்துக் கொண்டு மலமும், சிறுநீரும் கழித்தன.(87) பெருங்குழப்பத்தோடு கூடிய பலர் ஒன்றாகத் திரண்டனர். அவர்களில் சிலர் அச்சத்தால் தங்களைப் பூமியில் கிடத்திக் கொண்டனர். முகாமைச் சேர்ந்த விலங்குகள் அவர்களை அங்கேயே நசுக்கின.(88) முகாம் இந்நிலையை அடைந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதர்களின் தலைவரே, ராட்சசர்கள் மகிழ்ச்சியில் உரக்க முழக்கமிட்டனர்.(89) ஓ! மன்னா, மகிழ்ச்சியில் இருந்த பூதக்கூட்டங்களால் வெளியிடப்பட்ட அந்த உரத்த ஒலியானது திசைகளின் புள்ளிகள் அனைத்தையும், ஆகாயத்தையும் நிறைத்தது.(90)

துன்ப ஓலங்களைக் கேட்ட யானைகள், குதிரைகள் ஆகியன, தங்கள் கட்டுகளை அறுத்துக் கொண்டு அங்கேயும், இங்கேயும் ஓடி, முகாமின் போராளிகளை நசுக்கின.(91) அவ்விலங்குகள் அங்குமிங்கும் விரைந்த போது, அவற்றால் எழுப்பப்பட்ட புழுதியானது அவ்விரவின் இருளை இரட்டிப்பாக்கியது.(92) அந்த அடர்த்தியான இருள் சூழ்ந்தபோது, முகாமை சேர்ந்த போர்வீரர்கள் முற்றிலும் திகைப்படைந்தனர்; தந்தையரால் தங்கள் மகன்களையும், சகோதரர்களால் தங்கள் சகோதரர்களையும் அடையாளங்காண முடியவில்லை.(93) பாகர்களற்ற யானைகளைப் பிற யானைகளும், சாரதிகளற்ற குதிரைகளைப் பிற குதிரைகளும் {ஒன்றையொன்று} தாக்கிப் பிளந்து, தங்கள் வழியில் நின்ற மக்களை நசுக்கின.(94) ஒழுங்கனைத்தையும் இழந்த போராளிகள் விரைந்து சென்று ஒருவரையொருவர் கொன்று, தங்கள் வழியில் நின்றவர்கள் மீது பாய்ந்து அவர்களைத் துண்டுகளாக வெட்டிக் கொன்றனர்.(95)

உணர்வுகளை இழந்து, உறக்கத்தின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு, இருளில் மூழ்கிய அம்மனிதர்கள், விதியால் உந்தப்பட்டுத் தங்கள் தோழர்களையே கொன்றனர்.(96) வாயில் காப்போர் தாங்கள் காத்து வந்த வாயில்களையும், புறக்காவலில் ஈடுபட்டோர் புறங்களையும் கைவிட்டு, எங்கே செல்கிறோம் என்று தெரியாமல், உணர்வுகளை இழந்து தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தப்பி ஓடினர்.(97) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தக் கொலைகாரர்கள், கொல்லப்படுபவர்களை அடையாளம் காணாமல் ஒருவரையொருவன் கொன்றனர். விதியால் உந்தப்பட்ட அவர்கள் தங்கள் தந்தைமாரையும், மகன்களையும் அழைத்தனர்.(98) தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களைக் கைவிட்டு அவர்கள் தப்பி ஓடியபோது, தங்கள் குடும்பங்கள் மற்றும் தங்கள் பெயர்களைக் குறிப்பிட்டு ஒருவரையொருவர் அழைத்தனர்.(99) வேறு சிலர், “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கதறியபடியே கீழே பூமியில் விழுந்தனர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, போருக்கு மத்தியில் அவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு கொன்றான்.(100)

இவ்வாறு கொல்லப்படும்போது, வேறுசில க்ஷத்திரியர்கள், தங்கள் உணர்வுகளை இழந்து, அச்சத்தால் பீடிக்கப்பட்டுத் தங்கள் முகாம்களை விட்டுத் தப்பி ஓட முயன்றனர்.(101) அவ்வாறு தங்கள் உயிர்களைக் காத்துக்கொள்ள முகாமை விட்டுத் தப்பி ஓட முயற்சித்த அம்மனிதர்கள் வாயிலில் இருந்த கிருதவர்மன் மற்றும் கிருபரால் கொல்லப்பட்டனர்.(102) ஆயுதங்கள், கருவிகள் மற்றும் கவசங்கள் அற்றவர்களும், கலைந்த கேசத்தைக் கொண்டவர்களும், அச்சத்தால் நடுங்கி தங்கள் கரங்களைக் கூப்பியவர்களும் தரையில் கிடந்தார்கள். எனினும், (தங்கள் தேர்களில் இருந்த) அந்தக் குரு வீரர்கள் இருவரும் {அவர்களில்} யாருக்கும் இடமளிக்கவில்லை.(103) கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகிய அந்தத் தீயவர்கள் இருவரும், முகாமில் இருந்து தப்பித்த எவரையும் விட்டுவிடவில்லை.(104) துரோணரின் மகனுக்கு மிகவும் ஏற்புடையதைச் செய்வதற்காக அவர்கள் இருவரும், அந்தப் பாண்டவ முகாமின் மூன்று இடங்களில் நெருப்பூட்டினர்.(105)

அந்த முகாம் {இவ்வாறு} ஒளியூட்டப்பட்டபோது {எரிக்கப்பட்டபோது}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் தந்தைமாரை திளைக்கச் செய்பவனான அஸ்வத்தாமன், கையில் வாளுடன், பெரும் திறனுடன் தன் எதிரிகளைத் தாக்கினான்.(106) துணிச்சல்மிக்க அவனது எதிரிகளில் சிலர் அவனை நோக்கி விரைந்தனர், சிலர் இங்கேயும் அங்கேயும் ஓடினர். அந்த மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையான துரோணரின் வீரமகன், தன் வாளால் அவர்கள் அனைவரின் உயிரையும் எடுத்தான்.(107) சினத்தால் நிறைந்து போர்வீரர்களில் சிலரை வீழ்த்தி, எள்ளுக்கட்டையை வெட்டுவதைப் போலத் தன் வாளால் அவர்களை இரண்டாக வெட்டினான்.(108) ஓ! பாரதக் குலத்தின் காளையே, துன்ப ஓலங்களுடன் கதறியபடியே வீழ்ந்த மனிதர்களில் முதன்மையானவர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் உடல்கள் ஆகியவை ஒன்றாகக் கலந்து பூமியெங்கும் பரவிக்கிடந்தன.(109) ஆயிரக்கணக்கான மனிதர்கள் உயிரையிழந்து கீழே விழுந்தபோது, எண்ணற்ற தலையற்ற முண்டங்கள் எழுந்து நின்று மறுபடியும் கீழே விழுந்தன.(110)

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அஸ்வத்தாமன், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், ஆயுதங்களைப் பிடித்திருந்தவையுமான கரங்களையும், தலைகளையும், யானையின் துதிக்கைகளுக்கு ஒப்பான தொடைகளையும், கைகளையும், கால்களையும் வெட்டினான்.(111) துரோணரின் சிறப்புமிக்க மகன் சிலரின் முதுகுகளைச் சிதைத்து, சிலரின் தலைகளை அறுத்து, சிலரைப் போரில் இருந்து புறமுதுகிட்டு ஓடும்படியும் செய்தான்.(112) அவன் சிலரின் உடல்களையும், வேறு சிலரின் காதுகளையும், சிலரின் தோள்களையும் வெட்டி, சிலரின் தலைகளை அவர்களது உடல்களுக்குள் நசுக்கினான்.(113) அஸ்வத்தாமன் இவ்வழியில் ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கொன்று திரிந்து கொண்டிருந்தபோது நேர்ந்த இருளின் விளைவால் அந்த ஆழ்ந்த இரவு பயங்கரத்தை அடைந்தது.(114) இறந்தும், சாகக்கிடந்துமிருந்த ஆயிரக்கணக்கான மனிதர்கள், எண்ணற்ற குதிரைகள் மற்றும் யானைகளுடன் பூமியானது காணப் பயங்கரமானதாக இருந்தது.(115)

சினகொண்ட துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} வெட்டப்பட்ட அவனது எதிரிகள் விழுந்ததும் அந்தப் பூமியானது, யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களின் கூட்டத்தால் அடையப்பட்டு, (முறிந்த) தேர்கள், கொல்லப்பட்ட குதிரைகள் மற்றும் யானைகளுடன் சேர்ந்து அச்சம் நிறைந்ததாகத் தெரிந்தது.(116) {அவ்வாறு வீழும்போது} சிலர் தங்கள் சகோதரர்களையும், சிலர் தங்கள் தந்தைமாரையும், சிலர் தங்கள் மகன்களையும் அழைத்தனர். சிலர், “சினங்கொண்ட தார்தராஷ்டிரர்களால் போரில் இத்தகு அருஞ்செயல்களைச் செய்ய முடியாது. உறங்கும் நேரத்தில் அடையப்படும் இத்தீச்செயல்கள் ராட்சசர்களின் வேலையே. பார்த்தர்கள் இல்லாததன் விளைவாலேயே இந்தப் பெரும் படுகொலை நடந்து கொண்டிருக்கிறது.(117,118) ஜனார்த்தனனைத் {கிருஷ்ணனைத்} தன் பாதுகாவலனாகக் கொண்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தேவர்களாலும், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களாலும் வெல்லப்பட முடியாதவனாவான்.(119) பிரம்மத்துக்கு அர்ப்பணிப்புடனும், உண்மை நிறைந்த பேச்சுடனும், தன்னடக்கத்துடனும், அனைத்துயிர்களிடமும் கருணையுடனும் இருக்கும் பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, உறங்கிக் கொண்டிருப்பவர்களையோ, கவனமில்லாமல் இருப்பவனையோ, தன் ஆயுதங்களை வைத்துவிட்டவனையோ, கூப்பிய கரங்களுடன் சரணடைந்தவனையோ, பின்வாங்கிச் செல்பவனையோ, கேசம் கலைந்தவனையோ ஒருபோதும் கொல்ல மாட்டான்.(120) ஐயோ, நம்மீது இத்தகு கொடூரத்தை இழைப்பவர்கள் தீச்செயல்களைச் செய்யும் ராட்சசர்களே” என்று சொன்னார்கள். இத்தகு வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே பலர் கீழே விழுந்தனர்.(121)

மனிதர்களின் கதறல்களாலும், அழுகைகளாலும் எழுந்த உரத்த ஆரவராம் ஒரு குறுகிய காலத்திற்குள்ளாகவே அடங்கியது.(122) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருதியால் பூமி நனைந்ததால், அச்சந்தரும்வகையில் அடர்த்தியாக எழுந்த புழுதியானது விரைவில் மறைந்தது.(123) அஸ்வத்தாமன், உயிரினங்களைக் கொல்லும் ருத்திரனைப் போலவே, வலியுடனும், வேதனை மற்றும் துயரத்தில் மூழ்கியும் நகர்ந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கொன்றான்.(124) கட்டிப்பிடித்துக் கொண்டே கீழே விழுந்த பலரும், தப்பி ஓட முயன்ற பலரும், ஒளிந்து கொள்ள முயன்ற பலரும், போரில் போராடிக் கொண்டிருந்த பலரும் என அனைவரும் துரோணரின் மகனால் கொல்லப்பட்டனர்.(125) எரியும் தழல்களில் எரிந்தும், அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டும், மனிதர்கள் தங்கள் புலனுணர்வுகளை இழந்து ஒருவரையொருவர் கொன்றனர்.(126) ஓ! ஏகாதிபதி, பாதி இரவு முடிவதற்குள்ளாகவே, அந்தத் துரோணரின் மகன், பாண்டவர்களின் பெரும்படையை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(127) மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளுக்கு அழிவைத் தந்த அந்தப் பயங்கரமான இரவில், இருளில் உலவும் உயிரினங்கள் அனைத்தும் மகிழ்ச்சியில் நிறைந்தன.(128)

ராட்சசர்கள் மற்றும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த பிசாசங்கள் ஆகியோர், தரையில் கிடந்த மனித இறைச்சியைக் கடித்து, குருதியைக் குடித்தனர்.(129) அவர்கள் கடுமையானவர்களாகவும், பழுப்பு நிறத்தவர்களாகவும், பயங்கரமானவர்களாகவும், வஜ்ரம் போன்ற பற்களைக் கொண்டவர்களாகவும், குருதியால் நனைந்தவர்களாகவும் இருந்தனர். தலைகள் சடாமுடி தரித்துக் கொண்டு, நீண்ட பருத்த தொடைகளுடனும், ஐந்து கால்களுடன் கூடியவர்களுமாக இருந்த அவர்களின் வயிறுகள் பெரியனவாக இருந்தன.(130) அவர்களின் விரல்கள் பின்புறத்தில் இருந்தன. கடுங்குணமும், கோரத் தன்மைகளையும் கொண்ட அவர்களின் உரத்த குரல் பயங்கரமானதாக இருந்தது. அவர்கள் தங்கள் உடல்களில் கிங்கிணி மணிகளை வரிசையாகக் கட்டியிருந்தனர். நீலத் தொண்டைகளைக் கொண்டிருந்த அவர்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துபவர்களாக இருந்தனர்.(131) மிகவும் கொடூரமானவர்களும், அச்சமடையாமல் பார்க்க இயலாதவர்களும், எதிலும் வெறுப்படையாதவர்களுமான அவர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் மனைவியருடன் அங்கே வந்தனர். உண்மையில் அங்கே காணப்பட்ட ராட்சசர்கள் பல்வேறு வடிவங்களில் இருந்தனர்.(132)

ஓடையாக ஓடிக் கொண்டிருந்த குருதியைக் குடித்த அவர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து தனித்தனி கூட்டங்களாக ஆடத் தொடங்கினர். “இஃது அருமையாக இருக்கிறது”, “இது தூய்மையாக இருக்கிறது”, “இது மிக இனிமையாக இருக்கிறது” என்ற வார்த்தைகளையே அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர்.(133) விலங்குணவை உண்டு வாழும் பிற ஊனுண்ணிகளும், கொழுப்பு, மஜ்ஜை, எலும்புகள் ஆகியவற்றை ருசித்து, சடலங்களில் உள்ள இனிமையான பகுதிகளை உண்ணத் தொடங்கின.(134) வேறு சிலர், ஓடையாகப் பாய்ந்து கொண்டிருந்த கொழிப்பைக் குடித்து, களத்தில் நிர்வாணமாக ஓடிக் கொண்டிருந்தனர். பல்வேறு வகை முகங்களைக் கொண்டவர்களும், பெரும் மூர்க்கம் கொண்டவர்களும், இறந்தவற்றின் இறைச்சியை உண்டு வாழ்பவர்களுமான வேறு ஊனுண்ணிகளும்,(135) அங்கே ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் வந்தனர். கோரமானவர்களும், தீச்செயல்களைச் செய்பவர்களுமான பெரும் ராட்சசர்கள் எண்ணற்ற கூட்டங்களாக அங்கே வந்தனர்.(136) ஓ! மன்னா, அந்தப் பயங்கரப் பேரழிவுக்கு மத்தியில் காணப்பட்ட வேறு வகைப் பூதங்களும், அங்கே வந்து, மகிழ்ச்சியால் நிறைந்து, மனநிறைவுடன் உண்டனர்.(137)

காலை விடிந்ததும் அஸ்வத்தாமன் அம்முகாமைவிட்ட அகல விரும்பினான்.(138) அவன் மனித இரத்தத்தில் குளித்திருந்தான், அவனது கரமும், வாளும் ஒன்றானது போல, அந்த வாளின் கைப்பிடி அவனது பிடியில் உறுதியாக இருந்தது.(139) (நல்ல போர்வீரர்களால்) ஒரு போதும் நடக்கப்படாத பாதையில் நடந்து சென்ற அஸ்வத்தாமன், அந்தப் படுகொலைக்குப் பிறகு, யுகத்தின் முடிவில் அனைத்து உயிரினங்களையும் சாம்பலாய் எரித்த சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிந்தான்.(140) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தத் துரோணரின் மகன், நடக்கப்படாத வழியில் நடந்து, தன் நோன்புக்கு ஏற்புடைய சாதனையைச் செய்து, தன் தந்தையின் படுகொலையால் ஏற்பட்ட துயரை மறந்தான்.(141) துரோணரின் மகன் அந்த இரவில் உள்ளே நுழைந்த போது, உறக்கத்தில் அனைவரும் புதைந்திருந்ததன் விளைவால் பாண்டவ முகாமானது முற்றிலும் அசைவற்றதாக இருந்தது. இந்த இரவு படுகொலைக்குப்பின்னர், மீண்டும் அனைவரும் அமைதியடைந்ததும் அஸ்வத்தாமன் அங்கிருந்து வெளியே வந்தான்.(142) ஓ! மன்னா, முகாமில் இருந்து வெளியே வந்த வீர அஸ்வத்தாமன், தன் இரு தோழர்களையும் சந்தித்து, தன் சாதனையின் செய்தியைச் சொல்லி அவர்களை மகிழ்ச்சி கொள்ளச் செய்தான்.(143) அவனது நன்மையில் அர்ப்பணிப்புடன் கூடிய அவ்விருவரும், (வாயிலில்) பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும் அவர்கள் எவ்வாறு கொன்றார்கள் என்ற இனிய செய்தியை அவனிடம் சொன்னார்கள்.(144) இவ்வாறே அவ்விரவானது கவனமற்று, உறக்கத்தில் புதைந்திருந்த சோமகர்களுக்குப் பயங்கர அழிவைத் தந்தது.(145) காலத்தின் வழியானது தடுக்கப்படமுடியாதது என்பதில் ஐயமில்லை. நம்மை அழித்தவர்கள், இப்போது தாங்களே அழிந்து போனார்கள்” {என்றான் சஞ்சயன்}.(146)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, துரியோதனனுக்கு வெற்றியைத் தேடித்தர உறுதி கொண்டிருந்தாலும், இத்தகு சாதனையை ஏன் அவன் முன்பே அடையவில்லை?(147) அந்தப் பெரும் வில்லாளி {அஸ்வத்தாமன்} எக்காரணத்தினால் துரியோதனன் இறந்தபிறகு இந்தப் படுகொலையை நிகழ்த்தினான். இவற்றை எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்” என்று கேட்டான்.(148)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! குருகுலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, பார்த்தர்கள் மீது கொண்ட அச்சத்தினால், அஸ்வத்தாமன் அத்தகு சாதனையைச் செய்யவில்லை. பார்த்தர்களும், புத்திசாலியான கேசவனும் {கிருஷ்ணனும்}, சாத்யகியும் இல்லாததனாலேயே துரோணரின் மகனால் அச்சாதனையைச் செய்ய முடிந்தது.(149) அவ்வீரர்கள் இருக்கும்போது, தலைவன் இந்திரனைத் தவிர அவர்களைக் கொல்லத்தகுந்தவன் வேறு எவன் இருக்கிறான்?[1] ஓ! மன்னா, மேலும் அம்மனிதர்க்ள அனைவரும் உறக்கத்தில் இருந்ததால் மட்டுமே அஸ்வத்தாமனால் அச்சாதனையைச் செய்ய முடிந்தது.(150) பாண்டவப் படைக்குப் பேரழிவை ஏற்படுத்திய அம்மூன்று வீரர்களும் (அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர்) ஒன்றாகச் சந்தித்து, “நற்பேறு பெறுவோம்” என்று சொன்னார்கள்.(151) அவ்விரு தோழர்களும் அஸ்வத்தாமனை வாழ்த்தி அவனை ஆரத்தழுவிக் கொண்டனர். அப்போது பெருமகிழ்ச்சியடைந்த அவன் {அஸ்வத்தாமன்}, இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(152) “பாஞ்சாலர்கள் அனைவரும், திரௌபதியின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். சோமகர்களும், எஞ்சியிருந்த மத்ஸ்யர்கள் அனைவரும் என்னால் கொல்லப்பட்டனர்.(153) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட நாம் தாமதமில்லாமல் மன்னனிடம் {துரியோதனனிடம்} செல்வோமாக. மன்னன் இன்னும் உயிரோடு இருந்தால் அவனுக்கு இந்த மகிழ்ச்சி நிறைந்த செய்தியைச் சொல்வோம்” {என்று சொன்னான் அஸ்வத்தாமன்}”.(154)

மாண்டான் துரியோதனன்! – சௌப்திக பர்வம் பகுதி – 09-கௌரவர்களில் எஞ்சியிருந்தவர்களான மூன்று வீரர்களும் துரியோதனனிடம் சென்று, அவன் உயிரோடிருப்பதைக் காண்பது; குரு மன்னனின் பரிதாபகரமான நிலை; மூன்று வீரர்களின் புலம்பல்; கிருபரின் புலம்பல்; பாண்டவப்படைக்குச் செய்த பேரழிவைத் துரியோதனனிடம் சொன்ன அஸ்வத்தாமன்; செய்தியைக் கேட்டு மனநிறைவு கொண்ட துரியோதனன்; துரியோதனனின் மரணம்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாஞ்சாலர்களையும், திரௌபதியின் மகன்களையும் கொன்றபிறகு, எதிரியால் தாக்கி வீழ்த்தப்பட்டுத் துரியோதனன் கிடக்கும் இடத்திற்கு அந்தக் குரு வீரர்கள் மூவரும் சென்றனர்.(1) அங்கே வந்த அவர்கள், குற்றுயிராகக் கிடக்கும் மன்னனைக் {துரியோதனனைக்} கண்டனர். அவர்கள், தங்கள் தேர்களில் இருந்து குதித்து, உமது மகனைச் சூழ்ந்து கொண்டனர்.(2) ஓ! ஏகாதிபதி, குரு மன்னன் {துரியோதனன்} அங்கே முறிந்த தொடைகளுடன் கிடந்தான். கிட்டத்தட்ட உணர்விழந்த நிலையில், உயிர் போகும் தருவாயில் அவன் கிடந்தான். கீழே பார்த்த விழிகளுடன் அவன் அடிக்கடி இரத்தம் கக்கிக் கொண்டிருந்தான்.(3) அப்போது அவன் {துரியோதனன்}, பயங்கர வடிவிலான ஊனுண்ணும் விலங்குகளால் சூழப்பட்டிருந்தான், ஓநாய்கள், கழுதைப்புலிகள் ஆகியன அவனது உடலை உண்பதற்காக நெடுந்தொலைவில்லில்லாமல் அருகிலேயே காத்திருந்தன.(4) அம்மன்னன், தன்னை உண்ணும் எதிர்பார்ப்பில் நிற்கும் அந்த ஊனுண்ணும் விலங்குகளைப் பெரும் சிரமத்துடன் தடுத்துக் கொண்டிருந்தான். அவன் பெரும் வேதனையுடன் பூமியில் கிடந்து துடித்துக் கொண்டிருந்தான்.(5)

அவனது {துரியோதனது} படையில் எஞ்சியிருப்பவர்களான அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகிய மூன்று வீரர்களும், தன்குருதியிலேயே குளித்து இவ்வாறு பூமியில் கிடக்கும் அவனைக் கண்டு துன்பத்தால் பீடிக்கப்பட்டு, அவனைச் சுற்றி அமர்ந்தார்கள்.(6) குருதியில் நனைந்து, வெப்பப் பெருமூச்சுகளை விட்டுக் கொண்டிருந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் சூழப்பட்ட குரு மன்னன் {துரியோதனன்}, மூன்று நெருப்புகளால் சூழப்பட்ட வேள்விப்பீடத்தைப் போலவே தெரிந்தான்.(7) அந்த மூன்று வீரர்களும், முற்றிலும் தகாத அவலநிலையில் கிடக்கும் மன்னனைக் கண்டு, தாங்கிக் கொள்ள முடியாத சோகத்தில் அழுதனர்.(8) அவனது முகத்திலிருந்த குருதியைத் தங்கள் கரங்களால் துடைத்த அவர்கள், போர்க்களத்தில் கிடக்கும் மன்னன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இந்தப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டனர்.(9)

கிருபர், “பதினோரு {11} அக்ஷௌஹிணிகளின் தலைவனான இந்த மன்னன் துரியோதனன், எதிரியால் தாக்கி வீழ்த்தப்பட்டு, குருதியால் மறைக்கப்பட்டு வெறுந்தரையில் உறங்குவதால், விதியினால் எதையும் கொண்டு வர முடியும் என்பது தெரிகிறது.(10) பசும்பொன்னின் காந்தியைக் கொண்டதும், இம்மன்னனுக்குப் பிடித்தமானதும், பசும்பொன்னாலேயே அலங்கரிக்கப்பட்டதுமான இவனது கதாயுதம் இவன் அருகிலேயே கிடப்பதைப் பாருங்கள்.(11) எந்தப் போரிலும் இந்தக் கதாயுதம் இந்த வீரனைக் கைவிடவில்லை. இப்போதும், இந்தச் சிறப்புமிக்கப் போர்வீரன் சொர்க்கத்திற்குச் செல்ல இருக்கும் இத்தருணத்திலும் இந்தக் கதாயுதம் இவனை விடவில்லை.(12) பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்ட இவ்வாயுதம், படுக்கையறையில் தன் தலைவனின் அருகில் கிடக்கும் காதல் மனைவியைப் போலவே இந்த வீரனின் அருகில் கிடப்பதைப் பாருங்கள்.(13) காலம் கொண்டு வந்த இந்த மாற்றங்களைப் பாருங்கள். எதிரிகளை எரிப்பவனும், மகுடம் தரித்த மன்னர்கள் அனைவரின் தலையிலும் நடப்பவனுமான இவன், (எதிரியால்) வீழ்த்தப்பட்டு, இப்போது புழுதியை உண்டு கொண்டிருக்கிறான்.(14) எவன் முன்பு எதிரிகள் பலரைத் தாக்கி வீழ்த்தி, வெறுந்தரையில் கிடக்கச் செய்தானோ, அந்தக் குருக்களின் மன்னன் இன்று எதிரிகளால் தாக்கி வீழ்த்தப்பட்டு வெறுந்தரையில் கிடக்கிறான்.(15) நூற்றுக்கணக்கான மன்னர்கள், எவனுக்கு அஞ்சிப் பணிவார்களோ, அவன் இன்று இரைதேடும் விலங்குகளால் சூழப்பட்டுப் போர்க்களத்தில் கிடக்கிறான்.(16) முன்பு பிராமணர்கள் எவனிடம் காத்திருந்தார்களோ {பணிவிடை செய்தார்களோ}, ஐயோ, இன்று அந்தச் செல்வத்தலைவனின் உடலை உண்பதற்காக இரைதேடும் விலங்குகள் இவனுக்காகக் காத்திருக்கின்றன” என்றார்”.(17)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொட்ரந்தான், “ஓ! பாரதர்களில் சிறந்தவரே, அந்தக் குருகுலத் தலைவன் {துரியோதனன்} தரையில் கிடப்பதைக் கண்ட அஸ்வத்தாமன், இந்தப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டான்:(18) “ஓ! மன்னர்களில் புலியே {துரியோதனனே}, மக்கள் அனைவரும் உன்னை வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவன் என்று சொன்னார்கள். அந்த மக்கள், (கதாயுதப் போரில்) சங்கர்ஷணரின் {பலராமரின்} சீடனான நீயே பொக்கிஷத் தலைவன் (குபேரன்) என்றும் சொன்னார்கள்.(19) ஓ! பாவமற்றவனே, பிறகு உன்னில் எந்தத் தாமதத்தையும் அந்தப் பீமனால் காண முடிந்தது எவ்வாறு? நீ எப்போதும் வலிமைமிக்கவனாகவும், திறம் கொண்டவனாகவும் இருந்தாய். ஓ! மன்னா, மறுபுறம் அவனோ {பீமனோ}, தீய ஆன்மா கொண்ட பொல்லாதவனாக இருந்தான்.(20)

ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அப்படிப்பட்ட நீயே போரில் பீமசேனனால் தாக்கி வீழ்த்தப்பட்டதை நாங்கள் காண்பதால், இவ்வுலகில் அனைத்தையும் விடக் காலமே வலிமைமிக்கது என்பதில் ஐயமில்லை.(21) ஐயோ, நீதியின் ஒவ்வொரு விதியையும் அறிந்தவனான உன்னை, இழிந்தவனும், தீயவனுமான விருகோதரனால் {பீமனால்} நியாயமற்ற வகையில் தாக்கி வீழ்த்த முடிந்தது எவ்வாறு? காலம் தடுக்கப்பட முடியாதது என்பதில் ஐயமில்லை.(22) ஐயோ, உன்னால் நியாயமான போருக்கு அழைக்கப்பட்ட பீமசேனன், தன் வலிமையை வெளிப்படுத்தி உன் தொடைகளை முறித்தான்.(23) போரில் நியாயமற்ற வகையில் தாக்கி வீழ்த்தி, காலால் தீண்டிய ஒருவனைப் பொறுத்துக் கொண்ட அந்த இழிந்த யுதிஷ்டிரனுக்கு ஐயோ.(24) உலகம் உள்ளவரையில், போர்கள் அனைத்திலும், விருகோதரனை {பீமனை} நிச்சயம் போர்வீரர்கள் நிந்திப்பார்கள். நீ நியாயமற்ற முறையில் தாக்கி வீழ்த்தப்பட்டாய் என்பதில் ஐயமில்லை.(25)

ஓ! மன்னா {துரியோதனா}, யதுகுலத்தின் வீரப் பலராமன், “கதாயுதப் போர்களில் துரியோதனனுக்கு இணையானவன் யாருமில்லை” என்று எப்போதும் சொல்வான்.(26) ஓ! பாரதா, அந்த விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தவன் {பலராமன்}, “குருகுலத்தின் துரியோதனன் எனக்குத் தகுந்த சீடனாவான்” என்று வழக்கமாகவே ஒவ்வொரு சபையிலும் பெருமை பேசுவான்.(27) பெரும் முனிவர்களால் சொல்லப்படுவதைப் போலப் போரில் எதிரியை முகத்துக்கு நேராகச் சந்தித்து உயர்ந்த வெகுமதியை நீ அடைந்திருக்கிறாய்.(28) ஓ! மனிதர்களில் காளையே, ஓ! துரியோதனா, நான் உனக்காக வருந்தவில்லை. உன் தாயான காந்தாரி மற்றும் உனது தந்தை {திருதராஷ்டிரர்} ஆகியோர் பிள்ளைகளற்றவர்களாகிவிட்டனரே என்றே இப்போது வருந்துகிறேன்.(29) அவர்கள், சோகத்தால் பீடிக்கப்பட்ட நிலையில் தங்கள் உணவுக்காகப் பூமியெங்கும் திரியப் போகிறார்கள். விருஷ்ணி குலத்தின் கிருஷ்ணனுக்கும், தீய புரிதல் {துர்ப்புத்தி} கொண்ட அர்ஜுனனுக்கு ஐயோ.(30) அவர்கள் தங்களை அறநெறிகளின் கடமைகளை அறிந்தவர்கள் என்று கருதிக் கொண்டாலும், நீ கொல்லப்பட்டபோது அலட்சியமாகவே நின்றார்கள். ஓ! மன்னா, வெட்கமற்றவர்களாகவே இருந்தாலும் பிற பாண்டவர்களும், உன்னைக் கொன்ற முறையைக் குறித்து எவ்வாறு பேசப் போகிறார்கள்?(31)

ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனனே}, ஓ! மனிதர்களில் காளையே, எதிரியை முறையாக எதிர்த்துப் போர்க்களத்தில் கொல்லப்பட்டதால் நீ உயர்ந்த நற்பேற்றையே அடைவாய்.(32) ஐயோ, இப்போது பிள்ளைகளை இழந்தவளும், தன் சொந்தங்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் இழந்தவளுமான காந்தாரி அடையப்போகும் அவல நிலை என்னவாக இருக்கும்? பார்வையற்ற மன்னன் {திருதராஷ்டிரன்} அடையப்போகும் அவல நிலையும் என்னவாக இருக்கும்?(33) அரசனான உன்னை முன்னிட்டுக் கொண்டு சொர்க்கத்தை அடையாமல் இருக்கும் கிருதவர்மன், நான் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரரான கிருபர் ஆகிய எங்களுக்கு ஐயோ.(34) விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவனும், மனிதர்கள் அனைவரின் பாதுகாவலனும், குடிமக்கள் அனைவருக்கும் நன்மை செய்பவனுமான உன்னைப் பின்தொடராமல் இருக்கும் இழிந்த மனிதர்களான எங்களுக்கு ஐயோ.(35)

ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனனே}, கிருபரின் வசிப்பிடம், என் வசிப்பிடம் மற்றும் என் தந்தையின் வசிப்பிடம் ஆகியவையும், நம்மைச் சார்ந்திருப்பவர்களின் வசிப்பிடங்களும் உன் அதிகாரத்தாலேயே செல்வத்தால் நிறைந்திருந்தன.(36) உன் அருளால் நாங்களும், எங்கள் நண்பர்களும், உறவினர்களும், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளைக் கொடுத்து முதன்மையான வேள்விகள் பலவற்றைச் செய்தோம்.(37) பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு நீ சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டால், இத்தகு பாவிகளான நாங்கள் எங்கே செல்வோம்?(38) ஓ! மன்னா, (வாழ்வின்) உயர்ந்த எல்லையை அடையப்போகும் உன்னை நாங்கள் மூவரும் பின்தொடராததால், இத்தகு புலம்பல்களிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கப் போகிறோம்.(29) உன்னோடு நாங்கள் வராததால், உன் தோழமையை இழந்து, செல்வமற்று, உன் செழிப்பில் வலியுடன் வசிக்கப்போகும் நாங்கள் அடையப்போகும் கதிதான் என்ன?(40)

ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, நாங்கள் இவ்வுலகத்தில் துயரத்துடன் திரியப் போகிறோம் என்பதில் ஐயமில்லை. ஓ! மன்னா, உன்னை இழந்து நாங்கள் அமைதியை எங்கே அடைவோம்? மகிழ்ச்சியை எங்கே அடைவோம்?(41) ஓ! ஏகாதிபதி, இவ்வுலகில் இருந்து சென்று, (உனக்கு முன்பு அங்கே சென்றிருக்கும்) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களைச் சந்தித்து, என் வேண்டுகோளுக்கிணங்க, அவர்களின் வயதின் அடிப்படையிலும், பதவியின் அடிப்படையிலும் ஒருவர்பின் ஒருவராக உன் மரியாதையைச் செலுத்துவாயாக.(42) ஓ! மன்னா {துரியோதனா}, விற்களைத் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான உன் ஆசானை {துரோணரை} வழிபட்டபிறகு, திருஷ்டத்யும்னன் என்னால் கொல்லப்பட்டான் என்பதை அவரிடம் சொல்வாயாக.(43) உனக்கு முன்னே சொர்க்கத்திற்குச் சென்றிருப்பவர்களான வலிமைமிக்கத் தேர்வீரரும், மன்னருமான பாஹ்லீகரையும், சிந்துக்களின் ஆட்சியாளனையும் {ஜெயத்ரதனையும்}, சோமதத்தன் மற்றும் பூரிஸ்ரவஸையும்,(44) இன்னும் பிற முதன்மையான மன்னர்களையும் ஆரத்தழுவிக் கொள்வாயாக. என் வேண்டுகளோளுக்கிணங்க அவர்கள் அனைவரையும் ஆரத்தழுவி, அவர்களது நலத்தை விசாரிப்பாயாக” என்றான் {அஸ்வத்தாமன்}”.(45)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அந்த அஸ்வத்தாமன், உணர்வுகளை இழந்தவனாக, முறிந்த தொடைகளுடன் கிடந்த மன்னனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொல்லி, மீண்டும் தன் கண்களை அவன் மீது செலுத்தி, அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(46) “ஓ! துரியோதனா, உன்னில் இன்னும் உயிரானது இருக்குமானால், கேட்பதற்கு இனிய இவ்வார்த்தைகளைக் கேட்பாயாக. பாண்டவர்களின் தரப்பில் எழுவர் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர், தார்தராஷ்டரர்களில் நாங்கள் மூவர் மட்டுமே {உயிருடன் இருக்கிறோம்}.(47) ஐந்து சகோதரர்கள் {பாண்டவர்கள்}, வாசுதேவன் {கிருஷ்ணன்}, மற்றும் சாத்யகி ஆகியோரே அவர்களின் தரப்பில் இருக்கும் எழுவராவர். நம் தரப்பிலோ நான், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகிய மூவர் {எஞ்சியிருக்கிறோம்}.(48) திரௌபதியின் மகன்கள் அனைவரும், திருஷ்டத்யும்னனின் பிள்ளைகள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஓ! பாரதா, பாஞ்சாலர்கள் அனைவரும், எஞ்சியிருந்த மத்ஸ்யர்களும் கொல்லப்பட்டனர்.(49) அவர்கள் என்ன செய்தார்களோ, அந்தப் பழிக்குப்பழியைப் பார். பாண்டவர்கள் இப்போது பிள்ளைகளற்றவர்களா இருக்கின்றனர். அவர்களது முகாமில் உறக்கத்தில் புதைந்திருந்த மனிதர்கள் அனைவரும், விலங்குகள் அனைத்தும் கொல்லப்பட்டன.(50) ஓ! மன்னா, அவர்களது முகாமுக்குள் இரவில் ஊடுருவிய நான் பாவம்நிறைந்த செயல்களைச் செய்யும் பொல்லாதவனான திருஷ்டத்யும்னனை விலங்குகளைக் கொல்வதைப் போலக் கொன்றேன்” {என்றான் அஸ்வத்தாமன்}.(51)

அப்போது துரியோதனன், தன் இதயத்துக்கு ஏற்புடைய அவ்வார்த்தைகளைக் கேட்டு, புலனுணர்வு மீண்டு, பதிலுரையாக இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(52) “கங்கையின் மைந்தனோ {பீஷ்மரோ}, கர்ணனோ, உமது தந்தையோ {துரோணரோ} அடையாத ஒன்று, இறுதியாகக் கிருபர் மற்றும் போஜனனின் {கிருதவர்மனின்} துணையுடன் கூடிய உம்மால் இன்று அடையப்பட்டது.(53) பாண்டவப் படைகளின் தலைவனான அந்த இழிந்தவனையும் (திருஷ்டத்யும்னனையும்}, சிகண்டியையும் நீர் கொன்றிருக்கிறீர். இதன் விளைவாக நான் என்னை மகவத்துக்கு {இந்திரனுக்கு} இணையானவனாகக் கருதுகிறேன்.(54) உங்கள் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும். செழிப்பு உங்களுடையதாகட்டும். நாம் அனைவரும் மீண்டும் சொர்க்கத்தில் சந்திப்போம்” {என்றான் துரியோதனன்}.

இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் குருக்களின் மன்னன் {துரியோதனன்} அமைதியடைந்தான்.(55) (கொல்லப்பட்ட) தன் சொந்தங்கள் அனைவருக்குமான தன் துயரங்கள் அனைத்தையும் கைவிட்டு, அவன் {துரியோதனன்} தன் உயிர் மூச்சை விட்டான். அவனது உடல் மட்டுமே பூமியில் கிடந்தபோது, அவனது ஆன்மாவோ புனிதமான சொர்க்கத்திற்கு உயர்ந்து சென்றது.(56) ஓ! மன்னா, இவ்வாறே உமது மகன் துரியோதனன் தன் இறுதி மூச்சை சுவாசித்தான். போரை முதலில் துண்டியவனான அவன், தன் எதிரிகளால் இறுதியாகக் கொல்லப்பட்டான்.(57) அந்த மூன்று வீரர்களும் மன்னனை மீண்டும் மீண்டும் ஆரத்தழுவி கொண்டு அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறகு அவர்கள் தங்கள் தேர்களில் ஏறினர்.(58)

துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} இந்தப் பரிதாபகரமான புலம்பல்களைக் கேட்ட பிறகே, விடியற்காலையில் நான் நகரத்தை நோக்கிப் புறப்பட்டு வந்தேன்.(59) இவ்வாறே குருக்கள் மற்றும் பாண்டவர்களின் படைகள் அழிக்கப்பட்டன. ஓ! மன்னா, உமது தீய கொள்கையினால் ஏற்பட்ட அழிவு பெரிதானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது.(60) உமது மகன் சொர்க்கத்திற்கு உயர்ந்த பிறகு, நான் துயரத்தால் பீடிக்கப்பட்டேன், மேலும் முனிவர் {வியாசர்} கொடுத்த ஆன்மப் பார்வையையும் இழந்தேன்” {என்றான் சஞ்சயன்}”.(61)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மன்னன் {திருதராஷ்டிரன்}, தன் மகன் {துரியோதனன்} இறந்ததைக் கேட்டு, வெப்பப் பெருமூச்சுகளை விட்டுக்கொண்டு, பெரும் சோகத்தில் மூழ்கினான்”[1].(62)

சௌப்திக உபபர்வம் முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் -சல்லிய பர்வம்-ஹிரதப் பிரவேச பர்வம்-கதா யுத்த பர்வம்-

October 15, 2025

தடாகத்திற்குள் நுழைந்த துரியோதனன்! – சல்லிய பர்வம் பகுதி – 29-(சம்ஸ்க்ருதத்தில் ஹ்ரதம் என்றால் பெரிய நீர்நிலை என்ற பொருளாம். எனவே, தடாகநுழைவு என்று இந்த உபபர்வத்திற்குப் பொருள் கொள்ளலாம்.)தன் படையைத் தூண்டிய துரியோதனன்; எஞ்சியிருந்த கௌரவர்களை அழித்த பாண்டவர்கள்; பாண்டவர்களிடம் எஞ்சியிருந்த துருப்புகளின் எண்ணிக்கை; சஞ்சயனைக் கொல்ல எத்தனித்த சாத்யகி; சாத்யகியைத் தடுத்த வியாசர்; துரியோதனனைக் கண்ட சஞ்சயன்; தடாகத்தில் நுழைந்த துரியோதனன்; அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மனைச் சந்தித்த சஞ்சயன்; கௌரவர்களுக்கு ஏற்பட்ட அழிவைக்கேட்டு முகாமில் இருந்த அரசகுடும்பத்து மகளிர் நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது; யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு ஹஸ்தினாபுரம் சென்ற யுயுத்சு; விதுரனைச் சந்தித்த யுயுத்சு; யுயுத்சுவின் அமைதியின்மை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதன்பிறகு, ஓ! ஏகாதிபதி, சுபலன் மகனின் {சகுனியின்} தொண்டர்கள் சினத்தால் நிறைந்தனர். அந்தப் பயங்கரப் போரில் அவர்கள், தங்கள் உயிர்களையும் விட ஆயத்தமாகி, பாண்டவர்களைத் தடுக்கத் தொடங்கினர்.(1) சகாதேவனின் வெற்றிக்குத் துணை சேர்க்க விரும்பிய அர்ஜுனனும், பெரும் சக்தி கொண்ட பீமசேனனும், கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புக்கு ஒப்பாக அந்தப் போர்வீரர்களை வரவேற்க {எதிர்க்கத்} தொடங்கினர்.(2) தனஞ்சயன் {அர்ஜுனன்}, சகாதேவனைக் கொல்ல விரும்பியவர்களும், ஈட்டிகள், வாள்கள் வேல்கள் ஆகியவற்றைத் தரித்திருந்தவர்களுமான அந்தப் போர்வீரர்களின் நோக்கத்தைத் தன் காண்டீவத்தால் கலங்கடித்தான்.(3) அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, கையில் ஆயுதங்களுடன் விரைந்து வந்த அந்தப் போராளிகளின் குதிரைகளையும், கரங்களையும், சிரங்களையும் தன் அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} வெட்டி வீழ்த்தினான்.(4) பெரும் சுறுசுறுப்புடைய அந்த வீரர்களின் குதிரைகள் சவ்யசச்சினால்{அர்ஜுனனால்} தாக்கப்பட்டுப் பூமியில் விழுந்து தங்கள் உயிரை விட்டன.(5)தன் துருப்புகளின் பேரழிவைக் கண்ட மன்னன் துரியோதனன், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்தவனானான். இன்னும் பல நூறுகளாக இருந்த அவனது எஞ்சிய தேர்களையும்,(6) மேலும் தன் யானைகள், குதிரைகள் மற்றும் காலாட்களையும் ஒன்றாகத் திரட்டிய உமது மகன் {துரியோதனன்}, அந்தப் போர்வீரர்களிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(7) “நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் கூடிய பாண்டவர்கள் அனைவரோடும், தன் துருப்புகளுடன் கூடிய பாஞ்சால இளவரசனோடும் {திருஷ்டத்யும்னனோடும்} மோதி வேகமாக அவர்களைக் கொன்றுவிட்டுப் போரில் இருந்து திரும்புவீராக” என்றான்.(8) அவனது ஆணையை மரியாதையுடன் ஏற்றுக் கொண்டவர்களும், போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களுமான அந்தப் போர்வீரர்கள், உமது மகனுடைய ஆணையின் பேரில் அந்தப் போரில் பார்த்தர்களை எதிர்த்து மீண்டும் சென்றனர்.(9) எனினும், பாண்டவர்கள், கௌரவப்படையில் எஞ்சியிருப்பவர்களும், அந்தப் பயங்கரப் போரில் தங்களை எதிர்த்து இவ்வாறு வேகமாக விரைந்து வந்தவர்களுமான அந்தப் போர்வீரர்களை, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தங்கள் கணைகளால் மறைத்தனர்.(10)

போரிட வந்த அந்தப் படையினர், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, ஒரு பாதுகாவலனை அடையத் தவறியவர்களாக, அந்த உயர் ஆன்மப் போர்வீரர்களால் ஒரு கணத்தில் அழிக்கப்பட்டனர்.(11) அந்தப் படையால் எழுப்பப்பட்ட புழுதியுடன், (கௌரவக்) குதிரைகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்ததன் விளைவால், முக்கிய மற்றும் துணைத் திசைகளுக்கிடையில் வேறுபாட்டைக் காண முடியவில்லை.(12) பாண்டவ வியூகத்தில் இருந்து வெளியே வந்த பல போர்வீரர்கள், ஓ! பாரதரே, அந்தப் போரில் ஒரு கணத்தில் உமது துருப்பினரைக் கொன்றனர்.(13) ஓ! பாரதரே, உமது மகனால் {துரியோதனனால்} பதினோரு  {11} அக்ஷௌஹிணி துருப்புகள் திரட்டப்பட்டிருந்தன. ஓ! தலைவா, அவையனைத்தும் பாண்டுக்களாலும், சிருஞ்சயர்களாலும் கொல்லப்பட்டன.(14) உமது தரப்பைச் சேர்ந்த பல்லாயிரம் உயர் ஆன்ம மன்னர்களில், ஓ! ஏகாதிபதி, இப்போது துரியோதனன் மட்டுமே அதிகக் காயங்களுடன் உயிரோடு காணப்பட்டான்.(15)

துரியோதனன், அனைத்துப் பக்கங்களிலும் தன் கண்களைச் சுழலவிட்டு, பூமி வெறுமையாக இருப்பதையும், துருப்புகள் அனைத்தையும் தான் இழந்து நிற்பதையும், அதே வேளையில், பாண்டவர்கள் தங்கள் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறியதன் விளைவால் உரக்க முழங்கிக் கொண்டு அந்தப் போரில் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதையும் கண்டு, ஓ! ஏகாதிபதி, அந்த உயர் ஆன்மப் போர்வீரர்களால் ஏவப்பட்ட கணைகளின் விஸ் ஒலிகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் திகைத்து நின்றான். துருப்புகளையும், விலங்குகளையும் இழந்த அவன், தன் இதயத்தைக் களத்தில் இருந்து பின்வாங்குவதில் நிலைநிறுத்தினான்” {என்றான் சஞ்சயன்}.(16-18)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “என் துருப்புகள் கொல்லப்பட்டு, நமது முகாம் முற்றிலும் வெறுமையானபோது, ஓ! சூதா {சஞ்சயா}, பாண்டவர்களிடம் எஞ்சியிருந்து துருப்புகளின் பலம் என்ன? நான் இஃதை அறிய விரும்புகிறேன். எனவே, ஓ! சஞ்சயா, (உரைப்பதில்) திறன்மிக்கவனான நீ எனக்கு அதைச் சொல்வாயாக.(19) மேலும், ஓ! சஞ்சயா, பூமியின் தலைவனும், பலரில் எஞ்சியிருக்கும் ஒரே ஒருவனும், எனது மகனுமான அந்தத் தீயத் துரியோதனன், தன் படை அழிக்கப்பட்டபோது என்ன செய்தான் என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(20)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! ஏகாதிபதி, பாண்டவர்களின் வலிமைமிக்கப் படையில் எஞ்சியிருந்தது இரண்டாயிரம் {2000} தேர்களும், எழுநூறு {700} யானைகளும், ஐயாயிரம் {5000} குதிரைகளும், பத்தாயிரம் {10,000} காலாட்படை வீரர்களும் ஆகும். திருஷ்டத்யும்னன், இந்தப் படையைக் கவனித்துக் கொண்டு, அந்தப் போரில் காத்திருந்தான்.(21,22) அதேவேளையில், ஓ! பாரதர்களின் தலைவரே, தேர்வீரர்களில் முதன்மையானவனான மன்னன் துரியோதனனோ, எந்தவொரு போர்வீரனையும் தன் தரப்பில் காணவில்லை.(23) பூமியின் தலைவனான அந்தத் துரியோதனன், ஓ! ஏகாதிபதி, தன் எதிரிகள் உரக்க முழங்குவதையும, தன் படையின் அழிவையும் கண்டு, எந்தத் துணைவனும் இல்லாதவனாக, கொல்லப்பட்ட தன் குதிரையைக் கைவிட்டுவிட்டு, களத்தைவிட்டுக் கிழக்குத் திசையை நோக்கித் தப்பி ஓடினான்.(24) பதினோரு அக்ஷௌஹிணிகளின் தலைவனும், பெரும் சக்தி கொண்டவனுமான உமது மகன் துரியோதனன், தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு ஒரு தடாகத்தை நோக்கி காலாளாகத் தப்பி ஓடினான்.(25)

காலாளாக அதிகத் தொலைவைக் கடப்பதற்கு முன், அம்மன்னன் {துரியோதனன்}, புத்திசாலியும், அறவோனுமான விதுரனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.(26) ’பெரும் ஞானம் கொண்டவரான விதுரர், க்ஷத்திரியர்களுக்கும், நமக்கும் போரில் ஏற்படப்போகும் இந்தப் பேரழிவை முன்னறிந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை’(27) என்று நினைத்தவாறே, தன் படையின் அழிவைக் கண்டு துயரில் இதயம் எரிந்து கொண்டிருந்த அந்த மன்னன் {துரியோதனன்}, அத்தடாகத்தின் ஆழங்களுக்குள் ஊடுருவ விரும்பினான்.(28)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனைத் தங்கள் தலைமையில் கொண்ட பாண்டவர்கள், ஓ! மன்னா, சினத்தால் நிறைந்து, (எஞ்சியிருக்கும் மிகச்சிறிய) உமது படையை எதிர்த்து விரைந்தனர்.(29) தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் காண்டீவத்தைக் கொண்டு, ஈட்டிகள், வாள்கள், வேல்கள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு உரத்து முழங்கிக் கொண்டிருந்த (கௌரவத்) துருப்புகளின் நோக்கத்தைக் கலங்கடித்தான்.(30) தன் கூரிய கணைகளால் அந்தத் துருப்புகளையும், அதன் கூட்டாளிகளையும், சொந்தங்களையும் கொன்ற அர்ஜுனன், வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தன் தேரில் நின்று கொண்டிருந்தபோது, மிக அழகானவனாகத் தெரிந்தான்.(31) குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றோடு சுபலனின் மகனும் {சகுனியும்} வீழ்ந்த பிறகு, உமது படையானது, (காற்றால்) வீழ்த்தப்பட்ட பெரும் காட்டைப் போலத் தெரிந்தது.(32) லட்சக்கணக்கான போர்வீரர்கள் இருந்த அந்தத் துரியோதனனின் படையில், துரோணரின் வீரமகன் {அஸ்வத்தாமன்}, கிருதவர்மன், கௌதமரின் மகனான கிருபர் மற்றும் பூமியின் தலைவனான உமது மகன் {துரியோதனன்} ஆகியோரைத் தவிர மற்றொரு பெருந்தேர்வீரன் எவனையும் உயிரோடு காண முடியவில்லை.(34)

{சஞ்சயனான} என்னைக் கண்ட திருஷ்டத்யும்னன், சாத்யகியிடம் சிரித்துக் கொண்டே, “இவனைப் பிடித்து வைப்பதால் யாது பயன்? இவனை உயிரோடு வைத்திருப்பதால் எவ்வொன்றையும் ஈட்ட முடியாது” என்றான்.(35) திருஷ்டத்யும்னனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் தேர்வீரனுமான சிநியின் பேரன் {சாத்யகி}, தன் கூரிய வாளை உயர்த்திக் கொண்டு, என்னைக் கொல்ல ஆயத்தமானான்.(36) சரியாக அதே நேரத்தில், பெரும் ஞானியும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் (கருப்பு நிறம் கொண்ட வியாசர்), அங்கே வந்து “சஞ்சயன் உயிரோடு செல்லட்டும். எவ்வகையிலும் அவன் கொல்லப்படக்கூடாது” என்றார்.(37) அந்தத் தீவில் பிறந்தவரின் {துவைபாயனரின்} வார்த்தைகளைக் கேட்ட சிநியின் பேரன் {சாத்யகி}, தன் கரங்களைக் கூப்பிக் கொண்டு, என்னை விடுவித்துவிட்டு, “ஓ! சஞ்சயா, உனக்கு அமைதியுண்டாகட்டும், நீ எங்கும் செல்லலாம்” என்றான்.(38) அவனால் அனுமதிக்கப்பட்ட நான், என் கவசத்தைக் கழற்றிவிட்டு, என் ஆயுதங்களையும் கைவிட்டுவிட்டு, குருதியில் குளித்திருந்த என் அங்கங்களுடன், நகரத்தை நோக்கிச் செல்லும் சாலையில் மாலைவேளையில் புறப்பட்டேன்.(39)

இரண்டு மைல்கள் {ஒரு குரோசம்} தொலைவுக்கு வந்த பிறகு, ஓ! ஏகாதிபதி, கையில் கதாயுதத்துடனும், அதிகமாகச் சிதைக்கப்பட்ட உடலுடனும் தனியொருவனாக நிற்கும் துரியோதனனை நான் கண்டேன்.(40) அவனது கண்கள், கண்ணீரால் நிரம்பியிருந்ததால், அவனால் என்னைப் பார்க்க முடியவில்லை. நான் அவன் முன்னிலையில் உற்சாகமற்றவனாக நின்றிருந்தேன். அவனும் அதேபோலவே என்னை {இன்னாரென} அறிந்து கொள்ளாமலேயே பார்த்துக் கொண்டிருந்தான்.(41) களத்தில் தனியொருவனாக நின்று துயரப்பட்டுக் கொண்டிருக்கும் அவனைக் கண்டு, கவலையில் மூழ்கிய என்னால், சிறிது நேரத்திற்கு ஒரே ஒரு வார்த்தையைக் கூடப் பேச முடியவில்லை.(42) பிறகு, கைப்பற்றப்பட்டு, துவைபாயனரின் {வியாசரின்} அருளால் நான் விடுவிக்கப்பட்டது குறித்த அனைத்தையும் அவனிடம் சொன்னேன்.(43) ஒரு கணம் சிந்தித்த அவன் {துரியோதனன்}, தன் உணர்வுகள் மீண்டதும், அவனது சகோதரர்கள் மற்றும் அவனது துருப்புகளைக் குறித்து என்னிடம் விசாரித்தான்.(44) என் கண்களால் அனைத்தையும் நான் கண்டிருந்ததால், அவனது தம்பிமார் அனைவரும் கொல்லப்பட்டது, அவனது துருப்புகள் முற்றாக அழிக்கப்பட்டது என அனைத்தையும் அவனுக்குச் சொன்னேன்.(45) (பாண்டவர்கள் இருந்த இடத்தில் இருந்து) நான் புறப்பட்டபோது, துவைபாயனர் {வியாசர்} என்னிடம் சொன்னது போலவே, அந்நேரத்தில் எங்களில் மூன்று தேர்வீரர்கள் மட்டுமே உயிரோடு இருப்பதாக மன்னனிடம் நான் சொன்னேன்.(46)

ஆழ்ந்த பெருமூச்சுகளை விட்டபடியே, மீண்டும் மீண்டும் என்னைப் பார்த்த உமது மகன் {துரியோதனன்}, தன் கரத்தால் என்னைத் தீண்டி,(47) “ஓ! சஞ்சயா, இந்தப் போரில் ஈடுபட்டவர்களில், உன்னைத் தவிர வேறு எவரும் உயிரோடில்லை. உயிரோடிருக்கும் தங்கள் கூட்டாளிகளுடன் பாண்டவர்கள் இருக்கையில், (என் தரப்பில்) நான் ஒருவனையும் {உயிரோடு} காணவில்லை.(48) தலைவரான குருட்டு மன்னர் திருதராஷ்டிரரிடம், அவரது மகன் துரியோதனன், தடாகத்தின் ஆழங்களுக்குள் நுழைந்துவிட்டதாகச் சொல்வாயாக.(49) நண்பர்கள், மகன்கள், சகோதரர்கள் ஆகியோரை இழந்து, பாண்டவர்களால் தன் நாடு எடுத்துக் கொள்ளப்பட்டதையும் கண்டு, உயிரோடு வாழ விரும்புவதற்கு என்னைப் போன்ற எவன் இருக்கிறான்?(50) இவை அனைத்தையும் மன்னரிடம் சொல்லிவிட்டு, அந்தப் பயங்கரப் போரில் இருந்து நான் உயிரோடு தப்பியதையும், அதிகமாகக் காயமடைந்திருந்தாலும், இந்தத் தடாகத்தின் ஆழங்களுக்குள் உயிரோடு ஓய்ந்திருக்கப் போகிறேன் என்பதையும் அவருக்குச் சொல்வாயாக” என்றான்.(51)

இவ்வார்த்தைகளை என்னிடம் சொன்னபிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னன் அந்தத் தடாகத்திற்குள் நுழைந்தான். அந்த மனிதர்களின் ஆட்சியாளன் {துரியோதனன்}, தன் மாய சக்தியைக் கொண்டு, அத்தடாகத்தின் நீரைக் கட்டி, அதற்குள் தனக்கென ஓர் இடைவெளியை உண்டாக்கிக் கொண்டான்.(52) அந்தத் தடாகத்திற்குள் அவன் நுழைந்த பிறகு, என் தரப்பில் எவரும் இல்லாத நான், (எங்கள் படையைச் சேர்ந்த) அந்த மூன்று தேர்வீரர்களும், களைத்துப் போன தங்கள் விலங்குகளுடன் ஒன்றாக வருவதைக் கண்டேன்.(53) சரத்வான் மகனான கிருபர், தேர்வீரர்களில் முதன்மையானவனான வீர அஸ்வத்தாமன், போஜர் குலத்தின் கிருதவர்மன் ஆகியோரே அவர்கள். கணைகளால் சிதைக்கப்பட்டிருந்த அவர்கள் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த இடத்திற்கு வந்தனர்.(54)

என்னைக் கண்ட அவர்கள் அனைவரும், தங்கள் குதிரைகளை வேகமாகத் தூண்டி என்னிடம் வந்து, “ஓ! சஞ்சயா, நற்பேறாலேயே நீ இன்னும் வாழ்கிறாய்” என்றனர்.(55) பிறகு அவர்கள் அனைவரும் மனிதர்களின் ஆட்சியாளனான உமது மகனை {துரியோதனனைக்} குறித்து விசாரிக்கும் வகையில், “ஓ! சஞ்சயா, நமது மன்னன் துரியோதனன் உயிருடன் இருக்கிறானா?” என்று கேட்டனர்.(56) மன்னனின் உடல்நலம் நன்றாக இருப்பதை நான் அவர்களுக்குச் சொன்னேன். மேலும், துரியோதனன் என்னிடம் சொன்ன அனைத்தையும் அவர்களிடம் சொன்னேன். துரியோதனன் நுழைந்த தடாகத்தையும் அவர்களுக்குச் சுட்டிக் காட்டினேன்.(57) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, என் வார்த்தைகளைக் கேட்ட அஸ்வத்தாமன், அந்தப் பரந்தத் தடாகத்தின் மீது தன் கண்களைச் செலுத்தி, “ஐயோ, ஐயோ, நாங்கள் உயிரோடிருப்பதை மன்னன் அறிந்தானில்லை. அவனுடன் நாங்களும் இருந்தால், நம் எதிரிகளுடன் போரிடும் வல்லமை இன்னும் நமக்கிருக்கிறது” என்று சொல்லித் துயரத்தால் புலம்பத் தொடங்கினான்.(59) நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், பாண்டுவின் மகன்களைக் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர்.(60) நமது எஞ்சிய படையைச் சேர்ந்தவர்களான அந்த மூன்று தேர்வீரர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த கிருபரின் தேரில் என்னை ஏற்றிக் கொண்டு, குரு முகாமுக்குச் சென்றனர்.(61)

சூரியன் சற்று முன்பே மறைந்தான். முகாமின் புறக்காவலில் இருந்த துருப்பினர், உமது மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டதை அறிந்து உரக்க அழுதனர்.(62) பிறகு, ஓ! ஏகாதிபதி, அரசகுடும்பத்தின் மகளிரைக் கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்டிருந்த முதிர்ந்த மனிதர்கள், அந்த இளவரசிகளை அழைத்துக் கொண்டு நகரத்தை நோக்கிச் சென்றனர்.(63) மொத்த படையின் அழிவையும் கேட்டு அழுது கொண்டிருந்த மங்கையர், மேலும் உரக்க ஓலமிட்டு அழுதனர்.(64) ஓ! மன்னா, இடையறாமல் அழுதுகொண்டிருந்த பெண்கள், பெண் அன்றில்கூட்டங்களைப் போலத் தங்கள் குரல்களைப் பூமியில் எதிரொலித்தனர்.(65) அவர்கள் தங்கள் நகங்களால் தங்கள் உடல்களைக் கிழித்துக் கொண்டும், தங்கள் கரங்களால் தங்கள் தலைகளில் அடித்துக் கொண்டும், தங்கள் கூந்தலை அவிழ்த்துவிட்டுக் கொண்டும் உரக்க அழுது கொண்டே இருந்தனர்.(66) “ஓ!” மற்றும் “ஐயோ!” என்ற ஒலிகளால் காற்றை நிறைத்து, தங்கள் மார்புகளை அடித்துக் கொண்ட அவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உரக்க அழுது கதறினர்.(67)

அப்போது, ஆழமாகப் பீடித்திருந்தவர்களான துரியோதனனின் நண்பர்கள் {அமைச்சர்கள்}, தங்கள் கண்ணீரால் குரலற்றவர்களாகி, அரசகுல மங்கையரைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு நகரத்தை நோக்கிப் புறப்பட்டனர்.(68) முகாமின் காவலர்கள், விலைமதிப்பு மிக்க விரிப்புகளால் மூடப்பட்ட பல வெண் படுக்கைகளை எடுத்துக் கொண்டு, நகரத்தை நோக்கி வேகமாகச் சென்றனர்.(69) வேறு சிலர், பெண்கோவேறு கழுதைகளால் இழுக்கப்பட்ட தேர்களில் தங்கள் மனைவியரை அமர்த்திக்கொண்டு, நகரத்தை நோக்கிச் சென்றனர். வீடுகளில் இருக்கும்போது சூரியனாலும் காணப்படாத அந்த மங்கையர், ஓ! ஏகாதிபதி, இப்போது நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, பொதுமக்களின் பார்வைக்கு வெளிப்பட்டனர்.(71) ஓ! பாரதக் குலத்தின் தலைவரே {திருதராஷ்டிரரே}, மிக மென்மையானவர்களாக இருந்த அந்தப் பெண்கள், தங்களுக்கு நெருக்கமானவர்களையும், உறவினர்களையும் இழந்து, இப்போது நகரத்தை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தனர்.(72) மாட்டிடையர்களும், ஆட்டிடையர்களும், பொதுமக்களும், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டுப் பீதியால் நிறைந்து, நகரத்தை நோக்கித் தப்பி ஓடினர்.(73) இவர்களும் கூடப் பார்த்தர்களிடம் கொண்டிருந்த பேரச்சத்தால் நிறைந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே நகரத்தை நோக்கித் தப்பி ஓடினர்.(74)

அச்ச சூழ்நிலையில் அவர்கள் தப்பி ஓடும்போது, துயரத்தால் தன் உணர்வுகளை இழந்தவனான யுயுத்சு, வந்திருக்கும் ஆபத்துக் காலத்தில் செய்யப்பட வேண்டியது என்ன என்பது குறித்துச் சிந்தித்தான்.(75) “பயங்கர ஆற்றலைக் கொண்ட பாண்டவர்களால் போரில் துரியோதனன் வெல்லப்பட்டான். அவன் தன்னிடம் பதினோரு அக்ஷௌஹிணிகளைக் கொண்டிருந்தான். அவனது சகோதரர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(76) பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையிலான கௌரவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர். விதியின் ஆதிக்கத்தால் நான் மட்டுமே காக்கப்பட்டிருக்கிறேன்.(77) குரு முகாமிலிருந்த அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். ஐயோ, சக்தியை இழந்து, பாதுகாவலர்களையும் இழந்து அவர்கள், அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடுகின்றனர்.(78) இத்தகு காட்சியை இதற்கு முன்பு ஒருபோதும் கண்டதில்லை. கவலையால் பீடிக்கப்பட்டுள்ள அவர்கள், அஞ்சும் கண்களுடன், மான் கூட்டங்களைப் போல ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடுகிறார்கள்.(79) துரியோதனனின் ஆலோசகர்களில் {அமைச்சர்களில்} உயிரோடிருப்பவர்கள், அரச குடும்பத்தின் மகளிரைக் கூட்டிக் கொண்டு நகரத்தை நோக்கித் தப்பி ஓடுகின்றனர்.(80) ஓ! தலைவா[1], யுதிஷ்டிரன் மற்றும் வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} அனுமதி பெற்றுக் கொண்டு நானும் அவர்களுடன் நகரத்தில் நுழைய வேண்டிய நேரம் வந்துவிட்டதென நான் நினைக்கிறேன்” என்று நினைத்தான் {யுயுத்சு}. இக்காரணத்திற்காகவே அந்த வலிய கரங்களைக் கொண்ட இளவரசன் {யுயுத்சு}, அந்த வீரர்கள் இருவரிடமும் {யுதிஷ்டிரன் மற்றும் கிருஷ்ணனிடம்} சென்று, தன் நோக்கத்தை வெளிப்படுத்தினான்.(81)எப்போதும் கருணை கொண்டவனான மன்னன் யுதிஷ்டிரன், அவனிடம் மிகவும் மனநிறைவு கொண்டான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்}, வைசியத் தாய்க்குப் பிறந்த அந்தப் பிள்ளையை {யுயுத்சுவைத்} தழுவி கொண்டு, பாசத்துடன் அவனை அனுப்பிவைத்தான்.(82) தன் தேரைச் செலுத்திய அவன் {யுயுத்சு}, தன் குதிரைகளைப் பெரும் வேகத்தில் தூண்டினான். பிறகு அவன் {யுயுத்சு}, அரச குடும்பத்தின் மகளிர் நகரத்துக்குச் செல்வதை மேற்பார்வையிட்டான்.(83) சூரியன் மறைந்து கொண்டிருந்தான். அந்தப் பெண்களுடன் சேர்ந்து, கண்ணீர் நிறைந்த கண்களுடனும், துயரால் தடைபட்ட குரலுடனும் யுயுத்சுவும் ஹஸ்தினாபுர நகரத்திற்குள் நுழைந்தான்.(84)

அப்போது அவன் {யுயுத்சு} பெரும் ஞானியான விதுரன் கண்ணீர் நிறைந்த கண்களுடன் அமர்ந்திருப்பதைக் கண்டான். பெரும் சோகத்தால் இதயம் பீடிக்கப்பட்டதால், அவன் திருதராஷ்டிரனிடம் இருந்து அகன்று வந்திருந்தான்.(85) அவன் {யுயுத்சு}, விதுரனை வணங்கிவிட்டு, அவனது முன்னிலையில் நின்றான். உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் விதுரன் அவனிடம் {யுயுத்சுவிடம்}, “ஓ! மகனே, குருக்களின் அழிவுக்கு மத்தியில் நீ உயிருடன் இருப்பது நற்பேறாலேயே.(86) எனினும், நீ துரியோதனனை உடன் அழைத்து வராதது ஏன்? இதன் காரணத்தை எனக்கு விரிவாகச் சொல்வாயாக” என்று கேட்டான்.(87)

அப்போது யுயுத்சு {விதுரனிடம்}, “ஓ! ஐயா, சகுனியும், அவரது உறவினர்களும், நண்பர்களும் வீழ்ந்த பிறகு, மன்னன் துரியோதனன், தான் செலுத்திய குதிரையைக் கைவிட்டுவிட்டு, அச்சத்தால் கிழக்குத் திசையை நோக்கி தப்பி ஓடினான்.(88) மன்னன் தப்பி ஓடிய பிறகு, (கௌரவ) முகாமில் இருந்த மக்கள் அனைவரும், அச்சத்தால் கலக்கமடைந்து நகரத்தை நோக்கித் தப்பி ஓடினர்.(89) பிறகு, பெண்களின் பாதுகாவலர்கள், மன்னனுடைய {துரியோதனனின்} மனைவியரையும், அவனது தம்பிகளின் மனைவியரையும் வாகனங்களில் அமர்த்திக் கொண்டு, அச்சத்தால் தப்பி ஓடினர்.(90) இவ்வாறு தப்பி ஓடும் மக்களைப் பாதுகாப்பதற்காகவே, மன்னன் யுதிஷ்டிரன் மற்றும் கேசவனின் {கிருஷ்ணனின்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு, நான் ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டு வந்தேன்” என்றான் {யுயுத்சு}.(91)

திருதராஷ்டிரனுடைய வைசிய மனைவியின் மகன் {யுயுத்சு} சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், அளவிலா ஆன்மா கொண்டவனும், அனைத்து நடைமுறைகளையும் அறிந்தவனுமான விதுரன், அந்த நேரத்திற்கு எது முறையானது என்பதை உணர்ந்து, சொல்திறமிக்க யுயுத்சுவைப் பாராட்டினான்.(92) மேலும் அவன் {விதுரன்}, “பாரதர்கள் அனைவருக்கும் நேர்ந்த இந்த அழிவைக் கருத்தில் கொண்டு, நீ முறையாகவே செயல்பட்டிருக்கிறாய். கருணையினால் நீ உனது குலத்தின் கௌரவத்தையும் தக்க வைத்திருக்கிறாய்.(93) சுடர்மிக்க மகிமை கொண்ட சூரியனைக் காணும் உயிரினங்களைப் போல[2], வீரர்களுக்கு அழிவைத் தந்த இந்தப் பெரும்போரில் இருந்து நீ மீண்டு வந்ததை நாங்கள் காண்பது எங்கள் நற்பேறாலேயே.(94) ஓ! மகனே, முன்னறிதிறனை இழந்தவரும், பேரிடரால் பீடிக்கப்பட்டவரும், விதியால் தாக்கப்பட்டவரும், மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்டாலும், தன் தீய கொள்கையைத் தொடர்வதை நிறுத்த முடியாதவருமான குருட்டு மன்னருக்கு {திருதராஷ்டிரருக்கு}, இப்போது அனைத்து வகையிலும் நீ ஒருவனே ஒரே ஊன்றுகோலாக இருக்கிறாய்.(95) இந்த நாள் இங்கு ஓய்ந்திருப்பாயாக. நாளை நீ யுதிஷ்டிரனிடம் திரும்பலாம்” என்றான் {விதுரன்}.இவ்வார்த்தைகளைச் சொன்ன விதுரன், கண்ணீர் நிறைந்த கண்களுடன்,(96) யுயுத்சுவிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, துயரால் பீடிக்கப்பட்ட குடிமக்கள் மற்றும் கிராமவாசிகள், “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும் செய்த கூச்சல்களை எதிரொலித்த மன்னனின் {திருதராஷ்டிரனின்} வசிப்பிடத்திற்குள் நுழைந்தான்.(97) உற்சாகமற்ற அந்த மாளிகை, அதன் அழகனைத்தையும் இழந்ததாகத் தெரிந்தது; வசதிகளும், மகிழ்ச்சியும் அம்மாளிகையைக் கைவிட்டதாகத் தெரிந்தது. முழுவதும் வெறுமையாக இருந்த அம்மாளிகை முழுமையாகவே சீர்கெட்டிருந்தது. ஏற்கனவே சோகத்தால் நிறைந்திருந்த விதுரனின் துயரம், அக்காட்சியால் இன்னும் அதிகரித்தது.(98) அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனான விதுரன், நீண்ட பெருமூச்சுகளைவிட்டபடியே, சோகம் நிறைந்த இதயத்துடன் அரண்மனைக்குள் நுழைந்தான்.(99) யுயுத்சுவைப் பொறுத்தவரை, அவன் அந்த இரவைத் தன் வசிப்பிடத்திலேயே கழித்தான். துயரால் பீடிக்கப்பட்டிருந்த அவன் {யுயுத்சு}, துதிகளால் வரவேற்கப்பட்ட போது, எந்த மகிழ்ச்சியையும் அடையவில்லை. ஒருவரின் கரங்களால் மற்றவர்களுக்கு நேர்ந்த பாரதர்களின் பயங்கர அழிவை நினைத்துக் கொண்டே அவன் காலத்தைக் கடத்தினான்” {என்றான் சஞ்சயன்}.(100)

துரியோதனனைக் கண்டுபிடித்த வேடர்கள்! – சல்லிய பர்வம் பகுதி – 30-தடாகத்தில் மறைந்திருந்த துரியோதனனிடம் பேசிய கிருபர் முதலானோர்; ஓரிரவு ஓய்ந்திருக்கப் போவதாகச் சொன்ன துரியோதனன்; இந்நிகழ்வை மறைந்திருந்து கவனித்த வேடர்கள், அதைப் பீமசேனனிடம் தெரிவித்தது; துரியோதனன் இருந்த இடத்திற்கு வந்த பாண்டவர்கள்; பாண்டவர்கள் வருவதை அறிந்து தப்பி ஓடிய அஸ்வத்தாமன் முதலானோர் ஓர் ஆலமரத்தை அடைந்து ஓய்ந்திருப்பது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “போர்க்களத்தில் பாண்டு மகன்களால் கௌரவத் துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்ட பிறகு, என் படையில் பிழைத்திருந்தவர்களான கிருதவர்மன், கிருபர் மற்றும் துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் என்ன செய்தனர்? மேலும், தீய ஆன்மா கொண்ட மன்னன் துரியோதனன் அப்போது என்ன செய்தான்?” என்று கேட்டான்.(1,2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த உயர் ஆன்ம க்ஷத்திரியர்களின் மகளிர் தப்பி ஓடி, (கௌரவ) முகாம் முற்றிலும் வெறுமையான பிறகு, (நீர் குறிப்பிட்ட) அந்த மூன்று தேர்வீரர்களும் கவலையில் நிறைந்தனர்.(3) பாண்டு மகன்களின் வெற்றிக் கூச்சல்களைக் கேட்டும், மாலைவேளையில் முகாம் கைவிடப்பட்டதைக் கண்டும், மன்னனைக் காக்க விரும்பியும், களத்தில் நிற்க முடியாமலும், நமது தரப்பின் அந்த மூன்று தேர்வீரர்களும் அந்தத் தடாகத்தை நோக்கிச் சென்றனர்.(4) வெற்றி ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன், அந்தப் போரில் தன் சகோதரர்களுடன் சேர்ந்து பெரும் மகிழ்ச்சியை உணர்ந்து, துரியோதனனைக் கொல்லும் விருப்பத்தில் களமெங்கும் திரிந்து கொண்டிருந்தான்.(5) கோபத்தால் நிறைந்தவர்களும், வெற்றியை விரும்பியவர்களுமான பாண்டவர்கள் உமது மகனைத் தேடினர். அவர்கள் மிகக் கவனமாகத் தேடிய போதிலும் அவர்களால் (குரு) மன்னனை {துரியோதனனைக்} கண்டுபிடிக்க முடியவில்லை.(6)

கையில் கதாயுதத்துடன், பெரும் வேகத்துடன் போர்க்களத்தில் இருந்து தப்பிச் சென்ற அவன் {துரியோதனன்}, தனது மாய சக்திகளின் உதவியால் தடாகத்தின் நீரைக் கட்டி அதற்குள் ஊடுருவினான்.(7) இறுதியாகப் பாண்டவர்களின் விலங்குகள் மிகவும் களைத்தபோது, அவர்கள் தங்கள் முகாமுக்குச் சென்று அங்கே தங்கள் படைவீரர்களுடன் ஓய்வெடுத்தனர்.(8) பார்த்தர்கள் முகாமுக்குச் சென்ற பிறகு, கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் மெதுவாகத் தடாகத்தை நோக்கிச் சென்றனர்.(9) மன்னன் இருந்த அந்தத் தடாகத்தை அணுகிய அவர்கள், நீருக்குள் உறங்கிக் கொண்டிருந்தவனும், வெல்லப்பட முடியாதவனுமான அந்த மனிதர்களின் ஆட்சியாளனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! மன்னா, எழுவாயாக. எங்களோடு சேர்ந்து யுதிஷ்டிரனிடம் போரிடுவாயாக. வெற்றியை அடைந்து பூமியை அனுபவிப்பாயாக, அல்லது, ஓ! துரியோதனா, கொல்லப்பட்டு சொர்க்கத்திற்குச் செல்வாயாக.(11) ஓ! துரியோதனா, பாண்டவர்களின் படைகள் அனைத்தும் கூட உன்னால் கொல்லப்பட்டிருக்கின்றன. அவர்களில் உயிரோடிருப்பவர்களும் மிகவும் சிதைக்கப்பட்டிருக்கின்றனர்.(12) ஓ! ஏகாதிபதி, அவர்களால் உனது வேகத்தைத் தாங்கிக் கொள்ள இயலாது. அதிலும் குறிப்பாக எங்களால் நீ பாதுகாக்கப்படும்போது அவர்களால் தாங்கிக் கொள்ளவே இயலாது. எனவே, ஓ! பாரதா, எழுவாயாக” என்றனர்.(13)

துரியோதனன், “மனிதர்களில் காளைகளே, பாண்டவர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் நடந்த இந்த அழிவைத் தரும்போரில் உயிரோடு நீங்கள் வந்திருப்பதை நற்பேறாலேயே நான் காண்கிறேன்.(14) நாம் சற்றே ஓய்ந்து, நம் களைப்பகன்றதும், எதிரியோடு மோதி நாம் அவனை வெல்வோம். நீங்களும் களைப்பாக இருக்கிறீர்கள். நானும் மிகவும் சிதைக்கப்பட்டிருக்கிறேன். பாண்டவர்களின் படையோ வலிமையில் பெருகியிருக்கிறது. இக்காரணங்களுக்காவே நான் இப்போது போரிட விரும்பவில்லை.(15) வீரர்களே, உங்களது உன்னத இதயங்களின் காரணமாக உங்கள் பங்கிற்கு நீங்கள் சொல்லும் இந்த அறிவுரைகள் உங்களுக்கு {உங்கள் தரத்திற்கு} அற்புதமானவையல்ல. என்னிடம் நீங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்புணர்வும் பெரியதே. எனினும், இஃது ஆற்றலை வெளிக்காட்டும் நேரமில்லை.(16) இந்த ஓரிரவில் நான் ஓய்ந்திருந்து, நாளை உங்களுடன் சேர்ந்து எதிரியோடு போரிடுவேன். இதில் எவ்வையமும் கிடையாது” என்றான்.”(17)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவ்வாறு சொல்லப்பட்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, போரில் வெல்லப்பட முடியாத அம்மன்னனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! மன்னா, எழுவாயாக, நீ அருளப்பட்டிருப்பாயாக. இப்போதும் நாம் எதிரியை வெல்லலாம்.(18) என் அறச்செயல்கள் அனைத்தின் மீதும், உண்மையில் நான் கொடுத்துள்ள கொடைகள் அனைத்தின் மீதும், என் மௌனத் தியானங்களின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன், ஓ! மன்னா, நான் இன்று சோமகர்களைக் கொல்வேன்.(19) நான் போரில் பாண்டவர்களைக் கொல்லாமல் இவ்விரவு கழியுமேயானால், வேள்விகள் செய்வதன் மூலம் விளையும் மகிழ்ச்சியும், பக்திமான்கள் அனைவராலும் உணரப்படும் மகிழ்ச்சியும் எனக்குக் கிடைக்காமல் போகட்டும்.(20) ஓ! தலைவா, பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்லாமல் நான் எனது கவசத்தைக் களைய மாட்டேன். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே, என்னை நம்புவாயாக” என்றான்.(21)

அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, சில வேடர்கள் அங்கே வந்தனர். தாங்கள் சுமந்து வந்த இறைச்சியின் கனத்தால் களைத்துப் போயிருந்த அவர்கள், குறிப்பிட்ட எந்தக் காரியத்திற்காகவும் இல்லாமல் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக அங்கே வந்தனர்.(22) ஓ! தலைவா, ஓ! மன்னா, அந்த வேடர்கள் தினந்தோறும் பெரும் மதிப்புடன் பீமசேனனுக்காகக் கூடைகூடையாக இறைச்சியைக் கொண்டு வந்து கொடுப்பவர்களாவர்.(23) அத்தடாகத்தின் கரையில் மறைவாக அவர்கள் அமர்ந்தபோது, துரியோதனனுக்கும், அந்தப் போர்வீரர்களுக்கும் இடையில் நடந்த அந்த உரையாடலின் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டனர்.(24) போரிட விரும்பாத குரு மன்னனைக் கண்டவர்களும், போரிட விரும்பியவர்களுமான அந்தப் பெரும் வில்லாளிகள், தங்கள் ஆலோசனைகளைப் பின்பற்றும்படி அவனைப் பெரிதும் தூண்டத் தொடங்கினர்.(25)

அந்த வேடர்கள், கௌரவப்படையைச் சேர்ந்த அந்தத் தேர்வீரர்களைக் கண்டும், போரிட விரும்பாத மன்னன் {துரியோதனன்} நீருக்குள் இருப்பதைப் புரிந்து கொண்டும்,(26) அந்தப் போர்வீரர்களுக்கும், தடாகத்தின் ஆழங்களுக்குள் இருக்கும் அவர்களது தலைவனுக்கும் இடையில் நடந்த அந்த உரையாடலைக் கேட்டும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உண்மையில், தடாகத்திற்குள் இருப்பவன் துரியோதனனே என்பதைத் தெளிவாகக் கண்டும் ஒரு தீர்மானத்தைச் செய்தனர்.(27) சிறிது நேரத்திற்கு முன்புதான், மன்னனைத் தேடிக் கொண்டிருந்த பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, இம்மனிதர்களைச் சந்தித்து, அவர்களிடம் துரியோதனன் இருக்கும் இடத்தைக் குறித்த விசாரித்திருந்தான்.(28) பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} சொன்ன அந்த வார்த்தைகளை நினைவுகூர்ந்த அந்த வேடர்கள், ஓ! மன்னா, ஒருவொருக்கொருவர் கிசிகிசுத்தபடியே,(29) “(பாண்டவர்களிடம்) துரியோதனனை வெளிப்படுத்துவோம். அந்தப் பாண்டுவின் மகன் நமக்குச் செல்வத்தைத் தருவான். கொண்டாடப்படும் மன்னன் துரியோதனன் இங்கிருப்பது நமக்குத்தெளிவாகத் தெரிகிறது.(30) பழியுணர்ச்சி கொண்ட துரியோதனன் இந்தத் தடாகத்தின் நீருக்குள் மறைந்திருப்பதைச் சொல்வதற்காக மன்னன் யுதிஷ்டிரன் இருக்குமிடத்திற்கு நாம் அனைவரும் செல்வோம்.(31) மேலும், நாம் அனைவரும் சென்று, பெரும் வில்லாளியும், புத்திசாலியுமான பீமசேனனிடமும், திருதராஷ்டிரன் மகன் இந்தத் தடாகத்தின் நீருக்குள் மறைந்திருக்கிறான் என்பதைச் சொல்வோம்.(32) நம்மிடம் மனநிறைவு கொள்ளும் அவன் {பீமன்}, நமக்கு இன்னும் அதிகச் செல்வத்தைக் கொடுப்பான். பிறகு, இவ்வளவு கடினமாக உழைத்து, நாளுக்கு நாள் இறைச்சியை அடைந்து, இப்படிக் களைப்படைய வேண்டிய தேவை நமக்கு என்ன இருக்கிறது?” என்றனர்.(33)

இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த வேடர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து, செல்வத்துக்காக ஏங்கி, தங்கள் இறைச்சிக்கூடைகளை எடுத்துக் கொண்டு (பாண்டவ) முகாமை நோக்கிச் சென்றனர்.(34) இலக்கில் துல்லியமும், தாக்குவதில் திறனும் கொண்ட பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி, அப்போது மறைந்திருந்த துரியோதனனைக் களத்தில் காணாது, தங்கள் முகாமில் ஓய்ந்திருந்தனர்.(35) அந்தப் பொல்லாத பாவியின் தீய கொள்கைக்கு ஒரு முடிவை அடைய விரும்பிய அவர்கள், போர்க்களத்தின் அனைத்துத் திசைகளுக்கும் ஒற்றர்களை அனுப்பிக் கொண்டிருந்தனர்.(36) எனினும், அக்காரியத்திற்காக அனுப்பப்பட்ட படைவீரர்கள் அனைவரும், ஒன்றாக முகாமுக்குத் திரும்பி வந்து, மன்னன் துரியோதனன் குறித்த எத்தடயத்தையும் காண முடியவில்லை என்று நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் தெரிவித்தனர்.(37) திரும்பி வந்த தூதர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதக் குலத்தின் காளையே, பெரும் கவலையால் நிறைந்து, கடும் மூச்சு விடத் தொடங்கினான்.(38)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் இவ்வாறு உற்சாகமற்றிருந்தபோது, ஓ! தலைவா, தடாகக் கரையில் இருந்து பெரும் வேகத்துடன் வந்த அந்த வேடர்கள்,(39) துரியோதனனைக் கண்டுபிடித்திருந்ததால் மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாக முகாமை அடைந்தனர். முகாமுக்குள் நுழைய தடுக்கப்பட்டாலும், பீமசேனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் உள்ளே நுழைந்தனர்.(40) பாண்டுவின் வலிமைமிக்க மகனான பீமசேனனை அடைந்த அவர்கள், தாங்கள் கண்டது மற்றும் கேட்டது அனைத்தையும் சொன்னார்கள்.(41) பிறகு எதிரிகளை எரிப்பவனான விருகோதரன் {பீமன்}, அவர்களுக்குப் பெரும் செல்வத்தைக் கொடுத்து, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் அனைத்தையும் சொல்லும் வகையில்,(42) “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, எனக்கு இறைச்சி கொடுக்கும் வேடர்களால் துரியோதனன் கண்டுபிடிக்கப்பட்டார். ஓ! மன்னா, யாருக்காக நீர் இவ்வளவு கவலைப்படுகிறீரோ, அவன் {துரியோதனன்} இப்போது தடாகத்தின் நீரைக்கட்டி அதற்குள் இப்போது கிடக்கிறான்” என்றான்.(43)

பீமசேனனின் இந்த இனிமையான வார்த்தைகளைக் கேட்டவனும், குந்தியின் மகனுமான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, தன் தம்பியர் அனைவருடன் சேர்ந்து மகிழ்ச்சியால் நிறைந்தான்.(44) வலிமைமிக்க வில்லாளியான துரியோதனன், தடாகத்தின் நீருக்குள் ஊடுருவியிருப்பதை அறிந்த அம்மன்னன், ஜனார்த்தனனை {கிருஷ்ணனைத்} தன் தலைமையாகக் கொண்டு, பெரும் வேகத்துடன் அந்த இடத்திற்குச் சென்றான்.(45) அப்போது, ஓ! ஏகாதிபதி, மகிழ்ச்சியால் நிறைந்திருந்த பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவருக்கும் மத்தியில் ஆரவாரவொலி எழுந்தது.(46) ஓ! பாரதக் குலத்தின் காளையே, போர்வீரர்கள் சிங்க முழக்கங்களைச் செய்து உரக்கக் கூச்சலிட்டனர். க்ஷத்திரியர்கள் அனைவரும், ஓ! மன்னா, துவைபாயனம் {த்வைபாயனஹ்ரதம்} என்றழைக்கப்பட்ட அந்தத் தடாகத்திற்குப் பெரும் வேகத்துடன் சென்றனர்.(47) மகிழ்ச்சியடைந்த சோமகர்கள், “பாவியான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} கண்டுபிடிக்கப்பட்டான்” என்று சுற்றிலும் மீண்டும் மீண்டும் கூச்சலிட்டனர்.(48) ஓ! ஏகாதிபதி, பெரும் வேகத்துடன் வந்த அந்த மூர்க்கமான தேர்வீரர்களின் தேர்களால் உண்டான பேரொலி சொர்க்கங்களையே எட்டியது.(49) அவர்கள் அனைவரின் விலங்குகளும் களைத்திருந்தாலும், துரியோதனனைக் கண்டுபிடிப்பதில் முனைப்புடன் இருந்த மன்னன் யுதிஷ்டிரனின் பின்னால் அவர்கள் வேகமாகத் தொடர்ந்து சென்றனர்.(50)

அர்ஜுனன், பீமசேனன், பாண்டுவுக்கும் மாத்ரிக்கும் பிறந்த இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னன், வெல்லப்பட முடியாதவனான சிகண்டி,(51) உத்தமௌஜஸ், யுதாமன்யு, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, திரௌபதியின் மகன்கள் (ஐவர்), பாஞ்சாலர்களில் இன்னும் உயிரோடு எஞ்சிருந்தவர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும், அவர்களது யானைகளும், நூற்றுக்கணக்கான காலாட்படை வீரர்களும் யுதிஷ்டிரனுடன் சென்றனர்.(52) பெரும் வீரம் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், ஓ! ஏகாதிபதி, அப்போது துரியோதனன் எதற்குள் இருந்தானோ அந்தத் துவைபாயனம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட தடாகத்தை வந்தடைந்தான். பெருங்கடலைப் போலப் பரந்திருந்த அதன் {அத்தடாகத்தின்} தன்மை இனிமையானதாகவும், அதன் நீர் தெளிவானதாகவும், குளுமையானதாகவும் இருந்தது.(53) உண்மையில், அற்புத வழிமுறையான தனது மாய சக்தியால் அதன் நீரைக் கட்டிய உமது மகன் துரியோதனன், ஓ! பாரதரே, அந்தத் தடாகத்திற்குள்ளேயே இருந்தான்.(54) உண்மையில், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, ஓ! தலைவா, எம்மனிதனாலும் வெல்லப்பட முடியாதவனான அம்மன்னன் {துரியோதனன்} தன் கதாயுதத்துடன் அந்த நீருக்குள்ளேயே கிடந்தான்.(55) அத்தடாகத்தின் நீருக்குள் இருந்த மன்னன் துரியோதனன், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பாக (பாண்டவப் படை உண்டாக்கிய) அந்த ஆரவாரப் பேரொலியைக் கேட்டான்.(56) அப்போது யுதிஷ்டிரன், ஓ! மன்னா, துரியோதனனைக் கொல்லும் விருப்பத்துடன் தன் தம்பிகளோடு அந்தத் தடாகத்திற்கு வந்தான்.(57) அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தன் தேர்ச்சக்கரங்களின் ஒலியாலும், தன் சங்கின் உரத்த முழக்கத்தாலும் பூமியை நடுங்கச் செய்தபடியே அடர்த்தியான புழுதியை எழுப்பினான்.(58)

யுதிஷ்டிரனின் படையால் உண்டாக்கப்பட்ட அவ்வொலியைக் கேட்ட பெரும் தேர்வீரர்களான கிருதவர்மன், கிருபர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர், அந்தக் குரு மன்னனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள்:(59) “மகிழ்ச்சியால் நிறைந்தும், வெற்றிக்கான ஏக்கத்துடனும் பாண்டவர்கள் இங்கே வருகின்றனர். எனவே, நாங்கள் இந்த இடத்தை விட்டகல்கிறோம். இதை நீ அறிவாயாக. {எங்களுக்கு விடை கொடுப்பாயாக}” என்றனர்.(60) பெரும் சுறுசுறுப்புடைய அவ்வீரர்கள் வார்த்தைகளைக் கேட்ட அவன், “அப்படியே ஆகட்டும்” என்று அவர்களுக்குப் பதிலளித்து, (முன்பு போலவே) தன் மாயசக்தியால் நீரைக் கட்டி அதற்குள்ளேயே இருந்தான்.(61) கிருபரின் தலைமையிலான அந்தத் தேர்வீரர்கள், துயரால் நிறைந்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னனிடம் {துரியோதனனிடம்} விடைபெற்றுக் கொண்டு, அந்த இடத்தில் இருந்து தொலைவான ஓரிடத்திற்குச் சென்றுவிட்டனர்.(62)

தொலைவாகச் சென்ற அவர்கள், ஓ! ஐயா, ஓர் ஆலமரத்தைக் கண்டு, அதன் நிழலில் நின்றனர். மிகவும் களைத்துப் போய், மன்னனைக் குறித்த கவலையில் இருந்த அவர்கள், இத்தகு சிந்தனைகளில் ஈடுபட்டனர்:(63) ‘வலிமைமிக்கத் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, தடாகத்தின் நீரைக் கட்டி அதன் அடியில் கிடக்கிறான். பாண்டவர்களோ போரிடும் விருப்பத்துடன் அந்த இடத்தை அடைந்திருக்கின்றனர்.(64) போர் எவ்வாறு நடைபெறும்? மன்னனுக்கு {துரியோதனனுக்கு} என்ன ஆகும்? குரு மன்னனைப் பாண்டவர்களால் எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்?’ {என்று நினைத்தனர்}.(65) இவற்றை நினைத்த கிருபர் முதலான அந்த வீரர்கள், தங்கள் தேர்களில் இருந்து தங்கள் குதிரைகளை விடுவித்து, சிறிது நேரம் ஓய்வெடுக்க ஆயத்தமாகினர்” {என்றான் சஞ்சயன்}.(66)

துரியோதனனிடம் பேசிய யுதிஷ்டிரன்! – சல்லிய பர்வம் பகுதி – 31-துவைபாயனத் தடாகத்தின் கரைக்கு வந்து யுதிஷ்டிரனும், கிருஷ்ணனும் பேசிக்கொண்டது; நீரிலிருந்து வெளியே வருமாறு துரியோதனனைக் கேட்டுக் கொண்ட யுதிஷ்டிரன்; ஓய்வைக் கேட்ட துரியோதனன்; மறுத்த யுதிஷ்டிரன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த மூன்று தேர்வீரர்களும் அவ்விடத்தைவிட்டு அகன்ற பிறகு, பாண்டவர்கள், துரியோதனன் ஓய்ந்திருந்த அந்தத் தடாகத்திற்குப் வந்தனர்.(1) அந்தத் துவைபாயனத் தடாகத்தின் கரையை அடைந்த அவர்கள், ஓ! குரு குலத்தின் தலைவரே {திருதராஷ்டிரரே}, உமது மகனால் கவர்ந்திழுக்கப்பட்ட அந்த நீர்க்கொள்ளிடத்தைக் கண்டனர். அப்போது யுதிஷ்டிரன், வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்},(2) “இந்த நீரில் துரியோதனன், தன் மாய சக்தியைப் பயன்படுத்தியிருப்பதைப் பார். நீர்நிலையைக் கவர்ந்திழுத்து {ஸ்தம்பனம் செய்து} அதனுள் அவன் கிடக்கிறான். இப்போது அவனுக்கு மனிதர்களிடம் இருந்து எந்த அச்சமும் இல்லை.(3) அவன் {துரியோதனன்}, தெய்வீக மாயை இருப்புக்கு அழைத்து இப்போது இந்த நீர்நிலைக்குள் இருக்கிறான். அனைத்து வஞ்சகச் செயல்களையும் அறிந்தவனான அந்தப் பொல்லாதவன், இந்த வஞ்சச் செயலால் இப்படிப்பட்ட புகலிடத்தை அடைந்திருக்கிறான். எனினும், அவனால் உயிருடன் தப்ப முடியாது.(4) போரில் அவனது உதவிக்கு வஜ்ரதாரியே {இந்திரனே} வந்தாலும், ஓ! மாதவா {கிருஷ்ணா}, இன்று அவன் கொல்லப்படுவதை மக்கள் காண்பார்கள்” என்றான்.(5)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, உமது மாயசக்தியைப் பயன்படுத்தி, மாயாவியான துரியோதனனின் இந்த மாயை அழிப்பீராக. மாயையை அறிந்த ஒருவனை அந்த மாயையைக் கொண்டே கொல்ல வேண்டும். ஓ! யுதிஷ்டிரரே, இதுவே உண்மையாகும் {சத்தியமாகும்}.(6) ஓ! பாரதர்களின் தலைவரே, செயல்கள் மற்றும் வழிமுறைகளைக் கொண்டும், இந்நீர்நிலையில் உமது மாயசக்தியைப் பயன்படுத்தியும் மாய ஆன்மாவேயான அந்தச் சுயோதனனைக் கொல்வீராக.(7) செயல்கள் மற்றும் வழிமுறைகளைக் கொண்டுதான் தைத்தியர்களையும், தானவர்களையும் இந்திரன் கொன்றான். பலியும் {பலி சக்கரவர்த்தியும்} கூடப் பல செயல்கள் மற்றும் வழிமுறைகளைக் கொண்டே அந்த உயரான்மாவால் (உபேந்திரனால்) கட்டப்பட்டான்.(8) பெரும் அசுரனான ஹிரண்யாக்ஷனும், மற்றுமொருவனான ஹிரண்யகசிபுவும் பல செயல்கள் மற்றும் வழிமுறைகளின் உதவியைக் கொண்டே கொல்லப்பட்டனர்.(9) 

அதேபோலவே தான், புலஸ்திய குலத்தைச் சேர்ந்த ராட்சசன் ராவணனும், அவனது சொந்தங்கள் மற்றும் தொண்டர்களுடன் சேர்த்து ராமனால் கொல்லப்பட்டான். நடைமுறைகள் மற்றும் சூழ்ச்சித்திட்டங்களைக் கொண்டு நீரும் உமது ஆற்றலை வெளிப்படுத்துவீராக.(10) பெரும் பலம் கொண்டவர்களும், பழங்காலத்து தைத்தியர்களுமான தாரகன் மற்றும் விப்ரசித்தி ஆகிய இருவரும், ஓ! மன்னா, செயல்கள் மற்றும் வழிமுறைகளின் துணையைக் கொண்டே பழங்காலத்தில் கொல்லப்பட்டனர்.(11) அதே போலவே, வாதாபி, இல்வலன், திரிசரஸ், அசுரர்களான சுந்தன் மற்றும் உபசுந்தன் ஆகிய அனைவரும், ஓ! தலைவா, வழிமுறைகளின் துணைகொண்டே கொல்லப்பட்டனர்.(12) இந்திரனே கூட, செயல்கள் மற்றும் வழிமுறைகளின் உதவியால்தான் சொர்க்கத்தை அனுபவிக்கிறான். ஓ! யுதிஷ்டிரரே செயல்களே விளைவுகளைத் தரவல்லவை. அவற்றைப் போல வேறெதுவும் விளைவைத் தராது.(13) தைத்தியர்கள், தானவர்கள், ராட்சசர்கள் மற்றும் மன்னர்கள் ஆகியோர் செயல்கள் மற்றும் வழிமுறைகளின் உதவியால் கொல்லப்பட்டுள்ளனர். எனவே நீர், செயல்களின் உதவியை நாடுவீராக” என்றான் {கிருஷ்ணன்}”.(14)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வாசுதேவனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, சிரித்துக் கொண்டே, ஓ! ஏகாதிபதி, அந்தத் தடாகத்தின் நீருக்குள் இருந்தவனும், பெரும் வலிமைமிக்கவனுமான உமது மகனிடம் {துரியோதனனிடம்} பேசினான்,(15) “ஓ! சுயோதனா, க்ஷத்திரியர்கள் அனைவரையும் அழியச் செய்து, உனது குலத்தையே அழிவடையச் செய்துவிட்டு, ஓ! மன்னா, இந்நீரை ஏன் நீ இவ்வாறு செய்திருக்கிறாய்?(16) இன்று நீ உனது உயிரைக் காத்துக் கொள்ள விரும்பி ஏன் இத்தடாகத்திற்குள் நுழைந்திருக்கிறாய்? ஓ! மன்னா, ஓ! சுயோதனா, எழுந்து எங்களுடன் போரிடுவாயாக.(17) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இந்நீரைக் கவர்ந்திழுத்து அதற்குள் இப்போது கிடக்கிறாயே, உன் செருக்கும், கௌரவமும் இப்போது எங்கே சென்றன?(18) சபைகளில் மனிதர்கள் அனைவரும் உன்னை வீரன் என்று சொல்கிறார்கள். எனினும், நீ இந்த நீருக்குள் மறைந்திருப்பதால் அது முற்றான பொய்மை என்று நான் நினைக்கிறேன்.(19) ஓ! மன்னா, உன்னதக் குலத்தில் பிறந்த க்ஷத்திரியனாக எழுந்து போரிடுவாயாக. அதிலும் குறிப்பாக நீ ஒரு கௌரவேயனும் ஆவாய். உன் பிறப்பை நினைவுகூர்வாயாக.(20)

அச்சத்தால் போரில் இருந்து ஓடி இந்தத் தடாகத்தின் ஆழத்திற்குள் மறைந்து கொண்டு, குரு குலத்தில் பிறந்ததைக் குறித்து நீ எவ்வாறு தற்பெருமை பேச முடியும்?(21) ஒரு க்ஷத்திரியனின் நித்திய கடமையானது போரில் இருந்து விலகியிருப்பதல்ல. மதிக்கத்தக்கவர்களின் நடைமுறையானது போரில் இருந்து ஓடுவதல்ல; அது சொர்க்கத்திற்கும் வழிவகுக்காது.(22) வெற்றியில் விருப்பமுள்ளவனும், மகன்கள், சகோதரர்கள், தந்தைமார், உறவினர்கள், நண்பர்கள், தாய்மாமன்கள் மற்றும் சொந்தங்கள் கொல்லப்படுவதைக் கண்டவனுமான நீ, இப்போது இந்தப் போரின் முடிவை எட்டாமல் இந்தத் தடாகத்தில் எவ்வாறு இருக்கிறாய்?(23,24) வீரனாக இல்லாவிட்டாலும், உனது துணிவைக் குறித்து எப்போதும் தற்பெருமை பேசுகிறாய். ஓ! பாரதா, ஓ! தீய புரிதலைக் கொண்டவனே, மனிதர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கையில் உன்னை நீ வீரன் என்று பொய்யாகச் சொல்லிக் கொள்கிறாய்.(25)

எதிரிகள் பார்த்துக் கொண்டிருக்கையில் வீரர்கள் ஒருபோதும் தப்பி ஓடமாட்டார்கள். அல்லது, ஓ! வீரா, நீ போரில் இருந்து தப்பியதன் விளைவாக உனக்கு உண்டான துணிவைக் குறித்து எங்களுக்குச் சொல்வாயாக.(26) ஓ! இளவரசனே, உன் அச்சங்களைக் கைவிட்டு எழுந்து போரிடுவாயாக. உனது துருப்புகள் மற்றும் உனது தம்பிகள் அனைவரும் கொல்லப்படக் காரணமாக இருந்த நீ, ஓ! சுயோதனா,(27) நியாயமான நோக்கங்களைக் கொண்டிருந்தாயானால், உன் உயிரைக் காத்துக் கொள்ள நினைக்க மாட்டாய். ஓ! சுயோதனா, க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றும் உன்னைப் போன்ற ஒருவன், இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது.(28) கர்ணன் மற்றும் சுபலனின் மகனான சகுனி ஆகியோரை நம்பி, மூடத்தனத்தால் உன்னை அழிவற்றவனாகக் கருதிக் கொண்ட நீ, உன்னை நீயே புரிந்து கொள்ளத் தவறிவிட்டாய்.(29) இவ்வளவு பயங்கரமான பாவத்தைச் செய்தவனான நீ, ஓ! பாரதா, இப்போது போரிடுவாயாக.(30)

ஓ! ஐயா உனது ஆண்மை எங்கே? ஓ! சுயோதனா, உன்னால் பேணப்பட்ட அந்தச் செருக்கு எங்கே? இப்போது உனது ஆற்றல் எங்கே? உன்னில் பெருகியிருந்த அந்தப் பெருஞ்சக்தி எங்கே?(31) உன் ஆயுத சாதனைகள் எங்கே? நீ ஏன் இப்போது இந்தத் தடாகத்திற்குள் கிடக்கிறாய்? ஓ! பாரதா, க்ஷத்திரியக் கடமைகளை நோற்று எழுந்து போரிடுவாயாக.(32) எங்களை வென்று இந்தப் பரந்த பூமியை ஆள்வாயாக, அல்லது, ஓ! பாரதா, எங்களால் கொல்லப்பட்டு வெறுந்தரையில் உறங்குவாயாக.(33) இதுவே சிறப்புமிக்கப் படைப்பாளனாலேயே விதிக்கப்பட்ட உயர்ந்த கடமையாகும். சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி உண்மையாக நடந்து கொள்வாயாக. ஓ! பெரும் தேர்வீரா, மன்னனாகச் செயல்படுவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}”.(34)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! ஏகாதிபதி, தர்மனின் புத்திசாலி மகனால் {யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, நீருக்குள் இருந்தவாறே இவ்வார்த்தைகளைச் சொல்லி பதிலளித்தான்.(35)

துரியோதனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, வாழும் உயிரினங்களின் இதயங்களில் அச்சம் நுழைவது ஒருபோதும் ஆச்சரியமானதில்லை. எனினும், ஓ! பாரதா, என்னைப் பொறுத்தவரை, என் உயிரின் மீது கொண்ட அச்சத்தால் தூண்டப்பட்டு போர்க்களத்தைவிட்டு நான் தப்பி ஓடி வரவில்லை.(36) என் தேர் அழிக்கப்பட்டது, என் அம்பறாத்தூணிகளும் இல்லை, என் பார்ஷினி தேரோட்டிகளும் கொல்லப்பட்டனர். நான், போரில் ஒரே ஒரு தொண்டனுமின்றி தனியொருவனாக  இருந்தேன். அதற்காகவே நான் சிறிது ஓய்வெடுக்க விரும்பினேன்.(37) ஓ! மன்னா நான் இந்த நீருக்குள் புகுந்தது, என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக அல்ல, அச்சத்தாலுமல்ல, துயராலுமல்ல. களைப்பின் விளைவால் மட்டுமே நான் அப்படிச் செய்தேன்.(38) ஓ! குந்தியின் மகனே, உன்னைப் பின்தொடர்பவர்களுடன் நீ சற்று ஓய்ந்திருப்பாயாக. இந்தத் தடாகத்தில் இருந்து எழுந்து, நிச்சயம் உங்கள் அனைவருடனும் நான் போரிடுவேன்” என்றான்.(39)

யுதிஷ்டிரன் {துரியோதனனிடம்}, “நாங்கள் அனைவரும் போதுமான அளவுக்கு ஓய்ந்திருக்கிறோம். நீண்ட நேரமாக நாங்கள் உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறோம். ஓ! சுயோதனா, இப்போதே எழுந்து எங்களுக்குப் போரைத் தருவாயாக.(40) பார்த்தர்களைக் கொன்று செழிப்பான இந்த நாட்டை உனதாக்கிக் கொள்வாயாக, அல்லது போரில் எங்களால் கொல்லப்பட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் உலகங்களை அடைவாயாக” என்றான்.(41)

துரியோதனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குரு குலத்தோனே, ஓ! மன்னா, குருக்களில் நான் யாருக்காக அரசுரிமையை விரும்பினேனோ அந்தச் சகோதரர்கள் அனைவரும் களத்தில் இறந்து கிடக்கின்றனர்.(42) செல்வத்தை இழந்து, மேன்மையான க்ஷத்திரியர்களற்று, விதவையைப் போல இருக்கும் இந்தப் பூமியை இனிமேலும் நான் அனுபவிக்க விரும்பவில்லை.(43) எனினும், ஓ! யுதிஷ்டிரா, ஓ! பாரதக் குலத்தின் காளையே, உன்னை வென்று, பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டுக்களின் செருக்கை அடக்குவேன் என இன்னும் நம்புகிறேன்.(44) இருப்பினும், துரோணரும், கர்ணனும் ஒழிக்கப்பட்டு, நமது பாட்டன் பீஷ்மரும் கொல்லப்பட்ட பிறகு போருக்கான எந்தத் தேவையும் இல்லை.(45) ஓ! மன்னா, வெறுமையாய் இருக்கும் இந்தப் பூமி இப்போது உனக்காகவே இருக்கிறது. நண்பர்களும், கூட்டாளிகளும் அற்ற நாட்டை ஆள எந்த மன்னன்தான் விரும்புவான்?(46)

என்னைப் போன்ற நண்பர்களைக் கொல்லச் செய்து, மகன்கள், தம்பிகள் மற்றும் தந்தைமாரையும் கொல்லச் செய்து, என் நாடும் உன்னால் பறிக்கப்பட்ட பிறகு, என்னைப் போன்ற ஒருவன் எவ்வாறு உயிர்வாழ விரும்புவான்?(47) மான் தோலுடுத்திக் கொண்டு நான் காட்டுக்குச் செல்வேன். ஓ! பாரதா, நண்பர்களையும், கூட்டாளிகளையும் இழந்திருக்கும் எனக்கு நாட்டின் மீது எந்த விருப்பமுமில்லை.(48) ஓ! மன்னா, நண்பர்கள், கூட்டாளிகள் ஆகியோரையும், குதிரைகள், யானைகள் ஆகியவற்றையும் கிட்டத்தட்ட மொத்தமாக இழந்திருக்கும் இந்தப்பூமி உனக்காகவே இருக்கிறது.(49) என்னைப் பொறுத்தவரை, மான்தோலுடுத்திக் கொண்டு நான் காட்டுக்குச் செல்லப் போகிறேன். ஓ! தலைவா, நண்பர்களற்றவனான எனக்கு உயிர்வாழ எந்த விருப்பமும் இல்லை.(50) செல்வாயாக, ஓ! ஏகாதிபதி, தலைவர்களற்றதும், போர்வீரர்கள் இல்லாததும், செல்வத்தை இழந்ததும், கோட்டைகள் இல்லாததுமான பூமியை நீ தேர்ந்தெடுத்தவாறே ஆள்வாயாக” என்றான்”.(51)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கடும் வருத்தத்துடன் கூடிய இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், சிறப்புமிக்கவனுமான யுதிஷ்டிரன், இன்னும் நீருக்குள்ளேயே இருந்த உமது மகன் துரியோதனனிடம்,(52) “ஓ! ஐயா, நீருக்குள் இருந்து கொண்டு இவ்வாறு துயரில் பிதற்றாதே. இத்தகு வார்த்தைகளைக் கேட்கும் நான், ஓ! மன்னா, சகுனியைப் போல உன்னிடம் இரக்கமேதும் கொள்ள மாட்டேன்.(53) ஓ! சுயோதனா, இப்போது நீ இந்தப் பூமியை எனக்குக் கொடையளிக்க விரும்பலாம். இருப்பினும், இவ்வாறு உன்னால் கொடுக்கப்படும் பூமியை ஆள நான் விரும்பவில்லை.(54) உன்னிடம் இருந்து இந்தப் பூமியைக் கொடையாகப் பெற்று என்னால் பாவம் செய்ய முடியாது. ஓ! மன்னா, ஒரு க்ஷத்திரியனுக்குக் கொடையை ஏற்பது கடமையாக விதிக்கப்படவில்லை.(55) எனவே, உன்னால் இவ்வாறு கொடுக்கப்படும் இந்தப் பரந்த பூமியைப் பெற நான் விரும்பவில்லை. மறுபுறம், போரில் உன்னை வென்ற பிறகு அதை நான் அடைவேன்.(56)

இப்போது நீ பூமியின் தலைவனில்லை. உன் ஆட்சிப்பகுதியாக இல்லாத ஒன்றை நீ ஏன் கொடையாகக் கொடுக்க விரும்புகிறாய்? ஓ! மன்னா, நீதியின் விதிகளை நோற்று, நம் குலத்தின் நன்மையை விரும்பி உன்னிடம் எங்கள் பங்கை நாங்கள் இரந்து கேட்ட போது, இந்தப் பூமியை நீ ஏன் எங்களுக்குத் தரவில்லை?(57) வலிமைமிக்கக் கிருஷ்ணனின் கோரிக்கையை முதலில் மறுத்துவிட்டு, இப்போது நீ ஏன் பூமியைக் கொடுக்க விரும்புகிறாய்? உனக்கு ஏன் இந்த மூடத்தனம்?(58) எதிரியால் தாக்கப்பட்ட எந்த மன்னன்தான் தன் நாட்டைக் கொடுக்க விரும்புவான்? ஓ! குரு குலத்தின் மகனே, நீ இன்று பூமியைக் கொடுப்பதற்குத் தகுந்தவனல்ல.(59) உனக்கு அதிகாரம் இல்லாத ஒன்றை நீ ஏன் கொடையளிக்க விரும்புகிறாய்? போரில் என்னை வென்று இந்தப் பூமியை ஆள்வாயாக.(60) ஊசியின் முனையில் மறைக்கப்படும் அளவு நிலத்தை எனக்குக் கொடுப்பதைக்கூட நீ முன்பு ஏற்கவில்லை.(61) ஓ! ஏகாதிபதி, பிறகு எப்படி நீ முழுப் பூமியையும் எனக்குக் கொடையாகக் கொடுக்கிறாய்? ஊசியின் முனை மறைக்கக்கூடிய அளவு நிலத்தைக் கூட முன்பு கைவிட முடியாத நீ, இப்போது மொத்த பூமியையும் கைவிட எவ்வாறு விரும்புகிறாய்?(62) இத்தகு செழிப்பையடைந்து மொத்த பூமியையையும் ஆண்ட எவன்தான், தன் எதிரிகளுக்கு அந்தப் பூமியைக் கொடையளிக்கும் அளவுக்கு மூடனாக இருப்பான்?(63) 

மடமையினால் மலைத்திருக்கும் நீ, இதில் ஒழங்கற்ற முறைமையைக் காணவில்லை. நீ இந்தப் பூமியைக் கொடுத்துவிட விரும்பினாலும் உன்னால் உயிரோடு தப்ப முடியாது.(64) எங்களை வென்று இந்தப் பூமியை ஆள்வாயாக, அல்லது எங்களால் கொல்லப்பட்டு அருள் உலகங்களை அடைவாயாக.(65) நான், நீ என நாமிருவரும் உயிரோடிருந்தால், வெற்றியானது யாருக்குச் சொந்தம் என்பதில் உயிரினங்கள் அனைத்தும் ஐயங்கொள்ளும்.(66) ஓ! குறைந்த முன்னறிதிறன் கொண்டவனே, இப்போது உன் உயிரானது என்னை நம்பியே இருக்கிறது. நான் விரும்பினால் உன்னை உயிரோடு விடலாம், ஆனால் நீயோ உன்னைக் காத்துக் கொள்ள இயன்றவனில்லை.(67) நீ எங்களை எரித்துக் கொல்லவும், பாம்புகளைக் கொண்டு, பிற வகை நஞ்சுகள் மூலம், நீரில் எங்களை மூழ்கச் செய்து எனப் பலமுறை எங்கள் உயிரை எடுக்கவும் முயற்சி செய்தாய்.(68) ஓ! மன்னா, எங்கள் நாட்டைப் பறித்ததன் மூலமும், உன்னால் பேசப்பட்ட கொடுஞ்சொற்கள் மூலமும், திரௌபதியை முறையற்ற வகையில் நீ நடத்தியதன் மூலமும் உன்னால் நாங்கள் தீங்கிழைக்கப்பட்டோம்.(69) ஓ! இழிந்தவனே, இக்காரணங்களுக்காக உனது உயிர் பறிக்கப்பட வேண்டும். எழு, எழுந்து, எங்களுடன் போரிடுவாயாக. உனக்கான நன்மையை அதுவே தரும்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(70)

சஞ்சயன் தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெற்றியில் கொழித்த பாண்டவர்கள் அங்கே இவ்வாறே (துரியோதனனை கடிந்துரைத்தவாறும், கேலிசெய்தவாறும்) மீண்டும் மீண்டும் பேசினார்கள்” {என்றான் சஞ்சயன்}.(71)

நீரிலிருந்து எழுந்த துரியோதனன்! – சல்லிய பர்வம் பகுதி – 32-ஒவ்வொருவராகத் தன்னோடு போரிடலாம் என்று நீருக்குள் மறைந்திருந்தபடியே பாண்டவர்களை அழைத்த துரியோதனன்; பலர் சேர்ந்து அபிமன்யுவைக் கொன்றதைத் துரியோதனனுக்குச் சுட்டிக் காட்டிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரன் கொடுத்த வரங்கள்; நீரிலிருந்து எழுந்த துரியோதனன், பாண்டவர்களை ஒவ்வொருவர் பின் ஒருவராகப் போரிட வரும்படி அழைத்தது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “இவ்வாறு (தன் எதிரிகளால்) கடிந்துரைக்கப்பட்ட போது, எதிரிகளை எரிப்பவனும், கோபம் நிறைந்த இயல்பைக் கொண்டவனும், வீரனுமான என் அரச மகன் {துரியோதனன்} எவ்வாறு நடந்து கொண்டான்?(1) அவன் இதற்குமுன் ஒருபோதும் இதுபோன்ற கடிந்துரைகளைக் கேட்டதில்லை. மேலும் அவன், மன்னனுக்குரிய மரியாதையுடனேயே பிறரால் நடத்தப்பட்டிருக்கிறான்.(2) ஒரு குடையின் நிழலில் நின்றால், பிறரின் புகலிடத்தை எடுத்துக் கொண்டதாகிவிடும் என்று நினைத்து, அதில் நிற்க முன்பு துயரப்பட்டவனும், தன்னுணர்வுமிக்கச் செருக்கின் விளைவால் சூரியனின் பிரகாசத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாதவனுமான அவனால், தன் எதிரிகளின் வார்த்தைகளை எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடிந்தது?(3) மிலேச்சர்கள் மற்றும் நாடோடி இனங்களுடன் கூடிய மொத்த பூமியும் அவனுடைய அருளை நம்பி இருந்ததை நீயே உன் கண்களால் கண்டிருக்கிறாய்.(4) தொண்டர்கள் மற்றும் பணியாட்களை இழந்து ஒரு தனிமையான இடத்தில் மறைந்து கிடக்கையில், அந்த இடத்தில் வைத்து, குறிப்பாகப் பாண்டு மகன்களால் இவ்வாறு நிந்திக்கப்பட்ட போது, ஐயோ, அவன், வெற்றியாளர்களான தன் எதிரிகளால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட கசப்பான குற்றச்சாட்டுகளைக் கேட்டு, அவர்களுக்கு என்ன பதிலைச் சொன்னான்? ஓ! சஞ்சயா, அது குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(5,6)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “யுதிஷ்டிரனாலும், அவனது தம்பிகளாலும் இவ்வாறு நிந்திக்கப்பட்ட உமது அரச மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி, ஓ! மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த நீர்நிலைக்குள் கிடந்தபடியே அந்தக் கசப்பான வார்த்தைகளைக் கேட்டு மிகுந்த அவலமான நிலையை அடைந்தான். சூடான நீண்ட பெருமூச்சுகளை மீண்டும் மீண்டும் விட்டுக்கொண்டிருந்த அம்மன்னன் {துரியோதனன்}, தன் கரங்களை மீண்டும் மீண்டும் அசைத்து, போரில் தன் இதயத்தை நிலைக்கச் செய்து, நீருக்குள் இருந்தவாறே பாண்டுவின் அரச மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} இவ்வாறு பதிலளித்தான்.(7-9)

துரியோதனன், “பார்த்தர்களே, நீங்கள் அனைவரும் நண்பர்களையும், தேர்களையும், விலங்குகளையும் கொண்டுள்ளீர்கள். எனினும் நானோ, ஒரு தேரும், ஒரு விலங்கும் கூட இல்லாமல் உற்சாகமற்றவனாகவும், தனியொருவனாகவும் இருக்கிறேன்.(10) ஆயுதங்களை இழந்து, தனியொரு காலாளாக நிற்கும் நான், நன்கு ஆயுதம் தரித்தவர்களும், தேர்களை உடையவர்களுமான எண்ணற்ற எதிரிகளை எதிர்த்து எவ்வாறு போரிடத் துணிவேன்?(11) எனினும், ஓ! யுதிஷ்டிரா, நீங்கள் ஒவ்வொருவராக என்னுடன் போரிடலாம். துணிச்சலுடன் கூடிய பலருடன் ஒருவன் போரிடுவது முறையாகாது,(12) அதிலும் குறிப்பாகக் கவசமில்லாமல், களைத்தவனாக, பேரிடரால் பீடிக்கப்பட்டவனாக, அங்கங்கள் மிகவும் சிதைந்தவனாக, விலங்குகள் மற்றும் துருப்புகள் ஆகிய இரண்டையும் இழந்தவனாக இருக்கும் ஒருவனுக்கு அது முறையாகாது.(13) நான் உன்னிடமோ, பிருதையின் மகனான விருகோதரனிடமோ {பீமனிடமோ}, பல்குனனிடமோ {அர்ஜுனனிடமோ}, வாசுதேவனிடமோ {கிருஷ்ணனிடமோ}, பாஞ்சாலர்கள் அனைவரிடமோ, இரட்டையரிடமோ {நகுலன் மற்றும் சகாதேவனிடமோ}, யுயுதானானிடமோ {சாத்யகியிடமோ},(14) பிற துருப்புகள் அனைத்திடமோ போரிட சற்றும் அஞ்சவில்லை. போரில் தனியொருவனாகவே நின்று, உங்கள் அனைவரையும் நான் தடுப்பேன்.(15)

ஓ! மன்னா, அறவோரனைவரின் புகழுக்கும், அறமே அடிப்படையாகும். அறம் மற்றும் புகழ் ஆகியவற்றை நோற்கும் உன்னிடம் நான் இவை யாவற்றையும் சொல்கிறேன்.(16) நான் (இத்தடாகத்தில் இருந்து) எழுந்து உங்கள் அனைவருடனும் போரிடுவேன். பருவங்கள் அனைத்தையும் அடுத்தடுத்தாகச் சந்திக்கும் ஒரு வருடத்தைப் போல, நான் உங்கள் அனைவரையும் போரில் சந்திப்பேன்.(17) பாண்டவர்களே காத்திருப்பீராக. அதிகாலையில் விண்மீன்கள் {நட்சத்திரங்கள்} அனைத்தின் ஒளியையும் தன் சக்தியால் அழிக்கும் சூரியனைப் போல, இன்று ஆயுதமற்றவனாக, தேரற்றவனாக நான் இருப்பினும், தேர்களையும், குதிரைகளையும் கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் நான் அழிப்பேன்.(18) சிறப்புமிக்க க்ஷத்திரியர்களான பாஹ்லீகர், துரோணர், பீஷ்மர், உயர் ஆன்மக் கர்ணன், வீர ஜெயத்ரதன், பகதத்தன், மத்ரர்களின் ஆட்சியாளரான சல்லியர், பூரிஸ்ரவஸ், என் மகன்கள், ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, சுபலரின் மகனான சகுனி, என் நண்பர்கள், நலன்விரும்பிகள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் அனைவருக்கும் நான் பட்டிருக்கும் கடனிலிருந்து இன்று நான் விடுபடப் போகிறேன்.(19-21) உன்னையும், உனது சகோதரர்களையும் கொன்று, நான் பட்டிருக்கும் கடனிலிருந்து இன்று நான் விடுபடுவேன்” என்று சொன்னான். இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த (குரு) மன்னன் {துரியோதனன்} பேசுவதை நிறுத்திக் கொண்டான்.(22)

யுதிஷ்டிரன் {துரியோதனனிடம்}, “ஓ! சுயோதனா, நற்பேறாலேயே ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை நீ அறிந்து வைத்திருக்கிறாய். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நற்பேறாலேயே உன் இதயம் போரிட விரும்புகிறது.(23) நற்பேறாலேயே நீ வீரனாயிருக்கிறாய், ஓ! குரு குலத்தோனே, நற்பேறாலேயே போரிட நீ அறிந்திருக்கிறாய். தனியொருவனாய் இருந்தாலும் நற்பேறாலேயே எங்கள் அனைவரோடும் நீ போரிட விரும்புகிறாய்.(24) நீ விரும்பும் ஆயுதம் எதையும் எடுத்துக் கொண்டு, எங்களில் யாருடன் வேண்டுமானாலும் நீ போரிடலாம். நாங்கள் அனைவரும் இங்கே பார்வையாளர்களாக நிற்போம்.(25) ஓ! வீரா, (இன்னும்) உன் இதயத்தில் இருக்கும் மற்றொரு விருப்பத்தையும் நான் உனக்குக் கொடுக்கிறேன். எங்களில் எவரொருவரை கொன்றாலும் நீ மன்னனாகலாம். அல்லது எங்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்திற்குச் செல்வாய்” என்றான்.(26)

துரியோதனன் {யுதிஷ்டிரனிடம்}, “உங்களில் ஒருவனுடன் மட்டும் போரிடும் உகப்பைக்[1] கொடுத்தால் நீ துணிச்சல்மிக்கவனே, நான் கையில் கொண்டிருக்கும் இந்தக் கதாயுதமே நான் தேர்ந்தெடுத்திருக்கும் ஆயுதமாகும்.(27) எனக்கு இணையானவன் என்று உங்களில் எவன் தன்னை நினைப்பானோ, அவன் என் முன்னே வந்து, கதாயுதந்தரித்து, காலாளாக என்னுடன் போரிடட்டும். தேர்களைக் கொண்டு பல அற்புதமான தனிப்போர்கள் நேர்ந்தன. அற்புதமானதும், பெரியதுமான இந்தக் கதாயுதப் போர் இன்று நடைபெறட்டும்.(29) மனிதர்கள் (போரிடும்போது) ஆயுதங்களை மாற்றிக் கொள்ள விரும்புவார்கள். அப்படிப் போரிடும் தன்மையானது, உன் அனுமதியுடன் இன்று மாற்றப்படட்டும்.(30) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இன்று என் கதாயுதத்தைக் கொண்டு உன்னையும், உன் தம்பிகள் அனைவரையும், பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் அனைவரையும், இன்னும் நீ கொண்டிருக்கும் பிற துருப்புகள் அனைத்தையும் என்னால் வெல்ல முடியும். ஓ! யுதிஷ்டிரா, சக்ரனிடம் {இந்திரனிடம்} கூட நான் சிறிதும் அச்சமடைவதில்லை” என்றான்.(31)

யுதிஷ்டிரன் {துரியோதனனிடம்}, “எழு, ஓ! காந்தாரியின் மகனே, ஓ! சுயோதனா, எழுந்து என்னுடன் போரிடுவாயாக. தனியொருவனாக இருக்கும் நீ, ஓ! பெரும் வலிமை கொண்டவனே, கதாயுதம் தரித்துக் கொண்டு, ஒரு நேரத்தில் ஒருவரோடு மோதும் வகையில் {ஒருவர் பின் ஒருவராக} எங்களோடு போரிடுவாயாக.(32) ஓ! காந்தாரியின் மகனே, ஆண்மையுடனும், நல்ல கவனத்துடனும் போரிடுவாயாக. இன்று இந்திரனே உன் கூட்டாளியாக வந்தாலும் நீ உன் உயிரை விடுவாய்” என்றான்”.(33)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மனிதர்களில் புலியான உமது மகனால் {துரியோதனனால்} யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பொந்துக்குள் இருக்கும் வலிமைமிக்கப் பாம்பொன்றைப் போல அந்த நீருக்குள் இருந்தபடியே அவன் நீண்ட கடும் மூச்சுகளை விட்டுக் கொண்டிருந்தான்.(34) உயர்ந்த குலத்தில் பிறந்த ஒரு குதிரையால் சாட்டை அடியைப் பொறுத்துக் கொள்ள முடியாததைப் போலவே, இவ்வாறாக மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட அவனால் அந்த வார்த்தை அங்குசங்களைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(35)

தண்ணீரைப் பெரும் வேகத்தோடு கலங்கடித்த அந்தப் போர்வீரன், தடாகத்திலிருந்து எழும் யானைகளின் இளவரசனைப் போல, சினத்தால் பெருமூச்சுவிட்டபடியே, வஜ்ரம் போன்று பலமானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் கனத்த கதாயுதத்துடன் எழுந்தான்.(36) உமது மகன் {துரியோதனன்}, கட்டப்பட்டிருக்கும் அந்த நீரைத் துளைத்துக் கொண்டும், முழுக்க இரும்பாலான தன் கதாயுதத்தைத் தோளில் தாங்கியபடியும், கதிர்களால் அனைத்தையும் எரிக்கும் சூரியனைப் போல எழுந்தான்.(37) பெரும் பலமும், பெரும் நுண்ணறிவும் கொண்ட உமது மகன், இரும்பாலானதும், தாங்கு கயிறுடன் கூடியதுமான தன் கனத்த கதாயுதத்தைக் கையாளத் தொடங்கினான்.(38) சிகரத்துடன் கூடிய மலைக்கோ, வாழும் உயிரினங்களின் மேல் தன் கோபப்பார்வையைச் செலுத்தும் திரிசூலபாணியான ருத்ரனுக்கோ ஒப்பாகக் கதாயுதத்துடன் இருக்கும் அந்தப் பாரதத் தலைவனைக் கண்ட அவர்கள், வானத்தில் உள்ள தகிக்கும் சூரியனைப்போலத் தன்னைச் சுற்றி பிரகாசத்தைப் பொழிந்தான். உண்மையில், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான அவன், தோளில் கதாயுதத்துடன் நீரில் இருந்து எழுந்து நின்ற போது, உயிரினங்கள் அனைத்தும் தண்டத்துடன் கூடிய அந்தகனைப் போல அவனைக் கண்டன.(39-41)

உண்மையில் அப்போது, பாஞ்சாலர்கள் அனைவரும், வஜ்ரதாரியான சக்ரனையோ {இந்திரனையோ}, திரிசூலபாணியான ஹரனையோ போல உமது அரச மகனை {துரியோதனனைக்} கண்டன.(42) எனினும், நீரில் இருந்து எழும் அவனைக் கண்ட பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும், தங்கள் கரங்களைப் பற்றிக் கொண்டு மகிழ்ச்சியுறத் தொடங்கினர்[1].(43) உமது மகன் துரியோதனன், பார்வையாளர்களின் அந்தச் செயல்பாட்டைத் தனக்கு எதிரான அவமதிப்பாகக் கருதினான். பார்வையாலேயே பாண்டவர்களை எரித்துவிடுபவனைப் போலக் கோபத்தால் தன் விழிகளை உருட்டி, தன் புருவ அசைவால் நெற்றியை மூன்றாகச் சுருக்கி, மீண்டும் மீண்டும் தன் கீழுதட்டைக் கடித்தபடியே,(44,45) “பாண்டவர்களே, இந்தப் பரிகாசத்திற்கான கனியை நீங்கள் சுமப்பீர்கள். என்னால் இன்று கொல்லப்படும் நீங்கள், பாஞ்சாலர்களுடன் சேர்ந்து யமனின் வசிப்பிடத்தை அடைவீர்கள்” என்றான்.”(46)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “நீரில் இருந்து எழுந்த உமது மகன் துரியோதனன், கதாயுதத்தைத் தரித்து, குருதியால் குளித்த அங்கங்களுடன் அங்கே நின்று கொண்டிருந்தான்.(47) குருதியால் மறைக்கப்பட்டு, நீரில் நனைந்திருந்த உடலுடன் கூடிய அவன், நீர்ப்பெருக்குடன் கூடிய {அருவிகளைக் கொண்ட} ஒரு மலையைப் போலத் தெரிந்தான்.(48) கதாயுதத்துடன் அவன் நின்று கொண்டிருந்தபோது, பாண்டவர்கள், கிங்கரம்[2] என்றழைக்கப்படும் தண்டாயுதம் தரித்தவனும், கோபக்காரனுமான சூரியனின் மகனை {யமனைப்} போலவே அவனைக் கருதினர்.(49) பெரும் ஆற்றலைக் கொண்டவனான துரியோதனன், தன் கதாயுதத்தைத் தரித்துக் கொண்டு, மேகங்களையோ, அல்லது மகிழ்ச்சியுடன் முழங்கும் ஒரு காளையையோ போன்ற ஆழ்ந்த குரலுடன் பார்த்தர்களைப் போருக்கழைத்தான்.(50)(யமதண்டத்தின் பெயரே கிங்கரம்)

துரியோதனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, நீங்கள் ஒவ்வொருவராகவே என்னுடன் மோத வேண்டும். ஒரு வீரன், ஒரே நேரத்தில் பலரோடு மோதுவது முறையாகாது,(51) அதிலும் குறிப்பாகக் கவசமிழந்து, முயற்சியால் களைத்து, நீரால் நனைக்கப்பட்டு, அங்கங்கள் மிகவும் சிதைக்கப்பட்டு, தேர்கள், விலங்குகள் மற்றும் துருப்புகளையும் இழந்திருக்கும் ஒருவனுக்கு {பலரோடு மோதுவது} முறையாகாது.(52) எந்தக் கருவியுமற்றவனாக, கவசம் மற்றும் ஆயுதங்களை இழந்தவனாக இருந்தும் தனியொருவனாகப் போரிடும் என்னைச் சொர்க்கத்தில் இருக்கும் தேவர்கள் காணட்டும்.(53) நான் நிச்சயம் உங்கள் அனைவருடனும் போரிடுவேன். அனைத்தின் முறைமை மற்றும் முறையின்மைகளைக் குறித்த தேவையான தகுதிகளைக் கொண்டிருக்கும் நீ நடுவராக இருப்பாயாக” என்றான்.(54)

யுதிஷ்டிரன் {துரியோதனனிடம்}, “ஓ! துரியோதனா, பெருந்தேர்வீரர்கள் பலர் ஒன்றுசேர்ந்து போரில் அபிமன்யுவைக் கொன்றபோது இந்த அறிவு உனக்கு இல்லாமல் போனது எவ்வாறு?(55) எதையும் கருத்தில் கொள்ளாத, சிறு கருணையும் இல்லாத க்ஷத்திரியக் கடமைகள் மிகக் கொடூரமானவையாகும். இல்லையெனில், அந்தச் சூழ்நிலையில் அபிமன்யுவை நீங்கள் எவ்வாறு கொன்றிருக்க முடியும்?(56) நீங்கள் அனைவரும் நீதியை அறிந்தவர்களாவீர். நீங்கள் அனைவரும் வீரர்களுமாவீர். நீங்கள் அனைவரும் போரில் உங்கள் உயிர்களைக் கொடுக்கவும் ஆயத்தமாக இருந்தீர்கள். நேர்மையாகப் போரிடுபவர்களுக்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் உயர்ந்த முடிவானது சக்ரனின் {இந்திரனின்} உலகத்தை அடைவதேயாகும்.(57) ஒருவன் பலரால் ஒருபோதும் கொல்லப்படலாகாது என்பது உங்கள் கடமையாக இருந்தால், உன் ஆலோசனைகளின்படி செயல்பட்ட பலரால் அபிமன்யு ஏன் கொல்லப்பட்டான்?(58) கடினமான காலத்தில் அனைத்து உயிரினங்களும் அறக் கருத்துகளை மறக்கின்றன. பிறகு மறுவுலகத்தின் வாயில்கள் அடைக்கப்பட்டிருப்பதை அவை காண்கின்றன.(59) ஓ! வீரா {துரியோதனா}, உன் கவசத்தைப் பூட்டுவாயாக, உன் குழல்களை {கேசத்தைக்} கட்டுவாயாக. ஓ பாரதா, உனக்குத் தேவையான அனைத்தையும் எடுத்துக் கொள்வாயாக.(60) ஓ! வீரா, மேலும் கூடுதலாக, பாண்டவர்கள் ஐவரில் நீ மோத விரும்பும் ஒருவனை உன்னால் கொல்ல முடிந்தால்கூட, நீயே மன்னனாகலாம் என்ற உனது மற்றொரு விருப்பத்தையும் உனக்கு நான் அளிக்கிறேன். அல்லது (அவனால்) கொல்லப்படும் நீ சொர்க்கத்திற்குச் செல்வாய். ஓ! வீரா, உனது உயிரைத் தவிர எங்களால் கொடுக்க இயலும் எந்த வரத்தையும் நீ எங்களிடம் கேட்கலாம்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(61,62)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கத்தாலான கவசத்தைத் தன் உடலில் பூட்டிக் கொண்டு, பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கிரீடம் ஒன்றையும் அணிந்து கொண்டான்.(63) பிரகாசமான தங்கக்கவசத்தைப் பூண்டிருந்த அவன், அந்தத் தலைக்கவசத்தையும் சூட்டிக் கொண்டான். உண்மையில், ஓ! மன்னா, உமது மகன் ஒரு தங்கச் சிகரத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(64) கவசம்பூட்டி, கதாயுதம் தரித்து, பிற கருவிகளுடன் போர்க்கோலம் பூண்ட உமது மகன் துரியோதனன், ஓ! மன்னா, களத்தில் நின்றபடியே பாண்டவர்கள் அனைவரிடமும்,(65) “சகோதரர்களில் (ஐவரில்), கதாயுதம் தரித்துக் கொண்டு எவனொருவனும் என்னோடு போரிடலாம். என்னைப் பொறுத்துவரை, நான் சகாதேவனோடோ, பீமனோடோ, நகுலனோடோ,(66) பல்குனனோடோ {அர்ஜுனனோடோ}, உன்னோடோ இன்று போரிடவே விரும்புகிறேன். ஏற்றுக் கொண்ட மோதலின்படி உங்களில் ஒருவனோடு போரிடும் நான் இக்களத்தில் வெற்றியையடைவேன் என்பது உறுதியானதாகும்.(67)

தங்கத்துணியால் போர்த்தப்பட்டிருக்கும் என் கதாயுதத்தின் துணையுடன் அடைவதற்கரிதான இந்தப் பகைமைகளின் முடிவை இன்று நான் அடைவேன்.(68) கதாயுத மோதலில் எனக்கு இணையானவனாக ஒருவனையும் நான் நினைக்கவில்லை. என் கதாயுதத்தைக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக நான் உங்கள் அனைவரையும் கொல்வேன்.(69) உங்கள் அனைவரிலும் என்னோடு நியாயமாகப் போர் செய்யத் தகுந்தவன் ஒருவனுமில்லை. என்னைக் குறித்து இத்தகு செருக்கு நிறைந்த வார்த்தைகளைப் பேசுவது எனக்கு முறையாகாது. இருப்பினும், என் இந்த வார்த்தைகளை உங்கள் முன்னிலையில் நான் உண்மையாக்குவேன்.(70) இந்த நேரத்திற்குள்ளாகவே {முகூர்த்தத்திற்குள்ளாகவே} அந்த வார்த்தைகள் உண்மையாகவோ, பொய்யாகவோ ஆகலாம். உங்களில் கதாயுதத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவன் என்னோடு போரிடுவானாக” என்றான் {துரியோதனன்}.(71)

பீம துரியோதன வாக்குவாதம்! – சல்லிய பர்வம் பகுதி – 33-யுதிஷ்டிரனிடம் கோபடைந்த கிருஷ்ணன்; துரியோதனனை வெல்வது கடினமானது என்று சொன்ன கிருஷ்ணன்; எளிதில் வெல்வேன் என்று சொன்ன பீமன்; பீமனைப் புகழ்ந்த கிருஷ்ணன்; பீமனுக்கும் துரியோதனனுக்கு இடையில் நடந்த வாக்குவாதம்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன் இந்தத் தொணியிலேயே மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டிருந்தபோது, கோபத்தால் நிறைந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, “எங்களில் ஒருவரைக் கொன்று குருக்களின் மத்தியில் மன்னனாவாயாக” என்று ஆராயாமால் என்ன வார்த்தைகளைச் சொல்லிவிட்டீர். உண்மையில், ஓ! யுதிஷ்டிரரே, துரியோதனன், உம்மையோ, அர்ஜுனனையோ, நகுலனையோ, சகாதேவனையோ தேர்ந்தெடுத்தால் (விளைவதென்ன)?(2,3) ஓ! மன்னா, பீமசேனரைக் கொல்லும் விருப்பத்தால் துரியோதனன் இரும்புச் சிலையுடன் இந்தப் பதிமூன்று வருடங்களாகக் கதாயுதப்பயிற்சி செய்திருக்கிறான்[1].(4) ஓ! பாரதக் குலத்தின் காளையே, பிறகு நம் காரியத்தை எவ்வாறு நம்மால் அடையமுடியும்? ஓ! மன்னர்களில் சிறந்தவரே, கருணையால் தகாத பெருந்துணிவுடன் செயல்படுகிறீர்.(5)இக்கணத்தில், பிருதையின் மகனான விருகோதரரை {பீமரைத்} தவிர (துரியோதனனுக்கு) இணையான வேறொருவரை நான் காணவில்லை. மேலும் அவரது {பீமரது} கதாயுதப் பயிற்சியும் மிகப் பெரிதாக இல்லை.(6) எனவே, ஓ! ஏகாதிபதி, முன்பு உமக்கும், சகுனிக்கும் இடையில் நடைபெற்றதுபோல மீண்டும் வாய்ப்பைக் கொடுக்கும் ஓர் இழிந்த விளையாட்டுக்கு நீர் அனுமதி கொடுத்திருக்கிறீர்.(7) பீமர் வலிமையையும், ஆற்றலையும் கொண்டிருக்கிறார். எனினும் மன்னன் சுயோதனனோ திறமையைக் கொண்டிருக்கிறான். ஓ! மன்னா, வலிமைக்கும், திறமைக்கும் இடையிலான போட்டியில், திறனுடையவனே எப்போதும் வெல்வான்.(8) ஓ! மன்னா, இப்படிப்பட்ட ஒரு பகைவனை உமது வார்த்தைகளால் சுகமான, வசதியான இடத்தில் நிறுத்திவிட்டீர். எனினும், உமது நிலையையோ கடினமாக்கிக் கொண்டீர். இதன் விளைவாக நாம் பேராபத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறோம்.(9) எதிரிகள் அனைவரையும் வென்று, துயரங்களில் மூழ்கியிருக்கும் ஒரே ஓர் எதிரி மட்டுமே களையப்படவேண்டியவனாக இருக்கும் நேரத்தில் கைப்பிடியில் கிடைத்த அரசுரிமையை எவன்தான் கைவிடுவான்?(10)

இன்று உலகில் தேவனாகவே இருப்பினும் கூட, போரில் கதாயுதந்தரித்த துரியோதனனை வெல்லத்தகுந்த எந்த மனிதனையும் நான் காணவில்லை.(11) நீரோ, பீமரோ, நகுலனோ, சகாதேவனோ, பல்குனனோ {அர்ஜுனனோ} நேர்மையான போரில் துரியோதனனை வெல்லவல்லவர்களல்ல. மன்னன் துரியோதனன் பெருந்திறமையைக் கொண்டவனாக இருக்கிறான்.(12) ஓ! பாரதரே, “கதாயுதத்தை ஆயுதமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, எங்களில் ஒருவனைக் கொன்றால் நீ மன்னனாகலாம்” என்ற வார்த்தைகளை எவ்வாறு உம்மால் சொல்ல முடிந்தது?(13) துரியோதனன், நமக்கு மத்தியில் நேர்மையான போரை விரும்பி, விருகோதரரோடு {பீமரோடு} மோதினாலும் கூட, நமது வெற்றியானது ஐயத்திற்கிடமானதேயாகும். துரியோதனன் பெரும் வலிமையும், பெரும் திறமையும் கொண்டவனாவான்.(14) “எங்களில் ஒருவனைக் கொன்று மன்னனாவாயாக” என்று உம்மால் எவ்வாறு சொல்ல முடியும்? பாண்டு மற்றும் குந்தியின் வாரிசுகள் அரசாள விதிக்கப்பட்டவர்களில்லை என்பதில் ஐயமில்லை. காட்டு வாழ்வைத் தொடரவோ, பிச்சையெடுத்து வாழ்ந்து தங்கள் நாட்களைக் கடத்தவோதான் அவர்கள் பிறப்பை அடைந்திருக்கிறார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.(15)

பீமசேனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! மதுசூதனா, ஓ! யதுக்களை மகிழ்விப்பவனே, கவலைப்படாதே. எவ்வளவு கடினமானதாக இருப்பினும், இந்தப் பகைமையின் முடிவை இன்று நான் அடைவேன்.(16) போரில் சுயோதனனைக் கொல்வேன் என்பதில் ஐயமில்லை. ஓ! கிருஷ்ணா, நீதிமானான யுதிஷ்டிரரின் வெற்றி உறுதியானது என்றே தோன்றுகிறது.(17) இந்த எனது கதாயுதமானது, துரியோதனனுடைய கதாயுதத்தைவிட ஒன்றரைமடங்கு கனமானதாகும். ஓ! மாதவா, கவலை அடையாதே.(18) கதாயுதத்தையே ஆயுதமாகக் கொண்டு நான் அவனோடு போரிடத் துணிவேன். ஓ! ஜனார்த்தனா, நீங்கள் அனைவரும் அம்மோதலில் பார்வையாளர்களாக நிற்பீர்களாக.(19) அனைத்து வகை ஆயுதங்களைக் கொண்ட தேவர்களை உள்ளடக்கி மூவுலகத்தோடும் என்னால் போரிட முடியும் எனும்போது, துரியோதனனைக் குறித்து நீ என்ன சொல்வாய்?” என்றான்”.(20)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “விருகோதரன் {பீமன்} இவ்வார்த்தைகளைச் சொன்னதும், மகிழ்ச்சியால் நிறைந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, உயர்வாக மெச்சியபடியே அவனிடம்,(21) “ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, உம்மை நம்பியிருக்கும் நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர், தன் எதிரிகள் அனைவரையும் கொன்று, மீண்டும் தன் சுடர்மிக்கச் செழிப்பை அடைவார் என்பதில் ஐயமில்லை.(22) போரில் நீர் திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரையும் கொன்றுவிட்டீர். உமது கைகளால் மன்னர்கள் பலரும், இளவரசர்களும், யானைகளும் தங்கள் விதியைச் சந்திக்க நேர்ந்தது.(23) ஓ! பாண்டுவின் மகனே, கலிங்கர்கள், மகதர்கள், கௌரவர்கள், மேற்கத்தியர்கள், காந்தாரர்கள் ஆகியோர் அனைவரும் இந்தப் பயங்கரப் போரில் கொல்லப்பட்டனர்.(24) ஓ! குந்தியின் மகனே, துரியோதனனைக் கொன்று, விஷ்ணு (மூவுலகங்களின் அரசுரிமையையும்) சச்சியின் தலைவனுக்கு {இந்திரனுக்குக்} கொடுத்ததைப் போல, கடல்களுடன் கூடிய பூமியை நீதிமானான யுதிஷ்டிரருக்கு அளிப்பீராக.(25) பொல்லாத திருதராஷ்டிரர் மகனோ {துரியோதனனோ}, போரில் உம்மை எதிரியாக அடைந்து, தன் விதியைச் சந்திப்பான் என்பதில் ஐயமில்லை. அவனது எலும்புகளை நொறுக்கி உமது உறுதிமொழியை நிச்சயம் நீர் நிறைவேற்றுவீர்.(26) எனினும், ஓ! பிருதையின் மகனே, திருதராஷ்டிரன் மகனுடன் எப்போதும் கவனமாகப் போரிடுவீராக. அவன், திறன் மற்றும் பலம் ஆகிய இரண்டையும் பெற்று எப்போதும் போரில் திளைப்பவனாக இருக்கிறான்” என்றான் {கிருஷ்ணன்}.(27)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு சாத்யகி அந்தப் பாண்டுவின் மகனைப் பாராட்டினான்.(28) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரும் பீமசேனனின் அவ்வார்த்தைகளைப் பாராட்டினர்.(29) பிறகு, பயங்கர வலிமையைக் கொண்டவனான பீமன், சுடர்மிக்கச் சூரியனைப் போலச் சிருஞ்சயர்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த யுதிஷ்டிரனிடம், (30) “இந்தப் போரில் நான் இவனோடு {துரியோதனனோடு} மோதத் துணிவேன். மனிதர்களில் இழிந்தவனான இவன், போரில் என்னை வெல்லத் தகுந்தவன் இல்லை.(31) காண்டவ வனத்தில் நெருப்பை வீசிய அர்ஜுனனைப் போல, இன்று திருதராஷ்டிரர் மகனான இந்தச் சுயோதனன் மேல் என் இதயத்தில் நான் வளர்த்து வந்த கோபத்தைக் கக்கப் போகிறேன்.(32) ஓ! பாண்டுவின் மகனே, உமது இதயத்தில் தைத்திருக்கும் ஈட்டியை நான் இன்று பிடுங்கப் போகிறேன். ஓ! மன்னா, என் கதாயுதத்தைக் கொண்டு இந்த இழிந்தவனை வீழ்த்தியபிறகு, நீர் மகிழ்ச்சி அடைவீராக.(33) எனினும், ஓ! பாவமற்றவரே, உமது மகிமை நிறைந்த மாலையை {கீர்த்திமாலையை} நான் இன்று மீட்டெடுப்பேன். இன்று சுயோதனன் தனது உயிர் மூச்சையும், செழிப்பையும், நாட்டையும் கைவிடுவான்.(34) இன்று மன்னர் திருதராஷ்டிரரும் கூட, தன் மகனின் கொலையைக் கேட்டுவிட்டு, சகுனியின் பரிந்துரைகளில் இருந்து எழுந்த (நமக்கு அவர் இழைத்த) தீமைகள் அனைத்தையும் நினைவுகூர்வார்” என்றான் {பீமன்}.(35)

இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தப் பாரதக் குல இளவரசன் {பீமன்}, விருத்திரனை (மோதலுக்கு) அழைக்கும் சக்ரனை {இந்திரனைப்} போலப் போரிடுவதற்காக நின்று கொண்டிருந்தான்.(36) அந்த அழைப்பைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனும், பெரும் சக்தி கொண்டவனுமான உமது மகன் {துரியோதனன்}, மதங்கொண்ட யானையைத் தாக்கச் சொல்லும் மற்றொரு யானையைப் போல அம்மோதலுக்குச் சென்றான்.(37) பாண்டவர்கள், கதாயுதத்துடன் வந்த உமது மகனை, சிகரம் கொண்ட கைலாச மலையைப் போலக் கண்டனர்.(38) உண்மையில், மந்தையில் இருந்து பிரிந்து தனியாக நிற்கும் யானைகளின் இளவரசனைப் போல உமது வலிமைமிக்க மகனைக் கண்ட பாண்டவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(39) போரில் சிங்கத்தைப் போலவே நின்று கொண்டிருந்த துரியோதனன், எந்த அச்சத்தையும், திகைப்பையும், வலியையும், கவலையையும் அடையவில்லை.(40)

சிகரம் கொண்ட கைலாச மலையைப் போன்ற கதாயுதத்தை உயர்த்தி நின்ற அவனை {துரியோதனனைக்} கண்ட பீமசேனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனிடம்,(41) “மன்னர் திருதராஷ்டிரரும், நீயும் எங்களுக்குச் செய்த தீமைகள் அனைத்தையும் மனத்தில் நிறுத்துவாயாக. வாரணாவதத்தில் என்ன நடந்தது என்பதை நினைவுகூர்வாயாக.(42) திரௌபதி தன் பருவ {மாதவிடாய்} காலத்தில் சபைக்கு மத்தியில் வைத்து தவறாக நடத்தப்பட்டதையும், சகுனியின் பரிந்துரையால் மன்னர் யுதிஷ்டிரர் எவ்வாறு வீழ்த்தப்பட்டார் என்பதையும் நினைவுகூர்வாயாக.(43) ஓ! தீய ஆன்மாவே, அந்தச் செயல்கள் மற்றும் அப்பாவி பார்த்தர்களுக்கு நீ செய்த பிற தீங்குகள் ஆகியவற்றின் பயங்கர விளைவை இப்போது காண்பாயாக.(44) பாரதர்களின் சிறப்புமிக்கத் தலைவரும், நம் அனைவருக்கும் பாட்டனுமான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, உன் காரணமாக (எங்களால்) தாக்கி வீழ்த்தப்பட்டு இப்போது கணைப்படுக்கையில் கிடக்கிறார்.(45)

துரோணரும் கொல்லப்பட்டார், கர்ணனும் கொல்லப்பட்டான். பெரும் வீரம் கொண்ட சல்லியரும் கொல்லப்பட்டார். அதோ பகைமைகளின் வேராக இருந்த அந்தச் சகுனியும் போரில் அங்கே கொல்லப்பட்டிருக்கிறான்.(46) உனது வீரச் சகோதரர்களும், உனது மகன்களும், உன் துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்டிருக்கின்றன. பெரும் வீரம் கொண்டவர்களும், போரில் இருந்து பின்வாங்காதவர்களுமான வேறு பிற மன்னர்களும் கொல்லப்பட்டனர்.(47) இவர்களும், பிற க்ஷத்திரியக் காளைகள் பலரும், திரௌபதியின் குழல்களைப் பற்றிய அந்த இழிபிறவியான பிராதிகாமினும் கொல்லப்பட்டனர்.(48) குலத்தை அழித்தவனும், மனிதர்களில் இழிந்தவனுமான நீ மட்டுமே இன்னும் உயிருடன் இருக்கிறாய். உன்னையும் இன்று என் கதாயுதத்தால் கொல்லப்போகிறேன். இதில் ஐயமேதும் இல்லை.(49) ஓ! மன்னா, இன்றைய போரில் நான் உன் செருக்கைத் தணிப்பேன். அரசுரிமை குறித்த உன் நம்பிக்கை அனைத்தையும் அழித்து, ஓ! மன்னா, பாண்டுவின் மகன்களுக்கு இழைக்கபட்ட குற்றச் செயல்களுக்காகப் பழிதீர்ப்பேன்” என்றான் {பீமன்}.(50)

துரியோதனன் {பீமனிடம்}, “வார்த்தைகள் பலவற்றால் என்ன பயன்? என்னுடன் இப்போது போரிடுவாயாக. ஓ! விருகோதரா {பீமா}, போருக்கான உன் விருப்பத்தை உன்னில் இருந்து இன்று நான் விரட்டுவேன்.(51) ஓ! இழிந்தவனே {பீமா}, மோதலுக்காகக் கதாயுதத்துடன் நின்று கொண்டிருக்கும் என்னை நீ ஏன் காணவில்லையா? இமய மலையின் பாறையைப் போலத் தெரியும் உறுதிமிக்கக் கதாயுதத்தை நான் தரித்திருக்கவில்லையா?(52) ஓ! இழிந்தவனே, இவ்வாயுதத்தைத் தரித்திருக்கும் என்னை வெல்ல எந்த எதிரிதான் துணிவான்? இது நேர்மையான போராக இருந்தால், தேவர்களில் புரந்தரனே ஆனாலும் கூட அந்த எல்லைக்கு {துணிவுறத்} தகுந்தவன் இல்லை.(53) நீ குறிப்பிட்ட என் தீச்செயல்கள் அனைத்திருக்காகவும் (இப்போதும் கூட) உன்னால் எனக்குச் சிறு காயத்தையும் ஏற்படுத்திவிட முடியாது.(54) நான், என் பலத்தைப் பயன்படுத்தி உங்கள் அனைவரையும் காட்டில் வசிக்கவும், தலைமறைவாக மாறுவேடங்களில் இருக்கவும் செய்தேன்.(55) உங்களின் நண்பர்களும், கூட்டாளிகளும்கூடக் கொல்லப்பட்டிருக்கின்றனர். எங்கள் இழப்பும் அதற்கு இணையானதே. இப்போது இந்தப் போரில் நான் வீழ்ந்தாலும் அஃது உயர்வாகப் புகழத்தக்கதாகவே இருக்கும். ஒருவேளை காலமேகூட அதற்குக் காரணமாக அமையலாம்.(56) இந்த நாள் வரை, போர்களத்தில் நேர்மையான போரில் ஒருபோதும் நான் வீழ்த்தப்பட்டதில்லை. வஞ்சகத்தால் என்னை நீ வீழ்த்தினால், உனக்குப் புகழ்க்கேடு எப்போதும் நிலைதிருக்கும் என்பது நிச்சயம். அந்த உனது செயல் நியாயமற்றதும், இழிவானதுமாகும் என்பதில் ஐயமில்லை.(57) ஓ! குந்தியின் மகனே, நீரில்லா கூதிர்கால மேகத்தைப் போல இவ்வாறு கனியில்லாமல் {பலனில்லாமல்} முழங்காதே. உன் பலமனைத்தையும் இப்போது போரில் காட்டுவாயாக” என்றான் {துரியோதனன்}.(58)

அவனது இந்த வார்த்தைகளைக் கேட்டவர்களும் வெற்றியில் உள்ள விருப்பத்தால் உந்தப்பட்டவர்களுமான பாண்டவர்களும், சிருஞ்சயர்களும் அவற்றை உயர்வாக மெச்சினார்கள்.(59) கரங்களைத் தட்டி மதங்கொண்ட யானையைத் தூண்டும் மனிதர்களைப் போல, அவர்கள் (தங்கள் புகழுரைகளாலும், உற்சாகமூட்டல்களாலும்) மன்னன் துரியோதனனை மகிழ்வுறச் செய்தனர்.(60) அங்கே இருந்த யானைகள் மீண்டும் மீண்டும் பிளிறவும், குதிரைகள் மீண்டும் மீண்டும் கனைக்கவும் தொடங்கின. வெற்றியடையும் விருப்பத்தால் உந்தப்பட்ட பாண்டவர்களின் ஆயுதங்கள் தன்னொளியாலேயே ஒளிர்ந்து கொண்டிருந்தன” {என்றான் சஞ்சயன்}.(61)

பலராமன் வருகை! – சல்லிய பர்வம் பகுதி – 34-கதாயுத்தம் தொடங்குமுன் அங்கே வந்த பலராமன்; பலராமனை முறையாக வரவேற்ற பாண்டவர்கள்; அனைவரும் அமர்ந்ததும் கதாயுதப் போர் தொடங்கியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்ம பாண்டவர்கள் அனைவரும் அமர்ந்த பின்னர், உண்மையில் அந்தக் கடும்போர் தொடங்கப்போகும் தருணத்தில்,(1) பனைமரக் கொடியைக் கொண்டவனும், கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்டவனுமான ராமன் {பலராமன்}, தன் சீடர்களான அந்த இரு வீரர்களுக்கிடையில் நடக்கப்போகும் போரைக் கேள்விப்பட்டு அந்த இடத்திற்கு வந்தான்.(2) கேசவனுடன் {கிருஷ்ணனுடன்} கூடிய பாண்டவர்கள், அவனைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்து, அவனை நோக்கி விரைந்து முறையான சடங்குகளுடன் அவனை {பலராமனை} வழிபட்டு வரவேற்றனர்.(3) அவர்களது வழிபாடு முடிந்ததும், ஓ! மன்னா, அவர்கள் அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள், “ஓ! ராமரே, உமது சீடர் இருவரின் போர்த்திறன்களைக் காண்பீராக” {என்றனர்}.(4)

அப்போது ராமன் {பலராமன்}, கிருஷ்ணன் மற்றும் பாண்டவர்கள் மீது தன் கண்களைச் செலுத்தி, அங்கே கதாயுதத்துடன் நின்றிருந்த குருகுலத்து துரியோதனனையும் கண்டு,(5) “நான் வீட்டைவிட்டுச் சென்றதிலிருந்து நாற்பத்திரண்டு நாட்கள் கடந்திருக்கின்றன. புஷ்ய {பூசம்} நட்சத்திரக்கூட்டத்தின் கீழ் புறப்பட்ட நான் சிரவணத்தில் {திருவோணம்} திரும்பியிருக்கிறேன்[1]. ஓ! மாதவா {கிருஷ்ணா}, நான், என் சீடர்கள் இருவருக்கிடையிலான மோதலைக் காண விரும்புகிறேன்” என்றான்.(6) அந்நேரத்தில் வீரர்களான துரியோதனன் மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரும் கதாயுதங்களுடன் களத்தில் பிரகாசமாக நின்று கொண்டிருந்தனர்.(7) கலப்பையை ஆயுதமாகக் கொண்டவனை {பலராமனைத்} தழுவிக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், அவனது நலத்தை விசாரித்து, அவனை வரவேற்றான்.(8)

இரு பெரும் வில்லாளிகளான அந்தச் சிறப்புமிக்கக் கிருஷ்ணர்கள் {அதாவது கருப்பர்களான வாசுதேவன் மற்றும் அர்ஜுனன் ஆகியோர்} இருவரும், மகிழ்ச்சியால் நிறைந்து, கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட அந்த வீரனை {பலராமனை} உற்சாகமாக வணங்கி அவனைத் தழுவிக் கொண்டனர்.(9) அதேபோலவே, மாத்ரியின் மகன்கள் இருவரும் {நகுலன் மற்றும் சகாதேவனும்}, திரௌபதியின் மகன்கள் ஐவரும், பெரும்பலம் கொண்டவனான அந்த ரோகிணியின்மகனை {பலராமனை} வழிபட்டு, (மரியாதையுடன் ஒரு குறிப்பிட்ட தொலைவில்) நின்றனர்.(10) பெரும் பலத்தைக் கொண்டவனான பீமசேனனும், உமது மகனும் {துரியோதனன்}, (தங்கள் கரங்களில் இருந்த) கதாயுதங்கள் இரண்டையும் உயர்த்தி, அந்தப் பலதேவனை {பலராமனை} வழிபட்டனர்.(11) பிற மன்னர்கள் அனைவரும் ராமனுக்கு {பலராமனுக்கு} மரியாதை செலுத்தி வரவேற்று, அவனிடம், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, இம்மோதலைக் காண்பீராக” என்றனர். இவ்வாறே அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் உயர் ஆன்மா கொண்டவனான ரோகிணியின் மகனிடம் {பலராமனிடம்} சொன்னார்கள்.(12)

அளவிலா சக்தி கொண்டவனான ராமனும், பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சர்களைத் தழுவிக் கொண்டு, (பிற) மன்னர்கள் அனைவரின் நலத்தையும் குறித்து விசாரித்தான். அதேபோலவே, அவனை அணுகிய அவர்கள் {பிற மன்னர்கள்} அனைவரும் அவனது நலத்தைக் குறித்து விசாரித்தனர்.(13) கலப்பையைக் கொண்ட அந்த வீரன், அந்த உயர் ஆன்ம க்ஷத்திரியர்களின் வயதுக்கேற்ப மரியாதையாக விசாரித்துப் பதிலுக்கு வணங்கி,(14) ஜனார்த்தனனையும், சாத்யகியையும் அன்புடன் தழுவிக் கொண்டான். அவர்களது தலைகளை முகர்ந்து பார்த்த அவன், அவர்களது நலனையும் விசாரித்தான்.(15) ஓ! மன்னா, அவர்கள் இருவரும், தேவர்களின் தலைவனான பிரம்மனை வழிபடும் இந்திரனையும், உபேந்திரனையும் போலத் தங்களுக்கு மூத்தவனான அவனை முறையாகப் பதிலுக்கு வழிபட்டனர்.(16)

அப்போது தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! பாரதரே, எதிரிகளைத் தண்டிப்பவனான ரோகிணியின் மகனிடம், “ஓ! ராமா {பலராமா}, இரு சகோதரர்களுக்கிடையில் நடக்கும் இந்த அஞ்சத்தக்க மோதலைக் காண்பாயாக” என்றான்.(17) இவ்வாறு அந்தப் பெரும் தேர்வீரர்களால் வழிபடப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களும், பேரழகும் கொண்ட அந்தக் கேசவனின் அண்ணன் {பலராமன்}, அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டான்.(18) நீல நிற ஆடை அணிந்தவனும், வெண்ணிற மேனி கொண்டவனுமான ராமன் {பலராமன்}, அம்மன்னர்களுக்கு மத்தியில் அமர்ந்தபோது, ஆகாயத்தில் பல்லாயிரம் நட்சத்திரங்களால் சூழப்பட்ட சந்திரனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(19) அப்போது உமது மகன்கள் இருவருக்குமிடையில் {துரியோதனன் மற்றும் பீமனுக்கிடையில்}, (பல வருடங்களாகத் தொடரும்) சச்சரவை முடித்து வைப்பதற்காக மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் பயங்கரமான மோதல் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.(20)

சந்திரனும், ரோஹிணியும் – பிரபாஸத் தீர்த்தம்! – சல்லிய பர்வம் பகுதி – 35-பலராமனின் புனிதப்பயணத்தைக் குறித்து வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்; பிரபாஸத்தின் பெயர்க்காரணத்தைச் சொன்ன வைசம்பாயனர்; தக்ஷன் தன் மகள்களைச் சந்திரனுக்கு மணமுடித்துக் கொடுத்தது; ரோகிணியுடன் மட்டும் அதிக அன்புடன் இருந்த சந்திரன்; சந்திரனைச் சபித்த தக்ஷன்; தக்ஷனிடம் பரிகாரம் கேட்ட தேவர்கள்; பிரபாஸத்தை அடைந்து பிணிதீர்ந்த சந்திரன்; உதபானத்தில் மறைந்த சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கடியில் ஓடிக் கொண்டிருப்பதைச் சொல்லும் குறிப்பு…

ஜனமேஜயன் {வியாசரின் சீடரான வைசம்பாயனரிடம்}, “(குருக்களுக்கும் பாண்டுக்களுக்கும் இடையில் நடந்த) அந்தப் பெரும்போர் தொடங்குவதற்கு முன்பு, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} விடைபெற்றுக் கொண்ட தலைவன் ராமன் {பலராமன்}, விருஷ்ணிகள் பலருடன் (துவாரகையிலிருந்து) புறப்பட்டுச் சென்றான்.(1) அவன் கேசவனிடம், “நான் திருதராஷ்டிரன் மகனுக்கோ, பாண்டுவின் மகன்களுக்கோ என் ஆதரவைத் தரமாட்டேன், மாறாக நான் விரும்பும் இடங்களுக்குச் செல்லப்போகிறேன்” என்று சொன்னான்.(2) இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, எதிரிகளைத் தடுப்பவனான ராமன் {பலராமன்} அங்கிருந்து சென்று விட்டான். ஓ! பிராமணரே {வைசம்பாயனரே}, அவனது வருகை குறித்த அனைத்தையும் எனக்கு நீர் சொல்வதே தகும்.(8) ராமன் {பலராமன்} அந்த இடத்திற்கு எவ்வாறு வந்தான், அந்தப் போரை எவ்வாறு கண்டான் என்பதை எனக்கு விரிவாகச் சொல்வீராக. என் கருத்தின்படி நீர் உரைப்பதில் நல்ல திறம் பெற்றவராக இருக்கிறீர்” என்றான் {ஜனமேஜயன்}.(4)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “உயர் ஆன்மப் பாண்டவர்கள் உபப்லாவ்யத்தில் நிலைகொண்ட பிறகு, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {ஜனமேஜயா}, அமைதி நோக்குடனும், அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்வதற்காகவும் மதுசூதனனை {கிருஷ்ணனை} திருதராஷ்டிரன் முன்னிலைக்கு அனுப்பினர்.(5) ஹஸ்தினாபுரம் சென்று திருதராஷ்டிரனைச் சந்தித்த கேசவன் {கிருஷ்ணன்}, உண்மையான, அதிலும் குறிப்பாக நன்மையை விளைவிக்கும் வார்த்தைகளைச் சொன்னான்.(6) எனினும் அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, நான் ஏற்கனவே சொன்னது போலவே அந்த ஆலோசனைகளைக் கேட்கவில்லை.(7) அமைதியை ஏற்படுத்த இயலாதவனும், மனிதர்களில் முதன்மையானவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான கிருஷ்ணன், ஓ! மனிதர்களில் புலியே {ஜனமேஜயனே}, தன் தூது தோல்வியுற்றதும், (பாண்டவ முகாமுக்குத்) திரும்பி, பாண்டவர்களிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(9) “விதியால் உந்தப்படும் கௌரவர்கள் என் வார்த்தைகளை அலட்சியம் செய்கின்றனர். பாண்டவர்களே, என்னுடன் (போர்க்களத்திற்கு) வந்து, புஷ்ய {பூசம்} நட்சத்திரத்தின் கீழ் புறப்படுங்கள்” {என்று கிருஷ்ணன் சொன்னான்}.(10)

அதன்பிறகு, (இரு தரப்பின்) துருப்புகளும் திரட்டப்பட்டு, அணிவகுக்கப்பட்டபோது, மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமையைக் கொண்டவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான ரோகிணியின் மகன் {பலராமன்}, தன் தம்பியான கிருஷ்ணனிடம்,(11) “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! மதுசூதனா, நாம் குருக்களுக்கு ஆதரவளிப்போமாக” என்றான். எனினும் கிருஷ்ணனோ அவனது வார்த்தைகளைக் கேட்கவில்லை.(12) (இதனால்) இதயம் நிறைந்த சினத்துடன் கூடியவனும், கலப்பைதாரியுமான அந்த யதுகுலத்தின் சிறப்புமிக்க மகன் {பலராமன்}, சரஸ்வதிக்குப் {சரஸ்வதி ஆற்றுக்கு} புனிதப் பயணம் புறப்பட்டான்.(13) யாதவர்கள் அனைவரின் துணையுடன் கூடிய அவன், மைத்ரம்[1] என்றழைக்கப்படும் நட்சத்திரக்கூட்டத்தின் கீழ் புறப்பட்டான். எனினும் போஜத் தலைவன் (கிருதவர்மன்) துரியோதனன் தரப்பை அடைந்தான். யுயுதானனின் {சாத்யகியின்} துணையுடன் கூடிய வாசுதேவன் பாண்டவர்களை அடைந்தான்.(14) புஷ்ய நட்சத்திரக்கூட்டத்தின் கீழ் அந்த ரோகிணியின் வீரமகன் {பலராமன்} புறப்பட்ட பிறகு, அந்த மதுசூதனன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களை முன்னணியில் நிறுத்திக் கொண்டு, குருக்களை எதிர்த்துச் சென்றான்.(15)அப்படிச் சென்றபோது ராமன் {பலராமன்} வழியில் தன் பணியாட்களிடம், “புனித பயணத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும், பயன்படக்கூடிய ஒவ்வொரு பொருளையும் கொண்டு வருவீராக. துவாரகையில் இருக்கும் (புனித) நெருப்பையும், நமது புரோகிதர்களையும் கொண்டு வருவீராக. தங்கம், வெள்ளி, பசுக்கள், ஆடைகள், குதிரைகள், யானைகள், தேர்கள், கோவேறுகழுதைகள், ஒட்டகங்கள் மற்றும் பிற இழுவை கால்நடைகளையும் கொண்டு வருவீராக.(17) புனித நீர்நிலைகளில் தற்காலிகமாகத் தங்கும் போது தேவைப்படும் அனைத்தையும் கொண்டு வந்து, சரஸ்வதியை நோக்கிப் பெரும் வேகத்துடன் செல்வோமாக.(18) ரித்விக்குகளையும், நூற்றுக்கணக்கான முதன்மையான பிராமணர்களையும் அழைத்துவருவிராக” என்று பணியாட்களுக்கு ஆணைகளையிட்ட வலிமைமிக்கப் பலதேவன் {பலராமன்},(19) குருக்களுக்குப் பேரிடர் நேர்ந்த அந்நேரத்தில் புனிதப் பயணத்துக்குப் புறப்பட்டான். சரஸ்வதியை நோக்கிப் புறப்பட்ட அவன் {பலராமன்}, அவளது {சரஸ்வதி ஆற்றின்} போக்கில் உள்ள புண்ணியத்தலங்கள் அனைத்துக்கும்,(20) புரோகிதர்கள், நண்பர்கள், பிராமணர்களில் முதன்மையானோர் பலர் ஆகியோருடனும், தேர்கள், யானைகள், குதிரைகள், பணியாட்கள் ஆகியவற்றுடனும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மாடுகள், கோவேறு கழுதைகள் மற்றும் ஒட்டகங்களால் இழுக்கப்பட்ட பல வாகனங்களில் சென்றான்.(21)

பல்வேறு நாடுகளில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, களைத்திருந்தவர்களுக்கும், உடல் இளைத்திருந்தவர்களுக்கும், குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வாழ்வுக்குத் தேவையான பல்வேறு பொருட்கள் பெரும் அளவில் {தானமாகக்} கொடுக்கப்பட்டன.(22) ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிராமணர்கள் விரும்பிய எந்த உணவுவகைகளும் எங்கும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.(23) ரோகிணி மகனின் {பலராமனின்} ஆணைக்கிணங்க, பயணத்தின் வேறு வேறு நிலைகளில், உண்ணத்தக்கவையும், குடிக்கத்தக்கவையும் பெரும் அளவில் சேமிக்கப்பட்டன.(24) விலையுயர்ந்த ஆடைகள், படுக்கைகள், விரிப்புகள் ஆகியன சுகத்தையும், வசதியையும் விரும்பும் பிராமணர்களின் மனநிறைவுக்காக {தானமாகக்} கொடுக்கப்பட்டன.(25) எந்த ஒரு பிராமணனோ, எந்த ஒரு க்ஷத்திரியனோ கேட்ட எந்த ஒரு பொருளும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, மனவெறுப்பில்லாமல் அவனுக்குக் கொடுக்கப்படுவது காணப்பட்டது.(26) அந்தக் குழுவில் இருந்த அனைவரும் பெரும் மகிழ்ச்சியோடு சென்று, மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். (பலராமனைத் தொடர்ந்து சென்ற) மனிதர்கள், பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்கு வாகனங்களையும், தாகத்திலிருந்தோருக்கு பானங்களையும், பசித்தவர்களுக்கு ருசியான உணவுவகைகளையும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பலருக்கு அடைகளையும், ஆபரணங்களையும் {தானமாகக்} கொடுத்தனர்.(27,28)

அந்தக் குழு பயணம் செய்த சாலையானது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிரகாசமானதாக, ஓ! வீரா, அனைவருக்கும் உயர்ந்த வசதியை அளிப்பதாக, சொர்க்கத்துக்கு ஒப்பானதாக இருந்தது.(29) அதில் {அந்த சாலையில்} எங்கும் மகிழ்ச்சி இருந்தது, எங்கும் கொள்ளத்தக்க சுவையான உணவு வகைகளும் இருந்தான. அங்கே கடைகளும், சிறு கடைகளும், இருந்தன, விற்பனைக்குரிய பல்வேறு பொருட்களும் இருந்தன. மேலும் அந்த மொத்த வழியும் {சாலையும்} மனிதர்களால் நிரம்பியிருந்தது. மேலும் அது பல்வேறு வகையான மரங்கள், உயிரினங்கள் மற்றும் பல்வேறு வகையான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(30) கடும் நோன்புகளை நோற்பவனான அந்த உயர்ஆன்ம பலதேவன், ஓ! மன்னா {ஜனமேஜயா}, பல்வேறு புண்ணியத்தலங்களில் பிராமணர்களுக்கு அபரிமிதமான வேள்விப் பொருட்களையும், அதிகமான செல்வத்தையும் {தானமாக} அளித்தான்.(31) அந்த யது குலத் தலைவன் {பலராமன்}, சிறந்த துணிகளால் மறைக்கப்பட்டவையும், தங்கத்தால் பூட்டப்பட்ட கொம்புகளைக் கொண்டவையுமான ஆயிரக்கணக்கான கறவைப்பசுக்களையும்,(32) பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குதிரைகளையும், பல வாகனங்களையும், பல அழகிய பணியாட்களையும் {தானமாக} அளித்தான்.(33) இவ்வாறே அந்த உயர் ஆன்ம ராமன் {பலராமன்}, சரஸ்வதியில் இருந்து பல்வேறு சிறந்த தீர்த்தங்களில் செல்வத்தை {தானமாகக்} கொடுத்தான். ஒப்பற்ற சக்தியும், பெருந்தன்மையுடன் கூடிய நடத்தையையும் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, தன் பயணத்தின் போக்கில் இறுதியாகக் குருக்ஷேத்திரத்தை வந்தடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(34)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, சரஸ்வதியில் உள்ள பல்வேறு தீர்த்தங்களின் குணங்களையும், தோற்றங்களையும், தகுதிகளையும் {புண்ணியப் பலன்களையும்}, தற்காலிகமாக ஆங்காங்கே இருக்கும்போது நோற்கப்பட்ட விதிகளையும் எனக்குச் சொல்வீராக.(35) ஓ! சிறப்புமிக்கவரே, அவற்றை, அவற்றின் வரிசையிலேயே எனக்குச் சொல்வீராக. ஓ! பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, என் ஆவல் அடக்கமுடியாததாக இருக்கிறது” என்று கேட்டான்.(36)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, இந்தத் தீர்த்தங்கள் அனைத்தின் குணங்களும், தோற்றங்களும் பற்றிய கருத்து மிகப்பெரியதாகும். இருப்பினும் நான் உனக்கு அவற்றை விவரிப்பேன். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தப் புனித விவரிப்பை முழுமையாகக் கேட்பாயாக.(37) பலதேவன், தன்புரோகிதர்கள் மற்றும் நண்பர்களின் துணையுடன் முதலில் பிரபாஸம்[2] என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான். காசநோயால் {க்ஷயரோகத்தால்} பாதிக்கப்பட்டிருந்த நட்சத்திரக்கூட்டங்களின் தலைவன் (சோமன்), அங்கே தன் பாவத்தில் இருந்து விடுதலை அடைந்தான். அங்கே சக்தியை மீண்டும் பெற்ற அவன், ஓ! மன்னா, இப்போது அண்டத்திற்கு ஒளியூட்டிக் கொண்டிருக்கிறான். பூமியில் முதன்மையானதான அந்தத் தீர்த்தம், முன்பு (பிரகாசத்தை இழந்திருந்த) சோமனுக்கு {சந்திரனுக்குக்} காந்தியை அளித்ததால், அது பிரபாஸம் என்று அழைக்கப்படுகிறது” {என்றார் வைசம்பாயனர்}.(38,39)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “புகழப்படும் சோமன் {சந்திரன்} காசநோயால் பாதிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? மேலும் அவன் {சந்திரன்} அந்தத் தீர்த்தத்தில் எவ்வாறு நீராடினான்?(40) அந்தப் புனித நீரில் நீராடிய அவன், எவ்வாறு தன் சக்தியை மீண்டும் பெற்றான்? ஓ! முனிவரே, இவை யாவற்றையும் எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்றான்.(41)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, தக்ஷனுக்கு இருபத்தேழு {27} மகள்கள் இருந்தனர். அவர்கள் (திருமணத்திற்காக) சோமனுக்கு அளிக்கப்பட்டனர்.(42) மங்கலமான செயல்களைக் கொண்டவ சோமன் {சந்திரன்}, பல்வேறு நட்சத்திரக்கூட்டங்களான அந்த மனைவியருடன் தொடர்பு கொண்டு மனிதர்கள் காலத்தைக் கணக்கிட தொண்டாற்றினான்.(43) அகன்ற விழிகளைக் கொண்ட அவர்கள் அனைவரும் இவ்வுலகில் அழகில் ஒப்பற்ற அழகைக் கொண்டவர்களாக இருந்தனர். எனினும், ரோகிணியானவள் அழகெனும் செல்வத்தில் அவர்கள் அனைவரிலும் முதன்மையானவளாக இருந்தாள்.(44) புகழத்தக்கவனான சோமன் அவளிடம் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தான். அவள் அவனுக்கு இனிமையானவளானதால், அவளையே இன்பத் துணையாக (பெரும்பாலும்) அவன் அனுபவித்தான்.(45) அந்தப் பழங்கால நாட்களில், ஓ! ஏகாதிபதி, சோமன் ரோகிணியுடன் (அதிக) காலம் வாழ்ந்தான். நட்சத்திரக்கூட்டங்கள் என்றழைக்கப்பட்ட அவனது பிற மனைவியர் இதனால் அந்த உயர் ஆன்மாவிடம் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தனர்.(46)

படைப்புத் தலைவனான அவர்களது தந்தையிடம் (தக்ஷனிடம்) வேகமாகச் சென்ற அவர்கள், அவனிடம், “சோமன் எங்களுடன் வாழவில்லை. அவன் எப்போதும் ரோகிணியுடனேயே இருக்கிறான்.(47) எனவே, ஓ! உயிரினங்களின் தலைவரே, கட்டுப்படுத்தப்பட்ட உணவுமுறை மற்றும் கடும் நோன்புகளை நோற்றபடியே நாங்கள் அனைவரும் உமது தரப்பிலேயே வசிக்கப் போகிறோம்” என்றனர்.(48) அவர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தக்ஷன் (சோமனைக் கண்டு) அவனிடம், “உன் மனைவியர் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வயாக. பெரும்பாவம் உன்னைக் களங்கப்படுத்தாமல் இருக்கட்டும்” என்றான். பிறகு தக்ஷன் தன் மகள்களிடம், “நீங்கள் அனைவரும் சசினிடம் (சந்திரனிடம்} செல்லுங்கள். என் ஆணையின் பேரில் சந்திரமாஸ் உங்கள் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வான்” என்றான்.(50)

அவனால் {தக்ஷனால்} அனுப்பப்பட்ட அவர்கள் குளிர்ந்த கதிர்களைக் கொண்டோனின் {சந்திரனின்} வசிப்பிடத்திற்குச் சென்றனர். அதன்பிறகும் அந்தத் துதிக்கத்தக்க சோமன், ஓ! பூமியின் தலைவா, ரோஹிணியிடம் மட்டுமே நிறைவுகொண்டு, முன்பு போலவே அவளுடனேயே அதிகமாக வாழ்வதைத் தொடர்ந்தான்.(51) அவனது மற்ற மனைவியர் மீண்டும் தங்கள் தந்தையிடம் {தக்ஷனிடம்} சென்று அவனிடம், “உமக்குத் தொண்டு செய்து, உமது ஆசிரமத்திலேயே நாங்கள் வசிக்கப் போகிறோம். சோமன் எங்களோடு வாழவில்லை, உமது ஆணைகளையும் மனத்தில் கொள்ளவில்லை” என்றனர்.(52) அவர்களது வார்த்தைகளைக் கேட்ட தக்ஷன் மீண்டும் சோமனிடம், “உன் மனைவியர் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வாயாக. ஓ! விரோசனா, நான் சபிக்காதிருக்கும்படி நடந்து கொள்வாயாக” என்றான்.(53) எனினும், போற்றுதலுக்குரிய சோமன், அந்தத் தக்ஷனின் வார்த்தைகளை அலட்சியம் செய்து, ரோஹிணியுடன் மட்டுமே வாழ்வதைத் தொடர்ந்தான். இதனால் அவனது பிற மனைவியர் மீண்டும் அவனிடம் கோபமடைந்தனர்.(54) தங்கள் தந்தையிடம் சென்று, தங்கள் சிரங்களைத் தாழ்த்தி வணங்கி, அவனிடம், “சோமன் எங்களுடன் வாழவில்லை. எங்களுக்கு உமது பாதுகாப்பைத் தருவீராக.(55) போற்றுதலுக்குரிய சந்திரமாஸ் எப்போதும் ரோஹிணியுடனேயே அதிகமாக வாழ்கிறார். அவர் உமது வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தராமல், எங்களிடம் எந்த அன்பையும் காட்ட விரும்பவில்லை. எனவே, எங்கள் அனைவரையும் சோமன் ஏற்றுக் கொள்ளும் வகையில் எங்களைக் காப்பீராக” என்றனர்.(56)

போற்றுதலுக்குரிய தக்ஷன், இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கோபமடைந்து, அதன் விளைவாகச் சோமனின் {சந்திரனின்} மீது காசநோயை {க்ஷயரோகத்தைச்}[3] சாபமாக வீசினார். இவ்வாறு நட்சத்திரங்களின் தலைவனுக்கு அந்நோய் ஏற்பட்டது.(57) காசநோயால் {க்ஷயரோகத்தால்} பீடிக்கப்பட்ட சசின் {சந்திரன்} நாளுக்கு நாள் மெலிந்தான் {தேய்ந்தான்}. ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அவன் அந்நோயில் இருந்து விடுபடுவதற்காகப் பல்வேறு வேள்விகளைச் செய்வதன் மூலம் பல முயற்சிகளைச் செய்தான். எனினும் அந்த இரவைச் செய்பவனால் {சந்திரனால்} அச்சாபத்திலிருந்து விடுபட முடியவில்லை. மறுபுறம் அவன் மெலிந்து தேய்ந்து கொண்டே வந்தான்.(58,59) எனினும், சோமன் தேய்ந்து வருவதன் விளைவால், மூலிகைகள் வளரத் தவறின. அவற்றின் சாறுகள் வற்றி, சுவையற்றதாகின. அவை அனைத்தும் தங்கள் தன்மைகளை இழந்தன.(60) மூலிகைகளின் இந்த நலிவின் விளைவால், உயிரினங்களும் சிதைவடையத் தொடங்கின. உண்மையில் சோமன் தேய்ந்து வந்ததன் விளைவால், உயிரினங்கள் அனைத்தும் மெலியத் தொடங்கின.(61)அப்போது தேவர்கள் அனைவரும் சோமனிடம் வந்து, ஓ! மன்னா {ஜனமேஜயா}, “ஏன் உன் வடிவம் (முன்பு போல) அவ்வளவு அழகாகவோ, பிரகாசமாகவோ இல்லை? இந்தப் பேரிடர் எங்கிருந்து வந்தது என்ற காரணத்தை எங்களுக்குச் சொல்வாயாக.(62) உன் பதிலைக் கேட்ட பிறகு, உன் அச்சத்தைப் போக்கத் தேவையானதை நாங்கள் சொல்கிறோம்” என்றனர். இவ்வாறு சொல்லப்பட்டதும், முயலைத் தன் அடையாளமாகக் கொண்ட அந்தத் தேவன் {சந்திரன்}, சாபத்தின் காரணத்தையும், அதனால் காசநோயால் தான் பாதிக்கப்பட்டதையும் அவர்களுக்குச் சொன்னான்.(63) அவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், தக்ஷனிடம் சென்று, “ஓ! போற்றுதலுக்குரியவரே, சோமனிடம் நிறைவு கொள்வீராக. உமது இந்தச் சாபம் விலக்கிக் கொள்ளப்படட்டும்.(64) சந்திரமாஸ் {சந்திரன்} மிகவும் மெலிந்துவிட்டான். அவனது சிறு பகுதி மட்டுமே இப்போது காணப்படுகிறது. ஓ! தேவர்களின் தலைவரே, அவன் தேய்ந்து வருவதால், உயிரினங்கள் அனைத்தும் சிதைவையடைகின்றன.(65) பல்வேறு வகையான மூலிகைகளும் சிதைவையடைகின்றன. அவை சிதைவடைவதால் நாங்களும் சிதைவையடைகிறோம். நாங்கள் இல்லாமல் இந்த அண்டம் என்னவாகும்? ஓ! அண்டத்தின் தலைவரே, இஃதை அறிந்து கொண்டு (சோமனிடம்) மனநிறைவடைவதே உமக்குத் தகும்” என்றனர்.(66)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்த உயிரினங்களின் தலைவன் (தக்ஷன்), தேவர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “என் வார்த்தைகளை வேறு வகையில் ஆகச் செய்வது இயலாது.(67) எனினும், அருளப்பட்டவர்களே சில சூழ்ச்சிகளால் என் வார்த்தைகள் விலக்கப்படலாம். சசின் {சந்திரன்} தனது மனைவியர் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்ளட்டும். தேவர்களே, முயலைத் தன் அடையாளமாகக் கொண்டவன் {சந்திரன்}, சரஸ்வதியில் இருக்கும் அந்த முதன்மையான தீர்த்தத்தில் நீராடினால் மீண்டும் வளர்வான். இந்த என் வார்த்தைகள் உண்மையானவையாகும்.(69) சோமன் {சந்திரன்} அரைமாத காலத்திற்கு ஒவ்வொரு நாளும் தேய்வான், (தொடர்ந்து வரும் அடுத்த) அரை மாத காலத்தில் ஒவ்வொரு நாளும் வளர்வான். இந்த என் வார்த்தைகள் உண்மையானவையாகும்.(70) மேற்குப் பெருங்கடலுடன் சரஸ்வதி சந்திக்கும் இடத்தில் உள்ள அந்த நீர்க்கொள்ளிடத்தில் {பிரபாஸத்தில்}, தேவர்களுக்குத் தேவனை (மகாதேவனை) அவன் துதிக்கட்டும். மீண்டும் அவன் தன் வடிவையும், அழகையும் அடைவான்” {என்றான் தக்ஷன்}.(71)

அந்த (தெய்வீக) முனிவரின் ஆணைக்கிணங்க சோமன் சரஸ்வதிக்கு {சரஸ்வதி ஆற்றுக்குச்} சென்றான். அவன், தீர்த்தங்களில் முதன்மையானதும், சரஸ்வதிக்குச் சொந்தமானதுமான பிரபாஸம் என்று அழைக்கப்படும் அந்தத் தீர்த்தத்தை அடைந்தான்.(72) பெரும் சக்தி கொண்டவனும், பெரும் பிரகாசம் கொண்டவனுமான அந்தத் தேவன் {சந்திரன்}, புதுநிலவில் {அமாவாசையில்} அங்கே நீராடி, தன் குளுமையான கதிர்களை மீண்டும் அடைந்து, உலகங்களுக்கு ஒளியூட்டுவதை மீண்டும் தொடர்ந்தான்.(73) பிரபாஸைக்குச் சென்ற அனைத்து உயிரினங்களும், சோமனைத் தங்களுக்கு மத்தியில் கொண்டு, தக்ஷன் இருக்கும் இடத்திற்குத் திரும்பி வந்தன.(74) அந்த உயிரினங்களின் தலைவன் {தக்ஷன்}, (அவர்களை முறையாக வரவேற்று), அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பினான்.

போற்றுதலுக்குரிய தக்ஷன், சோமனிடம் மனநிறைவு கொண்டு, மீண்டும் அவனிடம்,(75) “ஓ! மகனே, பெண்களை அலட்சியம் செய்யாதே, பிராமணர்களை ஒருபோதும் அவமதிக்காதே. செல்வாயாக, கவனமாக என் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவாயாக” என்று சொன்னான்.(76) அவனால் விடைகொடுத்து அனுப்பப்பட்ட சோமன் தன் வசிப்பிடத்திற்குத் திரும்பினான். அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியால் நிறைந்து முன்பு போலவே வாழத் தொடங்கின.(77) இவ்வாறே, இரவைச் சமைப்பவன் {சந்திரன்} எவ்வாறு சபிக்கப்பட்டான் என்பதையும், தீர்த்தங்கள் அனைத்திலும் பிரபாஸம் எவ்வாறு முதன்மையடைந்தது என்பதையும் குறித்த அனைத்தையும் சொல்லிவிட்டேன்.(78) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, முயலைத் தன் அடையாளமாகக் கொண்ட தேவன் {சந்திரன்}, அடுத்தடுத்த ஒவ்வொரு புதுநிலவிலும் {அமாவாசையிலும்} அந்தச் சிறந்த தீர்த்தமான பிரபாஸத்தில் நீராடி தன் வடிவத்தையும், அழகையும் மீண்டும் அடைகிறான்.(79) ஓ! பூமியின் தலைவா, சந்திரமாஸ் நீராடி தன் பெரும் பிரகாசத்தை (பிரபையை) மீண்டும் அடைந்த காரணத்தினாலேயே அந்தத் தீர்த்தம் பிரபாஸம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.(80)

அதன்பிறகு சிதைவிலா மகிமை கொண்ட வலிமைமிக்கப் பலதேவன் {பலராமன்}, சமஸோத்பேதம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(81) கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, விலையுயர்ந்த பல கொடைகளை அந்த இடத்தில் கொடுத்து, தூய்மைச் சடங்குகளை முறையாகச் செய்து ஓரிரவை அங்கே கடத்தினான்.(82) பிறகு அந்தக் கேசவனின் அண்ணன் {பலராமன்}, உதபானத்திற்கு {உதபானம் என்ற இடத்திற்கு} வேகமாகச் சென்றான். அங்கே சரஸ்வதி தொலைந்துபோனவளாகத் தெரிந்தாலும், அந்த இடத்தில் தாங்கள் அடைந்த பெரும் புண்ணியம் மற்றும் பேரருளின் விளைவால், தவத்தில் வெற்றி மகுடம் சூட்டிக் கொண்ட மனிதர்கள் {சித்தர்கள்}, அங்கே இருந்த மூலிகைகளாலும், அந்த நிலத்தாலும் குளுமையை {நிதானத்தை} அடைந்து, பூமியின் குடல்களுக்குள், கண்ணுக்குத் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஓடையாக அந்த ஆற்றை அறிகிறார்கள்” {என்றார் வைசம்பாயனர்}[4].(83,84)

திரித முனிவரின் மனோவேள்வி – உதபானத் தீர்த்தம்! – சல்லிய பர்வம் பகுதி – 36-ஏகதன், துவிதன் மற்றும் திரிதன் என்ற மூன்று சகோதரர்களின் கதை; பேராசையால் திரிதரை வஞ்சிக்க நினைத்த அவரது சகோதரர்கள்; கிணற்றுக்குள் விழுந்த திரிதர்; சோமரசத்திற்காக மனோவேள்வி செய்த திரிதர்; அவரிடம் நிறைவடைந்த தேவர்கள்; உதபானத் தீர்த்தத்தில் நீராடுவதால் கிடைக்கும் பலன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “(ஏற்கனவே சொன்னது போல) பலதேவன் {பலராமன்}, முன்பொரு சமயம் சிறப்புமிக்க (முனிவரான) திரிதரின் வசிப்பிடமாக இருந்ததும், சரஸ்வதியில் {சரஸ்வதி நதிக்கரையில்} இருப்பதுமான உதபானம் என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(1) கலப்பையை ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, பெரும் செல்வத்தைத் தானமளித்து, பிராமணர்களை வழிபட்டு, அங்கே நீராடி மகிழ்ச்சியால் நிறைந்தான்.(2) அறத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட பெரும் தவசி திரிதர் அங்கேதான் வாழ்ந்திருந்தார். அந்த உயர் ஆன்மா கொண்டவர் {திரிதர்} ஒரு குழியில் {கிணற்றில்} இருந்த போது, சோமச்சாற்றைப் பருகினார்.(3) அவரது சகோதரர்கள் இருவரும், அவரை அந்தக் குழிக்குள் {கிணற்றுக்குள்} விட்டுவிட்டுத் தங்கள் இல்லத்திற்குத் திரும்பினர். பிராமணர்களில் முதன்மையானவரான அந்தத் திரிதர், அவர்கள் இருவரையும் சபித்தார்”.(4)ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “உதபானத்தின்[1] {உபதானம் என்ற அந்தக் கிணற்றின்} தோற்றம் என்ன? அந்தப் பெரும் தவசி அங்கே அந்தக் குழிக்குள் {கிணற்றுக்குள்} எவ்வாறு விழுந்தார்? அந்தப் பிராமணர்களில் முதன்மையனவர் ஏன் தமது சகோதரர்களால் குழிக்குள் விடப்பட்டார்?(5) குழிக்கள் அவரை விட்டு வந்த அவரது சகோதரர்கள் எவ்வாறு தங்கள் இல்லத்திற்குத் திரும்பினர்? திரிதர் தன் வேள்வியை எவ்வாறு செய்தார்? அவர் எவ்வாறு சோமத்தைக் குடித்தார்? ஓ! பிராமணரே, இவை யாவற்றையும் நான் கேட்பது முறையென நீர் நினைத்தால் அவற்றை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(6)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, இதற்கு முந்தைய யுகத்தில், தவசிகளான மூன்று சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் ஏகதன், துவிதன், திரிதன் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் மூவரும் சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்டிருந்தனர்.(7) படைப்பின் தலைவர்களைப் போல இருந்த அவர்கள், பிள்ளைகளுடன் அருளப்பட்டிருந்தனர். பிரம்மத்தை உச்சரிப்பவர்களான அவர்கள், தங்கள் தவங்களால் (இறப்புக்குப் பிறகு) பிரம்மலோகத்தை அடையும் தனிச்சலுகையைப் பெற்றனர்.(8) அறத்தில் எப்போதும் அர்ப்பணிப்புக் கொண்ட அவர்களது தந்தையான கௌதமர், அவர்களது தவங்கள், நோன்புகள், தற்கட்டுப்பாடு ஆகியவற்றால் அவர்களிடம் மிகவும் மனநிறைவு கொண்டவராக இருந்தார்.(9)

போற்றுதலுக்குரிய கௌதமர், தன் மகன்களால் பெரும் மகிழ்வை அடைந்து, அங்கேயே தன் நீண்ட வாழ்நாளைக் கழித்து, இறுதியாகத் தனக்குத் தகுந்த உலகத்தை அடைந்தார்.(10) எனினும், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, கௌதமரின் யஜமானர்களாக {சீடர்களாக} இருந்த மன்னர்கள், அவர் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டாலும், கௌதமரின் மகன்களைத் தொடர்ந்து வழிபட்டனர்.(11) அவர்களில் திரிதர், தன் செயல்கள் மற்றும் (வேத) கல்வியால், அவரது தந்தையான கௌதமரைப் போலவே முதன்மையானவராகத் திகழ்ந்தார்.(12) அறத்தன்மையும், உயர்ந்த அருளையும் கொண்ட தவசிகள் அனைவரும், முன்பு அவரது தந்தையான கௌதமரைத் எவ்வாறு வழிபட்டனரோ அவ்வாறே திரிதரையும் வழிபடத் தொடங்கினர்.(13)

ஒரு சமயம், சகோதரர்களான ஏகதன் மற்றும் துவிதன் ஆகிய இருவரும் செல்வத்தில் ஆவல் கொண்டு ஒரு வேள்வியைச் செய்ய நினைத்தனர்.(14) ஓ! எதிரிகளை எரிப்பவனே, திரிதரைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு, தங்கள் யஜமானர்கள் {சீடர்கள்} அனைவரிடமும் சென்று, தேவையான எண்ணிக்கையில் விலங்குகளைத் {கால்நடைகளைத்} திரட்டிக் கொண்டால்,(15) தாங்கள் இன்பமாகச் சோமச்சாற்றைப் பருகி, வேள்வியின் பெரும் தகுதிகளை {புண்ணியங்களை} அடையலாம் என்பதே அவர்கள் தீட்டிய திட்டமாகும். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த மூன்று சகோதரர்களும் அத்தீர்மானத்தின் படியே செய்தனர்.(16)

உயர் ஆன்மா கொண்ட அந்தப் பெரும் முனிவர்கள், விலங்குகளுக்காக (அவற்றை அடைவதற்காகத்) தங்கள் யஜமானர்கள் {சீடர்கள்} அனைவரிடமும் சென்று, அவர்களின் வேள்விகளில் துணையாக இருந்து, தாங்கள் செய்த புரோகிதத் தொண்டின் விளைவால், பெரும் எண்ணிக்கையிலான விலங்குகளைக் முறையான கொடையாகப் பெற்றுக் கிழக்கை நோக்கிச் சென்றனர்.(17,18) ஓ! மன்னா {ஜனமேஜயா}, திரிதர் உற்சாகமிக்க இதயத்துடன் அவர்களுக்கு முன்பு நடந்து சென்றார். ஏகதனும், துவிதனும் அவருக்குப் பின்னால் விலங்குகளுடன் வந்தனர்.(19) அந்தப் பெரும் விலங்கு மந்தையைக் கண்ட அவர்கள் இருவரும், திரிதருக்கு உரிய பங்கைக் கொடுக்காமல், அதைத் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்வதெவ்வாறு என்று சிந்திக்கத் தொடங்கினர்.(20) ஓ! மன்னா {ஜனமேஜயா}, இழிந்த பாவிகளான அந்த ஏகதன் மற்றும் துவிதன் ஆகிய இருவரும் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டதைக் கேட்பாயாக.(21)

அவர்கள், “திரிதன் வேள்விகளில் துணைபுரிவதில் திறம்பெற்றவனாக இருக்கிறான். திரிதன் வேதங்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும் இருக்கிறான். திரிதன், இன்னும் பல பசுக்களை ஈட்டவல்லவனாவான்.(22) எனவே, நாம் இருவரும் {அவனது பங்கான} பசுக்களை எடுத்துக் கொள்வோம். திரிதன் நம் துணையில்லாமல், தான் தேர்ந்தெடுக்கும் ஓர் இடத்திற்குச் செல்லட்டும்” என்றனர்.(23) அப்படி அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, வழியிலேயே இரவும் வந்தது. அவர்கள் அப்போது தங்கள் முன்பு ஓர் ஓநாயைக் கண்டனர். அந்த இடத்திற்கு அருகிலேயே சரஸ்வதியின் கரையில் ஆழமான குழி {கிணறு} ஒன்று இருந்தது.(24) தன் சகோதரர்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தவரான திரிதர், ஓநாயைக் கண்ட அச்சத்தால் ஓடிச் சென்று அந்தக் குழிக்குள் விழுந்தார்.(25)

அந்தக் குழியானது அடியற்றதாகவும், பயங்கரமானதாகவும், அனைத்துயிரினங்களையும் அச்சுறுத்துவதாகவும் இருந்தது. தவசிகளில் சிறந்தவரான அந்தத் திரிதர், அந்தக் குழிக்கள் இருந்தபடியே துன்ப ஓலமிடத் தொடங்கினார். அவரது இரு சகோதரர்களும் அவருடைய கதறலைக் கேட்டனர்.(26) அவரது சகோதரர்களான ஏகதனும், துவிதனும், அவர் குழிக்குள் விழுந்ததை அறிந்தும்கூட, ஓநாயிடம் கொண்ட அச்சத்தாலும், பேராசையினாலும் தங்கள் சகோதரனைக் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.(27) விலங்குகளை அடையும் பேராசையால் உந்தப்பட்டவர்களான அவரது இரு சகோதரர்களாலும் இவ்வாறு கைவிடப்பட்ட அந்தப் பெரும் தவசியான திரிதர், ஓ! மன்னா, புழுதியாலும்,(28) செடிகொடிகளாலும் நன்கு மறைக்கப்பட்டுத் தனியாக அந்தக் குழிக்குள் இருந்தபோது, ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா}, ஓர் இழிந்த பாவியைப் போல நரகத்திற்குள் மூழ்கியிருப்பவராகத் தம்மை நினைத்துக் கொண்டார்.(29) தாம் இன்னும் சோமச்சாற்றைக் குடிக்கும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டாததல் இறப்பதற்கு அவர் அஞ்சினார். பெரும் ஞானம் கொண்ட அவர், அங்கேயே இருந்து சோமத்தைக் குடிப்பதெவ்வாறு என்று தன் நுண்ணறிவின் துணை கொண்டு சிந்திக்கத் தொடங்கினார்.(30)

அந்தப் பெரும் தவசி {திரிதர்}, அதைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டே அந்தக் குழியில் நின்றிருந்தபோது, வளர்ந்து வரும் கொடியொன்று அங்கே குழிக்குள் {கிணற்றுக்குள்} தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.(31) அந்தக் குழி வறண்டிருந்தாலும், அந்தத் தவசி அதில் நீர் இருப்பதாகவும், வேள்வி நெருப்பு இருப்பதாகவும் கற்பனை செய்தார். தன்னையே ஹோத்ரியாக அமைத்து {கற்பனை செய்து)(32) கொண்ட அந்தப் பெரும் தவசி, தான் கண்ட அந்தக் கொடியைச் சோமச்செடியாக {ஸோமலதையாகக்} கற்பனை செய்தார். பிறகு அவர் (வேள்வி நடத்துவதற்குத் தேவையான) ருக்குக்களையும், யஜுஸுகளையும், சாமங்களையும்[2] மனத்தாலேயே சொன்னார்.(33) திரிதர், (அந்தக் கிணற்றுக்கடியில் கிடக்கும்) கூழாகற்களை (கற்பனையால்) சர்க்கரையாக்கினார். பிறகு அவர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, (மனத்தாலேயே) தன் தூய்மைச் சடங்குகளைச் செய்தார். அவர், (தான் கற்பனை செய்து வைத்திருந்த) நீரை தெளிந்த நெய்யாகக் கண்டார்.(34) (அந்த வேள்விக் கொடையில்) தேவர்களுக்கு அவரவருக்குரிய பங்கை ஒதுக்கினார். அடுத்ததாக அவர், (மனத்தால்) சோமத்தைப் பருகியபடியே உரத்த ஒலியெழுப்பத் தொடங்கினார். ஓ! மன்னா {ஜனமேஜயா}, வேள்வி செய்த அந்த முனிவர் முதலில் உதிர்த்த அவ்வொலிகள் சொர்க்கத்தை அடைந்தன. பிரம்மத்தை உச்சரிப்பவர்கள் விதித்துள்ள முறையின் படியே திரிதர் அவ்வேள்வியை நிறைவும் செய்தார்.(35)உயர் ஆன்ம திரிதர், அந்த வேள்வியைச் செய்து கொண்டிருந்தபோது, தேவலோகம் முழுமையும் கலக்கமடைந்தது. எனினும், எவரும் அதன் காரணத்தை அறியவில்லை. (தேவர்களின் ஆசானான) பிருஹஸ்பதி, (திரிதரால் உண்டான) அந்தப் பேரொலியைக் கேட்டார். அந்தத் தேவர்களின் புரோகிதர் {பிருஹஸ்பதி}, தேவர்களிடம், “திரிதன் ஒரு வேள்வியைச் செய்து கொண்டிருக்கிறான். தேவர்களே நாம் அங்கே செல்ல வேண்டும்.(37) பெரும் தவத்தகுதியைக் கொண்ட அவன் {திரிதன்}, கோபமடைந்தால், வேறு தேவர்களையே உண்டாக்கத் தகுந்தவனாகிவிடுவான்” என்றார்.(38) பிருஹஸ்பதியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, திரிதரின் வேள்வி நடந்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றனர்.(39) அவ்விடத்திற்குச் சென்ற தேவர்கள், அங்கே அந்த வேள்வியில் நிறுவப்பட்டிருக்கும் உயர் ஆன்ம திரிதரைக் கண்டனர்.(40)

பிரகாசமிக்க அழகுடன் கூடிய அந்த உயர் ஆன்மாவைக் கண்ட தேவர்கள் அவரிடம், “(உமது காணிக்கைகளில்) எங்கள் பங்கைப் பெறுவதற்காக நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்” என்றனர்.(41) அந்த முனிவர் அவர்களிடம், “சொர்க்கவாசிகளே, என் புலனுணர்வைக் கிட்டத்தட்ட இழந்த நிலையில் இந்தப் பயங்கரக் கிணற்றுக்குள் கிடக்கும் என்னைப் பாருங்கள்” என்றார்.(42) பிறகு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தத் திரிதர், உரிய மந்திரங்களுடன் தேவர்களுக்கு அவர்களுடைய பங்கை முறையாகக் கொடுத்தார். தேவர்கள், அதைப் பெற்றுக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.(43) அந்தச் சொர்க்கவாசிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை முறையாகப் பெற்று, அவரிடம் மனநிறைவுகொண்டு, அவர் விரும்பிய வரங்களை அவருக்கு அளித்தனர்.(44) அவர், (கிணற்றுக்குள் இருக்கும்) தமது துயர்நிறைந்த நிலையிலிருந்து தம்மை விடுவிக்க வேண்டும் எனும் வரத்தைத் தேவர்களிடம் கேட்டார்.(45)

மேலும் அவர் {திரிதர்}, “இந்தக் கிணற்றில் எவன் நீராடுவானோ, அவன், சோமத்தைப் பருகிய மனிதர்கள் அடையும் முடிவை {கதியை} அடையட்டும்” என்றும் கேட்டார்.(46) இந்த வார்த்தைகளைச் சொன்னதும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கிணற்றுக்குள் சரஸ்வதியே தன் அலைகளுடன் தோன்றினாள். அவளால் உயர்த்தப்பட்ட திரிதர், {கிணற்றுக்கு} மேலே வந்து, அந்தச் சொர்க்க வாசிகளை வழிபட்டார்.(47) அப்போது தேவர்கள் அவரிடம், “நீர் விரும்பியபடியே ஆகட்டும்” என்றனர். பிறகு அவர்கள் அனைவரும் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே சென்றனர். திரிதரும் மகிழ்ச்சியால் நிறைந்து, தன் வசிப்பிடத்திற்குச் சென்றார்.(48)

அங்கே தன் சகோதரர்களான இரு முனிவர்களையும் சந்தித்த அவர், அவர்களிடம் பெருங்கோபம் கொண்டார். பெரும் தவத்தகுதியைக் கொண்ட அவர் {திரிதர்}, அவர்களிடம் கடுஞ்சொற்களைப் பேசி,(49) “பேராசையால் என்னைக் கைவிட்டு ஓடிய உங்கள் பாவச்செயல்களுக்காக என்னால் சபிக்கப்படும் நீங்கள், கூரிய பற்களுடைய கடும் ஓநாய்களாய் மாறி காட்டில் திரிவீர்களாக.(50) மேலும், உங்கள் சந்ததிகள் சிறுத்தைப்புலிகளையும், கரடிகளையும், கருங்குரங்குகளையும் கொண்டவையாக இருக்கும்” என்று சபித்தார். திரிதர் அவ்வார்த்தைகளைச் சொன்னதும், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த உண்மை நிறைந்த முனிவரின் வார்த்தைகளின் விளைவால், அவரது சகோதரர்கள் இருவரும் மிக விரைவாக அந்த வடிவங்களுக்கு {ஓநாய்களாக} மாற்றமடைந்தனர்.(51)

அளவிலா ஆற்றலைக் கொண்ட பலதேவன் {பலராமன்}, உதபானத்தின் {உதபானம் என்ற அந்த இடத்தின்} நீரைத் தீண்டினான். அவன் பல்வேறு வகைகளிலான செல்வத்தைத் தானமளித்து, பிராமணர்கள் பலரை வழிபட்டான்.(52) உதபானத்தைக் கண்டு அதை மீண்டும் மீண்டும் புகழ்ந்த பலதேவன், அடுத்ததாக, சரஸ்வதியிலேயே இருந்த விநாசனத்திற்குச் {விநாசனம் என்ற இடத்திற்குச்} சென்றார்” {என்றார் வைசம்பாயனர்}.(53}

நைமிசத்தில் நுழைந்த சரஸ்வதி! – சல்லிய பர்வம் பகுதி – 37- விநாசனை,ஸுபூமிகை, கந்தர்வம், கர்க்கஸ்ரோதம், சங்கம், துவைதத்தடாகம், நாகதன்வானம் ஆகிய தீர்த்தங்களை அடைந்து, நீராடி, தானமளித்த பலராமன்; கர்க்கரைக் குறித்த சிறு விளக்கம்; நைமிசவனத்தில் நுழைந்த சரஸ்வதி; சரஸ்வதி நதிக்கரையை முழுமையாக ஆக்ரமித்த தவசிகள்; சரஸ்வதி ஆறு திடீரெனக் கிழக்கு நோக்கிப் பாய்ந்து, மீண்டும் மேற்கில் பாய்வதற்கான காரணம்; சப்தசாரஸ்வதத் தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சூத்திரர்கள் மற்றும் ஆபிரர்களின் மேல் சரஸ்வதி கொண்ட வெறுப்பினால் கண்ணுக்குத் தெரியாமல் எங்கு மறைந்து போனாளோ, அந்த விநாசனத்திற்குப் பலதேவன் {பலராமன்} சென்றான்.(1) இத்தகு வெறுப்பின் விளைவால், சரஸ்வதி அந்த இடத்தில் தொலைந்து போனவளாக இருப்பதால், ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா}, முனிவர்கள் எப்போதும் அந்த இடத்தை விநாசனை {விநாசனம்} என்ற பெயரால் அழைக்கின்றனர்[1].(2) சரஸ்வதியின் அந்தத் தீர்த்தத்தில் நீராடிய வலிமைமிக்கப் பலதேவன், அதே ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் சுபூமிகத்திற்கு {சுபூமிகம் என்ற இடத்திற்குச்} சென்றான்.(3) நல்ல நிறத்தையும், அழகிய முகத்தையும் கொண்ட பல அப்சரஸ்கள், எந்த இடைவேளையும் இல்லாமல் தூய தன்மை கொண்ட விளையாட்டுகளில் அங்கே எப்போதும் ஈடுபடுகின்றனர்.(4)

ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {ஜனமேஜயா}, தேவர்களும், கந்தர்வர்களும், பிரம்மனின் ஓய்விடமான அந்தப் புனிதமான தீர்த்தத்திற்கு ஒவ்வொரு மாதமும் செல்கின்றனர்.(5) ஓ! மன்னா, கந்தர்வர்களும், பல்வேறு அப்சரஸ் இனங்களும் ஒன்றாகக் கூடி, தாங்கள் விரும்பியவாறு மகிழ்ச்சியாகத் தங்கள் நேரத்தைக் கடத்துவதை அங்குக் காணலாம்.(6) அங்கே தேவர்களும், பித்ருக்களும், தங்கள் மேல் பொழியப்படும் புனிதமான, மங்கலமான மலர்களுடன் இன்பமாக விளையாடுவர்,(7) அங்கே செடிகொடிகள் அனைத்தும் மலர்க்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஓ! மன்னா, சரஸ்வதியின் அற்புத ஆற்றங்கரையில், அப்சரஸுகளின் அழகிய விளையாட்டுக் களமாக அந்தத் தீர்த்தம் இருப்பதால், அது சுபூமிகை {ஸுபூமிகை} என்று அழைக்கப்படுகிறது.(8) மதுகுலத்தின் பலதேவன், அந்தத் தீர்த்தத்தில் நீராடி, பிராமணர்களுக்கு ஏராளமான செல்வத்தைக் கொடையளித்து, அந்தத் தெய்வீகப் பாடல்கள் மற்றும் இசைக்கருவிகளின் ஒலியைக் கேட்டான்.(9) மேலும் அவன், தேவர்கள், கந்தவர்கள் மற்றும் ராட்சசர்கள் பலரின் நிழல்களையும் அங்கே கண்டான்.

பிறகு அந்த ரோகிணியின் மகன் {பலராமன்}, கந்தர்வர்களின் தீர்த்தத்திற்குச் சென்றான்.(10) விஸ்வாவசுவின் தலைமையிலானவர்களும், தவத்தகுதியைக் கொண்டவர்களும் கந்தர்வர்கள் பலரும், மிக அழகானவகையில் ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் அங்கே இருக்கின்றனர்.(11) அங்கே பல்வேறு வகையான செல்வங்களையும், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், பசுக்கள், கோவேறுகழுதைகள், ஒட்டகங்கள், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றையும் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்து,(12) பிராமணர்கள் பலருக்கு உணவளித்து, அவர்கள் விரும்பிய விலையுயர்ந்த பல பரிசுகளைக் கொடுத்து அவர்களை நிறைவு செய்த மதுகுலத்தின் பலதேவன் {பலராமன்}, பல பிராமணர்கள் சூழ, அவர்களால் துதிக்கப்பட்டபடியே அங்கிருந்து சென்றான்.(13)

ஒரே காது குண்டலத்தைக்[2] கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த எதிரிகளைத் தண்டிப்பவன், கந்தர்வத் தீர்த்ததிலிருந்து புறப்பட்டு, கர்க்கஸ்ரோதம் என்றழைக்கப்படும் புகழ்பெற்ற தீர்த்தத்திற்குச் சென்றான்.(14) அங்கே அந்தப் புனிதமான சரஸ்வதியின் தீர்த்தத்தில், வயதால் மதிப்புமிக்கவரும், தவத்துறவுகளால் ஆன்மத் தூய்மையடைந்தவருமான சிறப்புமிக்கக் கர்க்கர், காலம் மற்றும் அது செல்லும் பாதை, (ஆகாயத்தின்) ஒளிக்கோள்களுடைய மாறுதல்கள், மங்கல மற்றும் அமங்கல சகுனங்கள் அனைத்தின் அறிவையும் அடைந்தார்.(15,16) இந்தக் காரணத்தினாலே அந்தத் தீர்த்தம், அவரது பெயரையே கொண்டு கர்க்கஸ்ரோதம் என்று அழைக்கப்பட்டு வந்தது. ஓ மன்னா {ஜனமேஜயா}, சிறந்த நோன்புகளையும், உயர்ந்த அருளையும் கொண்ட முனிவர்கள், ஓ!தலைவா, காலத்தின் அறிவை அடைந்திருந்த கர்க்கருக்காக அங்கே எப்போதும் காத்திருந்தனர் {பணிவிடை செய்தனர்}[3].(17) வெண்சந்தனக் குழம்பைத் தன் மேனியில் பூசிக்கொண்டு அந்தத் தீர்த்தத்திற்குச் சென்ற பலதேவன், தூய ஆன்மாக்களைக் கொண்ட பல தவசிகளுக்குச் செல்வத்தை முறையாகத் தானமளித்தான்.(18)

நீல ஆடை உடுத்தியிருந்த அந்தச் சிறப்புமிக்கவன், பல வகைகளிலான விலையுயர்ந்த உணவுவகைகளைப் பிராணர்களுக்குக் கொடுத்த பிறகு, சங்கம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(19) பனைமரக் கொடியைக் கொண்ட அந்த வலிமைமிக்க வீரன், அங்கே அந்தச் சரஸ்வதியின் ஆற்றங்கரையில், மஹாசங்கம் என்று அழைக்கப்பட்டதும், மேருவைப் போல நெடிதுயர்ந்ததும், வெண்மைலையைப் போலத் தெரிந்ததும், பல முனிவர்களால் அடையப்பட்டதுமான ஒரு பெரும் மரத்தைக்[4] கண்டான்.(20) அங்கே ஆயிரக்கணக்கான யக்ஷர்களும், வித்யாதரர்களும், அளவிலா சக்தி கொண்ட ராட்சசர்களும், அளவிலா வலிமை கொண்ட பிசாசங்களும், சித்தர்களும் வசித்தனர்.(21) பிற வகை உணவுகளைக் கைவிட்ட அவர்கள் அனைவரும், ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, நோன்புகளையும், ஒழுங்கு கட்டுப்பாடுகளையும் நோற்று, உரிய காலங்களில் அந்தக் கானகத் தலைவனின் {அந்தப் பெரும் மரத்தின்} கனிகளை உண்டு, மனிதர்களால் காணப்படாதவாறு, தனித்தனி குழுக்களாகத் திரிந்து வந்தனர். ஓ! மன்னா, அந்தக் கானகத்தின் ஏகாதிபதி {அந்தப் பெரும் மரம்} இதற்காகவே உலகம் முழுவதும் அறியப்பட்டிருக்கிறான்.(22,23) சரஸ்வதியில் இருக்கும் அந்தத் தீர்த்தமானது {சங்கத் தீர்த்தம்} இக்காரணத்திற்காகவே புனிதமானதாகக்[5] கொண்டாடப்படுகிறது. கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்டவனும், யதுகுலத்தின் புலியுமான அந்தப் பலதேவன், அந்தத் தீர்த்தத்தில் பல கறவை பசுக்களையும், தாமிர மற்றும் இரும்பு பாத்திரங்களையும், பல்வேறு வகைகளிலான பிற பாத்திரங்களையும் தானமளித்து, பிராமணர்களை வணங்கி, பதிலுக்கு அவர்களாளும் வணங்கப்பட்டான்.-பிறகு அவன் {பலராமன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, துவைதத் தடாகத்திற்கு {நைஸர்க்கிகத் தீர்த்தத்திற்குச்}[6] சென்றான்.(24,25) அங்கே வந்த பலன் {பலராமன்}, பல்வேறு வகைகளிலான ஆடைகளில் பல்வேறு வகையான தவசிகளைக் கண்டான். அவன், அதன் நீரில் நீராடி, பிராமணர்களை வழிபட்டான்.(26) மகிழ்ச்சிக்குரிய பல்வேறு பொருட்களைப் பிராமணர்களுக்கு அபரிமிதமாகக் கொடையளித்த பலதேவன், பிறகு சரஸ்வதியின் தென் கரைவழியாகச் சென்றான்.(27)மங்கா மகிமையையும், வலிய கரங்களையும், அற ஆன்மாவையும் கொண்ட அந்தச் சிறப்புமிக்க ராமன் {பலராமன்}, அடுத்ததாக நாகதன்வானம் என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(28) எண்ணற்ற பாம்புகள் நிறைந்த அது, பெரும் காந்தியைக் கொண்ட பாம்புகளின் மன்னன் வாசுகியின் வசிப்பிடமாகும். அங்கே பத்தாயிரத்து நான்கு முனிவர்கள் தங்கள் நிரந்தர வசிப்பிடத்தைக் கொண்டிருந்தனர்.(29) (பழங்காலத்தில்) அங்கே வந்த தேவர்கள், சிறந்த பாம்பான {நாகமான} வாசுகியை அனைத்துப் பாம்புகளின் அரசனாக நிறுவினர். ஓ! குரு குலத்தோனே, அவ்விடத்தில் பாம்புகளால் எந்த அச்சமும் கிடையாது.(30) பிறகு மதிப்புமிக்கப் பல பொருட்களைப் பிராமணர்களுக்குத் தானமளித்த பலதேவன், கிழக்கு நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அடுத்தடுத்த ஒவ்வொரு அடியிலும் தோன்றிய நாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான புகழ்பெற்ற தீர்த்தங்களை அடைந்தான்.(31) அந்தத் தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடி, முனிவர்களால் சொல்லப்பட்ட நோன்புகளையும், நியமங்களையும் நோற்று, அபரிமிதமான செல்வத்தைத் தானமளித்து,(32) அங்கே தங்கள் வசிப்பிடங்களைக் கொண்ட தவசிகள் அனைவரையும் வணங்கிய பலதேவன், கிழக்குத்திசையில் சரஸ்வதி திரும்பும் இடத்தை அடைவதற்காக, காற்றின் செயல்பாட்டால் வழிநடத்தப்படும் மழைத்தாரைகளைப் போல அந்தத் தவசிகளால் சுட்டிக்காட்டப்பட்ட வழியில் சென்றான். அந்த நதியானது, நைமிசவனத்தில் வசிக்கும் உயர் ஆன்ம முனிவர்களைக் காண்பதற்காக அவ்வழியில் சென்றது.(33,34) எப்போதும் வெண்சந்தனக் குழம்பைப் பூசியிருந்தவனும், கதாயுதத்தைத் தன் ஆயுதமாகக் கொண்டவனுமான பலன் {பலராமன்}, ஆறுகளில் முதன்மையான அவள் {சரஸ்வதிதேவி} தன் பாதையை மாற்றிக் கொள்வதைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(35)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பிராமணரே, ஏன் சரஸ்வதி தன் பாதையைக் கிழக்குத் திசையை நோக்கி திருப்பிக் கொண்டாள்? ஓ! அத்வர்யுக்களுள் சிறந்தவரே, இது குறித்த அனைத்தையும் நீர் எனக்குச் சொல்வதே தகும்.(36) யதுக்களைத் திளைக்கச் செய்பவன் {பலராமன்} எக்காரணத்தால் வியப்படைந்தான்? உண்மையில், ஆறுகளில் முதன்மையான அவள் {சரஸ்வதிதேவி} இவ்வாறு தன் பாதையை மாற்றிக் கொண்டது ஏன்?” என்று கேட்டான்.(37)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “முன்பொரு காலத்தில், கிருதயுகத்தில், ஓ! மன்னா, நைமிச வனத்தில் வசிக்கும் தவசிகள் பனிரெண்டு வருடங்கள் நீடிக்கும் மகத்தான வேள்வியைச் செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.(38) ஓ! மன்னா, அந்த வேள்விக்கு வந்த முனிவர்கள் பலராவர். முறையான சடங்குகளுடன் அந்த வேள்வியை நடத்தித் தங்கள் நாட்களைக் கழித்து வந்த பேரருளாளர்கள்,(39) நைமிசத்தில் நடந்த வேள்வியின் அந்தப் பனிரெண்டு வருடங்களையும் நிறைவு செய்து, தீர்த்தயாத்திரை {புனிதநீர்நிலைகளுக்குப் பயணம்} செய்யப் புறப்பட்டனர்.(40) ஓ! மன்னா, முனிவர்களின் எண்ணிக்கையின் விளைவால், சரஸ்வதியின் தென்கரையில் இருந்த தீர்த்தங்கள் அனைத்தும், நகரங்களைப் போலத் தோன்றின.(41) ஓ! மனிதர்களில் புலியே, அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர்கள், தீர்த்தங்களின் தகுதிகளை {புண்ணியங்களை} அனுபவிக்கும் ஆவலின் விளைவால் சமந்தபஞ்சகம் வரை அந்நதியின் கரைகளில் தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டனர்.(42)

வேள்வி நெருப்புகளில் ஆகுதிகளை ஊற்றிக் கொண்டிருந்த தூய ஆன்மா கொண்ட முனிவர்களால் ஓதப்பட்ட வேதப் பேரொலியானது அந்த மொத்தப் பகுதிகளிலும் எதிரொலிப்பதாகத் தெரிந்தது.(43) அந்த உயர் ஆன்ம தவசிகளால் தெளிந்த நெய்யானது ஆகுதியாக ஊற்றப்பட்டதன் விளைவாகச் சுடர்விட்ட ஹோம நெருப்புகளால் அந்த ஆறுகளில் முதன்மையானவள் மிக அழகானவளாகத் தெரிந்தாள்.(44) வாலகில்யர்கள், அஸ்மகுட்டர்கள், தந்தோலூகலினர்கள், சம்பிராக்ஷியானர்கள்,[7] பிற தவசிகள்,(45) காற்றை உண்டு வாழ்ந்தவர்கள், நீரை உண்டு வாழ்ந்தவர்கள், மரங்களின் உலர்ந்த இலைகளை உண்டு வாழ்ந்தவர்கள், பல்வேறு வகையான நோன்புகளை நோற்றவர்கள், படுக்கையைத் துறந்து வெறுந்தரையை ஏற்றுக் கொண்டவர்கள்,(46) ஆகியோர் அனைவரும் சரஸ்வதிக்கு அருகில் இருந்த அந்த இடங்களுக்கு வந்தனர். அவர்கள், மந்தாகினி என்றழைக்கப்படும் தெய்வீக ஓடையை (தங்கள் இருப்பால்) அழகாக்கிய தேவர்களைப் போல அந்த முதன்மையான ஆற்றை {சரஸ்வதி ஆற்றை} மிக அழகானதாக்கினார்கள்.(47)வேள்விகளைச் செய்யத் தங்களை அர்ப்பணித்தவர்களான முனிவர்கள் நூற்றுக்கணக்கில் அங்கே வந்தனர். எனினும், உயரந்த நோன்புகளைப் பயில்பவர்களான அவர்கள் சரஸ்வதி ஆற்றங்களையில் போதுமான இடத்தை அடைவதில் தவறினார்கள்.(48) அவர்கள், தங்கள் புனிதமான நூல்களை {யஜ்ஞோபவீதங்களைக்} கொண்டு, நிலத்தின் சிறு பகுதிகளை அளந்து தங்கள் அக்னிஹோத்ரங்களையும், பல்வேறு பிற சடங்குகளையும் செய்தனர்.(49) தங்கள் சடங்குகளைச் செய்வதில் (அகன்ற தீர்த்தம் வேண்டி) கவலையில் மூழ்கியிருந்த பெரும் எண்ணிக்கையிலான முனிவர்களை அந்தச் சரஸ்வதி கண்டாள். அவர்களின் நிமித்தமாகவே,(50) புனித தவத்தைச் செய்யும் அந்த முனிவர்களிடம் கருணை கொண்ட அந்த முதன்மையான ஓடை {சரஸ்வதி}, ஓ! ஜனமேஜயா, அவ்விடங்களில தனக்கான பல்வேறு வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டாள் {திரும்பினாள்}.(51) இவ்வாறு ஆறுகளில் முதன்மையான அந்தச் சரஸ்வதி, அவர்களின் நிமித்தமாகத் தன் வழியைத் திருப்பிக் கொண்டு, மீண்டும் மேற்கு திசை நோக்கிப் பாய்ந்தாள்.(52)

{அப்படி அவள் மீண்டும் திரும்பும்போது}, “இந்த முனிவர்களின் வருகை பலனற்றுப்போவதைத் தவிர்த்துவிட்டேன், இனி நான் செல்ல வேண்டும்” என்று அவளே சொல்வது போல இருந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, இந்த அற்புதம் நிறைந்த அருஞ்செயல் அந்தப் பெரும் நதியால் அங்கே நிறைவேற்றப்பட்டது.(53) இவ்வாறே, ஓ! மன்னா, அந்த நீர்க்கொள்ளிடங்கள் நைமிசத்தில் {நைமிசவனத்தில்} உண்டாகின. ஓ! குருகுலத்தில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அங்கே அந்தக் குருக்ஷேத்திரத்தில் நீயும் மகத்தான வேள்விகளையும், சடங்குகளையும் செய்வாயாக.(54) நீர்க்கொள்ளிடங்கள் பலவற்றையும், அந்த முதன்மையான நதி தன் பாதையைத் திருப்பிக் கொண்டதையும் கண்ட அந்த உயர் ஆன்ம ராமன் {பலராமன்} ஆச்சரியத்தால் இதயம் நிறைந்தான்.(55) யது குலத்தை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் அவன் {பலராமன்}, அத்தீர்த்தங்களில் முறையாக நீராடி, செல்வத்தையும், மகிழ்ச்சிக்குரிய பல்வேறு பிற பொருட்களையும் பிராமணர்களுக்குத் தானமளித்து,(56) மேலும் அவர்களுக்குப் பல்வேறு வகைகளிலான உணவையும், அவர்களின் விருப்பத்துக்குகந்த பல்வேறு பொருட்களையும் கொடுத்தான்.

அந்த மறுபிறப்பாளர்களால் {பிராமணர்களால்} வழிபடப்பட்ட அந்தப் பலன் {பலராமன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சரஸ்வதியிலுள்ள தீர்த்தங்கள் அனைத்திலும் முதன்மையான (சப்த சாரஸ்வதம் என்ற) தீர்த்ததிற்குப் புறப்பட்டான். இறகு படைத்த எண்ணற்ற உயிரினங்கள் அங்கே தங்கள் இல்லங்களைக் கொண்டுள்ளன. அங்கே அந்தச் சரஸ்வதி ஆற்றங்கரையில் பதரி {இலந்தை}, இங்குதம், காஸ்மாரியம் {ஸ்யாமாகம்}, பிலக்ஷம், அஸ்வதம் {அரசம்}, விபிதகம் {தான்றி}, கக்கோலம் {கங்கோலம்}, பலாசம், கரீரம் {இளமூங்கில்}, பீலு ஆகிய மரங்களும், பல்வேறு பிறவகை மரங்களும் நிறைந்திருந்தன.(57-59) மேலும் அது கரூசகம், வில்வம், ஆம்ராதகம், அதிமுக்தகம், காஷந்தம், பாரிஜாதம் ஆகிய மரங்களைக் கொண்ட காடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(60) காட்சிக்கு இனிமையானதாக, மிக அழகியதாக இருந்த அதில் வாழைத் தோப்புகள் நிறைந்திருந்தன. காற்றையுண்டு வாழும் சிலர், நீரில் வாழும் சிலர், கனியில் வாழும் சிலர், இலைகளில் வாழும் சிலர், உமிநீக்கப்படாத தானியங்களை வெறும் கற்களின் துணை கொண்டு உமி நீக்கி உண்டு வாழும் சிலர் வானேயர்கள் என்று அழைக்கப்பட்ட சிலர் ஆகியோரைக் கொண்ட பல்வேறு தவசிகள் வந்து செல்லும் இடமாக அஃது இருந்தது. மேலும் அது வேதமோதலை எதிரொலித்தபடியே பல்வேறு வகையான விலங்குகள் நிறைந்ததாக இருந்தது.(61-62) அப்பழுக்கற்றவர்களும், அறத்திற்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான மனிதர்களுக்குப் பிடித்தமான இடமாக அஃது இருந்தது. கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட பலதேவன், பெரும் தவசியான மங்கணகர் எங்குத் தன் தவத்தைச் செய்து வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டாரோ அந்தச் சப்தசாரஸ்வதம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்தை வந்தடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(63)

சப்தசாரஸ்வதம்! – சல்லிய பர்வம் பகுதி – 38-சுப்ரபை, காஞ்சனாக்ஷி, விசாலை, மனோரமை, ஓகவதி, சுரேணு, விமலோதகை என ஏழு வடிவங்களாக வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு இடங்களில் தோன்றிய சரஸ்வதி ஆறு; அந்த ஏழு ஆறுகளும் ஒன்று கலந்த சப்தசாரஸ்வதத் தீர்த்தம்; மங்கணகர் வரலாறு; சிவனின் அருள்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஏன் அந்தத் தீர்த்தம் சப்தசாரஸ்வதம் என்றழைக்கப்பட்டது? யாரந்தத் தவசி மங்கணகர்? எவ்வாறு அந்தப் போற்றுதலுக்குரியவர் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டார் {எவ்வாறு சித்தரானார்}? அவரது நோன்புகளும், நியமங்களும் என்ன?(1) அவர் யாருடைய குலத்தில் பிறந்தவராவார்? மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரான அவர் எந்தெந்த புத்தகங்களைப் படித்தார் {எவற்றை அத்யயனம் செய்தார்}? ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, இவையாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, இந்த அண்டத்தை ஏழு சரஸ்வதிகள் மறைக்கின்றன. பெரும் சக்தி மிக்க மனிதர்களால் அந்தச் சரஸ்வதி எங்கெல்லாம் அழைக்கப்பட்டாளோ, அங்கெல்லாம் அவள் தோன்றினாள்.(3) சுப்ரபை, காஞ்சனாக்ஷி, விசாலை, மனோரமை, ஓகவதி, சுரேணு, விமலோதகை ஆகிய இவையே சரஸ்வதியின் ஏழு வடிவங்களாகும்.(4)

ஒரு காலத்தில் பெரும்பாட்டன் {பிரம்மன்} ஒரு பெரும் வேள்வியைச் செய்தான். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிலத்தில் அந்த வேள்வி நடந்து கொண்டிருந்தபோது, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மறுபிறப்பாளர்கள் {பிராமணர்களால்} பலர் அங்கே வந்தனர்.(5) அங்கே பாடப்பட்ட புனிதமான பாடல்களும், ஓதப்பட்ட வேதங்களும் அந்த இடத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. அந்த வேள்விச் சடங்குகளில், தேவர்கள் தங்கள் நிதானத்தை இழந்தனர் (அந்த அளவுக்கு ஆயத்தங்கள் நடந்தன).(6) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தப் பெரும்பாட்டன் வேள்வியில் நிறுவப்பட்டு, செல்வத்தையும், அனைத்து விருப்பங்களையும் அளிக்கவல்ல அந்த மகத்தான விழாவை நடத்திக் கொண்டிருந்தபோது,(7) அறம், பொருள் குறித்த அனைத்தையும் அறிந்த குறிப்பிட்ட சிலர் அங்கே இருந்தனர். ஓ! ஏகாதிபதி, அவர்களுக்குத் தேவையான பொருட்களை அவர்கள் நினைத்தவுடன், அவர்களுக்கு முன்பு அவை உடனே தோன்றின.(8) கந்தர்வர்கள் பாடினர், அப்சரஸ்களில் பல்வேறு இனத்தவர் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்கள் எப்போதும் பல்வேறு தெய்வீக இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டிருந்தனர்.(9) அந்த வேள்வியில் கொணரப்பட்ட பொருட்செல்வத்தில் தேவர்களேகூட மனம்நிறைந்தனர். அப்படியிருக்கையில் மனிதர்களைக் குறித்து நான் என்ன சொல்வது? தேவர்களே கூட ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(10)அந்த வேள்வி புஷ்கரையில் பெரும்பாட்டனின் முன்னிலையில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஓ! மன்னா, முனிவர்கள், “ஆறுகளில் முதன்மையான சரஸ்வதி இங்கே காணப்படாமையால், உயர்ந்த தன்மைகளைக் கொண்ட வேள்வியாக இதைச் சொல்ல முடியாது” என்றனர். இவ்வார்த்தைகளைக் கேட்ட பிரம்மன் உற்சாகமாகச் சரஸ்வதியை நினைத்தான்.(11,12) புஷ்கரையில் வேள்வியைச் செய்து கொண்டிருந்த பெரும்பாட்டனால் {பிரம்மனால்} இவ்வாறு அழைக்கப்பட்ட சரஸ்வதி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சுப்ரபை {ஸுப்ரபை} என்ற பெயரில் அங்கே தோன்றினாள். சரஸ்வதி அந்தப் பெரும்பாட்டனுக்கு விரைவாகச் செலுத்திய அம்மரியாதையைக் கண்ட முனிவர்கள் அந்த வேள்வியை உயர்வாக மதித்தனர்.(14) இவ்வாறே ஆறுகளில் முதன்மையான அந்தச் சரஸ்வதி, பெரும்பாட்டனின் {பிரம்மனின்} நிமித்தமாகவும், அந்த முனிவர்களை மனநிறைவு கொள்ளச் செய்வதற்காகவும் புஷ்கரையில் தோன்றினாள்.(15)(மற்றொரு நேரத்தில்) ஓ! மன்னா, நைமிசத்தில் பல முனிவர்கள் ஒன்றாகக் கூடி அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர். அங்கே வேதங்களைக் குறித்து அவர்களுக்குள் ஆய்வுக்குரிய பல இனிமையான விவாதங்கள் நடந்தன.(16) பல்வேறு சாத்திரங்களை அறிந்தவர்களான அம்முனிவர்கள் வசித்த இடத்தில் அவர்கள் சரஸ்வதியைக் குறித்துச் சிந்தித்தனர்.(17) வேள்வியைச் செய்யும் அம்முனிவர்களால் இவ்வாறு நினைக்கப்பட்டதும், உயர்ந்த அருளைக் கொண்டவளும், புனிதமானவளுமான சரஸ்வதி, அவர்களுக்கு உதவி செய்வதற்காக அந்த உயர் ஆன்ம முனிவர்கள் ஒன்றுதிரண்டிருந்த நைமிசத்தில் தோன்றி காஞ்சனாக்ஷி என்று அழைக்கப்பட்டாள்.(18,19) ஓ! பாரதா, இவ்வாறே அனைவராலும் வழிபடப்பட்ட முதன்மையான ஆறான அவள் அங்கே வந்தாள்.கயாவில் (மன்னன்) கயன் ஒரு பெரும் வேள்வியைச் செய்து கொண்டிருந்தபோது, ஆறுகளில் முதன்மையான அந்தச் சரஸ்வதி அந்தக் கயனின் வேள்வியில் அழைக்கப்பட்டாள் (அவ்வாறே அங்கே தோன்றவும் செய்தாள்). அங்கே இருந்தவர்களான கடும் நோன்புகளை நோற்கும் முனிவர்கள் கயாவில் தோன்றிய அவளது அந்த வடிவத்துக்கு விசாலை என்று பெயரிட்டனர்.(21) அந்த ஆற்றின் வேகமான நீரோட்டம் இமயத்தின் சாரலில் இருந்து பாய்கிறது.

ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஔத்தாலகர் என்பவரும் ஒரு வேள்வியைச் செய்தார்.(22) உயர் ஆன்ம ஔத்தாலகரின் வேள்வி கோசலத்தின் வட பாகத்தில் உள்ள புனிதமான பகுதியில் நடைபெற்றது.(23) முனிவர்களின் பெருங்கூட்டம் அங்கே திரண்டது. ஔத்தாலகர் தன் வேள்வியைத் தொடங்கும் முன்னர்ச் சரஸ்வதியை நினைத்தார். ஆறுகளில் முதன்மையான அவள், அந்த முனிவர்களின் நிமித்தமாக அந்தப் பகுதிக்கு வந்தாள்.(24) மரவுரிகளையும், மான்தோல்களையும் உடுத்தியிருந்த அம்முனிவர்கள் அனைவராலும் வழிபடப்பட்ட அவள், அம்முனிவர்கள் தங்கள் மனத்தால் அழைத்தபடியே மனோரமை என்ற பெயரில் அறியப்படலானாள்.(25)

மேலும் உயர் ஆன்ம குரு, குருக்ஷேத்திரத்தில் ஒரு வேள்வியைச் செய்தபோது, ஆறுகளில் முதன்மையானவளும், உயர்ந்த அருளைக் கொண்டவளுமான சரஸ்வதி அங்கே தோன்றினாள்.(26) ஓ! ஏகாதிபதி, (குருவின் வேள்வியில் உதவி செய்து கொண்டிருந்த) உயர் ஆன்ம வசிஷ்டரால் அழைக்கப்பட்டவளும், தெய்வீக நீர் நிரம்பியவளுமான சரஸ்வதி, அந்தக் குருக்ஷேத்திரத்தில் ஓகவதி எனும் பெயரில் தோன்றினாள்.(27)

ஒரு சமயம் தக்ஷன், கங்கை தோன்றும் இடத்தில் {கங்கோத்ரியில்} ஒரு வேள்வியைச் செய்தான். வேகமாகப் பாயும் சுரேணு எனும் பெயரில் சரஸ்வதி அங்கே தோன்றினாள்.(28)

பிரம்மன் புனிதமான இமயமலைக் காட்டில் மீண்டும் ஒரு வேள்வியைச் செய்தபோது, (அவனால் {பிரம்மனால்}) அழைக்கப்பட்டவளான போற்றுதலுக்குரிய சரஸ்வதி {விமலோதகை என்ற பெயரில்} அங்கே தோன்றினாள்.(29)

இந்த ஏழு வடிவங்கள் அனைத்தும், பலதேவன் {பலராமன்} வந்திருந்த அந்தத் தீர்த்தத்தில் {சப்த சாரஸ்வத்ததில்} ஒன்று கலந்தது. அவ்விடத்தில் {சரஸ்வதியின்} ஏழு வடிவங்கள் ஒன்று கலந்ததால் அந்தத் தீர்த்தப் இப்பூமியில் சப்தசாரஸ்வதம் என்ற பெயரில் அறியப்படுகிறது.(30) இவ்வாறே ஏழு சரஸ்வதிகளையும், அவர்களின் பெயர் வரிசையில் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். மேலும் நான் சப்தசாரஸ்வதம் என்றழைக்கப்படும் அந்தப் புனிதமான தீர்த்தம் குறித்தும் உனக்குச் சொல்லிவிட்டேன்.(31)

இப்போது இளமையில் இருந்தே பிரம்மச்சரிய வாழ்வுமுறையை ஏற்று வாழ்ந்த மங்கணகரின் அருஞ்செயலைக் குறித்துக் கேட்பாயாக. அவர், (ஒரு நாள்) ஆற்றில் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்தபோது,(32) களங்கமற்ற அங்கங்கள் மற்றும் அழகிய புருங்களைக் கொண்ட ஒரு பெண், திறந்த மேனியுடன் அந்நதியில் நீராடிக் கொண்டிருந்தாள். அதைக் கண்டதும், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அம்முனிவரின் உயிர்நீர் சரஸ்வதியில் {சரஸ்வதி நதியில்} விழுந்தது.(33) அந்தப் பெரும் தவசி அஃதை எடுத்து தனது மண்குடத்திற்குள் வைத்தார். அந்தப் பாத்திரத்திற்குள் வைக்கப்பட்ட அந்த உயிர்நீர் ஏழுபகுதிகளாகப் பிரிந்தது.(34) அந்த ஏழு பகுதிகளில் இருந்து ஏழு முனிவர்கள் பிறந்தனர். அவர்களில் இருந்து (நாற்பத்தொன்பது) மருத்துக்கள் தோன்றினர். அந்த ஏழு முனிவர்களும், வாயுவேகன், வாயுபலன் வாயுஹன், வாயுமண்டலன்,(35) வாயுஜாதன் {வாயுஜ்வாலன்}, வாயுரேதஸ், பெரும் சக்தி கொண்ட வாயுசக்கிரன் எனப் பெயரிடப்பட்டனர். இவ்வாறே பல்வேறு மருத்துக்களின் தந்தைமார் தோன்றினர்.(36)

அந்தப் பெரும் முனிவரின் நடத்தை குறித்ததும், பூமியில் மிக அற்புதமானதும், மூவலங்களாலும் நன்கு அறியப்பட்டதுமான ஒரு ஆச்சரியமான காரியத்தை இப்போது கேட்பாயாக.(37) பழங்காலத்தில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த மங்கணகர் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிறகு, ஒரு சந்தர்ப்பத்தில், குசப்புல்லால் {தர்ப்பையால்} அவரது கை துளைக்கப்பட்டது. அதன்பேரில் அந்தக் காயத்தில் இருந்து (சிவப்பான இரத்தம் வராமல்) காய்கறிச்சாறு {சாகரசம் – மூலிகைச்சாறு} வந்தது.(38) அந்த மூலிகைச் சாற்றைக் கண்ட அந்த முனிவர், மகிழ்ச்சியால் நிறைந்து, அந்த இடத்தில் நர்த்தனம் {நடனம்} செய்தார். அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும், அவர் ஆடுவதைக் கண்டு, அவரது சக்தியால் மயக்கமடைந்து ஆடத் தொடங்கின.(39)

அப்போது பிரம்மனின் தலைமையிலான தேவர்களும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும் மகாதேவனிடம் சென்று, ஓ! மன்னா, அந்த (மங்கணக) முனிவரின் செயலைக் குறித்துச் சொன்னார்கள். அவர்கள் அவனிடம் {மகாதேவனிடம்}, “ஓ! தேவா, அம்முனிவரை ஆடுவதிலிருந்து தடுப்பதே உனக்குத் தகும்” என்றனர்.(40) பெரும் மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும் அம்முனிவரைக் கண்ட மகாதேவன் {சிவன்}, தேவர்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தில், அவரிடம் {மங்கணகரிடம்},(41) “ஓ! பிராமணரே, உமது கடமைகளைக் குறித்த அறிந்த நீர் ஏன் இவ்வாறு நர்த்தனம் செய்கிறீர்? ஓ! தவசியே, ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, அறப்பாதையில் நடப்பவரும், தவசியுமான நீர் இவ்வாறு செயல்படும் அளவிற்கு என்ன முக்கியக் காரணத்தால் இவ்வளவு மகிழ்ச்சியை அடைந்திருக்கிறீர்?” என்று கேட்டான்.(42)

அம்முனிவர் {மங்கணகர்}, “ஓ! பாஹ்மணா {சிவனே}[1] என் காயத்தில் இருந்து மூலிகைச் சாறு பாய்வதை நீ காணவில்லையா? ஓ! தலைவா, இதைக் கண்டே நான் பெரும் மகிழ்ச்சியில் நர்த்தனம் செய்கிறேன்” என்றார்.(43) அந்தத் தேவன், அதிக விருப்பத்தால் மயங்கியிருந்த அந்த முனிவரிடம் சிரித்துக் கொண்டே, “நான் இஃதில் எந்த அதிசயத்தையும் காணவில்லை. என்னைப் பார்ப்பீராக” என்றான்.(44) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான மகாதேவன், அந்த முதன்மையான முனிவரிடம் இதைச் சொல்லி, தன் விரல்களின் நுனியைக் கொண்டு தன் கட்டைவிரலை அடித்தான்.(45) அதன்பேரில், ஓ! மன்னா, அக்காயத்தில் இருந்து சாம்பலும், வெண்பணியும் வெளிவந்தன. ஓ! ஏகாதிபதி, இதைக் கண்ட அம்முனிவர் நாணமடைந்து, அந்தத் தேவனின் காலில் விழுந்தார்.(46) வந்தது மகாதேவனைத் தவிர வேறு யாருமில்லை என்பதை அவர் அறிந்து கொண்டார்-ஆச்சரியத்தால் நிறைந்த அவர்{மங்கணகர்}, “பெரியவனும், பரம்பொருளுமான ருத்ரனையன்றி நீ வேறு எவனுமில்லை என நான் நினைக்கிறேன்.(47) ஓ! திரிசூலபாணியே, தேவர்களும், அசுரர்களும் அடங்கிய இந்த அண்டத்தின் புகலிடம் நீயே. இந்த அண்டத்தைப் படைத்தவன் நீயே என ஞானியர் சொல்கின்றனர்.(48) அண்ட அழிவின் {பிரளயத்தின்} போது, மீண்டும் அனைத்தும் உன்னுள் நுழைகின்றன. தேவர்களாலேயே அறியப்பட முடியாதவனான உன்னை நான் மற்றும் அவ்வாறு அறிந்து கொள்வேன்?(49) இந்த அண்டத்தில் உள்ள வடிவங்கள் அனைத்தும் உன்னில் தெரிகின்றன. ஓ! பாவமற்றவனே, பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் வரமருள்பவனான உன்னையே வழிபடுகின்றனர்.(50) அனைத்தும் நீயே. தேவர்களைப் படைத்தவன் நீயே, அவர்கள் படைக்கப்படக் காரணமானவனும் நீயே. தேவர்கள் தங்கள் காலத்தை மகிழ்ச்சியாகவும், முற்றிலும் அச்சமற்ற நிலையிலும் கடத்துவது உன் அருளாலேயே” என்றார். இவ்வாறு அந்த முனிவர் மகாதேவனைத் துதித்து வணங்கினார்.(51)

மேலும், “ஓ! தேவா, நான் வெளிப்படுத்திய இந்த மிக அற்பமான பணிவின்மை என் தவத்தகுதியை அழித்துவிட வேண்டாம். இதற்காக நான் உன்னிடம் வேண்டுகிறேன்” என்று கேட்டார்.(52) அந்தத் தேவன், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், மீண்டும் அவரிடம், “ஓ! பிராமணரே, என் அருளால் உமது தவத்தகுதி ஆயிரம் மடங்காக அதிகரிக்கட்டும். நான் எப்போதும் உம்மோடு இந்த ஆசிரமத்தில் வசித்திருப்பேன்.(53) சப்த சாரஸ்வதம் எனும் இந்தத் தீர்த்தத்தில் என்னை வழிபடும் ஒரு மனிதனால், இவ்வுலகிலும் {இம்மையிலும்}, அடுத்தவுலகிலும் {மறுமையிலும்} அடையமுடியாதது எதுவுமில்லை. அப்படிப்பட்ட ஒருவன் இறந்ததும் (சொர்க்கத்தில்) சாரஸ்வதம் என்றழைக்கப்படும் பகுதிக்குச் {சாரஸ்வதலோகத்துக்குச்} செல்வான் என்பதில் ஐயமில்லை” என்றான் {சிவன்}.(54) இதுவே, அபரிமிதமான சக்தி கொண்டவரான மங்கணகரின் வரலாறாகும். அவர் சுகன்யையிடத்தில் காற்றுத் தேவனால் {வாயுவால்} பெறப்பட்ட மகனாவார்” {என்றார் வைசம்பாயனர்}[2].(55)

மஹோதர ருசங்க முனிகள்! – சல்லிய பர்வம் பகுதி – 39-கபாலமோசனத் தீர்த்தத்தை அடைந்த பலராமன்; முனிவர் மஹோதரரின் வரலாறு; தசரதராமன் வெட்டிய ராட்சசனின் தலை; மஹோதரர் விடுபட்டது; ருசங்கு முனிவரின் தீர்மானம்; பிருதூதகத் தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கலப்பையை ஆயுதமாகக் கொண்டவனான ராமன் {பலராமன்}, அங்கே {சப்தசாரஸ்வதத்தில்} ஓரிரவைக் கழித்து, அந்தத் தீர்த்தத்தில் வசிப்போரை வழிபட்டு, மங்கணகரிடம் தான் கொண்ட மரியாதையைக் காட்டினான்.(1) கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, செல்வத்தைப் பிராமணர்களுக்குத் தானமளித்து, முனிவர்களால் வழிபடப்பட்டு அந்த இரவை அங்கே கடத்தினான்.(2) காலையில் எழுந்து தவசிகள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்ட அவன் {பலராமன்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, புனித நீரைத் தீண்டி பிற தீர்த்தங்களை நோக்கி வேகமாகப் புறப்பட்டான்.(3)-பலதேவன் பிறகு உசனஸ் என்ற பெயரால் அறியப்படும் தீர்த்தத்துக்குச் சென்றான். அது கபாலமோசனம் என்றும் அழைக்கப்படுகிறது. முன்பொரு காலத்தில் (தசரதனின் மகனான) ராமன், ஒரு ராட்சசனைக் கொன்று, அவனது தலையைப் பெரும் தொலைவில் எறிந்தான். அந்தத் தலையானது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, மஹோதரர் என்ற பெயருடைய பெரும் தவசி ஒருவரின் தொடையில் விழுந்து, அதனுடன் ஒட்டிக் கொண்டது {தொடையைக் கவ்விக் கொண்டது}. அந்தப் பெரும் முனிவர் {மஹோதரர்}, அந்தத் தீர்த்தில் நீராடி, அந்தச் சுமையில் இருந்து விடுபட்டார். உயர் ஆன்ம கவி (சுக்கிரன்) இங்கே தன் தவத்தைச் செய்துள்ளார்.(4,5) அங்கேதான் (சுக்கிரனின் பெயரால் அறியப்படும்) அரசியல் மற்றும் நெறிகள் ஆகியவற்றின் மொத்த அறிவியலும் அவருக்கு {சுக்கிரனுக்கு} உள்ளொளியில் தோன்றியது. சுக்கிரன் அங்கே வசித்தபோது, (தேவர்களுடன்) தைத்திய தானவப் போரைக் குறித்துத் தியானித்தார்.(6) தீர்த்தங்களில் முதன்மையான அந்தத் தீர்த்தத்திற்கு வந்த பலதேவன், ஓ! மன்னா, உயர் ஆன்ம பிராமணர்களுக்கு முறையாகத் தானமளித்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(7)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “(ராட்சசன் தலையிடமிருந்து) அந்தப் பெரும் முனிவர் {மஹோதரர்} விடுபட்ட இடம் கபாலமோசனம் என்று ஏன் அழைக்கப்படுகிறது? எந்தக் காரணத்திற்காக, எவ்வாறு அந்தத் தலை அவரிடம் ஒட்டிக் கொண்டது” என்று கேட்டான்.(8)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “முன்பொருசமயம், ஓ! மன்னர்களில் புலியே {ஜனமேஜயா}, (தசரதன் மகனான) உயர் ஆன்ம ராமன், ராட்சசர்களைக் கொல்லும் விருப்பத்தோடு தண்டக வனத்தில் வாழ்ந்தான்.(9) ஜனஸ்தானத்தில் அவன் அந்தத் தீய ஆன்மா கொண்ட ராட்சசனின் தலையைப் பெரும் கூர்மை கொண்ட ஒரு கத்தித் தலைக் கணையால் வெட்டினான். அந்தத் தலையானது ஆழ்ந்த கானகத்தில் சென்று விழுந்தது.(10) மஹோதரர் காட்டில் சென்று கொண்டிருந்தபோது (ஆகாயத்தின் ஊடாக) வந்த அந்தத் தலை அவரது தொடையில் விழுந்தது. ஓ! மன்னா, அவரது தொடையைத் துளைத்து, அதனுடன் ஒட்டிக் கொண்டு அங்கேயே நீடித்திருந்தது.(11) அந்தத் தலை இவ்வாறு அவரது தொடையில் ஒட்டிக் கொண்டதன் விளைவால், பெரும் ஞானம் கொண்ட அந்தப் பிராமணரால் (மஹோதரரால்} தீர்த்தங்களுக்கும், பிற புண்ணியத்தலங்களுக்கும் (எளிதாகச்) செல்ல முடியவில்லை.(12) பெரும் வலியால் பீடிக்கப்பட்டும், தொடையில் அழுகிய ஊனீர் வழிந்து கொண்டும் அவர் {மஹோதரர்} பூமியில் உள்ள தீர்த்தங்கள் அனைத்திற்கும் (ஒன்றன்பின் ஒன்றாகச்) சென்றார் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(13)

அவர் {மஹோதரர்} ஆறுகள் அனைத்திற்கும், பெருங்கடலுக்கும் கூடச் சென்றார். (எந்த நிவாரணத்தையும் காணாத) அந்தப் பெரும் தவசி, தூய ஆன்மாக்களைக் கொண்ட முனிவர்கள் பலரிடம் தனது பாடுகளைக் குறித்தும்,(14)அனைத்துத் தீர்த்தங்களில் நீராடியும் தான் வேண்டிய நிவாரணத்தை அடைய முடியாதது குறித்தும் பேசினார். அப்போது அந்த முதன்மையான பிராமணர், அந்தத் தவசிகளிடம் இருந்து முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைகளைக் கேட்டார்.(15) சரஸ்வதியில், முதன்மையான தீர்த்தமாக அமைந்திருப்பதும், அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுவிக்கவல்லதும், உசனாஸம் என்ற பெயரில் அறியப்படுவதும், (தவ) வெற்றியை அடைய சிறந்த இடமுமான அந்தத் தீர்த்தத்தைக் குறித்துக் கேள்விப்பட்டார்.(16) பிறகு அந்த ஔசனஸ {உசனஸ} தீர்த்தத்திற்குச் சென்ற அந்தப் பிராமணர் அங்கே அதன் நீரில் நீராடினார். அதன் பேரில் அந்த ராட்சசனின் தலையானது, அவனது தொடையை விட்டகன்று நீரில் விழுந்தது.(17) அந்த (உயிரில்லா) தலையிடம் இருந்து விடுபட்ட அந்த முனிவர் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தார். அந்தத் தலையைப் பொறுத்தவரால், அஃது அந்த நீரில் தொலைந்து போனது.(18)ஓ! மன்னா {ஜனமேஜயா}, ராட்சசனின் தலையிடம் இருந்து விடுபட்ட அந்த மஹோதரர், தூய்மையாக்கப்பட்ட ஆன்மாவோடும், தன் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டும், வெற்றியை அடைந்து தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(19) இவ்வாறு விடுபட்ட அந்தப் பெரும் தவசி, தன் புனிதமான ஆசிரமத்திற்குத் திரும்பியதும், தூய ஆன்மாக்களைக் கொண்ட அந்த முனிவர்களிடம் என்ன நடந்தது என்பதைக் குறித்துப் பேசினார்.(20) அங்கே கூடியிருந்த முனிவர்கள், அவரது வார்த்தைகளைக் கேட்டு, அந்தத் தீர்த்தத்திற்குக் கபாலமோசனம் என்ற பெயரை அளித்தனர்.(21) அந்தப் பெரும் முனிவர் மஹோதரர், மீண்டும் அந்த முதன்மையான தீர்த்தத்திற்கு {ஔசனஸம் [அ] உசனஸம் என்ற தீர்த்ததிற்குச்} சென்று, அதன் நீரைப் பருகி, பெரும் தவ வெற்றியை அடைந்தார்.(22)

அந்த மதுகுலத்தோன் {பலராமன்}, பிராமணர்களுக்குப் பெரும் செல்வத்தைத் தானமளித்து, அவர்களை வழிபட்ட பிறகு, ருசங்குவின் {உசங்குவின்} ஆசிரமத்திற்குச் சென்றான்.(23) முன்பொருகாலத்தில் அங்கே, ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஆர்ஷ்டிஷேணர் கடுந்தவங்களைச் செய்துவந்தார். அங்கேதான் (முன்பு க்ஷத்திரியராக இருந்த) பெரும் முனிவரான விஷ்வாமித்திரர் பிராமணரானார்.(24) அந்தப் பெரும் ஆசிரமம், அனைத்து விருப்பங்களுக்கும் கனியை அருளவல்லதாகும். ஓ! தலைவா, அஃது எப்போதும் முனிவர்கள் மற்றும் பிராமணர்களின் வசிப்பிடமாக இருந்தது.(25) பிராமணர்களால் சூழப்பட்டவனும், பேரழகனுமான பலதேவன் {பலராமன்}, முன்பொரு காலத்தில் ருசங்கு எங்குத் தன் உடலை விட்டாரோ அங்கே அந்த இடத்திற்குச் சென்றான்.(26)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, ருசங்கு, எப்போதும் கடுந்தவத்துக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த ஒரு முதிய பிராமணராவார். தன் உடலைக் கைவிடத் தீர்மானித்த அவர், நீண்ட காலமாக அதுகுறித்து ஆலோசித்திருந்தார்.(27) பெரும் தவத்தகுதியைக் கொண்ட அவர், தன் மகன்கள் அனைவரையும் அழைத்து, நீரானது அபரிமிதமாக இருக்கும் இடத்திற்குத் தன்னைக் கொண்டு போகச் சொன்னார்.(28) தங்கள் தந்தை மிகவும் முதிர்ந்துவிட்டதை அறிந்த அந்தத் தவசிகள், அவரைச் சரஸ்வதியில் இருக்கும் ஒரு தீர்த்தத்திற்குக் கொண்டு சென்றனர்.(29) நூறு தீர்த்தங்களைக் கொண்டவளும், உலகுடன் தொடர்பில்லாத முனிவர்கள் வசித்த கரைகளைக் கொண்டவளுமான புனிதமான சரஸ்வதியிடம் தம் மகன்களால் கொண்டுவரப்பட்டவரும், கடுந்தவங்களைச் செய்தவரும், தீர்த்தங்களின் தகுதிகளை {புண்ணியங்களைக்} குறித்து அறிந்தவரும், முனிவர்களில் முதன்மையானவருமான அந்த நுண்ணறிவுமிக்கத் தவசி {ருசங்கு}, முறையான சடங்குகளின்படி அந்தத் தீர்த்தத்தில் நீராடி, ஓ! மனிதர்களில் புலியே, கடமையுணர்வுடன் தமக்காகக் காத்திருந்த தமது மகன்கள் அனைவரிடமும் இந்த வார்த்தைகளை உற்சாகமாகச் சொன்னார்:(30,31) “புனிதமான மந்திரங்களை மனத்தில் ஓதிக் கொண்டிருக்கும்போது, அபரிமிதமான நீரைக் கொண்ட சரஸ்வதியின் வடகரையில் தன் உடலைக் கைவிடும் ஒருவன், மீண்டும் ஒருபோதும் இறப்பால் பீடிக்கப்படமாட்டான் {மறுபிறவி அடையமாட்டான்}” என்றார்.(32)

அற ஆன்மா கொண்ட பலதேவன் அத்தீர்த்தத்தின் {ருசங்கு} நீரைத் தீண்டி, அதில் நீராடி, பிராமணர்களிடம் அர்ப்பணிப்புக் கொண்டவனான அவன் அவர்களுக்கு மிகுதியான செல்வத்தைக் கொடுத்தான்.(33) பெரும் வலிமையையும், பெரும் ஆற்றலையும் கொண்ட அந்தப் பலதேவன், போற்றுதலுக்குரிய பெரும்பாட்டன் {பிரம்மன்} எங்கு லோகாலாகம் என்ற மலைகளை உண்டாக்கினானோ, கடும் நோன்புகளைக் கொண்டவரும், முனிவர்களில் முதன்மையானவருமான ஆர்ஷ்டிஷேணர் கடுந்தவங்களைச் செய்து எங்குப் பிராமணத் தன்மையை அடைந்தாரோ, அரசமுனியான சிந்துத்வீபனும், பெரும் தவசியான தேவாபியும், போற்றுதலுக்குரியவரும், கடுந்தவத்தையும், கடும் சக்தியையும் கொண்டவருமான சிறப்புமிக்க முனிவர் விஷ்வாமித்திரரும் எங்கு அதே நிலையை {பிராணத்தன்மையை} அடைந்தனரோ அந்தத் தீர்த்தத்திற்கு {பிருதூதகத் தீர்த்தத்திற்குச்} சென்றான்[1]” {என்றார் வைசம்பாயனர்}.(34-36)

பிராமணரான க்ஷத்திரியர்கள்! – சல்லிய பர்வம் பகுதி – 40-பிருதூதகத் தீர்த்ததிற்கு வரமருளிய ஆர்ஷ்டிஷேணர்; க்ஷத்திரியர்களான சிந்துத்வீபர், தேவாபி மற்றும் விஷ்வாமித்திரர் ஆகியோர் பிருதூதகத் தீர்த்தில் தவம் செய்து நீராடி பிராமண நிலையை அடைந்தது; அங்கிருந்து பக தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “போற்றுதலுக்குரிய ஆர்ஷ்டிஷேணர் ஏன் கடுந்தவங்களைச் செய்தார்? சிந்துத்வீபர் எவ்வாறு பிராமணத் தன்மையை அடைந்தார்?(1) ஓ! பிராமணரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, தேவாபியும், விஷ்வாமித்திரரும் எவ்வாறு அதே நிலையை அடைந்தனர்? ஓ! போற்றுதலுக்குரியவரே, இவையாவற்றையும் கேட்கும் ஆவல் எனக்குப் பெரிதாக இருக்கிறது” என்று சொன்னான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “முன்பொரு சமயம், கிருதயுகத்தில், ஓ! மன்னா, ஆர்ஷ்டிஷேணர் என்றழைக்கப்பட்ட மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர் ஒருவர் இருந்தார். அவர், தமது ஆசானின் இல்லத்தில் வசித்து, தினமும் பாடங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.(3) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவர் தமது ஆசானின் இல்லத்தில் நெடுங்காலம் வசித்திருந்தாலும், ஓ! ஏகாதிபதி, வேதங்களிலும், அறிவின் எந்தத் துறையிலோ திறன் எதையும் அடைய முடியவில்லை.(4) ஓ! மன்னா, இதனால் பெரும் ஏமாற்றமடைந்த அந்தத் தவசி மிகக் கடுமையான தவங்களைச் செய்தார். அவர் தமது தவத்தின் மூலம் ஒப்புவமையற்ற வேதங்களில் தேர்ச்சி பெற்றார்.(5) பெரும் கல்வியையும், வேதங்களில் தேர்ச்சியையும் அடைந்த அந்த முனிவர்களில் முதன்மையானவர் {ஆர்ஷ்டிஷேணர்}, அந்தத் தீர்த்தத்தில்தான் {பிருதூதகத் தீர்த்தத்தில் தான்} வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டார். அந்த இடத்தில் அவர் மூன்று வரங்களை அளித்தார்.(6) அவர், “இன்று முதல், இந்தப் பெரும் நதியின் (சரஸ்வதியின்) இந்தத் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன், குதிரை வேள்வியின் {அஸ்வமேதயாகத்தின்} பெருங்கனியை {பெரும்பலனை} அடைவானாக.(7) இன்று முதல், இந்தத் தீர்த்தத்தில் பாம்புகளினாலோ, காட்டு விலங்குகளாலோ எந்த அச்சமும் ஏற்படாது. {மேலும் இங்கே வந்து தவம் செய்யும்} சிறு முயற்சிகளிலேயே ஒருவன் இந்தப் பெரும் விளைவை இங்கே அடையலாம்” என்று வரமளித்தார் {ஆர்ஷ்டிஷேணர்}.(8) பெரும் சக்தியைக் கொண்ட அந்த முனிவர் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றார். இவ்வாறே போற்றுதலுக்குரிய ஆர்ஷ்டிஷேணர் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டார்.(9)

கிருதயுகத்தில், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெரும் சக்தி கொண்ட சிந்துத்வீபரும், தேவாபியும் கூட உயர்ந்த நிலையான பிராமணத் தன்மையை இந்தத் தீர்த்தத்திலேயே அடைந்தனர். அதே போல, புலன்களை அடக்கிக் கடுந்தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த குசிகரின் மகனும் {விஷ்வாமித்திரரும்} கூட, நல்ல தவம் பயின்று பிராமணத் தன்மையை அடைந்தார்.(11) காதி என்ற பெயரில் அறியப்பட்டு உலகத்தில் கொண்டாடப்பட்ட பெரும் க்ஷத்திரியர் ஒருவர் இருந்தார். அவருக்கு விஷ்வாமித்திரர் என்ற பெயரில் பேராற்றல் படைத்த மகனொருவர் பிறந்தார்.(12) அந்த மன்னன் கௌசிகர் {காதி} பெரும் தவசியாக ஆனார். பெரும் தவத்தகுதியைக் கொண்ட அவர், தம்முடலைக் கைவிடத் தீர்மானித்து, தமது மகனான விஷ்வாமித்திரரை அரியணையில் நிறுவ விரும்பினார்.(13) அவரது குடிமக்கள் அவரை {காதியை} வணங்கி, “ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, பேரசச்சத்திலிருந்து எங்களைப் பாதுகாப்பீராக. எங்களை விட்டுச் செல்லாதீர்” என்றனர்.(14) இவ்வாறு சொல்லப்பட்ட காதி, தன் குடிகளிடம், “என் மகன் {விஷ்வாமித்திரன்}, இந்தப் பரந்த அண்டத்தின் பாதுகாவலனாக இருப்பான்” என்றார்.(15)

இவ்வார்த்தைகளைச் சொன்ன காதி, (விஷ்வாமித்திரரை) அரியணையில் அமர்த்தி, சொர்க்கத்திற்குச் சென்றார், விஷ்வாமித்திரரும் மன்னனானார். இருப்பினும், அவர் சிறப்பாக முயன்றும்கூட அவரால் உலகத்தைக் காக்க முடியவில்லை.(16) அப்போது அந்த மன்னன் {விசுவாமித்திரர்}, (தன் நாட்டில்) ராட்சசர்களால் ஏற்படும் பேரச்சத்தைக் குறித்துக் கேள்விப்பட்டார். அவர், தமது நால்வகைப் படைகளுடன் தமது தலைநகரைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.(17) அவர்  {விசுவாமித்திரர்}, தமது வழியில் வெகு தூரம் சென்று வசிஷ்டரின் ஆசிரமத்தை அடைந்தார். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவரது துருப்புகள் அங்கே அதிக முறைகேடுகளைச் செய்தனர்.(18) போற்றுதலுக்குரிய பிராமணரான வசிஷ்டர், தமது ஆசிரமத்திற்கு வந்தபோது, அந்தப் பரந்தகாடு அழிக்கப்படுவதைக் கண்டார்.(19) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! ஏகாதிபதி, முனிவர்களில் சிறந்தவரான அந்த வசிஷ்டர், விஷ்வாமித்திரரிடம் கோபம் கொண்டார்.

அவர் {வசிஷ்டர்} தமது (ஹோமப்) பசுவிடம், “பெரும் எண்ணிக்கையிலான சபரர்களை உண்டாக்குவாயாக” என்று ஆணையிட்டார்.(20) இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பசு, அச்சந்தரும் முகத்தோற்றங்களையுடைய பெரும் மனிதக்கூட்டத்தை உண்டாக்கியது. அவர்கள் விஷ்வாமித்திரரின் படையுடன் மோதி, எங்கும் பேரழிவை ஏற்படுத்த தொடங்கினர்.(21) இதைக் கண்ட துருப்புகள் அங்கிருந்து தப்பி ஓடின. எனினும், காதியின் மகனான விஷ்வாமித்திரர், துறவும், தவமும் எதிர்பார்க்கும் விளைவுகளைத் தருவதாகக் கருதி, அவற்றின் மேல் தமது இதயத்தை நிலைநிறுத்தினார்.(22) சரஸ்வதியின் இந்த முதன்மையான தீர்த்தத்தில்தான், ஓ! மன்னா {ஜனமேஜயா} அவர், நோன்புகள் மற்றும் உறுதியான தீர்மானத்துடன் கூடிய உண்ணாநோன்புகள் ஆகியவற்றால் தமது உடல் மெலியத் தொடங்கினார்.(23) அவர் {விஷ்வாமித்திரர்} நீரையும், காற்றையும், மரங்களின் (மரங்களில் இருந்து விழுந்த) இலைகளையும் தன் உணவாக்கிக் கொண்டார். அவர் வெறுந்தரையில் உறங்கி (தவசிகளுடன் சேர்ந்து) பிற நோன்புகளையும் நோற்றார்.(24)

அவரது நோன்புகள் நோற்பதைத் தடுக்கத் தேவர்கள் மீண்டும் மீண்டும் முயற்சித்தனர். எனினும் அவரது இதயம் (தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்ட) நோன்புகளில் இருந்து பிறழவில்லை.(25) அப்போது, பெரும் அர்ப்பணிப்புடன் பல்வேறு வகையான தவங்களைப் பயின்ற அந்தக் காதியின் மகன் {விஷ்வாமித்திரர்} சூரியனைப் போலப் பிரகாசமிக்கவரானார்.((26) வரமருள்பவனான பெரும்பாட்டன் {பிரம்மன்}, தவத்தகுதி கொண்ட விஷ்வாமித்திரர் வேண்டிய வரத்தை அருளத் தீர்மானித்தான்.(27) விஷ்வாமித்திரர், தாம் ஒரு பிராமணராக அனுமதிக்கபட வேண்டும் என்ற வரத்தை] வேண்டினார். அனைத்து உலகங்களின் பெரும்பாட்டனான பிரம்மன், அவரிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னான்[1].(28) தமது கடுந்தவத்தால் பிராமணத்தன்மையை அடைந்த சிறப்புமிக்க விஷ்வாமித்திரர், தன் விருப்பம் நிறைவேறியதும், ஒரு தேவனைப் போல மொத்த உலகிலும் திரிந்து கொண்டிருந்தார்.(29)ராமனும் {பலராமனும்}, அந்த முதன்மையான தீர்த்தத்தில் பல்வேறு வகையான செல்வங்களைத் தானமளித்து, பிராமணர்களில் முதன்மையான பலரை முறையாக வழிபட்டு, அவர்களுக்குக் கறவைமாடுகளையும், வாகனங்களையும், படுக்கைகளையும், ஆபரணங்களையும், உணவையும், சிறந்த பானங்களையும் உற்சாகமாகக் கொடுத்தான்.(30,31) பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, ராமன் அங்கிருந்து {பிருதூதகத் தீர்த்தத்தில் இருந்து}அதிக தொலைவில் இல்லாததும், தால்பிய-பகர் கடுந்தவம் பயின்ற இடமுமான பக ஆசிரமத்திற்குச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(32)

யாயாத தீர்த்தம்! – சல்லிய பர்வம் பகுதி – 41-அவாகீர்ணத் தீர்த்ததிற்குச் சென்ற பலராமன்; முனிவர் பகரின் வரலாறு; பகரை அவமதித்த பாஞ்சால திருதராஷ்டிரன்; பாஞ்சாலத்தின் வீழ்ச்சி; பகரிடம் கருணை வேண்டிய திருதராஷ்டிரன்; யாயாத தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்; யாயாத தீர்த்ததில் வேள்வி செய்த யயாதி; வேள்விக்குத் துணை புரிந்தோருக்குச் செல்வத்தைப் பெருக்கிய சரஸ்வதி ஆறு; அடுத்ததாக வசிஷ்டாபவாகத் தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, அந்த யதுக்களைத் திளைக்கச் செய்பவன் {பலராமன்}, வேதமோதும் ஒலியை எதிரொலிக்கும் (பக) ஆசிரமத்திற்குச் சென்றான். அங்கே {அவாகீர்ணத் தீர்த்தத்தில் இருந்த பக ஆசிரமத்தில்} தால்பிய பகர் என்ற பெயருடைய பெருமுனிவர் ஒருவர்,(1) விசித்திரவீரியனின் மகனான திருதராஷ்டிரனின் நாட்டை ஆகுதியாக (வேள்வி நெருப்பில்) ஊற்றினார்[1]. அவர் {தால்பியபகர்}, மிகக் கடுமையான தவம் பயின்று தன் உடலை மெலியச் செய்தார். பெரும் சக்தியும் கொண்டவரும், அறவோருமான அந்த முனிவர் பெரும் கோபத்தில் நிறைந்தார் {பெருங்கோபத்தில் நிறைந்து (அச்செயலைச் செய்தார்]}.(2) பழங்காலத்தில் நைமிசவாசிகளான முனிவர்கள் பனிரெண்டு வருடங்களுக்கு நீளும் வேள்வி ஒன்றைச் செய்தனர். அந்த வேள்வி நடந்து கொண்டிருந்த போது, அதிலும் குறிப்பாக விஸ்வஜித் என்றழைக்கப்பட்ட வேள்வியின் நிறைவில், அந்த முனிவர்கள், பாஞ்சாலர்களின் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.(3) அங்கே சென்ற அவர்கள், (தாங்கள் நிறைவு செய்த அந்த வேள்விக்கு) தக்ஷிணையாக, நல்ல வலுவான இருபத்தோரு பசுக் கன்றுகளை {பாஞ்சால} மன்னனிடம் வேண்டிக் கேட்டனர்.(4)தால்பிய-பகர், (அம்முனிவர்களை அழைத்து) அவர்களிடம், “(என்னுடைய) விலங்குகளை உங்களுக்குள் பகிர்ந்து கொள்ளுங்கள். (உங்களுக்கு) இவற்றைக் கொடுத்துவிட்டு, அந்தப் பெரும் மன்னனிடம் (இன்னும் சிலவற்றைக்) கேட்கப் போகிறேன்” என்றார்.(5) பெரும் சக்தி கொண்டவரும், பிராமணர்களில் சிறந்தவருமான {முனிவர்} பகர், அம்முனிவர்கள் அனைவரிடமும் இவ்வாறு சொல்லிவிட்டு, திருதராஷ்டிரனின் வசிப்பிடத்திற்குச் சென்றார்.(6) அந்தத் தால்பியர், மன்னன் திருதராஷ்டிரனின் முன்னிலையை அடைந்தது, தனக்காகச் சில விலங்குகளை இரந்து கேட்டார். எனினும், அந்த மன்னர்களில் சிறந்தவன் {திருதராஷ்டிரன்}, எக்காரணமும் இன்றித் தனது பசுக்களில் சில இறந்ததைக் கண்டு, அவரிடம் கோபத்துடன், “இழிந்த பிராமணரே, நீர் விரும்பினால், (இறந்திருக்கும்) இந்த விலங்குகளை எடுத்துச் செல்வீராக” என்றான்.(7,8) கடமைகளை நன்கறிந்தவரான அந்த முனிவர், இவ்வார்த்தைகளைக் கேட்டு, “ஐயோ, சபையில் வைத்து என்னிடம் சொல்லப்பட்ட வார்த்தைகள் கொடூரமானவையாக இருக்கின்றன” என்று நினைத்தார்.(9) இவ்வாறு நினைத்த அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், கோபத்தால் நிறைந்து, மன்னன் திருதராஷ்டிரனின் அழிவில் தன் இதயத்தை நிலைநிறுத்தினார்.(10)

இறந்த போன அந்த விலங்குகளின் சதைகளை வெட்டியெடுத்த அந்தத் தவசிகளில் சிறந்தவர், சரஸ்வதியின் அந்தத் தீர்த்தத்தில் {அவாகீர்ணத் தீர்த்தத்தில்} (வேள்வி) நெருப்பை மூட்டி, மன்னன் திருதராஷ்டிரனுடைய நாட்டின் அழிவுக்காக அந்தச் சதைத் துண்டுகளை ஆகுதியாக ஊற்றினர் {அச்சதைகளைக் கொண்டு ஹோமம் செய்தார்}. கடும் நோன்புகளைக் கொண்ட அந்தப் பெரும் தால்பிய-பகர், அந்த இறைச்சித் துண்டுகளின் உதவியால், திருதராஷ்டிரனின் நாட்டையே அந்நெருப்பில் ஆகுதியாக ஊற்றினார்[2].(11,12) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, முறையான சடங்குகளுடன் அந்தக் கடும் வேள்வி தொடங்கப்பட்டதும், திருதராஷ்டிரனின் நாடானது அழிவடையத்தொடங்கியது.(13) உண்மையில், ஓ! தலைவா {ஜனமேஜயா}, மனிதர்கள் கோடரியைக் கொண்டு வெட்டுவதால் பெருங்காடு காணாமல் போவதைப் போலவே அந்த ஏகாதிபதியின் நாடும் அழிவடையத் தொடங்கியது. பேரிடரில் மூழ்கிய அந்த நாடு, தனது செழிப்பையும், வாழ்வையும் இழக்கத் தொடங்கியது.(14)இவ்வாறு பீடிக்கப்பட்ட தனது நாட்டைக் கண்ட அந்தப் பலமிக்க ஏகாதிபதி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, உற்சாகமற்றவனாகச் சிந்தனையில் மூழ்கினான்.(15) பிராணமர்களுடன் ஆலோசித்த அவன், (அத்துன்பத்திலிருந்து) தனது ஆட்சிப்பகுதிகளை விடுவிக்கப் பெருமுயற்சி செய்யத் தொடங்கினான்.(16) மன்னன் தன் உற்சாகத்தை இழந்தான். ஓ! பாவமற்றவனே, பிராமணர்களும் துயரால் நிறைந்தனர். இறுதியாகத் தன் நாட்டைக் காக்க மன்னன் {திருதராஷ்டிரன்} தவறிய நிலையில்,(17) ஓ! ஜனமேஜயா, அவன் தன் அமைச்சர்களிடம் (தீர்வுகளைக் குறித்து) கேட்டான். அந்த அமைச்சர்கள் இறந்த பசுக்களுடன் தொடர்புடைய அந்தத் தீமையை அவனுக்கு நினைவுறுத்தினர்.(18) அவர்கள், “தவசியான பகர், (அவ்விலங்குகளின்) சதையின் மூலம் நெருப்பின் உன் நாட்டை ஆகுதியாக ஊற்றுகிறார். அதனால் தான் எனது நாட்டுக்குப் பேரழிவு ஏற்படுகிறது.(19) இவை தவச்சடங்குகளின் விளைவாலேயே நடைபெறுகின்றன. அதனால்தான் இந்தப் பேரிடர் நேர்ந்திருக்கிறது. ஓ! மன்னா, சரஸ்வதியின் கரையில் உள்ள நீர்க்கொள்ளிடத்திற்கு அருகில் இருக்கும் அந்த முனிவரிடம் சென்று அவரை மனநிறைவு கொள்ளச் செய்வாயாக” என்றனர்.(20)

பிறகு அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, சரஸ்வதியின் கரைக்குச் சொன்று அவரது பாதங்களில் வீழ்ந்து, அவற்றை {பாதங்களைத்} தன் தலையால் தீண்டி, ஓ! பாரதக் குலத்தோனே {ஜனமேஜயா}, தன் கரங்களைக் கூப்பி இந்த வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! புகழத்தக்கவரே, நான் உம்மை மனம் நிறைவுறச் செய்வேன், என் குற்றத்தை மன்னிப்பீராக.(21) பேராசையால் ஈர்க்கப்பட்ட இழிந்தவனான நான் அறிவற்ற மூடனாவேன். நீரே என் புகலிடம், நீரே என் பாதுகாவலர், எனக்கு உமது கருணையைக் காட்டுவதே உமக்குத் தகும்” என்றான்.(22) இவ்வாறு துயரில் மூழ்கி, இதுபோல ஒப்பாரி செய்ய்யும் அவனைக் {மன்னன் திருதராஷ்டிரனைக்} கண்ட பகர், அவனிடம் இரக்கம் கொண்டு, அவனது நாட்டை விடுவித்தார்.(23) அந்த முனிவர், தன் கோப உணர்வை விட்டகன்று, அவனிடம் மனநிறைவு கொண்டார். அவனது நாட்டை விடுவிப்பதற்காக அந்தத் தவசி மீண்டும் நெருப்பில் ஆகுதிகளை ஊற்றினார்.(24) அந்நாட்டை (பேரிடரில் இருந்து) விடுவித்து, பல விலங்குகளைக் கொடையாகப் பெற்ற அவர் {முனிவர் பகர்}, இதயம் மகிழ்ந்தவராக மீண்டும் நைமிச வனத்திற்குச் சென்றார்.(24) தயாள மனமும், அற ஆன்மாவும் கொண்ட மன்னன் திருதராஷ்டிரனும், உற்சாகமிக்க இதயத்துடன், செழிப்பால் நிறைந்து தன் தலைநகருக்குச் சென்றான்.(26)

அந்தத் தீர்த்தத்தில்தான் பெரும் நுண்ணறிவைக் கொண்ட பிருஹஸ்பதியும், அசுரர்களின் அழிவுக்காகவும், சொர்க்கவாசிகளின் செழிப்புக்காகவும்,(27) சதையின் உதவியுடன் வேள்வி நெருப்பில் ஆகுதிகளை ஊற்றினான். இதன்காரணமாக போரில் நலிவடைந்த அசுரர்களை,  வெற்றியின் மீது கொண்ட ஆசையால் தூண்டப்பட்டிருந்த தேவர்கள் அழித்தனர்.(28) பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, குதிரைகள், யானைகள் மற்றும் கோவேறுகழுதைகள் பூட்டப்பட்ட வாகனங்கள், பெரும் மதிப்பிலான தங்கம், அதிகச் செல்வம், அதிகத் தானியம் ஆகியவற்றை முறையான சடங்குகளுடன் பிராமணர்களுக்குக் கொடுத்த ராமன் {பலராமன்} அடுத்ததாக யாயாதம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(29,30)

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அங்கே நகுஷனின் மைந்தனான உயர் ஆன்ம யயாதி நடத்திய வேள்வியில்தான், சரஸ்வதி பாலையும், தெளிந்த நெய்யையும் பெருக்கினாள்.(31) மனிதர்களில் புலியான மன்னன் யயாதி, அங்கே {யாயாதத் தீர்த்தத்தில்} வேள்வி செய்து, உற்சாகமாகச் சொர்க்கத்திற்குச் சென்று, பல அருள் உலகங்களை அடைந்தான்.(32) அந்தச் சரஸ்வதி ஆறானவள், (அந்த வேள்விக்கு அழைக்கப்பட்ட) பிராணர்களின் பெரும் ஆன்மப் பெருந்தன்மையையும், அவளிடம் அவர்கள் கொண்ட மாற்றமுடியாத அர்ப்பணிப்பையும் கண்டு, அவர்களின் இதயங்கள் விரும்பிய அனைத்தையும் அவர்களுக்குக் கொடுத்தாள்.(33) அந்த வேள்விக்கு அழைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் எங்கிருந்தனரோ, அங்கேயே அவர்களுக்கு வீடுகளையும், படுக்கைகளையும், ஆறு வெவ்வேறு வகைச் சுவைகளைக் கொண்ட உணவையும், பல்வேறு பிற வகைப் பொருட்களையும் அந்த ஆறுகளில் முதன்மையானவள் கொடுத்தாள்.(34) அந்தப் பிராமணர்களோ, அவர்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்புமிக்கப் பரிசுகள் அனைத்தையும் மன்னர் கொடுத்ததாகக் கருதிக் கொண்டனர். அவர்கள் அந்த ஏகாதிபதியை உற்சாகமாகப் புகழ்ந்து, அவனுக்குத் தங்கள் மங்கலமான ஆசிகளை வழங்கினர்.(35) தேவர்கள் மற்றும் கந்தர்வர்கள் அனைவரும் அவ்வேள்வியில் இருந்த அபரிமிதமான பொருட்களால் மனநிறைவை அடைந்தனர். மனிதர்களைப் பொருத்தவரையில் அந்த அபரிமிதமான பொருட்களைக் கண்டு அவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(36)

பனைமரக் கொடி கொண்டவனான அந்தச் சிறப்புமிக்கப் பலதேவன், வென்று, கட்டுப்படுத்தித் தூய்மையடைந்த ஆன்மாவுடனும், பேரறத்தின் தனித்தன்மையுடனும், மதிப்புமிக்கப் பொருட்களைத் தானமளித்து, அடுத்ததாக, வேகமான ஊற்றைக் கொண்ட வசிஷ்டாபவாகம் என்ற தீர்த்தத்திற்குச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(37)

வசிஷ்டாபவாஹத் தீர்த்தம்! – சல்லிய பர்வம் பகுதி – 42-விஷ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்கும் இடையிலான பகை; வசிஷ்டரைக் கொல்ல நினைத்த விஷ்வாமித்திரர் சரஸ்வதியை ஏவியது; விஷ்வாமித்திரரை வஞ்சித்த சரஸ்வதி; சரஸ்வதி பெற்ற சாபம்; வசிஷ்டாபவாஹத் தீர்த்தத்தின் பெயர்க்காரணம்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “வசிஷ்டாபவாகத்தின் (என்ற பெயரில் அறியப்பட்ட தீர்த்தத்தின்) ஓட்டம் ஏன் பயங்கரமான வேகம் கொண்டதானது? என்ன காரணத்தினால் அந்த முதன்மையான ஆறு வசிஷ்டரைக் கொண்டு {இழுத்துச்} சென்றது?(1) ஓ! தலைவரே {வைசம்பாயனரே}, வசிஷ்டருக்கும், விஷ்வாமித்திரருக்கும் இடையிலான சச்சரவின் காரணம் என்ன? ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, என்னால் கேட்கப்படும் இவை அனைத்தையும் குறித்து எனக்குச் சொல்வீராக. நீர் சொல்வதைக் கேட்டு என்னால் தணிவை அடையமுடியவில்லை” என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதா {ஜனமேஜயா}, கடுந்தவம் குறித்த போட்டாபோட்டியால் விஷ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்கும் இடையில் பெரும் பகை எழுந்தது. வசிஷ்டரின் உயர்ந்த வசிப்பிடம் சரஸ்வதியின் கிழக்குக்கரையில் ஸ்தாணு என்றழைக்கப்பட்ட தீர்த்தத்தில் இருந்தது. எதிர்க்கரையில் நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரரின் ஆசிரமம் இருந்தது.(4) ஓ! ஏகாதிபதி, அந்தத் தீர்த்தத்தில் ஸ்தாணு (மஹாதேவன்) கடுந்தவம் பயின்றான். தவசிகள் இன்னும் அந்தக் கடுஞ்சாதனைகளைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.(5) அங்கே ஒரு வேள்வியைச் செய்த ஸ்தாணு, அங்கே அந்தத் தீர்த்தத்தை நிறுவி அந்தச் சரஸ்வதி ஆற்றை வழிபட்டான். எனவே, ஓ! தலைவா, அது ஸ்தாணு தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.(6) பழங்காலத்தில் தேவர்கள், ஓ! மன்னா, தேவர்களின் எதிரிகளைக் கொல்பவனான ஸ்கந்தனைத் தங்கள் படைத்தலைவனாக அத்தீர்த்தத்தில் வைத்தே நிறுவினர்.(7)

சரஸ்வதியின் அந்தத் தீர்த்தத்தில்தான் பெரும் முனிவரான விஷ்வாமித்திரர், தன் கடுந்தவத்தின் துணையால் வசிஷ்டரைக் கொண்டு {இழுத்து} வந்தார். அந்த வரலாற்றைக் கேட்பாயாக.(8) தவசிகளான விஷ்வாமித்திரர் மற்றும் வசிஷ்டர் ஆகியோர் இருவரும், தங்கள் தவங்களின் மேன்மை குறித்த மெய்யுறுதியுடன் ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் எதிர்த்தனர்.(9] பெருமுனிவரான விஷ்வாமித்திரர், வசிஷ்டரின் சக்தியைக் கண்டு (பொறாமையால்) எரிந்து, அந்தக் காரியம் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.(10) அவர் தன் கடமைகளைச் செய்வதில் அர்ப்பணிப்புடன் இருந்தாலும், “இந்தச் சரஸ்வதி, தன் ஓட்டத்தின் சக்தியால் தவசிகளில் முதன்மையான வசிஷ்டரை என் முன் வேகமாகக் கொண்டு {இழுத்து} வர வேண்டும். இங்கே கொண்டுவரப்படும் அந்த மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரை {வசிஷ்டரை} நான் கொல்வேன் என்பதில் ஐயமில்லை”, என்ற இந்தத் தீர்மானத்தை எட்டினார்.(11,12)

இதைத் தீர்மானித்துக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கப் பெருமுனிவர் விஷ்வாமித்திரர், கண்கள் சிவந்த கோபத்துடன், அந்த ஆறுகளில் முதன்மையானவளை {சரஸ்வதியை} நினைத்தார்.(13) இவ்வாறு அந்தத் தவசியால் நினைக்கப்பட்டதும் அவள் {சரஸ்வதி} மிகவும் கலக்கமடைந்தாள். எனினும், அந்த அழகான மங்கை {சரஸ்வதி}, பெரும் சக்தியும், பெரும் கோபமும் கொண்ட அம்முனிவரிடம் {விஷ்வாமித்திரரிடம்} சென்றாள்.(14) அந்தச் சரஸ்வதி, நிறம் மங்கியவளாக, கூப்பிக் கரங்களுடன் உடல் நடுங்கிக் கொண்டே அந்த முதன்மையான தவசியின் முன் தோன்றினாள்.(15) உண்மையில், துயரால் அதிகம் பீடிக்கப்பட்டிருந்த அந்த மங்கை, வலிமைமிக்கத் தன் தலைவனை இழந்துவிட்ட ஒரு பெண்ணைப் போல இருந்தாள். அவள் அந்தச் சிறந்த முனிவரிடம் {விஸ்வாமித்திரரிடம்}, “நான் உமக்குச் செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்டாள்.(16) சினம் நிறைந்த அந்தத் தவசி அவளிடம், “வசிஷ்டரை நான் கொல்லும் வகையில், தாமதமில்லாமல் அவரை இங்கே கொண்டு வருவாயாக” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த {சரஸ்வதி} ஆறானவள் மிகவும் கலக்கமடைந்தாள்.(17) தாமரைக் கண்களைக் கொண்ட அந்த மங்கை, காற்றால் அசைக்கப்பட்ட கொடியைப் போலக் கூப்பிய கரங்களுடன், அச்சத்தால் மிகவும் நடுங்கினாள்.(18) அந்தப் பெரும் ஆற்றின் அந்த அவலநிலையைக் கண்ட அந்தத் தவசி {விஷ்வாமித்திரர்}, அவளிடம் {சரஸ்வதியிடம்}, “எந்த ஐயுணர்வுமின்றி வசிஷ்டரை என் முன் கொண்டு வருவாயாக” என்றார்.(19)

அவரது இந்த வார்த்தைகளைக் கேட்டவளும், அவர் {விஷ்வாமித்திரர்} செய்ய நினைக்கும் தீமையை அறிந்தவளுமான அவள் {சரஸ்வதி}, பூமியில் ஒப்பற்றவரான வசிஷ்டரின் ஆற்றலை அறிந்து,(20) அவரிடம் சென்று, நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரர் தன்னிடம் சொன்னதைத் தெரிவித்தாள்.(21) அவள், அந்த இருவரின் சாபம் குறித்தும் அஞ்சி மீண்டும் மீண்டும் நடுங்கினாள். உண்மையில், (அவர்களில் எவரேனும் ஒருவர் தனக்கு அளிக்கப்போகும்) துயர் நிறைந்த சாபத்திலேயே அவளது இதயம் நிலைத்திருந்தது. அவள் இருவரிடமும் கொண்ட அச்சத்துடன் நின்று கொண்டிருந்தாள்.(22) அற ஆன்மா கொண்டவரும், மனிதர்களில் முதன்மையானவருமான அந்த வசிஷ்டர், நிறம் மங்கியவளாகவும், கவலையில் மூழ்கியவளாகவும் அவளைக் கண்டு, அவளிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(23) வசிஷ்டர் {சரஸ்வதியிடம்}, “ஓ! நதிகளில் முதன்மையானவளே, உன்னைக் காத்துக் கொள்வாயாக. ஓ! வேகமாக ஓடையைக் கொண்டவளே, என்னைக் கொண்டு {இழுத்து} செல்வாயாக, இல்லையெனில் விஷ்வாமித்திரர் உன்னைச் சபிப்பார். எந்த ஐயமும் கொள்ளாதே” என்றார்.(24)

இரக்க குணம் கொண்ட அம்முனிவரின் {வசிஷ்டரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த ஆறானவள் {சரஸ்வதி}, ஓ! கௌரவ்யா {ஜனமேஜயா}, தான் பின்பற்ற வேண்டிய சிறந்த வழியைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினாள்.(25) அவள் மனத்தில், “வசிஷ்டர் என்னிடம் பெருங்கருணையை வெளிப்படுத்துகிறார். அவருக்குத் தொண்டாற்றுவதே எனக்கு முறையானது” என்ற எண்ணமே எழுந்தது.(26) அந்தச் சரஸ்வதி, தன் கரையில் மௌனமாக (மந்திரங்களை) ஓடிக்கொண்டிருந்த அந்தச் சிறந்த முனிவரை {வசிஷ்டரைக்} கண்டும், ஹோமத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குசிகரின் மகனை (விஷ்வாமித்திரரைக்) கண்டும்,(27) “இதுவே எனக்கான வாய்ப்பு {தக்க சமயம் இதுவே}” என்று நினைத்தாள். அப்போது அந்த ஆறுகளில் முதன்மையானவள் {சரஸ்வதி} தன் கரைகளில் ஒன்றைத் தன் {வேகமான} ஓட்டத்தால் இடித்துத் தள்ளினாள்.(28) அப்படி அந்தக் கரையை இடித்தபடியே அவள் வசிஷ்டரையும் கொண்டு {இழுத்துச்} சென்றாள்.

அப்படிக் கொண்டு செல்லப்படும்போது, ஓ! மன்னா, வசிஷ்டர் அந்த ஆற்றை இவ்வார்த்தைகளால் புகழ்ந்தார்:(29) “ஓ! சரஸ்வதி, அந்தப் பெரும்பாட்டனின் (மானஸத்) தடாகத்தில் நீ உதித்தாய். இந்த மொத்த அண்டமும் உன் சிறந்த நீரால் நிறைந்திருக்கிறது.(30) ஓ! தேவி, ஆகாயத்தில் பாய்ந்து மேகங்களுக்கு உனது நீரைப் புகட்டுகிறாய். நீர்கள் அனைத்தும் நீயே. உன் மூலமாகவே நாங்கள் எங்கள் சிந்தனைத் திறன்களைப் பயன்படுத்துகிறோம்.(31) நீயே புஷ்டி, தியுதி {காந்தி}, கீர்த்தி {புகழ்}, சித்தி {வெற்றி}, உமை {பார்வதி}[1] ஆவாய். நீயே பேச்சும், நீயே சுவாஹாவும்[2] ஆவாய். மொத்த அண்டமும் உன்னை நம்பியே இருக்கிறது. அனைத்து உயிரினங்களிலும் நான்கு வடிவங்களில் வசிப்பவள் நீயே” {என்று துதித்தார்}.(32)

[1] “வளர்ச்சி, காந்தி, புகழ் மற்றும் வெற்றியின் பொருத்தமான வடிவங்கள் இவை. இறுதியில் உள்ள உமை என்பது சிவனின் மனைவியான பரமேஸ்வரியைக் குறிப்பதாகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] “பெரும் செயல்திறனைக் கொண்ட ஒரு மந்திரமாகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இவ்வாறு அந்தப் பெருமுனிவரால் புகழப்பட்ட அந்தச் சரஸ்வதி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தப் பிராமணரை {வசிஷ்டரை} வேகமாக விஷ்வாமித்திரரின் ஆசிரமத்தை நோக்கி கொண்டு {இழுத்துச்} சென்று, முன்னவர் {வசிஷ்டர்} வந்திருப்பதைக் குறித்துப் பின்னவரிடம் {விஷ்வாமித்திரரிடம்} மீண்டும் மீண்டும் சொன்னாள்.(33) இவ்வாறு சரஸ்வதியால் தன் முன் கொண்டு வரப்பட்ட வசிஷ்டரைக் கண்ட விஷ்மாத்திரர், சினத்தால் நிறைந்து, அந்தப் பிராமணரைக் {வசிஷ்டரைக்} கொல்வதற்கு ஓர் ஆயுதத்தைத் தேடத் தொடங்கினார்.(34) அவர் கோபத்தால் நிறைந்திருப்பதைக் கண்ட அந்த ஆறானவள், ஒரு பிராமணரின் கொலையின் மீது (கொலை செய்வதைக் காண்பதிலும், அதற்கு உதவுவதிலும்) கொண்ட அச்சத்தால், மீண்டும் வசிஷ்டரைத் தனது கிழக்குக் கரைக்கே வேகமாகக் கொண்டு சென்றாள். இவ்வாறு தன் செயலால் காதியின் மகனை {விஷ்வாமித்திரரை} வஞ்சித்தாலும், அவள், இருவரின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தவளானாள்.(35)

பழியுணர்ச்சி கொண்ட விஷ்வாமித்திரர், முனிவர்களில் சிறந்தவரான வசிஷ்டர் {மீண்டும்} கொண்டு செல்லப்பட்டதைக் கண்டு, கோபத்தால் நிறைந்து சரஸ்வதியிடம்,(36) “ஓ! ஆறுகளில் முதன்மையானவளே, நீ என்னை வஞ்சித்துச் சென்றதால், உன் ஓடையானது, ராட்சசர்களுக்கு ஏற்புடைய குருதியாக மாறிப் போகட்டும்” என்றார்.(37) பிறகு, நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரரால் சபிக்கப்பட்ட சரஸ்வதி, இரத்தம் கலந்த நீரைச் சுமந்தபடியே ஒரு வருடம் முழுவதும் பாய்ந்து கொண்டிருந்தாள்.(38) தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோர், அந்த அவலநிலைக்குக் குறைக்கப்பட்ட சரஸ்வதியைக் கண்டு, பெருங்கவலையில் நிறைந்தனர்.(39) இதன் காரணமாகவே, ஓ! மன்னா, அந்தத் தீர்த்தம், வசிஷ்டாபவாஹம் என்று பூமியில் அழைக்கப்பட்டது. எனினும், அந்த முதன்மையான நதியானவள், மீண்டும் தன் முறையான நிலையை அடைந்தாள்” {என்றார் வைசம்பாயனர்}.(40)

நமுசியின் தலையைக் கொய்த இந்திரன்! – சல்லிய பர்வம் பகுதி – 43-தவத்தினால் சரஸ்வதியைத் தூய்மைப்படுத்திய தவசிகள்; அங்கே வேள்வி செய்து பிரம்மஹத்தியைப் போக்கிக் கொண்ட இந்திரன்; அங்கிருந்து சோமதீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்; பெரும் அரச மரத்தைக் கொண்டிருந்த சோம தீர்த்தம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரரால் கோபத்தில் சபிக்கப்பட்ட சரஸ்வதி, அந்த மங்கலமான சிறந்த தீர்த்தத்தின் {வசிஷ்டாபவாஹத் தீர்த்தத்தின்}, நீரோட்டத்தில் இரத்தத்தைச் சுமந்தபடி பாய்ந்தாள்.(1) பிறகு, ஓ! மன்னா!, ஓ பாரதா {ஜனமேஜயா}, ராட்சசர்கள் பலர் அங்கே வந்து, அங்கே பாய்ந்து கொண்டிருந்த குருதியைக் குடித்து, அங்கேயே மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.(2) அவர்கள், அந்தக் குருதியால் நிறைவடைந்து, உற்சாகத்தால் நிறைந்து, எந்த வகைக் கவலையுமில்லாமல், (புண்ணியத்தால்) சொர்க்கத்தை அடைந்த மனிதர்களைப் போல, அங்கே ஆடிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர்.(3) சில காலம் கழிந்ததும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட சில முனிவர்கள், சரஸ்வதியின் தீர்த்தங்களுக்குப் பயணிக்கும்போது அங்கேயும் {அந்த வசிஷ்டாபவாஹத் தீர்த்தத்திற்கும்} வந்தனர்.(4) அந்த முனிவர்களில் முதன்மையானவர்கள், அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடி, பெரும் மகிழ்ச்சியை அடைந்து, மேலும் புண்ணியத்தை அடைய விரும்பினர்.(5)

இறுதியாக, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கல்விமான்கள் இரத்த ஓடையாகப் பாய்ந்து கொண்டிருந்த சரஸ்வதியின் அந்தத் தீர்த்தத்திற்கும் {வசிஷ்டாபவாஹத்திற்கும்} வந்தனர். உயர்ந்த அருளைக் கொண்ட அவர்கள், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அச்சந்தரும் அந்தத் தீர்த்தத்திற்கு வந்து சேர்ந்து,(6) இரத்தத்துடன் கலந்திருக்கும் சரஸ்வதியின் நீரையும், அதை எண்ணற்ற ராட்சசர்கள் குடித்துக் கொண்டிருப்பதையும் கண்டனர்.(7) ஓ! மன்னா, கடும் நோன்புகளைக் கொண்ட அந்தத் தவசிகள் அந்த ராட்சசர்களைக் கண்டு, சரஸ்வதியை அந்த அவல நிலையில் இருந்து மீட்கப் பெரும் முயற்சிகளைச் செய்தனர்.(8) உயர்ந்த நோன்புகளைக் கொண்ட அந்த அருளாளர்கள், அங்கே வந்து, அந்த நதிகளில் முதன்மையானவளை {சரஸ்வதியை} இருப்புக்கு அழைத்து, அவளிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்:(9) “ஓ! மங்கலமான மங்கையே {கல்யாணி}, உன்னில் இருக்கும் இந்தத் தடாகம் ஏன் இவ்வாறு பீடிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான காரணத்தை எங்களுக்குச் சொல்வாயாக. அதைக் கேட்டு, (அத்தடாகத்தை முறையான நிலைக்கு மீட்க) நாங்கள் முயற்சி செய்வோம்” {என்றனர்}.(10)

இவ்வாறு கேட்கப்பட்ட சரஸ்வதி, பேசும்போது நடுங்கிக் கொண்டே, நேர்ந்த அனைத்தையும் அவர்களிடம் சொன்னாள். துயரால் பீடிக்கப்பட்டிருக்கும் அவளைக் கண்ட அந்தத் தவசிகள், அவளிடம்,(11) “நாங்கள் காரணத்தைக் கேட்டுவிட்டோம். ஓ! பாவமற்ற மங்கையே, நீ பெற்ற சாபத்தைக் குறித்தும் கேட்டோம். நாங்கள் அனைவரும் இனி முயற்சி செய்வோம்” என்றனர்.(12) அந்த ஆறுகளில் முதன்மையானவளிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன அவர்கள், அவர்களுக்குள் கலந்தாலோசித்தபடி, “நாம் அனைவரும் சேர்ந்து சரஸ்வதியை அவளது சாபத்திலிருந்து விடுவிப்போமாக” என்றனர்.(13) அந்தப் பிராமணர்கள் அனைவரும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அண்டத்தின் தலைவனும், உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவனுமான மஹாதேவனை வழிபட்டு, தவங்கள், நோன்புகள், உண்ணா நோன்புகள், பல்வேறு பொருட்களைத் தவிர்த்தல், வலிநிறைந்த நோன்புகள் ஆகியவற்றை நோற்று, ஆறுகளில் முதன்மையான அந்தத் தெய்வீக சரஸ்வதியை {அந்த அவலநிலையில் இருந்து} விடுவித்தனர்.(14-16)

அம்முனிவர்களால் சரஸ்வதியின் நீர் தூய்மையாக்கப்பட்டதைக் கண்ட (அங்கே வசித்து வந்த) ராட்சசர்கள், பசியால் பீடிக்கப்பட்டு, அந்த முனிவர்களின் பாதுகாப்பையே நாடினர்.(17) பசியால் பீடிக்கப்பட்ட அந்த ராட்சசர்கள், கூப்பிக் கரங்களுடன், கருணை நிரம்பிய அந்தத் தவசிகளிடம் இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொன்னார்கள்:(18) “நாங்கள் அனைவரும் பசித்திருக்கிறோம். நித்திய அறத்தில் இருந்து நாங்கள் விலகியிருக்கிறோம். பாவம் நிறைந்த எங்களின் இந்நடத்தை, நாங்கள் விரும்பி ஏற்றுக் கொண்டது கிடையாது.(19) உங்கள் அருள் இல்லாமையாலும், எங்கள் சொந்த தீய செயல்களாலும், எங்கள் பெண்களின் பாலியல் பாவங்களாலும் எங்கள் குற்றங்கள் {பாவங்கள்} அதிகரித்து, இவ்வாறு பிரம்ம ராட்சசர்களானோம். வைசியர்கள், சூத்திரர்கள், க்ஷத்திரியர்கள் ஆகியோரில் சிலரும், பிராமணர்களை வெறுப்பவர்களும், அவர்களுக்கு {பிராமணர்களுக்குக்} காயமேற்படுத்துபவர்களும் ராட்சசர்களாகின்றனர்.(20,21) பிராமணர்களில் சிறந்தவர்களே, எங்கள் துயர்துடைப்புக்கான ஏற்பாடுகளைச் செய்வீராக. நீங்கள் அனைத்து உலகங்களின் துயரையும் துடைக்கத் தகுந்தவர்களாவீர்கள்” என்றனர்.(23) அவர்களது இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தவசிகள், அந்தப் பெரும் நதியைப் புகழ்ந்தனர்.

அந்த ராட்சசர்களை மீட்பதற்காக, ஆழமான சிந்தனையில் ஆழ்ந்த அந்தத் தவசிகள்,(24) “தும்மலில் எச்சில் தெறித்த உணவு, புழு பூச்சிகளைக் கொண்டது, பிறர் உண்ட எச்சங்களின் கலவை, முடி {மயிர்} கலந்தது, அழுகியது {கெட்டுப் போனது}, கண்ணீர் கலந்தது ஆகிய உணவுகள் இந்த ராட்சசர்களின் பங்காகட்டும்.(25) இவையனைத்தையும் அறிந்த ஒரு கல்விமான், இவ்வகை உணவுகளைக் கவனமாகத் தவிர்ப்பானாக. அத்தகு உணவை உண்பவன் ராட்சசர்களின் உணவை உண்டதாகக் கருதப்படுவான்” என்றனர்.(26) அந்தத் தீர்த்தத்தைத் தூய்மைப்படுத்திய அந்தத் தவசிகள், அந்த ராட்சசர்களின் துயர் துடைப்புக்காக அந்த ஆற்றிடம் இவ்வாறு வேண்டினர்.(27) அந்தப் பெரும் முனிவர்களின் நோக்கத்தை அறிந்து கொண்ட அந்த ஆறுகளில் முதன்மையானவள் {சரஸ்வதியானவள்}, தன் உடலை, அருணை என்றழைக்கப்படும் புதிய வடிவில் ஏற்றுக் கொண்டாள்.(28) (சரஸ்வதியின் கிளையான) அந்தப் புதிய ஆற்றில் நீராடிய ராட்சசர்கள், தங்கள் உடல்களை விட்டுச் சொர்க்கத்தை அடைந்தனர்.(29) நூறு வேள்விகளைச் செய்தவனான தேவர்களின் தலைவன் (இந்திரன்), இவை யாவையும் உறுதிசெய்து கொண்டு, அந்த முதன்மையான தீர்த்தத்தில் {அருணசங்கத் தீர்த்தத்தில்} நீராடி, மிகப் பயங்கரமான பாவத்தில் இருந்து தூய்மையடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(30)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “என்ன காரணத்தால் இந்திரன் பிராமணரைக் கொன்ற {பிரம்மஹத்தி} பாவத்தால் களங்கமடைந்தான்? எவ்வாறு அவன் {இந்திரன்} அந்தத் தீர்த்தத்தில் நீராடி தூய்மையடைந்தான்?” என்று கேட்டான்.(31)

வைசம்பாயனர் {ஜனமேஜயன்} சொன்னார், “ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே, அந்த வரலாற்றைக் கேட்பாயாக. அந்த நிகழ்வுகளை, அவை நிகழ்ந்தவாறே கேட்பாயாக. பழங்காலத்தில் வாசவன் {இந்திரன்}, நமுசியிடம் தான் செய்து கொண்ட உடன்படிக்கையை எவ்வாறு உடைத்துக் கொண்டான் என்பதைக் கேட்பாயாக.(32) (அசுரன்) நமுசி, வாசவனின் மீது கொண்ட அச்சத்தால், சூரியனின் ஒரு கதிருக்குள் நுழைந்து {ஒளிந்து} கொண்டான். பிறகு இந்திரன் {அந்தப் போர் நடந்து கொண்டிருதபோதே} நமுசியோடு நட்பு கொண்டு, ஓர் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு,(33) “ஓ! அசுரர்களில் முதன்மையானவனே, ஓ! நண்பா, ஈரமடைந்த, அல்லது உலர்ந்த எப்பொருளினாலும் நான் உன்னைக் கொல்ல மாட்டேன். இரவிலோ, பகலிலோ நான் உன்னைக் கொல்ல மாட்டேன். இதையே உண்மை {சத்தியம்} என உறுதிகூறுகிறேன்” என்று சொன்னான்.(34) இந்த உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்ட தலைவன் இந்திரன், {போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது} ஒரு நாள் மூடுபனியைக் கண்டான். அப்போது {பகலும் இரவுமற்ற அந்தச் சந்திப் பொழுதில்} அவன் நீரின் {கடலின்} நுரையை (தனது ஆயுதமாகக்) கொண்டு நமுசியின் தலையைக் கொய்தான்.(35)

வெட்டப்பட்ட அந்த நமுசியின் தலையானது, இந்திரனைப் பின்தொடர்ந்து சென்று, அவனருகில் இருந்து, “ஓ! நண்பனைக் கொன்றவனே, ஓ! இழிந்தவனே” என்ற இந்த வார்த்தைகளைச் சொன்னது.(36) அந்தத் தலையால் இடைவிடாமல் {இவ்வாறு} தூண்டப்பட்ட இந்திரன், பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்று, என்ன நடந்தது என்பதைத் துயருடன் சொன்னான்.(37) அண்டத்தின் அந்த உயர்ந்த தலைவன் {பிரம்மன்}, அவனிடம் {இந்திரனிடம்}, “ஓ! தேவர்களின் தலைவா, ஒரு வேள்வியைச் செய்து, முறையான சடங்குகளுடன் அருணையில் {அருணசங்கமத் தீர்த்தத்தில்} நீராடினால், அந்தத் தீர்த்தம் பாவம் குறித்த அச்சத்தில் இருந்து உன்னைக் காக்கும்.(38) ஓ! சக்ரா {இந்திரா}, முனிவர்களால் அந்த ஆற்றின் நீர் புனிதப்படுத்தப்பட்டிருக்கிறது.

முன்பொரு சமயம், அவ்விடத்தில் அந்த ஆறு மறைந்தே இருந்தது.(39) தெய்வீகமான சரஸ்வதி, அருணையிடம் சென்று, அதில் தனது நீரைப் பாயவிட்டாள். சரஸ்வதி மற்றும் அருணையின் இந்தச் சங்கமம் {அருண சங்கமம்}, மிகப் புனிதமானதாகும்.(40) ஓ! தேவர்களின் தலைவா, அங்கு ஒரு வேள்வியைச் செய்வாயாக. அபரிமிதமான கொடைகளை அளிப்பாயாக. அங்கே உன் தூய்மைச் சடங்கைச் செய்து, உனது பாவத்தில் இருந்து விடுபடுவாயாக” என்றான் {பிரம்மன்}.(41)

இவ்வாறு சொல்லப்பட்ட சக்ரன் {இந்திரன்}, ஓ! ஜனமேஜயா, பிரம்மனின் அந்த வார்த்தைகளின்பேரில் சரஸ்வதியின் அந்த வசிப்பிடத்தில் பல்வேறு வேள்விகளைச் செய்தான்.(42) பலனைக் கொன்றவனான அந்த நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, கொடைகள் பலவற்றைக் கொடுத்து, அந்தத் தீர்த்தத்தில் நீராடி, குறிப்பிட்ட வேள்விகளை முறையாகச் செய்து, அருணையில் மூழ்கினான்.(43) அப்போது அவன் ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபட்டவனாக வெளியே எழுந்து வந்தான்[1]. பிறகு அந்தச் சொர்க்கத்தின் தலைவன் {இந்திரன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் சொர்க்கத்திற்குத் திரும்பிச் சென்றான்.(44) ஓ! பாரதா, அந்த நமுசியின் தலையும் அவ்வோடையில் {அருணையில்} விழுந்தது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அந்த அசுரனும் {நமுசியும்}, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற வல்ல நித்திய பகுதிகள் பலவற்றை அடைந்தான்.”

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உயர் ஆன்ம பலதேவன் {பலராமன்}, அந்தத் தீர்த்தத்தில் நீராடி, பல வகையிலான தானங்களை அளித்து, பெரும் புண்ணியத்தை அடைந்தான். அறச்செயல்களையே செய்யும் அவன்{பலராமன்}, அடுத்ததாகச் சோமனின் பெரும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(46) ஓ! மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, பழங்காலத்தில் அங்கேதான் சோமன் {சந்திரன்}, ராஜசூய வேள்வியைச் செய்தான். பிராமணர்களில் முதன்மையானவரும், பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவருமான உயர் ஆன்ம அத்ரியே அந்த மகத்தான வேள்வியின் ஹோத்ரியாக இருந்தார். அவ்வேள்வியின் நிறைவில், (ஒரு தரப்பில் இருந்த) தேவர்களுக்கும், (மறுதரப்பில் இருந்த) தானவர்கள், தைத்தியர்கள் மற்றும் ராட்சசர்களுக்கும் இடையில் ஒரு பெரும்போர் நடந்தது. அந்தக் கடும்போரானது, (அசுரன்) தாரகனின் பெயரால் {தாரகம் என்றே} அறியப்பட்டது. அந்தப் போரில் ஸ்கந்தன் {முருகன்} அந்தத் தாரகனைக் கொன்றான்.(47,48) அந்தச் சந்தர்ப்பத்தில் தைத்தியர்களை அழிப்பவனான மஹாசேனன் (என்றும் ழைக்கப்பட்ட ஸ்கந்தன்), தேவர்களின் படைத்தலைமை பொறுப்பை அடைந்தான்[2]. அந்தத் தீர்த்தத்தில்தான் ஒரு பெரும் அஸ்வத {அரச} மரம் இருக்கிறது. குமாரன் என்றும் அழைக்கப்பட்ட கார்த்திகேயன், {சோம தீர்த்தத்தில் உள்ள} அதன் {அந்த அரச மரத்தின்} நிழலில் தான் எப்போதும் வசித்திருக்கிறான்” {என்றார் வைசம்பாயனர்}.(49)

கார்த்திகேயன் பிறப்பு! – சல்லிய பர்வம் பகுதி – 44-சிவனிடம் உண்டாகி அக்னியில் விழுந்த ஸ்கந்தன்; ஸ்கந்தனைக் கங்கையில் விட்ட அக்னி; ஸ்கந்தனை இமயத்தில் விட்ட கங்கை; கார்த்திகைப் பெண்டிர் ஸ்கந்தனுக்கு முலையூட்டியது; சிவனைக் கண்டு அணுகிய ஸ்கந்தன்; பூதகணங்களின் தோற்ற வேறுபாடுகள்; நான்கு வடிவங்களாகத் தன்னைப் பிரித்துக் கொண்ட ஸ்கந்தன்; ஸ்கந்தனுக்கு ஆட்சியுரிமை கோரிய நால்வர்; ஸ்கந்தனைத் தேவர்களின் படைத்தலைவனாக்கிய பிரம்மன்; சமந்தபஞ்சகத்துக்கு வந்த தேவர்கள்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, சரஸ்வதியின் தகுதிகளைக் குறித்து விவரித்தீர். குமாரன் {முருகன்}, ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, (தேவர்களின் மூலம்) {படைத் தலைவனாக} பதவியேற்றுக் கொண்டதை விளக்குவதே உமக்குத் தகும்.(1) நான் என்னுள் பெரிய ஆவலை உணர்கிறேன். எனவே, போற்றுதலுக்குரியவனும், பலமிக்கவனுமான தலைவன் ஸ்கந்தன், (தேவர்களின் படைத்தலைவனாக) பதவியேற்ற காலம், இடம் மற்றும் தன்மை குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, அவனைப் பதவியேற்கச் செய்தது யார்? உண்மையான சடங்குகளைச் செய்தது யார்? அந்தத் தேவர்களின் படைத்தலைவன் {முருகன்} எவ்வாறு தைத்தியர்களுக்குப் பேரழிவை உண்டாக்கினான்?” என்று கேட்டான்.(2,3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இந்த ஆவலை நீ உணர்வது, உனது குருக் குலப் பிறப்புக்குத் தகுந்ததே. ஓ! ஜனமேஜயா, நான் சொல்லப்போகும் வார்த்தைகள் உனக்கு இன்பத்தை உண்டாக்கும்.(4) ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {ஜனமேஜயா}, நீ கேட்க விரும்புவதால், குமாரனின் பதவியேற்பையும், அந்த உயர்ஆன்மாவின் ஆற்றலையும் நான் சொல்லப் போகிறேன்.(5)

பழங்காலத்தில், மஹேஸ்வரனின் {சிவனின்} உயிர் வித்து வெளியேறி சுடர்மிக்க நெருப்பில் {அக்னியில்} விழுந்தது. அனைத்தையும் எரிப்பவனும், போற்றுதலுக்குரியவனுமான அக்னியால் அந்த அழிக்கப்பட முடியாத வித்தை எரிக்க முடியவில்லை.(6) மறுபுறம், வேள்விக் காணிக்கைகளைச் சுமப்பவனான அவன் {அக்னி}, அந்த வித்தின் விளைவால் பெரும் சக்தியையும், காந்தியையும் பெற்றான். பெருஞ்சக்தி கொண்ட அந்த வித்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.(7) பிரம்மனின் ஆணைக்கிணங்க தலைவன் அக்னி, கங்கையை (கங்கை ஆற்றை) அணுகி, சூரியப்பிரகாசத்தைக் கொண்ட அந்தத் தெய்வீக வித்தை அவளுக்குள் வீசினான்.(8) கங்கையாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாததால், அவள், தேவர்களால் வழிபடப்படும் இமயத்தின் அழகிய சாரலில் அதை விட்டாள்.(9) அதன்பேரில், அக்னியின் மகன் {ஸ்கந்தன்}, தன் சக்தியில் அனைத்துலகையும் மூழ்கச் செய்து அங்கேயே வளரத் தொடங்கினான். அதே வேளையில், கார்த்திகைகள் (அறுவர்), கடும் பிரகாசம் கொண்ட அந்தப் பிள்ளையைக் கண்டனர்.(10)

ஒரு மகனை விரும்பியவர்களான அந்தக் கிருத்திகைகள் அறுவரும், அக்னியின் உயர்ஆன்ம மகனான அந்தப் பலமிக்கத் தலைவன் {ஸ்கந்தன்}, நாணற்கொத்தில் கிடப்பதைக் கண்டு, “இவன் என் பிள்ளை, இவன் என் பிள்ளை” என்று உரக்கக் கதறினர்.(11) போற்றுதலுக்குரிய தலைவனான ஸ்கந்தன், அந்த ஆறு தாய்மாரின் மனோநிலையைப் புரிந்து கொண்டு, ஆறு வாய்களால் அவர்கள் அனைவரின் முலைகளையும் பருகினான்.(12) போற்றுதலுக்குரிய அந்தப் பிள்ளை கங்கையாற்றால் இமயத்தின் உச்சியில் விடப்பட்டதால், ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {ஜனமேஜயா}, தங்கமாக மாறிய அந்த மலை அழகாகத் தெரிந்தது.(14) வளர்ந்துவரும் அந்தப் பிள்ளையால் மொத்த பூமியும் அழகானது, இதன் காரணமாகவே (அக்காலத்தில் இருந்து) மலைகள் தங்கத்தை உண்டாக்கின.(15)

பெருஞ்சக்தி கொண்ட அந்தப் பிள்ளை கார்த்திகேயன் என்ற பெயரில் அழைக்கப்பட்டான். முதலில் அவன் காங்கேயன் என்ற பெயரால் அழைக்கப்பட்டான். அவன் உயர்ந்த தவச் சக்திகளையும் அடைந்தான்.(16) ஓ! ஏகாதிபதி, சுயக்கட்டுப்பாடு, தவம், பெரும் சக்தி ஆகியவற்றுடன் கூடிய அந்தப் பிள்ளை, சோமனைப் போலவே ஏற்புடைய உயர்ந்த தன்மைகளுடன் வளர்ந்தான்.(17) தங்கமயமான சிறந்த நாணற்கொத்தில் பேரழகுடன் கிடந்த அந்தப் பிள்ளை {ஸ்கந்தன்}, கந்தர்வர்களாலும், தவசிகளாலும் போற்றித் துதிக்கப்பட்டான்.(18) தெய்வீக இசையையும், நர்த்தனத்தையும் அறிந்தவர்களும், மிக அழகிய தன்மைகளைக் கொண்டவர்களுமான ஆயிரக்கணக்கான தேவமங்கையர், அவனைப் {ஸ்கந்தனைப்} புகழ்ந்து, அவனுக்கு முன்பாக நர்த்தனம் செய்தனர்.(19) ஆறுகள் அனைத்திலும் முதன்மையானவளான கங்கை அந்தத் தேவனுக்காகக் காத்திருந்தாள். பூமாதேவியும் பேரழகை ஏற்று, அப்பிள்ளையைத் (தனது மடியில்) தாங்கினாள்.(20) தெய்வீகப் புரோகிதரான பிருஹஸ்பதி, பிறப்புக்குப் பின்பு செய்யப்படும் வழக்கமான சடங்குகளை அந்தப் பிள்ளைக்குச் செய்தார். வேதங்கள் நான்கு வடிவங்களை ஏற்று, கூப்பிய கரங்களுடன் அந்தப் பிள்ளையை அணுகின. நான்கு பிரிவுகளுடன் கூடிய ஆயுத அறிவியலும், ஆயுதங்கள் அனைத்தும், அனைத்து வகைக் கணைகளும் அவனிடம் {ஸ்கந்தனிடம்} வந்தன.(22)

ஒரு நாள், பெருஞ்சக்தி கொண்ட அப்பிள்ளை {ஸ்கந்தன்}, தேவர்களுக்குத் தேவனான அந்த உமையின் தலைவன் {சிவன்}, பூதகணங்களின் கூட்டத்திற்கு மத்தியில், இமயத்தின் மகளுடன் {உமையுடன்} அமர்ந்திருப்பதைக் கண்டான்.(23) மெலிந்த உடல்களைக் கொண்ட அந்தப் பூதகணங்கள், அற்புதத்தன்மைகளைக் கொண்டிருந்தன. அழகற்றவையும், அழகற்ற தன்மைகளைக் கொண்டவையுமான அவை {பூதகணங்கள்}, விகாரமான ஆபரணங்களையும் அடையாளங்களையும் அணிந்திருந்தன.(24) புலிகள், சிங்கங்கள், கரடிகள், பூனைகள் மகரங்கள் ஆகியவற்றின் முகங்களைப் போல அவற்றின் முகங்கள் இருந்தன. வேறு சிலவற்றுக்குத் தேள்கள், யானைகள், ஒட்டகங்கள், ஆந்தைகள் ஆகியவற்றைப் போன்ற முகங்களும் இருந்தன. சில கழுகுகள் மற்றும் நரிகளின் முகங்களையும் கொண்டிருந்தன.(25)

அங்கே இருந்த சிலவற்றின் முகங்கள் நாரைகள், புறாக்கள் மற்றும் ருருக்களை {ஒருவகை மான்களைப்} போலவும் இருந்தன. அவற்றில் பலவற்றுக்கு நாய்கள், முள்ளம்பன்றிகள், உடும்புகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், மாடுகள் ஆகியவற்றைப் போன்ற உடல்களைக் கொண்டிருந்தன. சில மலைகளுக்கு ஒப்பாக இருந்தன, சில கடல்களுக்கு ஒப்பாக இருந்தன, சில உயர்த்தப்பட்ட சக்கரங்களுடனும், கதாயுதங்களைத் தங்கள் ஆயுதமாகக் கொண்டும் நின்றிருந்தன. அவற்றில் சில கரிய மைக் குவியலைப் போலவும், சில வெண்மலையைப் போலவும் தெரிந்தன. ஓ ஏகாதிபதி, ஏழு மைத்ரிகளும் {சப்த மாதர்களும்} அங்கே இருந்தனர்.(26,27) சத்யஸ்கள், விஸ்வதேவர்கள், மருத்துக்கள், வசுக்கள், பித்ருக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள், சித்தர்கள், தானவர்கள், பறவைகள் ஆகியவையும்,(28) சுயம்புவும், போற்றுதலுக்குரியவனுமான பிரம்மன் தன் மகன்களுடனும், விஷ்ணு, சக்ரன் ஆகியோரும் என அனைவரும் மங்கா மகிமை கொண்ட அந்தப் பிள்ளையினைக் கண்டு அங்கே சென்றனர்.(29) தேவர்களில் முதன்மையானோர் பலர், நாரதரின் தலைமையிலான கந்தர்வர்கள், தெய்வீக முனிவர்கள் பலர், பிருஹஸ்பதியின் தலைமையிலான சித்தர்கள்,(30) முதன்மையானோரான அண்டத்தின் தந்தைமார், தேவர்களுக்கே தேவர்களாகக் கருதப்பட்டோர், யாமர்கள் மற்றும் தாமர்கள் ஆகியோர் அனைவரும் அங்கே சென்றனர்.(31)

பெரும் பலமும், பெரும் தவச் சக்தியும் கொண்ட அந்தப் பிள்ளை {ஸ்கந்தன்}, திரிசூல, பினாகைபாணியான அந்தத் தேவர்களின் தலைவனிடம் (மஹாதேவனிடம்) சென்றான்.(32) அந்தப் பிள்ளை வருவதைக் கண்ட சிவனின் மனத்தில், இமயத்தின் மகள் {உமை}, கங்கை, அக்னி ஆகியோர் எண்ணியது போலவே, ’தங்கள் நால்வரில் எவரைக் கௌரவிக்க அந்தப் பிள்ளை, அவனிடமோ, அவளிடமோ வருவான்’ என்ற எண்ணம் உண்டானது. அவர்கள் ஒவ்வொருவரும், “அவன் தன்னிடம்தான் வருவான்” என்று நினைத்தனர்.(33,34) அந்த நால்வரின் எதிர்பார்ப்பையும் புரிந்து கொண்ட அவன், தன் யோக சக்தியால் ஒரே நேரத்தில் நான்கு வெவ்வேறு வடிவங்களை ஏற்றான்.(35) உண்மையில், போற்றுதலுக்குரிய அந்தப் பலமிக்கத் தலைவன் {ஸ்கந்தன்} ஒரு கணத்தில் அந்த நான்கு வடிவங்களையும் ஏற்றான். அவனுக்குப் பின்னால் நின்ற மூன்று வடிவங்ககளும் சாகன், விசாகன், நைகமேயன் என்ற பெயருடையவையாகும்.(36)

போற்றுதலுக்குரியவனும், பலமிக்கவனுமான அவன் {ஸ்கந்தன்} தன்னையே நான்கு வடிவங்களாகப் பிரித்துக் கொண்டு (தன்னை எதிர்பார்த்து அமர்ந்திருந்த அந்த நால்வரை நோக்கிச் சென்றான்). ஸ்கந்தன் என்றழைக்கப்படும் அற்புத தோற்றத்தைக் கொண்டவன், ருத்திரன் அமர்ந்திருக்கும் இடத்திற்குச் சென்றான்.(37) விசாகன், இமயத்தின் தெய்வீக மகள் {உமை} இருந்த இடத்திற்குச் சென்றான். கார்த்திகேயனின் வாயு வடிவமான போற்றுதலுக்குரிய சாகன், அக்னியை நோக்கிச் சென்றான். நெருப்பின் காந்தியைக் கொண்ட பிள்ளையான நைகமேயன், கங்கையிடம் சென்றான்.(38) தோற்றத்தில் ஒன்றாகவே தெரிந்த இந்த நான்கு வடிவங்களும் பெரும் காந்தியுடன் கூடியவையாக இருந்தன. அந்த நான்கு வடிவங்களும் அமைதியாக (ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள) அந்த நான்கு தேவதேவிகளிடம் சென்றன. இவையாவும் மிக அற்புதமானவையாகத் தெரிந்தன.(39) மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் இந்த மிக அற்புதமான நிகழ்வைக் கண்ட தேவர்கள், தானவர்கள் மற்றும் ராட்சசர்கள் ஆகியோர் பேரொலியை எழுப்பினர்.(40)

அப்போது ருத்திரன், உமாதேவி, அக்னி மற்றும் கங்கை ஆகியோர் அனைவரும், அண்டத்தின் தலைவனான பெரும்பாட்டனை வணங்கி, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, கார்த்திகேயனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்:(42) “ஓ! தேவர்களின் தலைவா {ருத்திரா}, எங்கள் மகிழ்ச்சிக்காக இந்த இளைஞனுக்கு {ஸ்கந்தனுக்கு}, அவனுக்குத் தகுந்ததும், அவனுக்கு விருப்பமானதுமான ஏதோ ஒரு வகை ஆட்சியுரிமையை வழங்குவதே உமக்குத் தகும்” என்றனர்.(43) போற்றுதலுக்குரியவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டன் {பிரம்மன்}, அந்த இளைஞனுக்கு {ஸ்கந்தனுக்கு} எதைக் கொடுப்பது என்று தனது மனத்திற்குள் நினைக்கத் தொடங்கினான். அவன் {பிரம்மன்} ஏற்கனவே, உயர் ஆன்மா தேவர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள் ஆகியோர் மற்றும், பூதங்கள், யக்ஷர்கள், பறவைகள், பாம்புகள் ஆகியற்றின் ஆட்சிப்பகுதிகளில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் வடிவங்களற்றோருக்கு (தேவர்களுக்கு) வழங்கிவிட்டான். எனவே, (தேவர்களுக்கு அளிக்கப்பட்ட) அந்த ஆட்சிப்பகுதி முழுமைக்கும் அந்த இளைஞனே உரிமையுடையவன் என்று கருதினான்.(45,46)

தேவர்களின் நன்மையில் எப்போதும் மனம் நிறைந்திருப்பவனான அந்தப் பெரும்பாட்டன் ஒரு கணம் சிந்தித்து, ஓ! பாரதா {ஜனமேஜயா}, அனைத்து உயிரினங்களின் படைத்தலைவன் என்ற நிலையை அவனுக்கு {ஸ்கந்தனுக்கு} அளித்தான்.(47) மேலும் அந்தப் பெரும்பாட்டன், தேவர்கள் மற்றும் வடிவமற்ற பிறர் அனைவருக்கும் தலைவர்களாகக் கருதப்படும் தேவர்கள் அனைவரும் அவனுக்காக {ஸ்கந்தனுக்காகக்} காத்திருக்க வேண்டும் {ஸ்கந்தனுக்குப் பணிசெய்ய வேண்டும்} என்று ஆணையிட்டான்.(49) பிறகு பிரம்மனின் தலைமையிலான தேவர்கள் அந்தப் பிள்ளையைத் {ஸ்கந்தனை} தங்களுடன் அழைத்துக்கொண்டு ஒன்றாக இமயத்திடம் வந்தனர்.(49) அவர்கள் தேர்ந்தெடுத்த இடமானது, புனிதமானவளும், தெய்வீகமானவளும், ஆறுகளில் முதன்மையானவளும், இமயத்தில் இருந்து உதித்து வருபவளும், மூவுலகங்குளாலும் கொண்டாடப்படுபவளுமான சரஸ்வதியின் கரையிலிருக்கும் சமந்தபஞ்சகமாகும்.(50) அங்கே, தேவர்களும், கந்தர்வர்களும், தங்கள் விருப்பங்கள் நிறைவேறியதன் விளைவால் மகிழ்ச்சியான இதயங்களுடன் அனைத்து தகுதியும் கொண்ட அந்தப் புனிதமான சரஸ்வதியின் கரையில் அமர்ந்திருந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(51)

தேவசேனாதிபதியானான் கந்தன்! – சல்லிய பர்வம் பகுதி – 45-ஸ்கந்தனை தேவர்களின் படைத்தலைவனாக முடிசூட்டிய பிருஹஸ்பதி, ஸ்கந்தனுக்குத் துணைவர்களைக் கொடுத்த தேவர்கள்; அந்தத் துணைவர்களின் பெயர்கள், தன்மைகள் மற்றும் உடற்கூறுகள்; அவர்கள் பேசிய மொழிகள்; அந்தத் துணைவர்களின் மகிழ்ச்சிக்கூத்து…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிருஹஸ்பதி, பதவியேற்பு விழாவுக்கெனச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேகரித்து, சுடர் மிக்க நெருப்பில் ஆகுதிகளை முறையாக ஊற்றினார்.(1) இமவான் {இமயமலை}, விலைமதிப்புமிக்க ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட இருக்கை ஒன்றைக் கொடுத்தான். சிறந்த ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், மங்கலமானதுமான அந்தச் சிறந்த ஆசனத்தில் கார்த்திகேயன் அமர வைக்கப்பட்டான்.(2) தேவர்கள், அவ்வகை விழாவுக்குத் தேவையான அனைத்து மங்கலப் பொருட்களையும் உரிய சடங்குகள் மற்றும் மந்திரங்களுடன் அங்கே கொண்டு வந்தனர்.(3)

பெருஞ்சக்தி கொண்ட இந்திரன் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும், சூரியன், சந்திரமாஸ், தாத்ரி, விதாத்ரி, வாயு, அக்னி,(4) பூஷன், பகன், அர்யமான், அம்சன், விவஸ்வான், பெரும் நுண்ணறிவைக் கொண்ட ருத்திரன், மித்திரன்,(5) (பதினோரு) ருத்திரர்கள், (எட்டு) வசுக்கள், (பனிரெண்டு) ஆதித்தியர்கள், (இரட்டையர்களான) அஸ்வினிகள், விஸ்வதேவர்கள், மருத்துக்கள் ஆகிய பல்வேறு தேவர்களும், சாத்யர்கள், பித்ருக்கள்,(6) கந்தர்வர்கள், அப்சரஸ்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள் ஆகியோரும், எண்ணற்ற தெய்வீக முனிவர்களும்,(7) வைகானஸர்கள், வாலகில்யர்கள் ஆகியோரும், பிற முனிகளில் காற்றை மட்டுமே உண்டு வாழ்வோர் மற்றும் சூரியக்கதிர்களை மட்டுமே உண்டு வாழ்வோருமாகிய பிருகு மற்றும் அங்கீரஸின் வழித்தோன்றல்களும், உயர் ஆன்ம யதிகள் பலரும்,(8) வித்யாதர்கள் அனைவரும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட அனைவரும்,(9) பெரும்பாட்டன் {பிரம்மன்}, புலஸ்தியர், பெரும் தவத்தகுதியைக் கொண்ட புலஹர், அங்கிரஸ், கசியபர், அத்ரி, மரீசி, பிருகு, கிரது, ஹரன், பிரசேதஸ், மனு, தக்ஷன் ஆகியோரும்,(10) காலங்கள், கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவையும், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, வடிவமேற்றுக் கொண்ட ஆறுகள் அனைத்தும், நித்திய வேதங்களும்,(11) கடல்கள், தடாகங்கள், பல்வேறு தீர்த்தங்கள், பூமி, வானம், முக்கிய மற்றும் துணைத்திசைகள் ஆகியவையும், மரங்கள் அனைத்தும், ஓ! மன்னா {ஜனமேஜயா},(12) தேவர்களின் தாயான அதிதி, ஹ்ரீ, ஸ்ரீ, சுவாஹா, சரஸ்வதி, உமை, சச்சி, சினீவாலி, அனுமதி, குஹு ஆகியோரும்,(13) புதுநிலவின் நாள் {அமாவாசையின்} வடிவமும், முழு நிலவின் நாள் {பௌர்ணமியின்} வடிவமும், சொர்க்கவாசிகளின் மனைவியரும், இமவான் {இமயமலை}, விந்தியம், பல முகடுகளைக் கொண்ட மேரு ஆகியவையும், தன் தொண்டர்களுடன் கூடிய ஐராவதனும், கலை, காஷ்டை, மாதம், அரைமாதம் {பிறைநாட்கள்}, ருது, இரவு, பகல் என்றழைக்கப்படும் காலத்தின் பிரிவுகளும், ஓ! மன்னா,(15) குதிரைகளின் இளவரசனான உச்சைஸ்ரவம், பாம்புகளின் மன்னனான வாசுகி, அருணன், கருடன் ஆகியோரும், மரங்கள் மற்றும் மூலிகைகளும்,(16) போற்றுதலுக்குரிய தர்மன் ஆகியோர் அனைவரும் ஒன்றாக அங்கே வந்தனர். காலன், யமன், மிருத்யு மற்றும் யமனின் தொண்டர்களும் அங்கே வந்தனர்.(17) பட்டியல் இன்னும் பெருகும் என்ற அச்சத்தால், அங்கே வந்த இன்னும் பல்வேறு தேவர்களைக் குறித்து நான் இங்கே சொல்லவில்லை. படைத்தலைவனாகக் கார்த்திகேயன் பொறுப்பேற்றுக் கொள்ளும் அவ்விழாவிற்கு இவர்கள் அனைவரும் வந்தனர்.(18)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, சொர்க்கவாசிகள் அனைவரும், அவ்விழாவுக்குத் தேவையான மங்கலப் பொருட்கள் அனைத்தையும் அங்கே கொண்டு வந்தனர்.(19) மகிழ்ச்சியால் நிறைந்த சொர்க்கவாசிகள், அக்காரியத்திற்குத் தேவையான புனிதமான பொருட்களுடன் கூடிய தங்கக் குடங்களில், சரஸ்வதியின் சிறந்த, புனிதமான நீரை, அசுரர்களுக்குப் பயங்கரனான அந்த உயர்ஆன்ம இளைஞனின் {ஸ்கந்தனின்} தலையில் ஊற்றி, அவனைத் தேவர்களின் படைத்தலைவனாக்கினர்.(20,21) உலங்கங்களின் பெரும்பாட்டனான பிரம்மன், பெரும் சக்தி கொண்டவரான கசியபர், இங்கே (குறிப்பிடப்பட்ட மற்றும்) குறிப்பிடப்படாத வேறு சிலர் ஆகியோர் அனைவரும், நீர்நிலைகளின் தலைவனாக வருணனை அமர்த்துவதற்காக, அவனது தலையில் நீரை ஊற்றியதுபோலவே ஸ்கந்தனின் தலையிலும் நீரை ஊற்றினர்.(22) அப்போது இதயம் நிறைந்தவனான தலைவன் பிரம்மன், பெரும் வலிமையைக் கொண்டவர்களும், காற்றின் வேகத்துடன் கூடியவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், நினைத்தமாத்திரத்தில் பெருகும் சக்தியைக் கொடையாகக் கொண்டவர்களுமான நான்கு துணைவர்களை ஸ்கந்தனுக்கு அளித்தான்.(23) அவர்கள் நந்திசேனன், லோஹிதாக்ஷன், கண்டாகர்ணன், குமுதமாலி என்ற பெயர்களைக் கொண்டவர்களாவர்.(24)

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தலைவன் ஸ்தாணு, நூறு மாயைகளை உண்டாக்கவல்லவனும், பெரும் வேகம் கொண்டவனும், பெருகக்கூடியவையான பெரும் வலிமையும், சக்தியும் கொண்டவனுமான ஒரு துணைவனை[1] ஸ்கந்தனுக்குக் கொடுத்தான். அவன், அசுரர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்துபவனாக இருந்தான்.(25) தேவர்களுக்கும், அசுரர்களுக்குமான பெரும்போரில், ஸ்தாணுவால் கொடுக்கப்பட்ட இந்தத் துணைவன், கோபத்தால் நிறைந்து, கடுஞ்செயல்களைப் புரிபவர்களான பதினான்கு லட்சம் {14,00,000} தைத்தியர்களைத் தன் வெறுங்கரத்தினாலேயே கொன்றான்.(26) அதன்பிறகு தேவர்கள், வெல்லப்பட முடியாததும், தெய்வீகத் துருப்புகள் நிறைந்ததும், தேவர்களின் எதிரிகளை அழிக்கவல்லதும், விஷ்ணுவைப் போன்ற வடிவங்களைக் கொண்டதுமான தேவர்களின் படையை ஸ்கந்தனிடம் ஒப்படைத்தனர்.(27) அப்போது, வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்களும், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், முனிவர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகியோர் அனைவரும், “(ஸ்கந்தனுக்கு} வெற்றி” என்று கூச்சலிட்டனர்.(28)

யமன், பெரும் சக்தி, பெரும் காந்தி ஆகியவற்றைக் கொண்டவர்களும், காலனுக்கே ஒப்பானவர்களுமான உன்மாதன் மற்றும் பிரமாதன் ஆகிய இருவரையும் அவனுக்கு {ஸ்கந்தனுக்குத்} துணைவர்களாகக் கொடுத்தான்.(29) பெரும் ஆற்றலைக் கொண்டவனான சூரியன், தன் தொண்டர்களான சுப்ராஜன் மற்றும் பாஸ்வரன் என்ற பெயர்களைக் கொண்ட இருவரை, நிறைந்த இதயத்துடன் கார்த்திகேயனுக்குக் கொடுத்தான்.(30) சோமன் {சந்திரன்}, கைலாச மலைச் சிகரங்களைப் போலத் தெரிந்தவர்களும், எப்போதும் வெண்மாலைகளையும், வெண்களிம்புகளையும் {சந்தனத்தையும்} பயன்படுத்துபவர்களான மணி மற்றும் சுமணி ஆகிய இருவரையும் அவனுக்குத் துணைவர்களாக அளித்தான்.(31) அக்னி, பகைவரின் படைகளைக் கலங்கடிப்பவர்களும், ஜ்வாலாஜிஹ்வன், ஜோதி {ஜ்யோதிஸ்} என்ற பெயர்களைக் கொண்டவர்களுமான வீரத் துணைவர்கள் இருவரை அவனுக்கு {ஸ்கந்தனுக்குக்} கொடுத்தான்.(32) அம்சன், பயங்கரப் பலத்தைக் கொண்டவர்களான பரிகன், வடன், பீமன் ஆகியோரையும், கடுஞ்சீற்றமும், பெரும் சக்தியும் கொண்டவர்களான தஹதி, தஹனன் ஆகிய இருவரையும் சேர்த்து, அந்த ஐவரையும் பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான ஸ்கந்தனுக்குத் துணைவராக கொடுத்தான்.(33) பகைவீரர்களைக் கொல்பவனான வாசவன் {இந்திரன்}, முறையே வஜ்ரத்தையும், கதாயுதத்தையும் ஆயுதங்களாகக் கொண்டவர்களான, உத்கிரோசன் மற்றும் பஞ்சகன் {ஸ்தகரன்} ஆகியோர் இருவரையும் அக்னியின் மகனுக்கு {ஸ்கந்தனுக்குத்} துணைவர்களாகக் கொடுத்தான்.(34) சிறப்புமிக்க விஷ்ணு, பெரும் வலிமையைக் கொண்டவர்களான சக்ரன், விக்ரமன், சங்கிரமன் என்ற மூன்று துணைவர்களை ஸ்கந்தனுக்குக் கொடுத்தான்.(35)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அஸ்வினிகளோ, அறிவியல்கள் அனைத்திலும் திறம்பெற்றவர்களான வர்த்தனன் மற்றும் நந்தனன் ஆகிய இருவரையும் ஸ்கந்தனுக்குத் துணைவர்களாக இதய நிறைவுடன் கொடுத்தனர்.(36) சிறப்புமிக்கத் தாத்ரியோ {பிரம்மனோ}, குந்தன், குசுமன், குமுதன், டம்பரன், ஆம்பரன் ஆகிய ஐவரையும் ஸ்கந்தனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(37) தாஷ்டிரி {விஸ்வகர்மன்}, பெரும் பலம் கொண்டவர்களான {ஆட்டு முகத்தைக் கொண்டோரான} சக்ரன் {வக்ரன்} மற்றும் அனுசக்ரன் {அனுவக்ரன்} ஆகியோர் இருவரையும், அந்த உயர் ஆன்மாவுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(38) தலைவன் மித்ரன், பெரும் கல்வி, தவத் தகுதி, ஏற்புடைய குணங்கள் ஆகியவற்றைக் கொண்டவர்களும், வரங்களை அருளவல்லவர்களும், மூவுலகங்களாலும் கொண்டாடப்படுபவர்களுமான சுவிரதன், சத்தியசந்தன் ஆகிய இருவரையும் அந்த உயர்ஆன்ம குமாரனுக்கு {ஸ்கந்தனுக்குத்} துணைவர்களாகக் கொடுத்தான்.(39) விதாத்ரி, பெரும்புகழைக் கொண்டவர்களான உயர் ஆன்ம சுப்பிரபன் மற்றும் சுபகர்மன் ஆகிய இருவரையும் அந்தக் கார்த்திகேயனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(40)

பூஷன், ஓ! பாரதா {ஜனமேஜயா}, பெரும் மாயசக்திகளைக் கொண்டவர்களான பாணீத்ரகன், காலிகன் ஆகிய இருவரையும் துணைவர்களாகக் கொடுத்தான்.(41) வாயு, ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, பெரும் பலம் கொண்டவர்களும், மிகப் பெரிய வாயைக் கொண்டவர்களுமான பலன், அதிபலன் ஆகிய இருவரையும் துணைவர்களாகக் கொடுத்தான்.(42) உண்மையை உறுதியாகப் பின்பற்றுபவனான வருணன், திமியின் வாயைப் போன்ற வாய்களைக் கொண்டவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களுமான கூடியவர்களான கசன், அதிகசன் ஆகிய இருவரையும் துணைவர்களாகக் கொடுத்தான்.(43) இமவான் {இமயமலை}, ஓ! மன்னா, சுவர்ச்சஸ், அதிவர்ச்சஸ் ஆகிய இருவரையும் அந்த அக்னியின் மகனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(44) மேரு, ஓ! பாரதா, காஞ்சனன், மேகமாலி ஆகிய இருவரையும் அவனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(45) மனுவும், பெரும் பலத்தையும் ஆற்றலையும் கொண்டவர்களான ஸ்திரன், அஸ்திரன் ஆகிய இருவரையும் அந்த அக்னியின் மகனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(46) விந்தியன் {விந்திய மலை}, பெரும் கற்களைக் கொண்டு போரிடுபவர்களான உச்சிருங்கன், அக்னிசிருங்கன் ஆகிய இருவரையும் அந்த அக்னியின் மகனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(47) சமுத்திரன் {பெருங்கடல்}, பெரும் வலிமைமிக்கவர்களும், கதாயுதம் தரித்தவர்களுமான சங்கிரஹன், விக்ரஹன் ஆகிய இருவரையும் அவனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(48) அழகிய பண்புகளைக் கொண்டவளான பார்வதி, அந்த அக்னியின் மகனுக்கு, உன்மாதன், புஷ்பதந்தன், சங்குகர்ணன் ஆகிய மூவரைத் துணைவர்களாகக் கொடுத்தாள்(49) பாம்புகளின் மன்னனான வாசுகி, ஓ! மனிதர்களில் புலியே, ஜயன், மஹாஜயன் ஆகிய இருவரையும் அந்த அக்னியின் மகனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(50)

அதேபோலவே, பெரும் வலிமை கொண்டவர்களான சாத்யர்கள், ருத்திரர்கள், வசுக்கள், பித்ருக்கள் ஆகியோரும், கடல்கள், ஆறுகள், மலைகள் ஆகியவையும், வேல்கள் மற்றுப் போர்க்கோடரிகளைத் தரித்தவர்களும், பல்வேறு வகை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான துணைவர்களை அந்தப் படைத்தலைவனுக்குக் கொடுத்தனர்.(52) ஸ்கந்தனால் அடையப்பட்டவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்தவர்களும், பல்வேறு வகை ஆடைகள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தவர்களுமான வேறு போராளிகளின் பெயர்களை இப்போது கேட்பாயாக.(53) அவர்கள், சங்குகர்ணன், நிகும்பன், பத்மன், குமுதன், பனிரெண்டு கைகளுடன் கூடிய அநந்தன், கிருஷ்ணன், உபகிருஷ்ணன்,(54) கிராணஸ்வரன், கபிஸ்கந்தன், காஞ்சனாக்ஷன், ஜலந்தமன், அக்ஷசந்தர்ஜனன், குணதீகன், தமோந்தக்ருதன்,(55) ஏகாக்ஷன், துவாதசாக்ஷன், ஏகஜடன், சஹஸ்ரபாகு, விகடன், வியாக்ராக்ஷன், க்ஷிதிகம்பனன்,(56) புண்யநாமன், சுநாமன், சுசக்ரன், பிரயதர்சனன், பரிஸ்ருதன், {யவனான} கோகநதன், பிரியமால்யானுலேபணன்,(57) அஜோதரன், கஜசிரன், ஸ்கந்தாக்ஷன், சதலோசனன், ஜ்வாலாஜிஹ்வன், கராளன், சிதகேசன், ஜடி, ஹரி,(58) {பரிஸ்ருதன், கோகநதன்}, கிருஷ்ணகேசன், ஜடாதரன், சதுர்த்தம்ஷ்டிரன், அஷ்டஜிஹ்வன், மேகநாதன், பிருதுஸ்ரவன்,(59) வித்யுதாக்ஷன், தனுர்வக்தரன், ஜாதரன், மாருதாசனன், உதாராக்ஷன், ரதாக்ஷன், வஜ்ரநாபன், வசுப்பிரபன்,(60) சமுத்திரவேகன், சைலகம்பி, விருஷன், மேஷப்பிரவாஹன், நந்தன், உபநந்தகன்,(61) தூம்ரன், சுவேதன், கலிங்கன், சித்தார்த்தன், விரதன், பிரயகன், நந்தன், கோநந்தன்,(62) ஆநந்தன், பிரமோதன், சுவஸ்திகன், திருவகன், க்ஷேமவாஹன், சுவாஹன், சித்தபாத்திரன்,(63) கோவ்ரஜன், கனகாபீடன், {மஹாபாரிஷதேஸ்வரன்}, காயனன், ஹஸனன், பாணன், கட்கன்,(64) வைதாலி, அதிதாலி, கதகன், வாதிகன், ஹம்ஸனன், பக்ஷதிக்தாங்கன், சமுத்ரோன்மாதனன்,(65) ரணோத்கடன், பிரஹாஸன், சுவேதசித்தன், நந்தகன், காலகண்டன், பிரபாஸன், கும்பாண்டகன்,(66) காலகக்ஷன், சிதன், பூதலோன்மதனன், யஜ்ஞவாஹன், பிரவாஹன் {சுவாஹன்}, தேவயாஜி, சோமபன்,(67) மஜ்ஜானன், {மஹாதேஜன்}, கிரதன், கிராதன், துஹரன், துஹாரன், சித்திரதேவன்,(68) மதுரன், சுப்ரசாதன், கிரீடி, {மகாபலன்}, வத்சலன், மதுவர்ணன், கலசோதரன்,(69) தர்மதன், மன்மதகரன், சூசீவக்தரன், சுவேதவக்தரன், சுவக்தரன், சாருவக்தரன், பாண்டுரன்,(70) தண்டபாகு, சுபாகு, ரஜன், கோகிலகன், அசலன், கனகாக்ஷன், பாலகரக்ஷகன்,(71) சஞ்சாரகன், கோகநதன், கிருதபத்திரன், ஜம்புகன், லோஹஜவக்தரன், ஜவனன், கும்பவக்தரன், கும்பகன்,(72) முண்டக்ரீவன் {சுவர்ணக்ரீவன்}, கிருஷ்ணௌஜஸ், ஹம்சவக்திரன், சந்திரபன், பாணிகூர்ச்சன், சம்பூகன், பஞ்சவக்தரன், சிக்ஷகன், சாஷவக்தரன், ஜாம்பூகன், காரவக்தரன் {சாகவக்தரன்}, குஞ்சகன், {யோகயோக்தன்} ஆவர்.(73)

இவர்களைத் தவிரக் கடுந்தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருந்தவர்களும், உயர் ஆன்மா கொண்டோருமான மதிப்பிற்குரிய பிராமணர்கள் பலரும் பெரும்பாட்டனால் அவனுக்கு {ஸ்கந்தனுக்குக்} கொடுக்கப்பட்டனர். அவர்களில் சிலர் இளைஞர்களாகவும், சிலர் முதிர்ந்தவர்களாகவும், ஓ! ஜனமேஜயா, சிலர் வயதால் மிக இளையவர்களாகவும் இருந்தனர். இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கானோர் அந்தக் கார்த்திகேயனிடம் வந்தனர்.(75)

அவர்கள் பல்வேறு வகைகளிலான முகங்களைப் பெற்றிருந்தனர். ஓ! ஜனமேஜயா, அவற்றைச் சொல்கிறேன் கேட்பாயாக. அவர்களில் சிலர் ஆமைகளைப் போன்ற முகங்களைக் கொண்டிருந்தனர், சிலர் சேவல்களைப் போன்ற முகங்களைக் கொண்டிருந்தனர். ஓ! பாரதா, சிலரின் முகங்கள் மிக நீளமானவையாக இருந்தன.(76) மேலும் சிலரின் முகங்கள், நாய்கள், ஓநாய்கள், முயல்கள், ஆந்தைகள், கழுதைகள், ஒட்டகங்கள், காட்டுப்பன்றிகளைப் போலிருந்தன.(77) சிலருக்கு மனித முகங்களும், சிலருக்கு, ஆடுகள் மற்றும் நரிகளைப் போன்ற முகங்களும் இருந்தன. சிலர் மகரங்கள் மற்றும் முள்ளம்பன்றிகளின் முகங்களுடன் மிகப் பயங்கரமாக இருந்தனர்.(78) சிலருக்குப் பூனைகளைப் போன்ற முகங்கள் இருந்தன, சிலர் பூச்சிகளைப் போன்ற முகத்தைக் கொண்டிருந்தனர். சிலரின் முகங்கள் மிக நீண்டவையாக இருந்தன. சிலர், கீரிப்பிள்ளை, ஆந்தை மற்றும் காக்கைகளின் முகங்களைக் கொண்டிருந்தனர்.(79) சிலர், எலி, மயில், மீன், செம்மறி ஆடு, வெள்ளாடு, எருமைகள் ஆகியவற்றின் முகங்களைக் கொண்டிருந்தனர்.(80)

சிலரின் முகங்கள், கரடிகள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் சிங்கங்களுக்கு ஒப்பானவையாக இருந்தன. சிலர் யானைகள் மற்றும் முதலைகளின் முகங்களைக் கொண்டிருந்தனர்.(81) சிலரின் முகங்கள் கருடன், காண்டாமிருகம், ஓநாய்கள் ஆகியவற்றைப் போல இருந்தன. சிலர், பசுக்கள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், பூனைகள் ஆகியவற்றின் முகங்களைக் கொண்டிருந்தனர்.(82) வயிறு, கால்கள் மற்றும் அங்கங்கள் பெருத்தவர்களான சிலரின் கண்கள் நட்சத்திரங்களைப் போல இருந்தன. சிலரின் முகங்கள் புறாக்கள் மற்றும் காளைகளைப் போல இருந்தன.(83) சிலரின் முகங்கள் கோகிலங்கள் {குயில்கள்}, பருந்துகள், தித்திரிகள், பல்லிகள் ஆகியவற்றைப் போல இருந்தன. சிலர் வெள்ளுடை உடுத்தியிருந்தனர்.(84) சிலர் பாம்புகளைப் போன்ற முகங்களைக் கொண்டிருந்தனர். சிலரின் முகங்கள் முள்ளம்பன்றிகளுக்கு ஒப்பானதாக இருந்தன. உண்மையில், சிலர் பயங்கர முகங்களையும், சிலர் இனிய முகங்களையும் பெற்றிருந்தனர். சிலர் பாம்புகளையே தங்கள் ஆடையாக உடுத்தியிருந்தனர். சிலரின் முகங்களும், மூக்குகளும் மாடுகளுக்கு ஒப்பானவையாக இருந்தன.(85)

சிலர் துருத்திக் கொண்டிருக்கும் பெரிய வயிறுகளையும், ஆனால் மிக மெலிந்த அங்கங்களையும் கொண்டிருந்தனர். சிலர் பெரிய அங்கங்களையும், ஆனால் மிக மெலிந்த வயிற்றையும் கொண்டிருந்தனர். சிலரின் கழுத்துகள் குட்டையாக இருந்தன. சிலரின் காதுகள் மிகப் பெரியனவாக இருந்தன. சிலர் பல்வேறு வகைப் பாம்புகளைத் தங்கள் ஆபரணங்களாகக் கொண்டிருந்தனர்.(86) சிலர் பெரிய யானைகளின் தோல்களையும், சிலர் கருப்பு மான்தோல்களையும் உடுத்தியிருந்தனர். சிலரின் வாய்கள் அவர்களின் தோள்களில் இருந்தன.(87)சிலருக்குத் தங்கள் வாய்களை வயிற்றிலேயேயும், சிலர் முதுகிலேயும், சிலர் கன்னங்களிலேயும், சிலர் தங்கள் கணுக்கால்களிலும், சிலர் இடையிலேயும், கொண்டிருந்தனர். மேலும் பலரின் வாய்கள் அவர்களின் உடலுடைய பிற பகுதிகளில் இருந்தன.(88) அந்தத் துருப்புகளின் தலைவர்களுக்கு மத்தியில் பலரின் முகங்கள் புழு மற்றும் பூச்சிகளைப் போல இருந்தன. அவர்களில் பலரின் வாய்கள், இரைதேடும் பல்வேறு விலங்குகளின் வாய்களைப் போல இருந்தன. சிலர் பல கரங்களையும், சிலர் பல தலைகளையும் பெற்றிருந்தனர்.(89) சிலரின் கரங்கள் மரங்களுக்கு ஒப்பானவையாக இருந்தன, சிலரின் முகங்கள் சிங்கங்களின் முகங்களுக்கு ஒப்பானவையாக இருந்தன. சிலரின் முகங்கள் பாம்புகளின் உடல்களைப் போல வழுவழுப்பானவையாக இருந்தன. அவர்களில் பலரின் வசிப்பிடங்கள் பல்வேறு வகைச் செடிகள் மற்றும் மூலிகைகளில் இருந்தன.(90)

சிலர் மரவுரியை உடுத்தியிருந்தனர், சிலர் பல்வேறு வகை எலும்புகளை உடுத்தியிருந்தனர், பல்வேறு வகைகளில் ஆடையுடுத்தியிருந்தனர். சிலர் பல்வேறு வகை மாலைகளாலும், பல்வேறு வகைச் சந்தனங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தனர்.(91) பல்வேறு வகைகளில் ஆடையுடுத்தியிருந்த அவர்களில் சிலர் தோல்களையே தங்கள் ஆடையாகக் கொண்டிருந்தனர். சிலர் தலைக்கவசங்களை அணிந்திருந்தனர். சிலரின் புருவங்கள் சுருங்கி நெற்றியில் கோடுகள் இருந்தன. சிலரின் கழுத்துகளில் சங்குகளில் காணப்படும் குறிகள் தென்பட்டன. சிலர் பெரும் பிரகாசத்தைக் கொண்டிருந்தனர்.(92) சிலர் கிரீடங்களைத் தரித்திருந்தனர். சிலர் தங்கள் தலைகளில் ஐந்து குடுமிகள் வைத்திருந்தனர், சிலர் முரட்டு மயிரைக் கொண்டிருந்தனர். சிலர் இரண்டு குடுமிகளையும், சிலர் மூன்றையும், சிலர் ஏழு குடுமிகளையும் கொண்டிருந்தனர்.(93) சிலரின் தலைகளில் இறகுகளைக் கொடிருந்தனர், சிலர் மகுடங்களைக் கொண்டிருந்தனர். சிலரின் தலைகள் முற்றிலும் வழுக்கையாக இருந்தன. சிலர் சடாமுடி தரித்திருந்தனர். சிலர் அழகிய மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். சிலரின் முகங்களில் மயிர் அடர்த்தியாக இருந்தது.(94) போர் ஒன்றே அவர்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்வைக் கொடுத்தது. அவர்கள் அனைவரும் தேவர்களில் முதன்மையானோராலும் வெல்லப்பட முடியாதவர்களாக இருந்தனர். அவர்களில் பலர், பல்வேறு வகைத் தெய்வீக ஆடைகளை அணிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் போரில் விருப்பம் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(95)

சிலர் கரிய நிறம் கொண்டவர்களாக இருந்தனர். சிலரின் முகங்களில் சதையே இல்லாமல் இருந்தது. சிலர் மிக நீண்ட முதுகுகளைக் கொண்டிருந்தனர், சிலருக்கு வயிறுகளே இல்லை. சிலரின் முதுகுகள் பெரியனவாக இருந்தன, சிலருக்கு மிகக் குறுகியவையாக இருந்தன. சிலர் நீண்ட வயிறுகளையும், சிலர் நீண்ட அங்கங்களையும் கொண்டிருந்தனர்.(96) சிலரின் கரங்கள் மிக நீண்டவையாக இருந்தன, அதேவேளையில் சிலரின் கரங்கள் குட்டையாகவும் இருந்தன. சிலர் குட்டையான அங்கங்களையுடைய குள்ளர்களாக இருந்தனர். சிலர் கூன்முதுகு கொண்டவர்களாக இருந்தனர். சிலர் குறுகிய இடை கொண்டவர்களாக இருந்தனர். சிலரின் காதுகளும், தலைகளும் யானைகளைப் போல இருந்தன.(97) சிலர் ஆமைகளைப் போன்ற மூக்குகளைக் கொண்டிருந்தனர். சிலருக்கு {மூக்குகள்} ஓநாய்களைப் போல இருந்தன. சிலருக்கு நீண்ட உதடுகள் இருந்தன, சிலருக்கு நீண்ட இடை இருந்தது. சிலர் பயங்கரமான தோற்றத்துடனும், கீழ்நோக்கிய முகங்களைக் கொண்டவர்களாக இருந்தனர்.(98) சிலர் மிக நீண்ட பற்களைக் கொண்டிருந்தனர், சிலர் குட்டையான பற்களைக் கொண்டிருந்தனர். சிலருக்கு நாலே பற்கள்தான் இருந்தன. அவர்களில் ஆயிரக்கணக்கானோர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, மதங்கொண்ட பெருவடிவ யானைகளைப் போல மிகப் பயங்கரமாக இருந்தனர்.(99) நல்ல உடற்கட்டைக் கொண்ட சிலர், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுப் பெருங்காந்தியுடன் திகழ்ந்தனர். சிலருக்கு மஞ்சள் கண்கள் இருந்தன. சிலருக்கு அம்புகளைப் போன்ற காதுகள் இருந்தன. ஓ! பாரதா, சிலருக்குக் கங்கை நீர் முதலைகளைப் போன்ற {சிவந்த} மூக்குகள் இருந்தன.(100)

சிலர் அகன்ற பற்களையும் சிலர் அகன்ற உதடுகளையும், சிலர் பச்சை மயிர்களையும் கொண்டிருந்தனர். பல்வேறு வகையான பாதங்கள், உதடுகள், பற்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்த அவர்கள், பல்வேறு வகைக் கரங்களையும், தலைகளையும் கொண்டிருந்தனர்.(101) ஓ! பாரதா {ஜனமேஜயா}, பல்வேறு வகைத் தோல்களை உடுத்தியிருந்த அவர்கள், பல்வேறு வகை மொழிகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.அந்தப் பலமிக்கவர்கள் அனைத்து மாகாணங்களின் வட்டாரப் பேச்சுமொழிகளிலும் திறனுடன் கூடியவர்களாக ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருந்தனர்.(102) வலிமைமிக்கவர்களான அந்தத் துணைவர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, (கார்த்திகேயனைச் சுற்றிலும்) முட்செடிகளை வெட்டிக் கொண்டு, அங்கே குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். சிலர் நீண்ட கழுத்துகளையும், சிலர் நீண்ட நகங்களையும், சிலர் நீண்ட கால்களையும் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் பெரிய தலைகளையும், சிலர் பெரிய கரங்களையும் கொண்டிருந்தனர்.(103) சிலரின் கண்கள் மஞ்சளாக இருந்தன, சிலரின் தொண்டைகள் நீலமாக இருந்தன, ஓ! பாரதா, சிலரின் காதுகள் மிக நீண்டவையாக இருந்தன. சிலரின் வயிறுகள் கரிய மைக்குவியலைப் போல இருந்தன.(104) சிலரின் கண்கள் வெண்மையாக இருந்தன, சிலரின் கழுத்துகள் சிவப்பாக இருந்தன, ஓ! மன்னா, சிலரோ பழுப்பு நிறக் கண்களைக் கொண்டிருந்தனர். கரிய நிறம் கொண்ட பலரும், ஓ!பாரதா, பல்வேறு நிறங்களைக் கொண்ட பலரும் அங்கே இருந்தனர்.(105) சிலர் வெண்சாமரங்களைப் போன்ற ஆபரணங்களைத் தங்கள் மேனியில் தரித்திருந்தனர். சிலர் தங்கள் உடல்களில் வெண்கோடுகளையும் {ரேகைகளையும்}, சிலர் சிவப்பு கோடுகளையும் கொண்டிருந்தனர். பல்வேறு நிறங்களில் சிலரும், தங்க நிறத்தில் சிலரும், மயில்களைப் போன்ற காந்தியுடன் கூடியவர்களாகச் சிலரும் இருந்தனர்.(106)

இறுதியாகக் கார்த்திகேயனிடம் வந்தோர் தரித்திருந்த ஆயுதங்களைக் குறித்துச் சொல்கிறேன். கேட்பாயாக.(107) சிலர் தங்கள் உயர்த்தப்பட்ட கரங்களில் சுருக்குக் கயிறுகளைக் கொண்டிருந்தனர். அவர்களது முகங்கள் புலிகளைப் போன்றும், கழுதைகளைப் போன்றும் இருந்தன. அவர்கள் கண்கள் கரியனவாகவும், அவர்களது தொண்டைகள் நீலமாகவும், அவர்களது கரங்கள் முள்பதித்த தண்டாயுதங்களுக்கு {பரிகங்களுக்கு} ஒப்பானவையாகவும் இருந்தன.(108) சிலர் சதக்னிகளையும், சக்கரங்களையும் கொண்டிருந்தனர், சிலர் கனத்த குறுங்கதாயுதங்களைக் கொண்டிருந்தனர். ஓ! பாரதா, சிலர் வாள்களையும், உலக்கைகளையும், தண்டாயுதங்களையும் கொண்டிருந்தனர்.(109) பெரும் வடிவமும், பெரும்பலமும் கொண்ட சிலர், வேல்களையும், வாள்களையும் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் கரங்களில் கதாயுதங்களையும், புசுண்டிகளையும், சிலர் சூலங்களையும் கொண்டிருந்தனர்.(110) உயர் ஆன்மாவும், பெரும்பலமும், பெரும் வேகமும், மூர்க்கமும் கொண்ட அந்த வலிமைமிக்கத் துணைவர்கள், தங்கள் கரங்களில் பல்வேறு வகையான பயங்கர ஆயுதங்களைக் கொண்டிருந்தனர்.(111)

வலிமையும், சக்தியும் கொண்டவர்களும், போரில் திளைப்பவர்களுமான அவர்கள், கார்த்திகேயனின் பட்டமேற்பைக் கண்டு, கிங்கிணி மணி வரிசைகளைத் தங்கள் மேனியில் தரித்துக் கொண்டு, அவனை {ஸ்கந்தனைச்} சுற்றிலும் ஆடிக் கொண்டிருந்தனர்.(112) ஓ! மன்னா, இவர்களும், இன்னும் பல வலிமைமிக்கத் துணைவர்களும், உயர் ஆன்மா கொண்டவனும், சிறப்புமிக்கவனுமான கார்த்திகேயனிடம் வந்தனர்.(113) சிலர் தேவலோகத்தைச் சேர்ந்தவர்களாகவும், சிலர் வானத்தைச் சேர்ந்தவர்களாகவும், சிலர் பூலோகத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் காற்றின் வேகத்தைக் கொண்டவர்களாக இருந்தனர். துணிச்சல்மிக்கவர்களும், வலிமைமிக்கவர்களுமான அவர்கள், தேவர்களால் ஆணையிடப்பட்டுக் கார்த்திகேயனின் துணைவர்களானார்கள்.(114) ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான இத்தகையோர் உயர் ஆன்ம கார்த்திகேயனின் பட்டமேற்புக்கு வந்து, அவனைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(115)

கிரௌஞ்ச மலையைப் பிளந்த கந்தன்! – சல்லிய பர்வம் பகுதி – 46-ஸ்கந்தனின் போர்த்துணைவர்களாக இருந்த தாய்மாரின் பெயர்கள்; மயிலையும், சேவலையும் அடைந்த ஸ்கந்தன்; தாரகாசுரன், மஹிஷன், திரிபாதன், ஹிரதோததரன் மற்றும் பாணன் ஆகியோரை ஸ்கந்தன் கொன்றது; கிரௌஞ்ச மலையைப் பிளந்த ஸ்கந்தன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! வீரா, எதிரிகளைக் கொல்பவர்களும், குமாரனின் துணைவர்களானவர்களுமான தாய்மாரின் பெருங்கூட்டத்தில் அடங்கியோரின் {மாத்ருகணங்களின்} பெயர்களை இப்போது சொல்லப் போகிறேன்.(1) ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்தச் சிறப்புமிக்கத் தாய்மாரின் பெயர்களைக் கேட்பாயாக. இவ்வண்டத்தில் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றில் இந்த மங்கலமானவர்கள் படர்ந்தூடுருவியிருக்கிறார்கள்.(2)

அவர்கள், பிரபாவதி, விசாலாக்ஷி, பாலிதை, கோனாசி {கோஸ்தனி}, ஸ்ரீமதி, பகுலை, பகுபுத்திரிகை,(3) அப்சுஜாதை, கோபாலி, பிருஹதம்பாலிகை, ஜயாவதி, மாலதிகை, திருவரத்னை, பயங்கரி,(4) வசுதாமை, சுதாமை, விசோகை, நந்தினி, ஏகசூடை, மஹாசூடை, சக்ரநேமி,(5) உத்தேஜனை, ஜயத்ஸேனை, கமலாக்ஷி, சோபனை, சத்ருஞ்சயை, குரோதனை, சலபி, கரி,(6) மாகதி {மாதவி}, சுபவக்தரை, தீர்த்தசேனி, கீதப்பிரியை, கல்யாணி, கோத்ருரோமை {ருத்ரரோமை}, அமிதாசனை,(7) மேகஸ்வனை, போகவதி, சுப்ரு, கனகாவதி, அலாதாக்ஷி, வீர்யவதி, வித்யுஜ்ஜிஹ்வை,(8) பத்மாவதி, சுநக்ஷத்ரை, கந்தரை, பகுயோஜனை, சந்தாநிகை, கமலை, மஹாபலை,(9) சுதாமை, பகுதாமை, சுப்ரபை, யசஸ்விநி, நிருத்யப்பிரியை, சதோலூகலமேகலை,(10) சதகண்டை, சதாநந்தை, பகநந்தை, பாவிநி, வபுஷ்மதி, சந்திரசீதை, பத்ரகாளி,(11) ஜங்காரிகை {ருக்ஷாம்பிகை}, நிஷ்குந்திகை {நிஷ்குடிகை}, வாமை, சத்வரவாஸிநீ, சுமங்கலை, ஸ்வஸ்திமதி {ஸ்வஸ்திமி}, பிருத்திகாமை {புத்திகாமை}, ஜயப்பிரியை,(12) கனதை {தனதை}, சுப்ரசாதை, பவதை, ஜலேஸ்வரி, ஏடீ, பேடீ, சமேடீ, வேதாளோஜநநி,(13) கண்டூதி, காலிகை, தேவமித்திரை, தம்புசி {வசுஸ்ரீ}, கேதகி {கோடரை}, சித்திரசேனை, அசலை,(14) குக்குடிகை, சங்கலிகை, சகுனிகை, குண்டாரிகை, கோகுலிகை {கௌகுலிகை}, கும்பிகை, சதோதரி,(15) உத்கிராதினி, ஜலேலை, மஹாவேகை, கங்கணை, மனோஜவை, கண்டகினி, பிரஹஸை, பூதனை {பீதனை},(16) கேசயை {கேசயந்தரி}, அந்தர்கதி {த்ருடி}, வாமை, குரோசனை, தடித்பிரபை, மந்தோதரி, துஹுண்டி {முண்டி}, கோடரை, மேகவாஹிநி,(17) சுபாகை {சுபிகை}, லம்பினி, லம்பை, வசுசூடை {தாம்ரசூடை}, விகாதினி {விகாசினி}, ஊர்த்வவேணிதரை, பிங்காக்ஷி, லோஹமேகலை,(18) பிருதுவக்தரை {பிருதுவஸ்திரை}, மதுலிகை, மதுகும்பை, யக்ஷாலிகை, மத்சுனிகை {மத்குலிகை}, ஜராயு, ஜர்ஜராநனை,(19) கியாதை, தஹதஹை, தமதமை, கண்டகண்டை, பூஷணை, மணிகுட்டிகை,(20) அமோகை, லம்பபயோதரை, வேணுவீணாதரை, பிங்காக்ஷி, லோஹமேக்ஷலை,(21) சசோலூகமுகி, கிருஷ்ணை, கரஜங்கை, மஹாஜவை, சிசுமாரமுகி, ஸ்வேதை, லோஹிதாக்ஷி, விபீஷணை,(22) ஜடாலிகை, காமசரி, தீர்க்கஜிஹ்வை, பலோத்கடை, காலேஹிகை, வாமனிகை, முகுடை,(23) லோஹிதாக்ஷி, மஹாகாயை, ஹரிபிண்டை, ஏகத்வசை, சுகுசுமை, கிருஷ்ணகர்ணி,(24) க்ஷுரகர்ணி, சதுஷ்கர்ணி, கர்ணப்பிராவரணை, சதுஷ்பதநிகேதை, கோகர்ணி, மஹிஷாநனை,(25) கரகர்ணி, மஹாகர்ணி, பேரீஸ்வனமஹாஸ்வனை, சங்ககும்பஸ்ரவை, பகதை,(26) {மஹாபலை}, கணை, சுகணை, பீநி, காமதை, சதுஷ்பதரதை, பூதிதீர்த்தை, அந்யகோசரை,(27) பசுதை, வித்ததை, சுகதை, மஹாயசை, பயோதை, கோமஹிஷதை, ஸவிசாலை,(28) பிரதிஷ்டை, சுப்ரதிஷ்டை, ரோசமானை, சுரோசனை, நௌகர்ணி {கௌகர்ணி}, முககர்ணி, வசிரை, மந்தினி, ஏகவக்தரை {ஏகசந்திரை}, மேகரவை {மேககர்ணை}, மேகமாலை, விரோசனை ஆகியோர் ஆவர்.(29) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, இவர்களும், பல்வேறு வடிவங்களைக் கொண்ட இன்னும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் பலரும் கார்த்திகேயனின் தொண்டர்களானார்கள்.(30)

அவர்களது நகங்கள் நீளமானைவையாக இருந்தன, ஓ! பாரதா, அவர்களின் பற்களும், உதடுகளும் அகன்றனவையாகத் துருத்திக் கொண்டு இருந்தன. நேரான வடிவங்களும், இனிய பண்புகளைக் கொண்டு இளமையுடன் இருந்த அவர்கள் அனைவரும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.(31) தவத் தகுதியைக் கொண்ட அவர்கள் அனைவரும் விரும்பிய வடிவை ஏற்றுக்கொள்ளவல்லவர்களாகவும் இருந்தனர். அவர்கள், தங்கள் அங்கங்களில் அதிகச் சதைப்பற்றில்லாதவர்களாகவும், நல்ல நிறத்தைக் கொண்டவர்களாகவும், தங்கத்தின் காந்தியையும் கொண்டிருந்தனர்.(32) அவர்களில் கருப்பாக இருந்த சிலர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மேகங்களின் வண்ணத்தில் இருந்தனர், சிலர் புகையின் வண்ணத்தில் இருந்தனர். காலைச் சூரியனின் காந்தியைக் கொண்டிருந்த சிலர் உயர்ந்த அருள் கொண்டவர்களாக இருந்தனர். நீண்ட குழல்களை {கேசத்தைக்} கொண்டிருந்த அவர்கள் வெள்ளுடை உடுத்தியிருந்தனர்.(33) சிலரின் சடை மேல் நோக்கிப் பின்னப்பட்டிருந்தது, சிலரின் கண்கள் பழுப்பு நிறத்தில் இருந்தன, சிலரது இடுப்புக் கச்சைகள் மிக நீண்டவையாக இருந்தன. சிலர் நீண்ட வயிறுகளையும், நீண்ட காதுகளையும், நீண்டு தொங்கும் முலைகளையும் கொண்டிருந்தனர்.(34) சிலர் தாமிரக் கண்களையும், தாமிர நிறத்தையும், பச்சைக் கண்களையும் கொண்டிருந்தனர். அவர்கள், வரங்களை அருளவல்லவர்களாகவும், விருப்பப்படி திரிபவர்களாகவும் எப்போதும் உற்சாகத்துடன் கூடியவர்களாகவும் இருந்தனர்.(35)

ஓ! எதிரிகளை எரிப்பவனே {ஜனமேஜயா}, பெரும் பலம் கொண்ட சிலர், யமனின் இயல்பையும், சிலர் ருத்திரனின் இயல்பையும், சிலர் சோமன், சிலர் குபேரன், சிலர் வருணன், சிலர் இந்திரன், சிலர் அக்னி என அவரவர் இயல்புகளிலும் பங்கு கொண்டனர்.(36) ஓ! பாரதக்குலத்தின் காளையே, சிலர், வாயு, குமாரன், பிரம்மன், விஷ்ணு, சூரியன், வராஹன் ஆகியோரின் இயல்புகளிலும் பங்கு கொண்டனர்.(37) இனிய அழகிய பண்புகளைக் கொண்ட அவர்கள் அப்சரஸ்களைப் போன்ற அழகுடையவர்களாக இருந்தனர். குரலில் கோகிலத்தை {குயிலைப்} போலவும், செழிப்பில் பொக்கிஷத் தலைவனை {குபேரனைப்} போலவும் அவர்கள் இருந்தனர்.(38)

போரில், அவர்களது சக்தி சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானதாக இருந்தது. காந்தியில் அவர்கள் நெருப்புக்கு ஒப்பானவர்களாக இருந்தனர். போரில் அவர்கள் எப்போதும் தங்கள் எதிரிகளைப் பீதியடையச் செய்தனர்.(39) விரும்பிய வடிவத்தை ஏற்க வல்லவர்களாகவும், காற்றின் வேகத்தைக் கொண்டவர்களாகவும் அவர்கள் இருந்தனர். கற்பனைக்கெட்டாத வலிமையும், சக்தியும் கொண்ட அவர்களின் ஆற்றலும் கற்பனைக்கெட்டாத வகையிலேயே இருந்தது.(40) மரங்கள், திறந்தவெளிகள் மற்றும் சாலைகளின் நாற்சந்திகள் ஆகியவற்றில் அவர்கள் தங்கள் வசிப்பிடங்களைக் கொண்டிருந்தனர். குகைகள், சுடலை {சுடுகாடு}, மலைகள் மற்றும் அருவிகளிலும் அவர்கள் வாழ்ந்தனர்.(41) அவர்கள் பல்வேறு வகையிலான ஆபரணங்களைப் பூண்டிருந்தனர், பல்வேறு வகையான ஆடைகளை உடுத்தியிருந்தனர், பல்வேறு மொழிகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.(42) எதிரிகளை அச்சத்தில் ஆழ்த்தவல்ல இவர்களும், (தாய்மாரின்) இன்னும் பிற இனங்களும்  சேர்ந்து, தேவர்களின் தலைவனுடைய {இந்திரனுடைய} ஆணைக்கிணங்க உயர் ஆன்ம கார்த்திகேயனைப் பின்பற்றினர்.(43)

பகனைத் தண்டித்த போற்றுதலுக்குரியவன் {இந்திரன்}, ஓ! மனிதர்களில் புலியே அந்தக் குஹனுக்கு (கார்த்திகேயனுக்கு), தேவர்களின் எதிரிகளை அழிக்கவல்ல ஓர் ஈட்டியை {வேலைக்} கொடுத்தான்.(44) விஸ் என்ற பேரொலியை உண்டாக்கும் அந்த ஈட்டி பல பெரிய மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெரும் காந்தியைக் கொண்டிருந்த அஃது, ஒளியால் சுடர்விடுவதாகத் தெரிந்தது. மேலும் இந்திரன் அவனுக்குக் காலைச் சூரியனைப் போன்ற ஒரு பிரகாசமான கொடியையும் கொடுத்தான்.(45)

சிவன், கடுஞ்சீற்றமிக்கதும், பல்வேறு வகை ஆயுதங்களைத் தரித்திருப்பதும், தவத்தால் பெறப்பட்ட பெருஞ்சக்தியைக் கொண்டதுமான ஒரு பெரும் படையை அவனுக்குக் {கார்த்திகேயனுக்குக்} கொடுத்தான்.(46) ஒரு நல்ல படைக்குண்டான நல்ல குணங்கள் அனைத்தையும் கொண்டதும் வெல்லப்பட முடியாததுமான அந்தப் படை தனஞ்சயம் என்ற பெயரால் அறியப்பட்டது. ருத்திரனுக்கு இணையான வலிமையைக் கொண்ட முப்பதாயிரம் {30,000} போர்வீரர்களால் அது பாதுகாக்கப்பட்டது. அந்தப் படைக்குப் போரில் இருந்து தப்பி ஓடுவது எவ்வாறு என்பது தெரியாது.(47)

விஷ்ணு, சூடிக் கொள்பவரின் வலிமையை அதிகரிக்கவல்ல ஒரு வெற்றிமாலையை அவனுக்குக் {கார்த்திகேயனுக்குக்} கொடுத்தான். உமை, சூரியனுக்கு ஒப்பான இரண்டு துண்டு துணிகளைக் கொடுத்தாள்.(48) கங்கை, அமுதத்தைக் கொண்ட ஒரு தெய்வீக நீர்க்குடத்தை அந்தக் குமாரனுக்குப் பெரும் மகிழ்வுடன் கொடுத்தாள். பிருஹஸ்பதி ஒரு புனிதமான தடியை {தண்டத்தை} அவனுக்குக் கொடுத்தான்.(49) கருடன், தனக்குப் பிடித்தமான மகனும், அழகிய இறகுகளையுடையதுமான ஒரு மயிலை அவனுக்குக் கொடுத்தான்.(50) அருணன், கூரிய அலகுகளைக் கொண்ட ஒரு சேவலை அவனுக்குக் கொடுத்தான். அரசன் வருணன், பெரும் சக்தியும், வலிமையும் கொண்ட ஒரு பாம்பை அவனுக்குக் கொடுத்தான்.(51) தலைவன் பிரம்மன், பிரம்மத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அந்தத் தேவனுக்கு {ஸ்கந்தனுக்கு} ஒரு கருப்பு மான்தோலைக் கொடுத்தான். உலகங்கள் அனைத்தையும் படைத்தவனான அவன் {பிரம்மன்}, போர்கள் அனைத்திலும் வெற்றியையும் கொடுத்தான்.(52)

தெய்வீகப் படைகளின் தலைமைப் பொறுப்பை அடைந்த ஸ்கந்தன், பிரகாசமான தழல்களுடன் கூடிய ஒரு சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(53) அந்தத் துணைவர்கள் மற்றும் தாய்மாரின் துணையுடன் கூடிய அவன், தேவர்களில் முதன்மையான அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம், தைத்தியர்களை அழிக்கச் சென்றான்.(54) மணிகளால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களைக் கொண்டதும், பேரிகைகள், சங்குகள், முரசுகள் ஆகியவற்றைக் கொண்டதும், கொடிகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டதுமான தேவர்களின் அந்தப் பயங்கரப் படையானது, கோள்களும், நட்சத்திரங்களும் சிதறிக் கிடக்கும் கூதிர்கால ஆகாயம் போல மிக அழகாகத் தெரிந்தது.(55)

பிறகு, தேவர்களின் அந்தப் பெருங்கூட்டமும், பல்வேறு வகையிலான உயிரினங்களும், ஆயிரக்கணக்கான பேரிகைகளை இசைத்துத் தங்கள் சங்குகளை முழக்கினர்.(56) அவர்கள், படகங்கள் {தம்பட்டங்கள்}, ஜர்ஜரங்கள், கிரகசங்கள், மாட்டுக் கொம்புகள் {கோவிஷாணிகங்கள்}, ஆடம்பரங்கள், கோமுகங்கள் டிண்டிமங்கள் ஆகியவற்றைப் பேரொலியுடன் முழக்கினர்.(57) வாசவனை {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்கள் அனைவரும் அந்தக் குஹனைப் {கார்த்திகேயனைப்} புகழ்ந்தனர். தேவர்களும், கந்தர்வர்களும் பாடினர், அப்சரஸ்கள் நர்த்தனம் புரிந்தனர்.(58) (இந்தக் கவனிப்புகளால்) மிகவும் மகிழ்ந்த ஸ்கந்தன், தேவர்கள் அனைவருக்கும் ஒரு வரம் தரும் வகையில், “உங்களைக் கொல்ல விரும்பும் உங்கள் எதிரிகள் அனைவரையும் நான் கொல்வேன்” என்றான்.(59) அந்தத் தேவர்களில் சிறந்தவனிடம் {ஸ்கந்தனிடம்} இருந்து இவ்வரத்தை அடைந்த சிறப்புமிக்கத் தேவர்கள், தங்கள் எதிரிகள் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகக் கருதினர்.(60)

ஸ்கந்தன் அவ்வரத்தை அருளிய பிறகு, மகிழ்ச்சியடைந்த அந்த உயிரினங்கள் அனைத்திடமிருந்தும் மூவுலகங்களையும் நிறைக்கும் வகையில் பேரொலி எழுந்தது.(61) அந்தப் பரந்த படையுடன் கூடிய ஸ்கந்தன், சொர்க்கவாசிகளைப் பாதுகாக்க, தைத்தியர்களை அழிக்கப் புறப்பட்டான்.(62) ஓ! மன்னா {ஜனமேஜயா}, (உடல் கொண்டு வந்தவையான) முயற்சி, வெற்றி, அறம், நிறைவு, செழிப்பு, துணிவு மற்றும் சாத்திரங்கள் ஆகியவை கார்த்திகேயனின் படைக்கு முன்னணியில் சென்றன.(63) வேல்கள், முத்கரங்கள், எரிகொள்ளிகள், கதாயுதங்கள், உலக்கைகள், நாராசங்கள், ஈட்டிகள், சூலங்கள் ஆகியவற்றைத் தரித்ததும், செருக்கில் கொழுத்த சிங்கம் போல முழங்கிக் கொண்டிருந்ததுமான அந்தப் பயங்கரப் படையோடு தெய்வீகக் குஹன் புறப்பட்டான்.(64,65)

தைத்தியர்கள், ராட்சசர்கள் மற்றும் தானவர்கள் அனைவரும் அவனைக் கண்டு, அச்சத்தால் கவலையடைந்து, அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(66) பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்த தேவர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். சக்தியும், வலிமையும் கொண்டவனான ஸ்கந்தன், இதை (எதிரிகள் தப்பி ஓடுவதைக்) கண்டு கோபத்தால் தூண்டப்பட்டான்.(67) அவன் (அக்னியிடம் இருந்து பெற்றிருந்த) பயங்கர ஆயுதமான ஈட்டியை {வேலை} மீண்டும் மீண்டும் ஏவினான். அப்போது அவன் வெளிப்படுத்திய சக்தியானது, தெளிந்த நெய்க் காணிக்கைகளால் ஊட்டப்பட்ட நெருப்புக்கு ஒப்பானதாக இருந்தது.(68) அளவிலா சக்தி கொண்டவனான ஸ்கந்தனால், அந்த ஈட்டி மீண்டும் மீண்டும் ஏவப்பட்டபோது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, பூமியில் நெருப்புக் கீற்றுகள் விழுந்தன.(69) பேரொலியுடன் கூடிய இடிகளும், பூமியில் விழுந்தன. ஓ! மன்னா, அண்ட அழிவு நாளில் {பிரளயத்தின் போது) ஏற்படும் பீதியை அனைத்தும் அடைந்தன.(70)

அக்னியின் மகனால் {கார்த்திகேயனால்} அந்தப் பயங்கர ஈட்டி ஒரு முறை ஏவப்பட்டபோது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயனே}, அதிலிருந்து லட்சக்கணக்கான ஈட்டிகள் வெளிவந்தன.(71) இறுதியாக, பலமிக்கவனும், போற்றுதலுக்குரியவனுமான ஸ்கந்தன், மகிழ்ச்சியால் நிறைந்து, (அந்தப் போரில்) லட்சக்கணக்கான, வலிமைமிக்க வீர தைத்தியர்களால் சூழப்பட்டவனும், பெரும் வலிமையும், ஆற்றலும் கொண்டவனும், தைத்தியர்களின் தலைவனுமான தாரகனைக் கொன்றான்.(72) பிறகு அவன், எட்டுப் பத்மம் எண்ணிக்கையிலான தைத்தியர்களால் சூழப்பட்டவனான மஹிஷனை அந்தப் போரில் கொன்றான். அடுத்ததாக, ஆயிரம் ஆஜுதங்கள் எண்ணிக்கையிலான தைத்தியர்களால் {நூறு லட்சம் பேரால்} சூழப்பட்ட திரிபாதனைக் கொன்றான்.(73) பிறகு அந்தப் பலமிக்க ஸ்கந்தன், பத்து நிகர்வ எண்ணிக்கையிலான தைத்தியர்களால் {லட்சம் கோடி பேரால்} சூழப்பட்ட ஹிரதோததரனை, பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்த அவனுடைய தொண்டர்களுடன் சேர்த்துக் கொன்றான்.(74) ஓ! மன்னா, அந்தத் தைத்தியர்கள் கொல்லப்பட்டபோது, திசைகளின் பத்து புள்ளிகளும் நிறையும்படி பேரொலி எழுப்பிய குமாரனின் தொண்டர்கள், ஆடி, குதித்து, மகிழ்ச்சியுடன் சிரத்துக் கொண்டிருந்தனர்.(75)

ஓ! மன்னா, ஸ்கந்தனின் ஈட்டியில் இருந்து வெளிப்பட்ட தழல்களில் ஆயிரக்கணக்கான தைத்தியர்கள் எரிந்தனர், அதே வேளையில் ஸ்கந்தனின் முழக்கங்களால் பீதியடைந்த சிலர், தங்கள் இறுதி மூச்சையும் விட்டனர்.(76) ஸ்கந்தனுடைய படைவீரர்களின் கொட்டாவிகளில் மூவுலகங்களும் பீதியடைந்தன. ஸ்கந்தனால் உண்டாக்கப்பட்ட தழல்களில் எதிரிகள் எரிந்தனர். பலர், அவனது வெறும் முழக்கங்களிலேயே கொல்லப்பட்டனர்.(77) தேவர்களின் எதிரிகளில் சிலர், கொடிகளால் தாக்கப்பட்டு உயிரை இழுந்தனர். சிலர், மணிகளின் ஒலியால் பீதியடைந்து பூமியின் பரப்பில் விழுந்தனர். சிலர், ஆயுதங்களால் சிதைக்கப்பட்டுக் கீழே விழுந்து உயிரை விட்டனர்.(78) இவ்வகையில், வீரனும், வலிமைமிக்கவனுமான கார்த்திகேயன், தன்னோடு போரிட வந்த பெரும் பலம் கொண்டவர்களான தேவர்களின் எதிரிகளில் எண்ணிலடங்காதோரைக் கொன்றான்.(79)

பெரும் வலிமை கொண்டவனும், பலியின் மகனுமான பாணன், கிரௌஞ்ச மலையில் ஏறி அந்தத் தேவர்களின் படையுடன் போரிட்டான்.(80) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், பெரும் படைத்தலைவனுமான ஸ்கந்தன், தேவர்களின் அந்த எதிரியை {பாணனை} எதிர்த்து விரைந்து சென்றான். கார்த்திகேயனிடம் அச்சம் கொண்ட அவன், அந்தக் கிரௌஞ்ச மலைக்குள் பதுங்கினான்.(81) சினத்தால் நிறைந்தவனும், போற்றுதலுக்குரியவனுமான அந்தக் கார்த்திகேயன், அக்னியால்[1] அவனுக்கு அளிக்கப்பட்ட ஈட்டியைக் கொண்டு அம்மலையை {கிரௌஞ்ச} மலையைப் பிளந்தான். அம்மலை வெளியிடும் ஒலியானது நாரைக்கு {கிரௌஞ்சத்திற்கு} ஒப்பானதாக இருந்ததால் அது கிரௌஞ்சம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.(82) சால மரங்களுடன் கூடிய அம்மலை பலவண்ணங்களைக் கொண்டிருந்தது. அதிலிருந்த {அம்மலையிலிருந்த} குரங்குகளும், யானைகளும் பீதியடைந்தன. அதில் தங்கள் வசிப்பிடத்தைக் கொண்டிருந்த பறவைகள் எழுந்து, ஆகாயத்தில் சுற்றிக் கொண்டிருந்தன. பாம்புகள், அதன் சாரலில் வெளியேற தொடங்கின.(83) அச்சத்தால் அங்கேயும், இங்கேயும் ஓடிக்கொண்டிருந்த சிறுத்தைகள் மற்றும் கரடிகளின் ஓலத்தை அஃது எதிரொலித்தது. அதில் இருந்த பிற காடுகளும், நூற்றுக்கணக்கான விலங்குகளின் ஓலத்தை வெளியிட்டன.(84) திடீரெனச் சரபங்களும், சிங்கங்களும் வெளியே ஓடின. அம்மலை இந்த அவலநிலைக்குக் குறைக்கப்பட்டாலும், இவையனைத்தின் விளைவால் அஃது அழகிய தன்மையை ஏற்றது.(85)அதன் சிகரங்களில் வசித்த வித்யாதரர்கள் காற்றில் பறந்து சென்றனர். கின்னரர்களும், ஸ்கந்தனின் ஈட்டி பாய்ந்த அச்சத்தால் கலக்கமடைந்து கவலையில் மூழ்கினர்.(86) அழகிய ஆபரணங்களும், மாலைகளும் அணிந்திருந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தைத்தியர்கள், அந்தச் சுடர்மிக்க மலையில் இருந்து வெளியே வந்தனர். அந்தப் போரில் அவர்களை விஞ்சிய குமாரனின் தொண்டர்கள், அவர்கள் அனைவரையும் கொன்றனர்.(87) போற்றுதலுக்குரிய ஸ்கந்தன், சினத்தால் நிறைந்து, (பழங்காலத்தில்) விருத்திரனைக் கொன்ற இந்திரனைப் போலவே, அந்தத் தைத்திய தலைவனின் (பலியின்) மகனை, அவனுடைய தம்பியுடன் சேர்த்துக் கொன்றான்.(88) பகைவீரர்களைக் கொல்பவனான அந்த அக்னியின் மகன், சிலநேரங்களில் தன்னைப் பலராகவும், சில நேரங்களில் தன் அனைத்துப் பகுதிகளை ஒன்றாகத் திரட்டியும், தன் ஈட்டியால் அந்தக் கிரௌஞ்ச மலையைப் பிளந்தான்.(89) அவனது கரங்களில் இருந்து மீண்டும் மீண்டும் ஏவப்பட்ட அந்த ஈட்டியானது, மீண்டும் மீண்டூம் அவனிடமே திரும்பி வந்தது. இவ்வாறே போற்றுதலுக்குரிய அக்னியின் மகனுடைய வலிமையும், மகிமையும் இருந்தது.(90)

இரட்டிப்பான வீரம், சக்தி, ஆற்றல், நிறைவு ஆகியவற்றைக் கொண்ட அந்தத் தேவன் {ஸ்கந்தன்}, அம்மலையை {கிரௌஞ்ச மலையைப்} பிளந்து, நூற்றுக்கணக்கான தைத்தியர்களைக் கொன்றான்.(91) இவ்வாறு தேவர்களின் எதிரிகளைக் கொன்ற அந்தப் போற்றுதலுக்குரிய தேவன், தேவர்களால் வழிபடப்பட்டு, கௌரவிக்கப்பட்டுப் பெரும் மகிழ்வை அடைந்தான்.(92) கிரௌஞ்ச மலை பிளக்கப்பட்டு, சந்தனின் மகன் கொல்லப்பட்ட பிறகு பேரிகைகள் முழக்கப்பட்டன.(93) யோகிகளின் அந்தத் தெய்வீகத் தலைவன் {ஸ்கந்தன்} மீது, தெய்வீக மாதர்கள் அடுத்தடுத்து மலர்மாரியைப் பொழிந்தனர்.(94) தெய்வீக நறுமணத்தைச் சுமந்து வந்த மங்கலமான தென்றல் அங்கே வீசத் தொடங்கியது. கந்தர்வர்களும், வேள்வி செய்வதில் எப்போதும் ஈடுபடுபவர்களான பெரும் முனிவர்களும் அவனைத் துதித்துப் பாடினர்.(95)

சிலர் அவனை {ஸ்கந்தனை} பெரும்பாட்டனின் பலமிக்க மகனும், பிரம்மனின் மகன்கள் அனைவரிலும் மூத்தவனுமான சனத்குமாரன் என்று சொல்கின்றனர்.(96) சிலர் அவனை மகேஸ்வரனின் {சிவனின்} மகன் என்று சொல்கின்றனர். சிலரோ அக்னியின் மகன் என்று சொல்கின்றனர். மேலும் சிலர் அவனை உமையின் மகனென்றோ, கிருத்திகைகள், அல்லது கங்கையின் மகனென்றோ சொல்கின்றனர்.(97) அவர்களில் ஒருவரின் மகனென்றோ, அவர்களில் இருவரின் மகனென்றோ, நால்வரில் ஒருவரின் மகன் என்றோ, சுடர்மிக்க வடிவமும், பெரும் வலிமையும் கொண்ட அந்த யோகியரின் தலைவனைக் குறித்து நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் சொல்கின்றனர்.(98)

ஓ! மன்னா {ஜனமேஜயனிடம்}, இவ்வாறே கார்த்திகேயனின் பட்டமேற்பு குறித்த அனைத்தையும் உனக்கு நான் சொல்லிவிட்டேன். இப்போது சரஸ்வதியின் தீர்த்தங்களில் முதன்மையான, புனிதமான தீர்த்தத்தின் {சோம தீர்த்தத்தின்} வரலாற்றைக் கேட்பாயாக.(99) ஓ! ஏகாதிபதி, தேவர்களின் எதிரிகள் கொல்லப்பட்ட பிறகு அந்த முதன்மையான தீர்த்தம் {சோம தீர்த்தம்}, இரண்டாவது சொர்க்கமானது.(100) அக்னியின் பலமிக்க மகன் {ஸ்கந்தன்}, தேவர்களில் முதன்மையானோர் ஒவ்வொருவருக்கும், பல்வேறு வகையான ஆட்சிப்பகுதிகள், வளங்கள் மற்றும் இறுதியாக மூவுலகங்களின் அரசுரிமையையும் கொடுத்தான்.(101) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வாறே தைத்தியர்களை அழித்தவனான அந்தப் போற்றுதலுக்குறியவன், தேவர்களால் தங்கள் படைத்தலைவனாக நிறுவப்பட்டான்.(102) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பழங்காலத்தில் தேவர்களால் நீர்நிலைகளின் தலைவனாக வருணன் நிறுவப்பட்ட மற்றொரு தீர்த்தம் தைஜஸம் {ஔசனம்} என்ற பெயரால் அறியப்படுகிறது.(103) அந்தத் தீர்த்தத்தில் நீராடி, ஸ்கந்தனைப் போற்றிய ராமன் {பலராமன்}, தங்கம், துணிகள், ஆபரணங்கள் மற்றும் பிற பொருட்களைப் பிராமணர்களுக்குக் கொடுத்தான்.(104) பகைவீரர்களைக் கொல்பவனான அந்த மாதவன் {பலராமன்}, அங்கே ஓரிரவைக் கழித்து, அந்த முதன்மையான தீர்த்தத்தைத் துதித்து, அதன் நீரைத்தீண்டி, உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அடைந்தான்.(105) தேவகூட்டத்தால் எவ்வாறு தெய்வீக ஸ்கந்தன் {படைத்தலைவனாக} நிறுவப்பட்டான் என்பது குறித்து நீ கேட்ட அனைத்தையும் நான் சொல்லிவிட்டேன்” {என்றார் வைசம்பாயனர்}.(106)

அக்னி, குபேரத் தீர்த்தங்கள்! – சல்லிய பர்வம் பகுதி – 47-நீர்நிலைகளின் தலைவனாக வருணனை நிறுவிய தேவர்கள்; அக்னி தீர்த்தம் மற்றும் கௌபேர தீர்த்தம் ஆகியவற்றுக்குச் சென்ற பலராமன்; அத்தீர்த்தங்களின் மகிமை…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, முறையான சடங்குகளுடன் ஸ்கந்தன் பட்டமேற்றதைக் குறித்து நான் உம்மிடம் இருந்து கேட்ட இந்த வரலாறு மிக அற்புதமானதாகும்.(1) ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, இந்த விவரிப்பைக் கேட்டதனால் தூய்மையடைந்தவனாக என்னை நான் கருதுகிறேன். என் மனம் மிகவும் உற்சாகமடைவதால், எனக்கு மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது.(2) குமாரனின் பட்டமேற்பையும், தைத்தியர்களின் அழிவையும் கேட்ட பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனினும், எனக்கு மற்றொரு காரியம் குறித்து மிகுந்த ஆவல் ஏற்படுகிறது.(3) பழங்காலத்தில் நீர்நிலைகளின் தலைவன் {வருணன்} எவ்வாறு அந்தத் தீர்த்ததில் வைத்து பட்டமேற்கச் செய்யப்பட்டான்? ஓ மனிதர்களில் சிறந்தவரே, பேரறிவையும், உரைப்பதில் திறனையும் கொண்டுள்ள நீர் அவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(4)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, உண்மையில் முந்தைய கல்பத்தில் நடந்தவாறே இந்த அற்புத வரலாற்றைக் கேட்பாயாக. பழங்காலத்தில், கிருத யுகத்தில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, வருணனை முறையாக அணுகிய தேவர்கள் அனைவரும், அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள்:(5) “தேவர்களின் தலைவனான சக்ரன் {இந்திரன்}, அனைத்து அச்சங்களில் இருந்தும் எங்களை எப்போதும் பாதுகாப்பதைப் போல, நீயும் ஆறுகள் அனைத்தின் தலைவனாக இருப்பாயாக.(6) ஓ! தேவா, நீ எப்போதும் மகரங்களின் வீடான பெருங்கடலில் வசிக்கிறாய். ஆறுகளின் தலைவனான இந்தப் பெருங்கடல் உனது ஆட்சிப்பகுதியாகட்டும்.(7) சோமனுடன் சேர்ந்து நீ வளர்ந்து, தேய வேண்டும்” என்றனர். (இவ்வாறு சொல்லப்பட்ட) வருணன், அவர்களிடம், “அப்படியே ஆகட்டும்” என்றான்.(8)

பிறகு, ஒன்றாகச் சேர்ந்த தேவர்கள் அனைவரும், பெருங்கடலையே தன் வசிப்பிடமாகக் கொண்டிருக்கும் வருணனை, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின் படி, நீர்நிலைகள் அனைத்தின் தலைவனாக நிறுவினார்கள்.(9) நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தின் தலைவனாக வருணனை நிறுவிய தேவர்கள், முறையாக அவனை வழிபட்டுத் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(10) தேவர்களால் நிறுவப்பட்டவனான சிறப்புமிக்க வருணன், தேவர்களைக் காக்கும் சக்ரனைப் போலவே, கடல்கள், தடாகங்கள், ஆறுகள் மற்றும் பிற நீர்க்கொள்ளிடங்களை முறையாகக் காக்கத் தொடங்கினான்.(11) பிரலம்பனைக் கொன்றவனும், பெரும் அறிவைக் கொண்டவனுமான பலதேவன் {பலராமன்}, அந்தத் தீர்த்தத்திலும் நீராடி, பல்வேறு வகையான தானங்களைச் செய்து, அடுத்ததாக, தெளிந்த நெய்யை உண்பவனான அக்னி, வன்னிமரத்திற்குள் ஒளிந்து கொண்டு, காட்சிக்குப் புலனாகாதபடி எந்த இடத்தில் மறைந்து போனானோ, அந்த அக்னி தீர்த்தத்திற்குச் சென்றான்.(12) உலகங்கள் அனைத்தின் ஒளியும் இவ்வாறு மறைந்தபோது, ஓ! பாவங்களற்றவனே, தேவர்கள் அண்டத்தின் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்றனர்.(13) அவர்கள், “போற்றுதலுக்குரிய அக்னி மறைந்துவிட்டான். தன் காரணத்தை நாங்கள் அறியவில்லை. அனைத்து உயிரினங்களும் அழிக்கப்படாமல் இருக்கட்டும். ஓ! பலமிக்கத் தேவா, நெருப்பை உண்டாக்குவீராக” என்றனர்”.(14)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “எக்காரணத்தினால் உலகங்கள் அனைத்தையும் உண்டாக்குபவனான அக்னி மறைந்து போனான்? மேலும் தேவர்களால் அவன் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டான்? இவை அனைத்தையும் எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்றான்.(15)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெருஞ்சக்தி கொண்ட அக்னி, பிருகுவின் சாபத்தால் பெரும்பீதியை அடைந்தான். அதனால் வன்னிமரத்திற்குள் ஒளிந்து கொண்டு, அந்தப் போற்றுதலுக்குரிய தவன் காட்சியில் இருந்து மறைந்து போனான்.(16) அக்னி மறைந்ததும், வாசவனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவரும், பெரும் துன்பத்தை அடைந்து, காணாமல் போன அந்தத் தேவனைத் தேடினார்கள்.(17) அவர்கள் அக்னியைக் கண்டுபிடித்த போது, அந்தத் தேவன் வன்னிமரத்திற்குள் கிடப்பதைக் கண்டனர்.(18) ஓ! மனிதர்களில் புலியே, பிருஹஸ்பதியைத் தங்கள் தலைமையாக் கொண்ட தேவர்கள், அந்தத் தேவனைக் கண்டுபிடிப்பதில் வெற்றியை அடைந்து, வாசவனுடன் சேர்ந்து மகிழ்ச்சியை அடைந்தனர்.(19) பிறகு அவர்கள் எங்கிருந்து வந்தனரோ அந்த இடத்திற்கே திரும்பி சென்றனர். அக்னியும், பிருகுவின் சாபத்தினால், பிரம்மத்தை உச்சரிப்பவரான அந்தப் பிருகு சொன்னது போலவே அனைத்தையும் உண்பவனானான்.(20)

நுண்ணறிவு கொண்ட பலராமன், அங்கே நீராடிய பிறகு, உலகங்கள் அனைத்தின் போற்றுதலுக்குரிய பெரும்பாட்டன் {பிரம்மன்} எங்குத் தன் படைப்பு வேலைகளைச் செய்தானோ அந்தப் பிரம்மயோனிக்குச் சென்றான்.(21) பழங்காலத்தில், தலைவன் பிரம்மன், அனைத்துத் தேவர்களுடன் சேர்ந்து அங்கே நீராடிய பிறகு, முறையான சடங்குகளைச் செய்து தேவர்களுக்காகத் தீர்த்தங்கள் அனைத்தையும் படைத்தான்.(22) பலதேவன் அங்கே நீராடி, பல்வேறு வகைத் தானங்களைச் செய்த பிறகு, ஓ! மன்னா, பலமிக்க ஐலபிலன் {குபேரன்} கடுந்தவங்களைச் செய்து எங்கே பொக்கிஷங்கள் அனைத்தின் தலைமையை அடைந்தானோ அந்தக் கௌபேரம் என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(23) அவன் {குபேரன்} (தவத்தில் ஈடுபட்டபடி) அங்கே வசித்தபோது அனைத்து வகைச் செல்வங்களும், அனைத்து விலைமதிப்புமிக்க ரத்தினங்களும் தாமாகவே அவனிடம் வந்தன. பலதேவன், அந்தத் தீர்த்தத்திற்குச் சென்று, அதன் நீரில் நீராடி, பிராமணர்களுக்கு முறையே அதிகச் செல்வத்தைக் கொடுத்தான்.(24)

அந்த இடத்தில் ராமன் {பலராமன்}, குபேரனின் சிறந்த நந்தவனத்தைக் கண்டான். பழங்காலத்தில், யக்ஷர்களின் தலைவனான உயர் ஆன்ம குபேரன், அங்கே கடுந்தவங்களைச் செய்து, பல வரங்களை அடைந்தான்.(25) பொக்கிஷங்களின் தலைமைப் பொறுப்பு, அளவிலா சக்தி கொண்ட ருத்ரனிடம் நட்பு, தேவன் என்ற நிலை, குறிப்பிட்ட திசைப் புள்ளியில் (வடக்குத் திசையின்) ஆதிக்கப் பொறுப்பு, நளகுபேரன் என்ற பெயரைக்கொண்ட ஒரு மகன் ஆகியவற்றை அங்கேதான் பெற்றான். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இவை யாவையும் அங்கேதான் அந்த யக்ஷர்களின் தலைவன் {குபேரன்} வேகமாக அடைந்தான்.(26) அங்கே வந்த மருத்துக்கள், அவனை (ஆட்சிப்பொறுப்பில்) முறையாக நிறுவினர். மேலும் அவன், தன் வாகனமாக நன்கு ஆயத்தம் செய்யப்பட்டதும், மனோ வேகம் கொண்டதுமான தெய்வீகத் தேர் ஒன்றையும், தேவர்களின் செல்வங்கள் அனைத்தையும் அடைந்தான்.(27) வெண்சந்தனத்தைப் பயன்படுத்துபவனான அந்தப் பலன் {பலராமன்}, அந்தத் தீர்த்தத்தில் நீராடி, அதிகச் செல்வத்தைத் தானமளித்து, வேகமாக மற்றொரு தீர்த்தத்திற்குச் சென்றான்.(28) அனைத்து வகை உயிரினங்களையும் கொண்ட அந்தத் தீர்த்தம் பதரபாசனை என்ற பெயரால் அறியப்படுகிறது. அங்கே ஒவ்வொரு பருவகாலத்தின் கனிகளும் எப்போதும் காணப்படும், மேலும், மலர்களும், அனைத்து வகைக் கனிகளும் எப்போதும் அபரிமிதமாகக் கிடைக்கும்” {என்றார் வைசம்பாயனர்}.(29)

சுருவாவதியும், அருந்ததியும்! – சல்லிய பர்வம் பகுதி – 48- பதரபாசனத் தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்; பரத்வாஜரின் மகளான சுருவாவதி, இந்திரனை நினைத்துக் கடுந்தவம் இயற்றியது; அருந்ததியிடம் இலந்தைப் பழங்களைச் சமைத்துத் தரக் கேட்ட சிவன்; இமயத்தில் தவம்செய்வோர் அடையும் புண்ணியத்தை அடைந்த அருந்ததி; பதரபாசனத் தீர்த்தத்தின் மகிமை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “(முன்பு சொன்னதைப் போலவே) ராமன் {பலராமன்}, தவசிகள் மற்றும் சித்தர்கள் பலரும் வசிக்கும் பதரபாசனம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான். அங்கே, பூமியில் ஒப்பற்ற அழகைக் கொண்டவளும், சுருவாவதி {சுருதாவதி} என்ற பெயரைக் கொண்டவளுமான பரத்வாஜரின் மகள் கடுந்தவம் செய்து கொண்டிருந்தாள். அவள், ஒரு பிரம்மச்சாரினியின் வாழ்வை நோற்று வந்த கன்னிகையாவாள்.(1,2) அந்த அழகிய காரிகை {சுருதாவதி}, தேவர்களின் தலைவனை {இந்திரனைத்} தன் கணவனாக அடையும் விருப்பத்தால், பல்வேறு வகை நோன்புகளை நோற்று, கடுந்தவத்தைப் பயின்று வந்தாள்.(3) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, பெண்கள் பயில மிகக் கடுமையான பல்வேறு நோன்புகளைத் தொடர்ச்சியாக அவள் நோற்றாள். பல வருடங்களும் கடந்து சென்றன.(4) இறுதியாக, பகனைத் தண்டித்தவனான போற்றுதலுக்குரியவன் {இந்திரன்}, அவளது அந்நடத்தை மற்றும் தவம் ஆகியவற்றின் விளைவாக அவளிடம் மனம் நிறைந்து, அவளை உயர்வாகக் கருதினான்.(5)

பலமிக்க அந்தத் தேவர்களின் தலைவன் {இந்திரன்}, மறுபிறப்பாள {பிராமண} முனிவரான உயர் ஆன்ம வசிஷ்டரின் வடிவத்தை ஏற்று, {சுருவாவதி இருந்த} அந்த ஆசிரமத்திற்கு வந்தான்.(6) தவசிகளில் முதன்மையானவரும், கடுந்தவங்களைக் கொண்டவருமான வசிஷ்டரைக் கண்ட அவள், ஓ! பாரதா {ஜனமேஜயா}, தவசிகளால் நோற்கப்படும் முறையான சடங்குகளின் படி அவரை வழிபட்டாள்.(7) நோன்புகளை அறிந்தவளும், மங்கலமானவளும், இனிய பேச்சுடையவளுமான அந்தக் காரிகை, அவரிடம் {வசிஷ்டரின் வடிவத்திலிருந்த இந்திரனிடம்}, “ஓ! போற்றுதலுக்குரியவரே, ஓ! தவசிகளில் புலியே, ஓ! தலைவா, உமது ஆணைகளை எனக்குச் சொல்வீராக.(8) ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, என் வலிமைக்குத்தக்கவாறு நான் உமக்குத் தொண்டாற்றுவேன். எனினும், சக்ரன் மீது கொண்டுள்ள மதிப்பின் {பக்தியின்} விளைவாக நான் {திருமணம் செய்து கொள்வதற்காக} உமக்கு என் கரத்தைத் தர மாட்டேன்.(9) என் நோன்புகள், நியமங்கள், கடும் தவம் ஆகியவற்றின் மூலம் மூவுலகங்களின் தலைவரான சக்ரனை, மனநிறைவு கொள்ளச் செய்வேன்” என்றாள்.(10)

அவளால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {இந்திரன்}, அவளது நோன்புகளை அறிந்து கொண்டு, சிரித்துக்கொண்டே அவள் மீது தன் கண்களைச் செலுத்தி, ஓ! பாரதா {ஜனமேஜயனிடம்}, அவளிடம் இனிமையாக,(11) “நீ கடும் வகையிலான தவத்தைப் பயில்கிறாய். ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவளே {சுருதாவதியே}, அதை நான் அறிவேன். ஓ! மங்கலமானவளே, உன் இதயத்தில் இருக்கும் நோக்கமும், ஓ! அழகிய முகத்தைக் கொண்டவளே, எதை அடைய நீ முயல்கிறாயோ, அதுவும் உன்னால் அடையப்படும். தவங்களாலாயே அனைத்தும் அடையப்படுகின்றன. அனைத்தும் தவங்களைச் சார்ந்தே இருக்கின்றன.(12,13) ஓ! அழகிய முகத்தைக் கொண்டவளே, தேவர்களுக்குச் சொந்தமான அருள் உலகங்கள் அனைத்தையும் தவங்களால் அடைய முடியும். பெரும் மகிழ்ச்சியின் வேராகத் தவங்களே இருக்கின்றன.(14) ஓ! மங்கலமானவளே, கடுந்தவங்களைச் செய்து, தங்கள் உடலைக் கைவிட்ட மனிதர்கள், தேவர்களின் நிலையை அடைகிறார்கள். இந்த என் வார்த்தைகளை மனத்தில் கொள்வாயாக.(15) ஓ! அருளப்பட்ட காரிகையே, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவளே, இப்போது நீ எனக்கு இந்த ஐந்து இலந்தைப்பழங்களையும் சமைத்து {பக்குவம் செய்து) தருவாயாக” என்றான் {வசிஷ்டரின் வடிவில் இருந்த இந்திரன்}.

{அசுரன்} பலனைக் கொன்றவனான போற்றுதலுக்குரியவன், இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, குறிப்பிட்ட மந்திரங்களை மனத்தால் உரைப்பதற்காக அந்த ஆசிரமத்தின் அருகில் இருக்கும் சிறந்த தீர்த்தத்திற்குச் சென்றுவிட்டான். ஓ! கௌரவங்களை அளிப்பவனே {ஜனமேஜயா}, அந்தத் தீர்த்தமானது, இந்திரனின் பெயராலேயே மூன்று உலகங்களிலும் அறியப்படுகிறது.(16,17) உண்மையில், அந்தத் தேவர்களின் தலைவன் {இந்திரன்}, அந்தக் காரிகையின் {சுருவாவதியின்} அர்ப்பணிப்பைச் சோதிக்கும் காரியத்திற்காகவே அந்த இலந்தைப் பழங்களைச் சமைப்பதைத் தடுக்கும் வழியில் அவ்வாறு செயல்பட்டான்.(18) அந்தக் காரிகை, ஓ! மன்னா, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பேச்சைத் துறந்து, அதில் {சமைப்பதில்} கவனத்தை நிலைக்கச் செய்து, தன் பணியைச் செய்யத் தொடங்கி, களைப்பெதையும் உணராதவளாக அப்பணியைச் செய்து கொண்டிருந்தாள்.(19) ஓ! மன்னர்களில் புலியே, இவ்வாறே உயர்ந்த நோன்புகளைக் கொண்ட அந்தக் காரிகை, அந்த இலந்தைகளைச் சமைக்கத் தொடங்கினாள். ஓ! மனிதர்களில் காளையே, தன் பணியில் அமர்ந்திருந்த அவளுக்கு, பகல்வேளை முடியப் போனாலும், மென்மையானதற்கான எந்த அறிகுறிகளையும் அந்த இலந்தைகள் காட்டவில்லை.(20)

அங்கே அவள் வைத்திருந்த எரிபொருள் {விறகு} அனைத்தும் எரிக்கப்பட்டுவிட்டது. எரிபொருளில்லாமல் நெருப்பு அணையப் போவதைக் கண்ட அவள் {சுருதாவதி}, தன் அங்கங்களையே எரிக்கத் தொடங்கினாள்.(21) அந்த அழகிய காரிகை முதலில் தன் கால்களை நெருப்புக்குள் நுழைத்தாள். அந்தப் பாவமற்ற காரிகை, தனது கால்கள் எரியும்போது அசையாமல் அமர்ந்திருந்தாள்.(22) அந்தக் களங்கமற்ற பெண், தன் கால்கள் எரிவதைக் கருத்தில் கொள்ளவே இல்லை. செய்வதற்குக் கடினமான அதை {அக்காரியத்தை}, (விருந்தினராக வந்த) அந்த முனிவருக்கு {வசிஷ்டரான இந்திரனுக்கு} நன்மை செய்யும் விருப்பத்தால் செய்தாள்.(23) வலி நிறைந்த அந்தச் செய்கையின் போது, அவளது முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அக்காரியத்தால் அவள் உற்சாகத்தையும் இழக்கவில்லை. நெருப்புக்குள் தன் அங்கங்களைத் திணித்த அவள், ஏதோ அவற்றைக் குளிர்ந்த நீருக்குள் முக்கியிருப்பதைப் போலப் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தாள்.(24) ஓ! பாரதா, “இந்த இலந்தைகளை நன்றாகச் சமைப்பாயாக” என்ற அம்முனிவரின் வார்த்தைகளை மட்டுமே அவள் தன் மனத்தில் சுமந்திருந்தாள்.(25)

அந்தப் பெரும் முனிவரின் வார்த்தைகளை மனத்தில் சுமந்த அந்த மங்கலமான காரிகை, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த இலந்தைகள் மென்மையாவதற்கு எந்த அறிகுறியையும் காட்டவில்லையெனினும் சமைத்துக் கொண்டேயிருந்தாள்.(26) போற்றுதலுக்குரிய அக்னி, அவளது கால்களை உண்டான் {எரித்தான்}. எனினும் இக்காரியத்தில் அந்தக் கன்னிகை சிறு வலியையும் உணரவில்லை.(27) மூவுலகங்களின் தலைவன் {இந்திரன்}, அவளது இச்செயல்பாட்டைக் கண்டு பெரிதும் மனநிறைவடைந்தான். பிறகு அவன், அந்தக் காரிகைக்குத் தன் சொந்த வடிவத்தை வெளிப்படுத்தினான்.(28)

அப்போது தேவர்களின் தலைவன் , கடும் நோன்புகளைக் கொண்ட அந்தக் கன்னிகையிடம் {இந்திரன் சுருவாவதியிடம்}, “உன் அர்ப்பணிப்பு, தவம் மற்றும் நோன்புகளால் நான் நிறைவடைந்தேன்.(29) எனவே, ஓ! மங்கலமானவளே{சுருதாவதியே}, நீ பேணிவளர்க்கும் விருப்பமானது நிறைவை அடையும். ஓ! அருளப்பட்டவளே, உன் உடலைத் துறந்து, சொர்க்கத்தில் நீ என்னோடு வாழ்வாய்.(30) இந்த ஆசிரமமானது, அனைத்துப் பாவங்களையும் அகற்றவல்லதாக உலகத்தில் முதன்மையான தீர்த்தமாக இருக்கும். ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, இது பதரபாசனம் என்ற பெயரில் அறியப்படும். இது மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டுப் பெரும் முனிவர்களால் புகழப்படும்.(31)

ஓ! மங்கலமானவளே {சுருதாவதியே}, பாவமற்றவளே, உயர்ந்த அருளைக் கொண்டவளே, ஒரு சந்தர்ப்பத்தில் ஏழு முனிவர்களும் இமயமலைக்குச் செல்லும் போது, (அவர்களில் ஒருவரின் {வசிஷ்டரின்} மனைவியான) அருந்ததியை இந்தத் தீர்த்தத்தில்தான் விட்டுச் சென்றனர்.(32) கடும் நோன்புகளைக் கொண்டோரான அந்த உயர்ந்த அருளாளர்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்கான கனிகளையும், கிழங்குகளையும் சேகரிக்கச் சென்றனர்.(33) தங்கள் வாழ்வாதாரத்தை அடைவதற்காக இமயமலையின் காடொன்றில் அவர்கள் வாழ்ந்து வந்தபோது, பனிரெண்டு வருடங்களுக்கு நீடித்த பஞ்சம் ஏற்பட்டது.(34) அந்தத் தவசிகள் தங்களுக்கென ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு, அங்கேயே வாழத் தொடங்கினர். அதேவேளையில் அருந்ததியானவள், (தான் விட்டுச் செல்லப்பட்ட அந்த இடத்திலேயே) கடுந்தவத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தாள்.(35) வரமளிப்பவனான முக்கண் தேவன் (மஹாதேவன்), கடும் நோன்புகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அருந்ததியைக் கண்டு மிகவும் மகிழ்ந்து அங்கே வந்தான்.(36)

அந்தச் சிறப்புமிக்க மஹாதேவன், ஒரு பிராமணரின் வடிவத்தை ஏற்று, அவளிடம் வந்து, “ஓ! மங்கலமானவளே, நான் பிச்சையை விரும்புகிறேன்” என்றான்.(37) அதற்கு அந்த அழகிய அருந்ததி, அவனிடம், “ஓ! பிராமணரே, சேகரித்து வைத்திருந்த எங்கள் உணவு தீர்ந்துவிட்டது. இந்த இலந்தைகளை உண்பாயாயாக” என்றாள்.(38) மஹாதேவன், “ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவளே, இந்த இலந்தைகளைச் சமைப்பாயாக” என்று பதிலுரைத்தான். இந்த வார்த்தைகளுக்குப் பிறகு, அந்தப் பிராமணருக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக அவள் அந்த இலந்தைகளைச் சமைக்கத் தொடங்கினாள்.(39) கொண்டாடப்பட்டவளான அருந்ததியானவள், அந்த இலந்தைகளை நெருப்பிலிட்டு, (மஹாதேவனின் உதடுகளில் இருந்து) பல்வேறு அற்புதமான, அழகிய, புனிதமான உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள். (ஏதோ அஃது ஒரு நாள் என்பதைப் போல) அந்தப் பனிரெண்டு வருட பஞ்சம் கழிந்துவிட்டது.(40)

உணவில்லாமல், சமைப்பதிலும், அந்த மங்கலமான உரைகளைக் கேட்பதிலும் ஈடுபட்டிருந்த அவளுக்கு {அருந்ததிக்கு}, அந்தப் பனிரெண்டு வருடங்களும், ஒரு நாளை போலக் கடந்து சென்றன.(41) பிறகு அந்த ஏழு முனிவர்களும் {சப்தரிஷிகளும்}, மலையில் இருந்து கனிகளை அடைந்து அந்த இடத்திற்குத் திரும்பி வந்தனர். போற்றுதலுக்குரிய மஹாதேவன், அருந்ததியிடம் மிகவும் நிறைவடைந்து, அவளிடம்,(42) “ஓ! அறமறிந்தவளே, இந்த முனிவர்களை முன்பு போலவே அணுகுவாயாக. உன் தவங்களாலும், நோன்புகளாலும் நான் நிறைவடைந்தேன்” என்றான்.(43) போற்றுதலுக்குரிய ஹரன், அப்போது தன் சொந்த வடிவை ஏற்று நின்று கொண்டிருந்தான். நிறைவடைந்தவனான அவன், அவர்களிடம் உன்னத நடத்தை கொண்ட அருந்ததியைக் குறித்து (இவ்வார்த்தைகளில்),(44) “மறுபிறப்பாளர்களே {பிராமணர்களே}, இந்த மங்கை ஈட்டியிருக்கும் தவத்தகுதியானது, இமயத்தின் சாரலில் நீங்கள் ஈட்டியதைவிட மிகப் பெரியது என நான் கருதுகிறேன்.(45) இவள், பனிரெண்டு வருடங்களாக உண்ணாமல், சமைத்துக் கொண்டே பனிரெண்டு வருடங்களைக் கடத்தி, கடுமையான தவத்தைச் செய்திருக்கிறாள்” என்றான்.(46) பிறகு, அருந்ததியிடம் பேசிய அந்தத் தெய்வீக மஹாதேவன், அவளிடம், “ஓ! மங்கலமான பெருமாட்டியே, உன் இதயத்தில் இருக்கும் வரத்தைக் கேட்பாயாக” என்று சொன்னான்.(47)

அப்போது சிவந்த நிறத்தில் அகன்ற கண்களைக் கொண்டிருந்த அந்த மங்கை, ஏழு முனிவர்களுக்கு மத்தியிலும் வைத்து, அந்தத் தேவனிடம், “ஓ! தெய்வீகமானவனே, நீ என்னிடம் நிறைவுகொண்டிருந்த இந்த இடமானது சிறந்த தீர்த்தமாகட்டும். பதரபாசனம் என்ற பெயரில் இஃது அறியப்படட்டும். இது சித்தர்கள் மற்றும் தெய்வீக முனிவர்களுக்குப் பிடித்தமான ஓய்விடமாக இருக்கட்டும்.(48) மேலும், ஓ! தேவர்களின் தேவா, எவன் தன்னைத் தூய்மையாக்கிக் கொண்டு, நோன்பை நோற்று மூன்று இரவுகள் இங்கே தங்கியிருக்கிறானோ, அவன் பனிரெண்டு வருடங்கள் நோன்பிருந்ததற்கான கனியை அடையட்டும்” என்று கேட்டாள்.(49) அந்தத் தேவன் {மகாதேவன்}, “அப்படியே ஆகட்டும்” என்று அவளிடம் சொல்லிவிட்டு, அந்த ஏழு முனிவர்களாலும் புகழப்பட்டு, சொர்க்கத்திற்குச் சென்றான்.(50) உண்மையில், அம்முனிவர்கள், அந்தத் தேவனைக் கண்டும், களைப்படையாமல், நிறம் மாறாமல், பசி தாகத்தைத் தாங்கவல்லவளாக இருந்த அருந்ததியைக் கண்டும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(51) ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட பெண்ணே, இவ்வாறே பழங்காலத்தில் தூய ஆன்மா கொண்ட அருந்ததியானவள், ஓ! கடும் நோன்புகளைக் கொண்ட காரிகையே {சுருதாவதியே}, என் நிமித்தமாக நீ அடைந்தது போலவே உயர்ந்த வெற்றியை அடைந்தாள்.(52)

எனினும், ஓ! இனிய கன்னிகையே {{சுருதாவதியே}, நீ இன்னும் கடுமையான தவத்தைச் செய்திருக்கிறாய். உன் நோன்புகளால் நிறைவடைந்த நான், ஓ! மங்கலமானவளே, அருந்ததிக்கு அருளப்பட்ட வரத்தைவிட மேம்பட்ட வரத்தை உனக்குத் தருவேன். ஓ! இனிமையானவளே, அருந்ததிக்கு வரத்தை அருளிய அந்த உயர் ஆன்ம தேவனின் சக்தியின் மூலமும், உனது ஆற்றலின் மூலமும் நான் உனக்கு, “இந்தத் தீர்த்தத்தில் ஓரிரவு மட்டுமே வசித்து, (தியானத்தில்) ஆன்மாவை நிலைக்கச் செய்பவன், தன் உடலைக் கைவிட்டு, (வேறு வழிகளில்) அடைவதற்குக் கடினமான பல அருள் உலகங்களை அடைவான்” என்ற மற்றொரு வரத்தையும் இப்போது கொடுப்பேன்” என்றான் {இந்திரன்}.(53-55)

பிறகு, பெரும் சக்தியைக் கொண்டவனான ஆயிரங்கண் சக்ரன் {இந்திரன்}, தூய்மையடைந்த சுருவாவதியிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி, சொர்க்கத்திற்குத் திரும்பிச் சென்றான்.(56) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, வஜ்ரதாரி சென்றதும், அங்கே இனிய நறுமணமிக்க தெய்வீக மலர்மாரி பொழிந்தது.(57) தெய்வீகத் துந்துபிகளும் பேரொலியுடன் அங்கே முழங்கின. ஓ! ஏகாதிபதி, மங்கலமான நறுமணமிக்கத் தென்றலும் அங்கே வீசியது.(58) அந்த மங்கலமான சுருவாவதி, தன் உடலைக் கைவிட்டு, இந்திரனின் மனைவியானாள். கடுந்தவத்தால் அந்நிலையை அடைந்த அவள், எப்போதும் அவனுடன் {இந்திரனுடன்} விளையாடிக் கொண்டு தன் காலத்தைக் கழிக்கத் தொடங்கினாள்” {என்றார் வைசம்பாயனர்}.(59)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “சுருவாவதியின் தாயார் யார்? அந்த அழகிய சுருவாவதி எவ்வாறு வளர்ந்தாள்? ஓ! பிராமணரே, என் ஆவல் அதிகமாக இருப்பதால், இதை நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(60)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஒரு காலத்தில், மறுபிறப்பாளரும், உயர் ஆன்மா கொண்ட முனிவருமான பரத்வாஜருக்கு, அகன்ற கண்களையுடையவளான கிரிடாச்சி {கிருதாசி} என்ற அப்சரஸ் கடந்து செல்வதைக் கண்டு உயிர்நீர் வெளியேறியது.(61) அதன்பேரில் அந்தத் தவசிகளில் முதன்மையானவர் {பரத்வாஜர்} அதைத் தன் கைகளில் ஏந்தினர். மரத்தின் இலைகளால் செய்யப்பட்ட ஒரு குடுவையில் அது வைக்கப்பட்டது. அந்தக் குடுவையிலேயே சுருவாவதி என்ற பெண் பிறந்தாள்.(62) தவத்தை செல்வமாகக் கொண்ட பரத்வாஜர், பிறப்புக்குப் பிறகு நடத்தப்படும் சடங்குகளைச் செய்து அவளுக்கு ஒரு பெயரைச் சூட்டினார்.(63) அறஆன்மா கொண்ட அம்முனிவர் {பரத்வாஜர்}, தேவர்களுக்கு முன்னிலையில் வைத்து சுருவாவதி என்ற பெயரைச் சூட்டினார். பரத்வாஜர், அப்பெண்ணைத் தன் ஆசிரமத்தில் வைத்து இமயத்தின் காடுகளுக்குச் சென்றார்.(64) யாதவர்களில் முதன்மையானவனும், பெரும் கண்ணியமும் மிக்கப் பலதேவன் {பலராமன்}, அந்தத் தீர்த்தத்தில் நீராடி, பிராமணர்களில் முதன்மையானோர் பலருக்கு அதிகச் செல்வத்தைக் கொடுத்து, ஆன்மாவைத் தியானத்தில் நிலைக்கச் செய்து, சக்ரனின் {இந்திரனின்} தீர்த்தத்திற்குச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(65)

தீர்த்தங்களில் புனிதநீராடல்! – சல்லிய பர்வம் பகுதி – 49-இந்திர, ராம, யமுனா, ஆதித்திய தீர்த்தங்களுக்குச் சென்ற பலராமன்; இந்திரன், பரசுராமர், வருணன், சூரியன் ஆகியோர் செய்த வேள்விகள்; மதுகைடபர்களைக் கொன்று ஆதித்தியத் தீர்த்தத்தில் நீராடிய விஷ்ணு; யோகசக்திகளை அடைந்த வியாசர் மற்றும் அசிததேவலர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “’அந்த யதுக்களின் வலிமைமிக்கத் தலைவன் {பலராமன்}, இந்திரனின் தீர்த்தத்திற்குச் சென்று, அங்கே உரிய சடங்குகளுடன் நீராடி, பிராமணர்களுக்குச் செல்வத்தையும், ரத்தினங்களையும் கொடுத்தான்.(1) தேவர்களின் தலைவன் {இந்திரன்} அங்கே நூறு வேள்விகளைச் செய்து, பிருஹஸ்பதிக்கு அபரிமிதமான செல்வத்தைத் தானமளித்தான்.(2) உண்மையில், அந்தச் சக்ரன் {இந்திரன்}, வேதங்களை அறிந்தோரான பிராமணர்களின் உதவியுடனும், (சாத்திரங்களில்) விதிக்கப்பட்டுள்ள சடங்குகளுடனும் அவ்வேள்விகள் அனைத்தையும் செய்தான். அந்த வேள்விகளில் அனைத்தும் தடங்கலற்றவையாக இருந்தன. அனைத்து வகைக் குதிரைகளும் அங்கே கொண்டுவரப்பட்டன. பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட தானங்கள் அபரிமிதமாக இருந்தன.(3) ஓ! பாரதர்களின் தலைவா, பெரும் காந்தியைக் கொண்ட சக்ரன் அந்த நூறு வேள்விகளையும் முறையாக முடித்ததும், சதக்ரது என்ற பெயரில் அழைக்கப்பட்டான்.(4) அனைத்துப் பாவங்களையும் துடைக்கவல்லதும், மங்கலமானதுமான அந்தப் புனிதத் தீர்த்தம், இதன் காரணமாகவே இந்திரத் தீர்த்தம் என்று அவன் பெயரால் அழைக்கப்பட்டது.(5)

அங்கே முறையாக நீராடிய பலதேவன், சிறந்த உணவும் மற்றும் ஆடைகளைத் தானமளித்துப் பிராமணர்களை வழிபட்டான். பிறகு அவன், ராமரின் {பரசுராமரின்} பெயரால் அழைக்கப்பட்டதும், மங்கலமானதுமான முதன்மையான தீர்த்தத்திற்குச் சென்றான்.(6) உயர்ந்த அருளையும், பெரும் தவத் தகுதியையும் கொண்ட பிருகு குலத்தின் ராமர் {பரசுராமர்}, மீண்டும் மீண்டும் பூமியைப் பணியச் செய்து, க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் அனைவரையும் கொன்றார்.(7) (அத்தகு அருஞ்செயல்களைச் செய்த) ராமர், முனிவர்களில் சிறந்தவரும், தன் ஆசானுமான கசியபரின் துணையுடன் ஒரு வாஜபேய வேள்வியையும், நூறு குதிரை வேள்விகளையும் அந்தத் தீர்த்தத்தில்தான் செய்தார். அங்கே ராமர் {பரசுராமர்}, தன் ஆசானுக்குக் கடல்களுடன் கூடிய மொத்த பூமியையும் வேள்விக்கூலியாகக் கொடுத்தார்.(8) ஓ! ஜனமேஜயா, அந்தப் பெரும் ராமர் {பரசுராமர்}, அங்கே முறையாக நீராடி, பிராமணர்களுக்குத் தானமளித்து அவர்களை வழிபட்டார்.(9) அவர், பல்வேறு வகை ரத்தினங்கள், பசுக்கள், யானைகள், பெண் பணியாட்கள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் ஆகிய பல்வேறு தானங்களை அளித்த பிறகு காட்டுக்குள் ஓய்ந்து சென்றார்.(10)

தேவர்களும், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களும் வந்து போகும் இடமானதும், புனிதமானதுமான அந்த முதன்மையான தீர்த்தத்தில் நீராடிய பிறகு, பலதேவன் {பலராமன்}, அங்கே இருந்த தவசிகளை முறையாக வழிபட்டு, யமுனா என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(11) ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, பழங்காலத்தில், பெரும்பிரகாசத்தைக் கொண்டவனும், உயர்ந்த அருளைக் கொண்டவனும், அதிதியின் மகனுமான வருணன், அந்தத் தீர்த்தத்தில்தான் ராஜசூய வேள்வியைச் செய்தான்.(13) ஓ!மன்னா {ஜனமேஜயா}, போரில் மனிதர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் ராட்சசர்களை அடக்கியவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான வருணன், அந்தத் தீர்த்தத்தில்தான் தன் மகத்தான வேள்வியைச் செய்தான். அந்த முதன்மையான வேள்வி தொடங்கியதும், மூவுலகங்களையும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் போர் மூண்டது.(14) வேள்விகளில் முதன்மையான (வருணனின்) ராஜசூயம் நிறைவடைந்ததும், ஓ! ஜனமேஜயா, க்ஷத்திரியர்களுக்கிடையில் ஒரு பயங்கரமான போர் தொடங்கியது.(15)

எப்போதும் தயாளமாக இருப்பவனும், பலமிக்கவனுமான பலதேவன், அங்கே முனிவர்களை வழிபட்டு, தானத்தை விரும்பியோருக்கு பல தானங்களை அளித்தான்.(16) மகிழ்ச்சியால் நிறைந்தவனும், பெரும் முனிவர்களால் புகழப்பட்டவனும், காட்டு மலர் மாலைகளால் எப்போதும் அலங்கரிக்கப்பட்ட வீரனுமான அந்தப் பலதேவன் அடுத்ததாக ஆதித்தியம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(17) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, போற்றுதலுக்குரியவனும், பெருங்காந்தியைக் கொண்டவனுமான சூரியன் அங்கே ஒரு வேள்வியைச் செய்து, (அண்டத்தின்) ஒளிக்கோள்கள் அனைத்தின் மீதான அரசுரிமையையும், தனக்கான பெரும் சக்தியையும் அடைந்தான்.(18)

அந்த ஆற்றின் {சரஸ்வதி ஆற்றின்} கரையில் அமைந்துள்ள அந்தத் தீர்த்தத்தில், வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்கள், விஸ்வதேவர்கள், மருத்துக்கள், கந்தர்வர்கள், அப்சரர்கள்,(19) தீவில் பிறந்தவர் (வியாசர்), சுகர், மதுசூதனனான கிருஷ்ணன், யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா},(20) ஆயிரக்கணக்கான பலர் மற்றும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் ஆகியோர் எப்போதும் வசிக்கின்றனர். உண்மையில், பழங்காலத்தில் விஷ்ணுவானவன், மது, கைடபன் என்ற அசுரர்கள் இருவரைக் கொன்று, மங்கலமானதும், புனிதமானதுமான அந்தச் சரஸ்வதியின் தீர்த்தத்தில் நீராடி {பாவம் விலகுவதற்காகத்} தனக்கான தூய்மைச் சடங்குகளைச் செய்தான்.(21,22) அற ஆன்மா கொண்டவரான தீவில் பிறந்தவரும் ((துவைபாயனரான} வியாசரும்) அந்தத் தீர்த்தத்தில் நீராடி, பெரும் யோக சக்திகளையும், உயர்ந்த வெற்றியையும் அடைந்தான்.(23) பெரும் தவத் தகுதியை உடையவரான முனிவர் அசித தேவலரும், உயர்ந்த யோகத் தியானத்தில் தன் ஆன்மாவை நிலைக்கச் செய்து அந்தத் தீர்த்தத்தில் நீராடியே பெரும் யோக சக்திகளை அடைந்தார்” {என்றார் வைசம்பாயனர்}.(24)

அசிததேவலரும், ஜைகிஷவ்யரும்! – சல்லிய பர்வம் பகுதி – 50-தேவலர் மற்றும் ஜைகிஷவ்யர் வரலாறு; இல்லறம் நோற்ற அசிததேவலர்; யாசகம் கேட்டு வந்த ஜைகிஷவ்யர்; ஐயமிட்டு நிறைவையடைந்த தேவலர்; ஜைகிஷவ்யர் அடைந்த தகுதிகளை எண்ணி பொறாமை கொண்ட தேவலர்; தேவலருக்கு யோகம் போதித்த ஜைகிஷவ்யர்; இருவரும் முக்தியை அடைந்தது; சோமதீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பழங்காலத்தில், அறஆன்மா கொண்டவரும், இல்லறம் சார்ந்த கடமைகளை நோற்பவரும், அசிததேவலர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு முனிவர் அந்தத் தீர்த்தத்தில் {ஆதித்திய தீர்த்தத்தில்} வாழ்ந்து வந்தார்.(1) அவர், அறத்திற்குத் தம்மை அர்ப்பணித்து, சுயக்கட்டுப்பாடுடைய தூய்மையான வாழ்வை மேற்கொண்டார். பெரும் தவத் தகுதியை உடைய அவர் {அசிததேவலர்}, அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவராகவும், எவருக்கும் தீங்கிழைக்காதவராகவும் இருந்தார். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, சொல், செயல், எண்ணம் ஆகியவற்றில் அனைத்து உயிரினங்களிடமும் அவர் {அசிததேவலர்} சமமாகவே நடந்து கொண்டார்.(2) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, கோபமற்றிருந்த அவருக்கு, நிந்தனையும், புகழும் சமமாகவே இருந்தன. ஏற்புடையவை {இனியவை} மற்றும் ஏற்பில்லாதவையிடம் சமமான மனப்பாங்கைக் கொண்டிருந்த அவர், யமனைப் போலவே முற்றிலும் பாரபட்சமற்றவராக {நடுநிலைமை கொண்டவராக} இருந்தார்.(3) அந்தப் பெரும் தவசி, தங்கத்தையும், கூழாங்கற்களின் குவியலையும் சமமான கண்களுடனேயே கண்டார். அவர் தினமும், தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் (தம்மிடம் வரும்) பிராமணர்கள் ஆகியோரை வழிபட்டார். அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்த அவர், எப்போதும் பிரம்மச்சரிய நோன்பையே நோற்றுவந்தார்.(4)

ஒரு காலத்தில், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, யோகத்திற்குத் தம்மை அர்ப்பணித்திருந்தவரும், ஆழ்ந்த தியானத்தைக் கொண்டவரும், பிச்சைக்காரர்களின் வாழ்வை வாழ்பவருமான {சந்நியாசியுமான} ஜைகிஷவ்யர் என்ற பெயரையுடைய நுண்ணறிவுமிக்க ஒரு தவசியானவர், தேவலரின் ஆசிரமத்திற்கு வந்தார்.(5) யோகத்தில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவரும், பெருங்காந்தியைக் கொண்டவருமான அந்தப் பெருந்தவசி {ஜைகிஷவ்யர்}, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தேவலரின் ஆசிரமத்தில் வசித்து வந்தபோது, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டார்.(6) உண்மையில் அந்தப் பெரும் முனிவரான ஜைகிஷவ்யர் அங்கே வசித்து வந்தபோது, தேவலர், எந்தக் காலத்திலும், ஒருபோதும் அவரைப் புறக்கணிக்காமல் அவர் மீதும் தம் கண்களை நிலைக்கச் செய்திருந்தார்.(7) ஓ! ஏகாதிபதி, இவ்வாறு பழங்காலத்தில் இந்த இருவரும் நீண்ட காலத்தைக் கழித்தனர். ஒரு சந்தர்ப்பத்தில், தவசிகளில் முதன்மையானவரான அந்த ஜைகிஷவ்யரைத் தேவலரால் காண முடியவில்லை.(8) எனினும், ஓ! ஜனமேஜயா, அறம் சார்ந்தவரும், பிட்சாடன {பிச்சை எடுத்து வாழும்} வாழ்வை நோற்பவருமான அந்த நுண்ணறிவுமிக்கத் தவசி {ஜைகிஷவ்யர்}, இரவுணவுக்கான நேரத்தில் ஐயம்வேண்டி {யாசகம் வேண்டி} தேவலரை அணுகினார்.(9) அந்தப் பெரும் தவசி {ஜைகிஷவ்யர்}, ஆண்டியின் கோலத்தில் மீண்டும் தோன்றியதைக் கண்ட தேவலர், அவருக்குப் பெரும் கௌரவங்களை அளித்து, மிகுந்த மனநிறைவைக் கொண்டார்.(10)

அந்தத் தேவலர், முனிவர்களால் விதிக்கப்பட்ட சடங்குகளுடனும், பெருங்கவனத்துடனும் தம்மால் இயன்ற அளவுக்குத் தமது விருந்தினரைப் பல வருடங்களாக வழிபட்டார்.(11) எனினும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒரு நாள் உயர் ஆன்ம தேவலரின் இதயத்தில், அந்தப் பெரும் முனிவரைக் கண்டு பெருங்கவலை உண்டானது.(12) அவர் {அசிததேவலர்} தனக்குள்ளேயே, “நான் இந்தத் தவசியைப் {ஜைகிஷவ்யரைப்} பல வருடங்களாக வழிபட்டு வருகிறேன். எனினும், அலட்சியமாக இருக்கும் இந்த ஆண்டி என்னிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லையே” என்று நினைத்தார்.(13) அருள்நிறைந்த தேவலர், இவ்வாறு நினைத்துக் கொண்டு, கையில் மண்குடத்துடன் ஆகாயமார்க்கமாகப் பெருங்கடலின் கரைக்குச் சென்றார்.(14) ஆறுகளின் தலைவனான பெருங்கடலின் கரையை அடைந்த உயர் ஆன்ம தேவலர், ஓ! பாரதா, அங்கே தனக்கு முன்பே வந்திருந்த ஜைகிஷவ்யரைக் கண்டார்.(15)

இதைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்த தலைவர் அசிதர், தனக்குள்ளேயே, “எனக்கு முன்பே பெருங்கடலை அடைந்து, தூய்மைச் சடங்குகளைச் செய்ய இந்த ஆண்டியால் எவ்வாறு முடிந்தது” என்று நினைத்தார்.(16) இவ்வாறே அந்தப் பெருமுனிவரான அசிதர் நினைத்தார். தூய்மைச் சடங்குகளை முறையாகச் செய்து, அதன்மூலம் தூய்மையடைந்த அவர் {அசிததேவலர்}, அமைதியாகப் புனிதமான மந்திரங்களை உரைக்கத் தொடங்கினார்.(17) தூய்மைச்சடங்குகளையும், மௌன வேண்டுதல்களையும் நிறைவு செய்த அந்த அருளப்பட்ட தேவலர், தமது மண் குடத்தில் நீரை நிரப்பிக் கொண்டு தமது ஆசிரமத்திற்குச் சென்றார். அந்தத் தவசி தமது ஆசிரமத்திற்குள் நுழைந்தபோதே அங்கே அமர்ந்திருந்த ஜைகிஷவ்யரைக் கண்டார்.(18,19) தேவலரிடம் ஒரு வார்த்தையும் பேசாத பெரும் தவசியான ஜைகிஷவ்யர், அவரது ஆசிரமத்தில் ஒரு மரக்கட்டையைப் போல வாழ்ந்து வந்தார்.(20)

தவங்களின் பெருங்கடலான அந்தத் தவசி {ஜைகிஷவ்யர்} (தான் செல்வதற்கு முன்பாகவே) கடலுக்குச் சென்று நீராடியதைக் கண்ட அசிதர், இப்போது தாம் வருவதற்கு முன்பாகவே அவர் அசிரமத்திற்கும் வந்துவிட்டதைக் கண்டார்.(21) பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான அசிததேவலர், ஜைகிஷவ்யரின் தவங்களால் யோகத்தின் மூலமாக அடையப்பட்ட இந்தச் சக்தியைக் கண்டு, அக்காரியம் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.(22) உண்மையில், அந்தச் சிறந்த தவசி {தேவலர்}, “எவ்வாறு இவர் எனக்கு முன்பே பெருங்கடலிலும், மீண்டும் என் ஆசிரமத்திலும் காணப்பட்டார்?” என்று மிகவும் ஆச்சரியமடைந்தார்.(23) மந்திரங்களை அறிந்தவரும், தவசியுமான அந்தத் தேவலர், இவ்வாறாகச் சிந்தித்துக் கொண்டிருந்த போது, ஓ! ஏகாதிபதி, ஆண்டியின் வாழ்வை வாழும் இந்த ஜைகிஷவ்யர் உண்மையில் யார் என்பதை அறிய தமது ஆசிரமத்தில் இருந்து எழுந்து வானத்தில் உயர்ந்தார்.(24) தேவலர், வானத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் சித்தர்களின் கூட்டத்தையும், அந்தச் சித்தர்களால் மரியாதையுடன் வழிபடப்படும் ஜைகிஷவ்யரையும் கண்டார்.(25)

தமது நோன்புகளில் உறுதியுடனும், (முயற்சிகளில்) விடாமுயற்சியுடனும் இருந்த தேவலர், அக்காட்சியைக் கண்டு கோபத்தால் நிறைந்தார். பிறகு அவர் {அசிததேவலர்} அந்த ஜைகிஷவ்யர் சொர்க்கத்திற்குப் புறப்பட்டுச் செல்வதைக் கண்டார்.(26) அடுத்ததாக அவர் பிதுருக்களின் உலகத்திற்குச் செல்வதை அவர் கண்டார். அதன் பிறகு அவர் யமலோகத்திற்குச் செல்வதையும் அவர் கண்டார்.(27) அந்தப் பெரும்தவசியான ஜைகிஷவ்யர் யமலோகத்தில் இருந்து, சோமலோகத்திற்குப் பறந்து செல்வதைக் கண்டார். பிறகு அவர் (ஒன்றன்பின் ஒன்றாக) குறிப்பிட்ட கடுமையான வேள்விகளைச் செய்தவர்கள் செல்லும் அருள் உலகங்களுக்குச் செல்வதைக் கண்டார்.(28) அங்கிருந்து அக்னிஹோத்ரிகளின் உலகத்திற்குச் சென்ற அவர், அங்கிருந்து தர்ச மற்றும் பௌர்ணமாச வேள்விகளைச் செய்தோரின் உலகத்திற்குச் சென்றார்.(29) நுண்ணறிவைக் கொண்டவரான தேவலர், தேவர்களாலேயே வழிபடப்படுவதும், விலங்குகளைக் கொன்று வேள்வி செய்தோர் அடைவதுமான தூய்மையான உலகத்திற்கு அவர் செல்வதைக் கண்டார்.(30)

அடுத்ததாக அவர், சாதுர்மாஸ்யம் என்றழைக்கப்படுவதும் மற்றும் அதே போன்ற பலவேறு வேள்விகளையும் செய்த தவசிகளின் இடத்திற்குச் செல்வதைத் தேவலர் கண்டார். அங்கிருந்து அவர், அக்னிஷ்டோம வேள்வியைச் செய்தவர்களுக்குச் சொந்தமான உலகதிற்குச் சென்றார்.(31) அடுத்ததாகத் தேவலர், அக்னிசுடம் என்றழைக்கப்படும் வேள்வியைச் செய்தோரின் உலகத்திற்கத் தமது விருந்தினர் {ஜைகிஷவ்யர்} செல்வதைக் கண்டார்.(32) உண்மையில், அவர் வாஜபேயம் என்றழைக்கப்படும் முதன்மையான வேள்வியையும், அபரிமிதமான தங்கம் தேவைப்படும் பிற வேள்விகளை {பகுஸுவர்ணகம் போன்றவற்றைச்} செய்த உயர்ந்த ஞானியரின் உலகங்களுக்குச் செல்வதைத் தேவலர் கண்டார்.(33) பிறகு அவர், ராஜசூயம் மற்றும் பௌண்டரிகம் ஆகியற்றைச் செய்தோரின் உலகத்திற்கு ஜைகிஷவ்யர் செல்வதைக் கண்டார்.(34) குதிரை வேள்வி {அஸ்வமேதம்} மற்றும் மனிதர்கள் கொல்லப்படும் வேள்வி {நரமேதம்} ஆகியவற்றைச் செய்த முதன்மையான மனிதர்களின் உலகங்களில் அவரைக் கண்டார்.(35)

உண்மையில் தேவலர், சௌத்ராமணி என்றழைக்கப்படும் வேள்வி மற்றும் அடைவதற்கு மிகக் கடினமானதும், அனைத்து விலங்குகளின் இறைச்சியும் தேவைப்படுவதுமான வேள்வியையும் {சர்வமேதம்} செய்தோரின் உலகத்தில் ஜைகிஷவ்யரைக் கண்டார்.(36) துவாதசாகம் என்றழைக்கப்படும் வேள்வி மற்றும் அதே தன்மை கொண்ட பல்வேறு வேள்விகளைச் செய்தோரின் உலகத்தில் ஜைகிஷவ்யர் காணப்பட்டார்.(37) அடுத்ததாக அசிதர், தமது விருந்தினர், மித்ராவருணன் மற்றும் ஆதித்தியர்களின் உலகங்களுக்குச் செல்வதைக் கண்டார்.(38) அடுத்ததாக அசிதர், தன் விருந்தினர் {ஜைகிஷவ்யர்} ருத்திரர்கள், வசுக்கள் மற்றும் பிருஹஸ்பதியின் உலகங்களைக் கடந்து செல்வதைக் கண்டார்.(39) கோலோகம் என்றழைக்கப்படும் அருள் உலகத்திற்குப் பறந்து சென்ற ஜைகிஷவ்யர், அடுத்ததாகப் பிரம்மசத்ரம் செய்தோரின் உலகத்தைக் கடக்கும்போது காணப்பட்டார்.(40)

தமது சக்தியால் மேலும் மூன்று உலகங்களைக் கடந்த அவர் {ஜைகிஷ்வ்யர்}, கணவர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டோரும், கற்புடையவர்களுமான பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட உலத்தில் அவர் காணப்பட்டார்.(41) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, அந்த இடத்தில், ஆழ்ந்த யோகம் கொண்டவரும், தவசிகளில் முதன்மையானவருமான ஜைகிஷவ்யர் தன் பார்வையில் இருந்து மறைந்துவிட்டதை அசிதர் கண்டார்.(42) அப்போது உயர்ந்த அருளைக் கொண்டவரான அந்தத் தேவலர், ஜைகிஷவ்யரின் சக்தி, அவரது நோன்புகளின் சிறப்பு, ஒப்பிலாத அவரது யோக வெற்றி ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்தார்.(43) பிறகு சுயக்கட்டுப்பாடு கொண்டவரான அசிதர், மரியாதையுடன் தமது கரங்களைக் குவித்து, பிரம்மசத்ரம் செய்தோரின் உலகத்தில் இருந்த முதன்மையான சித்தர்களிடம்,(44) “நான் ஜைகிஷவ்யரைக் காணவில்லை. பெரும் சக்தி கொண்ட அந்தத் தவசி எங்கே இருக்கிறார் என்பதை எனக்குச் சொல்வீராக. என் ஆவல் அதிகமாக இருப்பதால் இதை நான் கேட்க விரும்புகிறேன்” என்று விசாரித்தார்.(45)

அதற்குச் சித்தர்கள் {அசிததேவலரிடம்}, “ஓ! கடும் நோன்புகளைக் கொண்ட தேவலரே, நாங்கள் சொல்லும் உண்மையைக் கேட்பீராக. ஜைகிஷவ்யர் அழிவில்லாத பிரம்மலோகத்திற்குச் சென்றுவிட்டார்” என்றனர்”.(46)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிரம்மசத்ரியின் பகுதிகளில் வசித்த சித்தர்கள் சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்ட அசிதர், உயரப் பறக்க முயற்சித்து விரைவில் கீழே விழுந்தார்.(47) அப்போது சித்தர்கள், மீண்டும் தேவலரிடம், “ஓ! தேவலரே, ஜைகிஷவ்யர் சென்றிருக்கும் பிரம்ம லோகத்திற்கு நீர் செல்லத் தகுந்தவரல்ல” என்றனர்”.(48)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சித்தர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவலர், முறையான வரிசையில் ஒவ்வொரு உலகமாகத் தாண்டி கீழே வந்தார்.(49) உண்மையில், சிறகு படைத்த ஒரு பூச்சியைப் போல அவர் வேகமாகத் தனது ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார். தமது வசிப்பிடத்திற்குள் நுழையும் போதே அங்கே அமர்ந்திருக்கும் ஜைகிஷவ்யரைக் கண்டார்.(50) ஜைகிஷவ்யரின் தவ யோகத்தின் மூலம் அடையப்பட்ட சக்தியைக் கண்ட தேவலர், அதுகுறித்து நேர்மையான அறிவோடு சிந்தித்து,(51) ஓ! மன்னா {ஜனமேஜயா}, பணிவுடன் அந்தப் பெரும் தவசியை அணுகி, அந்த உயர் ஆன்ம ஜைகிஷவ்யரிடம், “ஓ! போற்றுதலுக்குரியவரே, மோட்ச (விடுதலையின்) அறத்தை {மோக்ஷதர்மத்தைப்} பின்பற்ற நான் விரும்புகிறேன்” என்றார்.(52) அவரது வார்த்தைகளைக் கேட்ட ஜைகிஷவ்யர், அவருக்குப் பாடங்களைக் கொடுத்தார். அவர் {ஜைகிஷவ்யர்}, யோகம் மற்றும் அழியாத உயர்ந்த கடமைகளையும், அவற்றின் நேர்மாறான தன்மைகளையும் அவருக்கு {தேவலருக்குப்} போதித்தார்.(53) அந்தப் பெருந்துறவி {ஜைகிஷவ்யர்}, உறுதியான தீர்மானத்தில் இருக்கும் அவரைக் கண்டு, (அவ்வறத்திற்குள் அவர் நுழைவதற்காக) விதிக்கப்பட்டிருக்கும் செயல்களனைத்தையும் முறையான சடங்குகளுடன் செய்தார்.(54) அப்போது பித்ருக்களுடன் சேர்ந்த உயிரினங்கள் அனைத்தும், மோட்ச அறத்தைப் பின்பற்றத் தீர்மானத்திருக்கும் தேவலரைக் கண்டு, “ஐயோ, இனி நமக்கு யார் உணவளிப்பார்?” என்று அழத் தொடங்கின.(55)

{திசைகளின்} பத்து புள்ளிகளிலும் எதிரொலித்த அவ்வுயிரினங்களின் இந்தப் புலம்பல்களைக் கேட்ட தேவலர், மோட்ச அறத்தை {துறவறத்தைக்} கைவிடுவதில் தன் இதயத்தை நிலைக்கச் செய்தார்.(56) ஓ! பாரதா {ஜனமேஜயா}, பிறகு அனைத்து வகையிலான புனித கனிகளும், கிழங்குகளும், மலர்களும், இலையுதிர்க்கும் மூலிகைகளும், “தீய இதயம் கொண்டவனும், அற்பனுமான இந்தத் தேவலன், மீண்டும் நம்மை வெட்டிப் பிடுங்கப் போகிறான் என்பதில் ஐயமில்லை. ஐயோ, அனைத்துயிர்களுக்கும் முற்றான தீங்கிழையாமையை உறுதிசெய்துவிட்டு, அவன் செய்யப்போகும் தீங்கை அவன் அறியவில்லை” என்றன.(57,58) இதனால், அந்தச் சிறந்த தவசி, தன் அறிவின் துணையுடன் சிந்திக்கத் தொடங்கி, “மோட்ச அறம், அல்லது இல்லறம் ஆகிய இரண்டில்[1] எனக்கு எது சிறந்தது?” என்று நினைத்தார்.(59) இதுகுறித்துச் சிந்தித்த தேவலர், ஓ மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, இல்லறத்தைக் கைவிட்டு, மோட்ச அறத்தை {துறவறத்தைப்} பின்பற்றினார்.(60)

இவ்வாறு சிந்தித்த தேவலர், அந்தத் தீர்மானத்தின் விளைவால், ஓ! பாரதா {ஜனமேஜயா}, உயர்ந்த வெற்றியையும், உயர்ந்த யோகத்தையும் அடைந்தார்.(61) அப்போது, பிருஹஸ்பதியின் தலைமையிலான தேவர்கள், ஜைகிஷவ்யரையும், அந்தத் தவசியின் தவங்களையும் புகழ்ந்தனர்.(62) தவசிகளில் முதன்மையானவரான நாரதர், அந்தத் தேவர்களிடம், “அசிதரை ஆச்சரியத்தில் நிறைத்த ஜைகிஷவ்யரிடம் கடுந்தவம் இல்லை” என்றார்.(63) அப்போது அந்தச் சொர்க்கவாசிகள், இந்த அச்சந்தரும் வார்த்தைகளைச் சொன்ன நாரதரிடம், “பெரும் தவசியான ஜைகிஷவ்யரைக் குறித்து அவ்வாறு சொல்லாதீர்.(64) ஆற்றல், தவம் மற்றும் யோக சக்தியில் இந்த உயர் ஆன்மாவுக்கு மேன்மையான, அல்லது இணையான எவரும் இல்லை. ஜைகிஷவ்யர் மற்றும் அசிதரின் சக்தி இவ்வாறானதே. அந்த இருவரின் இடமும், அந்த உயர் ஆன்மாக்கள் இருவரின் தீர்த்தமும் இதுதான் {ஆதித்திய தீர்த்தம் தான்}.(66) உயர் ஆன்மா கொண்டவனும், உன்னதச் செயல்களைச் செய்பவனுமான அந்தக் கலப்பைதாரி {பலராமன்}, அங்கே நீராடி, பிராமணர்களுக்குச் செல்வத்தைத் தானமளித்து, பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டிய பிறகு, சோம தீர்த்தத்தை நோக்கிச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(67)

ததீசரும், சாரஸ்வதரும்! – சல்லிய பர்வம் பகுதி – 51-ததீச, சாரஸ்வத முனிவர்களின் வரலாறு; ததீச முனிவரை மயக்கிய அலம்புசை; சரஸ்வதி ஆற்றிடம் பிறந்த சாரஸ்வதர்; ததீசரின் எலும்புகளால் ஆயுதம் செய்து அசுரர்களை வென்ற இந்திரன்; பனிரெண்டு வருடங்கள் நீடித்த பஞ்சம்; சரஸ்வதியாற்றின் மீன்களை உண்டு வாழ்ந்த சாரஸ்வத முனிவர்; அறுபதாயிரம் முனிவர்களுக்கு வேதங்களைக் கற்பித்த சாரஸ்வதர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதா, அந்தத் தீர்த்தத்தில்தான் {சோம தீர்த்தத்தில்தான்}, பழங்காலத்தில், நட்சத்திரங்களின் தலைவன் {சந்திரன்}, தாரகனைத் தீமையின் வேராகக் கொண்ட ஒரு பெரும்போரில் ஈடுபட்டு, ராஜசூய வேள்வியைச் செய்தான்.(1) தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட அறவோனான பலன் {பலராமன்}, அத்தீர்த்தத்தில் நீராடி, தானங்கள் பலவற்றைச் செய்து, சாரஸ்வதர் என்ற பெயர் கொண்ட முனிவரின் தீர்த்தத்திற்குச் சென்றான்.(2) அங்கே முன்பொரு காலத்தில், பனிரெண்டு {12} வருட பஞ்சம் நீடித்தபோது, தவசியான அந்தச் சாரஸ்வதர், பிராமணர்களில் முதன்மையானோர் பலருக்கு வேதங்களைக் கற்பித்தார்” {என்றார் வைசம்பாயனர்}.(2,3)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! தவத் தகுதியைக் கொண்டவரே, அந்தத் தவசியான சாரஸ்வதர், பனிரெண்டு வருடகாலப் பஞ்சத்தின் போது, ஏன் வேதங்களைக் கற்பித்தார்?” என்று கேட்டான்.(4)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில், நுண்ணறிவும், பெரும் தவத்தகுதியும் கொண்ட ஒரு தவசி இருந்தார். அவர் ததீசர் {ததீசி} என்ற பெயரால் கொண்டாடப்பட்டார். தமது புலன்களில் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்ட அவர், ஒரு பிரம்மச்சாரியின் வாழ்வை நோற்றார்.(5) அவரது மிகக் கடுமையான தவங்களின் விளைவால், சக்ரன் {இந்திரன்} பேரச்சத்தால் பீடிக்கப்பட்டான். பல்வேறு வகை வெகுமதிகளைக் கொடுக்க முன்வந்தும், அந்தத் தவசியை (அவரது தவத்திலிருந்து) விலக்க முடியவில்லை.(6) இறுதியாக அந்தப் பகனைத் தண்டித்தவன் {இந்திரன்}, அந்தத் தவசியை ஆசையில் மயக்கமடையச் செய்ய, பேரழகுடையவளும், அலம்புசை என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு தெய்வீக அப்சரஸை அவரிடம் அனுப்பி வைத்தான்.(7) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த உயர் ஆன்ம தவசி, தேவர்களை நிறைவு செய்யும் செயலை {தவத்தை} எங்கே செய்து வந்தாரோ, அந்தச் சரஸ்வதியின் கரையில் மேற்கண்ட {அலம்புசை என்ற} பெயரையுடைய தெய்வீகக் காரிகை தோன்றினாள்.(8) அழகிய அங்கங்கள் கொண்ட அந்தக் காரிகையைக் {அலம்புசையைக்} கண்டதும், அந்தத் தூய ஆன்மா கொண்ட தவசியின் {ததீசரின்} உயிர் வித்து வெளிப்பட்டது. சரஸ்வதியில் விழுந்த அஃதை அவர் கையில் ஏந்தினார்.(9) உண்மையில், ஓ! மனிதர்களில் காளையே {ஜனமேஜயா}, அவ்வித்தைக் கண்ட அந்த ஆறானவள் {சரஸ்வதி}, அதைத் தன் கருவறையில் தாங்கினாள். சரியான காலத்தில் அது கருவாக வளர்ந்தது. அந்தப் பேராறும், உயிர் கொண்ட பிள்ளையாவதற்காக அதைத் தாங்கிக் கொண்டாள்.(10)

ஓ! தலைவா {ஜனமேஜயா}, காலம் வந்தபோது, அந்தப் பிள்ளையை ஈன்ற அந்த முதன்மையான ஆறானவள் {சரஸ்வதியானவள்}, அப்பிள்ளையை எடுத்துக் கொண்டு அம்முனிவரிடம் {ததீசரிடம்} வந்தாள்.(11) அந்த முனிவர்களில் சிறந்தவர் {ததீசர்}, {முனிவர்களின்} சபையில் இருப்பதைக் கண்ட சரஸ்வதி, அவரிடம் {ததீசரிடம்} பிள்ளையைக் கொடுக்கும்போது,(12) “ஓ! மறுபிறப்பாள {பிராமண} முனிவரே, உம்மிடம் கொண்ட அர்ப்பணிப்பினால், நான் உமது மகனைத் தாங்கினேன். அலம்புசை என்ற அப்சரஸைக் கண்டதும் வெளிப்பட்ட உமது வித்தைக் கண்டு, உம்மிடம் கொண்ட அர்ப்பணிப்பினாலும், உமது சக்திக்கு எந்த அழிவும் ஏற்படாது என்பதை அறிந்தும், அஃதை என் கருவறையில் தாங்கினேன்.(13,14) என்னால் கொடுக்கப்படும் உமது களங்கமற்ற பிள்ளையை ஏற்றுக் கொள்வீராக” என்றாள். இவ்வாறு அவளால் {சரஸ்வதியால்} சொல்லப்பட்ட அம்முனிவர் {ததீசர்}, அப்பிள்ளையை ஏற்றுக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தார்.(15)

அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் {ததீசர்}, ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, பாசத்தால் தன் மகனின் தலையை முகர்ந்து, சில காலத்திற்கு அவனைத் தன் நெருக்கமான அரவணைப்புக்குள் வைத்திருந்தார்.(16) அந்த ஆற்றிடம் {சரஸ்வதியிடம்} மனம் நிறைந்தவரும், பெரும் தவசியுமான அந்தத் ததீசர், அவளுக்கு ஒரு வரத்தைக் கொடுக்கும் வகையில், “ஓ! அருளப்பட்டவளே, இதுமுதல், உன் நீரைக் கொண்டு விஸ்வதேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்களின் அனைத்து இனங்கள், அப்சரஸ்கள் ஆகியோருக்குப் பலியுணவு {திருப்படையல்} கொடுக்கப்படும்போது, அதனால் அவர்கள் பெரும் மகிழ்வை அடைவார்கள்” என்றார்.(17) அந்தப் பேராற்றிடம் {சரஸ்வதியிடம்} இவ்வாறு சொன்ன அந்தத் தவசி, நிறைவை அடைந்து, மகிழ்ச்சியால் நிறைந்து, இவ்வார்த்தைகளால் அவளைப் புகழ்ந்தார். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவற்றை முறையாகக் கேட்பாயாக.(18)

{ததீசர் சரஸ்வதியிடம்}, “ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவளே, பழங்காலத்தில் பிரம்மத் தடாகத்தில் இருந்து நீ எழுந்து வந்தாய். ஓ! ஆறுகளில் முதன்மையானவளே, கடும் நோன்புகளைக் கொண்ட தவசிகள் அனைவரும் உன்னை அறிவார்கள்.(19) எப்போதும் ஏற்புடைய {இனிமையான} குணத்தைக் கொண்ட நீ, எனக்குப் பெரும் நன்மையைச் செய்திருக்கிறாய். ஓ! அழகிய நிறத்தைக் கொண்டவளே, இந்த உனது பெரும்பிள்ளை, சாரஸ்வதன் என்ற பெயரில் அறியப்படுவான்.(20) புதிய உலகங்களையே உண்டாக்கவல்லவனான இந்த உனது மகன், உன் பெயராலேயே அறியப்படுவான். உண்மையில், அந்தப் பெருந்தவசி சாரஸ்வதன் என்ற பெயரால் அறியப்படுவான்.(21) ஓ! அருளப்பட்டவளே, பனிரெண்டு வருடங்கள் நீடிக்கும் பஞ்சம் ஏற்படும்போது, இந்தச் சாரஸ்வதன், பிராமணர்களில் முதன்மையானோர் பலருக்கு வேதங்களைக் கற்பிப்பான்.(22) ஓ! அருளப்பட்ட சரஸ்வதியே, ஓ அழகியே, என் அருளால் நீ எப்போதும் புனிதமான நதிகள் அனைத்திலும் முதன்மையானவளாக இருப்பாய்” என்றார் {ததீசர்}.(23)

அந்தத் தவசியால் {ததீசரால்} வரங்கள் அருளப்பட்ட பிறகு, அந்தப் பேராறானவள் இவ்வாறே புகழப்பட்டாள். ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பிறகு அந்த ஆறானவள் தன் பிள்ளையை எடுத்துக் கொண்டு பெரும் மகிழ்ச்சியுடன் சென்றாள்.(24) அதேவேளையில், தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் போர் நேர்ந்த தருணத்தில், சக்ரன் {இந்திரன்}, ஆயுதங்களைத் தேடி மூவுலகங்களிலும் திரிந்து கொண்டிருந்தான்.(25) எனினும், அந்தப் பெருந்தேவன் {இந்திரன்}, தேவர்களின் எதிரிகளைக் கொல்லத்தக்க ஆயுதங்களைக் கண்டடைவதில் தோல்வியுற்றான்.(26) பிறகு அந்தச் சக்ரன் தேவர்களிடம், “இந்தப் பேரசுரர்களை என்னால் சந்திக்க முடியவில்லை. உண்மையில், ததீசரின் எலும்புகள் இல்லாமல் நமது எதிரிகளை நம்மால் கொல்ல முடியாது.(27) எனவே தேவர்களே, அந்த முனிவர்களில் சிறந்தவரிடம் {ததீசரிடம்} சென்று, அவரிடம், “ஓ! ததீசரே, உமது எலும்புகளைத் தாரும். அவற்றைக் கொண்டு நாங்கள் எங்கள் எதிரிகளைக் கொல்வோம்” என்று வேண்டிக் கொள்ளுங்கள்” என்றான்.(28) அவர்களால் மன்றாடிக் கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த முனிவர்களில் முதன்மையானவர் {ததீசர்}, எந்தத் தயக்கமுமின்றித் தம்முயிரைக் கொடுத்தார். தேவர்களுக்கு ஏற்புடையதைச் செய்த அந்தத் தவசி, வற்றாத தகுதிகளை {புண்ணியங்களைக்} கொண்ட பல உலகங்களை அடைந்தார்.(29)

அதேவேளையில் சக்ரன் {இந்திரன்}, அவரது எலும்புகளைக் கொண்டு, வஜ்ரம், சக்கரம், கனத்த கதாயுதங்கள், பலவகையிலான தண்டங்கள் மற்றும் தடிகள் போன்ற பல்வேறு ஆயுதங்களை மகிழ்ச்சியாக உண்டாக்கினான். படைப்பாளனுக்கே இணையானவரான ததீசர், அனைத்துயிர்களுடைய தலைவனின் {பிரம்மனின்} மகனும், பெரும் முனிவருமான பிருகுவால் கடுந்தவங்களின் துணைகொண்டு பெறப்பட்டவராவார்[1].(31) பருத்த அங்கங்களும், பெரும் சக்தியும் கொண்டவரான ததீசர், உலகின் உயிரினங்களில் பலமிக்கவராகப் படைக்கப்பட்டார். மகிமைக்காகக் கொண்டாடப்படுபவரான அந்தப் பலமிக்கத் ததீசர், மலைகளின் மன்னனைப் போன்ற உயரத்தை அடைந்தார். பகனைத் தண்டித்தவன் {இந்திரன்}, அவரது {ததீசரது} சக்தியால் எப்போதும் கவலையடைந்திருந்தான்.(32) பிரம்ம சக்தியில் பிறந்த வஜ்ரத்தை, மந்திரங்களால் ஈர்த்த இந்திரன், ஓ! பாரதா, அதை ஏவியபோது பேரொலியை எழுப்பி, தைத்தியர்களின் தொண்ணூற்றொன்பது வீரர்களைக் கொன்றான்.(33) பயங்கரமான நீண்ட காலம் சென்றதும், ஓ! மன்னா, பனிரெண்டு ஆண்டுகளுக்கு நீடித்த பஞ்சம் ஏற்பட்டது.(34) பனிரெண்டாண்டு காலம் அந்தப் பஞ்சம் நீடித்த போது, ஓ! ஏகாதிபதி, பெரும் முனிவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(35)அனைத்துத் திசைகளிலும் அவர்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டவரும், தவசியுமான சாரஸ்வதரும், தப்பி ஓடுவதிலேயே தன் இதயத்தை நிலைநிறுத்தினார். அப்போது சரஸ்வதி ஆறானவள், அவரிடம் {சாரஸ்வதரிடம்}, “ஓ! மகனே, இங்கிருந்து நீ செல்ல வேண்டாம். இங்கேயே எப்போதும் பெரிய மீன்களை உனக்கு நான் உணவாகக் கொடுப்பேன். எனவே, இங்கேயே இருப்பாயாக” என்றாள்.(37) (அந்த ஆற்றால்) இவ்வாறு சொல்லப்பட்ட அந்தத் தவசி {சாரஸ்வதர்}, முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் உணவுக் காணிக்கைகளைக் கொடுத்து அங்கேயே வாழ்ந்து வந்தார். தமது தினசரி உணவை அடைந்த அவர், இவ்வாறே தன் உயிரையும், தேவர்களையும் தொடர்ந்து தாங்கி வந்தார்.(38) பனிரெண்டு வருட பஞ்சம் கடந்த பிறகு, வேதங்களின் உரைகளைக் குறித்துப் பெருமுனிவர்கள் ஒருவருக்கொருவர் வேண்டிக் கேட்டுக் கொண்டனர்.(39) அம்முனிவர்கள், பசித்த வயிறுகளுடன் திரிந்து கொண்டிருந்ததில், தங்கள் வேத அறிவை இழந்திருந்தனர். உண்மையில், அவர்களில் எவரும் சாத்திரங்களைப் புரிந்து கொள்ளக்கூடியவராக இல்லை.(40)

அவர்களில் எவரோ ஒருவர், குவிந்த கவனத்தோடு முனிவர்களில் முதன்மையான சாரஸ்வதர், வேதங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது, அவரைச் சந்திக்க நேர்ந்தது.(41) முனிவர்களின் சபைக்குத் திரும்பிய அவர் {அந்த ஒருவர்}, ஒப்பற்ற ஒளியையும், தேவர்களைப் போன்ற மேனியையும் கொண்டிருந்த சாரஸ்வதர், தனிமையான காட்டில் வேதங்களைப் படித்துக் கொண்டிருப்பதைக் குறித்து அவர்களிடம் {அந்தச் சபையில் இருந்த முனிவர்களிடம்} சொன்னார்.(42) பிறகு அந்தப் பெரும் முனிவர்கள் அனைவரும் அந்த இடத்திற்கு வந்து, அந்தத் தவசிகளில் சிறந்த சாரஸ்வதரிடம், “ஓ!தவசியே, எங்களுக்குக் கற்பிப்பீராக” என்ற வார்த்தைகளைச் சொன்னார்கள். அந்தத் தவசியும் {சாரஸ்வதரும்} அவர்களிடம், “முறையாக என் சீடர்கள் ஆவீர்களாக” என்று மறுமொழிகூறினார்.(43,44)

அதற்கு அந்தத் தவசிகளின் சபையானது {சாரஸ்வதரிடம்}, “ஓ! மகனே, நீ வயதால் மிகவும் இளையவனாக இருக்கிறாய்” என்றது. அதற்கு அவர் அந்தத் தவசிகளிடம், “என் அறத்தகுதி அழிவடையாமல் இருக்க நான் அத்தகு வழியிலேயே செயல்பட வேண்டும்.(45) எவன் முறையில்லாமல் கற்பிப்பிப்பானோ, எவன் முறையில்லாமல் கற்பானோ, அவர்கள் இருவரும் வெகு விரைவில் {அறிவின்} அழிவையடைந்து ஒருவரையொருவர் வெறுப்பார்கள்.(46) வருடங்கள் {வயது}, மூப்பு {தலைமயிர் நரைத்தல்}, செல்வம், சொந்தங்கள் ஆகியவற்றால் முனிவர்கள் தங்கள் தகுதியை அடைவதில்லை. நம்மில் எவர் வேதங்களைப் படித்துப் புரிந்து கொள்ளவல்லவரோ அவரே பெரியவர்” என்றார்.(47) அவரது இவ்வார்த்தைகளைக் கேட்ட அம்முனிவர்கள், முறையாக அவரது சீடர்களாகி, அவரிடம் இருந்து வேதங்களை அடைந்து, மீண்டும் தங்கள் சடங்குகளைப் பயின்றனர்.(48) மறுபிறப்பாள {பிராமண} முனிவரான சாரஸ்வதரிடம் இருந்து வேதங்களை அடைவதற்காக {இவ்வாறு} அறுபதாயிரம் {60,000} முனிவர்கள் அவரது சீடர்களானார்கள்.(49) ஏற்புடைய அம்முனிவர் சிறுவனாயிருப்பினும், அவருக்குக் கீழ்ப்படிந்த அம்முனிவர்கள் ஒவ்வொருவரும், அவர் அமர்வதற்கான ஆசனமாகக் கைநிறைந்த புற்களை {தர்ப்பைப் புற்களைக்} காணிக்கை அளித்தனர்.(50)

ரோகிணியின் வலிமைமிக்க மகனும், கேசவனின் {கிருஷ்ணனின்} அண்ணனுமானவன் {பலராமன்}, அத்தீர்த்தத்தில் {சாரஸ்வதத் தீர்த்தத்தில்} செல்வத்தைத் தானமளித்து, பழங்காலத்தில் முதிர்ந்த பெண்ணொருத்தி திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த மற்றொரு தீர்த்தத்திற்கு {விருத்தகன்யாஸ்ரமத்திற்கு} மகிழ்ச்சியாகச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(51)

முதிர்கன்னியும், சிருங்கவானும்! – சல்லிய பர்வம் பகுதி – 52-குணிகர்க்கர் உண்டாக்கிய மகள்; திருமணத்தில் விருப்பமில்லாமல் கடுந்தவம் செய்து முதிர் கன்னியாகியது; திருமணம் செய்யாததால் அருள் உலகங்கள் கிடைக்காது என்று அவளிடம் சொன்ன நாரதர்; ஓர் ஒப்பந்தத்தின் பேரில் அவளைத் திருமணம் செய்து கொண்ட சிருங்கவான்; விருத்தகன்யாஸ்ரமத் தீர்த்தத்திற்குண்டான பலன்; சல்லியனின் மறைவை அறிந்த பலராமன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, பழங்காலத்தில் அந்தக் கன்னிகை ஏன் தவத்தில் ஈடுபட்டாள். என்ன காரணத்திற்காக அவள் தவத்தில் ஈடுபட்டாள்? அவளது நியமம் என்ன?(1) நான் ஏற்கனவே உம்மிடம் கேட்ட உரையானது ஒப்பற்றதாகவும், புதிர் நிறைந்ததாகவும் இருக்கிறது. (இப்போது) அந்தக் கன்னிகை எவ்வாறு தன்னைத் தவத்தில் ஈடுபடுத்திக் கொண்டாள் என்ற விபரங்கள் அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குணி-கர்க்கர் என்ற பெயரில் பெரும் சக்தியையும், பெரும் புகழையும் கொண்ட ஒரு முனிவர் இருந்தார். அந்தத் தவசிகளில் முதன்மையானவர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, கடுந்தவங்களைச் செய்து, தம் விருப்பத்தின் ஆணையால் அழகிய புருவங்களைக் கொண்ட ஒரு மகளை[1] உண்டாக்கினார். கொண்டாடப்பட்ட தவசியான அந்தக் குணிகர்க்கர் அவளைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தார். பிறகு அவர், ஓ! மன்னா, தன் உடலைக் கைவிட்டு, சொர்க்கத்திற்குச் சென்றார்.(3,4) களங்கமற்றவளும், இனிமையானவளும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளும், அழகிய புருவங்களைக் கொண்டவளுமான அந்தக் கன்னிகை, தொடர்ந்து மிகக் கடுமையான தவங்களைச் செய்துவந்தாள். அவள் தன் உண்ணாநோன்புகளால் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட்டாள்.(5)இத்தகு கடும் தவங்களைப் பயில்வதிலேயே நீண்ட காலம் கடந்து சென்றது. அவளது தந்தை {குணி-கர்க்கர்} அவளை ஒரு கணவனுக்குக் கொடுப்பதற்குத் தயாராக இருந்தாலும், தனக்குத் தகுந்த ஒரு கணவனை அவள் காணாததால் திருமணத்தில் அவள் விருப்பம் கொள்ளவில்லை.(6) கடுந்தவங்களால் தொடர்ந்து தன் உடலை மெலியச் செய்த அவள், அந்தத் தனிமையான காட்டில் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபடுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள்.(7) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வளவு கடுமையான முயற்சியாலும், வயதாலும், தவங்களாலும் தன்னை மெலியச் செய்திருந்தாலும், அவள் தன்னை மகிழ்ச்சி நிறைந்தவளாகவே கருதினாள்.(8) இறுதியாக எந்த ஒருவரின் துணையுமின்றி ஓரடியும் நகர முடியாத (மிக முதிர்ந்த வயதான) நிலையை அவள் அடைந்ததும், அடுத்த உலகத்திற்குச் செல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினாள்.(9)

அவள், தன் உடலைக் கைவிடப்போவதைக் கண்ட நாரதர், அவளிடம், “ஓ! பாவமற்றவளே, திருமணச் சடங்கால் நீ தூய்மையடையாததன் விளைவால், உனக்கு எந்த அருள் உலகமும் கிடைக்காது.(10) ஓ! பெரும் நோன்புகளைக் கொண்டவளே, இதை நாங்கள் சொர்க்கத்தில் கேட்டிருக்கிறோம். உன் கடுந்தவங்கள் பெரியவாயினும், அருள் உலகங்களில் உனக்கு உரிமையேதும் கிடையாது” என்றார்.(11) நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த முதிர்ந்த மங்கை, முனிவர்களின் சபைக்குச் சென்று, “எவர் திருமணத்தில் என் கரங்களை ஏற்பாரோ, அவருக்கு என் தவத்தில் பாதியை நான் அளிப்பேன்” என்றாள்.(12) அவள் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், காலவரின் மகனும்[2], சிருங்கவான் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு முனிவர், ஓர் ஒப்பந்ததை முன்மொழிந்து அவளது கரங்களை ஏற்றார். {அந்த சிருங்கவான்},(13) “ஓ! அழகிய பெண்ணே, நீ என்னுடன் ஓரிரவு மட்டுமே வாழ்வாய் என்ற இந்த ஒப்பந்தத்தின் மூலம், நான் உன் கரத்தை ஏற்கிறேன்” என்றார். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட அவள், தனது கரத்தை அவரிடம் கொடுத்தாள்.(14) உண்மையில், அந்தக் காலவரின் மகன் {சிருங்கவான்}, விதிக்கப்பட்டிருந்த விதிகளின்படி நெருப்பில் முறையாக ஆகுதிகளை ஊற்றி அவளது கரத்தை ஏற்று, அவளைத் திருமணம் செய்து கொண்டார்.(15)அவ்விரவில் அவள், தெய்வீக ஆடையை உடுத்திக் கொண்டு, தெய்வீக ஆபரணங்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தெய்வீக களிம்புகள் {சந்தனம்} மற்றும் நறுமணப் பொருட்களைப் பூசப்பட்ட, அழகிய நிறம் கொண்ட இளம்பெண்ணாக மாறினாள்.(16) சுடர்மிக்க அவளது அழகைக் கண்ட காலவரின் மகன் {சிருங்கவான்}, மிகவும் மகிழ்ச்சியடைந்து அவளது துணையுடன் ஓரிரவைக் கழித்தார். காலையில் அவள் அவரிடம்,(17) “ஓ! பிராமணரே, ஓ! தவசிகளில் முதன்மையானவரே, உம்மிடம் நான் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் நிறைவடைந்தது. நீர் அருளப்பட்டிருப்பீராக, நான் இப்போது உம்மைவிட்டுச் செல்கிறேன்” என்றாள்.(18) அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்ட அவள், மீண்டும், “நீர்க்காணிக்கைகளுடனும், ஆழ்ந்த கவனத்துடனும் சொர்க்கவாசிகளை {தேவர்களை} நிறைவுசெய்தபிறகு, இந்தத் தீர்த்தத்தில் {விருத்தகன்யாஸ்ரமத் தீர்த்தத்தில்} எவன் ஓரிரவைக் கழிப்பானோ, அவன், ஐம்பத்தெட்டு வருடங்கள் பிரம்மச்சரிய நோன்பை நோற்றதன் தகுதியை அடைவான்” என்றாள்.(20)

இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் கற்புடைய மங்கை சொர்க்கத்திற்குச் சென்றாள். அவளது தலைவனான முனிவர் {சிருங்கவான்}, அவளது அழகை நினைத்து நினைத்து மிகவும் உற்சாகமற்றவராக ஆனார்.(21) அவர் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் விளைவால் அவர் அவளுடைய பாதித் தவத்தையும் சிரமத்துடன் ஏற்றுக் கொண்டார். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அவளது அழகால் கவலையில் ஆழ்ந்த அவர் {சிருங்கவான்}, தன்னுடலைக் கைவிட்டு விரைவில் அவளைப் பின்தொடர்ந்து சென்றார்.(22) நான் உனக்குச் சொன்ன இதுவே அந்த முதிர்ந்த கன்னிகையின் {விருத்தகன்யையின்} மேன்மைபொருந்திய வரலாறாகும். இதுவே அவளது பிரம்மச்சரியம் மற்றும் சொர்க்கத்திற்கான அவளது மங்கலப் புறப்பாடு ஆகியவற்றைக் குறித்த விவரிப்பாகும்.(23) அங்கே இருந்தபோதுதான், சல்லியனின் படுகொலையைக் குறித்துப் பலதேவன் {பலராமன்} கேள்விப்பட்டான். அங்கே பிராமணர்களுக்குத் தானமளித்த அவன், ஓ! எதிரிகளை எரிப்பவனே, போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்ட சல்லியனின் நிமித்தமாகத் துயரத்தை அடைந்தான்.(24) பிறகு அந்த மதுகுலத்தோன் {பலராமன்}, சமந்தபஞ்சகத்தின் {வாயிலை விட்டு வெளியே} சுற்றுப்புறத்திற்கு வந்து, குருக்ஷேத்திரப் போரின் விளைவுகளைக் குறித்து முனிவர்களிடம் விசாரித்தான்.(25) குருக்ஷேத்திரப் போரின் விளைவுகள் குறித்து அந்த யதுகுலத்தின் சிங்கத்தால் கேட்கப்பட்ட அந்த உயர் ஆன்மாக்கள், நடந்தது அனைத்தையும் குறித்து அவனிடம் {பலராமனிடம்} சொன்னார்கள்”.(26)

குருக்ஷேத்திரமே உயர்ந்த புண்ணியத்தலம்! – சல்லிய பர்வம் பகுதி – 53-பலராமனுக்குக் குருக்ஷேத்திரத்தின் வரலாற்றைச் சொன்ன முனிவர்கள்; மண்ணை உழுது கொண்டிருந்த குரு மன்னன்; குரு மன்னனை மீண்டும் மீண்டும் கேலி செய்த இந்திரன்; விடாமுயற்சியுடன் களத்தை உழுத குரு; குருக்ஷேத்திரத்தில் இறப்பவர்கள் பாவிகளாயிருப்பினும் சொர்க்கத்தை அடைவார்கள் என்ற வரத்தை அளித்த இந்திரன்; அவ்வரத்தை அங்கீகரித்த பிரம்மன், விஷ்ணு மற்றும் சிவன்…

அம்முனிவர்கள், “ஓ! ராமா {பலராமா}, உயிரினங்கள் அனைத்தின் தலைவனான பிரம்மனின் அழிவிலா வடவேள்விப்பீடம் {உத்தரவேதி} என்று சமந்தபஞ்சகம் சொல்லப்படுகிறது. பெரும் வரங்களை அளிப்பவர்களான சொர்க்கவாசிகள் பழங்காலத்தில் அங்கே பெரும் வேள்வி ஒன்றைச் செய்தனர்.(1) அரசமுனிகளில் முதன்மையானவனும், பெரும் நுண்ணறிவும், அளவிலா சக்தியும் கொண்டவனான உயர் ஆன்ம குரு, இந்தக் களத்தில் பல வருடங்கள் உழுதான் {களத்தைச் சமப்படுத்தினான்}. எனவே இது குருக்ஷேத்திரம் (குருவின் களம்) என்று அழைக்கப்படுகிறது” என்றனர்.(2)

ராமன் {பலராமன்}, “அந்த உயர் ஆன்ம குரு இந்தக் களத்தை என்ன காரணத்திற்காக உழுதான்? தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களே இஃது உங்களால் உரைக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கேட்டான்.(3)

அதற்கு அம்முனிவர்கள் {பலராமனிடம்}, “பழங்காலத்தில், ஓ! ராமா {பலராமா}, குருவானவன் இந்தக் களத்தின் மண்ணை விடாமுயற்சியுடன் உழுதுகொண்டிருந்தான். சொர்க்கத்தில் இருந்து கீழே இறங்கி வந்த சக்ரன், அவனிடம் அதன் காரணத்தைக் கேட்கும் வகையில்,(4) “ஓ! மன்னா {குருவே}, இத்தகு விடாமுயற்சியில் நீ ஏன் ஈடுபடுகிறாய்? ஓ! அரசமுனியே, எதை அடையும் நோக்கிற்காக நீ மண்ணை உழுதுகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.(5) அதற்குக் குரு, “ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, இந்தச் சமவெளியில் இறப்பவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைந்தவர்களாக அருள் உலகங்களை அடைய வேண்டும்” என்று மறுமொழி கூறினான்.(6) தலைவன் சக்ரனோ, அதைக் கேலி செய்து விட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டான். எனினும், அரசமுனியான குரு, எந்தத் தளர்வையும் அடையாமல், தொடர்ந்து மண்ணை உழுது கொண்டிருந்தான்.(7)

அவனிடம் மீண்டும் திரும்பி வந்த சக்ரன், மீண்டும் மீண்டும் அவனைக் கேலி செய்துவிட்டுச் சென்றான். எனினும் குரு அக்காரியத்தில் எந்தத் தளர்ச்சியையும் உணரவில்லை.(8) தளராத விடாமுயற்சியுடன் மன்னன் {குரு} மண்ணை உழுவதைக் கண்ட சக்ரன் {இந்திரன்}, தேவர்களை அழைத்து, அவர்களிடம் அந்த ஏகாதிபதியின் தொழிலைக் குறித்துச் சொன்னான். இந்திரனின் வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், ஆயிரங்கண்களைக் கொண்ட தங்கள் தலைவனிடம், “ஓ! சக்ரா, உன்னால் முடியுமாகையால் அந்த அரசமுனி கேட்கும் வரத்தை அளித்து அவனை நிறுத்துவாயாக.(10) நமக்கான வேள்விகளைச் செய்யாமல், அங்கே இறப்பதால் மட்டுமே மனிதர்கள் சொர்க்கத்தை அடையமுடியுமென்றால், நம் இருப்பே ஆபத்துக்குள்ளாக நேரிடும்” என்றனர்.(11)

இவ்வாறு உற்சாகமளிக்கப்பட்ட சக்ரன், அந்த அரசமுனியிடம் திரும்பி வந்து, “மேலும் உழாதே. என் வார்த்தைகளின்படி செயல்படுவாயாக. ஓ! மன்னா {குரு மன்னா}, தங்கள் புலன்கள் அனைத்தும் விழிப்புடன் இருக்கையில் உணவைத் துறந்து இங்கே இறப்பவர்களும், இங்கே போரில் அழிவடைவோரும் சொர்க்கத்திற்குச் செல்வார்கள். ஓ! பேரான்மா கொண்டவனே, ஓ! ஏகாதிபதி, அவர்கள் சொர்க்கத்தின் அருளை அனுபவிப்பார்கள்” என்றான். இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் குரு, “அப்படியே ஆகட்டும்” என்று சக்ரனுக்குப் பதிலளித்தான்.(14) பலனைக் கொன்றவனான சக்ரன், குருவிடம் விடைபெற்றுக் கொண்டு இதயம்நிறைந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் விரைவாகச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(15)

ஓ! யது குலத்தில் முதன்மையானவனே {பலராமா}, இவ்வாறே அந்த அரசமுனியானவன் {குரு} பழங்காலத்தில் நிலத்தை உழுததால், இங்கே தங்கள் உயிர் மூச்சை விடுபவர்களுக்குச் சக்ரன் பெரும் தகுதியை {புண்ணியத்தை} உறுதியளித்தான்.(16) உண்மையில், பிரம்மனின் தலைமையிலான தேவர்களில் முதன்மையானோர் அனைவராலும், புனிதமான முனிவர்களாலும், பூமியில் இதைவிடப் புண்ணியத்தலம் வேறில்லை என்று {குருக்ஷேத்திரம்} அங்கீகரிக்கப்பட்டது.(17) இங்கே கடுந்தவங்களைச் செய்வோர், தங்கள் உடல்களைக் கைவிட்ட பிறகு பிரம்மனின் வசிப்பிடத்திற்குச் செல்கின்றனர்.(18) மேலும் இங்கே தங்கள் செல்வத்தைத் தானமளிக்கும் தகுதிவாய்ந்த மனிதர்கள் {புண்ணியவான்கள்}, விரைவில் தங்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கிக் கொள்வார்கள்.(19) மேலும் நன்மையை எதிர்பார்த்து இங்கேயே நிரந்தரமாக வசிப்போர் யமலோகத்தை எப்போதும் காணமாட்டார்கள்.(20)

இங்கே பெரும் வேள்விகளைச் செய்யும் மன்னர்கள், இந்தப் பூமி நீடித்திருக்கும் வரை சொர்க்கத்தில் வசித்திருப்பார்கள்.(21) தேவர்களின் தலைவனான சக்ரனே இது குறித்து ஒரு வரியை இங்கே தொகுத்துப் பாடியிருக்கிறான். ஓ! பலதேவா, அதைக் கேட்பாயாக. {இந்திரன்},(22) “குருக்ஷேத்திரத்தில் இருந்து காற்றால் சுமந்து செல்லப்படும் புழுதியும் கூடத் தீச்செயல் புரிவோரையும் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்து, அவர்களைச் சொர்க்கத்திற்குச் சுமந்து செல்லும்” {என்று பாடியுள்ளான்}.(23) தேவர்களில் முதன்மையானோரும், பிராமணர்களில் முதன்மையானோரும், நிருகனைப் போன்ற பூமியின் மன்னர்களில் முதன்மையானோர் பலரும், பிறரும், விலைமதிப்புமிக்க வேள்விகளை இங்கே செய்து, தங்கள் உடல்களைக் கைவிட்டபிறகு சொர்க்கத்திற்குச் சென்றனர்.(24)

தரந்துகை, அரந்துகை {என்ற இரு நதிகள்}, {பரசு}ராமத் தடாகங்களுக்கும், சமசக்ரம் {மசக்ருக தீர்த்தம்} ஆகியவற்றுக்கு இடைப்பட்ட வெளியே குருக்ஷேத்திரம் என்றழைக்கப்படுகிறது. சமந்தபஞ்சகமானது, அனைத்துயிர்களின் தலைவனான பிரம்மனின் வட (வேள்விப்) பீடம் என்றழைக்கப்படுகிறது.(25) மங்கலமான, மிகப் புனிதமான, சொர்க்கவாசிகளாலும் மிகவும் மதிக்கப்பட்ட இந்த இடமானது {சொர்க்கத்திற்குரிய} அனைத்து குணநலன்களையும் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே இங்கே போரில் கொல்லப்படும் க்ஷத்திரியர்கள் அழிவிலா அருளைக் கொண்ட புனிதமான உலகங்களை அடைகின்றனர்.(26) குருக்ஷேத்திரத்தின் உயர்ந்த அருளைக் குறித்த இதுவும் சக்ரனாலேயே சொல்லப்பட்டது. சக்ரனால் சொல்லப்பட்டதனைத்தும், பிரம்மன், விஷ்ணு மற்றும் மஹேஸ்வரனாலும் அங்கீகரிக்கப்பட்டது” {என்றனர் அம்முனிவர்கள்}.(27)

சரஸ்வதியை எப்போதும் நினைக்க வேண்டும்! – சல்லிய பர்வம் பகுதி – 54-சாண்டில்யரின் மகளான ஸ்ரீமதியின் ஆசிரமத்திலிருந்து பிலக்ஷப்பிரஸ்ரவணத் தீர்த்தத்திற்கும், அடுத்ததாகக் காரபவனத் தீர்த்தத்திற்கும், மித்ராவருண ஆசிரமத்திற்கும், பிறகு அங்கிருந்து யமுனா தீர்த்ததிற்குச் சென்ற பலராமன்; அங்கே யமுனா தீர்த்தத்தில் கூடிய முனிவர்களின் சபையில் நாரதரைக் கண்ட பலராமன்; பீம துரியோதன கதாயுத்தத்தைக் குறித்துப் பலராமனுக்குச் சொன்ன நாரதர்; தன் சீடர்களுக்கிடையிலான மோதலைக் காண விரும்பி களத்திற்கு விரைந்து சென்ற பலராமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குருக்ஷேத்திரம் சென்று, அங்கே தானமளித்த அந்தச் சாத்வத குலத்தோன் {பலராமன்}, பேரழகுடன் கூடிய மிகப்பெரிய ஓர் ஆசிரமத்திற்குச் சென்றான்.(1) அந்த ஆசிரமத்தில் மதுக {இலுப்பை} மரங்கள், மாமரங்கள், பிலாக்ஷ {ஆல} மரங்கள், நியகிரோத {புங்க} மரங்கள், வில்வ மரங்கள், சிறப்பான பலா மரங்கள், அர்ஜுன {மருத} மரங்கள் நிறைந்திருந்தன.(2) புனிதக் குறியீடுகள் பலவற்றைக் கொண்ட அந்த நல்ல ஆசிரமத்தைக் கண்ட பலதேவன், அது யாருடையது என்று முனிவர்களிடம் கேட்டான்.(3)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த உயர் ஆன்மாக்கள் அந்தப் பலதேவனிடம் {பலராமனிடம்}, “ஓ! ராமா, பழங்காலத்தில் இந்த ஆசிரமம் யாருடையதாக இருந்தது என்பதை விவரமாகக் கேட்பாயாக.(4) பழங்காலத்தில் இங்கே தேவன் விஷ்ணு கடுந்தவத்தைச் செய்தான். நித்தியமான வேள்விகள் அனைத்தையும் அவன் இங்கே செய்தான்.(5) இங்கே ஒரு பிராமணக் கன்னிகை, இளமையிலிருந்து பிரம்மச்சரிய நோன்பிருந்து, தவ வெற்றியை அடைந்தாள். மாற்றமில்லா யோக சக்திகளைக் கொண்ட தவசியான அந்தப் பெண் சொர்க்கத்திற்குச் சென்றாள்.(6) உயர் ஆன்ம சாண்டில்யர்[1], ஓ! மன்னா, கடும் நோன்புகளை நோற்பவளும், கற்புடையவளும், சுயக்கட்டுப்பாடு கொண்டவளும், பிரம்மச்சரியத்தை நோற்பவளுமான ஓர் அழகிய மகளைப் {ஸ்ரீமதி} பெற்றார். பெண்களால் செய்ய முடியாத கடுந்தவங்களையும் செய்த அந்த அருளப்பட்ட மங்கை, இறுதியில் தேவர்களாலும், பிராமணர்களாலும் வழிபடப்பட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றாள். பலதேவன், அம்முனிவர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்டு அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.(8) முனிவர்களிடம் விடைபெற்றுக் கொண்டவனும், மங்கா புகழைக் கொண்டவனுமான பலதேவன், இமயத்தின் சாரலில் மாலை வேளைக்கான அனைத்து சடங்குகளையும் செய்து, அம்மலையின் மீது ஏறினான்.(9) பனைமரக்கொடியைக் கொண்ட அந்த வலிமைமிக்கப் பலராமன், அம்மலையில் ஏறிக் கொண்டிருக்கையில் அருகிலேயே ஒரு நல்ல புனிதமான தீர்த்தத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தான்.(10)சரஸ்வதியின் மகிமையையும், பிலக்ஷப்பிரஸ்ரவணம் என்றழைக்கப்பட்ட அந்தத் தீர்த்தத்தின் மகிமையையும் கண்ட பலன் {பலராமன்}, அடுத்ததாகக் காரவபனம் {காரபசனம்} என்றழைக்கப்படும் மற்றுமொரு சிறந்த, முதன்மையான தீர்த்தத்தை அடைந்தான்.(11) பெரும் பலத்தையும், கலப்பையையும் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, அங்கே தானமளித்த பிறகு, குளுமையானதும், தெளிவானதும், புனிதமானதும், பாவங்களை அகற்றுவதுமான (அந்தத் தீர்த்தத்தின்) நீரில் நீராடினான்.(12) அங்கே தவசிகளுடனும், பிராமணர்களுடனும் ஓரிரவைக் கழித்த ராமன், அடுத்ததாக மித்ராவருணர்களின் புனிதமான ஆசிரமத்திற்குச் சென்றான்.(13) அவன் {பலராமன்}, காரவபனத்திலிருந்து, பழங்காலத்தில் இந்திரன், அக்னி, அர்யமன் ஆகியோர் எங்கு பெரும் மகிழ்ச்சியை அடைந்தோர்களோ, அந்த யமுனையின் இடத்திற்குச் சென்றான்.(14) அற ஆன்மா கொண்ட அந்த யதுகுல காளை {பலராமன்} அங்கே நீராடி பெரும் மகிழ்ச்சியை அடைந்தான். பிறகு அந்த வீரன், முனிவர்கள் மற்றும் சித்தர்களின் சிறந்த பேச்சைக் கேட்பதற்காகக் கீழே அமர்ந்தான்.(15)எங்கே ராமன் {பலராமன்} அமர்ந்தானோ, அந்தச் சபைக்கு மத்தியில் அங்கே போற்றுதலுக்குரிய நாரதர் (தம் உலவல்களின் போது) வந்தார்.(16) சடாமுடியால் மறைக்கப்பட்டும், தங்கக் கதிர்களை உடுத்திக் கொண்டும் இருந்த அவர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, தமது கைகளில் தங்கத்தாலான ஒரு தண்டத்தையும், அதே விலைமதிப்புமிக்க உலோகத்தாலான ஒரு நீர்க்குடத்தையும் {கமண்டலத்தையும்} கொண்டிருந்தார்.(17) பாடுவதிலும், ஆடுவதிலும் சாதித்தவரும், தேவர்கள் மற்றும் பிராமணர்களால் போற்றப்படுபவருமான அவர் {நாரதர்}, ஆமை ஓட்டினாலானதும், இனிய இசையை எழுப்பக்கூடியதுமான அழகிய வீணை ஒன்றையும் வைத்திருந்தார்.(18) சச்சரவுகளைத் தூண்டுபவரும், சச்சரவுகளை எப்போதும் விரும்புபவருமான அந்தத் தெய்வீக முனிவர் {நாரதர்}, அழகிய ராமன் {பலராமன்} ஓய்ந்திருந்த அந்த இடத்திற்கு வந்தார்.(19) ராமன் எழுந்து நின்று, நெறிப்படுத்தப்பட்ட நோன்புகளைக் கொண்ட அந்தத் தெய்வீக முனிவரைத் தகுந்தவாறு வணங்கி, குருக்களுக்கு நேர்ந்தது அனைத்தையும் குறித்து அவரிடம் கேட்டான்.(20) கடமைகள் மற்றும் நடைமுறைகளை நன்கறிந்தவரான நாரதர் அவனுக்குக் குருக்களின் துயரகரமான பேரழிவு குறித்து நடந்தது அனைத்தையும் நடந்தவாறே சொன்னார்.(21) அப்போது அந்த ரோகிணியின் மகன் {பலராமன்} சோகம் நிறைந்த வார்த்தைகளில் அம்முனிவர்களிடம், “களத்தில் நிலை என்ன? அங்கே கூடியிருக்கும் மன்னர்கள் இப்போது எவ்வாறிருக்கிறார்கள்??(22) ஓ! தவச் செல்வத்தைக் கொண்டவரே, நான் அனைத்தையும் ஏற்கனவே கேட்டுவிட்டேன். இருப்பினும் அதை விவரமாக அறிய எனக்கு அதிக ஆவல் ஏற்படுகிறது” என்று கேட்டான்.(23)

நாரதர் {பலராமனிடம்}, “பீஷ்மர், துரோணர் மற்றும் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோர் ஏற்கனவே வீழ்ந்துவிட்டனர். வைகர்த்தனின் மகனான கர்ணனும், பெரும் தேர்வீரர்களான அவனது மகன்களுடன் வீழ்ந்துவிட்டான்.(24) ஓ! ரோகிணியின் மகனே {பலராமா}, பூரிஸ்ரவஸும், மத்ரர்களின் வீரத் தலைவனும் {சல்லியனும்} வீழ்ந்துவிட்டனர். இவர்களும், அங்கே கூடியிருந்த இன்னும் பல வலிமைமிக்க வீரர்களும், துரியோதனனின் வெற்றிக்காகத் தங்கள் அன்புக்குரிய உயிரையே விடத்தயாரானவர்களும், போரில் இருந்து திரும்பாதவர்களுமான மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் ஆகியோர் அனைவரும் வீழ்ந்துவிட்டனர்.(25,26) ஓ! மாதவா {பலராமா}, உயிரோடு இருப்பவர்களைக் குறித்து இப்போது சொல்கிறேன், கேட்பாயாக. திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} படையில் இப்போது படைகளைக் கலங்கடிக்கும் மூவர் மட்டுமே உயிருடன் எஞ்சியுள்ளனர்.(27) அவர்கள் கிருபர், கிருதவர்மன் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோராவர். அவர்களும், ஓ! ராமா, அச்சத்தால் திசைகளின் பத்து புள்ளிகளை நோக்கித் தப்பி ஓடிவிட்டனர்.(28)

சல்லியன் வீழ்ந்து, கிருபரும் மற்றவர்களும் ஓடிய பிறகு, பெரும் துயரத்தில் இருந்த துரியோதனன், துவைபாயனத் தடாகத்தின் ஆழங்களுக்குள் புகுந்து கொண்டான்.(29) அத்தடாகத்தின் நீரைக் கட்டி அதனடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த துரியோதனன், கிருஷ்ணனுடன் கூடிய பாண்டவர்களால் அணுகப்பட்டு, அவர்களது கொடும் வார்த்தைகளால் துளைக்கப்பட்டான்.(30) அந்த வார்த்தை ஈட்டிகளால் அனைத்துப் பக்கங்களிலும் துளைக்கப்பட்டவனும், வலிமைமிக்கவனுமான அந்த வீரத் துரியோதனன், ஓ! ராமா {பலராமா}, கனமான தன் கதாயுதத்துடன் அத்தடாகத்தில் இருந்து எழுந்தான்.(31) தற்போது அவன் பீமனோடு போரிடப் போகிறான். ஓ! ராமா, அந்தப் பயங்கர மோதல் இன்று நடைபெறப் போகிறது.(32) உனக்கு ஆர்வமிருந்தால், ஓ! மாதவா {பலராமா}, இங்கே தாமதிக்காமல் அங்கே விரைந்து செல்வாயாக. உன் சீடர்கள் இருவருக்குள் நடக்கப் போகும் பயங்கரப் போரை நீ காண விரும்பினால் செல்வாயாக” என்றார் {நாரதர்}.(33)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட ராமன் {பலராமன்}, அந்தப் பிராமணர்களில் முதன்மையானோரிடம் மரியாதையுடன் விடை பெற்றுக் கொண்டு, (தன் புனிதப் பயணத்தில்) தனக்குத் துணையாக வந்தோர் அனைவரையும் அனுப்பி வைத்தான்.(34) உண்மையில் அவன், தன் பணியாட்களிடம், “துவாரகைக்குத் திரும்புவீராக” என்று ஆணையிட்டான். பிறகு அவன் அந்த மலைகளின் இளவரசனிடம் இருந்தும், பிலக்ஷப்பிரஸ்ரவணம் என்று அழைக்கப்படும் அந்த அழகிய ஆசிரமத்தில் இருந்தும் இறங்கினான்.(35) தீர்த்தங்களின் பெரும் தகுதிகளை {புண்ணியங்களைக்} குறித்த தவசிகளின் உரையாடலைக் கேட்டவனும் மங்கா மகிமை கொண்டவனுமான அந்த ராமன் {பலராமன்}, பிராணர்களின் மத்தியில் இந்த வரியைப் பாடினான்:(36) “சரஸ்வதியின் அருகில் வசிப்பதால் ஏற்படும் இத்தகு மகிழ்வு வேறு எங்கே இருக்கிறது? சரஸ்வதியின் அருளில் வசிப்போரிடமுள்ள இத்தகு தகுதிகள் {புண்ணியங்கள்} வேறு எங்கே இருக்கின்றன? சரஸ்வதியை அணுகிய மனிதர்கள் சொர்க்கத்திற்குச் சென்றிருக்கின்றனர். அனைவரும் எப்போதும் சரஸ்வதியை நினைக்க வேண்டும். சரஸ்வதியே ஆறுகள் அனைத்திலும் மிகப் புனிதமானவளாவாள்.(37) சரஸ்வதி எப்போதும் மனிதர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறாள். சரஸ்வதியை அடைந்த மனிதர்கள், இங்கேயும் {இம்மையிலும்}, இதற்குப் பிறகும் {மறுமையிலும்} தங்கள் பாவங்களைக் குறித்து வருந்த வேண்டாம்” என்றான்.(38) மகிழ்ச்சி நிறைந்த கண்களுடன் மீண்டும் மீண்டும் சரஸ்வதியைப் பார்த்த அந்த எதிரிகளை எரிப்பவன், பிறகு நல்ல குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு சிறந்த தேரில் ஏறிக் கொண்டான்.(39) யது குலத்தின் காளையான அந்தப் பலதேவன் {பலராமன்}, தன் சீடர்கள் இருவருக்கிடையில் எதிர்வரப்போகும் மோதலைக் காணும் விருப்பத்தால் பெரும் வேகம் கொண்ட அந்தத் தேரில் பயணித்து அந்தக் களத்தை அடைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(40)

கதாயுத்தத் தொடக்கம்! – சல்லிய பர்வம் பகுதி – 55- களத்திற்கு வந்த பலராமனை வணங்கிய யுதிஷ்டிரன்; சமந்தபஞ்சகத்தில் போரிட வேண்டும் என்று கேட்ட துரியோதனன்; களர்மண்ணற்ற பகுதியில் போரிடத் தீர்மானித்து, இடத்தைத் தேர்ந்தெடுத்து பீமனையும், துரியோதனனையும் போரிட விட்டு அவர்களைச் சுற்றி அனைவரும் அமர்ந்து கொண்டது; சொற்போர் நடத்திய பீமனும் துரியோதனனும்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஜனமேஜயா இவ்வாறு அந்தப் பயங்கரப் போர் நடைபெற்றபோது, பெருஞ்சோகத்தில் இருந்த மன்னன் திருதராஷ்டிரன், இவ்வார்த்தைகளில் அதைச் சுட்டிக் காட்டினான்”.(1)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “கதாயுதப் போர் தொடங்கப்படும்போது, அவ்விடத்திற்கு வந்த ராமனை {பலராமனைக்} கண்ட என் மகன் {துரியோதனன்}, எவ்வாறு பீமனோடு போரிட்டான்?” என்று கேட்டான்.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், போரை விரும்பியவனுமான உமது வீரமகன் துரியோதனன், ராமன் வந்ததைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தான்.(3) அந்தக் கலப்பை வீரனை {பலராமனைக்} கண்ட மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெரும் மகிழ்ச்சியடைந்து, எழுந்து நின்று முறையாக அவனைக் கௌரவித்தான். அவனுக்கு இருக்கையையும் அளித்து, அவனது நலத்தைக் குறித்தும் விசாரித்தான்.(4)

அப்போது ராமன் {துரியோதனன்}[1], வீரர்களுக்கு உயர்ந்த நன்மையைத் தருபவையும், இனியவையுமான இந்த நீதிமிக்க வார்த்தைகளை யுதிஷ்டிரனுக்குப் பதிலாக அளித்தான். {துரியோதனன்},(5) {அவன்}, “ஓ! மன்னர்களில் சிறந்தவனே, மிகப் புனிதமான, பாவங்களைப் போக்கவல்ல, சொர்க்கத்திற்கு இணையான இடம் என்று தேவர்கள், முனிவர்கள், உயர் ஆன்மப் பிராமணர்கள் ஆகியோரால் போற்றப்படுவது குருக்ஷேத்திரமே என்று முனிவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.(6) இக்களத்தில் போரில் ஈடுபட்டுத் தங்கள் உடல்களைக் கைவிடும் மனிதர்கள், ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, சொர்க்கத்தில் சக்ரனுடன் {இந்திரனுடன்} வசிக்கப்போவது உறுதியாகும்.((7) இதற்காகவே, ஓ! மன்னா, நான் வேகமாக சமந்தபஞ்சகத்திற்குச் செல்வேன். தேவர்களின் உலகத்தில் அந்த இடமானது, அனைத்துயிர்களின் தலைவனான பிரம்மனின் வட (வேள்விப்) பீடமாக அறியப்படுகிறது.(8) மூவுலங்குகளிலும் அழிவில்லாத மிகப் புனிதமான அந்த இடத்தில் போரிட்டு இறப்பவன் சொர்க்கத்தை அடையப் போவது உறுதி” என்றான்[1].(9) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, குந்தியின் துணிச்சல் மிக்க மகனான தலைவன் யுதிஷ்டிரன், “அப்படியே” ஆகட்டும் என்று சொல்லி சமந்தபஞ்சகத்தை நோக்கிச் சென்றான்.(10)

மன்னன் துரியோதனனும், கோபத்துடன் தனது பெரும் கதாயுதத்தைத் தூக்கிக் கொண்டு, பாண்டவர்களுடன் கால்நடையாக நடந்து சென்றான்.(11) கவசம் தரித்து கதாயுதத்துடன் அவன் அவ்வாறு சென்ற போது,  வானத்தில் இருந்த தேவர்கள், “நன்று நன்று” என்று சொன்னார்கள். காற்றைப் போன்ற வேகம் கொண்ட சாரணர்கள்[2], குரு மன்னனைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.(12) பாண்டவர்களால் சூழப்பட்டவனும், உமது மகனுமான குரு மன்னன் {துரியோதனன்}, மதங்கொண்ட யானையின் நடையை ஏற்றுச் சென்றான்.(13) குறித்த இடத்திற்கு மேற்கு நோக்கி (தங்களுக்கு மத்தியில்) உமது மகனுடன் சென்ற அவர்கள், அந்த இடத்தை அடைந்ததும் அனைத்துப் பக்கங்களிலும் பரவினர்.(15) அது சரஸ்வதியின் தென் பக்கம் உள்ள சிறந்த தீர்த்தமாகும். அங்கே இருந்த தரையானது களர்மண் அற்றதாக இல்லாததால் அது மோதலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.(16)கவசம் தரித்து, தடித்த பெரும் கதாயுதத்துடன் கூடிய பீமன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்க கருடனின் வடிவை ஏற்றான்.(17) தன் தலையில் தலைக்கவசத்தைப் பூட்டிக் கொண்டு, தங்கத்தால் ஆன கவசத்தைத் தரித்துக் கொண்டு, கடைவாயை நாவால் நனைத்தபடி, கோபத்தால் கண்கள் சிவந்து, பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி, ஓ! மன்னா, தங்க சுமேருவைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(18) பெரும் சக்தி கொண்ட மன்னன் துரியோதனன், தன் கதாயுதத்தைத் தூக்கிக் கொண்டு, பீமசேனன் மீது தன் பார்வைகளைச் செலுத்தி, ஒரு யானையானது, மற்றொரு எதிரி யானையை மோதலுக்கு அழைப்பது போல அறைகூவி அழைத்தான்.(19) அதேபோலவே, வீர பீமனும், கடினமான தன் கதாயுதத்தைத் தூக்கிக் கொண்டு, ஒரு சிங்கம் மற்றொரு சிங்கத்தை அழைப்பதைப் போல அம்மன்னனை {துரியோதனனை} அறைகூவி அழைத்தான்.(20)

கதாயுதங்களை உயர்த்திய துரியோதனனும், பீமனும், அந்தப் போர்க்களத்தில் உயர்ந்த சிகரங்களைக் கொண்ட இரு மலைகளைப் போலத் தெரிந்தனர்.(21) அவர்கள் இருவரும் மிகுந்த கோபத்துடன் இருந்தனர்; பயங்கர ஆற்றலைக் கொண்டிருந்தனர்; கதாயுத மோதல்களில் அவர்கள் நுண்ணறிவு கொண்டவனான ரோகிணியின் மகனுடைய {பலராமனுடைய} சீடர்களாக இருந்தனர்;(22) சாதனைகளில் ஒப்பானவர்களாக இருந்த, அவர்கள் மயனையும், வாசவனையும் {இந்திரனையும்} போல இருந்தனர். பெரும் பலத்தைக் கொண்ட அவர்கள் இருவரும் சாதனைகளில் வருணனுக்கு ஒப்பானவர்களாக இருந்தனர்.(23) வாசுதேவன் {கிருஷ்ணன்}, அல்லது ராமன், அல்லது விஸ்ரவணனின் மகன் (ராவணன்) ஆகியோருக்கு ஒப்பானவர்களான அவர்கள் ஒவ்வொருவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மது மற்றும் கைடபனைப் போல இருந்தனர்.(24) சாதனைகளில் ஒப்பாக இருந்த அவர்கள், சுந்தன் மற்றும் உபசுந்தன் போலவோ, ராமன் மற்றும் ராவணன் போலவோ, வாலி மற்றும் சுக்ரீவன் போலவோ தெரிந்தனர்.(25)

எதிரிகளை எரிப்போரான அவ்விருவரும் காலனையும், மிருத்யுவையும் போலத் தெரிந்தனர். அப்போது அவர்கள் இருவரும், செருக்கில் பெருகி கூதிர்காலத்தின் ஆசையால் வெறிகொண்ட இரு யானைகள், பருவ காலத்தில் இருக்கும் பெண் யானையின் மீது கொண்ட ஏக்கத்தால் எதிர்ப்பது போல ஒருவரையொருவர் எதிர்த்தோடினர். சீற்றமிக்க இரு பாம்புகள் கோபத்தால் தங்கள் நஞ்சை மற்றொரு பாம்பின் மேல் கக்குவதைப் போல அவர்கள் இருவரும் தெரிந்தனர்.(26,27) எதிரிகளைத் தண்டிப்போரான அவ்விருவரும், ஒருவர் மீது ஒருவர் தங்கள் கோபப் பார்வைகளைச் செலுத்தினர். பாரதக் குலத்தின் புலிகளான அவ்விருவரும், பேராற்றலைக் கொண்டவர்களாக இருந்தனர்.(28) எதிரிகளை எரிப்போரான அவ்விருவரும், கதாயுதமோதலில்  வெல்லப்பட முடியாத சிங்கங்களைப் போல இருந்தனர். உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வெற்றியின் மீது கொண்ட விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட அவ்விருவரும், மதங்கொண்ட இரு யானைகளைப் போலவே தெரிந்தனர்.(29) பற்களையும், நகங்களையும் கொண்டு போர்க்கோலம் பூண்ட இரு புலிகளைப்போல அவர்கள் தாங்கிக் கொள்ளப்பட முடியாதவர்களாக இருந்தனர். உயிரினங்களை அழிக்கும் நோக்குடன் சீற்றத்துடன் பொங்கும் இரு கடக்கமுடியாத பெருங்கடல்களைப் போலவோ,(30) அனைத்தையும் எரிப்பதற்காக எழும் கோபக்கார சூரியன்கள் இரண்டைப் போலவோ அவர்கள் இருந்தனர்.

அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவரும் காற்றால் கலங்கடிக்கப்பட்டு, பயங்கரமாக முழங்கிக் கொண்டு, மழைக்காலத்தில் மழைத்தாரைகளைப் பொழியும் கிழக்கு மற்றும் மேற்குப்புற மேங்களைப் போலத் தெரிந்தனர். உயர் ஆன்மாவும், வலிமையும் கொண்ட அவ்விரு வீரர்களும், அண்ட அழிவின் போது எழும் இரு சூரியன்களைப் போலப் பெரும் ஒளியுடனும், பிரகாசத்துடனும் இருந்தனர். சினங்கொண்ட இரு புலிகளைப் போலவோ, முழங்கிக் கொண்டிருக்கும் இரு மேகத் திரள்களைப் போலவோ தெரிந்த அவர்கள்,(31-33) பிடரி கொண்ட இரு சிங்கங்களைப் போல மகிழ்ச்சியை அடைந்தனர். கோபக்கார யானைகள் இரண்டையோ, சுடர்மிக்க  நெருப்புகள் இரண்டையோ போல இருந்த அந்த உயர் ஆன்மாக்கள்,(34) உயர்ந்த சிகரங்களைக் கொண்ட இரு மலைகளைப் போலத் தோன்றினர். சினத்தில் பெருகிய உதடுகளுடன் ஒருவரையொருவர் நோக்கிக் கூரிய பார்வைகளைச் செலுத்திய உயர் ஆன்மா கொண்ட அவ்விரு சிறந்த மனிதர்களும், கதாயுதங்களுடன் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர். மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள் இருவரும், அடுத்தவரைத் தனக்குத் தகுதியான எதிராளியாகக் கருதினர்.(35,36)

அப்போது துரியோதனனும், விருகோதரனும் {பீமனும்} ஒன்றையொன்று நோக்கி கனைத்துக் கொள்ளும் இரு நல்ல குதிரைகளுக்கோ, பிளிறிக் கொள்ளும் இரு யானைகளுக்கோ ஒப்பாக இருந்தனர்.(37) மனிதர்களில் முதன்மையானோரான அவ்விருவரும், அப்போது வலிமையில் பெருகியிருக்கும் தைத்தியர்கள் இருவரைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர். அப்போது துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சகோதரர்கள், உயர் ஆன்மக் கிருஷ்ணன், அளவிலா சக்தி கொண்ட ராமன் {பலராமன்} ஆகியோருக்கு மத்தியில் இருந்த யுதிஷ்டிரனிடம் செருக்குமிக்க இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(39,39) “கைகேயர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் உயர் ஆன்மப் பாஞ்சாலர்கள் ஆகியோரால் பாதுகாக்கப்பட்டு, இங்கே இருக்கும் இந்த மன்னர்களில் முதன்மையானோர் அனைவருடனும் சேர்ந்து அமர்ந்து, எனக்கும், பீமனுக்கும் இடையில் நடக்கப் போகும் இந்தப் போரைக் காண்பீராக” என்றான். துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, அந்த வேண்டுகோளின்படியே அவர்கள் நடந்து கொண்டனர்.(40,41)

பெரிதாக இருந்த மன்னர்களின் கூட்டம் அமர்ந்த போது, அந்த இடம் சொர்க்கத்தில் உள்ள தேவர்களின் சபையைப் போல இருந்தது.(42) அந்த வலிமைமிக்க கரங்களைக் கொண்டோரின் கூட்டத்திற்கு மத்தியில், கேசவனின் {கிருஷ்ணனின்} அண்ணன் {பலராமன்} அமர்ந்த போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனைச் சுற்றிலும் இருந்த அனைவராலும் வழிபடப்பட்டான்.(43) அந்த மன்னர்களுக்கு மத்தியில், நீல ஆடை உடுத்தியவனும்,  அழகான நிறத்தைக் கொண்டவனுமான பலதேவன், இரவில் ஆயிரம் நட்சத்திரங்களால் சூழப்பட்ட முழு நிலவைப் போல அழகாகத் தெரிந்தான்.(44) அதேவேளையில் கதாயுதம் தரித்தவர்களும், எதிரிகளால் தாங்கிக் கொள்ளப்பட முடியாதவர்களுமான அவ்விரு வீரர்களும், ஓ! ஏகாதிபதி, அங்கே நின்று கொண்டு ஒருவரையொருவர் நோக்கி சீற்றத்துடன் பேசிக்கொண்டனர்.(45) இனிமையற்ற கசந்த வார்த்தைகளால் ஒருவரோடொருவர் பேசிக் கொண்ட அந்தக் குரு குலத்தின் முதன்மையான வீரர்கள் இருவரும், போரில் சக்ரனையும் {இந்திரனையும்}, விருத்திரனையும் போல ஒருவர் மீதொருவர் தங்கள் கோபப் பார்வைகளை வீசிக் கொண்டனர்” {என்றான் சஞ்சயன்}”.(46)

பீம, துரியோதனச் சொற்போர்! – சல்லிய பர்வம் பகுதி – 56-திருதராஷ்டிரனின் புலம்பல்; பீமனைப் போருக்கழைத்த துரியோதனன்; களத்தில் தென்பட்ட தீய சகுனங்கள்; யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி உற்சாகமூட்டிய பீமன்; துரியோதனனுக்கு அவனது பழைய குற்றங்களை நினைவுப்படுத்திய பீமன்; வீண்தற்புகழ்ச்சி வேண்டாம் எனப் பீமனை நிந்தித்த துரியோதனன்; துரியோதனனை நோக்கிச் சீற்றத்துடன் விரைந்த பீமன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஜனமேஜயா, தொடக்கத்திலேயே அவ்விரு வீரர்களுக்கும் இடையில் சீற்றமிக்க ஒரு சொற்போர் நடந்தது. அதனால் துயரமடைந்த மன்னன் திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்},(1) “ஓ! இத்தகு முடிவைக் கொண்ட மனிதன் நிந்திக்கத்தக்கவன் ஆவான். ஓ! பாவமற்றவனே {சஞ்சயா}, என் மகன் {துரியோதனன்} பதினோரு சமுக்களின்[1] தலைவனாக இருந்தான்.(2) அவன் தன் ஆணையின் கீழ் மன்னர்கள் அனைவரையும் வைத்துக் கொண்டு, மொத்த பூமியின் அரசுரிமையையும் அனுபவித்தான். ஐயோ, அப்படி இருந்த அவன் இப்போது காலாளாகத் தோளில் கதாயுதத்துடன் ஒரு போர் வீரனாகப் போரிடப் போகிறான்.(3) முன்பு இந்த அண்டத்தின் பாதுகாவலனாக இருந்த பாவப்பட்ட என் மகன் {துரியோதனன்}, இப்போது தானே பாதுகாவலன் இல்லாதவனாக இருக்கிறான். ஐயோ, இந்தச் சந்தர்ப்பத்தில் அவன் தோளில் கதாயுதத்துடன் காலாளாகச் செல்கிறான். இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(4) ஐயோ, ஓ! சஞ்சயா, இப்போது என் மகனால் உணரப்படும் துயரம் பெரிதாக இருக்கிறது” என்றான். இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்த மனிதர்களின் ஆட்சியாளன் {திருதராஷ்டிரன்}, பெருந்துயரத்தால் பீடிக்கப்பட்டு அமைதியை அடைந்தான்.(5)(மூன்று சமுக்கள் சேர்ந்தது ஓர் அனீகினி, பத்து அனீகினி சேர்ந்தது ஓர் அக்ஷௌஹிணி. அதாவது முப்பது சமுக்கள் சேர்ந்தது ஓர் அக்ஷௌஹிணியாகும்)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது துரியோதனன், மேகம் போன்ற ஆழ்ந்த குரலுடனும், ஒரு காளைமாட்டைப் போல இன்பமாகவும் முழங்கினான். பெரும் சக்தியைக் கொண்ட அவன் அந்தப் பிருதையின் {குந்தியின்} மகனை {பீமனை} போருக்கு அறைகூவி அழைத்தான்.(6) குருக்களின் அந்த உயர் ஆன்ம மன்னன் {துரியோதனன்} இவ்வாறு பீமனை மோதலுக்கு அழைத்தபோது, பயங்கர வகையிலான பல்வேறு சகுனங்கள் தென்பட்டன.(7) இடைவேளைகளில் பேரொலியுடன் கடுங்காற்று வீசத் தொடங்கி, புழுதி மாரியைப் பொழிந்தது. திசைகளின் அனைத்துப் புள்ளிகளும் அடர்த்தியான இருளில் மறைக்கப்பட்டன.(8) பேரொலியுடன் கூடிய இடிகள் அனைத்துப் பக்கங்களிலும் விழுந்து பெருங்குழப்பத்தை உண்டாக்கி, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தின. நூற்றுக்கணக்கான எரிக்கோள்கள் பேரொலியுடன் வெடித்தபடியே ஆகாயத்தில் இருந்து விழுந்தன.(9) ஓ! ஏகாதிபதி, ராகு, சூரியனின் பெரும்பகுதியை காலந்தவறி விழுங்கினான். காடுகளுடனும், மரங்களுடனும் கூடிய பூமியானவள் பெரிதும் நடுங்கினாள்.(10)

தரையில் இருந்து கடினமான கூழாங்கற்களைச் சுமந்து பொழியும் வகையில் சூடான காற்றுகள் வீசின, மலைகளின் சிகரங்கள் பூமியின் பரப்பில் விழுந்தன.(11) பல்வேறு வடிவங்களைக் கொண்ட விலங்குகள் அனைத்துப் பக்கங்களிலும் ஓடுவது தெரிந்தது. பயங்கரமான, சீற்றமிக்க நரிகள், சுடர்மிக்க வாய்களுடன் எங்கும் ஊளையிட்டுக் கொண்டிருந்தன.(12) மயிர்க்கூச்சம் ஏற்படும் வகையில் அனைத்துப் பக்கங்களிலும் பயங்கரமான பேரொலிகள் கேட்டன. நான்கு பக்கங்களும் எரிவதாகத் தெரிந்தது, தீய சகுனங்களைத் தெரிவிக்கும் பலவிலங்குகள் தென்பட்டன.(13) கிணறுகளில் இருந்த நீர் தானாகப் பெருகியது. ஓ! மன்னா, காணப்படாத உயிரினங்களின் பேரோலிகள் அனைத்துப் பக்கங்களிலும் கேட்டன.(14)

இவற்றையும், இன்னும் பிற சகுனங்களையும் கண்ட விருகோதரன் {பீமன்}, தன் அண்ணனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனிடம்,(15) “தீய ஆன்மா கொண்ட இந்தச் சுயோதனன், போரில் என்னை வீழ்த்தத்தகுந்தவன் இல்லை. காண்டவ வனத்தின் மீது நெருப்பை வீசிய அர்ஜுனனைப் போல, என் இதயத்தில் கமுக்கமாக நீண்ட நாட்களாகப் பேணிக் காத்த கோபத்தை, இந்தக் குருக்களின் ஆட்சியாளன் {துரியோதனன்} மீது நான் இன்று கக்கப் போகிறேன். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, உமது இதயத்தைத் துளைத்திருக்கும் ஈட்டியை நான் இன்று பிடுங்கப் போகிறேன்.(16,17) இந்தக் குரு குலத்தின் இழிந்த பாவியை என் கதாயுதத்தால் கொன்று, நான் இன்று புகழ் மாலையை உமது கழுத்தில் சூட்டப்போகிறேன்.(18) பாவ காரியங்களைச் செய்யும் இந்தப் பொல்லாதவனை என் கதாயுதத்தால் கொல்லப்போகிறேன். இந்த என் கதாயுதத்தைக் கொண்டே நான் இவனது உடலை நூறு துண்டுகளாகப் பிளக்கப் போகிறேன்.(19) யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} அவன் மீண்டும் நுழைய மாட்டான்.(20)

தூங்கிக் கொண்டிருந்தபோது நம் மீது பாம்பை ஏவியும், உண்ணும்போது நமக்கு நஞ்சைக் கொடுத்தும், பிரமாணகோடியின் நீரில் நம் உடலை வீசியும், அரக்கு வீட்டில் வைத்து நம்மை எரிக்க முயிற்சித்தும்,(21) சபையில் நம்மை அவமதித்தும், நம் உடைமைகள் அனைத்தையும் களவாடியும், ஒரு முழு வருடம் நம்மைத் தலைமறைவாக வாழச் செய்தும்,(22) நாடுகடந்து நம்மைக் காட்டில் வாழ வைத்தும் என, ஓ! பாவமற்றவரே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, {இவனால்} நமக்கு ஏற்பட்ட வேதனைகளுக்கெல்லாம் ஒரு முடிவை நான் இன்று எட்டுவேன். ஒரே நாளில் இந்த அற்பனைக் கொன்று, நான் இவனுக்குப் பட்டிருக்கும் கடனையெல்லாம் அடைக்கப் போகிறேன்.(23)

ஓ! பாரதர்களின் தலைவரே {யுதிஷ்டிரரே}, தூய்மையற்ற ஆன்மாக் கொண்ட இந்தத் தீய திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} வாழ்வுக்காலம் இன்று முடிவை நெருங்கிவிட்டது. இந்த நாளுக்குப் பிறகு அவன் தனது தந்தையையும், தாயையும் மீண்டும் காணமாட்டான்.(24) ஓ! ஏகாதிபதி, குருக்களின் இந்தத் தீய மன்னனுடைய மகிழ்ச்சி இன்று ஒரு முடிவை எட்டுகிறது. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இந்நாளுக்குப் பிறகு இவன் மீண்டும் பெண்ணழகின் மேல் தன் கண்களைச் செலுத்தமாட்டான்.(25) சந்தனு குலத்தின் இழுக்கான இவன், இன்று தன் உயிர் மூச்சு, செழிப்பு மற்றும் நாட்டைக் கைவிட்டு வெறுந்தரையில் உறங்குவான்.(26) இன்று மன்னர் திருதராஷ்டிரரும், தமது மகனின் வீழ்ச்சியைக் கேட்டு, சகுனியின் மூளையில் பிறந்த தீசெயல்கள் அனைத்தையும் நினைவுகூர்வார்” என்றான் {பீமன்}.(27)

ஓ மன்னர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, கதாயுதந்தரித்தவனும், பெருஞ்சக்தியைக் கொண்டவனுமான விருகோதரன், இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அசுரன் விருத்திரனை அறைகூவியழைக்கும் சக்ரனை {இந்திரனைப்} போலப் போரிட நின்றான்.(28)

சிகரத்துடன் கூடிய கைலாச மலையைப் போல உயர்த்தப்பட்ட கதாயுதத்துடன் நிற்கும் துரியோதனனைக் கண்ட பீமசேனன், கோபத்தால் நிறைந்து, மீண்டும் அவனிடம், “வாரணாவதத்தில் உன்னாலும் மன்னர் திருதராஷ்டிரராலும் செய்யப்பட்ட தீச்செயலை உன் மனத்தில் நினைப்பாயாக.(30) பருவகாலத்தில் இருந்த திரௌபதி சபைக்கு மத்தியில் வைத்து முறைகேடாக நடத்தப்பட்டதை நினைவுகூர்வாயாக. உன்னாலும், சுபலனின் மகனாலும் {சகுனியாலும்} பகடையின் மூலமாக மன்னருக்கு {யுதிஷ்டிரருக்கு} கையறுநிலையை ஏற்படுத்தியதை நினைவுகூர்வாயாக.(31) காட்டிலும், விராடனின் நகரத்திலும் கருவறைக்குள் மீண்டும் நுழைந்தவர்களைப் போல உன்னால் நாங்கள் அனுபவித்த பெரும் வேதனைகளை நினைவுகூர்வாயாக. அவை அனைத்திற்கும் நான் இன்று வஞ்சம் தீர்ப்பேன். ஓ! தீய ஆன்மா கொண்டவனே, நற்பேறாலேயே இன்று நான் உன்னைக் காண்கிறேன்.(32)

தேர்வீரர்களில் முதன்மையானவரும், பேராற்றலைக் கொண்டவருமான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, உன் நிமித்தமாகவே யக்ஞ்சேனன் {துருபதன்} மகனால் {சிகண்டியால்} தாக்கி வீழ்த்தப்பட்டு, கணைப்படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்.(33) துரோணர், கர்ணன் மற்றும் பேராற்றலைக் கொண்ட சல்லியன் ஆகியோரும் கொல்லப்பட்டனர். இந்தப் பகை நெருப்பின் வேரும், சுபலனின் மகனுமான சகுனியும் கூடக் கொல்லப்பட்டுவிட்டான்.(34) திரௌபதியின் குழல்களைப் பற்றி இழுந்த அற்பன் பிராதிகாமினும் கொல்லப்பட்டான். பெரும் வீரத்தோடு போரிட்ட உனது சகோரர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(35) இவர்களும், இன்னும் பல மன்னர்களும் உன் குற்றத்திற்காகவே கொல்லப்பட்டனர். இன்று கதாயுதத்துடன் கூடிய உன்னையும் நான் கொல்லப் போகிறேன். இதில் மிகச் சிறிய ஐயமும் கிடையாது” என்றான்.(36)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெருங்குரலுடன் இவ்வார்த்தைகளை விருகோதரன் {பீமன்} சொல்லிக் கொண்டிருந்தபோது, உண்மையான ஆற்றலைக் கொண்டவனான உமது அச்சமற்ற மகன் {துரியோதனன்},(37) “இந்தப் பெரும் தற்புகழ்ச்சியால் என்ன பயன்? ஓ! விருகோதரா {பீமா}, என்னோடு போரிடுவாயாக. உன் குலத்தில் இழிந்தவனே {குலாதம}, இன்று நான் உனது போரிடும் விருப்பத்தை அழிப்பேன்.(38) சாதாரண மனிதனை அச்சுறுத்துவதைப் போல, உன்னைப் போன்ற மனிதனால் துரியோதனனை அச்சுறுத்த முடியாது என்பதை அற்ப பலமுள்ளவனான நீ அறிந்து கொள்வாயாக.(39) இந்த விருப்பத்தை நீண்ட காலமாக நான் பேணி வளர்த்திருக்கிறேன். இந்த விருப்பமானது நீண்டகாலமாக என் இதயத்தில் இருந்தது. இறுதியில் நற்பேறாலேயே தேவர்கள் உன்னுடனான இந்தக் கதாமோதலை ஏற்படுத்தியிருக்கின்றனர்.(40) ஓ! தீய ஆன்மா கொண்டவனே, நீண்ட பேச்சுகளாலும், வெறும் தற்புகழ்ச்சியாலும் யாது பயன்? இந்த உன் வார்த்தைகளைச் செயலில் சாதிப்பாயாக. சற்றும் தாமதிக்காதே” என்றான்.(41)

அங்கிருந்தவர்களான சோமகர்களும், பிற மன்னர்களும் அவனது இவ்வார்த்தைகளைக் கேட்டு அவனை உயர்வாக மெச்சினார்கள்.(42) அனைவராலும் புகழப்பட்டதால் மகிழ்ச்சியால் மயிர்க்கூச்சமேற்பட்ட துரியோதனன், போரில் தன் இதயத்தை உறுதியாக நிலைநிறுத்தினான்.(43) மீண்டும் அங்கிருந்த மன்னர்கள், மோதலுக்குச் செல்லும் மதங்கொண்ட யானையைத் தூண்டிவிடுவோரைப் போலக் கோபக்காரனான உமது மகனுக்குக் கைத்தட்டி உற்சாகமூட்டினர்.(44) பாண்டுவின் மகனான உயர் ஆன்ம விருகோதரன் {பீமன்}, தன் கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு உமது உயர் ஆன்ம மகனை {துரியோதனனை} நோக்கி சீற்றத்துடன் விரைந்தான்.(45) அங்கே இருந்த யானைகள் உரக்கப் பிளிறின, குதிரைகளும் மீண்டும் மீண்டும் கனைத்தன. வெற்றிக்காக ஏங்கிய பாண்டவர்களின் ஆயுதங்கள் தாமாகவே சுடர்விட்டுப் பிரகாசித்தன” {என்றான் சஞ்சயன்}.(46)

பீமனைச் சாய்த்த துரியோதனன்! – சல்லிய பர்வம் பகுதி – 57-பீமனின் விலாவைத் தாக்கிய துரியோதனன்; பீமனின் தலையைத் தாக்கிய துரியோதனன்; கவனத்துடன் பொறுமைகாத்த பீமன்; பீமனின் வீச்சைத் தவிர்த்த துரியோதனன்; பீமனின் மார்பைத் தாக்கிய துரியோதனன்; துரியோதனனின் விலாவைத் தாக்கிய பீமன்; அந்த அடியால் மலைப்படைந்து முழங்கால் மடக்கிக் கீழே விழுந்த துரியோதனன். பீமனின் நெற்றியைத் தாக்கிய துரியோதனன்; பீமனின் எதிர்த்தாக்குதலால் மயக்கமடைந்து விழுந்த துரியோதனன்; துரியோதனனின் தாக்குதலால் நிலைகுலைந்து பலவீனமடைந்த பீமன்; பீமனின் கவசத்தைப் பிளந்த துரியோதனன்; மீண்டும் எழுந்து நின்ற பீமன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மனச்சோர்வடையாத இதயம் கொண்டவனான துரியோதனன், பீமசேனனை அந்நிலையில் கண்டு, பெரு முழக்கம் செய்து, சீற்றத்துடன் அவனை எதிர்த்து விரைந்தான்.(1) அவர்கள் இருவரும், தங்கள் கொம்புகளால் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் இரு காளைகளைப் போல மோதிக் கொண்டனர். அவர்களது கதாயுத வீச்சுக்கள் இடியொலிகளைப் போலப் பேரொலியை எழுப்பின.(2) வெற்றிக்கான ஏக்கத்துடன் கூடிய அவ்விருவருக்கும் இடையில் நடைபெற்ற போரானது, இந்திரனுக்கும், பிரகலாதனுக்கும் இடையில் நடைபெற்ற போரைப் போல மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தியது.(3) பெருஞ்சக்தி படைத்தவர்களும், கதாயுதம் தரித்திருந்தவர்களுமான அந்த உயர் ஆன்மப் போர்வீரர்கள் இருவரும், அங்கமெலாம் குருதியில் நனைய, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலத் தெரிந்தனர்.(4) பயங்கரமான அந்தப் பெரும்போர் நடந்து கொண்டிருந்தபோது, விட்டிற்பூச்சிகளால் நிறைந்திருப்பதைப் போல ஆகாயம் மிக அழகாகத் தெரிந்தது.(5)

கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் சிறிது நேரம் நீடித்தபிறகு, எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள் இருவரும் களைப்பையடைந்தனர்.(6) எதிரிகளை எரிப்பவர்களான அவர்கள் இருவரும் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, மீண்டும் தங்கள் அழகிய கதாயுதங்களை எடுத்துக் கொண்டு, ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.(7) உண்மையில், பெருஞ்சக்தி கொண்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களும், பெரும் வலிமைமிக்கவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும், சிறிது ஓய்வெடுத்த பிறகு ஒருவரோடொருவர் மோதிக் கொண்டபோது, பருவகாலத்தில் பெண் யானையின் துணையை அடைவதற்காக ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் இரு யானைகளைப் போல அவர்கள் தெரிந்தனர்.(8) கதாயுதம் தரித்திருந்தவர்களும், இணையான சக்தி கொண்டவர்களுமான அவ்விரு வீரர்களையும் கண்டு, தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் மனிதர்கள் ஆகியோர் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(9) கதாயுதம் தரித்திருந்தவர்களான துரியோதனன் மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரையும் கண்ட உயிரினங்கள் அனைத்தும், அவர்களில் எவன் வெற்றியடைவான் என்பதில் ஐயங்கொண்டன.(10)

சகோதரர்களும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானோருமான அவ்விருவரும், அடுத்தவரின் தாமதத்தில் பயன்பெற விரும்பி, காத்திருந்து அவர்களைக் கண்காணித்து ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்தனர்.(11) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கனமானதும், கடுமையானதும், யமனின் தண்டம், அல்லது இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பானதும், கொலைகாரக் கருவியுமான தங்கள் கதாயுதங்களை அவ்விருவரும் உயர்த்தியிருப்பதைப் பார்வையாளர்கள் கண்டார்கள்.(12) பீமசேனன் தன் ஆயுதத்தைச் சுழற்றிய போது, அது பயங்கரமான பேரொலியை உண்டாக்கியது.(13) தன் எதிரியான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, இவ்வாறு தன் கதாயுதத்தை ஒப்பற்ற வேகத்துடன் சுழற்றுவதைக் கண்ட துரியோதனன், ஆச்சரியத்தால் நிறைந்தான்.(14) உண்மையில் வீர விருகோதரன், ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, பல்வேறு வழிகளில் {கதிகளில்} திரிந்த போது {சுழன்ற போது} மிக உயர்வான அழகிய காட்சியை வெளிப்படுத்தினான்.(15)

தங்களைப் பாதுகாப்பதில் கவனமாக இருந்த அவ்விருவரும், இறைச்சித் துண்டுக்காகப் போரிடும் இரு பூனைகளைப் போல ஒருவரையொருவர் அணுகி அடுத்தவரை மீண்டும் மீண்டும் சிதைத்தனர்.(16) பீமசேனன், பல்வேறு வகையான பரிமாணங்களைச் செய்தான். முன்னேறியும், பின்வாங்கியும் அழகிய வட்டங்களில் அவன் திரிந்தான்.(17) அவன் {பீமன்} ஆச்சரியமான செயல்பாட்டால், அடிகளைக் கொடுத்தும், தன் எதிராளியின் அடிகளில் இருந்து விலகவும் செய்தான். (தாக்குதல் மற்றும் தற்காத்தல் ஆகியவற்றுக்காக) அவன் பல்வேறு வகையான நிலைகளை எடுத்தான். அவன் தாக்கவும் செய்தான், தன் எதிராளியின் தாக்குதலைத் தவிர்க்கவும் செய்தான். ஒருநேரம் வலமாகவும், ஒருநேரம் இடமாகவும் திரும்பி அவன் தன் எதிரியை நோக்கி ஓடினான்.(18) அவன் நேராகத் தன் எதிரியை எதிர்த்துச் சென்றான். அவன்{பீமன்} தன் எதிரியை இழுப்பத்காகச் சில தந்திரங்களையும் செய்தான். அவன் தன் எதிரி தன்னைத் தாக்க வெளிப்படும் வரை அசையாமல் நின்று, அவனைத் தாக்குவதற்குத்தயாராக இருந்தான். அவன் தன் எதிரியை வலம் வந்து, தன்னை வலம் வருவதில் இருந்து எதிரியைத் தவிர்த்தான். அவன் தன் எதிரியின் தாக்குதல்களைக் குனிந்தோ, உயரக் குதித்தோ, நகர்ந்தோ தவிர்த்தான்.(19) அவன் தன் எதிரியுடன் முகமுகமாக வந்து தாக்கினான், அல்லது அவனிடம் இருந்து நகர்ந்து சென்று அவனைத் தள்ளினான். கதாயுத மோதல்களில் சாதித்தவர்களான பீமன் மற்றும் துரியோதனன் ஆகிய இருவரும், இவ்வாறு போரிட்டு திரிந்தபடியே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்[1].(20)

குரு குலத்தில் முதன்மையானோரான அவ்விருவரும் இவ்வாறு திரிந்து, தங்கள் ஒவ்வொருவரின் அடிகளையும் தவிர்த்து வந்தனர். உண்மையில் அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் இருவரும் இவ்வாறு வட்டமாகச் சுழன்றுகொண்டிருந்தபோது, அவர்கள் ஒருவரோடொருவர் விளையாடிக் கொண்டிருப்பதைப் போலத் தெரிந்தது.(21) அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களான இருவரும், அம்மோதலில் தங்கள் போர்த்திறனை வெளிப்படுத்துவதற்காகச் சிலநேரங்களில், இரு யானைகள் தங்கள் தந்தங்களைக் கொண்டு ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போலத் திடீரெனத் தங்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். குருதியால் நனைந்திருந்த அவர்கள், ஓ! ஏகாதிபதி, அந்தக் களத்தில் மிக அழகாகத் தெரிந்தனர்.(23) இவ்வாறே அந்தப் போரானது, நாளின் முடிவில் பெரும் கூட்டத்தின் பார்வைக்கு முன்னிலையில் விருத்திரனுக்கும் வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடைபெற்ற போரைப் போல அச்சத்தையேற்படுத்துவதாக இருந்தது. கதாயுதங்களைத் தரித்திருந்த அவ்விருவரும் வட்டங்களில் சுழலத் தொடங்கினர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனன் வல மண்டலத்தையும், பீமசேனன் இட மண்டலத்தையும் பின்பற்றினர்[2].(25)

இவ்வாறு அந்தப் போர்க்களத்தில் பீமன் வட்டமாகச் சுழன்று வந்தபோது, துரியோதனன் திடீரென ஒரு கடும் வீச்சால் அவனது {பீமனது} விலாப்புறத்தைத் தாக்கினான்.(26) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது மகனால் தாக்கப்பட்ட பீமன், அந்த அடியைத் திருப்பிக் கொடுப்பதற்காகக் கனமான தன் கதாயுதத்தைச் சுழற்றத் தொடங்கினான்.(27) பார்வையாளர்கள், ஓ! ஏகாதிபதி, பீமசேனனின் அந்தக் கதாயுதத்தை, இந்திரனின் வஜ்ரத்தையோ, யமனின் உயர்த்தப்பட்ட தண்டத்தையோ போன்று பயங்கரமானதாகக் கண்டார்கள்.(28) பீமன் தன் கதாயுதத்தைச் சுழற்றுவதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்} தன் பயங்கரமான ஆயுதத்தை உயர்த்தி மீண்டும் அவனைத் தாக்கினான்.(29) ஓ! பாரதரே, உமது மகன் இறக்கிய கதாயுதத்தின் ஒலி பேரொலியாக இருந்தது. ஆகாயத்தில் {காற்றுவெளியில்} தீப்பொறி உண்டாகும் அளவுக்கு அந்த இறக்கம் அவ்வளவு வேகமானதாக இருந்தது.(30)

பெருஞ்சக்தி கொண்ட சுயோதனன் {துரியோதனன்}, பல்வேறு வகையான வட்டங்களில் சுழன்று, சரியான நேரத்தில் ஒவ்வொரு அசைவையும் பின்பற்றி மீண்டும் பீமனை விஞ்சியிருப்பதைப் போலத் தெரிந்தது.(31) அதேவேளையில், பீமசேனனின் பருத்த கதாயுதமானது, முழுச் சக்தியுடன் சுழந்து, பேரொலியையும், புகையையும், தீப்பொறிகளையும், தழல்களையும் உண்டாக்கியது.(32) பீமசேனன் தன் கதாயுதத்தைச் சுழற்றுவதைக் கண்ட சுயோதனன், கனமானதும், கடினமானதுமான தன் ஆயுதத்தைச் சுழற்றி மிக அழகிய தன்மையை வெளிப்படுத்தினான்.(33) துரியோதனனின் கதாயுதச் சுழற்சியில் உண்டான காற்றின் மூர்க்கத்தைக் குறித்துக் கொண்ட பாண்டுக்கள் மற்றும் சோமகர்கள் அனைவரின் இதயங்களிலும் பேரச்சம் நுழைந்தது.(34) அதேவேளையில், எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், போரின் அனைத்துப் பக்கங்களிலும் தங்கள் திறனை வெளிப்படுத்தி, தந்தங்களைக் கொண்டு ஒன்றையொன்று தாக்கிக் கொள்ள அணுகும் இரு யானைகளைப் போலத் தங்கள் காதாயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஓ! ஏகாதிபதி, குருதியால் நனைந்திருந்த அவர்கள் இருவரும் மிக அழகாகத் தெரிந்தனர்.(35,36) இவ்வாறே ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்க்க, விருத்திரனுக்கும், வாசவனுக்கும் இடையில் நடைபெற்ற கடுமையான போரைப் போல அப்போர் அந்த நாளில் முடிவு வரை நடந்து கொண்டிருந்தது.(37)

பீமன் களத்தில் உறுதியாக நிற்பதைக் கண்ட உமது வலிமைமிக்க மகன் {துரியோதனன்}, இன்னும் அழகான அசைவுகளைச் செய்து அந்தக் குந்தியின் மகனை {பீமனை} நோக்கி விரைந்தான்.(38) கோபத்தால் நிறைந்த பீமன், தங்கத்தால் அலங்கரிக்கபட்டதும், பெரும் மூர்க்கம் கொண்டதுமான கோபக்கார துரியோதனனின் கதாயுதத்தைப் பெரும் வேகத்தோடு தாக்கினான்.(39) எதிர் திசைகளில் வந்த இரு வஜ்ரங்களின் மோதலைப் போன்ற அந்த இரண்டு கதாயுதங்களின் மோதலால், தீப்பொறிகளுடன் கூடிய பேரொலி எழுந்தது.(40) பீமசேனனால் வீசப்பட்டு, வேகமாக விழுந்த கதாயுதம் பூமியையே நடுங்கச் செய்தது.(41) அந்தத் தாக்குதலில் தன் கதாயுதம் இவ்வாறு கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட அந்தக் குரு இளவரசனால் {துரியோதனனால்} அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உண்மையில் அவன், பகை யானைக் கொண்ட மதங்கொண்ட யானையைப் போலச் சினத்தால் நிறைந்தான்.(42) ஓ! ஏகாதிபதி, இடது மண்டலத்தைப் பின்பற்றித் தன் கதாயுதத்தைச் சுழற்றிய சுயோதனன், உறுதியான தீர்மானத்துடன், பயங்கர சக்தியைக் கொண்ட தன் ஆயுதத்தைக் கொண்டு அந்தக் குந்தியின் மகனுடைய {பீமனின்} தலையைத் தாக்கினான்.(43) உமது மகனால் தாக்கப்பட்டவனான பாண்டுவின் மகன் பீமன் நடுங்காததால், ஓ! ஏகாதிபதி, பார்வையாளர்கள் அனைவரும் மிகவும் ஆச்சரியமடைந்தனர்.(44) ஓ! மன்னா, மிகப் பலமாகத் தாக்கப்பட்டாலும், மிகுந்த பொறுமையுடன், ஓர் அங்குலமும் கலங்காத பீமசேனனை அங்கிருந்த போராளிகள் அனைவரும் பாராட்டினர்.(45)

அப்போது பயங்கர ஆற்றலைக் கொண்டவனான பீமன், கனமானதும், சுடர்மிக்கதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் கதாயுதத்தைத் துரியோதனன் மீது வீசினான்.(46) வலிமைமிக்கவனும், அச்சமற்றவனுமான துரியோதனன் அந்த வீச்சைத் தன் செயல்பாட்டால் தவிர்த்தான். இதைக்கண்ட பார்வையாளர்கள் பேராச்சரியத்தை உணர்ந்தனர்.(47) பீமனால் வீசப்பட்ட கதாயுதம், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, செயலிழந்து கலங்கிக் கீழே விழுந்தபோது, இடியைப் போன்ற பேரொலியை எழுப்பிப் பூமியை நடுங்கச் செய்தது.(48) கௌசிகம் என்றழைக்கப்படும் திறன்மிக்கச் செயல்முறையைப் பின்பற்றி, மீண்டும் மீண்டும் உயரக் குதித்த துரியோதனன், சரியாகப் பீமனுடைய கதாயுதத்தின் இறக்கத்தைக் கவனித்து, அதைக் கலங்கடித்து,(49) பெரும் பலத்தைக் கொண்டவனான அந்தக் குரு மன்னன், இவ்வாறு பீமசேனனைக் கலங்கடித்து, இறுதியாகச் சினத்துடன் அவனது {பீமனது} மார்பைத் தாக்கினான்.(50)

அந்தப் பயங்கரப் போரில் உமது மகனால் {துரியோதனனால்} பலமாகத் தாக்கப்பட்ட பீமசேனன் மலைப்பையடைந்து சற்று நேரத்திற்கு என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(51) அந்த நேரத்தில், ஓ! மன்னா, சோமகர்களும் பாண்டவர்களும் பெரும் ஏமாற்றமடைந்து, உற்சாகத்தை இழந்தனர்.(52) அந்த அடியால் சினமடைந்த பீமன், யானையொன்று மற்றொரு யானையை எதிர்த்து விரைவதைப் போல உமது மகனை நோக்கி விரைந்தான்.(53) உண்மையில் பீமன், உயர்த்தப்பட்ட கதாயுதத்துடன், சிங்கமொன்று காட்டுயானையை எதிர்த்து விரைவதைப் போலத் துரியோதனனை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான்.(54) கதாயுதப் பயன்பாட்டில் சாதனை செய்தவனான அந்தப் பாண்டுவின் மகன், குரு மன்னனை அணுகி, உமது மகனை இலக்காகக் கொண்டு, தன் ஆயுதத்தைச் சுழற்றத் தொடங்கினான்.(55)

பிறகு பீமசேனன் துரியோதனனின் விலாப்புறத்தைத் தாக்கினான். அந்த அடியால் மலைப்பையடைந்த அவன் {துரியோதனன்}, முட்டியால் தன்னைத் தாங்கிக் கொண்டு பூமியில் விழுந்தான்.(56) குரு குலத்தின் முதன்மையான அவன், முழங்கால் மடிந்து மண்டியிட்டு விழுந்ததும், ஓ! உலகத்தின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, சிருஞ்சயர்களுக்கு மத்தியில் பேராரவாரம் எழுந்தது.(57) ஓ! மனிதர்களில் காளையே, சிருஞ்சயர்களின் அவ்வாரவாரத்தைக் கேட்ட உமது மகன் சினத்தால் நிறைந்தான்.(58) அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரன், எழுந்து நின்று ஒரு பெரும்பாம்பைப் போலப் பெருமூச்சு விடத் தொடங்கி, பீமசேனனை எரித்துவிடுபவனைப் போல அவன் மீது தன் பார்வைகளைச் செலுத்தினான்.(59) பிறகு அந்தப் போரில், அந்தப் பாரதக் குலத்தில் முதன்மையானவன், அந்நேரத்தில் தன் எதிராளியின் தலையை நொறுக்கிவிடுபவனைப் போலப் பீமசேனனை நோக்கி விரைந்து சென்றான்.(60)

அப்போது, பயங்கர ஆற்றலைக் கொண்டவனான உயர் ஆன்ம துரியோதனன், அந்த உயர் ஆன்ம பீமசேனனின் நெற்றியைத் தாக்கினான். எனினும் அவன் ஓரங்குலமும் அசையாது மலையெனவே நின்றிருந்தான்.(61) அந்தப்போரில் இவ்வாறு தாக்கப்பட்ட அந்தப் பிருதையின் மகன் {பீமன்}, அபரிமிதமாகக் குருதி சிந்திய போது, மதநீர் வழியும் யானையைப் போல அழகானவனாகத் தெரிந்தான்.(62) தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அண்ணனும், எதிரிகளை நொறுக்குபவனுமான அவன், இரும்பாலானதும், வஜ்ரத்தைப் போன்ற ஒலியை உண்டாக்குவதும், வீரர்களைக் கொல்வதுமான தன் கதாயுதத்தை எடுத்து, தன் எதிராளியைப் பெரும் பலத்துடன் தாக்கினான்.(63) பீமசேனனால் தாக்கப்பட்ட உமது மகன், காட்டில் சூறாவளியின் பலத்தால் வேரோடு முறிக்கப்பட்டதும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு பெரும் சால மரத்தைப் போல மேனியெங்கும் நடுங்கியபடியே கீழே விழுந்தான்.(64) உமது மகன் {துரியோதனன்} பூமியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்ததைக் கண்ட பாண்டவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து, பேராரவாரம் செய்தனர். பிறகு உமது மகன், தடாகத்தில் இருந்து எழும் யானை ஒன்றைப் போலச் சுயநினைவு மீண்டு எழுந்தான்.(65)

எப்போதும் கோபம் நிறைந்தவனும், பெரும் தேர்வீரனுமான அந்த ஏகாதிபதி, பெருந்திறனுடன் திரிந்து, தன் முன் நிற்கும் பீமசேனனைத் தாக்கினான். இதில் அந்தப் பாண்டுவின் மகன் அங்கங்கள் பலவீனமடைந்து பூமியில் விழுந்தான்.(66) அந்தக் குரு இளவரசன், தன் சக்தியால் பீமசேனனைத் தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழச் செய்து சிங்க முழக்கம் செய்தான். இடியின் பலத்துக்கு ஒப்பாக இறங்கிய தனது கதாயுதத்தால் அவன் பீமனின் கவசத்தைப் பிளந்தான்.(67) அப்போது, சொர்க்கவாசிகளாலும், அப்சரஸுகளாலும் உண்டாக்கப்பட்ட பேராரவாரமானது ஆகாயத்தில் கேட்கப்பட்டது. பெரும் நறுமணத்தை வெளியிடும் மலர்மாரி தேவர்களால் பொழிப்பட்டு விழுந்தது.(68) பீமன் நெடுஞ்சாண் கிடையாகப் பூமியில் கிடப்பதையும், அவனது பலம் குறைந்ததையும், அவனது கவசம் பிளக்கப்பட்டதையும் கண்டு நமது எதிரிகளின் இதயங்களில் பேரச்சம் நுழைந்தது.(69) ஒரு கணத்தில் தன் உணர்வுகளை மீண்டும் அடைந்த விருகோதரன் {பீமன்}, குருதியால் கறைபடிந்திருந்த தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு, பெரும் முயற்சியுட்ன தன்னை உறுதியடையச் செய்து கொண்டு, உருளும் கண்களுடன் எழுந்து நின்றான்” {என்றான் சஞ்சயன்}.(70)

தொடை முறிக்கப்பட்ட துரியோதனன்! – சல்லிய பர்வம் பகுதி – 58-பீமனுக்கும், துரியோதனனுக்கும் இடையில் கடும்போர் நடந்தது; அவ்விரு போராளிகளுக்கிடையில் உள்ள தகுதிகளைக் குறித்துக் கிருஷ்ணனிடம் விசாரித்த அர்ஜுனன்; கிருஷ்ணன் சொன்ன பதில்; பீமனுக்கு அவனது சபதத்தை நினைவூட்டுவதற்காகத் தன் தொடையைத் தட்டிக் காட்டிய அர்ஜுனன்; துரியோதனனின் தொடையை முறித்த பீமன்; துரியோதனனின் வீழ்ச்சியின் போது நேர்ந்த சகுனங்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “குருகுலத்தின் முதன்மையான வீரர்களான அந்த இருவருக்கிடையில் இவ்வாறு நடைபெற்று வந்த போரைக் கண்ட அர்ஜுனன், வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்},(1) “உன் கருத்தில் இவர்கள் இருவருக்கிடையில் மேன்மையானவர் யார்? அவர்கள் எவர் எந்தத் தகுதியை {குணத்தைக்} கொண்டிருக்கின்றனர்? ஓ! ஜனார்த்தனா, இஃதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(2)

வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “அவர்கள் பெற்ற கல்வி இணையானதே, எனினும், பீமரின் வலிமை மிகப் பெரியது, அதே வேளையில் திருதராஷ்டிரர் மகனோ {துரியோதனனோ} மிகப் பெரும் திறனையும், பயிற்சியையும் கொண்டிருக்கிறான்.(3) பீமசேனர் நியாயமாக {முறையாகப்} போரிட்டால், அவர் வெற்றியை அடையமாட்டார். எனினும் அநியாயமாக {முறையில்லாமல்} போரிட்டால், அவரால் நிச்சயம் துரியோதனனைக் கொல்ல முடியும்.(4) தேவர்கள் வஞ்சத்தின் {மாயையின்} துணைகொண்டே அசுரர்களை வென்றனர். இதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். விரோசனன், வஞ்சத்தின் {மாயையின்} துணைகொண்டே சக்ரனால் {இந்திரனால்} வெல்லப்பட்டான்.(5) பலனைக் கொன்றவன் {இந்திரன்}, வஞ்சச் செயல் {மாயம்} ஒன்றாலேயே விருத்திரனை சக்தியிழக்கச் செய்தான். எனவே, வஞ்சத்தின் துணை கொண்டே பீமசேனர் தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.(6)

ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, சூதாட்டத்தின் போது, பீமர், போரில் தமது கதாயுதத்தால் சுயோதனனின் {துரியோதனனின்} தொடைகளை நொறுக்குவேன் எனச் சூளுரைத்திருக்கிறார்.(7) எனவே இந்த எதிரிகளை நொறுக்குபவர், தமது சபதத்தை இப்போது நிறைவேற்றட்டும். அவர், முழு வஞ்சகனான இந்தக் குரு மன்னனை, வஞ்சத்தாலேயே கொல்லட்டும்.(8) தமது பலத்தை மட்டுமே சார்ந்து பீமர் நியாயமாகப் போரிட்டால், மன்னர் யுதிஷ்டிரர், பேராபத்தை அடையக்கூடும்.(9) நான் உனக்கு மீண்டும் சொல்கிறேன், ஓ! பாண்டுவின் மகனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. மன்னர் யுதிஷ்டிரரின் தவறால் மட்டுமே இப்போது மீண்டும் நமக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.(10)

பீஷ்மர் மற்றும் பிற குருக்களைக் கொன்று பெரும் சாதனைகளை அடைந்த மன்னர் {யுதிஷ்டிரர்}, வெற்றியையும், புகழையும் அடைந்து, கிட்டத்தட்ட பகைமையின் முடிவையும் எட்டிவிட்டார்.(11) இவ்வாறு வெற்றியை அடைந்த அவர், ஐயத்திற்கும், ஆபத்தும் கொள்ளும் நிலையில் தன்னை மீண்டும் நிறுத்திக் கொண்டார். ஓ! பாண்டவா {அர்ஜுனா}, ஒரே போர்வீரனின் வெற்றி அல்லது தோல்வியில் போரின் விளைவை அமைத்துக் கொண்டதில் யுதிஷ்டிரரின் பங்குக்கு இது பெரும் மூடச் செயலாகும். சுயதோதனன் சாதித்தவனும், வீரனும், உறுதியான தீர்மானமும் கொண்டவனாவான்.(12,13) உசனஸால் {சுக்கிராச்சாரியரால்} சொல்லப்பட்ட பழைய வரியொன்றை நாம் கேட்டிருக்கிறோம். உண்மை பொருளுடன் அதைச் சொல்கிறேன் கேட்பாயாக.(14) “பகைவரின் படையில் எஞ்சியோரில் பிளக்கப்பட்டு, உயிருக்காகத் தப்பி ஓடி, மீண்டும் அணிதிரண்டு திரும்பிப் போரிட வருவோர், உறுதியான தீர்மானத்துடனும், ஒரே நோக்கத்துடனும் வருவதால் அவர்களைக் கண்டு எப்போதும் நாம் அஞ்சவேண்டும்” {என்பதே அந்த வரி}.(15)

ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, உயிரில் கொண்ட நம்பிக்கை அனைத்தையும் கைவிட்டு சீற்றத்துடன் விரைந்து வருவோரின் முன் சக்ரனாலேயே நிற்க முடியாது.(16) இந்தத் துரியோதனன் முறியடிக்கப்பட்டுத் தப்பி ஓடியவனாவான். அவனது துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்டுவிட்டன. அவன் தடாகத்தின் ஆழங்களுக்குள் நுழைந்தான். எனவே, அவன் வீழ்த்தப்பட்டு, தன் நாட்டைத் தக்க வைத்துக் கொள்வதில் நம்பிக்கையை இழந்து, காட்டுக்குள் ஓய்ந்து செல்லவும் விரும்பினான். அத்தகு மனிதனை, ஞானம் கொண்ட எந்த மனிதன்தான் தனிப் போருக்கு அறைகூவி அழைப்பான்?(17) ஏற்கனவே நமதாகிவிட்ட நாட்டைப் பறிப்பதில் துரியோதனன் வெல்லமாட்டானா? இல்லையா? என்பதை நான் அறியமாட்டேன். முழுமையாகப் பதிமூன்று வருடங்களாக அவன் பெரும் தீர்மானத்துடன் அந்தக் கதாயுதத்தில் பயிற்சி செய்திருக்கிறான். இப்போதும் கூட அவன், பீமசேனரைக் கொல்வதற்காக உயரக் குதிக்கிறான்; குறுக்காகவும் தாண்டுகிறான்.(18) வலிய கரங்களைக் கொண்ட பீமர், அநியாயமாக அவனைக் கொல்லவில்லையெனில், திருதராஷ்டிரர் மகனே நிச்சயம் மன்னனாக நீடிப்பான்” என்றான் {கிருஷ்ணன்}.(19) அந்த உயர் ஆன்மக் கேசவனின் {கிருஷ்ணனின்} அவ்வார்த்தைகளைக் கேட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, பீமசேனனின் கண்களுக்கு முன்பாகத் தன் இடது தொடையை அடித்தான்.(20)

அந்தக் குறியீட்டைப் புரிந்து கொண்ட பீமன், உயர்த்தப்பட்ட தன் கதாயுதத்துடன், அழகிய வட்டமாகவும், யமகம் மற்றும் இன்னும் பிற நகர்தல் முறைகளிலும் {கதிகளிலும்} நகர்ந்து திரிந்து கொண்டிருந்தான்.(21) அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சில நேரங்களில் வலது மண்டலத்தையும், சில நேரங்களில் இடதும் மண்டலத்தையும், சில நேரங்களில் கோமூத்ரகம் {கோமூத்ரி} என்றழைக்கப்படும் அசைவையும் பின்பற்றித் திரியத் தொடங்கித் தன் எதிரியை மலைக்கச் செய்தான்.(22) அதேபோலவே, ஓ! ஏகாதிபதி, கதாயுதப் போரை நன்கறிந்தவனான உமது மகனும், பீமசேனனைக் கொல்வதற்குப் பெருஞ்சுறுசுறுப்புடன் அழகாகத் திரிந்து கொண்டிருந்தான்.(23) அந்த வீரர்கள் இருவரும், பகைமையின் முடிவை அடைய விரும்பி, சந்தனக் குழம்பு மற்றும் நறுமணக் களிம்புகளால் பூசப்பட்டிருந்த தங்கள் பயங்கரக் கதாயுதங்களைச் சுழற்றியபடியே இரு கோபக்கார யனைகளைப் போல அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தனர்.(24) ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களும், பெரும் வீரத்தைக் கொண்டவர்களுமான அந்த மனிதர்களில் முதன்மையானோர் இருவரும், பாம்பைப் பிடிக்க விரும்பும் இரு கருடர்களைப் போலப் போரிட்டனர்.(25)

அம்மன்னனும், பீமனும் அழகிய வட்டங்களில் சுழன்று அவர்களது கதாயுதங்கள் மோதிக் கொண்டபோது, அவ்வாறு மீண்டும் மீண்டும் ஏற்பட்ட மோதல்களால் தீப்பொறிகள் உண்டாகின.(26) வீரமிக்கவர்களும், வலிமைமிக்கவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும், அந்தப் போரில் இணையாகவே தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள், ஓ! ஏகாதிபதி, சூறாவளியால் கலங்கடிக்கப்பட்ட இரண்டு பெருங்கடல்களுக்கு ஒப்பாக இருந்தனர்.(27) மதங்கொண்ட இரு யானைகளைப் போல இணையாக ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட அவர்களின் கதாயுதங்கள் மோதிக் கொண்டபோது, அவை இடியின் பேரொலியை உண்டாக்கின.(28) கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நெருக்கமான இடத்திற்குள் நடந்து கொண்டிருந்தபோது, அந்த எதிரிகளைத் தண்டிப்போரான இருவரும் போரினால் களைப்பையடைந்தனர்.(29) எதிரிகளை எரிப்போரான அவ்விருவரும், சிறிது நேரம் ஓய்வெடுத்து, சினத்தால் நிறைந்து, தங்கள் கதாயுதங்களை உயர்த்திக் கொண்டு, மீண்டும் ஒருவரோடொருவர் போரிடத் தொடங்கினர்.(30)

அவர்களது கதாயுதங்கள் மீண்டும் மீண்டும் இறங்கி அவர்கள் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்ட போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்கள் செய்த போரானது, மிகப் பயங்கரமானதாகவும், முற்றிலும் தடுக்கப்பட முடியாததாகவும் ஆனது.(31) காளைகளைப் போன்ற கண்களைக் கொண்டவர்களும், பெருஞ்சுறுசுறுப்பைக் கொண்டவர்களுமான அந்த வீரர்கள் இருவரும், அம்மோதலில் ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்து, சகதியிலுள்ள இரு காட்டெருமைகளைப் போல மூர்க்கமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(32) அங்கங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, தலைமுதல் கால் வரை குருதியால் மறைக்கப்பட்டு இருந்த அவர்கள், இமயத்தின் சாரலில் உள்ள இரு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலத் தெரிந்தனர்.(33) அம்மோதல் நடந்து கொண்டிருந்த போது, விருகோதரன் {பீமன்} (ஓர் உத்தியுடன்) துரியோதனனுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுப்பதுபோல் தெரிந்த போது, சிரித்துக் கொண்டே அவன் {துரியோதனன்} சிறிது முன்னே சென்றான்.(34) போரில் நன்கு திறம் படைத்தவனும், வலிமைமிக்கவனுமான விருகோதரன், தன் எதிராளி அருகில் வருவதைக் கண்டு திடீரென அவன் மீது தன் கதாயுதத்தை வீசினான்.(35)

தன் மீது வீசப்படும் கதாயுதத்தைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவ்விடத்தில் இருந்து நகர்ந்து சென்றதால் அந்த ஆயுதம் கலங்கடிக்கப்பட்டுப் பூமியில் விழுந்தது.(36) குரு குலத்தில் முதன்மையானவனான உமது மகன், அந்த வீச்சைத் தவிர்த்து, தன் ஆயுதத்தால் வேகமாகப் பீமசேனனைத் தாக்கினான்.(37) அந்த வீச்சின் பலத்தால் வழிந்த பெரும் அளவிலான குருதியின் விளைவால், அளவிலா சக்தி கொண்ட பீமசேனன் மலைப்படைந்ததாகத் தெரிந்தது.(38) எனினும் துரியோதனன், அந்தக் கணத்தில் பீமன் அவ்வளவு பீடிக்கப்பட்டிருக்கிறான் என்பதை அறியாதிருந்தான். பீமன் ஆழமாகப் பீடிக்கப்பட்டிருந்தாலும், தன் பொறுமையனைத்தையும் திரட்டிக் கொண்டு அதைத் தாக்குப்பிடித்தான்.(39) எனவே துரியோதனன், அசைவில்லாதவனாகவும், அடியைத் திருப்பிக் கொடுக்கத் தயாராக இருப்பவனுமாகவே அவனைக் கண்டான். அதன் காரணமாகவே உமது மகன் மீண்டும் அவனைத் தாக்காதிருந்தான்.(40)

சற்று ஓய்ந்திருந்த வீரப் பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அருகிலேயே நின்றிருந்த துரியோதனனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(41) அளவிலா சக்தி கொண்ட பீமசேனன், சினத்தால் நிறைந்து, தன்னை நோக்கி விரைந்து வருவதைக் கண்ட உமது உயர் ஆன்ம மகன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவனது வீச்சைக் கலங்கடிக்க விரும்பி, அவஸ்தானம் என்றழைக்கப்படும் திறன் நடையில் தன் இதயத்தை நிலைக்கச் செய்தான். எனவே அவன், விருகோதரனை {பீமனை} வஞ்சிப்பதற்காக உயரக் குதிக்க விரும்பினான்.(42,43) பீமசேனன் தன் எதிராளியின் நோக்கத்தை முற்றிலும் புரிந்து கொண்டான். எனவே, சிங்க முழக்கத்தோடு அவனை நோக்கி விரைந்த அவன் {பீமன்}, தனது முதல் இலக்கைக் கலங்கடிக்க அந்தக் குருமன்னன் {துரியோதனன்} உயரக் குதித்த போது, அவனது தொடைகளில் தன் கதாயுதத்தை வீசினான்.(44,45)

இடியின் சக்தியைக் கொண்டதும், பயங்கரச் செயல்களைப் புரியும் பீமனால் வீசப்பட்டதுமான அந்தக் கதாயுதம், துரியோதனின் அழகிய தொடைகள் இரண்டையும் முறித்தது.(46) மனிதர்களில் புலியான உமது மகன், பீமசேனனால் தன் தொடைகள் முறிக்கப்பட்டதும், தன் வீழ்ச்சியால் பூமியை எதிரொலிக்கச் செய்தபடியே கீழே விழுந்தான்.(47) மீண்டும் மீண்டும் இடைவேளைவிட்டு பேரொலியுடன் கூடிய கடுங்காற்று வீசத் தொடங்கியது. புழுதி மாரி பொழிந்தது. மரங்கள், செடிகள், மலைகள் ஆகியவற்றுடன் கூடிய பூமாதேவி நடுங்கத் தொடங்கினாள்.(48) பூமியின் ஏகாதிபதிகள் அனைவருக்கும் தலைவனான அந்த வீரர் வீழ்ந்தபோது, அடிக்கடி விழுந்த இடியுடன் சேர்ந்து பேரொலியுடன் கூடிய கடுங்காற்று வீசியது. உண்மையில், அந்தப் பூமியின் தலைவன் வீழ்ந்தபோது, வானத்தில் இருந்து பெரிய எரிநட்சத்திரங்கள் விழுவது தெரிந்தது.(49) ஓ! பாரதா அங்கே குருதிமாரியும், புழுதிமாரியும் பொழிந்தது. உமது மகனின் வீழ்ச்சியின் காரணமாக மகவத்தால் {இந்திரனால்} இவை பொழியப்பட்டன.(50)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, யக்ஷர்கள், ராட்சசர்கள் மற்றும் பிசாசங்களால் உண்டாக்கப்பட்ட பேரொலி ஆகாயத்தில் கேட்கப்பட்டது.(51) அந்தப் பயங்கர ஒலியால் ஆயிரக்கணக்கான பறவைகளும், விலங்குகளும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பீதிநிறைந்த ஒலிகளை வெளியிடத் தொடங்கின.(52) (பாண்டவப்) படையில் (கொல்லப்படாமல்) எஞ்சியிருந்த குதிரைகள், யானைகள் ஆகியவையும், மனிதர்களும், உமது மகன் {துரியோதனன்} வீழ்ந்ததும் பேரொலியை எழுப்பினர். சங்கு முழக்கங்களும், பேரிகைகளின் பேரொலிகளும், மிருதங்களின் ஒலிகளும் உரக்கக் கேட்டன.(53) பூமியின் ஆழங்களில் இருந்து ஒரு பயங்கர ஒலி வருவதாகத் தெரிந்தது. உமது மகனின் வீழ்ச்சியால், ஓ! ஏகாதிபதி, அச்சந்தரும் வடிவங்களைக் கொண்ட தலையற்ற உயிரினங்களும், பல கால்கள் மற்றும் கரங்களைக் கொண்டிருந்தவையும், அனைத்துயிர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், ஆடத்தொடங்கிப் பூமியின் அனைத்துப் பக்கங்களையும் மறைக்கத் தொடங்கின.(54) ஓ! மன்னா, கரங்களில் கொடிமரங்கள், அல்லது ஆயுதங்களுடன் இருந்த போராளிகள், ஓ! மன்னா, உமது மகனின் வீழ்ச்சிக்குப் பிறகு நடுங்கத் தொடங்கினர்.(55)

ஓ! மன்னர்களில் சிறந்தவரே, தடாகங்களும், கிணறுகளும் இரத்ததைக் கக்கின. வேகமான நீரோட்டத்தைக் கொண்ட ஆறுகள் எதிர்த்திசைகளில் ஓடத் தொடங்கின.(56) உமது மகனான துரியோதனன் வீழ்ந்த நேரத்தில், ஓ! மன்னா, ஆண்கள், பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் தெரியத் தொடங்கினர்.(57) இந்த அற்புதச் சகுனங்களைக் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும், ஓ! பாரதக் குலத்தின் காளையே, மனக்கலக்கத்தால் நிறைந்தனர்.(58) தேவர்களும், கந்தர்வர்களும், உமது மகன்களுக்கிடையே நடைபெற்ற அந்த அற்புதப் போரைக் குறித்துப் பேசிக் கொண்டே தாங்கள் விரும்பிய உலகத்திற்குச் சென்றனர்.(59) அதே போல, வேகமாகச் செல்பவர்களான சித்தர்களும், சாரணர்களும், மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவரையும் புகழ்ந்தபடியே, தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அவ்விடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.(60)

பீமனைக் கண்டித்த யுதிஷ்டிரன்! – சல்லிய பர்வம் பகுதி – 59- தொடை முறிந்து கிடந்த துரியோதனன்; பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, துரியோதனனை நிந்தித்து, அவனது தலையைக் காலால் மிதித்த பீமன்; பீமனைக் கண்டித்து, துரியோதனனுக்கு ஆறுதல் சொன்ன யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் புலம்பல்…

சஞ்சயன் சொன்னான், “(சூறாவளியால்) வேராடு முறிந்த விழுந்த பெரும் சால மரத்தைப் போலப் பூமியில் விழுந்து கிடந்த துரியோதனனைக் கண்ட பாண்டவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(1) மயிர்க்கூச்சத்தை அடைந்த சோமகர்களும், சிங்கத்தால் வீழ்த்தப்பட்ட மதங்கொண்ட யானையொன்றைப் போல வீழ்ந்து கிடக்கும் அந்தக் குரு மன்னனை {துரியோதனனைக்} கண்டனர்.(2) துரியோதனனைக் கீழே வீழ்த்திய வீர பீமசேனன், அந்தக் குரு தலைவனை {துரியோதனனை} அணுகி,(3) “ஓ இழிந்தவனே, முன்பு சபைக்கு மத்தியில் ஆடையிழந்திருந்த திரௌபதியைக் கண்டு சிரித்து, ஓ மூடா, எங்களை, “மாடு, மாடு” என்று நீ அழைத்தாய்.(4) அந்த அவமதிப்பின் கனியை {பலனை} இப்போது நீ தாங்கிக் கொள்வாயாக” என்றான். இவ்வார்த்தைகளைச் சொன்ன அவன், வீழ்ந்துவிட்ட தன் எதிரியின் தலையைத் தன் இடது காலால் தீண்டினான்.(5)

கோபத்தால் கண்கள் சிவந்திருந்தவனும், பகைவரின் படையைக் கலங்கடிப்பவனுமான பீமசேனன் மீண்டும் இவ்வார்த்தைகளைச் சொன்னான். ஓ ஏகாதிபதியே {திருதராஷ்டிரரே} அவற்றைக் கேட்பீராக,(6) “எங்களை அவமதிக்கும் வகையில் “மாடு, மாடு” என்று சொல்லி ஆடியவர்கள் எவரோ, அவர்களைக் கண்டு, “மாடு, மாடு” என்ற அதே வார்த்தைகளைச் சொல்லி இப்போது நாங்கள் ஆடுவோம்.(7) எங்களிடம் வஞ்சனையோ, நெருப்போ, பகடையாட்டமோ {சூதாட்டமோ} ஏதும் இல்லை. எங்கள் கரங்களின் வலிமையை நம்பியே நாங்கள் எங்கள் எதிரிகளைத் தடுத்துப் பீடிக்கிறோம்” என்றான்.(8) பகைமையின் மறுகரையை அடைந்தவனான விருகோதரன் மீண்டும் சிரித்துக் கொண்டே, யுதிஷ்டிரன், கேசவன் {கிருஷ்ணன்}, சிருஞ்சயர்கள், தனஞ்சயன் {அர்ஜுனன்}, மாத்ரியின் இரு மகன்கள் ஆகியோரிடம் மெதுவாக இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(9) {அவன்}, “திரௌபதி நோயுற்றிருந்தபோது, சபைக்கு இழுத்து வந்து அவளை ஆடையிழக்கச் செய்தவர்கள் எவரோ[1], அந்தத் தார்தராஷ்டிரர்கள், யக்ஞசேனன் மகளின் {திரௌபதியின்} தவத்தின் மூலம் பாண்டவர்களால் கொல்லப்பட்டதைக் காண்பீராக.(10) எங்களை எள்ளுப் பதர்கள் என்றழைத்த மன்னர் திருதராஷ்டிரரின் தீய இதயம் கொண்ட மகன்கள் அனைவரும், அவர்களது உறவினர்கள் மற்றும் தொண்டர்களுடன் எங்களால் கொல்லப்பட்டனர். (அச்செயல்களின் விளைவால்) ஒன்று நாம் சொர்க்கத்திற்குச் செல்வோமா, அல்லது நகரகத்தில் வீழ்வோமா என்பது சிறிய காரியமே[2]” என்றான்.(11)

மீண்டும் தன் தோளில் கிடந்த கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு, பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த அந்த ஏகாதிபதியின் தலையைத் தன் இடது காலால் தாக்கி, வஞ்சகம் நிறைந்த துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(12) நீதிமிக்க ஆன்மாக்களைக் கொண்ட சோமகர்களில் முதன்மையான வீரர்கள் பலரால், அந்தக் குரு குலத்தில் முதன்மையானவனின் தலையில், குறுகிய இதயத்தோடு இன்புற்றிருந்த பீமசேனனின் காலைக் கண்டு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.(13) விருகோதரன் உமது மகனைத் தாக்கி வீழ்த்தி இவ்வாறு தற்பெருமை பேசி, வெறிகொண்டு கூத்தாடியபோது, மன்னன் யுதிஷ்டிரன் அவனிடம்,(14) “நீ உன் பகைமையைத் தீர்த்துக் கொண்டாய், நியாமாகவோ, அநியாயமாகவோ உன் சபதத்தையும் நிறைவேற்றிக் கொண்டாய். ஓ பீமா, இப்போது நிறுத்துவாயாக.(15)

உன் காலால் இவனது தலையை நசுக்காதே. பாவகரமாகச் செயல்படாதே. துரியோதனன் ஒரு மன்னனாவான். மேலும் இவன் உன் சொந்தக்காரனுமாவான். இவன் வீழ்ந்துவிட்டான். ஓ பாவமற்றவனே, இந்த உனது நடத்தை முறையானதில்லை.(16) துரியோதனன் பதினோரு அக்ஷௌஹிணிகளின் தலைவனாக இருந்தான். இவன் குருக்களின் மன்னனாகவும் இருந்தான். ஓ பீமா, மன்னனும், உறவினனுமான இவனை உன் காலால் தீண்டாதே.(17) இவனது உறவினர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவனது நண்பர்களும், அமைச்சர்களும் சென்றுவிட்டனர். இவனது துருப்புகளும் அழிக்கப்பட்டுவிட்டன. போரில் இவன் வீழ்த்தப்பட்டுவிட்டான். அனைத்து வகையிலும் இவன் அனுதாபத்திற்குரியவன். இவன் மன்னன் என்பதை நினைவுகூர்ந்தால், இவன் அவமதிக்கப்படத் தகுந்தவனில்லை.(18) இவன் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டான். இவனது நண்பர்களும், சொந்தங்களும் கொல்லப்பட்டுவிட்டனர். இவனது சகோதரர்களும், மகன்களும் கூடக் கொல்லப்பட்டுவிட்டனர். இவனது ஈமப்பிண்டம் எடுக்கப்பட்டுவிட்டது. இவன் நமது சகோதரனாவான். இதை அவனுக்கு நீ செய்வது முறையாகாது.(19) “பீமசேனன் நீதிமிக்க நடத்தை கொண்டவனாவான்” என்று முன்பு உன்னைக் குறித்து மக்கள் சொன்னார்கள். ஓ பீமசேனா, நீ ஏன் இம்மன்னனை இவ்வழியில் அவமதிக்கிறாய்?” என்று கேட்டான்.(20)

இவ்வார்த்தைகளைப் பீமசேனனிடம் சொன்ன யுதிஷ்டிரன், கண்ணீரால் தடைபட்ட குரலுடனும், துன்பத்தால் பீடிக்கப்பட்டும், எதிரிகளைத் தண்டிப்பவனான துரியோதனனை அணுகி, அவனிடம்,(21) “ஓ ஐயா, நீ கோபப்படவோ, உனக்காகத் துன்பப்படவோ கூடாது. உனது முந்தைய செயல்களின் பயங்கர விளைவுகளையே நீ சுமக்கிறாய் என்பதில் ஐயமில்லை.(22) ஓ குரு குலத்தில் முதன்மையானவனே, நாங்கள் உன்னைக் காயப்படுத்த வேண்டும், நீ எங்களைக் காயப்படுத்த வேண்டும் என்ற இந்தச் சோகமான தீய முடிவு படைப்பாளனாலேயே விதிக்கப்பட்டிருக்கிறது என்பதிலும் ஐயமில்லை.(23) ஓ பாரதா, பேராசை, செருக்கு, மடைமை ஆகிய உன் குற்றங்களாலேயே இந்தப் பேரிடர் உனக்கு நேர்ந்திருக்கிறது.(24) உன் தோழர்கள், சகோதரர்கள், தந்தைமார்கள், மகன்கள், பேரர்கள் மற்றும் அனைவரையும் கொல்லச் செய்து, இப்போது நீ உன் மரணத்தை நெருங்கியிருக்கிறாய்.(25)

உன் குற்றத்தின் விளைவாலேயே, வலிமைமிக்கத் தேர்வீரர்களான உன் சகோதரர்கள் மற்றும் சொந்தங்கள் அனைவரும் எங்களால் கொல்லப்பட்டனர். இவை யாவும் தடுக்கப்பட முடியாத விதியின் செயல்பாடு என்றே நான் நினைக்கிறேன்.(26) நீ பரிதாபத்திற்குரியவன் அல்ல. மறுபுறம், ஓ பாவமற்றவனே, உன் மரணம் பொறாமை கொள்ளத்தக்கதாகும். ஓ கௌரவா, அனைத்து வகையிலும் நாங்களே பரிதாபத்திற்குரியவர்கள். எங்கள் அன்புக்குரிய நண்பர்களும், சொந்தங்களும் இல்லாமல் நாங்கள் பரிதாபகரமான வாழ்வை இழுக்கப் போகிறோம்.(27) ஐயோ, என் சகோதரர்கள், மகன்கள் மற்றும் பேரர்களைக் குறித்த சோகத்தில் உணர்வுகளை இழந்து துக்கத்தில் மூழ்கியிருக்கும் கைம்பெண்களை நான் எவ்வாறு காணப் போகிறேன்.(28) ஓ மன்னா, நீ இந்த உலகத்தில் இருந்து செல்லப் போகிறாய். நீ சொர்க்கத்தில் நிச்சயம் வசிப்பிடத்தைக் கொள்ளப் போகிறாய். மறுபுறம் நாங்களோ, நரகில் வாழும் உயிரினங்களாகக் கருதப்பட்டு, கடுந்துக்கத்தைத் தொடர்ந்து அனுபவிக்கப் போகிறோம்.(29) திருதராஷ்டிரர் மகன்கள் மற்றும் பேரர்களின் மனைவியர் துன்பத்தால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். சோகத்தால் நொறுங்கியிருக்கும் அந்தக் கைம்பெண்டிர், எங்கள் அனைவரையும் சபிப்பார்கள் என்பதில் ஐயமில்லை” என்றான்.(30)

இவ்வார்த்தைகளைச் சொன்ன தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, துயரால் ஆழமாகப் பீடிக்கப்பட்டு, கடும் மூச்சு விடத் தொடங்கி, புலம்பல்களில் ஈடுபட்டான்” {என்றான் சஞ்சயன்}.(31)

பலராமனை வளைத்துப் பிடித்த கேசவன்! – சல்லிய பர்வம் பகுதி – 60-கதாயுத்த விதிமுறைகளை மீறி, துரியோதனனின் உந்திக்குக் கீழே தாக்கிய பீமனைக் கண்டு கோபமடைந்த பலராமன் தன் கலப்பையை ஓங்கியபடியே பீமனை நோக்கி விரைந்து சென்றது; பலராமனைப் பிடித்துத் தடுத்த கிருஷ்ணன்; பீமன் தரப்பு நியாயத்தைச் சொன்ன கிருஷ்ணன்; கிருஷ்ணனின் உரையைக் கேட்டு வெகுண்ட பலராமன், துரியோதனனைப் புகழ்ந்து, பீமனை இகழ்ந்து துவாரைகைக்குப் புறப்பட்டுச் சென்றது; நாட்டின் அரசுரிமையை ஏற்குமாறு யுதிஷ்டிரனிடம் சொன்ன பீமன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா, வலிமைமிக்கவனும், மது குலத்தில் முதன்மையானவனுமான பலதேவன் {பலராமன்}, நியாயமற்ற வகையில் (குரு) மன்னன் {துரியோதனன்} தாக்கி வீழ்த்தப்பட்டதைக் கண்டு என்ன சொன்னான்?(1) ஓ! சஞ்சயா, கதாயுத மோதல்களில் நல்ல திறம் கொண்டவனும், அதன் விதிமுறைகளை நன்கறிந்தவனுமான அந்தத ரோகிணியின் மகன் {பலராமன்}, அச்சந்தர்ப்பத்தில் என்ன செய்தான் என்பதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தாக்குபவர்களில் முதன்மையானவனும், வலிமைமிக்கவனுமான ராமன் {பலராமன்}, உமது மகன் {துரியோதனன்} தொடைகளில் தாக்கப்பட்டதைக் கண்டு மிகுந்த கோபத்தை அடைந்தான்.(3) தன் கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, அம்மன்னர்களுக்கு மத்தியில் தன் கரங்களை உயர்த்தி, ஆழ்ந்த சோகக் குரலில், “ஓ!, பீமனுக்கு ஐயோ, பீமனுக்கு ஐயோ.(4) ஓ!, ஒரு வீச்சால் உந்திக்கு {தொப்புளுக்குக்} கீழே தாக்கப்பட்ட இத்தகு நியாயமற்ற போருக்கு ஐயோ. கதாயுதப்போரில் விருகோதரன் {பீமன்} செய்தது போன்ற ஒரு செயலை இதற்கு முன்பு எப்போதும் பார்க்கப்பட்டதில்லை.(5) உந்திக்குக் கீழே உள்ள எந்த அங்கமும் தாக்கப்படலாகாது. இதுவே ஆய்வுகளில் {சாத்திரங்களில்} விதிக்கப்பட்ட விதியாகும். எனினும், ஆய்வுகளின் உண்மைகளை அறியாதவனான இந்தப் பீமன் அறியாமை கொண்ட இழிந்தவனாவான். எனவேதான் இவன் {பீமன்} தன் விரும்பியபடி நடந்து கொண்டான்” என்றான்[1].(6)இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ராமன் {பலராமன்} பெரும் கோபம் கொண்டான். அப்போது, அந்த வலிமைமிக்கப் பலதேவன் {பலராமன்}, தன் கலப்பையை உயர்த்திக் கொண்டு பீமசேனனை நோக்கி விரைந்தான்.(7) உயர்த்தப்பட்ட கரங்களுடன் கூடிய அந்த உயர் ஆன்மப் போர்வீரனின் வடிவமானது, பல்வேறு வகை உலோகங்களுடன் பல வண்ணங்களில் இருக்கும் பெரும் கைலாச மலையைப் போல இருந்தது[2].(8) எனினும், எப்போதும் பணிவுடன் இருப்பவனான வலிமைமிக்கக் கேசவனோ {கிருஷ்ணனோ}, விரைந்து சென்ற அந்த ராமனை {பலராமன}, பருத்துருண்டிருந்த தன் கரங்களால் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டான்.(9) நிறத்தில் ஒருவன் கருப்பாகவும் {கிருஷ்ணன்}, மற்றவன் வெளுப்பாகவும் {பலராமன்} இருந்த அந்த யது குல வீரர்களில் முதன்மையான இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மாலை நேர வானில் {ஒரே நேரத்தில்} இருக்கும் சூரியனையும் சந்திரனையும் போல அக்கணத்தில் மிக அழகானவர்களாகத் தெரிந்தனர்.(10)ராமனின் {பலராமனின்} கோபத்தைத் தணிக்கும் வகையில் கேசவன் {கிருஷ்ணன்} அவனிடம், “ஒருவனின் சொந்த வளர்ச்சி, ஒருவனுடைய நண்பனின் வளர்ச்சி, ஒருவனுடைய நண்பனது நண்பர்களின் வளர்ச்சி,, ஒருவனுடைய எதிரியின் சிதைவு, ஒருவனின் எதிரியுடைய நண்பனின் சிதைவு, ஒருவனின் எதிரியுடைய நண்பர்களின் நண்பர்களுடைய சிதைவு ஆகிய ஆறு வகை வளர்ச்சியையும் ஒரு மனிதன் தன் வளர்ச்சியாகக் கொள்ளலாம்.(11) இவை ஒருவனுக்கு இதற்கு மாறாக நடக்கும்போதோ, ஒருவனுடைய நண்பர்களுக்கு அவ்வாறு நடக்கும்போதோ, அவன் தன் வீழ்ச்சி அருகில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, அத்தகு நேரங்களின் அவன் தீர்வை அடைவதற்கான வழிகளைத் தேட வேண்டும் {பகைமையைத் தணித்துக் கொள்ள வேண்டும்}.(12) மாசில்லா ஆற்றலைக் கொண்டவர்களான பாண்டவர்கள் இயல்பாகவே நம் நண்பர்களாவர். அவர்கள் நமது அத்தையின் {குந்தியின் -நம் தந்தையின் சகோதரியுடைய} பிள்ளைகளாவர். அவர்கள் தங்கள் பகைவர்களால் பெரிதும் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்.(13) தன் சபதத்தை நிறைவேற்றுவது ஒருவனது கடமையாகும். முன்பு பீமர், பெரும்போர் ஒன்றில் இந்தத் துரியோதனனின் தொடைகளைத் தமது கதாயுதத்தால் நொறுக்குவதாகச் சபைக்கு மத்தியில் வைத்து சபதமேற்றார்.(14) மேலும், பெரும் முனிவரான மைத்திரேயரும் கூட, ஓ எதிரிகளை எரிப்பவரே, “பீமன் தன் கதாயுதத்தால் உன் தொடைகளை நொறுக்குவான்” என்று முன்பே துரியோதனனைச் சபித்திருக்கிறார்.(15) இவை யாவற்றின் விளைவால், நான் பீமரிடம் எக்குற்றத்தையும் காணவில்லை. ஓ! பிரலம்பனைக் கொன்றவரே {பலராமரே}, கோபத்திற்கு வசப்படாதீர். பாண்டவர்களுடனான நமது உறவு, பிறப்பாலும், குருதியாலும், இதயங்களின் ஈர்ப்பாலும் ஏற்பட்டதாகும்.(16) இவர்களது வளர்ச்சியே நம் வளர்ச்சியாகும். எனவே, ஓ! மனிதர்களில் காளையே, கோபத்திற்கு வசப்படாதீர்” என்றான் {கிருஷ்ணன்}.

அறநெறிகளை அறிந்தவனான அந்தக் கலப்பைதாரி {பலராமன்}, வாசுதேவனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, “நல்லோரால் அறநெறி {அறம்} நன்றாகப் பயிலப்படுகிறது. எனினும், பெரும் பேராசையுள்ளோருக்குப் பயனில் {பொருளில்} விருப்பமும், காரியங்களில் பெரும்பற்று கொண்டோருக்கு இன்பத்தில் விருப்பமும் என இவ்விரு காரியங்களால், அறநெறியானது {அறமானது} எப்போதும் பீடிக்கப்படுகிறது.(18) அறம் மற்றும் பொருளையோ, அறம் மற்றும் இன்பத்தையோ, இன்பம் மற்றும் பொருளையோ பீடிக்காமல் {பாதிப்படையச் செய்யாமல்}, அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் முறையே பின்பற்றுபவர்கள், பெரும் மகிழ்ச்சியை அடைவதில் எப்போதும் வெல்கிறார்கள்.(19) நீ என்னிடம் என்ன சொன்னாலும், பீமசேனனால் அறம் பீடிக்கப்பட்டதன் விளைவால், என்னால் இப்போது சொல்லப்பட்ட இந்த {அறம், பொருள் மற்றும் இன்பத்தின்} ஒத்திசைவு நிலைகுலைகிறது” என்று சொன்னான்.(20)

கிருஷ்ணன் {பலராமரிடம்}, “கோபமில்லாதவராகவும், அற ஆன்மாகக் கொண்டவராகவும், அறத்திற்கு அர்ப்பணிப்பு கொண்டவராகவும் நீர் எப்போதும் சொல்லப்படுகிறீர். எனவே, அமைதியடைவீராக, கோபத்திற்கு வசப்படாதீர்.(21) கலிகாலம் அருகில் இருக்கிறது என்பதை அறிவீராக. பாண்டுவின் மகன் {பீமன்} செய்த சபதத்தையும் நினைவுகூர்வீராக. எனவே, இந்தப் பாண்டுவின் மகன், தமது சபதத்தை நிறைவேற்றுவதற்காகத் தமது பகைமைக்கான கடனைத் தீர்த்தவராகவே கருதப்பட வேண்டும்” என்றான்”.(22)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} இருந்து இந்தத் தவறான உரையை {கபட தர்மத்தைக்}[3] கேட்ட ராமன் {பலராமன்}, தன் கோபத்தைத் தணித்துக் கொள்ளவும், உற்சாகங்கொள்ளவும் தவறினான். பிறகு அவன் அந்தச் சபையில்,(23) “அற ஆன்மா கொண்ட மன்னன் சுயோதனனை நியாயமற்ற முறையில் கொன்ற இந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, இவ்வுலகில் வஞ்சகப் போர்வீரனாக {கபடயுத்தவீரனாக்} கருதப்படுவான்.(24) மறுபுறம், அற ஆன்மா கொண்ட துரியோதனனோ, அழிவில்லா அருளை அடைவான். இவ்வாறு தாக்கப்பட்டவனும், திருதராஷ்டிரரின் அரச மகனுமான இந்த மனிதர்களின் ஆட்சியாளன் {துரியோதனன்} நல்ல போர்வீரனாவான்.(25) போர் வேள்விக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, களத்தில் தொடக்க விழாக்களையும் செய்து, இறுதியாகத் தன் எதிரிகள் காட்டிய நெருப்பில் தன் உயிரையே ஆகுதியாக ஊற்றிய துரியோதனன், மகிமையை அடைந்து தன் இறுதி காணிக்கைகளைச் செலுத்தி தன் வேள்வியை நல்ல முறையில் நிறைவு செய்தான்” என்று சொன்னான்.(26) வெண்மேகத்தின் முகட்டைப் போலத் தெரிந்தவனான அந்த ரோகிணியின் வீர மகன் {பலராமன்}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, தன் தேரில் ஏறி துவாரகையை நோக்கிச் சென்றான்.(27) ராமன் துவாராவதிக்குப் புறப்பட்டதும், பாஞ்சாலர்கள், விருஷ்ணிகள் மற்றும் பாண்டவர்கள் உற்சாகத்தை இழந்தனர்.(28)அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்}, பெரும் துன்பத்தில் இருந்தவனும், கவலையில் நிறைந்தவனும், தலையைத் தொங்கப் போட்டிருந்தவனும், ஆழ்ந்த துன்பத்தின் விளைவால் என்ன செய்வது என்று அறியாதிருந்தவனுமான யுதிஷ்டிரனை அணுகி, அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(29) வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, “ஓ! நீதிமானான யுதிஷ்டிரரே, உறவினர்களும், நண்பர்களும் கொல்லப்பட்டவனும், உணர்வற்று வீழ்ந்து கிடப்பவனுமான துரியோதனனின் தலையானது, பீமரின் காலால் தாக்கப்பட அனுமதித்து, இந்த நியாயமில்லாத செயலை ஏன் நீர் அங்கீகரித்தீர். அறநெறிகளின் வழிகளை அறிந்தவரான நீர், ஓ! மன்னா, இந்தச் செயலை ஏன் அலட்சியமாகப் {பாரபட்சத்துடன்} பார்த்துக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டான்.(30,31)

யுதிஷ்டிரன், “ஓ! கிருஷ்ணா, விருகோதரன் கோபத்தால் உந்தப்பட்டு, தன் காலால் மன்னனின் தலையைத் தீண்டிய இந்தச் செயல் எனக்கு ஏற்புடையதில்லை, என் குலத்தின் இவ்வழிவிலும் எனக்கு மகிழ்ச்சியில்லை.(32) திருதராஷ்டிரர் மகன்களின் வஞ்சகத்தால் {கபடத்தால்} நாங்கள் எப்போதும் வஞ்சிக்கப்பட்டோம். அவர்கள் எங்களிடம் பல கொடூர வார்த்தைகளைப் பேசினர். மேலும் அவர்கள் எங்களைக் காடுகளுக்கு நாடு கடத்தினர்.(33) அச்செயல்கள் அனைத்தின் காரணமாகவும் பீமசேனனின் இதயம் பெருந்துயரை அடைந்தது. ஓ! விருஷ்ணி குலத்தோனே, இவையாவையும் சிந்தித்தே நான் அலட்சியமாகப் பார்த்திருந்தேன்.(34) ஞானத்தை இழந்தவனும், ஆசைகளுக்கு அடிமையானவனும், பேராசை கொண்டவனுமான அந்தத் துரியோதனனைக் கொன்ற இந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, நீதியினாலோ {தர்மத்தினாலோ}, அநீதியினாலோ {அதர்மத்தினாலோ}, தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டும்” என்றான்”.(35)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “யுதிஷ்டிரன் இதைச் சொன்ன பிறகு, யது குலத்தைத் தழைக்கச் செய்பவனான வாசுதேவன், “அப்படியே ஆகட்டும்” என்று சிரமத்துடன் சொன்னான்.(36) உண்மையில் வாசுதேவனிடம், யுதிஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, பீமனுக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் எப்போதும் விரும்பிய அவன் {கிருஷ்ணன்}, போரில் பீமன் செய்த அச்செயல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டான்.(37) போரில் உமது மகனைத் தாக்கி வீழ்த்திய கோபக்கார பீமசேனன், இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடனும், கூப்பிய கரங்களுடனுன் யுதிஷ்டிரனின் முன்பு நின்று, முறையான வடிவில் அவனை வணங்கினான்.(38) பெருஞ்சக்தி கொண்ட விருகோதரன் {பீமன்}, மகிழ்ச்சியால் விரிந்த கண்களுடனும், தான் வென்ற வெற்றியின் செருக்குடனும், ஓ! மன்னா, தன் அண்ணனிடம் {யுதிஷ்டிரனிடம்},(39) “ஓ! மன்னா, பூசல்கள் என்ற இடைஞ்சல் இல்லாதவளும், முட்கள் அனைத்தும் நீக்கப்பட்டவளுமான பூமாதேவி இன்று உம்முடையவனாள். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அவளை ஆட்சி செய்து உமது வகைக்கு {க்ஷத்திரியனுக்கு} உண்டான கடமைகளை நோற்பீராக.(40) இந்தப் பகைமைகளுக்குக் காரணமானவனும், தனது கபடவழிகளால் அதை வளர்த்தவனும், வஞ்சகத்தை விரும்பியவனும் இழிந்தவனுமான அந்தப் பொல்லாதவன் {துரியோதனன்}, ஓ! பூமியின் தலைவா, தாக்கி வீழ்த்தப்பட்டு {இதோ} வெறுந்தரையில் கிடக்கிறான்.(41) கொடூர வார்த்தைகளைச் சொல்பவர்களும், ராதையின் மகன் {கர்ணன்} மற்றும் சகுனி ஆகிய உமது எதிரிகளும், துச்சாசனனின் தலைமையிலான இழிந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர்.(42) ரத்தினங்கள் அனைத்தாலும் நிரம்பியவளும், காடுகள் மற்றும் மலைகளுடன் கூடியவளுமான பூமாதேவி, ஓ! ஏகாதிபதி, உயிரோடுள்ள எந்த எதிரியுமற்றவளாக மீண்டும் உம்மிடம் வருகிறாள்” என்றான்.(43)

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “பகைமைகள் முடிவுக்கு வந்துவிட்டன. மன்னன் துரியோதனனும் வீழ்ந்துவிட்டான். கிருஷ்ணனின் ஆலோசனைகளின் படி நடந்து கொண்ட நம்மால், இந்தப் பூமாதேவி வெல்லப்பட்டிருக்கிறாள்.(44) உன் தாய்க்கும், உன் கோபத்திற்கும் பட்ட கடனை நற்பேறாலேயே நீ அடைத்திருக்கிறாய். ஓ! வெல்லப்பட முடியாத வீரனே, நற்பேறாலேயே நீ வெற்றியாளனானாய், நற்பேறாலேயே உன் எதிரியும் கொல்லப்பட்டான்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(45)

தெய்வீகப் பூமாரி! – சல்லிய பர்வம் பகுதி – 61-துரியோதனன் வீழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்த பாண்டவ வீரர்கள்; அவர்களால் புகழப்பட்ட பீமன்; துரியோதனன் அவமதிக்கப்படுவதைத் தடுத்த கிருஷ்ணன்; அநியாயங்கள் அனைத்துக்கும் கிருஷ்ணனையே குற்றஞ்சாட்டிய துரியோதனன்; துரியோதனனின் தீச்செயல்களை நினைவூட்டி, அவனது பரிதாபகரமான முடிவு தவிர்க்கமுடியாதது என்று சொன்ன கிருஷ்ணன்; தன் மகிமையைக் குறித்துத் தற்புகழ்ச்சி செய்த துரியோதனன்; தெய்வீக மலர்மாரி பொழிந்தது; பெருந்தேர்வீரர்களை அநியாயமாகக் கொன்றதற்கான காரணங்களைச் சொன்ன கிருஷ்ணன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, போரில் பீமசேனனால் தாக்கி வீழ்த்தப்பட்ட துரியோதனனைக் கண்டு, பாண்டவர்களும், சிருஞ்சயர்களும் என்ன செய்தனர்?” என்று கேட்டான்.(1)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கிருஷ்ணனோடு கூடிய பாண்டவர்கள், சிங்கத்தால் கொல்லப்பட்ட காட்டு யானையைப் போலப் போரில் பீமசேனனால் கொல்லப்பட்ட துரியோதனனைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தனர். அந்தக் குரு மன்னன் {துரியோதனன்} வீழ்ந்த போது, பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும்,(2,3) தங்கள் மேலாடைகளை (காற்றில்) அசைத்து, சிங்க முழக்கம் செய்தனர். அந்தப் போர் வீரர்களின் மகிழ்ச்சியானது, பூமியால் பொறுத்துக் கொள்ள முடியாததாகத் தெரிந்தது.(4) சிலர் தங்கள் விற்களை வளைத்தனர்; சிலர் தங்கள் நாண்கயிறுகளை இழுத்தனர். சிலர் தங்கள் பெரும் சங்குகளை முழக்கினர்; சிலர் தங்கள் துந்துபிகளை ஒலித்தனர்.(5) சிலர் விளையாடிக் கொண்டும், குதித்துக் கொண்டும் இருந்தனர்; உமது பகைவர்களில் சிலர் உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

பல வீரர்கள் பீமசேனனிடம் இவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொன்னார்கள்,(6) “பெரும் போர்வீரரனான குரு மன்னனை {துரியோதனனை}, உன் கதாயுதத்தால் தாக்கி வீழ்த்தியதன் மூலம், மிகக் கடினமானதும், பெரியதுமான அருஞ்செயலை போரில் இன்று நீ செய்திருக்கிறாய்.(7) இந்திரனால் விருத்திரன் கொல்லப்பட்டதைப் போன்றே எதிரி உன்னால் கொல்லப்பட்டதாக இம்மனிதர்கள் அனைவரும் கருதுகின்றனர்.(8) ஓ! விருகோதரா {பீமா}, பல்வேறு வகை அசைவுகளைச் செய்து கொண்டும், (இத்தகு மோதல்களின் சிறப்பியல்புகளான) மண்டலகதிகளைச் செய்துகொண்டும் வீரத் துரியோதனனைக் கொல்ல உன்னைத் தவிர வேறு யாரால் முடியும்?(9) அடைவதற்கு அரிதான பகைமையின் அடுத்தக் கரையை இப்போது நீ அடைந்துவிட்டாய். நீ அடைந்திருக்கும் இந்தச் சாதனையானது, வேறு எந்தப் போர்வீரனாலும் அடைய முடியாததாகும்.(10)

ஓ! வீரா {பீமா}, ஒரு மதங்கொண்ட யானையைப் போலப் போர்க்களத்தில் துரியோதனனின் தலையை உன் காலால் நீ நொறுக்கியது நற்பேறாலேயே.(11) ஓ! பாவமற்றவனே {பீமனே}, எருமையின் குருதியைக் குடிக்கும் சிங்கம் ஒன்றைப் போல, ஓர் அற்புதப் போரில் துச்சாசனனின் குருதியை நீ குடித்ததும் நற்பேறாலேயே.(12) அற ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரனுக்குத் தீங்கிழைத்தோர் அனைவரின் தலையிலும் நீ உன் சக்தியால் கால் வைத்ததும் நற்பேறாலேயே.(13) நற்பேற்றால் உன் எதிரிகளை வென்று, துரியோதனனைக் கொன்றதன் விளைவால், ஓ! பீமா, உன் புகழ் உலகங்கெங்கும் பரவப் போகிறது.(14) விருத்திரன் வீழ்ந்ததும் சக்ரனைப் புகழ்ந்த வந்திகளையும், பாணர்களையும் போல, ஓ! பாரதா {பீமா}, இப்போது உன் எதிரிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, நாங்கள் உன்னைப் புகழ்கிறோம்.(15) ஓ! பாரதா {பீமா}, துரியோதனன் கொல்லப்பட்டபோது எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி {மயிர்ச்சிலிர்ப்பு} இன்னும் தணியவில்லை என்பதை அறிந்து கொள்வாயாக” என்றனர். அச்சந்தர்ப்பத்தில் அங்கே கூடிய துதிபாடிகளால் பீமசேனனிடம் இவ்வார்த்தைகளே சொல்லப்பட்டன.(16)

மனிதர்களில் புலிகளான பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்து இத்தகு மொழியில் பேசிக் கொண்டிருந்தபோது, மதுசூதனன் {கிருஷ்ணன்} அவர்களிடம்,(17) “மனிதர்களின் ஆட்சியாளர்களே, கொல்லப்பட்ட எதிரியை இத்தகு கொடூரப் பேச்சுகளால் மீண்டும் மீண்டும் கொல்வது முறையாகாது.((18) பாவம் நிறைந்தவனும், வெட்கங்கெட்டவனும், பேராசை கொண்ட இழிந்தவனுமான இவன் {துரியோதனன்}, பாவம் நிறைந்த அமைச்சர்களால் சூழப்பட்டு, நல்ல நண்பர்களின் அறிவுரை அலட்சியம் செய்தபோதே இறந்துவிட்டான்.(19) பாண்டவர்கள் அவனிடம் வேண்டிக் கொண்ட அவர்களது தந்தை வழி நாட்டின் {பாண்டுவின்} பங்கைக் கொடுத்துவிடுமாறு விதுரர், துரோணர், கிருபர், சஞ்சயன் ஆகியோர் மீண்டும் மீண்டும் சொல்லியும் மறுத்த போதே இவன் {துரியோதனன்} இறந்துவிட்டான்.(20) இந்த இழிந்தவன் இப்போது நண்பனாகவோ, எதிரியாகவோ கருதப்படத்தகுந்தவனல்ல. வெறும் மரக்கட்டையாகிவிட்டவனிடம் கசந்த மூச்சைச் செலவிட்டு {கசந்த மொழிகளைப் பேசி} என்ன பயன்?(21) மன்னர்களே, நாம் இந்த இடத்தைவிட்டுச் செல்லவேண்டும், எனவே உங்கள் தேர்களில் ஏறுவீராக. இந்த இழிந்த பாவி, தனது அமைச்சர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொல்லப்பட்டது நற்பேறாலேயே” என்றான் {கிருஷ்ணன்}.(22)

கிருஷ்ணனின் நிந்தனைகளைக் கேட்டுக் கொண்டிருந்த மன்னன் துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபவசப்பட்டு எழும்ப முயற்சி செய்தான்.(23) பின்தட்டில் அமர்ந்து, தன்னிரு கைகளாலும் தன்னைத் தாங்கிக் கொண்ட அவன் {துரியோதனன்}, தன் புருவங்களைச் சுருக்கித் தன் கோபப்பார்வைகளை வாசுதேவன் {கிருஷ்ணன்} மீது செலுத்தினான்.(24) பாதி உயர்ந்திருந்த அந்தத் துரியோதனனுடைய உடலின் வடிவமானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வாலில்லா நஞ்சுமிக்கப் பாம்பைப் போலத் தெரிந்தது.(25) எரிச்சலூட்டும்படியும், தாங்கிக் கொள்ளமுடியாதபடியும் இருந்த தன் வலிகளை அலட்சியம் செய்த அந்தத் துரியோதனன், கூரிய, கசந்த வார்த்தைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனைப்} பீடிக்கத் தொடங்கினான்.(26)

{துரியோதனன்}, “ஓ! கம்சனுடைய அடிமையின் {வசுதேவரின்} மகனே {கிருஷ்ணா}, கதாயுத மோதல்களில் நீடித்திருக்கும் விதிகளின் தீர்மானத்தின்படி, நான் மிகவும் நியாயமற்ற {மிக அநியாயமான} முறையில் தாக்கி வீழ்த்தப்பட்டிருப்பதை மறந்ததால் நீ வெட்கமில்லாதவன் என்பது தெரிகிறது. என் தொடைகளை முறிக்குமாறு குறிப்பால் உணர்த்தி, பீமனுக்கு நினைவூட்டி நீயே இந்த நியாயமற்ற செயலைச் செய்தாய். அர்ஜுனன், (உன் ஆலோசனையின் பேரில்) பீமனுக்குக் குறிப்பால் உணர்த்தியதை நான் கவனிக்கவில்லை என்று நினைத்தாயா?(27,28) எப்போதும் நியாயமாகப் போரிட்ட ஆயிரக்கணக்கான மன்னர்களைப் பல்வேறு வகையான நியாயமற்ற வழிகளில் கொன்ற நீ அச்செயல்களுக்கான பொறுப்பையோ, வெட்கத்தையோ உணரவில்லையா?(29) நாளுக்குநாள் வீரம் நிறைந்த போர்வீரர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய நீயே, சிகண்டியை முன்னிலையில் நிறுத்தி பாட்டனையும் {பீஷ்மரையும்} கொன்றாய்.(30)

அஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட யானையைக் கொன்றுவிட்டு, ஓ! தீய புரிதல் கொண்டவனே {கிருஷ்ணா}, ஆசானை {துரோணரைத்} தன் ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு நீயே செய்தாய். இஃது எனக்குத் தெரியாது என்று நீ நினைக்கிறாயா?(31) மேலும் வீரஞ்செறிந்த அவ்வீரர் {துரோணர்}, கொடூரனான இந்தத் திருஷ்டத்யும்னனால் கொல்லப்படும்போது, நீ அவனை எதிர்த்து தடுக்கவில்லையே.(32) அர்ஜுனனைக் கொல்வதற்காகக் கர்ணனால் (சக்ரனிடம் வரமாக) இரந்து பெறப்பட்ட ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} கடோத்கசன் மூலம் நீயே கலங்கடித்தாய். உன்னை விட வேறு எவன் பாவம் நிறைந்தவனாக இருக்க முடியும்?(33) அதே போலவே, வலிமைமிக்கவனும், தனது ஒரு கரம் வெட்டப்பட்டவனுமான பூரிஸ்ரவஸ், பிராய விரதத்தை நோற்றுக் கொண்டிருந்தபோது, உயர் ஆன்ம சாத்யகியின் மூலம் உன்னாலேயே கொல்லலப்பட்டான்.(34)

பார்த்தனை {அர்ஜுனனை} வெல்வதற்காகக் கர்ணன் அருஞ்செயல் புரிந்தான். எனினும், நீயோ, பாம்புகளின் இளவரசனுடைய (தக்ஷகனுடைய) மகனான அஸ்வசேனனின் நோக்கம் நிறைவேறுவதைக் கலங்கடித்தாய்.(35) மேலும் கர்ணனின் தேர்ச்சக்கரம் புழுதியில் புதைந்து, பேரிடரில் பீடிக்கப்பட்டு, அக்காரணத்தினாலேயே அந்த மனிதர்களில் முதன்மையானவன் கிட்டத்தட்ட வெல்லப்பட்டவனாக இருந்தபோது, உண்மையில், அவன் தன் சக்கரத்தை விடுவிக்கும் ஆவலில் இருந்தபோது, நீ அந்தக் கர்ணனைக் கொல்லச் செய்தாய்.(36) நியாயமான முறையில் என்னுடனும், கர்ணன், பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோருடனும் நீ போரிட்டிருந்தால், வெற்றி ஒருபோதும் உனதாகியிருக்காது என்பதில் ஐயமில்லை.(37) தங்கள் கடமைகளை நோற்பவர்களான மன்னர்கள் பலரையும், எங்களையும், மிகவும் நேர்மையற்ற, நியாயமற்ற வழிகளைப் பின்பற்றி நீயே கொல்லச் செய்தாய்” என்றான் {துரியோதனன்}.(38)

வாசுதேவன் {கிருஷ்ணன் துரியோதனனிடம்}, “ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனனே}, பாவம் நிறைந்த பாதையில் நீ நடந்ததன் விளைவாகவே, உன் தம்பிகள், மகன்கள், சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் தொண்டர்களுடன் சேர்த்து நீ கொல்லப்பட்டிருக்கிறாய்.(39) உன் தீச்செயல்களின் மூலமே பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய அவ்விரு வீரர்களும் கொல்லப்பட்டனர். கர்ணனும், உன் நடத்தையையே பின்பற்றியதால் கொல்லப்பட்டான்.(40) ஓ! மூடா, பாண்டவர்களின் தந்தை வழி பங்கைக் கொடுத்துவிடு என்று என்னால் வேண்டிக் கொள்ளப்பட்டும், பேராசை கொண்ட நீ அந்தச் சகுனியின் ஆலோசனையின்படி நடந்து கொண்டாய்.(41) பீமசேனருக்கு நீ நஞ்சூட்டினாய். ஓ! தீய புரிதல் கொண்டவனே, அரக்கு மாளிகையில் வைத்து, தங்கள் தாயோடு கூடிய பாண்டவர்கள் அனைவரையும் நீ எரிக்க முயன்றாய்.(42) சூதாட்ட நிகழ்வின்போது, தனது பருவகாலத்தில் இருந்த யக்ஞசேனன் மகளை {திரௌபதியைச்} சபைக்கு மத்தியில் வைத்து நீ துன்புறுத்தினாய்.(43) பகடையை நன்கறிந்தவனான சுபலனின் மகனை {சகுனியைக்} கொண்டு, சூதாட்டத்தில் திறமற்றவரும், அறவோருமான யுதிஷ்டிரரை நியாயமற்ற வகையில் நீ வென்றாய். அதற்காகவே நீ கொல்லப்படுகிறாய்.(44)

மற்றொரு சந்தர்ப்பத்தில், கிருஷ்ணையின் {திரௌபதியின்} தலைவர்களான பாண்டவர்கள் திருணபிந்துவின் ஆசிரமத்தை நோக்கி வேட்டையாடச் சென்றிருந்தபோது, பாவம் நிறைந்த ஜெயத்ரதன் மூலம் நீ அவளைத் துன்புறுத்தினாய்.(45) சிறுவனும், தனியனுமான அபிமன்யுவைச் சுற்றிலும் பல வீரர்களைச் சூழச் செயது, நீயே அவ்வீரனைக் கொல்லச் செய்தாய். ஓ! இழிந்த பாவியே, அந்தக் குற்றத்தின் விளைவாலேயே நீ கொல்லப்படுகிறாய்.(46) நாங்கள் செய்த நியாயமற்ற செயல்கள் என்று நீ சொல்லும் அனைத்தும், உண்மையில், பாவம் நிறைந்த உனது இயல்பின் விளைவால் உன்னால் செய்யப்பட்டவையே ஆகும்.(47) பிருஹஸ்பதி மற்றும் உசனஸின் {சுக்ராச்சாரியரின்} ஆலோசனைகளை நீ ஒருபோதும் கேட்டதில்லை. முதிர்ந்தவர்களுக்காக நீ ஒருபோதும் காத்திருந்ததில்லை {அவர்களுக்குப் பணிவிடை செய்ததில்லை}. நல்ல வார்த்தைகளை நீ ஒருபோதும் கேட்டதில்லை.(48) அடக்கமுடியாத பேராசைக்கும், பலனில் உள்ள தாகத்திற்கும் அடிமையாக இருந்த நீயே நியாயமற்ற செயல்கள் பலவற்றைச் செய்தவனாவாய். அந்த உன் செயல்பாடுகளின் விளைவை நீ இப்போது தாங்கிக் கொள்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(49)

துரியோதனன் {கிருஷ்ணனிடம்}, “நான் கல்வி கற்றவனாக, விதிப்படி தானம் செய்தவனாக, கடல்களுடன் கூடிய பரந்த பூமியை ஆட்சி செய்தவனாக, என் எதிரிகளின் தலைக்கு மேலேயே {உயர்ந்து} இருந்திருக்கிறேன்.(50) தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கும் க்ஷத்திரியர்களால் விரும்பப்படும் போர்க்கள மரணம் என்ற முடிவு இப்போது எனதாகியிருக்கிறது. எனவே, என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(51) தேவர்களுக்குத் தகுந்ததும், பிற மன்னர்களால் சிரமத்துடன் அடையப்படுவதுமான மனித இன்பங்கள் {அனைத்தும்} எனதாகவே இருந்திருக்கின்றன. உயர்ந்த வகைச் செல்வம் என்னால் அடையப்பட்டிருந்தது. என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(52) ஓ! மங்கா மகிமை கொண்டவனே {கிருஷ்ணா}, என் நலவிரும்பிகள், என் தம்பிகள் ஆகியோர் அனைவருடனும் நான் சொர்க்கத்திற்குச் செல்லப் போகிறேன். உங்களைப் பொறுத்தவரை, உங்கள் காரியம் நிறைவேறாமல், துயரால் {மனம்} கிழிக்கப்பட்டு, மகிழ்ச்சியற்ற இவ்வுலகில் நீங்கள் வாழப்போகிறீர்கள்” என்றான் {துரியோதனன்}”.(53)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “குருக்களின் அந்தப் புத்திசாலி மன்னனுடைய {துரியோதனனுடைய} இவ்வார்த்தைகளின் நிறைவின்போது, நறுமணமிக்க மலர்களின் அடர்த்தியான மழை வானத்தில் இருந்து பொழிந்தது.(54) கந்தர்வர்கள் இனிய இசைக்கருவிகளை முழக்கினார்கள். அப்சரஸ்கள் மன்னன் துரியோதனனின் மகிமையைக் கூட்டமாகப் பாடினர்.(55) சித்தர்கள், “மன்னன் துரியோதனன் புகழப்படுவான்” என்ற ஒலியை எழுப்பினர். அனைத்துப் பக்கங்களிலும் நறுமணமிக்க இனிய தென்றல் மென்மையாக வீசியது. அனைத்துப் பகுதிகளும் தெளிவடைந்து, ஆகாயமானது வைடூரியத்தைப் போன்ற நீலத்தை அடைந்தது.(56) இந்த அற்புதமான காரியங்களையும், துரியோதனனுக்குச் செய்யப்பட்ட வழிபாடுகளையும் கண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} தலைமையிலான பாண்டவர்கள் வெட்கத்தை அடைந்தனர்.(57) பீஷ்மர், துரோணர், கர்ணன், பூரிஸ்ரவஸ் ஆகியோர் நியாயமற்ற வகையில் கொல்லப்பட்டனர் என்று (கண்ணுக்குத் தெரியாத உயிரினங்களால் உரக்கச் சொல்லப்பட்டதைக்) கேட்ட அவர்கள் துயரால் பீடிக்கப்பட்டுக் கவலையால் அழுதனர்.(58)

கவலையிலும், துயரத்திலும் மூழ்கியிருந்த பாண்டவர்களைக் கண்ட கிருஷ்ணன், மேகங்கள், அல்லது துந்துபியைப் போன்ற ஆழ்ந்த குரலுடன் அவர்களிடம்,(59) “அவர்கள் அனைவரும் பெருந்தேர் வீரர்களாகவும், ஆயுதப் பயன்பாட்டில் வேகம் கொண்டவர்களாகவும் இருந்தனர். நீங்கள் உங்கள் ஆற்றல் முழுவதையும் வெளியிட்டிருந்தாலும், நியாயமான முறையில் போரிட்டு அவர்களை ஒருபோதும் கொன்றிருக்க முடியாது.(60) நியாயமான போரில் மன்னன் துரியோதனனும் கொல்லப்பட முடியாதவனே ஆவான். பீஷ்மரின் தலைமையிலான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரின் காரியமும் அதேதான்.(61) நான், உங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தாலேயே போரில் மீண்டும் மீண்டும் என் மாய சக்திகளையும், பல்வேறு வழிமுறைகளையும் பயன்படுத்தி அவர்களைக் கொல்லச் செய்தேன்.(62) போரில் அத்தகு வஞ்சிக்கும் வழிகளை நான் பின்பற்றவில்லையென்றால், வெற்றியோ, நாடோ, செல்வமோ ஒருபோதும் உங்களுடையதாகி இருக்காது.(63)

உயர் ஆன்மப் போர்வீரர்களான அவர்கள் நால்வரும், உலகத்தால் அதிரதர்களாகக் கருதப்பட்டனர். நியாயமான போரில் அவர்களை லோகபாலர்களாலேயே கொல்ல முடியாது.(64) அதேபோலவே, களைப்பை அறியாதவனும், கதாயுதம் தரித்தவனுமான திருதராஷ்டிரன் மகனும் {துரியோதனனும்}, தண்டந்தரித்த யமனாலேயேகூட நியாயமான போரில் கொல்லப்பட முடியாது.(65) உங்கள் எதிரிகள் வஞ்சகத்தாலேயே கொல்லப்பட்டனர் என்பதை நீங்கள் உங்கள் இதயம் வரை கொண்டு செல்லாதீர். ஒருவனின் எதிரிகளுடைய எண்ணிக்கை பெரிதாகும்போது, சூழ்ச்சிகள் மற்றும் வழிமுறைகளின் மூலமே அவர்களுக்கு அழிவை உண்டாக்க வேண்டும்.(66) தேவர்களே கூட அசுரர்களைக் கொல்வதில் இதே வழியிலேயே நடந்திருக்கின்றனர். எனவே, தேவர்கள் நடந்த அந்த வழியில் அனைவரும் நடக்கலாம்.(67) நாம் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டிருக்கிறோம். இது மாலை வேளை. நாம், நமது பாசறைகளுக்குத் திரும்புவதே சிறந்தது. மன்னர்களே, குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களுடன் நாம் அனைவரும் ஓய்வெடுப்போமாக” என்றான்.(68)

வாசுதேவனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் மகிழ்ச்சியால் நிறைந்து, சிங்கங்கள் பலவற்றைப் போல முழக்கம் செய்தனர்.(69) அவர்கள் அனைவரும் தங்கள் சங்குகளை முழக்கினர், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, மாதவனும் {கிருஷ்ணனும்}  மகிழ்ச்சியால் நிறைந்து, போரில் தாக்கிவீழ்த்தப்பட்ட துரியோதனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாஞ்சஜன்யத்தை முழக்கினான்” {என்றான் சஞ்சயன்}.(70)

அர்ஜுனனின் தேர் சாம்பலானது! – சல்லிய பர்வம் பகுதி – 62-முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட கௌரவ முகாமுக்குச் சென்ற பாண்டவர்கள்; அர்ஜுனனைத் தேரைவிட்டு இறங்கச் சொன்ன கிருஷ்ணன்; அர்ஜுனனின் தேர் எரிந்தது; அதன் காரணத்தை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்; யுதிஷ்டிரனின் வெற்றிக்கு வாழ்த்து கூறிய கிருஷ்ணன்; கிருஷ்ணனே அதற்குக் காரணம் என்று சொன்ன யுதிஷ்டிரன்; கிருஷ்ணனின் ஆலோசனையின் பேரில் பாண்டவர்களும், சாத்யகியும் முகாமுக்கு வெளியே தங்கியது; கிருஷ்ணனை ஹஸ்தினாபுரத்திற்கு அனுப்பிய பாண்டவர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பரிகங்களுக்கு ஒப்பான கரங்களைக் கொண்ட அம்மன்னர்கள் அனைவரும், மகிழ்ச்சியால் நிறைந்து, வழியில் சங்குகளை முழக்கிக் கொண்டே தங்கள் பாசறைகளை நோக்கிச் சென்றனர்.(1) பாண்டவர்களும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நமது முகாமை நோக்கிச் சென்றனர். பெரும் வில்லாளியான யுயுத்சு, சாத்யகி, திருஷ்டத்யும்னன், சிகண்டி, மற்றும் திரௌபதியின் ஐந்து மகன்களும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். பெரும் வில்லாளிகள் பிறரும் நமது பாசறைகளை நோக்கிச் சென்றனர்.(2,3) ஒளியை இழந்து, தன் தலைவனை இழந்து, கேளிக்கைக்குப் பிறகு பார்வையாளர்களால் கைவிடப்பட்ட அரங்கத்தைப் போல இருந்த துரியோதனனின் பாசறைக்குள் பார்த்தர்கள் நுழைந்தனர்.(4) உண்மையில், அந்த அரங்கமானது, கொண்டாட்டங்களை இழந்த ஒரு நகரத்தைப் போலவோ, யானையில்லாத ஒரு தடாகத்தைப் போலவோ தெரிந்தது. அப்போது அது பெண்களாலும், அலிகளாலும், முதிர்ந்த வயதுடைய குறிப்பிட்ட சில அமைச்சர்களாலும் நிறைந்திருந்தது.(5) முன்பெல்லாம் துரியோதனனும், மஞ்சள் சாயம் பூசப்பட்ட உடைகளை உடுத்திய பிற வீரர்களும் அந்த முதிர்ந்த அமைச்சர்களிடம் கரங்களைக் கூப்பி வணங்கி, அவர்களுக்காகக் காத்திருப்பார்கள்[1].(6) தேர்வீரர்களில் முதன்மையானோரான அந்தப் பாண்டவர்கள், குரு மன்னனின் {துரியோதனனின்} கூடாரத்தை அடைந்து தங்கள் தேர்களில் இருந்து இறங்கினர்.(7)அந்நேரத்தில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் நண்பனின் நன்மையிலேயே எப்போதும் ஈடுபடுபவனான கேசவன் {கிருஷ்ணன்}, காண்டீவதாரியிடம் {அர்ஜுனனிடம்},(8) “உன் காண்டீவத்தையும், வற்றாத அம்பறாத்தூணிகள் இரண்டையும் {இரண்டு அக்ஷயதூணீரங்ககையும்} எடுத்துக் கொண்டு இறங்குவாயாக. ஓ! பாரதர்களில் சிறந்தவனே, நான் உனக்குப் பின்பு இறங்குவேன்.(9) ஓ! பாவமற்றவனே, உன் நன்மைக்காக நீ கீழே இறங்குவாயாக” என்றான். பாண்டுவின் வீரமகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, தனக்குச் சொல்லப்பட்டதைப் போலவே செய்தான்.(10) நுண்ணறிவு கொண்ட கிருஷ்ணன், குதிரைகளின் கடிவாளங்களைக் கைவிட்டு, பிறகு தனஞ்சயனின் தேரில் இருந்து கீழே இறங்கினான்.(11) உயிரினங்கள் அனைத்தின் தலைவனான உயரான்மா {கிருஷ்ணன்}, அந்தத் தேரில் இருந்து இறங்கியதும், அர்ஜுனனின் வாகனக் கொடிமரத்தின் உச்சியில் இருந்த தெய்வீகக் குரங்கு அங்கேயே அப்போதே மறைந்து போனது.(12) முன்பு துரோணர் மற்றும் கர்ணனின் தெய்வீக ஆயுதங்களால் எரிக்கப்பட்ட அந்தப் பெரும் வாகனம், ஓ! மன்னா, கண்ணுக்குத் தெரிந்த எந்த நெருப்பும் ஊட்டப்படாமலே, வேகமாகத் தழல்களுடன் சுடர்விட்டெரிந்தது.(13) உண்மையில், அம்பறாத்தூணிகள், கடிவாளங்கள், குதிரைகள், நுகத்தடி, ஏர்க்கால் ஆகியவற்றுடன் கூடிய தனஞ்சயனின் தேரானது, சாம்பலாகக் குறைக்கப்பட்டுக் கீழே விழுந்தது {எரிந்து சாம்பலானது}.(14) அந்த வாகனம் இவ்வாறு சாம்பலாகக் குறைக்கப்பட்டதைக் கண்ட பாண்டுவின் மகன்கள், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, ஆச்சரியத்தால் நிறைந்தனர்.

மேலும் அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கரங்களைக் கூப்பிக் கிருஷ்ணனை வணங்கி, அன்பான குரலுடன், “ஓ! கோவிந்தா, ஓ! தெய்வீகமானவனே, என்ன காரணத்தினால் இந்தத் தேர் நெருப்பால் எரிக்கப்பட்டது?(15,16) நம் கண் முன்பே நடைபெறும் இந்த மிக ஆச்சரியமான நிகழ்ச்சியானது யாது? ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, எந்தத் தீங்குமின்றி என்னால் கேட்க முடியும் என்று நீ நினைத்தால், அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(17)

அதற்கு வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! அர்ஜுனா, அந்தத் தேரானது முன்பே பல்வேறு வகை ஆயுதங்களால் எரிக்கப்பட்டிருந்தது. ஓ! எதிரிகளை எரிப்பவனே, போரின்போது நான் அதில் அமர்ந்திருந்ததால், அது துண்டுகளாகச் சிதறாமல் இருந்தது.(18) பிரம்மாயுதங்களின் சக்தியால் முன்பே எரிக்கப்பட்டிருந்த அஃது, உன் நோக்கங்கள் அனைத்தையும் நீ நிறைவேற்றிக் கொண்ட பிறகு, என்னால் கைவிடப்பட்டதால் சாம்பலாகக் குறைக்கப்பபட்டது” என்றான்.(19)

பிறகு, எதிரிகளைக் கொல்பவனான தெய்வீகக் கேசவன் {கிருஷ்ணன்} சற்றே செருக்குடன் மன்னன் யுதிஷ்டிரனைத் தழுவி கொண்டு, அவனிடம்,(20) “ஓ! குந்தியின் மகனே, நீர் வெற்றியை அடைந்தது நற்பேறாலேயே, உமது எதிரிகள் வெல்லப்பட்டது நற்பேறாலேயே. வீரர்களுக்கு அழிவைத் தந்த இந்தப் போரில் இருந்து காண்டீவதாரி {அர்ஜுனன்}, பாண்டுவின் மகனான பீமசேனர், நீர் மற்றும் மாத்ரியின் இரு மகன்கள் ஆகியோர் உயிரோடு தப்பியதும், உங்கள் எதிரிகள் அனைவரையும் கொன்றதும் நற்பேறாலேயே.(21,22) ஓ! பாரதரே, உம்மால் என்ன செய்யப்பட வேண்டுமோ அதை விரைவாகச் செய்வீராக.(23) நான் உபப்லாவ்யத்துக்கு வந்த போது, காண்டீவதாரியின் துணையோடு என்னை அணுகிய நீர், தேனையும், சில வழக்கமான பொருள்களையும் கொடுத்து, “ஓ! தலைவா,(24) ஓ! கிருஷ்ணா, இந்தத் தனஞ்சயன் உனது சகோதரனும், நண்பனுமாவான். எனவே, இவன் {அர்ஜுனன்} அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டியவன்” என்ற வார்த்தைகளைச் சொன்னீர்.(25) நீர் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், நான், “அப்படியே ஆகட்டும்” என்று பதிலளித்தேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்} என்னால் பாதுகாக்கப்பட்டான், வெற்றியும் உமதானது.(26) ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, உண்மையான ஆற்றலைக் கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, வீரர்களுக்கு அழிவைத் தந்த இந்தப் பயங்கரப் போரிலிருந்து தன் சகோதரர்களுடன் {பாதுகாப்பாக} வெளியே வந்திருக்கிறான்” என்று சொன்னான் {கிருஷ்ணன்}.(28)

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மயிர்க்கூச்சத்துடன் கூடியவனாகி அந்த ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(28) யுதிஷ்டிரன், “ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே, துரோணர் மற்றும் கர்ணனால் ஏவப்பட்ட பிரம்மாயுதங்களைத் தாங்கிக் கொள்ள இந்திரனாலும் முடியாது எனும்போது வேறு எவரால் முடியும்?(29) சம்சப்தகர்கள் உன் அருளாலேயே வெல்லப்பட்டார்கள். கடுமைநிறைந்த மோதல்களிலும் உன் அருளாலேயே பார்த்தன் ஒருபோதும் புறமுதுகிடவில்லை.(30) அதேபோலவே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நானும் என் சந்ததியும், ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறு செயல்களை நிறைவேற்றி ஆற்றலும் சக்தியும் கொண்ட ஒரு மங்கல முடிவை உன் அருளாலேயே அடைந்தோம்.(31) உபப்லாவ்யத்தில் என்னிடம், பெருமுனிவரான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, “எங்கே அறம் இருக்கிறதோ அங்கே கிருஷ்ணன் இருப்பான். எங்கே கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கே வெற்றியிருக்கும்” என்று சொன்னார்” என்றான் {யுதிஷ்டிரன்}”[2].(32)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்த உரையாடலுக்குப் பிறகு உமது முகாமுக்குள் நுழைந்த அவ்வீரர்கள், இராணுவக் கருவூலத்தையும், பல நகைகளையும், பல செல்வத்தையும் அடைந்தனர்.(33) மேலும் அவர்கள் வெள்ளி, தங்கம், ரத்தினங்கள், முத்துக்கள் மற்றும் விலைமதிப்புமிக்கப் பல்வேறு ஆபரணங்கள், விரிப்புகள் தோல்கள்,(34) எண்ணற்ற ஆண், பெண் பணியாட்கள், மேலும் அரசுரிமைக்குத் தேவையான பிற பொருட்கள் பலவற்றையும் அடைந்தனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே, எவருடைய எதிரிகள் கொல்லப்பட்டுவிட்டனரோ அந்த உயர் ஆன்மாக்கள் {பாண்டவர்கள்} உமக்குச் சொந்தமான அந்த வற்றாத செல்வத்தை அடைந்து மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர்.(35) தங்கள் விலங்குகளைப் பூட்டுகளில் இருந்து விடுவித்த பாண்டவர்களும், சாத்யகியும், ஓய்வு கொள்வதற்காகச் சற்று நேரம் அங்கே இருந்தனர்.(36) அப்போது பெரும்புகழைக் கொண்ட வாசுதவேன் {கிருஷ்ணன்}, “அருளின் தொடக்கச் செயலாக இவ்விரவு நாம் நமது முகாமை விட்டு வெளியே இருப்போம்” என்றான்[3].(37) “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன பாண்டவர்கள், சாத்யகியும், எது மங்கலக் காரியம் என்று கருதப்படுகிறதோ, அதைச் செய்ய வாசுதேவனின் துணையுடன் முகாமை விட்டு வெளியே வந்தனர்.(38)எதிரிகளற்றவர்களான அந்தப் பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புனித ஓடையான ஓகவதியின் கரைக்கு வந்து, அவ்விரவிற்காக அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.(39) பிறகு அவர்கள் யது குலத்தின் கேசவனை ஹஸ்தினாபுரத்திற்கு அனுப்பி வைத்தனர். பெரும் ஆற்றலைக் கொண்டவனான வாசுதேவன், தாருகனைத் தன் தேரை எடுத்து வரச் செய்து, அம்பிகையின் அரச மகன் {திருதராஷ்டிரன்} இருந்த இடத்திற்கு மிக வேகமாக் சென்றான்.(40) சைவியம், சுக்ரீவம் (மற்றும் பிற குதிரைகள்) ஆகியவை பூட்டப்பட்ட அவனது தேர் புறப்பட்டபோது, (பாண்டவர்கள்) அவனிடம் {கிருஷ்ணனிடம்}, “தன் மகன்கள் அனைவரையும் இழந்து ஆதரவற்றவளாக இருக்கும் காந்தாரிக்கு ஆறுதலளிப்பாயாக” என்றனர்.(41) பாண்டவர்களால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தச் சாத்வதர்களின் தலைவன் {கிருஷ்ணன்}, ஹஸ்தினாபுரத்தை நோக்கிச் சென்று, தன் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டவளான காந்தாரியின் முன்னிலையை அடைந்தான்” {என்றான் சஞ்சயன்}”.(42)

காந்தாரியிடம் பேசிய கிருஷ்ணன்! – சல்லிய பர்வம் பகுதி – 63-காந்தாரியின் கோபத்தைத் தணிப்பதற்காகக் கிருஷ்ணனை ஹஸ்தினாபுரத்திற்கு அனுப்பிய யுதிஷ்டிரன்; திருதராஷ்டிரனின் அரண்மனையை அடைந்து அவனுக்கு ஆறுதலளித்த கிருஷ்ணன்; காந்தாரியிடம் பேசிய கிருஷ்ணன்; காந்தாரியின் மறுமொழி; திருதராஷ்டிரன் மற்றும் காந்தாரியிடம் இருந்து விரைவாக விடைபெற்றுக் கொண்ட கிருஷ்ணன்; அஸ்வத்தாமனிடமிருந்து பாண்டவர்களைப் பாதுகாக்குமாறு கிருஷ்ணனிடம் சொன்ன திருதராஷ்டிரனும், காந்தாரியும்; பாண்டவர்களிடம் திரும்பி வந்த கிருஷ்ணன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “மன்னர்களில் புலியும், நீதிமானுமான யுதிஷ்டிரன், எதிரிகளை எரிப்பவனான வாசுதேவனை {கிருஷ்ணனைக்} காந்தாரியிடம் அனுப்பிய காரணமென்ன?(1) கிருஷ்ணன், அமைதியை நிறுவுவதற்காக ஏற்கனவே கௌரவர்களிடம் சென்றிருந்தான். {அப்போது} அவன் தன் விருப்பத்தின் பலனை அடையவில்லை. அதன் விளைவாகவே இந்தப் போர் நடைபெற்றது.(2) போர்வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டு, துரியோதனன் வீழ்த்தப்பட்ட பிறகு, அந்தப் போரின் விளைவால் பாண்டுமகனின் {யுதிஷ்டிரனின்} பேரரசு முற்றிலும் எதிரிகளற்றதான பிறகு,(3) (குரு) முகாம்கள் அனைத்தும் வெறுமையாகி, அதில் இருந்தோர் அனைவரும் தப்பி ஓடிய பிறகு, அந்தப் பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} பெரும்புகழ் வெல்லப்பட்ட பிறகு, ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே வைசம்பாயனரே}, கிருஷ்ணன் மறுபடியும் (ஹஸ்தினாபுரத்திற்குச்} செல்ல வேண்டிய காரணமென்ன?(4) ஓ! பிராமணரே, அளவிலா ஆன்மா கொண்ட ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} அப்படிப் பயணம் செய்யப் போகிறவன் எனும்போது அதன் காரணம் எளிமையானதாக இருக்காது.(5) அத்யர்யுக்கள் அனைவரிலும் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, இத்தகைய தூதுக்கான காரணம் என்ன என்பதை எனக்கு விவரமாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(6)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, உண்மையில், நீ கேட்கும் இந்தக் கேள்வி உனக்குத் தகுந்ததே. ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, உண்மையில் நேர்ந்தவாறே அனைத்தையும் உனக்குச் சொல்கிறேன்.(7) திருதராஷ்டிரனின் வலிமைமிக்க மகனான துரியோதனன், நேர்மையான போர் விதிகளுக்கு முரண்பட்டுப் பீமசேனனால் தாக்கி வீழ்த்தப்பட்டதைக் கண்டவனும்,(8) உண்மையில், அந்தக் குரு மன்னன் நியாயமற்ற முறையில் கொல்லப்பட்டதைக் கண்டவனுமான யுதிஷ்டிரன், ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஓ! ஏகாதிபதி, தவத்தகுதி கொண்டவளான உயர் ஆன்ம காந்தாரியின் நினைப்பால் பேரச்சத்தில் நிறைந்தான். “அவள் கடுந்தவங்களைச் செய்திருக்கிறாள், எனவே மூவுலகங்களையும் அவளால் {காந்தாரியால்} எரித்து விட முடியும்”(9,10) என்றே அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} நினைத்தான்.

கிருஷ்ணனை அனுப்புவதால், கோபத்தில் எரிந்து கொண்டிருக்கும் காந்தாரி, யுதிஷ்டிரன் அங்குச் செல்வதற்கு முன்பே ஆறுதலை அடையக்கூடும்.(11) “நம்மால் இத்தகு அவல நிலைக்குக் கொண்டு வரப்பட்ட அவளது மகனின் {துரியோதனனின்} மரணத்தைக் கேட்டுக் கோபமடையும் அவளால், தன் மனத்தில் உள்ள நெருப்பைக் கொண்டு நம்மைச் சாம்பலாகக் குறைத்துவிட முடியும்.(12) எப்போதும் நியாயமாகப் போரிட்டவனான அவளது மகன் {காந்தாரியின் மகன் துரியோதனன்}, நியாயமற்ற முறையில் நம்மால் கொல்லப்பட்டான் என்று அவள் கேள்விப்பட்ட பிறகு, எரிச்சலையூட்டும் இத்தகு துயரத்தைக் காந்தாரியால் எவ்வாறு தாங்கிக் கொள்ள இயலும்?” {என்று நினைத்தான்”.(13) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், நீண்டநேரமாக இவ்வாறே சிந்தித்து, அச்சத்தாலும், துயராலும் நிறைந்தவனாக, வாசுதேவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(14)

{யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம்}, “ஓ! கோவிந்தா, உன் அருளால் என் நாடு முட்களற்றதானது. ஓ! மங்கா மகிமை கொண்டவனே, கற்பனையாலும் நாங்கள் அடைய முடியாத ஒன்று இப்போது எங்களுடையதாகியிருக்கிறது. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! யாதவர்களைத் திளைக்கச் செய்பவனே, போரில் நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில், கடுமையான தாக்குதல்களை நீ தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.(15,16) பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில், தேவர்களுடைய எதிரிகளின் அழிவுக்கு நீ உதவினாய், அவ்வெதிரிகளும் கொல்லப்பட்டனர்.(17) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவேனே, ஓ! மங்கா மகிமை கொண்டவனே, அதே வழியிலேயே நீ எங்களுக்கும் உன் உதவியைத் தந்திருக்கிறாய். ஓ! விருஷ்ணி குலத்தோனே, எங்கள் சாரதியாக இருக்கச் சம்மதித்து, காலமெல்லாம் நீ எங்களைப் பாதுகாத்திருக்கிறாய்.(18) இந்தப் பயங்கரப் போரில் நீ பல்குனனின் {அர்ஜுனனின்} பாதுகாவலனாக இல்லாவிடில், கடலெனும் இத்துருப்புகளை எவ்வாறு {நாங்கள்} வென்றிருக்க இயலும்?(19) மேலும், கதாயுத வீச்சுகள் பலவற்றையும், பரிகங்கள், ஈட்டிகள் {சக்திகள்}, குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, வேல்கள் {தோமரங்கள்}, போர்க்கோடரிகள் ஆகியவற்றின் தாக்குதல்கள் பலவற்றையும் {இப்போரில்} நீ தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.(20) ஓ! கிருஷ்ணா, போராயுதங்களில் வஜ்ரத்திற்கு ஒப்பான கடுஞ்சொற்கள் பலவற்றை எங்களின் நிமித்தமாக நீ கேட்கவேண்டியிருந்தது; அவற்றைப் பொறுத்துக் கொள்ளவும் வேண்டியிருந்தது.(21) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, இவையனைத்தும், துரியோதனனின் படுகொலையின் விளைவால் கனியற்றதாகிவிடவில்லை {துரியோதனனின் படுகொலையால் இவ்வாறு நீ பட்ட துன்பமெல்லாம் வீணாகிவிடவில்லை}. அந்தச் செயல்கள் அனைத்தின் கனிகளும் {பலன்களும்} அழிந்துவிடாமல் இருக்கும் வகையில் நீ மீண்டும் செயல்படுவாயாக.(22)

ஓ! கிருஷ்ணா, வெற்றி நமதானாலும், நமது இதயம் இன்னும் ஐயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறது. ஓ! மாதவா, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, காந்தாரியின் கோபம் தூண்டப்பட்டிருக்கிறது என்பதை அறிவாயாக.(23) உயர்ந்த அருளைக் கொண்ட அம்மங்கை {காந்தாரி}, கடுந்தவங்களால் தன்னை எப்போதும் மெலியச் செய்து வருகிறாள். அவள், தனது மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளின் படுகொலையைக் கேட்டு, நம்மை எரித்துவிடுவாள் என்பதில் ஐயமில்லை. ஓ! வீரா {கிருஷ்ணா}, அவளை அமைதிப்படுத்துவதற்கான நேரமிது என்று நான் நினைகிகறேன்.(24) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, தாமிரம் போல் கண்கள் சிவந்தவளும், தன் பிள்ளைகளுக்கு நேர்ந்த தீங்கால் மிகவும் பீடிக்கப்பட்டிருப்பவளுமான அம்மங்கையைக் காண இயன்றவன் இங்கே உன்னைத் தவிர வேறு எவன் இருக்கிறான்?(25) ஓ! மாதவா, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, கோபத்தில் எரிந்து கொண்டிருக்கும் காந்தாரியை அமைதிப்படுத்துவதற்கு நீ அங்கே செல்வதே முறையானது என நான் நினைக்கிறேன். நீயே அழிவற்றவனானதால், உலகங்கள் அனைத்தின் முதல் காரணமாக நீயே இருக்கிறாய்.(26) காலத்தின் விளைவுகளான, புலப்படும் மற்றும் புலப்படாத[1] அனைத்துக் காரணங்களும் நிறைந்த வார்த்தைகளால் உன்னாலேயே விரைவில் காந்தாரியை அமைதிப்படுத்த இயலும்.(27) எங்கள் பாட்டனும், புனிதருமான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, அங்கே இருப்பார். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உன் சக்திக்கு அடங்கிய அனைத்து வழிகளிலும் காந்தாரியின் கோபத்தைத் தணிப்பதே உன் கடமையாகும்” என்றான் {யுதிஷ்டிரன்}.(28)அந்த யதுகுலத்தைத் தழைக்கச் செய்பவன் {கிருஷ்ணன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, தாருகனை அழைத்து, “என் தேர் ஆயத்தம் செய்யப்படட்டும்” என்றான்.(29) கேசவனின் உத்தரவைப் பெற்றுக் கொண்ட தாருகன், மிக விரைவாகத் திரும்பி, தன் உயர் ஆன்மத் தலைவனிடம் {கிருஷ்ணனிடம்} தயாராக இருக்கும் தேரைக் காட்டினான்.(30) எதிரிகளை எரிப்பவனும், யதுகுலத்தின் தலைவனுமான தலைவன் கேவசன், அந்தத் தேரில் ஏறி, குருக்களின் நகரத்திற்கு மிக விரைவாகச் சென்றான்.(31) அப்போது போற்றுதலுக்குரியவனான அந்த மாதவன், தன் வாகனத்தைச் செலுத்திக் கொண்டு, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரத்தை} அடைந்து, அதனுள் நுழைந்தான்.(32) அதற்குள் நுழைகையிலேயே தனது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் அந்நகரை எதிரொலிக்கச் செய்த அவன் {கிருஷ்ணன்}, திருதராஷ்டிரனுக்கு ஒரு வார்த்தையைச் சொல்லியனுப்பி, தன் வாகனத்தில் இருந்து இறங்கி, அந்த முதிர்ந்த மன்னனின் அரண்மனைக்குள் நுழைந்தான்.(33)

அங்கே அவன் {கிருஷ்ணன்}, தனக்கு முன்பே வந்திருந்த முனிவர்களில் சிறந்தவரை (துவைபாயனரைக்) கண்டான். வியாசர் மற்றும் திருதராஷ்டிரன் ஆகிய இருவரின் பாதங்களையும் தழுவிக் கொண்ட ஜனார்த்தனன்,(34) அமைதியாகக் காந்தாரியையும் வணங்கினான். பிறகு யாதவர்களில் முதன்மையானவனான அந்த விஷ்ணு {அதோக்ஷஜன்} {கிருஷ்ணன்}, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, திருதராஷ்டிரனின் கரங்களைப் பற்றிக் கொண்டு, இனிமையாக அழத் தொடங்கினான்.(35) கவலையால் சிறிது நேரம் கண்ணீர் சிந்திய அவன்,(36) நீரைக் கொண்டு விதிப்படி தன் கண்களையும் முகத்தையும் கழுவிக் கொண்டான். பிறகு அந்த எதிரிகளைத் தண்டிப்பவன், மென்மையாக வெளிவந்த இவ்வார்த்தைகளைத் திருதராஷ்டிரனிடம் சொன்னான்.(37)

{கிருஷ்ணன்}, “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கடந்த காலம், எதிர்காலம் என நீர் அறியாதது எதுவுமில்லை. ஓ! தலைவா, காலத்தின் வழியைக் குறித்து நீர் நன்கறிந்தவராவீர்.(38) ஓ! பாரதரே, பாண்டவர்கள் உம்மீது கொண்டிருந்த மதிப்பால், தங்கள் குலத்தின் அழிவையும், க்ஷத்திரியர்களின் முற்றான அழிவையும் தடுப்பதற்கு முயற்சி செய்தனர்.(39) தன் தம்பிகளுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்ட அறவோனான யுதிஷ்டிரர் அமைதியாகவே வாழ்ந்துவந்தார். அவர் {யுதிஷ்டிரர்}, நியாமற்ற வகையில் பகடையில் வீழ்த்தப்பட்டு, நாடு கடந்தும் {வனவாசம்} சென்றார்.(40) பல்வேறு மாறுவேடங்களில் ஆடைகளை உடுத்திக் கொண்டு, தமது தம்பியரோடு தலைமறைவு வாழ்வையும் வாழ்ந்தார். அவர்கள் தினமும் சந்தித்த தங்கள் பல்வேறு இன்னல்களைக் கிட்டத்தட்ட ஆதரவற்றவர்களாகவே பொறுத்துக் கொண்டனர்.(41) போர் தொடங்குவதற்கு முன், அனைத்து மனிதர்களுக்கும் முன்னிலையில் நானே வந்து, ஐந்து கிராமங்களை மட்டுமே {உங்களிடம்} இரந்து கேட்டேன்.(42) காலத்தால் பீடிக்கப்பட்டும், பேராசையால் உந்தப்பட்டும், என் வேண்டுகோளை நீர் அருளவில்லை. ஓ! மன்னா, உமது குற்றத்தாலேயே, அனைத்து க்ஷத்திரிய குலங்களும் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன.(43)

பீஷ்மர், சோமதத்தர், பாஹ்லீகர், கிருபர், துரோணர், அவரது மகன் {அஸ்வத்தாமன்}, ஞானியான விதுரர் ஆகியோர் உம்மிடம் எப்போதும் அமைதியையே வேண்டினர். எனினும் நீர் அவர்களது ஆலோசனைகளைப் பின்பற்றவில்லை.(44) ஓ! பாரதரே, நீரே கூட இக்காரியத்தில் மடமையுடன் செயல்பட்டதால், ஓ! மன்னா, காலத்தால் பீடிக்கப்படும்போது அனைவரும் மலைப்பையே அடைகின்றனர் என்றே தெரிகிறது.(45) காலத்தின் விளைவைத் தவிர இது வேறென்னவாக இருக்க முடியும்? உண்மையில், விதியே உயர்ந்தது. ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, பாண்டவர்கள் மீது எக்குற்றத்தையும் சுமத்தாதீர்.(46) ஓ! எதிரிகளை எரிப்பவரே, அறநெறிவிதிகளின்படியோ, காரணத்தின்படியோ {அறிவின்படியோ}, பாசத்தின்படியோ, உயர் ஆன்ம பாண்டவர்களின் மிகச் சிறு மீறலையும் கூடத் தெளிவாகத் தீர்மானிக்க முடியவில்லை.(47) இவையாவும் உமது குற்றத்தின் கனியே என்பதை அறிந்து, பாண்டவர்கள் மீது எந்தத் தீய உணர்வையும் வளர்ப்பது உமக்குத் தகாது.(48)

குலம், பரம்பரை, ஈமப்பிண்டம் மற்றும் எவையெல்லாம் வாரிசைச் சார்ந்திருக்கின்றனவோ, அவையெல்லாம் உமக்கும் காந்தாரிக்கும் இப்போது பாண்டவர்களைச் சார்ந்தே இருக்கின்றன.(49) ஓ! குருக்களில் புலியே, நீரும், புகழ்பெற்ற காந்தாரியும் பாண்டவர்களிடம் எந்தக் கெடுநோக்கமும் கொள்ள வேண்டாம்.(50) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இவையனைத்தையும் சிந்தித்துப் பார்த்து, உமது சொந்த மீறல்களையும் நினைத்துப் பார்த்து, பாண்டவர்களிடம் நல்லுணர்வுகளையே வளர்க்க வேண்டும் என்று உம்மை நான் வணங்கிக் கேட்கிறேன்.(51) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! மன்னர்களில் புலியே, மன்னர் யுதிஷ்டிரர் உம்மிடம் கொண்ட பாசத்தையும், அர்ப்பணிப்பையும் {பக்தியையும்} நீர் அறிவீர்.(52) தமக்குத் தீங்கிழைத்த எதிரிகளைக் கொன்ற அவர், மன அமைதியை அடைவதில் வெல்லாமல் பகலும், இரவும் எரிந்து கொண்டிருக்கிறார்.(53) அந்த மனிதர்களில் புலி {யுதிஷ்டிரர்}, உமக்காகவும், காந்தாரிக்காகவும் துயரமடைந்து எந்த மகிழ்ச்சியையும் அடைவதில் தவறுகிறார்.(54) உமது பிள்ளைகளின் நிமித்தமாகத் துயரில் எரிந்து கொண்டிருப்பவரும், அந்தத் துன்பத்தால் அறிவும், புலன்களும் கலக்கப்பட்டிருப்பவருமான உம்மைக் காண வெட்கமடைந்தே அவர் உம் முன்னிலைக்கு வராமல் இருக்கிறார்” என்றான் {கிருஷ்ணன்}.(55)

திருதராஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த யது குலத்தின் முதன்மையானவன் {கிருஷ்ணன்}, ஓ! ஏகாதிபதி, துயரால் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரியிடம் இந்த உன்னதமான வார்த்தைகளைச் சொன்னான்:(56) “ஓ! சுபலரின் மகளே {காந்தாரியே}, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவளே, நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! மங்கலக் காரிகையே, இப்போது இவ்வுலகில் உன்னைப் போன்ற ஒரு பெண் கிடையாது.(57) ஓ! ராணி, என் முன்னிலையில் வைத்து நீ சபையில் பேசியவையும், நீதி நிறைந்தவையும், இருதரப்புக்கும் நன்மை செய்பவையுமான, உமது மகன்கள் கீழ்ப்படியாதவையுமான உனது அந்த வார்த்தைகளை நினைவுகூர்வாயாக.(58,59) வெற்றியில் பேராசை கொண்ட துரியோதனனிடம் நீ இந்தக் கசந்த வார்த்தைகளைச் சொன்னாய். அப்போது நீ அவனிடம், “ஓ! மூடா {துரியோதனனிடம்}, எங்கே அறமிருக்கிறதோ {நீதியிருக்கிறதோ} அங்கே வெற்றியிருக்கும் என்ற என் இந்த வார்த்தைகளைக் கேட்பாயாக” என்றாய்.(60) ஓ! இளவரசி, அந்த உன் வார்த்தையே இப்போது நிறைவேறியிருக்கிறது. ஓ! மங்கலமான பெண்ணே, இவையாவற்றையும் அறிந்து கொண்டு, உன் இதயத்தைக் கவலையில் நிலை கொள்ளச் செய்யாதே.(61) பாண்டவர்களின் அழிவை உன் இதயம் நாடாதிருக்கட்டும். உன் தவவலிமையின் விளைவால், ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவளே, சினத்தால் தூண்டப்பட்ட உன் கண்களைக் கொண்டே, அசையும், அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த மொத்த உலகத்தையும் நீ எரித்துவிட இயன்றவளாவாய்” என்றான் {கிருஷ்ணன்}.(62)

வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட காந்தாரி, “ஓ! கேசவா, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது.(63) எனினும், ஓ! ஜனார்த்தனா, உன் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, அந்த இதயம் ஒரு நிலையை அடைந்திருக்கிறது. ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, முதிந்தவரும், பார்வையற்றவருமான இந்த மன்னனைப் {திருதராஷ்டிரனைப்} பொறுத்தவரையில், பிள்ளைகளற்றவரான இவருக்கு, பாண்டுவின் மகன்களான அவ்வீரர்களுடன் கூடிய நீயே புகலிடமாக இருக்கிறாய் {அவருக்கு நீயே கதி}” என்றாள்.(65)

இவ்வளவும் சொன்ன காந்தாரி, தன் மகன்களின் மரணத்தால் உண்டான துயரில் எரிந்து, துணியால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு, உரக்க அழத் தொடங்கினாள்.(66) பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான தலைவன் கேசவன், புலப்பட்ட மற்றும் புலப்படாத நிகழ்வுகளில் இருந்து பெறப்பட்ட காரணங்கள் நிறைந்த வார்த்தைகளால், துயரால் பீடிக்கப்பட்ட அவ்விளவரசிக்கு ஆறுதலை அளித்தான்.(67) காந்தாரியையும், திருதராஷ்டிரனையும் தேற்றிய அந்த மதுகுலத்துக் கேசவன், துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்) தியானிக்கப்படும் தீமையை (தன் உள்ளுணர்வால்) அறியவந்தான்.(68)

அந்தக் கேசவன், தலைவணங்கி வியாசரின் பாதத்தை வழிபட்ட பிறகு, விரைவாக எழுந்து, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தத் திருதராஷ்டிரனிடம்,(69) “ஓ! குரு குலத்தில் முதன்மையானவரே, நான் உம்மிடம் இருந்து விடைபெறுகிறேன். உமது இதயத்தைத் துயரத்தில் நிலைகொள்ளச் செய்யாதீர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, ஒரு தீய நோக்கத்தைக் கொண்டுள்ளார். இதன் காரணமாகவே நான் இவ்வளவு விரைவாக எழுந்தேன்.(70) அவர் இரவு வேளையில் பாண்டவர்களை அழிக்கும் திட்டத்தை அமைத்திருப்பதாகத் தெரிகிறது” என்றான்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட காந்தாரி மற்றும் திருதராஷ்டிரன் ஆகியோர் இருவரும், கேசியைக் கொன்றவனான அந்தக் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்}, இவ்வார்த்தைகளில், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, வேகமாகச் சென்று பாண்டவர்களைக் காப்பாயாக.(71,72) ஓ! ஜனார்த்தனா, மீண்டும் நாங்கள் உன்னைச் சந்திக்க வேண்டும்” என்றனர்.

பிறகு, மங்கா மகிமை கொண்டவனான அந்தக் கேசவன், தாருகனுடன் சேர்ந்து அங்கிருந்து சென்றான்.(73) ஓ! மன்னா {ஜனமேஜயா}, வாசுதேவன் புறப்பட்டுச் சென்றதும், மொத்த உலகத்தாலும் போற்றப்படுபவரும், கற்பனைக்கெட்டா ஆன்மாவைக் கொண்டவருமான வியாசர், மன்னன் திருதராஷ்டிரனுக்கு ஆறுதலளிக்கத் தொடங்கினார்.(74) அற ஆன்மா கொண்டவனான வாசுதேவன் {கிருஷ்ணன்}, தன் தூதை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டு, முகாமையும், பாண்டவர்களையும் காண்பதற்காக ஹஸ்தினாபுரத்திலிருந்து புறப்பட்டுச் சென்றான்.(75) அவன் முகாமை அடைந்து, பாண்டவர்களின் முன்னிலைக்குச் சென்றான். அவன், (நகரத்திற்குத் தூது சென்ற போது நடந்த) அனைத்தையும் அவர்களிடம் சொல்லி அவர்களோடு அமர்ந்து கொண்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(76)

“சார்வாகர் நிச்சயம் பழிதீர்ப்பார்” என்ற துரியோதனன்! – சல்லிய பர்வம் பகுதி – 64-தொடைகள் முறிந்து களத்தில் கிடக்கும் துரியோதனனுடைய புலம்பல்களைத் திருதராஷ்டிரனிடம் உரைத்த சஞ்சயன்; துரியோதனன் தன் பெற்றோருக்குச் சொல்லியனுப்பிய செய்தி; கௌரவப் படையில் எஞ்சியிருந்த மூவருக்கு தெய்திதாங்கிகளின் மூலம் அவன் சொல்லியனுப்பிய செய்திகள்; தன் நண்பனான சார்வாகனிடம் தன் மரணச் சூழ்நிலையைச் சொல்லுமாறு சொன்ன துரியோதனன்; துரியோதனனின் இறுதி வார்த்தைகளை அஸ்வத்தாமனிடம் சொன்ன தூதர்கள்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, தலையில் மிதிக்கப்பட்டுத் தன் தொடைகள் முறிக்கப்பட்டு, தரையில் நெஞ்சாண்கிடையாகக் கிடந்தவனும், மிகவும் செருக்குடையவனுமான என் மகன் {துரியோதனன்} அப்போது என்ன சொன்னான்?(1) மன்னன் துரியோதனன் மிகவும் கோபம் நிறைந்தவனாகவும், பாண்டு மகன்களிடம் ஆழமாக வேர் விட்டிருந்த பகைமை கொண்டவனாகவும் இருந்தான். எனவே, அவனுக்கு இந்தப் பேரிடர் நேர்ந்தபோது, அந்தக் களத்தில் அடுத்து என்ன சொன்னான்?” என்று கேட்டான்.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நான் உமக்குச் சொல்லும்போதே கேட்பீராக. ஓ! மன்னா, பேரிடர் நேர்ந்தபோது, துரியோதனன் என்ன சொன்னான் என்பதைக் கேட்பீராக.(3) ஓ! ஏகாதிபதி, தொடைகள் முறிந்திருந்த அம்மன்னன், புழுதியால் மறைக்கப்பட்டவனாகக் கலைந்த தன் தலைமயிரைக் கோதிவிட்டபடியே அனைத்துப் பக்கங்களிலும் தன் கண்களைச் செலுத்திக் கொண்டிருந்தான்.(4) சிரமத்துடன் குழலை {கேசத்தைத்} திரட்டிய அவன் {துரியோதனன்}, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அவன் சினத்தால் நிறைந்தவனாக, தன் கண்களில் இருந்து வேகமாகக் கண்ணீர் பெருகியவனாக {சஞ்சயனான} என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சிறிது நேரம் ஒரு மதங்கொண்ட யானையைப் போலப் பூமியில் தன் கரங்களை அடித்துக் கொண்டிருந்தான்.(5)

தளர்ந்திருந்த தலைமயிரை அசைத்துக் கொண்டும், பற்களை நறநறவெனக் கடித்துக் கொண்டும், பாண்டுவின் மூத்த மகனை {யுதிஷ்டிரனை} அவன் நிந்திக்கத் தொடங்கினான். பிறகு அவன், பெருமூச்சுவிட்டுக்கொண்டே,(6) “ஐயோ, என் பாதுகாவலரும், சந்தனுவின் மகனுமான பீஷ்மர், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான கர்ணன், கௌதமர் மகன் {கிருபர்}, சகுனி, ஆயுததாரிகள் அனைவரிலும் முதல்வரான துரோணர்,(7) அஸ்வத்தாமன், வீர சல்லியன், கிருதவர்மன் ஆகியோரும் நானும் கூட இந்த அவலநிலையை அடைந்துவிட்டோம். காலம் தடுக்கப்பட முடியாததாகத் தெரிகிறது.(8) நான் பதினோரு சமுக்களின் தலைவனாக இருந்தும், இந்த அவல நிலையை அடைந்திருக்கிறேன். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {சஞ்சயா}, காலத்திற்கு மேல் மேன்மையாக எழ எவராலும் முடியாது.(9) இப்போரில் என் தரப்பில் உயிரோடு தப்பியவர்களிடம், நியாயமான போர்விதிகளுக்கு முரணாக நான் பீமசேனனால் தாக்கி வீழ்த்தப்பட்டிருக்கிறேன் என்பது தெரிவிக்கப்பட வேண்டும்.(10)

பூரிஸ்ரவஸ், பீஷ்மர், பெருஞ்செழிப்பைக் கொண்ட துரோணர் ஆகியோருக்கு இழைக்கப்பட்ட பாவம் நிறைந்த, நியாயமற்ற செயல்கள் பலவாகும்.(11) பாண்டவர்களால் இழைக்கப்பட்ட மற்றுமொரு மிக இழிந்த செயலான இது, நல்லோர் அனைவரின் நிந்தனைக்கும் உள்ளாகும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.(12) நியாயமற்ற வகையில் நடந்து கொண்டு ஈட்டப்பட்ட வெற்றியால் அறவோன் ஒருவனுக்கு என்ன மகிழ்ச்சி ஏற்பட முடியும்? மேலும், நியாயவிதிகளுக்கு முரண்படும் ஒரு மனிதனை எந்த ஞானிதான் ஏற்பான்?(13) இழிந்த பாவியான பாண்டுவின் மகன் விருகோதரனை {பீமனைப்} போல, எந்தக் கல்விமான அநீதியினால் வெற்றியடைந்து இவ்வாறு மகிழ்வான்?(14) தொடைகள் முறிந்து கிடக்கும் என்னைப் போன்ற ஒருவனின் தலையைப் பீமசேனன் கோபத்துடன் தன் காலால் தீண்டியதைவிட ஆச்சரியம் என்ன இருக்க முடியும்?(15) ஓ! சஞ்சயா, மகிமையும், செழிப்பும் கொண்டவனும், நண்பர்களுக்கு மத்தியில் வாழ்பவனுமான ஒரு மனிதனிடம் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடிய ஒருவன் மரியாதைக்குத் தகுந்தவனா?(16)

என்னைப் பெற்றோர் போர்க்கடமைகளைக் குறித்து அறியாதவர்களல்ல. ஓ! சஞ்சயா, துன்பத்தில் பீடிக்கப்பட்டிருக்கும் அவர்களிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக:(17) “நான் வேள்விகளைச் செய்திருக்கிறேன், பெரும் எண்ணிக்கையிலான பணியாட்களை முறையாக ஆதரித்திருக்கிறேன், கடல்களுடன் கூடிய மொத்த பூமியையும் ஆட்சி செய்திருக்கிறேன். உயிரோடு இருக்கும் என் எதிரிகளின் தலைக்கு மேலேயே நான் நிலைத்திருக்கிறேன்.(18) என் ஆற்றலை விரிவுபடுத்த என் சொந்தங்களுக்குச் செல்வத்தைக் கொடுத்தேன், நண்பர்களுக்கு ஏற்புடையதை {இனிமையானதைச்} செய்தேன். என் எதிரிகள் அனைவரையும் நான் தாக்குப்பிடித்தேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(19) பகைவரின் நாடுகளில் முன்னேறி, மன்னர்களை அடிமைகளைப் போல நான் ஆணையிட்டிருக்கிறேன். நான் விரும்பிய மற்றும் அன்புடன் இருந்த அனைவரிடமும் நல்ல முறையில் நடந்திருக்கிறேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(20)

நான் என் சொந்தங்கள் அனைவரையும் மதித்திருக்கிறேன் மற்றும் என்னைச் சார்ந்திருந்தோர் அனைவரின் நன்மையையும் கவனித்திருக்கிறேன். மனித இருப்பின் எல்லைகளான அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய மூன்றையும் நான் கவனித்திருக்கிறேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(21) பெரும் மன்னர்களுக்கு நான் ஆணையிட்டேன், பிறரால் அடைய முடியாத கௌரவம் என்னுடையதானது. நான் எப்போதும் என் பயணங்களை மிகச் சிறந்த குதிரைகளிலேயே செய்திருக்கிறேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(22) நான் வேதங்களைக் கற்றிருக்கிறேன், விதிப்படி தானங்களையும் அளித்திருக்கிறேன். என் வாழ்வு மகிழ்ச்சியிலேயே கழிந்தது. என் வகைக்காகக் கடமைகளை நோற்ற நான், இதன் பிறகு பல அருள் உலகங்களை அடைவேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(23) போரில் வெல்லப்பட்டு, என் எதிரிகளைத் தலைவர்களாகக் கொண்டு தொண்டு புரியும் நிலை எனக்கு ஏற்படாதது நற்பேறாலேயே. ஓ! தலைவா, பெருகியிருக்கும் செழிப்பானது, என் மரணத்திற்குப் பிறகு மட்டுமே என்னைக் கைவிட்டு மற்றொருவனுக்காகக் காத்திருக்கப் போகிறது.(24) தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கும் நல்ல க்ஷத்திரியர்களால் விரும்பப்படும் மரணத்தையே நான் அடைந்திருக்கிறேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(25)

பகைமையின் பாதையில் இருந்து விலகாமலும், சாதாரண மனிதனைப் போல வெல்லப்படாமலும் நான் இருப்பது நற்பேறாலேயே. சில வம்புகள் செய்திருந்தாலும் நான் வெல்லப்படாமல் இருப்பது நற்பேறாலேயே.(26) நியாயமான போர்விதிகளுக்கு முரணாக நியாயமற்ற வகையில் நான் கொல்லப்பட்டிருப்பதால், என் படுகொலையானது உறங்கிக் கொண்டிருப்பவனையோ, கவனமில்லாமல் இருப்பவனையோ கொல்வதைப் போன்றதோ, நஞ்சூட்டிக் கொல்லப்படுவதைப் போன்றதோ ஆகும்.(27) உயர்ந்த அருளைக் கொண்டவர்களான அஸ்வத்தாமர், சாத்வத குலத்தின் கிருதவர்மன் மற்றும் சரத்வான் மகனான கிருபர் ஆகியோரிடம்,(28) “விதிகளை மீறியவர்களும், அநீதிமிக்கச் செயல்களைச் செய்தவர்களுமான பாண்டவர்கள் மீது ஒருபோதும் நம்பிக்கை வைக்காதீர்கள்” என்ற இந்த என் வார்த்தைகள் சொல்லப்பட வேண்டும்” என்று {சஞ்சயனிடம் துரியோதனன்} சொன்னான்.(29)

அதன்பிறகு, உண்மையான ஆற்றலைக் கொண்டவனான உமது அரச மகன் {துரியோதனன்} செய்தி தாங்கிகளிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,: “போரில் நான் பீமசேனனால் மிக அநியாயமாகக் கொல்லப்பட்டேன்.(30) ஏற்கனவே சொர்க்கத்திற்குச் சென்று விட்டவர்களான துரோணர், கர்ணன், சல்லியன், பெரும் சக்தி கொண்ட விருஷசேனன், சுபலனின் மகனான சகுனி, பெரும் வீரம் கொண்ட ஜலசந்தன், சோமதத்தர் மகனான மன்னர் பகதத்தர், வலிமைமிக்க வில்லாளியான சிந்துமன்னன் ஜெயத்ரதன், துச்சாசனன் தலைமையிலானவர்களும், எனக்கு இணையானவர்களுமான என் தம்பிகள் அனைவர், பேராற்றலைக் கொண்டவனான துச்சாசனன் மகன், என் மகன் லக்ஷ்மணன், மற்றும் என்னுடன் சேர்ந்து போரிட்ட ஆயிரக்கணக்கானோரின் வழியைப் பின்பற்றிப் பணமற்ற வழிப்போக்கனைப் போல நான் இப்போது செல்லப் போகிறேன்.(31-34)

ஐயோ, துன்பத்தில் பீடிக்கப்பட்டிருக்கும் என் தங்கையானவள், அவளது சகோதரர்கள் மற்றும் கணவனின் படுகொலையைக் கேட்டுக் கவலை நிறைந்தவளாக எவ்வாறு வாழ்வாள்?(35) ஐயோ, காந்தாரி மற்றும் மருமகள்கள், மற்றும் பேரர்களின் மனைவிமார்கள் ஆகியோருடன் கூடியவரும், என் தந்தையுமான முதிர்ந்த மன்னர் {திருதராஷ்டிரர்} எவ்வளவு அவலநிலையில் இருக்கப் போகிறார்?(36) அழகியும், அகன்ற கண்களைக் கொண்டவளும், மகன்களற்று, கணவனற்றுப் போனவளுமான லக்ஷ்மணனின் தாய் {பானுமதி}, விரைவில் தன் மரணத்தைச் சந்திப்பாள் என்பதில் ஐயமில்லை.(37) பேச்சில் வல்லவரும், அர்ப்பணிப்பு கொண்டவரும், துறவியுமான சார்வாகர்[1]அனைத்தையும் அறிந்தால், அந்த அருளப்பட்ட மனிதர் நிச்சயம் என் மரணத்திற்காகப் பழிதீர்ப்பார்.(38) மூவுலகங்களிலும் கொண்டாடப்படும் புனிதக் களமான சமந்தபஞ்சகத்தில் இறப்பதால், நான் நிச்சயம் அழிவில்லாத உலகங்களை அடைவேன்” என்றான் {துரியோதனன்}.(39)அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மன்னனின் இந்தப் புலம்பல்களைக் கேட்டு, ஆயிரக்கணக்கான மனிதர்கள் கண்கள் நிறைந்த கண்ணீருடன் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(40) காடுகள், கடல்கள், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த உலகமும், பேரொலியை உண்டாக்கியபடியே பயங்கரமாக நடுங்கத் தொடங்கியது. திசைகளின் புள்ளிகள் அனைத்தும் இருளடைந்தன.(41) அந்தத் தூதர்கள் {செய்திதாங்கிகள்} துரோணரின் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} சென்று, கதாயுத மோதல் நடந்த விதம், மன்னனின் {துரியோதனனின்} வீழ்ச்சி ஆகியவை அனைத்தையும் {நடந்தவாறே} சொன்னார்கள்.(42) அவர்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரின் மகனிடம் அனைத்தையும் சொன்னபிறகு, நீண்ட நேரத்திற்குச் சிந்தித்தவாறே அங்கிருந்த பிறகு, துயரால் பீடிக்கப்பட்டு, தாங்கள் எங்கிருந்து வந்திருந்தனரோ அங்கேயே சென்றுவிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(43)

படைத்தலைவனானான் அஸ்வத்தாமன்! – சல்லிய பர்வம் பகுதி – 65-துரியோதனன் கிடந்த இடத்திற்குக் கிருபர், அஸ்வத்தாமன் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் வந்தது; விழுந்திருக்கும் துரியோதனனைக் கண்டு அஸ்வத்தாமன் புலம்பியது; துரியோதனனின் மறுமொழி; பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வதாகச் சபதமேற்ற அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனைப் படைத்தலைவனாக்குமாறு கிருபரிடம் கேட்டுக் கொண்ட துரியோதன்; மூன்று வீரர்களும் துரியோதனனைத் தனிமையில் விட்டு அகன்றது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கூரிய கணைகள், கதாயுதங்கள், வேல்கள் மற்றும் ஈட்டிகளால் மிகவும் காயமடைந்தும், கொல்லப்படாமல் கௌரவப் படையில் எஞ்சியிருந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் மூவரும், துரியோதனனின் வீழ்ச்சியைக் கேட்டு,(1,2) தங்களின் வேகமான குதிரைகளில் ஏறி விரைவாகப் போர்க்களத்திற்கு வந்தனர். அங்கே அவர்கள், காட்டில் சூறாவளியால் வீழ்த்தப்பட்ட பெரும் சால மரத்தைப் போல அந்த உயர் ஆன்ம திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, தரையில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைக் கண்டனர். அவர்கள், காட்டில் வேடனால் வீழ்த்தப்பட்ட ஒரு வலிமைமிக்க யானையைப் போலக் குருதியில் நனைந்து, வெறுந்தரையில் கிடந்து துடித்துக் கொண்டிருக்கும் அவனைக் கண்டனர். அவன், அபரிமிதமான இரத்த ஓடையில் குளித்தவனாக, வேதனையில் உருண்டு புரண்டு கொண்டிருப்பதைக் கண்டனர்.(3-5)

உண்மையில் அவர்கள், அவனைப் {துரியோதனனைப்} பூமியில் விழுந்த சூரியனைப் போலவோ, பெருங்காற்றால் வற்றிய பெருங்கடலைப் போலவோ, ஆகாயத்தில் மூடுபனியால் வட்டில் மறைக்கப்பட்ட முழு நிலவைப் போலவோ கண்டனர். ஆற்றலில் யானைக்கு இணையானவனும், நீண்ட கரங்களைக் கொண்டவனுமான அந்த மன்னன், புழுதியால் மறைக்கப்பட்டுப் பூமியில் கிடந்தான்.(6,7) ஒரு நாட்டின் ஏகாதிபதியைச் சுற்றி, செல்வத்தில் ஆசை கொண்டோர் இருப்பதைப் போல அவனைச் சுற்றிலும் ஊனுண்ணும் பல்வேறு பயங்கர விலங்குகளும், உயிரினங்களும் இருந்தன.(8) அவனது நெற்றி சினத்தால் ஆழ்வடுக்களைப் போலச் சுருங்கியிருந்தது, அவனது கண்கள் கோபத்தால் உருண்டு கொண்டிருந்தன. மனிதர்களில் புலியான அந்த மன்னன், (வேடர்களால்) வீழ்த்தப்பட்ட புலியைப் போலச் சினம் நிறைந்தவனாக இருப்பதைக் கண்டனர்.(9) பெரும் வில்லாளிகளான கிருபரும், பிறரும், பூமியில் வீழ்ந்து கிடந்த அந்த ஏகாதிபதியைக் கண்டு திகைப்படைந்தனர்.(10)

அவர்கள் தங்கள் தேர்களில் இருந்து இறங்கி மன்னை {துரியோதனனை} நோக்கி ஓடினர். துரியோதனனைக் கண்ட அவர்கள் அனைவரும் அவனைச் சுற்றி பூமியில் அமர்ந்தனர்.(11) அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கண்ணீர் நிறைந்த கண்களுடன், ஒரு பாம்பைப் போல மூச்சு விட்டுக் கொண்டு, பூமியில் கிடப்பவனும், மன்னர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தப் பாரதக் குலத் தலைவனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(12) “ஓ! மனிதர்களில் புலியே, புழுதிக்கறை படிந்து வெறுந்தடையில் நீ கிடப்பதால், மனிதர்களின் உலகில் நிலையானது ஏதுமில்லை என்பது உண்மையே.(13) மொத்த உலகிற்கும் ஆணை பிறப்பிக்கும் மன்னனாக நீ இருந்தாய். பிறகு ஏன், ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, இத்தகு தனிமையான காட்டில் வெறுந்தரையில் தனியனாக நீ கிடக்கிறாய்?(14) உன் அருகில் துச்சாசனனையோ, பெரும் தேர்வீரனான கர்ணனையோ, உன் நூற்றுக்கணக்கான நண்பர்களையோ நான் காணவில்லை. ஓ! மனிதர்களில் காளையே, இஃது என்ன?(15)

ஓ! உலகங்கள் அனைத்தின் தலைவனே {துரியோதனனே}, புழுதிக் கறைபடிந்து வெறுந்தரையில் நீ இவ்வாறு கிடப்பதால், யமனின் {விதியின்} வழிகளை அறிவது கடினம் என்பதில் ஐயமில்லை.(16) ஐயோ, மணிமுடிசூட்டுவிழாவில் புனித நீர் தெளிக்கப்பட்ட கேசங்களைக் கொண்ட க்ஷத்திரியர்கள் அனைவருக்கும் தலைமையில் இந்த எதிரிகளை எரிப்பவன் {இந்தத் துரியோதனன்} செல்வான். ஐயோ இப்போது அவன் புழுதியை உண்கிறான். காலம் அதன் வழியில் கொண்டு வரும் முரண்களைப் பாருங்கள்.(17) தூய்மையான உன் வெண்குடை எங்கே? ஓ! மன்னா {துரியோதனா}, காற்றை வீசும் வெண்சாமரம் எங்கே? ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, உனது பரந்த படையானது இப்போது எங்கே?(18) உலகின் தலைவனாக இருந்த நீ, இத்தகு அவல நிலைக்குக் குறைக்கப்பட்டதால், புத்தகம் {சாத்திரங்களைச்} சாராத காரணங்களைக் கொண்ட நிகழ்வுகளின் வழிகள் புதிர் நிறைந்தவையே என்பது நிச்சயம்.(19) சக்ரனுக்கு இணையான நீ, பரிதாபகரமான இத்தகு அவல நிலைக்குக் குறைக்கப்பட்டதால், மனிதர்கள் அனைவரின் செழிப்பும் நிலையில்லாததே என்பதில் ஐயமில்லை” என்றான் {அஸ்வத்தாமன்}.(20)

அஸ்வத்தாமனின் இந்தக் கவலைநிறைந்த வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் {துரியோதனன்}, அச்சந்தர்ப்பத்திற்குத் தகுந்த இந்த வார்த்தைகளை அவனுக்குப் பதிலாக அளித்தான்.(21) அவன் தன் கரங்களால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, மறுபடியும் சோகத்தால் கண்ணீர் சிந்தினான். பிறகு அந்த மன்னன், கிருபர் தலைமையிலான அந்த வீரர்களிடம்,(22) “(உயிரினங்கள் அனைத்தின்) மரணக்கட்டுப்பாடு படைப்பாளனால் விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. காலத்தின் வழியில் அனைத்து உயிரினங்களுக்கும் மரணம் நேர்கிறது.(23) அந்த மரணமே இப்போதும் உங்கள் அனைவரின் கண்களுக்கு முன்பாக எனக்கு நேர்கிறது. மொத்த உலகையும் ஆட்சி செய்த நான் இந்த அவல நிலைக்குக் குறைக்கப்பட்டிருக்கிறேன்.(24) என்ன பேரிடர் நேரிட்டாலும், நான் போரில் இருந்து ஒருபோதும் புறமுதுகிடாதது நற்பேறாலேயே. குறிப்பாக வஞ்சகத்தின் துணையைக் கொண்டு அந்தப் பாவிகளால் நான் கொல்லப்பட நேர்ந்ததும் நற்பேறாலேயே.(25)

பகைமையில் ஈடுபட்டபோதும், நான் வீரத்தையும், விடாமுயற்சியையும் எப்போதும் வெளிப்படுத்தியது நற்பேறாலேயே. நான் என் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் போரில் கொல்லப்பட்டதும் நற்பேறாலேயே.(26) இந்தப் பெரும்படுகொலையில் உயிரோடு தப்பியவர்களாக, பாதுகாப்பாக, உடல்நலத்துடன் இருப்பவர்களாக உங்களை நான் காண்பதும் நற்பேறாலேயே.(27) இஃது எனக்கு மிகவும் ஏற்புடையதாகும் {இனிமையானதாகும்}.(27) பாசத்தால் என் மரணத்திற்காக வருந்தாதீர்கள். வேதங்களுக்கு அதிகாரம் இருக்குமானால், நான் நிச்சயம் அழிவில்லாத பல உலகங்களை அடைந்திருக்கிறேன்.(28) அளவிலா சக்தி கொண்ட கிருஷ்ணனின் மகிமையை நான் அறியாதவனல்ல. அவன், க்ஷத்திரியக் கடமைகளை முறையாக நோற்று என்னை விழச் செய்யவில்லை.(29) நான் அவனை அடைந்துவிட்டேன். எக்காரணத்திற்காகவும், எவரும் எனக்காக வருந்தக்கூடாது. உங்களைப் போன்ற மனிதர்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதையே நீங்கள் செய்திருக்கிறீர்கள். நீங்கள் என் வெற்றிக்காக எப்போதும் முயற்சி செய்தீர்கள். எனினும், விதி கலங்கடிக்கப்பட முடியாததாகும்” என்றான் {துரியோதனன்}.(30)

இவ்வளவே சொன்ன அந்த மன்னன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கண்ணீரால் அலைமோதும் கண்களுடன், மரணவேதனையால் கலக்கமடைந்து அமைதியை அடைந்தான்.(31) மன்னனின் கண்ணீரையும், துயரத்தையும் கண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அண்ட அழிவின்போது காணப்படும் நெருப்பைப் போலக் கோபத்தால் சுடர்விட்டெரிந்தான்.(32) சினத்தில் மூழ்கிய அவன் {அஸ்வத்தாமன்} தன் கரங்களைப் பிசைந்து கொண்டே, கண்ணீரால் கரகரப்பான குரலுடன் மன்னனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(33) “ஒரு கொடூர சதியின் மூலம் அந்த இழிந்தவர்களால் என் தந்தை {துரோணர்} கொல்லப்பட்டார். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, இந்த அவலநிலைக்கு நீ குறைக்கப்பட்டிருப்பதைக் காணும்போது எரிக்கப்படுவதைப் போல அச்செயல் கூட என்னை இவ்வளவு அதிகமாக எரிக்கவில்லை.(34) ஓ! தலைவா, உண்மையின் மீதும், என் பக்திச் செயல்கள் அனைத்தின் மீதும், என் தானங்கள், என் அறம், நான் வென்ற அறத்தகுதிகள் அனைத்தின் மீதும் ஆணையிட்டு நான் சொல்லப் போகும் இவ்வார்த்தைகளைக் கேட்பாயாக.(35) நான் இன்று, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வைத்து, என் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும், பாஞ்சாலர்கள் அனைவரையும் யமலோகம் அனுப்பிவைப்பேன். ஓ! ஏகாதிபதி, எனக்கு அனுமதி அளிப்பதே உனக்குத் தகும்” என்றான் {அஸ்வத்தாமன்}.(36)

துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} சொன்னதும், தன் இதயத்திற்கு மிகவும் ஏற்புடையதுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தக் குரு மன்னன், கிருபரிடம், “ஓ! ஆசானே, ஒரு குடம் நிறைந்த நீரைத் தாமதமில்லாமல் என்னிடம் கொண்டு வாரும்” என்றான்.(37) மன்னனின் இந்த வார்த்தைகளின் பேரில் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் {கிருபர்}, ஒரு பாத்திரம் நிறைந்த நீரை விரைவாகக் கொண்டு வந்து, மன்னனை அணுகினார்.(38) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்}, அந்தக் கிருபரிடம், “ஓ! பிராணர்களில் முதன்மையானவரே, நீர் அருளப்பட்டிருப்பீராக, நீர் எனக்கு நன்மையை விரும்பினால், என் உத்தரவின் பேரில் இந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} படைத்தலைவனாக நிறுவப்படட்டும்.(39) மன்னனின் உத்தரவின் பேரில், ஒரு பிராமணன் கூடப் போரிடலாம், அதிலும் குறிப்பாக க்ஷத்திரியப் பயிற்சிகளைப் பின்பற்றுபவர்கள் {நிச்சயம்} போரிடலாம். சாத்திரங்களைக் கற்றோர் இதைச் சொல்கின்றனர்” என்றான் {துரியோதனன்}.(40)

சரத்வான் மகனான கிருபர், மன்னனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, அம்மன்னனின் உத்தரவின் பேரில் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைப்} படைத்தலைவனாக நிறுவினார்.(41) பட்டஞ்சூட்டல் முடிந்ததும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த மன்னர்களில் சிறந்தவனை ஆரத்தழுவிக் கொண்ட அஸ்வத்தாமன், தன் சிங்க முழக்கங்களால் பத்து புள்ளிகளையும் எதிரொலிக்கச் செய்து அந்த இடத்தை விட்டு அகன்றான்.(42) மன்னர்களில் முதன்மையானவனான துரியோதனன், அபரிமிதமான குருதியால் மறைக்கப்பட்டு, அனைத்துயிர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய அவ்விரவை அங்கேயே கழிக்கத் தொடங்கினான்.(43) போர்க்களத்தில் இருந்து விரைவாகச் சென்ற அவ்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துயரத்தால் கலங்கிய இதயங்களுடன், கவலையுடனும், மெய்யுறுதிப்பாடுடனும் சிந்திக்கத் தொடங்கினர்” {என்றான் சஞ்சயன்}.(44)

கதாயுத்த உப பர்வம் முற்றும்

சல்லியபர்வம் முற்றிற்று

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் -சல்லிய பர்வம்-சல்லிய வத பர்வம்-

October 15, 2025

தரையில் விழுந்துகிடந்த அரசசபை! – சல்லிய பர்வம் பகுதி – 01-கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு கௌரவர்கள் என்ன செய்தனர் என்று கேட்ட ஜனமேஜயன்; கர்ணனின் படுகொலையால் துரியோதனன் அடைந்த துயரம்; படைத்தலைவனாக நியமிக்கப்பட்ட சல்லியன்; நடுப்பகலில் யுதிஷ்டிரனால் கொல்லப்பட்ட சல்லியன்; பீமசேனனால் கொல்லப்பட்ட துரியோதனன்; பாண்டவப் படையை இரவில் அழித்த மூவர்; சஞ்சயனின் சொற்களைக் கேட்டு மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்; அரச மகளிரின் துயரம்; திருதராஷ்டிரனுக்கு ஆறுதலளித்த விதுரன்…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.ஜனமேஜயன், “ஓ! மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, அந்தப் போரில் இவ்வாறு சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கர்ணன் கொல்லப்பட்ட பிறகு, கௌரவர்களில் (கொல்லப்படாமல்) எஞ்சிய சிலர் என்ன செய்தனர்?(1) வலிமையிலும், சக்தியிலும் பெருகியிருந்த (பாண்டவர்களின்) படையைக் கண்டு, குரு இளவரசனான துரியோதனன், அந்த நேரத்திற்குத் தகுந்ததாக நினைத்துப் பாண்டவர்களிடம் எவ்வாறு நடந்து கொண்டான்?(2) இவை யாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {வைசம்பாயனரே} எனக்குச் சொல்வீராக. என் மூதாதையரின் பெரும் சாதனைகளைக் கேட்பதில் நான் ஒருபோதும் சலிப்படைவதில்லை” என்று கேட்டான்.(3)வைசம்பாயனர் சொன்னார், “கர்ணன் வீழ்ந்த பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரனின் மகனான சுயோதனன் {துரியோதனன்}, துன்பப்பெருங்கடலில் மூழ்கியவனாக, அனைத்துப் பக்கத்திலும் நம்பிக்கை இழந்த நிலையையே கண்டான்.(4) “ஐயோ, ஓ! கர்ணா, ஐயோ, ஓ! கர்ணா” என்று இடையறாத ஒப்பாரியில் ஈடுபட்ட அவன், பெரும் சிரமத்துடனும், தன் தரப்பில் கொல்லப்படாமல் எஞ்சிய மன்னர்கள் துணையுடனும் தன் பாசறையை அடைந்தான்.(5) சாத்திரங்கள் கற்பிக்கும் அற்புதக் காரணங்களைச் சொல்லி அம்மன்னர்கள் அவனைத் {துரியோதனனைத்} தேற்றினாலும் கூட, சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலையை நினைத்து அவனது மனம் அமைதியடையவில்லை.(6) {பிறகு}, விதியும், தேவையும் அனைத்திலும் பலமிக்கவை என்று கருதிய அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, போரிடுவதென உறுதியாகத் தீர்மானித்தான்.(7) தன் படைகளின் தலைவனாக முறையாகச் சல்லியனை நியமித்த அந்த மன்னர்களில் காளை {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தன் படைகளில் கொல்லப்படாமல் எஞ்சியிருப்போர் துணையுடன் போரிடச் சென்றான்.(8)

அப்போது, ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, தேவர்களுக்கும், அசுரரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பாகக் குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நடந்தது.(9) பிறகு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, பேரழிவை ஏற்படுத்திய சல்லியன், பெரும் எண்ணிக்கையிலான தன் துருப்புகளை இழந்து, இறுதியாக நடுப்பகல் வேளையில் யுதிஷ்டிரனால் கொல்லப்பட்டான்.(10) அப்போது தன் நண்பர்கள் மற்றும் சொந்தங்கள் அனைவரையும் இழந்த மன்னன் துரியோதனன், போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடி, தன் எதிரிகள் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக ஒரு பயங்கரமான தடாகத்தின் ஆழத்திற்குள் ஊடுருவிச் சென்றான்.(11) அந்நாளின் பிற்பகல் வேளையில், அந்தத் தடாகத்தை வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரால் சூழச் செய்த பீமசேனன், துரியோதனனை {தடாகத்திற்கு} வெளியே வரவைத்து, தன் பலத்தை வெளிப்படுத்தி வேகமாக அவனை {துரியோதனனைக்} கொன்றான்.(12)

துரியோதனன் கொல்லப்பட்ட பிறகு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, (குரு தரப்பில்) கொல்லப்படாமல் எஞ்சிய மூன்று தேரவீரர்கள் (அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர்), சினத்தால் நிறைந்து, இரவில் பாஞ்சாலத் துருப்புகளைக் கொன்றனர்.(13) அடுத்த நாள் காலையில், முகாமில் இருந்து புறப்பட்ட சஞ்சயன், சோகத்தாலும், கவலையாலும் நிறைந்து, உற்சாகமற்ற நிலையில் நகருக்குள் (குரு தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்}) நுழைந்தான்.(14) நகருக்குள் நுழைந்த அந்தச் சூதன் சஞ்சயன், துயரால் தன் கரங்களை உயர்த்தியபடியும், அங்கங்கள் நடுங்கிக் கொண்டும், மன்னனின் {திருதராஷ்டிரனின்} அரண்மனைக்குள் நுழைந்தான்.(15)

துயரால் நிறைந்த அவன் {சஞ்சயன்}, ஓ! மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, உரக்க அழுதபடியே, “ஐயோ, ஓ! மன்னா! ஐயோ, உயர் ஆன்ம ஏகாதிபதியின் {துரியோதனனின்} கொலையால் நாம் அனைவரும் அழிவையடைந்தோம்.(16) ஐயோ, சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையான வலிமையை உடைய நமது கூட்டாளிகள் {மன்னர்கள்} அனைவரும் பாண்டவர்களால் கொல்லப்பட்டதால், காலனே அனைத்திலும் பலமிக்கவனும், தன் வழியில் கோணலானவனும் ஆவான்[1].” என்றான்.(17) ஓ! மன்னா {ஜனமேஜயா}, “சஞ்சயன் அந்த அவல நிலையில் நகருக்கு திரும்பியதைக் கண்ட மக்கள் அனைவரும், ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பெரும் துயரால் நிறைந்து, “ஐயோ, ஓ! மன்னா!” என்று சொல்லி உரக்க அழுதனர்.(18) ஓ! மனிதர்களில் புலியே, துரியோதனனின் மரணத்தைக் கேட்டு, குழந்தைகள் உட்பட அனைத்துப் பக்கங்களிலும் மொத்த நகரமும் ஒப்பாரியிட்டது.(19) துன்பத்தில் ஆழமாகப் பீடிக்கப்பட்டிருந்த ஆண்களும், பெண்களும் என அனைவரும், தங்கள் புலனுணர்வை இழந்து, பைத்தியக்காரர்களுக்கு ஒப்பாக அங்கேயும் இங்கேயும் ஓடுவதை நாங்கள் கண்டோம்[2].(20)

மிகவும் கலங்கிப் போயிருந்த அந்தச் சூதன் சஞ்சயன், மன்னனின் {திருதராஷ்டிரனின்} வசிப்பிடத்திற்குள் நுழைந்து, ஏகாதிபதிகளில் முதன்மையானவனும், தன் கண்களையே அறிவாகக் கொண்டவனுமான அந்த மனிதர்களின் தலைவனை {திருதராஷ்டிரனைக்} கண்டான்.(21) பாவமற்ற ஏகாதிபதியான அந்தப் பாரதக் குலத்தின் தலைவன் {திருதராஷ்டிரன்}, தன் மருமகள்கள், காந்தாரி, விதுரன் ஆகியோரும், எப்போதும் தன் நலன்விரும்பிகளாக இருந்த பிற நண்பர்களும், உறவினர்களும் சூழ அமர்ந்திருப்பதையும்,(22) கர்ணனின் மரணத்தையே நினைத்துக் கொண்டிருப்பதையும் கண்ட அந்தச் சூதன் சஞ்சயன், ஓ! ஜனமேஜயா, இதயம் நிறைந்த துயரத்துடனும், கண்ணீரால் தடைபட்ட குரலுடனும் அழுதுகொண்டே அவனிடம், “ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, நான் சஞ்சயன் {வந்திருக்கிறேன்}. ஓ! பாரதக் குலத்தின் காளையே, நான் உம்மை வணங்குகிறேன்.(23,24) மத்ரர்களின் ஆட்சியாளன் சல்லியன் கொல்லப்பட்டான். அதே போலச் சுபலனின் மகனான சகுனியும், அந்தச் சூதாடியின் வீர மகனான உலூகனும் கொல்லப்பட்டனர்.(25)

சம்சப்தகர்கள் அனைவரும், சகர்களோடு கூடிய காம்போஜர்களும், மிலேச்சர்களும், மலைவாசிகளும், யவனர்களும் கூடக் கொல்லப்பட்டனர்.(26) ஓ! ஏகதிபதி {திருதராஷ்டிரரே}, கிழக்கத்தியர்களும், தெற்கத்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, வடக்கத்தியர்கள் மற்றும் மேற்கத்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(27) ஓ! ஏகாதிபதி, மன்னர்கள் அனைவரும், இளவரசர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். மன்னன் துரியோதனனும், பாண்டுவின் மகனால் {பீமனால்}, அவனது சபத்தின்படியே கொல்லப்பட்டான்.(28) ஓ! ஏகாதிபதி, முறிந்த தொடைகளுடன், குருதியில் நனைந்து, புழுதியில் இப்போது அவன் கிடக்கிறான். ஓ! மன்னா, திருஷ்டத்யும்னனும், வெல்லப்பட முடியாத சிகண்டியும் கூடக் கொல்லப்பட்டனர்.(29) ஓ! மன்னா, உத்தமௌஜஸ், யுதாமன்யு, பிரபத்ரகர்கள், மனிதர்களில் புலிகளான பாஞ்சாலர்கள் மற்றும் சேதிகள் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.(30)

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் அனைவரும், திரௌபதியின் மகன்களும் (ஐவரும்) கூடக் கொல்லப்பட்டனர். வீரனும், கர்ணனின் வலிமைமிக்க மகனுமான விருஷசேனனும் கொல்லப்பட்டான்.(31) (அங்கே கூடியிருந்த) மனிதர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். யானைகள் அனைத்தும் கொல்லப்பட்டன. ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்கள் அனைவரும் போரில் வீழ்ந்தனர், குதிரைகள் அனைத்தும்கூட வீழ்ந்தன.(32) ஓ! தலைவா, உமது தரப்பில் மிகச் சிலரே உயிரோடுள்ளனர். பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஒருவரோடொருவர் மோதிக்கொண்டதன் விளைவாக,(33) காலத்தால் திகைப்படையச் செய்யப்பட்ட இந்த உலகமானது இப்போது பெண்களை மட்டுமே கொண்டிருக்கிறது. பாண்டவர்களின் தரப்பில் எழுவர் உயிரோடிருக்கின்றனர், தார்தராஷ்டிரர்களிலோ மூவர் அவ்வாறு {உயிரோடு} இருக்கின்றனர்.(34) ஐந்து (பாண்டவ) சகோதரர்கள், வாசுதேவன் {கிருஷ்ணன்}, சாத்யகி, கிருபர், கிருதவர்மன், வெற்றியாளர்களில் முதன்மையான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோரே அவர்கள்.(35)

ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, உமது தரப்பில் திரட்டப்பட்ட அக்ஷௌஹிணிகள் அனைத்திலும் பிழைத்திருப்போர் இந்தத் தேர்வீரர்கள் மூவர் மட்டுமே.(36) பிழைத்திருப்போர் இவர்களே, எஞ்சியோர் {அனைவரும்} அழிந்துவிட்டனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரியோதனனையும், (பாண்டவர்களிடம்) அவன் கொண்ட பகைமையையும் காரணமாகக் கொண்டு, காலத்தால் மொத்த உலகமும் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது” என்றான் {சஞ்சயன்}.”(37)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மனிதர்களின் ஆட்சியாளனான திருதராஷ்டிரன், இந்தக் கொடுமொழியைக் கேட்டுத் தன் புலனுணர்வுகளை இழந்து பூமியில் விழுந்தான்.(38) மன்னன் கீழே விழுந்ததும், ஓ! ஏகாதிபதி, மன்னனின் துயரைக் கண்டவனும், பெரும்புகழைக் கொண்டவனுமான விதுரனும் சோகத்தால் பீடிக்கப்பட்டுப் பூமியில் விழுந்தான்.(39) ஓ! மன்னர்களின் சிறந்தவனே {ஜனமேஜயா}, காந்தாரியும், குரு பெண்கள் அனைவரும், இந்தக் கொடுஞ்சொற்களைக் கேட்டுத் திடீரெனத் தரையில் விழுந்தனர்.(40) பெரிய துணியில் வரையப்பட்ட வடிவங்களைப் போல, அரச மக்களின் அந்த மொத்த சபையும், தங்கள் புலனுணர்வை இழந்து, அறிவுபிறழ்ந்த நிலையில் பிதற்றிக் கொண்டே தரையில் கிடந்தது.(41) அப்போது பூமியின் தலைவனான மன்னன் திருதராஷ்டிரன், தன் மகன்களின் மரணத்தினால் உண்டான துயரில் பீடிக்கப்பட்டு, மெதுவாகவும், மிகுந்த சிரமத்துடனும் தன் உயிர் மூச்சை மீட்டெடுத்தான்.(42)

தன் புலனுணர்வை மீண்டும் அடைந்த அம்மன்னன் {திருதராஷ்டிரன்}, நடுங்கும் அங்கங்களுடனும், கவலை நிறைந்த இதயத்துடனும் தன் முகத்தை அனைத்துப் பக்கங்களிலும் திருப்பியபடி, க்ஷத்ரியிடம் (விதுரனிடம்) இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(43) “ஓ! கல்விமானான க்ஷத்ரியே {விதுரா}, ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, நீயே இப்போது எனது புகலிடமாவாய். என் மகன்கள் அனைவரையும் இழந்த நான், {இப்போது} தலைவனற்றவனாக இருக்கிறேன்” என்றான்.(44) இதைச் சொன்ன அவன், மீண்டும் தன் புலனுணர்வுகளை இழந்து கீழே விழுந்தான். கீழே விழுந்த அவனைக் கண்டவர்களும், அங்கிருந்தவர்களுமான அவனது உறவினர்கள் அனைவரும்,(45) அவன் மீது குளிர்ந்த நீரைத் தெளித்து, விசிறிகளால் அவனுக்கு வீசியும்விட்டனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு தேறுதலடைந்த அந்தப் பூமியின் தலைவன் {திருதராஷ்டிரன்},(46) தன் மகன்களுடைய மரணத்தின் நிமித்தமாகக் கவலையால் பீடிக்கபட்டு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, குடத்திலிட்ட பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டபடியே அமைதியாக இருந்தான்.(47) இவ்வாறு பீடிக்கப்பட்ட மன்னனைக் கண்டு சஞ்சயனும் அழுதான். மங்கையர் அனைவரும், பெரும் புகழைக் கொண்ட காந்தாரியும் கூட அவ்வாறே செய்தனர் {அழுதனர்}.(48)ஓ! மனிதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, மீண்டும் மீண்டும் மயங்கி விழுந்த திருதராஷ்டிரன், நீண்ட நேரத்திற்குப் பிறகு, விதுரனிடம்,(49) “மகளிர் அனைவரும் செல்லட்டும், பெரும்புகழைக் கொண்ட காந்தாரியும், இந்த நண்பர்கள் அனைவரும் செல்லட்டும். என் மனம் மிகவும் கலங்கியிருக்கிறது” என்றான்.(50) இவ்வாறு சொல்லப்பட்ட விதுரன், ஓ! பாரதக் குலத்தின் காளையே, மீண்டும் மீண்டும் நடுங்கிக் கொண்டே மெதுவாக மங்கையரை அனுப்பிவைத்தான்.(51) ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஆழமாகப் பீடிக்கப்பட்ட மன்னனைக் கண்டு, அந்த மங்கையர் அனைவரும், நண்பர்கள் அனைவரும் {அங்கிருந்து} சென்றனர்.(52) அப்போது சஞ்சயன், ஓ! எதிரிகளை எரிப்பவனே {ஜனமேஜயா}, புலனுணர்வு மீண்டவனும், பெரும் துன்பத்தால் அழுது கொண்டிருந்தவனுமான மன்னனை உற்சாகமில்லாமல் கண்டான்.(53) பிறகு விதுரன், இடையறாமல் அழுது கொண்டிருந்த அந்த மனிதர்களின் ஆட்சியாளனுக்கு {திருதராஷ்டிரனுக்கு}, கூப்பிய கரங்களுடனும், இனிய சொற்களுடனும் தேறுதல் கூறினான்” {என்றார் வைசம்பாயனர்}.(54)

துரியோதனனின் அன்புமொழிகளை இனி எப்போது கேட்பேன்? – சல்லிய பர்வம் பகுதி – 02-திருதராஷ்டிரன் புலம்பல்; துரியோதனனின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த திருதராஷ்டிரன்; விதியை நொந்து கொண்டது; விதுரனின் ஆலோசனைகளைக் கேட்காமல் போனதற்காக வருந்தியது; போர் நடந்த முறையை விவரமாகச் சொல்லுமாறு சஞ்சயனைப் பணித்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “{அங்கிருந்து} மகளிர் {அனைவரும்} அனுப்பப்பட்ட பிறகு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், முன்பைவிடப் பெருந்துயரில் மூழ்கிப் புலம்பத் தொடங்கினான். புகைக்கு ஒப்பான பெருமூச்சுகளைவிட்டபடியே, மீண்டும் மீண்டும் தன் கரங்களை அசைத்துக் கொண்டு, சிறிது நேரம் சிந்தித்த அவன் {திருதராஷ்டிரன்}, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(2)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஐயோ, ஓ! சூதா {சஞ்சயா}, போரில் எந்த இழப்பையும் சந்திக்காமல், பாண்டவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று உன்னிடம் இருந்து நான் கேட்கும் செய்தி துயர் மிகுந்ததாகும்.(3) என் மகன்கள் வீழ்ந்ததைக் கேட்டும் நொறுங்காமல் இருப்பதால், கடுமையான என் இதயம் வஜ்ரத்தின் தன்மையைக் கொண்டது என்பதில் ஐயமில்லை.(4) ஓ! சஞ்சயா, அவர்களது வயது, பிள்ளைப்பருவத்தில் அவர்களின் விளையாட்டுகள் ஆகியவற்றை நினைத்தும், இன்று அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர் என்பதை அறிந்தும் என் இதயம் துண்டுகளாக நொறுங்குவதாகத் தெரிகிறது.(5) பார்வையற்றதன் விளைவால், நான் அவர்களின் வடிவங்களைப் பார்த்ததில்லை என்றாலும், பிள்ளைகளிடம் ஒருவன் கொள்ளும் பாசத்தின் விளைவால், அவர்களிடம் நான் பேரன்பைக் கொண்டிருந்தேன்.(6) ஓ! பாவமற்றவனே, பிள்ளைப்பருவத்தைக் கடந்து, ஆண்மையின் தொடக்கமான இளமைப் பருவத்திற்குள் அவர்கள் நுழைந்துவிட்டார்கள் என்று கேட்டதும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.(7) இன்று செழிப்பையும், சக்தியையும் இழந்த நிலையில் அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று கேட்டதும், அவர்களுக்கு நேர்ந்த துயரால் ஏற்பட்ட கவலையில் மூழ்கி, மன அமைதியை அடைய முடியாதவனாக நான் இருக்கிறேன்.(8) {இவ்வாறு சஞ்சயனிடம் பேசிக் கொண்டிருந்த திருதராஷ்டிரன், துரியோதனனை நினைத்துப் பின்வருமாறு புலம்பத் தொடங்கினான்}

வா, ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, இப்போது பாதுகாவலனற்றவனாக இருக்கும் என்னிடம் வருவாயாக. ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, உன்னை இழந்தவனான நான், எந்த அவல நிலையை அடைவேனோ?(9) ஓ! ஐயா, கூடியிருக்கும் மன்னர்களை விட்டுவிட்டு, சாதாரணமான ஓர் இழிந்த மன்னனைப் போல உயிரையிழந்து வெறுந்தரையில் ஏன் நீ கிடக்கிறாய்?(10) ஓ! ஏகாதிபதி, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் புகலிடமாய் இருந்தவனே, ஓ! வீரா, குருடனும், கிழவனுமான என்னைவிட்டு நீ எங்கே சென்றுவிட்டாய்?(11) ஓ! மன்னா {துரியோதனா}, உன்னுடைய அந்தக் கருணையும், அந்த அன்பும், அந்த மரியாதையும் இப்போது எங்கே? போரில் வெல்லப்பட முடியாதவனான நீ, ஐயோ, எவ்வாறு பார்த்தர்களால் கொல்லப்பட்டாய்?(12) உறக்கத்திலிருந்து சரியான நேரத்தில் விழிக்கும் என்னை, அன்பு மற்றும் மரியாதை நிறைந்த வார்த்தைகளால், “ஓ! அப்பா, ஓ! அப்பா, ஓ! பெரும் மன்னா, ஓ! உலகத்தின் தலைவா” என்று இனி அழைக்கப்போவது எவன்?(13) கண்ணீர் நிறைந்த கண்களுடன் என் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “ஓ! குருகுலத்தவரே, எனக்கு ஆணையிடுவீராக” என்று இனி என்னிடம் கேட்கப் போவது எவன்?(14)

ஓ! அன்புக்குழந்தாய், உன் உதடுகளில் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டேனே, “இந்தப் பரந்த உலகம் பிருதையின் {குந்தியின்} மகனுக்கு எவ்வளவோ, அவ்வளவு நமக்கும் இருக்கிறது[1].(15) பகதத்தர், கிருபர், சல்லியர், அவந்தியின் இளவரசர்கள் இருவர் {விந்தன் மற்றும் அனுவிந்தன்}, ஜெயத்ரதன், பூரிஸ்ரவஸ், சலன், சோமதத்தர், பாஹ்லீகர்,(16) அஸ்வத்தாமர், போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, மகதத்தின் வலிமைமிக்க இளவரசன், பிருஹத்பலன், காசிகளின் ஆட்சியாளன், சுபலனின் மகன் சகுனி,(17) பல்லாயிரக்கணக்கான மிலேச்சர்கள், சகர்கள், யவனர்கள், கம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன், திரிகர்த்தர்களின் மன்னன் {சுசர்மன்},(18) பாட்டன் பீஷ்மர், பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கௌதமரின் மகன் {கிருபர்}[2]சுருதாயுஷ், அஸ்ருதாயுஷ், பெரும் சக்தி கொண்ட சதாயுஷ்,(19) ஜலசந்தன், ரிஷ்யசிருங்கனின் மகன் {ஆர்ஷ்யஸ்ருங்கி}, ராட்சசன் அலாயுதன், வலிய கரங்களைக் கொண்ட அலம்புசன், பெரும் தேர்வீரனான சுபாகு ஆகிய இவர்களும், இன்னும் எண்ணற்ற பிற மன்னர்களும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, பெரும்போரில் என் நிமித்தமாகத் தங்கள் உயிரையே விடச் சித்தமாயிருக்கிறார்கள்.(21) களத்தில் இவர்களுக்கு மத்தியில், என் தம்பிகள் சூழ நிற்கும் நான், ஓ! மன்னர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, பார்த்தர்கள், பாஞ்சாலர்கள்,(22) சேதிகள், திரௌபதியின் மகன்கள், சாத்யகி, குந்திபோஜன், ராட்சசன் கடோத்கசன் ஆகிய அனைவருடனும் போரிடவேன்.(23) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட இவர்களில் ஒருவனே கூட, ஓ! மன்னா, போரில் தன்னை நோக்கி விரையும் பாண்டவர்களைத் தடுக்க இயன்றவனே.(24) {அப்படியிருக்கையில்}, பாண்டவர்களோடு பகை கொண்டவர்களும், வீரர்களுமான இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும் என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஓ! ஏகாதிபதி, இவர்கள் அனைவரும் பாண்டவர்களைப் பின்தொடர்வோருடன் போரிட்டு, அவர்களைப் போரில் கொல்வார்கள்.(25) கர்ணன் மட்டுமே கூட, என்னுடன் சேர்ந்து பாண்டவர்களைக் கொன்றுவிடுவான். பிறகு வீர மன்னர்கள் அனைவரும் என் அதிகாரத்தின் கீழ் வாழ்வார்கள்.(26) ஓ! மன்னா, எவன் அவர்களுக்குத் தலைவனோ, அந்த வலிமைமிக்க வாசுதேவன் {கிருஷ்ணன்}, கவசந்தரிக்கமாட்டேன் என்று என்னிடம் சொல்லியிருக்கிறான்”.(27) {என்று துரியோதனனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து சொன்ன திருதராஷ்டிரன், சஞ்சயனிடம் திரும்பி}, இவ்வாறே, ஓ! சூதா {சஞ்சயா}, துரியோதனன் எப்போதும் என்னிடம் பேசுவான். இதைக் கேட்டே நானும் போரில் பாண்டவர்கள் கொல்லப்படுவார்கள் என்று நம்பினேன்.(28) எனினும், என் மகன்கள் அனைவரும், அந்த வீரர்களுக்கு மத்தியில் நின்று போரில் தீவிரமாக முயன்று கொண்டிருந்த போது கொல்லப்பட்டார்கள் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(29)

உலகின் தலைவரான வீரப் பீஷ்மர், சிகண்டியோடு மோதி, நரியால் கொல்லப்படும் சிங்கமாக மரணத்தை அடைந்தார் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(30) தாக்குதல் மற்றும் தற்காத்தல் ஆகியவற்றுக்கு உண்டான ஆயுதங்கள் அனைத்தின் ஆசானான பிராமணர் துரோணர், போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்டார் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(31) பூரிஸ்ரவஸ், சோமதத்தன், மன்னர் பாஹ்லீகர் ஆகியோரும் போரில் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(32) யானைகளின் முதுகுகளில் இருந்து போரிடம் திறன்பெற்ற பகதத்தன் கொல்லப்பட்டான், ஜெயத்ரதனும் கொல்லப்பட்டான் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(33) சுதக்ஷிணன், பூரு குலத்தின் ஜலசந்தன், சுருதாயுஷ், அஸ்ருதாயுஷ் ஆகியோரும் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(34) ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமைமிக்கவனுமான பாண்டியன் {சாரங்கத்வஜன்}, போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்டான். இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(35)

பிருஹத்பலன் கொல்லப்பட்டான், மகதர்களின் வலிமைமிக்க மன்னன், வீர உக்ராயுதன், அந்த வகை வில்லாளிகள் அனைவரும்,(36) அவந்தியின் இளவரசர்கள் இருவரும் (விந்தன் மற்றும் அனுவிந்தன்), திரிகர்த்தர்களின் மன்னன் {சுசர்மன்}, எண்ணற்ற சம்சப்தகர்கள் ஆகியோரும் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(37) மன்னன் அலம்புசன், ராட்சசன் அலாயுதன், ரிஷ்யசிருங்கன் மகன் {ஆர்ஷ்யசிருங்கி} ஆகியோர் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(38) நாராயணர்கள், கோபாலர்கள் ஆகியரை உள்ளடக்கிய, போரில் வெல்லப்பட முடியாத உருப்புகளும், பல்லாயிரம் மிலேச்சர்களும் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(39) சுபலனின் மகன் சகுனி, சூதாடியின் மகன் என்றழைக்கப்படுபவனும், தன் படைகளின் தலைமையில் நிற்கும் வீரனுமான வலிமைமிக்க உலூகன் ஆகியோர் கொல்லப்பட்டர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(40)

தாக்குதல் மற்றும் தற்காத்தல் ஆகியவற்றுக்கு உண்டான ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவர்களும், ஓ! சூதா, சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையான ஆற்றலைக் கொண்டவர்களுமான எண்ணிலடங்கா உயர் ஆன்ம வீரர்கள் ஆகியோரும்,(41) பல்வேறு ஆட்சிப்பகுதிகளைச் சேர்ந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(42) பெரும் வலிமை கொண்டவர்களான என் மகன்கள், என் பேரப்பிள்ளைகள், என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் கொல்லப்பட்டனர் என்றால், இது விதியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?(43) விதிக்கு உட்பட்டே மனிதன் பிறப்பை எய்துகிறான் என்பதில் ஐயமில்லை. நற்பேறு பெற்ற மனிதனே நன்மையைச் சந்திக்கிறான்.(44) ஓ! சஞ்சயா, நான் நற்பேற்றை இழந்தவனாதலால், என் பிள்ளைகளை இழந்தேன். கிழவனான நான், இப்போது என் எதிரிகளின் ஆளுகைக்கு எவ்வாறு அடிபணிவது?(45)

ஓ! தலைவா {சஞ்சயா}, நாடுகடந்து காடுகளுக்குச் செல்வதைத் தவிர எனக்கு நன்மை வேறேதும் இல்லை என நான் நினைக்கிறேன். உறவினர்களையும், சொந்தங்களையும் இழந்தவனாக இருப்பதால், நான் காடுகளுக்கே செல்லப் போகிறேன்.(46) ஓ! சஞ்சயா, சிறகுகளை இழந்து அவல நிலையில் வீழ்ந்திருக்கும் எனக்கு, நாடுகடந்து காடுகளுக்குச் செல்வதைத் தவிர வேறேதும் சிறந்ததாக இருக்க முடியாது.(47) துரியோதனன், சல்லியன், துச்சாசனன், விவிம்சன், வலிமைமிக்க விகர்ணன் ஆகியோர் கொல்லப்பட்ட பிறகு,(48) போரில் ஒருவனாகவே என் நூறு மகன்களைக் கொன்ற பீமசேனனின் முழக்கங்களை நான் எவ்வாறு தாங்கிக் கொள்ளப் போகிறேன்?(49) அவன் {பீமன்}, நான் கேட்டுக் கொண்டிருக்கும்போதே துரியோதனனின் படுகொலையை அடிக்கடிப் பேசுவான். துயரிலும், கவலையிலும் எரிந்து கொண்டிருக்கும் என்னால் அவனது கொடுஞ்சொற்களைத் தாங்கிக் கொள்ள இயலாது” என்றான் {திருதராஷ்டிரன்}.”(50)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறே உறவினர்கள் மற்றும் சொந்தங்களை இழந்தவனும், துயரில் எரிந்து கொண்டிருந்தவனுமான அந்த மன்னன் {திருதராஷ்டிரரன்}, தன் மகன்களின் மரணத்தால் உண்டான சோகத்தில் மூழ்கி மீண்டும் மீண்டும் மயங்கி விழுந்தான்.(51) நீண்ட நேரம் அழுத பிறகு, தன் தோல்வியை எண்ணியவனும், அம்பிகையின் மகனுமான திருதராஷ்டிரன் சூடான பெருமூச்சுகளை விட்டான்.(52) கவலையில் மூழ்கி, துயரில் எரிந்து கொண்டிருந்த அந்தப் பாரதக் குலத்துக் காளை {திருதராஷ்டிரன்}, என்ன நடந்தது என்ற விபரங்களைக் கவல்கணன் மகனான தன் தேரோட்டி சஞ்சயனிடம் மீண்டும் கேட்டான்.(53)

திருதராஷ்டிரன், “பீஷ்மரும், துரோணரும் கொல்லப்பட்ட பிறகு, சூதன் மகனும் {கர்ணனும்} வீழ்ந்த பிறகு, என் போர்வீரர்கள் யாரைத் தங்கள் படைத்தலைவனாகக் கொண்டனர்?(54) போரில் என் வீரர்கள் யாரைத் தங்கள் படைத்தலைவனாக்குகிறார்களோ அவரை எந்தத் தாமதமும் இல்லாமல் பாண்டவர்கள் கொன்று வருகின்றனர்.(55) நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால், போரின் முன்னணியில் பீஷ்மர் கொல்லப்பட்டார். துரோணரும் நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்டார்.(56) அதே போலவே சூதன் மகனான வீரக் கர்ணனும், மன்னர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(57)

துரியோதனனுடைய குற்றத்தின் மூலம் இந்தப் பூமியின் மக்கள்தொகை அழிக்கப்படும் என்று நீண்ட காலத்திற்கு முன்பே உயர் ஆன்ம விதுரன் என்னிடம் சொன்னான்.(58) காரியங்களில் தங்கள் கண்களைச் செலுத்தினாலும், அவற்றைப் பார்க்காத மூடர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மூடனான எனக்கு விதுரனின் சொற்கள் அவ்வாறே ஆகின.(59) அனைத்தின் தன்மைகளையும் அறிந்த நீதிமிக்க ஆன்மாவான விதுரனின் சொற்கள் உண்மையைத் தவிர வேறேதும் இல்லை என்பதால், அப்போது அவன் என்ன சொன்னானோ, சரியாக அதுவே நடந்திருக்கிறது.(60) விதியால் பீடிக்கப்பட்ட நான், அந்தச் சொற்களின்படி நடந்து கொள்ளவில்லை. அத்தீய வழியின் கனிகளே இப்போது தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. ஓ! கவல்கணன் மகனே {சஞ்சயா}, மீண்டும் அவற்றை எனக்கு விவரிப்பாயாக.(61) கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு எவன் நமது படையின் தலைவனானான்? அர்ஜுனனையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} எதிர்த்துச் சென்ற தேர்வீரன் எவன்?(62) போரில் மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} வலது சக்கரத்தைப் பாதுகாத்தவர்கள் யாவர்? அந்த வீரன் {சல்லியன்} போரிடச் சென்ற போது, அவனது இடது சக்கரத்தைப் பாதுகாத்தவர்கள் யாவர்?அவனது பின்புறத்தைப் பாதுகாத்தது யார்?(63)

நீங்கள் அனைவரும் ஒன்றாக இருந்தபோது, ஓ! சஞ்சயா, வலிமைமிக்க மத்ரர்களின் மன்னனையும் {சல்லியனையும்}, எனது மகனையும் {துரியோதனனையும்} பாண்டவர்களால் எவ்வாறு கொல்ல முடிந்தது?(64) பாரதர்கள் பேரழிவை அடைந்த விவரங்களை எனக்குச் சொல்வாயாக. என் மகன் துரியோதனன் போரில் எவ்வாறு வீழ்ந்தான், என்பதை எனக்குச் சொல்வாயாக.(65) பாஞ்சாலர்கள், அவர்களைப் பின்தொடர்ந்தவர்கள், திருஷ்டத்யும்னன், சிகண்டி, திரௌபதியின் மகன்கள் ஐவர் ஆகியோர் அனைவரும் எவ்வாறு வீழ்ந்தனர் என்பதை எனக்குச் சொல்வாயாக.(66) பாண்டவர்கள் (ஐவர்), சாத்வதர்கள் இருவர் (கிருஷ்ணன் மற்றும் சாத்யகி), கிருபர், கிருதவர்மன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர் உயிருடன் தப்பியது எவ்வாறு என்பதை எனக்குச் சொல்வாயாக.(67) போர் நடந்த முறை, அந்தப் போரின் தன்மை ஆகியவை அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ! சஞ்சயா, உரைப்பதில் நீ திறம் பெற்றவனாய் இருக்கிறாய். அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.”(68)

துரியோதனனின் வீர உரை! – சல்லிய பர்வம் பகுதி – 03-கர்ணன் கொல்லப்பட்ட பிறகு தப்பி ஓடிய கௌரவப்படையின் நிலை; தன் சாரதியிடம் பேசிய துரியோதனன்; இருபத்தைந்தாயிரம் பேரைத் தன் கதாயுதத்தால் கொன்ற பீமசேனன்; திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன் மற்றும் சாத்யகி ஆகியோர் செய்த போர்; பாண்டவர்கள் அனைவரையும் தடுத்த துரியோதனன்; மீண்டும் தப்பி ஓடிய கௌரவப் படை; துரியோதனன் ஆற்றிய வீர உரை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருக்களும், பாண்டவர்களும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டபோது, பேரழிவு நடந்தது எவ்வாறு என்பதைக் கவனமாகக் கேட்பீராக.(1) பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {அர்ஜுனனால்}, சூதன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டபிறகு, மீண்டும் மீண்டும் துருப்புகள் திரட்டப்பட்டு, மீண்டும் மீண்டும் அவை தப்பி ஓடிய பிறகு,(2) கர்ணனின் மரணத்தை அடுத்து நடந்த போரில் மனிதர்களுக்குப் பேரழிவு நேர்ந்த பிறகு, பார்த்தன் {அர்ஜுனன்} சிங்க முழக்கங்களைச் செய்தான். அந்நேரத்தில் உமது மகன்களின் இதயங்களில் பேரச்சம் நுழைந்தது.(3) உண்மையில், கர்ணனின் மரணத்திற்குப் பிறகு, உமது படையில் எவனாலும், துருப்புகளைத் திரட்டுவதிலோ, தன் ஆற்றலை வெளிக்காட்டுவதிலோ தன் இதயத்தை நிலைநிறுத்த முடியவில்லை.(4) அடியற்ற பெருங்கடலில் தங்களைக் காத்துக் கொள்ள ஒரு தெப்பம் இல்லாத கப்பலுடைந்த வியாபாரிகளைப் போல அவர்கள் தெரிந்தனர். தங்கள் பாதுகாவலன் {கர்ணன்}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் கொல்லப்பட்ட போது, அவர்கள் பரந்த கடலில் இருந்து பாதுகாப்பாக ஏதோ ஒரு கரையை அடைய விரும்பும் மனிதர்களைப் போல இருந்தனர்.(5) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலைக்குப் பின்னர் கணைகளால் சிதைக்கப்பட்டுப் பீதியடைந்த உமது துருப்பினர், பாதுகாவலனை விரும்பும் பாதுகாப்பற்ற மனிதர்களைப் போலவோ, சிங்கத்தால் பீடிக்கப்படும் மான்கூட்டம் போலவோ இருந்தனர்.(6)

சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வெல்லப்பட்ட அவர்கள், கொம்புகளொடிந்த காளைகளைப் போலவோ, நச்சுப்பற்கள் உடைபட்ட பாம்புகளைப் போலவோ மாலை வேளையில் திரும்பினார்கள்.(7) அவர்களது வீரர்களில் முதன்மையானவர்கள் கொல்லப்பட்டதும், கூரிய கணைகளால் துளைக்கப்பட்டுக் குழம்பிய உமது மகன்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலைக்குப் பின்னர் அச்சத்தால் தப்பி ஓடினர்.(8) ஆயுதங்கள் மற்றும் கவசங்களை இழந்த அவர்கள் அனைவரும், தங்கள் புலனுணர்வுகளையும் இழந்து எந்தத் திசையில் ஓடுவது என்பதை அறியாதிருந்தனர். அச்சத்தால் அனைத்துப் பக்கங்களிலும் தங்கள் கண்களைச் செலுத்திக்கொண்டே அவர்களில் பலர் ஒருவரையொருவர் கொல்லத் தொடங்கினர்.(9) பலர், “என்னைத்தான் பீபத்சு {அர்ஜுனன்} பின்தொடர்ந்து வருகிறான். என்னைத்தான் விருகோதரன் {பீமன்} பின்தொடர்ந்து வருகிறான்” என்றெண்ணி கீழே விழுந்தனர், அல்லது வாட்டமடைந்தனர்.(10)

சிலர் வேகமாகக் குதிரைகளைச் செலுத்திக் கொண்டும், சிலர் வேகமான தேர்களிலும், சிலர் வேகமான யானைகளிலும், எனப் பெரும் தேர்வீரர்கள் பலர், காலாட்படைவீரர்களைக் கைவிட்டுவிட்டு அச்சத்தால் தப்பி ஓடினர்.(11) களத்தில் இருந்து அவர்கள் தப்பி ஓடியபோது, யானைகளால் தேர்கள் உடைக்கப்பட்டன, பெரும் தேர்வீரர்களால் குதிரைவீரர்கள் நொறுக்கப்பட்டனர், குதிரைக்கூட்டங்களால் காலாட்படையினர் நசுக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.(12) சூதன் மகனின் {கர்ணனின்} வீழ்ச்சிக்குப் பிறகு, கள்வர்களும், இரைதேடும் விலங்குகளும் நிறைந்த காட்டில் வணிகர்க்கூட்டத்திலிருந்து பிரிந்து சென்றவர்களைப்போல உமது துருப்பினர் இருந்தனர்.(13) பாகர்கள் கொல்லப்பட்ட சில யானைகளும், துதிக்கைகள் வெட்டப்பட்ட சில யானைகளும் அச்சத்தால் பீடிக்கப்பட்டு, மொத்த உலகமும் பார்த்தனால் {அர்ஜுனனால்} நிறைந்திருப்பதைப் போலக் கண்டன.(14)

பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டுத் தப்பி ஓடும் தன் துருப்புகளைக் கண்ட துரியோதனன், ஓ! என்றும் ஐயோ! என்று கதறிக் கொண்டே தன் சாரதியிடம்,(15) “வில் தரித்துக் கொண்டு, படையின் பின்புறத்தில் நான் நிலைகொண்டால், பார்த்தனால் என்னை மீறிச் செல்ல இயலாது. எனவே, குதிரைகளை வேகமாகச் செலுத்துவாயாக.(16) போரில் நான் என் வீரத்தை வெளிப்படுத்தினால், கரைகளை ஒருபோதும் மீறத் துணியாத பெருங்கடலைப் போலவே குந்தியின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} என்னை மீறத் துணிய மாட்டான்.(17) இன்று, அர்ஜுனன், கோவிந்தன் {கிருஷ்ணன்}, செருக்கு மிக்க விருகோதரன் {பீமன்} மற்றும் எஞ்சியிருக்கும் என் எதிரிகளையும் கொன்றுவிட்டு, கர்ணனுக்கு நான் பட்டிருக்கும் கடனிலிருந்து விடுபடுவேன்” என்றான் {துரியோதனன்}.(18) இவ்வாறு வீரனாகவும், மதிப்புமிக்க மனிதனாகவும் மாறிய குருமன்னனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அவனது சாரதி, தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் குதிரைகளை மெதுவாகவே தூண்டினான்.(19) அந்நேரத்தில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களை இழந்த துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் பலரும், இருபத்தைந்தாயிரம் {25,000} காலாட்படை வீரர்களும் (போரிடுவதற்காக) மெதுவாகச் சென்றனர்.(20)

அப்போது கோபத்தால் நிறைந்த பீமசேனனும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனும் நால்வகைப் படைகளின் துணையுடன் அந்தத் துருப்புகளைச் சூழ்ந்து கொண்டு, கணைகளால் அவர்களை அழித்தனர்.(21) அவர்கள் அனைவரும் பீமனுடனும், பிருஷதன் மகனுடனும் {திருஷ்டத்யும்னனுடனும்} தீவிரமாகப் போரிட்டனர். அவர்களில் பலர், அந்தப் பாண்டவ வீரர்கள் இருவரின் பெயர்களையும் சொல்லி அவர்களை அறைகூவியழைத்தனர்.(22) போரில் அவர்களால் சூழப்பட்ட பீமன் அவர்களிடம் சினம் கொண்டவனானான். வேகமாகத் தன் தேரில் இருந்து இறங்கிய அவன் {பீமன்}, தன் கதாயுதத்தைக் கொண்டு போரிடத் தொடங்கினான்.(23) தன் சொந்த கரங்களின் பலத்தைச் சார்ந்திருந்தவனும், குந்தியின் மகனுமான விருகோதரன் {பீமன்}, தேரில் இருந்தவனானாலும், நியாயமான போர்விதிகளை நோற்பவனாக, தரையில் இருந்த அந்த எதிரிகளோடு போரிடவில்லை.(24) முழுக்க இரும்பாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டும், தாங்கு கயிற்றைக் கொண்டதும், யுகமுடிவின் அந்தகனுக்கு ஒப்பானதுமான அந்தக் கனத்த கதாயுதத்தை எடுத்துக் கொண்ட பீமன், யமன் தன் தண்டத்தால் உயிரினங்கள் அனைத்தையும் கொல்வதைப் போல அவர்கள் அனைவரையும் கொன்றான்.(25)

சினத்தால் தூண்டப்பட்ட அந்தக் காலாட்படைவீரர்கள், தங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் இழந்த நிலையில், தங்கள் உயிர்களையும் விடத் தயாராகி, சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும் பூச்சிகளைப் போல அந்தப் போரில் பீமனை நோக்கி விரைந்தனர்.(26) உண்மையில், சினத்தால் நிறைந்தவர்களும், போரில் வெல்லப்பட முடியாதவர்களுமான அந்தப் போர்வீரர்கள், பீமசேனனை அணுகி, யமனின் பார்வைபட்ட உயிரினங்களைப் போலத் திடீரென மடிந்தனர்.(27) வாளையும், கதாயுதத்தையும் எடுத்துக் கொண்ட பீமன், ஒரு பருந்தைப் போலத் தெரிந்து, உமது அந்த இருபத்தைந்தாயிரம் போர்வீரர்களையும் கொன்றான்.(28) அந்தத் துணிச்சல்மிக்கப் படைப்பிரிவைக் கொன்ற பிறகு, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான பீமன், தன் முன் திருஷ்டத்யும்னனைக் கொண்டு மீண்டும் நின்றான்.(29)

அதே வேளையில் பெரும் சக்தியைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} (குருக்களின்) தேர்ப்படைப்பிரிவை நோக்கிச் சென்றான். பெரும் பலத்தைக் கொண்டவர்களான மாத்ரியின் இரட்டை மகன்களும் {நகுலன், சகாதேவன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் அனைவரும், சகுனியைக் கொல்லும் விருப்பத்தில் அவனை எதிர்த்துப் பெரும் வேகத்தில் உற்சாகமாக விரைந்து சென்றனர்.(30) சகுனியின் எண்ணற்ற குதிரைப்படையைக் கூரிய கணைகளால் கொன்ற அந்தப் பாண்டவ வீரர்கள், சகுனியை எதிர்த்து வேகமாக விரைந்து, ஒரு பயங்கரப் போரைச் செய்தனர்.(31) அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்}, மூவுலகிலும் கொண்டாடப்பட்ட தன் வில்லான காண்டீவத்தை வளைத்துக் கொண்டு, கௌரவர்களின் தேர்ப்படைப் பிரிவுக்கு மத்தியில் ஊடுருவினான்.(32) வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், கிருஷ்ணனைச் சாரதியாகக் கொண்டதும், அர்ஜுனனை அதிலிருக்கும் போர்வீரனாகக் கொண்டதுமான அந்தத் தேரைக் கண்ட உமது துருப்புகள் அச்சத்தால் தப்பி ஓடின.(33) தேர்கள் மற்றும் குதிரைகளை இழந்தவர்களும், அனைத்துப் பக்கத்திலும் கணைகளால் துளைக்கப்பட்டவர்களுமான இருபத்தைந்தாயிரம் காலாட்படைவீரர்கள் பார்த்தனை {அர்ஜுனனை} நோக்கிச் சென்று அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(34)

அப்போது பாஞ்சாலர்களுக்கு மத்தியில் வலிமைமிக்கத் தேர்வீரனாக இருந்தவன் (திருஷ்டத்யும்னன்), தன் தலைமையில் பீமசேனனைக் கொண்டு, அந்தத் துணிச்சல்மிக்கப் படைப்பிரிவை வேகமாகக் கொன்று, வெற்றியாளனாக நின்றான்.(35) பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனும், கொண்டாடப்பட்டவனுமான திருஷ்டத்யும்னன் பேரழகு கொண்டவனாகவும், எதிரிகளின் பெருங்கூட்டத்தை நொறுக்கப்பவனாகவும் இருந்தான்.(36) புறாக்களைப் போன்ற வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தேரைக் கொண்டவனும், உயர்ந்த கோவிதார மரத்தால் செய்யப்பட்ட கொடிமரத்தைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னனைக் கண்டதும், உமது துருப்புகள் அச்சத்தால் தப்பி ஓடின.(37) தங்களுக்கு மத்தியில் சாத்யகியைக் கொண்ட மாத்ரியின் கொண்டாடப்பட்ட மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர்), ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் வேகம் கொண்டவனான காந்தார மன்னனை {சகுனியைப்} பின்தொடர்ந்து சென்று வேகமாக எங்கள் முன் தோன்றினர்.(38) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சேகிதானன், சிகண்டி, திரௌபதியின் மகன்கள் (ஐவர்) ஆகியோர், பெரும் எண்ணிக்கையிலான உமது துருப்பினரைக் கொன்று தங்கள் சங்குகளை முழங்கினர்.(39) களத்தில் இருந்து முகங்களைத் திருப்பிக் கொண்டு ஓடும் உமது துருப்பினர் அனைவரையும் கண்ட அந்த (பாண்டவ) வீரர்கள், வெல்லப்பட்ட காளைகளைத் துரத்தும் காளைகளைப் போல அவர்களைத் துரத்திச் சென்று தாக்கினர்.(40)

அப்போது பாண்டுவின் மகனான வலிமைமிக்கச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இன்னும் களத்தில் எஞ்சி நின்ற உமது படையைக் கண்டு சினத்தால் நிறைந்தான்.(41) ஓ! ஏகாதிபதி, அந்த எஞ்சிய உமது படையினரைத் திடீரென அவன் தன் கணைகளால் மறைத்தான். எனினும், அப்போது எழுந்த புழுதியால் காட்சி மறைக்கப்பட்டதன் விளைவால் எதையுமே {என்னால்} காண முடியவில்லை.(42) போர்க்களம் கணைகளால் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியிலும் இருள் பரவியது. ஓ! ஏகாதிபதி, உமது துருப்புகள் அச்சத்தால் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(43) அவனது {துரியோதனனது} படை இவ்வாறு பிளக்கப்பட்ட போது, ஓ! ஏகாதிபதி, அந்தக் குருமன்னன் {துரியோதனன்}, நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இருவரையும் எதிர்த்து விரைந்தான்.(44) அப்போது, ஓ! பாரதக் குலத்தின் தலைவரே, அசுரன் பலி, தேவர்கள் அனைவரையும் அறைகூவியழைத்ததைப் போலவே, துரியோதனன் பாண்டவர்கள் அனைவரையும் போருக்கு அறைகூவியழைத்தான்.(45)

பிறகு சினத்தால் நிறைந்து, ஒன்று கூடிய பாண்டவர்கள், முழங்கிக் கொண்டிருக்கும் துரியோதனனை எதிர்த்து, மீண்டும் மீண்டும் அவனை நிந்தித்தபடியும், பல்வேறு ஆயுதங்களை ஏவியபடியும் சென்றனர்.(46) எனினும் பின்னவன் {துரியோதனன்}, அச்சமில்லாமல் தன் எதிரிகளைக் கணைகளால் தாக்கினான். அப்போது உமது மகனிடம் நாங்கள் கண்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(47) ஏனெனில், பாண்டவர்கள் அனைவரும் அவனை {துரியோதனனை} மீறிச் செல்ல இயலாதவர்களாக இருந்தனர். இந்த நேரத்தில், சற்றுத் தொலைவில் இருந்தவர்களும் கணைகளால் மிகவும் சிதைக்கப்பட்டவர்களும், தப்பி ஓடத் தயாராக இருந்தவர்களுமான தன் துருப்புகளைத் துரியோதனன் கண்டான். ஓ! ஏகாதிபதி, அவர்களை அணிதிரட்டிய உமது மகன் {துரியோதனன்}, போரிடத் தீர்மானித்தவனாகவும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்பியவனாகவும் அந்தப் போர்வீரர்களிடம்,(48,49) “இங்கிருந்து நீங்கள் தப்பி ஓடினாலும், சமவெளியிலோ, மலைகளிலோ, பாண்டவர்களால் உங்களைக் கொல்ல முடியாத இடமொன்றையும் நான் காணவில்லை. தப்பி ஓடுவதால் என்ன பயன்?(50) பாண்டவப் படையினர் இப்போது எஞ்சியிருக்கும் சிலராகக் குறைக்கப்பட்டுள்ளனர். இரு கிருஷ்ணர்களும் மிகவும் சிதைக்கப்பட்டிருக்கின்றனர். இங்கே நாம் அனைவரும் ஒரு நிலையை எடுத்தால், நாம் வெற்றியை அடைவது உறுதியே.(51)

எனினும், உங்கள் வியூகத்தைப் பிளந்து நீங்கள் தப்பி ஓடினாலோ, பாவிகளான உங்களைப் பின் தொடர்ந்து வந்து உங்கள் அனைவரையும் பாண்டவர்கள் கொல்வார்கள். எனவே, போரில் மரணமானது, நமக்கு நன்மையே.(52) க்ஷத்திரிய நடைமுறையின்படி, போர்க்களத்தில் போரிடுகையில் மரணித்தல் இனிமையானதாகும். அத்தகு மரணம் {மரணிப்பவனுக்கு} எந்தத் துயரையும் தராது. அத்தகு மரணத்தை அடைவதால், ஒரு மனிதன் அடுத்த உலகில் அழிவில்லா மகிழ்ச்சியை அனுபவிக்கிறான்.(53) இங்கே கூடியிருக்கும் க்ஷத்திரியர்கள் அனைவரும் நான் சொல்வதைக் கேட்பீராக. உங்கள் மூதாதையரின் காலத்தில் இருந்து, உங்களால் பயிலப்படும் கடமைகளைத் துறப்பதைவிட, நீங்கள் கோபக்கார பீமசேனனின் சக்திக்குச் சரணடைவதே சிறந்ததாகும்.(54) போரில் இருந்து தப்பி ஓடுவதைவிட ஒரு க்ஷத்திரியனுக்குப் பாவம் நிறைந்த செயல் வேறொன்றும் இல்லை. கௌரவர்களே, போர்க்கடமையைவிடச் சொர்க்கத்திற்குச் செல்லும் சிறந்த பாதை வேறேதும் இல்லை.(55) பிறரால் நெடுங்காலத்தில் அடையப்படும் (அடுத்த உலகத்தில் {மறுமையில்} உள்ள) அருள் நிறைந்த பகுதிகளை, ஒரு போர்வீரன் ஒரே நாளில் அடையலாம்” என்றான் {துரியோதனன்}[1].

மன்னனின் இந்த வார்த்தைகளை நிறைவேற்றிய பெரும் க்ஷத்திரியத் தேர்வீரர்கள்,(56) தங்கள் தோல்வியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு, பாண்டவர்களை எதிர்த்து மீண்டும் விரைந்தனர்.(57) அப்போது உமது துருப்புகளுக்கும், எதிரியின் துருப்புகளுக்கும் இடையில், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பான மிகப் பயங்கரமான போர் மீண்டும் தொடங்கியது.(58) அப்போது, ஓ! ஏகாதிபதி, உமது மகன் துரியோதனன் தன் துருப்புகள் அனைத்துடன், யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவர்களை எதிர்த்து விரைந்தான்” {என்றான் சஞ்சயன்}[2].(59)

துரியோதனனுக்குக் கிருபர் உரைத்த நீதி! – சல்லிய பர்வம் பகுதி – 04-போரில் கௌரவர்கள் சந்தித்திருக்கும் வீழ்ச்சியையும், அர்ஜுனன் மற்றும் பீமசேனனின் வீரத்தையும் துரியோதனனிடம் எடுத்துரைத்த கிருபர், பாண்டவர்களுடன் அமைதியேற்படுத்திக் கொள்ள அவனிடம் சொன்னது..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வீழ்ந்து கிடக்கும் தேர்களின் நீடங்கள், உயர் ஆன்மப் போர்வீரர்களின் தேர்கள், யானைகள் ஆகியவற்றையும், போரில் கொல்லப்பட்ட காலாட்படை வீரர்களையும் கண்டும்,(1) போர்க்களமானது, ருத்ரனின் விளையாட்டு மைதானத்தின் தன்மையை அடைந்திருப்பதைப் பார்த்தும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மன்னர்களின் மகிமையற்ற முடிவுகளை நோக்கியும்,(2) துயரத்தால் பீடிக்கப்பட்ட உமது மகன் {துரியோதனன்} பின்வாங்கிய பிறகு, பார்த்தனின் {அர்ஜுனனின்} ஆற்றலைக் கண்டும், கவலையால் நிறைந்த துருப்புகள் பெருந்துயரத்தில் விழுந்து,(3) அடுத்து என்ன செய்வது என்று ஆலோசித்துக் கொண்டிருக்கையில், நசுக்கப்பட்ட கௌரவப் போர்வீரர்களின் உரத்த ஓலங்களைக் கேட்டும், ஓ! பாரதரே,(4) முறையின்றி இடம்பெயர்ந்திருக்கும் பெரும் மன்னர்களின் அடையாளச்சின்னங்களைக் கண்டும், வயதையும், நன்னடத்தையையும் கொண்டவரும், கருணையால் நிறைந்தவரும், சொல்வன்மை கொண்டவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான குரு தலைவர் கிருபர், மன்னன் துரியோதனனை அணுகி, கோபத்துடன் இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னார்:(6)

அவர் {கிருபர்}, “ஓ! துரியோதனா, ஓ! பாரதா, நான் உன்னிடம் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்பாயாக. அதைக் கேட்ட பிறகு, ஓ! ஏகாதிபதி, ஓ! பாவமற்றவனே, உனக்கு விருப்பமுண்டானால் அவற்றின்படி செயல்படுவாயாக.(7) ஓ! ஏகாதிபதி, போர்க்கடமையைவிடச் சிறந்த பாதை வேறேதும் கிடையாது. ஓ! க்ஷத்திரிய ஒழுங்கின் காளையே, அப்பாதையை அடைந்த க்ஷத்திரியர்களே போரில் ஈடுபடுகிறார்கள்.(8) க்ஷத்திரிய நடைமுறைகளை நோற்று வாழ்பவன், தன் மகன், தந்தை, சகோதரன், சகோதரியின் மகன், தாய்மாமன், உறவினர்கள் மற்றும் சொந்தங்களுடன் போரிடுகிறான்.(9) போரில் அவன் கொல்லப்பட்டால், அதில் {அவனுக்குப்} பெரும் தகுதி {புண்ணியம்} கிடைக்கிறது. அதே போல, களத்திலிருந்து அவன் ஓடினாலோ, பெரும் பாவமே கிடைக்கிறது. இதன் காரணமாகத் தான், க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றி வாழ விரும்பும் மனிதனின் வாழ்வு மிகப் பயங்கரமானதாக இருக்கிறது.(10)

இதைப் பொறுத்தவரை, உனக்கு நான் சில நல்ல வார்த்தைகளைச் சொல்லப் போகிறேன். பீஷ்மர், துரோணர் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன் ஆகியோர் வீழ்ந்த பிறகு,(11) ஓ! பாவமற்றவனே {துரியோதனா}, ஜெயத்ரதன், உனது சகோதரர்கள், உனது மகன் லக்ஷ்மணன் ஆகியோர் கொல்லப்பட்ட பிறகு, இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன இருக்கிறது?(12) யாவர் மீது சுமைகள் அனைத்தையும் வைத்து, நாம் அரசுரிமையில் இன்புற்றோமோ, அவர்கள் அனைவரும் தங்கள் உடல்களைத் துறந்து, பிரம்மத்தை அறிந்த மனிதர்களால் அடையத்தக்க அருள் உலகங்களுக்குச் சென்றுவிட்டனர்.(13) நம்மைப் பொறுத்தவரை, எண்ணற்ற சாதனைகளைக் கொண்ட அந்தப் பெரும் தேர்வீரர்களை இழந்துவிட்டு, எண்ணற்ற மன்னர்களை அழிவடையச் செய்து, துன்பத்திலேயே நாம் நமது காலத்தைக் கடத்தப் போகிறோம்.(14) அந்த வீரர்கள் அனைவரும் உயிரோடு இருக்கும்போதுகூட, பீபத்சு {அர்ஜுனன்} வெல்லப்பட முடியாதவனாகவே இருந்தான். கிருஷ்ணனைத் தன் கண்களாகக் கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரன் {அர்ஜுனன்}, தேவர்களாலேயே கூட வீழ்த்தப்பட முடியாதவனாவான்.(15)

பரந்த (கௌரவப்) படையானது, (வசந்தகாலத்தில் நிறுவப்படும்) இந்திரத்வஜத்தைப் போல உயர்ந்திருப்பதும், இந்திரவில்லை {வானவில்லைப்} போலப் பிரகாசிப்பதும், குரங்கைத் தாங்கியிருப்பதுமான அவனது {அர்ஜுனனின்} கொடிமரத்தை அணுகி, எப்போதும் அச்சத்திலேயே நடுங்கியது.(16) பீமசேனனின் சிங்கமுழக்கம், பாஞ்சஜன்யத்தின் சங்கொலி, காண்டீவத்தின் நாணொலி ஆகியவற்றைக்கேட்டே நமது இதயங்கள் நமக்குள் இறந்து விழுந்தன {நமது மனம் மயக்கமடைந்தது}.(17) மின்னலின் கீற்றுகளைப் போல அசைந்து, நம் கண்களைக் குருடாக்கிய அர்ஜுனனின் காண்டீவமானது, நெருப்பு வளையத்திற்கு ஒப்பாகத் தெரிகிறது.(18) பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்ட அந்த உறுதிமிக்க வில் {காண்டீவம்} அசைக்கப்படும்போது, அனைத்துப் பக்கங்களிலும் அசையும் மின்னலின் கீற்றைப் போலத் தெரிகிறது.(19) வெண்ணிறத்தையும், பெரும் வேகத்தையும், சந்திரன் அல்லது குசப் புல்லின் காந்தியையும் கொண்டவையும், வானத்தையே விழுங்கியபடி ஓடக்கூடியவையுமான குதிரைகள் அவனது {அர்ஜுனனின்} தேரில் பூட்டப்பட்டிருக்கின்றன.(20) காற்றால் விரட்டப்படும் மேகத் திரள்களைப் போலக் கிருஷ்ணனால் தூண்டப்பட்டும், தங்கத்தால் தங்கள் அங்கங்கள் அலங்கரிக்கப்பட்டும், போரில் அவை அர்ஜுனனைச் சுமந்து செல்கின்றன.(21)

குளிர்காலத்தில் காட்டில் உலர்ந்த புற்களை எரித்துப் பெருகும் காட்டுத்தீயைப் போலவே ஆயுதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான அந்த அர்ஜுனன் போரில் உமது பெரும்படையை எரித்தான்.(22) இந்திரனின் காந்தியைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} நமது படையணிகளுக்குள் நுழையும்போது, நான்கு தந்தங்களைக் கொண்ட யானையொன்றைப் போல அவன் தெரிவதை நாம் கண்டிருக்கிறோம்.(23) உமது படையைக் கலங்கடித்து மன்னர்களை அச்சுறுத்தியபோது, தாமரைகள் நிறைந்திருக்கும் தடாகத்தைக் கலங்கடிக்கும் ஒரு யானைக்கு ஒப்பாகவே தனஞ்சயனை {அர்ஜுனனை} நாம் கண்டிருக்கிறோம்.(24) தன் வில்லின் நாணொலியால் போர்வீரர்கள் அனைவரையும் அச்சுறுத்தும்போது, சிறு விலங்குகளைத் திகிலடையச் செய்யும் சிங்கத்திற்கு ஒப்பாகவே அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} நாம் கண்டிருக்கிறோம்.(25)

உலகங்கள் அனைத்திலும் உள்ள வில்லாளிகளில் முதன்மையானவர்களும், வில் தரித்தோரில் காளைகளுமான அந்தக் கிருஷ்ணர்கள் இருவரும் {கருப்பர்களான கிருஷ்ணன், அர்ர்ஜுனன்}, கவசம் பூண்டபடி மிக அழகாகத் தெரிகிறார்கள்.(26) ஓ! பாரதா {துரியோதனா}, களத்தில் இன்று கொல்லப்படுவோருக்கு, இது பயங்கரமான பனினேழாவது {17வது} நாள் போராகும்.(27) காற்றால் கலைக்கப்படும் கூதிர்கால மேகங்களைப் போல உனது படையின் பல்வேறு பிரிவுகள் பிளந்துவிட்டன.(28) ஓ! ஏகாதிபதி, புயலால் கலங்கடிக்கப்பட்ட படகானது, பெருங்கடலின் மத்தியில் வெளிப்படுத்தப் படுவதைப்போல {மூழ்கடிக்கப்படுவதைப் போல}, ஓ ஏகாதிபதி {துரியோதனா}, அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, உனது படையை நடுங்கச் செய்தான்.(29)

(ஜெயத்ரதன் கொல்லப்பட்டபோது) சூதன் மகன் {கர்ணன்} எங்கே சென்றான்? தமது தொண்டர்களுடன் கூடிய துரோணர் எங்கே சென்றார்? நான் எங்கே சென்றேன்? நீ எங்கே சென்றாய்? ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} எங்கே சென்றான்? தன் சகோதரர்களுடன் கூடிய உன் சகோதரன் துச்சாசனன் எங்கே சென்றான்?(30) ஜெயத்ரதனைக் கண்டும், அவன் தன் கணைகள் அடையும் தொலைவில் இருக்கிறான் என்பதையும் அறிந்த அர்ஜுனன், உனது உறவினர்கள், சகோதரர்கள், கூட்டாளிகள், தாய்மாமன்கள் ஆகியோர் மீது தனது காலை வைத்து, அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மன்னன் ஜெயத்ரதனைக் கொன்றான். அப்போது செய்ய முடியாததை இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?(31,32) உன் துருப்பில் அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} வெல்ல எவன் இருக்கிறான்?(33) அந்த உயர் ஆன்மப் போர்வீரன் தெய்வீக ஆயுதங்கள் பலவற்றைக் கொண்டுள்ளான். மேலும் காண்டீவத்தின் நாணொலியே நமது சக்திகளை அபகரித்துவிடுகிறது.(34) இப்போது தலைவனில்லாமல் இருக்கும் இந்த உனது படையானது, நிலவில்லாது ஓரிரவைப் போலவோ, யானைகளால் முறிக்கப்பட்ட மரங்களைத் தன் கரைகளில் கொண்ட நீர்வற்றிய ஓர் ஆற்றைப் போலவோ இருக்கிறது.(35)

வெண்குதிரைகளையும், வலிய கரங்களையும் கொண்ட அர்ஜுனன், உலர்ந்த புற்களுக்கிடையில் பரவும் காட்டுத்தீயைப் போல, தலைவனற்ற இந்த உன் படைக்குள் ஊடுருவி, தன் விருப்பம் போலத் திரிவான்.(36) சாத்யகி, பீமசேனன் ஆகிய இருவரின் மூர்க்கமும், மலைகள் அனைத்தையும் பிளக்கவோ, பெருங்கடல்கள் அனைத்தையும் வற்றச்செய்வோ வல்லமைபெற்றதாகும்.(37) ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, சபைக்கு மத்தியில் பீமன் பேசிய வார்த்தைகள்[1] அனைத்தும் கிட்டத்தட்ட அவனால் நிறைவேற்றப்பட்டுவிட்டன. நிறைவேற்றப்படாமல் எஞ்சியிருப்பவனையும் அவனால் நிறைவேற்றப்படும்[1].(38) வீழ்த்தக் கடினமான பாண்டவர்களின் படைக்கு எதிராகக் கர்ணன் போரிட்டுக் கொண்டிருக்கும்போதே, அது காண்டீவதாரியால் தீவிரமாகப் பாதுகாக்கப்பட்டது.(39) எக்காரணமும் இன்றி, நீதிமான்களான பாண்டவர்களுக்கு நீ இன்னல்கள் பலவற்றை விளைவித்திருக்கிறய். அச்செயல்பாடுகளின் கனிகளே இப்போது வருகின்றன.(40)

உன் நோக்கங்களுக்காகவே நீ பெருங்கவனத்துன் ஒரு பெரும் படையைத் திரட்டினாய். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்தப் பரந்த படையும், நீயும் கூட இப்போது பேராபத்தில் விழுந்துவிட்டீர்கள்.(41) சுயமே {ஆத்மாவே} அனைத்திற்கும் புகலிடம் என்பதால், இப்போது உன்னை நீ பாதுகாத்துக் கொள்வாயாக. {ஆதாரமான} அந்தப் புகலிடம் உடைந்துபோனால், ஓ! ஐயா, அதிலுள்ள அனைத்தும் அனைத்துப் பக்கங்களிலும் சிதறிப் போகும்[2].(42) பலவீனமடைந்தவன், சமரசத்தின் மூலம் அமைதியை நாட வேண்டும். வளர்பவனோ, போரிட வேண்டும். இதுவே பிருஹஸ்பதி கற்பித்திருக்கும் கொள்கையாகும் {நீதியாகும்}.(43) நமது படை பலத்தைப் பொறுத்தவரை நாம் இப்போது பாண்டு மகன்களைவிடக் குறைவடைந்தவர்களாக இருக்கிறோம். எனவே, ஓ! தலைவா, பாண்டவர்களோடு அமைதியேற்படுத்திக் கொள்வதே நமக்கு நன்மையாகும் என நான் நினைக்கிறேன்.(44) எவன் தனக்கான நன்மையை அறிந்து கொள்ளவில்லையோ, தனக்கான நன்மையை (அறிந்தே) அலட்சியம் செய்வானோ, அவன் எந்த நன்மையையும் அடையமாட்டான்.(45)

மன்னன் யுதிஷ்டிரனைப் பணிந்தால், அரசுரிமை நம்மிடமே இருக்கும் என்றால், அதுவும் நமக்கு நன்மையையே உண்டாக்கும், மூடத்தனத்தின் மூலம் (பாண்டவர்களிடம்) தோற்பது நன்மையைத் தராது.(46) யுதிஷ்டிரன் கருணையுள்ளவன். விசித்திரவீரியன் மகனும் {திருதராஷ்டிரனும்}, கோவிந்தனும் {கிருஷ்ணனும்} வேண்டினால், அவன் உன்னையே மன்னனாகத் தொடர அனுமதிப்பான்.(47) வெற்றியாளர்களான மன்னன் யுதிஷ்டிரன், அர்ஜுனன் மற்றும் பீமசேனன் ஆகியோரிடம் ரிஷிகேசன் என்ன சொன்னாலும், அதற்கு அவர்கள் அனைவரும் ஐயமறக் கீழ்ப்படிவார்கள்.(48) கிருஷ்ணன், குருகுலத்தின் திருதராஷ்டிரன் வார்த்தைகளை மீற மாட்டான் என்றும், அதே போல, பாண்டுவின் மகனும் கிருஷ்ணனின் வார்த்தைகளை மீற மாட்டான் என்றும் நான் நினைக்கிறேன்.(49) பிருதையின் {குந்தியின்} மகன்களுடனான பகைமைகள் நிறுத்தப்படுவதே உனக்கான நன்மை என நான் கருதுகிறேன். குறுகிய நோக்கங்களுக்காகவோ, என் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவோ இதை நான் உனக்குச் சொல்லவில்லை. ஓ! மன்னா {துரியோதனா}, நன்மையெனக் கருதுவதையே நான் உனக்குச் சொல்கிறேன். (இப்போது இவற்றை நீ புறக்கணித்தால்) இவ்வார்த்தைகளை நீ உன் மரணத் தருவாயில் நினைவுகூர்வாய்” என்றார் {கிருபர்}.(50) வயதில் முதிர்ந்தவரும், சரத்வானின் மகனுமான கிருபர் அழுதுகொண்டே இவ்வார்த்தைகளைச் சொன்னார். வெப்பப் பெருமூச்சுகளை விட்ட அவர் கவலையடைந்தவராகக் கிட்டத்தட்ட தமது புலனுணர்வுகளை இழந்தார்” {என்றான் சஞ்சயன்}.(51)

திரௌபதியின் துகிலுரிப்பை மறப்பானோ? – சல்லிய பர்வம் பகுதி – 05-கிருபரின் வார்த்தைகள் நன்மையளிப்பனவாக இருப்பினும், அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொன்ன துரியோதனன்; பாண்டவர்களுடன் அமைதியேற்படுத்திக் கொள்ள முடியாத நிலையைக் கிருபருக்கு எடுத்துச் சொன்ன துரியோதனன்; பாண்டவர்களுக்குத் தான் இழைத்த தீமைகளைச் சொன்னது; துரியோதனனின் பேச்சால் உற்சாகமடைந்த வீரர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கௌதமரின் கொண்டாடப்பட்ட மகனால் {கிருபரால்} இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் (துரியோதனன்), சூடான பெருமூச்சுகளை விட்டபடி மௌனமாக இருந்தான்.(1) சிறிது நேரம் சிந்தித்தவனும், எதிரிகளை எரிப்பவனுமான அந்த உயர் ஆன்ம திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, சரத்வான் மகனான கிருபரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(2) “ஒரு நண்பன் சொல்லும் அத்தனையும் என்னிடம் நீர் சொல்லியிருக்கிறீர். மேலும், போரிடும்போதும், உமது உயிரைக் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைகொள்ளமால் எனக்காக அனைத்தையும் செய்திருக்கிறீர்.(3) பாண்டவப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் ஊடுருவி, பெரும் சக்தி கொண்டவர்களான பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் நீர் போராடியதை இந்த உலகம் கண்டிருக்கிறது.(4) ஒரு நண்பனால் சொல்லப்பட வேண்டியது எதுவோ, அஃது உம்மால் சொல்லப்பட்டது. எனினும், மரணத்தருவாயில் இருக்கும் ஒரு மனிதனுக்கு மருந்தைப் போல, உமது வார்த்தைகள் எனக்கு மகிழ்வைத் தரவில்லை.(5)

நன்மையானதும், சிறப்பானதும், காரணம் நிறைந்ததுமான நீர் சொன்ன இந்த வார்த்தைகள், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே {கிருபரே}, எனக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை.(6) (முன்பொரு சமயம்) நம்மால் நாடிழந்த அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, எவ்வாறு நம்மீது நம்பிக்கை வைப்பான்? அந்த வலிமைமிக்க மன்னன் {யுதிஷ்டிரன்} ஒருமுறை நம்மால் பகடையில் வீழ்த்தப்பட்டான். என் வார்த்தைகள் அவன் எவ்வாறு நம்புவான்?(7) அதேபோல, பார்த்தர்களின் நன்மையிலேயே எப்போதும் ஈடுபடும் கிருஷ்ணன், நம்மிடம் தூதனாக வந்தபோது, நம்மால் வஞ்சிக்கப்பட்டான். நமது அந்தச் செயல்பாடு ஆய்வமைவற்றதாகும் {தவறான முடிவாகும்}. ஓ! மறுபிறப்பாளரே, ரிஷிகேசன் {கிருஷ்ணன்} எவ்வாறு என் வார்த்தைகளை நம்புவான்?(8) இளவரசி கிருஷ்ணை {திரௌபதி} சபையில் நின்று கொண்டிருந்தபோது, பரிதாபகரமாக அழுதாள். நமது அந்தச் செயல்பாட்டையோ, நம்மால் யுதிஷ்டிரன் நாடிழந்ததையோ ஒருபோதும் கிருஷ்ணன் மறக்கமாட்டான்.(9) இந்த இரு கிருஷ்ணர்களும் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகியோர்} தங்களுக்குள் ஒரே இதயத்தைக் கொண்டவர்கள் என்றும், ஒருவர் மீதொருவர் உறுதியான பற்றுடையவர்கள் என்றும் முன்பே நாம் கேட்டிருந்தோம். ஓ! தலைவரே {கிருபரே}, இன்று அதை நம் கண்களாலேயே நாம் காண்கிறோம்.(10)

தன் தங்கை {சுபத்திரை} மகனின் {அபிமன்யுவின்} படுகொலையைக் கேட்ட கேசவன் {கிருஷ்ணன்}, தன் இரவுகளைக் கவலையிலேயே கழிக்கிறான். அவனுக்கு நாம் பெரிய தீங்கை இழைத்திருக்கிறோம். அவன் நம்மை எவ்வாறு மன்னிப்பான்?(11) அபிமன்யுவுடைய மரணத்தின் விளைவாக அர்ஜுனனும், அவலமான நிலையை அடைந்திருக்கிறான். வேண்டிக் கேட்டுக் கொண்டாலும் கூட, அவன் எவ்வாறு எனக்கு நன்மையைச் செய்ய முயல்வான்?(12) பாண்டுவின் இரண்டாவது மகனும், வலிமைமிக்கவனுமான பீமசேனன், மிகவும் சீற்றத்துடன் இருக்கிறான். அவன் ஒரு பயங்கரமான சபதத்தைச் செய்திருக்கிறான். அவன் {பீமன்} உடைவானேயொழிய ஒருபோதும் வளையமாட்டான். {இறப்பானேயொழிய பணியமாட்டான்}.(13) நமக்கு எதிராகப் பகைமையையே சுவாசிக்கும் அந்த வீர இரட்டையர்கள் {நகுலனும், சகாதேவனும்}, கவசம்பூட்டி, வாள் தரிக்கும்போது இரு யமன்களுக்கு ஒப்பாக இருக்கின்றனர்.(14) திருஷ்டத்யும்னனும், சிகண்டியும் எனக்கு எதிராகத் தங்கள் வாள்களை உருவியிருக்கிறார்கள். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {கிருபரே}, அவர்கள் எவ்வாறு எனக்கு நன்மையைச் செய்ய முயல்வார்கள்?(15)

ஒற்றையாடையுடுத்தி {வீட்டுக்கு விலக்காகத்} தன் பருவ காலத்தில் இருந்த இளவரசி கிருஷ்ணை {திரௌபதி}, அனைவரின் கண்களுக்கு முன்பாகவும் சபைக்கு மத்தியில் வைத்துத் துச்சாசனனால் கொடூரமாக நடத்தப்பட்டாள்.(16) துயரில் மூழ்கிய அந்த நிர்வாண திரௌபதியை[1] இன்னும் நினைவில் வைத்திருப்பவர்களும், எதிரிகளை எரிப்பவர்களுமான பாண்டவர்களைப் போரில் இருந்து விலக்கவே முடியாது.(17) மேலும் துருபதனின் மகளான கிருஷ்ணை {திரௌபதி}, என் அழிவுக்காகவும், தன் கணவர்களால் பேணப்படும் நோக்கங்களின் வெற்றிக்காகவும் கடும் நோன்புகளை நோற்று, அனைத்து நாட்களிலும் வெறுந்தரையில் படுத்து, பகைமைகள் முடியும் வரை அந்நிலையிலேயே தொடரவே நினைத்திருக்கிறாள்.(18) கௌரவம் மற்றும் செருக்கைக் கைவிட்டவளான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} உடன் பிறந்த தங்கை (சுபத்ரை), உண்மையான ஒரு பணிப்பெண்ணாகவே மாறி திரௌபதிக்கு எப்போதும் பணிவிடைகளைச் செய்கிறாள்.(19) எனவே, அனைத்தும் தழல்விட்டெரிகின்றன. அந்த நெருப்பை ஒருபோதும் தணிக்க முடியாது. அபிமன்யுவுடைய படுகொலையின் விளைவால் அவர்களுடன் அமைதி ஏற்படுத்திக் கொள்வது சாத்தியமற்றதாகிவிட்டது.(20)

கடல் சூழ்ந்த இந்தப் பூமியின் அரசுரிமையை அனுபவித்த நான், பாண்டவர்களின் உதவியின் கீழ் ஓர் அரசை எவ்வாறு அமைதியாக அனுபவிக்க முடியும்?(21) மன்னர்கள் அனைவரின் தலைகளின் மீது, சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த நான், யுதிஷ்டிரனின் பின்னால் ஓர் அடிமையைப் போல எவ்வாறு நடந்து செல்ல முடியும்?(22) மகிழத்தக்க பொருட்கள் அனைத்தையும் அனுபவித்து, பெரும் கருணையை வெளிப்படுத்திய நான், இப்போது இரங்கத்தக்கவர்களை என் தோழர்களாக அடைந்து ஓர் இரங்கத்தக்க வாழ்வை எவ்வாறு நோற்க முடியும்?(23) நீர் பேசிய மென்மையான நன்மையான அந்த வார்த்தைகளை நான் வெறுக்கவில்லை. எனினும், அமைதிக்கான நேரம் இதுவல்ல என்றே நான் நினைக்கிறேன்.(24) ஓ! எதிரிகளை எரிப்பவரே {கிருபரே}, நேர்மையாகப் போரிடுவதே நல்ல கொள்கை என நான் கருதுகிறேன். ஓர் அலியைப் போலச் செயல்படுவதற்கு இது நேரமல்ல. மறுபுறம், இது போருக்கான நேரமாகும்.(25)

நான் பல வேள்விகளைச் செய்திருக்கிறேன். பிராமணர்களுக்குத் தக்ஷிணைகளைக் கொடுத்திருக்கிறேன். என் விருப்பங்கள் அனைத்தையும் நான் அடைந்திருக்கிறேன். வேத உரைகளை நான் கேட்டிருக்கிறேன். என் எதிரிகளின் தலைகளின் மீது நான் நடந்திருக்கிறேன்.(26) என் பணியாட்கள் அனைவரும் என்னால் நன்கு பேணப்பட்டனர். மக்களைத் துயரில் இருந்து விடுவித்திருக்கிறேன். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, பாண்டவர்களிடம் இத்தகு எளிய வார்த்தைகளைப் பேச நான் ஒருபோதும் துணியமாட்டேன்.(27) வெளிநாட்டு அரசுகளை நான் கைப்பற்றியிருக்கிறேன். என் சொந்த அரசையும் நான் முறையாகவே ஆண்டிருக்கிறேன். இன்பத்துக்குகந்த பல்வேறு பொருட்களை நான் அனுபவித்திருக்கிறேன். பித்ருக்கள் மற்றும் க்ஷத்திரியக்கடமைக்கு நான் செலுத்த வேண்டிய கடன்களைச் செலுத்தியிருக்கிறேன்.(28) நிச்சயமாக இங்கே இனி மகிழ்ச்சியில்லை. அரசாலோ, நற்பெயராலோ என்ன நேரப்போகிறது? இங்கே அடையத்தக்கது புகழ் மட்டுமே. அந்தப் புகழைப் போரின் மூலமே அடையலாம்; வேறு எவ்வழியிலும் அடையமுடியாது.(29) க்ஷத்திரியன் ஒருவன் தன் வீட்டில் மரணமடைவது நிந்திக்கத்தக்கதாகும். வீட்டிலுள்ள படுக்கையில் மரணம் என்பது ஒருவனுக்கு மிகவும் பாவம் நிறைந்ததாகும்.(30)

வேள்விகளைச் செய்த பிறகு, தன் உடலைக் காடுகளிலோ, போரிலோ துறக்கும் ஒரு மனிதன் பெரும் மகிமையை அடைகிறான்.(31) அழுதுகொண்டிருக்கும் உறவினர்களுக்கு மத்தியில், நோய் மற்றும் முதுமையால் பீடிக்கப்பட்டு, வலியில் பரிதாபமாக அழுதவாறு இறப்பவன் மனிதனே அல்ல.(32) பல்வேறு இன்பநுகர் பொருட்களைக் கைவிட்டு, நேர்மையாகப் போரிடப் போகும் நான், உயர்ந்த எல்லையை அடைந்தோரின் தோழமையை அடைந்து, சக்ரனின் {இந்திரனின்} உலகங்களுக்குச் செல்லப் போகிறேன்.(33) போரில் இருந்து பின்வாங்காதவர்களும், அறிவைக் கொடையாகக் கொண்டவர்களும், உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், வேள்விகளைச் செய்தவர்களும், ஆயுதவேள்வியில் {போரில்} தூய்மையடைந்தவர்களும் {புனிதமடைந்தவர்களும் [இறந்தவர்களும்]}, நேர்மையான நடத்தை கொண்டவர்களுமான வீரர்களின் வசிப்பிடம் சொர்க்கமேயாகும் என்பதில் ஐயமில்லை.(34) போரில் ஈடுபடும் அத்தகு வீரர்களை, பல்வேறு இனங்களைச் சேர்ந்த அப்சரஸ்கள் இன்பமாகப் பார்க்கின்றனர் என்பதில் ஐயமில்லை. அப்சரஸ்களின் தோழமையுடன், சொர்க்கத்தில் இன்புற்று, தேவர்களின் சபையில் வழிபடப்படும் அவர்களைப் பித்ருக்கள் பார்க்கின்றனர் என்பதில் ஐயமில்லை.(35)

போரில் இருந்து திரும்பாதவர்களும், தேவர்களும் செல்லும் பாதையில் நாம் இப்போது உயர்வோமாக.(36) அந்தப் பாதையிலேயே நம் மதிப்பிற்குரிய பாட்டனும் {பீஷ்மரும்}, பெரும் அறிவைக் கொண்ட ஆசானும் {துரோணரும்}, ஜெயத்ரதனும், கர்ணனும், துச்சாசனனும் சென்றனர்.(37) இந்தப் போரில் எனக்காகத் தீவிரமாகப் போராடிய துணிச்சல்மிக்க மன்னர்கள் பலர் கொல்லப்பட்டுவிட்டனர். கணைகளால் சிதைக்கப்பட்டு, குருதியில் குளித்த அங்கங்களுடன் கூடிய அவர்கள் வெறுந்தரையில் இப்போது கிடக்கிறார்கள்.(38) பெரும் துணிச்சலைக் கொண்டவர்களும், சிறந்த ஆயுதங்களை அறிந்தவர்களும், சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வேள்விகளைச் செய்தவர்களுமான அம்மன்னர்கள், தங்கள் கடமைகளைச் செய்து தங்கள் உயிர்மூச்சைத் துறந்து இப்போது இந்திரலோகவாசிகளாகிவிட்டனர்.(39) (அருள் உலகத்திற்குச் செல்ல) அவர்கள் வழிவகுத்துக் கொடுத்துள்ளனர். அந்த அருள் இலக்கை அடைய விரைந்து செல்லும் வீரர்களுடைய கூட்டத்தின் விளைவாக மீண்டும் அவ்வழி அடைவதற்கரிதாக மாறும்[2].(40)

எனக்காக இறந்த அந்த வீரர்களின் சாதனைகளை நன்றியுடன் நினைவுகூரும் நான், என் இதயத்தை அரசில் நிலைக்கச் செய்யாமல், அவர்களுக்கு நான் பட்டிருக்கும் கடனையே அடைக்க விரும்புகிறேன்.(41) என் நண்பர்கள், தம்பிகள் மற்றும் பாட்டன்கள் கொல்லப்படக் காரணமான நான் என் உயிரைக் காத்துக் கொண்டால், உலகம் என்னை நிந்திக்கும் என்பதில் ஐயமில்லை.(42) பாண்டு மகனுக்கு {யுதிஷ்டிரனைப்} பணிந்து, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இல்லாமல் நான் அனுபவிக்கப்போவது எத்தகைய அரசாக இருக்கக்கூடும்?(43) அண்டத்தில் அதை அடைந்து தலைவனாக இருந்த நான், இப்போது நல்ல போரின் மூலம் சொர்க்கத்தை அடையப் போகிறேன். இது வேறுவிதமாகாது” என்றான் {துரியோதனன்}.(44) துரியோதனனால் இவ்வாறு சொல்லப்பட்ட க்ஷத்திரியர்கள் அனைவரும் அந்தப் பேச்சை மெச்சி, மன்னனை உற்சாகமூட்டும் வகையில், “நல்லது, நல்லது” என்றனர்.(45)

தங்கள் தோல்விக்காக எவ்வருத்தமும் கொள்ளாமல், தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த உறுதியாகத் தீர்மானித்த அவர்கள் அனைவரும், போரிடத் தீர்மானித்த பிறகு, உற்சாகத்தால் நிறைந்தனர்.(46) தங்கள் விலங்குகளைத் தேற்றிய கௌரவர்கள், போரின் எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியை அடைந்து, களத்தில் இருந்து சற்றே இரு யோஜனைகளுக்குக் குறைந்த தொலைவில் (அந்த இரவுக்கான) தங்கள் முகாமை அமைத்தனர்.(47) புனிதமான சரஸ்வதியின் {சரஸ்வதி நதியின்} சிவந்த நீரையும், இமய மலையின் அடிவாரத்தில் மேட்டுச் சமவெளியை அடைந்த அவர்கள், அந்நீரில் குளித்து, அதைக் கொண்டு தங்கள் தாகத்தைத் தணித்துக் கொண்டனர். உமது மகனால் {துரியோதனனால்} உற்காசமடைந்த அவர்கள் (அந்த ஓய்வுக் களத்தில்) காத்திருந்தனர்.(48) மீண்டும் தங்களை ஒருவரோடொருவர் அணிதிரட்டிக் கொண்ட அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும், விதியால் உந்தப்பட்டு (தங்கள் முகாமில்) காத்திருந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(49)

படைத்தலைவனானான் சல்லியன்! – சல்லிய பர்வம் பகுதி – 06-இமய மலையின் அடிவாரத்தில் உள்ள மேட்டுச் சமவெளியில் பதினேழாம் நாள் இரவைக் கழித்த கௌரவர்கள்; படைத்தலைவரை நியமிக்கும்படி துரியோதனனைக் கேட்டுக் கொண்ட படை வீரர்கள்; அஸ்வத்தாமனிடம் சென்று ஆலோசனை கோரிய துரியோதனன்; சல்லியனைப் படைத்தலைவராக நியமிக்கும்படி சொன்ன அஸ்வத்தாமன்; அவ்வாறே ஆகும்படி சல்லியனை வேண்டிக் கொண்ட துரியோதனன்; அதை ஏற்றுக் கொண்ட சல்லியன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இமய மலையின் அடிவாரத்தில், அந்த மேட்டுச் சமவெளியில் இருந்த அந்த வீரர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரின் எதிர்பார்ப்பில் மகிழ்ந்து ஒன்றாகத் திரண்டு அந்த இரவைக் கழித்தனர்.(1) உண்மையில், சல்லியன், சித்திரசேனன், வலிமைமிக்கத் தேர்வீரனான சகுனி, அஸ்வத்தாமன், கிருபர், சாத்வதகுலத்தின் கிருதவர்மன்,(2) சுஷேனன், அரிஷ்டசேனன், பெரும் சக்தி கொண்ட திருதசேனன், ஜயத்சேனன் ஆகிய இந்த மன்னர்கள் அனைவரும் அங்கேயே தங்கள் இரவைக் கழித்தனர்.(3) வீரக் கர்ணன் போரில் கொல்லப்பட்ட பிறகு, வெற்றியை விரும்பிய பாண்டவர்களிடம் அச்சம் கொண்ட உமது மகன்கள், அந்த இமய மலைகளிலும் அமைதியை அடையத் தவறினர்.(4)

போரிடத் தீர்மானித்த அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னனை {துரியோதனனை} முறையாக வழிபட்டு, சல்லியனின் முன்னிலையில் அவனிடம் {துரியோதனனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்.(5) அவர்கள், “உன் படைக்கு யாராவது ஒருவரைத் தலைவராக்கிய பிறகு எதிரியுடன் போரிடுவதே உனக்குத் தகும். அவரால் பாதுகாக்கப்பட்டே போரில் நாம் எதிரிகளை வெல்வோம்” என்றனர்.(6) அப்போது துரியோதனன், தன் தேரில் இருந்து இறங்காமலேயே, தேர்வீரர்களில் முதன்மையானவனும், போர்விதிகள் அனைத்தையும் அறிந்தவனும், போரில் அந்தகனுக்கு ஒப்பானவனுமாi வீரனை (அஸ்வத்தாமனை) நோக்கிச் சென்றான்[1].(7) அழகிய அங்கங்களைக் கொண்டவனும், தலையை நன்கு மறைத்திருந்தவனும், சங்கில் உள்ளதைப் போலக் கழுத்தில் மூன்று கோடுகளைக் கொண்டவனும், இனிய பேச்சைக் கொண்டவனும், முற்றாக மலர்ந்த தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனும், புலியைப் போன்ற முகத்தைக் கொண்டவனும், மேருவைப் போன்ற மேன்மை கொண்டவனும்,(8) மஹாதேவனின் {சிவனின்} காளைக்கு ஒப்பான கழுத்து, கண்கள், நடை மற்றும் குரலைக் கொண்டவனும், நன்கு இயைந்த, பருத்த, நீண்ட கரங்களைக் கொண்டவனும், நன்கு கட்டமைக்கப்பட்ட அகன்ற மார்பைக் கொண்டவனும்,(9) காற்றில் பறக்கும் கருடனுக்கு இணையான வேகத்தையும், பலத்தையும் கொண்டவனும், சூரியனின் கதிர்களைப் போன்ற காந்தியைக் கொடையாகக் கொண்டவனும், புத்திக்கூர்மையில் உசனசுக்கு {சுக்கிரனுக்குப்} போட்டியாளனும் {இணையானவனும்},(10) அழகு, வடிவம் மற்றும் முகத்தின் கவர்ச்சி ஆகியவற்றில் சந்திரனைப் போன்றவனும், எண்ணற்ற தங்கத் தாமரைகளால் அமைந்ததைப் போன்ற உடலைக் கொண்டவனும், இயைந்து பொருந்தும் மூட்டுகளைக் கொண்டவனும்,(11) நன்கு கட்டமைக்கப்பட்ட தொடைகள், இடை மற்றும் குறுக்கைக் கொண்டவனும், அழகிய பாதம், அழகிய விரல்கள், அழகிய நகங்கள் ஆகியவற்றைக் கொண்டவனுமான அவன் {அஸ்வத்தாமன்}, படைப்புகள் அனைத்தின் நற்பண்புகள் மற்றும் அழகு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக நினைத்துப் பார்த்த பிறகு, படைப்பாளனால் பெருங்கவனத்துடன் படைக்கப்பட்டவனாகத் தெரிந்தான்.(12)

நற்குறிகள் அனைத்தையும் கொண்டவனும், ஒவ்வொரு செயலிலும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்பவனுமான அவன் {அஸ்வத்தாமன்}, கல்வியில் பெருங்கடலாவான். எப்போதும் தன் எதிரிகளைப் பெரும் வேகத்துடன் வெற்றிக் கொண்ட அவன், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான்.(13) நான்கு பாதங்கள் மற்றும் பத்து அங்கங்களைக் கொண்ட ஆயுத அறிவியலின் அனைத்து விவரங்களையும் அறிந்தவனாக அவன் இருந்தான்[2]. நான்கு வேதங்களையும், அதன் அங்கங்களையும், ஐந்தாவதாக ஆக்யானங்களையும்[3] அறிந்தவனாக அவன் இருந்தான்.(14) பெரும் தவத் தகுதியைக் கொண்டவரும், பெண்ணிடம் பிறக்காதவருமான துரோணர், பெருங்கவனத்துடனும், தவ நோன்புகளுடனும் முக்கண் தேவனை வழிபட்டு, {அவரைப் போன்றே} பெண்ணிடம் பிறக்காத தன் மனைவியிடம் {கிருபியிடம்} அவனை {அஸ்வத்தாமனைப்} பெற்றெடுத்தார்.(15)

அப்படிப்பட்ட ஒப்பற்ற சாதனைகளையும், புகழையும் கொண்டவனும், பூமியில் ஒப்பற்ற அழகைக் கொண்டவனும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் கற்றறிந்தவனும், சாதனைகளில் பெருங்கடலும், களங்கமற்றவனுமான அஸ்வத்தாமனை அணுகிய உமது மகன் {துரியோதனன்}, அவனிடம், “ஓ! ஆசான் மகனே {அஸ்வத்தாமரே}, நீரே இன்று எங்களது உயர்ந்த புகலிடமாக இருக்கிறீர். எனவே, இப்போது எவரை நமது படைத்தலைவராக நியமிப்பது? யாரைத் தலைமையாக்கிக் கொண்டு, ஒன்று சேர்ந்திருக்கும் நம் அனைவராலும் பாண்டவர்களை வெல்ல முடியும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக” என்றான் {துரியோதனன்}.(16-18)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}“சல்லியர் நமது படையின் தலைவராகட்டும். குலம், ஆற்றல், சக்தி, புகழ், அழகு மற்றும் பிற அனைத்து சாதனைகளிலும் அவரே மேன்மையானவராக இருக்கிறார்.(19) தமக்கு அளிக்கப்பட்ட சேவைகளால் மனம் நிறைந்த அவர் {சல்லியர்}, தன் சொந்த தங்கையின் {மாத்ரியின்} மகன்களைக் கைவிட்டுவிட்டு, நமது தரப்பை அடைந்திருக்கிறார். தாமே ஒரு பெரிய படையை வைத்திருக்கும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர், தேவர்ப்படையின் இரண்டாம் தலைவனை (கார்த்திகேயனை {முருகனைப்}) போன்றவராவார்.(20) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே {துரியோதனா}, அம்மன்னரை {சல்லியரை} நமது படைத்தலைவராக்கினால், வெல்லப்பட முடியாத ஸ்கந்தனை {முருகனைப்) படைத்தலைவனாக்கிய தேவர்களைப் போலவே நம்மால் வெற்றியை ஈட்ட முடியும்” என்றான் {அஸ்வத்தாமன்}.(21)

துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} இவ்வார்த்தைகளைச் சொன்னதும், சல்லியனைச் சூழ்ந்து கொண்ட மன்னர்கள் அனைவரும், அவன் வெற்றியடைவானென {வெற்றி} முழக்கமிட்டனர். போருக்குத் தங்கள் மனத்தை ஆயத்தம் செய்து கொண்ட அவர்கள் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தனர்.(22) அப்போது கரங்களைக் கூப்பியபடியே தன் தேரில் இருந்து இறங்கிய துரியோதனன், போரில் துரோணர் மற்றும் பீஷ்மருக்குப் போட்டியாளனும் {இணையானவனும்}, {அப்போது} தன் தேரில் இருந்தவனுமான சல்லியனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(23) “ஓ! நண்பர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவரே, நண்பர்களின் வடிவத்தில் இருக்கும் மனிதர்கள் உண்மையான நண்பர்கள்தானா? இல்லையா? என ஞானியர் சோதிப்பது போன்ற அப்படிப்பட்ட நேரம் இப்போது உமது நண்பர்களுக்கு வந்திருக்கிறது.(24) துணிச்சல்மிக்க நீரே எங்கள் படைத்தலைவராகி, எங்கள் படையின் முன்னணியில் இருக்க வேண்டும். நீர் போரிடச் செல்லும்போது பாண்டவர்களும், அவர்களது நண்பர்களும் உற்சாகத்தை இழப்பார்கள், பாஞ்சாலர்களோ தளர்வடைவார்கள்” என்றான் {துரியோதனன்}.(25)

சல்லியன், “ஓ! குருக்களின் மன்னா {துரியோதனா}, நீ என்னிடம் நிறைவேற்றச் சொல்வதை நான் நிறைவேற்றுவேன். உயிர்மூச்சு, நாடு, செல்வம் ஆகிய நான் கொண்ட அனைத்தும் உன் சேவைக்காகவே {உனக்காகவே} இருக்கின்றன” என்று பதிலுரைத்தான்.(26)

துரியோதனன், “ஓ! அம்மானே {தாய்மாமனே}, என் படையின் தலைமைப் பொறுப்பை அடைய நான் உம்மை வேண்டி நிற்கிறேன். ஓ! போர்வீரர்களில் முதன்மையானவரே, போரில் தேவர்களைப் பாதுகாக்கும் ஸ்கந்தனை {முருகனைப்} போலவே ஒப்பற்றவகையில் எங்களைக் காப்பீராக.(27) ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, பாவகனின் {அக்னியின்} மகனான கார்த்திகேயன் {முருகன்}, தேவர்களின் (படை) தலைமையை ஏற்றதுபோலவே, நீரே உம்மைத் தலைமைப்பொறுப்பில் நிறுவிக் கொள்வீராக. ஓ! வீரரே, தானவர்களைக் கொல்லும் இந்திரனைப் போல, போரில் நமது எதிரிகளைக் கொல்வீராக” என்றான் {துரியோதனன்}.”(28)

கிருஷ்ணனுடன் ஆலோசித்த யுதிஷ்டிரன்! – சல்லிய பர்வம் பகுதி – 07-துரியோதனனுக்கு உறுதிகூறிய சல்லியன்; சல்லியனைப் படைத்தலைமையில் நிறுவிய துரியோதனன்; கர்ணன் கொல்லப்பட்ட துயர் மறைந்து, மகிழ்ச்சியடைந்த கௌரவர்கள் சல்லியனை வாழ்த்தியது; படைத்தலைமையில் சல்லியன் நிறுவப்பட்டதை அறிந்து கிருஷ்ணனுடன் ஆலோசித்த யுதிஷ்டிரன்; சல்லியனைப் புகழ்ந்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரனைத் தவிர வேறு எவராலும் சல்லியனைக் கொல்ல முடியாது என்று சொன்ன கிருஷ்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “(குரு) மன்னனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த வீர ஏகாதிபதி (சல்லியன்), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனுக்கு மறுமொழியாக இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1) “ஓ! வலிய கரங்களைக் கொண்ட துரியோதனா, ஓ! சொல்திறமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. தேரில் இருக்கும் இரு கிருஷ்ணர்களையும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களாக நீ கருதுகிறாய். எனினும், அவ்விருவரும் ஒன்றாகச் சேர்ந்தாலும்கூடக் கரங்களின் வலிமையில் எனக்கு இணையாக மாட்டார்கள்.(2) பாண்டவர்களைக் குறித்துச் சொல்ல வேறு என்ன தேவை இருக்கிறது? போரின் முன்னணியில் கோபத்துடன் போரிடும்போது, தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் அடங்கிய மொத்த உலகமும் ஆயுதங்களுடன் எதிர்த்து வந்தாலும், அவர்களுடன் என்னால் போரிட முடியும்.(3) போரில் கூடியிருக்கும் பார்த்தர்களையும், சோமகர்களையும் நான் வெல்வேன். நான் உன் துருப்புகளுக்குத் தலைவனாவேன் என்பதில் ஐயமில்லை.(4) நம் எதிரிகளால் விஞ்சமுடியாத ஒரு வியூகத்தை நான் வகுப்பேன். ஓ! துரியோதனா, இதையே நான் உனக்குச் சொல்வேன். இதில் எந்த ஐயமுமில்லை” என்றான் {சல்லியன்}.(5)

(சல்லியனால்) இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் துரியோதனன், ஓ! பாரதர்களில் சிறந்தவரே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, காலந்தாழ்த்தாமல் மகிழ்ச்சியுடன் தன் துருப்புகளுக்கு மத்தியில் வைத்து, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி மத்ரர்களின் மன்னன் {சல்லியன்} மீது புனித நீரை ஊற்றினான்[1].(6) சல்லியனுக்குத் தலைமைப் பொறுப்புக் கொடுக்கப்பட்ட பிறகு, ஓ! பாரதரே, உமது துருப்புகளுக்கு மத்தியில் உரத்த சிங்க முழக்கங்களும், பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளும் எழுந்தன.(7) கௌரவப் போர்வீரர்களும், மத்ரகர்களுக்கு மத்தியில் வலிமைமிக்கத் தேர்வீரர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து, போர்க்கள ரத்தினமான அரசன் சல்லியனை இவ்வார்த்தைகளில் புகழ்ந்தனர்.(8) அவர்கள், “ஓ! மன்னா {சல்லியா}, வெற்றி உனதாகட்டும். நீ நீடூழி வாழ்வாயாக. கூடியிருக்கும் எதிரிகள் அனைவரையும் கொல்வாயாக. உனது கரங்களின் வலிமையைப் பெற்ற பிறகு, பெரும் பலம் கொண்ட தார்தராஷ்டிரர்கள், ஓர் எதிரியுமற்ற பரந்த உலகை ஆளட்டும்.(9) தேவர்களும், அசுரர்களும் அடங்கிய மூலவுலங்கங்களையும் போரில் நீ வெல்ல வல்லவன் என்பதால், அழியக்கூடியவர்களான சோமகர்கள் மற்றும் சிருஞ்சயர்களைக் குறித்துச் சொல்லும் தேவை என்ன இருக்கிறது?” என்றனர்.(10)

இவ்வாறு புகழப்பட்ட அந்த மத்ரகர்களின் வலிமைமிக்க மன்னன் {சல்லியன்} பண்படாத ஆன்மாக்களைக் கொண்டோரால் அடைய முடியாத பெருமகிழ்ச்சியை அடைந்தான்.(11) சல்லியன், “ஓ! மன்னா {துரியோதனா}, போரில் பாண்டவர்களையும், பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வேன், அல்லது அவர்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்திற்குச் செல்வேன்.(12) இன்று (போர்க்களத்தில்) அச்சமற்றுத் திரியப்போகும் என்னை இந்த உலகம் காணட்டும். இன்று, பாண்டுவின் மகன்கள் அனைவரும், வாசுதேவனும், சாத்யகியும், (13) திரௌபதியின் மகன்களும், திருஷ்டத்யும்னனும், சிகண்டியும், பிரபத்ரகர்கள் அனைவரும்(14) என் ஆற்றல், என் வில்லின் பெரும் வலிமை, எனது வேகம், என் ஆயுதங்களின் சக்தி, என் கரங்களின் பலம் ஆகியவற்றைப் போரில் காணப் போகிறார்கள்.(15) இன்று பார்த்தர்களும், சித்தர்கள் மற்றும் சாரணர்கள் அனைவரும், என் கரங்களின் பலத்தையும், நான் கொண்டிருக்கும் ஆயுத செல்வத்தையும் காணட்டும்.(16) இன்று என் ஆற்றலைக் காணும் பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், எதிர்நடவடிக்கை எடுக்க விரும்பி, பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றப் போகிறார்கள்.(17) இன்று நான் பாண்டவர்களின் துருப்புகளை அனைத்துப் பக்கங்களிலும் முறியடிப்பேன். ஓ! தலைவா {துரியோதனா}, துரோணர், பீஷ்மர் மற்றும் சூதன் மகன் {கர்ணன்} ஆகியோரை நான் போரில் விஞ்சுவேன். ஓ! கௌரவா {துரியோதனா}, உனக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக நான் களத்தில் திரிவேன்” என்றான் {சல்லியன்}.”(18)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “சல்லியன் தலைமைப் பொறுப்பில் நிறுவப்பட்ட பிறகு, ஓ! கௌரவங்களை அளிப்பவரே {திருதராஷ்டிரரே}, அதற்கு மேலும் உமது துருப்புகளில் எவரும், கர்ணன் குறித்து எத்துயரும் அடையவில்லை.(19) உண்மையில், துருப்புகள் உற்சாகமும், மகிழ்ச்சியுமடைந்தனர். பார்த்தர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டதாகவும், மத்ரர்களின் ஆட்சியாளனுடைய பலத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதாகவும் அவர்கள் கருதினர்.(20) பெரும் மகிழ்ச்சியை அடைந்த உமது துருப்புகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவ்விரவில் மகிழ்ச்சியாக உறங்கி, பெரும் உற்சாகம் அடைந்தனர்.(21)

உமது படையின் அந்தக் கூச்சல்களைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், க்ஷத்திரியர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும்போது, விருஷ்ணி குலத்தோனிடம் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(22) “ஓ! மாதவா {கிருஷ்ணா}, மத்ரர்களின் ஆட்சியாளரும், போர் வீரர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்படுபவரும், பெரும் வில்லாளியுமான சல்லியரை, அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, தன் படையின் தலைவராக்கியிருக்கிறான்.(23) ஓ! மாதவா, நடந்ததை அறிந்த பிறகு, எது நன்மையோ அதைச் செய்வாயாக. நீயே எங்கள் தலைவனும், பாதுகாவலனுமாவாய். அடுத்து செய்யப்பட வேண்டியதைச் செய்வாயாக” என்றான்{யுதிஷ்டிரன்}.(24)

அப்போது, வாசுதேவன் {கிருஷ்ணன்}, ஓ! ஏகாதிபதி, அம்மன்னிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, ஆர்த்தாயனியை {சல்லியரை} உண்மையாக {உள்ளபடியே} நான் அறிவேன்.(25) ஆற்றலும், பெரும் சக்தியும் கொண்ட அவர், மிகவும் சிறப்புமிக்கவராவார். அவர் போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவரும், பெரும் கரநளினம் கொண்டவரும் ஆவார்(26) நான் அந்த மத்ரர்களின் ஆட்சியாளரை {சல்லியரை} பீஷ்மர், அல்லது துரோணர், அல்லது கர்ணன் ஆகியோருக்கு இணையானவர், அல்லது, ஒருவேளை அவர்களுக்கும் மேம்பட்டவர் என்றே நினைக்கிறேன்.(27) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {யுதிஷ்டிரரே}, போரிடும் சல்லியருக்கு ஒப்பான ஒரு போர்வீரனை நன்கு சிந்தித்த பிறகும் நான் காணவில்லை.(28) போரில் அவர் {சல்லியர்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிகண்டி, அர்ஜுனன், பீமர், சாத்யகி, திருஷ்டத்யும்னன் ஆகியோரைவிட வலிமைமிக்கமிக்கவராவார்.(29) ஓ! ஏகாதிபதி, சிங்கம், அல்லது யானையின் ஆற்றலைக் கொண்டவரான அந்த மத்ரர்களின் மன்னன், அண்ட அழிவின் போது உயிரினங்களுக்கு மத்தியில் கோபத்துடன் திரியும் அந்தகனைப் போலவே போரில் அச்சமில்லாமல் திரியப் போகிறார்.(30)

ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, புலிக்கு இணையான அற்றலைக் கொண்ட உம்மைத் தவிர, போரில் அவருக்கு இணையான வேறு எவரையும் நான் காணவில்லை.(31) ஓ! குரு குலத்தின் மகனே, போரில் கோபத்தால் தூண்டப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளரைக் கொல்ல இந்த மொத்த உலகத்திலோ, சொர்க்கத்திலோ கூட உம்மைத்தவிர வேறொரு மனிதன் இல்லை.(32) நாளுக்கு நாள் போரில் ஈடுபட்டு உமது துருப்புகளை அவர் கலங்கடித்து வருகிறார். இதற்காகவே, சம்பரனைக் கொன்ற மகவத்தை {இந்திரனைப்} போல, போரில் சல்லியரைக் கொல்வீராக.(33) திருதராஷ்டிரர் மகனால் {துரியோதனனால்} மதிப்புடன் நடத்தப்படும் அந்த வீரர்கள் போரில் வெல்லப்பட முடியாதவராவார். போரில் மத்ரர்களின் ஆட்சியாளர் {சல்லியரே} வீழ்ந்த பிறகே, நீர் அடையப்போகும் வெற்றி உறுதியானதாகும். அவர் கொல்லப்பட்டால், பரந்த தார்தராஷ்டிரப் படையும் கொல்லப்படும்.(34) ஓ! ஏகாதிபதி, ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, இப்போது என் வார்த்தைகளைக் கேட்கும் நீர், வலிமைமிக்கத் தேர்வீரரான அந்த மத்ரர்களின் ஆட்சியாளரை எதிர்த்துச் செல்வீராக.(35)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, அசுரன் நமுசியைக் கொன்ற வாசவனை {இந்திரனைப்} போல அந்தப் போர்வீரரை நீர் கொல்வீராக. அவர் {சல்லியர்} உமது தாய்மாமன் என்பதை நினைத்து இங்கே எந்தக் கருணையும் காட்டப்பட வேண்டிய தேவை இல்லை. க்ஷத்திரியக் கடமைகளை உமக்கு முன் கொண்டு, அந்த மத்ரர்களின் ஆட்சியாளரைக் கொல்வீராக.(36) பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் ஆகிய அடியற்ற பெருங்கடல்களைக் கடந்துவிட்டு, மாட்டுக்குளம்படி தடமேயான {அத்தடத்தில் உள்ள நீரேயான} சல்லியரிடம் நீரும், உம்மைப் பின்தொடர்பவர்களும் மூழ்கிவிடாதீர்.(37) உமது மொத்த தவச் சக்தியையும், உமது க்ஷத்திரிய ஆற்றலையும் போரில் வெளிப்படுத்துவீராக. அந்தத் தேர்வீரரை {சல்லியரைக்} கொல்வீராக” என்றான் {கிருஷ்ணன்}.(38)

இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், பாண்டவர்களால் வழிபடப்படுபவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, அந்த மாலை வேளையில் தன் பாசறைக்குச் சென்றான்.(39) கேசவன் சென்றதும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் மற்றும் சோமகர்கள் அனைவருக்கும் விடைகொடுத்தனுப்பி, உடலில் இருந்து ஈட்டிகள் பிடுங்கப்பட்ட யானை ஒன்றைப் போல அவ்விரவில் மகிழ்ச்சியாக உறங்கினான்.(40) பெரும் வில்லாளிகளான பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும், கர்ணனுடைய வீழ்ச்சியின் விளைவில் திளைத்து, அவ்விரவில் மகிழ்ச்சியாக உறங்கினர்.(41) நோய் விலகியதும், வில்லாளிகள் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரர்களால் நிரம்பியதுமான அந்தப் பாண்டவர்களின் படையானது, ஓ! ஐயா, கர்ணனின் படுகொலையால் கிடைத்த வெற்றியின் விளைவால் அவ்விரவில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(42)

தனியொருவனாகப் போரிட வேண்டாம்! – சல்லிய பர்வம் பகுதி – 08- எவரும் தனியொருவராகப் பாண்டவர்களுடன் நேருக்கு நேராகப் போரிட வேண்டாம் என்று தீர்மானித்த கௌரவர்கள்; இரு தரப்பிலும் அமைக்கப்பட்ட வியூகங்கள்; எஞ்சியிருந்த கௌரவ மற்றும் பாண்டவப் படைகளின் எண்ணிக்கை; அப்போதும் கௌரவர்களே எண்ணிக்கையில் அதிகமாக இருந்தது; பதினெட்டாம் நாள் போர் தொடங்கியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த இரவு கழிந்ததும், துரியோதனன், உமது படைவீரர்கள் அனைவரிடமும், “வலிமைமிக்கத் தேர்வீரர்களே, ஆயுதம் தரிப்பீராக” என்றான்.(1) மன்னனின் ஆணையைக் கேட்ட அந்தப் போர்வீரர்கள் தங்கள் கவசங்களைப் பூட்டத் தொடங்கினர். சிலர் தங்கள் தேர்களில் வேகமாகத் தங்கள் குதிரைகளைப் பூட்டினர், வேறு சிலர் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தனர்.(2) யானைகளை ஆயத்தம் செய்வது தொடங்கப்பட்டது. காலாட்படைவீரர்கள் ஆயுதங்களைத் தரிக்கத் தொடங்கினர். ஆயிரக்கணக்கான வேறு சிலர், தேர்த்தட்டுகளில் தரைவிரிப்புகளைப் பரப்பத் தொடங்கினர்.(3) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, படைவீரர்களின் உற்சாகத்தை அதிகரிக்க இசைக்கருவிகளின் ஒலி அங்கே எழுந்தது.(4) அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சரியான நிலைகளில் நிறுத்தப்பட்ட துருப்பினர் அனைவரும், கவசமணிந்து கொண்டு, மரணத்தையே தங்கள் இலக்காகத் தீர்மானித்து நிற்பதாகத் தெரிந்தது.(5)

மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைத்} தங்கள் தலைவனாக்கிக் கொண்ட கௌரவர்களின் பெரும் தேர்வீரர்கள், தங்கள் துருப்புகளைப் பிரித்துப் படைப்பிரிவுகளாக அணிவகுத்து நின்றனர்.(6) பிறகு, கிருபர், கிருதவர்மன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சல்லியன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோரோடு கூடிய உமது போர்வீரர்கள் அனைவரும், இன்னும் உயிரோடு எஞ்சியிருக்கும் பிற மன்னர்களும், உமது மகனை {துரியோதனனைச்} சந்தித்து, அவர்களில் எவரும் தனி நபராகவோ, துணையின்றியோ பாண்டவர்களுடன் போரிடுவதில்லை என்ற தீர்மானத்தை எட்டினர்.(7,8) அவர்கள், “பாண்டவர்களுடன் எவன் எந்த ஆதரவுமின்றித் தனியாகப் போரிடுவானோ, எவன் போரிட்டுக் கொண்டிருக்கும் தன் தோழனைக் கைவிடுவானோ, அவன் ஐந்து முக்கியப் பாவங்களையும் {பஞ்சமாபாதகங்களால் விளையும் பாவங்களையும்}, சிறு பாவங்கள் {உபபாதகங்களால் விளையும் பாவங்கள்} அனைத்தையும் அடைவான்” என்றனர். மேலும் அவர்கள், “நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து {ஒருவரையொருவர் காத்துக் கொண்டு} எதிரியுடன் போரிடுவோமாக” என்றனர்.(9) ஒருவருக்கொருவர் இவ்வாறு ஒரு தீர்மானத்தை எட்டிய அந்தப் பெரும் தேர்வீரர்கள், மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைத்} தங்கள் தலைமையில் கொண்டு, தங்கள் எதிரிகளை எதிர்த்து விரைந்து சென்றனர்.(10)

அதேபோல, பாண்டவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும்போரில் தங்கள் துருப்புகளை அணிவகுத்துக் கொண்டு, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கௌரவர்களோடு போரிடுவதற்காக அவர்களை எதிர்த்துச் சென்றனர்.(11) ஓ! பாரதர்களின் தலைவரே, கலங்கும் பெருங்கடலுக்கு ஒப்பான ஒலியுடன் கூடியதும், தேர்கள் மற்றும் யானைகளின் விளைவால் அற்புதமாகத் தெரிந்ததுமான அந்தப் படையானது அலைகள் பெருகிய ஆழமான பெருங்கடலின் தன்மையை விரைவில் அடைந்தது” {என்றான் சஞ்சயன்}.(12)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “துரோணர், பீஷ்மர் மற்றும் ராதையின் மகன் {கர்ணன்} ஆகியோரின் வீழ்ச்சியை நான் கேட்டிருக்கிறேன். இப்போது சல்லியன் மற்றும் என் மகனின் {துரியோதனனின்} வீழ்ச்சியை எனக்குச் சொல்வாயாக.(13) ஓ! சஞ்சயா, உண்மையில் சல்லியன் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் எவ்வாறு கொல்லப்பட்டான்? மேலும் எனது மகன் துரியோதனன், பெரும் வலிமை கொண்ட பீமசேனனால் எவ்வாறு கொல்லப்பட்டான்?” என்று கேட்டான்.(17)

சஞ்சயன் {திடுதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் போரை (உமக்கு) விவரிக்கும்போதே, மனித உடல்களின் அழிவையும், யானைகள் மற்றும் குதிரைகள் இழப்பையும் {மனவுறுதியுடன்} பொறுமையாகக் கேட்பீராக.(15) ஓ! மன்னா, துரோணர், பீஷ்மர் மற்றும் சூதன் மகன் {கர்ணன்} ஆகியோர் வீழ்த்தப்பட்ட பிறகு, ஓ! ஐயா, போரில் பார்த்தர்கள் அனைவரையும் சல்லியன் கொன்றுவிடுவான் என்ற நம்பிக்கை உமது மகன்களின் இதயத்தில் பலமடைந்தது.(16) அந்நம்பிக்கையைத் தன் இதயத்தில் வளர்த்துக் கொண்டு, அதன் மூலம் ஆறுதலை அடைந்த உமது மகன் துரியோதனன், ஓ! பாரதரே, போரில் வலிமைமிக்கத் தேர்வீரனான மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} நம்பி, தன்னைப் பாதுகாவலனுள்ளவனாகக் கருதிக் கொண்டான்.(17) கர்ணனின் வீழ்ச்சியில் பார்த்தர்கள் சிங்க முழக்கங்கள் செய்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தார்தராஷ்டிரர்களின் இதயங்களைப் பேரச்சம் பீடித்திருந்தது.(18) முறையாக அவனுக்கு உறுதி கூறிய, மத்ரர்களின் வீர மன்னன் {சல்லியன்}, ஓ! ஏகாதிபதி, அனைத்து வகையிலும் மங்கலகரமான ஏற்பாடுகளுடன் கூடிய ஒரு பெரும் வியூகத்தை அமைத்து,(19) போரில் பார்த்தர்களை எதிர்த்துச் சென்றான். மத்ரர்களின் அந்த வீர மன்னன் {சல்லியன்}, மிகப் பலமானதும், பெரும் வேகத்தில் கணைகளை ஏவவல்லதுமான தன் அழகிய வில்லை அசைத்துக் கொண்டே சென்றான்.(20)

அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சல்லியன்}, சிந்துவில் பிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட முதன்மையான வாகனத்தில் ஏறிச் சென்றான். அவனது தேரை ஓட்டிய சாரதி, அவ்வாகனத்தினை பிரகாசமாகத் தெரியும்படி செய்தான்.(21) எதிரிகளை நொறுக்கும் துணிச்சல்மிக்கவனான அந்த வீரன் (சல்லியன்), ஓ! ஏகாதிபதி, உமது மகன்களின் அச்சங்களை விலக்கியபடி, அத்தேரால் பாதுகாக்கப்பட்டு நின்றான்.(22) அப்படி (போருக்கு) முன்னேறிச் செல்கையில், கவசம் பூண்டிருந்த அந்த மத்ரர்களின் மன்னன், வியூகத்தின் தலைமையில் நின்று கொண்டு, துணிச்சல் மிக்க மத்ரகர்களின் மற்றும் வெல்லப்பட முடியாத கர்ணனின் மகன்கள் ஆகியோரின் துணையுடன் சென்றான் (23) இடப்பக்கத்தில், கிருதவர்மன், திரிகர்த்தர்களால் சூழப்பட்டு நின்றான். வலப்பக்கத்தில், கௌதமர் (கிருபர்), சகர்கள் மற்றும் யவனர்களுடன் கூடி நின்றார்.(24) பின்புறத்தில், அஸ்வத்தாமன், காம்போஜர்களால் சூழப்பட்டு நின்றான். நடுவில், துரியோதனன், முதன்மையான குரு போர்வீரர்களால் சூழப்பட்டு நின்றான்.(25) சுபலனின் மகனான சகுனியும், வலிமைமிக்கத் தேர்வீரனான உலூகனும், பெரும் குதிரைப்படை மற்றும் பிற துருப்புகளுடன் முன்னேறிச் சென்றனர்.(26)

எதிரிகளைத் தண்டிப்பவர்களான பாண்டவர்களில் வலிமைமிக்க வில்லாளிகள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, உமது துருப்புகளை எதிர்த்து விரைந்தனர்.(27) திருஷ்டத்யும்னன், சிகண்டி, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர், சல்லியனின் படையை எதிர்த்து பெரும் வேகத்தோடு சென்றனர்.(28) அப்போது தன் துருப்புகளின் துணையுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதக் குலத்தின் காளையே, சல்லியனைக் கொல்லும் விருப்பத்தால், அவனை மட்டுமே எதிர்த்துச் சென்றான்.(29) எதிரிகளின் பெருங்கூட்டங்களைக் கொல்பவனான அர்ஜுனன், பெரும் வில்லாளியான கிருதவர்மனையும், சம்சப்தகர்களையும் எதிர்த்துப் பெரும் வேகத்தோடு விரைந்தான்.(30) பீமசேனன் மற்றும் சோமகர்களில் பெரும் தேர்வீரர்கள் ஆகியோர், ஓ! ஏகாதிபதி, போரில் தங்கள் எதிரிகளைக் கொல்ல விரும்பி கிருபரை எதிர்த்து விரைந்தானர்.(31) தங்கள் துருப்புகளின் துணையுடன் கூடியவர்களான மாத்ரியின் மகன்கள் {நகுலன்-சகாதேவன்} இருவரும், சகுனியையும், அவர்களது படைகளின் முன்னணியில் இருந்த பெரும் தேர்வீரனான உலூகனையும் எதிர்த்து விரைந்தனர்.(32) அதேபோலவே உமது படையைச் சேர்ந்த ஆயிரமாயிரம் போர்வீரர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.(33)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “வலிமைமிக்க வில்லாளிகளான பீஷ்மர், துரோணர் மற்றும் பெரும் தேர்வீரனான கர்ணன் ஆகியோரின் வீழ்ச்சிக்குப் பிறகு, குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருதரப்பினரின் எண்ணிக்கையும் குறைந்த பிறகு, உண்மையில், பெரும் ஆற்றலைக் கொண்ட பார்த்தர்கள் போரில் மீண்டும் கோபமடைந்த போது, ஓ! சஞ்சயா, படைகள் ஒவ்வொன்றின் பலமும் என்னவாக இருந்தது?” என்று கேட்டான்.(34,35)

சஞ்சயன்{திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா, அந்தச் சந்தர்ப்பத்தில் நாமும், எதிரியும் போருக்காக எவ்வாறு நின்றோம்? அந்த இரண்டு படைகளின் பலமும் அப்போது என்னவாக இருந்தது என்பதைக் கேட்பீராக.(36) ஓ! பாரதக் குலத்தின் காளையே,

பதினோராயிரம் {11,000} தேர்கள், பத்தாயிரத்து எழுநூறு {10,700} யானைகள்,(37) இருநூறாயிரம் {2லட்சம்} குதிரைகள், முப்பது லட்சம் {3 Million} காலாட்படை வீரர்கள் ஆகியவையே உமது படையின் {கௌரவப்படையின்} பலமாக இருந்தது.(38)

ஆறாயிரம் {6,000} தேர்கள், ஆறாயிரம் {6,000} யானைகள், பத்தாயிரம் {10,000} குதிரைகள், பத்து லட்சம் {1 Million} காலாட்படை வீரர்கள் ஆகியவை, ஓ! பாரதரே,(39) அந்தப் போரில் எஞ்சிய பாண்டவப் படையாக இருந்தது[1]. ஓ! பாரதக் குலத்தின் காளையே, இவர்களே போரில் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(40)

இவ்வழியில் தங்கள் படைகளைப் பிரித்துக் கொண்ட நாங்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டும், வெற்றியடையும் விருப்பத்தாலும், எங்களை மத்ரர்களின் ஆட்சியாளனின் {சல்லியனின்} கட்டுப்பாட்டில் நிறுத்திக் கொண்டு பாண்டவர்களை எதிர்த்துச் சென்றோம்.(41) அதே போல, மனிதர்களில் புலிகளும், வெற்றியில் விருப்பம் கொண்டவர்களுமான அந்தத் துணிச்சல்மிக்கப் பாண்டவர்களும், பெரும்புகழைக் கொண்ட பாஞ்சாலர்களும் {எங்களை எதிர்த்துப்} போரிட வந்தனர்.(42) இவ்வாறே, ஓ! ஏகாதிபதி, ஓ! தலைவா, அந்த மனிதப் புலிகள் அனைவரும் தங்கள் எதிரிகளைக் கொல்லும் விருப்பத்தால், நாளின் வைகறைப் பொழுதில் {விடியற்காலையில்} ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(43) அதன் பிறகு, ஒருவரையொருவர் அடிப்பதிலும், கொல்லுவதிலும் ஈடிபட்டிருந்த உமது துருப்புகளுக்கும், எதிரிகளுக்கும் இடையில் கடுமையானதும், பயங்கரமானதுமான ஒரு போர் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(44)

பதினெட்டாம் நாள் போர்த்தொடக்கம்! – சல்லிய பர்வம் பகுதி – 09-பதினெட்டாம் நாள் போர் தொடங்கியது; இரு தரப்பிலும் நேர்ந்த பயங்கரமான அழிவு; அர்ஜுனனும், பீமசேனனும் கௌரவப் படையைப் பிளந்து தப்பி ஓடச் செய்தது; குரு தலைவர்கள் தங்கள் துருப்புகளை மீண்டும் அணிதிரட்ட முயற்சித்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதன் பிறகு, தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு இடையில் நடைபெற்றதைப் போன்றதும், கடுமையானதும், பயங்கரமானதுமான ஒரு போர் குருக்களுக்கும், சிருஞ்சயர்களுக்கும் இடையில் நடைபெற்றது.(1) மனிதர்கள், தேர்க்கூட்டங்கள், யானைகள், யானைவீரர்கள், ஆயிரக்கணக்கான குதிரைவீரர்கள், பெரும் ஆற்றலைக் கொண்ட குதிரைகள் ஆகியன யாவும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன.(2) பயங்கர வடிவிலான யானைகள் பேரொலியுடன் விரைந்து கொண்டிருப்பது, மழைக்காலங்களில் ஆகாய மேகங்களின் முழக்கங்களுக்கு ஒப்பாகக் கேட்டது.(3) யானைகளால் தாக்கப்பட்ட சில தேர்வீரர்கள் தங்கள் தேர்களை இழந்தனர். அந்த மதங்கொண்ட விலங்குகளால் முறியடிக்கப்பட்ட சில துணிச்சல் மிக்கப் போராளிகள் களத்தில் ஓடிக் கொண்டிருந்தனர்.(4)

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களும், தங்கள் கணைகளுடன் கூடியவர்களுமான தேர்வீரர்கள், பெரும் குதிரைப்படையையும், யானைகளைத் தூண்டி அவற்றைப் பாதுகாத்துவந்த காலாட்படைவீரர்களையும் அடுத்த உலகத்திற்கு அனுப்பினர்.(5) ஓ! மன்னா, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட குதிரைவீரர்கள், களத்தில் திரிந்து கொண்டிருந்த பெரும் தேர்வீரர்களைச் சூழ்ந்து கொண்டு, சூலங்கள், ஈட்டிகள் மற்றும் வாள்களால் அவர்களைத் தாக்கிக் கொன்றனர்.(6) விற்களைத் தரித்திருந்த சில போராளிகள் பலரும் ஒன்று சேர்ந்து, பெரும் தேர்வீரர்களைச் சூழ்ந்து கொண்டு, தனித்தனியாக இருந்த அவர்களை ஒவ்வொருவராக யமலோகம் அனுப்பிவைத்தனர்.(7) வேறு சில பெருந்தேர் வீரர்கள், யானைகளையும், தங்கள் வகையைச் சேர்ந்த முதன்மையான போர்வீரர்களையும் சூழ்ந்து கொண்டு, களத்தில் போரிட்டபடி திரிந்து கொண்டிருநண அவர்களில் வலிமைமிக்கச் சிலரைக் கொன்றனர்[1].(8) அதே போலவே, ஓ! மன்னா, யானை வீரர்கள், கோபத்தால் தூண்டப்பட்ட தன்னந்தனி தேர்வீரர்களைச் சூழ்ந்து கொண்டு, கணைகளை இறைத்து அவர்களை அடுத்த உலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.(9) அந்தப் போரில் யானை வீரர்களை எதிர்த்து யானை வீரர்களும், தேர்வீரர்களை எதிர்த்து தேர்வீரர்களும் எதிர்த்துச் சென்று, ஈட்டிகள், வேல்கள் மற்றும் துணிக்கோல் கணைகளால் {நாராசங்களால்} ஒருவரையொருவர் கொன்றனர்.(10)

போருக்கு மத்தியில், யானைகளும், குதிரைகளும், திகைத்துப் போயிருந்த காலாட்படைகளை மிதித்துக் கொண்டு அதிகக் குழப்பத்தைச் செய்து கொண்டிருந்தன.(11) சாமரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த குதிரைகள், இமய அடிவாரத்தின் சமவெளிகளில் காணப்படும் அன்னங்களைப் போல அனைத்துப் பக்கங்களிலும் விரைந்தன. பூமியையே விழுங்கிவிட ஆயத்தமாகத் தெரியும்படி அவ்வளவு வேகத்துடன் அவை விரைந்தன.(12) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தக் குதிரைகளின் குளம்படிகளால் துளைக்கப்பட்ட போர்க்களமானது, மேனியில் (தன் காதலனின்) நகக்குறிகளைத் தாங்கிக் கொண்டிருக்கும் அழகிய பெண்ணைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(13) வீரர்களின் நடை, தேர்ச்சக்கரங்கள், காலாட்படை வீரர்களின் கூச்சல், யானைகளின் பிளிறல்,(14) பேரிகைகளின் முழக்கம் மற்றும் பிற இசைக்கருவிகள், சங்கொலி ஆகியவற்றால் உண்டான ஒலியானது, செவிடாக்கும் இடியின் முழக்கங்களைப் போலப் பூமியில் எதிரொலிக்கத் தொடங்கியது.(15)

விற்களின் நாணொலிகள், கத்திகளின் கீற்றுகள், போராளிகளுடைய கவசங்களின் பளபளப்பு ஆகியவை அனைத்தும் சேர்ந்து எதையும் காணமுடியாதபடி குழப்பத்தை ஏற்படுத்தின.(16) யானைகளின் தந்தங்களைப் போலத் தெரிந்தவையும், மனித உடல்களில் இருந்து வெட்டப்பட்ட விழுந்தவையுமான கரங்கள், உயரக்குதித்து, நடுங்கியபடியே சீற்றத்துடன் நகர்ந்தன.(17) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் விழுந்த தலைகளால் உண்டான ஒலியானது, பனை மரங்களில் இருந்து விழும் கனிகளின் ஒலிக்கு ஒப்பானவையாக இருந்தன.(18) அந்த விழுந்த தலைகளால் விரவி, இரத்தச் சிவப்பாகக் கிடந்த பூமியானது, பருவ காலத்தில் தங்க நிறத் தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டதைப் போலத் தெரிந்தது.(19) உண்மையில், அதிகமாகச் சிதைக்கப்பட்டு, விழி பிதுங்கியிருந்த அந்த உயிரற்ற தலைகளால், ஓ! மன்னா, போர்க்களமானது முற்றும் மலர்ந்திருந்த தாமரைகள் விரவிக் கிடப்பதைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(20)

சந்தனம் பூசப்பட்டவையும், விலைமதிப்புமிக்கக் கேயூரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தவையுமான போராளிகளின் விழுந்த கரங்களால், அந்தப் பூமியானது, இந்திரனைக் கௌரவிப்பதற்காக நடப்பட்டிருக்கும் கவர்ச்சிகரமான கம்பங்கள் விரவிக் கிடப்பதைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(21) யானைகளின் துதிக்கைகளைப் போல வழவழப்பாகத் தெரிந்தவையும், அந்தப் போரில் வெட்டப்பட்டவையுமான மன்னர்களின் தொடைகளால் அந்தப் போர்க்களம் மறைக்கப்பட்டது.(22) நூற்றுக்கணக்கான தலையற்ற முண்டங்கள் நிறைந்ததும், குடைகளும் சாமரங்களும் விரவிக் கிடந்ததுமான அந்தப் பரந்த படையானது, மலர்ந்திருக்கும் காட்டைப் போல அழகாகத் தெரிந்தது.(23) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கங்கள் குருதியில் குளித்திருந்ததால் மலர்ந்திருக்கும் கின்சுகங்களைப் போலத் தெரிந்த போர்வீரர்கள் அச்சமில்லாமல் அந்தப் போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.(24) கணைகள் மற்றும் வேல்களால் பீடிக்கப்பட்ட யானைகளும் கூட, வானத்தில் இருந்து விழும் சிதறிய மேகங்களைப் போல இங்கேயும், அங்கேயும் விழுந்து கொண்டிருந்தன.(25)

உயர் ஆன்மப் போர்வீரர்களால் கொல்லப்பட்ட யானைப்படைப்பிரிவுகள், காற்றால் கலக்கப்பட்ட மேகங்களைப் போல அனைத்துத் திசைகளிலும் பிரிந்து சென்றன.(26) மேகங்களைப் போலத் தெரிந்த அந்த யானைகள், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, யுக முடிவில் உலகம் அழியும் தருணத்தில் இடியால் பிளக்கப்படும் மலைகளைப் போலப் பூமியில் விழுந்து கொண்டிருந்தன.(27) தரையில் சாரதிகளுடன் குவியல் குவியலாக விழுந்து கிடக்கும் குதிரைகள் மலைகளைப் போலத் தெரிந்தன.(28) அந்தப் போர்க்களத்தில், அடுத்த உலகத்தை நோக்கிப் பாயும் ஆறு ஒன்று தோன்றியது. குருதியே அதன் நீரானது, தேர்கள் அதன் சுழிநீர்களாகின. கொடிமரங்கள் அதன் மரங்களாகவும், எலும்புகள் அதன் கூழாங்கற்களாகவும் ஆகின.(29) (போராளிகளின்) கரங்கள் அதன் முதலைகளாகவும், விற்கள் அதன் நீரோட்டமாகவும், யானைகள் அதன் பெரும்பாறைகளாகவும், குதிரைகள் சிறிய பாறைகளாகவும் ஆகின. கொழுப்பும், ஊனீரும் அதன் சகதியாகவும், குடிகள் அதன் அன்னங்களாகவும், கதாயுதங்கள் அதன் தெப்பங்களாகவும் ஆகின.(30)

நிறைந்திருந்த கவசங்கள், தலைக்கவசங்கள், கொடிகள் ஆகியன அதன் அழகிய மரங்களாகின. அதிகமாக இருந்த சக்கரங்கள் அதன் சக்கரவாகப் பறவைகளாகின. அது திரிவேணுகளாலும், தண்டங்களாலும் மறைக்கப்பட்டிருந்தது.(31) துணிவுள்ளோரின் மகிழ்ச்சியைத் தூண்டியும், மருண்டோரின் அச்சங்களை அதிகரித்தும், குருக்களையும், சிருஞ்சயர்களையும் தன் கரையில் அதிகமாகக் கொண்டிருந்த அந்த ஆறு சீற்றத்துடன் ஓடியது.(32) பரிகங்களுக்கு ஒப்பான கரங்களைக் கொண்ட அந்தத் துணிச்சல் மிக்கப் போர்வீரர்கள், தெப்பங்கள் மற்றும் படகுகளாகச் செயல்படும் தங்கள் வாகனங்கள் மற்றும் விலங்குகளின் துணையுடன், இறந்தோரின் உலகத்தை நோக்கிப் பாய்ந்த அந்தப் பயங்கர ஆற்றைக் கடந்தனர்.(33) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யாராலும் எவருக்கும் எந்தக் கருணையையும் காட்டப்படாததும், நால்வகைப் படைகளுக்கும் பேரழிவைத் தந்ததுமான அந்தப் போர், பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கு இடையில் நடந்ததற்கு ஒப்பாக நடந்தது.(34) ஓ! எதிரிகளை எரிப்பவரே, போராளிகளில் சிலர் தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் உரக்க அழைத்தனர். சிலர், அழுது கொண்டிருக்கும் உறவினர்களால் அழைக்கப்பட்டு அச்சத்தால் பீடிக்கப்பபட்டனர்.(35)

கடுமையும், பயங்கரமும் நிறைந்த அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, அர்ஜுனனும், பீமசேனனும் தங்கள் எதிரிகளை மலைப்படையச் செய்தனர்.(36) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, இவ்வாறு கொல்லப்பட்ட உமது பரந்த படையானது, மது மயக்கத்தில் உள்ள ஒரு பெண்ணைப் போலப் போர்க்களத்தில் மயங்கி விழுந்தது.(37) பீமசேனனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, அந்தப் பட்டையை மலைப்படையச் செய்து தங்கள் சங்குகளை முழக்கி, சிங்க முழக்கம் செய்தனர்.(38) அந்த உரத்த இடி முழக்கத்தைக் கேட்ட திருஷ்டத்யும்னனும், சிகண்டியும், தங்களுக்குத் தலைமையில் மன்னன் யுதிஷ்டிரனை நிறுத்திக் கொண்டு, மத்ரர்களின் ஆட்சியாளனை எதிர்த்து விரைந்தனர்.(39) ஓ! ஏகாதிபதி, அந்தப் போர்வீரர்கள் ஒன்றாகவும், தனித்தனியாகவும் சல்லியனுடன் போரிட்ட விதம் மிக அற்புதமானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது.(40) பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களும், ஆயுதங்களை அறிந்தவர்களும், போரில் வெல்லப்பட முடியாதவர்களுமான மாத்ரியின் மகன்கள் இருவரும் {நகுலனும், சகாதேவனும்}, வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, உமது படையை எதிர்த்துப் பெரும் வேகத்துடன் சென்றனர்.(41)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அப்போது வெற்றியில் ஆவலுள்ள பாண்டவர்களின் கணைகளால் பல்வேறு வழிகளில் சிதைக்கப்பட்ட உமது படையானது, போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடத் தொடங்கியது.(42) உறுதிமிக்க வில்லாளிகளால் இவ்வாறு தாக்கப்பட்டு, பிளக்கப்பட்ட அந்தப் படையானது, உமது மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடியது.(43) ஓ! பாரதரே, முறியடிக்கப்பட்ட போராளிகளுக்கு மத்தியில் இருந்த சிறப்புமிக்க க்ஷத்திரியர்கள், வெற்றி மீது கொண்ட விருப்பத்தால், “நில்லுங்கள், நில்லுங்கள்” என்று சொல்லி கூச்சலிட்டபோது, உமது போர்வீரர்களுக்கு மத்தியில் “ஓ!” என்றும் “ஐயோ!” என்றும் கூச்சல்கள் எழுந்தன.(44) இவை அனைத்திற்கும் பிறகு, பாண்டவர்களால் பிளக்கப்பட்ட உமது படையானது, தன் அன்பு மகன்களையும், சகோதரர்களையும், தாய்மாமன்களையும், சகோதரியின் மகன்களையும், திருமணத்தால் ஏற்பட்ட பந்தங்களையும், சில உறவினர்களையும் கைவிட்டுவிட்டுப் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடியது.((45) ஓ! பாரதக் குலத்தின் காளையே, தங்கள் பாதுகாப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஆயிரக் கணக்கான போர்வீரர்கள், தங்கள் குதிரைகளையும், யானைகளையும் பெரும் வேகத்தில் தூண்டியபடியே அங்கிருந்து தப்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.(46)

கர்ணன் மகன்களைக் கொன்ற நகுலன்! – சல்லிய பர்வம் பகுதி – 10-யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்த சல்லியன்; கர்ணனின் மகனான சித்திரசேனனை எதிர்த்து விரைந்த நகுலன்; கர்ணனின் மகன்களான சித்திரசேனன், சத்தியசேனன், சுஷேனன் ஆகிய மூவரைக் கொன்ற நகுலன்; சிதறிய படையை மீண்டும் திரட்டிய சல்லியன்; சாத்யகி, திருஷ்டத்யும்னன், பீமசேனன், அர்ஜுனன் ஆகியோர் அந்த இடத்திற்கு விரைந்து வந்தது….

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “படை பிளப்பதைக் கண்ட மத்ரர்களின் வீர மன்னன் {சல்லியன்}, தன் சாரதியிடம், “மனோவேகம் கொண்ட இந்தக் குதிரைகளை விரைவாகச் செலுத்துவாயாக.(1) அதோ, பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்டிரன், தனது தலைக்கு மேலே பிடிக்கப்பட்ட குடையுடன் பிரகாசமாகத் தெரிகிறான்.(2) ஓ! சாரதியே, என்னை அங்கே வேகமாகக் கொண்டு சென்று, என் வலிமையைக் காண்பாயாக. போரில் பார்த்தர்கள் என் எதிரே நிற்க இயலாதவர்களாவர்” என்றான் {சல்லியன்}.(3) இவ்வாறு சொல்லப்பட்ட மத்ர மன்னனின் {சல்லியனின்} சாரதி, துல்லியமான இலக்கைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் நின்று கொண்டிருந்த அந்த இடத்திற்குச் சென்றான்.(4)

சல்லியன், வலிமைமிக்க அந்தப் பாண்டவர்களின் படை மீது திடீரெனப் பாய்ந்தான். பொங்கும் கடலை அடக்கும் கரைகளைப் போலத் தனியொருவனாகவே அவன் அதைத் தடுத்தான்.(5) உண்மையில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மலையை நோக்கி விரையும் கடலைப் போலப் பாண்டவர்களின் அந்தப் பெரிய படையானது, அந்தப் போரில் சல்லியனை எதிர்த்துச் சென்று அசையாமல் நின்றது.(6) போர்க்களத்தில் நிற்கும் மத்ரர்களின் ஆட்சியாளனைக் கண்ட கௌரவர்கள், மரணத்தையே தங்கள் இலக்காகச் செய்து கொண்டு திரும்பிவந்தனர்.(7) அவர்கள் திரும்பியதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நன்றாக அணிவகுக்கப்பட்ட அந்த வியூகத்தில் தனித்தனியாகத் தங்கள் நிலைகளை எடுத்துக் கொண்டதும், நீரைப் போலக் குருதிபாயும் பயங்கரமான போர் தொடங்கியது.

வெல்லப்பட முடியாதவனான நகுலன், {கர்ணன் மகனான} சித்திரசேனனுடன் மோதினான்.(8) சிறந்த வில்லாளிகளான அவ்விரு வீரர்களும், அந்தப் போரில் ஒருவரையொருவர் அணுகி, ஆகாயத்தின் தெற்கிலும் வடக்கிலும் எழுந்த இரு மேகங்கள் மழை பொழிவதைப் போல, அந்தப் போரில் தங்கள் கணைமாரியால் ஒருவரையொருவர் நனைத்தனர். பாண்டுவின் மகனுக்கும் {நகுலனுக்கும்}, எதிராளிக்கும் {சித்திரசேனனுக்கும்} இடையிலான எந்த வேறுபாட்டையும் என்னால் காணமுடியவில்லை.(9,10) அவர்கள் இருவரும் ஆயுதங்களில் சாதித்தவர்களாகவும், வலிமைமிக்கவர்களாகவும், தேர்வீரர்களின் நடைமுறையை அறிந்தவர்களாகவும் இருந்தனர். ஒருவரையொருவர் கொல்ல விரும்பிய அவர்கள், அடுத்தவரின் குறைபாடுகளையும், தாமதத்தையும் கவனமாகத் தேடினர்.(11) அப்போது சித்திரசேனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நன்கு கடினமாக்கப்பட்டும், கூர்மையானதுமான ஓர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்}, நகுலனின் வில்லை அதன் கைப்பிடியில் அறுத்தான்.(12)

அப்போது கர்ணனின் மகன் {சித்திரசேனன்}, வில்லற்றிருந்த நகுலனின் நெற்றியில், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளுடன் கூடியவையுமான மூன்று கணைகளால் தாக்கினான்.(13) இன்னும் சில கூரிய கணைகளால் அவன் {சித்திரசேனன்} நகுலனின் குதிரைகளை யமலோகம் அனுப்பி வைத்தான். அடுத்ததாக, அவன் தன் எதிராளியின் கொடிமரத்தையும் சாரதியையும் மும்மூன்று கணைகளால் வீழ்த்தினான்.(14) தன் எதிரியின் கரங்களால் ஏவப்பட்ட அம்மூன்று கணைகளை, தன் நெற்றியில் தைத்திருக்க, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மூன்று முகடுகளைக் கொண்ட ஒரு மலையைப் போல நகுலன் மிக அழகாகத் தெரிந்தான்.(15) தன் வில்லையும், தேரையும் இழந்த நகுலன், ஒரு வாளை எடுத்துக் கொண்டு, மலைச்சிகரத்தில் இருந்து குதிக்கும் ஒரு சிங்கத்தைப் போலத் தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்தான்.(16)

எனினும் அவன் {நகுலன்} தரையில் நடந்து விரைந்து சென்ற போது, அவனுடைய எதிராளி {சித்திரசேனன்} அவன் {நகுலன்} மீது கணைமாரியைப் பொழிந்தான். சுறுசுறுப்பும், ஆற்றலும் கொண்ட நகுலன், அந்தக் கணைமாரியை தன் கேடயத்தில் ஏற்றான்.(17) பிறகு சித்திரசேனனின் தேரை அடைந்தவனும், போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்தவனும், உழைப்பால் களைக்காதவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரனுமான அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, துருப்புகள் அனைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதில் {அந்தத் தேரில்} ஏறினான்.(18) பிறகு அந்தப் பாண்டுவின் மகன், கிரீடத்தாலும், காது குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், அழகிய நாசி மற்றும் அகன்ற பெரிய இரு கண்கள் ஆகியவற்றால் அருளப்பட்டதுமான சித்திரசேனனின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான். சூரியனின் காந்தியுடன் கூடிய சித்திரசேனன் இதனால் தன் தேர்த்தட்டில் இருந்து கீழே விழுந்தான்.(19) சித்திரசேனன் கொல்லப்பட்டதைக் கண்ட பெரும் தேர்வீரர்கள் அனைவரும், சிங்க முழக்கங்களாலும் புகழ்ச்சியாலும் உரக்கக் கதறினர்.(20)

அதேவேளையில் கர்ணன் மகன்களான சுஷேனன் மற்றும் சத்தியசேனன் ஆகிய பெரும் தேர்வீரர்கள் இருவரும், தன் சகோதரன் {சித்திரசேனன்} கொல்லப்பட்டதைக் கண்டு, கூரிய கணைமாரியை ஏவினர்.(21) தேர்வீரர்களில் முதன்மையானவர்களான அவர்கள், அந்தப் பாண்டுவின் மகனை {நகுலனை} நோக்கி, இரு புலிகளைப் போல வேகமாக விரைந்தனர்.(22) அவர்கள் இருவரும், வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலன் மீது கூரிய கணைகளைப் பொழிந்தனர். உண்மையில், அவர்கள் அந்தக் கணைகளைப் பொழிந்தபோது, மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகத் திரள்களுக்கு ஒப்பானவர்களாக அவர்கள் தெரிந்தனர்.(23) மேனியெங்கும் கணைகளால் துளைக்கப்பட்டிருந்தாலும், பாண்டுவின் அந்த வீரமகன், மற்றொரு தேரில் ஏறி, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, சினத்துடன் இருக்கும் யமனைப் போலப் போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தான்.(24) பிறகு அந்த இரு சகோதரர்களும் {கர்ணனின் மகன்களும்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் நேரான கணைகளால் நகுலனின் தேரைத் துண்டுகளாகச் சிதறடித்தனர்.(25)

அப்போது நகுலன், அம்மோதலில் சிரித்துக் கொண்டே நான்கு கூரிய கணைகளால் சத்தியசேனனின் குதிரைகளைத் தாக்கினான்.(26) அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகள் கொண்ட நீண்ட கணையொன்றைக் {நாராசத்தை} குறிபார்த்து சத்தியசேனனின் வில்லை அறுத்தான்.(27) இதன்காரணமாக மற்றொரு தேரில் ஏறி, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட பின்னவனும் {சத்தியசேனனும்}, அவனது சகோதரனான சுஷேனனும், பாண்டுவின் மகனை {நகுலனை} எதிர்த்து விரைந்தனர்.(28) மாத்ரியின் வீர மகனோ {நகுலனோ}, ஓ! ஏகாதிபதி போரின் முன்னணியில் இருந்த அவர்கள் ஒவ்வொருவரையும் இரு கணைகளால் அச்சமில்லாமல் துளைத்தான்.(29) பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான சுஷேனன், கோபத்தால் நிறைந்து, சிரித்துக் கொண்டே, அந்தப் போரில் பாண்டுவின் மகனுடைய உறுதிமிக்க வில்லை ஒரு கத்தி முனை கணையால் {க்ஷுரப்ரத்தால்} அறுத்தான்.(30)

அப்போது கோபத்தால் உணர்விழந்த நகுலன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஐந்து கணைகளால் சுஷேனனையும், ஒன்றால் அவனது கொடிமரத்தையும் துளைத்தான்.(31) பிறகு ஒரு கணத்தையும் இழக்காத அவன் {நகுலன்}, சத்யசேனனின் தோல் கவசத்தையும் {கையுறையையும்} அறுத்ததால், ஓ! ஐயா, துருப்புகள் அனைத்தும் உரத்த கூச்சலிட்டன.(32) எதிரியைக் கொல்லவல்லதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட சத்தியசேனன், அனைத்துப் பக்கங்களிலும் பாண்டுவின் மகனைக் கணைகளால் மறைத்தான்.(33) அந்தக் கணைகளைக் கலங்கடித்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான நகுலன், தன் எதிராளிகள் ஒவ்வொருவரையும் இரு கணைகளால் துளைத்தான்.(34) பின்னவர்களில் ஒவ்வொருவரும், நேராகச் செல்லும் கணைகள் பலவற்றால் பதிலுக்கு அந்தப் பாண்டுவின் மகனைப் பல கூரிய கணைகளால் துளைத்தனர்.(35)

அப்போது, பெரும் கரநளினம் கொண்ட வீர சத்தியசேனன், தன் சகோதரனின் துணையில்லாமலேயே நகுலனுடைய தேரின் ஏர்க்காலையும், அவனது வில்லையும் இரு கணைகளால் அறுத்தான்.(36) எனினும், அதிரதனான நகுலன், தன் தேரில் நின்று கொண்டு, தங்கக் கைப்பிடி கொண்டதும், கூர்முனை கொண்டதும், எண்ணெயில் ஊற வைத்ததும், மிகப் பிரகாசமானதுமான ஓர் ஈட்டியை எடுத்துக் கொண்டான்.(37) ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, அஃது {அந்த ஈட்டி}, அடிக்கடி தன் நாவை வெளியே தள்ளும் கடும் நஞ்சுமிக்க ஒரு பெண்பாம்புக்கு ஒப்பாக இருந்தது. அவ்வாயுதத்தை உயர்த்திய அவன் {நகுலன்}, அம்மோதலில் சத்தியசேனன் மீது அதை ஏவினான்.(38) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த ஈட்டியானது, அந்தப் போரில் சத்தியசேனனின் இதயத்தைத் துளைத்து, அதை நூறு துண்டுகளாக்கியது. புலன் உணர்வையும், உயிரையும் இழந்த அவன் {சத்தியசேனன்}, தன் தேரில் இருந்து கீழே பூமியில் விழுந்தான்.(39) தன் சகோதரன் கொல்லப்பட்டதைக் கண்ட சுஷேனன், சினத்தால் உணர்விழந்தவனாக அந்தப் போரில் திடீரென நகுலனைத் தேரற்றவனாகச் செய்தான்.ஒரு கணத்தையும் இழக்காத அவன், தரையில் நின்று போராடிய அந்தப் பாண்டுவின் மகன் மீது தன் கணைகளைப் பொழிந்தான்.(40)

நகுலன் தேரற்றவனாக இருப்பதைக் கண்ட திரௌபதியின் மகன் சுதசோமன், அந்தப் போரில் தன் தந்தையைக் {நகுலனைக்} காக்க அந்த இடத்தில் விரைந்து வந்தான்.(41) சுதசோமனின் தேரில் ஏறிக் கொண்டவனும், பாரதக் குலத்தின் வீரனுமான நகுலன், மலையில் இருக்கும் ஒரு சிங்கம் போல மிக அழகாகத் தெரிந்தான்.(42) அந்தப் பெரும் தேர்வீரர்கள் இருவரும், தங்கள் கணைமாரிகளை ஏவியபடி ஒருவரையொருவர் அணுகி அடுத்தவரின் அழிவுக்கு முயற்சி செய்தனர்.(43)_ அப்போது சினத்தால் நிறைந்த சுஷேனன், மூன்று கணைகளால் பாண்டுவின் மகனையும் {நகுலனையும்}, இருபதால் {நகுலனின் மகன்} சுதசோமனின் கரங்களையும், மார்பையும் தாக்கினான்.(44) ஓ! ஏகாதிபதி, இதனால் மூர்க்கமடைந்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான நகுலன், திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் தன் கணைகளால் மறைத்தான்.(45)

பெரும் சக்தி கொண்டதும், அரை வட்டத் தலை கொண்டதுமான ஒரு கூரிய கணையை {அர்த்தச்சந்திர பாணத்தை} எடுத்துக் கொண்ட நகுலன், அந்தப் போரில் அதைக் கர்ணனின் மகன் {சுஷேணன்} மீது பெரும் வேகத்தோடு ஏவினான்.(46) ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்} அந்தக் கணையைக் கொண்டு, துருப்புகள் அனைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சுஷேனனின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான். அந்த அருஞ்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(47) இவ்வாறு சிறப்புமிக்க நகுலனால் கொல்லப்பட்ட கர்ணனின் மகன் {சுஷேனன்}, ஆற்றங்கரையில் நிற்கும் நெடிய மரம் ஒன்று நீரோட்டத்தால் தூக்கி வீசப்படுவதைப் போலக் கீழே விழுந்தான்.(48) கர்ணன் மகன்களின் படுகொலையையும், நகுலனின் ஆற்றலையும் கண்ட உமது படையானது, ஓ! பாரதக் குலத்தின் காளையே, அச்சத்தால் அங்கிருந்து தப்பி ஓடியது.(50) எனினும், அவர்களது படைத்தலைவனும், துணிச்சல்மிக்கவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான மத்ரர்களின் வீர ஆட்சியாளன் {சல்லியன்}, ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் துருப்புகளைப் பாதுகாத்தான்.(50)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் படையை அணிதிரட்டிய அந்தச் சல்லியன், சிங்க முழக்கங்கள் செய்து கொண்டும், தன் வில்லில் சீற்றத்துடன் நாணொலி எழுப்பியபடியும் போரில் அச்சமற்று நின்றிருந்தான்.(51) அப்போது, அந்த உறுதிமிக்க வில்லாளியால் {சல்லியனால்} அந்தப் போரில் பாதுகாக்கப்பட்ட உமது துருப்புகள், ஓ! மன்னா, எதிரியை எதிர்த்து மீண்டும் உற்சாகமாக அனைத்துப் பக்கங்களில் இருந்தும் சென்றன.(52) ஓ! மன்னா, அந்த உயர் ஆன்மப் போர்வீரர்கள், அனைத்துப் பக்கங்களிலும் போரிட விரும்பி அந்தப் பெரும் வில்லாளியான மத்ரர்களின் ஆட்சியாளனைச் {சல்லியனைச்} சூழ்ந்து நின்றனர்.(53) அப்போது, சாத்யகி, பீமசேனன், மாத்ரியின் இரட்டை மகன்களான அந்த இரு பாண்டவர்கள் {நகுலன், சகாதேவன்} ஆகியோர், பணிவின் வசிப்பிடமும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான யுதிஷ்டிரனைத் தங்களுக்குத் தலைமையில் நிறுத்திக் கொண்டு,(54) போரில் அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் {சல்லியனைச்} சூழ்ந்து நின்று உரத்த சிங்க முழக்கங்களைச் செய்தனர். மேலும் அந்த வீரர்கள், தாங்கள் ஏவிய கணைகளால் “விஸ்” ஒலியை உண்டாக்கியும், பல்வேறு வகைகளில் அடிக்கடி கூச்சலிட்டபடியும் இருந்தனர்.(55) உமது வீரர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே சினத்தால் நிறைந்து, போரிடும் விருப்பத்தால், மத்ரர்களின் ஆட்சியாளனைச் சூழ்ந்து நின்றனர்.(56)

அப்போது, மருண்டோரின் அச்சத்தைத் தூண்டும் வகையில், மரணத்தையே தங்கள் இலக்காக்கிக் கொண்ட உமது படைவீரர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இரு தரப்பினருக்கிடையில் ஒரு போர் தொடங்கியது.(57) யமனுடைய அரசின் மக்கள் தொகையை அதிகரித்தபடி அச்சமற்ற போராளிகளுக்கிடையில் நடந்த அந்தப் போரானது, ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பானதாக இருந்தது.(58) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குரங்குக் கொடியைக் கொண்டவனான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, போரில் சம்சப்தகர்களைக் கொன்றுவிட்டு, கௌரவப் படையின் அந்தப் பகுதியை எதிர்த்து விரைந்து வந்தான்.(59) திருஷ்டத்யும்னனின் தலைமையிலான பாண்டவர்கள் அனைவரும் சிரித்துக் கொண்டே அதே படைப்பிரிவை எதிர்த்து விரைந்து, கூரிய கணைமாரிகளைப் பொழிந்தனர்.(60) பாண்டவர்களால் விஞ்சப்பட்ட அந்தக் கௌரவப் படை திகைப்படைந்து மலைத்து நின்றது. உண்மையில், அப்போது அந்தப் படைப்பிரிவினால், திசைகள் மற்றும் துணைத் திசைகளின் புள்ளிகளை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(61)

பாண்டவர்களால் ஏவப்பட்ட கூரிய கணைகளால் மறைக்கப்பட்டிருந்த அந்தக் கௌரவப் படையானது, தன் முதன்மையான வீரர்களை இழந்து, நடுங்கி, அனைத்துப் பக்கங்களிலும் பிளந்தது. உண்மையில், ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, உமது அந்தப் படையானது, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்களால் கொல்லப்பட நேர்ந்தது.(62) அதேபோல, ஓ! மன்னா, பாண்டவப் படையும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உமது மகன்களால் அந்தப் போரில் ஏவப்பட்ட நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகளால் கொல்லப்பட நேர்ந்தது.(63) மிகவும் தூண்டப்பட்டவையாக இருந்த அந்த இருபடைகளும் ஒன்றையொன்று கொன்று கொண்டிருந்தபோது, மழைக்காலங்களில் கலங்கும் ஓடைகள் இரண்டைப் போல மிகவும் கலக்கமடைந்திருந்தன.(64) அந்தப் பயங்கரப் போரின் போது, ஓ! ஏகாதிபதி, உமது போர்வீரர்கள் மற்றும் பாண்டவர்களின் போர்வீரர்கள் ஆகியோரின் இதயங்களில் பேரச்சம் நுழைந்தது” {என்றான் சஞ்சயன்}.(65)

தப்பி ஓடிய கிருதவர்மன்! – சல்லிய பர்வம் பகுதி – 11-பலவீனமடைந்து கலங்கிய கௌரவப் படை; படையை மீட்கப் பாண்டவர்களை எதிர்த்த சல்லியன்; அப்போது தோன்றிய தீய சகுனங்கள்; யுதிஷ்டிரனை எதிர்த்த சல்லியன்; யுதிஷ்டிரனின் துணைக்கு வந்த பீமசேனன்; சல்லியனுக்குத் துணையாக வந்த கிருதவர்மன்; பீமனின் குதிரைகளை மீண்டும் மீண்டும் கொன்ற கிருதவர்மன்; கதாயுதத்தால் கிருதவர்மனின் குதிரைகளையும், தேரையும் நொறுக்கிய பீமசேனன்; தப்பி ஓடிய கிருதவர்மன்; சல்லியனை இலக்காகக் கொண்ட பீமன், அவனது சாரதியை வீழ்த்தியது; பீமனும், சல்லியனும் கதாயுதத்திற்கு ஆயத்தமாக நின்றது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஒருவரையொருவர் கொன்று இவ்வாறு துருப்புகள் கலங்கியபோது, பல போர்வீரர்கள் தப்பி ஓடி, யானைகள் உரக்கக் கதறத் தொடங்கியபோது,(1) அந்தப் பயங்கரப் போரில் காலாட்படையினர் பேரொலியுடன் கதறி ஓலமிடத் தொடங்கியபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகள் பல்வேறு திசைகளில் ஓடியபோது,(2) பயங்கரப் படுகொலைகள் நடந்த போது, உடல்படைத்த உயிரினங்கள் அனைத்தும் பயங்கர அழிவைச் சந்தித்த போது, பல்வேறு வகைகளிலான ஆயுதங்கள் ஒன்றோடொன்று பாயவோ, மோதவோ செய்த போது, தேர்களும், யானைகளும் ஒன்றாகக் கலக்கத் தொடங்கியபோது,(3) வீரர்கள் பெருமகிழ்ச்சியையும், கோழைகள் பேரச்சத்தையும் உணர்ந்த போது, போராளிகள் ஒருவரையொருவர் கொல்ல விரும்பி மோதிக் கொண்டபோது,(4) யமனின் அரசுகுடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அச்சந்தரும் விளையாட்டான அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்தபோது, பாண்டவர்கள் தங்கள் கூரிய கணைகளால் உமது துருப்புகளைக் கொன்றனர். அதே வகையில் உமது துருப்பினரும் பாண்டவத் துருப்புகளைக் கொன்றனர்.(6)

சூரியன் உதித்த அந்தக் காலை வேளையில், உண்மையில், மருண்டோரை அச்சுறுத்தும்வகையில் அந்தப் போர் நடந்து கொண்டிருந்த போது,(7) உயர் ஆன்ம யுதிஷ்டிரனால் பாதுகாக்கப்பட்டவர்களும் துல்லியமான இலக்கைக் கொண்டவர்களுமான பாண்டவ வீரர்கள், மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு உமது படைகளுடன் போரிட்டனர்.(8) ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, பெரும் பலம் கொண்டதும், தாக்குவதில் திறன் கொண்டதும், இலக்கில் துல்லியம் கொண்டதுமான செருக்குமிக்கப் பாண்டவர்களுடன் மோதி அந்தக் குரு படை, காட்டுத்தீயால் அச்சமடைந்த ஒரு மந்தையின் பெண்மானைப் போலப் பலவீனமடைந்து, கலங்கிப் போனது.(9)

புழுதியில் மூழ்கும் மாட்டைப் போல ஆதரவற்றுப் பலவீனமாக இருந்த அந்தப் படையைக் கண்ட சல்லியன், அதை மீட்க விரும்பி, பாண்டவப் படையை எதிர்த்துச் சென்றான்.(10) சினத்தால் நிறைந்த அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, ஒரு சிறந்த வில்லை எடுத்துக் கொண்டு, பாண்டவ எதிரிகளை எதிர்த்துப் போரிட விரைந்தான்.(11) பாண்டவர்களும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் வெற்றியடைய விரும்பி, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} எதிர்த்துச் சென்று, கூரிய கணைகளால் அவனைத் துளைத்தனர்.(12) அப்போது, பெரும்பலத்தைக் கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கூரிய கணைகளால் அப்படையைப் பீடித்தான்.(13)

அச்சமயத்தில் பல்வேறு சகுனங்கள் தோன்றின. மலைகளுடன் கூடிய பூமியானவள் {பூமாதேவி} பேரொலியை உண்டாக்கியபடியே நடுங்கினாள்.(14) கைப்பிடிகளுடன் கூடிய வேல்களைப் போலப் பிரகாசமான கூர்முனைகளைக் கொண்ட எரிநட்சத்திரங்கள், ஆகாயத்தில் இருந்து காற்றைக் கிழித்துக் கொண்டு கீழே பூமியில் விழுந்தன.(15) பெரும் எண்ணிக்கையிலான மான்கள், எருமைகள் மற்றும் பறவைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையைத் தங்கள் வலப்புறத்தில் கொண்டன[1].(16) வெள்ளி மற்றும் செவ்வாய்க் கோள்கள், புதனுடன் சேர்ந்து பாண்டவர்களுக்குப் பின்புறமாகவும், பூமியின் தலைவர்கள் (கௌரவர்கள்) அனைவருக்கும் முன்னிலையிலும் {எதிர்ப்புறத்திலும்} தோன்றின[2].(17) ஆயுதங்களின் முனைகள், (போர்வீரர்களின்) கண்களைக் கூசச் செய்யும் வகையில் சுடர்மிக்கத் தழல்களை வெளியிடுவதாகத் தெரிந்தது. பெரும் எண்ணிக்கையிலான காகங்கங்களும், ஆந்தைகளும் போராளிகளின் தலைகளிலும், அவர்களது கொடிமர நுனிகளிலும் அமர்ந்தன.(18)

பிறகு, பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த கௌரவ மற்றும் பாண்டவப் போராளிகளுக்கு இடையில் ஒரு கடும்போர் நடந்தது.(19) அப்போது, ஓ! மன்னா, கௌரவர்கள் தங்கள் படைப்பிரிவுகளைத் திரட்டிக் கொண்டு பாண்டவப் படையை எதிர்த்து விரைந்தனர்.(20) தளர்வடைய இயலா ஆன்மா கொண்ட சல்லியன், மழைத்தாரைகளைப் பொழியும் ஆயிரங்கண் இந்திரனைப் போலக் குந்தியின் மகனான யுதிஷ்டிரனின் மீது அடர்த்தியான கணைமாரிகளைப் பொழிந்தான்.(21) பெரும் பலம் கொண்ட அவன் {சல்லியன்}, பீமசேனன், திரௌபதியின் ஐந்து மகன்கள், பாண்டுவின் மூலம் மாத்ரியிடம் பிறந்த இரு மகன்கள் {நகுலனும், சகாதேவனும்}, திருஷ்டத்யும்னன், சிநியின் பேரன் {சாத்யகி}, சிகண்டி ஆகிய ஒவ்வொருவரையும், தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பத்து கணைகளால் துளைத்தான்.(22,23) உண்மையில் அவன் {சல்லியன்}, கோடைகால நெருக்கத்தில் மழையைப் பொழியும் மகவத்தை {இந்திரனைப்} போலத் தன் கணைமாரிகளைப் பொழியத் தொடங்கினான்.(24)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சல்லியனுடைய கணைகளான் விளைவால், பிரபத்ரகர்களும், சோமகர்களும் ஆயிரக்கணக்கில் வீழ்வது காணப்பட்டது.(25) வண்டுகள் அல்லது வெட்டுக்கிளிகளின் கூட்டங்களைப் போலவும், மேகங்களில் இருந்து விழும் இடியைப் போலவும் சல்லியனின் கணைகள் விழுவது அங்கே காணப்பட்டது.(26) யானைகள், குதிரைகள், காலாட்படைவீரர்கள், தேர்வீரர்கள் ஆகியோர் சல்லியனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, கீழே விழவோ, திரியவோ, உரத்த ஓலமிடவோ செய்தனர்.(27) சினத்திலும், ஆற்றலிலும் மதங்கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, யுகத்தின் முடிவில் வரும் அந்தகனைப் போலப் போரில் தன் எதிரிகளை மறைத்தான். மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளன் மேகங்களைப் போல உரக்க முழங்கத் தொடங்கினான்.(28) இவ்வாறு சல்லியனால் கொல்லப்பட்ட பாண்டவப் படையானது, (பாதுகாப்பு நாடி) குந்தியின் மகனான யுதிஷ்டிரனை நோக்கி ஓடியது.(29)

பெருங்கரநளினம் கொண்ட சல்லியன், அவர்களைக் கூரிய கணைகளால் போரில் நொறுக்கிய பிறகு, அடர்த்தியான கணைமாரியால் யுதிஷ்டிரனைப் பீடிக்கத் தொடங்கினான்.(30) குதிரை மற்றும் காலாட்படையுடன் தன்னை நோக்கி மூர்க்கமாக விரைந்து வரும் சல்லியனைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், சினத்தால் நிறைந்து, அங்குசத்தால் தடுக்கப்படும் மதங்கொண்ட யானையைப் போலக் கூரிய கணைகளால் அவனைத் தடுத்தான்.(31) அப்போது சல்லியன் கடும் நஞ்சுக்கு ஒப்பான பயங்கரக் கணையொன்றை யுதிஷ்டிரன் மீது ஏவினான். அந்தக் கணையானது, குந்தியின் உயர் ஆன்ம மகனை {யுதிஷ்டிரனைத்} துளைத்து வேகமாகப் பூமியில் விழுந்தது.(32) அப்போது, கோபத்தால் நிறைந்த விருகோதரன் {பீமன்}, ஏழு கணைகளாலும், சகாதேவன் ஐந்தாலும், நகுலன் பத்தாலும் சல்லியனைத் துளைத்தனர்.(33) திரௌபதியின் (ஐந்து) மகன்கள், எதிரிகளைக் கொல்பவனும், மூர்க்கமாக இருப்பவனுமான ஆர்தாயனியின் {சல்லியனின்} மீது, மலையின் மீது மழையைப் பொழியும் மேகத் திரள்களைப் போலக் கணைமாரிகளைப் பொழிந்தனர்.(34)

சல்லியன் அனைத்துப் புறங்களில் இருந்தும் பார்த்தர்களால் தாக்கப்படுவதைக் கண்ட கிருதவர்மனும், கிருபரும் அந்த இடத்திற்குக் கோபத்துடன் விரைந்தனர்.(35) வலிமையும், சக்தியும் கொண்ட உலூகன், சுபலனின் மகனான சகுனி, உதடுகளில் புன்னகையைக் கொண்டவனும் வலிமைமிக்கத் தேர்வீரனுமான அஸ்வத்தாமன் ஆகியோரும், உமது மகன்கள் அனைவரும், அந்தப் போரில் அனைத்து வழிகளிலும் சல்லியனைப் பாதுகாத்தனர்.(36) பீமசேனனை மூன்று கணைகளால் துளைத்த கிருதவர்மன், அடர்த்தியான கணைமாரிகளை ஏவி, கோபத்தின் வடிவமாகத் தெரிந்த அந்தப் போர்வீரனை {பீமனைத்} தடுத்தான்.(37) சினத்தால் தூண்டப்பட்ட கிருபர், பல கைகளால் திருஷ்டத்யும்னனைத் தாக்கினார். சகுனி, திரௌபதியின் மகன்களை எதிர்த்துச் சென்றான், அஸ்வத்தாமன் இரட்டையர்களை {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரை எதிர்த்துச் சென்றான்.(38) போர்வீரர்களில் முதன்மையானவனும், கடும் சக்தி கொண்டவனுமான துரியோதனன், அந்தப் போரில் வலிமை கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, மற்றும் அர்ஜுனனை எதிர்த்துச் சென்று பல கணைகளால் அவர்களைத் தாக்கினான்.(39) இவ்வாறு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, களத்தின் பல்வேறு பகுதிகளில் சீற்றமிக்கவர்களும், அழகானவர்களுமான நூற்றுக்கணக்கான மோதல்கள் உமது படைக்கும், எதிரியின் படைக்கும் இடையில் நடைபெற்றன.(40)

அப்போது போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, அம்மோதலில் பீமசேனனுடைய தேரின் பழுப்பு நிற {கரடி நிற} குதிரைகளைக் கொன்றான். குதிரைகளற்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் தேரில் இருந்து இறங்கி, தண்டத்தை உயர்த்திய காலனைப் போலத் தன் கதாயுதத்தைக் கொண்டு போரிடத் தொடங்கினான்.(41) சகாதேவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அவனுடைய குதிரைகளைக் கொன்றான். அப்போது சகாதேவன் தன் வாளால் சல்லியனின் மகனைக் கொன்றான்.(42) ஆசானான கௌதமர் {கிருபர்}, மீண்டும் அச்சமில்லாமல் திருஷ்டத்யும்னனுடன் போரிட்டார். அவர்கள் இருவரும் மிகக் கவனமான முயற்சியுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர்.(43) ஆசானின் மகனான அஸ்வத்தாமன், அதிகக் கோபம் இல்லாமல் போரில் சிரித்துக் கொண்டே, திரௌபதியின் ஐந்து வீரமகன்கள் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் துளைத்தான்.(44) மீண்டும் அந்தப் போரில் பீமசேனனின் குதிரைகள் கொல்லப்பட்டன. குதிரைகளற்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் தேரில் இருந்து இறங்கி,(45) தண்டத்தை உயர்த்திய காலனைப் போலத் தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டான். கோபத்தால் தூண்டப்பட்ட அந்த வலிமைமிக்க வீரன் {பீமன்}, கிருதவர்மனின் குதிரைகளையும், தேரையும் நொறுக்கினான். கிருதவர்மன் தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்துத் தப்பி ஓடினான்.(46)

சினத்தால் தூண்டப்பட்ட சல்லியனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சோமகர்கள் மற்றும் பாண்டவர்கள் பலரைக் கொன்று, கூரிய கணைகள் பலவற்றால் மீண்டும் யுதிஷ்டிரனைப் பீடித்தான்.(47) அப்போது வீரப் பீமன், தன் கீழுதட்டைக் கடித்தவாறு, சினத்தில் மதங்கொண்டு, அந்தப் போரில் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, சல்லியனைக் கொல்வதற்காக அவனையே இலக்காக நோக்கினான்.(48) மரண இரவைப் போல(எதிரியின் தலையை) எதிர்நோக்கும், யமனின் தண்டத்திற்கு ஒப்பானதும், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் உயிருக்கு அழிவைத் தரக்கூடியதும்,(49) தங்கத் துணியால் கட்டப்பட்டதும், சுடர்மிக்க எரிநட்சத்திரத்தைப் போலத் தெரிவதும், தாங்குக் கயிற்றுடன் கூடியதும், பெண் பாம்பைப் போலச் சீற்றமிக்கதும், வஜ்ரத்தைப் போலக் கடினமானதும், முழுக்க இரும்பாலானதும்,(50) இனிய மங்கையைப் போலச் சந்தனக் குழம்பு மற்றும் பிற நறுமணப் பொருட்களால் பூசப்பட்டதும், கொழுப்பு, குருதி, ஊனிர் ஆகியவற்றைச் சிந்தத் செய்வதும், யமனின் நாவுக்கு ஒப்பானதும்,(51) அதனுடன் இணைக்கப்பட்ட மணிகளின் விளைவால் கீச்சொலிகளை உண்டாக்குவதும், இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பானதும்,  புதிதாகச் சட்டை உரித்து விடுபட்ட கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானதும், யானைகளின் மதநீரால் நனைந்ததும்,(52) பகைவரின் துருப்புகளை அச்சுறுத்துவதும், நட்பு துருப்புகளை மகிழ்ச்சி கொள்ளச் செய்வதும், உலக மனிதர்களால் கொண்டாடப்படுவதும், மலைச்சிகரங்களையே பிளக்கவல்லதும்,(53) எதைக் கொண்டு, கைலாசத்தில் அந்தக் குந்தியின் வலிமைமிக்க மகன் {பீமன்}, மகேஸ்வரனின் நண்பனான தலைவன் அளகனையே {குபேரனையே}[3] அறைகூவி அழைத்தானோ,(54) திரௌபதிக்கு ஏற்புடையதைச் செய்து மந்தார மலர்களை அடையும் பொருட்டுக் கந்தமாதன மலைச்சாரலில் பலரால் தடுக்கப்பட்டாலும், கோபத்துடன் கூடிய பீமன், செருக்கு மிக்கவர்களும், மாயசக்திகளைக் கொண்டவர்களுமான பெரும் எண்ணிக்கையிலான குஹ்யர்களை எந்த ஆயுதத்தைக் கொண்டு பீமன் கோபத்துடன் கொன்றானோ,(55) வைரங்கள், ரத்தினங்கள் நிறைந்ததும், எட்டு பட்டைகளைக் கொண்டுதும், இந்திரனின் வஜ்ரத்தைப் போலக் கொண்டாடப்பட்டதுமான அந்தக் கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு, வலிமைமிக்கக் கரத்தைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} சல்லியனை எதிர்த்து விரைந்தான்.(56)

பயங்கர ஒலியைக் கொண்ட அந்தக் கதாயுதத்துடன் கூடியவனும், போரில் திறன்மிக்கவனுமான பீமன், பெரும் வேகம் கொண்ட சல்லியனின் நான்கு குதிரைகளை நொறுக்கினான்.(57) அப்போது அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்ட வீரச் சல்லியன், பீமசேனனின் அகன்ற மார்பின் மீது ஒரு வேலை வீசி உரக்கக் கூச்சலிட்டான். அந்த வேலானது, பாண்டு மகனின் {பீமனின்} கவசத்தைத் துளைத்துச் சென்று அவனது உடலுக்குள் ஊடுருவியது.(58) எனினும், விருகோதரன், அவ்வாயுதத்தைப் பிடுங்கி எடுத்து, அதைக் கொண்டே சல்லியனுடைய சாரதியைத் துளைத்தான்.(59) முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்ட அந்தச் சாரதி, குருதி கக்கிக் கலங்கிய இதயத்துடன் கீழே விழுந்தான். இதனால் தன் தேரில் இருந்து கீழே இறங்கி வந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மகிழ்ச்சியாகப் பீமனைப் பார்த்தான்.(60) தன் அருஞ்செயலுக்குப் பதிலடிக் கொடுக்கப்பட்டதைக் கண்ட சல்லியன் ஆச்சரியத்தால் நிறைந்தான். அமைதியான ஆன்மா கொண்ட அந்த மத்ரர்களின் ஆட்சியாளன், தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் எதிரியின் மீது தன் பார்வையைச் செலுத்துத் தொடங்கினான்.(61) போரில் பீமனின் பயங்கரச் சாதனையைக் கண்ட பார்த்தர்கள், மகிழ்ச்சிமிக்க இதயங்களுடன், உழைப்பால் களைப்படைய முடியாதவனான அவனை {பீமனை} வழிபட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(62)

சல்லியன் பீமன் கதாயுத்தம், – சல்லிய பர்வம் பகுதி – 12-சல்லியனுக்கும், பீமனுக்கும் இடையில் நேர்ந்த கடுமையான கதாயுதப் போர்; ஒரே நேரத்தில் கீழே விழுந்த சல்லியனும், பீமனும்; கீழே விழுந்த சல்லியனைப் போர்க்களத்தைவிட்டு வெளியே கொண்டு போன கிருபர்; நொடிப்பொழுதில் எழுந்து நின்று, மீண்டும் சல்லியனை அறைகூவியழைத்த பீமசேனன்; சேகிதானனைக் கொன்ற துரியோதனன்; யுதிஷ்டிரனோடு போரிட்ட சல்லியன்; சல்லியனின் தேர்ச்சக்கரப் பாதுகாவலர்களைக் கொன்று, சல்லியனின் கொடிமரத்தையும் வெட்டிய யுதிஷ்டிரன்; சல்லியனுக்கு முன்பு ஆற்றலை இழந்து நின்ற யுதிஷ்டிரன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தன் சாரதி வீழ்ந்துவிட்டதைக் கண்ட சல்லியன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முழுக்க இரும்பாலான தன் கதாயுதத்தை வேகமாக எடுத்துக் கொண்டு, அசையாத மலையென நின்றான்.(1) எனினும், வலிமைமிக்கக் கதாயுதத்துடன் கூடிய பீமன், சுடர்மிக்க யுகநெருப்பையோ, பாசக்கயிற்றைக் கொண்ட யமனையோ, உறுதியான சிகரத்தைக் கொண்ட கைலாச மலையையோ, வஜ்ரத்துடன் கூடிய இந்திரனையோ, திரிசூலத்துடன் கூடிய மஹாதேவனையோ, காட்டில் உள்ள மதங்கொண்ட யானையொன்றையோ போலத் தெரிந்த சல்லியனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(2,3) அந்நேரத்தில், வீரர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்படி, ஆயிரக்கணக்கான சங்கொலிகளும், கொம்பு {எக்காள} ஒலிகளும், சிங்க முழக்கங்களும் எழுந்தன.(4) அந்த இரு முதன்மையான போர்வீரர்களையும் அனைத்துப் பக்கங்களிலும் இருந்த பார்த்த இரு படைகளின் போராளிகளும், “நன்று, நன்று” என்று சொல்லி அவர்கள் இருவரையும் பாராட்டினர்.(5)

மத்ரர்களின் ஆட்சியாளனையோ {சல்லியனையோ}, யதுக்களைத் திளைக்கச் செய்யும் ராமனையோ {பலராமனையோ} தவிர, போரில் பீமனின் மூர்க்கத்தைத் தாங்கிக் கொள்ளும் துணிவு கொண்டோர் வேறு எவரும் இல்லை.(6) அதே போலவே, பீமனைத் தவிர, மத்ரர்களின் சிறப்புமிக்க மன்னனின் {சல்லியனின்} கதாயுத சக்தியைத் தாங்கிக் கொள்ளும் துணிவு கொண்ட வேறு எந்தப் போர்வீரனும் அங்கே இல்லை.(7) விருகோதரன் {பீமன்} மற்றும் மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஆகிய அந்தப் போராளிகள் இருவரும், காளைகளைப் போல முழங்கிக் கொண்டு, அடிக்கடி காற்றில் குதித்து எழுந்தவாறு, வட்டமாகச் சுழன்றனர் {மண்டகதிகளோடு சஞ்சரித்தனர்}.(8) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கும் இடையிலான அம்மோதலில், வட்டமாகச் சுழல்வதிலோ {மண்டலகதிகளிலோ}, கதாயுதத்தைப் பயன்படுத்துவதிலோ அவர்களுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை.(9)

பிரகாசமான தங்கத்துணியால் சுற்றிலும் கட்டப்பட்டு நெருப்புப் பட்டையாகத் தெரிந்த சல்லியனின் கதாயுதமானது, பார்வையாளர்களிடம் அச்சத்தைத் தூண்டியது.(10) அதே போலவே, உயர் ஆன்ம பீமனின் கதாயுதமும், அவன் வட்டமாகச் சுழல்கையில், மேகங்களுக்கு மத்தியில் இருக்கும் மின்னலைப் போலத் தெரிந்தது.(11) மத்ர ஆட்சியாளனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட பீமனின் கதாயுதம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் தீப்பொறிகளை உண்டாக்கி எரிவது போலத் தெரிந்தது.(12) அதே போல, பீமனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட சல்லியனின் கதாயுதமும், சுடர்மிக்கத் தணல் மழையைப் பொழிந்து கொண்டு அற்புதமாகத் தெரிந்தது.(13) பெரும் யானைகள் இரண்டு, தங்கள் தங்கள் தந்தங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போலவோ, பெரும் காளைகள் இரண்டு தங்கள் கொம்புங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதைப் போலவோ அந்த இருவீரர்களும், இரும்பால் கட்டப்பட்ட தண்டங்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் இரு போராளிகளைப் போலத் தங்கள் முதன்மையான கதாயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர்.(14) கதாயுதங்களால் தாக்கப்பட்ட அவர்களது அங்கங்கள், விரைவில் குருதியில் குளித்து, மலர்ந்திருக்கும் இரு கின்சுகங்களைப் போலத் தெரிந்த விளைவால் அழகாகத் தெரிந்தன.(15)

மத்ர ஆட்சியாளனால் {சல்லியனால்} இடப்பக்கமும், வலப்பக்கமும் தாக்கப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன் மலையொன்றைப் போல அசையாதவனாக நின்றான்.(16) அதே போலவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனின் கதாயுதத்தால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டாலும்,  யானையின் தந்தங்களால் தாக்கப்படும் மலையொன்றைப் போலச் சல்லியன் அசையாது நின்றான்.(17) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவரின் கதாயுத வீச்சுகளால் உண்டான ஒலியானது, அடுத்தடுத்த இடியொலிகளைப் போல அனைத்துப் பக்கங்களிலும் கேட்டது.(18) ஒரு கணம் நின்றவர்களும், பெரும் சக்தி கொண்டவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும், தங்கள் கதாயுதங்களை உயர்த்திக் கொண்டு, மிக நெருக்கத்தில் மீண்டும் வட்டமாகச் சுழலத் தொடங்கினர்.(19) மனிதசக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளைக் கொண்ட அந்தப் போர்வீரர்கள் இருவருக்கும் இடையில் மீண்டும் தொடங்கிய மோதலில், அவர்கள் ஒவ்வொருவரும் எட்டு எட்டுகள் {நடையடிகள்} மட்டும் அடுத்தவனை நோக்கி முன்னேறி, உயர்த்தப்பட்ட இரும்பு தண்டங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(20)

அப்போது, ஒருவரையொருவர் அடைய விரும்பிய அவர்கள் மீண்டும் வட்டமாகச் சுழலத் தொடங்கினர். (கதாயுதப்பயன்பாட்டில்) சாதித்தவர்களான அவ்விருவரும் தங்கள் தங்கள் திறன்மேன்மையை வெளிக்காட்டத் தொடங்கினர்.(21) தங்கள் பயங்கர ஆயுதங்களை உயர்த்திக் கொண்ட அவர்கள், நிலநடுக்கத்தின்போது, சிகரங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் மலைகளைப் போல மீண்டும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(22) அவர்களின் பலத்தின் விளைவால் ஒருவரையொருவர் அதிகமாக நொறுக்கிய அந்த வீரர்கள் இருவரும், இந்திர வழிபாட்டுக்காக நடப்பட்ட கம்புகள் இரண்டைப் போல ஒரே நேரத்தில் கீழே விழுந்தனர்.(23) அப்போது அந்தக் காட்சியைக் கண்டவர்களும், இருபடைகளைச் சேர்ந்தவர்களுமான துணிச்சல்மீக்க போராளிகள், ஓ என்றும் ஐயோ என்றும் கூச்சலிட்டனர். பெரும் பலத்தோடு முக்கிய அங்கங்கள் தாக்கப்பட்டதால், அவர்கள் இருவரும் மிகவும் கலங்கிப் போயிருந்தனர்.(24) அப்போது வலிமைமிக்கக் கிருபர், மத்ரர்களில் காளையான சல்லியனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு, போர்க்களத்தில் இருந்து அவனை வேகமாகக் கொண்டு சென்றார்.(25)

எனினும், கண்ணிமைப்பதற்குள் எழுந்து நின்ற பீமசேனன், மதுவுண்டவன் போலத் தள்ளாடியபடியே உயர்த்திப்பிடித்த கதாயுதத்துடன் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} அறைகூவியழைத்தான்.(26) அப்போது வீரத்துடன் கூடிய உமது படையின் போர்வீரர்கள், பல்வேறு ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, பல்வேறு இசைக்கருவிகளை முழக்கி இசைத்தபடியே பாண்டவர்களுடன் போரிட்டனர்.(27) கரங்களையும், ஆயுதங்களையும் உயர்த்திக் கொண்டு, பேரொலியை எழுப்பிக் கொண்டிருந்த உமது போராளிகள், ஓ! ஏகாதிபதி, துரியோதனன் தலைமையில் பாண்டவர்களை எதிர்த்து விரைந்தனர்.(28) கௌரவப் படையைக் கண்ட பாண்டுமகன்கள், துரியோதனன் தலைமையிலான அந்தப்போர்வீரர்களை எதிர்த்து சிங்க முழக்கங்களுடன் விரைந்தனர்.(29)

பிறகு உமது மகன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அப்படி விரைந்து வரும் வீரர்களில் சேகிதானானைத்[1] தனிமைப்படுத்தி, ஒரு வேலால் அவனது மார்பை ஆழமாகத் துளைத்தான்.(30) இவ்வாறு உமது மகனால் தாக்கப்பட்ட சேகிதானன், குருதியால் மறைக்கப்பட்டு, ஆழ்ந்த மயக்கத்தை அடைந்து தன் தேர்த்தட்டில் இருந்து கீழே விழுந்தான்.(31) பாண்டவர்களில் பெரும் தேர்வீரர்கள், சேகிதானன் கொல்லப்பட்டதைக் கண்டு, (கௌரவர்கள் மீது) இடையறாத கணைமாரியைப் பொழிந்தனர்.(32) உண்மையில், வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்ட பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி, உமது படைப்பிரிவுகளின் அனைத்துப் பக்கங்களிலும் அழகாகத் திரிந்து கொண்டிருந்தனர்.(33) கிருபர், கிருதவர்மன், வலிமைமிக்கவனான சுபலனின் மகன் {சகுனி} ஆகியோர் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைத்} தங்கள் முன் கொண்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுடன் போரிட்டனர்.(34) துரியோதனன், ஓ! ஏகாதிபதி, பரத்வாஜர் மகனை {துரோணரைக்} கொன்றவனும், அபரிமிதமான சக்தியும், ஆற்றலும் கொண்ட வீரனான திருஷ்டத்யும்னனுடன் போரிட்டான்.(35)உமது மகனால் {துரியோதனனால்} அனுப்பப்பட்ட, துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} தலைமையிலான மூவாயிரம் {3000} தேர்கள் விஜயனோடு (அர்ஜுனனோடு) போரிட்டுக் கொண்டிருந்தன.(36) அந்தப் போராளிகள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெற்றியடைய உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு, உயிரின் மீது கொண்ட அச்சத்தைத் துறந்தனர். உண்மையில், ஓ! மன்னா, ஒரு தடாகத்தினுள் செல்லும் அன்னங்களைப் போலவே, உமது போர்வீரர்கள், பாண்டவப்படைக்கு மத்தியில் ஊடுருவின.(37) அப்போது, அடி கொடுப்பதிலும், வாங்குவதிலும் இன்பங்கொண்டு ஒருவரையொருவர் கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்ட போராளிகளைக் கொண்ட குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் ஒரு கடும் போர் நடந்தது.(38) ஓ! மன்னா, வீரர்களுக்கு அழிவை ஏற்படுத்திய அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, காணப் பயங்கரமான பூமியின் புழுதி காற்று எழுந்தது.(39) போர் நடந்து கொண்டிருந்த போது, சொல்லப்பட்ட (பாண்டவப் போர்வீரர்களின்) பெயர்களையும், பாண்டவர்களால் சொல்லப்பட்ட (குரு போர்வீரர்களின்) பெயர்களையும் கேட்டே, அச்சமில்லாமல் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டிருந்த போராளிகளை நாங்கள் அறிந்தோம்.(40)

எனினும், ஓ! மனிதர்களில் புலியே , விரைவில் அந்தப் புழுதியானது, அப்போது சிந்தப்பட்ட குருதியால் விலக்கப்பட்டு, புழுதியோடு கூடிய இருளும் விரட்டப்பட்டு, மீண்டும் திசைகளின் புள்ளிகள் அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன.(41) உண்மையில், அச்சந்தருவதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, உமது போர்வீரர்களிலோ, எதிரியின் போர்வீரர்களிலோ எவரும் புறமுதுகிடவில்லை.(42) பிரம்மலோகத்தை அடையும் விருப்பத்தாலும், நியாயமாகப் போரிட்டு வெற்றியை அடையும் விருப்பத்தாலும், சொர்க்கத்தை அடையும் நம்பிக்கையாலும் தூண்டப்பட்ட போராளிகள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.(43) தங்கள் தலைவர்களால் தங்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதரங்களின் நிமித்தமாக அவர்களுக்குப் பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தவோ, தங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் நோக்கத்தை நிறைவேற்றும் உறுதியான தீர்மானம் கொண்டோ, சொர்க்கத்தில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்த போர்வீரர்கள், அந்தச் சந்தர்ப்பத்தில் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டிருந்தனர்.(44) பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை ஏவியும், வீசியும் கொண்டிருந்த பெரும் தேர்வீரர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து முழங்கிக் கொண்டோ, தாக்கிக் கொண்டோ இருந்தனர்.(45) உமது போர்வீரர்களும், எதிரியின் போர்வீரர்களும், “கொல்வாயாக, துளைப்பாயாக, கைப்பற்றுவாயாக, தாக்குவாயாக, வெட்டுவாயாக” என்ற வார்த்தைகளைச் சொல்வதே அந்தப் போர்க்களத்தில் கேட்டுக் கொண்டிருந்தது.(46)

அப்போது சல்லியன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனைக் கொல்லவிரும்பி, கூரிய கணைகள் பலவற்றால் அவனைத் துளைத்தான்.(47) எனினும், உடலின் முக்கிய அங்கங்கள் எவை என்பதை அறிந்த பிருதையின் மகனோ {யுதிஷ்டிரனோ}, ஓ! ஏகாதிபதி, மத்ரர்களின் ஆட்சியாளனுடைய {சல்லியனுடைய} முக்கிய அங்கங்களைக் குறிபார்த்து, பதினான்கு துணிக்கோல் கணைகளால் {நாராசங்களால்} மிக எளிதாக அவனைத் தாக்கினான்.(48) பெரும் புகழைக் கொண்ட சல்லியன், தன் கணைகளால் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைத்} தடுத்து, சினத்தால் நிறைந்து, தன் எதிராளியைக் கொல்ல விரும்பி, அந்தப் போரில் கங்க இறகுகளைக் கொண்ட எண்ணற்ற கணைகளால் அவனைத் துளைத்தான்.(49) ஓ! ஏகாதிபதி, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருந்த போதே அவன் {சல்லியன்}, நேரான கணையொன்றால் யுதிஷ்டிரனை மீண்டும் தாக்கினான்.(50)

பெரும் புகழைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், சினத்தால் நிறைந்து, கங்கங்கள் மற்றும் மயில்களின் இறகுகளைக் கொண்ட கூரிய கணைகள் பலவற்றால் மத்ரர்களின் ஆட்சியாளனைத் துளைத்தான்.(51) பிறகு, அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {யுதிஷ்டிரன்} எழுபது கணைகளால் சந்திரசேனனையும், ஒன்பதால் சல்லியனின் சாரதியையும், அறுபத்து நான்கால் துருமசேனனையும் துளைத்தான்.(52) உயர் ஆன்மப் பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} (இவ்வாறு) சல்லியனுடைய தேர்ச்சக்கரங்களின் இரு பாதுகாவலர்களும் கொல்லப்பட்ட போது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {சல்லியன்}, சேதிகளுக்கு மத்தியில் இருபத்தைந்து போர்வீரர்களைக் கொன்றான்.(53) மேலும் அந்தப் போரில் அவன் {சல்லியன்}, சாத்யகியை இருபத்தைந்து கூரிய கணைகளாலும், பீமசேனனை ஏழாலும், மாத்ரியின் இரு மகன்களை {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரை} நூறு கணைகளாலும் துளைத்தான்.(54) சல்லிய்ன இவ்வாறு போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தபோது, மன்னர்களில் சிறந்தவனான பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான பல கணைகளை அவன் மீது ஏவினான்.(55)

குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தன் எதிராளி முன்னணியில் நின்று கொண்டிருந்தபோது, ஓர் அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} கொண்டு அவனது தேரில் உள்ள கொடிமரநுனியை அறுத்தான்.(56) அந்தப் பெரும்போரில் பாண்டுவின் மகனால் இவ்வாறு வெட்டப்பட்ட சல்லியனின் கொடிமரம், பிளக்கப்பட்ட மலைச்சிகரத்தைப் போலக் கீழே விழுவதை நாங்கள் கண்டோம்.(57) தன் கொடிமரம் கீழே விழுந்ததையும், பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} தன் முன் நின்று கொண்டிருப்பதையும் கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, சினத்தால் நிறைந்து, கணைமாரிகளை ஏவினான்.(58) க்ஷத்திரியர்களில் காளையும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான சல்லியன், மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களின் தேவனைப் போல அந்தப் போரில் அடர்த்தியான கணைமாரிகளைப் பொழிந்தான்.(59) சாத்யகி, பீமசேனன், மாத்ரியின் இரட்டை மகன்கள் ஆகியோர் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் துளைத்த அவன் {சல்லியன்}, யுதிஷ்டிரனையும் பெரிதாகப் பீடித்தான்.(60)

அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மேகத்திரள்கள் எழுந்ததைப் போலப் பாண்டு மகனின் மார்புக்கு முன்பு பரவியிருந்த கணைகளின் வலையொன்றை நாங்கள் கண்டோம்.(61) அந்தப் போரில் சினத்தால் நிறைந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சல்லியன், நேரான கணைகளால் யுதிஷ்டிரனை மறைத்தான்.(62) அந்தக் கணை மாரிகளால் பீடிக்கப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், விருத்திரனைக் கொன்றவனுக்கு {இந்திரனுக்கு} முன்பு அசுரன் ஜம்பனைப் போலவே தன் ஆற்றலை இழந்தவனாக உணர்ந்தான்” {என்றான் சஞ்சயன்}.(63)

சல்லியனின் ஆற்றல்! – சல்லிய பர்வம் பகுதி – 13-சல்லியனை எதிர்த்த பாண்டவ வீரர்கள்; அனைவரையும் கலங்கடித்த சல்லியன்; பீமசேனனின் படையும், யுதிஷ்டிரனின் படையும் மட்டுமே தப்பி ஓடாமல் இருந்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இவ்வாறு மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} பீடிக்கப்பட்டபோது, சாத்யகி, பீமசேனன், பாண்டுவினால் மாத்ரிக்குப் பிறந்த இரண்டு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் தங்கள் தேர்களுடன் சல்லியனைச் சூழ்ந்து கொண்டு அந்தப் போரில் அவனைப் பீடிக்கத் தொடங்கினர்.(1) ஆதரவற்றவனாக இருந்த சல்லியன் அந்தப் பெரும் தேர்வீரர்களால் இவ்வாறு பீடிக்கப்பட்டதை (அத்தாக்குதல்களை அவன் வெற்றிகரமாகத் தடுப்பதைக்) கண்டு, உரத்த பாராட்டொலிகள் கேட்கப்பட்டன, மேலும், (அம்மோதலைக் கண்ட) சித்தர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். (அந்தப் போரைப் பார்ப்பதற்காக) அங்கே கூடியிருந்த துறவிகள் அதை அற்புதமானதாக அறிவித்தனர்.(2) அம்மோதலில் பீமசேனன், ஆற்றலில் (அவனது பெயருக்கு ஏற்றபடியே} தடுக்கப்பட முடியாத ஈட்டியாக[1] இருந்த சல்லியனை ஒரு கணையால் துளைத்து, அடுத்ததாக ஏழால் மீண்டும் அவனைத் {சல்லியனைத்} துளைத்தான்.(3) தர்மனின் மகனை {யுதிஷ்டிரனைக்} காக்க விரும்பிய சாத்யகி, நூறு கணைகளால் சல்லியனைத் துளைத்து, சிங்க முழக்கம் செய்தான்.(4) நகுலன் ஐந்து கணைகளாலும், சகாதேவன் ஏழாலும் அவனைத் துளைத்தனர்; அதன் பிறகு பின்னவன் {சகாதேவன்} அதே அளவு கணைகளால் மீண்டும் அவனைத் துளைத்தான்.(5)

அந்தப் போரில் கவனமாகப் போராடிய மத்ரர்களின் வீர ஆட்சியாளன் {சல்லியன்}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் இவ்வாறு பீடிக்கப்பட்டதும், கணைகளை ஏவுவதில் பெரும் சக்தி கொண்டதும், பெருங்கடினத்தைத் தாங்கவல்லதும், உறுதிமிக்கதுமான ஒரு வில்லை எடுத்துக் கொண்டு,(6) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இருபத்தைந்து கணைகளால் சாத்யகியையும், எழுபத்திமூன்றால் பீமனையும், ஏழால் நகுலனையும் துளைத்தான்.(7) பிறகு ஓர் அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} கொண்டு, நாணில் கணை பொருத்தப்பட்ட சகாதேவனின் வில்லை அறுத்து, அந்தப் போரில் எழுபத்து மூன்று கணைகளால் சகாதேவனையும் துளைத்தான்.(8) அப்போது சகாதேவன், மற்றொரு வில்லில் நாண்பொருத்திக் கொண்டு, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கோ, சுடர்மிக்க நெருப்புக்கோ ஒப்பான ஐந்து கணைகளால் தன் தாய்மாமனை {சல்லியனைத்} துளைத்தான்.(9) பெரும் சினத்தால் நிறைந்த அவன் {சகாதேவன்}, அந்தப் போரில் தன் எதிராளியின் சாரதியை ஒரு நேரான கணையால் தாக்கி, மூன்று கணைகளால் சல்லியனையும் மீண்டும் துளைத்தான்.(10)

அப்போது பீமசேனன், எழுபது கணைகளால் அந்த மத்ரர்களின் ஆட்சியாளனைத் துளைத்தான், சாத்யகி ஒன்பதாலும், மன்னன் யுதிஷ்டிரன் அறுபதாலும் அவனைத் துளைத்தனர்.(11) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் இவ்வாறு துளைக்கப்பட்டதும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, செஞ்சுண்ண மலையின் சாரலில் ஓடும் சிவப்பு ஓடைகளைப் போல, சல்லியனின் உடலில் குருதி வழியத் தொடங்கியது.(12) எனினும், ஓ! மன்னா, சல்லியன் விரைவாக ஐந்து கணைகளால் அந்தப் பெரும் வில்லாளிகளைப் பதிலுக்குத் துளைத்தது மிகவும் அற்புதமானதாகத் தெரிந்தது.(13) ஓ! ஐயா, மற்றொரு அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} எடுத்துக் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சல்லியன்}, அம்மோதலில் நாண் பொருத்தப்பட்ட தர்மனின் {யுதிஷ்டிரனின்} வில்லை அறுத்தான்.(14) மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டவனும், பெரும் தேர்வீரனுமான அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, சல்லியனையும், அவனது குதிரைகள், சாரதி, கொடிமரம், தேர் ஆகியவற்றையும் பல கணைகளால் மறைத்தான்.(15)

அந்தப் போரில் தர்மன் மகனின் {யுதிஷ்டிரனின்} கணைகளால் இவ்வாறு மறைக்கப்பட்ட சல்லியன், கூரிய பத்து கணைகளால் முன்னவனை {யுதிஷ்டிரனைத்} தாக்கினான்.(16) அப்போது, தர்மனின் மகன் கணைகளால் இவ்வாறு பீடிக்கப்பட்டதைக் கண்டு சினத்தால் நிறைந்த சாத்யகி, கணைமேகங்களால் அந்த மத்ரர்களின் வீர ஆட்சியாளனைத் {சல்லியனைத்} தடுத்தான்.(17) சல்லியன், கத்திமுகக் கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் சாத்யகியின் உறுதிமிக்க வில்லை அறுத்து, பிற பாண்டவப் போர்வீரர்கள் ஒவ்வொருவரையும் மும்மூன்று கணைகளால் துளைத்தான்.(18) அப்போது, ஓ! ஏகாதிபதி, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகி, சினத்தால் நிறைந்து, தங்கக் கைப்பிடி கொண்டதும், பல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு வேலை சல்லியன் மீது வீசினான்.(19) பீமசேனன், சுடர்மிக்கப் பாம்பொன்றைப் போலத் தெரிந்த துணிக்கோல் கணை {நாராசம்} ஒன்றை அவன் மீது ஏவினான்; நகுலன் அவன் மீது ஈட்டி ஒன்றை வீசினான், அவனைக் கொல்லும் விருப்பம் கொண்டவர்களான சகாதேவன் ஒரு கதாயுதத்தையும், தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} சதக்னி ஒன்றையும் அவன் மீது வீசினர்.(20)

எனினும், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அந்த ஐந்து போர்வீரர்களின் கரங்களால் வீசப்பட்ட அவ்வாயுதங்கள் அனைத்தும் தன் தேரை நோக்கி வந்து கொண்டிருந்தபோதே அந்தப் போரில் அவற்றைக் கலங்கடித்தான்.(21) சல்லியன், பெரும் எண்ணிக்கையிலான அகன்ற தலை கணைகளை {பல்லங்களைக்} கொண்டு, சாத்யகியால் ஏவப்பட்ட வேலை அறுத்தான். வீரமும், பெரும் கரநளினமும் கொண்ட அவன் {சல்லியன்}, பீமனால் ஏவப்பட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான கணையை இரு துண்டுகளாக வெட்டினான்.(22) மேலும் அவன், நகுலனால் ஏவப்பட்ட தங்கப்பிடி கொண்ட அந்தப் பயங்கரமான ஈட்டியையும், சகாதேவனால் வீசப்பட்ட கதாயுதத்தையும் கணை மேகங்களால் தடுத்தான்.(23) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேலும் அவன் {சல்லியன்}, மன்னனால் {யுதிஷ்டிரனால்} தன் மீது ஏவப்பட்ட சதக்னியை, பாண்டு மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இரு கணைகளால் வெட்டி, உரத்த சிங்க முழக்கம் செய்தான். எனினும், அந்தப் போரில் தன் ஆயுதம் வீழ்த்தப்பட்டதைச் சிநியின் பேரனால் {சாத்யகியால்} தாங்கிக் கொள்ள முடியவில்லை.(24) சினத்தால் உணர்ச்சியை இழந்த சாத்யகி, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, இரண்டு கணைகளால் மத்ரர்களின் ஆட்சியாளனையும் {சல்லியனையும்}, மூன்றால் அவனது சாரதியையும் துளைத்தான்.(25)

இதனால் சினம் தூண்டப்பட்ட சல்லியன், ஓ! ஏகாதிபதி, வலிமைமிக்க யானைகளைக் கூரிய வேல்களால் துளைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களைப் போல இருந்த அவர்கள் அனைவரையும் பத்து கணைகளால் ஆழத் துளைத்தான்.(26) இவ்வாறு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} தடுக்கப்பட்டவர்களான அந்த எதிரிகளைக்கொல்பவர்களால், சல்லியனுக்கு முன்னிலையில் நிற்கவும் முடியவில்லை.(27) சல்லியனின் ஆற்றலைக் கண்ட மன்னன் துரியோதனன்பாண்டவர்களும், பாஞ்சாலர்களும், சிருஞ்சயர்களும் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகவே கருதினான்.(28) அப்போது, ஓ! மன்னா, வலிமைமிக்கக் கரங்களையும், பெரும் ஆற்றலையும் கொண்ட பீமசேனன், தன் உயிர் மூச்சை விட்டுவிட மனத்தில் தீர்மானித்துக் கொண்டு மத்ரர்களின் ஆட்சியாளனுடன் மோதினான்.(29) நகுலன், சகாதேவன் மற்றும் பெரும் வலிமை கொண்ட சாத்யகி ஆகியோர் சல்லியனைச் சூழ்ந்து கொண்டு அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவன் மீது தங்கள் கணைகளை ஏவினர்.(30)

பெரும் வில்லாளிகளும், பாண்டவர்களில் பெரும் தேர்வீரர்களுமான அந்த நால்வரால் சூழப்பட்டாலும்கூட, மத்ரர்களின் வீர ஆட்சியாளன் {சல்லியன்} தொடர்ந்து அவர்களுடன் போரிட்டுக் கொண்டே வந்தான்.(31) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பயங்கரப் போரில் சல்லியனுடைய தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களில் ஒருவனைக் கத்தித் தலை கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் விரைவாக வெட்டினான்.(32) துணிச்சல்மிக்கவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தச் சல்லியனுடைய தேர்ச்சக்கரப் பாதுகாவலன் இவ்வாறு கொல்லப்பட்டதும், பெரும் பலம் கொண்ட சல்லியன், பாண்டவத் துருப்புகளைக் கணைமாரியால் மறைத்தான்.(33) ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் தன் துருப்புகள் கணைகளால் மறைக்கப்படுவதைக் கண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், இவ்வகையில் சிந்தித்தான்,(34) “உண்மையில், மாதவனின் {கிருஷ்ணனின்} அந்த முக்கியத்துவம்வாய்ந்த வார்த்தைகள் எவ்வாறு உண்மையாகப் போகின்றன? சினத்தால் தூண்டப்பட்டிருக்கும் மத்ரர்களின் ஆட்சியாளர் {சல்லியர்} போரில் என் படையை அழித்துவிடமாட்டார் என நம்புகிறேன்” {என்று யுதிஷ்டிரன் சிந்தித்தான்}.(35)

அப்போது, ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றோடு கூடிய பாண்டவர்கள், மத்ரர்களின் ஆட்சியாளனை அணுகி, அனைத்துப் பக்கத்தில் இருந்தும் அவனைப் பீடிக்கத் தொடங்கினர்.(36) பெரும் மேகத்திரள்களை விலக்கும் காற்றைப் போல, அந்தப் போரில் மத்ரர்களின் மன்னன், அங்கே எழுந்த கணைமாரியையும், பல்வேறு வகைகளைச் சேர்ந்த அபரிமிதமான ஆயுதங்களையும் விலக்கினான்.(37) பிறகு, சல்லியனால் ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான கணைமழையானது, வெட்டுக்கிளிகளின் கூட்டங்களைப் போல ஆகாயத்தில் செல்வதை நாங்கள் கண்டோம்.(38) உண்மையில், போரின் முன்னணியில் இருந்து மத்ரர்களின் ஆட்சியாளனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள், பறவைக்கூட்டங்கள் பாய்ந்து செல்வதைப் போலக் காணப்பட்டன.(39) மத்ர மன்னனின் வில்லில் இருந்து வெளிப்பட்டவையும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான கணைகளால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் ஓர் அங்குலம் இடம் கூட இல்லாத அளவுக்கு நிரம்பியிருந்தது.(40)

அந்தப் பயங்கரப் போரில், வலிமைமிக்கவனும், அதீத கரநளினம் கொண்டவனுமான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஏவிய கணைகளால், அடர்த்தியான இருள் உண்டானபோதும்,(41) பாண்டவர்களின் பரந்த படையானது அந்த வீரனால் இவ்வாறு கலங்கடிக்கப்படுவதைக் கண்ட போதும், தேவர்களும், கந்தர்வர்களும் பேராச்சரியத்தால் நிறைந்தனர்.(42) அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளால் பாண்டவ வீரர்கள் அனைவரையும் சீற்றத்துடன் பீடித்த சல்லியன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனையும் மறைத்து, ஒரு சிங்கத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கினான்.(43) அந்தப் போரில் சல்லியனால் இவ்வாறு மறைக்கப்பட்ட பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அந்த வீரனை எதிர்த்துப் போரிட முடியாதவர்களாக ஆனார்கள்.(44) எனினும், பீமசேனனைத் தங்கள் தலைமையில் கொண்ட பாண்டவர்களும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் வழிநடத்தப்பட்டவர்களும், போர்க்கள ரத்தினமான துணிச்சல்மிக்கச் சல்லியனிடம் இருந்து தப்பி ஓடவில்லை” {என்றான் சஞ்சயன்}.(45)

அர்ஜுனன் அஸ்வத்தாமன் மோதல்! – சல்லிய பர்வம் பகுதி – 14-பதினெட்டாம் நாள் போரில் அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த மோதல்; அஸ்வத்தாமனைத் தேரற்றவனாகச் செய்த அர்ஜுனன்; பாஞ்சாலத்தின் சுரதனைக் கொன்று அவனது தேரில் ஏறிக் கொண்ட அஸ்வத்தாமன்; தனியொருவனாகப் பலரிடம் போரிட்டுக் கொண்டிருந்த அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் அந்தப் போரில் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அவனைப் பின் தொடர்ந்து வந்தோரும், வீரமிக்கோருமான திரிகர்த்தர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஆகியோரின் கணைகள் பலவற்றால் துளைக்கப்பட்ட அர்ஜுனன்,(1) துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} மூன்று கணைகளாலும், பிற வீரர்களில் ஒவ்வொருவரையும் இரண்டு கணைகளாலும் பதிலுக்குத் துளைத்தான்.(2) கூரிய கணைகளால் தாக்கப்பட்டு, அந்தக் கணைகள் தங்கள் அங்கங்களின் தைத்திருந்ததன் விளைவால் முள்ளம்பன்றிகளைப் போலத் தெரிந்தாலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது துருப்பினர் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து தப்பி ஓடாமலிருந்தனர்.(3) துரோணர் மகனைத் தங்கள் தலைமையில் கொண்ட அவர்கள், அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டு அவனோடு போரிட்டனர்.(4) ஓ! மன்னா, அவர்களால் ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான கணைகள், விரைவில் அர்ஜுனனின் தேர்த்தட்டை நிறைத்தன.(5)

பெரும் வில்லாளிகளும், போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களுமான அந்த இரு கிருஷ்ணர்களும் கணைகளால் மறைக்கப்பட்டதைக் கண்ட அந்த வெல்லப்படமுடியாத (கௌரவப்) போராளிகள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(6) உண்மையில் அந்நேரத்தில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனுடைய தேரின் கூபரம், சக்கரங்கள், ஏர்க்கால், கடிவாளங்கள், நுகத்தடி, அனுஷ்கரம் ஆகியவை கணைகளால் முற்றிலும் மறைக்கப்பட்டிருந்தன.(7) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது உமது போர்வீரர்களால் பார்த்தனுக்குச் செய்யப்பட்டவற்றைப் போன்றவை இதற்கு முன்னர்ப் பார்க்கப்பட்டதோ, கேட்கப்பட்டதோ இல்லை.(8) அழகிய சிறகுகளைக் கொண்ட கூரிய கணைகளுடன் கூடிய அந்தத் தேரானது, பூமியில் நூற்றுக்கணக்கான தீப்பந்தங்களால் சுடர்விட்டெரியும் ஒரு தெய்வீக வாகனத்தை {விமானத்தைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(9) அப்போது அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி, மலைமீது மழைத்தாரைகளைப் பொழியும் ஒரு மேகத்தைப் போல நேரான கணைகளின் மாரியால் பகைவரின் படையை மறைத்தான்.(10)

அந்தப் போரில் பார்த்தனின் {அர்ஜுனனின்} பெயர் பொறிக்கப்பட்ட கணைகளால் தாக்கப்பட்ட அந்தப் போர்வீரர்கள், காரியங்களின் அந்நிலையைக் கண்டு, போர்க்களம் முழுவதும் பார்த்தனால் நிரம்பியிருப்பதாகக் கருதினர்.(11) அப்போது, கணைகளைத் தழல்களாகவும், காண்டீவத்தின் உரத்த நாணொலியைக் காற்றாகவும் கொண்ட பார்த்த நெருப்பானது, உமது துருப்புகளாலான விறகை எரிக்கத் தொடங்கியது.(12) பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வீழ்ந்துவிட்ட சக்கரங்கள், நுகத்தடிகள், அம்பறாத்தூணிகள், கொடிகள், கொடிமரங்கள், அவற்றைச் சுமந்திருந்த தேர்கள், அனுஷ்கரங்கள், திரிவேணுக்கள், அச்சுகள், பூட்டுவார்கள், கொறடாக்கள், காதுகுண்டலங்களாலும், தலைக்கவசங்களாலும் அலங்கரிக்கப்பட்ட போர்வீரர்களின் தலைகள், ஆயிரக்கணக்கான தொடைகள், விசிறிகளுடன் கூடிய குடைகள், கிரீடங்கள், மகுடங்கள் ஆகியவற்றின் குவியல்கள் பார்த்தனின் தேர் சென்ற வழித்தடமெங்கும் காணப்பட்டன.(13-16) உண்மையில், ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதர்களின் தலைவரே, அந்தக் கோபக்கார பார்த்தனின் தேர் சென்ற வழித்தடமெங்கும், குருதியால் சகதியான தரையானது, ருத்ரனின் விளையாட்டுக்களம் போலக் கடக்க முடியாததாக இருந்தது. அந்தக் காட்சியானது, கோழைகளை அச்சுறுத்தி, துணிச்சல்மிக்கோரை மகிழ்வித்தது.(17,18) எதிரிகளை எரிப்பவனான பார்த்தன், கூடுகளுடன் கூடிய இரண்டாயிரம் {2000} தேர்களை அழித்து, சுடர்மிக்கத் தழல்களுடன் கூடிய புகையற்ற நெருப்பைப் போலத் தெரிந்தான்.(19) உண்மையில் வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தப் பார்த்தன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றுடன் கூடிய அண்டத்தை (யுக முடிவில்) அழிப்பதற்காகச் சுடர்விட்டெரியும் சிறப்புமிக்க அக்னியைப்போலவே தெரிந்தான்.(20)

அந்தப் போரில் பாண்டு மகனின் {அர்ஜுனனின்} ஆற்றலைக் கண்டவனும், தன் தேரில் பல கொடிகளைக் கொண்டவனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} அவனைத் தடுக்க முயற்சி செய்தான்.(21) வாகனங்களில் வெண்குதிரைகள் பூட்டியிருப்பவர்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பி விரைவில் ஒருவருடனொருவர் மோதிக் கொண்டனர்.(22) ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவ்விருவராலும் ஏவப்பட்ட கணைமாரிகள், கோடையின் நெருக்கத்தில் இரு மேகத் திரள்களால் பொழியப்படும் மழைத்தாரைகளைப் போல அடர்த்தியானவையாகவும், பயங்கரமானவையாகவும் இருந்தன.(23) ஒருவரையொருவர் அறைகூவியழைத்த அந்த இரு போர்வீரர்களும், இரு காளைகள் தங்கள் கொம்புகளால் ஒன்றையொன்று கிழித்துக் கொள்வதைப் போலவே, அந்தப் போரில் நேரான கணைகளால் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(24) ஓ! மன்னா, அவர்களுக்கிடையில் நீண்ட நேரத்திற்குச் சமமான போரே நடைபெற்றது. ஆயுங்களின் மோதல் பயங்கரத்தை அடைந்தது.(25)

அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! பாரதரே, தங்கச் சிறகுகளையும் பெரும் சக்தியையும் கொண்ட பனிரெண்டு கணைகளால் அர்ஜுனனையும், பத்தால் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தான்.(26) அந்தப் பெரும்போரில் ஆசானின் மகனுக்குச் சிறிது நேரம் கொஞ்சம் மதிப்பைக் காட்டிய பீபத்சு {அர்ஜுனன்}, பிறகு சிரித்துக் கொண்டே, தன் வில்லான காண்டீவத்தைப் பலமாக வளைத்தான்.(27) வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, விரைவில் தன் எதிராளியை குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும், தேரற்றவனாகவும் செய்து, அதிகப் பலத்தைச் செலுத்தாமலே மூன்று கணைகளால் அவனைத் துளைத்தான்.(28) குதிரைகளற்ற தேரில் நின்று கொண்டிருந்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சிரித்துக் கொண்டே இரும்பு முள் பதித்த கதாயுதம் {பரிகம்} ஒன்றைப் போலத் தெரிந்த ஒரு கனமான உலக்கையை அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது வீசினான்.(29) தங்கத் துணியால் அலங்கரிக்கப்பட்ட அவ்வாயுதம் தன்னை நோக்கி வருவதைக் கண்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்த வீரப் பார்த்தன் {அர்ஜுனன்}, அதை ஏழு துண்டுகளாக வெட்டினான்.(30)

தன் உலக்கை வெட்டப்பட்டதைக் கண்டவனும், பெரும் கோபம் கொண்டவனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, மலைச் சிகரத்தைப் போலத் தெரிந்ததும், இரும்பு முட்கள் பதிக்கப்பட்டதுமான ஒரு பயங்கரமான கதாயுதத்தை {பரிகத்தை} எடுத்துக் கொண்டான். போரில் சாதித்தவனான அந்தத் துரோணர் மகன் அதைப் பார்த்தன் மீது வீசினான்.(31) அந்த முட்கதாயுதம் {பரிகம்} சினம் கொண்ட அந்தகனைப் போலத் தன்னை நோக்கி வருவதைக் கண்ட பாண்டுவின் மகன் அர்ஜுனன், ஐந்து சிறந்த கணைகளால் அதை வேகமாக வெட்டினான்.(32) அந்தப் பெரும்போரில் பார்த்தனின் கணைகளால் வெட்டப்பட்ட அந்த ஆயுதம், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (பகை) மன்னர்களின் இதயங்களைப் பிளப்பதைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(33) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் மூன்று பிற கணைகளால் துரோணரின் மகனைத் துளைத்தான். வலிமைமிக்கப் பார்த்தனால் துரோணரின் மகன் பெரும்பலத்துடன் ஆழத்துளைக்கப்பட்டாலும், ஆண்மையுடன் கூடியவனாக அச்சம் அல்லது கலக்கத்தின் எந்த அறிகுறியையும் வெளிக்காட்டவில்லை.(34)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் தேர்வீரனான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, க்ஷத்திரியர்கள் அனைவரின் கண்களுக்கு முன்பாகவே சுரதனை {ஸுரதனைக்} கணைமாரியால் மறைத்தான்.(35) பாஞ்சாலர்களில் பெரும் தேர்வீரனான சுரதன் அந்தப் போரில் மேகங்களின் முழக்கத்தைப் போல ஆழ்ந்த சடசடப்பொலியைக் கொண்ட தன் தேரைச் செலுத்திக் கொண்டு துரோணரின் மகனை எதிர்த்து விரைந்தான்.(36) உறுதியானதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதுமான தன் முதன்மையான வில்லை வளைத்த அந்தப் பாஞ்சால வீரன், நெருப்பின் தழல்களுக்கோ, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கோ ஒப்பான கணைகளால் அஸ்வத்தாமனை மறைத்தான்.(37) கோபத்தில் தன்னை நோக்கி விரையும் பெரும் போர்வீரனான சுரதனைக் கண்ட துரோணரின் மகன், தடியால் தாக்கப்பட்ட பாம்பொன்றைப் போலச் சினத்தால் நிறைந்தான்.(38) புருவத்தை மூன்று கோடுகளாகச் சுருக்கிக் கொண்டு, தன் நாவால் கடவாயை நனைத்த அவன் {அஸ்வத்தாமன்}, சினத்துடன் சுரதனைப் பார்த்து, தன் வில்லின் நாண்கயிற்றைத் தேய்த்து, யமனின் மரணக்கோலுக்கு {யமதண்டத்துக்கு} ஒப்பான கூரிய துணிக்கோல் கணையொன்றை {நாராசத்தை} ஏவினான்.(39) பெரும் வேகம் கொண்ட அந்தக் கணையானது, சுரதனின் இதயத்தைத் துளைத்து வெளியேறி, வானத்தில் இருந்து வீசப்பட்ட சக்ரனின் வஜ்ரத்தைப் போலப் பூமியைப் பிளந்து கொண்டு உள்ளே நுழைந்தது.(40)

அந்தக் கணையால் தாக்கப்பட்ட சுரதன், இடியால் பிளப்பட்ட மலைச்சிகரம் ஒன்றைப் போலக் கீழே பூமியில் விழுந்தான்.(41) அந்த வீரன் வீழ்ந்த பிறகு, தேர்வீரர்களின் முதன்மையான அந்தத் துரோணரின் வீரமகன் {அஸ்வத்தாமன்}, கொல்லப்பட்ட தன் எதிரியின் {சுரதனின்} வாகனத்தில் வேகமாக ஏறிக் கொண்டான்.(42) பிறகு, ஓ! ஏகாதிபதி, போரில் வெல்லப்பட முடியாத போர்வீரனான அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கவசமும், ஆயுதங்களும் தரித்துக் கொண்டு, சம்சப்தகர்களால் ஆதரிக்கப்பட்டு அர்ஜுனனோடு போரிட்டான்.(43) நடுப்பகல் வேளையில் ஒருவனுக்கும், பலருக்கும் இடையில் நடந்த அந்தப் போரானது, யமனின் ஆட்சிப்பகுதியில் உள்ளோரின் எண்ணிக்கையைப் பெருக்கியபடியே மிகவும் கடுமையான நிலையை அடைந்தது.(44) அப்போது அந்தப் போராளிகள் அனைவரின் ஆற்றலையும் கவனித்த அர்ஜுனன், தனியனாக, ஆதரவற்றவனாக ஒரே நேரத்தில் தன் எதிரிகள் அனைவருடனும் போரிட்ட அந்த அற்புதமான காட்சியை நாங்கள் கண்டோம்.(45) அர்ஜுனனுக்கும், அவனது எதிரிகளுக்கும் இடையில் நடைபெற்ற அம்மோதலானது, பழங்காலத்தில் இந்திரனுக்கும், அசுரர்களின் பரந்த படைக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக மிகக் கடுமையானதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(46)

பாண்டவர்களோடு மோதிய சல்லியன்! – சல்லிய பர்வம் பகுதி – 15-துரியோதனனைப் பீடித்த திருஷ்டத்யும்னன்; கிருபர் மற்றும் கிருதவர்மனுடன் போரிட்ட சிகண்டி, சாத்யகியுடன் மோதிய சல்லியன்; சல்லியனின் ஆற்றல்; தாய்மாமனைக் கொல்ல விரைந்த மருமக்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனும், பிருஷதனின் மகனான திருஷ்டத்யும்னனும், அபரிமிதமான கணைகளையும், ஈட்டிகளையும் பயன்படுத்தி ஒரு கடும்போரைச் செய்தனர்.(1) அவர்கள் இருவரும், ஓ! ஏகாதிபதி, மழைக்கால மேகங்கள் பொழியும் மழையைப் போலக் கணைமாரியை ஏவினர்.(2) (குரு) மன்னன் {துரியோதனன்}, துரோணரைக் கொன்றவனும், கடுங்கணைகளைக் கொண்டவனுமான பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} ஐந்து கணைகளால் துளைத்து, மீண்டும் ஏழு கணைகளால் அவனைத் துளைத்தான்.(3) பெரும் வலிமையும், உறுதியான ஆற்றலும் படைத்த திருஷ்டத்யும்னன், துரியோதனனை அந்தப் போரில் எழுபது கணைகளால் பீடித்தான்.(4) மன்னன் இவ்வாறு பீடிக்கப்படுவதைக் கண்டவர்களான அவனுடன் பிறந்த சகோதரர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒரு பெரும் படையின் துணையுடன் அந்தப் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனைச்} சூழ்ந்து கொண்டனர்.(5)

அனைத்துப் பக்கங்களிலும் அந்த அதிரதர்களால் சூழப்பட்ட அந்தப் பாஞ்சால வீரன் {திருஷ்டத்யும்னன்}, ஓ! மன்னா, ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் தன் வேகத்தை வெளிப்படுத்தியபடியே அந்தப்போரில் திரிந்து கொண்டிருந்தான்.(6) சிகண்டி, பிரபத்ரகர்களால் ஆதரிக்கப்பட்டவனானக் கிருதவர்மன் மற்றும் பெரும் தேர்வீரரான கிருபர் ஆகிய இரு குரு வில்லாளிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தான்.(7) மேலும், ஓ! ஏகாதிபதி, போர்வீரர்கள் அனைவரும் தங்கள் உயிரை விடத் தீர்மானித்துத் தங்கள் உயிரையே பணயம் வைத்துப் போரிட்டுக் கொண்டிருந்ததால், அந்தப் போரானது கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது.(8) சல்லியன், அனைத்துப் பக்கங்களிலும் கணைமாரிகளை ஏவியபடி, சாத்யகி மற்றும் விருகோதரனோடு {பீமனோடு} கூடிய பார்த்தர்களைப் பீடித்துக் கொண்டிருந்தான்.(9) ஓ! ஏகாதிபதி, பொறுமையும், பெரும் பலமும் கொண்ட அந்த மத்ரர்களின் மன்னன் {சல்லியன்}, ஆற்றலில் அந்தகனுக்கு ஒப்பானவர்களான இரட்டையர்களுடனும் (நகுலன் மற்றும் சகாதேவனோடும்) அதே நேரத்தில் போரிட்டுக் கொண்டிருந்தான்.(10)

அந்தப் பெரும்போரில் சல்லியனின் கணைகளால் சிதைக்கப்பட்ட பாண்டவப் பெருந்தேர்வீரர்கள், ஒரு பாதுகாவலனை அடையத் தவறினர்.(11) அப்போது மாத்ரியின் மகனான வீர நகுலன், பெரிதும் பீடிக்கப்படும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்டு, தன் தாய்மாமனை {சல்லியனை} எதிர்த்து வேகமாக விரைந்தான்.(12) அந்தப் போரில் (பலகணைகளால்) சல்லியனை மறைத்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான நகுலன் சிரித்துக் கொண்டே, முழுக்க இரும்பாலானவையும், கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், தன் வில்லில் இருந்து பெரும் வேகத்துடன் ஏவப்பட்டவையுமான பத்து கணைகளால் அவனது {சல்லியனின்} நடு மார்பைத் துளைத்தான்.(13, 14) சிறப்புமிக்கத் தன் மருமகனால் பீடிக்கப்பட்ட சல்லியன், நேரான கணைகள் பலவற்றால் பதிலுக்குத் தன் மருமகனை {நகுலனைப்} பீடித்தான்.(15)

அப்போது மன்னன் யுதிஷ்டிரன், பீமசேனன், சாத்யகி, மாத்ரியின் மகனான சகாதேவன் ஆகியோர் அனைவரும் மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} எதிர்த்து விரைந்தனர்.(16) எதிரிகளை வீழ்த்துபவனான அந்தக் குரு படையின் தலைவன் {சல்லியன்}, தேர்களின் சடசடப்பொலியால் முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகளை நிறைத்து பூமியை நடுங்கச் செய்தபடியே தன்னை நோக்கி வேகமாக விரைந்து வந்த அந்த வீரர்கள் அனைவரையும் அந்தப் போரில் வரவேற்றான் {எதிர்த்தான்}.(17) யுதிஷ்டிரனை மூன்று கணைகளாலும், பீமனை ஏழாலும் துளைத்த சல்லியன், அந்தப் போரில் சாத்யகியை நூறு கணைகளாலும், சகாதேவனை மூன்றாலும் துளைத்தான்.(18) பிறகு அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கத்தித் தலைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்}, உயர் ஆன்ம நகுலனின் கணை பொருத்தப்பட்ட வில்லை அறுத்தான்.(19) பெரும் தேர்வீரனான அந்த மாத்ரியின் மகன் {நகுலன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, சிறகுள்ள கணைகளால் மத்ரர்கள் ஆட்சியாளனை வேகமாக மறைத்தான்.(20)

யுதிஷ்டிரன், சகாதேவன் ஆகியோர் ஒவ்வொருவரும், ஓ! ஐயா, அந்த மத்ரர்களின் ஆட்சியாளனுடைய மார்பை பத்து கணைகளால் துளைத்தனர்.(21) பீமசேனன் மற்றும் சாத்யகி ஆகியோர் இருவரும், மத்ரர்களின் ஆட்சியாளனை நோக்கி விரைந்து, கங்க இறகுகளாலான சிறகுகள் படைத்த கணைகளைக் கொண்டு முன்னவன் {பீமன்} அறுபதாலும், பின்னவன் {சாத்யகி} ஒன்பதாலும் அவனைத் தாக்கினர்.(22) இதனால் சினத்தால் நிறைந்த அந்த மத்ரர்களின் ஆட்சியாளன், ஒன்பது கணைகளால் சாத்யகியைத் துளைத்து மீண்டும் எழுபது நேரான கணைகளால் அவனைத் துளைத்தான்.(23) பிறகு அவன் {சல்லியன்}, ஓ! ஐயா, சாத்யகியின் கணை பொருத்தப்பட்ட வில்லின் பிடியை அறுத்து, பின்னவனின் {சாத்யகியின்} நான்கு குதிரைகளையும் யமனின் உலகத்திற்கு அனுப்பி வைத்தான்.(24) சாத்யகியைத் தேரற்றவனாகச் செய்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்த மத்ரர்களின் ஆட்சியாளன், அனைத்துப் பக்கங்களிலும் ஒரு நூறு கணைகளால் அவனை {சாத்யகியைத்} தாக்கினான்.(25) அடுத்ததாக அவன் {சல்லியன்}, மாத்ரியின் இரு கோபக்கார மகன்கள், பாண்டுவின் மகனான பீமசேனன், யுதிஷ்டிரன் ஆகியோர் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் துளைத்தான்.(26)

பார்த்தர்கள் ஒன்று சேர்ந்தும் கூட அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனை அணுக முடியாத அளவுக்கு மிக அற்புதமான அவனது ஆற்றலை அப்போது நாங்கள் கண்டோம்.(27) மற்றொரு தேரில் ஏறிக் கொண்டவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான அந்த வலிமைமிக்கச் சாத்யகி, மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} அடங்கிப் பீடிக்கப்படும் பாண்டவர்களைக் கண்டு அவனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(28) சபைகளின் ரத்தினமான சல்லியன், மதங்கொண்ட யானையொன்று மற்றொரு யானையை எதிர்ப்பதைப் போலச் சாத்யகியின் தேரை எதிர்த்துத் தன் தேரில் விரைந்தான்.(29) சாத்யகிக்கும், மத்ரர்களின் வீர ஆட்சியாளனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது, பழங்காலத்தில் அசுரன் சம்பரனுக்கும், தேவர்களின் தலைவனுக்கும் இடையில் நடைபெற்றத்தைப் போலக் காண்பதற்குப் பயங்கரமானதாகவும், அற்புதமானதாகவும் இருந்தது.(30) அந்தப் போரில் தன் எதிரே நின்ற மத்ரர்களின் ஆட்சியாளனைக் கண்ட சாத்யகி, பத்து கணைகளால் அவனைத்துளைத்து, “நில்லும், நில்லும்” என்றான்.(31)

அந்த உயர் ஆன்மப் போர்வீரனால் ஆழத்துளைக்கப்பட்ட அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அழகிய இறகுகளுடன் கூடிய கூரிய கணைகளால் பதிலுக்குச் சாத்யகியைத் துளைத்தான்.(32) பெரும் வில்லாளிகளான அந்தப் பார்த்தர்கள், சாத்யகியால் தாக்கப்படும் மத்ரர்களின் மன்னனைக் கண்டு, தங்கள் தாய்மாமனான அவனைக் {சல்லியனைக்} கொல்ல விரும்பி அவனை நோக்கி வேகமாக விரைந்தனர்.(33) போராடிக்கொண்டிருந்த அந்த வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற மோதலானது, குருதியின் பெரும்பாய்ச்சலால் அடையாளங்காணப்பட்டு, முழங்கிக் கொண்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான சிங்கங்களுக்கு இடையில் நடைபெறும் மோதலைப் போல மிகப் பயங்கரமாக இருந்தது.(34) அந்தப் போராட்டமானது, ஓ! ஏகாதிபதி, முழங்கிக் கொண்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான சிங்கங்கள், இறைச்சிக்காகத் தங்களுக்குள் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதற்கு ஒப்பாக இருந்தது.(35) அவர்களால் ஏவப்பட்ட அடர்த்தியான கணைமாரியால் பூமியானது முற்றிலும் நிறைந்து, ஆகாயமும் கணைகளின் ஒரே திரளாக ஆனது.(36)

அந்தக் கணைகளால் களத்தைச் சுற்றிலும் இருள் உண்டானது. உண்மையில், அந்தச் சிறப்புமிக்க வீரர்களால் ஏவப்பட்ட கணைகளால், மேகங்களால் உண்டாவதைப் போன்ற நிழல் உண்டானது.(37) அப்போது, ஓ! மன்னா, போர்வீரர்களால் ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், சட்டை உரித்த பாம்புகளைப் போலத் தெரிபவையுமான சுடர்மிக்கக் கணைகளுடன் திசைப்புள்ளிகள் எதிர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(38) எதிரிகளைக் கொல்பவனான அந்தச் சல்லியன், தனியனாக, ஆதரவற்றவனாக அந்தப் போரில் பல கணைகளை ஏவிப் போரிட்டு அடைதற்கரிதான சாதனையை அடைந்தான்.(39) கங்கங்கள் மற்றும் மயில்களின் இறகுகளைக் கொண்டவையும், மத்ரர்களின் ஆட்சியாளனுடைய கரங்களில் இருந்து ஏவப்பட்டுப் பாய்ந்தவையுமான அந்தக் கடுங்கணைகளால் பூமியானது மறைக்கப்பட்டது.(40) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் அசுரர்களின் அழிவின்போது இருந்த சக்ரனின் {இந்திரனின்} தேரைப் போல அந்தப் பயங்கரப் போரில் சல்லியனின் தேரானது திரிந்து கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம்” {என்றான் சஞ்சயன்}.(41)

சல்லியன் யுதிஷ்டிரன் மோதல்! – சல்லிய பர்வம் பகுதி – 16-குருக்களால் பீடிக்கப்பட்ட பாண்டவர்கள்; கிருபரையும், கிருதவர்மனையும் கணைகளால் மறைத்த அர்ஜுனன்; சல்லியனை எதிர்த்து உறுதியாக நின்ற யுதிஷ்டிரன்; சல்லியனிடம் இருந்து தப்பி ஓடிய பாண்டவர்கள்; கிருஷ்ணனிடமும், தன் தம்பிகளிடமும் பேசி, சல்லியனைக் கொல்வதற்கு உறுதியேற்ற யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் அருஞ்செயல்; சல்லியனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட அஸ்வத்தாமன்; மற்றொரு தேரில் மீண்டும் சல்லியனுக்கும், யுதிஷ்டிரனுக்கும் இடையில் மீண்டும் நடந்த போர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் சல்லியனைத் தங்கள் தலைமையில் கொண்ட உமது துருப்புகள், பெரும் மூர்க்கத்துடன் பார்த்தர்களை எதிர்த்து மீண்டும் விரைந்தனர்.(1) போரில் கடுமையானவர்களான உமது துருப்பினர் பார்த்தர்களை எதிர்த்து விரைந்து பீடிக்கப்பட்டாலும், எண்ணிக்கையில் அதிகமானோராக இருந்ததன் விளைவால் மிகவிரைவில் அவர்களை {பார்த்தர்களைக்} கலங்கடித்தனர்.(2) இரு கிருஷ்ணர்களும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே குருக்களால் தாக்கப்பட்ட அந்தப் பாண்டவத் துருப்பினர், பீமசேனனால் தடுக்கப்பட்டாலும் களத்தில் நிற்கவில்லை.(3) இதன் காரணமாகச் சினத்தால் நிறைந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, கிருபரையும், அவரைப் பின்தொடர்வோரையும், கிருதவர்மனையும் கணைமாரியால் மறைத்தான்.(4)

சகாதேவன் தன் படைகள் அனைத்துடன் சகுனியைத் தடுத்தான். நகுலன், அருகில் இருந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மீது தன் பார்வையைச் செலுத்தினான்.(5)
திரௌபதியின் (ஐந்து) மகன்கள், (குரு படையின்) பெரும் எண்ணிக்கையிலான மன்னர்களைத் தடுத்தனர்.
பாஞ்சால இளவரசனான சிகண்டி, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைத்} தடுத்தான்.(6)
கதாயுதம் தரித்திருந்த பீமசேனன், மன்னனை {துரியோதனனைத்} தடுத்தான்.
குந்தியின் மகனான யுதிஷ்டிரன், {கௌரவப்} படைகளுக்குத் தலைவனாக இருந்த சல்லியனைத் தடுத்தான்.(7)

போரில் எப்போதும் புறமுதுகிடாதவர்களான எதிரிகளுக்கும், உமது போர்வீரர்களுக்கு மத்தியிலும், அந்த இணைக்கு இடையிலும் மீண்டும் போர் தொடங்கியது.(8) மொத்த பாண்டவப் படையையும் எதிர்த்து தனியொருவனாகப் போரிட்டுக் கொண்டிருந்த சல்லியனின் மிக அற்புதமான சாதனையை அப்போது நாங்கள் கண்டோம்.(9) அந்தப் போரில் யுதிஷ்டிரனின் அருகில் இருந்த சல்லியன், சந்திரனுக்கு அருகே இருக்கும் சனிக்கோளை {சனி கிரகத்தைப்} போலத் தெரிந்தான்.(10) கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகளால் மன்னனை {யுதிஷ்டிரனைப்} பீடித்த சல்லியன், கணைமாரியால் பீமனை மறைத்தபடி அவனை {பீமனை} எதிர்த்து விரைந்தான்.(11) சல்லியனால் வெளிப்படுத்தப்பட்ட கரநளினம், மற்றும் ஆயுதங்களில் தேர்ச்சி ஆகியவற்றைக் கண்டு இரு படைகளின் துருப்புகளும் அவனை உயர்வாக மெச்சின.(12)

சல்லியனால் பீடிக்கப்பட்டுப் பெரும் சிதைவையடைந்த பாண்டவர்கள், நிற்குமாறு கட்டளையிட்ட யுதிஷ்டிரனின் கூச்சல்களையும் அலட்சியம் செய்தபடியே போரைவிட்டுவிட்டு தப்பி ஓடினர்.(13) மத்ரர்களின் ஆட்சியாளனால் அவனது {யுதிஷ்டிரனின்} துருப்புகள் இவ்வாறு கொல்லப்பட்டபோது, பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் சினத்தால் நிறைந்தான்.(14) தன் ஆற்றலில் நம்பிக்கைக் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன், போரில் வெல்வது, அல்லது மரணத்தைச் சந்திப்பது என்ற தீர்மானத்துடன் மத்ரர்களின் ஆட்சியாளனைப் பீடிக்கத் தொடங்கினான்.(15)

அவன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பியர் அனைவரையும், மதுகுலத்தின் கிருஷ்ணனையும் அழைத்து, அவர்களிடம், “கௌரவர்களுக்காகத் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திய பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் பிற மன்னர்கள் அனைவரும் போரில் அழிந்துவிட்டனர். நீங்கள் அனைவரும் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கின்படியே உங்கள் வீரத்தை வெளிப்படுத்திப் போராடிவருகிறீர்கள்.(17) வலிமைமிக்கத் தேர்வீரரான சல்லியரைக் கொண்ட என்னுடைய ஒரு பங்கு மட்டுமே மிச்சமிருக்கிறது. இன்றைய போரில் நான் மத்ரர்களின் ஆட்சியாளரை {சல்லியரை} வெல்ல விரும்புகிறேன். அந்தப் பணி நிறைவேறுவதற்காக நான் விரும்புவதனைத்தையும் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(18) வீரர்களான மத்ராவதியின் {மாத்ரியின்} மகன்கள் இருவரும் என் {தேர்ச்} சக்கரங்களின் பாதுகாவலர்களாகட்டும். அவர்கள் வாசவனாலும் {இந்திரனாலும்} வெல்லப்பட முடியாத வீரர்களாகக் கணக்கிடப்படுகிறார்கள்[1].(19) தங்கள் சபதங்களில் உறுதியானவர்களும், அனைத்துக் கௌரவங்களுக்குத் தகுதியானவர்களுமான அவர்கள் இருவரும், க்ஷத்திரியர்களின் கடமைகளைத் தங்கள் முன் நிறுத்தியபடியே தங்கள் தாய்மாமனுடன் {சல்லியனுடன்} போரிடுவார்கள்.(20)

ஒன்று, போரில் சல்லியர் கொல்லப்படுவார், அல்லது நான் அவரைக் கொல்வேன். நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. உலக வீரர்களில் முதன்மையானவர்களே, நான் சொல்லும் இந்த உண்மையான வார்த்தைகளைக் கேட்பீராக.(21) பூமியின் தலைவர்களே, க்ஷத்திரியக் கடமைகளை நோற்று, வெற்றியடையவோ, கொல்லப்படவோ உறுதியாகத் தீர்மானத்துக் கொண்டு, என் தாய்மாமனுடன் நான் போரிடப் போகிறேன்.(22) தேரைச் செய்வோர், அறிவியலின் விதிகளின்படி செய்யப்பட்ட என் வாகனத்தையும், சல்லியரை விட அதிகமாக அளவுகளில் பிற வகைக் கருவிகள் அனைத்தையும் வேகமாக எனக்குக் கொடுக்கட்டும்.(23) சிநியின் பேரன் {சாத்யகி} எனது வலது சக்கரத்தையும், திருஷ்டத்யும்னன் இடதையும் பாதுகாக்கட்டும். பிருதையின் மகனான தனஞ்சயன் இன்று என் பின்புறத்தைப் பாதுகாக்கட்டும்.(24) ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான பீமன் என் முன்பு நின்று போரிடட்டும். இவ்வாறிருந்தால் நேரப்போகும் பெரும்போரில் நான் சல்லியரைவிட மேன்மையானவனாக இருப்பேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(25)

இவ்வாறு மன்னன் {யுதிஷ்டிரன்} சொன்னதும், அவனது நலன்விரும்பிகள் அனைவரும் தாங்கள் வேண்டிக் கொள்ளப்பட்டதைப் போலவே செய்தனர்.(26) பாண்டவத் துருப்பினர், அதிலும் குறிப்பாகப் பாஞ்சாலர்கள், சோமகர்கள் மற்றும் மத்ஸ்யர்கள் ஆகியோர் மீண்டும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(27) மன்னன் இந்தச் சபதத்தைச் செய்த பிறகு, மத்ரர்களின் ஆட்சியாளனை எதிர்த்துச் சென்றான். அப்போது பாஞ்சாலர்கள், எண்ணற்ற சங்குகள் மற்றும் பேரிகைகளை முழக்கி, சிங்க முழக்கம் செய்தனர்.(28) பெரும் சுறுசுறுப்புடைய அவர்கள் சினத்தால் நிறைந்து, குருக்களில் காளையான மத்ரர்களின் ஆட்சியாளனை எதிர்த்து உரத்த மகிழ்ச்சிக் கூச்சல்களுடன் விரைந்து சென்றனர்.(29) மேலும் அவர்கள், யானைகளின் மணியோசையையும், சங்குகள் மற்றும் துந்துபிகளின் உரத்த முழக்கங்கங்களையும் பூமியில் எதிரொலிக்கச் செய்தனர்.(30)

அப்போது உமது மகனும் {துரியோதனனும்}, மத்ரர்களின் வீர ஆட்சியாளனும் {சல்லியனும்}, உதய மற்றும் அஸ்த மலைகளைப் போலத் தங்களைத் தாக்குபவர்களை வரவேற்றனர் {எதிர்கொண்டனர்}.(31) போரில் தன் ஆற்றல் குறித்துத் தற்பெருமை பேசிக் கொண்ட சல்லியன், மழையைப் பொழியும் மகவத்தை {இந்திரனைப்} போல, எதிரிகளைத் தண்டிக்கும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் மீது கணை மாரியைப் பொழிந்தான்.(32) உயர் ஆன்மா கொண்ட குருக்களின் மன்னனும் {யுதிஷ்டிரனும்}[2], தன் அழகிய வில்லை எடுத்துக் கொண்டு, துரோணர் தனக்குக் கற்றுத் தந்த பல்வேறு வகைகளிலான பாடங்களை வெளிப்படுத்தினான்.(33) அவன் பெருந்திறனுடனும், வேகமாகவும் அடுத்தடுத்த கணைமாரிகளை அழகாகப் பொழிந்தான். போரில் அவன்{யுதிஷ்டிரன்} திரிந்து கொண்டிருந்தபோது, எவராலும் அவனிடம் ஒரு குறையையும் காண முடியவில்லை.(34) போரில் பெரும் ஆற்றலைக் கொண்ட சல்லியன் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவரும் இறைச்சித் துண்டுக்காகப் போரிடும் புலிகளிரண்டைப் போல ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(35)

பீமன், போரில் திளைப்பவனான உமது மகனுடன் {துரியோதனனுடன்} போரிட்டுக் கொண்டிருந்தான். பாஞ்சால இளவரசன் (திருஷ்டத்யும்னன்), சாத்யகி, பாண்டுவுக்குப் பிறந்த மாத்ரியின் இரு மகன்கள் {நகுல, சகாதேவன்} ஆகியோர் சகுனியையும், சுற்றிலும் இருந்த பிற குரு வீரர்களையும் வரவேற்றனர் {எதிர்கொண்டனர்}.(36) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கையின் விளைவால், அந்த இடத்தில், வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டிருந்த உமது போர் வீரர்களுக்கும், எதிரியின் போர்வீரர்களுக்கும் இடையில் பயங்கரமான போர் நிகழ்ந்தது.(37) அப்போது துரியோதனன், அந்தப் போரில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த பீமனின் கொடிமரத்தை நேரான கணையொன்றால் குறிபார்த்து, அதை வெட்டி வீழ்த்தினான்.(38) ஓ! கௌரவங்களை அளிப்பவரே, பல மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பீமசேனனின் அந்த அழகிய கொடிமரம் கீழே விழுந்தது.(39) மீண்டும் அந்த மன்னன் {துரியோதனன்}, யானையின் துதிக்கையைப் போலத் தெரிந்த பீமனின் அழகிய வில்லை, கூரிய கத்தி முனை கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} வெட்டினான்.(40)

பெருஞ்சக்தி கொண்டவனும், வில்லற்றவனுமான பீமன், தன் ஆற்றலை வெளிப்படுத்தி, ஈட்டியொன்றால் உமது மகனின் {துரியோதனனின்} மார்பைத் துளைத்தான். இதனால் உமது மகன் {துரியோதனன்}, தனது தேர்த்தட்டில் கீழே அமர்ந்தான்.(41) {இவ்வாறு} துரியோதனன் மயங்கியதும், மீண்டும் விருகோதரன் {பீமன்}, கத்தி முனைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்}, அவனது சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(42) துரியோதனனின் தேரில் இருந்த குதிரைகள் தங்கள் சாரதியை இழந்து, தேரை இழுத்துக் கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் மூர்க்கமாக ஓடியதால் (குரு படையில்) உரத்த ஓலங்கள் எழுந்தன.(43) அப்போது வலிமைமிக்கத் தேர்வீரனான அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் உமது மகனைக் {துரியோதனனைக்} காக்க விரும்பி அந்தத் தேரைப் பின்தொடர்ந்து சென்றனர்.(44) (இதைக் கண்ட கௌரவத்) துருப்புகள் மிகவும் கலக்கமடைந்தன. துரியோதனனைப் பின்தொடர்ந்தோர் பீதியடைந்தனர். அந்நேரத்தில், தன் வில்லை வளைத்த காண்டீவதாரி {அர்ஜுனன்}, தன் கணைகளால் அவர்களைக் கொல்லத் தொடங்கினான்.(45)

அப்போது, சினத்தால் தூண்டப்பட்ட யுதிஷ்டிரன், மனோவேகம் கொண்டவையும், தந்தத்தைப் போன்ற வெண்மையானவையுமான தன் குதிரைகளைத் தூண்டி, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} எதிர்த்து விரைந்தான்.(46) பிறகு, குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம் அற்புதமான ஒன்றைக் கண்டோம். இதற்கு முன்பு வரை மெதுவாகவும், மென்மையாகவும் போரிட்டு வந்த அவன் {யுதிஷ்டிரன்} {அப்போது} மிக உக்கிரமாகப் போரிட்டான்.(47) அகலத் திறந்த கண்களுடனும், சினத்தால் நடுங்கிய உடலுடனும் இருந்த அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, தன் கூரிய கணைகளால் பகைவரின் போர்வீரர்களை நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வெட்டி வீழ்த்தினான்.(48) மூத்த பாண்டவன் எதிர்த்துச் சென்ற அந்தப் படைவீரர்கள், ஓ! மன்னா, இடியினால் பிளக்கப்பட்ட மலைச்சிகரங்களைப் போல அவனால் வீழ்த்தப்பட்டனர்.(49) குதிரைகள், சாரதிகள், கொடிமரங்கள் ஆகியவற்றுடன் கூடிய தேர்களை வீழ்த்தி, பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்களையும் வீழ்த்திய யுதிஷ்டிரன், மேகத்திரள்களை அழிக்கும் வலிமைமிக்கக் காற்றைப் போல எந்தத் துணையுமின்றி அந்த இடத்தில் விளையாடத் தொடங்கினான்.(50)

சினத்தால் நிறைந்த அவன் {யுதிஷ்டிரன்}, (அண்ட அழிவின்போது) வாழும் உயிரினங்களை அழிக்கும் ருத்திரனைப் போல, அந்தப் போரில் சாரதிகளுடன் கூடிய குதிரைகளையும், சாரதிகளற்ற குதிரைகளையும், ஆயிரக்கணக்கான காலாட்படை வீரர்களையும் அழித்தான்.(51) அனைத்துப் பக்கங்களிலும் தன் கணைகளை ஏவி போர்க்களத்தை வெறுமையாகச் செய்த யுதிஷ்டிரன், “நில்லும், நில்லும்” என்று சொல்லியபடியே மத்ரர்களின் ஆட்சியாளனை எதிர்த்து விரைந்தான்.(52) பயங்கரச் செயல்களைப்புரியும் அவ்வீரனின் சாதனைகளைக் கண்ட உமது வீரர்கள் அனைவரும் அச்சமடைந்தனர். எனினும் சல்லியன் அவனை எதிர்த்துச் சென்றான்.(53) சினத்தால் நிறைந்த அவர்கள் இருவரும் தங்கள் சங்குகளை முழக்கினர். ஒருவரையொருவர் அறைகூவி அழைத்துக் கொண்ட அவர்கள் இருவரும் மீண்டும் தங்களுக்குள் மோதிக் கொண்டனர்.(54) அப்போது சல்லியன் கணைமாரிகளால் யுதிஷ்டிரனை மறைத்தான். அதேபோல, குந்தியின் மகனும், மத்ரர்களின் ஆட்சியாளனை கணைமாரியால் மறைத்தான்.(55)

அப்போது மத்ரர்களின் ஆட்சியாளன் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய அவ்விரு வீரர்களும், அந்தப் போரில் ஒருவரையொருவர் கணைகளால் சிதைத்துக் கொண்டு, குருதியில் குளித்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சால்மலி {இலவ மரம்} மற்றும் கின்சுக {பலாச மரம்} மரங்களைப் போல அழகாகத் தெரிந்தனர். பெரும் காந்தியைக் கொண்டவர்களும், போரில் வெல்லப்பட முடியாதவர்களும், சிறப்புமிக்க வீரர்களுமான அவர்கள் இருவரும் உரத்த முழக்கங்களைச் செய்தனர்.(56,57) அவ்விருவரையும் கண்ட படைவீரர்களால் அவர்களில் யார் வெல்லப்போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனைக்} கொன்று பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்} பூமியை அனுபவிப்பானா? அல்லது சல்லியன், பாண்டுவின் மகனைக் கொன்று துரியோதனனுக்குப் பூமியை அளிப்பானா? என்பதை அங்கிருந்த போர்வீரர்களால் தீர்மானிக்க முடியவில்லை. அவ்வாறு போரிட்டுக் கொண்டிருக்கும்போதே மன்னன் யுதிஷ்டிரன் எதிரிகளைத் தன் வலப்புறத்தில் நிறைத்தினான்.(58,59) பிறகு சல்லியன் நூற்றுக்கணக்கான முதன்மையான கணைகளால் யுதிஷ்டிரன் மீது ஏவினான். பெருங்கூர்மை கொண்ட மற்றொரு கணையால் அவன் {சல்லியன்}, பின்னவனின் {யுதிஷ்டிரனின்} வில்லை அறுத்தான்.(60) மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட யுதிஷ்டிரன், முன்னூறு {300} கணைகளால் சல்லியனைத் துளைத்து, கத்தி முகக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} பின்னவனின் {சல்லியனின்} வில்லையும் அறுத்தான்.(61)

அப்போது அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, சில நேரான கணைகளால் தன் எதிராளியின் நான்கு குதிரைகளைக் கொன்றான். மேலும் இரண்டு மிகக் கூரிய கணைகளால் அவன், சல்லியனின் பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் வெட்டி வீழ்த்தினான்.(62) பிறகு அவன், சுடர்மிக்கதும், நன்கு கடினமாக்கப்பட்டதுமான மற்றொரு கூரிய கணையை எடுத்துக் கொண்டு, தன் முன்பு நின்றிருந்த சல்லியனின் கொடிமரத்தையும் அறுத்தான். அப்போது, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, துரியோதனனின் படையானது பிளந்தது.(63) அந்த நேரத்தில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அந்த அவல நிலைக்குத் தள்ளப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} நோக்கி வேகமாகச் சென்று, தன் தேரில் அவனை ஏற்றிக் கொண்டு வேகமாகத் தப்பி ஓடினான்.(64) அவர்கள் இருவரும் சென்றபிறகு, யுதிஷ்டிரனின் உரத்த முழக்கத்தைக் கேட்டனர். அப்போது நின்ற மத்ரர்களின் ஆட்சியாளன், முறையாக ஆயத்தம் செய்யப்பட்டிருந்த மற்றொரு தேரில் ஏறிக் கொண்டான்.(65) அந்தச் சிறந்த தேரானது, மேகங்களின் முழக்கத்தைப் போன்ற ஆழ்ந்த சடசடப்பொலியைக் கொண்டிருந்தது. ஆயுதங்கள் மற்றும் பிற வகைக் கருவிகள் அனைத்தும் பொருத்தப்பட்டிருந்த அந்த வாகனமானது, எதிரிகளுக்கு மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தியது” {என்றான் சஞ்சயன்}.(66)

சல்லியனைக் கொன்ற யுதிஷ்டிரன்! – சல்லிய பர்வம் பகுதி – 17-சல்லியனைத் தாக்கிய பாண்டவத் தலைவர்கள்; சல்லியனோடு போரிட்ட யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்ற சல்லியன்; சல்லியனின் கவசத்தை அறுத்த பீமசேனன்; தெய்வீக ஈட்டியால் சல்லியனைக் கொன்ற யுதிஷ்டிரன்; சல்லியனின் தம்பிக்கும், யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடந்த மோதல்; யுதிஷ்டிரனிடம் இருந்து தப்பி ஓடிய கௌரவப் படை; கிருதவர்மனுக்கும், சாத்யகிக்கும் இடையில் நடந்த மோதல்; கிருதவர்மனை வீழ்த்திய சாத்யகி; கிருதவர்மனைக் காத்த கிருபர்; துரியோதனனின் வீரம்; கிருதவர்மனைத் தேரற்றவனாக்கிய யுதிஷ்டிரன்; கிருதவர்மனைக் காத்த அஸ்வத்தாமன்; யுதிஷ்டிரனோடு போரிட்ட கிருபர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, மிக உறுதியானதும், மேலும் கடினமானதுமான மற்றொரு வில்லை எடுத்து யுதிஷ்டிரனைத் துளைத்து ஒரு சிங்கத்தைப் போல முழங்கினான்.(1) அப்போது, அளவிலா ஆன்மா கொண்ட அந்த க்ஷத்திரியக் காளை {சல்லியன்}, மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களின் தேவனைப் போல க்ஷத்திரியர்கள் அனைவரின் மேலும் கணைமாரிகளைப் பொழிந்தான்.(2) பத்து கணைகளால் சாத்யகியையும், மூன்றால் பீமனையும், அதே அளவுக்குச் சகாதேவனையும் துளைத்த அவன் {சல்லியன்} யுதிஷ்டிரனைப் பெரிதும் பீடித்தான்.(3) மேலும் அவன், சுடர்மிக்கப் பந்தங்களால் யானைகளைப் பீடிக்கும் ஒரு வேடனைப் போலவே, குதிரைகள், தேர்கள், யானைகளுடன் கூடிய பெரும் வில்லாளிகளான பிறர் அனைவரையும் பல கணைகளால் பீடித்தான்.(4) உண்மையில், அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {சல்லியன்}, யானைகள், யானை வீரர்கள், குதிரைகள், குதிரைவீரர்கள், தேர்கள் மற்றும் தேர்வீரர்கள் ஆகியோரை அழித்தான்.(5) ஆயுதங்களைப் பிடித்திருந்த போராளிகளின் கரங்களையும், வாகனங்களின் கொடிமரங்களையும் வெட்டிவீழ்த்திய அவன், குசப்புல் ஈக்குகள் விரவிக் கிடக்கும் ஒரு வேள்விப்பீடத்தைப் போல (கொல்லப்பட்ட) போர்வீரர்களைப் பூமியில் விரவிக் கிடக்கச் செய்தான்.(6)

அப்போது சினத்தால் நிறைந்தவர்களான பாண்டுக்கள், பாஞ்சாலர்கள், சோமகர்கள் ஆகியோர், அனைத்தையும் அழிக்கும் காலனைப் போலத் தங்கள் துருப்புகளை இவ்வாறு கொன்றுவரும் அந்த வீரனை {சல்லியனைச்} சூழ்ந்து கொண்டனர்.(7) அந்தப் போர்வீரன் பயங்கர வலிமை கொண்ட (பாண்டவ) மன்னனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும்போது, பீமசேனன், சிநியின் பேரன் {சாத்யகி}, முதன்மையான மனிதர்களான மாத்ரியின் இரு மகன்கள் {நகுல சகாதேவன்} ஆகியோர் அவனைச் {சல்லியனைச்} சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் அவனைப் போருக்கு அறைகூவியழைத்தனர்.(8) பிறகு அந்தப் போர்க்களத்தில், போர்வீரர்களில் முதன்மையான மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} அடைந்த அந்த வீரர்கள், அம்மோதலில் அந்த முதன்மையான மனிதனை {சல்லியனைத்} தடுத்து, கடும் சக்தி கொண்ட சிறகு படைத்த கணைகளால் அவனைத் தாக்கத் தொடங்கினர்.(9) பீமசேனன், மாத்ரியின் இரு மகன்கள், மதுகுலத்தோன் {சாத்யகி} ஆகியோரால் பாதுகாக்கப்பட்டவனான தர்மனின் அரசமகன் {யுதிஷ்டிரன்}, கடும் சக்தி கொண்ட, சிறகு படைத்த கணைகளால் மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} நடுமார்பைத் தாக்கினான்.(10) அப்போது கவசமும், ஆயுதங்களும் தரித்திருந்த உமது படையின் தேர்வீரர்கள் மற்றும் பிற போராளிகள், அந்தப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளன் கணைகளால் அதிகமாகப் பீடிக்கப்பட்டதைக் கண்டு, துரியோதனனின் கட்டளையின் பேரில் அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(11)

போரில் அந்நேரத்தில் மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஏழு கணைகளால் யுதிஷ்டிரனை வேகமாகத் துளைத்தான். அந்தப் பயங்கர மோதலில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த உயர் ஆன்மப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, ஒன்பது கணைகளால் தன் எதிரியைப் பதிலுக்குத் துளைத்தான்.(12) பெரும் தேர்வீரர்களான மத்ர ஆட்சியாளன் {சல்லியன்} மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவரும், எண்ணெயில் துவைக்கப்பட்டவையும், அவர்களின் காது வரை வளைக்கப்பட்ட வில்லின் நாண்கயிறுகளில் இருந்து ஏவப்பட்டவையுமான கணைகளால் ஒருவரையொருவர் மறைக்கத் தொடங்கினர்.(13) பெரும் பலம் கொண்டவர்களும், எதிரிகளால் வீழ்த்தப்பட முடியாதவர்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், அடுத்தவரின் கவனக்குறைவில் கவனமாக இருப்பவர்களுமான அந்தச் சிறந்த மன்னர்கள் இருவரும், தங்கள் கணைகளால் வேகமாகவும், ஆழமாகவும் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர்.(14) உயர் ஆன்மப் போர்வீரர்களான துணிச்சல்மிக்க மத்ர ஆட்சியாளனும், அந்த வீரப் பாண்டவனும் ஒருவரின் மீது ஒருவர் எண்ணற்ற கணைகளைப் பொழிந்த போது, அவர்களுடைய விற்கள், நாண்கயிறுகள், உள்ளங்கைகள் ஆகியவற்றில் உண்டான உரத்த ஒலியானது, இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பானதாக இருந்தது.(15) அவர்கள், ஆழ்ந்த கானகத்தில் இறைச்சித் துண்டுக்காகப் போரிடும் இளம்புலிகள் இரண்டைப் போல அந்தப் போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தனர். ஆற்றல் செருக்கு பெருகியவர்களான அவர்கள், பலமிக்கத் தந்தங்களுடன் கூடிய மதங்கொண்ட இரண்டு யானைகளைப் போல ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(16)

அப்போது, பெரும் மூர்க்கம் கொண்டவனான மத்ரர்களின் சிறப்புமிக்க ஆட்சியாளன் {சல்லியன்}, தன் வீரத்தை வெளிப்படுத்தி, பயங்கர வலிமை கொண்ட வீரனான யுதிஷ்டிரனின் மார்பை, நெருப்பு அல்லது சூரியனின் காந்தியைக் கொண்ட கணையொன்றால் துளைத்தான்.(17) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வாறு ஆழத் துளைக்கப்பட்டவனும், குரு குலத்துக் காளையுமான சிறப்புமிக்க யுதிஷ்டிரன், நன்கு ஏவப்பட்ட கணையொன்றால் மத்ரர்களின் ஆட்சியாளனைத் தாக்கி மகிழ்ச்சியால் நிறைந்தான்.(18) கண்ணிமைக்கும் நேரத்தில் தன் புலனுணர்வுகள் மீண்டவனும், ஆயிரங்கண் கொண்டவனுக்கு {இந்திரனுக்கு} இணையான ஆற்றலைக் கொண்டவனுமான அந்த மன்னர்களில் முதன்மையானவன் (சல்லியன்), கோபத்தால் கண்கள் சிவந்து, அந்தப் பிருதையின் மகனை{யுதிஷ்டிரனை} நூறு கணைகளால் வேகமாகத் தாக்கினான்.(19) இதன்காரணமாகச் சினத்தால் நிறைந்த தர்மனின் சிறப்புமிக்க மகன் {யுதிஷ்டிரன்}, சல்லியனின் மார்பை வேகமாகத் துளைத்து, ஒரு கணத்தையும் இழக்காமல், ஆறு கணைகளால் அவனுடைய தங்கக் கவசத்தையும் தாக்கினான்.(20)

அப்போது, மகிழ்ச்சியால் நிறைந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, தன் வில்லை வளைத்துப் பல கணைகளை ஏவி, இறுதியாகத் தன் அரச எதிரியான அந்தக் குரு குலத்துக் காளையின் வில்லை கத்தி முகக் கணைகள் {க்ஷுரப்ரங்கள்} இரண்டால் அறுத்தான்.(21) பிறகு அந்தப் போரில், புதியதும், மேலும் உறுதிமிக்கதுமான வில்லொன்றை எடுத்துக் கொண்ட சிறப்புமிக்க யுதிஷ்டிரன், அசுரன் நமுசியைத் துளைக்கும் இந்திரனைப் போலக் கூர்முனை கணைகள் பலவற்றால் சல்லியனைத் துளைத்தான்.(22) சிறப்புமிக்கச் சல்லியன், ஒன்பது கணைகளால் பீமன் மற்றும் மன்னன் யுதிஷ்டிரனின் தங்கக் கவசங்களை வெட்டி, அவ்விருவரின் கரங்களையும் துளைத்தான்.(23) பிறகு, நெருப்பு அல்லது சூரியனின் காந்தியைக் கொண்ட மற்றொரு கத்தி முகக் கணையால் {க்ஷுரப்ரத்தால்} யுதிஷ்டிரனின் வில்லையும் அவன் அறுத்தான். இந்நேரத்தில் கிருபர், ஆறு கணைகளை ஏவி மன்னனின் {யுதிஷ்டிரனின்} சாரதியைக் கொன்றதன் காரணமாக, அவன் {அந்த சாரதி} தேருக்கு முன்பு கீழே விழுந்தான்.(24) பிறகு மத்ரர்களின் ஆட்சியாளன் நான்கு கணைகளைக் கொண்டு யுதிஷ்டிரனின் நான்கு குதிரைகளைக் கொன்றான். மன்னனின் குதிரைகளைக் கொன்ற உயர் ஆன்ம சல்லியன், பிறகு தர்மனின் அரச மகனுடைய துருப்பினரைக் கொல்லத் தொடங்கினான்.(25)

அந்த (பாண்டவ) மன்னன் அந்த அவல நிலைக்குக் கொண்டு வரப்பட்டபோது, சிறப்புமிக்கப் பீமசேனன், பெரும் வேகத்தைக் கொண்ட ஒரு கணையால் மத்ர மன்னனின் {சல்லியனின்} வில்லை வேகமாக அறுத்து, மேலும் இரு கணைகளால் அம்மன்னனையும் ஆழமாகத் துளைத்தான்.(26) மற்றொரு கணையால் அவன், சல்லியனுடைய சாரதியின்  கவசம் பொருந்திய உடலில் இருந்து அவனது தலையை வெட்டினான். பெருஞ்சினத்தால் தூண்டப்பட்ட பீமசேனன், ஒரு கணமும் தாமதியாமல் அடுத்ததாகத் தன் எதிரியின் நான்கு குதிரைகளையும் கொன்றான்.(27) பிறகு, வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான பீமன், பெரும் வேகம் கொண்ட நூறு கணைகளால் அவ்வீரனை மறைத்து, அந்தப் போரில் தனியொருவனாகத் திரிந்து வந்தான். மாத்ரியின் மகனான சகாதேவனும் அதையே செய்தான். அக்கணைகளால் சல்லியன் திகைப்படைந்ததைக் கண்ட பீமன், வேறு கணைகளால் அவனது கவசத்தையும் அறுத்தான்.(28) பீமசேனனால் கவசம் வெட்டப்பட்டவனான அந்த உயர் ஆன்ம மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, ஒரு வாளையும், ஆயிரம் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, தன் தேரில் இருந்து கீழே குதித்து, குந்தியின் மகனை நோக்கி விரைந்தான். பயங்கரப் பலத்தைக் கொண்ட சல்லியன், நகுலனுடைய தேரின் ஏர்க்காலை வெட்டி, யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தான்.(29) சினத்துடன் விரையும் யமனைப் போல, மன்னனை நோக்கி மூர்க்கமாக விரையும் அவனைக் கண்ட திருஷ்டத்யும்னன், சிகண்டி, திரௌபதியின் மகன்கள் (ஐவர்), மற்றும் சிநியின் பேரன் {சாத்யகி} ஆகியோர் திடீரென அவனை நோக்கிச் சென்றனர்.(30)

அப்போது சிறப்புமிக்கவனான பீமன், முன்னேறிவரும் அவ்வீரனின் {சல்லியனின்} ஒப்பற்ற கேடயத்தைப் பத்து கணைகளால் அறுத்தான். மேலும் அவன் {பீமன்}, மற்றொரு அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} அந்தப் போர்வீரனின் வாளையும் கைப்பிடியில் அறுத்தான். இதனால் மகிழ்ச்சியில் நிறைந்த அவன் {பீமன்}, துருப்புகளுக்கு மத்தியில் உரக்க முழங்கினான்.(31) பீமனின் அந்த அருஞ்செயலைக் கண்ட பாண்டவத் தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர். உரக்கச் சிரித்த அவர்கள், கடும் முழக்கங்களைச் செய்தபடியே, சந்திரனைப் போன்று வெண்மையான தங்கள் சங்குகளை முழக்கினர்.(32) வியர்வையில் நனைந்து, குருதியில் குளித்து, மிகவும் துயருற்றிருந்த உமது படையின் வீரர்கள், அந்தப் பயங்கர ஒலியால் கிட்டத்தட்ட உயிரற்றவர்களைப் போல தங்கள் உற்சாகத்தை இழந்தனர்.(33) பீமசேனன் தலைமையிலான அந்த முதன்மையான பாண்டவ வீரர்களால் தாக்கப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளன், (அவர்களைப் பொருட்படுத்தாமல்) ஒரு மானைக் கைப்பற்றப்போகும் சிங்கத்தைப் போல யுதிஷ்டிரனை நோக்கிச் சென்றான்.(34) அப்போது, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாக இருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கோபத்தில் தூண்டப்பட்டதன் விளைவால் சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிந்தான். தன் எதிரே மத்ர ஆட்சியாளனைக் {சல்லியனைக்} கண்ட அவன் {யுதிஷ்டிரன்}, அந்த எதிரியை நோக்கி மிக மூர்க்கமாக விரைந்தான்.(35)

கோவிந்தனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளை நினைவுகூர்ந்த அவன், சல்லியனின் அழிவில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். உண்மையில் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், குதிரைகளற்ற, சாரதியற்ற தன் தேரில் நின்று கொண்டு, ஓர் ஈட்டியை எடுக்க விரும்பினான்.(36) அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, சல்லியனின் அருஞ்செயலைக் கண்டும், தன் பங்காக ஒதுக்கப்பட்ட அந்த வீரன் இன்னும் கொல்லப்படாமல் இருப்பதை நினைவுகூர்ந்தும், இந்திரனின் தம்பி {கிருஷ்ணன்} தன்னிடம் செய்யச் சொன்ன செயலை நிறைவேற்றுவதில் தன் இதயத்தை நிலைக்கச் செய்தான்.(37) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தங்கம் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்டதும், தங்கத்தைப் போன்ற பிரகாசமான ஒளியைக் கொண்டதுமான ஓர் ஈட்டியை எடுத்தான். அகன்று விரிந்திருந்த தன் விழிகளை உருட்டிய அவன், சினம் நிறைந்த இதயத்துடன் தன் பார்வையை மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மீது செலுத்தினான்.(38) ஓ மனிதர்களில் தேவரே {திருதராஷ்டிரரே}, இவ்வாறு தூய ஆன்மா கொண்டவனும், பாவங்களனைத்தும் கழுவப்பட்டவனுமான அம்மன்னனால் பார்க்கப்பட்டும், மத்ரர்களின் அந்த ஆட்சியாளன் {சல்லியன்} சாம்பலாகக் குறையாமல் {எரிந்து சாம்பலாகாமல்} இருந்தான். இஃது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, எங்களுக்குப் பேராச்சரியத்தை ஏற்படுத்தியது.(39) பிறகு, குருக்களின் அந்தச் சிறப்புமிக்கத் தலைவன் {யுதிஷ்டிரன்}, கடினமான அழகிய கைப்பிடியுடன் கூடியதும், ரத்தினங்கள் மற்றும் பவழங்களால் பிரகாசித்ததுமான அந்தச் சுடர்மிக்க ஈட்டியை {சக்தி ஆயுதத்தை}, மத்ரர்களின் மன்னன் {சல்லியன்} மீது பெரும்பலத்துடன் வீசினான்.(40)

பெரும் பலத்துடன் வீசப்பட்டு, ஆகாயத்தினூடே சென்ற அந்தச் சுடர்மிக்க ஈட்டியானது {சக்தி ஆயுதம்}, யுகமுடிவில் வானத்தில் இருந்து விழும் எரிநட்சத்திரத்தைப் போல நெருப்புப்பொறிகளை உமிழ்வதைக் கௌரவர்கள் அனைவரும் கண்டனர்.(41) அந்தப் போரில், நீதிமானானான மன்னன் யுதிஷ்டிரன், மரணத்தைத் தரும் பாசக்கயிற்றைத் தரித்திருக்கும் கால இரவுக்கோ {காலராத்திரிக்கோ}, அச்சந்தரும் யமனின் தன்மையைக் கொண்ட வளர்ப்புத் தாய்க்கோ ஒப்பானதும், பிராமணச் சாபத்தைப் போன்றதும், கலங்கடிக்கப்பட முடியாததுமான அந்த ஈட்டியை மிகக் கவனமாக வீசினான்[1].(42) பாண்டுவின் மகன்கள், நறுமணப்பொருட்கள், மாலைகள், சிறந்த இருக்கைகள், சிறந்த வகை உணவுகள் மற்றும் பானங்களுடன் எப்போதும் அவ்வாயுதத்தைக் கவனமாக வழிபட்டு வந்தனர். சம்வர்த்தக நெருப்பைப் போலச் சுடர்விடுவதாகத் தெரிந்த அவ்வாயுதம், அங்கீரசின் அதர்வணச் சடங்கைப் போலக் கடுமையானதாக இருந்தது.(43) ஈசானனின் பயன்பாட்டுக்காக (தெய்வீகத் தச்சனான) தஸ்த்ரியால் {விஸ்வகர்மாவால்} உண்டாக்கப்பட்ட அஃது, எதிரிகள் அனைவரின் உயிர் மூச்சுகளையும், உடலையும் எரிக்கவல்லதாய் இருந்தது. அது தன் சக்தியால் பூமி, ஆகாயம், அனைத்து நீர் கொள்ளிடங்கள் மற்றும் அனைத்து வகை உயிரினங்களையும் அழிக்கவல்லதாய் இருந்தது.(44) மணிகள், கொடிகள், ரத்தினங்கள், வைரங்கள், வைடூரியங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதும், தங்கக் கைப்பிடி கொண்டதுமான அது, பல நோன்புகளை நோற்ற பிறகு, தஸ்திரியாலேயே {விஸ்வகர்மனாலேயே} கவனமாக வடிவமைக்கப்பட்டதாகும். தவறாமல் மரணத்தைத் தரக்கூடிய அது பிரம்ம வெறுப்பாளர்கள் அனைவரையும் அழிக்கவல்லதாகும்.(45)

கடுமையான பல மந்திரங்களால் அஃதை {அந்த ஈட்டியை} ஈர்த்து, பெரும் பலம் மற்றும் பெருங்கவனத்தால் அதற்குப் பயங்கர வேகத்தை அளித்த மன்னன் யுதிஷ்டிரன், மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} அழிவுக்காக {பறவைகளின்} சிறந்த வழித்தடத்தின் ஊடாக அதை வீசினான்.(46) அந்த மன்னன் {யுதிஷ்டிரன் சல்லியனிடம்}, “ஓ! இழிந்தவரே, நீர் கொல்லப்பட்டீர்” என்ற வார்த்தைகளை உரத்த குரலில் சொல்லி, பழங்காலத்தில் அந்தகாசுரனின் அழிவுக்காகத் தன் கணையை ஏவிய ருத்ரனைப் போல, வெளிப்படையாகக் கோபத்தில் ஆடியபடியே, வலுவானதும், அழகானதுமான தன் (வலக்) கரத்தை வளைத்து அஃதை {அந்த ஈட்டியை} ஏவினான்.(47) இருப்பினும் உரக்க முழங்கிய சல்லியன், நெருப்பானது, தன் மேல் ஊற்றப்படும் தெளிந்த நெய்யைப் பிடிக்கத் தாவுவதைப் போலவே, வலிமையனைத்தையும் பயன்படுத்தி யுதிஷ்டிரனால் ஏவப்பட்டதும், தடுக்கப்பட முடியாத சக்தி கொண்டதுமான அந்தச் சிறந்த ஈட்டியைப் பிடிக்க முயற்சித்தான்.(48) அவனது முக்கிய அங்கங்களையும், அவனது அகன்ற அழகிய மார்பையும் துளைத்த அந்த ஈட்டியானது, சிறு தடையுமில்லாமல் (மத்ரத்தைச் சார்ந்த) அம்மன்னனின் உலகம் பரந்த புகழை (தன்னோடு) கவர்ந்து சென்று, நீர் நுழைவது போலவே பூமிக்குள் எளிதாக நுழைந்தது.(49) நாசித்துளைகள், கண்கள், காதுகள், வாய் ஆகியவற்றில் இருந்தும், காயங்களில் வழிந்தும் வெளிப்பட்ட குருதியால் நனைக்கப்பட்ட அவன் {சல்லியன்}, ஸ்கந்தனால் துளைக்கப்பட்ட பெருவடிவ கிரௌஞ்ச மலையைப் போலத் தெரிந்தான்.(50)

குரு குல வழித்தோன்றலால் கவசம் அறுபட்டவனும், இந்திரனின் யானையைப் போன்ற பலவானுமான அந்தச் சிறப்புமிக்கச் சல்லியன், தன் கரங்களை அகல விரித்து, இடியால் பிளக்கப்பட்ட ஒரு மலைச்சிகரத்தைப் போலக் கீழே பூமியில் விழுந்தான்.(51) இந்திரனை வழிபட நிறுவப்பட்ட நெரும் கொடிமரமொன்று தரையில் விழுவதைப் போல அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, தன் கரங்களை அகல விரித்தபடி நீதிமானான மன்னன் யுதிஷ்ட்டிரனை நோக்கிய முகத்துடன் கீழே பூமியில் விழுந்தான்[2].(52) தன் மார்பில் விழப்போகும் அன்புத்தலைவனை வரவேற்கும் ஓர் அன்புமனைவியைப் போலவே, சிதைந்து குருதியில் குளித்த அங்கங்களுடன் விழும் அந்த மனிதர்களில் காளையை வரவேற்பதற்காகப் பூமியானவள் பாசத்துடன் சற்றே எழுந்தது போலத் தெரிந்தது.(53) பலமிக்கச் சல்லியன், அன்பு மனைவியைப் போலப் பூமியை நீண்ட காலம் அனுபவித்த பிறகு, தன் அங்கங்கள் அனைத்தாலும் பூமியை அணைத்தபடியே, அவளது மார்பில் உறங்குவதைப் போல அப்போது தெரிந்தது.(54) நியாயமான போரில் நீதிமிக்க ஆன்மாவான தர்மனின் மகனால் {யுதிஷ்டிரனால்} கொல்லப்பட்ட சல்லியன், வேள்வி மேடையில் தணிந்து கிடக்கும் நன்னெருப்பின் தன்மையை ஏற்றதாகத் தெரிந்தது.(55) ஆயுதங்களையும் கொடிமரத்தையும் இழந்து, இதயம் துளைக்கப்பட்டிருந்தாலும், உயிரற்றுக் கிடந்த அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் தன் அழகைக் கைவிட்டதாகத் தெரியவில்லை.(56)

அப்போது யுதிஷ்டிரன், இந்திரனின் வில்லுக்கு ஒப்பான காந்தியைக் கொண்ட தன் வில்லை எடுத்து, பாம்புகளை அழிக்கும் பறவைகளின் அரசனைப் போல, அந்தப் போரில் தன் எதிரிகளை அழிக்கத் தொடங்கினான். பிறகு தனது கூர்முனைக் கணைகளால் தன் எதிரிகளின் உடல்களைப் பெரும் வேகத்துடன் வெட்டத் தொடங்கினான்.(57) அப்போது அந்தப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்} ஏவிய கணைமாரிகளால், உமது துருப்புகள் முற்றிலும் மறைக்கப்பட்டன. அச்சத்தால் தங்கள் கண்களை மூடிக் கொண்ட அவர்கள், (திகைத்துப் போய்) ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர். அவர்கள் தங்கள் உடல்களில் இரத்தம் வழிய, தாக்குதலுக்கும், தற்காப்புக்கும் உண்டான தங்கள் ஆயுதங்களை இழந்து, தங்கள் உயிர் மூச்சுகளையும் விட்டனர்.(58)

சல்லியன் வீழ்ந்ததும், இளமையுடன் கூடியவனும், (இறந்து போன) தன் அண்ணனுக்கு அனைத்து சாதனைகளிலும் இணையானவனும், வலிமைக்க ஒரு தேர்வீரனாகக் கருதப்பட்டவனுமான மத்ர மன்னனின் தம்பி, யுதிஷ்டிரனை எதிர்த்துச் சென்றான்.(59) போரில் வெல்லப்பட முடியாதவனும், தன் அண்ணனுக்கு இறுதி மரியாதைகளைச் செலுத்த விரும்பியவனுமான அந்த மனிதர்களில் முதன்மையானவன், பல கணைகளால் அந்தப் பாண்டவனை {யுதிஷ்டிரனை} வேகமாகத் துளைத்தான்.(60) பெரும் வேகத்துடன் கூடியவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், ஆறு கணைகளால் அவனைத் துளைத்தான். அவன், கத்திமுகக் கணைகள் {க்ஷுரப்ரங்கள்} இரண்டால் தன் எதிராளியின் வில்லையும், கொடிமரத்தையும் அறுத்தான்.(61) பிறகு அவன், அகன்ற தலையும், கூர்முனையும், பெரும் சக்தியும் கொண்ட சுடர்மிக்கக் கணையொன்றால் தன் முன் நின்றிருந்த தன் எதிரியின் தலையைத் தாக்கி வீழ்த்தினான்.(62) காது குண்டலங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தலையானது, புண்ணியங்கள் தீர்ந்து விழும் ஒரு சொர்க்கவாசியைப் போல அந்தத் தேரில் இருந்து கீழே விழுவதை நான் கண்டேன்.(63)

முழுவதும் குருதியால் குளித்திருந்த அவனது தலையற்ற உடலான தேரில் இருந்து கீழே விழுவதைக் கண்ட கௌரவத் துருப்புகள் பிளந்து ஓடின.(64) உண்மையில், அழகிய கவசம் பூட்டியிருந்தவனான மத்ரனின் அந்தத் தம்பி கொல்லப்பட்டதும், ஓ! என்றும், ஐயோ என்றும் கதறியபடியே குருக்கள் பெரும் வேகத்தோடு தப்பி ஓடினர்.(65) சல்லியனின் தம்பி கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், புழுதியால் மறைக்கப்பட்டவர்களுமான உமது துருப்பினர், பாண்டவர்களிடம் ஏற்பட்ட அச்சத்தால், தங்கள் வாழ்வில் நம்பிக்கையிழந்து தப்பி ஓடினர்.(66) பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சிநியின் பேரனான சாத்யகி, அச்சமடைந்து தப்பி ஓடும் கௌரவர்களை எதிர்த்துச் சென்றான்.(67) அப்போது ஹிருதிகனின் மகன் {கிருதவர்மன்}, ஓ! மன்னா, (வீழ்த்தப்பட்ட படையை எதிர்த்து) முன்னேறுபவனும், தடுக்கப்பட முடியாதவனும், வலிமைமிக்க வில்லாளியுமான அந்த வெல்லப்பட முடியாத போர்வீரனை {சாத்யகியை} அச்சமில்லாமல் வேகமாக எதிர்த்தான்.(68)

விருஷ்ணி குலத்தைச் சேர்ந்த சிறப்புமிக்கவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} மற்றும் சாத்யகி ஆகியோர் இருவரும், சீற்றமிக்க இரு சிங்கங்களைப் போல ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(69) பிரகாசத்தில் சூரியனுக்கு ஒப்பான அவர்கள் இருவரும் சூரியக் கதிர்களுக்கு ஒப்பான சுடர்மிக்கக் காந்தியைக் கொண்ட கணைகளால் ஒருவரையொருவர் மறைத்தனர்.(70) விருஷ்ணி குலத்தின் அந்த இரு சிங்கங்கள் தங்கள் விற்களில் இருந்து ஏவிய அந்தப் பலமிக்கக் கணைகளை, ஆகாயத்தில் வேகமாகச் செல்லும் பூச்சிகளைப் போல நாங்கள் கண்டோம்.(71) சாத்யகியைப் பத்து கணைகளாலும், அவனது குதிரைகளை மூன்றாலும் துளைத்த அந்த ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, ஒரு நேரான கணையால் அவனது {சாத்யகியின்} வில்லையும் அறுத்தான்.(72) இவ்வாறு வெட்டப்பட்ட தனது சிறந்த வில்லை அப்பால் கிடத்திய அந்தச் சிநி குலத்துக் காளை {சாத்யகி}, முதலில் இருந்ததைவிடக் கடினமான மற்றொரு வில்லை வேகமாக எடுத்துக் கொண்டான்.(73)

முதன்மையான வில்லை எடுத்துக் கொண்ட அந்த முதன்மையான வில்லாளி {சாத்யகி}, பத்து கணைகளால் ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} நடுமார்பைத் துளைத்தான்.(74) பிறகு நன்கு ஏவப்பட்ட கணைகள் பலவற்றால் அவனது தேரையும், அந்தத் தேரின் ஏர்க்காலையும் வெட்டிய சாத்யகி, பிறகு தன் எதிராளியின் குதிரைகளையும், அவனது பார்ஷினி சாரதிகள் இருவரையும் வேகமாகக் கொன்றான்.(75) அப்போது, சரத்வானின் மகனான வீரக் கிருபர், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, ஹிருதிகன் மகன் தேரற்றவனாகச் செய்யப்பட்டதைக் கண்டு, அவனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து அவனைக் கொண்டு சென்றார்.(76) மத்ரர்களின் மன்னன் {சல்லியன்} கொல்லப்பட்டு, கிருதவர்மன் தேரற்றவனாகச் செய்யப்பட்ட பிறகு, துரியோதனனின் மொத்தப் படையும் அந்தப் போரில் மீண்டும் புறமுதுகிட்டது.(77) அந்நேரத்தில் அந்தப் படையானது புழுதி மேகத்தால் மறைக்கப்பட்டது. எங்களால் எதையும் காண முடியவில்லை. எனினும் உமது படையின் பெரும்பகுதி வீழ்ந்தது. உயிரோடு எஞ்சியவர்களும் போரில் இருந்து தங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு புறமுதுகிட்டோடினர்.(78)

விரைவில், அனைத்துப் பக்கங்களிலும் பாய்ந்த பல்வேறு குருதி ஓடைகளின் விளைவால் பூமியின் புழுதி தணிவது தெரிந்தது.(79) அப்போது தன் படை பிளப்பதை அருகில் இருந்து கண்ட துரியோதனன், முன்னேறிவரும் பார்த்தர்கள் அனைவரையும் தனியொருவனாகத் தடுத்தான்.(80) பாண்டவர்களும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனும், ஆனர்த்தர்களின் வெல்லப்பட முடியாத தலைவனும் (சாத்யகியும்) தங்கள் தேர்களில் இருப்பதைக் கண்ட குரு மன்னன் {துரியோதனன்}, அவர்கள் அனைவரையும் கூரிய கணைகளால் மறைத்தான்.(81) (அந்நேரத்தில்) தங்கள் முன் நிற்கும் யமனை அணுக அஞ்சும் உயிரினங்களைப் போல, எதிரிகள் அவனை {துரியோதனனை} நெருங்கவில்லை. அதேவேளையில், ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} மற்றொரு தேரில் ஏறிக் கொண்டு, அந்த இடத்திற்குச் சென்றான்.(82) அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான யுதிஷ்டிரன், நான்கு கணைகளால் கிருதவர்மனின் நான்கு குதிரைகளைக் கொன்று, பெரும் சக்தி கொண்ட ஆறு அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} கௌதமர் மகனையும் {கிருபரையும்} துளைத்தான்.(83)

அப்போது அஸ்வத்தாமன், (பாண்டவ) மன்னனால் குதிரைகளற்றவனாகவும், தேரற்றவனாகவும் செய்யப்பட்ட ஹிருதிகன் மகனை {கிருதவர்மனைத்} தன் தேரில் ஏற்றிக் கொண்டு, யுதிஷ்டிரனின் முன்னிலையில் இருந்து அவனை அப்பால் கொண்டு சென்றான்.(84) சரத்வான் மகன் {கிருபர்}, பதிலுக்கு எட்டு கணைகளால் யுதிஷ்டிரனைத் துளைத்து, மேலும் எட்டு கூரிய கணைகளால் அவனது குதிரைகளையும் துளைத்தார்.(85) ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இவ்வாறு உமது மகன் மற்றும் உமது தீய கொள்கைகளால் அந்தப் போரின் தணல்கள் அங்குமிங்கும் எரியத் தொடங்கின.(86) அந்தப் போர்க்களத்தில், குரு குலத்துக் காளையால் {யுதிஷ்டிரனால்}, அந்த வில்லாளிகள் முதன்மையானவன் {சல்லியன்} கொல்லப்பட்ட பிறகு, சல்லியன் கொல்லப்பட்டதைக் கண்ட பார்த்தர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியால் நிறைந்து, தங்கள் சங்குகள் முழக்கினர்.(87) பழங்காலத்தில் விருத்திரன் கொல்லப்பட்ட பிறகு இந்திரனை மெச்சிய தேவர்களைப் போலவே, அந்தப் போரில் அனைவராலும் யுதிஷ்டிரன் பாராட்டப்பட்டான். அவர்கள் பல்வேறு வகைகளிலான இசைக்கருவிகளை இசைத்து முழக்கி, அவ்வொலியைப் பூமியின் அனைத்துப் பக்கங்களிலும் எதிரொலிக்கச் செய்தனர்” {என்றான் சஞ்சயன்}.(88)

சல்லியனின் தொண்டர்கள்! – சல்லிய பர்வம் பகுதி – 18-தங்கள் தலைவனின் படுகொலைக்குப் பழிதீர்க்க முனைந்த சல்லியனின் தொண்டர்கள்; அவர்களைத் தடுத்த துரியோதனன்; துரியோதனனுக்குக் கீழ்ப்படியாத மத்ரகர்கள்; அவர்களைத் தாக்கி அழித்த பாண்டவர்கள்; மத்ரகர்களைக் காக்க துரியோதனனைத் தூண்டிய சகுனி; மத்கர்களைக் காக்க விரைந்த கௌரவவீரர்கள்; களத்தில் இருந்து மீண்டும் புறமுதுகிட்ட கௌரவர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சல்லியன் கொல்லப்பட்ட பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மத்ர மன்னனை {சல்லியனைப்} பின்தொடர்ந்த எழுனூறு {700} வீரப் போர்வீரர்கள் பெரும் சக்தியுடன் போரிடச் சென்றனர்.(1) தலைக்கு மேல் வெண்குடை பிடிக்கப்பட்டு, எப்போதும் வெண்சாமரம் வீசப்பட்டு, மலை போன்ற ஒரு பெரிய யானையைச் செலுத்திக் கொண்டு வந்த துரியோதனன், “செல்லாதீர்கள், செல்லாதீர்கள்” என்று சொல்லி மத்ரகப் போர்வீரர்களைத் தடுத்தான்.(2) துரியோதனனால் மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்டாலும், அவ்வீரர்கள், யுதிஷ்டிரனைக் கொல்லும் விருப்பத்தோடு பாண்டவப் படைக்குள் ஊடுருவினர்.(3) துரியோதனனிடம் மாறாப்பற்றுக் கொண்ட அந்தத் துணிச்சல்மிக்கப் போராளிகள், தங்கள் விற்களில் உரத்த நாணொலி எழுப்பியபடியே பாண்டவர்களுடன் போரிட்டனர்.(4)

அதேவேளையில், சல்லியன் கொல்லப்பட்டதையும், மத்ரக மன்னனின் {சல்லியனின்} நலனில் அர்ப்பணிப்புக் கொண்ட மத்ரகர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களால் யுதிஷ்டிரன் பீடிக்கப்படுவதையும் கேட்ட பெரும் தேர்வீரனான பார்த்தன் {அர்ஜுனன்}, தன் வில்லான காண்டீவத்தை வளைத்துக் கொண்டும், தன் தேரின் சடசடப்பொலியால் பூமியை நிறைத்துக் கொண்டும் அங்கே வந்தான்.(5,6) பிறகு, அர்ஜுனன், பீமன், பாண்டுவின் மூலமாக மாத்ரிக்குப் பிறந்த இரண்டு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, மனிதர்களில் புலியான சாத்யகி, திரௌபதியின் (ஐந்து) மகன்கள்,(7) திருஷ்டத்யும்னன், சிகண்டி, பாஞ்சாலர்கள், சோமகர்கள் ஆகியோர் யுதிஷ்டிரனைக் காக்க விரும்பி, அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து நின்றனர்.(8) மன்னனை {யுதிஷ்டிரனைச்} சுற்றித் தங்கள் நிலைகளை ஏற்றவர்களும், மனிதர்களில் காளைகளுமான அந்தப் பாண்டவர்கள், பெருங்கடலைக் கலங்கடிக்கும் மகரங்களைப் போலப் பகைவரின் படையைக் கலங்கடிக்கத் தொடங்கினர். உண்மையில், மரங்களை அசைக்கும் வலிமைமிக்கச் சூறைக்காற்றைப் போல அவர்கள் உமது படையை நடுங்கச் செய்தனர்.(9)

{ஆனாலும்} எதிர்க்காற்றால் கலங்கலடிக்கப்படும் பெரும் கங்கையாற்றைப் போல, மீண்டும் அந்தப் பாண்டவப் படை அதிகமாகக் கலக்கமடைந்தது.(10) அந்த வலிமைமிமிக்கப் படையைக் கலங்கச் செய்தவர்களும், சிறப்புமிக்கவர்களுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் (மத்ரகர்கள) அனைவரும், “எங்கே அந்த மன்னன் யுதிஷ்டிரன்?(11) துணிச்சல்மிக்க அவனது சகோதரர்கள் ஏன் இங்குத் தென்படவில்லை? பெரும் சக்தி கொண்ட பாஞ்சாலர்களுக்கும், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டிக்கும் என்ன ஆயிற்று? திருஷ்டத்யும்னன், சிநியின் பேரன் {சாத்யகி}, பெரும் தேர்வீரர்களான திரௌபதியின் (ஐந்து) மகன்கள் ஆகியோர் எங்கே சென்றுவிட்டனர்?” என்று உரக்கக் கூச்சலிட்டனர்.(12) இதனால், வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரௌபதியின் மகன்கள், அந்த வார்த்தைகளைச் சொல்லி மூர்க்கமாகப் போரிட்டுக் கொண்டிருந்த மத்ர மன்னனின் தொண்டர்களைக் கொல்லத் தொடங்கினர்.(13) அந்தப் போரில் உமது துருப்புகளில் சிலர் தேர்ச்சக்கரங்களால் நசுக்கப்படுவதும், சிலர் உயர்ந்த கொடிமரங்களால் கொல்லப்படுவதும் அங்கே காணப்பட்டது.(14) எனினும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படையைச் சேர்ந்த துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், உமது மகனால் தடுக்கப்பட்டாலும் கூட, அந்த வீரப் பாண்டவர்களைக் கண்டதும், அவர்களை எதிர்த்து மேலும் விரைந்தனர்.(15)

மென்மையாகப் பேசிய துரியோதனன், அவ்வீரர்கள் எதிரியோடு போரிடுவதைத் தவிர்க்க முயன்றான். எனினும், பெரும் தேர்வீரர் எவரும் அவனது கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை.(16) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, காந்தார மன்னனின் மகனும், பேச்சுத்திறன் கொண்டவனுமான சகுனி, துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(17) “நம் கண்களுக்கு முன்பாக மத்ரகப் படை கொல்லப்படும்போது, நாம் எவ்வாறு நின்று கொண்டிருக்கலாம்? ஓ! பாரதா {துரியோதனா}, நீ இங்கிருக்கும்போது இது {இப்படி நடப்பது} நல்லதாகத் தெரியவில்லை.(18) ஒற்றுமையுடன் நான் அனைவரும் போரிட வேண்டும் என்பதே நமது திட்டம். ஓ! மன்னா {துரியோதனா}, பிறகு ஏன் நீ, நமது துருப்புகள் இவ்வாறு எதிரிகளால் கொல்லப்படும்போதும் பொறுத்துக் கொள்கிறாய்?” என்று கேட்டான்.(19)

துரியோதனன் {சகுனியிடம்}, “என்னால் முன்பே தடுக்கப்பட்டாலும், அவர் என் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. இந்த மனிதர்கள் ஒன்றாக இந்தப் பாண்டவப்படைக்குள் சென்று விட்டனர்” என்றான்.(20)

சகுனி, “போரில் சினத்தால் தூண்டப்படும் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், தங்கள் தலைவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை. அம்மனிதர்களிடம் நீ கோபப்படுவது உனக்குத் தகாது. அக்கறையின்மைக்கு இது சமயமில்லை.(21) எனவே, மத்ர மன்னனின் தொண்டர்களான அந்தப் பெரும் வில்லாளிகளைக் காப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து, நமது தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுடன் செல்வோம்.(22) ஓ! மன்னா {துரியோதனா}, பெருங்கவனத்துடம் நாம் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்வோம்” என்றான் {சகுனி}. சகுனியின் நடத்தையைக் குறித்துச் சிந்தித்த கௌரவர்கள் அனைவரும், மத்ரர்கள் இருந்த அந்த இடத்திற்குச் சென்றனர்.(23) இவ்வாறு (தன் தாய்மாமனால்) சொல்லப்பட்ட துரியோதனனும், சிங்க முழக்கங்கள் செய்து கொண்டும், அவ்வொலியால் பூமியை எதிரொலிக்கச் செய்தபடியும், ஒரு பெரும் படை சூழ எதிரியை எதிர்த்துச் சென்றான்.(24) “கொல்வாயாக, துளைப்பாயாக, பிடிப்பாயாக, தாக்குவாயாக, வெட்டுவாயாக” என்ற இவ்வொலிகளே அங்கே அந்தத் துருப்புகளுக்கு மத்தியில் கேட்கப்பட்டன.(25)

அதேவேளையில், அந்தப் போரில் மத்ர மன்னின் {சல்லியனின்} தொண்டர்கள் ஒன்றுசேர்ந்து தங்களைத் தாக்குவதைக் கண்ட பாண்டவர்கள், மத்யமம் என்றழைக்கப்பட்ட வியூகத்தில் தங்களை அணிவகுத்துக் கொண்டு அவர்களை எதிர்த்துச் சென்றனர்[1].(26) கையோடு கையாகச் சிறிது நேரம் போரிட்டவர்களும், மத்ரமன்னனின் தொண்டர்களுமான அந்த வீரப் போர்வீரர்கள், அழிவைச் சந்திப்பது அங்கே காணப்பட்டது.(27) பிறகு நாங்கள் முன்னேறிக் கொண்டிருந்த போது, ஒன்று சேர்ந்து வந்த பாண்டவர்கள், பெரும் சுறுசுறுப்புடன் மத்ரகர்களின் படுகொலையை நிறைவுசெய்து, மகிழ்ச்சியில் நிறைந்து இன்பக்கூச்சலிட்டனர்.(28) அப்போது சுற்றிலும் அங்கே தலையில்லாத வடிவங்கள் எழுவது காணப்பட்டது. சூரிய வட்டலில் இருந்து பெரும் எரிநட்சத்திரங்கள் விழுவதும் தென்பட்டது.(29) பூமியானது, தேர்கள், உடைந்த அச்சுகள், நுகத்தடிகள், கொல்லப்பட்ட போர்வீரர்கள், உயிரற்ற குதிரைகள் ஆகியவற்றால் மறைக்கப்பட்டது.(30)

காற்றின் வேகத்தைக் கொண்டவையும், (வழிநடத்த சாரதிகளில்லாமல்) தேர்களில் இன்னும் பூட்டப்பட்டிருந்தவையுமான குதிரைகள், ஓ! ஏகாதிபதி, போர்க்களத்தில் இங்கேயும் அங்கேயும் போர்வீரர்களை இழுத்துச் செல்வது காணப்பட்டது.(31) சில குதிரைகள் உடைந்த சக்கரங்களைக் கொண்ட தேர்களை இழுத்துச் சென்றன, சில உடைந்த தேர்களின் பகுதிகளைச் சுமந்து கொண்டே அனைத்துப் பக்கங்களிலும் ஓடின.(32) பூட்டாங்கயிறுகளால் தணிவடைந்த சில குதிரைகளும் ஆங்காங்கே தென்பட்டன புண்ணியங்கள் தீர்ந்து சொர்க்கத்தில் இருந்து விழும் சொர்க்கவாசிகளைப் போலத் தங்கள் தேர்களில் இருந்து தேர்வீரர்கள் கீழே விழும்வதும் காணப்பட்டன.(33) மத்ரமன்னனின் துணிச்சல்மிக்கத் தொண்டர்கள் கொல்லப்பட்ட போது, தாக்குவதில் பெருந்திறன் கொண்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான பார்த்தர்கள், தங்களை நோக்கி ஒரு குதிரைப்படை வருவதைக் கண்டு, வெற்றியடையும் விருப்பத்தால் அதை நோக்கி வேகமாக விரைந்தனர்.(34) தங்கள் கணைகளால் உரத்த விஸ் ஒலியை உண்டாக்கி, தங்கள் சங்கொலிகளுடன் கலந்து பல்வேறு வகை ஒலிகளையும் வெளியிட்டவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களும், தாக்குவதில் திறன்மிக்கவர்களுமான அவர்கள், தங்கள் விற்களை அசைத்துக் கொண்டு சிங்க முழக்கம் செய்தனர்.(35)

மத்ர மன்னனின் அந்தப் பெரும்படை அழிக்கப்பட்டதைக் கண்டும், அவர்களது வீர மன்னன் {சல்லியன்} போரில் கொல்லப்பட்டதைக் கண்டும் துரியோதனனின் மொத்த படையும் மீண்டும் களத்தில் இருந்து புறமுதுகிட்டது.(36) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உறுதிமிக்க வில்லாளிகளான பாண்டவர்களால் தாக்கப்பட்ட அந்தக் குரு படையானது, அச்சத்தால் தூண்டப்பட்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடியது” {என்றான் சஞ்சயன்}.(37)[2]

இருபத்தோராயிரம் பேரைக் கொன்ற பீமன்! – சல்லிய பர்வம் பகுதி – 19-புறமுதுகிட்ட கௌரவப் படை; பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டது; படையின் பின்புறத்தை அடைந்த துரியோதனன்; காலாட்படையினரில் இருபத்தோராயிரம் பேரைக் கொன்ற பீமன்; துரியோதனன் தன் வீரர்களிடம் பேசிய வீர உரை; மீண்டும் அணிதிரண்ட கௌரவப்படை..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்கத் தேர்வீரனும், வெல்லப்பட முடியாத வீரனுமான அந்தப் பெரும் மன்னன் {சல்லியன்} போரில் கொல்லப்பட்டதும், உமது துருப்புகளும், உமது மகன்கள் அனைவரும் போரில் இருந்து புறமுதுகிட்டு ஓடினர்.(1) உண்மையில், சிறப்புமிக்க யுதிஷ்டிரனால் அவ்வீரன் {சல்லியன்} கொல்லப்பட்டதும், உமது துருப்புகள், ஆழ்ந்த கடலில் மரக்கலம் உடைந்து, அதைக் கடக்க ஒரு படகில்லாத வணிகர்களைப் போல இருந்தன.(2) மத்ர மன்னன் {சல்லியன்} வீழ்ந்ததும், ஓ! ஏகாதிபதி, உமது துருப்பினர், ஒரு பாதுகாவலனை விரும்பும் தலைவனற்ற மனிதர்கள் போலவோ, சிங்கம் ஒன்றால் பீடிக்கப்படும், ஒரு மான்கூட்டத்தைப் போலவோ இருந்தனர்.(3) கொம்புகளை இழந்த காளைகளைப் போலவோ, தந்தங்கள் உடைந்த யானைகளைப் போலவோ இருந்த உமது துருப்பினர், அஜாதசத்ருவால் {யுதிஷ்டிரனால்}, வீழ்த்தப்பட்டு நடுப்பகல் வேளையில் தப்பி ஓடினர்.(4) சல்லியன் வீழ்ந்த பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்பினரில் ஒருவனும் படையைத் திரட்டுவதிலோ, தன் ஆற்றலை வெளிப்படுத்துவதிலோ தன் இதயத்தை நிலைநிறுத்தவில்லை.(5)

ஓ! மன்னா, பீஷ்மர், துரோணர், சூதன் மகன் {கர்ணன்} ஆகியோர் வீழ்ந்த போது இருந்த அச்சமும், துயரமும், ஓ! பாரதரே, ஓ! ஏகாதிபதி, மீண்டும் நமதானது.(6) வலிமைமிக்கத் தேர்வீரனான சல்லியனின் வீழ்ச்சியில் வெற்றியை இழந்த குரு படையானது, கொல்லப்படும் தன் வீரர்களுடன் குழப்பமடைந்து, கூரிய கணைகளால் வெட்டுப்பட்டு வீழத் தொடங்கியது. மத்ர மன்னனின் படுகொலையால், ஓ! ஏகாதிபதி, உமது போர்வீரர்கள் அனைவரும் அச்சத்தால் தப்பி ஓடினர்.(7) சிலர் குதிரைமுதுகிலும், சிலர் யானைகளிலும், சிலர் தேர்களிலும் எனப் பெரும் தேர்வீரர்களும், காலாட்படைவீரர்களும் அச்சத்தால் பெரும் வேகத்துடன் தப்பி ஓடினர்.(8) மலைகளைப் போலத் தெரிந்தவையும், தாக்குவதில் சாதித்தவையுமான இரண்டாயிரம் யானைகள், சல்லியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அங்குசங்களாலும், கட்டை விரல்களாலும் தூண்டப்பட்டுத் தப்பி ஓடின.(9) உண்மையில், ஓ! பாரதர்களின் தலைவரே, உமது படைவீரர்கள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர். கணைகளால் பீடிக்கப்பட்ட அவர்கள், மூச்சுவாங்க ஓடுவதும் காணப்பட்டது.(10)

வீழ்ந்தவர்களாக, பிளந்து ஓடுபவர்களாக மனத்தளர்ச்சியால் ஓடும் அவர்களைக் கண்டு, பாஞ்சாலர்களும், பாண்டவர்களும், வெற்றி அடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, வேகமாக அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(11) வீரப் போர்வீரர்கள் வெளிப்படுத்திய கணைகளின் விஸ் ஒலிகளும், பிற ஒலிகளும், உரத்த சிங்க முழக்கங்களும், சங்கு முழக்கங்களும் பேராற்றல்வாய்ந்ததவையாக இருந்தன.(12) அச்சத்தால் கலக்கமடைந்து ஓடும் கௌரவப்படையைக் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் ஒருவருக்கொருவர்,(13) “உண்மையில் உறுதியுள்ள மன்னன் யுதிஷ்டிரன் இன்று தன் எதிரிகளை வென்றான். துரியோதனன் இன்று தன் காந்தியையும், அரச செழுமையையும் இழந்தான்.(14) இன்று மனிதர்களின் மன்னனான திருதராஷ்டிரன், தன் மகன் கொல்லப்பட்டதைக் கேட்டு மலைப்படைந்து, பூமியில் புரண்டு, கடும் வேதனையை உணரட்டும்.(15)

குந்தியின் மகனே {அர்ஜுனனே} வில்லாளிகள் அனைவரிலும் பெரும் வலிமை மிக்கவன் என்பதை அவன் {திருதராஷ்டிரன்} இன்று அறியட்டும். பாவியும், தீய இதயம் கொண்டவனுமான அந்த மன்னன் இன்று தன்னைத் தானே கடிந்து கொள்ளட்டும்.(16) இன்று அவன் காலத்தையும், விதுரனின் நன்மையான வார்த்தைகளையும் நினைவுகூரட்டும். இந்த நாள் முதல் அவன் பார்த்தர்களின் அடிமையாகக் காத்திருக்கட்டும் {பணி செய்யட்டும்}. பாண்டு மகன்கள் அனுபவித்த துயரத்தை இன்று அந்த மன்னனும் அனுபவிக்கட்டும்.(17) கிருஷ்ணனின் பெருமையை இன்று அம்மன்னன் அறியட்டும். அவன் {திருதராஷ்டிரன்}, போரில் அர்ஜுனனுடைய வில்லின் பயங்கரமான நாணொலியையும், அவனது ஆயுதங்கள் அனைத்தின் பலத்தையும், போரில் அவனது கரங்களின் வலிமையையும் இன்று கேட்கட்டும்.(18) இந்திரனால் கொல்லப்பட்ட அசுரன் பலியைப் போலவே போரில் துரியோதனன் கொல்லப்படும்போது, உயர்ஆன்ம பீமனின் பயங்கர வலிமையை இன்று அவன் அறிந்து கொள்வான்.(19) துச்சாசனனைக் கொன்று பீமன் அடைந்த சாதனையை அடைய, வலிமையும், பலமும் கொண்ட பீமனைத் தவிர, இவ்வுலகில் வேறு எவனும் இல்லை.(20) தேவர்களாலேயே வீழ்த்தப்பட முடியாதவனான மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} படுகொலையைக் கேட்டு, பாண்டுவுடைய மூத்த மகனின் {யுதிஷ்டிரனின்} ஆற்றலை இன்று அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} அறிந்து கொள்வான்.(21) சுபலனின் வீரமகனும் {சகுனியும்}, காந்தாரர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகு, அவன் பாண்டுவின் மூலம் மாத்ரிக்குப் பிறந்த இரண்டு மகன்களின் பலத்தை அறிந்து கொள்வான்.(22)

தனஞ்சயன் {அர்ஜுனன்}, சாத்யகி, பீமசேனன், பிருஷதனின் மகனான திருஷ்டத்யும்னான், திரௌபதியின் ஐந்து மகன்கள், மாத்ரியின் இரண்டு மகன்கள், வலிமைமிக்க வில்லாளியான சிகண்டி, மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோரைத் தங்கள் போர்வீரர்களாகக் கொண்டவர்களால் ஏன் வெல்ல முடியாது?(23,24) அண்டத்தின் பாதுகாவலனும், ஜனார்த்தனன் என்றும் அழைக்கப்படுபவனுமான கிருஷ்ணனைத் தங்கள் பாதுகாவலனாகக் கொண்டவர்களால் ஏன் வெல்ல முடியாது? அறத்தையே தங்கள் புகலிடமாகக் கொண்டோரால் ஏன் வெல்ல முடியாது?(25) அறம் மற்றும் புகழின் புகலிடமான ரிஷிகேசனை {கிருஷ்ணனைத்} தன் பாதுகாவலனாகக் கொண்டவனும், பிருதையின் மகனுமான யுதிஷ்டிரனைத் தவிர, பீஷ்மர், துரோணர், கர்ணன், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} மற்றும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பிற மன்னர்களையும் வெல்ல வேறு எவன் தகுந்தவன்?” என்று {பாண்டவ வீரர்களும், பாஞ்சால வீரர்களும் ஒருவருக்கொருவர்} பேசிக் கொண்டனர்.(26,27) இவ்வார்த்தைகளைச் சொல்லி இன்பத்தில் நிறைந்த சிருஞ்சயர்கள், அந்தப் போரில் கணைகளால் அதிகமாகச் சிதைக்கப்பட்டிருந்த உமது துருப்புகளைப் பின்தொடர்ந்து சென்றனர்.(28)

அப்போது பெரும் வீரம் கொண்ட தனஞ்சயன் பகைவரின் தேர்ப்படையை எதிர்த்துச் சென்றான். மாத்ரியின் இரு மகன்களும், வலிமைமிக்கப் போர்வீரனான சாத்யகியும் சகுனியை எதிர்த்துச் சென்றனர்.(29) பீமசேனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக வேகமாகத் தப்பி ஓடும் அவர்கள் அனைவரையும் கண்ட துரியோதனன், சிரித்துக் கொண்டே தன் சாரதியிடம்,(30) “பார்த்தன் {அர்ஜுனன்} தன் வில்லோடு அங்கு நின்று கொண்டு, என்னை மீறுகிறான். என் குதிரைகளை மொத்த படையின் பின்புறத்திற்குக் கொண்டு செல்வாயாக.(31) கரைகளை மீற முடியாத பெருங்கடலைப் போலவே, குந்தியின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, பின்புறத்தில் நான் நிலைகொண்டால் என்னை மீறிச் செல்ல ஒருபோதும் துணியமாட்டான்.(32) ஓ! சாரதியே, பாண்டவர்களால் பின்தொடரப்படும் இந்தப் பரந்த படையைப் பார். துருப்புகள் நகர்வதன் விளைவால் அனைத்துப் பக்கங்களிலும் எழும் இந்தப் புழுதி மேகத்தைப் பார்.(33) பயங்கரமானவையும், பேரொலியுடன் கூடியவையுமான அந்தச் சிங்க முழக்கங்களைக் கேள். எனவே, ஓ சாரதியே, மெதுவாகச் சென்று பின்புறத்தில் நிலையெடுப்பாயாக.(34) போரில் நின்று பாண்டவர்களுடன் நான் போரிட்டால், ஓ! சாரதியே, என்படை மீண்டும் திரண்டு வந்து வீரத்துடன் போரிடும்” என்றான்.(35)

மதிப்புக்குரிய வீரன் ஒருவனுக்குத் தகுந்த உமது மகனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சாரதி, தங்க இழைகளுடன் கூடிய அந்தக் குதிரைகளை மெல்லத் தூண்டினான்.(36) யானைகள், குதிரைகள் ஆகியவற்றையும், தேர்வீரர்களையும் இழந்தவர்களும், தங்கள் உயிரையே விட ஆயத்தமாக இருந்தவர்களுமான இருபத்தோராயிரம் {21,000} காலாட்படை வீரர்கள் இன்னும் போரிட நின்று கொண்டிருந்தனர்.(37) பல்வேறு நாடுகளில் பிறந்தவர்களும், பல்வேறு நகரங்களில் இருந்து வந்தவர்களுமான அந்தப் போர்வீரர்கள், பெரும்புகழை வெல்ல விரும்பி களத்தில் நின்று கொண்டிருந்தனர்.(38) மகிழ்ச்சியால் நிறைந்து விரைந்து செல்லும் அந்தப் போர்வீரர்களுக்கிடையிலான மோதல் பேரொலியுடன் கூடியதாகவும், மிகவும் பயங்கரமானதாகவும் இருந்தது.(39) அப்போது, ஓ! மன்னா, பீமசேனனும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனும், நால்வகைப் படைகளுடன் அவர்களைத் தடுத்தனர்.(40)

சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பிய சில காலாட்படைவீரர்கள், உரத்த கூச்சலிட்டபடியும், தங்கள் கக்கங்களை அறைந்தபடியும், பீமனை எதிர்த்துச் சென்றனர்.(41) போரில் வெல்லப்பட முடியாதவர்களான அந்தத் தார்தராஷ்டிரப் போராளிகள், சினத்தால் நிறைந்து, பீமசேனனை அடைந்து சீற்றத்துடன் கூச்சலிட்டனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. அந்தப் போரில் பீமனைச் சூழ்ந்த கொண்ட அவர்கள் அனைத்துப் பக்கங்களிலும் அவனைத் தாக்கத் தொடங்கினர்.(42) பெரும் எண்ணிக்கையிலான அந்தக் காலாட்படை வீரர்களால் சூழப்பட்டு, அந்தப் போரில் அவர்களால் தாக்கப்பட்ட பீமன், மைநாக மலையைப் போலத் தான் நின்ற இடத்திலேயே அசையாமால் நின்றிருந்தான்.(43) அதேவேளையில், ஓ! ஏகாதிபதி, அவனைத் தாக்கியவர்கள், சினத்தால் நிறைந்து, பாண்டவர்களின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரனைப் பீடிக்க முயற்சி செய்தபடியே, (அவனை {பீமனைக்} காக்க முயன்ற) பிற போராளிகளையும் தடுத்தனர்.(44) அவ்வீரர்களுடன் மோதிய பீமன் சினத்தால் நிறைந்தவனானான். வேகமாகத் தன் தேரைவிட்டு இறங்கி அவன், காலாளாக அவர்களை எதிர்த்துச் சென்றான்.(45)

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தனது பெரும் கதாயுதத்தை எடுத்துக் கொண்ட பீமன், தண்டத்துடன் கூடிய யமனைப் போலவே உமது துருப்பினரைக் கொல்லத் தொடங்கினான்.(46) வலிமைமிக்கவனான பீமன், தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளற்றவர்களாக இருந்த அந்த இருபத்தோராயிரம் {21000} காலாட்படைவீரர்களையும் தன் கதாயுதத்தால் நொறுக்கினான்.(47) பலமான அந்தப் படைப்பிரிவினரைக் கொன்றவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், தன் முன்னிலையில் திருஷ்டத்யும்னனுடன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(48) இவ்வாறு கொல்லப்பட்ட அந்தத் தார்தராஷ்டிரக் காலாட்படை வீரர்கள், மலர்க்கொத்துகளுடன் கூடிய கர்ணிகாரங்கள் சூறாவளியால் வீழ்த்தப்பட்டதைப் போலக் குருதியில் குளித்துத் தரையில் கிடந்தனர்.(49) பல்வேறு வகை மலர்களால் அமைக்கப்பட்ட மாலையால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பல்வேறு வகைக் காது குண்டலங்களை அணிந்தவர்களும், பல்வேறு குலங்களைச் சார்ந்தவர்களும், பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்து வந்தவர்களுமான அந்தப் போராளிகள் உயிரையிழந்து களத்தில் கிடந்தனர்.(50)

கொடிகள் மற்றும் கொடிமரங்களால் மறைக்கப்பட்ட அந்தப் பெரும் காலாட்படையானது, இவ்வாறு வெட்டப்பட்டுக் களத்தில் கிடக்கும்போது, கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும், அச்சத்தை ஏற்படுத்துவதுமாகக் காணப்பட்டது.(51) யுதிஷ்டிரனின் தலைமையில் தங்கள் தொண்டர்களுடன் போரிட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும், உமது சிறப்புமிக்க மகன் துரியோதனனை {எதிர்த்து அவனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(52) அந்தப் பெரும் வில்லாளிகள், உமது துருப்பினர் போரில் இருந்து புறமுதுகிடுவதைக் கண்டு, துரியோதனனை எதிர்த்துச் சென்று, கரைகளைக் கடக்க முடியாத பெருங்கடலைப் போலவே அவனைக் கடக்க முடியாதவர்களானார்கள்.(53) ஒன்று சேர்ந்திருந்த பார்த்தர்களால், தனியொருவனான அவனை மீற முடியாதபோது, உமது மகனிடம் நாங்கள் கண்ட ஆற்றல் மிக அற்புதமானதாக இருந்தது.(54)

அப்போது, அதிகத் தூரம் தப்பி ஓடாதவர்களும், கணைகளால் சிதைக்கப்பட்டிருந்தவர்களும், தப்பி ஓடுவதையே தங்கள் இதயங்களில் நிலைநிறுத்தியிருந்தவர்களுமான தன் படையினரிடம் பேசிய துரியோதனன் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(55) “நீங்கள் ஓடினால், பாண்டவர்களால் உங்களைப் பின் தொடர முடியாது, அல்லது கொல்ல முடியாது என்று சொல்லும் அளவுக்கு, சமவெளியிலோ, மலையிலோ எந்த இடத்தையும் நான் காணவில்லை. பிறகு ஓடுவதால் என்ன பயன்?(56) பாண்டவர்களின் படையானது எண்ணிக்கையில் குறைக்கப்பட்டிருக்கிறது. இரு கிருஷ்ணர்களும் அதிகமாகச் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் நிலைத்து நின்றால், நிச்சயம் வெற்றி நமதாகும்.(57) முறையனைத்தையும் இழந்து நீங்கள் ஓடுவீர்கள் என்றால், பாவிகளான பாண்டவர்கள் பின்தொடர்ந்து வந்து உங்கள் அனைவரையும் கொள்வார்கள். மறுபுறம் நாம் நிலைத்து நின்றால், நமக்கு நல்ல விளைவு ஏற்படும்.(58) இங்கே தாக்கப்பட்டிருக்கும் க்ஷத்திரியர்கள் அனைவரும் கேட்பீராக. வீரர்களையும், கோழைகளையும் யமன் கொல்வான் எனும்போது, க்ஷத்திரியன் என்று தன்னை அழைத்துக் கொண்டு எந்த மனிதன் போரிடாத மூடனாக இருப்பான்?(59) கோபக்கார பீமசேனனின் முன்னிலையில் நாம் நின்றால், நல்ல விளைவு நமக்கு ஏற்படும். க்ஷத்திரிய நடைமுறையின்படி போராடிக் கொண்டிருக்கும்போது போரில் மரணமேற்பட்டால் அது மகிழ்ச்சி நிறைந்ததே.(60) வெற்றியடைவதால் ஒருவன் இங்கே மகிழ்ச்சியை அடைகிறான். கொல்லப்பட்டாலோ, அவன் அடுத்த உலகில் பெரும் கனிகளை {பலன்களை} அடைகிறான். கௌரவர்களே, போர் அளிப்பதை விடச் சொர்க்கத்திற்கான சிறந்த பாதை வேறு எதுவும் கிடையாது. போரில் கொல்லப்படும் நீங்கள் எத்தாமதமும் இன்றி அருள் உலகங்கள் அனைத்தையும் அடைவீர்கள்” என்றான் {துரியோதனன்}.(61)

அவனது இவ்வார்த்தைகளைக் கேட்டு அவனை உயர்வாக மெச்சிய (குரு) மன்னர்கள் மீண்டும் பாண்டவர்களை எதிர்த்துப் போரிட விரைந்தனர்.(62) வேகமாக முன்னேறிவரும் அவர்களைக் கண்டவர்களும், போருக்காக அணிவகுத்திருந்தவர்களும், தாக்குவதில் திறம்படைத்தவர்களுமான பார்த்தர்கள், சினத்தால் நிறைந்து, வெற்றியடையும் விருப்பத்தால் அவர்களை எதிர்த்து விரைந்தனர்.(63) வீரமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, மூவுலகங்களிலும் கொண்டாடப்படும் தன் வில்லான காண்டீவத்தை வளைத்து, தன் தேரில் எதிரியை எதிர்த்துச் சென்றான்.(64) மாத்ரியின் இரு மகன்கள், சாத்யகி ஆகியோர் சகுனியை எதிர்த்து விரைந்தனர். பிற (பாண்டவ) வீரர்கள், சிரித்துக் கொண்டு, உமது படைகளை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(65)

எதிரிகளைக் கலங்கடித்த மிலேச்சன் சால்வன்! – சல்லிய பர்வம் பகுதி – 20-பாண்டவப் படையை எதிர்த்து வந்த மிலேச்சன் சால்வன்; படையைக் கலங்கடித்த சால்வனின் பெரும் யானை; பாண்டவப் படையைப் பிளந்த சால்வன்; சால்வனை எதிர்த்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனின் தேரை நொறுக்கிய யானை; யானையைக் கொண்ட திருஷ்டத்யும்னன்; சால்வனைக் கொன்ற சாத்யகி…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “(குரு) படை மீண்டும் அணிதிரண்டபிறகு, மிலேச்சர்களின் ஆட்சியாளனான சால்வன், சினத்தால் நிறைந்து, அங்கங்களில் மதநீர் சொரிந்ததும், மலையைப் போலத் தெரிந்ததும், செருக்கு நிறைந்ததும், {இந்திரனின் யானையான} ஐராவதனுக்கு ஒப்பானதும், பகைவரின் பெருங்கூட்டத்தை நொறுக்கவல்லதுமான ஒரு பெரிய யானையைச் செலுத்திக் கொண்டு, பாண்டவர்களின் பெரும்படையை எதிர்த்து விரைந்தான்.(2) அந்தச் சால்வனின் விலங்கானது {யானையானது} உன்னதமான உயர்ந்த குலத்தில் {பத்ர குலத்தில்} பிறந்ததாகும். அஃது எப்போதும் திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} வழிபடப்பட்டதாகும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அது யானை பழக்குவதை நன்கறிந்தோரால் சரியாக ஆயத்தம் செய்யப்பட்டு, போருக்காகச் சரியாகப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அந்த யானையைச் செலுத்தி வந்த அந்த மன்னர்களில் முதன்மையானவன் {சால்வன்} கோடையின் நெருக்கத்தில் உள்ள காலை சூரியனைப் போலத் தெரிந்தான்.(3) அந்த முதன்மையான யானையில் ஏறிய அவன் {சால்வன்}, ஓ! ஏகாதிபதி, பாண்டவர்களை எதிர்த்துச் சென்று, சக்தியில் இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பானவையும், பயங்கரமானவையுமான கூரிய கணைகளால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவர்களைத் துளைத்தான்.(4) அந்தப்போரில் அவன் {சால்வன்} தன் கணைகளை ஏவி, பகைவீரர்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பியபோது, ஓ மன்னா, பழங்காலத்தில் வஜ்ரதாரியான வாசவன் {இந்திரன்}, தைத்தியர்களின் படைகளை நொறுக்குகையில் ஏற்பட்ட தைத்தியர்களின் நிலையைப் போலக் கௌரவர்களாலோ, பாண்டவர்களாலோ அவனிடம் எந்தக் குறையையும் {கவனக்குறைவையும்} காணமுடியவில்லை.(5)

பாண்டவர்கள், சோமகர்கள் மற்றும் சிருஞ்சயர்கள், ஆயிரம் யானைகளைப் போலத் தங்களைச் சுற்றித் திரிந்து கொண்டிருந்த அந்த யானையை, பழங்காலப் போரில் இந்திரனின் யானையைத் தேவர்களின் எதிரிகள் கண்டதைப் போலக் கண்டார்கள்.(6) (அந்த விலங்கால்) கலங்கடிக்கப்பட்டிருந்த பகைவரின் படை அனைத்துப் பக்கங்களிலும் உயிரை இழந்ததைப் போலத் தெரிந்தது. போரில் நிற்க இயலாமல், ஒருவரையொருவர் மிதித்து நசுக்கிக் கொண்டே பேரச்சத்துடன் தப்பி ஓடினார்கள்.(7) மன்னன் சால்வனால் பிளக்கப்பட்ட பாண்டவர்களின் அந்தப் பெரும் படையானது, அந்த யானையின் மூர்க்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திடீரென அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடியது.(8) பாண்டவப்படை பிளந்து வேகமாகத் தப்பி ஓடுவதைக் கண்ட உமது படையின் முதன்மையான தேர்வீரர்கள் அனைவரும் மன்னன் சால்வனை வழிபட்டு, சந்திரனைப் போல வெண்மையான தங்கள் சங்குகளை முழக்கினர்.(9) சங்குகளை முழக்கிக் கொண்டு கௌரவர்கள் மகிழ்ச்சியால் கூச்சலிடுவதைக் கேட்டவனும், பாண்டவ மற்றும் சிருஞ்சயப் படைகளின் தலைவனுமான பாஞ்சால இளவரசனால் (திருஷ்டத்யும்னனால்) அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(10)

அப்போது சிறப்புமிக்கத் திருஷ்டத்யும்னன், இந்திரனோடு கூடிய மோதலில் அசுரன் ஜம்பன், இந்திரன் செலுத்தி வந்த யானைகளின் இளவரசனான ஐராவதனை எதிர்த்துச் சென்றதைப் போல அந்த யானையை வெல்வதற்காகச் சென்றான்.(11) பாஞ்சாலர்களின் ஆட்சியாளன் தன்னை எதிர்த்து மூர்க்கமாக விரைந்து வருவதைக் கண்டவனும், மன்னர்களில் சிங்கமுமான சால்வன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருபதன் மகனை {திருஷ்டத்யும்னனை} அழிப்பதற்காகத் தன் யானையை விரைவாகத் தூண்டினான்.(12) பின்னவன் {திருஷ்டத்யும்னன்}, குப்புற வீழ்வதுபோலத் தன்னை அணுகி வந்த அந்த விலங்கை, கொல்லன் கையால் பளபளக்காப்பட்டவையும், சுடர்மிக்கவையும், கடுஞ்சக்தி கொண்டவையும், நெருப்பின் காந்திக்கும் ஒப்பானவையுமான முதன்மையான மூன்று கணைகளால் துளைத்தான்.(13) பிறகு அந்தச் சிறப்புமிக்க வீரன், கூராக்கப்பட்ட முதன்மையான ஐந்து கணைகளால் அவ்விலங்கின் மத்தகத்தைத் தாக்கினான். அவற்றால் துளைக்கப்பட்ட அந்த யானைகளின் இளவரசன், போரில் இருந்து புறமுதுகிட்டு பெரும் வேகத்தோடு ஓடியது.(14) எனினும் சால்வன், அதீதமாகச் சிதைக்கப்பட்டிருந்ததும், பின்வாங்கச்செய்யப்பட்டுதுமான அந்த முதன்மையான யானையைத் திடீரெனத் தடுத்துத் திரும்பச் செய்து, அந்த மதங்கொண்ட விலங்குக்குப் பாஞ்சால மன்னனின் {திருஷ்டத்யும்னனின்} தேரைக் காட்டி, அங்குசங்கள் மற்றும் கூரிய வேல்களால் அத்தேரை எதிர்த்துச் செல்லத் தூண்டினான்.(15)

அவ்விலங்கு தன்னை நோக்கி மூர்க்கமாக விரைவதைக் கண்ட வீரத் திருஷ்டத்யும்னன், ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, அச்சத்தால் அங்கங்கள் திகைத்துப் போய், தன் தேரில் இருந்து கீழே பூமியில் குதித்தான்.(16) அதே வேளையில் அந்தப் பெரும் யானையானது, குதிரைகள் மற்றும் சாரதியுடன் கூடியதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தத் தேரைத் திடீரெனத் தன் துதிக்கையால் தூக்கி பூமியில் அடித்து நொறுக்கியது. பாஞ்சால மன்னனின் சாரதி, அந்த யானையால் இவ்வாறு நசுக்கப்பட்டதைக் கண்ட பீமன், சிகண்டி மற்றும் சிநியின் பேரன் {சாத்யகி} ஆகியோர் அவ்விலங்கை எதிர்த்துப் பெரும் வேகத்தோடு விரைந்தனர்.(18) மூர்க்கமாக முன்னேறிவரும் அவ்விலங்கைத் தங்கள் கணைகளால் வேகமாகத் தடுத்தனர். அந்தத் தேர்வீரர்களால் இவ்வாறு எதிர்க்கப்பட்டு, போரில் அவர்களால் தடுக்கப்பட்ட அந்த யானையானது நடுங்கத் தொடங்கியது.(19) அதே வேளையில், மன்னன் சால்வன், அனைத்துப் பக்கங்களிலும் கதிர்களைப் பொழியும் சூரியனைப் போலத் தன் கணைகளை ஏவத் தொடங்கினான். அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட (பாண்டவத்) தேர்வீரர்கள் தப்பி ஓடத் தொடங்கினர்.(20)

சால்வனின் அந்த அருஞ்செயலைக் கண்ட பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் மத்ஸ்யர்கள் ஆகியோர், ஓ! மன்னா, அந்தப் போரில் ஓ! என்றும், ஐயோ! என்றும் உரக்கக் கூச்சலிட்டனர்.(21) அப்போது, அந்தத் துணிச்சல்மிக்கவனான பாஞ்சால மன்னன் {திருஷ்டத்யும்னன்}, உயர்ந்த மலைச்சிகரத்திற்கு ஒப்பான தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அங்கே தோன்றினான். ஓ! மன்னா, எதிரிகளைத் தாக்குபவனான அந்த வீரன், அச்சமில்லாமல் அந்த யானையை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(22) பெரும் சுறுசுசுறுப்புடன் கூடிய அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, மலையைப் போலப் பெரியதாக இருந்ததும், மழைபொழியும் மேகங்களைப் போல மதநீரைப் பெருக்கியதுமான அந்த யானையைத் தன் கதாயுதத்தால் தாக்கத் தொடங்கினான்.(23) மலையைப் போன்ற அந்தப் பெரும் விலங்கானது, திடீரென மத்தகம் பிளக்கப்பட்டு, உரக்கப் பிளிறிக் கொண்டே பெரும் அளவிலான குருதியைக் கக்கி, நிலநடுக்கத்தின் போது கீழே விழும் மலையைப் போலத் திடீரெனக் கீழே விழுந்தது.(24) அந்த யானைகளின் இளவரசன் விழுந்த காட்சியைக் கண்டு உமது மகனின் துருப்புகள் ஓலமிட்டபோது, சிநிகுலத்தப் போர்வீரர்களில் முதன்மையானவன் {சாத்யகி}, ஒரு கூரிய அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்}, மன்னன் சால்வனின் தலையை அறுத்தான்.(25) சாத்வத வீரனால் {சாத்யகியால்} அந்தச் சால்வனின் தலை வெட்டப்பட்டப்பட்டதும், தேவர்களின் தலைவன் வீசிய வஜ்ரத்தால் திடீரெனப் பிளக்கப்பட்ட ஒரு மலைச்சிகரத்தைப் போல அவன், யானைகளின் இளவரசனான தன் யானையுடன் சேர்ந்து கீழே பூமியில் விழுந்தான்” {என்றான் சஞ்சயன்}.(26)

கிருதவர்மனை வென்ற சாத்யகி! – சல்லிய பர்வம் பகுதி – 21-கிருதவர்மன் போரிடுவதைக் கண்டு திரும்பி வந்த கௌரவர்கள்; கிருதவர்மனை எதிர்த்த சாத்யகி; கிருதவர்மனைத் தேரற்றவனாகச் செய்த சாத்யகி; கிருதவர்மனைக் காத்த கிருபர்; தனியொருவனாக நின்று பாண்டவப் படையை எதிர்த்த துரியோதனன்; மற்றொரு தேரில் ஏறி மீண்டும் வந்த கிருதவர்மன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சபைகளின் ரத்தினமான சால்வன்[1] கொல்லப்பட்ட பிறகு, சூறாவளியில் முறிந்த விழுந்த பெரும் மரம் போல உமது படை வேகமாகப் பிளந்தது.(1) படை பிளவுறுவதைக் கண்டவனும், வீரமும், பெரும்பலமும் கொண்டவனும், வலிமைமிக்கத்தேர்வீரனுமான கிருதவர்மன், அந்தப் போரில் பகைவரின் படையைத் தடுத்தான்.(2) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தப்பி ஓடியவர்களான குருவீரர்கள், அந்தச் சாத்வத வீரன் {கிருதவர்மன்}, (எதிரியின்) கணைகளால் துளைக்கப்பட்டாலும் அந்தப் போரில் மலையென நிற்பதைக் கண்டு, மீண்டும் அணிதிரண்டு திரும்பி வந்தனர்.(3) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களுக்கும், தப்பி ஓடி, மரணத்தையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு மீண்டும் திரும்பி வந்தவர்களான குரு வீரர்களுக்கு இடையில் போர் நடந்தது.(4) அந்தச் சாத்வத வீரனுக்கும் {கிருதவர்மனுக்கும்}, அவனது எதிரிகளுக்கும் இடையில் நேர்ந்த கடும் மோதலானது, வெல்லப்பட முடியாத பாண்டவப் படையைத் தனியொருவனாக அவன் {கிருதவர்மன்} தடுத்ததால் அற்புதமானதாக இருந்தது.(5)

நண்பர்கள் மிகக்கடுமையான சாதனைகளைச் செய்வதைக் கண்ட அவர்களது நண்பர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, சொர்க்கத்தையே எட்டுமளவுக்கு உரத்த சிங்க முழக்கங்களைச் செய்தனர்.(6) ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த ஒலிகளைக் கேட்ட பாஞ்சாலர்கள் அச்சமடைந்தனர். அப்போது சிநியின் பேரனான சாத்யகி அவ்விடத்திற்கு வந்தான்.(7) பெரும் பலம் கொண்டவனான மன்னன் க்ஷேமகீர்த்தியை {க்ஷேகதூர்த்தியை} அணுகிய சாத்யகி, ஏழு கூரிய கணைக்களால் அவனை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான்.(8) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட தேர்வீரனான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, கூரிய கணைகளை ஏவியபடியே வந்தபோது, பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} அவனை {சாத்யகியை} எதிர்த்து வேகமாக விரைந்தான்.(9) தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், முதன்மையான ஆயுதங்களைத் தரித்து வந்தவர்களுமான அவ்விரு வில்லாளிகளும், சிங்கங்களைப் போல முழங்கி, பெரும்பலத்துடன் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(10)

பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் மற்றும் பிற போர்வீரர்களும், அவ்விரு வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட பயங்கரமான மோதலின் பார்வையாளர்களானார்கள்.(11) விருஷ்ணி மற்றும் அந்தகக் குலத்தைச் சேர்ந்த அவ்விரு வீரர்களும், மகிழ்ச்சியால் நிறைந்த இரு யானைகளைப் போல, நீண்ட கணைகளாலும் {நாராசங்களாலும்}, கன்றின் பல் போன்ற தலைகளைக் கொண்ட கணைகளாலும் {வத்சதந்தங்களாலும்} ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(12) பல்வேறு வகையான தடங்களில் திரிந்தவர்களான ஹிருதிகன் மகனும் {கிருதவர்மனும்}, அந்தச் சிநிகுலத்துக் காளையும் {சாத்யகியும்}, விரைவில் கணைமாரிகளால் ஒருவரையொருவர் மறைத்தனர்.(13) அந்த இரு விருஷ்ணி சிங்கங்களின் விற்களில் இருந்து பெரும் பலத்துடன் ஏவப்பட்ட கணைகள், வேகமாகச் செல்லும் பூச்சிகளுக்கு ஒப்பாக ஆகாயத்தில் பறப்பது காணப்பட்டது.(14) அப்போது ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, உண்மையான ஆற்றலைக் கொண்டவனான சாத்யகியை அணுகி, அவனது நான்கு குதிரைகளையும் நான் கூரிய கணைகளால் துளைத்தான்.(15)

நீண்ட கரங்களைக் கொண்ட சாத்யகி, வேலால் தாக்கப்பட்ட ஒரு யானையைப் போல இதனால் சினம் தூண்டப்பட்டு, எட்டு முதன்மையான கணைகளால் கிருதவர்மனைத் துளைத்தான்.(16) பிறகு கிருதவர்மன், முழுமையாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான மூன்று கணைகளால் சாத்யகியைத் துளைத்து, மற்றொரு கணையால் அவனது வில்லையும் அறுத்தான்.(17) முறிந்த தன் வில்லை ஒருபுறம் கிடத்திய அந்தச் சிநி குலத்துக் காளை {சாத்யகி}, கணைபொருத்தப்பட்ட மற்றொன்றை {மற்றொரு வில்லை} வேகமாக எடுத்துக் கொண்டான்.(18) முதன்மையான அந்த வில்லை எடுத்து, அதற்கு நாண்பொருத்தியவனும், பெரும் நுண்ணறிவும், பெரும் பலமும் கொண்டவனும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமையும் சக்தியும் கொண்டவனுமான அந்த அதிரதன் {சாத்யகி}, கிருதவர்மனால் தன் வில் வெட்டப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், சீற்றத்தால் நிறைந்து, பின்னவனை {கிருதவர்மனை} எதிர்த்து வேகமாக விரைந்தான்.(19,20)

அப்போது அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, பத்து கூரிய கணைகளால், கிருதவர்மனின் சாரதி, குதிரைகள் மற்றும் கொடிமரத்தைத் தாக்கினான்.(21) இதன் காரணமாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வில்லாளியும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கிருதவர்மன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தேர் சாரதியற்றதாக, குதிரைகளற்றதாகச் செய்யப்பட்டதைக் கண்டு(22) சினத்தால் நிறைந்தான். கூர்முனை கொண்ட ஒரு வேலை உயர்த்திய அவன் {கிருதவர்மன்}, அந்தச் சிநிகுலத்துக் காளையைக் கொல்லும் விருப்பத்தால் தன் கரவலிமை முழுவதையும் பயன்படுத்தி அஃதை அவன் {சாத்யகி} மீது வீசினான்.(23) எனினும், அந்தச் சாத்வத குலத்தின் சாத்யகி, பல கூரிய கணைகளால் அந்த வேலைத் தாக்கி பல துண்டுகளாக வெட்டி வீழ்த்தி, மதுகுலத்துக் கிருதவர்மனை (தன் சுறுசுறுப்பாலும், ஆற்றலாலும்) திகைப்படையச் செய்தான். மற்றுமோர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்} அவன் கிருதவர்மனின் மார்பைத் துளைத்தான்.(24) அந்தப் போரில் ஆயுதங்களில் திறன் கொண்ட யுயுதானனால் {சாத்யகியால்}, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாகச் செய்யப்பட்ட கிருதவர்மன் கீழே பூமியில் இறங்கினான்.(25)

அந்த வீரக் கிருதவர்மன், அந்தத் தனிப்போரில் சாத்யகியால் தன் தேரை இழந்ததால், (கௌரவர்களின்) துருப்புகள் அனைத்தும் பேரச்சத்தால் நிறைந்தன.(26) கிருதவர்மன் இவ்வாறு குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாக, தேரற்றவனாகச் செய்யப்பட்ட போது உமது மகன்களின் இதயங்கள் பெரும் சோகத்தால் பீடிக்கப்பட்டன.(27) எதிரிகளைத் தண்டிப்பவனான அவன் குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாகச் செய்யப்பட்டதைக் கண்ட கிருபர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சிநி குலத்துக் காளையை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்ப விரும்பி அவனை நோக்கி விரைந்தார்.(28) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருபர், வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கிருதவர்மனைத் தமது தேரில் ஏற்றிக் கொண்டு, போரின் நெருக்கத்தில் இருந்து அவனை வெளியே கொண்டு சென்றார்.(29) கிருதவர்மன் தேரற்றவனாகச் செய்யப்பட்ட பிறகு, சிநியின் பேரன் {சாத்யகி} அக்களத்தில் பலம் நிறைந்தவனாக ஆனதும், துரியோதனனின் மொத்த படையும் போரில் இருந்து புறமுதுகிட்டது.(30)

எனினும், (குரு) படையானது புழுதி மேகத்தால் மறைக்கப்பட்டிருந்ததால், எதிரியால் அதைப் பார்க்க முடியவில்லை. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} மன்னன் துரியோதனனைத் தவிர உமது போர்வீரர்களான மற்றவர்கள் அனைவரும் தப்பி ஓடினர்.(31) தன் படை முறியடிக்கப்பட்டதை அருகில் இருந்து கண்ட அவன், வேகமாக விரைந்து, வெற்றியடைந்த எதிரியைத் தாக்கி, தனியொருவனாக அவர்கள் அனைவரையும் தடுத்தான்.(32) அந்த வெல்லப்பட முடியாத வீரன் {துரியோதனன்}, சினத்தால் நிறைந்து, பாண்டுக்கள், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னன், சிகண்டி, திரௌபதியின் மகன்கள் ஆகியோர் அனைவரும் மற்றும் பாஞ்சாலர்கள், கைகேயர்கள், சோமகர்கள் ஆகியோரின் பெருங்கூட்டத்தையும் கூரிய கணைகளால் அச்சமில்லாமல் தாக்கினான்.(33,34) மந்திரங்களால் தூய்மையாக்கப்பட்ட வேள்வி மேடையில் எரியும் சுடர்மிக்கப் பெரும் நெருப்பைப் போல, வலிமைமிக்கவனான உமது மகன் {துரியோதனன்}, உறுதியான தீர்மானத்துடன் களத்தில் நின்று கொண்டிருந்தான். இவ்வாறே மன்னன் துரியோதனன் அந்தப் போரில் களமெங்கும் திரிந்து கொண்டிருந்தான்.(35) அப்போது, அந்தகனை அணுகமுடியாத உயிரினங்களைப் போலவே, அவனது எதிரிகளால் அவனை {துரியோதனனை} நெருங்க முடியவில்லை. பிறகு, ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, மற்றொரு தேரைச் செலுத்திக் கொண்டு அங்கே வந்தான்” {என்றான் சஞ்சயன்}.(36)

யுதிஷ்டிரனைத் தேரற்றவனாகச் செய்த சகுனி! – சல்லிய பர்வம் பகுதி – 22-துரியோதனனின் அருஞ்செயல்; பாண்டவப்பட்டையைத் தனியொருவனாக எதிர்கொண்ட துரியோதனன்; தப்பி ஓடிய போர்வீரர்கள் துரியோதனன் போரிடுவதைக் கண்டு மீண்டும் வந்தது; அஸ்வத்தாமன் பீமனோடும், சகுனி யுதிஷ்டிரனோடும் போரிட்டது; யுதிஷ்டிரனைத் தேரற்றவனாகச் செய்த சகுனி; மற்றொரு தேரில் ஏறிவந்த யுதிஷ்டிரன்; உலூகன் நகுலனோடும், துரியோதனன் திருஷ்டத்யும்னனோடும், கிருபர் திரௌபதியின் மகன்களோடும் போரிட்டது; களமெங்கும் அடர்த்தியாக எழுந்த புழுதி மேகம், போர்வீரர்களின் குருதியால் நனைந்து தணிவையடைந்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தேர்வீரர்களில் முதன்மையானவனான உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் தேரைச் செலுத்திக் கொண்டு, மனத்தளர்ச்சியால் ஏற்பட்ட துணிவால் நிறைந்து, பெரும் வீரத்தோடு கூடிய ருத்திரனைப் போல அந்தப் போரில் தெரிந்தான்.(1) அவனால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளால் பூமி முற்றிலும் மறைக்கப்பட்டது. உண்மையில் அவன் {துரியோதனன்}, மலைச்சாரல்களில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமாரிகளால் தன் எதிரிகளை நனைத்தான்.(2) அப்போது அந்தப் பெரும்போரில் பாண்டவர்களில் எந்த ஒரு மனிதனோ, குதிரையோ, யானையோ, தேரோ, துரியோதனனின் கணைகளால் தாக்கப்படாதவர்களாகவோ, தாக்கப்படாததாகவோ இல்லை.(3) போர்வீரர்களில் யார்மீதெல்லாம் நான் கண்களைச் செலுத்தினேனோ, ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதரே, அவர்கள் அனைவரும் உமது மகனின் {துரியோதனனின்} கணைகளால் தாக்கப்பட்டிருந்தனர்.(4) போரில் விரையும்போதோ, அணிவகுத்துச் செல்லும்போதே எழும் புழுதியால் மறைக்கப்படும் ஒரு கூட்டத்தைப் போல, அந்தப் பாண்டவப் படையானது அப்போது அந்தச் சிறப்புமிக்க வீரனின் கணைகளால் மறைக்கப்பட்டிருந்தது.(5)

அப்போது பூமியானது, ஓ! பூமியின் தலைவரே {திருதராஷ்டிரரே}, பெரும் கரநளினம் கொண்ட வில்லாளியான உமது மகன் துரியோதனனின் கணைகளாலான ஒரே பரப்பாக என்னால் காணப்பட்டது.(6) உமது தரப்பையும், எதிரியின் தரப்பையும் சேர்ந்தவர்களான களத்தில் இருந்த ஆயிரமாயிரம் போர்வீரர்களில், அப்போது துரியோதனன் என்ற ஒரு மனிதன் மட்டுமே எனக்குத் தெரிந்தான்.(7) ஒன்று சேர்ந்திருந்தவர்களான பார்த்தர்களால், தனியொருவனான உமது மகனை {துரியோதனனை} அணுக முடியாததால், அப்போது அவனிடம் {துரியோதனனிடம்} நாங்கள் கண்ட ஆற்றலானது மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(8) அவன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே, யுதிஷ்டிரனை நூறு கணைகளாலும், பீமசேனனை எழுபதாலும், சகாதேவனை ஏழாலும் துளைத்தான்.(9) அவன், நகுலனை அறுபத்துநான்காலும், திருஷ்டத்யும்னனை ஐந்தாலும், திரௌபதியின் மகன்களை ஏழாலும், சாத்யகியை மூன்று கணைகளாலும் துளைத்தான். பிறகு அவன், ஓ! ஐயா ஓர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்} சகாதேவனின் வில்லையும் அறுத்தான்.(10)

முறிந்த வில்லை ஒருபுறம் கிடத்திய மாத்ரியின் வீரப் புதல்வன் {சகாதேவன்}, மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்டு மன்னன் துரியோதனனை எதிர்த்து விரைந்து, அந்தப் போரில் பத்து கணைகளால் அவனைத் துளைத்தான்.(11) பெரும் வில்லாளியும், துணிவுமிக்கவனுமான நகுலன், மேலும் பயங்கரமான ஒன்பது கணைகளால் மன்னனைத் {துரியோதனனைத்} துளைத்து உரக்க முழங்கினான்.(12) சாத்யகி நேரான ஒற்றைக் கணையால் மன்னனை {துரியோதனனைத்} தாக்கினான்; திரௌபதியின் மகன்கள் எழுபத்துமூன்றாலும், மன்னன் யுதிஷ்டிரன் ஐந்தாலும் அவனைத் தாக்கினர். பீமசேனன் அம்மன்னனை எண்பது கணைகளால் பீடித்தான்.(13) இவ்வாறு பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த துருப்பினர்களுக்கு முன்னிலையில் அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர்களால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் எண்ணற்ற கணைகளால் துளைக்கப்பட்டாலும் துரியோதனன் நடுங்கவில்லை.(14) அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரனின் வேகம், திறம், ஆற்றல் ஆகியவை அனைத்து உயிரினங்களையும் விஞ்சுவதாக மனிதர்கள் அனைவராலும் காணப்பட்டது.(15)

அதேவேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்ற தார்தராஷ்டிரர்கள், மன்னனைக் கண்டு மீண்டும் அணிதிரண்டு, கவசம் தரித்தவர்களாக அங்கே திரும்பி வந்தனர்.(16) அவர்கள் திரும்பி வந்தபோது அவர்களால் உண்டாக்கப்பட்ட ஒலியானது, மழைக்காலங்களில் பொங்கும் கடலைப் போல மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.(17) அந்தப் போரில் வெல்லப்படாத தங்கள் மன்னனை {துரியோதனனை} அணுகிய அந்தப் பெரும் வில்லாளிகள், போரிடுவதற்காகப் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றனர்.(18) அந்தப் போரில் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பீமசேனனத் தடுத்தான். ஓ! ஏகாதிபதி, துணிச்சல்மிக்கப் போராளிகளால் முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகளுக்கிடையில் வேறுபாடு காணமுடியாத அளவுக்கு அந்தப் போரில் ஏவப்பட்ட கணைகளால் திசைப்புள்ளிகள் அனைத்தும் முற்றிலும் மறைக்கப்பட்டன.(19,20)

அஸ்வத்தாமன் மற்றும் பீமசேனனைப் பொறுத்தவரையில், ஓ! பாரதரே, அவர்கள் இருவரும் கொடுஞ்சாதனைகளைப் புரிபவர்களாக இருந்தனர். அவ்விருவரும் போரில் தடுக்கப்பட முடியாதவர்களாக இருந்தனர். மீண்டும் மீண்டும் வில்லின் நாண்கயிற்றை இழுத்ததால் இருவரின் கரங்களும் பல வடுக்களைக் கொண்டிருந்தன. ஒருவருக்கொருவர் சாதனைகளில் பதிலடி கொடுத்து, மொத்த அண்டத்தையே அச்சுறுத்தும் வகையில் அவர்கள் இருவரும் தொடர்ந்து போரிட்டனர்.(21) வீரனான சகுனி அந்தப் போரில் யுதிஷ்டிரனைத் தாக்கினான். சுபலனின் வலிமைமிக்க மகன் {சகுனி}, மன்னனின் {யுதிஷ்டிரனின்} நான்கு குதிரைகளைக் கொன்று, துருப்புகள் அனைத்தையும் அச்சத்தால் நடுங்கச் செய்தபடியே உரக்க முழங்கினான்.(22) அதேவேளையில் வீரச் சகாதேவன், வீரனும், வெல்லப்பட்டவனுமான மன்னனை {யுதிஷ்டிரனைத்} தன் தேரில் ஏற்றிக் கொண்டு அந்தப் போரில் இருந்து கொண்டு சென்றான்.(23) மற்றொரு தேரைச் செலுத்திக் கொண்டு (போருக்குத் திரும்பி வந்த) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், முதலில் ஒன்பது கணைகளால் சகுனியைத் துளைத்து, மீண்டும் ஐந்தால் அவனை மேலும் துளைத்தான். பிறகு, வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்} உரத்த முழக்கம் செய்தான்.(24) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அச்சத்தை ஏற்படுத்துவதான அந்தப் போர் இவ்வாறே காண்பதற்கு அற்புதமானதாக இருந்தது. பார்வையாளர்களை மகிழ்ச்சியில் நிறைத்த அந்தப் போர், சித்தர்களாலும், சாரணர்களாலும் புகழப்பட்டது.(25)

அளவிலா ஆன்மா கொண்ட {சகுனியின் மகன்} உலூகன், அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கணைமாரியை ஏவியபடியே வலிமைமிக்க வில்லாளியான நகுலனை எதிர்த்து விரைந்தான்.(26) வீர நகுலனோ, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களிலும் அடர்த்தியான கணைமாரிகளை அந்தச் சகுனியின் மகனை {உலூகனைத்} தடுத்தான்}.(27) அந்தத் தேர்வீரர்கள் இருவரும் நற்பிறப்பையும், வலிமையையும் கொண்டவர்களாக இருந்தனர். பெரும் சினத்துடன் ஒருவரோடொருவர் போரிடுவதாக அவர்கள் இருவரும் காணப்பட்டனர்.(28) அதேபோலக் கிருதவர்மன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அசுரன் பலனோடு போரிடும் சக்ரனை {இந்திரனைப்} போல, எதிரிகளை எரிப்பவனான சிநியின் பேரனோடு {சாத்யகியோடு} போரிட்டுப் பிரகாசமாகத் தெரிந்தான்.(29) துரியோதனன், அந்தப் போரில் திருஷ்டத்யும்னனின் வில்லை வெட்டி, வில்லற்றிருந்த தன் எதிராளியைக் கூரிய கணைகளால் துளைத்தான்.(30) அம்மோதலில் மற்றொரு உறுதிமிக்க வில்லை எடுத்துக் கொண்ட திருஷ்டத்யும்னன், அனைத்து வில்லாளிகளும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அம்மன்னனோடு {துரியோதனனோடு} போரிட்டுக் கொண்டிருந்தான்.(31) ஓ! பாரதக் குலத்தின் காளையே, மதநீர் பெரும் இரு காட்டு யானைகளுக்கிடையில் நடக்கும் மோதலைப் போல அவ்வீரர்கள் இருவருக்கும் இடையில் நடந்த போரானது மிகக் கடுமையானதாக இருந்தது.(32)

அந்தப் போரில், சினத்தால் தூண்டப்பட்ட வீரக்கௌதமர் {கிருபர்}, நேரான கணைகள் பலவற்றால் திரௌபதியின் வலிமைமிக்க மகன்களைத் துளைத்தார்.(33) உடல் படைத்த ஒருவன், தன் (ஐந்து) புலன்களோடு போரிடுவதற்கு ஒப்பாக அவருக்கும் அந்த ஐவருக்கும் இடையில் நடைபெற்ற போர் இருந்தது. அச்சத்தை ஏற்படுத்துவதும், மிகக் கடுமையானதாகவும் இருந்த அந்தப் போரில் எத்தரப்பும் அடுத்தவருக்கு எக்கருணையும் காட்டவில்லை.(34) திரௌபதியின் (ஐந்து) மகன்களும், மூடனைப் பீடிக்கும் (ஐம்)புலன்களைப் போலக் கிருபரைப் பீடித்தனர். மறுபுறம் அவரோ அவர்களோடு மிகத் தீவிரமாகப் போரிட்டு அவர்களைக் கட்டுப்படுத்தினார்.(35) ஓ! பாரதரே, இவ்வாறே, அவருக்கும் {கிருபருக்கும்}, அவர்களுக்கும் {திரௌபதியின் மகன்களுக்கும்} இடையில் நடைபெற்ற போரானது மிக அற்புதமானதாக இருந்தது.(36)

மனிதர்கள் மனிதர்களோடும், யானைகள் யானைகளோடும், குதிரைகள் குதிரைகளோடும், தேர்வீரர்கள் தேர்வீரர்களோடும் போரிட்டனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மீண்டும் அந்தப் போரானது, சாதாரணமானதாகவும், அச்சந்தருவதுமாக மாறியது.(37) ஓ! தலைவா, இங்கே ஒரு மோதல் அழகானதாக இருந்தால், அங்கே மற்றொரு மோதல் அச்சம்தருவதாகவும், வேறு இடத்தில் மிகக் கடுமையானதாக இருந்தது. ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் பயங்கரமான பல மோதல்கள் நடைபெற்றன.(38) (இரு படைகளையும் சார்ந்தவர்களான) அந்த எதிரிகளைத் தண்டிப்போர் ஒருவரோடொருவர் மோதி, அந்தப் பயங்கரப் போரில் ஒருவரையொருவர் துளைத்துக் கொன்றனர்.(39) போர்வீரர்களின் வாகனங்களாலும், விலங்குகளாலும் எழுப்பப்பட்ட அடர்த்தியான புழுதி மேகம் அங்க காணப்பட்டது. ஓ! மன்னா, ஓடும் குதிரைகளால் எழுப்பப்பட்ட அடர்த்தியான புழுதியும், காற்றால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.(40) சக்கரங்களாலும், யானைகளின் மூச்சுக்காற்றாலும் எழுப்பப்பட்ட புழுதியானது, மாலை மேகத்தைப் போல வானத்தில் அடர்த்தியாக எழுந்தது.(41)

புழுதி எழுந்து, சூரியன் ஒளியை இழந்து, பூமி மறைக்கப்பட்டபோது, வீரமும், வலிமையும் கொண்ட தேர்வீரர்களைக் காண முடியவில்லை.(42) ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, வீரர்களின் குருதியால் பூமி நனைக்கப்பட்டபோது, ஒருகணத்தில் புழுதி மறைந்து அனைத்தும் தெளிவாகத் தெரிந்தது.(43) உண்மையில், அடர்த்தியானதும், பயங்கரமானதுமான அந்தப் புழுதி மேகம் தணிக்கப்பட்டது. அப்போது, ஓ! பாரதரே, அந்த நடுப்பகலில் போராளிகளுக்கிடையில் தங்கள் தங்கள் பலம் மற்றும் தரத்தின் அடிப்படையில் உண்டானவையும், மிகக் கடுமையானவையுமான பல்வேறு தனிப்போர்களை என்னால் காண முடிந்தது. அந்த அருஞ்செயல்களின் பிரகாசமான காந்தி முழுமையாகக் காட்சியில் தோன்றியது.(44,45) அந்தப் போரில் பாய்ந்த கணைகளின் ஒலியானது, அனைத்துப் பக்கங்களிலும் எரிந்து கொண்டிருக்கும் பரந்த மூங்கில் காட்டில் எழும் ஒலிக்கு ஒப்பான போரொலியாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(46)

சகுனியின் குதிரைப் படை! – சல்லிய பர்வம் பகுதி – 23- கிருதவர்மனின் குதிரைகளைக் கொன்ற யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனை எதிர்க்க எழுநூறு தேர்வீரர்களை அனுப்பிய துரியோதனன்; துரியோதனன் அனுப்பிய வீரர்கள் அனைவரையும் கொன்ற சிகண்டியின் பாஞ்சாலப் படை; பயங்கரச் சகுனங்கள் தோன்றின; பாண்டவர்களை எதிர்த்த சகுனி; சகுனியை எதிர்க்க சகாதேவனை அனுப்பிய யுதிஷ்டிரன்; பத்தாயிரம் குதிரைகளைக் கொண்ட சகுனியின் குதிரைப்படை ஆறாயிரமாகச் சுருங்கியது; தலையற்ற முண்டங்கள் ஒரு கையில் தலையுடனும், மறுகையில் வாளுடனும் எழுந்து நின்றது; சகுனியைச் சூழ்ந்த கொண்ட பாண்டவர்கள்; சகுனியின் உதவிக்குச் சென்ற கௌரவர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அச்சத்தையேற்படுத்தும் அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்தபோது, பாண்டவர்களால் உமது மகனின் {துரியோதனனின்} படை பிளக்கப்பட்டது.(1) எனினும், பெரும் முயற்சி செய்து தங்கள் பெரும் தேர்வீரர்களை அணிதிரட்டிய உமது மகன்கள், பாண்டவப் படையோடு போரிடுவதைத் தொடர்ந்தனர்.(2) உமது மகனின் நலனை விரும்பிய (குரு) போர்வீரர்கள், திடீரென மீண்டும் திரும்பி வந்தனர். அவர்கள் திரும்பி வந்ததும், உமது போர்வீரர்களுக்கும், எதிரியின் போர்வீரர்களுக்கும் இடையில், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பான போர் மிகப் பயங்கரமாக நடந்தது.(3,4) போர்வீரர்கள், அனுமானம் மற்றும் அங்கே சொல்லப்பட்ட பெயர்களின் துணை கொண்டு போரிட்டனர். இவ்வாறு அவர்கள் ஒருவரோடொருவர் போரிட்டபோது ஏற்பட்ட அழிவானது பெரிதானதாக இருந்தது.(5)

பெரும் கோபத்தில் நிறைந்த மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் போரில் தார்தராஷ்டிரர்களையும், அவர்களது மன்னனையும் {துரியோதனனையும்} வெல்லும் விருப்பத்தால்,(6) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான மூன்று கணைகளால் சரத்வான் மகனை {கிருபரைத்} துளைத்து, அடுத்ததாக வேறு நான்கு கணைகளால் கிருதவர்மனின் நான்கு குதிரைகளையும் கொன்றான்.(7) அப்போது அஸ்வத்தாமன், கொண்டாடப்பட்டவனான ஹிருதிகன் மகனை {கிருதவர்மனை} அங்கிருந்து கொண்டு சென்றான். சரத்வானின் மகன் {கிருபர்} பதிலுக்கு எட்டு கணைகளால் யுதிஷ்டிரனைத் துளைத்தார்.(8) பிறகு மன்னன் துரியோதனன், மன்னன் யுதிஷ்டிரன் போரிட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு எழுநூறு {700} தேர்களை அனுப்பினான்.(9) சிறந்த போர்வீரர்களால் செலுத்தப்பட்டவையும், காற்று அல்லது எண்ணத்தின் வேகத்தைக் கொண்டவையுமான அந்தத் தேர்கள், குந்தி மகனின் {யுதிஷ்டிரனின்} தேரை எதிர்த்து அந்தப் போரில் விரைந்தன.(10)

அனைத்துப் பக்கங்களிலும் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்ட அவர்கள், சூரியனைக் காட்சியில் இருந்து மறைக்கும் மேகங்களைப் போல, அவனைக் காட்சியில் இருந்து மறைத்தனர்.(11) அப்போது, சிகண்டியின் தலைமையிலான வீரர்கள், கௌரவர்களால் அவ்வாறு தாக்கப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்டு, சினத்தால் நிறைந்து, அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களானார்கள்.(12) குந்தியின் மகனான யுதிஷ்டிரனைக் காக்க விரும்பிய அவர்கள், பெரும் வேகம் கொண்டவையும், மணி வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் தேர்களில் அந்த இடத்திற்கு வந்தனர்.(13) அப்போது, பாண்டவர்களுக்கும், குருக்களுக்கும் இடையில், யமனின் ஆட்சிப்பகுதிகளில் வசிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும், குருதியே நீராகப் பாயும் வகையிலும் ஒரு பயங்கரப் போர் தொடங்கியது.(14) பாண்டவர்களும், பாஞ்சாலர்களும், எதிரிகளான குரு படையின் அந்த எழுநூறு தேர்வீரர்களையும் கொன்று, மீண்டும் (ஒட்டுமொத்த குரு படையையும்) தடுத்தனர்.(15)

அங்கே உமது மகனுக்கும் {துரியோதனனுக்கும்}, பாண்டவர்களுக்கும் இடையில் ஒரு கடும்போர் நடந்தது. அதற்குமுன் நாங்கள் அதுபோன்றதொரு போரை கேட்டதோ பார்த்ததோ கிடையாது.(16) எவராலும் யாருக்கும் கருணையே காட்டப்படாத அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, உமது படை மற்றும் எதிரி படையின் போர்வீரர்கள் வேகமாக வீழ்ந்து கொண்டிருக்கும்போது,(17) போராளிகள் அனைவரும் கூச்சலிட்டு, தங்கள் சங்குகளை முழக்கிக் கொண்டிருக்கும்போது, வில்லாளிகள் முழக்கம் செய்து கொண்டும், பல்வேறு வகைகளினான ஒலிகளை எழுப்பிக் கொண்டு இருக்கும்போது,(18) உண்மையில், அந்தப் போர் கடுமையாக நடந்து, போராளிகளின் முக்கிய அங்கங்கள் தாக்கப்பட்டு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வெற்றியை விரும்பியவர்களான துருப்புகள் வேகமாக விரைந்து கொண்டிருந்தபோது,(19) உலகில் உள்ள அனைத்தும் பயங்கரமான பேரழிவுக்கு உட்பட்டபோது, நற்பிறவியும், அழகும் கொண்ட எண்ணற்ற பெண்மணிகள் விதவைகளாக்கப்பட்டபோது,(20) உண்மையில், நண்பர்களுக்கும், எதிரிகளுக்கும் போர்வீரர்களால் எந்தக் கருணையும் காட்டப்படாமல் அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருக்கும்போது, அனைத்தின் அழிவுக்கான முன்னறிவிப்பாகப் பயங்கரச் சகுனங்கள் தோன்றின.(21)

மலைகள், காடுகளுடன் கூடிய பூமியானவள், பேரொலியை உண்டாக்கியபடி நடுங்கினாள். கைப்பிடிகளுடன் கூடிய எரிப்பந்தங்களைப் போன்ற எரிநட்சத்திரங்கள், சூரிய வட்டிலில் இருந்து விழுவதைப் போல, வானத்தில் இருந்து அனைத்துப் பக்கங்களிலும் விழுந்தன.(22) சூறாவளி எழுந்து, கடுங்கூழாங்கற்களைச் சுமந்து கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் தாழ்வாக வீசியது. யானைகள் அபரிமிதமான கண்ணீரைச் சொரிந்து, அதிகமாக நடுங்கின.(23) இந்தப் பயங்கரமான கடுஞ்சகுனங்கள் அனைத்தையும் அலட்சியம் செய்த க்ஷத்திரியர்கள், ஒருவரோடொருவர் கலந்தாலோசித்துக் கொண்டு, சொர்க்கத்தை அடையும் விருப்பத்தால், குருவின் பெயரால் அழைக்கப்பட்டதும், அழகானதுமான அந்தப்புனிதக் களத்தில் {குருக்ஷேத்திரத்தில்} மீண்டும் போரிடுவதற்காக உற்சாகமாக நின்றனர்.(24)

அப்போது காந்தார மன்னனின் மகனான சகுனி, “நீங்கள் அனைவரும் முன்னால் இருந்து போரிடுங்கள். நானோ, பின்னால் இருந்து பாண்டவர்களைக் கொல்வேன்” என்றான்.(25) பிறகு, பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களான மத்ரகப் போர்வீரர்களில், நமது தரப்பில் இருந்து முன்னேறிச் சென்றவர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, பல்வேறு மகிழ்ச்சியான ஒலிகளை வெளியிட்டனர்.(26) எனினும், வெல்லப்பட முடியாதவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களுமான பாண்டவர்கள், தங்கள் விற்களை அசைத்துக் கொண்டே மீண்டும் நம்மை எதிர்த்து வந்து, கணைமாரியால் நம்மை மறைத்தனர்.(27) அப்போது எதிரியால் மத்ரகப் படையினர் கொல்லப்பட்டனர். இதைக் கண்டு, துரியோதனனின் துருப்புகள் மீண்டும் போரில் இருந்து புறமுதுகிட்டன.(28) எனினும், காந்தாரர்களின் வலிமைமிக்க மன்னன் {சகுனி}, மீண்டும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “பாவிகளே! நில்லுங்கள்! (எதிரியோடு) போரிடுங்கள்! போரால் என்ன பயன்?” என்றான்.(29) அந்நேரத்தில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, காந்தாரர்களின் மன்னன் {சகுனி}, பளபளப்பான வேல்களுடன் போரிட வல்லவர்களாகப் பத்தாயிரம் {10000} குதிரை வீரர்களை முழுமையாகத் தன்னிடம் கொண்டிருந்தான்.(30)

அந்தப் பேரழிவு நடந்து கொண்டிருந்தபோது, அந்தப் பெரும்படையின் துணையுடன் கூடியவனான சகுனி, தன் வீரத்தை வெளிப்படுத்தி, பின்புறத்தில் இருந்து பாண்டவப்படையைத் தாக்கி, தன் கூரிய கணைகளால் அவர்களைக் கொன்றான்.(31) அப்போது பாண்டுக்களின் அந்தப் பரந்த படையானது, ஓ! ஏகாதிபதி, வலிமைமிக்கக் காற்றால் அனைத்துப் பக்கங்களிலும் கலைக்கப்படும் மேகத்திரளைப் போலவே பிளந்தது.(32) அப்போது யுதிஷ்டிரன், தன் படை முறியடிக்கப்படுவதை அருகிலிருந்து கண்டு, வலிமைமிக்கச் சகாதேவனைத் தூண்டும்வகையில் அமைதியாக, “அதோ சுபலனின் மகன் {சகுனி}, கவசம் பூண்டவனாக நமது படையின் பின்புறத்தைப் பீடித்து நிற்கிறான். அவன் நமது படைகளைப் படுகொலை செய்கிறான். ஓ! பாண்டுவின் மகனே {சகாதேவா}, பொல்லாதவனான அத்தீயவனைக் காண்பாயாக.(34) திரௌபதி மகன்களின் துணையுடன், சுபலனின் மகனான அந்தச் சகுனியை நோக்கிச் சென்று, அவனைக் கொல்வாயாக. அதேவேளையில் நான், ஓ! பாவமற்றவனே, பாஞ்சாலர்களின் ஆதரவுடன் எதிரியின் தேர்ப்படையை அழிக்கப்போகிறேன்.(35) உன்னுடன் யானைகள் அனைத்தையும், குதிரைகள் அனைத்தையும், மூவாயிரம் காலாட்படைவீரர்களையும் அழைத்துச் செல்வாயாக. இவற்றின் துணையுடன் சகுனியைக் கொல்வாயாக” என்றான்.(36)

அதன் பிறகு, வில்தரித்த போராளிகளால் செலுத்தப்பட்ட எழுநூறு யானைகள், ஐயாயிரம் குதிரைகள், வீரனான சகாதேவன்,(37) மூவாயிரம் காலாட்படை வீரர்கள், திரௌபதியின் மகன்கள் ஆகியோர் அனைவரும், போரில் வீழ்த்தக் கடினமானவனான சகுனியை எதிர்த்து விரைந்தனர்.(38) எனினும் பெரும் வீரம் கொண்டவனான அந்தச் சுபலனின் மகன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களை விஞ்சி நின்று, வெற்றிக்கான ஏக்கத்துடன், அவர்களது படையைப் பின்புறத்தில் இருந்து கொல்லத் தொடங்கினான்.(39)

பாண்டவப் படையைச் சேர்ந்தவர்களும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களும், சினத்தால் மதங்கொண்டவர்களுமான குதிரைவீரர்கள், சுபலன் மகனின் தேர்வீரர்களை விஞ்சி அவனது படைக்குள் ஊடுருவினர்.(40) வீரம் கொண்டவர்களான அந்தக் குதிரைவீரர்கள், தங்கள் யானைகளுக்கு மத்தியில் நின்று கொண்டு, கணைமாரியால் சுபலன் மகனின் பெரும்படையை மறைத்தனர்.(41) உமது தீய ஆலோசனைகளின் விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, கதாயுதங்களும், வேல்களும் பயன்படுத்தப்பட்டதும், வீரர்கள் மட்டுமே பங்கேற்றதுமான அந்தப் பயங்கரப் போர் நிகழ்ந்தது.(42) அந்தப் போரில் தேர்வீரர்கள் அனைவரும் பார்வையாளர்களாக நின்றுவிட்டதால், அங்கே வில்-நாண்கயிறுகளின் நாணொலிகள் அதற்கு மேலும் கேட்கவில்லை. அந்நேரத்தில் போரிட்ட தரப்புகளுக்கு எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.(43) ஓ! பாரதக் குலத்தின் காளையே, குருக்கள் மற்றும் பாண்டவர்களாகிய இரு தரப்பினரும், வீரர்களின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட ஈட்டிகளை ஆகாயத்தில் இருந்து வரும் எரிநட்சத்திரங்களைப் போலவே கண்டனர்.(44)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் பளபளப்பைக் கொண்டவையும், விழுபவையுமான வாள்களால் மறைக்கப்பட்ட மொத்த ஆகாயமும் மிக அழகாகத் தெரிந்தது.(45) ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சுற்றிலும் வீசப்பட்ட வேல்களின் தன்மையானது, ஆகாயத்தில் செல்லும் வெட்டுக்கிளிகளின் கூட்டங்களைப் போல ஆனது.(46) கணைகளால் காயமடைந்த குதிரைவீரர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட காயங்களின் விளைவால், குருதியில் குளித்த அங்கங்களுடன் கூடிய குதிரைகள், அனைத்துப் பக்கங்களிலும் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் விழுந்தன.(47) ஒன்றோடொன்று மோதிக் கொண்டு நொறுங்கிய அவற்றில் பல சிதைக்கப்பட்டவையாகத் தெரிந்தன, மேலும் பல தங்கள் வாய்களில் இருந்து குருதியைக் கக்கின. துருப்புகள் புழுதிமேகத்தால் மறைக்கப்பட்ட போது, அங்கே அடர்த்தியான இருள் பரவியது.(48) அந்த இருளானது அனைத்தையும் மறைத்தபோது, ஓ! மன்னா, அந்த இடத்திலிருந்து, துணிச்சல்மிக்கப் போராளிகளும், குதிரைகளும், மனிதர்களும் நகர்வதை நாங்கள் கண்டோம்.(49)

சிலர் பூமியில் விழுந்து அதிகமாகக் குருதியைக் கக்குபவர்களாகக் காணப்பட்டனர். வேறு சில போராளிகள், ஒருவரையொருவர் தலைமுடியைப் பற்றி இழுத்து, அசைய முடியாமல் இருந்தனர்.(50) பெரும் பலத்தைக் கொண்ட பலர், குதிரைகளின் முதுகுகளில் இருந்து ஒருவரையொருவர் இழுத்து, அவர்களோடு மோதி, மற்போரில் ஈடுபடும் போராளிகளைப் போல ஒருவரையொருவர் கொன்றனர்.(51) உயிரை இழந்தவர்களான பலர், தாங்கள் செலுத்தி வந்த குதிரைகளின் முதுகுகளிலேயே கொண்டு செல்லப்பட்டனர். தங்கள் வீரத்தில் செருக்குக் கொண்டு, வெற்றி மீது கொண்ட விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட பலர், கீழே பூமியில் விழுபவர்களாகக் காணப்பட்டனர்.(52) குருதியில் குளித்து, அங்கங்களை இழந்து, தலைமயிரற்றவர்களாக நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான போராளிகள் பூமியில் விரவிக் கிடந்தனர்.(53) யானைவீரர்கள், குதிரைவீரர்கள், கொல்லப்பட்ட குதிரைகள், போராளிகள், இரத்தக்கறைபடிந்த கவசங்கள், ஆயுதந்தரித்த பிறர், பல்வேறு வகைகளிலான பயங்க ஆயுதங்களால் ஒருவரையொருவர் கொல்ல முயன்ற சிலர், ஆகியோர் அனைவரும் அச்சந்தருவதும், பயங்கரப் பேரழிவை ஏற்படுத்தியதுமான அந்தப் போரில் ஒருவரையொருவர் நெருக்கமாகக் கட்டிக் கொண்டு கிடந்ததால் பூமியின் பரப்பு மறைக்கப்பட்டதன் விளைவாக, எந்தப் போர்வீரனாலும் தன் குதிரையில் வெகுதொலைவுக்குச் செல்ல முடியவில்லை.(54,55)

சிறிது நேரம் போரிட்டுக் கொண்டிருந்தவனும், சுபலனின் மகனுமான சகுனி, எண்ணிக்கையில் ஆறாயிரமாக {6000} எஞ்சியிருந்த தன் குதிரைப்படையுடன் அங்கிருந்து சென்றுவிட்டான்.(56) அதேபோல, பாண்டவப் படையும், குருதியில் நனைந்தும், அதன் விலங்குகள் களைப்படைந்தும், எஞ்சியிருந்தவையான ஆறாயிரம் {6000} குதிரைகளுடன் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டது.(57) இரத்தக்கறை படிந்திருந்த பாண்டவப் படையின் குதிரைவீரர்கள், போரிடும் நோக்கோடும், தங்கள் உயிரையே விடத் துணிந்தும்,(58) “இனியும் இங்கே தேர்களில் போரிடுவது இயலாது; பிறகு, இங்கே யானைகளில் போரிடுவது எவ்வளவு கடினமானதாக இருக்கும். தேர்கள் தேர்களை எதிர்த்தும், யானைகள் யானைகளை எதிர்த்தும் செல்லட்டும்.(59) பின்வாங்கிச் சென்ற சகுனி தன் படைப்பிரிவின் உள்ளே நிற்கிறான். சுபலனின் அரச மகன் {சகுனி} போரிடுவதற்காக மீண்டும் வரமாட்டான்” என்று சொன்னார்கள்.(60)

அப்போது திரௌபதியின் {ஐந்து} மகன்களும், மதங்கொண்ட யானைகளும், பெரும் தேர்வீரனான பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னன் இருந்த இடத்திற்குச் சென்றனர்.(61) சகாதேவனும் கூட, புழுதி மேகம் எழுந்தபோது, மன்னன் யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்குத் தனியாகச் சென்றான்.(62) இவ்வாறு அனைவரும் சென்றுவிட்ட பிறகு, சுபலனின் மகனான சகுனி, கோபத்தால் தூண்டப்பட்டு, மீண்டும் திருஷ்டத்யும்னனுடைய படைப்பிரிவின் மேல் பாய்ந்து, அதைத் தாக்கத் தொடங்கினான்.(63) ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களும், தங்கள் உயிரையே துச்சமாக மதித்தவர்களுமான உமது படையின் வீரர்களுக்கும், எதிரி படையின் வீரர்களுக்கும் இடையில் அங்கே மீண்டும் ஒரு பயங்கரப் போர் தொடங்கியது.(64) வீரர்களுக்கிடையிலான அம்மோதலில், ஒருவரையொருவர் நிலைத்த கண்களுடன் பார்த்த போராளிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஒருவர்மீதொருவர் பாய்ந்தனர்.(65)

அழிவை ஏற்படுத்தும் அந்தப் பெரும் படுகொலையில், வாள்களால் வெட்டப்பட்ட தலைகள் கீழே விழும்போது, பனம்பழம் விழும் ஒலியை உண்டாக்கின.(66) கவசங்களை இழந்து, ஆயுதங்களால் சிதைக்கப்பட்டு, கீழே தரையில் விழும் உடல்கள், கரங்கள், உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட தொடைகள் ஆகியன மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேரொலியை ஏற்படுத்தின.(67) சகோதரர்களையும், மகன்களையும், தந்தைமாரையும் கூரிய ஆயுதங்களால் தாக்கிய போராளிகள், இறைச்சித் துண்டுகளுக்காகப் போரிடும் பறவைகளைப் போலக் காணப்பட்டனர்.(68) சினத்தால் தூண்டப்பட்ட ஆயிரக்கணக்கான போர்வீரர்கள் ஒருவர் மீதொருவர் பாய்ந்து, அந்தப் போரில் பொறுமையில்லாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(69) நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான போராளிகள், கொல்லப்பட்டுத் தங்கள் குதிரைகளில் இருந்து கீழே விழும் குதிரைவீரர்களின் கனத்தால் கொல்லப்பட்டுக் கீழே களத்தில் விழுந்தனர்.(70)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கையின் விளைவால் ஒருவரையொருவர் முக்கிய அங்கங்களில் துளைக்க விரும்பிய போராளிகளின் ஈட்டிகளும், வாள்களும் கீழே விழும் ஒலிகளும், ஓ! மன்னா, பெரும் வேகம் கொண்ட குதிரைகளின் கனைப்பொலிகளும், கவசம் தரித்த மனிதர்களின் கூச்சல்களும் பேரொலியாகின.(71,72) அந்நேரத்தில் களைப்பை அடைந்து உமது படைவீரர்கள், சினம் தீர்ந்தவர்களாக, தங்கள் விலங்குகள் களைப்படைந்தவர்களாக, தாகத்தால் உலர்ந்தவர்களாக, கூரிய ஆயுதங்களால் சிதைக்கப்பட்டவர்களாகப் போரில் இருந்து புறமுதுகிடத் தொடங்கினர்.(73) குருதிமணத்தால் மதங்கொண்ட {இரத்த வாசனையால் வெறிகொண்ட} பலர், நண்பர்களையே எதிரிகளைப் போலக் கொல்லத்தக்கவர்களாகவும், உண்மையில், அகப்பட்ட எவரையும் கொல்லத்தக்கவர்களாகவும் மதியிழந்தவர்களானார்கள்.(74) பெரும் எண்ணிக்கையிலான க்ஷத்திரியர்கள், ஓ! மன்னா, வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, கணைகளால் தாக்கி வீழ்த்தப்பட்டுப் பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்தனர்.(75)

ஓநாய்கள், கழுகுகள், நரிகள் ஆகியன ஊளையிடவும், மகிழ்ச்சியால் அலறவும் செய்து, பேரொலியை உண்டாக்கின. உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது படை பேரிழப்பை அடைந்தது.(76) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மனிதர்கள் மற்றும் குதிரைகளின் உடல்களால் விரவிக் கிடந்த பூமியானது, இரத்த ஓடைகளால் மறைக்கப்பட்டு, மருண்டோரை அச்சங்கொள்ளச் செய்தது.(77) ஓ! பாரதரே, வாள்கள், போர்க்கோடரிகள், வேல்கள் ஆகியவற்றால் மீண்டும் மீண்டும் தாக்கிச் சிதைக்கப்பட்ட உமது போர்வீரர்களும், பாண்டவப் போர்வீரர்களும் ஒருவரையொருவர் அணுகுவதை நிறுத்தினர்.(78) தங்கள் தங்கள் பலத்திற்குத் தக்க ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, இறுதிச் சொட்டுக் குருதியுள்ளவரை போரிட்ட போராளிகள், தங்கள் காயங்களில் இருந்து குருதி வழிய கீழே விழுந்தனர்.(79) தலையற்ற வடிவங்கள், (ஒரு கரத்தில்) தங்கள் தலைகளின் மயிரைப் பற்றியபடியும், (மறுகரத்தில்) உயர்த்தப்பட்டவையும், இரத்தம் தோய்ந்தவையுமான வாள்களோடும் காணப்பட்டன.(80)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வாறு பல தலையற்ற வடிவங்கள் எழுந்து, குருதிமணம் போராளிகளைக் கிட்டத்தட்ட உணர்வற்றவர்களாகச் செய்து,(81) அந்தப் போரொலியானது சற்றே தணிவடைந்தபோது, சுபலனின் மகன் {சகுனி}, எஞ்சிய தனது சிறு குதிரைப்படையுடன், பாண்டவர்களின் பெரும்படையை (மீண்டும்) அணுகினான்.(82) வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டவர்களும், பெரும் சுறுசுறுப்பையுடையவர்களுமான பாண்டவர்கள், காலாட்படையினர், யானைகள் மற்றும் குதிரைப்படைகளுடனும், உயர்த்தப்பட்ட ஆயுதங்களுடனும் சகுனியை நோக்கி விரைந்தனர்.(83) பகைமையின் எல்லையை {முடிவை} அடைய விரும்பிய பாண்டவர்கள், ஒரு சுவராக அணிவகுத்து அனைத்துப் பக்கங்களிலும் சகுனியைச் சூழ்ந்து கொண்டு, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களால் அவனை {சகுனியைத்} தாக்கத் தொடங்கினர்.(84)

அனைத்துப் பக்கங்களிலும் தாக்கப்படும் உமது படையைக் கண்ட கௌரவர்களும், குதிரைகள், காலாட்படையினர், யானைகள் மற்றும் தேர்களுடன் பாண்டவர்களை நோக்கி விரைந்தனர்.(85) பெரும் துணிவுமிக்கவர்களான காலாட்படைவீரர்கள் சிலர், ஆயுதங்களே இல்லாதவர்களாக, தங்கள் கால்களாலும், முட்டிகளாலும் அந்தப் போரில் எதிரிகளைத் தாக்கி வீழ்த்தினர்.(86) தேர்வீரர்கள் தங்கள் தேர்களில் இருந்தும், யானைவீரர்கள் யானைகளிலிருந்தும், புண்ணியமற்ற மனிதர்கள் தங்கள் புண்ணியங்கள் தீர்ந்ததும் தங்கள் தெய்வீக வாகனங்களில் இருந்து வீழ்வதைப் போல விழுந்தனர்.(87) இவ்வாறு, அந்தப் போரில் ஒருவரோடொருவர் போரிட்ட போராளிகள், தந்தைமாரையும், சகோதரர்களையும், நண்பர்களையும், மகன்களையும் கொன்றனர்.(88) ஓ பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, எவருக்கும் எவராலும் எந்தக் கருணையும் காட்டப்படாததும், அனைத்துப் பக்கங்களிலும் வேல்கள், வாள்கள், கணைகள் வேகமாக வீழ்த்தப்பட்டுக் காணும் காட்சியைப் பயங்கரமாக்கியதுமான அந்தப் போர் இவ்வாறே நிகழ்ந்தது” {என்றான் சஞ்சயன்}.(89)

துரியோதனனை நிந்தித்த அர்ஜுனன்! – சல்லிய பர்வம் பகுதி – 24-துரியோதனனைக் குறித்து வீரர்களிடம் விசாரித்த சகுனி; துரியோதனன் இருக்குமிடம் அறிந்து அங்கே சென்ற சகுனி; சகுனியின் உற்சாகமிக்கப் பேச்சால் மகிழ்ந்த கௌரவவீரர்கள் பாண்டவப் படையை எதிர்த்துச் சென்றது; கிருஷ்ணனிடம் துரியோதனனை நிந்தித்த அர்ஜுனன்; கௌரவப்படைக்குள் ஊடுருவிய கிருஷ்ணன்; அர்ஜுனனால் தாக்கப்பட்டு ஊக்கத்தை இழந்த கௌரவர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரின் பேரொலி ஒருவாறு தணிந்து, பாண்டவர்கள் பெரும் எண்ணிக்கையிலான தங்கள் எதிரிகளைக் கொன்ற பிறகு, எஞ்சியிருந்த தன் எழுநூறு {700} குதிரைகளுடன்[1] சுபலனின் மகன் {சகுனி} (மீண்டும்) போரிட வந்தான்.(1) தன் படைவீரர்களை வேகமாக அணுகி, அவர்களைப் போரிடத் தூண்டிய அவன், மீண்டும் மீண்டும், “எதிரிகளைத் தண்டிப்பவர்களே, கவனமாகப் போரிடுங்கள்” என்று சொன்னான்.(2) அவன் அங்கிருந்த க்ஷத்திரியர்களிடம், “பெரும் தேர்வீரனான மன்னன் {துரியோதனன்} எங்கே?” என்று கேட்டான். சகுனியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அவர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, “அதோ, முழு நிலவுக்கு இணையான பெரிய குடை இருக்குமிடத்தில், கவசம் தரித்த தேர்வீரர்கள் இருக்கும் இடத்தில், மேகங்களுக்கு ஒப்பான பேரொலி கேட்கும் இடத்தில் பெரும் தேர்வீரரான குரு மன்னன் {துரியோதனன்} இருக்கிறார். ஓ! மன்னா {சகுனியே}, வேகமாக அங்கே சென்றால், உம்மால் குரு ஏகாதிபதியை {துரியோதனனைக்} காண முடியும்” என்று பதிலுரைத்தனர்.(5)துணிச்சல்மிக்க அந்தப் போர்வீரர்களால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், சுபலனின் மகனுமான சகுனி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பின்வாங்காத வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டவனாக உமது மகன் இருந்த இடத்திற்குச் சென்றான்.(6) அந்தத் தேர்ப்படைக்கு மத்தியில் இருந்த துரியோதனனைக் கண்ட சகுனி, அங்கே இருந்த உமது தேர்வீரர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில்,(7) ஓ! மன்னா, துரியோதனனிடம் உற்சாகமாக இவ்வார்த்தைகளைச் சொன்னான். உண்மையில் அவன் {சகுனி}, தன் காரியங்கள் அனைத்தும் ஏற்கனவே நிறைவேறிவிட்டதைக் காட்டும் வகையில் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்[2].(8) “ஓ! மன்னா {துரியோதனா}, (பாண்டவர்களின்) தேர்ப்படைப்பிரிவினரைக் கொல்வாயாக. அவர்களது குதிரைகள் அனைத்தும் என்னால் வெல்லப்பட்டன. ஒருவன் தன் உயிரைக் கொடுக்காமல் போரில் யுதிஷ்டிரனைக் கைப்பற்றுவது சாத்தியமில்லை.(9) பாண்டு மகனால் {யுதிஷ்டிரனால்} பாதுகாக்கப்படும் அந்தத் தேர்ப்படை அழிக்கப்பட்ட பிறகு, யானைகள், காலாட்படைவீரர்கள் மற்றும் பிறர் அனைவரையும் நாம் கொல்வோம்” என்றான்.(10)அவனது இவ்வார்த்தைகளைக் கேட்ட உமது போர்வீரர்கள், வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டுப் பாண்டவப்படையை நோக்கி உற்சாகமாக ஓடினர்.(11) தங்கள் முதுகுகளில் அம்பறாத்தூணிகளுடனும், கைகளில் விற்களுடனும் கூடிய அவர்கள் அனைவரும் தங்கள் விற்களை அசைத்து, சிங்க முழக்கத்தைச் செய்தனர்.(12) ஓ! மன்னா, விற்களின் கடும் நாணொலிகளும், உள்ளங்கைகளை அறையும் ஒலிகளும், பலமாக ஏவப்பட்ட கணைகளான் விஸ் ஒலிகளும் மீண்டும் கேட்கப்பட்டன.(13)

அந்தக் குரு போராளிகள் உயர்த்தப்பட்ட விற்களுடன் பாண்டவப்படையை நோக்கி வருவதைக் கண்டவனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேவகியின் மகனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(14) “அச்சமில்லாமல் குதிரைகளைத் தூண்டி, இந்தத் துருப்புகளின் கடலுக்குள் ஊடுருவுவாயாக. என் கூரிய கணைகளின் மூலம் இன்று நான் இந்தப் பகைமைகளின் எல்லையை {முடிவை} அடைவேன்.(15) ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இரு தரப்புக்கிடையில் நடக்கும் இந்தப் பெரும்போரில் இது பதினெட்டாவது நாளாகும்.(16) உண்மையில் எண்ணற்றவையாக இருந்த அந்த உயர் ஆன்ம வீரர்களின் படையானது கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. விதியின் வழியைப் பார்.(17) ஓ! மாதவா {கிருஷ்ணா}, பரந்த கடலைப் போல இருந்த திருதராஷ்டிர மகனின் {துரியோதனனின்} படையானது, நம்மோடு மோதிய பிறகு, பசுவின் குளம்புகளால் உண்டான தடத்தைப் போலாகிவிட்டது.(18)

பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பிறகு அமைதி ஏற்படுத்தப்பட்டிருந்தால், ஓ! மாதவா {கிருஷ்ணா}, அனைத்தும் நன்றாக இருந்திருக்கும். எனினும், பலவீனமான அறிவைக் கொண்ட மூடனான துரியோதனன் அமைதியை ஏற்படுத்தவில்லை.(19) ஓ! மாதவா, பீஷ்மரால் சொல்லப்பட்ட வார்த்தைகள் நன்மை தருபவையும், பின்பற்றத் தகுந்தவையுமாகும். எனினும், அறிவை இழந்தவனான சுயோதனன், அதன்படி செயல்படவில்லை.(20) பீஷ்மர் தாக்கப்பட்டு, பூமியில் வீழ்த்தப்பட்ட பிறகும், போர் ஏன் தொடர்கிறது என்பதற்கான காரணத்தை நான் அறியவில்லை.(21) சந்தனு மகனின் {பீஷ்மரின்} வீழ்ச்சிக்குப் பிறகும் தார்தராஷ்டிரர்கள் போரைத் தொடர்ந்ததால், அனைத்து வழிகளிலும் அவர்கள் மூடர்கள் என்றும், பலவீனமான அறிவைக் கொண்டவர்கள் என்றும் நான் கருதுகிறேன்.(22)

அதன்பிறகும், பிரம்மத்தை உச்சரிப்பவர்கள் அனைவரிலும் முதன்மையான துரோணர் வீழ்ந்த பிறகும், ராதையின் மகன் {கர்ணன்} வீழ்ந்த பிறகும், விகர்ணன் வீழ்ந்த பிறகும் பேரழிவு நிற்கவில்லையே.(23) ஐயோ, மனிதர்களில் புலியான கர்ணன் தன் மகன்களுடன் வீழ்ந்து, சிறு (கௌரவப்) படை மட்டுமே எஞ்சியிருந்தபோதும் பேரழிவு நிற்கவில்லையே.(24) வீரனான சுருதாயுஷ், பூரு குலத்தின் ஜலசந்தன், மன்னன் சுருதாயுதன் ஆகியோர் வீழ்ந்த பிறகும் கூடப் பேரழிவு நிற்கவில்லை.(25) ஓ ஜனார்த்தனா, பூரிஸ்ரவஸ், சல்லியர், சால்வன், அவந்தியின் வீரர்கள் ஆகியோர் வீழ்ந்தபிறகும் பேரழிவு நிற்கவில்லை.(26) ஜெயத்ரதன், ராட்சசன் அலாயுதன், பாஹ்லீகர், சோமதத்தன் ஆகியோர் வீழ்ந்த பிறகும் பேரழிவு நிற்கவில்லை.(27) வீரரான பகதத்தர், காம்போஜத் தலைவன் சுதக்ஷிணன், துச்சாசனன் ஆகியோர் வீழ்ந்த பிறகும் பேரழிவு நிற்கவில்லை.(28) ஓ! கிருஷ்ணா, வீரமும், பெரும் நாடுகளைச் சொந்தமாகக் கொண்டவர்களும், வலிமையும் மிக்கவர்களுமான பல்வேறு மன்னர்கள் போரில் கொல்லப்பட்ட பிறகும் பேரழிவு நிற்கவில்லை.(29) போரில் பீமசேனரால் முழுமையாக ஓர் அக்ஷௌஹிணி துருப்புகள் கொல்லப்பட்ட பிறகும், தார்தராஷ்டிரர்களின் மடமையினாலோ, பேராசையாலோதான் இந்தப்பேரழிவு நிற்கவில்லை.(30)

நிச்சயம் மூடனான துரியோதனனைத் தவிர, குரு குலத்தைப் போன்ற உன்னதக் குலத்தில் பிறந்த வேறு எந்த மன்னன்தான், கனியற்ற {பலனற்ற} இந்தக் கடும் பகைமைகளைத் தொடர்வான்?(31) அறிவும், ஞானமும் கொண்டும், தீமையிலிருந்து நன்மையைப் பகுத்துப் பார்க்க வல்லவனுமாக இருந்தும், தகுதியிலும், பலத்திலும், துணிவுலும் தன் எதிரிகள் தன்னைவிட மேம்பட்டவர்கள் என்பதை அறிந்தும் இவ்வாறு போரைத் தொடுப்பவன் இங்கே எவன் இருக்கிறான்?(32) உன்னால் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கீழ்ப்படிந்து பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள மனமில்லாத ஒருவனால் உண்மையில் பிறரின் ஆலோசனைகளை எவ்வாறு கேட்க இயலும்?(33) சந்தனுவின் மகனான பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோர் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளுமாறு தூண்டியபோது அவர்களை அலட்சியம் செய்த அவனுக்கு என்ன மருந்துதான் இன்று ஏற்புடையதாக இருக்கக்கூடும்?(34) ஓ! ஜனார்த்தனா, வயது முதிர்ந்த தந்தையும், நல்ல அறிவு கொண்ட அவனது தாயும் நன்மையான வார்த்தைகளைச் சொன்னபோது, மூடத்தனத்தால் அவர்களை அலட்சியம் செய்து அவமதித்த அவனால் நல்ல ஆலோசனைகளை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?(35)

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, தன் குலத்தை அழிப்பதற்காகவே துரியோதனன் பிறப்பை எடுத்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஓ! தலைவா, அவனது நடத்தையும், கொள்கையும் அதையே சுட்டுகிறது. இன்னும் கூட அவன், எங்களது நாட்டை எங்களுக்குக் கொடுக்க மாட்டான். ஓ! அச்யுதா, இதுவே என் கருத்தாகும்.(36) ஓ! ஐயா, திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} உயிரோடுள்ளவரை, எங்கள் பங்கான நாட்டை அவன் எங்களுக்குக் கொடுக்க மாட்டான் என்று உயர் ஆன்ம விதுரர் என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்.(37) மேலும் விதுரர், “ஓ! கௌரவங்களை அளிப்பவனே, திருதராஷ்டிரர் உயிரோடுள்ளவரை, பொல்லாதவனான அந்தப் பாவி உங்களுக்குப் பாவத்தையே செய்வான்.(38) போரில்லாமல் உங்களால் துரியோதனனை வெல்லவே முடியாது” என்றார். ஓ! மாதவா, முன்னறிதிறம் கொண்டவரான விதுரர், இவ்வாறே என்னிடம் அடிக்கடி சொன்னார்.(39) தீய ஆன்மா கொண்டவனும், பொல்லாதவனுமான அவன் செய்யும் செயல்கள் அனைத்தும், உயர் ஆன்ம விதுரர் சொன்னதற்கு முற்றிலும் சரியாக இருப்பதாக இப்போது நான் அறிகிறேன்.(40)

நன்மையைத் தரக்கூடியவையும், சரியானவையுமான ஜமதக்னி மகனின் {பரசுராமரின் வார்த்தைகளைக் கேட்டும், அவற்றை அலட்சியம் செய்த அந்தத் தீய புத்தியுள்ளவன், உறுதியாக அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட வேண்டும்.(41) துரியோதனன் பிறந்ததும், அந்த இழிந்தவனின் விளைவால் மொத்த க்ஷத்திரிய வகையும் அழிவுக்குள்ளாகும் என்று தவவெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பலர் சொன்னார்கள்.(42) துரியோதனனின் செயல்களால் க்ஷத்திரியர்கள் கிட்டத்தட்ட மொத்தமாக அழிவை அடைந்துவிட்டதால், ஓ! ஜனார்த்தனா, அம்முனிவர்களின் வார்த்தைகள் இப்போது {உண்மையென} உணரப்படுகின்றன. ஓ! மாதவா, நான் இன்று போர்வீரர்கள் அனைவரையும் கொல்வேன்.(43) க்ஷத்திரியர்கள் அனைவரும் கொல்லப்பட்டு, (கௌரவ) முகாம் வெறுமையான பிறகும், தன் அழிவுக்காகத் துரியோதனன் எங்களுடன் போரையே விரும்புவான்.(44) இந்தப் பகைமைகளை அதுவே {அந்தப் போரே} முடித்துவைக்கும். ஓ! மாதவா, ஓ விருஷ்ணி குலத்தோனே, விதுரரின் வார்த்தைகளை என் மனத்திற்குள்ளேயே நான் சிந்தித்துப் பார்த்தும், தீய ஆன்மா கொண்ட துரியோதனனின் செயல்களைக் கருத்தில் கொண்டும் நான் இந்தத் தீர்மானத்திற்கே வந்திருக்கிறேன். ஓ! வீரா {கிருஷ்ணா}, தீய ஆன்மா கொண்ட துரியோதனனையும், அவனது படையையும் இன்று என் கூரிய கணைகளால் நான் கொல்லப்போவதால் இந்தப் பாரதப் படைக்குள் ஊடுருவுவாயாக.(45,46) திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இந்தப் பலவீனமான படையைக் கொன்று, யுதிஷ்டிரருக்கு எது நன்மையோ அதை இன்று நான் செய்யப் போகிறேன்” என்றான் {அர்ஜுனன்}.”(47)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “சவ்யசச்சினால் {அர்ஜுனனால் இவ்வாறு சொல்லப்பட்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, கைகளில் கடிவாளத்துடன், அச்சமில்லாமல் அந்தப் பரந்த எதிரி படைக்குள் போருக்காக ஊடுருவினான்.(48) (அவ்விரு வீரர்களும் நுழைந்த) அது விற்களாலான பயங்கரமான காடாக இருந்தது. ஈட்டிகளே அதன் முட்களாக இருந்தன. கதாயுதங்கள், முள்பதித்த தண்டங்கள் {பரிகங்கள்} ஆகியன அதன் பாதைகளாக இருந்தன. தேர்களும், யானைகளும் அதில் இருக்கும் பெரும் மரங்களாக இருந்தன.(49) குதிரைப்படையும், காலாட்படையும் அதில் இருக்கும் கொடிகளாக இருந்தன. சிறப்புமிக்கவனான கேசவன் {கிருஷ்ணன்}, பல கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தக் காட்டுக்குள் நுழைந்த போது, மிகப் பிரகாசமானவனாகத் தெரிந்தான்.(50) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் அர்ஜுனனைச் சுமந்து சென்ற அந்த வெள்ளைக் குதிரைகள், தாசார்ஹ குலத்தோனால் {கிருஷ்ணனால்} தூண்டப்பட்ட நிலையில் எங்கும் திரிவதாகக் காணப்பட்டன.(51) அப்போது எதிரிகளை எரிப்பவனான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, மழையைப் பொழியும் மேகத்தைப் போல நூற்றுக்கணக்கான கூரிய கணைகளை ஏவியபடியே தன் தேரில் சென்று கொண்டிருந்தான்.(52)

அந்த நேரான கணைகளால் உண்டான ஒலியும், அவற்றைக் கொண்டு அந்தப் போரில் சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} மறைக்கப்பட்ட அந்தப் போராளிகள் உண்டாக்கிய ஒலியும் பேரொலியாக இருந்தன. போராளிகளின் கவசத்தைத் துளைத்துச் சென்ற அந்தக் கணைமாரிகள் பூமியில் விழுந்தன.(53) இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான தீண்டலைக் கொண்டவையும், காண்டீவத்திலிருந்து ஏவப்பட்டவையுமான கணைகள், ஓ! மன்னா, அந்தப் போரில் மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளைத் தாக்கி, சிறகு படைத்த பூச்சிகளைப் போன்ற ஒலியுடன் போரில் விழுந்தன.(54) காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளால் அனைத்தும் மறைக்கப்பட்டன. அந்தப் போரில் முக்கிய மற்றும் துணைத் திசைகளுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை.(55) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எண்ணையில் துவைக்கப்பட்டவையும், கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்பட்டவையும், பார்த்தனின் பெயர் பொறிக்கப்பட்டவையுமான கணைகளால் மொத்த உலகமும் நிறைந்திருப்பதைப் போலத் தெரிந்தது.(56) அந்தக் கூரிய கணைகளால் தாக்கப்பட்டு, தீப்பந்தங்களால் எரிக்கப்பட்ட யானைக்கூட்டத்தைப் போலப் பார்த்தனால் எரிக்கப்பட்ட கௌரவர்கள், ஊக்கம் குன்றியவர்களாகத் தங்கள் பலத்தை இழந்தனர்[3].(57)விற்களும், கணைகளும் தரித்திருந்த பார்த்தன், சுடர்மிக்கச் சூரியனுக்கு ஒப்பாக, உலர்ந்த புற்குவியலை எரிக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போல அந்தப் போரில் பகைவரின் போராளிகளை எரித்தான்.(58) காட்டுவாசிகளால் காட்டில் விடப்பட்டதும், சுடர்மிக்கத் தழல்களும், (தணலில் இருந்து எழும்) பெரும் சக்தியும் கொண்டு முழங்குவதுமான நெருப்பானது, மரங்களும், உலர்ந்த கொடிகளின் குவியல்களையும் கொண்ட அந்தக் காட்டையே எரிப்பதைப் போலவே,(59) பெரும் சுறுசுறுப்பும், கடுஞ்சக்தியும் கொண்டவனும், கணைகளையே தன் தழல்களாகக் கொண்டவனும், ஆயுதங்களில் ஆற்றல் கொண்டவனுமான அந்த வீரன் {அர்ஜுனன்}, கோபத்தால் உமது மகனின் {துரியோதனனின்} துருப்புகள் அனைத்தையும் வேகமாக எரித்தான்.(60) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், மரணபலத்தைக் கொண்டவையும், கவனமாக ஏவப்பட்டவையுமான அவனது கணைகளை எந்தக் கவசத்தாலும் கலங்கடிக்க முடியவில்லை. அவன், எந்த மனிதன் மீதும், குதிரையின் மீதும், அல்லது பெரும் வடிவம் கொண்ட யானையின் மீதும் இரண்டாம் கணையை ஏவ வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.(61) வஜ்ரதாரியான இந்திரன், தைத்தியர்களைத் தாக்கி வீழ்த்தியதைப் போலவே, வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் கொண்ட அந்தப் படைப்பிரிவுக்குள் தனியொருவனாக நுழைந்த அர்ஜுனனும், பல்வேறு வடிவங்களிலான கணைகளால் அதை {அந்தப் படைப்பிரிவை} அழித்தான்” {என்றான் சஞ்சயன்}.(62)

குதிரையில் தப்பி ஓடிய துரியோதனன்! – சல்லிய பர்வம் பகுதி – 25-துரியோதனனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்ற திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனிடம் தோல்வியடைந்த துரியோதனன் ஒரு குதிரையில் தப்பி ஓடியது; திருஷ்டத்யும்னனிடம் தப்பிய சஞ்சயன் சாத்யகியிடம் உயிரோடு அகப்பட்டது; அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் துரியோதனனைத் தேடிக்கொண்டு சகுனி இருக்கும் இடத்திற்குச் சென்றது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}   சொன்னான், “தனஞ்சயன் {அர்ஜுனன்}, போரில் போராடிக் கொண்டிருந்தவர்களும், பின்வாங்காதவர்களுமான அந்த வீரர்களின் நோக்கத்தைத் தன் காண்டீவத்தால் வீணாகும்படி செய்தான்.(1) அர்ஜுனனால் ஏவப்பட்டவையும், தடுக்கப்பட முடியாதவையும், பெரும் சக்தி கொண்டவையும், வஜ்ரத்தைப் போன்ற தீண்டலைக் கொண்டவையுமான அந்தக் கணைகள் மேகத்தால் பொழியப்படும் மழைத்தாரைகளுக்கு ஒப்பாகத் தெரிந்தன.(2) ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கிரீடியால் {அர்ஜுனனால்} இவ்வாறு தாக்கப்பட்ட அந்தப் படையானது, உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே தப்பி ஓடியது.(3)

சிலர் தங்கள் தந்தைமாரையும், சகோதரர்களையும் கைவிட்டனர்; வேறு சிலர், தங்கள் தோழர்களைக் கைவிட்டனர். சில தேர்வீரர்கள் தங்கள் விலங்குகளை இழந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிலருடைய அச்சுகளோ, நுகத்தடிகளோ, சக்கரங்களோ உடைந்தன.(4) சிலருக்குக் கணைகள் தீர்ந்து போயின. சிலர் கணைகளால் பீடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டனர். காயம்படாதவர்களாக இருப்பினும் சிலர், அச்சத்தால் பீடிக்கப்பட்டுக் கூட்டமாகத் தப்பி ஓடினர்.(5) தங்கள் சொந்தங்கள் அனைவரையும், விலங்குகளையும் இழந்த சிலர், தங்கள் மகன்களைக் காக்க முயன்றனர். சிலர் தங்கள் தந்தைமாரை உரக்க அழைத்தனர், சிலர் தங்கள் தோழர்களையும், தொண்டர்களையும் அழைத்தனர்.(6) ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, ஓ! ஏகாதிபதி, சிலரோ, தங்கள் உறவினர்கள, சகோதரர்கள் மற்றும் பிற சொந்தங்களைக் கைவிட்டுத் தப்பி ஓடினர்.(7)

பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர், அதனால் ஆழத் துளைக்கப்பட்டு, தங்கள் உணர்வுகளை இழந்தவர்களாக, கடினத்துடன் மூச்சுவிடுபவர்களாகத் தென்பட்டனர்.(8) அவர்களைத் தங்கள் தேர்களில் ஏற்றிக் கொண்ட வேறு சிலர், சிறிது நேரம் அவர்களின் துயராற்றி, அவர்களை ஓய்வெடுக்கச் செய்து, நீர் கொடுத்து அவர்களின் தாகத்தைத் தணித்து, மீண்டும் போரிடச் சென்றனர்.(9) போரில் எளிதாக வீழ்த்தப்பட முடியாதவர்களான சிலர், காயம்பட்டவர்களைக் கைவிட்டுவிட்டு, உமது மகனின் கட்டளைகளைக்குக் கீழ்ப்படிய விரும்பி மீண்டும் போரிடச் சென்றனர்.(10) தங்கள் தாகத்தைத் தணித்துக் கொண்டோ, விலங்குகளைக் களைப்பாறச் செய்தோ சிலரும், ஓ! பாரதர்களின் தலைவரே, (புதிய) கவசம் அணிந்து கொண்ட சிலரும்,(11) தங்கள் சகோதரர்கள், மகன்கள் மற்றும் தந்தைமாருக்கு ஆறுதலளித்து, அவர்களை முகாமில் விட்டுவிட்டு மீண்டும் போரிட வந்தனர்.(12) மூத்தோர், சிறியோர் வரிசையில் தங்கள் தேர்களை அணிவகுத்துக் கொண்ட சிலர், மீண்டும் பாண்டவர்களை எதிர்த்துப் போரிடச் சென்றனர்.(13) (தங்கள தேர்களில்) மணிவரிசைகளால் மறைக்கப்பட்ட அந்த வீரர்கள், மூன்று உலகங்களையும் வெற்றிகொள்ளும் நோக்குடன் செல்லும் தைத்தியர்கள் மற்றும் தானவர்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(14) தங்கத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்கள் வாகனங்களில் பதற்றத்துடன் விரைந்த சிலர், பாண்டவப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் இருந்த திருஷ்டத்யும்னனுடன் போரிட்டனர்.(15)

பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னன், பெரும் தேர்வீரனான சிகண்டி, நகுலனின் மகனான சதானீகன் ஆகியோர் எதிரியின் தேர்ப்படையோடு போரிட்டனர்.(16) அப்போது சினத்தால் நிறைந்தவனும், ஒரு பெரும்படையால் ஆதரிக்கப்பட்டவனுமான பாஞ்சால இளவரசன் {திருஷ்டம்யும்னன்}, கோபக்காரர்களான உமது துருப்பினரைக் கொல்லும் விருப்பத்தோடு அவர்களை நோக்கி விரைந்தான்.(17) பிறகு, உமது மகன் {துரியோதனன்}, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதரே, இவ்வாறு தன்னை நோக்கி விரைந்து வந்த அந்தப் பாஞ்சால இளவரசன் மீது கணைமாரிகள் பலவற்றை ஏவினான்.(18) அப்போது திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா, வில்லைக் கொண்டு போரிட்டு வந்த உமது மகனின் {துரியோதனனின்} கணைகள் பலவற்றால் மார்பிலும், கரங்களிலும் வேகமாகத் துளைக்கப்பட்டான்.(19) கூரிய வேல்களால் துளைக்கப்பட்ட யானையொன்றைப் போல ஆழத்துளைக்கப்பட்ட அந்தப் பெரும் வில்லாளி {திருஷ்டத்யும்னன்}, தன் கணைகளைக் கொண்டு துரியோதனனின் நான்கு குதிரைகளை யமலோகத்திற்கு அனுப்பிவைத்தான். அடுத்ததாக, மற்றோர் அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} கொண்டு, அவன் தன் எதிரியுடைய {துரியோதனனுடைய} சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தெடுத்தான்.(20)

எதிரிகளைத் தண்டிப்பவனான மன்னன் துரியோதனன், இவ்வாறு தன் தேரை இழந்து, ஒரு குதிரையின் முதுகில் ஏறிக்கொண்டு, ஒரு தொலைவான இடத்திற்குப் பின்வாங்கிச் சென்றான்.(21) தன் படையானது ஆற்றலை இழந்ததைக் கண்டவனும், வலிமைமிக்கவனுமான உமது மகன் துரியோதனன், ஓ! மன்னா, சுபலன் மகன் {சகுனி} இருந்த இடத்திற்குச் சென்றான்.(22) கௌரவத் தேர்கள் நொறுக்கப்பட்டபோது, தேர்வீரர்களான அந்த ஐந்து பாண்டவர்களையும் மூவாயிரம் பெரும் யானைகள் சூழ்ந்து கொண்டனர்.(23) யானைப்படையால் சூழப்பட்டவர்களான அந்த ஐந்து சகோதரர்களும், ஓ! பாரதரே, ஓ! மனிதர்களில் புலியே, மேகங்களால் மறைக்கப்பட்ட கோள்களை {கிரகங்களைப்} போல அழகாகத் தெரிந்தனர்.(24) வலிமைமிக்கக் கரங்களையும், வெண்குதிரைகளையும், இலக்கில் துல்லியத்தையும் கொண்டவனான அர்ஜுனன், ஓ! மன்னா, கிருஷ்ணனைத் தன் சாரதியாகக் கொண்டு தன் தேரில் சென்று கொண்டிருந்தான்.(25)

மலைகளைப் போன்ற அந்தப் பெரும் யானைகளால் சூழப்பட்ட அவன் {அர்ஜுனன்}, கூரியவையும், பளபளக்கப்பட்டவையுமான தன் கணைகளால் அவ்விலங்குகளை அழிக்கத் தொடங்கினான்.(26) தனித்தனி கணைகளால் கொல்லப்பட்ட பெரும் யானைகள் ஒவ்வொன்றும், சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்டவையாகவோ, வீழ்ந்து கொண்டிருப்பவையாகவோ, சிதைக்கப்படுபவையாகவோ இருப்பதை நாங்கள் கண்டோம்.(27) மதங்கொண்ட யானையைப் போன்றவனான பீமசேனன், அந்த ஆனைகளைக் கண்டு, உறுதிமிக்கத் தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தண்டந்தரித்த யமனைப் போலத் தன் தேரில் இருந்து கீழே குதித்து அவற்றை நோக்கி விரைந்து சென்றான்.(28) பாண்டவர்களில் பெரும் தேர்வீரனான அவன் {பீமன்}, உயர்த்தப்பட்ட கதாயுதத்துடன் வருவதைக் கண்ட உமது படைவீரர்கள் அச்சத்தால் நிரம்பியவர்களாக மலமும், சிறுநீரும் கழித்தனர்.(29) அப்போது நாங்கள், பீமனின் கதாயுதத்தால் மத்தகம் பிளக்கப்பட்டு, அங்கமெல்லாம் குருதியால் நனைக்கப்பட்டு அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டிருப்பவையாக மலைகளைப் போன்ற அந்தப் பெரிய யானைகளைக் கண்டோம்.(30)

பீமனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட அந்த யானைகள், வலியால் கதறிக் கொண்டே அவனிடம் இருந்து அப்பால் ஓடிச்சென்று, சிறகிழந்த மலைகளைப் போலக் கீழே விழுந்தன.(31) மத்தகம் பிளக்கப்பட்டு அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருப்பவையோ, கீழே விழுந்து கொண்டிருப்பவையோவான அந்த யானைகள் எண்ணிக்கையில் பலவாக இருப்பதைக் கண்டு உமது படைவீரர்கள் அச்சத்தை அடைந்தனர்.(32) பிறகு, யுதிஷ்டிரனும், மாத்ரியின் இரு மகன்களும் {நகுல, சகாதேவன்} கோபத்தால் நிறைந்து, கழுகின் இறகுகளாலான சிறகுகளைக் கொண்ட கணைகளால் அந்த யானைவீரர்களைக் கொல்லத் தொடங்கினர்.(33) போரில் தோல்வியடைந்த (குரு) மன்னன் {துரியோதனன்} அவ்விடத்தில் இருந்து குதிரையின் முதுகிலேறி தப்பிச் சென்ற பிறகு, (கௌரவ) யானைகளால் பாண்டவர்கள் அனைவரும் சூழப்பட்டிருப்பதைத் திருஷ்டத்யும்னன் கண்டான்.(34) ஓ! ஏகாதிபதி, பாஞ்சால மன்னனின் மகனான திருஷ்டத்யும்னன் இதைக் கண்டு, அந்த யானைகள் அனைத்தையும் கொல்ல விரும்பி அவற்றை நோக்கிச் சென்றான்.(35)

அதேவேளையில், தேர்ப்படைக்கு மத்தியில் துரியோதனனைக் காணாதவர்களான அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர், “துரியோதனன் எங்குச் சென்றுவிட்டான்?” என்று அங்கே இருந்த க்ஷத்திரியர்கள் அனைவரிடமும் கேட்டனர்.(36) அந்தப் பேரழிவுக்கு மத்தியில் மன்னனை {துரியோதனனைக்} காணாதவர்களான அந்தப் பெரும் தேர்வீரர்கள் அனைவரும், உமது மகன் கொல்லப்பட்டதாக நினைத்தனர். எனவே, துன்பம் நிறைந்த முகங்களுடன் அவர்கள் அவனைக் குறித்து விசாரித்தனர்.(37) அவனுடைய சாரதி வீழ்ந்ததும் அவன் {துரியோதனன்} சுபலனின் மகனிடம் {சகுனியிடம்} சென்று விட்டதாகச் சிலர் அவர்களிடம் சொன்னார்கள்.(38) காயங்களுடன் அங்கே மிகவும் சிதைக்கப்பட்டிருந்த சில க்ஷத்திரியர்கள், “துரியோதனனால் இங்கே என்ன தேவை இருக்கிறது? அவன் இன்னும் உயிரோடிருந்தால் பாருங்கள். ஒற்றுமையுடன் நீங்கள் அனைவரும் போரிடுவீராக. மன்னன் உங்களுக்கு என்ன செய்யப் போகிறான்?” என்று சொன்னார்கள்.(39)

மிகவும் சிதைக்கப்பட்டவர்களும், தங்கள் உறவினர்கள் பலரை இழந்தவர்களும், எதிரியின் கணைகளால் இன்னும் பீடிக்கப்பட்டுக் கொண்டிருந்தவர்களுமான வேறு சில க்ஷத்திரியர்கள், “நம்மைச் சூழ்ந்திருக்கும் இந்தப் படைகளைக் கொல்வோம். யானைகளைக் கொன்றதும் பாண்டவர்கள் இங்கே வருகிறார்கள் பாருங்கள்” என்று தெளிவற்ற வார்த்தைகளைச் சொன்னார்கள்.(40,41) அவர்களுடைய இவ்வார்த்தைகளைக் கேட்ட அஸ்வத்தாமன், பாஞ்சால மன்னனின் தடுக்கப்படமுடியாத படையைத் துளைத்துக் கொண்டு, கிருபருடனும், கிருதவர்மனுடனும் சேர்ந்து சுபலனின் மகன் {சகுனி} இருக்குமிடத்திற்குச் சென்றான். உண்மையில், உறுதிமிக்க வில்லாளிகளான அந்த வீரர்கள் தேர்ப்படையை விட்டுவிட்டு (துரியோதனனைத் தேடி) சென்றனர்.(42,43) அவர்கள் அங்கிருந்த சென்ற பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யுமன்ன தலைமையிலான பாண்டவர்கள் தங்கள் எதிரிகளைக் கொல்லத் தொடங்கினர்.(44) வீரமும், துணிச்சலும் கொண்டவர்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அவர்களை உற்சாகமாக விரைவதைக் கண்டவர்களும், முகம் வெளிறியவர்களுமான உமது துருப்பினர், தங்கள் உயிர்களில் நம்பிக்கையிழந்தனர்.(45)

கிட்டத்தட்ட ஆயுதங்களை இழந்தவர்களும், (எதிரியால்) சூழப்பட்டவர்களுமான நமது படைவீரர்களைக் கண்டவனும், இரு வகைப் படைகளை மட்டுமே கொண்டவனுமான {சஞ்சயனாகிய} நான், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயிரைத் துச்சமாக மதித்து,(46) நமது படையின் ஐந்து தலைவர்களுடன் சேர்ந்து கொண்டு, சரத்வான் மகன் {கிருபர்} நின்று கொண்டிருந்த இடத்தில் நம் மனிதர்களை நிறுத்தி, பாஞ்சால இளவரசனின் {திருஷ்டத்யும்னனின்} படைகளோடு போரிட்டேன்.(47) கிரீடியின் {அர்ஜுனனின்} கணைகளால் நாங்கள் பீடிக்கப்பட்டோம். இருப்பினும், எங்களுக்கும், திருஷ்டத்யும்னனின் படைப்பிரிவுக்கும் இடையில் ஒரு கடும்போர் நடந்தது. இறுதியில் பின்னவனால் {திருஷ்டத்யும்னனால்} வெல்லப்பட்ட நாங்கள் அனைவரும் அம்மோதலில் இருந்து பின்வாங்கிச் சென்றோம்.(48) அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி எங்களை எதிர்த்து விரைந்து வருவதை நான் கண்டேன். அந்தப் போரில் நானூறு {400} தேர்களுடன் அந்த வீரன் எங்களைப் பின்தொடர்ந்து வந்தான்.(49) குதிரைகள் களைத்துப் போயிருந்த திருஷ்டத்யும்னனிடம் இருந்து பெருங்கடினத்துடன் தப்பித்த நான், நகரத்திற்குள் வீழும் பாவியைப் போல மாதவனின் {சாத்யகியின்} படைகளுக்கு மத்தியில் விழுந்தேன். அங்கே குறுகிய காலத்திற்குச் சீற்றமும் கடுமையும் கொண்ட ஒரு போர் நடந்தது.(50)

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சாத்யகி, என்னை உயிரோடு பிடிக்க விரும்பி என் கவசத்தை வெட்டினான். உணர்விழந்தவனாகத் தரையில் கிடந்த என்னை அவன் {சாத்யகி} கைப்பற்றினான் {உயிரோடு பிடித்தான்}.(51) அப்போது குறுகிய காலத்திற்குள்ளாகவே பீமசேனனின் கதாயுதத்தினாலும், அர்ஜுனனின் கணைகளாலும் அந்த யானைப்படையானது அழிக்கப்பட்டது.(52) மலைகளைப் போன்று பெரியவையான அந்த வலிமைமிக்க யானைகள், நொறுங்கிய அங்கங்களுடன் அனைத்துப் பக்கங்களிலும் விழுந்ததன் விளைவால், தங்கள் வழி முற்றிலும் அடைக்கப்பட்டதைப் பாண்டவப் போர்வீரர்கள் கண்டனர்.(53) அப்போது வலிமைமிக்கப் பீமசேனன், ஓ! ஏகாதிபதி, அந்தப் பெரும் யானைகளை இழுத்துத் தள்ளி, பாண்டவர்கள் வெளியே வருவதற்கான வழியை உண்டாக்கினான்.(54) அதேவேளையில், அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர், தேர்ப்படைக்கு மத்தியில் எதிரிகளைத் தண்டிப்பவனான துரியோதனனைக் காணாமல், உமது அரச மகனைத் தேடினர்.(55) அந்தப் பயங்கரப் பேரழிவின் போது, பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனைக்} கைவிட்ட அவர்கள், மன்னனைக் காணும் ஆவலால் சுபலன் மகன் {சகுனி} இருந்த இடத்திற்குச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.(56)

துரியோதனனின் தம்பிகளைக் கொன்ற பீமன்! – சல்லிய பர்வம் பகுதி – 26-எஞ்சியிருந்த துரியோதனனின் தம்பிகள் பீமனை எதிர்த்து வந்தது; பீமனைத் தாக்கிய சுருதர்வன்; துரியோதனனின் தம்பியரில் பதினோரு பேரைக் கொன்ற பீமன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனால் {பீமனால்} அந்த யானைப்படை கொல்லப்பட்ட பிறகு, போரில் பீமசேனனால் உமது படை இவ்வாறு கொல்லப்பட்டபோது,(1) தண்டம் தரித்தவனும், சினத்துடன் கூடியவனுமான, அனைத்தையும் அழிப்பவனுமான அந்தகனைப் போலத் தெரிந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவனைக் கண்டவர்களும்,(2) உடன்பிறந்த சகோதரர்களும், கொல்லப்படாமல் எஞ்சியிருப்பவர்களுமான உமது மகன்கள், குரு குலத்தவனான உமது மகன் துரியோதனன் காணப்படாத அந்த அந்த நேரத்தில் ஒன்றுகூடி பீமசேனனை எதிர்த்து விரைந்தனர்.(3) அவர்கள் துர்மர்ஷணன், சுருதாந்தன், ஜைத்ரன், பூரிபலன், ரவி, ஜயத்சேனன், சுஜாதன், எதிரிகளைக் கொல்பவனான துர்விஷகன்,(4) துர்விமோசனன் என்றழைக்கப்பட்ட ஒருவன், துஷ்பிரசாதன், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான சுருதர்வன் ஆகியோராவர். அவர்கள் அனைவரும் போரில் சாதித்தவர்களாக இருந்தனர்.(5)

இந்த உமது மகன்கள் ஒன்றாகச் சேர்ந்து, பீமசேனனை எதிர்த்து விரைந்து அனைத்துப் பக்கங்களிலும் அவனை அடைத்துக் கொண்டனர்.(6) பிறகு மீண்டும் தன் தேரில் ஏறிக் கொண்ட பீமன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே, உமது மகன்களின் முக்கிய அங்கங்களின் மேல் கூரிய கணைகளை ஏவத் தொடங்கினான்.(7) அந்தப் பயங்கரப் போரில் பீமசேனனின் கணைகளால் மறைக்கப்பட்ட உமது மகன்கள், பாதையில் குறுக்கிடும் யானையை இழுக்கும் மனிதர்களைப் போல அந்தப் போர்வீரனை {பீமனை} இழுக்கத் தொடங்கினர்.(8) சினத்தால் தூண்டப்பட்ட பீமசேனன், ஒரு கத்தித் தலை கணையால் {க்ஷுரப்ரத்தால்} துர்மர்ஷணனின் தலையை வெட்டி விரைவில் அதைப் பூமியில் வீழ்த்தினான்.(9) அடுத்ததாகப் பீமன், அனைத்து கவசங்களையும் ஊடுருவவல்ல மற்றொரு அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்}, வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகன் சுருதாந்தனைக் கொன்றான்.(10)

பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஒரு துணிக்கோல் கணையால் {நாராசத்தால்} ஜயத்சேனனை மிக எளிதாகத் துளைத்து, அந்தக் குரு குலக் கொழுந்தை அவனது தேரில் இருந்து வீழ்த்தினான். ஓ! மன்னா, கீழே விழுந்த அந்த இளவரசனும் உடனே இறந்தான்.(11) இதனால் சினம் தூண்டப்பட்ட உமது மகன் சுருதர்வன், கழுகின் இறகுகளால் சிறகமைந்த ஒரு நூறு நேரான கணைகளால் பீமனைத் துளைத்தான்.(12) அப்போது சினத்தால் எரிந்த பீமன், நஞ்சுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான மூன்று கணைகளால் ஜைத்ரன், ரவி, பூரிபலன் ஆகிய மூவரையும் துளைத்தான்.(13) இவ்வாறு தாக்கப்பட்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், வசந்தகாலத்தில் மலர்ந்திருப்பவையும், (விறகு வெட்டியால்) வெட்டப்படுபவையுமான கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலத் தங்கள் தேர்களில் இருந்து கீழே விழுந்தனர்.(14) பிறகு, அந்த எதிரிகளை எரிப்பவன் {பீமன்}, மிகக் கூர்மையான மற்றொரு அகன்ற தலை கணையை {பல்லத்தைக்} கொண்டு துர்விமோசனனைத் தாக்கி, அவனை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(15) இவ்வாறு தாக்கப்பட்ட அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {துர்விமோசனன்}, மலைச்சிகரத்தில் ஓங்கி வளர்ந்த மரம் ஒன்று காற்றால் முறிவதைப் போலத் தன் தேரில் இருந்து கீழே தரையில் விழுந்தான்.(16)

அடுத்ததாக அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, படைகளின் தலைமையில் இருந்த உமது மற்ற மகன்களான துஷ்பிரசாதன் மற்றும் சுஜாதன் ஆகிய இருவரில் ஒவ்வொருவரையும் அந்தப் போரில் இருகணைகளைக் கொண்டு தாக்கினான். அந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட அந்த முதன்மையான தேர்வீரர்கள் இருவரும் கீழே விழுந்தனர்.(17) அடுத்ததாக உமது மற்றொரு மகனான துர்விஷகனை நோக்கி விரைந்த பீமன், அந்தப் போரில் ஓர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்} அவனைத் துளைத்தான். அந்த இளவரசன், வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் தேரில் இருந்து கீழே விழுந்தான்.(18) அந்தப் போரில் தனியொருவனான பீமனால் தன் சகோதரர்களில் பலர் கொல்லப்படுவதைக் கண்ட சுருதர்வன், சினம் கொண்டு, உறுதியானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் வில்லை வளைத்து, சக்தியில் நஞ்சுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான எண்ணற்ற கணைகளை ஏவியபடியே பீமனை நோக்கி விரைந்தான்.(19,20)

அந்தப் பயங்கரப் போரில் பாண்டு மகனின் {பீமனின்} வில்லை வெட்டிய அந்தக் குரு இளவரசன் {சுருதர்வன்}, வில்லற்றவனான பீமனை இருபது கணைகளால் துளைத்தான்.(21) அப்போது, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டவனும் வலிமைமிக்கத் தேர்வீரனுமான பீமசேனன், “நில், நிற்பாயாக” என்று சொன்னபடியே உமது மகனை {சுருதர்வனைக்} கணைகளால் மறைத்தான்.(22) அவ்விருவருக்குள் நடைபெற்ற போரானது, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் வாசவனுக்கு {இந்திரனுக்கு}, அசுரன் ஜம்பனுக்கும் இடையில் நடைபெற்றதைப் போல அழகியதாகவும், கடுமையானதாகவும் இருந்தது.(23) யமனின் மரணக் கோலுக்கு {காலதண்டத்திற்கு} ஒப்பானவையும், அவ்விரு போர்வீரர்களால் ஏவப்பட்டவையுமான கூரிய கணைகளால், பூமி, வானம் மற்றும் திசைப்புள்ளிகள் அனைத்தும் மறைக்கப்பட்டன.(24) அப்போது சினத்தால் நிறைந்த சுருதர்வன், தன் வில்லை எடுத்துக் கொண்டு அந்தப் போரில் பீமசேனனின் கரங்களையும், மார்பையும் கணைகள் பலவற்றால் தாக்கினான்.(25)

வில்தரித்த உமது மகனால் {சுருதர்வனால்} ஆழத்துழைக்கப்பட்ட பீமன், முழு நிலவிலோ {பௌர்ணமியிலோ}, புதுநிலவிலோ {அமாவசையிலோ} கலங்கும் பெருங்கடலைப் போலப் பெருங்கலக்கமடைந்தான்.(26) அப்போது கோபத்தால் நிறைந்தவனான பீமன், ஓ! ஐயா, தன் கணைகளைக் கொண்டு, உமது மகனின் சாரதியையும், நான்கு குதிரைகளையும் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான்.(27) தேரற்றவனான அவனை {சுருதர்வனைக்} கண்டவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தங்கள் கரங்களின் நளினத்தை வெளிக்காட்டியபடியே, சிறகுகள் படைத்த கணைகளால் அவனை மறைத்தான்.(28) அப்போது, தேரற்றவனான சுருதர்வன், ஒரு வாளையும், கேடயம் ஒன்றையும் எடுத்துக் கொண்டான். எனினும், வாளுடனும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான கேடயத்துடனும் அந்த இளவரசன் திரிந்த போது, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஒரு கத்தித் தலைக் கணையால் {க்ஷுரப்ரத்தால்} அவனது {சுருதவர்மனது} தலையைத் தாக்கி, அதைப் பூமியில் வீழ்த்தினான்.(29) அந்தக் கத்தித் தலைக் கணையால் தலையற்றதாகச் செய்யப்பட்ட அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரனின் உடலானது, பேரொலியோல் பூமியை நிறைத்தபடியே தேரில் இருந்து கீழே விழுந்தது[1].(30)

உமது துருப்புகள் அந்த வீரனின் வீழ்ச்சியால் அச்சமடைந்திருந்தாலும், அந்தப்போரில் பீமசேனனுடன் போரிட விரும்பி அவனை எதிர்த்து விரைந்தன.(31) வீரனும், கவசந்தரித்தவனுமான அந்தப் பீமசேனன், கொல்லப்படாமல் எஞ்சியிருந்த அந்தத் துருப்புகளின் பெருங்கடலுக்கு மத்தியில் இருந்து தன்னை நோக்கி வேகமாக விரைந்து வந்த அந்தப் போர்வீரர்களை வரவேற்றான் {எதிர்த்தான்}. அவ்வீரனை அடைந்த அந்தப் போர்வீரர்கள், அவனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.(32) இவ்வாறு உமது போர்வீரர்களால் சூழப்பட்ட பீமன், ஆயிரங்கண் கொண்டவன் {இந்திரன்}, அசுரர்களைப் பீடிப்பதைப் போல, கூரிய கணைகளால் அவர்கள் அனைவரையும் பீடிக்கத் தொடங்கினான்.(33) தேர்க்கூடுகளுடன் கூடிய ஐநூறு {500} பெருந்தேர்களை அழித்த அவன் {பீமன்}, அந்தப் போரில் மீண்டும் எழுநூறு {700} யானைகளைக் கொன்றான்.(34) அடுத்ததாக அந்தப் பாண்டுவின் மகன், தன் வலிமைமிக்கக் கணைகளால் பத்தாயிரம் {10000} காலாட்படைவீரர்களைக் கொன்று, மேலும் எண்ணூறு {800} குதிரைகளையும் கொன்று பிரகாசமானவனாகத் தெரிந்தான்.(35)

உண்மையில், குந்தியின் மகனான அந்தப் பீமசேனன், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் உமது மகன்களைக் கொன்ற பிறகு, தன் நோக்கம் அடையப்பட்டதாகவும், தன் பிறப்பின் காரணம் நிறைவேறியதாகவும் கருதிக் கொண்டான்.(36) அந்நேரத்தில் உமது துருப்புகள், ஓ! பாரதரே, இவ்வகையில் போரிட்டவனும், உமது மக்களை இவ்வழியில் கொன்றவனுமான அந்தப் போர்வீரனைப் பார்க்கவும் துணியவில்லை.(37) குருக்கள் அனைவரையும் முறியடித்து, அவர்களின் தொண்டர்களையும் கொன்ற பீமன், தன் கக்கங்களை அறைந்து கொண்டதால் உண்டான ஒலியால் பெரும் யானைகளை அச்சுறுத்தினான்.(38) அப்போது, ஓ! ஏகாதிபதி, பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களை இழந்ததும், அப்போதைக்குச் சொற்பமான படைவீரர்களையே கொண்டிருந்ததுமான உமது படையானது, ஓ! மன்னா, மிகவும் உற்சாகமற்றதாக ஆனது” {என்றான் சஞ்சயன்}.(39)

மற்றுமொருவனைக் கொன்ற பீமன்! – சல்லிய பர்வம் பகுதி – 27-திருதராஷ்டிரன் மகன்களில் உயிரோடு எஞ்சியிருந்த இருவர்; அர்ஜுனனிடம் பேசிய கிருஷ்ணன்; திரிகர்த்தப் படையை நோக்கிச் சென்று சுசர்மனைக் கொன்ற அர்ஜுனன்; திருதராஷ்டிரன் மகனான சுதர்சனனைக் கொன்ற பீமன்; பீமனுக்கும் கௌரவப்படைக்கும் இடையில் ஏற்பட்ட போர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது பிள்ளைகளில் இன்னும் கொல்லப்படாதவர்களான துரியோதனன் மற்றும் உமது மகன் சுதர்சனன் ஆகிய இருவர் மட்டுமே அந்நேரத்தில் (கௌரவ) அந்தக் குதிரைப்படைக்கு மத்தியில் இருந்தனர்.(1) அந்தக் குதிரைப்படைக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த துரியோதனனைக் கண்ட தேவகியின் மகன் (கிருஷ்ணன்), குந்தியின் மகனான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்},(2) “நமது பாதுகாப்பைப் பெற்றிருந்த உறவினர்களான பெரும் எண்ணிக்கையிலான நமது எதிரிகள் கொல்லப்பட்டுவிட்டனர். அதோ, சஞ்சயனைக் கைப்பற்றிக் கொண்டு சிநியின் பேரன் {சாத்யகி} திரும்பி வருகிறான்.(3) நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும், ஓ! பாரதா, தார்தராஷ்டிரர்களுடனும், அவர்களின் தொண்டர்களுடனும் போரிட்டு களைத்துப் போயிருக்கின்றனர்.(4) கிருபர், கிருதவர்மன் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான அஸ்வத்தாமன் ஆகியோர் துரியோதனனின் தரப்பைவிட்டு, வேறெங்கோ தங்கள் நிலைகளைக் கொண்டுள்ளனர்.(5) துரியோதனனின் துருப்புகளைக் கொன்றுவிட்டு, அதோ பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, பிரபத்ரகர்களுக்கு மத்தியில் பேரழகுடன் நிற்கிறான்.(6)

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அதோ, தலைக்குமேல் வெண்குடை பிடிக்கப்பட்டு, சுற்றிலும் தன் பார்வையைச் சுழலவிட்டபடியே தன் குதிரைப்படைக்கு மத்தியில் துரியோதனன் நிற்கிறான்.(7) அவன், (எஞ்சியிருக்கும் தன்) படையை மீண்டும் அணிவகுத்திருக்கும் தன் படைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருக்கிறான். உனது கூரிய கணைகளால் இவனைக் கொன்றுவிட்டால், உன் நோக்கங்கள் அனைத்தையும் நீ அடைந்தவனாவாய்.(8) இந்தத் துருப்புகள், தங்களுக்கு மத்தியில் இருக்கும் உன்னைக் கண்டும், தங்கள் யானைப்படையின் அழிவைக் கண்டும் தப்பி ஓடாதவரை, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, நீ துரியோதனனைக் கொல்ல முயற்சிப்பாயாக.(9) யாராவது ஒருவர் பாஞ்சால இளவரசனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} சென்று, அவனை இந்த இடத்திற்கு வரச் சொல்லட்டும். ஓ! ஐயா, கௌரவத் துருப்புகள் அனைத்தும் களைத்துப் போயிருக்கின்றன. பாவியான துரியோதனனால் ஒருபோதும் தப்ப இயலாது.(10) போரில் பெரும் எண்ணிக்கையிலான உன் துருப்புகளைக் கொன்றிருக்கும் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பாண்டவர்கள் வெல்லப்பட்டதாக நம்பி செருக்கை வெளிப்படுத்துகிறான்.(11) அவனது துருப்புகள் பாண்டவர்களால் பீடிக்கப்பட்டு, கொல்லப்பட்டதைக் கண்டு, அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, அவனது அழிவுக்காகவே நிச்சயம் போரிட வருவான்” என்றான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட பல்குனன் {அர்ஜுனன்}, அவனிடம் {கிருஷ்ணனிடம்} மறுமொழியாக,(12)

“ஓ! கௌரவங்களை அளிப்பவனே, திருதராஷ்டிரரின் மகன்களில் கிட்டத்தட்ட அனைவரும் பீமரால் கொல்லப்பட்டுவிட்டனர். இருவர் மட்டுமே இன்னும் உயிருடன் எஞ்சியிருக்கின்றனர். எனினும், ஓ! கிருஷ்ணா, அவர்களும் இன்று தங்கள் அழிவை அடைவார்கள்.(13) பீஷ்மர் கொல்லப்பட்டார், துரோணரும் கொல்லப்பட்டார், வைகர்த்தனன் என்றும் அழைக்கப்படும் கர்ணனும் கொல்லப்பட்டான். மத்ரர்களின் மன்னனான சல்லியர் கொல்லப்பட்டார், ஓ! கிருஷ்ணா, ஜெயத்ரதனும் கொல்லப்பட்டான்.(14) ஓ! கிருஷ்ணா, சுபலனின் மகனான சகுனியின் துருப்புகளில் ஐநூறு குதிரைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஓ! ஜனார்த்தனா, தேர்களில் இன்னும் இருநூறே இருக்கின்றன. உறுதிமிக்க யானைகளில் இன்னும் நூறு மட்டுமே இருக்கின்றன. மூவாயிரம் காலாட்கள் மட்டுமே இன்னும் இருக்கின்றனர்.(15) அஸ்வத்தாமர், கிருபர், திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்}, உலூகன், சகுனி, சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோரும் இன்னும் எஞ்சியிருக்கின்றனர்.(16) இவையே, ஓ! மாதவா {கிருஷ்ணா}, துரியோதனனின் எஞ்சிய படையாக இருக்கின்றன. உண்மையில் இவ்வுலகத்தில் எவராலும் மரணத்தில் இருந்து தப்பிக்க இயலாது.(17)

இவ்வளவு பெரிய பேரழிவு ஏற்பட்டிருந்தாலும், இன்னும் துரியோதனன் உயிரோடிருப்பதைப் பார். எனினும், மன்னன் யுதிஷ்டிரர் இன்று தன் எதிரிகள் அனைவரிடம் இருந்தும் விடுபடுவார். எதிரிகளில் எவரும் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது என்றே நான் கருதுகிறேன்.(18) மனிதர்களைவிடவும் சக்தி வாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பினும், போர்க்களத்தில் இருந்து அவர்கள் தப்பி ஓடாமலிருந்தால், போர் எவ்வளவு மூர்க்கமாக நடைபெற்றாலும் நான் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் கொல்வேன்.(19) இன்றைய போரில் கோபத்தால் நிறையும் நான், என் கூரிய கணைகளால் காந்தார இளவரசனைக் {சகுனியைக்} கொல்வதன் மூலமாக, நீண்ட காலமாக அவதிப்பட்டு வரும் மன்னருடைய {யுதிஷ்டிரருடைய} தூக்கமற்ற நிலையை விலக்குவேன்.(20) சபையில் நடந்த சூதாட்டத்தில் தீய நடத்தை மூலமாக எங்களிடம் இருந்து சுபலனின் மகன் {சகுனி} வென்ற விலைமதிப்புமிக்க அனைத்துப் பொருட்களையும் மீண்டும் நான் வென்றெடுப்பேன்.(21) யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திலிருக்கும் {ஹஸ்தினாபுரத்தில் இருக்கும்} பெண்கள் அனைவரும், பாண்டவர்களின் கரங்களால் தங்கள் கணவர்கள், மகன்கள் ஆகியோர் போரில் கொல்லப்பட்டதைக் கேட்டு உரக்க ஓலமிடப் போகின்றனர்.(22)

ஓ! கிருஷ்ணா, இன்று நமது பணி முடிவை அடையும். இன்று துரியோதனன் சுடர்மிக்கத் தன் செழிப்பனைத்தையும், தன் உயிர் மூச்சையும் கூட விட்டுவிடுவான்.(23) ஓ! விருஷ்ணி குலத்தோனே, இன்று என்னால் தொடுக்கப்படும் போரில் இருந்து அவன் தப்பி ஓடவில்லையெனில், ஓ! கிருஷ்ணா, திருதராஷ்டிரரின் மூட மகன் {துரியோதனன்} இறந்துவிட்டதாகவே கருதிக் கொள்வாயாக.(24) அந்தக் குதிரைகள், என் வில்லின் நாணொலியையும், உன் உள்ளங்கையொலியையும் தாங்கிக் கொள்ள இயலாதவையாக இருக்கின்றன. ஓ! கிருஷ்ணா, அவற்றை நான் கொல்லும் வகையில், நீ அங்கே செல்வாயாக” {என்றான் அர்ஜுனன்}.(25)

பெரும் மனோவலிமை கொண்ட அந்தப் பாண்டுவின் மகனால் இவ்வாறு சொல்லப்பட்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் படைப்பிரிவை நோக்கித் தன் குதிரைகளைத் தூண்டினான்.(26) (துரியோதனன் இருந்த) அந்தப் படையைக் கண்டு, பீமசேனன், அர்ஜுனன் மற்றும் சகாதேவன் ஆகிய மூன்று வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அதைத் தாக்குவதற்காகத் தங்களை ஆயத்தம் செய்து கொண்டு, துரியோதனனைக் கொலும் விருப்பத்தால் உரத்த சிங்க முழக்கம் செய்தபடியே அதை {அந்தப் படையை} எதிர்த்து ஒன்றாக விரைந்து சென்றனர்.(27) உயர்த்திய விற்களுடன் ஒன்றாகச் சேர்ந்து விரைந்து வரும் அம்மூன்று போர்வீரர்களையும் கண்ட சுபலனின் மகன் {சகுனி}, எதிரிகளான பாண்டவர்களை எதிர்த்து அந்த இடத்தை நோக்கிச் சென்றான்.(28) உமது மகன் சுதர்சனன் பீமசேனனை எதிர்த்து விரைந்து சென்றான். சுசர்மனும், சகுனியும் கிரீடியுடன் {அர்ஜுனனுடன்} மோதினார்கள். குதிரையின் முதுகில் இருந்து உமது மகன் துரியோதனன் சகாதேவனை எதிர்த்துச் சென்றான்.(29)

அப்போது உமது மகன் {துரியோதனன்}, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, கவனத்துடனும், பெரும் வேகத்துடனும், பலத்துடனும், ஒரு வேலால் சகாதேவனின் தலையைத் தாக்கினான்.(30) உமது மகனால் இவ்வாறு தாக்கப்பட்ட சகாதேவன், அங்கமெங்கும் குருதியால் குளித்து, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(31) பிறகு, தன் உணர்வுகள் மீண்ட சகாதேவன், ஓ! மன்னா, சினத்தால் நிறைந்து, கூரிய கணைகளால் துரியோதனனை மறைத்தான்.(32) பார்த்தன் என்றும் வேறு பெயரால் அழைக்கப்படுபவனும், தன் ஆற்றலை வெளிப்படுத்தியவனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, குதிரைமுதுகுகளில் இருந்த துணிச்சல்மிக்கப் போராளிகள் பலரின் தலைகளை வெட்டினான்.(33) உண்மையில் அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்}, தனது கூரிய கணைகள் பலவற்றால் அந்த (குதிரைப்) படையை அழித்தான். குதிரைகள் அனைத்தையும் வீழ்த்திய அவன், அடுத்ததாக, திரிகர்த்தர்களின் தேர்களை எதிர்த்துச் சென்றான்.(34) இதன் காரணமாக ஒன்று சேர்ந்த திரிகர்த்தர்களில் பெரும் தேர்வீரர்கள், கணைமாரிகளால் அர்ஜுனனையும், வாசுதேவனையும் மறைத்தனர்.(35)

பெரும்புகழைக் கொண்டவனான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கத்தித் தலைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} சத்தியகர்மனைத் தாக்கி, தன் எதிராளியுடைய தேரின் ஏர்க்கால்களையும் அறுத்தான்.(36) அந்தக் கொண்டாடப்பட்ட வீரன் சிரித்துக் கொண்டே, ஓ! தலைவா, பிரகாசமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன் எதிராளியின் {சத்தியகர்மனின்} தலையை மற்றொரு கத்தித் தலைக் கணையால் அறுத்தான்.(37) அடுத்ததாக அவன், போர்வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பசித்திருந்த சிங்கமொன்று காட்டில் ஒரு மானைத் தாக்குவதைப் போலச் சத்யேஷுவைத் தாக்கினான்.(38) அவனைக் கொன்ற பார்த்தன், மூன்று கணைகளால் சுசர்மனையும் துளைத்து, தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் தேர்வீரர்கள் அனைவரையும் கொன்றான்.(39) பிறகு அவன், வெகுகாலம் பேணிக் காக்கப்பட்ட கோபமெனும் கடும் நஞ்சைக் கக்கியபடியே பிரஸ்தலத்தின் ஆட்சியாளனான சுசர்மனை எதிர்த்துப் பெரும் வேகத்தோடு விரைந்தான்.(40)

ஓ! பாரதக் குலத்தின் காளையே, முதலில் ஒரு நூறு கணைகளால் அவனை மறைத்த அர்ஜுனன், பிறகு அந்த வில்லாளியின் குதிரைகள் அனைத்தையும் கொன்றான்.(41) பிறகு, தனது வில்லின் நாண்கயிற்றில், யமதண்டத்திற்கு ஒப்பான வலிமைமிக்கக் கணையொன்றைப் பொருத்திய பார்த்தன் {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே சுசர்மனைக் குறி பார்த்து அவன் மீது வேகமாக அதைத் தொடுத்தான்.(42) கோபத்தால் சுடர்விட்ட அந்த வில்லாளியால் ஏவப்பட்ட அந்தக் கணையானது, சுசர்மனை அடைந்து, அந்தப் போரில் அவனது இதயத்தைத் துளைத்துச் சென்றது.(43) ஓ! ஏகாதிபதி, பாண்டவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியுறச் செய்யும் வகையிலும், உமது போர்வீரர்கள் அனைவரையும் துன்புறச் செய்யும் வகையிலும் அந்தச் சுசர்மன் உயிரை இழந்து பூமியில் விழுந்தான்.(44) அந்தப் போரில் சுசர்மனைக் கொன்ற பார்த்தன், பிறகு பெரும் தேர்வீரர்களான, அந்த மன்னனின் {சுசர்மனின்} முப்பத்தைந்து {35} மகன்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான்.(45) சுசர்மனின் தொண்டர்கள் அனைவரையும் கூரிய கணைகளால் கொன்றவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அர்ஜுனன், எஞ்சியிருக்கும் பாரதப் படையை எதிர்த்துச் சென்றான்.(46)

அந்தப் போரில் சினத்தால் நிறைந்த பீமன், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, சிரித்துக் கொண்டே உமது மகனான சுதர்சனனைக் காணமுடியாதபடி மறைத்தான்.(47) சினத்தால் நிறைந்தவனான அந்தப் பாண்டுவின் மகன், சிரித்துக் கொண்டே, பெரும் கூர்மை கொண்ட கத்தித் தலைக் கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} தன் எதிராளியின் {சுதர்சனனின்} தலையைக் கொய்தான்[1].(48) அந்த (குரு) வீரனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்தப் போரில் அவனது {சுதர்சனனின்} தொண்டர்கள் பீமனைச் சூழ்ந்து கொண்டு கூரிய கணைகளின் மாரியை அவன் மீது ஏவினார்கள்.(49) எனினும் விருகோதரன் {பீமன்}, தன்னைச் சுற்றிலும் மறைத்திருந்த படையை, இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட தன் கூரிய கணைகளால் மறைத்தான். ஓ பாரதக் குலத்தின் காளையே, மிகக் குறுகிய காலத்திற்குள்ளாவே பீமன் அவர்கள் அனைவரையும் கொன்றான்.(50)

இவ்வாறு அழிவை அடைந்து கொண்டிருந்தபோது, பெரும் வலிமை கொண்ட கௌரவ வீரர்கள் பலர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமனை அணுகி அவனோடு போரிடத் தொடங்கினர்.(51) அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஓ! மன்னா, தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் மறைத்தான். அதேபோலவே, ஓ! ஏகாதிபதி, உமது வீரர்களும் அனைத்துப்பக்கங்களில் இருந்தும் பாண்டவர்களில் பெரும் தேர்வீரர்களை மறைத்தனர்.(52) அப்போது இரு தரப்பைச் சேர்ந்த போர்வீரர்கள் அனைவரும், இவ்வாறு ஒருவரோடொருவர் போரிட்டபடியே மிகவும் கலக்கமடைந்தனர்.(53) ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இரு படைகளின் போராளிகளும், ஓ! மன்னா, (இறந்து போன) தங்கள் உறவினர்களுக்காக உரத்த ஓலமிட்டபடியே கீழே விழத் தொடங்கினர்” {என்றான் சஞ்சயன்}.(54)

சகுனியையும், உலூகனையும் கொன்ற சகாதேவன்! – சல்லிய பர்வம் பகுதி – 28-காதேவனை எதிர்த்து வந்த சகுனி; பீமனோடு மோதிய சகுனியும், உலூகனும்; போர்க்களத்தின் கோரநிலை; சகாதேவனைத் தாக்கிய உலூகன்; படைவீரர்களுக்கு உற்சாகமூட்டிய துரியோதனன்; உலூகனின் தலையைக் கொய்த சகாதேவன்; சகுனி ஏவிய ஆயுதங்களைக் கலங்கடித்த சகாதேவன்; சகுனியைக் கொன்ற சகாதேவன்; காண்டீவத்தின் நாணொலி கேட்டு அஞ்சி ஓடிய வீரர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுக்கு அழிவைத் தந்த அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுபலனின் மகனான சகுனி, சகாதேவனை எதிர்த்து விரைந்தான்.(1) வீரச் சகாதேவனோ, சகுனி தன்னை நோக்கி வேகமாக விரைந்தபோது, பூச்சிக்கூட்டங்களைப் போன்ற எண்ணற்ற வேகமான கணைமாரியை அந்தப் போர்வீரனின் {சகுனியின்} மீது ஏவினான்.(2) அந்த நேரத்தில் உலூகனும் பீமனோடு மோதி, பத்து கணைகளால் அவனைத் துளைத்தான். அதேவேளையில் மூன்று கணைகளால் பீமனைத் துளைத்த சகுனி, ஓ! ஏகாதிபதி, தொண்ணூறால் சகாதேவனை மறைத்தான்.(3) உண்மையில், போரில் ஒருவரோடொருவர் மோதிக்கொண்ட அந்த வீரர்கள், கங்க மற்றும் மயில் இறகுகளைக் கொண்டவையும், தங்கத்தாலான சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கள் காதுவரை இழுக்கப்பட்ட நாண்கயிறுகளில் இருந்து ஏவப்பட்டவையுமான கூரிய கணைகள் பலவற்றால் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர்.(4) அவர்களின் விற்களில் இருந்தும், கரங்களில் இருந்தும் ஏவப்பட்ட அந்தக் கணைமாரிகள், ஓ! ஏகாதிபதி, மேகத்தில் இருந்து பொழியும் அடர்த்தியான மழைப்பொழிவைப் போலத் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தன.(5)

அப்போது சினத்தால் நிறைந்தவனான பீமன் மற்றும் பெரும் வீரம் கொண்டவனான சகாதேவன் ஆகிய இருவரும், பெரும் வலிமையைக் கொண்டவர்களாக, மிகப் பெரும் பேரழிவையுண்டாக்கியபடி அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தனர்.(6) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் படையானது, அவ்விரு வீரர்களால் ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான கணைகளால் மறைக்கப்பட்டது. அதன் காரணமாகக் களத்தில் பல பகுதிகளில் ஆகாயமானது இருளால் மறைக்கப்பட்டது.(7) ஓ! ஏகாதிபதி, கணைகளால் மறைக்கப்பட்ட குதிரைகள், ஓடிக்கொண்டிருந்த பெரும் எண்ணிக்கையிலான போராளிகளை இழுத்துச் சென்று, அவர்கள் கொல்லப்பட்டதன் விளைவாக, போர்க்களத்தில் உள்ள பல பகுதிகளின் வழித்தடங்கள் முற்றாக மறைக்கப்பட்டன.(8) சாரதிகளுடன் கொல்லப்பட்ட குதிரைகள், உடைந்த கேடயங்கள், வேல்கள், வாள்கள், ஈட்டிகள், சூலங்கள் ஆகியவற்றால் சுற்றிலும் மறைக்கப்பட்ட பூமியானது, மலர்களால் மூடப்பட்டுக் கிடப்பதைப் போலப் பலவண்ணங்களில் தென்பட்டது.(9) ஒருவரோடொருவர் மோதிக்கொண்டு, போரில் திரிந்து கொண்டிருந்த போராளிகள், ஓ! மன்னா, கோபத்தால் நிறைந்து ஒருவரையொருவர் கொன்றனர்.(10)

விரைவில் அந்தப் போர்க்களமானது, காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், கோபத்தில் கண்கள் புரண்டு, சினத்தால் உதடுகள் கடிக்கப்பட்ட நிலையில் இருந்த முகங்களால் அருளப்பட்டவையுமான தலைகளால் மறைக்கப்பட்டதாயிற்று.(11) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் யானைகளின் துதிக்கைகளுக்கு ஒப்பானவையும், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், தோலுறைகளால் மறைக்கப்பட்டவையும், வாள்களையும், வேல்களையும், போர்க்கோடரிகளையும் இன்னும் பிடித்துக் கொண்டிருந்தவையுமான போர்வீரர்களின் வெட்டப்பட்ட கரங்களாலும்,(12) எழுந்து நின்ற நிலையில், இரத்தம் சிந்தியபடி களத்தில் ஆடிக் கொண்டிருந்த தலையற்ற உடல்களாலும் மறைக்கப்பட்டும், ஊனுண்ணும் பல்வேறு விலங்குகளால் மொய்க்கப்பட்டும், ஓ! தலைவா, பூமியானது பயங்கரத் தன்மையை வெளிப்படுத்தியது.(13) பாரதப் படையானது எஞ்சிய சிறு குழுவாகக் குறைக்கப்பட்ட பிறகு, அந்தப் பயங்கரப் போரில் மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவர்கள், கௌரவர்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பத் தொடங்கினர்.(14)

அதே வேளையில், வீரனான சுபலன் மகனின் {சகுனியின்} வீரமகன் {உலூகன்}, ஒரு வேலால் {பராசத்தால்} சகாதேவனின் தலையை மிகப் பலமாகத் தாக்கினான்.(15) அந்த அடியின் விளைவால் மிகவும் கலக்கமடைந்த சகாதேவன், ஓ! ஏகாதிபதி, கீழே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(16) சகாதேவனை அந்த அவலநிலையில் கண்ட வீரப் பீமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து மொத்த குரு படையையும் தடுத்தான்.(17) அவனது துணிக்கோல் கணைகளால் {நாராசங்களால்} பகைவீரர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் துளைத்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {பீமன்}, அவர்களைத் துளைத்தபிறகு சிங்க முழக்கம் செய்தான்.(18) அந்த முழக்கத்தால் அச்சமடைந்த சகுனியின் தொண்டர்கள், தங்கள் குதிரைகள் மற்றும் யானைகளுடன் அச்சத்தால் அவசரமாக அங்கிருந்து தப்பி ஓடினர்.(19)

அவர்கள் பிளந்தோடுவதைக் கண்ட மன்னன் துரியோதனன், அவர்களிடம், “அறநெறியறியா க்ஷத்திரியர்களே, நிற்பீராக. போரிடுவீராக. தப்படி ஓடுவதால் என்ன பயன்? புறமுதுகிடாமல் போரில் உயிர்மூச்சை விடும் வீரன், இங்கேயும் புகழை அடைந்து, இதன்பிறகும் அருள் உலகங்களில் மகிழ்கிறான்” என்றான்.(20) இவ்வாறு மன்னனால் உற்சாகமூட்டப்பட்ட சுபலன் மகனின் {சகுனியின்} தொண்டர்கள், மரணத்தையே தங்கள் இலக்காக்கிக் கொண்டு பாண்டவர்களை எதிர்த்து மீண்டும் விரைந்தனர்.(22) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அப்படி விரைந்து வந்த போர்வீரர்களால் உண்டாக்கப்பட்ட ஒலியானது, கலங்கிய கடலுக்கு ஒப்பாகப் பயங்கரமானதாக இருந்தது.(23) ஓ! ஏகாதிபதி, போரில் இவ்வாறு முன்னேறிவரும் சுபலன் மகனின் {சகுனியின்} தொண்டர்களைக் கண்டவர்களும், வெற்றியாளர்களுமான பாண்டவர்கள் அவர்களை எதிர்த்துச் சென்றனர்.(24) சிறிது ஆறுதலையடைந்தவனும், வெல்லப்படமுடியாதவனுமான சகாதேவன், ஓ! ஏகாதிபதி, பத்து கணைகளால் சகுனியையும், மூன்றால் அவனது குதிரைகளையும் துளைத்தான். பிறகு அவன், பெரும் எண்ணிக்கையிலான வேறு சில கணைகளால் சுபலன் மகனின் {சகுனியின்} வில்லை மிக எளிதாக வெட்டினான்.(25) எனினும், போரில் வெல்லப்பட முடியாதவனான சகுனி, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு அறுபது கணைகளால் நகுலனையும், அடுத்தது ஏழால் பீமசேனனையும் துளைத்தான்.(26)

உலூகனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் தன் தந்தையை {சகுனியைக்} காக்க விரும்பி, ஏழு கணைகளால் பீமனையும், எழுபதால் சகாதேவனையும் துளைத்தான்.(27) அம்மோதலில் பீமசேனன், பல கூரிய கணைகளால் உலூகனையும், அறுபத்துநான்கால் சகுனியையும், அவர்களைச் சுற்றிப் போரிட்டுக் கொண்டிருந்த பிற போர்வீரர்கள் ஒவ்வொருவரையும் மும்மூன்றாலும் துளைத்தான்.(28) எண்ணெயில் தோய்க்கப்பட்ட கணைகளைக் கொண்டு பீமசேனனால் தாக்கப்பட்ட கௌரவர்கள், அந்தப் போரில் சினத்தால் நிறைந்து, மின்னலால் சக்தியூட்டப்பட்ட மேகங்கள் மலைச்சாரில் மழையைப் பொழிவதைப் போலக் கணைமாரிகளால் சகாதேவனை மறைத்தனர்.(29)

அப்போது, வீரச் சகாதேவன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன்னை எதிர்த்து வந்த உலூகனின் தலையை ஓர் அகன்ற தலைக் கணையால் {பல்லத்தால்} கொய்தான்.(30) சகாதேவனால் கொல்லப்பட்ட உலூகன், அந்தப் போரில் பாண்டவர்களை மகிழ்வித்தபடியே, தன் அங்கங்கள் அனைத்தும் குருதியில் குளித்த நிலையில், தனது தேரில் இருந்து கீழே பூமியில் விழுந்தான்.(31) தன் மகன் {உலூகன்} கொல்லப்பட்டதைக் கண்ட சகுனி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கண்ணீரால் தடைபட்ட குரலுடனும், நீண்ட பெருமூச்சுகளை விட்டபடியும் விதுரனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.(32) கண்ணீர் நிறைந்த கண்களுடன் ஒரு கணம் சிந்தித்த சகுனி, கடுமூச்சுவிட்டபடியே சகாதேவனை அணுகி, அவனை மூன்று கணைகளால் துளைத்தான்.(33) சுபலன் மகனால் {சகுனியால்} ஏவப்பட்ட அந்தக் கணைகளைக் கணைமாரிகளால் கலங்கடித்த அந்த வீரச் சகாதேவன், ஓ! ஏகாதிபதி, அந்தப் போரில் தன் எதிராளியின் {சகுனியின்} வில்லை அறுத்தான்.(34)

தன் வில்லானது வெட்டப்பட்டதைக் கண்டவனும், சுபலனின் மகனுமான சகுனி, ஓ! மன்னா, உறுதியான ஒரு வாளை எடுத்துக் கொண்டு, அதைச் சகாதேவன் மீது வீசினான்.(35) எனினும் பின்னவன் {சகாதேவன்}, ஓ! ஏகாதிபதி, அம்மோதலில் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த சுபலன் மகனின் {சகுனியின்} அந்தப் பயங்கரமான வாளை மிக எளிதாக இரண்டு துண்டுகளாக வெட்டினான்.(36) தன் வாளானது இரண்டாக வெட்டப்பட்டதைக் கண்ட சகுனி, உறுதிமிக்கக் கதாயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதைச் சகாதேவன் மீது வீசினான். அந்தக் கதாயுதமும், தன் இலக்கை அடையமுடியாமல் பூமியில் விழுந்தது.(37) இதன் பிறகு சினத்தால் நிறைந்தவனான அந்தச் சுபலன் மகன் {சகுனி}, எதிர்வரும் கால இரவுக்கு ஒப்பான பயங்க ஈட்டி ஒன்றை அந்தப் பாண்டு மகனின் {சகாதேவனின்} மீது வீசினான்.(38) அம்மோதலில் சகாதேவன், தன்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கும் அந்த ஈட்டியைத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் கணைகளைக் கொண்டு மூன்று துண்டுகளாக மிக எளிதாக வெட்டி வீழ்த்தினான்.(39) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், துண்டுகளாக வெட்டப்பட்டதுமான அந்த ஈட்டியானது ஆகாயத்தில் இருந்து விழும் ஒரு சுடர்மிக்க வஜ்ரத்தைப் போலப் பல கீற்றுகளாகச் சிதறியபடியே பூமியில் விழுந்தது.(40)

அந்த ஈட்டியானது கலங்கடிக்கப்பட்டதைக் கண்டு அச்சத்தால் பீடிக்கப்பட்ட சுபலனின் மகனும் {சகுனியும்}, உமது துருப்பினர் அனைவரும் அச்சத்துடன் அங்கிருந்து தப்பி ஓடினர்.(41) அப்போது வெற்றியில் ஆவலோடு இருந்த பாண்டவர்கள் உரத்த கூச்சல்களை வெளியிட்டனர். தார்தராஷ்டிரர்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட அவர்கள் அனைவரும் போரில் இருந்து புறமுதுகிட்டனர்.(42) உற்சாகமற்றவர்களாக அவர்களைக் கண்ட மாத்ரியின் அந்த வீரமகன் {சகாதேவன்} அந்தப் போரில் பல்லாயிரம் கணைகளால் அவர்களைத் தடுத்தான்.(43) அப்போது சகாதேவன், வெற்றியடையும் எதிர்பார்ப்பில் ஓடிக் கொண்டிருந்தவனும், காந்தாரர்களின் சிறந்த குதிரைப்படையால் பாதுகாக்கப்பட்டவனுமான சுபலனின் மகனை {சகுனியை} வந்தடைந்தான்.(44) ஓ! மன்னா, தன் பங்காக ஒதுக்கப்பட்ட அந்தச் சகுனி இன்னும் உயிரோடிருப்பதை நினைத்துப் பார்த்த சகாதேவன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தேரில் அந்தப் போர்வீரனைப் பின்தொடர்ந்து சென்றான்.(45)

உறுதிமிக்கத் தன் வில்லுக்கு நாண்பொருத்திக் கொண்டு, அதை மிகப் பலமாக வளைத்த சகாதேவன், சினத்தால் நிறைந்து, அந்தச் சுபலன் மகனைப் {சகுனியைப்} பின்தொடர்ந்து சென்று, கூர்முனை வேல்களால் வலிமைமிக்க யானையொன்றைத் தாக்கும் ஒரு மனிதனைப் போல, கழுகின் இறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கணைகள் பலவற்றால் அவனை மூர்க்கமாகத் தாக்கினான்.(46) பெரும் மனோவலிமை கொண்ட சகாதேவன், இவ்வாறு தன் எதிரியைப் பீடித்து, (அவனுடைய கடந்த காலக் கெடுசெயல்களை) அவனது மனத்திற்கு நினைவூட்டும்படி இந்த வார்த்தைகளால்: “க்ஷத்திரியக் கடமைகளை நோற்று (என்னோடு) போரிடுவீராக. ஆண்மையோடிருப்பீராக.(47) ஓ! மூடரே, சபைக்கு மத்தியில் பகடையில் சூதாடும்போது நீர் மிகவும் மகிழ்ந்தீர். ஓ! தீய அறிவைக் கொண்டவரே, அச்செயலின் கனியை இப்போது பெறுவீராக.(48) அப்போது எங்களைக் கேலிபேசிய தீய ஆன்மாக்களைக் கொண்டோர் அனைவரும் அழிந்துவிட்டனர். குலத்தில் இழிந்தவனான துரியோதனனும், அவனது தாய்மாமனான நீரும் மட்டுமே இன்னும் உயிரோடிருக்கிறீர்கள்.(49) ஒரு தடியைக் கொண்டு மரத்தின் கனியைக் கொய்யும் ஒரு மனிதனைப் போல நான் என் கத்தித் தலைக் கணை ஒன்றைக் கொண்டு தலையைக் கொய்து இன்றும்மைக் கொல்லப் போகிறேன்” என்றான்.(50)

பெரும் வலிமை கொண்ட மனிதர்களில் புலியான அந்தச் சகாதேவன் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, சினத்தால் நிறைந்து, சகுனியை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(51) போர்வீரர்களில் முதன்மையானவனும், வெல்லப்படமுடியாதவனுமான அந்தச் சகாதேவன், கோபத்தால் எரித்துவிடுபவனைப் போலத் தன் எதிரியை அணுகி, தன் வில்லைப் பலமாக வளைத்து,(52) பத்து கணைகளால் சகுனியையும், நான்கால் அவனது குதிரைகளையும் துளைத்தான். பிறகு அவனது குடை, கொடிமரம், வில் ஆகியவற்றை வெட்டி வீழ்த்திய அவன், ஒரு சிங்கத்தைப் போல முழக்கம் செய்தான்.(53) சகாதேவனால் இவ்வாறு கொடிமரம், வில் மற்றும் குடை ஆகியன வெட்டப்பட்ட அந்தச் சுபலனின் மகன் {சகுனி}, தன் முக்கிய அங்கமெங்கும் கணைகள் பலவற்றால் துளைக்கப்பட்டிருந்தான்.(54) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த வீரச் சகாதேவன், தடுக்கப்படமுடியாத கணைமாரியை சகுனியின் மீது மீண்டுமொருமுறை ஏவினான்.(55)

அப்போது சினத்தால் நிறைந்த அந்தச் சுபலன் மகன் {சகுனி}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வேல் ஒன்றால் சகாதேவனைக் கொல்லும் விருப்பத்துடன் அம்மோதலில் தனியொருவனாகப் பின்னவனை {சகாதேவனை} நோக்கி விரைந்து சென்றான்.(56) எனினும் அந்த மாத்ரியின் மகனோ {சகாதேவனோ}, ஒரு கணத்தையும் இழக்காமல், மூன்று அகன்ற தலைக் கணைகளைக் கொண்டு, போரின் முன்னணியில் வைத்துத் தன் எதிரியின் உயர்த்தப்பட்ட வேலையும், நன்கு பருத்திருந்த அவனது கரங்கள் இரண்டையும் வெட்டி வீழ்த்தி, உரத்த முழக்கம் செய்தான்.(57) பெரும் சுறுசுறுப்பை உடையவனான வீரச் சகாதேவன், கடினமான இரும்பாலானதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதும், கவசமனைத்தையும் ஊடுவவல்லதும், பெரும் வேகத்துடனும், கவனத்துடனும் ஏவப்பட்டதுமான ஓர் அகன்ற தலைக் கணையை {பல்லத்தைக்} கொண்டு தன் எதிரியின் {சகுனியின்} தலையை அவனது உடலில் இருந்து வெட்டி வீழ்த்தினான்.(58) சுபலனின் மகன் {சகுனி}, அந்தப் போரில் பாண்டுவின் மகனால் ஏவப்பட்டதும், பெருங்கூர்மை மற்றும் சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தக் கணையால் தன் தலையை இழந்து கீழே பூமியில் விழுந்தான்.(59) உண்மையில், சினத்தால் நிறைந்த அந்தப் பாண்டுவின் மகன் {சகாதேவன்}, தங்கச் சிறகால் அலங்கரிக்கப்பட்டதும், கல்லில் கூராக்கப்பட்டதும், வேகமாகச் செல்லக் கூடியதுமான அக்கணையைக் கொண்டு குருக்களின் தீய கொள்கைக்கு வேராக இருந்த அந்தத் தலையைத் தாக்கி வீழ்த்தினான்.(60) முக்கிய அங்கமெங்கும் ஊனீராக நனைந்தபடி தரையில் கிடக்கும் தலையற்ற சகுனியைக் கண்ட உமது போர்வீரர்கள், அச்சத்தால் பலவீனர்களாகி, தங்கள் கைகளில் ஆயுதங்களுடன் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(61)

அந்த நேரத்தில் தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியவற்றுடன் கூடிய உமது மகன்கள், காண்டீவத்தின் நாணொலியைக் கேட்டு முற்றிலும் பிளந்தவர்களாக, நிறமற்ற முகங்களைக் கொண்டவர்களாக, அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களாக, தங்கள் உணர்வுகளை இழந்தவர்களாகத் தப்பி ஓடினார்கள்.(62) சகுனியை அவனது தேரில் இருந்து வீசியெறிந்த பிறகு, ஓ! பாரதரே, அந்தப் பாண்டவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். தங்களுக்கு மத்தியில் இருந்த கேசவனுடன் மகிழ்ந்த அவர்கள், அந்தப் போரில் தங்கள் துருப்புகளுக்கு மகிழ்வூட்டும்படி தங்கள் சங்குகளை முழக்கினர்.(63) மகிழ்ச்சியான இதயங்களுடன் கூடிய அவர்கள், “ஓ! வீரா, தீய ஆன்மா மற்றும் தீய வழிகளைக் கொண்டவனான சகுனி, அவனுடைய மகனுடன் சேர்த்து உன்னால் கொல்லப்பட்டது நற்பேறாலேயே {பாக்கியத்தினாலேயே}” என்று சொல்லி சகாதேவனை வழிபட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(64)

சல்லிய வத பர்வம் முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  கர்ண பர்வம்-பதினேழாம் நாள் போர்-

October 15, 2025

ஜனமேஜயன் கேள்வி! – கர்ண பர்வம் பகுதி – 01-துரோணர் இறந்த பிறகு, துரியோதனனும், பிற மன்னர்களும் அவரது மகனிடம் சென்றது; கர்ணனைத் தங்கள் படைத்தலைவனாக்கிக் கொண்டு போரிடச் சென்றது; இரண்டு நாட்கள் கடும் போருக்குப் பிறகு அர்ஜுனனால் கர்ணன் கொல்லப்படுவது ஆகியவற்றை வைசம்பாயனர் சொல்வது; போரை விவரமாகச் சொல்லும்படி ஜனமேஜயன் கேட்டுக் கொண்டது…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.வைசம்பாயனர் {வியாசரின் சீடர்} சொன்னார், “ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, துரோணர் கொல்லப்பட்டதும், துரியோதனன் தலைமையிலான (கௌரவப் படையின்) அரசப் போர்வீரர்கள் அனைவரும், இதயம் நிறைந்த பெருங்கவலையுடன், துரோணர் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} சென்றனர்.(1) துரோணரின் இழப்பால் அழுதபடியே இருந்த தங்கள் உற்சாகமற்ற நிலையின் விளைவால், சக்தியை இழந்து, துயரால் பீடிக்கப்பட்ட அவர்கள், சரத்வான் மகளின் {கிருபியின்} மகனை {அஸ்வத்தாமனைச்} சுற்றி அமர்ந்தனர்.(2) சாத்திரங்களில் காணப்படும் கருத்துகளால் சற்று ஆறுதலடைந்த அந்தப் பூமியின் ஆட்சியாளர்கள், இரவு வந்ததும் தங்கள் தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினர்.(3)எனினும், ஓ! குரு குலத்தோனே {ஜனமேஜயா}, தங்கள் வசிப்பிடங்களில் இருந்த அந்தப் பூமியின் தலைவர்களால் எந்த மகிழ்ச்சியையும் உணரமுடியவில்லை. மிகப்பெரும் படுகொலைகளை நினைத்துப் பார்த்த அவர்களால் உறங்கவும் முடியவில்லை.(4) குறிப்பாகச் சூதன் மகன் (கர்ணன்), மன்னன் சுயோதனன் {துரியோதனன்}, துச்சாசனன், சகுனி ஆகியோரால் உறங்கவே முடியவில்லை.(5) இந்த நால்வரும், உயர் ஆன்மப் பாண்டவர்களுக்குத் தாங்கள் ஏற்படுத்திய துயரங்களை நினைத்துப் பார்த்தபடியே அவ்விரவை துரியோதனனின் பாசறையில் ஒன்றாகக் கழித்தனர்.(6) முன்பு அவர்கள், பகடையாட்டத்தால் துயரில் மூழ்கியிருந்த திரௌபதியைச் சபைக்குக் கொண்டு வந்தனர்.அதை நினைத்துப் பார்த்த அவர்கள், கவலை நிறைந்த இதயங்களுடன் பெரும் வருத்தத்தை அடைந்தனர்.(7) சூதாட்டத்தின் விளைவால் (பாண்டவர்களுக்கு) ஏற்படுத்தப்பட்ட அந்தத் துன்பங்களை நினைத்துப் பார்த்த அவர்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, உண்மையில் அவ்விரவை நூறு வருடங்களைப் போலக் கழித்தனர்.(8)

காலை விடிந்ததும், அவர்கள் அனைவரும் இயல்பு விதிகளை நோற்று, வழக்கமான தங்கள் சடங்குகளைச் செய்தனர்.(9) வழக்கமான சடங்குகளைச் செய்த பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஓரளவுக்கு ஆறுதலை அடைந்த அவர்கள், தங்கள் துருப்புகளை முறையாக அணிவகுக்கச் செய்து, போரிட வெளியே வந்து,(10) கர்ணனின் மணிக்கட்டில் மங்கல நாணைக் கட்டி, அவனைத் {கர்ணனைத்} தங்கள் படைத்தலைவனாக்கிக் கொண்டு, பிராமணர்களில் முதன்மையானோர் பலருக்கு, தயிர்ப்பாத்திரங்கள், தெளிந்த நெய், அக்ஷதங்கள் [1], தங்க நாணயங்கள், பசுக்கள், ரத்தினங்கள், நகைகள், விலைமதிப்புமிக்க ஆடைகள் ஆகியவற்றைப் பரிசாகக் கொடுத்தும், கட்டியங்கூறுவோர் {சூதர்கள்}, இசைக்கலைஞர்கள் {மாகதர்கள்}, துதிபாடிகள் {வந்திகள்} ஆகியோரை வெற்றித் துதிகளால் தங்களைப் பாடச் செய்தும், அவர்களைத் தங்களின் வெற்றிக்காக வேண்டச் செய்தனர்.(11,12) ஓ! மன்னா {ஜனமேஜயா}, பாண்டவர்களும், தங்கள் காலைச் சடங்குகளைச் செய்த பிறகு, போரிடும் தீர்மானத்துடன் தங்கள் முகாமை விட்டு வெளியே வந்தனர்.(13)அப்போது, ஒருவரையொருவர் வெல்ல விரும்பிய குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையில், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் ஒரு கடும்போர் தொடங்கியது.(14) கர்ணனுடைய படைத்தலைமையின் போது, குரு மற்றும் பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில் நடந்த போரானது மிகக் கடுமையானதாக இரண்டு நாட்களுக்கு நீடித்தது.(15) போரில் தன் எதிரிகளைப் பெரும் எண்ணிக்கையில் கொன்ற விருஷன் (கர்ணன்), இறுதியாகத் தார்தராஷ்டிரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(16) பிறகு ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பிய சஞ்சயன், குருஜாங்கலத்தில் நடைபெற்ற அனைத்தையும் திருதராஷ்டிரனுக்குச் சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(17)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}“பீஷ்மர் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர் ஆகியோரின் வீழ்ச்சியைக் கேட்டவனும், அம்பிகையின் மகனுமான முதிர்ந்த மன்னன் திருதராஷ்டிரன் பெரும் துயரால் பீடிக்கப்பட்டிருந்தான்.(18) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, துரியோதனனின் நலன் விரும்பியான கர்ணனின் மரணத்தைக் கேட்டுத் துயரில் மூழ்கியும், எவ்வாறு அவன் {திருதராஷ்டிரன்} உயிரோடு இருந்தான்?(19) தன் மகன்களின் வெற்றி எவனிடம் இருக்கிறது என அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} நினைத்தானோ, அவன் {கர்ணன்} வீழ்ந்த போதும், எவ்வாறு அவனால் {திருதராஷ்டிரனால்} உயிர் தரித்திருக்க முடிந்தது?(20) 

கர்ணனின் மரணத்தைக் கேட்ட பிறகும் மன்னன் {திருதராஷ்டிரன்} தன் உயிரை விடாமல் இருந்தான் எனும்போது, எத்தகு பெரும் துயரச் சூழ்நிலைகளிலும் மனிதர்கள் தங்கள் உயிரை விடுவது மிகக் கடினமானது என்றே நான் நினைக்கிறேன்.(21) ஓ! பிராமணரே {வைசம்பாயனரே}, சந்தனுவின் மதிப்புமிக்க மகன் {பீஷ்மர்}, பாஹ்லீகன், துரோணர், சோமதத்தன், பூரிஸ்ரவஸ், பிற நண்பர்கள், தன் மகன்கள், பேரன்கள் ஆகியோரின் வீழ்ச்சியைக் கேட்ட பிறகும், மன்னன் {திருதராஷ்டிரன்} தன் உயிரை விடவில்லை எனும்போது, ஓ! மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, ஒருவன் உயிரை விடுவது என்பது மிகக் கடினமானது என்றே நான் நினைக்கிறேன்.(22,23) உண்மையாக நடந்தவாறே இவை யாவற்றையும் எனக்கு விரிவாகச் சொல்வீராக. என் மூதாதையரின் உயர்ந்த சாதனைகளைக் கேட்பதில் நான் நிறைவை அடையவில்லை” என்றான் {ஜனமேஜயன்}.(24)

சஞ்சயன் திருதராஷ்டிரன் உரையாடல்! – கர்ண பர்வம் பகுதி – 02-கர்ணன் வீழ்ந்ததைத் திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்; திருதராஷ்டிரனின் புலம்பல்; திருதராஷ்டிரன் வருந்தக்கூடாது என்று சொன்ன சஞ்சயன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கர்ணன் வீழ்ந்த பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியற்ற இதயம் கொண்ட கவல்கணன் மகன் {சஞ்சயன்}, காற்றின் வேகத்திற்கு ஒப்பான குதிரைகளில் அவ்விரவே நாகபுரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டான்.(1) ஹஸ்தினாபுரத்தை அடைந்ததும், ஆழ்ந்த கவலையால் நிறைந்த இதயத்துடன் கூடிய அவன் {சஞ்சயன்}, சொந்தங்களோ, நண்பர்களோ {அப்போது அங்கு} இல்லாதிருந்த திருதாரஷ்டிரனின் வசிப்பிடத்திற்குச் சென்றான். துயரால் சக்தி அனைத்தையும் இழந்திருந்த மன்னனை {திருதராஷ்டிரனைக்} கண்ட அவன் {சஞ்சயன்}, கூப்பிய கரங்களுடன், தலைவணங்கி அந்த ஏகாதிபதியின் பாதங்களை வழிபட்டான்.(3)

முறையாக மன்னன் திருதராஷ்டிரனை வணங்கிய அவன் {சஞ்சயன்}, கவலையால் கூவியபடியே சொல்லத் தொடங்கினான்,(4) “ஓ! பூமியின் தலைவா {திருதராஷ்டிரரே}, நான் சஞ்சயன். நீர் மகிழ்ச்சியாக இல்லையா? உமது தவறுகளால் இத்தகு துயரத்தில் வீழ்ந்தாலும், நீர் மலைப்படைய மாட்டீர் என நான் நம்புகிறேன்.(5)

விதுரர், துரோணர், கங்கையின் மகன் {பீஷ்மர்}, கேசவன் {கிருஷ்ணன்} ஆகியோர் உமது நன்மைக்கான ஆலோசனைகளைச் சொன்னார்கள். அந்த ஆலோசனைகளை நீர் மறுத்தத்தை நினைத்து இப்போது நீர் எந்த வலியையும் உணரவில்லை என நான் நம்புகிறேன்.(6)

ராமர் {பரசுராமர்}, நாரதர், கண்வர் மற்றும் பிறராலும் உமது நன்மைக்கான ஆலோசனைகள் சபையில் வைத்துச் சொல்லப்பட்டன. அவை உம்மால் மறுக்கப்பட்டதை நினைத்து இப்போது நீர் எந்த வலியையும் உணரவில்லை என நான் நம்புகிறேன்.(7)

உமது நன்மையிலேயே எப்போதும் ஈடுபட்ட நண்பர்களான பீஷ்மர், துரோணர் மற்றும் பிறரும் போரில் எதிரியால் கொல்லப்பட்டதை நினைத்து நீர் எந்த வலியையும் உணரவில்லை என நான் நம்புகிறேன்” என்றான் {சஞ்சயன்}.(8)

கரங்களைக் கூப்பியபடி தன்னிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த அந்தச் சூதன் மகனிடம் {சஞ்சயனிடம்}, துயரால் பீடிக்கப்பட்டு, நீண்ட வெப்பப் பெருமூச்சுகளை விட்டபடியே இருந்த அந்த ஏகாதபதி {திருதராஷ்டிரன்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(9)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும் கொண்ட போர்வீரரான அந்தக் கங்கை மகனின் {பீஷ்மரின்} வீழ்ச்சியையும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான துரோணரின் வீழ்ச்சியையும் கேட்டு என் இதயத்தில் பெரும் வலியை உணர்கிறேன்.(10) பெரும் சக்தி கொண்டவரும், வசுக்களால் பிறந்தவருமான எந்த வீரர் கவசம் பூண்டு கொண்டு ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் தேர்வீரர்களைக் கொன்றாரோ,(11), பிருகுவின் மகன் {பரசுராமர்}, உயர்ஆன்மா கொண்ட எவரிடம் உயர்ந்த ஆயுதங்களைக் கொடுத்தாரோ, பிள்ளைப் பருவத்திலே எந்தப் போர்வீரர், ராமரால் {பரசுராமரால்} வில்லின் அறிவியல் பயிற்றுவிக்கப்பட்டாரோ, ஐயோ அவர் {பீஷ்மர்}, பாண்டவர்களால் பாதுகாக்கப்பட்டவனும், யக்ஞசேனன் {துருபதன்} மகனுமான சிகண்டியால் கொல்லப்பட்டாரே. இதற்காக என் இதயம் பெரிதும் வலிக்கிறது[1].(12,13)எந்த வீரரின் அருளின் மூலம், வலிமைமிக்கத் தேர்வீரர்களான குந்தியின் அரச மகன்களும், பூமியின் தலைவர்கள் பலரும் மகாரதர்கள்[2] ஆனார்களோ,(14) ஐயோ, துல்லியமான இலக்குக் கொண்ட அந்தப் பெரும் வில்லாளியான துரோணர், திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டதைக் கேட்டு என் இதயம் மிகவும் வலிக்கிறது.(15) அவ்விருவரும், நால்வகை ஆயுதங்களிலும் (ஆயுதங்களின் அறிவிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலும்)[3] தங்களுக்கு ஒப்பாக எவனையும் கொண்டதில்லை. ஐயோ, பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும் கொல்லப்பட்டதைக் கேட்டு என் இதயம் மிகவும் வலிக்கிறது.(16) எந்தப் போர்வீரர், ஆயுத அறிவில் தனக்கு நிகராக மூன்று உலகிலும் எவனையும் கொள்ளவில்லையோ, வீரரான அந்தத் துரோணரின் கொலையைக் கேட்டு என் தரப்பின் மக்கள் என்ன செய்தனர்?(17)பாண்டுவின் உயர்ஆன்ம மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஆற்றலுடன் முயன்று, பலமிக்கப் படையான சம்சப்தகர்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிய பிறகு,(18) துரோணரின் புத்திசாலி மகனுடைய {அஸ்வத்தாமனுடைய} நாராயண ஆயுதம் கலங்கடிக்கப்பட்ட பிறகு, (கௌரவப்) படைப்பிரிவுகள் தப்பி ஓடத் தொடங்கிய பிறகு, என் தரப்பின் மக்கள் என்ன செய்தனர்?(19) துரோணரின் மரணத்திற்குப் பிறகு, தப்பி ஓடியவர்களும், துயரக் கடலில் மூழ்கியவர்களுமான என் துருப்பினரை, ஆழ்ந்த கடலின் நடுவே கப்பல் உடைந்த கடலோடிகளுக்கு ஒப்பாக நான் நினைக்கிறேன்.(20) ஓ! சஞ்சயா, குரு படைப்பிரிவுகள் களத்தில் இருந்து தப்பி ஓடிய போது, துரியோதனன், கர்ணன், போஜர்களின் தலைவனான கிருதவர்மன், மத்ரர்களின் ஆட்சியாளனான சல்லியன், எஞ்சியிருக்கும் என் மகன்கள் மற்றும் பிறரின் முகங்கள் எவ்வண்ணத்தை ஏற்றன?(21,22) ஓ!கவல்கணன் மகனே {சஞ்சயா}, பாண்டவர்கள் மற்றும் என் தரப்பின் போர்வீரர்களால் வெளிப்படுத்தப்பட்ட ஆற்றலை விளக்கியபடி, போரில் உண்மையாக நடந்தவாறே இவையாவற்றையும் எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது தவறால், கௌரவர்களுக்கு ஏற்பட்ட அனைத்தையும் கேட்டு நீர் எந்த வேதனையும் அடைய வேண்டாம். ஞானியான எவனும், விதிகொண்டு வரும் எதற்காகவும், ஒருபோதும் வலியை உணர்வதில்லை {மனம் வருந்துவதில்லை}.(24) விதி வெல்லப்பட முடியாததாகையால், மனித காரியங்கள் அடையப்படுவதாகவும், அடையப்படாததாகவும் ஆகலாம். எனவே, ஞானியான ஒருவன், தான் விரும்பிய பொருட்களை அடைந்தாலோ, வேறுவிதமானாலோ ஒருபோதும் வலியை உணர்வதில்லை” (என்றான் சஞ்சயன்}.(25)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, நான் வலியை உணரவில்லை. நான் இவை யாவற்றையும் விதியின் விளைவாகவே கருதுகிறேன். விரும்பியபடியே அனைத்தையும் நீ எனக்குச் சொல்வாயாக” என்றான்.(26)

தன் படைக்கு உற்சாகமூட்டிய துரியோதனன்! – கர்ண பர்வம் பகுதி – 03-திருதராஷ்டிரன் மகன்களின் முகவாட்டத்தைக் கண்டு, கலங்கி நின்ற படைவீரர்கள்; படைவீரர்களுக்கு உற்சாகமூட்டிய துரியோதனன்; கர்ணனின் பெருமைகளைச் சொன்ன துரியோதனன்; அர்ஜுனனால் கர்ணன் கொல்லப்பட்டதைத் திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பெரும் வில்லாளியான துரோணர் வீழ்ந்ததும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்கள், நிறம் மங்கியவர்களாகி, உற்சாகமற்றவர்களாகி தங்கள் உணர்வுகளை இழந்தனர்.(1) ஆயுதங்கள் தரித்திருந்தவர்களான அவர்கள் அனைவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் தலையைத் தொங்கப்போட்டனர். துயரால் பீடிக்கப்பட்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்த அவர்கள், முற்றிலும் அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.(2) இவ்வாறு பீடிக்கப்பட்ட முகத்தோற்றத்துடன் கூடிய அவர்களைக் கண்ட உமது துருப்பினர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துயரால் மனங்கலங்கி மேல்நோக்கியபடி வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.(3) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் துரோணர் கொல்லப்பட்டதைக் கண்டதும், அவர்களில் பலரின் ஆயுதங்கள், இரத்தக் கறைகளுடன் அவர்களது கைகளில் இருந்து விழுந்தன.(4) மேலும், ஓ! பாரதரே, படைவீரர்களின் பிடியில் இருந்த எண்ணற்ற ஆயுதங்களும், வானத்தில் இருந்து விழும் விண்கோள்களுக்கு ஒப்பாகத் தொங்கிக் கொண்டிருந்தன[1].(5)

அப்போது துரியோதனன், ஓ! ஏகாதிபதி, முடக்கப்பட்டு உயிரற்றவர்களைப் போல இப்படி நின்று கொண்டிருந்த உமது அந்தப் படையைக் கண்டு,(6) “உங்கள் கரங்களின் வலிமையை நம்பியே நான் பாண்டவர்களைப் போருக்கு அழைத்து, இந்த ஆயுத வழியைத் தொடக்கினேன்.(7) எனினும், துரோணர் வீழ்ந்ததும், {நமக்கான} வாய்ப்பு மகிழ்ச்சியற்றதாகத் தெரிகிறது. போரில் ஈடுபடும் போர்வீரர்கள் அனைவரும் போரில் சாகிறார்கள்.(8) போரில் ஈடுபடுவதால், ஒரு போர்வீரன் வெற்றியையோ, மரணத்தையோ அடைவான். இதில் (துரோணரின் மரணத்தில்) என்ன வினோதமிருக்கிறது? ஒவ்வொரு திசையை நோக்கியும் முகத்தைத் திருப்பிப் போரிடுவீராக.(9) வலிமையும், பலமும், உயர் ஆன்மாவும் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான விகர்த்தனன் மகன் கர்ணன், தனது தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்தியபடியே போரில் திரிவதை இப்போது காண்பீராக.(10)

போரில் அந்தப் போர்வீரன் {கர்ணன்} மீது கொண்ட அச்சத்தாலேயே, கோழையான குந்தியின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, சிங்கத்தைக் கண்ட சிறு மானைப் போல எப்போதும் பின்வாங்குகிறான்.(11) அவனே {கர்ணனே}, பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொண்ட வலிமைமிக்கப் பீமசேனனை, சாதாரண மனிதப் போர் முறைகளாலேயே அந்தப் பரிதாப நிலையை அடையச் செய்தான்.(12) ஆயிரக்கணக்கான மாயைகளைக் கொண்டவனும், தெய்வீக ஆயுதங்களை நன்கறிந்தவனும், துணிச்சல்மிக்கவனுமான கடோத்கசனை உரக்க முழங்கியபடியே, வெல்லப்படமுடியாத தனது ஈட்டியால் கொன்றவன் அவனே {கர்ணனே}.(13) இலக்கில் துல்லியமும், வெல்லப்பட முடியாத சக்தியும் கொண்ட அந்தப் புத்திசாலி போர்வீரனின் {கர்ணனின்} வற்றாத ஆயுத வலிமையை இன்று காண்பீராக.(14) விஷ்ணுவுக்கும், வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} ஒப்பான அஸ்வத்தாமன் மற்றும் கர்ணன் ஆகிய இருவரின் ஆற்றலையும் அந்தப் பாண்டுவின் மகன்கள் இன்று காணட்டும்[2].(15) போரில் பாண்டுவின் மகன்களையும், அவர்களது துருப்புகளையும் தனித்தனியாகவே உங்கள் அனைவராலும் கொல்ல முடியும். அப்படியிருக்கையில் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் உங்களால் அடைய இயலும் சாதனை எவ்வளவு பெரியதாக இருக்க முடியும்? பெரும் சக்தியைக் கொண்டவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களுமான நீங்கள், இன்று பெரும்பணிகளைச் சாதித்தபடியே ஒருவரையொருவர் காணப் போகிறீர்கள்” என்றான் {துரியோதனன்}.(16)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, இந்த வார்த்தைகளைச் சொன்ன உமது மகன் துரியோதனன், தனது தம்பிகளுடன் கூடி கர்ணனை (குரு படையின்) படைத்தலைவனாக்கினான்.(17) படைத்தலைமையை ஏற்றவனும், போரில் மிகக் கடுமையானவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கர்ணன் உரத்த முழக்கங்களைச் செய்தபடியே எதிரியோடு போரிட்டான்.(18) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சிருஞ்சயர்கள், பாஞ்சாலர்கள், கேகயர்கள் மற்றும் விதேஹர்களுக்கு மத்தியில் அவன் {கர்ணன்} பேரழிவை ஏற்படுத்தினான்.(19) ஒன்றின் {ஒரு கணையின்} சிறகுக்கு {புங்கத்திற்கு} மிக நெருக்கமாக, வண்டுகளின் கூட்டங்களைப் போல எண்ணற்ற சரக் கணைகள் அவனது வில்லில் இருந்து வெளிப்பட்டன. பெரும் சுறுசுறுப்புடன் கூடிய பாஞ்சாலர்களையும், பாண்டவர்களையும் பீடித்து, ஆயிரக்கணக்கான போர்வீரர்களைக் கொன்ற அவன் {கர்ணன்}, இறுதியாக அர்ஜுனனால் கொல்லப்பட்டான்” {என்றான் சஞ்சயன்}.(21)

மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்! – கர்ண பர்வம் பகுதி – 04-துயரால் மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்; பெண்களின் ஓலம்; பெண்கள் மயங்கிவிழுந்தது; மீண்டும் சஞ்சயனிடம் போரைக் குறித்து விசாரித்த திருதராஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இந்தப் புலனாய்வைக் கேட்ட அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், துயரின் உச்சக்கட்டத்தை உணர்ந்து, சுயோதனன் {துரியோதனன்} ஏற்கனவே இறந்துவிட்டதாகவே கருதினான். மிகவும் கலங்கிப் போன அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, உணர்வுகளை இழந்த யானையொன்றைப் போலக் கீழே பூமியில் விழுந்தான்.(1) பெரிதும் கலக்கமடைந்தவனான அந்த ஏகாதிபதிகளில் முதனமையானவன் {திருதராஷ்டிரன்} பூமியில் விழுந்த போது, ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, (அரச குடும்பத்தைச் சார்ந்த) பெண்கள் உரக்க ஓலமிட்டனர். மொத்த பூமியையும் நிறைக்குமளவுக்கு அவ்வொலி பேரொலியாக இருந்தது[1].(2) ஆழ்ந்த துயரக் கடலில் மூழ்கியிருந்த அந்தப் பாரதப் பெண்மணிகள், பெரிதும் கலக்கமடைந்த இதயங்களுடன், துயரால் எரிக்கப்பட்டவர்களாக உரக்க அழுதனர்.(3) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மன்னனை அணுகிய காந்தாரியும், அந்தக் குடும்பத்தின் பிற பெண்மணிகள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்து கீழே பூமியில் விழுந்தனர்.(4)அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, துயரால் பீடிக்கப்பட்டுக் கண்ணீரால் குளித்து, உணர்வுகளை இழந்த அந்தப் பெண்களுக்குச் சஞ்சயன் ஆறுதல் கூறினான்.(5) (சஞ்சயனால்) ஆறுதலடைந்த அந்தப் பெண்கள், காற்றால் அசைக்கப்பட்ட வாழையைப் போல மீண்டும் மீண்டும் நடுங்கத் தொடங்கினர்.(6) விதுரனும், அந்தக் குரு வழித்தோன்றலின் {திருதராஷ்டிரன்} மீது நீரைத் தெளித்து, தன் கண்ணையே ஞானமாகக் கொண்ட [2] அந்தப் பலமிக்க ஏகாதிபதிக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஆறுதலளிக்கத் தொடங்கினான்.(7) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மெதுவாக உணர்வுகளை அடைந்து, அந்தக் குடும்பத்தின் பெண்கள் அங்கே இருப்பதை அறிந்து கொண்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, மதியிழந்த ஒருவனைப் போலச் சிறிது நேரம் முற்றிலும் அமைதியாக இருந்தான்.(8)சிறிது நேரம் சிந்தித்து, நீண்ட பெருமூச்சுகளை மீண்டும் மீண்டும் விட்ட அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, தன் மகன்களை நிந்தித்து, பாண்டவர்களைப் புகழ்ந்தான்.(9) தன் அறிவையும், சுபலனின் மகனான சகுனியின் அறிவையும் நிந்தித்த மன்னன், நீண்ட நேரம் சிந்தித்த பிறகு, மீண்டும் மீண்டும் நடுங்கத் தொடங்கினான்.(10) மீண்டும் தன் மனத்தைக் கட்டுப் படுத்திக் கொண்ட அந்த மன்னன், போதுமான மன உரத்துடன், கவல்கணன் மகனான தன் தேரோட்டி சஞ்சயனிடம் கேள்வி கேட்டான்.(11)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, நீ சொன்னதனைத்தையும் நான் கேட்டேன். ஓ! சூதா, எப்போதும் வெற்றியை விரும்பிய என் மகன் துரியோதனன், வெற்றியடையவதில் சலிப்படைந்து ஏற்கனவே யமனின் வசிப்பிடத்திற்குச் சென்றுவிட்டானா? ஓ! சஞ்சயா, திரும்பச் சொல்ல வேண்டியிருந்தாலும் கூட, இவை யாவையும் எனக்கு உண்மையாகச் சொல்வாயாக” என்றான்.(12,13)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஜனமேஜயா, மன்னனால் {திருதராஷ்டிரனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்தச் சூதன் {சஞ்சயன்}, அவனிடம், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த வைகர்த்தனன் {கர்ணன்}, வலிமைமிக்க வில்லாளிகளும், போரில் தங்கள் உயிர்களை விடத் தயாராக இருந்தவர்களுமான தனது மகன்கள், தம்பிகள் மற்றும் பிற சூதப் போர்வீரர்கள் அனைவருடன் சேர்த்துக் கொல்லப்பட்டான்.(14) பாண்டுவின் புகழ்பெற்ற மகனால் {பீமனால்} துச்சாசனனும் கொல்லப்பட்டான். உண்மையில், அந்தப் போரில் கோபத்துடன் இருந்த பீமசேனனால் அவனது {துச்சாசனனின்} குருதியும் குடிக்கப்பட்டது” {என்றார் வைசம்பாயனர்}.(15)

கொல்லப்பட்ட கௌரவ வீரர்கள்! – கர்ண பர்வம் பகுதி – 05-பாண்டவர்கள் மற்றும் குருக்களில் இறந்தவர்கள் யார் எனச் சஞ்சயனிடம் கேட்ட திருதராஷ்டிரன்; கொல்லப்பட்ட குரு வீரர்களைக் குறித்துச் சொன்ன சஞ்சயன்

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வார்த்தைகளைக் கேட்ட அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், துயரால் இதயம் கலங்கிப் போய்த் தன் சாரதியான சஞ்சயனிடம்,(1) “ஓ! ஐயா {சஞ்சயா}, சிறுமதியாளனான என் மகனுடைய {துரியோதனனுடைய} தீய கொள்கையின் விளைவாலேயே விகர்த்தனன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டான். இந்தப் புலனாய்வு என் இதயத்தின் மையத்தையே பிளக்கிறது.(2) இந்தத் துன்பக் கடலை நான் கடக்க விரும்புகிறேன். எனவே, குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு[1] மத்தியில் இன்னும் உயிரோடு இருப்பவர்கள் எவர்கள், இறந்தவர்கள் எவர்கள் என்பதை எனக்குச் சொல்லி என் ஐயங்களை விலக்குவாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.(3)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்டவரும், போரில் வெல்லப்பட முடியாதவரும், பெரும் எண்ணிக்கையிலான [2] சிருஞ்சயர்களையும், பாஞ்சாலர்களையும் கொன்றவருமான சந்தனுவின் மகன் பீஷ்மர், {போர் தொடங்கிப்} பத்து நாட்களுக்குப் பிறகு கொல்லப்பட்டார்.(4) வலிமைமிக்கவரும், வெல்லப்பட முடியாத வில்லாளியும், தங்கத் தேரைக் கொண்டவருமான துரோணர், போரில் பாஞ்சாலப் படைப்பிரிவுகளைக் கொன்ற பிறகு கொல்லப்பட்டார்.(5) பீஷ்மரும், சிறப்புமிக்கத் துரோணரும் ஏற்படுத்திய பேரழிவுக்குப் பின்னர் எஞ்சியவர்களில் பாதியைக் கொன்ற பிறகு விகர்த்தனன் மகனான கர்ணனும் கொல்லப்பட்டான்.(6)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும்பலம் கொண்டவனான இளவரசன் விவிம்சதி, போரில் நூற்றுக்கணக்கான ஆனர்த்த {ஆனர்த்த நாட்டுப்} போர்வீரர்களைக் கொன்றபிறகு கொல்லப்பட்டான்.(7) குதிரைகளையும், ஆயுதங்களையும் இழந்தாலும், உமது வீர மகனான விகர்ணன், க்ஷத்திரியக் கடமைகளை நினைவில் கொண்டு எதிரியை எதிர்த்து நின்றான்.(8) பீமசேனன், துரியோதனனால் தனக்கு இழைக்கப்பட்ட முறையற்ற தீங்குகளை நினைவு கூர்ந்தும், தன் சொந்த சபதத்தை மனத்தில் கொண்டும் அவனை {விகர்ணனைக்} கொன்றான்.(9) பெரும் வலிமை கொண்டவர்களும், அவந்தியின் இளவரசர்களுமான விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகிய இருவரும், அடைவதற்கு மிகக் கடினமான சாதனைகளைச் செய்துவிட்டு யமலோகம் சென்றனர்.(10) தன் கூரிய கணைகளால் பதினோரு {11} அக்ஷௌஹிணி துருப்புகளை வென்ற அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிந்துவை {சிந்து நாட்டைத்} தலைமையாகக் கொண்ட பத்து அரசுகள் எந்த வீரனுடைய அளுகையின் கீழிருக்கின்றனவோ, உமக்கு எப்போதும் எவன் கீழ்ப்படிந்திருந்தானோ, அந்த வலிமையும், சக்தியும் மிக்க ஜெயத்ரதனைக் கொன்றான்.(12)

பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், போரில் எளிதாக வெல்லப்பட முடியாதவனும், தன் தந்தையின் உத்தரவுகளுக்கு எப்போதும் கீழ்ப்படிபவனுமான துரியோதனன் மகன் {லக்ஷ்மணன்}, சுபத்ரையின் மகனால் {அபிமன்யுவால்} கொல்லப்பட்டான்[3].(13) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், போரில் மூர்க்கமானவனுமான துணிச்சல்மிக்கத் துச்சாசனன் மகன்[4] பெரும் ஆற்றலுடன் முயன்ற திரௌபதியின் மகனால் யமலோகத்திற்கு அனுப்பப்பட்டான்.(14) கிராதர்கள் மற்றும் கடற்கரையில் உள்ள தாழ்ந்த நிலங்களில் வசிக்கும் பிறர் ஆகியோரின் ஆட்சியாளனும், பெரும் மதிப்புடையவனும், தேவர்களின் தலைவனுடைய அன்பு நண்பனும், க்ஷத்திரியக் கடமைகளுக்கு எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனுமான பகதத்தன், ஆற்றலுடன் பெரிதும் முயன்ற தனஞ்சயனால் {அர்ஜுனனால்} யமலோகத்திற்கு அனுப்பப்பட்டான்.(15,16) ஓ! மன்னா, கௌரவர்களின் உறவினனும், துணிச்சல் மிக்கவனும், கொண்டாடப்பட்டவனுமான அந்தச் சோமதத்தன் மகன் பூரிஸ்வரவஸ், போரில் சாத்யகியால் கொல்லப்பட்டான்.(17)

க்ஷத்திரியர்களில் முதன்மையானவனும், போரில் மிகவும் அச்சமற்ற வகையில் திரியக்கூடியவனுமான அம்பஷ்ட மன்னன் சுருதாயுஸ்[5], அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(18) ஆயுதங்களில் சாதித்தவனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், எப்போதும் கோபம் நிறைந்தவனுமான உமது மகன் துச்சாசனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் கொல்லப்பட்டான்[6].(19) பல்லாயிரக்கணக்கான அற்புத யானைகளைக் கொண்டவனான சுதக்ஷிணன்[7] போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(20) கோசலர்களின் ஆட்சியாளன் {பிருஹத்பலன்}[8], பல்லாயிரம் பேரைக் கொன்ற பிறகு, ஆற்றலுடன் முயன்ற சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} யமலோகம் அனுப்பப்பட்டான்.(21) பல்லாயிரம் எதிரிகளோடும், வலிமைமிக்கத் தேர்வீரனான பீமசேனனோடும் போரிட்ட உமது மகன் சித்திரசேனன், பீமசேனனால் கொல்லப்பட்டான்.(22) எதிரிகளின் அச்சங்களை அதிகரிப்பவனும், மத்ர ஆட்சியாளனின் தம்பியும்[9], வாளும், கேடயமும் தரித்தவனுமான அந்த அழகிய போர்வீரன், சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} கொல்லப்பட்டான்.(23)போரில் கர்ணனுக்கு இணையானவனும், ஆயுதங்களில் சாதித்தவனும், வலிமையும், சக்தியும், நிலைத்த ஆற்றலையும் கொண்ட கர்ணனின் மகன் விருஷசேனன், தன் மகன் அபிமன்யு கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்தவனும், தான் செய்த சபதத்தை மனத்தில் கொண்டவனுமான தனஞ்சயனால் {அர்ஜுனனால்} யமலோகம் அனுப்பப்பட்டான்[10].(24,25) பூமியின் தலைவனும், பாண்டவர்களிடம் ஆழ்ந்த வெறுப்பை எப்போதும் வெளிப்படுத்தியவனுமான சுருதாயுஷ், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} தன் மனத்தில் உள்ள வெறுப்பைச் சொன்னதும், அவனால் கொல்லப்பட்டான்.(26) பெரும் ஆற்றலைக் கொண்டவனான சல்லியன் மகன் ருக்மரதன், ஓ! ஐயா, சகாதேவனின் தாய்மாமன் மகனாகவும், மைத்துனனாகவும் இருப்பினும், பின்னவன் {சகாதேவன்} முன்னவனை {ருக்மரதனைக்}[11] கொன்றான்.(27) பெரும் ஆற்றல், வலிமை, சக்தி ஆகியவற்றைக் கொண்ட முதிர்ந்த மன்னன் பாகீரதன், கைகேயர்களின் ஆட்சியாளனான பிருஹத்க்ஷத்திரன் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர்.(28) பெரும் ஞானத்தையும், பலத்தையும் கொண்ட பகதத்தன் மகன், ஓ! மன்னா, பருந்தின் சுறுசுறுப்புடன் போர்க்களத்தில் எப்போதும் திரியும் நகுலனால் கொல்லப்பட்டான்.(29) பெரும் வலிமையும், ஆற்றலும் கொண்டவரான உமது பாட்டன் பாஹ்லீகரும், அவரைப் பின்தொடர்ந்தவர்களும், பீமசேனனால் கொல்லப்பட்டனர்.(30

ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, ஜராசந்தனின் மகனும், மகதர்களின் இளவரசனும், வலிமைமிக்கவனுமான ஜெயத்சேனன், போரில் உயர் ஆன்ம சுபத்திரையின் மகனால் கொல்லப்பட்டான்.(31) ஓ! மன்னா, உமது மகன் துர்முகன், வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மற்றொரு மகன் துஸ்ஸஹன் ஆகியோரை பீமசேனன் தன் கதாயுதத்தால் கொன்றான்.(32) துர்மர்ஷணன், துர்விஷஹன், வலிமைமிக்கத் தேர்வீரனான துர்ஜயன் ஆகியோர் அடைவதற்கரிய சாதனைகளைச் செய்து யமலோகத்திற்குச் சென்றனர்.(33) போரில் வெல்லப்பட முடியாத இரு சகோதரர்களான கலிங்கனும், விருஷகனும் {ரிஷபனும்}, அடைவதற்கரிய சாதனைகளைச் செய்து யமலோகத்தை அடைந்தனர்.(34) சூதனும், பெரும் சக்தி கொண்டவனுமான உமது ஆலோசகன் விருஷவர்மன், ஆற்றலுடன் முயன்ற பீமசேனனால் யமலோகம் அனுப்பப்பட்டான்.(35)

பத்தாயிரம் யானைகளின் வலிமையைக் கொண்ட மன்னன் பௌரவனும், தன்னைப் பின்தொடர்ந்தவர்கள் அனைவருடன், பாண்டுவின் மகன் அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(36) தாக்கும் திறன் கொண்ட இரண்டாயிரம் எண்ணிக்கையிலான வசாதிகள் அனைவரும், பெரும் ஆற்றலைக் கொண்ட சூரசேனர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர்.(37) கவசம் பூண்டவர்களும், திறம்படத் தாக்க இயன்றவர்களும், போரில் மூர்க்கமானவர்களுமான அபீஷாஹர்களும், கலிங்கர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(38) போரில் மிகுந்த கோபம் நிறைந்தவர்களும், களத்தில் எப்போதும் பின்வாங்காதவர்களுமான கோகுலத்தில் வாழ்ந்து வளர்ந்த பிற வீரர்களும் (நாராயணக் கோபர்களும்) சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டனர்.(39) அர்ஜுனனை அணுகியவர்களான பல்லாயிரக்கணக்கான சிரேணிகள் மற்றும் சம்சப்தகர்கள் ஆகியோர் அனைவரும் யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(40)

பெரும் ஆற்றலைக் கொண்டவர்களும், உமது மைத்துனர்களுமான விருஷகன் மற்றும் அச்சலன் ஆகிய இருவரும் சவ்யசச்சினால் கொல்லப்பட்டனர்.(41) வலிய கரங்களைக் கொண்டவனும், மூர்க்கமாக் செயல்படுபவனும் {உக்கிரகர்மன்}, பெயராலும், சாதனைகளாலும் பெரும் வில்லாளியுமான மன்னன் சால்வன், பீமசேனானால் கொல்லப்பட்டான்.(42) ஓ! மன்னா, போரில் ஒன்றாகப் போரிட்டவர்களும், தங்கள் கூட்டாளிக்காகப் பெரும் வீரத்துடன் போரிட்டவர்களுமான ஓகவத் {ஓகவான்} மற்றும் விருஷந்தன் {பிருஹந்தன்} ஆகிய இருவரும் யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(43) ஓ! ஏகாதிபதி, தேர்வீரர்களில் முதன்மையான க்ஷேமதூர்த்தி, போரில் கதாயுதத்துடன் கூடிய பீமசேனனால் கொல்லப்பட்டான்.(44) பெரும் வில்லாளியும், வலிமைமிக்க மன்னனுமான ஜலசந்தனும், பெரும் பேரழிவை ஏற்படுத்திய பிறகு போரில் சாத்யகியால் கொல்லப்பட்டான்.(45)

(பெரும் வடிவைக் கொண்ட) கழுதைகள் பூட்டப்பட்ட வாகனத்தைக் கொண்டவனும், ராட்சசர்களின் இளவரசனுமான அலாயுதன், பெரும் ஆற்றலுடன் முயன்ற கடோத்கசனால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(46) சூதனான ராதையின் மகன் {கர்ணன்}, அவனது தம்பிகளான வலிமைமிக்கத் தேர்வீரர்கள், கைகேயர்கள், மாலவர்கள், மத்ரகர்கள், கடும் ஆற்றலைக் கொண்ட திராவிடர்கள், யௌதேயர்கள், லலித்தர்கள், க்ஷுத்ரகர்கள், உசீனரர்கள், மாவேலலகர்கள், துண்டிகேரர்கள், சாவித்ரிபுத்திரர்கள், கிழக்கத்தியர், வடக்கத்தியர், மேற்கத்தியர், தெற்கத்தியர் ஆகியோர் அனைவரும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சவ்யசச்சினால் கொல்லப்பட்டனர்.(47-49) பெரும் எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள், கூட்டங்கூட்டமான குதிரைகள், பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்கள், பெரும் யானைகள் பலவும் கொல்லப்பட்டன.(50) கொடிமரங்கள், ஆயுதங்கள், கவசம், ஆடை, ஆபரணங்கள், விடாமுயற்சி, உயர்ந்த பிறப்பு, நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்ட வீரர்கள் பலரும் அந்தப் போரில் உழைப்பால் களைப்பெதையும் அறியாதவனான பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டனர். அளவிலா வலிமை கொண்ட பிறர், தங்கள் எதிரிகளைக் கொல்ல விரும்பி அதே போன்ற விதியையே அடைந்தனர்.(51-52) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இவர்களும், ஆயிரக்கணக்கான இன்னும் பலரும், அவர்களைப் பின்தொடர்ந்தவர்களும் போரில் கொல்லப்பட்டனர். நீர் என்னிடம் கேட்டதற்கு இப்போது பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.(53) 

இவ்வாறே அர்ஜுனனும், கர்ணனும் போரிட்ட போது அழிவு ஏற்பட்டது. போரில் விருத்திரனை மகேந்திரன் கொன்றதைப் போலவும், ராவணனை ராமன் கொன்றதைப் போலவும்,(54) நரகன், அல்லது முரணைக் கிருஷ்ணன் கொன்றதைப் போலவும்; மூவுலகங்களிலும் கொண்டாடப்படும் ஒரு பயங்கரப் போரைச் செய்த பிறகு, போரில் வெல்லப்பட முடியாதவனும், சொந்தங்களுடனும், நண்பர்களுடனும் கூடியவனுமான வீர கார்த்தவீரியனைப் பிருகு குலத்தின் ராமர் {பரசுராமர்} கொன்றதைப் போலவும்;(55,56) (அசுரன்) மஹிஷனை ஸ்கந்தன் கொன்றதைப் போலவும், (அசுரன்) அந்தகனை ருத்திரன் கொன்றதைப் போலவும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் வெல்லப்பட முடியாதவனும், தார்தராஷ்டிரர்களுக்கு வெற்றியில் நம்பிக்கை ஏற்படுத்தியவனும், பாண்டவர்களுடன் ஏற்பட்ட பகைமைக்குப் பெரும் காரணமானவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான கர்ணனை, அவனது சொந்தங்கள் அனைவருடன் சேர்த்து அர்ஜுனன் ஒரு தனிப்போரில் கொன்றான். (57,58)

ஒரு காலத்தில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகன் சாதிப்பான் என்பதை நன்கு சிந்திக்கும் நண்பர்கள் உமக்குத் தெரிவிக்கத் தவறவில்லையெனினும் {தெரிவித்தார்கள் எனினும்}, அவனால் {அர்ஜுனனால்} இயலும் என்று நீர் எதை நம்பாதிருந்தீரோ அதை இப்போது அவன் சாதித்துவிட்டான். பேரழிவு நிறைந்த அந்தப் பேரிடர் இப்போது வந்துவிட்டது.(59) ஓ! மன்னா, பேராசைமிக்க உமது மகன்களுக்கு நல்லாசிகளைக் கூறி, அவர்களின் தலைகளில் நீர் தீமைகளை {பாவத்தைக்} குவித்துவிட்டீர். அத்தீமைகளின் கனியே இப்போது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது” {என்றான் சஞ்சயன்}.(60)

கொல்லப்பட்ட பாண்டவ வீரர்கள்! – கர்ண பர்வம் பகுதி – 06-கொல்லப்பட்ட பாண்டவ வீரர்களைக் குறித்துத் திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! மகனே {சஞ்சயா}, போரில் பாண்டவர்களால் என்தரப்பில் கொல்லப்பட்டோரின் பெயர்களை நீ குறிப்பிட்டாய். ஓ! சஞ்சயா, இப்போது என் தரப்பு மக்களால் பாண்டவர்களுக்கு மத்தியில் கொல்லப்பட்டோரின் பெயர்களை எனக்கு இப்போது சொல்வாயாக” என்று கேட்டான்.(1)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் பெரும் ஆற்றலையும், சக்தியையும், வலிமையையும் கொண்ட குந்திகள் {பாண்டவவீரர்கள்}, தங்கள் சொந்தங்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவருடன் சேர்த்துப் போரில் பீஷ்மரால் கொல்லப்பட்டனர்.(2) நாராயணர்கள், பலபத்திரர்கள், நூற்றுக்கணக்கான பிற வீரர்கள் ஆகிய (பாண்டவர்களுக்கு அர்ப்பணிப்புள்ள அனைவரும் வீர பீஷ்மரால் கொல்லப்பட்டனர்.(3) சக்தியிலும், வலிமையிலும் போரில் கிரீடம் தரித்தவனான அர்ஜுனனுக்கு இணையான சத்யஜித், துல்லிய இலக்கைக் கொண்ட துரோணரால் போரில் கொல்லப்பட்டான்.(4) வலிமைமிக்க வில்லாளிகளும், போரில் திறம்பெற்றவர்களுமான பாஞ்சாலர்களில் பலர் துரோணரோட மோதி, யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(5) அதே போல வயதால் மதிப்பிற்குரியவர்களும், தங்கள் கூட்டாளிக்காகப் பெரும் ஆற்றலுடன் முயன்றவர்களுமான விராடன் மற்றும் துருபதன் ஆகிய இரு மன்னர்களும், தங்கள் மகன்களோடு சேர்த்துப் போரில் துரோணரால் கொல்லப்பட்டனர்.(6)

பாலனாக இருப்பினும், அர்ஜுனனுக்கோ, கேசவனுக்கோ {கிருஷ்ணனுக்கோ}, பலதேவனுக்கோ {பலராமனுக்கோ} போரில் இணையானவனும், போரில் உயர்ந்த சாதனைகளைச் செய்தவனும், வெல்லப்பட முடியாத வீரனுமான அபிமன்யு, எதிரிகளைப் பெரும் எண்ணிக்கையில் கொன்ற பிறகு, இறுதியாக ஆறு முதன்மையான தேர்வீரர்களால் சூழப்பட்டு அவர்களால் கொல்லப்பட்டான். அர்ஜுனனைத் தடுக்க முடியாத அவர்கள் அர்ஜுனனின் மகனை {அபிமன்யுவைக்} கொன்றனர். வீரனான அந்தச் சுபத்ரையின் மகன் {அபிமன்} தன் தேரை இழந்தாலும், க்ஷத்திரியக் கடமைகளை நினைவுகூர்ந்து போரில் நிலைத்திருந்தான். இறுதியாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, துச்சாசனன் மகன் அவனை {அபிமன்யுவைக்) களத்தில் கொன்றான்.(7-9) படச்சரர்களைக் கொன்றவனும், பெரும் படையால் சூழப்பட்டவனும், அழகனுமான அம்பஷ்டன் மகன், தன் கூட்டாளிகளுக்காகத் தன் ஆற்றல் முழுவதையும் வெளிப்படுத்தினான்.(10) எதிரிகளுக்கு மத்தியில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, அவன் துரியோதனன் மகனான துணிச்சல்மிக்க லக்ஷ்மணனால் போரில் எதிர்கொள்ளப்பட்டு யமனின் வசிப்பிடத்துக்கு அனுப்பப்பட்டான்.(11)

வலிமைமிக்க வில்லாளியும், போரில் வெல்லப்பட முடியாதவனும், ஆயுதங்களில் சாதித்தவனுமான பிருஹந்தன், பெரும் ஆற்றலுடன் முயன்ற துச்சாசனனால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(12) போரில் வெல்லப்பட முடியாதவர்களும், தங்கள் கூட்டாளிகளாக்காகத் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தியவர்களும், மன்னர்களுமான மணிமான் மற்றும் தண்டதாரன் ஆகிய இருவரும் துரோணரால் கொல்லப்பட்டனர்.(13) போஜர்களின் ஆட்சியாளனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், தன் படைகளின் முகப்பில் நின்றவனுமான அம்சுமான், பெரும் ஆற்றலுடன் முயன்ற துரோணரால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(14) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கடற்கரையின் ஆட்சியாளனான சித்திரசேனன், தன் மகனோடு சேர்த்து, சமுத்ரசேனனால் பலவந்தமாக யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(15) கடல்வழி நாட்டின் {அநூப நாட்டின்} மற்றொரு ஆட்சியாளனான நீலன், பெரும் சக்தி கொண்ட வியாக்ரதத்தன் ஆகிய இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, அஸ்வத்தாமனால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டனர்.(16) சித்திராயுதன், சித்திரயோதி ஆகிய இருவரும் பெரும் படுகொலைகளைச் செய்து, தன் தேரின் பல்வேறு நகர்வுகளை வெளிப்படுத்திய பிறகு, பெரும் ஆற்றலுடன் முயன்ற விகர்ணனால் போரில் கொல்லப்பட்டான்.(17)

போரில் விருகோதரனுக்கு {பீமனுக்கு} இணையானவனும், கைகேயப் போர்வீரர்களால் சூழப்பட்டவனுமான கைகேயர்கள் தலைவன், சகோதரனால் கொல்லப்பட்ட சகோதரனாக மற்றொரு கைகேயனாலேயே கொல்லப்பாட்டன்.(18) மலைநாட்டைச் சேர்ந்தவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனும, கதாயுதப் போர்களில் சாதித்தவனுமான ஜனமேஜயன், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, உமது மகன் துர்முகனால் கொல்லப்பட்டான்.(19) முதன்மையான மனிதர்களும், பிராகசமான கோள்கள் இரண்டைப் போன்றவர்களுமான ரோசமானன் சகோதரர்கள் ஆகிய இருவரையும் துரோணர் தன் கணைகளால் சொர்க்கத்திற்கு ஒன்றாக அனுப்பினார்.(20) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்ட வேறு மன்னர்கள் பலரும் (பாண்டவர்களுக்காகப்) போரிட்டனர். அடைவதற்கரிய சாதனைகளைச் செய்த அவர்கள் அனைவரும் யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(21)

சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} தாய்மாமன்களான புருஜித் மற்றும் குந்திபோஜன் ஆகிய இருவரும், போரில் மரணமடைவதால் கிட்டும் உலகங்களுக்குத் துரோணரின் கணைகளால் அனுப்பப்பட்டனர்.(22) தன்னைப் பின்தொடர்பவர்களுக்குத் தலைமையேற்று வந்த காசிகளின் ஆட்சியாளனான அபிபூ, போரில் வசுதானன் மகனால் தனது உயிரை விடும்படி செய்யப்பட்டான்.(23) அளவற்ற ஆற்றலைக் கொண்ட யுதாமன்யு, பெரும் சக்தியைக் கொண்ட உத்தமௌஜஸ் ஆகியோர் வீரமிக்க நூற்றுக்கணக்கான போர்வீரர்களைக் கொன்ற பிறகு நமது மக்களால் கொல்லப்பட்டனர்.(24) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாஞ்சால இளவரசர்களான மித்ரவர்மன் மற்றும் க்ஷத்ரதர்மன் ஆகிய முதன்மையான வில்லாளிகள் இருவரும் துரோணரால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்வீரர்களில் முதன்மையானவனும், பெரும் துணிச்சல் கொண்டவனும், சிகண்டியின் மகனுமான க்ஷத்ரதேவன், ஓ! ஐயா, உமது பேரன் லக்ஷ்மணனால் கொல்லப்பட்டான்.(26)

பெரும் வலிமை கொண்டவர்களும், போரில் அச்சமற்றுத் திரிந்தவர்களும், தந்தையும் மகனுமான சுசித்ரன் மற்றும் சித்ரவர்மன் ஆகிய இரு வீரர்களும் துரோணரால் கொல்லப்பட்டனர்.(27) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அலைகள் நிறைந்த பெருங்கடலைப் போன்ற வார்த்தக்ஷேமி, போரில் தன் ஆயுதங்கள் தீர்ந்து, இறுதியாக இடைஞ்சலற்ற அமைதியை அடைந்தான்.(28) சூதர்களில் முதன்மையான சேனாபிந்து, போரில் எதிரிகள் பலரை எரித்த பிறகு, இறுதியாகப் பாஹ்லீகனால் {Bahlika} கொல்லப்பட்டான்.(29) ஓ! ஏகாதிபதி, சேதிகளுக்கு மத்தியில் உள்ள தேர்வீரர்களில் முதன்மையான திருஷ்டகேது, அடைவதற்கரிய சாதனைகளை அடைந்து யமனின் வசிப்பிடத்தை அடைந்தான்.(30) அதேபோல, பெரும் ஆற்றலைக் கொண்டவனான வீர சத்யதிருதி, பாண்டவர்களுக்காகப் போரில் பெரும் கொலைகளைச் செய்த பிறகு, யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(31) பூமியின் தலைவனும், சிசுபாலனின் மகனுமான சுகேது, எதிரிகள் பலரைக் கொன்ற பிறகு, இறுதியில் போரில் துரோணரால் கொல்லப்பட்டான்.(32)

விராடனின் மகன் சங்கனும், பெரும்பலம் கொண்ட உத்தரனும், அடைவதற்கரிய சாதனைகளை அடைந்து யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(33) அதே போல, மத்ஸ்யர்களின் சத்யதிருதி, பெரும் சக்தி கொண்ட மதிராஸ்வன், பெரும் ஆற்றலைக் கொண்ட சூர்யதத்தன் ஆகியோர் அனைவரும் துரோணரின் கணைகளால் கொல்லப்பட்டனர்.(34) ஓ! ஏகாதிபதி, பெரும் ஆற்றலைக் கொண்ட சிரேணிமத் (சிரேணிமான்} அடைவதற்கரிய சாதனைகளை அடைந்து, யமனின் வசிப்பிடத்தை அடைந்தான்.(35) பெரும் ஆற்றலைக் கொண்டவனும், உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான மகதர்களின் தலைவன்[1], பீஷ்மரால் கொல்லப்பட்டுப் போர்க்களத்தில் உறங்குகிறான்.(36) போரில் பேரழிவை ஏற்படுத்திய வசுதானனும், பெரும் ஆற்றலுடன் முயன்ற பரத்வாஜர் மகனால் {துரோணரால்} யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(37) இவர்களும், பாண்டவர்களின் இன்னும் பிற வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரும், பெரும் ஆற்றலுடன் முயன்ற துரோணரால் கொல்லப்பட்டனர். நீர் என்னைக் கேட்டது அனைத்தையும் இப்போது நான் சொல்லிவிட்டேன்” {என்றான் சஞ்சயன்}.(38)

உயிரோடு எஞ்சிய போர்வீரர்கள்! – கர்ண பர்வம் பகுதி – 07-குருக்களில் இன்னும் உயிரோடு இருக்கும் வீரர்கள் யாவர் என்பதைத் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன சஞ்சயன்; துயர் தாளாமல் மீண்டும் மயங்கி விழுந்த திருதராஷ்டிரன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, என் போர்வீரர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் அழிந்த பிறகு, என் படையில் எஞ்சியிருப்போரும் அழிந்துவிட மாட்டார்கள் என்று நான் நம்பவில்லை.(1) வலிமைமிக்க வில்லாளிகளும், குருக்களில் முதன்மையானோரும், வீரர்களுமான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும் கொல்லப்பட்ட பிறகும், நான் இன்னும் உயிரோடு இருப்பதால் என்ன பயன்?(2) போர்க்கள ரத்தினமும், பத்தாயிரம் யானைகளின் பலத்துடன் கூடிய பெரும் கர வலிமை கொண்டவனுமான ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} மரணத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(3) ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவனே, ஓ! சூதா {சஞ்சயா}, முதன்மையான வீரர்கள் அனைவரும் இறந்த பிறகு எனது படையில் இன்னும் உயிரோடு எஞ்சியிருப்போரைக் குறித்து இப்போது சொல்வாயாக.(4) வீழ்ந்தவர்களின் பெயர்களை நீ எனக்குச் சொன்னாய். எனினும், இன்னும் உயிரோடு எஞ்சியிருப்போர் அனைவரும் கூட ஏற்கனவே இறந்துவிட்டதாகவே எனக்குத் தெரிகின்றனர்” என்றான் {திருதராஷ்டிரன்}.(5)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிராமணர்களில் முதன்மையான துரோணர், சுடர்மிக்க, தெய்வீகமான, வலிமைமிக்க நால்வகை ஆயுதங்கள் [1] பலவற்றை எந்த வீரனுக்கு வழங்கினாரோ, திறனும், கரநளினமும் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன், உறுதியான பிடியும், வலுவான ஆயுதங்களும், பலமிக்கக் கணைகளும் கொண்ட அந்த வீரன், நெடுந்தொலைவுக்கு {ஆயுதங்களை} ஏவவல்லவனான அந்த உயர்ஆன்ம துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, உமக்காகப் போரிட விரும்பி களத்தில் இன்னும் நிற்கிறான்.(6,7) ஆநர்த்த நாட்டுவாசியும், ஹிருதிகனின் மகனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், சாத்வதர்களில் முதன்மையானவனும், போஜர்களின் தலைவனும், ஆயுதங்களில் சாதித்தவனுமான அந்தக் கிருதவர்மன், போரிட விரும்புபவனாக இன்னும் களத்தில் இருக்கிறான்.(8) ஆர்த்தாயனன் மகனும், போரில் அச்சமற்றவனும், போர்வீரர்களில் முதல்வனும், உம் தரப்பில் உள்ள அனைவரிலும் முதன்மையானவனும், தன் வார்த்தைகளை மெய்ப்பிப்பதற்காகத் தன் சொந்த தங்கையின் {மாத்ரியின்} மகன்களான பாண்டவர்களைக் {நகுல சகாதேவர்களை} கைவிட்டவனும், போரில் கர்ணனின் உற்சாகச் செருக்கைக் குறைப்பதாக யுதிஷ்டிரனின் முன்னிலையில் உறுதியளித்தவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட வீரனும், வெல்லப்பட முடியாதவனும், சக்தியில் சக்ரனுக்கே {இந்திரனுக்கே} இணையானவனுமான சல்லியன், உமக்காகப் போரிட விரும்பி இன்னும் களத்தில் இருக்கிறான்(9,10)

ஆஜநேயர்கள், சைந்தவர்கள், மலைவாசிகள், வடிநிலப் பகுதிவாசிகள் {ஆற்றுப்படுகைவாசிகள்}, காம்போஜர்கள், வனாயுகள் ஆகியோரைக் கொண்ட தன் படையின் துணையுடன் கூடிய காந்தாரர்களின் மன்னன் {சகுனி}, உமக்காகப் போரிட விரும்புபவனாகக் களத்தில் இருக்கிறான்.(11) ஓ! மன்னா, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரும், பல்வேறு அழகிய வழிகளில், பல்வேறு ஆயுதங்களுடன் போரிடவல்லவரும், கௌதமர் என்று அழைக்கப்படுபவருமான சரத்வான் மகன் {கிருபர்}, பெருங்கடினத்தைத் தாங்கவல்லதும், பெரியதுமான ஓர் அழகிய வில்லை எடுத்துக் கொண்டு போரிட விரும்பி களத்தில் நிற்கிறார்.(12) ஓ! குரு குலத்தின் தலைவரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனும், நல்ல குதிரைகளுடனும், கொடிமரத்துடனும் கூடிய நல்ல தேரில் ஏறியவனுமான கைகேயர்கள் ஆட்சியாளனுடைய மகன், உமக்காகப் போரிடுவதற்காகக் களத்தில் நிற்கிறான்.(13) 

ஓ! மன்னா{திருதராஷ்டிரரே}, உமது மகனும், குருகுலத்தின் போர்வீரர்களில் முதன்மையானவனுமான புருமித்ரன், சூரியன் அல்லது நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட தன் தேரில் ஏறிக்கொண்டு, மேகமற்ற ஆகாயத்தில், பிரகாசமாக ஒளிரும் சூரியனைப் போலவே களத்தில் நிற்கிறான்.(14) பெரும் சக்தி கொண்ட துரியோதனனும், ஒரு யானைப்படைக்கு மத்தியில், போராளிகளில் முதன்மையான பலரின் துணையுடன் போரிட விரும்பி தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் தேரில் நிற்கிறான்.(15) மன்னர்கள் பலருக்கு மத்தியில், தாமரையின் காந்தியைக் கொண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன் {துரியோதனன்}, சற்றே புகையுடன் கூடிய நெருப்பைப் போலவோ, மேகங்களில் இருந்து வெளிப்படும் சூரியனைப் போலவோ, தனது அழகான தங்கக் கவசத்துடன் பிரகாசமாகத் தெரிந்தான்.(16)

சித்திரசேனனுடன் சேர்ந்து, வாள் மற்றும் கேடயத்துடன் கூடிய சுஷேணன், வீர சத்யசேனன் ஆகிய உமது மகன்களும், இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன், போரிடும் விருப்பத்துடன் நிற்கின்றனர்.(17) பெரும் பலம் கொண்டவர்களும், பணிவுடன் கூடியவர்களுமான பாரத இளவரசர்கள் சித்ராயுதன், சுருதவர்மன், ஜயன், சலன், சத்யவிரதன், துச்சலன் ஆகியோர் அனைவரும் போரிட விரும்பி களத்தில் நிற்கின்றனர்.(18) கைதவ்யர்களின் ஆட்சியளானும், தன் துணிவில் செருக்குக் கொண்டவனும், போரில் அச்சமற்றுத் திரியவல்லவனுமான அந்த இளவரசன் {கைதவ்ய ராஜகுமாரன்}, காலாட்படை, குதிரைப்படை, யானைகள் மற்றும் தேர்களைக் கொண்ட தன் எதிரிகளைக் கொன்றபடியே, உமக்காகப் போரிட விரும்பி களத்தில் நிற்கிறான்.(19) வீரம் கொண்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களும், திறம்படத் தாக்கவல்லவர்களும், துல்லியமான இலக்கைக் கொண்டவர்களுமான சுருதாயு, சுருதாயுதன், சித்திராங்கதன், சித்திரவர்மன் ஆகியோரும் போரில் விருப்பத்துடன் களத்தில் நிற்கின்றனர்.(20)

கர்ணனின் மகனான உயர் ஆன்ம சத்யசந்தன், போரிடும் விருப்பத்துடன் களத்தில் நிற்கிறான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயர்ந்த ஆயுதங்களின் அறிவையும், பெரும் கரநளினத்தையும் கொண்டவர்களான கர்ணனின் வேறு இரண்டு மகன்களும், அற்ப சக்தி கொண்ட போர்வீரர்களால் துளைக்க முடியாதபடியே, உமக்காகப் போரிடும் விருப்பத்துடன் பெரும் படைகளுக்குத் தலைமையில் நிற்கிறார்கள்.(21) இவ்வீரர்கள் மற்றும் அளவற்ற வலிமை கொண்ட இன்னும் பல முதன்மையான போர்வீரர்கள் ஆகியோரின் துணையுடன் குரு மன்னன் (துரியோதனன்) இரண்டாவது இந்திரனைப் போல வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டு தன் யானை படைப்பிரிவுக்கு மத்தியில் நிற்கிறான்” {என்றான் சஞ்சயன்}.(22)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “நமக்கும் எதிரிக்கும் மத்தியில் உயிரோடு இருப்பவர்கள் அனைவரையும் நீ முறையாக எனக்குச் சொல்லிவிட்டாய். இதிலிருந்தே வெற்றி எந்தப்பக்கம் சேரும் என்பதை நான் தெளிவாகப் பார்க்கிறேன். உண்மையில் அஃதை இந்த உண்மைகளில் இருந்தே அனுமானிக்கலாம்” என்றான்.(23)

வைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} தொடர்ந்தார், “தன் முதன்மையான வீரர்கள் அனைவரும் இறந்துவிட்டதால், தன் படையின் சிறு பகுதி மட்டுமே உயிரோடு இருப்பதை அறிந்த அம்பிகையின் மகன் திருதராஷ்டிரன், இதைச் சொன்ன போது, துயரத்தில் மிகவும் கலக்கமடைந்ததாகத் தன் இதயத்தை உணர்ந்தான். {அப்படியே, அந்த} மன்னன் {திருதராஷ்டிரன்} மயங்கிப் போனான். பிறகு ஓரளவுக்குத் தன் உணர்வுகள் மீண்ட அவன், சஞ்சயனிடம், “ஒருக்கணம் பொறுப்பாயாக” என்றான்.(24,25) மேலும் அந்த மன்னன், “ஓ! மகனே {சஞ்சயா}, இந்தக் கொடிய பேரிடரைக் கேட்ட பிறகு, என் இதயம் பெரிதும் கலங்குகிறது. என் புலன்கள் மயங்குகின்றன, என் அங்கங்களும் முடங்குகின்றன” என்றான்.(26) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், அம்பிகையின் மகனும், பூமியின் தலைவனுமான அந்தத் திருதராஷ்டிரன், தன் உணர்வுகளை இழந்து கீழே பூமியில் விழுந்தான்”{என்றார் வைசம்பாயனர்}.(27)

திருதராஷ்டிரனின் புலம்பல்! – கர்ண பர்வம் பகுதி – 08-கர்ணனின் பெருமைகளைச் சொல்லிப் புலம்பிய திருதராஷ்டிரன், நஞ்சுண்டோ, தீயில் விழுந்தோ, மலையில் இருந்து விழுந்தோ சாக விரும்புவதாகச் சஞ்சயனிடம் சொன்னது…

ஜனமேயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே {வைசம்பாயனரே}, மன்னன் {திருதராஷ்டிரன்} சற்றே ஆறுதலடைந்ததும், கர்ணனின் வீழ்ச்சியையும், தனது மகன்கள் கொல்லப்பட்டதையும் கேட்டு என்ன சொன்னான்?(1) உண்மையில், தன் மகன்களுக்கு ஏற்பட்ட அழிவால் உண்டான அவனது துயரம் வருந்தக்கூடியதாக இருக்கிறது. அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} சொன்னது அனைத்தையும் கேட்கின்ற எனக்கு {அவற்றை} நீர் சொல்வீராக” என்றான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நம்பமுடியாததும், அதிர்ச்சியூட்டுவதும், அச்சமூட்டுவதும், அனைத்து உயிரினங்களின் உணர்வுகளையும் முடக்கும் திறன் கொண்டதும், மேருவின் வீழ்ச்சியைப் போலத் தெரிவதும்,(3) அல்லது நம்ப முடியாத வகையிலான சுக்கிரனின் {சுக்கிராச்சாரியரின்} அறிவு மயக்கம் போன்றதும், அல்லது பயங்கரச் சாதனைகளைச் செய்த இந்திரன் எதிரிகளிடம் அடையும் வீழ்ச்சியைப் போன்றதும்,(4) அல்லது ஆகாயத்தில் இருக்கும் பிரகாசமான சூரியன் பூமியில் விழுந்ததைப் போன்றதும், அல்லது வற்றாத நீர் கொள்ளிடமான பெருங்கடலானது, புரிந்து கொள்ள முடியாத வகையில் வற்றிப் போவது போன்றதும்,(5) அல்லது பூமி, ஆகாயம், திசைப்புள்ளிகள் மற்றும் நீர் ஆகியன, வியக்கவைக்கும் வகையில் முற்றிலும் அழிவது போன்றதும், அல்லது புண்ணியம் மற்றும் பாவம் ஆகிய இரு செயல்களும் கனியற்றுப் போவது போன்றதுமான கர்ணனின் படுகொலையைக் கேட்ட திருதராஷ்டிரன்,(6) அதுகுறித்துச் சிறிது நேரம் மெய்யுறுதியுடன் சிந்தித்ததும், தன் படை நிர்மூலமாக்கப்பட்டதாகவே நினைத்தான்.(7)

கொல்லப்பட முடியாத கர்ணனைப் போலவே, அதே போன்ற விதியையே பிற உயிரினங்களும் அடையப் போகின்றன என்று நினைத்தவனும், துயரில் எரிந்தவனும், பாம்பொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தவனும், கிட்டத்தட்ட அங்கங்கள் {அனைத்தும்} முடங்கியவனும், அந்த அம்பிகையின் மகனுமான மன்னன் திருதராஷ்டிரன், மிகவும் உற்சாகமற்ற வகையில் நெடும் பெருமூச்சுகளைவிட்டுக் கொண்டே, கவலையால் நிறைந்து “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும் புலம்பத் தொடங்கினான்.(8,9)

அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, “ஓ! சஞ்சயா, அதிரதனின் அந்த வீர மகன் {கர்ணன்}, சிங்கம் அல்லது யானையின் ஆற்றலைக் கொண்டிருந்தான். ஒரு காளையின் கழுத்தளவிற்குத் தன் கழுத்து தடித்தவனான {காளையின் திமில்களைப் போலத் தோள் தடித்தவனான} அவனது கண்கள், நடை மற்றும் குரலும் கூடக் காளையைப் போன்றே இருந்தன.(10) வஜ்ரத்தைப் போன்ற கடினமான அங்கங்களைக் கொண்ட அந்த இளைஞன் {கர்ணன்}, காளையானது மற்றொரு காளையிடம் இருந்து தப்பி ஓடாததைப் போல, பெரும் இந்திரனே {மகேந்திரனே} தன் எதிரியாக இருந்தாலும் போரில் இருந்து எப்போதும் விலகியதில்லை. (11)

அவனது வில்லின் நாணொலி, உள்ளங்கையொலி, அவனது கணை மாரியின் “விஸ்” என்ற ஒலி ஆகியவற்றால் மனிதர்களும், குதிரைகளும், தேர்களும், யானைகளும் போரில் இருந்து தப்பி ஓடின.(12) துரியோதனன், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், எதிரிகளின் பெருங்கூட்டத்தைக் கொல்பவனும், மங்காப் புகழைக் கொண்டவனுமான அந்தப் போர்வீரனை {கர்ணனை} நம்பியே, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டுவின் மகன்களிடம் பகைமையைத் தூண்டிவிட்டான்.(13) தேர்வீரர்களில் முதன்மையானவனும், மனிதர்களில் புலியும், தடுக்கப்படமுடியாத தொடக்கத்தை {புறப்பாட்டைக்} கொண்ட வீரனுமான அந்தக் கர்ணன், போரில் பார்த்தனால் {அர்ஜுனனால்} எவ்வாறு கொல்லப்பட்டான்?(14)

அவன் {கர்ணன்}, தன் கரங்களின் வலிமையை நம்பியே, மங்காப் புகழ் கொண்ட கேசவனையும் {கிருஷ்ணனையும்}, தனஞ்சயன் {அர்ஜுனன்}, விருஷ்ணிகள் மற்றும் பிற எதிரிகள் அனைவரையும் அலட்சியம் செய்தான்?(15) அவன் {கர்ணன்}, மூடனும், பேராசை கொண்டவனும், தலைக்குனிவை அடைந்தவனும், அரசில் ஆசை கொண்டவனும், பீடிக்கப்பட்டவனுமான துரியோதனனிடம், “ஒன்றாகச் சேர்ந்திருப்பவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான சாரங்கபாணி {கிருஷ்ணன்} மற்றும் காண்டீவதாரி {அர்ஜுனன்} ஆகிய இருவரையும், போரில் அவர்களது முதன்மையான தேர்களில் இருந்து நான் ஒருவனாகவே கீழே வீழ்த்துவேன்” என்று சொல்வது வழக்கம்.(16,17)

காந்தாரர்கள், மத்ரகர்கள், மத்ஸ்யர்கள், திரிகர்த்தர்கள், தங்கணர்கள், காசர்கள்,(18) பாஞ்சாலர்கள், விதேஹர்கள், குளிந்தர்கள், காசி-கோசலர்கள், சுஹ்மர்கள், அங்கர்கள், நிஷாதர்கள், புண்டரர்கள், கீசகர்கள்,(19) வத்ஸர்கள், கலிங்கர்கள், தரதர்கள், அஸ்மகர்கள், ரிஷிகர்கள் ஆகிய வெல்லப்பட முடியாதவர்களும், வலிமிக்கவர்களுமான எதிரிகளை அவன் {கர்ணன்} அடக்கியிருக்கிறான். துணிவுமிக்க இந்தக் குலங்கள் அனைத்தையும் கங்க இறகுகளைக் கண்ட தன் கூரிய கணைகளால் அடக்கியவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, துரியோதனனின் செல்வாக்கை வளர்ப்பதற்காக அவர்கள் அனைவரையும் நமக்குக் கப்பம் கட்டச் செய்தான்.(20,21) ஐயோ, தெய்வீக ஆயுதங்களை நன்கறிந்த போர்வீரனும், படைகளைப் பாதுகாப்பவனும், வலிமையும் சக்தியும் கொண்ட விருஷன் என்று அழைக்கப்பட்டவனும், விகர்த்தனன் மகனுமான அந்தக் கர்ணன், வீரர்களும், வலிமைமிக்கவர்களும், தன் எதிரிகளுமான பாண்டுவின் மகன்களால் போரில் எவ்வாறு கொல்லப்பட்டான்?(22)

தேவர்களில் முதன்மையானவனான இந்திரனைப் போல, கர்ணன் மனிதர்களில் முதன்மையானவனாக இருந்தான். இந்த மூவுலகிலும், இவர்களைப் போல வேறு மூன்றாவது நபரை நாம் கேள்விப்பட்டதிலை.(23) குதிரைகளில் உச்சைஸ்ரவம் முதன்மையானது; யக்ஷர்களில் வைஸ்ரவணன் {குபேரன்} முதன்மையானவன்; தேவர்களில் இந்திரன் முதன்மையானவன்; தாக்குபவர்களில் கர்ணனே முதன்மையானவன்.(24) பெரும் வீரமிக்கவர்களும், மிக வலிமையானவர்களுமான ஏகாதிபதிகளால் கூட வெல்லப்பட முடியாதவனாக இருந்த அவன் {கர்ணன்}, துரியோதனனின் செல்வாக்கை வளர்ப்பதற்காக மொத்த உலகத்தையும் அடக்கினான்.(25) மகத ஆட்சியாளன் {ஜராசந்தன்}, நல்லிணக்கம் மற்றும் கௌரவங்களின் மூலம் கர்ணனைத் தன் நண்பனாக அடைந்து, கௌரவர்களையும், யாதவர்களையும் தவிர்த்து உலகின் க்ஷத்திரியர்கள் அனைவரையும் போருக்கு அறைகூவி அழைத்தான்.(26)

{அப்படிப்பட்ட} அந்தக் கர்ணன், சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} தனிப்போரில் கொல்லப்பட்டதைக் கேட்டு, நடுக்கடலில் உடைந்த மரக்கலத்தைப் போலத் துயரக் கடலில் நான் மூழ்குகிறேன்.(27) உண்மையில், மனிதர்களில் முதன்மையானவனும், தேர்வீரர்களில் சிறந்தவனுமான அவன் {கர்ணன்}, தனிப்போரில் கொல்லப்பட்டதைக் கேட்டு, கடலில் தெப்பம் இல்லாத ஒருவனைப் போலத் துன்பக்கடலில் நான் மூழ்குகிறேன்.(28) ஓ! சஞ்சயா, இவ்வளவு துயரத்திலும் சாகாமல் இருப்பதால் என் இதயம் பிளக்க முடியாததாகவும், வஜ்ரத்தைவிடக் கடினமானதாகவும் இருப்பதாக நான் நினைக்கிறேன்.(29) ஓ! சூதா, சொந்தங்கள், உறவினர்கள், கூட்டாளிகள் ஆகியோரின் தோல்வியையும், அவமானத்தையம் கேட்ட பிறகும், இவ்வுலகில் என்னைத் தவிர வேறு எவன் உயிரை விடாமல் இருப்பான்?(30) நஞ்சுண்ணவோ, நெருப்பில் விழவோ, மலைச்சிகரத்தில் இருந்து விழவோ நான் விரும்புகிறேன். ஓ! சஞ்சயா, {இந்தத்} துயரத்தின் பெருங்கனத்தை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை” {என்றான் திருதராஷ்டிரன்}.(31)

திருதராஷ்டிரன் விசாரணை! – கர்ண பர்வம் பகுதி – 09-கர்ணனின் மரணத்தைக் கேட்டு துக்கமடைந்த திருதராஷ்டிரன்; கர்ணன் மற்றும் துரியோதனன் பற்றிச் சஞ்சயனிடம் கூறியது; கர்ணன் மற்றும் பாண்டவர்களுக்கிடையில் நடைபெற்ற போரைக் குறித்துச் சொல்லுமாறு சஞ்சயனை ஏவிய திருதராஷ்டிரன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அழகாலும், பிறப்பாலும், புகழாலும், தவத்தாலும், கல்வியாலும் உலகம் உம்மை யயாதியின் மகன் நகுஷனுக்கு இணையாகக் கருதுகிறது.(1) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் உயர்ந்த சாதனையைக் கொண்ட பெருமுனிவர் ஒருவரைப் போல வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவராவீர். உமது மனவுறுதியைத் திரட்டுவீராக. துயருக்குள்ளாகாதீர்” {என்றான்}.(2)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சால மரத்தைப் போல இருந்த கர்ணனே போரில் கொல்லப்பட்டதால், விதியே உயர்ந்ததென்றும், முயற்சி கனியற்றதென்றும் நான் நினைக்கிறேன்[1].(3) யுதிஷ்டிரனின் படையையும், பாஞ்சாலத் தேர்வீரர்களின் பெருங்கூட்டத்தையும் கொன்று, தன் கணைமாரியால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் எரித்து, அசுரர்களை மலைக்கச் செய்த வஜ்ரதாரியை {இந்திரனைப்} போல, போரில் பார்த்தர்களை {பாண்டவர்களை} மலைக்கச் செய்த பிறகு, ஐயோ, எதிரியால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட அந்த வலிமைமிக்க வீரன் {கர்ணன்}, புயலால் பூமியில் வேரோடு சாய்க்கப்பட்ட பெருமரம் ஒன்றைப் போல எவ்வாறு விழுந்திருக்க முடியும்?(4,5)உண்மையில், மூழ்கிக் கொண்டிருப்பவனான மனிதன் ஒருவனால், பெருங்கடலின் எல்லையைக் காண முடியாததைப் போல, என் துயரங்களுக்கு ஓர் எல்லையை என்னால் காண இயலவில்லை. கர்ணனின் மரணம் மற்றும் பல்குனனின் {அர்ஜுனனின்} வெற்றி ஆகியவற்றைக் கேட்டு என் கவலைகள் அதிகரிப்பதால் நான் உயிர்வாழ விரும்பவில்லை.(6) உண்மையில், ஓ! சஞ்சயா, கர்ணனின் படுகொலையை நம்பவே முடியாததாக நான் கருதுகிறேன்.(7) கர்ணனின் வீழ்ச்சியைக் கேட்ட பிறகும், என் இந்தக் கடினமான இதயம் {கல்நெஞ்சம்} ஆயிரம் துண்டுகளாக வெடிக்காமல் இருப்பதால், அது வஜ்ரத்தாலானதே என்பதில் ஐயமில்லை.(8)

கர்ணனின் மரணத்தைக் கேட்டுத் துயரால் புண்பட்டும் நான் சாகாதிருப்பதால், (என் பிறப்புக்கு) முன்பே, தேவர்களால் எனக்கு நீண்ட வாழ்நாள் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஓ! சஞ்சயா, நண்பர்களற்ற ஒருவனின் இந்த வாழ்வுக்கு ஐயோ,(9) ஓ! சஞ்சயா, இன்று இந்த இழிந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டவனும், மூட புத்தி கொண்டவனுமான நான், அனைவராலும் பரிதாபப்படும்படியான துன்பகரமான வாழ்வையே வாழ வேண்டியிருக்கும்.(10) ஓ! சூதா {சஞ்சயா}, முன்பு மொத்த உலகத்தாலும் மதிக்கப்பட்ட நான், எதிரிகளால் அவமதிக்கப்பட்டு எவ்வாறு வாழ்வேன்?(11) ஓ! சஞ்சயா, பீஷ்மர், துரோணர் மற்றும் உயர் ஆன்ம கர்ணன் ஆகியோருடைய வீழ்ச்சியின் விளைவால், வலியில் {துன்பத்தில்} இருந்து பெரும் வலியையும் {பெருந்துயரையும்}, பேரிடரையுமே நான் அடைந்திருக்கிறேன்.(12) சூதன் மகன் {கர்ணன்} போரில் கொல்லப்பட்டான் எனும்போது, (என் படையைச் சேர்ந்த) எவனும் உயிரோடு தப்புவான் என்பதைக் காணவில்லை. ஓ! சஞ்சயா, அவன் {கர்ணன்} என் மகன்களுக்கு ஒரு பெரும் தெப்பத்தைப் போன்றவனாக இருந்தான்[2].(13) எண்ணற்ற கணைகளை ஏவிய அந்த வீரன் போரில் கொல்லப்பட்டுவிட்டான். அந்த மனிதர்களில் காளை {கர்ணன்} இல்லாமல், நான் வாழ்வதால் என்ன பயன்?(14) அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, இடியின் வீழ்ச்சியால் பிளக்கப்பட்ட ஒரு மலைச் சிகரத்தைப் போலவே தன் தேரிலிருந்து வீழ்ந்திருப்பான் என்பதில் ஐயமில்லை.(15) மதங்கொண்ட ஒரு யானைகளின் இளவரசனால் கொல்லப்பட்ட மற்றொரு யானையைப் போல அவன் {கர்ணன்}, குருதியில் குளித்து, பூமியை அலங்கரித்தபடி கிடந்திருப்பான் என்பதில் ஐயமில்லை.(16)எவன் தார்தராஷ்டிரர்களின் பலமாக இருந்தானோ, எவன் பாண்டு மகன்களை அச்சுறுத்துபவனாக இருந்தானோ, ஐயோ செருக்கு நிறைந்த வில்லாளியான அந்தக் கர்ணன், அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(17) வீரனும், வலிமைமிக்க வில்லாளியுமான அவன் {கர்ணன்}, என் மகன்களின் அச்சங்களை விலக்குபவனாக இருந்தான். ஐயோ, உயிரை இழந்த அந்த வீரன், இந்திரனால் தாக்கி வீழ்த்தப்பட்ட மலையைப் போல (பூமியில்) கிடக்கிறான்[3].(18) துரியோதனனின் விருப்பங்கள், முடவன் இடம்பெயர்வதை {வழிநடையைப்} போன்றனவோ, ஏழை மனிதனின் {தரித்திரனின்} விருப்பம் நிறைவேறுவதைப் போன்றனவோ, தாகம் கொண்டவனுக்கு எப்போதோ கிடைக்கும் நீர்த்துளிகளைப் போன்றனவோ ஆகும்.(19) ஒரு வழியில் திட்டமிடப்பட்ட நமது திட்டங்கள் வேறு மாதிரியாக முடிகின்றன. ஐயோ, விதியே வலிமையானது, காலமும் மீற முடியாதது.(20)

ஓ! சூதா {சஞ்சயா}, எனது மகன் துச்சாசனன், (புழுதியில்) பணியச் செய்யப்பட்டு, உற்சாகமற்ற ஆன்மா கொண்டவனாக ஆண்மை அனைத்தையும் இழந்து களத்தில் இருந்து ஓடிக்கொண்டிருந்தபோது கொல்லப்பட்டானா?(21) ஓ! மகனே, ஓ! சஞ்சயா, அந்தச் சந்தர்ப்பத்தில் கோழைத்தனமான செயல் எதையும் அவன் செய்யவில்லை என நான் நம்புகிறேன். வீழ்ந்துவிட்ட பிறகு அந்த வீரன் க்ஷத்திரியர்களைப் போலத் தன் மரணத்தைச் சந்திக்கவில்லையா?(22) போரேற்புக்கு எதிரான நலம்தரும் மருந்தான யுதிஷ்டிரனின் தொடர்ச்சியான அறிவுரையை மூடனான துரியோதனன் ஏற்கவில்லை.(23)

பெரும்புகழைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கணைப்படுக்கையில் கிடந்த பீஷ்மர் தண்ணீரை இரந்து கேட்ட போது, பூமியின் பரப்பைத் துளைத்தான்.(24) அந்தப் பாண்டு மகனால் உண்டாக்கப்பட்ட நீர்த்தாரையைக் கண்ட அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர் (பீஷ்மர், துரியோதனனிடம், “ஓ! ஐயா, பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்வாயாக. பகைமைகள் தணிந்தால், அமைதி உனதாகும். உனக்கும் உன் சகோதரர்களுக்கும் இடையிலான போர் என்னோடு முடிந்து போகட்டும். பாண்டு மகன்களுடன் சகோதரத்துவத்துடன் இந்தப் பூமியை அனுபவிப்பாயாக” என்றார்.(25,26) அந்த ஆலோசனைகளை அலட்சியம் செய்த எனது பிள்ளை {துரியோதனன்} இப்போது நிச்சயமாக வருந்தியிருப்பான். பெரும் முன்னறிதிறம் கொண்ட பீஷ்மர் சொன்னதே இப்போது நடக்கிறது.(27)

ஓ! சஞ்சயா, என்னைப் பொறுத்தவரை, நான் ஆலோசகர்களற்றவனாக, மகன்களை இழந்தவனாக இருக்கிறேன். சூதாட்டத்தின் விளைவாக, சிறகுகளை இழந்த பறவையைப் போல நான் பெருந்துயரத்தில் வீழ்ந்துவிட்டேன்.(28) ஓ! சஞ்சயா, விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகள் ஒரு பறவையைப் பிடித்து அதன் சிறகுகளை வெட்டி, மகிழ்ச்சியாக அதை விடுவிக்கும்போது,(29) சிறகற்றதன் விளைவால் இடம்பெயர முடியாத அந்த உயிரினத்தைப் போலவே நானும் சிறகுகளை இழந்த ஒரு பறவையாகிவிட்டேன்.(30) பலவீனனாக, எந்த வளமும் அற்றவனாக, சொந்தங்களற்றவனாக, உறவினங்கள் மற்றும் நண்பர்களை இழந்தவனாக, உற்சாகமற்றவனாக, எதிரிகளால் அவமதிக்கப்பட்டவனாக நான் எந்தத் திசைப்புள்ளிக்குத்தான் செல்வேன்?(31) எவன் காம்போஜர்கள், கைகேயர்களுடன் கூடிய அம்பஷ்டர்கள் ஆகியோர் அனைவரையும் வெற்றிகொண்டானோ, தன் காரியத்தைச் சாதித்துப் போரில் கந்தர்வர்கள், விதேகஹர்கள் ஆகியோரைப் போரில் வென்றானோ, எவன் துரியோதனனின் செல்வாக்கை வளர்ப்பதற்காக மொத்த உலகையும் அடக்கினானோ, அந்தப் பலமிக்கவன் {கர்ணன்}, ஐயோ, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர்களும், வீரர்களும், பலவான்களுமான பாண்டவர்களால் வெல்லப்பட்டான்.(32,33)

போரில் அந்த வலிமைமிக்க வில்லாளியான கர்ணன், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (அர்ஜுனனால்) கொல்லபட்ட பிறகு, ஓ! சஞ்சயா, (களத்தில்) நின்ற வீரர்கள் யாவர் என்பதை எனக்குச் சொல்வாயாக.(34) போரில் அவன் பாண்டவர்களால் கொல்லப்பட்ட போது தனியனாகவும், (நண்பர்களால்) கைவிடப்பட்டவனாகவும் இல்லை என நான் நம்புகிறேன். ஓ! ஐயா, துணிச்சல்மிக்க நம் வீரர்கள் வீழ்ந்ததை இதற்கு முன்பே நீ எனக்குச் சொல்லியிருக்கிறாய்.(35) சிகண்டியின் தாக்குதலைத் தடுக்க எதையும் செய்யாதவரும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவருமான பீஷ்மரைப் போரில் அவன் {சிகண்டி} தனது பலமிக்கக் கணைகளால் வீழ்த்தினான்.(36) அதே போல, ஓ! சஞ்சயா, பல கணைகளால் ஏற்கனவே துளைக்கப்பட்டுப் போரில் தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவரும், வலிமைமிக்க வில்லாளியுமான துரோணரைத் தன் வாளை உயர்த்திக் கொன்றான் துருபதனின் மகனான திருஷ்டத்யும்னன்.(37) இவர்கள் இருவரும் பாவமான நிலையிலும், குறிப்பாக வஞ்சகத்தாலும் கொல்லப்பட்டனர். பீஷ்மர் மற்றும் துரோணரின் கொலையைக் குறித்து நான் இப்படியே கேட்டேன்.(38) உண்மையில் பீஷ்மரும், துரோணரும் போரிட்டுக் கொண்டிருந்த போது, நேர்மையான வழிகளில் வஜ்ரதாரியால் {இந்திரனால்} கூடப் போரில் கொல்லப்பட முடியாதவர்களாக இருந்தனர். நான் உனக்குச் சொல்லும் இதுவே உண்மையாகும் {சத்தியமாகும்}.

கர்ணனைப் பொறுத்தவரை, உண்மையில், இந்திரனுக்கு நிகரான அந்த வீரன் பன்மடங்கான தெய்வீக ஆயுதங்களை ஏவி கொண்டிருந்த போது, மரணத்தால் அவனை எவ்வாறு தீண்ட முடியும்?(40), எவனிடம், அவனது காதுகுண்டலங்களுக்கு மாற்றாக, எதிரியைக் கொல்வதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், மின்னலின் காந்தியைக் கொண்டதுமான தெய்வீக ஈட்டியைக் கொடுத்தானோ,(41) எவன், சந்தனத்தூளுக்கு மத்தியில் (தன் அம்பறாத்தூணியில்) பாம்பு வாய்க் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், நல்ல சிறகுகளைக் கொண்டதும், எதிரிகள் அனைவரையும் கொல்லவல்லதுமான தெய்வீகக் கணையை {நாகாஸ்திரத்தைக்} கொண்டிருந்தானோ,(42) எவன், பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோரைத் தங்கள் தலைமையில் கொண்ட வலிமைமிக்க வீரத் தேர்வீரர்களை அலட்சியம் செய்து, ஜமதக்னியின் மகனிடம் {பரசுராமரிடம்} பயங்கரப் பிரம்மாயுதத்தை அடைந்தானோ,(43) எவன், துரோணரைத் தங்கள் தலைமையில் கொண்ட போர்வீரர்கள் கணைகளால் பீடிக்கப்பட்டுக் களத்தில் புறமுதுகிடுவதைக் கண்டு தன் கூரிய கணைகளால் சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} வில்லை அறுத்தானோ அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன்,(44) எவன், பத்தாயிரம் யானைகளின் வலிமையையும், காற்றின் வேகத்தையும் கொண்ட வெல்லப்பட முடியாத பீமசேனனைக் கணப்பொழுதிற்குள் தேரிழக்கச் செய்து, அவனைக் {பீமனைக்} கண்டு நகைத்தானோ,(45) எவன் நேரான கணைகளால் சகாதேவனை வென்று, அவனைத் தேரற்றவனாகச் செய்து, இரக்கத்தாலும், அறக்கருத்தாலும் அவனைக் கொல்லாதிருந்தானோ,(46) வெற்றியடையும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மாயைகளைச் செய்த இராட்சச இளவரசன் கடோத்கசனைச் சக்ரனின் {இந்திரனின்} ஈட்டியால் எவன் கொன்றானோ,(47) எவனுடைய போர்ச் சாதனைகள், நீண்ட காலத்திற்கு அவனுடன் தனிப்போரில் ஈடுபடுவதைத் தவிர்க்கும்படி தனஞ்சயனை {அர்ஜுனனை} அச்சத்தில் நிறைத்ததோ அவன், ஐயோ, அந்த வீரன் {கர்ணன்} போரில் எவ்வாறு கொல்லப்பட முடியும்?[4](48)

தேரிழப்பு, வில்முறிப்பு, ஆயுதங்கள் தீர்தல் ஆகியவற்றில் எவையேனும் ஒன்று நடைபெறாமல், எதிரிகளால் அவன் எவ்வாறு கொல்லப்பட முடியும்?(49) மனிதர்களில் புலியும், உண்மையான புலியையே போன்றவனும், பெரும் மூர்க்கம் கொண்டவனுமான கர்ணன், தன் உறுதிமிக்க வில்லை அசைத்துக் கொண்டு, அதிலிருந்து பயங்கரக் கணைகளையும், தெய்வீக ஆயுதங்களையும் போரில் ஏவிக் கொண்டிருந்தவனை எவனால் வெல்ல முடியும்?(50) அவன் கொல்லப்பட்டான் என்று நீ என்னிடம் சொல்வதால், அவனது வில் ஒடிந்திருக்க வேண்டும், அல்லது அவனது தேர் பூமியில் அழுந்தியிருக்க வேண்டும், அல்லது அவனது ஆயுதங்கள் தீர்ந்து போயிருக்க வேண்டும் என்பது நிச்சயம். உண்மையில், அவனது கொலைக்கான ({அவனது கொலையை} விளக்கும்) வேறு எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை.(51)

“பல்குனனை {அர்ஜுனனைக்} கொல்லாமல் என் பாதங்களைக் கழுவுவதில்லை” என்ற பயங்கரச் சபதத்தை உயர் ஆன்மா கொண்ட எவன் செய்தானோ,(52) எந்தப் போர்வீரன் மீது கொண்ட அச்சத்தால், மனிதர்களில் காளையும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் காட்டில் தொடர்ந்து பதிமூன்று வருடங்களாகத் தூங்காமல் இமைத்துக் கொண்டிருந்தானோ,(53) உயர் ஆன்மாவையும், பெரும் ஆற்றலையும் கொண்ட எவனது வீரத்தை நம்பி என் மகன், பாண்டவர்களின் மனைவியைப் {திரௌபதியைப்} பலவந்தமாகச் சபைக்கு இழுத்து வந்தானோ,(54) அங்கே அந்தச் சபையில், பாண்டவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, குருக்களின் முன்னிலையில், பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} அடிமைகளின் மனைவி என்று எவன் அழைத்தானோ,(55) சூத குலத்தைச் சேர்ந்த எந்த வீரன், சபைக்கு மத்தியில், கிருஷ்ணையிடம் {கர்ணன் திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணையே, எள்ளுப் பதர்களைப் போன்றவர்களான உன் கணவர்கள் அனைவரும் இனி இல்லை, எனவே, ஓ! அழகிய நிறத்தைக் கொண்டவளே, வேறு ஏதேனும் கணைவனைத் தேடுவாயாக” என்று சொல்லி, இணையான கடுமையும், முரட்டுத்தனமும் கொண்ட வேறு உணர்வு வெளிப்பாடுகளையும் அவளைக் கேட்கச் செய்தானோ, அந்த வீரன் எதிரியால் எவ்வாறு கொல்லப்பட்டான்?(56,57)

துரியோதனனிடம் எவன், “ஓ! துரியோதனா, போரில் தன் ஆற்றலைக் குறித்துத் தற்புகழ்ச்சி செய்து கொள்ளும் பீஷ்மரோ, போரில் வெல்லப்பட முடியாதவரான துரோணரோ பாரபட்சத்தால் குந்தியின் மகன்களைக் கொல்ல மாட்டார்கள். நானே அவர்கள் அனைவரையும் கொல்வேன், உன் இதய நோய் விலகட்டும்” என்ற வார்த்தைகளைச் சொன்னானோ, எவன், “குளுமையான சந்தனக் குழம்பால் பூசப்பட்டிருக்கும் என் கணை ஆகாயத்தில் செல்லும் போது, (அர்ஜுனனின்) காண்டீவத்தாலும், வற்றாத அம்பறாத்தூணி இரண்டாலும் என்ன செய்து விட முடியும்?” என்றும் சொன்னானோ, ஐயோ, காளையைப் போன்ற அகன்ற தோள்களைக் கொண்ட அந்தப் போர்வீரன், அர்ஜுனனால் எவ்வாறு கொல்லப்பட முடியும்?(58-60)

எவன் காண்டீவத்தில் இருந்து ஏவப்படும் கைகளின் கடுந்தீண்டலை அலட்சியம் செய்து, கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, “உனக்கு இப்போது கணவர்களில்லை” என்று சொல்லி பாண்டவர்களை வெறித்துப் பார்த்தானோ,(61) ஓ! சஞ்சயா, எவன் தன் கரங்களின் வலிமையை நம்பி, பார்த்தர்கள், அவர்களது மகன்கள் மற்றும் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மீது ஒருக்கணமும் அச்சங்கொள்ளாமல் இருந்தானோ, அவன், வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்டு, சீற்றத்துடன் தன்னை எதிர்த்து விரையும் தேவர்களின் கரங்களிலேயே கூட மரணத்தை அடைய முடியாது என்று நான் நினைக்கும்போது, ஓ! ஐயா, பாண்டவர்களைக் குறித்துச் சொல்லும் தேவையென்ன இருக்கிறது?(63) அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, தன் கையுறைகளை அணிந்து கொண்டு வில்லின் நாணைத் தொடும்போதோ, அவன் எதிரில் நிற்கத்தகுந்தவர் எவருமில்லை.(64) சூரியன், சந்திரன் அல்லது நெருப்பு ஆகியவற்றின் காந்திகளை இழக்க பூமிக்குச் சாத்தியப்படலாம், ஆனால், போரில் எப்போதும் பின்வாங்காத அந்த முதன்மையான மனிதன் இறப்பது சாத்தியமில்லை.(65)

எவன் கர்ணனையும், தன் தம்பி துச்சாசனனையும் தன் கூட்டாளிகளாக அடைந்தானோ, அந்தத் தீய புத்தி கொண்ட என் மூடப் பிள்ளை {துரியோதனன்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} பரிந்துரைகளை மறுக்க எண்ணம் கொண்டதால்,(66) காளையின் தோள்களைக் கொண்ட கர்ணன் மற்றும் துச்சாசனனின் கொலைகளைக் கண்டு இப்போது புலம்பங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பான் என்பது உறுதி.(67) சவ்யசச்சினுடனான {அர்ஜுனனுடனான} தனிப்போரில் விகர்த்தனன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டதையும், பாண்டவர்கள் வெற்றி மகுடம் சூடியதையும் கண்ட துரியோதனன் என்ன சொன்னான்?(68) போரில் துர்மர்ஷனனும், விருஷசேனனும் கொல்லப்பட்டதைக் கண்டும், வலிமைமிக்கத் தேர்வீரர்களால் கொல்லப்படும்போது தன் படை பிளக்கப்படுவதைக் கண்டும்,(69) ஓடும் நோக்கோடு (தன் படையின்) மன்னர்கள் முகத்தைத் திருப்புவதையும், தன் தேர்வீரர்கள் ஏற்கனவே ஓடிவிட்டதையும் கண்டும் என் மகன் இப்போது புலம்பல்களில் ஈடுபடுகிறான் என்றே நான் நினைக்கிறேன்.(70)

உற்சாகமிழந்த தன் படையைக் கண்டவனும், ஆளமுடியாதவனும், செருக்கு மிக்கவனும், மூடனும், ஆசைகளைக் கட்டுப்படுத்த முடியாதவனுமான துரியோதனன் உண்மையில் என்ன சொன்னான்?(71) தன் நண்பர்கள் அனைவராலும் தடுக்கப்பட்டும், இத்தகு கடும் பகைமையைத் தானே தூண்டிக் கொண்டவனும், போரில் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களைப் பெருமளவில் இழந்தவனுமான துரியோதனன் என்ன சொன்னான்?(72) பீமசேனனால் போரில் தன் தம்பி {துச்சாசனன்} கொல்லப்பட்டதைக் கண்டும், அவனது இரத்தம் குடிக்கப்பட்டதை அடுத்தும் உண்மையில் துரியோதனன் என்ன சொன்னான்?(73) என் மகன், காந்தாரர்களின் ஆட்சியாளனோடு {சகுனியோடு)} சேர்ந்து, “போரில் கர்ணன் அர்ஜுனனைக் கொல்வான்” என்றான். கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்டபோது, உண்மையில் அவன் {துரியோதனன்} என்ன சொன்னான்?(74)

ஓ! ஐயா {சஞ்சயா}, முன்பு பகடையாட்டம் நடந்து முடிந்ததும் மகிழ்ச்சியால் நிறைந்தவனும், பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} வஞ்சித்தவனும், சுபலனின் மகனுமான சகுனி, கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்டபோது என்ன சொன்னான்?(75) சாத்வதர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் வில்லாளியும், ஹிருதிகன் மகனுமான கிருதவர்மன், வைகர்த்தனன் {கர்ணன்} கொல்லப்பட்டதைக் கண்டு என்ன சொன்னான்.(76) ஆயுத அறிவியலை அடைய விரும்புபவர்களான பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும் எவனிடம் பாதுகாப்பிற்காகக் காத்திருக்கிறார்களோ {பணி செய்கிறார்களோ}, ஓ! சஞ்சயா, இளமையையும், அழகிய வடிவத்தையும் கொண்டவனும், பார்வைக்கு இனியவனும், உலகம் முழுவதும் கொண்டாடப்படுபவனும், துரோணரின் புத்திசாலி மகனுமான அந்த அஸ்வத்தாமன் என்ன சொன்னான்?(77,78) ஓ! ஐயா {சஞ்சயா}, கௌதம குலத்தைச் சேர்ந்தவரும், தேர்வீரர்களில் முதன்மையானவரும், ஆயுத அறிவியலின் ஆசிரியரும், சரத்வானின் மகனுமான கிருபர் கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்ட போது என்ன சொன்னார்?(79) மத்ரப் போர்வீரர்களின் வலிமைமிக்கத் தலைவனும், மத்ரத்தின் மன்னனும், சபைகளின் ரத்தினமும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், (தற்காலிகமாக) தேரைச் செலுத்துவதில் ஈடுபட்டவனும்[5], சௌவீர குலத்தைச் சேர்ந்த பெரும் வில்லாளியுமான சல்லியன், கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்டு என்ன சொன்னான்? ஓ! சஞ்சயா, போரிட வந்த பூமியின் தலைவர்களும், போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களுமான பிற போர்வீரர்கள் அனைவரும், வைகர்த்தனன் {கர்ணன்} கொல்லப்பட்டதைக் கண்டு என்ன சொன்னார்கள்?(80-82)

தேர்வீரர்களில் முதன்மையானவரும், மனிதர்களில் காளையுமான அந்த வீரத் துரோணர் வீழ்ந்த பிறகு, எவரெல்லாம் தங்கள் வகைக்கான பல்வேறு பிரிவுகளின் தலைவர்களானார்கள்?(83) ஓ! சஞ்சயா, தேர்வீரர்களில் முதன்மையானவனும், மத்ரர்களின் ஆட்சியாளனுமான சல்லியன், வைகர்த்தனன் {கர்ணன்} தேரைச் செலுத்துவதில் எவ்வாறு ஈடுபட்டான் என் எனக்குச் சொல்வாயாக.(84) சூதன் மகன் {கர்ணன்} போரில் ஈடுபட்டபோது, பின்னவனின் வலது சக்கரத்தைப் பாதுகாத்தவர்களும், அவனது இடது சக்கரத்தைப் பாதுகாத்தவர்களும், அந்த வீரனின் பின்புறத்தில் நின்றவர்களும் யாவர்?(85) கர்ணனைக் கைவிடாத வீரர்கள் யாவர்? ஓடிப்போன அற்பவர்கள் யாவர்? வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், ஒன்று சேர்ந்தவர்களாக இருந்த உங்களுக்கு மத்தியில் எவ்வாறு கொல்லப்பட்டான்?(86) வலிமைமிக்கத் தேர்வீரர்களும், துணிச்சல்மிக்கவர்களுமான பாண்டவர்கள், மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போன்ற கணை மாரிகளை ஏவியபடி எவ்வாறு அவனை எதிர்த்துச் சென்றார்கள்?(87) 

ஓ! சஞ்சயா, வலிமைமிக்கதும், தெய்வீகமானதும், தன் வகையில் முதன்மையானதும், பாம்பைப் போன்ற தலையுடன் கூடியதுமான அந்தக் கணை {நாகாஸ்திரம்} எவ்வாறு பயனற்றதாகச் செய்யப்பட்டது என்பதையும் சொல்வாயாக.(88) ஓ! சஞ்சயா, என் படையின் தலைவர்களே நசுக்கப்படும்போது, உற்சாகமற்ற அதில் {என் படையில்} எஞ்சியோர் சிலரும் கூடக் காக்கப்படும் சாத்தியம் எதையும் நான் காணவில்லை.(89) எனக்காக எப்போதும் தங்கள் உயிரைவிடத் தயாராக இருந்த வலிமைமிக்க இரு வில்லாளிகளான, பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவீரர்களும் கொல்லப்பட்டதைக் கேட்ட பிறகும் வாழ்வதால் எனக்கு என்ன பயன்?(90) பத்தாயிரம் {10000} யானைகளுக்கு இணையான வலிமையான கரங்களைக் கொண்ட கர்ணன், பாண்டவர்களால் கொல்லப்பட்டான் என்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.(91)

துரோணர் இறந்த பிறகு, ஓ! சஞ்சயா, துணிச்சல்மிக்கப் போர்வீரர்களான கௌரவர்களுக்கும், அவர்களது எதிரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட போரில் நடந்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக.(92) குந்தியின் மகன்கள் கர்ணனுடன் எவ்வாறு போரிட்டனர் என்பதையும், அந்த எதிரிகளைக் கொல்பவன் {கர்ணன்} போரில் எவ்வாறு தன் ஓய்வை அடைந்தான் என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.[6](93)

படைத்தலைவனாக்கப்பட்ட கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 10-துரோணர் கொல்லப்பட்டதும், தப்பி ஓடிய படைகளை அணிதிரட்டிய துரியோதனன்; அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து முகாமில் ஆலோசித்த கௌரவர்கள்; கர்ணனைப் படைத்தலைவனாக்குமாறு சொன்ன அஸ்வத்தாமன்; கர்ணனின் பெருமைகளைச் சொல்லி, படைத்தலைமையை ஏற்குமாறு அவனைக் கேட்டுக் கொண்ட துரியோதனன்; துரியோதனனின் வார்த்தைகளை ஏற்ற கர்ணன்; சாத்திரங்களுக்கு இணங்கிய சடங்குகளின் படி படைத்தலைமையை ஏற்ற கர்ணன்; வந்திகளும், பிராமணர்களும் கர்ணனை வாழ்த்தியது; பொழுது புலர்ந்ததும் படையை அணிவகுத்த கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த நாளில் வலிமைமிக்க வில்லாளியான துரோணர் வீழ்ந்ததும், வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} காரியம் கலங்கடிக்கப்பட்டதும்,(1) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கௌரவர்களின் பரந்த படை ஓடிய பிறகு, பார்த்தன் {அர்ஜுனன்}, தன் துருப்புகளை அணிதிரட்டிக் கொண்டு தன் சகோதரர்களுடன் களத்தில் நின்றான்.(2) அவன் {அர்ஜுனன்} களத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் படை ஓடுவதைக் கண்டு பெரும் துணிவுடன் அவற்றை அணிதிரட்டினான்.(3)

ஓ! பாரதரே, தன் படைப்பிரிவுகளை நிலையேற்கச் செய்த உமது மகன் {துரியோதனன்}, வெற்றியடைந்தவர்களும், மகழ்ச்சியால் நிறைந்திருப்பவர்களும், நீண்ட நேரமாகப் போரிட்டுக் கொண்டிருந்த தன் எதிரிகளுமான பாண்டவர்களுடன், தன் கர வலிமையை நம்பி நீண்ட நேரம் போரிட்டான். மாலை சந்தி அணுகியதும் அவன் தன் துருப்புகளைத் திரும்ப அழைத்துக் கொண்டான்.(4,5) தங்கள் துருப்புகளைத் திரும்ப அழைத்துக் கொண்டு, தங்கள் முகாமுக்குள் நுழைந்த கௌரவர்கள், விரிப்புகளுடன் கூடிய விலையுயர்ந்த கட்டில்கள், சிறந்த இருக்கைகள் மற்றும் பகட்டான படுக்கைகள் ஆகியவற்றில் தேவர்களைப் போல அமர்ந்து கொண்டு, தங்கள் நலனைக் குறித்து ஒருவரோடொருவர் கலந்தாலோசித்தனர்.(6,7) பிறகு மன்னன் துரியோதனன், அந்த வலிமைமிக்க வில்லாளிகளிடம், இனிமையான, உயர்ந்த வெளிப்பாடுகளுடன் கூடிய பின்வரும் வார்த்தைகளைப் பேசினான்.(8)

துரியோதனன், “புத்திசாலிகளில் முதன்மையானவர்களே, உங்கள் கருத்துகளை அனைவரும் தாமதமில்லாமல் அறிவிப்பீராக. மன்னர்களே, இந்தச் சூழ்நிலையில் இன்றியமையாதது எது? அதைவிடவும் அவசியமானது எது?” என்று கேட்டான்.(9)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அந்த மனிதர்களின் இளவரசன் {துரியோதனன்}, அவ்வார்த்தைகளைப் பேசிய போது, தங்கள் அரியாசனங்களில் அமர்ந்திருந்த மனித சிங்கங்கள் {மன்னர்கள்}, போரில் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு முகபாவங்களைச் செய்தனர்.(10) புத்திசாலித்தனத்துடன் கூடியவனும், பேச்சில் சாதித்தவனுமான ஆசான் மகன் {அஸ்வத்தாமன்}, போர் நெருப்பில் தங்கள் உயிர்களை நீர்க்காணிக்கைகளாக {ஆகுதிகளாக} ஊற்ற விரும்பும் அவர்கள் அனைவரின் குறிப்புகளை உற்றுநோக்கி, காலைச்சூரியனின் பிரகாசத்துடன் கூடிய ஏகாதிபதியின் {துரியோதனனின்} முகத்தையும் கண்டு,(11) இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “உற்சாகம், வாய்ப்பு, திறமை, கொள்கை {நீதி} ஆகிய வழிகள் முடிவுகள் அனைத்தையும் சாதிக்கவல்லவை {வெற்றியை அடையவல்லவை} என்று கற்றோரால் அறிவிக்கப்பட்டிக்கிறது. எனினும், அவை விதியைச் சார்ந்ததே[1].(12)

தேவர்களுக்கு இணையானவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், கொள்கையுடன் {நீதியுடன்} கூடியவர்களும், அர்ப்பணிப்புள்ளவர்களும், சாதித்தவர்களும், நன்றியுணர்வு கொண்டவர்களுமாக நம் தரப்பில் இருந்த முதன்மையான மனிதர்கள் கொல்லப்பட்டுவிட்டனர்.(13) அவை யாவற்றாலும் நாம் வெற்றியில் நம்பிக்கையிழக்கக்கூடாது. இந்த வழிகள் முறையாகப் பொருத்தப்பட்டால், விதியையே கூட அநுகூலமானதாக்கலாம்.(14) எனவே, ஓ! பாரதா {துரியோதனா}, நாம் அனைவரும் சேர்ந்து, மனிதர்களில் முதன்மையானவனும், அனைத்து சாதனைகளையும் கொண்டவனுமான கர்ணனைப் படையின் தலைமையில் நிறுவலாம் {சேனாதிபதியாக்கலாம்}.(15) கர்ணனை நம் படைத்தலைவனாகச் செய்து, நம் பகைவர்களை நாம் நசுக்குவோம். இந்தக் கர்ணன் பெரும் வலிமை கொண்டவன்; இவன் ஆயுதங்களில் சாதித்தவனும், போரில் வீழ்த்தப்பட இயலாத வீரனுமாவான். யமனைப் போலத் தடுக்கப்பட முடியாதவனான இவன் {கர்ணன்}, போரில் நம் எதிரிகளை வெல்லத்தகுந்தவனாவான்” என்றான் {அஸ்வத்தாமன்}.(16)

ஆசான் மகனின் {அஸ்வத்தாமனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்நேரத்தில் கர்ணன் மீது பெரும் நம்பிக்கைகளைக் கொண்டான்.(17) பீஷ்மர் மற்றும் துரோணரின் வீழ்ச்சிக்குப் பிறகு கர்ணன் பாண்டவர்களை வெல்வான் என்ற அந்த நம்பிக்கையைத் தன் இதயத்தில் பேணி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அதனால் ஆறுதலை அடைந்து வந்த துரியோதனன்,(18) அஸ்வத்தாமனின் அந்த வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சியால் நிறைந்தும், தன் மனதை உறுதியாக்கிக் கொண்டும், தன் கரங்களின் வலிமையை நம்பியும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த ராதையின் மகனிடம் {கர்ணனிடம்}, பாசம், மரியாதை, உண்மை, மகிழ்ச்சி, நன்மை ஆகியவை நிறைந்த இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(19-20) “ஓ! கர்ணா, உன் ஆற்றலையும், நீ என் மீது கொண்ட பெரும் நட்பையும் நான் அறிவேன். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அவை யாவற்றுக்காகவும், என் நன்மைக்கான குறிப்பிட்ட சில வார்த்தைகளை உனக்குச் சொல்வேன்.(21) ஓ! வீரா, அவற்றைக் கேட்ட பிறகு, உனக்கு எது விருப்பமுடைடையதாகத் தோன்றுகிறதோ அதைச் செய்வாயாக. பெரும் அறிவைக் கொண்டிருப்பதால், நீயே எனக்கு உயர்ந்த புகலிடமாவாய்.(22)

அதிரதர்களான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய என் இரண்டு படைத்தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்களைவிட வலிமையானவனான நீயே என் படைத்தலைவன் ஆவாயாக.(23) பெரும் வில்லாளிகளான அவ்விருவரும் வயதால் முதிர்ந்தவர்களாக இருந்தனர். மேலும், அதைத் தவிரவும் அவர்கள் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} பரிவும் கொண்டிருந்தனர். இருப்பினும், ஓ! ராதையின் மகனே {கர்ணா}, உன் வார்த்தையினால் அவ்விரு வீரர்களும் என்னால் மதிக்கப்பட்டனர்.(24) ஓ! ஐயா {கர்ணா}, பாண்டுவின் மகன்களுடன் பாட்டன் {பீஷ்மர்} கொண்ட உறவுமுறையால், தொடர்ந்து பத்து நாட்களாக அந்தப் பயங்கரப் போரில் அவர்கள் தப்புவிக்கப்பட்டனர்.(25) நீயும் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டாய். அந்தப் பெரும்போரில் தன் முன்னே சிகண்டியைக் கொண்ட பல்குனனால் {அர்ஜுனனால்} வீரப் பீஷ்மரும் கொல்லப்பட்டார்.(26) அந்தப் பெரும் வில்லாளி வீழ்ந்து, கணைப்படுக்கையில் தன்னை வழிப்படுத்திக் கொண்ட பிறகு, ஓ! மனிதர்களில் புலியே, உன் வார்த்தையினாலேயே துரோணர் நமது தலைவராக்கப்பட்டார்.(27) பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} அவரது {துரோணரது} சீடர்களாயிருந்த உறவின் விளைவால், அவராலும் கூட அவர்கள் தப்புவிக்கப்பட்டனர் என்றே நான் நினைக்கிறேன். மிக விரைவில், அந்தக் கிழவரும் {துரோணரும்} திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டுவிட்டார்.(28) போரில் உனக்கு இணையான மற்றொரு போர்வீரனை என்னால் சிந்திக்கவும் முடியவில்லை. போரில் கொல்லப்பட்ட அவ்விரு முதன்மையான போர்வீரர்களாலும் கூட உன் ஆற்றலை அளவிட முடியாது.(29)

இன்று, நீ மட்டுமே நமக்கு வெற்றியைக் கொடுக்க வல்லவன் என்பதில் சந்தேகமில்லை. முன்பும், இடையிலும், பின்பும் நீ நமது நன்மைக்காகவே செயல்பட்டவனாவாய்.(30) எனவே, ஒரு தலைவனைப் போல இந்தப் போரின் சுமையைச் சுமப்பதே உனக்குத் தகும். உன்னை நீயே தலைமையில் நிறுவிக் கொள்வாயாக.(31) தேவர்களின் படைத்தலைவனும், மங்கா ஆற்றலைக் கொண்டவனுமான தலைவன் ஸ்கந்தன் (தேவர்களின் படையை ஆதரிப்பதைப்) போல, இந்தத் தார்தராஷ்டிரப் படையை நீ ஆதரிப்பாயாக. தானவர்களைக் கொல்லும் மஹேந்திரனைப் போல, நம் எதிரிக்கூட்டங்கள் அனைத்தையும் அழிப்பாயாக.(32) போரில் நிற்கும் உன்னைக் காணும் வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்களும், அவர்களுடன் சேர்ந்து பாஞ்சாலர்களும், விஷ்ணுவைக் கண்ட தானவர்களைப் போலப் போரில் தப்பி ஓடப் போகிறார்கள். எனவே, இந்தப் பரந்த படைக்கு நீ தலைமையேற்பாயாக.(33) களத்தில் நீ தீர்மானத்துடன் நின்றால், தீய இதயங்களைக் கொண்ட பாண்டவர்கள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோர் அனைவரும் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து தப்பி ஓடுவார்கள்.(34) உதயச் சூரியன் தன் சக்தியால் அனைத்தையும் எரித்தபடியே அடர்த்தியான இருளை அழிப்பதைப் போல, நீ நம் எதிரிகளை அழிப்பாயாக” என்றான் {துரியோதனன்}.(35)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரும், துரோணரும் கொல்லப்பட்டிருந்தாலும், கர்ணன் பாண்டவர்களை வெல்வான் என்ற நம்பிக்கை உமது மகனின் {துரியோதனனின்} இதயத்தில் பலமடைந்தது.(36) தன் இதயத்திற்குள் அந்நம்பிக்கையைப் பேணிக்காத்த அவன் {துரியோதனன்}, கர்ணனிடம், “ஓ! சூதன் மகனே {கர்ணா}, உனக்கு எதிரில் போரிடப் பார்த்தன் {அர்ஜுனன்} எப்போதும் விரும்பியதில்லை” என்றான்.(37)

அப்போது கர்ணன் {துரியோதனனிடம்}, “ஓ காந்தாரியின் மகனே {துரியோதனா}, `தங்கள் மகன்களோடு கூடிய பாண்டவர்களையும், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} நான் வெல்வேன்’ என்ற இந்த வார்த்தைகளை முன்னர் உன் முன்னிலையிலேயே சொல்லியிருக்கிறேன்.(38) நான் உனது படைத்தலைவனாவேன். இதில் எந்த ஐயமும் இல்லை. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அமைதியடைவாயாக. பாண்டவர்கள் ஏற்கனவே வெல்லப்பட்டதாகவே கருதுவாயாக” என்றான்.(39)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இப்படிச் சொல்லப்பட்டதும் மன்னன் துரியோதனன், ஸ்கந்தனை கௌரவிப்பதற்காகத் தேவர்கள் அனைவருடன் சேர்ந்த நூறு வேள்விகளைச் செய்தவனைப் போலக் கர்ணனைக் கௌரவிப்பதற்காக ஏகாதிபதிகள் அனைவருடன் சேர்ந்து எழுந்து நின்றான்.(40) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் தலைமையிலான மன்னர்கள் அனைவரும், வெற்றியை விரும்பி, விதிகளுக்கு இணங்கிய சடங்குகளின் படி கர்ணனைப் படைத்தலைவர் பொறுப்பில் நிறுவினார்கள்[2].(41) மந்திரங்களால் தூய்மையாக்கப்பட்டு, விளிம்புவரை நீர் நிறைந்தவையும், யானைகளின் தந்தங்கள், காண்டாமிருகங்களின் கொம்புகள் மற்றும் வலிமைமிக்கக் காளைகளின் கொம்புகள் ஆகியவற்றுடன் கூடியவையுமான பொற்குடங்ளுடனும், மண்குடங்களுடனும்,(42) ரத்தினங்கள் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்ட பிற பாத்திரங்களுடனும், நறுமணமிக்க மூலிகைகள் மற்றும் செடிகளுடனும், அபரிமிதமாகச் சேகரிக்கப்பட்டட பிற பொருட்களுடனும், உடும்பர மரத்தில் {அத்திப் பலகையில்} செய்யப்பட்டதும், பட்டுத் துணியால் மூடப்பட்டதுமான இருக்கை ஒன்றில் சுகமாக வீற்றிருந்த கர்ணன், சாத்திரங்களுக்கு இணங்கிய சடங்குகளின் படி படைத்தலைவனாகப் பட்டமளிக்கப்பட்டான். அந்தச் சிறந்த ஆசனத்தில் குளிப்பட்டப்பட்ட அந்த உயர் ஆன்மாவை {கர்ணனைப்} பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் மரியாதைக்குரிய சூத்திரர்கள் ஆகியோர் புகழ்ந்து துதித்தனர்[3].(43,44)இப்படிப் படைத்தலைவனாக நிறுவப்பட்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான ராதையின் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நிஷ்கங்கள், பசுக்கள் மற்றும் பிற செல்வங்களைக் கொடையாக அளிக்கச் செய்து பிராமணர்களில் முதன்மையான பலரையும் தன்னை ஆசீர்வதிக்கும்படி செய்தான்.(45) ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, ’கோவிந்தனோடு {கிருஷ்ணனோடு} கூடிய பார்த்தர்களையும், அவர்களைப் பின்தொடர்வோர் அனைவரையும் வெல்வாயாக’ என்ற இவ்வார்த்தைகளையே வந்திகளும், பிராமணர்களும் அவனிடம் சொன்னார்கள்.(46) (மேலும் அவர்கள்), “ஓ! ராதையின் மகனே {கர்ணா} கடுங்கதிர்களால் இருளை அழிக்கும் உதயச் சூரியனைப் போல, நம் வெற்றிக்காகப் பார்த்தர்களையும், பாஞ்சாலர்களையும் கொல்வாயாக.(47) சூரியனின் எரியும் கதிர்களைப் பார்க்க இயலாத ஆந்தைகளைப் போல, உன்னால் ஏவப்படும் கணைகளைக் கேசவனுடன் {கிருஷ்ணனுடன்} கூடியவர்களால் {பாண்டுவின் மகன்களால்} பார்க்கவும் முடியாது.(48) போரில் இந்திரனுக்கு எதிராக நிற்க இயலாத தானவர்களைப் போல, ஆயுதங்களுடன் கூடிய உனக்கு முன்னிலையில் நிற்பதற்கும் பார்த்தர்களாலும், பாஞ்சாலர்களாலும் இயலாது” என்றனர்.(49)

படைத்தலைமையில் நிறுவப்பட்டவனும், ஒப்பிலா காந்தி கொண்டவனுமான ராதையின் மகன் {கர்ணன்}, இரண்டாவது சூரியனைப் போல அழகுடனும், ஒளியுடனும் பிரகாசித்தான்.(50) (இவ்வாறு) ராதையின் மகனை {கர்ணனைப்} படையின் தலைவனாக நிறுவிய உமது மகன் {துரியோதனன்}, காலனால் தூண்டப்பட்டு, தன் காரியங்கள் நிறைவேறியவனாகத் தன்னைக் கருதிக் கொண்டான்.(51) எதிரிகளைக் கொல்பவனான அந்தக் கர்ணனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, படைத்தலைமை பொறுப்பை அடைந்து, சூரியன் உதித்ததும், துருப்புகளை அணிவகுக்கச் செய்தான்.(52) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தாரகையைத் தீய வேராகக் கொண்ட போரில், தேவர்களால் சூழப்பட்ட ஸ்கந்தனைப் போல, உமது மகன்களால் சூழப்பட்ட கர்ணன் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.(53)

மகரார்த்தச்சந்திர வியூகங்கள்! – கர்ண பர்வம் பகுதி – 11-போர்க்களத்திற்குச் சென்று தன் படையை மகரவியூகத்தில் அணிவகுத்த கர்ணன்; அர்ஜுனனிடம் பேசிய யுதிஷ்டிரன்; தன் படையை அர்த்தச்சந்திர வியூகத்தில் அணிவகுத்த அர்ஜுனன்; பதினாறாம் நாள் போர் தொடங்கியது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, படைத்தலைமையை அடைந்த பிறகு, மன்னனே {துரியோதனனே} இனிமையும், சகோதரத்துவமும் நிறைந்த அவ்வார்த்தைகளால் அவனிடம் {கர்ணனிடம்} பேசிய பிறகு, சூரிய உதயத்தில் துருப்புகளை அணிவகுக்கச் செய்த பிறகு, விகர்த்தனன் மகனான கர்ணன் என்ன செய்தான்?” என்றான்.(1,2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கர்ணனின் விருப்பங்களை அறிந்த உமது மகன்கள், இன்பகரமான இசையுடன் துருப்புகளை அணிவகுக்கக் கட்டளையிட்டனர்.(3) விடிவதற்கு இன்னும் அதிக நேரம் இருந்த போது, “அணிவகுப்பீர், அணிவகுப்பீர்” என்ற உரத்த ஒலி உமது துருப்புகளின் மத்தியில் எழுந்தது.(4) தங்கள் கவசங்களைப் பூட்டும்போதோ, சேணம்பூட்டப்படும்போதோ, முதன்மையான யானைகள், தடுப்புடன் கூடியவையும் தயாரிப்பு நிலையில் இருந்தவையுமான தேர்கள், காலாட்படை வீரர்கள், குதிரைகள் ஆகியனவற்றுக்கு மத்தியிலும், சுறுசுறுப்புடன், ஒருவரையொருவர் கூவி அழைத்தப்படி நகர்ந்து கொண்டிருந்த போராளிகளுக்கு மத்தியில் எழுந்த அந்த ஆரவாரமானது மகத்தானதாகி சொர்க்கங்களையே எட்டியது.(5,6)

பிரகாசமான சூரியனின் காந்தியைக் கொண்டதும், பல கொடிகளால் மகுடம் சூட்டப்பட்டும், வெண்கொடிமரத்தைக் கொண்டதும், நாரைகளின் நிறத்திலான குதிரைகளுடன் கூடியதும், யானை கட்டும் கயிறை {யானைச் சங்கிலியை} பொறியாகத் தாங்கியதும் {கொடியில் கொண்டதும்}, நூற்றுக்கணக்கான அம்பறாத்தூணிகளால் நிறைந்ததும், கதாயுதம், மரத் தடுப்பு ஆகியவற்றைக் கொண்டதும், சதக்னிகள் நிறைந்ததும், மணிவரிசைகளைக் கொண்டதும், ஈட்டிகள், வேல்கள், சூலங்கள் மற்றும் பல விற்களுடன் கூடியதுமான தேரில், தங்கப் பின்புறம் கொண்ட வில்லைத் தாங்கியபடியே சூதன் மகன் {கர்ணன்} தோன்றினான்.(7-9) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, தங்க இழைகளின் வலையால் அலங்கரிக்கப்பட்ட சங்கை ஊதிக் கொண்டும், பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்ட உறுதிமிக்கத் தன் வில்லை அசைத்துக் கொண்டும் களத்தில் தோன்றினான்.(10)

தேர்வீரர்களில் முதன்மையானவனும், அணுகுவதற்குக் கடினமானவனும், இருளை அழிக்கும் உதயச் சூரியனுக்கு ஒப்பானவனும், வலிமைமிக்க வில்லாளியுமான கர்ணன் தன் தேரில் அமர்ந்திருப்பதைக் கண்டு,(11) ஓ! மனிதர்களில் புலியே, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கௌரவர்களில் எவரும், பீஷ்மர், அல்லது துரோணர், அல்லது வேறு மனிதர்களின் இழப்பாலும் கவலை கொள்ளவில்லை.(12) ஓ! ஐயா, தன்னுடைய சங்கின் வெடிப்பொலிகளால் போர்வீரர்களை வேகப்படுத்திய கர்ணன், கௌரவர்களின் அந்தப் பரந்த படையை வெளியே கொண்டுவந்தான்.(13) வலிமைமிக்க வில்லாளியும், எதிரிகளை எரிப்பவனுமான அந்தக் கர்ணன், துருப்புகளை மகர வியூகத்தில் அணிவகுக்கச் செய்துகொண்டு, வெற்றியடையும் விருப்பத்துடன் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றான்.(14)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மகரத்தின் அலகு முனையில் கர்ணனே நின்றிருந்தான். அதன் இரு கண்களிலும் துணிச்சல்மிக்கச் சகுனியும், வலிமைமிக்கத் தேர்வீரனான உலூகனும் இருந்தனர்.(15) அதன் தலையில் துரோணர் மகனும் {அஸ்வத்தாமனும்}, அதன் கழுத்தில் {துரியோதனனின்} உடன்பிறந்த சகோதரர்கள் அனைவரும் இருந்தனர். அதன் {மகரத்தின்} மத்தியில் பெரும்படையால் ஆதரிக்கப்பட்டபடி மன்னன் துரியோதனன் இருந்தான்.(16) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அதன் இடது காலில் நாராயணத் துருப்புகள் மற்றும் வெல்லப்படமுடியாத போர்வீரர்களான கோபாலர்கள் ஆகியோரின் துணையுடன் கிருதவர்மன் நின்றிருந்தான்.(17) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலது காலில் கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட கௌதமர் மகன் {கிருபர்}, வலிமைமிக்க வில்லாளிகளான திரிகர்த்தர்கள் மற்றும் தெற்கத்தியர் ஆகியோருடன் நின்றிருந்தார்.(18) இடது பின்னங்காலில் மத்ரர்களின் நாட்டில் இருந்து வந்த பெரும் படையுடன் சல்லியன் நின்றிருந்தான்.(19) வலது பின்னங்காலில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உண்மையான நோன்புகளைக் கொண்ட சுஷேணன், ஆயிரம் தேர்கள் மற்றும் முன்னூறு யானைகளால் சூழப்பட்டபடி  நின்றிருந்தான்.(20) அதன் வால் பகுதியில், ஒரு பெரும்படையால் சூழப்பட்ட படி வலிமையும் சக்தியும் கொண்ட இரண்டு அரச சகோதரர்களான சித்திரனும், சித்திரசேனனும் நின்றிருந்தனர்.(21)

ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் முதன்மையான கர்ணன் இவ்வாறு வெளியே வந்த போது, அர்ஜுனன் மீது தன் கண்களைச் செலுத்திய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(22) “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, ஓ! வீரா, இந்தப் போரில் வீரர்கள் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரர்களால் காக்கப்படும் வகையில் இந்தத் தார்தராஷ்டிரப் படையை எவ்வாறு கர்ணன் அணிவகுத்திருக்கிறான் பார்.(23) இந்தத் தார்தராஷ்டிரப் படை துணிச்சமிக்கப் போர்வீரர்களை இழந்திருக்கிறது. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, எஞ்சியிருப்போரைப் புல்லுக்கு இணையான பலவீனர்களாக நான் நினைக்கிறேன். ஒரே பெரும் வில்லாளியாக சூதன் மகனே {கர்ணனே} அதனில் ஒளிர்கிறான்.(24) அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன், தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் மற்றும் பெரும் பாம்புகள் உள்ளடங்கிய அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மூவுலகாலும் வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான்.(25) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இன்று நீ அவனைக் {கர்ணனைக்} கொன்றுவிட்டால், ஓ! பல்குனா {அர்ஜுனா}, வெற்றி உனதேயாகும். பனிரெண்டு {12} ஆண்டுகளாக என் இதயத்தில் தைத்திருக்கும் முள்ளும் பிடுங்கப்பட்டதாகும். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இஃதை அறிந்து கொண்டு நீ விரும்பியவாறு அணிவகுப்பாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.(26)

தனது அண்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், வெண்குதிரைகளைக் கொண்டவனுமான அந்தப் பாண்டவன், அரை நிலவு {அர்த்தச் சந்திரன்} வடிவிலான எதிர் வியூகத்தில் {அர்த்தச்சந்திர வியூகத்தில்} தன் படையை அணிவகுத்தான்.(27) அதன் இடது பக்கத்தில் பீமசேனனும், வலது பக்கத்தில் பெரும் வில்லாளியான திருஷ்டத்யும்னனும் நின்றிருந்தனர்.(28) அந்த வியூகதின் நடுவில் மன்னனும் {யுதிஷ்டிரனும்}, பாண்டுவின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} இருந்தனர். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் பின்புறத்தில், நகுலனும், சகாதேவனும் நின்றனர்.(29) பாஞ்சால இளவரசர்களான யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இருவரும், (அர்ஜுனனின்) தேர்ச்சக்கரங்களுடைய பாதுகாவலர்களானார்கள். கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்ட அவர்கள், ஒரு கணமும் அர்ஜுனனை விட்டு அகலாமல் இருந்தனர்.(30)

ஓ! பாரதரே, பெரும் வீரம் கொண்டவர்களும், கவசம் தரித்தவர்களுமான எஞ்சிய மன்னர்கள், தாங்கள் கொண்ட உற்சாகம் மற்றும் உறுதியின் அளவுக்கத்தக்க அந்த வியூகத்தில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்றனர்.(31) ஓ! பாரதரே, இவ்வாறே தங்கள் பெரும் வியூகத்தை அமைத்த பாண்டவர்களும், உமது படையின் வலிமைமிக்க வில்லாளிகளும், தங்கள் இதயங்களைப் போரில் நிலைநிறுத்தினர்.(32) போரில் சூதன் மகனால் {கர்ணனால்} வகுக்கப்பட்டிருக்கும் போர்வியூகத்தில் அணிவகுத்திருக்கும் தன் படையைக் கண்ட துரியோதனன், தன் சகோதரர்கள் அனைவருடன் சேர்ந்து பாண்டவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டதாகக் கருதினான்.(33) அதே போல, யுதிஷ்டிரனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வியூகத்தில் அணிவகுக்கப்பட்டிருக்கும் பாண்டவப் படையைக் கண்டு, கர்ணனுடன் சேர்ந்த தார்தராஷ்டிரர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டதாகக் கருதினான்.(34)

அப்போது சங்குகள், பேரிகைகள், உடுக்கைகள் {பணவங்கள்}, பெருமுரசுகள் {ஆனகங்கள்}, கைத்தாளங்கள் {கோமுகங்கள்}, டிண்டிமங்கள், ஜார்ஜரங்கள் ஆகியன அனைத்துப் பக்கங்களிலும் உரக்க முழக்கி, இசைக்கப்பட்டன.(35) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த உரத்த ஒலியை எழுப்பக்கூடிய கருவிகள் இரண்டு படைகளுக்கு மத்தியிலும் முழக்கி இசைக்கப்பட்டன. வெற்றியை அடைவதற்காகத் துணிச்சல்மிக்க வீரர்களால் சிங்க முழக்கங்களும் அங்கே எழுந்தன.(36) மேலும், ஓ! மன்னா, அங்கே குதிரைகளின் கனைப்பொலிகளும், யானைகளின் பிளிறல்களும், தேர்ச்சக்கரங்களின் கடும் சடசடப்பொலிகளும் எழுந்தன.(37)

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்நேரத்தில், கவசம்பூண்டவனும், வியூகத்தின் தலைமையில் நின்றவனும், பெரும் வில்லாளியுமான கர்ணனைக் கண்டு, (கௌரவப் படையில்) எவரும் துரோணரின் இழப்பை உணராதிருந்தனர்.(38), ஓ! ஏகாதிபதி, மகிழ்ச்சியான மனிதர்களால் நிறைந்த இரண்டு படைகளும், தாமதமில்லாமல் ஒருவரையொருவர் அழிக்க (தயாராக) போரிடும் ஆவலோடு அங்கே நின்றிருந்தனர்.(39) அங்கே, ஓ! மன்னா, கர்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகிய இரு வீரர்களும் ஒருவரையொருவர் கண்டு, கோபத்தால் தூண்டப்பட்டு, உறுதியான தீர்மானத்துடன் தங்கள் தங்கள் படைப்பிரிவுகளின் ஊடாகத் திரிந்தபடியோ, நின்று கொண்டோ இருந்தனர்.(40) ஒருவரையொருவர் சந்திக்க விரைந்த அந்த இரு படையினரும் (மகிழ்ச்சியால்) ஆடுவதாகத் தெரிந்தது. இரண்டு படைகளின் சிறகுகள், மற்றும் பக்கச் சிறகுகள் ஆகியவற்றில் இருந்து போரிடுவதற்காகப் போர் விருப்பமுள்ள போர்வீரர்கள்  முன்னே வந்தனர்[1].(41) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுக்கிடையிலான போரானது ஒருவரையொருவர் அழிப்பதற்காகத் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(42)

பீமனால் கொல்லப்பட்ட க்ஷேமதூர்த்தி! – கர்ண பர்வம் பகுதி – 12-பீமனுக்கும் க்ஷேமதூர்த்திக்கும் இடையில் நடைபெற்ற போர்; க்ஷேமதூர்த்திக் கொல்லப்பட்டது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, மகிழ்ச்சிமிக்க மனிதர்களாலும், குதிரைகள், மற்றும் யானைகள் ஆகியவற்றாலும் நிறைந்த அந்தப் பரந்த இரு படைகளும், தேவாசுர படைகளுக்கு ஒப்பான காந்தியுடன் ஒன்றோடொன்று சந்தித்து, ஒன்றையொன்று தாக்கத் தொடங்கின.(1) பெரும் ஆற்றலைக் கொண்ட மனிதர்களும், தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவையும், காலாட்படை வீரர்களும், உடல்களுக்கும், பாவங்களுக்கும் அழிவை ஏற்படுத்தும் கட்டுறுதியான வீச்சுகளுடன் தாக்குதலைத் தொடுத்தனர்[1].(2) சிங்கத்தைப் போன்ற மனிதர்கள் ஒவ்வொருவரும், முழு நிலவுக்கோ, சூரியனுக்கோ ஒப்பானவையும், தாமரையின் நறுமணத்தைக் கொண்டவையும் சிங்கத்தைப் போன்றவையுமான வேறு மனிதர்களின் தலையால் பூமியை தூற்றினர்.(3) போராளிகள், பிறை வடிவம் மற்றும் அகன்ற தலை கொண்ட கணைகளாலும் {அர்த்தச்சந்திர பாணம் மற்றும் பல்லங்களாலும்}, கத்திமுகக் கணைகளாலும் {க்ஷுரப்ரங்களாலும்}, கோடரிகளாலும், போர்க்கோடரிகளாலும் வேறு போராளிகளின் தலைகளை வெட்டினர்.(4) ஆயுதங்களாலும், கடகங்களாலும் அலங்கரிக்கப்பட்ட நீண்ட பருத்த கரங்களைக் கொண்ட மனிதர்களின் கரங்கள், பருத்த கரங்களைக் கொண்ட வேறு மனிதர்களால் வெட்டப்பட்டுப் பூமியில் விழுந்து ஒளிர்ந்தன.(5) சிவந்த விரல்கள், உள்ளங்கை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு நெளிந்து கொண்டிருந்த அந்தக் கரங்கள், கருடனால் கொல்லப்பட்ட ஐந்து தலை பாம்புகள் கிடப்பதைப் போலப் பிரகாசமாகப் பூமியில் படர்ந்து கிடந்தன.(6)புண்ணியம் தீர்ந்து போய்த் தங்கள் தெய்வீகத் தேர்களில் இருந்து விழும் சொர்க்கவாசிகளைப் போல, எதிரிகளால் தாக்கப்பட்ட துணிச்சல்மிக்க வீரர்கள், தங்கள் யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியவற்றில் இருந்து கீழே விழுந்தனர்.(7) வேறு துணிச்சல் மிக்க வீரர்களும், கனமான கதாயுதங்கள், முள் பதித்த கதாயுதங்கள் {பரிகங்கள்}, மற்றும் குறுந்தடிகளுடன் கூடிய மேலும் துணிச்சல்மிக்கப் போராளிகளால் அந்தப் போரில் நசுக்கப்பட்டு நூற்றுகணக்கில் விழுந்தனர்.(8) கொந்தளிப்படைந்த அந்தப் போரில் தேர்கள், தேர்களால் நசுக்கப்பட்டன, மதங்கொண்ட யானைகள், வேறு மதங்கொண்ட யானைகளாலும், குதிரைவீரர்கள், வேறு குதிரைவீரர்களாலும் நசுக்கப்பட்டனர்.(9) தேர்களால் அழிக்கப்பட்ட மனிதர்களும், யானைகளால் அழிக்கப்பட்ட தேர்களும், காலாட்படைவீரர்களால் கொல்லப்பட்ட குதிரைவீரர்களும், யானைகளால் அழிக்கப்பட்ட தேர்கள், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்களும், காலாட்படை வீரர்களால் அழிக்கப்பட்ட தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளும், குதிரைகளால் அழிக்கப்பட்ட தேர்கள், காலாட்படை வீரர்களும் மற்றும் யானைகளும், தேர்களால் அழிக்கப்பட்ட மனிதர்களும், யானைகளும் களத்தில் கீழே விழுந்தன.(10,11) கைகள், கால்கள், ஆயுதங்கள், தேர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மனிதர்களும், குதிரைகளும், யானைகளும், தேர்வீரர்களும், தேர்வீரர்கள், குதிரைகள், யானைகளுக்கு ஏற்படுத்திய பேரழிவு பெரியதாக இருந்தது.(12)

வீரம் மிகுந்த போர்வீரர்களால் இப்படி அந்தப் படை தாக்கிக் கொல்லப்பட்ட போது, விருகோதரன் {பீமன்} தலைமையிலான பார்த்தர்கள் {பாண்டவர்கள்} எங்களை எதிர்த்து வந்தனர்.(13) அகன்ற தோள்களும், நீண்ட கரங்களும், நெடிய உடற்கட்டும், பெரிய கண்களும் கொண்டோரான, பாண்டியர்கள், சோழர்கள், கேரளர்கள் {சேரர்கள்} ஆகிய அனைவருடன் கூடிய வலிமைமிக்க ஓர் அணிவகுப்பால் சூழப்பட்டவர்களும், திராவிடர்களின் படைகளுடன் கூடியவர்களுமான திருஷ்டத்யும்னன், சிகண்டி, திரௌபதியின் (ஐந்து) மகன்கள், பிரபத்ரகர்கள், சாத்யகி, சேகிதானன் ஆகியோரும் அவர்களுடன் {பாண்டவர்களுடன்} இருந்தனர்.(14,15) சாத்யகியால் வழிநடத்தப்பட்ட ஆந்திர இனக்குழுவைச் சேர்ந்த காலாட்படை போராளிகள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களாகவும், சிவந்த பற்களுடையவர்களாகவும், மதங்கொண்ட யானைகளின் ஆற்றலைக் கொண்டவர்களாகவும், பல்வேறு வண்ணங்களிலான ஆடைகளை உடுத்தியிருந்தவர்களாகவும், நறுமணப்பொடிகளைப் பூசியிருந்தவர்களாகவும்,(16) வாள்களையும், சுருக்குக் கயிறுகளையும் தரித்திருந்தவர்களாகவும், வலிமைமிக்க யானைகளையே தடுக்கவல்லவர்களாகவும், ஒருவரையொருவர் கைவிடாத மரணத் தோழர்களாகவும் {காலனின் தோழர்களாகவும்} [2],(17) அம்பறாத்தூணிகளைக் கொண்டவர்களாகவும், விற்களைத் தாங்கியிருந்தவர்களாகவும், நீண்ட குழல்களை {மயிரைக்} கொண்டவர்களாகவும், இனிமையான பேச்சைக் கொண்டவர்களாகவும், கடும் வடிவங்களையும், பெரும் சக்தியையும் கொண்டவர்களாகவும் இருந்தனர் [3].(18)துணிச்சல் மிக்கப் பிற போர்வீரர்களான சேதிகள், பாஞ்சாலர்கள், கைகேயர்கள், காருஷர்கள், கோசலர்கள், காஞ்சிகள், மகதர்கள் ஆகியோரும் விரைந்து முன்னேறினர்.(19) முதன்மையான வகைகளைச் சேர்ந்த அவர்களது தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியனவும், அவர்களது கடும் காலாட்படை வீரர்களும், பல்வேறு இசைக்கருவிகளின் இசையால் மகிழ்ந்து ஆடுவதாகவும், சிரிப்பதாகவும் தெரிந்தது.(20) அந்தப் பரந்த படைக்கு மத்தியில், யானையின் கழுத்தில் ஏறிக் கொண்ட விருகோதரன் {பீமன்}, பல முதன்மையான யானைவீரர்களால் சூழப்பட்டபடியே, உமது படையை எதிர்த்து வந்தான்.(21) முறையாக ஆயுதங்களைத் தரித்திருந்தவையும், கடுமையானவையும், முதன்மையானவையுமான அந்த யானைகள், உதய மலையின் மேலே உதயச் சூரியனால் மகுடம் சூட்டப்பட்டதும் கல்லால் கட்டப்பட்டதுமான மாளிகை போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(22) விலைமதிப்புமிக்க ரத்தினங்கள் பதிக்கப்பட்டவையும், தங்கள் வகையில் முதன்மையானவையுமான அவற்றின் {அந்த யானைகளின்} இரும்புக் கவசங்களும், நட்சத்திரங்களால் விரவிக் கிடக்கும் கூதிர்காலத்து ஆகாயத்தைப் போலப் பிரகாசித்தன.(23)

கூதிர்காலத்து நடுப்பகல் சூரியனின் காந்தியுடன் கூடிய அந்தப் பீமன், விரிந்து நீட்டப்பட்ட தன் கைகளில் வேலுடனும், தன் தலையில் அலங்கரிக்கப்பட்ட ஓர் அழகிய கிரீடத்துடனும், தன் எதிரிகளை எரிக்கத் தொடங்கினான்.(24) அந்த {பீமனின்} யானையைத் தொலைவிலிருந்தே கண்டவனும், தானும் யானையில் ஏறியிருந்தவனுமான க்ஷேமதூர்த்தி, மிகவும் மகிழ்ச்சியாக இருந்த பீமனை நோக்கி அறைகூவியபடியே விரைந்து சென்றான்.(25) அப்போது, மேலே மரங்களைக் கொண்ட இரு பெரும் மலைகளுக்கு ஒப்பானவையும், ஒன்றோடொன்று போரிட விரும்பியவையும் கடும் வடிவங்களுடன் கூடியவையுமான அந்த இரு யானைகளுக்கும் இடையில் ஒரு மோதல் நடந்தது.(26) ஒன்றோடொன்று மோதிய அந்த யானைகளில் இருந்த அவ்விரு வீரர்களும், சூரியக் கதிர்களின் காந்தியுடன் கூடிய வேல்களால் பலவந்தமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு உரத்த முழக்கமிட்டனர்.(27) பிறகு, பிரிந்த அவர்கள், தங்கள் யானைகளுடன் வட்டமாகத் திரிந்து, விற்களை எடுத்துக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.(28)

தங்கள் உரத்த முழக்கங்களாலும், தங்கள் கக்கங்களைத் தட்டிக் கொண்டதாலும், தங்கள் கணைகளின் விஸ் என்ற ஒலியாலும் சுற்றியிருந்த மக்களை மகிழ்ச்சியடைச் செய்தபடியே அவர்கள் தொடர்ந்து சிங்க முழக்கமிட்டனர்.(29) பெரும் பலம் கொண்டவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களுமான அவ்விருவரும், காற்றில் மிதக்கும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கள் யானைகளின் உயர்த்தித் தூக்கப்பட்ட துதிக்கைகளைப் பயன்படுத்திப் போரிட்டனர்.(30) பிறகு, அடுத்தவரின் வில்லை வெட்டிய அவ்விருவரும், ஒருவரையொருவர் நோக்கி முழங்கியபடியே, மழைக்காலத்து இரு மேகத் திரள்கள் மலைத்தாரைகளைப் பொழிவதைப் போல ஈட்டிகள் மற்றும் வேல்களின் மழையை ஒருவர்மீதொருவர் பொழிந்தனர்.(31)

அப்போது, க்ஷேமதூர்த்தி, பெரும் மூர்கத்தைக் கொண்ட வேலொன்றால் பீமசேனனின் நடுமார்பைத் துளைத்து, மேலும் ஆறால் துளைத்து, உரக்க முழங்கினான்.(32) தன் உடலில் தைத்திருந்த அந்த வேல்களுடன் கூடியவனும் கோபத்தால் சுடர்விட்டவனுமான பீமசேனன், மேகத்திரையின் வழியே கதிர்களை வெளியேற்றும் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(33) அப்போது பீமன், சூரியனின் கதிர்களைப் போலப் பிரகாசமானதும், முற்றிலும் நேராகச் செல்வதும், முழுவதும் இரும்பாலானதுமான வேல் ஒன்றைத் தன் எதிராளியின் மீது கவனமாக வீசினான்.(34) பிறகு அந்தக் குலுட்டர்களின் {கரூசர்களின்} ஆட்சியாளன் {க்ஷேமதூர்த்தி}, தன் வில்லை வளைத்துப் பத்துக் கணைகளால் அந்த வேலை அறுத்து, மேலும் அறுபது {60} கணைகளால் பாண்டுவின் மகனை {பீமனைத்} துளைத்தான்.(35) பிறகு பாண்டுவின் மகனான பீமன், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான நாணொலி கொண்ட தன் வில்லை எடுத்துக் கொண்டு, உரக்க முழங்கிய படியே தன் எதிராளியின் யானையைத் தன் கணைகளால் ஆழமாகப் பீடித்தான்.(36) அந்தப் போரில் பீமசேனனின் கணைகளால் பீடிக்கப்பட்ட அந்த யானை, அதைத் தாங்கிக் கொள்ள முனைந்தாலும், காற்றால் விரட்டப்படும் மேகத்தைப் போலக் களத்தில் நிற்கவில்லை.(37) பீமனுக்குச் சொந்தமானதும், கடுமையானதுமான யானைகளின் இளவரசன், காற்றால் விரட்டப்படும் மேகத்திரள்களைப் புயலால் விரட்டப்படும் மற்றொரு மேகத்திரளைப் போல (ஓடிக் கொண்டிருக்கும்) தன் எதிராளியைப் பின்தொடர்ந்து சென்றது.(38) தன் யானையை நிறுத்திய வீர க்ஷேமதூர்த்தி, பின்தொடர்ந்து வந்த பீமசேனனின் யானையைத் தன் கணைகளால் துளைத்தான்.(39) நன்கு அடிக்கப்பட்டதும், முற்றிலும் நேரானதுமான கத்தித் தலை கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் தன் எதிராளியின் வில்லை வெட்டிய க்ஷேமதூர்த்தி, பிறகு அந்தப் பகை யானையைப் பீடித்தான்.(40)

அப்போது அந்தப் போரில் கோபத்தால் நிறைந்த க்ஷேமதூர்த்தி, பீமனைத் துளைத்து, அவனது யானையின் அனைத்துப் பகுதியையும் நீண்ட கணைகள் {நாராசங்கள்} பலவற்றால் தாக்கினான்.(41) எனினும், தன் யானை வீழ்வதற்கு முன்பே அந்த விலங்கில் இருந்து கீழே குதித்துப் பூமியில் நின்ற பீமன், பிறகு தன் கதாயுதத்தால் எதிராளியின் யானையை நசுக்கினான்.(42) நசுக்கப்பட்ட தன் யானையில் இருந்து கீழே குதித்து, உயர்த்திய ஆயுதத்துடன் தன்னை நோக்கி வந்த க்ஷேமதூர்த்தியையும், பீமன் அவ்வாறே தாக்கினான்.(43) இப்படித் தாக்கப்பட்ட க்ஷேமதூர்த்தி, இடியால் வீழ்த்தப்பட்டு, இடியால் பிளக்கப்பட்ட மலையின் அருகிலேயே கிடக்கும் சிங்கத்தைப் போலத் தன் கையில் வாளுடன் தன் யானையின் அருகிலேயே உயிரற்று விழுந்தான்.(44) குலுட்டர்களின் {கரூசர்களின்} கொண்டாடப்படும் மன்னன் {க்ஷேமதூர்த்தி} கொல்லப்பட்டதைக் கண்ட உமது துருப்புகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, மிகவும் துன்புற்று தப்பி ஓடின” {என்றான் சஞ்சயன்}.(45)

கைகேயத்து விந்தானுவிந்தர்கள்! – கர்ண பர்வம் பகுதி – 13-கேகயத்து இளவரசர்களான விந்தானுவிந்தர்கள் மற்றும் சாத்யகிக்கு இடையில் நடந்த மோதல்; சாத்யகியால் கொல்லப்பட்ட விந்தானுவிந்தர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்கவனும், வீரமிக்க வில்லாளியுமான கர்ணன், அந்தப் போரில் தன் நேரான கணைகளால் பாண்டவப் படையைத் தாக்கத் தொடங்கினான்.(1) அதே போலவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் தேர்வீரர்களான பாண்டவர்களும், கோபத்தால் நிறைந்து, கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது மகனுடைய {துரியோதனனுடைய} படையைத் தாக்கத் தொடங்கினர்.(2) கர்ணனும், ஓ! மன்னா, அந்தப் போரில், கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்படவையும், சூரியக் கதிர்களின் பிரகாசத்துடன் கூடியவையுமான துணிக்கோல் கணைகளால் {நாராசங்களால்} பாண்டவப் படையைக் கொன்றான்.(3) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அங்கே கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட யானைகள் உரக்கப் பிளிறி, தங்கள் பலத்தை இழந்து மயக்கமடைந்து அனைத்துப் பக்கங்களிலும் திரிந்தன.(4)

அந்தப் படையானது சூதன் மகனால் {கர்ணனால்} இவ்வாறு அழிக்கப்பட்ட போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {கர்ணனை} நோக்கி நகுலன் பெரும் வேகத்துடன் விரைந்தான்.(5) கடும் சாதனைகளை அடைவதில் ஈடுபட்டிருந்த துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} எதிர்த்து பீமசேனன் விரைந்தான். சாத்யகி, கைகேய இளவரசர்களான விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோரைத் தடுத்தான்[1].(6) மன்னன் சித்திரசேனன் முன்னேறி வரும் சுருதகர்மனை எதிர்த்து விரைந்தான்; பிரதிவிந்தியன், அழகிய கொடிமரத்தையும், அழகிய வில்லையும் கொண்ட சித்திரனை எதிர்த்து விரைந்தான்.(7) துரியோதனன், தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தான்; அதே வேளையில் தனஞ்சயன் {அர்ஜுனன்}, கூட்டம் கூட்டமாக வந்த கோபக்கார சம்சப்தகர்களை எதிர்த்து விரைந்தான்.(8) பெரும் வீரர்கள் கொல்லப்பட்ட அம்மோதலில், திருஷ்டத்யும்னன் கிருபரை எதிர்த்துச் சென்றான். வெல்லப்படமுடியாத சிகண்டி கிருதவர்மனோடு மோதினான்.(9) சுருதகீர்த்திச் சல்லியனுடன் மோதினான், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மாத்ரியின் மகனான வீரச் சகாதேவன், உமது மகன் துச்சாசனனோடு மோதினான்.(10)

அந்தப் போரில் கைகேய இளவரசர்கள் இருவரும், சுடர்மிக்கக் கணைமாரியால் சாத்யகியை மறைத்தனர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பின்னவனும் {சாத்யகியும்}, அந்த இரு கைகேயச் சகோதரர்களை மறைத்தான்.(11) காட்டில் இரு யானைகள் தங்கள் தந்தங்களைக் கொண்டு ஒரு பகையானையைத் தாக்குவது போல, அந்த வீரச் சகோதரர்கள் இருவரும் சாத்யகியின் மார்பை ஆழத் துளைத்தனர்.(12) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கணைகளால் தங்கள் முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்ட அந்த இரு சகோதரர்களும், பழுதற்ற செயல்களைச் செய்யும் சாத்யகியைத் தங்கள் கணைகளால் துளைத்தனர்.(13) எனினும், ஓ! மன்னா, ஓ! பாரதரே, திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் கணைமாரியால் மறைத்த சாத்யகி, புன்னகைத்துக் கொண்டே, அவ்விரு சகோதரர்களையும் தடுத்தான்.(14) சிநியின் பேரன் {சாத்யகி} ஏவிய அந்தக் கணைமாரியால் தடுக்கப்பட்ட அவ்விரு சகோதரர்களும், தங்கள் கணைகளால் அந்தச் சிநியின் பேரனுடைய தேரை மறைத்தனர்.(15)

பெரும் புகழைக் கொண்ட அந்தச் சௌரின் {சாத்யகி}, அவ்விருவரின் அழகிய விற்களை வெட்டிவிட்டு அந்தப் போரில் தன் கூரிய கணைகளால் அவர்களைத் தடுத்தான்.(16) வேறு அழகிய இரு விற்களையும், பெரும் எண்ணிக்கையிலான பலமிக்கக் கணைகளையும் எடுத்துக் கொண்ட அவ்விருவரும், சாத்யகியை மறைத்து, பெரும் சுறுசுறுப்புடனும், திறனுடனும் திரியத் தொடங்கினர்.(17) கங்க மற்றும் மயில் இறகுகளைக் கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், அவ்விரு சகோதரர்களால் ஏவப்பட்டவையுமான அந்த வலிமைமிக்கக் கணைகள் திசைகளின் அனைத்துப் புள்ளிகளுக்கும் ஒளியூட்டியபடியே பாயத் தொடங்கின.(18) அவர்களுக்கிடையிலான அந்தப் பயங்கரப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களால் ஏவப்பட்ட கணைகள் அங்கே இருளை உண்டாக்கின. பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஒவ்வொருவரும் அடுத்தவரின் விற்களை வெட்டினர்.(19)

அப்போது வெல்லப்பட முடியாதவனான அந்தச் சாத்வதன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, அதில் நாணேற்றி, கத்தி தலை கொண்ட கூரிய கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் அனுவிந்தனின் தலையை அறுத்தான்.(20) காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய தலையானது, ஓ! மன்னா, (பழங்காலத்தில் நடந்த) பெரும்போரில் கொல்லப்பட்ட சம்பரனின் தலை போல விழுந்தது. மேலும் அது கைகேயர்கள் அனைவரையும் துயரில் நிறைக்கும்படி உடனே பூமியை அடைந்தது.(21) துணிச்சல் மிக்க அந்தப் போர்வீரன் {அனுவிந்தன்} கொல்லப்பட்டதைக் கண்ட அவனது சகோதரனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான விந்தன், மற்றொரு வில்லுக்கு நாணேற்றி, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் சிநியின் பேரனைத் தடுக்கத் தொடங்கினான்.(22) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அறுபது {60} கணைகளால் சாத்யகியைத் துளைத்த அவன் {விந்தன்}, “நில், நில்” என்று சொன்னபடியே உரக்க முழங்கினான்.(23) பிறகு அந்தக் கைகேயர்களின் வலிமைமிக்கத் தேர்வீரன் {விந்தன்}, பல்லாயிரம் கணைகளால் சாத்யகியின் கரங்களையும் மார்பையும் வேகமாகத் தாக்கினான்.(24)

அனைத்து அங்கங்களிலும் கணைகளால் காயம்பட்டவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, மலர்ந்திருக்கும் கின்சுகம் {பலாச மரம்} ஒன்றைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பிரகாசமாகத் தெரிந்தான்.(25) அந்த மோதலில் உயர் ஆன்ம கைகேயனால் துளைக்கப்பட்ட சாத்யகி, (பதிலுக்கு) இருபத்தைந்து கணைகளால் அந்தக் கைகேயனை {விந்தனை} மிக எளிதாகத் துளைத்தான்.(26) பிறகு, தேர்வீரர்களில் முதன்மையான அவ்விரு போர்வீரர்களும் {விந்தனும் சாத்யகியும்}, அம்மோதலில் ஒருவரின் அழகிய வில்லை மற்றவர் அறுத்து, ஒருவரின் சாரதியையும், குதிரைகளையும் மற்றவர் வேகமாகக் கொன்று, வாளால் போரிடுவதற்காக ஒருவரையொருவர் காலால் நடந்தே அணுகினர்.(27) பருத்த கரங்களைக் கொண்டவர்களான அவ்விருவரும், (பழங்காலத்தில்) தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் பெரும் வலிமையுடன் கூடிய இருவரான ஜம்பன் மற்றும் சக்ரனை {இந்திரனைப்} போல, நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கேடயத்தையும், ஒரு சிறந்த வாளையும் எடுத்துக் கொண்டு, அந்தப் பரந்த அரங்கில் பிரகாசமாகத் தெரிந்தனர்.(28) அந்தப் பெரும்போரில் அவர்கள் இருவரும் வட்டமாக {மண்டலகாரமாகத்} திரியத் தொடங்கினர். பிறகு அவர்கள் ஒருவரையொருவர் அருகில் அணுகி, ஒருவரோடொருவர் வேகமாக மோதத் தொடங்கினர்.(29)

அப்போது அந்தச் சாத்வதன் {சாத்யகி}, அந்தக் கைகேயனின் {விந்தனின்} கேடயத்தை இரண்டாகப் பிளந்தான். பின்னவனும் {விந்தனும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் கேடயத்தை இரண்டாகப் பிளந்தான்.(30) நூறு நட்சத்திரங்களால் மறைக்கப்பட்ட தன் எதிராளியின் கேடயத்தைப் பிளந்த கைகேயன், (சில நேரங்களில்) முன்னேறியும், பின்வாங்கியும் வட்டமாகத் திரியத் தொடங்கினான்.(31) அப்போது பெறும் சுறுசுறுப்பைக் கொண்ட சிநியின் பேரன் {சாத்யகி}, இவ்வாறு கையில் வாளுடன் அந்தப் பரந்த அரங்கில் திரிந்து கொண்டிருந்த கைகேயர்களின் இளவரசனை {விந்தனை} ஒரு பக்கத் தாக்குதால் {குறுக்காக} வெட்டினான்.(32) கவசம் பூட்டப்பட்டவனும், பெரும் வில்லாளியுமான அந்தக் கைகேய இளவரசன் {விந்தன்} இவ்வாறு அந்தப் பெரும்போரில் இரண்டாகப் பிளக்கப்பட்டதும், இடியால் பிளக்கப்பட்ட மலையொன்றைப் போலக் கீழே விழுந்தான்.(33)

போரில் அவனைக் கொன்றதும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், எதிரிகளை எரிப்பவனுமான துணிச்சல்மிக்கச் சிநியின் பேரன் {சாத்யகி}, வேகமாக யுதாமன்யுவின் தேரில் ஏறிக் கொண்டான்.(34) பிற்பாடு, முறையாக (அனைத்தையும்) அடையப்பெற்ற மற்றொரு தேரில் ஏறிய சாத்யகி, தன் கணைகளால் கைகேயர்களின் பெரும்படையைக் கொல்லத் தொடங்கினான்.(35) இப்படிப் போரில் கொல்லப்பட்ட அந்தக் கைகேயர்களின் பரந்த படையினர், தங்கள் எதிரியை {சாத்யகியை} விட்டுவிட்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.(36)

சுருதகர்மனும்! பிரதிவிந்தியனும்!! – கர்ண பர்வம் பகுதி – 14-சுருதகர்மனுக்கும், சித்திரசேனனுக்கும் இடையிலான போர்; சுருதகர்மனால் கொல்லப்பட்ட சித்திரசேனன்; பிரதிவிந்தியனுக்கும் சித்திரனுக்கும் இடையில் நடந்த போர்; பிரதிவிந்தியனால் கொல்லப்பட்ட சித்திரன்; பீமசேனனை நோக்கி விரைந்த அஸ்வத்தாமன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தில் நிறைந்த சுருதகர்மன் [1], அந்தப் போரில் பூமியின் தலைவனான சித்திரசேனனை ஐம்பது கணைகளால் தாக்கினான்.(1) ஓ! மன்னா, அந்த அபிசாரர்களின் ஆட்சியாளன் {சித்திரசேனன்} (பதிலுக்கு) ஒன்பது நேரான கணைகளால் சுருதகர்மனைத் தாக்கி, ஐந்தால் அவனது சாரதியைத் துளைத்தான்.(2) சினத்தால் நிறைந்த சுருதகர்மன், படைகளுக்குத் தலைமையில் இருந்த சித்திரசேனனின் முக்கிய அங்கத்தை ஒரு கணையால் தாக்கினான்.(3) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தக் கணையால் ஆழத்துளைக்கப்பட்டவனும், உயர் ஆன்மா கொண்ட இளவரசனுமான வீரச் சித்திரசேனன், பெரும் வலியை உணர்ந்து மயக்கமடைந்தான்.(4) இந்த இடைவேளையில், பெரும் புகழைக் கொண்ட சுருதகர்மன், (உணர்வற்றிருந்த தன் எதிராளியான) அந்தப் பூமியின் தலைவனை {சித்திரசேனனை} தொண்ணூறு கணைகளால் மறைத்தான்.(5)

அப்போது உணர்வுகள் மீண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சித்திரசேனன், தன் எதிராளியின் வில்லை ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} வெட்டி, ஏழு கணைகளால் தன் எதிராளியைத் துளைத்தான்.(6) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், பலமாகத் தாக்க வல்லதுமான மற்றொரு வில்லை எடுத்த சுருதகர்மன், தன் கணைகளின் அலைகளால் சித்திரசேனனை {முள்ளம்பன்றி போன்ற} அற்புதத் தோற்றம் கொண்டவனாக ஆக்கினான்.(7) அந்தக் கணைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், இளமை நிறைந்தவனும், அழகிய மாலைகளை அணிந்தவனுமான மன்னன் {சித்திரசேனன்}, சபைக்கு மத்தியில் நல்ல அலங்காரத்துடன் கூடிய ஓர் இளைஞனைப் போல அந்தப் போர்க்களத்தில் தெரிந்தான்.(8) ஒரு கணையால் சுருதகர்மனின் நடுமார்பை விரைவாகத் துளைத்த அவன் {சித்திரசேனன்}, அவனிடம், “நில், நில்” என்றான்.(9) போரில் அந்தக் கணையால் துளைக்கப்பட்ட சுருதகர்மனும், செஞ்சுண்ணச் சாற்றின் ஓடையை உதிர்க்கும் ஒரு மலையைப் போல இரத்தம் சிந்தத் தொடங்கினான்.(10) குருதியில் குளித்து, அதனால் கறைபடிந்த அந்த வீரன் {சுருதகர்மன்}, மலர்ந்திருக்கும் கின்சுகம் {பலாச மரம்} ஒன்றினைப் போலப் போரில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(11)

அப்போது எதிரியால் இப்படித் தாக்கப்பட்ட அந்தச் சுருதகர்மன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து, எதிரியைத் தடுக்கும் சித்திரசேனனின் அந்த வில்லை இரண்டாக வெட்டினான்.(12) பின்னவனின் {சித்திரசேனனின்} வில்லானது வெட்டபட்ட பிறகு, ஓ! மன்னா, சுருதகர்மன், நல்ல சிறகுகளைக் கொண்ட முன்னூறு கணைகளால் அவனை {சித்திரசேனனை} முழுமையாக மறைத்தான்.(13) தலைப்பாகையால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன் உயர் ஆன்ம எதிராளியின் {சித்திரசேனனின்} தலையை, கூர்முனை கொண்ட மற்றொரு அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} அவன் {சுருதகர்மன்} அறுத்தான்.(14) சித்திரசேனனின் அந்தச் சுடர்மிக்கத் தலையானது, ஆகாயத்தில் இருந்து தானாகத் தளர்ந்து பூமியில் விழுந்த நிலவைப் போலத் தரையில் விழுந்தது.(15) {தங்கள்} மன்னன் கொல்லப்பட்டதைக் கண்ட சித்திரசேனனின் துருப்புகள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, (அவனைக் கொன்றவனை {சுருதகர்மனை}) எதிர்த்து மூர்க்கமாக விரைந்தன.(16) அப்போது சினத்தால் நிறைந்த அந்தப் பெரும் வில்லாளி {சுருதகர்மன்}, தன் கணைகளை ஏவியபடியே, அண்ட அழிவின் போது சீற்றத்தால் நிறைந்து, அனைத்து உயிரினங்களையும் எதிர்த்துச் செல்லும் யமனைப் போல, அந்தப் படையை எதிர்த்துச் சென்றான்.(17) அந்தப் போரில் வில் தரித்த உமது பேரனால் {சுருதகர்மனால்} கொல்லப்பட்ட அவர்கள், காட்டுத்தீயால் எரிக்கப்படும் யானைகளைப் போல அனைத்துப் பக்கங்களிலும் வேகமாகத் தப்பி ஓடினர்.(18) எதிரியை வெல்வதில் நம்பிக்கை இழந்து தப்பி ஓடும் அவர்களைக் கண்டு, தன் கூரிய கணைகளால் அவர்களைத் தொடர்ந்து சென்ற சுருதகர்மன் (தன் தேரில்) பிரகாசமாகத் தெரிந்தான்.(19)

பிறகு, {யுதிஷ்டிரனின் மகன்}பிரதிவிந்தியன் [2] , ஐந்து கணைகளால் சித்திரனைத் துளைத்து, மூன்றால் அவனது சாரதியைத் தாக்கி, ஒரு கணையால் அவனது கொடிமரத்தையும் தாக்கினான்.(20) சித்திரன், தங்கச் சிறகுகள் மற்றும் கூர்முனைகளைக் கொண்டவையும், கங்க மற்றும் மயில் இறகுகளைக் குஞ்சமாகக் கொண்டவையுமான ஒன்பது அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} அவனது {பிரதிவிந்தியனின்} கரங்களிலும், மார்பிலும் தாக்கினான்.(21) பிறகு பிரதிவிந்தியன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் கணைகளால் தனது எதிராளியின் வில்லை அறுத்து, ஐந்து கூர்முனைக் கணைகளால் பின்னவனை ஆழத் துளைத்தான்.(22) பிறகு சித்திரன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்க மணிகளால் அலங்கரிக்கப்பட்டதும், நெருப்பின் தழலுக்கு ஒப்பானதும், பயங்கரமானதும், தடுக்கப்பட முடியாததுமான ஈட்டி ஒன்றை உமது பேரன் {பிரதிவிந்தியன்} மீது ஏவினான்.(23) எனினும் பிரதிவிந்தியன் அந்தப் போரில், ஒளிரும் விண்கல்லைப் [3] போலத் தன்னை நோக்கி வந்த அந்த ஈட்டியை, மூன்று துண்டுகளாக மிகவும் எளிதாக வெட்டினான்.(24) பிரதிவிந்தியனின் கணைகளால் மூன்று துண்டுகளாக வெட்டப்பட்ட அந்த ஈட்டியானது, யுக முடிவில் அனைத்து உயிர்களையும் அச்சத்தில் ஆழ்த்தும் வஜ்ரத்தைப் போலக் கீழே விழுந்தது.(25)

அந்த ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட சித்திரன், தங்க வலையால் அலங்கரிக்கப்பட்ட கனமான கதாயுதம் ஒன்றை எடுத்துப் பிரதிவிந்தியன் மீது அதை வீசினான்.(26) அந்தப் போரில் அந்தக் கதாயுதம், பின்னவனின் {பிரதிவிந்தியனின்} குதிரைகளையும், சாரதியையும் கொன்று, தவிரவும் அவனது தேரையும் நசுக்கி பெரும் மூர்க்கத்துடன் பூமியில் விழுந்தது.(27) அதேவேளையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் தேரில் இருந்து இறங்கிய பிரதிவிந்தியன், நன்கு அலங்கரிக்கப்பட்டதும், தங்கப் பிடி கொண்டதுமான ஈட்டி ஒன்றைச் சித்திரன் மீது வீசினான்.(28) தன்னை நோக்கி வந்த அதை {அந்த ஈட்டியைப்} பிடித்த அந்த உயர் ஆன்ம மன்னன் சித்திரன், ஓ! பாரதரே, அதே ஆயுதத்தைப் பிரதிவிந்தியன் மீது {திரும்ப} வீசினான்.(29) துணிச்சல் மிக்கப் பிரதிவிந்தியனைத் தாக்கிய அந்தச் சுடர்மிக்க ஈட்டி, அந்தப் போரில் அவனது வலக்கரத்தைத் துளைத்து, இடியின் வெடிப்பைப் போல மொத்த பகுதிக்கும் ஒளியூட்டியபடியே பூமியில் விழுந்து.(30)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது சினத்தால் நிறைந்த பிரதிவிந்தியன், சித்திரனுக்கு அழிவை உண்டாக்க விரும்பி, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வேல் {தோமரம்} ஒன்றை அவன் {சித்திரன்} மீது ஏவினான். அந்த வேலானது, அவனது {சித்திரனின்} கவசத்தையும், மார்பையும் ஊடுருவி, பொந்துக்குள் நுழையும் வலிமைமிக்கப் பாம்பொன்றைப் போலப் பூமிக்குள் நுழைந்தது.(32) அந்த வேலால் தாக்கப்பட்ட அந்த மன்னன், பெரியவையும், பருத்தவையும், இரும்பு தண்டங்களுக்கு ஒப்பானவையுமான தன் கரங்களை விரித்தபடியே கீழே விழுந்தான்.(33) சித்திரன் கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், போர்க்கள ரத்தினங்களுமான உமது போர்வீரர்கள், பிரதிவிந்தியனை நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்தும் மூர்க்கமாக விரைந்தனர்.(34) பல்வேறு வகைகளிலான கணைகளையும், மணிவரிசைகளால் அலங்கரிக்கப்பட்ட சதக்னிகளையும் ஏவிய அவர்கள், சூரியனை மறைக்கும் மேகத் திரள்களைப் போல, பிரதிவிந்தியனை விரைவில் மறைத்தனர்.(35) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான அந்தப் பிரதிவிந்தியன், போரில் அப்படித் தன்னைத் தாக்குபவர்களைத் தன் கணைமாரியால் எரித்து, வஜ்ரதாரியான சக்ரன் {இந்திரன்}, அசுரப்படையை முறியடித்ததைப் போல உமது படையை முறியடித்தான்.(36)

இப்படியே போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்ட உமது துருப்புகள், ஓ!மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்றுதிரண்ட மேகத்திரள்கள் காற்றால் விரட்டப்படுவதைப் போலத் திடீரென அனைத்துப் பக்கங்களிலும் ஓடினர்.(37) அனைத்துப் பக்கங்களிலும் கொல்லப்பட்ட உமது படையினர் இவ்வாறு ஓடியபோது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மட்டும் தனியனாக வலிமைமிக்கப் பீமசேனனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(38) (பழங்காலத்தில்) தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில், விருத்திரனுக்கும், வாசவனுக்கும் {இந்திரனுக்கு} இடையில் நடந்த மோதலைப் போல, அங்கே அவர்களுக்குள் ஒரு கடும் மோதல் உடனேயே நடந்தது” {என்றான் சஞ்சயன்}.(39)

பீமனோடு மோதிய அஸ்வத்தாமன் – கர்ண பர்வம் பகுதி – 15-பீமசேனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடந்த போர்; மயக்கமடைந்து விழுந்த இருவரும்; அவர்கள் இருவரையும் பாராட்டிய சித்தர்களும், பிறரும்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் கர நளினத்தை வெளிப்படுத்தியபடியே ஒரு கணையால் பீமனைத் துளைத்தான்.(1) உடலின் முக்கிய அங்கங்களுடைய அறிவனைத்தையும் கொண்டிருந்ததால், வேகமான கரங்களைக் கொண்டவனான அந்த அஸ்வத்தாமன், அவனது {பீமனின்} முக்கிய அங்கங்கள் அனைத்தையும் குறிபார்த்து, தொண்ணூறு {90} கணைகளால் மீண்டும் அவனைத் {பீமனைத்} துளைத்தான்.(2) துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கூரிய கணைகளால் எங்கும் துளைக்கப்பட்ட பீமசேனன், அந்தப் போரில் கதிர்களுடன் கூடிய சூரியனைப் போலவே பிரகாசமாகத் தெரிந்தான்.(3) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, நன்கு செலுத்தப்பட்ட ஓராயிரம் {1000} கணைகளால் துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} மறைத்து, சிங்க முழக்கம் செய்தான்.(4) அந்தப் போரில் தன் கணைகளால் தன் எதிரியின் கணைகளைக் கலங்கடித்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே, ஒரு துணிக்கோல் கணையால் {நாராசத்தால்} அந்தப் பாண்டவனின் {பீமனின்} முன்நெற்றியைத் தாக்கினான்.(5) ஓ! மன்னா, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, காட்டில் ஒரு காண்டாமிருகம் அதன் கொம்பைச் செருக்குடன் தாங்கிக் கொள்வதைப் போலவே அந்தக் கணையைத் தன் முன்நெற்றியில் தாங்கிக் கொண்டான்.(6)

பிறகு அந்தப் போரில் சிரித்துக் கொண்டே இருந்த வீரப் பீமன், போராடிக் கொண்டிருக்கும் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} நெற்றியை மூன்று துணிக்கோல் கணைகளால் {நாராசங்களை} தாக்கினான். அந்தப் பிராமணன் {அஸ்வத்தாமன்}, தன் நெற்றியில் ஒட்டியிருந்த அந்த மூன்று கணைகளுடன், மழைக்காலங்களில் நீரால் கழுவப்படும் மூன்று சிகரங்களைக் கொண்ட மலை ஒன்றைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(8) அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, நூற்றுக்கணக்கான கணைகளால் அந்தப் பாண்டவனைப் {பீமனை} பீடித்தாலும், காற்றால் அசைக்கப்பட முடியாத மலையைப் போல இருந்த அவனை {பீமனை} அசைக்கத் தவறினான்.(9) அதே போலவே, மகிழ்ச்சியால் நிறைந்திருந்த அந்தப் பாண்டுவின் மகனாலும், மலையை அசைப்பதில் தவறும் மழைத்தாரைகளைப் போலவே, தன் நூற்றுகணக்கான கணைகளால் அந்தப் போரில் துரோணர் மகனை அசைக்க முடியவில்லை.(10)

பயங்கரக் கணைமாரியால் ஒருவரையொருவர் மறைத்தவர்களும், வலிமையும், கடுமையும் கொண்டவர்களுமான அந்தப் பெரும் தேர்வீரர்கள் இருவரும், தங்கள் முதன்மையான தேர்களில் அப்போது பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தனர்.(11) உலகத்தின் அழிவுக்காக உதித்த சுடர்மிக்க இரு சூரியர்களைப் போலத் தெரிந்த அவர்கள், சிறந்த கணைகளாலான தங்கள் கதிர்களால் ஒருவரையொருவர் எரிப்பதில் ஈடுபட்டனர்.(12) அந்தப் பெரும்போரில் மற்றவரின் சாதனைகளுக்கு எதிர்வினையாற்ற பெருங்கவனத்துடன் முயன்றவர்களும், உண்மையில் மிகவும் அச்சமற்றவகையில் கணைமாரியால் செயலுக்குப் பொருத்தமான செயலில் ஈடுபட்டவர்களும்,(13) மனிதர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும் அம்மோதலில் இரு புலிகளைப் போலவே திரிந்தனர். வெல்லப்பட்ட முடியாதவர்களும், பயங்கரமானவர்களுமான அவ்விருவரும் கணைகளையே தங்கள் நச்சுப்பற்களாகவும், விற்களையே தங்கள் வாய்களாகவும் கொண்டிருந்தனர்.(14)

மேகத்திரள்களால் மறைக்கப்பட்ட ஆகாயத்து சூரியனையும், சந்திரனையும் போல, அனைத்துப் பக்கங்களிலும் கணை மேகங்களால் மறைக்கப்பட்ட அவர்கள் (கண்களுக்குக்) காணப்பட முடியாதவர்களானார்கள்.(15) பிறகு எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள் இருவரும், மேகத்திரைகளில் இருந்து விடுபட்ட செவ்வாயையும், புதனையும் போலச் சுடர்விட்டபடி விரைவில் தோன்றினார்கள்.(16) அச்சந்தரும் வகையிலான அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, விருகோதரனை {பீமனைத்} தன் வலப்பக்கத்தில் நிறுத்திய துரோணர் மகன் {அஸ்வத்தாமன்},(17) மலையொன்றின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல, நூற்றுக்கணக்கான கடுங்கணைகளை அவன் {பீமன்} மீது பொழிந்தான்.

எனினும், பீமனால் தன் எதிரியின் அந்த வெற்றிக் குறியீட்டைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(18) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அஸ்வத்தாமனின் வலப்பக்கத்தில் நின்றபடியே, பின்னவனின் சாதனைகளுக்கு எதிர்வினையாற்றத் தொடங்கினான். (நிலைமையின் தேவைக்குத் தகுந்தபடி) முன்னேறவும், பின்வாங்கவும் செய்த அவர்களது தேர்கள், பல்வேறு வழிகளில் திரிவதைத் தொடர்ந்த நிலையிலேயே,(19) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கும் இடையிலான அந்தப் போர் மிகவும் மூர்க்கமடைந்தது. பல்வேறு பாதைகளில் திரிந்து, (போரிடுவதில்) வட்டமாகச் சுழன்ற அவர்கள்,(20) தங்கள் விற்களை முழுமையாக வளைத்துக் கணைகளை ஏவியபடியே ஒருவரையொருவர் தாக்குவதைத் தொடர்ந்தனர். மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவனை அழித்துவிடவும் பெருமுயற்சி செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அந்தப் போரில் மற்றவனைத் தேரற்றவனாகச் செய்ய விரும்பினர்.(21)

பிறகு, அந்தப் பெரும் தேர்வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றை அழைத்தான். எனினும், அந்தப் போரில் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் எதிரியின் அந்த ஆயுதங்கள் அனைத்திற்கும் தன் கணைகளால் எதிர்வினையாற்றினான்.(22) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அண்ட அழிவின் போது, கோள்களுக்கிடையில் நடக்கும் பயங்கர மோதலைப் போலப் பயங்கரமான ஆயுத மோதல் அப்போது அங்கே நிகழ்ந்தது.(23) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களால் ஏவப்பட்ட கணைகள் ஒன்றோடொன்று மோதி திசைப்புள்ளிகள் அனைத்திற்கும், சுற்றிலும் இருந்த உமது துருப்புகளுக்கும்கூட ஒளியையூட்டின.(24) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அண்ட அழிவின் போது வீழும் விண்கற்களால் மறைக்கப்பட்டதைப் போலவே, கணைக்கூட்டங்களால் மறைக்கப்பட்ட ஆகாயம், பயங்கரத் தோற்றத்தை ஏற்றது.(25) ஓ! பாரதரே, கணைகளின் மோதலால் பொறிகளுடனும், சுடர்களுடன் கூடிய தழல்களுடனும் நெருப்பு அங்கே உண்டானது. அந்நெருப்பு இரு படைகளையும் எரிக்கத் தொடங்கியது.(26)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே திரிந்த சித்தர்கள், “போர்கள் அனைத்திலும் இந்தப் போரே முதன்மையானது. (இதற்கு முன் போரிடப்பட்ட) போர்கள் அனைத்தும் இதன் பதினாறின் ஒரு பங்கிற்கும் ஆகாது. இதுபோன்றதொரு போர் இனி நேராது. பிராமணனும், க்ஷத்திரியனுமான இவ்விரு மனிதர்களும் ஞானம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.(29) இருவரும் துணிச்சல்மிக்கவர்களாகவும், கடும் ஆற்றலைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். பீமனின் வலிமை பயங்கரமானதாக இருக்கிறது. அடுத்தவனின் {அஸ்வத்தாமனின்} ஆயுதத்திறன் அற்புதமானதாக இருக்கிறது. இவர்களது சக்தி எவ்வளவு பெரியதாக இருக்கிறது? இவ்விருவரும் கொண்ட திறன் எவ்வளவு அற்புதமானதாக இருக்கிறது?(30) யுகத்தின் முடிவில் அண்டத்தை அழிக்க நிற்கும் இரண்டு யமன்களைப் போலவே இவ்விருவரும் இந்தப் போரில் நிற்கின்றனர். இவர்கள் இருவரும் இரண்டு ருத்திரர்களைப் போலவோ, இரண்டு சூரியர்களைப் போலவோ பிறந்திருக்கின்றனர்.(31) பயங்கர வடிவங்களைக் கொண்ட இந்த மனிதர்களில் புலிகள் இருவரும், இந்தப் போரில் இரு யமன்களைப் போலவே இருக்கின்றனர்” என்ற சித்தர்களில் இத்தகைய வார்த்தைகளே ஒவ்வொரு கணமும் {அங்கே} கேட்கப்பட்டன. மேலும் அங்கே கூடியிருந்த சொர்க்கவாசிகளுக்கு மத்தியில் சிங்க முழக்கம் எழுந்தது.(32)

அந்தப் போரில் அவ்விரு போர் வீரர்களாலும் செய்யப்பட்டவையும், அற்புதமானவையும், நினைத்துப் பார்க்கவும் முடியாதவையுமான சாதனைகளைக் கண்டு, சித்தர்கள் மற்றும் சாரணர்களின் நெருக்கமான கூட்டங்கள் ஆச்சரியத்தால் நிறைந்தன.(33) அவ்விருவரையும் புகழ்ந்த தேவர்களும், சித்தர்களும், பெரும் முனிவர்களும், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரோணர் மகனே {அஸ்வத்தாமா}, நன்று. ஓ! பீமா, நன்று” என்றனர்.(34) அதேவேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் ஒருவருக்கொருவர் காயங்களைச் ஏற்படுத்திய அந்த வீரர்கள் இருவரும், சினத்தால் கண்களை உருட்டியபடியே ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்தனர்.(35) சினத்தால் சிவந்த கண்களுடன் கூடிய அவர்களது உதடுகளும்கூடச் சினத்தால் நடுங்கின. கோபத்தால் தங்கள் பற்களை அரைத்த அவர்கள், தங்கள் உதடுகளையும் கடித்துக் கொண்டனர்.(36)

அந்தப் பெரும் தேர்வீரர்கள் இருவரும், ஆயுதங்களின் பளபளப்பைத் தங்கள் மின்னலாகக் கொண்டு, கணைத்தாரைகளை மழையாகப் பொழியும் மேகங்கள் இரண்டைப் போல அந்தப் போரில் தங்களைக் கணை மாரியால் மறைத்துக் கொண்டனர்.(37) அந்தப் பெரும்போரில் மற்றவரின் கொடிமரத்தையும், சாரதியையும், குதிரைகளையும் துளைத்த அவர்களில் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் தொடர்ந்து தாக்கியபடியே இருந்தனர்.(38) பிறகு, ஓ! ஏகாதிபதி, அந்தப் பயங்கர மோதலில் சினத்தால் நிறைந்த அவர்கள் ஒவ்வொருவரும், மற்றவனைக் கொல்ல விரும்பி, இரு கணைகளை எடுத்துக் கொண்டு விரைவாக அவற்றை எதிரியின் மீது ஏவினர்.(39) தடுக்கப்படமுடியாதவையும், இடியின் சக்தியைக் கொண்டவையுமான அந்தச் சுடர்மிக்கக் கணைகள் இரண்டும், ஓ! மன்னா, தங்கள் தங்கள் படைப்பிரிவுகளின் தலைமையில் நின்று கொண்டிருந்த அவ்விரு வீரர்களையும் வந்தடைந்து {அவர்களைத்} தாக்கின.(40)

அந்தக் கணைகளால் ஆழத்துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்கப் போராளிகள் இருவரில் ஒவ்வொருவரும், மற்றவனின் சக்தியால் {கட்டுண்டு} தங்கள் தங்கள் தேர்களின் தட்டுகளில் மூழ்கினர் {விழுந்தனர்}.(41) துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} நினைவிழந்ததை அறிந்த அவனது சாரதி, ஓ! மன்னா, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனைப் போரில் இருந்து {வெளியே} கொண்டு சென்றான்.(42) அதேபோல, ஓ! மன்னா, மீண்டும் மீண்டும் மயக்கமடைந்தவனும், எதிரிகளை எரிப்பவனுமான பாண்டுவின் மகனையும் {பீமனையும்} அவனது சாரதி போரில் இருந்து {வெளியே} கொண்டு சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(43)

அர்ஜுனன் அஸ்வத்தாமன் மோதல்! – கர்ண பர்வம் பகுதி – 16-சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்; அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல் ..

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சம்சப்தகர்களுடன் அர்ஜுனனுக்கும், பாண்டவர்களுடன் பிற மன்னர்களுக்கும் எவ்வாறு போர் நடந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக.(1) ஓ! சஞ்சயா, அர்ஜுனன் அஸ்வத்தாமனுடனும், பூமியின் பிற தலைவர்கள் பார்த்தர்களுடனும் எவ்வாறு போரிட்டனர் என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாவங்களுக்கும், உடல்களுக்கும், உயிர்களுக்கும் அழிவை உண்டாக்கிய அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதை நான் சொல்லும்போது கேட்பீராக.(3) எதிரிகளைக் கொல்பவனான பார்த்தன் {அர்ஜுனன்}, பெருங்கடலுக்கு ஒப்பான சம்சப்தகப் படைக்குள் ஊடுருவி, பரந்த கடலைக் கலங்கடிக்கும் சூறாவளியைப் போல அதை மிகவும் கலங்கடித்தான்.(4) முழு நிலவின் காந்தியைக் கொண்ட முகங்கள், அழகிய கண்கள், புருவங்கள் மற்றும் பற்களால் அலங்கரிக்கப்பட்ட துணிச்சல்மிக்கப் போர்வீரர்களின் தலைகளைக் கூர் முனைகளைக் கொண்ட அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} அறுத்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, தண்டுகளில் இருந்து கொய்யப்பட்ட தாமரைகளைப் போல விரைவில் அவற்றை {தலைகளைப்} பூமியில் விரவிக் கிடக்கச் செய்தான்.(5) மேலும் அந்தப் போரில் அர்ஜுனன், சுற்றிலும் நன்கு பருத்தவையும், பெரியவையும், பிரம்மாண்டமானவையும், சந்தனக்குழம்பாலும், நறுமணப் பொருட்களாலும் பூசப்பட்டவையும், ஆயுதங்களைப் பிடியில் கொண்டிருந்தவையும், தோலுறைகளால் மறைக்கப்பட்ட விரல்களுடன் கூடியவையும், ஐந்து தலை பாம்புகளைப் போலத் தெரிந்தவையுமான தன் எதிரிகளின் கரங்களைத் தனது கத்தித் தலைக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அறுத்தான்.(6)

மேலும் அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, குதிரைகளையும், சாரதிகளையும், தேரோட்டிகளையும், கொடிகளையும், விற்களையும், கணைகளையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்களையும் தனது அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} மீண்டும் மீண்டும் அறுத்தான்.(7) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் அந்தப் போரில், பல்லாயிரக்கணக்கான கணைகளால் தேர்வீரர்களையும், யானைகளையும், குதிரைகளையும், குதிரைவீரர்களையும் யமனின் வசிப்பிடத்திற்கு மேலும் அனுப்பி வைத்தான்.(8) சினத்தால் நிறைந்த முதன்மையான போர்வீரர்கள் பலர், காளைகளைப் போல முழங்கிக் கொண்டும், பருவகாலத்தில் பசுவுக்கான ஏக்க வெறியுடன் (கூடிய காளைகளைப் போலவே) உரத்த கூச்சல்களுடன் அர்ஜுனனை நோக்கி விரைந்து சென்றனர்.(9) அர்ஜுனன் அவர்களைக் கொல்வதில் ஈடுபட்டிருந்தபோது, மதங்கொண்ட காளைகள் தங்கள் இனத்தில் ஒன்றைத் தங்கள் கொம்புகளால் தாக்குவதைப் போல அவர்கள் அனைவரும் தங்கள் கணைகளால் அவனைத் {அர்ஜுனனைத்} தாக்கினர். அவனுக்கும், அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரானது, மூவுலகையும் வெல்வதற்காகத் தைத்தியர்களுக்கும், வஜ்ரதாரிக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த போரைப் போல மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.(10)

தன் ஆயுதங்களால் தன் எதிரிகளின் ஆயுதங்களை அனைத்துப் பக்கங்களிலும் தடுத்த அர்ஜுனன், எண்ணற்ற கணைகளால் வேகமாகத் துளைத்து அவர்களுடைய உயிர்களை எடுத்தான்.(11) தன் எதிரிகளின் அச்சங்களை அதிகரிப்பவனும், ஜெயன் என்று அழைக்கப்பட்டவனுமான அர்ஜுனன், மேகத்திரள்களை அழிக்கும் காற்றைப் போல, தன்னால் ஏற்கனவே சிதறடிக்கப்பட்ட அச்சுகள், சக்கரங்கள், கம்புகளைக் கொண்டவையும், போர்வீரர்கள், குதிரைகள் மற்றும் சாரதி ஏற்கனவே கொல்லப்பட்டவையும், ஆயுதங்கள் அம்பறாத்தூணிகள் இடம்பெயர்ந்தவையும், கொடிமரங்கள் நொறுங்கியவையும், சேணங்களும், கடிவாளங்களும் பிளக்கப்பட்டவையும், மரக்கூடுகளும் மற்றும் அச்சுகளும் ஏற்கனவே உடைந்தவையுமான தேர்க்கூட்டங்களை நூறு துண்டுகளாக வெட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் நிறைத்தபடி, ஒன்றாகச் சேர்ந்து போரிட்ட ஆயிரக்கணக்கான பெரும் தேர்வீரர்களைப் பகைத்துக் கொண்டு, காண்பதற்குப் பிரமாண்டமான சாதனைகளை அடைந்தான்.(12-14)

சித்தர்கள், தெய்வீக முனிவர்கள் மற்றும் சாரணர்களின் கூட்டங்கள் அனைத்தும் அவனைப் {அர்ஜுனனைப்} பாராட்டின. தெய்வீகப் பேரிகைகள் ஒலித்தன, மேலும் கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனின் தலைகளில் மலர்மாரி பொழிந்தன. அப்போது ஓர் அருவமான குரல்,(15) “கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், சந்திரனின் அழகையும், நெருப்பின் காந்தியையும், காற்றின் பலத்தையும், சூரியனின் பிரகாசத்தையும் எப்போதும் கொண்ட இரு வீரர்கள் ஆவர்.(16) ஒரே தேரில் இருக்கும் அவ்விரு வீரர்களும், பிரம்மனையும், ஈசானனையும் போலவே வெல்லப்பட முடியாதவர்களாவர்” என்றது.(17) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இந்த அற்புதங்களைக் கேட்டுக் கண்ட அஸ்வத்தாமன், அந்தப் போரில் பெரும் கவனத்துடனும், தீர்மானத்துடனும் இரு கிருஷ்ணர்களையும் எதிர்த்து விரைந்தான்.(18)

கணையைப் பற்றியிருந்த கரங்களுடன் கூடிய அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளைக் கொல்லும் தலைகளுடன் கூடிய கணைகளை ஏவிக்கொண்டிருந்த அந்தப் பாண்டவனை {அர்ஜுனனைப்} புகழ்ந்து, அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(19) “ஓ! வீரா, (உன் முன்பாக) வந்து நிற்கும் மதிக்கத்தக்க விருந்தினன் ஒருவனாக என்னை நீ கருதினால், போரின் விருந்தோம்பலை முழு இதயத்துடன் இன்று எனக்குக் கொடுப்பாயாக” என்றான்.(20) இவ்வாறு போரிடும் விருப்பத்துடன் ஆசான் மகனால் {அஸ்வத்தாமனால்} அழைக்கப்பட்ட அர்ஜுனன், தான் உயர்வாக மதிப்பிடப்பட்டதாகக் கருதி, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்},(21) “சம்சப்தகர்கள் என்னால் கொல்லப்பட வேண்டும், ஆனால் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} என்னை மீண்டும் அழைக்கிறார். ஓ! மாதவா {கிருஷ்ணா}, இந்தக் கடமைகளில் எதை நான் முதலில் செய்ய வேண்டும்? நீ முறையெனக் கருதினால், எழுந்து விருந்தோம்பலை அளித்துவிடலாம்” என்றான் {அர்ஜுனன்}.(22)

இப்படிச் சொல்லப்பட்ட கிருஷ்ணன், வேள்விக்கு இந்திரனைக் கொண்டு செல்லும் வாயுவைப் போல, வெற்றியாளனை அறைகூவி அழைக்கும் விதிப்படி அழைக்கப்பட்ட பார்த்தனைத் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அருகில் கொண்டு சென்றான்.(23) ஒன்றிலேயே மனம் நிலைத்திருந்த துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} வணங்கிய கேசவன் {கிருஷ்ணன்}, அவனிடம், “ஓ! அஸ்வத்தாமரே, அமைதியாக இருந்து, ஒரு கணத்தையும் இழக்காமல், தாக்கவும், தாங்கிக் கொள்ளவும் செய்வீராக.(24) பிறரைச் சார்ந்திருப்போர்கள், தங்கள் தலைவர்களுக்குச் செலுத்த வேண்டிய கடமைகளைத் திருப்பிச் செலுத்தும் நேரம் இதோ வந்திருக்கிறது. பிராமணர்களுக்கிடையிலான சச்சரவுகள் நுட்பமானவையாகும். எனினும், க்ஷத்திரியர்களுக்கிடையிலான சச்சரவுகளின் விளைவுகள், வெற்றியாகவும், தோல்வியாகவும் நன்கு உணரப்படுபவையாகும் {இயல்பானவையாகும்}.(25) பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} நீர் வேண்டும் விருந்தோம்பலின் சிறந்த சடங்குகளை அடைவதற்கு, இந்தப் பாண்டுவின் மகனிடம் இப்போது அமைதியாகப் போரிடுவீராக” என்றான்.(26)

வாசுதேவனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவன், “அப்படியே ஆகட்டும்” என்று மறுமொழி கூறி, கேசவனை {கிருஷ்ணனை} அறுபது கணைகளாலும், அர்ஜுனனை மூன்றாலும் துளைத்தான்.(27) அப்போது, சினத்தால் நிறைந்த அர்ஜுனன், மூன்று கணைகளால் அஸ்வத்தாமனின் வில்லை அறுத்தான். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மேலும் உறுதிமிக்க மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(28) கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அதை நாணேற்றிய அவன் {அஸ்வத்தாமன்}, கேசவனை முன்னூறு {300} கணைகளாலும், அர்ஜுனனை ஓராயிரம் {1000} கணைகளாலும் துளைத்தான்.(29) அப்போது அந்தத் துரோணரின் மகன், அந்தப் போரில் அர்ஜுனனை மலைக்கச் செய்து, ஆயிரக்கணக்கான, பத்தாயிரக் கணக்கான, பத்து இலட்சக்கணக்கான கணைகளை மிகக் கவனமாக ஏவினான்.(30) அந்தப் பிரம்ம உச்சரிப்பாளனின் {அஸ்வத்தாமனின்}, அம்பறாத்தூணிகள், வில், வில்லின் நாண்கயிறு, விரல்கள், தோள்கள், கரங்கள், மார்பு, முகம், மூக்கு, கண்கள்,(31) காதுகள், தலை, அங்கங்கள், உடலின் {தோல்} துளைகள், மேனியின் கவசம், தேர், கொடிமரம் ஆகியவற்றில் இருந்து கணைகள் வெளிப்படத் தொடங்கின.(32) அந்த அடர்த்தியான கணைமாரியால் மாதவனையும் {கிருஷ்ணனையும்}, பாண்டுவின் மகனையும் துளைத்த அந்தத் துரோணர் மகன், மகிழ்ச்சியால் நிறைந்து, மேகக்கூட்டங்களின் பரந்த திரளுக்கு ஒப்பான உரத்த முழக்கத்தைச் செய்தான்.(33)

அவனது முழக்கத்தைக் கேட்ட பாண்டுவின் மகன், மங்காப் புகழ் கொண்ட கேசவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ மாதவா {கிருஷ்ணா}, ஆசான் மகன் {அஸ்வத்தாமன்} எனக்குச் செய்யும் பொல்லாங்கைப் பார்.(34) இந்த அடர்த்தியான கணைமாரியால் அவர் நம்மைக் கொல்லவே கருதுகிறார். எனினும், என் பயிற்சியாலும், வலிமையாலும் அவரது நோக்கத்தை இப்போது கலங்கடிக்கப் போகிறேன்” என்றான் {அர்ஜுனன்}.(35) அஸ்வத்தாமனால் ஏவப்பட்ட அந்தக் கணைகள் ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக்கிய அந்த முதன்மையான பாரதக் குலத்தவன் {அர்ஜுனன்}, அடர்த்தியான பனியை அழிக்கும் சூரியனைப் போல அவை அனைத்தையும் அழித்தான்.(36) இதன் பிறகு, அந்தப் பாண்டுவின் மகன், குதிரைகள், சாரதிகள், தேர்கள், யானைகள், கொடிமரங்கள் மற்றும் காலாட்படை வீரர்கள் ஆகியோருடன் கூடிய சம்சப்தகர்களை மீண்டும் துளைத்தான்.(37) அங்கே பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த ஒவ்வொருவரும், கால், அல்லது தேர், அல்லது குதிரை, அல்லது யானை ஆகியவற்றுடன் நின்று கொண்டிருந்த ஒவ்வொருவரும், அர்ஜுனன் கணைகளால் தான் மறைக்கப்பட்டிருப்பதாகக் கருதினர்.(38)

காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையும், சிறகு படைத்தவையும், பல்வேறு வடிங்களிலானவையுமான அந்தக் கணைகள், அந்தப் போரில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} முன்போ, இரண்டு மைல் தொலைவுக்குள்ளோ இருந்த யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களைக் கொன்றன.(39) ஆவலைக் குறைக்கும் மதநீரானது, குமடுகளிலும், பிற அங்கங்களிலும் ஒழுகிக் கொண்டிருந்த யானைகளின் துதிக்கைகள், காட்டில் கோடரியால் வெட்டப்பட்டுக் கீழே விழும் நெடும் மரங்களைப் போல அகன்ற தலைக் கணைகளால் {பல்லங்களால்} வெட்டபட்டு விழுந்தன.(40) குன்றுகளைப்போன்ற அந்தப் பெரும் யானைகள், இந்திரனின் வஜ்ரத்தால் நொறுக்கப்பட்ட மலைகளைப் போலச் சற்றுப் பிறகே தங்கள் சாரதிகளுடன் கீழே விழுந்தன.(41) மாலை வானில் கரையும் நீர்மாளிகைகளை {மேகங்களைப்} போலத் தெரிந்தவையும், பெரும் வேகமும், நல்ல பயிற்சியும் கொண்டிருந்த குதிரைகள் பூட்டப்பட்டிருந்தவையும், நன்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்தவையுமான தேர்களைத் தன் கணைகளால் நுண்ணியப் பகுதிகளாக வெட்டிய அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளின் மீது கணைமாரிகளைப் பொழிவதைத் தொடர்ந்தான். தனஞ்சயன் {அர்ஜுனன்}, எதிரியின் நன்கு அலங்கரிக்கப்பட்ட குதிரைவீரர்களையும், காலாட்படை வீரர்களையும் கொல்வதைத் தொடர்ந்தான்.(42,43) உண்மையில், யுக முடிவில் எழும் சூரியனுக்கு ஒப்பான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, கூரிய கணைகளையே தன் கதிர்களாகக் கொண்டு, எளிதில் வற்ற செய்ய இயலாத சம்சப்தகப் பெருங்கடலை வற்ற செய்தான்.(44)

அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, இடியால் மலையைப் பிளக்கும் வஜ்ரதாரியைப்போலப் பெரும் மலைக்கு ஒப்பாக இருந்த துரோணர் மகனை {அஸ்வத்தாமனைப்} பெரும் வேகம் கொண்டவையும், சூரியனின் காந்தியைக் கொண்டிருந்தவையுமான கணைகளைக் கொண்டு ஒரு கணமும் தாமதிக்காமல் மீண்டும் துளைத்தான்.(45) போரிடும் விருப்பத்துடன் கூடிய அந்த ஆசான் மகன் {அஸ்வத்தாமன்} சினத்தால் நிறைந்து, வேகமாகச் செல்லும் தன் கணைகளால் அர்ஜுனனையும், அவனது குதிரைகளையும், சாரதிகளையும் துளைப்பதற்காக அவனை அணுகினான். எனினும் அர்ஜுனன், அஸ்வத்தாமனால் தன்னை நோக்கி ஏவப்பட்ட கணைகளை வேகமாக வெட்டினான்.(46) பெரும் கோபத்தில் நிறைந்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் வீட்டிற்கு வந்த விருந்தினனுக்கு அனைத்தையும் அளிக்கும் ஓர் ஈகையாளனைப் போல, விரும்பத்தக்க விருந்தினனான அஸ்வத்தாமனுக்கு அம்பறாத்தூணிகளுக்கு மேல் அம்பறாத்தூணிகளாலான கணைகளை அளித்தான்.(47) பிறகு, தகாத விருந்தினர்களைக் கைவிட்டு, தகுந்தவனை நோக்கிச் செல்லும் ஒரு கொடையாளனைப் போல, சம்சப்தகர்களை விட்ட அந்தப் பாண்டுவின் மகன், துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} நோக்கி ஒரு கொடையாளனைப் போல விரைந்தான்[1].(48)

அஸ்வத்தாமனை விரட்டிய அர்ஜுனன்! – கர்ண பர்வம் பகுதி – 17-அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்; அர்ஜுனனால் களத்தைவிட்டு விரட்டப்பட்ட அஸ்வத்தாமன் கர்ணனின் படைக்குள் தஞ்சமடைந்தது; சம்சப்தகர்களை மீண்டும் எதிர்த்துச் சென்ற அர்ஜுனனும், கிருஷ்ணனும்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஆகாயத்தில் ஒரே நட்சத்திரக்கூட்டத்திற்குள் நுழையும் போது சுக்ரனுக்கும், பிருஹஸ்பதிக்கும் இடையில் நடைபெறும் போரைப் போலவே, கோள்களான சுக்ரன் மற்றும் பிருஹஸ்பதியின் காந்திக்கு ஒப்பான அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் அந்தப் போர் நடந்தது.(1) உலகத்தை அச்சுறுத்துபவர்களான அவர்கள், சுடர்மிக்கக் கணைகளையே தங்கள் கதிர்களாகக் கொண்டு ஒருவரையொருவர் பீடித்து, தங்கள் சுற்றுப்பாதையில் இருந்து விலகிய இரு கோள்களைப் போல நின்றனர்.(2) அப்போது அர்ஜுனன், அஸ்வத்தாமனின் புருவ மத்தியைத் தன் கணையொன்றால் ஆழத்துளைத்தான். {நெற்றியில்} அந்தக் கணையுடன் கூடிய துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, மேல்நோக்கிய கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலவே பிரகாசமாகத் தெரிந்தான்.(3) அஸ்வத்தாமனின் நூற்றுக்கணக்கான கணைகளால் ஆழமாகப் பீடிக்கப்பட்ட இரு கிருஷ்ணர்களும் கூட, யுக முடிவில் கதிர்களுடன் கூடிய இரு சூரியன்களைப் போலவே தெரிந்தனர்.(4)

பிறகு கிருஷ்ணனை மயக்கத்தில் கண்ட அர்ஜுனன், அனைத்துப் பக்கங்களிலும் கணைத்தாரைகளை வெளியிடும் ஓர் ஆயுதத்தை ஏவினான். பிறகு அவன் {அர்ஜுனன்}, இடி, அல்லது நெருப்பு, அல்லது மரணக்கோலுக்கு ஒப்பான எண்ணற்ற கணைகளால் துரோணர் மகனைத் தாக்கினான்.(5)

வலிமையும் சக்தியும் கொண்ட அந்தக் கடுஞ்சாதனையாளன் (அஸ்வத்தாமன்), பெரும் வேகம் கொண்டவையும், தாக்கப்பட்டால் காலனையும் வலியை உணரச் செய்பவையும், நன்கு ஏவப்பட்டவையுமான கணைகளால் கேசவன் மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரையும் துளைத்தான்.(6) துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அந்தக் கணைகளைத் தடுத்த அர்ஜுனன், நல்ல சிறகுகளைக் கொண்ட இரு மடங்கு கணைகளால் அவனை மறைத்து, அந்த முதன்மையான வீரனையும் {அஸ்வத்தாமனையும்}, அவனது குதிரைகள், சாரதி மற்றும் கொடிமரத்தையும் மறைத்துச் சம்சப்தகர்களைத் தாக்கத் தொடங்கினான்.(7)

பார்த்தன் {அர்ஜுனன்}, பின்வாங்காதவர்களான தன் எதிரிகளின் விற்கள், கணைகள், அம்பறாத்தூணிகள், வில்லின் நாண்கயிறுகள், கரங்கள், தோள்கள், இறுக்கப்பிடிக்கப்பட்ட ஆயுதங்கள், குடைகள், கொடிமரங்கள், குதிரைகள், தேர் அச்சுகள், ஆடைகள், மலர்மாலைகள், ஆபரணங்கள், கவசங்கள், அழகிய கேடயங்கள் மற்றும் அழகான தலைகள் ஆகியவற்றை நன்கு ஏவப்பட்ட தன் கணைகளால் பெரும் எண்ணிக்கையில் அறுத்தான்.(8,9) பெரும் கவனத்துடன் போரிடும் வீரர்களால் செலுத்தப்பட்டவையும், நன்கு ஆயத்தம் செய்யப்பட்டவையுமான தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியன பார்த்தனால் {அர்ஜுனனால்} ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான கணைகளால் அழிக்கப்பட்டு, அவற்றைச் செலுத்திய வீரர்களுடனேயே கீழே விழுந்தன.(10) அகன்ற தலை {பல்லம்}, பிறை வடிவ {அர்த்தச்சந்திர}, கத்திமுக {க்ஷுரப்ர} கணைகளால் வெட்டப்பட்டவையும், தாமரை, சூரியன், அல்லது முழு நிலவின் அழகுக்கு ஒப்பானவையும், கிரீடங்கள், ஆரங்கள், மகுடங்கள் ஆகியவற்றால் பிரகாசித்தவையுமான மனிதத் தலைகள் இடைவிடாமல் பூமியில் விழுந்து கொண்டிருந்தன.(11)

அப்போது தானவர்களின் செருக்கைத் தணிப்பவனான அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கொல்ல விரும்பிய கலிங்க, வங்க மற்றும் நிஷாத வீரர்கள், தைத்தியர்களின் பெரும் எதிரியுடைய {இந்திரனுடைய} யானையின் {ஐராவதத்தின்} காந்திக்கு ஒப்பானதை {யானையைச்} செலுத்திக் கொண்டு, அவனை {அர்ஜுனனை} எதிர்த்து வேகமாக விரைந்தனர்[1].(12) பார்த்தன்  {அர்ஜுனன்}, அந்த யானைகளின் கவசம், முக்கிய அங்கங்கள், துதிக்கைகள், சாரதிகள், கொடிமரங்கள் மற்றும் கொடிகள் ஆகியவற்றை வெட்டியதால், இடியால் பிளக்கப்பட்ட மலைச் சிகரங்களைப் போல அந்த விலங்குகள் கீழே விழுந்தன.(13) அந்த யானைப்படை பிளக்கப்பட்ட போது, மேகக்கூட்டங்களின் திரள்களால் உதயச் சூரியனைத் தடுக்கும் காற்றைப் போலக் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனான அந்த அர்ஜுனன், புதிதாக உதித்த சூரியனின் காந்தியைக் கொண்ட கணைகளால் தன் ஆசான் மகனை {அஸ்வத்தாமனைத்} தடுத்தான்.(14) தன் கணைகளால் அர்ஜுனன் கணைகளைத் தடுத்த அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அர்ஜுனன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரையும் தன் கணைகளாலேயே மறைத்து, கோடையின் முடிவில் சூரியனையோ, சந்திரனையோ ஆகாயத்தில் மறைக்கும் மேகங்களின் திரளைப் போல உரக்க முழங்கினான்.(15) அந்தக் கணைகளால் ஆழத்துளைத்தக்கப்பட்ட அர்ஜுனன், தன் ஆயுதங்களால், அஸ்வத்தாமனையும், அவனைப் பின்பற்றும் உமது படையினரையும் நோக்கிக் குறிவைத்து, அஸ்வத்தாமனின் கணைகளால் உண்டாக்கப்பட்ட இருளை வேகமாக விலக்கி, நல்ல சிறகுகளைக் கொண்ட கணைகளால் அவர்கள் அனைவரையும் துளைத்தான்.(16)அந்தப் போரில் சவ்யசச்சின் {அர்ஜுனன்} எப்போது தன் கணைகளை எடுத்தான், எப்போது அவற்றைக் குறி பார்த்தான், எப்போது அவற்றை விடுத்தான் என்பதை யாராலும் காணமுடியவில்லை. யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், தேர்வீரர்கள் ஆகியோர், அவனது கணைகளால் தாக்கப்பட்டு உயிரையிழந்து கீழே விழுவது மட்டுமே அங்கே காணப்பட்டது.(17) அப்போது, ஒரு கணத்தையும் இழக்காத துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, பத்து முதன்மையான கணைகளைக் குறிபார்த்து, அவை ஏதோ ஒரே கணையே என்பதைப் போல அவற்றை வேகமாக ஏவினான். பெரும் சக்தியுடன் ஏவப்பட்ட அவற்றில் ஐந்து அர்ஜுனனையும், மற்ற ஐந்து வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தன.(18) அந்தக் கணைகளால் தாக்கபட்டவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும், குபேரனையும், இந்திரனையும் போலக் குருதியில் குளித்தனர். இப்படிப் பீடிக்கப்பட்ட அவ்விரு வீரர்களும், ஆயுதங்களின் அறிவியலில் முற்றான திறன் கொண்ட அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டனர் என்றே மக்கள் அனைவரும் கருதினர்.(19)

அப்போது அந்தத் தசார்ஹர்களின் தலைவன் {கிருஷ்ணன்} அர்ஜுனனிடம், “(இப்படி அஸ்வத்தாமனை மிதமாக விடுவதால்) ஏன் பிழை செய்கிறாய்? இந்தப் போர்வீரனைக் கொல்வாயாக. வேறுபாடின்றி மதிக்கப்பட்டால், சிகிச்சையில்லாமல் தணிக்கப்படாத நோயைப் போல இவர் பெரும் துன்பத்திற்குக் காரணமாவார்” என்றான். மங்கா மகிமை கொண்ட கேசவனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று மறுமொழி கூறியவனும், மறைக்கப்படாத புரிதல் கொண்டவனுமான அர்ஜுனன், துரோணர் மகனைத் தன் கணைகளால் கவனமாகச் சிதைக்கத் தொடங்கினான்.(20) அப்போது சினத்தால் நிறைந்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, காண்டீவத்தில் இருந்து பெரும் சக்தியுடன் ஏவப்பட்டவையும், ஆடுகளின் காதுகளைப் போன்ற தலை கொண்டவையுமான கணைகளால் தன் எதிரியின் {அஸ்வத்தாமனின்}, சந்தனக்குழம்பு பூசப்பட்ட பருத்த கரங்களையும், மார்பையும், தலையையும், ஈடற்ற தொடைகளையும் வேகமாகத் துளைத்தான். பிறகு அஸ்வத்தாமனின் குதிரைகளுடைய கடிவாளங்களை வெட்டிய அர்ஜுனன், அந்தக் குதிரைகளையும் துளைக்கத் தொடங்கியதால், அவை {குதிரைகள்} அஸ்வத்தாமனைக் களத்தைவிட்டுப் பெருந்தொலைவுக்குக் கொண்டு சென்றன.(21)

காற்றின் வேகத்தைக் கொண்ட அந்தக் குதிரைகளால் இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவனும், பார்த்தனின் கணைகளால் ஆழத்துளைக்கப்பட்டவனும், புத்திசாலியுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சிறிது நேரம் சிந்தித்த பின், திரும்பிச் செல்லவும், பார்த்தனோடு {அர்ஜுனனோடு} போரைப் புதுப்பிக்கவும் விரும்பவில்லை.(22) வெற்றியானது எப்போதும் விருஷ்ணிகளின் தலைவனுடனும் {கிருஷ்ணனுடனும்}, தனஞ்சயனுடனும் {அர்ஜுனனுடனும்} இருக்கும் என்பதையறிந்த அந்த முதன்மையான அங்கீரசக் குலத்தவன் {அஸ்வத்தாமன்}, நம்பிக்கை இழந்தவனாக, கணைகளும், ஆயுதங்களும் கிட்டத்தட்டத் தீர்ந்தவனுமாகக் கர்ணனின் படைக்குள் நுழைந்தான்.(23) உண்மையில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தன் குதிரைகளைக் கட்டுப்படுத்திய அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} சற்றே ஆறுதலடைந்து, தேர்கள், குதிரைகள் மற்றும் மனிதர்களால் நிறைந்த அந்தக் கர்ணனின் படைக்குள் நுழைந்தான்.(24) தங்கள் எதிரியான அந்த அஸ்வத்தாமன், மந்திரங்களாலும், மருந்துகளாலும், வழிமுறைகளாலும் உடலில் இருந்து விலக்கப்பட்ட நோயைப் போல, அவனது குதிரைகளால் இவ்வாறு களத்தைவிட்டு விலகிய பிறகு,(25) கேசவனும், அர்ஜுனனும், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான சடசடப்பொலி கொண்டதும், காற்றில் ஆடிய கொடியைக் கொண்டதுமான தங்கள் தேரில் சம்சப்தகர்களை எதிர்த்துச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.(26)

மகதர்களின் தலைவன் தண்டதாரன்! – கர்ண பர்வம் பகுதி – 18-அர்ஜுனனுக்கும் தண்டதாரனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்; தண்டதாரனையும், அவனது தம்பி தண்டனையும் கொன்ற அர்ஜுனன்; அர்ஜுனனைத் துதித்த போர்வீரர்கள்; மீண்டும் சம்சப்தகர்களை நோக்கி விரைந்த அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில், பாண்டவப்படையின் வடபுறத்தில், தண்டதாரனால் கொல்லப்படும் காலாட்படை வீரர்கள், யானைகள், குதிரைகளாலும் மற்றும் தேர்களாலும் அங்கே உரத்த ஆரவாரம் எழுந்தது.(1) கருடன் அல்லது காற்றின் வேகத்தைக் கொண்ட குதிரைகளை நிறுத்தாமலேயே தேரைத் திருப்பிய கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம்,(2) “(எதிரிகளை) நொறுக்கும் யானையுடன் கூடிய மகதர்களின் தலைவன் {தண்டதாரன்} ஆற்றலில் ஒப்பற்றவனாக இருக்கிறான். பயிற்சியிலும், வலிமையிலும், அவன் பகதத்தனுக்குச் சற்றும் குறைவில்லாதவனாவான்.(3) அவனை {தண்டதாரனை} முதலில் கொன்ற பிறகு, சம்சப்தகர்களைக் கொல்வாயாக” என்று சொன்னான். அந்தக் கேசவன் {கிருஷ்ணன்}, தனது சொற்களின் முடிவில், பார்த்தனை {அர்ஜுனனை} தண்டதாரனின் முன்னிலைக்குக் கொண்டு சென்றான்.(4)

அங்குசத்தைக் கையாள்வதில் ஒப்பற்றவனும்[1]கோள்களனைத்தின் மத்தியில் தலையில்லாத கோளான கேதுவைப் போன்றவனுமான அந்த மகதர்களின் தலைவன் {தண்டதாரன்}, மொத்த உலகையும் அழிக்கும் கடும் வால் விண்மீனைப் போல, பகைவர் படையை அழித்துக் கொண்டிருந்தான்.(5) எதிரிகளைக் கொல்வதும், நன்கு ஆயத்தம் செய்யப்பட்டதும், யானையின் முகத்தையும், வடிவையும் கொண்ட ஒரு தானவனைப் போலத் தெரிந்ததும், மேகக்கூட்டங்களின் திரளுக்கு ஒப்பாகப் பிளிறியதுமான யானையைச் செலுத்திய அந்தத் தண்டதாரன், தன் கணைகளால் ஆயிரக்கணக்கான தேர்களையும், குதிரைகளையும், யானைகளையும், மனிதர்களையும் அழித்துக் கொண்டிருந்தான்.(6) தன் பாதங்களைக் கொண்டு தேர்களை நசுக்கிய அந்த யானையும் கூட, பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களையும், அவர்களது குதிரைகள் மற்றும் சாரதிகளையும் பூமியில் நசுக்கியது. அந்த முதன்மையான யானை, தன்னிரு முன்னங்கால்கள் மற்றும் துதிக்கையைப் பயன்படுத்தி யானைகள் பலவற்றைக் கொன்றது. உண்மையில் அவ்விலங்கு மரணச் சக்கரத்தை {காலச்சக்கரத்தைப்} போல நகர்ந்து கொண்டிருந்தது.(7) உருக்கு கவசங்களால் அலங்கரிக்கப்பட்ட மனிதர்களையும், அவர்களது குதிரைகள் மற்றும் காலாட்படைவீரர்களையும் கொன்ற அந்த மகதர்களின் தலைவன் {தண்டதாரன்}, தடித்த நாணல்களைப் படபடக்கும் ஒலியுடன் நொறுக்குவதைப் போலத் தனக்குச் சொந்தமானதும், வலிமையானதுமான அந்த முதன்மையான யானையைக் கொண்டு அவர்களைப் பூமியில் நசுக்கினான்.(8)அப்போது முதன்மையான தேரில் ஏறிவந்த அர்ஜுனன், ஆயிரக்கணக்கான தேர்கள், குதிரைகள், யானைகள் நிறைந்ததும், எண்ணற்ற மிருதங்கங்கள், பேரிகைகள், சங்குகள் ஆகியவற்றின் இசையால் எதிரொலிக்கப்பட்டதும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி, வில்லின் நாண்கயிறினால் உண்டான நாணொலி, உள்ளங்கையொலி ஆகியவற்றின் ஆரவாரத்துடன் கூடியதுமான படைக்கு மத்தியில் இருந்த அந்த யானைகளின் இளவரசனை நோக்கி வேகமாக விரைந்தான்.(9) பிறகு தண்டதாரன், முதன்மையான பன்னிரு கணைகளால் அர்ஜுனனையும், பதினாறால் ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்}, மூன்றால் குதிரைகள் ஒவ்வொன்றையும் துளைத்து, உரக்க முழங்கி, மீண்டும் மீண்டும் சிரித்தான்.(10) அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, பெரும் எண்ணிக்கையிலான அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} தன் எதிரியின் வில்லை அதன் நாண்கயிற்றோடும், அதில் பொருத்தப்பட்ட கணையோடும் அறுத்து, நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அவனது கொடிமரத்தையும், அவனது விலங்கின் வழிகாட்டிகளையும், அவ்விலங்கைப் பாதுகாத்த காலாள்களையும் வெட்டினான். இதனால், அந்தக் கிரிவ்ரஜத் [2] தலைவன் {தண்டதாரன்} சினத்தால் நிறைந்தான்.(11) ஆவலால் கன்னக்கதுப்பு {கபோலம்} பிளந்ததும் {மதநீர் ஒழுகியதும்}, மேகத்திரள்களுக்கு ஒப்பானதும், காற்றின் வேகத்துடன் கூடியதுமான தன் யானையைக் கொண்டு ஜனார்த்தனனை கலங்கடிக்க விரும்பிய தண்டதாரன், பல வேல்களால் தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தாக்கினான்.(12)

அப்போது கிட்டத்தட்ட அதே நேரத்திலேயே அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஒரு யானையின் துதிக்கையைப் போலத் தெரிந்த தன் எதிரியின் இரு கரங்களில் ஒவ்வொன்றையும், முழு நிலவுக்கு ஒப்பான தலையையும் கத்தித் தலை கணைகள் {க்ஷுரப்ரங்கள்} மூன்றைக் கொண்டு வெட்டினான்.(13) தங்கக் கவசத்துடன் கூடிய அந்த யானை, தங்கத்தால் அலங்கரிக்கபட்ட பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் மறைக்கப்பட்டு, இரவில் சுடர்விட்டெரியும் காட்டுத்தீயில், செடிகள் மற்றும் மரங்களுடன் கூடிய மலையொன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(14) வலியால் பீடிக்கப்பட்டு, மேகங்களின் திரளைப் போல முழங்கி, மிகவும் பலவீனமடைந்திருந்த அந்த யானை, பிளிறிக் கொண்டே தள்ளாடிய நடையுடன் திரிந்து, இடியால் பிளக்கப்பட்ட மலைச் சிகரம் ஒன்றைப் போலத் தன் கழுத்தில் இருந்த வழிகாட்டியுடன் கீழே விழுந்தது.(15)

போரில் தன் அண்ணன் வீழ்ந்ததும், தண்டனானவன், இந்திரனின் தம்பியையும் {விஷ்ணுவான கிருஷ்ணனையும்}, தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} கொல்ல விரும்பி, பனி போன்ற வெண்மையானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், இமயச் சிகரத்தைப் போலத் தெரிந்ததுமான தன் யானையில் அவர்களை எதிர்த்துச் சென்றான்.(16) கதிர்களைப் போலப் பிரகாசமானவையும், கூராக்கப்பட்டவையுமான மூன்று வேல்களால் ஜனார்த்தனனைத் {கிருஷ்ணனைத்} தாக்கிய தண்டன், ஐந்தால் அர்ஜுனனையும் தாக்கி உரக்க முழங்கினான். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தண்டனின் இரு கரங்களையும் உரக்க முழங்கிய படியே அறுத்தான்.(17) கத்தித் தலை கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அறுக்கப்பட்டவையும், சந்தனக்குழும்பால் பூசப்பட்டவையும், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், வேல்களைப் பிடித்திருந்தவையுமான அவ்விரு கரங்களும், யானையின் முதுகில் இருந்து விழுந்த அதே வேளையில், மலைச்சிகரத்தில் இருந்து கீழே விழுபவையும், பெரும் அழகுடன் கூடியவையுமான பெரும் பாம்புகள் இரண்டைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(18)

கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (பார்த்தனால் {அர்ஜுனனால்}) பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணையொன்றைக் கொண்டு வெட்டப்பட்ட தண்டனின் தலையும் யானையின் முதுகில் இருந்து கீழே பூமியில் விழுந்தது. குருதியால் நனைந்து கிடந்த அஃது, அஸ்தமலையில் இருந்து மேற்குப் பகுதியை நோக்கி விழுந்த சூரியனைப் போலப் பிரகாசிப்பதாகத் தெரிந்தது.(19) சூரியக் கதிர்களின் பிரகாசத்துடன் கூடிய சிறந்த கணைகள் பலவற்றைக் கொண்டு பார்த்தனால் துளைக்கப்பட்டதும், வெண்முகில்களின் திரளுக்கு ஒப்பானதுமான அந்த எதிரியின் {தண்டனின்} யானை, இடியால் பிளக்கப்பட்ட இமாலயச் சிகரத்தைப் போல, பேரொலியுடன் கீழே விழுந்தது.(20) அப்போது வெற்றியடையவல்லவையும், ஏற்கனவே கொல்லப்பட்ட {யானைகள்} இரண்டிற்கு ஒப்பானவையுமான வேறு பெரும் யானைகள், அந்தப் போரில் வெட்டப்பட்ட (தண்டனுக்கும், தண்டாதரனுக்கும் சொந்தமான) அந்த இரண்டைப் போலவே சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வெட்டப்பட்டன. இதனால் அந்தப் பரந்த எதிரிப்படை பிளந்தது.(21) அடர்த்தியான கூட்டங்களாக இருந்த யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியவையும், மனிதர்களும் ஒருவரோடொருவர் மோதி களத்தில் விழுந்தனர். தள்ளாடிக் கொண்டிருந்த அவை, ஒன்றோடொன்று பயங்கரமாக மோதிக் கொண்டு உயிரற்றுக் கீழே விழுந்தன.(22)

அப்போது புரந்தரனை {இந்திரனைச்} சூழ்ந்து கொள்ளும் தேவர்களைப் போல அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்ட அவனது படைவீரர்கள், “ஓ! வீரா, காலனைக் கண்ட உயிரினங்களைப் போல நாங்கள் அஞ்சிய பகைவன் உன்னால் கொல்லப்பட்டது நற்பேறாலேயே.(23) ஓ! எதிரிகளைக் கொல்பவனே, வலிமைமிக்க எதிரிகளால் ஆழமாகப் பீடிக்கப்பட்ட மக்களை அச்சத்தில் இருந்து நீ பாதுகாக்கவில்லையெனில், எவர்களது மரணத்தில் இப்போது மகிழ்கிறோமோ அந்த நமது எதிரிகளே இந்நேரத்தில் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்” என்றனர்.(24) நண்பர்களும், கூட்டாளிகளும் சொன்ன இவற்றையும், இன்னும் பிற வார்த்தைகளையும் கேட்ட அர்ஜுனன், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், அவரவர் தகுதிகளுக்கேற்ப அம்மனிதர்களை வழிபட்டு, மீண்டும் சம்சப்தகர்களை எதிர்த்துச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}[3].(25)

போர்க்களத்தை வர்ணித்த கிருஷ்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 19-சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்; அவர்களை விரைவாகக் கொல்லும்படி சொன்ன கிருஷ்ணன்; அர்ஜுனனின் வேகத்தை வியந்த கிருஷ்ணன், அவனிடம் போர்க்களத்தை வர்ணித்தது; பாண்டியனால் திருதராஷ்டிரப்படைக் கலங்கடிக்கப்படுவதைக் கண்டு வியந்த கிருஷ்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “புதன் கோளானது அதன் சுற்றுப்பாதையில் சுழன்று செல்வதைப் போலச் சுழன்ற ஜிஷ்ணு {அர்ஜுனன்}, மீண்டும் பெரும் எண்ணிக்கையிலான சம்சப்தகர்களைக் கொன்றான்.(1) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்ட மனிதர்களும், குதிரைகள் மற்றும் யானைகள் ஆகியவையும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} நடுங்கியபடியே திரிந்து நிறம் மங்கிக் கீழே விழுந்து இறந்தன.(2) தன்னுடன் போரில் ஈடுபட்ட பகை வீரர்களின் நுகத்தில் பூட்டப்பட்ட விலங்குகளில் முதன்மையானவை பலவற்றையும், சாரதிகள், கொடிமரங்கள், விற்கள், கணைகள், கரங்கள், அதன் பிடியில் இருந்த ஆயுதங்கள், தோள்கள், தலைகள் ஆகியவற்றையும், அகன்ற தலை கொண்டவை {பல்லங்கள்}, கத்தி போன்ற தலைகளைக் கொண்டவை {க்ஷுரங்கள்}, பிறைவடிவத்திலானவை {அர்த்தச்சந்திரக் கணைகள்}, கன்றின் பல் போன்ற தலை கொண்டவை {வத்சதந்தங்கள்} எனச் சில பல கணைகளால் அந்தப் போரில் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அறுத்தான்.(3,4) பருவ காலத்தில் பசுவுக்காகச் சண்டையிடும் காளைகளைப் போல நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் அர்ஜுனனை நெருங்கி வந்தார்கள்.(5) அப்போது அவர்களுக்கும், அவனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது, மூவுலகங்களை வெற்றி கொள்வதற்காகத் தைத்தியர்களுக்கும், வஜ்ரதாரிக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடைபெற்ற மோதலைப் போல மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.(6)

அப்போது உக்ராயுதனின் [1] மகன், நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான மூன்று கணைகளால் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான். எனினும் பார்த்தன், தன் எதிரியின் உடலிலிருந்து அவனது தலையை அறுத்தான்.(7) பிறகு சினத்தால் நிறைந்த அவ்வீரர்கள், கோடையின் நெருக்கத்தில் மருத்தர்களால் {காற்றுகளால்} தூண்டப்பட்ட மேகங்கள், இமயத்தை மறைப்பதைப் போல, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களால் அர்ஜுனனை அனைத்துப் பக்கங்களிலும் மறைத்தனர்.(8) அனைத்துப் பக்கங்களிலும் இருந்த தன் எதிரிகளைத் தன் ஆயுதங்களால் தடுத்த அர்ஜுனன், நன்கு ஏவப்பட்ட கணைகளால் பெரும் எண்ணிக்கையிலான தன் எதிரிகளைக் கொன்றான்.(9) பிறகு அர்ஜுனன், தன் கணைகளால், தேர்கள் பலவற்றின் திரிவேணுக்கள், குதிரைகள் ஆகியவற்றையும் பார்ஷினி சாரதிகளையும் வெட்டி, {அ தேர்களில்} பலவற்றின் ஆயுதங்களையும், அம்பறாத்தூணிகளையும் புரட்டி, அவற்றில் பெரும்பாலானவற்றின் சக்கரங்கள், கொடிமரங்கள் ஆகியவற்றை இழக்கச் செய்து, பலவற்றின் நாண்கயிறுகள், கடிவாளங்கள், அச்சுகளைப் பிளந்து, பிறவற்றின் கீழ்த்தட்டுகளையும், நுகத்தடிகளையும் அழித்து, பலவற்றின் உபகரணங்கள் அனைத்தையும் அதனதன் இடங்களில் இருந்து விழ வைக்கவும் செய்தான்.(10,11)அர்ஜுனனால் இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் அடித்து நொறுக்கப்பட்ட அந்தத் தேர்கள், நெருப்பு, காற்று மற்றும் மழையால் அழிக்கப்பட்ட செல்வந்தர்களின் ஆடம்பர மாளிகைகளைப் போலத் தெரிந்தன.(12) மூர்க்கத்தில் இடிக்கு ஒப்பான கணைகளால், தங்கள் முக்கிய அங்கங்கள் பிளக்கப்பட்ட யானைகள், மின்னலின் வெடிப்புகளால் மலைமுகடுகளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாளிகைகளைப் போலக் கீழே விழுந்தன.(13) பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள், அர்ஜுனனால் தாக்கப்பட்டுத் தங்கள் பலத்தையெல்லாம் இழந்து, குருதியில் குளித்துத் தங்கள் நாக்குகளும், உள்ளுறுப்புகளும் வெளியே பிதுங்கத் தங்கள் சாரதிகளுடன் பூமியில் விழுந்து பயங்கரமாகக் காட்சியளித்தன.(14) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} கணைகளால் துளைக்கப்பட்ட மனிதர்களும், குதிரைகள் மற்றும் யானைகளும் தள்ளாடியபடித் திரிந்து, கீழே விழுந்து வலியால் கதறி நிறம் மங்கியவைகளாகத் தெரிந்தன.(15) தானவர்களைத் தாக்கும் மகேந்திரனை {இந்திரனைப்} போலப் பார்த்தன், கல்லில் கூராக்கப்பட்டவையும், இடிக்கு ஒப்பானவையும், நஞ்சு போன்ற பயங்கரமானவையுமான கணைகளால் பெரும் எண்ணிக்கையிலான தன் எதிரிகளைத் தாக்கினான்.(16)

விலையுயர்ந்த கவசங்களைப் பூண்டவர்களும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைத் தரித்திருந்தவர்களுமான துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், பார்த்தனால் கொல்லப்பட்டுத் தங்கள் தேர்கள் மற்றும் கொடிமரங்களுடன் களத்தில் கிடந்தனர்.(17) உயர்ந்த குடியில் பிறந்தவர்களும், பெரும் அறிவைக் கொண்டவர்களும், அறச் செயல்களைச் செய்தவர்களுமான மனிதர்கள், வெல்லப்பட்டு (உயிரை இழந்த) அவர்களது உடல்கள் பூமியில் கிடந்தாலும், தங்கள் மகத்தான செயல்களின் விளைவாக அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றனர்.(18) பிறகு, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உமது படையின் தலைவர்கள், சினத்தால் நிறைந்து, தங்களைப் பின்தொடர்பவர்களின் துணையுடன் தேர்வீரர்களில் முதன்மையான அந்த அர்ஜுனனை எதிர்த்து விரைந்தனர்.(19) தங்கள் தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றில் சென்ற போர்வீரர்களும், காலாட்படை வீரர்களும், (அர்ஜுனனைக்) கொல்ல விரும்பிய அனைவரும், பல்வேறு ஆயுதங்களைப் பெரும் வேகத்துடன் ஏவியபடியே அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தனர்.(20) பிறகு, அந்த அர்ஜுனக் காற்றானது, மேகக்கூட்டங்களின் திரளைப் போன்ற போர்வீரர்களால் பொழியப்பட்ட அந்த அடர்த்தியான கணைமாரியைக் கூரிய கணைகளால் அழித்தது.(22)

அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்}, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ!பாவமற்றவனே, ஏன் நீ இவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கிறாய்? சம்சப்தகர்களை விரைவாகக் கலங்கடித்து, கர்ணனின் படுகொலைக்காக விரைவாயாக” என்றான்.(23) “அப்படியே ஆகட்டும்” என்று கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன், எஞ்சிய சம்சப்தகர்களைத் தன் ஆயுதங்களால் பலமாகத் தாக்கி, தைத்தியர்களை அழிக்கும் இந்திரனைப் போல அவர்களை அழிக்கத் தொடங்கினான்.(24) அந்த நேரத்தில் நெருக்கத்தில் இருந்து கவனித்தும் கூட, அர்ஜுனன் எப்போது தன் கணைகளை வெளியே எடுத்தான், எப்போது அவற்றைக் குறிபார்த்தான், எப்போது அவற்றை வேகமாக விடுத்தான் என்பதை மனிதர்களால் குறிப்பிட முடியவில்லை.(25) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அதைக் கோவிந்தனேகூட ஆச்சரியமாகக் கருதினான். தடாகத்தைப் பிளந்து செல்லும் அன்னங்களைப் போல, அன்னங்களின் வெண்மையையும், வேகத்தையும் கொண்ட அர்ஜுனனின் கணைகள் பகைவரின் படைக்குள் ஊடுருவின.(26)

அப்போது கோவிந்தன் {கிருஷ்ணன்}, போர்க்களத்தில் நடக்கும் அந்தப் பேரழிவைக் கண்டு சவ்யசச்சினிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(27) “ஓ! பார்த்தா, பாரதர்களுக்கும், பூமியின் பிற மன்னர்களுக்கும் நேரும் இந்தப் பயங்கரமான பேரழிவு துரியோதனனுக்காகவே இங்கே நடைபெறுகிறது.(28) ஓ! பரதனின் மகனே {அர்ஜுனனே}, வலிமைமிக்க வில்லாளிகள் பலருடையவையும், தங்கப் பின்புறம் கொண்டவையுமான இந்த விற்களையும், அவர்களது உடல்களில் இருந்து தளர்ந்து விழுந்த இந்த இடைக்கச்சைகளையும், அம்பறாத்தூணிகளையும் பார்.(29) தங்கச் சிறகுகளைக் கொண்ட இந்த நேரான கணைகளையும், தங்கள் சட்டைகளில் இருந்து விடுபட்ட பாம்புகளைப் போலத் தெரிபவையும், எண்ணெயில் நனைக்கபட்டவையுமான இந்த நீண்ட கணைகளையும் {நாராசங்களையும்} பார்.(30) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த அழகிய வேல்கள் சிதறிக் கிடப்பதையும், ஓ! பாரதா {அர்ஜுனா}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், போர்வீரர்களின் உடல்களில் இருந்து விழுந்தவையுமான இந்தக் கவசங்களையும் பார்.(31) தங்கத்தால் பளபளபாக்கப்பட்ட இந்தச் சூலங்களையும், அதே உலோகத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த ஈட்டிகளையும், தங்க இழைகளாலும், சணல் நாராலும் {பொற்பட்டங்களால்} கட்டப்பட்ட கனத்த கதாயுதங்களையும் பார்.(32)

பிரகாசமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த வாள்களையும், அஃதாலேயே அலங்கரிக்கப்பட்ட இந்தக் கோடரிகளையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடிகளைக் கொண்ட இந்தப் போர்க்கோடரிகளையும் பார்.(33) சுற்றிலும் சிதறிக்கிடப்பவையான இந்த முள்பதித்த தண்டங்களையும் {பரிகங்களையும்}, இந்தக் குறுங்கணைகளையும் {பிண்டிபாலங்களையும்}, இந்தப் புசுண்டிகளையும், இந்தக் கணபங்களையும், இரும்பாலான இந்தக் குந்தங்களையும், இந்தக் கனத்த முசலங்களையும் {உலக்கைகளையும்} பார்[2].(34) வெற்றியை வேண்டுபவர்களும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருப்பவர்களுமான இந்தப் போர்வீரர்கள், இறந்து விட்டாலும், இன்னும் உயிருடன் கூடியவர்களாகவே தெரிவதைப் பார்.(35) கதாயுதங்களால் நொறுக்கப்பட்ட அங்கங்களுடனும், முசலங்களால் தலைகள் பிளக்கப்பட்டும், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களால் நொறுக்கிக் கிழிக்கப்பட்டும் கிடக்கும் இந்த ஆயிரக்கணக்கான போர்வீரர்களைப் பார்.(36)ஓ! எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனனே}, கணைகள், ஈட்டிகள், வாள்கள், வேல்கள், ரிஷ்டிகள், கோடரிகள், சூலங்கள், நக்கரங்கள்[3] மற்றும் தடிகளால் பயங்கரமாகச் சிதைக்கப்பட்டு, குருதியோடையில் குளித்து உயிரையிழந்த மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களால் இந்தப் போர்களம் விரவிக் கிடக்கிறது.(37,38) ஓ! பாரதா, சந்தனக்குழும்பு பூசி அங்கதங்களால் அலங்கரிக்கபட்டு, மங்கலக் குறிகளால் அருளப்பட்டு, தோலுறைகளில் மறைக்கப்பட்டு, கேயூரங்களால் அலங்கரிக்கப்பட்ட தோள்களால் விரவிக் கிடக்கும் இந்தப் பூமி பிரகாசமாகத் தெரிகிறது.(39) பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட வீரர்களின் உறைகளில் மறைக்கப்பட்ட விரல்களுடன் கூடியவையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான கரங்களும், துண்டிக்கப்பட்ட தோள்களும், யானைகளின் துதிக்கைகளைப் போலத் தெரியும் அறுக்கப்பட்ட தொடைகளும், காதுகுண்டலங்கள் மற்றும் ரத்தினங்களைக் கொண்ட தலைப்பாகைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட தலைகளும் (பூமியை மிகவும் அழகாக்கியபடி) விரவிக் கிடக்கின்றன.(40)

தங்க மணிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், பல்வேறு வழிகளில் நொறுக்கப்பட்டவையுமான அந்த அழகான தேர்களைப் பார். குருதியில் குளித்த கணக்கற்றக் குதிரைகளையும், அந்தத் தேர்த்தட்டுகளையும், நீண்ட அம்பறாத்தூணிகளையும், பல்வேறு வகைகளிலான கொடிமரங்களையும், கொடிகளையும்,(41) போராளிகளின் அந்தப் பெரும் சங்குகளையும், முற்றிலும் வெண்மையான அந்தச் சாமரங்களையும், வெளியே பிதுங்கிய நாவுகளுடன் மலைகளைப் போலக் களத்தில் கிடக்கும் அந்த யானைகளையும்,(42) அந்த அழகிய வெற்றிக் கொடிகளையும், கொல்லப்பட்ட அந்த யானைவீரர்களையும், அந்தப் பெரும் விலங்குகளின் முதுகில் ஒரே துண்டாக விரிக்கப்படும் அந்த விலையுயர்ந்த கம்பளங்களையும்,(43) வைடூரியங்கள் பதித்த கைப்பிடிகளுடன் பூமியில் விழுந்து கிடக்கும் அந்த அங்குசங்களையும், குதிரைகளின் அந்தத் தங்கமயமான நுகங்களையும், அவற்றின் மார்புக்கான வைரங்கள் பதித்த கவசங்களையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, குதிரைவீரர்களால் சுமக்கப்படும் கொடிமரங்களின் நுனியில் கட்டப்பட்ட அந்த விலையுயர்ந்த துணிகளையும்,(45) குதிரைகளின் முதுகில் விரிக்கத் தங்கத்தால் இழைக்கப்பட்டுத் தரையில் விழுந்து கிடக்கும் பலவண்ணங்களிலான அந்தக் கம்பளங்களையும், கூடுகளையும், ரங்குத் தோல்களையும்,(46) மன்னர்களின் தலைப்பாகைகளை அலங்கரிக்கும் அந்தப் பெரிய வைரக் கற்களையும், தங்கத்தாலான அந்த அழகிய ஆரங்களையும், நிலைகளில் இருந்து புரண்ட அந்தக் குடைகளையும், அந்தச் சாமரங்களையும், விசிறிகளையும் பார்.(47)

காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், சந்திரன் அல்லது விண்மீன்களின் பிரகாசத்தைக் கொண்டவையும், நன்கு வெட்டப்பட்ட தாடிகளால் அழகூட்டப்பட்டவையும், முழு நிலவைப் போலத் தெரிபவையுமான முகங்களால் விரவிக் கிடக்கும் இந்தப் பூமியைப் பார்.(48) அல்லி மற்றும் தாமரை மலர்களைப் போலத் தெரியும் அந்த முகங்களால் விரவிக் கிடக்கும் இந்தப் பூமியானது, அல்லி மற்றும் தாமரை மலர்களின் அடர்த்தியான கூட்டத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தடாகத்திற்கு ஒப்பாகத் தெரிகிறது.(49) பிரகாசமான நிலவின் ஒளியைக் கொண்டதும், விரிந்து கிடக்கும் விண்மீன் கூட்டங்களின் நட்சத்திரவொளிகளால் ஒளிரும் கூதிர்காலத்து ஆகாயத்தைப் போலத் தெரிவதுமான இந்தப் பூமியைப் பார்.(50) ஓ! அர்ஜுனா, இன்றைய பெரும்போரில் உன்னால் அடையப்பட்ட இந்தச் சாதனைகள் உண்மையில் உனக்கே தகும், அல்லது சொர்க்கத்திலிருக்கும் தேவர்களின் தலைவனுக்கே {இந்திரனுக்கே} தகும்” என்றான் {கிருஷ்ணன்}.(51)

இப்படியே கிருஷ்ணன், அர்ஜுனனுக்குப் போர்க்களத்தைக் காட்டினான். (களத்தில் இருந்து தங்கள் முகாமிற்குத் திரும்புகையில்) அவர்கள் துரியோதனனின் படையில் இருந்து பேரொலியைக் கேட்டனர்.(52) உண்மையில், அந்த ஆரவாரம், சங்குகளின் முழக்கங்களாலும், துந்துபிகள், பேரிகைகள், படகங்கள், தேர்ச்சக்கரங்களில் சடசடப்பொலிகள், குதிரைகளின் கனைப்பொலிகள், யானைகளின் பிளிறல்கள் மற்றும் ஆயுதங்களில் கடும் மோதல்களால் ஆனதாக இருந்தது.(53) காற்றின் வேகத்தைக் கொண்ட தன் குதிரைகளின் துணையுடன் அந்தப் படைக்குள் ஊடுருவிய கிருஷ்ணன், பாண்டியனால் உமது படைக் கலங்கடிக்கப்படுவதைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தான்.(54) உயிர்வாழும் காலம் தீர்ந்துவிட்ட உயிரினங்களைக் கொல்லும் யமனைப் போலவே, கணைகள் மற்றும் ஆயுதங்களில் திறம்பெற்ற போர்வீரர்களில் முதன்மையானவனான அந்தப் பாண்டியன், பல்வேறு வகைகளிலான கணைகளால் பகைவர்க்கூட்டத்தை அழித்துக் கொண்டிருந்தான்.(55) யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் உடல்களைக் கூரிய கணைகளால் துளைத்தவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான அவன் {பாண்டியன்}, அவர்களை வீழ்த்தி, அவர்களை உயிரை இழக்கச் செய்தான். பகைவர்களில் முதன்மையான பலரால் தன் மீது வீசப்பட்ட பல்வேறு ஆயுதங்களைத் தன் கணைகளால் வெட்டிய அந்தப் பாண்டியன், தானவர்களை அழிக்கும் சக்ரனை {இந்திரனைப்} போலத் தன் எதிரிகளைக் கொன்றான்” {என்றான் சஞ்சயன்}.(57)

ஒப்பற்றவனான மலயத்வஜப் பாண்டியன்! – கர்ண பர்வம் பகுதி – 20-மலயத்வஜப் பாண்டியனின் பெருமையைக் கேட்ட திருதராஷ்டிரனும் அஃதை உரைத்த சஞ்சயனும்; தனக்கு இணையாக எவரையும் கருதாத பாண்டியன்; கர்ணனின் படையைக் கலங்கடித்தது; பாண்டியனின் ஆற்றலைக் கண்டு வியந்து, அவனைப் பாராட்டி, அவனைப் போருக்கு அழைத்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனின் நாண்கயிற்றை அறுத்து, அவனது குதிரைகளையும், பாதுகாவலர்கள் இருவரையும் கொன்ற பாண்டியன் மலயத்வஜன்; பாண்டியன் மலயத்வஜனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்று, அவனது தேரைச் சுக்கநூறாக நொறுக்கிய அஸ்வத்தாமன்; தன்னைத் தேடி வந்த யானையில் ஏறிக் கொண்ட மலயத்வஜப் பாண்டியன்; பாண்டியனின் கரங்களையும், சிரத்தையும் அறுத்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனை வழிபட்ட துரியோதனன்.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, உலகம் பரந்த புகழைக் கொண்ட பாண்டியனின் பெயரை ஏற்கனவே நீ எனக்குச் சொன்னாய். ஆனால், போரில் அவனது சாதனைகள் உன்னால் உரைக்கப்படவே இல்லை.(1) அந்தப் பெரும் வீரனின் ஆற்றல், ஊக்கம், சக்தி, வலிமையின் அளவு மற்றும் செருக்கை இன்று எனக்கு விபரமாகச் சொல்வாயாக” என்று கேட்டான்.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஆயுத அறிவியலின் முழு அறிவைக் கொண்ட தலைவர்களான பீஷ்மர், துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கர்ணன், அர்ஜுனன், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆகியோர் உம்மால் தேர்வீரர்களில் முதன்மையானவர்களாகக் கருதப்படுகிறார்கள். எனினும், இந்தத் தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவருக்கும் சக்தியில் மேம்பட்டவனாக, அந்தப் பாண்டியன் தன்னையே கருதினான் என்பதை அறிவீராக. உண்மையில் அவன், மன்னர்களில் எவரையும் தனக்கு நிகராகக் கருதியதே இல்லை.(3,4) கர்ணன் மற்றும் பீஷ்மரையும் அவன் தனக்கு இணையாக ஒருபோதும் ஏற்றதில்லை. வாசுதேவன் {கிருஷ்ணன்}, அல்லது அர்ஜுனனுக்கு எவ்விதத்திலும் குறைந்தவனாகத் தன் இதயத்தால் ஒருபோதும் அவன் ஏற்றதுமில்லை.(5) மன்னர்களில் முதன்மையானவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தப் பாண்டியன் இவ்வாறே இருந்தான். அந்தகனைப் போலச் சினத்தால் நிறைந்த அந்தப் பாண்டியன், அந்நேரத்தில் கர்ணனின் படையைக் கொன்று கொண்டிருந்தான்.(6)

தேர்கள், குதிரைகள் ஆகியவற்றால் பெருகியிருந்ததும், காலாட்படைவீரர்களில் முதன்மையானோர் நிறைந்ததுமான அந்தப் படையானது, பாண்டியனால் தாக்கப்பட்டு, குயவனின் சக்கரத்தைப் போலச் சுழலத் தொடங்கியது.(7) மேகக்கூட்டங்களின் திரளை விலக்கும் காற்றைப் போல அந்தப் பாண்டியன், தன்னால் நன்கு ஏவப்பட்ட கணைகளைக் கொண்டு, குதிரைகளையும், சாரதிகளையும், கொடிமரங்களையும், தேர்களையும் அழித்து, அதன் ஆயுதங்களையும், குதிரைகளையும் விழச் செய்து, அந்தப் படையைக் கலைக்கத் தொடங்கினான்.(8) மலைகளைப் பிளப்பவன் {இந்திரன்} தன் வஜ்ரத்தால் மலைகளைத் தாக்கி வீழ்த்துவதைப் போலவே பாண்டியனும், கொடிமரங்கள், கொடிகள், ஆயுதங்கள் ஆகியவற்றை வெட்டி, அவற்றைத் தரித்திருந்த யானைகளை அதன் சாரதிகளோடும், அவ்விலங்கைப் பாதுகாத்த காலாட்படை வீரர்களோடும் வீழ்த்தினான்.(9) மேலும் அவன், குதிரைகளையும், ஈட்டிகள், வேல்கள் மற்றும் அம்பறாத்தூணிகளுடன் கூடிய குதிரைவீரர்களையும் வெட்டி வீழ்த்தினான். பெரும் துணிவைக் கொண்டவர்களும், போரில் தளராதவர்களும், பிடிவாதம் கொண்டவர்களுமான புளிந்தர்கள், கஸர்கள், பாஹ்லீகர்கள், நிஷாதர்கள், அந்தகர்கள், தங்கணர்கள், தெற்கத்தியர்கள், போஜர்கள் ஆகியோர் அனைவரையும் தன் கணைகளால் சிதைத்த பாண்டியன், அவர்களது ஆயுதங்களையும், கவசங்களையும் இழக்கச் செய்து, அவர்களது உயிரையும் இழக்கச் செய்தான்.(10,11) போரில் நான்கு வகைச் சக்திகளையும் கொண்ட அந்தப் படையைத் தன் கணைகளால் அழித்துக் கொண்டிருந்த பாண்டியனைக் கண்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அந்த அச்சமற்ற போர்வீரனை நோக்கி அச்சமில்லாமல் சென்றான்.(12)

அப்போது புன்னகையுடன் கூடியவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் தேரில் நர்த்தனமாடிக்கொண்டிருப்பவனைப் போலத் தெரிந்த அந்தப் போர்வீரனிடம் {பாண்டியனிடம்} அச்சமற்ற வகையில் இனிமையாகப் பேசியழைத்து அவனிடம்,(13) “ஓ! மன்னா {பாண்டிய மன்னா}, ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடையவனே, உன் பிறவி உன்னதமானதாகவும், கல்வி பெரியதாகவும் இருக்கிறது. கொண்டாடப்படும் வலிமையையும், ஆற்றலையும் கொண்ட நீ இந்திரனுக்கே ஒப்பானவனாக இருக்கிறாய்.(14) பருத்த உன்னிரு கரங்களில் உன்னால் பிடிக்கப்பட்டிருப்பதும், உன் பிடியில் இணைக்கப்பட்ட பெரிய நாண்கயிற்றைக் கொண்டதுமான அந்த வில்லை வளைத்து, வேகமான கணைகளாலான அடர்த்தியான மழையை உன் எதிரிகள் மீது பொழியும்போது, மேகக்கூட்டங்களின் திரளைப் போல நீ அழகாகத் தெரிகிறாய். போரில் என்னைத் தவிர உனக்கு நிகரான வேறு எவரையும் நான் காணவில்லை.(15,16) பயங்கர வலிமையைக் கொண்ட அச்சமற்ற சிங்கமானது, காட்டில் மான் கூட்டங்களை நொறுக்குவதைப் போல, எண்ணற்ற தேர்களையும், யானைகளையும், காலாட்படை வீரர்களையும், குதிரைகளையும் தனியனாகவே நீ நொறுக்குகிறாய்.(17) ஆகாயத்தையும், பூமியையும் உன் தேர்ச்சக்கரங்களின் உரத்த சடசடப்பொலியால் எதிரொலிக்கச் செய்யும் நீ, உரத்த முழக்கங்களைச் செய்து பயிரை அழிக்கும் கூதிர்கால மேகத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிகிறாய்.(18) உன் அம்பறாத்தூணியை வெளியே எடுத்து, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான உன் கூரிய கணைகளை ஏவி, முக்கண் தேவனுடன் போரிடும் (அசுரன்) அந்தகனைப் போல என்னோடு மட்டுமே நீ போரிடுவாயாக” என்றான் {அஸ்வத்தாமன்}.(19)

இப்படிச் சொல்லப்பட்ட பாண்டியன், “அப்படியே ஆகட்டும்” என்றான். “தாக்குவாயாக” என்று அவனிடம் சொன்ன துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஆவேசத்துடன் அவனைத் தாக்கினான். பதிலுக்கு மலயத்வஜன் {மலையத்வஜன்}[1], முள்பதித்த ஒரு கணையால் {கர்ணியால்} துரோணர் மகனைத் துளைத்தான்.(20) அப்போது ஆசான்களில் சிறந்த அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சிரித்துக் கொண்டே, முக்கிய அங்கங்களை ஊடுருவவல்லவையும், நெருப்பின் தழல்களுக்கு ஒப்பானவையுமான சில கடுங்கணைகளால் அந்தப் பாண்டியனைத் தாக்கினான்.(21) பிறகு அஸ்வத்தாமன், கூர்முனை கொண்டவையும், முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்லவையுமான பிற பெரிய கணைகள் சிலவற்றை, வேறுபட்ட பத்து வகை நகர்வுகளுடன்[2] செல்லுமாறு தன் எதிரியின் மீது மீண்டும் ஏவினான்.(22) எனினும் பாண்டியன், தன் எதிரியின் அந்தக் கணைகள் அனைத்தையும் ஒன்பது கணைகளால் வெட்டினான். மேலும் நான்கு கணைகளால் தன் எதிரியின் நான்கு குதிரைகளையும் அவன் பீடித்ததால், அவை விரைவாக இறந்தன.(23) பிறகு, தன் கூரிய கணைகளால் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கணைகளை வெட்டிய பாண்டியன், சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதும், நீட்டி வளைக்கப்பட்டதுமான அஸ்வத்தாமனுடைய வில்லின் நாண் கயிற்றையும் அறுத்தான்.(24)

அப்போது, எதிரிகளைக் கொல்பவனான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, நாண்பூட்டாத தன் வில்லில் நாணைப்பூட்டிய அதே வேளையில், தன் தேரில் வேறு சிறந்த குதிரைகளைத் தன் ஆட்கள் பூட்டிவிட்டார்களா என்பதையும் பார்த்துக் கொண்டு,(25) (தன் எதிரியின் மீது) ஆயிரக்கணக்கான கணைகளை ஏவினான். இதனால், தன் கணைகளைக் கொண்டு அந்த மறுபிறப்பாளன் {பிராமணன்}, மொத்த ஆகாயத்தையும் திசைகளின் பத்து புள்ளிகளையும் நிறைத்தான்.(26) கணை ஏவுவதில் ஈடுபட்டுள்ள உயர்ஆன்ம துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} அந்தக் கணைகள் உண்மையில் வற்றாதவை என்பதை அறிந்திருந்தாலும், மனிதர்களில் காளையான அந்தப் பாண்டியன் அவை அனைத்தையும் துண்டுகளாக வெட்டினான்.(27) அந்த அஸ்வத்தாமனின் எதிராளி, அவனால் {அஸ்வத்தாமனால்} ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் கவனமாக வெட்டி, அம்மோதலில் பின்னவனின் {அஸ்வத்தாமனின்} தேர்ச்சக்கரங்களுடைய பாதுகாவலர்கள் இருவரைத் தன் கூரிய கணைகளால் கொன்றான்.(28)

தன் எதிரியால் வெளிக்காட்டப்படும் கரநளினத்தைக் கண்ட துரோணர் மகன், தன் வில்லை வட்டமாக வளைத்து, மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்திரளைப் போலத் தன் கணைகளை ஏவத் தொடங்கினான்.(29) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஒரு நாளின் எட்டுப் பாகத்தில் ஒன்றின் அளவிலான கால இடைவெளிக்குள் {ஏழரை நாழிகை = 2 முகூர்த்தம் = 1 சாமம் = 3 மணிநேர காலத்திற்குள்}[3], அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஒவ்வொன்றிலும் எட்டு இளங்காளைகள் பூட்டப்பட்டு இழுக்கப்படும் எட்டு வண்டிகளால் சுமக்கப்படும் அளவிற்குக் கணைகள் பலவற்றை ஏவினான்.(30) அந்நேரத்தில் சினத்தில் நிறைந்த அந்தகனைப் போலவோ, அந்தகனுக்கே அந்தகனைப் போலவோ தெரிந்த அஸ்வத்தாமனைக் கண்ட மனிதர்களில் கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் உணர்வுகளை இழந்தனர்.(31) மலைகளுடனும், மரங்களுடனும் கூடிய பூமியைக் கோடையின் முடிவில் மழைத்தாரைகளால் நனைக்கும் மேகத் திரளைப் போல, அந்த ஆசான் மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிப்படையின் மீது தன் கணைமாரியைப் பொழிந்தான்.(32)

அஸ்வத்தாம மேகத்தால் ஏவப்பட்ட அந்தத் தாங்கிக்கொள்ளமுடியாத கணைமாரியை வாயவ்ய ஆயுதத்தால் கலங்கடித்த அந்தப் பாண்டிய காற்று, மகிழ்ச்சியால் நிறைந்து உரத்த முழக்கங்களைச் செய்தது.(33) அப்போது துரோணர் மகன், முழங்கிக் கொண்டிருந்த பாண்டியனுடையதும், மலய மலை பொறிக்கப்பட்டதும், சந்தனக் குழம்பாலும், பிற நறுமணப்பொருட்களாலும் பூசப்பட்டதுமான கொடிமரத்தை அறுத்து, பின்னவனின் நான்கு குதிரைகளையும் கொன்றான்.(34) பிறகு ஒற்றைக்கணையால் தன் எதிரியின் சாரதியைக் கொன்ற அஸ்வத்தாமன், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான நாணொலி கொண்ட அந்தப் போர்வீரனின் {மலயத்வஜனின்} வில்லைப் பிறைவடிவக் கணையொன்றால் வெட்டி, தன் எதிரியின் தேரையும் நுண்ணியத் துண்டுகளாகப் பொடியாக்கினான்.(35) தன் ஆயுதங்களால் எதிரியின் ஆயுதங்களைத் தடுத்து, அவனது ஆயுதங்கள் அனைத்தையும் வெட்டிய துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் எதிரிக்குத் தீங்கால் மகுடம் சூட்ட ஒரு வாய்ப்பை அடைந்தாலும் கூட, மேலும் சிறிது நேரம் அவனோடு போரிடும் விருப்பத்தால் அவனைக் கொல்லாதிருந்தான்.(36)

அதே வேளையில் கர்ணன், பாண்டவர்களின் பெரிய யானைப் படையை எதிர்த்து விரைந்து, அதை முறியடித்து அழிக்கத் தொடங்கினான்.(37) தேர்வீரர்களை அவர்களது தேர்களை இழக்கச் செய்த அவன் {கர்ணன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, நேரான எண்ணற்ற கணைகளால், யானைகளையும், குதிரைகளையும், மனிதப் போர்வீரர்களையும் தாக்கினான்.(38) வலிமைமிக்க வில்லாளியான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளைக் கொல்பவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான பாண்டியனைத் தேரற்றவனாகச் செய்திருந்தாலும், போரிடும் விருப்பத்தில் அவனைக் கொல்லாதிருந்தான்.(39) அந்த நேரத்தில், பெரும் தந்தங்களுடன் கூடியதும், போர் உபகரணங்கள் அனைத்தையும் கொண்டு ஆயத்தம் செய்யப்பட்டதும், வேகமாக ஓடுவதும், பெரும் வலிமையைக் கொண்டதும், அஸ்வத்தாமனின் கணைகளால் தாக்கப்பட்டதும், சாரதியற்றதுமான ஒரு பெரும் யானை, மற்றொரு பகை யானையை எதிர்த்து முழங்கிக் கொண்டே பாண்டியன் இருந்த திசையை நோக்கிப் பெரும் வேகத்துடன் சென்றது.(40) பிளவுபட்ட மலைச்சிகரம் ஒன்றைப் போலத் தெரிந்த அந்த யானைகளின் இளவரசனைக் கண்டவனும், யானையின் கழுத்தில் இருந்து போரிடும் முறையை நன்கறிந்தவனுமான அந்தப் பாண்டியன், மலைச்சிகரத்தின் உச்சியில் உரத்த முழக்கத்துடன் துள்ளிக் குதிக்கும் ஒரு சிங்கத்தைப் போல அந்த விலங்கின் கழுத்தில் விரைவாக ஏறினான்.(41)

பிறகு, மலைகளின் இளவரசனின் அந்தத் தலைவன் {மலயத்வஜன்}, அங்குசத்தால் யானையைத் தாக்கி, சினத்தால் ஈர்க்கப்பட்டு, ஆயுதங்களைப் பெரும் வேகத்துடன் வீசுவதில் (தான் வேறுபட்டுத் தனித்துவமாகத் தெரிந்த) கவனமான நிதானத்துடன், சூரியனது கதிர்களின் பிரகாசத்துடன் கூடிய ஒரு {வேல்} வேலை  ஆசான் மகனின் {அஸ்வத்தாமன்} மேல் விரைவாக ஏவி உரக்க முழக்கமிட்டான்.(42) மகிழ்ச்சியால் மீண்டும் மீண்டும், “நீர் கொல்லப்பட்டீர், நீர் கொல்லப்பட்டீர்” என்று கூவிய பாண்டியன், ரத்தினங்களாலும், முதல் நீரின் வைரங்களாலும் {மிகத் தூய வைரங்களாலும்}, மிகச் சிறந்த வகைத் தங்கத்தாலும், அற்புதத் துணியாலும், முத்துச்சரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட துரோணர் மகனின் கிரீடத்தை (அந்த வேலைக் கொண்டு) துண்டுகளாக நொறுக்கினான்.(43) சூரியன், சந்திரன், கோள்கள், அல்லது நெருப்பின் காந்தியைக் கொண்ட அந்தக் கிரீடம், அந்தத் தாக்குதலுடைய பலத்தின் விளைவால், இந்திரனின் வஜ்ரத்தால் பிளக்கப்பட்ட ஒரு மலைச் சிகரம் பேரொலியுடன் பூமியில் விழுவதைப் போலக் கீழே விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது.(44)

இதனால் பெருஞ்சினத்தால் சுடர்விட்ட அஸ்வத்தாமன், காலால் மிதிபட்ட பாம்புகளின் இளவரசனைப் போல, எதிரியைப் பெரும்வலியால் பீடிக்கவல்லவையும், யமதண்டத்துக்கு ஒப்பானவையுமான பதினான்கு கணைகளை எடுத்துக் கொண்டான்.(45) அக்கணைகளில் ஐந்தால் தன் எதிராளியின் யானையுடைய நான்கு கால்களையும், துதிக்கையையும், மூன்றால் அம்மன்னனின் {மலயத்வஜனின்} இரு கரங்களையும், சிரத்தையும் {தலையையும்} வெட்டிய அவன் {அஸ்வத்தாமன்}, பெரும் பிரகாசம் கொண்டவர்களும், அந்தப் பாண்டிய மன்னனைப் பின்தொடர்ந்து சென்றவர்களுமான வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அறுவரை ஆறு கணைகளால் கொன்றான்.(46) நீண்டவையும், நன்கு பருத்தவையும், சிறந்த சந்தனக்குழம்பால் பூசப்பட்டவையும், தங்கம், முத்துக்கள், ரத்தினங்கள், வைரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையுமான அம்மன்னனின் {மலயத்வஜனின்} கரங்கள் பூமியில் விழுந்ததும், கருடனால் கொல்லப்பட்ட இரு பாம்புகளைப் போல நெளியத் தொடங்கின.(47) முழு நிலவின் பிரகாசத்துடன் அருளப்பெற்ற முகத்தைக் கொண்டதும், நேர்த்தியான மூக்கையும், சினத்தால் தாமிரமாகச் சிவந்த இரண்டு பெரிய கண்களையும் கொண்டதும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தத் தலையும் தரையில் விழுந்து, இரண்டு பிரகாசமான நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில் உள்ள நிலவைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(48)

திறன்நிறைந்த அந்தப் போர்வீரனால் {அஸ்வத்தாமனால்}, ஐந்து கணைகளைக் கொண்டு ஆறு துண்டுகளாக வெட்டப்பட்ட யானையும், மூன்று கணைகளைக் கொண்டு நான்கு துண்டுகளாக வெட்டப்பட்ட மன்னனும், மொத்தமாகப் பத்துத் துண்டுகளாகப் பிரிந்து கிடந்த போது, பத்து தேவர்களுக்காகப் பத்து பகுதிகளாகப் பிரித்துப் படைக்கபட்ட வேள்வி நெய்யைப் போல அது தெரிந்தது.(49) சுடலையில் {சுடுகாட்டில்} சுடர்விட்டெரியும் நெருப்பானது, உயிரற்ற உடலின் வடிவில் நீர்க்காணிக்கையை ஏற்ற பிறகு, நீரால் அணைக்கப்படுவதைப் போலவே, அந்தப் பாண்டிய மன்னன் {மலயத்வஜன்}, எண்ணற்ற குதிரைகளையும், மனிதர்களையும், யானைகளையும் துண்டுகளாக வெட்டி, ராட்சசர்களுக்கு அவற்றை உணவாகப் படைத்த பிறகு, இப்படியே துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கணைகளால் அமைதிப்படுத்தப்பட்டான்[4].(50) ஆயுத அறிவியலின் அந்த முழுமையான தலைவன் {அஸ்வத்தாமன்}, தான் எடுத்துக்கொண்ட பணியை நிறைவு செய்த பிறகு, அசுரன் பலி {பலிச்சக்கரவர்த்தி} அடக்கப்பட்டதும், விஷ்ணுவை மகிழ்ச்சியாக வழிபட்ட தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போலத் தன் தம்பிகளுடன் கூடியவனும் உமது மகனுமான மன்னன் {துரியோதனன்}, அந்தப் போர்வீரனை {அஸ்வத்தாமனை} பெரும் மரியாதையுடன் வழிபட்டான்” {என்றான் சஞ்சயன்}.(51)

கர்ணனின் வீரம்! – கர்ண பர்வம் பகுதி – 21-பாண்டியன் கொல்லப்பட்டதும் என்ன நேர்ந்தது என்று சஞ்சயனை விசாரித்த திருதராஷ்டிரன்; கர்ணனின் வீரமும், அவனால் உண்டாக்கப்பட்ட பேரழிவும்; திருஷ்டத்யும்னன், உபபாண்டவர்கள், இரட்டயர் மற்றும் யுயுதானன் ஆகியோர் ஒன்று சேர்ந்து கர்ணனை எதிர்த்தது; போர்வீரர்கள் பிறருக்கிடையில் நேர்ந்த கடும்போர்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, பாண்டியன் {மலயத்வஜன்} கொல்லப்பட்டதும், வீரர்களில் முதன்மையான கர்ணன், அந்தப் போரில் எதிரியை முறியடித்து அழித்துக் கொண்டிருந்தபோது, அர்ஜுனன் என்ன செய்தான்?(1) அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பெரும் வலிமையையும், தன் கடமைகளில் கவனமும், ஆயுத அறிவியலில் முற்றான திறமும் கொண்ட வீரனாவான். உயர் ஆன்ம சங்கரனே {சிவனே}, உயிரினங்கள் அனைத்தின் மத்தியில் அவனை {அர்ஜுனனை} வெல்லப்பட முடியாதவனாக்கினான்.(2) எதிரிகளைக் கொல்பவனான அந்தத் தனஞ்சயனிடமே {அர்ஜுனனிடமே} நான் பெரும் அச்சம் கொள்கிறேன். ஓ! சஞ்சயா, அங்கே அத்தருணத்தில் பார்த்தன் {அர்ஜுனன்} சாதித்தது அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(3)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டியன் வீழ்ந்ததும், கிருஷ்ணன் இந்த நன்மையான வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொன்னான், “நான் மன்னரை {யுதிஷ்டிரரைக்} காணவில்லை. பிற பாண்டவர்களும் பின்வாங்கிவிட்டனர்.(4) பார்த்தர்கள் திரும்பியிருந்தால், எதிரியின் பரந்த படையானது பிளக்கப்பட்டிருக்கும். அஸ்வத்தாமனால் ஊக்கப்படுத்தப்படும் காரியங்களை நிறைவு செய்யும் விதமாகக் கர்ணன், சிருஞ்சயர்களைக் கொன்று கொண்டிருக்கிறான்.(5) (அந்தப் போர்வீரனால்) குதிரைகளுக்கும், தேர்வீரர்களுக்கும், யானைகளுக்கும் பேரழிவு ஏற்படுகிறது” என்றான். இப்படியே வீர வாசுதேவன் கிரீடம் தரித்தவனிடம் (அர்ஜுனனிடம்) அனைத்தையும் எடுத்துரைத்தான்[1].(6)

தன் அண்ணன் {யுதிஷ்டிரன்} பேராபத்தில் இருப்பதைக் கேட்டுணர்ந்த பார்த்தன் {அர்ஜுனன்} கிருஷ்ணனிடம் விரைவாக, “ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, குதிரைகளைச் செலுத்துவாயாக” என்றான்.(7) பிறகு ரிஷிகேசன் தடுக்கப்பட முடியாத அந்தத் தேரைச் செலுத்தினான். அங்கே நடந்த மோதலில் மீண்டும் கடுமை அதிகமானது.(8) பீமசேனனின் தலைமையிலான பாண்டவர்களும், சூதன் மகனின் {கர்ணனின்} தலைமையிலான நாங்களும், அதாவது குருக்களும், பாண்டவர்களும் அச்சமற்ற வகையில் {ஒருவரையொருவர்} மிகவும் நெருங்கி வந்தோம்.(9) ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, யமனின் ஆட்சிப்பகுதியில் வசிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் கர்ணனுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் மீண்டும் போர் தொடங்கியது.

விற்கள், கணைகள், முள்பதித்த தண்டாயுதங்கள், வாள்கள், வேல்கள், கோடரிகள், குறுங்கதாயுதங்கள், புசுண்டிகள், ஈட்டிகள் {சக்திகள்}, குத்துவாள்கள், போர்க்கோடரிகள்,(11) கதாயுதங்கள், சூலங்கள், பளபளப்பாக்கப்பட்ட குந்தங்கள், குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, அங்குசங்கள் ஆகியவற்றுடன் கூடிய போராளிகள் ஒருவரையொருவர் கொல்ல விரும்பிய படியே ஒருவர் மீதொருவர் வேகமாகப் பாய்ந்தனர்.(12) ஆகாயம், திசைகளின் முக்கிய மற்றும் துணைப் புள்ளிகள், வானம், பூமி ஆகியவற்றைக் கணைகளின் விஸ் ஒலி, வில்லின் நாண்கயிறுகளின் நாணொலி, உள்ளங்கையொலி, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி ஆகியவற்றால் நிறைத்தபடியே பகைவரை நோக்கிப் பகைவர்கள் விரைந்தனர்.(13) அந்தப் பேரொலியால் மகிழ்ந்த வீரர்கள், பகைமைகளின் இறுதியை அடையும் விருப்பத்தில் வீரர்களுடனே போரிட்டனர்.(14) நாண்கயிறுகள், கூடுகள், விற்கள், யானைகளின் பிளிறல்கள் ஆகியவற்றாலும், காலாட்படை வீரர்கள் மற்றும் வீழ்ந்த மனிதர்களின் கூச்சல்களாலும் அவ்வொலியானது பேரொலியானது.(15) கணைகளின் பயங்கரமான விஸ் ஒலி, துணிச்சல்மிக்கப் போர்வீரர்களின் பல்வேறு கூச்சல்கள் ஆகியவற்றைக் கேட்ட துருப்புகள் அச்சமடைந்து, நிறம் மங்கிக் கீழே விழுந்தன.(16) கதறுவதிலும், ஆயுதங்களை ஏவுவதிலும் ஈடுபட்ட அந்தப் பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளை, அதிரதனின் அந்த வீரமகன் {கர்ணன்} தன் கணைகளால் நொறுக்கினான்.(17)

பிறகு கர்ணன், தன் கணைகளைக் கொண்டு, துணிச்சல் மிக்கப் பாஞ்சால வீரர்களில் இருபது தேர்வீரர்களை, அவர்களது குதிரைகள், சாரதிகள் மற்றும் கொடிமங்களோடு யமலோகத்திற்கு அனுப்பினான்.(18) அப்போது போர்வீரர்களில் முதன்மையானவர்களும், பெரும் சக்தியைக் கொண்டவர்களும், ஆயுதங்களை வேகமாகப் பயன்படுத்துபவர்களுமான பாண்டவப் படையினர் பலர், வேகமாகச் சுழன்று அனைத்துப் பக்கங்களிலும் கர்ணனைச் சூழ்ந்து கொண்டனர்.(19) தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டதும், அன்னங்களால் மறைக்கப்பட்டதுமான தடாகத்திற்குள் மூழ்கும் யானைமந்தையின் தலைமையானையைப் போல அந்தப் பகைவர்களின் படையை ஆயுதமாரியால் கர்ணன் கலங்கடித்தான்.(20) எதிரிகளுக்கு மத்தியில் ஊடுருவிய அந்த ராதையின் மகன் {கர்ணன்}, தன் சிறந்த வில்லை அசைத்துத் தாக்கத் தொடங்கித் தன் கூரிய கணைகளால் அவர்களது தலைகளை வீழ்த்தினான்.(21) போர்வீரர்களின் கேடயங்களும், கவசங்களும் வெட்டுண்டு பூமியில் விழுந்தன. கர்ணனின் இரண்டாவது கணையின் தீண்டல் தேவைப்பட்ட எவருமே அங்கு இருக்கவில்லை.(22)

சாட்டையால் குதிரைகளைத் தாக்கும் சாரதியைப் போலக் கர்ணன், (தன் எதிரிகளின்) வில்லின் நாணால் மட்டுமே உணரக்கூடிய கூடுகளையும், கவசங்களையும், அவற்றைப் பூண்ட உடல்களையும், உயிர்களையும் நொறுக்கவல்ல தன் கணைகளால் தாக்கினான்.(23) மான்கூட்டங்களைக் கலங்கடிக்கும் சிங்கம் ஒன்றைப் போலக் கர்ணன், தன் கணைகள் செல்லும் தொலைவிற்குள் வர நேர்ந்த அந்தப் பாண்டுக்கள், சிருஞ்சயர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரையும் வேகமாகக் கலங்கடித்தான்.(24) அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களின் தலைவனும் {திருஷ்டத்யும்னனும்}, திரௌபதியின் மகன்களும், இரட்டையரும் {நகுலன் மற்றும் சகாதேவனும்}, மற்றும் யுயுதானனும் ஒன்று சேர்ந்து கர்ணனை எதிர்த்தனர்.(25) இவ்வாறு குருக்களும், பாஞ்சாலர்களும், பாண்டுக்களும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தங்கள் உயிர்களையே துச்சமென மதித்த போர்வீரர்கள் பிறர் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர்.(26) கவசங்களும் உறைகளும் நன்கு பூட்டப்பட்டவர்களும், தலைக்கவசங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பெரும் பலத்தைக் கொண்டவர்களுமான போராளிகள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கதாயுதங்களுடனும், குறுந்தண்டங்கள், உயர்த்திப் பிடிக்கப்பட்ட யமதண்டங்களைப் போலத் தெரிந்த முள்பதித்த தடிகள் ஆகியவற்றுடனும் குதித்து, ஒருவரையொருவர் அறைகூவியழைத்து, உரக்க முழங்கிக் கொண்டே தங்கள் எதிரிகளை நோக்கி விரைந்தனர்.(27,28)

பிறகு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும், தாக்கப்பட்டும், தங்கள் அங்கங்களில் குருதி வழிய, அறிவையும், கண்களையும், ஆயுதங்களையும் இழந்தபடியே அவர்கள் கீழே விழுந்தனர்.(29) ஆயுதங்களால் மறைக்கப்பட்ட சிலர், பற்களால் அலங்கரிக்கப்பட்ட குருதி நிறைந்த வாய்களுடனும், மாதுளை போன்ற அழகிய முகங்களுடன் அங்கே கிடக்கையில், உயிரோடு இருப்பவர்களைப் போலவே தெரிந்தனர்.(30) போரெனும் அந்தப் பரந்த கடலில், சினத்தால் நிறைந்த வேறு சிலர், சிதைக்கப்பட்டனர், அல்லது வெட்டப்பட்டனர், அல்லது துளைக்கப்பட்டனர், அல்லது வீழ்த்தப்பட்டனர், அல்லது துண்டிக்கப்பட்டனர், அல்லது போர்க்கோடரிகளாலும், குறுங்கணைகளாலும், அங்குசங்களாலும், சூலங்களாலும், வேல்களாலும் கொல்லப்பட்டனர்.(31,32) ஒருவரையொருவர் கொன்று குருதியில் மறைந்த அவர்கள், கோடரியால் வெட்டப்பட்ட சந்தன மரங்கள், தங்கள் குளுமையான இரத்தச் சிவப்புத் திரவத்தை உதிர்த்தபடியே கீழே விழுவதைப் போல உயிரையிழந்து கீழே விழுந்தனர்.(33)

தேரால் அழிக்கப்பட்ட தேர்களும், யானைகளால் யானைகளும், மனிதர்களால் மனிதர்களும், குதிரைகளால் அழிக்கப்பட்ட குதிரைகளும் ஆயிரக்கணக்கில் கீழே விழுந்தன.(34) கொடிமரங்கள், தலைகள், குடைகள், யானைகள், துதிக்கைகள், மனிதக்கரங்கள் ஆகியன கத்திமுக {க்ஷுரப்ரம்}, அல்லது அகன்ற தலை {பல்லம்}, அல்லது பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணைகளால் வெட்டப்பட்டுப் பூமியில் விழுந்தன.(35) பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களும், யானைகளும், தேர்களுடன் பூட்டப்பட்ட குதிரைகளும் அந்தப் போரில் நொறுக்கப்பட்டன. குதிரைவீரர்களால் கொல்லப்பட்ட துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் பலர் கீழே விழுந்தனர், துதிக்கைகள் வெட்டப்பட்ட யானைகள் பலவும், (தங்கள் உடல்களில் இருந்த) கொடிமரங்கள் மற்றும் கொடிகளுடன் மலைகள் வீழ்வதைப் போலக் கீழே விழுந்தன. காலாட்படைவீரர்களால் தாக்கப்பட்ட யானைகள் மற்றும் தேர்கள் பலவும் அழிக்கப்பட்டு, அல்லது அழிக்கப்படும் வேளையில், அனைத்துப் பக்கங்களிலும் விழுந்தன. சுறுசுறுப்புடன் கூடிய காலாட்படைவீரர்களுடன் மோதிய குதிரைவீரர்கள், அவர்களால் {காலாட்படை வீரர்களால்} கொல்லப்பட்டனர்.(36-38) அதே போலக் குதிரைவீரர்களால் கொல்லப்பட்ட காலாட்படை வீரர்களின் கூட்டங்களும் களத்தில் பட்டுக் கீழே விழுந்தனர். அந்தப் பயங்கரப்போரில் கொல்லப்பட்டோரின் முகங்களும், அங்கங்களும், நசுக்கப்பட்ட தாமரைகளைப் போலவும், மங்கிய மலர்மாலைகளைப் போலவும் தெரிந்தன. யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் அழகிய வடிவங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அழுக்கடைந்த துணிகளுக்கு ஒப்பாகக் காண்பதற்கு வெறுக்கத்த நிலையை அடைந்தன” {என்றான் சஞ்சயன்}[2].(39-40)

மிலேச்ச மன்னனைக் கொன்ற நகுலன்! – கர்ண பர்வம் பகுதி – 22-துரியோதனனின் தூண்டுதலின் பேரில் திருஷ்டத்யும்னனை எதிர்த்துச் சென்ற யானைப் படையினர்; யானைகளைக் கொன்ற திருஷ்டத்யும்னன்; யானைகளால் கொல்லப்பட்ட படைவீரர்கள்; வங்கர்களின் மன்னனை வீழ்த்திய சாத்யகி; புண்டரனைக் கொன்ற சகாதேவன்; அங்கர்களின் தலைவனான மிலேச்ச மன்னனைக் கொன்ற நகுலன்; யானைப்படையைப் பீடித்த பாண்டவர்கள்; புறமுதுகிட்டோடிய கௌரவப் படையினர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “யானைகளில் சென்ற போர்வீரர்கள் பலர், உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டு, சினத்தால் நிறைந்து, திருஷ்டத்யும்னனுக்கு அழிவை ஏற்படுத்த விரும்பி அவனை எதிர்த்துச் சென்றனர்.(1) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிழக்கத்தியர்கள், தெற்கத்தியர்கள், அங்கர்கள், வங்கர்கள், புண்டரர்கள், மகதர்கள், தாம்ரலிப்தகர்கள், மேகலர்கள், கோசலர்கள், மத்ரர்கள், தாசர்ணர்கள், நிஷாதர்கள் ஆகியோரைச் சார்ந்தவர்களும், யானைப் போரில் திறம்பெற்ற போராளிகளில் முதன்மையானோருமான பலர், கலிங்கர்களுடன் சேர்ந்து கொண்டு, கணைகளையும், வேல்களையும் பொழியும் மேகங்களைப் போல அந்தப் போரில் பாஞ்சாலர்களை நனைத்தனர்.(2-4)

குதிங்கால்கள், கால்விரல் நுனிகள் மற்றும் அங்குசங்களைக் கொண்டு தங்கள் சாரதிகளால் தூண்டப்பட்ட அந்த (எதிரிகளை) நசுக்கும் யானைகளைப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} தன் கணைகளாலும் நாராசங்களாலும் மறைத்தான்.(5) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மலைகளைப் போலப் பெரியவையாக இருந்த அவ்விலங்குகள் ஒவ்வொன்றையும், அந்தப் பாஞ்சால வீரன் {திருஷ்டத்யும்னன்}, பத்து, எட்டு, அல்லது ஆறு கூரிய கணைகளால் துளைத்தான்.(6) மேகங்களால் சூழப்பட்ட சூரியனைப் போலப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, அந்த யானைகளால் சூழப்பட்டிருப்பதைக் கண்ட பாண்டுக்களும், பாஞ்சாலர்களும், கூரிய ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு உரத்த முழக்கங்களுடன் (அவனை மீட்பதற்காக) அவனை நோக்கிச் சென்றனர்.(7) அந்த யானைகளின் மீது தங்கள் ஆயுதங்களைப் பொழிந்த அந்தப் போர்வீரர்கள், தங்களின் உள்ளங்கையொலிகள் மற்றும் தங்கள் வில்லின் நாணொலிகள் ஆகியவற்றினால் உண்டான இசையின் துணையுடனும், காலத்தை வெல்லும் வீரர்களால் தூண்டப்பட்டும் அவர்கள் வீரர்களின் நடனத்தை ஆடத் தொடங்கினர்.(8)

அப்போது, பெரும்பலத்தைக் கொண்டவர்களான நகுலன், சகாதேவன், திரௌபதியின் மகன்கள், பிரபத்ரகர்கள், சாத்யகி, சிகண்டி, சேகிதானன் ஆகிய வீரர்கள் அனைவரும், மேகங்கள் தங்கள் மழையால் மலைகளை நனைப்பதைப் போலத் தங்கள் ஆயுதங்களால் அந்த யானைகளை அனைத்துப் பக்கங்களிலும் நனைத்தனர்.(9) மிலேச்சப் போர்வீரர்களால் தூண்டப்பட்ட அந்தச் சீற்றமிகு யானைகள், தங்கள் துதிக்கைகளால் மனிதர்களையும், குதிரைகளையும், தேர்களையும் இழுத்துத் தங்கள் கால்களால் அவற்றை நசுக்கின.(10) தங்கள் தந்தங்களின் முனைகளால் அவை சிலரைத் துளைத்தன, சிலரை உயரத் தூக்கித் தரையில் வீசின; அந்தப் பெரும் விலங்குகளின் தந்தங்களில் உயரத் தூக்கப்பட்ட வேறு சிலர், பார்வையாளர்களை அச்சுறுத்தும் வகையில் கீழே விழுந்தனர்.(11)

அப்போது, சாத்யகி, தன் முன்னே இருந்த வங்கர்களின் மன்னனுடைய யானையின் முக்கிய அங்கங்களைச் சிதைத்துப் பெரும் வேகத்தைக் கொண்ட நீண்ட கணையொன்றால் {நாராசத்தால்} அதைப் போர்க்களத்தில் கீழே வீழ்த்தினான்.(12) பிறகு சாத்யகி, தன்னால் தொட முடியாதவனான சாரதியை, அவன் தன் விலங்கின் முதுகில் இருந்து குதிக்கப் போகும் தருணத்தில், மற்றொரு நீண்ட கணையால் அவனது மார்பைத் துளைத்தான். சாத்வதனால் இவ்வாறு தாக்கப்பட்ட அவன் {வங்கர்களின் மன்னன்} கீழே பூமியில் விழுந்தான்.(13) அதே வேளையில் சகாதேவன், நகரும் மலையெனத் தன்னை எதிர்த்து வந்த புண்டரனின் யானையைப் பெரும் கவனத்துடன் ஏவப்பட்ட மூன்று கணைகளால் தாக்கி,(14) கொடிமரம், சாரதி, கவசம் மற்றும் அதன் {யானையின்} உயிரையும் இழக்கச் செய்தான். இவ்வாறு அந்த யானையை வெட்டி வீழ்த்திய சகாதேவன், அங்கர்களின் தலைவனை [1] எதிர்த்துச் சென்றான்.(15) எனினும், சகாதேவனை விலகச் செய்த நகுலன், யமதண்டத்திற்கு ஒப்பான மூன்று நீண்ட கணைகளால் {நாராசங்களால்} அங்கர்களின் ஆட்சியாளனைப் பீடித்து, ஒரு நூறு கணைகளால் தன் எதிரியின் யானையையும் பீடித்தான்.(16) பிறகு அந்த அங்கர்களின் ஆட்சியாளன், சூரியக் கதிர்களைப் போன்ற பிரகாசம் கொண்ட எண்ணூறு {800} வேல்களை நகுலன் மீது வீசினான். அவை ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக நகுலன் வெட்டினான்.(17) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்} தன் எதிராளியின் தலையைப் பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணையொன்றால் வெட்டி வீழ்த்தினான். இதனால் உயிரையிழந்த அந்த மிலேச்ச மன்னன், தான் செலுத்திய விலங்கிலிருந்து கீழே விழுந்தான்.(18)யானைகளைச் செலுத்துவதில் திறன்பெற்ற அந்த அங்கர்களின் இளவரசன் வீழ்ந்ததும், சினத்தால் நிறைந்த அங்கர்களின் யானைக்காரர்கள், நகுலனைத் துண்டுகளாக {தூள்தூளாக} நசுக்க விரும்பி, காற்றில் அசையும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், சிறந்த வாய்களைக் கொண்டவையும், தங்கத்தாலான அம்பாரிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், சுடர்மிக்க மலைகளைப் போலத் தெரிந்தவையுமானத் தங்கள் யானைகளில் வேகமாக அவனை {நகுலனை} எதிர்த்துச் சென்றனர்.(19,20) மேலும், மேகலர்கள், உத்கலர்கள், கலிங்கர்கள், நிஷாதர்கள், தாம்ரலிப்தகர்கள் பலரும், நகுலனைக் கொல்ல விரும்பி தங்கள் கணைகளையும், வேல்களையும் பொழிந்தபடியே அவனை எதிர்த்துச் சென்றனர்.(21) அப்போது சினத்தால் நிறைந்தவர்களான பாண்டுக்கள், பாஞ்சாலர்கள் மற்றும் சோமகர்கள், மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல அந்தப் போர்வீரர்களால் சூழப்பட்ட நகுலனை மீட்பதற்காக வேகமாக விரைந்தனர்.(22) பிறகு தங்கள் கணைகளையும், நாராசங்களையும் பொழிந்த அந்தத் தேர்வீரர்களுக்கும், ஆயிரக்கணக்கான வேல்களைப் பொழிந்த அந்த யானைக்காரர்களுக்கும் இடையே ஒரு கடும்போர் நேர்ந்தது.(23) யானைகளின் மத்தகங்கள், மற்ற அங்கங்கள், துதிக்கைகள் மற்றும் அலங்காரப் பொருட்களும் நாராசங்களால் மிகவும் துளைக்கப்பட்டுப் பிளந்து சிதைந்தன.(24)

அப்போது சகாதேவன், வேகமான அறுபத்துநான்கு கணைகளால், அந்தப் பெரும் யானைகளில் எட்டை விரைவாகக் கொன்று, அதன் சாரதிகளோடு கீழே விழச் செய்தான்.(25) தன் குலத்தை மகிழ்விப்பவனான நகுலனும், பெரும் வீரியத்துடன் தன் அற்புத வில்லை வளைத்து, நேரான கணைகள் {நாராசங்கள்} பலவற்றால் யானைகள் பலவற்றைக் கொன்றான்.(26) பிறகு, பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, சிநியின் பேரன் {சாத்யகி}, திரௌபதியின் மகன்கள், பிரபத்ரகர்கள், சிகண்டி ஆகியோர் அந்தப் பெரும் யானைகளைக் கணை மழையால் நனைத்தனர்.(27) பாண்டவ வீரர்களாலான அந்த மழைநிறைந்த மேகங்களின் விளைவாக, எதிரியின் யானைகளாலான அந்த மலைகள், இடியுடன் கூடிய புயலால் தாக்கி வீழ்த்தப்பட்ட உண்மையான மலைகளைப் போலவே, அவர்களது எண்ணற்ற கணைகளாலான மழைத்தாரைகளால் தாக்கி வீழ்த்தப்பட்டன.(28) பாண்டவத் தேர்வீரர்களான அந்தத் தலைவர்கள், அந்த உமது யானைகளை இவ்வாறு கொன்று, கரையை உடைத்துச் செல்லும் ஆற்றுக்கு ஒப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பகைவரின் படையின் மீது தங்கள் கண்களைச் செலுத்தினர்.(29) பாண்டு மகனின் அந்தப் போர்வீரர்கள், இவ்வாறு உமது படையைக் கலங்கடித்து, மீண்டும் அதைக் கலங்கடித்த பிறகு கர்ணனை எதிர்த்து விரைந்தனர். {என்றான் சஞ்சயன்}(30)

துச்சாசனனை வென்ற சகாதேவன்! – கர்ண பர்வம் பகுதி – 23-சகாதேவனை எதிர்த்து வந்த துச்சாசனன்; துச்சாசனனுக்கும், சகாதேவனுக்கும் இடையில் நடந்த கடும்போர்; மாறிமாறி ஒருவரின் வில்லை மற்றவர் வெட்டியது; துச்சாசனனை மயக்கமடையச் செய்த சகாதேவன்; போர்க்களத்தைவிட்டுத் துச்சாசனனைக் கொண்டு சென்ற அவனது சாரதி..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சினத்தால் நிறைந்த சகாதேவன், இவ்வாறு உமது படையைச் சிதறடித்துக் கொண்டிருந்தபோது, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, சகோதரனை எதிர்த்த சகோதரனாகத் துச்சாசனன் அவனை {சகாதேவனை} எதிர்த்துச் சென்றான்.(1) அவ்விருவரும் பயங்கரப் போரில் ஈடுபடுவதைக் கண்ட பெரும் தேர்வீரர்கள் அனைவரும், சிங்க முழக்கங்களைச் செய்தபடியே தங்கள் ஆடைகளை {காற்றில்} அசைத்தனர்.(2) அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் வலிமைமிக்க அந்த மகன் {சகாதேவன்}, வில்தரித்த உமது கோபக்கார மகனால் {துச்சாசனனால்} மூன்று கணைகளைக் கொண்டு மார்பில் தாக்கப்பட்டான்.(3) பிறகு சகாதேவன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முதலில் ஒரு கணையால் உமது மகனைத் {துச்சாசனனைத்} துளைத்து, எழுபது கணைகளால் மீண்டும் அவனையும், அதன் பிறகு மூன்றால் அவனது சாரதியையும் துளைத்தான்.(4)

அப்போது துச்சாசனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும்போரில் சகாதேவனின் வில்லை அறுத்து, எழுபத்து மூன்று கணைகளால்அவனது கரங்களிலும், மார்பிலும் துளைத்தான்.(5) பிறகு அந்தப் பயங்கர மோதலில் சினத்தால் நிறைந்த சகாதேவன், ஒரு வாளை உருவி கொண்டு, அதைச் சுழற்றி உமது மகனின் {துச்சாசனனின்} தேரை நோக்கி வேகமாக வீசினான்.(6) கணை பொருத்தப்பட்ட துச்சாசனனுடைய வில்லின் நாண்கயிற்றை வெட்டிய அந்தப் பெரிய வாளானது, ஆகாயத்தில் இருந்து விழும் பாம்பைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(7) பிறகு மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட அந்த வீரச் சகாதேவன், மரணக் கணையொன்றை துச்சாசனன் மீது ஏவினான்.(8) எனினும், அந்தக் குரு போர்வீரன், யமதண்டத்தைப் போன்ற அந்தப் பிரகாசமான கணையானது தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும்போதே, அதைத் தன் கூர்முனை வாளால் இரு துண்டுகளாக வெட்டினான்.(9) பிறகு அந்தக் கூரிய வாளை சுழற்றிய துச்சாசனன், அந்தப் போரில் தன் எதிரியின் மீது அதை வேகமாக வீசினான். அதே வேளையில் அந்த வீரப் போர்வீரன் {துச்சாசனன்} கணையொன்றுடன் கூடிய மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(10)

எனினும் சகாதேவன், அந்தப் போரில் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த வாளைத் தன் கூரிய கணைகளால் மிக எளிதாக வெட்டிக் கீழே விழச் செய்தான்.(11) அப்போது அந்தப் பயங்கரப் போரில் உமது மகன் {துச்சாசனன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அறுபத்துநான்கு கணைகளைச் சகாதேவன் தேர் மீது வேகமாக ஏவினான்.(12) எனினும் சகாதேவன், ஓ! மன்னா, அந்த எண்ணற்றக் கணைகள் பெரும் வேகத்தோடு தன்னை நோக்கி வந்து கொண்டிருந்தபோதே, அவை ஒவ்வொன்றையும் ஐந்து கணைகளால் வெட்டினான்.(13) உமது மகனால் {துச்சாசனனால்} ஏவப்பட்ட அந்த வலிமைமிக்கக் கணைகளைத் தடுத்த சகாதேவன், அந்தப் போரில் தன் எதிரியின் மீது பெரும் எண்ணிக்கையிலான கணைகளை ஏவினான்.(14) அந்தக் கணைகள் ஒவ்வொன்றையும் மூன்று கணைகளால் வெட்டிய உமது மகன், மொத்த உலகையும் எதிரொலிக்கச் செய்தபடி உரக்க முழங்கினான்.(15)

பிறகு துச்சாசன், ஓ! மன்னா, சகாதேவனைத் துளைத்து, ஒன்பது கணைகளால் பின்னவனின் {சகாதேவனின்} சாரதியையும் அந்தப் போரில் தாக்கினான்.(16) அப்போது சினத்தால் நிறைந்த சகாதேவன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் வில்லின் நாண்கயிற்றில் அந்தகனுக்கு ஒப்பான பயங்கரக் கணையொன்றைப் பொருத்தினான்.(17) பெரும் வேகத்தோடு சென்ற அந்தக் கணையானது, ஓ! மன்னா, அவனது {துச்சாசனனின்} பலமான கவசத்தையும், உடலையும் துளைத்து, எறும்புப்புற்றுக்குள் ஊடுருவும் பாம்பொன்றைப் போலப் பூமிக்குள் நுழைந்தது.(18) அவன் {துச்சாசனன்} உணர்வுகளை இழந்ததைக் கண்ட அவனது சாரதி, தானும் கூரிய கணைகளால் எப்போதும் தாக்கப்பட்டிருந்தாலும், வேகமாகத் தன் தேரை {போருக்கு} வெளியே கொண்டு சென்றான்.(19) இவ்வாறு அந்தக் குரு போர்வீரனை வென்ற அந்தப் பாண்டுவின் மகன் {சகாதேவன்}, துரியோதனனின் படைப்பிரிவைக் கண்டு, அனைத்துப் பக்கங்களிலும் அதை நொறுக்கத் தொடங்கினான்.(20) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதரே, கோபத்தில் தூண்டப்பட்ட ஒரு மனிதன் எறும்புக்கூட்டத்தை நசுக்குவதைப் போலவே அந்தப் பாண்டுவின் மகனும் {சகாதேவனும்} கௌரவப் படையை நசுக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(21)

நகுலனை வீழ்த்திய கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 24-கர்ணனுக்கும் நகுலனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; நகுலனின் வில்லை அறுத்த கர்ணன்; கர்ணனின் வில்லை அறுத்த நகுலன்; ஆச்சரியத்தில் நிறைந்த தேவர்கள்; மீண்டும் கர்ணனுடைய வில்லின் நுனியை அறுத்த நகுலன்; இருவரின் கணைகளால் நிறைந்த ஆகாயம்; இருவீரர்களாலும் கொல்லப்பட்ட இருபடையினர்; பார்வையாளர்களாகத் தொலைவில் நின்ற இரு படை வீரர்கள்; கர்ணனின் கணைகளால் போர்க்களத்தில் உண்டான நிழல்; நகுலனின் தேரையும் குதிரைகளையும் சிதறடித்த கர்ணன், நகுலனின் கழுத்தில் வில்லை மாட்டி எள்ளி நகையாடி உயிரைப் பறிக்காமல் விட்டது; தப்பி ஓடிய நகுலன் யுதிஷ்டிரனின் தேரில் தஞ்சமடைந்தது; பாஞ்சாலர்களுக்கு மத்தியில் பேரழிவை ஏற்படுத்திய கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நகுலன் பெரும்பலத்துடன் கௌரவப் படைப்பிரிவுகளை முறியடித்து அழித்துக் கொண்டிருந்த போது, சினத்தால் நிறைந்தவனும், விகர்த்தனன் மகனுமான கர்ணன் அவனைத் தடுத்தான்.(1) அப்போது, நகுலன் சிரித்துக் கொண்டே கர்ணனிடம், “நீண்ட காலத்திற்குப் பிறகு, தேவர்களின் கருணையால் நான் உன்னைக் காண்கிறேன்.(2) ஓ! இழிந்தவனே, நீயும் என் பார்வையில் ஒரு பொருளாய் வந்திருக்கிறாய். இந்தத் தீமைகள் அனைத்திற்கும், இந்தப் பகைமைக்கும், இந்தச் சச்சரவுக்கும் ஆணிவேரானாவர் நீயே.(3) உன் குற்றங்களாலேயே, கௌரவர்கள் ஒருவருடனொருவர் மோதி அழிகின்றனர். இன்றைய போரில் உன்னைக் கொன்று, நோக்கத்தை அடைந்தவனாக என்னைக் கருதிக் கொள்வேன். என் இதயத்தின் நோயும் விலகப்போகிறது” என்றான் {நகுலன்}.(4)

இவ்வாறு நகுலனால் சொல்லப்பட்ட சூதன் மகன் {கர்ணன்}, அந்த இளவரசனுக்கும் {நகுலனுக்கும்}, குறிப்பாக எந்த ஒரு வில்லாளிக்கும் தகுந்த பின்வரும் வார்த்தைகளை அவனிடம் சொன்னான்,(5) “ஓ! வீரா {நகுலா}, என்னைத் தாக்குவாயாக. உன் ஆண்மையை நாங்கள் காண விரும்புகிறோம். ஓ! துணிச்சில்மிக்கப் போர்வீரா, போரில் சில சாதனைகளை அடைந்திருப்பதால், நீ தற்பெருமையே பேச வேண்டும்.(6) ஓ! ஐயா, வீரர்களானவர்கள், தற்பெருமையில் ஈடுபடாமல் தங்கள் சக்தியில் சிறப்பாகப் போரிடுவார்கள். உன் சிறப்பான வலிமையைப் பயன்படுத்தி என்னுடன் போரிடுவாயாக. உன் செருக்கை நான் தணிப்பேன்” என்றான் {கர்ணன்}.(7) இவ்வார்த்தைகளைச் சொன்ன சூதன் மகன் {கர்ணன்}, வேகமாக அந்தப் பாண்டுவின் மகனை {நகுலனைத்} தாக்கி, அம்மோதலில் எழுபத்து மூன்று {73} கணைகளால் அவனைத் துளைத்தான்.(8)

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அப்போது சூதன் மகனால் {கர்ணனால்} இவ்வாறு தாக்கப்பட்ட நகுலன், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளாக்கு ஒப்பான எண்பது {80} கணைகளால் பதிலுக்கு அவனைத் {கர்ணனைத்} தாக்கினான்.(9) பிறகு பெரும் வில்லாளியான அந்தக் கர்ணன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான எண்ணற்ற கணைகளால் தன் எதிராளியின் {நகுலனின்} வில்லை அறுத்து, முப்பது கணைகளால் அவனைப் {நகுலனைப்} பீடித்தான்.(10) அவனது {நகுலனது} கவசத்தைத் துளைத்த அந்தக் கணைகள், கடும் நஞ்சுமிக்க நாகங்கள் பூமியைத் துளைத்த பிறகு நீரைக் குடிப்பதைப் போல அந்தப் போரில் அவனது {நகுலனது} குருதியைக் குடித்தன.(11) அப்போது, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மற்றொரு உறுதிமிக்க வில்லை எடுத்துக் கொண்ட நகுலன், இருபது கணைகளால் கர்ணனைத் துளைத்து, மூன்றால் அவனது {கர்ணனது} சாரதியைத் துளைத்தான்.(12)

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பகைவீரர்களைக் கொல்பவனான நகுலன், சினத்தால் நிறைந்து, பெரும் கூர்மை கொண்ட கத்தித் தலை {க்ஷுரப்ரக்} கணைகளால் கர்ணனின் வில்லை அறுத்தான்.(13) சிரித்துக் கொண்டே இருந்த அந்தப் பாண்டுவின் வீர மகன் {நகுலன்}, தேர்வீரர்களில் முதன்மையானவனும், வில்லற்றவனுமான கர்ணனனை முன்னூறு {300} கணைகளால் தாக்கினான்.(14) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனால் {நகுலனால்}, இவ்வாறு கர்ணன் பீடிக்கப்படுவதைக் கண்டவர்களும், (ஆகாயத்தில் இருந்த) தேவர்களுடன் கூடியிருந்தவர்களும், அங்கே இருந்தவர்களுமான தேர்வீரர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(15) அப்போது மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டவனும், விகர்த்தனன் மகனுமான கர்ணன், ஐந்து கணைகளால் நகுலனின் தோள்ப்பூட்டைத் தாக்கினான்.(16) அங்கே தைத்த அந்தக் கணைகளுடன் கூடிய மாத்ரியின் மகன் {நகுலன்}, பூமியின் மீது தன் கதிர்களால் ஒளியைப் பொழியும் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(17) பிறகு நகுலன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஏழு கணைகளால் கர்ணனைத் துளைத்து, மீண்டும் கர்ணனுடைய வில்லின் நுனிகளில் ஒன்றை அறுத்தான்.(18) அந்தப் போரில் மேலும் கடுமையான ஒரு வில்லை எடுத்துக் கொண்ட கர்ணன், தன் கணைகளால் அனைத்துப் பக்கங்களிலும் நகுலனை மூடி ஆகாயத்தையும் நிறைத்தான்.(19) எனினும், வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலன், கர்ணனின் வில்லில் இருந்து இவ்வாறு திடீரென ஏவப்பட்ட கணைகளால் மறைக்கப்பட்டாலும், தன் கணைகளால் அந்தக் கணைகள் அனைத்தையும் விரைவாக அறுத்தான்.(20)

சுற்றித்திரியும் விட்டிற்பூச்சிகளின் கூட்டத்தால் நிறைந்த வானம் போலவே, பெரும் எண்ணிக்கையிலான கணைகள் பரவிக் கிடந்த ஆகாயம் காட்சியளித்தது.(21) உண்மையில், வானமானது, (அந்தப் போர்வீரர்கள் இருவராலும்) ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான கணைகளால் மறைக்கப்பட்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வெட்டுக்கிளிகளின் கூட்டத்தால் மறைக்கப்பட்டதைப் போலவே தெரிந்தது.(22) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், தொடர் சரங்களாக வெளிப்பட்டவையுமான அந்தக் கணைகள், ஆகாயத்தில் பறக்கும் நாரைகளின் வரிசைகளைப் போலவே அழகாகத் தெரிந்தது.(23) இவ்வாறு வானம் கணைமழையால் மறைக்கப்பட்டபோது, சூரியனே காட்சியில் இருந்து மறைந்து கொண்டான், காற்றில் பறக்கும் எந்த உயிரினத்தாலும் பூமியில் இறங்க முடியவில்லை.(24) அனைத்துப் பக்கங்களும் இவ்வாறு கணைமழையால் மறைக்கப்பட்டபோது, அந்த உயர் ஆன்மப் போர்வீரர்கள் இருவரும், யுகத்தின் முடிவில் எழுந்த இரு சூரியர்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(25)

கர்ணனின் வில்லில் இருந்து வெளிப்பட்ட கணைகளால் கொல்லப்பட்ட சோமகர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மிகவும் பீடிக்கப்பட்டவர்களாகப் பெரும் வலியை உணர்ந்து, தங்கள் கடைசி மூச்சைச் சுவாசிக்கத் தொடங்கினர்.(26) அதேபோல, நகுலனின் கணைகளால் தாக்கப்பட்ட உமது போர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காற்றால் வீசப்பட்ட மேகங்களைப் போல அனைத்துப் பக்கங்களிலும் கலைந்து சென்றனர்.(27) அந்தப் போர் வீரர்கள் இருவராலும் தங்கள் தங்கள் வலிமைமிக்க தெய்வீகக் கணைகளால் இவ்வாறு கொல்லப்பட்ட இரண்டு படையினரும், அந்தக் கணைகள் அடையும் தொலைவுக்கு அப்பால் பின்வாங்கி, அம்மோதலைக் காணும் பார்வையாளர்களாக நின்றனர்.(28) கர்ணன் மற்றும் நகுலன் ஆகியோரின் கணைகளால் அந்த இருபடைகளும் விரட்டப்பட்டபோது, அந்த உயர் ஆன்ம வீரர்கள் இருவரும், கணை மழையால் ஒருவரையொருவர் துளைக்கத் தொடங்கினர்.(29) அந்தப் போர்களத்தில் தங்கள் தெய்வீக ஆயுதங்களை வெளிக்காட்டிய அவர்கள், ஒருவரின் அழிவை மற்றவர் ஏற்படுத்த விரும்பி வேகமாக ஒருவரையொருவர் மறைத்துக் கொண்டனர்.(30)

நகுலனால் ஏவப்பட்ட கணைகள், கங்க மற்றும் மயிலின் இறகால் அலங்கரிக்கப்பட்டு, சூதன் மகனை {கர்ணனை} மறைத்தபடியே, ஆகாயத்தில் நிலைத்து நிற்பதாகத் தெரிந்தன.(31) அதே போல அந்தப் பயங்கரப் போரில் சூதன் மகனால் {கர்ணனால்} ஏவப்பட்ட கணைகளும் பாண்டுவின் மகனை {நகுலனை} மறைத்தபடியே ஆகாயத்தில் நிலைத்து நிற்பதாகவே தெரிந்தன.(32) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கணையறைகளுக்குள் மறைக்கப்பட்ட அந்தப் போர் வீரர்கள் இருவரும், மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனையும், சந்திரனையும் போலக் கண்ணுக்குப் புலப்படாதவர்களானார்கள்.(33) அப்போது கர்ணன், சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் பயங்கரத் தன்மையை அடைந்து, அனைத்துப் பக்கங்களிலும் கணை மழையால் அந்தப் பாண்டுவின் மகனை மறைத்தான்.(34)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சூதன் மகனால் {கர்ணனால்} முற்றிலும் மறைக்கப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, மேகங்களால் மறைக்கப்பட்டவனான நாளை உண்டாக்குபவனை {சூரியனைப்} போல எந்த வலியையும் உணராதவனாக இருந்தான்.(35) அப்போது, ஓ! ஐயா, அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே தன் கணைச்சரத்தை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஏவினான்.(36) அந்த உயர் ஆன்மக் கர்ணனின் கணைகளால் எஞ்சிய போர்க்களமெங்கும் ஒரு பரந்த நிழல் தெரிந்தது. உண்மையில், (அவனது வில்லில் இருந்து) தொடர்ந்து வெளிப்பட்ட அந்த அற்புதக் கணைகளால் மேகங்களால் உண்டானதைப் போல அங்கே ஒரு நிழல் உண்டானது.(37) பிறகு கர்ணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்ம நகுலனின் வில்லை அறுத்து, தேர்த்தட்டில் இருந்து பின்னவனின் சாரதியையும் மிக எளிதாக விழச் செய்தான்.(38) அடுத்ததாக, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நான்கு கூரிய கணைகளால் அவன் {கர்ணன்}, நகுலனின் நான்கு குதிரைகளை விரைவாக யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான்.(39) மேலும் அவன் {கர்ணன்}, தனது கணைகளால் தன் எதிராளியின் சிறந்த தேரையும், அவனது கொடிமரம், அவனது தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்கள், கதாயுதம், வாள், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட கேடயம், வேறு பிற உபகரணங்கள் மற்றும் போர்ச் சாதனங்கள் ஆகியவற்றையும் நுண்ணியத் துண்டுகளாக வெட்டினான்.(40)

அப்போது நகுலன், குதிரைகளற்றவனாக, தேரற்றவனாக, கவசமற்றவனாக, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, முள்பதித்த கனத்தத் தடி ஒன்றைக் கையில் தரித்துக் கொண்டு தன் தேரில் இருந்து வேகமாக இறங்கினான்.(41) பாண்டுவின் மகனால் {நகுலனால்} இவ்வாறு உயர்த்தப்பட்ட அந்தப் பயங்கரத் தடியும், ஓ! மன்னா, பெரும் கடினத்தைத் தாங்க வல்ல கூரிய கணைகள் பலவற்றால் வெட்டப்பட்டது.(42) தன் எதிராளி {நகுலன்} ஆயுதமற்றவனாக இருப்பதைக் கண்ட கர்ணன், நேரான கணைகள் பலவற்றால் தாக்கத் தொடங்கினான், ஆனால், அவனைப் {நகுலனை} பெரிதும் பீடித்துவிடாமல் இருப்பதிலும் கவனம் செலுத்தினான்.(43) ஆயுதங்களில் சாதித்த அந்த வலிமைமிக்கப் போர்வீரனால் {கர்ணனால்} இவ்வாறு அந்தப் போரில் தாக்கப்பட்ட நகுலன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வேதனையில் வேகமாகத் தப்பி ஓடினான்.(44) மீண்டும் மீண்டும் சிரித்தபடி அவனைத் {நகுலனைத்} தொடர்ந்து சென்ற அந்த ராதையின் மகன் {கர்ணன்}, ஓ! பாரதரே, பின்வாங்கிக் கொண்டிருந்த நகுலனின் கழுத்தில், நாண் பொருத்தப்பட்ட தன் வில்லை மாட்டினான்.(45) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கழுத்தில் அந்தப் பெரிய வில்லுடன் கூடிய அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, ஒளிவட்டத்துடன் கூடிய ஆகாயத்து நிலவைப் போலவோ, இந்திரவில்லால் வளைக்கப்பட்ட ஒரு வெண்மேகத்தைப் போலவோ பிரகாசமாகத் தெரிந்தான்.(46)

அப்போது அவனிடம் {நகுலனிடம்} பேசிய கர்ணன், “நீ சொன்ன வார்த்தைகள் பயனற்றதாகின. மீண்டும் மீண்டும் என்னால் தாக்கப்பட்டிருக்கும் உன்னால் மகிழ்ச்சியாக இப்போது அவற்றைச் சொல்ல முடியாதா?(47) ஓ! பாண்டுவின் மகனே {நகுலனே}, பெரும் வலிமை கொண்ட குருக்களுடன் மீண்டும் போரிடாதே. ஓ! குழந்தாய் {நகுலா}, உனக்கு இணையானவர்களுடன் போரிடுவாயாக. ஓ! பாண்டுவின் மகனே {நகுலனே}, இதற்காக வெட்கமேதும் அடையாதே.(48) ஓ! மாத்ரியின் மகனே, வீட்டுக்குச் செல், அல்லது கிருஷ்ணனும், பல்குனனும் {அர்ஜுனனும்} எங்கிருக்கின்றனரோ அங்கே செல்வாயாக” என்றான் {கர்ணன்}. அவனிடம் {நகுலனிடம்} இவ்வாறு பேசிய பிறகு, அவன் {கர்ணன்} அவனைக் {நகுலனை} கைவிட்டுச் சென்றான்.(49) அறநெறி அறிந்தவனான கர்ணன், ஏற்கனவே காலனின் கோரப்பற்களுக்கிடையில் இருந்த நகுலனை அப்போது கொல்லவில்லை. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குந்தியின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த கர்ணன் நகுலனைச் செல்லவிட்டான்.(50)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, வில்லாளியான சூதன் மகனால் {கர்ணனால்} இவ்வாறு விடப்பட்டு, பெரும் நாணத்துடன் யுதிஷ்டிரனின் தேரை நோக்கிச் சென்றான்.(51) சூதன் மகனால் எரிக்கப்பட்ட அவன் {நகுலன்}, பெரும் துயரால் எரிந்து, ஜாடிக்குள் வைக்கப்பட்ட ஒரு பாம்பைப் போலத் தொடர்ந்து பெருமூச்சு விட்டுக் கொண்டே தன் அண்ணனின் {யுதிஷ்டிரனின்} தேரில் ஏறினான்.(52) அதே வேளையில் கர்ணன், நகுலனை வென்ற பிறகு, அழகான கொடிகளைக் கொண்டதும், நிலவைப் போன்ற வெண்மையான குதிரைகளைக் கொண்டதுமான தேரில் பாஞ்சாலர்களை எதிர்த்து வேகமாகச் சென்றான்.(53) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கௌரவப் படையின் தலைவன் {கர்ணன்}, பாஞ்சாலத் தேர்க்கூட்டங்களை நோக்கிச் செல்வதைக் கண்ட போது, பாண்டவர்களுக்கு மத்தியில் ஒரு பேராரவாரம் அங்கே உண்டானது.(54) ஓ! ஏகாதிபதி, சூரியன் நடுவானை அடைந்த அந்த வேளையில், பலமிக்கப் போர்வீரனும், சக்கரம் போன்ற சுறுசுறுப்புடன் எப்போதும் திரிந்து கொண்டிருந்தவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்} ஒரு பேரழிவை உண்டாக்கினான்.(55)

பாஞ்சாலப் போர்வீரர்கள் பலர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, நொறுங்கிய சக்கரங்கள் மற்றும் அச்சுகளுடன் கூடியவையும், உடைந்த கொடிமரங்கள் மற்றும் கிழிந்த கொடிகளுடன் கூடியவையும், குதிரைகளற்றவையும், சாரதியற்றவையுமானத் தங்கள் தேர்களில் போரில் இருந்து கொண்டு செல்லப்படுவதை நாங்கள் கண்டோம். மேலும் (கணைகளால் அங்கங்கள் எரிக்கப்பட்ட) யானைகள் பலவும், காட்டுத்தீயில் எரிந்து, அங்கங்கள் சுடப்பட்டுப் பரந்தக்காட்டில் தனியாகத் திரிவது போல அங்கே அனைத்துத் திசைகளிலும் திரிவது காணப்பட்டது. உயர் ஆன்மக் கர்ணனால் தாக்கப்பட்ட வேறு சில {யானைகள்}, மத்தகங்கள் பிளக்கப்பட்டு, அல்லது குருதியில் குளித்து, அல்லது துதிக்கைகள் துண்டிக்கப்பட்டு,(56-58) அல்லது தங்கள் கவசம் பிளந்து, அல்லது தங்கள் வால்கள் அறுபட்டு, பிரிந்து செல்லும் மேகங்களைப் போலக் கீழே விழுந்தன.(59) ராதையின் மகனுடைய கணைகள் மற்றும் வேல்களால் அச்சுறுத்தப்பட்ட வேறு சில யானைகள், சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும் பூச்சிகளைப் போல ராதையின் மகனையே எதிர்த்துச் சென்றன.(60) பெரும் யானைகள் சில, தங்கள் சாரலில் சிற்றாறுகள் பாயும் மலைகளைப் போலப் பல்வேறு அங்கங்களில் குருதியை உதிர்த்து ஒன்றையொன்று எதிர்த்துத் தாக்குவது காணப்பட்டது.(61)

முதன்மையான இனத்தைச் சேர்ந்த குதிரைகள், மார்புத்தகடுகளையும், வெள்ளி, வெண்கலம் மற்றும் தங்கத்தாலான தங்கள் ஆபரணங்களையும் இழந்து,(62) நெற்றியணி, கடிவாளங்கள், சாமரங்கள், சேணவிரிப்புகள் இழந்து, தங்கள் முதுகுகளில் இருந்து அம்பறாத்தூணிகள் விழுந்து, போர்க்கள ரத்தினங்களான தங்கள் வீரச் சாரதிகள் கொல்லப்பட்டு, களத்தில் அங்கேயும் இங்கேயும் திரிந்து கொண்டிருப்பது காணப்பட்டது.(63,64) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வேல்கள், ரிஷ்டிகள், வாள்கள் ஆகியவற்றால் துளைத்து வெட்டப்பட்டவர்களும், கவசம், தலைக்கவசம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான குதிரை வீரர்கள் பலரை, ஓ! பாரதரே, கொல்லப்பட்டோ, கொல்லப்படும் தருணத்திலோ, அச்சத்துடன் நடுங்குவதையோ, பல்வேறு அங்கங்களை இழப்பதையோ நாங்கள் கண்டோம்.(65,66) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பெரும் வேகம் கொண்ட குதிரைகள் பூட்டப்பட்டவையுமான தேர்களும், தங்கள் சாரதிகள் கொல்லப்பட்டு அங்கேயும் இங்கேயும் வேகமாக இழுத்துச் செல்லப்படுவது காணப்பட்டது.(67) இவற்றில் சிலவற்றில், ஓ! பாரதரே, அச்சுகளும், தூண்களும் உடைந்திருந்தன. சிலவை கொடிகள் மற்றும் கொடிமரங்களற்றவையாக இருந்தன. சிலவை தங்கள் ஏர்க்கால்களை இழந்தவையாக இருந்தன.(68)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சூதன் மகனின் {கர்ணனின்} கணைகளால் எரிக்கப்பட்டுத் தங்கள் தேர்களை இழந்து எங்குச் சுற்றிக் கொண்டிருக்கும் தேர்வீரர்கள் பலரும் எங்களால் அங்கே காணப்பட்டனர்.(69) சிலர் ஆயுதங்களை இழந்திருந்தனர், பெரும் எண்ணிக்கையிலான சிலர் தங்கள் கைகளில் ஆயுதங்களைக் கொண்டிருந்தாலும் உயிரற்றவர்களாகக் களத்தில் கிடப்பதும் காணப்பட்டது.(70) நட்சத்திரக்கூட்டங்கள் பதிக்கப்பட்டவையும், அழகான மணிவரிசைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், பலவண்ணங்களிலான வண்ணமயமான கொடிகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான யானைகள் பலவும் அனைத்துத் திசைகளிலும் திரிவது எங்களால் காணப்பட்டது.(71) கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் வெட்டப்பட்ட தலைகள், கரங்கள், மார்புகள், பிற அங்கங்கள் சுற்றிலும் இறைந்து கிடப்பது எங்களால் காணப்பட்டது.(72) (பாண்டவப் படையின்) போர்வீரர்கள் கூரிய கணைகளால் போரிட்ட போது, கர்ணனின் கணைகளால் சிதைக்கப்படுகையில், கடுமையான ஒரு பெரிய பேரிடர் அவர்களை ஆட்கொண்டது.(73)

சூதன் மகனால் {கர்ணனால்} அந்தப் போரில் கொல்லப்பட்ட சிருஞ்சயர்கள், சுடர்மிக்க நெருப்பை நோக்கி விரையும் பூச்சிகளைப் போலவே குருடாக அவனையே {கர்ணனையே} எதிர்த்துச் சென்றனர்.(74) உண்மையில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் பாண்டவப் படைப்பிரிவினரை எரிப்பதில் ஈடுபட்டிருந்த போது, அவனைத் {கர்ணனைத்} தவிர்த்த க்ஷத்திரியர்கள், சுடர்மிக்க யுகநெருப்பாகவே அவனைக் கருதினர்.(75) அந்தப் பேரழிவில், வீரர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்தப் பாஞ்சாலர்களில் உயிருடன் எஞ்சியோர் தப்பி ஓடினர். எனினும் நொறுங்கிப் போய்ப் பின்வாங்கிய அந்தப் போர்வீரர்களின் மீது பின்னால் இருந்து கணைகளை ஏவியபடியே கர்ணன் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான். பெரும் சக்தியைக் கொண்ட அவன் {கர்ணன்} கவசங்களையும், கொடிமரங்களையும் இழந்த அந்தப் போராளிகளைப் பின்தொடர்ந்து சென்றான்.(76) உண்மையில் பெரும் வலிமையைக் கொண்ட அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, நடுவானை அடையும்போது அனைத்து உயிரினங்களையும் அழிக்கும் இருளை அகற்றுவோனைப் {சூரியனைப்} போலத் தன் கணைகளால் அவர்களைத் தொடர்ந்து எரித்தான்” {என்றான் சஞ்சயன்}.(77)

சகுனி மற்றும் உலூகனின் வெற்றி! – கர்ண பர்வம் பகுதி – 25-யுயுத்சுவுக்கும் உலூகனுக்கும் இடையில் நடந்த மோதல்; யுயுத்சுவை வென்ற உலூகன்; சுருதகர்மனுக்கும், நகுலனின் மகனான சதானீகனுக்கும் இடையில் நடந்த மோதல்; சகுனிக்கும் பீமனின் மகனான சுதசோமனுக்கும் இடையில் நடந்த மோதல்; சகுனியின் ஆற்றல்; வாளின் ஆற்றலை வெளிப்படுத்திய சுதசோமன்; தரையில் நின்று போரிட்ட சுதசோமனை வியந்த தேவர்கள்; சுதசோமனின் வாளை வெட்டிய சகுனி; அர்ஜுனன் மகனான சுருதகீர்த்தியின் தேரில் ஏறிக்கொண்ட சுதசோமன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது மகனின் {துரியோதனனின்} பரந்த படையை முறியடித்துக் கொண்டிருந்த யுயுத்சுவை எதிர்த்து, “நில், நில்” என்று சொன்னபடியே உலூகன் வேகமாகச் சென்றான்.(1) அப்போது யுயுத்சு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இந்திரனே} வஜ்ர்த்தால் ஒரு மலையைத் தாக்குவதைப் போல, பெரும் சக்தியுடன் சிறகு படைத்த கூர்முனைக் கணையொன்றால் உலூகனைத் தாக்கினான்.(2) இதனால் சினத்தில் நிறைந்த உலூகன், அந்தப் போரில் உமது மகனின் {யுயுத்சுவின்}[1] வில்லைக் கத்தித்தலை கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} வெட்டி, முள்பதித்த கணையொன்றால் {கர்ணியால்} உமது மகனையும் {யுயுத்சுவையும்} தாக்கினான்.(3) உடைந்த அந்த வில்லை வீசியெறிந்த யுயுத்சு, கோபத்தால் கண்கள் சிவந்து, பெரும் வேகத்தைக் கொண்ட மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(4) ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பிறகு அந்த இளவரசன், அறுபது கணைகளால் உலூகனைத் துளைத்தான். அடுத்ததாக உலூகனின் சாரதியைத் துளைத்த யுயுத்சு, மீண்டும் உலூகனையும் தாகினான்.(5)அப்போது சினத்தால் நிறைந்த உலூகன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இருபது கணைகளால் யுயுத்சுவைத் துளைத்து, பிறகு தங்கத்தால் ஆன அவனது {யுயுத்சுவின்} கொடிமரத்தையும் வெட்டினான்.(6) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயர்ந்ததும், அழகானதும், தங்கத்தாலானதுமான அந்தக் கொடிமரம் (உலூகனால்) வெட்டப்பட்டு, யுயுத்சுவின் தேருக்கு முன்பாகக் கீழே விழுந்தது.(7) தன் கொடிமரம் வெட்டப்பட்டதைக் கண்ட யுயுத்சு, கோபத்தால் தன் உணர்வுகளை இழந்து, ஐந்து கணைகளால் உலூகனின் நடுமார்பைத் துளைத்தான்.(8) பிறகு அந்தப் போரில் உலூகன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதர்களிற்சிறந்தவரே, எண்ணெயில் நனைக்கப்பட்ட அகன்ற தலைக் கணை {பல்லம்} ஒன்றால் தன் எதிராளியுடைய சாரதியின் தலையை அறுத்தான்.(9) அடுத்ததாக யுயுத்சுவின் நான்கு குதிரைகளையும் கொன்ற அவன் {உலூகன்}, ஐந்து கணைகளால் அவனையும் {யுயுத்சுவையும்} தாக்கினான். பலமிக்க உலூகனால் ஆழமாகத் தாக்கப்பட்ட யுயுத்சு, மற்றொரு தேரில் ஏறினான்.(10) அவனை {யுயுத்சுவைப்} போரில் வென்ற உலாகன், பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்களை நோக்கி வேகமாக முன்னேறி, கூரிய கணைகளால் அவர்களைக் கொல்லத் தொடங்கினான்.(11)

அப்போது உமது மகன் சுருதகர்மன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, {நகுலனின் மகனான} சதானீகனைக் கண்கள் இமைப்பதற்காகும் அரைப்பொழுதிற்குள் அச்சமற்ற வகையில் குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும், தேரற்றவனாகவும் ஆக்கினான்.(12) எனினும், ஓ! ஐயா, வலிமைமிக்கத் தேர்வீரனான சதானீகன், குதிரைகளற்ற தன் தேரில் நின்றபடியே சினத்தால் நிறைந்து உமது மகனின் {சுருதகர்மனின்} மீது ஒரு கதாயுதத்தை வீசினான்.(13) அந்தக் கதாயுதமானது, உமது மகனின் தேரை அதன் குதிரைகள் மற்றும் சாரதியுடன் துண்டுகளாகக் குறைத்து, பெரும் வேகத்துடன் பூமியில் விழுந்து, அதைத் துளைத்துச் சென்றது.(14) பிறகு, குருக்களின் புகழை அதிகரிப்பவர்களும், தங்கள் தேர்களை இழந்தவர்களும், மோதலில் இருந்து விலகியவர்களுமான அவ்விரு வீரர்களும், ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டனர்.(15) அப்போது அச்சத்துக்கு ஆட்பட்ட உமது மகன் விவிம்சுவின் தேரில் ஏறிக் கொண்டான், அதே வேளையில், சதானீகனோ, {யுதிஷ்டிரனின் மகனானப்} பிரதிவிந்தியனின் தேரில் ஏறிக் கொண்டான்.(16)

சினத்தால் நிறைந்த சகுனி, {பீமசேனனின் மகனான} சுதசோமனைக் கூரிய கணைகள் பலவற்றால் துளைத்தாலும், நீர்த்தாரையானது ஒரு மலையின் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த தவறியதைப் போலப் பின்னவனை {சுதசோமனை} நடுங்கச் செய்வதில் தவறினான்.(17) தன் தந்தையின் {பீமனின்} பெரும் எதிரியைக் கண்ட சுதசோமன், ஓ! பாரதரே, பல்லாயிரம் கணைகாளல் அந்தச் சகுனியை மறைத்தான்.(18) எனினும், துல்லிய இலக்கைக் கொண்ட போர்வீரனும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனுமான அந்தச் சகுனி, போரிடும் விருப்பத்தால் இயக்கப்பட்டு, சிறகுகள் படைத்த தன் கணைகளால் அந்தக் கணைகள் அனைத்தையும் விரைவாக வெட்டினான்.(19) போரில் தன் கணைகளால் அந்தக் கணைகளைத் தடுத்த சகுனி, சினத்தால் நிறைந்து மூன்று கணைகளால் சுதசோமனைத் தாக்கினான்.(20) அப்போது உமது மைத்துனன் {சகுனி}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் எதிராளியின் குதிரைகள், கொடிமரம் மற்றும் சாரதியைத் தன் கணைகளால் நுண்ணியத் துண்டுகளாக வெட்டியதால் பார்வையாளர்கள் உரத்த கூச்சலிட்டனர்.(21) குதிரைகளையும், தேரையும் இழந்தவனும், கொடிமரம் வெட்டப்பட்டவனுமான அந்தப் பெரும் வில்லாளி (சுதசோமன்), ஒரு நல்ல வில்லை எடுத்துக் கொண்டு தன் தேரில் இருந்து கீழே குதித்துப் பூமியில் நின்றான்.(22) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், பெரும் எண்ணிக்கையிலானவையுமான கணைகளை ஏவி அந்தப் போரில் உமது மைத்துனனின் {சகுனியின்} தேரை மறைத்தான்.(23) எனினும் அந்தச் சுபலனின் மகன் {சகுனி}, வெட்டுக்கிளிகளின் கூட்டத்துக்கு ஒப்பான அந்தக் கணைமாரி தன் தேரை நோக்கி வருவதைக் கண்டும் நடுங்காதிருந்தான். மறுபுறம், அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரன் தன் கணைகளால் அக்கணைகள் அனைத்தையும் நொறுக்கினான்.(24)

தன் தேரில் இருந்த சகுனியுடன், காலாளாக நின்று போராடும் சுதசோமனின் நம்புதற்கரிய அருஞ்சலைக் கண்டவர்களான அங்கே இருந்த போர்வீரர்களும், ஆகாயத்தில் இருந்த சித்தர்களும் மிகவும் மகிழ்ந்தனர்.(25) அப்போது சகுனி, பெரும் வேகத்தைக் கொண்டவையும், கூரியவையும், முற்றிலும் நேரானவையுமான எண்ணற்ற அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} சுதசோமனின் வில்லையும், அவனது {சுதசோமனது} அம்பறாத்தூணிகள் அனைத்தையும் வெட்டினான்.(26) வில்லற்றவனாகத் தேரற்றவனாக ஆன சுதசோமன் கருநெய்தலின் வண்ணம் கொண்டதும், தந்தக் கைப்பிடி கொண்டதுமான வாள் ஒன்றை உருவியுயர்த்தி உரத்த முழக்கம் செய்தான்.(27) தெளிந்த வானின் வண்ணத்தைக் கொண்ட புத்திசாலி சுதசோமனின் அந்த வாள் சுழற்றப்பட்ட போது, அது யமதண்டத்தைப் போல மிக ஆபத்தானதாகச் சகுனியால் கருதப்பட்டது.(28) அந்த வாளைத் தரித்தவனும், திறனும், வலிமையும் கொண்டவனுமான அவன் {சுதசோமன்}, பதினான்கு {14} வகையான உத்திகளை வெளிக்காட்டியபடியே திடீரென அந்த அரங்கில் வட்டமாக {மண்டலகரமாகத்} திரியத் தொடங்கினான்[2].(29) உண்மையில் அவன் {பீமன் மகன் சுதசோமன்} அந்தப் போரில் உயரமாகச் சுழன்றும், பக்கங்களில் உந்தித் தள்ளியும், முன்னோக்கிக் குதித்தும், உயரமாக எம்பிக் குதித்தும், வேகமாக ஓடியும், முன்னோக்கி விரைந்தும், மேல்நோக்கி விரைந்தும் என இப்படித் திரிந்து கொண்டே அந்த அசைவுகள் {உத்திகள்} அனைத்தையும் வெளிக்காட்டினான்.(30) அப்போது, சுபலனின் அந்த வீரமகன் {சகுனி} தன் எதிரியின் மீது எண்ணற்ற கணைகளை ஏவினாலும், அவை அனைத்தும் தன்னை நோக்கி வந்த போதே அவற்றை அந்தச் சிறந்த வாளால் பின்னவன் {எதிரி சுதசோமன்} வெட்டினான்.(31)(இதனால்) சினத்தால் நிறந்த சுபலனின் மகன் {சகுனி}, ஓ! மன்னா, கடும் நஞ்சுகொண்ட பாம்புகளுக்கு ஒப்பான எண்ணற்ற கணைகளை மீண்டும் சுதசோமன் மீது ஏவினான்.(32) கருடனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்டவனும், தனது திறன் மற்றும் வலிமையின் துணை கொண்டவனுமான சுதசோமன், பெரும் சுறுசுறுப்பை வெளிக்காட்டியபடியே இவற்றையும் வெட்டினான்.(33) அப்போது சகுனி, தன் முன் மண்டலகாரமாகத் திரிந்து கொண்டிருந்தவனும், தன் எதிராளியுமான பின்னவனின் {சுதசோமனின்} அந்தப் பிரகாசமான வாளைப் பெரும் கூர்மை கொண்ட கத்தித் தலை கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் வெட்டினான்.(34) இவ்வாறு வெட்டப்பட்ட அந்தப் பெரிய வாளானது (அதன் பாதித் துண்டு) பூமியில் விழுந்தது, அதே வேளையில், ஓ! பாரதரே, பாதிவாளானது சுதசோமனின் பிடியிலேயே இருந்தது.(35)

தன் வாள் வெட்டப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சுதசோமன் ஆறு எட்டுகள் {நடையடிகள்} பின்வாங்கித் தன் பிடியில் இருந்த பாதி வாளைத் தன் எதிரியின் {சகுனியின்} மீது வீசினான்.(36) தங்கத்தாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் துண்டு, நாண்கயிற்றுடன் கூடிய சிறப்புமிக்கச் சகுனியின் வில்லை வெட்டி, விரைவாகப் பூமியில் விழுந்தது. அப்போது சுதசோமன் சுருதகீர்த்தியின் பெரிய தேருக்குச் சென்றான். (37,38) உறுதிமிக்கதும், வெல்லப்பட முடியாததுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட சுபலனின் மகனும் {சகுனியும்}, (வழியில்) பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளைக் கொன்றபடியே பாண்டவப் படையை நோக்கிச் சென்றான்.(39) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுபலனின் மகன் {சகுனி} அச்சமற்ற வகையில் அந்தப் போரில் திரிவதைக் கண்டு, பாண்டவர்கள் படையின் அந்தப் பகுதியில் உரத்த ஆரவாரம் எழுந்தது.(40) பெரியதும், மயிர்ச்சிலிர்ப்புடன் கூடியதும், ஆயுதங்களுடன் கூடியதுமான அந்தப் படைப்பிரிவுகள், சிறப்புமிக்கச் சுபலன் மகனால் {சகுனியால்} முறியடிக்கப்படுவதை மக்கள் கண்டனர்.(41) தேவர்களின் தலைவன் {இந்திரன்} தைத்திய படையை நசுக்குவதைப் போலவே சுபலனின் மகனும் {சகுனியும்} அந்தப் பாண்டவப் படையை அழித்தான்” {என்றான் சஞ்சயன்}.(42)

பாஞ்சால இளவரசர்களின் தோல்வி! – கர்ண பர்வம் பகுதி – 26-கிருபருக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையில் நேரந்த போர்; பீமனை நோக்கி ஓடிய திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனை வென்ற கிருபர்; சிகண்டியின் வில்லை வெட்டிய கிருதவர்மன்; கிருதவர்மனின் வில்லை வெட்டிய சிகண்டி; சிகண்டியை மயக்கமடையச் செய்த கிருதவர்மன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “செருக்குமிக்கச் சிங்கமொன்றைக் காட்டில் தடுக்கும் ஒரு சரபத்தைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கிருபர், திருஷ்டத்யும்னனைத் தடுத்தார்.(1) கௌதமரின் வலிமைமிக்க மகனால் {கிருபரால்} தடுக்கப்பட்ட பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒரேயொரு எட்டு {நடையடி} கூட முன்னேற முடியவில்லை.(2) கௌதமரின {கிருபரின்} தேரானது திருஷ்டத்யும்னனின் தேருக்கும் முன்பு இருப்பதைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும் அச்சமடைந்து, பின்னவன் {திருஷ்டத்யும்னன்} அழியும் சமயம் வந்துவிட்டதெனக் கருதின.(3)

உற்சாகமிழந்தவர்களான தேர்வீரர்கள் மற்றும் குதிரைவீரர்கள், “வலிமை, சக்தி, பெரும் நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்டவரும், தெய்வீக ஆயுதங்களை அறிந்தவரும், மனிதர்களில் முதன்மையானவருமான சரத்வான் மகன் {கிருபர்}, துரோணரின் மரணத்தால் சினத்தால் நிறைந்திருக்கிறார். இன்று திருஷ்டத்யும்னன், கௌதமரின் {கிருபரின்} கைகளில் இருந்து தப்ப முடியுமா?(4,5) இந்தப் பரந்த படை இன்று இந்தப் பேராபத்துக்குத் தப்புமா? இந்தப் பிராமணர் {கிருபர்} நம் அனைவரையும் மொத்தமாகக் கொன்றுவிடமாட்டாரா?(6) இன்று அவர் ஏற்றிருக்கும் வடிவும் அந்தகனைப் போலவே இருப்பதும், இன்று அவர் {கிருபர்} துரோணரைப் போலவே செயல்படுவார் என்பதையே காட்டுகிறது.(7) பெரும் கரநளினம் கொண்ட ஆசான் கௌதமர் {கிருபர்} போரில் எப்போதும் வெல்பவராவார். ஆயுதங்களின் அறிவையும், பெரும் சக்தியையும் கொண்ட அவர் {கிருபர்}, சினத்தால் நிறைந்திருக்கிறார்” என்றனர்.(8) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இருபடை போர்வீரர்களாலும் பேசப்படும் இது போன்ற பல்வேறு பேச்சுக்களைக் கேட்டபடியே அந்த இருவீரர்களும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(9)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் மூச்சை ஆழமாக இழுத்துவிட்டவரும், சரத்வான் மகனுமான கிருபர், செயல்படாமல் நின்றிருந்த பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} முக்கிய அங்கங்கள் அனைத்தையும் பீடிக்கத் தொடங்கினார்.(10) அந்தப் போரில் சிறப்புமிக்கக் கௌதமரால் {கிருபரால்} தாக்கப்பட்டுப் பெரிதும் கலக்கமடைந்த திருஷ்டத்யும்னன் என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(11) அப்போது அவனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} அவனது சாரதி, “ஓ! பிருஷதன் மகனே {திருஷ்டத்யும்னா}, நலமாக இருக்கிறாயா? போரில் இதற்கு முன்னர் இதுபோன்ற பேரிடரில் நீ சிக்குவதை நான் கண்டதில்லை.(12) உன் முக்கிய அங்கங்களைக் குறிபார்த்து அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரால் {கிருபரால்} ஏவப்படுபவையும், முக்கிய அங்கங்களை ஊடுருவவல்லவையுமான இந்தக் கணைகள் உன்னைத் தாக்காமல் இருப்பது நல்லூழ் தரும் ஒரு வாய்ப்பாலேயே.(13) கடலால் திருப்பப்படும் ஓர் ஆற்றின் ஓட்டத்தைப் போல, இப்போது நான் இந்தத் தேரைத் திருப்பப்போகிறேன். உன் ஆற்றலை அழிக்கும் அந்தப் பிராமணர் {கிருபர்}, உன்னால் கொல்லப்பட முடியாதவர் என்றே நான் நினைக்கிறேன்” என்றான் {திருஷ்டத்யும்னனின் சாரதி}.(14)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்படிச் சொல்லப்பட்ட திருஷ்டத்யும்னன் மெதுவாக, “ஓ! ஐயா {சாரதியே}, என் மனம் கலங்குகிறது, என் அங்கங்கள் வியர்க்கின்றன. என் உடல் நடுங்குகிறது. எனக்கு மயிர்க்கூச்சமும் ஏற்படுகிறது. போரில் அந்தப் பிராமணரைத் தவிர்த்துவிட்டு, மெதுவாக அர்ஜுனர் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக. ஓ! தேரோட்டியே, அர்ஜுனர், அல்லது பீமசேனர் ஆகியோரை அடைந்ததும், வளமை எனதாகும். இதுவே எனது உறுதியான நம்பிக்கை” என்றான்.(17) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, குதிரைகளைத் தூண்டிய அந்தத் தேரோட்டி, உமது துருப்புகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தவனும், வலிமைமிக்க வில்லாளியுமான பீமசேனன் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.(18) ஓ! ஐயா, அவ்விடத்தில் இருந்து திருஷ்டத்யும்னனின் தேர் விலகிச் செல்வதைக் கண்ட கௌதமர் {கிருபர்}, நூற்றுக்கணக்கான கணைகளை ஏவியபடையே அதைப் பின்தொடர்ந்து சென்றார்.(19) அந்த எதிரிகளை அழிப்பவர், மீண்டும் மீண்டும் தன் சங்கையும் முழங்கினார். உண்மையில் அவர் {கிருபர்}, தானவன் நமுசியை {நமூச்சியை} முறியடித்த இந்திரனைப் போலவே, அந்தப் பிருஷதன் மகனை முறியடித்தார்.(20)

பீஷ்மரின் மரணத்திற்குக் காரணனும், வெல்லப்பட முடியாதவனுமான சிகண்டி, தன்னோடு சிரித்துக் கொண்டே போரிட்டுக் கொண்டிருந்த ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} அந்தப் போரில் தடுக்கப்பட்டான்.(21) எனினும் சிகண்டி, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த ஹிருதிகனோடு {கிருதவர்மனோடு} மோதி, ஐந்து கூரிய கணைகளாலும், அகன்ற தலை கணைகளாலும் {பல்லங்களாலும்} அவனது {கிருதவர்மனது} தோள்பூட்டைத் தாக்கினான்.(22) அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், சினத்தால் நிறைந்து, சிறகு படைத்த அறுபது கணைகளால் தன் எதிரியைத் துளைத்தான். பிறகு ஒற்றைக்கணையொன்றால் அவன் {கிருதவர்மன்}, சிரித்துக் கொண்டே அவனது {சிகண்டியின்} வில்லை வெட்டினான்.(23) அந்த வலிமைமிக்கத் துருபதன் மகனை {சிகண்டி}, கோபத்தால் நிறைந்து மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு ஹிருதிகன் மகனிடம் {கிருதவர்மனிடம்}, “நில், நிற்பாயாக” என்றான்.(24) பிறகு அந்தச் சிகண்டி, ஓ! ஏகாதிபதி, பெரும் வேகம் கொண்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான தொண்ணூறு கணைகளைத் தன் எதிரியின் {கிருதவர்மனின்} மீது ஏவினான். எனினும் அந்தக் கணைகள் அனைத்தும் கிருதவர்மனின் கவசத்தில் இருந்து எதிர்விசை கொண்டு விழுந்தன.(25)

அக்கணைகள் எதிர்விசை கொண்டு பூமியின் பரப்பில் இறைந்து கிடப்பதைக் கண்ட சிகண்டி, ஒரு கத்தி தலைக் கணையால் கிருதவர்மனின் வில்லை அறுத்தான்.(26) கோபத்தால் நிறைந்த அவன் {சிகண்டி}, கொம்புகளற்ற காளைக்கு ஒப்பாக வில்லற்றவனாக இருந்த ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} கரங்களையும், மார்பையும் எண்பது கணைகளால் தாக்கினான்.(27) நீரால் நிரம்பிய கொள்கலனொன்று நீரைக் கொப்பளிப்பதைப் போலக் கணைகளால் கிழித்துச் சிதைக்கப்பட்டிருந்த கிருதவர்மன், சினத்தால் நிறைந்திருந்தாலும், தன் அங்கங்களின் ஊடாகக் குருதியைக் கக்கினான்.(28) குருதியில் குளித்த அந்தப் போஜ மன்னன் {கிருதவர்மன்}, மழைக்குப் பிறகு செஞ்சுண்ண நீரோடையைக் கீற்றுகளாக வெளியிடும் மலையொன்றைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(29)

அப்போது, நாணேற்றப்பட்டதும், கணையொன்று பொருத்தப்பட்டதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட அந்தப் பலமிக்கக் கிருதவர்மன், சிகண்டியின் தோள்ப்பூட்டைத் தாக்கினான்.(30) தோள்ப்பூட்டில் இக்கணைகளால் தைக்கப்பட்டிருந்த சிகண்டி, கிளைகளும், கொப்புகளும் பரப்பிய பெரிய மரம் ஒன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(31) ஒருவரையொருவர் துளைத்துக்கொண்டே குருதியில் குளித்து அவ்விரு போராளிகளும், கொம்புகளால் ஒன்றையொன்று குத்திக் கொள்ளும் இரண்டு காளைகளுக்கு ஒப்பாக இருந்தனர்.(32) கவனமாக ஒருவரையொருவர் கொல்ல முயன்ற அவ்வரு வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அந்த அரங்கத்தில் ஓராயிரம் வளையங்களில் நகர்ந்து சென்றனர்.(33)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரனிடம்}, அம்மோதலில் கிருதவர்மன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான எழுபது கணைகளால் பிருஷதன் மகனை {சிகண்டியைத்} துளைத்தான்.(34) பிறகு தாக்குபவர்களில் சிறந்தவனான அந்தப் போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்}, பெரும் சுறுசுறுப்புடன் பயங்கரமான ஒரு மரணக் கணையைத் தன் எதிரியின் {சிகண்டியின்} மீது ஏவினான்.(35) அதனால் தாக்கப்பட்ட சிகண்டி, விரைவில் மயக்கமடைந்தான். மலைப்புக்கு ஆட்பட்ட அவன் {சிகண்டி}, தன் கொடிக்கம்பத்தைப் பிடித்துக் கொண்டே தன்னைத் தாங்கிக் கொண்டான்.(36) அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனுடைய சாரதி, விரைவாக அவனைப் {சிகண்டியைப்} போரில் இருந்து கொண்டு சென்றான். ஹிருதிகன் மகனின் கணையால் எரிக்கப்பட்ட அவன் {சிகண்டி},மீண்டும் மீண்டும் பெருமூச்சை விட்டான்.(37) துருபதனின் வீரமகன் {சிகண்டி} தோற்ற பிறகு, ஓ! தலைவா, அனைத்துப் பக்கங்களிலும் கொல்லப்பட்ட பாண்டவப் படையானது, களத்தில் இருந்து வெளியே ஓடியது” {என்றான் சஞ்சயன்}.(38)

சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்! – கர்ண பர்வம் பகுதி – 27-சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்; பல்வேறு வீரர்களுடன் போரிட்டு அவர்களைக் கொன்றது; குருதிச் சேற்றில் திரிந்த அர்ஜுனனின் தேர்; சம்சப்தகர்களை வென்ற அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வெண்குதிரை கொண்டோனும் (அர்ஜுனனும்) கூட, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பஞ்சுக்குவியலை அணுகும் காற்றைப் போல உமது படையை முறியடித்து அனைத்துப் பக்கங்களிலும் அதைச் சிதறடித்தான்.(1) அவனை எதிர்த்து திரிகர்த்தர்கள், சிபிக்கள், கௌரவர்கள், சால்வர்கள், சம்சப்தகர்கள் ஆகியோரும், நாராயணர்களைக் கொண்ட படையும் விரைந்தன.(2) சத்யசேனன், சந்திரதேவன், மித்ரதேவன், சுருதஞ்சயன், சுஸ்ருதன் மகன், சித்திரசேனன் மற்றும் மித்ரவர்மன் ஆகியோரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெரும் வில்லாளிகளும், பல்வேறு ஆயுதங்களை அறிந்தவர்களுமான தன் தம்பிகள் மற்றும் மகன்கள் ஆகியோரால் சூழப்பட்ட திரிகர்த்தர்களின் மன்னனும் {சுசர்மனும்},(4) பெருங்கடலை நோக்கிப் பாயும் சீற்றமிகு நீரோடையைப் போல அந்தப் போரில் கணைமாரியிறைத்தபடியே திடீரென முன்னேறிச் சென்றனர்.(5)

லட்சக்கணக்கில் இருந்த அந்தப் போர்வீரர்கள், கருடனைக் கண்ட பாம்புகளைப் போலவே அர்ஜுனனை அணுகிய அழிந்து போவது தெரிந்தது.(6) போரில் கொல்லப்பட்டாலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுடர்மிக்க எருப்பில் இருந்து ஒருபோதும் பின்வாங்காத பூச்சிகளைப் போலவே அவர்கள் அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} விட்டு அகலவில்லை.(7) அம்மோதலில் சத்யசேனன், மூன்று கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான், மித்ரதேவன் அறுபத்து மூன்றாலும், சந்திரதேவன் ஏழாலும் அவனைத் துளைத்தனர்.(8) மித்ரவர்மன் அவனை எழுபத்து மூன்று கணைகளாலும், சுஸ்ருதன் மகன் ஏழாலும் துளைத்தனர். சத்ருஞ்சயன் இருபதாலும், சுசர்மன் ஒன்பதாலும் அவனைத் துளைத்தனர்.(9) அம்மோதலில் இவ்வாறு பலரால் துளைக்கப்பட்ட அர்ஜுனன், பதிலுக்கு அம்மன்னர்கள் அனைவரையும் துளைத்தான். உண்மையில், சுஸ்ருதன் மகனை ஏழு கணைகளாலும், சத்யசேனனை மூன்றாலும் அவன் துளைத்தான்,(10) சத்ருஞ்சயனை இருபதாலும், சந்திரதேவனை எட்டாலும், மித்ரதேவனை நூறாலும், சுருதசேனனை மூன்றாலும்,(11) மித்ரவர்மனை ஒன்பதாலும், சுசர்மனை எட்டாலும் அவன் துளைத்தான்.

பிறகு, கல்லில் கூராக்கப்பட்ட எண்ணற்ற கணைகளைக் கொண்டு, தலைப்பாகையால் அலங்கரிக்கப்பட்ட சுஸ்ருதன் மகனின் தலையை அவனது உடலில் இருந்து துண்டித்தான்.(12) பிறகு எந்தத் தாமதமும் செய்யாமல் எண்ணற்ற பிற கணைகளால் அவன் சந்திரதேவனை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான். வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறரைப் பொருத்தவரைத் தீவிரமாகப் போரிட்ட அவன் {அர்ஜுனன்}, அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் தடுத்தான்.(13) அப்போது சினத்தால் நிறைந்த சத்யசேனன், அந்தப் போரில் கிருஷ்ணனைக் குறி பார்த்து, உறுதிமிக்க ஒரு வேலை ஏவி, சிங்க முழக்கம் செய்தான்.(14) இரும்புவாயும், தங்கப் பிடியும் கொண்ட அந்த வேலானது, உயர் ஆன்ம மாதவனின் {கிருஷ்ணனின்} இடது கரத்தைத் துளைத்துச் சென்று பூமிக்கு ஊடுருவியது.(14) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வாறு அந்தப் பெரும்போரில் வேலால் துளைக்கப்பட்ட மாதவனின் {கிருஷ்ணனின்} கரங்களில் இருந்து சாட்டையும், கடிவாளமும் கீழே விழுந்தன.(16)

வாசுதேவனின் {கிருஷ்ணனின்} அங்கம் துளைக்கப்பட்டதைக் கண்டவனும், பிருதையின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கோபமனைத்தையும் திரட்டிக் கொண்டு வாசுதேவனிடம்,(17) “ஓ! வலிய கரங்கொண்டவனே, ஓ! பலமிக்கவனே, என் கூர்மையான கணைகளால் சத்யசேனனை நான் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவதற்கு ஏதுவாக, அவனிடம் {சத்யசேனனிடம்} தேரைக் கொண்டு செல்வாயாக” என்றான்.(18) பிறகு அந்தச் சிறப்புமிக்கக் கேசவன் {கிருஷ்ணன்}, வேகமாகத் தன் சாட்டையையும், கடிவாளங்களையும் எடுத்துக் கொண்டு, சித்திரசேனனின் வாகனத்திற்கு முன்பு அந்தத் தேரைக் கொண்டு செல்லுமாறு அந்தக் குதிரைகளைச் செய்தான்.(19) அண்டத்தின் ஆட்சியாளன் {கிருஷ்ணன்} இவ்வாறு துளைக்கப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், பிருதையின் மகனுமான அந்தத் தனஞ்சயன், சில கூரிய கணைகளால் சத்யசேனனைத் தடுத்து,(20) காதுகுண்டலங்களுடன் அலங்கரிக்கப்பட்டவனும், படையின் தலைமையில் நின்றவனுமான அந்த மன்னனுடைய பெரிய தலையைப் பெரும் கூர்மையைக் கொண்ட எண்ணற்ற அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} அவனது உடலில் இருந்து வெட்டினான்.(21) இவ்வாறு சத்யசேனனின் தலையை வெட்டிய அவன் {அர்ஜுனன்}, எண்ணற்ற கூரிய கணைகளால் சித்திரவர்மனையும் அகற்றி {கொன்று}, கன்றின் பல்லலைப் போன்ற ஒரு கூரிய கணையால் {வத்சதந்தத்தால்} பின்னவனின் சாரதியையும் அகற்றினான்.(22)

சினத்தால் நிறைந்த அந்த வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, நூற்றுக்கணக்கான கணைகளால், சம்சப்தகர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வீழ்த்தினான்.(23) பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா, வெள்ளிச் சிறகுகளைக் கொண்ட கத்தி தலை கணையொன்றால் சிறப்புமிக்க மித்ரசேனனின் தலையை வெட்டினான். மேலும் சினத்தால் நிறைந்த அவன் சுசர்மனின் தோள்ப்பூட்டைத் தாக்கினான்.(24) அப்போது கோபத்தால் நிறைந்தவர்களான சம்சப்தகர்கள் அனைவரும், தனஞ்சயனை {அர்ஜுனனை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு கணைமாரியால் அவனைப் பீடிக்கத் தொடங்கி, திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் தங்கள் கூச்சல்களால் நிறைத்தனர்.(25) இவ்வாறு அவர்களால் பீடிக்கப்பட்டவனும், அளவில்லா ஆன்மா கொண்டவனும், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான ஆற்றலைக் கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, ஐந்திர ஆயுதத்தை {ஐந்திராஸ்திரத்தை} அழைத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்வாயுதத்தில் இருந்து ஆயிரகணக்கான கணைகள் தொடர்ச்சியாக வெளிப்படத் தொடங்கின.(26)

அப்போது, ஓ! மன்னா, கொடிமங்கள், அம்பறாத்தூணிகள், நுகத்தடிகள், அச்சுக்கட்டைகள், சக்கரங்கள், பூட்டாங்கயிறுகள், கூபரங்கள், தேர்த்தட்டுகள், கூபரங்கள் ஆகியவற்றைச் சுற்றிலும் கொண்டவையும், குதிரைகள், சூலங்கள், கதாயுதங்கள், முள் பதித்த தண்டங்கள், ஈட்டிகள், வேல்கள், கோடரிகள், சக்கரங்களுடன் கூடிய சதாக்னிகள், கணைகள், தொடைகள், கழுத்தாரங்கள், அங்கதங்கள், கேயூரங்கள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மாலைகள், கவசங்கள், ஓ! பாரதரே, குடைகள், விசிறிகள், கிரீடங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகள் ஆகியவற்றுடன் கூடியவையுமான தேர்கள் விழுகையில் உரத்த ஆரவாரம் கேட்டது.(27-31) காது குண்டலங்கள் மற்றும் அழகிய கண்களால் அலங்கரிக்கப்பட்டவையும், முழு நிலவுக்கு ஒப்பானவையுமான தலைகள் ஒவ்வொன்றும், ஆகாயத்து நட்சத்திரங்களைப் போலக் களத்தில் கிடந்தன.(32) அழகிய மலர்மாலைகள், சிறந்த ஆடைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையும், சந்தனக்குழம்பு பூசப்பட்டவையுமாகக் கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கும் போர்வீரர்களின் உடல்கள் பலவாக இருந்தன.(33)

பயங்கரமாக இருந்த அந்தப் போர்க்களமானது, நீராவி வடிவங்கள் நிறைந்து மேகங்களுடன் கூடிய ஆகாயத்தைப் போலத் தெரிந்தது. கொல்லப்பட்ட பெரும் வலிமைமிக்க இளவரசர்கள் மற்றும் க்ஷத்திரியர்களுடனும்,(34) வீழ்ந்திருந்த யானைகள், குதிரைகள் ஆகியவற்றுடனும் கூடிய பூமியானது, மலைகளால் விரவிக் கிடப்பதைப் போல அந்தப் போரில் கடக்க முடியாததானது.(35) தொடர்ச்சியாகத் தன் எதிரிகளைக் கொல்வதிலும், யானைகள் மற்றும் குதிரைகளைத் தன் அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} தாக்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்தச் சிறப்புமிக்கப் பாண்டவனின் தேர்ச் சக்கரங்களுக்கு அங்கே பாதையேதும் இல்லை.(36) ஓ! ஐயா, அந்தப் போரில் குருதிச் சேற்றில் திரிவதால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக அவனது {அர்ஜுனனின்} தேர்ச்சக்கரங்கள் நிற்பது போலத் தெரிந்தது.(37) எனினும், மனம், அல்லது காற்றின் வேகத்துடன் கூடிய அவனது {அர்ஜுனனது} குதிரைகள், நகர மறுத்த அந்தச் சக்கரங்களைப் பெரும் முயற்சியுடனும், உழைப்புடனும் இழுத்தன.(38) இவ்வாறு வில்தரித்த அந்தப் பாண்டு மகனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட அந்தப் படையானது, எதிரியை எதிர்த்து எஞ்சிநிற்போன் எவனும் இல்லாமல் கிட்டத்தட்ட மொத்தமாகவே தப்பி ஓடியது.(39) அந்தப் போரில் பெரும் எண்ணிக்கையிலான சம்சப்தகர்களை வென்றதும், பிருதையின் மகனான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, புகையற்றச் சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமா-யுதிஷ்டிரனை அச்சமில்லாமல் எதிர்கொண்ட துரியோதனன்; துரியோதனனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்று, அவனது கொடிமரம், வில் மற்றும் வாள் ஆகியவற்றை வீழ்த்திய யுதிஷ்டிரன்; பேராபத்தான நிலையில் துரியோதனன் தரையில் நிற்பதைக் கண்டு அங்கே விரைந்த கௌரவர்கள்; யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்ட பாண்டவர்கள்; அதன் பிறகு நடந்த போர் குறித்த வர்ணனை…கத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.(40)

துரியோதனனை நிராயுதபாணியாக்கிய யுதிஷ்டிரன்! – கர்ண பர்வம் பகுதி – 28-யுதிஷ்டிரனை அச்சமில்லாமல் எதிர்கொண்ட துரியோதனன்; துரியோதனனின் குதிரைகளையும், சாரதியையும் கொன்று, அவனது கொடிமரம், வில் மற்றும் வாள் ஆகியவற்றை வீழ்த்திய யுதிஷ்டிரன்; பேராபத்தான நிலையில் துரியோதனன் தரையில் நிற்பதைக் கண்டு அங்கே விரைந்த கௌரவர்கள்; யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்ட பாண்டவர்கள்; அதன் பிறகு நடந்த போர் குறித்த வர்ணனை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யுதிஷ்டிரன் பெரும் எண்ணிக்கையிலான கணைகளை ஏவிக் கொண்டிருந்தபோது, மன்னன் துரியோதனன் அவனை {யுதிஷ்டிரனை} அச்சமற்ற வகையில் எதிர்கொண்டு வரவேற்றான்.(1) நீதிமானான அரசன் யுதிஷ்டிரன், வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகனை {துரியோதனனைத்} வேகமாகத் துளைத்து, மூர்க்கத்துடன் அவனை நோக்கி விரைந்து, “நில், நிற்பாயாக” என்றான்.(2) எனினும் துரியோதனன், ஒன்பது கணைகளால் பதிலுக்கு யுதிஷ்டிரனைத் துளைத்து, பெருங்கோபத்தால் நிறைந்து, அகன்ற தலை கணை {பல்லம்} ஒன்றால் யுதிஷ்டிரனின் சாரதியையும் தாக்கினான்.(3)

அப்போது மன்னன் யுதிஷ்டிரன், தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பதிமூன்று கணைகளைத் துரியோதனன் மீது ஏவினான்.(4) நான்கு கணைகளால் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {யுதிஷ்டிரன்}, தன் எதிரியின் {துரியோதனனின்} நான்கு குதிரைகளைக் கொன்று, ஐந்தாவதால், துரியோதனனுடைய சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(5) ஆறாவதால் (குரு) மன்னனின் {துரியோதனனின்} கொடிமரத்தைப் பூமியில் வீழ்த்தி, ஏழாவதால் அவனது வில்லையும், எட்டாவதால் அவனது வாளையும் வீழ்த்தினான்.(6) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், மேலும் ஐந்து கணைகளால் அந்தக் குரு ஏகாதிபதியையும் {துரியோதனனையும்} ஆழமாகப் பீடித்தான்.(7) அப்போது உமது மகன், குதிரைகள் அற்ற அந்தத் தேரில் இருந்து இறங்கி, உடனடி ஆபத்துடன் கூடியவனாகப் பூமியில் நின்றான். பேரச்சம் கொள்ளத்தக்க அந்தச் சூழ்நிலையில் அவனைக் கண்டவர்களான கர்ணன், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர் மற்றும் பிறர், மன்னனை {துரியோதனனை} மீட்கும் விருப்பத்தால் அவ்விடத்தை நோக்கித் திடீரென விரைந்தனர்.(8) பிறகு பாண்டுவின் மகன்கள் {பிறர்} அனைவரும் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்டு அம்மோதலில் பங்கேற்றதால், ஒரு கடும் போர் அங்கே நிகழ்ந்தது.(9)

அந்தப் பெரும் போரில் ஆயிரக்கணக்கான எக்காளங்கள் முழங்கின, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எண்ணற்ற குரல்களின் குழப்பான ஆரவாரம் அங்கே எழுந்தது.(10) எங்கே கௌரவர்களுடன் பாஞ்சாலர்கள் போரிட்டார்களோ, அங்கே மனிதர்களோடு மனிதர்கள் நெருங்கினர் {போரிட்டனர்}, யானைகளோடு, முதன்மையான யானைகளும் நெருங்கின.(11) தேர்வீரர்கள் தேர்வீரர்களோடு நெருங்கினர், குதிரைகள் குதிரைகளோடும் நெருங்கின. பெரும் ஆற்றலைக் கொண்டவர்களும், பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைத் தரித்தவர்களும், பெரும் திறன் கொண்டவர்களும், இருவர் இருவராகப் போரிடுபவர்களான பல்வேறு மனிதர்களும், விலங்குகளும், அந்தக் களத்தில் அழகாகக் காட்சியளித்தன.(12) பெரும் மூர்க்கம் கொண்டவர்களான அந்த வீரர்கள் அனைவரும், ஒருவருக்கொருவர் அழிவை ஏற்படுத்த விரும்பி, பெரும் சுறுசுறுப்புடனும், திறனுடனும் போரிட்டனர்.(13) அந்தப் போரில் அவர்கள், போர்வீரர்களின் (ஒப்பளிக்கப்பட்ட) நடைமுறைகளை நோற்று ஒருவரையொருவர் கொன்றனர். அவர்களில் எவரும் பின்னாலிருந்து {பின்புறத்தில் இருந்து} போரிடவில்ல.(14) மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே அந்தப் போர் அழகிய தன்மையைக் கொண்டிருந்தது. விரைவில் அது, போராளிகள் ஒருவருக்கொருவர் எந்த மதிப்பையும் காட்டாதவகையில் வெறிபிடித்த மனிதர்களின் மோதலாக மாறியது.(15)

தேர்வீரன் யானையை அணுகி, கூரிய கணைகளால் துளைத்து, நேரான கணைகளால் அதை யமனிடம் அனுப்பினான்.(16) அந்தப் போரில் பல்வேறு இடங்களில் யானைகள் குதிரைகளை அணுகி, அவற்றில் பலவற்றைக் கீழே இழுத்து (தங்கள் தந்தங்களால்) மிகக் கொடூரமாக அவற்றைக் கிழித்தன.(17) பெரும் எண்ணிக்கையிலான குதிரைவீரர்களும் கூட, குதிரைகளில் முதன்மையான பலவற்றைச் சூழ்ந்து கொண்டு, தங்கள் உள்ளங்கைகளால் உரத்த ஒலியை உண்டாக்கி, அவற்றுடன் நெருங்கினர்.(18), அந்தக் குதிரைவீரர்கள், அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருந்த குதிரைகளையும், அதே போலக் களத்தில் பின்புறத்திலும், பக்கங்களிலும் திரிந்து கொண்டிருந்த பெரும் யானைகள் பலவற்றையும் கொன்றனர்.(19) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மதங்கொண்ட யானைகள், பெரும் எண்ணிக்கையிலான குதிரைகளை முறியடித்து, தங்கள் தந்தங்களால் அவற்றைக் கொன்றன, அல்லது பெரும்பலத்துடன் அவற்றை நசுக்கின.(20) கோபத்தால் நிறைந்த சில யானைகள் தங்கள் தந்தங்களால் குதிரைவீரர்களோடு கூடிய குதிரைகளைத் துளைத்தன. வேறு சில, அவற்றைப் பெரும்பலத்துடன் பிடித்து, பெரும்பலத்துடன் தரையில் வீசியெறிந்தன.(21) சரியான வாய்ப்புகளைப் பெற்ற காலாட்படை வீரர்களால் தாக்கப்பட்ட பல யானைகள், வலியால் பயங்கரமாகக் கூச்சலிட்டபடியே அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடின.(22)

அந்தப் பெரும்போரில், தங்கள் ஆபரணங்களை வீசியெறிந்துவிட்டு, ஓடிப்போன காலாட்படை வீரர்களில் பலர், அந்தக் களத்தில் விரைவாக {எதிரிகளால்} சூழப்பட்டனர். பெரும் யானைகளைச் செலுத்திய யானைவீரர்கள், வெற்றியின் குறியீடுகளைப் புரிந்து கொண்டு, தங்கள் விலங்குகளுடன் சுழன்று, அவற்றைக் கொண்டு அந்த அழகிய ஆபரணங்களைப் பிடிக்கச் செய்து, தங்கள் தந்தங்களால் அவர்களைத் துளைக்கச் செய்தனர்.(23,24) பெரும் மூர்க்கத்தையும், கடும் வலிமையையும் கொண்ட வேறு சில காலாட்படை வீரர்கள், இவ்விளையாட்டுகளில் ஈடுபடும் அந்த யானைவீரர்களைச் சூழ்ந்து கொண்டு அவர்களைக் கொல்லத் தொடங்கினர்.(25) அந்தப் பெரும்போரில் மேலும் சிலர், யானைகளின் துதிக்கைகளால் காற்றில் தூக்கி வீசப்பட்டுக் கீழே விழுகையில், பயிற்சி பெற்ற அவ்விலங்குகளின் தந்தநுனிகளால் துளைக்கப்பட்டனர்.(26) திடீரெனப் பிற யானைகளால் பிடிக்கப்பட்ட சிலர், அவற்றின் தந்தங்களால் தங்கள் உயிரை இழந்தனர். தங்கள் படைப்பிரிவுகளில் இருந்து வேறு படைப்பிரிவுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட சிலர், ஓ! மன்னா, அந்தப் பெரும் யானைகளால் மீண்டும் மீண்டும் தரையில் உருட்டப்பட்டுச் சிதைக்கப்பட்டனர்.(27) வேறு சிலர், விசிறிகளைப் போல உயரச் சுழற்றப்பட்டு அந்தப் போரில் கொல்லப்பட்டனர். சிலர், நின்று கொண்டிருந்த யானைகள் பிறவற்றுக்கு முன்னிலையில் அங்கேயும் இங்கேயும் களத்தில் திரிந்த யானைகளால் தங்கள் உடல்கள் அதிகமாகத் துளைக்கப்பட்டு, கிழிக்கப்பட்டனர்.(28)

பல யானைகள், தங்கள் குமடுகள், மத்தகங்கள் மற்றும் தங்கள் தந்தங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சூலங்களாலும், வேல்களாலும், ஈட்டிகளாலும், ஆழமாகக் காயம்பட்டன.(29) தங்கள் பக்கங்களில் நின்றிருந்த கடுமையான தேர்வீரர்களாலும், குதிரைவீரர்களாலும் மிகவும் பீடிக்கப்பட்ட பல யானைகள் தங்கள் உடல் பிளக்கப்பட்டுப் பூமியில் விழுந்தன.(30) அந்தப் பயங்கரப் போரில், தங்கள் குதிரைகளில் இருந்த குதிரைவீரர்கள் பலர், தங்கள் வேல்களால் காலாட்படை வீரர்களைத் தாக்கி, அவர்களைப் பூமியில் செருகினர், அல்லது பெரும்பலத்துடன் அவர்களை நசுக்கினர்.(31) மூர்க்கமான, பயங்கரமான அந்தப் போரில் சில யானைகள், ஓ ஐயா, கவசம் பூண்ட தேர்வீரர்களை அணுகி, அவர்களது வாகனங்களில் இருந்து அவர்களை உயரத்தூக்கி, பெரும்பலத்துடன் அவர்களைக் கீழே பூமியில் தூக்கி விசின.(32) துணிக்கோல் கணையால் கொல்லப்பட்ட சில யானைகள், இடியால் பிளக்கப்பட்ட மலைச் சிகரங்களைப் போலக் கீழே பூமியில் விழுந்தன.(33)

போராளிகளுடன் மோதிய போராளிகள், தங்கள் கை முட்டிகளால் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர், அல்லது ஒருவரையொருவர் முடியைப் பற்றி இழுத்துக் கீழே வீசி ஒருவரையொருவர் சிதைக்கத் தொடங்கினர்.(34) வேறு சிலர் தங்கள் கரங்களை விரித்துக் கீழே பூமியில் தங்கள் எதிரிகளை வீசி, தங்கள் பாதங்களை அவர்களது மார்புகளில் வைத்துப் பெரும் சுறுசுறுப்புடன் அவர்களது தலைகளை வெட்டினர்.(35) சில போராளிகள், ஓ! மன்னா, இறந்து போன சில எதிரிகளைத் தங்கள் பாதங்களால் தாக்கினர். ஓ! மன்னா, சிலர், கீழே விழும் எதிரியின் தலையைத் தங்கள் வாளால் வெட்டினர்.(36) சிலர், உயிருடன் உள்ள எதிரியின் உடலில் தங்கள் ஆயுதத்தால் குத்தினர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கைமுட்டிகளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டவர்கள், அல்லது ஒருவரையொருவர் மயிர்ப்பற்றிக் கொண்டவர்கள், அல்லது வெறுங்கரங்களுடன் ஒருவரோடொருவர் மற்போரிட்டவர்கள் ஆகிய போராளிகளுக்கிடையில் அங்கே கடும்போர் நடந்தது.(37) பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைப் பயன்படுத்திய போராளிகள், வேறு சிலருடன் போரிட்டுக் கொண்டிருந்தவர்களும், அவர்களைக் காணாதவர்களுமான போராளிகளின் உயிர்களைப் பல சந்தர்ப்பங்களில் எடுத்தனர்.(38)

பொதுவாக நடந்த அந்தப் போரில், போராளிகள் அனைவரும் சிதைக்கப்பட்ட போது, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தலையில்லா முண்டங்கள் அந்தக் களத்தில் எழுந்து நின்றன.(39) உறைந்த குருதியில் நனைந்த ஆயுதங்களும், கவசங்களும், மிக அழகிய சிவப்பால் {சிவப்பு நிறத்தால்} வண்ணமேற்றப்பட்ட துணிகளைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(40) பயங்கர ஆயுத மோதல்களால் குறிக்கப்பட்ட அந்தக் கடும்போரானது இவ்வாறே நடந்தது. வெறிபிடித்து முழங்கும் கங்கையின் ஓடையானது மொத்த அண்டத்தையுமே தன் ஆரவாரத்தால் நிறைப்பதைப் போல அது தெரிந்தது.(41) கணைகளால் பீடிக்கப்பட்ட போர்வீரர்களால், எதிரிகளிடமிருந்து தங்கள் நண்பர்களை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. வெற்றியை வேண்டிய மன்னர்கள், தாங்களும் போரிட வேண்டும் என்று நினைத்தே அங்கே போரிட்டனர்.(42) அந்தப் போர்வீரர்கள், அருகில் வந்த நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இருவரையும் கொன்றனர். இரு படைகளையுஞ் சேர்ந்த போராளிகளும், அவர்களைச் சீற்றத்துடன் தாக்கிய இருபடை வீரர்களாலும் தங்கள் அறிவை இழந்தனர் {மயக்கமடைந்தனர்}.(43)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நொறுங்கிய தேர்கள், விழுந்த யானைகள், தரையில் கிடக்கும் குதிரைகள், வீழ்த்தப்பட்ட மனிதர்கள்,(44) உறைந்த இரத்தம் மற்றும் சதைகளின் சேறு ஆகியவற்றுடன் கூடிய பூமியானது, குருதியோடைகளால் மறைக்கப்பட்டு, விரைவில் கடக்கப்பட முடியாததானது.(45) கர்ணன் பாஞ்சாலர்களைக் கொன்றான், அதே வேளையில் தனஞ்சயன் {அர்ஜுனன்} திரிகர்த்தர்களைக் கொன்றான். ஓ! மன்னா, பீமசேனன், குருக்களையும், அவர்களின் படைப்பிரிவின் யானைகள் அனைத்தையும் கொன்றான்.(46) இவ்வாறே, சூரியன் நடுவானைக் கடந்த அந்த வேளையில், பெரும்புகழை வெல்லும் விருப்பத்தால் உந்தப்பட்ட குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு துருப்புகளின் அழிவும் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.(47)

துரியோதனனைக் கொல்லாமல் விட்ட யுதிஷ்டிரன்! – கர்ண பர்வம் பகுதி – 29-யுதிஷ்டிரனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் நடந்த போர் எவ்வாறு தொடர்ந்தது என்று திருதராஷ்டிரன் கேட்க அதை விவரித்த சஞ்சயன்; தேரை இழந்திருந்த துரியோதனன், மற்றொரு தேரை அடைந்து யுதிஷ்டிரனை எதிர்த்தது; யுதிஷ்டிரனின் வில்லை வெட்டிய துரியோதனன்; துரியோதனனின் கொடிமரத்தையும், வில்லையும் வெட்டிய யுதிஷ்டிரன்; கதாயுதத்தை எடுத்த துரியோதனன்; ஈட்டி ஒன்றால் துரியோதனனின் மார்பைத் துளைத்து அவனை மயக்கமடையச் செய்த யுதிஷ்டிரன்; துரியோதனனைக் கொல்லாதவாறு யுதிஷ்டிரனைத் தடுத்த பீமசேனன்; துரியோதனனை அடைந்த கிருதவர்மன்; கிருதவர்மனை எதிர்த்து விரைந்த பீமசேனன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, கசப்பானவையும், தாங்கிக் கொள்ள முடியாதவையுமான துன்பங்கள் பலவற்றையும், என் மகன்களால் நீடிக்கும் இழப்புகளையும் உன்னிடமிருந்து நான் கேட்டேன்.(1) ஓ! சூதா {சஞ்சயா}, நீ என்னிடம் சொன்னதிலிருந்தும், போரில் {நாம்} போரிட்டு வரும் முறையிலிருந்தும், இனி மேல் கௌரவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது என் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது.(2) அந்தப் பயங்கரப் போரில் துரியோதனன், தேரற்றவனாகச் செய்யப்பட்டான். (அப்போது) தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} எவ்வாறு போரிட்டான்? அரசன் துரியோதனன் பதிலுக்கு எவ்வாறு போரிட்டான்?(3) அந்தப் பிற்பகலில் வேளையில் அந்தப் போர் எவ்வாறு நடந்தது? ஓ! சஞ்சயா, உரையாற்றுவதில் திறம் கொண்டவனாக இருப்பதால் இவை யாவற்றையும் எனக்கு நீ விரிவாகச் செல்வாயாக” என்றான்.(4)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இரு படைகளின் துருப்புகளும் தங்கள் தங்கள் படைப்பிரிவுகளின்படி போரிட்டுக் கொண்டிருந்தபோது, ஓ!மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன் துரியோதனன், மற்றொரு தேரைச் செலுத்திக் கொண்டு, கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலச் சினத்தால் நிறைந்து, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்டு, வேகமாகத் தன் சாரதியிடம், “செல், செல்வாயாக.(5,6) ஓ! சாரதியே, கவசம்பூண்டவனும், தன் தலைக்கு மேலே பிடிக்கப்பட்டிருக்கும் குடையின் கீழ் ஒளிர்ந்து கொண்டிருப்பவனுமான பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்} எங்கிருக்கிறானோ, அங்கே என்னை விரைந்து கொண்டு செல்வாயாக” என்றான்.(7) மன்னனால் {துரியோதனனால்} இவ்வாறு தூண்டப்பட்ட சாரதி, தன் அரசத்தலைவனின் {துரியோதனனின்} சிறந்த தேரை யுதிஷ்டிரனின் முகத்தை நோக்கி விரைவாகத் தூண்டினான்.(8) இதனால் சினத்தால் நிறைந்தவனும், மதங்கொண்ட யானையைப் போலத் தெரிந்தவனுமான யுதிஷ்டிரனும் தன் சாரதியிடம், “துரியோதனன் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக” என்று சொல்லித் தூண்டினான்.(9)அப்போது, சகோதரர்களும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களும், வீரர்களுமான அவ்விருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர். பெரும் சக்தி கொண்டவர்களும், கோபத்தால் நிறைந்தவர்களும், போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களும், பெரும் வில்லாளிகளுமான அவ்விருவரும் அந்தப் போரில் தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் சிதைக்கத் தொடங்கினர்.(10) பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் மன்னன் துரியோதனன், கல்லில் கூராக்கப்பட்ட அகன்ற தலை கணை {பல்லம்} ஒன்றால் அந்த அறம்சார்ந்த ஏகாதிபதியின் வில்லை இரண்டாக வெட்டினான்.(11) சினத்தால் நிறைந்த யுதிஷ்டிரனால் இந்த அவமதிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தன் உடைந்த வில்லை வீசிவிட்டுக் கோபத்தால் கண்கள் சிவந்தவனும், தன் படைகளுக்குத் தலைமையில் நின்றவனுமான அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, துரியோதனனின் கொடிமரத்தையும், வில்லையும் வெட்டினான்.(13) பிறகு, துரியோதனன் மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு பாண்டுவின் மகனைத் துளைத்தான். சினத்தால் நிறைந்த அவர்கள், ஒருவரை நோக்கி மற்றவர் கணைமாரி ஏவுவதைத் தொடர்ந்தனர்.(14)

ஒருவரையொருவர் வெல்ல விரும்பிய அவர்கள், கோபக்காரச் சிங்கங்கள் இரண்டிற்கு ஒப்பாகவே இருந்தனர். முழங்கிக் கொண்டிருக்கும் இரு காளைகளைப் போல அந்தப் போரில் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(15) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தேவையான நேரத்தில் தாமதிக்கும் {சில} தவறுகளை ஒருவரிடமொருவர் எதிர்பார்த்தபடியே தொடர்ந்து {அங்கே} திரிந்து கொண்டிருந்தனர். பிறகு, முழுமையாக வளைக்கப்பட்ட விற்களில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் காயமடைந்த அவ்விரு போர்வீரர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலர்ந்திருக்கும் கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தனர். ஓ! மன்னா, அப்போது அவர்கள் மீண்டும் மீண்டும் சிங்க முழக்கம் செய்தனர்.(16,17) மனிதர்களின் ஆட்சியாளர்களான அவ்விருவரும், அந்தப் பயங்கரமான போரில், தங்கள் உள்ளங்கைகளால் உரத்த ஒலிகளை உண்டாக்கி, தங்கள் விற்களில் உரக்க நாணொலிக்கவும் செய்தனர். அவர்கள் தங்கள் சங்குகளையும் பெரும்பலத்துடன் ஊதினார்கள்.(18) மேலும் அவர்கள் ஒருவரையொருவர் அதிகமாகப் பீடித்தனர். அப்போது மன்னன் யுதிஷ்டிரன், சினத்தால் நிறைந்து, தடுக்கப்பட முடியாதவையும், இடியின் சக்தியைக் கொண்டவையுமான மூன்று கணைகளால் உமது மகனின் {துரியோதனனின்} மார்பைத் தாக்கினான். எனினும், உமது அரசமகன் {துரியோதனன்}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான ஐந்து கூரிய கணைகளால் அவனைப் {யுதிஷ்டிரனைப்} பதிலுக்குத் துளைத்தான்.(19-20)

அப்போது மன்னன் துரியோதனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அனைவரையும் கொல்லவல்லதும், மிகக் கூர்மையானதும், சுடர்மிக்கப் பெரிய பந்தத்திற்கு ஒப்பானதுமான ஈட்டி {சக்தி} ஒன்றை வீசினான்.(21) அது சென்று கொண்டிருந்தபோதே, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கூரிய கணைகளால் அதை மூன்று துண்டுகளாக விரைவாக வெட்டி, ஐந்து கணைகளால் துரியோதனனையும் துளைத்தான்.(22) தங்கக் கைப்பிடியைக் கொண்டதும், விஸ் என்ற உரத்த ஒலியை உண்டாக்கியதுமான அந்த ஈட்டியானது, கீழே விழுந்தபோது, சுடர்மிக்கத் தழல்களுடன் கூடிய பெரிய பந்தம் ஒன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(23) அந்த ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கூர்முனை கொண்ட ஒன்பது கூரிய கணைகளால் யுதிஷ்டிரனைத் தாக்கினான்.(24) தன் வலிமைமிக்க எதிரியால் {துரியோதனனால்} ஆழத் துளைக்கப்பட்ட அந்த எதிரிகளை எரிப்பவன் {யுதிஷ்டிரன்}, துரியோதனன் மீது குறி வைப்பதற்காகக் கணையொன்றை எடுத்தான்.(25) வலிமைமிக்க யுதிஷ்டிரன் அந்தக் கணையைத் தன் வில்லின் நாணில் பொருத்தினான்.(26) பிறகு, சினத்தால் நிறைந்தவனும், பெரும் வீரத்தைக் கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அதை {அந்தக் கணையைத்} தன் எதிரியின் மீது ஏவினான். வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகனைத் {துரியோதனனைத்} தாக்கிய அந்தக் கணை,(27) அவனை மலைக்கச் செய்த பிறகு, (அவனது உடலை ஊடுருவி கடந்து சென்று) பூமிக்குள் நுழைந்தது.

பிறகு, கோபத்தால் நிறைந்த துரியோதனன், பெரும் மூர்க்கத்தைக் கொண்ட கதாயுதம் ஒன்றை உயர்த்திக் கொண்டே,(28) (குருக்களுக்கும், பாண்டுக்களுக்கும் இடையில் இருந்த) பகைமைகளை முடித்துக் கொள்வதற்காக, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தான். கதாயுதத்தை உயர்த்தியவனும், தண்டத்துடன் கூடிய யமனுக்கு ஒப்பானவனுமான அவனை {துரியோதனனைக்} கண்ட(29) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், வலிமைமிக்கதும், காந்தியால் சுடர்விடுவதும், பெரும் மூர்க்கத்தைக் கொண்டதும், சுடர்விடும் பந்தத்தைப் போலத் தெரிந்ததுமான ஈட்டி {சக்தி ஆயுதம்} ஒன்றை உமது மகனின் {துரியோதனனின்} மீது வீசினான்.(30) தன் தேரில் நின்று கொண்டிருந்த குரு இளவரசன் {துரியோதனன்}, அந்தக் கணையால் மார்பில் ஆழமாகத் துளைக்கப்பட்டு, ஆழமான வலியை உணர்ந்து, கீழே விழுந்து மயக்கமடைந்தான்.(31) அப்போது தன் சபதத்தை நினைவுகூர்ந்த பீமன், யுதிஷ்டிரனிடம், “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இவன் உம்மால் கொல்லப்படக்கூடாது” என்றான். இதனால் யுதிஷ்டிரன் (தன் எதிரிக்கு இறுதி அடியைக் கொடுப்பதில் இருந்து) விலகினான்[1].(32)அந்த நேரத்தில், துன்பப் பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருந்த உமது அரசமகனிடம் {துரியோதனனிடம்}, கிருதவர்மன் மிக வேகமாக வந்து சேர்ந்தான்.(33) அப்போது பீமன், தங்கத்தாலும், சணலாலான கயிறுகளாலும் அலங்கரிக்கப்பட்ட கதாயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டு, அந்தப் போரில் கிருதவர்மனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(34) அந்தப் பிற்பகல் வேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்ட உமது துருப்பு மற்றும் எதிரி துருப்புப் போராளிகளுக்கு இடையில் இவ்வாறே போர் நடந்தது[2].(35)

அர்ஜுனன் மற்றும் சாத்யகியின் ஆற்றல்! – கர்ண பர்வம் பகுதி – 30-கர்ணனுக்கும், சாத்யகிக்கும் இடையில் நேர்ந்த போர்; சாத்யகியால் அதிகம் பீடிக்கப்படும் கர்ணனைக் கண்டு சாத்யகியை எதிர்த்துச் சென்ற கௌரவர்கள்; கௌரவர்களை விரட்டிய சாத்யகி; அர்ஜுனனை எதிர்த்த துரியோதனன்; துரியோதனனைத் தேரற்றவனாகச் செய்த அர்ஜுனன் மரணக் கணையொன்றைத் துரியோதனன் மீது ஏவியது; அர்ஜுனனின் கணையை வெட்டிய அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மனைத் திக்குமுக்காடச் செய்த அர்ஜுனன் அடுத்ததாகக் கர்ணனை எதிர்த்துச் சென்றது; சாத்யகியை விட்டுவிட்டு அர்ஜுனனோடு மோதிய கர்ணன்; சூரியன் மறைந்தது; பதினாறாம் நாள் முடிவு…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் வீழ்த்தக் கடினமானவர்களான உமது போர்வீரர்கள், கர்ணனை முன்னணியில் நிறுத்திக் கொண்டு, திரும்பிவந்து, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்ததற்கு ஒப்பான ஒரு போரை (எதிரியுடன்) போரிட்டனர்.(1) யானைகள், மனிதர்கள், தேர்கள், குதிரைகள், சங்குகள் ஆகியவற்றால் உண்டாக்கப்பட்ட பேராரவாரத்தால் தூண்டப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான யானைவீரர்கள், தேர்வீரர்கள், காலாட்படை வீரர்கள், குதிரைவீரர்கள் ஆகியோர், கோபத்தால் நிறைந்து, எதிரியை எதிர்த்துச் சென்று, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களின் வீச்சுக்களால் அவர்களைக் கொன்றனர்.(2) அந்தப் பயங்கரப் போரில் யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியவையும், மனிதர்களும், கூரிய போர்க்கோடரிகள், வாள்கள், கோடரிகள், பல்வேறு வகைகளிலான கணைகள் மற்றும் தங்கள் விலங்குகள் ஆகியவற்றைக் கொண்டு துணிச்சல்மிக்கப் போர்வீரர்களால் கொல்லப்பட்டனர்.(3)

வெண்பற்கள், அழகிய முகங்கள், அழகிய கண்கள், சிறந்த மூக்குகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையும், அழகிய கிரீடங்களாலும், காதுகுண்டலங்களாலும், அருளப்பட்டவையும், தாமரை, அல்லது சூரியன், அல்லது சந்திரன் ஆகியவற்றுக்கு ஒப்பானவையுமான மனிதத்தலைகள் விரவிக்கிடந்ததால் பூமியானது மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.(4) ஆயிரக்கணக்கான யானைகளும், மனிதர்களும், குதிரைகளும், நூற்றுக்கணக்கான பரிகங்கள், குறுந்தடிகள் {உலக்கைகள்}, ஈட்டிகள் {சக்திகள்}, வேல்கள் {தோமரங்கள்}, அங்குசங்கள், புசுண்டிகள் மற்றும் கதாயுதங்களால் கொல்லப்பட்டன. {அவற்றால் சிந்தப்பட்ட} சிந்திய குருதி அந்தக் களத்தில் ஆற்றைப் போன்ற ஓர் ஓடையை உண்டாக்கியது.(5) அந்தத் தேர்வீரர்களும், மனிதர்களும், குதிரைகளும், யானைகளும் எதிரியால் கொல்லப்பட்டு, பயங்கரத் தன்மைகளுடனும், காயங்களின் பிளவுகளுடனும் கிடந்ததன் விளைவால், அண்ட அழிவின் போது மரணத்தின் மகனுடைய {யமனின்} ஆட்சிப்பகுதியைப் போல அந்தப் போர்க்களம் தெரிந்தது.(6)

அப்போது, ஓ! மனிதர்களில் தேவரே {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளும், தேவர்களின் பிள்ளைகளுக்கு ஒப்பாகத் தெரியும் குருக்களில் காளைகளான உமது மகன்கள் அனைவரும், அளவில்லா வலிமையைக் கொண்ட போர்வீரர்களைக் கொண்ட ஒரு படையைத் தங்கள் முன்னணியில் கொண்டு, சிநி குலத்துக் காளையான சாத்யகியை எதிர்த்துச் சென்றனர்.(7) அதன் பேரில் அந்தப் படையானது, மனிதர்களில் முதன்மையானோரும், குதிரைகளும், தேர்களும், யானைகளும் நிரம்பிய அந்தப் படையானது ஆழ்கடலின் உரத்த ஆரவாரத்தை உண்டாக்கி, அசுரர்களின் படைக்கோ, தேவர்களின் படைக்கோ ஒப்பானதாக அழகில் கடுமையாக ஒளிர்ந்தது.(8)

அப்போது தேவர்களின் தலைவனுக்கு ஒப்பான ஆற்றலையுடையவனும், இந்திரனின் தம்பியைப் போன்றவனுமான அந்தச் சூரியன் மகன் {கர்ணன்}, சூரியக் கதிர்களுக்கு ஒப்பான காந்தியையுடைய கணைகளால் அந்தச் சிநி குலத்தில் முதன்மையானவனை {சாத்யகியைத்} தாக்கினான்.(9) அந்தப் போரில், அந்தச் சிநி குலத்தின் காளையும் {சாத்யகியும்}, தன் தேர், குதிரைகள் மற்றும் சாரதியாலும், நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவையும், பல்வேறு வகைகளிலானவையுமான பயங்கரக் கணைகளாலும் அந்த மனிதர்களில் முதன்மையானவனை {கர்ணனை} மறைத்தான்.(10) பிறகு, தேர்வீரர்களில் காளையான அந்த வசுசேனன் {கர்ணன்}, அந்தச் சிநி குலத்தின் முதன்மையான வீரனின் {சாத்யகியின்} கணைகளால் ஆழமாகப் பீடிக்கப்படுவதைக் கண்டவர்களும், உமது படையைச் சார்ந்தவர்களுமான அதிரதர்கள் பலர், யானைகள், தேர்கள் மற்றும் காலாட்படை வீரர்களின் துணையுடன் அவனை {கர்ணனை} வேகமாக அணுகினர்.(11) எனினும், பெருங்கடலைப் போன்று பரந்திருந்த அந்தப் படையானது, எதிரிகளும், பெரும் வேகம் கொண்டவர்களும், துருபதன் மகன்களின் தலைமையில் இருந்தவர்களுமான பாண்டவப் போர்வீரர்களால் தாக்கப்பட்டுக் களத்தில் இருந்து தப்பி ஓடியது. அந்த நேரத்தில், மனிதர்களுக்கும், தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளுக்கு ஒரு பேரழிவு நேர்ந்தது.(12)

அப்போது, மனிதர்களில் முதன்மையானவர்களான அந்த அர்ஜுனனும், கேசவனும் {கிருஷ்ணனும்}, தினப்படியான தங்கள் வேண்டுதல்களைச் சொல்லி, தலைவன் பவனை முறையாக வழிபட்டு, உமது துருப்புகளை எதிர்த்துத் தங்கள் எதிரிகளான அவர்களைக் கொல்லும் தீர்மானத்துடன் வேகமாக விரைந்தனர்.(13) அவர்களது எதிரிகள் (குருக்கள்), மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான சடசடப்பொலி கொண்டதும், காற்றில் அழகாக அசையும் கொடிகளைக் கொண்டதும், வெண்குதிரைகள் பூட்டப்பட்டதுமான அந்தத் தேரின் மீது உற்சாகமற்ற வகையில் தங்கள் கண்களைச் செலுத்தினர்.(14) அப்போது காண்டீவத்தை வளைத்த அர்ஜுனன், தன் தேரில் நர்த்தனம் புரிந்தபடியே, சிறு வெற்றிடத்தையும் விட்டுவிடாமல் ஆகாயத்தையும், முக்கிய மற்றும் துணைத்திசைகள் அனைத்தையும் கணைகளின் மாரியால் நிறைத்தான்.(15) மேகங்களை அழிக்கும் சூறாவளியைப் போல அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, நன்கு அலங்கரிக்கப்பட்டவையும், ஆயுதங்கள், கொடிமரங்கள் மற்றும் சாதரிகளுடன் ஆயத்தம் செய்யப்பட்டவையும், தேவர்களின் வாகனங்களைப் போலத் தெரிந்தவையுமான தேர்கள் பலவற்றைத் தன் கணைகளால் அழித்தான்.(16) வெற்றிக் கொடிகள் மற்றும் ஆயுதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகள் பலவற்றையும், அவற்றை வழிநடத்திய மனிதர்களையும், குதிரைகளுடன் கூடிய குதிரைவீரர்கள் பலரையும், காலாட்படைவீரர்களில் பலரையும் கூட அர்ஜுனன் தன் கணைகளால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(17)

அப்போது துரியதோனன், கோபத்துடன் இருந்தவனும், தடுக்கப்பட முடியாதவனும், உண்மையில் யமனுக்கு ஒப்பானவனுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {அர்ஜுனனை} எதிர்த்து தனியனாகவே சென்று, அவனைத் {அர்ஜுனனைத்} தன் நேரான கணைகளால் தாக்கினான்.(18) தன் எதிராளியின் {துரியோதனன்} வில், சாரதி, குதிரைகள், கொடிமரம் ஆகியவற்றை ஏழு கணைகளால் வெட்டிய அர்ஜுனன், அடுத்ததாக ஒரு கணையால் அவனது குடையையும் அறுத்தான்.(19) அப்போது ஒரு வாய்ப்பை அடைந்த அவன் {அர்ஜுனன்}, தாக்கப்படும் மனிதனின் உயிரை எடுக்க வல்ல சிறந்த கணையொன்றைத் துரியோதனனின் மீது ஏவினான். எனினும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அக்கணையை ஏழு துண்டுகளாக வெட்டினான்.(20) பிறகு துரோணர் மகனின் வில்லை வெட்டி, தன் கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் கொன்ற பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அடுத்ததாக, கிருபரின் உறுதிமிக்க வில்லையும் அறுத்தான்.(21) பிறகு ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} வில்லை வெட்டிய அவன் {அர்ஜுனன்}, அவனது {கிருதவர்மனின்} கொடிமரத்தையும், குதிரைகளையும் வீழ்த்தினான். அடுத்து துச்சாசனனின் வில்லை வெட்டிய அவன் {அர்ஜுனன்}, ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்துச் சென்றான்.(22)

இதனால் சாத்யகியை விட்டகன்ற கர்ணன், விரைவாக மூன்று கணைகளால் அர்ஜுனனையும், இருபதால் கிருஷ்ணனையும் துளைத்து, மீண்டும் மீண்டும் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான்.(23) கோபத்தால் தூண்டப்பட்ட இந்திரனைப் போலவே அந்தப் போரில் தன் எதிரிகளைக் கொல்லும்போது, கர்ணனால் ஏவப்பட்ட கணைகள் பலவாக இருந்தாலும் அவன் {அர்ஜுனன்} களைப்பெதையும் உணரவில்லை.(24) அதேவேளையில், முன்னே வந்த சாத்யகி, தொண்ணூற்று ஒன்பது {99} கடுங்கணைகளால் கர்ணனைத் துளைத்து, மீண்டும் ஒரு நாறாலும் துளைத்தான்.(25) அப்போது பார்த்தர்களில் முதன்மையான வீரர்கள் அனைவரும் கர்ணனைப் பீடிக்கத் தொடங்கினர். யுதாமன்யு, சிகண்டி, திரௌபதியின் மகன்கள், பிரப்ரகர்கள்,(26) உத்தமௌஜஸ், யுயுத்சு, இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, திருஷ்டத்யும்னன், சேதிகள், காருஷர்கள், மத்ஸ்யர்கள் மற்றும் கைகேயர்களின் படைப்பிரிவினர்,(27) வலிமைமிக்கச் சேகிதானன், சிறந்த நோன்புகளைக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன் ஆகிய இவர்கள் அனைவரும், தேர்கள், குதிரைகள், யானைகள், கடும் ஆற்றலைக் கொண்ட காலாட்படைவீரர்கள் ஆகியோரின் துணையுடன்,(28) அந்தப் போரில் கர்ணனை அனைத்துப் பக்கங்களில் சூழ்ந்து கொண்டு, அவனுக்கு அழிவையுண்டாக்கத் தீர்மானித்துக் கடுஞ்சொற்களால் அவனிடம் {கர்ணனிடம்} பேசி, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை அவன் மீது பொழிந்தனர்.(29)

தன் கூரிய கணைகளால் அவ்வாயுதமாரியை அறுத்த கர்ணன், காற்றானது தன் வழியில் நிற்கும் மரங்களை முறித்துத் தள்ளுவதைப் போல, தன் ஆயுதங்களின் சக்தியால் தன் எதிராளிகளை அகற்றினான்.(30) கோபத்தால் நிறைந்த கர்ணன், தேர்வீரர்கள், பாகர்களுடன் கூடிய யானைகள், குதிரை வீரர்களுடன் கூடிய குதிரைகள் மற்றும் பெரும் கூட்டங்களான காலாட்படைவீரர்களைக் கொல்பவனாகக் காணப்பட்டான்.(31) கர்ணனின் ஆயுதங்களுடைய சக்தியால், அந்தப் பாண்டவர்களின் மொத்த படையே கிடத்தட்ட கொல்லப்பட்டு, ஆயுதங்களை இழந்தவர்களாக, அங்கங்கள் கிழிந்து சிதைந்தவர்களாக, களத்தில் இருந்து ஓய்ந்து செல்பவர்களாக ஆக்கப்பட்டனர்.(32) அப்போது சிரித்துக் கொண்டிருந்த அர்ஜுனன், தன் ஆயுதங்களால் கர்ணனின் ஆயுதங்களைக் கலங்கடித்து, கணைகளின் அடர்த்தியான மழையால், ஆகாயம், பூமி மற்றும் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தான்.(33)

அர்ஜுனனின் கணைகள், கனமான தண்டங்களைப் போலவும், பரிகங்களைப் போலவும் பாய்ந்தன. அவற்றில் சில சதக்னிகளைப் போலப் பாய்ந்தன, சில சீற்றமிக்க இடியைப் போலப் பாய்ந்தன.(34) இவற்றால் கொல்லப்பட்டவையும், காலாட்படை, குதிரை, தேர்கள் மற்றும் யானைகளைக் கொண்டவையுமான அந்தக் கௌரவப்படையானது, அதன் கண்களை அடைத்துக் கொண்டு, உரத்தத் துன்ப ஒலங்களை வெளியிட்டபடி, உணர்வற்றவர்களாகத் திரிந்து கொண்டிருந்தனர்.(35) அந்தச் சந்தர்ப்பத்தில் கொல்லப்பட்ட குதிரைகள், மனிதர்கள் மற்றும் யானைகளும் பலவாகும். மீண்டும் கணைகளால் தாக்கப்பட்டு, ஆழமாகப் பீடிக்கப்பட்டு பலர் அச்சத்தால் தப்பி ஓடினர்.(36)

வெற்றியடையும் விருப்பத்தால் உமது போர்வீரர்கள், இவ்வாறு போரிட்டுக் கொண்டிருந்தபோது, சூரியன் அஸ்த மலையை அடைந்து அதனுள் நுழைந்தான்.(37) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இருளாலும், குறிப்பாகப் புழுதியாலும், சாதகமாகவோ, பாதகமாகவோ எங்களால் எதையும் காண முடியவில்லை.(38) ஓ! பாரதரே, இரவுப்போருக்கு அஞ்சிய (கௌரவர்களில்) வலிமைமிக்க வில்லாளிகள் தங்கள் போராளிகள் அனைவருடன் களத்தை விட்டுச் சென்றனர்.(39) ஓ! மன்னா, அந்த நாளின் முடிவில் கௌரவர்கள் சென்றதும், வெற்றி அடைந்ததால் மகிழ்ந்த பார்த்தர்களும், தங்கள் முகாம்களுக்குச் சென்று,(40) தங்கள் இசைக்கருவிகளால் பல்வேறு வகைகளிலான ஒலிகளை உண்டாக்கித் தங்கள் எதிரிகளை ஏளனம் செய்து, அச்யுதனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் பாராட்டினர்.(41) அந்த வீரர்கள் இவ்வாறு படையை விலக்கிக் கொண்டதும், துருப்புகள் அனைத்தும், மன்னர்கள் அனைவரும் பாண்டவர்களை வாழ்த்தினார்கள்.(42) {படைகள்} விலகிய பிறகு, பாவமற்ற மனிதர்களான பாண்டவர்கள், பெருமகிழ்ச்சியடைந்து, தங்கள் பாசறைகளுக்குச் சென்று அங்கே இரவில் ஓய்ந்திருந்தனர்.(43) பெரும் எண்ணிக்கையிலான ராட்சசர்கள், பிசாசங்கள், ஊனுண்ணும் விலங்குகள் ஆகியன, ருத்திரனின் விளையாட்டுக்களத்திற்கு ஒப்பான அந்தப் பயங்கரப் போர்க்களத்திற்கு வந்தன” {என்றான் சஞ்சயன்}.(44)

கர்ணன் சொன்ன பலவீனங்கள்! – கர்ண பர்வம் பகுதி – 31-அர்ஜுனனின் சிறப்பைச் சொன்ன திருதராஷ்டிரன்; போர்க்களத்தில் நேர்ந்தவற்றைச் சொல்லத் தொடங்கிய சஞ்சயன்; அர்ஜுனனைப் புகழ்ந்த கர்ணன்; அர்ஜுனனுக்கு எதிரான தன் பலங்களையும், பலவீனங்களையும் சொன்ன கர்ணன்; விஜயம் என்ற கர்ணனுடைய வில்லின் சிறப்பு; பலவீனங்களை நேராக்கி மேம்பட்டவனாகத் திகழத் துரியோதனனிடம் சில ஏற்பாடுகளைச் செய்ய சொன்ன கர்ணன்; ஏற்பாடுகள் நிறைவேற்றப்பட்டால் சாதிப்பேன் என்ற கர்ணன்; வாக்களித்த துரியோதனன் சல்லியனிடம் பேசியது..

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அர்ஜுனன் உங்கள் அனைவரையும் தன் விருப்பப்படி கொன்றான் என்றே தெரிகிறது. உண்மையில் யமனே அர்ஜுனனுக்கு எதிராக ஆயுதங்களை எடுத்தாலும், அவனும் போரில் அவனிடம் தப்ப முடியாது.(1) தனியொருவனாகவே பார்த்தன் {அர்ஜுனன்} பத்திரையை {சுபத்திரையை} அபகரித்தான், தனியொருவனாகவே அவன் அக்னியையும் மனநிறைவு கொள்ளச் செய்தான். தனியொருவனாகவே அவன் மொத்த உலகையும் அடிபணியச் செய்து, மன்னர்கள் அனைவரையும் கப்பம் கட்டச் செய்தான்.(2) தன் தெய்வீக வில்லுடன் தனியொருவனாகவே அவன் நிவாதகவசர்களைக் கொன்றான். தனியொருவனாகவே அவன் {அர்ஜுனன்}, வேட வடிவத்தில் தன் முன் நின்ற மகாதேவனுடன் {சிவனுடன்} போரிட்டான்.(3) தனியொருவனாகவே அவன் பாரதர்களைக் காத்தான், மேலும் தனியொருவனாகவே அவன் பவனையும் {சிவனையும்} மனநிறைவு கொள்ளச் செய்தான். கடும் ஆற்றலைக் கொண்ட பூமியின் மன்னர்கள் அனைவரும் அவனால் {அர்ஜுனனால்} தனியொருவனாகவே வெல்லப்பட்டனர்.(4) குருக்களை {கௌரவர்களைப்} பழிக்க முடியாது. மறுபுறம் அவர்கள் (இத்தகு போர்வீரனொருவனுடன் போர் செய்ததால்) பாராட்டுக்குரியவர்களே. அவர்கள் {கௌரவர்கள்} என்ன செய்தனர் என இப்போது எனக்குச் சொல்வாயாக. ஓ! சூதா {சஞ்சயா}, அதன் பிறகு துரியோதனன் என்ன செய்தான் என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.(5)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தாக்கப்பட்டு, காயம்பட்டு, தங்கள் வாகனங்களில் இருந்து வீழ்த்தப்பட்டு, கவசத்தை இழந்து, ஆயுதங்களை இழந்து, தங்கள் விலங்குகள் கொல்லப்பட்டு, அவலக் குரல்களுடனும், எரியும் துயரத்துடனும், தங்கள் எதிரிகளால் வெல்லப்பட்டவர்களும், இறுமாப்புடன் கூடியவர்களுமான கௌரவர்கள், தங்கள் பாசறைகளுக்குள் நுழைந்து, மீண்டும் ஒருவரோடொருவர் கலந்தாலோசித்தனர். அவர்கள், விஷத்தையும், பற்களையும் இழந்து மிதிபட்ட பாம்புகளைப் போலத் தெரிந்தனர்.(6,7) கோபக்காரப் பாம்பைப் போலப் பெருமூச்சு விட்ட கர்ணன், தன் கரங்களைப் பிசைந்தபடி உமது மகனைப் {துரியோதனனைப்} பார்த்துக் கொண்டே அவர்களிடம்,(8) “அர்ஜுனன் கவனம்நிறைந்தவனாகவும், உறுதிமிக்கவனாகவும், திறனைக் கொண்டவனாகவும், நுண்ணறிவு கொண்டவனாகவும் எப்போதும் இருக்கிறான். மேலும், நேரம் வரும்போது வாசுதேவன் {கிருஷ்ணன்} (என்ன செய்ய வேண்டும் என்பதில்) அவனை விழிப்புணர்வு கொள்ளச் செய்கிறான்.(9) இன்று, அந்தத் திடீர் ஆயுதமழையைக் கொண்டு, அவனால் நாம் வஞ்சிக்கப்பட்டோம். எனினும் நாளை, ஓ! பூமியின் தலைவா {துரியோதனா}, அவனது {அர்ஜுனனது} நோக்கங்கள் அனைத்தையும் நான் மழுங்கடிப்பேன்” என்றான் {கர்ணன்}.(10)

கர்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட துரியோதனன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, அந்த மன்னர்களில் முதன்மையானோர் ஓய்வெடுக்க அனுமதி அளித்தான். மன்னனால் {துரியோதனனால்} அனுமதிக்கப்பட்ட அந்த ஆட்சியாளர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பாசறைகளுக்குச் சென்றனர்.(11) அவ்விரவை மகிழ்ச்சியாகக் கழித்த அவர்கள், (அடுத்த நாள்) போருக்கு உற்சாகமாகச் சென்றனர்.(12) அப்போது அவர்கள், பிருஹஸ்பதி மற்றும் உசனஸ் {சக்கிராச்சாரியார்} ஆகியோரின் இசைவுக்கேற்றபடி, குரு {கௌரவக்} குலத்தில் முதன்மையானவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனால், பெருங்கவனத்துடன் அமைக்கப்பட்ட, வெல்லப்பட முடியாத வியூகம் ஒன்றைக் கண்டனர்.(13)

அப்போது எதிரிகளைக் கொல்பவனான துரியோதனன், எதிரிகளுக்கு எதிர்வினையாற்றுபவனும், காளைபோன்ற {காளையின் திமிலைப் போன்ற} கழுத்தைக் கொண்ட போர்வீரனும், போரில் புரந்தரனுக்கும் {இந்திரனுக்கும்}, வலிமையில் மருத்துக்களுக்கும், சக்தியில் கார்த்தவீரியனுக்கும் இணையான வீரக் கர்ணனை மனத்தில் நினைத்தான். உண்மையில், மன்னனின் {துரியோதனனின்} இதயம் கர்ணனை நோக்கியே திரும்பியது.(14,15) பேராபத்தான நிலையில் நண்பனை நாடும் ஒருவனின் இதயத்தைப் போல, துருப்புகள் அனைத்தின் இதயங்களும் வலிமைமிக்க வில்லாளியும், வீரனுமான அந்தச் சூதன் மகனை {கர்ணனை} நோக்கித் திரும்பின {நாடின}” {என்றான் சஞ்சயன்}.(16)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா {சஞ்சயா}, விகர்த்தனன் {சூரியன்} மகனான கர்ணனை உங்கள் அனைவரின் இதயங்களும் நாடிய போது, அடுத்ததாகத் துரியோதனன் என்ன செய்தான்?(17) குளிரால் பீடிக்கப்பட்ட மனிதர்கள் தங்கள் பார்வையைச் சூரியனை நோக்கித் திருப்புவதைப் போல என் துருப்பினரும் தங்கள் கண்களை ராதையின் மகன் {கர்ணன்} மேல் செலுத்தினரா? துருப்புகளைத் திருப்பி அழைத்த பிறகு, போர் மீண்டும் தொடங்கியதும்,(18) ஓ! சஞ்சயா, விகர்த்தனன் மகனான கர்ணன் எவ்வாறு போரிட்டான்? அந்தச் சூதன் மகனுடன் {கர்ணனுடன்} பாண்டவர்கள் அனைவரும் எவ்வாறு போரிட்டனர்?(19) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கர்ணன், தனியொருவனாகவே பார்த்தர்களையும், சிருஞ்சயர்களையும் கொல்வான். கர்ணனுடைய கரங்களின் வலிமையானது போரில் சக்ரன் {இந்திரன்}, அல்லது விஷ்ணுவுக்கு இணையானதாகும்.(20) அவனது ஆயுதங்கள் மூர்க்கமானவை, அந்த உயர் ஆன்மா கொண்டவனின் ஆற்றலும் மூர்க்கமானதே. கர்ணனை நம்பியே மன்னன் துரியோதனன் தன் இதயத்தைப் போரில் நிலைநிறுத்தினான்.(21) துரியோதனன், அந்தப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} ஆழமாகப் பீடிக்கப்பட்டதைக் கண்டும், பெரும் ஆற்றலை வெளிப்படுத்தியவர்களான பாண்டுவின் மகன்களைப் பார்த்தும், வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன் என்ன செய்தான்?(22)

ஐயோ, கர்ணன் மீது கொண்ட நம்பிக்கையாலேயே பார்த்தர்களையும், அவர்களுடன் கூடிய அவர்களது மகன்களையும், கேசவனையும் {கிருஷ்ணனையும்} வெல்ல முடியும் என மூடனான துரியோதனன் நம்புகிறான்.(23) ஐயோ, கர்ணனால் தன் பலத்தைக் கொண்டு போரில் பாண்டுவின் மகன்களை வெல்ல முடியாது என்பதே பெருந்துயரத்தைத் தருகிறது. விதியே உயர்வானது என்பதில் ஐயமில்லை.(24) ஐயோ, அந்தச் சூதாட்டத்தின் பயங்கர முடிவு இதோ வந்திருக்கிறது. ஐயோ, ஓ! சஞ்சயா, துரியோதனனின் செயல்களால் உண்டானவையும், பெரும் எண்ணிக்கையிலானவையும், பயங்கரக் கணைகளைப் போன்றவையுமான இதயத்தைப் பிளக்கும் கவலைகளை நான் இப்போது {என் இதயத்தில்} சுமக்கிறேன்.(25) ஓ! ஐயா {சஞ்சயா}, அப்போதெல்லாம், சுபலனின் மகனே {சகுனியே}, கூர்மதிகொண்டோனாகக் கருதப்பட்டான். கர்ணனும், மன்னன் துரியோதனனிடம் மிக அதிகமான பற்றுடன் எப்போதும் இருக்கிறான்.(26) ஐயோ, வழக்கு இப்படியிருக்கையில், ஓ! சஞ்சயா, தோல்விகளையும், எனது மகன்களின் மரணங்களையும் நான் ஏன் அடிக்கடிக் கேட்கிறேன்.(27) போரில் பாண்டவர்களைத் தடுக்கவல்லவர்கள் எவரும் இல்லையே. ஆதரவற்ற பெண்களுக்கு மத்தியில் நுழையும் மனிதனைப் போல, அவர்கள் என் படைக்குள் ஊடுருவுகிறார்கள். உண்மையில், விதியே உயர்வானது” என்றான் {திருதராஷ்டிரன்}.(28)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பகடையாட்டம் மற்றும் பிறவற்றைப் போன்ற உமது நீதிமிக்கச் செயல்கள் அனைத்தையும் இப்போது நினைப்பீராக. எந்தச் செயல்பாடுகள் கடந்தனவோ அவையே மனிதனின் சிந்தனை நோக்கங்களாக அமைகின்றன.(29) எனினும், ஒருவன் கடந்த போன செயல்களைச் சிந்திக்கக்கூடாது. அத்தகு சிந்தனையால் ஒருவன் அழிந்து போகக்கூடும். ஞானம் கொண்டவராக இருப்பினும், உமது செயல்களின் நன்மை, அல்லது தீமைகளை நீர் சிந்தித்துப் பார்க்காததால், (நீர் எதிர்பார்த்த) அவ்விளைவு பலனளிக்கும் இடத்தில் இருந்து இப்போது நீங்கியது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களுடன் போரிடுவதற்கு எதிராகப் பல முறை உமக்கு ஆலோசனை வழங்கப்பட்டது[1].(30,31) எனினும், ஓ! ஏகாதிபதி, மடமையினால் அவ்வாலோசனைகளை நீர் ஏற்கவில்லை. பாண்டுவின் மகன்களுக்கு எதிராகப் பயங்கர இயல்பைக் கொண்ட பாவம் நிறைந்த பல்வேறு செயல்கள் உம்மால் செய்யப்பட்டன.(32) அச்செயல்களுக்காகவே இப்போது இந்த மன்னர்களின் பயங்கரப் படுகொலைகள் நேர்ந்திருக்கின்றன. எனினும் அவையாவும் இப்போது கடந்தவையே. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வருந்தாதீர்.(33) மங்கா புகழ் கொண்டவரே, நேர்ந்துவிட்ட பயங்கரப் பேரழிவின் விவரங்களை இப்போது கேட்பீராக.இரவு விடிந்ததும் கர்ணன், மன்னன் துரியோதனனிடம் சென்றான்.(24) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரன் {கர்ணன்}, மன்னனை {துரியோதனனை} அணுகி, “ஓ! மன்னா, சிறப்புமிக்கப் பாண்டு மகனுடன் {அர்ஜுனனுடன்} நான் இன்று போரிடுவேன்.(35) இன்று நான் அந்த வீரனைக் கொல்வேன், அல்லது அவன் {அர்ஜுனன்} என்னைக் கொல்வான். ஓ! பாரதா {துரியோதனா}, நானும், பார்த்தனும் {அர்ஜுனனும்} போரிட வேண்டியிருந்தாலும், ஓ! மன்னா, பல்வேறு காரியங்களால் எனக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் இதுவரை அது {நேரடி சந்திப்பு} நடக்கவில்லை. ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, என் ஞானத்தில் பேசப்படும் இந்த என் வார்த்தைகளை இப்போது கேட்பாயாக.(36,37) ஓ! பாரதா {துரியோதனா}, போரில் பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்லாமல் நான் திரும்பேன். முதன்மையான போர்வீரர்களை நம் படை இழந்திருப்பதாலும், போரில் நான் இருப்பேன் என்பதாலும், அதிலும் குறிப்பாகச் சக்ரன் {இந்திரன்} எனக்களித்த ஈட்டியை நான் இழந்துவிட்டேன் என்பதாலும், பார்த்தன் {அர்ஜுனன்} என்னை எதிர்த்து வருவான். எனவே, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {துரியோதனா}, எது நன்மை என்பதை இப்போது கேட்பாயாக.(38,39)

என் தெய்வீக ஆயுதங்களின் சக்தியானது, அர்ஜுனனின் ஆயுதங்களின் சக்திக்கு இணையானதே. பலமிக்க எதிரிகளின் சாதனைகளுக்கு எதிர்வினை ஆற்றுவதிலும், கரநளினத்திலும், கணைகள் ஏவப்படும் தொலைவிலும்,(40) திறனிலும், குறியைத் தாக்குவதிலும் சவ்யசச்சின் {அர்ஜுனன்} ஒருபோதும் எனக்கு நிகராகமாட்டான். ஓ! பாரதா, உடல்பலம், துணிச்சல், (ஆயுத) அறிவு, ஆற்றல்,(41) குறி பார்த்தல் ஆகியவற்றிலும் சவ்யசச்சின் {அர்ஜுனன்} ஒருபோதும் எனக்கு இணையாக மாட்டான். விஜயம் என்று அழைக்கப்படும் என் வில்லானது (அதன் வகையில்) ஆயுதங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும்.(42) அஃது (இந்திரனுக்கு) ஏற்புடையதைச் செய்ய விரும்பிய (தெய்வீகக் கைவினைஞன்) விஸ்வகர்மனால் இந்திரனுக்காகவே செய்யப்பட்டதாகும். ஓ! மன்னா {துரியோதனா}, அவ்வில்லால் இந்திரன் தைத்தியர்களை வென்றான்.(43) அதன் நாணொலியால் தைத்தியர்கள் {திசைகளின்} பத்து புள்ளிகளையும் வெறுமையாகக் கண்டனர்[2]. அனைவராலும் மதிக்கப்பட்ட அந்த வில்லைச் சக்ரன் {இந்திரன்}, பிருகுவின் மகனிடம் (ராமரிடம் {பரசுராமரிடம்}) கொடுத்தான்.(44) விற்களில் முதன்மையான அந்தத் தெய்வீக வில்லைப் பிருகுவின் மகன் {பரசுராமர்} என்னிடம் கொடுத்தார். கூட்டமாகக் கூடியிருக்கும் தைத்தியர்களுடன் அந்த வில்லைக் கொண்டு போரிடும் இந்திரனைப் போல நான், வெற்றியாளப் போர்வீரர்களில் முதன்மையானவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அர்ஜுனனுடன் போரிடுவேன். ராமர் {பரசுராமர்} பரிசளித்த அந்த உறுதிமிக்க வில்லானது {விஜயம் என்ற வில்லானது}, காண்டீவத்திற்கும் மேன்மையானதாகும். இந்த வில்லைக் கொண்டுதான் (பிருகுவின் மகனால் {பரசுராமரால்} இந்தப் பூமி இருபத்தோரு முறை வெல்லப்பட்டது. (45-47) ராமர் எனக்களித்த அந்த வில்லுடனே நான் அந்தப் பாண்டுவின் மகனுடன் போரிடுவேன்.

ஓ! துரியோதனா, வெற்றியாளர்களில் முதன்மை வீரனான அந்த அர்ஜுனனைப் போரில் கொன்று உன்னையும், உன் நண்பர்களையும் இன்று நான் மகிழ்ச்சியடையச் செய்வேன். (உன் விருப்பத்தை எதிர்க்க) ஒரு போர்வீரனும் இல்லாதவளும், மலைகள், காடுகள், தீவுகள் ஆகியவற்றுடன் கூடியவளும், நீயும், உன் மகன்களும், பேரர்களும் மேன்மையாக ஆளக்கூடியவளுமான மொத்த பூமியும் இன்று உனதாவாள். உனக்கு ஏற்புடையதைச் செய்வதே குறிப்பான நோக்கம் என்பதால், துறவியின் வெற்றியானது, அறத்தில் அர்ப்பணிப்பும், பற்றார்வமும் கொண்ட ஒருவனால் தவற விட முடியாததைப் போல, இன்று என்னால் அடையப்பட முடியாத ஏதும் கிடையாது. நெருப்பிலிருக்கும் மரத்தால் அந்த மூலகத்தை {பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பைத்} தாங்கிக் கொள்ள முடியாததைப் போலவே, போரில் அர்ஜுனனால் என்னைத் தாங்கிக் கொள்ள முடியாது.(47-51)

எனினும் எந்த அடிப்படையில் நான் அர்ஜுனனுக்குத் தாழ்ந்தவனாக இருக்கிறேன் என்பதை நான் அறிவிக்க வேண்டும். அவனது வில்லின் நாண்கயிறு தெய்வீகமானது, அவனது அம்பறாத்தூணிகள் இரண்டும் வற்றாதவையாகும். அவனது சாரதி கோவிந்தனாவான் {கிருஷ்ணனாவான்}.(52) அவனைப் {கிருஷ்ணனைப்} போல ஒருவன் எனக்கு இல்லை. விற்களில் முதன்மையானதும், தெய்வீகமானதும், போரில் அழிவற்றதும், காண்டீவம் என்றழைக்கப்படுவதுமான வில் அவனுடையது.(53) சிறந்ததும், தெய்வீகமானதும், உறுதிமிக்கதுமான விஜயம் என்று அழைக்கப்படும் வில்லை நானும் கொண்டிருக்கிறேன். எனவே, எங்கள் விற்களைப் பொறுத்தவரையில், ஓ! மன்னா, நான் அர்ஜுனனுக்கு மேம்பட்டவனாகவே இருக்கிறேன்[3].(54) பாண்டுவின் வீர மகன் {அர்ஜுனன்} எப்பொருட்களில் எல்லாம் என்னைவிட மேம்பட்டவனாக இருக்கிறான் என்பதை இப்போது கேட்பாயாக. (அவனது குதிரைகளின்) கடிவாளங்களைப் பிடிப்பவன், உலகங்கள் அனைத்தாலும் புகழப்படும் தசார்ஹகுலத்தோனாவான் {கிருஷ்ணனாவான்}.(55) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், எப்பகுதியிலும் ஊடுருவப்பட முடியாததுமான அவனது தெய்வீகத் தேரும், ஓ! வீரா {துரியோதனா}, மனோவேகம் கொண்ட அவனது குதிரைகளும், அக்னியால் அவனுக்கு {அர்ஜுனனால்} அளிக்கப்பட்டவையாகும்.(56) சுடர்மிக்கக் குரங்கைக் கொண்ட அவனது தெய்வீகக் கொடிமரமானது மிகவும் அற்புதமானதாகும். மேலும், அண்டத்தைப் படைத்தவனான கிருஷ்ணனே அவனது தேரைப் பாதுகாக்கிறான்.(57)இக்காரியங்களில் எல்லாம் அர்ஜுனனுக்குக் குறைந்தவனாகவே {நான்} இருப்பினும், அவனோடு போர்புரிய நான் விரும்புகிறேன். எனினும், சபைகளின் ரத்தினமான இந்தச் சல்லியன், சௌரிக்கு {கிருஷ்ணனுக்கு} இணையானவராவார்.(58) இவர் {சல்லியன்} என் சாரதியானால், வெற்றியானது நிச்சயம் உனதேயாகும். எனவே, எதிரிகளால் தடுக்கப்பட முடியாத இந்தச் சல்லியன் என் தேரின் சாரதியாகட்டும்.(59) என் நீண்ட கணைகளையும் {நாராசங்களையும்}, கழுகின் இறகுகளாலான சிறகுகளைக் கொண்டவற்றையும் {கணைகளையும்} பெரும் எண்ணிக்கையிலான வண்டிகள் சுமந்து வரட்டும். ஓ! ஏகாதிபதி, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட முதன்மையான தேர்கள் பெரும் எண்ணிக்கையில் என்னை எப்போதும் பின்தொடர்ந்து வரட்டும். குறிப்பிடப்பட்ட தன்மைகளைப் பொறுத்தவரையில், இந்த ஏற்பாடுகளால், நான் அர்ஜுனனுக்கு மேம்பட்டவனாக ஆவேன்.(61) சல்லியன் கிருஷ்ணனுக்கு மேன்மையானவர், நானோ அர்ஜுனனுக்கு மேம்பட்டவன். எதிரிகளைக் கொல்பவனான அந்தத் தசார்ஹ குலத்தோன் குதிரைக் கலைகளை அறிந்திருப்பதைப் போலவே,(62) வலிமைமிக்கத் தேர்வீரரான இந்தச் சல்லியரும் குதிரைக்கலைகளை அறிந்திருக்கிறார். கரங்களின் வலிமையில் மத்ரர்களின் தலைவருக்கு இணையாக வேறு எவனும் இல்லை.(63) ஆயுதங்களில் எனக்கு இணையான எவனும் இல்லாததைப் போல, குதிரைகளின் அறிவில் சல்லியனுக்கு இணையானவன் எவனும் இல்லை.(64)

சூழ்நிலை இவ்வாறிருந்தால், நான் பார்த்தனுக்கு மேம்பட்டவனாக இருப்பேன். என் தேரை எதிர்த்து வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்களும் துணிந்து வரமாட்டார்கள்.(65) இவையாவும் கவனிக்கப்பட்டால், ஓ! குருக்களில் சிறந்தவனே, நான் என் தேரில் ஏறும்போது, போர்வீரனின் தன்மைகளில் அர்ஜுனனுக்கு மேம்பட்டவனாகி, பல்குனனை {அர்ஜுனனை} வெல்வேன்.(66) ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, ஓ! எதிரிகளை எரிப்பவனே, இவை யாவும் உன்னால் செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். காலதாமதம் ஏதும் செய்ய வேண்டாம்.(67) இவையாவும் நிறைவேற்றப்பட்டால், விருப்பப்படும் அனைத்து சந்தர்ப்பத்திலும் மிகவும் பலன் தரும் வகையில் என்னாலான உதவி கிடைக்கும். அப்போது, ஓ! பாரதா {துரியோதனா}, போரில் நான் எதைச் சாதிப்பேன் என்பதை நீ காண்பாய்.(68) போரில் பாண்டுவின் மகன்கள் என்னை அணுகும்போது, அனைத்து வழிகளிலும் நான் அவர்களை வெல்வேன். தேவர்களாலும், அசுரர்களாலும் கூடப் போரில் என்னை எதிர்த்து வர முடியாது. அப்படியிருக்கையில், மனிதத் தோற்றம் கொண்ட பாண்டு மகன்களைக் குறித்து என்ன சொல்வது” என்று கேட்டான் {கர்ணன்}.(69)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “போர்க்கள ரத்தினமான கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, அந்த ராதையின் மகனை {கர்ணனை} வழிபட்டு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனிடம்,(70) “ஓ! கர்ணா, நீ நினைப்பதைச் சாதிப்பாயாக. சிறந்த அம்பறாத்தூணிகள், குதிரைகள் ஆகியவற்றுடன் ஆயத்தப்படுத்தப்பட்ட தேர்கள் போரில் உன்னைப் பின் தொடர்ந்து வரும்.(71) நீ எவ்வளவு விரும்புவாயோ அவ்வளவு எண்ணிக்கையிலான தேர்கள், உன் நீண்ட கணைகளையும் {நாராசங்களையும்}, கழுகின் இறகுகளால் ஆயத்தப்படுத்தப்பட்ட கணைகளையும் சுமந்து வரட்டும். நாங்களும், மன்னர்கள் அனைவரும் போரில் உன்னைப் பின்தொடர்ந்து வருவோம்” என்று பதிலளித்தான் {துரியோதனன்}.”(72)

சஞ்சயன் தொடர்ந்தான், “இச்சொற்களைச் சொன்னவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான உமது அரச மகன் {துரியோதனன்}, மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} அணுகி, பின் வரும் வார்த்தைகளால் அவனுடன் பேசினான்” {என்றான் சஞ்சயன்}.(73)

சாரதியாவதை ஏற்ற சல்லியன்! – கர்ண பர்வம் பகுதி – 32-கர்ணனுக்குச் சாரதியாக இருக்குமாறு சல்லியனை வேண்டிய துரியோதனன்; சினம் கொண்ட சல்லியன் வீட்டுக் திரும்புவதாகச் சொல்வது; வர்ணங்களின் உயர்வு தாழ்வு சொல்வது; சல்லியனைத் தடுத்து அவனைப் புகழ்ந்த துரியோதனன்; துரியோதனனின் புகழ்ச்சியில் நிறைந்த சல்லியன், ஒரு நிபந்தனையுடன் கர்ணனுக்குச் சாரதியாக இருப்பதாக ஏற்றது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது மகன் {துரியோதனன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} அணுகி, அவனிடம் பாசத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “ஓ! மெய்நோன்புகள் கொண்டவரே, ஓ பெரும் நற்பேற்றைக் கொண்டவரே, ஓ! எதிரிகளின் கவலைகளை அதிகரிப்பவரே, ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, ஓ! போரில் வீரரே, ஓ! பகைவர் துருப்புகளை அச்சுறுத்துபவரே,(2) ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவரே {சல்லியரே}, என்னிடம் பேசிய கர்ணனின் நிமித்தமாக, இந்த மன்னர்களில் சிங்கங்களின் முன்னிலையில், உம்மிடம் வேண்டிக் கேட்க நான் எவ்வாறு விரும்புகிறேன் என்பதையே நீர் கேட்டுக் கொண்டிருக்கிறீர்.(3) ஓ! ஒப்பிலா ஆற்றலைக் கொண்டவரே, ஓ! மத்ரர்களின் மன்னரே, எதிரியின் அழிவுக்காக, பணிவுடன் சிரம் தாழ்த்தி நான் இன்று உம்மை வேண்டிக் கேட்கிறேன்[1].(4) எனவே, பார்த்தனின் {அர்ஜுனனின்} அழிவுக்காகவும், எனது நன்மைக்காகவும், ஓ! தேர்வீரர்களில் முதன்மையானவரே, தேரோட்டியின் பணியை அன்புடன் ஏற்பதே உமக்குத் தகும்.(5)

ராதையின் மகன் {கர்ணன்}, தனது சாரதியாக உம்மைக் கொண்டு என் எதிரிகளை அடக்குவான். ஓ! பெரும் நற்பேற்றைப் பேற்றவரே {சல்லியரே}, போரில் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையானவரே, கர்ணனின் {கர்ணனுடைய குதிரைகளின்} கடிவாளங்களைப் பிடிப்பதற்கு உம்மைத் தவிர வேறு எவனும் இல்லை. மகேஸ்வரனை {சிவனைக்} காக்கும் பிரம்மனைப் போல நீர் அனைத்து வழிகளிலும் கர்ணனைக் காப்பீராக.(6,7) பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} அனைத்து ஆபத்துகளிலும், அனைத்து வழிகளிலும் காக்கும் விருஷ்ணி குலத்தோனை {கிருஷ்ணனைப்} போல, ஓ! மத்ரர்களின் தலைவா, இன்று நீர் ராதையின் மகனைக் காப்பீராக.(8) பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோரும், நீரும், போஜர்களின் வீரத்தலைவன் {கிருதவர்மன்}, சுபலரின் மகன் சகுனி, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோரும், நானும் நமது படையின் முக்கியப் பலமாக இருக்கிறோம்.(9) இவ்வாறே, ஓ! பூமியின் தலைவா, நாம் பகைவரின் படையை ஒவ்வொருவருக்கும் ஒரு பங்காக ஒன்பது பகுதிகளாகப் பிரித்துக் கொண்டோம். பீஷ்மருக்குப் பகிர்ந்தளித்த பங்கானது இப்போது இல்லை. அதே போல, உயர் ஆன்ம துரோணருக்குப் பகிர்ந்தளித்த பங்கும் இப்போது இல்லை.(10) அவர்கள் இருவரும் தங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பங்கிற்கு அதிகமாகவே என் எதிரிகளைக் கொன்றிருக்கின்றனர்.

மனிதர்களில் புலிகளான அவ்விருவரும், கிழவர்கள் என்றாலும், வஞ்சகத்தாலேயே அவ்விருவரும் கொல்லப்பட்டார்கள்.(11) அடைவதற்கரிய மிகக் கடினமாகச் சாதனைகளைச் செய்த அவ்விருவரும், ஓ! பாவமற்றவரே, சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டார்கள். அதே போலவே நம் படையைச் சார்ந்த மனிதர்களில் புலிகளான பலரும், தங்கள் சிறந்த சக்திகளைப் பயன்படுத்திப் பெருமுயற்சி செய்த பிறகு, போரில் எதிரியால் கொல்லப்பட்டு, தங்கள் உயிரைவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(12,13) எனவே, ஓ! மன்னா {சல்லியரே}, முதலில் நம்மை விடக் குறைவானவர்களாக இருந்த பார்த்தர்களால், பெரும்பகுதி கொல்லப்பட்ட இந்த என் படை {இப்போது} இந்நிலையை அடைந்திருக்கிறது. இப்போது என்ன செய்யப்பட வேண்டும்?(14) ஓ! பூமியின் தலைவா, வலிமைமிக்கவர்களும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவர்களுமான உயர் ஆன்ம குந்தியின் மகன்களால் {பாண்டவர்களால்} எஞ்சிய என் படையும் அழிவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வீராக.(15)

ஓ! தலைவா {சல்லியரே}, என் இந்தப் படையின் துணிச்சல்மிக்கப் போர்வீரர்களைப் போரில் பாண்டவர்கள் கொன்றுவிட்டனர்.(16) ஓ!மனிதர்களில் புலியே, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கர்ணனும், மொத்த உலகத்தில் உள்ள தேர்வீரர்களில் முதன்மையான நீரும் மட்டுமே நமது நன்மையில் அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்கள்.(17) ஓ! சல்லியரே, கர்ணன் இன்று அர்ஜுனனுடன் போரிட விரும்புகிறான். ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, அவன் {கர்ணன்} வெற்றிப் பெறுவான் என்ற நம்பிக்கை என்னில் பெரிதாக இருக்கிறது.(18) கர்ணனின் {கர்ணனுடைய குதிரைகளின்} கடிவாளங்களை நன்றாகப் பிடிக்கத்தக்கவர் (உம்மைத் தவிர) வேறு எவரும் இவ்வுலகில் இல்லை. கடிவாளங்களைப் பிடிப்பவர்கள் அனைவரிலும் முதன்மையான கிருஷ்ணன், போரில் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இருப்பதைப் போலவே, ஓ! மன்னா {சல்லியரே}, கடிவாளங்களைப் பிடிப்பவர்கள் அனைவரில் முதன்மையான நீர் கர்ணனின் தேரில் இருப்பீராக.(19) ஓ! ஐயா, போரில் அவனது {கிருஷ்ணனின்} துணையுடனும், அவனால் பாதுகாக்கப்பட்டும் பார்த்தன் {அர்ஜுனன்} அடையும் சாதனைகள் அனைத்தும் உம் முன்பாக இருக்கின்றன.(20) முன்பெல்லாம் அர்ஜுனன், போரில் இது போலத் தன் எதிரிகளை எப்போதும் கொன்றதில்லை. எனினும், இப்போதோ, கிருஷ்ணனுடன் சேர்ந்து அவனது ஆற்றல் பெரிதாகியிருக்கிறது.(21) ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, பார்த்தன் {அர்ஜுனன்}, கிருஷ்ணனுடன் சேர்ந்திருப்பதால் நாளுக்கு நாள் இந்தப் பரந்த தார்தராஷ்டிரப் படையானது நிர்மூலமாக்கப்படுகிறது.(22)

ஓ! பெரும் காந்தி கொண்டவரே {சல்லியரே}, கர்ணனுக்கும், உமக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட பங்கு ஒன்று இருக்கிறது. கர்ணனுடன் சேர்ந்து அந்தப் பங்கைச் சுமந்து, போரில் அஃதை அழிப்பீராக.(23) சூரியன், அருணனுடன் சேர்ந்து இருளை அழிப்பதைப் போலவே, நீர் கர்ணனுடன் சேர்ந்து போரில் பார்த்தர்களைக் கொல்வீராக.(24) அடிவானில் உதித்தெழும் இரு சூரியர்களுக்கு ஒப்பானவர்களும், காலை சூரியனின் பிரகாசத்தைக் கொண்ட வீரர்களுமான கர்ணன் மற்றும் சல்லியன் ஆகியோரைப் போரில் கண்டு, (எதிரியின்) வலிமைமிக்கத் தேர்வீரர்கள் தப்பித்து ஓடட்டும்.(25) சூரியனையும் அருணனையும் கண்ட இருள் அழிவதைப் போல, கௌந்தேயர்களும், அவர்களுடன் சேர்ந்த பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்களும், உம்மையும் கர்ணனையும் கண்டு அழிந்து போகட்டும்.(26) கர்ணன் தேர்வீரர்களில் முதன்மையானவனாகவும், நீரோ சாரதிகளில் முதன்மையானவராகவும் இருக்கிறீர்கள். மீண்டும் ஏற்படப்போகும் இந்தப் போரின் மோதலில், உமக்கு இணையானவர் எவரும் இல்லை.(27) அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} காப்பதைப் போல, போரில் நீரும் விகர்த்தனன் மகனான கர்ணனைக் காப்பீராக.(28) உம்மைச் சாரதியாகக் கொண்ட கர்ணன், சக்ரனை {இந்திரனைத்} தலைமையில் கொண்ட தேவர்களுடன் கூடப் போரில் வெல்லப்பட முடியாதவன் ஆகிவிடுவான். பிறகு, பாண்டவர்களைக் குறித்துச் சொல்ல என்ன இருக்கிறது? என் வார்த்தைகளில் ஐயம் கொள்ளாதீர்” {என்றான் துரியோதனன்}.(29)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு சல்லியன் சினத்தால் நிறைந்தான். தன் புருவங்களை மூன்று கோடுகளாகச் சுருக்கி, மீண்டும் மீண்டும் தன் கரங்களை அசைத்து,(30) கோபத்தால் சிவந்த தன் பெரிய கண்களை உருட்டியவனும், பருத்த கரங்களைக் கொண்டவனும், தன் குலப்பிறப்பு, செல்வம், அறிவு, பலம் ஆகியவற்றில் பெருமை கொண்டவனுமான அந்தப் போர்வீரன் {சல்லியன்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(31) சல்லியன் {துரியோதனனிடம்}, “ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, எந்தத் தயக்கமும் இல்லாமல் “சாரதியாகச் செயல்படுவாயாக” என்று என்னை நீ வேண்டிக் கொள்வதால், நீ என்னை அவமதிக்கிறாய், அல்லது என்னைச் சந்தேகிக்கிறாய் என்பதில் ஐயமில்லை.(32) எம்மை விடக் கர்ணனை மேன்மையானவனாகக் கருதுவதால் நீ அவனை இவ்வாறு புகழ்கிறாய். எனினும் நான், ராதையின் மகனைப் {கர்ணனைப்} போரில் எனக்கு இணையானவனாகக் கருதவில்லை.(33) ஓ! பூமியின் தலைவா {துரியோதனா}, இன்னும் பெரிய பங்கை எனக்கு நீ அளிப்பாயாக. அதை {அந்தப் பங்கைப்} போரில் அழித்து, நான் எந்த இடத்தில் இருந்து வந்தேனோ அங்கே திரும்பிச் செல்வேன்.(34) அல்லது, நீ விரும்பினால், ஓ! குருக்களை மகிழ்விப்பவனே, எதிரியுடன் நான் தனியொருவனாகவே போரிடுவேன். இன்று எதிரிகளை எரிக்கப்போகும் என் ஆற்றலைக் காண்பாயாக. (35)

எம்மைப் போன்ற ஒரு மனிதன், {மனத்தில்} ஓர் அவமானத்தை அடைகாத்துக் கொண்டு, நான் செய்யும் பணியில் எப்போதும் ஈடுபடமாட்டான். போரில் என்னை நீ எப்போதும் {இப்படி} அவமதிக்கக்கூடாது.(36) இடியைப் போன்றவையும், பருத்தவையுமான என்னிரு கரங்களைப் பார். என் சிறந்த வில்லையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான இந்தக் கணைகளையும் பார்.(37) காற்றின் வேகத்தைக் கொண்ட சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட என் தேரைப் பார். ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், சணல் கயிறுகளால் பின்னப்பட்டதுமான என் கதாயுதத்தையும் பார்.(38) கோபத்தில் நிறைந்தால், ஓ! மன்னா, என் சக்தியைக் கொண்டு பூமியைப் பிளக்கவும், மலைகளைச் சிதறடிக்கவும், பெருங்கடல்களை வற்ற செய்யவும் என்னால் முடியும்.(39) ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, எதிரிகளைப் பீடிக்க இவ்வளவு வல்லவனாக என்னை அறிந்தும்கூட, அதிரதன் மகனை {கர்ணனைப்} போல இழிந்த பிறப்புக் கொண்ட ஒரு மனிதனுக்குப் போரில் சாரதி அலுவலில் என்னை ஏன் நீ நியமிக்கிறாய்?[2](40)ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, இத்தகு அற்பப் பணிகளை எனக்கு அளிப்பது உனக்குத் தகாது. இவ்வளவு மேன்மையான நான், பாவம் நிறைந்த ஒரு மனிதனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய என் மனத்தை இணங்கச் செய்ய முடியாது.(41) தன் அன்புக்குக் கீழ்ப்படிந்து, தன் சொந்த விருப்பத்தோடு வந்த ஒரு மேன்மையான மனிதனைப் பாவம் நிறைந்த அற்பனுக்கு எவன் வசப்படச் செய்வானோ, அவன், மேன்மையானவனோடு கீழ்மையானவனைக் குழப்பிக் கொண்டதற்காக நிச்சயம் பாவத்தையே அடைவான்[3].(42)
பிரம்மன் பிராமணர்களை அவனது வாயிலிருந்து படைத்தான், 
க்ஷத்திரியர்களை அவனது கரங்களில் இருந்து படைத்தான். 
வைசியர்களை அவனது தொடைகளில் இருந்தும், 
சூத்திரர்களை அவனது பாதங்களில் இருந்தும் படைத்தான்.
அந்த நால்வகையில் ஒன்றோடொன்று இணைந்ததன் விளைவால், மேலான வர்க்கங்களில் பிறந்த மனிதர்கள், தங்களைவிடக் கீழான வர்க்கங்களின் பெண்களைத் திருமணம் செய்தும், நிலையெதிர்மாறாகச் செய்தும் {மேன்மையான பெண்கள், கீழ்மையான ஆண்களைத் திருமணம் செய்து கொள்வதாலும்}, அந்த நான்கிலிருந்து குறிப்பிட்ட வர்க்கங்கள் உதித்தன[4].(44)(பிற வர்க்கங்களின்) பாதுகாவலர்கள், செல்வத்தை அடைபவர்கள், அதையே {செல்வத்தைக்} கொடுப்பவர்கள் ஆகியோரே {மேலே} விளக்கப்பட்டிருக்கும் க்ஷத்திரியர்கள் ஆவர். வேள்விகளில் துணை செய்வது, கல்வி பயிற்றுவிப்பது, தூய கொடைகளை ஏற்பது ஆகியவற்றைச் செய்து மனிதர்களுக்கு நன்மை செய்வதற்காகப் பூமியில் நிறுவப்பட்டிருக்கிறார்கள்.

(45) உழவு, கால்நடை வளர்த்தல், கொடை ஆகியவையே சாத்திரங்களின் படி வைசியர்களின் தொழில்கள்.(46)

அதே போலச் சூதர்கள் {வர்ணக்கலப்பில் பிறந்தவர்கள்}, க்ஷத்திரியர்களுக்குப் பணியாட்களாவர், க்ஷத்திரியர்களோ சூதர்களுக்குப் பணியாட்கள் அல்ல. ஓ! பாவமற்றவனே {துரியோதனா}, என் இந்த வார்த்தைகளைக் கேட்பாயாக.(47) என்னைப் பொறுத்தவரை, புனித நீராடலுடன் மகுடம் சூடியவன் நான். அரச முனிகளின் குலத்தில் நான் பிறந்திருக்கிறேன். பெரும் தேர்வீரனாக நான் அறியப்பட்டிருக்கிறேன். வழிபாட்டுக்கும், பாணர்களும், சூதர்களும் {புகழ்ந்து} சொல்வன அல்லது பாடுவன ஆகியவற்றுக்கும் நான் தகுந்தவனாக இருக்கிறேன்.(48) ஓ! பகைவரின் துருப்புகளைக் கொல்பவனே, இவை யாவையுமாக இருக்கும் என்னால், போரில் சூதன் மகனுக்கு {கர்ணனுக்குச்} சாரதியாகச் செயல்பட முடியாது.(49) இந்த அவமதிப்பை அடைந்த நான் ஒருபோதும் போரிட மாட்டேன். ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, நான் வீடு திரும்புவதற்கு உன் அனுமதியைக் கேட்கிறேன்” என்றான் {சல்லியன்}.(50)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், மனிதர்களில் புலியும், சபைகளின் ரத்தினமுமான சல்லியன், சினத்தால் நிறைந்து, வேகமாக எழுந்து, மன்னர்களின் அந்தச் சபையில் இருந்து வெளியேற முயன்றான்.(51) எனினும், உமது மகன் {துரியோதனன்}, பாசத்தாலும், பெரும் மதிப்பினாலும் அம்மன்னனை நிறுத்தி, அனைத்து நோக்கங்களையும் அடையவல்ல இந்த இனிமையான, சமரச வார்த்தைகளை அவனிடம் {சல்லியனிடம்} சொன்னான்:(52) “ஓ! சல்லியரே, நீர் சொன்னது போலத்தான் இருக்கிறது {யாவும் இருக்கின்றன} என்பதில் ஐயமில்லை. ஆனால், நான் குறிப்பிட்ட ஒரு நோக்கத்தையே என் பார்வையில் கொள்கிறேன். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, அதைக் கேட்பீராக.(53) ஓ! மன்னா {சல்லியரே}, கர்ணன் உம்மிலும் மேன்மையானவன் இல்லை, மேலும் நான் உம்மில் ஐயங்கொள்ளவுமில்லை. மத்ரர்களின் அரசத் தலைவர் தவறானதை ஒருபோதும் செய்ய மாட்டார்.(54) மனிதர்களில் முதன்மையான உமது முன்னோர்கள் எப்போதும் உண்மையையே சொன்னார்கள். இதன் காரணமாகவே நீர் ஆர்த்தாயனி (உண்மையைத் தங்கள் புகலிடமாகக் கொண்டோரின் வாரிசு)[5] என்று அழைக்கப்படுவதாக நான் நினைக்கிறேன்.(55)ஓ! கௌரவங்களை அளிப்பவரே {சல்லியரே}, நீர் எதிரிகளுக்கு, முள்பதித்த கணையொன்றைப் {ஒரு கர்ணியைப்} போன்றவர்[6], எனவேதான் நீர் பூமியில் சல்லியன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறீர்.(56) வேள்விகளில் (பிராமணர்களுக்குப்) பெரும் கொடைகளை அளிப்பவரே, ஓ! அறவோனே, நீர் சாதிப்பீர் என்று முன்பு சொன்ன அனைத்தையும் சாதிப்பீராக.(57) அந்த முதன்மையான குதிரைகளுக்குச் சாரதியாக நான் தேர்ந்தெடுத்த உமக்கு, ராதையின் மகனோ {கர்ணனோ}, நானோ வீரத்தில் மேம்பட்டவர்கள் இல்லை.(58) எனினும், ஓ! ஐயா {சல்லியரே}, வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு) மேம்பட்டவராக உலகம் உம்மைக் கருதவதைப் போலவே, கர்ணனும் பல குணங்களில் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} மேம்பட்டவனே.(59) ஓ! மனிதர்களில் காளையே, ஆயுதகாரியங்களில் நிச்சயமாகக் கர்ணன் பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} மேம்பட்டவனே. குதிரைகளின் அறிவு மற்றும் வலிமையில் நீரும் கிருஷ்ணனுக்கு மேம்பட்டவரே.(60) ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, குதிரைகளில் உமது அறிவானது, உயர் ஆன்ம வாசுதேவனை {கிருஷ்ணனை} விட இரண்டு மடங்கு அதிகமானது என்பதில் ஐயமில்லை” என்றான் {துரியோதனன்}.(61)சல்லியன் {துரியோதனனிடம்}, “ஓ! காந்தாரியின் மகனே, ஓ! குருகுலத்தோனே {துரியோதனா}, இந்தத் துருப்புகள் அனைத்தின் மத்தியில் வைத்து, தேவகியின் மகனுக்கு {கிருஷ்ணனுக்கு} மேம்பட்டவனாக என்னை நீ விவரிப்பதால், உன்னிடம் நான் மனநிறைவு கொண்டேன்.(62) நீ வேண்டிக் கொள்வதைப் போலவே, அந்தப் பாண்டு மகன்களில் முதன்மையானவனுடன் {அர்ஜுனனுடன்} போரிடுகையில், பெரும்புகழைக் கொண்ட ராதையின் மகனுக்கு {கர்ணனுக்கு} நான் சாரதியாக இருப்பேன்.(63) எனினும், ஓ! வீரா {துரியோதனா}, விகர்த்தனன் மகனுடனான {கர்ணனுடனான} என் புரிதல் {புரிந்துணர்வு ஒப்பந்தம்} இவ்வாறு {பின்வருமாறு} இருக்கட்டும். அவனது முன்னிலையில் என் விருப்பப்படி எந்த வார்த்தைகளையும் நான் பேசுவேன்” என்றான் {சல்லியன்}.(64)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு, ஓ! மன்னா, ஓ! பாரதரே, உமது மகன் {துரியோதனன்}, கர்ணனுடன் சேர்ந்து, அந்த மத்ரர்களின் இளவரசனிடம் {சல்லியனிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்றான் {துரியோதனன்}” {என்றான் சஞ்சயன்}.(65)

துரியோதனன் சொன்ன சிவத் துதி! – கர்ண பர்வம் பகுதி – 33-தாரகாசுரனை முன்னிட்டு தேவர்களுக்கும், அசுரர்களுக்கு நடந்த போரைக் குறித்துச் சல்லியனிடம் சொன்ன துரியோதனன்; பிரம்மனை நோக்கித் தவமிருந்த தாரகனின் மகன்கள் மூவர்; வரமளித்த பிரம்மன்; மயனின் உதவியால் முந்நகரத்தை {திரிபுரத்தைக்} கட்டிய தைத்தியர்கள்; முந்நகரத்தை வெல்லத் தவறிய இந்திரன்; முந்நகரத்தை வெல்ல பிரம்மனிடம் வழிகேட்ட இந்திரன்; தேவர்கள் சொன்ன சிவத்துதி; ஆறுதலளித்த சிவன்.

துரியோதனன் {சல்லியனிடம்}, “ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, ஓ! தலைவா {சல்லியரே}, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போரில் என்ன நடந்தது என்பதைப் பற்றி நான் உமக்குச் சொல்லப் போவதை மீண்டும் கேட்பீராக.(1) இதைப் பெரும் முனிவரான மார்க்கண்டேயர் என் தந்தைக்கு உரைத்தார். ஓ! அரச முனிகளில் சிறந்தவரே, அதில் எதையும் விட்டுவிடாமல் இப்போது நான் உமக்கு உரைக்கிறேன். கிஞ்சிற்றும் ஐயமில்லாமல் நம்பிக்கையுடன் அவ்விவரங்களைக் கேட்பீராக.(2) ஒருவரையொருவர் வெல்ல விரும்பிய தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் தாரகனையே {தாரகாசுரனையே} கேடாகக் (வேராகக்) கொண்ட பெரும் போர்[1] ஒன்று நடந்தது. தைத்தியர்கள் தேவர்களால் வீழ்த்தப்பட்டனர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3) தைத்தியர்கள் வீழ்ந்ததும், ஓ! மன்னா {சல்லியரே}, தாரகாக்ஷன் {தாராக்ஷன்}, கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற பெயர்கொண்ட தாரகனின் {தாரகாசுரனின்} மூன்று மகன்களும், கடும் தவங்களைப் பயின்று, உயர்ந்த நோன்புகளை நோற்று வாழ்ந்து வந்தனர். ஓ! எதிரிகளை எரிப்பவரே {சல்லியரே}, அந்த நோன்புகளால் அவர்கள் உடல் மெலிந்தவர்களானார்கள்.(4,5) வரமளிக்கும் பெரும்பாட்டன் {பிரம்மன்}, அவர்களின் சுயக்கட்டுப்பாடு, நோன்புகள், தவங்கள், தியானங்கள் ஆகியவற்றின் விளைவாக மனநிறைவு கொண்டு அவர்களுக்கு வரங்களை அளித்தான்.(6) ஒன்றாகச் சேர்ந்திருந்த அவர்கள், உலகத்தின் எந்த உயிரினத்தின் மூலமும், எக்காலத்திலும் மரணம் நேராதபடி {மரணமில்லாமையைப்} பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} வரம் கேட்டனர்.(7)தெய்வீகத் தலைவனும், உலகங்கள் அனைத்தின் குருவுமான அவன் {பிரம்மன்} அவர்களிடம், “எவ்வுயிரின் வாயிலாகவும் மரணமடையாதவாறு இருக்கக்கூடிய எந்தத் தன்மையும் உண்டாகாது. எனவே, அசுரர்களே, அத்தகு வேண்டுதல்களில் இருந்து விலகுவீராக. உங்களுக்கு விருப்பமான வேறேதும் வரத்தைக் கேட்பீராக” என்றான். பிறகு, அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, வேறு வரத்தைக் குறித்து நீண்ட காலம் மீண்டும் மீண்டும் தங்களுக்குள் ஆலோசித்து, உலகங்கள் அனைத்தின் பெருங்குருவான அவனிடம் {பிரம்மனிடம்}, இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள், “ஓ! தேவரே, ஓ! பெரும்பாட்டனே {பிரம்மாவே}, {பின்வரும்} இந்த வரத்தை எங்களுக்கு அளிப்பீராக.(9) {விரும்பியபடி காற்றில் திரியக்கூடிய} முந்நகரங்களில் {திரிபுரத்தில்} வசித்தபடியே உமது அருளால் நாங்கள் இவ்வுலகில் திரிந்து வருவோம்.(10) ஓராயிரம் வருடங்கள் சென்ற பிறகு, நாங்கள் அனைவரும் ஒன்று சேர்வோம், எங்கள் முந்நகரங்களும் கூட ஒன்றுசேரும்.(11) அப்போது தேவர்களில் முதன்மையான எவனாவது, ஒரே கணையால் அந்த மூன்று நகரங்களையும் துளைத்தால், ஓ! தலைவோ, அப்போது எங்கள் அழிவு நேரட்டும்” என்று கேட்டனர்[2].(12)“அப்படியே ஆகட்டும்” என்று அவர்களிடம் சொன்ன அந்தத் தேவன் {பிரம்மன்} மீண்டும் சொர்க்கத்திற்கு உயர்ந்தான். அவ்வரங்களைப் பெற்று மகிழ்ச்சியால் நிறைந்த அந்த அசுரர்கள், அந்த மூன்று நகரங்களையும் எவ்வாறு அமைக்க வேண்டும் என்று தங்களுக்குள் தீர்மானித்துக் கொண்டு,(13) அந்நோக்கத்தை அடைவதற்காக, அழிவோ, களைப்போ அறியாதவனும், தைத்தியர்கள் மற்றும் தானவர்கள் அனைவராலும் வழிபடப்படுபவனும், பெரும் அசுரனும், தெய்வீகக் கைவினைஞனுமான மயனை {மயாசுரனைத்} தேர்ந்தெடுத்தனர்.(14) பிறகு, பெரும் நுண்ணறிவைக் கொண்ட மயன், தன் தவச் சக்தியின் துணையால், தங்கத்தாலான ஒன்றும், வெள்ளியால் மற்றொன்றும், கருப்பு இரும்பால் இன்னும் ஒன்றும் என முந்நகரங்களைக் கட்டமைத்தான்.(15) ஓ! பூமியின் தலைவா {சல்லியரே}, தங்க நகரம் சொர்க்கத்திலும், வெள்ளி நகரம் ஆகாயத்திலும், இரும்பு நகரம் பூமியிலும் என அவை அனைத்தும் வட்டமாகச் சுழன்று வருவது போன்ற வழியில் நிறுவப்பட்டன[3].(16) அந்த நகரங்கள் ஒவ்வொன்றும் நூறு யோஜனைகள் அகலமும், நூறு யோஜனைகள் நீளமும் கொண்டிருந்தன. மேலும் அவை, வீடுகளையும், மாளிகைகளையும், உயர்ந்த சுவர்களையும், முகப்பு மண்டபங்களையும் கொண்டிருந்தன.(17) ஒன்றுக்கொன்று நெருக்கமாகச் சிறந்த அரண்மனைகளால் பெருகியிருந்தாலும், அவற்றின் தெருக்கள் {வீதிகள்} அகலமாகவும், விசாலமாகவும் இருந்தன. மேலும் அவை பல்வேறு மாளிகைகளாலும், வாயில்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(18)மேலும், ஓ! ஏகாதிபதி {சல்லியரே}, அந்நகரங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக மன்னன் ஒருவனைக் கொண்டிருந்தன.(19) தங்கத்தாலான அழகிய நகரமானது சிறப்புமிக்கத் தாரகாக்ஷனுக்கும், வெள்ளியாலான நகரம் கமலாக்ஷனுக்கும், இரும்பாலானது வித்யுன்மாலிக்கும் சொந்தமானவையாக இருந்தன.(20) அந்தத் தைத்திய மன்னர்கள் மூவரும், விரைவில் தங்கள் சக்தியால் மூவுலகங்களையும் தாக்கியபடி அங்கே வசித்து ஆட்சி செய்து கொண்டே, “படைத்தவன் என்று அழைக்கப்படுபவன் எவன்?”[4] என்று சொல்லத் தொடங்கினர்.(21) தங்களுக்கு நிகரான வீரர்கள் எவரும் இல்லாதவர்களும், தானவர்களில் முதன்மையானவர்களுமான அவர்களிடம் {அந்த மூன்று மன்னர்களிடம்}, செருக்குடையவர்களும், தேவர்களால் முன்பு வீழ்த்தப்பட்டவர்களும், பெரும் செழிப்பை விரும்பியவர்களுமான ஊனுண்ணும் தானவர்கள் லட்சக் கணக்கில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் வந்து, அந்த முந்நகரங்களில் குடியேறினர்.(22,23) இவ்வாறு ஒன்றாகச் சேர்ந்த அவர்கள் அனைவருக்கும் விரும்பிய அனைத்தையும் கொடுப்பவனாக மயன் இருந்தான். அவனை நம்பியே, முற்றிலும் அச்சமற்ற வகையில் அவர்கள் அனைவரும் அங்கே வசித்தனர்.(24) முந்நகரத்தில் வசித்தவர்களில் எவரும், எப்பொருளையும் தன் இதயத்தால் விரும்பினால், மயன் தனது மாயா சக்திகளின் துணையால் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றினான்.(25)தாரகாக்ஷன், ஹரி என்ற பெயரில் ஒரு வீரமான, வலிமைமிக்க மகனைப் பெற்றிருந்தான். மிகக் கடுமையான தவங்களைச் செய்த அவனிடம் பெரும்பாட்டன் {பிரம்மன்} மனநிறைவு கொண்டான்.(26) அந்தத் தேவன் {பிரம்மன்} மனம் நிறைந்த போது, அவனிடம் ஹரி, “ஆயுதங்களால் கொல்லப்பட்டவர்கள் {தடாகத்தில்} வீசப்பட்டால், இருமடங்கு பலத்துடன் உயிருடன் மீண்டு வரும் வகையில் எங்கள் நகரத்தில் ஒரு தடாகம் உண்டாகட்டும்”[5] என்ற ஒரு வரத்தைக் கேட்டான்.(27) இந்த வரத்தை அடைந்தவனும், தாரகாக்ஷனின் மகனுமான வீரன் ஹரி, ஓ! தலைவா {சல்லியரே}, இறந்தோரை உயிருடன் மீட்கவல்ல ஒரு தடாகத்தைத் தன் நகரத்தில் உண்டாக்கினான்.(28) எவ்வடிவமும், எத்தோற்றமும் கொண்ட தைத்தியன் எவன் கொல்லப்பட்டாலும், அத்தடாகத்தில் அவன் வீசப்பட்டால், அதே வடிவம் மற்றும் தோற்றத்துடன் மீண்டும் அவன் உயிரோடு வெளியே வந்தான்.(29) தைத்தியர்கள், தங்களில் கொல்லப்பட்டோரை மீண்டும் அடைந்து, மூன்று உலகங்களையும் பீடிக்கத் தொடங்கினர். தவ வழிகளின் மூலம் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், தேவர்களின் அச்சங்களை அதிகரிப்பவர்களுமான அவர்கள் {தைத்தியர்கள்}, ஓ! மன்னா {சல்லியரே}, போரில் எந்த இழப்பையும் அடையவில்லை.(30,31)பேராசை, மூடத்தனம் ஆகியவற்றால் மயக்கமடைந்து, தங்கள் அறிவை இழந்த அவர்கள் அனைவரும், அண்டத்தில் நிறுவப்பட்ட மாநகரங்கள் மற்றும் நகரங்களை வெட்கமில்லாமல் அழித்தனர்.(32) தாங்கள் பெற்ற வரங்களால் செருக்கில் நிறைந்த அவர்கள், எந்நேரமும், எல்லா இடங்களிலும், தேவர்களையும், அவர்களது துணைவர்களையும் தங்கள் முன் விரட்டிக் கொண்டே, தெய்வீகக் காடுகள், சொர்க்கவாசிகளின் விருப்பத்திற்குரிய ஆட்சிப்பகுதிகள் மற்றும் இனிமையானவையும், புனிதமானவையுமான முனிவர்களின் ஆசிரமங்கள் ஆகியவற்றில் விரும்பியவாறெல்லாம் திரிந்து கொண்டிருந்தனர். மேலும் தீயவர்களான அந்தத் தானவர்கள் எவருக்கும் எந்த மரியாதையும் காட்டவில்லை.(33,34) உலகங்கள் இவ்வாறு பீடிக்கப்படுகையில், மருத்துக்களால் சூழப்பட்ட சக்ரன் {இந்திரன்}, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் இடியை {வஜ்ரத்தை} ஏவிய படி அந்த முந்நகரங்களையும் எதிர்த்துப் போரிட்டான்.(35) எனினும், ஓ! மன்னா {சல்லியரே}, படைத்தவனின் {பிரம்மனின்} வரங்களால் ஊடுருவமுடியாதவையாக இருந்த அந்த நகரங்களைத் துளைப்பதில் புரந்தரன் {இந்திரன்} தவறியபோது, அச்சத்தில் நிறைந்த அந்தத் தேவர்களின் தலைவன்{இந்திரன்} அந்நகரங்களை விட்டகன்று, அசுரர்களால் இழைக்கப்பட்ட அநீதிகளைத் தெரிவிப்பதற்காக, எதிரிகளைத் தண்டிப்பவரான பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்றான்.(36,37)

தெய்வீகமான பெரும்பாட்டனிடம் அனைத்தையும் தெரிவித்து, அவனுக்குத் தலைவணங்கிய அவர்கள், முந்நகரத்தை {திரிபுரத்தை} அழிக்கக்கூடிய வழிமுறைகளைக் கேட்டனர்.(38) இந்திரனின் வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {பிரம்மன்}, “உங்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவன் எவனும், எனக்கு எதிராகக் குற்றம் செய்தவனே ஆவான்.(39) அசுரர்கள் அனைவரும், தீய ஆன்மாக்களைக் கொண்டவர்களாகவும், எப்போதும் தேவர்களை வெறுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். உங்களுக்கு வலியை {துன்பத்தைத்} தருபவர்கள், எனக்கு எதிராக எப்போதும் குற்றம் இழைப்பவர்களே.(40) உயிரினங்கள் அனைத்திடமும் நான் வேறுபாடு காணாதவன். இதில் எந்த ஐயமும் கிடையாது. எனினும், அநீதிமிக்கவர்கள் {அதர்மிகள்} அனைவரும் கொல்லத்தக்கவர்களே. இதுவே என் நிலைத்த நோன்பாகும்.(41) அந்த மூன்று கோட்டைகளும் [6] ஒரே கணையால் துளைக்கப்பட வேண்டும். வேறு எவ்வழியாலும் அவற்றை அழிக்க முடியாது. ஸ்தாணுவை {சிவனைத்} தவிர வேறு எவனாலும் அவற்றை ஒரே கணையால் துளைக்க முடியாது.(42) ஆதித்யர்களே, ஈசானன் என்றும், ஜிஷ்ணு என்றும் வேறு பெயரில் அழைக்கப்படுபவனும், உழைப்பில் எப்போதும் களைப்பறியாதவனுமான ஸ்தாணுவை {சிவனை} உங்கள் போர்வீரனாகத் தேர்ந்தெடுப்பீராக. அவனே அந்த அசுரர்களை அழிப்பான்” என்றான் {பிரம்மன்}.(43)பிரம்மனின் இந்த வார்த்தைகளைக் கேட்டவர்களும், சக்ரனின் {இந்திரனின்} தலைமையிலானவர்களுமான தேவர்கள், பிரம்மனைத் தங்கள் தலைமையாகக் கொண்டு, காளையைத் தன் குறியீடாகக் கொண்ட தேவனின் {சிவனின்} பாதுகாப்பை நாடி சென்றனர்.(44) கடுந்தவங்களில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுபவர்களும், வேதங்களின் அழியாத வார்த்தைகளைச் சொல்பவர்களுமான முனிவர்களின் துணையுடன் கூடிய அந்த நீதிமான்கள் {தேவர்கள்}, தங்கள் மொத்த ஆன்மாவான பவனை {சிவனை} நாடினார்கள்.(45) அனைத்துச் சூழ்நிலைகளிலும் அச்சங்களை விலக்குபவனும், அண்டத்தின் ஆன்மாவும், தன் ஆன்மாவால் அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பவனுமான அந்தப் பரமாத்மாவை {ஈஸ்வரனான சிவனை} வேதங்களின் உயர்ந்த வார்த்தைகளில் அவர்கள் புகழ்ந்தனர்.(46) தன் ஆன்மாவின் செயல்பாடுகள் அனைத்தையும் தனிச்சிறப்புக் கொண்ட தவங்களால் நிறுத்த அறிந்தவனும், ஆன்மாவுக்கும், பருப்பொருளுக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்தவனும், தன் ஆன்மாவை எப்போதும் கட்டுக்குள் கொண்டவனும், அண்டத்தில் ஒப்பற்றவனும், (அனைத்திற்கும்) மூலமானவனும், பாவமற்றவனும், ஈசானன் என்று அழைக்கப்படுபவனுமான அந்த உமையின் தலைவனை {சிவனை}, அவர்கள் கண்டனர்.(47,48) அந்தத் தேவன் ஒருவனேயென்றாலும், அவர்கள் பல்வேறு வடிவங்களில் அவனைக் கற்பனை செய்திருந்தனர். அவர்கள், தங்கள் தங்கள் இதயங்களில் தனித்தனியாகக் கண்டிருந்த பல்வேறு வடிவங்கள் ஒவ்வொன்றையும் அந்த உயர் ஆன்மாவிடம் {சிவனிடம்} கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(49) பிறவாதவனான அந்த அண்டத் தலைவனை உயிரினங்கள் அனைத்தின் வடிவங்களில் கண்ட அந்தத் தேவர்களும், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் அனைவரும், தங்கள் சிரங்களால் பூமியைத் தொட்டனர்.[7](50)“நல்வரவு” என்ற வார்த்தையால் அவர்களை வணங்கி, அவர்களது பணிந்த தன்மையில் இருந்து அவர்களை உயர்த்திச் சிரித்த சிறப்புமிக்கச் சங்கரன், “உங்கள் வருகையின் நோக்கத்தை எமக்குச் சொல்வீராக” என்றான்.(51) முக்கண் தேவனால் {சிவனால்} இவ்வாறு ஆணையிடப்பட்டதும் அவர்களது இதயங்கள் ஆறுதலை அடைந்தன. அப்போது அவர்கள் அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்: “ஓ! தலைவா, உன்னை மீண்டும் மீண்டும் வணங்குகிறோம். தேவர்கள் அனைவரின் மூலமே ஆனவனும், வில் தரித்தவனும், கோபத்தால் நிறைந்தவனுமான உன்னை வணங்குகிறோம். உயிரினங்கள் அனைத்தின் தலைவனுடைய (தக்ஷனின்) வேள்வியை அழித்தவனும், உயிரினங்களின் தலைவர்கள் அனைவராலும் புகழப்படுபவனுமான உன்னை வணங்குகிறோம்.(53) சிவந்தவனும், மூர்க்கமானவனும், நீல மிடறு {தொண்டை} கொண்டவனும், திரிசூலந்தரித்தவனும்,(54) கலங்கடிக்கப்பட முடியாதவனும், மான்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், ஆயுதங்களில் முதன்மையான ஆயுதத்தைக் கொண்டு போரிடுபவனும், துதிகள் அனைத்திற்கும் தகுந்தவனும், மிகத் தூய்மையானவனும், அழிவின் வடிவே ஆனவனும், காலனே ஆனவனும்,(55) தடுக்கப்பட முடியாதவனும், பிரம்மனே ஆனவனும், பிரம்மச்சாரியின் வாழ்வை நோற்பவனும், ஈசானனும், அளக்கப்பட முடியாதவனும், பெரும் கட்டுப்பாட்டாளனும், கந்தலாடை அணிந்தவனும்,(56) பழுப்பானவனும், நோன்புகளை நோற்பவனும், விலங்கின் தோல்களை ஆடையாக அணிந்தவனும், குமாரனின் {முருகனின்} தந்தையும், முக்கண்ணனும், ஆயுதங்களில் முதன்மையான ஆயுதத்தைத் தரிப்பவனும்,(57) {உன்} பாதுகாப்பை நாடுவோர் அனைவரின் துன்பங்களை அழிப்பவனும், பிராமணர்களை வெறுப்போர் அனைவரையும் அழிப்பவனும், மரங்கள் அனைத்தின் தலைவரும், மனிதர்கள் அனைவரின் தலைவனும், பசுக்கள் அனைத்தின் தலைவனும், எப்போதும் வேள்விகளின் தலைவனாக இருப்பவனுமான உன்னை வணங்குகிறோம்.(58) துருப்புகளின் தலைமையில் எப்போதும் இருப்பவனும், முக்கண்ணனும், கடும் சக்தி கொண்டவனுமான உன்னை வணங்குகிறோம். எண்ணம், சொல் மற்றும் செயல்களில் நாங்கள், எங்களை உனக்கு அர்ப்பணிக்கிறோம். எங்களிடம் அருள்கூர்வாயாக” {என்றனர்}.(59) இந்தத் துதியால் மனம் நிறைந்த அந்தப் புனிதமானவன் {சிவன்}, “நல்வரவு” என்ற வார்த்தையால் வணங்கி, அவர்களிடம், “உங்கள் அச்சங்கள் அகலட்டும். உங்களுக்கு யாம் செய்ய வேண்டியதைச் சொல்வீராக” என்றான் [சிவன்]”[8].(60)

சிவனின் தேர்! – கர்ண பர்வம் பகுதி – 34அ-திரிபுரவாசிகளைக் கொல்ல சிவனைத் துதித்த பிரம்மன்; ஒற்றுமையாக இருக்கும் தங்கள் பலத்தில் பாதி அளவைக் கொண்டு அசுரர்களைக் கொல்ல சிவனை வேண்டிய தேவர்கள்; மஹாதேவன் என்று சிவன் அழைக்கப்படுவதற்கான காரணம்; போரிடத் தகுந்த தேர், வில் மற்றும் கணையை உண்டாக்குமாறு தேவர்களைப் பணித்த சிவன்; மூவுலகங்களின் பகுதிகள் அனைத்தையும் கொண்டு, விஸ்வகர்மனின் கைவண்ணத்தால் தேவர்கள் உண்டாக்கிய தேர், வில் மற்றும் கணை; தேரில் ஏறிய சிவன், தனக்குச் சாரதி யார் எனக் கேட்டது…

துரியோதனன் {சல்லியனிடம்}, “அந்த உயர் ஆன்ம தேவனால் {சிவனால்}, பித்ருக்கள், தேவர்கள் மற்றும் முனிவர்கள் கூட்டத்தின் அச்சங்கள் இவ்வாறு விலக்கப்பட்ட பிறகு, பிரம்மன், அண்டத்தின் நன்மைக்காக இவ்வார்த்தைகளால் சங்கரனை {சிவனைத்} துதித்தான்:(1) “ஓ! அனைவரின் தலைவா, உன்னருளால், உயிர்கள் அனைத்தின் தலைமையும் எனதாகியது. அந்தப் பதவியை அடைந்த நான் தானவர்களுக்குப் பெரும் வரத்தை அளித்துவிட்டேன்.(2) ஓ! கடந்த காலம் மற்றும் எதிர் காலங்களின் தலைவா, எவருக்கும் எம்மதிப்பையும் காட்டாத அந்தத் தீய அற்பர்களை அழிக்கும் வல்லமை உன்னைத்தவிர வேறு எவருக்கும் தகாது. ஓ! தேவா, உன் பாதுகாப்பை நாடுபவர்களும், உன்னை வேண்டுபவர்களுமான இந்தச் சொர்க்கவாசிகளின் எதிரிகளைக் கொல்லத்தகுந்த ஒரே ஒருவன் நீயே. ஓ! தேவர்கள் அனைவரின் தலைவா, இவர்களுக்கு உன் அருளைத் தருவாயாக. ஓ! திரிசூலம் தரித்தவனே, தானவர்களைக் கொல்வாயாக.(3,4) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, உன் அருளால் அண்டம் மகிழ்ச்சியை அடையட்டும். ஓ! உலகங்கள் அனைத்தின் தலைவா, தஞ்சம் அளிப்பவன் எவனோ, அவன் நீயே. நாங்கள் அனைவரும் உன்னைத் தஞ்சமடைந்தோம்” என்றான் {பிரம்மன்}.(5)

ஸ்தாணு {சிவன்}, “உங்கள் எதிரிகள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். எனினும், தனியொருவனாக அவர்களை நான் கொல்லத் துணியேன். தேவர்களின் எதிரிகள் வலிமையைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(6) எனவே, நீங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து என் வலிமையில் பாதியைக் கொண்டு உங்கள் எதிரிகளைப் போரில் எரிப்பீராக. ஒற்றுமையே பெரும்பலமாகும்” என்றான்.(7)

தேவர்கள் {சிவனிடம்}, “நாங்கள் ஏற்கனவே அவர்களது சக்தியையும், வலிமையையும் கண்டிருப்பதால், அவர்கள் சக்தியிலும், வலிமையிலும் எங்களைவிட இருமடங்கு அதிகமானவர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்றனர்.(8)

அதற்கு அந்தப் புனிதமானவன் {சிவன்}, “உங்களுக்கு எதிராகக் குற்றமிழைத்த அந்தப் பாவம் நிறைந்த அற்பர்கள் கொல்லப்பட வேண்டும். என் சக்தியிலும், வலிமையிலும் பாதியைக் கொண்டு அந்த உங்கள் எதிரிகள் அனைவரையும் கொல்வீராக” என்றான்.(9)

தேவர்கள் {சிவனிடம்}, “ஓ! மஹேஸ்வரா, உன் சக்தியில் பாதியை எங்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. மறுபுறம், ஒற்றுமையுடன் உள்ள எங்களின் வலிமையில் பாதியைக் கொண்டு எங்கள் எதிரிகளை நீயே கொல்வாயாக” என்றனர்.(10)

அந்தப் புனிதமானவன் {சிவன்}, “உண்மையில் என் வலிமையில் பாதியை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால், ஒற்றுமையாக இருக்கும் உங்கள் சக்தியில் பாதியைக் கொண்டு நான் அவர்களைக் கொல்வேன்” என்றான்.(11)

துரியோதனன் {சல்லியனிடம்} தொடர்ந்தான், “பிறகு தேவர்கள், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {சல்லியரே}, அந்தத் தேவர்களின் தேவனிடம் {சிவனிடம்} “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார்கள். அவர்கள் அனைவரிடம் இருந்தும் அவர்களது பாதிச் சக்தியை எடுத்துக் கொண்ட அவன், வலிமையில் மேன்மையானவன் ஆனான்.(12) உண்மையில், அந்தத் தேவன், அண்டத்தில் உள்ள அனைவருக்கும் வலிமையில் மேன்மையானவனாக ஆனான். அந்நேரத்தில் இருந்துதான் சங்கரன் மஹாதேவன் {பெருந்தேவன்} என்று அழைக்கப்பட்டான்.(13)

அப்போது மகாதேவன், “சொர்க்கவாசிகளே, வில்லையும், கணையையும் தரித்து என் தேரில் இருந்து கொண்டு, உங்கள் எதிரிகளான அவர்களைப் போரில் நான் கொல்வேன்.(14) எனவே, தேவர்களே, இந்த நாளே நான் அசுரர்களைப் பூமியில் வீழ்த்துமாறு, இப்போது எனக்குத் தேரையும், வில்லையும், கணையையும் ஏற்படுத்துவீராக” என்றான்[1].(15)

தேவர்கள், “ஓ தேவர்களின் தலைவா, மூவுலகங்களில் காணப்படும் வடிவங்கள் அனைத்தையும் திரட்டி, அவை ஒவ்வொன்றின் பகுதிகளை எடுத்துக் கொண்டு, பெரும் சக்தி கொண்ட ஒரு தேரை நாங்கள் உனக்கு அமைப்போம்.(16) விஸ்வகர்மனின் கைவண்ணத்தில், பெரும் நுண்ணறிவுடன் வடிமைக்கப்பட்ட பெரும் தேராக அஃது இருக்கும்” என்றனர். இதைச் சொன்ன அந்தத் தேவப்புலிகள், அந்தத் தேரைக் கட்டத் தொடங்கினர்.(17) மேலும் அவர்கள், அந்தச் சங்கரன் பயன்படுத்தும் கணையாக விஷ்ணு, சோமன் {சந்திரன்} மற்றும் ஹுதாசனன் {அக்னி} ஆகியோரைச் செய்தனர். ஓ! மன்னா {சல்லியரே}, கணைகளில் முதன்மையான அந்தக் கணையின் கைப்பிடியாக அக்னியும், தலையாகச் சோமனும், முனையாக விஷ்ணுவும் ஆகினர்.(18) பெரும் நகரங்கள், பட்டணங்கள், மலைகள், காடுகள், தீவுகள் ஆகியவற்றுடன் கூடியவளும், பல்வேறு உயிரினங்களுக்கு வீடானவளுமான பூமாதேவியே தேராக்கப்பட்டாள்.

மந்தரமலை அதன் அச்சாணியாக்கப்பட்டது; பெரும் ஆறான கங்கை[2] ஜங்கமானது {பக்கத்தடுப்புகள்}; முக்கிய மற்றும் துணைத் திசைகளின் புள்ளிகள் அந்தத் தேரின் ஆபரணங்களாகின.(20) நட்சத்திரக்கூட்டங்கள் அதன் சுழல்தண்டாகியது; கிருத யுகம் அதன் நுகத்தடியானது; பாம்புகளில் சிறந்த வாசுகி அந்தத் தேரின் கூபரம் ஆனான்.(21) இமய மற்றும் விந்திய மலைகள் அபஸ்கரம் மற்றும் அதிஷ்தானங்களாகின {தேரின் பாகங்களாகின}; உதய மற்றும் அஸ்த மலைகள், தேவர்களில் முதன்மையான அந்தத் தேவனின் {சிவனின்} தேருடைய சக்கரங்களாகின.(22) தானவர்களின் வசிப்பிடமான சிறந்த பெருங்கடலை அதன் மற்றொரு அச்சாணியாக அவர்கள் ஆக்கினார்கள். ஏழு முனிவர்களும் {சப்தரிஷிகளும்}, அந்தத் தேரின் சக்கரங்களுக்குப் பாதுகாவலர்களானார்கள்.(23) கங்கை, சரஸ்வதி, சிந்து, வானம் ஆகியன அதன் துரமாக {தேரின் பகுதிகள்} ஆகின; பிற ஆறுகள் அனைத்தும் மற்றும் நீர்நிலைகள் அனைத்தும், அந்தத் தேரின் அங்கங்கள் {பகுதிகளை} பலவற்றைக் கட்டும் கயிறுகளாகின.(24) பகல், இரவு, காலத்தின் பல பிரிவுகளான கலைகள், காஷ்டைகள், பருவங்கள் ஆகியன அதன் அனுஷ்கரமாகின. சுடர்மிக்கக் கோள்களும், நட்சத்திரங்களும் அதன் மரத்தடுப்புகளாகின.(25)

அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன ஒன்று கலந்து அதன் திரிவேணுவாகின {தேரின் பகுதிகளை இணைக்கும் மூங்கில் கழிகள்}. மலர்கள் மற்றும் கனிகளால் அலங்கரிக்கப்பட்ட செடிகொடிகள் அதன் மணிகளாகின.(26) சூரியனும், சந்திரனும் சமமாக்கப்பட்டு, அவை அந்தத் தேர்களில் முதன்மையான தேரின் (வேறு இரண்டு) சக்கரங்களாகின. பகலும், இரவும் வலப்புறத்திலும், இடப்புறத்திலும் உள்ள அதன் மங்கலமான சிறகுகளாகின.(27) திருதராஷ்டிரனை முதன்மையாகக் கொண்ட பத்து முதன்மையான பாம்புகள் அத்தனையும், அந்தத் தேரின் (மற்றொரு) சுழல்தண்டாகின. வானம் அதன் (மற்றொரு) நுகத்தடியாக்கப்பட்டது, சம்வர்த்தகம், வலாகம் என்று அழைக்கப்படும் மேகங்கள், அந்த நுகத்தடியின் தோல் இழைகளாகின. இரு சந்திப் பொழுதுகளும், திருதி, மேதை, ஸ்திதி, சந்நதி,[3] கோள்கள் மற்றும் நட்சத்திரங்களால் விரவிக் கிடக்கும் ஆகாயம் ஆகியன அந்தத் தேரை மறைக்கும் தோல்களாகச் செய்யப்பட்டன. தேவர்கள், நீர்நிலைகள், இறந்தோர் மற்றும் பொக்கிஷங்கள் ஆகியவற்றுக்குத் தலைவர்களான லோகபாலர்கள் அந்தத் தேரின் குதிரைகளாக்கப்பட்டனர்[4].(29) காலபிருஷ்டன், நகுஷன், கார்க்கோடகன், தனஞ்சயன் மற்றும் இன்னும் பிற பாம்புகள், அந்தக் குதிரைகளின் பிடறிகளைக் கட்டும் கயிறுகளாகினர்.(30) முக்கிய மற்றும் துணைத்திசைகள் அந்தத் தேரின் குதிரைகளுடைய கடிவாளங்களாகின. வேதவொலியான வஷத்தானது {வஷத்காரமானது} தான்றுகோலானது {சாட்டை போன்றது}, காயத்ரி அந்தக் கோலுடன் இணைந்த இழையானது.(31)

மங்கல நாட்கள் நான்கும் குதிரைகளின் சேணங்களாகின, அவற்றை ஆட்சி செய்யும் பித்ருக்கள் அதன் சங்கிலிகளாகவும், ஊசிகளாகவும் ஆகின[5].(32) செயல், உண்மை, தவநோன்புகள், பொருள் ஆகியன அந்தத் தேரின் கயிறுகளாக்கப்பட்டன. மனமானது அந்தத் தேர் நிற்கும் தரையானது, வாக்கே {பேச்சே} அது செல்லும் தடமானது.(33) பல்வேறு வண்ணங்களிலான கொடிகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. மின்னலுடனும், அதனுடன் இணைந்த இந்திரவில்லுடனும் {வானவில்லுடனும்} அந்தச் சுடர்மிக்கத் தேரானது கடும் ஒளியை வெளியிட்டது. முன்பொரு சமயம், உயர் ஆன்ம ஈசானனின் வேள்வியில் ஒரு வருடம் என நிர்ணயிக்கப்பட்ட காலவெளியானது ஒரு வில்லானது, சாவித்ரி தேவி வில்நாண் கயிற்றின் உரத்த ஒலியானாள்.(35) விலைமதிப்பற்ற ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், ஊடுருவ முடியாததும், பிரகாசமானதும், காலச்சக்கரத்தில் இருந்து உதித்ததுமான ஒரு தெய்வீகக் கவசமும் உண்டாக்கப்பட்டது.(36) தங்க மலையான அந்த அழகிய மேரு, கொடிக்கம்பமானது, மின்னலின் கீற்றுகளைக் கொண்ட மேகங்கள் அதன் கொடிகளாகின.(37) இப்படி ஆயத்தம் செய்யப்பட்ட அந்தத் தேரானது, வேள்வி நடத்தும் புரோகிதர்களுக்கு மத்தியில் சுடர்விடும் நெருப்பைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தது. முறையாக ஆயத்தம் செய்யப்பட்ட அந்தத் தேரைக் கண்ட தேவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(38)

ஓ ஐயா {சல்லியரே}, மொத்த அண்டத்தின் சக்திகளும் ஒரே இடத்தில் ஒன்றாக இணைந்ததைக் கண்ட தேவர்கள் ஆச்சரியப்பட்டு, இறுதியாக அந்தச் சிறப்புமிக்கத் தேவனிடம் {சிவனிடம்} அந்தத் தேர் தயாராகிவிட்டது எனத் தெரிவித்தனர்.(39) ஓ! ஏகாதிபதி {சல்லியரே}, ஓ! மனிதர்களில் புலியே {சல்லியரே}, இவ்வாறு தேவர்களால் தங்கள் எதிரிகளைக் கலங்கடிப்பதற்காகத் தேர்களில் சிறந்த அந்தத் தேரானது கட்டமைக்கப்பட்டதும், அதில் சங்கரன் {சிவன்} தனது தெய்வீக ஆயுதங்களை வைத்தான். வானத்தையே அதன் கொடிக்கம்பமாக ஏற்படுத்திக் கொண்ட அவன், ஆவின வகையான தன் காளையை அதில் வைத்தான்.(41) பிரம்ம தண்டம், காலத் தண்டம், ருத்ர தண்டம், நோய் ஆகியன அந்தத் தேர் பக்கவாட்டுகளின் பாதுகாவலர்களாகி, அனைத்துப் பக்கங்களை நோக்கியும் தங்கள் முகங்களைத் திருப்பிக் கொண்டன.(42) அதர்வனும் {அதர்வ வேதமும்}, அங்கீரசும் அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரனின் {சிவனின்} தேர்ச்சக்கரங்களுடைய பாதுகாவலர்களானார்கள். ரிக் வேதம், சாமவேதம், புராணங்கள் ஆகிய அந்தத் தேருக்கு முன்பாக நின்றன.(43) வரலாறுகளும், யஜுர்வேதமும் பின்புறத்தின் பாதுகாவலர்களாகின. ஓ! ஏகாதிபதி {சல்லியரே}, புனித உரைகள் அனைத்தும், அறிவியல்கள் அனைத்தும், பாடல்கள் அனைத்தும், வேதவொலியான வஷத்தும் {வஷத்காரமும்} கூட அதைச் சூழ்ந்து நின்றன.(44) ஓ! மன்னா {சல்லியரே}, ஓரசையான “ஓம்” என்ற சொல்லானது அந்தத் தேருக்கு முன்பாக நின்று அதை மிகவும் அழகாக்கியது.(45)

ஆறுபருவங்களால் அலங்கரிக்கப்பட்ட வருடத்தையே வில்லாகக் கொண்ட அவன் {சிவன்}, அந்தப் போரில் தன் நிழலையே அந்த வில்லின் உறுதியான நாண்கயிறாக்கினான்.(46) அந்தச் சிறப்பு மிக்க ருத்திரன் காலனேயாவான்; வருடமே அவனது வில்லானது; எனவே, ருத்திரனின் நிழலான நள்ளிரவானது {மரண இரவானது} அந்த வில்லின் அழிக்கப்பட முடியாத நாண்கயிறானது.(47) (ஏற்கனவே சொன்னது போல) விஷ்ணு, அக்னி மற்றும் சோமன் ஆகியோர் கணையாகினர். இந்த அண்டமானது, அக்னியையும், சோமனையும் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதே போல இந்த அண்டம் விஷ்ணுவைக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் விஷ்ணுவானவன், அளக்க முடியாத சக்தி கொண்ட புனிதமான பவனின் {சிவனின்} ஆன்மாவாவான். இதனாலேயே வில்லின் அந்த நாண்கயிறானது அசுரர்களுக்குத் தாங்கமுடியாததாக இருந்தது[6].(49) பிருகு, அங்கிரஸ் ஆகியோரின் கோபத்தில் தோன்றியதும், தாங்கிக் கொள்ளப்பட முடியாததும், கோப நெருப்பானதும், தடுக்கப்பட முடியாததுமான தன் கடுங்கோபத்தைச் சங்கரன் {சிவன்} அந்தக் கணையில் செலுத்தினான்.(50) அப்போது, நீலமும் சிவப்பும் ஆனவனும், அல்லது புகையானவனும், பத்தாயிரம் சூரியர்களைப் போலத் தெரிபவனும், மட்டுமீறிய நெருப்பால் சூழப்பட்டவனும், தோல்களை உடுத்தியவனுமான அந்தப் பயங்கரத் தேவன் {சிவன்} காந்தியால் சுடர்விட்டெரிந்தான்.(51)

சங்கடப்படுத்த மிகக் கடினமானவனையும் சங்கடப்படுத்துபவனும், வெற்றியாளனும், பிரம்மத்தை வெறுப்போர் அனைவரையும் கொல்பவனும், ஹரன் என்றும் அழைக்கப்படுபவனும், நீதிமான்களை {அறவோரை} மீட்டு, நீதியற்றவர்களை {மறவோரை} அழிப்பவனுமான அந்தச் சிறப்புமிக்க ஸ்தாணு {சிவன்}, வலிமையும், பயங்கரமும் நிறைந்தவர்களும், பயங்கர வடிவங்களைக் கொண்டவர்களும், மனோ வேகம் கொண்டவர்களும், (எதிரிகள் அனைவரையும்) கலங்கடித்து நொறுக்க வல்லவர்களுமான பலரின் துணையுடன், தன்னைக் குறித்து விழிப்படையச் செய்யும் ஆன்மாவின் நுட்பமான பதினான்கு திறன்களுடன் கூடியவனைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.(52,53) ஓ! மன்னா {சல்லியரே}, அவனது அங்கங்களையே தங்கள் புகலிடமாகக் கொண்ட இந்த மொத்த அண்டமும், அசையும் மற்றும் அசையாத உயிர்களுடன் சேர்ந்து மிக உயர்ந்த அற்புதமான தோற்றத்தைக் கொண்டு அழகாகத் தெரிந்தது.(54) முறையாக ஆயத்தம் செய்யப்பட்ட அந்தத் தேரைக் கண்ட அவன் {சிவன்}, தன் மேனியில் கவசம் பூண்டு கொண்டு, வில்லையும் தரித்துக் கொண்டு, சோமன், விஷ்ணு மற்றும் அக்னி ஆகியோரிடம் இருந்து உண்டான அந்தத் தெய்வீகக் கணையை எடுத்துக் கொண்டான்.(55)

பிறகு தேவர்கள், ஓ! மன்னா {சல்லியரே}, அந்தப் பலமிக்கத் தேவன் {சிவன்} மீது தான் கொண்டுள்ள நறுமணங்கள் அனைத்தையும் வீசும்படி தேவர்களில் முதன்மையான வாயுவுக்கு ஆணையிட்டனர்.(56) அப்போது மஹாதேவன் {சிவன்}, தேவர்களையே அச்சுறுத்தியபடி, பூமியையே நடுங்கச் செய்தபடி அந்தத் தேரில் உறுதியான தீர்மானத்துடன் ஏறினான்.(57) அந்தத் தேவர்களுக்குத் தேவன் {சிவன்}, அந்தத் தேரில் ஏறும்போது, பெரும் முனிவர்கள், கந்தர்வர்கள், தேவர்க்கூட்டங்கள், அப்சரஸ்களின் பல்வேறு இனக்குழுக்கள் ஆகியோர் துதிபாடத் தொடங்கினர்.(58) வரமளிக்கும் அந்தத் தேவன் {சிவன்}, மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களால் புகழப்பட்டும், பாணர்களாலும், ஆடற்கலையை நன்கறிந்த பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த நர்த்தகிகளான அப்சரஸ்களால் துதிக்கப்பட்டும், வாள், கணை மற்றும் வில்லைத் தரித்துக் கொண்டு மிக அழகாகத் தெரிந்தான். பிறகு புன்னகைத்த அவன் {சிவன்}, அந்தத் தேவர்களிடம், “எவன் எனது சாரதியாவான்?” என்று கேட்டான்.{என்றான் துரியோதனன்}.(59,60)

திரிபுரம் எரித்த சிவன்! – கர்ண பர்வம் பகுதி – 34ஆ-தேவர்களிடம் தனக்கு ஒரு சாரதியை நியமிக்குமாறு கேட்ட சிவன்; சிவனுக்குச் சாரதியாக இருக்கப் பிரம்மனிடம் வேண்டிய தேவர்கள்; கோரிக்கையை ஏற்ற பிரம்மன்; திரிபுரத்தை எரித்த சிவன்; சிவனுக்குச் சாரத்தியம் ஏற்ற பிரம்மனைப் போல, சல்லியனும் கர்ணனுக்குச் சாரதியாக வேண்டும் என வேண்டிய துரியோதனன்…

{துரியோதனன் சல்லியனிடம் தொடர்ந்தான்}, “தேவர்கள் அவனிடம் {சிவனிடம்}, “ஓ! தேவர்களின் தலைவா, யாரை நீ நியமிப்பாயோ, அவரே உன் சாரதியாகட்டும்” என்றனர்.(61) அவர்களிடம் அந்தத் தேவன் {சிவன்}, “நீங்களே சிந்தித்துப் பார்த்து, என்னைவிட மேன்மையானவனைத் தாமதமில்லாமல் எனக்குச் சாரதியாக்குவீராக” என்றான்.(62) அந்த உயர் ஆன்ம தேவனால் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்று, அவனது அருளை நாடி இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள்:(63) “ஓ! புனிதமானவரே, தேவர்களின் எதிரிகளைப் பீடிக்கும் காரியத்தில் நீர் எங்களுக்கு ஆணையிட்ட அனைத்தையும் நிறைவேற்றிவிட்டோம். காளையைத் தன் அடையாளமாகக் கொண்ட தேவனும் {சிவனும்} எங்களிடம் மனம் நிறைந்தான்.(64) அற்புதமான ஆயுதங்கள் பலவற்றுடன் ஆயத்தம் செய்யப்பட்ட தேரை நாங்கள் கட்டமைத்துவிட்டோம். எனினும், அந்த முதன்மையான தேருக்கு யார் சாரதியாக முடியும் என்பதை நாங்கள் அறியவில்லை.(65) எனவே, தேவர்களில் எவராவது ஒருவரைச் சாரதியாக நியமிப்பீராக. ஓ! புனிதமானவரே {பிரம்மனே}, நீர் எங்களிடம் சொன்ன அந்த வார்த்தைகளை மெய்யாக்குவதே உமக்குத் தகும்.(66) ஓ! தேவரே, இதற்கு முன்னர், எங்களுக்கு நன்மை செய்வதாக நீர் சொல்லியிருக்கிறீர். அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதே உமக்குத் தகும்.(67)

தாங்கிக் கொள்ளப்பட முடியாததும், நமது எதிரிகளை நிர்மூலமாக்கவல்லதுமான அந்தச் சிறந்த தேரானது, தேவர்களின் பகுதிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பினாகை தரித்த அந்தத் தேவனே {சிவனே} அதில் நிற்கும் போர்வீரனாகச் செய்யப்பட்டான். தானவர்களை அச்சத்தால் பீடித்து அவன் {சிவன்} போருக்குத் தயாராக இருக்கிறான்.(68) {அந்தத் தேரில்} நான்கு வேதங்களும் நான்கு முதன்மையான குதிரைகளாகியிருக்கின்றன. மலைகளுடன் கூடிய பூமியானவளே அந்த உயர் ஆன்மாவுக்கு {சிவனுக்குத்} தேராகியிருக்கிறாள். நட்சத்திரங்கள் அந்த வாகனத்தை அலங்கரிக்கின்றன. (ஏற்கனவே சொன்னது போல) ஹரனே {சிவனே} போர்வீரனாக இருக்கிறான். எனினும், அவனுக்குச் சாரதியாகக்கூடிய எவரையும் நாங்கள் காணவில்லை.(69) இவை யாவற்றுக்கும் மேன்மையான ஒருவரையே அந்தத் தேரின் சாரதியாக நாட வேண்டும். ஹரனே போர்வீரன், ஓ! தேவரே {பிரம்மனே}, அந்தத் தேரின் முக்கியத்துவமும் உமக்கு இணையானதாகும். ஓ! பெரும்பாட்டனே, கவசம், ஆயுதங்கள், வில் ஆகியவற்றை ஏற்கனவே நாம் கொண்டிருக்கிறோம்.(70) அந்தத் தேரின் சாரதியாக உம்மைத் தவிர வேறு எவரையும் எங்களால் காண முடியவில்லை. நீர் அனைத்துச் சாதனைகளையும் {பண்புகளையும்} கொண்டவராக இருக்கிறீர். ஓ! தலைவா, தேவர்கள் அனைவருக்கும் நீர் மேன்மையாக இருக்கிறீர்.(71) தேவர்களின் வெற்றிக்காகவும், எங்கள் எதிரிகளின் அழிவுக்காகவும், அந்தத் தேரில் வேகமாக ஏறி, அந்த முதன்மையான குதிரைகளின் கடிவாளங்களைப் பிடிப்பீராக” என்றனர் {தேவர்கள்}.(72) மூவுலகங்களின் தலைவனான அந்தப் பெரும்பாட்டனிடம் தங்கள் தலைகளை வணங்கிய அந்தத் தேவர்கள், சாரதி நிலையை {சாரத்தியம்} ஏற்பதில் அவனை மனநிறைவு கொள்ளச் செய்ய முயன்றனர்.(73)

பெரும்பாட்டன் {பிரம்மன்}, “சொர்க்கவாசிகளே, நீங்கள் சொன்ன யாதிலும் பொய்மையேதும் இல்லை. கபர்தின் {சடை தரித்த சிவன்} போரிடுகையில் அவனது குதிரைகளின் கடிவாளத்தை நான் பிடிப்பேன்” என்றான்.(74) பிறகு, உலகங்களைப் படைப்பவனும், சிறப்புமிக்கத் தேவனுமான அந்தப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, உயர் ஆன்ம ஈசானனின் சாரதியாகத் தேவர்களால் நியமிக்கப்பட்டான்.(75) மேலும் அவன் {பிரம்மன்} அனைவராலும் வழிபடப்பட்டு அந்தத் தேரில் வேகமாக ஏறும்போது, காற்றின் வேகத்தைக் கொண்ட அந்தக் குதிரைகள், தலைவணங்கி பூமியில் விழுந்தன.(76) தேரில் ஏறிய பிறகு, சிறப்புமிக்கத் தேவனான அந்தப் பெரும்பாட்டன், தன் சக்தியால் பிரகாசித்தபடி, கடிவாளங்களையும், தான்றுகோலையும் {சாட்டையையும்} எடுத்தான்.(77) அப்போது அந்தச் சிறப்புமிக்கத் தேவன், அந்தக் குதிரைகளை எழுப்பிவிட்டு, தேவர்களில் முதன்மையான ஸ்தாணுவிடம், “{தேரில்} ஏறுவாயாக” என்று சொன்னான்.(78) பிறகு, விஷ்ணு, சோமன் மற்றும் அக்னி ஆகியோர் அடங்கிய அந்தக் கணையை எடுத்துக் கொண்ட ஸ்தாணு, அந்தத் தேரில் ஏறி, தன் வில்லால் எதிரியை நடுங்கச் செய்தான்.(79) அந்தத் தேவர்களின் தலைவன் தேரில் ஏறிய பிறகு, பெருமுனிவர்கள், கந்தர்வர்கள், தேவர்க்கூட்டங்கள், அப்சரஸ்களின் பல்வேறு இனக்குழுக்கள் ஆகியோர் அவனைத் துதித்தனர்.(80)

அழகுடன் பிரகாசித்தவனும், வாள், கணை மற்றும் வில் ஆகியவற்றைத் தரித்தவனுமான அந்த வரமளிக்கும் தேவன் {சிவன்}, தன் சக்தியால் மூன்று உலகங்களையும் சுடர்மிக்கவையாகச் செய்தபடி தன் தேரில் நின்றிருந்தான்.(81) அந்தப் பெரும் தேவன் {சிவன்}, இந்திரனின் தலைமையான தேவர்களிடம் மீண்டும், “அசுரர்களை அழிக்கும் என் திறனில் ஐயுற்று ஒரு போதும் நீங்கள் வருந்தக்கூடாது.(82) இந்தக் கணையால் அசுரர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதை அறிவீராக” என்றான். அப்போது தேவர்கள், “உண்மைதான். அசுரர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர்” என்றனர்.(83) அந்தத் தெய்வீகத் தலைவன் {சிவன்} சொன்ன வார்த்தைகள் பொய்க்க முடியாது என்று நினைத்த தேவர்கள், உண்மையில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.(84) பிறகு அந்தத் தேவர்களின் தலைவன் {சிவன்}, தேவர்கள் அனைவராலும் சூழப்பட்டு, எதற்கும் ஒப்பிடப்பட முடியாத அந்தப் பெரும் தேரில் சென்றான்.(85) அதே வேளையில் அந்தச் சிறப்புமிக்கத் தேவன், போரில் ஒப்பற்றவர்களும், மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டிருந்தவர்களும், ஒருவரை நோக்கி மற்றவர் கூக்குரலிட்டபடியே அனைத்துப் பக்கங்களிலும் மூர்க்கமாக ஓடிக் கொண்டிருந்தவர்களுமான துணைவர்களாலும், ஊனுண்ணிகள் பிறராலும் துதிக்கப்பட்டான்.(86) பெரும் நற்பேற்றைக் கொண்டவர்களும், தவத்தகுதிகளையுடையவர்களும், உயர்ந்த பண்புகளைக் கொண்டவர்களுமான முனிவர்களும், தேவர்களும் மகாதேவனின் வெற்றிக்காக அவனை வாழ்த்தினர்.(87)

மூன்று உலகங்களின் அச்சங்களை விலக்குபவனான அந்த வரமளிக்கும் தேவன் {சிவன்}, இவ்வாறு சென்ற போது, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {சல்லியரே}, தேவர்கள் அனைவருடன் கூடிய மொத்த அண்டமும் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.(88) மேலும் அங்கே இருந்த முனிவர்கள், ஓ! மன்னா {சல்லியரே], பல்வேறு பாடல்களால் அந்தத் தேவர்களின் தலைவனைத் துதித்து, அவனது சக்தியை மேம்படுத்தியபடி அங்கேயே நிலை கொண்டனர்.(89) அவன் {சிவன்} புறப்பட்ட அந்த நேரத்தில், லட்சக்கணக்கான, பத்துலட்சக்கணக்கான கந்தர்வர்கள், பல்வேறு இசைக்கருவிகளை இசைத்தனர்.(90) வரமளிக்கும் பிரம்மன், தேரில் ஏறி அசுரர்களை நோக்கிச் சென்ற போது, அந்த அண்டத்தின் தலைவன் {சிவன்} சிரித்துக் கொண்டே, “நன்று, நன்று.(91) ஓ! தேவரே {பிரம்மனே}, தைத்தியர்கள் எங்கிருக்கின்றனரோ அங்கே செல்வீராக. விழிப்புடன் குதிரைகளைத் தூண்டுவீராக. போரில் நான் இன்று எதிரியைக் கொல்லும்போது என் கரங்களின் வலிமையைக் காண்பீராக” என்றான்.(92) இப்படிச் சொல்லப்பட்ட பிரம்மன், காற்று, அல்லது சிந்தனையின் வேகத்தைக் கொண்ட அந்தக் குதிரைகளைத் தூண்டி, தைத்தியர்களாலும், தானவர்களாலும் பாதுகாக்கப்பட்ட முந்நகரம் {திரிபுரம்} இருந்த இடத்தை நோக்கிச் சென்றான்.(93) உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்பட்டவையும், வானத்தையே விழுங்கிவிடுவதைப் போன்ற வேகத்துடன் சென்றவையுமான அந்தக் குதிரைகளுடன் அந்தச் சிறப்புமிக்கத் தேவன் சொர்க்கவாசிகளின் வெற்றிக்காக வேகமாகச் சென்றான்.(94)

உண்மையில் பவன் {சிவன்}, முந்நகரத்தை {திரிபுரத்தை} நோக்கி அந்தத் தேரில் சென்ற போது, அவனது காளையானது திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைக்கும்வண்ணம் பயங்கரமாக முழங்கியது.(95) அந்தக் காளையின் பயங்கரமான பெருமுழக்கத்தைக் கேட்டவர்களும், தேவர்களின் எதிரிகளுமான தாரகனின் வழித்தோன்றல்கள் பலரும், அவனைப் பின்பற்றுபவர்களும் தங்கள் இறுதி மூச்சை சுவாசித்தனர்.(96) அவர்களில் பலர் போரில் எதிரியை எதிர்த்து நின்றனர். அப்போது, ஓ! மன்னா {சல்லியரே}, திரிசூலம் தரித்த ஸ்தாணு, கோபத்தால் தன் உணர்வுகளை இழந்தவனாக ஆனான்.(97) அனைத்து உயிரினங்களும் பீடியடைந்தன, மூன்று உலகங்களும் நடுங்கத் தொடங்கின. அந்தக் கணையால் அவன் குறிபார்த்த போது, பயங்கரமான சகுனங்கள் தோன்றின.(98) எனினும், அந்தக் கணையில் இருந்த சோமன், அக்னி மற்றும் விஷ்ணு ஆகியோரது எடையுடைய அழுத்தத்தின் விளைவாகவும், பிரம்மன், ருத்ரன் மற்றும் பின்னவனின் {ருத்ரனின்} வில் ஆகியவற்றின் அழுத்தத்தின் காரணமாகவும் அந்தத் தேரானது மூழ்குவதைப் போலத் தெரிந்தது.(99) அப்போது அந்தக் கணையின் முனையில் இருந்து வெளிப்பட்ட நாராயணன், காளையின் வடிவை ஏற்று அந்தப் பெரிய தேரை உயர்த்தினான்.(100)

அந்தத் தேரானது மூழ்கி, எதிரிகள் முழங்கத் தொடங்கிய போது, பெரும் வலிமையைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {சிவன்}, ஓ! கௌரவங்களை அளிப்பவரே {சல்லியரே}, தனது குதிரைகளின் முதுகிலும், தனது காளையின் தலையிலும் நின்றபடியே, சினத்தால் பெருமுழக்கம் செய்யத் தொடங்கினான். அந்த நேரத்தில் சிறப்புமிக்க ருத்ரன் அந்தத் தானவ நகரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.(101,102) ஓ! மனிதர்களில் சிறந்தவரே {சல்லியரே}, அந்நிலையில் நின்ற ருத்ரன், அந்தக் குதிரைகளின் காம்புகளையும் (teats), காளையுடைய குளம்புகளின் ஆணிகளையும் வெட்டினான்.(103) ஓ! மன்னா, அற்புதச் செயல்களைச் செய்யும் வலிமைமிக்க ருத்ரனால் பீடிக்கப்பட்ட அந்தக் காலம் முதல் குதிரைகள் காம்புகள் இன்றியே இருக்கின்றன[1].(104)

அப்போது சர்வன் {சிவன்}, தன் வில்லின் நாணையேற்றிக் கொண்டு, முந்நகரத்தை {திரிபுரத்தை} நினைத்துக் கொண்டே, பாசுபத ஆயுதத்துடன் தான் ஒன்றிணைத்த அந்தக் கணையால் குறிபார்த்தபடி காத்திருந்தான்.(105) ஓ! மன்னா {சல்லியரே}, ருத்ரன் அவ்வாறு வில்லைப் பிடித்த படி நின்று கொண்டிருந்த அந்த நேரத்தில், அந்த மூன்று நகரங்களும் ஒன்று சேர்ந்தன.(106) அந்த மூன்று நகரங்களும் தங்கள் தனிப்பட்ட பண்புகளை இழந்து ஒன்று சேர்ந்த போது, ஆரவாரமே உயர் ஆன்மத் தேவர்களின் மகழ்ச்சியானது.(107) பிறகு தேவர்கள் அனைவரும், சித்தர்களும், பெரும் முனிவர்களும் மஹேஸ்வரனை {சிவனைப்} புகழ்ந்து, ஜெயம் என்ற சொல்லைச் சொன்னார்கள்.(108) அப்போது, தாங்கிக் கொள்ள முடியாத சக்தியைக் கொண்டவனும், விவரிக்க முடியாத வடிவமும், கடுமையும் கொண்ட தேவனும், அசுரர்களைக் கொல்ல விரும்பிய போர்வீரனுமான அந்தத் தேவனின் {சிவனின்} முன்னிலையில் அந்த முந்நகரம் உடனே தோன்றியது.(109) பிறகு, சிறப்புமிக்கத் தேவனான அந்த அண்டத் தலைவன், அந்தத் தெய்வீக வில்லை வளைத்து, மொத்த அண்டத்தின் வலிமையையும் பிரதிபலித்த அந்தக் கணையை முந்நகரத்தின் {திரிபுரத்தின்} மீது ஏவினான்.(110) ஓ! பெரும் நற்பேற்றைக் கொண்டவரே {சல்லியரே}, அந்த முதன்மையான கணை ஏவப்பட்டதும், பூமியை நோக்கி விழத்தொடங்கிய அந்த நகரங்களில் இருந்து துன்பம் நிறைந்த பேரோலங்கள் கேட்கப்பட்டன. அந்த அசுரர்களை எரித்த அவன் {சிவன்}, அவர்களை மேற்குப் பெருங்கடலில் வீசினான்.(111) முந்நகரம் {திரிபுரம்} இவ்வாறே எரிக்கப்பட்டது, மூன்று உலகங்களுக்கும் நன்மை செய்யும் விருப்பத்தால் கோபத்துடன் கூடிய மஹேஸ்வரனால் தானவர்களும் இவ்வாறே அழிக்கப்பட்டனர்.(112)

அந்த முக்கண் தேவன் {சிவன்}, தன் கோபத்தால் உண்டான நெருப்பிடம், “ஓ!, மூவுலகங்களையும் சாம்பலாக்கிவிடாதே” என்று சொல்லி அதைத் தணித்தான்.(113) இதன் பிறகு, தேவர்களும், முனிவர்களும், மூன்று உலகங்களும், தங்கள் இயல்பு நிலைகள் மீண்டு, ஒப்பற்ற சக்தி கொண்ட ஸ்தாணுவை {சிவனை} உயர்ந்த தரத்திலான வார்த்தைகளால் மனநிறைவு கொள்ளச் செய்தனர்.(114) பிறகு படைப்பாளனை {பிரம்மனைத்} தங்கள் தலைமையில் கொண்டவர்களும், இத்தகு முயற்சியால் தங்கள் நோக்கம் ஈடேறியவர்களுமான தேவர்கள், அந்தப் பெரும் தேவனிடம் {சிவனிடம்} அனுமதி பெற்றுக் கொண்டு, தாங்கள் எந்த இடங்களில் இருந்து வந்தனரோ அங்கேயே சென்றனர்.(115) சிறப்புமிக்கத் தேவனும், உலகங்களைப் படைப்பவனும், தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவரின் தலைவனுமான மகேஸ்வரன், உலகங்கள் அனைத்தின் நன்மைக்காக எது செய்யப்பட வேண்டுமோ, அதைச் செய்தான்.(117)

உலகங்களைப் படைத்தவனும், பெரும்பாட்டனும், மங்காப் புகழ் கொண்ட உயர்ந்த தேவனுமான சிறப்புமிக்கப் பிரம்மன், ருத்ரனின் சாரதியாகச் செயல்பட்டதைப் போல, ருத்ரனின் குதிரைகளைக் கட்டுப்படுத்திய அந்தப் பெரும்பாட்டனைப் போல், உயர் ஆன்ம ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} குதிரைகளை நீர் கட்டுப்படுத்துவீராக.(118) ஓ! மன்னர்களில் புலியே {சல்லியரே}, கிருஷ்ணன், கர்ணன் மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகியோருக்கு நீர் மேம்பட்டவரே என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.(119) போரில் ருத்ரனைப் போன்றவனே கர்ணன், கொள்கையில் பிரம்மனைப் போன்றவரே நீரும். எனவே, ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நீங்கள் இருவரும், அசுரர்களைப் போன்ற என் எதிரிகளை வெல்லத் தகுந்தவர்களே.(120) ஓ! சல்லியரே, கிருஷ்ணனைத் தன் தேரின் சாரதியாகவும், வெண்குதிரைகளையும் கொண்டவனான குந்தியின் மகனை {அர்ஜுனனை} கர்ணனால் எதைக் கொண்டு கொல்ல முடியுமோ, அஃது இன்று வேகமாக நடக்கட்டும்.(121) எங்களுக்காகவும், எங்கள் அரசுகளுக்காகவும், போரில் வேண்டும் வெற்றிக்காகவும், கர்ணன் உம்மைச் சார்ந்தே இருக்கிறான். எனவே, (கர்ணனின்) அந்தச் சிறந்த குதிரைகளின் கடிவாளங்களைப் பிடிப்பீராக” {என்றான் துரியோதனன்}.(122)

வரமளித்த சிவன்! – கர்ண பர்வம் பகுதி – 34இ-சல்லியனுக்குப் பரசுராமர் மற்றும் சிவனின் கதையைச் சொன்ன துரியோதனன்; தெய்வீக ஆயுதங்கள் வேண்டி தவமிருந்த பரசுராமர்; தூய்மையடையப் பணித்த சிவன்; தைத்தியர்களை வெல்ல முடியாத தேவர்கள் சிவனிடம் பணிந்து வேண்டியது; தைத்தியர்களை அழிக்க பரசுராமரை ஏவிய சிவன்; தைத்தியர்களை அழித்த பரசுராமர்; ஆயுதங்களை அளித்த சிவன்; பரசுராமரிடம் இருந்து அவ்வாயுதங்களைப் பெற்றான் கர்ணன் எனத் துரியோதனன் சொல்வது…

{துரியோதனன் சல்லியனிடம் தொடர்ந்தான்}, “நான் சொல்லப்போகும் மற்றுமொரு கதையைக்  கேட்பீராக. அறமொழுகும் அந்தணர் {பிராமணர்} ஒருவர் என் தந்தையிடம் என் முன்னிலையில் இதைச் சொன்னார்.(123) ஓ! சல்லியரே, செயல்களின் காரணங்களும், நோக்கங்களும் நிறைந்த அந்த இனிமையான வார்த்தைகளைக் கேட்ட பிறகு, எவ்வித ஐயுணர்வும் இன்றி நீர் தீர்மானிப்பதையே செய்வீராக.(124)

பிருகு குலத்தவரில் கடும் தவநோன்புகளைக் கொண்டவராக ஜமதக்னி இருந்தார். அவருக்கு, அனைத்து அறங்களையும், சக்தியையும் கொண்டவரும், ராமர் {பரசுராமர்} என்ற பெயரில் கொண்டாடப்படுபவருமான ஒரு மகன் இருந்தார்.(125) உற்சாகமிக்க ஆன்மாவுடன் மிகக் கடினமான தவத்தைப் பயின்று, நோன்புகளுக்கும், விரதங்களுக்கும் கட்டுப்பட்டு, தன் புலன்களைக் கட்டுப்படுத்திய அவர் {பரசுராமர்}, ஆயுதங்களை அடைவதற்காகத் பவதேவனை {சிவனை} நிறைவுறச் செய்தார்.(126) அவரது அர்ப்பணிப்பு மற்றும் இதயத்தின் அமைதிநிலை ஆகியவற்றின் விளைவால் மஹாதேவன் {சிவன்} அவரிடம் {பரசுராமரிடம்} மனநிறைவு கொண்டான். ராமரது {பரசுராமரின்} இதயத்தில் பேணப்பட்ட விருப்பத்தைப் புரிந்து கொண்ட சங்கரன் {சிவன்}, தன்னை அவரிடம் {பரசுராமரிடம்} வெளிக்காட்டினான்.(127) 

மஹாதேவன் {சிவன்}, “ஓ! ராமா {பரசுராமா}, நான் உன்னிடம் நிறைவைக் கொண்டேன். நீ அருளப்பட்டிருப்பாயாக, உன் விருப்பத்தை நான் அறிவேன். உன் ஆன்மாவைத் தூய்மையாக்குவாயாக. அப்போது உன் விருப்பங்கள் அனைத்தையும் நீ அடைவாய்.(128) நீ தூய்மையானதும் {பரிசுத்தமடைந்ததும்} ஆயுதங்கள் அனைத்தையும் நான் உனக்குத் தருவேன். ஓ! பிருகுவின் மகனே, திறனற்றவனையும், அவ்வாயுதங்களுக்குத் தகாதவனையும் அவை {அவ்வாயுதங்கள்} எரித்துவிடும்” என்றான் {சிவன்}.(129) தேவதேவனும், திரிசூலபாணியுமான அந்தத் தேவனால் {சிவனால்} இவ்வாறு சொல்லப்பட்ட அந்த ஜமதக்னி மகன் {பரசுராமர்}, பலம்வாய்ந்த அந்த உயர்ந்தவனிடம் {சிவனிடம்} சிரம் தாழ்த்தி,(130) “ஓ! தேவதேவா, அவற்றை ஏந்த நான் தகுந்தவன் என உண்மையில் எப்போது நீ கருதுகிறாயோ, எப்போதும் உன் பணியில் அர்ப்பணிப்புடன் இருக்கும் எனக்கு அவ்வாயுதங்களை அப்போது கொடுப்பதே உனக்குத் தகும்” என்றார்.(131)

துரியோதனன் {சல்லியனிடம்} தொடர்ந்தான், “பிறகு அந்த ராமர், தவங்கள், புலன்களில் தற்கட்டுப்பாடு, நோன்புகள் நோற்பு, வழிபாடு, காணிக்கைகள், மந்திரங்களுடன் கூடிய வேள்விகள் மற்றும் ஹோமங்கள் ஆகியவற்றால் நீண்ட பல ஆண்டுகளாக சர்வனை {சிவனைத்} துதித்தார்.(132) இறுதியாக அந்த உயர் ஆன்ம பிருகு குல மகனிடம் {பரசுராமரிடம்} மனம் நிறைவடைந்த மகாதேவன், அறங்கள் பலவற்றைக் கொண்ட தன் தெய்வீகத் துணைவியின் {உமாதேவியின்} முன்னிலையில்:(133) “நோன்புகளில் உறுதியான இந்த ராமன் {பரசுராமன்}, என்னிடம் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவனாவான்” என்று சொன்னான். அவனிடம் மனம் நிறைந்த அந்தத் தலைவன் சங்கரன், ஓ! எதிரிகளைக் கொல்பவரே {சல்லியரே}, தேவர்கள் மற்றும் முனிவர்களின் முன்னிலையில் அவரது நற்பண்புகளை மீண்டும் மீண்டும் அறிவித்தார்.(134)

அதே வேளையில் தைத்தியர்கள் மிகவும் வலிமைமிக்கவர்களாக ஆகிவிட்டார்கள். செருக்கு மற்றும் மடமையால் குருடான அவர்கள் {தைத்தியர்கள்}, சொர்க்கவாசிகளைப் பீடிக்கத் தொடங்கினர். அப்போது தேவர்கள் ஒன்றுகூடி, அவர்களைக் கொல்ல உறுதியாகத் தீர்மானித்து, தங்கள் எதிரிகளின் அழிவுக்காக மிக ஊக்கமாக முயன்றனர். எனினும், அவர்களை வெல்லத் தவறினர்.(136) பிறகு தேவர்கள், உமையின் தலைவனான மஹேஸ்வரனிடம் சென்று, “எங்கள் எதிரிகளைக் கொல்வீராக” என்று சொல்லி அர்ப்பணிப்புடன் அவனை நிறைவு கொள்ளச் செய்யத் தொடங்கினர்.(137) தேவர்களின் எதிரிகளை அழிப்பதாக அவர்களிடம் உறுதியளித்த அந்தத் தேவன், பிருகுவின் வழித்தோன்றலான ராமரை அழைத்தான். ராமரிடம் {பரசுராமரிடம்} அந்த சங்கரன்,(138) “ஓ! பிருகுவின் வழித்தோன்றலே {பரசுராமா}, உலகம் அனைத்திற்கும் நன்மை செய்யவும், என்னை நிறைவு கொள்ளச்செய்யவும் விரும்பி, கூடியிருக்கும் தேவஎதிரிகள் அனைவரையும் கொல்வாயாக” என்றான்.(139)

இப்படிச் சொல்லப்பட்ட ராமர் {பரசுராமர்}, முக்கண்களைக் கொண்ட அந்த வரமளிக்கும் தேவனிடம் {சிவனிடம்}, “ஓ! தேவர்களின் தலைவா, ஆயுதங்களற்றவனாக நான் இருக்கிறேன், போரில் வெல்லப்பட முடியாதவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களுமான தானவர்கள் கூட்டத்தைக் கொல்ல என்னிடம் என்ன பலத்தைக்கொண்டிருக்கிறேன்?” என்று கேட்டார்.(140) அதற்கு அந்த மஹேஸ்வரன், “என் ஆணையின் படி சென்று அந்த எதிரிகளை நீ கொல்வாயாக. அந்த எதிரிகள் அனைவரையும் வென்ற பிறகு, எண்ணிலா தகுதிகளை நீ அடைவாய்” என்றான்.(141) இவ்வார்த்தைகளைக் கேட்டு அவை அனைத்தையும் ஏற்ற ராமர் {பரசுராமர்}, தமது வெற்றிக்காக தீர்திற {பரிகாரச்} சடங்குகளைச் செய்யச் செய்து, தானவர்களை எதிர்த்துச் சென்றார்.(142)

வலிமை, மடமை, செருக்கு ஆகியவற்றைக் கொண்ட அந்தத் தேவ எதிரிகளிடம் பேசிய அவர், “போரில் மூர்க்கர்களான தைத்தியர்களே, போரை எனக்கு அளிப்பீராக {என்னுடன் போரிடுவீராக}.(143) உங்களை வெல்வதற்காகத் தேவதேவனால் நான் அனுப்பப்பட்டுள்ளேன்” என்றார். அப்போது, அந்தப் பிருகுவின் வழித்தோன்றலால் {பரசுராமரால்} இவ்வாறு சொல்லப்பட்ட அந்தத் தைத்தியர்கள் போரிடத் தொடங்கினர்.(144) எனினும், பார்கவர்களை இன்புறச் செய்யும் அவர் {பரசுராமர்}, இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட வீச்சுகளால் போரில் தைத்தியர்களைக் கொன்று,(145) மஹாதேவனிடம் {சிவனிடம்} திரும்பி வந்தார். பிராமணர்களில் முதன்மையான அந்த ஜமதக்னி மகன் {பரசுராமர்}, தானவர்களால் தன் மேனியில் ஏற்பட்ட காயங்கள் பலவற்றுடனே திரும்பினார். எனினும், ஸ்தாணுவால் {சிவனால்} தீண்டப்பட்டதும் அவரது காயங்கள் குணமடைந்தன.(146) அவரது அந்த அருஞ்செயலால் நிறைவை அடைந்த அந்தச் சிறப்புமிக்க தேவன், அந்த உயர் ஆன்ம பிருகு மகனுக்கு {பரசுராமருக்கு} பல்வேறு வகைகளிலான வரங்களை அளித்தான்.(147) இதயம் நிறைந்தவனும், திரிசூலபாணியுமான அந்தத் தேவதேவன், “ஓ! பிருகு குலத்தவரை இன்புறச் செய்பவனே {பரசுராமா}, உன் உடலில் ஆயுதங்கள் பாய்ந்ததன் விளைவால் நீ அடைந்த துன்ப வலி, மனிதசக்திக்கு அப்பாற்பட்ட வகையில் நீ செய்த அருஞ்செயலுக்குச் சாட்சி பகர்கிறது. நீ விருப்பப்பட்டவாறே, இந்தத் தெய்வீக ஆயுதங்களை என்னிடம் இருந்து பெறுவாயாக” என்றான் {சிவன்}.(148,149)

துரியோதனன் தொடர்ந்தான், “பிறகு அந்த ராமர் {பரசுராமர்}, தெய்வீக ஆயுதங்களையும், தாம் விரும்பிய வரங்களையும் அடைந்து, சிவனுக்குத் தலைவணங்கினார்.(150) பிறகு அந்தப் பெரும் தவசி {பரசுராமர்}, தேவர்களின் தலைவனிடம் {சிவனிடம்} விடைபெற்றுச் சென்றார். அந்த முனிவர் சொன்ன அந்தப் பழங்கதை இதுவே.(151) அந்தப் பிருகுவின் வழித்தோன்றல் {பரசுராமர்}, ஓ! மன்னர்களில் புலியே {சல்லியரே}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், உயர் ஆன்ம கர்ணனுக்குத் தமது ஆயுத அறிவியல் அனைத்தையும் கொடுத்தார்.(152) கர்ணனிடம் எக்களங்கமாவது இருந்திருப்பின், ஓ! பூமியின் தலைவா {சல்லியரே}, அந்தப் பிருகு குலத்தை இன்புறச் செய்வபவர் {பரசுராமர்}, தமது தெய்வீக ஆயுதங்களை அவனுக்கு ஒருபோதும் கொடுத்திருக்க மாட்டார்.(153)

கர்ணனைச் சூத குலத்தில் பிறந்தவன் என்று என்னால் நினைக்க முடியவில்லை. க்ஷத்திரிய வகையில் ஒரு தேவனுக்குப் பிறந்த மகனாகவே இவன் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.(154) இவன் பிறந்த குலத்தை உறுதி செய்ய முடியாத வகையில், (குழந்தை பருவத்திலேயே) அவன் கைவிடப்பட்டிருக்க வேண்டும் எனவும் நான் நினைக்கிறேன். இந்தக் கர்ணன், ஓ! சல்லியரே, சூத வகையில் எவ்வழியிலும் பிறந்திருக்க முடியாது.(155) பெண்மான் ஒன்றால் ஒருபோதும் ஒரு புலியைப் பெற முடியாததைப் போலத் தனது (இயற்கையான) காதுகுண்டலங்கள் மற்றும் (இயற்கையான) கவசம் ஆகியவற்றைக் கொண்டவனும், நீண்ட கரங்களையும் கொண்டவனும், சூரியனுக்கே ஒப்பானவனுமான இந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {கர்ணன்}, ஒரு சாதாரணப் பெண்ணுக்குப் பிறந்திருக்கவே முடியாது.(156) யானைகளின் இளவரசனுடைய துதிக்கைக்கு ஒப்பாக இவனது கரங்கள் ஒவ்வொன்றும் பருத்திருக்கின்றன. அனைத்து எதிரிகளையும் தடுக்க வல்ல இவனது இந்த அகன்ற மார்பைப் பார்ப்பீராக.(157) ஓ! மன்னா {சல்லியரே}, வைகர்த்தனன் {சூரியன் மகன்} என்றும் வேறு பெயரில் அழைக்கப்படும் இந்தக் கர்ணன், ஒரு சாதாரண மனிதனாக இருக்கவே முடியாது. பெரும் வீரத்தைக் கொண்ட இந்த ராமரின் {பரசுராமரின்} சீடன் {கர்ணன்}, ஓ! மன்னர்களின் மன்னா {சல்லியரே}, மிக உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனாவான்” {என்றன் துரியோதனன்}.(158)

ஆரியர் பயிலா நடத்தைகள்! – கர்ண பர்வம் பகுதி – 35-கர்ணனை விட மேன்மையானவனாகச் சல்லியனைச் சொன்ன துரியோதனன்; சாரத்ய நிலையை ஏற்ற சல்லியன்; சல்லியனை ஐயுற்ற கர்ணன்; மீண்டும் சல்லியனிடம் பேசிய துரியோதனன்; ஆரியர்கள் பயிலாத நான்கு வெவ்வேறு நடத்தைகளைக் குறித்துக் கர்ணனுக்கு எடுத்துரைத்த சல்லியன்…

துரியோதனன் {சல்லியனிடம்}, “இவ்வாறே சிறப்புமிக்கத் தேவனும், உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனுமான பிரம்மன் சாரதி நிலையையும், ருத்ரன் {சிவன்} போர்வீரன் நிலையையும் அந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்றனர்.(1) ஓ! வீரரே {சல்லியரே}, அத்தேரின் சாரதி, அதன் போர்வீரனைவிட மேன்மையானவனாக இருக்க வேண்டியிருந்தது. எனவே, ஓ! மனிதர்களில் புலியே, இந்தப் போரில் குதிரைகளின் கடிவாளங்களை நீர் பிடிப்பீராக.(2) ஓ! பெரும் மன்னா {சல்லியரே}, அந்தச் சந்தர்ப்பத்தில், தேவர்கள் அனைவராலும் கவனத்துடன் பெரும்பாட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போல, உண்மையில், சங்கரனை விடப் பெரியவனாகத் தேவர்களால் அவன் {பிரம்மன்} தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போலவே, இப்போது கர்ணனை விட மேன்மையான உம்மை நாங்கள் கவனத்துடன் தேர்ந்தெடுத்திருக்கிறோம். ருத்திர குதிரைகளின் கடிவாளங்களைப் பெரும்பாட்டன் {பிரம்மன்} ஏந்தியதைப் போலவே, ஓ! பெரும் காந்தி கொண்டவரே {சல்லியரே}, இந்தப் போரில் கர்ண குதிரைகளின் கடிவாளங்களைத் தாமதமில்லாமல் நீர் ஏந்துவீராக” என்றான் {துரியோதனன்}.(3,4)

சல்லியன் {துரியோதனனிடம்}, “ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, அந்த இரண்டு தேவ சிங்கங்களைக் குறித்து நீ சொன்ன சிறப்புமிக்க இந்தத் தெய்வீக வரலாற்றை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.(5) உண்மையில், பெரும்பாட்டன் எவ்வாறு பவனின் {சிவனின்} சாரதியாகச் செயல்பட்டான் என்பதையும், ஓ! பாரதா {துரியோதனா}, ஒரே கணையால் அசுரர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டனர் என்பதையும் நான் கேட்டிருக்கிறேன்.(6) பழங்காலத்தில் எவ்வாறு அந்தச் சிறப்புமிக்கப் பெரும்பாட்டன் சாரதியாகச் செயல்பட்டான் என்ற அறிவனைத்தையும் ஏற்கனவே கிருஷ்ணனும் அறிந்திருக்கிறான். உண்மையில் கடந்த காலம், எதிர்காலம் மற்றும் அவற்றின் விபரங்கள் அனைத்தையும் கிருஷ்ணன் அறிவான்.(7) இவ்வுண்மையை அறிந்தே அவன் {கிருஷ்ணன்}, ருத்ரனின் {சிவனின்} சாரதியான தான்தோன்றியை {பிரம்மனைப்} போலப் பார்த்தனின் {அர்ஜுனனின்} சாரதியானான்.(8) எவ்வழியிலாவது குந்தியின் மகனை {அர்ஜுனனைக்} கொல்வதில் இந்தச் சூதன் மகன் {கர்ணன்} வென்றால், அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டதைக் கண்டு கேசவனே {கிருஷ்ணனே} போரில் ஈடுபடுவான். அப்போது அந்தச் சங்கு சக்கரக் கதாதாரி {கிருஷ்ணன்}, உன் படையையே எரித்துவிடுவான்.(9) அந்தச் சிறப்புமிக்க விருஷ்ணி குலத்தோனின் {கிருஷ்ணனின்} கோபம் தூண்டப்படும்போது, அவனை எதிர்த்து நிற்க {நமது} படையணிகளின் முன்னணியில் எந்த மன்னனும் இங்கே இல்லை” என்றான் {சல்லியன்}.(10)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இவ்வாறு பேசிக்கொண்டிருந்த மத்ர ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} எதிரிகளைத் தண்டிப்பவனும், உற்சாக ஆத்மா கொண்டவனுமான உமது வலிமைமிக்க மகன் {துரியோதனன்},(11) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, வைகர்த்தனன்[1] என்று வேறு பெயரில் அழைக்கப்படுபவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், நமது சாத்திரங்கள் அனைத்தின் பொருளை உணர்ந்தவனுமான கர்ணனைக் குறித்துப் போரில் இழிவாக எண்ண வேண்டாம்.(12) அவனது வில்லின் நாணொலி, மற்றும் அவனது உள்ளங்கையொலி ஆகிய பயங்கரப் பேரொலிகளைக் கேட்டே பாண்டவத் துருப்புகள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடும்.(13) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, நூற்றுக்கணக்கான மாயைகளை வெளிப்படுத்திய கடோத்கசன் அவ்விரவில் (கர்ணனால்) எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை உமது கண்களாலேயே நீர் கண்டீர்.(14) இவ்வளவு நாட்களும் பெரும் அச்சத்தை உணர்ந்த பீபத்சுவால் {அர்ஜுனனால்} கர்ணனை எதிர்த்து நிற்க முடியவில்லை.(15) வலிமைமிக்கப் பீமசேனனும் கூட, கர்ணனுடைய வில்லின் நுனியால் இங்கேயும் அங்கேயும் இழுக்கப்பட்டு, “மூடன், பெருந்தீனிக்காரன்” என்ற பல்வேறு விதமாகக் கடிந்துரைக்கப்பட்டான்.(16) மாத்ரியின் துணிச்சல்மிக்க மகன்கள் இருவரும் பெரும்போரில் கர்ணனால் வீழ்த்தப்பட்டிருப்பினும், ஓ! ஐயா, ஏதோ ஒரு காரணத்தால் இவன் {கர்ணன்}  அவர்களைக் கொல்லவில்லை.(17)

விருஷ்ணி குலத்தில் முதன்மையானவனும், சாத்வத குலத்தின் தலைவனுமான வீரச் சாத்யகியும், கர்ணனால் வெல்லப்பட்டு, தேரற்றவனாகச் செய்யப்பட்டான்.(18) திருஷ்டத்யும்னன் தலைமையிலான சிருஞ்சயர்கள் அனைவரும் இந்தப் போரில் கர்ணனால் மிக எளிமையாக வீழ்த்தப்பட்டனர்.(19) உண்மையில், வஜ்ரதாரியான புரந்தரனையே கொல்லத் தகுந்தவன் எவனோ, {இந்த அருஞ்செயல்கள் அனைத்தையும் செய்தவனான} அந்தப் பெரும் வீரன் {கர்ணன்} கோபத்தால் தூண்டப்படும்போது, பாண்டவர்களால் எவ்வாறு வெல்ல அவனை முடியும்?(20) ஓ! வீரரே {சல்லியரே}, நீரும் ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவரே. நீர் கல்வியின் அனைத்துக் கிளைகளிலும் திறன் கொண்டவரே. ஆயுத வலிமையில் உமக்கு நிகராகப் பூமியில் வேறு எவரும் இல்லை.(21)

தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டிருக்கும் நீர், உமது எதிரிகளுக்கு ஓர் ஈட்டியை {முளையைப்} போலிருக்கிறீர். இக்காரணத்திற்காகவே, ஓ! மன்னா {சல்லியரே}, ஓ! எதிரிகளைக் கொல்பவரே, சல்லியன் என்று நீர் அழைக்கப்படுகிறீர்(22). உமது கரங்களின் வலிமையை எதிர்கொண்ட சாத்வதர்கள் அனைவராலும், சிறந்த விளைவைப் பெற முடியவில்லை. ஓ! மன்னா {சல்லியரே}, கிருஷ்ணன் வலிமையில் உம்மை விட மேம்பட்டவனா? உண்மையில், பார்த்தன் கொல்லப்பட்ட பிறகு, எவ்வாறு கிருஷ்ணனால் பாண்டவத் துருப்புகளின் சுமை சுமக்கப்படுமோ, அவ்வாறே கர்ணன் உயிரைவிட்டால், இந்தப் பரந்த (கௌரவப்) படையின் சுமையைச் சுமக்கவல்லவராக நீர் இருக்கிறீர்.(24) ஓ! ஐயா, என் துருப்புகளைத் தடுக்கத்தக்கவனாக அவன் {கிருஷ்ணன்} ஏன் இருக்க வேண்டும்? பகைவரின் துருப்புகளைக் கொல்லத்தக்கவராக நீர் ஏன் இருக்கக்கூடாது?[2] (25) ஓ! ஐயா {சல்லியரே}, (கொல்லப்பட்ட) என் தம்பிகள் மற்றும் பூமியின் வீர மன்னர்கள் பிறரின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி உமக்காக நான் விருப்பத்துடன் செல்வேன் {உமக்காக இறக்கவும் துணிவேன்}“ என்று மறுமொழி கூறினான் {துரியோதனன்}.(26)

சல்லியன் {துரியோதனனிடம்}, “ஓ! காந்தாரியின் மகனே, ஓ! கௌரவங்களை அளிப்பவனே, தேவகியின் மகனைவிட {கிருஷ்ணனைவிட} நான் மேம்பட்டவன் என்று உன் துருப்புகளுக்கு முன்பு நீ சொல்வதால், உன்னிடம் நான் பெரிதும் மனநிறைவு கொண்டேன்.(27) நீ விரும்புவது போலவே, அந்தப் பாண்டு மகன்களில் முதன்மையானவனோடு ராதையின் கொண்டாடப்படும் மகன் {கர்ணன்} போரிடும்போது, அவனது சாரதி நிலையை {சாரத்யத்தை} நான் ஏற்பேன்.(28) எனினும், ஓ! வீரா {துரியோதனா}, நான் வைகர்த்தனுடன் {கர்ணனுடன்} ஒரு சிறு கட்டுவரம்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ’இவனது {கர்ணனது} முன்னிலையில் நான் விரும்பும் எவ்வார்த்தையையும் நான் சொல்வேன்’ என்பதே அஃது” என்றான்.(29)

சஞ்சயன் தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்} கர்ணனுடன் சேர்ந்து, “அப்படியே ஆகட்டும்” என்று க்ஷத்திரியர்கள் அனைவரின் முன்னிலையும் மத்ரர்களின் ஆட்சியாளனுக்கு மறுமொழி கூறினான்.(30) சல்லியன் ஏற்றுக் கொண்ட சாரதி நிலையால் (சாரத்யத்தால்) உறுதி கொண்ட துரியோதனன், மகிழ்ச்சியால் நிறைந்து, கர்ணனைத் தழுவிக் கொண்டான்.(31) (சுற்றிலும் இருந்த பாணர்களாலும், துதிபாடிகளாலும்) துதிக்கப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, மீண்டும் கர்ணனிடம், “தானவர்களைக் கொன்ற பெரும் இந்திரனைப் போலப் போரில் பார்த்தர்கள் அனைவரையும் கொல்வாயாக” என்றான். தன் குதிரைகளின் கடிவாளங்களை ஏந்தும் அலுவலைச் சல்லியன் ஏற்றதும், கர்ணன், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் மீண்டும் துரியோதனனிடம், “மத்ரர்களின் ஆட்சியாளர் தாம் சொல்வதை உற்சாகமாகச் சொல்லவில்லை. ஓ! மன்னா {துரியோதனா}, மீண்டும் அவரிடம் இனிய சொற்களால் வேண்டிக் கொள்வாயாக” என்றான்.(34)

இப்படிச் சொல்லப்பட்டவனும், பெரும் ஞானத்தைக் கொண்டவனும், அனைத்தையும் சாதித்தவனுமான அந்த வலிமைமிக்க மன்னன் துரியோதனன், பூமியின் தலைவனும், மத்ரர்களின் ஆட்சியாளனுமான அந்தச் சல்லியனிடம், அந்தப் பகுதி முழுவதையும் மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில் நிறைத்தபடி, “ஓ! சல்லியரே, இன்று அர்ஜுனனோட போரிட வேண்டும் என்று கர்ணன் நினைக்கிறான். ஓ! மனிதர்களில் புலியே, போரில் கர்ணனுடைய குதிரைகளின் கடிவாளங்களை ஏந்துவீராக.(36) பிற போர்வீரர்கள் அனைவரையும் கொன்ற இந்தக் கர்ணன், பல்குனனை {அர்ஜுனனைக்} கொல்ல விரும்புகிறான். ஓ! மன்னா, இவனது குதிரைகளின் கடிவாளங்களை ஏந்தும் காரியத்தில் மீண்டும் மீண்டும் நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.(37) சாரதிகள் அனைவரிலும் முதன்மையான அந்தக் கிருஷ்ணன், பார்த்தனுக்கு ஆலோசகனாக இருப்பதைப் போலவே, அனைத்து ஆபத்துகளில் இருந்தும் இன்று கர்ணனை நீர் பாதுகாப்பீராக” என்றான் {துரியோதனன்}[3].(38)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது உமது மகனைத் தழுவி கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் சல்லியன், எதிரிகளைக் கொல்பவனான அந்தத் துரியோதனனிடம்,(39) “ஓ! காந்தாரியின் அரசமகனே, ஓ! அழகிய குணங்களைக் கொண்டவனே, இதைத்தான் நீ நினைக்கிறாயென்றால், அதற்காக, உனக்கு ஏற்புடைய அனைத்தையும் நான் சாதிப்பேன்.(40) ஓ! பாரதர்களின் தலைவா, எச்செயல்களுக்கு நான் தகுந்தவனோ, அச்செயல்களில் என்னை முழு இதயத்துடன் ஈடுபடுத்திக் கொண்டு, உன் செயல்கள் எவற்றின் சுமையையும் நான் சுமப்பேன். எனினும், கர்ணனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் அவனிடம் நான் பேசும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடாத எந்த வார்த்தைகளையும் கர்ணனும், நீயும் பொறுத்துக் கொள்வீராக” என்று மகிழ்ச்சியாக மறுமொழி கூறினான். (42)

கர்ணன் {சல்லியனிடம்}, “ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, பிரம்மன் ஈசானனுக்கும் {சிவனுக்கும்}, கேசவன் பார்த்தனுக்கும் எவ்வாறு நன்மை செய்தார்களோ, அவ்வாறே நீரும் எப்போதும் நமது நன்மையில் ஈடுபடுவீராக” என்றான்.(43)

சல்லியன், “தன்னொறுப்பு {சுயநிந்தனை}, தற்புகழ்ச்சி, பிறரை இகழ்வது, பிறரைப் புகழ்வது ஆகிய நான்கு வகை நடத்தைகளையும் மரியாதைக்குரிய நபர்கள் {ஆரியர்கள்}[4] எவரும் பயில்வதில்லை.(44) எனினும், ஓ! கல்விமானே, உன் நம்பிக்கையை ஈர்க்க நான் சொல்லப்போகும் எதுவும் தற்புகழ்ச்சி நிறைந்ததாகவே இருக்கும். அவை யாவற்றிற்காகவும், அதை முறையாகக் கேட்பாயாக.(45) ஓ! பலமானவனே, மாதலியைப் {இந்திரன் சாரதியைப்} போலவே விழிப்புணர்விலும், குதிரைகளைக் கட்டுப்படுத்துவதிலும், எதிர்வரும் ஆபத்தை அறிவதிலும், அதைத் தவிர்ப்பதிலும், நடைமுறையில் அதைத் தவிர்க்கும் தகுதியிலும் நான் இந்திரனுக்கே கூடச் சாரதி அலுவலை ஏற்கத் தகுந்தவனே.(46) பார்த்தனோடு நீ போரிடுகையில், உன் குதிரைகளின் கடிவாளங்களை நான் ஏந்துவேன். ஓ! சூதனின் மகனே, உன் கவலை அகலட்டும்” என்றான்{சல்லியன்}.(47)

சாரதியானான் சல்லியன்! – கர்ண பர்வம் பகுதி – 36-கர்ணனிடம் நம்பிக்கை தெரிவித்த துரியோதனன்; சல்லியனை மீண்டும் வேண்டிக் கொண்டது; ஒரே தேரில் ஏறிய கர்ணனும், சல்லியனும்; கர்ணனை வாழ்த்திய துரியோதனன்; அர்ஜுனனைக் கொல்லத்தகுந்த தன் திறன் குறித்துக் கர்ணன் தற்புகழ்ச்சி செய்வது; பாண்டவர்களைப் புகழ்ந்து கர்ணனை அச்சுறுத்த முயன்ற சல்லியன்..

துரியோதனன் {கர்ணனிடம்} , “கிருஷ்ணனைவிட மேன்மையானவரும், தேவதலைவனின் {இந்திரனின்} சாரதியான மாதலியைப் போன்றவருமான இந்த மத்ர ஆட்சியாளர் {சல்லியர்}, உனக்குச் சாரதியாகச் செயல்படுவார்.(1) உண்மையில், இந்திரனின் குதிரைகள் பூட்டப்பட்ட தேரை நிர்வகிக்கும் மாதலியைப் போலவே, சல்லியரும் இன்று உனது தேரின் குதிரைகளுக்குச் சாரதியாக இருப்பார்.(2) அவ்வாகனத்தில் போர்வீரனாக உன்னையும், அதன் சாரதியாக மத்ரர்களின் ஆட்சியாளரையும் {சல்லியரையும்} கொண்ட முதன்மையான தேரானது, நிச்சயம் பார்த்தர்களைப் போரில் வெல்லும்” என்றான்.(3)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “காலை வந்ததும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனன், பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட அந்த மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} மீண்டும்,(4) “ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, கர்ணனுடைய முதன்மையான குதிரைகளின் கடிவாளங்களைப் போரில் ஏந்துவீராக. ராதையின் மகன் {கர்ணன்} உம்மால் பாதுகாக்கப்பட்டுத் தனஞ்சயனை {அர்ஜுனனை} வெல்லப்போகிறான்” என்றான். இவ்வாறு சொல்லப்பட்ட சல்லியன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லித் தேரில் ஏறினான்.(5) அந்தத் தேரைச் சல்லியன் அணுகிய போது, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் கூடிய கர்ணன், தன் சாரதியிடம் {சல்லியனிடம்}, “ஓ! தேரோட்டியே, எனக்காகத் தேரை விரைவாக ஆயத்தம் செய்வீராக” என்றான்.(6) தன் வகையில் முதன்மையானதானதும், ஆகாயத்தின் நீர் {மேக} மாளிகைகளுக்கு ஒப்பானதுமான அந்த வெற்றித் தேரை முறையாக ஆயத்தம் செய்த சல்லியன், அதைக் கர்ணனிடம் கொண்டு வந்து, “நீ அருளப்பட்டிருப்பாயாக, வெற்றி உனதாகட்டும்” என்றான்.(7)

அப்போது தேர்வீரர்களில் முதன்மையான கர்ணன், பிரம்மத்தை அறிந்த புரோகிதர் ஒருவரால் பழங்காலத்தில் தூய்மையாக்கப்பட்ட {பரிசுத்தமாக்கப்பட்ட} அந்தத் தேரை முறையாக வழிபட்டு,(8) அதை வலம்வந்து, சூரியதேவனைக் கவனமாகத் துதித்து, அருகில் நின்றிருந்த மத்ர ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்}, “வாகனத்தில் ஏறுவீராக” என்றான்.(9) அதன் பேரில், கர்ணனுக்குச் சொந்தமானதும், வெல்லப்பட முடியாததும், முதன்மையானதுமான அந்தப் பெரிய தேரில், வலிமையும், சக்தியும் மிக்கச் சல்லியன், மலைச்சிகரத்தில் ஏறும் சிங்கத்தைப் போல ஏறினான்.(10) சல்லியன் நிலைகொண்டதைக் கண்ட கர்ணன், மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகத்திரள்களில் ஏறும் சூரியனைப் போலவே தன் சிறந்த தேரில் ஏறினான்.(11) சூரியன், அல்லது நெருப்பின் காந்தியைக் கொண்ட அந்த வீரர்கள் இருவரும், ஒரே தேரில் ஏறிக்கொண்டு, ஆகாய மேகத்தில் அமர்ந்திருக்கும் சூரியனையும், அக்னியையும் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(12) (பாணர்கள் மற்றும் துதிபாடிகளால்) துதிக்கப்படுபவர்களும், பெரும் காந்தியைக் கொண்டவர்களுமான அவ்விரு வீரர்களும், அப்போது வேள்வியில் ரித்விக்குகளாலும், சத்யஸ்களாலும் துதி பாடல்களால் துதிக்கப்படும் இந்திரனையும் அக்னியையும் போலத் தெரிந்தனர்.(13) சல்லியனால் கடிவாளம் பிடிக்கப்பட்ட தன் குதிரைகளுடன் கூடிய தேரில் உறுதிமிக்கத் தன் வில்லை வளைத்தபடியே, ஒளிவட்டத்திற்குள் இருக்கும் சூரியனைப் போலக் கர்ணன் நின்றிருந்தான்.(14) இந்த முதன்மையான தேரில் நிலைகொண்ட மனிதர்களில் புலியான கர்ணன், தன் கணைகளையே தன் கதிர்களாகக் கொண்டு, மந்தரமலைகளில் உள்ள சூரியனைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(15)

அளவில்லா சக்தி கொண்டவனும், போருக்காகத் தன் தேரில் நிலை கொண்டிருந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த ராதையின் மகனிடம் {கர்ணனிடம்}, துரியோதனன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(16) “ஓ! அதிரதன் மகனே, ஓ! வீரா {கர்ணா}, துரோணரும், பீஷ்மரும் அடையாததும், அடைவதற்கரியதுமான அருஞ்செயலை வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்குபோதே அடைவாயாக.(17) வலிமைமிக்கத் தேர்வீரர்களான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும், போரில் அர்ஜுனனையும், பீமசேனனையும் கொல்வார்கள் என நான் எப்போதும் ஐயமின்றி நம்பினேன்.(18) இரண்டாம் வஜ்ரதாரியை {இந்திரனைப்} போல, ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அவ்விருவரும் அடையாததும், வீரனுக்குத் தகுந்ததுமான அருஞ்செயலை இந்தப் பெரும்போரில் நீ அடைவாயாக.(19) ஒன்று நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைப் பிடிப்பாயாக, அல்லது தனஞ்சயன், பீமசேனன், மாத்ரியின் மகன்களான இரட்டையர்கள் {நகுலன், சகாதேவன்} ஆகியோரைக் கொல்வாயாக.(20) நீ அருளப்பட்டிருப்பாயாக, வெற்றி உனதாகட்டும். ஓ! மனிதர்களில் புலியே, போருக்குப் புறப்படுவாயாக. பாண்டு மகனின் துருப்புகள் அனைத்தையும் சாம்பலாகக் குறைப்பாயாக” என்றான் {துரியோதனன்}.(21)

அப்போது ஆயிரக்கணக்கான எக்காளங்கள் மற்றும் பத்தாயிரக்கணக்கான பேரிகைகள் ஒன்றாக ஒலித்து ஆகாய மேகங்களைப் போன்ற ஒலியை உண்டாக்கின.(22) (துரியோதனனின்) அவ்வார்த்தைகளை ஏற்றவனும், தன் தேரில் நிலை கொண்டிருந்த முதன்மையான தேர்வீரனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, போரில் சாதித்த போர்வீரனான சல்லியனிடம், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, தனஞ்சயன், பீமசேனன், இரட்டையர்கள் இருவர், மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோரை நான் கொல்லும் வகையில் குதிரைகளைத் தூண்டுவீராக.(24) ஓ! சல்லியரே, கங்க இறகுகளால் சிறகுகளமைந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகளை நான் ஏவும்போது, என் கரங்களின் வலிமையை இன்று தனஞ்சயன் {அர்ஜுனன்} காணட்டும்.(25) ஓ! சல்லியரே, இன்று பாண்டவர்களின் அழிவுக்காகவும், துரியோதனனின் வெற்றிக்காகவும் பெரும் சக்திகளைக் கொண்ட கணைகளை நான் ஏவுவேன்” என்றான் {கர்ணன்}.(26)

சல்லியன் {கர்ணனிடம்}, “ஓ! சூதன் மகனே {கர்ணா}, பெரும் வலிமை கொண்டவர்களும், பெரும் வில்லாளிகளும், அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவர்களுமான அந்தப் பாண்டுவின் மகன்கள் அனைவரையும் நீ ஏன் இவ்வளவு இகழ்வாகக எண்ணுகிறாய்?(27) பெரும் நற்பேற்றைக் கொண்டவர்களும், வெல்லப்பட முடியாதவர்களும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவர்களுமான அவர்கள் பின்வாங்காதவர்களாக இருக்கிறார்கள். இந்திரனுக்கே இதயத்தில் அச்சத்தைத் தூண்டவல்லவர்கள் அவர்கள்.(28) ஓ! ராதையின் மகனே {கர்ணா}, இந்தப் போரில் இடியின் தொடரொலிக்கு ஒப்பான காண்டீவத்தின் நாணொலியை நீ கேட்கையில், இத்தகு பேச்சுகள் எதையும் நீ பேச மாட்டாய்.(29) ஆகாயத்து மேகங்களைப் போலத் தங்கள் கூரிய கணைகளால் கவிகைகளை அமைக்கப் போகும் தர்மனின் மகனையும் {யுதிஷ்டிரனையும்}, இரட்டையர்களையும் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரையும்}(30), பெரும் கர நளினமும், (கணைமாரிகளைப்) பொழியும் தன்மையும் கொண்ட பாண்டவப் படையின் வேறு பிற வெல்லப்பட முடியாத மன்னர்களையும் நீ காணும்போது, இத்தகு வார்த்தைகளை நீ சொல்ல மாட்டாய்” என்று சொன்னான் {சல்லியன்}.(31)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} சொன்ன அவ்வார்த்தைகளை அலட்சியம் செய்த கர்ணன், பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட அவனிடம் {சல்லியனிடம்} “செல்வீராக” என்று சொன்னான்” {என்றான் சஞ்சயன்}.(32)

எள்ளி நகையாடிய சல்லியன்! – கர்ண பர்வம் பகுதி – 37-போரிடப் புறப்பட்ட கர்ணன்; அப்போது தோன்றிய சகுனங்கள்; முடிவு தெரிந்தே புறப்பட்டாலும், தன்னைத் தானே புகழ்ந்து கொண்ட கர்ணன்; கர்ணனை எள்ளி நகையாடிய சல்லியன், கர்ணனை நிந்தித்து அர்ஜுனனைப் புகழ்ந்தது; பாண்டவப் படையை எதிர்த்துச் சென்ற கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்க வில்லாளியான கர்ணன், போரிடும் விருப்பத்துடன் தன் நிலை ஏற்றதைக் கண்ட கௌரவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து, அனைத்துப் பக்கங்களிலிருந்தும் உரக்க கூச்சலிட்டனர்.(1) தூரியங்கள் மற்றும் பேரிகைளின் ஒலி, பல்வேறு வகையிலான கணைகளின் விஸ் என்ற ஒலி, பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட போராளிகளின் முழக்கங்கள் ஆகியவற்றோடும், மரணம் ஒன்றையே நிற்கும் புள்ளியாகக் கொண்டும், உமது துருப்புகள் அனைத்தும் போருக்குச் சென்றன.(2)

கர்ணன் புறப்பட்டு, குருபடையின் போர்வீரர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமாதேவி நடுங்கி பேரொலியை உண்டாக்கினாள்.(3) சூரியன் உள்ளிட்ட ஏழு பெரும் கோள்கள் (மோதுவதற்காக) ஒன்றையொன்று எதிர்த்துச் செல்வதைப் போலத் தெரிந்தது. எரிநட்சத்திர மழை காணப்பட்டது, திசைகள் அனைத்தும் எரிவதைப் போலத் தெரிந்தன.(4) மேகமற்ற வானில் இருந்து இடி விழுந்தது, கடும் காற்றும் வீசத் தொடங்கியது.(5) பெரும் எண்ணிக்கையிலான விலங்குகளும், பறவைகளும் உமது படையைத் தங்கள் வலப்புறத்தில் கொண்டு பெரும் அழிவுகளை முன்னறிவித்தன[1].(6) கர்ணன் புறப்பட்டதும், அவனது குதிரைகள் பூமியில் விழுந்தன. வானத்தில் இருந்து பயங்கரமான எலும்புகளின் மழை பொழிந்தது.(7) (கௌரவப் போர்வீரர்களின்) ஆயுதங்கள் எரிவதைப் போலத் தெரிந்தன; அவர்களது கொடிமரங்கள் நடுங்கின; ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்களின் விலங்குகள் அபரிமிதமான கண்ணீரைச் சொரிந்தன.(8) இவையும் இன்னும் பல பயங்கரச் சகுனங்களும் குருக்களின் அழிவுக்காகத் தோன்றின. விதியால் மயக்கமுற்ற அவர்களில் எவரும் அந்தச் சகுனங்களைக் கருத்தில் கொள்ள வில்லை.(9)

சூதன் மகன் {கர்ணன்} புறப்பட்டதைக் கண்ட (கௌரவப் படையைச் சார்ந்த) மனிதர்களின் ஆட்சியாளர்கள் அனைவரும் அவனது வெற்றிக்காகக் கூக்குரலிட்டனர். பாண்டவர்களை ஏற்கனவே வெல்லப்பட்டுவிட்டதாகவே கௌரவர்கள் கருதினர்.(10) பீஷ்மர் மற்றும் துரோணரின் மரணங்களை எண்ணிப் பார்த்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான வைகர்த்தனன் {கர்ணன்}, தன் தேரில் நின்று கொண்டிருந்த போது சூரியனையோ, நெருப்பையோ போன்ற காந்தியுடன் சுடர்விட்டான்.(11) பார்த்தனின் {அர்ஜுனனின்} வலிமைமிக்கச் சாதனைகளை நினைத்துப் பார்த்த அவன் {கர்ணன்}, இறுமாப்பு மற்றும் செருக்குடன், கோபத்தில் சுடர்விட்டு, கடும் பெருமூச்சுகளைவிட்டபடி சல்லியனிடம் பேசியவாறே இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(12) “என் வில்லுடன் நான் என் தேரில் இருக்கும்போது, கோபத்தால் தூண்டப்பட்டவனும், வஜ்ரதாரியுமான இந்திரனிடமே நான் அச்சங்கொள்ள மாட்டேன். பீஷ்மரின் தலைமையிலான அந்தப் பெரும் போர்வீரர்கள் போர்க்களத்தில் கிடப்பதைக் கண்டும் நான் எந்தக் கவலையையும் அடையவில்லை.(13) இந்திரனுக்கும், விஷ்ணுவுக்கும் நிகரானவர்களும், முதன்மையான தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளை நொறுக்குபவர்களும், கொல்லப்பட முடியாத வீரர்களுமான அந்தக் களங்கமற்ற பீஷ்மரும், துரோணரும் எதிரியால் கொல்லப்பட்டும் இந்தப் போரில் நான் எந்த அச்சத்தையும் அடையவில்லை.(14) உண்மையில் ஆசான் {துரோணர்}, வலிமைமிக்க ஆயுதங்களை அறிந்தவராகவும், பிராமணர்களில் முதன்மையானவராகவும் இருந்தாலும் கூட, சாரதிகள், யானைகள் மற்றும் தேர்களுடன் கூடிய நமது வலிமைமிக்க மன்னர்களை எதிரிகள் அழித்தபோது, அவர்கள் அனைவரையும் போரில் ஏன் கொல்லவில்லை?(15) குருக்களே, பெரும்போரில் அந்தத் துரோணரை நினைவு கூர்ந்து நான் சொல்வதைக் கேட்பீராக.

கடுந்தோற்றத்தையுடைய காலனுக்கு ஒப்பான போர்வீரனாக முன்னேறி வரும் அர்ஜுனனைத் தாங்கிக் கொள்ளக்கூடியவன் என்னையன்றி உங்களில் வேறு எவரும் கிடையாது.(16) பயிற்சியால் உண்டான திறனும், வலிமையும், துணிவும், உயர்ந்த ஆயுதங்களும், கொள்கையும் துரோணரில் இருந்தன. அந்த உயர் ஆன்மாவே மரணத்திற்கு அடிபணிய வேண்டியிருந்தது எனும்போது, (நமது படையின்) வேறு அனைவரையும் நான் பலமற்றவர்களாகவும், மரணத்தருவாயில் இருப்பவர்களாகவுமே கருதுகிறேன்.(17) செயல்களின் தொடர்புகளை {பற்றுகளைத்} தவிர்க்க முடியாததன் விளைவாக, இவ்வுலகில் நிலையானது எதையும் நன்கு சிந்தித்த பிறகும் கூட என்னால் காண முடியவில்லை. ஆசானே {துரோணரே} இறந்தார் எனும்போது, இன்றைய சூரிய உதயம் வரையாவது உயிருடன் வாழ்வோம் என எவன்தான் உறுதியாக நம்புவான்?[2](18) போரில் ஆசான் இவ்வாறு எதிரியால் கொல்லப்பட்டார் என்றால், சாதாரண மற்றும் தெய்வீக ஆயுதங்கள், வலிமை, ஆற்றல், சாதனைகள், விவேகமான கொள்கை {நீதியில் ஞானம்} ஆகியவற்றால் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியை அழிக்க முடியாது என்பதில் ஐயமில்லாமல் போகிறது.(19) சக்தியில் துரோணர் நெருப்புக்கோ சூரியனுக்கோ நிகரானவர், ஆற்றலில் விஷ்ணுவுக்கோ, புரந்தரனுக்கோ {இந்திரனுக்கோ} அவர் ஒப்பானவர், கொள்கையில் {நீதியில்} அவர் {துரோணர்] பிருஹஸ்பதிக்கோ, உசனஸுக்கோ {சுக்கிராச்சாரியருக்கோ} நிகரானவர்; அப்படித் தடுக்கப்பட முடியாதவராக இருந்த அவரையே கூட, ஆயுதங்களால் காக்க முடியவில்லை.(20)

ஓ! சல்லியரே, தார்தராஷ்டிரர்களின் வீரம் வீழ்த்தப்பட்டு, (நமது) மகளிரும், குழந்தைகளும் அழுது, ஓலமிட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நானே போரிட வேண்டியவன் என்பதை நான் அறிவேன். எனவே, நம் எதிரிகளின் படையை எதிர்த்துச் செல்வீராக.(21) உண்மையில் உறுதிமிக்க {சத்தியத்தில் உறுதியான} பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, பீமசேனன், அர்ஜுனன், சாத்யகி மற்றும் இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} ஆகியோர் இருக்கும் அந்தத் துருப்புகளைத் தாக்குப்பிடிக்க என்னைத் தவிரை வேறு எவரால் முடியும்?(22) எனவே, ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, இந்தப் போரில் பாஞ்சாலர்கள், பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களை நோக்கி விரைவாகச் செல்வீராக. போரில் அவர்களோடு மோதி, நான் அவர்களைக் கொல்வேன், அல்லது துரோணர் சென்ற பாதையில் யமனின் முன்னிலையை நான் அடைவேன்.(23) ஓ! சல்லியரே, அந்த வீரர்களுக்கு மத்தியில் நான் செல்ல மாட்டேன் என்று நீர் நினைக்காதீர். இந்த உட்பகையை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. (அவற்றைப் பொறுத்துக் கொள்ள முயலாத) நான் துரோணரைப் பின்தொடர்ந்தாவது செல்வேன்[3].(24) ஞானியோ, மூடனோ, அவனது காலம் முடிந்தால், அவர்கள் அனைவரையும் காலன் சமமாகவே கருதுகிறான்; எவரும் தப்ப முடியாது. ஓ! கல்விமானே, நான் பார்த்தர்களை எதிர்த்துச் செல்வேன். என் விதியை மீற முடியாதவனாக நான் இருக்கிறேன்.(25) விசித்திரவீரியன் மகனுடைய {திருதராஷ்டிரனுடைய} மகன் {துரியோதனன்} எப்போதும் எனக்கு நன்மை செய்வதிலேயே ஈடுபட்டான். அவனது நோக்கங்களைச் சாதிப்பதற்காக அன்பிற்குரியவையும், விடுவதற்குக் கடினமானவையுமான என் உயிர் மூச்சையும், இந்த உடலையும் நான் துறப்பேன்.(26)

புலித்தோலால் மறைக்கப்பட்டதும், எவ்வொலியையும் உண்டாக்காத அச்சுகள், தங்க ஆசனம், வெள்ளியாலான திரிவேணு ஆகியவற்றைக் கொண்ட இந்த முதன்மையான தேரானது, ராமர் {பரசுராமர்} எனக்கு அளித்த இந்த முதன்மையான குதிரைகள் பூட்டப்பட்டதாக இருக்கிறது.(27) ஓ! சல்லியரே, இந்த அழகிய விற்களையும், கொடிமரங்களையும், கதாயுதங்களையும், கடும் தோற்றங்களையுடைய இந்தக் கணைகளையும், சுடர்மிக்க இந்த வாளையும், இந்த வலிமைமிக்க ஆயுதத்தையும், கடுமையானதும், பேரொலியை எழுப்பக்கூடியதுமான இந்த வெண் சங்கையும் பார்ப்பீராக.(28) கொடிகளால் அலங்கரிக்கப்பட்டதும், இடியைப் போன்ற ஆழமான சடசடப்பொலியை உண்டாக்கும் சக்கரங்களைக் கொண்டதும், வெண் குதிரைகள் பூட்டப்பட்டதும், சிறந்த அம்பறாத்தூணிகளால் அலங்கரிக்கப்படுமான இந்தத் தேரில் செல்லும் நான், என் வலிமையை வெளிப்படுத்தி, தேர்வீரர்களில் காளையான அர்ஜுனனை இந்தப் போரில் கொல்வேன்.(29) அண்டத்தை எரிக்கும் அந்தகனே இந்தப் போரில் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்காணிப்புடன் பாதுகாத்தாலும்கூட, போரில் அவனோடு மோதி நான் அவனைக் கொல்வேன், அல்லது பீஷ்மரைப் பின்தொடர்ந்து யமனின் முன்னிலைக்குச் செல்வேன்.(30) யமன், வருணன், குபேரன், வாசவன் {இந்திரன்} ஆகியோர் தங்களைப் பின்தொடர்பவர்களுடன் இங்கே வந்து, ஒன்றாகச் சேர்ந்து இந்தப் பெரும்போரில் அந்தப் பாண்டுவின் மகனைப் {அர்ஜுனனைப்} பாதுகாத்தாலும், அவர்கள் அனைவருடன் சேர்த்து நான் அவனை வெல்வேன். {அவ்வாறிருக்கையில்} பல சொற்களின் தேவைதான் எதற்கு?” {என்றான் கர்ணன்}.(31)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “போரின் எதிர்பார்ப்பில் மிகவும் மகிழ்ச்சியாகத் தற்புகழ்ச்சி செய்து கொண்டிருந்த கர்ணனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மத்ரர்களின் வீர மன்னன் {சல்லியன்}, அவனை எள்ளி நகையாடியபடி, உரக்கச் சிரித்து, {தற்புகழ்ச்சியில் இருந்து} அவனைத் தடுப்பதற்காகப் பின்வரும் மறுமொழியைச் சொன்னான்.(32)

சல்லியன் {கர்ணனிடம்}, “நிறுத்து, ஓ! கர்ணா, இத்தகு தற்புகழ்ச்சியை நிறுத்து. பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் நீ, ஒருவன் எப்போதும் சொல்லக்கூடாததையெல்லாம் சொல்கிறாய். மனிதர்களில் முதன்மையான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} எங்கே? ஓ! மனிதர்களில் தாழ்ந்தவனே {கர்ணனே}, நீ எங்கே?(33) இந்திரனின் தம்பியாலும் {கிருஷ்ணனாலும்}, தேவர்களின் தலைவனாலும் பாதுகாக்கப்பட்டு, தேவலோகம் போல இருந்த யாதவர்களின் வசிப்பிடத்தை {துவாரகையைக்} கலங்கடித்து விட்டு, அனைவரிலும் முதன்மையானவனின் (கேசவனின் {கிருஷ்ணனின்}) தங்கையைக் {சுபத்திரையைக்} கடத்த அர்ஜுனனைத் தவிர வேறு எவனால் முடியும்?(34) ஒரு விலங்கைக் கொன்ற சச்சரவு நேர்ந்த சமயத்தில், தலைவர்களின் தலைவனும், உலகங்களைப் படைத்தவனுமான பவனை {சிவனைப்} போருக்கு அழைக்க, தேவர்களுடைய தலைவனின் {இந்திரனின்} ஆற்றலுக்கு நிகரான ஆற்றலைக் கொண்ட அர்ஜுனனைத் தவிர வேறு எவனால் முடியும்?(35)

அந்த ஜயன் {அர்ஜுனன்}, அக்னியைக் கௌரவப் படுத்துவதற்காக, அசுரர்கள், தேவர்கள், பெரும்பாம்புகள், மனிதர்கள், பறவைகள், பிசாசங்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோரைத் தன் கணைகளால் வென்று, அத்தேவன் {அக்னி} விரும்பிய உணவை அவனுக்குக் கொடுத்தான்.(36) ஓ! கர்ணா, சூரியப் பிரகாசம் கொண்ட தன் சிறந்த கணைகளால் அந்த எதிரிகளைக் கொன்றபோது, அந்தப் பல்குனன் {அர்ஜுனன்}, குருக்களுக்கு மத்தியில் இருந்த திருதராஷ்டிரர் மகனையும் {துரியோதனனையும்} விடுவித்தது உனக்கு நினைவில்லையா?(37) முதல்வனாக நீ தப்பி ஓடிய பிறகு, அந்த வானுலாவிகளை (சித்திரரதன் தலைமையிலான கந்தர்வர்களை) வீழ்த்தி, சச்சரவையே இயல்பாகக் கொண்ட திருதராஷ்டிரர் மகன்களைப் பாண்டவர்கள் விடுவித்த அந்த நிகழ்வு உனக்கு நினைவில்லையா?(38) (விராடனின்) பசுக்களைக் கைப்பற்றச் சென்ற நிகழ்வின் போது, மனிதர்கள் மற்றும் விலங்குகள் ஆகிய இரண்டையும் பெரும் எண்ணிகையில் கொண்டிருந்தவர்களும், ஆசான் {துரோணர்}, ஆசானின் மகன் {அஸ்வத்தாமன்}, பீஷ்மர் ஆகியோரைத் தங்களுடன் கொண்டிருந்தவர்களுமான கௌரவர்களை அந்த மனிதர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்} வென்றானே. ஓ!, அப்போது அர்ஜுனனை ஏன் நீ வெல்லவில்லை?(39) உன் அழிவுக்காகவே மற்றுமொரு சிறந்த போர் இப்போது தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. உன் எதிரியிடம் கொண்ட அச்சத்தால், நீ தப்பி ஓடாமல் இருந்தால், ஓ! சூதன் மகனே {கர்ணா}, போரிடச் சென்றவுடன் நீ கொல்லப்படுவாய்” என்றான் {சல்லியன்}.(40)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, கர்ணனிடம் இக்கடுமொழியில் இதயப்பூர்வமாக ஈடுபட்டு, பின்னவனின் {அவனது} எதிரியையும் புகழ்ந்து கொண்டிருந்தபோது, எதிரிகளை எரிப்பவனான அந்தக் குரு படையின் தலைவன் {கர்ணன்}, சினத்தால் தூண்டப்பட்டு, மத்ர மன்னனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(41)

கர்ணன் {சல்லியனிடம்}, “அப்படியே ஆகட்டும், அப்படியே ஆகட்டும். எனினும், அர்ஜுனனின் புகழ்ச்சியில் நீர் ஈடுபடுவது ஏன்? எனக்கும் அவனுக்கு இடையில் போர் நேரப்போகிறது. என்னை அவன்  {அர்ஜுனன்} போரில் வென்றால், இந்த உமது புகழ்ச்சிகள் அனைத்தும் நன்கு சொல்லப்பட்டதாகவே கருதப்படும்” என்றான்.(42)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி எந்த மறுமொழியும் கூறாமலிருந்தான். போரிடும் விருப்பத்தோடு கர்ணன், “செல்வீராக” என்று சல்லியனிடம் சொன்ன போது,(43) தன் வாகனத்தில் வெண்குதிரைகள் பூட்டியிருந்தவனும், சல்லியனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான அந்தப் பெரும் தேர்வீரன் {கர்ணன்}, இருளை அளிக்கும் சூரியனைப் போலப் போரில் பெரும் எண்ணிக்கையிலானவர்களைத் தன் வழியில் கொன்றபடியே எதிரிகளை எதிர்த்து விரைந்தான்.(44) உண்மையில் கர்ணன், புலித்தோல்கள் போர்த்தி, வெண்குதிரைகள் பூட்டப்பட்ட அந்தத் தேரில் உற்சாகமிக்க இதயத்துடன் சென்று, பாண்டவர்களின் படையைக் கண்டதும், தனஞ்சயனைக் {அர்ஜுனனைக்} குறித்து விசாரித்தான்” {என்றான் சஞ்சயன்}.(45)

“அர்ஜுனனை எனக்குக் காட்டிக் கொடுத்தால்?” என்ற கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 38-அர்ஜுனனைத் தன்னிடம் காட்டிக் கொடுப்பவனுக்கு, அவன் விரும்பும் பரிசுகளைத் தான் அளிக்கப் போவதாகப் பாண்டவத் துருப்பினரிடம் சொன்ன கர்ணன்; மீண்டும் சல்லியன் கர்ணனிடம் பேசத் தொடங்குவது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது படைக்கு மகிழ்வூட்டியபடி கர்ணன் போருக்குப் புறப்பட்ட பிறகு, தான் சந்தித்த ஒவ்வொரு பாண்டவப் படைவீரனிடமும் அவன் {கர்ணன்} இவ்வார்த்தைகளைப் பேசினான்:(1) “வெண்குதிரைகளைக் கொண்ட உயர் ஆன்மத் தனஞ்சயனை {அர்ஜுனனை} இன்று எனக்குச் சுட்டிக் காட்டுபவனுக்கு, அவன் விரும்பும் எந்தச் செல்வத்தையும் நான் அளிப்பேன்.(2) அதைப் பெற்ற பின்பும் அவன் நிறைவடையவில்லையென்றால், அதற்கு மேலும் அதிகமாக நான் கொடுப்பேன். அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு ஒரு வண்டிச்சுமை அளவுக்கு ரத்தினங்களையும், நகைகளையும் அளிப்பேன்.(3) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவன் நிறைவடையவில்லையெனில், அவனுக்கு நூறு பசுக்களையும், அவற்றில் பால் கறப்பதற்காக அதே அளவு பித்தளை பாத்திரங்களையும் கொடுப்பேன்.(4) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு முதன்மையான நூறு கிராமங்களை அளிப்பேன். அர்ஜுனனை எனக்குக் காட்டுபவனுக்கு, கருங்கண்களையும், நீண்ட கூந்தலையும் கொண்ட காரிகைகள் பலரையும், வெண் கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட தேர் ஒன்றையும் அளிப்பேன்.(5)

அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அது நிறைவைத் தரவில்லையெனில், யானைகள் அளவுக்குப் பெரியவையான ஆறு காளைகள்[1] பூட்டப்பட்டதும், தங்கத்தாலானதுமான மற்றுமொரு தேரை நான் அளிப்பேன்.(6) ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், தங்கக் கழுத்தணி பூண்டவர்களும், நல்ல நிறத்தைக் கொண்டவர்களும்[2], பாடல் மற்றும் ஆடலில் சாதித்தவர்களுமான நூறு காரிகைகளையும் நான் அவனுக்கு அளிப்பேன்.(7) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அதுவும் நிறைவைத் தரவில்லையெனில், நூறு யானைகளையும், நூறு கிராமங்களையும், நூறு தேர்களையும்,(8) பருத்தவையும், சிறந்த தன்மைகள் பலவற்றைக் கொண்டவையும், தேர்களை இழுக்க வல்லவையும், நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையும், முதன்மையான இனத்தைச் சேர்ந்தவையுமான பத்தாயிரம் {10000} குதிரைகளையும் நான் அவனுக்கு அளிப்பேன்.(9) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்குத் தங்கக் கொம்புகள் கொண்ட நூனூறு பசுக்களையும், அவற்றின் கன்றுகளையும் கொடுப்பேன்.(10) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அதுவும் நிறைவைத் தரவில்லையெனில், மேலும் மதிப்புமிக்கப் பரிசாகத் தங்க இழைகளாலும், தங்க நகை ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஐநூறு {500} குதிரைகளை நான் அவனுக்கு அளிப்பேன். நன்கு கீழ்ப்படியும் தன்மை கொண்ட வேறு பதினெட்டு குதிரைகளையும் நான் கொடுப்பேன்.(11,12) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்குப் பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டதும், முதன்மையான காம்பாஜக் குதிரைகள் பூட்டப்பட்டதும், தங்கத்தாலானதுமான பிரகாசமான ஒரு தேரையும் அளிப்பேன்.(13)

அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அது நிறைவைத் தரவில்லையெனில், மிகவும் மதிப்புமிக்கப் பரிசாகக் கழுத்துகளில் தங்க ஆரங்களுடையவையும், தங்க அம்பாரிகளால் மறைக்கப்பட்டவையும், பெருங்கடலின் மேற்குக் கடற்கரைகளில் பிறந்தவையும்,[3] யானைப்பழக்கிகளால் பயிற்சியளிக்கப்பட்டவையுமான அறுநூறு {600} யானைகளை நான் அவனுக்கு அளிப்பேன்.(14,15) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அது நிறைவைத் தரவில்லையெனில், மேலும் மதிப்புமிக்கப் பரிசாக, மக்கள் நிறைந்தவையும், செல்வம் நிறைந்தவையும், காடுகள் மற்றும் ஆறுகள் ஆகியவற்றை அருகாமையில் கொண்டவையும், ஆபத்துகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவையும், (இன்றியமையாதவை பிறவற்றுடன் சேர்த்து) நன்கு அமைக்கப்பட்டவையும், மன்னர்களால் அனுபவிக்கத் தகுந்தவையுமான பதினான்கு {14} வைசியக் கிராமங்களை நான் அவனுக்கு அளிப்பேன்.(16,17) தனஞ்சயனை {அர்ஜுனனை} எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு, தங்கக் கழுத்தணி கொண்டவர்களும், மகதர்களின் நாட்டைச் சேர்ந்தவர்களும், மிக இளவயதுடையவர்களுமான நூறு அடிமைப்பெண்களை நான் அவனுக்கு அளிப்பேன்.(18) அர்ஜுனனை எனக்குக் கண்டுபிடித்துத் தருபவனுக்கு அது நிறைவைத் தரவில்லையெனில், மேலும் மதிப்புமிக்கப் பரிசாக, உண்மையில் அவனே வேண்டுவதைக் கொடுப்பேன்.(19) நான் கொண்டுள்ள மகன்கள், மனைவியர், இன்பங்கள் மற்றும் இன்பநுகர் பொருட்கள் அனைத்தையும் அவன் விரும்பினால் நான் கொடுப்பேன்[4].(20) உண்மையில், கேவசவனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் நான் கொன்ற பிறகு, அவர்களை எனக்குக் கண்டுபிடித்துத் தந்தவனுக்கு, அவர்களிடம் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனிடம்} எஞ்சியிருக்கும் செல்வங்கள் அனைத்தையும் கொடுப்பேன்” என்று சொன்னான் {கர்ணன்}.(21)

அந்தப் போரில் இப்படிப் பல்வேறு பேச்சுகளைப் பேசிய கர்ணன், கடலில் பிறந்ததும், இனிய ஒலியை உண்டாக்குவதுமான தன் சிறந்த சங்கை எடுத்து ஊதினான்.(22) சூதன் மகனின் நிலைக்குத் தகுந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன்னைப் பின்தொடர்பவர்கள் அனைவருடன் சேர்ந்து மகிழ்ச்சியில் நிறைந்தவன் ஆனான்.(23) அந்தச் சூழ்நிலையில், ஓ! மன்னா, ஓ! மனிதர்களில் காளையே, (கௌரவத்) துருப்புகளுக்கு மத்தியில், மிருதங்கங்கள் மற்றும் பேரிகைகளின் முழக்கங்கள், சிங்க முழக்கங்கள், யானைகளின் பிளிறல்கள் ஆகியன அங்கே பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளோடு கலந்து எழுந்தன. மகிழ்ச்சியால் நிறைந்த போர்வீரர்களின் கூச்சல்களும் அங்கே எழுந்தன.(24,25) இவ்வாறு (கௌரவத்) துருப்புகள் மகிழ்ச்சியில் நிறைந்திருந்த போது, வெறுப்புடன் சிரித்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, எதிரிகளைக் கலங்கடிப்பவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், போரெனும் பெருங்கடலுக்குள் மூழ்கச் செல்பவனும், இத்தகு வீண் தற்புகழ்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனுமான அந்த ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்” {என்றான் சஞ்சயன்}[5].(26)

“கர்ணா நீயொரு நரி!” என்ற சல்லியன்! – கர்ண பர்வம் பகுதி – 39-அர்ஜுனனுடன் தனியாகப் போரிட வேண்டாம் என்று கர்ணனை எச்சரித்த சல்லியன்; தன் தீர்மானத்தில் உறுதியாக இருந்த கர்ணன்; கர்ணனின் செருக்கைப் பொறுத்துக் கொள்ள முடியாத சல்லியன் அவனை இகழ்ந்தது; கர்ணன் மற்றும் அர்ஜுனனை, நரி மற்றும் சிங்கமாக ஒப்பிட்டுச் சொன்ன சல்லியன்…

சல்லியன் {கர்ணனிடம்}, “ஓ! சூதன் மகனே {கர்ணா}, யானையளவு பெரிதான ஆறு காளைகளுடன் கூடிய தங்கத் தேரை எவனுக்கும் கொடுத்துவிடாதே. நீ இன்று தனஞ்சயனை {அர்ஜுனனைக்} காணப் போகிறாய்.(1) நீயே பொக்கிஷத் தலைவன் {குபேரன்} என்பதைப் போலச் செல்வங்களைக் கொடுப்பதாக மடமையினாலே நீ சொல்கிறாய்.[1] எனினும், ஓ! ராதையின் மகனே {கர்ணனே}, எந்தத் இடருமில்லாமலே நீ இன்று தனஞ்சயனைக் காண்பாய்.(2) அறிவற்ற மனிதனைப் போல நீ செல்வத்தைக் கொடுக்கிறாய்; தகாதவர்களுக்குக் கொடுக்கப்படும் அப்பரிசுகளில் இணைந்திருக்கும் குறைகளை நீ காணவில்லை.(3) நீ கொடுக்க விரும்பும் அப்பெருஞ்செல்வத்தைக் கொண்டு, நிச்சயம் வேள்விகள் பலவற்றை நடத்திவிட முடியும். எனவே, ஓ! சூதன் மகனே {கர்ணா}, நீ அவ்வேள்விகளைச் செய்வாயாக.(4) மடமையினால் தூண்டப்பட்ட அவ்விருப்பம் நிச்சயம் வீணானதாகும். இரண்டு சிங்கங்கள் ஒரு நரியால் வீழ்த்தப்பட்டதை நாம் எப்போதும் கேட்டதில்லை.(5)

எதை நீ எப்போதும் வேண்டக்கூடாதோ அதையே வேண்டுகிறாய். சுடர்மிகும் நெருப்புக்குள் வேகமாக விழும் உன்னைத் தடுக்க நண்பர்கள் எவரும் உனக்கு இல்லை என்பது தெரிகிறது.(6) எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதில் வேறுபாடு காண உன்னால் இயலவில்லை. உன் காலம் நிறைவுபெற்றது என்பதில் ஐயமில்லை. வாழ விரும்பும் எந்த மனிதன்தான் இந்தளவுக்குக் கேட்பதற்கு ஒத்திசையாத, தகாத பேச்சுகளைப் பேசுவான்?(7) இந்த உனது முயற்சியானது, கழுத்தில் கனமான கல்லைக் கட்டிக் கொண்டு, இரண்டு கைகளால் மட்டுமே பெருங்கடலைக் கடக்க விரும்பும் ஒருவனைப் போலவோ, மலைச்சிகரத்தில் இருந்து குதித்துவிட விரும்பும் ஒருவனைப் போலவோ இருக்கிறது.(8) உன் நன்மைக்கான வெற்றியை நீ அடைய விரும்புவாயெனில், அணிவகுக்கப்பட்ட உன் படைப்பிரிவுக்குள் நல்ல பாதுகாப்புடன் இருந்து கொண்டு, உனது போர்வீரர்கள் அனைவரின் உதவியுடன் தனஞ்சயனுடன் {அர்ஜுனனுடம்} போரிடுவாயாக. {தனியாகப் போரிடாதே}.(9) உன் மீது எந்தத் தீய நோக்கமும் கொள்ளாமல், திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} நன்மைக்காகவே இதை நான் உன்னிடம் சொல்கிறேன். உன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள விருப்பமேதும் நீ கொண்டிருந்தால், என்னால் சொல்லப்பட்டும் வார்த்தைகளை ஏற்பாயாக” என்றான் {சல்லியன்}.(10)

கர்ணன் {சல்லியனிடம்}, “என் கரங்களின் வலிமையை நம்பியே நான் அர்ஜுனனுடன் போரிட முயல்வேன். எனினும், நண்பனின் முகத்தோடு கூடிய பகைவரான நீர் என்னை அச்சுறுத்த விரும்புகிறீர்.(11) இந்தத் தீர்மானத்தில் இருந்து என்னைப் பின்வாங்கச் செய்ய எவனாலும், ஏன் வஜ்ரத்தை உயர்த்தும் இந்திரனாலும் கூட முடியாது எனும்போது, மனிதர்களைக் குறித்துச் சொல்லும் தேவை என்ன இருக்கிறது?” என்றான்.(12)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கர்ணனுடைய வார்த்தைகளின் முடிவில், அவனது கோபத்தைத் தூண்ட விரும்பிய மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அவனுக்கு மறுமொழியாக இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(13) {சல்லியன்}, “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பல்குனனால் {அர்ஜுனனால்} ஏவப்படுபவையும், கங்க இறகுகளால் சிறகுகள் அமைந்தவையும், அவனது வில்லின் நாணில் இருந்து தூண்டப்பட்டவையும், அவனது சக்தி அனைத்தையும் திரட்டி ஏவப்பட்டவையுமான கூர்முனை கணைகள் உன்னை நாடும்போது, அந்த வீரனுடனான உன் மோதலைக் குறித்து நீ வருந்துவாய்.(14) சவ்யசச்சின் என்றும் அழைக்கப்படும் பார்த்தன் {அர்ஜுனன்}, தன் தெய்வீக வில்லை எடுத்துக் கொண்டு (குரு) படையை எரித்து, கூரிய கணைகளால் உன்னை அதீதமாகப் பீடிக்கும்போது, ஓ! சூதன் மகனே {கர்ணா}, நீ (உன் மடமைக்காக) வருந்துவாய்.(15) தாயின் மடியில் கிடக்கும் குழந்தை, நிலவைப் பிடிக்க முயல்வதைப் போல நீயும் உன் மடமையினால் தேரில் நிற்கும் பிரகாசமிக்க அர்ஜுனனை வெல்ல முயல்கிறாய்.(16) ஓ! கர்ணா, கூர்முனை சாதனைகளைக் கொண்ட அர்ஜுனனுடன் நீ இன்று போரிட விரும்புவதன் மூலம், திரிசூலத்தின் கூர் முனைகளில் உன் அங்கங்களைத் தேய்த்துக் கொள்கிறாய்[2].(17)

ஓ! சூதன் மகனே {கர்ணனே}, சுறுசுறுப்பும், இளமையும், மடமையும் கொண்ட ஒரு சிறு மானானது, கோபத்தால் தூண்டப்பட்ட ஒரு பெரும் சிங்கத்தை அறைகூவியழைப்பதைப் போன்றதே இந்த உனது அறைகூவல் இருக்கிறது.(18) ஓ! சூதன் மகனே {கர்ணா}, காட்டில் இறைச்சியில் நிறைவு கொண்ட ஒரு நரியானது, பிடரிமயிர் கொண்ட காட்டு ஏகாதிபதியை {பெருஞ்சிங்கத்தை} அறைகூவியழைப்பதைப் போல, வலிமையும் சக்தியும் கொண்ட அந்த இளவரசனை {அர்ஜுனனை} நீ அறைகூவியழைக்காதே. அர்ஜுனனோடு மோதி அழிவையடையாதே.(19) ஓ! கர்ணா, ஒரு முயலானது, கலப்பைகள் அளவு பெரிய தந்தங்களைக் கொண்டதும், வலிமைமிக்கதும், வாயிலும், கன்னத்திலும் மத நீர் பெருக்குவதுமான ஒரு யானையை அறைகூவியழைப்பதைப் போல, நீ பிருதையின் மகனான தனஞ்சயனை {அர்ஜுனனை} அறைகூவியழைக்கிறாய்.(20) பார்த்தனோடு போரிட விரும்பும் மடமையினால் நீ, பொந்துக்குள் கிடக்கும் கடும் நஞ்சுமிக்கக் கருநாகத்தை மரத்துண்டினால் {குச்சியினால்} துளைத்து, அதன் சீற்றத்தைத் தூண்டுகிறாய்.(21) ஓ! கர்ணா, சிறுமதி கொண்ட நீ, மனிதர்களில் சிங்கமான அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} அலட்சியம் செய்து, கோபத்தால் தூண்டப்பட்டதும், பிடரிமயிர் கொண்டதுமான ஒரு சிங்கத்தை நோக்கி ஊளையிடும் நரியைப் போல அவனை {அர்ஜுனனை} நோக்கி ஊளையிடுகிறாய்.(22)

ஒரு பாம்பானது, பறவைகளில் முதன்மையானவனும், அழகிய இறகுகள் கொண்டவனும், பெரும் சுறுசுறுப்புடையவனுமான வினதையின் மகனை {கருடனை} தன் அழிவுக்காகவே அறைகூவியழைப்பதைப் போல, பாண்டுவின் மகனான தனஞ்சயனை நீ அறைகூவியழைக்கிறாய்.(23) நீர்நிலைகள் அனைத்தின் கொள்ளிடமும், மலைகளைப் போன்ற அலைகளைக் கொண்டதும், நீர்வாழ் உயிரினங்கள் நிறைந்ததும், சந்திரன் உதிக்கையில் உயரமாக எழுவதுமான பயங்கரமானபெருங்கடலை நீ படகில்லாமல் கடக்க விரும்புகிறாய்.(24) ஓ! கர்ணா, ஒரு கன்றானது, கூரிய கொம்புகளையும், பேரிகையைப் போன்ற தடித்த திமில்களையும் கொண்டதும், தாக்கவல்லதுமான காளையொன்றை அறைகூவியழைப்பதைப் போல, போரில் நீ பிருதையின் மகனான தனஞ்சயனை {குந்தியின் மகனான அர்ஜுனனை} அறைகூவியழைக்கிறாய்.(25) அபரிமிதமான மழையைப் பொழியும் பயங்கரமான பெரும் மேகத்தைக் கண்டு கரையும் தவளையைப் போல, மனிதர்களில் பர்ஜன்யனான {மேகதேவனான}[3] அர்ஜுனனைக் கண்டு நீ கரைகிறாய்.(26) தன் தலைவனின் வீட்டு எல்லைக்குள் இருக்கும் நாயானது, காட்டில் திரியும் புலியைக் கண்டு குரைப்பதைப் போல, ஓ! கர்ணா, மனிதர்களில் புலியான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டு நீ குரைக்கிறாய்.(27)

ஓ! கர்ணா, காட்டில், குழிமுயல்களுக்கு மத்தியில் வசிக்கும் நரியானது, உண்மையில் ஒரு சிங்கத்தைப் பார்க்குவரை, தன்னையே ஒரு சிங்கமாகக் கருதிக் கொள்ளும்.(28) அது போலவே, ஓ! ராதையின் மகனே {கர்ணா}, எதிரிகளை ஒடுக்குபவனும், மனிதர்களில் புலியுமான தனஞ்சனை நீ காணாததால், உன்னையே சிங்கமாக நீ கருதிக் கொள்கிறாய்.(29) ஒரே தேரில் சூரியனையும், சந்திரனையும் போல இருக்கும் கிருஷ்ணர்கள் {கருபர்களான கிருஷ்ணன், அர்ஜுனன்} இருவரையும் நீ காணாதவரை உன்னை நீயே சிங்கமாகக் கருதிக் கொள்வாய்.(30) பெரும்போரில் காண்டீவத்தின் நாணொலியை நீ எதுவரை கேட்கவில்லையோ, அதுவரை நீ விரும்பியதைச் செய்ய இயன்றவனாக இருப்பாய்.(31) பார்த்தன் {அர்ஜுனன்}, தன் தேரின் சடசடப்பொலியாலும், தன் வில்லின் நாணொலியாலும் திசைகளின் பத்து புள்ளிகளையும் நிறைப்பதைக் கண்டும், புலியைப் போல அவன் முழங்குவதைக் கண்டும், நீ நரியாகப் போகிறாய்.(32) நீ எப்போதும் நரியே ஆவாய், தனஞ்சயனோ {அர்ஜுனனோ} எப்போதும் சிங்கமேயாவான். ஓ! மூடா, அந்த வீரர்களிடம் கொண்ட பொறாமை மற்றும் வெறுப்பின் விளைவால், நீ எப்போதுமே நரியாகவே தெரிகிறாய்.(33) எலியும் பூனையும் ஒன்றுக்கொன்று பலத்தில் எப்படியோ, நாயும் புலியும் எப்படியோ, நரியும் சிங்கமும் எப்படியோ, முயலும் யானையும் எப்படியோ, பொய்மையும், மெய்யும் எப்படியோ, விஷமும் அமுதமும் எப்படியோ, அப்படியே நீயும் பார்த்தனும் உங்கள் செயல்களால் அனைவராலும் அறியப்படுகிறீர்கள்” {என்றான் சல்லியன்}.(34)

“உமது தலையை நொறுக்கிவிடுவேன்!” என்ற கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 40-மத்ரக நாட்டின் நடைமுறைகள், அந்நாட்டின் பெண்களின் நடத்தை, நட்பை மறுக்கும் குணம் ஆகியவற்றை வெளியிட்டுச் சல்லியனை நிந்தித்த கர்ணன், மேலும் இதுபோலப் பேசினால் தன் கதாயுதத்தால் சல்லியனின் தலையை நொறுக்கிவிடுவதாகச் எச்சரித்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அளவிலா சக்தி கொண்ட சல்லியனால் இவ்வாறு நிந்திக்கப்பட்ட ராதையின் மகன் {கர்ணன்}, தன்னை நிந்திப்பவனின் வார்த்தைக் கணைகளின் விளைவால் அவனது {சல்லியனின்} பெயரின் பொருளை உணர்ந்து, கோபத்தால் நிறைந்து இவ்வாறு பதிலுரைத்தான்[1]”(1)

கர்ணன் {சல்லியனிடம்}, “ஓ! சல்லியரே, தகுதிமிக்க மனிதர்களின் {குணசாலிகளின்} தகுதிகளை {குணங்களைத்} தகுதியற்றவர்கள் {குணமில்லாதவர்கள்} அறிவதில்லை, தகுதிமிக்கவர்களே {குணசாலிகளே} அறிவார்கள். எனினும், நீர் தகுதியற்றவராகவே இருக்கிறீர். அப்படியிருக்கையில், தகுதியையும், தகுதியின்மையையும் உம்மால் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?(2) ஓ! சல்லியரே, அர்ஜுனனின் வலிமைமிக்க ஆயுதங்கள், அவனது சக்தி, வில், கணைகள், அந்த உயர் ஆன்ம வீரனின் ஆற்றல் ஆகியவற்றை நான் நன்கறிவேன்.(3) அதே போல, ஓ! சல்லியரே, பூமியின் தலைவர்களுக்கு மத்தியில் காளையான கிருஷ்ணனின் பெருமையை நான் நன்கறிந்ததைப் போல நீர் அறியமாட்டீர்.(4) ஆனால், ஓ! சல்லியரே, என் சக்தியையும், பாண்டு மகனின் {அர்ஜுனனின்} சக்தியையும் அறிந்தே நான் அவனைப் போருக்கு அறைகூவியழைக்கிறேன். சுடர்மிக்க நெருப்பைப் பொறுத்தவரை, பூச்சி போல நான் செயல்படுவதில்லை.(5)

ஓ! சல்லியரே, குருதி குடிக்கும் கூரிய வாய்க் கொண்டதும், ஓர் அம்பறாத்தூணிக்குள் தனியாகவே கிடப்பதும், சிறகுகளுடன் ஆயத்தம் செய்யப்பட்டதும், எண்ணெயில் நன்கு தோய்க்கப்பட்டதும், நன்கு அலங்கரிக்கப்பட்டதுமான இந்தக் கணையை நான் கொண்டிருக்கிறேன்.(6) சந்தனத்தூளுக்கு மத்தியில் கிடப்பதும், பல ஆண்டுகளாக என்னால் வழிபடப்பட்டு வருவதுமான இது, பாம்பொன்றின் இயல்பையும், வடிவத்தையும் கொண்டிருப்பதால், நஞ்சுமிக்கதாகவும், கடுமையானதாகவும், பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளைக் கொல்லவல்லதாகவும் இருக்கிறது.(7) பயங்கர வடிவமும், அதிக அச்சத்தைத் தரவல்லதுமான இது, கவசங்களையும், எலும்புகளையும் துளைக்கவல்லதாக இருக்கிறது. கோபத்தால் தூண்டப்படும் நான், இதைக் கொண்டு வலிமைமிக்க மேருவின் மலைகளையும் கூடத் துளைக்க முடியும்.(8) பல்குனனையோ {அர்ஜுனனையோ}, தேவகியின் மகனான கிருஷ்ணனையோ தவிர வேறு எந்த மனிதனின் மீதும் நான் இக்கணையை ஏவமாட்டேன். இவ்விஷயத்தில் நான் உமக்கு உண்மையைச் சொல்கிறேன். அதைக் கேட்பீராக.(9)

ஓ! சல்லியரே, கோபத்தால் தூண்டப்பட்ட நான் இக்கணையைக் கொண்டு, வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் தனஞ்சயனோடு {அர்ஜுனனோடு} போரிடுவேன். அந்த அருஞ்செயல் எனக்குத் தகுந்ததே.(10) விருஷ்ணி குலத்தின் வீரர்கள் அனைவரிலும், கிருஷ்ணனிடமே எப்போதும் செழிப்பு நிறுவப்பட்டுள்ளது. பாண்டுவின் மகன்கள் அனைவரிலும், பார்த்தனிடமே {அர்ஜுனனிடமே} எப்போதும் வெற்றி நிறுவப்பட்டுள்ளது.(11) ஒரே தேரில் இருக்கும் அந்த மனிதர்களில் புலிகள் இருவரும், போரில் தனியனான என்னை எதிர்த்து வருவார்கள். ஓ! சல்லியரே, இன்று என் குலப்பிறப்பின் உன்னதத்தை நீர் பார்ப்பீர்.(12) அத்தையின் மகனும், தாய்மாமனின் மகனுமான அந்த மைத்துனர்கள் இருவரும்[2], அந்த வெல்லப்பட முடியாத போர்வீரர்கள் இருவரும், (ஒரே கணையைக் கொண்டு) என்னால் கொல்லப்பட்டு, ஒரே இழையில் கோர்க்கப்பட இரு முத்துகளைப் போலத் தெரிவதை நீர் காண்பீர்.(13) அர்ஜுனனின் காண்டீவம், குரங்கைத் தாங்கும் கொடி, கிருஷ்ணனின் சக்கரம், கருடனைத் தாங்கும் கொடி ஆகியன மருண்டோரின் அச்சத்தையே தூண்டும். எனினும், ஓ! சல்லியரே, எனக்கோ அவை மகிழ்ச்சியை உண்டாக்கும்.(14) தீய நிலைப்பாடும், பெரும்போரில் திறனற்ற வழிமுறைகளையும் கொண்ட நீர் ஒரு மூடரே. அச்சத்தால் பீடிக்கப்பட்டே நீர் இப்படிக் கரைகிறீர்.(15) அல்லது நானறியாத ஏதோ காரணத்திற்காக நீர் அவர்களைப் புகழ்கிறீர். முதலில் அவர்கள் இருவரையும் கொன்றுவிட்டு, உம்மையும், உமது சொந்தங்கள் அனைவருடனும் சேர்த்து இன்று கொல்வேன்.(16)

பாவம் நிறைந்த நாட்டில் பிறந்த நீர், தீய ஆன்மா கொண்டவராகவும், கோணல் புத்தி கொண்டவராகவும், க்ஷத்திரியர்களில் இழிந்தவராகவும் இருக்கிறீர். நண்பராய் இருந்து கொண்டே, இரு கிருஷ்ணர்களைக் (இப்படிப் புகழ்வதால்) கொண்டு ஓர் எதிரியைப் போல என்னை ஏன் அச்சுறுத்துகிறீர்?(17) இன்று அவர்கள் இருவரும் என்னைக் கொல்வார்கள், அல்லது நான் அவர்கள் இருவரையும் கொல்வேன். என் பலத்தால் முடிந்ததெதுவோ அஃதை அறிந்த நான் இரு கிருஷ்ணர்களிடமும் அச்சமேதும் கொள்ளவில்லை.(18) ஓராயிரம் வாசுதேவர்களையும், நூற்றுக்கணக்கான பல்குனர்களையும் என்னால் தனியனாகவே கொல்ல முடியும். ஓ! பாவம் நிறைந்த நாட்டில் பிறந்தவரே, உமது நாவை அடக்கும்.(19) ஓ! சல்லியரே, ஏற்கனவே பழமொழிகளாகிவிட்டவையும், இளைஞர்கள், முதியவர்கள், மகளிர் ஆகியோராலும், கணக்கிலடங்கா பயணங்களில் ஈடுபடும் மனிதர்களாலும், ஏதோ தங்கள் கல்வியின் ஒரு பகுதியாக அமைந்துவிட்ட ஒன்றைப் போல் தீய மத்ரகர்களைக் குறித்துப் பொதுவாகச் சொல்லப்படுபவையுமான இந்தச் சொலவடைகளைக் என்னிடமிருந்து கேட்பீராக. மன்னர்களின் அவைகளில் இதே காரியங்கள் முன்பு பிராமணர்களாலும் முறையாக உரைக்கப்பட்டிருக்கின்றன. ஓ! மூடரே, அந்தச் சொலவடைகளைக் கவனமாகக் கேட்டு நீர் மன்னிக்கலாம், அல்லது மீண்டும் {என்னோடு} இணையலாம். {பேசாமலிருக்கவும், அல்லது மறுமொழிகூறவும்}.(20,21)

மத்ரகன் {மத்ர நாட்டவன்} என்பவன் எப்போதும் நண்பர்களை வெறுப்பவனே. எவன் நம்மை வெறுப்பானோ அவனே மத்ரகன். பேச்சில் கீழ்த்தரமானவனும், மனித இனத்தில் இழிந்தவனுமான மத்ரகனிடம் நட்பென்பதே கிடையாது.(22) மத்ரகன் எப்போதும் தீய ஆன்மா கொண்டவனாகவும், எப்போதும் பொய்மை நிறைந்தவனாகவும், கோணல்புத்தி கொண்டவனாகவுமே இருக்கிறான். மரணக் கணம் வரையிலும் கூட மத்ரகர்கள் தீயவர்களாகவே இருப்பார்கள் என்று நாம் கேள்வி படுகிறோம். (மத்ரகர்களுக்கு மத்தியில்) தந்தை, மகன், தாய், மாமியார், மாமனார், தாய்மாமன், மருமகன், மருமகள், சகோதரன், பேரன், பிற சொந்தங்கள்,(24) தோழர்கள், அவர்களது இல்லங்களுக்கு வரும் அயலார், ஆண் மற்றும் பெண் அடிமைகள் ஆகியோர் {தங்களுக்குள்} ஒன்று கலக்கிறார்கள். மத்ரகர்களின் பெண்கள், தாங்கள் அறிந்த அல்லது அறியாத ஆடவருடன் தங்கள் விருப்பப்படியே கலந்து கொள்கிறார்கள்[3].(25) நீதியற்ற ஒழுக்கத்துடன் கூடிய அவர்கள், வறுத்து, பொடியாக்கப்பட்ட சோளம் மற்றும் மீனை உண்டு, தங்கள் இல்லங்களில் மது குடித்து[4], மாட்டிறைச்சியும் உண்டு சிரித்து, அழுகின்றனர்.(26) ஒத்திசைவில்லாப் பாடல்களைப் பாடும் அவர்கள், வெளிப்படையாகப் பேசியபடியே ஒருவரோடொருவர் காமத்தில் கலக்கிறார்கள். {இவ்வாறு} அனைத்து வகைத் தீச்செயல்களிலும் ஆணவமும், இழிபெயரும் கொண்ட மத்ரகர்களிடம் எவ்வாறு அறமிருக்க முடியும்?(27) ஒரு மத்ரகனுடன் எவனும் நட்பு கொள்ளக்கூடாது, அல்லது அவனிடம் பகைமையையும் தூண்டக்கூடாது. மத்ரகனிடம் நட்பேதும் கிடையாது. மத்ரகன் எப்போதும் மனிதத்தின் கறையே.(28) காந்தாரகர்களிடம் தூய்மையும், வேள்வி செய்பவனாகவும், புரோகிதனாகவும் மன்னனே இருக்கும் வேள்வியில் ஊற்றப்படும் ஆகுதியையும் போல மத்ரகர்களுக்கு மத்தியில் நட்பின் அனைத்து செயல்பாடுகளும் தொலைந்துபோகும்.(29)

அதே போல, தேளால் கடிபட்டு அதன் நஞ்சால் பீடிக்கப்பட்ட ஒரு மனிதனுக்கு ஞானியர் மருத்துவம் செய்கையில், இவ்வார்த்தைகள் சொல்லப்படுவதை உண்மையாகவே காணலாம்: “சூத்திரனின் அறவிழாக்களில் {திருவருட்சாதனங்களில்} துணைபுரியும் ஒரு பிராமணன் தரமிழப்பதைப் போலவே, பிராமணர்களை வெறுப்பவன் எப்போதும் தரமிழப்பதைப் போலவே மத்ரகர்களுடன் கூட்டணி ஏற்படுத்தும் மனிதனும் தரமிழிப்பான். மத்ரகனிடம் நட்பேதும் இல்லாததைப் போல, ஓ! தேளே, உன் நஞ்சானது இல்லாமல் போகட்டும். இந்த அதர்வ மந்திரங்களால் நான் சர்வசாந்தி சடங்குகளை முறையாகச் செய்திருக்கிறேன்” {என்று ஞானியர் சொல்வதை நாம் காணலாம்}.(30-32) ஓ! கல்விமானே, இதை அறிந்து கொண்டு உமது நாவை அடக்கும், அல்லது, மேலும் நான் சொல்லப் போகும் சிலவற்றையும் கேளும்.(33)

மதுவினால் போதையுண்டு, தங்கள் ஆடைகளைக் களைந்துவிட்டு ஆடும் பெண்களும், (குறிப்பிட்ட நபர்கள் எவருடனும்) புணர்ச்சியில் இணையாதவர்களும், இணைந்தவர்களுமான மகளிரும் எந்தக் கட்டுபாடுகளும் இன்றித் தாங்கள் விரும்பியதைச் செய்கிறார்கள் எனும்போது,(34) ஓ! மத்ரகரே {சல்லியரே}, நான் கேட்கிறேன், அம்மகளிரில் ஒருத்தியின் குழந்தையான நீர், மனிதர்களின் கடமைகளை அறிவிக்கத் தகுந்தவராக எவ்வாறு ஆக முடியும்? ஒட்டகங்கள், கழுதைகள் ஆகியவற்றைப் போல இயற்கையின் அழைப்புக்குப் பதில் சொல்லி வாழ்பவர்களும், பாவம் நிறைந்தவர்களும், நாணமற்றவர்களுமான அம்மகளிரில் ஒருத்தியின் பிள்ளையான நீர், மனிதர்களின் கடமைகளை அறிவிக்க எவ்வாறு விரும்பலாம்?(35,36) ஒரு மத்ரகப் பெண்மணி, சிறு அளவு காடிக்காக {ஒரு வகை மதுவுக்காக} வேண்டப்படும்போது, அதைக் கொடுக்கும் விருப்பமில்லாத அவள், தன் இடைகளைச் சொறிந்தபடி, இந்தக் கொடும் மொழிகளைச் சொல்கிறாள்;(37) “எனக்கு அன்பான காடியை என்னிடம் எந்த மனிதனும் கேட்காதிருக்கட்டும். அவனுக்கு நான் என் மகனைக் கொடுப்பேன், என் கணவனையும் அவனுக்குக் கொடுப்பேன், ஆனால் காடியை ஒருபோதும் கொடுக்க மாட்டேன்” {என்று சொல்வாள்}[5].(38)

இளம் மத்ரகக் கன்னியர்களை மிக நாணமற்றவர்களாகவும், மயிர் நிறைந்தவர்களாகவும், பெருந்தீனிக்காரர்களாகவும், தூய்மையற்றவர்களாகவுமே நாம் கேள்விப்படுகிறோம். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அவர்களது செயல்பாடுகளையும், இன்னும் இதே போன்ற வேறு காரியங்களையும் அவர்களைக் குறித்து என்னாலும், பிறராலும் உறுதியாகச் சொல்ல முடிகிறது.(39,40) உண்மையில், பாவம் நிறைந்த நாட்டில் பிறந்தவர்களும், நடைமுறையில் மிலேச்சர்களாக இருப்பவர்களும், கடமைகள் அனைத்தையும் முற்றாக அலட்சியம் செய்பவர்களுமான மத்ரகர்களாலும், சிந்து சௌவீரர்களாலும் கடமை குறித்த எதையும் எவ்வாறு அறிய முடியும்?(41) போரில் கொல்லப்பட்டு, நல்லோரால் புகழப்பட்டுப் பூமியில் கிடப்பதே க்ஷத்திரியர்களின் உயர்ந்த கடமையென நாம் கேள்விப்படுகிறோம்.(42) மரணத்தால் சொர்க்கத்தை அடைய விரும்பும் நான் இந்த ஆயுத மோதலில் (என் உயிரை இழந்து) கிடக்க வேண்டும் என்பதையே விரும்புகிறேன்.(43)

திருதராஷ்டிரரின் புத்திசாலி மகனுக்கு நான் உயிர் நண்பனாகவும் இருக்கிறேன். அவனுக்காகவே என் உயிர்மூச்சையும், என்னிடமுள்ள எந்தச் செல்வத்தையும் நான் கொண்டிருக்கிறேன்.(44) உம்மைப் பொறுத்தவரை, ஓ! பாவம் நிறைந்த நாட்டில் பிறந்தவரே {சல்லியரே}, ஓர் எதிரியைப் போல எங்களிடம் நீர் அனைத்திலும் நடந்து கொள்வதால், பாண்டவர்களால் நீர் களங்கப்படுத்தப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.(45) நாத்திகர்களால் தவறாக வழிநடத்தப்பட இயலாத நீதிமிக்க மனிதனைப் போல, நானும் உம்மைப் போன்ற நூறு பேராலும் இந்தப் போரில் இருந்து அகற்ற இயலாதவனாகவே இருக்கிறேன்.(46) வியர்வையில் நனைந்திருக்கும் ஒரு மானைப் போல, அழுவதற்கோ, தாகம் கொள்வதற்கோ {வறட்சி அடைவதற்கோ} உமக்குச் சுதந்திரமுண்டு. ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை நோற்பவனான நான், உம்மால் அச்சுறுத்தப்படத் தகுந்தவனாக இல்லை.(47) போரில் தங்கள் உயிரை விட்டவர்களும், பின்வாங்காத வீரர்களும் மனிதர்களில் சிங்கங்களுமாக இருந்தோரின் முடிவைக் குறித்துக் கடந்த காலங்களில் என் ஆசான் ராமரால் {பரசுராமரால்} எனக்கு அறிவிக்கப்பட்டவற்றை என் மனதில் நான் நினைத்துப் பார்க்கிறேன். கௌரவர்களைக் காக்கவும், எங்கள் எதிரிகளைக் கொல்லவும் தயாராக இருக்கும் என்னை, புரூரவனின் சிறந்த நடத்தையைக் கைகொள்ளத் தீர்மானித்திருப்பவனாக நீர் அறிந்து கொள்வீராக.(49)

ஓ! மத்ரகர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, இக்காரியத்தில் இருந்து என்னை அகற்றக் கூடிய மனிதன் எவனும் மூவுலகிலும் இருப்பதை நான் காணவில்லை.(50) இவை யாவையும் அறிந்து பேசுவதை நிறுத்துவீராக. ஏன் அச்சத்தால் இவ்வாறு கரைகிறீர்? ஓ! மத்ரகர்களில் இழிந்தவரே, நான் இப்போது உம்மைக் கொன்று, உமது உடலை ஊனுண்ணும் உயிரினங்களுக்குக் காணிக்கையாகக் கொடுக்க மாட்டேன்.(51) ஓ! சல்லியரே, நட்பைக் கருதுவதாலும், திருதராஷ்டிரர் மகனுக்காகவும் {துரியோதனனுக்காகவும்}, பழியைத் தவிர்ப்பதற்காகவும் என இம்மூன்று காரணங்களாலேயே நீர் இன்னும் உயிரோடு இருக்கிறீர்.(52) ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, இத்தகு வார்த்தைகளை நீர் மீண்டும் பேசினால், வஜ்ரத்தைப் போன்ற கடினமான என் கதாயுதத்தினால் உமது தலையை நொறுக்கிவிடுவேன்.(53) ஓ! பாவம் நிறைந்த நாட்டில் பிறந்தவரே, இரு கிருஷ்ணர்கள் கர்ணனைக் கொல்வதையோ, கர்ணன் இரு கிருஷ்ணர்களையும் கொல்வதையோ மக்கள் இன்று பார்ப்பார்கள், அல்லது கேட்பார்கள்” என்றான் {கர்ணன்}.(54) இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த ராதையின் மகன் {கர்ணன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மீண்டும் மத்ரர்களின் மன்னனிடம் {சல்லியனிடம்}, “செல்லும், செல்வீராக” என்று அச்சமில்லாமல் சொன்னான்” {என்றான் சஞ்சயன்}.(55)

செங்கண் காக்கையும், அன்னமும்! – கர்ண பர்வம் பகுதி – 41-காக்கை மற்றும் அன்னத்தைக் குறித்த கதையொன்றைக் கர்ணனுக்குச் சொன்ன சல்லியன்; அந்த உவமைக் கதையில் வரும் காக்கையைப் போன்றவனே கர்ணன் என்று அவனை நிந்தித்த சல்லியன்; கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் பாதுகாப்பை நாடுமாறு கர்ணனுக்கு அறிவுரை கூறிய சல்லியன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போரில் மகிழ்ச்சி கொள்பவனான ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} இவ்வார்த்தைகளைக் கேட்ட சல்லியன் மீண்டும் கர்ணனிடம் ஓர் உதாரணத்தைச் சொல்லிப் பேசினான்.(1) {அவன்}, “பெரும் வேள்விகளைச் செய்தவர்களும், போரில் ஒருபோதும் பின்வாங்காதவர்களும், புனித நீராடலுடன் மணிமுடி தரித்த மன்னர்களும் உதித்த குலத்தில் பிறந்தவன் நான். மேலும் நானும் அறப்பயிற்சியில் அர்ப்பணிப்புள்ளவனே.(2) ஓ! விருஷா {கர்ணா}, மதுவின் போதையிலிருப்பவனைப் போலவே நீ தெரிகிறாய். போதையிலிருக்கும் உன்னையும், உனது தவறையும் நட்பின் காரணமாகவே நான் சீராக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.(3) ஓ! கர்ணா, ஒரு காகத்தைக் குறித்து நான் சொல்லப்போகும் உவமையைக் கேட்பாயாக. அதைக் கேட்டதும், ஓ! மதியற்றவனே, உன் குலத்தில் இழிந்தவனே, நீ தேர்ந்தெடுப்பதையே செய்வாயாக.(4)

ஓ! கர்ணா, அப்பாவியான என்னை நீ கொல்ல விரும்பும் அளவுக்கு, என்னிடம் ஒரு சிறு தவறையும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.(5) நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டையும் அறிந்திருப்பதாலும், குறிப்பாக நான் உனது தேரின் சாரதியாக இருப்பதாலும், மன்னன் துரியோதனனின் நன்மையை நான் விரும்புவதாலும், உனக்கு எது நன்மை, எது தீமை என்பதை நான் சொல்லியே ஆக வேண்டும்.(6) இந்தத் தேருக்கு மிக நெருக்கமான தொடர்பில் இருப்பவனும், இதன் சாரதியாக இருப்பவனுமான நான், சமமான தரை எது? சமமற்றது எது? (என் வாகனத்தில் உள்ள) போர்வீரனின் பலம், அல்லது பலவீனம், அனைத்து நேரங்களிலும் (நான் செலுத்தும்) குதிரைகள் மற்றும் போர்வீரனின் களைப்பு மற்றும் மயக்கம்,(7) இருப்பிலுள்ள ஆயுதங்களின் அறிவு, விலங்குகள் மற்றும் பறவைகளின் ஒலிகள், குதிரைகளுக்குக் கனமானவை எவை? மிகக் கனமானவை எவை? கணைகளைப் பிடுங்குதல், காயங்களை ஆற்றுதல்,(8) ஆயுதங்களுக்கு எதிர்வினையாற்றும் ஆயுதங்கள் எவை? பல்வேறு போர்முறைகள், அனைத்து வகைகளிலான சகுனங்கள் மற்றும் குறியீடுகள் என்பன போன்றவற்றைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஓ! கர்ணா, இதற்காகவே, இந்த உதாரணத்தை நான் மீண்டும் உனக்கு உரைக்கிறேன்.(9)

பெருங்கடலின் மறுபக்கத்தில், அபரிமிதமான செல்வமும், சோளமும் {தானியமும்} கொண்டிருந்த வைசியன் ஒருவன் இருந்தான். அவன் வேள்விகளைச் செய்பவனாகவும், தாராளமான கொடைகளை அளிப்பவனாகவும், அமைதி நிறைந்தவனாகவும், தன் வகைக்கான {வைசிய} கடமைகளில் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும் இருந்தான், பழக்கவழக்கங்களாலும், மனத்தாலும் தூய்மையானவனாகவும் இருந்தான்.(10) அவன் தன் அன்புக்குரிய மகன்களாகப் பலரைக் கொண்டிருந்தான், உயிர்கள் அனைத்திடமும் அன்புடனும் இருந்தான். அறத்தால் வழிநடத்தப்பட்ட ஒரு மன்னனின் ஆட்சிப்பகுதிளுக்குள் அவன் அச்சமில்லாமல் வாழ்ந்து வந்தான்.(11) நன்னடத்தைக் கொண்டவர்களான அந்த வைசியனின் இளம் மகன்களின் உணவில் எஞ்சியவற்றைக் கொண்டு {எச்சிலுணவை உண்டு} வாழ்ந்து வந்த காகம் ஒன்று அங்கே இருந்தது.(12) அந்த வைசியக் குழந்தைகள் இறைச்சி, தயிர், பால், பாயாசம், தேன், நெய் ஆகியவற்றை எப்போதும் அந்தக் காக்கைக்குக் கொடுத்து வந்தனர்.(13) அந்த வைசியப் பிள்ளைகளின் உணவில் எஞ்சியவற்றால் இவ்வாறு உணவூட்டப்பட்டு வந்த அந்தக் காக்கையானது ஆணவம் கொண்டு, தனக்கு இணையான அனைத்துப் பறவைகளையும், ஏன் மேன்மையான பறவைகளையும்கூட அலட்சியம் செய்து {அவமதித்து} வந்தது.(14)

ஒரு சமயத்தில், உற்சாகமான இதயங்களையும், பெரும் வேகத்தையும் கொண்டவையும், எண்ணிய இடம் எங்கும் செல்ல வல்லவையும், செல்லும் தொலைவிலும், பறக்கும் வேகத்திலும் கருடனுக்கு இணையானவையுமான குறிப்பிட்ட சில அன்னங்கள் {ஹம்சங்கள்} பெருங்கடலின் அந்தப் பக்கத்திற்குத் தற்செயலாக வந்தன.(15) அந்த அன்னங்களைக் கண்ட வைசியச் சிறுவர்கள், அந்தக் காக்கையிடம், “ஓ! வானுலாவியே {காக்கையே}, சிறகு படைத்த உயிரினங்கள் அனைத்திலும் நீயே மேன்மையானவன்” என்றனர்.(16) அற்ப அறிவு கொண்டவர்களான அந்தப் பிள்ளைகளால் வஞ்சிக்கப்பட்ட அந்த முட்டையிடும் உயிரினம் {காக்கை}, மடமையினாலும், செருக்காலும் அந்த வார்த்தைகளை உண்மையென்றே கருதியது.(17) அந்தப் பிள்ளைகளின் உணவில் எஞ்சியதை உண்டு செருக்கடைந்திருந்த அந்தக் காகம், பெரும் தொலைவுகளைக் கடக்க வல்ல அந்த அன்னங்களுக்கு மத்தியில் பறந்து சென்று, அவற்றின் தலைவன் யார் என்பதை விசாரிக்க விரும்பியது.(18) இறுதியாக அந்த மடக் காக்கையானது, களைப்பில்லா சிறகுகளைக் கொண்ட அந்தப் பறவைகள், எதனைத் தங்களில் தலைவனாகக் கருதினவோ, அதனிடம், “பறப்பதில் நாம் ஒரு போட்டி வைத்துக் கொள்வோமா?” என்று அறைகூவியழைத்தது.(19)

அங்கே கூடியிருந்தவையும், பெரும் பலம் கொண்ட முதன்மையான பறவைகளுமான அந்த அன்னங்கள், கரையும் காக்கையின் அந்த வார்த்தைகளைக் கேட்டுச் சிரிக்கத் தொடங்கின.(20) அப்போது, விரும்பிய எங்கும் செல்லவல்ல அந்த அன்னங்கள், அந்தக் காக்கையிடம்,(21) “அன்னங்களாகிய நாங்கள், மானஸத் தடாகத்தில் எங்கள் வசிப்பிடத்தைக் கொண்டவர்களாவோம்.  உலகம் முழுவதையும் நங்கள் கடந்து வருகிறோம். நாங்கள் சிறகுபடைத்த உயிரினங்களுக்கு மத்தியில் கடக்கும் தொலைவுகளுக்காகவே நாங்கள் மெச்சப்படுகிறோம்.(22) ஓ! மூடா, ஒரு காகமாக இருந்து கொண்டு, நினைத்த எங்கும் செல்லவல்லவனும், பெரும் வலிமை கொண்டவனும், பறக்கையில் பெரும் தொலைவுகளைக் கடப்பவனுமான ஓர் அன்னத்தை நீ அறைகூவியழைப்பது எவ்வாறு? சொல், ஓ! காகமே, நீ எவ்வாறு எங்களோடு பறப்பாய்?” என்று கேட்டது.(23)

தற்பெருமை நிறைந்த அந்தக் காகம், தன் இனத்துடைய மடமையின் விளைவால், மீண்டும், மீண்டும் அவ்வன்னத்தின் வார்த்தைகளில்  குறை கண்டுபிடித்து, இந்தப் பதிலை அளித்தது.(24) அந்தக் காகம், “வெவ்வேறு வகையான நூற்றொரு அசைவுகளை {இயக்கங்களை [அ] கதிகளை} வெளிப்படுத்தியபடியே நான் பறப்பேன் என்பதில் யாதொரு ஐயமும் கிடையாது. ஒவ்வொரு நூறு யோஜனைகளையும், வெவ்வேறு அழகிய அசைவுகளைச் செய்தபடியே, அந்த அசைவுகள் அனைத்தையும் நான் வெளிப்படுத்துவேன்.(25) உயர எழுவது, கீழ்நோக்கிப் பாய்வது, சுற்றிச் சுழல்வது, நேரே செல்வது, மெதுவாகச் செல்வது, உறுதியாக முன்னேறுவது, சாய்ந்த கோணத்தில் மேலும், கீழுமான பல்வேறு அசைவுகளைச் செய்வது,(26) அசையாமல் மிதப்பது, கணைபோல் முன்னோக்கிப் பாய்வது, கடும் வேகத்துடன் மேல்நோக்கி உயர்வது, மீண்டும் மெது்வாக முன்னேறுவது, பிறகு மிக மூர்க்கமாக முன்னேறுவது,(27) மீண்டும் கீழ்நோக்கிப் பாய்வது, சுற்றிச் சுழல்வது, உறுதியாக முன்னேறுவது, அதிர்வுடன் மேலே மேலே எழுவது, நேராக உயர்வது, மீண்டும் கீழே பாய்வது,(28), வட்டமாகச் சுழல்வது, செருக்குடன் விரைவது, என அசைவுகளின் பல்வேறு வகைகளான இவற்றை நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெளிப்படுத்துவேன். அப்போது நீங்கள் என் பலத்தைக் காண்பீர்கள்.[1](29) பல்வேறு அசைவுகளின் வகைகளான இவற்றில் எதைக் கண்டு நான் வானத்தில் உயர வேண்டும். அன்னங்களே, இந்த அசைவுகளில் எதைக் கொண்டு நான் வெளியினூடாகப் பறக்க வேண்டும்?(30) உங்களுக்கு அசைவு வகையைத் தீர்மானித்த பிறகு, நீங்கள் என்னோடு பறக்கலாம். அந்த வெவ்வேறு அசைவுகளையும் பின்பற்றியே ஆதாரமற்ற வெளியில் என்னோடு நீங்கள் பறக்க வேண்டும்” என்றது {காக்கை}.(31)

காகம் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், அன்னங்களில் ஒன்று அதனுடன் {அந்தக் காக்கையுடன்} பேசியது. ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அந்த அன்னம் சொன்ன வார்த்தைகளைக் கேட்பாயாக. அந்த அன்னம், “ஓ! காகமே, நூற்றொரு வகையான அசைவுகளுடன் நீ பறப்பாய் என்பதில் யாதொரு ஐயமும் கிடையாது. எனினும், (பிற) பறவைகள் அறிந்த ஒரே வகை அசைவுடனே நான் பறப்பேன். ஓ! காகமே, நான் வேறு எதையும் அறியமாட்டேன். உன்னைப் பொறுத்தவரை, ஓ! செங்கண்களைக் கொண்டவனே, நீ விரும்பும் எவ்வகை அசைவுடனும் பறப்பாயாக” என்று சொன்னது {அந்த அன்னப்பறவை}.(32-35) அங்கே கூடியிருந்த காகங்கள், இவ்வார்த்தைகளைக் கேட்டு உரக்கச் சிரித்து, “பறப்பதில் ஒரே வகையை மட்டுமே அறிந்த அன்னமானது, நூறு வெவ்வேறு வகைகளில் பறப்பதைவிட  சிறப்படையப் போவதெவ்வாறு?”[2] என்றன.(36)

பிறகு அன்னம் மற்றும் காகம் ஆகிய இரண்டும் ஒன்றையொன்று அறைகூவியழைத்தபடியே வானத்தில் எழுந்தன. காகமானது வெவ்வேறு வகையான நூறு அசைவுகளுடன் பறந்த அதே வேளையில், விரும்பிய எங்கும் செல்லவல்ல அன்னமானது ஒரே வகை அசைவிலேயே பறந்தது.(37) அன்னம் பறந்து சென்றது, காக்கையும் (தனது திறனை) ஒவ்வொருவரும் வியக்கும் வண்ணமும், தன் சாதனைகளை ஒவ்வொருவரும் உயர்வாகப் பேசும் வண்ணமும் பறந்து சென்றது.(38) பெரும் மகிழ்ச்சியில் நிறைந்திருந்த காகங்கள், அடுத்தடுத்த நேரங்களில் பல்வேறு வகைப் பறக்கும் அசைவுகளைக் கண்டு, மேலும் உரக்கக் கரைந்தன.(39) அன்னங்களும், (அந்தக் காகங்கள்) ஏற்றுக்கொள்ளாத பல கருத்துகளைச் சொல்லிக் கேலியுடன் சிரித்தன. பிறகு அவை இங்கேயும் அங்கேயும் மீண்டும் மீண்டும் உயரப் பறக்கத் தொடங்கின.(40) அவை மர உச்சிகளில் இருந்து கீழே பாயவும், பூமியின் பரப்பில் இருந்து உயர எழும்பவும் தொடங்கின. பிறகு அவை தங்கள் வெற்றியைக் குறிக்கும் வகையில் பல்வேறு கூச்சல்களைச் செய்தன.(41) எனினும், அந்த அன்னமானது, (தான் பழக்கப்பட்ட) ஒரே வகையிலான மெதுவான அசைவையே செய்து வானத்தைக் கடக்கத் தொடங்கியது. எனவே, ஓ! ஐயா {கர்ணா}, ஒரு சிறு {முகூர்த்த} காலம் வரை, காகத்தைவிட அந்த அன்னம் பின்தங்கியதாகத் தெரிந்தது.(42)

இதனால் காகங்கள், அன்னங்களை அவமதிக்கும் வகையில், இந்த வார்த்தைகளைச் சொல்லின: “பறந்து சென்றவனும், உங்களில் ஒருவனுமான அந்த அன்னம், பின்தங்கியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது” {என்றன காகங்கள்}.(43) (பறந்து கொண்டிருந்த) அன்னமானது, இவ்வார்த்தைகளைக் கேட்டதும், மேற்குநோக்கி, மகரங்களின் வசிப்பிடமான பெருங்கடலுக்குப் பெரும் வேகத்துடன்  பறந்து சென்றது.(44) அப்போது, களைக்கும்போது அமர்வதற்கு தீவுகள் அல்லது மரங்கள் எதையும் காணாமல் கிட்டத்தட்ட உணர்வையிழந்திருந்த அந்தக் காகத்தின் இதயத்திற்குள் அச்சம் நுழைந்தது. அந்தக் காகமானது, களைப்படைந்த போது, பரந்திருக்கும் அந்த நீரின் மீது எங்கே இறங்குவது எனத் தன் இதயத்துக்கள் எண்ணியது.(45) எண்ணற்ற உயிரினங்களின் வசிப்பிடமாக இருக்கும் பெருங்கடலானது கடக்கமுடியாததாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான ராட்சசர்கள் வசிக்கும் அது, {பல உயிரினங்கள் வசிப்பதால்} வானத்தைவிட மேன்மையானது.(46) ஓ! சூதனின் மகனே {கர்ணா}, ஆழத்தில் அதை விஞ்சுவதற்கு எதுவும் கிடையாது. ஓ! கர்ணா, பெருங்கடலின் நீரானது வெளியைப் போலவே எல்லையற்றிருப்பதாக மனிதர்கள் அறிகிறார்கள். ஓ! கர்ணா, அதன் நீரின் அளவுக்கு ஒரு காகமானது எம்மாத்திரம்?(47)

ஒரு கணத்தில் பெரும் தொலைவைக் கடந்த அன்னமானது, காகத்தைத் திரும்பிப் பார்த்ததும், அதனால் (இயலுமென்றாலும்} அதைப் பின்னால் விட்டு விட்டுச் செல்ல முடியவில்லை.(78) அந்தக் காகத்தைக் கடந்து சென்ற அந்த அன்னமானது, தன் கண்களை அதன் {அந்தக் காகத்தின்} மீது செலுத்தி, “இந்தக் காகமே {நம்மிடம்} வரட்டும்” என்று எண்ணிக் காத்திருந்தது.(49) காகமும், மிகவும் களைத்துப் போய் அன்னத்திடம் வந்தது.(50) விழுந்து, மூழ்கப்போகும் அதைக் கண்டும், நல்லினத்தோரின் நடைமுறைகளை நினைவுகூர்ந்தும் அதைக் காக்க விரும்பிய அன்னமானது, அதனிடம் இவ்வார்த்தைகளைப் பேசியது:(51) “பறத்தல் குறித்துப் பேசியபோது, பல்வேறு வகைகளிலான அசைவுகளைக் குறித்து நீ மீண்டும் மீண்டும் பேசினாயே. அவை எங்களுக்குப் புதிராக இருப்பதால் (இந்த உனது நிலையில்) அவை குறித்து நீ பேசவில்லையோ?(52) ஓ! காகமே, பறப்பதில் இப்போது நீ  பின்பற்றிய அசைவுவகையின் பெயரென்ன? உன் சிறகுகளாலும், அலகாலும் நீ மீண்டும் மீண்டும் நீரைத் தொடுகிறாயே.(53) ஓ! காகமே, அந்தப் பறக்கும் அசைவுகளில் நீ இப்போது எதைப் பின்பற்றுகிறாய்? வா, வா, ஓ! காகமே, வேகமாக வா, நான் உனக்காகவே காத்திருக்கிறேன்” என்றது.(54)

சல்லியன் {கர்ணனிடம்} தொடர்ந்தான், “ஓ! தீய ஆன்மா கொண்டவனே, மிகவும் பீடிக்கப்பட்டதும், தன் சிறகுகளாலும், அலகாலும் நீரைத் தொட்டுக் கொண்டிருந்ததும், அன்னத்தால் இவ்வாறு காணப்பட்டதுமான அந்தக் காகம், அதனிடம் {அன்னத்திடம்} பேசியது.(55) உண்மையில், அந்த நீர்ப்பரப்பின் எல்லையைக் காணாமல், களைத்து விழுந்து, பறக்கும் திறனை இழந்த காகமானது, அவ்வன்னத்திடம், “காகங்களாகிய நாங்கள், கா, கா எனக் கரைந்து கொண்டு அங்குமிங்கும் திரிந்து கொண்டிருப்போம். ஓ! அன்னமே, என் உயிர் மூச்சு உன் கரங்களில் இருக்கிறது, என் பாதுகாப்பை உன்னிடம் நான் நாடுகிறேன். ஓ! என்னைக் கடற்கரைக்கு அழைத்துச் செல்வாயாக” என்றது.(57) மிகவும் பீடிக்கப்பட்டுத் தன் சிறகுகளாலும், அலகாலும் பெருங்கடலைத் தொட்டுக் கொண்டிருந்த அந்தக் காகம், மிகவும் களைத்துப் போயத் திடீரெனக் கீழே விழுந்தது.(58) கவலை கொண்ட இதயத்துடன், பெருங்கடலின் நீரில் அது விழுவதைக் கண்ட அன்னமானது, மரணத் தருவாயில் இருந்த அந்தக் காகத்திடம், “ஓ! காகமே, தற்புகழ்ச்சியுடன் நீ  சொன்னதென்ன என்பதை நினைவுகூர்வாயாக. நூற்றொரு வெவ்வேறு வகைகளில் வானத்தில் பறப்பேன் என்பதே உன் வார்த்தைகளாக இருந்தன. எனவே, நூறு வெவ்வேறு வகைகளில் பறப்பவனும், என்னைவிட மேன்மையானவனுமான நீ, ஐயோ, ஏன் களைத்துப் போய்ப் பெருங்கடலில் விழுந்தாய்?” என்றது.(61)

பலவீனமடைந்த அந்தக் காகமானது, மேல்நோக்கி அன்னத்தின் மீது தன் கண்களைச் செலுத்தி, அதை மனநிறைவு கொள்ளச் செய்ய முயற்சிக்கும் வகையில்,(62) “பிறருடைய உணவுகளில் எஞ்சியதை உண்டு, அதனால் செருக்கடைந்த நான், ஓ! அன்னமே, கருடனுக்கு இணையானவனாக என்னைக் கருதிக் கொண்டு, அனைத்துக் காகங்களையும், பிற பறவைகள் பலவற்றையும் அலட்சியம் செய்தேன் {அவமதித்தேன்}.(63) எனினும், இப்போது என் உயிர் மூச்சை உன் கரத்தில் இருக்கிறது, உன் பாதுகாப்பை நான் வேண்டுகிறேன். ஓ!, என்னை ஏதேனும் ஒரு தீவின் கரைக்குக் கொண்டு செல்வாயாக.(64) ஓ! அன்னமே, ஓ! தலைவா, நான் என் நாட்டுக்குப் பாதுகாப்பாகத் திரும்ப முடிந்தால், அதன் பிறகு எப்போதும் ஒருவரையும் அலட்சியம் செய்ய {அவமதிக்க} மாட்டேன். ஓ!, இந்தப் பேரிடரில் இருந்து என்னைக் காப்பாயாக” என்று மறுமொழி கூறியது.(65)

இவ்வாறு சொன்னதும், கவலையுடன் அழுது கொண்டிருந்ததும், உணர்வுகளை இழந்ததும், “கா, கா” எனக் கரைந்து கொண்டே,(66) பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருந்ததும், நீரில் நனைந்திருந்திருந்ததும், காணச் சகியா நிலையில் இருந்ததும், அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்ததுமான அதனிடம் {காகத்திடம்}, மேலும் ஒரு வார்த்தையும் சொல்லாத அந்த அன்னமானது, தன் கால்களால் அதனைப் பற்றி இழுத்து, மெதுவாகத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டது.(67) உணர்விழந்த அந்தக் காகத்தைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்ட அன்னமானது, அவ்விரண்டும் ஒருவரையொருவர் அறைகூவியழைத்தபடி எங்கிருந்து பறந்த வந்தனவோ, அதே தீவுக்கு வேகமாகத் திரும்பியது.(68) உலர்ந்த தரையில் அவ்வானுலாவியை {காக்கையைக்}கிடத்தி, அதற்கு ஆறுதலளித்த அவ்வன்னம், மனோ வேகத்துடன் தான் விரும்பிய பகுதிக்குச் சென்றது. பிறரின் உணவுகளில் எஞ்சியவற்றை உண்டு வந்த அந்தக் காகமானது, இவ்வாறே அந்த அன்னத்தால் வெல்லப்பட்டது. பிறகு அந்தக் காகம், தன் வலிமை, சக்தி ஆகியவற்றில் இருந்த செருக்கைத் துறந்து, அமைதியான வாழ்வையே மேற்கொண்டது.(69,70)

உண்மையில், அந்த வைசியப் பிள்ளைகளின் உணவுகளில் எஞ்சியதை உண்டு வளர்ந்த அந்தக் காகமானது, தனக்கு இணையானவர்களையும், மேன்மையானவர்களையும் அலட்சியம் செய்ததை {அவமதித்தைப்} போலவே, ஓ! கர்ணா, திருதராஷ்டிரன் மகன்களுடைய உணவில் எஞ்சியவற்றை {எச்சிலுணவை} உண்டு வளர்ந்த நீ, உனக்கு இணையானவர்கள் மற்றும் மேன்மையானவர்கள் அனைவரையும் அவமதிக்கிறாய்.(71) விராடனின் நகரத்தில், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், பீஷ்மர், மற்றும் பிற கௌரவர்களின் பாதுகாப்பு என்ற ஆதாயம் உனக்கு இருந்தபோதே, பார்த்தனை {அர்ஜுனனை} நீ ஏன் கொல்லவில்லை?(72) சிங்கத்தால் வீழ்த்தப்பட்ட நரிக்கூட்டத்தைப் போல, அப்போது, பெரும் அழிவை ஏற்படுத்தியவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனனால்  வீழ்த்தப்பட்ட போது, உங்கள் ஆற்றல் எங்கே சென்றது?(73) குரு வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} உன் தம்பி கொல்லப்படுவதைக் கண்டதும், முதலில் தப்பி ஓடியவன் நீயே.(74) துவைதத் தடாகத்தின் வனங்களில் {துவைத வனத்தில்}, ஓ! கர்ணா, கந்தர்வர்களால் நீங்கள் தாக்கப்பட்டபோது, குருக்கள் அனைவரையும் கைவிட்டுவிட்டு முதலில் தப்பி ஓடியவன் நீயே.(75) பேரழிவை ஏற்படுத்தியவர்களான சித்திரசேனன் தலைமையிலான கந்தவர்கள் போரில் வெற்றியடைந்த பிறகு, ஓ! கர்ணா, துரியோதனனையும், அவனது மனைவியையும் மீட்டவன் பார்த்தனே {அர்ஜுனனே}.(76)

முன்பு, ஓ! கர்ணா, ராமரேகூட {பரசுராமரே கூட}, (குரு) சபையில், மன்னர்கள் முன்னிலையில், பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கேசவனின் {கிருஷ்ணனின்} ஆற்றலைக் குறித்துப் பேசியிருக்கிறார்.(77) அந்தக் கிருஷ்ணர்கள் இருவரும் கொல்லப்பட முடியாதவர்கள் என்று மன்னர்கள் அனைவரின் முன்னிலையில், துரோணரும், பீஷ்மரும் பேசிய வார்த்தைகளை நீ அடிக்கடி கேட்டாய்.(78) அனைத்து உயிரினங்களை விடவும் மேன்மையானவனாக  பிராமணன் இருப்பதைப் போல, உன்னைவிட மேன்மையானவனாக அர்ஜுனன் இருப்பவற்றில் சிலவற்றையே உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(79) வசுதேவரின் மகனும் {வாசுதேவ கிருஷ்ணனும்}, குந்தி மற்றும் பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்} முதன்மையான தேரில் இருப்பதை நீ விரைவில் காண்பாய்.(80)

(அந்தக் கதையில்) காகமானது, நுண்ணறிவுடன் செயல்பட்டு, அன்னத்தின் பாதுகாப்பை நாடியதைப் போல, நீயும் விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} மற்றும் பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரின் பாதுகாப்பை நாடுவாயாக.(81) பெரும் ஆற்றலைக் கொண்டவர்களான வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் காணும்போது, ஓ! கர்ணா, இவ்வாறான பேச்சுகளை நீ பேசமாட்டாய்.(82) பார்த்தன் {அர்ஜுனன்}, நூற்றுக்கணக்கான கணைகளால் உன் செருக்கைத் தணிக்கும்போது, உனக்கும் தனஞ்சயனுக்குமான {அர்ஜுனனுக்குமான} வேறுபாட்டை நீ காண்பாய்.(83) மனிதர்களில் சிறந்தவர்களான அவ்விருவரும், தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களின் மத்தியிலும் கொண்டாடப்படுபவர்கள் ஆவர். விட்டில் பூச்சியைப் போன்றவனான நீ, மடமையினால் பிரகாசமிக்க அந்த ஒளிக்கோள்கள் இரண்டையும் அலட்சியமாக நினைக்காதே.(84) சூரியனையும், சந்திரனையும் போன்ற கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் தங்கள் பிரகாசத்திற்காகவே {புகழுக்காகவே} {அவ்வாறு} கொண்டாடப்படுகிறார்கள். எனினும், நீ மனிதர்களில் விட்டிற்பூச்சியைப் போன்றவனே.(85) ஓ! கல்விமானே, ஓ! சூதனின் மகனே {கர்ணா}, அச்யுதனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் அலட்சியமாக எண்ணாதே. உயர் ஆன்மா கொண்ட அவ்விருவரும் மனிதர்களில் சிங்கங்களாவர். இவ்வாறான தற்புகழ்ச்சிகளில் ஈடுபடாதே” {என்றான் சல்லியன்}.(86)

கர்ணன் பெற்ற சாபங்கள்! – கர்ண பர்வம் பகுதி – 42-பரசுராமரிடம் தான் பெற்ற சாபத்தைச் சொன்ன கர்ணன்; பரசுராமர் கர்ணனின் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தது; புழுவாக வந்து கர்ணனின் தொடையைத் துளைத்த இந்திரன்; நடந்ததை அறிந்த பரசுராமர்; உண்மையைச் சொன்ன கர்ணன்; பரசுராமரின் சாபம்; நண்பன் மற்றும் எதிரிக்கிடையிலான வேறுபாட்டைச் சல்லியனுக்குச் சொன்ன கர்ணன் அவனை நிந்திப்பது; யாரிடமும் அஞ்சாத தான், ஒரு பிராமணரின் சாபத்திற்கு அஞ்சுவதாகச் சொன்ன கர்ணன்; ஹோமப்பசுவின் கன்றைக் கொன்ற கர்ணன்; பிராமணரின் சாபம்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதிரதனின் உயர் ஆன்ம மகன் {கர்ணன்}, நம்பிக்கையே இல்லாமல் மத்ரர்களின் ஆட்சியாளனுடைய {சல்லியனுடைய} இவ்வார்த்தைகளைக் கேட்ட பிறகு, அந்தச் சல்லியனிடம், “வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனைக் குறித்தது நான் நன்கு அறிந்ததே.(1) தேர்களைச் செலுத்துவதில் சௌரியின் {கிருஷ்ணனின்} திறன், பாண்டுவின் மகனான அர்ஜுனனுடைய உயர்ந்த ஆயுதங்களின் வல்லமை ஆகியவை இந்நேரத்தில் நான் நன்கறிந்தவையே. எனினும், ஓ! சல்லியரே, அக்காரியங்களின் விழிச் சான்று உம்மிடம் இல்லை {அவற்றை நீர் கண்டதில்லை}.(2) ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான அந்தக் கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} இருவரிடமும் நான் அச்சமின்றிப் போரிடுவேன். எனினும், மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரான ராமரின் {பரசுராமரின்} சாபம், இன்று என்னைப் பெரிதும் துன்புறுத்துகிறது.(3) முன்பொரு சமயம், ராமரிடம் {பரசுராமரிடம்} இருந்து தெய்வீக ஆயுதங்களைப் பெற விரும்பி ஒரு பிராமணனின் வேடத்தில் அவருடன் நான் வசித்து வந்தேன். அந்தச் சந்தர்ப்பத்தில், ஓ! சல்லியரே, தேவர்களின் தலைவன் {இந்திரன்}, ஒரு புழுவின் கடும் வடிவத்தை ஏற்று என் தொடையை அணுகி அதைத் துளைத்து ஒரு தடையை உண்டாக்கினான்.(4) என் ஆசான் {பரசுராமர்}, எனது தொடையில் தலையை வைத்து உறங்கிக் கொண்டிருக்கையில், அதை {என் தொடையை} அணுகி அதைத் துளைக்கத் தொடங்கினான். என் தொடை துளைக்கப்பட்டதன் விளைவால், என் உடலில் இருந்து அடர்த்தியான குருதி வெள்ளம் பாய்ந்தது.(5)என் ஆசானிடம் (அவரது உறக்கத்தினைக் கலைப்பதில்) கொண்ட அச்சத்தினால் நான் என் அங்கத்தை அசைக்காமல் இருந்தேன். எனினும் அந்தப் பிராமணர் விழித்துக் கொண்டதும் அங்கு நடந்ததைக் கண்டார். என் பொறுமையைக் கண்ட அவர் {பரசுராமர்}, என்னிடம் “நீ பிராமணனே அல்ல. நீ யார் என்பதை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக” என்றார்.(6) ஓ! சல்லியரே, நான் ஒரு சூதன் என்பதைச் சொல்லி அவரிடம் உண்மையைக் கூறினேன். என் வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெரும் தவசி, சினத்தால் இதயம் நிறைந்து, “ஓ! சூதா, வஞ்சகத்தின் விளைவால் நீ இவ்வாயுதத்தை அடைந்ததால், உன் மரணத்திற்கான காலம் வரும்போது, தேவையேற்படும் சமயத்தில் இஃது உன் நினைவில் தோன்றாது. பிராமணனாக இல்லாத ஒருவனிடம் நிச்சயம் பிரம்மன் வசிக்கமாட்டான்” என்று சபித்தார்[1].(8) கடுமையானதும், பயங்கரமானதுமான இந்தப் போரில் அந்தப் பெரும் ஆயுதத்தை {பிரம்மாயுதத்தைக்} நான் மறந்துவிட்டேன் [2].(9) ஓ! சல்லியரே, பாரதர்களுக்கு மத்தியில் சாதித்தவனும், பெருந்திறனுடன் தாக்குபவனும், அண்ட அழிவை ஏற்படுத்துபவனும், வலிமையாக நொறுக்குபவனுமான அந்த மிகப் பயங்கரமானவன் (அர்ஜுனன்), க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் பலரை எரித்துவிடுவான் என்றே நான் நினைக்கிறேன்.(10)எனினும், ஓ! சல்லியரே, கடும் வில்லாளியும், போர்வீரர்களில் முதன்மையானவனும், சுறுசுறுப்புடைய வீரனும், தாங்கிக் கொள்ள முடியாத சக்தியைக் கொண்டவனும், பயங்கரமானவனும், உறுதிமொழிகளைச் சாதித்த போர்வீரனும், பாண்டுவின் மகனுமான அந்தத் தனஞ்சயனை {அர்ஜுனனைப்} போரில் நான் கொல்வேன் என்பதை அறிவீராக.(11) எதிரிகளைப் பெருமளவில் அழிக்கவல்ல அந்த ஆயுதத்தை {பிரம்மாயுதத்தை} இன்று நான் என் காட்டுப்பாட்டில் (கட்டுப்பாட்டிலாவது) வைத்திருக்கிறேன்[3]. எதிரிகளை எரிப்பவனும், ஆயுதங்களில் சாதித்த வலிமைமிக்கப் போர்வீரனும், அளவிலா சக்தி கொண்ட கடும் வில்லாளியும், கொடுரமான, பயங்கரமான வீரனும், எதிரிகளைத் தடுப்பவனுமான தனஞ்சயனை {அர்ஜுனனைப்} போரில் நான் கொல்வேன்.(12) நீர்நிலைகள் அனைத்தின் தலைவனும், அளக்கமுடியாதவனுமான பெருங்கடலானவன் {சமுத்திரராஜன்}, எண்ணிலா உயிரினங்களை மூழ்கடிப்பதற்குக் கடும் மூர்க்கத்துடன் விரைகிறான். எனினும், கரைகள் அவனைப் பிடித்துத் தடுத்து விடுகின்றன.(13) இன்று, இவ்வுலகில், வில்லின் நாணை இழுப்பவர்கள் அனைவரிலும் முதன்மையான குந்தியின் மகன் {அர்ஜுனன்}, நல்ல சிறகுகளைக் கொண்டவையும், வீரர்களுக்கு அழிவை உண்டாக்குபவையும், அனைத்து அங்கங்களையும் ஊடுருவவல்லவையும், அவற்றில் எதுவும் பொய்க்காதவையுமான எண்ணிலா கணைகளை இடையறாமல் தொடுத்துக் கொண்டிருக்கும்போது, அவனோடு {அர்ஜுனனோடு} போரிடும் நான் அவனைத் தடுப்பேன்.(14) வலிமையிலும் வலிமைமிக்கவனும், உயர்ந்த ஆயுதங்களைக் கொண்ட போர்வீரனும், பெருங்கடலைப் போன்ற வீரனும், நெடுந்தொலைவை அடையக்கூடியவையும், கடுமையானவையுமான கணைகளையே அலைகளாகக் கொண்டவனுமான அவன் {அர்ஜுனன்} (பகை) மன்னர்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கும்போது, பெருங்கடலைத் தடுக்கும் கரையைப் போல, நான் இன்று அவனைத் தடுப்பேன்.(15)

நான் இன்று அவனோடு {அர்ஜுனனோடு} போரிடும்போது, வில் தரிக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் இணையேதும் இல்லாததும், ஒன்றுசேர்ந்திருக்கும் தேவாசுரர்களையே வெல்லவல்லதுமான அந்தக் கடும்போரைக் காண்பீராக.(16)

அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} பெருஞ் செருக்குடனே இருக்கிறான். போரிட விரும்பும் அவன், மனித சக்திக்கு அப்பாற்பட்ட தனது வலிமைமிக்க ஆயுதங்களுடன் என்னை அணுகுவான். போரில் என் ஆயுதங்களால் அவனுடைய ஆயுதங்களைக் கலங்கடிக்கும் நான், என் அற்புதக் கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனை} இன்று வீழ்த்துவேன்.(17)

கடுங்கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலத் தன் எதிரிகளை எரித்து, இருளையகற்றுபவனைப் போலவே தழலுடன் சுடர்விடும் நான் மேகத் திரள்களைப் போலவே, என் கணைகளால் தனஞ்சயனை {அர்ஜுனனை} இன்று முற்றாக மறைப்பேன்.(18)

பெரும் சக்தியைக் கொண்டதும், புகை கலந்ததும், உலகம் முழுவதையும் எரிக்கத் தயாராக இருப்பதைப் போலத் தெரிவதுமான தழல்களைக் கொண்ட சுடர்மிக்க நெருப்பை அணைக்கும் மேகங்களைப் போல நான் என் கணை மழையால் போரில் குந்தியின் மகனை அழிப்பேன்.(19) 

கடும் நஞ்சுமிக்கதும், பிடிபட மிகக் கடினமானதும், கூரிய நச்சுப்பற்களைக் கொண்டதும், சுடர்மிக்க நெருப்பைப் போன்றதும், கோபத்தால் எரிவதும், தன் எதிரிகளை எப்போதும் எரிப்பதுமான பயங்கரப் பாம்பான அந்தக் குந்தியின் மகனை {அர்ஜுனனை} என் அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} அசையாமல் தடுக்கப் போகிறேன்.(20)

வலிமைமிக்கவனும், அனைத்தையும் நொறுக்குபவனும், மூர்க்கமானவனும், தாக்கும் தேவனுமான வாயுவை அசையாமல் தடுக்கும் இமயத்தைப் போல நான் கோபக்காரனும், பழிவாங்குபவனுமான தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தடுப்பேன்.(21) 

உலகில் வில் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், எதிரிகள் அனைவரையும் சந்திக்கவல்லவனும், தேர்த்தடங்கள் அனைத்தையும் நன்கு அறிந்தவனும், போரிடுவதில் வீரனுமான தனஞ்சயனைப் போரில் நான் தடுப்பேன்.(22) 

வில் தரிக்கும் மனிதர்களில் இணையில்லாதவனும், மொத்த உலகத்தையும் வென்றவனுமான அவனுடன் {அர்ஜுனனுடன்} இன்று நான் போரிடுவேன்.(23)

காண்டவம் என்றழைக்கப்படும் நாட்டில் {காட்டில்} தேவர்கள் உட்பட அனைத்தை உயிரினங்களையும் வென்ற சவ்யசச்சினுடன் {அர்ஜுனனுடன்} என்னைத் தவிரத் தன்னுயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் வேறு எந்த மனிதன்தான் போரிடுவான் {போரிட விரும்புவான்}?(24) அர்ஜுனன் செருக்குடையவன்; அவனது ஆயுதங்களோ ஆழமாகத் தாக்குபவை; அவன் குதிரைகளை நன்கறிந்தவன்; பெரும் படைகளைக் கலங்கடிக்கவல்லவன்; அதிரதனாக அவன் கருதப்படுகிறான். இவ்வாறெல்லாம் இருந்தாலும், நான் இன்று என் கூரிய கணைகளால் அவனது {அர்ஜுனனது} உடலிலிருந்து தலையை அறுத்தெடுக்கப் போகிறேன்.(25)

ஓ! சல்லியரே, எப்போதும் மரணத்தையோ, வெற்றியையோ {மட்டுமே} என் முன்னால் கொள்ளும் நான், இன்று தனஞ்சயனோடு போரிடப்போகிறேன். அந்தகனுக்கு ஒப்பான அந்தப் பாண்டவனுடன் தனித்தேரில் போரிடக்கூடியவன் என்னைத் தவிர வேறு எவனுமில்லை.(26) க்ஷத்திரியர்களுடைய சபைகளின் மத்தியில் பல்குனனின் {அர்ஜுனனின்} ஆற்றலைக் குறித்து நானே மகிழ்ச்சியாகவே பேசுவேன். எனினும், மூடரும், மூட அறிவு கொண்டவருமான நீர் அர்ஜுனனின் ஆற்றலைக் குறித்து என்னிடம் ஏன் பேசுகிறீர்.(27) ஏற்பில்லா {இனிமையற்ற} செயல்களைச் செய்பவர் நீர். கொடூரராகவும், அற்பராகவும், பொறுமையற்றவருமான {மன்னிக்கும் இயல்பற்றவருமான} நீர், பொறுமை சாலிகளைச் சிறுமைபடுத்துகிறீர். உம்மைப் போன்ற நூறு நபர்களை என்னால் கொல்ல முடியும் என்றாலும், மன்னிக்கும் இயல்பிலான என் மனநிலையின் விளைவால், காலத்தின் உடனடித் தேவையைக் கருத்தில் கொண்டு உம்மை நான் மன்னிக்கிறேன்.(28) பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவர் நீர். பாண்டுவின் மகனுக்காக {அர்ஜுனனுக்காக}, ஏற்பில்லாத பலவற்றைச் சொல்லி ஒரு மூடனைப் போல என்னை ஏன் நீர் நிந்திக்கிறீர்? கோணல் மனம் கொண்ட நீர், நேர்மையான இதயம் கொண்ட என்னிடம் இவ்வார்த்தைகள் அனைத்தையும் சொன்னீர். நட்பு என்பது ஏழு எட்டுகள்[4] கொண்டதாகையால் நண்பனான {என்னைப் போன்ற} நண்பர்களுக்குத் தீங்கிழைக்கும் நீர் சபிக்கப்பட்டவராவீர்.(29) இப்போது {நாம்} கடந்து வரும் காலம் பயங்கரமானதாகும். துரியோதனனே நேராகப் போரிட வந்திருக்கிறான். அவனது நோக்கங்கள் நிறைவேற ஆவல் கொண்டவனாக நான் இருக்கிறேன். எனினும், (குரு மன்னனிடம்) எந்த நட்பும் இல்லாதவரைப் போலவே உமது செயல்பாடுகள் உம்மைக் காட்டுகின்றன.(30)

ஒருவனிடம் பற்றைக் காட்டுபவனும் {பாசம் கொண்டவனும்}, அவனை மகிழ்விப்பவனும், அவனைக் கௌரவிப்பவனும், அவனது இன்பங்களில் மகிழ்பவனுமான மற்றொருவனே நண்பன் எனப்படுகிறான். இந்தப் பண்புகள் அனைத்தையும் நான் கொண்டுள்ளேன், இவை யாவற்றையும் மன்னனும் {துரியோதனனும்} அறிவான் என்பதை நான் உமக்குச் சொல்லிக் கொள்கிறேன்.(31) மறுபுறம், நம்மை அழிப்பவனும், தண்டிப்பவனும், தன் ஆயுதங்களைக் கூராக்குபவனும், காயப்படுத்துபவனும், நம்மைப் பெருமூச்சு விடச் செய்பவனும், நம்மை உற்சாகமற்றவர்களாகச் செய்பவனும், பல்வேறு வழிகளில் நமக்குத் தீங்கிழைப்பவனுமான ஒருவன் எதிரி எனப்படுவான். இந்தப் பண்புகள் அனைத்தும் உம்மிடம் காணப்படுகின்றன, மேலும் நீரும் இவை யாவற்றையும் என்னிடம் காண்கின்றீர்[5].(32) துரியோதனனுக்காகவும், உமக்கு ஏற்புடையதைச் செய்வதற்காகவும், வெற்றிக்காகவும், எனக்காகவும், கடவுளுக்காகவும், மிகத் தீவிரமாக முயன்று பார்த்தனுடனும் {அர்ஜுனனுடனும்}, வாசுதேவனுடனும் {கிருஷ்ணனுடனும்} நான் போரிடுவேன். என் அருஞ்செயல்களை இன்று காண்பீராக.(33) என் சிறந்த ஆயுதங்களான பிரம்மாயுதத்தையும், பிற தெய்வீக ஆயுதங்களையும், மனித ஆயுதங்களையும் இன்று காண்பீராக. மதங்கொண்ட எதிராளியைக் கொல்லும் மற்றொரு மதங்கொண்ட யானையைப் போலவே, கடும் ஆற்றலைக் கொண்ட அந்த வீரனை {அர்ஜுனனை} நான் இன்று கொல்வேன்.(34) பிரம்மம் என்றழைக்கப்படும் அளவிலா சக்தி கொண்ட அந்த ஆயுதத்தை, என் வெற்றிக்காக இன்று பார்த்தன் மீது என் மனத்தாலேயே ஏவுவேன். இன்றைய போரில் என் தேர்ச்சக்கரங்கள் பூமிக்குள் புதையவில்லையென்றால், அந்த ஆயுதத்திடம் இருந்து அர்ஜுனனால் தப்ப இயலாது.(35) ஓ! சல்லியரே, தண்டம் தரித்து வரும் யமனிடமோ, சுருக்கு {பாசம்} தரித்து வரும் வருணனிடமோ, கதாயுததாரியாக வரும் குபேரனிடமோ, வஜ்ரதாரியாக வரும் வாசவனிடமோ {இந்திரனிடமோ}, என்னைக் கொல்வதற்காக அணுகும் வேறு எந்த எதிரியிடமோ நான் அச்சங்கொள்வதில்லை என்று நீர் அறிவீராக.(36,37) எனவே, நான் பார்த்தனிடமோ, ஜனார்த்தனனிடமோ {கிருஷ்ணனிடமோ} எந்த அச்சமும் கொள்ளவில்லை. மறுபுறம், அழிவுமிக்க இன்றைய போரில் நான் அந்த இருவருடனும் மோதுவேன்.(38)

ஒரு காலத்தில், விஜயம் என்றழைக்கப்படும் என் வில்லைக் கொண்டு ஆயுதங்களில் பயிற்சி எடுப்பதற்காகத் திரிந்து, ஓ! மன்னா {சல்லியரே}, பயங்கர வடிவங்களிலான கடுங்கணைகளை ஏவிக்கொண்டிருந்த போது, அந்தத் தனிமையான காட்டில் திரிந்து கொண்டிருந்த (ஒரு பிராமணரின்) ஹோமப் பசுவின் கன்றை அக்கணைகளில் ஒன்றால் கவனமில்லாமல் தாக்கி, என் விருப்பமில்லாமலேயே கொன்றுவிட்டேன். அப்போது அந்தப் பிராமணர் என்னிடம், “என் ஹோமப்பசுவின் கன்றை நீ உணர்வில்லாமல் கொன்றுவிட்டதால், போரிடுங்காலத்தில் உன் இதயத்திற்குள் அச்சம் நுழையும்போது, (உன் தேரின்) சக்கரம் பூமியில் புதைந்து போகட்டும்” என்று சொன்னார்.(41) பிராமணரின் இந்த வார்த்தைகளிலேயே நான் பெரும் அச்சமடைகிறேன். சந்திர குலத்தவரும், (பிற மக்களின்) இன்ப துன்பங்களுக்குத் தலைவர்களுமான இந்த மன்னர்கள்,(42) அந்தப் பிராமணருக்கு ஓராயிரம் பசுக்களையும், அறுநூறு காளை மாடுகளையும் கொடுக்க முன்வந்தனர். ஓ! சல்லியரே, ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, இத்தகு கொடையாலும் அந்தப் பிராமணர் மனநிறைவு கொள்ளவில்லை.(43) பிறகு நான் அவருக்குப் பெரிய தந்தங்களையுடைய எழுநூறு {700} யானைகளையும், பல்லாயிரக்கணக்கான அடிமைகளையும், அடிமைப்பெண்களையும் தருவதாகச் சொன்னேன். அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் அதிலும் மனம் நிறையவில்லை.(44) அடுத்ததாக, கருப்பு நிறமுள்ளவையும், வெண்ணிற கன்றைக் கொண்டவையுமான பதினான்காயிரம் {14000} பசுக்களைத் திரட்டினாலும், அந்தப் பிராமணர்களில் சிறந்தவரின் அருளை என்னால் அடைய முடியவில்லை.(45) ஆசைக்குகந்த பொருட்கள் அனைத்தாலும் நிறைந்த செழிப்புமிக்க மாளிகை ஒன்றை அவருக்கு உரிய வழிபாடுகளுடன் நான் கொடுக்க விரும்பினாலும், அந்தக் கொடையைப் பெற அவர் மறுத்துவிட்டார்.(46)

குற்றமிழைத்துவிட்டு, விடாப்பிடியாக அவரது மன்னிப்பை இரந்து கேட்டுக் கொண்டிருந்த என்னிடம் அந்தப் பிராமணர், “ஓ! சூதா, நான் சொன்னவை நடந்தே தீரும். அது வேறு வகையாக முடியாது. பொய்மையானது, உயிரினங்களை அழித்துவிடும், பாவமும் எனதாகும். எனவே, அறத்தைப் பேணிக்காப்பதற்காகவே, பொய்மை பேச நான் துணிவதில்லை.(47,48) பிராமணனின் ஆதாரவழிகளை மீண்டும் அழிக்காதே. என் பேச்சைப் பொய்யாக்க இவ்வுலகில் எவனும் கிடையாது. அவ்வார்த்தைகளை ஏற்றுக் கொள்வாயாக. அது (கன்றைக் கொன்ற பாவத்திற்கு) ஓர் ஈடாக {பரிகாரமாக} உனக்கு அமையும்” என்றார்.(49) உம்மால் கடிந்துரைக்கப்பட்டாலும், நட்பின் நிமித்தமாக நான் உமக்கு இவையாவையும் வெளிப்படுத்தினேன். இவ்வாறு கடிந்துரைக்கும் உம்மை நான் அறிவேன். இப்போது அமைதியாக இருந்து, நான் தற்சமயம் சொல்லப்போவதைக் கேட்பீராக” என்றான் {கர்ணன்}.(50)

சல்லியனை எச்சரித்த கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 43-சல்லியனை நிந்தித்த கர்ணன்; சல்லியனைக் கர்ணன் ஏன் கொல்லவில்லை என்பதற்கு அவன் சொன்ன காரணங்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, இவ்வாறு மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} மௌனமடையச் செய்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மீண்டும் இவ்வார்த்தைகளில் அவனிடம் {சல்லியனிடம்} பேசினான்:(1) “ஓ! சல்லியரே, உதாரணம் சொல்லும் {உவமை கதை} வழியில் என்னிடம் நீர் பேசியதற்கு மறுமொழியாக, உமது வார்த்தைகளால் நான் இந்தப் போரில் அச்சுறுத்தப்படப்பட முடியாதவன் என்பதையே உமக்குச் சொல்கிறேன்.(2) வாசவனுடன் {இந்திரனுடன்} கூடிய தேவர்கள் அனைவரும் என்னோடு போரிட்டாலும்கூட, நான் அச்சமேதும் அடைய மாட்டேன் எனும் போது, பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கேசவன் {கிருஷ்ணன்} ஆகியோரிடம் நான் அஞ்சுகிறேன் என்பது குறித்து என்ன சொல்வது?(3) வார்த்தைகளால் மட்டுமே அச்சுறுத்தப்பட இயலாதவனாக நான் இருக்கிறேன். ஓ! சல்லியரே, போரில் உம்மால் அச்சுறுத்தப்படத் தகுந்தவன் வேறு எவனோ (நான் அல்ல).(4) நீர் என்னிடம் கசப்பான வார்த்தைகள் பலவற்றைப் பேசியிருக்கிறீர். இழிந்தோரின் பலம் இங்கேயே இருக்கிறது. என் தகுதிகளைப் பேச இயலாத நீர், ஓ தீய இதயம் கொண்டவரே, கசப்பான காரியங்கள் பலவற்றையே பேசுகிறீர்.(5)

ஓ! மத்ரகரே {சல்லியரே}, கர்ணன் போரில் அஞ்சுவதற்காகப் பிறந்தவனல்லன். மறுபுறம், நான் வீரத்தை வெளிப்படுத்துவதற்காகவும், புகழை அடைவதற்காகவும் பிறந்தவனாவேன்.(6) உம்மிடம் நான் கொண்ட நட்பிற்காகவும், என் பற்றுக்காகவும் {பாசத்திற்காகவும்}, கூட்டாளியாக நீர் இருப்பதாலும் என இம்மூன்று காரணங்களாலேயே, ஓ சல்லியரே, நீர் இன்னும் உயிரோடு இருக்கிறீர்.(7) மன்னர் திருதராஷ்டிரருக்காக இப்போது செய்யப்படுவது முக்கியப் பணியாகும். ஓ! சல்லியரே, அப்பணி என்னைச் சார்ந்தே இருக்கிறது. அதன் காரணமாகவே இக்கணம் வரை நீர் வாழ்கிறீர்.(8) உம்மால் சொல்லப்படும் ஏற்பில்லா வார்த்தைகள் என்னால் மன்னிக்கப்படும் என்ற ஒப்பந்தம் என்னால் முன்பு ஏற்கப்பட்டது. அந்த ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஓ! மத்ரகரே இதன் காரணமாகவே நீர் வாழ்கிறீர்.(9) ஆயிரம் சல்லியர்கள் இல்லாமலும் என்னால் என் எதிரிகளை வெல்லமுடியும்.[1] ஒரு நண்பனுக்குக் காயமேற்படுத்துபவன் பாவம் நிறைந்தவனாவான். இதன் காரணமாகவே இப்போது நீர் வாழ்கிறீர்” என்றான் {கர்ணன்}.(10)

பாஹ்லீக நடைமுறைகளைப் பழித்த கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 44-திருதராஷ்டிரனுடைய அவையில் பல்வேறு நாடுகளைக் குறித்துப் பேசுகையில் பாஹ்லீக நாடு குறித்துப் சொல்லப்பட்டதைச் சல்லியனுக்குச் சொன்ன கர்ணன்; பாஹ்லீகர்களின் நடைமுறை மற்றும் ஒழுக்கங்களைக் குறித்தும், பாஹ்லீக மகளிரின் நடத்தைகள் மற்றும் குடிவெறியைக் குறித்தும் பழித்துப் பேசிய கர்ணன்; இழிகுணங்கள் கொண்ட அந்தப் பாஹ்லீகர்களுக்கு மத்தியில் எவனும் வாழலாமா என்று கேட்டது; பிராமணர்கள் மற்றும் ராட்சசப் பெண்மணிகள் பாஹ்லீகர்களைக் குறித்துச் சொன்னதை எடுத்துரைத்துச் சல்லியனைப் பழித்த கர்ணன்…

சல்லியன் {கர்ணனிடம்}, “ஓ! கர்ணா, எதிரி குறித்து நீ சொல்லும் இவை வெறும் பிதற்றல்களே! என்னைப் பொறுத்தவரை, ஆயிரம் கர்ணர்கள் இல்லாமலேயே நான் எதிரியைப் போரில் வெல்லவல்லவனாவேன்” என்றான்.(1)

சஞ்சயன் {கர்ணனனிடம்} தொடர்ந்தான், “கர்ணனிடம் இத்தகு இனிமையற்ற காரியங்களைச் சொன்னவனும், கடும் குணங்களைக் கொண்டவனுமான மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} அவன் {கர்ணன்}, இரு மடங்கு கசப்பான வார்த்தைகளால் மீண்டும் பேசினான்.(2)

கர்ணன் {சல்லியனிடம்}, “ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, திருதராஷ்டிரரின் முன்னிலையில உரைக்கப்படும்போது என்னால் கேட்கப்பட்ட இவற்றைக் கவனமான ஈடுபாட்டுடன் கேட்பீராக.(3) இனிமை நிறைந்த பல்வேறு நிலப்பகுதிகள், பழங்காலத்தின் மன்னர்கள் பலர் ஆகியவை குறித்துத் திருதராஷ்டிரரின் வசிப்பிடத்தில் பிராமணர்கள் உரை நிகழ்த்துவது வழக்கமாகும்.(4) பிராமணர்களில் முதன்மையானவரும், வயது முதிர்ந்தவருமான ஒருவர், பழங்கால வரலாறுகளைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, பாஹ்லீகர்கள் மற்றும் மத்ரகர்களைப் பழித்து இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(5)அறமற்றவர்களும், இமயம், கங்கை, சரஸ்வதி, யமுனை, குருக்ஷேத்திரம், சிந்து மற்றும் {அதன்} ஐந்து கிளை ஆறுகளைக்[1] கடந்து வாழ்பவர்களும், தூய்மையற்ற மக்களுமான பாஹ்லீகர்களை ஒருவன் எப்போதும் தவிர்க்க வேண்டும்.(6,7) பசுக்களைக் கொல்லும் களமும், போதையுண்டாக்கும் மதுவகைகளைச் சேமிப்பதற்கான இடமும் எப்போதும் (பாஹ்லீக) மன்னர்களுடைய வசிப்பிட நுழைவாயில்களின் அடையாளங்களாக விளங்கியதை நான் என் இளமைக்கால நாட்களில் இருந்து நினைவுகூர்கிறேன்[2].(8) மிகக் கமுக்கமான இயக்கம் {இரகசியமான காரியம்} ஒன்றிற்காக நான் பாஹ்லீகர்களுக்கு மத்தியில் வாழ்ந்திருக்கிறேன். அப்படி அங்கே தங்கியதன் விளைவாக நான் அந்த மக்களை நன்றாக அறிந்திருக்கிறேன்.(9)சாகலம் என்ற பெயரில் ஒரு நகரமும், ஆபகம் {நிம்நகை} என்ற பெயரில் {கீழ்நோக்கிப் பாயும்} ஓர் ஆறும், ஜார்த்திகர்கள் {சண்டாளர்கள்}[3] என்ற பெயரால் அறியப்படும் பாஹ்லீகர்களின் ஓர் இனக்குழுவும் அங்கே {பாஹ்லீக நாட்டில்} இருக்கின்றன. அம்மக்களின் நடைமுறைகள் மிகவும் கண்டிக்கத்தக்கனவாகும்.(10) வறுத்த வாற்கோதுமையை {பார்லியை} உண்டு, கௌடம் என்றழைக்கப்படும் மதுவை அவர்கள் குடிக்கிறார்கள். பூண்டுடன் {வேறு சில பதிப்புகளில் வெங்காயம் என்றிருக்கிறது} சேர்த்து மாட்டிறைச்சியையும் அவர்கள் உண்கிறார்கள். மேலும் அவர்கள், இறைச்சி கலந்த மாவு உருண்டைகளையும், பிறரிடம் இருந்து பெறப்பட்ட சோற்றையும்[4] உண்கிறார்கள். நல்லொழுக்கங்கள் எவையும் அவர்களிடம் கிடையாது[5].(11) அவர்களது மகளிர், மலர்மாலைகளும், கண்மையும் இல்லாமல், மதுவால் போதையுண்டு, ஆடைகளை இழந்து, சிரித்துக் கொண்டும், நகரங்களிலுள்ள வீடுகளின் சுவர்களுக்கு வெளியே ஆடிக் கொண்டும்,(12) கழுதை கத்துவது போலவும், ஒட்டகம் கதறுவதைப் போலவும் பல்வேறு வகைகளிலான ஆபாசப் பாடல்களைப் பாடிக் கொண்டும் இருப்பார்கள். புணர்ச்சியில் அவர்கள் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாதவர்களாகவும், வேறு காரியங்கள் அனைத்திலும் அவர்கள் விருப்பப்படியே செயல்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். குடிவெறியுடன் கூடிய அவர்கள், ஈர்க்கும் அடைமொழிகளால் {காமக்குறிப்பு வார்த்தைகளால்} ஒருவரையொருவர் அழைத்துக் கொள்வார்கள்.(13) தங்கள் கணவர்கள் மற்றும் தலைவர்களிடம் குடிபோதையின் வியப்பொலிகள் பலவற்றால் பேசுபவர்களும், பாஹ்லீகர்களில் வீழ்ந்துவிட்ட மகளிருமான அவர்கள், புனிதமான நாட்களிலும் கூட எக்கட்டுப்பாட்டையும் பின்பற்றாமல், ஆடிக் கொண்டே இருப்பார்கள்[6].(14)

தீய பாஹ்லீகர்களில் ஒருவனும், ஆணவம் கொண்ட அந்தப் பெண்களுக்கு மத்தியில் வாழ்ந்தவனும், சில நாட்கள் குருஜாங்கலத்தில் வாழ நேர்ந்தவனுமான ஒருவன், உற்சாகமற்ற இதயத்துடன்,(15) “ஐயோ, பருத்த அங்கங்களைக் கொண்டவளும், மெல்லிய கம்பளிகளை {ஆடைகளை} உடுத்தியவளுமான அந்த (பாஹ்லீகக்) கன்னிகை, கட்டிலுக்கு {படுக்கைக்குப்} போகும் இந்த வேளையில், இப்போது குருஜாங்கலத்தில் நாட்களைக் கடத்தி வரும் அவளது காதலனான என்னை நினைத்திருப்பாளே.(16) சத்லஜ் மற்றும் இனிமை நிறைந்த ஐராவதி ஆகியவற்றை {ஆறுகளைக்} கடந்து, என் சொந்த நாட்டை அடைந்து, தடித்த நுதலெலும்பை {நெற்றியைக்} கொண்டவர்களும், நெற்றியில் சிவந்த அரிதாரத்தாலான சுடர்மிக்க வளையங்களைக் கொண்டவர்களும், கண்களில் கருப்பு மையிலான இழைகளைக் கொண்டவர்களும், தங்கள் அழகிய வடிவங்களின் மேல் கம்பளிகள் மற்றும் தோல்களால் உடுத்தியிருப்பவர்களும், கீச்சுக் குரலால் பேசுபவர்களுமான அந்த அழகு நிறைந்த பெண்கள் மீது எப்போது நான் என் கண்களைச் செலுத்த போகிறேன்?(17,18) கழுதைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றின் கதறல்களைப் போலவே, இனிமையான மிருதங்கங்கள், ஆனகங்கள் மற்றும் சங்குகளின் இசைக்கு மத்தியில் போதையிலிருக்கும் அம்மகளிரின் தோழமையில் நான் எப்போது இன்புற்றிருக்கப் போகிறேன்?(19) வன்னி, பீலு மற்றும் மூங்கில் மரங்கள் அடர்ந்த காடுகளின் இனிய பாதைகளில், மோருடன் கூடிய பணியாரங்கள், மாவு உருண்டைகளை உண்ணும் அந்த மகளிருக்கு மத்தியில் நான் எப்போது இருக்கப்போகிறேன்?(20) தங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு, நெடுஞ்சாலைகளில் வரும் வழிப்போகர்களின் மீது பாய்ந்து, அவர்களது மேலங்கிகளையும், உடைகளையும் பறித்துக் கொண்டு, அவர்களை மீண்டும் மீண்டும் தாக்கும் என் சொந்த நாட்டு மக்களுக்கு மத்தியில் நான் எப்போது இருக்கப்போகிறேன்?” என்று வெடித்துச் சொல்கிறான் {பாடுகிறான்}.(21)

இந்த அளவுக்கு வீழ்ந்துவிட்டவர்களும், தீயவர்களும், நடைமுறைகள் தவறியவர்களுமான அந்தப் பாஹ்லீகர்களுக்கு மத்தியில் ஒரு கணமாவது விருப்பத்துடன் வசிக்க எந்த மனிதன்தான் இருக்கிறான்?(22) ஓ! சல்லியரே, எவரின் தகுதிகள் {புண்ணியம்} மற்றும் குறைகளில் {பாவங்களில்} ஆறில் ஒரு பங்கை நீர் கொண்டிருக்கிறீரோ, அந்தப் பாஹ்லீகர்களின் இழிவான நடத்தையை இவ்வாறே அந்தப் பிராமணர் விளக்கினார்.(23) இதைச் சொன்ன அந்த நல்ல பிராமணர், தீய பாஹ்லீகர்களைக் குறித்து மீண்டும் சொன்னதை நான் உமக்குத் திரும்பச் சொல்கிறேன். நான் சொல்வதைக் கேட்பீராக.(24) பெரியதும், மக்கள் தொகை அதிகம் கொண்டதுமான அந்தச் சாகல நகரத்தில், ஒவ்வொரு தேய்பிறை பதினான்காம் நாளிலும் {சதுர்த்தசியிலும்} ஒரு ராட்சசப் பெண், தனது துந்துபியின் {இசைக்கருவியின்} துணையுடன், “மாட்டிறைச்சியைக் கழுத்துவரை உண்டு, கௌட மதுவை உண்டு, பாஹ்லிகர்கள் குறித்த பாடல்களை நான் இனி எப்போது சாகல நகரத்தில் பாடப்போகிறேன்?(26), ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, பருத்த அங்கங்களைக் கொண்ட அந்தக் கன்னிகைகள் மற்றும் மகளிருடன் சேர்ந்து, பெரும் அளவிலான ஆட்டிறைச்சியையும், பெரும் அளவிலான பன்றி, மாடு, வளர்ப்புப்பறவை {கோழி}, கழுதைகள் மற்றும் ஒட்டங்கங்களின் இறைச்சியையும் நான் எப்போது கழுத்துவரை உண்ணப் போகிறேன்? ஆட்டிறைச்சி உண்ணாதவர்கள் வீணாகவே வாழ்கிறார்கள்” என்று பாடுவாள்.(27,28) ஓ! சல்லியரே, இவ்வாறே இளைஞர்களும், முதிர்ந்தவர்களுமான சாகலவாசிகள், மதுவால் போதையுற்று பாடிக் கதறுகின்றனர். இத்தகு மக்களுக்கு மத்தியில் எவ்வாறு அறமிருக்க முடியும்?(29)

இதையும் நீர் அறியவேண்டும். எனினும், குரு சபையில் மற்றுமொரு பிராமணர் எங்களிடம் சொன்னதை நான் மீண்டும் உமக்குச் சொல்கிறேன்:(30) “பீலு மரங்களைக் கொண்ட காடுகள் எங்கிருக்கின்றனவோ, தங்களில் ஆறாவதாகச் சிந்துவை {சிந்து நதியைக்} கொண்ட சதத்ரு, விபாசை, ஐராவதி, சந்திரபாகை, விதஸ்தை ஆகிய ஐந்து ஆறுகளும் எங்குப் பாய்கின்றனவோ, இமயத்தில் இருந்து அகன்று இருப்பவையான அந்தப் பகுதிகளில் உள்ள நாடுகள் ஆரட்டாகள்[7] என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. அப்பகுதிகள் அறமும், அறநெறிகளும் அற்று இருக்கின்றன. அங்கே எவரும் செல்லக்கூடாது.(31,32) தேவர்களும், பித்ருக்களும், பிராமணர்களும், வீழ்ந்துவிட்டவர்களிடமிருந்தோ, பிற வர்ணப் பெண்களிடம் சூத்ரர்களால் பெறப்பட்டவர்களிடமிருந்தோ, வேள்விகளைச் செய்யாதவர்களும், மிகவும் அறமற்றவர்களுமான பாஹ்லீகர்களிடமிருந்தோ கொடையேதும் பெறுவதில்லை” என்றார். கல்விமானான அந்தப் பிராமணர் அந்தக் குரு சபையில் மேலும்,(33,34) “பாஹ்லீகர்கள், அகன்ற வயிறுகளைக் கொண்ட மரப் பாத்திரங்களிலும், மண் பாத்திரங்களிலும், நாயால் நக்கப்பட்டவையும், அழுகிய வாற்கோதுமை மற்றும் பிற தானியங்களால் கறைபட்டவையுமான பாத்திரங்களிலும் எந்த வெறுப்புணர்வும் இல்லாமல் உண்கிறார்கள்.(35) பாஹ்லீகர்கள், ஆடு, ஒட்டகம் மற்றும் கழுதைகளின் பாலைக் குடித்து, பல்வேறு வகையான அந்தப் பால்களில் உண்டாகும் தயிரையும், பிற உணவுகளையும் உண்கிறார்கள்.(36) அந்தத் தரமிழந்த மக்கள், தங்களில் பல வேசி மகன்களையும் கொண்டுள்ளனர். அவர்கள் உண்ணாத உணவோ, பாலோ எதுவும் கிடையாது. அறியாமையில் மூழ்கியிருக்கும் ஆரட்டா-பாஹ்லீகர்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்களாவர்” என்றும் சொன்னார்.(37)ஓ! சல்லியரே இதையும் நீர் அறிய வேண்டும். எனினும், குரு சபையில் என்னிடம் பேசிய மற்றொரு பிராமணர் சொன்னதையும் நான் உமக்குச் சொல்ல வேண்டும். அவர்,(38) “யுகந்தரம் என்றழைக்கப்படும் நகரத்தில் பாலைக் குடித்துவிட்டு, அச்யுதஸ்தலம் என்ற இடத்தில் வசித்து, பூதிலயம் என்ற இடத்தில் நீராடிய ஒருவனால் எவ்வாறு சொர்க்கத்திற்குச் செல்ல முடியும்?[8](39) மலைகளில் இருந்து பாய்ந்தவுடன் எங்கே ஐந்து ஆறுகள் இருக்கின்றனவோ, அங்கே ஆரட்டா பாஹ்லீகர்களுக்கு மத்தியில், மதிப்பிற்குரிய எந்த மனிதனும் {எந்த ஆரியனும்} இரு நாட்களுக்குக்கூடத் தங்கக் கூடாது.(40) விபாசை ஆற்றில், பாஹி மற்றும் ஹீகன் என்ற பெயரில் இரு பிசாசங்கள் வசிக்கின்றன. அவை படைப்பாளனால் படைக்கப்பட்ட உயிரினங்கள் இல்லை. இவ்வளவு இழிந்த பிறவிகளைக் கொண்ட அவர்களால் {பாஹ்லீகர்களால்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகளை எவ்வாறு அறிய முடியும்?(41) காரஷ்கரர்கள், மாஹிஷகர்கள், கலிங்கர்கள், கேரளர்கள், கார்க்கோடகர்கள், வீரகர்கள் மற்றும் அறமற்ற வேறு மக்கள் ஆகியோரை ஒருவன் தவிர்க்க வேண்டும்[9]” என்றார்.(42)இவ்வாறே பெரும் இடையைக் கொண்ட ஒரு ராட்சசப் பெண்மணி, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் புனித நீராடுவதற்காக அந்நாட்டிற்குச் சென்று ஒரு நாளை கடக்க நேர்ந்த அந்தப் பிராமணரிடம் சொன்னாள்.(43) அந்தப் பகுதிகள் ஆரட்டாகள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. அங்கே வசிக்கும் மக்கள் பாஹ்லீகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மிகப் புராதனமான காலங்களில் இருந்தே பிராமணர்களில் இழிந்தோர் அங்கே வசித்து வருகின்றனர்.(44) அவர்கள் வேதமற்றவர்களாக, அறிவற்றவர்களாக, வேள்வியற்றவர்களாக, பிறரின் வேள்விகளில் துணை புரியும் சக்தி அற்றவர்களாகவே இருக்கின்றனர். வீழ்ந்துவிட்ட அவர்கள் அனைவரும், அவர்களில் பலரும், பிற மக்களின் பெண்களிடம் சூத்திரர்களால் பெறப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். தேவர்கள் அவர்களிடம் இருந்து எந்தக் கொடைகளையும் பெறுவதில்லை.(45) பிரஸ்தாலர்கள், மத்ரர்கள், காந்தாரர்கள், ஆரட்டாகள், காசர்கள் என்று அழைக்கப்படுவோர், வசாதிகள், சிந்துக்கள், சௌரவீரர்கள் ஆகியோர் அவர்களின் நடைமுறைகளுக்காகக் கிட்டத்தட்ட பழிக்கத்தக்கவர்களாகவே இருக்கின்றனர்” என்றான் {கர்ணன்}.(46)

மத்ரகர்களைப் பழித்த கல்மாஷபாதன்! – கர்ண பர்வம் பகுதி – 45-காந்தாரர்கள், மத்ரகர்கள் பாஹ்கீலகர்ளைக் குறித்து ஒரு பிராமணர் சொன்னதைச் சஞ்சயனுக்கு விளக்கிச் சொன்ன கர்ணன்; ஆரட்டர்கள் மீது விழுந்த, கற்புடைய பெண் ஒருத்தியின் சாபம்; கல்மாஷபாதன் என்ற ஒரு ராட்சசன் மத்ரகர்களைக் குறித்துச் சொன்னதைச் சல்லியனுக்குச் சொன்ன கர்ணன்; அதைத் தொடர்ந்து மேலும் மத்ரகர்களைப் பழித்த கர்ணன்; அனைவரையும் பழிக்கலாகாது எனக் கர்ணனுக்கு எடுத்துச் சொன்ன சல்லியன்; மேற்கொண்டு கர்ணனும், சல்லியனும் வாக்குவாதம் செய்யாதவாறு தடுத்த துரியோதனன்; கர்ணனும், சல்லியனும் போரிட ஒரே தேரில் புறப்பட்டது…

கர்ணன் {சல்லியனிடம்} தொடர்ந்தான், “ஓ! சல்லியரே, இவை யாவையும் நீர் அறிந்திருக்க வேண்டும். எனினும் நான் உமக்கு மீண்டும் சொல்கிறேன். நான் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்பீராக.(1) ஒரு காலத்தில் ஒரு பிராமணர் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார். எங்கள் நடைமுறைகளைக் கண்டு மிகவும் மனம் நிறைந்த அவர், எங்களிடம்,(2) “நான் நீண்ட காலம் இமயச் சிகரமொன்றில் தனியாக வசித்திருந்தேன். அப்போதிருந்தே பல்வேறு அறங்களைப் பின்பற்றும் பல்வேறு நாடுகளை நான் கண்டிருக்கிறேன்.(3) எனினும், ஒரு நாட்டின் மக்கள் அனைவரும் நேர்மையில்லாமல் செயல்படுவதை நான் கண்டதே இல்லை. நான் சந்தித்த அனைத்து குலத்தவரும் வேதங்களை அறிந்தோரால் அறிவிக்கப்பட்டதே உண்மையான அறம் என்று ஏற்கிறார்கள்.(4) பல்வேறு அறங்களைப் பின்பற்றும் பல்வேறு நாடுகளின் வழியாகப் பயணித்த நான், ஓ! மன்னா {கர்ணா}, இறுதியாகப் பாஹ்லீகர்களுக்கு மத்தியில் சென்றேன்.(5)

அங்கே முதலில் ஒருவன் பிராமணனாவதாகவும், பிறகு க்ஷத்திரியனாவதாகவும் நான் கேள்விப்பட்டேன். உண்மையில் அதன் பிறகே ஒரு பாஹ்லீகன், வைசியனாகவும், அதன்பிறகு, சூத்திரனாகவும், அதன் பிறகு நாவிதனாகிறான்.(6) நாவிதனாகும் அவன், பிறகு {அடுத்த பிறவியில்} மீண்டும் ஒரு பிராமணனாகிறான். பிராமண நிலைக்குத் திரும்பிய அவன், மீண்டும் ஓர் அடிமையாகவே ஆகிறான்.(7) ஒரே குடும்பத்தில், ஒருவன் பிராமணனானால்; மற்ற அனைவரும் அறத்தில் இருந்து விழுந்து, தாங்கள் விரும்பியபடி செயல்படுகின்றனர்.[1](8) அற்ப புத்தி கொண்ட காந்தாரர்கள், மத்ரகர்கள், பாஹ்லீகர்கள் ஆகியோர் இப்படியே இருக்கிறார்கள். உலகம் முழுவதும் பயணித்து வந்த நான், பாவம் நிறைந்த ஒழுங்கின்மைகளால் அறத்திற்கு அழிவை உண்டாக்கும், இந்நடைமுறைகளைக் குறித்துப் பாஹ்லீகர்களிடமே கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார்.(9)ஓ! சல்லியரே இவை யாவையும் நீர் அறிந்திருக்க வேண்டும். எனினும், பாஹ்லீகர்களைக் குறித்து மேலும் ஒருவர் என்னிடம் சொன்ன இழிவார்த்தைகளை நான் மீண்டும் சொல்கிறேன்.(10) பழங்காலத்தில் கற்புடைய ஒரு பெண் ஆரட்டா (ஆராட்டாவைச் சேர்ந்த) கள்வர்களால் கடத்திச் செல்லப்பட்டாள். பாவம் நிறைந்த வகையில் அவர்களால் அவள் களங்கப்படுத்தப்பட்டதும், அவர்களை அவள்,(11) “கணவனற்றவளும் {திருமணமாகாதவளும்}, ஆதரவற்றவளுமான ஒரு பெண்ணை நீங்கள் பாவகரமாகக் களங்கப்படுத்தியிருப்பதால், உங்கள் குடும்பங்களின் பெண்டிர் அனைவரும் கற்பற்று போகட்டும்.(12) மனிதர்களில் இழிந்தோரே, இந்தப் பயங்கரப் பாவத்தின் விளைவுகளில் இருந்து உங்களால் தப்பவே முடியாது” என்று சபித்தாள். ஓ! சல்லியரே, இதன் காரணமாகவே, ஆரட்டர்களுடைய சகோதரிகளின் மகன்கள் அவர்களுக்கு வாரிசுகளாகிறார்களே அன்றிச் சொந்த மகன்கள் அவர்களுடைய வாரிசுகளாவதில்லை[2].(13) பெரும் அருளைப் பெற்றவர்களான கௌரவர்கள், பாஞ்சாலர்கள், சால்வர்கள், {மத்ஸ்யர்கள்}, நைமிசர்கள், கோசலர்கள், காசப்பௌண்டிரர்கள் {காசர்கள், பௌண்டிரர்கள் [அல்லது காசிகள், அங்கர்கள்}, கலிங்கர்கள், மகதர்கள்,(14) சேதிகள் {சைத்யர்கள்} ஆகியோர் அனைவரும் நிலைத்த அறம் எதுவென அறிந்தவர்கள். பல்வேறு நாடுகளில் இருக்கக்கூடிய பொல்லாதவர்கள் கூட அறமெதுவென அறிகிறார்கள். எனினும், பாஹ்லீகர்கள் நீதியற்றே வாழ்கிறார்கள்.(15)

மத்ஸ்யர்களில் தொடங்கி, குரு, பாஞ்சால நாட்டுவாசிகளும், நைமிசவாசிகளும், மதிப்பிற்குரிய பிற மக்களும், அனைத்துக் குலங்களில் உள்ள பக்திமான்களும், அறத்தின் நிலைத்த உண்மைகளை அறிகிறார்கள். {ஆனால்}, மத்ரகர்கள் மற்றும் ஐந்து ஆறுகள் பாயும் நாட்டில் வசிக்கும் கோணல் மனம் கொண்டோரைக் குறித்து இவ்வாறு சொல்ல முடியாது.(16) ஓ! மன்னா {சல்லியரே}, இக்காரியங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டு, அறம் மற்றும் அறநெறியோடு தொடர்புடைய காரியங்கள் அனைத்திலும் சொற்களை இழந்த ஒருவனைப் போல உமது நாவை அடக்கிக் கொள்வீராக. நீரே அம்மக்களின் பாதுகாவலரும், மன்னரும் ஆவீர், எனவே, அவர்களது தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் குறைகள் {பாவங்கள்} ஆகியவற்றின் ஆறில் ஒரு பங்கைக் கொள்பவராகவும் நீரே இருக்கிறீர்.(17) அல்லது ஒருவேளை, நீர் அவர்களை எப்போதும் பாதுகாத்ததில்லை என்பதால், அவர்களது குறைகளில் {பாவங்களில்} மட்டுமே ஆறில் ஒரு பங்கைக் கொள்பவராவீர். பாதுகாக்கும் மன்னனே குடிமக்களின் தகுதிகளில் {புண்ணியங்களில்} பங்கு கொள்ள முடியும். நீர் அவர்களது தகுதிகளில் {புண்ணியங்களில்} பங்கு கொள்பவர் அல்ல.(18)

பழங்காலத்தில் நிலைத்த அறமானது அனைத்து நாடுகளிலும் போற்றி மதிக்கப்பட்ட போது, பெரும்பாட்டன் {பிரம்மன்}, ஐந்து ஆறுகளைக் கொண்ட நாட்டின் நடைமுறைகளை உற்று நோக்கி அவர்களை நிந்தித்தான்.(19) கிருத யுகத்திலேயே, பிறர் நிலத்தில் {பிறன் மனையிடம்} சூத்திரர்களால் பெறப்பட்டவர்களும், தீய செயல்பாடுகளைக் கொண்டவர்களும், வீழ்ந்துவிட்டவர்களுமான அம்மக்களின் நடைமுறைகளைப் பிரம்மன் நிந்தித்தான் என்றால், இப்போது {இக்காலத்தில் உள்ள} உலகின் மனிதர்களுக்கு நீர் என்ன சொல்வீர்?(20) இப்படியே பெரும்பாட்டன், ஐந்து ஆறுகள் பாயும் அந்த நாட்டின் நடைமுறைகளைக் கண்டித்தான். மக்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது, பெரும்பாட்டன் இம்மனிதர்களிடம் களங்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.(21) ஓ! சல்லியரே, இவை யாவையும் நீர் அறிய வேண்டும். எனினும், நான் இன்னும் உமக்குச் சொல்வேன். கல்மாஷபாதன் என்ற பெயருடைய ராட்சசன் ஒருவன், ஒரு குளத்தில் மூழ்கும்போது,(22) “பிச்சையெடுப்பது க்ஷத்திரியனுக்கு மாசு கற்பிக்கும், அதே போல நோன்புகளை நோற்காதிருப்பது பிராமணர்களுக்கு மாசு கற்பிக்கும். பாஹ்லீகர்கள் பூமியின் மாசாவார்கள், மத்ரப் பெண்டிர் மொத்த பெண்பாலினத்தின் மாசாவார்கள்” என்று சொன்னான்.(23) அப்படி ஓடையில் மூழ்கிய அந்த ராட்சசனை {கல்மாஷபாதனை} ஒரு மன்னன் காப்பாற்றினான். பின்னவனால் {மன்னனால்} கேட்கப்பட்ட முன்னவன் {ராட்சசன்}, இந்த {பின்வரும்} பதிலை சொன்னான். நான் சொல்வதைக் கேட்பீராக.(24) {அந்த ராட்சசன் கல்மாஷபாதன்}, “மனிதகுலத்தில் மிலேச்சர்கள் மாசடைந்தவர்கள்; மிலேச்சர்களைவிட எண்ணெய் விற்பவர்கள் மாசடைந்தவர்கள்; எண்ணெய்விற்பவர்களைவிட அலிகள் மாசடைந்தவர்கள்; தங்கள் வேள்விகளில், க்ஷத்திரியர்களைப் புரோகித வேலைக்கு வைத்துக் கொள்பவர்கள் அலிகளைவிட மாசடைந்தவர்களாவர்.(25) நீ என்னைக் கைவிடவில்லையென்றால், இறுதிப் பெயர்களைக் கொண்ட நபர்களை {க்ஷத்திரியர்களைத்} தங்கள் புரோகிதராகக் கொண்டோரும், மத்ரகர்களும் அடையும் பாபத்தை நீ அடைவாய்” என்றான் {கல்மாஷபாதன்}[3].(26)

ஒரு ராட்சசனாலோ, நஞ்சின் சக்தியாலோ கொல்லப்பட்டவனை மீட்கும் சூத்திரமாக இதையே அந்த ராட்சசன் அறிவித்தான். பின்வரும் வார்த்தைகள் அனைத்தும் மிக உண்மையே.(27) வேதங்களில் சொல்லப்பட்ட கடமைகளைப் பாஞ்சாலர்கள் பின்பற்றுகிறார்கள்; கௌரவர்கள் உண்மையை {சத்தியத்தைப்} பின்பற்றுகிறார்கள்; மத்ஸ்யர்களும், சூரசேனர்களும் வேள்விகளைச் செய்கிறார்கள்; கிழக்கத்தியர் சூத்திரர்களின் நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்; தெற்கத்தியர்கள் வீழ்ந்துவிட்டவர்களாவர்; பாஹ்லீகர்களோ திருடர்கள்; சௌராஷ்டிரர்கள் வேசி மகன்களாவர்[4].(28) நன்றிகெட்டத்தனம், திருட்டு, குடி, ஆசான்களின் மனைவியரோடு முறைபிறழ் புணர்ச்சியில் ஈடுபடுவது, கடுமொழி, பசுக்கொலை, இரவில் வீட்டைவிட்டு வெளியே காமத்தோடு திரிதல், பிறரின் ஆபரணங்களை அணிவது ஆகியவற்றால் தூய்மையற்றவர்களாக ஆனவர்களால் என்ன பாவத்தைத்தான் செய்ய முடியாது?(29)

பாஞ்சாலர்கள் தொடங்கி, கௌரவர்கள், நைமிசர்கள், மத்ஸ்யர்கள் ஆகிய இவர்கள் யாவரும், அறம் யாது என்பதை அறிவார்கள். வடக்கத்தியர்கள், அங்கர்கள், மகதர்கள் ஆகியோர் (அறநெறிகளை அறியவில்லையெனினும்) பக்திமான்களின் நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனர்.(30) அக்னியின் தலைமையிலான தேவர்கள் பலர் கிழக்கில் வசிக்கின்றனர். அறச்செயல்களைச் செய்யும் யமனால் ஆட்சி செய்யப்படும் தெற்கில் பித்ருக்கள் வசிக்கின்றனர்.(31) மேற்கில் இருக்கும் பிற தேவர்களை வலிமைமிக்க வருணன் மேற்பார்வை செய்கிறான். வடக்கானது தெய்வீக சோமனாலும், பிராமணர்களாலும் பாதுகாக்கப்படுகிறது.(32) ராட்சசர்களும், பிசாசங்களும் மலைகளில் சிறந்த இமயத்தைப் பாதுகாக்கின்றனர். ஓ! பெரும் மன்னா {சல்லியரே}, குஹ்யர்களோ, கந்தமாதன மலைகளைப் பாதுகாக்கின்றனர். ஜனார்த்தனன் என்றும் அழைக்கப்படும் விஷ்ணுவோ, உயிரினங்கள் அனைத்தையும் ஐயமறப் பாதுகாக்கிறான். (இவையாவும் இப்படி இருந்தாலும், பாஹ்லீகர்களோ தேவர்களில் தங்களைக் காக்க எவரையும் கொண்டிருக்கவில்லை).(33)

மகதர்கள் குறிப்புகளால் அறிந்து கொள்கிறார்கள்; கோசலர்கள், தாங்கள் காண்பவற்றால் அறிந்து கொள்கிறார்கள்; குருக்களும், பாஞ்சாலர்களும், பாதி உரைக்கப்பட்ட பேச்சில் அறிந்து கொள்கிறார்கள்; முழுமையாகப் பேசினாலும் சால்வர்களால் அறிந்து கொள்ள முடியாது.(34) சிபிக்களைப் போன்ற மலைவாசிகள் பெரும் மூடர்களாவர்[5]. யவனர்களோ அனைத்துமறிந்தவர்கள்; குறிப்பாகச் சூரர்களும் கிட்டத்தட்ட அதுபோலவே அனைத்துமறிந்தவர்களே.[6](35) பிற மக்களால் புரிந்து கொள்ள முடியாது; நன்மையான ஆலோசனைகளைச் சொன்னால் பாஹ்லீகர்கள் சினமடைவார்கள்; மத்ரகர்களைப் பொறுத்தவரை (மேலே குறிப்பிட்டவற்றில்) எவற்றிலும் அவர்கள் சேராதவர்கள். ஓ! சல்லியரே, நீரும் அவ்வாறானவரே. எனக்கு மறுமொழி சொல்லாதீர்.(36) மத்ரகர்கள் பூமியில் உள்ள அனைத்து நாடுகளைவிடவும் மாசடைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அதே போல மத்ர மகளிர் மொத்த பெண் பாலினத்திலேயே மாசடைந்தவர்களாக அழைக்கப்படுகிறார்கள்.(37) மது குடித்தல், தங்கள் ஆசான்களின் படுக்கையைக் களங்கப்படுத்தல், தவறான புணர்வால் உற்ற கருவை அழித்தல், அடுத்தவரின் செல்வத்தைக் களவாடுதல் ஆகியவற்றைத் தங்கள் நடைமுறைகளாகக் கொண்டவர்கள் செய்யாத பாவங்களே ஏதுமில்லை. ஆரட்டாகளுக்கும், ஐந்து ஆறுகள் பாயும் நாட்டின் மக்களுக்கும் ஐயோ.(38) இதை அறிந்து கொண்டு அமைதியடைவீராக. என்னை எதிர்க்க முயலாதீர். முதலில் உம்மைக் கொன்ற பிறகு, கேசவனையும், அர்ஜுனனையும் கொல்லும் நிலையை எனக்கு ஏற்படுத்திவிடாதீர்” {என்றான் கர்ணன்}.(39)

சல்லியன் {கர்ணனிடம்}, “ஓ! கர்ணா, {நோயினால் பீடிக்கப்பட்டு} துன்புறுவோரைக் கைவிடுதல், மனைவியையும், மக்களையும் விற்பனை செய்தல் ஆகியன நீ மன்னனாக இருக்கும் அங்கர்களுக்கு மத்தியில் பரவலாக நடைபெறுகிறது.(40) பீஷ்மர், உனது அந்தக் களங்களைச் சிந்தித்தே, ரதர்களையும், அதிரதர்களையும் பட்டியலிட்டபோது, உன் கோபத்தைத் தூண்டினார். கோபங்கொள்ளாதே.(41) பிராமணர்களை எங்கும் காணமுடியும்; க்ஷத்திரியர்களும் எங்கும் காணப்படுகிறார்கள்; ஓ! கர்ணா, அதே போலத்தான் வைசியர்களும், சூத்திரர்களும் காணப்படுகிறார்கள். கற்புநிறைந்தவர்களும், சிறந்த நோன்புகளைக் கொண்டோருமான மகளிருங்கூட எங்கும் காணப்படுகிறார்கள்.(42) வேறு மனிதர்களைக் கேலி பேசுவதிலும், ஒருவரையொருவர் காயப்படுத்துவதிலும் எங்கும் மனிதர்கள் மகிழ்ச்சியே அடைகிறார்கள். காமம்நிறைந்த மனிதர்களும் எங்கேயும் காணப்படவே செய்கிறார்கள்.(43) அனைவரும், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பிறரின் குறைகளைப் பேசுவதில் திறம்பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். எனினும், தன் குறைகளை எவரும் அறிவதில்லை, அல்லது அவற்றை அறிந்து வெட்கப்படுவதில்லை.(44) எங்கும் மன்னர்கள் தங்கள் தங்களுக்குரிய அறங்களில் அர்ப்பணிப்புடன் இருந்து, தீயவர்களைத் தண்டிக்கவே செய்கிறார்கள். நல்ல மனிதர்கள் எங்கும் காணப்படுகிறார்கள்.(45) ஓ! கர்ணா, ஒரு நாட்டின் மக்கள் அனைவரும் பாவம் நிறைந்தவர்களாக இருக்க முடியாது. தேவர்களின் நடத்தையையே விஞ்சக்கூடிய மனிதர்களும், பல நாடுகளில் இருக்கிறார்கள்” என்றான் {சல்லியன்}.(46)சஞ்சயன் {கர்ணனிடம்} தொடர்ந்தான், “அப்போது மன்னன் துரியோதனன், ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} நண்பனாகப் பேசியும், சல்லியனிடம் கரங்கூப்பி வேண்டிக் கொண்டும், கர்ணனையும், சல்லியனையும் (தங்களின் சொற்போரைத் தொடர்வதிலிருந்து) தடுத்து நிறுத்தினான்.(47) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது மகனால் அமைதிப்படுத்தப்பட்ட கர்ணன், வேறேதும் சொல்வதை நிறுத்திக் கொண்டான். சல்லியனும் எதிரியை எதிர்கொண்டான்.(48) ராதையின் மகன் சிரித்துக் கொண்டே, “செல்வீராக” என்று சல்லியனை மீண்டும் தூண்டினான்” {என்றான் சஞ்சயன்}.[7](49)

பதினேழாம் நாள் போர்த் தொடக்கம்! – கர்ண பர்வம் பகுதி – 46-தினேழாம் நாள் போர் தொடங்கியதும், பாண்டவர்களின் வியூகத்தைக் கண்டு எதிர்வியூகம் அமைத்த கர்ணன், யுதிஷ்டிரனைத் தாக்கி வீழ்த்தியதாகத் திருதராஷ்டிரனிடம் சொன்ன சஞ்சயன்; அர்ஜுனன் இருக்கும்போது கர்ணனால் எவ்வாறு யுதிஷ்டிரனைத் தாக்க முடிந்தது எனச் சஞ்சயனிடம் விசாரித்த திருதராஷ்டிரன்; வியூகங்களில் போர்வீரர்கள் ஏற்ற நிலைகளை வர்ணித்த சஞ்சயன்; அர்ஜனனிடம் பேசிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனுக்கு உறுதியளித்த அர்ஜுனன்; அர்ஜுனனின் தேரைக் கண்ட சல்லியன், அவனது திறனைக் குறித்தும், காணப்படும் தீய சகுனங்களைக் குறித்தும் கர்ணனிடம் சொன்னது; சல்லியனிடம் சம்சப்தகார்களால் மறைக்கப்பட்ட அர்ஜுனனைக் காட்டிய கர்ணன்; அர்ஜுனனை யாராலும் வெல்ல முடியாது என்று சொன்ன சல்லியன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பகைவரின் படைகள் அனைத்தையும் தடுக்கவல்லதும், திருஷ்டத்யும்னனால் அமைக்கப்பட்டதுமான பார்த்தர்களின் ஒப்பற்ற வியூகத்தைக் கண்ட கர்ணன்,(1) சிங்க முழக்கங்களைச் செய்தபடியும், தன் தேரில் உரத்த சடசடப்பொலியை எழுப்பியபடியும் சென்றான். மேலும் அவன் {கர்ணன்}, இசைக்கருவிகளின் உரத்த ஆரவாரத்தால் பூமியை நடுங்கச் செய்தான்.(2) போரில் எதிரிகளைத் தண்டிப்பவனான அந்த வீரன் சினத்தில் நடங்குவதாகத் தெரிந்தது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகளை எதிர் வியூகத்தில் முறையாக அணிவகுக்கச் செய்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்த வீரன் {கர்ணன்},(3) அசுரர் படையைக் கொன்ற மகவத்தை {இந்திரனைப்} போலப் பாண்டவப் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கினான். கணைகள் பலவற்றால் யுதிஷ்டிரனைத் தாக்கிய அவன், பாண்டுவின் அந்த மூத்த மகனைத் தன் வலப்புறத்தில் நிறுத்தினான்.”(4)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, திருஷ்டத்யும்னனின் தலைமையிலானவர்களும், பீமசேனனால் பாதுகாக்கப்பட்டவர்களும், தேவர்களாலேயே வெல்லப்பட முடியாதவர்களும், பெரும் வில்லாளிகளுமான அந்தப் பாண்டவர்கள் அனைவருக்கும் எதிராக ராதையின் மகன் {கர்ணன்} தன் படையை எவ்வாறு எதிர் வியூகத்தில் அணிவகுக்கச் செய்தான்?(5) ஓ! சஞ்சயா, நமது படையின் சிறகுகளிலும், சிறகுகளின் எல்லைகளிலும் நின்றவர் யாவர்? போர்வீரர்கள் எவ்வாறு முறையாகப் பிரிந்து நின்றனர்?(6) என் படையின் வியூகத்திற்கு எதிராகப் பாண்டுவின் மகன்கள் எவ்வாறு தங்கள் வியூகத்தை அமைத்தனர்? மகத்தானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் எவ்வாறு தொடங்கியது?(7) கர்ணன் யுதிஷ்டிரனை எதிர்த்துச் செல்கையில் பீபத்சு {அர்ஜுனன்} எங்கிருந்தான்? அர்ஜுனனின் முன்னிலையில் யுதிஷ்டிரனைத் தாக்குவதற்கு எவனால் முடியும்?(8) முன்பு காண்டவத்தில் அனைத்து உயிரினங்களையும் தனியனாக வென்ற அர்ஜுனனுடன், ராதையின் மகனை {கர்ணனைத்} தவிர உயிர்மீது விருப்பம் கொண்ட எவன் போரிடுவான்?” என்று கேட்டான்.(9)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வியூகங்கள் அமைக்கப்பட்டதையும், அர்ஜுனன் வந்த விதத்தையும், இருதரப்பினராலும் தங்கள் தங்களுக்குரிய மன்னர்கள் சூழ எவ்வாறு அந்தப் போர் நடத்தப்பட்டது என்பதையும் இப்போது கேட்பீராக.(10) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சரத்வானின் மகனான கிருபர், பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட மகதர்கள், சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் {உமது படையின்} வலது சிறகில் தங்கள் நிலைகளைக் கொண்டனர்.(11) இவர்களுக்கு வலப்புறத்தில், விட்டில் பூச்சிகளைப் போலப் பெரும் எண்ணிக்கையில் இருந்தவர்களும், பிசாசங்களைப் போன்ற கடும் தோற்றங்கொண்டவர்களும், அச்சமற்றவர்களுமான காந்தாரக் குதிரைவீரர்கள் பலர் மற்றும் வீழ்த்துவதற்குக் கடினமான மலைவாசிகள் பலர் ஆகியோரின் துணையுடன் சகுனி, வலிமைமிக்க உலூகன் ஆகியோர் நின்றிருந்தனர்.(12,13) போர்வெறிக் கொண்ட சம்சப்தகர்களின் {34,000} முப்பத்துநாலாயிரம் பின்வாங்காத தேர் வீரர்கள் அனைவரும், கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் கொல்ல விரும்பி, உமது மகன்களைத் தங்கள் மத்தியில் கொண்டு (கௌரவப் படையின்) இடப்புறத்தைப் பாதுகாத்தனர்.(14) அவர்களுக்கு இடப்புறத்தில், காம்போஜர்கள், சகர்கள், யவனர்கள் ஆகியோர் தங்கள் தேர்கள், குதிரைகள், காலாட்கள் துணையுடன் சூதன் மகனின் {கர்ணனின்} உத்தரவின் பேரில் அர்ஜுனனையும், வலிமைமிக்கக் கேசவனையும் {கிருஷ்ணனையும்} அறைகூவி அழைக்கும்படி நின்றுகொண்டிருந்தனர்.(15)

அந்தப் படையின் தலைமையில்,, கவசம் தரித்து, அங்கதங்கள் மற்றும் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கர்ணன், மத்திய பகுதியைப் பாதுகாப்பதற்காக அங்கே நின்றான்.(16) தன் கோபக்கார மகன்களால் ஆதரிக்கப்பட்டவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்த வீரன் {கர்ணன்}, தன் வில்லை மீண்டும் மீண்டும் வளைத்தபோது, அந்தப் படையின் தலைமையில் பிரகாசமாக ஒளிர்ந்தான்.(17) வலிமைமிக்கக் கரங்களையும், சூரியன், அல்லது நெருப்பின் பிரகாசத்தையும், பழுப்பு நிறக் கண்களையும், அழகிய பண்புகளையும் கொண்டவனும், படையின் பின்புறத்தில் நின்றவனுமான துச்சாசனன், பல துருப்புகள் சூழ யானையின் கழுத்தில் ஏறிவந்து, படிப்படியாகப் போரில் முன்னேறினான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னன் துரியோதனன், அழகிய குதிரைகளில் ஏறி வந்தவர்களும், அழகிய கவசங்களைப் பூண்டவர்களுமான தன் தம்பிகளின் பாதுகாப்போடு அவனுக்கு {துச்சாசனனுக்குப்} பின்னால் வந்தான்.(18,19) ஒன்று சேர்ந்திருந்தவர்களும், பெரும் சக்தி கொண்டவர்களுமான மத்ரகர்கள் மற்றும் கேகயர்களாலும் பாதுகாக்கப்பட்ட அந்த மன்னன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேவர்களால் சூழப்பட்ட நூறு வேள்விகளைச் செய்தவனை {இந்திரனைப்} போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(20)

அஸ்வத்தாமன் மற்றும் பிற வலிமைமிக்கத் தேர்வீரர்களில் முதன்மையானோரும், மிலேச்சர்களால் செலுத்தப்பட்டவையும், மேகங்களைப போல மதநீர் பெருக்குபவையும், எப்போதும் மதம்பிடித்தவையாகவே இருப்பவையுமான பல யானைகளும் அந்தத் தேர்ப்படையைப் பின்தொடர்ந்து சென்றன.(21) வெற்றிக் கொடிகளாலும், சுடர்மிக்க ஆயுதங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பெரிய உயிரினங்கள், அவற்றின் முதுகில் இருந்து போரிடுவதில் திறம்பெற்ற போர்வீரர்களால் செலுத்தப்பட்டு, மரங்கள் அடர்ந்த மலைகளைப் போல அழகாகத் தெரிந்தன.(22) துணிச்சல்மிக்கவர்களும், பின்வாங்காதர்வர்களும், கோடரிகள் மற்றும் வாள்களைத் தரித்தவர்களுமான போர்வீரர்களே அந்த யானைகளின் பாதுகாவலர்களானார்கள்.(23) குதிரைவீரர்கள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியவற்றால் கவர்ச்சிகரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த முதன்மையான வியூகம், தேவர்கள், அல்லது அசுரர்களின் வியூகத்தைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(24) போர் முறைகளை நன்கறிந்தவனான அதன் தலைவரால் பிருஹஸ்பதியின் திட்டப்படி அமைக்கபட்ட அந்த வியூகம், (முன்னேறிச் சென்ற போது) ஆடிக் கொண்டே செல்வதாகத் தெரிந்தது, மேலும் எதிரிகளின் இதயங்களில் அச்சம் நுழைந்தது.(25) மழைக்காலங்களில் எப்போதும் தோன்றும் மேகங்களைப் போல, போருக்காக ஏங்கியிருந்த காலாட்படைவீரர்கள், குதிரைவீரர்கள் மற்றும் தேர்வீரர்கள் ஆகியோரும், யானைகளும் அந்த வியூகத்தின் சிறகுகளில் இருந்தும், அவ்வியூகத்தின் எல்லைகளில் இருந்தும் வெளிப்படத் தொடங்கினர்.(26)

அப்போது மன்னன் யுதிஷ்டிரன், (பகைவரின்) படையின் தலைமையில் இருக்கும் கர்ணனைக் கண்டு, எதிரிகளைக் கொல்பவனும், உலகத்தின் வீரனுமான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(27) “ஓ! அர்ஜுனா, போரில் கர்ணனால் அமைக்கப்பட்ட வலிமைமிக்க வியூகத்தைப் பார். பகைவரின் படையானது, அதன் சிறகுகளிலும், சிறகின் எல்லைகளிலும் பிரகாசமாகத் தெரிகிறது.(28) பரந்து விரிந்திருக்கும் இந்தப் படையைக்கண்டு, அது நம்மை வென்றுவிடாத அளவுக்கான நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும்” {என்றான் யுதிஷ்டிரன்}. மன்னனால் {யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட அர்ஜுனன் கூப்பிய கரங்களோடு, “நீர் சொன்னதுபோலவே அனைத்தும் செய்யப்படும். வேறுவிதமாக ஆகாது.(30) ஓ! பாரதரே, எதனால் எதிரிக்கு அழிவு ஏற்படுமோ, அதை நான் செய்வேன். அவர்களது முதன்மையான வீரர்களைக் கொல்வதால், நான் அவர்களது அழிவைச் சாதிப்பேன்” என்றான்.(31)

யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, “அதே நோக்கோடு நீ ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்துச் செல்வாயாக, பீமசேனன் சுயோதனனை {துரியோதனனை} எதிர்த்துச் செல்லட்டும், நகுலன் விருஷசேனனை எதிர்த்தும், சகாதேவன் சுபலனின் மகனை {சகுனியை} எதிர்த்தும், சதாநீகன் துச்சாசனனை எதிர்த்தும், சிநிக்களில் காளையான அந்தச் சாத்யகி, ஹிருதிகள் மகனை {கிருதவர்மனை} எதிர்த்தும், பாண்டியன் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} எதிர்த்தும் செல்லட்டும். நான் கிருபருடன் போரிடுவேன்.(32,33) திரௌபதியின் மகன்களும், சிகண்டியும், எஞ்சிய தார்தராஷ்டிரர்களை எதிர்த்துச் செல்லட்டும். நமது படையின் பிற போர்வீரர்கள் நமது பிற எதிரிகளோடு மோதட்டும்” என்றான்.(34)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “நீதிமானான யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, தன் துருப்புகளிடம் (தேவையானதைச் செய்யச்சொல்லி) ஆணையிட்டும், படையின் தலைமையில் சென்றான்.(35) பிரம்மத்தில் இருந்து பிரகாசத்தை அடைந்தவனும், அண்டத்தின் தலைவனுமான அக்னி எந்தத் தேருக்குக் குதிரைகளாக ஆனானோ, பிரம்மத்தில் இருந்தே முதலில் தோன்றியதால், அது பிரம்மனுக்குச் சொந்தமானது எனத் தேவர்களால் எந்தத் தேர் அறியப்படுகிறதோ,(36) பழங்காலத்தில் பிரம்மன், இந்திரன், வருணன் ஆகியோரை ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து எந்தத் தேர் தாங்கியதோ, அந்த ஆதித் தேரிலேயே கேசவனும், அர்ஜுனனும் போருக்குச் செல்கிறார்கள்.(37)

அற்புதத் தன்மையைக் கொண்ட அந்தத் தேர் முன்னேறி வருவதைக் கண்ட சல்லியன், போரில் பெருஞ்சக்தி கொண்ட போர்வீரனான அதிரதன் மகனிடம் {கர்ணனிடம்} மீண்டும்,(38) “வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், கிருஷ்ணனைச் சாரதியாகக் கொண்டதும், செயலின் தவிர்க்கப்பட முடியாத கனியைப் போல {வினைப்பயனைப் போலத்} துருப்புகள் அனைத்தாலும் தடுக்கப்படமுடியாத வாகனமுமான அந்தத் தேர் அதோ வருகிறது. நீ யாரைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தாயோ அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, வழியில் தன் எதிரிகளைக் கொன்றபடியே அதோ வருகிறான்.(39) கேட்கப்படும் பெருமுழக்கங்கள் மேகங்களின் முழக்கத்தைப் போல ஆழமாக, மகத்தானதாகக் கேடப்படுவதால், அவர்கள் உயர் ஆன்மாக்களைக் கொண்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} தான் என்பதில் ஐயமில்லை.(40)

கூடாரம் போல ஆகாயத்தில் பரவும் புழுதிப்படலம் அதோ உயர்கிறது. ஓ! கர்ணா, அர்ஜுனனுடைய சக்கரங்களின் சுற்றளவால் ஆழமாக வெட்டப்பட்டு மொத்த பூமியும் நடுங்குவதைப் போலத் தெரிகிறது.(41) உன் படையின் இரு பக்கங்களிலும் கடுங்காற்று வீசிக் கொண்டிருக்கிறது. ஊனுண்ணும் விலங்குங்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன, மேலும் இவ்விலங்குகள் அச்சத்தையூட்டும் வகையில் கதறுகின்றன.(42) ஓ! கர்ணா, பயங்கரமானதும், தீமைக்குறியீடானதும், ஆவி {நீராவி} வடிவம் கொண்டதுமான கேது, மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையில் சூரியனை மறைத்தபடி தோன்றுகிறது[1].(43) வலிமைமிக்க ஓநாய்கள் பலவும், புலிகளும் சுற்றிலும் உள்ள பல்வேறு வகை விலங்குக் கூட்டங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காண்பாயாக.(44) பயங்கரமான கங்கங்களும், கழுகுகளும் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி ஆலோசனையில் ஈடுபடுவதைப் போல ஒன்றையொன்று நோக்கி அமர்ந்திருப்பதைக் காண்பாயாக.(45)

உன் தேரில் இணைக்கப்பட்டுள்ள வண்ணந்தோய்ந்த சாமரங்கள் அமைதியற்றுப் பறக்கின்றன. உன் கொடிமரமும் நடுங்குகிறது.(46) பருத்த பெரிய அங்கங்களைக் கொண்டவையும், பறக்கும் பறவைகளுக்கு ஒப்பான பெரும் வேகம் கொண்டவையுமான உன் அழகிய குதிரைகளும் நடுங்குவதைக் காண்பாயாக.(47) ஓ! கர்ணா, இந்தச் சகுனங்களால் மன்னர்கள் நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் நிலைத்த உறக்கம் கொள்வதற்காக உயிரையிழந்து தரையில் கிடப்பார்கள் என்பது உறுதி.(48) மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் சங்குகளின் உரத்த பெருமுழக்கம் கேட்கப்படுகிறது. ஓ! ராதையின் மகனே, பேரிகைகள் மற்றும் மிருதங்கங்களின் ஒலிகளும் அனைத்துப் பக்கங்களிலும் கேட்கப்படுகின்றன.(49) பல்வேறு வகைகளிலான கணைகளின் விஸ் ஒலிகளும், தேர்கள், குதிரைகள் மற்றும் மனிதர்களால் உண்டாக்கப்பட்டும் ஆரவாரங்களும் கேட்கப்படுகின்றன. ஓ! கர்ணா, உயர் ஆன்மப் போர்வீரர்களுடைய விற்களின் நாண்கயிறுகளால் உண்டாக்கப்படும் உரத்த நாணொலியையும் கேட்பாயாக. (50)

ஓ! கர்ணா, மணிவரிசைகளைக் கொண்டதும், தங்க நிலவுகள் மற்றும் விண்மீண்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான அர்ஜுனனின் அந்தக் கொடிகளைப் பார். திறன்மிக்கக் கலைஞர்களால் தங்கத்தில் சித்திர வேலைப்பாடு செய்யப்பட்டவையும், பல்வேறு வண்ணங்களில் இருப்பவையுமான அவை, காற்றில் அசையும்போது, மேகத்திரள்களில் உள்ள மின்னலின் கீற்றுகளைப் போல அர்ஜுனனின் தேரில் பிரகாசத்துடன் சுடர்விடுகின்றன.(51,52) காற்றில் அசைகையில் கூரிய ஒலிகளை உண்டாக்கும் (வேறு) கொடிகளையும் பார். ஓ! கர்ணா, தங்கள் வாகனங்களில் கொடியால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களுடன் கூடியவர்களான உயர் ஆன்மப் பாஞ்சாலர்களின் தேர்வீரர்கள், தெய்வீகத் தேர்களில் இருக்கும் தேவர்களைப் போலவே பிரகாசமாகத் தெரிகின்றனர்.(53) குந்தியின் வீரமகனும், தன் கொடிமரத்தில் முதன்மையான குரங்கைக் கொண்டவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, பகைவரை அழிப்பதற்காக முன்னேறி வருவதைப் பார்.(54) பார்த்தனின் {அர்ஜுனனின்} கொடிமரத்தின் உச்சியில், எதிரிகளின் அச்சங்களை அதிகப்படுத்துவதும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் (போர்வீரர்களின்) பார்வையை ஈர்ப்பதுமான அந்தப் பயங்கரக் குரங்குக் காணப்படுகிறது.(55)

நுண்ணறிவு கொண்ட கிருஷ்ணனின் சக்கரம், கதாயுதம், சாரங்கம் என்றழைக்கப்படும் வில், (பாஞ்சஜன்யம் என்றழைக்கப்படும்) சங்கு, மேலும் அவனது கௌஸ்து ரத்தினம் ஆகியன அவனில் மிக அழகாகத் தெரிகின்றன.(56) சாரங்கம் மற்றும் கதையுதம் தரித்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, காற்றின் வேகத்தைக் கொண்ட அந்த வெண்குதிரைகளைத் தூண்டியபடி வந்து கொண்டிருக்கிறான்.(57) சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வளைக்கப்படும் காண்டீவம் அதோ நாணொலிக்கிறது. அந்த வலிய கரங்களைக் கொண்ட வீரனால் ஏவப்படும் கூரிய கணைகள் அவனது எதிரிகளை அழிக்கின்றன.(58) முழு நிலவைப்போன்று அழகான முகங்களைக் கொண்டவையும், தாமிரவண்ணம் கொண்ட நீண்ட பெரிய கண்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான பின்வாங்காத மன்னர்களின் தலைகளால் பூமி விரவிக்கிடக்கிறது.(59) பரிகங்களைப் போலத் தெரிபவையும், ஆயுதங்களைப் பிடியில் {தம் கைப்பிடியில்} கொண்டவையும், சிறந்த நறுமணப் பொருட்களால் பூசப்பட்டவையும், உயர்த்திப் பிடித்த ஆயுதங்களுடன் போரில் திளைக்கும் போர்வீரர்களின் கரங்கள் அங்கே விழுந்து கொண்டிருக்கின்றன.(60)

கண்கள், நாவுகள், உள்ளுறுப்புகள் ஆகியன பிதுங்கிய குதிரைகள் தங்கள் சாரதிகளுடன் விழுகின்றன, விழுந்து உயிரையிழந்து பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கின்றன.(61) மலைச்சிகரங்களைப் போன்று பெரிய உயிரற்ற யானைகள், பார்த்தனால் கிழித்துச் சிதைத்துத் துளைக்கப்பட்டுப் பெரும் மலைகளைப் போலக் கீழே விழுகின்றன.(62) வானத்தில் மாறிக் கொண்டே இருக்கும் ஆவி வடிவங்களைப் போலத் தெரியும் அந்தத் தேர்கள், அவற்றின் அரச சாரதிகள் கொல்லப்பட்டு, சொர்க்கவாசிகளின் புண்ணியங்கள் தீர்ந்ததால் விழும் தெய்வீகத் தேர்களைப் போலக் கீழே விழுகின்றன.(63) பிடரி மயிர் கொண்ட சிங்கம் ஒன்றால் எண்ணற்ற கால்நடைக்கூட்டங்கள் கலங்கடிக்கப்படுவதைப் போல, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் மிகவும் கலங்கடிக்கப்படும் இந்தப் படையைப் பார்.(64) அதோ தாக்குவதற்காக முன்னேறிவரும் பாண்டவ வீரர்கள், போரில் ஈடுபட்டுவரும் மன்னர்களையும், உன் படையின் பெரும் எண்ணிக்கையிலான யானைகளையும், குதிரைகளையும், தேர்வீரர்கள் மற்றும் காலாட்படை வீரர்கள் ஆகியோரையும் கொல்கிறார்கள்.(65)

அதோ, மேகங்களால் மறைக்கப்படும் சூரியனைப் போலவே, (நண்பர்கள் மற்றும் எதிரிகளாலும், ஆயுதங்கள் மற்றும் புழுதியாலும்) மறைக்கப்பட்டிருக்கும் பார்த்தனைக் {அர்ஜுஅனனைக்} காண முடியவில்லை. அவனது கொடிமரம் மட்டுமே காணப்படுகிறது, அவனது வில்நாண்கயிற்றின் நாணொலி மட்டுமே கேட்கப்படுகிறது.(66) ஓ! கர்ணா, வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் சாரதியாகக் கொண்டவனும், போரில் தன் எதிரிகளைக் கொன்று வருபவனுமான அந்த வீரனை நீ இன்று உறுதியாகக் காண்பாய். நீ எவனைக் குறித்து விசாரித்தாயோ, அவனை நிச்சயம் நீ காண்பாய்.(67) ஓ! கர்ணா, மனிதர்களில் புலிகளும், கண்கள் சிவந்தவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகியோர் இருவரும் ஒரே தேரில் நிற்பதை நீ இன்று உறுதியாகக் காண்பாய்.(68) ஓ! ராதையின் மகனே {கர்ணா}, கேசவனைத் {கிருஷ்ணனைத்} தன் சாரதியாகவும், காண்டீவத்தைத் தன் வில்லாகவும் கொண்டவனைக் கொல்வதில் நீ வென்றுவிட்டால், நீயே எங்கள் மன்னனாவாய்.(69) சம்சப்தகர்கள் அறைகூவியதால் பார்த்தன் {அர்ஜுனன்} இப்போது அவர்களை எதிர்த்துச் செல்கிறான். அந்த வலிமைமிக்கப் போர்வீரன், போரில் தன் எதிரிகளுக்குப் பேரழிவை ஏற்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறான்” என்றான் {சல்லியன்}.(70)

இப்படிச் சொன்ன மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} கர்ணன் சினத்துடன், “கோபக்கார சம்சப்தகர்களால் அனைத்துப் பக்கங்களிலும் தாக்கப்படும் பார்த்தனைக் காண்பீராக.(71) மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போலப் பார்த்தனை இப்போது காணவில்லை. ஓ சல்லியரே, போர்வீரர்கள் எனும் பெருங்கடலுக்குள் மூழ்கிய அர்ஜுனன் அழியப்போவது உறுதி” என்றான்.(72)

சல்லியன், “நீரால் வருணனைக் கொல்பவனோ, எரிபொருளால் {விறகால்} நெருப்பைத் தணிப்பவனோ இங்கே எவன் இருக்கிறான்? காற்றைப் பிடிக்கவோ, பெருங்கடலைக் குடிக்கவோ இங்கே எவன் இருக்கிறான்?(73) பார்த்தனைப் பீடிக்குஞ்செயலும் அவ்வாறே என்றே நான் கருதுகிறேன். தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து தங்கள் தலைமையில் இந்திரனையே கொண்டு போரிட்டாலும், அர்ஜுனன் வெல்லப்பட முடியாதவனாவான்.(74) அல்லது, அவ்வார்த்தைகளை (பார்த்தனைக் கொல்லவல்ல உன் திறனைச்} சொல்லி நிறைவடைந்து, உன் மனத்தைச் சுமையைக் குறைத்துப் பாதிப்பை அடைவாயாக. பார்த்தனைப் போரில் வெற்றிக் கொள்ள முடியாது. உன் மனத்தில் கொண்டிருக்கும் வேறேதும் காரியத்தைச் சாதிப்பாயாக.(75)

எவன் இந்தப் பூமியைத் தன் இரு கரங்களால் தூக்குவானோ, எவன் தன் கோபத்தால் உயிரினங்கள் அனைத்தையும் எரிப்பானோ, எவன் தேவர்களைச் சொர்க்கத்தில் இருந்து வீசி எறியவல்லவனோ, அவனாலேயே அர்ஜுனனைப் போரில் வெல்ல முடியும்.(76) உழைப்பால் எப்போதும் களைப்படையாதவனும், பிரகாசத்தால் சுடர்விடுபவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், மற்றொரு மேருவைப் போல நிற்பவனும், குந்தியின் மற்றொரு வீர மகனுமான பீமனைக் காண்பாயாக.(77) எப்போதும் கோபம் தூண்டப்பட்டவனும், பழிதீர்க்க ஏங்கிக் கொண்டிருப்பவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தப் பீமன், போரில் வெற்றியடைய விரும்பியும், தன் காயங்கள் அனைத்தையும் நினைத்தபடியும் அங்கே நின்று கொண்டிருக்கிறான்.(78) பகை நகரங்களை அடக்குபவனும், போரில் எதிரிகளால் தடுக்கப்படக் கடினமானவனும், அறவோர்களில் முதன்மையானவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் அதோ நிற்கிறான்.(79) மனிதர்களில் புலிகளும், அசுவினி இரட்டையர்களும், வெல்லப்படமுடியாதவர்களும், உடன் பிறந்தவர்களுமான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும் அதோ நிற்கின்றனர்.(80)

பாஞ்சால இளவரசர்களின் குணங்களைக் கொண்ட அந்தக் கிருஷ்ணையின் ஐந்து மகன்களையும் அங்கே காணலாம். போரில் அர்ஜுனனுக்கு நிகரான அவர்கள் அனைவரும் போரிட விரும்பியே அங்கே நின்று கொண்டிருக்கின்றனர்.(81) செருக்கிலும் சக்தியிலும் பெருகுபவர்களும், திருஷ்டத்யும்னனின் தலைமையிலானவர்களும், பெரும் சக்தி கொண்ட வீரர்களுமான துருபதன் மகன்கள், அங்கே தங்கள் நிலையை ஏற்றிருக்கின்றனர்.(82) சாத்வதர்களில் முதன்மையானவனும், இந்திரனைப் போலத் தடுக்கப்பட முடியாதவனுமான சாத்யகி, போரிடும் விருப்பத்தால், அந்தகன் கோபத்தோடு அந்தகன் நம் கண்முன்னே வருவதைப் போல அதோ நம்மை எதிர்த்து வருகின்றான்” என்றான் {சல்லியன்}.(83) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவரும் ஒருவரோடொருவர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, கங்கை மற்றும் யமுனையின் ஊற்றுகளைப் போலக் கடும்போரில் இருபடைகளும் ஒன்று கலந்தன” {என்றான் சஞ்சயன்}[2].(84)

பேரழிவை உண்டாக்கிய கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 47-சம்சப்தகர்களை எதிர்த்துச் சென்ற அர்ஜுனன்; கர்ணனைப் பாதுகாத்த துரியோதனன்; பாஞ்சாலர்களுக்குப் பேரழிவை உண்டாக்கிய கர்ணன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “முறையாக அணிவகுக்கப்பட்ட அந்தப் படைகள் இரண்டும் போரிடுவதற்காக இவ்வாறு ஒன்றுகலந்த போது, ஓ!சஞ்சயா, பார்த்தன் {அர்ஜுனன்} சம்சப்தகர்களையும், கர்ணன் பாண்டவர்களையும் எவ்வாறு எதிர்த்தனர்?(1) உரைப்பதில் திறனுள்ளவனாக நீ இருப்பதால், போர் நிகழ்வுகளை எனக்குச் சொல்வாயாக. போரில் வீரர்களின் ஆற்றல்களைக் குறித்துக் கேட்பதில் நான் எப்போதும் முழு நிறைவையடைவதில்லை” என்று கேட்டான்.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அவ்வகையில் நின்றிருந்த பகைவரின் பரந்த படையை உற்று நோக்கிய அர்ஜுனன், உமது மகனின் {துரியோதனனின்} தீய கொள்கையின் {ஆலோசனைகளின்} விளைவால், தன் துருப்புகளை முறையான வடிவில் அணிவகுக்கச் செய்தான்.(3) குதிரைவீரர்கள், யானைகள், காலாட்படை வீரர்கள், தேர்கள் ஆகியவை நிறைந்ததும், திருஷ்டத்யும்னன் தலைமையிலானதுமான அந்தப் பரந்த பாண்டவப் படையானது, அப்போது மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(4) புறாக்களைப் போன்று வெண்மையான தன் குதிரைகளுடன் கூடியவனும், சூரியன் அல்லது சந்திரனுக்கு இணையான காந்தியைக் கொண்டவனும், வில் தரித்திருந்தவனுமான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, காலனே உடல் கொண்டு வந்ததைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(5) போரிடும் விருப்பத்துடன் கூடிய திரௌபதியின் மகன்கள், அந்தப் பார்ஷதனின் {திருஷ்டத்யும்னனின்} பக்கத்தில் நின்றிருந்தனர். அவர்கள் அனைவரும் சிறந்த கவசங்களைப் பூண்டவர்களாகவும், சிறந்த ஆயுதங்களைத் தரித்தவர்களாகவும், புலிகளின் ஆற்றலைக் கொண்டவர்களாகவும் இருந்தனர். ஒளிவீசும் உடல்களோடு கூடிய அவர்கள் சந்திரனோடு தோன்றும் விண்மீண்களைப் போலத் தங்கள் தாய்மாமனை {திருஷ்டத்யும்னனைப்} பின்தொடர்ந்தனர்.(6)

வியூகத்தில் நிற்கும் சம்சப்தகர்களைக் கண்ட அர்ஜுனன், கோபத்தால் தூண்டப்பட்டு, தன் வில்லான காண்டீவத்தை வளைத்தபடி அவர்களை எதிர்த்து விரைந்தான்.(7) அப்போது அர்ஜுனனைக் கொல்ல விரும்பிய சம்சப்தகர்கள், வெற்றியடைய உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டும், மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டும் பார்த்தனை எதிர்த்து விரைந்தனர்.(8) மனிதர்கள், குதிரைகள், மதங்கொண்ட யானைகள், தேர்கள் ஆகியவை நிறைந்ததும், வீரர்களைக் கொண்டதுமான அந்தத் துணிச்சல்மிக்கப் படையானது {சம்சப்தகப் படையானது}, மிக வேகமாக அர்ஜுனனைப் பீடிக்கத் தொடங்கியது.(9) கிரீடியுடனான {அர்ஜுனனுடனான} அவர்களது மோதல் மிகவும் மூர்க்கமாக இருந்தது. நாம் கேள்விப்பட்ட அர்ஜுனன் மற்றும் நிவாதகவசர்களுக்கு இடையில் நடந்ததற்கு ஒப்பாக அந்த மோதல் இருந்தது.(10)

தேர்கள், குதிரைகள், கொடிமரங்கள், யானைகள், போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலாட்படைவீரர்கள், கணைகள், விற்கள், வாள்கள், சக்கரங்கள், போர்க்கோடரிகள், ஆயுதங்களைப் பிடியில் கொண்டு உயர்த்தப்பட்ட கரங்கள் மற்றும் எதிரிகளின் தலைகளையும் பார்த்தன் ஆயிரமாயிரமாக அறுத்துத் தள்ளினான்.(11,12) போர்வீரர்களின் ஆழமான சுழலில் பார்த்தனின் {அர்ஜுனனின்} தேர் மூழ்கிப் போனதாகக் கருதிய சம்சப்தகர்கள், பெரும் முழக்கங்களைச் செய்தனர்.(13) எனினும், முன்னால் இருந்த தன் எதிரிகள் அனைவரையும் கொன்ற பார்த்தன், அதையும் தாண்டி நின்றவர்களையும் கொன்று, அதன் பிறகு, உயிருடன் கூடிய அனைத்து உயிரினங்களையும் கோபத்தால் கொல்லும் ருத்திரனைப் போலத் தனக்கு வலப்புறத்திலும், பின்புறத்தில் இருந்தோரையும் கொன்றான்.(14)

பாஞ்சாலர்கள், சேதிகள், சிருஞ்சயர்கள் ஆகியோருக்கும், உமது துருப்புகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதலானது மிக மூர்க்கமானதாக இருந்தது.(15) உற்சாகத்துடன் கூடியவையும், சினத்தால் நிறைந்தவையும், தேர்களின் அடர்த்தியான படையணிகளைத் தாக்கவல்லவையுமான துருப்புகளின் துணையுடன் கூடியவர்களும், போரில் வீழ்த்தப்படக் கடினமான வீரர்களுமான கிருபர், கிருதவர்மன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர், பெரும் துணிவைக் கொண்டவர்களான கோசலர்கள், காசிகள், மத்ஸ்யர்கள், காருஷர்கள், கைகேயர்கள், சூரசேனர்கள் ஆகியோர் அனைவருடனும் போரிட்டனர்.(16,17) பெரும் படுகொலைகள் நிறைந்ததும், உடல் உயிர் மற்றும் பாவங்களுக்கு அழிவை உண்டாக்குவதுமான அந்தப் போரானது, அதில் ஈடுபட்ட க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வீரர்களுக்குப் புகழ், சொர்க்கம் மற்றும் அறம் ஆகியவற்றை உண்டாக்குவதாக அமைந்தது.(18)

அதே வேளையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன் தம்பிகளுடன் கூடிய மன்னன் துரியோதனன், குரு வீரர்கள் பலராலும், வலிமைமிக்க மத்ரகத் தேர்வீரர்கள் பலராலும் ஆதரிக்கப்பட்டு, பாண்டவர்கள், பாஞ்சாலர்கள், சேதிகள் மற்றும் சாத்யகியுடன் போரிட்டுக் கொண்டிருந்த கர்ணனைப் பாதுகாத்தான்.(19,20) தன் கூரிய கணைகளால் அந்தப் பரந்த படைப்பிரிவையும், தேர்வீரர்களில் முதன்மையான பலரையும் அழித்த கர்ணன், யுதிஷ்டிரனைப் பீடிப்பதில் வென்றான்.(21) கவசங்கள், ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான எதிரிகளின் உடல்கள் ஆகியவற்றை வெட்டி, தன் எதிரிகளில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று, அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்து, அவர்களைப் பெரும்புகழ் ஈட்டச் செய்த கர்ணன், தன் நண்பர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கினான்.(22) இப்படியே, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுக்கு அழிவை உண்டாக்கியதும், குருக்களுக்கும், சிருஞ்சயர்களுக்கும் இடையில் நடந்ததுமான அந்தப் போரானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போருக்கு ஒப்பாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(23)

தடுக்கப்பட முடியாத கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 48-பாஞ்சாலர்களை எதிர்த்துச் சென்ற கர்ணன், பிரபத்ரகர்கள், பாஞ்சாலர்கள், மற்றும் சேதிகளைக் கொன்றது; கர்ணனின் மகனான பானுசேனனைக் கொன்ற பீமசேனன்; கௌரவர்களைப் பீடித்த பீமன்; கர்ணனின் மற்றொரு மகனான சுஷேணனுக்கும் நகுலசகாதேவர்களுக்கும் இடையில் நடந்த போர்; கர்ணனின் மற்றொரு மகனான விருஷசேனனைத் தேரற்றவனாக, ஆயுதமற்றவனாகச் செய்த சாத்யகி; விருஷசேனனைக் காத்த துச்சாசனன்; துச்சாசனனைத் தேரற்றவனாகச் செய்த சாத்யகி; பாண்டவ வீரர்களைக் கலங்கடித்த கர்ணன், தடுக்கப்பட முடியாதவனாக யுதிஷ்டிரனின் படைப்பிரிவை அடைந்தது; யுதிஷ்டிரனைத் தாக்கிய கர்ணன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “கர்ணன், ஓ! சஞ்சயா, பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில் ஊடுருவி, பேரழிவை ஏற்படுத்திய பிறகு, மன்னன் யுதிஷ்டிரனைத் தாக்கிப் பீடித்தது எவ்வாறு என்பதை எனக்குச் சொல்வாயாக.(1) கர்ணனைத் தடுத்த பார்த்தர்களில் முதன்மையான வீரர்கள் யாவர்? அதிரதன் மகன் {கர்ணன்}, யுதிஷ்டிரனைப் பீடிப்பதில் வெல்வதற்கு முன்னர், அவனால் நொறுக்கப்பட்ட வீரர்கள் யாவர்?” என்று கேட்டான்.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போருக்காக நின்றிருக்கும் திருஷ்டத்யும்னன் தலைமையிலான பார்த்தர்களைக் கண்டவனும், எதிரிகளை நொறுக்குபவனுமான கர்ணன், பாஞ்சாலர்களை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான்.(3) அதே போலவே, வெற்றியடைய ஏங்கிய பாஞ்சாலர்கள், மோதலுக்கு முன்னேறிக் கொண்டிருந்த அந்த உயர்ஆன்மப் போர்வீரனை {கர்ணனை} எதிர்த்து, கடலை நோக்கி விரையும் அன்னங்களைப் போல வேகமாக விரைந்தனர்.(4) அப்போது, எதிரொலியால் இதயத்தைத் துளைத்துவிடுவதைப் போல முழங்கிய ஆயிரக்கணக்கான சங்குகளின் முழக்கங்களும், உரத்த மணியோசை போன்ற ஆயிரம் பேரிகைகளின் கடுமொலிகளும் இருபடைகளிலும் எழுந்தன.(5) அங்கே எழுந்த பல்வேறு இசைக்கருவிகளின் ஒலியும், யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றால் உண்டான ஒலிகளும், வீரர்களின் சிங்க முழக்கங்களும் மிகுந்த அச்சமூட்டின.(6) மலைகள், மரங்கள், பெருங்கடல்கள் ஆகியவற்றுடன் கூடிய மொத்த பூமியும், காற்றால் விரட்டப்படும் மேகங்களால் மறைக்கப்பட்ட மொத்த வானமும், சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவற்றோடு சேர்ந்த மொத்த ஆகாயமும் அவ்வொலியால் நடுங்கியதாகத் தெரிந்தது.(7) அவ்வொலியைக் கேட்ட உயிரினங்கள் அனைத்தும் கலக்கமடைந்தன. அவற்றில் பலமற்ற சில இறந்தும் விழுந்தன.(8)

அப்போது, பெருங்கோபத்தால் தூண்டப்பட்ட கர்ணன், தன் ஆயுதங்களை வேகமாக அழைத்து, அசுரர்களின் படையைத் தாக்கும் மகவத்தை {இந்திரனைப்} போல, அந்தப் பாண்டவப் படையைத் தாக்கத் தொடங்கினான்.(9) பாண்டவப் படைக்குள் ஊடுருவி, தன் கணைகளை ஏவிய கர்ணன், பிரபத்ரகர்களில் எழுபத்தேழு முதன்மையான போர்வீரர்களைக் கொன்றான்.(10) பிறகு அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {கர்ணன்}, நல்ல சிறகுகளைக் கொண்ட இருபத்தைந்து கூரிய கணைகளால், இருபத்தைந்து பாஞ்சாலர்களையும் கொன்றான்.(11) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எதிரிகள் அனைவரின் உடல்களையும் துளைக்கவல்லவையுமான துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்} பலவற்றால் அந்த வீரன் {கர்ணன்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சேதிகளை {சைத்யர்களைக்} கொன்றான்.(12) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் மனிதசக்திக்கு அப்பாற்பட்ட அந்த அருஞ்செயல்களை அவன் {கர்ணன்} செய்து கொண்டிருந்த போது, பாஞ்சாலர்களின் பெருந்தேர்க்கூட்டங்கள் அவனை அனைத்துப் பக்கங்களிலும் விரைவாகச் சூழ்ந்து கொண்டன.(13) ஓ! பாரதரே, வைகர்த்தனன் என்றும், விருஷன் என்றும் வேறுபெயர்களில் அழைக்கப்பட்ட அந்தக் கர்ணன், தடுக்கப்பட முடியாத ஐந்து கணைகளைக் குறிபார்த்து, ஐந்து பாஞ்சால வீரர்களைக் கொன்றான்.(14) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் அவன் {கர்ணன்} கொன்ற அந்த ஐந்து பாஞ்சாலர்கள், பானுதேவன், சித்திரசேனன், சேனாபிந்து, தபனன், சூரசேனன் ஆகியோராவார்.(15)

அந்தப் பெரும்போரில் பாஞ்சால வீரர்கள் இவ்வாறு கணைகளால் கொல்லப்பட்ட போது, “ஓ” என்றும், “ஐயோ” என்றும் அந்தப் பாஞ்சாலப் படைக்கு மத்தியில் பெரும் கூச்சல்கள் கேட்டன.(16) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களில் பத்துத் தேர்வீரர்கள் கர்ணனைச் சூழ்ந்து கொண்டனர். கர்ணன் அவர்களையும் தன் கணைகளால் வேகமாகக் கொன்றான்.(17) கர்ணனின் தேர்ச்சக்கரங்களைப் பாதுகாத்தவர்களும், சுஷேணன், சத்யசேனன் என்ற பெயர்களைக் கொண்ட அவனது வெல்லப்பட முடியாத மகன்கள் இருவர், தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்துப் போரிடத் தொடங்கினர்.(18) கர்ணனின் மூத்த மகனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான விருஷசேனன், தன் தந்தையின் {கர்ணனின்} பின்புறத்தைப் பாதுகாத்து வந்தான்.(19)

அப்போது கவசம் தரித்தவர்களான திருஷ்டத்யும்னன், சாத்யகி, திரௌபதியின் ஐந்து மகன்கள், விருகோதரன் {பீமன்}, ஜனமேஜயன், சிகண்டி, பிரபத்ரகர்களில் முதன்மையான போர்வீரர்கள் பலர், சேதிகளில் {சைத்யர்களில்} பலர், கைகேயர்கள், பாஞ்சாலர்கள், இரட்டையர்கள் {நகுலனும், சகாதேவனும்}, மத்ஸ்யர்கள் ஆகியோர் தாக்குவதில் திறம்பெற்றவனான ராதையின் மகனைக் {கர்ணனைக்} கொல்ல விரும்பி, அவனை நோக்கி மூர்க்கமாக விரைந்தனர்.(20,21) அவன் {கர்ணன்} மீது பல்வேறு வகைகளிலான ஆயுதங்களையும், அடர்த்தியான கணைமாரியையும் பொழிந்த அவர்கள், மழைக்காலங்களில் மலைச்சாரல்களைப் பீடிக்கும் மேகங்களைப் போல அவனைப் பீடிக்கத் தொடங்கினர்.(22) தங்கள் தந்தையைக் காக்க விரும்பியவர்களும், திறன் மிகத் தாக்குபவர்களுமான கர்ணனின் மகன்கள் அனைவரும், உமது படையைச் சேர்ந்த இன்னும் பிற வீரர்களும் அந்த (பாண்டவ) வீரர்களைத் தடுத்தனர்.(23)

சுஷேணன், அகன்ற தலை கணையொன்றால் பீமசேனனின் வில்லை அறுத்து, ஏழு துணிக்கோல் கணைகளால் பீமனையும் துளைத்து, பெருமுழக்கம் செய்தான்.(24) பயங்கர ஆற்றலைக் கொண்ட விருகோதரன் {பீமன்}, மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்டு, விரைவாக அதற்கு நாணேற்றி, சுஷேணனின் வில்லை அறுத்தான்.(25) சினத்தால் தூண்டப்பட்டு (தன் தேரில்) நர்த்தனம் ஆடுபவனைப் போலத் தெரிந்த அவன் {பீமன்}, பத்து கணைகளால் சுஷேணனைத் தாக்கி, கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக எழுபது கூரிய கணைகளால் கர்ணனையும் துளைத்தான்.(26) பீமன், வேறு பத்து கணைகளால் குதிரைகள், சாரதி, ஆயுதங்கள், கொடிமரம் ஆகியவற்றைக் கொண்ட கர்ணனின் மற்றொரு மகனான பானுசேனனை, அவனது நண்பர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வீழ்த்தினான்.(27) சந்திரனைப் போன்ற அழகிய முகத்தைக் கொண்ட அந்த இளைஞனின் பார்வைக்குகந்த தலையானது, தண்டிலிருந்து கொய்யப்படும் தாமரையைப் போலக் கத்தி தலை கணை ஒன்றால் {க்ஷுரப்ரத்தால்} கொய்யப்பட்டது.(28) கர்ணனின் மகனை {பானுசேனனைக்} கொன்ற பீமன் , மீண்டும் உமது துருப்புகளைப் பீடிக்கத் தொடங்கினான். கிருபர் மற்றும் ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்} ஆகியோரின் விற்களை அறுத்த அவன், அவ்விருவரையும் பீடிக்கத் தொடங்கினான்.(29) முழுக்க இரும்பாலான மூன்று கணைகளால் துச்சாசனனையும், ஆறால் சகுனியையும் துளைத்த அவன் {பீமன்}, உலூகன் மற்றும் (அவனது தம்பி) பதத்திரி ஆகியோரைத் தேரிழக்கச் செய்தான்.(30)

அடுத்ததாகச் சுஷேணனிடம், இவ்வார்த்தைகளில், “நீ கொல்லப்பட்டாய்” என்று சொன்ன பீமன் ஒரு கணையை எடுத்துக் கொண்டான். இருப்பினும் கர்ணன் அந்தக் கணையை வெட்டி, மூன்று கணைகளால் பீமனையும் தாக்கினான்.(31) பிறகு, பெரும் சீற்றத்துடன் கூடிய மற்றொரு நேரான கணையை எடுத்துக் கொண்ட பீமன், அதைச் சுஷேணன் மீது ஏவினான். ஆனால் விருஷன் {கர்ணன்} அக்கணையையும் வெட்டினான்.(32) அப்போது தன் மகனைக் காக்க விரும்பிய கர்ணன், கொடூரனான பீமசேனனுக்கு ஒரு முடிவைக்கொண்டுவர விரும்பி, எழுபத்துமூன்று கடுங்கணைகளால் பின்னவனை {பீமசேனனைத்} தாக்கினான்.(33) பிறகு, பெருங்கடினத்தைத் தாங்கவல்ல சிறந்த வில்லொன்றை எடுத்துக் கொண்ட சுஷேணன், ஐந்து கணைகால் நகுலனின் கரங்களையும், மார்பையும் தாக்கினான்.(34) அப்போதும், பெருங்கடினத்தைத் தாங்கவல்ல பலமான இருபது கணைகளால் தன் எதிராளியைத் துளைத்த நகுலன், பெருமுழக்கம் செய்து, கர்ணனை அச்சுறுத்தினான்.(35)

எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கவனான அந்தச் சுஷேணன், பத்து கணைகளால் நகுலனைத் துளைத்து, கத்தி தலை கணையொன்றால் பின்னவனின் வில்லையும் வேகமாக அறுத்தான்.(36) அப்போது சினத்தால் மதியிழந்த நகுலன், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, அந்தப் போரில் ஒன்பது கணைகளால் சுஷேணனைத் தடுத்தான்.(37) பகைவீரர்களைக் கொல்பவனான அவன் {நகுலன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கணை மாரியால் அனைத்து இடங்களையும் மறைத்து, சுஷேணனின் சாரதியைக் கொன்று, மூன்று கணைகளால் சுஷேணனையும் துளைத்து, பிறகு வெறு மூன்று அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} பெரும் பலம் கொண்ட அவனது {சுஷேனனின்} வில்லையும் மூன்று துண்டுகளாக வெட்டினான்.(38) சினத்தால் தன் உணர்வுகளை இழந்தவனான சுஷேணனும், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, அறுபது கணைகளால் நகுலனையும், ஏழால் சகாதேவனையும் துளைத்தான்.(39) ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அந்த வீரர்களுக்கிடையில், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்ததைப் போலக் கடும்போர் நேர்ந்தது.(40)

சாத்யகி, மூன்று கணைகளால் {கர்ணனின் மூத்த மகன்} விருஷசேனனின் சாரதியைக் கொன்று, பின்னவனின் வில்லை அகன்ற தலை கொண்ட கணையொன்றால் வெட்டி, ஏழு கணைகளால் அவனது குதிரைகளையும் தாக்கினான்.(41) மற்றொரு கணையால் அவனது கொடிமரத்தை நொறுக்கிய அவன் {சாத்யகி}, மூன்று கணைகளால் விருஷசேனனின் மார்பைத் தாக்கினான். இவ்வாறு தாக்கப்பட்ட விருஷசேனன், தன் தேரில் மயக்கமடைந்தாலும், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மீண்டும் எழுந்து நின்றான்[1].(42) யுயுதானனால் {சாத்யகியால்}, தன் சாரதி, குதிரைகள், தேர் மற்றும் கொடிமரத்தை இழந்த விருஷசேனன், வேளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, யுயுதானனைக் {சாத்யகியை} கொல்லும் விருப்பதோடு அவனை எதிர்த்து விரைந்தான்.(43) எனினும் சாத்யகி, தன் எதிராளி தன்னை நோக்கி விரைந்துவந்த போது, பன்றியின் காதுகளைப் போன்ற தலைகளைக் கொண்ட பத்து கணைகளால் அவனது வாளையும், கேடயத்தையும் தாக்கினான்.(44) அப்போது துச்சாசனன், தேரற்றவனாகவும், ஆயுதங்களற்றவனாகவும் செய்யப்பட்ட விருஷசேனனைக் கண்டு, அவனை வேகமாகத் தன் தேரில் ஏறச் செய்து, அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு அவனைக் கொண்டு சென்று, மற்றொரு வாகனத்தில் அவனைச் செல்லச் செய்தான்.(45)

வலிமைமிக்கத் தேர்வீரனான விருஷசேனன், மற்றொரு வாகனத்தில் ஏறி வந்து, எழுபது கணைகளால் திரௌபதியின் மகன்களையும், ஐந்தால் யுயுதானனையும் {சாத்யகியையும்},(46) அறுபத்துநான்கால் பீமசேனனையும், ஐந்தால் சகாதேவனையும், முப்பதால் நகுலனையும், ஏழால் சதானீகனையும்,(47) பத்தால் சிகண்டியையும், நூறால் மன்னன் யுதிஷ்டிரனையும் தாக்கினான். ஓ! ஏகாதிபதி, வெற்றியடைய விரும்பிய இவர்களையும், இன்னும் பிற முதன்மையான வீரர்கள் பலரையும்,(48) கர்ணனின் மகனான அந்தப் பெரும் வில்லாளி {விருஷசேனன்}, தன் கணைகளால் தொடர்ந்து பீடித்தான். அப்போது அந்தப் போரில் வெல்லப்பட முடியாதவனான விருஷசேனன், தொடர்ந்து கர்ணனின் பின்புறத்தைப் பாதுகாத்தான்.(49)

சிநியின் பேரன் {சாத்யகி}, முழுக்க இரும்பாலான தொண்ணூற்றொரு கணைகளால் துச்சாசனனைச் சாரதியற்றவனாகவும், குதிரைகளற்றவனாகவும், தேரற்றவனாகவும் செய்து, பத்து கணைகளால் துச்சாசனனின் நெற்றியைத் தாக்கினான்.(50) (தேவையான அனைத்துடனும்) முறையாக ஆயத்தம் செய்யப்பட்டிருந்த மற்றொரு தேரில் ஏறிவந்த அந்தக் குரு இளவரசன் {துச்சாசனன்}, கர்ணனின் படைப்பிரிவுக்குள் இருந்தபடியே பாண்டவர்களோடு மீண்டும் போரிடத் தொடங்கினான்.(51) பிறகு, திருஷ்டத்யும்னன் பத்துக் கணைகளாலும், திரௌபதியின் மகன்கள் எழுபத்துமூன்றாலும், யுயுதானன் {சாத்யகி} ஏழாலும் கர்ணனைத் துளைத்தனர்.(52) பீமசேனன் அறுபத்துநான்கு கணைகளாலும், சகாதேவன் ஏழாலும் அவனைத் {கர்ணனைத்} துளைத்தனர். நகுலன் முப்பது கணைகளாலும், சதானீகன் ஏழாலும் அவனைத் துளைத்தனர். வீரச் சிகண்டி பத்தாலும், மன்னன் யுதிஷ்டிரன் ஒரு நூறு கணைகளாலும் அவனை {கர்ணனைத்} துளைத்தனர்.(53) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்ட இவர்களும், மனிதர்களில் முதன்மையானோரான இன்னும் பிறர் அனைவரும், பெரும் வில்லாளியான சூதன் மகனை {கர்ணனை} அந்தப் பயங்கரப் போரில் கலங்கடிக்கத் தொடங்கினர்.(54)

எதிரிகளைத் தண்டிப்பவனும், பெரும் வீரனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, தன் தேரால் பல விரைவான பரிணாமங்களைச் செய்து, அந்தப் போர்வீரர்கள் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் துளைத்தான்.(55) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதன் பிறகு, உயர் ஆன்மக் கர்ணணால் வெளிக்காட்டப்பட்ட கரநளினத்தையும், அவனது ஆயுதங்களின் சக்தியையும் நாங்கள் கண்டோம்.(56) எப்போது அவனது கணைகளை எடுத்தான், எப்போது அவற்றைக் குறிபார்த்தான், எப்போது அவற்றை விடுத்தான் என்பதை மக்களால் காண முடியவில்லை. அவனது கோபத்தின் விளைவால், அவனது எதிரிகள் வேகமாக இறப்பதை மட்டுமே அவர்கள் கண்டனர்.(57) வானம், ஆகாய விரிவு, பூமி, மற்றும் இடங்கள் அனைத்தும் கூரிய கணைகளால் முற்றாக மறைக்கப்பட்டதாகத் தெரிந்தது. செம்மேகங்களால் மறைக்கப்பட்டதைப் போல ஆகாயம் பிரகாசமாகத் தெரிந்தது.(58)

வில் தரித்த ராதையின் வீர மகன் {கர்ணன்}, (தன் தேரில்) நர்த்தனம் ஆடுபவனைப் போல, தன்னைத் துளைத்துத் தாக்கியவர்கள் ஒவ்வொருவரையும் மூன்று மடங்கு கணைகளால் பதிலுக்குத் துளைத்தான்.(59) மீண்டும் அவன் {கர்ணன்}, அவர்கள் ஒவ்வொருவரையும், அவர்களுடைய குதிரைகள், சாரதி, தேர் மற்றும் கொடிமரம் ஆகியவற்றையும் பத்து பத்து கணைகளால் துளைத்துப் பெருமுழக்கம் செய்தான். பிறகு, அவனைத் தாக்கியவர்கள் (அவன் கடந்து செல்லும் வகையில்) அவனுக்கு வழிவிட்டனர்.(60) கணைமாரிகளால் அந்த வலிமைமிக்க வில்லாளிகளை நொறுக்கியவனும், எதிரிகளை நொறுக்குபவனுமான அந்த ராதையின் மகன், பாண்டவ மன்னனால் {யுதிஷ்டிரனால்} தலைமைதாங்கப்பட்ட படைப்பிரிவுக்கு மத்தியில் தடுக்கப்பட முடியாதவனாக ஊடுருவினான்.(61) பின்வாங்காதவர்களான சேதிகளின் முப்பது தேர்களை அழித்த அந்த ராதையின் மகன் {கர்ணன்}, கூரிய கணைகள் பலவற்றால் யுதிஷ்டிரனைத் தாக்கினான்.(62) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிகண்டி, சாத்யகி ஆகியோரோடு கூடிய பாண்டவப் போர்வீரர்கள் பலர், ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} இருந்து மன்னனை {யுதிஷ்டிரனைக்} காக்க விரும்பி அவனை {யுதிஷ்டிரனைச்} சூழந்து கொண்டனர்.(63) அதே போலவே, உமது படையைச் சார்ந்தவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், வலிமைமிக்க வில்லாளிகளுமான அனைவரும், அந்தப் போரில் தடுக்கப்பட முடியாத கர்ணனை உறுதியான தீர்மானத்தோடு பாதுகாத்தனர்.(64) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளும், துணிச்சல்மிக்கப் போர்வீரர்களின் சிங்க முழக்கங்களும் விண்ணைப் பிளந்தன.(65) சூதன் மகனின் {கர்ணனின்} தலைமையிலான குருக்களும், யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவர்களும் அச்சமில்லாமல் மீண்டும் ஒருவரோடொருவர் மோதினர்” {என்றான் சஞ்சயன்}.(66)

யுதிஷ்டிரனை எள்ளிநகையாடிய கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 49-யுதிஷ்டிரனை நோக்கி விரைந்த கர்ணன்; கர்ணனை அறைகூவி அழைத்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனால் தாக்கப்பட்டுத் தன் தேரில் மயக்கமடைந்து விழுந்த கர்ணன்; விரைவில் உணர்வு மீண்ட கர்ணன், யுதிஷ்டிரனின் தேர்ச்சக்கரத்தைப் பாதுகாத்த சந்திரதேவன் மற்றும் தண்டதாரன் ஆகியோரைக் கொன்றது; யுதிஷ்டிரனின் மேனியில் கர்ணன் ஆழமான காயத்தை உண்டாக்கியது; பிரம்மாஸ்திரத்தை ஏவிய கர்ணன்; யுதிஷ்டிரனின் வில்லையும் கவசத்தையும் அறுத்த கர்ணன்; கர்ணனை வேல்களால் தாக்கி அவனுக்குக் குருதியைக் கொப்பளிக்க வைத்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் தேரை அழித்த கர்ணன்; புறமுதுகிட்ட யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனைத் தொடர்ந்து சென்று, அவனது தோள்களைத் தீண்டி, எள்ளி நகையாடிய கர்ணன்; யுதிஷ்டிரனை விடுவித்த கர்ணன்; சுரூதகீர்த்தியின் தேரில் ஏறிக் கொண்ட யுதிஷ்டிரன்; போரின் கோரத்தை வர்ணித்த சஞ்சயன்; களத்தில் பாய்ந்த குருதிப்புனல்; திரும்பி வந்த பீமசேனன் மற்றும் சாத்யகியின் தலைமையிலான பாண்டவ வீரர்களிடம் புறமுதுகிட்டோடிய கௌரவப்படை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டவப்படையின் ஊடாகச் சென்ற கர்ணன், ஆயிரக்கணக்கான தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படைவீரர்கள் ஆகியோரால் சூழப்பட்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தான்.(1) எதிரிகளால் தன் மீது ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான ஆயுதங்களைத் தன் நூற்றுக்கணக்கான கடுங்கணைகளால் வெட்டிய விருஷன் {கர்ணன்}, அச்சமில்லாமல் அப்படையைத் துளைத்துச் சென்றான்.(2) உண்மையில், சூதனின் மகன் {கர்ணன்}, தன் எதிரிகளின் தலைகளையும், கரங்களையும், தொடைகளையும் வெட்டினான், அவர்களும் உயிரை இழந்து கீழே பூமியில் விழுந்தனர்.(3) சாத்யகியால் தூண்டப்பட்ட திராவிட, அந்தக, நிஷாத காலாட்படை வீரர்கள், கர்ணனைக் கொல்ல விரும்பி, அந்தப் போரில அவனை நோக்கி மீண்டும் விரைந்தனர்.(4) கரங்கள், தலைக்கவசங்கள் ஆகியவற்றை இழந்து, கர்ணனின் கணைகளால் கொல்லப்பட்ட அவர்கள், (கோடரியால்) வெட்டப்பட்ட சாலமரக் காட்டைப் போல அடுத்தடுத்து கீழே விழுந்தனர்.(5)

இவ்வாறு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான போராளிகள் உயிரை இழந்து, தங்கள் புகழால் மொத்த ஆகாயத்தையும் நிறைத்து, தங்கள் உடல்களுடன் பூமியில் விழுந்தனர்.(6) வைகர்த்தனன் என்று வேறு பெயரில் அழைக்கப்பட்ட கர்ணன், அந்தகனைப் போலப் போரில் கோபத்துடன் திரிந்து கொண்டிருந்தபோது, மந்திரங்கள் மற்றும் மருந்துகளால் நோயைத் தடுக்க முயலும் மக்களைப் போலப் பாண்டுக்களும், பாஞ்சாலர்களும் அவனுக்குத் {கர்ணனுக்குத்} தடைகளை ஏற்படுத்தினர்.(7) தாக்குபவர்களான அவர்கள் அனைவரையும் நொறுக்கிய கர்ணன், மந்திரங்கள், மருந்துகள் மற்றும் (தணிவடையச் செய்யும்) சடங்குகளால் தடுக்கப்பட முடியாத தாங்கிக் கொள்ள முடியாத நோயைப் போல, யுதிஷ்டிரனை நோக்கி மீண்டும் விரைந்தான்.(8) இறுதியாக, மன்னனைக் {யுதிஷ்டிரனைக்} காக்க விரும்பிய பாண்டுக்கள், பாஞ்சாலர்கள், கைகேயர்கள் ஆகியோர் அனைவராலும் தடுக்கப்பட்ட கர்ணன், பிரம்மத்தை அறிந்த மனிதர்களை வெல்ல முடியாத காலனைப் போல அவர்களைக் கடந்து செல்வதில் வெல்லவில்லை.(9)

அப்போது கோபத்தால் கண்கள் சிவந்த யுதிஷ்டிரன், பகைவீரர்களைக் கொல்பவனும், சற்றுத் தொலைவில் தடுக்கப்பட்டிருந்தவனுமான கர்ணனிடம் இவ்வார்த்தைகளைப் பேசினான்,(10) “ஓ! கர்ணா, ஓ! கர்ணா, ஓ! வீண் நோக்குள்ளவனே. ஓ! சூதனின் மகனே, என் வார்த்தைகளைக் கேட்பாயாக. சுறுசுறுப்பான பல்குனனை {அர்ஜுனனை} நீ எப்போதும் அறைகூவி அழைக்கிறாய்.(11) திருதராஷ்டிரர் மகனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து, நீ எப்போதும் எங்களை எதிர்க்க முயல்கிறாய். உன் பெரும் ஆற்றலைத் திரட்டி, உன் வலிமை அனைத்தையும், உன் சக்தி அனைத்தையும், மற்றும் பாண்டுவின் மகன்களிடம் நீ கொண்டுள்ள வெறுப்பனைத்தையும் இன்று காட்டுவாயாக.(12) இன்றைய பயங்கர போரில், போருக்கான உன் அசையை நான் அகற்றுவேன்” {என்றான் யுதிஷ்டிரன்}.(13)

இவ்வார்த்தைகளைச் சொன்ன பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முழுக்க இரும்பாலானதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதுமான பத்து கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.(14) ஓ! பாரதரே, எதிரிகளைத் தண்டிப்பவனும், பெரும் வில்லாளியுமான சூதன் மகன் {கர்ணன்}, பெருங்கவனத்துடன், கன்றின் பற்களைப் போன்ற தலைகளைக் கொண்ட பத்து கணைகளால் {வத்ஸதந்தங்களால்} பதிலுக்கு யுதிஷ்டிரனைத் துளைத்தான்.(15) ஏளனமாகச் சூதன் மகனால் {கர்ணனால்} இவ்வாறு துளைக்கப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான யுதிஷ்டிரன் நெய்யேற்கும் நெருப்பைப் போலக் கோபத்துடன் சுடர்விட்டெரிந்தான்.(16) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், உறுதிமிக்கதுமான வில்லை வளைத்த அந்தப் பாண்டுவின் மகன், வில்லின் நாண்கயிற்றில் மலைகளையே துளைக்கவல்ல கூரிய கணை ஒன்றைப் பொருத்தினான்.(17) வில்லை முழுமையாக வளைத்த அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, சூதன் மகனைக் {கர்ணனைக்} கொல்லும் விருப்பத்தால், காலனின் கணையைப் போன்று அழிவைத் தரக்கூடிய அந்தக் கணையை வேகமாக ஏவினான்.(18)

பெரும் வலிமை கொண்ட மன்னனால் {யுதிஷ்டிரனால்} ஏவப்பட்டதும், இடிக்கு ஒப்பானதும், “விஸ்” என்ற ஒலியைக் கொண்டதுமான அந்தக் கணை வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனின் இடது பக்கத்தைத் திடீரெனத் துளைத்தது.(19) அந்தத் தாக்குதலின் பலத்தால் ஆழமாகப் பீடிக்கப்பட்ட கர்ணன், பலவீனமடைந்த அங்கங்களுடன், கரங்களில் இருந்து தன் வில் தளர்ந்து விழத் தன் தேரில் மயக்கமடைந்து விழுந்தான்.(20) கர்ணனை அந்தப் பரிதாப நிலையில் கண்ட அந்தப் பரந்த தார்தராஷ்டிரப் படையானது “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கதறியது, போராளிகளின் முகங்கள் அனைத்தும் நிறமிழந்தன.(21) மறுபுறம், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆற்றலைக் கண்ட பாண்டவர்களுக்கு மத்தியில் சிங்க முழக்கங்களும், கூச்சல்களும், குழப்பமான இன்பக் கதறல்களும் எழுந்தன.(22)

எனினும், கடும் ஆற்றலைக் கொண்ட ராதையின் மகன் {கர்ணன்}, விரைவில் உணர்வுகள் மீண்டு, தன் இதயத்தை யுதிஷ்டிரனின் அழிவில் நிலைநிறுத்தினான்.(23) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், விஜயம் என்றழைக்கப்படுவதுமான தன் உறுதிமிக்க வில்லை வளைத்த அளவிலா ஆன்மா கொண்ட அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, தன் கூரிய கணைகளால் பாண்டுவின் மகனைத் {யுதிஷ்டிரனைத்} தடுக்கத் தொடங்கினான்.(24) அம்மோதலில் அவன் {கர்ணன்}, உயர் ஆன்ம யுதிஷ்டிரனுடைய தேரின் இருச்சக்கரங்களைப் பாதுகாத்த பாஞ்சால இளவரசர்களான சந்திரதேவன் மற்றும் தண்டதாரன் ஆகிய இருவரையும் கத்தி தலை கணைகள் இரண்டால் கொன்றான்.(25) யுதிஷ்டிரனுடைய தேரின் பக்கங்களில் நின்றிருந்த அந்த வீரர்கள் இருவரும், சந்திரனுக்குப் பக்கத்தில் இருந்து புனர்வசு {புனர்பூச} நட்சத்திரக்கூட்டத்தைப் [1] போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(26) எனினும், யுதிஷ்டிரன் மீண்டும் முப்பது கணைகளால் கர்ணனைத் துளைத்தான். மேலும் அவன், சுஷேணன் மற்றும் சத்யசேனன் என்ற இருவரில் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் தாக்கினான்.(27) மேலும் அவன் கர்ணனைப் பாதுகாத்த ஒவ்வொருவரையும் மும்மூன்று நேரான கணைகளால் துளைத்தான்.(28)

அப்போது, சிரித்துக் கொண்டே தன் வில்லை அசைத்த அதிரதன் மகன் {கர்ணன்}, ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} மன்னனின் {யுதிஷ்டிரனின்} உடலில் ஓர் ஆழமான காயத்தை ஏற்படுத்தி, மீண்டும் அறுபது கணைகளால் அவனைத் துளைத்து, உரக்க முழங்கினான்.(29) அப்போது பாண்டவர்களில் முதன்மையான வீரர்கள் பலர், மன்னனைக் {யுதிஷ்டிரனைக்} காக்க விரும்பி கர்ணனை நோக்கி கோபத்தோடு விரைந்து, தங்கள் கணைகளால் அவனைக் கலங்கடிக்கத் தொடங்கினர்.(30) சாத்யகி, சேகிதானன், யுயுத்சு, சிகண்டி, திரௌபதியின் மகன்கள், பிரபத்ரகர்கள்,(31) இரட்டையர்கள் (நகுலனும், சகாதேவனும்), பீமசேனன், சிசுபாலன் {சிசுபாலனின் மகனாக இருக்க வேண்டும்}, காருஷர்கள், மத்ஸ்யர்கள், சூரர்கள், கைகேயர்கள், காசிகள் மற்றும் கோசலர்கள்(32) ஆகிய இந்தத் துணிச்சல் மிக்க வீரர்கள் அனைவரும், பெரும் சுறுசுறுப்புடன் அந்த வசுசேனனை {கர்ணனைத்} தாக்கினர். பாஞ்சால இளவரசனான ஜனமேஜயன், கர்ணனைப் பல கணைகளால் துளைத்தான்.(33)

பல்வேறு வகைகளிலான கணைகள்[2], பல்வேறு ஆயுதங்கள் ஆகியவற்றைத் தரித்திருந்த பாண்டவ வீரர்கள், தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் துணையுடன் கர்ணனை நோக்கி விரைந்து, அவனைக் கொல்ல விரும்பி, அனைத்துப் பக்கங்களிலும் அவனை {கர்ணனைச்} சூழ்ந்து கொண்டனர்.(34,35) இவ்வாறு அந்தப் பாண்டவப் போர்வீரர்களில் முதன்மையானோரால் அனைத்துப் பக்கங்களிலும் தாக்கப்பட்ட கர்ணன், பிரம்மாயுதத்தை இருப்புக்கு அழைத்து, திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் கணைகளால் நிறைத்தான்.(36) பிறகு அந்த வீரக் கர்ணன், சுடர்மிக்க நெருப்பைப் போல, எரியும் தழல்களைக் கணைகளாகக் கொண்டு, பாண்டவத் துருப்புகள் எனும் காட்டை எரித்துப் போரில் திரிந்து கொண்டிருந்தான்.(37) உயர் ஆன்மா கொண்டவனும், பெரும் வில்லாளியுமான அந்தக் கர்ணன், சில வலிமைமிக்க ஆயுதங்களைக் குறிபார்த்து, சிரித்துக் கொண்டே, மனிதர்களில் முதன்மையானவனான அந்த யுதிஷ்டிரனின் வில்லை அறுத்தான்.(38)

மேலும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாகத் தொண்ணூறு நேரான கணைகளைக் குறிபார்த்த கர்ணன், அந்தக் கூர்மையான கணைகளால் தன் எதிராளியின் {யுதிஷ்டிரனின்} கவசத்தை அறுத்தான்.(39) காற்றால் விரட்டப்படும் மேகங்கள் சூரியக் கதிர்களால் துளைக்கப்படுவதைப்போலத் தங்கத்தாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கவசமானது, கீழே விழும்போது அழகாகத் தெரிந்தது.(40) உண்மையில், விலையுயர்ந்த சிறந்த பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தக் கவசம், மனிதர்களில் முதன்மையான அவனுடைய உடலில் இருந்து விழுந்தபோது, இரவில் நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கும் ஆகாயத்தைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(41) அக்கணைகளால் கவசம் அறுபட்ட அந்தப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, குருதியால் மறைக்கப்பட்டு, கோபத்துடன் முழுக்க இரும்பாலான ஈட்டி ஒன்றை அந்த அதிரதன் மகன் {கர்ணன்} மீது வீசினான்.(42) எனினும் கர்ணன், அந்தச் சுடர்மிக்க ஈட்டியானது ஆகாயத்தில் வந்து கொண்டிருந்தபோதே, ஏழு கணைகளால் அதை (துண்டுகளாக) வெட்டினான்.(43)

அப்போது யுதிஷ்டிரன், நான்கு வேல்களால் கர்ணனின் இரு கரங்களையும், நெற்றியையும், மார்பையும் தாக்கி மீண்டும் மீண்டும் பெருமுழக்கம் செய்தான்.(44) அதன்பேரில், கர்ணனின் காயங்களில் இருந்து குருதி கொப்பளித்தது, இதனால் சினத்தால் நிறைந்து, பாம்பொன்றைப் போல மூச்சு விட்ட அவன் {கர்ணன்}, தன் எதிராளியின் கொடிமரத்தை வெட்டி, மூன்று அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} அந்தப் பாண்டவனையும் {யுதிஷ்டிரனையும்} துளைத்தான்.(45) மேலும் அவன் {கர்ணன்}, (தன் எதிரி கொண்டிருந்த) அம்பறாத்தூணிகள் இரண்டையும், (அவன் {யுதிஷ்டிரன்} செலுத்திவந்த) தேரையும் நுண்ணியத் துண்டுகளாக வெட்டினான். அதன் பேரில், தந்தங்களைப் போன்ற வெண்ணிறத்தைக் கொண்டவையும், வாலில் கருப்பு முடிகளைக் கொண்டவையும், வழக்கமாக (போருக்கு) அவனைச் {யுதிஷ்டிரனைச்} சுமந்து வருபவையுமான குதிரைகள் பூட்டப்பட்ட மற்றொரு தேரில் ஏறி, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு, தப்பி ஓடத் தொடங்கினான் {புறமுதுகிட்டு ஓடினான்}. இவ்வாறே பார்ஷினி சாரதி கொல்லப்பட்ட யுதிஷ்டிரன் பின்வாங்கத் தொடங்கினான்.(46,47) அவன் {யுதிஷ்டிரன்} மிகவும் உற்சாகமற்ற நிலையை அடைந்து, கர்ணனின் முன்னால் நிற்க முடியாதவனான். அப்போது, பாண்டுவின் மகனான யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து சென்ற ராதையின் மகன் {கர்ணன்},(48) பலவந்தமாக அவனைக் கைப்பற்ற விரும்பி, அவனது தோள்களைத் தீண்டி, வஜ்ரம், குடை, அங்குசம், மீன், கொடி, ஆமை, சங்கு, ஆகிய மங்கலக் குறிகளால் அருளப்பட்ட (உள்ளங்கையைக் கொண்ட) தன் அழகான கையைத் தூய்மையாக்கிக் கொண்டான்.(49,50)

அப்போது சல்லியன், அவனிடம் {கர்ணனிடம்}, “ஓ! கர்ணா, மன்னர்களில் சிறந்த இவனைப் பிடிக்காதே. நீ அவனைப் பிடித்ததும், உன்னையும், என்னையும் அவன் சாம்பலாகக் குறைத்துவிடுவான்” என்றான்[3].(51) அப்போது எள்ளி நகையாடிய கர்ணன், அவனை {யுதிஷ்டிரனை} இழித்துரைக்கும் வகையில், “உன்னதக் குலத்தில் பிறந்து, க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றுபவனாக இருந்தாலும், உன் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பி அச்சத்தால் போரை விட்டு எவ்வாறு நீ விலகுகிறாய்? க்ஷத்திரியக் கடமைகளை நீ நன்கறிந்தவனில்லை என நான் நினைக்கிறேன்.(52,53) பிரம்ம சக்தியைக் கொண்ட நீ, உண்மையில் வேத கல்வி கற்பதிலும், வேள்விச் சடங்குகளைச் செய்வதிலும் அர்ப்பணிப்புள்ளவனாவாய். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, மீண்டும் போரிடாதே, துணிவுமிக்க வீரர்களை நீ மீண்டும் அணுகாதே.(54) வீரர்களை நோக்கி கடுமொழியில் பேசாதே, மேலும் பெரும்போர்களுக்கு நீ வராதே. ஓ! ஐயா, நீ இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம், ஆனால், எங்களைப் போன்றோரிடம் அவ்வழியில் இனி ஒருபோதும் பேசாதே.(55) எங்களைப் போன்றோரிடம் இவ்வாறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதால், போரில் இதையும், இன்னும் பிற வகை நடத்தைகளையும் நீ சந்திக்க நேரிடும். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, உன் இடத்திற்குத் திரும்பிச் செல்வாயாக, அல்லது கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகியோர் எங்கிருக்கின்றனரோ அங்கே செல்வாயாக.(56) உண்மையில், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உன்னைப் போன்ற ஒருவனைக் கர்ணன் ஒருபோதும் கொல்ல மாட்டான்” என்றான் {கர்ணன்}.

பிருதையின் மகனிடம் {{குந்தியின் மகன் யுதிஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன வலிமைமிக்கக் கர்ணன், யுதிஷ்டிரனை விடுவித்துவிட்டு,(57) அசுரப்படையைக் கொல்லும் வஜ்ரதாரியை {இந்திரனைப்} போலப் பாண்டவப் படையைக் கொல்லத் தொடங்கினான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மனிதர்களின் ஆட்சியாளன் (யுதிஷ்டிரன்) தப்பி ஓடினான்.(58) மன்னன் தப்பி ஓடுவதைக் கண்ட சேதிகள், பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் அனைவரும், மங்கா மகிமையைக் கொண்ட அந்த ஏகாதிபதியைப் பின்தொடர்ந்து சென்றனர்.(59) திரௌபதியின் மகன், சூரர்கள், பாண்டுவுக்கு மாத்ரியிடத்தில் உண்டான இரட்டை மகன்கள் {நகுலனும், சகாதேவனும்}, ஆகியோரும் மன்னனைப் பின்தொடர்ந்து சென்றனர். யுதிஷ்டிரனின் படைப்பிரிவு பின்வாங்குவதைக் கண்ட வீரக் கர்ணன், குருக்கள் அனைவருடன் சேர்ந்து மிகவும் மகிழ்ந்து, புறமுதுகிடும் படையைப் பின்தொடர்ந்து செல்லத் தொடங்கினான். பேரிகைகள், சங்குகள், மிருதங்கங்கள், விற்கள் ஆகியவற்றின் ஆரவாரங்களும்,(60,61) சிங்க முழக்கங்களும் தார்தராஷ்டிரத் துருப்புகளுக்கு மத்தியில் எழுந்தன. அதேவேளையில், ஓ! குருகுலத்தவரே {திருதராஷ்டிரரே}, சுரூதகீர்த்தியின் தேரில் வேகமாக ஏறிச் சென்ற யுதிஷ்டிரன், கர்ணனின் ஆற்றலைக் காணத் தொடங்கினான். பிறகு, தன் துருப்புகள் வேகமாகக் கொல்லப்படுவதைக் கண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன்,(62,63) சினத்தால் நிறைந்து, தன் போர்வீரர்களிடம், “இந்த எதிரிகளைக் கொல்வீராக. ஏன் செயலற்று இருக்கிறீர்கள்?” என்று ஆணையிட்டான்.

அப்போது, மன்னனால் {யுதிஷ்டிரனால்} ஆணையிடப்பட்டவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பீமசேனன் தலைமையில் இருந்தவர்களுமான பாண்டவர்கள் அனைவரும் உமது மகன்களை எதிர்த்து விரைந்தனர். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (இரு படைகளைச் சேர்ந்த) போர்வீரர்களின் கூச்சல்களும், தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்களால் உண்டாக்கப்பட்ட ஒலியும், ஆயுதங்களின் மோதலொலியும் மிகப் பெரிதாக இருந்தன. “முயல்வீர், தாக்குவீர், எதிரியை எதிர்ப்பீர்”(64-66) போன்ற வார்த்தைகளையே அந்தப் பயங்கரப் போரில் போராளிகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். அவர்களால் ஏவப்பட்ட கணைமாரியின் விளைவாக, மேகங்களால் உண்டானதைப் போன்ற ஒரு நிழல் போர்க்களமெங்கும் பரவியது.(67) அந்த மனிதர்களின் ஆட்சியாளர்கள் கணைகளால் மறைத்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதன் விளைவாக, அந்தப் போரில் அவர்கள், கொடிகள், கொடிமரங்கள், குடைகள், குதிரைகள், சாரதிகள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவற்றை இழந்தவர்களானார்கள்.(68) உண்மையில், அந்தப் பூமியின் தலைவர்கள், உயிரையும், அங்கங்களையும் இழந்துபூமியில் விழுந்தனர்.

சமமற்ற முதுகுகள் கொண்டதன் விளைவாக மலைச்சிகரங்களைப் போலத் தெரிந்த பெரும் யானைகள்,(69) தங்கள் சாரதிகளோடு சேர்ந்து, இடியால் பிளக்கப்பட்ட மலைகளைப் போல உயிரை இழந்து கீழே விழுந்தன. ஆயிரக்கணக்கான குதிரைகளும், தங்கள் கவசங்கள், கருவிகள், மற்றும் அலங்காரங்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டு, உடைக்கப்பட்டு, தளரச் செய்யப்பட்டு, தங்கள் வீரச் சாரதிகளுடன் சேர்ந்து உயிரையிழந்து கீழே விழுந்தன. தேர்வீரர்கள் தங்கள் பிடியில் இருந்து ஆயுதங்கள் தளர்ந்து, (பகை) தேர்வீரர்களால் தங்கள் தேர்களையும், உயிரையும் இழந்தனர். காலாட்படைவீரர்களின் பெருங்கூட்டங்கள் அந்தப் பயங்கர மோதலில் பகைவீரர்களால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கில் கீழே விழுந்தன. தாமிர வண்ணத்தில் அகன்று விரிந்திருந்த கண்களாலும், தாமரை, அல்லது சந்திரன் போன்ற அழகிய முகங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தலைகளால், போர்வெறி ஏறிய அந்த வீரப் போராளிகளின் தலைகளால் பூமியானது மறைக்கப்பட்டது.(70-72) பூமியில் துணிவுமிக்க எதிரிகளால் நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்பட்டுப் புதிதாக {சொர்க்கத்திற்கு} வந்த வீரர்களை தெய்வீகப் பாடற்கலைஞர்கள் எவற்றைக் கொண்டு தொடர்ந்து வரவேற்றனரோ, அவர்களை {அப்படி வந்தோரை} எந்த வாகனங்களில் அமர்த்தி (இந்திரலோகத்தை நோக்கிக்) கொண்டு சென்றனரோ, அந்தத் தெய்வீகத் தேர்களில் இருந்த அப்சரஸ் பெருங்கூட்டத்தில் இருந்து வந்த இசை மற்றும் பாடல்களின் விளைவாக வானத்தில் கேட்கப்படும் ஒலியைப் போன்ற பேரொலியை பூமியின் பரப்பிலும் மக்கள் கேட்டனர். அந்த அற்புதக் காட்சிகளைத் தங்கள் கண்களாலேயே நேரடியாகக் கண்டு, சொர்க்கத்திற்குச் செல்லும் விரும்பிய வீரர்கள்,(73-75) உற்சாகமிக்க இதயங்களுடன் வேகமாக ஒருவரையொருவர் கொன்றனர். அந்தப் போரில் தேர்வீரர்கள் {வேறு} தேர்வீரர்களுடனும், காலாட்படை வீரர்கள் காலாட்படை வீரர்களுடனும், அழகாகப் போரிட்டனர்,(76) யானைகள் யானைகளுடனும், குதிரைகள் குதிரைகளுடனும் அழகாகப் போரிட்டன. உண்மையில், யானைகளுக்கும், குதிரைகளுக்கும், மனிதர்களுக்கும் அழிவைத் தந்த அந்தப் போரானது இவ்வாறு நடந்து கொண்டிருந்த போது,(77) துருப்புகளால் எழுப்பப்பட்ட புழுதியால் போர்க்களம் மறைக்கப்பட்டது.

பிறகு, எதிரிகள் எதிரிகளைக் கொன்றனர், நண்பர்களும் நண்பர்களைக் கொன்றனர். வாழ்வுக்கும், பாவங்களுக்கும் அழிவைத் தந்த அந்தக் கடும்போரில், போராளிகள் ஒருவரையொருவர் குழலைப் {மயிரைப்} பிடித்திழுத்தும், தங்கள் பற்களால் ஒருவரையொருவர் கடித்தும், நகங்களால் ஒருவரையொருவர் கிழித்தும்,(78) விரல்மடக்கி முட்டியால் ஒருவரையொருவர் தாக்கியும், வெறும் கரங்களால் ஒருவருடனொருவர் போரிடவும் செய்தனர். உண்மையில், யானைகளுக்கும், குதிரைகளுக்கும், மனிதர்களுக்கும் பேரழிவைத் தந்த அந்தப் போர் இவ்வாறு மூர்க்கமாக நடந்து கொண்டிருந்த போது,(79) (கொல்லப்பட்ட) மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் உடல்களில் இருந்து ஒரு குருதி ஆறே பாய்ந்தது. அந்த ஓடையானது {குருதி ஆறானது} யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் இறந்த உடல்களைப் பெரும் எண்ணிக்கையில் கொண்டு சென்றது.(80) உண்மையில், மனிதர்கள், குதிரைகள், யானைகள், நிறைந்த அந்தப் பரந்த படையில், மனிதர்கள், குதிரைகள், யானைகள், குதிரைவீரர்கள் மற்றும் யானைவீரர்கள் ஆகியோரால் உண்டான அந்த ஆறு, சதையால் {இறைச்சியால்} சகதியாகி மிகப் பயங்கரமாக இருந்தது.(81) மருண்டோரை அச்சங்கொள்ள வைத்த அந்த ஓடையில், மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் உடல்கள் மிதந்தன. வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்ட சில போராளிகள் அதை வேகமாகக கடந்து சென்றனர், சிலர் மறுபக்கத்திலேயே இருந்தனர்.(82) சிலர் அதன் ஆழங்களுக்குள் பாய்ந்தனர், சிலர் அதில் மூழ்கினர், சிலர் அதன் பரப்பிற்கு எழுந்து அதை நீந்திக் கடந்தனர். மேனியெங்கும் குருதியால் பூசப்பட்ட அவர்களது கவசங்களும், ஆயுதங்களும், ஆடைகளும் என அனைத்தும் குருதியாகவே இருந்தன.(83) சிலர் அதில் நீராடினர், சிலர் அதைக் குடித்தனர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சிலர் பலவீனமடைந்தனர். தேர்கள், குதிரைகள், மனிதர்கள், யானைகள், ஆயுதங்கள் ஆபரணங்கள்,(84) ஆடைகள், கவசங்கள், கொல்லப்பட்டோ, கொல்லப்படவோ இருந்த போராளிகள், பூமி, வானம், ஆகாய விரிவு, திசைப்புள்ளிகள் என அனைத்தும் சிவப்பாயின.(85) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, மணம், தீண்டல், சுவை, அந்தக் குருதியின் மிகச் சிவப்பான காட்சி, அதன் பாயும் ஒலி,(86) ஆகியவற்றுடன் கிட்டத்தட்ட அனைத்துப் போராளிகளுமே உற்சாகத்தை மிகவும் இழந்தனர்.

அப்போது, பீமசேனன் மற்றும் சாத்யகியின் தலைமையிலான பாண்டவ வீரர்கள், தங்களை ஏற்கனவே வீழ்த்திய அந்த (குரு) படையை எதிர்த்து மீண்டும் மூர்க்கமாக விரைந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விரைந்து வரும் அந்தப் பாண்டவ வீரர்களின் மூர்க்கம் தடுக்கப்பட முடியாததாக இருப்பதைக் கண்ட(87,88) உமது மகன்களின் அந்தப் பரந்த படை அந்தப் போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடியது. உண்மையில், தேர்கள், குதிரைகள், யானைகள் மற்றும் மனிதர்கள் நிறைந்த உமது படையானது, எதிரியால் கலங்கடிக்கப்பட்டு, கட்டுக்கோப்பான வியூகமாக மேலும் நீடித்திராமல், கவசங்கள் இடம்பெயர்ந்து, தங்கள் பிடியில் இருந்த ஆயுதங்கள் மற்றும் விற்கள் தளர்ந்து, காட்டில் சிங்கங்களால் பீடிக்கப்படும் யானைக் கூட்டத்தைப் போல அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடின” {என்றான் சஞ்சயன்}.(89,90)

கர்ணனை வீழ்த்திய பீமன்! – கர்ண பர்வம் பகுதி – 50-பீமனை எதிர்த்து விரைந்த கௌரவர்கள்; பீமனை நோக்கிச் சென்ற கர்ணன்; யுதிஷ்டிரனைச் சாத்யகியிடமும், திருஷ்டத்யும்னனிடம் அடைக்கலமாய் விட்டுச் சென்ற பீமன்; கர்ணனை எதிர்த்த பீமன்; அர்ஜுனன் வரக்கூடும் என்பதால், பீமனைத் தாக்கப் போவதாகச் சொன்ன கர்ணன்; ஆமோதித்த சல்லியன்; கணைகளால் பீமனின் நடுமார்பைத் தாக்கி அவனது வில்லை அறுத்த கர்ணன்; கர்ணனைக் கொல்ல விரும்பி பீமன் ஏவிய கடுங்கணை ஒன்றால் தாக்கப்பட்டுத் தன் தேரில் மயக்கமடைந்து விழுந்த கர்ணன்; போர்க்களத்தைவிட்டுக் கர்ணனைக் கொண்டு சென்ற சல்லியன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டவ வீரர்கள் உமது படையை நோக்கி மூர்க்கமாக விரைவதைக் கண்ட துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதக் குலத்தின் காளையே, தன் படையின் போர்வீரர்களை {அவர்கள் புறமுதுகிடாதபடி} அனைத்துப் பக்கங்களிலும் தடுத்தான். எனினும், உமது மகன் {துரியோதனன்} தன் குரலின் உச்சியில் கதறினாலும், ஓ! மன்னா, தப்பி ஓடும் அவனது துருப்புகள், ஓடுவதை நிறுத்த மறுத்தன.(1,2) அப்போது அந்தப் படையின் ஒரு சிறகும், அந்தச் சிறகுகளின் எல்லைகளில் இருந்தோரும், சுபலனின் மகன் சகுனியும், கௌரவர்களும், நன்கு ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு அந்தப் போரில் பீமசேனனை எதிர்த்து விரைந்தனர்.(3) மன்னர்கள் அனைவருடன் கூடிய தார்தராஷ்டிரப் படையானது புறமுதுகிட்டு ஓடுவதைக் கண்ட கர்ணனும், மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்}, “பீமனை நோக்கித் தேரைச் செலுத்துவீராக” என்றான்.(4) இவ்வாறு கர்ணனால் தூண்டப்பட்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அன்னங்களின் வண்ணத்தில் இருந்த அந்த முதன்மையான குதிரைகளை விருகோதரன் {பீமன்} இருக்கும் இடத்தை நோக்கித் தூண்டத் தொடங்கினான்.(5) இவ்வாறு போர்க்கள ரத்தினமான சல்லியனால் தூண்டப்பட்ட அந்தக் குதிரைகள், பீமசேனனின் தேரை அணுகிப் போரில் கலந்தது.(6)

அதேவேளையில் கர்ணன் அணுகுவதைக் கண்ட பீமன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்து, கர்ணனின் அழிவில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(7) வீரச் சாத்யகி மற்றும் பிருஷதனின் {துருபதனின்} மகனான திருஷ்டத்யும்னன் ஆகியோரிடம் பேசிய அவன் {பீமன்}, நல்லான்மா கொண்ட மன்னர் யுதிஷ்டிரரை நீங்கள் இருவரும் பாதுகாப்பீராக. என் கண்களுக்கு முன்பாகவே பெரும் ஆபத்தான நிலையில் இருந்து அவர் {யுதிஷ்டிரர்} தப்பித்தது மிகக் கடினமாக இருந்தது.(8) துரியோதனின் மனநிறைவுக்காகத் தீய ஆன்மா கொண்ட ராதையின் மகனால் {கர்ணனால்}, மன்னரின் கவசமும், அவரது ஆடைகளும் நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பிளந்து கிழிக்கப்பட்டன.(9) ஓ! பிருஷதன் மகனே {திருஷ்டத்யும்னா}, நான் இன்று துயரின் முடிவை எட்டப் போகிறேன். நான் இன்று போரில் கர்ணனைக் கொல்வேன், அல்லது பயங்கரப் போரில் கர்ணன் என்னைக் கொல்வான். நான் இதை உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(10) இன்று மன்னரை {யுதிஷ்டிரரை} நான் ஒரு புனிதப் பற்றாக {அடைக்கலப் பொருளாக} உன்னிடம் அளிக்கிறேன். மன்னரைப் {யுதிஷ்டிரரைப்} பாதுகாப்பதற்காக உற்சாகம் நிறைந்த இதயங்களுடன், இன்று நீங்கள் முயல்வீராக” என்றான் {பீமன்}.(11)

இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன், ஒரு சிங்க முழக்கத்தால் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் எதிரொலிக்கச் செய்தபடி அதிரதன் மகனை {கர்ணனை} நோக்கிச் சென்றான்.(12) போரில் மகிழ்பவனான பீமன் வேகமாக முன்னேறுவதைக் கண்ட பலமிக்க மத்ரர்களின் மன்னன் {சல்லியன்}, சூதனின் மகனிடம் {கர்ணனிடம்} பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்.(13) சல்லியன் {கர்ணனிடம்}, “ஓ! கர்ணா, சினத்தில் நிறைந்திருக்கும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாண்டு மகனை {பீமனைப்} பார். பல ஆண்டுகளாகப் பேணப்பட்ட அவனது {பீமனது} கோபத்தை உன்மீது அவன் கக்க விரும்புகிறான் என்பதில் ஐயமில்லை.(14) இதற்கு முன்னர் இத்தகு வடிவத்தை அவன் {பீமன்} ஏற்றதில்லை. அபிமன்யுவும், ராட்சசன் கடோத்கசனும் கொல்லப்பட்ட போது கூட அவன் இத்தகு வடிவத்தை ஏற்றதில்லை.(15) கோபத்தால் நிறைந்து, யுகமுடிவில் தோன்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்பின் காந்தியோடு கூடிய வடிவை ஏற்று, மூன்று உலகங்களும் சேர்ந்து வந்தாலும் எதிர்க்கவல்லவனாகவே அவன் தெரிகிறான்” என்றான் {சல்லியன்}.(16)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, இவ்வார்த்தைகளை ராதையின் மகனிடம் {கர்ணனிடம்} சொல்லிக் கொண்டிருந்தபோது, சினத்தால் தூண்டப்பட்ட பீமன் கர்ணனை நோக்கி வந்தான்.(17) போரில் மகிழ்பவனான பீமன் இவ்வாறு அவனை அணுகியதைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே சல்லியனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(18)

{கர்ணன் சல்லியனிடம்}, “ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, ஓ! தலைவா, பீமனைக் குறித்து நீர் இன்று என்னிடம் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மையே என்பதில் ஐயமில்லை.(19) இந்த விருகோதரன் {பீமன்} துணிச்சல்மிக்கவனும், கோபம் நிறைந்த வீரனுமாவான். தன் உடலைப் பாதுகாப்பதில் கவலையற்றவனாகவும், உடல் உறுப்புகளின் பலத்தில் அனைவருக்கும் மேம்பட்டவனாகவும் இருக்கிறான்.(20) விராட நகரத்தில் தலைமறைவு வாழ்வை வாழ்ந்த போது, திரௌபதிக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக, இவன் {பீமன்}, தனது வெறுங்கரங்களின் வலிமையை மட்டுமே நம்பி, கீசகனையும், அவனது உறவினர்களையும் கமுக்கமாகக் கொன்றான்.(21) கதாயுதத்தை உயர்த்திப் பிடித்த காலனுடன் {காலனான என்னுடன்} அவன் போரிடத் தயாராக இருக்கிறான்.(22) எனினும், அர்ஜுனனை நான் கொல்ல வேண்டும், அல்லது அர்ஜுனன் என்னைக் கொல்ல வேண்டும் என்ற இந்த ஆசையானது என் நாட்கள் {காலம்} முழுவதும் பேணிக் காக்கப்பட்டு வந்திருக்கிறது.(23) அந்த எனது ஆசையானது, பீமனுடன் நான் மோதுவதன் விளைவால் இன்று நிறைவேறக்கூடும். நான் பீமனைக் கொன்றாலோ, அவனைத் தேரற்றவனாகச் செய்தாலோ,(24) பார்த்தன் {அர்ஜுனன்} என்னை எதிர்த்து வரக்கூடும். அஃது எனக்கு நன்மையே. இந்த நேரத்தில் ஏற்றதென நீர் நினைப்பதைத் தாமதமில்லாமல் தீர்மானிப்பீராக” என்றான் {கர்ணன்}.(25)

அளவிலா சக்தி கொண்ட ராதை மகனின் {கர்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட சல்லியன் {கர்ணனிடம்},(26) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, பெரும் வலிமையைக் கொண்ட பீமசேனனை எதிர்த்துச் செல்வாயாக. பீமசேனனைத் தடுத்த பிறகு நீ பல்குனனை {அர்ஜுனனை} அடையக்கூடும்.(27) ஓ! கர்ணா, உனது நோக்கம் எதுவோ, நீண்ட ஆண்டுகளாக நீ உன் இதயத்தில் பேணிப் பாதுகாத்துவரும் ஆசை எதுவோ, அஃது இன்று நிறைவேறும். நான் உனக்கு உண்மையே சொல்கிறேன்” என்று மறுமொழிகூறினான் {சல்லியன்}.(28)

இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன், மீண்டும் சல்லியனிடம், “போரில் நான் அர்ஜுனனைக் கொல்வேன், அல்லது அவன் என்னைக் கொல்வான். போரில் உமது இதயத்தை நிலைநிறுத்தி, விருகோதரன் இருக்கும் இடத்திற்குச் செல்வீராக” என்றான் {கர்ணன்}.(29)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சல்லியன், உமது படையை முறியடித்துக் கொண்டிருந்த அந்தப் பெரும் வில்லாளியான பீமன் இருந்த இடத்திற்கு அந்தத் தேரை வேகமாகச் செலுத்தினான்.(30) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே பீமனும், கர்ணனும் சந்தித்தபோது, எக்காளங்களின் முழக்கமும், பேரிகைகளின் முழக்கமும் எழுந்தன.(31) சினத்தால் நிறைந்த வலிமைமிக்கப் பீமசேனன், வீழ்த்தக்கடினமான உமது துருப்புகளைப்  அனைத்துப் பக்கங்களுக்கும், பளபளப்பாக்கப்பட்ட தன் கூரிய கணைகளால் சிதறடிக்கத் தொடங்கினான்.(32) போரில் கர்ணனுக்கும், பாண்டு மகனுக்கும் {பீமனுக்கு} இடையில் நடந்த அம்மோதல், கடுமையையும், அச்சந்தரும் நிலையையும் அடைந்த போது எழுந்த அவ்வொலி பேராற்றல் வாய்ந்ததாக இருந்தது.(33)

தன்னை நோக்கி வரும் பீமனைக் கண்டவனும், வைகர்த்தனன், அல்லது விருஷன் என்று வேறு பெயரில் அழைக்கப்பட்டவனுமான கர்ணன், சினத்தால் நிறைந்து, கணைகளால் அவனது {பீமனின்} நடுமார்பைத் தாக்கினான்.(34) அளவிலா ஆன்மா கொண்ட அந்தக் கர்ணன், மீண்டும் கணைமாரியால் அவனை {பீமனை} மறைத்தான். இவ்வாறு சூதன் மகனால் துளைக்கப்பட்ட பீமன், முன்னவனை {கர்ணனை} சிறகு படைத கணைகளால் மறைத்தான்.(35) மேலும் அவன் நேரான ஒன்பது கூரிய கணைகளால் கர்ணனை மீண்டும் துளைத்தான். பிறகு கர்ணன், எண்ணற்ற கணைகளால், பீமனின் வில்லை அதன் கைப்பிடியில் இரண்டாக வெட்டினான்.(36) அவனது {பீமனது} வில்லை வெட்டிய பிறகு, அவன் {கர்ணன்}, பெரும் கூர்மை கொண்டதும், அனைத்து வகைக் கவசங்களையும் ஊடுருவவல்லதுமான கணையொன்றால் மீண்டும் அவனது {பீமனது} நடுமார்பைத் துளைத்தான்.(37) அப்போது மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட விருகோதரன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உடலின் முக்கியப் பகுதிகள் எவை என்பதை முழுமையாக நன்கறிந்தவனாகக் கூரிய கணைகள் பலவற்றால் சூதன் மகனைத் {கர்ணனைத்} துளைத்தான்.(38)

வேடனொருவன் சுடர்மிக்கப் பந்தங்கள் பலவற்றால் காட்டில் செருக்குமிக்க மதங்கொண்ட யானை ஒன்றைத் தாக்குவதைப் போலக் கர்ணன் இருபத்தைந்து கணைகளால் அவனை {பீமனைத்} துளைத்தான்.(39) அக்கணைகளால் அங்கங்கள் சிதைக்கப்பட்டுச் சினத்தால் கண்கள் சிவந்த அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, பழிவாங்கும் ஆசையாலும், கோபத்தாலும் உணர்வற்றவனாகி, சூதன் மகனைக் {கர்ணனைக்} கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, (40) பெரும் வேகம் கொண்டதும், பெரும் கடினத்தைத் தாங்க வல்லதும், மலைகளையே துளைக்கத் தகுந்ததுமான ஒரு சிறந்த கணையைத் தன் வில்லில் பொருத்தினான்.(41) வில்லின் நாண்கயிற்றைத் தன் காதுவரை இழுத்தவனும், காற்றுதேவனின் மகனுமான அந்தப் பெரும் வில்லாளி {பீமன்}, கோபத்தால் நிறைந்து, கர்ணனுக்கு ஒரு முடிவை ஏற்படுத்த விரும்பி அந்தக் கணையை ஏவினான்.(42)

வலிமைமிக்கப் பீமனால் இவ்வாறு ஏவப்பட்ட அந்தக் கணை, இடியைப் போன்ற ஒலியை உண்டாக்கி, மலைகளையே துளைத்துச் செல்லும் வஜ்ரத்தைப் போல அந்தப் போரில் கர்ணனைத் துளைத்துச் சென்றது.(43) ஓ! குருகுலத்தைத் தழைக்கச் செய்பவரே {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் தாக்கப்பட்டவனும், (உமது படைகளின்) தலைவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, உணர்வற்றவனாகக் கீழே தன் தேர்தட்டில் அமர்ந்தான். (44) அப்போது தன் உணர்வுகளை இழந்து விட்ட சூதன் மகனை {கர்ணனைக்} கண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அந்தப் போர்க்கள ரத்தினத்தை {கர்ணனைத்} அந்தப் போரில் இருந்து தன் தேரில் வெளியே கொண்டு சென்றான்.(45) கர்ணனின் தோல்விக்குப் பிறகு, பீமசேனன், தானவர்களை முறியடிக்கும் இந்திரனைப் போல அந்தப் பரந்த தார்தராஷ்டிரப் படையை முறியடிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(46)

பீமனின் பராக்கிரமம்! – கர்ண பர்வம் பகுதி – 51-கர்ணனைக் காப்பதற்குத் தன் தம்பிகளை அனுப்பிய துரியோதனன்; திருதராஷ்டிரன் மகன்களில் அறுவரைக் கொன்ற பீமன்; பீமனோடு மீண்டும் மோதிய கர்ணன்; பீமனின் வில்லை அறுத்த கர்ணன்; பீமனால் தாக்கப்பட்டு உடல் நடுங்கிய கர்ணன்; பீமனின் கொடிமரம், சாரதி மற்றும் தேரை அழித்த கர்ணன்; தன் கதாயுதத்தால் எழுநூறுக்கும் மேற்பட்ட யானைகளைக் கொன்ற பீமன்; பீமனைக் கண்டு அஞ்சி ஓடிய கௌரவர்கள்; மூவாயிரம் குதிரைவீரர்களைத் தன் கதாயுதத்தாலேயே கொன்ற பீமன்; கர்ணனிடம் இருந்து தப்பி ஓடிய யுதிஷ்டிரன்; கர்ணன் யுதிஷ்டிரனைத் தொடர்வதைத் தடுத்து அவனோடு மோதிய பீமன்; பீமனின் துணைக்கு வந்த சாத்யகி; சூரியன் நடுவானை அடைந்தது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்தக் கர்ணனை நெடுஞ்சாண் கிடையாக அவனது தேரில் கிடக்கச் செய்த பீமனின் சாதனையானது அடைவதற்கு மிக அரிதானது.(1) “சிருஞ்சயர்களோடு சேர்த்துப் பாண்டவர்களைக் கொல்வதற்குக் கர்ணன் ஒருவனே இருக்கிறான்” என்பதையே, ஓ! சூதா {சஞ்சயா}, துரியோதனன் என்னிடம் அடிக்கடி சொல்வது வழக்கம்.(2) எனினும், போரில் இப்போது பீமனால் வீழ்த்தப்பட்ட ராதையின் மகனைக் {கர்ணனைக்} கண்டு, என் மகன் துரியோதனன் அடுத்ததாக என்ன செய்தான்?” என்று கேட்டான்.(3)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் பெரும் போரில் புறமுதுகிட்ட சூத வகையைச் சார்ந்த ராதையின் மகனை {கர்ணனைக்} கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன்னுடன் பிறந்த தம்பிகளிடம்,(4) “நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. நீங்கள் வேகமாகச் சென்று, பீமசேனனிடம் உண்டான அச்சத்தால் அடியற்ற துன்பப் பெருங்கடலில் மூழ்கியிருக்கும் ராதையின் மகனை {கர்ணனைக்} காப்பீராக” என்றான்.(5) மன்னனால் {துரியோதனனால்} இவ்வாறு ஆணையிடப்பட்ட அந்த இளவரசர்கள், கோபத்தால் தூண்டப்பட்டு, பீமசேனனைக் கொல்லும் விருப்பத்தில், சுடர்மிக்க நெருப்பை நோக்கிச் செல்லும் பூச்சிகளைப் போல அவனை {பீமனை} நோக்கி விரைந்து சென்றனர்.(6) அவர்கள், சுருதர்வான் {சுருதாயு}, துர்த்தரன், கிராதன், விவித்ஸு, விகடன், சோமன் {ஸமன்}, நிஷங்கி, கவசி, பாசி, நந்தன், உபநந்தகன்,(7) துஷ்பிரதர்ஷன், சுபாஹு, வாதவேகன், சுவார்ச்சஸஸ், தனுக்ராஹன், துர்மதன், ஜலசந்தன், சலன், ஸஹன் ஆகியோர் ஆவர்[1].(8)பெருந்தேர்ப்படையொன்றால் சூழப்பட்ட அந்த இளவரசர்கள், பெரும் சக்தியோடும், வலிமையோடும், பீமசேனனை அணுகி, அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(9) அவர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனை நோக்கிப் பல்வேறு வகைகளிலான கணைமாரிகளைப் பொழிந்தனர். இவ்வாறு அவர்களால் பீடிக்கப்பட்டவனும், பெரும் பலம் கொண்டவனுமான பீமன்,(10) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன்னை எதிர்த்து வந்த அந்த உமது மகன்களுக்கு மத்தியில் இருந்த முதன்மையான ஐம்பது தேர்வீரர்களையும், வேறு ஐநூறு பேரையும் வேகமாகக் கொன்றான்[2].(11) பிறகு, சினத்தால் நிறைந்த பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்}, முழு நிலவுக்கு ஒப்பான முகத்தால் அருளப்பட்டதும், காதுகுண்டலங்கள் மற்றும் தலைக்கவசத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான விவித்சுவின் தலையைத் தாக்கி வீழ்த்தினான். இவ்வாறு வெட்டப்பட்ட அந்த இளவரசன் கீழே பூமியில் விழுந்தான்.(12) தங்கள் வீரச் சகோதரன் கொல்லப்பட்டதைக் கண்ட (பிற) சகோதரர்கள், ஓ! தலைவா, அந்தப் போரில் பயங்கரமான ஆற்றலைக் கொண்ட பீமனை நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்து சென்றனர்.(13)பயங்கர ஆற்றலைக் கொண்டவனான பீமன், அந்தப் போரில் அகன்ற தலை கொண்ட வேறு கணைகள் {பல்லங்கள்} இரண்டால், உமது மகன்களில் மேலும் இருவரின் உயிரை எடுத்தான்.(14) இரண்டு தெய்வீக இளைஞர்களைப் போலத் தெரிந்த விகடன் மற்றும் சஹன் ஆகிய அவர்கள் இருவரும், புயலால் வேரோடு சாய்க்கப்பட்ட இரு மரங்களைப் போலப் பூமியில் விழுந்தனர்.(15) அப்போது ஒரு கணத்தையும் இழக்காத பீமன், கூர்முனை கொண்ட நீண்ட கணையொன்றால் {நாராசம் ஒன்றால்} கிராதனை யமலோகம் அனுப்பி வைத்தான். அந்த இளவரசன் உயிரை இழந்து கீழே பூமியில் விழுந்தான்.(16) அப்போது, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, பெரும் வில்லாளிகளான உமது வீரமகன்கள் அனைவரும் இவ்வாறு கொல்லப்படுகையில் உரத்தத் துன்பக் கதறல்கள் அங்கே எழுந்தன.(17) அந்தத் துருப்புகள் மீண்டும் கலங்கடிக்கப்பட்டபோது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கப் பீமன், அந்தப் போரில், நந்தன் மற்றும் உபநந்தகன் ஆகியோரையும் யமலோகம் அனுப்பி வைத்தான்[3].(18) அதன் பேரில் உமது மகன்கள் மிகவும் கலங்கடிக்கப்பட்டு, யுக முடிவின் அந்தகனைப் போல அந்தப் போரில் நடந்து கொண்ட பீமசேனனைக் கண்டு அச்சமடைந்து தப்பி ஓடினர்.(19)

அந்த உமது மகன்கள் கொல்லப்பட்டதைக் கண்டு, உற்சாகத்தை இழந்த இதயத்துடன் கூடிய சூதன் மகன் {கர்ணன்}, அன்னங்களின் வண்ணத்தைக் கொண்ட தன் குதிரைகளை மீண்டும் பாண்டுவின் மகன் {பீமன்} இருக்கும் இடத்திற்குத் தூண்டினான்.(20) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} தூண்டப்பட்ட அக்குதிரைகள் பெரும் வேகத்துடன் பீமசேனனின் தேரை அடைந்து போரில் கலந்தது.(21) ஓ! ஏகாதிபதி, போரில் கர்ணனுக்கும், பாண்டுவின் மகனுக்கும் {பீமனுக்கும்} இடையில் மீண்டும் ஏற்பட்ட இந்த மோதல், ஓ! மன்னா, மிகக் கடுமையானதாகவும், அச்சம் நிறைந்ததாகவும், பெரும் ஆரவராம் நிறைந்ததாகவும் ஆனது.(22) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பதைக் கண்ட {சஞ்சயனாகிய} நான், அந்தப் போரில் மேற்கொண்டு நடப்பவற்றை அறிய மிகுந்த ஆவல் கொண்டவனானேன்.(23)

அப்போது, போரில் தன் ஆற்றலைக் குறித்துத் தற்புகழ்ச்சி செய்து கொண்ட பீமன், ஓ! மன்னா, உமது மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சிறகு படைத்த கணைமாரியால் கர்ணனை அம்மோதலில் மறைத்தான்.(24) பிறகு, மிக உயர்ந்த ஆயுதங்களை அறிந்த போர்வீரனான கர்ணன், கோபத்தால் நிறைந்து, முழுக்க இரும்பாலானவையும், அகன்ற தலை கொண்டவையும், நேரானவையுமான ஒன்பது கணைகளால் {பல்லங்களால்} பீமனைத் துளைத்தான்.(25) அதன்பேரில், வலிமைமிக்கக் கரங்களையும், பயங்கர ஆற்றலையும் கொண்ட பீமன், கர்ணனால் இவ்வாறு தாக்கப்பட்டதும், தன் காது வரை இழுக்கப்பட்ட வில்லின் நாண்கயிற்றில் இருந்த ஏழு கணைகளை ஏவி தன்னைத் தாக்கியவனைத் துளைத்தான்.(26) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலப் பெருமூசுவிட்ட கர்ணன், அடர்த்தியான கணைமாரியால் அந்தப் பாண்டுவின் மகனை {பீமனை} மறைத்தான்.(27) வலிமைமிக்கப் பீமனும், கௌரவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அடர்த்தியான கணைப்பொழிவால் அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை {கர்ணனை} மறைத்துப் பெருமுழக்கம் செய்தான்.(28)

அப்போது சினத்தால் நிறைந்த கர்ணன், தன் வில்லை உறுதியாகப் பிடித்துக்கொண்டு, கல்லில் கூராக்கப்பட்டவையும், கங்க இறகுகளைக் கொண்டவையுமான பத்து கணைகளால் பீமனைத் துளைத்தான்.(29) பெருங்கூர்மை கொண்ட மற்றொரு அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} பீமனின் வில்லையும் அவன் {கர்ணன்} அறுத்தான். அப்போது வலிமைமிக்கக் கரங்களையும், பெரும் பலத்தையும் கொண்ட பீமன், சணல் கயிறுகளால் சுற்றிலும் கட்டப்பட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டும், காலனின் இரண்டாம் தண்டாயுதம் போன்றதுமான ஒரு பயங்கரமான பரிகத்தை எடுத்துக் கொண்டு கர்ணனை ஒரே அடியாகக் கொல்லும் விருப்பத்தோடு, பெருமுழக்கத்துடன் அதை அவன் மீது வீசினான்.(30,31) எனினும் கர்ணன், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான எண்ணற்ற கணைகளால், இடியைப் போலப் பெருமுழக்கம் செய்து கொண்டு தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த அந்தப் பரிகத்தைப் பல துண்டுகளாக வெட்டினான்.(32) பிறகு, பகைவரின் துருப்புகளைக் கலங்கடிப்பவனான பீமன், பெரும்பலம் கொண்ட தன் வில்லைப் பிடித்து, கூரிய கணைகளால் கர்ணனை மறைத்தான்.(33) அந்தச் சந்திப்பில் கர்ணனுக்கும், பாண்டுவின் மகனுக்கும் {பீமனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போரானது, ஒன்றையொன்று கொல்ல விரும்பும் பெருஞ்சிங்கங்களின் இரண்டிற்கிடையிலான போரைப் போல ஒரு கணத்தில் அச்சந்தருவதாக மாறியது.(34)

அப்போது கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வில்லைப் பெரும்பலத்தோடு வளைத்து, நாண்கயிற்றைத் தன் காது வரை இழுத்து மூன்று கணைகளால் பீமசேனனைத் துளைத்தான்.(35) கர்ணனால் ஆழத்துளைக்கப்பட்டவனும், பலம் கொண்டோர் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தப் பெரும் வில்லாளி {பீமன்}, தன் எதிராளியின் உடலைத் துளைத்துச் செல்லக்கூடிய ஒரு பயங்கரக் கணையை எடுத்தான்.(36) அந்தக் கணையானது, கர்ணனின் கவசத்தைப் பிளந்து, அவனது உடலையும் துளைத்துக் கடந்து சென்று, எறும்புப்புற்றுக்குள் செல்லும் பாம்பொன்றைப் போலப் பூமிக்குள் நுழைந்தது.(37) அந்தத் தாக்குதலுடைய பலத்தின் விளைவால், பெரிதும் வலியை உணர்ந்த கர்ணன் மிகவும் கலக்கமடைந்தான். உண்மையில் அவன் {கர்ணன்}, நிலநடுக்கத்தின் போது குலுங்கும் மலையெனத் தன் தேரில் நடுங்கினான்.(38)

அப்போது சினத்தால் நிறைந்த கர்ணன், ஓ! மன்னா, பதிலடி கொடுக்க விரும்பி, இருபத்தைந்து கணைகளாலும், இன்னும் பலவற்றாலும் பீமனைத் தாக்கினான்.(39) பிறகு அவன் வேறு ஒரு கணையால் பீமசேனனின் கொடிமரத்தை அறுத்து, தான் விடுத்த மற்றொரு அகன்ற தலை கணையால் {பலத்தால்} பீமனின் சாரதியை யமனின் முன்னிலைக்கு அனுப்பினான்.(40) அடுத்ததாக மற்றொரு சிறகு படைத்த கணையால் பாண்டு மகனின் {பீமனின்} வில்லை வேகமாக அறுத்த கர்ணன், பயங்கரச் சாதனைகளைச் செய்த பீமனைத் தேரிழக்கச் செய்தான்.(41) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {திருதராஷ்டிரரே}, தன் தேரை இழந்தும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், {ஆற்றலில்} காற்று தேவனுக்கு ஒப்பானவனுமான பீமன், ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தன் சிறந்த வாகனத்தில் இருந்து கீழே குதித்தான்.(42) உண்மையில் பெருஞ்சீற்றத்துடன் தன் தேரில் இருந்து கீழே குதித்த பீமன், ஓ! மன்னா, கூதிர் கால மேகங்களை அழிக்கும் {விரட்டும்} காற்றைப் போல உமது துருப்புகளைக் கொல்லத் தொடங்கினான்.(43)

எதிரிகளை எரிப்பவனும், கோபத்தால் நிறைந்தவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஏர்க்கலப்பைகளைப் போலப் பெரிய தந்தங்களைக் கொண்டவையும், பகைவரின் துருப்புகளைத் தாக்கும் திறன் கொண்டவையுமான எழுநூறு யானைகளைத் திடீரென முறியடித்தான் {தாக்கினான்}.(44) பெரும் பலத்தைக் கொண்டவனும், யானைகளின் முக்கிய அங்கங்கள் எவை என்தை அறிந்தவனுமான அவன், அவற்றின் நெற்றிப்பொட்டுகளையும், கும்பப் பகுதிகளையும், தந்தக் கட்டுகளிலும் தாக்கினான்.(45) அதன்பேரில் அச்சமடைந்த அவ்விலங்குகள் தப்பி ஓடின. ஆனால் தங்கள் சாரதிகளால் மீண்டும் தூண்டப்பட்ட அவை, சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல மீண்டும் பீமசேனனைச் சூழ்ந்து கொண்டன.(46) தன் வஜ்ரத்தால் மலைகளை வீழ்த்தும் இந்திரனைப் போல அந்தப் பீமன், சாரதிகள், ஆயுதங்கள் மற்றும் கொடிமரங்களோடு கூடிய அந்த எழுநூறு யானைகளையும் தன் கதாயுதத்தால் நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்தினான்.(47) எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தக் குந்தியின் மகன் அடுத்ததாக, பெரும் பலத்தைக் கொண்டவையும், சுபலன் மகனுக்கு {சகுனிக்குச்} சொந்தமானவையுமான ஐம்பத்திரண்டு யானைகளை அடித்து வீழ்த்தினான்.(48)

உமது படையை எரித்துக் கொண்டிருந்த அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, பிறகு அந்தப் போரில், முதன்மையான தேர்களில் ஒரு நூறையும், காலாட்படை வீரர்களில் பல நூற்றுக்கணக்கானவர்களையும் அழித்தான்.(49) சூரியனாலும், உயர் ஆன்ம பீமனாலும் எரிக்கப்பட்ட உமது படையானது, நெருப்பில் பரப்பட்ட ஒரு தோல் துண்டைப் போலச் சுருங்கத் தொடங்கியது.(50) ஓ! பாரதக் குலத்தின் காளையே அந்த உமது துருப்புகள், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தினால் கவலையில் நிறைந்து, அந்தப் போரில் பீமனைத் தவிர்த்துவிட்டு, அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடின.(51) அப்போது சிறந்த கவசங்களைத் தரித்த ஐநூறு தேர்வீரர்கள், பெரும் முழக்கங்களைச் செய்தபடியும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அடர்த்தியான கணைமாரியைப் பொழிந்தபடியும், பீமனை நோக்கி விரைந்தனர்.(52) அந்தப் பீமன், அசுரர்களை அழிக்கும் விஷ்ணுவைப் போலத் துணிச்சல் மிக்கப் போர்வீரர்களை, அவர்களது சாரதிகள், தேர்கள், கொடிகள், கொடிமரங்கள் மற்றும் ஆயுதங்களுடன் சேர்த்துத் தன் கதாயுதத்தால் அழித்தான்.(53)

அப்போது, சகுனியால் அனுப்பப்பட்டவர்களும், துணிச்சல்மிக்க மனிதர்களால் மதிக்கப்படுபவர்களுமான மூவாயிரம் குதிரைவீரர்கள், ஈட்டிகள், வாள்கள் மற்றும் வேல்களுடன் பீமனை நோக்கி விரைந்தனர்.(54) அவர்களை நோக்கி மூர்க்கமாகச் சென்ற அந்த எதிரிகளைக் கொல்பவன், பல்வேறு வழித்தடங்களில் சென்று தன் கதாயுதத்தால் அவர்களைக் கொன்றான்.(55) பெரும்பாறைகளால் தாக்கப்படும்போது, யானை மந்தைகளுக்கு மத்தியில் எழுவதைப் போலப் பீமனால் தாக்கப்பட்ட அவர்களுக்கு மத்தியில் உரத்த கூச்சல்கள் எழுந்தன.(56) அவ்வழியில் சுபலன் மகனின் {சகுனியின்} மூவாயிரம் {3000} சிறந்த குதிரைகளைக் கொன்ற அவன், மற்றொரு தேரில் ஏறிக் கொண்டு, சினத்தால் நிறைந்து ராதையின் மகனை எதிர்த்துச் சென்றான்.(57)

அதேவேளையில் கர்ணனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவனான தர்மன் மகனை {யுதிஷ்டிரனை} அடர்த்தியான கணைமாரியால் மறைத்து, அவனது சாரதியையும் வீழ்த்தினான்.(58) பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {கர்ணன்}, அந்தப் போரில் இருந்து யுதிஷ்டிரன் தப்பி ஓடுவதைக் கண்டு, கங்க இறகுகளாலானவையும், நேராகச் செல்லக்கூடியவையுமான கணைகள் பலவற்றை ஏவிக்கொண்டே அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.(59) காற்றுதேவனின் மகன் {பீமன்}, சினத்தால் நிறைந்து, தன் கணைகளால் மொத்த ஆகாயத்தையும் மறைத்து, மன்னனை {யுதிஷ்டிரனைப்} பின் தொடர்ந்து சென்ற கர்ணனை அடர்த்தியான கணைமாரியால் மறைத்தான்.(60) பின்தொடர்வதில் இருந்து திரும்பியவனும், எதிரிகளை நொறுக்குபவனுமான ராதையின் மகன் {கர்ணன்}, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கூரிய கணைகளால் பீமனை வேகமாக மறைத்தான்.(61) அப்போது அளவிலா ஆன்மா கொண்டவனான சாத்யகி, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமனின் தேர் அருகே தன்னை நிறுத்திக் கொண்டு, பீமனின் முன்பு இருந்த கர்ணனைப் பீடிக்கத் தொடங்கினான்.(62) சாத்யகியால் அதிகம் பீடிக்கப்பட்டாலும், கர்ணன் பீமனையே அணுகினான். வில்தரித்தோர் அனைவருக்கு மத்தியில் காளைகளும், பெருஞ்சக்தி கொண்டவர்களுமான அவ்விருவரும், ஒருவரையொருவர் அணுகி அழகிய கணைகளை ஏவியபோது மிகப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(63)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} ஆகாயத்தில் அவர்களால் பரப்பப்பட்ட அந்தக் கணைகள், நாரைகளின் சுடர்மிக்க முதுகுகளைப் போல, மிகக் கடுமையாகவும், பயங்கரமாகவும் தெரிந்தன.(64) அந்த ஆயிரங்கணைகளின் விளைவால், ஓ! மன்னா, அதற்கும் சூரியக் கதிர்களையோ, முக்கிய, அல்லது துணைத் திசைப்புள்ளிகளையோ எங்களாலும், எதிரியாலும் காண முடியவில்லை.(65) உண்மையில், நடுப்பகலில் ஒளிரும் சுடர்மிக்கச் சூரியப் பிரகாசமானது, கர்ணன் மற்றும் பாண்டுவின் மகனால் {பீமனால்} ஏவப்பட்ட அடர்த்தியான கணைமாரியால் விலக்கப்பட்டது.(66) சுபலனின் மகன் {சகுனி}, கிருதவர்மன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அதிரதன் மகன் {கர்ணன்}, கிருபர் ஆகியோர் பாண்டவர்களுடன் போரிடுவதைக் கண்ட கௌரவர்கள் திரண்டு மீண்டும் போரிடத் திரும்பி வந்தனர்.(67) ஓ! ஏகாதிபதி, தங்கள் எதிரிகளை எதிர்த்து மூர்க்கமாக விரைந்த அந்தப் படையுண்டாக்கிய ஆரவாரமானது, மழைகளால் நிரம்பிய பெருங்கடல்களால் உண்டாக்கப்படும் பயங்கர ஒலிக்கு ஒப்பாக மகத்தானதாக இருந்தது.(68) போரில் சீற்றத்துடன் ஈடுபட்ட அவ்விரு படைகளும், போர்வீரர்களைக் கண்டு, அந்தப் பயங்கர ஆபத்தில் ஒன்றையொன்று பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியால் நிறைந்தன.(69)

சூரியன் நடுவானை எட்டியபோது தொடங்கிய அந்தப் போரானது, இதுவரை நம்மால் கேள்விப்படாததைப் போலவும், காணப்படாததைப் போலவும் இருந்தது.(70) ஒரு பரந்த படையானது, பெரும் நீர்நிலையான ஒன்று பெருங்கடலை நோக்கி வரைவதைப் போல மற்றொரு பரந்த படையை எதிர்த்து விரைந்தது.(71) இரு படைகளும் ஒருவரையொருவர் நோக்கி முழங்கிய போது எழுந்த ஆரவாரமானது, பல பெருங்கடல்கள் ஒன்றோடொன்று கலந்தால் கேட்கப்பட்டவதைப் போல ஆழமானதாகவும் உரக்கவும் இருந்தது.(72) உண்மையில் அந்தச் சீற்றமிகு படைகள் இரண்டும், ஒன்றையொன்று நோக்கிப் பாயும் இரு சீற்றமிக்க ஆறுகள் ஒன்றாக ஒரே திரளாகக் கலக்கப்போகவதைப் போல ஒன்றையொன்று அணுகின.(73)

அதன் பிறகு, பெரும் புகழை வெல்ல விரும்பியவர்களான குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருவருக்கிடையில் தொடங்கிய போரானது, பயங்கரமானதாகவும், அச்சந்தருவதாகவும் இருந்தது.(74) கூச்சலிட்ட போர்வீர்களின் முற்றிலும் குழப்பமான ஒலிகள், ஓ! பாரத அரசரே, அவர்கள் ஒருவரையொருவர் பெயர் சொல்லி அழைத்தபோது இடையறாமல் கேட்கப்பட்டன.(75) ஒருவன், தனது தந்தை அல்லது தாயின் தரப்பிலிருந்தோ, செயல்கள் அல்லது நடத்தையிலிருந்தோ பெற்ற கேலிக்குரிய எந்தக் காரியமும், அவனது எதிரியால் அந்தப் போரில் அறிவிக்கப்பட்டது.(76) அந்தப் போரில் ஒருவரையொருவர் உரக்க நிந்தித்துக் கொள்ளும் அந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர்களைக் கண்ட நான், ஓ! மன்னா, அவர்களது வாழ்நாள் காலம் முடிந்து விட்டது என்றே நினைத்தேன்.(77) அளவிலா சக்தி கொண்ட அந்தக் கோபக்கார வீரர்களின் உடல்களைக் கண்டு, வரப்போகும் பயங்கர விளைவுகளைக் குறித்த ஒரு பெரும் அச்சம் என் இதயத்திற்குள் நுழைந்தது.(78) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஆகிய அனைவரும், ஒருவரையொருவர் தாக்கித் தங்கள் கூரிய கணைகளால் ஒருவரையொருவர் சிதைக்கத் தொடங்கினர்” {என்றான் சஞ்சயன்}.(79)

பலவீனமடைந்த கௌரவப் படை! – கர்ண பர்வம் பகுதி – 52-இரு படைகளுக்கும் இடையில் நடந்த கடும்போர்; உயிரினங்களின் ருத்ரசூனைக்கு ஒப்பான பயங்கரத்தை அடைந்த போர்க்களம்; நால்வகைப் படைகளும் தங்களுக்குள் மோதிக்கொண்ட விதம்; பலவீனமடைந்த கௌரவப் படை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் எதிர்த்துப் பகை உணர்வுகளை வளர்த்து வந்தவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களுமான க்ஷத்திரியர்கள், அந்தப் போரில் ஒருவரையொருவர் கொல்லத் தொடங்கினர்.(1) ஓ! மன்னா, தேர்க்கூட்டங்கள், குதிரைகளின் பெரும்படைகள், காலாட்படைப்பிரிவுகள், பெரும் எண்ணிக்கையிலான யானைகள் ஆகியவை அந்தப் போரில் ஒன்றோடொன்று கலந்தன.(2) அந்தப் பயங்கரப் போரில், ஒருவர் மீதொருவர் வீசிக்கொண்ட கதாயுதங்கள், முள் பதித்த தண்டங்கள் {பரிகங்கள்}, குணபங்கள் {சக்திகள்}, வேல்கள் {பராசங்கள்}, குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, ஏவுகணைகள் {முசுண்டிகள்} ஆகியவை விழுவதை நாங்கள் கண்டோம்.(3) காணப் பயங்கரமான கணைமாரிகள், விட்டிற்பூச்சிகளைப் போலப் பறந்தன. யானைகளை அணுகிய யானைகள், ஒன்றையொன்று முறியடித்தன.(4)

அந்தப் போரில் குதிரைவீரர்களோடு மோதிய குதிரைவீரர்கள், தேர்வீரர்களோடு மோதிய தேர்வீரர்கள், காலாட்படை வீரர்களோடு மோதிய காலாட்படை வீரர்கள், குதிரைவீரர்களைச் சந்தித்த காலாட்படைவீரர்கள்,(5) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள் மற்றும் யானைகளைச் சந்தித்த காலாட்படைவீரர்கள், யானைகள் மற்றும் குதிரைவீரர்களைச் சந்தித்த தேர்கள், பிற மூன்று வகைப் படைகளைப் பெரும் வேகத்தோடு சந்தித்த யானைகள் ஆகியன ஒன்றையொன்று நசுக்கிக் கலங்கடிக்கத் தொடங்கின.(6) அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, தங்கள் குரல்களின் உச்சியில் கூச்சலிட்டதன் விளைவால், அந்தப் போர்க்களமானது உயிரினங்களின் (உயிரினங்களைக் கொல்லும் ருத்ரனின்) சூனைக்கு {இறைச்சிக் கொட்டிலுக்கு} ஒப்பான அச்சத்தைத் தருவதாக இருந்தது.(7) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, குருதியால் மறைக்கப்பட்ட பூமியானது, மழைக்காலங்களில் செம்பட்டுப்பூச்சிகளால் {இந்திரகோபங்களால்} மறைக்கப்பட்ட பரந்த நிலத்தைப் போல அழகாகத் தெரிந்தது.(8) உண்மையில் பூமியானது, செக்கச்சிவந்த சாயம் பூசப்பட்ட வெண்ணிற ஆடைகளை உடுத்தியிருக்கும் பேரழகு இளங்கன்னிகையின் குணங்களையே அப்போது ஏற்றிருந்தது.(9) சதை, குருதி ஆகியவற்றால் பன்னிறங்கொண்ட அந்தப் போர்க்களமானது, எங்கும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதைப் போல இருந்தது. உடலிலிருந்து அறுக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான சிரங்களும், ஓ! பாரதரே, கரங்கள், தொடைகள், காதுகுண்டலங்கள், போர்வீரர்களின் உடல்களில் இடம்பெயர்ந்திருந்த பிற ஆபரணங்கள்,(10) கழுத்தணிகள், மார்புக்கவசங்கள், துணிவுமிக்க வில்லாளிகளின் உடல்கள், கவசங்கள், கொடிகள் ஆகியனவும் தரையில் சிதறிக் கிடந்தன.(11)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யானைகளை எதிர்த்து வந்த யானைகள், தங்கள் தந்தங்களால் ஒன்றையொன்று கிழித்துக் கொண்டன. எதிராளியின் தந்தங்களால் தாக்கப்பட்ட யானைகள் மிக அழகாகத் தெரிந்தன.(12) குருதியில் குளித்த அந்தப் பெரும் உயிரினங்கள் {யானைகள்}, தங்கள் சாரல்களில் ஓடைகளாகப் பாயும் தாதுக்களால் அலங்கரிக்கப்பட்ட அசையும் மலைகளைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(13) குதிரைவீரர்களால் வீசப்பட்ட வேல்கள், அல்லது பகை போராளிகளால் பக்கவாட்டில் கொள்ளப்பட்டவற்றை {வேல்களைப்}, பிடித்துக் கொண்ட அவ்விலங்குகளில் பல, அவ்வாயுதங்களை வளைத்து முறித்தன.(14) கணைகளால் கவசங்கள் வெட்டப்பட்ட பல யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குளிர்காலத்தின் தொடக்கத்தில் மேகங்களற்றுக் காணப்படும் மலைகளைப் போலத் தெரிந்தன.(15) பல முதன்மையான யானைகள், தங்கச் சிறகுகளைக் கொண்ட கணைகளால் துளைக்கப்பட்டு, ஓ! ஐயா, சுடர்மிக்கப் பந்தங்களால் ஒளியூட்டப்பட்ட சிகரங்களைக் கொண்ட மலைகளைப் போல மிக அழகாகத் தெரிந்தன.(16) மலைகளைப் போலப் பெரியவையாக இருந்த அவ்வுயிரினங்களில் சில, பகையானைகளால் தாக்கப்பட்டு அந்தப் போரில் சிறகு படைத்த மலைகளைப் (சிறகு படைத்த மலைகள் தங்கள் சிறகுகள் வெட்டப்பட்டதும் விழுவதைப்) போலக் கீழே விழுந்தன.(17) கணைகளால் பீடிக்கப்பட்ட இன்னும் பிற {யானைகள்}, தங்கள் காயங்களால் மிகவும் வலியை உணர்ந்து, தங்கள் மத்தகம், அல்லது தங்கள் தந்தங்களுக்கு இடையிலான பகுதிகளால் பூமியைத் தீண்டி கீழே விழுந்தன {தலைகுப்புற விழுந்தன}.(18) வேறு சில யானைகளோ சிங்கங்களைப் போல முழங்கின. இன்னும் பலவோ, பயங்கர ஒலிகளை வெளியிட்டபடியே அங்கேயும், இங்கேயும் ஓடின, மேலும் பல, ஓ! மன்னா, வலியால் கதறின.(19)

தங்க இழைகளுடன் கூடிய குதிரைகளும், கணைகளால் தாக்கப்பட்டு, கீழே விழவோ, பலவீனமடையவோ, அனைத்துத் திசைகளிலும் ஓடவோ செய்தன.(20) கணைகள் மற்றும் வேல்களால் தாக்கப்பட்டு, அல்லது, கீழே இழுக்கப்பட்ட வேறு சில {குதிரைகள்}, பூமியில் விழுந்து, பல்வேறு வகைகளிலான அசைவுகளைச் செய்து, வலியால் வேதனையுடன் நெளிந்தன.(21) ஓ! ஐயா, மனிதர்களும் பூமியில் விழுந்து, வலியால் பல்வேறு கூச்சல்களையிட்டனர். தங்கள் உறவினர், தந்தைமார், மற்றும் பாட்டன்மார்,(22) மற்றும் வேறு சிலரைக் கண்ட பிறர், தங்கள் எதிரிகள் பின்வாங்குவதைக் கண்டு, அவர்களுக்கு நன்கறிந்த பெயர்களையும், அவர்களது குலப் பெயர்களையும் சொல்லி ஒருவருக்கொருவர் உரக்கக் கதறினர்.(23) தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட போராளிகள் பலரின் கரங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளால் வெட்டப்பட்டு, பல்வேறு வகை அசைவுகளைச் செய்தபடி தரையில் நெளிந்தன.(24) இப்படி ஆயிரக்கணக்கான கரங்கள் கீழே விழுந்து, மேலே எழுந்தன, மேலும் பல, ஐந்து தலை பாம்புகளைப் போல முன்னோக்கி நகர்வதாகத் தெரிந்தது.(25) சிறுத்துச் செல்லும் பாம்புகளின் உடல்களைப் போலத் தெரிந்தவையும், சந்தனத்தால் பூசப்பட்டவையுமான அக்கரங்கள், ஓ! மன்னா, குருதியில் நனைந்த போது, தங்கத்தாலான சிறு கொடிமரங்களைப் போல அழகாகத் தெரிந்தன.(26) அனைத்துப் பக்கங்களிலும் போரானது மூர்க்கமாகவே நடைபெறுவதே இயல்பாக மாறியதும், போர்வீரர்கள் தாங்கள் போரிடுவோருடனோ, தாக்குவோருடனோ தனித்த உணர்வுகள் ஏதும் இல்லாமல் போரிட்டு ஒருவரையொருவர் கொன்றனர்.(27)

போர்க்களத்தில் புழுதி மேகம் பரவி, பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அடர்த்தியான மழையாகப் பொழிந்தன. இவ்வாறு காட்சி இருளடைந்ததும், போராளிகளால் அதற்கு மேலும் நண்பர்களிடமிருந்து எதிரிகளை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(28) உண்மையில், கடுமையானதும், அச்சத்தை உண்டாக்குவதுமான அந்தப் போரானது இவ்வாறே நடந்தது. விரைவில் குருதிப் புனல்களால் அங்கே பெரும் ஆறுகள் பல பாயத் தொடங்கின.(29) தங்கள் பாறைகளாக அமைந்த போராளிகளின் தலைகளால் அவை {அந்த ஆறுகள்} நிறைந்திருந்தன. போர்வீரர்களின் மயிர், அவற்றின் மேல் மிதக்கும் பாசிகளாகவும், புற்களாகவும் அமைந்தன. எலும்புகளே அவற்றின் மீன்களாகின. விற்கள், கணைகள், கதாயுதங்கள் ஆகியன அவற்றைக் கடக்கும் தெப்பங்களாகின.(30) சதையையும், குருதியையும் அவற்றின் சேறாகக் கொண்டவையும், பயங்கரமானவையும், அச்சத்தை ஏற்படுத்துபவையுமான அந்த ஆறுகள், அங்கே இவ்வாறு உண்டான குருதியோடையால் பெருகி,(31) மருண்டோரின் அச்சங்களையும், துணிவுமிக்கோரின் மகிழ்ச்சியையும் அதிகப்படுத்தின. அச்சத்தைத் தரும் அந்த ஆறுகள் யமனின் வசிப்பிடத்திற்கு வழிகாட்டிச் சென்றன. க்ஷத்திரியர்களை அச்சமடையச் செய்த பலர் அந்த ஓடைகளில் மூழ்கி மாண்டனர்.(32)

ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, ஊனுண்ணும் பல்வேறு உயிரினங்களின் முழக்கம் மற்றும் ஊளையின் விளைவால், அந்தப் போர்க்களமானது, இறந்தோரின் மன்னனுடைய {யமனுடைய} ஆட்சிப்பகுதிகளை {நரகத்தைப்} போலப் பயங்கரத்தை அடைந்தது.(33) அனைத்துப் பக்கங்களிலும் தலையற்ற முண்டங்கள் எண்ணற்றவை எழுந்து நின்றன. பயங்கரமான உயிரினங்கள், ஓ! பாரதரே, சதை மற்றும் குருதியைக் கழுத்துவரை உண்டு, குருதி மற்றும் கொழுப்பைக் குடித்துச் சுற்றிலும் ஆடத்தொடங்கின.(34) காகங்கள், கழுகுகள், நாரைகள் ஆகியன, கொழுப்பு, மஜ்ஜை மற்றும் பிற விலங்குகளின் சதை ஆகியவற்றால் நிறைவடைந்து, மகிழ்ச்சியாகத் திரிவது தெரிந்தது.(35)

எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரர்களாக இருந்த உம்மவர், விடுவதற்குக் கடினமான அச்சங்கள் அனைத்தையும் விட்டு, போர்வீரர்களின் உறுதியை நோற்று, அச்சமற்ற வகையில் தங்கள் கடமைகளைச் செய்தனர்.(36) உண்மையில், எண்ணற்ற கணைகளும், ஈட்டிகளும் காற்றில் எங்குப் பாய்ந்தனவோ, ஊனுண்ணும் பல்வேறு வகை உயிரினங்கள் எங்கு நிறைந்திருந்தனவோ அந்தக் களத்தில், துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், அச்சமில்லாமல் திரிந்து தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்தினர்.(37) ஓ! பாரதரே, ஒருவரோடொருவர் பேசிக்கொண்ட அவர்கள், தங்கள் பெயர்களையும், குடும்பங்களையும் அறிவித்தனர். தங்கள் தந்தைமார் மற்றும் குடும்பங்களை அறிவித்துக் கொண்ட அவர்களில் பலர், ஓ! தலைவா, ஓ! மன்னா, ஈட்டிகள், வேல்கள் மற்றும் போர்க்கோடரிகளால் ஒருவரையொருவர் நொறுக்கத் தொடங்கினர்.(38,39) கடுமையானதும், அச்சத்தை ஏற்படுத்துவதுமான அந்தப் போர் நடந்து கொண்டிருந்த போது கௌரவபடையானது, பெருங்கடலின் ஆழத்தில் நொறுக்கப்பட்ட மரக்கலம் ஒன்றைப் போல அதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையை அடையும் வகையில் பலவீனமடைந்தது” {என்றான் சஞ்சயன்}.(40)

நாகாஸ்திரம் ஏவிய அர்ஜுனன்! – கர்ண பர்வம் பகுதி – 53-ம்சப்தகர்களோடு போரிட்ட அர்ஜுனன்; நெருக்கமாகப் போரிட்ட அந்தப் போர்வீரர்கள் அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் பிடித்துக் கொண்டது; நாகாஸ்திரத்தை ஏவிய அர்ஜுனன்; அதனால் கட்டுண்ட சம்சப்தகர்கள்; கருடாஸ்திரத்தை ஏவிய சுசர்மன்; சம்சப்தகர்களின் கட்டுகள் விலகியது; ஐந்திராயுதத்தை ஏவி சம்சப்தகர்களை அழித்த அர்ஜுனன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; அச்சம் நிறைந்ததாக அமைந்த போர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “க்ஷத்திரியர்கள் பலர் மூழ்கிக் கொண்டிருந்த அந்தப் போர் நடந்து கொண்டிருக்கும்போது, ஓ! ஐயா, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த ஆரவாரத்திற்கும் மேலாகக் காண்டீவத்தின் உரத்த நாணொலியானது, சம்சப்தகர்கள், கோசலர்கள், மற்றும் நாராயணப் படைகளைப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} எங்குக் கொன்று கொண்டிருந்தானோ, அங்கே கேட்டுக் கொண்டிருந்தது.(1,2) சினத்தால் நிரம்பியும், வெற்றிக்கான விருப்பத்துடனும் இருந்த சம்சப்தகர்கள் அந்தப் போரில் அர்ஜுனனின் தலையில் கணைமாரியைப் பொழியத் தொடங்கினர்.(3) எனினும், பலமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா, அந்தக் கணைமாரியை வேகமாகத் தடுத்து, அந்தப் போரில் தேர்வீரர்களில் முதன்மையானோர் பலரைக் கொல்லத் தொடங்கினான்.(4) அந்தத் தேர்ப் படைப்பிரிவுக்குள் மூழ்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, கூராக்கப்பட்டதும், கங்க இறகுகளைக் கொண்டதுமான கணைகளின் உதவியுடன் கூடியவனாகச் சிறந்த ஆயுதங்களைக் கொண்டிருந்த சுசர்மனிடம் வந்தான்.(5)

அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனோ {சுசர்மனோ}, அர்ஜுனன் மீது அடர்த்தியான கணைமாரியைப் பொழிந்தான். அதே வேளையில் சம்சப்தகர்களும் தங்கள் கணைகளால் அர்ஜுனனை மறைத்தனர்.(6) அப்போது பத்து கணைகளால் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்த சுசர்மன், மூன்றால் ஜனார்த்தனனின் {கிருஷ்ணனின்} வலக்கரத்தைத் துளைத்து, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} அர்ஜுனனின் கொடிமரத்தையும் துளைத்தான்.(7) அதன்பேரில், பெரும் வடிவிலானதும், தெய்வீகத் தச்சனின் கைவண்ணத்தில் உருவானதுமான அந்த முதன்மையான குரங்கு, பேரொலிகளை வெளியிடத் தொடங்கி, மிக மூர்க்கமாக முழங்கி உமது துருப்பினரை அச்சுறுத்தியது.(8) குரங்கின் முழக்கங்களைக் கேட்ட உமது படை அச்சமடைந்தது. உண்மையில், பேரச்சத்தினுடைய ஆதிக்கத்தின் கீழ் இருந்த அந்த வியூகமே {படையே} முற்றிலும் செயலற்றுப் போனது.(9) அப்படிச் செயலற்று நின்ற உமது படையானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்வேறு மலர்களால் பூத்துக் குலுங்கும் சைத்ரரதக் காடு போல அழகாகத் தெரிந்தது.(10)

பிறகு, ஓ! குருக்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, தங்கள் உணர்வுகள் மீண்ட அந்தப் போர்வீரர்கள், மலைகளை நனைக்கும் மேகங்களைப் போலத் தங்கள் கணைமாரியால் அர்ஜுனனை நனைத்தனர்.(11) அப்போது அவர்கள் அனைவரும் அந்தப் பாண்டவனின் {அர்ஜுனனின்} பெருந்தேரைச் சூழ்ந்து கொண்டனர். அவனைத் {அர்ஜுனனைத்} தாக்கிய அவர்கள், எப்போதும் கூரிய கணைகளால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டாலும் கூடப் பெருமுழக்கங்களைச் செய்து கொண்டே இருந்தனர்.(12) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவனது {அர்ஜுனனின்} குதிரைகள், தேர்ச்சக்கரங்கள், தேரின் ஏர்க்கால், மற்றும் அந்த வாகனத்தின் பிற அங்கங்கள் ஆகியவற்றைப் பெரும்பலத்தோடு தாக்கியபடியே அவர்கள் சிங்க முழக்கங்கள் பலவற்றைச் செய்தனர்.(13) அவர்களில் சிலர் கேசவனின் {கிருஷ்ணனின்} பருத்த கரங்களைப் பற்றினர், மேலும் அவர்களில் வேறு சிலர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேரில் நின்று கொண்டிருந்தவனான பார்த்தனை {அர்ஜுனனைப்} பெரும் மகிழ்ச்சியோடு பிடித்தனர்.(14) அப்போது, அந்தப் போர்க்களத்தில் தன் கரங்களை அசைத்த கேசவன் {கிருஷ்ணன்}, தன் முதுகில் உள்ள சாரதிகள் {பாகர்கள்} அனைவரையும் உடல் குலுக்கிக் கீழே தள்ளும் பொல்லாத யானையொன்றைப் போலத் தன்னைப் பிடித்த அனைவரையும் கீழே வீசினான்.(15) பிறகு அந்தப் பெரும் தேர்வீரர்களால் சூழப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, தன் தேர் தாக்கப்படுவதையும், கேசவன் தாக்கப்படும் அந்த முறையையும் கண்டு, சினத்தால் நிறைந்து, பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்களையும், காலாட்படைவீரர்களையும் தூக்கி வீசினான்.(16)

மேலும் அவன் {அர்ஜுனன்}, நெருக்கமான போருக்குத் தகுந்தவாறு, தனக்கு நெருக்கமாக இருந்த போராளிகள் அனைவரையும் கணைகள் பலவற்றால் மறைத்தான். கேசவனிடம் பேசிய அவன் {அர்ஜுனன்},(17) “ஓ! கிருஷ்ணா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஆயிரகணக்கில் கொல்லப்பட்டாலும், ஒரு பயங்கரக் காரியத்தை நிறைவேற்றுவதில் ஈடுபடுபவர்களும், எண்ணற்றவர்களாய் இருப்பவர்களுமான இந்தச் சம்சப்தகர்களைப் பார். (18) ஓ! யதுக்களில் காளையே {கிருஷ்ணா}, தன் தேரில் இத்தகைய நெருக்கமான தாக்குதலைத் தாங்கிக் கொள்ளக்கூடியவன் என்னைத் தவிர இவ்வுலகில் வேறு எவனும் இல்லை” என்றான்.(19) பீபத்சு {அர்ஜுனன்}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டுத் தன் சங்கை முழக்கினான். அப்போது கிருஷ்ணனும் தன் சங்கை முழக்கி, அதன் முழக்கத்தால் ஆகாயத்தை நிறைத்தான்.(20) அம்முழக்கத்தைக் கேட்ட சம்சப்தகர்களின் படையானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடுங்கத் தொடங்கிப் பேரச்சம் கொண்டது.(21) பிறகு, பகைவீரர்களைக் கொல்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி, நாகம் என்றழைக்கப்படும் ஆயுதத்தை {நாகாஸ்திரத்தை} அழைத்து, சம்சப்தகர்களின் கால்களை மீண்டும் மீண்டும் முடக்கினான்.(22) கால்களைக் கட்டும் அந்தப் பட்டைகளை {நாகாஸ்திரக் கணைகளைக்} கொண்டு, அந்த உயர் ஆன்மப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} இவ்வாறு கட்டப்பட்ட அவர்கள் அனைவரும் கல்லாகிப் போனவர்களைப் போல அசைவற்றிருந்தனர்.(23) பிறகு, பழங்காலத்தில் தாரகனுடனான போரில் அசுரர்களைக் கொன்ற இந்திரனைப் போல, அசைவற்றிருந்த அந்தப் போர்வீரர்களை அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} கொல்லத் தொடங்கினான்.(24) போரில் இவ்வாறு கொல்லப்பட்ட அவர்கள், அந்தத் தேரை விட்டுவிட்டுத் தங்கள் ஆயுதங்கள் அனைத்தையும் கீழே வீசத் தொடங்கினர்.(25) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கால்கள் முடக்கப்பட்ட அவர்களால், ஓர் அடியேனும் நகர முடியவில்லை. அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, தன் நேரான கணைகளால் அவர்களைக் கொன்றான்.(26) உண்மையில் அந்தப் போரில், காலைக் கட்டும் ஆயுதத்தை அழைத்துப் பார்த்தன் {அர்ஜுனன்} எவர் மீது குறி வைத்து ஏவினானோ, அந்தப் போர்வீரர்கள் அனைவரும், தங்கள் கீழ் அங்கங்களில் பாம்புகளால் கட்டப்பட்டனர்.(27)

அப்போது வலிமைமிக்கத் தேர்வீரனான சுசர்மன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் படை இவ்வாறு முடக்கப்பட்டதைக் கண்டு, சுபர்ணம் என்றழைக்கப்படும் ஆயுதத்தை {கருடாஸ்திரத்தை} விரைவாக அழைத்தான்.(28) அதன்பேரில் எண்ணற்ற பறவைகள் கீழே வந்து, அந்தப் பாம்புகளை விழுங்கத் தொடங்கின., அந்த வானுலாவிகளைக் கண்ட பின்னவையும் {பாம்புகளும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தப்பி ஓடத் தொடங்கின.(29) கால்களைக் கட்டும் அவ்வாயுதத்தில் இருந்து விடுபட்ட அந்தச் சம்சப்தகப் படையானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மேகங்களில் இருந்து விடுபட்டு அனைத்து உயினரங்களுக்கும் ஒளியைத் தரும் சூரியனைப் போலத் தெரிந்தது.(30) இவ்வாறு விடுபட்ட அந்தப் போர்வீரர்கள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தங்கள் கணைகளை மீண்டும் ஏவி, அர்ஜுனனுடைய தேரின் மீது தங்கள் ஆயுதங்களையும் வீசினர். அவர்கள் அனைவரும் பார்த்தனை எண்ணற்ற கணைகளால் துளைத்தனர்.(31) பகைவீரர்களைக் கொல்பவனான அந்த வாசவன் மகன் {இந்திரனின் மகனான அர்ஜுனன்}, அந்த வலிமைமிக்க ஆயுதங்களைத் தன் கணைமாரியால் அறுத்து, அந்தப் போர்வீரர்களையும் கொல்லத் தொடங்கினான்.(32)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது சுசர்மன்,  நேரான கணை ஒன்றால் அர்ஜுனனின் மார்பைத் துளைத்து, மேலும் மூன்று பிற கணைகளாலும் அவனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான்.(33) அதனால் ஆழத்துளைக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்த அர்ஜுனன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தான். அப்போது துருப்புகள் யாவும், “பார்த்தன் கொல்லப்பட்டான்” என்றே உரக்கக் கூச்சலிட்டன.(34) இதனால், சங்குகள், பேரிகைகள் ஆகியவற்றின் முழக்கங்களும், பல்வேறு இசைக்கருவிகளின் ஒலியும், உரத்த சிங்க முழக்கங்களும் அங்கே எழுந்தன.(35) அளவிலா ஆன்மா கொண்டவனும், வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனைத் தன் சாரதியாகக் கொண்டவனுமான பார்த்தன், தன் உணர்வுகள் மீண்டு, வேகமாக ஐந்திர ஆயுதத்தை அழைத்தான்.(36) ஓ! ஐயா ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},, அவ்வாயுதத்தில் இருந்து வெளிப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளால், மன்னர்களும், யானைகளும் கொல்லப்படுவது அனைத்துப் பக்கங்களிலும் காணப்பட்டது.(37) நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணகான குதிரைகள், தேர்கள் ஆகியவையும் அவ்வாயுதத்தால் அந்தப் போரில் கொல்லப்படுவதும் (அழிக்கப்படுவதும்) காணப்பட்டது. அத்துருப்புகள் இவ்வாறு கொல்லப்பட்டபோது, ஓ! பாரதரே ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},, சம்சப்தகர்கள் மற்றும் கோபாலர்கள் ஆகியோர் அனைவரின் இதயங்களிலும் பேரச்சம் நுழைந்தது. அர்ஜுனனோடு போரிட அவர்களில் ஒரு மனிதனும் இருக்கவில்லை.(38,39)

அங்கே, வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அர்ஜுனன் உமது துருப்புகளை அழிக்கத் தொடங்கினான். அந்தப் படுகொலையை அனைவரும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தாமல் முற்றிலும் செயலற்றவர்களாகவே நீடித்தனர்.(40) அப்போது, அந்தப் போரில் முழுமையாகப் பத்தாயிரம் {10000} போராளிகளைக் கொன்ற அந்தப் பாண்டுவின் மகன், ஓ! ஏகாதிபதி ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புகையற்ற சுடர்மிக்க நெருப்பொன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(41) மேலும் அவன் பதினாலாயிரம் {14000} போர்வீரர்களையும், மூவாயிரம் {3000} யானைகளையும் முழுமையாகக் கொன்றான்.(42) பிறகு, மரணத்தையோ, வெற்றியையோ தங்கள் இலக்காக்கிக் கொண்ட சம்சப்தகர்கள் மீண்டும் தனஞ்சயனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.(43) அப்போது, உமது போர்வீரர்களுக்கும், வலிமைமிக்க வீரனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அந்தப் பாண்டுவின் மகனுக்கும் இடையில் நடந்த போரானது அச்சம் நிறைந்ததாக அமைந்தது” {என்றான் சஞ்சயன்}.(44)

சுகேதுவைக் கொன்ற கிருபர்! – கர்ண பர்வம் பகுதி – 54-சிருஞ்சயர்களைக் கொன்ற கிருபர்; கிருபரை எதிர்த்த சிகண்டி; சிகண்டியைத் தேரிழக்கச் செய்த கிருபர்; சிகண்டியைக் காக்க விரைந்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைத் தடுத்த கிருதவர்மன்; சிகண்டியின் கேடயத்தை வெட்டிய கிருபர்; கிருபரை எதிர்கொண்ட பாஞ்சால இளவரசன் சுகேது; பின்வாங்கிய சிகண்டி; சுகேதுவைக் கொன்ற கிருபர்; கிருதவர்மனின் சாரதியை வீழ்த்தி வென்ற திருஷ்டத்யும்னன் கௌரவர்களைத் தடுக்கத் தொடங்கியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கிருதவர்மன், கிருபர், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சூதன் மகன் {கர்ணன்}, உலூகன், சுபலன் மகன் (சகுனி), தன்னுடன் பிறந்த சகோதரர்களுடன் கூடிய மன்னன் {துரியோதனன்} ஆகியோர்,(1) பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} அச்சத்தில் பீடிக்கப்பட்டுப் பெருங்கடலில் உடைந்த மரக்கலமொன்றைப் போல ஒன்றாக நிற்க முடியாத நிலையில் இருக்கும் (குரு) படையைக் கண்டு, பெரும் வேகத்துடன் அதை மீட்க முயன்றனர்.(2) மீண்டும் நடந்த போரானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} ஒரு குறுகிய காலத்திற்கு மிகக் கடுமையானதாகவும், மருண்டோரின் அச்சங்களையும், துணிவுமிக்கோரின் இன்பத்தையும் அதிகரிக்கும் வண்ணம் நடந்தது.(3) அந்தப் போரில் கிருபரால் ஏவப்பட்ட அடர்த்தியான கணை மாரியானது, அடர்த்தியான விட்டிற்பூச்சிகளைப் போலச் சிருஞ்சயர்களை மறைத்தது.(4)

அப்போது சினத்தால் நிறைந்த சிகண்டி, கௌதமர் மகனுக்கு {கௌதமரின் பேரனும், சரத்வானின் மகனுமான கிருபருக்கு} எதிராக வேகமாகச் சென்று, அந்தப் பிராமணக் காளையின் மேல் தன் கணைமாரியை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பொழிந்தான்.(5) உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவரான கிருபர், அந்தக் கணைப்பொழிவைத் தடுத்து, அந்தப் போரில் கோபத்துடன் பத்து கணைகளால் சிகண்டியைத் துளைத்தார்.(6) அப்போது சினத்தால் நிறைந்த சிகண்டி, நேரானவையும், கங்க இறகுகளைக் கொண்டவையுமான ஏழு கணைகளால் அம்மோதலில் கிருபரை ஆழத் துளைத்தான்.(7) பிறகு, பெரும் தேர்வீரரும், இரு பிறப்பாளருமான {பிராமணருமான} அந்தக் கிருபர், அந்தக் கூரிய கணைகளால் ஆழத் துளைக்கப்பட்டு, சிகண்டியை அவனது குதிரைகள், சாரதி மற்றும் தேர் ஆகியவற்றை இழக்கச் செய்தார்.(8) குதிரைகளற்ற தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் (சிகண்டி), ஒரு வாளையும், கேடயத்தையும் எடுத்துக் கொண்டு அந்தப் பிராமணரை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(9) அம்மோதலில் அந்தப் பாஞ்சால இளவரசன் {சிகண்டி} முன்னேறிச் செல்கையில் அவனை நேரான கணைகள் பலவற்றால் கிருபர் மறைத்தது பெரும் ஆச்சரியம் நிறைந்ததாக இருந்தது.(10) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இவ்வாறு தாக்கப்பட்ட) சிகண்டி, முற்றிலும் செயல்பாடின்றியிருக்கும் பறக்கும் (மிதக்கும்) பாறைகளைப் போல இருந்த காட்சியை அந்தப் போரில் நாங்கள் மிக அற்புதம் நிறைந்ததாகவே கண்டோம்.(11)

ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கிருபரால் (கணைகளைக் கொண்டு) மறைக்கப்பட்ட சிகண்டியைக் கண்ட திருஷ்டத்யும்னன், கிருபரை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(12) எனினும் பெரும் தேர்வீரனான கிருதவர்மன், மூர்க்கமாக விரைந்து சரத்வான் மகனை {கிருபரை} எதிர்த்துச் செல்லும் திருஷ்டத்யும்னனை எதிர்கொண்டான்.(13) சரத்வான் மகனின் {கிருபரின்} தேரை நோக்கித் தன் மகன் மற்றும் துருப்புகளுடன் விரைந்த யுதிஷ்டிரனைத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} தடுத்தான்.(14) உமது மகன் துரியோதனன், கணைமாரியை ஏவி கொண்டு, பெரும் வேகத்தைக் கொண்டவர்களான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரையும் எதிர்கொண்டு தடுத்தான்.(15) வைகர்த்தனன் என்று வேறு பெயரில் அழைக்கப்படும் கர்ணனும், ஓ! பாரதரே, அந்தப் போரில் பீமசேனன், காருஷர்கள், கைகேயர்கள் மற்றும் சிருஞ்சயர்களைத் தடுத்தான்.(16)

அதேவேளையில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் சரத்வான் மகன் {கிருபர்}, பெரும் சுறுசுறுப்புடன், சிகண்டியை எரிக்கும் நோக்கோடு, அவன் மீது கணைகள் பலவற்றை ஏவினார்.(17) எனினும் அந்தப் பாஞ்சால இளவரசன் {சிகண்டி} தன் வாளை மீண்டும் மீண்டும் சுழற்றி, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னை நோக்கிக் கிருபரால் ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள் அனைத்தையும் வெட்டினான்.(18) அப்போது கௌதமர் மகன் {கிருபர்}, நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பிருஷதன் மகனுடைய {சிகண்டியுடைய} கேடயத்தைத் தன் கணைகளால் வேகமாக வெட்டினார்.(19) ஓ! ஏகாதிபதி, தன் கேடயத்தை இழந்து கிருபருடைய சக்தியின் ஆளுகைக்குள் இருந்த சிகண்டி, காலனின் கோரப் பற்களுக்கிடையே சிக்கிய நோயாளியைப் போல (கிருபரை நோக்கி) கையில் வாளுடன் விரைந்து சென்றான்.(20)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சந்திரகேதுவின் மகன் சுகேது [1], அவ்வாறு கிருபரின் கணைகளால் தாக்கப்பட்டுத் துயரில் மூழ்கியிருந்த வலிமைமிக்கச் சிகண்டியை நோக்கிச் சென்றான்.(21) உண்மையில் அளவிலா ஆன்மா கொண்டவனும், இளைஞனுமான அந்த இளவரசன், கௌதமரின் தேரை நோக்கி விரைந்து, அந்தப் பிராமணரின் மீது பெருங்கூர்மை கொண்ட எண்ணற்ற கணைகளை அந்தப் போரில் பொழிந்தான்.(22) நோன்புகள் நோற்கும் அந்தப் பிராமணர், போரில் (வேறொருவனுடன்) ஈடுவதைக் கண்ட சிகண்டி, ஓ! மன்னர்களில் சிறந்தவரே, அந்த இடத்தில் இருந்து வேகமாகப் பின்வாங்கினான்.(23) அதே வேளையில் சுகேது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்பது கணைகளால் கௌதமரின் மகனைத் {கிருபரைத்} துளைத்து, மேலும் எழுபதாலும், அதன் பிறகு மீண்டும் மூன்றாலும் துளைத்தான்.(24) ஓ! ஐயா, அதன் பிறகு அந்த இளவரசன் {சுகேது} கிருபரின் கணை பொருத்தப்பட்ட வில்லை அறுத்து, மற்றொரு கணையால், பின்னவருடைய {கிருபருடைய} சாரதியின் முக்கிய அங்கத்தைக் கடுமையாகத் தாக்கினான்.(25)

சினத்தால் நிறைந்த கௌதமர் மகன் {கிருபர்}, மிக உறுதியான புதிய வில் ஒன்றை எடுத்துக் கொண்டு, முப்பது கணைகளால் சுகேதுவின் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் தாக்கினார்.(26) அங்கங்கள் அனைத்தும் மிகப் பலவீனமடைந்த அந்த இளவரசன் {சுகேது}, நிலநடுக்கத்தின் போது நடுங்கும் ஒரு மரத்தைப் போலத் தன் சிறந்த தேரில் நடுங்கினான்.(27) அப்போது, கத்தி தலை கணையொன்றை எடுத்த கிருபர், அவ்விளவரசன் நடுங்கிக் கொண்டே இருக்கையில், சுடர்மிக்கக் காதுகுண்டலங்கள், தலைப்பாகை மற்றும் தலைக்கவசம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவனது {சுகேதுவின்} தலையை, அவனது உடலில் இருந்து வீழ்த்தினார்.(28) அதன்பேரில் அந்தத் தலையானது, பருந்தின் நகங்களில் இருந்து விழும் இறைச்சித் துண்டைப் போலப் பூமியில் விழுந்ததும், ஓ! பெரும் புகழ் கொண்டவரே, அவனது உடலும் கீழே விழுந்தது.(29) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுகேதுவின் வீழ்ச்சியின் பேரில் அச்சமடைந்த அவனது துருப்புகள் கிருபரைத் தவிர்த்துவிட்டு, அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடின.(30)

வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னனைச் சூழ்ந்து கொண்ட கிருதவர்மன், அவனிடம் உற்சாகமாக, “நில், நிற்பாயாக” என்றான்.(31) அந்த விருஷ்ணி மற்றும் பாஞ்சாலப் போர்வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற போரானது, ஓர் இறைச்சித் துண்டுக்காக இரு பருந்துகளுக்கிடையில் நடைபெறுவதைப் போல மிகக் கடுமையானதாக இருந்தது.(32) சினத்தால் நிறைந்த திருஷ்டத்யும்னன் அந்தப் போரில் ஒன்பது கணைகளால் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனைத்} தாக்கி, அவனைப் பெரிதும் பீடிப்பதில் வென்றான்.(33) பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} இவ்வாறு ஆழத் துளைக்கப்பட்ட கிருதவர்மன், அந்தப் போரில் தன்னைத் தாக்குபவனுடைய குதிரைகள், தேர் மற்றும் அவனது கணைகள் ஆகியவற்றை {தன் கணைகளால்} மறைத்தான்.(34) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வாறு தேரோடு மறைக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், மழைநிறைந்த மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போலக் கண்ணுக்குப் புலப்படாதவனாக ஆனான்.(35) பிறகு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்த திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா, அந்தப் போரில் தன் காயங்களோடு பிரகாசமாகத் தெரிந்தான்.(36)

பாண்டவப் படைத்தலைவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, சினத்தால் நிறைந்து, கிருதவர்மனை அணுகி, கடும் கணைமாரியை அவன் மீது பொழிந்தான்.(37) எனினும் ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, அந்தப் போரில் தன்னை நோக்கிப் பெரும் மூர்க்கத்துடன் வந்து கொண்டிருந்த அந்தக் கடுங்கணை மாரியை பல்லாயிரக்கணக்கான தன் கணைகளால் அழித்தான்.(38) தாங்கிக் கொள்ள முடியாத தன் கணைமாரியானது அந்தப் போரில் கிருதவர்மனால் தடுக்கப்பட்டதைக் கண்ட பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன் எதிராளியை அணுகி அவனைத் {கிருதவர்மனைத்} தடுக்கத் தொடங்கினான்.(39) விரைவில் அவன் {திருஷ்டத்யும்னன்}, பெரும் கூர்மை கொண்ட அகன்ற தலை கணை ஒன்றால் கிருதவர்மனின் சாரதியை யமனுலகுக்கு அனுப்பி வைத்தான்.(40) வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னன், வலிமைமிக்கத் தன் எதிராளியை வீழ்த்திய பிறகு, ஒரு கணமும் தாமதிக்காமல் தன் கணைகளால் கௌரவர்களைத் தடுக்கத் தடுங்கினான்.(41) அப்போது, ஓ! மன்னா, உமது போர்வீரர்கள், பெரும் சிங்க முழக்கங்களைச் செய்து கொண்டு திருஷ்டத்யும்னனை நோக்கி விரைந்தனர். இதனால், அவர்களுக்கிடையில் மீண்டும் ஒரு போர் நடந்தது” {என்றான் சஞ்சயன்}.(42)

யுதிஷ்டிரனோடு மோதிய அஸ்வத்தாமன்! – கர்ண பர்வம் பகுதி – 55-நன்கு பாதுகாக்கப்பட்ட யுதிஷ்டிரனை உற்சாகமாக எதிர்த்துச் சென்ற அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனைத் தாக்கிய சாத்யகியும், திரௌபதியின் மகன்களும்; பதிலுக்கு அவர்களைத் தாக்கிய அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த சாத்யகி; சாத்யகியின் சாரதியைக் கொன்ற அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனிடம் பேசிய யுதிஷ்டிரன் அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்றது; அஸ்வத்தாமனும் விலகிச் சென்றது; கௌரவப் படையை எதிர்த்துச் சென்ற யுதிஷ்டிரன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சிநியின் பேரனாலும் {சாத்யகியாலும்} திரௌபதியின் வீர மகன்களாலும் பாதுகாக்கப்பட்ட யுதிஷ்டிரனைக் கண்டு, மன்னனை {யுதிஷ்டிரனை} உற்சாகமாக எதிர்த்துச் சென்று,(1) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான கடுங்கணைகள் பலவற்றை இறைத்தபடியே, தன் தேரில் பல்வேறு வழிமுறைகளையும், தான் அடைந்த பெரும் திறனையும், தனது அதீத கரநளினத்தையும் வெளிக்காட்டினான்.(2) தெய்வீக ஆயுதங்களின் சக்தியால் ஈர்க்கப்பட்ட கணைகளைக் கொண்டு மொத்த ஆகாயத்தையே அவன் {அஸ்வத்தாமன்} நிறைத்தான்.(3) துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} கணைகளால் ஆகாயம் மறைக்கப்பட்டதால் எதையும் காண முடியவில்லை. அஸ்வத்தாமனுக்கு முன்பு இருந்த பரந்த வெளியானது, கணைகளின் ஒரே பரப்பாக ஆனது.(4) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அடர்த்தியான கணைமாரியால் இவ்வாறு மறைக்கப்பட்ட ஆகாயமானது, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, தங்கத்தால் சித்திர வேலைப்பாடு செய்யப்பட்ட கூடாரம் ஒன்று அங்கே விரிக்கப்பட்டதைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(5) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பிரகாசமான கணைமாரியால் மறைக்கப்பட்ட ஆகாயத்தில், மேகங்களைப் போன்ற ஒரு நிழல் அந்தச் சந்தர்ப்பத்தில் தோன்றியது.(6) இவ்வாறு கணைகளின் ஒரே பரப்பாக இருந்த வானத்தில் வானுலாவும் உயிரினமேதும் பறக்க முடியாததை அற்புதம் நிறைந்த காட்சியாக நாங்கள் கண்டோம்.(7)

அப்போது சாத்யகி, பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் மற்றும் பிற போர்வீரர்கள் தீர்மானத்துடன் போராடினாலும், அவர்கள் அனைவராலும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த முடியவில்லை. துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} வெளிக்காட்டப்பட்ட பெருங்கரநளினத்தைக் கண்ட (பாண்டவப் படையின்) வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வானத்தில் இருக்கும் சூரியனைப் போல எரித்துக் கொண்டிருந்த அஸ்வத்தாமனைப் பார்க்கவும் இயலாதவர்களாக அந்த மன்னர்கள் அனைவரும் இருந்தனர். இவ்வாறு (பாண்டவத்) துருப்புகள் கொல்லப்பட்ட போது, வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரௌபதியின் மகன்கள், சாத்யகி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பாஞ்சாலப் போர்வீரர்கள் ஆகியோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, மரணம் குறித்த தங்கள் அச்சங்கள் அனைத்தையும் உதறித்தள்ளி, துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} எதிர்த்து விரைந்தனர்.(8-11)

அப்போது சாத்யகி, இருபத்தேழு கணைகளால் துரோணர் மகனைத் {அஸ்வத்தாமனைத்} துளைத்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட மேலும் ஏழு நீண்ட கணைகளாலும் {நாராசங்களாலும்} அவனைத் துளைத்தான்.(12) யுதிஷ்டிரன் அவனை {அஸ்வத்தாமனை} எழுபத்து மூன்று கணைகளாலும், பிரதிவிந்தியன் ஏழாலும்; சுருதகர்மன் மூன்றாலும், சுருதகீர்த்தி ஐந்தாலும் அவனைத் துளைத்தனர்.(13) மேலும் சுதசோமன் ஒன்பது கணைகளாலும், சதானீகன் ஏழாலும் அவனைத் துளைத்தனர்[1]. மேலும் வேறு வீரர்கள் பலரும் அவனை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பல கணைகளால் துளைத்தனர்.(14)

அப்போது சினத்தால் நிறைந்து, கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலப் பெருமூச்சுவிட்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, கல்லில் கூராக்கப்பட்ட இருபத்தைந்து கணைகளால் பதிலுக்குச் சாத்யகியைத் துளைத்தான்.(15) மேலும் அவன் சுருதகீர்த்தியை ஒன்பது கணைகளாலும், சுதசோமனை ஐந்தாலும்; சுருதகர்மனை எட்டாலும், பிரதிவிந்தியனை மூன்றாலும் துளைத்தான்.(16) மேலும் அவன் {அஸ்வத்தாமன்} சதானீகனை ஒன்பது கணைகளாலும், தர்மனின் மகனை (யுதிஷ்டிரனை) ஐந்தாலும் துளைத்தான். மேலும் பிற போர்வீரர்கள் ஒவ்வொருவரையும் அவன் இரண்டு இரண்டு கணைகளால் துளைத்தான். பிறகு அவன் சில கூரிய கணைகளைக் கொண்டு சுருதகீர்த்தியின் வில்லை அறுத்தான்.(17) அப்போது, பெருந்தேர்வீரனான பின்னவன் {சுருதகீர்த்தி} மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு முதலில் மூன்று கணைகளாலும், பிறகு கூர்முனைகளைக் கொண்ட வேறு பிற கணைகள் பலவற்றாலும் துரோணரின் மகனைத் துளைத்தான்.(18) பிறகு, ஓ ஏகாதிபதி, ஓ! பாரதக் குலக் காளையே, துரோணரின் மகன் அந்தப் பாண்டவத் துருப்புகளை அடர்த்தியான கணைமாரியால் மறைத்தான்.(19)

அளவிலா ஆன்மா கொண்டவனான அந்தத் துரோணர் மகன் சிரித்துக் கொண்டே நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் வில்லை அறுத்து, அடுத்ததாக மூன்று கணைகளால் அவனையும் {யுதிஷ்டிரனையும்} துளைத்தான்.(20) அப்போது, மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்ட தர்மன் மகன் {யுதிஷ்டிரன்}, எழுபது கணைகளால் துரோணரின் மகனுடைய {அஸ்வத்தாமனுடைய} கரங்களையும், மார்பையும் துளைத்தான்.(21) பிறகு அந்தப் போரில் சினத்தால் நிறைந்த சாத்யகி, பெரும் தாக்குதலைச் செய்பவனான துரோணர் மகனின் வில்லை ஓர் அர்த்தச் சந்திரக் கணையால் அறுத்து, உரக்க முழங்கினான்.(22) தன் வில் வெட்டப்பட்டவனும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஓர் ஈட்டியால் சாத்யகியின் சாரதியை அவனது தேரில் இருந்து வேகமாக வீழ்த்தினான்.(23) அப்போது துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, மற்றொரு வில்லை எடுத்துக்கொண்டு, ஓ! பாரதரே, சினியின் பேரனை {சாத்யகியைக்} கணைமாரியால் மறைத்தான்.(24) அவனது சாரதி கொல்லப்பட்டதும், ஓ! பாரதரே, அந்தப் போரில் சாத்யகியின் குதிரைகள் அங்கும் இங்கும் ஓடுவதாகத் தெரிந்தது.(25)

அப்போது யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவப் போர்வீரர்கள் அனைவரும் கூரிய கணைகளை ஏவியபடி, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான அந்தத் துரோணர் மகனை நோக்கி மூர்க்கமாக விரைந்தனர்.(26) எனினும், எதிரிகளை எரிப்பவனான அந்தத் துரோணர் மகன், தன்னை எதிர்த்து கோபத்துடன் வரும் போர்வீரர்களைக் கண்டு, அவர்கள் அனைவரையும் அந்தப் போரில் எதிர்கொண்டான்.(27) பிறகு, காட்டில் உலர்ந்த புற்கள் மற்றும் வைக்கோல் குவியலை எரிக்கும் நெருப்பைப் போன்றவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான துரோணர் மகன், தன் கணைமாரியையே தனது தழல்களாகக் கொண்டு, உலர்ந்த புல் மற்றும் வைக்கோல் குவியலுக்கு ஒப்பான பாண்டவத் துருப்புகளை அந்தப் போரில் எரித்தான்.(28) துரோணர் மகனால் இவ்வாறு எரிக்கப்பட்ட அந்தப் பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} படையானது, ஓ! பாரதர்களின் தலைவரே, திமிங்கலத்தால் கலக்கப்படும் ஆற்றின் முகத்துவாரத்தைப் போல மிகவும் கலக்கமடைந்தது.(29) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணர் மகனின் ஆற்றலைக் கண்ட மக்கள், பாண்டவர்கள் அனைவரும் அவனால் {அஸ்வத்தாமனால்} ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாகவே கருதினர்.(30)

அப்போது, பெரும் தேர்வீரனும், துரோணரின் சீடனுமான யுதிஷ்டிரன், சினத்தாலும், பதிலடி கொடுக்கும் விருப்பத்தாலும் நிறைந்து, துரோணர் மகனிடம்[2],(31) “ஓ! மனிதர்களில் புலியே, இன்று நீர் என்னைக் கொல்ல விரும்புவதால், உம்மிடம் பற்று {அன்பு} மற்றும் நன்றியுணர்வு ஏதும் இல்லை. தவம், கொடை மற்றும் கல்வியே ஒரு பிராமணரின் கடமைகளாகும்.(32) வில்லானது க்ஷத்திரியனால் மட்டுமே வளைக்கப்பட வேண்டும். எனவே, நீர் பெயரளவில் மட்டமே பிராமணராக இருக்கிறீர் என்றே தெரிகிறது.(33) எனினும், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, நீர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இப்போரில் நான் கௌரவர்களை வெல்வேன். போரில் உம்மால் என்ன முடியுமோ அதைச் செய்யும். பிராமணர்களில் இழிந்தவர் என்றே நான் உம்மைச் சொல்வேன்” என்றான் {யுதிஷ்டிரன்}[3].(34)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, சிரித்துக் கொண்டே, எது முறையானது, எது உண்மையானது என்பதைச் சிந்தித்து மறுமொழியேதும் கூறாதிருந்தான். எதையும் சொல்லாத அவன், கோபத்தில் உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கும் அந்தகனைப் போல அந்தப் போரில், கணைமாரியால் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனை} மறைத்தான்.(36) இவ்வாறு துரோணர் மகனால் மறைக்கப்பட்ட அந்தப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! ஐயா, தன் பெரும்படையை விட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து வேகமாகச் சென்றான்.(37) தர்மனின் மகனான யுதிஷ்டிரன் சென்றதும், ஓ! மன்னா, உயர் ஆன்ம துரோணர் மகனும் அந்த இடத்தைவிட்டு அகன்றான். அப்போது, ஓ! மன்னா, அந்தப் பெரும்போரில் துரோணர் மகனைத் தவிர்த்த யுதிஷ்டிரன், கொடும்பணியான படுகொலைகளைச் செய்யத் தீர்மானித்து உமது படையை எதிர்த்துச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(39)

அஸ்வத்தாமனை மயக்கமடையச் செய்த அர்ஜுனன்! – கர்ண பர்வம் பகுதி – 56-அர்ஜுனன், பீமன் மற்றும் கர்ணன் ஆகியோர் ஏற்படுத்திய பேரழிவு; நகுலன் மற்றும் சகாதேவனோடு போரிட்ட துரியோதனன்; துரியோதனனைத் தடுத்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனின் வில்லை மீண்டும் மீண்டும் அறுத்த துரியோதனன்; துரியோதனனைத் தேரற்றவனாகச் செய்த திருஷ்டத்யும்னன்; துரியோதனைக் காத்த தண்டதாரன்; பாஞ்சாலத் தலைவர்களைக் கொன்ற கர்ணன்; கர்ணனோடு போரிட முன்னேறிய யுதிஷ்டிரன்; கர்ணனைத் தாக்கிய பாண்டவக்கூட்டம்; பீமனைக் கண்ட அச்சத்தால் உயிரைவிட்ட தேர்வீரர்கள்; சம்சப்தகர்களை வென்ற அர்ஜுனன்; கௌரவப் படையை அழித்த அர்ஜுனன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; அர்ஜுனனைத் தடுத்த அஸ்வத்தாமன்; அர்ஜுனனை விஞ்சி நின்ற அஸ்வத்தாமன்; அர்ஜுனனைக் கண்டித்த கிருஷ்ணன்; அஸ்வத்தாமனை மயக்கமடையச் செய்த அர்ஜுனன்; காயம் காரணமாக வெகுதூரம் விலகிச் சென்று ஓய்வெடுத்த யுதிஷ்டிரன்

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதே வேளையில் வைகர்த்தனன் {கர்ணன்}, பாஞ்சாலர்களாலும், சேதிகளாலும், கைகேயர்களாலும் ஆதரிக்கப்பட்ட பீமசேனனைத் தடுத்துக் கணைகள் பலவற்றால் அவனை மறைத்தான்.(1) அந்தப் போரில் பீமன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சேதிகள், காருஷர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகியோரில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரைக் கர்ணன் கொன்றான்.(2) அப்போது பீமசேனன், தேர்வீரர்களில் சிறந்தவனான கர்ணனைத் தவிர்த்துவிட்டு, உலர்ந்த புற்களை நோக்கிச் செல்லும் சுடர்மிக்க நெருப்பைப் போலக் கௌரவத் துருப்புகளை எதிர்த்துச் சென்றான்.(3) சூதன் மகனும் {கர்ணனும்} அந்தப் போரில் பாஞ்சாலர்கள், கைகேயர்கள் மற்றும் சிருஞ்சயர்களில் ஆயிரக்கணக்கான வலிமைமிக்க வில்லாளிகளைக் கொல்லத் தொடங்கினான்.(4) உண்மையில், மூன்று வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தன் {அர்ஜுனன்}, விருகோதரன் {பீமன்} மற்றும் கர்ணன் ஆகியோர் முறையே சம்சப்தகர்கள், கௌரவர்கள் மற்றும் பாஞ்சாலர்களைக் கொல்லத் தொடங்கினர்.(5) உமது தீய கொள்கையின் {ஆலோசனைகளின்} விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் அந்த மூன்று பெரும் போர்வீரர்களின் சிறந்த கணைகளால் எரிக்கப்பட்டு, அந்தப் போரில் அழியத் தொடங்கினர்.(6)

அப்போது, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்த துரியோதனன், ஒன்பது கணைகளால் நகுலனையும் அவனது நான்கு குதிரைகளையும் துளைத்தான்.(7) அடுத்ததாக அளவிலா ஆன்மாகக் கொண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, கத்திமுகக் கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் சகாதேவனின் தங்கக் கொடிமரத்தை வெட்டி வீழ்த்தினான்.(8) கோபத்தால் நிறைந்த நகுலன், ஓ! மன்னா, அந்தப் போரில் உமது மகனை எழுபத்து மூன்று கணைகளால் தாக்கினான், சகாதேவனோ ஐந்தால் அவனைத் தாக்கினான்.(9) பாரதக் குலத்தின் முதன்மையான போர்வீரர்களும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவர்களுமான அவர்கள் ஒவ்வொருவரும், சினங்கொண்ட துரியோதனின் ஐந்து {ஐந்து ஐந்து} கணைகளால் தாக்கப்பட்டனர்.(10) மேலம் அகன்ற தலை கொண்ட இரு கணைகளை {பல்லங்களைக்} கொண்டு, அந்தப் போராளிகள் இருவரின் வில்லையும் அவன் {துரியோதனன்} அறுத்தான்; பிறகு அவன் எழுபத்து மூன்று கணைகளால் அந்த இரட்டையரில் ஒவ்வொருவரையும் திடீரெனத் துளைத்தான்.(11)

இந்திரனின் வில்லுக்கு ஒப்பானவையும், முதன்மையானவையுமான அழகிய இரு விற்களை எடுத்துக் கொண்ட அந்த வீரர்கள் {நகுலன் -சகாதேவன்} இருவரும், அந்தப் போரில் தெய்வீக இளைஞர்களைப் போல அழகாகத் தெரிந்தனர்.(12) பிறகு, போரில் பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட அந்தச் சகோதரர்கள் இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலைச்சாரலில் மழையைப் பொழியும் மேகத் திரள்கள் இரண்டைப் போலத் தங்கள் சகோதரன் {துரியோதனன்} மீது இடையறாத பயங்கரக் கணைமாரியைப் பொழிந்தனர்.(13) அதன்பேரில், ஓ! மன்னா, பெரும் தேர்வீரனான உமது மகன் {துரியோதனன்}, சினத்தால் நிறைந்து, சிறகு படைத்த கணைகளின் மாரியால் இரு பெரும் வில்லாளிகளான அந்தப் பாண்டுவின் இரட்டை மகன்களைத் தடுத்தான்.(14) ஓ! பாரதரே, அந்தப் போரில் துரியோதனனின் வில்லானது தொடர்ந்து வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது, அதிலிருந்து கணைகள் அனைத்துப் பக்கங்களிலும் இடையறாமல் வெளிவருவதும் காணப்பட்டது.(15) துரியோதனனின் கணைகளால் மறைக்கப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன்கள் இருவரும், மேகத்திரள்களால் மறைக்கப்பட்டுக் காந்தியை இழந்து ஆகாயத்தில் இருக்கும் சந்திரனையும், சூரியனையும் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தனர்.(16) உண்மையில், ஓ! மன்னா, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள் சூரியனின் கதிர்களைப் போலத் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தன.(17) ஆகாயம் இவ்வாறு மறைக்கப்பட்டு, காணும் அனைத்தும் ஒரே சீரான கணைகளின் பரப்பாகவே இருந்தபோது, இரட்டையரின் கூறுகள் {தன்மைகள்}, யுகமுடிவின் அந்தகனைப் போல வெளிப்பட்டன.(18) மறுபுறம், உமது மகனின் ஆற்றலைக் கண்ட பெரும் தேர்வீரர்கள் அனைவரும், காலனின் முன்னிலையில் நிற்பதாகவே மாத்ரியின் இரட்டை மகன்களைக் கருதினர்.(19)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படையின் தலைவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான பார்ஷதன் {திருஷ்டத்யும்னன்} துரியோதனன் இருந்த இடத்திற்கு வந்தான்.(20) பெரும் தேர்வீரர்களான மாத்ரியின் மகன்கள் இருவரையும் கடந்து சென்று தனது கணைகளால் அவன் உமது மகனைத் தடுக்கத் தொடங்கினான்.(21) அளவிலா ஆன்மா கொண்டவனும், மனிதர்களில் காளையுமான உமது மகன், பதிலடி கொடுக்கும் விருப்பத்தால் நிறைந்தவனாகச் சிரித்துக் கொண்டே இருபத்தைந்து கணைகளால் அந்தப் பாஞ்சால இளவரசனைத் {திருஷ்டத்யும்னனைத்} துளைத்தான்.(22) அளவிலா ஆன்மா கொண்டவனும், மனிதர்களில் காளையுமான உமது மகன், பதிலடி கொடுக்கும் விருப்பத்தால் நிறைந்தவனாக மீண்டும் அந்தப் பாஞ்சால இளவரசனை அறுபது கணைகளாலும், அதன் பிறகு ஐந்தாலும் துளைத்து உரத்த முழக்கம் செய்தான்.(23) பிறகு அந்த மன்னன் {துரியோதனன்} கூரிய கத்தி முனை கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால், ஓ! ஐயா, அந்தப் போரில் தன் எதிராளியின் கணைபொருத்தப்பட்ட வில்லையும், தோலாலான கையுறையையும் அறுத்தான்.(24) முறிந்த வில்லை வீசியெறிந்தவனும், எதிரிகளை நொறுக்குபவனுமான அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, புதியதும், பெருங்கடினத்தைத் தாங்கவல்லதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(25) வேகத்தால் சுடர்மிக்கவனும், கோபத்தால் குருதி சிவப்பான கண்களைக் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான அந்தத் திருஷ்டத்யும்னன், தன் மேனியில் உள்ள காயங்கள் பலவற்றுடன் தன் தேரில் பிரகாசமாகத் தெரிந்தான்.(26)

ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, துரியோதனனைக் கொல்ல விரும்பிய அந்தப் பாஞ்சால வீரன் {திருஷ்டத்யும்னன்}, சீறும் பாம்புகளுக்கு ஒப்பான துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்} பதினைந்தை ஏவினான்.(27) கல்லில் கூராக்கப்பட்டவையும், கங்கம் மற்றும் மயில்களின் இறகுகளைக் கொண்டவையுமான அந்தக் கணைகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட மன்னனின் {திருஷ்டத்யும்னனின்} கவசத்தைப் பிளந்து, அவனது உடலினூடாகக் கடந்து சென்று, ஏவப்பட்ட சக்தியின் விளைவால் பூமிக்குள் நுழைந்தன.(28) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஆழத்துளைக்கப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, இளவேனிற்காலத்தில், மலர்களின் கனத்துடன் கூடிய ஒரு பெரிய கின்சுகத்தை {பலாச மரத்தைப்} போல மிக அழகாகத் தெரிந்தான்.(29) அக்கணைகளால் கவசம் பிளக்கப்பட்டு, தன் மேனியெங்கும் அடைந்த காயங்களால் மிகவும் உறுதியற்ற நிலையை அடைந்த அவன் {துரியோதனன்}, ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} திருஷ்டத்யும்னனின் வில்லை அறுத்தான்.(30) ஓ! ஏகாதிபதி, தன் எதிராளியின் வில்லை அறுத்த மன்னன் {துரியோதனன்},  பெரும் வேகத்துடன், அவனது {திருஷ்டத்யும்னனின்} நெற்றியின் இரு புருவங்களுக்கு மத்தியிலும் பத்து கணைகளால் தாக்கினான்.(31) கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்பட்ட அக்கணைகள், தேன் விரும்பும் வண்டுகள் முற்றும் மலர்ந்த தாமரையை அலங்கரிப்பதைப் போலத் திருஷ்டத்யும்னனின் முகத்தை அலங்கரித்தன.(32)

அந்த முறிந்த வில்லை வீசி எறிந்த உயர் ஆன்ம திருஷ்டத்யும்னன், மற்றொரு வில்லையும், பதினாறு அகன்ற தலை கணைகளையும் வேகமாக எடுத்துக் கொண்டான்.(33) ஐந்தால் துரியோதனனின் நான்கு குதிரைகளையும், சாரதியையும் கொன்ற அவன் {திருஷ்டத்யும்னன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அவனது வில்லை மற்றொன்றால் {கணையால்} அறுத்தான்.(34) எஞ்சியிருந்த பத்தை கணைகளால், உமது மகனுடைய தேரின் உபஷ்கரம் {உபகரணங்கள்}, குடை, ஈட்டி, வாள், கதாயுதம் மற்றும் கொடிமரத்தையும் அறுத்தான்.(35) உண்மையில், தங்க அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட குரு மன்னனின் {துரியோதனனின்} அழகிய கொடிமரமும், ரத்தின வேலைப்பாடு செய்யப்பட்ட யானைப் பொறியும் {கொடியில் உள்ள இலச்சனையும்} பாஞ்சாலர்களின் இளவரசனால் {திருஷ்டத்யும்னனால்} அறுக்கப்பட்டதை மன்னர்கள் அனைவரும் கண்டனர்.(36) அப்போது துரியோதனனுடன் பிறந்த தம்பிகள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, தேரற்றவனும், அந்தப் போரில் தன் ஆயுதங்கள் அனைத்தும் அறுபட்டவனுமான துரியோதனனை மீட்டனர்.(37) திருஷ்டத்யும்னன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஓ! ஏகாதிபதி, அந்த மனிதர்களின் ஆட்சியாளனை {துரியோதனைத்} தன் தேரில் ஏறச் செய்த துருதரன் {குண்டதாரன், தண்டதாரன்},[1] வேகமாக அவனைப் போருக்கு வெளியே கொண்டு சென்றான்.(38)

அதே வேளையில், வலிமைமிக்கக் கர்ணன், சாத்யகியை வென்றதும், (குரு) மன்னனை {துரியோதனனைக்} காக்க விரும்பி, கடுங்கணைகளைக் கொண்டவனும், துரோணரைக் கொன்றவனுமான அந்தப் போர்வீரனை {திருஷ்டத்யும்னனை} முகத்துக்கு நேராக எதிர்த்துச் சென்றான்.(39) எனினும், சிநியின் பேரன் {சாத்யகி} அவனை வேகமாகப் பின் தொடர்ந்து வந்து, தன் எதிராளியைத் துரத்திச் செல்லும் யானையானது தன் தந்தங்களால் பின்னால் இருந்து தாக்குவதைப் போலத் தன் கணைகளால் அவனைத் தாக்கினான்.(40) அப்போது, ஓ! பாரதரே, கர்ணனுக்கும், பிருஷதன் மகனுக்கும் இடையில் இருந்த வெளியில் இரு படைகளின் உயர் ஆன்ம போர்வீரர்களுக்கும் இடையில் நடந்த போரானது மிகத் தீவிரமாக நடந்தது.(41) பாண்டவர்களிலோ, நம்மிலோ புறமுதுகிட்ட போர்வீரன் ஒருவன் கூட இல்லை. அப்போது கர்ணன் பாஞ்சாலர்களை எதிர்த்துப் பெரும் வேகத்தோடு சென்றான்.(42) சூரியன் உச்சி வானுக்கு உயர்ந்த வேளையில், ஓ! மனிதர்களில் சிறந்தவரே, இருதரப்பிலும் யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களுக்குப் பேரழிவு ஏற்பட்டது.(43)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெற்றியடையும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட பாஞ்சாலர்கள் அனைவரும், பறவைகள் மரத்தை நோக்கிச் செல்வதைப் போலக் கர்ணனை எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(44) பெரும் சக்தி கொண்ட அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, சினத்தால் நிறைந்து, பாஞ்சாலர்களின் தலைவர்களான வியாக்ரகேது, சுசர்மன், சித்திரன், உக்ராயுதன், ஜயன், சுக்லன், ரோசமானன், வெல்லப்பட முடியாத சிங்கசேனன் ஆகியோரைத் தனித்தனியாகத் தன் கூர்முனைக் கணைகளால் தாக்கத் தொடங்கினான்.(45,46) தங்கள் தேர்களில் வேகமாக முன்னேறி வந்த அந்த வீரர்கள், கோபக்கார வீரனும், போர்க்கள ரத்தினமுமான அந்தக் கர்ணனைச் சூழ்ந்து கொண்டு, அந்த மனிதர்களில் முதன்மையானவன் மேல் தங்கள் கணைகளைப் பொழிந்தனர்.(47) மனிதர்களில் முதன்மையானவனும், பெரும் வீரம் கொண்டவனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, தன்னோடு போரில் ஈடுபட்ட அந்த எட்டு வீரர்களையும் எட்டு கூரிய கணைகளால் பீடித்தான்.(48) பெரும் ஆற்றலைக் கொண்ட அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா, போரில் திறம்பெற்ற பல்லாயிரக்கணக்கான போர்வீரர்கள் பிறரை அப்போது கொன்றான்.(49)

சினத்தால் நிறைந்த ராதையின் மகன் {கர்ணன்} அப்போது அந்தப் போரில், ஜிஷ்ணு, ஜிஷ்ணுகர்மன், தேவாபி, சித்திரன், சித்ராயுதன், ஹரி, சிங்ககேது, ரோசமானன், பெரும் தேர்வீரனான சலபன் மற்றும் சேதிகளின் தேர்வீரர்களில் பலரையும் கொன்றான்.(50,51) அந்த வீரர்களின் உயிரை எடுத்துக் குருதியில் குளித்திருந்த அதிரதன் மகனின் {கர்ணனின்} வடிவமானது, ருத்ரனின் பெருவடிவத்தைப் போலச் சக்தியிலும், செருக்கிலும் பெருகியிருந்தது.(52) ஓ! பாரதரே, அங்கே கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட யானைகள் அச்சத்தால் அனைத்துப் பக்கங்களுக்கும் தப்பி ஓடி, அந்தப் போர்க்களத்தில் பெருங்கலக்கத்தை ஏற்படுத்தின.(53) கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட பிறர், பல்வேறு கூச்சல்களையிட்டவாரே இடியால் பிளக்கப்பட்ட மலைகளென விழுந்தனர்.(54) கர்ணன் சென்ற தடமெங்கும், விழுந்துவிட்ட யானைகள், குதிரைகள், மனிதர்கள் ஆகியோரின் உடல்களாலும், விழுந்துவிட்ட தேர்களாலும் பூமியானது விரவிக் கிடந்தது.(55)

உண்மையில் பீஷ்மரோ, துரோணரோ, உமது படையின் பிற போர்வீரர்கள் எவருமோ எப்போதும் சாதிக்காத அருஞ்செயல்களே அந்தப் போரில் கர்ணனால் சாதிக்கப்பட்டன.(56) ஓ! மனிதர்களில் புலியே, யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் அந்தச் சூதன் மகன் பேரழிவை உண்டாக்கினான்.(57) மான் கூட்டத்திற்கு மத்தியில் சிங்கமானது அச்சமற்றுத் திரிவதைப் போலவே, பாஞ்சாலர்களுக்கு மத்தியில் கர்ணன் அச்சமில்லாமல் திரிந்தான்.(58) சிங்கமானது அச்சத்திலிருக்கும் மான்கூட்டத்தைத் திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் சிதறடிப்பதைப் போலவே, கர்ணனும் பாஞ்சாலர்களின் தேர்க்கூட்டங்களை அனைத்துப் பக்கத்திற்கும் சிதறடித்தான்.(59) சிங்கத்தின் கோரப்பற்களை அடைந்து உயிருடன் தப்பவே முடியாத மானைப் போலவே கர்ணனை அணுகிய பெருந்தேர்வீரர்களால் தங்கள் உயிர்களுடன் தப்ப முடியவில்லை.(60) சுடர்மிக்க நெருப்பைத் தீண்டினால் உறுதியாக எரிந்துவிடும் மக்களைப் போலே, ஓ! பாரதரே, சிருஞ்சயர்களும், கர்ணநெருப்பின் அருகாமையை அடைந்ததும் எரிக்கப்பட்டனர்.(61) சேதிகள் மற்றும் பாஞ்சாலர்களின் போர்வீரர்களில் வீரர்களாகக் கருதப்பட்ட பலர், அவர்களோடு தனியனாகப் போரிட்ட கர்ணனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களது பெயர் அறிவிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.(62) கர்ணனின் ஆற்றலைக் கண்ட {சஞ்சயனாகிய} நான், ஓ! மன்னா, அதிரதன் மகனிடமிருந்து ஒரு பாஞ்சாலனும் அந்தப் போரில் தப்பமாட்டான் என்றே நினைத்தேன்.(63) உண்மையில் சூதன் மகன் {கர்ணன்} அந்தப் போரில் மீண்டும் மீண்டும் பாஞ்சாலர்களை முறியடித்தான்.(64)

அந்தப் பயங்கரப் போரில் இவ்வாறு பாஞ்சாலர்களைக் கொல்லும் கர்ணனைக் கண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அவனை நோக்கிக் கோபத்துடன் விரைந்தான்.(65) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனும், திரௌபதியின் மகன்களும், நூற்றுக்கணக்கான போர்வீரர்களும், எதிரிகளைக் கொல்பவனான அந்த ராதையின் மகனை {கர்ணனைச்} சூழ்ந்து கொண்டனர்.(66) சிகண்டி, சகாதேவன், நகுலன், நகுலனின் மகன் {சதானீகன்}, ஜனமேஜயன், சிநியின் பேரன் {சாத்யகி}, பிரபத்ரகர்கள்(67) ஆகிய அளவிலா சக்தி கொண்ட இவர்கள் அனைவரும் திருஷ்டத்யும்னனைத் தங்கள் முன்னணியில் கொண்டு சென்று, கணைகளாலும், பல்வேறு ஆயுதங்களாலும் கர்ணனைத் தாக்கியபோது மிகச் சிறப்பானவர்களாகத் தெரிந்தனர்.(68) கருடன் பெரும் எண்ணிக்கையிலான பாம்புகளின் மீது பாய்வதைப் போலவே, அந்த அதிரதன் மகனும் {கர்ணனும்} தனியனாகச் சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரின் மீதும் அம்மோதலில் பாய்ந்தான்.(69) ஓ! ஏகாதிபதி, அவர்களுக்கும், கர்ணனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும் தானவர்களுக்கும் இடையில் நடைபெற்றதைப் போலக் கடுஞ்சீற்றத்துடன் நடந்தது.(70) சூழ்ந்திருக்கும் இருளை அழிக்கும் சூரியனைப் போலவே அச்சமற்றவனான கர்ணனும் ஒன்றாகச் சேர்ந்து வருபவர்களும், தன் மீது மீண்டும் மீண்டும் கணைமாரிகளைப் பொழிபவர்களுமான அந்தப் பெரும் வில்லாளிகளோடு தனியனாகவே மோதினான்.(71)

ராதையின் மகன் இவ்வாறு பாண்டவர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தபோது, சினத்தால் நிறைந்த பீமசேனன், யமதண்டத்திற்கு ஒப்பான கணைகளால் குருக்களைக் கொல்லத் தொடங்கினான்.(72) பாஹ்லீகர்கள், கைகேயர்கள், மத்ஸ்யர்கள், வசாதிகள், மத்ரர்கள் மற்றும் சைந்தவர்களோடு தனியனாகவே போரிட்ட அந்தப் பெரும் வில்லாளி {பீமன்}, மிகப் பிரகாசமானவனாகத் தெரிந்தான்.(73) பீமனின் துணிக்கோல் கணைகளால் தங்கள் முக்கிய அங்கங்களில் தாக்கப்பட்ட யானைகள், தங்கள் சாரதிகளோடு கீழே விழுந்து, தங்கள் வீழ்ச்சியின் வன்மையால் பூமியை நடுங்கச் செய்தன.(74) தங்கள் சாரதிகள் கொல்லப்பட்ட குதிரைகளும், உயிரையிழந்த காலாட்படைவீரர்களும், கணைகளால் துளைக்கப்பட்டுப் பெரும் அளவிலான குருதியைக் கக்கியபடி கீழே கிடந்தனர்.(75) ஆயிரக்கணக்கான தேர்வீரர்கள் தங்கள் கரங்களில் இருந்து தளர்ந்த ஆயுதங்களுடன் கீழே விழுந்தனர். காயங்களால் சிதைந்த உடல்களுடன் கூடிய அவர்கள், பீமன் மீது கொண்ட அச்சத்தால் ஈர்க்கப்பட்டுத் தங்கள் உயிரையிழந்து கீழே விழுந்தனர்.(76) தேர்வீரர்கள், குதிரைவீரர்கள், யானைவீரர்கள், சாரதிகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரும், குதிரைகள் மற்றும் யானைகள் ஆகியவை அனைத்தும் பீமசேனனின் கணைகளால் சிதைக்கப்பட்டுப் பூமியில் விரவிக் கிடந்தன.(77)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் படையானது, உற்சாகத்தை இழந்து, சிதைக்கப்பட்டும், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால பீடிக்கப்பட்டு மலைத்துப் போய் நின்றது.(78) உண்மையில், ஓ! மன்னா, கூதிர்காலத்தில் அமைதியாக இருக்கும் பெருங்கடலைப் போலவே அந்தப் பயங்கரப் போரில் மனச்சோர்வையடைந்த அந்தப் படையும் அசைவற்று நின்றது.(79) அமைதியான பெருங்கடலைப் போலவே அந்தப் படையானது மலைத்து நின்றபோது, கோபம், சக்தி மற்றும் வலிமையைக் கொண்ட உமது மகனின் படையானது தன் செருக்கை இழந்து தன் காந்தி அனைத்தையும் இழந்தது. உண்மையில், இவ்வாறு கொல்லப்பட்ட அந்தப் படையானது, ஊனீரில் நனைந்து, குருதியில் குளித்தது. ஓ! பாரதர்களின் தலைவா, குருதியில் நனைந்த போராளிகள் ஒருவரையொருவர் அணுகி கொன்றது அங்கே காணப்பட்டது.(80-82) சினத்தால் நிறைந்த சூதன் மகன் {கர்ணன்}, பாண்டவப் படைப்பிரிவை சிதறடித்த அதே வேள்யில் பீமசேனன் குருக்களைச் சிதறடித்தான்.(83)

காண்போர் ஆச்சரியத்தில் நிறையும் வகையில் அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்தபோது, வெற்றியாளர்களில் முதன்மையான அர்ஜுனன், பெரும் எண்ணிக்கையிலான சம்சப்தகர்களை அவர்களது வியூகத்திற்கு மத்தியில் கொன்ற பிறகு, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, போராடிக் கொண்டிருக்கும் இந்தச் சம்சப்தகர்களின் படையானது உடைந்துவிட்டது.(84,85) சிங்கத்தின் முழக்கத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத மானைப் போல என் கணைகளைப் பொருத்துக் கொள்ள முடியாதவர்களும், சம்சப்தகர்களுமான அந்தப் பெருந்தேர்வீரர்கள் தங்களைப் பின்தொடர்பவர்களுடன் சேர்ந்து தப்பி ஓடுகின்றனர்.(86) இந்தப் பெரும்போரில் சிருஞ்சயர்களின் பெரும்படையும் உடைந்ததாகத் தெரிகிறது. நுண்ணறிவைக் கொண்ட கர்ணனின் யானைக் கயிறு பொறிக்கப்பட்ட கொடியானது, ஓ! கிருஷ்ணா,(87) அவன் {கர்ணன்} பெரும் சுறுசுறுப்புடன் திரிந்து வரும் யுதிஷ்டிரரின் படைப்பிரிவுக்கு மத்தியில் அதோ தெரிகிறது. (நமது படையின்) பெரும் தேர்வீரர்கள் பிறரால் கர்ணனை வெல்ல இயலவில்லை.(88) போராற்றலில் கர்ணன் பெருஞ்சக்தி வாய்ந்தவன் என்பதை நீ அறிவாய். கர்ணன் நமது படைகளைச் சிதறடித்துக் கொண்டிருக்கும் இடத்திற்குச் செல்வாயாக.(89) போரில் (பிற வீரர்களைத்) தவிர்த்துவிட்டு, பெரும் தேர்வீரனான அந்தச் சூதன் மகனை {கர்ணனை} எதிர்த்துச் செல்வாயாக. ஓ! கிருஷ்ணா, இதையே நான் விரும்புகிறேன். எனினும், நீ விரும்புவதைச் செய்வாயாக” என்றான் {அர்ஜுனன்}.(90) அவனது வார்த்தளைக் கேட்ட கோவிந்தன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம் புன்னகைத்தவாறே, “ஓ! பாண்டுவின் மகனே, தாமதமில்லாமல் கௌரவர்களைக் கொல்வாயாக” என்றான்.(91)

அப்போது, கோவிந்தனால் தூண்டப்பட்டவையும், அன்னங்களைப் போன்று வெண்மையானவையுமான அந்தக் குதிரைகள், கிருஷ்ணனையும், பாண்டு மகனையும் {அர்ஜுனனையும்} சுமந்து கொண்டு உமது பரந்த படைக்குள் ஊடுருவின.(92) உண்மையில், தங்கப் பட்டைகளைக் கொண்டவையும், கேசவனால் தூண்டப்பட்டவையுமான அந்த வெண்குதிரைகள் அதன் மத்தியில் ஊடுருவியதும், உமது படையானது அனைத்துப் பக்கங்களிலும் பிளந்தது.(93) குரங்குக் கொடியைக் கொண்டதும், மேகங்களின் ஆழ்ந்த முழக்கத்திற்கு ஒப்பான சக்கரச் சடசடப்பொலி கொண்டதும், கொடிகளைக் காற்றில் அசைத்துச் சென்றதுமான அந்தத் தேரானது, ஆகாயத்தினூடாகக் கடந்து செல்லும் தெய்வீகத் தேரொன்றைப் போல அந்தப் படைக்குள் ஊடுருவியது.(94) சினத்தால் நிறைந்தவர்களும், குருதியெனக் கண்கள் சிவந்தவர்களுமான கேசவனும், அர்ஜுனனும், உமது பரந்த படையைத் துளைத்து ஊடுருவி சென்ற போது, தங்கள் காந்தியால் மிகப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(95) போரில் திளைப்பவர்களும், குருக்களால் அறைகூவி அழைக்கப்பட்டுக் களத்திற்கு வந்தவர்களுமான அவ்வீரர்கள் இருவரும், ஒரு வேள்வியை நடத்தும் புரோகிதர்களால் முறையான சடங்குகள் செய்யப்பட்டு இருப்புக்கு அழைக்கப்பட்ட அசுவினி இரட்டையர்களைப் போலவே தெரிந்தனர்.(96) சினத்தால் நிறைந்ததும் மனிதர்களில் புலிகளான அவ்விருவரின் வேகமும், ஒரு பெருங்காட்டில் வேடர்களின் கரவொலியால் கோபம் தூண்டப்பட்ட யானைகள் இரண்டின் வேகத்தைப் போல அதிகரித்தது.(97)

அந்தத் தேர்ப்படை மற்றும் பெரும் எண்ணிக்கையிலான குதிரைகளுக்கு மத்தியில் ஊடுருவிய பல்குனன் {அர்ஜுனன்}, பாசக்கயிறுடன் செல்லும் யமனைப் போலவே அந்தப் படைப்பிரிவுகளுக்குள் திரிந்து கொண்டிருந்தான்.(98) தன் படையின் மீது அவன் {அர்ஜுனன்} இத்தகு ஆற்றலை வெளிப்படுத்துவதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! பாரதரே, மீண்டும் சம்சப்தகர்களை அவனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராகத் தூண்டினான்.(99) அதன் பேரில் ஓராயிரம் தேர்கள், முந்நூறு யானைகள், பதினாலாயிரம் குதிரைகள்,(100) வில் தரித்தவர்களும், பெரும் துணிவுமிக்கவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான இருநாறாயிரம் காலாட்படைவீர்களுடன் கூடிய(101) சம்சப்தகர்களின் தலைவரகள், ஓ! ஏகாதிபதி, அனைத்துப் பக்கங்களிலும் கணைமாரியால் அந்தப் பாண்டவனை மறைத்தபடியே, அந்தப் போரில் குந்தியின் மகனை நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்தனர்.(102) இவ்வாறு அந்தப் போரில் கணைகளால் மறைக்கப்பட்டவனும், பகைவரின் படைகளைக் கலங்கடிப்பவனுமான பார்த்தன், பாசக்கயிற்றைக் கொண்ட யமனைப் போலவே கடும் வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். பார்த்தன் அந்தச் சம்சப்தகர்களைக் கொல்லும்போது, அனைவராலும் பார்க்கத்தகுந்தவனாக ஆனான்.(103)

அப்போது தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், மின்னலின் பிரகாசத்தைக் கொண்டவையும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் இடையறாமல் ஏவப்பட்டவையுமான கணைகளால் ஆகாயம் நிறைந்தது.(104) அர்ஜுனனின் கரங்களால் ஏவப்பட்ட வலிமைமிக்கக் கணைகளால் முற்றாக அடைக்கப்பட்ட அனைத்தும், சுற்றிலும் இடையறாமல் விழுந்து, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பாம்புகளால் மறைக்கப்பட்டவற்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(105) அளவிலா ஆன்மா கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், கூரிய முனைகளைக் கொண்டவையுமான நேரான கணைகளை அனைத்துப் பக்கங்களிலும் ஏவினான்.(106) பார்த்தனின் உள்ளங்கை ஒலியின் விளைவாக, பூமி, அல்லது ஆகாயப் பெட்டகம், அல்லது திசைப்புள்ளிகள் அனைத்தும், அல்லது பல்வேறு பெருங்கடல்கள், அல்லது மலைகளே பிளந்துவிட்டனவோ என்றே மக்கள் நினைத்தனர்.(107) பத்தாயிரம் க்ஷத்திரியர்களைக் கொன்ற வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, அப்போது, சம்சப்தகர்களுடைய சிறகின் எல்லைக்கு வேகமாகச் சென்றான்.(108) காம்போஜர்களால் பாதுகாக்கப்பட்ட அந்தச் சிறகின் எல்லை அடைந்த பார்த்தன் {அர்ஜுனன்}, தானவர்களைக் கலங்கடிக்கும் வாசவனை {இந்திரனைப்} போலத் தன் கணைகளால் அவர்களைப் பலமாகக் கலங்கடிக்கத் தொடங்கினான்.(109) அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} அவன் {அர்ஜுனன்}, தன்னைக் கொல்ல விரும்பும் எதிரிகளின் ஆயுதங்களைப் பிடித்திருந்த கரங்களையும், சிரங்களையும் வேகமாக அறுத்தான்.(110) பல்வேறு அங்கங்களையும், ஆயுதங்களையும் இழந்த அவர்கள், சூறாவளியால் முறிக்கப்பட்ட பல கிளைகளைக் கொண்ட மரங்களைப் போலக் கீழே பூமியில் விழுந்தனர்.(111)

இவ்வாறு யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள், காலாட்படை வீரர்கள் ஆகியோரை அவன் {அர்ஜுனன்} கொன்று கொண்டிருந்தபோது, (காம்போஜர்களின் தலைவனான) சுதக்ஷிணனின் தம்பி, அவன் மீது கணைமாரியைப் பொழியத் தொடங்கினான்.(112) அப்போது அர்ஜுனன், முள்பதித்த காதாயுதங்களை {பரிகங்களைப்} போலத் தெரிந்தவையான தன்னைத் தாக்குபவனின் இரண்டு கரங்களை அர்த்தச்சந்திரக் கணைகள் இரண்டாலும், முழு நிலவைப் போல அழகாக முகத்தால் அருளப்பட்ட அவனது {சுதக்ஷிணனின் தம்பியின்} தலையைக் கத்தித் தலை கணையொன்றாலும் அறுத்தான்.(113) குருதியில் குளித்து, உயிரை இழந்த அவன், இடியால் பிளக்கப்பட்ட செஞ்சுண்ண மலையொன்றைப் போலத் தனது வாகனத்தில் இருந்து கீழே விழுந்தான்.(114) உண்மையில், நெடியவனும், அழகானவனும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனுமான காம்போஜர் தலைவனின் தம்பி கொல்லப்பட்டு, தங்கத் தூண் ஒன்றைப் போலவோ, தங்கமயமான சுமேருவின் சிகரம் ஒன்றைப் போலவோ கீழே விழுவதை மக்கள் கண்டனர்.(115) பிறகு, கடுமையானதும், அற்புதம் நிறைந்ததுமான மற்றொரு போர் அங்கே தொடங்கியது. போராடும் போராளிகளின் நிலைகள் வேறு வேறாக இருந்தன.(116) காம்போஜர்கள், யவனர்கள், சக குலத்தவர் ஆகியோரின் குதிரைகள் மற்றும் போராளிகள் ஒவ்வொருவரும், ஓ! ஏகாதிபதி, ஒரே கணையால் கொல்லப்பட்டு, குருதியில் குளித்ததால், மொத்தப் போர்க்களமும் ஒரு சிவப்புப் பரப்பானது.(117) குதிரைகள் மற்றும் சாரதிகளை இழந்த தேர்வீரர்கள், சாரதிகளை இழந்த குதிரைகள், பாகர்களை இழந்த யானைகள், யானைகளை இழந்த பாகர்கள் ஆகியோர் ஒருவரோடொருவர் போரிட்டதன் விளைவால், ஓ! மன்னா, அங்கே ஒரு பெரும் அழிவு ஏற்பட்டது.(118)

சம்சப்தகர்களின் சிறகும் {படையின் சிறகு பகுதியும்}, சிறகின் எல்லைகளும் இவ்வாறு சவ்யசச்சனால் {அர்ஜுனனால்} நிர்மூலமாக்கப்பட்ட போது, வெற்றி அடையும் போர்வீரர்களில் முதன்மையான அர்ஜுனனை எதிர்த்து துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} வேகமாக விரைந்தான்.(119) உண்மையில் அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் உறுதிமிக்க வில்லை அசைத்துக் கொண்டும், பயங்கரக் கணைகள் பலவற்றைத் தன்னுடன் எடுத்துக் கொண்டும் கதிர்களுடன் தோன்றும் சூரியனைப் போலவே சென்றான்.(120) சினத்தால் அகல விரித்த வாயுடனும், பதிலடி கொடுக்கும் விருப்பத்துடனும், சிவந்த கண்களுடனும் இருந்த அந்த வலிமைமிக்க அஸ்வத்தாமன், யுகமுடிவில் கோபத்தில் நிறைந்திருப்பவனும், கதாயுதம் தரித்திருப்பவனுமான காலனைப் போலவே அச்சமேற்படுத்துபவனாகத் தெரிந்தான்.(121) பிறகு அவன் {அர்ஜுனன்} கடுங்கணை மாரியை ஏவினான். தன்னால் ஏவப்பட்ட அந்தக் கணைகளால் அவன் பாண்டவப் படையைச் சிதறடிக்கத் தொடங்கினான்.(122) அவன் {அர்ஜுனன்}, தாசார்ஹ குலத்தோனைக் கண்டதும், ஓ! ஐயா, ஓ! மன்னா, அவன் மீது கடுங்கணை மாரியை மீண்டும் மீண்டும் பொழிந்தான்.(123) துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} ஏவப்பட்டுப் பாய்ந்த வந்த அந்தக் கணைகளால் கிருஷ்ணன், தனஞ்சயன் ஆகிய இருவரும் தங்கள் தேரில் முற்றாக அடைக்கப்பட்டனர்.(124)

அப்போது வீர அஸ்வத்தாமன், நூற்றுக்கணக்கான கூரிய கணைகளால் அந்தப் போரில் மாதவன் {கிருஷ்னன்} மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் மலைக்கச் செய்தான்.(125) அசைவன மற்றும் அசையாதன ஆகிய அனைத்தையும் பாதுகாப்பவர்களான அவ்விருவரும் கணைகளால் இவ்வாறு மறைக்கப்படதைக் கண்டு, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டமானது “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கதறியது.(126) சித்தர்கள் மற்றும் சாரணர்களின் கூட்டம் அங்கே வந்து, “உலகங்கள் அனைத்திற்கும் நன்மை விளையட்டும்” என்று அனைத்துப் பக்கங்களில் இருந்தும் மனதார வேண்டிக் கொண்டனர்.(127) அந்தப் போரில் கணைகளால் கிருஷ்ணர்கள் இருவரையும் மறைத்த துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} ஆற்றலைப் போன்ற ஓர் ஆற்றலை முன்பு எப்போதும் நான் கண்டதில்லை.(128) எதிரிகளுக்கு அச்சத்தை உண்டாக்குவதும், சிங்கத்தின் முழக்கத்திற்கு ஒப்பானதுமான அஸ்வத்தாமனுடைய வில்லின் ஒலியை, ஓ! மன்னா, அந்தப் போரில் நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டோம்.(129) அந்தப் போரில் திரிந்து தன் வலப்பக்கமும், இடப்பக்கமும் தாக்கிய போது, அவனது வில்லின் நாண்கயிறானது, மேகத் திரள்களுக்கு மத்தியில் இருக்கும் மின்னலின் கீற்றுகளைப் போல அழகாகத் தெரிந்தது.(130) பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பெரும் உறுதியையும், கரநளினத்தையும் கொண்டவனாக இருப்பினும், துரோணரின் மகனை அவன் கண்டபோது பெரிதும் மலைப்படைந்தான்.(131) உண்மையில் அப்போது அர்ஜுனன், தன் ஆற்றலானது, தன்னைத் தாக்கும் உயர் ஆன்மாவால் அழிக்கப்பட்டதாகவே கருதினான்.(132)

துரோணர் மகனுக்கு {அஸ்வத்தாமனுக்கும்}, பாண்டவனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையிலான அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்த போது, ஓ! ஏகாதிபதி, அதிலும் அந்த வலிமைமிக்கத் துரோணர் மகன், இவ்வாறு தன் எதிராளியிலும் மேம்பட்டு, குந்தியின் மகன் {அர்ஜுனன்} தன் சக்தியை இழந்த போது, கிருஷ்ணன் சினத்தால் நிறைந்தவனானான். கோபத்துடன் இருந்த அவன் ஆழ்ந்த பெரு மூச்சுகளைவிட்ட படியே, அஸ்வத்தாமன் மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் தன் கண்களாலேயே எரித்து விடுபவனைப் போல மீண்டும் மீண்டும் பார்த்தான். சினத்தால் நிறைந்த கிருஷ்ணன், பாசமிக்கத் தொனியில் அர்ஜுனனிடம்,(133-135) “ஓ! பார்த்தா, இன்று துரோணர் மகன் உன்னை விஞ்சுவதால், போரில் நான் உன்னை இவ்வாறு காண்பது மிக விநோதமானதாகத் தெரிகிறது.(136) முன்பு நீ கொண்டிருந்ததைப் போல இப்போது உன் கரங்களில் வலிமையும், சக்தியும் இல்லையா? உன் கரங்களில் இன்னும் காண்டீவம் இருக்கவில்லையா? உன் தேரில் இப்போது நீ நிற்கவில்லையா?(137) உன் இரு கரங்களும் பலமாக இல்லையா? உன் முட்டுகளில் காயமேதும் ஏற்பட்டிருக்கிறதா? பிறகு ஏன் போரில் உன்னைவிடத் துரோணர் மகன் விஞ்சுவதை நான் காண்கிறேன்?(138) ஓ! பார்த்தா, ஓ! பாரதக் குலத்தின் காளையே, உன்னைத் தாக்குபவரை உன் ஆசானின் மகனாகக் கருதி விட்டுவிடாதே. அவரை விட்டுவிடத் தகுந்த நேரம் இதுவன்று” என்றான்.(139)

இவ்வாறு கிருஷ்ணனால் சொல்லப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, வேகமே முக்கியமான தேவையாக இருந்த அந்த நேரத்தில், பதினான்கு அகன்ற தலை கணைகளை எடுத்து, அஸ்வத்தாமனின் வில், கொடிமரம், குடை, கொடிகள், தேர், ஈட்டி மற்றும் கதாயுதம் ஆகியவற்றை அறுத்தான்.(140) கன்றின் பல் போன்ற மேலும் சில கணைகளை {வத்சதந்தங்களை} எடுத்துக் கொண்ட அவன், அவற்றைக் கொண்டு துரோணர் மகனின் தோளில் ஆழமாகத் தாக்கினான். அதன் பேரில் ஆழ்ந்த மயக்கமடைந்த அஸ்வத்தாமன், தன் கொடிக்கம்பத்தைத் தாங்கிக் கொண்டே கீழே அமர்ந்தான்.(141) ஓ!ஏகாதிபதி, பின்னவனின் {அஸ்வத்தாமனின்} தேரோட்டி, அவனைத் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து காக்க விரும்பி, எதிரியால் இவ்வாறு ஆழமாகப் பீடிக்கப்பட்டு மயக்கமுற்றிருந்த அவனைக் கொண்டு சென்றான்.(142)

அதேவேளையில் எதிரிகளை எரிப்பவனான விஜயன் {அர்ஜுனன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வீரனான உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது துருப்புகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொன்றான்.(143) இவ்வாறே, ஓ! மன்னா, உமது தீய கொள்கைகளால், எதிரியுடன் போரிடும் உமது போர்வீரர்களுக்கு ஒரு கொடூரமான, பயங்கரமான பேரழிவு தொடங்கியது.(144) குறுகிய காலத்திற்குள்ளாகவே பீபத்சு {அர்ஜுனன்} சம்சப்தகர்களை முறியடித்தான்; விருகோதரன் {பீமன்} குருக்களையும்; வசுசேனன் {கர்ணன்} பாஞ்சாலர்களையும் முறியடித்தனர்.(145) பெரும் வீரர்களுக்கு அழிவைத் தரும் அந்தப் போரில் சுற்றிலும் பல தலையற்ற முண்டங்கள் எழுந்து நின்றன.(146) அதே வேளையில், ஓ! பாரதர்களின் தலைவா, தன் காயங்களால் ஏற்பட்ட பெரும் வலியால் யுதிஷ்டிரன், போரில் இருந்து இரண்டு மைல்கள் பின்வாங்கிச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தான்” {என்றான் சஞ்சயன்}.

அஸ்வத்தாமனின் சபதம்! – கர்ண பர்வம் பகுதி – 57-கௌரவர்களுக்கு உற்சாகமளித்த துரியோதனன்; திருஷ்டத்யும்னன் செய்த அநீதியை நினைவுகூர்ந்த அஸ்வத்தாமன் ஒரு சபத்தைச் செய்தது; போர்க்களத்தின் முதன்மையான போர்வீரர்களைக் காண வந்த தேவர்களும், அப்சரஸ்களும்; அப்சரஸ்கள் சிந்திய தெய்வீக நறுமணத்தை நுகர்ந்த வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு இறந்தது; மூர்க்கமடைந்த போர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது துரியோதனன், ஓ! பாரதர்களின் தலைவரே, கர்ணனிடம் சென்று, அவனிடமும், மத்ரர்களின் ஆட்சியாளனிடமும், அங்கே இருந்த பூமியின் தலைவர்களிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “எம்முயற்சியும் செய்யாமலேயே சொர்க்கத்தின் வாயில்கள் அகலத் திறந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பமானது {நமக்கு} வாய்த்திருக்கிறது. ஓ! கர்ணா, இத்தகு போரை அடைந்த க்ஷத்திரியர்கள் மகிழ்ச்சியையே அடைகிறார்கள்.(2) ஓ! ராதையின் மகனே {கர்ணா}, வலிமையிலும், ஆற்றலிலும் தங்களுக்கு நிகரான துணிச்சல்மிக்க க்ஷத்திரியர்களுடன் போரிடும் அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள் பெரும் நன்மையையே அடைகிறார்கள். இந்தச் சந்தர்ப்பம் அவ்வாறே வாய்த்திருக்கிறது.(3) இந்தத் துணிச்சல்மிக்க க்ஷத்திரியர்கள் போரில் பாண்டவர்களைக் கொன்று அகன்ற பூமியை அடையட்டும், அல்லது எதிரியால் போரில் கொல்லப்பட்டு, வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அருள் உலகங்களை வெல்லட்டும்” என்றான் {துரியோதனன்}.(4) துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த க்ஷத்திரியக் காளைகள், உற்சாக நிறைவுடன் உரத்த முழக்கங்களைச் செய்து, தங்கள் இசைக்கருவிகளை இசைத்து, முழக்கினர்.(5)

துரியோதனனின் படை இவ்வாறு மகிழ்ச்சியில் நிறைந்தபோது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} உமது போர்வீரர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், “துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, உங்கள் அனைவரின் கண்களுக்கும் முன்னால் என் தந்தை {துரோணர்} தன் ஆயுதங்களைக் கீழே வைத்த பிறகு, திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டார்.(6,7) மன்னர்களே, இத்தகு நடத்தை தூண்டிவிடும் கோபத்தாலும், என் நண்பனுக்காகவும் உண்மையில் உங்கள் அனைவரின் முன்பும் நான் உறுதிமொழி ஏற்கிறேன். அந்த எனது உறுதிமொழியைக் கேட்பீராக.(8) திருஷ்டத்யும்னனைக் கொல்லாமல் நான் என் கவசத்தை அகற்ற மாட்டேன். இந்த எனது உறுதிமொழி நிறைவேற வில்லையென்றால் சொர்க்கத்திற்கு நான் செல்லாதிருப்பேனாக.(9) அர்ஜுனனாகட்டும், பீமசேனனாகட்டும், அல்லது வேறு எவருமாகட்டும், என்னை எதிர்த்து வரும் அவனை, அல்லது அவர்கள் யாவரையும் நான் நசுக்கிவிடுவேன். இதில் ஐயமேதுமில்லை” என்றான் {அஸ்வத்தாமன்}.(10)

அஸ்வத்தாமன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, மொத்த பாரதப் படையும் ஒன்றாகச் சேர்ந்து பாண்டவர்களை எதிர்த்து விரைந்தன, பின்னவர்களும் {பாண்டவப் படையும்} முன்னவர்களை {கௌரவர்களை} எதிர்த்து விரைந்தனர்.(11) ஓ! பாரதரே, தேர்ப்படைப்பிரிவின் துணிவுமிக்கத் தலைவர்களுக்கு இடையில் நடந்த மோதலானது மிகவும் அச்சத்தைத் தருவதாக அமைந்தது. குருக்கள் மற்றும் சிருஞ்சயர்களுக்கு முன்னணியில் நிறுவப்பட்ட வாழ்வின் அழிவானது, இறுதியான பெரும் அண்ட அழிவின் போது ஏற்படுவதற்கு ஒப்பாக இருந்தது.(12) அந்த ஆயுத வழி {போர்} தொடங்கியதும், தேவர்களுடனும், அப்சரஸ்களின் துணையுடனும் கூடிய பல்வேறு (மேன்மையான) உயிரினங்கள் அந்த மனிதர்களில் முதன்மையானோரைக் காண அங்கே வந்தனர்.(13) மகிழ்ச்சியால் நிறைந்த அப்சரஸ்கள், தங்கள் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்போடு இருந்த அந்த மனிதர்களில் முதன்மையானோரை தெய்வீக மலர்மாலைகளாலும், பல்வேறு வகையான தெய்வீக நறுமணப் பொருட்களாலும், பல்வேறு ரத்தின இனங்களாலும் மறைத்தனர்.(14) அந்த அற்புதமான நறுமணங்களைப் போர்வீரர்களில் முதன்மையான அனைவரின் நாசிகளுக்கும் மென்மையான தென்றல் கொண்டு சேர்த்தது. காற்றுடைய செயல்பாட்டின் விளைவால் அந்த நறுமணங்களை நுகர்ந்த போர்வீரர்கள் மீண்டும் போரில் ஈடுபட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு பூமியில் விழத் தொடங்கினர்.(15) தெய்வீக மலர்கள், தங்கச் சிறகுகளைக் கொண்ட அழகிய கணைகள் மற்றும் போர்வீரர்களில் முதன்மையான பலரால் விரவிக்கிடந்த பூமியானது, நட்சத்திரக்கூட்டங்களால் விரவிக் கிடந்த ஆகாயத்தைப் போலத் தெரிந்தது.(16) ஆகாயத்தில் இருந்து வந்த மகிழ்ச்சி மற்றும் இசைக்கருவிகள் ஒலி ஆகியவற்றின் விளைவால், வில்லின் நாணொலிகள், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகள் மற்றும் போர்வீரர்களின் கூச்சல்கள் நடந்த அந்தச் சீற்றமிகு ஆயுதவழியானது மிக மூர்க்கமானதாக ஆனது” {என்றான் சஞ்சயன்}.(17)

களநிலவரம் விவரித்த கிருஷ்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 58-யுதிஷ்டிரனைக் குறித்துக் கவலையடைந்த அர்ஜுனன் அதைக் கிருஷ்ணனிடம் தெரிவிப்பது; கள நிலவரத்தை அர்ஜுனனுக்கு எடுத்துரைத்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரனிடம் செல்லுமாறு கிருஷ்ணனைத் தூண்டிய அர்ஜுனன்; களநிலவரத்தை மீண்டும் விவரித்தபடியே யுதிஷ்டிரன் இருக்குமிடத்திற்குத் தேரைச் செலுத்திய கிருஷ்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அர்ஜுனன், கர்ணன் மற்றும் பாண்டுவின் மகனான பீமசேனன் ஆகியோர் கோபத்தை அடைந்தபோது பூமியின் தலைவர்களுக்கு இடையே நடந்த அந்தப் போரானது இவ்வாறே நடந்தது.(1) துரோணர் மகனையும் {அஸ்வத்தாமனையும்}, பெரும் தேர்வீரர்களான பிறரையும் வென்ற அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்},(2) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, பாண்டவப் படை தப்பி ஓடுவதைப் பார். இந்தப் போரில் கர்ணன், நமது பெரும் தேர்வீரர்களைக் கொல்வதைப் பார்.(3) ஓ! தசார்ஹ குலத்தோனே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரை நான் காணவில்லை. மேலும், ஓ! போர்வீரர்களின் முதன்மையானவனே, தர்மன் மகனின் {யுதிஷ்டிரரின்} கொடிமரத்தையும் காணவில்லை.(4) ஓ! ஜனார்த்தனா, நாளின் மூன்றாவது பகுதி இன்னும் இருக்கிறது. தார்தராஷ்டிரர்களில் எவரும் என்னை எதிர்த்துப் போரிட வரவில்லை.(5) 

எனவே, எனக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக, யுதிஷ்டிரர் எங்கிருக்கிறாரோ அங்கே செல்வாயாக. தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} பாதுகாப்பாகவும், போரில் தன் தம்பிகளுடன் நலமாக இருப்பதையும் கண்ட பிறகு,(6) ஓ! விருஷ்ணி குலத்தோனே, நான் எதிரியோடு மீண்டும் போரிடுவேன்” என்றான் {அர்ஜுனன்}. பீபத்சுவின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட ஹரி {கிருஷ்ணன்}, மரணத்தையே தங்கள் இலக்காகச் செய்து கொண்டு, எதிரியோடு போரிட்டுக் கொண்டிருந்தவர்களும், வலிமைமிக்கவர்களும், பெரும் பலமிக்கத் தேர்வீரர்களுமான சிருஞ்சய வீரர்களுடன், மன்னன் யுதிஷ்டிரன் எங்கிருந்தானோ, அங்கே தன் தேரில் வேகமாகச் சென்றான்.(7,8)

அந்தப் பேரழிவு நடந்து கொண்டிருந்தபோது, போர்க்களத்தைக் கண்ட கோவிந்தன் {கிருஷ்ணன்}, சவ்யசச்சினிடம் {அர்ஜுனனிடம்},(9) “ஓ! பாரதா, துரியோதனனின் நிமித்தமாகப் பூமியில் உள்ள க்ஷத்திரியர்கள் அனைவருக்கும் நேரும் இந்தப் பயங்கரப் பேரழிவைப் பார்.(10) ஓ! பாரதா {அர்ஜுனா}, கொல்லப்பட்ட வீரர்களுக்குச் சொந்தமான தங்கப் பின்புறம் கொண்ட விற்களையும், தங்கள் தோள்களில் இருந்து இடம் பெயர்ந்திருக்கும் விலைமதிப்புமிக்க அவர்களது அம்பறாத்தூணிகளையும் பார்.(11) தங்கச் சிறகுகளைக் கொண்ட அந்த நேரான கணைகளையும் {நாராசங்களையும்}, எண்ணெயில் கழுவப்பட்டவையும், தங்கள் சட்டைகளில் இருந்து விடுபட்ட பாம்புகளைப் போலத் தெரிந்தவையுமான அந்தத் துணிக்கோல் கணைகளையும் பார்.(12) ஓ! பாரதா, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், தந்தப் பிடிகளைக் கொண்டவையுமான அந்தக் கத்திகளையும், தங்கம் பதிக்கப்பட்டு இடம்பெயர்ந்திருக்கும் அந்தக் கேடயங்களையும் பார்.(13) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்த வேல்களையும், தங்க ஆபரணங்களைக் கொண்ட அந்த ஈட்டிகளையும் {சக்திகளையும்}, சுற்றிலும் தங்கத்தால் {பொற்பட்டங்களால்} கட்டப்பட்ட அந்தப் பெரும் கதாயுதங்களையும் பார்.(14) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வாள்களையும், தங்க ஆபரணங்களைக் கொண்ட அந்தக் கோடரிகளையும் {பரசுகளையும்}, தங்கள் தங்கக் கைப்பிடிகளில் இருந்து விழுந்த போர்க்கோடரிகளின் தலைகளையும் பார்.(15)

அந்த இரும்பு குந்தங்களையும், மிகக் கனமான அந்தக் குறுந்தண்டங்களையும், அந்த அழகிய ஏவுகணைகளையும், முள்பதித்த தலைகளைக் கொண்ட அந்தப் பெரும் தடிகளையும், சக்கரதாரிகளின் கரங்களில் இருந்து இடம்பெயர்ந்திருக்கும் சக்கரங்களையும், இந்தப் பயங்கரப் போரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அந்தச் சூலங்களையும் பார்.(16) (உயிரோடு இருந்தபோது) போருக்கு வந்தவர்களான பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட போர்வீரர்கள், பல்வேறு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, உயிரை இழந்து கீழே கிடந்தாலும் இன்னும் உயிரோடு இருப்பவர்களைப் போலவே தெரிகிறார்கள்.(17) கதாயுதங்களால் நசுக்கப்பட்ட அங்கங்களையும், கனமான தண்டங்களால் உடைக்கப்பட்ட தலைகளையும், யானைகள், குதிரைகள் மற்றும தேர்களால் கிழித்துச் சிதைக்கப்பட்ட உடல்களையும் கொண்டு போர்க்களத்தில் கிடக்கும் இந்த ஆயிரக்கணக்கான போர்வீரர்களைப் பார்.(18) போர்க்களமானது, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, கணைகள், ஈட்டிகள், வாள்கள், கோடரிகள், கத்திகள், முள்பதித்த கதாயுதங்கள் {பரிகங்கள்}, வேல்கள், இரும்புக் குந்தங்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றாலும், காயங்கள் பலவற்றால் வெட்டப்பட்டு, குருதிப்புனலால் மறைக்கபட்டு உயிரை இழந்த மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் உடல்களாலும் மறைக்கப்பட்டிருக்கிறது.(19,20)

ஓ! பாரதா {அர்ஜுனா}, சந்தனத்தால் பூசப்பட்டு, தங்க அங்கதங்களாலும் {தோள்வளைகளால்}, கேயூரங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையும், தங்கள் {கைகளின்} முனைகள் தோலுறைகளால் மறைக்கப்பட்டவையுமான கரங்களுடன் கூடிய பூமியானது அழகானதாகத் தெரிகிறது.(21) தோலுறைகள் பூட்டப்பட்ட கரங்கள், இடம்பெயர்ந்திருக்கும் ஆபரணங்கள், யானைகளின் துதிக்கைகளைப் போலத் தெரியும் அறுக்கப்பட்ட தொடைகள் ஆகியவற்றுடன் கூடிய சுறுசுறுப்பான போர்வீரர்கள் பலராலும்,(22) விலைமதிப்புமிக்க ரத்தினங்கள், காது குண்டலங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையும், அகன்ற பெரிய கண்களைக் கொண்டவையுமான போர்வீரர்களின் விழுந்துவிட்ட தலைகளாலும் விரவிக்கிடக்கும் இந்தப் பூமியானது மிக அழகானதாகத் தெரிகிறது.(23) மேனியெங்கும் குருதியால் பூசப்பட்ட தலையற்ற உடல்கள், வெட்டப்பட்ட அங்கங்கள், தலைகள், உதடுகள் ஆகியவற்றுடன் கூடிய பூமியானது, ஓ! பாரதர்களில் சிறந்தவனே, நெருப்பு அணைக்கப்பட்டுச் சிதறிக் கிடக்கும் ஒரு வேள்விப் பீடத்தைப் போலத் தெரிகிறது.(24) தங்க மணிவரிசையைக் கொண்ட அந்த அழகிய தேர்கள், பல்வேறு வழிகளில் நொறுக்கப்பட்டிருப்பதையும், களத்தில் பரவிக் கிடக்கும் கொல்லப்பட்ட குதிரைகளின் உடல்களில் இன்னும் கணைகள் ஒட்டிக் கொண்டிருப்பதையும் பார்.(25) அந்தத் தேர்த்தட்டுகளும், அந்த அம்பறாத்தூணிகளும், அந்தக் கொடிகளும், பல்வேறு வகைகளிலான அந்தக் கொடிமரங்களும், தேர்வீரர்களின் பெரிய வெண்சங்குகளும் களமெங்கும் சிதறிக் கிடப்பதைப் பார்.(26)

மலைகளைப் போலப் பெரியவையான அந்த யானைகள், நாக்கு வெளியே தள்ளியவாறு பூமியில் கிடப்பதையும், வெற்றிக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்த யானைகள், மற்றும் குதிரைகள் தங்கள் உயிர்களை இழந்து கிடப்பதையும் பார்.(27) அந்த யானை அம்பாரிகளையும், அந்தத் தோல்கள் மற்றும் விரிப்புகளையும், பலவண்ணங்களுடன் அழகாக இருக்கும் அந்தக் கிழிந்துபோன விரிப்புகளையும் பார்.(28) பெரும் வடிவிலான யானைகள் விழுந்ததன் விளைவால், பல்வேறு வழிகளில் உடைந்து, கிழிந்திருக்கும் அந்த மணிவரிசைகளையும், வைடூரியக் கற்கள் பதிக்கப்பட்ட அந்த அழகிய மாவெட்டிகளையும், தரையில் விழுந்து கிடக்கும் அந்த அங்குசங்களையும் பார்.(29) தங்கத்தாலும், பலவண்ண ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையும், (கொல்லப்பட்ட) குதிரைவீரர்களின் பிடியில் இன்னும் இருப்பவையுமான அந்தச் சாட்டைகளையும், குதிரையின் முதுகில் இருக்கைகளாகப் பயன்பட்டு இப்போது தரையில் கிடப்பவைகளான அந்த விரிப்புகளையும், ரங்கு மான் தோல்களையும் பார்.(30) மன்னர்களின் கிரீடங்களை அலங்கரிக்கும் அந்த ரத்தினங்களையும், தங்கத்தாலான அந்த அழகிய கழத்தணிகளையும், இடம்பெயர்ந்து கிடக்கும் அந்தக் குடைகளையும், விசிறுவதற்கான சாமரங்களையும் பார்.(31) அழகிய காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டும், நன்கு வெட்டப்பட்ட தாடிகளுடனும், நிலவு மற்றும் நட்சத்திரங்களின் காந்தியுடனும் கூடிய வீரர்களின் முகங்களால், குருதிச் சேற்றுடன் விரவிக் கிடக்கும் இந்தப் பூமியைப் பார்[1].(32)

காயமடைந்தாலும், உயிர் இன்னும் போகாமல் துன்பத்தால் ஓலமிட்டுக் கொண்டே சுற்றிலும் கிடக்கும் அந்தப் போர்வீரர்களைப் பார். ஓ! இளவரசே {அர்ஜுனா}, அவர்களது உறவினர்கள் தங்கள் ஆயுதங்களை வீசி எறிந்துவிட்டு, அவர்களைப் பராமரித்துக் கொண்டு இடையறாமல் அழுது கொண்டிருக்கின்றனர்.(33) கணைகளால் போர்வீரர்களை மறைத்து, அவர்களின் உயிரை எடுத்த பிறகும், சுறுசுறுப்புடன் கூடியவர்களும், வெற்றியடையும் ஏக்கம் கொண்டவர்களும், சினம் பெருகியவர்களுமான அந்தப் போராளிகள் பிற எதிரிகளை எதிர்த்து மீண்டும் போரிடச் செல்வதைப் பார்.(34) சிலர் களத்தில் இங்கேயும் அங்கேயும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். தங்கள் உறவினர்களான வீழ்ந்துவிட்ட வீரர்களால் இரந்து கேட்கப்பட்ட தண்ணீரைத் தேடி சிலர் செல்கின்றனர்.(35) அதே வேளையில், ஓ! அர்ஜுனா, பலர் தங்கள் இறுதி மூச்சை சுவாசிக்கின்றனர். திரும்பி வரும் அவர்களது உறவினர்கள், உணர்வற்றுக் கிடக்கும் அவர்களைக் கண்டு,(36) தாங்கள் கொண்டு வந்த நீரை வீசிவிட்டு, ஒருவரை நோக்கி ஒருவர் கதறிக் கொண்டே மூர்க்கமாக ஓடுகின்றனர். ஓ! பாரதா {அர்ஜுனா}, பலர் தங்கள் தாகம் தணிந்ததும் இறக்கின்றனர், பலர் தாங்கள் {நீரைக்} குடித்துக் கொண்டிருக்கும்போதே இறக்கின்றனர்.(37) சிலர் தங்கள் உறவினர்களிடம் பாசத்தைக் கொண்டிருந்தாலும், {இறந்து போன} தங்கள் அன்புக்குரிய உறவினர்களை விட்டுவிட்டு அந்தப் பெரும்போரில் எதிரிகளை நோக்கி ஓடுகின்றனர்.(38) மேலும் சிலர், ஓ! மனிதர்களில் சிறந்தவனே, தங்கள் கீழுதடுகளைக் கடித்துக் கொண்டு, தங்கள் புருவங்கள் சுருங்கியதன் விளைவாக, பயங்கரத்தை அடைந்த முகங்களுடன் சுற்றிலும் களத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்” என்றான் {கிருஷ்ணன்}.

இந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வாசுதேவன் {கிருஷ்ணன்} யுதிஷ்டிரனை நோக்கிச் சென்றான். அர்ஜுனனும், அந்தப் பெரும்போரில் மன்னனை {யுதிஷ்டிரனைப்} பார்ப்பதற்காக, “செல், செல்வாயாக” என்று கோவிந்தனை மீண்டும் மீண்டும் தூண்டிக் கொண்டிருந்தான்.(40) பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குப்} போர்க்களத்தைக் காட்டிய பிறகு, வேகமாகச் சென்ற மாதவன் {கிருஷ்ணன்}, மீண்டும் பார்த்தனிடம் மெதுவாக, “மன்னர் யுதிஷ்டிரரை நோக்கி விரைந்து செல்லும் அந்த மன்னர்களைப் பார். போர் அரங்கத்தில் சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பாகத் திகழும் கர்ணனைப் பார்.(42) அதோ வலிமைமிக்க வில்லாளியான பீமர் போரிடச் சென்று கொண்டிருக்கிறார். பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் பாண்டவர்களில் முதன்மையானவர்கள் யாவரோ, திருஷ்டத்யும்னனைத் தங்கள் தலைமையில் கொண்டவர்கள் யாவரோ, அவர்களே பீமரைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள்.(43) விரைந்து செல்லும் பார்த்தர்களால் எதிரியின் பரந்த படையான மீண்டும் பிளக்கிறது. ஓ! அர்ஜுனா, தப்பி ஓடும் கௌரவர்களை அணிவகுக்கச் செய்ய முயலும் கர்ணனைப் பார்.(44) ஓ! குரு குலத்தோனே, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான வீரனான துரோணர் மகன் {அஸ்வத்தாமர்}, வேகத்தில் யமனுக்கும், ஆற்றலில் இந்திரனுக்கும் ஒப்பாக அதோ செல்கிறார். வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் அந்த வீரரை {அஸ்வத்தாமரை} எதிர்த்து விரைகிறான். சிருஞ்சயர்கள் திருஷ்டத்யும்னனின் வழிகாட்டுதலின் பேரில் பின்தொடர்கிறார்கள். {அதோ} சிருஞ்சயர்கள் வீழ்வதைப் பார்” என்றான் {கிருஷ்ணன்}.(46)

இவ்வாறே வெல்லப்பட முடியாதவனான வாசுதேவன் {கிருஷ்ணன்}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனான அர்ஜுனனிடம் அனைத்தையும் விவரித்தான். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பயங்கரமானதும், அச்சத்தை ஏற்படுத்துவதுமான ஒரு போர் தொடங்கியது.(47) ஓ! ஏகாதிபதி, அவ்விரு படைகளும் மரணத்தையே இலக்காகக் கொண்டு ஒருவரோடொருவர் மோதிக் கொண்டபோது உரத்த சிங்க முழக்கங்கள் எழுந்தன.(48) இவ்வாறே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது தீய கொள்கைகளின் விளைவால், உமது மற்றும் எதிரியின் போர்வீரர்களான அந்த அழிவு பூமியில் ஏற்பட்டது” {என்றான் சஞ்சயன்}.(49)

மீண்டும் அஸ்வத்தாமனை மயக்கமடையச் செய்த அர்ஜுனன்! – கர்ண பர்வம் பகுதி – 59-தனியனான கர்ணனுக்கும், பாண்டவப் படையினருக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்த போர்; திருஷ்டத்யும்னனின் வில்லை அறுத்த கர்ணன்; கர்ணனைத் தடுத்த சாத்யகி; திருஷ்டத்யும்னனை எதிர்த்து வந்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனும், திருஷ்டத்யும்னனும் கடுமொழியில் பேசிக் கொண்டது; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனைத் தேரற்றவனாகச் செய்து, அவனைக் கொல்வதற்காக இழுத்துச் சென்ற அஸ்வத்தாமன்; அந்தக் காட்சியைக் காட்டி, அஸ்வத்தாமனிடம் இருந்து திருஷ்டத்யும்னனைக் காக்குமாற அர்ஜுனனிடம் சொன்ன கிருஷ்ணன்; அஸ்வத்தாமனைத் தாக்கிய அர்ஜுனன்; மீண்டும் தேரில் ஏறிய அஸ்வத்தாமன்; திருஷ்டத்யும்னனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட சகாதேவன்; அர்ஜுனனால் தாக்கப்பட்டு மீண்டும் மயக்கமடைந்த அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனைக் களத்தைவிட்டுக் கொண்டு சென்ற அவனது சாரதி; மீண்டும் சம்சப்தகர்களை நோக்கிச் செல்ல விரும்பிய அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில், யுதிஷ்டிரனின் தலைமையில் பார்த்தர்களும், சூதன் மகன் {கர்ணன்} தலைமையில் நாங்களும் இருந்தபோது, குருக்களும், சிருஞ்சயர்களும் அச்சமில்லாமல் ஒருவரோடொருவர் மீண்டும் மோதிக் கொண்டனர்.(1) அப்போது, கர்ணனுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில், யமனின் அரசாங்கத்தைப் பெருகச் செய்வதும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதுமான ஒரு பயங்கரமான போர் தொடங்கியது.(2) துணிச்சல்மிக்கச் சம்சப்தகர்களில் சொற்பமானவர்களே கொல்லப்படாமல் எஞ்சிய போது, குருதிப்புனலை உண்டாக்கிய அந்த மூர்க்கமான போர் தொடங்கியதும்,(3) ஓ! ஏகாதிபதி (திருதராஷ்டிரரே}, (பாண்டவத் தரப்பு) மன்னர்கள் அனைவருடன் கூடிய திருஷ்டத்யும்னன், வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்கள் ஆகியோர் அனைவரும் கர்ணனை மட்டுமே எதிர்த்து விரைந்தனர்.(4) பெரும் அளவிலான நீர்த்தாரைகளை ஏற்கும் மலையைப் போல எவரின் துணையும் இல்லாத கர்ணன், மகிழ்ச்சியால் நிறைந்தவர்களும், வெற்றிக்காக ஏங்கியவர்களும், அந்தப் போரில் முன்னேறி வருபவர்களுமான அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் {தனியாக} எதிர்கொண்டான்.(5) கர்ணனோடு மோதிய அந்த வலிமைமிக்க வீரர்கள், மலையுடன் மோதி அனைத்துப் பக்கங்களிலும் சிதறும் நீர்த்திரள்களைப் போலச் சிதறி பிளந்தனர்.(6) எனினும், அவர்களுக்கும், கர்ணனுக்கும் இடையில் நடந்த அந்தப் போர் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

அப்போது அந்தப் போரில் திருஷ்டத்யும்னன் நேரான கணை ஒன்றால் ராதையின் மகனை {கர்ணனைத்} தாக்கி, அவனிடம், “நில்லும், நிற்பீராக” என்றான்.(7) வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், சினத்தால் நிறைந்து, விஜயம் என்று அழைக்கப்பட்ட தன் முதன்மையான வில்லை அசைத்து, திருஷ்டத்யும்னனின் வில்லையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான அவனது கணைகளையும் வெட்டி, ஒன்பது கணைகளால் திருஷ்டத்யும்னனையும் தாக்கினான். ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்ம பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கவசத்தைத் துளைத்த அந்தக் கணைகள்,(8,9) குருதியில் குளித்து, செம்பட்டுப்பூச்சிகள் {இந்திரகோபங்கள்} பலவற்றைப் போல அழகாகத் தெரிந்தன. வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன், உடைந்துபோன அந்த வில்லை வீசிவிட்டு,(10) மற்றொரு வில்லையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகள் பலவற்றையும் எடுத்துக் கொண்டான். எண்ணிக்கையில் எழுபதாக இருந்த அந்த நேரான கணைகளால் கர்ணனைத் துளைத்தன.(11) அதே போலக் கர்ணனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் எதிரிகளை எரிப்பவனான அந்தப் பிருஷதன் மகனைக் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகள் பலவற்றால் மறைத்தான். துரோணரைக் கொன்றவனான அந்தப் பெரும் வில்லாளி {திருஷ்டத்யும்னன்}, கூரிய கணைகள் பலவற்றால் கர்ணனைத் துளைத்துப் பதிலடி கொடுத்தான்.(12)

அப்போது சினத்தால் நிறைந்த கர்ணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இரண்டாவது யமதண்டத்தைப் போன்றதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான கணையொன்றைத் தன் எதிராளியின் மீது ஏவினான்.(13) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரமான கணையானது, பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி மூர்க்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிநியின் பேரன் {சாத்யகி}, தன் பெரும் கரநளினத்தை வெளிக்காட்டும் விதமாக அதை ஏழு துண்டுகளாக அறுத்தான்.(14) சாத்யகியின் கணைகளால் கலங்கடிக்கப்பட்ட தன் கணையைக் கண்ட கர்ணன், ஓ! மன்னா, கணைமாரிகளால் சாத்யகியை அனைத்துப் பக்கங்களிலும் தடுத்தான்.(15) அம்மோதலில் அவன் ஏழு துணிக்கோல் கணைகளால் சாத்யகியைத் துளைத்தான். எனினும் அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, பதிலுக்குத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணைகள் பலவற்றால் அவனைத் {கர்ணனைத்} துளைத்தான்.(16) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இரு வீரர்களுக்குள் நடந்த போரானது, பார்வையாளர்கள் மற்றும் போராளிகள் ஆகிய இருவரையும் அச்சத்தில் நிறைந்தது. அஃது {அந்தப் போர்} அச்சந்தருவதாக இருந்தாலும், அழகானதாகவும், காணத் தகுந்ததாகவும் இருந்தது.(17) அந்தப் போரில் கர்ணன் மற்றும் சிநியின் பேரன் ஆகியோரின் அருஞ்செயல்களைக் கண்டு மயிர்ச்சிலிர்த்து நிற்பதாக அனைத்து உயிரினங்களும் தெரிந்தன.(18)

அதே வேளையில் வலிமைமிக்கத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, எதிரிகளைத் தண்டிப்பவனும், எதிரிகள் அனைவரின் ஆற்றலையும் தணிப்பவனுமான பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} எதிர்த்து விரைந்தான்.(19) சினத்தால் நிறைந்தவனும், பகை நகரங்களை அடக்குபவனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, திருஷ்டத்யும்னனிடம், “ஓ! பிராமணனைக் {துரோணரைக்} கொன்றவனே, நில், நிற்பாயாக, நீ இன்று என்னிடம் இருந்து உயிரோடு தப்ப முடியாது” என்றான்.(20) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பெரும் கரநளினம் கொண்டவனுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அஸ்வத்தாமன்}, உறுதியுடன் முயன்று, பெரும் வேகத்துடன் கூடியவையும், பயங்கரமானவையுமான கூரிய கணைகளைக் கொண்டு, கிட்டத்தட்ட தன் ஆற்றல் முழுவதையும் வெளிப்படுத்திப் போராடிய துணிச்சல் மிக்கப் பிருஷதன் மகனை ஆழமாகத் துளைத்தான். துரோணர் (உயிரோடு இருந்தபோது), ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பிருஷதன் மகனைக் கண்டு, தன் காலன் வந்துவிட்டதாகக் கருதியதைப் போலவே, பகைவீரர்களைக் கொல்பவனான பிருஷதன் மகனும், அந்தப் போரில் துரோணர் மகனைக் {அஸ்வத்தாமனைக்} கண்டதும், தன் காலன் வந்துவிட்டதாகவே கருதினான்.(21-23) எனினும், போரில் ஆயுதங்களால் தான் கொல்லப்படாதவன் என்பது நினைவுகூர்ந்த அவன், அண்ட அழிவின் போது அந்தகனை எதிர்க்கும் அந்தகனைப் போலத் துரோணரின் மகனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(24)

எனினும், துரோணரின் வீரமகன் {அஸ்வத்தாமன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் முன் நிற்கும் திருஷ்டத்யும்னனைக் கண்டு, கோபத்தால் ஆழ்ந்த பெருமூச்சுகளைவிட்டபடியே அவனை நோக்கி விரைந்தான்.(25) ஒருவரையொருவர் கண்டு இருவருமே பெருஞ்சினத்தால் நிறைந்தனர். அப்போது, பெரும் சுறுசறுப்பைக் கண்ட துரோணரின் வீர மகன், ஓ! ஏகாதிபதி, தன்னிடம் இருந்து தொலைவில் இல்லாத திருஷ்டத்யும்னனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! பாஞ்சாலர்களில் இழிந்தவனே, நான் இன்று உன்னை யமனிடம் அனுப்புவேன்.(26,27) பார்த்தனால் {அர்ஜுனனால்} பாதுகாக்கப்படாமல் போரில் நீ நின்றாலோ, ஓ! மூடா, தப்பி ஓடாமல் நீ இருந்தாலோ, முன்பு துரோணரைக் கொன்றதால் நீ இழைத்த பாவமானது, அந்த உனது பெருந்தீமைக்காக இன்று உன்னை வருத்தத்தால் நிறைக்கும். {இதை உனக்கு} நான் உண்மையாகவே சொல்கிறேன்” {என்றான் அஸ்வத்தாமன்}.(28,29)

இவ்வாறு சொல்லப்பட்ட வீரத் திருஷ்டத்யும்னன், “உறுதியுடன் போரிட்டுக் கொண்டிருந்த உமது தந்தைக்குப் பதிலளித்த என் அதே வாள், இந்த உமது பேச்சுக்கும் இன்று பதிலளிக்கும்.(30) ஓ! பெயரளவில் மட்டுமே பிராமணராக இருப்பவரே {அஸ்வத்தாமரே}, துரோணரை என்னால் கொல்ல முடிந்ததென்றால், என் ஆற்றலை வெளிப்படுத்தி இன்று உம்மை நான் ஏன் கொல்ல மாட்டேன்?” என்று மறுமொழி கூறினான்.(31) பாண்டவப் படைகளின் கோபக்காரத் தலைவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, கூரிய கணையொன்றால் துரோணர் மகனைத் துளைத்தான்.(32) பிறகு, சினத்தால் நிறைந்த துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நேரான கணைகளைக் கொண்டு திருஷ்டத்யும்னனை அனைத்துப் பக்கங்களிலும் மறைத்தான்.(33) ஆயிரக்கணக்கான கணைகளால் மறைக்கப்பட்டதால், ஓ! ஏகாதிபதி, அதற்கு மேலும் ஆகாயமோ, திசைப்புள்ளிகளோ, சுற்றிலும் உள்ள போராளிகளோ காணப்படவில்லை.(34) அதே போலப் பிருஷதன் மகனும், ஓ! ஏகாதிபதி, கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, போர்க்கள ரத்தினமான அந்தத் துரோணர் மகனைக் கணைகளால் மறைத்தான்.(35)

ராதையின் மகனும் {கர்ணனும்} கூட, ஓ! ஏகாதிபதி, பாஞ்சாலர்கள், பாண்டவர்கள், திரௌபதியின் (ஐந்து) மகன்கள், யுதாமன்யு, தன் அருஞ்செயலின் விளைவால் அனைவரின் கண்களுக்கு வடமீனாக {அருந்ததி நட்சத்திரமாகத்} தெரிந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சாத்யகி ஆகியோரைத் தனியாகவே தடுத்தான்.(36) அப்போது திருஷ்டத்யும்னன் அந்தப் போரில், மிகக் கடினமானதும் உறுதியானதுமான துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} வில்லையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான அவனது கணைகள் அனைத்தையும் அறுத்தான்.(37) எனினும், துரோணர் மகன் கண்ணிமைப்பதற்குள் தன் கணைகளால், பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} வில், ஈட்டி, கதாயுதம், கொடிமரம், குதிரைகள், சாரதி மற்றும் தேர் ஆகியவற்றை அழித்தான்.(38) வில்லற்று, தேற்று, குதிரைகளற்று, சாரதியற்றுப் போன அந்தப் பிருஷதன் மகன் ஒரு பெரிய கத்தியையும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சுடர்மிக்கக் கேடயத்தையும் எடுத்துக் கொண்டான்.(39) பெரும் கரநளினத்தையும், வலிமைமிக்க ஆயுதங்களையும் கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தத் துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா, அந்தப் போரில் அகன்ற தலைக் கணைகளை {பல்லங்களைக்} கொண்டு, திருஷ்டத்யும்னன் தன் தேரின் அருகே வருவதற்கு முன்பே பின்னவனின் {திருஷ்டத்யும்னனின்} அந்த ஆயுதங்களையும் வேகமாக அறுத்தான்.(40) இவை யாவும் அற்புதமானவையாகத் தெரிந்தன.

எனினும், வலிமைமிக்கத் தேர்வீரனான அஸ்வத்தாமன் விறுவிறுப்பாகப் போராடினாலும், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, கணைகள் பலவற்றால் துளைத்துச் சிதைக்கப்பட்டவனாகவும், தேரற்று, குதிரைகளற்று, வில்லற்றவனாகவும் இருந்த திருஷ்டத்யும்னனை அவனால் கொல்ல முடியவில்லை.(41,42) எனவே, ஓ! மன்னா, தன் எதிரியைக் கணைகளால் கொல்ல முடியவில்லை என்பதைத் துரோணர் மகன் கண்டபோது, அவன் தன் வில்லை வைத்துவிட்டு, பிருஷதன் மகனை நோக்கி வேகமாக {தேரை விட்டு இறங்கி நடந்து} சென்றான்.(43) அந்த உயர் ஆன்மா கொண்டவன் {அஸ்வத்தாமன்}, தன் எதிரியை நோக்கி விரைந்த வேகமானது, ஒரு பெரிய பாம்பைப் பிடிப்பதற்காகப் பாயும் கருடனுக்கு ஒப்பாக இருந்தது.(44)

அதே வேளையில், மாதவன் {கிருஷ்ணன்} அர்ஜுனனிடம், “ஓ! பார்த்தா, பிருஷதன் மகனின் தேரை நோக்கிப் பெரும் வேகத்துடன் துரோணர் மகன் எவ்வாறு விரைகிறார் என்பதைப் பார். அந்த இளவரசனை அவர் கொன்றுவிடுவார் என்பதில் ஐயமில்லை.(45) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! எதிரிகளை நொறுக்குபவனே, காலனின் கோரப் பற்களுக்கிடையில் அகப்பட்டிருப்பதைப் போல இப்போது துரோணர் மகனின் கோரப் பிடிக்குள் இருக்கும் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} மீட்பாயாக” என்றான். இவ்வார்த்தைகளைச் சொன்ன வீர வாசுதேவன் {கிருஷ்ணன்} துரோணர் மகன் இருந்த இடத்தை நோக்கி குதிரைகளைத் தூண்டினான்.(46,47) நிலவின் காந்தியைக் கொண்ட அந்தக் குதிரைகள், கேசவனால் தூண்டப்பட்டு, வானத்தையே விழுங்கிவிடுவதைப் போலத் துரோணர் மகனின் தேரை நோக்கிப் பாய்ந்தன.(48) பெரும் சக்தியைக் கொண்ட கிருஷ்ணன் மற்றும் தனஞ்சயன் ஆகிய இருவரும் தன்னை நோக்கி வருவதைக் கண்ட வலிமைமிக்க அஸ்வத்தாமன், திருஷ்டத்யும்னனை விரைவாகக் கொல்வதற்கான பெரும் முயற்சிகளைச் செய்தான்.(49)

ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன் தன் எதிரியால் இழுக்கப்படுவதைக் கண்ட வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} நோக்கி கணைகள் பலவற்றை ஏவினான்.(50) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையுமான அந்தக் கணைகள், துரோணர் மகனை அணுகி, எறும்புப் புற்றைத் துளைக்கும் பாம்புகளைப் போல அவனை ஆழமாகத் துளைத்தன.(51) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பயங்கரக் கணைகளால் இவ்வாறு துளைக்கப்பட்ட துரோணரின் வீரமகன், அளவிலா சக்தி கொண்ட அந்தப் பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனைக்} கைவிட்டான்.(52) உண்மையில் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் இவ்வாறு பீடிக்கப்பட்ட அந்த வீரன், தன் தேரில் {மீண்டும்} ஏறித் தன் சிறந்த வில்லை எடுத்துக் கொண்டு, கணைகள் பலவற்றால் பார்த்தனைத் துளைக்கத் தொடங்கினான்.(53) அதேவேளையில், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, வீரச் சகாதேவன், எதிரிகளை எரிப்பவனான அந்தப் பிருஷதன் மகனைத் தன் தேரில் சுமந்து சென்றான்.(54) அப்போது அர்ஜுனன், ஓ! மன்னா, துரோணர் மகனைப் பல கணைகளால் துளைத்தான். சினத்தால் நிறைந்த துரோணர் மகன், அர்ஜுனனின் கரங்களையும் மார்பையும் தாக்கினான்.(55)

இவ்வாறு கோபம் தூண்டப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, காலனின் இரண்டாவது தண்டம் போன்றதோ, ஒருவேளை காலனையே போன்றதோவான ஒரு நீண்ட கணையை அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} மீது ஏவினான். பெரும் காந்தியைக் கொண்ட அந்தக் கணையானது அந்தப் பிராமண வீரனின் தோள்களில் பாய்ந்தது.(56) அந்தப் போரில் அடைந்த அந்தத் தாக்குதலின் பலத்தால் மிகவும் கலக்கமடைந்து அவன் {அஸ்வத்தாமன்}, ஓ! ஏகாதிபதி, தன் தேர்த்தட்டில் அமர்ந்து மயங்கிப் போனான்.(57) அப்போது கர்ணன், ஓ! ஏகாதிபதி, தன் வில்லான விஜயத்தை அசைத்துக் கொண்டு, சினத்தால் நிறைந்து, அர்ஜுனனோடு தனிப்போரில் ஈடுபடும் விருப்பத்துடன் அந்தப் போரில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.(58) அதேவேளையில் துரோணர் மகன் உணர்வற்றுக் கிடப்பதைக் கண்ட பின்னவனின் {அஸ்வத்தாமனின்} சாரதி, வேகமாகப் போர்க்களத்தில் இருந்து அவனைக் கொண்டு சென்றான்.(59)

பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} மீட்கப்பட்டதையும், துரோணர் மகன் பீடிக்கப்பட்டதையும் கண்ட பாஞ்சாலர்கள், ஓ! மன்னா, வெற்றியடையும் எதிர்பார்ப்பில் உரக்க முழங்கத் தொடங்கினர்.(60) ஆயிரக் கணக்கான இனிய கருவிகள் {இசைக் கருவிகள்} ஒலிக்கத் தொடங்கின. போரில் இத்தகு அற்புதமான அருஞ்செயல்களைக் கண்ட போராளிகள் சிங்க முழக்கம் செய்தனர்.(61) அந்தச் சாதனையைச் செய்த பார்த்தன் {அர்ஜுனன்}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, சம்சப்தகர்களை நோக்கிச் செல்வாயாக. அதையே நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றான்.(62) பாண்டு மகனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தசார்ஹ குலத்தோன், பல கொடிகளால் அருளப்பட்டதும், காற்று, அல்லது மனத்தின் வேகத்தைக் கொண்டதுமான அந்தத் தேரில் முன்னேறிச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(63)

கிருஷ்ணனின் நேரடிப் போர் வர்ணனை! – கர்ண பர்வம் பகுதி – 60-சம்சப்தகர்களிடம் செல்லுமாறு சொன்ன அர்ஜுனனுக்கு யுதிஷ்டிரனின் நிலையைச் சுட்டிக் காட்டிய கிருஷ்ணன்; போரை நேரடியாக வர்ணித்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரனைக் காத்து நின்ற சாத்யகியும், பீமனும்; ஒருவேளை யுதிஷ்டிரர் இறந்திருக்கக்கூடும் என்று ஐயமெழுப்பிய கிருஷ்ணன்; பீமனின் வீரத்தை எடுத்துரைத்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரன் உயிரோடுதான் இருக்கிறான் என ஐயந்தெளிந்த கிருஷ்ணன்; நிஷாத இளவரசன் ஒருவனைக் கொன்ற பீமன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் குந்தியின் மகனான பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குச்} சுட்டிக் காட்டிய கிருஷ்ணன், அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(2) “ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வலிமைமிக்கவர்களும், தார்தராஷ்டிரர்களில் பெரும் வில்லாளிகளுமான பலர், அதோ உன் அண்ணனை (யுதிஷ்டிரரைப்) பின்தொடர்ந்து செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் அவரைக் கொல்லும் விருப்பத்தைக் கொண்டவர்களாவர்.(2) போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களும் வலிமைமிக்கவர்களுமான பாஞ்சாலர்கள், உயர் ஆன்ம யுதிஷ்டிரரை மீட்கும் விருப்பத்தால் அவரை நோக்கிச் செல்கின்றனர்.(3) ஓ! பார்த்தா {அர்ஜுனா}, மொத்த உலகின் மன்னனான துரியோதனன், கவசம்பூண்டு, பெரும்படை ஒன்றின் துணையுடன் அதோ பாண்டவ மன்னரை {யுதிஷ்டிரரைப்} பின்தொடர்ந்து செல்கிறான்.(4) தன் எதிராளியைக் கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்ட அந்த வலிமைமிக்கத் துரியோதனன், ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, நஞ்சுமிக்கப் பாம்புகளின் தீண்டலையுடைய ஆயுதங்களைக் கொண்டவர்களும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான தன் தம்பிகளின் துணையுடன் அவரைப் பின்தொடர்ந்து செல்கிறான்.(5)

அந்தத் தார்தராஷ்டிர யானைகளும், குதிரைகளும், தேர்வீரர்களும், காலாட்படை வீரர்களும், மதிப்புமிக்க ரத்தினத்தைக் கவர நினைக்கும் ஓர் ஏழை மனிதரைப் போல யுதிஷ்டிரரைக் கைப்பற்ற வருகின்றனர்.(6) சாத்யகியாலும், பீமனாலும் தடுக்கப்படும் அவர்கள், அமுதத்தைக் கவர்ந்து செல்ல விரும்பிய தைத்தியர்கள் சக்ரனாலும் {இந்திரனாலும்}, அக்னியாலும் அசைவற்றவர்களாகச் செய்யப்பட்டதைப் போல மீண்டும் மலைப்படைந்து நிற்கின்றனர்.(7) எனினும், (குரு படையின்) வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அதிகமான தங்கள் எண்ணிக்கையின் விளைவால், மழைக்காலங்களில் பெருங்கடலை நோக்கி விரையும் பெரும் அளவிலான நீரைப் போல யுதிஷ்டிரரை நோக்கி மீண்டும் செல்கின்றனர்.(8) அந்த வலிமைமிக்க வில்லாளிகள் சிங்க முழக்கங்களைச் செய்து, சங்குகளை முழக்கித் தங்கள் விற்களை அசைத்துக் கொண்டிருக்கின்றனர்.(9) இவ்வாறு துரியோதனனின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டவரும், குந்தியின் மகனுமான யுதிஷ்டிரரை ஏற்கனவே காலனின் வாய்க்குள் அகப்பட்டவராகவோ, ஏற்கனவே வேள்வி நெருப்பில் ஊற்றப்பட்ட ஆகுதியாகவோ நான் கருதுகிறேன்[1].(10)

ஓ! பாண்டவா {அர்ஜுனா}, திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} படையானது முறையாக ஆயத்தம் செய்யப்பட்டு அணிவகுக்கப்பட்டிருக்கிறது. அதன் {அந்த வியூகத்துடைய} கணைகளின் எல்லைக்குள் சக்ரனே {இந்திரனே} வந்தாலும், அவனும் தப்புவது அரிதே.(11) பெரும் வேகத்துடன் கணைமாரிகளைப் பொழிபவனும், கோபத்தில் அந்தகனுக்கு ஒப்பானவனுமான வீரத் துரியோதனனின் மூர்க்கத்தைப் போரில் எவனால் தாங்கிக் கொள்ள முடியும்?(12) வீரத் துரியோதனன், அல்லது துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அல்லது கிருபர், அல்லது கர்ணனுடைய கணைகளின் சக்தியானது, மலைகளையே பிளந்துவிடக் கூடியதாகும்.(13) எதிரிகளை எரிப்பவரான மன்னர் யுதிஷ்டிரர், ஒரு முறை கர்ணனால் களத்தில் புறமுதுகிடச் செய்யப்பட்டார். அந்த ராதையின் மகன் {கர்ணன்}, பெரும் வலிமைகொண்டவனாகவும், பெரும் கரநளினம் கொண்டவனாகவும் இருக்கிறான். அவன் {கர்ணன்}, போரில் பாண்டுவின் மூத்த மகனை {யுதிஷ்டிரரைப்} பீடிக்கத் தகுந்தவனாக, அதிலும் குறிப்பாக, வலிமைமிக்கவர்களும், துணிச்சல்மிக்கவர்களுமான திருதராஷ்டிரர் மகன்களுடன் சேர்ந்திருக்கும்போது அதற்கு முற்றிலும் தகுந்தவனாகவே அவன் இருக்கிறான்.(14,15)

கடும் நோன்புகளைக் கொண்ட அந்தப் பிருதையின் மகன் {திருஷ்டத்யும்னன்}, அவ்வீரர்கள் அனைவருடன் போரிட்டுக் கொண்டிருந்த போது, பெரும் தேர் வீரர்களான பிறர் அவரைத் தாக்கி, அவரது வீழ்ச்சியில் பங்களித்தனர்.(16) ஓ! பாரதர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, தன் உண்ணா நோன்புகளின் விளைவால் மன்னர் {யுதிஷ்டிரர்} மிகவும் மெலிந்திருக்கிறார். அவர் பிரம்ம சக்தியைக் கொண்டிருக்கிறார், ஆனால், அந்தப் பலமிக்கவர் அதிக அளவு க்ஷத்திரிய வலிமையைக் கொண்டவராக இல்லை[2].(17) எனவே, கர்ணனால் தாக்கப்பட்டவரும், எதிரிகளை எரிப்பவருமான அந்தப் பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரர்}, பேராபத்தான நிலையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.(18) ஓ! பார்த்தா, மன்னர் யுதிஷ்டிரர் வீழ்ந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். உண்மையில், எதிரிகளைத் தண்டிப்பவரும், கோபம் நிறைந்தவருமான பீமசேனர், வெற்றியடையும் விருப்பத்தால் அடிக்கடி கூச்சலிட்டு, சிங்க முழக்கங்களைச் செய்து, தங்கள் சங்குகளை முழக்கும் தார்தராஷ்டிரர்களைப் பொறுமையாகத் தாங்கிக் கொள்வதால்,(19,20) ஓ! மனிதர்களில் காளையே, பாண்டுவின் மகனான யுதிஷ்டிரர் இறந்துவிட்டார் என்றே நான் நினைக்கிறேன்[3]. அதோ தார்தராஷ்டிரர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களைக் கர்ணன் முன்னேறத் தூண்டுகிறான்.(21)

வலிமைமிக்க (தார்தராஷ்டிரத்) தேர்வீரர்கள், ஸ்தூணாகர்ணம், இந்திரஜாலம், பாசுபதம் மற்றும் பிற ஆயுதக் கூட்டங்களுடன் பிருதையின் அரச மகனைச் {குந்தியின் மகனான யுதிஷ்டிரனைச்} சூழ்ந்திருக்கிறார்கள் [4].(22) வேகமே தேவையான அந்த உயர்ந்த வேளையில் பாஞ்சாலர்களும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான பாண்டவர்களும், அடியற்ற கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் மனிதனை காக்க விரையும் பலசாலிகளைப் போல மன்னரை {யுதிஷ்டிரரை} நோக்கி விரைந்து செல்வதால், அவர் ஆழமாகப் பீடிக்கப்பட்டு, மிகப் பலவீனமான நிலையிலேயே இருக்கக்கூடும்.(23,24) மன்னரின் கொடிமரமும் தென்படவில்லை. ஒருவேளை கர்ணன் தன் கணைகளால் தாக்கி அதை வீழ்த்தியிருக்கக்கூடும். ஓ! பார்த்தா, இரட்டையர்கள் {நகுல சகாதேவன், சாத்யகி, சிகண்டி,(25) திருஷ்டத்யும்னன், பீமன், சதானீகன் ஆகியோரும், பாஞ்சாலர்களும் மற்றும் சேதிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஓ! பாரதா,(26) தாமரைக்கூட்டங்களை அழிக்கும் யானையொன்றைப் போலக் கர்ணன் தன் கணைகளால் பாண்டவப் படையை அதோ அழித்துக் கொண்டிருக்கிறான்.(27) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உன் படையின் தேர்வீரர்கள் அதோ தப்பி ஓடுகின்றனர். பார், ஓ! பார்த்தா, அந்தப் பெரும் போர்வீரர்கள் எவ்வாறு பின்வாங்குகிறார்கள் என்பதைப் பார்.(28) ஓ! பாரதா, போரில் கர்ணனால் தாக்கப்படும் அந்த யானைகள், வலியால் பிளிறிக் கொண்டே அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடுகின்றன.(30)

சூதன் மகனின் {கர்ணனின்} தேரில் இருப்பதும், யானையின் கயிற்றைப் பொறியாகத் தாங்கியதுமான அந்த முதன்மையான கொடிமரம், களமெங்கும் அசைந்து தென்படுவதைப் பார்.(31) அதோ, அந்த ராதையின் மகன் {கர்ணன்}, பீமசேனரை எதிர்த்து இப்போது விரைகையில், நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்து, உன் படையைக் கொன்றுகொண்டே செல்கிறான்.(32) அச்சந்தரும் போரில் சக்ரனால் {இந்திரனால்} முறியடிக்கப்படும் தைத்தியர்களைப் போலவே அந்த வலிமைமிக்கப் பாஞ்சாலத் தேர்வீரர்கள் அங்கே (கர்ணனால்) முறியடிக்கப்படுகின்றனர்.(33) பாஞ்சாலர்கள், பாண்டுக்கள், சிருஞ்சயர்கள் ஆகியோரை வென்ற கர்ணன், அதோ அனைத்துப் பக்கங்களிலும் தன் கண்களைச் செலுத்தி உன்னையே தேடுகிறான் என நான் நினைக்கிறேன்.(34) ஓ! பார்த்தா, கர்ணன் தன் முதன்மையான வில்லை அழகாக வளைக்கும்போது, தன் எதிரிகளை வென்று தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் சக்ரனை {இந்திரனைப்} போல மிக அழகாகத் தெரிகிறான் பார்.(35)

கௌரவர்கள், கர்ணனின் ஆற்றலைக் கண்டு, அனைத்துப் பக்கங்களிலும் பாண்டுக்களையும், சிருஞ்சயர்களையும் அச்சங்கொள்ளச் செய்யும் வகையில் அதோ முழங்கிக் கொண்டிருக்கின்றனர்.(36) அந்தப் பயங்கரப் போரில், ஓ! கௌரவங்களை அளிப்பவனே, கர்ணனே தன் முழு ஆன்மாவோடு பாண்டுக்களை அச்சுறுத்தும் வகையில், அனைத்துத் துருப்புகளிடமும்,(37) “கௌரவர்களே முன்னேறிச் செல்லுங்கள், நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. இந்தப் போரில் ஒரு சிருஞ்சயனும் உயிரோடு தப்பாத வகையில் வேகமாக விரைவீராக.(38) நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதைச் செய்வீராக. எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் உங்களைப் பின்தொடர்ந்து வருவோம்” என்று அதோ சொல்கிறான். இந்த வார்த்தைகளைச் சொன்ன அவன் {கர்ணன்}, தன் கணைகளை இறைத்தபடியே (தன் துருப்புகளுக்குப்) பின்னால் முன்னேறிச் செல்கிறான்.(39) ஓ! பார்த்தா, இந்தப் போரில் வெண்குடையால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கர்ணன், சந்திரனால் அலங்கரிக்கப்பட்ட உதயமலைகளைப் போலத் தெரிவதைப் பார்.(40) நூறு விலாக்களை {கம்பிகளைக்} கொண்டதும், முழு நிலவுக்கு ஒப்பானதும், இந்தப் போரில் அவனது தலைக்கு மேலே பிடிக்கப்பட்டதுமான அவனது அழகிய குடையுன் கூடிய கர்ணன், ஓ! இளவரசே {அர்ஜுனா}, தன் பார்வையை உன் மேல் செலுத்துகிறான். இந்தப் போரில் அவன் பெரும் வேகத்துடன் இங்கே வருவான் என்பதில் ஐயமில்லை.(41,42)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, அச்சத்தை ஏற்படுத்தும் இந்தப் போரில் அவன் {கர்ணன்}, தன் உறுதிமிக்க வில்லை அசைப்பதையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தன் கணைகளை ஏவுவதையும் பார்.(43) ஓ! பார்த்தா, அந்த ராதையின் மகன் {கர்ணன்}, குரங்கைக் கொண்டிருக்கும் உன் கொடியைக் கண்டு, ஓ! எதிரிகளை எரிப்பவனே, உன்னோடு மோத விரும்பி, இந்தத் திசையை நோக்கி அதோ திரும்புகிறான். உண்மையில் அவன் {கர்ணன்}, விளக்கின் வாய்க்குள் புகும் பூச்சி ஒன்றைப் போலவே தன் அழிவுக்காகவே {இங்கே} வந்து கொண்டிருக்கிறான்.(44) கோபம் நிறைந்தவனும், துணிச்சல்மிக்கவனுமான அவன், திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} நன்மையிலேயே எப்போதும் ஈடுபடுகிறான். தீய புத்தியைக் கொண்ட அவனால் {கர்ணனால்}, எப்போதும் உனக்கு இணையானவனாக ஆக முடியாது.(45)

கர்ணன் தனியனாகவும், ஆதரவற்றவனாகவும் இருப்பதைக் கண்ட திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, ஓ! பாரதா, அவனைக் காப்பதற்காகத் தன் பெரும் படையின் துணையுடனும், பெரும் உறுதியுடனும் அவனை நோக்கித் திரும்புகிறான்.(46) அந்தத் தீய ஆன்மா கொண்டவனும், அவனது கூட்டாளிகள் அனைவரும், புகழ், அரசாங்கம் மற்றும் இன்பத்தை வெல்லும் விருப்பத்துடன், சுறுசுறுப்பையும் வெளிப்படுத்தும் உன்னால் கொல்லப்பட வேண்டும்.(47) நீங்கள் இருவரும் பெரும் பலத்தைக் கொண்டவர்கள். நீங்கள் இருவரும் பெரும் புகழையும் கொண்டவர்கள். ஓ! பார்த்தா, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான பெரும்போரில் தேவனைப் போலவும், தானவனைப் போலவும் ஒருவருடனொருவர் போரில் {நீங்கள் இருவரும்} மோதும்போது, உன் ஆற்றலைக் கௌரவர்கள் அனைவரும் காண வேண்டும்.(48) பெருஞ்சினத்தால் நிறைந்திருக்கும் உன்னையும், சீற்றத்துடன் இருக்கும் கர்ணனையும் கண்டு, ஓ! பாரதக் குலத்தின் காளையே, கோபத்திலிருக்கும் துரியோதனனால் எதையும் செய்ய இயலாது.(49) தூய்மையான ஆன்மாகவாக உன்னைக் கருதியும், ஓ! பாரதக் குலத்தின் காளையே, நல்லோனான யுதிஷ்டிரரிடம் ராதையின் மகன் {கர்ணன்} பெரும் பகைமையைப் பாராட்டுவதையும் நினைவுகூர்ந்தும்,(50) ஓ! குந்தியின் மகனே, எது இப்போது அடையப்பட வேண்டுமோ அதை அடைவாயாக. போரில் உன் இதயத்தை நேர்மையாக நிறுத்தி, அந்தத் தேர்வீரர்களின் தலைவனை {கர்ணனை} எதிர்த்துச் செல்வாயாக.(51)

ஓ! தேர்வீரர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, ஓ! குந்தியின் மகனே, ஓ! வீரா, பெரும் வலிமையும், கடும் சக்தியும் கொண்ட ஐநூறு முதன்மையான தேர்வீரர்களும்,(52) ஐயாயிரம் யானைகளும், அதைவிட இருமடங்கு குதிரைகளும், எண்ணற்ற காலாட்படை வீரர்களும் ஒன்று சேர்ந்து, ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொண்டு, உன்னை எதிர்த்து அதோ வருகின்றனர். உன் விருப்பப்படியே நீ, பெரும் வில்லாளியான சூதன் மகனிடம் {கர்ணனிடம்} உன்னை வெளிப்படுத்துவாயாக. ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவனை {கர்ணனை} நோக்கிப் பெரும் வேகத்துன் செல்வாயாக.(53,54) பெருங்கோபத்தால் நிறைந்த கர்ணன், அதோ பாஞ்சாலர்களை எதிர்த்து விரைகிறான். அவனது கொடிமரம் திருஷ்டத்யும்னனின் தேரை நோக்கிச் செல்வதை நான் காண்கிறேன். அவன் பாஞ்சாலர்களை முற்றாக அழிப்பான் என்றே நான் நினைக்கிறேன்.(55) நான் உனக்குச் சில நற்செய்திகளையும் சொல்கிறேன், ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஓ! பார்த்தா, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்[5].(56)

திரும்பி வரும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமர், ஓ! பாரதரே, சிருஞ்சயர்கள் மற்றும் சாத்யகியால் ஆதரிக்கப்பட்டுப் படையின் தலைமையில் நிலைகொள்கிறார்.(57) ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, பீமசேனர் மற்றும் உயர் ஆன்ம பாஞ்சாலர்களின் கூரிய கணைகளால் அதோ கௌரவர்கள் கொல்லப்படுகின்றனர்.(58) குருதியில் குளித்திருக்கும் பாரதப் படையானது, ஓ! பாரத் குலத்தின் தலைவா, பயிர்களை இழந்திருக்கும் பூமியின் தன்மையை அடைந்து மிகவும் உற்சாகமற்றிருக்கிறது.(60) ஓ! குந்தியின் மகனே, போராளிகளில் முதன்மையானவரான பீமசேனர், கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலச் சினத்தால் நிறைந்து (கௌரவப்) படையை முறியடித்துக் கொண்டிருக்கிறார்.(61) விண்மீன்கள், நிலவுகள் மற்றும் சூரியன்களால் அலங்கரிக்கப்பட்ட மஞ்சள், சிவப்பு, கருப்பு, மற்றும் வெள்ளைக் கொடிகளும், குடைகள் பலவும், ஓ! அர்ஜுனா {அதோ} சிதறிக் கிடக்கின்றன.(62) தங்கம், அல்லது வெள்ளி, அல்லது பித்தளை மற்றும் பிற உலோகங்களால் செய்யப்பட்ட கொடிமரங்களும், யானைகள், மற்றும் குதிரைகளும், களமெங்கும் {அதோ} சிதறிக் கிடக்கின்றன.(63)

பின்வாங்காத பாஞ்சாலர்களின் பல்வேறு வகைக் கணைகளால் உயிரை இழுந்த அந்தத் தேர்வீரர்கள் அதோ தங்கள் தேர்களில் இருந்து விழுகின்றனர்.(64) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, பெரும் வேகத்தோடு கூடிய பாஞ்சாலர்கள், சாரதிகளற்ற தார்தராஷ்டிர யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களை எதிர்த்து அதோ விரைகின்றனர்.(65) தங்கள் உயிர்களைத் துச்சமாக மதிப்பவர்களும், போரில் வீழ்த்தக் கடினமானவர்களுமான அந்தப் போர்வீரர்கள், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, ஓ! மனிதர்களில் புலியே, பீமசேனரின் வலிமையின் துணைகொண்டு பகைவரின் படையை நொறுக்குகின்றனர்.(66) பாஞ்சாலர்கள், உரத்த முழக்கங்களைச் செய்து, தங்கள் எதிரிகளை நோக்கி விரைகையில், தங்கள் சங்குகளை முழக்கிக் கொண்டு, போரில் தங்கள் கணைகளால் அதோ அவர்களை நொறுக்குகின்றர்.(67) அவர்களது சக்தியையும், பலத்தையும் பார். யானைகளைக் கொல்லும் கோபக்கார சிங்கங்களைப் போல, சுத்தமான வீரத்தால் பாஞ்சாலர்கள் தார்தராஷ்டிரர்களைக் {அதோ} கொல்கிறார்கள்.(68) ஆயுதங்களற்ற அவர்கள், ஆயுதம்படைத்த தங்கள் எதிரிகளிடம் இருந்து அவ்வாயுதங்களைப் பறித்து, இவ்வாறு பறிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு நன்கு தாக்கக்கூடிய தங்கள் எதிரிகளைக் கொன்று உரத்த முழங்கங்களைச் செய்கின்றனர்.(69)

அவர்களது எதிரிகள், சிரங்கள் மற்றும் கரங்கள் தாக்கப்பட்டுக் களத்தில் வீழ்த்தப்படுகின்றனர். பாஞ்சாலத் தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகள் அனைத்தும் உயர்ந்த பாராட்டுக்குரியவையாகும்.(70) மானஸத் தடாகத்தை {மானசரோவர் ஏரியை} விட்டுப் பெரும் வேகத்தில் புறப்பட்டு, கங்கைக்கு விரையும் அன்னங்களைப் போல, கௌரவர்களை எதிர்த்துப் பாஞ்சாலர்கள் {அதோ} விரைகின்றனர், அந்தப் பரந்த தார்தராஷ்டிரப் படையின் ஒவ்வொரு பகுதியும் {அதோ} அவர்களால் தாக்கப்படுகின்றன.(71) காளைகளைத் தடுக்கும் காளைகளைப் போல, வீரக் கிருபர், கர்ணன் மற்றும் பிற தலைவர்கள், தங்கள் வீரமனைத்தையும் வெளிப்படுத்திப் பாஞ்சாலர்களைத் தடுக்கின்றனர்.(72) திருஷ்டத்யும்னனால் தலைமை தாங்கப்பட்ட பாஞ்சால வீரர்கள், பீமரின் ஆயுதங்கள் எனும் பெருங்கடலில் ஏற்கனவே மூழ்கிக் கொண்டிருப்பவர்களும், தங்கள் எதிரிகளுமான தார்தராஷ்டிரப் படையின் பெருந்தேர் வீரர்களை ஆயிரக்கணக்கில் கொல்கின்றனர்.(73) தங்கள் எதிரிகளால் விஞ்சப்படும் பாஞ்சாலர்களைக் காண்பவரும், அச்சமற்றவருமான அந்தக் காற்று தேவனின் மகன் {பீமர்}, தன் கணைகளை ஏவி, பகைவர் படையைத் தாக்கி, உரத்த முழக்கங்களைச் செய்கிறார்.(74) பரந்த தார்தராஷ்டிரப் படையின் பெரும் பகுதியானது மிகவும் அச்சத்திலிருக்கிறது.(75)

துணிக்கோல் கணைகளைக் கொண்டு பீமரால் துளைக்கப்படும் அந்த யானைகள், இந்திரனின் வஜ்ரத்தால் பிளக்கப்படும் மலை முகடுகளைப் போலக் கீழே விழுவதைப் பார்.(76) பீமசேனரின் நேரான கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட அந்தப் பெரும் யானைகள், தங்கள் படையணிகளையே நசுக்கியபடியே தப்பி ஓடுகின்றன.(77) ஓ! அர்ஜுனா, போரில் வெற்றியடையும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டுப் பயங்கரமாக முழங்கும் பீமசேனரின் தாங்கிக் கொள்ள முடியாத சிங்க முழக்கங்களையும் நீ அறிந்துகொள்ளவில்லையா {கேட்கவில்லையா}?(78) நிஷாதர்களின் இளவரசன், சினத்தால் நிறைந்து, தண்டத்தைத் தரித்திருக்கும் யமனைப் போலவே பாண்டுவின் மகனை {பீமரைக்} கொல்ல விரும்பி தன் வேல்களை எடுத்துக் கொண்டு, தன் முதன்மையான யானையின் மீதேறி அவரை எதிர்த்து அதோ வருகிறான். (79) நெருப்பு, அல்லது சூரியனின் காந்தியுடன் கூடிய பத்து கூரிய துணிக்கோல் கணைகளைக் கொண்டு பீமரால் தாக்கப்பட்டு, முழங்கிக் கொண்டிருக்கும் அந்த {நிஷாத} இளவரசனின் பிடியில் இருந்த வேல்களுடன் கூடிய இரு கரங்களும் வெட்டப்படுகின்றன.(80)

அந்த இளவரசனைக் கொன்ற பீமர், நீல மேகங்களைப் போலத் தெரிபவையும், சாரதிகளால் திறனுடன் வழிநடத்தப்பட்ட பிற யானைகளையும் எதிர்த்துச் செல்கிறார்.(81) அந்தச் சாரதிகள், அபரிமிதமான ஈட்டிகளாலும், வேல்களாலும் விருகோதரை {பீமரைத்} தாக்குவதைப் பார். ஒரே நேரத்தில் தன் கணைகளால் ஏழு யானைகளைக் கொல்லும் உனது அண்ணனால் {பீமரால்} அவற்றின் {அந்த யானைகளின்} வெற்றிக் கொடிகளும் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. பிற யானைகளைப் பொறுத்தவரை, அவை ஒவ்வொன்றும் பத்துப் பத்துக் கணைகளைக் கொண்டு அவரால் கொல்லப்படுகின்றன.(82.83) புரந்தரனுக்கு {இந்திரனுக்கு} இணையான பீமர் இப்போது போரில் ஈடுபடுவதால், ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, தார்தராஷ்டிரர்களின் கூச்சல்கள் இதற்கு மேல் கேட்கப்படவில்லை.(84) துரியோதனனின் படைவீரர்களில், முழுமையாக மூன்று அக்ஷௌஹிணி வீரர்கள் (பீமரின் முன்னிலையில்) ஒன்று சேர்ந்து நிற்கின்றனர். கோபத்திலிருப்பவரும், மனிதர்களில் சிங்கமான அந்தப் பீமரால், அவர்கள் அனைவரும் தடுக்கப்படுகின்றனர்” என்றான் {கிருஷ்ணன்}.(85)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அடைவதற்கரிதானதும், பீமசேனனால் அடையப்பட்டதுமான அந்த அருஞ்செயலைக் கண்ட அர்ஜுனன், எஞ்சியிருக்கும் தன் எதிரிகளைத் தன் கணைகளால் அழித்தான்.(86) (அர்ஜுனனால்) முறியடிக்கப்பட்டு, போரில் கொல்லப்பட்ட அந்த வலிமைமிக்கச் சம்சப்தகர்கள், ஓ! தலைவா, அச்சத்தால் பீடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(87) (அப்படி விழுந்த) அவர்களில் பலர், சக்ரனின் {இந்திரனின்} விருந்தினர்களாகி பேரின்பத்தை அடைந்தனர். பார்த்தனைப் {அர்ஜுனனைப்} பொறுத்தவரை, மனிதர்களில் புலியான அவன், தன் நேரான கணைகளைக் கொண்டு, தார்தாஷ்டிரரின் நால்வகைப் படைகளையும் கொல்வதைத் தொடர்ந்தான்” {என்றான் சஞ்சயன்}.(88)

பீமனின் அருஞ்செயல்கள்! – கர்ண பர்வம் பகுதி – 61-பீமனிடம் இருந்து தப்பி ஓடிய படையை மீண்டும் அணிதிரட்டிய கர்ணன்; கர்ணனுடன் மோதிய சிகண்டி, குதிரைகளையும், சாரதியையும் இழந்து தப்பி ஓடியது; திருஷ்டத்யும்னனுடன் வீரமாகப் போரிட்ட துச்சாசனன்; விருஷசேனனுடன் மோதிய நகுலன்; உலூகனை விரட்டிய சகாதேவன்; சகுனியை எளிதாக வென்ற சாத்யகி; பீமனிடம் புறமுதுகிட்ட துரியோதனன்; கிருபரிடம் இருந்து பின்வாங்கிச் சென்ற யுதாமன்யு; கிருதவர்மனால் விரட்டப்பட்ட உத்தமௌஜஸ்; யானைப் படையைக் கலங்கடித்து, தேர்வீரர்களைப் புறமுதுகிடச் செய்து, ருத்திரனைப் போலத் தெரிந்த பீமசேனன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “பீமனும், பாண்டுவின் மகனான யுதிஷ்டிரனும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதும், என் துருப்புகள் பாண்டுக்களாலும், சிருஞ்சயர்களாலும் கொல்லப்படும் போதும்,(1) உண்மையில் என் பரந்த படையானது, பிளக்கப்பட்டு, முறியடிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் உற்சாகத்தை இழந்தபோதும், ஓ! சஞ்சயா, கௌரவர்கள் என்ன செய்தனர் என்று எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.(2)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிய கரங்களைக் கொண்ட பீமன், சூதன் மகனின் {கர்ணனின்} பெரும் வல்லமையைக் கண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் கண்கள் சிவந்து, அவனை நோக்கி விரைந்தான்.(3) பீமசேனனிடம் இருந்து உமது படை தப்பி ஓடுவதைக் கண்ட வலிமைமிக்கக் கர்ணன், ஓ! மன்னா, பெரும் முயற்சிகளைச் செய்து அதை அணிதிரட்டினான்.(4) வலிய கரங்களைக் கொண்ட கர்ணன், உமது மகனின் {துரியோதனனின்} படையை அணிதிரட்டிய பிறகு, போரில் வீழ்த்தக்கடினமான வீரர்களான பாண்டவர்களை எதிர்த்துச் சென்றான்.(5) பெரும் தேர்வீரர்களான பாண்டவர்களும் தங்கள் விற்களை அசைத்துக் கணைகளை ஏவியபடியே அந்த ராதையின் மகனை {கர்ணனை} எதிர்த்துச் சென்றனர்.(6) பீமசேனன், சிநியின் பேரன் {சாத்யகி}, சிகண்டி, ஜனமேஜயன், பெரும் பலங்கொண்ட திருஷ்டத்யும்னன், பிரபத்ரகர்கள் அனைவர்,(7) மனிதர்களில் புலிகளான அந்தப் பாஞ்சாலர்கள் ஆகியோர் சினத்தால் நிறைந்து, வெற்றியின் மீது கொண்ட விருப்பத்தால் ஈர்க்கப்பட்டு, அந்தப் போரில் உமது படையை எதிர்த்து அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்தனர்.(8) அதேபோல உமது படையின் பெருந்தேர்வீரர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டவப் படையைக் கொல்லும் விருப்பத்தில் அஃதை எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(9) தேர்கள், யானைகள், குதிரைகள் நிறைந்தவையும், அபரிமிதமான காலாட்படைவீரர்கள் மற்றும் கொடிமரங்களைக் கொண்டவையுமான அந்த இரு படைகளும், ஓ! மனிதர்களில் புலியே, அப்போது ஓர் அற்புதத் தன்மையை ஏற்றன.(10)

சிகண்டி கர்ணனை எதிர்த்துச் சென்றான், திருஷ்டத்யும்னன் ஒரு பெரும்படையின் துணையுடன் கூடிய உமது மகன் துச்சாசனனை எதிர்த்துச் சென்றான்.(11) நகுலன் விருஷசேனனை எதிர்த்துச் சென்றான், அதே வேளையில் யுதிஷ்டிரன் சித்திரசேனனை எதிர்த்தான். சகாதேவன், ஓ! மன்னா, அந்தப் போரில் உலூகனை எதிர்த்துச் சென்றான்.(12) சாத்யகி சகுனியை எதிர்த்துச் சென்றான். திரௌபதியின் மகன்கள் பிற கௌரவர்களை எதிர்த்தனர். வலிமைமிக்கத் தேர்வீரனான அஸ்வத்தாமன் பெருங்கவனத்துடன் அர்ஜுனனை எதிர்த்துச் சென்றான்.(13) கௌதமரின் மகன் கிருபர் வலிமைமிக்க வில்லாளியான யுதாமன்யுவை எதிர்த்துச் சென்றார், அதே வேளையில் பெரும் பலத்தைக் கொண்ட கிருதவர்மன் உத்தமௌஜஸை எதிர்த்துச் சென்றான்.(14) வலிய கரங்களைக் கொண்ட பீமசேனன், ஓ! ஐயா, தனியொருவனாக, ஆதரவற்றவனாக, குருக்கள் மற்றும் தங்கள் தங்கள் படைப்பிரிவுகளின் தலைமையில் நின்றிருந்த உமது மகன்கள் அனைவரையும் எதிர்த்தான்.(15)

அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீஷ்மரைக் கொன்றவனான சிகண்டி, அந்தப் போரில் அச்சமற்றவனாகத் திரிந்து கொண்டிருந்த கர்ணனைச் சிறகுபடைத்த தன் கணைகளால் தடுத்தான்.(16) தடுக்கப்பட்டவனான கர்ணன் அப்போது சினத்தால் தன் உதடுகள் நடுங்க, மூன்று கணைகளைக் கொண்டு சிகண்டியின் கண் புருவங்களுக்கு மத்தியில் தாக்கினான்.(17) தன் நெற்றில் தைத்திருந்த அந்த மூன்று கணைகளுடன் கூடிய சிகண்டி, மூன்று உயர்ந்த சிகரங்களைக் கொண்ட ஒரு வெள்ளி மலையைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(18) அம்மோதலில் சூதன் மகனால் {கர்ணனால்} ஆழத்துளைக்கப்பட்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான சிகண்டி, பதிலுக்குத் தொண்ணூறு கூறிய கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.(19) அப்போது வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், சிகண்டியின் குதிரைகளைக் கொன்று, அடுத்ததாக மூன்று கணைகளால் அவனது சாரதியையும் கொன்று, ஒரு கத்தி முகக் கணையால் {க்ஷுரப்ரத்தால்} அவனது கொடிமரத்தையும் அறுத்தான்.(20) பிறகு, எதிரிகளை எரிப்பவனான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சிகண்டி}, சினத்தால் நிறைந்து, குதிரைகளற்றத் தன் தேரில் இருந்து கீழே குதித்துக் கர்ணன் மீது ஓர் ஈட்டியை வீசினான்.(21) அம்மோதலில் மூன்று கணைகளால் அவ்வீட்டியை வெட்டிய கர்ணன், ஓ! பாரதரே, பிறகு ஒன்பது கூரிய கணைகளால் சிகண்டியைத் துளைத்தான்.(22) மிகவும் சிதைக்கப்பட்டவனும், மனிதர்களில் சிறந்தவனுமான அந்தச் சிகண்டி கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளைத் தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் இருந்து வேகமாகப் பின்வாங்கினான்.(23) பிறகு கர்ணன், ஓ! ஏகாதிபதி, பஞ்சுக் குவியலைச் சிதறடிக்கும் வலிய காற்றைப் போலப் பாண்டவர்களின் துருப்புகளைச் சிதறடிக்கத் தொடங்கினான்.(24)

அதே வேளையில், உமது மகன் துச்சாசனனால் பீடிக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பதிலுக்கு மூன்று கணைகளால் அவனது நடுமார்பைத் துளைத்தான்.(25) அப்போது துச்சாசனன், ஓ! ஐயா, தன்னைத் தாக்குபவனின் இடக்கரத்தை, கூரியதும், நேரானதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதுமான ஓர் அகன்ற தலை கணையால் {பலத்தால்} துளைத்தான்.(26) இவ்வாறு துளைக்கப்பட்ட திருஷ்டத்யும்னன், கோபத்தால் நிறைந்து, பதிலடி கொடுக்க விரும்பி, ஓ! பாரதரே, துச்சாசனன் மீது பயங்கரமான கணை ஒன்றை ஏவினான்.(27) இருப்பினும், உமது மகன் {துச்சாசனன்}, திருஷ்டத்யும்னனால் ஏவப்பட்டுத் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த மூர்க்கமான கணையைத் தன் கணைகள் மூன்றால் வெட்டினான்.(28) பிறகு, திருஷ்டத்யும்னனை அணுகிய அவன், தங்கத்தால் அலங்கரிக்கபட்ட அகன்ற தலை கொண்ட பதினேழு கணைகளால் அவனது கரங்களையும் மார்பையும் தாக்கினான்.(29) அதனால் சினத்தால் நிறைந்த அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, கூரிய கத்தித் தலை கணை ஒன்றால் {க்ஷுரப்ரத்தால்}, ஓ! ஐயா, துச்சாசனனின் வில்லை அறுத்தான். இதனால் துருப்புகள் அனைத்தும் உரக்க முழங்கின.(30)

மற்றொரு கணையை எடுத்துக் கொண்ட உமது மகன் {துச்சாசனன்}, சிரித்துக் கொண்டே அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கணைமாரிகளால் திருஷ்டத்யும்னனைத் தடுத்தான்.(31) உமது உயர்ஆன்ம மகனின் ஆற்றலைக் கண்ட போராளிகளும், சித்தர்களும், அப்சரஸ்களும் ஆச்சரியத்தால் நிறைந்தவர்கள் ஆனார்கள்.(32) பிறகு, சிங்கத்தால் தடுக்கப்பட்ட பெரும் யானையொன்றைப் போல, இவ்வாறு துச்சாசனனால் தாக்கப்படும் வலிமைமிக்கத் திருஷ்டத்யும்னனை நாங்கள் கண்டோம்.(33) அப்போது, ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, (பாண்டவப் படையின்) தலைவனைக் காக்க விரும்பிய பாஞ்சாலத் தேர்வீரர்கள் பலரும், யானைகள், குதிரைகள் ஆகியனவும் உமது மகனைச் {துச்சாசனனைச்} சூழ்ந்து கொண்டன.(34) ஓ! எதிரிகளை எரிப்பவரே, உமது போர்வீரர்களுக்கும், எதிரியின் போர்வீரர்களுக்கும் இடையில் தொடங்கிய போரானது, யுக முடிவில் அனைத்துயிர்களுக்கும் நேரும் அழிவு காட்டுவதைப் போலவே அச்சம் நிறைந்த காட்சியையே தந்தது.(35)

தன் தந்தையின் {கர்ணனின்} அருகில் நின்ற விருஷசேனன், முழுக்க இரும்பாலான ஐந்து கணைகளால் நகுலனைத் துளைத்து, மேலும் மூன்று கணைகளால் மீண்டும் அவனைத் துளைத்தான்.(36) அந்த வீர நகுலன், சிரித்துக் கொண்டே, பெரும் கூர்மை கொண்ட துணிக்கோல் கணையொன்றால் விருஷசேனனின் மார்பை ஆழமாகத் துளைத்தான்.(37) இவ்வாறு தன் வலிமைமிக்க எதிரியால் துளைக்கப்பட்டவனும், எதிரிகளை எரிப்பவனுமான விருஷசேனன், தன்னைத் தாக்கியவனை இருபத்தைந்து கணைகளால் துளைத்து, ஐந்து கணைகளால் அவனால் {நகுலனால்} துளைக்கப்பட்டான்.(38) பிறகு அந்த மனிதர்களில் காளையர் இருவரும், ஆயிரக்கணக்கான கணைகளால் ஒருவரையொருவர் மறைத்துக் கொண்டனர். அதன்பேரில் அவர்களை ஆதரித்த படைப்பிரிவுகள் பிளந்தன.(39) திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} துருப்புகள் தப்பி ஓடுவதைக் கண்ட சூதன் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா, அவர்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களைப் பலவந்தமாகத் நிறுத்த தொடங்கினான்.(40) கர்ணன் சென்ற பிறகு, நகுலன் கௌரவர்களை எதிர்த்துச் சென்றான். கர்ணனின் மகனும் {விருஷசேனனும்} நகுலனைத் தவிர்த்துவிட்டு,(41) ஓ! ஐயா, தன் தந்தையின் {கர்ணனின்} தேர்ச்சக்கரங்களைப் பாதுகாப்பதற்காக அந்த ராதையின் மகன் {கர்ணன்} இருந்த இடத்திற்கே வேகமாகச் சென்றான்.

கோபக்கார உலூகன் சகாதேவனால் தடுக்கப்பட்டான்.(42) அவனது நான்கு குதிரைகளையும் கொன்ற வீர சகாதேவன், பிறகு, தன் எதிரியின் சாரதியை யமலோகம் அனுப்பி வைத்தான்.(43) அப்போது தன் தந்தைக்கு {சகுனிக்கு} மகிழ்ச்சியை அளிப்பவனான உலூகன், தன் தேரில் இருந்து கீழே குதித்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வேகமாகச் சென்று, திரிகர்த்தர்களின் படைப்பிரிவுக்குள் நுழைந்தான்.(44) சாத்யகி, இருபது கூரிய கணைகளால் சகுனியைத் துளைத்து, அகன்ற தலை கொண்ட கணையொன்றால் {பல்லத்தால்} அந்தச் சுபலன் மகனின் {சகுனியின்} கொடிமரத்தையும் எளிதாக அறுத்தான்.(45) சுபலனின் வீர மகன் {சகுனி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சின்னத்தால் நிறைந்து, அம்மோதலில் சாத்யகியின் கவசத்தைத் துளைத்து, பிறகு தங்கத்தாலான அவனது கொடிமரத்தையும் அறுத்தான்.(46) அப்போது சாத்யகி, கூரிய கணைகள் பலவற்றால் அவனைப் {சகுனியைப்} பதிலுக்குத் துளைத்து, ஓ! ஏகாதிபதி, மூன்று கணைகளால் அவனது {சகுனியின்} சாரதியைத் தாக்கினான்.(47) பிறகு அவன் {சாத்யகி}, வேறு கணைகளைக் கொண்டு, சகுனியின் குதிரைகளை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான். ஓ! மனிதர்களில் காளையே, தன் தேரில் இருந்து வேகமாக இறங்கியவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சகுனி,(48) வேகமாக {தன் மகன்} உலூகனின் தேரில் ஏறிக் கொண்டான். அப்போது பின்னவன் {உலுகன்} போரில் திறம்பெற்ற வீரனான அந்தச் சிநியின் பேரனிடம் {சாத்யகியிடம்} இருந்து தன் தந்தையை {சகுனியை} பெரும் வேகத்தோடு வெளியே கொண்டு சென்றான்.(49) பிறகு சாத்யகி, ஓ! மன்னா, அந்தப் போரில் பெரும் வேகத்தோடு உமது படையை எதிர்த்து விரைந்ததனால் அந்தப் படை பிளந்தது.(50) சினியின் பேரனுடைய {சாத்யகியின்} கணைகளால் மறைக்கப்பட்ட உமது படையினர், ஓ! ஏகாதிபதி, பெரும் வேகத்தோடு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடி, உயிரை இழந்து கீழே விழுந்தனர்.(51)

உமது மகன் {துரியோதனன்} அந்தப் போரில் பீமசேனனைத் தடுத்தான். ஒரு கணப்பொழுதில் பீமன், அந்த மனிதர்களின் ஆட்சியாளனை {துரியோதனனைத்} குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாக, தேரற்றவனாக, கொடியற்றவனாகச் செய்ததால், (பாண்டவத்) துருப்புகள் பெருமகிழ்ச்சியடைந்தன. பிறகு உமது மகன் {துரியோதனன்}, பீமசேனனின் முன்னிலையில் இருந்து சென்றுவிட்டான்.(52,53) இதனால் மொத்த குரு படையும் பீமசேனனை எதிர்த்து விரைந்தது. பீமசேனனைக் கொல்லும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட அந்தப் போராளிகளால் உண்டாக்கப்பட்ட ஆரவாரமானது வல்லமைமிக்கதாக இருந்தது.(54) யுதாமன்யு, கிருபரைத் துளைத்து அவரது வில்லையும் வேகமாக அறுத்தான். அப்போது, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான கிருபர், மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு,(55) யுதாமன்யுவின் கொடிமரம், சாரதி மற்றும் குடை ஆகியவற்றைப் பூமியில் சாய்த்தார். இதனால், வலிமைமிக்கத் தேர்வீரனான யுதாமன்யு தன் தேரைத் தானே ஓட்டிக் கொண்டு அதில் {அந்தத் தேரிலேயே} பின்வாங்கிச் சென்றான்.(56)

உத்தமௌஜஸ், மலையில் மழைத்தாரைகளைப் பொழியும் ஒரு மேகத்தைப் போல, பயங்கரமான ஆற்றலைக் கொண்ட ஹிருதிகனின் பயங்கர மகனை {கிருதவர்மனை} அடர்த்தியான கணைமாரியால் மறைத்தான்.(57) ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, அவர்களுக்கு இடையிலான அந்தப் போரானது, ஓ! ஏகாதிபதி, இதற்கு முன்பு காணப்படாததைப் போல அச்சம் நிறைந்த நிலையை அடைந்தது.(58) அப்போது கிருதவர்மன், ஓ! மன்னா, அம்மோதலில் திடீரென உத்தமௌஜஸின் மார்பைத் துளைத்ததால், பின்னவன் {உத்தமௌஜஸ்} தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.(59) அந்த முதன்மையான தேர்வீரனின் சாரதி அவனை {அங்கிருந்து} வெளியே கொண்டு சென்றான். அப்போது மொத்த குரு படையும், பீமசேனனை நோக்கி விரைந்தது.(60)

துச்சாசனன் மற்றும் சுபலன் மகன் {சகுனி} ஆகியோர், ஒரு பெரும் யானைப் படையின் துணையுடன் அந்தப் பாண்டுவின் மகனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டு, சிறு கணைகளால் {க்ஷுதரகங்களால்} அவனைத் {பீமனைத்} துளைக்கத் தொடங்கினர்.(62) தன்னை எதிர்த்து வேகமாக முன்னேறும் அந்த யானைப் படையைக் கண்ட விருகோதரன் {பீமன்}, பெருஞ்சினத்தால் நிறைந்து, தன் தெய்வீக ஆயுதங்களை இருப்புக்கு அழைத்தான். மேலும் அவன் அசுரர்களைத் தாக்கும் இந்திரனைப் போல யானைகளை யானைகளாலேயே தாக்கத் தொடங்கினான்.(63) விருகோதரன் {பீமன்} அந்த யானைகளைக் கொன்று கொண்டிருந்த போது, அந்தப் போரில், நெருப்பை மறைக்கும் பூச்சிகளின் கூட்டத்தைப் போலத் தன் கணைகளால் ஆகாயத்தை மறைத்தான்.(64) மேகத்திரள்களைச் சிதறடிக்கும் காற்றைப் போலவே அந்தப் பீமன் ஆயிரக்கணக்கில் ஒன்றாகத் திரண்டிருந்த அந்த யானைக் கூட்டங்களைச் சிதறடித்து அழித்தான்.(65)

தங்க வலைப்பின்னல்களாலும், ரத்தினங்கள் பலவற்றாலும் மேனியெங்கும் மறைக்கப்பட்டிருந்த அந்த யானைகள், மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகங்களைப் போல அந்தப் போரில் மிக அழகாகத் தெரிந்தன.(66) பீமனால் கொல்லப்பட்ட அந்த யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தப்பி ஓடத் தொடங்கின. அவற்றில் சில தங்கள் இதயங்கள் துளைக்கப்பட்டுப் பூமியில் விழுந்தன.(67) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், விழுந்துவிட்டவையுமான அந்த யானைகளுடன் கூடிய பூமியானது, உடைந்த மலைகளால் விரவிக் கிடப்பதைப் போலவே அழகாகத் தெரிந்தது.(68) சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டவர்களும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், விழுந்துவிட்டவர்களுமான யானை வீரர்களுடன் கூடிய அந்தப் பூமியானது, தகுதி தீர்ந்த {புண்ணியம் தீர்ந்த} கோள்களால் விரவிக் கிடப்பதைப் போல அழகாகத் தெரிந்தது[1].(69) அப்போது, கன்னப்பொட்டுகளும் {கபோலங்களும்}, மத்தகங்களும், துதிக்கைகளும் ஆழமாகத் துளைக்கப்பட்ட அந்த யானைகள், பீமசேனனின் கணைகளால் பீடிக்கப்பட்டு அந்தப் போரில் இருந்து நூற்றுக் கணக்கில் தப்பி ஓடின.(70)

மலைகளைப் போலப் பெரியவையான அவற்றில் சில, அச்சத்தால் பீடிக்கப்பட்டு, கணைகளால் தங்கள் அங்கங்கள் துளைக்கப்பட்டு அனைத்துப் பக்கங்களிலும் உலோகத் தாதுக்கள் வழியும் மலைகளைப் போலக் குருதியைக் கக்கியபடியே தப்பி ஓடின.(71) அப்போது சந்தனக்குழம்பாலும், பிற நறுமணப்பொருட்களாலும் பூசப்பட்டவையும், இரு பெரும் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான பீமனின் இரு கரங்களும், தொடர்ந்து வில்லை வளைப்பதில் ஈடுபடுவதை மக்கள் கண்டனர்.(72) இடிமுழக்கத்திற்கு ஒப்பான அவனது வில்லின் நாண்கயிறு மற்றும் உள்ளங்கைகளின் ஒலியைக் கேட்ட அந்த யானைகள், சிறுநீரும், மலமும் கழித்து அச்சத்தால் தப்பி ஓடின.(73) தனியொருவனாகப் பெரும் நுண்ணறிவைக் கொண்ட பீமனின் அருஞ்செயல்களால், அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் {பீமன்}, அனைத்து உயிர்களையும் அழித்துக் கொண்டிருக்கும் ருத்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்” {என்றான் சஞ்சயன்}.(74)

கர்ணனிடம் புறமுதுகிட்ட யுதிஷ்டிரன்! – கர்ண பர்வம் பகுதி – 62-யுதிஷ்டிரனை முற்றுகையிட்ட துரியோதனன்; யுதிஷ்டிரனை மீட்க விரைந்த பாண்டவப் படை; அந்தப் பாண்டவப் படை முழுவதையும் தனியொருவனாகத் தடுத்த கர்ணன்; சகாதேவனால் தாக்கப்பட்ட துரியோதனன்; சினம் கொண்ட கர்ணன் பாண்டவத் துருப்புகளை விரட்டியது; யுதிஷ்டிரனைத் தாக்கிய கர்ணன்; கௌரவப் படையைப் பிளந்த யுதிஷ்டிரன்; கர்ணனால் தாக்கப்பட்டு அவனிடம் இருந்து பின்வாங்கிச் சென்ற யுதிஷ்டிரன்..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது அந்த அழகிய அர்ஜுனன், வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், நாராயணனாலேயே {கிருஷ்ணனால்} செலுத்தப்பட்டதுமான அந்த முதன்மையான தேரில் {அங்கே} காட்சியளித்தான்.(1) பெருங்கடலைக் கலங்கடிக்கும் சூறாவளியைப் போல, ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, விஜயன் {அர்ஜுனன்} அந்தப் போரில் குதிரைவீரர்கள் நிறைந்த உமது படையைக் கலங்கடித்தான்.(2) வெண்குதிரைகளைக் கொண்டவனான அர்ஜுனன் வேறு காரியத்தில் {போரில்} ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, உமது மகன் துரியோதனன், சினத்தால் நிறைந்து, பழிவாங்கும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டு, தன் துருப்புகளில் பாதி அளவு சூழச் சென்று, முன்னேறி வந்து கொண்டிருந்த யுதிஷ்டிரனைத் திடீரென முற்றுகையிட்டான்.(3) பிறகு அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, எழுபத்துமூன்று கத்தி தலைக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அந்தப் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைத்} துளைத்தான். இதனால் கோபத்தால் தூண்டப்பட்டவனும், குந்தியின் மகனுமான யுதிஷ்டிரன்,(4) முப்பது அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} உமது மகனை {துரியோதனனை} வேகமாகத் தாக்கினான். அப்போது, யுதிஷ்டிரனைப் பிடிப்பதற்காகக் கௌரவத் துருப்புகள் மிக வேகமாக விரைந்தன.(5)

எதிரியின் தீய எண்ணங்களைப் புரிந்து கொண்ட பாண்டவப் படையின் பெருந்தேர்வீரர்கள், ஒன்றாகச் சேர்ந்து, குந்தியின் மகனான யுதிஷ்டிரனை மீட்பதற்காக அவனை நோக்கி விரைந்தனர்.(6) உண்மையில், நகுலன், சகாதேவன், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னன் ஆகியோர் ஒரு முழு அக்ஷௌஹிணி துருப்புகளால் சூழப்பட்டு இவ்வாறு யுதிஷ்டிரனை நோக்கிச் சென்றனர்.(7) பீமசேனனும், அந்தப் போரில் உமது படையின் பெருந்தேர்வீரர்களை நசுக்கி, எதிரிகளால் சூழப்பட்ட மன்னனை {யுதிஷ்டிரனை} நோக்கிச் சென்றான்.(8) வைகர்த்தனன் என்றும் அழைக்கப்பட்ட கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அடர்த்தியான கணைமாரிகளை ஏவிக் கொண்டு, (யுதிஷ்டிரனை மீட்பதற்காக) இவ்வாறு முன்னேறிவரும் அந்த வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரையும் தனியொருவனாகத் தடுத்தான்.(9) அவர்களும் அடர்த்தியான கணைமாரிகளை ஏவி, எண்ணற்ற வேல்களை வீசி உறுதியாகப் போரிட்டாலும், ராதையின் மகனை {கர்ணனைப்} பார்க்கக் கூட அவர்களால் முடியவில்லை.(10)

உண்மையில், தாக்கும் மற்றும் தடுக்கும் ஆயுதங்கள் அனைத்திலும் திறன் வாய்ந்தவனான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, பெரும் வில்லாளிகளான அவர்கள் அனைவரையும் தடுத்தான்.(11) எனினும், உயர் ஆன்ம சகாதேவன், (துரியோதனன் இருந்த இடத்திற்கு) வேகமாக அணுகி, தாமதமில்லாமல் ஒரு (தெய்வீக) ஆயுதத்தை இருப்புக்கு அழைத்து, இருபது கணைகளால் துரியோதனனைத் துளைத்தான்.(12) இவ்வாறு சகாதேவனால் துளைக்கப்பட்ட குரு மன்னன் {துரியோதனன்}, குருதியால் மறைக்கப்பட்டு, கன்னப்பொட்டுகள் {கபோலங்கள்} பிளக்கப்பட்ட பெரும் யானை ஒன்றைப் போல அழகாக இருந்தான்.(13) பெரும் சக்தி கொண்ட கணைகள் பலவற்றால் ஆழமாகத் துளைக்கப்பட்ட உமது மகனை {துரியோதனனைக்} கண்டவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, சினத்தால் நிறைந்து அந்த இடத்திற்கு விரைந்து சென்றான்.(14) அந்த அவல நிலைக்குக் குறைக்கப்பட்ட துரியோதனனைக் கண்ட கர்ணன், தன் ஆயுதங்களை வேகமாக இருப்புக்கு அழைத்து, யுதிஷ்டிரன் மற்றும் பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} துருப்புகளைக் கொல்லத் தொடங்கினான்.(15)

இவ்வாறு உயர் ஆன்மக் கர்ணனால் கொல்லப்பட்ட யுதிஷ்டிரனின் துருப்புகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூதன் மகனின் கணைகளால் பீடிக்கப்பட்டு விரைவில் தப்பி ஓடின.(16) கணைகளின் மழையானது அங்கே மொத்தமாகப் பொழிந்தது. உண்மையில், சூதன் மகனின் {கர்ணனின்} வில்லில் இருந்து அடுத்தடுத்து ஏவப்பட்ட அவை {கணைகள்}, முன்பு ஏவப்பட்டவற்றின் சிறகை {வால்பகுதியைத்} தங்கள் தலையால் {கணை முனையால்) தீண்டின.(17) அந்தக் கணைமாரிப் பொழிவில் {கணைகள்} ஒன்றோடொன்று மோதிக்கொண்டதன் விளைவால், ஓ! ஏகாதிபதி, ஆகாயத்தில் நெருப்புண்டாவதைப் போலத் தெரிந்தது.(18), ஓ! மன்னா, முன்னேறிச் செல்லும் வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் போன்றவையும், எதிரிகளின் உடல்களைத் துளைக்க வல்லவையுமான கணைகளால், அந்தக் கர்ணன், திசைகளின் பத்து புள்ளிகளையும் விரைவில் மறைத்தான்.(19) உயர்ந்த ஆயுதங்களை வெளிப்படுத்திய கர்ணன், செஞ்சந்தனக்குழம்பால் பூசப்பட்டவையும், தங்கம் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான தன் இரு கரங்களையும் பெரும் சக்தியுடன் அசைக்கத் தொடங்கினான்.(20)

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களையும் தன் கணைகளால் மலைக்கச் செய்த கர்ணன், நீதிமானான யுதிஷ்டிரனை ஆழமாகப் பீடித்தான்.(21) இதன் காரணமாகச் சினத்தால் நிறைந்த தர்மனின் மகன் யுதிஷ்டிரன், ஐம்பது கூரிய கணைகளால் கர்ணனைத் தாக்கினான்.(22) அந்தக் கணைமாரியால் உண்டான இருளின் விளைவால், போரானது காணப் பயங்கரமானது. கங்க இறகுகளைக் கொண்ட பல்வேறு வகைக் கூரிய கணைகளாலும், கல்லில் கூராக்கப்பட்ட எண்ணற்ற அகன்ற தலை கணைகளாலும் {பல்லங்களாலும்}, பல்வேறு வகைகளிலான ஈட்டிகள், வாள்கள் மற்றும் கதாயுதங்களினாலும், அவர்களைத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} கொன்ற போது, ஓ! ஏகாதிபதி, உமது துருப்புகளுக்கு மத்தியில் பெரும் துன்பக் குரல்கள் எழுந்தன.(23,24) அற ஆன்மா கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தீமை செய்ய விரும்பித் தன் கண்களை எங்கே செலுத்தினானோ, ஓ! பாரதக் குலத்தின் காளையே, அங்கே உமது படை பிளந்தது.(25) பெருஞ்சினத்தால் தூண்டப்பட்டவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான கர்ணனும், பதிலடி கொடுக்கும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டு, முகத்தில் கோபம் கொப்பளிக்க அந்தப் போரில் துணிக்கோல்கணைகளையும், அர்த்தச்சந்திரக் கணைகளையும், கன்றின் பல் போன்ற தலைகளைக் கொண்ட கணைகளையும் {வத்ஸதந்தங்களையும்} ஏவிக் கொண்டு, நீதிமானான மன்னனும், பாண்டுவின் மகனுமான யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தான். யுதிஷ்டிரனும், தங்கச் சிறகுகளைக் கொண்ட கூரிய கணைகள் பலவற்றால் அவனைத் {கர்ணனைத்} துளைத்தான்.(26,27)

அப்போது சிரிப்பவனைப் போலத் தெரிந்த கர்ணன், கங்க இறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான மூன்று அகன்ற தலைக் கணைகளை {பல்லங்களைக்} கொண்டு, பாண்டுவின் அரசமகனுடைய மார்பில் துளைத்தான்.(28) அதனால் ஆழமாகப் பீடிக்கப்பட்டவனான அந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தவாறே தன் சாரதியிடம் பின்வாங்கிச் செல்லுமாறு ஆணையிட்டான்.(29) அதன் பேரில் தங்கள் மன்னனோடு {துரியோதனனோடு} கூடிய தார்தராஷ்டிரர்கள் அனைவரும், “பிடியுங்கள். பிடியுங்கள்” என்று உரக்கக் கூவியவாறு அந்த மன்னனை {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(30) அப்போது தாக்குவதில் திறம்பெற்ற ஆயிரத்து எழுநூறு கேகயத் துருப்பினர், பாஞ்சாலத் துருப்பினரோடு ஒன்று சேர்ந்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தத் தார்தராஷ்டிரர்களைத் தடுத்தனர்.(31) கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நடந்து கொண்டிருபோது, பெரும் வலிமை கொண்ட போர்வீரர்களான துரியோதனன் மற்றும் பீமன் ஆகிய இருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்” {என்றான் சஞ்சயன்}.(32)

பாசறையை அடைந்த யுதிஷ்டிரன்! – கர்ண பர்வம் பகுதி – 63-கணைகளால் சிதைக்கப்பட்டுப் பாண்டவப் பாசறையை நோக்கி சென்று கொண்டிருந்த யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து சென்று தாக்கிய கர்ணன்; யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்று, அவனது தலைப்பாகையையும் வீழ்த்திய கர்ணன்; சகாதேவனின் தேரில் ஏறிக்கொண்ட நகுலனும், யுதிஷ்டிரனும்; யுதிஷ்டிரனைவிட்டு அர்ஜுனனைத் தாக்குமாறு கர்ணனிடம் சொன்ன சல்லியன்; யுதிஷ்டிரனையே தொடர்ந்து தாக்கிய கர்ணன்; பீமனிடம் துரியோதனன் சிக்கியிருப்பதைக் கர்ணனுக்கு உணர்த்திய சல்லியன்; யுதிஷ்டிரனை விட்டகன்று பீமனிடம் சென்ற கர்ணன்; யுதிஷ்டிரனைப் பாசறையில் விட்டுவிட்டுப் பீமனிடம் திரும்பிய நகுலனும், சகாதேவனும்..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் கர்ணன், தன் முன்னே நின்றவர்களும் வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பெரும் வில்லாளிகளுமான அந்தக் கைகேயர்களைத் தன் கணைமாரிகளால் பீடிக்கத் தொடங்கினான்.(1) உண்மையில், அந்த ராதையின் மகன் {கர்ணன்}, தன்னை அந்தப் போரில் தடுத்துக் கொண்டிருந்த அந்தப் போர்வீரர்களில் ஐநூறு பேரை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(1) அந்தப் போரில் தடுக்கப்பட முடியாதவனாக இருக்கும் ராதையின் மகனைக் {கர்ணனைக்} கண்ட அந்தப் போர்வீரர்கள், தங்களைத் தாக்குபவனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, பீமசேனனின் முன்னிலையை வந்தடைந்தனர்.(3) அந்தத் தேர்ப்படையைத் தன் கணைகளால் பல பகுதிகளாகப் பிளந்த கர்ணன், ஒரே தேரில் தனியொருவனாகச் சென்று, கணைகளால் அதிகம் சிதைக்கப்பட்டவனும், கிட்டத்தட்ட உணர்வை இழந்திருந்தவனும், தன் இரு பக்கங்களிலும் நகுலன் மற்றும் சகாதேவனை நிறுத்திக் கொண்டு பாண்டவப் பாசறையை அடைவதற்காக மெதுவாகச் சென்று கொண்டிருந்தவனுமான யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்தான்.(4,5)

மன்னனை {யுதிஷ்டிரனை} அணுகிய ராதையின் மகன் {கர்ணன்}, துரியோதனனுக்கு நன்மை செய்ய விரும்பி, உறுதிமிக்க மூன்று கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைத்} துளைத்தான்.(6) பதிலுக்கு அந்த மன்னனும் {யுதிஷ்டிரனும்}, ராதை மகனின் நடு மார்பைத் துளைத்து, மூன்று கணைகளால் அவனது சாரதியையும் துளைத்தான்.(7) பிறகு, எதிரிகளை எரிப்பவர்களும், யுதிஷ்டிரனின் தேர்ச்சக்கரங்களைப் பாதுகாப்பவர்களுமான மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலனும், சகாதேவனும்}, மன்னனைக் {யுதிஷ்டிரனைக்} கொல்வதில் கர்ணன் வெல்லாத வகையில் பின்னவனை {கர்ணனை} நோக்கி விரைந்தனர்.(8) அப்போது, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும், பெருங்கவனத்துடன் கணைமாரிகளை ஏவி, அவற்றைக் கொண்டு ராதையின் மகனை {கர்ணனை} மறைத்தனர்.(9) எனினும், வீரனான சூதன் மகன் {கர்ணன்}, உயர் ஆன்மா கொண்டவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான அந்த இருவரையும், பெரும் கூர்மை கொண்ட அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} துளைத்தான்.(10)

பிறகு அந்த ராதையின் மகன் {கர்ணன்}, தந்தத்தைப் போன்ற வெண்மையானவையும், மனத்தைப் போன்று வேகமானவையும், வாலில் கருப்பு முடியைக் கொண்டவையுமான யுதிஷ்டிரனின் சிறந்த குதிரைகளைக் கொன்றான்.(11) அப்போது பெரும் வில்லாளியான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே மற்றொரு அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} குந்தி மகனின் தலைப்பாகையை வீழ்த்தினான்,(12) அதே போல, நகுலனின் குதிரைகளையும் கொன்ற அந்த வீரக் கர்ணன், மாத்ரியின் அந்தப் புத்திசாலி மகனின் {நகுலனின்} தேருடைய ஏர்க்காலையும், வில்லையும் அறுத்தான்.(13) குதிரைகளற்றவர்களும், தேரற்றவர்களும், பாண்டுவின் மகன்களுமான அந்தச் சகோதர்கள் இருவரும் {யுதிஷ்டிரனும், நகுலனும்}, அதன்பேரில் சகாதேவனின் தேரில் ஏறிக் கொண்டனர்.(14)

அந்த இரு சகோதரர்களையும் தேரற்றவர்களாகக் கண்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், அவர்களது தாய்மாமனுமான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, கருணையால் ராதையின் மகனிடம் {கர்ணனிடம்},(15) “நீ இன்று பிருதையின் மகனான பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} போரிட வேண்டும். தர்மனின் அரச மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} இந்த அளவுக்குச் சினம் தூண்டப்படும் வகையில் ஏன் நீ போரிடுகிறாய்?(16) உன் ஆயுதங்கள் தீர்ந்து பாதிப்படையும் நிலையில் நீ இருக்கிறாய். உன் கவசமும் பலவீனமடைந்துள்ளது. ஓ! ராதையின் மகனே {கர்ணனே}, பார்த்தனை {அர்ஜுனனை} நீ அடையும் போது, உன் கணைகளும் குறைந்து, அம்பறாத்தூணிகளும் இல்லாமல், உன் சாரதியும், குதிரைகளும் களைத்துப் போய், எதிரியின் ஆயுதங்களால் நீயும் சிதைந்திருந்தால், ஏளனத்திற்கும், கேலிக்கும் உரிய பொருளாக நீ ஆவாய்” என்றான் {சல்லியன்}.(17) மத்ரர்களின் ஆட்சியாளனால் இவ்வாறு சொல்லப்பட்டாலும், சினத்தால் நிறைந்திருந்த கர்ணன், அந்தப் போரில் யுதிஷ்டிரனைத் தாக்குவதைத் தொடரவே செய்தான்.(18) மேலும் அவன், பாண்டு மற்றும் மாத்ரியின் மகன்கள் இருவரையும் கூரிய கணைகள் பலவற்றால் துளைப்பதையும் தொடர்ந்தான். சிரித்துக் கொண்டே தன் கணைகளால் அவன் {கர்ணன்}, யுதிஷ்டிரனைப் போரில் இருந்து புறங்காட்ட வைத்தான்.(19)

அப்போது சல்லியன், யுதிஷ்டிரனை அழிக்கத் தீர்மானித்துப் பெருங்கோபத்தால் தன் தேரில் நின்று கொண்டிருந்த கர்ணனிடம், மீண்டும் சிரித்துக் கொண்டே, இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(20) “ஓ! ராதையின் மகனே, எவனுடைய நிமித்தமாகத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} உன்னை எப்போதும் கௌரவிக்கிறானோ, அந்தப் பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வாயாக.(21) இரு கிருஷ்ணர்களும் தங்கள் சங்குகளை உரக்க முழங்குவது கேட்கப்படுகிறது. மழைக்காலங்களில் கேட்கப்படும் மேகங்களின் முழக்கத்தைப்போல அர்ஜுனனின் நாணொலியும் கேட்கப்படுகிறது.(22) அர்ஜுனன், நமது தேர்வீரர்களில் முதன்மையானோரைத் தன் கணைப் பொழிவால் தாக்கி வீழ்த்தி நம் துருப்பினர் அனைவரையும் அதோ விழுங்கிக் கொண்டிருக்கிறான். ஓ கர்ணா, இந்தப் போரில் அவனைப் பார்.(23)

அவனது பின்புறத்தை யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இருவரும் பாதுகாக்கின்றனர். துணிச்சல்மிக்கச் சாத்யகி அவனது இடது சக்கரத்தைப் பாதுகாக்கிறான்,(24) திருஷ்டத்யும்னன் அவனது வலது சக்கரத்தைப் பாதுகாக்கிறான். பீமசேனனோ திருதராஷ்டிரரின் அரச மகனுடன் {துரியோதனனுடன்} அதோ போரிடுகிறான்.(25) ஓ! ராதையின் மகனே, இன்று நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே  அந்தப் பீமன் மன்னனைக் கொல்ல இயலாத வகையிலும், அவனிடம் இருந்து மன்னன் {துரியோதனன்} தப்புவிக்கும் வகையிலும் செயல்படுவாயாக.(26) போர்க்கள ரத்தினமான பீமசேனனின் ஆளுகையின் கீழ் துரியோதனன் கொண்டுவரப்படுவதைப் பார். அவனை அணுகி உன்னால் காக்க முடியுமென்றால், உண்மையில் அஃது அற்புதம் நிறைந்த ஓர் அருஞ்செயலாகவே இருக்கும். (27) மன்னனைப் பேராபத்து நெருங்குவதால் அங்கே சென்று அவனை மீட்பாயாக. மாத்ரியின் மகன்களையோ, மன்னன் யுதிஷ்டிரனையோ கொல்வதால் நீ என்ன ஆதாயத்தை அடையப் போகிறாய்?” என்றான்.(28) ஓ! பூமியின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சல்லியனின் வார்த்தைகளைக் கேட்டவனும், அந்தப் பயங்கரப்போரில் பீமனால் ஆட்கொள்ளப்படும் துரியோதனனைக் கண்டவனுமான ராதையின் வீர மகன் {கர்ணன்},(29) சல்லியனின் வார்த்தைகளால் இவ்வாறு தூண்டப்பட்டு, மன்னனைக் காக்க மிகவும் விரும்பி, அஜாதசத்ருவையும் {யுதிஷ்டிரனையும்}, பாண்டு மற்றும் மாத்ரியின் இரட்டை மகன்களையும் விடுவித்தான்.(30) பறவைகளைப் போன்ற வேகத்தைக் கொண்டவையும், மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} தூண்டப்பட்டவையுமான தன் குதிரைகளால் அவன் {கர்ணன்} கொண்டு செல்லப்பட்டான்.(31)

கர்ணன் சென்றதும், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், ஓ! ஐயா, சகாதேவனின் வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டுப் பின்வாங்கிச் சென்றான்.(32) தன் இரட்டைச் சகோதரர்களின் துணையுடன் சென்ற அந்த மனிதர்களின் ஆட்சியாளன் {யுதிஷ்டிரன்}, வெட்கத்துடன் (பாண்டவ) முகாமுக்கு வேகமாகத் திரும்பி, கணைகளால் மிகவும் சிதைக்கப்பட்ட தன் உடலுடன்,(33) தேரில் இருந்து கீழே இறங்கி, ஒரு சிறந்த படுக்கையில் வேகமாக அமர்ந்து கொண்டான்.
அப்போது அவனுடைய உடலில் இருந்து கணைகள் பிடுங்கப்பட்ட பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, துன்பக்கணையால் தன் இதயம் அதிகமாகப் பீடிக்கப்பட்டவனாக,(34) வலிமைமிக்கத் தேர்வீரர்களும், மாத்ரியின் மகன்களுமான தன் இரு சகோதரர்களிடம், “பீமசேனனின் படைப்பிரிவுக்கு வேகமாகத் திரும்பிச் செல்வீராக.(35) மேகமென முழங்கிக் கொண்டே விருகோதரன் {பீமன்} போரிட்டுக் கொண்டிருக்கிறான்” என்றான். மற்றொரு தேரில் ஏறியவனும், தேர்வீரர்களில் காளையுமான நகுலன்,(36) பெரும் சக்தி கொண்ட சகாதேவன் ஆகிய பெரும் வலிமையைக் கொண்டவர்களும், எதிரிகளை நசுக்குபவர்களான அவ்விரு சகோதரர்களும், மிக வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டு, பீமனை நோக்கிச் சென்றனர். உண்மையில், ஒன்றாகச் சேர்ந்து பீமசேனனின் படைப்பிரிவுக்குத் திரும்பிய அந்தச் சகோதரர்கள், அங்கே தங்களுக்குரிய இடங்களில் நிலைகொண்டனர்” {என்றான் சஞ்சயன்}.(37)

கர்ணன் ஏவிய பார்க்கவ ஆயுதம்! – கர்ண பர்வம் பகுதி – 64-அர்ஜுனனை நோக்கி விரைந்த அஸ்வத்தாமன்; கிருஷ்ணனின் வலக்கரத்தைத் துளைத்த அஸ்வத்தாமன்; களத்தில் பாய்ந்த குருதிப்புனல்; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த அர்ஜுனன்; ஐந்திராயுதம் ஏவிய அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனின் சாரதியை வீழ்த்திய அர்ஜுனன்; தேரைச் செலுத்திக் கொண்டே போரிட்ட அஸ்வத்தாமன்; கடிவாளங்களை அறுத்த அர்ஜுனன்; தப்பி ஓடிய கௌரவப் படை; தடுத்து நிறுத்திய கர்ணன்; பார்க்கவ ஆயுதத்தை ஏவிய கர்ணன்; கர்ணனிடம் போரிட கிருஷ்ணனிடம் அனுமதி கேட்ட அர்ஜுனன்; யுதிஷ்டிரனைக் கண்ட பிறகு, கர்ணனோடு போரிடலாம் என்று அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்; யுதிஷ்டிரனைக் காணச் சென்ற கிருஷ்ணனும், அர்ஜுனனும்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதே வேளையில் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு பெரும் தேர்ப்படை சூழ திடீரெனப் பார்த்தன் {அர்ஜுனன்} இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றான்.(1) சௌரியைத் {கிருஷ்ணனைத்} தன் துணைவனாகக் கொண்ட வீரப் பார்த்தன், பொங்கும் பெருங்கடலைத் தடுக்கும் கரையைப் போல, இயல்பான தூண்டலுடன் விரைந்து வந்த அஸ்வத்தாமனை இயல்பான தூண்டலுடனே தடுத்து நின்றான்.(2) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்த துரோணர் மகன், அர்ஜுனன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரையும் தன் கணைகளால் மறைத்தான்.(3) கணைகளால் மறைக்கப்பட்ட இரு கிருஷ்ணர்களையும் கண்ட (பாண்டவப் படையின்) பெருந்தேர்வீரர்களும், குருக்களும் மிகுந்த ஆச்சரியத்தை அடைந்தனர்.(4) அப்போது அர்ஜுனன் சிரித்துக் கொண்டே ஒரு தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். எனினும் பிராமணனான அஸ்வத்தாமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவ்வாயுதத்தை அந்தப் போரில் கலங்கடித்தான்.(5)

உண்மையில் அம்மோதலில், துரோணர் மகனைக் {அஸ்வத்தாமனைக்} கொல்லும் விருப்பத்தில் அர்ஜுனனால் ஏவப்பட்ட அந்த ஆயுதங்கள் அனைத்தும் அந்தப் பெரும் வில்லாளியால் கலங்கடிக்கப்பட்டன.(6) அச்சம் நிறைந்த அந்த ஆயுதமோதலானது நடந்து கொண்டிருந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அகன்ற வாயைக் கொண்ட அந்தகனுக்கு ஒப்பானவனாகவே அந்தத் துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} நாங்கள் கண்டோம்.(7) முக்கிய மற்றும் துணைத் திசைகள் அனைத்தையும் நேரான கணைகளால் மறைத்த அவன் {அஸ்வத்தாமன்}, வாசுதேவனின் வலக்கரத்தை மூன்று கணைகளால் துளைத்தான்.(8) அப்போது அர்ஜுனன், தன்னைத் தாக்கும் அந்த உயர் ஆன்மா கொண்டவனின் {அஸ்வத்தாமனின்} குதிரைகள் அனைத்தையும் கொன்று[1], அந்தப் போரில் அச்சம் ஏற்படுத்தக்கூடியதும், அடுத்த உலகத்தை நோக்கிச் செல்வதும், பல்வேறு வகைகளிலான உயிரினங்கள் மிதந்து சென்றதுமான இரத்த ஆற்றால் பூமியை மறைத்தான். பார்த்தனால் {அர்ஜுனனால்} ஏவப்பட்ட கணைகளின் மூலம் கொல்லப்பட்ட அஸ்வத்தாமனின் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களும், பெரும் எண்ணிக்கையிலானவர்களுமான அந்தத் தேர்வீரர்கள் அழிவடைவதைப் பார்வையாளர்கள் அனைவரும் கண்டனர். அஸ்வத்தாமனும், தன் எதிரிகளைக் கொன்று, யமனின் ஆட்சிப்பகுதிகளுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு பயங்கரமான இரத்த ஆற்றை அங்கே உண்டாக்கினான்.(9-11)

பயங்கரமானதும், அச்சம் நிறைந்ததுமான அந்தப் போரானது, துரோணர் மகனுக்கும் {அஸ்வத்தாமனுக்கும்}, பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்து கொண்டிருந்தபோது, ஒருவருக்கொருவர் எந்தக் கருணையும் காட்டாமல் போரிட்ட போராளிகள், அங்கேயும், இங்கேயும் விரைந்து கொண்டிருந்தனர்.(12) குதிரைகளும், சாரதிகளும், கொல்லப்பட்ட தேர்கள், சாரதிகள் கொல்லப்படக் குதிரைகள், பாகர்கள் கொல்லப்பட்ட யானைகள் ஆகியவற்றின் விளைவாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பார்த்தனால் ஒரு பயங்கரமான பேரழிவு ஏற்பட்டது.(13) பார்த்தனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் தேர்வீரர்கள் உயிரை இழந்து கீழே விழுந்தனர். தங்கள் கட்டுகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்ட குதிரைகள், அங்கேயும், இங்கேயும் ஓடின.(14) போர்க்கள ரத்தினமான பார்த்தனின் அந்த அருஞ்செயல்களைக் கண்ட துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்}, வெற்றியாளர்களின் முதன்மையான முன்னவனை {அர்ஜுனனை} வேகமாக அணுகி,(15) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் உறுதிமிக்க வில்லை அசைத்து, கூரிய கணைகள் பலவற்றால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனை {அர்ஜுனனைத்} துளைத்தான்.(16) மீண்டும் வில் வளைத்த அந்தத் துரோணர் மகன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறகு படைத்த ஒரு கணையால் மார்பைக் குறி பார்த்து அர்ஜுனனைக் கொடூரமாகத் தாக்கினான்.(17)

அம்மோதலில், துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} ஆழத்துளைக்கப்பட்டவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்ட வீரனுமான அந்தக் காண்டீவதாரி {அர்ஜுனன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கணை மாரிகளால் துரோணர் மகனைப் பலவந்தமாக மறைத்து, அவனது வில்லையும் அறுத்தான்.(18) வில்லறுபட்ட துரோணர் மகன், இடிக்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட ஒரு முள் பதித்த கதாயுதத்தை {பரிகத்தை} எடுத்துக் கொண்டு, அம்மோதலில் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன் மீது வீசினான்.(19) எனினும், ஓ! மன்னா, அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தன்னை நோக்கி வந்து கொண்டிருந்ததுமான அந்த முள் பதித்த கதாயுதத்ததைத் திடிரென அறுத்தான்.(20) இவ்வாறு, பார்த்தனின் கணைகளால் வெட்டப்பட்ட அஃது, ஓ! மன்னா, இடியால் தாக்கப்பட்டு நொறுங்கிய ஒரு மலையைப் போலப் பூமியில் விழுந்தது.(21)

இதனால் சினத்தால் நிறைந்தவனும், பெரும் தேர்வீரனுமான துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஐந்திர ஆயுதத்துடைய சக்தியின் துணை கொண்டு பீபத்சுவை {அர்ஜுனனை} மறைக்கத் தொடங்கினான்.(22) ஐந்திர ஆயுதத்தின் மூலம் ஆகாயத்தில் பரப்பப்பட்ட கணைமாரியைக் கண்டவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் வில்லான காண்டீவத்தை எடுத்து, இந்திரனால் உண்டாக்கப்பட்ட வலிமைமிக்க ஓர் ஆயுதத்தை அவனது நாண்கயிற்றில் பொருத்தி, அந்த ஐந்திரக் கணைமாரியை அழித்தான்.(23) ஐந்திர ஆயுதத்தால் உண்டான கணைமாரியைக் கலங்கடித்த பார்த்தன், (தன் கணைகளால்) துரோணர் மகனின் தேரை வேகமாக மறைத்தான். எனினும், பார்த்தனின் கணைகளால் மறைக்கப்பட்டாலும் அந்தத் துரோணர் மகன்,(24) பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} ஏவப்பட்ட அந்தக் கணைமாரியின் ஊடாக ஊடுவி, பின்னவனை {அர்ஜுனனை} அணுகி, ஒரு வலிமைமிக்க ஆயுதத்தை இருப்புக்கு அழைத்து, திடீரென நூறு {100} கணைகளால் கிருஷ்ணனையும், முன்னூறு {300} குறுங்கணைகளால் {பிண்டிபாலங்களால்} அர்ஜுனனையும் துளைத்தான்.(25)

அப்போது அர்ஜுனன், ஒரு நூறு கணைகளால் தனது ஆசானின் மகனை {அஸ்வத்தாமனை} அவனது முக்கிய அங்கங்கள் அனைத்திலும் துளைத்தான். பிறகு அவன் {அர்ஜுனன்}, உமது போர்வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, துரோணர் மகனின் குதிரைகள், சாரதி, வில்லின் நாண் கயிறு ஆகியவற்றின் மீது தன் கணைகளைப் பொழிந்தான்.(26) அனைத்து முக்கிய அங்கங்களிலும் துரோணர் மகனை {அஸ்வத்தாமனைத்} துளைத்தவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஓர் அகன்ற தலைக் கணையை {பல்லத்தைக்} கொண்டு தன் எதிராளியின் {அஸ்வத்தாமனின்} சாரதியை அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினான்.(27) எனினும், கடிவாளங்களைத் தானே பிடித்துக் கொண்ட துரோணர் மகன், கணைகள் பலவற்றால் கிருஷ்ணனை மறைத்தான். பல்குனனோடு {அர்ஜுனனோடு} போரிட்டுக் கொண்டே தன் குதிரைகளை வழிநடத்தியதால், அப்போது துரோணர் மகனிடம் நாங்கள் கண்ட ஆற்றலுடன் கூடிய செயல்பாடு மிக அற்புதமானாதாக இருந்தது. அந்தப் போரில் அவனது இந்த அருஞ்செயலை, ஓ! மன்னா, போர்வீரர்கள் அனைவரும் பாராட்டினர்.(29)

ஜயன் என்றும் அழைக்கப்பட்ட பீபத்சு, சிரித்துக் கொண்டே, அந்தப் போரில் கத்தி முகக் கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால், அஸ்வத்தாமனின் குதிரைகளுடைய கடிவாளங்களை வேகமாக அறுத்தான்.(30) இதன் காரணமாக, ஏற்கனவே அர்ஜுனனுடைய கணைகளின் சக்தியால் பீடிக்கப்பட்டிருந்த அந்தத் துரோணர் மகனின் குதிரைகள் தப்பி ஓடின. அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளுக்கு மத்தியில் பேரொலி எழுந்தது.(31) அதே வேளையில், வெற்றியை அடைந்த பாண்டவர்கள், மேலும் அதை மேம்படுத்த விரும்பி, உமது துருப்புகளின் மீது அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கூரிய கணைகளை ஏவியபடி அவற்றை எதிர்த்து விரைந்து சென்றனர்.(32) அப்போது, தார்தராஷ்டிரர்களின் அந்தப் பரந்த படையானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ! ஏகாதிபதி, அனைத்துப் போர்முறைகளையும் அறிந்தவர்களான உமது மகன்கள், சுபலனின் மகனான சகுனி மற்றும் கர்ணன் ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, வெற்றியடையும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட வீரப் பாண்டவர்களால், ஓ! மன்னா, மீண்டும் மீண்டும் பிளக்கப்பட்டது.(33,34)

அந்தப் படையை உமது மகன்கள் தடுக்க முயற்சித்தாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களிலும் பீடிக்கப்பட்ட அது களத்தில் நிற்கவில்லை.(35) உண்மையில், அனைத்துப் பக்கங்களிலும் போர்வீரர்கள் பலர் தப்பி ஓடிக் கொண்டிருந்ததன் விளைவால் அச்சத்தை அடைந்த உமது மகனின் {துரியோதனனின்} பரந்த படைக்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டது.(36) சூதன் மகன் {கர்ணன்}, “நில்லுங்கள், நிற்பீராக” என்று உரக்கக் கூச்சலிட்டாலும், உயர் ஆன்மப் போர்வீரர்கள் பலரால் கொல்லப்பட்ட உமது படையானது களத்தில் நிற்கவில்லை.(37) அப்போது, ஓ! ஏகாதபதி, அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடிக் கொண்டிருக்கும் தார்தராஷ்டிரப் படையைக் கண்டு, வெற்றியடையும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட பாண்டவர்களால் பேரொலிகள் எழுப்பப்பட்டன.(38)

அப்போது துரியோதனன், கர்ணனிடம் அன்புடன் பேசி, “ஓ! கர்ணா, பாண்டவர்களால் அதிகமாகப் பீடிக்கப்பட்ட நமது படையைப் பார். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இஃதை அறிந்து கொண்டு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, இந்நேரத்திற்கு ஏற்றதைச் செய்வாயாக.(39,40) பாண்டவர்களால் முறியடிக்கப்பட்டோரான (நமது) போர்வீரர்களில் ஆயிரக்கணக்கானோர், ஓ! வீரா {கர்ணா}, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, உன்னை மட்டுமே அழைக்கின்றனர்” என்றான்.(41)

துரியோதனனின் இந்தப் பயங்கர வார்த்தைகளைக் கேட்ட ராதையின் மகன் {கர்ணன்}, சிரிப்பவன் போல இருந்து கொண்டு, மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(42) “ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, என் கரங்களின் ஆற்றலையும், என் ஆயுதங்களின் சக்தியையும் பார்ப்பீராக. நான் இன்று பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டுக்கள் அனைவரையும் இந்தப் போரில் கொல்வேன். ஓ! மனிதர்களில் புலியே, குதிரைகளுடன் கூடிய என் தேரைச் செலுத்துவீராக. நான் சொன்னது போலவே அனைத்தும் நடக்கும் என்பதில் ஐயமில்லை” என்றான்.(43)

இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பெரும் வீரம் கொண்ட வீரனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பழைமையானதும், விஜயம் என்று அழைக்கப்பட்டதுமான முதன்மையான வில்லை எடுத்து,(44) அதில் நாணேற்றி, அந்த நாணை மீண்டும் மீண்டும் தேய்த்தான். தன் உண்மைத் தன்மை மற்றும் ஓர் உறுதிமொழி ஆகியவற்றைச் சொல்லி உறுதிகூறி, துருப்புகளைக் களத்தில் நிற்கச் செய்தவனும், அளவிலா ஆன்மா கொண்டவனும், வலிமைமிக்கவனுமான அந்தக் கர்ணன், பார்க்கவம்[2] என்ற பெயரில் அழைக்கப்பட்ட ஆயுதத்தைத் தன் வில்லின் நாணில் பொருத்தினான்.(45) அவ்வாயுதத்தில் இருந்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கோடிக்கணக்கான கூரிய கணைகள் பாய்ந்தன.(46) கங்கங்கள் மற்றும் மயில்களின் இறகுகளால் சிறகமைந்தவையும், சுடர்மிக்கவையும், பயங்கரமானவையுமான அந்தக் கணைகளால் முற்றாக மறைக்கப்பட்ட பாண்டவப் படையால் எதையும் காண முடியவில்லை.(47) வலிமைமிக்கப் பார்க்கவ ஆயுதத்தால் அந்தப் போரில் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்களுக்கு மத்தியில் உரத்த ஓலங்கள் எழுந்தன.(48) ஓ! மன்னா, அனைத்துப் பக்கங்களிலும் ஆயிரக்கணக்காக விழும் தேர்களாலும், உயிரை இழுந்து விழும் யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களாலும், ஓ! ஏகாதிபதி, பூமியானது நடுங்கத் தொடங்கியது. பரந்த பாண்டவப் படையானது ஓர் எல்லையிலிருந்து மறு எல்லை வரை கலக்கமடைந்தது.(49,50)அதே வேளையில், எதிரிகளை எரிப்பவனும், போர்வீரர்களில் முதன்மையானவனும், மனிதர்களில் புலியுமான அந்தக் கர்ணன், தன் எதிரிகளை எரித்துக் கொண்டிருந்த போது, புகையற்ற நெருப்பொன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(51) இவ்வாறு கர்ணனால் கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள் மற்றும் சேதிகள், ஒரு காட்டுத்தீயில் உணர்வையிழக்கும் யானைகளைப் போல அந்தக் களமெங்கும் தங்கள் உணர்வுகளை இழக்கத் தொடங்கினர்.(52) ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் புலிகளைப் போலவே முழங்கிக் கொண்டிருந்தனர். பீதியடைந்து, அச்சத்தால் நடுங்கியவாறே போர்க்களத்தின் அனைத்துப் பக்கங்களிலும் ஓடிக்கொண்டிருந்த போராளிகளால் உண்டாக்கப்பட்ட ஓலமானது, அண்ட அழிவின் போது வாழும் உயிரினங்களின் ஓலங்களைப் போலப் பேரொலியாக இருந்தது.(53,54) சூதன் மகனால் {கர்ணனால்} அவர்கள் இவ்வாறு கொல்லப்படுவதைக் கண்டவையான, விலங்குகள், பறவைகள் முதலான உயிரினங்கள் அனைத்தும் அச்சத்தால் நிறைந்தன.(55)

அப்போது சூதன் மகனால் இவ்வாறு கொல்லப்பட்ட சிருஞ்சயர்கள், யமனின் ஆட்சிப்பகுதிகளுக்குள் இருப்பவையான இறந்தோரின் ஆவிகள், தங்களைக் காப்பதற்காக யமனை அழைப்பதைப் போலவே, அர்ஜுனனையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} மீண்டும் மீண்டும் அழைத்தனர். கர்ணனின் கணைகளால் கொல்லப்பட்ட துருப்புகளின் அந்த ஓலங்களைக் கேட்டவனும், பயங்கரமான பார்க்கவ ஆயுதம் இருப்புக்கு அழைக்கப்பட்டதைக் கண்டவனும், குந்தியின் மகனுமான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, இவ்வார்த்தைகளை வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} சொன்னான்:(56-58)) “ஓ! வலிய கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, பார்க்கவ ஆயுதத்தின் ஆற்றலைப் பார். எவ்வழியாலும் போரில் அதைக் கலங்கடிக்க முடியாது.(59) இந்தப் போரில், ஓ! கிருஷ்ணா, சினத்தால் நிறைந்தவனும், ஆற்றலில் அந்தகனுக்கே ஒப்பானவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, கடுமையான இத்தகு அருஞ்செயலைச் செய்து கொடிருப்பதையும் பார்.(60) அடிக்கடி தன் குதிரைகளைத் தூண்டும் அவன் {கர்ணன்} மீண்டும் மீண்டும் தன் கோபப்பார்வைகளை என் மீது செலுத்துகிறான். இந்தப் போரில் ஒருபோதும் என்னால் கர்ணனிடம் இருந்து தப்ப இயலாது[3].(61) உயிருடன் வாழும் மனிதன் போரில் வெற்றியையோ, வீழ்ச்சியையோ சந்திக்கலாம். எனினும், ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, இறந்தவனுக்கோ, மரணமே கூட வெற்றியே ஆகும். இறந்தவனுக்கு எவ்வாறு தோல்வி ஏற்படக்கூடும்?” என்று கேட்டான் {அர்ஜுனன்}[4].(62பார்த்தனால் {அர்ஜுனனால்} இவ்வாறு சொல்லப்பட்ட கிருஷ்ணன், புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான அவனிடம், அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்த இவ்வார்த்தைகளால் மறுமொழி கூறினான்:(63) “குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரர்}, கர்ணனால் சிதைக்கப்பட்டு ஆழமாகக் காயமடைந்திருக்கிறார். முதலில் அவரைக் கண்டு ஆறுதலளித்த பிறகு, ஓ! பார்த்த {அர்ஜுனா}, நீ கர்ணனைக் கொல்லலாம்” {என்று சொன்னான்}.(64) பிறகு, யுதிஷ்டிரனைக் காண விரும்பி அவனை நோக்கிச் சென்ற அதே வேளையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனும் களைப்படையட்டும் என்று கேசவன் நினைத்தான்.(65) கணைகளால் பீடிக்கப்பட்ட யுதிஷ்டிரனைத் தானும் காண விரும்பிய தனஞ்சயன் {அர்ஜுனன்}, கேசவனுடைய {கிருஷ்ணனுடைய} ஆணையின் பேரில் போரைத் தவிர்த்துவிட்டு அந்தத் தேரில் வேகமாகச் சென்றான்.(66) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் காணும் விருப்பத்தில் இவ்வாறு சென்று கொண்டிருந்த அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, படையின் ஒவ்வொரு பகுதியில் தன் கண்களைச் செலுத்தினாலும், தன் அண்ணனைக் {யுதிஷ்டிரனைக்} காண்பதில் தவறினான்.(67) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தன் ஆசானின் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} போரிட்டு, வஜ்ரதாரியாலும் {இந்திரனாலும்} தடுக்கப்பட முடியாத அந்த வீரனை {அஸ்வத்தாமனை} வென்ற பிறகு, இவ்வாறு சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(68)

யுதிஷ்டிரனைக் கண்ட கிருஷ்ணர்கள்! – கர்ண பர்வம் பகுதி – 65-போர்வீரர்களை உற்சாகப்படுத்திய அர்ஜுனன்; யுதிஷ்டிரனைக் குறித்துப் பீமனிடம் விசாரித்த அர்ஜுனன்; யுதிஷ்டிரன் உயிருடன் இருப்பது ஐயமே என்று அர்ஜுனனிடம் சொன்ன பீமன்; யுதிஷ்டிரனைக் கண்டு வருமாறு பீமனுக்குச் சொன்ன அர்ஜுனன்; பகைவரைத் தான் பார்த்துக் கொள்வதாகவும், யுதிஷ்டிரனை அர்ஜுனனே கண்டு வர வேண்டும் என்றும் சொன்ன பீமன்; யுதிஷ்டிரனைக் காணச் சென்ற கிருஷ்ணனும், அர்ஜுனனும்; அவர்களைக்கண்டு மகிழ்ந்த யுதிஷ்டிரன் கர்ணன் கொல்லப்பட்டு விட்டதாகக் கருதியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} வீழ்த்தி, வலிமைமிக்கதும், வீரம் நிறைந்ததும், அடைவதற்கரிதானதுமான ஓர் அருஞ்செயலைச் செய்தவனும், எதிரிகளால் தடுக்கப்பட முடியாதவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கைகளில் வளைக்கப்பட்ட வில்லுடன், தன் துருப்புகளுக்கு மத்தியில் கண்களைச் செலுத்தினான்.(1) துணிச்சல்மிக்கச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, தங்கள் படைப்பிரிவுகளின் முகப்புகளில் போரிட்டுக் கொண்டிருந்த போர்வீரர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், அவர்களில் தங்கள் முந்தைய சாதனைகளுக்காகக் கொண்டப்படுவோரைப் பாராட்டி, தன் படையின் தேர்வீரர்களைத் தங்கள் நிலைகளில் தொடர்ந்து நிலைக்கச் செய்தான்.(2) கிரீடத்தாலும், தங்கக் கழுத்தணியாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த அர்ஜுனன், தன் அண்ணனான ஆஜமீட குலத்து யுதிஷ்டிரனைக் காணாததால், வேகமாகப் பீமனை அணுகி, “மன்னர் {யுதிஷ்டிரர்} எங்கிருக்கிறார் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டு, மன்னன் இருக்குமிடத்தை அவனிடம் விசாரித்தான்.(3)

இவ்வாறு கேட்கப்பட்ட பீமன் {அர்ஜுனனிடம்}, “நீதிமானான மன்னர் யுதிஷ்டிரன், கர்ணனின் கணைகளால் தன் அங்கங்கள் எரிக்கப்பட்டு, இவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டார். அவர் இன்னும் உயிருடன் இருப்பது ஐயத்திற்கிடமானதே” என்றான்.(4)

இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன் {பீமனிடம்}, “இந்தக் காரணத்திற்காக, குருவின் வழித்தோன்றல்கள் அனைவரிலும் சிறந்தவரான மன்னரை {யுதிஷ்டிரரைக்} குறித்து அறிந்து வருவதற்காக இவ்விடத்தில் இருந்து வேகமாகச் செல்வீராக. கர்ணனின் கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட மன்னர் {யுதிஷ்டிரர்} {நம்} முகாமுக்கே சென்றிருப்பார் என்பதில் ஐயமில்லை.(5) அந்தக் கடும் ஆயுதவழியில் கூரிய கணைகளைக் கொண்டு துரோணரால் ஆழத்துளைக்கப்பட்ட போதும், வெற்றியை எதிர்பார்த்தவரும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவருமான மன்னர் {யுதிஷ்டிரர்}, அந்தத் துரோணர் கொல்லப்படும்வரை போரிலேயே நிலைத்திருந்தார்.(6) பாண்டவர்களில் முதன்மையானவரான அந்தப் பெருந்தன்மைமிக்கவர், இன்றைய போரில் கர்ணனால் பேராபத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். எனவே, ஓ! பீமரே, அவரது {யுதிஷ்டிரரது} நிலையை உறுதி செய்து கொள்வதற்காக, அவர் இருக்கும் இடத்திற்கு வேகமாகச் செல்வீராக. நம் எதிரிகள் அனைவரையும் தடுத்துக் கொண்டு நான் இங்கே நிற்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.(7)

இவ்வாறு சொல்லப்பட்ட பீமன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பெரும் மகிமை கொண்டவனே, பாரதர்களில் காளையான மன்னரின் {யுதிஷ்டிரரின்} நிலையை உறுதி செய்வதற்கு நீயே செல்வாயாக. நான் சென்றால், ஓ! அர்ஜுனா, வீரர்களில் முதன்மையானோரான பலர், போரில் நான் அச்சமடைந்துவிட்டதாகச் சொல்லக்கூடும்” என்றான்.(8) அப்போது அர்ஜுனன், பீமசேனனிடம், “என் படைப்பரிவுக்கு எதிரில் சம்சப்தகர்கள் இருக்கின்றனர். கூடித் திரண்டிருக்கும் அந்த எதிரிகளை முதலில் கொல்லாமல், இந்த இடத்தில் இருந்து அகல்வது எனக்கு இயலாத காரியமாகும்” என்றான்.(9) அப்போது பீமன், அர்ஜுனனிடம், “ஓ! குருக்களில் முதன்மையானவனே, என் சொந்த வலிமையைக் கொண்டு நான் சம்சப்தகர்கள் அனைவருடனும் போரிடுவேன். எனவே, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, நீயே செல்வாயாக” என்றான்.(10)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பகைவர்களுக்கு மத்தியில் தன் அண்ணனான பீமசேனனின் அடைவதற்கரிதான அவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், மன்னனைக் {யுதிஷ்டிரனைக்} காண விரும்பி, அந்த விருஷ்ணி வீரனிடம் {கிருஷ்ணனிடம்},(11) “ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, இந்தத் துருப்புகளின் கடலை விட்டுவிட்டு, குதிரைகளைச் செலுத்துவாயாக. ஓ! கேசவா {கிருஷ்ணா}, மன்னர் அஜாதசத்ருவை {யுதிஷ்டிரரைக்} காண நான் விரும்புகிறேன்” என்றான்.(12)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தசார்ஹர்களில் முதன்மையான கேசவன் {கிருஷ்ணன்}, சரியாகக் குதிரைகளைச் செலுத்தப்போகும் தருணத்தில் பீமனிடம் அவன் {கிருஷ்ணன்}, “ஓ! பீமரே, இந்த அருஞ்செயல் உமக்கு அற்புதமானதன்று. நான் (அங்கே) செல்லப் போகிறேன். திரண்டிருக்கும் இந்தப் பார்த்தனுடைய எதிரிகளைக் கொல்வீராக” என்றான்.(13) பிறகு ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவனான பீமனைப் படையின் முன்னணியில் நிறுத்தி, (சம்சப்தகர்களுடன்) போரிடுமாறு ஆணையுமிட்டு, ஓ! ஏகாதிபதி, கருடனுக்கு ஒப்பான அந்தக் குதிரைகளால் சுமக்கப்பட்டு மன்னன் யுதிஷ்டிரன் இருந்த இடத்திற்கு வேகமாகச் சென்றான்.(14,15)

பிறகு, தங்கள் தேரில் சென்ற அந்த மனிதர்களில் முதன்மையானோர் இருவரும் (கிருஷ்ணனும், அர்ஜுனனும்}, தன் படுக்கையில் கிடந்த மன்னனை {யுதிஷ்டிரனை} அடைந்தனர். அந்தத் தேரில் இருந்து இறங்கிய இருவரும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் பாதங்களை வழிபட்டனர்.(16) அந்த மனிதர்களில் காளை, அல்லது புலி {யுதிஷ்டிரன்}, பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதைக் கண்ட அந்தக் கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} இருவரும், வாசவனை {இந்திரனைக்} கண்ட அசுவினி இரட்டையரைப் போல மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(17)

அப்போது மன்னன் {யுதிஷ்டிரன்}, அசுவினி இரட்டையரை வாழ்த்தும் விவஸ்வானைப் போலவோ, வலிமைமிக்க அசுரன் ஜம்பனைக் கொன்ற பிறகு, சக்ரனையும் {இந்திரனையும்} விஷ்ணுவையும் பாராட்டிய பிருஹஸ்பதியைப் போலவோ அவ்விருவரையும் {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} வாழ்த்தினான்.(18) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கர்ணன் கொல்லப்பட்டதாக நினைத்து மகிழ்ச்சியால் நிறைந்தான். அந்த எதிரிகளை எரிப்பவன் {யுதிஷ்டிரன்}, மகிழ்ச்சியால் தடைபட்ட குரலுடன் இவ்வார்த்தைகளை அவர்களிடம் சொன்னான்” {என்றான் சஞ்சயன்}.(19)

யுதிஷ்டிரனின் அதியாவல்! – கர்ண பர்வம் பகுதி – 66-கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் கண்ட யுதிஷ்டிரன், கர்ணன் கொல்லப்பட்டதாக நினைத்து அவர்களிடம் விசாரித்தது; தன் இதயத்தில் இருந்த அச்சங்களை வெளிப்படுத்திய யுதிஷ்டிரன், கர்ணனை அர்ஜுனன் எவ்வாறு கொன்றான் என்று விசாரித்தது…

யுதிஷ்டிரன், “ஓ! தேவகியைத் தாயாகக் கொண்டவனே {கிருஷ்ணா}, நல்வரவு, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} உனக்கு நல்வரவு. ஓ! அச்யுதா {கிருஷ்ண}, ஓ! அர்ஜுனா, உங்கள் இருவரையும் கண்டது மிகவும் இனிமையான காட்சியாக இருக்கிறது.(1) கர்ணனின் எதிரிகளான நீங்கள் இருவரும், உங்கள் மேனியில் எந்தக் காயமுமின்றி, வலிமைமிக்கத் தேர்வீரனான அவனைக் {கர்ணனைக்} கொன்றிருக்கிறீர்கள் என்று காண்கிறேன்.(2) அவன் {கர்ணன்} இந்தப் போரில், கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலவே இருந்தான். ஆயுதங்கள் அனைத்திலும் சாதித்தவனாகவும் அவன் இருந்தான். தார்தராஷ்டிரர்கள் அனைவரின் தலைவனாக இருந்த அவன், அவர்களது கவசமாகவும், பாதுகாவலனாகவும் இருந்தான்.(3) போரிட்டுக் கொண்டிருக்கும்போது, பெரும் வில்லாளிகளான விருஷசேனன் மற்றும் சுசேனன் ஆகிய இரு பெரும் வில்லாளிகளால் எப்போதும் பாதுகாக்கப்படுபவனாகவும் அவன் இருந்தான். பெரும் சக்தி கொண்ட அவன் {கர்ணன்}, ராமரிடம் {பரசுராமரிடம்} இருந்து ஆயுத பாடங்களைக் கற்றான். போரில் அவன் வெல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான்.(4) உலகமனைத்திலும் முதன்மையான அவன், ஒரு தேர்வீரனாக, உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்பட்டான். அவன் {கர்ணன்}, தார்தராஷ்டிரர்களின் மீட்பனாகவும், அவர்களது படைக்கு முன்னணியில் செல்பவனாகவும் இருந்தான்.(5)

பகைவரின் துருப்புகளைக் கொல்பவனாகவும், எதிரிகளின் பெருங்கூட்டத்தை நசுக்குபவனாகவும் அவன் {கர்ணன்} இருந்தான். எப்போதும் துரியோதனனுக்கு நன்மை செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவன், நமக்குத் துன்பத்தைக் கொடுக்கவும் எப்போதும் தயாராகவே இருந்தான்.(6) வாசவனை {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களாலேயே, போரில் வெல்லப்பட முடியாதவனாக அவன் இருந்தான். சக்தியிலும், வலிமையிலும் அவன் {கர்ணன்}, நெருப்பு தேவனுக்கும் {அக்னிக்கும்}, காற்று தேவனுக்கும் {வாயுவுக்கும்} நிகரானவனாக இருந்தான்.(7) ஈர்ப்பில் அவன் அளக்கமுடியாத கீழ் உலகம் {பாதாளம்} போலவே இருந்தான். நண்பர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான அவன், எதிரிகளுக்கு அந்தகனைப் போலவே இருந்தான். இந்தப் பயங்கரப் போரில் (இவ்வாறெல்லாம் இருந்த) கர்ணனைக் கொன்ற பிறகு, ஓர் அசுரனைக் கொன்ற தேவர்கள் இருவரைப் போல நீங்கள் இருவரும் வந்திருப்பது நற்பேறாலேயே.(8)

ஓ! அச்யுதா {கிருஷ்ணா}, அர்ஜுனா, இன்று வலிமையோடு போராடிக் கொண்டிருந்த எனக்கும், உயிரினங்களை அழிக்கும் அந்தகனுக்கு ஒப்பான அந்த வீரனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் ஒரு பெரும்போர் நடந்தது.(9) என் கொடிமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது. என் பார்ஷினி சாரதிகள் இருவரும் அவனால் {கர்ணனால்} கொல்லப்பட்டனர். யுயுதானன், திருஷ்டத்யும்னன், இரட்டையர்கள் (நகுலனும், சகாதேவனும்), வீரச் சிகண்டி, திரௌபதியின் மகன்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நான் அவனால் {கர்ணனால்}, குதிரைகளற்றவனாகவும், தேரற்றவனாகவும் செய்யப்பட்டேன்.(10,11) இவர்களையும் {மேற்கண்டோரையும்}, தன் எதிரிகளில் எண்ணற்றோரையும் வென்ற பிறகு, வலிமையும், சக்தியும் கொண்டவனான அந்தக் கர்ணன், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டோனே {அர்ஜுனா}, போரில் உறுதியுடன் முயன்று கொண்டிருந்த என்னையும் வென்றான்.(12) அதன் பிறகு, என்னைப் பின்தொடர்ந்தே வந்து, என் பாதுகாவலர்கள் அனைவரையும் ஐயமில்லாமல் வென்ற அந்த முதன்மையான போர்வீரன் {கர்ணன்}, என்னிடம் பல்வேறு கடுமொழிகளைப் பேசினான்.(13) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, பீமசேனனுடைய ஆற்றலின் காரணமாகவே நான் இன்னும் உயிரோடிருக்கிறேன். (அவனைக் குறித்து) இதற்கு மேலும் நான் சொல்ல வேண்டிய தேவையென்ன இருக்கிறது? அந்த அவமானத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(14)

ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, கர்ணன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, பதிமூன்று {13} வருடங்களாக இரவில் தூக்கத்தையோ, பகலில் ஆறுதலையோ என்னால் அடைய முடிந்ததில்லை.(15) ஓ! தனஞ்சயா, கர்ணன் மீது கொண்ட வெறுப்பால் நிறைந்து நான் எரிகிறேன். வாத்ரிணசைப் பறவை போல, என் அழிவு நேரத்தை அறிந்தே நான் கர்ணனிடம் இருந்து தப்பி வந்தேன்[1].(16) போரில் கர்ணனின் அழிவை நான் எவ்வாறு சாதிக்க வேண்டும் என்ற நினைப்பிலேயே என் மொத்த காலமும் கடந்தது.(17) விழிப்பிலோ, உறக்கத்திலோ, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, (என் மனக்கண்ணால்) நான் எப்போதும் கர்ணனையே கண்டேன். நான் எங்கிருந்தாலும், இந்த அண்டமே கர்ணனால் நிறைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றியது.(18) கர்ணனிடம் கொண்ட அச்சத்தால், ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, நான் எங்குச் சென்றாலும், அங்கே என் கண்களுக்கு எதிராகக் கர்ணன் நிற்பதையே கண்டேன்.(19) போரில் பின்வாங்காத அந்த வீரனால் {கர்ணனால்}, குதிரைகள் மற்றும் தேருடன் கூடிய நான் வெல்லப்பட்டாலும், அவனால் உயிரோடு விடப்பட்டேன்.(20)

போர்க்கள ரத்தினமான கர்ணன், இன்று என்னைச் “சீ” என்றதால், இந்த உயிரினாலோ, அரசாங்கத்தாலோ எனக்கு யாது பயன்?(21) போரில் பீஷ்மர், அல்லது கிருபர், அல்லது துரோணர் ஆகியோரிடம் எனக்கு நேராத ஒன்று, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சூதன் மகனிடம் {கர்ணனிடம்} நேர்ந்தது.(22) இதன் காரணமாகவே, ஓ! குந்தியின் மகனே, நான் உன்னிடம் உனது நலத்தைக் கேட்கிறேன். கர்ணனை நீ இன்று எவ்வாறு கொன்றாய் என்பதை எனக்கு விபரமாகச் சொல்வாயாக(23) போரில் கர்ணன், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையானவனாவான். ஆற்றலில் அவன் யமனுக்கு நிகரானவனாவான். ஆயுதங்களில் அவன் ராமருக்கு {பரசுராமருக்கு} இணையானவனாவான். அவனை {கர்ணனை} எவ்வாறு நீ கொன்றாய்?(24) அவன் வலிமைமிக்கத் தேர்வீரனாகவும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனாகவும் கருதப்படுபவனாவான். அவன் வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனும், மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமாவான்.(25)

ஓ! இளவரசனே {அர்ஜுனா}, அந்த ராதையின் மகன் {கர்ணன்}, திருதராஷ்டிரராலும், அவரது மகனாலும் {துரியோதனனாலும்}, உனக்காகவே எப்போதும் வழிபடப்பட்டான். அவனை எவ்வாறு நீ கொன்றாய்?(26) ஓ! அர்ஜுனா, ஓ! மனிதர்களில் காளையே, அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, கர்ணனை உனக்குக் காலனாகவே கருதினான்.(27) ஓ! மனிதர்களில் புலியே, அந்தக் கர்ணன் போரில் எவ்வாறு உன்னால் கொல்லப்பட்டான்? ஓ! குந்தியின் மகனே, அந்தக் கர்ணன் எவ்வாறு உன்னால் கொல்லப்பட்டான்?(28) ஓ! மனிதர்களில் புலியே, அவனது நண்பர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ருரு மானின் தலையைக் கிழிக்கும் ஒரு புலியைப் போல, போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவனது தலையை நீ எவ்வாறு தாக்கி வீழ்த்தினாய்?(29) போரில் திசைப்புள்ளிகள் அனைத்திலும் எவன் உன்னைத் தேடினானோ, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, உன்னைச் சுட்டிக் காட்டுபவனுக்கு யானையின் உடலளவுகளைக் கொண்ட ஆறு காளைகளால் இழுக்கப்படும் தேரைக் கொடுப்பதாக எவன் உறுதியளித்தானோ அந்தக் கர்ணன்,(30) தீய ஆன்மா கொண்டவனான அந்தக் கர்ணன், கங்க இறகுகளைக் கொண்ட உன் கூரிய கணைகளால் கொல்லப்பட்டு வெறுந்தரையில் கிடக்கிறானா என்று நான் உன்னைக் கேட்கிறேன். போரில் சூதன் மகனை {கர்ணனைக்} கொன்றதால், எனக்கு இனிமையான ஓர் உயர்ந்த பணியை நீ சாதித்திருக்கிறாய்.(31)

ஆணவம், செருக்கு, தன் வீரத்தில் தற்பெருமை ஆகியவற்றால் நிறைந்தவனும், போர்க்களத்தில் எங்கும் உன்னைத் தேடிக் கொண்டிருந்தவனுமான அந்தச் சூதன் மகனோடு {கர்ணனோடு} போரில் மோதி அவனை நீ கொன்றுவிட்டாயா?(32) ஓ! ஐயா, எப்போதும் உன்னை அறைகூவி அழைப்பவனும், உன் நிமித்தமாகவே, தங்கத்தாலானதும், எண்ணற்ற யானைகள், காளைகள் மற்றும் குதிரைகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்டமான தேரைப் பிறருக்குக் கொடுக்க விரும்பிய அந்த இழிந்த பாவியை உண்மையில் போரில் நீ கொன்றுவிட்டாயா?(33) சுயோதனனின் {துரியோதனனின்} அன்புக்குரியவனும், வீரச்செருக்கால் போதையுண்டவனும், குருக்களின் சபையில் எப்போதும் தற்பெருமை பேசுபவனுமான அந்தப் பொல்லாத பாவியை இன்று உண்மையில் நீ கொன்றுவிட்டாயா?(34) போரில் மோதியவனும், குருதியில் நனைக்கப்பட்ட, உன் வில்லில் இருந்து உன்னால் ஏவப்பட்ட வானுலாவும் கணைகளால் தன் அங்கங்கள் சிதைக்கப்பட்டவனுமாக அந்த இழிந்தவன் இன்று களத்தில் கிடக்கிறானா? (இறுதியாக) திருதராஷ்டிரர் மகனின் இரு கரங்களும் முறிந்தனவா?(35)

செருக்கால் நிறைந்து, மன்னர்களின் சபையில், துரியோதனனை மகிழ்விப்பதற்காக “நான் பல்குனனை {அர்ஜுனனைக்} கொல்வேன்” என்று எப்போதும் தற்பெருமை பேசி மடமையினால் அவன் {கர்ணன்} உதிர்த்த அவ்வார்த்தைகள் நிறைவேறாமல் போயினவா?(36) ஓ! இந்திரனின் மகனே, “பார்த்தன் {அர்ஜுனன்} உயிரோடு வாழும் வரை தன் கால்களைக் கழுவுவதில்லை” என்று உறுதிமொழியேற்றவன் எவனோ, அந்தச் சூதன் மகன், சிறுமதிபடைத்த அந்தக் கர்ணன் இன்று உன்னால் கொல்லப்பட்டானா?(37) சபையில், குரு தலைவர்களுக்கு முன்னிலையில் கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணையே {திரௌபதியே}, வலிமையை இழந்தவர்களும், மிகவும் பலவீனமானவர்களும், வீழ்ந்துவிட்டவர்களுமான பாண்டவர்களை நீ ஏன் கைவிடக்கூடாது?” என்று பேசியவனும், தீய அறிவைக் கொண்டவனுமான அந்தக் கர்ணன்,(38) “கிருஷ்ணனையும், பார்த்தனையும் {அர்ஜுனனையும்} கொல்லாமல் போரில் இருந்து திரும்புவதில்லை“ என்று சொல்லி, உன் நிமித்தமாகச் சபதமேற்ற அந்தக் கர்ணன், பாவம் நிறைந்த அறிவைக் கொண்ட அந்தக் கர்ணன், கணைகளால் தன் உடல் துளைக்கப்பட்டு, இன்று போர்க்களத்தில் கிடக்கிறானா?(39) சிருஞ்சயர்களும், கௌரவர்களும், ஒருவரோடொருவர் மோதிக் கொண்ட போது நடந்ததும், போரில் என்னைப் பரிதாபமிக்க அந்த இழிந்த நிலையை அடையச் செய்ததுமான அந்தப் போரின் இயல்பை நீ அறிவாய். அந்தக் கர்ணனோடு மோதி, அவனை இன்று நீ கொன்றுவிட்டாயா?(40)

ஓ! சவ்யசச்சின் {அர்ஜுனா}, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட சுடர்மிக்கக் கணைகளைக் கொண்டு, காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கர்ணனின் பிரகாசமிக்கத் தலையை அவனது உடலில் இருந்து அறுத்துவிட்டாயா?(41) ஓ! வீரா {அர்ஜுனா}, இன்று கர்ணனின் கணைகளால் துளைக்கப்பட்ட நான், (நீ அவனைக் கொன்றுவிடுவாய் என்று) உன்னை நினைத்தேன். கர்ணனைக் கொன்றதன் மூலம், அந்த என் நினைப்பை நீ உண்மையாக்கினாயா?(42) கர்ணனால் அளிக்கப்பட்ட பாதுகாப்பின் விளைவால், செருக்கால் நிறைந்திருக்கும் சுயோதனன் {துரியோதனன்} எப்போதும் நம்மைத் துச்சமாகவே கருதி வந்தான். உன் ஆற்றலை வெளிப்படுத்தி, நீ இன்று அந்தச் சுயோதனனின் புகலிடத்தை {துரியோதனனுக்குப் பாதுகாப்பை அளிக்கும் கர்ணனை} அழித்தாயா?(43) கௌவர்களின் முன்னிலையிலும், சபைக்கு மத்தியிலும், எள்ளுப்பதர்கள் என்று முன்பு எவன் நம்மை அழைத்தானோ, அந்தத் தீய ஆன்மா கொண்ட சூதன் மகனும், பெருகோபம் கொண்டவனுமான அந்தக் கர்ணனுடன் போரில் மோதி நீ இன்று அவனைக் கொன்றுவிட்டாயா?(44) சுபலன் மகனால் {சகுனியால்} சூதாட்டத்தில் வெல்லப்பட்ட யக்ஞசேனன் மகளை {திரௌபதியைப்} பலவந்தமாக இழுத்துவருமாறு துச்சாசனனுக்குக் கட்டளையிட்டுச் சிரித்துக் கொண்டிருந்தவன் எவனோ, அந்தத் தீய ஆன்மாகக் கொண்ட சூதன் மகன் இன்று உன்னால் கொல்லப்பட்டானா?(45)

பூமியில் உள்ள ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான நமது பாட்டன் பீஷ்மர், ரதர்களையும், அதிரதர்களையும் பட்டியலிட்டபோது, அவரால் அரைத் தேர்வீரனாக எவன் கணக்கிடப்பட்டானோ அந்தச் சிறுமதிகொண்ட கர்ணன் உன்னால் கொல்லப்பட்டானா?(46) ஓ! பல்குனா {அர்ஜுனா}, போரில் கர்ணனோடு மோதி இன்று நீ அவனைக் கொன்றாய் என்று என்னிடம் சொல்லி, பழி உணர்ச்சியில் பிறந்துதும், அவமானம் என்ற காற்றால் விசிறப்படுவதும், என் இதயத்தில் எரிந்து கொண்டிருப்பதுமான இந்த நெருப்பை நீ அணைப்பாயாக.(47) கர்ணன் கொல்லப்பட்ட செய்தியானது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாகும். எனவே, அந்தச் சூதன் மகன் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை எனக்குச் சொல்வாயாக. விருத்திரன் கொல்லப்பட்ட செய்தியுடன் வரும் இந்திரனின் வரவிற்காகக் காத்திருந்த தெய்வீக விஷ்ணுவைப் போலவே, ஓ! வீரா, நானும் உனக்காக இவ்வளவு நீண்ட காலம் காத்திருந்தேன்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(48)

யுதிஷ்டிரனிடம் உறுதிகூறிய அர்ஜுனன்! – கர்ண பர்வம் பகுதி – 67-நடந்தவற்றை யுதிஷ்டிரனிடம் சொன்ன அர்ஜுனன்; சம்சப்தகர்களுடன் தான் போரிட்டதையும், அஸ்வத்தாமன் குறுக்கிட்டதையும், தன்னால் பீடிக்கப்பட்ட அஸ்வத்தாமன் கர்ணனின் படைக்குள் நுழைந்ததையும், கர்ணன் ஏவிய பார்க்கவ ஆயுதத்தைத் தான் கண்டதையும் யுதிஷ்டிரனிடம் சொன்ன அர்ஜுனன்; கர்ணனையும், அவனது உறவினர்கள் அனைவரையும் கொல்வதாக யுதிஷ்டிரனிடம் உறுதிகூறிய அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கோபத்தில் நிறைந்திருந்த நேர்மையான மன்னனின் {யுதிஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், உயர் ஆன்ம அதிரதனும், எல்லையில்லா சக்தி கொண்டவனுமான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, பெரும் வலிமைமிக்கவனும், வெல்லப்பட முடியாதவனுமான அந்த யுதிஷ்டிரனிடம் மறுமொழியாக,(1) “இன்று சம்சப்தகர்களுடன் போரிடுகையில், குரு துருப்புகளின் முகப்பில் எப்போதும் செல்லும் துரோணர் மகன் {அஸ்வத்தாமர்}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகளை ஏவியபடியே திடீரென என் எதிரில் வந்தார்[1].(2) மேகங்களின் முழக்கத்தைப் போன்ற ஆழ்ந்த சடசடப்பொலியைக் கொண்ட என் தேரைக் கண்டதும், துருப்புகள் அனைத்தும் அதைச் சூழ்ந்து கொள்ளத் தொடங்கின. அவர்களில் முழுமையாக ஐநூறு பேரைக் கொன்ற நான், ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, அந்தத் துரோணர் மகனை {அஸ்வத்தாமரை} எதிர்த்துச் சென்றேன்.(3) பெரும் உறுதியோடு என்னை அணுகிய அந்த வீரர், ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே} சிங்கத்தை எதிர்த்து வரும் யானைகளின் இளவரசனைப் போல என்னை எதிர்த்து விரைந்து, என்னால் கொல்லப்பட்டு வந்த கௌரவத் தேர்வீரர்களை மீட்க விரும்பினார்.(4) அப்போது, ஓ! பாரதரே, குருவீரர்களில் முதன்மையானவரும், நடுங்கச் செய்யப்பட இயலாதவருமான அந்த ஆசான் மகன் {அஸ்வத்தாமன்}, அந்தப் போரில், நஞ்சுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான கூரிய கணைகளால் என்னையும், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} பீடிக்கத் தொடங்கினார்.(5)

என்னோடு {அவர்} போரிட்டபோது, எட்டு இளங்காளைகளால் இழுக்கப்படும் எட்டு வண்டிகள் அவரது நூற்றுக்கணக்கான கணைகளைச் சுமந்து வந்தன. அவை அனைத்தையும் அவர் என் மீது ஏவினார். ஆனால் நானோ, மேகங்களை அழிக்கும் காற்றைப் போல என் கணைகளால் அவரது கணைமாரியை அழித்தேன்.(6) பிறகு, திறன், பலம் மற்றும் உறுதியான தீர்மானம் ஆகியவற்றோடு கூடிய அவர், மழைக்காலங்களில் நீர்த்தாரைகளைப் பொழியும் கார்மேகத்தைப் போலத் தன் காது வரை இழுக்கப்பட்ட வில்லின் நாண்கயிற்றில் இருந்து ஏவப்பட்ட ஆயிரகணக்கான கணைகளை என் மீது ஏவினார்.(7) துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் கணைகளை இடப்புறத்தில் இருந்து ஏவுகிறாரா, வலப்புறத்தில் இருந்து எவுகிறாரா என்பதை நாங்கள் அறியாத வண்ணம் அவர் அந்தப் போரில் திரிந்தார், அதே போல அவர் {அஸ்வத்தாமர்} தமது கணைகளை எப்போது எடுத்தார், அவற்றை எப்போது விடுத்தார் என்பதையும் நாங்கள் அறியவில்லை.(8) உண்மையில், துரோணர் மகனின் வில்லானது இடையறாமல் வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே எங்களால் காணப்பட்டது. இறுதியாகத் துரோணர் மகன் ஐந்து கூரிய கணைகளால் என்னையும், மேலும் ஐந்து கூரிய கணைகளால் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தார்.(9) எனினும், கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக, வஜ்ரத்தின் சக்தியைக் கொண்ட முப்பது கணைகளால் நான் அவரைப் பீடித்தேன். என்னால் ஏவப்பட்ட அந்தக் கணைகளால் மிகவும் பீடிக்கப்பட்ட அவர் {அஸ்வத்தாமர்}, விரைவில், ஒரு முள்ளம்பன்றியின் வடிவை ஏற்றார்.(10)

அவரது {அஸ்வத்தாமரது} அங்கங்கள் அனைத்தும் குருதியில் குளித்திருந்தன. போர்வீரர்களில் முதன்மையானோரான தன் துருப்பினர் குருதியால் மறைக்கப்பட்டு, என்னால் மூழ்கடிக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவர், சூதன் மகனின் {கர்ணனின்} தேர்ப்படைப் பிரிவிற்குள் நுழைந்துவிட்டார்.(11) (பகைவரின் படைகளை) கலங்கடிப்பவனான கர்ணன், போரில் என்னால் மூழ்கடிக்கப்பட்ட துருப்புகளைக் கண்டு, யானைகளும், குதிரைகளும் அச்சமடைந்து ஓடுவதைக் கண்டு, ஐம்பது பெருந்தேர்வீரர்களுடன் என்னை வேகமாக அணுகினான். கர்ணனைத் தவிர்த்து, அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு, உம்மைக் காண்பதற்காக நான் இங்கே வேகமாக வந்தேன்[2].(12) பாஞ்சாலர்கள் அனைவரும் கர்ணனைக் கண்டதால், சிங்கத்தின் மணத்தை {வாசனையை} அறிந்த பசுக்களைப் போல அச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, கர்ணனை அணுகிய பிரபத்ரகர்களும், அகன்று விரிந்திருக்கும் காலனின் வாய்க்குள் நுழைந்தவர்களைப் போலத் தெரிகிறார்கள்.(13) துன்பத்தில் இருந்த அந்தத் தேர்வீரர்களில், முழுமையாக ஆயிரத்து எழுநூறு பேரைக் கர்ணன் ஏற்கனவே யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவிட்டான். உண்மையில், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தச் சூதன் மகன் {கர்ணன்} நம்மைக் காணும் வரை தன் உற்சாகத்தை இழக்கவில்லை.(14) முதலில் நீர் அஸ்வத்தாமருடன் போரிட்டு, அவரால் மிகவும் சிதைக்கப்பட்டீர். கர்ணனால் நீர் காணப்பட்ட பிறகே அதை நான் கேள்விப்பட்டேன். ஓ! நினைத்துப் பார்க்க முடியாத அருஞ்செயல்களைச் செய்பவரே, கொடூரனான கர்ணனினிடம் இருந்து வந்த பிறகு, (முகாமில்) நீர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பீர் என்றே நான் நினைத்தேன்.(15)

ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, போரின் முன்னணியில் கர்ணனால் வெளிப்படுத்தப்பட்ட பேரற்புதமான (பார்க்கவ) ஆயுதத்தை நான் கண்டேன். வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தக் கர்ணனைத் தடுக்கச் சிருஞ்சயர்களில் எந்தப் போர்வீரனாலும் இப்போது இயலாது.(16) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, சிநியின் பேரனான சாத்யகியும், திருஷ்டத்யும்னனும், என் தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களாகட்டும். வீர இளவரசர்களான யுதாமன்யுவும், உத்தமௌஜசும் என் பின்புறத்தைப் பாதுகாக்கட்டும்.(17) ஓ! பெரும் மகிமை கொண்டவரே, பகைவரின் படையில் இருப்பவனும், வீரனும், வெல்லப்பட முடியாத தேர்வீரனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, இன்றைய இந்தப் போரில் காணப்பட்டால், ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ஓ! பாரதரே, விருத்திரனுடன் மோதிய சக்ரனை {இந்திரனைப்} போலவே அவனுடன் {கர்ணனுடன்} நான் போரிடுவேன். வெற்றிக்கான போரில் நானும், சூதன் மகனும் போராடுவதை வந்து பாரும்.(18,19) வலிமைமிக்கக் காளையின் முகத்தை நோக்கி ஓடும் மனிதர்களைப்[3] போல அங்கே அந்தப் பிரபத்ரகர்கள் கர்ணனை நோக்கி விரைகின்றனர். அங்கே, ஓ! பாரதரே, ஆறாயிரம் இளவரசர்கள், சொர்க்கத்திற்காகப் போரில் தங்களைத் தியாகம் செய்கின்றனர்.(20)ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, என் பலத்தை வெளிப்படுத்தி, கர்ணனோடு போரிட்டு, அவனையும், அவனது உறவினர்கள் அனைவரையும் இன்று நான் கொல்லவில்லையெனில், ஓ! மன்னர்களில் சிங்கமே {யுதிஷ்டிரரே}, தான் செய்த உறுதிமொழியை நிறைவேற்றாத ஒருவனுக்கு என்ன முடிவு ஏற்படுமோ, அதே முடிவு என்னையும் அடையட்டும்.(21) போரில் வெற்றி எனதே என எனக்கு ஆசி வழங்குமாறு நான் உம்மை இரந்து கேட்கிறேன். அதோ, தார்தராஷ்டிரர்கள் பீமரை விழுங்கப் போகின்றனர். ஓ! மன்னர்களில் சிங்கமே, சூதன் மகனையும் {கர்ணனையும்}, அவனது துருப்புகளையும், நம் எதிரிகள் அனைவரையும் நான் கொல்வேன்” என்றான் {அர்ஜுனன்}”.(22)

உன் காண்டீவத்திற்கு ஐயோ! – கர்ண பர்வம் பகுதி – 68-கர்ணன் உயிரோடிருப்பதை அறிந்து கோபமடைந்த யுதிஷ்டிரன் அர்ஜுனனை நிந்தித்தது; அர்ஜுனன் பிறந்த போது அசரீரி சொன்னதை நினைவுபடுத்தியது; பீமனைக் கைவிட்டு வந்தமைக்கு அர்ஜுனனை நிந்தித்துக் காண்டீவத்தைக் கிருஷ்ணனிடம் கொடுத்து, அர்ஜுனன் சாரதியாக வேண்டும் என்று சொன்ன யுதிஷ்டிரன்; அர்ஜுனன் கருவிலேயே கலைந்திருக்கலாம் என நிந்தித்த யுதிஷ்டிரன்; அர்ஜுனனின் காண்டீவம், வலிமை, வீரம், தேர் ஆகிவயற்றை நிந்தித்த யுதிஷ்டிரன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அளவிலா சக்தி கொண்டவனும் பிருதையின் மகனுமான அந்த யுதிஷ்டிரன், வலிமையும், சக்தியும் கொண்ட கர்ணன் இன்னும் உயிரோடு இருப்பதைக் கேட்டு, பல்குனனிடம் {அர்ஜுனனிடம்} பெருங்கோபமடைந்தும், கர்ணனின் கணைகளால் எரிந்தும், தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1) “ஓ! ஐயா, உன் படையானது, கௌரவமற்ற வழியில் வீழ்த்தப்பட்டுத் தப்பி ஓடியிருக்கிறது. கர்ணனைக் கொல்ல முடியாததால். அச்சமடைந்து, பீமனைக் கைவிட்டுவிட்டு இங்கே நீ வந்திருக்கிறாய்.(2) குந்தியின் கருவறைக்குள் நுழைந்து, அவளது கருவைத் தோல்வியுறச் செய்திருக்கிறாய். சூதன் மகனை {கர்ணனைக்} கொல்ல இயலாமல், பீமனைக் கைவிட்டு வந்து முறையற்ற செயலைச் செய்திருக்கிறாய்.(3) ஓ! பார்த்தா {அர்ஜுனா}, துவைத வனத்தில் இருக்கும்போது, ஒரே தேரில் சென்று கர்ணனைக் கொல்லப்போவதாக நீ என்னிடம் சொன்னாய். கர்ணன் மீது கொண்ட அச்சத்தால், கர்ணனைத் தவிர்த்து, பீமனைக் கைவிட்டுவிட்டு ஏன் இங்கு வந்தாய்?(4) துவைதவனத்தில், நீ என்னிடம், “ஓ! மன்னா, கர்ணனோடு என்னால் போரிட இயலாது” என்று சொல்லியிருந்தால், ஓ! பார்த்தா , சூழ்நிலைக்குத் தகுந்த வேறு ஏற்பாடுகளை நாங்கள் செய்திருப்போமே.(5)

ஓ! வீரா {அர்ஜுனா}, கர்ணனைக் கொல்வதாக உறுதியளித்துவிட்டு, நீ அந்த உறுதியைக் காத்தாயில்லை. எதிரிகளுக்கு மத்தியில் எங்களைக் கொண்டு வந்து, கடும் மண்ணில் {தரையில்} தூக்கி வீசி எங்களை ஏன் நீ நொறுக்குகிறாய்?(6) ஓ! அர்ஜுனா, நாங்கள் உன்னிடம் இருந்து பல்வேறு நல்ல பொருட்களையும், நன்மைகளையும் எதிர்பார்த்தே உனக்கு எப்போதும் ஆசிகளைச் சொன்னோம். எனினும், ஓ! இளவரசனே, ஒரு மரத்திடம் கனியை எதிர்பார்த்திருந்து, மலர்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றதைப் போல, அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் வீணானவை என்று {இப்போது} மெய்ப்பிக்கப்பட்டன.(7) அரசின் மீது பேராசை கொண்ட நாங்கள், இறுதியில் ஏமாற்றமடையும் வகையில், இறைச்சித் துண்டிற்குள் மறைந்திருக்கும் மீன்-முள்ளை {தூண்டில் முள்ளைப்} போலவோ, உணவில் பூசப்பட்ட நஞ்சைப் போலவோ, {இருப்பவனான} நீ அரசின் வடிவில் அழிவையே சுட்டியிருக்கிறாய்.(8) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, பருவகாலத்தில் தேவர்களால் அனுப்பப்படும் மழையை எதிர்பார்த்துப் பூமியில் நம்பிக்கையுடன் தூவப்படும் விதையைப் போலவே உன்னை நம்பியே இந்தப் பதிமூன்று வருடங்களாக நாங்கள் வாழ்ந்துவிட்டோம்.(9)

ஓ! மூட அறிவைக் கொண்டோனே {அர்ஜுனா}, நீ பிறந்து ஏழு நாட்களில் வானத்தில் இருந்து ஒரு குரல் பிருதையிடம் {குந்தியிடம்}, இந்த வார்த்தைகளையே சொன்னது, “பிறந்திருக்கும் இந்த உனது மகன், வாசவனின் {இந்திரனின்} ஆற்றலைக் கொண்டிருப்பான். தனது வீரப் பகைவர்கள் அனைவரையும் இவன் வெல்வான்.(10) உயர்ந்த சக்தியைக் கொண்ட இவன், காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} ஒன்றாகத் திரண்டிருக்கும் தேவர்கள் அனைவரையும், பல்வேறு உயிரினங்களையும் வெல்வான். மத்ரர்கள், கலிங்கர்கள் மற்றும் கைகேயர்களை இவன் அடக்குவான். பல மன்னர்களுக்கு மத்தியில் வைத்துக் குருக்களை இவன் கொல்வான்.(11) இவனுக்கும் மேன்மையான வில்லாளி எவனும் இருக்க மாட்டான், எந்த உயிரினத்தாலும் இவனை வெல்ல இயலாது. புலன்களைத் தன் கட்டுக்குள்கொண்டு, அறிவின் கிளைகள் அனைத்திலும் திறனைப் பெறும் இவன் விரும்பிவிட்டால், உயிரினங்கள் அனைத்தையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்து விடுவான்.(12) ஓ! குந்தி, உனக்குப் பிறந்திருக்கும் இந்த உயர்ந்த ஆன்மா கொண்டவன், அழகில் சோமனுக்கும், வேகத்தின் காற்றின் தேவனுக்கும் {வாயுவுக்கும்}, பொறுமையில் {உறுதியில்} மேருவுக்கும் {மேரு மலைக்கும்}, மன்னிக்கும் தன்மையில் {பொறுமையில்} பூமிக்கும், காந்தியில் சூரியனுக்கும், செழிப்பில் பொக்கிஷத் தலைவனுக்கும் {குபேரனுக்கும்}, வீரத்தில் சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, வலிமையில் விஷ்ணுவுக்கும் போட்டியாளனாக இருப்பான். அதிதியின் மகனான விஷ்ணுவைப் போலவே இவன் எதிரிகள் அனைவரையும் கொல்வான். அளவிலா சக்தி கொண்ட இவன், தன் எதிரிகளுக்கு ஏற்படுத்தும் அழிவினாலும், நண்பர்களுக்காகப் பெறும் வெற்றியாலும் கொண்டாடப் படுபவனாக இருப்பான். அதையும் தவிர, இவன் ஒரு குலத்தின் நிறுவுனனாக இருப்பான்” {என்றது வானத்தில் இருந்து வந்த அந்தக் குரல்}.(13,14)

சதசிருங்க மலைகளின் சிகரத்தில் தவசிகள் பலர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே வானத்தில் இருந்து அந்தக் குரல் இவ்வாறு பேசியது. எனினும் அவையாவும் கடந்து விட்டன. ஐயோ, தேவர்களும் பொய்மைகளைப் பேசுவார்கள் என்பதையே இது காட்டுகிறது.(15) முனிவர்களில் முதன்மையானோர் பலரால் உன்னைக் குறித்து எப்போதும் புகழ்ச்சியாகச் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்ட நான், வெற்றியையும், செழிப்பையும் சுயோதனன் {துரியோதனன்} அடைவான் என்பதையோ, கர்ணனிடம் நீ அச்சங்கொள்வாய் என்பதையோ எதிர்பார்க்கவில்லை.(16) தெய்வீகத் தச்சனால் {விஸ்வகர்மனால்} கட்டமைக்கப்பட்டதும், கீச்சொலி கேட்காத அச்சுகளைக் கொண்டதும், குரங்கைச் சுமக்கும் கொடிமரத்தைக் கொண்டதுமான சிறந்த தேரில் நீ செல்கிறாய். வாரில் தங்கமும் பட்டும் இணைக்கப்பட்ட வாளை நீ தரித்திருக்கிறாய். இந்த உனது வில்லான காண்டீவம், முழுமையாக ஆறு முழம் நீளம் கொண்டதாகும். மேலும் கேசவனை {கிருஷ்ணனை} நீ சாரதியாகக் கொண்டிருக்கிறாய்.[1] ஓ! பார்த்தா, பிறகு ஏன் நீ கர்ணனிடம் கொண்ட அசத்தால் போரில் இருந்து வெளியே வந்தாய்.(17)ஓ! தீய ஆன்மா கொண்டவனே {அர்ஜுனா}, இந்த வில்லைக் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} கொடுத்துவிட்டு, நீ சாரதியானால், மருத்தர்களின் தலைவன் (சக்ரன் {இந்திரன்}) தன் வஜ்ரத்தால் அசுரன் விருத்திரனைக் கொன்றதைப் போல, கடுமைமிக்கக் கர்ணனைக் கேசவன் (இந்நேரம்) கொன்றிருப்பான்.(18) போரில் திரிபவனும், கடுமையானவனுமான ராதையின் மகனை உன்னால் தடுக்க முடியவில்லையெனில், ஆயுதங்களில் (அவற்றைப் பயன்படுத்துவதிலும், அவற்றின் அறிவிலும்) மேன்மையான வேறு மன்னர் எவருக்கும் இந்த உனது காண்டீவத்தை இன்று கொடுத்துவிடுவாயாக.(19) அது செய்யப்பட்டால், மகன்கள் மற்றும் மனைவியரற்றவர்களாகவும், அரசை இழந்து மகிச்சியற்றவர்களாகவும், அடியாழமற்ற நரகப் பேரிடரில் மூழ்கியவர்களாகவும் உலகம் நம்மைக் காணாது.(20) ஓ! இளவரசனே, போரில் இருந்து இவ்வாறு வெளியேறியதை விட, நீ குந்தியின் கருவறையில் உன் பிறப்பை அடையாமல் இருந்திருக்கலாம், அல்லது, ஓ! பொல்லாத ஆன்மாவே, கருவறையில் ஐந்தாவது மாதத்திலேயே கலைந்திருக்கலாம், அப்படியிருந்தால் அஃது உனக்கு நன்மையானதாக அமைந்திருக்கும்.(21) உன் காண்டீவத்திற்கு ஐயோ, உன் கரங்களின் வலிமைமைக்கு ஐயோ, வற்றாத உன் கணைகளுக்கு ஐயா. உன் கொடியில் இருக்கும் பெருவடிவக் குரங்கிற்கு ஐயோ, நெருப்புத் தேவனால் {அக்னியால்} உனக்கு வழங்கப்பட்ட உன் தேருக்கு ஐயோ” என்றான் {யுதிஷ்டிரன்}”[2].(22)

பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீரும்! – கர்ண பர்வம் பகுதி – 69-தன் சப்தத்தை நினைத்துக் கோபமடைந்த அர்ஜுனன், யுதிஷ்டிரனைக் கொல்வதற்காக வாளை உருவியது; அர்ஜுனனை அதட்டி நிந்தித்த கிருஷ்ணன்; பொய்ம்மையும் வாய்மைக்கு இணையாக ஆகும் சந்தர்ப்பங்களை அர்ஜுனனுக்குச் சுட்டிக் காட்டிய கிருஷ்ணன்; தன் சபதத்துக்குப் பங்கம் நேராதவாறு ஆலோசனைகளைக் கிருஷ்ணனிடம் வேண்டிய அர்ஜுனன்; கிருஷ்ணன் சொன்ன ஆலோசனை.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “யுதிஷ்டிரனால் இப்படிச் சொல்லப்பட்டவனும், வெண்குதிரைகளைக் கொண்டவனுமான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, அந்தப் பாரதக் குலத்தின் காளையை {யுதிஷ்டிரனைக்} கொல்வதற்காகத் தன் வாளை உருவினான்.(1) (மனித) இதயத்தின் செயல்பாடுகளை நன்கறிந்தவனான கேசவன் {கிருஷ்ணன்}, அவனது {அர்ஜுனனின்} கோபத்தைக் கண்டு, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ ஏன் உன் வாளை உருவுகிறாய்?(2) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, நீ போரிடக் கூடிய எவரும் இங்கு இருப்பதாக நான் காணவில்லையே. நுண்ணறிவு கொண்ட பீமசேனரால், இப்போது தார்தராஷ்டிரர்கள் தாக்கப்படுகிறார்களே.(3) ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, மன்னரை {யுதிஷ்டிரரைக்} காண்தற்காகவே நீ போரில் இருந்து {இங்கு} வந்தாய். மன்னரையும் நீ கண்டுவிட்டாய். உண்மையில், யுதிஷ்டிரர் நலமாகவே இருக்கிறார்.(4) புலிக்கு இணையான ஆற்றலுடன் கூடிய இந்த மன்னர்களில் புலியைக் கண்டு நீ மகிழ்ச்சியுற வேண்டிய இந்நேரத்தில் ஏன் இந்த மடமை?(5) ஓ! குந்தியின் மகனே, நீ கொல்லத்தக்க மனிதர் எவரையும் நான் இங்குக் காணவில்லையே. பிறகு ஏன் {யாரை} நீ தாக்க விரும்புகிறாய்? உன் மனத்தில் உள்ள இந்த மாயைதான் யாது?(6) உறுதிமிக்க அந்த வாளை ஏன் இவ்வளவு வேகமாக எடுக்கிறாய்? ஓ! குந்தியின் மகனே, நான் உன்னைக் கேட்கிறேன். ஓ! நினைத்துப் பார்க்க முடியாத ஆற்றலைக் கொண்டவனே, கோபத்துடன் அந்த வாளைப் பிடித்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டான்.(7)

கிருஷ்ணனால் இவ்வாறு கேட்கப்பட்ட அர்ஜுனன், யுதிஷ்டிரனின் மீது தன் கண்களைச் செலுத்தி, கோபக்காரப் பாம்பொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டே கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்},(8) “ எந்த மனிதன் என்னிடம், “உன் காண்டீவத்தை வேறொருவனுக்குக் கொடு” என்று சொல்கிறானோ அவனது தலையை நான் அறுப்பேன். இதுவே என் கமுக்கமான நோன்பாகும் {இரகசிய விரதமாகும்}.(9) ஓ! அளவிலா ஆற்றலைக் கொண்டோனே, ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, உன் முன்னிலையிலேயே அந்த வார்த்தைகள் இந்த மன்னரால் பேசப்பட்டன. அவற்றை மன்னிக்க நான் துணியமாட்டேன்.(10) அறத்திலிருந்து சிறு வீழ்ச்சியை அடைவதற்கும் அஞ்சும் இந்த மன்னரை அதற்காகவே நான் கொல்லப்போகிறேன். இந்த மனிதர்களில் சிறந்தவரைக் {யுதிஷ்டிரரைக்} கொன்று என் நோன்பை நான் காக்கப் போகிறேன்.(11) ஓ! யதுக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனே, அதற்காகவே நான் என் வாளை உருவினேன். யுதிஷ்டிரரைக் கொன்று, உண்மைக்கான {சத்தியத்திற்கான} என் கடனையே நான் செலுத்தப் போகிறேன்.(12) ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அதனால் நான் என் துயரையும், நோயையும் போக்கிக் கொள்வேன். இவ்வாறு எழுந்திருக்கும் சூழ்நிலைக்குத் தகுந்ததாக எதை நீ நினைக்கிறாய் என்றே நான் உன்னைக் கேட்கிறேன்?(13) ஓ! ஐயா, இவ்வண்டத்தின் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் அறிந்தவன் நீயே. நீ எனக்கு என்ன சொல்வாயோ, அதையே நான் செய்யப் போகிறேன்” என்றான் {அர்ஜுனன்}.(14)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது கோவிந்தன் {கிருஷ்ணன்], பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ச்சீ… ச்சீ…” என்று சொல்லி மீண்டும் அவனிடம்,(16) “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, கோபப்படக்கூடாத நேரத்தில் நீ கோபம் கொள்வதால், ஓ! மனிதர்களில் புலியே, பெரியோருக்காக நீ காத்திருந்ததில்லை என்பதை நான் இப்போது அறிகிறேன். ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அறநெறியின் தனிச்சிறப்புகளை அறிந்த எவனும், ஓ! பாண்டுவின் மகனே, அவற்றை அறிந்தவனான நீ இன்று செயல்பட்ட விதத்தில், நடந்து கொள்ள மாட்டான்.(17) ஓ! பார்த்தா, வெளிப்படையாக முறையாகத் தெரிந்தாலும், சாத்திரங்களால் கண்டிக்கப்பட்டவையும், செய்யக்கூடாதவையுமான செயல்களைச் செய்பவன் மனிதர்களில் இழிந்தவனாவான்[1].(18) சீடர்களால் காத்திருக்கப்படும் {பணிசெய்யப்படும்} கல்விமான்கள், அறநெறியின் ஆணைகளைப் பின்பற்றி அறிவித்த தங்கள் கருத்துகளின் தீர்மானங்களை நீ அறிய மாட்டாய்[2].(19) அந்தத் தீர்மானங்களை அறியாத மனிதன், ஓ! பார்த்தா, என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதில் வேற்றுமையை உணர முடியாமல் குழம்பிப் போய்ப் புத்தி மயங்குகிறான்.(20) என்ன செய்யப்பட வேண்டும், என்ன செய்யப்படக்கூடாது என்பதை உறுதி செய்வது எளிதல்ல. சாத்திரங்களின் உதவியாலேயே அனைத்தையும் உறுதி செய்து கொள்ள முடியும். எனினும், நீ சாத்திரங்களை அறியவில்லையே.(21)

சாத்திரங்களை உணர்ந்தவனாக (உன்னை நீ நம்பிக்கொள்வதால்), அறியாமையால் ஏவப்படும் நீ, அறநெறியை (இவ்வாறு) நோற்கவிரும்புகிறாய் (எனத் தெரிகிறது). அறத்தை அறிந்தவனாக உன்னை நீ நம்புகிறாய். ஆனால், ஓ! பார்த்தா, உயிர்வாழும் உயிரினங்களைக் கொல்வது பாவம் என்பதை நீ அறியவில்லை.(22) விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்காமல் தவிர்ப்பது {விலங்குகளிடம் அஹிம்சையே} உயர்ந்த அறம் என நான் நினைக்கிறேன். ஒருவன் பொய்ம்மையும் பேசலாம், ஆனால் ஒருபோதும் கொலை செய்யக் கூடாது.(23) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பிறகு ஒரு சாதாரண மனிதனைப் போல, நீ எப்படி அறநெறியறிந்தவரும், மன்னருமான உன் அண்ணனைக் கொல்ல விரும்பலாம்?(24) போரில் ஈடுபடாத ஒரு மனிதனையோ, ஓர் எதிரியையோ, போரில் புறமுதுகிடுபவனையோ, தப்பி ஓடுபவனையோ, பாதுகாப்பை வேண்டுபவனையோ, கரங்கூப்பியவனையோ, சரணடைந்தவனையோ, தேரற்றவனையோ கொல்வதை நேர்மையாளர்கள் ஒரு போதும் மெச்சுவதில்லை. இந்தத் தன்மைகள் அனைத்தும் உனக்கு மூத்தவரிடம் {யுதிஷ்டிரரிடம்} இருக்கின்றன[3].(25,26)

சாத்திரங்களை உணர்ந்தவனாக (உன்னை நீ நம்பிக்கொள்வதால்), அறியாமையால் ஏவப்படும் நீ, அறநெறியை (இவ்வாறு) நோற்கவிரும்புகிறாய் (எனத் தெரிகிறது). அறத்தை அறிந்தவனாக உன்னை நீ நம்புகிறாய். ஆனால், ஓ! பார்த்தா, உயிர்வாழும் உயிரினங்களைக் கொல்வது பாவம் என்பதை நீ அறியவில்லை.(22) விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்காமல் தவிர்ப்பது {விலங்குகளிடம் அஹிம்சையே} உயர்ந்த அறம் என நான் நினைக்கிறேன். ஒருவன் பொய்ம்மையும் பேசலாம், ஆனால் ஒருபோதும் கொலை செய்யக் கூடாது.(23) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பிறகு ஒரு சாதாரண மனிதனைப் போல, நீ எப்படி அறநெறியறிந்தவரும், மன்னருமான உன் அண்ணனைக் கொல்ல விரும்பலாம்?(24) போரில் ஈடுபடாத ஒரு மனிதனையோ, ஓர் எதிரியையோ, போரில் புறமுதுகிடுபவனையோ, தப்பி ஓடுபவனையோ, பாதுகாப்பை வேண்டுபவனையோ, கரங்கூப்பியவனையோ, சரணடைந்தவனையோ, தேரற்றவனையோ கொல்வதை நேர்மையாளர்கள் ஒரு போதும் மெச்சுவதில்லை. இந்தத் தன்மைகள் அனைத்தும் உனக்கு மூத்தவரிடம் {யுதிஷ்டிரரிடம்} இருக்கின்றன[3].(25,26)

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, முன்பே இந்த நோன்பு மடமையின் காரணமாக {குழந்தைத்தனமாக} உன்னால் பின்பற்றப்பட்டது. அந்நோன்பின் விளைவாகவும், மடமையினாலும், பாவம் நிறைந்த இந்தச் செயலை நீ செய்யத் துணிகிறாய்.(27) புரிந்து கொள்ளக் கடினமானதும், மிக நுட்பமானதுமான அறநெறியின் பாதையைத் தீர்மானிக்காமல், மதிப்பிற்குரிய உன் மூத்தவரை நோக்கி நீ ஏன் விரைகிறாய்?(28) ஓ! பாண்டுவின் மகனே, பீஷ்மராலும், நீதிமானான யுதிஷ்டிரராலும், க்ஷத்ரி என்று வேறு பெயரிலும் அழைக்கப்பட்ட விதுரராலும், பெரும்புகழைப் பெற்ற குந்தியினாலும் அறிவிக்கப்பட்டதும், அறநெறியுடன் தொடர்புடையதுமான இந்தப் புதிரை {தர்மரகசியத்தை} நான் இப்போது உனக்குச் சொல்கிறேன்[4]. நான் அந்தப் புதிர் குறித்த அனைத்து விவரங்களையும் உனக்குச் சொல்கிறேன். ஓ! தனஞ்சயா, கேட்பாயாக.(29,30)உண்மையை {சத்தியத்தை} உரைப்பவன் நேர்மையாளன். உண்மையைத் தவிர உயர்வானது ஏதுமில்லை. எனினும், உள்ளபடியே உண்மையானது, அதன் முக்கிய இயல்புகளைப் பொறுத்தவரை புரிந்து கொள்ள மிகக் கடினமானதாகும் என்பதைக் காண்பாயாக.(31) பொய்ம்மையே உண்மையாகவும், உண்மையே பொய்ம்மையாகவும் உள்ள இடத்தில், உண்மையும் சொல்லக்கூடாததாகலாம்; பொய்ம்மையும் சொல்லக்கூடியதாகலாம்[5].(32) ஆபத்தான வாழ்வுச் சூழலிலும், திருமணத்திலும் பொய்ம்மை சொல்லத்தக்கதாகிறது. ஒருவன் தன் சொத்துகள் அனைத்தையும் இழக்கக்கூடிய சூழ்நிலையிலும் பொய்ம்மை சொல்லத்தக்கதாகிறது.(33) திருமணத்தின் போதோ, பெண்ணுடன் இன்பமாக இருப்பதற்காகவோ, உயிருக்கு ஆபத்து ஏற்படுங்காலத்திலோ, ஒருவனது மொத்த சொத்தும் பறிபோகும் நிலையிலோ, ஒரு பிராமணனுக்காகவோ பொய்ம்மை சொல்லப்படலாம். இந்த ஐவகைப் பொய்மைகள் பாவமற்றவையாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன.(34) இந்தச் சந்தர்ப்பங்களில் பொய்மையே உண்மையாகவும், உண்மையே பொய்மையாகவும் ஆகிறது.(35)

உண்மைக்கும், பொய்மைக்கும் இடையிலான வேறுபாட்டை அறியாமல் உண்மையை {சத்தியத்தைப்} பயில்பவன் மூடனாவான். உண்மைக்கும், பொய்மைக்கும் இடையில் உள்ள வேற்றுமையை உணரக் கூடியவனே அறநெறியை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(36) கண்பார்வை இல்லாத விலங்கைக் கொன்றதால் பலாகன் அடைந்ததைப் போல, ஒரு விவேகியும்கூட ஒரு கொடுஞ்செயலைச் செய்வதன் மூலம் பெரும் தகுதியை {புண்ணியத்தை} அடைவான் என்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?(37) ஆறுகளுக்கு மத்தியில் (வாழும்) கௌசிகன் அடைந்ததைப் போல, அறியாமை கொண்ட மூடனொருவனும் தகுதியை {புண்ணியத்தை} அடையும் விருப்பத்தால், பெரும்பாவத்தையே ஈட்டுவான் என்பதிலும் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?” என்றான் {கிருஷ்ணன்}.(38)

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ புனிதமானவனே, பலாகனைக் குறித்தும், ஆறுகளுக்கு மத்தியில் (வாழும்) கௌசிகனைக் குறித்தும் உள்ள இந்த எடுத்துக்காட்டுகள் அடங்கிய கதையை நான் புரிந்து கொள்ளும் வகையில் எனக்கு உரைப்பாயாக” என்று கேட்டான்.(39)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! பாரதா, விலங்குகளை வேட்டையாடும் குறிப்பிட்ட ஒருவன் {வேடன்}, பலாகன் என்ற பெயரில் இருந்தான். விருப்பத்தினால் அல்லாமல், தன் மகன்கள் மற்றும் மனைவியரின் வாழ்வுக்காக மட்டுமே அவன் விலங்குகளைக் கொன்று வந்தான்.(40) தன் வகைக்குண்டான கடமைகளில் அர்ப்பணிப்போடும், எப்போதும் உண்மை பேசிக் கொண்டும், தீய நோக்கம் ஏதும் இல்லாமலும் இருந்த அவன், தன்னை நம்பியிருந்த தன் பெற்றோரையும், பிறரையும் ஆதரித்து வந்தான்.(41) ஒரு நாள், விடாமுயற்சியுடனும், கவனத்துடனும் விலங்குகளைத் தேடியும், ஒன்றையும் அவனால் காண முடியவில்லை. இறுதியில், கண்களின் குறைக்கு ஈடு செய்யும் வகையில் நுகர்வுணர்ச்சி கொண்ட {மூக்கையே கண்ணாகக் கொண்ட} ஊனுண்ணும் விலங்கு ஒன்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்ததைக் கண்டான்.(42) அதைப்போன்ற விலங்கொன்றை அவன் அதுவரை கண்டதில்லை என்றாலும், அதை உடனே கொன்றான். பார்வையற்ற அந்த விலங்கைக் கொன்றதும், வானத்தில் இருந்து (அந்த வேடனின் தலைமீது) மலர்மாரி பொழிந்தது.(43) அந்த விலங்குகளை வேட்டையாடுபவனை {வேடனைச்} சொர்க்கத்திற்குக் கொண்டு செல்வதற்காக, மிக இனிமையானதும், அப்சரஸ்களின் பாடல்களையும், அவர்களுடைய இசைக்கருவிகளின் இசையையும் எதிரொலித்துக் கொண்டிருந்ததுமான தெய்வீகத் தேர் ஒன்று அங்கே வந்தது.(44) ஊனுண்ணும் அவ்விலங்கு, தவத்துறவுகளை மேற்கொண்டு, உயிரினங்கள் அனைத்தின் அழிவுக்குக் காரணமாக அமைந்த ஒரு வரத்தை அடைந்ததது. அதன் காரணமாகத் தான்தோன்றியால் {பிரம்மனால்} அது குருடாக்கப்பட்டது.(43) உயிரினங்கள் அனைத்தையும் கொல்லத் தீர்மானித்திருந்த அவ்விலங்கைக் கொன்றதால், பலாகன் சொர்க்கத்திற்குச் சென்றான். {எனவே} அறத்தைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானதாகும்.(46)

சாத்திரங்களில் அதிக அறிவற்றவனும், கௌசிகன் என்ற பெயரைக் கொண்டவனுமான தவசி ஒருவன் இருந்தான்[6]. கிராமத்தை விட்டு மிகத் தொலைவில்லாததும், பல ஆறுகள் சந்திக்கும் புள்ளியுமான ஓர் இடத்தில் அவன் வாழ்ந்து வந்தான்.(47) “நான் எப்போதும் உண்மையையே பேசுவேன்” என்று சொல்லி ஒரு சபதத்தை அவன் செய்திருந்தான். ஓ! தனஞ்சயா, பிறகு அவன் உண்மை பேசுபவன் எனக் கொண்டாடப்படலானான்.(48) அந்த நேரத்தில், சில குறிப்பிட்ட மனிதர்கள், கள்வர்கள் மீது கொண்ட அச்சத்தால் (கௌசிகன் வசித்து வந்த) வனத்திற்குள் நுழைந்தனர். சினத்தால் நிறைந்த கள்வர்கள், அவர்களைக் கவனமாகத் தேடியபடியே அங்கே வந்தனர்.(49) உண்மையைப் பேசுபவனான கௌசிகனிடம் வந்த அவர்கள், “ஓ புனிதமானவரே, சற்று முன்னர் எந்தப் பாதையின் வழியாக மக்கள் கூட்டம் சென்றது? உண்மையின் பெயரால் கேட்கும் எங்களுக்குப் பதிலளிப்பீராக. அவர்களை நீர் கண்டிருந்தால், எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டனர்.(50) இவ்வாறு உண்மையின் பெயரில் கேட்கப்பட்ட கௌசிகனும், “மரங்கள், கொடிகள் மற்றும் செடிகள் நிறைந்த இந்த வனத்திற்குள்தான் அம்மனிதர்கள் நுழைந்தனர்” என்று உண்மையை அவர்களிடம் சொன்னான்.(51) இவ்வாறே, ஓ! பார்த்தா, அந்தக் கௌசிகன் அவர்களுக்குத் தகவலை அளித்தான். பிறகு அந்தக் கொடூர மனிதர்கள், தாங்கள் தேடி வந்தவர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் அனைவரையும் கொன்றனர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(52) சிறுமதி கொண்டவனும், அறநெறிகளின் தனித்துவ வேறுபாடுகளை அறியாதவனுமான மூடனொருவன், தன் ஐயங்களுக்கான தீர்வை முதியோரிடம் கேட்காமல் நரகத்தில் வீழ்வதைப் போலவே, அறநெறியின் நுட்பங்களை அறியாத கௌசிகனும், தான் பேசிய வார்த்தைகளில் இருந்த அந்தப் பெரும்பாவத்தின் விளைவால் பயங்கரமான நரகத்தில் வீழ்ந்தான்.(53,54)

பாவத்திலிருந்து அறத்தை வேறுபடுத்திப் பார்க்க சில அறிகுறிகள் இருக்க வேண்டும். உயர்ந்ததும், அடைய முடியாததுமான ஞானத்தை, சிலவேளைகளில் அறிவுப்பயிற்சியின் {பகுத்தறிவின்} மூலம் நாம் அடைக்கூடும்.(55) ஒருபுறம் சாத்திரங்கள் அறத்தைக் குறிக்கின்றன என்று பலர் சொல்கின்றனர். நான் இதில் முரண்படவில்லை. எனினும், சாத்திரங்கள் அனைத்து வழக்குகளிலும் {அறக்குறிப்புகளை} வழங்குவதிலை.(56) உயிரினங்களின் வளர்ச்சிக்காக அறநெறி குறித்த கட்டளைகளே {அவற்றில்} அறிவிக்கப்பட்டிருக்கின்றன.(57) தீங்கிழையாமை {அஹிம்சை} அறநெறியுடன் தொடர்புடையது என்பது உறுதியானதே. அறநெறி குறித்த கட்டளைகள் {சாத்திரங்கள்} உயிரினங்களைத் தீங்கிழையாதனவாக மாற்றவே உண்டாக்கப்பட்டன.(58) அந்த அறநெறியானது அனைவராலும் தூக்கி நிறுத்தப்படுவதனாலேயே {உயர்த்தப்படுவதனாலேயே} அது தர்மம் {அறம்} என்று அழைக்கப்படுகிறது[7]. உண்மையில், அறநெறியே உயிரினங்களைத் தூக்கிநிறுத்துகிறது {உயர்த்துகிறது}. எனவே, (உயிரினங்களைத்) தூக்கி நிறுத்தவதற்காகக் கணிக்கப்படுவதே அறநெறி என்பதில் ஐயமில்லை.(59) சாத்திரங்கள் மௌனமாக {ஒன்றும் சொல்லாமல்} இருக்கும் சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, அறிவின் துணையில்லாத கட்டளைகளின் படி செயல்பட்டு அறத்தை அடையவோ, முக்தியை அடையவோ நம்புவோருடன், எச்சந்தர்ப்பத்திலும் ஒருவன், எத்தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.(60) (சாத்திரங்களோ, ஞானமோ எந்த ஒளியையும் பாய்ச்சாத சூழ்நிலைகளில்), பேசும் தேவை ஏற்படும்போது, ஒருவன் அமைதியுடன் இருக்க வேண்டும், அல்லது, அந்த அமைதியானது (தனக்கோ, பிறருக்கோ) ஆபத்தை உண்டாக்குமானால், பொய்ம்மை பேசுவதே சிறப்பானதாகும். உண்மையில், அந்தப் பொய்ம்மையே உண்மையாகும் {சத்தியமாகும்}.(61) குறிப்பிட்ட காரியங்களை நோக்கமாகக் கொண்டு, ஒரு சபதத்தைச் செய்த ஒருவன், அவற்றை {அக்காரியங்களைத்} தன் செயல்களால் காக்கவில்லையென்றால், அந்தச் சபதத்தின் கனியை அவன் அடைவானில்லை[8].(62) உயிருக்கு ஆபத்து நேரும் சந்தர்ப்பங்களிலோ, திருமணத்தின்போதோ, ஒருவனுடைய உறவினர்கள், சொந்தங்கள் ஆகியோர் மொத்தமாக அழிவடைய நேரும் என்ற அபாயம் இருக்கும்போதோ, கேலிக்காகவோ சொல்லப்படுவது பொய்மையாகக் கருதப்படமாட்டாது.(63)

அறநெறியின் உண்மைகளை அறிந்தோர் இவற்றில் பாவத்தைக் காணமாட்டார்கள். {போலியான} ஓர் உறுதிமொழியால், திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் தோழமையில் இருந்து ஒருவன் தப்பிக்கூடும் என்றால், அந்தப் பொய்மையானது ஐயமில்லாத உண்மையே என்பதால், அங்கே போலியாக உறதியளிப்பதே சிறந்ததாகும். தன் செல்வங்கள் கள்வர்களிடம் பறிபோவதை ஒருவனால் எவ்வழியிலாவது தவிர்க்க முடியுமென்றால், அதை {அந்தச் செல்வங்களை} அவன் அவர்களுக்கு {கள்வர்களுக்கு} ஒருபோதும் கொடுக்கக்கூடாது.(64,65) ஒருவனுடைய செல்வத்தைப் பாவிகளுக்குத் தானமளிப்பது, அந்தக் கொடையாளியையே பீடிக்கும் {துன்புறுத்தும்}. எனவே, நீதிக்காகப் பொய்மை பேசுவது பொய்மையாகாது.(66) அறநெறியையோ, அல்லதையோ உறுதி செய்து கொள்ளக்கூடிய குறிப்புகளை நான் உனக்கு முறையாக இப்போது அறிவித்துவிட்டேன். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இவை யாவற்றையும் கேட்ட பிறகு, யுதிஷ்டிரர் உன்னால் கொல்லத்தக்கவரா என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(67)

அர்ஜுனன், “ஓ! கிருஷ்ணா, பெரும் ஞானத்தையும், பெரும் நுண்ணறிவையும் கொண்டவனாக நீ இருக்கிறாய். எங்கள் நன்மைக்காக நீ சொன்னது ஐயமற உண்மையே.(68) நீ எங்களுக்குத் தாயும், தந்தையும் போன்றவனாவாய். ஓ! கிருஷ்ணா, நீயே எங்களுக்குப் பெரும் புகலிடம். அதன் காரணமாகவே நீ எங்களுக்குச் சிறந்த ஆலோசனைகளை வழங்குகிறாய்.(69) ஓ! கிருஷ்ணா, மூவுலகிலும் நீ அறியாதன ஏதுமில்லை. எனவே, உயர்ந்த அறநெறியையும், அதன் விவரங்களையும் நீ அறிந்திருக்கிறாய்.(70) நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் என்னால் கொல்லப்படத்தக்கவர் இல்லை என்றே நான் உறுதியாகக் கருதுகிறேன். எனினும், இதில், தற்போதைய என்னுடைய காரியத்தில் நான் என்ன செய்யலாம் என்பதை அருள்கூர்ந்து எனக்குச் சொல்வாயாக. நான் இப்போது அறிவிக்கப் போவதும், என் இதயத்தில் இருப்பதுமான மற்றொன்றையும் இப்போது கேட்பாயாக.(71) ஓ! தாசார்ஹ குலத்தோனே, என் நோன்பு என்ன என்பதை நீ அறிவாய். “ஓ! பார்த்தா, ஆயுதங்களிலும், சக்தியிலும் உன்னிலும் மேம்பட்ட ஒருவனுக்கு உன் காண்டீவத்தைக் கொடுப்பாயாக” என்ற இவ்வார்த்தைகளை எவன் என்னிடம் சொல்வானோ, அவனை என் வலிமையை வெளிப்படுத்தி நான் கொல்வேன். பீமர், தன்னை “தாடியற்றவனே”[9] என்று அழைப்பவனைக் கொல்வதைப்போலவே நானும் கொல்வேன். ஓ! வீரா, மன்னர், “உன் வில்லைக் கொடுப்பாயாக” என்ற அந்தச் சொற்களை உன் முன்னிலையிலேயே என்னிடம் மீண்டும் மீண்டும் சொன்னார்.(72,73) ஓ! கேசவா, நான் அவரைக் கொன்றால், ஒரு கணமும் என்னால் இவ்வுலகில் வாழ முடியாது. மடமையினாலும், மனநிலையை இழந்ததாலும், மன்னரைக் கொல்ல எண்ணி நான் பாவமிழைத்துவிட்டேன்.(74) ஓ! நீதிமான்கள் அனைவரிலும் முதன்மையானவனே, உலகமனைத்திலும் அறியப்பட்ட என் நோன்பு மெய்ப்பிக்கப்படும் அதேவேளையில் நானும், பாண்டுவின் மூத்த மகனும் {யுதிஷ்டிரரும்} உயிரோடு இருக்கத்தக்க ஆலோசனையை நீ எனக்கு வழங்குவாயாக” என்று கேட்டான் {அர்ஜுனன்}.(75)

வாசுதேவன் {அர்ஜுனனிடம்}, “மன்னர் {யுதிஷ்டிரர்} களைப்படைந்து, துயரத்தின் ஆளுகைக்குள் இருக்கிறார். அவர் போரில் கர்ணனின் எண்ணற்ற கணைகளால் சிதைக்கப்பட்டிருக்கிறார். ஓ! வீரா {அர்ஜுனா}, போரில் பின்வாங்கி வரும்போது, சூதன் மகனால் (அவனது {கர்ணனின்} கணைகளால்) அவர் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டார்.(76) இதன் காரணமாகத் துயரத்தில் இருந்த அவர் {யுதிஷ்டிரர்}, கோபத்தால் முறையற்ற அந்த வார்த்தைகளை உன்னிடம் பேசிவிட்டார். போரில் கர்ணனை நீ கொல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வார்த்தைகளால் உன்னைத் தூண்டிவிட்டார்.(77) அந்தப் பொல்லாத கர்ணன், (உன்னைத் தவிர) இவ்வுலகில் உள்ள வேறு எவராலும் தாங்கிக் கொள்ளப்பட முடியாதவன் என்பதைப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரர்} அறிவார். இதன் காரணமாகவே, ஓ! பார்த்தா, பெருங்கோபத்தில் இருந்த மன்னர் உன் முகத்துக்கு நேராகக் கடும் வார்த்தைகளைப் பேசினார்.(78) இன்றைய போர் விளையாட்டில், எப்போதும் விழிப்புடன் இருப்பவனும், எப்போதும் தாங்கிக் கொள்ளப்பட முடியாதவனுமான கர்ணனே பந்தயப் பொருளாவான். அந்தக் கர்ணன் கொல்லப்பட்டால், கௌரவர்கள் நிச்சயம் வீழ்ச்சியடைவார்கள். இதையே தர்மனின் அரச மகனும் {யுதிஷ்டிரரும்} நினைத்தார்.(79) இதற்காகவே தர்மனின் மகன் மரணத்திற்குத் தகுந்தவராகிவிட மாட்டார். ஓ! அர்ஜுனா, உன் நோன்பும் காக்கப்பட வேண்டும். யுதிஷ்டிரர் உயிரை இழக்காமலும், இருப்பினும் மரணத்தையே அடைந்தவராகவும் ஆக உனக்கு ஏற்புடைய வகையில் நான் சொல்லும் ஆலோசனைகளை இப்போது கேட்பாயாக.(80)

மரியாதைக்குத் தகுந்த ஒருவர், அந்த மரியாதையைத் தொடர்ந்து அடையும் வரை மனிதர்களின் உலகில் அவர் வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. எனினும், அத்தகு மனிதர் ஒருவர் அவமதிப்பை அடையும்போது, அவர் உயிரோடு இருந்தாலும் இறந்தவராகவே சொல்லப்படுகிறார்.(81) இந்த மன்னர் {யுதிஷ்டிரர்}, உன்னாலும், பீமராலும், இரட்டையர்களாலும் {நகுலன் மற்றும் சகாதேவனாலும்}, வீரர்கள் அனைவராலும், இவ்வுலகில் பலகாலமாக மதிக்கப்படுவோர் அனைவராலும் எப்போதும் மதிக்கப்பட்டே வருகிறார்.(82) எனவே, ஓ! பார்த்தா, “மதிப்புக்குரியவரே” என்று வழக்கமாக உன்னால் அழைக்கப்படும் இந்த யுதிஷ்டிரரை இப்போது “நீ” என்று அழைப்பாயாக. ஓ! பாரதா, “நீ” என்று அழைக்கப்படும் மேன்மையான ஒருவர், உயிரை இழக்கவில்லையென்றாலும் கொல்லப்பட்டவரே ஆவார்.(83) ஓ! குந்தியின் மகனே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரிடம் நீ இவ்வாறு நடந்து கொள்வாயாக. ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, கண்டிக்கத்தக்க இந்நடத்தையைப் பின்பற்றுவாயாக.(84) திறன்தேர்வுகள்[10] அனைத்திலும் சிறந்த இந்தத் திறன்தேர்வை {சுருதியை} அதர்வன் மற்றும் அங்கிரஸ் ஆகியோர் அறிவித்திருக்கின்றனர். நன்மையை விரும்பும் மனிதர்கள், எந்தவகையான ஐயுணர்வுமின்றி இவ்வழியில் நடக்க வேண்டும்.(85)

மேன்மையான ஒருவர், உயிரையிழக்காமல் இருந்தாலும், “நீ” என்று அழைக்கப்பட்ட அந்த மதிப்புக்குரியவன் கொல்லப்பட்டவனே ஆவான் என்று சொல்லப்படுகிறது. கடமையை அறிந்தவனான நீ, நான் குறிப்பிட்ட முறையில் நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரிடம் பேசுவாயாக.(86) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உன் கையால் நேரும் இந்த மரணத்தை, உன்னால் இழைக்கப்பட்ட குற்றமாக ஒருபோதும் மன்னர் யுதிஷ்டிரர் நினைக்கமாட்டார். இவ்வழியில் அவரிடம் பேசும் நீ, பிறகு அவரது பாதங்களை வழிபட்டு, இந்தப் பிருதையின் மகனிடம் {யுதிஷ்டிரரிடம்} மதிப்புமிக்க வார்த்தைகளைப் பேசி காயமடைந்த அவரது மரியாதைக்கு ஆறுதலளிப்பாயாக.(87) உன் அண்ணன் விவேகியாவார். எனவே, பாண்டுவின் அந்த அரசமகன் {யுதிஷ்டிரர்} உன்னிடம் ஒருபோதும் கோபப்படமாட்டார். பொய்ம்மையிலிருந்தும், உடன்பிறந்தவரைக் கொல்வதிலிருந்தும் விடுபடும் நீ, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பிறகு உற்சாகமாகச் சூதன் மகனான கர்ணனைக் கொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(88)

கிருஷ்ணா, துன்பக்கடலில் நீயே படகாவாய்! – கர்ண பர்வம் பகுதி – 70-கிருஷ்ணனுடைய ஆலோசனையின் பேரில் யுதிஷ்டிரனை ஒருமையில் பேசி அவமதித்த அர்ஜுனன்; பீமனைப் புகழ்ந்து, யுதிஷ்டிரனைச் சூதுக்கு அடிமை என நிந்தித்த அர்ஜுனன்; அண்ணனை அவமதித்த குற்ற உணர்வால் தற்கொலை செய்து கொள்ள வாளை உருவிய அர்ஜுனன்; அர்ஜுனனைத் தடுத்த கிருஷ்ணன், தற்புகழ்ச்சி தற்கொலைக்குச் சமமானது என்று சொன்னது; தற்புகழ்ச்சி செய்த அர்ஜுனன்; யுதிஷ்டிரனிடம் மன்னிப்பு கோரிய அர்ஜுனன்; மனம் நொந்து தன்னையே நிந்தித்துக் கொண்ட யுதிஷ்டிரன், காட்டுக்குச் செல்லப்போவதாகச் சொன்னது; யுதிஷ்டிரனுக்கு உண்மையைச் சொன்ன கிருஷ்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இவ்வாறு ஜனார்த்தனனால் {கிருஷ்ணனால்} சொல்லப்பட்ட பிருதையின் மகனான அர்ஜுனன், தன் நண்பனின் அவ்வாலோசனைகளைப் பாராட்டி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம், முன்னெப்போதும் பயன்படுத்தாத கடும் மொழியில் பேசினான்.(1)

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, போர்க்களத்தில் இருந்து முழுமையாக இரண்டு மைல் தொலைவில்[1] நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் நீ என்னை இவ்வாறு நிந்தியாதே. எனினும், உலகின் முதன்மையான வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் பீமன் என்னை நிந்திக்கலாம்.(2) போரில் சரியான நேரத்தில் தன் எதிரிகளைப் பீடித்து, பூமியின் துணிச்சல்மிக்கத் தலைவர்கள் பலரையும், முதன்மையான தேர்வீரர்களையும், பெரும் யானைகளையும், குதிரைவீரர்கள் பலரையும், எண்ணற்ற துணிச்சல்மிக்கப் போராளிகளையும் கொன்ற அவர் {பீமர்},(3) அதற்கும் மேலாக ஆயிரம் யானைகளையும், பத்தாயிரம் காம்போஜ மலைவாசிகளையும் கொன்று, எண்ணற்ற சிறு விலங்குகளைக் கொன்ற சிங்கத்தைப் போலப் போரில் சிங்க முழக்கம் செய்து கொண்டிருக்கிறார்.(4) அந்த வீரர், உன்னால் அடையவே முடியாத அடைதற்கரிய கடும் அருஞ்செயல்களைச் செய்திருக்கிறார். கையில் கதாயுதத்துடன், தன் தேரிலிருந்து கீழே குதித்து, போரில் பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளை அவர் அழித்திருக்கிறார்.(5) தன் முதன்மையான வாளைக் கொண்டும் அவர், பல குதிரைவீரர்கள், தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளை அழித்திருக்கிறார். தேர்களின் உடைந்த உறுப்புகளையும், தன் வில்லையும் கொண்டு அவர் எதிரிகளை எரித்து வருகிறார். இந்திரனின் ஆற்றலோடு கூடிய அவர், தன் காலாலும், வெறும் கரங்களாலும் எண்ணற்ற எதிரிகளைக் கொன்று வருகிறார்.(6)பெரும் வலிமையைக் கொண்டவரும், குபேரன், அல்லது யமனுக்கு ஒப்பானவருமான அவர் {பீமர்}, தன் பலத்தை வெளிப்படுத்தி, பகைவரின் படையை அழித்து வருகிறார். அந்தப் பீமசேனருக்கு என்னை நிந்திக்க உரிமையுண்டு, ஆனால் எப்போதும் நண்பர்களால் பாதுகாக்கப்படும் உனக்குக் {உரிமை} கிடையாது.(7) முதன்மையான தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரைக் கலங்கடிக்கும் பீமர், இப்போதும் தார்தராஷ்டிரர்களுக்கு மத்தியில் தனியொருவராகவே இருக்கிறார். அந்த எதிரிகளைத் தண்டிப்பவருக்கு என்னை நிந்திக்கும் உரிமையுண்டு.(8) இப்போது கலிங்கர்கள், வங்கர்கள், அங்கர்கள், நிஷாதர்கள், மகதர்கள், எப்போதும் மதங்கொண்டவையாக, நீலமேகத் திரள்களைப் போன்றவையாக இருக்கும் பகைவரின் பெரும் எண்ணிக்கையிலான யானைகளையும் கொன்று வரும் அந்த எதிரிகளைத் தண்டிப்பவர் {பீமர்} என்னை நிந்திக்கத் தகுந்தவர்.(9) தகுந்த தேரில் சென்று, சரியான நேரத்தில் தன் வில்லை அசைத்து, தன் (மற்றொரு) கரத்தில் கணைகளைக் கொண்டிருக்கும் அந்த வீரர், மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலப் பெரும்போரில் கணைமாரியைப் பொழிந்து வருகிறார்.(10) இன்றைய போரில் மத்தகங்கள் பிளக்கப்பட்டு, தந்த முனைகள் வெட்டப்பட்ட எண்ணூறு யானைகள், பீமரின் கணைகளால் கொல்லப்படுவதை நான் கண்டேன். அந்த எதிரிகளைக் கொல்பவர் என்னிடம் கடுஞ்சொற்களைப் பேசத் தகுந்தவரே[2].(11)

முதன்மையான பிராமணரின் பலம் பேச்சில் இருக்கிறது, க்ஷத்திரியனின் பலம் அவனது கரங்களில் இருக்கிறது. ஓ! பாரதா, நீ சொற்களில் பலமானவனாகவும், வன்னெஞ்சம் கொண்டவனாகவும் இருக்கிறாய். நீ உன்னைப் போலவே என்னையும் நினைத்துக் கொள்கிறாய்.(12) நான் என் ஆன்மாவாலும், வாழ்வாலும், மகன்களாலும், மனைவியராலும் உனக்கு எப்போதும் நன்மையையே செய்கிறேன். இவையாவும் இருந்தபோதிலும், நீ இத்தகு வார்த்தை ஈட்டிகளால் இன்னும் என்னைத் துளைப்பதால், நாங்கள் உன்னிடம் இருந்து எந்த இன்பத்தையும் எதிர்பார்க்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.(13) திரௌபதியின் படுக்கையில் கிடக்கும் நீ, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் உன் நிமித்தம் நான் கொன்று கொண்டிருந்தாலும் என்னை அவமதிக்கவே செய்கிறாய். ஓ! பாரதா, எந்தக் கவலையற்றவனாகவும், கொடூரனாகவும் நீ இருக்கிறாய். நான் உன்னிடம் இருந்து எந்த மகிழ்ச்சியையும் எப்போதும் அடைந்ததில்லை.(14) ஓ! மனிதர்களின் தலைவா, உண்மைக்கு உறுதியான அர்ப்பணிப்போடு இருந்த அந்தப் பீஷ்மர், உனக்கு நன்மை செய்வதற்காகவே போரில் தன் மரணத்திற்கான வழிகளை உன்னிடம் சொல்லி, வீரனும், உயர்ஆன்மா கொண்டவனும், துருபதன் மகனும், என்னால் பாதுகாகப்பட்டவனுமான சிகண்டியால் கொல்லப்பட்டார்.(15)

சூதாடும் தீய பழக்கத்திற்கு நீ அடிமையாக இருப்பதால், அரசுரிமையை மீட்கும் உமது நினைப்பு எனக்கு எந்த இன்பத்தையும் அளிக்கவில்லை. இழிந்தோர் மட்டுமே அடிமையாகும் தீய செயலைச் செய்த நீ, இப்போது எங்கள் உதவியால் உன் எதிரிகளை வெல்ல விரும்புகிறாய்.(16) பகடையின் எண்ணற்ற களங்கங்களையும், பெரும் பாவம் நிறைந்த தன்மையையும் நீ சகாதேவன் சொல்லக் கேட்டாய். எனினும், தீயோரால் வழிபடப்படும் பகடையை உன்னால் கைவிட முடியவில்லை. இதன் காரணமாகவே நாங்கள் அனைவரும் நரகத்திற்குள் வீழ்ந்தோம்.(17) நீ பகடையில் சூதாடிக் கொண்டிருந்ததால் நாங்கள் எந்த மகிழ்ச்சியையும் எப்போதும் அடைந்ததில்லை. ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, நீயே இந்தப் பேரிடர் அனைத்தையும் உண்டாக்கிவிட்டு, என்னிடம் சுடுஞ்சொற்களால் பேசுகிறாய்.(18) எங்களால் கொல்லப்பட்ட பகைவரின் துருப்பினர், உடல்கள் சிதைக்கப்பட்டு, உரத்த ஓலங்களையிட்டபடியே களத்தில் கிடக்கின்றனர். நீ செய்த அந்தக் கொடுஞ்செயலாலேயே கௌரவர்கள் குற்றவாளிகளாகி அழிக்கப்பட்டு வருகின்றனர்.(19) இருதரப்பைச் சேர்ந்த பெரும் போர்வீரர்களாலும் போரில் ஒப்பற்ற அருஞ்செயல்கள் செய்யப்பட்ட பிறகு, வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு நாட்டினர், தாக்கப்பட்டு, காயடையச் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு வருகின்றனர்.(20) நீயே சூதாடினாய். உன்னாலேயே நாங்கள் எங்கள் அரசை இழந்தோம். ஓ! மன்னா, எங்களது பேரில் உன்னிடமிருந்தே எழுந்தது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உனது பேச்செனும் கொடூர அங்குசத்தால் மீண்டும் தாக்கி எங்கள் கோபத்தைத் தூண்டாதே” என்றான் {அர்ஜுனன்}”.(21)

சஞ்சயன் சொன்னான், “தன் அண்ணனிடம் இந்தக் கடுமையான, மிகக் கசப்பான வார்த்தைகளைப் பேசி, அதனால் ஒரு சிறு பாவத்தை இழைத்த பிறகு, நுண்ணறிவு, விவேகம் மற்றும் அமைதியைக் கொண்டவனும், அறத்திலிருந்து வீழ்வது குறித்த அச்சத்தோடு எப்போதும் செயல்படுபவனுமான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, மிகவும் உற்சாகத்தை இழந்து போனான்.(22) தேவர்கள் தலைவனின் மகன் {அர்ஜுனன்}, பின்னிரக்கத்தால் நிறைந்து, கடுமூச்சு விட்டுக் கொண்டே தன் வாளை உருவினான். இதைக் கண்ட கிருஷ்ணன், “இஃது என்ன? வானத்தைப் போல நீலமாக இருக்கும் உன் வாளையே ஏன் மீண்டும் உறையில் இருந்து உருவுகிறாய்?(23) உன் நோக்கம் நிறைவேற ஆலோசனை வழங்குவதற்காக உன் பதில் என்ன என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான் கிருஷ்ணன்.

அந்த முதன்மையான மனிதனால் {கிருஷ்ணனால்} இவ்வாறு சொல்லப்பட்ட அர்ஜுனன், கேசவனிடம் பெரும் சோகத்துடன்,(24) “இந்தத் தீய செயலைச் செய்த நான், என் பலத்தை வெளிப்படுத்தி என்னையே கொல்ல {தற்கொலை செய்து கொள்ளப்} போகிறேன்” என்றான்.

பார்த்தனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், நீதிமான்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான கேசவன், தனஞ்சயனிடம் இதைச் சொன்னான்,(25) “மன்னரிடம் {யுதிஷ்டிரரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு நீ ஏன் இவ்வளவு மகிழ்ச்சியற்றவனாக இருக்கிறாய்? ஓ! எதிரிகளைக் கொல்பவனே, நீ இப்போது உன்னையே அழித்துக் கொள்ள விரும்புகிறாய். எனினும், ஓ! கிரீடி {ஆர்ஜுனா}, நீதிமான்களால் இஃது அங்கீகரிக்கப்படவில்லை.(26) ஓ! மனிதர்களில் வீரா, பாவத்தின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக நீ இன்று அற ஆன்மா கொண்ட இந்த உன் அண்ணனைக் கொன்றிருந்தால், அப்போது உன் நிலை எவ்வாறு இருந்திருக்கும், அப்போது நீ என்ன செய்திருப்பாய்?(27) ஓ! பாரதா, அறநெறியானது நுட்பமானதும், அறிந்து கொள்ள முடியாததுமாகும், குறிப்பாக அறியாமை கொண்டோரால் அறிந்து கொள்ள முடியாது. நான் உனக்குப் போதிப்பதைக் கேட்பாயாக. உன்னையே நீ அழித்துக் கொள்வதால், நீ உன் அண்ணனைக் கொன்றிருந்தால் அடையும் நரகத்தைவிட படுபயங்கரமான நரகத்தில் மூழ்கிப் போவாய்.(28) உன் சொந்த தகுதிகளை உன் சொற்களாலேயே இப்போது அறிவிப்பாயாக. ஓ! பார்த்தா, அப்போது நீ உன்னையே கொன்றிருப்பாய்” என்றான் {கிருஷ்ணன்}.(29)

இவ்வார்த்தைகளைப் பாராட்டி, “ஓ! கிருஷ்ணா, அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன சக்ரனின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் வில்லைத் தாழ்த்தி, அறவோரில் முதன்மையான யுதிஷ்டிரனிடம், “ஓ! மன்னா, கேட்பீராக.(30) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, பினாகையைத் தாங்கும் தெய்வத்தைத் தவிர, என்னைப் போன்ற வேறொரு வில்லாளி எவனும் கிடையாது. அந்தச் சிறப்புமிக்க தெய்வத்தாலேயே கூட நான் மதிக்கப்படுகிறேன். அசையும் மற்றும் அசையா உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டத்தையே என்னால் ஒரு கணத்தில் அழித்துவிட முடியும்.(31) ஓ! மன்னா, திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும், அவற்றில் ஆண்டுகொண்டிருந்த மன்னர்கள் அனைவரையும் வெற்றிக் கொண்டு, அவர்கள் அனைவரையும் உமது கட்டுக்குள் கொண்டுவந்தவன் நானே. (உம்மால் செய்யப்பட்ட) ராஜசூயம், தக்ஷிணையால் நிறைவடைந்ததும், உமக்குச் சொந்தமான தெய்வீகமான அரண்மனையும் என் ஆற்றலால் கொண்டு வரப்பட்டன.(32) என் கரங்களில் கூரிய கணைகளும், நாணேற்றப்பட்டுக் கணைபொருத்தப்பட்ட வில்லும் (அவற்றினால் உண்டான தழும்புகளும்) இருக்கின்றன. என் உள்ளங்கால் இரண்டிலும் கொடிகளுடன் கூடிய தேர்களின் குறிகள் இருக்கின்றன. என்னப்போன்ற ஒரு மனிதனைப் போரில் எவனாலும் வெல்ல முடியாது.(33)

வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள நாடுகள் என்னால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு, முறியடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டன. சம்சப்தகர்களில் சிறு பகுதி மட்டுமே உயிருடன் எஞ்சியிருக்கிறது. நான் மட்டுமே (பகைவரின்) மொத்த படையில் பாதியைக் கொன்றிருக்கிறேன்.(34) ஓ! மன்னா, தேவர்களின் படைக்கு ஒப்பான பாரதப் படையினர் என்னால் கொல்லப்பட்டு, களத்தில் கிடக்கின்றனர். உயர்ந்த ஆயுதங்களை அறிந்தோரை மட்டுமே நான் (உயர்ந்த) ஆயுதங்களைக் கொண்டு கொல்கிறேன். இதன் காரணமாகவே மூவுலகங்களும் சாம்பலாகாமல் இருக்கின்றன[3].(35) பயங்கரமானதும், வெற்றிகரமானதுமான என் தேரைச் செலுத்திக் கொண்டு, சூதன் மகனைக் {கர்ணனைக்} கொல்வதற்காகக் கிருஷ்ணனும் நானும் விரைவில் செல்லப் போகிறோம்.(36) இன்று அந்தச் சூதப் பெண்மணி {ராதை} மகனற்றவளாவாள், அல்லது கர்ணனால் குந்தி மகனற்றவளாவாள். போரில் என் கணைகளால் கர்ணனைக் கொல்லாமல் நான் என் கவசத்தைக் கழற்ற மாட்டேன் என்று உண்மையாகவே சொல்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.(37)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வெற்றியாளர்களில் முதன்மையான யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன பார்த்தன், “தன் ஆயுதங்களை வீசி எறிந்துவிட்டு, தன் வில்லையும் கீழேவைத்து, வேகமாகத் தன் வாளை உறைக்குள் செலுத்தினான்.(38) வெட்கத்தால் தலைகுனிந்து நின்றவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், கூப்பிய கரங்களுடன் யுதிஷ்டிரனிடம், “ஓ! மன்னா, என்னை மன்னித்து மகிழ்ச்சியடைவீராக. நான் என்ன சொன்னேன் என்பதைச் சற்று நேரம் கழித்து நீர் புரிந்து கொள்வீர். நான் உம்மை வணங்குகிறேன்” என்றான்.(39) எதிரிகள் அனைவரையும் தாங்கிக் கொள்ள இயன்ற அந்த அரசவீரனை {யுதிஷ்டிரனை} இவ்வாறு உற்சாகப்படுத்த முயன்றவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனன், அங்கேயே நின்று கொண்டு மீண்டும், “இந்தப் பணி தாமதமாகாது. அது விரைவில் நிறைவேற்றப்படும். கர்ணன் என்னை நோக்கி வருகிறான். நானும் அவனை எதிர்த்துச் செல்வேன்.(40) போரில் இருந்து பீமரைக் காக்கவும், சூதன் மகனைக் கொல்லவும் நான் என் முழு ஆன்மாவோடு செல்வேன். உமது நன்மைக்காகவே நான் என் உயிரைத் தாங்கியிருக்கிறேன் என்று நான் உமக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா, இதை உண்மையாக அறிவீராக” என்றான்.(41)

இவ்வாறு சொன்னவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், சுடர்மிக்கக் காந்தியைக் கொண்டவனுமான அர்ஜுனன், மன்னனின் {யுதிஷ்டிரனின்} பாதங்களைத் தொட்டு, களத்திற்குச் செல்ல எழுந்தான்.(42) எனினும், தன் தம்பியான பல்குனனின் {அர்ஜுனனின்} அந்தக் கடும் வார்த்தைகளைக் கேட்டவனும், பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், (தான் அமர்ந்திருந்த) அந்தப் படுக்கையில் இருந்து எழுந்து, இதயம் நிறைந்த சோகத்துடன் பார்த்தனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(43) “ஓ! பார்த்தா, நான் தீயவனாகவே செயல்பட்டிருக்கிறேன். அதனாலேயே நீங்கள் பயங்கரப் பேரிடரில் அகப்பட்டீர்கள். எனவே, இன்று இந்த என் தலையைத் தாக்கி வீழ்த்துவாயாக. நான் மனிதர்களில் இழிந்தவனும், என் குலத்தை அழித்தவனுமாவேன்.(44) நான் இழிந்தவன். நான் தீய வழிகளுக்கு அடிமையாக இருக்கிறேன். மூட புத்தி கொண்டவனாக நான் இருக்கிறேன். நான் சோம்பேறியாகவும், கோழையாகவும் இருக்கிறேன். முதியோரை அவமதிப்பவனாக நான் இருக்கிறேன். நான் கொடூரன். என்னைப் போன்ற ஒரு கொடூரனுக்கு எப்போதும் கீழ்ப்படிந்தவனாக இருப்பதால் உன்னால் என்ன {நன்மையை} ஈட்ட முடியும்?(45) இழிந்தவனான நான், இன்றே காடுகளுக்குள் ஓயச் செல்கிறேன். நானில்லாமல் நீ மகிழ்ச்சியாக வாழ்வாயாக. உயர் ஆன்ம பீமசேனனே மன்னனாக இருப்பதற்குத் தகுந்தவன். பேடியான நான், அரசுரிமையை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன்?(46) கோபத்தால் தூண்டப்பட்ட உனது கடும்பேச்சைத் தாங்கிக் கொள்ள இயலாதவனாக நான் இருக்கிறேன். பீமனே மன்னனாகட்டும். ஓ! வீரா, இவ்வாறு அவமதிக்கப்பட்ட நான் உயிரோடு இருப்பதால் என்ன பயன்?” என்றான் {யுதிஷ்டிரன்}.(47)

இவ்வார்த்தைகளைச் சொன்ன மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்தப் படுக்கையை விட்டு அகன்று, திடீரென எழுந்து, காட்டுக்குச் செல்ல விரும்பினான். அப்போது அவனை வணங்கிய வாசுதேவன் {கிருஷ்ணன்}, அவனிடம்,(48) “ஓ! மன்னா, உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனான காண்டீவதாரி {அர்ஜுனன்}, காண்டீவத்தைக் குறித்துச் செய்திருந்த கொண்டாடப்படும் நோன்பானது நீர் அறிந்ததே.(49) எந்த மனிதன் அவனிடம், “உன் காண்டீவத்தை வேறொருவனுக்குக் கொடுப்பாயாக” என்று சொல்வானோ, அவன் அவனால் கொல்லப்படுவான். அதே வார்த்தைகளைத் தான் நீர் அவனிடம் சொன்னீர்.(50) எனவே, மெய்யுறுதி கொண்ட அந்த நோன்பைக் காப்பதற்காகவே, ஓ! பூமியின் தலைவரே, என்னுடைய ஆலோசனையின் பேரிலேயே பார்த்தன் இந்த அவமதிப்பை உமக்கு அளித்தான். மேன்மையானவர்களை அவமதிப்பது அவர்களின் மரணமே என்று சொல்லப்படுகிறது.(51) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, இதன் காரணமாக, ஓ! மன்னா, உண்மையைக் காக்க என்னாலும், அர்ஜுனனாலும் இழைக்கப்பட்ட இந்த மீறலுக்காக உம்மைப் பணிபவனும், வேண்டிக் கொள்பவனுமான என்னை மன்னிப்பதே உமக்குத் தகும். ஓ! பெரும் மன்னா, நாங்கள் இருவரும் உமது கருணைக்காகப் பணிகிறோம்.(52,53) ராதையின் பொல்லாத மகனுடைய {கர்ணனுடைய} குருதியை இன்று பூமாதேவி குடிக்கப் போகிறாள். நான் உம்மிடம் உண்மையாக உறுதிகூறுகிறேன். சூதன் மகன் {கர்ணன்} இன்று கொல்லப்படுவான் என்பதை அறிவீராக. எவனுடைய கொலையை நீர் விரும்புகிறீரோ அவன் இன்று தன் உயிரை இழப்பான்” என்றான் {கிருஷ்ணன்}.(54)

கிருஷ்ணனின் இந்த வார்த்தகைகளைக் கேட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்த ரிஷிகேசனை {கிருஷ்ணனைப்} பரபரப்புடன் எழுப்பி,(55) தன் கரங்களைக் கூப்பியபடியே அவசரமாக, “நீ சொன்னது போலத்தான் இருக்கிறது. மீறலுக்கான குற்றவுணர்வு என்னிடம் இருக்கிறது.(56) ஓ! கோவிந்தா, நான் இப்போது உன்னால் விழிப்படைந்தேன். ஓ! மாதவா, நான் உன்னால் காக்கப்பட்டேன். ஓ! அச்யுதா, பேரிடரில் இருந்து இன்று நாங்கள் உன்னால் காக்கப்பட்டோம்.(57) உன்னைத் தலைவனாக அடைந்த நானும், அர்ஜுனனும் மடமையால் மலைப்படைந்து {மயங்கி}, துன்பமெனும் பெருங்கடலில் இருந்து மீடக்கப்பட்டோம்.(58) உண்மையில், இன்று உன் நுண்ணறிவு என்ற படகை அடைந்த நாங்கள், எங்கள் உறவினர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் துன்பம் மற்றும் துயரமாகிய பெருங்கடலைக் கடந்துவிட்டோம். ஓ! அச்யுதா, உன்னை அடைந்த நாங்கள் தலைவனற்றவர்களாக ஆக மாட்டோம்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(59)

அர்ஜுனனை வாழ்த்திய யுதிஷ்டிரன்! – கர்ண பர்வம் பகுதி – 71-அர்ஜுனன் உற்சாகமற்றிருப்பதைக் கண்டு அவனைத் தேற்றிய கிருஷ்ணன்; யுதிஷ்டிரனின் பாதம்பணிந்து, மன்னிப்பைக் கோரிய அர்ஜுனன்; நெடுநேரம் அழுத சகோதரர்கள்; கர்ணனைக் கொல்ல அர்ஜுனனைத் தூண்டிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் பாதங்களில் வீழ்ந்து உறுதியேற்ற அர்ஜுனன்; அர்ஜுனனுக்கு ஆசி வழங்குமாறு யுதிஷ்டிரனிடம் சொன்ன கிருஷ்ணன்; அர்ஜுனனை வாழ்த்தி ஆசி வழங்கிய யுதிஷ்டிரன்; கர்ணனை அன்றே கொல்வதாக மீண்டும் உறுதியளித்த அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மன்னன் யுதிஷ்டிரனின் மகிழ்ச்சிகரமான இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், யதுக்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்பவனும், அற ஆன்மா கொண்டவனுமான கோவிந்தன் {கிருஷ்ணன்}, அப்போது பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} பேசினான்.(1) எனினும், கிருஷ்ணனின் {கிருஷ்ணன் பேசும்} அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் {அர்ஜுனன்}, யுதிஷ்டிரனிடம் அவ்வார்த்தைகளைச் சொன்னதால், இழைத்துவிட்ட சிறு பாவத்தைக் கருதி மிகவும் உற்சாகமற்றவனாக இருந்தான்.(2) அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்} சிரித்துக் கொண்டே, அந்தப் பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அறத்தை நோற்று, உன் கூரிய வாளால் தர்மன் மகனை {யுதிஷ்டிரரை} நீ கொன்றிருந்தால், உன் நிலைமை என்னவாக இருக்கும்? மன்னரை “நீ” என்ற மட்டுமே சொன்னதற்குக் கூட, உன் இதயம் உற்சாகத்தை இழந்துவிட்டது.(3,4) ஓ பார்த்தா, நீ மன்னரைக் கொன்றிருந்தால், அதன் பிறகு என்ன செய்திருப்பாய்? அறநெறியை அறிந்து கொள்ள முடியாது {அது கடினம்}, அதிலும் குறிப்பாக மூட அறிவால் அஃது அறியப்படமாட்டாது.(5) பாவம் குறித்த அச்சத்தின் விளைவால், ஐயமில்லாமல், பெரும் துயரத்தையே நீ அடைந்திருப்பாய். உன் அண்ணனைக் கொன்றதன் விளைவால் பயங்கர நரகத்திலும் நீ மூழ்கியிருப்பாய்.(6)

அறச் செயல்பாடு கொண்டவரும், அறம் பயில்வோர் அனைவரிலும் முதன்மையானவரும், குரு குலத்தின் தலைவருமான இந்த மன்னரை {யுதிஷ்டிரரை} இப்போது மனம் நிறையச் செய்வாயாக. என் விருப்பமும் இதுவே.(7) அர்ப்பணிப்பால் மன்னர் யுதிஷ்டிரரை மனம் நிறையச் செய்து, அவர் மகிழ்ச்சியை அடைந்ததும், சூதன் மகனுடன் {கர்ணனுடன்} போரிடுவதற்காக அவனது தேரை எதிர்த்து நாம் இருவரும் செல்வோம்.(8) ஓ1 கௌரவங்களை அளிப்பவனே, இன்று உன் கூரிய கணைகளால் கர்ணனைப் போரில் கொன்று, தர்மன் மகனுக்கு {யுதிஷ்டிரருக்குப்} பெரும் மகிழ்ச்சியை நீ அளிப்பாயாக.(9) ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, இந்த நேரத்திற்குத் தகுந்ததென இதையே நான் நினைக்கிறேன். இதைச் செய்த பிறகே உன் காரியம் நிறைவேறும்” என்றான் {கிருஷ்ணன்}.(10) அப்போது வெட்கத்தை அடைந்த அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் தலையால் மன்னர் யுதிஷ்டிரனின் பாதங்களைத் தொட்டான்.(11) மேலும் அவன் {அர்ஜுனன்} அந்தப் பாரதர்களின் தலைவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “என்னிடம் மனநிறைவு கொள்வீராக. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அறம் நோற்கும் விருப்பத்தாலும், பாவத்திற்கு அஞ்சியும் நான் சொன்ன அனைத்தையும் மன்னிப்பீராக {பொறுப்பீராக}” என்று மீண்டும் மீண்டும் சொன்னான்.(12)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “எதிரிகளைக் கொல்பவனான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, அழுதுகொண்டே தன் பாதத்தில் கிடப்பதைக் கண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பியை எழச் செய்தான்.(13) பூமியின் தலைவனான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பியைப் பாசத்துடன் தழுவிக் கொண்டு, உரக்க அழுதான்.(14) பெரும் காந்தியைக் கொண்ட அந்தச் சகோதரர்கள் இருவரும், நீண்ட நேரம் அழுத பிறகு, ஓ! ஏகாதிபதி, இறுதியாகத் தங்கள் துயரில் இருந்து விடுபட்டு, முன்பு போலவே உற்சாகத்தால் நிறைந்தனர்.(15) அப்போது மீண்டும் பாசத்துடன் தன் தம்பியைத் தழுவிக் கொண்டு, அவனது தலையை முகர்ந்த அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மிகுந்த மன நிறைவை அடைந்து, தன் தம்பியான ஜயனை {அர்ஜுனனைப்} பாராட்டி, “ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, போரில் மிகுந்த கவனத்தோடு நான் முயன்றாலும் கூட, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கர்ணன் தன் கணைகளால் என் கவசம், கொடிமரம், வில், ஈட்டி, குதிரைகள் மற்றும் கணைகள் ஆகியவற்றை வெட்டினான்.(17) ஓ! பல்குனா {அர்ஜுனா}, போரில் அவனது {கர்ணனின்} அருஞ்செயல்களைக் கண்டும், அவற்றை நினைத்தும் துயரத்தால் நான் என் சக்திகளை இழந்தேன்.(18) இன்றைய போரில் நீ அவ்வீரனை {கர்ணனைக்} கொல்லவில்லையென்றால், நான் என் உயிர் மூச்சை விட்டுவிடுவேன். உயிரோடிருப்பதால் என்ன பயன் இருக்கிறது?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(19)

இவ்வாறு சொல்லப்பட்ட விஜயன் {அர்ஜுனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, “இன்றைய போரில் நான் கர்ணனைக் கொல்வேன், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, ஓ! பூமியின் தலைவரே , அல்லது அவனால் {கர்ணனால்} கொல்லப்பட்டுப் பூமியில் வீழ்வேன் என்று உண்மை மற்றும் உமது அருளின் பெயராலும், பீமர் மற்றும் இரட்டையர்களின் {நகுலன் மற்றும் சகாதேவனின்} பெயராலும் நான் உறுதியேற்கிறேன்.(20,21) உண்மையாக உறுதியேற்றபடியே நான் என் ஆயுதங்களைத் தொடுவேன்” என்று மறுமொழி கூறினான். மன்னரிடம் {யுதிஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன அவன் {அர்ஜுனன்}, மாதவனிடம் {கிருஷ்ணனிடம்},(22) “ஓ! கிருஷ்ணா, இன்றைய போரில் நான் கர்ணனைக் கொல்வதில் ஐயமில்லை. நீ அருளப்பட்டிருப்பாயாக, உன் நுண்ணறிவின் துணையால் அந்தத் தீயவனின் படுகொலை நிச்சயம் நேரும்” என்றான் {அர்ஜுனன்}.(23)

இவ்வாறு சொல்லப்பட்ட கேசவன் {கிருஷ்ணன்}, ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பாரதர்களில் சிறந்தவனே, வலிமைமிக்கக் கர்ணனைக் கொல்வதற்கு நீ தகுந்தவனே.(24) ஓ! வலிமைமிக்கத் தேர்வீரா, ஓ! மனிதர்களில் சிறந்தவனே {அர்ஜுனனே}, போரில் கர்ணனை நீ கொல்வாய் என்பதே எப்போதும் என் எண்ணமாக இருக்கிறது” என்றான்.(25) பெரும் நுண்ணறிவைக் கொண்ட மாதவன், மீண்டும் தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரரே, பீபத்சுவுக்கு {அர்ஜுனனுக்கு} ஆறுதலை அளித்து, தீய ஆன்மாவான கர்ணனைக் கொல்ல அவனுக்கு ஆணையிடுவதே உமக்குத் தகும்[1]. கர்ணனின் கணைகளால் நீர் பீடிக்கப்பட்டீர் என்பதைக் கேட்டே, ஓ! பாண்டுவின் மகனே, உமது நிலையை உறுதி செய்து கொள்வதற்காக நானும், இவனும் இங்கே வந்தோம்.(26, 27) ஓ! மன்னா, நீர் கொல்லப்படாதது நற்பேறாலேயே. நீர் பிடிபடாததும் நற்பேறாலேயே. ஓ! பாவமற்றவரே, உமது பீபத்சுவின் {அர்ஜுனனின்} வெற்றிக்கான வாழ்த்துகளைச் சொல்லி, அவனுக்கு ஆறுதலளித்து ஆசி கூறுவீராக” என்றான் {கிருஷ்ணன்}.(28)

யுதிஷ்டிரன், “ஓ! பார்த்தா, ஓ! பீபத்சு, வாருங்கள், ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா} வந்து என்னைத் தழுவிக் கொள்வாயாக. சொல்லத்தகுந்த நன்மையான வார்த்தைகளையே நீ எனக்குச் சொல்லியிருக்கிறாய், நான் உன்னை மன்னித்தேன்.(29) ஓ! தனஞ்சயா, செல்வாயாக, சென்று கர்ணனைக் கொல்வாயாக என்று நான் ஆணையிடுகிறேன். ஓ! பார்த்தா, நான் உன்னிடம் சொன்ன கடுஞ்சொற்களுக்காக என்னிடம் நீ கோபங்கொள்ளாதே” என்றான் {யுதிஷ்டிரன்}.”(30)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா யுதிஷ்டிரனுக்குத் தலைவணங்கி, தன் அண்ணனின் பாதங்களைத் தன்னிரு கரங்களாலும் பற்றிக் கொண்டான்.(31) அவனை எழச் செய்து, நெருக்கமாக அவனைத் தழுவிக் கொண்ட மன்னன், அவனது தலையை முகர்ந்து, மீண்டும் இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னான்,(32) “ஓ! தனஞ்சயா, ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, நான் உன்னால் பெரிதும் கௌரவிக்கப்பட்டேன். நீ எப்போதும் வெற்றியையும், மேன்மையையும் வெல்வாயாக {அடைவாயாக}” என்றான்.(33)

அர்ஜுனன், “இன்று வலிமையில் செருக்குற்ற ராதையின் மகனை {கர்ணனை} போரில் அடைந்து, பாவம் நிறைந்த செயல்களைச் செய்த அம்மனிதனை, அவனது சொந்தங்கள் மற்றும் அவனைப் பின்தொடர்வோர் அனைவருடனும் சேர்த்து என் கணைகளால் கொல்வேன்.(34) தன் வில்லை வலுவாக வளைத்து, எவன் அவனது கணைகளால் உம்மைப் பீடித்தானோ, அந்தக் கர்ணன், தன் செயலுக்கான கசந்த கனியை இன்று அடைவான்.(35) ஓ! பூமியின் தலைவரே, கர்ணனைக் கொன்ற பிறகு, உமக்குப் பின்னால் நடந்து உம்மைக் கௌரவிக்க, அந்தப் பயங்கரப் போரில் இருந்து இன்று நான் திரும்பிவருவேன்.(36) கர்ணனைக் கொல்லாமல், இன்று அந்தப் பெரும்போரில் இருந்து நான் திரும்பேன். ஓ! அண்டத்தின் தலைவா, உமது பாதங்களைத் தொட்டு, நான் இந்த உறுதியை ஏற்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}”.(37)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவ்வாறு பேசிக் கொண்டிருந்த அந்தக் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனிடம் (அர்ஜுனனிடம்) யுதிஷ்டிரன், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் மிக முக்கியமான இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(38) “அழியாப் புகழையும், உன் விருப்பத்திற்குத் தகுந்தபடியே வெற்றி, சக்தி மற்றும் உன் எதிரிகளின் அழிவு, வாழ்நாள் ஆகியவற்றை அடைவாயாக. தேவர்கள் உனக்குச் செழிப்பை அருளட்டும். என்னால் விரும்பப்பட்டும் அளவுக்கு நீ இவை அனைத்தையும் அடைவாயாக. தன் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ளும்பொருட்டு விருத்திரனைக் கொன்ற புரந்தரனை {இந்திரனைப்} போலவே, {கர்ணனைக் கொல்வதற்காகப்} போரிட நீ விரைந்து செல்வாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}”.(39)

கிருஷ்ணன் செய்த கர்ணார்ஜுன ஒப்பீடு! – கர்ண பர்வம் பகுதி – 72-தன் தேரை ஆயத்தம் செய்யும்படி கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன்; தேரை ஆயத்தம் செய்து தகவல் தெரிவித்த தாருகன்; கர்ணனுடன் போரிடப் புறப்பட்ட அர்ஜுனனுக்கு முன்பு தோன்றிய நற்சகுனங்கள்; கவலைநிறைந்திருந்த அர்ஜுனனிடம், அவனது திறன்களை வியந்து சொன்ன கிருஷ்ணன், கர்ணனின் திறன்களையும் சொல்லி, அவனைக் கொல்லுமாறு அர்ஜுனனைத் தூண்டியது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உற்சாகம் நிறைந்த இதயத்தோடு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை நிறைவு செய்து, சூதன் மகனை {கர்ணனைக்} கொல்லத் தயாரான பார்த்தன் {அர்ஜுனன்}, கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்},(1) “என் தேர் மீண்டும் ஆயத்தம் செய்யப்படட்டும், அதனோடு என் முதன்மையான குதிரைகள் பூட்டப்படட்டும். அந்தப் பெரும் வாகனத்தில் அனைத்து வகை ஆயுதங்களும் வைக்கப்படட்டும்.(2) குதிரைகள் தரையில் புரண்டிருக்கின்றன. குதிரைகளை நன்கறிந்தோரால் அவை பயிற்றுவிக்கப்பட்டுள்ளன. அந்தத் தேரின் பிற கருவிகளுடன் கூடிய அவை, தங்கள் சேணங்கள் பூட்டப்பட்டு வேகமாகக் கொண்டு வரப்படட்டும்.(3) ஓ! கோவிந்தா, சூதன் மகனைக் {கர்ணனைக்} கொல்ல விரைந்து புறப்படுவாயாக” என்று சொன்னான். ஓ! ஏகாதிபதி, உயர் ஆன்ம பல்குனனால் {அர்ஜுனனால்} இவ்வாறு சொல்லப்பட்ட கிருஷ்ணன், தாருகனை அழைத்து, “பாரதக் குலத்தின் தலைவனும், வில் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனுமான அர்ஜுனன் சொன்னவை அனைத்தையும் செய்வாயாக” என்றான்.(4,5)

கிருஷ்ணனால் இவ்வாறு ஆணையிடப்பட்ட தாருகன், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, புலித் தோல்களால் மறைக்கப்பட்டதும், எதிரிகள் அனைவரையும் எப்போதும் எரிக்கவல்லதுமான அந்தத் தேரில் அக்குதிரைகளைப் பூட்டினான்.(6) பிறகு அவன் {தாருகன்}, அவ்வாகனம் ஆயத்தம் செய்யப்பட்ட செய்தியை உயர் ஆன்ம பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} சொன்னான். உயர் ஆன்ம தாருகனால் ஆயத்தம் செய்யப்பட்ட தேரைக் கண்ட பல்குனன் {அர்ஜுனன்},(7) யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு, பிராமணர்களைத் தன் நன்மைக்கான சடங்குகளைச் செய்யவும், தனக்கு ஆசி கூறவும் செய்து, அந்த அற்புத வாகனத்தில் ஏறினான்.(8) பெரும் விவேகியும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனும் அவனுக்கு ஆசி கூறினான். இதன் பிறகு பல்குனன், கர்ணனின் தேரை நோக்கிச் சென்றான்.(9) அந்தப் பெரும் வில்லாளி இவ்வாறு செல்வதைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கர்ணன் ஏற்கனவே அந்த உயர் ஆன்ம பாண்டவனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டுவிட்டதாகவே கருதின.(10)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திசைப்புள்ளிகள் அனைத்தும் அமைதியடைந்தன. ஓ! மன்னா, மீன்கொத்திப் பறவைகள், கிளிகள் மற்றும் நாரைகளும் அந்தப் பாண்டுவின் மகனை வலம் வந்தன.(11) அழகியவையும், மங்கலகரமானவையும், “புங் {பும்}” என்றழைக்கப்பட்டவையுமான பெரும் எண்ணிக்கையிலான பறவைகள் (சரியான நேரத்தில் தோன்றி) அர்ஜுனனை அந்தப் போரில் பெரும் வேகத்தை வெளிப்படுத்த செய்யும் வகையில் அவனைச் சுற்றி உற்சாகமாக இரைந்தன. பயங்கரமான கங்கங்கள், கழுகுகள், நாரைகள், பருந்துகள், அண்டங்காக்கைகள் ஆகியன, உணவு இருப்பால் ஈர்க்கப்பட்டடு, அவனது தேருக்கு முன்பாகச் சென்று, மங்கலச் சகுனங்களை வெளிப்படுத்தும் வகையில், பகைவரின் படை அழியப்போவதையும், கர்ணனின் கொலையையும் முன்னறிவித்தன. பார்த்தன் சென்று கொண்டிருந்த அதே வேளையில், அவனது உடலானது வேர்வையால் மறைக்கப்பட்டது.(12-15) தன் சபதத்தைத் தான் நிறைவேற்றப் போவது எவ்வாறு என்ற கவலை அவனுக்கு {அர்ஜுனனுக்கு} அதிகமானது. செல்லும்போதே பார்த்தன் கவலையால் நிறைவதைக் கண்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, காண்டீவதாரியிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளின் பேசினான்”.(16)

வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! காண்டீவதாரியே, இந்த உன் வில்லால் நீ யாரையெல்லாம் வென்றாயோ, அவர்களை வெல்ல இங்கே வேறொருவனும் இல்லை.(17) சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலைக்கொண்ட பல வீரர்கள், வீரனான உன்னோடு போரில் மோதி உயர்ந்த உலகங்களை அடைந்ததை நாங்கள் கண்டோம்.(18) ஓ! பலமிக்கவனே, துரோணர், பீஷ்மர், பகதத்தன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜர்களின் தலைவர் சுதக்ஷிணன், வலிமையும் சக்தியும் கொண்ட சுருதாயுதன் மற்றும் அச்யுதாயுதன் ஆகியோருடன் மோதிய பிறகு உனக்கு இணையில்லாத எவனால் {உன்னைத் தவிர வேறு எவனால்} நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க முடியும்?(19,20) தெய்வீக ஆயுதங்கள், கரநளினம், வலிமை ஆகியவற்றைக் கொண்டவனான நீ போரில் மலைப்படையாதவனாக {மயங்கி வீழாதவனாக} இருக்கிறாய். அறிவால் உண்டான பணிவைக் கொண்டவனாகவும் நீ இருக்கிறாய்.(21)

விளைவை ஏற்படுத்தும் வகையில் உன்னால் தாக்க முடிகிறது. ஓ! அர்ஜுனா, இலக்கில் துல்லியமும், சமயத்திற்கு ஏற்ற தேர்வு செய்யும் ஆற்றலையும் நீ கொண்டிருக்கிறாய். தேவர்கள், கந்தர்வர்கள் ஆகியோரோடு சேர்த்து அசையும் மற்றும் அசையா உயிரினங்கள் அனைத்தையும் அழிக்கத்தகுந்தவனாகவும் நீ இருக்கிறாய்.(22) ஓ! பார்த்தா, போரில் உனக்கு இணையான வேறு மனிதப் போர் வீரன் எவனும் இவ்வுலகில் கிடையாது. வில் தரித்துப் போரில் வெல்லப்பட முடியாதவர்களாக இருக்கும் க்ஷத்திரியர்கள் அனைவரிலும், ஏன் தேவர்களுக்கு மத்தியிலும் கூட, உனக்கு இணையான ஒருவனை நான் கண்டதோ, கேட்டதோ கிடையாது. ஓ பார்த்தா, அனைத்து உயிரினங்களையும் படைத்த பிரம்மனே நீ எதைக் கொண்டு போரிடுகிறாயோ, அந்தப் பெரும் வில்லான கண்டீவத்தையும் படைத்தான். இந்தக் காரணத்தாலும், உனக்கு இணையாக வேறு எவனும் இல்லை. எனினும், ஓ! பார்த்தா, உனக்கு நன்மையானதையும் நான் சொல்ல வேண்டும்.(23-25)

ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, போர்க்கள ரத்தினமான கர்ணனை நீ அலட்சியம் செய்யாதே. கர்ணன் வலிமைமிக்கவனாவான். அவன் செருக்குமிக்கவனும், ஆயுதங்களில் சாதித்தவனுமாவான். அவன் ஒரு மஹாரதன்.(26) அவன் (போர் முறைகளில்) சாதித்தவனும், போர் முறைகள் அனைத்தையும் அறிந்தவனுமாவான். இடத்திற்கும், காலத்திற்கும் பொருத்தமான அனைத்தையும் அவன் நன்கறிவான். இன்னும் அதிகம் சொல்ல என்ன இருக்கிறது? ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, சுருக்கமாகக் கேட்பாயாக.(27) வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனை உனக்கு இணையானவனாக, அல்லது ஒருவேளை உனக்கு மேம்பட்டவனாக நான் கருதுகிறேன். இந்தப் பெரும்போரில், பெரும் கவனத்தோடும், உறுதியோடும் நீ அவனைக் கொல்ல வேண்டும்.(28) சக்தியில் அவன் அக்னிக்கு இணையானவன். வேகத்தில் அவன் காற்றைப் போல மூர்க்கமானவன். கோபத்தில் அவன் அந்தகனுக்கே ஒப்பானவன். வலிமையுடன் கூடிய அவன், உடலமைப்பால் சிங்கத்திற்கு ஒப்பாக இருக்கிறான்.(29) அவன் எட்டு ரத்னிகள்[1] அளவுக்கு உடற்கட்டைக் கொண்டவனாக இருக்கிறான். அவனது கரங்கள் பருத்தவையாக இருக்கின்றன. அவனது மார்பு அகன்றதாக இருக்கிறது. அவன் வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான். அவன் உணர்ச்சிமிக்கவனாக இருக்கிறான். அவன் வீரனாக இருக்கிறான். மேலும் அவன் வீரர்களில் முதன்மையானவனாகவும் இருக்கிறான். அவன் மிகுந்த அழகனாக இருக்கிறான்.(30)

போர்வீரனுக்குரிய அனைத்தையும் கொண்ட அவன் நண்பர்களின் அச்சங்களைப் போக்குபவனாக இருக்கிறான். திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} நன்மையில் ஈடுபடும் அவன் {கர்ணன்}, பாண்டுவின் மகன்களை வெறுக்கிறான்.(31) உன்னைத் தவிர, வாசவனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்களாலும் கூட ராதையின் மகனைக் கொல்ல முடியாது என்றே நான் நினைக்கிறேன். எனவே, அந்தச் சூதன் மகனை {கர்ணனை} இன்று கொல்வாயாக.(32) இரத்தமும், சதையும் கொண்ட எவனாலும் {எந்த மனிதனாலும்}, ஏன் பெருங்கவனத்துடன் போரிடும் தேவர்களாலும், ஒன்றாகத் திரண்டு போரிட வரும் (மூவுலகங்களின்) போர்வீரர்கள் அனைவராலும் கூட அந்தத் தேர்வீரனை வெல்ல முடியாது.(33) பாண்டவர்களிடம் அவன் {கர்ணன்}, தீய ஆன்மா கொண்டவனாகவும், பாவம்நிறைந்த நடத்தை கொண்டவனாகவும், கொடூரனாகவும், தீய புத்தி {எண்ணம்} கொண்டவனாகவுமே நடந்திருக்கிறான். பாண்டு மகன்களுடனான தன் சச்சரவில், தன் சொந்த நலன்கள் பாதிக்கப்படுவதையும் கருதிப்பாராமலேயே அவன் செயல்படுகிறான். எனவே, அந்தக் கர்ணனைக் கொன்று, உன் நோக்கத்தை இன்று நிறைவேற்றுவாயாக.(34) மரணத்தின் அருகாமையில் இருக்கும் முதன்மையான தேர்வீரனான அந்தச் சூதன் மகனை இன்று யமனின் முன்னிலைக்கு அனுப்புவாயாக. உண்மையில், தேர்வீரர்களில் முதல்வனான அந்தச் சூதன் மகனைக் கொன்று, நீதிமானான யுதிஷ்டிரரிடம் நீ கொண்டுள்ள அன்பைக் காட்டுவாயாக.(35)

ஓ! பார்த்தா, தேவர்களாலும், அசுரர்களாலும் தடுக்கப்பட முடியாத உன் ஆற்றலை நான் உண்மையாக அறிவேன். தீய ஆன்மா கொண்ட அந்தச் சூதன் மகன், செருக்கின் மிகுதியால் எப்போதும் பாண்டுவின் மகன்களை அவமதித்தே வருகிறான்.(36) ஓ! தனஞ்சயா, இழிந்தவனான துரியோதனன், எந்த மனிதனால் தன்னை வீரனாகக் கருதிக் கொள்கிறானோ, (அந்தப்) பாவம் நிறைந்த மனிதர்கள் அனைவருக்கும் எவன் வேராக இருக்கிறானோ, அந்தச் சூதன் மகனை {கர்ணனை} இன்று நீ கொல்வாயாக.(37) ஓ! தனஞ்சயா, மனிதர்களில் புலியும், சுறுசுறுப்பு மற்றும் செருக்கு மிக்கவனும், தன் நாவையே வாளாகவும், வாயையே வில்லாகவும், பற்களையே கணைகளாகவும் கொண்டவனுமான அந்தக் கர்ணனைக் கொல்வாயாக.(38) உன்னில் இருக்கும் சக்தி மற்றும் வலிமை ஆகியவற்றைப் பொறுத்தவரை உன்னை நான் நன்றாக அறிவேன். யானையொன்றைக் கொல்லும் ஒரு சிங்கத்தைப் போல, நீ துணிச்சல்மிக்கக் கர்ணனைப் போரில் கொல்வாயாக.(39) ஓ பார்த்தா, எவன் வைகர்த்தனன் என்று வேறு பெயரால் அழைக்கப்படுகிறானோ, எவனுடைய சக்தியால் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} உன் சக்தியை {உங்களை} அவமதிக்கிறானோ, அந்தக் கர்ணனை இன்று நீ கொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}”.(40)

அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 73-பீஷ்மர் மற்றும் துரோணரின் மரணத்துக்கும், துரியோதனனுடைய அநீதிகளுக்கும் கர்ணனே காரணம் என்பதைக் கூறிய கிருஷ்ணன்; அர்ஜுனனின் சாதனைகளை விளக்கியது; கர்ணன் செய்த தீமைகளையும், அவனே துரியோதனனின் நம்பிக்கையாய் இருப்பதையும் அர்ஜுனனுக்கு எடுத்துரைத்த கிருஷ்ணன்; அபிமன்யு கொல்லப்பட்ட விதத்தைக் கூறி அர்ஜுனனின் கோபத்தைத் தூண்டியது; அபிமன்யுவின் மரணத்திற்குக் கர்ணனே காரணம் என்று சொன்னது; கௌரவச் சபையில் திரௌபதியைக் கர்ணன் அவமதித்த விதத்தைச் சொன்னது; கர்ணன் பாண்டவப் படையைக் கொன்று கொண்டிருப்பதை அர்ஜுனனுக்குச் சுட்டிக் காட்டிய கிருஷ்ணன்; கர்ணனைக் கொல்ல அர்ஜுனனை வற்புறுத்திய கிருஷ்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அளவிலா ஆன்மா கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கர்ணனைக் கொல்லும் உறுதியான நோக்கோடு (போரிடச்} சென்று கொண்டிருந்த அர்ஜுனனிடம் மீண்டும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “ஓ! பாரதா {அர்ஜுனா}, மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளுக்கு நேரும் இந்தப் பயங்கரப் படுகொலையில் இன்று பதினேழாம் நாளாகும்.(2) தொடக்கத்தில் உனக்குச் சொந்தமான படை பரந்த அளவில் இருந்தது. போரில் எதிரியுடன் மோதிய அந்தப் படையானது, ஓ! மன்னா {அர்ஜுனா}, எண்ணிக்கையில் மிகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.(3) கௌரவர்களும், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, தொடக்கத்தில் எண்ணற்ற யானைகளையும், குதிரைகளையும் கொண்டிருந்தனர். எனினும், உன்னை எதிரியாகக் கொண்டு மோதிய அவர்கள், போரின் முகப்பில் கிட்டத்தட்ட நிர்மூலமாக்கப்பட்டுவிட்டனர்.(4) இந்தப் பூமியின் தலைவர்களும், இந்தச் சிருஞ்சயர்களும், இந்தப் பாண்டவத் துருப்புகளுடன் ஒன்று சேர்ந்து, வெல்லப்படாத உன்னையே தங்கள் தலைவனாக அடைந்து, போர்க்களத்தில் நிலைபெற்றிருக்கின்றனர்.(5) ஓ! எதிரிகளைக் கொல்பவனே, உன்னால் பாதுகாக்கப்பட்ட பாஞ்சாலர்கள், மத்ஸ்யர்கள், காரூஷர்கள், சேதிகள் ஆகியோர் உன் எதிரிகளுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கின்றனர்.(6)

போரில் கூடியிருக்கும் கௌரவர்களை வெல்லக்கூடியவன் இங்கே வேறு எவன் இருக்கிறான்? மறுபுறம், உன்னால் பாதுகாக்கப்படும் பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களை வெல்லவும் இங்கே வேறு எவன் இருக்கிறான்?(7) எனினும், ஒன்று சேர்ந்த தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களைக் கொண்ட மூவுலகங்களையும் போரில் நீ வெல்லத்தகுந்தவனாவாய். பிறகு கௌரவப் படையைக் குறித்து நான் என்ன சொல்ல வேண்டும்?(8) ஓ! மனிதர்களில் புலியே, ஆற்றலில் வாசவனுக்கே {இந்திரனுக்கே} ஒப்பானவனாக இருந்தாலும், உன்னைத் தவிர வேறு எவனால் மன்னன் பகதத்தனை வெற்றிக் கொள்ள முடியும்?(9) அதே போலவே, ஓ! பாவமற்றவனே, ஓ! பார்த்தா, பூமியின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வந்தாலும், உன்னால் பாதுகாக்கப்படும் இந்தப் பரந்த படையை அவர்களால் பார்க்கக்கூட முடியாது.(10)

அதே போலவே, உன்னால் பாதுகாக்கப்பட்டதாலேயே திருஷ்டத்யும்னன் மற்றும் சிகண்டியால், துரோணர் மற்றும் பீஷ்மரைக் கொல்ல முடிந்தது.(11) உண்மையில், ஓ! பார்த்தா, சக்ரனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்டவர்களும், பாரதர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரையும் போரில் எவனால் வெல்ல முடியும்?(12) ஓ! மனிதர்களில் புலியே, அக்ஷௌஹிணிகளின் சீற்றமிகு தலைவர்களும், புறமுதுகிடாதவர்களும், வெல்லப்பட முடியாத வீரர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களும், ஒன்றாகச் சேர்ந்திருந்தவர்களுமான சந்தனுவின் மகன் பீஷ்மர், துரோணர், வைகர்த்தனன் {கர்ணன்}, கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மன்னன் துரியோதனன் ஆகியோரை இவ்வுலகில் உன்னைத் தவிர வேறு எந்த மனிதனால் வெல்ல முடியும்?(13-15)

படைவீரர்களின் எண்ணிலடங்கா படைப்பிரிவுகளும், (உன் கணைகளால்) சிதைக்கப்பட்ட அவர்களது குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகள் ஆகியவையும் (உன்னால்) அழிக்கப்பட்டிருக்கின்றன. கோபம் நிறைந்தவர்களும், கடுமையானவர்களும், பல்வேறு மாகாணங்களில் இருந்து வந்தவர்களுமான எண்ணற்ற க்ஷத்திரியர்களும் உன்னால் அழிக்கப்பட்டிருக்கின்றனர்.(16) குதிரைகள் மற்றும் யானைகளும், ஓ! பாரதா, பல்வேறு க்ஷத்திரிய இனங்களைச் சேர்ந்த கோவாசர்கள், தாசமீயர்கள், வசாதிகள், கிழக்கத்தியர்கள், வாடதானர்கள், தங்கள் கௌரவத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களான போஜர்கள் ஆகிய பெரும் எண்ணிக்கையிலான போராளிளும், ஓ! பாரதா, உன்னையும், பீமரையும் அணுகி அழிவையே அடைந்தனர்.(17,18) பயங்கரச் செயல்களைச் செய்பவர்களும், மிகக் கடுமையானவர்களும், பெரும் கோபமும், பெரும் வலிமையும் கொண்டவர்களும், போரில் திளைப்பவர்ளும், கதாயுதங்களைக் கொண்டவர்களுமான துஷாரர்கள், யவனர்கள், கசர்கள், தார்வபிசாரர்கள், தரதர்கள், சகர்கள், கமதர்கள், ரமதர்கள், தங்கணர்கள்,(19) அந்திரகர்கள், புளிந்தர்கள், கடும் ஆற்றலைக் கொண்ட கிராதர்கள், மிலேச்சர்கள், மலைவாசிகள், கடற்புறத்திலிருந்து வந்த இனங்கள்(20) ஆகிய அனைவரும் குருக்களுடன் ஒன்று சேர்ந்து, துரியோதனனுக்காகக் கோபத்துடன் போரிட்டு, உன்னைத் தவிர வேறு யாராலும் போரில் வெல்லப்பட முடியாதவர்களாக இருந்தனர்.(21)

வலிமைமிக்கவர்களும், எண்ணிக்கையில் பெருகி இருந்தவர்களும், போரில் முறையாக அணிவகுக்கப்பட்டவர்களுமான தார்தராஷ்டிரர்களைக் கண்டும், உன்னால் பாதுகாக்கப்படாமல் எந்த மனிதனால் முன்னேறிச் செல்ல இயலும்?(22) ஓ! பலமிக்கவனே, உன்னால் பாதுகாக்கப்பட்ட பாண்டவர்கள், கோபத்தால் நிறைந்து, அவர்களுக்கு மத்தியில் ஊடுருவி, பொங்கும் கடலுக்கு ஒப்பாகப் புழுதியால் மறைக்கப்பட்ட அந்தப் படையை அழித்தனர்.(23) மகதர்களின் ஆட்சியாளனான வலிமைமிக்க ஜயத்சேனனால், போரில் அபிமன்யு கொல்லப்பட்டு ஏழு நாட்கள் கடந்திருக்கின்றன.(24) அதன்பிறகு, கடுஞ்சாதனைகளைச் செய்பவையும், அந்த மன்னனை {ஜயத்சேனனைப்} பின்தொடர்பவையுமான பத்தாயிரம் யானைகளைப் பீமசேனர் தமது கதாயுதத்தால் கொன்றார்.(25) அதன்பிறகு பிற யானைகளும் நூற்றுக்கணக்கான தேர்வீரர்களும் பீமசேனரின் பல பயன்பாட்டில் அவரால் {பீமரால்} அழிக்கப்பட்டனர்.(26) இவ்வாறே, ஓ! பார்த்தா, இந்தப் பயங்கரப் போரில் தங்கள் குதிரைகள், தேர்வீரர்கள் யானைகள் ஆகியவற்றுடன் பீமசேனர் மற்றும் உன்னுடன் மோதிய கௌரவர்கள், ஓ! பாண்டுவின் மகன், இங்கிருந்து யமலோகத்திற்குச் சென்றனர்.(27)

ஓ! பார்த்தா {அர்ஜுனா}, கௌரவப் படையின் முகப்பானது, பாண்டவர்களால் தாக்கி வீழ்த்தப்பட்டதும், ஓ! ஐயா, பீஷ்மர், கடுங்கணைகளை ஏவினார்.(28) உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவரான அவர், சேதிகள், பாஞ்சாலர்கள், காரூஷர்கள், மத்ஸ்தர்கள் மற்றும் கைகேயர்கள் ஆகியோரைத் தம் கணைகளால் மறைத்து அவர்களைக் கொன்றார்.(29) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், நேராகச் செல்பவையும், எதிரிகள் அனைவரின் உடல்களையும் துளைக்கவல்லவையுமான கணைகள் அவரது வில்லில் இருந்து வெளிப்பட்டு ஆகாயத்தை நிறைத்தன.(30) அவர் {பீஷ்மர்}, ஒரே நேரத்தில் கணை மழைகளைப் பொழிந்து, ஆயிரக்கணக்கான தேர்வீரர்களைக் கொன்றார். மொத்தமாக அவர் ஒரு நூறாயிரம் {ஒரு லட்சம்} மனிதர்களையும் பெரும் வலிமை கொண்ட யானைகளையும் கொன்றார்.(31) புது வகையில் உள்ள பல்வேறு அசைவுகளைக் கைவிட்டுத் திரிந்து கொண்டிருந்த தீய மன்னர்களும், யானைகளும் அழியும்போது, பல குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளையும் சேர்த்து கொன்றனர். உண்மையில், போரில் பீஷ்மரால் ஏவப்பட்ட கணைகள் எண்ணற்றவையாகும்.(32) சேர்ந்தாற்போலப் பத்து நாட்களுக்குப் பாண்டவப் படைகளைக் கொன்ற பீஷ்மர், எண்ணற்ற தேர்த்தட்டுகளை வெறுமையாக்கி, எண்ணற்ற யானைகளையும், குதிரைகளையும் கொன்றார்.(33) போரில் ருத்ரன், அல்லது உபேந்திரனின் வடிவத்தை ஏற்ற அவர், பாண்டவப் படைகளைப் பீடித்து, அவர்களுக்கு மத்தியில் பேரழிவை உண்டாக்கினார்.(34) தெப்பமற்ற கடலில் மூழ்கிக் கொண்டிருந்த தீய சுயோதனனை மீட்க விரும்பிய அவர் {பீஷ்மர்}, சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் கைகேயர்களில் உள்ள பூமியின் தலைவர்கள் பலரைக் கொன்று, தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் நிறைந்திருந்த பாண்டவப் படையில் பேரழிவை உண்டாக்கினார். நன்கு ஆயுதம் தரித்தவர்களான சிருஞ்சயர்களுக்கு மத்தியில் எண்ணற்ற காலாட்படைவீரர்களும், பூமியின் பிற தலைவர்களும், போரில் அந்த வீரர் எரிக்கும் காந்தியுடன் கூடிய சூரியனுக்கு ஒப்பாகத் திரிந்து கொண்டிருந்தபோது, அவரைக் காண்பதற்கும் இயலாதவர்களாக இருந்தனர்.(35-37) இறுதியாகப் பாண்டவர்கள், தங்கள் வழிவகைகள் அனைத்தையும் கொண்டு ஒரு பெரும் முயற்சியைச் செய்து, வெற்றியடையும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டவரும், இவ்வழியில் போரில் திரிந்து கொண்டிருந்தவருமான அந்தப் போர்வீரரை {பீஷ்மரை} எதிர்த்து விரைந்தனர்.(38) எனினும் உலகின் முதன்மையான போர்வீரர் என்று கருதப்படும் அவர் {பீஷ்மர்}, எந்த உதவியையும் பெறாமல், போரில் பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களை முறியடித்தார்.(39) அவரோடு மோதிய சிகண்டி, உன்னால் பாதுகாக்கப்பட்டு அந்த மனிதர்களில் புலியை {பீஷ்மரைத்} தன் நேரான கணைகளால் கொன்றான்.(40) வாசவனை {இந்திரனைத்} தன் எதிரியாக அடைந்த விருத்திரனைப் போல, மனிதர்களில் புலியான உன்னை (தமது பகைவனாக) அடைந்த அந்தப் பாட்டன் {பீஷ்மர்}, இப்போது கணைப்படுக்கையில் கிடக்கிறார்.(41)

கடுமை நிறைந்த துரோணரும் சேர்ந்தாற்போல ஐந்து நாட்களுக்காப் பகைவரின் படையைக் கொன்றார். ஊடுருவமுடியாத {பிளகப்பட முடியாத} வியூகம் ஒன்றை அமைத்து, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரைக் கொல்லச் செய்த அந்தப் பெரும் வீரரே, (சில காலத்திற்கு) ஜெயத்ரதனையும் பாதுகாத்தார். யமனைப் போலவே கடுமையான அவர், இரவு போரில் பேரழிவை உண்டாக்கினார்.(42,43) பெரும் வீரம் கொண்ட அந்தப் பரத்வாஜரின் வீரமகன் {துரோணர்}, தமது கணைகளால் எண்ணற்ற போராளிகளை எரித்தார். இறுதியாகத் திருஷ்டத்யும்னனுடன் மோதி, உயர்வான தன் முடிவை அடைந்தார்[1].(44) அந்நாளில் சூதன் மகன் {கர்ணன்} தலைமையிலான (தார்தராஷ்டிரப்) போர்வீரர்கள் அனைவரையும் நீ தடுக்காமலிருந்திருந்தால், துரோணரை எப்போதும் கொன்றிருக்க முடியாது.(45) மொத்த தார்தராஷ்டிரப் படையையும் நீயே தடுத்துவைத்திருந்தாய். இதனாலேயே, ஓ! தனஞ்சயா, பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} துரோணரைக் கொல்ல முடிந்தது.(46)உன்னைத் தவிர வேறு எந்த க்ஷத்திரியனால், போரில் ஜெயத்ரதனைப் படுகொலை செய்த அந்த அருஞ்செயலைச் செய்ய முடியும்?(47) பரந்த (கௌரவப்) படையைத் தடுத்து, துணிவுமிக்க மன்னர்கள் பலரைக் கொன்று, உன் வலிமை மற்றும் உன் ஆயுதங்களின் சக்தி ஆகியவற்றின் துணையால் நீ மன்னன் ஜெயத்ரதனைக் கொன்றாய்.(48) சிந்துக்களின் ஆட்சியாளனை (ஜெயத்ரதனைப்) படுகொலை செய்த செயலை அற்புதம் நிறைந்ததாக மன்னர்கள் அனைவரும் கருதுகின்றனர். எனினும், நீயே அதைச் செய்தாய் என்பதாலும், நீ பெரும் தேர் வீரன் என்பதாலும் நான் அவ்வாறு (அதை அற்புதம் என்று) கருதவில்லை.(49) உன்னைப் பகைவனாக அடைந்த இந்தப் பரந்த க்ஷத்திரியக் கூட்டம், ஒரு முழு நாளில் அழிவை அடைந்திருக்குமென்றாலும், அப்போதும் நான் இந்த க்ஷத்திரியர்களை உண்மையில் வலிமைநிறைந்தவர்களாகவே கருதுவேன்[2].(50) பீஷ்மரும், துரோணரும் கொல்லப்பட்ட பிறகு, ஓ! பார்த்தா, இந்தப் பயங்கரத் தார்தராஷ்டிரப் படையானது தன் வீரர்கள் அனைவரையும் இழந்துவிட்டதாகவே கருதப்பட வேண்டும்.(51) உண்மையில், அதன் முதன்மையான வீரர்கள் கொல்லப்பட்டு, குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியன அழிக்கப்பட்ட பாரதப் படையானது, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை இழந்த ஆகாயத்தைப் போல இன்று தெரிகிறது.(52) ஓ! பார்த்தா, அதோ கடும் ஆற்றலைக் கொண்ட அந்தப் படை பழங்காலத்தில் சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலால் காந்தியை இழந்த அசுரப் படையைப் போல இன்று தன் காந்தியை இழந்திருக்கிறது.(53)

அந்தப் பெருந்திரளில் எஞ்சியிருக்கும் படையானது, இப்போது அஸ்வத்தாமன், கிருதவர்மன், கர்ணன், சல்லியன் மற்றும் கிருபர் ஆகிய ஐந்து பெரும் தேர்வீரர்களை மட்டுமே கொண்டிருக்கிறது.(54) ஓ! மனிதர்களில் புலியே, அந்த ஐந்து பெரும் தேர்வீரர்களையும் இன்று கொன்று, உன் பகைவர்கள் அனைவரையும் கொன்ற வீரனாகி, தீவுகள் மற்றும் நகரங்களுடன் கூடிய இந்தப் பூமியை மன்னர் யுதிஷ்டிரருக்கு அளிப்பாயாக.(55) அளவிலா சக்தியும் செழிப்பும் கொண்டவரும், பிருதையின் மகனுமான யுதிஷ்டிரர், நீரையும், அதற்கு மேலே ஆகாயத்தையும், அதற்குக் கீழே பாதாள உலகங்களையும் கொண்டிருக்கும் மொத்த உலகத்தையும் இன்று அடையட்டும்.(56) பழங்காலத்தில் தைத்தியர்களையும் தானவர்களையும் கொன்ற விஷ்ணுவைப் போல இந்தப் படையைக் கொன்று, (மூவுலகங்களையும்) சக்ரனுக்கு அளித்த ஹரியைப் போல, நீ இந்தப் பூமியை மன்னருக்கு {யுதிஷ்டிரருக்கு} அளிப்பாயாக.(57) விஷ்ணுவால் தானவர்கள் கொல்லப்பட்டதும் மகிழ்ந்த தேவர்களைப் போலப் பாஞ்சாலர்கள், தங்கள் பகைவர்கள் கொல்லப்பட்டு இன்று மகிழ்ச்சியை அடையட்டும்.(58)

மனிதர்களில் முதன்மையான உன் ஆசான் துரோணரின் மீது கொண்ட மதிப்பால் அஸ்வத்தாமரிடம் நீ இரக்கம் கொண்டாயெனினும், ஆசானுக்கு உரிய மதிப்புடன் நீ கிருபரிடம் பரிவு கொண்டாயெனினும்,(59) கிருதவர்மனை அணுகி, தாய்வழி சொந்தங்களின் மீது கொண்ட மதிப்பால் இன்று நீ அவனை யமலோகம் அனுப்பவில்லையெனினும்,(60) ஓ! தாமரைக் கண்ணா {அர்ஜுனா}, உன் தாயாரின் சகோதரரான மத்ரர்களின் ஆட்சியாளர் சல்லியரை அணுகி, இரக்கத்தால் அவரை நீ கொல்லவில்லையெனினும்,(61) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பாண்டு மகன்களின் மீது கடும் வெறுப்பைக் கொண்டவனும், பாவம் நிறைந்த இதயம் கொண்ட இழிந்தவனுமான கர்ணனைக் கூரிய கணைகளால் வேகமாக இன்று கொல்வாயாக.(62) இதுவே உன் உன்னதக் கடமையாகும். இதில் முறையற்றதென ஏதுமில்லை. நாம் அஃதை அங்கீகரிக்கிறோம், அதில் எந்தக் களங்கமும் இல்லை.(63)

ஓ! மங்கா புகழ் கொண்டோனே, ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, இரவில் உன் தாயாரை, அவளது பிள்ளைகள் {பிள்ளைகளான உங்கள்} அனைவரோடு சேர்த்து எரிக்கும் முயற்சிக்கும், பகடையாட்டத்தின் விளைவால் சுயோதனன் உங்களிடம் நடந்து கொண்ட நடத்தைக்கும் தீய ஆன்மா கொண்ட கர்ணனே அடிவேராக இருக்கிறான்.(64) சுயோதனன், கர்ணன் மூலமான விடுதலையையே எப்போதும் எதிர்பார்த்திருக்கிறான். சினத்தால் நிறைந்த அவன் {துரியோதனன்}, (அந்த ஆதரவின் விளைவாலேயே) என்னையும் பீடிக்க முயல்கிறான்.(65) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, போரில் பார்த்தர்கள் அனைவரையும் ஐயமில்லாமல் கர்ணன் கொல்வான் என்பது திருதராஷ்டிரருடைய அரசமகனின் {துரியோதனனின்} உறுதியான நம்பிக்கையாகும்.(66) உன் வலிமையை முற்றாக அறிந்தவனாக இருப்பினும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா} அந்தத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, கர்ணன் மீது கொண்ட நம்பிக்கையின் விளைவாலேயே உன்னோடு போர்தொடுத்தான்.(67) “ஒன்றாகக் கூடியிருக்கும் பார்த்தர்கள் அனைவரையும், வலிமைமிக்கத் தேர்வீரனும், தாசார்ஹ குலத்தைச் சேர்ந்தவனுமான வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} நான் வெல்வேன்” என்றே கர்ணன் எப்போதும் சொல்லி வருகிறான். திருதராஷ்டிரரின் தீய மகனை மிதமிஞ்சித் தூண்டும் தீய கர்ணன் எப்போதும் (குரு) சபையில் {இவ்வாறே} முழங்குகிறான். ஓ! பாரதா, அவனை இன்று கொல்வயாக.(69) குற்றவாளியாகத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} உங்களுக்கு இழைத்த தீங்குகள் அனைத்திலும் தீய ஆன்மா கொண்டவனும், பாவம் நிறைந்த அறிவைக் கொண்டவனுமான கர்ணனே அவற்றின் தலைவனாக இருக்கிறான்.(70)

காளையைப் போன்ற கண்களைக் கொண்ட சுபத்ரையின் வீர மகன் {அபிமன்யு}, தார்தராஷ்டிரப் படையைச் சேர்ந்தவர்களும், கொடூர இதயங்களைக் கொண்டவர்களுமான ஆறு வலிமைமிக்கத் தேர்வீரர்களால் கொல்லப்படுவதை நான் கண்டேன்.(71) துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர் மற்றும் பிற வீரர்களைக் கொண்ட அந்த மனிதர்களில் காளைகளைக் கலங்கடித்த அவன் {அபிமன்யு}, யானைகளைத் தங்கள் பாகர்களை இழக்கச் செய்தான், வலிமைமிக்கத் தேர்வீரர்களைத் தங்கள் தேர்களை இழக்கும்படியும் செய்தான்.(72) காளையின் திமில்களைப் போன்ற கழுத்தைக் கொண்டவனும், குருக்கள் மற்றும் விருஷ்ணிகளின் புகழைப் பரப்பியவனுமான அபிமன்யு, குதிரைகளைத் தங்கள் சாரதிகளையும், காலாட்படை வீரர்களைத் தங்கள் ஆயுதங்களையும், உயிரையும் இழக்கச் செய்தான்.(73) (கௌரவப்) படைப்பிரிவுகளை முறியடித்து, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரைப் பீடித்த அவன் {அபிமன்யு} எண்ணற்ற மனிதர்களையும், குதிரைகள் மற்றும் யானைகளையும் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பிவைத்தான்.(74)

ஓ! நண்பா {அர்ஜுனா}, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் கணைகளால் பகைவரின் படையை எரித்துக் கொண்டே அவ்வாறு முன்னேறிச் சென்ற போது, அந்தச் சந்தர்ப்பத்திலும் கூட, தீய ஆன்மா கொண்ட கர்ணன், அந்த வீரனிடம் பகைமை பாராட்டினான் என்று நினைக்கும் போதே என் அங்கமெல்லாம் எரிகின்றன. நான் உண்மையின் பெயரால் இதை உனக்கு உறுதி கூறுகிறேன். ஓ! பார்த்தா, அந்தப் போரில் அபிமன்யுவின் முகத்திற்கு நேரே நிற்க முடியாமல், சுபத்ரை மகனின் கணைகளால் சிதைக்கப்பட்டு, சுய நினைவை இழந்து, குருதியில் குளித்த கர்ணன், சினத்தால் எரிந்து அழ்ந்த பெருமூச்சுகளை விட்டான். இறுதியாக, கணைகளால் பீடிக்கப்பட்ட அவன் {கர்ணன்}, களத்தில் புறமுதுகிட நினைத்தான்.(75-77) தப்பி ஓடும் ஆவல் கொண்டு, உயிரில் நம்பிக்கையிழந்த அவன் போரில் சற்று நேரம், தான் அடைந்த காயங்களால் களைப்படைந்தவனாக, முற்றிலும் மலைப்படைந்தவனாக நின்றான்.(78) இறுதியாக, அந்த நேரத்திற்குத் தகுந்தாற்போல, “கர்ணா, அபிமன்யுவின் வில்லை அறுப்பாயாக” என்ற துரோணரின் கொடூர வார்த்தைகளை அந்தப் போரில் கேட்டான்.(79) முறையற்ற போர் வழிமுறைகளை நன்கறிந்தவர்களான ஐந்து பெருந்தேர் வீரர்கள், அவனால் {கர்ணனால்} அந்தப்போரில் வில்லற்றவனாகச் செய்யப்பட்ட அந்த வீரனை {அபிமன்யுவைத்} தங்கள் கணைமாரியால் கொன்றனர்.(80) அந்த வீரனின் படுகொலையால் ஒவ்வொருவரின் இதயத்திற்குள்ளும் துயரம் நுழைந்தது. தீய ஆன்மா கொண்ட கர்ணன் மற்றும் சுயோதனன் மட்டுமே மகிழ்ச்சியாகச் சிரித்தனர்.(81)

(குரு) சபையில், பாண்டவர்கள் மற்றும் குருக்களின் முகத்திற்கு நேராகக் கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} கடுமையாகவும், கசப்பாகவும் பேசிய கர்ணனின் கொடூர வார்த்தைகளை நினைவுகூர்வாயாக.(82) “ஓ! கிருஷ்ணையே {திரௌபதியே}, பாண்டவர்கள் இறந்துவிட்டனர். அவர்கள் நித்தியமான நரகத்திற்குள் மூழ்கிவிட்டார்கள். ஓ! பருத்த பிட்டங்களைக் கொண்டவளே, ஓ! இனிமையாகப் பேசுபவளே, இப்போது வேறு தலைவர்களைத் தேர்ந்தெடுப்பாயாக.(83) ஓ! நெளிந்த இமைமயிர் கொண்டவளே, திருதராஷ்டிரரின் வசிப்பிடத்திற்குள் ஒரு பணிப்பெண்ணாக இப்போது நுழைவாயாக, இனிமேல் உனக்குக் கணவர்கள் இல்லை.(84) ஓ! கிருஷ்ணையே, இன்று பாண்டவர்கள் உனக்கு எந்தச் சேவையும் செய்ய மாட்டார்கள். ஓ! பாஞ்சால இளவரசியே, அடிமைகளின் மனைவி நீ, ஓ! அழகிய பெண்ணே, நீயே கூட அடிமையே.(85) இன்று துரியோதனன் மட்டுமே பூமியில் ஒரே மன்னனாகக் கருதப்படுகிறான். உலகம் முழுவதிலும் உள்ள மற்ற மன்னர்கள் அனைவரும் அவனுடைய {துரியோதனனின்} ஆட்சி நிர்வாகத்தையே பராமரித்து வருகின்றனர்.(86) ஓ! இனியவளே, பாண்டவர்கள் அனைவரும் சமமாக விழுந்து கிடக்கின்றனர் என்பதை இப்போது பார். திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} சக்தியில் மூழ்கிப் போன அவர்கள், இப்போது அமைதியாக ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர்.(87) இவர்கள் அனைவரும் எள்ளுப் பதர்களே, இவர்கள் அனைவரும் நரகத்தில் மூழ்கிவிட்டவர்களே என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர்கள் மன்னர்களுக்கு மன்னனான இந்தக் கௌரவனிடம் (துரியோதனனிடம்) பணியாளாகவே பணிசெய்ய முடியும்” என்றான்{கர்ணன்}.(88) ஓ! பாரதா {அர்ஜுனா}, பாவம் நிறைந்தவனும், தீய இதயம் கொண்டவனும், இழிந்தவனுமான கர்ணன், அந்தச் சந்தர்ப்பத்தில் நீ கேட்டுக் கொண்டிருக்கும்போதே பேசிய இழிந்த பேச்சு இதுவே.(89)

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், உன்னால் ஏவப்படுகையில் உயிரையே எடுக்கவல்லவையுமான கணைகள், அந்த இழிந்தவன் உங்களுக்குச் செய்த பிற தீங்குகள் அனைத்தையும், அந்த (நெருப்பு) வார்த்தைகளையும் அணைக்கட்டும். உன் கணைகள் அந்தத் தீங்குகள் அனைத்தையும் தணித்து, அந்தப் பொல்லாதவனின் உயிரையும் அணைக்கட்டும்.(90,91) அந்தத் தீய ஆன்மா கொண்ட கர்ணன், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட பயங்கரக் கணைகளின் தீண்டலை உணர்ந்து, பீஷ்மர் மற்றும் துரோணரின் வார்த்தைகளை இன்று நினைத்துப் பார்க்கட்டும்.(92) எதிரிகளைக் கொல்பவையும், மின்னலின் பிரகாசத்தைக் கொண்டவையுமான துணிக்கோல் கணைகள் உன்னால் ஏவப்பட்டு, அவனது முக்கிய அங்கங்களைத் துளைத்து, அவனது குருதியைக் குடிக்கட்டும்.(93) பெரும் வேகம் கொண்டவையும், சீற்றமும், வலிமையும் மிக்கவையுமான கணைகள் உன் கரங்களால் ஏவப்பட்டு, கர்ணனின் முக்கிய அங்கங்களை ஊடுருவி, இன்று அவனை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பட்டும்.(94)

இன்று உன் கணைகளால் பீடிக்கப்பட்டு, தன் தேரில் இருந்து கீழே விழும் கர்ணனைக் கண்டு, உற்சாகத்தை இழந்து, கவலையில் நிறைந்து, பூமியின் மன்னர்கள் அனைவரும் துன்பத்துடன் ஓலமிடட்டும்.(95) இன்று குருதியில் மூழ்கி, தன் பிடியிலுள்ள ஆயுதங்கள் தளர்ந்து, பூமியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடக்கும் கர்ணனை அவனது சொந்தங்கள் மகிழ்சியற்ற முகங்களுடன் காணட்டும்.(96) யானை கட்டும் கயிரைப் பொறியாகக் கொண்டதும், உயரமானதுமான அதிரதன் மகனின் {கர்ணனின்} கொடிமரம், உன் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} வெட்டப்பட்டு, படபடத்துக் கொண்டே பூமியில் விழட்டும். (97) சல்லியன், (தான் செலுத்துவதும்) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேரானது, அதன் போர்வீரனையும், குதிரைகளையும் இழந்து உன் நூற்றுக்கணக்கான கணைகளால் துண்டுகளாக வெட்டப்படுவதைக் கண்டு, அச்சத்தால் அதைக் கைவிட்டுவிட்டு ஓடட்டும்.(98) உன் எதிரியான சுயோதனன், உன்னால் கொல்லப்படும் அதிரதன் மகனைக் {கர்ணனைக்} கண்டு, அரசு மற்றும் உயிரில் நம்பிக்கையிழக்கட்டும்.(99)

ஓ! பார்த்தா, சக்தியில் இந்திரனுக்கு இணையானவனும், அல்லது ஒருவேளை சங்கரனே ஆனவனுமான கர்ணன், தன் கணைகளால் அதோ உன் துருப்புகளைக் கொன்று வருகிறான்.(100) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {அர்ஜுனா}, அங்கே கர்ணனின் கூரிய கணைகளால் கொல்லப்பட்டாலும், பாண்டவர்களின் காரியத்தை நிறைவேற்றவே பாஞ்சாலர்கள் விரைகின்றனர்.(101) ஓ! பார்த்தா, பாஞ்சாலர்கள், திரௌபதியின் (ஐந்து) மகன்கள், திருஷ்டத்யும்னன், சிகண்டி, திருஷ்டத்யும்னனின் மகன்கள், நகுலனின் மகன் சதானீகன், நகுலன், சகாதேவன், துர்முகன், ஜனமேஜயன், சுதர்மன், சாத்யகி ஆகியோரைக் கர்ணன் விஞ்சி நிற்கிறான்.(102-103) ஓ! எதிரிகளை எரிப்பவனே, உன் கூட்டாளிகளான அந்தப் பாஞ்சாலர்கள் அந்தப் பயங்கரப் போரில் கர்ணனால் தாக்கப்படும்போதும் உண்டாகும் உரத்த ஆரவாரம் கேட்கப்படுகிறது.(104) பாஞ்சாலர்கள் ஒருபோதும் அஞ்சவில்லை, அல்லது அவர்கள் போர்க்களத்தில் இருந்து புறமுதுகிடவும் இல்லை. அந்த வலிமைமிக்க வில்லாளிகள், இந்தப் பெரும்போரில் ஏற்படப்போகும் மரணத்தைத் துச்சமாக மதிக்கின்றனர்.(105)

தனியாகவே பாண்டவப் படையைத் தன் கணைமேகங்களால் சூழ்ந்து கொண்ட பீஷ்மருடன் மோதியும் அந்தப் பாஞ்சாலர்கள் அவரிடம் இருந்து தங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளவில்லை {புறமுதுகிடவில்லை}.(106) மேலும், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, தங்கள் பெரும் எதிரியும், வில்தரித்தோர் அனைவரின் ஆசானும், வெல்லப்படமுடியாதவரும், ஆயுதங்களின் சுடர்மிக்க நெருப்பும், போரில் தன் எதிரிகளை எப்போதும் எரிப்பவருமான துரோணரைப் பலவந்தமாக வெல்லத் துரிதமாகச் செயல்படவே எப்போதும் அவர்கள் {பாஞ்சாலர்கள்} முயன்றனர். அதிரதன் மகனை {கர்ணனை} அஞ்சி அவர்கள் ஒருபோதும் போரில் தங்கள் முகங்களைத் திருப்பிக் கொண்டதில்லை {புறமுதுகிட்டதில்லை}.(107,108) எனினும் அந்த வீரக் கர்ணன், சுடர்மிக்க நெருப்பை நோக்கி வரும் பூச்சி கூட்டங்களின் உயிரை எடுக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போலப் பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களும், தன்னை எதிர்த்து விரைபவர்களுமான அந்தப் பாஞ்சால வீரர்களின் உயிர்களைத் தன் கணைகளால் எடுக்கிறான்,(109) இந்தப் போரில் அந்த ராதையின் மகன், தங்கள் கூட்டாளிகளுக்காகத் தங்கள் உயிரை விடத் தீர்மானித்தவர்களும், வீரர்களும், தன்னை எதிர்த்து வருபவர்களுமான பாஞ்சாலர்களை நூற்றுக்கணக்கில் அழிக்கிறான்.(110) ஓ! பாரதா, படகற்ற பெருங்கடலான கர்ணனில் மூழ்கிக் கொண்டிருக்கும் அந்தப் பெரும் வில்லாளிகளை, அந்தத் துணிச்சல்மிக்க வீரர்களைக் காக்க நீ அவர்களின் படகாவதே உனக்குத் தகும்.(111)

தவசிகளில் முதன்மையானவரும், பிருகு குலத்தவருமான ராமரிடம் {பரசுராமரிடம்} அவன் பெற்ற அந்த ஆயுதத்தின் {பார்க்கவ ஆயுதத்தின்} கோர வடிவம் வெளிக்காட்டப்படுகிறது.(112) சீற்றமிக்கதும், சக்தியால் சுடர்விடுவதும், பயங்கர வடிவத்தைக் கொண்டதுமான அவ்வாயுதம், நம் பரந்த படையைச் சூழ்ந்து கொண்டு, துருப்புக்ள அனைத்தையும் எரிக்கிறது.(113) கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகள், வண்டுக்கூட்டங்களைப் போலப் போரில் அடர்த்தியாகச் சென்று உன் துருப்புகளை எரிக்கின்றன.(114) ஓ! பாரதா, ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைக்காதவர்களால் தடுக்கப்பட முடியாத கர்ணனின் அவ்வாயுதத்தோடு போரில் மோதும் அந்தப் பாஞ்சாலர்கள், அதோ அனைத்துத் திசைகளிலும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(115) ஓ! பார்த்தா, தணிக்கப்பட முடியாத கோபத்தைக் கொண்டவரான பீமர், அனைத்துப் பக்கங்களிலும் சிருஞ்சயர்களால் சூழப்பட்டு, கர்ணனிடம் போரிட்டு, பின்னவனின் {கர்ணனின்} கூரிய கணைகளால் பீடிக்கப்படுகிறார்.(116) புறக்கணிக்கப்பட்ட நோயின் கிருமி உடலுக்குள் நுழைவதைப் போல, ஓ! பாரதா, கர்ணன் புறக்கணிக்கப்பட்டால், அவன் பாண்டவர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் பாஞ்சாலர்களை அழித்துவிடுவான்.(117)

போரில் ராதையின் மகனுடன் {கர்ணனுடன்} மோதி, வீட்டுக்கு பாதுகாப்பாகவும், நலமாகவும் திரும்பி வருவதற்கு, உன்னைத் தவிர வேறு எந்தப் போர்வீரனையும் யுதிஷ்டிரரின் படையில் நான் காணவில்லை.(118) ஓ! மனிதர்களில் காளையே, ஓ! பார்த்தா, உன் சபதத்துக்குத் தக்கபடி செயல்பட்டு, உன் கூரிய கணைகளால் கர்ணனை இன்று கொன்று பெரும்புகழை வெல்வாயாக.(119) ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே, கர்ணனைத் தங்களுக்கு மத்தியில் கொண்டுள்ள கௌரவர்களைப் போரில் வெல்ல நீ மட்டுமே தகுந்தவன், வேறு எவனும் இல்லை என்பதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(120) வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனைக் கொல்லும் இந்த அருஞ்செயலைச் செய்து, ஓ! பார்த்தா, உன் நோக்கத்தை அடைந்து, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டு மகிழ்ச்சியாக இருப்பாயாக” என்றான் {கிருஷ்ணன்}”.(121)

அர்ஜுனனின் உறுதிமொழிகள்! – கர்ண பர்வம் பகுதி – 74-கர்ணனைக் கொல்வதாகக் கிருஷ்ணனிடம் அர்ஜுனன் செய்த உறுதிமொழிகள்; கர்ணனைக் கொன்ற பிறகு நேரக்கூடியவற்றைக் குறித்துக் கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன்; இறுதியாகக் கிருஷ்ணனின் அனுமதியுடன் மீண்டும் தற்புகழ்ச்சி செய்து கொண்ட அர்ஜுனன்; போரிடப் புறப்பட்டது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதரே, கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பீபத்சு {அர்ஜுனன்}, தன் கவலையை விட்டு உற்சாகம் நிறைந்தவனானான்.(1) காண்டீவத்தின் நாணை உருவி, அதை வளைத்த அவன் {அர்ஜுனன்}, கர்ணனின் அழிவுக்காகத் தன் வில்லைப் பற்றிக் கொண்டு, அந்தக் கேசவனிடம் இவ்வாறு பேசினான்,(2) “ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, உன்னை என் பாதுகாவலனாகக் கொண்டிருக்கும்போதும், கடந்த காலம் மற்றும் வருங்காலத்தை அறிந்தவனான நீ என்னிடம் இன்று நிறைவுடன் இருக்கும்போதும், வெற்றி எனதாகவே இருக்க வேண்டும்.(3) ஓ! கிருஷ்ணா, உன் துணையுடன் கூடிய என்னால் பெரும்போரில் ஒன்று சேர்ந்து வரும் மூன்று உலகங்களையும் அழித்துவிட முடியும் எனும்போது, கர்ணனைக் குறித்து என்ன சொல்ல வேண்டும்?(4) ஓ! ஜனார்த்தனா, பாஞ்சாலர்கள் தப்பி ஓடுவதையும், போரில் கர்ணன் அச்சமற்றவனாகத் திரிவதையும் நான் பார்க்கிறேன்.(5) சக்ரனால் அழைக்கப்பட்ட பலமிக்க வஜ்ரத்தைப் போல, ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, கர்ணனால் இருப்புக்கு அழைக்கப்பட்ட பார்க்கவ ஆயுதம் அனைத்துத் திசைகளிலும் செல்வதை நான் பார்க்கிறேன்.(6) ஓ விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, கர்ணன் என்னால் கொல்லப்படப்போவதும் {இந்தப் போரே}, பூமியுள்ளவரை அனைத்து உயிரினங்களாலும் பேசப்படப்போவதும் இந்தப் போரே.(7)

ஓ! கிருஷ்ணா, என் கரங்களால் செலுத்தப்படுபவையும், காண்டீவத்தில் இருந்து ஏவப்படுபவையுமான முள்ளற்ற கணைகள் {விகர்ணங்கள்}, கர்ணனைச் சிதைத்து, அவனை யமனிடம் இன்று கொண்டு செல்லும்.(8) அரசுரிமைக்குத் தகாதவனான துரியோதனனை அரியணையில் நிறுவிய தமது அறிவை மன்னர் திருதராஷ்டிரர் இன்று சபித்துக் கொள்ளப் போகிறார்.(9) ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, தமது அரசுரிமை, இன்பம், செழிப்பு, அரசு, நகரம் மற்றும் மகன்களைத் திருதராஷ்டிரர் இன்று இழக்கப் போகிறார்.(10) நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன், ஓ! கிருஷ்ணா, கர்ணன் கொல்லப்பட்டதும், துரியோதனன் வாழ்விலும், அரசிலும் இன்று நம்பிக்கையற்றவனாவான்.(11) பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரில் இந்திரனால் வெட்டப்பட்ட விருத்தினரைப் போல, என் கணைகளால் துண்டுகளாக வெட்டப்படும் கர்ணனைக் காணும் மன்னன் துரியோதனன், அமைதியைக் கொண்டு வர நீ பேசிய வார்த்தைகளை இன்று மனத்தில் நினைக்கப் போகிறான்.(12)

ஓ! கிருஷ்ணா, என் கணைகளே {பகடை} பாச்சிகைகள் என்றும், என் காண்டீவமே அவற்றை வீசும் {பகடைக்} களம் என்றும், என் தேரே {பகடை} கட்டம் போட்ட துணி என்றும் சுபலனின் மகன் {சகுனி} இன்று அறியப் போகிறான்.(13) ஓ! கோவிந்தா, கூரிய கணைகளால் கர்ணனைக் கொன்று, குந்தி மகனின் {யுதிஷ்டிரரின்} நீண்ட உறக்கமின்மையை நான் அகற்றுவேன்.(14) என்னால் சூதன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டதன் பேரில், குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரர்} நிறைவை அடைந்து, உற்சாகம் நிறைந்த இதயத்துடன் என்றென்றைக்குமான மகிழ்ச்சியையும் இன்று அடையட்டும்.(15) ஓ! கேசவா {கிருஷ்ணா}, தடுக்கப்பட முடியாததும், ஒப்பற்றதும், கர்ணனை உயிரிழக்கச் செய்வதுமான ஒரு கணையை நான் இன்று ஏவப் போகிறேன்.(16)

ஓ! கிருஷ்ணா, என்னைக் கொல்வது குறித்துக் கர்ணன், “பல்குனனை {அர்ஜுனனைக்} கொல்லாதவரை நான் என் கால்களைக் கழுவமாட்டேன்” என்று சபதம் செய்திருக்கிறான்.(17) ஓ! மதுசூதனா, அந்த இழிந்தவனின் இந்தச் சபதத்தைப் பொய்க்கச் செய்து, நேரான கணைகளால் அவனது உடலை அவனது தேரில் இருந்து நான் இன்று தூக்கி வீசுவேன்.(18) பூமியில் உள்ள பிற மனிதர்கள் அனைவரையும் போரில் இகழும் அந்தச் சூதன் மகனின் {கர்ணனின்} குருதியைப் பூமி இன்று குடிக்கப் போகிறது.(19) திருதராஷ்டிரரின் ஒப்புதலுடன், சூதன் மகன் கர்ணன் தன் தகுதிகளைத் தானே தற்புகழ்ச்சி செய்து கொண்டு, “ஓ! கிருஷ்ணையே, இப்போது உனக்குக் கணவன் எவனும் இல்லை” என்று சொன்னான்.(20) என் கூரிய கணைகள் அவனது அந்தப் பேச்சைப் பொய்க்கச் செய்யும். கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளைப் போல அவனது உயிர்க்குருதியை அவை குடிக்கும்.(21) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட என்னால் செலுத்தப்படுபவையும், மின்னலின் பிரகாசத்தைக் கொண்டவையும், காண்டீவத்தில் இருந்து ஏவப்படுபவையுமான துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்} கர்ணனை அவனது இறுதிப் பயணத்திற்கு அனுப்பப் போகின்றன.(22)

சபைக்கு மத்தியில், பாண்டவர்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் பாஞ்சால இளவரசியிடம் {திரௌபதியிடம்} பேசிய அந்தக் கொடூர வார்த்தைகளுக்காக ராதையின் மகன் {கர்ணன்} இன்று மனம் வருந்துவான்.(23) அந்தச் சந்தர்ப்பத்தில் எள்ளுப்பதர்களாக இருந்தவர்கள், தீய ஆன்மா கொண்டவனும், வைகர்த்தனன் என்று வேறு பெயரால் அழைக்கப்படுபவனும், சூதன் மகனுமான கர்ணன் வீழ்ந்த பிறகு எள்ளாவார்கள்.(24) திருதராஷ்டிரர் மகன்களிடம் தன் தகுதிகளைத் தானே புகழ்ந்து கொள்ளும் வகையில், “நான் உங்களைப் பாண்டுவின் மகன்களிடம் இருந்து காப்பேன்” என்ற வார்த்தைகளைச் சொன்னான். அவனது அந்தப் பேச்சை என் கூரிய கணைகள் பொய்க்கச் செய்யப் போகின்றன.(25) இன்று வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, “பாண்டவர்கள் மற்றும் அவர்களது மகன்கள் அனைவரையும் நான் கொல்வேன்” என்று சொன்ன கர்ணனை நான் கொல்வேன்[1].(26) ஓ! மதுசூதனா, எவனுடைய ஆற்றலை நம்பி தீய புத்தி கொண்ட திருதராஷ்டிரரின் செருக்குமிக்க மகன்கள் எப்போதும் எங்களை அவமதித்தார்களோ, அந்த ராதையின் மகனை, அந்தக் கர்ணனை நான் இன்று கொல்வேன்.(27)

ஓ! கிருஷ்ணா, கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு, தங்கள் மன்னனோடு கூடிய தார்தராஷ்டிரர்கள், சிங்கத்தைக் கண்டு அஞ்சும் மான்களைப் போலப் பீதியடைந்து அனைத்துத் திசைகளிலும் இன்று ஓடப் போகிறார்கள்.(28) போரில் என்னால் கர்ணன் கொல்லப்பட்டதன் பேரில், மன்னன் துரியோதனன், தன் மகன்கள் மற்றும் உறவினர்களுடன் கூடி இன்று மனம் வருந்த போகிறான்.(29) ஓ! கிருஷ்ணா, இன்று கர்ணன் கொல்லப்படுவதைக் கண்டு, திருதராஷ்டிரரின் கோபம் நிறைந்த மகன் {துரியோதனன்} போரில் வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவன் என்று என்னை அறியட்டும்.(30) மன்னர் திருதராஷ்டிரர் மற்றும் அவரது மகன்கள், பேரப்பிள்ளைகள், அமைச்சர்கள், பணியாட்கள் ஆகியோரை நான் இன்று உறைவிடமற்றவர்களாக்குவேன்.(31) ஓ! கேசவா, நாரைகளும், பிற ஊனுண்ணும் பறவைகளும், என் கணைகளால் துண்டுகளாக வெட்டப்பட்ட கர்ணனின் அங்கங்களுடன் இன்று விளையாடப் போகின்றன.(32) ஓ! மதுசூதனா, வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ராதையின் மகனான கர்ணனின் தலையை நான் இன்று வெட்டப் போகிறேன்.(33) ஓ! மதுசூதனா, விபாடங்கள் மற்றும் கத்தி முகக் கணைகள் {க்ஷுரப்ரங்கள்} ஆகியவற்றால் தீய ஆன்மா கொண்ட ராதையின் மகனுடைய அங்கங்களைப் போரில் இன்று நான் அறுக்கப் போகிறேன்.(34)

வீர மன்னர் யுதிஷ்டிரர் தம் இதயத்தில் நீண்ட காலமாக உள்ள பெரும் வலியிலிருந்தும் {துன்பத்த்திலிருந்தும்}, பெரும் கவலையிலிருந்தும் இன்று விடுபடப் போகிறார்.(35) ஓ! கேசவா, ராதையின் மகனையும், அவனது உறவினர்கள் அனைவரையும் கொன்று தர்மனின் மகனான யுதிஷ்டிரரை நான் இன்று மகிழ்ச்சியுறச் செய்வேன்.(36) ஓ! கிருஷ்ணா, சுடர்மிக்க நெருப்பு, அல்லது நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பான கணைகளால் போரில் உற்சாகமற்ற வகையில் கர்ணனைப் பின்தொடர்ந்து செல்வோரை நான் இன்று கொல்வேன்.(37) ஓ! கோவிந்தா, தங்கக் கவசம் பூண்டவர்களான மன்னர்களை (அவர்களின் உடல்களைக்) கழுகின் இறகுகளைக் கொண்ட என் நேரான கணைகளைக் கொண்டு இன்று பூமியில் விரவிக் கிடக்கச் செய்வேன்.(38) ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, அபிமன்யுவின் எதிரிகள் அனைவரின் உடல்களையும் என் கூரிய கணைகளால் நொறுக்கி, அவர்களது தலைகளை இன்று அறுப்பேன்.(39) ஓ! கேசவா, தார்தராஷ்டிரர்கள் {திருதராஷ்டிரனின் குல தோன்றல்கள்} அற்ற பூமியை என் அண்ணனுக்கு {யுதிஷ்டிரருக்கு} நான் இன்று அளிப்பேன், அல்லது ஒருவேளை அர்ஜுனன் இல்லாத பூமியில் நீ நடந்து கொண்டிருப்பாய்.(40)

ஓ! கிருஷ்ணா, வில்லாளிகள் அனைவருக்கும், என் கோபத்திற்கும், குருக்களுக்கும், என் கணைகளுக்கும், காண்டீவத்திற்கும் பட்டிருக்கும் கடனில் இருந்து நான் இன்று விடுபடுவேன்.(41) ஓ! கிருஷ்ணா, சம்பரனைக் கொன்ற மகவத்தை {இந்திரனைப்} போலப் போரில் கர்ணனைக் கொன்று, பதிமூன்று வருடங்களாக அனுபவித்த துயரில் இருந்து நான் இன்று விடுபடுவேன்.(42) தங்கள் கூட்டாளிகளின் பணியை நிறைவேற்ற விரும்பியவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான சோமகர்கள், போரில் நான் கர்ணனைக் கொன்ற பிறகு, தங்கள் பணி நிறைவடைந்ததாக இன்று கருதப் போகிறார்கள்.(43) ஓ! மாதவா {கிருஷ்ணா}, நான் இன்று கர்ணனைக் கொன்று வெற்றியை அடைந்ததும், சிநியின் பேரன் {சாத்யகி} கொள்ளும் மகிழ்ச்சியின் அளவை நான் அறியமாட்டேன்.(44) போரில் கர்ணனையும், வலிமைமிக்கத் தேர்வீரனான அவனது மகனையும் கொன்று, பீமர், இரட்டையர்கள் (நகுலன், சகாதேவன்) மற்றும் சாத்யகி ஆகியோருக்கு நான் இன்று மகிழ்ச்சியை அளிக்கப் போகிறேன்.(45) ஓ! மாதவா, பயங்கரப் போரில் கர்ணனைக் கொன்று, திருஷ்டத்யும்னன் மற்றும் சிகண்டி ஆகியோருடன் கூடிய பாஞ்சாலர்களுக்கு நான் பட்டிருக்கும் கடனை நான் இன்று அடைக்கப் போகிறேன்.(46) போரில் கௌரவர்களுடன் போரிட்டு, சூதன் மகனைக் கொல்லும் கோபம் நிறைந்த தனஞ்சயனை {அர்ஜுனனை} அனைவரும் இன்று காணப் போகிறார்கள்.(47)

மீண்டும் உன் முன்னிலையில் என் சொந்த பெருமைகளை நானே சொல்ல {தற்புகழ்ச்சி செய்ய என்னை} அனுமதிப்பாயாக. ஆயுத அறிவியலில் இவ்வுலகில் எனக்கு நிகராக எவனும் கிடையாது. ஆற்றலிலும் கூட எனக்கு ஒப்பானவன் எவன் இருக்கிறான்? பொறுமையில் எனக்கு இணையான வேறு எந்த மனிதன் இருக்கிறான்? கோபத்திலும், எனக்கு நிகராக வேறு எவனும் கிடையாது.(48,49) ஒன்றுகூடியவர்களான அசுரர்கள், தேவர்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தையும், வில் தரித்தவனும், என் கரங்களின் ஆற்றலைத் துணையாகக் கொண்டவனுமான என்னால் வெல்ல முடியும்.(50) தனி ஒருவனாக என் வலிமையை வெளிப்படுத்தி, காண்டீவத்தில் இருந்து வெளிப்படும் என் கணைகளின் நெருப்பைக் கொண்டு, குருக்கள் மற்றும் பாஹ்லீகர்கள் அனைவரையும் தாக்கி, குளிர்காலத்தின் நெருக்கத்தில் உலர்ந்த புற்குவியலின் மத்தியில் உள்ள நெருப்பைப் போல அவர்களைப் பின்தொடர்பவர்களையும் நான் எரிப்பேன்.(51) இந்த அம்புக்குறிகளும், நாணில் பொருத்தப்பட்ட கணையுடன் வளைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிறந்த விற்குறிகளையும் என் உள்ளங்கையில் நான் கொண்டிருக்கிறேன். என் உள்ளங்கால் ஒவ்வொன்றிலும் தேர் மற்றும் கொடிமரத்தின் குறியீடுகள் இருக்கின்றன. போரிடச் செல்லும் என்னைப் போன்ற மனிதன் ஒருவன், எவனாலும் வெல்லப்பட முடியாது” என்றான் {அர்ஜுனன்}.(52) ரத்தச் சிவப்பான கண்களைக் கொண்டவனும், எதிரிகளைக் கொல்பவனும், வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அவன் {அர்ஜுனன்}, அச்யுதனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டுப் பீமனை மீட்கவும், கர்ணனின் உடலில் இருந்து அவனது தலையைக் கொய்யவும் வேகமாகப் போரிடச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}.(53)

சுஷேணனைக் கொன்ற உத்தமௌஜஸ்! – கர்ண பர்வம் பகுதி – 75-அர்ஜுனன் புறப்பட்ட பிறகு ஏற்பட்ட போரின் தன்மையைத் திருதராஷ்டிரனுக்கு விளக்கிய சஞ்சயன்; அர்ஜுனன் ஏற்படுத்திய அழிவு; எவரெவர் எவரெவரோடு மோதினர் என்ற குறிப்பு; கர்ணனின் மகனான சுஷேணனைக் கொன்ற உத்தமௌஜஸ்; உத்தமௌஜஸைத் தேரற்றவனாகச் செய்த கர்ணன்; கிருபரின் குதிரைகளைத் தாக்கிவிட்டு சிகண்டியின் தேரில் ஏறிக் கொண்ட உத்தமௌஜஸ்; தேரிழந்த கிருபரைக் கொல்லாமல் விட்ட சிகண்டி; கிருபரை மீட்ட அஸ்வத்தாமன்; பீமனின் ஆவேசத் தாக்குதல்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! ஐயா {சஞ்சயா}, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகியோருக்கும், என் படையின் போர்வீரர்களுக்கும் இடையில் நடந்ததும், பயங்கரமானதும், நிலைகாண முடியாததுமான அம்மோதலில் தனஞ்சயன் {அர்ஜுனன்} போரிடச் சென்ற போது, உண்மையில் அந்தப் போர் எவ்வாறு நடந்தது?” என்று கேட்டான்.(1)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் போரில் உயரந்த கொடிமரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், (செருக்கிலும், சக்தியிலும்) பெருகியிருந்தவையுமான பாண்டவப்படையின் எண்ணற்ற பிரிவுகள் ஒன்றாகச் சேர்ந்து, கோடையின் முடிவில் ஆழ்ந்த முழக்கங்களை வெளியிடும் மேகத்திரள்களைப் போல, பேரிகைகளையும், பிற கருவிகளையுமே தங்கள் வாயாகக் கொண்டு உரக்க முழங்கத் தொடங்கின.(2) அதைத் தொடர்ந்து நடந்த போரானது, கொடூரமானதும், வாழும் உயிரினங்களுக்கு அழிவை உண்டாக்குவதுமான பருவந்தவறிய, கேடுநிறைந்த மழைக்கு ஒப்பானதாக இருந்தது. பெரும் யானைகளே அதன் மேகங்களாக இருந்தன; ஆயுதங்களே அங்கே பொழியும் நீராகின; இசைக்கருவிகளின் டங்காரமும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும், உள்ளங்கை ஒலிகளும் அதன் முழக்கங்களாகின; தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு ஆயுதங்கள் மின்னலின் கீற்றுகளாகின; கணைகள், வாள்கள், துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, வலிமைமிக்க ஆயுதங்கள் ஆகியன மழைத்தாரைகளாகின. {போரின்} வேகமான தொடக்கத்தால் அம்மோதலில் குருதியாறு பாய்ந்தது. இடைவிடாத வாள்வீச்சுகளால் பயங்கரத் தன்மையை அடைந்த அது {அம்மோதல்}, க்ஷத்தரியரின் பேரழிவை அதிகமாகக் கொண்டிருந்தது.(3,4)

தேர்வீரர்கள் பலர் ஒன்றாகச் சேர்ந்து, தனியொரு தேர்வீரனைச் சூழ்ந்து கொண்டு, அவனை யமனின் முன்னிலைக்கு அனுப்பினர். அல்லது, தனியொரு முதன்மையான தேர்வீரன், தனியொரு பகைவனை {அவ்வாறு} அனுப்பினான், அல்லது தனியொருவன் ஒன்றாகச் சேர்ந்திரந்த பகைவர்கள் பலரை {யமனின் முன்னிலைக்கு} அனுப்பினான்.(5) மேலும், ஏதோவொரு தேர்வீரன், ஏதோவொரு பகைவனை அவனது சாரதி மற்றும் குதிரைகளோடு யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான். ஒரே யானையில் ஏதோ ஒரு பாகன், தேர்வீரர்கள் பலரையும், குதிரைவீரர்களையும் {யமனுலகு} அனுப்பினான்.(6) அதேபோலவே பார்த்தனும் {அர்ஜுனனும்}, {தன்} கணை மேகங்களைக் கொண்டு, பகைவருக்குச் சொந்தமான சாரதிகள் மற்றும் குதிரைகளோடு கூடிய தேர்கள் பலவற்றையும், சாரதிகளோடு கூடிய யானைகளையும், குதிரைகளையும், காலாட்படைவீரர்களையும் {யமனுலகு} அனுப்பினான்.(7) அந்தப் போரில் கிருபரும், சிகண்டியும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர், அதே வேளையில், சாத்யகி துரியோதனனை எதிர்த்துச் சென்றான். மேலும் சுருதசிரவஸ், துரோணர் மகனோடும் {அஸ்வத்தாமனோடும்}, யுதாமன்யு சித்திரசேனனோடும் மோதினர்.(8)

பெரும் சிருஞ்சயத் தேர்வீரனான உத்தமௌஜஸ், கர்ணனின் மகனான சுஷேணனுடன் மோதினான், அதேவேளையில் சகாதேவன், வலிமைமிக்கக் காளையை எதிர்க்கும் பசித்த சிங்கம் ஒன்றைப் போலக் காந்தாரர்களின் மன்னன் சகுனியை எதிர்த்து விரைந்தான்.(9) நகுலனின் மகனான இளமைநிறைந்த சதானீகன், கணைமாரியை ஏவியபடியே கர்ணனின் மகனான இளமைநிறைந்த விருஷசேனனை எதிர்த்து விரைந்தான். கர்ணனின் வீர மகனும் {விருஷசேனனும்}, அந்தப் பாஞ்சால இளவரசியின் {திரௌபதியின்} மகனை {சதானீகனை} கணைகள் பலவற்றால் தாக்கினான்.(10) போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனும், தேர்வீரர்களில் காளையுமான அந்த மாத்ரியின் மகன் நகுலன் கிருதவர்மனைத் தாக்கினான். பாஞ்சாலர்களின் மன்னனும், யக்ஞசேனனின் {துருபதனின்} மகனுமான திருஷ்டத்யும்னன், கௌரவப் படையின் தலைவனான கர்ணனைத் தன் படைகள் அனைத்தையும் கொண்டு தாக்கினான்.(11) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பாரதப் படையில் ஒரு பகுதியாக அமைந்திருந்தவர்களும், பெருகியிருந்தவர்களுமான சம்சப்தகர்களின் படையோடு கூடிய  துச்சாசனன், தடுக்கப்பட முடியாத வேகத்தைக் கொண்டவனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான பீமனை அந்தப் போரில் சீற்றத்துடன் தாக்கினான்.(12)

வீர உத்தமௌஜஸ் தன் பலத்தை வெளிப்படுத்தி, கர்ணன் மகனை {சுஷேணனைத்} தாக்கி, அவனது தலையை அறுத்ததால், அது {அந்தத் தலை} பூமியையும், ஆகாயத்தையும் பேரொலியால் நிறைத்தபடி கீழே பூமியில் விழுந்தது.(13) சுஷேணனின் தலை தரையில் கிடப்பத்தைக் கண்டு, கர்ணன் கவலையால் நிறைந்தான். எனினும் சினத்தோடு கூடிய அவன் {கர்ணன்}, தன் மகனைக் கொன்றவனின் {உத்தமௌஜஸின்} குதிரைகள், தேர், கொடிமரம் ஆகியவற்றைக் கூரிய கணைகள் பலவற்றால் விரைவில் வெட்டி வீழ்த்தினான்.(14) அதே வேளையில் உத்தமௌஜஸ், கிருபரின் குதிரைகளைத் தன் கூரிய கணைகளால் துளைத்து, பிரகாசமான தன் வாளால் அவற்றையும், கிருபரின் பக்கங்களைப் பாதுகாத்த போர்வீரர்களையும் வெட்டி வீழ்த்தி, சிகண்டியின் தேரில் வேகமாக ஏறினான்.(15) கிருபர் தமது தேரை இழந்தவராக இருப்பதைக் கண்டவனும், தன் வாகனத்தில் இருந்தவனுமான சிகண்டி,  அவரை {கிருபரைத்} தன் கணைகளால் தாக்க விரும்பவில்லை. அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} கிருபரின் தேரைத் தன் தேரால் மறைத்துக் கொண்டு, சேற்றில் சிக்கிய காளையை மீட்பதைப் போலப் பின்னவரை {கிருபரை} மீட்டான்.(16)

அதேவேளையில், காற்று தேவனின் {வாயுத்தேவனின்} மகனான பீமன், தங்கக் கவசம் பூண்டு, கோடை காலத்தலில் அனைத்தையும் எரிக்கும் நடுப்பகல் சூரியனைப் போல, உமது மகன்களின் துருப்புகளைத் தன் கூரிய கணைகளால் எரிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(17)
விசோகனுக்குப் பரிசளித்த பீமன்! – கர்ண பர்வம் பகுதி – 76- தனியொருவனாகப் போரிட்டுக் கொண்டிருந்த பீமன்; பீமனிடம் இருந்து தப்பி ஓடிய கௌரவப் படை; யுதிஷ்டிரன் ஓடிவிட்டதாகவும், அர்ஜுனன் இறந்துவிட்டதாகவும் ஐயுற்ற பீமன், ஆயுதங்கள் போதுமான அளவுக்கு இருக்கின்றவா என்று தன் தேரோட்டியான விசோகனிடம் ஆய்வு செய்யுமாறு சொன்னது; அர்ஜுனன் வருவதைக் கண்டு பீமனுக்குச் சொன்ன விசோகன்; மகிழ்ச்சியடைந்த பீமன் விசோகனுக்குப் பரிசுகளை அளிப்பது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தக் கடும்மோதல் நடக்கையில், தனி ஒருவனாகப் போரிட்டுக் கொண்டிருந்த பீமன், எண்ணற்ற எதிரிகளால் சூழப்பட்டபோது, {பீமன்} தன் சாரதியிடம் {விசோகனிடம்}, “தார்தராஷ்டிரப் படைக்கு மத்தியில் என்னைக் கொண்டு செல்வாயாக.(1) ஓ! தேரோட்டியே, இந்தக் குதிரைகளால் சுமக்கப்பட்டு வேகமாகச் செல்வாயாக. இந்தத் தார்தராஷ்டிரர்கள் அனைவரையும் நான் யமனின் முன்னிலைக்கு அனுப்புவேன்” என்றான். இவ்வாறு பீமசேனனால் தூண்டப்பட்ட தேரோட்டி, பீமன் எந்த இடத்தில் உமது மகனின் {துரியோதனனின்} படையை அழிக்க விரும்பினானோ, அந்த இடத்திற்கு அதை எதிர்த்து மிக மூர்க்கமாகவும், வேகமாகவும் சென்றான். அப்போது யானைகள், தேர்கள், குதிரை மற்றும் காலாட்கள் ஆகியவற்றோடு கூடிய எண்ணற்ற கௌரவத் துருப்புகள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனை எதிர்த்து விரைந்தன.(2,3) பிறகு ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும், பீமனுக்குச் சொந்தமான முதன்மையான வாகனங்களைத் தங்கள் எண்ணற்ற கணைகளால் அவர்கள் {கௌரவர்கள்} தாக்கினர். எனினும், உயர் ஆன்ம பீமன், தன்னை நோக்கி வரும் எதிரிகளின் கணைகள் அனைத்தையும் தங்கச்சிறகுகளைக் கொண்ட தன் கணைகளால் அறுத்தான்.(4)

இவ்வாறு பீமனின் கணைகளால் இரண்டு, அல்லது மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அவனது எதிரிகளின் கணைகள் பூமியில் விழுந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனின் கணைகளால் தாக்கப்பட்ட முதன்மையான க்ஷத்திரியர்களுக்கு மத்தியில், யானைகள், தேர்கள், குதிரை மற்றும் காலாட்கள் ஆகியன,(5) ஓ! ஏகாதிபதி, இடியால் பிளக்கப்படும் மலைகள் உண்டாக்கும் ஆரவாரத்திற்கு ஒப்பாக உரக்க ஓலமிட்டன. இவ்வாறு பீமனால் தாக்கப்பட்ட அந்த முதன்மையான க்ஷத்திரியர்கள், பீமனின் பலமிக்கக் கணைகளால் தங்கள் அங்கங்கள் துளைக்கப்பட்டு, புதிதாக வளர்ந்த பறவைகள் ஒரு மரத்தை நோக்கிச் செல்வதைப் போல, அந்தப் போரில் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பீமனை எதிர்த்து விரைந்தனர். இவ்வாறு அவனை {பீமனை} எதிர்த்து உமது துருப்புகள் சென்ற போது, சீற்றமும், மூர்க்கமும் கொண்ட அந்தப் பீமன், யுக முடிவின்போது கதாயுதம் தரித்த காலன், உயிரினங்கள் அனைத்தையும் எரித்து அழிப்பதைப் போலத் தன் வேகமனைத்தையும் வெளிப்படுத்தினான்.(6-7) யுக முடிவில் வாயை அகல விரித்து அனைத்து உயிர்களையும் அழிக்கும் காலனைப் போலச் சீற்றமும், வேகமும் கொண்டிருந்த அந்தப் பீமனை உமது படைவீரர்களால் தடுக்க முடியவில்லை.(8) பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, புயலால் சிதறடிக்கப்படும் மேகத்திரள்களைப் போல, உயர் ஆன்மப் பீமனால் அந்தப் போரில் இவ்வாறு சிதைத்து எரிக்கப்பட்ட அந்தப் பாரதப் படையானது அனைத்துப் பக்கங்களிலும் பிளக்கப்பட்டுத் தப்பி ஓடியது. அப்போது, வலிமைமிக்கவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான பீமசேனன், தன் தேரோட்டியிடம் உற்சாகமாக,(9,10) “ஓ! சூதா {விசோகா}, என்னை நோக்கி வரும் அந்தத் தேர்களும், கொடிமரங்களும் நமக்குச் சொந்தமானவையா? எதிரிகளுக்குச் சொந்தமானவையா? என்பதை உறுதி செய்வாயாக. போரில் உள்ளிழுக்கப்பட்டிருப்பதால், அவற்றை வேறுபடுத்திப் பார்க்க என்னால் இயலவில்லை. என் கணைகளால் என் துருப்புகளையே நான் மறைக்காமல் இருக்க வேண்டும்.(11)

ஓ! விசோகா, அனைத்துப் பக்கங்களிலும் பகை போர்வீரர்களையும், தேர்களையும், அவர்களது கொடிமரங்களின் உச்சிகளையும் {மட்டுமே} காண்பதால் நான் பெரிதும் பீடிக்கப்பட்டிருக்கிறேன். மன்னரோ {யுதிஷ்டிரரோ} துன்பத்தில் இருக்கிறார். கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனும் இன்னும் வரவில்லை. ஓ! சூதா, இக்காரியங்கள் என் இதயத்தைக் கவலையால் நிறைக்கின்றன.(12) ஓ! தேரோட்டி, எதிரிகளுக்கு மத்தியில் என்னை விட்டுவிட்டு நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் சென்று விட்டார் என்பதே என் துயரமாகும். பீபத்சுவும் {அர்ஜுனனும்} உயிரோடிருக்கிறானா? அல்லது இறந்துவிட்டானா? என்பதை நான் அறியவில்லை. இஃது என் துயரத்தை இன்னும் அதிகரிக்கிறது.(13) எனினும், பெரும் துன்பத்தில் நிறைந்திருந்தாலும், பெரும் வலிமையைக் கொண்ட இந்தப் பகைவரின் துருப்புகளை நான் அழிப்பேன். கூடியிருக்கும் எதிரிகளுடனான போருக்கு மத்தியில் இவ்வாறு அழிவை உண்டாக்கி, இன்று நான் உன்னை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்வேன்.(14) ஓ! சூதா, கணைகளைக் கொண்ட என் அம்பறாத்தூணிகள் அனைத்தையும் ஆய்வு செய்து, என் தேரில் எஞ்சியிருக்கும் கணைகளின் அளவையும், வகைகளையும், நன்றாக உறுதி செய்வாயாக” என்றான் {பீமன்}.(15)

இவ்வாறு ஆணையிடப்பட்ட விசோகன், “ஓ! வீரரே {பீமரே}, கணைகளில் நீர் இன்னும் அறுபதாயிரத்தைக் {60,000} கொண்டிருக்கிறீர், உமது கத்தித் தலைக் கணைகள் {க்ஷுரப்ரங்கள்}, அகன்ற தலை கணைகள் {பல்லங்கள்} ஒவ்வொன்றிலும் பத்தாயிரம் {10,000} எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறீர். ஓ! வீரரே, துணிக்கோல் கணைகளில் {நாராசங்களில்} இன்னும் இரண்டாயிரம் {2,000} இருக்கின்றன, ஓ, பார்த்தரே {பீமரே}, பிரதரங்களில் {சிறப்பு வகைக் கணைகள்} இன்னும் மூவாயிரம் {3,000} இருக்கின்றன. உண்மையில், ஓ! பார்த்தரே {பீமரே}, ஆறு எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகளில் சுமக்க முடியாத அளவுகளுக்கான ஆயுதங்கள் இன்னும் இருக்கின்றன.(16) ஓ! கல்விமானே, கரங்களைக் கொண்டு மட்டுமே பயன்படுத்தும் ஆயுதங்களில் கதாயுதங்கள் மற்றும் வாள்கள் மட்டுமே இன்னும் ஆயிரம் ஆயிரமாக இருக்கின்றன. அதே அளவுக்கு வேல்கள், குறுவாள்கள், ஈட்டிகள், சூலங்கள் ஆகியனவும் இருக்கின்றன. உமது ஆயுதங்கள் தீர்ந்து போகும் என்று ஒருபோதும் அஞ்சாதீர்” என்றான் {விசோகன்}.(17)

பீமன் {தேரோட்டி விசோகனிடம்}, “ஓ! சூதா, இந்தப் பயங்கரமான போரில் என் வில்லில் இருந்து சீற்றத்துடன் ஏவப்படும் வேகமான கணைகளால், என் எதிரிகள் அனைவரையும் சிதைத்து, அனைத்தையும் மறைக்கப்போவதால் சூரியன் மறைந்து யமனின் இருள் உலகங்களுக்கு ஒப்பாக இந்தப் போர்க்களத்தை ஆக்கப்போகிறது.(18) ஓ! சூதா, போரில் பீமசேனன் அடிபணிந்தான், அல்லது குருக்கள் அனைவரையும் அவன் அடியபணியச் செய்தான் என்பதைக் குழந்தைகள் உள்ளிட்ட க்ஷத்திரியர்கள் அனைவரும் இன்று அறியப் போகிறார்கள்.(19) கௌரவர்கள் அனைவரும் போரில் வீழ்வார்கள், அல்லது என் கடந்த காலச் சாதனைகளைத் தொடக்கமாகக் கொண்டு உலகமனைத்தும் என்னை இன்று மெச்சப் போகிறது. தனி ஒருவனாக நான் அவர்கள் அனைவரையும் வீழ்த்தப் போகிறேன், அல்லது அவர்கள் அனைவரும் பீமசேனனைத் தாக்கி வீழ்த்தப் போகிறார்கள்.(20) நற்செயல்களைச் சாதிக்க உதவி செய்யும் தேவர்கள் எனக்கு அருள் வழங்கப் போகிறார்கள். முறையாக இருப்புக்கு அழைக்கப்படும் சக்ரன் {இந்திரன்}, வேகமாக ஒரு வேள்விக்கு வருவதைப் போல எதிரிகளைக் கொல்பவனான அர்ஜுனன் இப்போது இங்கே வரப்போகிறான்.(21) பாரதப்படை பிளப்பதைப் பார். அந்த மன்னர்கள் ஏன் தப்பி ஓடுகிறார்கள்? மனிதர்களில் முதன்மையான சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் கணைகளால் அந்தப் படையை மறைக்கிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(22)

ஓ! விசோகா, அந்தக் கொடிமரங்கள், யானைகள், குதிரைகள் மற்றும் காலாட்படைவீரர்களின் கூட்டம் ஆகியன ஓடிப்போவதைப் பார். ஓ! சூதா, கணைகள் மற்றும் ஈட்டிகளால் தாக்கப்படும் இந்தத் தேர்கள், சிதறடிக்கப்படுவதைப் பார்.(23) தங்கச் சிறகுகள் மற்றும் மயிலின் இறகுகள் ஆகியவற்றைக் கொண்டவையும், இடியின் சக்தியைக் கொண்டவையுமான தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் அதிகமாகக் கொல்லப்பட்டாலும், இடைவெளிகளை நிரப்பிக் கொள்ளும் அந்தக் கௌரவப் படையை அதோ பார்.(24) தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியன காலாட்படைவீரர்களின் கூட்டத்தை நசுக்கிக் கொண்டு தப்பி ஓடுகின்றன. உண்மையில், தங்கள் உணர்வுகளை இழந்த கௌரவர்கள் அனைவரும், எரியும் காட்டில் அச்சத்தால் நிறைந்த யானைகளைப் போலத் துன்பக் குரலை வெளியிட்டபடியே தப்பி ஓடுகின்றனர். ஓ! விசோகா, அந்தப் பெரும் யானைகளும் கணைகளால் தாக்கப்பட்டு உரக்கப் பிளிறுகின்றன” என்றான் {பீமன்}.(25,26)

விசோகன் {பீமனிடம்}, “ஓ! பீமரே, பார்த்தரால் {அர்ஜுனரால்} கோபத்துடன் வளைக்கப்படும் காண்டீவத்தின் நாணொலியை நீர் கேட்காமலிருப்பது எவ்வாறு? இந்த உமது காதுகள் இரண்டும் செயலிழந்துவிட்டனவா?[1](27) ஓ! பாண்டுவின் மகனே {பீமரே}, உமது விருப்பங்கள் யாவும் நிறைவேறிவிட்டன. (எதிரியின்) யானைப்படைக்கு மத்தியில் (அர்ஜுனரின் கொடியில் உள்ள) குரங்கு அதோ காணப்படுகிறது. நீல மேகங்களுக்கு மத்தியில் மின்னலைப் போலக் காண்டீவத்தின் நாண்கயிறுகள் கீற்றுகளாகத் தெரிவதைப் பாரும்.(28) அதோ தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கொடிமரத்தின் உச்சியில் உள்ள குரங்கானது இந்தப் பயங்கரப் போரில் பகைவரின் படைப்பிரிவுகளை அனைத்துப் பக்கங்களிலும் அச்சுறுத்துகிறது. நான் கூட அதைப் பார்க்கும்போது அச்சத்தால் தாக்கப்படுகிறேன்.(29) அங்கே, அர்ஜுனரின் அழகிய கிரீடம் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் கிரீடத்தில் உள்ள ரத்தினம் சூரியனின் காந்தியோடு மிகப் பிரகாசமாகத் தெரிகிறது.(30)அவருக்குப் பக்கத்தில் உரத்த சங்கொலியைக் கொண்டதும், வெண்மேகங்களின் வண்ணத்தைக் கொண்டதுமான அவரது தேவதத்த சங்கை அங்கே பாரும். கடிவாளங்களைப் பிடித்துக் கொண்டு, பகைவரின் படைக்குள் ஊடுருவும் ஜனார்த்தனருக்கு {கிருஷ்ணருக்குப்} பக்கத்தில் சூரியப் பிரகாசத்தைக் கொண்டதும், கத்தி போன்ற கூர்மை கொண்டதுமான அவரது சக்கரத்தைப் பாரும். ஓ! வீரரே, எப்போதும் யதுக்களால் வழிபடப்படுவதும், புகழைப் பெருக்குபவனான கேசவனுடையதுமான அந்தச் சக்கரத்தைப் பாரும்.(31,32) முற்றிலும் நேராக உயர்ந்திருக்கும் மரங்களுக்கு ஒப்பானவையான பெரும் யானைகளின் அந்தத் துதிக்கைகள், கிரீடியால் {அர்ஜுனனால்} வெட்டப்பட்ட பூமியில் விழுகின்றன. அந்தப் பெரும் உயிரினங்களும், கணைகளால் துளைத்துப் பிளக்கப்பட்டு, இடியால் பிளக்கப்பட்ட மலைகளைப் போலத் தங்கள் பாகர்களுடன் அங்கே கீழே விழுகின்றன.(33) ஓ! குந்தியின் மகனே {பீமரே}, மிக அழகானதும், சந்திரனின் நிறத்தைக் கொண்டதுமான கிருஷ்ணரின் பாஞ்சஜன்யத்தையும், அவரது மார்பில் சுடர்விடும் கௌஸ்துபத்தையும், அவரது வெற்றி மாலையையும் அங்கே காண்பீராக.(34)

தேர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், முதலானவருமான பார்த்தர் {அர்ஜுனர்}, வெண்மேகங்களின் நிறத்தைக் கொண்டவையும், கிருஷ்ணரால் தூண்டப்பட்டவையுமான தன் முதன்மையான குதிரைகளால் சுமக்கப்பட்டு, பகைவரின் படையைக் கொன்றபடியே வருகிறார் என்பதில் ஐயமில்லை.(35) தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} சக்தியைக் கொண்ட உமது தம்பியால் {அர்ஜுனனால்} சிதைக்கப்பட்ட அந்தத் தேர்கள், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்களின் கூட்டத்தைப் பாரும். கருடனின் சிறகுகளால் உண்டாக்கப்பட்ட புயலில் வேரோடு பிடுங்கப்பட்ட காட்டைப் போல அவை விழுந்து கொண்டிருப்பதைப் பாரும்.(36) தங்கள் குதிரைகள் மற்றும் சாரதிகளுடனும் கூடிய நானூறு தேர்வீரர்களும், எழுநூறு யானைகளும், எண்ணற்ற காலாட்படைவீரர்கள் மற்றும் குதிரைவீரர்களும் கிரீடியின் {அர்ஜுனரின்} வலிமைமிக்கக் கணைகளால் இந்தப் போரில் கொல்லப்படுவதைப் பாரும்.(37) குருக்களைக் கொன்றபடியே வலிமைமிக்க அர்ஜுனன், சித்திரை நட்சத்திரக்கூட்டத்தைப் போல உமது பக்கத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். உமது விருப்பங்கள் யாவும் நிறைவேறுகின்றன. உமது எதிரிகள் அழிக்கப்படுகிறார்கள். உமது வலிமையும், உமது வாழ்நாளும் எப்போதும் அதிகரிக்கட்டும்” என்றான் {விசோகன்}.(38)

பீமன் {தேரோட்டி விசோகனிடம்}, “ஓ! விசோகா, அர்ஜுனனின் வருகையை நீ சொன்னதாலும், நீ சொன்ன அந்தச் செய்தியால் உன்னிடம் எனக்கு மகிழ்ச்சி உண்டானதாலும், மக்கள் தொகை நிறைந்த பதினான்கு கிராமங்களையும், நூறு அடிமைப்பெண்களையும், இருபது தேர்களையும் நான் உனக்குத் தருகிறேன்” என்றான் {பீமன்}”.(39)

சகுனியைத் தோற்கடித்த பீமன்! – கர்ண பர்வம் பகுதி – 77-அர்ஜுனன் கௌரவப் படைகளுக்கு ஏற்படுத்திய பேரழிவு; கர்ணனின் படையை நோக்கிச் சென்ற அர்ஜுனன்; அர்ஜுனன் வருவதை உணர்ந்த பீமன் உற்சாகமாகப் போரிட்டது; பீமனைத் தடுக்கத் தன் படையை ஏவிய துரியோதனன்; இரண்டு லட்சத்து இருநூறு வீரர்களைக் கொன்ற பீமன் அங்கே ஒரு குருதிப் புனலை உண்டாக்கியது; பீமனைத் தாக்கச் சகுனியை ஏவிய துரியோதனன்; பீமனுடன் சகுனி புரிந்த வீரப் போர்; பீமனைச் சரமாரியாகத் தாக்கிய சகுனி; இருவருக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர்; சகுனியின் வில், குதிரைகள், சாரதி, தேர் ஆகியவற்றை அழித்து அவனை மயக்கமடையச் செய்த பீமன்; பீமனிடம் இருந்து தப்பி ஓடிய துரியோதனனும், கௌரவர்களும்; கர்ணனைத் தஞ்சமடைந்த கௌரவர்கள்; கர்ணனின் படையை நோக்கிச் சென்ற பீமன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தேரொலிகளையும், (போர்வீரர்களின்) சிங்க முழக்கங்களையும் கேட்ட அர்ஜுனன், “குதிரைகளைப் பெரும் வேகத்தில் தூண்டுவாயாக” என்று கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்} சொன்னான்.(1) அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கோவிந்தன், அவனிடம், “பீமர் எங்கிருக்கிறாரோ அங்கே நான் பெரும் வேகத்தோடு செல்லப்போகிறேன்” என்றான்.(2) அப்போது கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், தேர்கள், குதிரைகள், யானைகள் மற்றும் காலாட்களின் பெரும்படைகளோடு சென்று, தங்கள் கணைகளின் விஸ் ஒலி, தங்கள் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி, தங்கள் குதிரைக் குளம்படிகளின் ஒலிகள் ஆகியவற்றால் பூமியை எதிரொலிக்கச் செய்தவர்களுமான (கௌரவப் படைக்குச் சொந்தமான) மனிதர்களில் சிங்கங்கள் பலர், பனி, அல்லது சங்கு போன்று வெண்மையானவையும், தங்கம், முத்து, ரத்தினங்களால் ஆன கடிவாளங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகளால் சுமக்கப்பட்டு வெற்றிபெற முன்னேறிச் சென்றவனும், (அசுரன்) ஜம்பனைக் கொல்வதற்காக வஜ்ரத்தைத் தரித்துக் கொண்டு அவனை எதிர்த்துப் பெருங்கோபத்தோடு சென்ற தேவர்கள் தலைவனை {இந்திரனைப்} போன்றவனுமான ஜயனை (அர்ஜுனனை) எதிர்த்துச் சென்றனர்.(3-4) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவர்களுக்கும், பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் உடல், உயிர், பாவம் ஆகியவற்றுக்கு அழிவைத் தருவதும், மூவுலகங்களின் நிமித்தமாக அசுரர்களுக்கும், வெற்றியாளர்களில் முதன்மையானவனான தேவன் விஷ்ணுவுக்கும் இடையில் நடைபெற்ற போரைப் போன்றதுமான ஒரு பெரும்போர் நடந்தது.(5)

கிரீடம் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனான பார்த்தன் {அர்ஜுனன்}, தனியொருவனாகவே அவர்கள் ஏவிய வலிமைமிக்க ஆயுதங்களையும், அவர்களது சிரங்கள் மற்றும் கரங்களையும் பல்வேறு வழிகளில், பெரும் கூர்மை கொண்ட கத்தி முக, பிறைவடிவ, அகன்ற தலை கணைகளால் {க்ஷுரப்ரம், அர்த்தச்சந்திரக்கணை, பல்லங்கள் ஆகியவற்றால்} வெட்டினான்.(6) குடைகள், விசிறுவதற்கான சாமரங்கள், கொடிமரங்கள், குதிரைகள், தேர்கள், காலாட்படை கூட்டங்கள், யானைகள் ஆகியன பல்வேறு வழிகளில் வடிவம் சிதைக்கப்பட்டு, புயலால் முறிந்து விழும் காட்டைப் போலப் பூமியில் விழுந்தன.(7) தங்க அம்பாரிகளால் அலங்கரிக்கப்பட்டு, (முதுகுகளில்) வெற்றிக்கொடிகள் மற்றும் போர்வீரர்களைக் கொண்ட பெரும் யானைகள், தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் துளைக்கப்பட்ட போது, ஒளியுடன் எரியும் மலைகளைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தன.(8) யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றை வாசவனின் வஜ்ரத்திற்கு ஒப்பான சிறந்த கணைகளால் துளைத்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, பழங்காலத்தில் (அசுரன்) பலனைப் பிளக்கச் சென்ற இந்திரனைப் போலவே கர்ணனைக் கொல்ல வேகமாகச் சென்று கொண்டிருந்தான்.(9) மனிதர்களில் புலியும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன் {அர்ஜுனன்}, பெருங்கடலுக்குள் பாயும் மகரத்தைப் போல உமது படைக்குள் ஊடுருவினான்.(10).

அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்ட உமது போர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள், காலாட்கள், பெரும் எண்ணிக்கையிலான யானைகள் மற்றும் குதிரைகள் ஆகியவற்றுடன் அவனை எதிர்த்து விரைந்தனர்.(11) அவர்கள் பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்ற போது உண்டாக்கிய ஆரவாரமானது, புயலின் சீற்றத்தால் அடிக்கப்படும் பெருங்கடலின் நீரால் உண்டாக்கப்பட்டதற்கு ஒப்பாகப் பேராற்றல் வாய்ந்ததாக இருந்தது.(12) (ஆற்றலில்) புலிகளுக்கு ஒப்பான அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் அனைவரும், மரணம் குறித்த அச்சமனைத்தையும் கைவிட்டு, அந்தப் போரில், அந்த மனிதர்களில் புலியை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தனர்.(13) எனினும் அர்ஜுனன், குரு தலைவர்களின் அந்தத் துருப்புகள் அவன் மீது ஆயுதமாரியை ஏவியபடி முன்னேறி வருகையிலேயே கூடித்திரண்ட மேகத் திரள்களை விரட்டும் புயல் காற்றைப் போல அவற்றை முறியடித்தான்.(14) தாக்குவதில் திறம்பெற்றவர்களா அந்தப் பெரும் வில்லாளிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் அர்ஜுனனை எதிர்த்துச் சென்று, கூரிய கணைகளால் அவனைத் துளைக்கத் தொடங்கினர்.(15)

அப்போது அர்ஜுனன், தன் கணைகளால் பல்லாயிரக்கணக்கான தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(16) அர்ஜுனனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் இவ்வாறு அந்தப் போரில் தாக்கப்பட்ட அந்தப் பெரும் தேர்வீரர்கள், தங்கள் தேர்களில் இருந்து ஒருவருக்கடுத்து ஒருவராகக் காணாமல் போவதாகத் தெரிந்தது.(17) மொத்தமாக அர்ஜுனன், அந்தப் போரில் வீரத்துடன் முயன்று கொண்டிருந்த அந்த வீரத் தேர்வீரர்களில் நானூறு பேரைத் தன் கூரிய கணைகளால் கொன்றான்.(18) பல்வேறு வகைகளிலான கூரிய கணைகளால் தாக்கப்பட்ட அவர்கள், அர்ஜுனனைத் தவிர்த்துவிட்டு அனைத்துப் பக்கங்களில் தப்பி ஓடினர்.(19) பொங்கும் கடலானது மலையோடு மோதி சிதறும்போது உண்டாவதைப் போல அந்தப் போர்வீரர்கள் பிளந்து, தப்பி ஓடியபோது உண்டான ஆரவாரம் பேராற்றல் வாய்ந்ததாக இருந்தது.(20)

அந்தப் படையைத் தன் கணைகளால் முறியடித்து, அதை அச்சுறுத்திய பிருதையின் மகன் அர்ஜுனன், ஓ! ஐயா, அதன்பிறகு சூதன் மகனின் {கர்ணனின்} படைப்பிரிவை எதிர்த்துச் சென்றான்.(21) பழங்காலத்தில் பாம்புகளைப் பிடிக்கப் பாய்ந்திறங்கிய கருடன் உண்டாக்கியதைப் போன்ற பேரொலியுடன் அர்ஜுனன் தன் எதிரிகளைச் சந்தித்தான்.(22) பார்த்தனைப் {அர்ஜுனனைப்} பார்க்கவிரும்பிய வலிமைமிக்கப் பீமசேனன், அவ்வொலியைக் கேட்டு மகிழ்ச்சியால் நிறைந்தான்.(23) பார்த்தனின் வருகையைக் கேட்டுணர்ந்த வீர பீமசேனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் உயிரையே துச்சமாக மதித்து உமது துருப்புகளைக் கலங்கடிக்கத் தொடங்கினான்.(24) காற்றுக்கு இணையான ஆற்றலைக் கொண்டவனும், காற்று தேவனின் மகனுமான வீர பீமன், காற்றைப் போலவே அந்தக் களத்தில் திரியத் தொடங்கினான்.(25)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனால் தாக்கப்பட்ட உமது படையானது, கடலுக்கு மத்தியில் உடைந்த கப்பலைப் போலச் சுழலத் தொடங்கியது.(26) தன் கரநளினத்தை வெளிப்படுத்திய பீமன், தன் கடுங்கணைகளால் அந்தப் படையை வெட்டிச் சிதைக்கத் தொடங்கி, பெரும் எண்ணிக்கையிலானோரை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான்.(27) அந்தச் சந்தர்ப்பத்தில், யுக முடிவில் தோன்றும் அந்தகனைப் போல, மனித சக்திக்கு அப்பாற்பட்ட பீமனின் வலிமையைக் கண்ட உமது போர்வீரர்கள் அச்சத்தால் நிறைந்தனர்.(28) வலிமைநிறைந்த தன் படைவீரர்கள் இவ்வாறு பீமசேனனால் பீடிக்கப்படுவதைக் கண்ட மன்னன் துரியோதனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகளையும், பெரும் வில்லாளிகள் அனைவரையும் அழைத்து, ஓ! பாரதக் குலத்தின் காளையே, பீமன் வீழ்த்தப்பட்டால் பாண்டவத் துருப்புகளை ஏற்கனவே கொல்லப்பட்டனவாகக் கருதலாம் என்பதால் அந்தப் போரில் அவர்களிடம் பீமனைக் கொல்ல ஆணையிட்டான்.(29,30)

உமது மகனின் {துரியோதனனின்} ஆணையை ஏற்ற மன்னர்கள் அனைவரும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கணைமாரியால் பீமனை மறைத்தனர்.(31) ஓ! மன்னா, வெற்றி பெறும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற யானைகளும், மனிதர்களும், ஓ! ஏகாதிபதி, தேர்களும், குதிரைகளும் விருகோதரனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டன.(32) இவ்வாறு அந்தத் துணிச்சல்மிக்க வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டவனும், பாரதக் குலத்தின் தலைவனுமான அந்த வீரன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விண்மீன்களால் சூழப்பட்ட நிலவைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(33) உண்மையில் முழு நிலவானது தன் ஒளிவட்டத்திற்குள் அழகாகத் தெரிவதைப் போலவே அந்த மனிதர்களில் சிறந்தவனும் {பீமனும்} அந்தப் போரில் மிக அழகானவனாகத் தெரிந்தான்.(34) கொடூர நோக்கம் கொண்ட அந்த மன்னர்கள் அனைவரும் கோபத்தால் சிவந்த கண்களுடனும், விருகோதரனை {பீமனைக்} கொல்லும் விருப்பத்தால் உந்தப்பட்டும் தங்கள் கணை மழையை அவன் மீது பொழிந்தனர்.(35)

நேரான கணைகளால் அந்த வலிமைமிக்கப்படையைத் துளைத்த பீமன், வலையில் இருந்து வெளிப்படும் மீன் ஒன்றைப் போல, பின்வாங்காத பத்தாயிரம் {10,000} யானைகளையும், இருநூறாயிரத்து இருநூறு (இரண்டு லட்சத்து இருநூறு- 2,00,200} மனிதர்களையும், ஓ! பாரதரே, ஐந்தாயிரம் {5,000} குதிரைகளையும், நூறு தேர்வீரர்களையும் கொன்றுவிட்டு அந்த முற்றுகையில் இருந்து வெளிவந்தான். இவை யாவையும் கொன்ற பீமன் அங்கே ஒரு குருதிப் புனலை {இரத்த ஆற்றைப்} பாயச் செய்தான்.(36-38) குருதியே அதன் நீரானது, தேர்கள் சுழல்களாகின; யானைகள் அதில் நிறைந்திருக்கும் முதலைகளாகின. மனிதர்கள் அதன் மீன்களாகவும், குதிரைகள் அதன் சுறாக்களாகவும், விலங்குகளின் முடிகள் அதன் பாசியாகவும் ஆகின.(39) உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட கரங்கள் அதன் முதன்மையான பாம்புகளாகின. எண்ணற்ற ஆபரணங்களும், ரத்தினங்களும் அவ்வோடையில் அடித்துச் செல்லப்பட்டன. தொடைகள் அதன் முதலைகளாகவும், ஊனீர் சேறாகவும் ஆகின. மேலும் தலைகள் அதன் பாறைகளாகின.(40)

விற்களும் கணைகளும், அந்தப் பயங்கர ஆற்றைக் கடந்த செல்ல மனிதர்களால் வேண்டப்பட்ட தெப்பங்களாகவும், கதாயுதங்களும், பரிகங்களும் அதன் பாம்புகளாகின. குடைகள், கொடிமரங்கள் அதன் அன்னங்களாகவும், தலைப்பாகைகள் அதன் நுரையாகவும் ஆகின.(41) கழுத்தணிகள் அதன் தாமரைகளாகவும், அங்கே எழுந்த மண் தூசு அதன் அலைகளாகவும் அமைந்தன. உன்னதக் குணங்களைக் கொண்டோர் அதை எளிமையாகக் கடந்தனர், மருண்டோரும், அச்சமடைந்தோரும் கடப்பதற்குக் கடினமானதாக அதைக் கண்டனர்.(42) போர்வீரர்களையே அதன் முதலைகளாகக் கொண்ட அது யமனின் உலகத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது. உண்மையில், அந்த மனிதர்களில் புலி {பீமன்}, அந்நதியை வெகுவிரைவில் உண்டாக்கிவிட்டான்.(43) தூய்மையற்ற ஆன்மாக்களைக் கொண்டோருக்கு வைதரணீயைக் கடப்பது கடினம் என்பதைப் போல, பயங்கரமானதும், மருண்டோரின் அச்சத்தை அதிகரிப்பதுமான அந்தக் குருதிப் புனலைக் கடப்பதும் கடினமானதாக இருந்தது.(44) தேர்வீரர்களில் சிறந்தவர்களான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} எங்கே ஊடுருவினானோ, அங்கே அவன் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பகை போர் வீரர்களை வீழ்த்தினான்.(45)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே},போரில் பீமசேனனால் அடையப்பட்ட அந்தச் சாதனைகளைக் கண்ட துரியோதனன்,  சகுனியிடம், “ஓ! மாமா, போரில் வலிமைமிக்கப் பீமசேனனை வெல்வீராக. அவன் {பீமன்} வீழ்த்தப்பட்டால், வலிமைமிக்கப் பாண்டவப் படையும் வீழ்த்தப்படதாகவே கருதப்படும்” என்றான்.(47) இவ்வாறு சொல்லப்பட்டவனும், பயங்கரப் போரைச் செய்யவல்லவனுமான அந்தச் சுபலனின் வீர மகன் {சகுனி}, ஓ! ஏகாதிபதி, தன் தம்பிகள் சூழ அங்கிருந்து சென்றான்.(48) பயங்கர ஆற்றலைக் கொண்ட பீமனை அந்தப் போரில் அணுகிய அந்த வீரச் சகுனி, பெருங்கடலையைத் தடுக்கும் கரையைப் போல அவனைத் தடுத்தான்.(49) கூரிய கணைகளால் பீமன் தடுக்கப்பட்டாலும், அவை யாவையும் அலட்சியம் செய்த பீமன், சுபலன் மகன்களை எதிர்த்துச் சென்றான்.(50)

அப்போது சகுனி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான எண்ணற்ற துணிக்கோல் கணைகளை {நாராசங்களை} பீமனுடைய மார்பின் இடது பக்கத்தில் ஏவினான்.(51) அந்த உயர் ஆன்மப் பாண்டு மகனின் {பீமனின்} கவசத்தைத் துளைத்துச் சென்றவையும், கங்க மற்றும் மயில் இறங்குகளைக் கொண்டவையுமான அந்தக் கடுங்கணைகள், ஓ! ஏகாதிபதி, அவனது உடலில் ஆழமாக மூழ்கின.(52) அந்தப் போரில் ஆழத் துளைக்கப்பட்ட பீமன், ஓ! பாரதரே, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணையொன்றைச் சுபலன் மகன் {சகுனி} மீது திடீரென ஏவினான்.(53) எனினும், ஓ! மன்னா, எதிரிகளை எரிப்பவனும், பெரும் கரநளினம் கொண்டவனுமான சகுனி, தன்னை நோக்கி வந்த அந்தப் பயங்கரக் கணையை ஏழு துண்டுகளாக வெட்டினான்.(54) தன் கணை பூமியில் விழுந்த போது, ஓ! மன்னா, மிகவும் கோபமடைந்த பீமன், ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} சுபலன் மகனின் வில்லை மிக எளிதாக வெட்டினான்.(55)

அப்போது அந்த வீரச் சுபலன் மகன் {சகுனி}, முறிந்த அந்த வில்லை விட்டு விட்டு, மற்றொரு வில்லையும், பதினாறு அகன்ற தலை கணைகளையும் {பல்லங்களையும்} எடுத்தான்.(56) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த அகன்ற தலை கணைகளில் நேரான இரண்டைக் கொண்டு பீமனைத் தாக்கி;(57) மற்றொன்றால் பீமனின் கொடிமரத்தை வெட்டி, இன்னும் இரண்டால் அவனது குடையையும் அவன் {சகுனி} அறுத்தான். அந்தச் சுபலன் மகன் {சகுனி}, எஞ்சியிருப்பவற்றில் நான்கைக் கொண்டு தன் எதிராளியின் நான்கு குதிரைகளைத் துளைத்தான்.(58) இதனால் சினத்தால் நிறைந்த வீரப் பீமன், ஓ! ஏகாதிபதி, இரும்பாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடியைக் கொண்டதுமான ஓர் ஈட்டியை அந்தப் போரில் வீசினான்.(59) பாம்பின் நாக்கைப் போல ஓய்வற்றதும், பீமனின் கரங்களில் இருந்து ஏவப்பட்டதுமான அந்த ஈட்டியானது, உயர் ஆனமச் சுபலன் மகனுடைய தேரின் மீது வேகமாக விழுந்தது.(60)

அப்போது கோபத்தால் நிறைந்த பின்னவன் {சகுனி}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அதே ஈட்டியை எடுத்து, அதைப் பீமசேனன் மீது திரும்ப வீசினான்.(61) உயர் ஆன்மப் பாண்டு மகனின் {பீமனின்} இடது கரத்தைத் துளைத்த அது, வானத்தில் இருந்து கீற்றுகளாக விழும் மின்னலைப் போலப் பூமியில் விழுந்தது.(62) ஓ! ஏகாதிபதி, இதனால் தார்தராஷ்டிரர்கள் சுற்றிலும் பெரும் முழக்கத்தை வெளியிட்டனர். எனினும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட தன் எதிரிகளின் அந்தச் சிங்க முழக்கங்களைப் பீமனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(63) அப்போது அந்த வலிமைமிக்கப் பாண்டுவின் மகன் {பீமன்} நாண் பொருத்தப்பட்ட மற்றொரு வில்லை ஒரு கணத்தில் எடுத்துக் கொண்டு, ஓ! ஏகாதிபதி, தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்துப் போரிட்டுக் கொண்டிருந்த சுபலன் மகனின் {சகுனியின்} படைவீரர்களைக் கணைகளால் மறைத்தான்.(64) அவனது நான்கு குதிரைகளையும், பிறகு அவனது சாரதியையும் கொன்றவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், ஓ! மன்னா, அடுத்ததாக, ஒரு கணத்தையும் இழக்காமல் தன் எதிராளியின் கொடிமரத்தை ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} அறுத்தான்.(65)

அந்தக் குதிரைகளற்ற தேரை வேகமாகக் கைவிட்டவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்தச் சகுனி, சினத்தால் சிவந்த கண்களுடனும், தயாராகத் தன் கரங்களில் வளைத்து வைக்கப்பட்ட வில்லுடனும் தரையில் நின்று கொண்டு, பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அவன் பிறகு, ஓ!மன்னா {திருதராஷ்டிரரே}, எண்ணற்ற கணைகளால் பீமனை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தாக்கினான்.(66) அந்தக் கணைகளாக் கலங்கடித்த வீரப் பீமன், சினத்தால் சகுனியின் வில்லை அறுத்து, கூரிய கணைகள் பலவற்றால் சகுனியையும் துளைத்தான்.(67) பலமிக்கத் தன் எதிராளியால் ஆழத் துளைக்கப்பட்ட அந்த எதிரிகளை எரிப்பவன் {சகுனி}, ஓ! மன்னா, கிட்டத்தட்ட உயிரற்றவனைப் போலப் பூமியில் விழுந்தான்.(68) அவன் {சகுனி} மயக்கமடைந்ததைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, பீமசேனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் தேரில் அவனைப் {சகுனியைப்} போரிலிருந்து கொண்டு சென்றான்.(69) மனிதர்களில் புலியான அந்தச் சகுனி, துரியோதனனின் தேரில் இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட போது, போரில் இருந்து தங்கள் முகங்களைத் திருப்பிக் கொண்ட தார்தராஷ்டிரத் துருப்புகள், பீமசேனனால் அந்தப் பயங்கரச் சந்தர்ப்பத்தில் அச்சமடைந்து அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(70)

பெரும் வில்லாளியான அந்தப் பீமசேனனால், சுபலன் மகன் {சகுனி} தோற்கடிக்கப்பட்டதும், பெரும் அச்சத்தால் நிறைந்த உமது மகன் துரியோதனன், தன் தாய்மாமனின் {சகுனியின்} உயிர் மீது கொண்ட மதிப்பால், தன் வேகமானக் குதிரைகளால் சுமக்கப்பட்டுப் பின்வாங்கினான்.(71) போரில் இருந்து மன்னனே {துரியோதனனே} பின்வாங்குவதைக் கண்டத் துருப்புகள், ஓ! பாரதரே, அவ்விருவருக்கும் இடையில் நடந்த மோதலில் இருந்து தப்பிச் சென்றனர்.(72) போரில் இருந்து தார்தராஷ்டிரத் துருப்புக்ள அனைத்தும் பின்வாங்குவதையும், அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடுவதையும் கண்ட பீமன், வேகமாக விரைந்து, அவர்கள் மீது பாய்ந்து, நூற்றுக்கணக்கான கணைகளை ஏவினான்.(73) பீமனால் கொல்லப்பட்டுப் பின்வாங்கிய தார்தராஷ்டிரர்கள், ஓ! மன்னா, கர்ணன் இருந்த இடத்தை அடைந்து, அவனைச் சுற்றி நின்று மீண்டும் போரில் நிலை கொண்டனர்.(74)

பெரும் வலிமையும், பெரும் சக்தியும் கொண்ட கர்ணனே அவர்களுக்குப் புகலிடமாக அமைந்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கர்ணனைக் கண்ட உமது துருப்புகள் ஆறுதலையடைந்து, கப்பல் உடைந்த மாலுமிகள், ஓ! மனிதர்களில் புலியே, துன்பம் நிறைந்த தங்கள் அவல நிலையில், இறுதியாக ஒரு தீவை அடைவதைப் போல, ஒருவரையொருவர் நம்பி உற்சாகமாக நின்றனர். பிறகு அவர்கள், மீண்டும் மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்காக விரைந்தனர்” {என்றான் சஞ்சயன்}”.(75-77)

கர்ணன் ஏற்படுத்திய பேரழிவு! – கர்ண பர்வம் பகுதி – 78- பீமன் தார்தராஷ்டிரர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்தபோது, கர்ணன் என்ன செய்து கொண்டிருந்தான் என்பதைத் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன சஞ்சயன்; கர்ணனும், பீமனும் தங்கள் எதிரிகளின் படைகளை அழித்தது; பாஞ்சாலர்களை எதிர்த்துச் சென்ற கர்ணன்; கர்ணனைச் சூழ்ந்து கொண்ட பாண்டவப் படை வீரர்கள்; அவர்களைப் புறமுதுகிடச் செய்த கர்ணன்; கர்ணன் ஏற்படுத்திய பேரழிவு; துரியோதனன் அடைந்த மகிழ்ச்சி; பாஞ்சாலர்களின் வீரம்; பாண்டவப் போர்வீரர்கள் ஏற்படுத்திய பேரழிவு…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “அந்தப் போரில் பீமசேனனால் நமது துருப்புகள் பிளக்கப்பட்டபோது, ஓ! சஞ்சயா, துரியோதனனும், சுபலனின் மகனும் {சகுனியும்} என்ன சொன்னார்கள்?(1) அல்லது, வெற்றியாளர்களில் முதன்மையான கர்ணனோ, அந்தப் போரில் என் தரப்பைச் சேர்ந்த போர்வீரர்களோ, கிருபரோ, கிருதவர்மனோ, துரோணரின் மகனோ {அஸ்வத்தாமனோ}, துச்சாசனனோ என்ன சொன்னார்கள்?(2) என் படையின் போர்வீரர்கள் அனைவருடன் அந்தப் போரில் தனியொருவனாகப் போரிட்ட அந்தப் பாண்டுமகனின் {பீமனின்} ஆற்றல் மிக அற்புதமானது என நான் நினைக்கிறேன்.(3) ராதையின் மகன் {கர்ணன்}, தன் சபதத்தின் படி (பகை) துருப்புகளிடம் நடந்து கொண்டானா? ஓ! சஞ்சயா, எதிரிகளைக் கொல்பவனான அந்தக் கர்ணனே, கௌரவர்களின் செழிப்பும், கவசமும், புகழும், வாழ்வின் நம்பிக்கையுமாவான்.(4) அளவற்ற சக்தி கொண்ட அந்தக் குந்தியின் மகனால் {பீமனால்} படை பிளக்கப்படுவதைக் கண்டு, அதிரதன் மற்றும் ராதையின் மகனான கர்ணன் அந்தப் போரில் என்ன செய்தான்?(5) போரில் வீழ்த்தக் கடினமானவர்களான என் மகன்களோ, நமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களோ, பிற மன்னர்களோ என்ன செய்தனர்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(6)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் பிற்பகலில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் வீரம் கொண்டவனான சூதன் மகன் {கர்ணன்}, பீமசேனன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சோமகர்கள் அனைவரையும் தாக்கத் தொடங்கினான்.(7) பெரும்பலம் கொண்ட பீமனும், தார்தராஷ்டிரத் துருப்புகளை அழிக்கத் தொடங்கினான். அப்போது கர்ணன், (தன் சாரதியான) சல்லியனிடம், “பாஞ்சாலர்களிடம் என்னைக் கொண்டு செல்வீராக” என்றான்.(8) உண்மையில், பெரும் நுண்ணறிவு கொண்ட பீமசேனனால் தன் படை முறியடிக்கப்படுவதைக் கண்ட கர்ணன், மீண்டும் தன் சாரதியிடம் {சல்லியனிடம்}, “பாஞ்சாலர்களிடம் மட்டுமே என்னைக் கொண்டு செல்வீராக” என்றான்.(9) இவ்வாறு தூண்டப்பட்டதும்,பெரும் வலிமையைக் கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளனான சல்லியன், மனோ வேகம் கொண்ட அந்த வெண்குதிரைகளைச் சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் காருஷர்களை நோக்கிச் செலுத்தினான்.(10)

பகைவீரர்களைக் கலங்கடிப்பவனான அந்தச் சல்லியன், வலிமைமிக்க அந்தப் படைக்குள் ஊடுருவி, போர்வீரர்களில் முதன்மையான கர்ணன் எந்த இடத்திற்கெல்லாம் செல்ல விரும்பினானோ அந்த இடங்கள் அனைத்திற்கும் அந்தக் குதிரைகளை உற்சாகமாக நடத்தினான்.(11) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, புலித்தோல்களால் மறைக்கப்பட்டதும், மேகத்தைப் போலத் தெரிந்ததுமான அந்தத் தேரைக் கண்ட பாண்டுக்களும், பாஞ்சாலர்களும் பீதியடைந்தனர்.(12) அந்தப் பயங்கரப் போரில் இடியொலி, அல்லது துண்டுகளாகப் பிளக்கும் மலையின் ஒலிக்கு ஒப்பாக அந்தத் தேரின் சடசடப்பொலியானது கேட்டது.(13) கர்ணன், வில்லின் நாணைத் தன் காதுவரை இழுத்து ஏவிய நூற்றுக் கணக்கான கூரிய கணைகளைக் கொண்டு பாண்டவப்படையின் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான போர்வீரர்களைத் தாக்கினான்.(14)

வெல்லப்படாத கர்ணன் அந்த அருஞ்செயல்களைச் செய்து கொண்டிருந்த போது, பாண்டவர்களில் பெரும் தேர்வீரர்களும், வலிமைமிக்க வில்லாளிகள் பலரும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(15) உண்மையில், சிகண்டி, பீமன், பிருஷதனின் மகன் திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன், பாஞ்சாலியின் (ஐந்து) மகன்கள், சாத்யகி ஆகியோர், அந்த ராதையின் மகனைச் {கர்ணனைச்} சூழ்ந்து கொண்டு அவனை அடுத்த உலகத்திற்கு அனுப்பும் விருப்பத்தால், அவன் மீது கணைமாரியைப் பொழிந்தனர்.(16) மனிதர்களில் சிறந்தவனான அந்த வீரச் சாத்யகி, அந்தப் போரில் இருபது கணைகளால் கர்ணனைத் தோள்ப்பூட்டில் தாக்கினான்.(17) சிகண்டி இருபத்தைந்து கணைகளாலும், திருஷ்டத்யும்னன் ஏழாலும், திரௌபதியின் மகன்கள் அறுபத்துநான்காலும், சகாதேவன் ஏழாலும், நகுலன் ஒரு நூறாலும் அந்தப் போரில் அவனைத்தாக்கினர்.(18) வலிமைமிக்கப் பீமசேனன் அம்மோதலில், சினத்தால் நிறைந்து, நேரான தொண்ணூறு கணைகளால் ராதையின் மகனைத் {கர்ணனைத்} தாக்கினான்.(19)

அப்போது பெரும் வலிமைமிக்க அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, ஏளனமாகச் சிரித்துக் கொண்டே, தன் அற்புத வில்லை வளைத்து, தன் எதிரிகளைக் பீடிக்கும்படி கூரிய கணைகள் பலவற்றை விடுத்தான்.(20) அந்த ராதையின் மகன் அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் பதிலுக்குத் துளைத்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் வில்லையும், அவனது கொடிமரத்தையும் அறுத்த கர்ணன், சாத்யகியின் நடுமார்பைத் தொண்ணூறு கணைகளால் துளைத்தான். கோபத்தால் நிறைந்த அவன் {கர்ணன்}, பிறகு பீமசேனனை முப்பது கணைகளால் துளைத்தான்.(21,22) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அடுத்ததாக ஓர் அகன்ற தலைக் கணையை {பல்லத்தைக்} கொண்டு, சகாதேவனின் கொடி மரத்தை அறுத்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {கர்ணன்}, மூன்று பிற கணைகளால், சகாதேவனின் சாரதியையும் பீடித்தான்.(23) ஓ! பாரதக் குலத்தின் காளையே, கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக, திரௌபதியின் (ஐந்து) மகன்களைத் தேரிழக்கச் செய்த அவனது செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(24) உண்மையில், தன் நேரான கணைகளால் அந்த வீரர்களைப் போரில் புறமுதுகிடச் செய்த அந்த வீரக் கர்ணன், பாஞ்சாலர்களையும், சேதிக்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரையும் கொல்லத் தொடங்கினான்.(25)

இவ்வாறு அந்தப் போரில் தாக்கப்பட்ட சேதிகளும், மத்ஸ்யர்களும், கர்ணனை மட்டுமே எதிர்த்து விரைந்து, அவன் மீது கணை மாரியைப் பொழிந்தனர்.(26) எனினும், வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, தன் கூரிய கணைகளால் அவர்களைத் தாக்கத் தொடங்கினான். பெரும் ஆற்றலைக் கொண்டவனும், அந்தப் போரில் எந்த ஆதரவுமின்றி, தனியொருவனாகப் போரிட்ட அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, முழு ஆற்றலோடு போராடிய அந்த வில்லாளிகள் அனைவருடனும் போரிட்டு,(27,28) ஓ! ஏகாதிபதி, பாண்டவப் போர்வீரர்கள் அனைவரையும் தன் கணைகளால் தடுத்த பெரும் சாதனையை நான் கண்டேன். ஓ! பாரதரே, அந்தச் சந்தர்ப்பத்தில் கரநளினம் கொண்ட அந்த உயர் ஆன்ம கர்ணனிடம்,(29) தேவர்கள், சித்தர்கள் மற்றும் சாரணர்கள் அனைவரும் நிறைவு கொண்டனர். ஓ! மனிதர்களில் சிறந்தவரே, தார்தராஷ்டிரர்களில் பெரும் வில்லாளிகள் அனைவரும்,(30) பெரும் தேர்வீரர்களில் முதன்மையானவனும், வில்லாளிகள் அனைவரிலும் முதல்வனுமான கர்ணனைப் புகழ்ந்தனர்.

அப்போது கர்ணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் பகைவரின் அந்தப் படையை,(31) வலிமைமிக்கதும், சுடர்மிக்கதுமான காட்டுநெருப்பானது, கோடைக்காலத்தில் உலர்ந்த புற்குவியலை எரிப்பதைப் போல எரித்தான். இவ்வாறு கர்ணனால் கொல்லப்பட்ட பாண்டவத் துருப்புகள், அச்சத்தால் பீடிக்கப்பட்டு, கர்ணனின் கண் முன்பாகவே அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடியது. கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கூரிய கணைகளால் அந்தப் போரில் இவ்வாறு தாக்கப்பட்டபோது, பாஞ்சாலர்களுக்கு மத்தியில் உரத்த ஓலங்கள் எழுந்தன. அவ்வொலியைக் கேட்டு அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களும், கர்ணனின் எதிரிகளுமான அந்தப் பரந்த பாண்டவப் படையானது,(32-34) கர்ணனையே அந்தப் போரின் ஒரே போர்வீரனாகக் கருதியது. பிறகு எதிரிகளை நொறுக்குபவனான அந்த ராதையின் மகன், மீண்டும் ஓர் அற்புத சாதனையை அடைந்தான்.(35) ஒன்று சேர்ந்திருந்தவர்களான பாண்டவர்களால் அதன்காரணமாக அவனை {கர்ணனைப்} பார்க்கக்கூட முடியவில்லை.

பெருகும் நீர்த்திரளானது மலையை அடையும்போது பிளக்கப்படுவதைப் போலவே,(36) அந்தப் பாண்டவப் படையும், கர்ணனைச் சந்தித்ததும் பிளந்தது. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்தக் கர்ணன், அந்தப் பரந்த பாண்டவப் படையை எரித்து, புகையற்ற சுடர்மிக்க நெருப்பைப் போல அங்கே நின்று கொண்டிருந்தான். ஓ! மன்னா, பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட அந்த வீரன், துணிச்சல் மிக்கத் தன் எதிரிகளின் கரங்களையும், சிரங்களையும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட காதுகளையும் தன் கணைகளால் வெட்டினான். தந்தக் கைப்பிடிகள் கொண்ட வாள்கள், கொடிமரங்கள், ஈட்டிகள், குதிரைகள், யானைகள்,(37-39) பல்வேறு வகையான தேர்கள், கொடிகள், அச்சுகள், நுகத்தடிகள், பல்வேறு வகைகளினான சக்கரங்கள் ஆகியன,(40) ஓ! மன்னா, ஒரு போர்வீரனின் சபதத்தை நோற்கும் கர்ணனால் பல்வேறு வழிகளில் வெட்டப்பட்டன.

ஓ! பாரதரே, அங்கே கர்ணனால் கொல்லப்பட்ட யானைகள், குதிரைகள் ஆகியவற்றுடன் கூடியவையும்,(41) சதைகள் மற்றும் குருதியால் சேறானவையுமான பூமி கடக்கமுடியாததாகியது. கொல்லப்பட்ட குதிரைகள், காலாட்கள், முறிந்த தேர்கள், இறந்த யானைகள் ஆகியவற்றின் விளைவால் அந்தக் களத்தில் சமமற்ற மற்றும் சமமான இடங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(42) கர்ணனின் (தெய்வீக) ஆயுதம் வெளிப்படுத்தப்பட்ட போது கணைகளால் உண்டான அந்த அடர்த்தியான இருளில், போராளிகளால் நண்பர்களையும், எதிரிகளையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(43) ஓ! ஏகாதிபதி, கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான கணைகளால் பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் முற்றாக மறைக்கப்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் இவ்வாறு வீரியத்துடன் போராடிக்கொண்டிருந்த பாண்டவர்களின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், காட்டில் ஒரு கோபக்கார சிங்கத்தால் முறியடிக்கப்படும் மான்கூட்டத்தைப் போலவே, ராதையின் மகனால் {கர்ணனால்} மீண்டும் மீண்டும் பிளக்கப்பட்டனர்.(44-46)

பாஞ்சாலத் தேர்வீரர்களில் முதன்மையானவர்களையும், (பிற) எதிரிகளையும் முறியடித்தவனும், பெரும் புகழைக் கொண்டவனுமான கர்ணன், அந்தப் போரில், சிறு விலங்குகளைக் கொல்லும் ஓர் ஓநாயைப் போலப் பாண்டவப் போர்வீரர்களைக் கொன்றான். போரில் புறமுதுகிடும் பாண்டவப் படையைக் கண்டவர்களும், பெரும் வலிமைமிக்கத் தார்தராஷ்டிர வில்லாளிகள்,(47,48) பின்வாங்கிச் செல்லும் அந்தப் படையைப் பயங்கரக் கூச்சலிட்டபடியே தொடர்ந்து சென்றனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அப்போது பெரும் மகிழ்ச்சியில் நிறைந்த துரியோதனன்,(49) படையின் அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு இசைக்கருவிகளை இசைக்கச்செய்தான். மனிதர்களில் முதன்மையானவர்களான அந்தப் பாஞ்சாலப் பெரும் வில்லாளிகள் பிளந்தாலும் கூட,(50) மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு மீண்டும் போரிடுவதற்காக வீரமாகத் திரும்பினர்.

எனினும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் மனிதர்களில் காளையும், எதிரிகளை அழிப்பவனுமான ராதையின் மகன், திரும்பி வந்த அந்த வீரர்களைப் பல்வேறு வழிகளில் பிளந்தான். ஓ! பாரதரே, அங்கே பாஞ்சாலர்களில் இருபது தேர்வீரர்களும், சேதி போர்வீரர்களில் நூறு பேரும் கர்ணனின் கணைகளால் கொல்லப்பட்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தேர்த்தட்டுகளையும், குதிரைகளின் முதுகுகளையும் வெறுமையாகச் செய்து,(51-53) யானைகளின் கழுத்திலிருந்து போரிட்ட போராளிகளைக் கொன்று, காலாட்படை வீரர்களை முறியடித்தவனும் எதிரிகளை எரிப்பவனும், பெரும் துணிச்சல்மிக்கவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, நடுப்பகல் சூரியனைப் போலக் காணப்பட முடியாதவனாகி, யுக முடிவின் அந்தகனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். இவ்வாறு, ஓ! ஏகாதிபதி, எதிரிகளைக் கொல்பவனும், வலிமைமிக்க வில்லாளியுமான அந்தக் கர்ணன், காலாட்படை வீரர்கள், குதிரைகள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியவற்றைக் கொன்றபடியே தன் தேரில் நின்றிருந்தான். உண்மையில், உயிரினங்கள் அனைத்தையும் கொன்றுவிட்டு நின்று கொண்டிருக்கும் வலிமைமிக்கக் காலனைப் போலவே,(54-56) அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் கர்ணனும், சோமகர்களைக் கொன்றுவிட்டுத் தனியாக நின்று கொண்டிருந்தான். பிறகு, பாஞ்சாலர்களிடம் நாங்கள் கண்ட ஆற்றலானது மிக அற்புதமானதாகத் தெரிந்தது,(57) கர்ணனால் இவ்வாறு தாக்கப்பட்டாலும் கூட அவர்கள் போரில் முகப்பில் இருந்த அந்த வீரனிடம் இருந்து தப்பி ஓட மறுத்தனர்

அந்த நேரத்தில், மன்னன் (துரியோதனன்), துச்சாசனன், சரத்வானின் மகன் கிருபர்,(58) அஸ்வத்தாமன், கிருதவர்மன், பெரும் வலிமையைக் கொண்ட சகுனி ஆகியோர் பாண்டவப் போர்வீரர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொன்றனர்.(59) ஓ! ஏகாதிபதி, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சகோதரர்களான கர்ணனின் மகன்கள் இருவரும், சினத்தால் நிறைந்து, களத்தின் பல்வேறு பகுதிகளில் பாண்டவப் படையைக் கொன்று கொண்டிருந்தனர்.(60) பேரழிவு நேர்ந்த அந்தப் போர் நடந்த இடம் பயங்கரமானதாகவும், கொடூரமானதாகவும் இருந்தது. அதே போலப் பாண்டவ வீரர்களான திருஷ்டத்யும்னன், சிகண்டி,(61) திரௌபதியின் மகன்கள் (ஐவர்) ஆகியோரும் சினத்தால் நிறைந்து உமது படையைக் கொன்றனர். இவ்வாறே பாண்டவர்களுக்கு மத்தியில் களத்தின் அனைத்திடங்களிலும் பேரழிவு நேர்ந்தது, மேலும் இவ்வாறே உமது படையும், வலிமைமிக்கப் பீமனின் கரங்களில் நேர்ந்த பேரிழப்பால் துன்புற்றது” {என்றான் சஞ்சயன்}.(62)

சல்லியனிடம் அர்ஜுனனைப் புகழ்ந்த கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 79-கர்ணனைக் கண்டு களத்தில் குருதிப்புனலை உண்டாக்கிய அர்ஜுனன்; கர்ணனைக் கொல்லாமல் திரும்புவதில்லை என்று கிருஷ்ணனனிடம் சொன்னது; அர்ஜுனனைக் கண்டு கர்ணனுக்குத் தகவல் தெரிவித்த சல்லியன் கர்ணனை அர்ஜுனனிடம் போரிட வற்புறுத்தியது; சல்லியனின் வார்த்தைகளில் ஆறுதல் அடைந்த கர்ணன், அர்ஜுனனைக் கொல்லாமல் திரும்புவதில்லை என்று சல்லியனுக்கு உறுதியளித்தது; சல்லியனிடம் அர்ஜுனனைப் புகழ்ந்த கர்ணன்; அர்ஜுனனுக்கு இணையான போர்வீரன் எவனும் இவ்வுலகில் இல்லை என்று சொன்ன கர்ணன்; அர்ஜுனனைக் கண்டதும் தன் இதயத்திற்குள் அச்சம் நுழைகிறது என்றும், பார்த்தனே வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவன் என்றும் சொன்னது; அர்ஜுனனைத் தடுக்கக் கௌரவர்களை ஏவிய கர்ணன்; அவர்கள் அனைவரையும் தாக்கிய அர்ஜுனன்; அஸ்வத்தாமனையும், கிருபரையும் தேரற்றவர்களாகச் செய்தது; பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில நடந்த கடும் மோதல்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி, (எதிரியின்) நால்வகைப் படைகளையும் கொன்று, அந்தப் பயங்கரப் போரில் கோபக்கார சூதன் மகனையும் {கர்ணனையும்} கண்டு,(1) சதை, ஊனீர் மற்றும் எலும்புகளுடன் கூடிய பழுப்பு நிறக் குருதி ஆற்றை அங்கே உண்டாக்கினான்.(2) மனிதத் தலைகளே அதன் பாறைகளும், கற்களுமாகின. யானைகளும், குதிரைகளும் அதன் கரைகளாக அமைந்தன. வீரப் போராளிகளின் எலும்புகளால் நிறைந்த அது, கருங்காக்கைகள் மற்றும் கழுகுகளின் அலறல்களை எதிரொலித்துக் கொண்டிருந்தது. குடைகள் அதன் அன்னங்களாகின, அல்லது தெப்பங்களாகின. அந்த ஆறானது, தன் ஓடைகளில் மரங்களை இழுத்துச் செல்வதைப் போல வீரர்களைக் கொண்டு சென்றது.(3) (வீழ்ந்து கிடந்த) கழுத்தணிகள் அதன் தாமரைக்கூட்டங்களாகவும், தலைப்பாகைகள் அதன் சிறந்த நுரைகளாகவும் ஆகின. விற்களும், கணைகளும் அதன் மீன்களாகின; மனிதர்களால் நொறுக்கப்பட்ட கிரீடங்கள் அதன் பரப்பில் மிதந்து கொண்டிருந்தன[1].(4) கேடயங்களும், கவசங்களும் அதன் சுழல்களாகின, தேர்கள் அதன் படகுகளாகின. வெற்றியை விரும்பும் மனிதர்களால் எளிதாகக் கடக்கத்தக்கதாகவும், கோழைகளால் கடக்கப்பட முடியாததாகவும் அஃது இருந்தது.(5)

அந்த ஆற்றைப் பாயச் செய்தவனும், பகைவரைக் கொல்பவனும், மனிதர்களில் காளையுமான பீபத்சு {அர்ஜுனன்}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்},(6) “ஓ! கிருஷ்ணா, அதோ சூதன் மகனின் {கர்ணனின்} கொடிமரம் தெரிகிறது. அங்கே பீமசேனரும், பிறரும் அந்தப் பெரும் தேர்வீரனுடன் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அங்கே கர்ணனிடம் அச்சம் கொண்ட பாஞ்சாலர்கள் தப்பி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(7) அங்கே கர்ணனோடு கூடிய மன்னன் துரியோதனன், பாஞ்சாலர்களை முறியடிக்கையில், தன் தலைக்கு மேல் வெண்குடையுடன் மிகப் பிரகாசமாகத் தெரிகிறான்.(8) அங்கே சூதன் மகனால் பாதுகாக்கப்படும் கிருபர், கிருதவர்மன், வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்} ஆகியோர் அம்மன்னன் துரியோதனனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர்.(9) ஓ! கிருஷ்ணா, அங்கே கடிவாளத்தைப் பிடிப்பதை நன்கறிந்தவரான சல்லியர், கர்ணனின் தேர்த்தட்டில் அமர்ந்து, அந்த வாகனத்தை வழிநடத்தியபடியே மிகப் பிரகாசமாகத் தெரிகிறார்.(10) நான் பேணிக்காத்த விருப்பமாகையால், என்னை அந்த வலிமைமிக்கத் தேர்வீரனிடம் கொண்டு செல்வாயாக. கர்ணனைக் கொல்லாமல் நான் இந்தப் போரில் திரும்புவதில்லை. அல்லது, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இந்த ராதையின் மகன் {கர்ணன்}, நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தர்களையும், சிருஞ்சயர்களையும் அழித்துவிடுவான்” என்றான் {அர்ஜுனன்}.(12)

இவ்வாறு சொல்லப்பட்ட கேசவன் {கிருஷ்ணன்}, வேகமாகத் தன் தேரை உமது படைக்கு எதிராகவும், கர்ணனுக்கும், சவ்யசச்சினுக்கும் {அர்ஜுனனுக்கும்) இடையில் ஒரு தனிப்போரை உண்டாக்கவும், வலிமைமிக்க வில்லாளியான கர்ணனை நோக்கிச் சென்றான்.(13) உண்மையில் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஹரி {கிருஷ்ணன்}, பாண்டு மகனின் {அர்ஜுனனின்} ஆணையின் பேரில், பாண்டவத் துருப்புகள் அனைத்திற்கும் (அந்தச் செயலால்) உறுதியளித்தபடியே தன் தேரில் சென்றான்.(14) பிறகு அர்ஜுனனுடைய வாகனத்தின் சடசடப்பொலியானது, வாசவனின் {இந்திரனின்} பேராற்றல் வாய்ந்த வஜ்ரத்தின் ஒலியைப் போல அந்தப் போரில் உரக்க எழுந்தது.(15) கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், அளவில்லா ஆன்மா கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் தேர்ச்சக்கரங்களின் உரத்த சடசடப்பொலியோடு உமது படையை வென்றான் {வென்றபடியே} (வந்தான்).(16)

வெண்குதிரைகளையும், கிருஷ்ணனைச் சாரதியாகவும் கொண்ட அர்ஜுனன் இவ்வாறு முன்னேறி வருவதைக் கண்ட மத்ரர்களின் மன்னன் {சல்லியன்}, அந்த உயர் ஆன்மா கொண்டவனின் கொடிமரத்தையும் கண்டு, கர்ணனிடம்,(17) “தன் வாகனத்தில் வெண்குதிரைகளைப் பூட்டியவனும், கிருஷ்ணனைச் சாரதியாகக் கொண்டவனுமான அந்தத் தேர்வீரன் {அர்ஜுனன்}, போரில் தன் எதிரிகளைக் கொன்றவாறே அதோ வருகிறான். நீ யாரை விசாரித்தாயோ அவன் அதோ வருகிறான்.(18) அதோ அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} தன் வில்லான காண்டீவத்தைப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். இன்று உன்னால் அவனைக் {அர்ஜுனனைக்} கொல்ல முடியுமென்றால், அஃது எங்களுக்குப் பெரும் நன்மையைச் செய்ததாகும்.(19) ஓ! கர்ணா, உன்னோடு மோத விரும்பி, நமது போர்வீரர்களில் தலைமையானவர்களைக் கொன்றபடியே அவன் வருகிறான். ஓ! ராதையின் மகனே {கர்ணா}, வேறு எவனாலும் அவன் தடுக்கப்பட முடியாதவனாவான். பாரதக் குலத்தின் அந்த வீரனை எதிர்த்து நீ செல்வாயாக.(20)

தன் எதிரிகளைப் பெரும் எண்ணிக்கையில் கொல்லும் அர்ஜுனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, அங்கே தார்தராஷ்டிரப்படை அனைத்துப் பக்கங்களிலும் வேகமாகப் பிளக்கிறது.(21) நம் போர்வீரர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டு, சினத்திலும், சக்தியிலும் பெருகி பெரும் வேகத்தோடு வரும் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தோற்றத்திலிருந்து, அவன் உன்னோடு மோதவே {இவ்வாறு} வருகிறான் என நான் நினைக்கிறேன்.(22) கோபத்தில் சுடர்விடும் பார்த்தன் {அர்ஜுனன்}, உன்னையன்றி வேறு யாராலும்; அதிலும் குறிப்பாக (உன்னால்) விருகோதரன் {பீமன்} மிக அதிமாகப் பீடிக்கப்படும்போது தன் போர்விருப்பத்தை விடவே மாட்டான்.(23) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் உன்னால் மிக அதிகமாகச் சிதைக்கப்பட்டு, தேரற்றவனாகச் செய்யப்பட்டான் என்பதை அறிந்தும், சிகண்டி, சாத்யகி, பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னன்,(24) திரௌபதியின் மகன்கள் (ஐவர்), யுதாமன்யு, உத்தமௌஜஸ், சகோதரர்களான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரை(25) {ஆகியோரின் அவலநிலையைக்} கண்டும், எதிரிகளை எரிப்பவனான அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்} உன்னை எதிர்த்துத் தனித்தேரில் மூர்க்கமாக வந்து கொண்டிருக்கிறான்.(26)

பிற போராளிகளைத் தவிர்த்துவிட்டு அவன் {அர்ஜுனன்} நம்மை எதிர்த்தே மிக வேகமாக வருகிறான் என்பதில் ஐயமில்லை. ஓ! கர்ணா, (நம்மில் அவனை எதிர்க்கக் கூடியவர் எவரும் இல்லை என்பதால்) நீயே அவனை எதிர்த்துச் செல்வாயாக.(27) (பொங்கும் கடலைத் தடுக்கும்) கரையைப் போல, போரில் அந்தக் கோபக்கார அர்ஜுனனைத் தடுக்க உன்னைத் தவிர வேறு எந்த வில்லாளியையும் நான் இவ்வுலகில் காணவில்லை.(28) அவனது பக்கங்களுக்கோ, பின்புறத்திற்கோ எந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக நான் காணவில்லை. அவன் தனி ஒருவனாகவே உன்னை எதிர்த்து வருகிறான். இப்போது நீ வெற்றியடைய முயற்சிப்பாயாக.(29) போரில் இரு கிருஷ்ணர்களுடனும் {கருப்பர்களுடன்} மோத நீ ஒருவனே இயன்றவன். ஓ! ராதையின் மகனே, அ்ஃது உன் பொறுப்பேயாகும். எனவே தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துச் செல்வாயாக.(30) பீஷ்மர், துரோணர், துரோணரின் மகன், கிருபர் ஆகியோருக்கு நீ இணையானவனாவாய். இந்தப் பெரும்போரில் முன்னேறி வரும் அந்தச் சவ்யசச்சினை {அர்ஜுனனை} நீ தடுப்பாயாக.(31)

உண்மையில், ஓ! கர்ணா, தன் நாவை அடிக்கடி வீசும் பாம்புக்கோ, முழங்கும் காளைக்கோ, காட்டுப் புலிக்கோ ஒப்பான இந்தத் தனஞ்சயனை {அர்ஜுனனை} நீ கொல்வாயாக.(32) அங்கே அந்த மன்னர்களும், தார்தராஷ்டிரப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அர்ஜுனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக ஒருவரையொருவர் கருதிப்பாராமல் வேகமாகத் தப்பி ஓடுகின்றனர்.(33) ஓ! சூதன் மகனே, ஓ! வீரா {கர்ணா}, போரில் பின்வாங்கிச் செல்லும் அந்த வீரர்களின் அச்சங்களை அகற்ற உன்னைத் தவிர வேறு எந்த மனிதனும் இல்லை.(34) ஓ! மனிதர்களில் புலியே, போரில் உன்னையே தஞ்சமாக அடைந்த அந்தக் குருக்கள் அனைவரும், உன் பாதுகாப்பை விரும்பி உன்னையே நம்பி நிற்கின்றனர்.(35) ஓ! ராதையின் மகனே, கிட்டத்தட்ட வெல்ல முடியாதவர்களான வைதேஹர்கள், அம்பஷ்டர்கள், காம்போஜர்கள், நக்னஜித்கள் மற்றும் காந்தாரர்கள் ஆகியோரைப் போரில் வீழ்த்திய உன் துணிவைத் திரட்டிக் கொண்டு அந்தப் பாண்டுவின் மகனை எதிர்த்து நீ செல்வாயாக.(36) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உன் பெரும் ஆற்றலைத் திரட்டிக் கொண்டு, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனிடம் (அர்ஜுனனிடம்) எப்போதும் நிறைவுடன் இருக்கும் விருஷ்ணி குலத்து வாசுதேவனை {கிருஷ்ணனை} எதிர்த்துச் செல்வாயாக” என்றான் {சல்லியன்}. 37

கர்ணன் {சல்லியனிடம்}, “நீர் இப்போது வழக்கமான மனநிலையை அடைந்துவிட்டதாகவும், இப்போது உம்மை எனக்கு ஏற்புடையவராகவும் நான் காண்கிறேன். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} எந்த அச்சமும் அடைய வேண்டாம்.(38) என் கரங்களின் வலிமையை இன்று பாரும், என் திறனையும் பாரும். பாண்டவர்களின் வலிமைமிக்கப்படையையும், மனிதர்களில் சிங்கங்களான அந்தக் கிருஷ்ணர்கள் இருவரையும் நான் இன்று தனியொருவனாகவே கொல்வேன்.(39) நான் இன்று அந்த வீரர்கள் இருவரையும் கொல்லாமால் களத்தைவிட்டுத் திரும்ப மாட்டேன். அல்லது அவ்விருவரால் இன்று கொல்லப்பட்டுப் போர்க்களத்தில் நான் தூங்குவேன். போரில் வெற்றியானது உறுதியில்லாததாகும். கொன்றோ, கொல்லப்பட்டோ நான் இன்று என் காரியத்தை நிறைவேற்றுவேன்” என்றான் {கர்ணன்}.(40,41)

சல்லியன், “ஓ! கர்ணா, இந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் (அர்ஜுனன்) தனியொருவனாக இருந்தாலும் வெல்லப்பட்டமுடியாதவன் என்றே பெரும் தேர்வீரர்கள் அனைவரும் சொல்கின்றனர். மேலும், கிருஷ்ணனால் அவன் பாதுகாக்கப்பட்டிருக்கும்போது, அவனை வெல்ல எவன் துணிவான்?” என்றான்.(42)

கர்ணன், “நான் கேட்விப்பட்டவரை, இத்தகு மேன்மையான தேர்வீரன் எவனும் பூமியில் பிறக்கவில்லை. அப்படிப்பட்ட பார்த்தனை எதிர்கொள்ளப்போகும் என் ஆற்றலைக் காண்பீராக.(43) தேர்வீரர்களில் முதன்மையான இந்தக் குருகுல இளவரசன் {அர்ஜுனன்}, அவனது வெண்ணிறக் குதிரைகளால் சுமக்கப்பட்டுப் போரில் திரிந்து வருகிறான். ஒருவேளை அவன் {அர்ஜுனன்} இன்று என்னை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைக்கலாம். எனினும், கர்ணனின் மரணத்தோடு இவர்கள் (குருக்கள்) அனைவரும் அழிக்கப்படுவார்கள் என்பதை அறிவீராக.(44) இந்த இளவரசனின் கரங்கள் இரண்டும் எப்போதும் வியர்வையால் மறைக்கப்படுவதில்லை. அவை ஒருபோதும் நடுங்குவதுமில்லை. அவை பருத்தவையாகவும், வடுக்களோடு கூடியவையாகவும் இருக்கின்றன. ஆயுதப் பயன்பாட்டில் உறுதியாக இருக்கும் அவன், பெரும் திறனையும், பெரும் கரநளினத்தையும் கொண்டிருக்கிறான். உண்மையில், அந்தப் பாண்டுவின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு) இணையான போர்வீரன் எவனும் இல்லை.(45)

அவன் {அர்ஜுனன்} பெரும் எண்ணிகையிலான கணைகளை எடுத்து, அவை ஏதோ ஒன்று என்பதைப் போல அவன் அவற்றை ஏவுகிறான். வேகமாக வில்லின் நாண்கயிற்றில் அவற்றைப் பொருத்தி, இரு மைல்கள் {ஒரு குரோச} தொலைவிற்கு அவன் அவற்றை ஏவுகிறான். அவை எப்போதும் எதிரியின் மீது பாய்கின்றன. அவனுக்கு இணையாக வேறு எந்த வீரன் இவ்வுலகத்தில் இருக்கிறான்?(46) பெரும் சுறுசுறுப்புடன் கூடிய அந்த அதிரதன், கிருஷ்ணனைத் தன் கூட்டாளியாகக் கொண்டு காண்டவத்தில் தேவன் அக்னியை நிறைவு செய்தான். அங்கே அந்தச் சந்தர்ப்பத்தில்தான் உயர் ஆன்மக் கிருஷ்ணன் தன் சக்கரத்தையும், பாண்டுவின் மகனான அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் வில்லான காண்டீவத்தையும் அடைந்தனர்.(47) அழிவேதும் அறியாதவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அவன் அங்கேதான் வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தன் பயங்கரத் தேரையும், தெய்வீகமானவையும், வற்றாதவையுமான தன்னிரு அம்பறாத்தூணிகளையும், இன்னும் பல்வேறு தெய்வீக ஆயுதங்களையும் நெருப்புத் தேவனிடம் {அக்னி தேவனிடம்} இருந்து அடைந்தான்.(48) இந்திரலோகத்தில் அவன் தன் சங்கான தேவதத்தத்தை அடைந்து, எண்ணற்ற தைத்தியர்களையும், காலகேயர்கள் அனைவரையும் கொன்றான். அவனுக்கு மேன்மையானவனாக இவ்வுலகில் எவன் இருக்கிறான்?(49) மகிமைமிக்க ஆன்மா கொண்ட அவன், நல்லதொரு போரில் மகாதேவனை {சிவனை} நிறைவு செய்து, அவனிடமிருந்து பயங்கரமானதும், வலிமைமிக்கதும், மூவுலகங்களையும் அழிக்கவல்லதுமான பாசுபத ஆயுதத்தை அடைந்தான்.(50)

பல்வேறு லோகபாலர்களும் ஒன்றாக இணைந்து அளவிலா சக்தியைக் கொண்ட தங்கள் ஆயுதங்களை அவனுக்குக் கொடுத்தனர். அவற்றைக் கொண்டே அந்த மனிதர்களில் சிங்கம் போரிட ஒன்றாகச் சேர்ந்து வந்த அசுரர்களான காலகஞ்சர்களை வேகமாக அழித்தான்.(51) அதே போலவே, விராடனின் நகரத்திலும், ஒரே தேரில் தனியொருவனாக வந்து நம் அனைவரையும் வென்று, நம்மிடமிருந்த கால்நடைச் செல்வத்தைப் பறித்து, முதன்மையான தேர்வீரர்களின் ஆடைகளையும் (அவற்றின் பகுதிகளையும்) எடுத்துக் கொண்டான்.(52) விருஷ்ணி குலத்தோனை {கிருஷ்ணனைத்} தன் கூட்டாளியாகக் கொண்டவனும், க்ஷத்திரியர்களில் முதன்மையானவனும், இத்தகு சக்தியையும், பண்புகளையும் கொண்டவனுமான அந்த வீரனை அறைகூவி அழைப்பதால், ஓ! சல்லியரே, துணிவின் எல்லையில் உலகம் அனைத்திலும் முதன்மையான ஒருவனாக நான் என்னைக் கருதிக் கொள்கிறேன்.(53) மேலும், எவன் நாராயணனோ, எவன் எதிரியற்றவனோ, எவனது பண்புகள், உலகங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பத்தாயிரம் வருடங்களானாலும் சொல்லி முடியாதோ, அந்த மதங்கொண்ட சக்தியை உடையவனும், சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு எப்போதும் வெற்றியடைபவனுமான அந்தக் கேசவனால் {கிருஷ்ணனால்} அவன் {அர்ஜுனன்} பாதுகாக்கப்படுகிறான். ஒரே தேரில் அந்தக் கிருஷ்ணர்கள் இருவரையும் கண்டு, வீரத்துடன் சேர்ந்து என் இதயத்திற்குள் அச்சமும் நுழைகிறது[2].(54,55)

பார்த்தனே {அர்ஜுனனே} வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவன், அதே வேளையில், சக்கரத்தைக் கொண்ட மோதல்களில் நாராயணன் ஒப்பற்றவனாவான். வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்} இவ்வாறானவர்களே. உண்மையில், இமய மலைகள் அவற்றின் இருப்பில் இருந்து நகரலாம், ஆனால் இவ்விரு கிருஷ்ணர்களும் நகரார்கள்.(56) அவ்விருவரும் வீரர்களாகவும், பெரும் திறனைக் கொண்டவர்களாகவும், ஆயுதப் பயன்பாட்டில் உறுதிமிக்கவர்களாகவும், வலிமைமிக்கத் தேர்வீரர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வைரத்தாலான உடலைக் கொண்டவர்களாக {பலசாலிகளாக} இருக்கிறார்கள்.(57) ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, பாண்டு மகனுடன் போரிட வேண்டும் என்று நான் பேணிக்காத்து வந்த விருப்பம் இன்று தாமதமில்லாமல் நிறைவேறப் போகிறது. அற்புதம் நிறைந்ததும், ஒப்பற்றதும், அழகானதுமான அந்தப் போர் விரைவில் நடக்க இருக்கிறது. போரில் இன்று அவ்விருவரையும் நான் வீழ்த்துவேன், அல்லது அந்த இரு கிருஷ்ணர்களும் இன்று என்னை வீழ்த்துவார்கள்” என்றான் {கர்ணன்}.(58) இவ்வார்த்தைகளைச் சல்லியனிடம் சொன்னவனும், பகைவர்களைக் கொல்பவனுமான கர்ணன், அந்தப் போரில் மேகங்களின் கர்ஜனையைப் போல உரத்த முழக்கங்களைச் செய்யத் தொடங்கினான். பிறகு, குருக்களில் முதன்மையான உமது மகனை {துரியோதனனை} அடைந்து, அவனால் மரியாதையாக வணங்கப்பட்ட கர்ணன், அந்த இளவரசனிடமும் {துரியோதனனிடமும்}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட போர்வீரர்களான கிருபர் மற்றும் போஜத் தலைவன் கிருதவர்மன் ஆகியோரிடமும், தன் மகனோடு கூடிய காந்தாரர்களின் ஆட்சியாளன் {சகுனி}, ஆசானின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் சொந்தத் தம்பி மற்றும் காலாட்படை, குதிரை, மற்றும் யானை வீரர்கள் ஆகியோரிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(60)

அவன் {கர்ணன்}, “அச்யுதன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனை நோக்கி விரைவீராக, பூமியின் தலைவர்களே, சுற்றிலும் உள்ள பாதைகளை மறைத்து, முயற்சியால் அவர்களைக் களைப்படையச் செய்து, ஆழமாக அவர்களைச் சிதைத்தப்பிறகு, எளிதாக அவர்களைக் கொல்லலாம்” என்றான்.(61) “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன அந்த முதன்மையான வீரர்கள், அர்ஜுனனைக் கொல்லும் விருப்பத்துடன் அவனை எதிர்த்து வேகமாகச் சென்றனர். அப்போது கர்ணனின் ஆணைக்குக் கீழ்ப்படிந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அந்தப் போரில் எண்ணற்ற கணைகளால் தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தாக்கத் தொடங்கினர்.(62) பெரும் அளவிலான நீரைக் கொண்ட பெருங்கடல் ஆண் {நதிகள்} மற்றும் பெண் {நதங்கள் = ஓடைகள்} ஆறுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதைப் போலவே, அர்ஜுனன் அந்தப் போரில் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் எதிர்கொண்டான்.(63) அவன் எப்போது தன் சிறந்த கணைகளை வில்லின் நாண்கயிற்றில் பொருத்தினான், எப்போது அவற்றை விடுத்தான் என்பதை அவனது எதிரிகளால் காண முடியவில்லை. தனஞ்சயனால் ஏவப்பட்ட கணைகளால் துளைக்கப்பட்டுத் தொடர்ச்சியாக உயிரையிழந்து கீழே விழும் மனிதர்களும், குதிரைகளும், யானைகளும் மட்டுமே அங்கே காணக்கூடியனவாக இருந்தன.(64) நோயுற்ற கண்களைக் கொண்ட மனிதர்களால் சூரியனைப் பார்க்க முடியாததைப் போலவே, அந்தச் சந்தர்ப்பத்தில் காண்டீவத்தையே அழகான வட்டிலாகவும், கணைகளையே தன் கதிர்களாகவும் கொண்டவனும், யுக முடிவில் எழுந்து அனைத்தையும் எரிக்கும் சூரியனின் சக்தியைக் கொண்டவனுமான ஜயனை {அர்ஜுனனைக்} கௌரவர்களால் பார்க்கவும் முடியவில்லை.(65)

சிரித்துக் கொண்டே இருந்த பார்த்தன், தன் கணை மாரியால், அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் தன் மீது ஏவப்பட்ட சிறந்த கணைகளை அறுத்தான். பதிலுக்கு அவன் {அர்ஜுனன்}, தன் வில்லான காண்டீவத்தை முழுமையான வட்டமாக வளைத்து எண்ணற்ற கணைகளால் அவர்களைத் தாக்கினான்.(66) சூரியனின் கடுங்கதிர்கள், ஜியேஷ்ட {ஆனி} மற்றும் ஆஷார {ஆடி} மாதங்களில் (பூமியின்) நீரை எளிதாக வற்ற செய்வதைப் போலவே, ஓ மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனும், தன் எதிரிகளின் கணைகளைக் கலங்கடித்து உமது துருப்புகளை எரித்தான்.(67) அப்போது கிருபர், போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, உமது மகன் {துரியோதனன்} ஆகியோர் கணை மாரிகளை ஏவியபடியே அவனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தனர். வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணரின் மகனும் {அஸ்வத்தாமனும்} தன் கணைகளை ஏவியபடியே அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தான். உண்மையில், அவர்கள் அனைவரும், மலை மீது மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல அவன் மீது தங்கள் கணைகளை மழையாகப் பொழிந்தனர்.(68) எனினும் அந்தப் பாண்டுவின் மகன், பெரும் சுறுசுறுப்புடனும், வேத்துடனும் கூடியவனாக, தன்னைக் கொல்லும் விருப்பத்துடன் கூடிய அந்தச் சாதனைப் போர்வீரர்களால் அந்தப் பயங்கரப் போரில் பெருங்கவனத்துடன் தன் மீது ஏவப்பட்ட அந்தச் சிறந்த கணைகளைத் தன் கணைகளால் அறுத்து, தன் எதிராளிகள் ஒவ்வொருவரின் மார்பையும் மூன்று கணைகளால் துளைத்தான்.(69) கணைகளையே தன் கடுங்கதிர்களாகக் கொண்ட அந்த அர்ஜுனச் சூரியன், பிரகாசமான ஒளிவட்டமாக அமைந்த காண்டீவத்தை முழுதாக வளைத்து, தன் எதிரிகளை எரித்த போது, ஜியேஷ்ட மற்றும் ஆஷார மாதங்களில் தன் பிரகாசமான ஒளிவட்டத்திற்குள் இருக்கும் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(70)

அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} பத்து முதன்மையான கணைகளால் தனஞ்சயனையும், மூன்றால் கேசவனையும், நான்கால் தனஞ்சயனின் நான்கு குதிரைகளையும் துளைத்து, அர்ஜுனனின் கொடியிலிருந்த குரங்கின் மீது கணைகள் பலவற்றைப் பொழிந்தான்.(71) இவையாவற்றுக்காகவும் தனஞ்சயன் தன் எதிராளியின் கையில் முழுமையாக வளைக்கப்பட்டிருந்த வில்லை அறுத்து, ஒரு கத்தி முகக் கணையால் {க்ஷுரப்ரத்தால்} அவனது {அஸ்வத்தாமனின்} சாரதியுடைய தலையையும், நான்கு பிற கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் வெட்டி, இறுதியாகத் தன் எதிரியின் தேரில் இருந்த கொடிமரத்தை மூன்று பிற கணைகளால் வீழ்த்தினான்.(72) அப்போது கோபத்தால் நிறைந்த அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தக்ஷகனின் உடலைப் போலப் பிரகாசமானதும், விலைமதிப்புமிக்கதும், ரத்தினங்கள், வைரங்கள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும் மலையின் அடிவாரத்தில் பிடிபட்ட ஒரு பெரும்பாம்புக்கு ஒப்பானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(73) பூமியில் நின்றவாறே அந்த வில்லுக்கு நாண்பொருத்தி, ஒன்றன் பின் ஒன்றாகக் கணைகளையும், ஆயுதங்களையும் வெளியே எடுத்தவனும், பல சாதனைகள் விஞ்சி நின்ற போர்வீரனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, மனிதர்களில் முதன்மையானவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான அவ்விருவரையும் மிக அருகில் இருந்து பல கணைகளால் துளைத்தான்.(74) வலிமைமிக்கத் தேர்வீரர்களான கிருபர், போஜன் {கிருதவர்மன்}, உமது மகன் {துரியோதனன்} ஆகியோர் போரின் முகப்பில் நின்று கொண்டு, அந்தப் பாண்டவர்களில் காளை மீது பாய்ந்து, இருளை அகற்றுபவனை {சூரியனை} மறைக்கும் மேகங்களைப் போல அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(75)

ஆயிரங்கரங்கள் கொண்டோனுக்கு (கார்த்தவீரியனுக்கு) இணையான ஆற்றலைக் கொண்டவனான பார்த்தன் {அர்ஜுனன்}, பழங்காலத்தில் தன் கணைகளை (அசுரன்) பலியின் மீது பொழிந்த வஜ்ரதாரியை {இந்திரனைப்} போலக் கணை பொருத்தப்பட்ட கிருபரின் வில், அவரது குதிரைகள், அவரது கொடிமரம் மற்றும் அவரது சாரதியின் மீது தன் கணைகளைப் பொழிந்தான்.(76) பார்த்தனின் கணைகளால் ஆயுதங்கள் அழிக்கப்பட்டவரும், அந்தப் பெரும்போரில் தன் கொடிமரமும் நொறுக்கப்பட்டவருமான கிருபர், முன்பு கங்கையின் மைந்தனான பீஷ்மர், (அவர் வீழ்ந்த நாளில்) இதே கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட போர்வீரனுடைய எத்தனை கணைகளால் தாக்கப்பட்டாரோ அதே அளவுக்கு ஆயிரக்கணக்கான பல்வேறு கணைகளால் அர்ஜுனானால் பீடிக்கப்பட்டார்.(77) அப்போது அந்த வீரப் பார்த்தன், முழங்கிக் கொண்டிருந்த உமது மகனின் கொடிமரத்தையும், வில்லையும் தன் கணைகளால் அறுத்தான். அடுத்ததாகக் கிருதவர்மனின் அழகிய குதிரைகளை அழித்த அவன், பின்னவனின் {கிருதவர்மனின்} கொடிமரத்தையும் அறுத்தான்.(78) பிறகு அவன், பகைவரின் படையில் இருந்த யானைகளையும், குதிரைகளோடு கூடிய தேர்களையும், சாரதிகளையும், விற்கள் மற்றும் கொடி மரங்களையும் பெரும் வேகத்தோடு அழிக்கத் தொடங்கினான். அதன் பேரில் அந்த உமது பரந்த படையானது, நீர் மோதும் ஏரிக்கரைகளைப் போல நூறு பகுதிகளாகப் பிளந்தது.(79)

அப்போது அர்ஜுனனின் தேரை வேகமாகத் தூண்டிய கேசவன் {கிருஷ்ணன்}, அவனால் பீடிக்கப்பட்ட எதிரிகள் அனைவரையும் தன் வலப்பக்கத்தில் நிறுத்தினான்.(80) பிறகு ஒரு மோதலை விரும்பிய பிற வீரர்கள், விருத்திரனைக் கொன்று சென்ற இந்திரனைப் போலப் பெரும் வேகத்தோடு சென்று கொண்டிருந்த தனஞ்சயனை, உயர்ந்த கொடிமரங்களுடன் நன்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்த தேர்களோடு பின்தொடர்ந்து சென்றனர்.(81) அப்போது வலிமைமிக்கத் தேர்வீரர்களான சிகண்டி, சாத்யகி, இரட்டையர்கள் ஆகியோர் தனஞ்சயனின் திசையிலேயே சென்று, எதிரிகளைத் தடுத்து, கூரிய கணைகளால் அவர்களைத் துளைத்து, பயங்கரமான முழக்கங்களைச் செய்தனர்.(82) பிறகு குரு வீரர்களும், சிருஞ்சயர்களும் சினத்தால் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டு, பழங்காலத்தின் பெரும்போர் ஒன்றில் அசுரர்களும், தேவர்களும் போலப் பெரும் சக்தி கொண்ட நேரான கணைகளால் ஒருவரையொருவர் கொன்றனர்.(83) எதிரிகளைத் தண்டிப்பவர்களான யானைவீரர்கள், குதிரை வீரர்கள், தேர் வீரர்கள் ஆகியோர் அனைவரும் வெற்றி பெரும் விருப்பத்தாலோ, சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டிய பொறுமையின்மையாலோ ஈர்க்கப்பட்டு, வேகமாகக் களத்தில் விழுந்தனர். பெரும் முழக்கங்களைச் செய்தபடியே அவர்கள் நன்கு ஏவப்பட்ட கணைகளால் ஒருவரையொருவர் மூர்க்கமாகத் துளைத்துக் கொண்டனர்.(84) பெரும் துணிச்சலைக் கொண்ட அந்த உயர்ஆன்ம போர்வீரர்கள், அங்கே அந்தப் பயங்கரப் போரில் இருளை உண்டாக்கியதன் விளைவால் முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகள் இருளில் மூழ்ந்து அந்தச் சூரியனின் பிரகாசமே முற்றாக முறைக்கப்பட்டது” {என்றான் சஞ்சயன்}.(85)

கௌரவர்களை விரட்டிய அர்ஜுனன்! – கர்ண பர்வம் பகுதி – 80-கர்ணனின் படைகளைத் தவிர்த்துவிட்டு, பீமனைக் காக்க விரைந்த அர்ஜுனன்; அர்ஜுனனால் கௌரவப்படைக்கு ஏற்பட்ட அழிவு; தப்பி ஓடிய கௌரவர்கள்; பீமனுடன் சிறிது நேரம் ஆலோசித்த அர்ஜுனன்; கௌரவர்களை விரட்டி அவர்களைப் பூமியில் தள்ளிய அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குரு படையின் முதன்மையான வீரர்கள் பலரால் தாக்கப்பட்டு, (அந்தத் தாக்குதலால்) மூழ்குபவன் போலத் தெரிந்த குந்தியின் மகனான பீமனை மீட்க விரும்பிய தனஞ்சயன் {அர்ஜுனன்},(1) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சூதன் மகனின் {கர்ணனின்} துருப்புகளைத் தவிர்த்துவிட்டு, (பீமனை எதிர்த்துக் கொண்டிருந்த) அந்தப் பகைவீரர்களைத் தன் கணைகளால் காலனின் உலகத்திற்கு அனுப்பத் தொடங்கினான்[1].(2) அர்ஜுனன் அடுத்தடுத்து பொழிந்த கணை மழையால், வானம் கணைகள் மூட்டத்துடன் காணப்பட்ட அதே வேளையில் உமது படையை {பாண்டவப் படையின்} பிறர் கொல்வதும் காணப்பட்டது.(3) இறகு படைத்த உயிரினங்களின் அடர்த்தியான கூட்டத்திற்கு ஒப்பான கணைகளால் ஆகாயத்தை நிறைத்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி, அந்த நேரத்தில் குருக்களின் யமனாகவே ஆனான்.(4) தன் அகன்ற தலை மற்றும் தட்டைத் தலை கணைகள் {பல்லங்கள்}, கத்தி போன்ற கூர்மையான கணைகள் {க்ஷுரப்ரகங்கள்}, பிரகாசமாகப் பளபளப்பாக்கப்பட்டிருந்த துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்} ஆகியவற்றால் பார்த்தன் {அர்ஜுனன்} தன் எதிரிகளின் உடல்களைச் சிதைத்து, அவர்களின் தலைகளையும் அறுத்தான்.(5)

உடல்கள் வெட்டி சிதைக்கப்பட்ட சிலரும், கவசமிழந்த சிலரும், தலைகளையிழந்த சிலரும் என விழுந்து கொண்டிருப்பவர்களும், வீழ்ந்தவர்களுமான போர்வீரர்களால் அந்தப் போர்க்களம் விரவிக் கிடந்தது.(6) (உயிருள்ளோர் உலகத்தையும், இறந்தோரின் உலகத்தையும் பிரிக்கும்) பெரும் வைதரணீயை {வைதரணீ ஆற்றைப்} போல அந்தப் போர்க்களமானது, ஓ! மன்னா, தனஞ்சயனின் கணைகளால் தாக்கப்பட்ட குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகள் ஆகியவை சிதைக்கப்பட்டு, துளைக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, பல்வேறு வழிகளில் வெட்டப்பட்டதன் விளைவாகச் சமமற்றதாகவும், கடக்க முடியாததாகவும், காணச் சகியாததாகவும், பயங்கரமானதாகவும் ஆனது.(7,8) உடைந்த கணைகள், சக்கரங்கள், அச்சுகள் ஆகியவற்றாலும், குதிரைகளற்ற, அல்லது குதிரைகளுள்ள தேர்களாலும், சாரதியற்ற, அல்லது சாரதிகளுள்ள தேர்களாலும் பூமியானது மறைக்கப்பட்டிருந்தது.(9)

எப்போதும் சீற்றத்துடன் இருப்பவையும் {மதங்கொண்டவையும்}, கோபத்தால் தூண்டப்பட்டவையும், நன்கு பயிற்சியளிக்கப்பட்டவையும், தங்க வண்ண கவசம் தரித்தவர்களும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தவர்களுமான போர்வீரர்களால் செலுத்தப்பட்டவையும், கடுமையான பாகர்களின் குதிங்கால்களாலும், கட்டைவிரல்களாலும் அழுத்தம் கொடுக்கப்பட்டுத் தூண்டப்பட்டவையுமான நானூறு {400} யானைகள், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் கணைகளால் தாக்கப்பட்டு, உயிரினங்கள் வாழும் பெரும் மலைகளில் இருந்து தளர்ந்து விழும் சிகரங்களைப் போலக் கீழே விழுந்தன.(10,11) உண்மையில், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்டு விழுந்து (இன்னும் பிற) யானைகளாலும் பூமி மறைக்கப்பட்டது.(12) மேகத் திரள்களின் ஊடாகப் பிளந்து செல்லும் சூரியனைப் போல, அந்த அர்ஜுனனின் தேரானது, மேனியில் மதநீர் ஒழுகுபவையும், மேகத்திரள்களைப் போலத் தெரிபவையுமான யானைகளின் உடல்களின் அடர்த்தியினூடாகக் கடந்து சென்றது.(13) கொல்லப்பட்ட யானைகள், மனிதர்கள் மற்றும் குதிரைகளாலும், பல்வேறு வழிகளில் நொறுக்கப்பட்ட தேர்களாலும், ஆயுதங்கள், கருவிகள், கவசங்கள், பல்வேறு வகைகளிலான ஆயுதங்கள் கைகளில் தளர்ந்து கிடந்த உயிரற்ற வீரர்களாலும், பல்குனன் {அர்ஜுனன்}, தன் வழித்தடங்களைக் குவியச் செய்தான்.(14) காண்டீவத்தின் நாணொலியானது, ஆகாயத்தில் எழும் இடியினொலியைப் போல மகத்தான பேரொலியாக இருந்தது.(15)

அப்போது, தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்கப்பட்ட (தார்தராஷ்டிரப்) படையானது, பெருங்கடலின் மத்தியில் புயலால் அடிக்கப்படும் பெரிய மரக்கலத்தைப் போலப் பிளந்தது.(16) எரிகொள்ளிகள், எரிகோள்கள், இடிகள் ஆகியவற்றுக்கு ஒப்பானவையும், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையுமான பல்வேறு வகைகளிலான மரணக்கணைகள் உமது படையை எரித்தன.(17) தனஞ்சயனின் கணைகளால் இவ்வாறு பீடிக்கப்பட்ட அந்த வலிமையான படை, இரவு நேரத்தில் மலையிலிருக்கும் மூங்கில்காடுகள் எரிவதைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(18) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் கணைகளால் நொறுக்கப்பட்டு, எரிக்கப்பட்டு, குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டு, சிதைக்கப்பட்டு, கொல்லப்பட்ட அந்த உமது படையானது அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடியது.(19) உண்மையில், சவ்யசச்சினால் எரிக்கப்பட்ட கௌரவர்கள், காட்டுத்தீயில் அச்சமடைந்து ஓடும் பெரும் வனத்தின் விலங்குகளைப் போல அனைத்துப் பக்கங்களிலும் கலைந்தோடின.(20)

(பீமசேனனைத் தாக்கிய) அந்தக் குரு படையானது, அந்த வலிமைமிக்க வீரனை {பீமனைக்} தவிர்த்துவிட்டு, கவலையால் நிறைந்து, போரில் புறமுதுகிட்டது.(21) குருக்கள் முறியடிக்கப்பட்ட பிறகு, வெல்லப்பட முடியாதவனான பீபத்சு {அர்ஜுனன்}, பீமசேனனை அணுகி, அங்கே ஒரு கணம் தங்கினான்.(22) பீமனைச் சந்தித்து, அவனோடு ஆலோசனை செய்த பல்குனன் [அர்ஜுனன்}, யுதிஷ்டிரனின் உடலில் இருந்து கணைகள் பிடுங்கப்பட்டதையும், பின்னவன் {யுதிஷ்டிரன்} முற்றிலும் நலமாக இருப்பதையும் தன் அண்ணனிடம் {பீமனிடம்} தெரிவித்தான்.(23) பீமன் சென்றதும், தனஞ்சயன், ஓ! பாரதரே, இந்தப் பூமியையும், வானத்தையும் தன் தேரின் சடசடப்பொலியால் எதிரொலிக்கச் செய்தபடியே (மீண்டும் தன் எதிரிகளை எதிர்த்துச்) சென்றான்.(24) பிறகு, வீரர்களும், போர்வீரர்களில் முதன்மையானவர்களும், துச்சாசனனின் தம்பிகளுமான உமது மகன்களில் பத்து பேரால் அவன் {அர்ஜுனன்} சூழப்பட்டான்.(25) எரிப்பந்தங்களைக் கொண்டு யானையைப் பீடிக்கும் வேடர்களைப் போலத் தங்கள் கணைகளால் அர்ஜுனனைப் பீடித்த அவ்வீரர்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் விற்களை விரித்து விளைத்து (தங்கள் தேர்களில்) நர்த்தனம் செய்பவர்களைப் போலத் தெரிந்தனர்.(26)

அப்போது மதுசூதனன் {கிருஷ்ணன்} தன் தேரை வழிநடத்திய படியே அவர்கள் அனைவரையும் தன் வலப்பக்கத்தில் நிறுத்தினான் [2]. உண்மையில் அவன் {கிருஷ்ணன்}, அவர்கள் அனைவரையும் விரைவில் அர்ஜுனன் யமனின் முன்னிலைக்கு அனுப்பிவிடுவான் என்று எதிர்பார்த்தான்.(27) அர்ஜுனனின் தேர் வேறு திசையில் செல்வதைக் கண்ட அந்த வீரர்கள் அவனை நோக்கி விரைந்தனர். எனினும், பார்த்தன் {அர்ஜுனன் / பீமன்}, எண்ணற்ற துணிக்கோல் கணைகளாலும் {நாராசங்களாலும்}, பிறைவடிவக் கணைகளாலும் {அர்த்தச்சந்திர பாணங்களாலும்} அவர்களது கொடிமரங்கள், குதிரைகள், விற்கள் மற்றும் கணைகளை வெட்டி வீழ்த்தி, அவர்களையும் பூமியில் விழச் செய்தான். பிறகு, கடிக்கப்பட்ட உதடுகளாலும், சினங்கொண்ட ரத்தச் சிவப்பான கண்களாலும் அலங்கரிக்கப்பட்ட அவர்களது தலைகளைச் சில அகன்ற தலை கணைகளால் அவன் {அர்ஜுனன் / பீமன்} வீழ்த்தினான்[3]. அம்முகங்கள், தாமரைக் கூட்டங்களைப் போல அழகாகத் தெரிந்தன.(28-30) எதிரிகளைக் கொல்பவனான அர்ஜுனன், தங்கக் கவசம் பூண்டிருந்த அந்தப் பத்துக் கௌரவர்களை, பெரும் மூர்க்கத்தையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட பத்து அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} கொன்றுவிட்டு முன்னேறத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(31)

கர்ணனிடம் தஞ்சமடைந்த கௌரவர்கள்! – கர்ண பர்வம் பகுதி – 81-அர்ஜுனனை நோக்கி விரைந்த சம்சப்தகர்கள்; அவர்களைத் தவிர்த்துவிட்டுக் கர்ணனை நோக்கித் தேரைச் செலுத்திய கிருஷ்ணன், எனினும் பின் தொடர்ந்து வந்த சம்சப்தகர்களை வீழ்த்திய அர்ஜுனன்; அர்ஜுனனை எதிர்த்து வந்த கௌரவப் படை; அதை முறியடித்த அர்ஜுனன்; கர்ணனைத் தஞ்சமடைந்த கௌரவர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் பெரும் வேகம் கொண்ட தன் குதிரைகளால் சுமக்கப்பட்டு முன்னேறிக் கொண்டிருந்த குரங்குக் கொடியோன் அர்ஜுனனை எதிர்த்துப் போரிடுவதற்காகத் தொண்ணூறு கௌரவத் தேர்வீரர்கள் {சம்சப்தகர்கள்} விரைந்தனர்.(1) அந்த மனிதர்களில் புலிகள், மறு உலகத்தைக் குறித்துப் பயங்கரச் சபதம் ஒன்றை [1] ஏற்றுக் கொண்டு, மனிதர்களில் புலியான அந்த அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டனர்.(2) எனினும், (அவர்களைக் கண்டு கொள்ளாத) கிருஷ்ணன், பெரும் வேகம் கொண்டவையும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், முத்துச்சரங்களால் மறைக்கப்பட்டவையுமான அர்ஜுனனின் வெண்குதிரைகளைக் கர்ணனின் தேரை நோக்கித் தூண்டினான்.(3) அந்தத் தொண்ணூறு சம்சப்தகர்களும், கர்ணனின் தேரை நோக்கிச் செல்லும் தனஞ்சயனைப் பின்தொடர்ந்து சென்று, அவன் மீது கணைமாரியை இறைத்தனர்.(4) அப்போது அர்ஜுனன், பெரும் சுறுசுறுப்புடையவர்களும், தன்னைத் தாக்குபவர்களுமான அந்தத் தொண்ணூறு பேரையும், அவர்களது சாரதிகள், விற்கள் மற்றும் கொடிமரங்களையும் தன் கூரிய கணைகளால் வெட்டினான்.(5) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் பல்வேறு வகைக் கணைகளால் கொல்லப்பட்ட அவர்கள், புண்ணியங்கள் தீர்ந்து சொர்கத்தில் இருந்து கீழே விழும் சித்தர்களைப் போலத் தங்கள் தேர்களில் இருந்து விழுந்தனர்.(6)

இதன்பிறகு, தேர்கள், யானைகள், மற்றும் குதிரைகளோடு கூடிய கௌரவர்கள் பலர், குரு குலத்தில் முதன்மையானவனும், பாரதர்களின் தலைவனுமான அர்ஜுனனை அச்சமில்லாமல் எதிர்த்து சென்றனர்.(7) போராடும் மனிதர்கள் மற்றும் குதிரைகள் நிறைந்ததும், முதன்மையான யானைகள் பெருகியிருந்ததுமான உமது மகன்களின் அந்தப் பெரிய படையானது தனஞ்சயனின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக அவனைச் சூழ்ந்து கொண்டன.(8) அந்த வலிமைமிக்கக் கௌரவ வில்லாளிகள், ஈட்டிகள், வாள்கள், வேல்கள், சூலங்கள், கதாயுதங்கள், கத்திகள் மற்றும் கணைகளுடன் அந்தக் குரு குல வழித்தோன்றலை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.(9) சூரியன் தன் கதிர்களால் இருளை அழிப்பது போலவே, அந்தப் பாண்டுவின், மகன் ஆகாயத்தில் சூழ்ந்திருந்த அந்தக் கணைமாரியைத் தன் கணைகளால் அழித்தான்.(10)

எப்போதும் மதப்பெருக்குடன் இருக்கும் ஆயிரத்து முன்னூறு {1300} யானைகளைச் செலுத்திக் கொண்டு வந்த மிலேச்சர்களின் படையானது, உமது மகனின் {துரியோதனனின்} உத்தரவின் பேரில் பார்த்தனின் {அர்ஜுனனின்} பக்கங்களைத் தாக்கியது.(11) முள் பதித்த கணைகள் {கர்ணிகள்}, நாளீகங்கள், துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, வேல்கள், சூலங்கள், ஈட்டிகள், கம்பணங்கள், குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்} ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் தேரில் இருந்த பார்த்தனைப் பீடித்தனர்.(12) ஒப்பற்ற அந்தக் கணை மாரிகளில் யானைகளின் தந்தங்களால் ஏவப்பட்ட சிலவற்றைப் பல்குனன் {அர்ஜுனன்}, மிகக் கூர்மையான தன் அகன்ற தலை கணைகள் {பல்லங்கள்} மற்றும் பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணைகளால் அறுத்தான்.(13) பல்வேறு வகைக் கணைகளுடன் கூடிய அவன் {அர்ஜுனன்}, அந்த யானைகளை அனைத்தும், அவற்றின் கொடிமரங்கள், கொடிகள், பாகர்கள் ஆகியவற்றையும், வஜ்ரத்தால் மலைகளைத் தாக்கும் இந்திரனைப் போலத் தாக்கினான்.(14) தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் பீடிக்கப்பட்டவையும், தங்கத்தாலான கழுத்தணிகளை அணிந்திருந்தவையுமான அந்தப் பெரும் யானைகள், எரிகுழம்புகளுடன் சுடர்விடும் மலைகளைப் போல உயிரை இழந்து கீழே விழுந்தன.(15)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளாலான அந்தப் படையின் முழக்கம், கூச்சல் மற்றும் ஓலங்களுக்கு மத்தியில் காண்டீவத்தின் நாணொலியானது உயர்ந்து எழுந்தது.(16) யானைகள், ஓ! மன்னா, (கணைகளால்) தாக்கப்பட்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடின. சாரதிரிகள் கொல்லப்பட்ட குதிரைகளும் அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருந்தன.(17) ஓ! ஏகாதிபதி, வானத்தில் மாறிக்கொண்டே இருந்த நீராவி வடிவங்களை {மேகங்களைப்} போன்ற தேர்கள், சாரதிகளையும், குதிரைகளையும் இழந்தவையாக ஆயிரக்கணக்கில் தென்பட்டன.(18) அங்கேயும், இங்கேயும் திரிந்து கொண்டிருந்த குதிரைவீரர்கள், ஓ! ஏகாதிபதி, பார்த்தனின் கணைகளால் உயிரை இழந்து கீழே விழுவதும் காணப்பட்டது.(19) அந்த நேரத்தில் அர்ஜுனனின் கரவலிமையும் காணப்பட்டது. அந்தப் போரில், தனியொருவனாகவே அவன் (அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னைத் தாக்கிக் கொண்டிருந்தவர்களான) குதிரைவீரர்களையும், யானைகளையும், தேர்வீரர்களையும் வென்றான் (என்ற அளவுக்கு அவனது கரவலிமை பெரியதாக இருந்தது).(20)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட பல்குனன், மூவகைப் படைகளைக் கொண்ட ஒரு பெரும் (கௌரவப்) படையால் சூழப்பட்டதைக் கண்ட பீமசேனன்,(21) கௌரவத் தேர்வீரர்களில் கொல்லப்படாமல் எஞ்சியவர்களும், தன்னோடு போரிட்டுக் கொண்டிருந்தவர்களுமான அந்தச் சிலரைத் தவிர்த்துவிட்டு, தனஞ்சயனின் தேர் இருந்த இடத்திற்கு மூர்க்கமாக விரைந்தான்.(22) அதேவேளையில், அந்தப் பெரும் படுகொலைக்குப் பிறகும் எஞ்சியிருந்த அந்தக் கௌரவப்படை மிகவும் பவலீனமடைந்து தப்பி ஓடியது. (ஏற்கனவே சொன்னது போல) அர்ஜுனனைக் கண்ட பீமன், தன் தம்பியை நோக்கிச் சென்றான்.(23) களைப்படையாதவனும், கதாயுதம் தரித்தவனுமான அந்தப் பீமன், அர்ஜுனனால் பெரும்பகுதியினர் கொல்லப்பட்டும் எஞ்சியிருந்தவையும், பெரும் வலிமையைக் கொண்டவையுமான அந்தக் கௌரவக் குதிரைகளை {குதிரை வீரர்களை / குதிரைப் படையை} அந்தப் போரில் அழித்தான்.(24) மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும் மரண இரவைப் போலக் கடுமையானதும், சுவர்கள், மாளிகைகள், நகரங்களின் வாயில்கள் ஆகியவற்றை நொறுக்கவல்லதும், மிகப் பயங்கரமானதுமான தன் கதாயுதத்தைக் கொண்டு, தன்னைச் சுற்றியிருந்த மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளைத் தொடர்ச்சியாகத் தாக்கினான். ஓ! ஐயா, அந்தக் கதாயுதம் எண்ணற்ற குதிரைகளையும், சாரதிகளையும் கொன்றது.(25,26)

அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அந்தக் கதாயுதத்தைக் கொண்டு, இரும்பாலான கவசந்தரித்த மனிதர்களையும் குதிரைகளையும் நொறுக்கினான். அதனால் தாக்குண்ட அவர்கள் பேரொலியோடு கீழே விழுந்தனர்.(27) தங்கள் பற்களால் பூமியைக் கடித்து, குருதியில் குளித்தவர்களும், தங்கள் தலைகளில் இருந்த மகுடங்கள், விற்கள் மற்றும் அங்கங்களில் அடிப்பாகங்கள் நொறுக்கப்பட்டவர்களுமான அவர்கள், ஊனுண்ணும் விலங்குகள் அனைத்திற்கும் உணவாகி களத்தில் கிடந்தனர்.(28) குருதி, தசை, ஊனீர் மற்றும் எலும்புகள் ஆகியவற்றை வயிறு முட்ட உண்ட அந்த (பீமசேனனின்) கதாயுதம், மரண இரவை {காலனைப்} போலவே காணக் கடினமானதாக இருந்தது.(29) பத்தாயிரம் {10000} குதிரைகளையும், எண்ணற்ற காலாட்படை வீரர்களையும் கொன்ற பீமன், கையில் தன் கதாயுத்துடனும், சினத்துடனும், களத்தில் இங்கேயும், அங்கேயும் ஓடினான்.(30)

அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கையில் கதாயுதுத்துடன் பீமனைக் கண்ட உமது துருப்புகள், காலதண்டத்துடன் கூடிய யமனே தங்களுக்கு மத்தியில் இருப்பதாகக் கருதின.(31) அப்போது சினத்தால் தூண்டப்பட்டவனும், மதங்கொண்ட யானைக்கு ஒப்பானவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, பெருங்கடலுக்குள் நுழையும் ஒரு மகரத்தைப் போல, அந்தக் (கௌரவர்களின்) யானைப் படைப்பிரிவுக்குள் புகுந்தான்.(32) உறுதிமிக்கக் கதாயுதத்துடன் அந்த யானைப்படைக்குள் ஊடுருவியவனும், கோபத்துடன் கூடியவனுமான பீமன், மிகக் குறுகிய காலத்திற்குள் அதை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான்.(33) தங்கள் உடல்களில் முள் பதித்த தகடுகளுடன் கூடிய அந்த மதங்கொண்ட யானைகள், தங்கள் பாகர்கள், கொடிமரங்கள் ஆகியவற்றுடன், சிறகு படைத்த மலைகளைப் போல அனைத்துப் பக்கங்களிலும் விழுவதை நாங்கள் கண்டோம்.(34) அந்த யானைப்படையை அழித்த அந்த வலிமைமிக்கப் பீமசேனன், மீண்டும் தன் தேரில் ஏறிக் கொண்டு, அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்றான்.(35)

இவ்வாறு கொல்லப்பட்டதும், ஓடிப் போவதற்குத் தயாராக இருந்ததும் உற்சாகமின்மையால் நிறைந்து, கிட்டத்தட்ட செயலற்ற நிலையில் நின்ற அந்தப் பெரும்படையானது, ஓ! ஏகாதிபதி, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் ஆயுதங்களால் தாக்கப்பட்டது.(36) அடக்கமுடையதாகத் தெரிந்ததும், செயலற்று, கிட்டத்தட்ட அசைவற்று நின்றதுமான அந்தப் படையைக் கண்ட அர்ஜுனன், உயிரை எரிக்கும் கணைகளால் அதை மறைத்தான்.(37) அந்தப் போரில் காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கணைமாரியால் துளைக்கப்பட்ட மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளும், இழைகளுடன் கூடிய கதம்ப மலர்களைப் போல அழகானவையாகத் தெரிந்தன.(38) ஓ! மன்னா, மனிதர்கள், குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றை வேகமாகக் கொல்லும் அர்ஜுனனின் கணைகளால் இவ்வாறு தாக்கப்பட்ட கௌரவப் படையில் இருந்து துன்ப ஓலங்கள் எழுந்தன.(39) “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கதறி, மிகவும் அச்சப்பட்டு, ஒன்றோடொன்று நெருங்கி நின்ற உமது படையானது பெரும் வேகத்தோடு திரும்பத் தொடங்கியது.(40)

எனினும், குருக்களும், பெரும் வலிமை கொண்ட பாண்டவர்களுக்கும் இடையிலான அந்தப் போர் தொடர்ந்து கொண்டே இருந்தது. காயம்படாத எந்த ஒரு தேர்வீரனோ, குதிரைவீரனோ, யானைவீரனோ, குதிரையோ, யானையோ அங்கே இல்லை.(41) கணைகளால் துளைக்கப்பட்ட தங்கள் கவசங்களுடன் குருதியில் குளித்த அத்துருப்பினர், காடுகளில் மலர்ந்திருக்கும் அசோகங்களைப் போலச் சுடர்விடுபவர்களாகத் தெரிந்தனர்.(42) அந்தச் சந்தர்ப்பத்தில் வீரத்தை வெளிப்படுத்திய சவ்யசச்சினை {அர்ஜுனனைக்} கண்ட கௌரவர்கள், கர்ணனின் உயிரில் நம்பிக்கையிழந்தவர்களாக ஆனார்கள்.(43) அர்ஜுனனுடைய கணைகளின் தீண்டலைத் தாங்கிக் கொள்ள முடியாததாக உணர்ந்த கௌரவர்கள், அந்தக் காண்டீவதாரியால் வெல்லப்பட்டுக் களத்தைவிட்டுத் தப்பி ஓடினர்.(44) அர்ஜுனனின் கணைகளால் இவ்வாறு தாக்கப்பட்டுப் பட்டு அந்தப் போரில் கர்ணனை விட்டுவிட்டு, (தங்களைக் காக்கும்படி) சூதன் மகனை உரக்க அழைத்துக் கொண்டே அனைத்துப் பள்ளங்களிலும் தப்பி ஓடினர்.(45)

எனினும், அவர்களைப் பின்தொடர்ந்த சென்ற பார்த்தன் {அர்ஜுனன்}, நூற்றுக்கணக்கான கணைகளை ஏவி, பீமசேனனின் தலைமையிலான பாண்டவ வீரர்களை மகிழ்ச்சியடையச் செய்தான்.(46) அப்போது, ஓ! ஏகாதிபதி, உமது மகன்கள் கர்ணனின் தேரை நோக்கிச் சென்றனர். அடியற்ற பெருங்கடலில் மூழ்குபவர்களைப் போலத் தெரிந்த அவர்களுக்கு, கர்ணன் ஒரு தீவாக ஆனான்.(47) ஓ! ஏகாதிபதி, நஞ்சற்ற பாம்புகளைப் போன்ற அந்தக் கௌரவர்கள், காண்டீவதாரியிடம் கொண்ட அச்சத்தால் கர்ணனிடம் தஞ்சமடைந்தனர்.(48) உண்மையில், செயல்பாடுகளுடன் கூடிய உயிரினங்கள், மரணத்தின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, அறத்திடம் தஞ்சமடைவதைப் போலவே,(49) உமது மகன்களும், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, பாண்டுவின் உயர் ஆன்ம மகனிடம் {அர்ஜுனனிடம்} கொண்ட அச்சத்தால், வலிமைமிக்க வில்லாளியான கர்ணனிடம் தஞ்சமடைந்தனர்.(50)

அப்போது, அச்சத்தால் ஈர்க்கப்படாத கர்ணன், கணைகளால் பீடிக்கப்பட்டுக் குருதியில் குளித்து வேதனையில் இருந்த அந்தப் போர்வீரர்களிடம், “அஞ்சாதீர்கள்! என்னிடம் வாருங்கள்!” என்றான்.(51) பார்த்தனால் உமது படை மிக மூர்க்கமாகப் பிளக்கப்படுவதைக் கண்ட கர்ணன், எதிரியைக் கொல்ல விரும்பி தன் வில்லை வளைத்து நின்றிருந்தான்.(52) குருக்கள் களத்தைவிட்டு அகன்றதைக் கண்டவனும், ஆயுததாரிகளில் அனைவரிலும் முதன்மையானவனுமான கர்ணன், சற்றே சிந்தித்து, பார்த்தனைக் கொல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தி, நீண்ட பெருமூச்சுகளை விடத் தொடங்கினான்.(53) தன் உறுதிமிக்க வில்லை வளைத்த அந்த அதிரதன் மகன் விருஷன் {கர்ணன்}, சவ்யசச்சின் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் பாஞ்சாலர்களை எதிர்த்து விரைந்தான்.(54) எனினும், இரத்தச் சிவப்பான கண்களைக் கொண்ட பூமியின் தலைவர்கள் பலர், மலையின் மீது மழையைப் பொழியும் மேகங்களைப் போலத் தங்கள் கணைமழையை விரைவாகப் பொழிந்தனர்.(55) அப்போது, ஓ! வாழும் உயிரினங்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, கர்ணனால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகள், பாஞ்சாலர்களில் பலரைத் தங்கள் உயிரை இழக்கச் செய்தன.(56) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, நண்பர்களின் மீட்பனான அந்தச் சூதன் மகனால், தன் நண்பர்களின் நிமித்தமாக இவ்வாறு தாக்கப்பட்ட பாஞ்சாலர்கள் பேரோலங்களை வெளியிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(57)

பீமனை வீழ்த்திய துச்சாசனன்! – கர்ண பர்வம் பகுதி – 82-பாஞ்சாலர்களை அழிக்கத் தொடங்கிய கர்ணன்; பாஞ்சால இளவரசர்களான ஜனமேஜயன், திருஷ்டத்யும்ன் ஆகியோரையும் மற்றும் சிநி குலத்து சாத்யகியையும் குதிரைகளற்றவர்களாகச் செய்தது; கைகேய இளவரசன் விசோகனையும், படைத்தலைவன் உக்ரகர்மனையும் கொன்ற கர்ணன்; கர்ணனின் மகனான பிரசேனனைக் கொன்ற சாத்யகி; சாத்யகியைக் கர்ணனிடமிருந்து காத்த சிகண்டி; திருஷ்டத்யும்னனின் மகனைக் கொன்ற கர்ணன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; கர்ணனை அசைக்க முடியாத பாஞ்சாலர்கள்; சாத்யகி செய்த போர்; பீமனை எதிர்த்து வந்த துச்சாசனன்; துச்சாசனனின் வில்லையும், கொடிமரத்தையும் அறுத்து, அவனது சாரதியின் தலையையும் கொய்த பீமன்; துச்சாசனன் ஏவிய கணையொன்றால் துளைக்கப்பட்ட பீமன் உயிரை இழந்தவனைப் போலத் தன் தேரில் விழுந்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரன்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெண்குதிரை கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனனால் குருக்கள் விரட்டப்பட்ட பிறகு, சூதன் மகனான கர்ணன், மேகத்திரள்களின் கூட்டத்தை அழிக்கும் புயலைப் போலத் தன் வலிமைமிக்கக் கணைகளால் பாஞ்சாலர்களின் மகன்களை அழிக்கத் தொடங்கினான்.(1) அஞ்சலிகங்கள் என்று அழைக்கப்படும் அகன்ற முகக் கணைகளால், {பாஞ்சால} ஜனமேஜயனின் சாரதியை வீழ்த்திய அவன் {கர்ணன்}, அடுத்ததாக அந்தப் பாஞ்சால வீரனின் குதிரைகளையும் கொன்றான். பிறகு எண்ணற்ற அகன்ற தலை கணைகளை {பல்லங்களைக்} கொண்டு சதானீகன் மற்றும் சுதசோமன் ஆகிய இருவரையும் துளைத்த அவன் {கர்ணன்}, பிறகு அவ்விரு வீரர்களின் விற்களையும் அறுத்தான்.(2) அடுத்ததாக, ஆறு கணைகளால் திருஷ்டத்யும்னனைத் துளைத்த அவன், பிறகு ஒரு கணத்தையும் இழக்காமல் அம்மோதலில அந்த இளவரசனின் {திருஷ்டத்யும்னனின்} குதிரைகளைக் கொன்றான். அடுத்ததாகச் சாத்யகியின் குதிரைகளைக் கொன்ற அந்தச் சூதன் மகன், கைகேயர்களின் ஆட்சியாளனுடைய மகனான விசோகனைக் கொன்றான்.(3) கைகேய இளவரசன் {விசோகன்} கொல்லப்பட்டதை அடுத்து, கைகேயப் படைத்தலைவனான உக்ரகர்மன் [1], வேகமாக விரைந்து, கர்ணனின் மகனான பிரசேனனை[2] சீற்றமிக்கக் கணைகள் பலவற்றால் மிக மூர்க்கமாகத் தாக்கி, அவனை நடுங்கச் செய்தான்.(4) அப்போது கர்ணன், தன் மகனைத் தாக்குபவனின் கரங்களையும், சிரத்தையும், பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணைகள் மூன்றால் வெட்டியதால், கோடரியால் கிளைகள் வெட்டப்பட்டு விழும் சால மரத்தைப் போலப் பின்னவன் {உக்ரகர்மன்} உயிரை இழந்து தன் தேரில் இருந்து கீழே விழுந்தான்.(5)

அப்போது {கர்ணனின் மகன்} பிரசேனன், குதிரைகளற்றவனான சிநியின் பேரனை {சாத்யகியை}, நேராகச் செல்லும் கூரிய கணைகள் பலவற்றால் மறைத்து, தன் தேரில் நர்த்தனம் செய்பவனைப் போலத் தெரிந்தான். எனினும், சிநியின் பேரனால் {சாத்யகியால்} விரைவில் தாக்கப்பட்ட கர்ணனின் மகன் {பிரசேனன்} கீழே விழுந்தான் {கொல்லப்பட்டான்}.(6) கர்ணன், தன் மகன் கொல்லப்பட்டதையடுத்து, சினத்தால் நிறைந்த இதயத்துடன், சிநிக்களின் காளையை {சாத்யகியைக்} கொல்லும் விருப்பத்துடன் அவனிடம், “ஓ! சிநியின் பேரனே, நீ கொல்லப்பட்டாய்” என்று சொல்லி, எதிரிகள் அனைவரையும் கொல்லவல்ல கணையொன்றை அவன் {சாத்யகியின்} மீது ஏவினான்.(7) அப்போது சிகண்டி, மூன்று கணைகளால் அக்கணையை வெட்டி, மேலும் மூன்று கணைகளால் கர்ணனையும் தாக்கினான். கடுஞ்சீற்றமுடைய அந்தச் சூதன் மகன், சிகண்டியின் வில்லையும் கொடி மரத்தையும் இரண்டு கத்தி முகக் கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} வெட்டி, ஆறு கணைகளால் சிகண்டியையும் தாக்கி, அதன்பிறகு திருஷ்டத்யும்னன் மகனின் தலையையும் வெட்டினான்.(8,9)

திருஷ்டத்யும்னனின் மகன் கொல்லப்பட்ட பிறகு, அந்தக் கடும் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னர்களில் சிங்கமே {திருதராஷ்டிரரே}, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} பேசிய கிருஷ்ணன், “பாஞ்சாலர்கள் நிர்மூலமாக்கப்படுகின்றனர். செல், ஓ! பார்த்தா, கர்ணனைக் கொல்வாயாக” என்றான்.(10) இப்படிச் சொல்லப்பட்டவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனன், புன்னகைத்து, தேர்வீரர்களின் தலைவனான கர்ணனால் அந்தப் பயங்கரச் சந்தர்ப்பத்தில் கொல்லப்படும் பாஞ்சாலர்களைக் காக்க விரும்பி, அதிரதன் மகனின் {கர்ணனின்} தேரை நோக்கித் தன் தேரில் சென்றான்.(11) உரத்த நாணொலியைக் கொண்ட தன் காண்டீவத்தை நீட்டி, தன் வில்லின் நாண்கயிற்றைத் தன் உள்ளங்கையால் கடுமையாக அடித்து, தன் கணைகளின் மூலமாகத் திடீரென இருளை உண்டாக்கி, பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள், குதிரைகள், தேர்கள் மற்றும் கொடிமரங்களை அழித்தான்.(12) (அந்நாணொலியின்) எதிரொலிகள் வானத்தில் எதிரொலித்தன. (காற்றில் நிலைக்க முடியாத) பறவைகள், மலைகளின் நிலக் குடைவுகளுக்குள் தஞ்சமடைந்தன. முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லுடன் அர்ஜுனன் மிகப் பிரகாசமாகத் தெரிந்தான். உண்மையில், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனான பார்த்தன், அந்தப் பயங்கரக் கணத்தில் எதிரிகள் மீது பாய்ந்த போது,(13) வீரர்களில் முதன்மையான பீமசேனன், அந்தப் பாண்டு மகனின் {அர்ஜுனனின்} பின்புறத்தைப் பாதுகாத்தபடியே அவனைப் பின்தொடர்ந்து சென்றான். அப்போது அந்த இளவரசர்கள் இருவரும், வழியில் தங்கள் எதிரிகளோடு மோதிபடியே கர்ணனை நோக்கித் தங்கள் தேர்களில் பெரும் வேகத்தோடு சென்றனர்.(14) அந்த இடைவேளையின் போது, சூதன் மகன், சோமகர்களைக் கலங்கடித்தபடியே கடுமையாகப் போரிட்டான். எண்ணற்ற தேர்வீரர்களையும், குதிரைகளையும், யானைகளையும் கொன்ற அவன், தன் கணைகளால் திசைகளின் பத்து புள்ளிகளையும் மறைத்தான்.(15)

அப்போது, உத்தமௌஜஸ், {பாஞ்சால} ஜனமேஜயன், கோபமடைந்தவனான யுதாமன்யு, சிகண்டி ஆகியோர் பிருஷதன் மகனுடன் (திருஷ்டத்யும்னனுடன் சேர்ந்து) உரக்க முழங்கியபடியே கணைகள் பலவற்றால் கர்ணனைத் துளைத்தனர்.(16) பாஞ்சாலப் போர்வீரர்களில் முதன்மையான அந்த ஐவரும், வைகர்த்தனன் என்றும் அழைக்கப்பட்ட கர்ணனை எதிர்த்து விரைந்தாலும், துறவின் மூலம் தூய்மையான ஆன்மாவை அடைந்த மனிதர்களிடம் புலன்நுகர்பொருட்கள் தவறுவது போலவே[3], அவர்களால் அவனது தேரில் இருந்து அவனை அசைக்க முடியவில்லை.(17) அவர்கள் விற்கள், கொடிமரங்கள், குதிரைகள், சாரதிகள், கொடிகள் ஆகியவற்றைத் தனது கணைகளால் வேகமாக வெட்டி கர்ணன், சிங்கத்தைப் போல முழங்கிக் கொண்டே அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் தாக்கினான்.(18) வீரனான அந்தக் கர்ணன், தன் கையில் கணைகளுடன், வில்லின் நாண்கயிற்றைத் தீண்டி தன்னைத் தாக்குபவர்கள் மீது அவற்றை ஏவி தன் எதிரிகளைக் கொல்லும்போது ஏற்படும் அந்த வில்லின் நாணொலியால், மலைகள் மற்றும் மரங்களுடன் கூடிய பூமி பிளக்கப்போகிறது என்றெண்ணி மக்கள் மிகவும் உற்சாகமிழந்தவர்களாக ஆனார்கள்.(19) சக்ரனின் {இந்திரனின்} வில்லுக்கு ஒப்பானதும், பெரியதும், நீளமானதுமான தன் வில்லைக் கொண்டு கணைகளை ஏவிய அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, ஒளிவட்டத்துக்குள் சுடர்மிக்கக் கதிர்கள் பலவற்றுடன் கூடிய சூரியனைப் போலவே மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.(20)

அப்போது சூதனின் மகன் {கர்ணன்}, பனிரெண்டு கூரிய கணைகளால் சிகண்டியைத் துளைத்து, ஆறால் உத்தமௌஜஸையும், மூன்றால் யுதாமன்யுவையும், சோமக மற்றும் பிருஷத மகன்கள் (ஜனமேஜயன் மற்றும் திருஷ்டத்யும்னன் ஆகிய) இருவரில் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளாலும் துளைத்தான்.(21) அந்தப் பயங்கரப் போரில் சூதன் மகனால் {கர்ணனால்} வெல்லப்பட்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஐவரும், எதிரிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தூய ஆன்மா கொண்ட மனிதனால் வெல்லப்படும் புலன் நுகர் பொருட்களைப் போல முற்றிலும் செயலற்றவர்களாக நின்றனர்.(22) அப்போது, திரௌபதியின் மகன்கள் ஐவரும், ஆழமான பெருங்கடலில் உடைந்த மரக்கலங்களில் உள்ள வணிகர்களைப் பிற மரக்கலங்களைக் கொண்டு மீட்கும் மனிதர்களைப் போலக் கர்ணக் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தவர்களான தங்கள் தாய்மாமன்களை, நன்றாக ஆயத்தம் செய்யப்பட்ட பிற தேர்களுடன் வந்து மீட்டனர்.(23) பிறகு, அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, கர்ணனால் ஏவப்பட்ட எண்ணற்ற கணைகளைத் தன் கூரிய கணைகளால் வெட்டி, முற்றிலும் இரும்பாலான கூரிய கணைகள் பலவற்றால் கர்ணனையும் துளைத்து, எட்டு கணைகளால் உமது மூத்த மகனை {துரியோதனனைத்} துளைத்தான்.(24) பிறகு, கிருபர், போஜத் தலைவன் (கிருதவர்மன்), உமது மகன் {துரியோதனன்}, கர்ணன் ஆகியோர் பதிலுக்குச் சாத்யகியைக் கூரிய கணைகளால் தாக்கினர். எனினும் அந்த யது குலத்தின் முதன்மையானவன் {சாத்யகி}, (நான்கு) திசைகளின் காவலர்களுடன் {திக்பாலர்களுடன்} போரிடும் தைத்தியர்களின் தலைவனைப் போல அந்த நான்கு போர்வீரர்களுடனும் போரிட்டான்.(25)

நாணொலிக்கும் தன் வில்லானது முழுமையான அளவுக்கு வளைக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து இடையறாமல் பாய்ந்த கணைகளின் மூலம் அந்தச் சாத்யகி, கூதிர் கால வானின் நடுப்பகல் சூரியனைப் போலத் தடுக்கப்பட முடியாதவனானான்.(26) அப்போது எதிரிகளை எரிப்பவர்களான அந்த வலிமைமிக்கப் பாஞ்சாலத் தேர்வீரர்கள், மீண்டும் தங்கள் தேர்களைச் செலுத்திக் கொண்டு, கவசம் பூண்டு, ஒன்றாகச் சேர்ந்து, போரில் எதிரிகளைப் பீடிக்கும் சக்ரனை {இந்திரனைக்} காக்கும் மருத்துகளைப் போல அந்தச் சிநிக்களில் முதன்மையானவனை {சாத்யகியைப்} பாதுகாத்தனர்.(27) பிறகு உமது எதிரிகளுக்கும், உமது படையின் போர்வீரர்களுக்கும் இடையில் நடந்ததும், மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் படுகொலைகள் நிறைந்ததுமான அந்தப் போரானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த மோதலுக்கு ஒப்பாகக் கடுமையை அடைந்தது.(28) பல்வேறு ஆயுத மழையால் மறைக்கப்பட்ட தேர்வீரர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோர் ஓரிடத்தில் இருந்து மறு இடத்திற்கு நகரத் தொடங்கினர். ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அவர்கள், சூழன்றனர், அல்லது துன்ப ஓலங்களை வெளியிட்டனர், அல்லது உயிரை இழந்து கீழே விழுந்தனர்.(29)

காரியங்களின் நிலை அவ்வாறிருக்கையில், உமது மகனும், மன்னனுக்கு {துரியோதனனுக்குத்} தம்பியுமான துச்சாசனன், கணைமாரியை ஏவியபடியே அச்சமில்லாமல் பீமனை எதிர்த்து வந்தான். விருகோதரனும் {பீமனும்}, ஒரு பெரிய ருரு மானை நோக்கிப் பாயும் சிங்கம் ஒன்றைப் போல அவனை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தான்.(30) அப்போது ஒருவரோடொருவர் பகை கொண்டவர்களும், உயிரையே பணயமாக வைத்துப் போர்விளையாட்டை ஆடிக்கொண்டிருந்தவர்களுமான அவ்விரு வீரர்களுக்குள்ளும் நேர்ந்த மோதலானது, பழங்காலத்தில் {அசுரன்} சம்பரனுக்கும், சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்ததைப்போல மிகக் கடுமையான நிலையை அடைந்தது.(31) காமத்தால் தூண்டப்பட்டவையும், தங்கள் உடல்களில் தொடர்ச்சியாக மதநீர் பெருக்குபவையுமான பெருங்களிறுகள் {பெரும் ஆண் யானைகள்} இரண்டு, பருவ காலத்தில் உள்ள பிடியின் {பெண் யானையின்} அருகில் ஒன்றோடொன்று போரிட்டுக் கொள்வதைப் போல, பெரும் சக்தி கொண்டவையும், ஒவ்வொருவரின் உடலைத் துளைக்கவல்லவையுமான கணைகளால் அவ்விருவரும் ஒருவரையொருவர் ஆழத் தாக்கிக் கொண்டனர்.(32) பெரும் வேகம் கொண்ட விருகோதரன் {பீமன்}, கத்தி தலைக் கணைகள் {க்ஷுரப்ரங்கள்} இரண்டால் உமது மகனின் {துச்சாசனனின்} வில்லையும், கொடிமரத்தையும் அறுத்தான். தன்னை எதிர்ப்பவனின் நெற்றியை, சிறகு படைத்த மற்றொரு கணையால் துளைத்து, அடுத்ததாக (நான்காவது கணையைக் கொண்டு) பின்னவனுடைய சாரதியின் தலையை அவனது உடலில் இருந்து அறுத்தான்.(33)

மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட இளவரசன் துச்சாசனன், பனிரெண்டு கணைகளால் விருகோதரனைத் துளைத்தான். தானே தன் குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்துக் கொண்ட அவன், நேரான கணைகளின் மாரியை மீண்டும் பீமன் மீது பொழிந்தான்.(34) அப்போது துச்சாசனன், சூரியனின் கதிர்களைப் போன்ற பிரகாசமானதும், தங்கம், வைரங்கள் மற்றும் பிற விலைமதிப்பில்லா ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டும், தன்னைத் தாக்குபவனின் உடலைத் துளைக்கவல்லதும், இந்திரனுடைய வஜ்ரத்தின் வீச்சைப் போலத் தடுக்கப்பட முடியாததுமான கணையொன்றை ஏவினான்.(35) அதனால் உடல் துளைக்கப்பட்ட விருகோதரன் {பீமன்}, தளர்ந்த அங்கங்களுடன், விரித்து நீட்டிய கரங்களுடனும் உயிரை இழந்த ஒருவனைப் போலத் தன் சிறந்த தேரில் விழுந்தான். எனினும் உணர்வுகள் மீண்ட அவன் ஒரு சிங்கத்தைப் போல முழங்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(36)

மார்பைப் பிளந்து உதிரம் குடித்த பீமன்! – கர்ண பர்வம் பகுதி – 83-பீமனின் வில்லை அறுத்து, அவனது சாரதியைத் துளைத்த துச்சாசனன், பீமன் ஏவிய ஈட்டியை வெட்டி, மற்றொரு கணையால் பீமனை ஆழமாகத் துளைத்த துச்சாசனன்; துச்சாசனனுக்குத் தன் சபதத்தை நினைவுப்படுத்திய பீமன்; துச்சாசனனின் தலையைத் தாக்கி, அவனுடைய குதிரைகள், தேர் ஆகியவற்றை இழக்கச் செய்தது; தரையில் விழுந்து துடித்த துச்சாசனன்; கர்ணன், துரியோதனன், கிருபர், அஸ்வத்தாமன், கிருதவர்மன் ஆகியோரைக் கூவியழைத்து, அவர்களின் கண்ணெதிரிலேயே துச்சாசனனின் மார்பைப் பிளந்து அவனது உதிரத்தைக் குடித்த பீமன்; கர்ணனின் தம்பியான சித்திரசேனனைக் கொன்ற யுதாமன்யு; கர்ணனை எதிர்த்து விரைந்த நகுலன்; தன் சபதம் நிறைவேறியதை கிருஷ்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் சொன்ன பீமன்; துரியோதனனைக் கொல்லப் போவதாகச் சொன்னது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மிக மூர்க்கமாகப் போரிட்ட இளவரசன் துச்சாசனன், அடைவதற்கு மிக அரிதான சாதனையை அம்மோதலில் அடைந்தான். ஒரு கணையால் பீமனின் வில்லை அறுத்த அவன், ஆறு கணைகளால் தன் எதிரியின் சாரதியைத் துளைத்தான்.(1) அந்த அருஞ்செயல்களைச் செய்தவனும், பெரும் சுறுசறுப்பைக் கொண்டவனுமான அந்த இளவரசன் {துச்சாசனன்}, ஒன்பது கணைகளால் பீமனையும் துளைத்தான். உண்மையில் அப்போது, அந்த உயர் ஆன்ம போர்வீரன், ஒரு கணத்தையும் இழக்காமல், பெரும் சக்தி கொண்ட பல கணைகளால் பீமசேனனைத் துளைத்தான்.(2) இதனால் சினத்தால் நிறைந்தவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனுமான பீமசேனன், உமது மகனின் {துச்சாசனனின்} மீது கடுமையான ஓர் ஈட்டியை ஏவினான். சுடர்விடும் பந்தமெனத் தன்னை நோக்கி மூர்க்கமாக விரையும் அந்தப் பயங்கர ஈட்டியைக் கண்ட உமது உயர் ஆன்ம மகன் {துச்சாசனன்}, முழுதாக வளைத்த தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட பத்து கணைகளால் அதை வெட்டினான்.(3) அவன் அந்தக் கடுஞ்சாதனையை அடைவதைக் கண்ட போர்வீரர்கள் அனைவரும், மகிழ்ச்சியால் நிறைந்து, அவனை உயர்வாகப் புகழ்ந்தனர். பிறகு உமது மகன் {துச்சாசனன்}, மற்றொரு கணையால் பீமனை ஆழத் துளைத்தான்.(4) துச்சாசனனைக் கண்டதும் கோபத்தால் சுடர்விட்டெரிந்த பீமன், அவனிடம், “ஓ! வீரா, வேகமாகவும், ஆழமாகவும், உன்னால் நான் துளைக்கப்பட்டேன். எனினும், மீண்டும் என் கதாயுதத்தின் வீச்சைத் தாங்கிக் கொள்வாயாக” என்றான்.(5)

இதைச் சொன்னவனும், சினத்தோடிருந்தவனுமான பீமன், துச்சாசனனைக் கொல்வதற்காகத் தனது பயங்கரமான கதாயுதத்தை எடுத்தான். மீண்டும் அவனிடம் {துச்சாசனனிடம்} பேசியவன் {பீமன்}, “ஓ! தீய ஆன்மா கொண்டவனே, இன்று இந்தப் போர்க்களத்தில் நான் உனது உதிரத்தைக் குடிப்பேன்” என்றான்.(6) இவ்வாறு சொல்லப்பட்ட உமது மகன் {துச்சாசனன்}, காலனுக்கே ஒப்பான ஒரு கடும் ஈட்டியைப் பெரும்பலத்தோடு பீமன் மீது வீசினான். கோபத்தால் நிறைந்த வடிவத்துடன் கூடிய பீமனும், தனது பயங்கரக் கதாயுதத்தைச் சுழற்றி, தன் எதிராளியின் மீது வீசினான்.(7) அந்தக் கதாயுதம், துச்சாசனனின் ஈட்டியை வேகமாக முறித்து, உமது மகனின் தலையைத் தாக்கியது. உண்மையில், உடலில் வழிந்தோடும் மதநீரோடு கூடிய யானையொன்றைப் போல வியர்த்துக் கொண்டிருந்த பீமன், அந்தப் பயங்கரப் போரில் தன் கதாயுதத்தை அந்த இளவரசன் {துச்சாசனன்} மீது வீசினான்.(8) பீமசேனன், அவ்வாயுதத்தைக் கொண்டு, பத்து விற்களின் நீளத்தின் அளவைக் கொண்ட தொலைவுக்குத் துச்சாசனனை அவனது தேரில் இருந்து பலமாக வீசியெறிந்தான். மூர்க்கமான அந்தக் கதாயுதத்தால் தாக்கப்பட்ட துச்சாசனன், தரையில் வீசியெறியப்பட்டு நடுங்கத் தொடங்கினான்.(9) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்வாயுதம் வீழ்ந்ததால், அவனது குதிரைகள் அனைத்தும், அவனது தேரும் கூட அணுக்களாகக் குறைந்து போகின. துச்சாசனனைப் பொறுத்தவரையில், அவனது கவசம், ஆபரணங்கள், ஆடை, மாலைகள் ஆகியன இடம்பெயர்ந்திருந்தன, அவன் வலியால் பீடிக்கப்பட்டு நெளியத் தொடங்கினான்.(10)

பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட பீமசேனன், அப்போது, அந்தப் பயங்கரப் போரில், குரு படையின் முதன்மையான போர்வீரர்கள் பலருக்கு மத்தியில் நின்று கொண்டு, உமது மகன்களால் (பாண்டவர்களுக்கு) இழைக்கப்பட்ட பகையான அனைத்துச் செயல்பாடுகளையும் நினைவுகூர்ந்தான்.(11) நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளைச் செய்தவனான வலிய கரங்களைக் கொண்ட பீமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (அந்த அவல நிலையில்) துச்சாசனனைக் கண்டு, திரௌபதியின் குழல்கள் {கேசம்} பற்றப்பட்டதையும், அவள் நோயுற்றிருந்த போது ஆடை களையப்பட்டதையும்[1] நினைத்துப் பார்த்தான்.(12) உண்மையில், அக்காட்சியில் இருந்து கணவர்கள் முகம் திருப்பி அமர்ந்திருக்கையில் அந்த இளவரசிக்கு இழைக்கப்பட்ட பல்வேறு தீமைகளை நினைத்துப் பார்த்த அப்பாவி பீமன், நெருப்பில் ஊட்டப்பட்ட தெளிந்த நெய்க் காணிக்கையைப் போல[2] கோபத்தில் சுடர்விட்டெரிந்தான்.(13) கர்ணன், சுயோதனன், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருதவர்மன் ஆகியோரோடு பேசிய அவன், “இன்று நான் இந்தப் பொல்லாத துச்சாசனனைக் கொல்லப் போகிறேன். அனைத்துப் போர்வீரர்களும் (அவர்களால் முடிந்தால்) இவனைப் பாதுகாத்துக் கொள்ளட்டும்” என்றான்.(14) இதைச் சொன்னவனும், பெரும் பலமும் சுறுசுறுப்பும் கொண்டவனுமான பீமன், துச்சாசனனைக் கொல்லும் விருப்பத்தால் திடீரென விரைந்தான்.(15)

கடுமையும், மூர்க்கமும் கொண்ட சிங்கம் ஒன்று வலிமைமிக்க யானையை நோக்கி வரைவதைப் போலவே, வீரர்களில் முதன்மையான அந்த விருகோதரன் {பீமன்}, அந்தப் போரில் துச்சாசனனை நோக்கி விரைந்து, சுயோதனனும், கர்ணனும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனைத் தாக்கினான். தன் தேரில் இருந்து கீழே குதித்துத் தரையில் இறங்கிக் கீழே விழுந்து கிடந்த எதிரியின் மீது கண்களைப் பொருத்தி நிலைக்கப் பார்த்துக் கொண்டிருந்தான்.(16) கூர்தீட்டப்பட்டதும், கூர்முனை கொண்டதுமான தன் வாளை உருவி, சினத்தால் நடுங்கிய அவன் {பீமன்}, தன் காலைத் துச்சாசனனின் தொண்டையில் வைத்து, தரையில் நீட்டிக் கிடந்த அந்தத் தன் எதிரியின் {துச்சாசனனின்} மார்பைப் பிளந்து, சூடான அவனது உயிர்க்குருதியைக் குடித்தான்.(17) பிறகு அவனைக் கீழே வீசி, உமது மகனின் தலையை அந்த வாளால் வெட்டியவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான பீமன், தன் சபதத்தை நிறைவேற்ற விரும்பி, சுவையில் இன்புறுவதற்காகத் தன் எதிரியின் உதிரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தான். பிறகு கோபம் நிறைந்த கண்களுடன் அவனைப் துச்சாசனனைப்} பார்த்த அவன் {பீமன்}, இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(18,19) “என் எதிரியின் இந்த உதிரதத்தை, என் தாயின் பாலுக்கோ, தேனுக்கோ, தெளிந்த நெய்க்கோ, தேனில் இருந்து உண்டாக்கப்பட்ட நல்ல மதுவுக்கோ, நல்ல நீருக்கோ, {பசுவின்} பாலுக்கோ, தயிருக்கோ, மோருக்கோ, அமுதத்தைப் போன்ற மேன்மையான இனிய சுவையைக் கொண்ட அனைத்து வகையிலான பிற பானங்களுக்கோ சுவையில் மேம்பட்டதாக நான் கருதுகிறேன்” என்றான்.(20,21) கடுஞ்செயல்களைச் செய்யக்கூடிய பீமன், கோபத்தால் தன் இதயம் நிறைந்து, இறந்து போன துச்சாசனனை மீண்டும் கண்டு, மெல்லப் புன்னகைத்து, “இதற்கு மேல் நான் உன்னை என்ன செய்ய முடியும்? மரணம் உன்னை என் கைகளில் இருந்து தப்பிக்க வைத்தது” என்றான்.(22)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனன், தன் எதிரியின் உதிரத்தைக் குடித்ததில் மகிழ்ச்சியில் நிறைந்து இவ்வார்த்தைகளைச் சொல்லிப் போர்க்களத்தில் அச்சமூட்டியபோது, பின்னவனை {பீமனைக்} கண்டவர்கள் அச்சத்தால் கீழே விழுந்தனர்.(23) அக்காட்சியைக் கண்டும் கீழே விழாதவர்கள், தங்கள் கரங்களில் இருந்து ஆயுதங்கள் கீழே விழுவதைக் கண்டனர். அச்சத்திலிருந்த பலர், பலவீனமாகக் கதறி, பாதி மூடிய கண்களுடன் பீமனைப் பார்த்தனர்.(24) உண்மையில் பீமனைச் சுற்றி நின்றோர் அனைவரும், அவன் துச்சாசனனின் உதிரத்தைக் குடிப்பதைக் கண்டதும், அச்சத்தில் மூழ்கி, “இவன் மனிதனல்ல” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர்.(25) பீமன் இவ்வடிவத்தை ஏற்ற போது, அவன் தன் எதிரியின் உதிரத்தைக் குடிப்பதைக் கண்ட மக்கள், “இந்தப் பீமன் ராட்சசனாகவே இருக்க வேண்டும்” என்று ஒருவருக்கொருவர் சொன்னபடியே {கர்ணனின் தம்பியான} சித்திரசேனனோடு சேர்ந்து தப்பி ஓடினர்.(26)

அப்போது, (பாஞ்சால) இளவரசனும், தன் துருப்புகளின் தலைமையில் நின்று கொண்டிருந்தவனுமான யுதாமன்யு, பின்வாங்கிச் செல்லும் சித்திரசேனனை அச்சமில்லாமல் பின்தொடர்ந்து சென்று, ஒன்றன்பின் ஒன்றாக ஏழு கூரிய கணைகளால் அவனை வேகமாகத் துளைத்தான்.(27) மிதிபட்டதும், பெரும் சக்தியைக் கொண்டதுமான ஒரு பாம்பு, தன் நஞ்சைக் கக்க விரும்பி மீண்டும் மீண்டும் தன் நாவை வெளியே நீட்டுவதைப் போல, சித்திரசேனனும் திரும்பி மூன்று கணைகளால் அந்தப் பாஞ்சால இளவரசனையும் {யுதாமன்யுவையும்}, ஆறால் அவனது சாரதியையும் துளைத்தான்.(28) அப்போது துணிச்சல்மிக்க யுதாமன்யு, நல்ல சிறகைக் கொண்டதும், மிகக் கூரிய முனையைக் கொண்டதுமான ஒரு கணையை முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து மிகக் கவனமாக ஏவி, தன் எதிரியின் {சித்திரசேனனின்} தலையை வீழ்த்தினான்.(29) தன் தம்பியான சித்திரசேனனின் வீழ்ச்சிக்குப் பிறகு, கோபத்தால் நிறைந்த கர்ணன், தன் ஆற்றலை வெளிப்படுத்தி, அந்தப் பாண்டவப் படையை ஓடச் செய்ததால், நகுலன் அளவிலா சக்தி கொண்ட அவ்வீரனை {கர்ணனை} எதிர்த்து விரைந்தான்.(30)

பீமனும், (கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே) பழியுணர்ச்சி கொண்ட துச்சாசனனைக் கொன்ற பிறகு, அவனது உதிரத்தைச் சிறிதளவு எடுத்து, மிக ஓங்கிய நுரையீரலைக் {மூச்சுக் காற்றினைக்} கொண்ட அவன், உலகின் முதன்மையான வீரர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(31) “ஓ! மனிதர்களில் இழிந்தோரே, இதோ உங்கள் தொண்டையில் இருந்து உயிர்க்குருதியை நான் குடிக்கிறேன். (நீங்கள் முன்பு செய்ததைப் போலவே) மகிழ்ச்சியால் நிறைந்து எங்களை “விலங்கு, விலங்கு” என்று நிந்தியுங்கள்” என்று சொன்னான்.(32) மேலும் தொடர்ந்த அவன், “அப்போது, “விலங்கு, விலங்கு” என்று சொல்லி எங்களைப் பார்த்து ஆடியவர்கள், தங்கள் வார்த்தைகளை மீண்டும் சொன்னபடியே இப்போது ஆடப்போகிறார்கள்.(33) பிரமாணக்கோடி அரண்மனையில் எங்கள் உறக்கும், எங்கள் உணவில் கலக்கப்பட்ட நஞ்சு, கருநாகங்களின் கடிகள், அரக்கு வீட்டில் இடப்பட்ட நெருப்பு,(34) சூதாடித் திருடப்பட்ட எங்கள் நாடு, காடுகளுக்குள் நாங்கள் நாடுகடத்தப்பட்டது, கொடூரமாக பற்றி இழுக்கப்பட்ட திரௌபதியின் அழகிய கூந்தல்,(35) போரில் கணைகள் மற்றும் ஆயுதங்களின் வீச்சுகள், வீட்டில் நாங்கள் அடைந்த துயரங்கள், விராடனின் வசிப்பிடத்தில் நாங்கள் அடைந்த பிற துன்பங்கள் ஆகிய(36) அனைத்து துயரங்களும், சகுனி, துரியோதனன் மற்றும் ராதையின் மகனுடைய ஆலோசனைகளின் மூலமாக உங்களையே காரணமாக வைத்து நடந்தன.(37) திருதராஷ்டிரர் மற்றும் அவரது மகனின் {துரியோதனனின்} தீய குணங்களின் மூலமாகவே நாங்கள் இந்தக் கடுந்துயரங்களை அடைந்தோம். மகிழ்ச்சி எப்போதும் எங்களுடையதாக இருந்ததில்லை” என்றான் {பீமன்}.(38)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்த வெற்றியாளன் விருகோதரன் {பீமன்}, மீண்டும் கேசவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(39) உண்மையில் குருதியில் குளித்து, தன் காயங்களில் இருந்து உதிரம் பாய, மிகவும் சிவந்திருந்த முகத்துடன் பெரும் கோபத்தில் நிறைந்திருந்தவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனுமான பீமசேனன், இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “வீரர்களே, போரில் துச்சாசனன் சம்பந்தமாக நான் என்ன சபதம் செய்திருந்தேனோ, அதை இன்று நிறைவேற்றிவிட்டேன்.(40) இரண்டாவது விலங்கான துரியோதனனையும், இந்தப் போர் வேள்வியில் கொன்று என் மற்றொரு சபதத்தையும்[3] நான் நிறைவேற்றுவேன். கௌரவர்களின் முன்னிலையில் அந்தத் தீய ஆன்மாக் கொண்டவனின் தலையை என் காலால் உதைத்த பிறகே நான் அமைதியை அடைவேன்” என்றான் {பீமன்}.(41) இவ்வார்த்தைகளைச் சொன்ன பீமன், பெரும் மகிழ்ச்சியில் நிறைந்து, குருதியில் நனைந்து, (அசுரனான) விருத்திரனைக் கொன்ற பிறகு முழங்கிக் கொண்டிருந்தவனும், வலிமைமிக்கவனும், உயர் ஆன்மா கொண்டவனும், ஆயிரங்கண்களைக் கொண்டவனுமான இந்திரனைப் போல உரக்க முழங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(42)

நகுலனைத் தேரற்றவனாகச் செய்த விருஷசேனன்! – கர்ண பர்வம் பகுதி – 84-திருதராஷ்டிரன் மகன்களான பத்து பேரால் தாக்கப்பட்ட பீமன் அவர்கள் அனைவரையும் கொன்றது; பீமனின் ஆற்றலைக் கண்டு அச்சமடைந்த கர்ணன்; கர்ணனுக்கு உற்சாகமூட்டிய சல்லியன்; நகுலனுக்கும், கர்ணனின் மகனான விருஷசேனனுக்கும் இடையில் நடந்த மோதல்; விருஷசேனனால் தேரற்றவனாகச் செய்யப்பட்ட நகுலன் பீமனின் தேரில் ஏறிக் கொண்டது; விருஷசேனனைக் கொல்லச் சொல்லி அர்ஜுனனை வற்புறுத்திய பீமனும், நகுலனும்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துச்சாசனன் கொல்லப்பட்டபிறகு, போரில் பின்வாங்காதவர்களும், பெரும் தேர்வீரர்களும், வலிமையும், சக்தியும் கொண்டவர்களும், கோபமெனும் நஞ்சு நிறைந்தவர்களுமான உமது மகன்களில் பத்து பேர், தங்கள் கணைகளால் பீமனை மறைத்தனர்.(1) நிஷாங்கின், கவசின், பாசின், தண்டதாரன், தானுகிரகன், அலோலூபன், சகன், ஷண்டன், வாதவேகன், சுவர்ச்சஸ் ஆகியனவே,(2) தங்கள் அண்ணன் கொலையால் பீடிக்கப்பட்டவர்களும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமசேனனைத் தடுக்க ஒன்றாகச் சேர்ந்திருந்தவர்களுமான அந்தப் பத்து பேரின் பெயர்களாகும்.(3) அந்தப் பெரும் தேர்வீரர்களால் அனைத்துப் பக்கங்களிலும் தடுக்கப்பட்ட பீமன், சினத்தால் நெருப்பெனக் கண்கள் சிவந்து, கோபத்துடன் இருக்கும் அந்தகனைப் போலவே பிரகாசமாகத் தெரிந்தான்.(4) எனினும் பார்த்தன் {பிருதையின் மகன்: பீமன் / அர்ஜுனன்}, தங்கக் கைவளைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பத்து இளவரசர்களை, தங்கச் சிறகுகளையும், பெரும் மூர்க்கத்தையும் கொண்ட பத்து அகன்ற தலைக் கணைகளை {பல்லங்களைக்} கொண்டு யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்[1].(5)

அந்தப் பத்து வீரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாண்டவர்களால் உண்டான அச்சத்தினால் பீடிக்கப்பட்ட உமது படை, சூதன் மகன் {கர்ணன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே தப்பி ஓடியது.(6) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வாழும் உயிரனங்களை அழிப்பவனுக்கு {காலனுக்கு) ஒப்பான பீமனின் ஆற்றலைக் கண்ட கர்ணனின் இதயத்திற்குள் பேரச்சம் நுழைந்தது.(7) சபைகளின் ரத்தினமான சல்லியன், கர்ணனின் தன்மைகளை ஆய்வு செய்து, அவனது மனநிலையைப் புரிந்து கொண்டு, அந்த நேரத்திற்கு ஏற்ற வார்த்தைகளை அந்த எதிரிகளைத் தண்டிப்பவனிடம் {கர்ணனிடம்} சொன்னான்:(8) “ஓ! ராதையின் மகனே {கர்ணனே}, வருந்தாதே. இஃது உனக்குத் தகாது. பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டே இம்மன்னர்கள் அனைவரும் ஓடுகின்றனர்.(9) உயர் ஆன்மப் பீமனால், துச்சாசனனின் இரத்தம் குடிக்கப்பட்டதன் விளைவாலும், அவனுக்கு நேர்ந்த பேரிடராலும் மிகவும் துன்புற்ற துரியோதனன் மலைப்படைந்திருக்கிறான்.(10)

கிருபரோடு கூடிய பிறரும், மன்னனின் தம்பியரில் இன்னும் எஞ்சியிருப்போரும்[2] பீடிக்கப்பட்ட இதயங்களுடனும், கவலையால் சினம் தணிவடைந்தும், துரியோதனனைச் சுற்றி அமர்ந்து அவனுக்கு ஆறுதலளிக்கின்றனர்.(11) தனஞ்சயன் {அர்ஜுனன்} தலைமையிலானவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களுமான அந்தப் பாண்டவ வீரர்கள் உன்னை எதிர்த்துப் போரிடவே வருகிறார்கள்.(12) இந்தக் காரணங்களுக்காக, ஓ! மனிதர்களில் புலியே, உன் ஆற்றல் அனைத்தையும் திரட்டி, க்ஷத்திரியக் கடமைகளை உன் கண் முன் நிறுத்தி, தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துச் செல்வாயாக.(13) (இந்தப் போரின்) மொத்த சுமையும் திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} உன் மீதே நிறுத்தப்பட்டிருக்கிறது. ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, உன் பலத்திற்கும், சக்திக்கும் சிறந்தவாறு அந்தச் சுமையைச் சுமப்பாயாக.(14) வெற்றியிலேயே பெரும்புகழ் இருக்கிறது, தோல்வியிலோ, சொர்க்கம் நிச்சயமாக இருக்கிறது.(15) ஓ! ராதையின் மகனே, உன் மகனான விருஷசேனன், நீ மலைப்பில் மூழ்கியிருப்பதைக் கண்டு, கோபத்தால் நிறைந்து, பாண்டவர்களை நோக்கி அதோ விரைகிறான்” என்றான் {சல்லியன்}.(16) அளவிலா சக்தி கொண்ட சல்லியனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட கர்ணன், ஆலோசித்தபடியே, போரானது தவிர்க்க இயலாததாகிவிட்டதென மாற்றமில்லாத தீர்மானத்தை அடைத்தான்.(17)

அப்போது கோபத்தால் நிறைந்த விருஷசேனன், காலதண்டத்துடன் கூடிய யமனுக்கு ஒப்பாகக் கதாயுதம் தரித்தவனும், உமது துருப்புகளைக் கொன்று கொண்டிருந்தவனும், பாண்டுவின் மகனுமான விருகோதரனை {பீமனை} நோக்கி விரைவாகத் தன் தேரைச் செலுத்தினான்.(18) வீரர்களில் முதன்மையான நகுலன், கோபத்தால் நிறைந்து, (அசுரன்) ஜம்பனை எதிர்த்து விரையும் வெற்றியாளன் மகவத்தை {இந்திரனைப்} போலக், கர்ணனின் மகனான தங்கள் எதிரியை நோக்கி மகிழ்ச்சியான இதயத்துடன் விரைந்து சென்று, கணைகளால் அவனைத் தாக்கினான்.(19) பிறகு, துணிச்சல்மிக்க அந்த நகுலன், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தன் எதிரியின் கொடிமரத்தை, ஒரு கத்தி தலை கணையை {க்ஷுரப்ரத்தைக்} கொண்டு அறுத்தான். அடுத்ததாக ஓர் அகன்ற தலைக் கணையை {பல்லத்தைக்} கொண்டு அவன் {நகுலன்}, தங்க வாருடன் இணைக்கப்பட்ட கர்ணன் மகனின் வில்லையும் அறுத்தான். (20)

அப்போது, வலிமையான ஆயுதங்களைக் கொண்ட கர்ணனின் மகன் {விருஷசேனன்}, துச்சாசனனுக்குத் தன் மரியாதையைக் காட்ட விரும்பி, மற்றொரு வில்லை வேகமாக எடுத்துக் கொண்டு, வலிமைமிக்க தெய்வீக ஆயுதங்கள் பலவற்றால், பாண்டுவின் மகனான நகுலனைத் துளைத்தான்.(21) பிறகு சினத்தால் நிறைந்த அந்த உயர் ஆன்ம நகுலன், சுடர்மிக்க எரிப்பந்தங்களுக்கு ஒப்பான கணைகளால் தன் எதிராளியைத் துளைத்தான். ஆயுதங்களை நன்கறிந்தவனான கர்ணனின் மகனும், இதனால் நகுலன் மீது தெய்வீக ஆயுதங்களைப் பொழிந்தான்.(22) தனது எதிரியுடைய ஆயுதங்களின் வீச்சுகளால் கோபமடைந்ததாலும், தன் ஆயுதங்களின் சக்தியாலும், தன்னொளியாலும், தெளிந்த நெய்க் காணிக்கைகளால் ஊட்டப்படும் நெருப்பைப் போல அந்தக் கரண்ன் மகன் {விருஷசேனன்} சுடர்விட்டெரிந்தான்.(23) உண்மையில், ஓ! மன்னா, அந்தக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, வனாயு இனத்தைச் சேர்ந்தவையும், வெண்ணிறம் கொண்டவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், மென்மையான நகுலனுக்குச் சொந்தமானவையுமான அழகிய குதிரைகளைத் தன் சிறந்த ஆயுதங்களால் கொன்றான்.(24) குதிரைகளற்ற தன் வாகனத்தில் இருந்து இறங்கிய நகுலன், பிரகாசமானதும், தங்க நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு கேடயத்தை எடுத்துக் கொண்டு, வானத்தைப் போன்ற நீலவண்ணம் கொண்ட வாள் ஒன்றையும் எடுத்துக் கொண்டு, அடிக்கடி குதித்த படியே ஒரு பறவையைப் போல அங்கே திரிந்தான்.(25)

காற்றில் அழகிய பரிமாணங்களை நிகழ்த்திக் காட்டிய அந்தப் பாண்டுவின் மகன், முதன்மையான மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் பலவற்றையும் வெட்டினான். அந்த வாளால் வெட்டப்பட்டவை, குதிரை வேள்வி ஒன்றில், {குதிரையை} வெட்டும் கடமையில் நியமிக்கப்பட்ட மனிதனால் வெட்டப்படும் விலங்குகளைப் போலப் பூமியில் விழுந்தன.(26) நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களும், போரில் திளைப்பவர்களும், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்களும், நன்கு கூலி கொடுக்கப்பட்டவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களும், சிறந்த சந்தனக் குழம்பை மேனியில் பூசியிருந்தவர்களுமான இரண்டாயிரம் வீரர்கள், வெற்றியின் விருப்பத்தால் ஈர்க்கப்பட்டவனும், தனியொருவனுமான நகுலனால் வேகமாக வெட்டி வீழ்த்தப்பட்டனர்.(27) அப்போது, அந்தப் போரில் திடீரெனப் பெரும் வேகத்தோடு நகுலனை எதிர்த்து விரைந்த அந்தக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, அவனைக் கொல்லும் விருப்பத்தால், பல கூரிய கணைகளைக் கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் அவனைத் துளைத்தான்.(28) இவ்வாறு (விருஷசேனனின்) கணைகளால் தாக்கப்பட்ட நகுலன், துணிச்சல்மிக்கத் தன் எதிராளியைப் பதிலுக்குத் தாக்கினான். பாண்டு மகனால் துளைக்கப்பட்ட அந்த விருஷசேனன், கோபத்தால் நிறைந்தான். எனினும், அந்தப் பயங்கரப் போரில், தன் அண்ணனான பீமனால் காக்கப்பட்ட உயர் ஆன்ம நகுலன், அந்தச் சந்தர்ப்பத்தில் பயங்கரச் சாதனைகளை அடைந்தான்.(29) சினத்தால் நிறைந்த கர்ணன் மகன், பிறகு, எந்த ஆதரவுமின்றி முதன்மையான மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளை அழித்துக் கொண்டு அந்தப் போரில் விளையாடிக் கொண்டிருப்பவனைப் போலத் தெரிந்த வீர நகுலனை பதினெட்டு கணைகளால் துளைத்தான்.(30)

அந்தப் போரில் விருஷசேனனால ஆழத்துளைக்கப்பட்டவனும், பாண்டுவின் மகனும், மனிதர்களில் முதன்மையானவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டாவனுமான நகுலன், சினத்தால் நிறைந்து, கர்ணன் மகனைக் கொல்லும் விருப்பத்தோடு, அம்மோதலில் அவனை எதிர்த்து விரைந்தான்.(31) இறைச்சியில் விருப்பத்துடன் சிறகுகளை விரிக்கும் பருந்தொன்றைப் போலப் பெரும் சக்தி கொண்ட நகுலன், மிக வேகமாக எதிர்த்து சென்று கொண்டிருந்த போது, அவன் {நகுலன்} மீது கூரிய கணைமாரியை விருஷசேனன் பொழிந்தான்.(32) எனினும், தன் எதிராளியின் கணைமாரியைக் கலங்கடித்த நகுலன், பல்வேறு அழகிய அசைவுகளுடன் {கதிகளுடன்} திரிந்து கொண்டிருந்தான். ஓ! மன்னா, பெரும் சுறுசுறுப்புடனும், அந்த அழகிய அசைவுகளுடனும் நகுலன் திரிந்து கொண்டிருந்தபோது, அந்தப் பயங்கரப் போரில் கர்ணன் மகன் {விருஷசேனன்}, ஆயிரம் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட அவனது {நகுலனின்} கேடயத்தைத் தன் வலிமைமிக்கக் கணைகளால் வெட்டினான்.(33) பளபளப்பாக்கப்பட்டதும், கூர்முனை கொண்டதும், உருக்காலானதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதும், எதிரிகளின் உடல்கள் அனைத்தையும் அழிக்கவல்லதும், பயங்கரமானதும், பாம்பின் நஞ்சைப் போலக் கடுமையானதும், உறையில் இருந்து உருவப்பட்டதுமான தன் வாளை நகுலன் மிக வேகமாகச் சுழற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு கணத்தையும் இழக்காத அந்த எதிரிகளைத் தடுப்பவன் (விருஷசேனன்), கூரிய கத்தித் தலை கணைகள் {க்ஷுரப்ரங்கள்} ஆறால் அதை {அந்த வாளை} வெட்டினான். அதன் பிறகு, விருஷசேனன், நன்கு கடினமாக்கப்பட்டவையும், கூர்முனை கொண்டவையுமான சில கணைகளால் தன் எதிராளியின் {நகுலனின்} நடுமார்பை ஆழமாகத் துளைத்தான்.(34,35)

உன்னதமான மனிதர்களால் பாராட்டப்பட்டவையும், வேறு மனிதனால் அடைய முடியாதவையுமான அந்த அருஞ்செயல்களை அவன் {விருஷசேனன்} அடைந்த பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், உயர் ஆன்மாவைக் கொண்டவனுமான நகுலன், பீமசேனனின் தேரை நோக்கிச் சென்றான்.(36) குதிரைகளற்றவனான அந்த மாத்ரியின் மகன், கர்ணனின் மகனால் இவ்வாறு பீடிக்கபட்டு, தனஞ்சயன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மலைச்சிகரத்தில் பாயும் சிங்கம் ஒன்றைப் போலப் பீமனின் தேர் மீது பாய்ந்தேறினான்.(37) அப்போது, உயர் ஆன்மா கொண்ட அந்த வீர விருஷசேனன், கோபத்தால் நிறைந்து, பாண்டுவின் மகன்களான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவர் மீதும் தன் கணைமாரியைப் பொழிந்தான்.(38) பாண்டு மகனின் (நகுலனின்) தேரானது அழிவடைந்த பிறகு, (விருஷசேனனால்) அவனது வாளும் வேகமாக வெட்டப்பட்ட பிறகு, குரு வீரர்களில் முதன்மையான பலர், ஒன்றாகச் சேர்ந்து, அந்தப் பாண்டவச் சகோதரர்களை அணுகி, கணைப் பொழிவால் அவர்களைத் தாக்கத் தொடங்கினர்.(39)

அப்போது, தெளிந்த நெய்க்காணிக்கைகளால் ஊட்டப்பட்ட நெருப்புகள் இரண்டைப் போலக் கோபத்தால் நிறைந்தவர்களும், பாண்டுவின் மகன்களுமான அந்தப் பீமனும், அர்ஜுனனும், விருஷசேனன் மீதும், அவனைச் சுற்றிலும் கூடியிருந்த பிறர் மீதும் பயங்கரக் கணைமாரியைப் பொழிந்தனர்.(40) அப்போது காற்று தேவனின் {வாயுத்தேவனின்} மகன் {பீமன்}, அந்தப் பல்குனனிடம் {அர்ஜுனனிடம்}, “நகுலன் பீடிக்கப்படுவதைப் பார். கர்ணனின் மகன் {விருஷசேனன்} எங்களைத் தடுக்கிறான். எனவே நீ அந்தக் கர்ணனின் மகனை எதிர்த்துச் செல்வாயாக” என்றான்.(41) இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தக் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவன் (அர்ஜுனன்), தன் அண்ணனான விருகோதரனின் {பீமனின்} தேரை அணுகினான். அவ்வீரன் {அர்ஜுனன்} அருகில் வருவதைக் கண்ட நகுலன் அவனிடம், “இவனை வேகமாகக் கொல்வீராக” என்றான்.(42) தன் எதிரே நின்று கொண்டிருந்த தன் தம்பி நகுலனால் அந்தப் போரில் இவ்வாறு சொல்லப்பட்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், உறுதிமிக்க வீரனுமான அந்த அர்ஜுனன், கேசவனால் {கிருஷ்ணனால்} செலுத்தப்பட்ட தன் குரங்குக் கொடி வாகனத்தை, விருஷசேனனை நோக்கி மிக வேகமாகச் செலுத்தச் செய்தான்” {என்றான் சஞ்சயன்}.(43)

கர்ணனின் மகனைக் கொன்ற அர்ஜுனன்! – கர்ண பர்வம் பகுதி – 85-நகுலனைக் காக்க விரைந்த பாண்டவ வீரர்கள்; அவர்களை எதிர்த்துச் சென்ற கௌரவர்கள்; பாண்டவர்களுக்கு ஆதரவாக யானைப்படையுடன் வந்த குளிந்தர்கள்; குளிந்த இளவரசனைக் கொன்ற கிருபர்; குளிந்த இளவரசனின் தம்பியைக் கொன்ற சகுனி; சதானீகனின் குதிரைகளைக் கொன்ற கிருதவர்மன்; துரியோதனனின் மார்பைத் துளைத்த மற்றொரு குளிந்த இளவரசன், கிராதனையும் தாக்கி வீழ்த்தி, விருகனைத் துளைத்து, அவனது குதிரைகளைக் கொன்று, தேரை நொறுக்கியது; பப்ருவின் மகனான மகத இளவரசனைக் கொன்ற சதானீகன்; குளிந்த இளவரசனைக் கொன்ற சகுனி; கர்ணனின் மகனான விருஷசேனன் செய்த அருஞ்செயல்; அர்ஜுனனைத் தாக்கிய விருஷசேனன்; அபிமன்யுவை நினைத்து, கர்ணனை எச்சரித்து, விருஷசேனனைக் கொன்ற அர்ஜுனன்; அர்ஜுனனை நோக்கிக் கோபத்துடன் விரைந்த கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “நகுலன் தேரிழந்ததையும், கர்ணன் மகனின் {விருஷசேனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டதையும், ஆயுதங்களால் சிதைக்கப்பட்டதையும், அவனது கணைகள், வில், வாள் ஆகியன வெட்டப்பட்டதையும் அறிந்தவர்களும், எதிரிகள் அனைவரையும் தடுப்பவர்களுமான துருபதனின் ஐந்து வீரமகன்கள், ஆறாவதாகச் சிநியின் பேரன் {சாத்யகி}, திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகிய பதினோரு பேரும், பேரொலியை எழுப்புபவையும், {அவற்றுடன்} பிணக்கப்பட்டுள்ள குதிரைகளால் இழுக்கப்படுபவையுமான தேர்களில், காற்றில் அசையும் கொடிகளுடனும், சாதித்த சாரதிகளால் வழிநடத்தப்பட்டும் வேகமாகச் சென்றனர். நன்கு ஆயுதம் தரித்திருந்த அந்தப் போர்வீரர்கள் {துருபதன் மகன்கள், சாத்யகி மற்றும் திரௌபதியின் மகன்கள் ஆகியோர்}, உமது யானைகள், தேர்கள், மனிதர்கள் மற்றும் குதிரைகளை, உறுதிமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகளால் அழிக்கத் தொடங்கினர்.(1,2) அப்போது ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, கிருபர், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, துரியோதனன், சகுனியின் மகன் {சகுனியாகவே இருக்க வேண்டும்}, விருகன், கிராதன் மற்றும் தேவாவிரதன் ஆகிய முதன்மையான கௌரவத் தேர்வீரர்கள், தங்கள் விற்களைத் தரித்தும், யானைகள் அல்லது மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான ஆழமான சடசடப்பொலி கொண்ட தங்கள் தேர்களில் ஏறியும் வேகமாக அவர்களை {அந்தப் பதினோரு பேரை} எதிர்த்துச் சென்றனர்.(3) மனிதர்களில் முதன்மையானவர்களும், தேர்வீரர்களில் முதல்வர்களுமான (பாண்டவப் படையின்) அந்தப் பதினோரை வீரர்களையும் தாக்கிய இந்தக் கௌரவ வீரர்கள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கணைகளால் அவர்களின் முன்னேற்றத்தைத் தடுத்தனர். இதன் காரணமாக, மூர்க்கமும் வேகமும் கொண்டவையும், மலைச்சிகரங்களைப் போலத் தெரிந்தவையும், புதிதாய் எழுந்த மேகங்களின் வண்ணத்தைக் கொண்டவையுமான தங்கள் யானைகளைச் செலுத்திக் கொண்டு, கௌரவவீரர்கள் எதிர்த்து அந்தக் குளிந்தர்கள் {குணிந்தர்கள்} வந்தனர்.(4) நன்கு ஆயத்தம் செய்யப்பட்டவையும், தங்கத்தால் மறைக்கப்பட்டவையும், இமயப் பகுதிகளில் பிறந்தவையும், போருக்காக ஏங்கிய போர்வீரர்களால் {குளிந்தர்களால்}[1] செலுத்தப்பட்டவையுமான அந்த மதங்கொண்ட யானைகள், மின்னலின் சக்தியூட்டப்பட்டு ஆகாயத்திலிருக்கும் மேகங்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(5)
அப்போது அந்தக் குளிந்தர்களின் இளவரசன், முழுக்க இரும்பாலான பத்து கணைகளால் கிருபரையும், அவரது சாரதி மற்றும் குதிரைகளையும் மூர்க்கமாகத் தாக்கினான். (பதிலுக்கு) சரத்வான் மகனின் {கிருபரின்} கணைகளால் தாக்கப்பட்ட அந்த இளவரசன் தன் யானையில் இருந்து கீழே தரையில் விழுந்தான்.(6) அப்போது அந்த இளவரசனின் தம்பியானவன், முழுக்க இருப்பாலானவையும், சூரியனின் கதிர்களைப் போலப் பிரகாசமாக இருந்தவையுமான எண்ணற்ற வேல்களால் கிருபரின் தேரைத் தாக்கி உரத்த முழக்கங்களைச் செய்தான். எனினும், காந்தாரர்களின் ஆட்சியாளன் {சகுனி}, முழங்கிக் கொண்டே இருந்த அந்தப் போர்வீரனின் தலையை {அவன் முழங்கிக் கொண்டிருக்கும்போதே} வெட்டினான்.(7) அந்தக் குளிந்தர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, உமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, கடலில் பிறந்த தங்கள் சங்குகளை முழக்கி, விற்களைத் தரித்துக் கொண்டு, தங்கள் எதிரிகளை எதிர்த்து விரைந்து சென்றனர்.(8) குருக்கள் ஒருபுறத்திலும், பாண்டுக்கள் மற்றும் சிருஞ்சயர்கள் மறுபுறத்திலுமென மீண்டும் நடந்த போரானது, கணைகள், கத்திகள், ஈட்டிகள், வாள்கள், கதாயுதங்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றுடன் பயங்கரமானதாகவும், அச்சந்தருவதாகவும் மாறி, மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளுக்குப் பெரும் அழிவைத் தந்தது.(9) தேர்வீரர்கள், குதிரைகள், யானைகள், காலாட்படைவீரர்கள் ஆகியோர், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, கீழே தரையில் விழுந்து, மின்னலின் சக்தியூட்டப்பட்டவையும், தொடர்ச்சியான இடி முழக்கத்தை உண்டாக்குபவையுமான மேகத்திரள்கள், காற்றால் அனைத்துப் பக்கங்களில் சிறடிக்கப்படும்போதான ஆகாயத்தைப் போல அந்தப் போர்க்களத்தை மாற்றினர்.(10)

அப்போது போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, பெரும் யானைகளையும், தேர்வீரர்களையும், எண்ணிலா காலாட்களையும், சதானீகனின் குதிரையையும் தாக்கினான். கிருதவர்மனின் கணைகளால் தாக்கப்பட்ட இவை விரைவில் கீழே தரையில் விழுந்தன.(11) அதே நேரத்தில் அஸ்வத்தாமனின் கணைகளால் கொல்லப்பட்டவையும், அனைத்து வகை ஆயுதங்களால் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தவையும், சாதனை செய்த போர்வீரர்களால் செலுத்தப்பட்டவையும், உயர்ந்த கொடிமரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான மூன்று பெரும் யானைகள், இடியால் பிளக்கப்பட்ட பெரும் சிகரங்களைப் போல உயிரற்றுத் தரையில் விழுந்தன.(12) பிறகு, குளிந்தத் தலைவனின் மூன்றாவது சகோதரன், சிறந்த கணைகள் சிலவற்றால் உமது மகன் துரியோதனனின் நடுமார்பைத் துளைத்தான். எனினும் உமது மகன் {துரியோதனன்}, அவனையும், அவனது யானையையும் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றால் துளைத்தான்.(13) அப்போது, இளவரசனைத் தன் முதுகில் கொண்ட அந்த யானைகளின் இளவரசன், மழைக்காலங்களில், சச்சியின் தலைவனுடைய {இந்திரனுடைய} வஜ்ரத்தால் பிளக்கப்பட்டு விழும் செம்மலையொன்றின் சாரலில் செஞ்சுண்ண ஓடை பாய்வதைப் போல, தன் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் குருதியோடை வெளியேற கீழே விழுந்தது.(14) எனினும், அந்தக் குளிந்த இளவரசன், உரிய காலத்தில் தன்னைக் காத்துக் கொண்டு மற்றொரு யானையைச் செலுத்தினான். அந்த இளவரசனால் தூண்டப்பட்ட அந்த விலங்கானது {யானையானது}, கிராதனையும், அவனது சாரதி, குதிரைகள் மற்றும் தேரையும் தாக்கியது. எனினும், கிராதனின் கணைகளால் துளைக்கப்பட்ட அந்த யானை, இடியினால் பிளக்கப்பட்ட மலையொன்றைப் போலத் தன் சாரதியுடன் சேர்ந்து கீழே விழுந்தது.(15)

எனினும், மலைகளில் பிறந்தவனும், மற்றொரு யானையில் முதுகில் இருந்தவனுமான அந்த இளவரசனின் கணைகளால் தாக்கப்பட்ட வெல்லப்பட்ட முடியாத தேர்வீரனான அந்தக் கிராதர்களின் ஆட்சியாளன், தன் குதிரைகள், சாரதி, வில், கொடிமர்ம் ஆகியவற்றுடன், புயலால் வேரோடு பெயர்ந்து விழுந்த ஒரு பெரும் மரத்தைப் போலக் கீழே விழுந்தான்.(16) அப்போது விருகன், இமயத்தைத் தன் வசிப்பிடமாகக் கொண்டவனும், யானையில் நின்றிருந்தவனுமான அந்த இளவரசனின் பனிரெண்டு கணைகளால் துளைக்கப்பட்டான். அந்தப் பெரும் விலங்கு {யானை}, தன் நான்கு கால்களாலும், (கௌரவப் போர்வீரனான} விருகனின் குதிரைகளையும், தேரையும் வேகமாக நொறுக்கியது.(17) பிறகு தன் சாரதியுடன் கூடிய அந்த யானைகளின் இளவரசன், பப்ருவின் மகனால் ஆழமாகத் துளைக்கப்பட்டு, பின்னவனை {பப்ரு மகனை} எதிர்த்து மிக வேகமாக முன்னேறியது. எனினும் மகதர்களின் இளவரசனான அந்தப் பப்ருவின் மகனோ, சகாதேவன் மகனின் கணைகளால் பீடிக்கப்பட்ட கீழே விழுந்தான்.(18) பிறகு அந்தக் குளிந்த இளவரசன், தன் தந்தங்களாலும், உடலாலும் முதன்மையான போர்வீரர்களைக் கொல்லவல்ல அந்த யானையுடன் சேர்ந்து, சகுனியைக் கொல்வதற்காக அவனை நோக்கி மிக மூர்க்கமாக விரைந்தான். அந்த மலைவாசி சகுனியைப் பீடிப்பதில் வெற்றியும் அடைந்தான். எனினும், விரைவில் அந்தக் காந்தாரர்களின் தலைவன் {சகுனி} அவனது {குளிந்த இளவரசனின்} தலையை அறுத்தான்.(19) அதே நேரத்தில் பெரும் யானைகளும், குதிரைகளும், தேர்வீரர்களும், காலாட்களின் பெருங்கூட்டமும் {நகுலனின் மகனான} சதானீகனால் தாக்கப்பட்டு, முடக்கமடைந்து, நொறுங்கி, கருடனின் சிறகுகளால் உண்டான புயல் தாக்கப்பட்ட பாம்புகளைப் போலக் கீழே பூமியில் விழுந்தன.(20)

அப்போது (கௌரவத் தரப்பைச் சார்ந்த) குளிந்த போர்வீரன் ஒருவன், சிரித்துக் கொண்டே, நகுலன் மகனான சதானீகனைக் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றால் துளைத்தான். எனினும், நகுலன் மகனோ, தாமரைக்கு ஒப்பான தன் எதிராளியின் தலையை ஒரு கத்தித் தலைக் கணையை {க்ஷுரப்ரத்தைக்} கொண்டு, அவனது உடலில் இருந்து வெட்டினான்.(21) அப்போது கர்ணனின் மகன் {விருஷசேனன்}, முழுக்க இரும்பாலான மூன்று கணைகளால் சதானீகனையும், அதே அளவு கணைகளால் அர்ஜுனனையும் துளைத்தான். பீமனை மூன்று கணைகளாலும், நகுலனை ஏழாலும், ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} பனிரெண்டாலும் துளைத்தான்.(22) மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளை அடையும் அந்த விருஷசேனனின் அருஞ்செயலைக் கண்ட கௌரவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து அவனைப் பெரிதும் பாராட்டினர். எனினும், அவர்கள் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} ஆற்றலையும் அறிந்தவர்களாக இருந்ததால், நெருப்புக்குள் ஏற்கனவே ஊற்றப்பட்ட காணிக்கையாகவே விருஷசேனனைக் கருதினர்.(23) அப்போது, பகைவீரர்களைக் கொல்பவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், மனிதர்களில் முதன்மையான மாத்ரியின் மகன் நகுலன் அனைவருக்கும் மத்தியில் தன் தேரை இழந்ததைக் கண்டும், கணைகளால் சிதைக்கப்பட்ட ஜனார்த்தனனைக் கண்டும், அந்தப் போரில் சூதன் மகனுக்கு (கர்ணனுக்கு) முன்பாக அப்போது நின்று கொண்டிருந்த விருஷசேனனை எதிர்த்து விரைந்தான்.(24) இந்திரனை எதிர்த்துச் செல்லும் நமுசியைப் போலவே பெருந்தேர்வீரனான அந்தக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, கடுமையானவனும், மனிதர்களில் முதன்மையானவனும், ஆயிரங்கணைகளைக் கொண்டவனும், தன்னை நோக்கி வருபவனுமான அர்ஜுனனை எதிர்த்து விரைந்தான்.(25)

எவருடைய ஆதரவுமற்ற அந்த உயர் ஆன்மக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, அந்தப் போரில் ஒரு கணையால் வேகமாகப் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்து, பழங்காலத்தில் இந்திரனைத் துளைத்த பிறகு முழங்கிய நமுசியைப் போலவே பெருமுழக்கம் செய்தான்.(26) மீண்டு விருஷசேனன், உறுதிமிக்கக் கணைகள் பலவற்றால் பார்த்தனின் இடது கக்கத்தைத் துளைத்தான். அடுத்ததாக ஒன்பது கணைகளால் கிருஷ்ணனைத் துளைத்த அவன், மீண்டும் பத்து கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான்.(27) வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன், அந்த உறுதி மிக்கக் கணைகளால் விருஷசேனனால் துளைக்கப்பட்ட பிறகு, சற்றே கோபமடைந்து, கர்ணன் மகனை {விருஷசேனனைக்} கொல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(28) உயர் ஆன்மா கொண்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், கோபத்தால் மூன்று கோடுகளுடன் பள்ளமாகிய புருவத்துடன், போரின் முன்னணியில் இருந்து, அம்மோதலில் விருஷசேனனின் அழிவுக்காக எண்ணற்ற கணைகளை விரைவாக ஏவினான்.(29) 

யமனே போரிட்டாலும், அவனையும் கொல்ல வல்ல அந்த வீரன் {அர்ஜுனன்}, கோபத்தால் சிவந்த கண்களுடன், பயங்கரமாகச் சிரித்தபடியே, கர்ணனிடமும், துரியோதனன் மற்றும் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} தலைமையிலிருந்த கௌரவர்களிடமும், இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! கர்ணா, இந்தப் போரில் நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சீற்றமிக்க விருஷசேனனை என் கூரிய கணைகளால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைப்பேன். பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், தனியொருவனாக இருந்தவனும், ஆதரவற்றவனாகத் தன் தேரில் இருந்தவனுமான என் மகனை {அபிமன்யுவை}நான் இல்லாத வேளையில், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொன்றதாக மக்கள் சொல்கின்றனர். எனினும் நான் உன் மகனை {விருஷசேனனை} நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொல்வேன். கௌரவத் தேர்வீரர்கள் அனைவரும் இவனைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். சீற்றமிக்க விருஷசேனனை நான் கொல்வேன். அதன் பிறகு, ஓ! மூடா {கர்ணா}, அர்ஜுனனான நான் போருக்கு மத்தியில் வைத்து உன்னைக் கொல்வேன். இன்றைய போரில் நான் இந்தச் சச்சரவின் வேரும், துரியோதனனின் ஆதரவின் விளைவால் செருக்கடைந்திருப்பவனுமான உன்னைக் கொல்வேன். என் பலத்தை வெளிபடுத்தி, இந்தப் போரில் நிச்சயம் நான் உன்னைக் கொல்வேன், பீமசேனரோ, எவனது தீய கொள்கையின் மூலம், பகடையில் பிறந்த இந்தச் சச்சரவு எழுந்ததோ, அந்தத் துரியோதனனைக் கொல்லப் போகிறார்” என்றான் {அர்ஜுனன்}.(30-34) இவ்வார்த்தைகளைச் சொன்ன அர்ஜுனன், தன் வில்லின் நாண்கயிற்றைத் தேய்த்து, அந்தப் போரில் விருஷசேனன் மீது இலக்கை வைத்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கர்ணன் மகனின் படுகொலைக்காக எண்ணற்ற கணைகளை ஏவினான்.(35)

அப்போது கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன், அச்சமில்லாமலும், பெரும்பலத்துடனும், பத்து கணைகளால் விருஷசேனனின் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் துளைத்தான். கத்தித் தலை கொண்ட நான்கு கடுங்கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அவன் {அர்ஜுனன்}, விருஷசேனனின், வில், இரு கரங்கள் மற்றும் சிரத்தை அறுத்தான்.(36) பார்த்தனின் கணைகளால் தாக்கப்பட்ட அந்தக் கர்ணன் மகன் {விருசசேனன்}, கரங்களையும், சிரத்தையும் இழந்து, மலைச்சிகரத்தில் இருந்து கீழே விழும் மலர்களுடன் கூடிய ஒரு பெரும் சாலமரத்தைப் போலத் தன் தேரில் இருந்து கீழே பூமியில் விழுந்தான்.(37) தன் மகன் இவ்வாறு கணைகளால் தாக்கப்பட்டு, தன் வாகனத்தில் இருந்து விழுவதைக் கண்டவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டுவனும், சூதன் மகனுமான கர்ணன், தன் மகனின் {விருஷசேனனின்} மரணத்தால் ஏற்பட்ட துயருடன் எரிந்து கோபத்தால் ஈர்க்கப்பட்டு, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட பார்த்தனின் தேரை எதிர்த்து வேகமாத் தன் தேரில் சென்றான்.(38) உண்மையில், தான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனால் போரில் தன் மகன் {விருஷசேனன்} கொல்லப்படுவதைக் கண்ட அந்த உயர் ஆன்மக் கர்ணன், பெருங்கோபத்தால் நிறைந்து, கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் எதிர்த்து விரைந்தான்” {என்றான் சஞ்சயன்}[2].(39)

கர்ணனை எதிர்த்துச் சென்ற அர்ஜுனன்! – கர்ண பர்வம் பகுதி – 86-கர்ணனைக் கொல்ல அர்ஜுனனுக்கு உற்சாகமூட்டிய கிருஷ்ணன்; அன்றைக்கே கர்ணனைக் கொல்லாமல் திரும்புவதில்லை எனக் கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன்; கர்ணனை எதிர்த்துக் குதிரைகளைத் தூண்டிய கிருஷ்ணன்; கர்ணனை அடைந்த அர்ஜுனனின் தேர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பெரிய வடிவத்தைக் கொண்டவனும், முழங்கிக் கொண்டிருப்பவனும், தேவர்களாலேயே தடுக்கப்பட முடியாதவனுமான கர்ணன், பொங்கும் கடலென முன்னேறிவருவதைக் கண்ட மனிதர்களில் காளையான அந்தத் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம்,(1) “வெண்குதிரைகளைக் கொண்டவனும், சல்லியனைத் தன் சாரதியாகக் கொண்டவனுமான தேர்வீரனை {கர்ணனை} எதிர்த்தே நீ போரிடப் போகிறாய். எனவே, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}! உன் பொறுமை அனைத்தையும் அழைப்பாயாக {திரட்டுவாயாக}.(2) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நன்கு ஆயத்தம் செய்யப்பட்டுள்ள கர்ணனின் தேரைக் காண்பாயாக. வெண்குதிரைகள் இணைக்கப்பட்டுள்ள அதில் {அந்தத் தேரில்} ராதையின் மகனே {கர்ணனே} போர்வீரனாக நின்று கொண்டிருக்கிறான்.(3) கொடிகள் நிறைந்ததும், மணிவரிசைகளால் அலங்கரிக்கப்பட்டதுமான அது {அந்தத் தேர்}, வெண்ணிறம் கொண்ட குதிரைகளால், ஆகாயத்தில் தாங்கிச் செல்லப்படும் தெய்வீகத் தேரைப் போலவே தெரிகிறது.(4) யானை கட்டும் கயிற்றைப் பொறியாக {இலச்சனையாகக்} கொண்டதும், இந்திரனின் வில்லைப் போலத் தெரிவதும், ஆகாயத்தைத் தெளிவான கோட்டால் பிரிப்பதுமான அந்தக் கர்ணனின் கொடிமரத்தைக் காண்பாயாக.(5)

மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கணை மாரியை ஏவி வருபவனும், திருதராஷ்டிரர் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்புடையதைச் செய்யும் விருப்பத்தால் முன்னேறி வருபவனுமான கர்ணனைக் காண்பாயாக.(6) அங்கே, அந்தத் தேரின் முதன்மைப் பகுதியில் வீற்றிருக்கும் மத்ரர்களின் அரசத் தலைவனே {சல்லியனே}, அளவிலா சக்தி கொண்ட ராதையின் மகனுடைய குதிரைகளை வழிநடத்தி வருகிறார்.(7) அவர்களுடைய {கௌரவர்களுடைய} பேரிகைகளின் முழக்கத்தையும், சங்குகளின் கடும் ஒலியையும் கேட்பாயாக. ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அனைத்துப் பக்கங்களில் இருந்து வரும் பல்வேறு சிங்க முழக்கங்களைக் கேட்பாயாக.(8) அளவிலா சக்தி கொண்ட கர்ணனால் வளைக்கப்படுவதும், பிற பேரொலிகள் அனைத்தையும் அமைதியாக்குவதுமான (விஜயம் என்ற) வில்லின் பயங்கர நாணொலியைக் கேட்பாயாக.(9) அங்கே, அந்தப் பாஞ்சாலர்களில் வலிமைமிக்கத் தேர்வீரர்களைப் பின்தொடர்ந்து வருபவர்கள், பெருங்காட்டில் உள்ள மான்கூட்டமொன்று கோபக்கார சிங்கமொன்றைக் கண்டது போலப் பிளந்து ஓடுகின்றனர்.(10)

ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, சூதன் மகனை {கர்ணனை} நீ மிகக் கவனமாகக் கொல்வதே உனக்குத் தகும். உன்னைத் தவிர வேறு எந்த மனிதனும் கர்ணனின் கணைகளைத் தாங்கிக் கொள்ளத் துணிய மாட்டான்.(11) மூன்று உலகங்களையும், அவற்றில் உள்ள அசையும், மற்றும் அசையா உயிரினங்களையும், தேவர்களையும், கந்தர்வர்களையும் போரில் வெல்லத்தகுந்தவன் நீ என்பதை நான் நன்கு அறிவேன்.(12) கடுமையானவனும், பயங்கரமானவனும், பெருந்தேவனும், மூக்கண் சர்வனும், கபர்தின் என்று அழைக்கப்படுவபனுமான அந்த ஈசானனுடனே {சிவனுடனேயே} நீ போரிட்டாய் எனும்போது, வேறு என்ன சொல்ல வேண்டியிருக்கிறது.(13) எனினும், உயிரினங்கள் அனைத்தின் அருளுக்கும் மூலகாரணனும், ஸ்தாணு என்று அழைக்கப்படுவனும், அந்தத் தேவர்களுக்குத் தேவனுமான சிவனையே நீ போரில் நிறைவு செய்திருக்கிறாய். பிற தெய்வங்கள் அனைவரும் உனக்கு வரங்களை அளித்திருக்கின்றனர்.(14) ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அந்தத் தேவர்களுக்குத் தேவனும், திரிசூலம் தரித்தவனுமான அந்தத் தெய்வத்தின் {சிவனின்} அருளால், ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டோனே, {அசுரன்} நமுசியைக் கொன்ற இந்திரனைப் போல நீ கர்ணனைக் கொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(15)

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, என் வெற்றி உறுதியானதே. ஓ! மதுசூதனா, உலகங்கள் அனைத்திற்கும் ஆசானான நீ என்னிடம் நிறைவு கொண்டிருப்பதால் இஃதில் எந்தச் சந்தேகமும் இல்லை.(16) ஓ! ரிஷிகேசா, ஓ! பெரும் தேர்வீரா, என் குதிரைகளையும், தேரையும் தூண்டுவாயாக. இன்று கர்ணனைக் கொல்லாமல் போரில் இருந்து பல்குனன் {அர்ஜுனன்} திரும்பமாட்டான்.(17) இன்று கர்ணன் கொல்லப்படுவதையும், என் கணைகளால் துண்டுகளாக வெட்டப்படுவதையும் காண்பாயாக. அல்லது, ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, (கர்ணனின்) கணைகளால் நான் கொல்லப்படுவதை இன்று காண்பாயாக.(18) மூவுலங்கங்களையும் மலைக்கச்செய்ய வல்ல அந்தப் பயங்கப்போரானது நெருங்கி வருகிறது. இந்தப் பூமி உள்ளளவும் இதைக் குறித்து மக்கள் பேசப் போகின்றனர்” என்றான் {அர்ஜுனன்}.(19)

உழைப்பால் எப்போதும் களைக்காத கிருஷ்ணன், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, பகையானையை எதிர்த்து விரையும் யானையொன்றைப் போலக் கர்ணனை எதிர்த்துத் தன் தேரில் விரைந்தான்.(20) பெரும் சக்தியைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, எதிரிகளைத் தண்டிப்பவனான கிருஷ்ணனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! ரிஷிகேசா, காலங்கடக்கிறது, குதிரைகளைத் தூண்டுவாயாக” {என்று சொன்னான்}. இவ்வாறு பாண்டுவின் உயர் ஆன்ம மகனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்ட கேசவன் {கிருஷ்ணன்},(21) அவனை வெற்றியடையும்படி வாழ்த்தி, மனோ வேகம் கொண்ட அந்தக் குதிரைகளைத் தூண்டினான். பிறகு, பெரும் வேகத்தைக் கொண்ட பாண்டு மகனின் {அர்ஜுனனின்} தேரானது, கர்ணனின் தேருடைய முகப்பை அடைந்தது” {என்றான் சஞ்சயன்}.(22)

ஆகாயத்தில் நின்ற தேவாசுரர்கள்! – கர்ண பர்வம் பகுதி – 87-கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நேரப்போகும் போரைக் காண ஆகாயத்தில் கூடிய தேவாசுரர்கள்; முறையே இரண்டு தரப்பாகத் தேவாசுரர்கள் பிரிந்தது; கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் வெற்றியானது சமமானதாக இருக்க வேண்டும் என்று உயிரினங்களால் பிரம்மனிடம் விரும்பிக் கேட்கப்பட்டது; அர்ஜுனனுக்கே வெற்றி என இந்திரனும்; கர்ணனுக்கே வெற்றி எனச் சூரியனும் விரும்பி கேட்டது; அர்ஜுனனே வெற்றிபெறுவான் என்று சொன்ன பிரம்மனும், ஈசானனும்; கர்ணன், சல்லியன் உரையாடல்; அர்ஜுனன், கிருஷ்ணன் உரையாடல்; கர்ணனை நிச்சயம் கொல்லப்போவதாகக் கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “{தன் மகன்} விருஷசேனன் கொல்லப்பட்டதைக் கண்ட கர்ணன், துயரத்தாலும், சினத்தாலும் நிறைந்து, தன் மகனின் மரணத்திற்காகக் கண்களில் கண்ணீரைச் சிந்தினான்.(1) பெரும் சக்தியையும், சினத்தால் தாமிரமெனச் சிவந்த கண்களையும் கொண்ட கர்ணன், தன் எதிரியான தனஞ்சயனை {அர்ஜுனனைப்} போருக்கழைத்து, அவன் முகத்திற்கு நேராகச் சென்றான்.(2) அப்போது சூரியப் பிரகாசம் கொண்டவையும், புலித் தோல்களால் மூடப்பட்டவையுமான அந்தத் தேர்கள் இரண்டும், அருகருகே இருக்கும் இரு சூரியன்களைப் போலத் தெரிந்தன.(3) வெண் குதிரைகளைக் கொண்டவர்களும், எதிரிகளை நொறுக்கும் போர்வீரர்களும், பெரும் வில்லாளிகளும், சூரியப் பிரகாசத்தைக் கொண்டவர்களுமான அந்தப் போர்வீரர்கள் இருவரும் {கர்ணனும், அர்ஜுனனும்}, ஆகாயத்திலுள்ள சூரியனையும், சந்திரனையும் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(4) இந்திரனுக்கும், விரோசனன் மகனுக்கும் (பலிக்கும்) ஒப்பான அவ்வீரர்கள் இருவரும், மூவுலகையும் வெற்றிக் கொள்ளப் போருக்குத் தயாராவதைக் கண்டு, உயிரினங்கள் அனைத்தும் ஆச்சரியத்தில் நிறைந்தன.(5)

தேர்ச்சக்கரச் சடசடப்பொலிகள், வில்லின் நாணொலிகள், உள்ளங்கை ஒலி, கணைகளின் விஸ் ஒலி, சிங்க முழக்கங்கள் ஆகியவற்றுடன் கூடிய அந்தப் போர் வீரர்கள் இருவரும், ஒருவரையொருவர் எதிர்த்து விரைவதைக் கண்டும், கர்ணனின் யானை கட்டும் கயிற்றையும், பார்த்தனின் {அர்ஜுனனின்} குரங்கையும் கொண்ட கொடிமரங்களுடன் அவர்கள் ஒருவரையொருவர் அணுகுவதைக் கண்டும், பூமியின் தலைவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் நிறைந்தனர்.(6,7) ஒருவரோடொருவர் மோதப்போகும் அவ்விரு தேர்வீரர்களைக் கண்ட மன்னர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிங்க முழக்கங்களைச் செய்தபடியே அவர்களை மீண்டும் மீண்டும் உற்சாகப்படுத்தினர்.(8) பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கர்ணனுக்கு இடையிலான தனிப்போரைக் கண்ட ஆயிரக்கணக்கான போராளிகள், தங்கள் கக்கங்களை அறையவும், தங்கள் ஆடைகளைக் காற்றில் அசைக்கவும் செய்தனர்.(9) கௌரவர்கள், கர்ணனை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் இசைக்கருவிகளை இசைத்து, எண்ணற்ற சங்குகளை முழக்கினர்.(10) அதே போல, பாண்டவர்கள் அனைவரும், தனஞ்சயனை {அர்ஜுனனை} மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக எக்காளங்கள் மற்றும் சகங்களைக் கொண்டு திசைகள் அனைத்தையும் எதிரொலிக்கச் செய்தனர்.(11)

கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கு இடையிலான அந்த மோதல் நேர்ந்த சமயத்தில், துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் செய்த அந்தச் சிங்க முழக்கங்கள், கக்க அறைதல்கள், பிற உரத்த கூச்சல்கள் மற்றும் முழக்கங்கள் பேராற்றல் வாய்ந்தனவாக இருந்தன.(12) மனிதர்களில் புலிகளும், தேர்வீரர்களில் முதன்மையானவர்களுமான அவர்கள் {கர்ணனும், அர்ஜுனனும்} தங்கள் உறுதிமிக்க வில், கணைகள் மற்றும் ஈட்டிகளை ஆயத்தம் செய்து கொண்டு, நெடுங்கொடிமரங்களுடன் கூடிய தங்கள் தேர்களில் நின்று கொண்டிருப்பதை மக்கள் கண்டனர்.(13) கவசம் பூண்டு, கத்திகளைக் கச்சையில் கட்டிக் கொண்டு, வெண்குதிரைகளில் வந்த அவ்விருவரும், சிறந்த சங்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். ஒருவன் {அர்ஜுனன்} கிருஷ்ணனைத் தன் சாரதியாகக் கொண்டிருந்தான், மற்றவனோ {கர்ணனோ} சல்லியனைத் தன் சாரதியாகக் கொண்டிருந்தான். பெரும் தேர்வீரர்களான அவர்கள் இருவரும் ஒருவர் போலவே தெரிந்தனர்.(14) சிங்கக் கழுத்துகளையும், நீண்ட கரங்களையும், சிவந்த கண்களையும் கொண்ட அவர்கள் இருவரும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். மின்னலின் கீற்றுகளைப் போலத் தெரிந்த விற்களைத் தரித்துக் கொண்ட அவர்கள் இருவரும், ஆயுத செல்வத்தால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.(15)

வெண்சாமரங்களால் வீசப்பட்டு, தங்கள் தலைக்கு மேலே வெண்குடையால் அலங்கரிக்கப்பட்டவர்களாக அவ்விருவரும் இருந்தனர். சிறந்த அம்பறாத்தூணிகளைக் கொண்ட அவர்கள் இருவரும், மிகவும் அழகாகத் தெரிந்தனர்.(16) அவ்விருவரும் செஞ்சந்தனக் குழம்பால் பூசப்பட்டு, மதங்கொண்ட இரு காளைகளைப் போலத் தெரிந்தனர். சிங்கத்தைப் போல அகன்ற கழுத்தையும், அகன்ற மார்பையும் கொண்டவர்களான அவ்விருவரும், பெரும்பலத்துடன் கூடியவர்களாகவும் இருந்தனர்.(17) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் அறைகூவி அழைத்த அவர்களில் ஒவ்வொருவரும், அடுத்தவனைக் கொன்றுவிட விரும்பினர். மாட்டுக் கொட்டகையில் உள்ள வலிமைமிக்கக் காளைகளைப் போல, அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்தனர்.(18) மதங்கொண்ட இரு யானைகளைப் போலவோ, கோபத்துடன் கூடிய மலைகளைப் போலவோ, கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்குட்டிகளைப் போலவோ, அனைத்தையும் அழிக்கும் யமன்களைப் போலவோ அவர்கள் இருந்தனர்.(19) இந்திரனையும், விருத்திரனையும் போல ஒருவரோடொருவர் சினம் கொண்ட அவர்கள், காந்தியில் சூரியனையும், சந்திரனையும் போலத் தெரிந்தனர். கோபத்தால் நிறைந்த அவர்கள், யுக முடிவின் போது, உலகை அழிக்க எழும் வலிமைமிக்கக் எரிக்கோள்கள் இரண்டுக்கு ஒப்பாக இருந்தனர்.(20)

அவர்கள் இருவரும் தெய்வீகத் தந்தைமாருக்குப் பிறந்தவர்களாகவும், அழகில் தேவர்களுக்கு ஒப்பானவர்களாகவும், சக்தியில் தேவர்களைப் போன்றவர்களாகவும் இருந்தனர். உண்மையில் தாமாகவே அந்தப் போர்க்களத்தில் சூரியனாகவும், சந்திரனாகவும் அவர்கள் தெரிந்தனர்.(21) அவ்விருவரும், பெரும் வலிமை கொண்டவர்களாகவும், போரில் செருக்கு நிறைந்தவர்களாவும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்தவர்களாகவும் இருந்தனர். புலிகளின் மூர்க்கத்தைக் கொண்டவர்களும், மனிதர்களில் புலிகளுமான அவ்விரு வீரர்களையும் கண்ட உமது துருப்பினர், ஓ! ஏகாதிபதி, பெரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(22) மனிதர்களில் புலிகளான கர்ணன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரிருவரும் போரிடுவதைக் கண்ட அனைவரின் இதயங்களுக்குள்ளும், அவர்களில் யார் வெல்லப் போகிறார்கள் என்ற ஐயம் நுழைந்தது.(23) மேன்மையான ஆயுதங்களைக் கொண்டவர்களும், போரில் நன்கு பயிற்சி பெற்றவர்களுமான அவ்விருவரும், தங்கள் கக்கங்களை அறைந்து {அவ்வொலியால்} ஆகாயத்தை எதிரொலிக்கச் செய்தனர்.(24) ஆற்றல் மற்றும் வலிமையின் விளைவால் பெரும் வேகத்தைக் கொண்ட அவர்களின் போர்த்திறனைப் பொறுத்தவரை, அசுரன் சம்பரனுக்கும், தேவர்களின் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்} ஒப்பானவர்களாக அவ்விருவரும் இருந்தனர்.(25)

அவ்விருவரும் போரில் கார்த்தவீரியனுக்கோ, தசரதன் மகனுக்கோ {இராமனுக்கோ} இணையானவர்களும், சக்தியில் விஷ்ணுவுக்கோ, போரில் பவனுக்கோ {சிவனுக்கோ} இணையானவர்களாக இருந்தனர்.(26) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெண்குதிரைகளைக் கொண்ட அவ்விருவரும், முதன்மையான தேர்களால் சுமக்கப்பட்டார்கள். மேலும் அந்தப் போரில் அவ்விருவரும் முதன்மையான சாரதிகளைக் கொண்டிருந்தனர்.(27) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் தேர்களில் பிரகாசமாகத் தெரிந்த அந்தப் பெரும் தேர்வீரர்கள் இருவரையும் காண அங்கே வந்திருந்த சித்தர்கள் மற்றும் சாரணர்கள் கூட்டம் ஆச்சரியத்தால் நிறைந்தது.(28) அப்போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே, தங்கள் துருப்புகளுடன் கூடிய தார்தராஷ்டிரர்கள், காலம் எதையும் இழக்காமல், போர்க்கள ரத்தினமான உயர் ஆன்மக் கர்ணனைச் சூழ்ந்து கொண்டனர்.(29) அதேபோலவே, திருஷ்டத்யும்னன் தலைமையிலான பாண்டவர்களும், மகிழ்ச்சியால் நிறைந்து, போரில் நிகரில்லாதவனான உயர் ஆன்மப் பார்த்தனைச் {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.(30)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில், உமது படையின் பணயப் பொருளாகக் கர்ணனும், பாண்டவர்களின் பணயப் பொருளாகப் பார்த்தனும் {அர்ஜுனனும்} ஆனார்கள்.(31) அந்தச் சபையின் உறுப்பினர்களான இருதரப்புப் படைவீரர்களும், அவ்விளையாட்டின் பார்வையாளர்களானார்கள். உண்மையில், அந்தப் போர்விளையாட்டில் ஈடுபட்டோரைப் பொறுத்தவரை, வெற்றியோ, தோல்வியோ உறுதியானதாகவே இருந்தது.(32) கர்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகிய அவ்விருவரும் வெற்றிக்காவோ, நேர்மாறான நிலைக்காகவோ நமக்கும், பாண்டவர்களுக்குமான போர்க்கள விளையாட்டை நின்றபடியே தொடங்கினார்கள்.(33) போரில் திறம்பெற்றவர்களான அவ்விருவரும், ஓ! ஏகாதிபதி, அம்மோதலில் ஒருவரோடொருவர் மிகவும் கோபம் கொண்டு, ஒருவரையொருவர் கொல்ல விலும்பினர்.(34) இந்திரன் மற்றும் விருத்திரனைப் போல, ஒருவரையொருவர் உயிரெடுக்க விரும்பிய அவர்கள், பயங்கர வடிவம் கொண்ட இரு பெரும் எரிநட்சத்திரங்களைப் போல ஒருவரையொருவர் எதிர்த்தனர்.(35)

அப்போது ஆகாயத்தில் இருந்த உயிரினங்களுக்கு மத்தியில், கர்ணன் மற்றும் அர்ஜுனன் குறித்த காரியத்தில் தூற்றுதல்களுடன் கூடிய வேற்றுமைகளும், சர்ச்சைகளும் எழுந்தன. உலகவாசிகள் அனைவரும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தங்களுக்குள் வேறுபடுவது கேட்கப்பட்டது.(36) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், பாம்புகள் {நாகர்கள்}, ராட்சசர்கள் ஆகியோர் கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான அம்மோதலில் எதிரெதிர் பக்கங்களை எடுக்க நேர்ந்தது.(37) விண்மீன்களுடன் கூடிய ஆகாயமானது, ஓ! ஏகாதிபதி, கர்ணனின் காரியத்தில் ஆவல் கொண்ட அதே வேளையில், இந்தப் பரந்த பூமியானது {பூமியானவள்}, மகனிடம் தாய்க் கொள்ளும் ஆவலைப் போல, பார்த்தனின் {அர்ஜுனனின்} காரியத்தில் ஆவல்கொண்டது {ஆவல்கொண்டாள்}[1].(38) ஆறுகள், கடல்கள், மலைகள், ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, மரங்கள், இலையுதிர்க்கும் செடிகள் மற்றும் கொடிகள் ஆகியன கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் தரப்பை ஏற்றன.(39) அசுரர்கள், யாதுதானர்கள், குஹ்யர்கள், ஓ! எதிரிகளை எரிப்பவரே, கருங்காக்கைகள் மற்றும் பிற வானுலாவிகள் ஆகியன கர்ணனின் தரப்பை ஏற்றன.(40)

ரத்தினங்கள், விலைமதிக்கமுடியாத செல்வங்கள் அனைத்தும், வரலாறுகளை ஐந்தாவதாகக் கொண்ட நான்கு வேதங்கள், உபவேதங்கள், உபநிஷத்துகளுடன் கூடிய அதன் புதிர்களும், தொகுப்புகளும்,(41) வாசுகி, சித்திரசேனன், தக்ஷகன், உபதக்ஷகன், மலைகள் அனைத்தும், தங்கள் பிள்ளைகளுடன் கூடிய கத்ருவின் வாரிசுகள் அனைவரும், நஞ்சுடன் கூடிய பெரும்பாம்புகள் அனைத்தும், நாகர்களும் அர்ஜுனன் தரப்பை ஏற்றன.(42) ஐராவதனும் அவனது பிள்ளைகளும், சுரபியின் வாரிசுகள், வைசாலியின் வாரிசுகள், போகினிகள் ஆகியோரும் அர்ஜுனனை ஏற்றன. சிறு பாம்புகள் அனைத்தும் கர்ணனின் தரப்பை அடைந்தன. ஓநாய்கள், காட்டு மான்கள், மங்கலகரமான அனைத்து வகை விலங்குகள், பறவைக் ஆகியன, ஓ! மன்னா, பார்த்தனின் {அர்ஜுனனின்} வெற்றியை விரும்பின.(44) வசுக்கள், மருத்துக்கள், சத்யஸ்கள், ருத்திரர்கள், விஸ்வதேவர்கள், அசுவினிகள், அக்னி, இந்திரன், சோமன், பவனன் ஆகியோரும் மற்றும் திசைகளின் பத்து புள்ளிகளும் தனஞ்சயனின் ஆதரவாளர்களானார்கள், அதே வேளையில் ஆதித்யர்கள் அனைவரும் கர்ணனின் தரப்பை ஏற்றனர்.(45)

வைசியர்கள், சூத்திரர்கள், சூதர்கள், பிறப்பால் கலப்பு வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் அனைவரும், ஓ! மன்னா, ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} தரப்பை ஏற்றனர்.(46) எனினும், தேவர்கள், பித்ருக்கள், அவர்களோடிருந்தவர்கள், அவர்களைப் பின்தொடர்பவர்கள், யமன், வைஸ்ரவணன் {குபேரன்}, வருணன் ஆகியோர் அர்ஜுனனின் தரப்பிலிருந்தனர். பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் ஆகியோரும், வேள்விகள், தக்ஷிணைகள் என்றழைக்கப்படும் கொடைகள் ஆகியனவும் அர்ஜுனனின் தரப்பை ஏற்றன.(47) பிரேதங்கள், பிசாசங்கள், ஊனுண்ணும் பல விலங்குகள் மற்றும் பறவைகள், கடல்வாழ் அசுரர்களுடன் கூடிய ராட்சசர்கள், நாய்கள், நரிகள் ஆகியன கர்ணனின் தரப்பை ஏற்றன.(48) தெய்வீக, மறுபிறப்பாள, அரச முனிகளின் பல்வேறு இனங்கள், பாண்டு மகனை {அர்ஜுனனை} ஏற்றனர். தும்புருவின் தலைமையிலான கந்தர்வர்கள், ஓ! மன்னா, அர்ஜுனன் தரப்பில் இருந்தனர்.(49) ஓநாய்கள், மான்கள், யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்கள், மேகங்கள், காற்று ஆகியவற்றைத் தங்கள் வாகனங்களாகக் கொண்ட பிராதா மற்றும் மௌனி ஆகியோரின் வாரிசுகள், கந்தர்வர்களில் பல்வேறு வகையினர், அப்சரஸ்கள், விவேகிகளான தவசிகள் பலர் ஆகியோர், கர்ணன் மற்றும் அர்ஜுனனுக்கிடையிலான அம்மோதலைக் காண அங்கே வந்தனர்.(50,51)

தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், யக்ஷர்கள், பறவைகள், வேதங்களை அறிந்தவர்களான பெரும் முனிவர்கள், ஸ்வாதா என்றழைக்கப்படும் கொடைகளில் வாழும் பித்ருக்கள்,(52) தவம், அறிவியல்கள், பல்வேறு நன்மைகளைக் கொண்ட (தெய்வீக) மூலிகைகள் ஆகியன, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே வந்து நிலைகொண்டு பேரொலியை எழுப்பின.(53) மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களுடன் கூடிய பிரம்மனும், உயிரினங்களின் தலைவனும், தேரில் இருந்தவனுமான பவனும் {சிவனும்}, ஆகாயத்தின் அந்தப் பகுதிக்கு வந்தனர்.(54) உயர் ஆன்மா கொண்டோரான கர்ணன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் ஒருவரோடொருவர் மோதப்போவதைக் கண்டு சக்ரன் {இந்திரன்}, “அர்ஜுனன், கர்ணனை வெல்லட்டும்” என்றான். எனினும் சூரியனோ, “கர்ணன், அர்ஜுனனை வெல்லட்டும்.(55) உண்மையில், என் மகன் கர்ணன், அர்ஜுனனைக் கொன்று இந்தப் போரில் வெற்றியை அடையட்டும்” என்றான்.(56)

அங்கே இருந்த சூரியன் மற்றும் வாசவன் {இந்திரன்} ஆகிய அந்தப் புகழ்பெற்ற இருவரும், எதிரெதிர் தரப்புகளை ஏற்று, இவ்வாறே ஒருவரோடொருவர் சர்ச்சை செய்து கொண்டனர்.(57) உயர் ஆன்மா கொண்டோரான கர்ணன் மற்றும் தனஞ்சயன் ஆகிய இருவரும் போரிடப் போவதைக் கண்டு தேவர்களும், அசுரர்களும் எதிரெதிர் தரப்புகளை ஏற்றனர்.(58) தெய்வீக முனிவர்கள், தேவர்கள் அனைவரும், உயிரினங்கள் அனைத்துடனும் கூடிய மூவுலகமும் அந்தக் காட்சியைக் கண்டு நடுங்கினர்.(59) தேவர்கள், பார்த்தனின் தரப்பிலிருந்தனர், அசுரர்களோ, கர்ணனின் தரப்பிலிருந்தனர். இவ்வாறே அம்மோதலில் விருப்பம் கொண்ட உயிரினங்கள் அனைத்தும், இங்கோ, அங்கோ எனத் தேர்வீரர்களில் தலைவர்களான குரு அல்லது பாண்டவ வீரனின் தரப்பை ஏற்றன.(60)

தான்தோன்றியான படைப்புத்தலைவனை (பிரம்மனைக்) கண்ட தேவர்கள், அவனிடம், “ஓ! தேவா, மனிதர்களில் சிங்கங்களான இவ்விருவருக்கும் வெற்றிச் சமமானதாக இருக்கட்டும். கர்ணன் மற்றும் அர்ஜுனனுக்கு இடையிலான இம்மோதலின் விளைவாக இந்தப் பரந்த அண்டம் அழியாதிருக்கட்டும். ஓ! தான்தோன்றியே, இவ்விருவருக்கும் இணையான வெற்றியே கிட்டட்டும் என்ற வார்த்தையை மட்டும் சொல்வீராக” என்றனர்.(62) இவ்வார்த்தைகளைக் கேட்ட மகவத் {இந்திரன்}, பெரும்பாட்டனை வணங்கி, நுண்ணறிவு கொண்ட அனைத்திலும் முதன்மையான அந்தத் தேவர்களுக்குத் தேவனிடம் {பிரம்மனிடம்}, “கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} இருவரும் எப்போதும் வெற்றியை அடைவது உறுதியென நீரே முன்பு சொல்லியிருக்கிறீர். நீர் சொன்னவாறே (இப்போது) ஆகட்டும். ஓ! புனிதமானவரே {பிரம்மனே}, என்னிடம் நிறைவு கொள்வீராக” என்று சொன்னான்.(64)

இதைக் கேட்ட பிரம்மனும், ஈசானனும், அந்தத் தேவர்களின் தலைவனிடம் {இந்திரனிடம்}, “வேள்விக் கொடைகளை உண்பவனை {அக்னிதேவனைக்} காண்டவ வனத்தில் நிறைவு செய்தவனும், ஓ! சக்ரா {இந்திரா}, சொர்க்கத்திற்கு வந்து உனக்கு உதவியவனும், சவ்யசச்சினும் {இரு கரங்களைப் பயன்படுத்துபவனும்}, உயர் ஆன்மா கொண்டவனுமான அந்த விஜயனின் {அர்ஜுனனின்} வெற்றி உறுதியானதே.(65,66) கர்ணன், தானவர்களின் பக்கத்தில் இருக்கிறான். எனவே, அவன் தோல்வியடைய வேண்டும் என்பதே சரி. இதனால் தேவர்களின் காரியங்கள் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.(66) ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, ஒருவனின சொந்தக் காரியமானது எப்போதும் முக்கியமானதாக இருக்க வேண்டும். உயர் ஆன்மப் பல்குனன் {அர்ஜுனன்}, உண்மைக்கும், அறநெறிக்கும் அர்ப்பணிப்புள்ளவனாக இருக்கிறான். அவன் எப்போதும் வெல்ல வேண்டும் என்பதில் ஐயமில்லை.(68) உயர் ஆன்மா கொண்டவனும், தன் கொடிமரத்தில் காளையைக் கொண்ட புனிதமான தேவன் {சிவன்}, எவனால் நிறைவு செய்யப்பட்டானோ, அண்டத்தின் தலைவனான விஷ்ணுவையே தன் தேரின் சாரதியாக எவன் கொண்டுள்ளானோ, ஓ! ஆயிரங்கண் கொண்டோனே {இந்திரா}, அவன் ஏன் வெற்றியடையமாட்டான்? பெரும் மனோசக்தியும், பெரும்பலமும் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, ஆயுதங்களில் சாதித்த, தவத்தகுதி கொண்ட ஒரு வீரனாவான்.(70) பெரும் உடல் சக்தியைக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, மொத்த ஆயுத அறிவியலையும் தன்னிடம் கொண்டிருக்கிறான் {அறிந்திருக்கிறான்}. உண்மையில், பார்த்தன் அனைத்து சாதனைகளையும் செய்தவனாவான். தேவர்களின் காரியங்களை நிறைவேற்றுபவனாகையால் அவன் வெற்றியே அடைய வேண்டும்.(71) சாதகமவோ, பாதகமாகவோ இருக்கக்கூடிய விதியையே, தன் மகிமையின் விளைவால் மீறக் கூடியவன் பார்த்தன்; அவன் அவ்வாறு செய்கையில், உயிரினங்களுக்குப் பேரழிவு ஏற்படும்.(72) இருகிருஷ்ணர்களும் கோபத்தால் தூண்டப்படும் போது, எதைக் குறித்தும் கவலைகொள்ள மாட்டார்கள். உயிரினங்களில் காளைகளான இவ்விருவருமே, உண்மை மற்றும் உண்மையற்ற பொருட்கள் அனைத்தையும் உண்டாக்கியவர்கள் ஆவர்.(73) இவ்விருவரும், புராதனமானவர்களும், முனிவர்களில் சிறந்தவர்களுமான நரநாராயணர்கள் ஆவர். அவர்களை ஆட்சி செய்ய எவரும் கிடையாது. அவர்களே அனைவரையும் ஆட்சி செய்பவர்கள் ஆவர். முற்றிலும் அச்சமற்றவர்களான அவர்கள், எதிரிகள் அனைவரையும் எரிப்பவர்களாக இருக்கிறார்கள்.(74) சொர்க்கத்திலோ, மனிதர்களுக்கு மத்தியிலோ அவர்களுக்கு இணையான எவரும் கிடையாது. மூவுலகங்களும், தெய்வீக முனிவர்களும், சாரணர்களும் இவர்கள் இருவரின் பின்னால் இருக்கின்றனர்.(75)

தேவர்களும், உயிரினங்கள் அனைத்தும் இவர்களின் பின்னால் நடந்து செல்கின்றனர். இவ்விருவருடைய சக்தியின் விளைவாலேயே மொத்த அண்டமும் நிலைத்திருக்கிறது.(76)

மனிதர்களில் காளையான கர்ணன், இங்கிருக்கும் இந்த முதன்மையான உலகங்களை அடையட்டும். அவன் வசுக்கள், அல்லது மருத்துக்கள் ஆகியோரின் அடையாளத்தை அடையட்டும். விகர்த்தனன் {சூரியன்} மகன் {கர்ணன்}, துணிச்சல் மிக்கவனும், வீரனுமானதால், சொர்க்கத்தில் துரோணர் மற்றும் பீஷ்மருடன் சேர்த்து அவனும் வழிபடப்படட்டும். எனினும், வெற்றியானது இரு கிருஷ்ணர்களையே அடையட்டும்” என்றார் {பிரம்மனும், சிவனும்}.(78) தேவர்களில் முதன்மையான அவ்விருவரும் (பிரம்மனும், ஈசானனும்) இவ்வாறு சொன்னதும், ஆயிரம் கண்களைக் கொண்ட தேவன் {இந்திரன்}, உயிரினங்கள் அனைத்தையும் வணங்கி,(79) “அண்டத்தின் நன்மைக்காக அந்தத் தேவர்கள் இருவரால் சொல்லப்பட்டதை நீங்கள் கேட்டீர்கள். அஃது அப்படியே ஆகும், வேறாகாது. உற்சாகமிக்க இதயங்களுடன் நிற்பீராக” என்றான் {இந்திரன்}.(80)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உயிரினங்கள் அனைத்தும், ஓ! ஐயா, ஆச்சரியத்தால் நிறைந்து, அந்தத் தேவனைப் புகழ்ந்தனர்.(81) அப்போது தேவர்கள் பல்வேறு வகைகளிலான நறுமணமிக்க மலர்களைப் பொழிந்து, தங்கள் எக்காளங்களை முழக்கினர்.(82) உண்மையில், தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள் ஆகிய அனைவரும், மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவருக்குள் நேரப்போகும் அந்த ஒப்பற்ற தனிப்போரைக் காண அங்கே காத்திருந்தனர்.(83) ஓ! மன்னா, கர்ணனும், அர்ஜுனனும் இருந்த இரண்டு தேர்களிலும் வெண்குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. இரண்டும் {அந்த இரண்டு தேர்களும்} சிறந்த கொடிமரங்களைக் கொண்டவையாகவும், உரத்த சடசடப்பொலியை உண்டாக்குபவையாகவும் இருந்தன.(84) துணிச்சல்மிக்க வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும், சல்லியனையும், கர்ணனையும் அணுகிய முதன்மையான வீரர்கள் பலரில் ஒவ்வொருவரும் தங்கள் சங்கை முழக்கினர்.(85)

அப்போது (அந்தப் போர்வீரர்கள் இருவருக்குள்ளும்) தொடங்கிய போரானது, மருண்டோர் அனைவரையும் அச்சுறுத்தியது. சக்ரனையும் {இந்திரனையும்}, சம்பரனையும் போல அவர்கள் ஒருவரையொருவர் கடுமையுடன் அறைகூவியழைத்தனர்.(86) முற்றிலும் பிரகாசமானவையாக இருந்த அந்த வீரர்கள் இருவரின் கொடிமரங்களும், அண்ட அழிவின் போது ஆகாயத்தில் எழுந்த ராகு மற்றும் கேது கோள்களைப் போல, அவர்களின் தேர்களில் மிக அழகாகத் தெரிந்தன.(87) யானை கட்டும் கயிற்றைக் கொண்டதும், ரத்தினங்களால் ஆனதும், மிக உறுதியானதும், இந்திரனின் வில்லுக்கு ஒப்பானதும், பாம்பைப் போலத் தெரிந்ததுமான கர்ணனின் கொடியானது, (காற்றில் அசைகையில்) பிரகாசமாகத் தெரிந்தது.(88) மேலும், அகன்ற வாயைக் கொண்டதும், பயங்கரமானதும், சூரியனைப் போலப் பார்க்கக் கடினமானதுமான பார்த்தனுக்குச் சொந்தமான முதன்மையான குரங்கு, {அதைப் பார்ப்பவர்களைத்} தன் உறுதிமிக்கப் பல்லால் அச்சுறுத்தியது.(89)

காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கொடிமரத்தில் இருந்த மூர்க்கமான குரங்கானது, போரிட விரும்பி, தன் நிலையில் இருந்து {அகன்று} விரைந்து, கர்ணனுடைய கொடிமரத்தின் மீது பாய்ந்தது.(90) பெரும் மூர்க்கத்தைக் கொண்ட அந்தக் குரங்கு, பாம்பின் மீது கருடன் பாய்வதைப் போல முன்னோக்கிப் பாய்ந்து, தன் நகங்களாலும், பற்களாலும், அந்த யானை கட்டும் கயிற்றைத் தாக்கியது.(91) சிறு மணி வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டதும், இரும்பைப் போலக் கடினமானதும், (யமன் அல்லது வருணனின் கைகளிலிருக்கும்) மரணச் சுருக்குக்கு {பாசக்கயிற்றுக்கு} ஒப்பானதுமான அந்த யானை கட்டும் கயிறானது, கோபத்தால் நிறைந்து குரங்கை நெருங்கியது.(92) இவ்வாறு அவ்விரு வீரர்களுக்கிடையிலானதும், பகடையாட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவற்றின் விளைவாக வந்ததுமான அந்தக் கடுமையான தனிப்போரில், அவர்களின் கொடிமரங்களே முதலில் ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டன. அதே வேளையில், ஒருவனின் குதிரைகள் மற்றவனின் குதிரைகளைப் பார்த்துக் கனைத்தன.(93) தாமரைக் கண் கேசவனோ {கிருஷ்ணனோ}, தன் கூரிய பார்வையால் சல்லியனைத் துளைத்தான். பின்னவனும் {சல்லியனும்}, முன்னவனை {கிருஷ்ணனைக்} கண்டு, அதே போன்ற பார்வைகளை வீசினான்.(94) எனினும், குந்தி மகனான தனஞ்சயன் தன் பார்வைகளால் கர்ணனை வென்ற அதே வேளையில், வாசுதேவன் {கிருஷ்ணன்} சல்லியனை வென்றான்.(95)

அப்போது சூதன் மகன் {கர்ணன்}, புன்னகைத்தவாறே சல்லியனிடம், “ஓ! நண்பரே, இன்று பார்த்தன் {அர்ஜுனன்} எவ்வகையிலாவது என்னை கொன்றுவிட்டால், அதன் பிறகு நீர் என்ன செய்வீர் என்பதைச் சொல்வீராக” என்று கேட்டான்.

அதற்குப் பதிலுரைத்த சல்லியன் {கர்ணனிடம்}, “நீ கொல்லப்பட்டால், கிருஷ்ணன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் நான் கொல்வேன்” என்றான்.(96,97) மீண்டும் அந்த மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, “ஓ! கர்ணா, இன்றைய போரில் வெண்குதிரை கொண்ட அர்ஜுனன் உன்னைக் கொன்றால், ஒரே தேரில் செல்லும் நான் மாதவன் {கிருஷ்ணன்} மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் கொல்வேன்” என்றான்.”(98)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அர்ஜுனனும், கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்} இதே போன்ற கேள்வியைக் கேட்டான். எனினும் கிருஷ்ணன் புன்னகைத்தவாறே பார்த்தனிடம், பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(99) “சூரியன் தன் இடத்தில் இருந்து தளர்ந்து வீழலாம், பூமாதேவி ஆயிரம் துண்டுகளாகச் சிதறிப் போகலாம்; நெருப்புக் குளுமையாகலாம், இருப்பினும், ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, கர்ணனால் உன்னைக் கொல்ல இயலாது.(100) எனினும், அதுபோல் ஏதேனும் நடந்தால், அண்டமே அழியும் என்பதை அறிவாயாக. என்னைப் பொறுத்தவரை, என் வெறுங்கைகளைக் கொண்டே, போரில் கர்ணன் மற்றும் சல்லியன் ஆகிய இருவரையும் கொல்வேன்” என்றான்.(101)

கிருஷ்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட குரங்குக் கொடியோன் அர்ஜுனன், சிரித்துக் கொண்டே, முயற்சியால் களைப்பேதும் அடையாதவனான கிருஷ்ணனுக்கு மறுமொழியாக,(102) “ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, சல்லியர் மற்றும் கர்ணன் ஆகியோர் இருவரும் ஒன்று சேர்ந்தாலும், தனியனான எனக்கு ஈடாகமாட்டார்கள். தன் கொடிமரம், கொடிகள் ஆகியவற்றுடனும், சல்லியனுடனும், தனது தேர் மற்றும் குதிரைகளுடனும், தனது குடை, கவசம், ஈட்டிகள், கணைகள் மற்றும் வில் ஆகியவற்றுடனும் கூடிய கர்ணன், போரில் என் கணைகளால் துண்டுகளாக வெட்டப்படுவதை நீ இன்று காண்பாய்.(103,104) தன் தேர், குதிரைகள், ஈட்டிகள், கவசம், ஆயுதங்களுடன் கூடிய அவன் {கர்ணன்}, தந்தமுடைய யானையால் காட்டில் நொறுக்கப்படும் மரத்தைப் போல என்னால் தூசாகக் குறைக்கப்படப் போவதை நீ இன்று காண்பாய்.(105)

இன்று ராதை மகனின் {கர்ணனின்} மனைவிமார் விதவைகளாகப் போகின்றனர். உண்மையில், ஓ! மாதவா, அவர்கள் (கடந்த இரவின்) கனவுகளில், தங்களை அணுகும் தீமையின் அறிகுறிகளைக் கண்டிருப்பார்கள்.(106) உண்மையில், கர்ணனின் மனைவியர் விதவைகளாவதை நீ இன்று காண்பாய். முன்னறிவற்ற இந்த மூடன் {கர்ணன்}, சபைக்குள் கிருஷ்ணை {திரௌபதி} இழுத்து வரப்படுவதைக் கண்டு, மீண்டும் மீண்டும் சிரித்து, தீய வார்த்தைகளால் எங்களை நிந்தித்ததை நினைத்து உண்டாகும் கோபத்தை என்னால் அடக்கிக் கொள்ளவே முடியாது.(107,108) ஓ! கோவிந்தா, ஒரு மதங்கொண்ட யானையால் நொறுக்கப்படும் மலர்கள் நிறைந்த மரத்தைப் போல, என்னால் நொறுக்கப்படும் கர்ணனை நீ இன்று காண்பாய்.(109) ஓ மதுசூதனா {கிருஷ்ணா}, கர்ணன் வீழ்ந்த பிறகு, “ஓ! விருஷ்ணி குலத்தோனே, நற்பேற்றாலேயே வெற்றி உனதானது” என்ற அந்த இனிய வார்த்தைகளை நீ இன்று கேட்பாய்.(110) எதிரிக்குக் கடனைச் செலுத்தி, இதயத்தின் கனத்தைக் குறைத்துக் கொண்டு, அபிமன்யுவின் அன்னைக்கு {சுபத்திரைக்கு} நீ இன்று ஆறுதலை அளிப்பாய். மகிழ்ச்சியால் நிறையும் நீ, உன் தந்தைவழி அத்தையான குந்திக்கு இன்று ஆறுதலை அளிப்பாய்.(111) ஓ! மாதவா {கிருஷ்ணா}, கண்ணீர் நிறைந்த முகத்துடன் கூடிய கிருஷ்ணைக்கும் {திரௌபதிக்கும்}, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரருக்கும், அமுதம் போன்ற இனிய வார்த்தைகளால் நீ இன்று ஆறுதலை அளிப்பாய்” என்றான் {அர்ஜுனன்}.”(112)

துரியோதனனுக்கு அஸ்வத்தாமன் கூறிய அறிவுரை! – கர்ண பர்வம் பகுதி – 88-கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான போர் தொடங்கியது; எதிரிகளை வீழ்த்திக் கர்ணனைத் துளைத்த அர்ஜுனன்; அர்ஜுனன் மீதி பொழிந்த மலர்மாரி; பாண்டவர்களிடம் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளுமாறு துரியோதனனை அறிவுறுத்திய அஸ்வத்தாமன்; இணங்க மறுத்த துரியோதனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் ஆகாயத்தில், தேவர்கள், நாகர்கள், அசுரர்கள், சித்தர்கள், யக்ஷர்கள், பெரும் கூட்டங்களாக இருந்த கந்தர்வர்கள், ராட்சசர்கள், அப்சரஸ்கள், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள், அரச முனிகள் ஆகியோரும் அற்புத இறகுகளைக் கொண்ட பறவைகள்[1] ஆகியனவும் அற்புதமான வடிவை ஏற்றன.(1) மனிதர்கள் யாவரும், வானத்தில் அற்புதத்தன்மையுடன் நின்றிருந்த அவர்களையும், இசைக்கருவிகள், பாடல்கள், புகழ் துதிகள், சிரிப்பு, ஆடல்களையும், மற்றும் பல்வேறு வகைகளினான இன்பமான ஒலிகளை எதிரொலித்திருக்கும் வானத்தையும் கண்டனர்.(2)

அப்போது மகிழ்ச்சியால் நிறைந்த கௌரவ மற்றும் பாண்டவப் போர்வீரர்கள், இசைக் கருவிகள் மற்றும் சங்குகளின் முழக்கங்களாலும், சிங்க முழக்கங்களாலும் பூமியையும், திசைகளின் பத்து புள்ளிகளையும் எதிரொலிக்கும்படி போராரவாரம் செய்து தங்கள் எதிரிகளைக் கொல்லத் தொடங்கினர்.(3) மனிதர்கள், குதிரைகள், யானைகள், தேர்கள், ஆயுதங்கள் ஆகியவற்றால் நிறைந்ததும், கதாயுதங்கள், வாள்கள், ஈட்டிகள், குத்துவாள்கள் ஆகியவற்றின் பாய்ச்சலின் விளைவாகப் போராளிகளால் தாங்கிக் கொள்ள முடியாததும், வீரர்களால் நிறைந்ததும், உயிரற்ற உடல்களால் நிறைந்ததுமான போர்க்களமானது, குருதியால் சிவப்பாகி மிகவும் பிரகாசமாகத் தெரிந்தது.(4) உண்மையில், குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகியோருக்கிடையிலான அந்தப் போர், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பானதாக இருந்தது. தனஞ்சயனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, அதிரதன் மகனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் கடுமையான, பயங்கரமான போர் தொடங்கிய பிறகு, சிறந்த கவசம் தரித்திருந்த அவ்விரு வீரர்களில் ஒவ்வொருவரும், திசைகளின் பத்து புள்ளிகளையும், தன்னை எதிர்த்த படையையும் நேரான, கூரிய கணைகளால் மறைத்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் ஏவப்பட்ட கணைகளால் அங்கே உண்டான இருளின் காரணமாக, உமது போர்வீரர்களையோ, எதிரிகளையோ அதற்கு மேலும் வேறு எதையும் பார்க்க முடியவில்லை.(5,6)

ஆகாயத்தில் பரவியிருக்கும் ஒளிக்கதிர்கள், சூரியனையோ, சந்திரனையோ நோக்கிக் குவிவதைப் போல, அச்சமடைந்த போர்வீரர்கள் அனைவரும் கர்ணன், அல்லது அர்ஜுனனின் பாதுகாப்பை நாடினார்கள். பிறகு அந்த வீரர்கள் இருவரும், கிழக்கில் இருந்து வரும் காற்றும், மேற்கில் இருந்து வரும் காற்றும் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதைப் போலத் தன் ஆயுதத்தால் மற்றவனின் ஆயுதங்களைக் கலங்கடிக்கச் செய்து,(7) மேங்களால் உண்டானதும், ஆகாயத்தை மறைத்திருந்ததுமான இருளை விலக்கி எழும் சூரியனையோ, சந்திரனையோ போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தனர். தன் துருப்புக்கு உற்சாகமூட்டிய அவர்கள் ஒவ்வொருவரும் {கர்ணனும், அர்ஜுனனும்}, “தப்பி ஓடாதீர்கள்” என்று சொன்னதால், களத்தைவிட்டு அகலாமல் இருந்த எதிரி மற்றும் உமது போர்வீரர்கள்,(8) வாசவனையும் {இந்திரனையும்}, சம்பரனையும் சுற்றி நிற்கும் தேவர்களையும், அசுரர்களையும் போல, அவ்விரு வலிமைமிக்கத் தேர்வீரர்களைச் சூழ்ந்து நின்றனர். அப்போது அந்த இரு படைகளும், மனிதர்களில் சிறந்த அவ்விருவரையும், பேரிகைகள் மற்றும் பிற இசைக்கருவிகளின் ஒலிகளாலும், சிங்கமுழக்கங்களாலும் வரவேற்றதால்,(9) சுற்றித் திரண்டு முழங்கும் மேகங்களால் வரவேற்கப்படும் சூரியனையும், சந்திரனையும் போல அந்த மனிதர்களில் காளைகள் இருவரும் அழகாகத் தெரிந்தனர்[2]. முழுமையான வட்டமாக வளைக்கப்பட்ட வில்லைத் தரித்து, (சூரிய, அல்லது சந்திர) ஒளிவட்டத்துடன் கூடியவர்களாகத் தெரிந்த அவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் கதிர்களாக அமைந்த ஆயிரக்கணக்கான கணைகளை அந்தப் போரில் ஏவி,(10) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த அண்டத்தையும் எரிக்கும் வகையில், யுக முடிவில் எழும் தாங்கிக் கொள்ளப்பட முடியாத இரு சூரியர்களுக்கு ஒப்பானவர்களாகத் தெரிந்தார்கள்.

வெல்லப்பட முடியாதவர்களும், எதிரிகளை அழிக்கவல்லவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களும், தங்களில் அடுத்தவரிடம் தன் திறனை வெளிக்காட்டியவர்களும்,(11) போர்வீரர்களுமான கர்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகிய அவ்விருவரும், இந்திரனையும், அசுரன் ஜம்பனையும் போல, அந்தப் போரில் ஒருவரிடமொருவர் அச்சமில்லாமல் நெருங்கினர். அப்போது வலிமைமைமிக்க ஆயுதங்களை இருப்புக்கு அழைத்த அந்த உறுதிமிக்க வில்லாளிகள் இருவரும், தங்கள் பயங்கரக் கணைகளால்,(12) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எண்ணற்ற மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளைக் கொல்லத் தொடங்கி, தங்களுக்குள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மீண்டும் அந்த மனிதர்களில் முதன்மையானவர்களாக இருவராலும் பீடிக்கப்பட்டவையும், யானைகள், காலாள்கள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்களை உள்ளடக்கியவையுமான குருக்கள் மற்றும் பாண்டவர்களின் துருப்புகள், காட்டில் சிங்கத்தால் தாக்கப்பட்ட சிறுவிலங்குகளைப் போல அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடின.

அப்போது, துரியோதனன், போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, சுபலனின் மகன் {சகுனி}, கிருபர் மற்றும் சரத்வான் மகளின் {கிருபியின்} மகன் {அஸ்வத்தாமன்},(13,14) ஆகிய ஐந்து பெரும் தேர்வீரர்களும், பெரும் வலியை உண்டாக்கவல்ல கணைகளால் தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்}, கேசவனையும் {கிருஷ்ணனையும்} தாக்கினர். எனினும், தனஞ்சயன், அதே நேரத்தில், தன் கணைகளால் அந்தப் போர்வீரர்களின் விற்களையும், அம்பறாத்தூணிகளையும், குதிரைகளையும், யானைகளையும், சாரதிகளோடு கூடிய தேர்களையும் வெட்டி, சிறந்த கணைகளால் அவர்கள் ஒவ்வொருவரையும் சிதைத்து, பனிரெண்டு கணைகளால் சூதன் மகனையும் {கர்ணனையும்} துளைத்தான். அப்போது நூறு யானைகளும், நூறு தேர்களும், எண்ணற்ற சகர்கள், துகாரர்கள் மற்றும் யவன குதிரைவீரர்களும், காம்போஜர்களின் முதன்மையான போராளிகள் சிலருடன் சேர்ந்து, அர்ஜுனனைக் கொல்ல விரும்பி, அவனை எதிர்த்து வேகமாக விரைந்தனர். தன் கையில் இருந்த கணைகள் மற்றும் கத்தித் தலை கணைகளால் {க்ஷுரப்ரங்களால்}, எதிரிகளின் சிறந்த ஆயுதங்களையும், அவர்களது தலைகளையும்,(15-17), குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களையும் வெட்டி வீழ்த்திய தனஞ்சயன் {அர்ஜுனன்}, போரில் தன்னோடு மோதிய எதிரிகளையும் வீழ்த்தினான். அப்போது ஆகாயத்தில், சிறந்த தேவர்களால் இசைக்கப்பட்ட தெய்வீக பேரிகைகள் {தங்கள் ஒலிகளால்} வெடித்தன. இவை அர்ஜுனனின் துதிகளோடு கலந்தன.(18) மென்மையான தென்றலால் வீசப்பட்டதும், நறுமணமிக்கதுமான மலர் மாரி அங்கே (அர்ஜுனனின் தலை மீது) பொழிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சம்பவத்தைக் கண்ட தேவர்களும், மனிதர்களும், அனைத்து உயிரினங்களும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(19) ஒரே கருத்தைக் கொண்டவர்களாகையால், உமது மகனும் {துரியோதனனும்}, சூதன் மகனும் {கர்ணனும்} மட்டுமே ஆச்சரியத்தையோ, வலியையோ {துன்பத்தையோ} உணரவில்லை.

அப்போது துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, துரியோதனனின் கரங்களைப் பற்றிக் கொண்டு[3], தணிவான தொனியைப் பின்பற்றி உமது மகனிடம்,(20) “ஓ! துரியோதனா, நிறைவடைவாயாக. பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்வாயாக. இங்கே சச்சரவுக்கான எந்தத் தேவையும் இல்லை. போருக்கு ஐயோ {போரை நிந்திக்க வேண்டும்}. வலிமைமிக்க ஆயுதங்களான பிரம்ம ஆயுதத்தை அறிந்த ஆசான் {துரோணர்} கொல்லப்பட்டுவிட்டார். பீஷ்மரின் தலைமையிலானவர்களும், மனிர்களில் காளைகளுமான பிறரும் கொல்லப்பட்டுவிட்டனர்.(21) என்னைப் பொறுத்தவரையும், என் தாய்மாமனை {கிருபரைப்} பொறுத்தவரையும் நாங்கள் கொல்லப்பட முடியாதவர்கள். பாண்டுவின் மகன்களோடு (அரசைப் பகிர்ந்து கொண்டு) எப்போதும் அரசாள்வாயாக. நான் தடுத்தால் தனஞ்சயன் விலகிவிடுவான். ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்} பகைமையை விரும்பவில்லை.(22) யுதிஷ்டிரன் உயிரினங்கள் அனைத்தின் நன்மையிலும் எப்போதும் ஈடுபடுகிறான். விருகோதரன் {பீமன்} அவனுக்குக் கீழ்ப்படிந்தவனே ஆவான். அதே போலவே இரட்டையர்களும் {நகுல சகாதேவர்களும்} கீழ்ப்படிந்தவர்களே. உனக்கும், பார்த்தர்களுக்கும் இடையில் அமைதி உண்டாக்கப்பட்டால், அந்த உன் விருப்பத்தின் மூலமே, அனைத்து உயிரினங்களும் நன்மையை அடைந்தன என்பது போலவும் தெரியும்.(23) இன்னும் உயிரோடு இருக்கக்கூடிய மன்னர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லட்டும். துருப்புகள், தங்கள் பகைமையில் இருந்து விலகட்டும். ஓ! மன்னா {துரியோதனா} என் வார்த்தைகளை நீ கேட்கவில்லையென்றால், எதிரிகளால் போரில் நீ துன்பத்தில் எரிய வேண்டியிருக்கும்.(24) கிரீடத்தாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன் தனி ஒருவனாக எவற்றை அடைந்தான் என்பதை நீயும் கண்டாய், இந்த அண்டமும் நன்றாகக் கண்டது. {அசுரன்} பலனைக் கொன்றவனாலேயே {இந்திரனாலேயே} கூட இதைப்போன்றதொரு காரியத்தைச் சாதிக்க முடியாது. அதே போல, யமனாலோ, பிரசேதகர்களாலோ, யக்ஷர்களின் புகழ்பெற்ற மன்னனாலோ {குபேரனாலோ} கூடச் சாதிக்க முடியாது.(25)

தனஞ்சயனின் {அர்ஜுனனின்} சாதனைகளைப் பொறுத்தவரை, அஃது இதைவிட மிக மேம்பட்டதாகும். நான் என்ன சொன்னாலும், அவன் ஒருபோதும் அதை மீற மாட்டான். அவன் உன்னை எப்போதும் பின்தொடர்வான். ஓ! மன்னா {துரியோதனா}, அண்டத்தின் நன்மைக்காக நீ நிறைவடைவாயாக.(26) நீ எப்போதும் என்னை மதிக்கிறாய். நானும் உன்னிடம் பெரும் நட்பைக் கொண்டுள்ளேன். இதன் காரணமாகவே, நான் உனக்கு இதைச் சொல்கிறேன். அமைதியை நீ ஏற்றால், கர்ணனையும் கூட நான் விலங்கச் செய்வேன்.(27) நுணுக்கமாகக் கண்டறியும் மனிதர்கள், இயல்பாகவே நண்பர்களாகுபவர்கள், மனவேற்றுமை நீக்கப்பட்டு {நல்ல வார்த்தைகளால்} உண்டாகுபவர்கள், செல்வத்தின் மூலம் உண்டாகுபவர்கள், இறுதியாகப் பலத்தை வெளிப்படுத்தி அடக்கி {நண்பர்களாகக்} கொள்ளப்படுபவர்கள் என நால்வகை நண்பர்களைக் குறித்துச் சொல்கிறார்கள்.[4] பாண்டுவின் மகன்களைப் பொறுத்தவரை இந்த அனைத்தும் உன்னிடம் இருக்கின்றன.(28) ஓ! வீரா, பாண்டவர்களோ, இயல்பாகவே உன் நண்பர்களாவர். {நல்ல வார்த்தைகளால்} மனவேற்றுமை நீக்கப்பட்டு மீண்டும் உறுதியாக அவர்களை நண்பர்களாக அடைவாயாக. நீ நிறைவு கொண்டால், ஓ! மன்னர்களின் மன்னா {துரியோதனா}, அவர்களும் நண்பர்களாக ஏற்பார்கள், எனவே அவ்வழியிலேயே செயல்படுவாயாக” என்றான் {அஸ்வத்தாமன்}.(29)

தன் நண்பனின் {அஸ்வத்தாமனின்} மூலம் சொல்லப்பட்ட இந்த நன்மையான வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன் சிறிது நேரம் சிந்தித்தான். நீண்ட பெருமூச்சுகளை விட்ட அவன், உற்சாகமற்ற இதயத்துடன், “ஓ! நண்பரே {அஸ்வத்தாமரே}, நீர் சொன்னவாறே இஃது இருக்கிறது. எனினும், நான் உமக்குச் சொல்லப்போகும் வார்த்தைகளையும் கேட்பீராக.(30) தீய இதயம் கொண்ட விருகோதரன் {பீமன்}, ஒரு புலியைப் போலத் துச்சாசனனைக் கொன்று, தன் இதயத்தில் இன்னும் நீடித்திருக்கும் வார்த்தைகளைச் சொன்னான். நீரும் அதைக் கேட்டீர். பிறகு, எவ்வாறு அமைதி ஏற்பட முடியும்?(31) மேலும், புயலின் வேகமானது, வலிமைமிக்க மேரு மலைகளில் மோதி பலவீனமடைவதைப் போலவே, அர்ஜுனனால், போரில் கர்ணனைத் தாங்கிக் கொள்ள முடியாது. மேலும் பலவந்தமான பகைமை கொண்ட (நான் அவர்களுக்கு இழைத்த) பல செயல்களை நினைத்துப் பார்த்து, பிருதையின் {குந்தியின்} மகன்களும் என்னிடம் சிறு நம்பிக்கையும் கொள்ள மாட்டார்கள்.(32) ஓ! மங்காப் புகழ் கொண்ட ஆசான் மகனே {அஸ்வத்தாமரே}, “போரில் இருந்து விலகுவாயாக” என்று இப்போது கர்ணனிடம் சொல்வதும் உமக்குத் தகாது. பல்குனன் {அர்ஜுனன்} இன்று மிகவும் களைத்துப் போய் இருக்கிறான். கர்ணன் விரைவில் அவனைக் கொல்வான்” என்றான் {துரியோதனன்}.(33) பணிவோடு கூடிய இந்த வார்த்தைகளை ஆசான் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} மீண்டும் மீண்டும் சொன்ன உமது மகன் {துரியோதனன்}, தன் துருப்புகளை அழைத்து, “கணைகளைத் தரித்துக் கொண்டு, இந்த எதிரிகளை எதிர்த்து விரைந்து, அவர்களைக் கொல்வீராக. ஏன் செயலற்று நிற்கிறீர்கள்?” என்று ஆணையிட்டான் {துரியோதனன்}.”(34)

கர்ணனை கைவிட்டு ஓடிய கௌரவர்கள்! – கர்ண பர்வம் பகுதி – 89- கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த பயங்கரமான போர்; அர்ஜுனன் ஏவிய கணைகள் அனைத்தையும் கலங்கடித்த கர்ணன்; இதைப் பொறுக்காத பீமன் அர்ஜுனனைக் கடிந்து கொண்டு, அவனுக்கு உற்சாகமூட்டியது; கிருஷ்ணனும் அர்ஜுனனுக்கு உற்சாகமூட்டியது; பிரம்மாயுதத்தை அழைத்த அர்ஜுனன்; அவ்வாயுதத்தைக் கலங்கடித்த கர்ணன்; இரண்டாவது முறையும் பிரம்மாயுதத்தை ஏவிய அர்ஜுனன்; அவ்வாயுதத்தால் கௌரவத் துருப்புகளுக்கு நேர்ந்த பேரழிவு; போரைக் காண களத்தில் வந்த யுதிஷ்டிரன்; அர்ஜுனனின் பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அறுந்த காண்டீவத்தின் நாண்கயிறு; அந்தக் கணத்தைப் பயன்படுத்தி அர்ஜுனன், கிருஷ்ணன் மற்றும் பீமனைத் துளைத்த கர்ணன்; கர்ணனைத் தன் கணைகளால் மறைத்த அர்ஜுனன்; பாம்புகளை ஏவி கிருஷ்ணனைத் துளைத்த கர்ணன்; கணைகளாக மாறி வந்த அந்தப் பாம்புகளை வெட்டி, கர்ணனின் உடலை ஆயுதங்களால் நன்கு சிதைத்த அர்ஜுனன்; நடுக்கமடைந்த கர்ணன் மிகுந்த கடினத்தோடு தன் தேரில் நின்றது; அச்சத்தால் கர்ணனைக் கைவிட்டுத் தப்பி ஓடிய கௌரவர்கள்; இருப்பினும் வீரத்தோடு உற்சாகமாகப் போராடிய கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சங்கு முழக்கங்களும், பேரிகையின் ஒலிகளும் பேரொலியாக எழுந்தபோது, வெண்குதிரைகளைக் கொண்டோரும், மனிதர்களில் முதன்மையானோருமான சூதன் மகன் வைகர்த்தனன் {கர்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகனின் தீய கொள்கையின் விளைவால் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(1) பெரும் மூர்க்கத்தைக் கொண்ட வீரர்களான தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் அதிரதன் மகன் {கர்ணன்} ஆகிய இருவரும், முழுதாக வளர்ந்த தந்தங்களைக் கொண்டவையும், பருவகாலத்தில் உள்ள பிடிக்காக {பெண் யானைக்காக} மோதிக்கொள்பவையுமான, மதங்கொண்ட இமாலயக் களிறுகள் {ஆண் யானைகள்} இரண்டைப் போல ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(2) மேகத்திரள் ஒன்று, மற்றொரு மேகத்திரளுடன், அல்லது மலையோடு மலை மோதிக் கொள்வதைப் போல அந்தப் போர்வீரர்கள் இருவரும், கணைமாரியைப் பொழிந்து கொண்டும், உரத்த நாணொலி எழுப்பும் தங்கள் விற்களுடனும், செவிடாக்கும் சடசடப்பொலியை உண்டாக்கும் தங்கள் தேர்சக்கரங்களுடனும், பேரொலிகளை வெளியிடும் தங்கள் நாண்கயிறுகள் மற்றும் உள்ளங்கைகளுடனும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(3) நெடிய சிகரங்களைக் கொண்டவையும், மரங்கள், செடி கொடிகள் நிறைந்தவையும், அவற்றுக்கு இயல்பான பல்வேறு காட்டுவாசிகளால் நிறைந்தவையுமான இரண்டு மலைகளைப் போல, அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் இருவரும், ஒரு மோதலுக்காக ஒருவரையொருவர் நோக்கி விரைந்து, வலிமைமிக்க ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(4) அந்த இரு வீரர்களுக்கு இடையிலான அம்மோதல், பழங்காலத்தில் தேவர்களின் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்}, விரோசனன் மகனுக்கும் {பலிக்கும்} இடையில் நடந்ததைப் போலச் சீற்றம் நிறைந்ததாக இருந்தது. பிறரால் தாங்கிக் கொள்ள முடியாதவையும், குருதியையே அருவருக்கத்தக்க சுவை கொண்ட தன் தண்ணீராகக் கொண்ட ஒரு நதியால் குறிக்கப்பட்டவையுமான, அவ்விரு வீரர்களின் அங்கங்களும், அவர்களது சாரதிகள் மற்றும் விலங்குகளின் அங்கங்களும் மிகவும் சிதைக்கப்பட்டன[1].(5)

பல்வேறு வகைகளிலான தாமரைகள், மீன்கள், ஆமைகள் நிறைந்தவையும், பல்வேறு வகைகளிலான நீர்க்கோழிகளின் குரல்களை எதிரொலித்தவையும், காற்றால் மெதுவாகக் கலக்கப்பட்டவையுமான இரு பெரும் தடாகங்கள் ஒன்றையொன்று அணுகுவதைப் போலவே, கொடிமரங்களால் அருளப்பட்ட அந்தத் தேர்கள் இரண்டும் ஒன்றையொன்று அணுகின.(6) பெரும் இந்திரனுக்கு {மஹேந்திரனுக்கு} இணையான ஆற்றலைக் கொண்டவர்களும், பெரும் இந்திரனுக்கே ஒப்பானவர்களுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவரும், பெரும் இந்திரன் மற்றும் (அசுரன்) விருத்திரன் ஆகியோரைப் போலவே, அந்தப் பெரும் இந்திரனின் வஜ்ரத்திற்கு இணையான கணைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(7) அழகிய கவசங்கள், ஆபரணங்கள், ஆடைகள், ஆயுதங்களால் ஆயத்தம் செய்யப்பட்ட தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்களைக் கொண்ட இரு படைகளும், அங்கே ஆகாயத்தில் இருந்தவர்களும், அர்ஜுனன் மற்றும் கர்ணனுக்கிடையிலான அற்புதத் தன்மை கொண்ட அம்மோதலைக் கண்டு அச்சமடைந்தனர்.(8) மதங்கொண்ட யானைகள், ஒன்றையொன்று எதிர்த்து விரைவதைப் போல, அதிரதன் மகனை {கர்ணனைக்} கொல்லும் விருப்பத்துடன், அவனை {கர்ணனை} எதிர்த்து, அர்ஜுனன் விரைந்த போது, பார்வையாளர்களில் வேறு சிலர், மகிழ்ச்சியால் நிறைந்து, சிங்க முழக்கங்கள் செய்து, தங்கள் கரங்களை உயர்த்தி, தங்கள் விரல்களையோ, தாங்கள் பிடித்திருந்த துணித்துண்டுகளையோ அசைத்தனர்.(9)

அப்போது சோமகர்கள், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! அர்ஜுனா, வேகமாகச் சென்று கர்ணனைத் துளைப்பாயாக. தாமதமில்லாமல் அவனது தலையையும், (அதனோடு சேர்த்து) அரசை அடையும் திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} ஆசையையும் வெட்டி வீழ்த்துவாயாக” என்று உரக்கக் கூச்சலிட்டனர்.(10) அதே போல நமது போர்வீரர்கள் பலர், கர்ணனிடம், “செல், ஓ! கர்ணா, சென்று, கூரிய கணைகளால் அர்ஜுனனைக் கொல்வாயாக. பிருதையின் {குந்தியின்} மகன்கள் எப்போதும் காட்டிலேயே இருக்கும் வகையில் மீண்டும் செல்லட்டும்” என்றனர்.(11) அப்போது, அம்மோதலில் கர்ணன் முதலில் பத்து வலிமைமிக்கக் கணைகளால் பார்த்தனைத் துளைத்தான். பதிலுக்கு அர்ஜுனன், பெரும் மூர்க்கம் கொண்டவையான பத்துக் கூர்முனைக் கணைகளால் அவனது நடுமார்பைத் துளைத்தான்.(12) உண்மையில், அந்தச் சூதன் மகனும் {கர்ணனும்}, அர்ஜுனனும், நல்ல சிறகுகளுடன் கூடிய கணைகள் பலவற்றால் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர். அந்தப் பயங்கரப் போரில், தாங்கள் ஒவ்வொருவரும் செய்யும் தாமதத்தின் பயனை அடைய விரும்பிய அவர்கள், உற்சாகமிக்க இதயங்களுடன் ஒருவரையொருவர் எதிர்த்து மூர்க்கமாக விரைந்தனர்.(13) கடும் வில்லாளியான அர்ஜுனன், தன் இரு கைகளையும், காண்டீவத்தின் நாண்கயிற்றையும் தேய்த்துவிட்டு, துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, நாளீகங்கள், பன்றியின் காது போன்ற தலைகளைக் கொண்ட கணைகள் {வராஹகர்ணங்கள்}, கத்தி தலை கணைகள் {க்ஷுரப்ரங்கள்}, அஞ்சலீகங்கள், பிறைவடிவக் கணைகள் {அர்த்தச்சந்திரக் கணைகள்} ஆகியவற்றின் மழையைப் பொழிந்தான்.(14) பார்த்தனின் அந்தக் கணைகள், ஆகாயமெங்கும் பரவி, மாலைவேளையில், இரவு ஓய்வுக்காக மரத்திற்குள் தலைதாழ்த்தி ஊடுருவும் பறவைக்கூட்டங்களைப் போலக் கர்ணனின் தேருக்குள் ஊடுருவின.(15)

எதிரிகள் அனைவரையும் வெல்பவனான அர்ஜுனன், சுருங்கிய புருவத்துடனும், கோபப் பார்வைகளுடனும், கர்ணன்மீது ஏவிய அந்தக் கணைகள் அனைத்தும், பாண்டு மகனால் {அர்ஜுனனால்} ஏவப்பட்ட தொடர்ச்சியான அந்தக் கணைமாரிகள் அனைத்தும், சூதன் மகனின் கணைகளால் வெட்டப்பட்டன.(16) அப்போது அந்த இந்திரன் மகன் {அர்ஜுனன்}, எதிரிகள் அனைவரையும் கொல்லவல்ல நெருப்பாயுதம் {ஆக்னேயாஸ்திரம்} ஒன்றைக் கர்ணன் மீது ஏவினான். பூமியையும், வானத்தையும், திசைகளின் பத்து புள்ளிகளையும் மறைத்தபடி, சூரியப் பிரகாசத்துடன் சென்ற அஃது, அவனது உடலையே ஒளியால் சுடவிட்டெரியச் செய்தது.(17) போர்வீரர்களின் ஆடைகள் அனைத்திலும் நெருப்புப் பற்றியதால் அவர்கள் அனைவரும் தப்பி ஓடினர். மூங்கில் காடுகளில் தீப்படிக்கும்போது கேட்கப்படும் பேரொலிகள் அங்கே கேட்கப்பட்டன.(18) அந்த நெருப்பாயுதம் {ஆக்னேயாஸ்திரம்}, அனைத்துப் பக்கங்களிலும் செயல்படுவதைக் கண்டவனும், பெரும் வீரம் கொண்டவனுமான, சூதன் மகன் கர்ணன், அதைத் தணிப்பதற்காக வாருணாயுத்ததை அம்மோதலில் ஏவினான். கர்ணனுடைய ஆயுதத்தின் விளைவால் அந்த நெருப்பானது தணிவடைந்தது.(19)  திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் வேகமாக மறைத்த பெரும் மேகத்திரள்கள் அங்கே இருளை உண்டாக்கின. மலைகளின் தன்மைகளுடன் கூடிய முனைகளைக் கொண்ட அந்த மேகங்கள், அனைத்துப் பக்கங்களில் சூழ்ந்து கொண்டு, பூமியில் நீரைப் பாய்ச்சின.(20)

அந்தக் கடும் நெருப்பானது கடுமையாகவே இருந்தாலும், ஒரே கணத்தில் அந்த மேகங்களால் தணிக்கப்பட்டது. மொத்த ஆகாயமும், முக்கிய மற்றும் துணைத் திசைகள் அனைத்தும் அம்மேகங்களால் மறைக்கப்பட்டிருந்தன.(21) இவ்வாறு மேகங்களால் சூழப்பட்ட திசைப்புள்ளிகள் அனைத்தும் இருளடைந்ததால் அங்கே எதையும் காண முடியவில்லை. அப்போது அர்ஜுனன், கர்ணனால் உண்டான அம்மேகங்களை வாயவ்ய ஆயுதத்தால் {வாயவ்யாஸ்திரத்தால்} விலக்கினான்.(22) இதன்பிறகு, எதிரிகளால் வெல்லப்பட முடியாதவனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, காண்டீவத்தையும், அதன் நாண்கயிற்றையும், தன் கணைகளையும் மந்திரங்களால் ஈர்க்கச்செய்து, தேவர்கள் தலைவனுக்குப் பிடித்தமானதும், சக்தியிலும், ஆற்றலிலும் வஜ்ரத்திற்கு இணையானதுமான மற்றொரு ஆயுதத்தை {வஜ்ராஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்தான்.(23) அப்போது, வஜ்ரத்தின் சக்தியும், மூர்க்கமும் கொண்டவையான கத்தித்தலை கணைகள் {க்ஷுரப்ரங்கள்}, அஞ்சலீகங்கள், பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணைகள், நாளீகங்கள், துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, பன்றியின் காது போன்ற தலைகளைக் கொண்டவை {வராஹகர்ணங்கள்} ஆகிய கூரிய கணைகள் அனைத்தும், காண்டீவத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் வெளிப்பட்டன.(24) பெரும் சக்தியும், வலிமையும், கழுகின் சிறுகளையும் கொண்ட அந்த மூர்க்கமான கூரிய கணைகள், கர்ணனின் அங்கங்கள் அனைத்தையும், அவனது குதிரைகளையும், வில்லையும், நுகத்தடியையும், சக்கரங்களையும், கொடிமரத்தையும் துளைத்து, கருடனைக் கண்டஞ்சிய பாம்புகள் பூமிக்குள் ஊடுருவுவதைப் போலவே வேகமாக அவற்றுக்குள் ஊடுருவின.

மேனியெங்கும் கணைகளால் துளைக்கப்பட்டு, குருதியில் குளித்த அந்த உயர் ஆன்மக் கர்ணன், கோபத்தால் உருளும் கண்களுடன்,(25,26) தன் வில்லின் உறுதியான நாண்கயிற்றை வளைத்து, கடலின் முழக்கத்திற்கு ஒப்பான உரத்த நாணொலியை உண்டாக்கி, பார்க்கவ ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். (அர்ஜுனன் ஏவிய) இந்தரனின் ஆயுதத்துடைய {வஜ்ராயுதத்தின்} வாயிலிருந்து வெளிப்பட்ட பார்த்தனின் கணைமாரிகளை வெட்டி வீழ்த்திய கர்ணன்,(27) தன் ஆயுதத்தால் {பார்க்கவ ஆயுதத்தால்} எதிராளியின் ஆயுதத்தை (வஜ்ராயுதத்தைக்) கலங்கடித்து, (பாண்டவப் படையின்) தேர்களையும், யானைகளையும், காலாட்படை வீரர்களையும் அழித்தான். அந்தக் கடும் மோதலில் அர்ஜுனனின் சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் கர்ணன், பார்க்கவ ஆயுதத்தின் சக்தியால் இதைச் செய்தான்.(28)

கோபத்தால் நிறைந்தவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, இரு கிருஷ்ணர்களையும் {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} கண்டு சிரித்து, அந்தப் போரில் நன்கு ஏவப்பட்ட கணைகளால் பாஞ்சாலத் தேர்வீரர்களில் முதன்மையானோரைத் துளைத்தான்.(29) அப்போது ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் கர்ணனின் கணைமாரியால் பீடிக்கப்பட்டு, கோபத்தால் நிறைந்த பாஞ்சாலர்களும், சோமகர்களும், ஒன்று சேர்ந்தவர்களாக நின்று, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் சூதன் மகனை {கர்ணனைக்} கூரிய கணைகளால் துளைத்தனர்.(30) வேகமாகத் தன் கணைகளால் அவற்றை வெட்டிய சூதன் மகன் {கர்ணன்}, அந்தப் போரில் அவர்களைக் கலங்கடித்து, பாஞ்சாலர்களின் தேர்களையும், யானைகளையும், குதிரைகளையும் பல கணைகளால் பீடித்தான்.(31) கர்ணனின் அந்தக் கணைகளால் தங்கள் மேனி துளைக்கப்பட்ட அவர்கள், பயங்கரப் பலம் கொண்ட கோபக்கார சிங்கமொன்றால் கொல்லப்பட்ட வலிமைமிக்க யானைகளைப் போல, பேரொலிகளைச் செய்தபடியே உயிரையிழந்து கீழே பூமியில் விழுந்தனர்.(32) முதன்மையான போர்வீரர்களும், பெரும் பலம் கொண்ட வீரர்களும், எப்போதும் (போருக்குத்) தன்னை அறைகூவியழைத்தவர்களுமான அந்தப் பாஞ்சாலத் தலைவர்களைக் கொன்ற கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கணைகளை ஏவுகையில், மழைத்தாரைகளைப் பொழியும் மேகத் திரள்களைப் போல அழகாகத் தெரிந்தான்.(33)

அப்போது கர்ணன் வென்றுவிட்டதாக நினைத்த உமது போர்வீரர்கள், உரக்கக் கைத்தட்டியவாறே சிங்க முழக்கங்களை வெளியிட்டனர். ஓ! குருக்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, எதிரிகளால் தாங்கிக் கொள்ளப்பட முடியாததான வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணனின் வீரத்தைக் கண்ட அவர்கள் அனைவரும், கர்ணனின் ஆளுகைக்குள் கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} இருவரும் வந்துவிட்டதாகவே கருதினர். போருக்கு மத்தியில் தனஞ்சயனின் அந்த ஆயுதம், கர்ணனால் கலங்கடிக்கப்பட்டதைக் கண்டவனான,(34,35) காற்று தேவனின் {வாயுத்தேவனின்} கோபக்கார மகன் {பீமன்}, கோபத்தால் சுடர்விட்டெரியும் கண்களுடன் தன் கைகளைப் பிசையத் தொடங்கினான். உண்மையில், கோபம் நிறைந்த அந்தப் பீமன், தன் கோபம் தூண்டப்பட்ட நிலையில், ஆழ்ந்த பெருமூச்சுகளை விட்டபடியே, துல்லிய இலக்கைக் கொண்ட அர்ஜுனனிடம்,(36) “ஓ! ஜிஷ்ணு {அர்ஜுனா}, அறத்திலிருந்து விழுந்தவனான இந்தப் பொல்லாத சூதன் மகன் {கர்ணன்}, போரில் தன் வலிமையை வெளிப்படுத்தி, நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பாஞ்சாலப் போர்வீரர்களில் பலரைக் கொல்வது எவ்வாறு?(37) இதற்கு முன்பு நீ தேவர்களாலோ, காலகேயர்களாலோ வெல்லப்பட முடியாதவனாக இருந்தாய். ஸ்தாணுவுடைய {சிவனுடைய} கரங்களின் தீண்டலை நீ பெற்றிருக்கிறாய். ஓ! கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனா, பிறகு, தேர்வீரர்கள் பயன்படுத்தும் பத்து நீண்ட கணைகளைக் {நாராசங்களைக்} கொண்டு சூதன் மகனால் {கர்ணனால்} உன்னை முதலில் துளைக்க முடிந்தது எவ்வாறு?(38) இன்று அந்தச் சூதன் மகன், உன்னால் ஏவப்பட்ட கணைகளைக் கலங்கடிப்பது எனக்கு மிக ஆச்சரியமானதாகத் தெரிகிறது. கிருஷ்ணையின் {கருப்பியான திரொபதியின்} துன்பங்களையும், இந்தத் தீய ஆன்மா கொண்ட சூதன் மகனால் {கர்ணனால்} “எள்ளுப்பதர்களே” என்று அச்சமில்லாமல் சொல்லப்பட்ட, ஏற்கமுடியாத, கூரிய வார்த்தைகளையும் நினைவுகூர்வாயாக. ஓ! சவ்யசச்சின் {அர்ஜுனா}, இவை யாவற்றையும் நினைவுகூர்ந்து, பொல்லாதவனான கர்ணனை இன்றைய போரில் வேகமாகக் கொல்வாயாக”(39,40) ஓ! கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனா, (இச்செயலில்) நீ இவ்வளவு அலட்சியமாக இருப்பது ஏன்? கர்ணனின் படுகொலையில் உன் அலட்சியத்தைக் காட்ட இது நேரமல்ல. எந்தப் பொறுமையால் உயிரினங்கள் அனைத்தையும் வென்று, காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} அக்னிக்கு உணவூட்டினாயோ,(41) அந்தப் பொறுமையால், இந்தச் சூதன் மகனை {கர்ணனை} நீ கொல்வாயாக. நானும் கூட என் கதாயுதத்தாலேயே இவனை நொறுக்கிவிடுவேன்” என்றான் {பீமன்}.

அப்போது, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, பார்த்தனின் கணைகள் கர்ணனால் கலங்கடிக்கப்படுவதைக் கண்டு, முன்னவனிடம் {அர்ஜுனனிடம்},(42) “ஓ! கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனா, இன்று உன் ஆயுதங்களைக் கர்ணனின் ஆயுதங்களால் நொறுக்க முடிவது எவ்வாறு? ஓ! வீரா, நீ உன் அறிவை இழப்பது {மயங்கமடைவது} ஏன்? கர்ணனுக்குப் பின்னால் நிற்கும் கௌரவர்கள், இப்போது மகிழ்ச்சியுடன் கூச்சலிடுவதை நீ கவனிக்கவில்லையா?(43) உண்மையில், உன் ஆயுதங்கள் அனைத்தும் கர்ணனின் ஆயுதங்களால் கலங்கடிக்கப்பட்டதை அவர்கள் அனைவரும் அறிவார்கள். எந்தப் பொறுமையைக் கொண்டு,  இருள் தன்மையையே தங்கள் ஆயுதமாகக் கொண்ட மனிதர்களையும், பயங்கரமான க்ஷத்திரியர்களையும், செருக்கில் பிறந்த அசுரர்களையும் யுகம் யுகமாகப் பல போர்களில் கொன்றிருக்கிறாயோ, அந்தப் பொறுமையைக் கொண்டு, கர்ணனை இன்று கொல்வாயாக. சக்ரன் {இந்திரன்} தன் எதிரியான நமுசியின் தலையை வஜ்ரத்தால் தாக்கி வீழ்த்தியதைப் போல, உன் வலிமையை வெளிப்படுத்தி, நான் உனக்குத் தரும் கத்தி போன்ற கூர்முனை கொண்ட இந்தச் சுதர்சனத்தால் {சுதர்சனச் சக்கரத்தால்} உன் எதிரியின் தலையைத் தாக்கி வீழ்த்துவாயாக. எந்தப் பொறுமையைக் கொண்டு, வேடன் வடிவில் வந்த சிறப்புமிக்க தெய்வமான மகாதேவனை {சிவனை} நீ நிறைவு செய்தாயோ,(44-46) அந்தப் பொறுமையை மீண்டும் அழைத்து, ஓ! வீரா, சூதன் மகனையும் {கர்ணனையும்}, அவனைப் பின் தொடர்பவர்கள் அனைவரையும் கொல்வாயாக. அதன்பிறகு கடல்களையே கச்சையாகக் கொண்டவளும், நகரங்கள், கிராமங்கள், செல்வங்கள் ஆகியவற்றைக் கொண்டவளுமான பூமாதேவியின் பரப்பில் இருந்து எதிரிகள் அனைவரையும் நீக்கி மன்னர் யுதிஷ்டிரருக்கு அவளை {பூமியை} அளிப்பாயாக. அந்தச் செயலால், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, ஒப்பற்ற புகழையும் நீ வெல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}. இவ்வாறு (கிருஷ்ணனால்) சொல்லப்பட்டவனும், பெரும் வலிமையைக் கொண்டவனுமான அந்த உயர் ஆன்மப் பார்த்தன் {அர்ஜுனன்}, தன் இதயத்தில் சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலையை நிலைநிறுத்தினான்.(47,48)

உண்மையில், பீமனாலும், ஜனார்த்தனனாலும் {கிருஷ்ணனாலும்} தூண்டப்பட்டு, (தன் துன்பங்களை) நினைவுகூர்ந்து, தனக்குள்ளேயே உள் ஆய்வைச் செய்து, இவ்வுலகத்திற்குத் தான் வந்த காரணத்தை மனத்தில் நிறுத்தி, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} அவன்,(49) “நான் இப்போது, உலகத்தின் நன்மைக்காகவும், சூதன் மகனின் அழிவுக்காகவும் வலிமையும், சீற்றமும் கொண்ட ஓர் ஆயுதத்தை இருப்பு அழைக்கப் போகிறேன். உன் அனுமதியும், பிரம்மன் மற்றும் பவனின் அனுமதியும், பிரம்மத்தை அறிந்தோர் அனைவரின் அனுமதியும் அதற்கு வேண்டும்” என்று சொன்னான் {அர்ஜுனன்}.(50) புனிதமான கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, பிரம்மனை வணங்கியவாறு, சிறந்ததும், தடுக்கப்பட முடியாததும், மனத்தால் மட்டுமே பயன்படுத்த கூடியதுமான பிரம்ம ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்தான்.(51) எனினும், அவ்வாயுதத்தைக் {பிரம்மாஸ்திரத்தைக்} கலங்கடித்த கர்ணன், மழைத்தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போலத் தன் கணைகளை ஏவியபடியே தொடர்ந்து அழகானவனாகத் தெரிந்தான். கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் அவ்வாயுதமானது, போருக்கு மத்தியில் கர்ணனால் கலங்கடிக்கப்படுவதைக் கண்டவனும், கோபம் நிறைந்தவனும், வலிமைமிக்கவனுமான பீமன், சினத்தால் சுடர்விட்டெரிந்து, துல்லிய இலக்கைக் கொண்ட அர்ஜுனனிடம், “உயர்ந்த பிரம்ம ஆயுதத்தையும், (எதிரிகளின் அழிவை அடைய) அதைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் திறம்பட அறிந்தவன் என உன்னைக் குறித்து மக்கள் சொல்கின்றனர்.(53) ஓ! சவ்யசச்சின், அதே வகையிலான மற்றொரு ஆயுதத்தைப் பயன்படுத்துவாயாக” என்றான் {பீமன்}.

இவ்வாறு தன் அண்ணனால் {பீமனால்} சொல்லப்பட்ட சவ்யசச்சின் {அர்ஜுனன்}, அதே வகையைச் சேர்ந்த இரண்டாவது ஆயுதத்தைப் பயன்படுத்தினான். அளவிலா சக்தி கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, அதைக் கொண்டு, பாம்புகளுக்கு ஒப்பான சீற்றத்துடன் கூடியவையும், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையும், சூரியனின் சுடர்மிக்கக் கதிர்களைப் போன்றவைகளுமான கணைகளால், முக்கிய மற்றும் துணைத் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் மறைத்தான். அந்தப் பாரதக் குலத்தின் காளையால் உண்டாக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், யுக நெருப்பு, அல்லது சூரியனின் பிரகாசத்துடன் கூடியவையுமான அந்தக் கணைகள்,  கர்ணனின் தேரை ஒரு கணத்தில் மறைத்தன.(54,55) அதிலிருந்து வெளிப்பட்டவையும், பயங்கர வடிவைக் கொண்டவையுமான நூற்றுக்கணக்கான நீண்ட ஈட்டிகள், போர்க்கோடரிகள், சக்கரங்கள், துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்} ஆகியவற்றால் சுற்றியிலும் இருந்த பகைவரின் போர்வீரர்கள் அனைவரும் தங்கள் உயிரை இழக்கத் தொடங்கினர். பகைவரின் போர்வீரனான ஏதோ ஒருவனின் தலை, அவனது உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுக் கீழே போர்க்களத்தில் விழுந்தது.(56,57) விழுந்து கொண்டிருக்கும் தன் தோழனைக் கண்ட மற்றொருவன் அச்சத்தால் பூமியில் இறந்து விழுந்தான். யானை துதிக்கையைப் போன்றதும் பருத்ததுமான மூன்றாமவனின் பெரிய (வலது) கரம், (பார்த்தனால்) வெட்டப்பட்டு, பிடியில் உள்ள வாளுடன் கீழே விழுந்தது.(58) கேடயத்துடன் கூடிய நான்காமவனின் இடக்கரம், கத்தித் தலைக் கணையொன்றால் வெட்டப்பட்டுக் கிழே விழுந்தது. இவ்வாறே, கிரீடம் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, துரியோதனன் படையைச் சார்ந்த முதன்மையான போர்வீரர்கள் அனைவரையும், மரணத்தைத் தரும், தன் பயங்கரமான கணைகளால் காயப்படுத்தவும், கொல்லவும் செய்தான். வைகர்த்தனனும் {கர்ணனும்} அந்தப் போருக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான கணைகளை ஏவினான்.(59,60) இவை, உரத்த விஸ் ஒலியுடன், மேகங்களில் இருந்து பொழியும் மழைத்தாரைகளைப் போலப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது பாய்ந்தன.

அப்போது மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளைச் செய்த பீமசேனன், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, மற்றும் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன் ஆகிய ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்த அந்தப் பயங்கர வலிமையைக் கொண்ட கர்ணன், பயங்கரமான பேரொலியுடன் முழங்கினான். கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், பீமனையும், ஜனார்த்தனனையும் (கிருஷ்ணனையும்} கண்டு,(61,62) (தன் எதிராளியின் சாதனைகளைப்) பொறுத்துக் கொள்ள முடியாதவனானான். எனவே, மீண்டும் அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்}, பதினெட்டு கணைகளை ஏவினான். அந்தக் கணைகளில் ஒன்றால் அவன் கர்ணனின் அழகிய கொடிமரத்தையும், நான்கால் சல்லியனையும், மூன்றால் கர்ணனையும் துளைத்தான்.(63) நன்கு ஏவப்பட்ட மற்ற பத்து கணைகளைக் கொண்டு அவன் {அர்ஜுனன்}, தங்கக் கவசம் பூண்ட, கௌரவப் போர்வீரனான சபாபதியைத் தாக்கினான். இதன்பேரில் அந்த இளவரசன் {சபாபதி}, தன் சிரம் {தலை}, கரங்கள், குதிரைகள், சாரதி, வில் மற்றும் கொடிமரம் ஆகியவற்றை இழந்து,(64) காயமடைந்து, கோடரியால் வெட்டப்பட்ட சாலமரம் ஒன்றைப் போலத் தன் முதன்மையான தேரில் இருந்து இறந்து விழந்தான். மீண்டும் கர்ணை மூன்று, எட்டு, பனிரெண்டு, நான்கு மற்றும் பத்துக் கணைகளால் துளைத்த பார்த்தன்,(65) பல ஆயுதங்களைக் கொண்டு நாறு யானைகளையும், எண்ணூறு தேர்வீரர்களையும், சாரதிகளோடு கூடிய ஓராயிரம் குதிரைகளையும், துணிச்சல்மிக்க எட்டாயிரம் காலாட்படைவீரர்களையும் கொன்றான்.

விரைவில் பார்த்தன் {அர்ஜுனன்}, கர்ணனையும், அவனது சாரதி {சல்லியன்}, தேர், குதிரைகள், கொடி மரம் ஆகியவற்றையும் தன் நேரான கணைகளைக் கொண்டு காட்சியில் இருந்து மறைத்தான் {கண்களுக்குப் புலப்படாதவையாகச் செய்தான்}. இவ்வாறு தனஞ்சயனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட அந்தக் கௌரவர்கள் அப்போது அதிரதன் மகனிடம் {கர்ணனிடம்},(67) “உன் கணைகளை ஏவி, பாண்டு மகனை {அர்ஜுனனைக்} கொல்வாயாக. ஏற்கனவே அவன் தன் கணைகளால் குருக்களை நிர்மூலமாக்கத் தொடங்கிவிட்டான்” என்றனர். இவ்வாறு தூண்டப்பட்ட கர்ணன், தன் சிறந்த முயற்சிகளால், கணைகள் பலவற்றை இடையறாமல் ஏவினான்.(68) முக்கிய அங்கங்களை வெட்ட வல்லவையும், கர்ணனால் நன்கு ஏவப்பட்டவையுமான அந்தக் குருதி குடிக்கும் கணைகள், எண்ணற்ற பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் கொன்றன. இவ்வாறே, வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவர்களும், பெரும் பலம் கொண்டவர்களும், எதிரிகள் அனைவரையும் தாங்கிக் கொள்ளவல்லவர்களும்,(69) ஆயுதங்களை நன்கறிந்தவர்களுமான அவ்வீரர்கள் இருவரும், தங்களை எதிர்த்து வந்த போர்வீரர்களை வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றால் தாக்கினர்.

அப்போது, {தன் உடலில் இருந்து} கணைகள் பிடுக்கப்பட்டவனும், மந்திரங்களாலும், தன்னிடம் நல்ல மனநிலை கொண்ட அறுவைசிகிச்சை நிபுணர்களில் முதன்மையானவர்களால் மருந்தளிக்கப்பட்டும் நலமடைந்தவனும், தங்கக் கவசம் பூண்டவனுமான யுதிஷ்டிரன், (அர்ஜுனனுக்கும், கர்ணனுக்கும் இடையில் நடந்த) அம்மோதலைக் காண்பதற்காக அந்த இடத்திற்கு வேகமாக வந்தான். ராகுவின் கோரப்பற்களுக்கிடையில் இருந்து விடுபட்டதும், ஆகாயத்தில் எழுந்ததுமான பிரகாசமிக்க முழு நிலைவைப் போல அங்கே வந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் கண்ட அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியால் நிறைந்தன. போர்வீரர்களில் முதன்மையானோரும், வீரர்களில் முதல்வர்களும், எதிரிகளைக் கொல்பவர்களுமான கர்ணன் மற்றும் பார்த்தன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் போரில் ஈடுபடுவதைப் பார்வையாளர்களாகக் கண்ட வானவாசிகள் {தேவர்கள்} மற்றும் நிலவாசிகள் {மனிதர்கள்] இருவரும், தாங்கள் செலுத்திய, அல்லது தங்கள் வாகனங்களில் பூட்டப்பட்ட, விலங்குகளை {குதிரைகள் / யானைகளைக்} கட்டுப்படுத்தியவாறு அசைவில்லாமல் நின்றனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்கள் இருவரும், முதன்மையான கணைகள் பலவற்றால் ஒருவரையொருவர் தாக்கியதால், தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் அதிரதன் மகன் {கர்ணன்} ஆகிய இருவரின் விற்கள், வில்லின் நாண்கயிறுகள், உள்ளங்கைகள் ஆகியவற்றில் எழுந்த ஒலிகள் மகத்தானதாகவும், அவர்களால் நன்கு ஏவப்பட்ட கணைகள் உண்டாக்கிய விஸ்ஒலி செவிடாக்குவதாகவும் இருந்தன. அப்போது, அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} பலமாகத் தன் வில்லின் {காண்டீவத்தின்} நாணை இழுத்த போது, அது பேரொலியுடன் அறுந்தது.(70-74)

இவ்வாறு அளிக்கப்பட்ட இடைவேளையில், அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, கூரியவையும், எண்ணெயில் நனைக்கப்பட்டவையும், பறவைகளின் இறகுகளால் சிறகமைந்தவையும், சட்டை உரித்த பாம்புகளுக்கு ஒப்பானவையுமான நூற்றுக்கணக்கான குறுங்கணைகளால் {பிண்டிபாலங்களால்} பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான்.(75) மேலும் அவன் அறுபது கணைகளால் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} எட்டால் பல்குலனனையும் {அர்ஜுனனையும்} துளைத்தான். மேலும் அந்தச் சூரியன் மகன் {கர்ணன்}, ஆயிரமாயிரமான வலிமைமிக்கக் கணைகளால் பீமனைத் துளைத்தான்.(76) கிருஷ்ணனையும், பார்த்தனின் {அர்ஜுனனின்} கொடிமரத்தையும் துளைத்த கர்ணன், பார்த்தனைப் பின்தொடர்ந்து வந்த சோமகர்களுக்கு மத்தியில் பலரை வீழ்த்தினான். எனினும், அவர்களும் பதிலுக்கு, ஆகாயத்தில் சூரியனை மறைக்கும் மேகங்களின் திரள்களைப் போல நேரான கணைமாரியால் கர்ணனை மறைத்தனர்.(77) ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் சாதித்தவனான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, முன்னேறிவரும் அந்தப் போர்வீரர்களைத் தன் கணைகளால் மலைக்கச் செய்து, அவர்களால் ஏவப்பட்ட ஆயுதங்கள் அனைத்தையும் கலங்கடித்து, அவர்களது தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளையும் அழித்தான்.(78)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, அவர்களில் முதன்மையான தேர்வீரர்கள் பலரையும் தன் கணைகளால் பீடித்தான். கர்ணனின் கணைகளால் துளைக்கப்பட்ட அவர்களது உடல்களானவை, உயிரற்றுத் தரையில் விழும்போது பேரொலியை உண்டாக்கின.(79) உண்மையில் பயங்கரப் பலம் கொண்ட கர்ணனால் பீடிக்கப்பட்ட அந்த வலிமைமிக்கப் போராளிகள், கோபக்கார சிங்கத்தால் பீடிக்கப்பட்ட நாய்களின் கூட்டத்தைப் போல அழிந்தன. இதன் பிறகு, பாஞ்சாலர்களுக்கு மத்தியில் உள்ள போராளிகளில் முதன்மையான பலரும், (கௌரவர்களுக்கு மத்தியில் உள்ள) அதே போன்ற பலரும், கர்ணனாலும், தனஞ்சயனாலும் {அர்ஜுனனாலும்} கொல்லப்பட்டுக் கீழே விழுந்தனர்.(80)

வலிமைமிக்கக் கர்ணனால், பெரும்பலத்துடன் நன்கு ஏவப்பட்ட கணைகளால் தங்கள் குடல்களில் உள்ள உள்ளடக்கங்களைக் கழித்து {மலத்தை வெளியேற்றியபடியே} உயிரையிழந்து கீழே விழுந்தனர். அப்போது ஏற்கனவே வெற்றி தங்களுடையதானது எனக் கருதிய உமது {கௌரவ} துருப்பினர், தங்கள் கரங்களை வேகமாகத் தட்டி, உரத்த சிங்க முழக்கங்களைச் செய்தனர்.(81) உண்மையில், அந்தப் பயங்கர மோதலில் கர்ணனின் ஆளுகைக்குள் கிருஷ்ணர்கள் இருவரும் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவே அவர்களில் அனைவரும் கருதினர். பிறகு தன் வில்லின் நாண்கயிற்றை வேகமாக வளைத்து, அந்த அதிரதன் மகனின் {கர்ணனின்} அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்த பார்த்தன்,(82) கர்ணனின் கணைகளால் சிதைக்கப்பட்ட தன் அங்கங்களின் விளைவால் சினத்தால் நிறைந்து, கௌரவர்களைத் தாக்கினான். தன் வில்லின் நாண்கயிற்றை உருவி, தன் உள்ளங்கைகளைத் தட்டி, தன்னால் ஏவப்பட்ட கணைகளின் மாரியால் அங்கே திடீரென இருளை உண்டாக்கினான்.(83) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன், அந்தக் கணைகளால் கர்ணனையும், சல்லியனையும், குருக்கள் அனைவரையும் துளைத்தான். அந்த வலிமைமிக்க ஆயுதத்தின் மூலம் இருண்ட ஆகாயத்தில், பறவைகளால் பறக்க முடியாதபோது நறுமணத்தைச் சுமந்தபடியே இனிய தென்றால் அங்கே வீசத்தொடங்கியது. சிரித்துக் கொண்டே இருந்த பார்த்தன், பத்து கணைகளால் சல்லியனின் கவசத்தைப் பலமாகத் தாக்கினான்.(84) அடுத்ததாகக் கர்ணனைப் பனிரெண்டு கணைகளால் துளைத்த அவன், மேலும் ஏழாலும் அவனைத் துளைத்தான். பார்த்தனின் வில்லில் இருந்து பெரும்பலத்துடன் ஏவப்பட்டவையும், கடும் சக்தியைக் கொண்டவையும், சிறகுகள் படைத்தவையுமான அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட கர்ணன்,(85) சிதைந்த அங்கங்களுடன் குருதியில் குளித்த உடலுடன், அண்ட அழிவின் போது, நடுப்பகலிலோ, மாலையிலோ சுடலைக்கு மத்தியில், குருதியால் நனைந்த தன் உடலுடன் விளையாடும் {கூத்தாடும்} ருத்திரனைப் போலவே பிரகாசமாகத் தெரிந்தான்.(86)

அப்போது அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, தேவர்கள் தலைவனுக்கு (சக்தியிலும், வலிமையிலும்) ஒப்பானவனான தனஞ்சயனை மூன்று கணைகளால் துளைத்து, ஐந்து பாம்புகளுக்கு ஒப்பான சுடர்மிக்க வேறு ஐந்து கணைகளைக் கிருஷ்ணனின் உடலுக்குள் ஊடுருவச் செய்தான்.(87) பெரும்பலத்துடன் ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள், அந்த உயிரினங்களில் முதன்மையானவனின் {கிருஷ்ணனின்} கவசத்தைத் துளைத்து ஊடுருவி, அவனது உடலைக் கடந்து சென்று பூமியில் விழுந்தன. பெரும் சக்தி கொண்ட அவை, பூமிக்குள் நுழைந்து, (பாதாள உலகத்தில் உள்ள போகவதி ஆற்றின் நீரில்) குளித்து மீண்டும் கர்ணனிடமே திரும்பி வந்தன.(88) அந்தக் கணைகள் தக்ஷகனுடைய மகனின் (காண்டவ வனத்தில் பார்த்தனால் தன் அன்னை கொல்லப்பட்டவனான இந்த அஸ்வசேனனின்) தரப்பை ஏற்ற ஐந்து பெரும் பாம்புகளாகும். பெரும்பலத்துடன் ஏவப்பட்ட பத்து அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்}, அந்த ஐந்து பாம்புகள் ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக அர்ஜுனன் வெட்டியதன் பேரில் அவை பூமியில் விழுந்தன.(89) கர்ணனின் கரங்களால் ஏவப்பட்டவையும், கணைகளாக மாறியிருந்தவையுமான அந்தப் பாம்புகளால் இவ்வாறு அங்கங்கள் துளைக்கப்பட்ட கிருஷ்ணனைக் கண்டவனும், கிரீடம் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், உலர்ந்த புற்குவியலை எரிக்கும் நெருப்பைப் போலக் கோபத்தால் சுடர்விட்டெரிந்தான்.(90)

பிறகு அவன், காதுவரை இழுக்கப்பட்ட வில்லின் நாண்கயிற்றில் இருந்து ஏவப்பட்ட சுடர்மிக்க மரணக் கணைகளால், கர்ணனின் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் துளைத்தான். (ஆழமாகத் துளைக்கப்பட்ட) கர்ணன், வலியால் நடுங்கினான். பெருங்கடினத்துடன் தன் பொறுமையனைத்தையும் திரட்டிக்கொண்டே அவன் {கர்ணன்} நின்று கொண்டிருந்தான்.(91) கோபத்தால் நிறைந்த தனஞ்சயன் {அர்ஜுனன்} ஏவிய கணைமாரியால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முக்கிய மற்றும் துணைத் திசைகள் அனைத்தும், சூரியனின் காந்தியும், கர்ணனின் தேரும் கண்ணுக்குப் புலப்படாதவையாக ஆகின. அடர்த்தியான மூடு பனியால் மூடப்பட்டதைப் போல ஆகாயம் தெரிந்தது.(92) பிறகு எதிரிகளைக் கொல்பவனும், குரு குலத்தின் காளையும், வீரர்களில் முதன்மையானவனுமான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள், குதிரைகள், சாரதிகள் ஆகியவற்றுடன் கூடியவர்களும், கர்ணனின் தேர்ச்சக்கரங்களுக்கும், சிறகுகளுக்கும் {பக்கங்களுக்கும்}, முன்புறத்திற்கும், பின்புறத்திற்கும் பாதுகாவலர்களாக இருந்தவர்களும், துரியோதனனின் தேர்ப்படையில் முக்கியமானவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், துரியோதனனால் தூண்டப்பட்டுப் பெரும் சக்தியுடன் போரிட்டுக் கொண்டிருந்தவர்களுமான குரு போர்வீரர்களில் முதன்மையான அந்த இரண்டாயிரம் பேரையும் கொன்றான்.(93-95)

அப்போது, உமது மகன்களும், உயிருடன் எஞ்சியிருந்த கௌரவர்களும் கர்ணனை விட்டுவிட்டும், இறந்து கொண்டிருந்தவர்களும், காயமடைந்தவர்களும், ஓலமிட்டுக் கொண்டிருந்தவர்களுமான தங்கள் மகன்கள் மற்றும் தந்தைமாரைக் கைவிட்டுவிட்டும் தப்பி ஓடினர்.(96) அச்சமடைந்த குருக்களால் கைவிடப்பட்டவனும், தன்னைச் சுற்றியிருந்த வெளி வெறுமையாக இருந்ததைக் கண்டவனுமான கர்ணன், ஓ!பாரதரே {திருதராஷ்டிரரே}, எந்தக் கலக்கத்தையும் அடையாமல், மறுபுறம் உற்சாகம் நிறைந்த இதயத்துடன் அர்ஜுனனை நோக்கி விரைந்தான்” {என்றான் சஞ்சயன்}[2].(97)

கோபத்தால் கண்ணீர் சிந்திய கர்ணன்! – கர்ண பர்வம் பகுதி – 90-அஸ்வசேனன் என்ற பாம்பின் வரலாறு; பாம்புக் கணையை நினைவுகூர்ந்து, அதைத் தன் வில்லின் நாண்கயிற்றில் பொருத்திய கர்ணன்; கிருஷ்ணன் தேரை அழுத்தியது; அர்ஜுனனின் கிரீடம் உடைந்தது; மீண்டும் தன்னை ஏவும்படி கேட்ட அஸ்வசேனனும், மறுத்த கர்ணன்; தானாக அர்ஜுனனைத் தாக்கச் சென்ற அஸ்வசேனனைத் துண்டுகளாக வெட்டிய அர்ஜுனன்; கர்ணனின் தேரை விழுங்கத் தொடங்கிய பூமாதேவி; தனக்கு நேரிடும் பேரிடர்களைக் கண்டு அறத்தைப் பழித்த கர்ணன்; அர்ஜுனனின் நாண்கயிறுகளைப் பதினோரு முறை வெட்டிய கர்ணன்; தன் சக்கரத்தை வெளிக்கொணரும் வரை, தன்னைத் தாக்கிக் கொல்ல வேண்டாம் என்று கோபத்துடனும், கண்ணீருடனும் அர்ஜுனனை வேண்டிய கர்ணன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அர்ஜுனனின் கணைகள் பாய்ந்ததன் விளைவால் தப்பி ஓடிப் பிளந்த கௌரவப் படைப்பிரிவினர், தொலைவில் நின்று கொண்டு, அர்ஜுனனின் ஆயுதம் சக்தியில் பெருகுவதையும், மின்னலின் பிரகாசத்துடன் செல்வதையும் காணத் தொடங்கினர்.(1) எதிரியின் அழிவுக்காக அந்தக் கடும் மோதலில் பெரும் வீரியத்துடன் அர்ஜுனன் ஏவிய ஆயுதம் சென்று கொண்டிருந்தபோதே, அதைக் கர்ணன் தன் பயங்கரக் கணைமாரியால் கலங்கடித்தான்.(2) உண்மையில், சக்தியில் பெருகிய (பார்த்தனின்) அந்த ஆயுதம், குருக்களை எரித்துக் கொண்டிருந்தபோது, சூதன் மகன் {கர்ணன்}, தங்கச் சிறகுகளைக் கொண்ட தன் கணைகளால் அதை நொறுக்கினான். பிறகு, கர்ணன், உறுதியான நாண்கயிற்றைக் கொண்டதும், உரத்த ஒலியெழுப்புவதுமான தன் வில்லை வளைத்துக் கணைமாரிகளைப் பொழிந்தான்.(3) அர்ஜுனனின் அந்த எரியும் ஆயுதத்தை, (பலாபலன்களில்) அதர்வணச் சடங்குக்கு ஒப்பானதும், ராமரிடம் {பரசுராமரிடம்} இருந்து பெற்றதும், பெரும் பலம் வாய்ந்ததும், எதிரியைக் கொல்லவல்லதுமான தன் ஆயுதத்தால் அந்தச் சூதன் மகன் {கர்ணன்} அழித்தான். மேலும் அவன் {கர்ணன்} பார்த்தனையும் {அர்ஜுனனையும்} எண்ணற்ற கூரிய கணைகளால் துளைத்தான்[1].(4)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனுக்கும், அதிரதன் மகனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் நடந்த அந்த மோதலானது மிகப் பயங்கரமான நிலையை அடைந்தது. தந்தங்களால் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் கடுமையான இரு யானைகளைப் போல அவர்கள் தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் தொடர்ந்து தாக்கிக் கொண்டனர்.(5) திசைகளின் புள்ளிகள் அனைத்தும் ஆயுதங்களால் மறைக்கப்பட்டன, சூரியனும் கூடக் கண்ணுக்குப் புலப்படாதவனானான். உண்மையில், கர்ணனும், பார்த்தனும் {அர்ஜுனனும்} தங்கள் கணைகளின் பொழிவால், ஆகாயத்தில் எந்த இடைவெளியும் இல்லாமல், அதைக் கணைகளின் ஒரே பரப்பாக ஆக்கினர்.(6) கௌரவர்கள் மற்றும் சோமகர்கள் அனைவரும், பரந்து விரிந்த ஒரு கணை வலையையே அப்போது கண்டனர். கணைகளால் உண்டாக்கப்பட்ட அந்த அடர்த்தியான இருளில், வேறு எதையும் அவர்களால் பார்க்க முடியவில்லை.(7) ஆயுதங்களில் சாதித்த மனிதர்களில் முதன்மையான அவ்விருவரும், இடையறாமல் குறிபார்த்து, எண்ணற்ற கணைகளை ஏவி, பல்வேறு வகைகளிலான அழகிய செயலாற்று வழிமுறைகளை வெளிப்படுத்தினர்.(8) போரில் அவர்கள் ஒருவரோடொருவர் இவ்வாறு போரிட்டுக் கொண்டிருந்தபோது, ஆற்றல், ஆயுதங்கள் மற்றும் கரநளினம் ஆகியவற்றில், சில வேளைகளில் சூதன் மகன் {கர்ணன்} தன் எதிராளியை விஞ்சி நின்றான், சில வேளைகளில் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்} அவனை விஞ்சிநின்றான்.(9) ஒருவர் தாமதத்தை மற்றவர் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய அந்த வீரர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்றதும், பயங்கரமானதும், அச்சத்தை ஏற்படுத்தவதுமான அந்த ஆயுத வழியை {போரைக்} கண்டு, அந்தப் போர்க்களத்தில் இருந்த பிற போர்வீரர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(10) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்த உயிரினங்கள் கர்ணனையும், அர்ஜுனனையம் பாராட்டினர். உண்மையில் அவர்களில் பலர் ஒரே நேரத்தில், மகிழ்ச்சியால் நிறைந்து, சில நேரங்களில் “ஓ! கர்ணா, மிகச்சிறப்பு” என்றும், சில நேரங்களில் “ஓ! அர்ஜனா, மிகச்சிறப்பு” என்றும் கூச்சலிட்டனர்.(11)

அந்தக் கடும் மோதல் நடக்கையில், தேர்களின் கனமும், குதிரைகள், யானைகள் ஆகியவற்றின் நடையும் பூமியை ஆழமாக அழுத்திய போது, அர்ஜுனனுக்கு எதிரியான அஸ்வசேனன் எனும் பாம்பானவன், பாதாள உலகத்தில் தன் நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான்.(12) காண்டவத்தின் காட்டுத் தீயில் இருந்து தப்பிய அவன், (பாதாள உலகத்திற்குச் செல்வதற்காக) கோபத்தால் பூமியை துளைத்துச் சென்றான். அந்தத் துணிச்சல் மிக்கப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, தன் தாயின் மரணத்தையும், அதன் காரணமாக அர்ஜுனனிடம் தான் கொண்ட பகைமையையும் நினைவு கூர்ந்து, பாதாளலோகத்தில் இருந்து எழுந்து வந்தான். வானத்தில் எழுக்கூடிய சக்தியைக் கொண்ட அவன் {அஸ்வசேனன்}, கர்ணன் மற்றும் அர்ஜுனனுக்கிடையிலான போரைக் காண்பதற்காகப் பெரும் வேகத்துடன் பறந்து சென்றான்.(13) தீய ஆன்மா கொண்ட பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராகத் தான் கொண்ட பகைமையை நிறைவு செய்ய இதுவே நேரம் என்று நினைத்த அவன் {அஸ்வசேனன்}, வேகமாகக் கர்ணனின் அம்பறாத்தூணிக்குள் ஒரு கணையின் வடிவில் புகுந்தான்.(14)

அந்த நேரத்தில், சுற்றிலும் ஒளியைப் பொழிந்த வண்ணம் கணைகளின் வலை ஒன்று அங்கே காணப்பட்டது. கர்ணனும், பார்த்தனும் தங்கள் கணைப் பொழிவால், அடர்த்தியான கணைகளின் ஒரே திரளாக ஆகாயத்தைச் செய்தனர்.(15) பரந்து, விரிந்த அந்தக் கணைகளின் பரப்பைக் கண்ட கௌரவர்கள் மற்றும் சோமகர்கள் அனைவரும் அச்சத்தால் நிறைந்தவர்களாகினர். கணைகளால் உண்டான அடர்த்தியான, பயங்கரமான அந்த இருளில் அவர்கள் வேறு எதையும் பார்க்கமுடியாதவர்களானார்கள்.(16) மனிதர்களில் புலிகளும், உலகின் வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவர்களுமான அந்த வீரர்கள் இருவரும், போரில் தங்கள் முயற்சிகளால் களைப்படைந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(17) இளம் (பனை) இலைகளாலான சிறந்த விசிறிகளால் அவர்கள் இருவரும் வீசப்பட்டனர். ஆகாயத்தில் இருந்த அப்சரஸ்கள் பலரால் நறுமணமிக்கச் சந்தன நீரும் அவர்கள் மேல் தெளிக்கப்பட்டது. சக்ரனும் {இந்திரனும்}, சூரியனும், தங்கள் கரங்களால் அவ்விரு வீரர்களின் முகங்களையும் முழுமையாகத் துடைத்தனர்.(18)

இறுதியாகக் கர்ணன் தன்னால் பார்த்தனை {அர்ஜுனனை} விஞ்ச இயலவில்லை என்பதையும், அவனது {அர்ஜுனனின்} கணைகளால் தான் மிகவும் எரிக்கப்படுவதையும் கண்டபோது, தன் அங்கங்கள் மிகவும் சிதைக்கப்பட்ட அந்த வீரன், தன் அம்பறாத்தூணிக்குள் தனியாகக் கிடக்கும் அந்தக் கணையின் மீது தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(19) எதிரியைக் கொல்லக்கூடியதும், மிகக் கூரியதும், பாம்பின் வாயைக் கொண்டதும், சுடர்மிக்கதும், கடுமையானதுமான அந்தக் கணையை விதிப்படி பளபளப்பாக்கிய அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பார்த்தனின் அழிவுக்காக வெகுகாலமாகத் தன்னிடம் வைத்திருந்த அதைத் தன் வில்லின் நாண்கயிற்றில் பொருத்தினான்.(20) கடுஞ்சக்தி கொண்டதும், சுடர்மிக்கக் காந்தியைக் கொண்டதும், தங்க அம்பறாத்தூணியில் சந்தனத் தூளுக்கு மத்தியில் கிடந்ததும், எப்போதும் தன்னால் வழிபடப்பட்டதுமான அந்தக் கணையைப் பொருத்திய கர்ணன், தன் வில்லின் நாண்கயிற்றைக் காதுவரை இழுத்து, பார்த்தன் மீது அதைக் குறி வைத்தான்.(21) உண்மையில், அந்தப் போரில் பல்குனனின் {அர்ஜுனனின்} தலையை வெட்டுவதற்காகவே, ஐராவதத்தின் குலத்தில் பிறந்த அந்தச் சுடர்மிக்கக் கணையைக் குறி வைத்தான். அப்போது திசைகளின் அனைத்துப் புள்ளிகளும், ஆகாயமும் எரிந்தன, பயங்கர எரிநட்சத்திரங்களும், இடிகளும் விழுந்தன.(22) வில்லின் நாண்கயிற்றில் கணையின் வடிவிலான அந்தப் பாம்பு பொருத்தப்பட்ட போது, சக்ரனுடன் {இந்திரனுடன்} கூடிய லோகபாலர்கள் உரக்க ஓலமிட்டனர். பாம்பான அஸ்வசேனன், யோக சக்திகளின் உதவியால் தன் கணைக்குள் நுழைந்திருப்பதைச் சூதன் மகன் {கர்ணன்} அறியவில்லை.(23)

வைகர்த்தன் {கர்ணன்} அந்தக் கணையைக் குறிபார்ப்பதைக் கண்டவனும், உயர் ஆன்மா கொண்டவனுமான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, “ஓ! கர்ணா, இந்தக் கணை அர்ஜுனனின் தலையை வீழ்த்தாது. கவனமாகத் தேடி, எதிரியின் தலையை வீழ்த்தக்கூடிய மற்றொரு கணையைப் பொருத்துவாயாக” என்றான்[2].(24) பெரும் சுறுசுறுப்புடைய அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, கோபத்தில் எரியும் கண்களுடன், மத்ரர்களின் ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்}, “ஓ! சல்லியரே, கர்ணன் ஒரு போதும் ஒரு கணையை இரு முறை குறிபார்ப்பதில்லை. எங்களைப் போன்ற மனிதர்கள் ஒருபோதும் நேர்மையற்ற போர்வீரர்களாக மாட்டார்கள்” என்றான்.[3](25) இவ்வார்த்தைகளைச் சொன்ன கர்ணன், பல வருடங்களாகத் தான் வழிபட்ட அந்தக் கணையைப் பெருங்கவனத்துடன் ஏவினான். வெற்றியைப் பெற நினைத்த அவன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் எதிராளியிடம் {அர்ஜுனனிடம்} வேகமாக, “ஓ! பல்குனா {அர்ஜுனா}, நீ கொல்லப்பட்டாய்” என்றான்[4].(26) கர்ணனின் கரங்களில் இருந்து ஏவப்பட்டதும், பயங்கரமான விஸ் ஒலியுடன் கூடியதும், நெருப்பு, அல்லது சூரியனுக்கு ஒப்பான காந்தியைக் கொண்டதுமான அந்தக் கணை, வில்லின் நாண்கயிற்றை விட்டகன்றதும், ஒரு பெண்ணின் கூந்தலைப் பிரிக்கும் வகுட்டைப் போல, ஒரு கோட்டால் ஆகாயத்தைப் பிரிப்பது போலத் தெரிந்து, ஆகாயத்தில் சுடர்விட்டெரிந்தது.(27)

ஆகாயத்தில் சுடர்விடும் அந்தக் கணையைக் கண்டவனும், கம்சனைக் கொன்றவனுமான மாதவன் {கிருஷ்ணன்}, பெரும் வேகத்துடன், தன் பாதத்தால் அந்தச் சிறந்த தேரைக் கீழே அழுத்தி, மிக எளிதாக ஒரு முழம்[5] ஆழத்திற்கு அதை {அந்தத் தேரை} {பூமியில்} மூழ்கச் செய்தான்.(28) இதனால், சந்திரனின் கதிர்களைப் போல வெண்மையானவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகள், தங்கள் முட்டிகளை மடக்கித் தங்களைத் தரையில் கிடத்திக் கொண்டன {தரையில் விழுந்தன}. உண்மையில் கர்ணனால் குறிபார்க்க்கப்பட்ட (கணையின் வடிவில் இருந்த) அந்தப் பாம்பைக் கண்டவனும், வலிமையுடன் கூடிய மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான மாதவன் {கிருஷ்ணன்}, தன் பலத்தைச் செலுத்தி இவ்வாறு தன் பாதத்தால் அந்தத் தேரைப் பூமிக்குள் அழுத்தியதால், (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) அந்தக் குதிரைகள், தங்கள் முட்டிகளை மடக்கி, அந்தத் தேர் மூழ்கிய அந்தப் பூமியில் தங்களைக் கிடத்திக் கொண்டன[6].(29,30) அப்போது ஆகாயத்தில் வாசுதேவனை {கிருஷ்ணனைப்} புகழ்ந்து பேரொலிகள் எழுந்தன. பல தெய்வீகக் குரல்கள் கேட்கப்பட்டன, கிருஷ்ணன் மீது தெய்வீக மலர்கள் பொழிந்தன, சிங்க முழக்கங்களும் செய்யயப்பட்டன. மதுசூதனின் {கிருஷ்ணனின்} முயற்சியால் இவ்வாறு அந்தத் தேரானது பூமிக்குள் அழுத்தப்பட்ட போது,(31) பெருங்கவனத்துடனும், கோபத்துடனும் ஏவப்பட்ட அந்தப் பாம்பாயுதத்தின் இயல்பின் விளைவால், சூதன் மகன் {கர்ணன்} அந்தக் கணையைக் கொண்டு உலகம், ஆகாயம், சொர்க்கம், நீர்நிலைகள் போன்ற அனைத்திலும் கொண்டாடப்பட்ட ஆபரணமும், தன் எதிராளியான அர்ஜுனனின் தலையில் இருந்ததுமான அந்த அற்புத மகுடத்தை வீழ்த்தினான்.(32)அந்தக் கிரீடமானது, சூரியன், அல்லது சந்திரன், அல்லது நெருப்பு, அல்லது ஒரு கோளின் காந்தியைக் கொண்டதும், தங்கம், முத்துகள், ரத்தினங்கள், வைரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதும், புரந்தனுக்காகப் பலமிக்கத் தான்தோன்றியாலேயே {பிரம்மனாலேயே} பெருங்கவனத்துடன் செய்யப்பட்டதுமாகும்.(33) விலைமதிப்புமிக்கத் தோற்றத்தைக் கொண்டதும், எதிரிகளின் இதயங்களை அச்சங்கொள்ளச் செய்வதும், அதை அணிபவனுக்கு மகிழ்ச்சியை அளிப்பதும், நறுமணத்தைப் பொழிவதுமான அந்த ஆபரணமானது {கிரீடமானது}, தேவர்களின் எதிரிகளைக் கொல்ல பார்த்தன் சென்ற போது, தேவர்களின் தலைவனாலேயே {இந்திரனாலேயே} மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனுக்கு {அர்ஜுனனுக்குக்} கொடுக்கப்பட்டதாகும்.(34) அந்தக் கிரீடமானது, ருத்ரன், நீர்நிலைகளின் தலைவன் {வருணன்}, சக்ரன் {இந்திரன்} மற்றும் குபேரன் ஆகியோராலும், பிநாகை, பாசம் {சுருக்குக் கயிறு}, வஜ்ரம் மற்றும் முதன்மையான கணைகளைக் கொண்டும் நொறுக்கப்பட முடியாததாக இருந்தது. தேவர்களில் முதன்மையானோராலேயே அது பொறுத்துக் கொள்ளப்பட முடியாததாக இருந்தது.(35) பெரும் சுறுசுறுப்பு கொண்டவனும், தீய இயல்பைக் கொண்டவனும், போலி நோன்புகளைக் கொண்டவனுமான அந்தப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, தங்கத்தாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கிரீடத்தின் மீது பாய்ந்து, அர்ஜுனன் தலையிலிருந்து அதை அகற்றிவிட்டான்.(36)

அந்தப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனின் தலையில் இருந்து பலவந்தமாக அஃதை அகற்றி, மலர்களுடன் கூடிய உயர்ந்த, அழகிய மரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு மலைச்சிகரத்தைப் பிளக்கும் வஜ்ரத்தைப் போலப் பல ரத்தினங்களைக் கொண்டதும், அழகால் சுடர்விட்டதும், நன்கு வடிவமைக்கப்பட்டதுமான அந்த ஆபரணத்தைத் துண்டுகளாகக் குறைத்தான்.(37) அந்தச் சிறந்த ஆயுதத்தால் நொறுக்கப்பட்டதும், காந்தியுடன் கூடியதும், (பாம்பின்) நஞ்செனும் நெருப்பால் சுடர்விட்டதும், அழகு நிறைந்ததும், பார்த்தனால் மிகவும் விரும்பப்பட்டதுமான அந்தக் கீரடம், சூரியனின் சுடர்மிக்க வட்டில் அஸ்தமலைகளில் வீழ்வதைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(38) உண்மையில், அந்தப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, அரும்பும் இலைகள் மற்றும் மலர்களுடனும் கூடிய உயர்ந்த மரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அழகிய மலைச் சிகரத்தை வீழ்த்தும் இந்திரனின் வஜ்ரத்தைப் போல, பல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், அர்ஜுனனின் தலையில் இருந்ததுமான அந்தக் கிரீடத்தைப் பலவந்தமாக அகற்றினான்.(39) புயலால் கலங்கடிக்கப்படும்போது பூமி, ஆகாயம், சொர்க்கம், நீர்நிலைகள் ஆகியவை உரக்க முழங்குவதைப் போலவே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த நேரத்தில் உலகங்கள் அனைத்திலும் முழக்கம் எழுந்தது. அந்த மகத்தான ஒலியைக் கேட்ட மக்கள், அமைதியாக இருக்கும் திறனை இழந்து, மிகவும் கலங்கிப் போய் நின்றபடியே சுழன்றனர்.(40)

கரிய நிறம் கொண்டவனும், இளமை நிறைந்தவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, அந்தக் கிரீடம் இல்லாதவனாக, உயர்ந்த சிகரத்தைக் கொண்ட ஒரு நீல மலையைப் போல அழகாகத் தெரிந்தான். அப்போது தன் குழல்களை {கேசத்தை} வெண்துணியால் கட்டிக் கொண்ட அர்ஜுனன், முற்றிலும் அசைவற்றவனாக நின்றான். தலையில் வெள்ளைத் தலைப்பாகையுடன் கூடிய அவன், சூரியக் கதிர்களால் ஒளியூட்டப்பட்ட உதய மலையைப் போலத் தெரிந்தான்.(41) இவ்வாறு, (காண்டவத்தில் அர்ஜுனனால் கொல்லப்பட்ட) சிறந்த வாயைக் கொண்ட அந்தப் பெண்பாம்பானவள், பெரும் சக்தியும், வலிமையும் கொண்ட அந்த அர்ஜுனன், குதிரைகளின் கடிவாளங்களின் அளவு உயரத்தில் தன் தலையைக் கொண்டிருப்பதைக் கண்டு, நன்கு வடிவமைக்கப்பட்டதும், (முன்பொரு காலத்தில்) அதிதியின் மகனுக்கு {இந்திரனுக்குச்} சொந்தமானதும், சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதுமான அந்தக் கிரீடத்தை மட்டும், சூரியனின் மகனால் {கர்ணனால்} ஏவப்பட்ட கணையின் வடிவிலான தன் மகனின் {அஸ்வசேனன்} மூலமாக அகற்றினாள். ஆனால் அர்ஜுனனும் (பின் வரும் தொடர்விளைவில் தோன்றப் போவதைப் போல), அந்தப் பாம்பை யமனின் சக்திக்கு அடிபணியச் செய்யாமல் போரை விட்டுத் திரும்பவில்லை[7].(42) கர்ணனின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட நெருப்பு, அல்லது சூரியனின் பிரகாசத்திற்கு ஒப்பான விலைமதிப்புமிக்கக் கணையானவனும், முன்பே அர்ஜுனனின் மிக முக்கிய எதிரியானவனுமான அந்த வலிமைமிக்கப் பாம்பானவன் {அஸ்வசேனன்}, இவ்வாறு பின்னவனின் {அர்ஜுனனின்} கிரீடத்தை நொறுக்கிச் சென்றான்.(43)தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், அர்ஜுனனின் தலையில் இருந்ததுமான அந்தக் கிரீடத்தை எரித்த அவன் {அஸ்வசேனன்}, மீண்டும் பெரும் வேகத்தோடு அர்ஜுனனிடம் செல்ல விரும்பினான். எனினும், (அவனைக் கண்டவனும், ஆனால் அவனை அறியதவனுமான) கர்ணனால் கேட்கப்பட்ட அவன் {அஸ்வசேனன்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(44) “ஓ! கர்ணா, என்னைப் பாராமலேயே நீ என்னை ஏவினாய். இதன் காரணமாகவே என்னால் அர்ஜுனனின் தலையை வீழ்த்த முடியவில்லை. என்னை நன்றாகப் பார்த்த பிறகு, மீண்டும் என்னை வேகமாக ஏவுவாயாக. அப்போது, உன் எதிரியும், என் எதிரியுமான அவனை {அர்ஜுனனை} நான் கொல்வேன்” என்றான்.(45) இவ்வாறு அந்தப் போரில் அவனால் சொல்லப்பட்ட சூதன் மகன் {கர்ணன்}, “பயங்கர வடிவைக் கொண்ட நீ யார்?” என்று கேட்டான். அதற்கு அந்தப் பாம்பானவன் {அஸ்வசேனன் கர்ணனிடம்}, “பார்த்தனால் {அர்ஜுனால்} தீங்கிழைக்கப்பட்ட ஒருவனாக என்னை நீ அறிந்து கொள்வாயாக. என் அன்னையைக் கொன்றதால், நான் அவனிடம் பகை கொண்டேன்.(46) வஜ்ரதாரியே {இந்திரனே} பார்த்தனைக் காத்தாலும்கூட, பின்னவன் {அர்ஜுனன்} பித்ருக்களின் மன்னனுடைய {யமனுடைய} ஆட்சிப்பகுதிக்குச் சென்றே ஆக வேண்டும். என்னை அலட்சியம் செய்யாதே. நான் சொல்வதைச் செய். நான் உன் எதிரியைக் கொல்வேன். தாமதமில்லாமல் என்னை ஏவுவாயாக” என்றான் {அஸ்வசேனன்}.(47)

அவ்வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் {அஸ்வசேனனிடம்}, “ஓ! பாம்பே {அஸ்வசேனா}, அடுத்தவனின் வலிமையை நம்பி போரில் வெற்றி பெற எப்போதும் கர்ணன் விரும்பியதில்லை. நூறு அர்ஜுனர்களை நான் கொல்ல வேண்டியிருந்தாலும், ஓ! பாம்பே, ஒரே கணையை இருமுறை நான் ஏவமாட்டேன்” என்றான்.(48) போருக்கு மத்தியில் மீண்டும் அவனிடம் பேசியவனும், மனிதர்களில் சிறந்தவனுமான அந்தச் சூரியன் மகன் கர்ணன், “பிற பாம்பாயுதங்களுடைய இயல்பின் துணையைக் கொண்டும், உறுதியான முயற்சி மற்றும் கோபத்தைக் கொண்டும் நான் பார்த்தனைக் {அர்ஜுனனைக்} கொல்வேன். நீ மகிழ்வடைந்து, வேறெங்கும் செல்வாயாக” என்றான் {கர்ணன்}.(49) அந்தப் போரில் கர்ணனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பாம்புகளின் இளவரசன் {அஸ்வசேனன்}, சினத்தால் அவ்வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு கணையின் வடிவையேற்று தானே பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்லச் சென்றான். பயங்கர வடிவைக் கொண்ட அவன் {அஸ்வசேனன்}, ஆவலுடன் காத்த விருப்பமானது தன் எதிரியினை அழிப்பதே ஆகும்.(50)

அப்போது கிருஷ்ணன் அம்மோதலில் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “உன்னிடம் பகை கொண்ட அந்தப் பெரும்பாம்பைக் கொல்வாயாக” என்றான். மதுசூதனனால் {கிருஷ்ணனால்} இவ்வாறு சொல்லப்பட்டவனும், எதிரிகளுக்கு எப்போதும் கடுமையான வில்லாளியுமான அந்தக் காண்டீவதாரி {அர்ஜுனன்}, அவனைக் குறித்து {கிருஷ்ணனிடம்} விசாரிக்கும் வகையில், “உண்மையில், கருடனின் வாயில் நேராகச் சென்று விழுவதைப் போல, என்னை எதிர்த்துத் தானே முன்னேறி வரும் அந்தப் பாம்பானவன் யார்?” என்று கேட்டான்.(51) அதற்குக் கிருஷ்ணன், “வில்தரித்து, காண்டவ வனத்தில் அக்னி தேவனை நிறைவு செய்வதில் நீ ஈடுபட்டிருந்த போது, இந்தப் பாம்பானவன், தன் தாயின் உடலுக்குள் பதுங்கி வானத்தில் இருந்தான், வானத்தில் இருப்பது ஒரே பாம்பு என்று நினைத்து நீ அந்தத் தாயைக் கொன்றாய்.(52) உன்னால் செய்யப்பட்ட அந்தப் பகைச்செயலை நினைத்துப் பார்த்தே, இன்று உன் அழிவுக்காக உன்னை நோக்கி இவன் வருகிறான். ஓ! எதிரிகளைத் தடுப்பவனே, சுடர்மிக்க எரிநட்சத்திரம் ஒன்று வானத்தில் இருந்து விழுவதைப் போல வரும் அவனைப் பார்ப்பாயாக” என்றான்.”(53)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது சினத்தால் முகம் மாறிய ஜிஷ்ணு {அர்ஜுனன்}, சாய்வான திசையில் ஆகாயத்தில் இருந்து தன்னை நோக்கி வந்த அந்தப் பாம்பை ஆறு கூரிய கணைகளைக் கொண்டு வெட்டினான். இவ்வாறு உடல் வெட்டப்பட்ட அவன் {அஸ்வசேனன்} பூமியில் விழுந்தான்.(54) அர்ஜுனனால் அந்தப் பாம்பானவன் வெட்டப்பட்ட பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பருத்த கரங்களைக் கொண்டவனும், உயிரினங்களில் முதன்மையானவனுமான தலைவன் கேசவன் {கிருஷ்ணன்}, பூமியில் இருந்து அந்தத் தேரைத் தன் கரங்களைக் கொண்டு உயர்த்தினான்.(55) அந்நேரத்தில், தனஞ்சயனைச் சாய்வாகப் பார்த்த கர்ணன், கல்லில் கூராக்கப்பட்டவையும், மயிலின் இறகுகளைக் கொண்டவையுமான பத்து கணைகளால், மனிதர்களில் முதன்மையான அந்தக் கிருஷ்ணனைத் துளைத்தான்.(56) அப்போது தனஞ்சயன், பன்றியின் காதுகளைப் போன்ற தலையைக் கொண்டவையும், நன்கு ஏவப்பட்டவையுமான பனிரெண்டு கூரிய கணைகளால் {வராஹகர்ணங்களால்} கர்ணனைத் துளைத்து, தன் வில்லின் நாண்கயிற்றைத் தன் காது வரை இழுத்து, கடும் நஞ்சுமிக்கப் பாம்பின் சக்தியைக் கொண்டவொரு துணிக்கோல் கணையையும் {நாராசத்தையும்} ஏவினான்.(57) அர்ஜுனனால் நன்கு ஏவப்பட்ட அந்த முதன்மையான கணை, கர்ணனின் கவசத்தை ஊடுருவிச் சென்று, அவனது உயிர் மூச்சை நிறுத்திவிடுவதைப் போல, அவனது குருதியைக் குடித்து, ஊனீரால் தன் சிறகுகள் நனைந்து, பூமிக்குள் நுழைந்தது.(58)

பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட விருஷன் {கர்ணன்}, தடியால் அடிக்கப்பட்ட பாம்பொன்றைப் போல அந்தக் கணையால் தாக்கப்பட்டதால் சினமடைந்து, நஞ்சைக் கக்கும் கடும் நஞ்சுமிக்கப் பாம்பைப் போன்ற வலிமைமிக்கக் கணைகள் பலவற்றை ஏவினான்.(59) அவன் {கர்ணன்}, ஜனார்த்தனனை {கிருஷ்ணனைப்} பனிரெண்டு கணைகளாலும், அர்ஜுனனை தொண்ணூற்றொன்பது கணைகளாலும் துளைத்தான். ஒரு பயங்கரக் கணையால் மீண்டும் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} துளைத்த கர்ணன், சிரித்துக் கொண்டே பெருமுழக்கம் செய்தான்.(60) எனினும், அந்தப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} தன் எதிரியின் மகிழ்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனித உடலின் முக்கியப் பகுதிகள் அனைத்தையும் அறிந்தவனும், இந்திரனின் ஆற்றலைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்}, பெரும் சக்தி கொண்ட பலனைத் தாக்கிய இந்திரனைப் போல நூற்றுக்கணக்கான கணைகளால் அவனது முக்கிய அங்கங்களைத் துளைத்தான்.(61) பிறகு அர்ஜுனன், காலதண்டத்திற்கு ஒப்பான தொண்ணூறு கணைகளைக் கர்ணன் மீது ஏவினான். அக்கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட கர்ணன், இடியால் பிளக்கப்பட்ட மலையைப் போல நடுங்கினான்.(62) விலைமதிப்புமிக்க ரத்தினங்கள், விலைமதிக்க முடியாத வைரங்கள், பசும்பொன் {தூய தங்கம்} ஆகிவற்றால் அலங்கரிக்கப்பட்ட கர்ணனின் தலைக்கவசம், அவனது காதுகுண்டலங்கள் ஆகியவையும் கூட, சிறகு படைத்த கணைகளைக் கொண்டு அர்ஜுனனால் பூமியில் வீழ்த்தப்பட்டன.(63) விலைமதிப்புமிக்கதும், பிரகாசமானதும், நெடுங்காலத்திற்கு முதன்மையான கலைஞர்கள் பலரால், பெருங்கவனத்துடன் வடிவமைக்கப்பட்டதுமான சூதன் மகனின் {கர்ணனின்} கவசத்தையும் கூட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஒரு கணத்தில் பல துண்டுகளாக வெட்டி வீழ்த்தினான்.(64)

இவ்வாறு அவனைக் {கர்ணனைக்} கவசமற்றவனாக்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, சினத்துடன், பெரும் சக்தி கொண்ட கூரிய கணைகள் நான்கால் கர்ணனைத் துளைத்தான். தன் எதிரியால் பலமாகத் தாக்கப்பட்ட கர்ணன், பித்தம், சளி, வாயு மற்றும் காய்ச்சல் ஆகியவற்றால் பீடிக்கப்பட்ட ஒரு நோயாளியைப் போல, பெரும் வலியால் துன்புற்றான்.(65) பெரும் வேகம் கொண்ட அர்ஜுனன், எண்ணற்றவையும், சிறந்தவையும், பெரும் கூர்மை கொண்டவையும், பெரும் பலம், வேகம் மற்றும் கவனத்துடன் வட்டமாக வளைக்கப்பட்ட வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான கணைகளால் மீண்டும் அவனது முக்கிய அங்கங்களைத் துளைத்தான்.(66) கூர்முனையையும், கடும் சக்தியையும் கொண்ட அந்தப் பல்வேறு கணைகளைக் கொண்டு பார்த்தனால் ஆழத் துளைக்கப்பட்ட கர்ணன், தன் சாரலில் செந்நீர் ஓடைகள் பாயும் ஒரு செஞ்சுண்ண மலையைப் போல (குருதியால் மறைக்கப்பட்டு) மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.(67) மீண்டும் அர்ஜுனன், நேராகச் செல்பவையும், முழுக்க இரும்பாலானவையும், பலமானவையும், தங்கச் சிறகுகளுடன் கூடியவையும், அந்தகனின் நெருப்புதண்டத்துக்கு ஒப்பானவையுமான கணைகளால், கிரௌஞ்ச மலைகளைத் துளைக்கும் அக்னியின் மகனைப்[8] போல அந்தக் கர்ணனை நடுமார்பில் துளைத்தான்.(68) பிறகு சூதன் மகன் {கர்ணன்}, சக்ரனின் {இந்திரனின்} வில்லுக்கு ஒப்பான தன் வில்லையும், அம்பறாத்தூணியையும் எறிந்து விட்டு, பெரும் வலியை உணர்ந்து, சுழன்று, தன் பிடி தளர்ந்து, பெரும் வேதனையை அடைந்து, செயலற்றவனாக மலைத்து நின்றான்[9].(69)ஆண்மையின் கடமையை {ஆண்மை விரதத்தை} நோற்பவனான அறம்சார்ந்த அர்ஜுனன், அத்தகு துயரத்தில் வீழ்ந்த தன் எதிரியைக் கொல்ல விரும்பவில்லை. அப்போது இந்திரனின் தம்பி {கிருஷ்ணன்}, பெரும்பரபரப்புடன், அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, ஏன் மறதி நிறைந்தவனாக இருக்கிறாய்?(70) உண்மையில் விவேகம் கொண்டோர், தங்கள் எதிரிகள் பலவீனமாக இருந்தாலும், ஒரு போதும் அவர்களை விடமாட்டார்கள். கற்றறிந்தவனான ஒருவன், துயரில் விழுந்த எதிரிகளைக் கொல்வதால் தகுதி {புண்ணியம்} மற்றும் புகழ் ஆகிய இரண்டையும் ஈட்டுகிறான்.(71) காலத்தை இழக்காமல், எப்போதும் உன்னிடம் பகை கொண்டவனும், வீரர்களில் முதன்மையானவனுமான கர்ணனை வேகமாக நொறுக்குவாயாக. சூதன் மகன் {கர்ணன்} இயன்றவனானதும் {எழுந்ததும்}, முன்பைப் போலவே உன்னை எதிர்த்து விரைவான். எனவே, அசுரன் நமுசியைக் கொன்ற இந்திரனைப் போல நீ அவனைக் கொல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(72) “ஓ! கிருஷ்ணா, அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி ஜனார்த்தனனை வழிபட்டவனும், குருகுலத்தின் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அர்ஜுனன், அசுரன் சம்பரனைத் துளைத்த சொர்க்கத்தின் ஆட்சியாளனை {இந்திரனைப்} போல, சிறந்த கணைகள் பலவற்றால் மீண்டும் கர்ணனை வேகமாகத் துளைத்தான்.(73) கிரீடத்தில் அலங்கரிக்கப்படும் பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கன்றின் பல் போன்ற தலைகளைக் கொண்ட கணைகள் {வத்ஸதந்தங்கள்} பலவற்றால் கர்ணனையும், அவனது தேர் மற்றும் குதிரைகளையும் மறைத்து, தன் வீரத்தை வெளிப்படுத்தி, தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் மறைத்தான்.(74)

கன்றின் பல் போன்ற தலைகளைக் கொண்ட அந்தக் கணைகளால் {வத்ஸதந்தங்களால்} துளைக்கப்பட்டவனும், அகன்ற மார்பைக் கொண்டவனுமான அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, மலர்கள் நிறைந்த அசோகம், பலாசம், சால்மலி {முள்ளிலவு} மரங்களைப் போலவோ, சந்தன மரக் காடுகளை அதிகம் கொண்ட ஒரு மலையைப் போலவோ பிரகாசமாகத் தெரிந்தான்.(75) உண்மையில், தன் உடலில் தைத்திருந்த அந்த எண்ணற்றக் கணைகளுடன் கூடிய கர்ணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மரங்கள் நிறைந்த உச்சிகளையும், தாழ்வரைகளையும் கொண்ட மலைகளின் இளவரசனைப் போலவோ, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கர்ணிகார மரங்களைப் போல அந்தப் போரில் பிரகாசமாகத் தெரிந்தான்.(76) கணைமாரிகளைத் திரும்பத் திரும்ப ஏவியவனும், அந்தக் கணைகளையே தன் கதிர்களாகக் கொண்டவனுமான கர்ணன், அஸ்த மலைகளை நோக்கி, பிரகாசமான வட்டிலுடனும், சிவந்த கதிர்களுடனும் செல்லும் சூரியனைப் போலத் தெரிந்தான்.(77) எனினும், அர்ஜுனன் கரங்களில் இருந்து ஏவப்பட்ட கூர்முனைக் கணைகள், அதிரதன் மகனின் {கர்ணனின்} கரங்களால் ஏவப்பட்டவையும், வலிமைமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான சுடர்மிக்கக் கணைகளுடன் ஆகாயத்தில் மோதி, அவை அனைத்தையும் அழித்தன.(78) பொறுமை மீண்டவனும், கோபக்கார பாம்புகளுக்கு ஒப்பான கணைகள் பலவற்றை ஏவியவனுமான கர்ணன், கோபக்காரப் பாம்புகளைப் போலத் தெரிந்த பத்து கணைகளால் பார்த்தனையும், அவ்வாறே தெரிந்த ஆறு கணைகளால் கிருஷ்ணனையும் துளைத்தான்.(79)

அப்போது தனஞ்சயன் {அர்ஜுனன்}, வலிமைமிக்கதும், முழுக்க இரும்பாலானதும், பாம்பின் நஞ்சுக்கோ, நெருப்பின் சக்திக்கோ ஒப்பானதும், இந்திரனின் இடிமுழக்கத்திற்கு ஒப்பான விஸ் ஒலியைக் கொண்டதும், உயர்ந்த (தெய்வீக) ஆயுதத்தின் சக்தியால் ஈர்க்கப்பட்டதுமான பயங்கரக் கணை ஒன்றை ஏவ விரும்பினான்.(80) அந்நேரத்தில், கர்ணனின் மரணத்திற்கான அந்த நேரம் வந்த போது, கண்ணுக்குப்புலப்படாதவனாக {கர்ணனை} அணுகிய காலன், பிராமணனின் சாபத்தை[10] மறைமுகமாகச் சுட்டிக் காட்டும் வகையில், அவனது மரணம் நெருங்கிவிட்டது என்று கர்ணனுக்குத் தெரிவிக்க விரும்பி, அவனிடம் {கர்ணனிடம்}, “பூமாதேவி உன் சக்கரத்தை விழுங்குகிறாள்” என்றான்.(81) உண்மையில், கர்ணனின் மரணத்திற்கான நேரம் வந்தபோது, சிறப்புமிக்கப் பார்க்கவர் {பரசுராமர்} அவனுக்கு அளித்த உயர்ந்த பிரம்ம ஆயுதம் அவனது நினைவில் இருந்து தப்பியது. பூமியும் அவனுடைய தேரின் இடது சக்கரத்தை விழுங்கத் தொடங்கியது.(82) அந்த முதன்மையான பிராமணனின் சாபத்தின் விளைவால், பூமியில் ஆழமாக மூழ்கிய கர்ணனின் தேரானது சுழலத் தொடங்கி, மேட்டுப்பகுதியில் மலர்களின் கனத்துடன் நிற்கும் புனிதமான மரம் ஒன்றைப் போல அந்த இடத்திலேயே நிலைத்து நின்றது[11].(83)

பிராமணனின் சாபத்தால் அவனது தேர் சுழலத் தொடங்கி, ராமரிடம் {பரசுராமரிடம்} பெற்ற அந்த உயர்ந்த ஆயுதமும், உள்ளொளியால் தன்னிடம் ஒளிராமல், பாம்பு வாய்க் கொண்ட அவனது பயங்கரக் கணையும் பார்த்தனால் வெட்டப்பட்ட போது, கர்ணன் கவலையால் நிறைந்தான்.(84) அந்த இடர்கள் அனைத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத அவன் {கர்ணன்}, தன் கரங்களை அசைத்தபடியே {உதறியபடியே} அறம் குறித்துப் பழிக்கத் தொடங்கி, “அறமானது நேர்மையாளர்களை {அறவோரைக்} காக்கும் என்று அறமறிந்தோர் எப்போதும் சொல்கின்றனர்.(85) நம்மைப் பொறுத்தவரை, நம்மால் இயன்றதிலும், அறிவிலும் சிறந்த அளவுக்கு அறம் பயிலவே எப்போதும் முயல்கிறோம். எனினும், இப்போதோ அறமானது, தனக்கு அர்ப்பணிப்புள்ள நம்மைக் காக்காமல் அழித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அறமானது எப்போதும் தன்னை வழிபடுபவர்களைக் காக்காது என்றே நான் நினைக்கிறேன்” என்றான்.(86) இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவன் அர்ஜுனனுடைய கணைகளால் தாக்குதலால் மிகவும் கலக்கமடைந்தான். அவனது குதிரைகளும், அவனது சாரதியும் {சல்லியனும்}, தங்கள் வழக்கமான நிலைகளை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். தன் முக்கிய அங்கங்கள் தாக்கப்பட்டுக் கருத்தில்லாதவனாக {தளர்ச்சியடைந்து} இருந்த அவன் {கர்ணன்}, அந்தப் போரில் மீண்டும் மீண்டும் அறத்தை {தர்மத்தைப்} பழித்தான்.(87) பிறகு அவன், கிருஷ்ணனின் கரங்களை மூன்று கணைகளாலும், பார்த்தனை ஏழாலும் துளைத்தான்.(88)

அப்போது அர்ஜுனன், முற்றிலும் நேரானவையும், கடும் மூர்க்கம் கொண்டவையும், நெருப்பின் காந்திக்கு ஒப்பானவையும், சக்தியில் இந்திரனின் வஜ்ரத்தைப் போன்றவையுமான பயங்கரமான பதினேழு கணைகளை ஏவினான்.(89) அச்சந்தரத்தக்க மூர்க்கம் கொண்ட அந்தக் கணைகள் கர்ணனைத் துளைத்து, அவனது உடலைக் கடந்து சென்று பூமியின் பரப்பில் விழுந்தன. அதிர்ச்சியில் நடுங்கிய கர்ணன், கிட்டத்தட்ட தன் முழுச் சுறுசுறுப்பையும் அப்போது வெளிப்படுத்தினான்.(90) ஒரு பலமிக்க முயற்சியால் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அவன் {கர்ணன்}, பிரம்ம ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான்[12]. பிரம்மாயுதத்தைக் கண்ட அர்ஜுனன், ஐந்திர ஆயுதத்தை உரிய மந்திரங்களுடன் இருப்புக்கு அழைத்தான்.(91) காண்டீவத்தையும், அதன் நாண்கயிற்றையும், தன் கணைகளையும் மந்திரங்களால் ஈர்த்த அந்த எதிரிகளை எரிப்பவன், மழைத்தாரைகளைப் பொழியும் புரந்தரனை {இந்திரனைப்} போலக் கணை மாரியை ஏவினான்.(92) பெரும் சக்தியும், பலமும் கொண்ட அந்த ஆயுதங்கள், பார்த்தனின் தேரில் இருந்து வெளிப்பட்டு, கர்ணனின் வாகனத்தருகே கண்களுக்குக் காணப்பட்டன. வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், தன் முன்பு தெரிந்த அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தான்.(93)

இவ்வாறு அந்த ஆயுதம் அழிக்கப்பட்டதைக் கண்ட விருஷ்ணி வீரன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம், “ஓ! பார்த்தா, உயர்ந்த ஆயுதங்களை ஏவுவாயாக. ராதையின் மகன் உன் கணைகளைக் கலங்கடிக்கிறான்” என்றான்.(94) அர்ஜுனன், உரிய மந்திரங்களுடன், பிரம்ம ஆயுதத்தைத் தன் வில்லின் நாண்கயிற்றில் பொருத்தினான். கணைகளால் திசைகளின் புள்ளிகள் அனைத்தையும் மறைத்த பார்த்தன், (இன்னும் பல) கணைகளால் கர்ணனைத் தாக்கினான்.(95) அப்போது கர்ணன், பெரும் சக்தி கொண்ட எண்ணற்ற கூரிய கணைகளால் அர்ஜுனனுடைய வில்லின் நாண் கயிற்றை அறுத்தான். அதே போல இரண்டாவதாகப் பொருத்தப்பட்ட நாண்கயிற்றையும், மூன்றாவதையும், நான்காவதையும், ஐந்தாவதையும் கூட அறுத்தான்.(96) ஆறாவதும், ஏழாவதும், அதற்கடுத்து எட்டாவதும், ஒன்பதாவதும், பத்தாவதும், இறுதியாகப் பதினொன்றாவதும் அந்த விருஷனால் {கர்ணனால்} அறுபட்டது. நூற்றுக் கணக்கான கணைகளை ஏவ வல்ல கர்ணன், பார்த்தன் தன் வில்லுக்கு நூறு நாண்கயிறுகளைக் கொண்டிருந்தான் என்பதை அறியவில்லை[13].(97) தன் வில்லுக்கு மற்றொரு நாண்கயிற்றைக் கட்டி, பல கணைகளை ஏவிய அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சுடர்மிக்க வாய்களைக் கொண்ட பாம்புகளுக்கு ஒப்பான கணைகளால் கர்ணனை மறைத்தான்.(98) எப்போது நாண்கயிறு அறுந்தது, எப்போது அது மாற்றப்பட்டது என்பதைக் கர்ணன் காணாத வகையில், அறுந்த அந்த நாண்கயிறுகளை அர்ஜுனன் வேகமாக மாற்றினான். அவனால் செய்யப்பட்ட அந்த அருஞ்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது.(99)

ராதையின் மகன் {கர்ணன்} தன் ஆயுதங்களால், சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} ஆயுதங்களைக் கலங்கடித்தான். தன் ஆற்றலை வெளிப்படுத்திய அவன், தனஞ்சயனை {அர்ஜுனனை} விட மேம்படுவதாக அந்த நேரத்திற்குத் தெரிந்தது.(100) கர்ணனின் ஆயுதங்களால் பீடிக்கப்படும் அர்ஜுனனைக் கண்ட கிருஷ்ணன், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “கர்ணனை {அருகில்} அணுகி, மேன்மையான ஆயுதங்களால் அவனைத் தாக்குவாயாக” என்றான்.(101) அப்போது சினத்தால் நிறைந்த தனஞ்சயன், நெருப்பைப் போன்றதும், பாம்பின் நஞ்சுக்கு ஒப்பாகத் தெரிந்ததும், வஜ்ரத்தைப் போலக் கடினமானதுமான மற்றொரு தெய்வீக ஆயுதத்தை மந்திரங்களால் ஈர்த்து,(102) அதனுடன் ரௌத்ர ஆயுதத்தையும் ஒன்றிணைத்து, அதைத் தன் எதிரியின் மீது ஏவ விரும்பினான்[14]. அந்த நேரத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமியானது, கர்ணனின் தேர்ச்சக்கரங்களில் ஒன்றை விழுங்கியது.(103) வேகமாகத் தன் வாகனத்தில் இருந்து இறங்கிய அவன் {கர்ணன்}, மூழ்கிய சக்கரத்தைத் தன்னிரு கரங்களாலும் பற்றி, அதைப் பெரும் முயற்சியுடன் உயர்த்த முயற்சித்தான்.(104) கர்ணனால் பலமாக உயரத் தூக்கப்பட்டவளும், அவனது சக்கரத்தை விழுங்கியவளுமான பூமாதேவியானவள், நான்கு விரல்களின் அளவு உயரத்திற்கு, தன் ஏழு தீவுகள், மலைகள், நீர் நிலைகள், காடுகள் ஆகியவற்றுடன் உயர எழுந்தாள்.(105)

விழுங்கப்பட்ட தன் சக்கரத்தைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்}, கோபத்தால் கண்ணீர் சிந்தி, அர்ஜுனனைக் கண்டு, சினத்தால் நிறைந்து இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(106) “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, ஓ! பார்த்தா, மூழ்கிய இந்தச் சக்கரத்தை நான் உயர்த்தும்வரை ஒரு கணம் பொறுப்பாயாக.(107) ஓ! பார்த்தா, என் தேரின் இடது சக்கரம், தற்செயலாகப் பூமியால் விழுங்கப்பட்டதைக் கண்டும், கோழையால் மட்டுமே செய்யப்படக்கூடிய (என்னைத் தாக்கிக் கொல்லும்) இந்தக் காரியத்தைக (செய்யாமல்) கைவிடுவாயாக.(108) அற நடத்தைகளை நோற்கும் துணிச்சல்மிக்கப் போர்வீரர்களாக இருப்பவர்கள், கலைந்த முடிகளைக் கொண்ட மனிதர்கள், போரில் இருந்து முகம் திருப்பிக் கொண்டோர், பிராமணன், கரங்கூப்பியவன், சரணடைந்தவன், இடத்தை இரந்து கேட்பவன், தன் ஆயுதத்தை விட்டவன், கணைகள் தீர்ந்து போனவன், கவசம் இடம்பெயர்ந்தவன், ஆயுதம் விழுந்துவிட்டவன், ஆயுதம் உடைந்துபோனவன் ஆகியோர் மீது ஒருபோதும் தங்கள் ஆயுதங்களை ஏவுவதில்லை.(109,110) நீ உலகின் துணிச்சல்மிக்க மனிதனாவாய். போர்விதிகளையும் நீ நன்கறிந்தவனாவாய். இந்தக் காரணங்களுக்காக நீ என்னை ஒரு கணம் பொறுப்பாயாக,(111) அஃதாவது, ஓ! தனஞ்சயா {அர்ஜுனா} நான் என் சக்கரத்தைப் பூமியில் இருந்து வெளிக்கொணரும் வரை பொறுப்பாயாக. நீ தேரில் இருக்கவும், நான் பலவீனனாக, ஊக்கம் குன்றியவனாகப் பூமியில் நிற்கவும் கூடிய இந்த நேரத்தில் நீ என்னைக் கொல்வது உனக்குத் தகாது[15].(112) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வாசுதேவனாலோ {கிருஷ்ணனாலோ}, உன்னாலோ என்னைக் கிஞ்சிற்றும் அச்சுறுத்த இயலாது. நீ க்ஷத்திரிய வகையில் பிறந்தவனாவாய். நீ உயர்ந்த குலம் ஒன்றைத் தழைக்க வைப்பவனாவாய். அறத்தின் படிப்பினைகளை நினைவுகூர்ந்து, ஒரு கணம் என்னைப் பொறுப்பாயாக” என்று சொன்னான் {கர்ணன்}.”(113)

கர்ணனின் தலையைக் கொய்த அர்ஜுனன்! – கர்ண பர்வம் பகுதி – 91- அறம் மற்றும் நியாயமான போர் ஆகியவற்றை வேண்டிய கர்ணனைக் குற்றஞ்சாட்டிய கிருஷ்ணன், அவனாலும், துரியோதனனாலும் பாண்டவர்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகளை நினைவூட்டியது; வெட்கத்தால் தலைகுனிந்த கர்ணன்; அர்ஜுனனை மயக்கமடையச் செய்த கர்ணன்; அந்த இடைவேளையில் தன் தேரை வெளிக்கொணர முயன்ற கர்ணனின் தலையைப் புலனுணர்வு மீண்ட அர்ஜுனன் வெட்டியது; கர்ணனின் உடலில் இருந்து வெளிப்பட்ட ஒளி சூரியனைச் சென்றடைந்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தேரில் நின்றிருந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, அந்தக் கர்ணனிடம், “ஓ! ராதையின் மகனே {கர்ணா}, நீ அறத்தை நினைவு கூர்வது நற்பேறாலேயே. கீழ்த்தரமானவர்கள் {நீசர்கள்}, தாங்கள் துன்பத்தில் மூழ்கும்போது, தங்கள் தேவைக்குப் பழிப்பதும், தாங்கள் செய்யும் தீச்செயல்களின் போது பழிக்காததும் பொதுவாகக் காணப்படுகிறது.(1) நீ, சுயோதனன், துச்சாசனன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர், ஒற்றையாடையில் இருந்த திரௌபதியைச் சபைக்கு மத்தியில் கொண்டு வரச் செய்தீர்கள். ஓ! கர்ணா, அச்சந்தர்ப்பத்தில் உனது அறம் வெளிப்படவில்லை. பகடையில் திறன்பெற்ற சகுனி, அஃதை {பகடையை} அறியாத குந்தியின் மகனான யுதிஷ்டிரரை சபையில் வெற்றிக் கொண்ட போது, இந்த உனது அறம் {தர்மம்} எங்கே சென்றது?(3) உன் ஆலோசனைப்படி செயல்பட்ட குரு மன்னன் (துரியோதனன்), பாம்புகள் மற்றும் நஞ்சூட்டப்பட்ட உணவு ஆகியவற்றின் உதவியால் பீமரைப் பீடித்தபோது, உனது அறம் எங்கே சென்றது?(4) காடுகளுக்குள் நாடுகடத்தப்பட்ட காலமும், {மறைந்து வாழ வேண்டிய} பதிமூன்றாவது {13} வருடமும் கழிந்த பிறகும், பாண்டவர்களுக்கு அவர்களது அரசை நீங்கள் கொடுக்காதபோது, உனது அறம் எங்கே சென்றது?(5)

உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களை எரித்துக் கொல்வதற்காக வாரணாவதத்தின் அரக்கு வீட்டுக்கு நீங்கள் நெருப்பிட்டீர்களே, ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அப்போது, உனது அறம் எங்கே சென்றது?(6)

மாதவிடாயின் காரணமாகக் குறைந்த உடையில் இருந்தவளும், துச்சாசனனின் விருப்பப்படிக் கீழ்ப்படிந்திருந்தவளுமான கிருஷ்ணை {திரௌபதி} சபைக்கு மத்தியில் நின்றிருந்தபோது அவளைக் கண்டு சிரித்தாயே, ஓ! கர்ணா, அப்போது இந்த உனது அறம் எங்கே சென்றது?(7)

பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் அத்துமீறி, அப்பாவியான கிருஷ்ணை {திரௌபதி} இழுக்கப்பட்டபோது, நீ தலையிடவில்லையே. ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அப்போது உனது அறம் எங்கே சென்றது?(8)

யானையின் நடை கொண்ட பெண்மணியாக மதிக்கப்பட்ட இளவரசி திரௌபதியிடம் நீ பேசியபோது, “ஓ! கிருஷ்ணையே, பாண்டவர்கள் தொலைந்தனர். அழிவில்லா நரகில் அவர்கள் மூழ்கிவிட்டனர். நீ வேறொரு கணவனைத் தேர்ந்தெடுப்பாயாக” என்றாயே. ஓ! கர்ணா, அப்போது உனது அறம் எங்கே சென்றது?(9)

அரசின் மீது பேராசை கொண்டும், காந்தாரர்களின் ஆட்சியாளனை {சகுனியை} நம்பியும் (பகடையாட) பாண்டவர்களை நீங்கள் அழைத்தீர்களே. அப்போது உனது அறம் எங்கே சென்றது?(10)

வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர், சிறுவனான அபிமன்யுவைப் போரில் சூழ்ந்துகொண்டு, அவனைக் கொன்ற போது, உனது அறம் எங்கே சென்றது?(11)

இப்போது நீ இருப்புக்கு அழைக்கும் இந்த அறம், அந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் எங்குமில்லையெனில், இப்போது அவ்வார்த்தையைச் சொல்லி உன் {வாயின்} மேலண்ணத்தை உலர்த்துவதால் யாது பயன்? ஓ! சூதா {கர்ணா}, நீயோ இப்போது அறத்தின் நடைமுறைகளைக் குறித்துப் பேசுகிறாய், ஆனாலும் நீ உயிரோடு தப்ப மாட்டாய்.(12) புஷ்கரனால் வீழ்த்தப்பட்ட நளன், மீண்டும் தன் ஆற்றலால் அரசை மீட்டதைப் போல, ஆசையிலிருந்து விடுபட்ட பாண்டவர்களும், தங்கள் கரங்களின் ஆற்றலாலும், தங்கள் நண்பர்கள் அனைவரின் உதவியாலும் தங்கள் அரசை மீட்பார்கள்.(13) தங்கள் பலமிக்க எதிரிகளைக் கொன்ற பிறகு, சோமகர்களுடன் சேர்ந்து தங்கள் அரசை அவர்கள் மீட்பார்கள். அறத்தால் எப்போதும் காக்கப்படும் இந்த மனிதர்களில் சிங்கங்களின் (பாண்டு மகன்களின்) கைகளால் தார்தராஷ்டிரர்கள் அழிவை அடைவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}[1].”(14)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இவ்வாறு சொல்லப்பட்ட கர்ணன், எந்தப் பதிலையும் அளிக்காமல் தன் தலையைத் தொங்கவிட்டான்.(15) சினத்தால் உதடுகள் நடுங்க தன் வில்லை உயர்த்திய அவன் {கர்ணன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெரும் சக்தியும், ஆற்றலும் கொண்டவன் ஆதலால், பார்த்தனுடனான {அர்ஜுனனுடனான} தன் போரைத் தொடர்ந்தான்.(16) அப்போது பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} பேசிய வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! பெரும் வலிமை கொண்டோனே, தெய்வீக ஆயுதத்தால் கர்ணனைத் துளைத்து, அவனைக் கீழே வீழ்த்துவாயாக” என்றான்.(17) அந்தப் புனிதமானவனால் இவ்வாறு சொல்லப்பட்ட அர்ஜுனன் சினத்தால் நிறைந்தான். உண்மையில், கிருஷ்ணனால் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, சீற்றத்துடன் சுடர்விட்டெரிந்தான்.(18) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் இருந்த பார்த்தனுடைய உடலின் துளைகள் அனைத்திலும் நெருப்பின் தழல்கள் வெளிப்படுவதாகத் தெரிந்தது. அந்தக் காட்சியைக் காண மிக அற்புதமானதாக இருந்தது.(19) அதைக் கண்ட கர்ணன், பிரம்மாயுதத்தை இருப்புக்கு அழைத்து, தனஞ்சயன் மீது கணைமாரியைப் பொழிந்து, தன் தேரை வெளிக்கொணர மீண்டும் முயற்சித்தான்.(20)

பார்த்தனும் {அர்ஜுனனும்}, பிரம்மாயுதத்தின் துணையால் கர்ணன் மீது கணைமாரியைப் பொழிந்தான். அந்தப் பாண்டுவின் மகன், தன் ஆயுதத்தால் எதிரியின் ஆயுத்தைக் கலங்கடித்தபடியே தொடர்ந்து அவனைத் தாக்கினான்.(21) அப்போது அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, கர்ணனைக் குறிபார்த்து, அக்னியின் சக்தியால் ஈர்க்கப்பட்டதும், தனக்குப் பிடித்தமானதுமான மற்றொரு ஆயுதத்தை ஏவினான். அர்ஜுனனால் ஏவப்பட்ட அந்த ஆயுதம், தன் சக்தியால் சுடர்விட்டெரிந்தது.(22) எனினும் கர்ணன் வருணாயுதத்தால் அந்த நெருப்பைத் தணித்தான். மேலும் அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, தான் உண்டாக்கிய மேகங்களின் மூலம், மழை நாளில் காணப்படும் இருளால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தான்.(23) பெரும் சக்தி கொண்ட அந்தப் பாண்டுவின் மகன், கர்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அச்சமில்லாமல் வாயவ்ய ஆயுதத்தின் மூலம் அம்மேகங்களை விலக்கினான்.(24) அப்போது அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பாண்டுமகனைக் {அர்ஜுனனைக்} கொல்வதற்காக நெருப்பைப் போன்ற சுடர்மிக்கப் பயங்கரக் கணையொன்றை எடுத்தான்.(25)

புகழத்தக்க அந்தக் கணை நாண்கயிற்றில் பொருத்தப்பட்டபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமாதேவி, அவளது மலைகள், நீர்நிலைகள் மற்றும், காடுகளுடன் சேர்ந்து நடுங்கினாள்.(26) கடினமான கூழாங்கற்களுடன் கடுங்காற்று வீசத் தொடங்கியது. திசைகளின் புள்ளிகள் அனைத்தும் புழுதியில் மூழ்கியன. ஓ! பாரதரே, ஆகாயத்தில் தேவர்களுக்கு மத்தியில் துயரத்துடன் கூடிய ஓலங்கள் எழுந்தன.(27) சூதன் மகனால் {கர்ணனால்} குறிபார்க்கப்பட்ட அந்தக் கணையைக் கண்ட பாண்டவர்கள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உற்சாகமற்ற இதயங்களுடன் பெருங்கவலையில் மூழ்கினர்.(28) கூர்முனை கொண்டதும், சக்ரனின் {இந்திரனின்} வஜ்ரத்திற்கு ஒப்பான பிரகாசத்துடன் கூடியதுமான அந்தக் கணை கர்ணனின் கரங்களில் இருந்து ஏவப்பட்டு, எறும்புப்புற்றுக்குள் ஊடுருவும் பெரும்பாம்பைப் போலத் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} மார்பில் பாய்ந்தது.(29) எதிரிகளைக் கலங்கடிப்பவனான அந்த உயர் ஆன்ம பீபத்சு {அர்ஜுனன்}, அம்மோதலில் இவ்வாறு துளைக்கப்பட்டுச் சுழலத் தொடங்கினான். அவனது பிடி தளர்ந்ததால், அவனது கரங்களில் இருந்த அவனது வில்லான காண்டீவம் விழுந்தது. நிலநடுக்கத்தால் நடுங்கும் மலைகளின் இளவரசனைப் போல அவன் {அர்ஜுனன்} நடுங்கினான்.(30)

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரன் விருஷன் {கர்ணன்}, பூமியால் விழுங்கப்பட்ட தன் தேரின் சக்கரத்தை வெளிக்கொணர விரும்பி, தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்தான். தன்னிரு கைகளாலும் சக்கரத்தைப் பற்றிய அவன் {கர்ணன்}, பெரும் பலத்துடன் அதை இழுக்க முயன்றாலும், விதி அவனது அம்முயற்சியைத் தோல்வியுறச் செய்தது.(31) அதே வேளையில் கிரீடத்தால் அலங்கரிக்கப்படும் உயர் ஆன்ம அர்ஜுனன், தன் உணர்வுகள் மீண்டு, காலதண்டத்தைப் போன்று மரணத்தைத் தரக்கூடிய அஞ்சலிகம்[2] என்றழைக்கப்படும் கணையொன்றை எடுத்தான் {எடுக்கத் தயாரானான்}. அப்போது பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} பேசிய வாசுதேவன் {கிருஷ்ணன்}, “உன் எதிரியான இந்த விருஷன் {கர்ணன்}, அவனது தேரில் ஏறுவதற்கு முன்னர், அவனது தலையை உன் கணையால் கொய்வாயாக” என்றான்.(32) தன் எதிரியின் சக்கரம் இன்னும் புதைந்த நிலையில், தலைவன் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} அவ்வார்த்தைகளை மெச்சியவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அர்ஜுனன், சுடர்மிக்கப் பிரகாசம் கொண்ட கத்தித் தலைக் கணை {க்ஷுரப்ரம்} ஒன்றை எடுத்து, யானை கட்டும் கயிறு பொறிக்கப்பட்டதும், களங்கமற்ற சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதுமான (கர்ணனின்) கொடிமரத்தைத் தாக்கினான்.(33) அந்தக் கொடிமரமானது விலைமதிப்புமிக்க யானை கட்டும் கயிறு பொறிக்கப்பட்டதும், தங்கம், முத்துக்கள், ரத்தினங்கள், வைரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதும், ஞானத்தில் விஞ்சிய முதன்மையான கலைஞர்களால் கவனத்துடன் வடிவமைக்கப்பட்டதும், பெரும் அழகைக் கொண்டதும் பசும்பொன்னின் வண்ணங்களைக் கொண்டதுமாக இருந்தது.(34) அந்தக் கொடிமரமானது, எப்போதும் உமது துருப்புகளுக்குப் பெரும் வீரத்தை அளிப்பதாகவும், எதிரிக்கு அச்சத்தை ஊட்டுவதுமாக இருந்தது. அதன் வடிவம் புகழத்தக்கதாக இருந்தது. உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட அது {அந்தக் கொடிமரம்}, காந்தியில் சூரியனுக்கு ஒப்பானதாக இருந்தது. உண்மையில் அதன் பிரகாசமானது, நெருப்பு, சூரியன், அல்லது சந்திரனைப் போன்றதாக இருந்தது.(35)

கிரீடத்தால் அலங்கரிக்கப்படும் அர்ஜுனன், பெரும் தேர்வீரனான அதிரதன் மகனின் {கர்ணனின்} அந்தக் கொடிமரத்தைப் பெருங்கூர்மை கொண்டதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதும், தெளிந்த நெய்க்காணிக்கைகளால் ஊட்டப்படும் நெருப்பின் காந்தியைக் கொண்டதும், சுடர்மிக்க அழகைக் கொண்டதுமான அந்தக் கத்தித் தலை கணையால் {க்ஷுரப்ரத்தால்} வெட்டி வீழ்த்தினான்.(36) அப்படி விழுந்த அந்தக் கொடிமரத்தோடு சேர்ந்து, குருக்களின் இதயங்களும், அவர்களது புகழும், செருக்கும், வெற்றி மீதான நம்பிக்கையும், விரும்பத்தக்க அனைத்தும் விழுந்த போது (அந்தக் குரு படையில் இருந்து) “ஓ” என்றும், “ஐயோ” என்றும் உரத்த ஓலங்கள் எழுந்தன.(37) பெரும் கரநளினம் கொண்ட குரு குலத்து வீரனால் {அர்ஜுனனால்} அந்தக் கொடிமரம் வெட்டி வீழ்த்தப்பட்டதைக் கண்ட உமது துருப்புகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கர்ணனின் வெற்றியில் இருந்த அனைத்து நம்பிக்கைகளையும் இழந்தனர்.(38) கர்ணனை அழிக்க விரைந்த பார்த்தன் {அர்ஜுனன்}, இந்திரனின் வஜ்ரத்திற்கோ, அக்னியின் தண்டத்திற்கோ ஒப்பானதும், ஆயிரங்கதிர் சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதுமான சிறந்த அஞ்சலிக ஆயுதத்தைத் தன் அம்பறாத்தூணியில் இருந்து வெளியே எடுத்தான்.(39)

முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்லதும், குருதியாலும், சதையாலும் பூசப்பட்டதும், நெருப்பு, அல்லது சூரியனுக்கு ஒப்பானதும், விலைமதிப்புமிக்கப் பொருட்களால் செய்யப்பட்டதும், மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுக்கு அழிவை உண்டாக்குவதும், நேராகப் பெரும் மூர்க்கத்துடன் செல்லகூடியதுமான அது {அந்த அஞ்சலிகம்}, ஆறு அடி {சிறகுகள் என்று இருக்க வேண்டும்} மற்றும் மூன்று முழம் நீளத்தைக் கொண்டதாக இருந்தது.(40) ஆயிரங்கண் இந்திரனுடைய வஜ்ரத்தின் சக்தியைக் கொண்டதும், இரவில் தடுக்கப்பட முடியாத ராட்சசர்களைப் போன்றதும், பிநாகை அல்லது நாராயணனின் சக்கரத்திற்கு ஒப்பானதுமான அது மிகப் பயங்கரமானதாகவும், வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் அழிவை உண்டாக்குவதுமாக இருந்தது[3].(41) பார்த்தன் {அர்ஜுனன்}, கணையின் வடிவில் இருந்ததும், தேவர்களாலேயே தடுக்கப்பட முடியாததும், அந்தப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} எப்போதும் துதிக்கப்படுவதும், தேவர்களையும் அசுரர்களையும் வெல்ல வல்லதுமான அந்தப் பெரும் ஆயுதத்தை உற்சாகமாக எடுத்தான்.(42) அந்தப் போரில் பார்த்தனின் பிடியில் இருந்த அந்தக் கணையைக் கண்ட மொத்த அண்டமும், அதன் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் சேர்ந்து நடுங்கியது. உண்மையில், அந்தப் பயங்கரப் போரில் உயர்த்தப்படும் அவ்வாயுதத்தைக் கண்ட முனிவர்கள், “அண்டத்தில் அமைதியுண்டாகட்டும்” என்று உரக்கக் கூச்சலிட்டனர்.(43) அப்போது அந்தக் காண்டீவதாரி {அர்ஜுனன்}, அந்த ஒப்பற்ற கணையைத் தன் வில்லில் பொருத்தி, வலிமைமிக்க உயர்ந்த ஆயுதம் ஒன்றில் அஃதை இணைத்தான். தன் வில்லான காண்டீவத்தை இழுத்த அவன் {அர்ஜுனன்}, வேகமாக,(44) “நான் தவத்துறவுகளை மேற்கொண்டவனாக, மூத்தவர்களை நிறைவுசெய்தவனாக, நலன்விரும்பிகளின் ஆலோசனைகளைக் கேட்பவனாக இருந்தால், இந்த எனது கணை, என் எதிரியின் உடலையும், இதயத்தையும் விரைவாக அழிக்கவல்ல வலிமைமிக்க ஆயுதம் ஒன்றைப் போல ஆகட்டும்.(45) என்னால் வழிபடப்படுவதும், பெரும் கூர்மை கொண்டதுமான இந்தக் கணை, அந்த உண்மையின் காரணமாக என் எதிரியான கர்ணனைக் கொல்லட்டும்” என்றான் {அர்ஜுனன்}.

இவ்வார்த்தைகளைச் சொன்ன தனஞ்சயன் {அர்ஜுனன்}, அங்கிரஸின் அதர்வணத்தில் பரிந்திரைக்கப்படும் சடங்கின் பலாலன்களைக் கொண்டதும், பிரகாசத்தால் சுடர்விடுவதும், போரில் காலனாலேயே பொறுத்துக்கொள்ள முடியாததும், கடுமையானதுமான அந்தப் பயங்கரக் கணையைக் கர்ணனின் அழிவுக்காக விடுத்தான். கிரீடத்தால் அலங்கரிக்கப்படும் பார்த்தன் {அர்ஜுனன்}, கர்ணனைக் கொல்ல விரும்பி, பெரும் உற்சாகத்துடன், “இந்தக் கணை எனக்கு வெற்றியை அளிக்கட்டும். என்னால் ஏவப்படுவதும், நெருப்பு, அல்லது சூரியனின் காந்தியைக் கொண்டதுமான இந்தக் கணையானது கர்ணனை யமனின் முன்னிலைக்குக் கொண்டு செல்லட்டும்” என்றான்.(47) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், கிரீடத்தாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்படுபவனுமான அர்ஜுனன், கர்ணனிடம் கொண்ட பகைவுணர்ச்சியை வளர்த்து, அவனைக் கொல்லவிரும்பி, சூரியன், அல்லது சந்திரனின் காந்தியைக் கொண்டதும், வெற்றியை அளிக்கவல்லதுமான அந்த முதன்மையான கணையால் தன் எதிரியை {கர்ணனை} உற்சாகமாகத் தாக்கினான்.(48) இவ்வாறு அந்த வலிமைமிக்க வீரனால் {அர்ஜுனனால்} ஏவப்பட்டதும், சூரியனின் சக்தியைக் கொண்ட அந்தக் கணை, திசைப்புள்ளிகளின் அனைத்தையும் எரியச் செய்தது. இந்திரன் வஜ்ரத்தால் விருத்திரனுடைய தலையை வீழ்த்தியது போல, அர்ஜுனன், அந்தக் கணையைக் கொண்டு, தன் எதிரியின் {கர்ணனின்} தலையை வீழ்த்தினான்.(49) உண்மையில் அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மந்திரங்களால் ஈர்க்கப்பட்டு, வலிமைமிக்க ஆயுதமான மாற்றப்பட்ட அந்த அஞ்சலிக ஆயுதத்தைக் கொண்டு, பிற்பகலில் அந்த வைகர்த்தனனின் {கர்ணனின்} தலையை வெட்டினான்.(50)

இவ்வாறு அந்த அஞ்சலிகத்தால் வெட்டப்பட்ட கர்ணனின் உடல் பூமியில் விழுந்தது.(51) உதயச் சூரியனின் காந்திக்கு இணையானதும், கூதிர்கால நடுவான சூரியனுக்கு ஒப்பானதுமான அந்த (கௌரவப்) படைத்தலைவனின் {கர்ணனின்} தலையும், அஸ்த மலைகளில் விழும் குருதிவட்டில் கொண்ட சூரியனைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(52) உண்மையில், மிக அழகானதும், எப்போதும் ஆடம்பரமாகக் கவனிக்கப்பட்டதும், உன்னச் செயல்களைச் செய்யும் கர்ணனுடையதுமான அந்தத் தலையானது, பெரும் செல்வத்தில் நிறைந்த வசதியான மாளிகையைக் கைவிட விரும்பாத ஒருவனைப் போலவே விருப்பமில்லாமலேயே அந்த உடலைக் கைவிட்டது.(53) அர்ஜுனனின் கணையால் வெட்டப்பட்டதும், உயிரை இழந்ததும், பெரும் காந்தியுடன் கூடியதுமான கர்ணனின் நெடிய உடலானது, அனைத்துக் காயங்களில் இருந்தும் குருதி வெளியேற, மழைக்குப்பிறகு இடியால் பிளக்கப்பட்ட, தன் பக்கங்களில் செந்நீர் ஓடைகளுடன் கூடியசெஞ்சுண்ண மலைச் சிகரம் ஒன்றைப் போலக் கீழே விழுந்தது.(54) அப்போது வீழ்ந்துவிட்ட கர்ணனின் உடலில் இருந்து ஓர் ஒளியானது ஆகாயத்தினூடாகக் கடந்து சென்று சூரியனுக்குள் நுழைந்தது. கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு, மனிதப் போர்வீரர்கள் அனைவராலும் இந்த அற்புதக் காட்சி காணப்பட்டது.(55)

அப்போது பல்குனனால் {அர்ஜுனனால்}, கர்ணன் கொல்லப்பட்டதைக் கண்ட பாண்டவர்கள், தங்கள் சங்குகளை உரக்க முழக்கினர். அதேபோலவே, கிருஷ்ணனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} கூட, மகிழ்ச்சியால் நிறைந்து, காலத்தை இழக்காமல் தங்கள் சங்குகளை முழக்கினர்.(56) சோமகர்கள், களத்தில் கொல்லப்பட்டுக் கிடக்கும் கர்ணனைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்து, (பாண்டவப் படையின்) பிற துருப்புகளுடன் சேர்ந்து உரக்கக் கூச்சலிட்டனர். பெரும் மகிழ்ச்சியால் அவர்கள் தங்கள் எக்காளங்களை முழக்கி, தங்கள் கரங்களையும் ஆடைகளையும் அசைத்தனர்.(57) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்வீரர்கள் அனைவரும் பார்த்தனை {அர்ஜுனனை} அணுகி மகிழ்ச்சியாகப் புகழத் தொடங்கினர். வலிமைகொண்ட பிறரும், ஆடிக்கொண்டும், ஒருவரையொருவர் தழுவிக் கொண்டும் உரக்கக் கூச்சலிட்டபடியும், “கணைகளால் சிதைக்கப்பட்டுக் கர்ணன் பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடத்தப்பட்டிருப்பது நற்பேறாலேயே” என்றனர்.(58) உண்மையில், வெட்டப்படக் கர்ணனின் தலையானது, புயலால் தளர்ந்து விழுந்த மலைச்சிகரம் ஒன்றைப் போலவோ, வேள்வி முடித்தும் அணைக்கப்பட்ட நெருப்பைப் போலவோ, அஸ்த மலைகளை அடைந்துவிட்ட சூரியனின் வடிவத்தைப் போலவோ அழகானதாக இருந்தது.(59) கணைகளையே கதிர்களாகக் கொண்ட கர்ண சூரியன், பகைவரின் படையை எரித்தபிறகு, இறுதியாக, வலிமைமிக்க அர்ஜுன காலத்தால் மறையச்செய்யப்பட்டது.(60)

அஸ்த மலைகளை நோக்கிச் செல்லும் சூரியன், தன் கதிர்கள் அனைத்தையும் தன்னோடு எடுத்துக் கொண்டு செல்வது போலவே, (அர்ஜுனனின்) அந்தக் கணையும், கர்ணனின் உயிர்மூச்சை எடுத்துக் கொண்டு {உடலைவிட்டு} வெளியே கடந்து சென்றது.(61) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தச் சூதன் மகனின் மரணக் காலமானது, அந்நாளின் பிற்பகலாக இருந்தது[4]. அந்தப் போரில் அஞ்சலிக ஆயுதத்தால் வெட்டப்பட்ட கர்ணனின் தலையானது, அவனது உடலோடு சேர்ந்து கீழே விழுந்தது.(62) உண்மையில், அர்ஜுனனின் அந்தக் கணையானது, கௌரவத் துருப்புகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வேகமாகக் கர்ணனின் தலையையும், உடலையும் வீழ்த்தியது.(63) வீரக்கர்ணன் வீழ்த்தப்பட்டுப் பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடத்தப்பட்டதைக் கண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, கொடிமரமிழந்த அந்தத் தேருடன் அங்கிருந்து சென்றான்.(64) கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்தப் போரில் கணைகளால் ஆழத் துளைக்கப்பட்ட கௌரவர்கள், காந்தியுடன் சுடர்விடும் அர்ஜுனனின் உயர்ந்த கொடிமரத்தின் மேல் தங்கள் கண்களை அடிக்கடி செலுத்தியபடியே, அச்சத்தால் பீடிக்கப்பட்டுக் களத்தை விட்டே தப்பி ஓடினர்.(65) ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரைக்கு ஒப்பான முகத்துடன் அருளப்பட்ட, ஆயிரங்கண் இந்திரனைப் போன்ற சாதனைகளைக் கொண்ட கர்ணனின் அழகிய தலையானது, நாளின் முடிவில் காணப்படும் ஆயிரங்கதிர் சூரியனைப் போலக் கீழே பூமியில் விழுந்தது” {என்றான் சஞ்சயன்}.(66)

துரியோதனனைத் தேற்றிய சல்லியன்! – கர்ண பர்வம் பகுதி – 92-கர்ணன் கொல்லப்பட்டதில் துரியோதனன் அடைந்த துயரம்; உரத்த முழக்கங்களைச் செய்து கௌரவர்களை அச்சுறுத்திய பீமன்; வீழ்ந்துவிட்ட கர்ணனைக் காணச் சென்ற படைவீரர்கள்; துரியோதனனைத் தேற்றிய சல்லியன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான அம்மோதலில் கணைகளால் நொறுக்கப்பட்ட துருப்புகளைக் கண்ட சல்லியன், கோபத்தால் நிறைந்து கருவிகளை இழந்த அந்தத் தேரில் சென்றான்.(1) சூதன் மகனை {கர்ணனை} இழந்த தன் படையையும், அதன் தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் அழிக்கப்பட்டதையும் கண்ட துரியோதனன், கண்ணீரால் குளித்த கண்களுடன், கவலையின் வடிவாக மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.(2) கணைகளால் துளைக்கப்பட்டவனும், குருதியில் குளித்தவனும், விருப்பத்துடன் வானத்தில் இருந்து விழுந்த சூரியனைப் போலப் பூமியில் நீண்டு கிடப்பவனுமான வீரக் கர்ணனைக் காண விரும்பிய போர்வீரர்கள், அங்கே வந்து, வீழ்ந்துவிட்ட அந்த வீரனை {கர்ணனைச்} சூழ்ந்து நின்றனர்.(3) இவ்வாறு அங்கே நின்றிருந்த எதிரிப்படையினர் மற்றும் நமது படையினருக்கு மத்தியில், தங்கள் இயல்புக்குத் தக்கபடி, சிலர் மகிழ்ச்சிக் குறிகளை வெளிக்காட்டினர், சில அச்சத்தையும், சிலர் கவலையையும், சிலர் ஆச்சரியத்தையும் வெளிக்காட்டினர், சிலரோ பெரும் துயரில் வீழ்ந்தனர்.(4) கௌரவர்களில் சிலர், வலிமைமிக்கக் கர்ணன், கவசம், ஆபரணங்கள், ஆடைகள், ஆயுதங்கள் ஆகிய அனைத்தும் இடம்பெயரச் செய்யப்பட்டு, தனஞ்சயனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டதைக் கேட்டு, காளையை இழந்து பேரச்சம் கொண்ட பசுக்கூட்டத்தைப் போல அச்சத்தால் தப்பி ஓடினர்.(5)

அப்போது பீமன், பெருமுழக்கங்களைச் செய்து, அந்த அச்சந்தரத்தக்க, மகத்தான கூச்சல்களால் ஆகாயத்தை நடுங்கச் செய்தபடி, தன் கக்கங்களை அறைந்து கொள்ளவும், குதிக்கவும், ஆடவும் தொடங்கி, அந்த அசைவுகளால் தார்தராஷ்டிரர்களை அச்சுறுத்தினான்.(6) சோமகர்களும், சிருஞ்சயர்களும் தங்கள் சங்குகளை உரக்க முழங்கினர். அவ்வேளையில் சூதன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டதைக் கண்ட க்ஷத்திரியர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர்.(7) பயங்கரமான போரைச் செய்த கர்ணன், சிங்கத்தால் கொல்லப்படும் யானையைப் போல அர்ஜுனனால் கொல்லப்பட்டான். மனிதர்களில் காளையான அந்த அர்ஜுனன், இவ்வாறே தன் சபதத்தை நிறைவேற்றினான். உண்மையில், இவ்வாறே பார்த்தன் {அர்ஜுனன்}, (கர்ணனிடம்) தான் கொண்ட பகைமையில் எல்லையை அடைந்தான்.(8)

மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, மலைப்படைந்த இதயத்துடன் கொடிமரமிழந்த அந்தத் தேரில், துரியோதனனின் பக்கத்தை வேகமாக அடைந்து, கவலையால் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(9) “உன் படையின் யானைகள், குதிரைகள் மற்றும் முதன்மையான போர்வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள், குதிரைகள் மற்றும் மலைகளைப் போன்ற பெரும் யானைகள் ஒன்றோடொன்று மோதி கொல்லப்பட்டதன் விளைவால், உன் படையானது யமனின் ஆட்சிப்பகுதியைப் போலத் தெரிகிறது.(10) ஓ! பாரதா {துரியோதனா}, இன்று கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடந்ததைப் போன்ற போர் இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை. இன்று கர்ணன் அந்த இரு கிருஷ்ணர்களையும், உன் பிற எதிரிகள் அனைவரையும் பலமாகத் தாக்கினான்.(11) எனினும், விதியானது நிச்சயம் பார்த்தனால் {அர்ஜுனனால்} கட்டுப்படுத்தப்பட்டு இதை நடத்தியிருக்கிறது. இதனாலேயே விதியானது பாண்டவர்களைப் பாதுகாக்கவும், நம்மைப் பலவீனமடையவும் செய்கிறது. உன் நோக்கங்களை நிறைவேற்றத் தீர்மானித்த பல வீரர்கள் எதிரியால் பலவந்தமாகக் கொல்லப்பட்டனர்.(12) சக்தி, துணிவு, வலிமை ஆகியவற்றில் குபேரன், அல்லது யமன், அல்லது வாசவன் {இந்திரன்}, அல்லது நீர்நிலைகளின் தலைவன் {வருணன்} ஆகியோருக்கு இணையானவர்களும், அனைத்துத் தகுதிகளைக் கொண்டவர்களும், கிட்டத்தட்ட கொல்லப்பட முடியாதவர்களும், உன் நோக்கத்தை அடைய விரும்பியவர்களுமான துணிச்சல் மிக்க மன்னர்கள், போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்டனர். ஓ! பாரதா {துரியோதனா}, இதற்காக நீ வருந்தாதே. இதுவே விதி. ஆறுதலை அடைவாயாக. வெற்றி என்பது எப்போதும் அடையப்படுவதில்லை[1]” என்றான் {சல்லியன்}.(13-14)மத்ரர்களின் ஆட்சியாளனுடைய {சல்லியனுடைய} அவ்வார்த்தைகளைக் கேட்டு, தன் தீச்செய்கைகளை நினைவுகூர்ந்த துரியோதனன், உற்சாகமற்ற இதயத்துடன், கிட்டத்தட்ட புலனுணர்வை இழந்தவனாக, கவலையின் வடிவமாக மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டான்” {என்றான் சஞ்சயன்}.(15)

துரியோதனனின் வீர உரை! – கர்ண பர்வம் பகுதி – 93-அர்ஜுனன், பீமன் மற்றும் திருஷ்டத்யும்னன், இரட்டையர்கள், சிகண்டி மற்றும் திரௌபதியின் மகன்கள் ஆகியோரைக் கண்டு அஞ்சி ஓடிய கௌரவர்கள்; அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற துரியோதனன்; கௌரவர்களின் இருபத்தைந்தாயிரம் காலாட்படை வீரர்களைக் கொன்ற பீமேசேனன்; தேர்ப்படையை நோக்கி விரைந்த அர்ஜுனன்; போர்வீரர்களை அணிதிரட்ட வீர உரையாற்றிய துரியோதனன்…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அந்தப் பயங்கர நாளில், கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த அம்மோதலில் கணைகளால் நொறுக்கப்பட்டும், (ஆயுதங்களால்) எரிக்கப்பட்டும் தப்பி ஓடும்போது குரு மற்றும் சிருஞ்சயப் படைகளின் தன்மை எவ்வாறு இருந்தது?”என்று கேட்டான்.(1)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளுக்கு அந்தப் போரில் பயங்கரமான பேரழிவு எவ்வாறு உண்டானது என்பதைக் கவனமாகக் கேட்பீராக.(2) கர்ணன் வீழ்ந்த பிறகு, பார்த்தன் {அர்ஜுனன்} செய்த சிங்க முழக்கங்களால், உமது மகன்களின் இதயங்களின் பேரச்சம் நுழைந்தது.(3) கர்ணன் வீழ்ந்ததும், உமது படையின் எந்தப் போர்வீரனும், துருப்புகளைத் திரட்டுவதையோ, ஆற்றலை வெளிப்படுத்துவதிலோ தன் இதயத்தில் நிலைநிறுத்தவில்லை.(4) அர்ஜுனனால் தங்கள் புகலிடம் அழிக்கப்பட்ட அவர்கள், அடியற்ற பெருங்கடலில் உடைந்த மரக்கலத்தில் இருந்த தெப்பமற்ற வணிகர்களைப் போல, கடக்க முடியாததைக் கடக்க விரும்பினார்கள்.(5)

சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலைக்குப் பின்னர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கணைகளால் துளைக்கப்பட்டு, அச்சமடைந்த கௌரவர்கள் தலைவனற்றவர்களாக, சிங்கத்தால் பீடிக்கப்படும் யானை மந்தையைப் போலப் பாதுகாப்பை விரும்பினார்கள்.(6) அந்தப் பிற்பகலில் சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வெல்லப்பட்ட அவர்கள், முறிந்த கொம்புகளைக் கொண்ட காளைகளைப் போலவோ, உடைந்த நச்சுப்பற்களைக் கொண்ட பாம்புகளைப் போலவோ தப்பி ஓடினார்கள்.(7) தங்கள் முதன்மையான போர்வீரர்கள் கொல்லப்பட்டும், தங்கள் துருப்புகள் குழப்பத்தில் ஆழ்ந்தும், கூரிய கணைகளால் தாங்களே சிதைக்கப்பட்டும் இருந்த உமது மகன்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணனின் வீழ்ச்சிக்குப்பின்னால் அச்சத்தால் தப்பி ஓடினார்கள்.(8) ஆயுதங்கள் மற்றும் கவசங்களை இழந்த அவர்கள், திசைகளை அறியாதவர்களாக, புலன் உணர்வை இழந்தவர்களாக ஓடும்போது ஒருவரையொருவர் நசுக்கி, அச்சத்தால் பீடிக்கப்பட்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(9) “பீபத்சு {Vibhatsu-அர்ஜுனன்} வேகமாகத் துரத்தி வருவது என்னையே”, “விருகோதரன் {பீமன்} வேகமாகத் துரத்தி வருவது என்னையே” என்று நினைத்த கௌரவர்கள் ஒவ்வொருவரும், அச்சத்தால் ஒளியிழந்து, ஓடிக் கொண்டிருக்கும்போதே கீழே விழுந்தனர்.(10)

குதிரைகளில் சிலரும், தேர்களில் சிலரும், யானைகளில் சிலரும், கால்களில் சிலரும் என வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பெரும் வேகத்துடன் அச்சத்தால் தப்பி ஓடினர்.(11) யானைகளால் தேர்கள் நொறுக்கப்பட்டன, பெரும் தேர்வீரர்களால் குதிரைவீரர்கள் நொறுக்கபட்டனர், குதிரைகள் அச்சத்தால் தப்பி ஓடும்போது காலாட்படை வீரர்களின் கூட்டம் நசுக்கப்பட்டது.(12) சூதன் மகனின் {கர்ணனின்} வீழ்ச்சிக்குப்பிறகு உமது போர்வீரர்கள், இரைதேடும் விலங்குகள், கள்வர்கள் ஆகயோர் நிறைந்த காட்டில் இருக்கும் பாதுகாப்பற்ற மக்களைப் போல ஆகினர்.(13) பாகர்கள் இல்லாத யானைகளைப் போலவும், கரங்கள் இல்லாத மனிதர்களைப் போலவும் அவர்கள் இருந்தனர். அச்சத்தால் பீடிக்கப்பட்ட அவர்கள், பார்த்தனால் நிறைந்திருப்பதைப் போலவே மொத்த உலகையும் கண்டனர்.(14)

பீமசேனனிடம் கொண்ட அச்சத்தால் பீடிக்கபட்டு அவர்கள் தப்பி ஓடுவதையும், உண்மையில், “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கூவியபடியே களத்தை விட்டு ஆயிரக்கணக்கில் அகன்ற தன் துருப்புகளையும் கண்ட துரியோதனன், தன் சாரதியிடம், (15) “கையில் வில்லுடன் நிற்கும் என்னைப் பார்த்தனால் மீறிச் செல்ல முடியாது. துருப்புகள் அனைத்திற்கும் பின்னால் மெதுவாகத் தூண்டுவாயாக.(16) படையின் பின்னால் இருந்து நான் போரில்லால், ஆழ்ந்த நீர்நிலைகளால் கரையைக் கடக்க முடியாததைப் போல அந்தக் குந்தியின் மகனால் என்னை மீறிச் செல்ல முடியாது.(17) அர்ஜுனன், கோவிந்தன் {கிருஷ்ணன்}, செருக்கு மிக்க விருகோதரன் மற்றும் எஞ்சிய என் எதிரிகளைக் கொன்று, கர்ணனுக்கு நான் பட்டிருக்கும் கடனிலிருந்து விடுபடுவேன்” என்றான் {துரியோதனன்}.(18) குரு மன்னனால் சொல்லப்பட்டவையும், வீரனுக்கும், கௌரவமிக்க மனிதனுக்கும் தகுந்தவையுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட தேரோட்டி, தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்ட தன் குதிரைகளை மெல்லத் தூண்டினான்.(19)

அப்போது உமது படையைச் சார்ந்த இருபத்தைந்தாயிரம் {25000} காலாட்படை வீரர்கள், அவர்களுக்கிடையில் தேர்களோ, குதிரைகளோ, யானைகளோ இல்லாமல், போருக்கு ஆயத்தமாகினர்.(20) கோபத்தால் நிறைந்த பீமசேனனும், பிருஷதனின் மகனான திருஷ்டத்யும்னனும், நால் வகைப் படைகளுடன் அவர்களைச் சூழ்ந்து கொண்டு தங்கள் கணைகளால் அவர்களைத் தாக்கத் தொடங்கினர்.(21) பதிலுக்கு அந்தப் போர்வீரர்களும், பீமனுடனும், பிருஷதன் மகனுடனும் {திருஷ்டத்யும்னனுடனும்} போரிட்டனர். அவர்களில் சிலர் அவ்விரு வீரர்களின் பெயர்களைச் சொல்லி அறைகூவியழைத்தனர்.(22) அப்போது பீமசேனன் சினத்தால் நிறைந்தான். கையில் கதாயுதத்துடன் தன் தேரை விட்டு இறங்கிய அவன் {பீமன்}, போருக்கு வந்த அந்தப் போர்வீரர்களுடன் போரிட்டான்.(23) நேர்மையான போருக்கான விதிகளை நோற்றவனும், குந்தியின் மகனுமான அந்த விருகோதரன் {பீமன்}, தன் தேரில் இருந்து கீழே இறங்கி, தன் கரங்களின் வலிமையை மட்டுமே நம்பி, காலாள்களாக இருந்த அந்த எதிரிகளோடு காலாளாகவே போரிட்டான்.(24)

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தனது பெரிய கதாயுதத்தை எடுத்துக் கொண்ட அவன் {பீமன்}, தண்டம் தரித்த யமனைப் போல, அவர்கள் அனைவரையும் கொல்லத் தொடங்கினான்.(25) காலாள்களாக இருந்த கௌரவப் போர்வீரர்கள், சினத்தால் நிறைந்து, தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்து, சுடர்மிக்க நெருப்பை நோக்கிப் பாயும் பூச்சிகளைப் போல அந்தப் போரில் பீமனை எதிர்த்து விரைந்தனர்.(26) போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களும், மதங்கொண்டவர்களுமான அந்தப் போராளிகள், பீமசேனனை அணுகி, யமனைக் கண்ட உயிரினிங்களைப் போல அந்தப் போரில் மாண்டனர்.(27) கதாயுதம் தரித்த வலிமைமிக்கப் பீமன், ஒரு பருந்தைப் போலத் திரிந்து அந்த இருபத்தைந்தாயிரம் {25000} போராளிகள் அனைவரையும் அழித்தான்.(28) வீரப் போர்வீரர்களைக் கொண்ட அந்தப் படைப்பிரிவை அழிந்தவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலையும், பெரும் வலிமையையும் கொண்ட பீமன், மீண்டும் திருஷ்டத்யும்னனைத் தன் முன்னால் கொண்டு நின்றான்.(29)

பெருஞ்சக்தி கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, (கௌரவர்களில் எஞ்சிய) தேர்ப்படையை எதிர்த்துச் சென்றான்.(30) மாத்ரியின் இரு மகன்களும் {நகுலன் மற்றும் சகாதேவனும்}, சாத்யகியும், மகிழ்ச்சியால் நிறைந்து சகுனியை எதிர்த்து வேகமாக விரைந்து, அந்தச் சுபலன் மகனின் {சகுனியின்} துருப்புகளைக் கொன்றனர்.(31) அம்மோதலில் தங்கள் கூரிய கணைகளைக் கொண்டு அவனது {சகுனியின்} குதிரைப் படையையும், யானைகளையும் கொன்ற அவர்கள், சகுனியை எதிர்த்து மூர்க்கமாக விரைந்ததன் பேரில் அங்கே ஒரு பெரும்போர் நிகழ்ந்தது.(32) அதே வேளையில் தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, உமது தேர்ப்படையை எதிர்த்துச் சென்று, மூவுலகங்களாலும் கொண்டாடப்படும் தன் வில்லான காண்டீவத்தில் நாணொலி எழுப்பினான்.(33) வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், கிருஷ்ணனை சாரதியாகக் கொண்டதுமான அந்தத் தேரைக் கண்டும், அதில் இருந்த போர் வீரன் அர்ஜுனனே என்பதைப் பார்த்தும், உமது துருப்புகள் அச்சத்துடன் தப்பி ஓடின.(34)

தேர்களை இழந்திருந்த இருபத்தைந்தாயிரம் காலாட்படை வீரர்கள் (பீமன் மற்றும் திருஷ்டத்யும்னனின் கைகளில்) அழிவை அடைந்தனர்.(35) அவர்களைக் கொன்றவனும், மனிதர்களில் புலியும், பாஞ்சாலர்களுக்கு மத்தியில் பெரும் தேர்வீரனும், பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனுமான அந்த உயர் ஆன்ம திருஷ்டத்யும்னன், விரைவில் பீமேசேனன் முன்பாகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டான்.(36,37) புறாக்களைப் போன்ற வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், கோவிதார மரத்தால் {காட்டாத்தி [அ] குராமரம்} ஆன உயர்ந்த கொடிமரத்தைக் கொண்டதுமான திருஷ்டத்யும்னனின் தேரைக் கண்ட கௌரவர்கள் பேரச்சத்துடன் தப்பி ஓடினர்.(38) பெரும்புகழைக் கொண்ட இரட்டையர்களும் (நகுலன் மற்றும் சகாதேவனும்), சாத்யகியும், ஆயுத பயன்பாட்டில் கரநளினத்தைக் கொண்ட காந்தாரர்களின் மன்னனை {சகுனியைப்} பெரும் வேகத்தோடு துரத்திச் சென்று (பாண்டவப் படைப்பிரிவுகளுக்கு மத்தியில்) மீண்டும் தோன்றினர்.(39) சேகிதானான், சிகண்டி, திரௌபதியின் (ஐந்து) மகன்கள் ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது பரந்த படையைக் கொன்று தங்கள் சங்குகளை உரக்க முழங்கினர்.(40)

அந்த வீரர்கள் அனைவரும், களத்தைவிட்டுத் திரும்பிய முகங்களுடன் தப்பி ஓடும் உமது துருப்புகளைக் கண்டாலும், கோபக்காரக் காளைகளை வென்ற வேறு காளைகளைப் போல மேலும் அவர்களைத் துரத்திச் சென்றனர்.(41) பெரும் வலிமை கொண்டவனான பாண்டுவின் மகன் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையில் எஞ்சியோர் இன்னும் போரிட நிற்பதைக் கண்டு, கோபத்தால் நிறைந்தான்.(42) பெரும் சக்தி கொண்ட தனஞ்சயன் மூவுலகங்களாலும் கொண்டாடப்படும் தன் வில்லான காண்டீவத்தை வளைத்தபடியே அந்தத் தேர்ப்படையை எதிர்த்து விரைந்தான். அதனால் எழுந்த புழுதியால் காட்சி இருளாகி, அதற்கும் மேலும் வேறெதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(44) இவ்வாறு பூமியானது புழுதியால் மறைக்கப்பட்டு, அனைத்தையும் இருள் மறைத்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகள் அச்சத்தால் அனைத்துப் பக்கங்களிலும் ஓடின.(45)

குரு படையானது இவ்வாறு பிளந்த போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகனான குரு மன்னன் {துரியோதனன்}, தன்னை எதிர்த்த எதிரிகளை அனைவரையும் எதிர்த்து விரைந்தான்.(46) அப்போது, ஓ! பாரதக் குலத்தின் தலைவா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் தேவர்களை அறைகூவியழைத்த அசுரன் பலியைப் {மகாபலி} போலவே துரியோதனனும் பாண்டவர்கள் அனைவரையும் போருக்கு அறைகூவியழைத்தான்.(47) இதனால் ஒன்றுசேர்ந்த பாண்டவர்கள் அனைவரும், துரியோதனன் மீது பல்வேறு ஆயுதங்களை ஏவியபடியும், வீசியபடியும், அவனை மீண்டும் மீண்டும் கடிந்து கொண்டு அவனை எதிர்த்து விரைந்தனர்.(48) எனினும், சினத்தால் நிறைந்த துரியோதனன், கூரிய கணைகளைக் கொண்டு அந்த எதிரிகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் அச்சமில்லாமல் கொன்றான்.(49) அப்போது, தனி ஒருவனாகவும், எந்த ஆதரவில்லாதவனாகவும், ஒன்றுசேர்ந்திருந்த பாண்டவர்கள் அனைவருடன் போரிட்ட உமது மகனிடம் நாங்கள் கண்ட ஆற்றலானது மிக அற்புதமானதாக இருந்தது.(50)

அப்போது துரியோதனன், கணைகளால் சிதைக்கப்பட்டு, தப்பி ஓடுவதையே இதயங்களில் நிறுத்தியிருந்த தன் துருப்புகள் களத்தைவிட்டு வெகு தொலைவில் சென்றுவிடாததைக் கண்டான்.(51) அவர்களை அணிதிரட்டியவனும், தன் கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தீர்மானித்தவனுமான உமது மகன் {துரியோதன்ன}, அந்தப் போர்வீரர்களை மகிழ்ச்சிப்படுத்து விதமாக இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(52) “நீங்கள் தப்பி ஓடினாலும், பூமியிலோ, மலைகளிலோ பாண்டவர்களால் உங்களைக் கொல்ல முடியாத எந்த இடத்தையும் நான் காணவில்லை. அப்படியிருக்கையில், தப்பி ஓடுவதால் பயன் யாது?(53) பாண்டவர்கள் இப்போது கொண்டிருப்பது சிறு படையேயாகும். இரு கிருஷ்ணர்களும் கூட அதிகமாகச் சிதைக்கப்பட்டிருக்கின்றனர். நாம் அனைவரும் சேர்ந்து போரில் நின்றால் நிச்சயம் வெற்றி நமதேயாகும்.(54) 

ஒற்றுமையின்றி நாம் தப்பி ஓடினால், நம்மைத் துரத்தி வரும் பாண்டவர்கள் நிச்சயம் நம் அனைவரையும் கொன்றுவிடுவார்கள். இதனால், நாம் போரிட்டு சாவதே சிறந்தது.(55) போரில் மரணமடைவது மகிழ்ச்சி நிறைந்ததாகும். க்ஷத்திரியக் கடமைகளை நோற்றுப் போரிடுவீராக. இறந்தவன் எந்தத் துயரையும் அறிய மாட்டான். மறுபுறம், அப்படிப்பட்டவன் இதன் பிறகு நித்தியமான அருளையே மகிழ்ச்சியுடன் அனுபவிப்பான்.(56) க்ஷத்திரியர்களே, இங்கே கூடியிருக்கும் நீங்கள் அனைவரும் கேட்பீராக. அழிப்பவனான யமன், வீரனையோ, கோழையையோ விடாத போது, நம்மைப் போன்று க்ஷத்திரிய நோன்பை நோற்றாலும், அறிவில்லாத எவன்தான் போரிடாமல் இருப்பான்?(57) கோபக்கார எதிரியான பீமசேனனுடைய சக்தியின் கீழ் நீங்கள் உங்களை நிறுத்திக் கொள்ளப் போகிறீர்களா? உங்கள் தந்தைமாரும், பாட்டன் மாரும் நோற்ற {க்ஷத்திரியக்} கடமையைக் கைவிடுவது உங்களுக்குத் தகாது.(58) போரில் இருந்து தப்பி ஓடுவதைவிட ஒரு பெரிய பாவம் க்ஷத்திரியனுக்கு வேறில்லை. கௌரவர்களே, போர்க்கடமையைவிட, சொர்க்கத்திற்கான அருளப்பட்ட வழி வேறேதும் இல்லை. போர்வீரர்களே, போரில் கொல்லப்பட்டு, தாமதமில்லாமல் சொர்க்கத்தை அனுபவிப்பீராக” என்றான் {துரியோதனன்}.”(59)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “உமது மகன் இவ்வார்த்தைகளைச் சொன்ன போது, மிகவும் சிதைக்கப்பட்டிருந்த (கௌரவப்) போர்வீரர்கள், அந்தப் பேச்சையும் கருதிப் பாராமல் {அலட்சியம்} செய்து, அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினார்கள்” {என்றான் சஞ்சயன்}”(60)

சங்குகளை முழக்கிய அர்ஜுனனும்! கிருஷ்ணனும்!! – கர்ண பர்வம் பகுதி – 94-களத்தில் நேர்ந்த பேரழிவைத் துரியோதனனுக்கு விளக்கிச் சொன்ன சல்லியன்; இரவு ஓய்வுக்காகத் துருப்புகளைத் திரும்ப அழைக்குமாறு சொன்ன சல்லியன்; கர்ணனின் நிமித்தமாகத் துரியோதனன் அடைந்த துயரம்; கர்ணன் வீழ்ந்ததும் தென்பட்ட சகுனங்கள்; தங்கள் சங்குகளை முழக்கிய அர்ஜுனனும், கிருஷ்ணனும்; வீரத்திற்காக அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் வழிபட்ட தேவர்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “முகத்தில் பயத்துடன் கூடியவனும், துயரத்தால் இதயம் மலைத்திருந்தவனும், துருப்புகளைத் திரட்டிக் கொண்டிருந்தவனுமான உமது மகனை {துரியோதனனைக்} கண்ட மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, அந்தத் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(1)

சல்லியன் {துரியோனனிடம்}, “ஓ! வீரா {துரியோதனா}, கொல்லப்பட்ட மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் குவியல்களால் மறைக்கப்பட்டிருக்கும் இந்தப் பயங்கரமான போர்க்களத்தைப் பார். மலைகளைப் போலப் பெரியவையும், அதிகமாகச் சிதைக்கப்பட்டவையும், கணைகளால் முக்கிய அங்கங்கள் துளைக்கப்பட்டவையும், ஆதரவற்று கிடப்பவையும், உயிரை இழந்தவையும், கவசம் இடம்பெயர்ந்தவையுமான விழுந்துவிட்ட யானைகளாலும், அவை தரித்திருந்தவையும், இப்போது சிதறிக்கிடப்பவையுமான ஆயுதங்கள், கவசங்கள், வாள்கள் ஆகியவற்றால் சில பாதைகள்  மறைக்கப்பட்டிருக்கின்றன. விழுந்துவிட்ட இந்த விலங்குகள், இடியால் பிளக்கப்பட்டு, பாறைகள், உயர்ந்த மரங்கள், கொடிகள் ஆகியவை தளர்ந்து, சுற்றிலும் சிதறிக் கிடக்கும் பெரும் மலைகளுக்கு ஒப்பாக இருக்கின்றன.(2,3) அந்தப் பெரும் விலங்குகள் தரித்திருந்த மணிகள், இரும்பு அங்குசங்கள், வேல்கள், கொடிமரங்கள் ஆகியவை தரையில் சிதறிக் கிடக்கின்றன. தங்க அம்பாரிகளால் அலங்கரிக்கப்பட்ட அவற்றின் உடல்கள் இப்போது குருதியில் குளித்திருக்கின்றன. மேலும் கணைகளால் சிதைக்கப்பட்டு, வலியால் கடினமாக மூச்சுவிட்டுக் கொண்டு, குருதியைக் கக்குபவையும் விழுந்துவிட்டவையுமான குதிரைகளால் சில பாதைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன.(4) அவற்றில் சில பலவீனமான ஒலியுடன் ஓலமிடுகின்றன, உருளும் கண்களுடன் சில பூமியைக் கடிக்கின்றன, சில பரிதாபகரமாகக் கனைக்கின்றன. குதிரைவீரர்களாலும், தங்கள் விலங்குகளில் இருந்து விழுந்துவிட்ட யானைவீரர்களாலும், தங்கள் தேர்களில் இருந்து பலவந்தமாகத் தூக்கி வீசப்பட்ட தேர்வீரர்களின் கூட்டங்களாலும் களத்தின் சில பகுதிகள் மறைக்கப்பட்டிருக்கின்றன.(5)

அவற்றில் சில ஏற்கனவே இறந்துவிட்டன, மேலும் சில மரணத்தருவாயில் இருக்கின்றன. தேர்களாலும், மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றின் சடலங்களாலும், துதிக்கைகளும், அங்கங்களும் வெட்டப்பட்ட பெரும் யானைகளாலும் மறைக்கப்பட்ட பூமியானது, (யமனின் ஆட்சிப்பகுதியில் பாயும்) பெரும் வைதரணீயை {வைதரணீ நதியைப்} போலப் பயங்கரமாகத் தெரிகிறது.(6) நடுங்கும் உடல்களுடன் தரையில் கிடப்பவையும், தந்தங்கள் உடைந்தவையும், குருதி கக்குபவையும், வலியால் தீனமாக அழுபவையும், தங்கள் முதுகுகளில் இருந்த போர்வீரர்களை இழந்தவையும், தங்கள் அங்கங்களை மறைத்திருந்த கவசங்களை இழந்தவையும், தங்கள் பக்கங்கள் மற்றும் பின்புறத்தைப் பாதுகாத்த காலாட்படை வீரர்களை இழந்தவையும், அம்பறாத்தூணிகள், கொடிகள், கொடிமரங்கள் இடம்பெயர்ந்தவையும், தங்க அம்பாரிகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கள் உடல்கள் எதிரியின் ஆயுதங்களால் ஆழமாகத் தாக்கப்பட்டவையுமான யானைகள் சிதறிக் கிடந்த பூமியானது அவ்வாறே {வைதரணீ நதியைப் போலப் பயங்கரமானதாக} இருக்கிறது.(7) விழுந்துவிட்டவர்களும், பெரும் புகழைக் கொண்டவர்களுமான யானைவீரர்கள், குதிரைவீரர்கள், தேர்வீரர்கள், முகத்துக்கு முகமாகப் போரிட்டு எதிரிகளால் கொல்லப்பட்டவர்களும், கவசங்கள், ஆபரணங்கள், ஆடைகள், ஆயுதங்கள் ஆகியவற்றை இழந்தவர்களுமான காலாட்படைவீரர்கள் ஆகியோரின் உடல்கள் சிதறிக் கிடப்பதன் விளைவாகப் பூமியானது, மேகங்களால் மறைக்கப்பட்ட ஆகாயத்தைப் போலத் தெரிகிறது.(8) கணைகளால் சிதைக்கப்பட்டவர்களும், காட்சியில் முழுமையாக வெளிப்பட்டவர்களும், சுயநினைவை இழந்திருந்தவர்களும், விழுந்துவிட்டவர்களும், மெல்ல மூச்சு விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தவர்களுமான ஆயிரக்கணக்கான போராளிகளால் மறைக்கப்பட்டிருந்த பூமியானது, அணைக்கப்பட்ட நெருப்புகளால் மறைக்கப்பட்டதைப் போலத் தெரிகிறது.(9) கணைகளால் துளைக்கப்பட்டு, பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கர்ணனால் உயிரையிழந்த குருக்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகிய இரு தரப்பு முதன்மையான வீரர்களுடன் கூடிய பூமியானது, ஆகாயத்தில் இருந்து விழுந்த சுடர்மிக்கக் கோள்களால் விரவிக் கிடப்பதைப்போல, அல்லது, சுடர்மிக்கக் கோள்கள் சிதறிக் கிடக்கும் இரவு நேர வானத்தைப் போலத் தெரிகிறது[1].(10)

கர்ணன் மற்றும் அர்ஜுனனின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட கணைகள், யானைகள், குதிரைகள் மனிதர்கள் ஆகியோரின் உடல்களைத் துளைத்து, அவற்றின் உயிர்களை நிறுத்தி, கீழ்நோக்கிய தலையுடன் தங்கள் பொந்துக்குள் நுழையும் பெரும்பாம்புகளைப் போலப் பூமிக்குள் சென்றன.(11) கொல்லப்பட்டுக் குவிந்து கிடக்கும் மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளாலும், தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் அதிரதன் மகனின் {கர்ணனின்} கணைகளால் உடைக்கப்பட்ட தேர்களாலும், அவர்களால் ஏவப்பட்ட எண்ணற்ற கணைகளாலும் பூமியானது கடக்கப்பட முடியாததாக இருக்கிறது.(12) வலிமைமிக்கக் கணைகளால் நொறுக்கப்பட்டவையும், அவற்றில் இருந்த போர்வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் கொடிமரங்களுடன் கூடியவையும், நன்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்தவையுமான தேர்கள், தங்கள் இணைப்புகள் உடைந்து, அச்சுகள், நுகத்தடிகள், திரிவேணு ஆகியவை துண்டுகளாகக் குறைக்கப்பட்டு, சக்கரங்கள் தளர்ந்து, உபஷ்கரங்கள் அழிக்கப்பட்டு, அனுஷ்கரங்கள் துண்டுகளாக வெட்டப்பட்டு, அம்பறாத்தூணிகளின் இணைப்புகள் வெட்டப்பட்டு, தேர்த்தட்டுகள் உடைந்து களத்தில் விரவி கிடக்கின்றன. தங்கம் மற்றும் இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அந்த வாகனங்களால் விரவிக் கிடக்கும் பூமியானது, கூதிர்கால மேகங்களால் விரவிக் கிடக்கும் ஆகாயத்தைப் போலத் தெரிகிறது.(13,14) நன்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்த அரசத் தேர்கள், தங்கள் சாரதிகளை இழந்து, குதிரைகளால் வேகமாக இழுக்கபடுவதன் விளைவாலும், மிக வேகமாகத் தப்பி ஓடும் மனிதர்கள், யானைகள், தேர்கள் மற்றும் குதிரைகளின் விளைவாலும் படையானது பல்வேறு வழிகளில் பிளக்கின்றது.(15)

தங்க மணிகளைக் கொண்ட முள் பதித்த கதாயுதங்கள் {பரிகங்கள்}, போர்க்கோடரிகள், கூரிய வேல்கள், கனமான தண்டங்கள், உலக்கைகள், உரையிலிருந்து உருவப்பட்ட பிரகாசமான வாள்கள், தங்கத் துணியால் மறைக்கப்பட்ட கதாயுதங்கள் ஆகியன களத்தில் விழுந்து கிடக்கின்றன.(16) தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட விற்கள், பசும்பொன்னால் ஆன அழகிய சிறகுகளைக் கொண்ட கணைகள், மிகக் கடினமானவையும், நீளமானவையுமான குத்து வாள்கள், வேல்கள், தங்கத்தைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய கத்திகள், குடைகள், விசிறிகள், சங்குகள், சிறந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்கள், யானை அம்பாரிகள், கொடிமரங்கள், தேர்க்கூடுகள், கிரீடங்கள், கழுத்தணிகள், பிரகாசமான மகுடங்கள்,(18) ஓ! மன்னா {துரியோதனா}, வெண்சாமரங்கள், முத்து மற்றும் வைடூரியங்களால் ஒளிரும் மாலைகள், தலையில் உள்ள தலைப்பாகைகள், மணிக்கட்டு மற்றும் தோள்களுக்கான வளைகள், தங்க இழைகளுடன் கூடிய கழுத்தணிகள்,(19] பல்வேறு வகைகளிலான விலைமதிப்புமிக்க வைரங்கள், ரத்தினங்கள், முத்துக்கள், ஆடம்பரத்தில் வளர்ந்த உடல்கள், சந்திரனைப் போன்ற அழகான தலைகள் ஆகியன அங்கே சிதறிக் கிடக்கின்றன.(20) உடல்கள், ஆடைகள், பல்வேறு வகைகளிலான இன்ப விளையாட்டுகள் ஆகியவற்றைக் கைவிட்டு, அர்ப்பணிப்புடன் பெரும் தகுதியை அடைந்து, தங்கள் வகைக்கான அறத்தை வெளிப்படுத்திய அவர்கள் {போர்வீரர்கள்}, புகழ்ச்சுடரோடு கூடியவர்களாக வேகமாக அருள் உலகங்களுக்குச் சென்றனர்.(21) ஓ! துரியோதனா, திரும்புவாயாக. துருப்புகளும் ஓயட்டும். ஓ! மன்னா {துரியோதனா}, கௌரவங்களை அளிப்பவனே, உன் முகாமை நோக்கிச் செல்வாயாக. ஓ! மனிதர்களில் ஆட்சியாளனே, நீயே இவை யாவற்றுக்கும் காரணமாவாய்” என்றான் {சல்லியன்}.

துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன சல்லியன், இதயம் நிறைந்த வேதனையுடன் அங்கேயே நின்றான். எனினும், அந்நேரத்தில் மிகவும் பீடிக்கப்பட்டவனான துரியோதனன், தன் புலன்களை இழந்து, கண்ணீரால் குளித்த கண்களுடன், “ஓ! கர்ணா! ஓ! கர்ணா!” என்று சொல்லி சூதன் மகனுக்காக {கர்ணனுக்காக} அழுதான்.(23) அப்போது துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} தலைமையிலான மன்னர்கள் அனைவரும், மீண்டும் மீண்டும் துரியோதனனுக்கு ஆறுதலளித்து, புகழால் சுடர்விடுவதாகத் தெரிந்த அர்ஜுனனின் உயர்ந்த கொடிமரத்தை அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டே தங்கள் முகாம்களுக்குச் சென்றனர்.(24) அனைத்தும் பிரகாசமாகத் தெரிந்த அந்தப் பயங்கர வேளையில், அடுத்த உலகிற்குச் செல்லத் தீர்மானித்தவர்களும், குருதியால் மறைக்கப்பட்டதன் விளைவால், தங்கள் குணங்களை உணர முடியாதவர்களுமான கௌரவர்கள் அனைவரும், சிவப்பு ஆடைகள், மலர் மாலைகள் மற்றும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அரசவை மங்கையைப் போல, மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றின் உடல்களில் இருந்து பாய்ந்த குருதியில் குளித்திருந்த பூமியைக் கண்டு அங்கே நிற்க இயலாதவர்களானார்கள்.(25,26)

கர்ணன் கொல்லப்பட்டதால் கவலையில் நிறைந்த அவர்கள், “ஐயோ கர்ணா! ஐயோ, கர்ணா!” என்று உரக்க அழுது புலம்பினர். சூரியன் சிவப்பு நிறத்தை ஏற்பதைக் கண்ட அவர்கள் அனைவரும், வேகமாகத் தங்கள் முகாமை நோக்கிச் சென்றனர்.(27) கர்ணனைப் பொறுத்தவரை, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டதும், குருதி தோய்ந்த இறகுகளைக் கொண்டதும், கல்லில் கூராக்கப்பட்டதும், தங்கச் சிறகைக் கொண்டதுமான கணையால் துளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டாலும், அந்த வீரன் பிரகாசமான கதிர்களைக் கொண்ட சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் தரையில் கிடந்தான்.(28) தன்னை வழிபடுவோரிடம் எப்போதும் அன்புடன் இருக்கும் சிறப்புமிக்கச் சூரியன், குருதியால் நனைந்த கர்ணனின் உடலைத் தீண்டி, துயரத்தால் சிவந்த தன்மையை அடைந்து, நீராட விரும்பி வேறு {மேற்கு} கடலுக்குச் சென்றதைப் போலவே அப்போது தெரிந்தது[2].(29) அப்படியே நினைத்துக் கொண்டு, (அந்தப் போரைக் காண அங்கே வந்திருந்த) தேவர்கள் மற்றும் முனிவர்களின் கூட்டங்களும், காட்சியை விட்டகன்று தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் சென்றனர். மற்ற உயிரினங்களின் பெருங்கூட்டமும், அதையே நினைத்துக் கொண்டு, சொர்க்கத்திற்கோ, பூமிக்கோ சென்றனர்.(30)

குரு வீரர்களில் முதன்மையானோரும் கூட, தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் அதிரதன் மகனுக்கு {கர்ணனுக்கு} இடையில் நடைபெற்றதும், அனைத்து உயிரினங்களுக்கும் அச்சத்தையூட்டியதுமான அற்புதமான போரைக் கண்டு, ஆச்சரியத்தால் நிறைந்து, (அம்மோதலைப்) புகழ்ந்து (தங்கள் இரவு வசிப்பிடத்திற்கு) சென்றனர்.(31) கணைகளால் கவசம் வெட்டப்பட்டிருந்தாலும், அந்தப் பயங்கரப் போரில் கொல்லப்பட்டிருந்தாலும், அந்த ராதை மகனின் அழகான தன்மைகள் எதுவும் இறந்தபின்னும் அவனை விட்டு அகலவில்லை.(32) உண்மையில், அந்த வீரனின் உடலானது, புடம்போட்ட தங்கத்துக்கு ஒப்பாக இருப்பதை அனைவரும் கண்டனர். உயிருடன் கூடியதாகவும், நெருப்பு, அல்லது சூரியனின் பிரகாசத்தைக் கொண்டதாகவும் அது தெரிந்தது.(33) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, களத்தில் இறந்து கிடக்கும் சூதன் மகனை {கர்ணனைக்} கண்ட போர்வீரர்கள் அனைவரும் சிங்கத்தைக் கண்ட வேறு விலங்குகளைப் போல அச்சமடைந்தனர்.(34) உண்மையில், அந்த மனிதர்களில் புலி இறந்து கிடந்தாலும், தன் உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தயாராக இருப்பவனைப் போலவே {அப்போதும்} தெரிந்தான். அந்தச் சிறப்புமிக்கச் சடலத்தில் எதுவும் மாறியிருப்பதாகத் தெரியவில்லை.(35)

அழகிய ஆடையுடுத்தி, மிக அழகிய கழுத்துடன் கூடிய சூதன் மகனின் முகமானது, காந்தியுடன் கூடிய முழு நிலவுக்கு ஒப்பானதாக இருந்தது.(36) பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, பிரகாசமான தங்கத்தாலான அங்கதங்களால் அலங்கரிக்கப்படிருந்த அந்த வைகர்த்தனன் {கர்ணன்}, கொல்லப்பட்டாலும், கிளைகள் மற்றும் கொப்புகளால் அலங்கரிக்கப்பட்ட பெரும் மரம் ஒன்றைப் போலவே நீண்டு கிடந்தான்.(37) உண்மையில், அந்த மனிதர்களில் புலி, பசும்பொன்னின் குவியலைப் போலவோ, பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} கணை எனும் நீர் கொண்டு அணைக்கப்பட்ட சுடர்மிக்க நெருப்பைப் போலவோ இருந்தான்.(38) நீரின் தீண்டலால் அணைந்த காட்டுத் தீயைப் போலவே அந்தப் போரில் கர்ணத்தீயானது அர்ஜுன மேகத்தால் அணைக்கப்பட்டது.(39) கணைமாரிகளை ஏவி, திசைகளின் பத்து புள்ளிகளையும் எரித்தவனும், மனிதர்களில் புலியுமான அந்தக் கர்ணன், தன் மகன்களுடன் சேர்த்து பார்த்தனின் சக்தியால் அமைதிப்படுத்தப்பட்டான். பூமியில் நியாயமான போரால் ஈட்டிய மகிமையையும் புகழையும் எடுத்துக் கொண்டு அவன் {கர்ணன்} அடுத்த உலகத்திற்குச் சென்றான்.(40)

தன் ஆயுதங்களின் சக்தியால் பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் எரித்துக் கணைமாரிகளைப் பொழிந்து, பகைவரின் படையணிகளை எரித்து,(41) பேரழகுடைய ஆயிரங்கதிர் சூரியனால் வெப்பமூட்டப்பட்ட அண்டத்தைப் போலவே, வைகர்த்தனன் என்றும் அழைக்கப்பட்ட அந்தக் கர்ணன், தன் மகன்கள் மற்றும் தொண்டர்களுடன் இந்த உலகை விட்டுச் சென்றான்.(42) தகுந்தோரான இந்தப் பறவை கூட்டங்களுக்குக் கல்ப மரமாக இருந்த அந்த வீரன் இவ்வாறே வீழ்ந்தான். தகுந்தோரால் வேண்டப்படும்போது அவன் {கர்ணன்}, “நான் தருகிறேன்” என்றே எப்போதும் சொன்னானேயன்றி, “என்னிடம் இல்லை” என்ற வார்த்தைகளை ஒரு போதும் சொன்னதே இல்லை.(43) நல்லோர் எப்போதும் அவனை அறவோனாகவே கருதினர். அந்தத் தனிப்போரில் வீழ்ந்த விருஷன் {கர்ணன்}, இவ்வாறானவனாகவே இருந்தான். அந்த உயர் ஆன்மா கொண்டோனின் செல்வங்கள் அனைத்தும் பிராமணர்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டிருந்தன. அவன் பிராமணர்களுக்குக் கொடுக்க மாட்டான் என்று சொல்ல ஏதுமில்லை, ஏன் அவன் உயிரையே கூடப் பிராமணர்களுக்காகக் கொடுப்பான்.(44) அவன் எப்போதும் மாதர்களுக்குப் பிடித்தமானவனாகவும், மிகவும் தாராளம் வாய்ந்தவனாகவும், வலிமைமிக்கத் தேர்வீரனாகவும் இருந்தான். பார்த்தனின் {அர்ஜுனனின்} ஆயுதங்களால் எரிக்கப்பட்ட அவன், இவ்வாறு உயர்ந்த முடியவையே அடைந்தான்[3].(45)

எவனை நம்பி உமது மகன் {துரியோதனன்} பகைமைகளைத் தூண்டினானோ, அவன் {கர்ணன்} தன்னுடன் கௌரவர்களின் வெற்றி நம்பிக்கை, மகிழ்ச்சி, கவசம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு இவ்வாறே சொர்க்கத்திற்குச் சென்றான்.(46) கர்ணன் வீழ்ந்தபோது, ஆறுகள் அசையாமல் நின்றன. மங்கிய நிறத்துடன் சூரியன் மறைந்தான். சோமனின் மகனான, புதன் கோளானவன், நெருப்பு, அல்லது சூரியனின் வண்ணத்தை ஏற்று, ஆகாயத்தில் சாய்வுக்கோணத்தில் செல்வதைப் போலத் தெரிந்தது.(47) ஆகாயமே இரண்டாகப் பிளந்ததைப் போலவும் தெரிந்தது; பூமி உரக்க முழங்கியது; பலமானதும், பயங்கரமானதுமான காற்று வீசத் தொடங்கியது. அடிவானின் புள்ளிகள் அனைத்தும் புகையால் மறைக்கப்பட்டு எரிவதாகத் தெரிந்தது. பெருங்கடல்கள் கலங்கி பயங்கரமான ஒலிகளை எழுப்பின.(48) காடுகளுடன் கூடிய மலைகள் நடுங்கத் தொடங்கின, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அனைத்து உயிரினங்களும் வலியை உணர்ந்தன {துன்புற்றன}. வியாழன் கோளானது, ரோஹினி நட்சத்திரக்கூட்டத்தைப் பீடித்து, சந்திரன், அல்லது சூரியனின் வண்ணத்தை ஏற்றது.(49) கர்ணனின் வீழ்ச்சியால் துணைத்திசைகளும் கூட எரிந்தன. ஆகாயம் இருளால் மூடப்பட்டது. பூமி நடுங்கியது. சுடர்மிக்கக் காந்தியுடன் கூடிய எரிநட்சத்திரங்கள் வீழ்ந்தன. ராட்சசர்களும், பிற இரவு உலாவிகளும் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(50)

அர்ஜுனன், அந்தக் கத்திமுனைக் கணையை {அஞ்சலிகத்தைக்} கொண்டு, சந்திரனைப் போன்ற அழகான முகத்தால் அலங்கரிக்கப்பட்ட கர்ணனின் தலையைத் தாக்கி வீழ்த்திய போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சொர்க்கம், ஆகாயம் மற்றும் பூமியில் உள்ள உயிரினங்கள் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கதறுவது கேட்டது.(51) தேவர்கள், கந்தவர்கள் மற்றும் மனிதர்களால் வழிபடப்பட்டவனும், தன் எதிரியுமான கர்ணனைப் போரில் கொன்ற பிறகு, பிருதையின் மகனான அர்ஜுனன், விருத்திரனைக் கொன்ற ஆயிரங்கண் தேவனை {இந்திரனைப்} போலச் சக்தியில் பிரகாசமாகத் தெரிந்தான்.(52) மேகங்களின் முழக்கங்களுக்கு ஒப்பான சடசடப்பொலியைக் கொண்டதும், கூதிர்காலத்தின் நடுவான சூரியனைப் போன்ற காந்தியைக் கொண்டதும், கொடிகளால் அலங்கரிக்கப்பட்டதும், அடிக்கடி பயங்கர ஒலியை உண்டாக்கும் கொடிமரத்தைக் கொண்டதும், பனி, அல்லது சூரியன், அல்லது சங்கு அல்லது பளிங்குக்கு ஒப்பான பிரகாசம் கொண்டதும்,(53) இந்திரனின் குதிரைகளைப் போன்ற குதிரைகளையே கொண்டதுமான அந்தத் தேரில் சென்று கொண்டிருந்தவர்களும், பெரும் இந்திரனுக்கு ஒப்பான சக்தியைக் கொண்டவர்களும், தங்கம், முத்துக்கள், ரத்தினங்கள், வைரங்கள் மற்றும் வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், நெருப்பு, அல்லது சூரியனைப் போன்ற காந்தி கொண்டவர்களுமான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மற்றும் கேசினைக் கொன்றவன் {கிருஷ்ணன்} ஆகிய அந்த மனிதர்களில் முதன்மையானோர் இருவரும், ஒரே தேரில் செல்லும் விஷ்ணுவையும், வாசவனையும் போல அச்சமில்லாமல் அந்தப் போர்க்களத்தில் பெரும் வேகத்துடன் சென்று கொண்டிருந்தனர்.(54,55)

காண்டீவத்தின் நாணொலியாலும், உள்ளங்கை அறைகளாலும் எதிரியைக் காந்தியிழந்தவனாகச் செய்தவர்களும், கணைமாரிகளால் குருக்களைக் கொன்றவர்களும், அளவிலா சக்தியைக் கொண்டவர்களுமான குரங்குக் கொடியோன் அர்ஜுனன், கருடக் கொடியோன் கிருஷ்ணன்(56) ஆகிய அந்த மனிதர்களில் முதன்மையானோர் இருவரும், மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாக, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பனியைப் போன்று வெண்மையானவையும், பேரொலி எழுப்புபவையுமான சங்குகளைத் தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டு, அவற்றைத் தங்கள் உதடுகளில் பொருத்தி, எதிரிகளின இதயங்களைத் துளைக்கும் ஒலியுடன் தங்கள் அழகிய வாய்களால் அவற்றை மீண்டும் மீண்டும் முழக்கினர்.(57) பாஞ்சஜன்யம் மற்றும் தேவதத்தத்தின் சங்குலிகள், பூமி, ஆகாயம் மற்றும் சொர்க்கம் ஆகியவற்றை நிறைத்தன.(58) வீர மாதவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் அந்தச் சங்கொலிகளால், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, கௌரவர்கள் அனைவரும் அச்சத்தால் நிறைந்தனர்.(59) தங்கள் சங்கொலிகளால், காடுகள், மலைகள், ஆறுகள், திசைப்புள்ளிகள் ஆகியவற்றை எதிரொலிக்கச் செய்த அந்த மனிதர்களில் முதன்மையானோர், அவ்வொலியால் யுதிஷ்டிரனை மகிழச் செய்தனர்.(60)

இவ்வாறு முழக்கப்பட்ட அந்தச் சங்கொலிகளைக் கௌரவர்கள் கேட்டதும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்கள் அனைவரும், மத்ர ஆட்சியாளன் {சல்லியன்} மற்றும் பாரதர்களின் தலைவனான துரியோதனன் ஆகியோரை விட்டுவிட்டு பெரும் வேகத்துடன் களத்தை விட்டகன்றனர்.(61) அப்போது ஒன்று சேர்ந்திருந்த பல்வேறு உயிரினங்கள், உதயச் சூரியன்கள் இரண்டைப் போலத் தெரிந்தவர்களும், போர்க்களத்தில் பிரகாசமாக ஒளிர்ந்தவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களுமான வீரர்களான தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்}, ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} வாழ்த்தின.(62) கர்ணனின் கணைகளால் துளைக்கப்பட்டவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான அச்யுதன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகியோர் இருவரும், பல கதிர்களைக் கண்ட சந்திரனையும் சூரியனைப் போல இருளை அகற்றிப் பிரகாசமாக ஒளிர்வதாகத் தெரிந்தனர்.(63) அந்தக் கணைகளைப் பிடுங்கியவர்களும், ஒப்பற்ற ஆற்றலைக் கொண்டவர்களுமான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவரும், நலன்விரும்பிகள் மற்றும் நண்பர்களால் சூழப்பட்டு, வேள்விப் புரோகிதர்களால் முறையாக இருப்புக்கு அழைக்கப்படும் வாசவனையும் {இந்திரனையும்}, விஷ்ணுவையும் போலத் தங்கள் பாசறைக்குள் மகிழ்ச்சியாக நுழைந்தனர்.(64) அந்தப் பயங்கரமான போரில் கர்ணன் கொல்லப்பட்டதும், தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள், சாரணர்கள், பெருமுனிவர்கள், யக்ஷர்கள், பெரும் நாகர்கள் ஆகியோர் கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் பெருமதிப்புடன் வழிபட்டு, (அனைத்து காரியங்களிலும்) அவர்கள் வெற்றியடைய வாழ்த்தினர்.(65) அப்போது தங்கள் நண்பர்கள் ஒவ்வொருவரையும் அவர்களின் வயதுக்கத்தக்கபடி வரவேற்று, பதிலுக்கு அந்த நண்பர்களால் தங்கள் ஒப்பற்ற சாதனைகளுக்காகப் பாராட்டப்பட்ட அந்த வீரர்கள் இருவரும், பலியை {மகாபலியை} வீழ்த்திய பிறகு இருந்த தேவர்கள் தலைவனையும் {இந்திரனும்}, விஷ்ணுவையும் போலத் தங்கள் நண்பர்களுடன் மகிழ்ந்திருந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(66)

பாசறைக்குத் திரும்பிய கௌரவர்கள்! – கர்ண பர்வம் பகுதி – 95-கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு, களத்தில் இருந்து ஓயச் சென்ற கௌரவர்களின் வரிசைமுறை…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வைகர்த்தனன் என்றும் அழைக்கப்பட்ட கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அச்சத்தால் பீடிக்கப்பட்டு, வெறும் வெளியில் தங்கள் கண்களைச் செலுத்தியபடியே அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(1) உண்மையில், எதிரியால் வீரக் கர்ணன் கொல்லப்பட்டான் என்பதைக் கேட்டதும், அச்சத்தால் மலைத்த உமது துருப்புகள் அனைத்தும் பிளந்து, அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடின.(2) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கவலையால் நிறைந்த குரு தலைவர்கள், தப்பி ஓடுவதில் இருந்து யாரை உமது மகன் {துரியோதனன்} தடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தானோ அந்தத் தலைவர்கள் தங்கள் துருப்புகளைத் திரும்ப அழைக்க விரும்பினர்.(3) அவர்களின் விருப்பத்தைப் புரிந்து கொண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! பாரதகுலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சல்லியனின் ஆலோசனைப்படி செயல்பட்டு படையைத் திரும்ப அழைத்தான்.(4)

அப்போது கிருதவர்மன், ஓ! பாரதரே, உமது படையில் கொல்லப்படாமல் எஞ்சியிருந்த நாராயணத் துருப்புகள் சூழ வேகமாகப் பாசறையை நோக்கிச் சென்றான்.(5) ஆயிரக்கணக்கான காந்தாரர்கள் சூழ இருந்த சகுனி, அதிரதன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டதைக் கண்டு, வேகமாகப் பாசறையை நோக்கிச் சென்றான்.(6) சரத்வானின் மகனான கிருபர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மேகத் திரள்களுக்கு ஒப்பான ஒரு பெரும் யானைப்படையால் சூழப்பட்டு வேகமாகப் பாசறையை நோக்கிச் சென்றார்.(7) பாண்டவர்களின் வெற்றியைக் கண்டு நீண்ட பெருமூச்சுகளை மீண்டும் மீண்டும் விட்ட வீர அஸ்வத்தாமன் வேகமாகப் பாசறையை நோக்கிச் சென்றான்.(8) கொல்லப்படாமல் எஞ்சியிருந்த சம்சப்தகர்களால் இன்னும் ஒரு பெரிதாகவே இருந்த அந்தப் படையால் சூழப்பட்ட சுசர்மனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சமுற்ற அந்தப் படைவீரர்களின் மேல் தன் கண்களைச் செலுத்தியபடியே சென்றான்.(9)

ஆழமாகப் பீடிக்கப்பட்டவனும், அனைத்தையும் இழந்தவனுமான மன்னன் துரியோதனன், இதயம் நிறைந்த துயருடன், மகிச்சியற்ற சிந்தனைகள் பலவற்றுக்கு இரையாகியபடியே சென்று கொண்டிருந்தான்.(10) தேர்வீரர்களில் முதன்மையான அந்தச் சல்லியன், அனைத்துப் பக்கங்களிலும் தன் கண்களைச் செலுத்தியபடியே கொடிமரத்தை இழந்த அந்தத் தேரில் பாசறையை நோக்கிச் சென்றான்.(11) இன்னும் பெரும் எண்ணிக்கையில் இருந்த பாரதப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறர், அச்சத்தால் பீடிக்கப்பட்டும், வெட்கத்தால் நிறைந்தும், கிட்டத்தட்ட தங்கள் உணர்வுகளை இழந்த நிலையில் வேகமாகத் தப்பி ஓடினர்.(12) உண்மையில், கர்ணன் வீழ்த்தப்பட்டதைக் கண்ட கௌரவர்கள் அனைவரும், அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களும் கவலையுற்றவர்களுமாகக் கண்ணீரால் தடைபட்ட குரல்களுடன் நடுங்கிக் கொண்டே தப்பி ஓடினர்.(13) ஓ! குரு குலத்தின் தலைவரே {திருதராஷ்டிரரே}, குரு படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களில் சிலர் அர்ஜுனனைப் பாராட்டினர், சிலர் கர்ணனைப் பாராட்டினர்.(14)

அந்தப் பெரும்போரில் உமது படையின் ஆயிரக்கணக்கான போர்வீரர்களுக்கு மத்தியில் அதற்கு மேலும் போரிட விரும்பிய எந்த ஒரு மனிதனும் அங்கே இல்லை.(15) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கர்ணனின் வீழ்ச்சிக்குப் பிறகு, வாழ்வு, அரசு, மனைவியர், செல்வம் ஆகியவற்றில் கௌரவர்கள் நம்பிக்கையற்றவர்கள் ஆனார்கள்.(16) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அவர்களைக் கவனமாக வழிநடத்திய உமது மகன் {துரியோதனன்}, துயரத்தாலும், கவலையாலும் நிறைந்தவனாகி, இரவில் அவர்களை ஓய்வெடுக்கச் செய்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(17) அந்தப் பெரும் தேர்வீரர்களும், ஓ! ஏகாதிபதி, அவனது ஆணைகளைச் சிரந்தாழ்ந்து ஏற்று, உற்சாகமற்ற இதயங்களுடனும், மங்கிய முகங்களுடனும் களத்தை விட்டு ஓயச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.(18)

வெற்றி கிருஷ்ணனுடையதே! – கர்ண பர்வம் பகுதி – 96-யுதிஷ்டிரனிடம் செல்லுமாறு அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் ஆரத்தழுவிக் கொண்ட யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனுக்கு வாழ்த்து தெரிவித்த கிருஷ்ணன்; வெற்றியானது கிருஷ்ணனுடையதே என்று சொன்ன யுதிஷ்டிரன், கர்ணனின் உடலைக் காண போர்க்களத்திற்கு வந்தது; பாண்டவப் பாஞ்சால வீரர்களால் வாழ்த்தப்பட்ட யுதிஷ்டிரன்; கர்ண பர்வத்தை உரைப்பதாலும், உரைப்பதைக் கேட்பதாலும் கிட்டும் பலன்கள்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இவ்வாறு கர்ணன் கொல்லப்பட்டு, கௌரவத் துருப்புகள் தப்பி ஓடிய பிறகு, மகிழ்ச்சியால் பார்த்தனை {அர்ஜுனனைத்} தழுவிக் கொண்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1) “{அசுரன்} விருத்திரன் வஜ்ரதாரியால் {இந்திரனால்} கொல்லப்பட்டான். கர்ணனோ உன்னால் கொல்லப்பட்டான். பயங்கரப் போரில் விருத்திரன் கொல்லப்பட்டதையும், கர்ணனின் படுகொலையையும் மனிதர்கள் (ஒரே அளவிலேயே) பேசுவார்கள்.(2) பெருஞ்சக்தி கொண்ட தேவனால் {இந்திரனால்} தனது வஜ்ரத்தைக் கொண்டு போரில் விருத்திரன் கொல்லப்பட்டான். உன்னால் வில்லையும், கூரிய கணைகளையும் கொண்டு கர்ணன் கொல்லப்பட்டான்.(3) ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, ஓ! பாரதா, உலகத்தில் நன்கு அறியப்படப் போவதும், உனக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தரக்கூடியதுமான இந்த உனது ஆற்றலைக் குறித்து நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரிடம் சென்று சொல்வாயாக.(4) போரில் எதைச் சாதிக்க நீண்ட வருடங்களாக நீ முயற்சி செய்து வந்தாயோ, அந்தக் கர்ணனின் படுகொலையை நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரிடம் சொல்லி, மன்னருக்கு {யுதிஷ்டிரருக்கு} நீ பட்டிருக்கும் கடனில் இருந்து விடுபடுவாயாக.(5) உனக்கும், கர்ணனுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிருந்தபோது, களத்தைக் காண்பதற்காகத் தர்மன் மகன் {யுதிஷ்டிரர்} ஒரு முறை {இங்கே} வந்தார்.(6) எனினும், (கணைகளால்) அதிகமாகவும் ஆழமாகவும் துளைக்கப்பபட்டிருந்த அவரால் {யுதிஷ்டிரரால்}, போரில் நிற்க இயலவில்லை” என்றான் {கிருஷ்ணன்}.(7)

பார்த்தன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, யது குலத்துக் காளையான கேசவனுக்கு {கிருஷ்ணனுக்குப்} பதிலளித்தான். பின்னவனும் {கிருஷ்ணனும்} உற்சாகமாக அந்த முதன்மையான தேரை அப்போது திரும்பச் செய்தான்.(8) இந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொன்ன கிருஷ்ணன், படைவீரர்களிடம், “நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. நீங்கள் அனைவரும் எதிரியை எதிர்த்துக் கவனமாக நிற்பீராக” என்றான்.(9) பிறகு அந்தக் கோவிந்தன் {கிருஷ்ணன்}, திருஷ்டத்யும்னன், யுதாமன்யு, மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, விருகோதரன் {பீமன்}, யுயுதானன் {சாத்யகி} ஆகியோரிடம்,(9) “மன்னர்களே, அர்ஜுனனால் செய்யப்பட்ட கர்ணனின் படுகொலையை மன்னருக்குத் {யுதிஷ்டிரருக்குத்} தெரிவித்துவிட்டு நாங்கள் திரும்பி வரும் வரையில் கவனமாக இங்கேயே நிற்பீராக” என்றான்.(11)

அந்த வீரர்களின் அனுமதியைப் பெற்ற பிறகே அவன் {கிருஷ்ணன்} மன்னன் {யுதிஷ்டிரன்} இருக்கும் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றான். பார்த்தனுடன் {அர்ஜுனனுடம்} சென்ற கோவிந்தன் {கிருஷ்ணன்}, தங்கத்தாலான சிறந்த படுக்கையில், மனிதர்களில் புலியான யுதிஷ்டிரன் கிடப்பதைக் கண்டான். பெரும் மகிழ்ச்சியோடு கூடிய அவ்விருவரும் மன்னனின் {யுதிஷ்டிரனின்} பாதத்தைத் தொட்டனர் {தொட்டு வணங்கினர்}.(12,13) அவர்களின் மகிழ்ச்சியையும், அவர்களது உடலில் இருந்த இயல்புக்கு மீறிய அதிகமான காயங்களையும் கண்ட யுதிஷ்டிரன், ராதையின் மகன் {கர்ணன்} இறந்து விட்டதாகக் கருதி தன் படுக்கையில் இருந்து வேகமாக எழுந்தான்.(4) எதிரிகளைத் தண்டிப்பவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, தன் படுக்கையில் இருந்து எழுந்து, வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் மீண்டும் மீண்டும் அன்புடன் தழுவிக் கொண்டான். பிறகு அந்தக் குரு குலத்தின் வழித்தோன்றல் {யுதிஷ்டிரன்}, வாசுதேவனிடம் (கர்ணனின் மரணத்தைக் குறித்த செய்திகளைக்) கேட்டான்.(15)

அப்போது, இனிய பேச்சைக் கொண்டவனும், யதுகுலத்தின் வழித்தோன்றலுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, கர்ணனின் மரணத்தைக் குறித்து உள்ளபடி நடந்தவாறே சரியாக அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான்.(16) அச்யுதன் என்றும் அழைக்கப்படும் அந்தக் கிருஷ்ணன், சிரித்துக் கொண்டே தன் உள்ளங்கைகளைக் கூப்பி, எதிரிகள் கொல்லப்பட்ட மன்னன் யுதிஷ்டிரனிடம்,(17) “வீரர்களுக்குப் பேரழிவைத் தந்ததும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தியதுமான இந்தப் போரில் இருந்து, காண்டீவதாரியும் {அர்ஜுனனும்}, பாண்டுவின் மகனான விருகோதரரும் {பீமரும்}, நீரும், மாத்ரியின் இரட்டை மகன்களும் {நகுலன் மற்றும் சகாதேவனும்} விடுபட்டது நற்பேறாலேயே.(18) 

ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, அடுத்து செய்யப்பட வேண்டியவற்றைச் செய்வீராக. பெரும் வலிமையைக் கொண்டவனும், வைகர்த்தனன் என்றும் அழைக்கப்பட்டவனுமான அந்தச் சூதன் மகன் கர்ணன் கொல்லப்பட்டான். ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, வெற்றி உமதானது நற்பேறாலேயே. ஓ! பாண்டுவின் மகனே, நற்பேறாலேயே நீர் வளர்கிறீர்.(19) பகடையில் வெல்லப்பட்ட கிருஷ்ணையை {திரௌபதியைக்} கண்டு சிரித்தவனும், மனிதர்களில் பொல்லாதவனுமான அந்தச் சூதன் மகனின் {கர்ணனின்} குருதியை இன்று பூமாதேவி குடித்தாள்.(20) ஓ! பாரதக் குலத்தின் காளையே, அந்த உமது எதிரி {கர்ணன்}, மேனியெங்கும் கணைகளால் துளைக்கப்பட்டு இன்று வெறுந்தரையில் கிடக்கிறான். கணைகளால் துளைக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் கிடக்கும் அந்த மனிதர்களில் புலியை {கர்ணனைக்} காண்பீராக.(21) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, உமது எதிரிகள் எவரும் அற்ற இந்தப் பூமியைக் கவனமாக ஆண்டு, அனைத்து வகை இன்பமான பொருட்களுடனும், எங்களோடும் மகிழ்ச்சியாக இருப்பீராக” என்றான் {கிருஷ்ணன்}.”(22)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “உயர் ஆன்மக் கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் மகிழ்ச்சியோடு பதிலுக்கு அந்தத் தாசார்ஹ குலத்து வீரனை {கிருஷ்ணனை} வழிபட்டு, “நற்பேறே, நற்பேறே” என்று சொன்னான்.(23) மேலும் அவன் {யுதிஷ்டிரன்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! தேவகியின் மகனே {கிருஷ்ணனா}, உன்னைத் தேரோட்டியாக அடைந்த பார்த்தனால் {அர்ஜுனனால்} மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளை அடையமுடியும் எனும்போது, இஃது உனக்கு ஆச்சரியமானது இல்லை” என்றான்.(24) பிறகு பிருதையின் {குந்தியின்} நீதிமிக்க மகனான அந்தக் குரு குலத் தலைவன் {யுதிஷ்டிரன்}, அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கேசவனின் {கிருஷ்ணனின்} வலக்கரத்தைப் பிடித்துக் கொண்டு, கேவசன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரிடமும்,(25) “நீங்கள் இருவரும், புராதனமானவர்களும், அறத்தை {நீதியைக்} காப்பதில் எப்போதும் ஈடுபடுபவர்களும், சிறந்த முனிவர்களுமான நர நாராயணர்கள் என்று நாரதர் என்னிடம் சொன்னார்.(26) பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்ட தலைவர் கிருஷ்ணதுவைபாயணரான உயர்ந்த அருளைக் கொண்ட அந்த வியாசரும் கூட இந்தத் தெய்வீக வரலாற்றை மீண்டும் மீண்டும் என்னிடம் சொல்லியிருக்கிறார்.(27) ஓ! கிருஷ்ணா, பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளை எதிர்த்து, எவரிடமும் புறமுதுகிடாமல் அவர்களை வென்றிருப்பது உனது செல்வாக்கினாலேயே. போரில் பார்த்தனுடைய சாரதிநிலையை நீ ஏற்றபோதே, தோல்வியையல்ல, வெற்றியையே அடைவோம் என்பது உறுதியாகிவிட்டது” என்றான் {யுதிஷ்டிரன்}.(29)

இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், மனிதர்களில் புலியும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், தந்தத்தைப் போன்ற வெண்ணிறம் கொண்டவையும், கருப்பு வால்களைக் கொண்டவையும், மனோவேகம் கொண்டவையுமான குதிரைகள் பூட்டப்பட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் தேரில் ஏறிக்கொண்டு, பல பாண்டவத் துருப்புகள் சூழப் புறப்பட்டு, ஆயிரக்கணக்கான சம்பவங்கள் நடைபெற்ற போர்க்களத்தைக் காண்பதற்காக, வழிநெடுக கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனிடம் இனிமையாகப் பேசிக் கொண்டே சென்றான்.(30,31) மாதவன் {கிருஷ்ணன்}, மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகிய இரு வீரர்களிடமும் பேசிக் கொண்டே சென்ற மன்னன் {யுதிஷ்டிரன்}, போர்க்களத்தில் கிடக்கும் மனிதர்களில் காளையான கர்ணனைக் கண்டான்.(32) உண்மையில், மன்னன் யுதிஷ்டிரன், நேரான இழைகளுடன் கூடிய கதம்ப மலரைப் போலக் கணைகளால் மேனியெங்கும் துளைக்கப்பட்டிருந்த கர்ணனைக் கண்டான்.(33) அந்த யுதிஷ்டிரன், நறுமணமிக்க எண்ணெய் நிறைந்த ஆயிரக்கணக்கான தங்க விளக்குகளின் ஒளியில் கர்ணனை {கர்ணனின் உடலைக்} கண்டான்.(34) காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கர்ணனையும், அவனது மகனையும் கண்ட மன்னன் யுதிஷ்டிரன்,(35) தன் கண்களை நம்புவதற்கு முன்பு, மீண்டும் மீண்டும் அவனைப் பார்த்தான்.

பிறகு மனிதர்களில் புலிகளான மாதவனையும் {கிருஷ்ணனையும்}, பல்குனனையும் {அர்ஜுனனையும்} புகழ்ந்த அவன்,(36) “ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, பெரும் விவேகத்தைக் கொண்ட நீ என் பாதுகாவலனாகவும், தலைவனாகவும் இருக்கும் விளைவால், என் தம்பிகளுடன் கூடிய நான் இன்று இந்தப் பூமியின் மன்னனாகிறேன்.(37) மனிதர்களில் புலியான செருக்கு மிக்க ராதையின் மகனுடைய {கர்ணனின்} கொலையைக் கேட்கும் திருதராஷ்டிரரின் தீய ஆன்ம கொண்ட மகன் {துரியோதனன்}, உயிர் மற்றும் அரசு ஆகிய இரண்டிலும் மனத்தளர்ச்சி அடைவான். ஓ! மனிதர்களில் காளையே {கிருஷ்ணா}, உன் அருளின் மூலமாகவே நாங்கள் எங்கள் நோக்கங்கள் நிறைவேறியவர்களானோம்.(38,39) எதிரி கொல்லப்பட்டது நற்பேறாலேயே. பாண்டுவின் மகனான காண்டீவதாரி {அர்ஜுனன்} வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டதும் நற்பேறாலேயே.(40) பதிமூன்று {13} வருடங்களை நாங்கள் விழிப்புடனும், பெரும் கவலையுடனுமே கழித்தோம். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உன் அருளால் நாங்கள் இந்த இரவில் மகிழ்ச்சியாக உறங்குவோம்” என்றான் {யுதிஷ்டிரன்}.(41) இவ்வாறே, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, ஓ! ஏகாதிபதி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்}, அர்ஜுனனையும் பெரிதாகப் புகழ்ந்தான்.”(42)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பார்த்தனின் கணைகளால் கர்ணனும், அவனது மகனும் கொல்லப்பட்டதைக் கண்டவனும், குருகுலத்தைத் தழைக்கச் செய்பவனுமான யுதிஷ்டிரன், மீண்டும் பிறப்பெடுத்தவனாகத் தன்னைக் கருதினான்.(48) (பாண்டவப் படையின்) மன்னர்களும், பெரும் தேர்வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்து, குந்தியின் மகனான யுதிஷ்டிரனை அணுகி, அவனைப் பெரிதும் மகிழ்ச்சியுறச் செய்தனர்.(44) சூதன் மகனின் {கர்ணனின்} படுகொலைக்குப் பின்னர், நகுலன், சகாதேவன், பாண்டுவின் மகனான விருகோதரன் {பீமன்}, விருஷ்ணித் தேர்வீரர்களில் முதன்மையானவனான சாத்யகி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன், சிகண்டி, பிற பாண்டுக்கள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் ஆகியோர் அந்தக் குந்தியின் மகனை {யுதிஷ்டிரனை} வழிபட்டனர்.(46) போரில் திளைப்பவர்களும், திறம்படத் தாக்குபவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களும், வெற்றிக்காக ஏங்கியவர்களுமான அந்த வீரர்கள், பாண்டுவின் மகனான யுதிஷ்டிரனை வெகுவாகப் பாரட்டி, எதிரிகளை எரிப்பவர்களான இரு கிருஷ்ணர்களையும், புகழுரைகள் நிறைந்த தங்கள் பேச்சால் புகழ்ந்தனர். பிறகு, மகிழ்ச்சியால் நிறைந்த அந்தப் பெரும் தேர்வீரர்கள் தங்கள் முகாமை நோக்கிச் சென்றனர்.(47,48) ஓ! மன்னா, உமது தீய கொள்கையின் விளைவால் விளைந்ததும், மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கியதுமான அந்தப் பேரழிவு இவ்வாறே நடந்தது. இப்போது அதற்காக ஏன் நீர் வருந்துகிறீர்?” {என்றான் சஞ்சயன்}.”(49)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்தத் தீய செய்திகளைக் கேட்ட குரு மன்னன் திருதராஷ்டிரன், தன் அற்புத இருக்கையில் இருந்து கீழே தரையில் விழுந்தான்.(50) அதே போல, பெரும் முன்னறி பார்வை கொண்ட அரச மங்கை காந்தாரியும் கீழே விழுந்தாள்.(51) அப்போது விதுரன், சஞ்சயன் ஆகிய இருவரும் விழுந்துவிட்ட ஏகாதிபதியைத் தூக்கி, அவனுக்கு ஆறுதலளித்தனர். அதேபோலக் காந்தாரியும் குரு பெண்மணிகளால் தூக்கப்பட்டாள்.(52,53) விதியும், தேவையும் அனைத்திலும் சக்திமிக்கவை என்று நினைத்த அந்த அரசத் துறவி {திருதராஷ்டிரன்}, பெரும் துயரில் வீழ்ந்து, தன் உணர்வுகளை இழந்தவனாகத் தெரிந்தான்.(54) எனினும், கவலை மற்றும் துயரத்தால் நிறைந்த இதயத்துடன் கூடிய அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} மீண்டும் மயக்கமடையவில்லை. அவர்களால் ஆறுதலளிக்கப்பட்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, அமைதியாக இருந்து, துக்கத் தியானத்தில் ஈடுபட்டான்.(55)

ஓ! பாரதா {ஜனமேஜயா}, உயர் ஆன்ம தனஞ்சயனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, அதிரதன் மகனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் நடந்ததும், ஒரு வேள்வியைப் போன்றதுமான இந்தப் பெரும்போரைப் படிப்பவன் {உரைப்பவன்}, படிக்கப்படுவதைக் கேட்பவன் ஆகிய இருவரும் ஒரு பெரும் வேள்வி செய்ததன் கனியை {பலனை} அடைவார்கள்.(56) புனிதமானவனும், அழிவில்லாதவனுமான விஷ்ணுவே வேள்வி என்றும், பிற தேவர்களான, அக்னி, வாயு, சோமன், சூரியன் ஆகிய ஒவ்வொருவரும் அவ்வாறானவர்களே {வேள்வியே} என்றும் கல்விமான்கள் சொல்கின்றனர். எனவே, கெடுநோக்கம் இல்லாமல் இந்தப் பர்வத்தைக் கேட்பவனோ, உரைப்பவனோ, மகிழ்ச்சியை அடைபவனும், அருள் உலகங்கள் அனைத்தையும் அடையவல்லவனும் ஆவான்.(57) புனிதமானதும், சம்ஹிதைகளில் முதன்மையானதுமான இதைப் படிக்கும் மனிதர்கள், எப்போதும் அர்ப்பணிப்பில் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவ்வாறு செயல்படுபவர்கள், செல்வம், தானியம் மற்றும் புகழையும் அடைவார்கள்.(58) எனவே, ஒரு மனிதன் கெடுநோக்கம் இல்லாமல் இதை எப்போதும் கேட்க வேண்டும். இவ்வாறு செய்பவன், அனைத்து வகை இன்பங்களையும் அடைவான். விஷ்ணுவும், சிறப்புமிக்கத் தான்தோன்றியான பவனும் {சிவனும்} அந்த மனிதர்களில் முதன்மையானவனிடம் நிறைவடைவார்கள்.(59)

ஒரு பிராமணன், இதைப் படிப்பதால், வேதங்களைப் படித்ததன் கனியை {பலனை} அடைவான்;

ஒரு க்ஷத்திரியன், பலத்தையும், போரில் வெற்றியையும் அடைவான்;

வைசியர்கள் அபரிமிதமான செல்வத்தை அடைவார்கள்;

சூத்திரர்கள் உடல்நலத்தையும், நோயில் இருந்து விடுதலையையும் அடைவார்கள்.(60)

மேலும் சிறப்பு மிக்க விஷ்ணு நித்தியமானவனாவான். இந்தப் பர்வத்தில் அந்தத் தேவனே மகிமைப்படுத்தப்பட்டுள்ளதால், இதைப் படிக்கும், அல்லது கேட்கும் மனிதன், மகிழ்ச்சியை அடைந்து, தன் இதயத்தின் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறியவனாவான். பெரும் முனிவரின் (வியாசரின்) இந்த வார்த்தைகள் ஒருபோதும் பொய்யாக முடியாது.(61) கர்ண பர்வம் உரைக்கப்படும்போது கேட்பதால் அடையப்படும் தகுதியானது {புண்ணியமானது}, ஒரு வருடம் முழுவதும் நிறுத்தாமல் {தடையில்லாமல்} கன்றுகளோடு கூடிய பசுக்களைத் தானமளிப்பதற்கு இணையானதாகும்[1]”(62)

பதினேழாம் நாள் போர் முற்றும்
கர்ண பர்வம் முற்றிற்று 
——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  துரோண பர்வம்-துரோண வதப் பர்வம் –

October 15, 2025

படைகளை உறங்க அனுமதித்த அர்ஜுனன்! – துரோண பர்வம் பகுதி – 184-துரோணரைத் தடுக்க, திருஷ்டத்யும்னனைத் தூண்டிய யுதிஷ்டிரன்; துரோணரை எதிர்த்து பாண்டவத் தலைவர்கள் அனைவரும் விரைவது; துரியோதனனும், பிறரும் துரோணரைக் காக்க வருவது; இரு படைகளுக்கும் இடையிலான கடும் போர்; போர்வீரர்களைத் தூங்க அனுமதித்த அர்ஜுனன்; அர்ஜுனனின் இந்தக் கருணைக்கு அவனை வாழ்த்திய கௌரவத் துருப்புகள்; போராளிகள் அனைவரும் போர்க்களத்திலேயே உறங்குவது; சந்திரன் உதித்து இருளை விலக்கியது; உறக்கத்தில் இருந்து எழுந்த இரு படைகளும் போருக்குத் தயாராவது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வியாசரால் இப்படிச் சொல்லப்பட்டவனும், நீதிமானுமான வீர மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கர்ணனைத் தானே சென்று கொல்லும் முயற்சியில் இருந்து விலகினான்.(1) எனினும், அவ்விரவில் சூதன் மகனால் {கர்ணனால்} கடோத்கசன் கொல்லப்பட்டதன் விளைவால், துயராலும், கோபத்தாலும் அம்மன்னன் {யுதிஷ்டிரன்} நிறைந்தான்.(2)

உமது பரந்த படையானது பீமனால் தடுக்கப்பட்டதைக் கண்ட யுதிஷ்டிரன், திருஷ்டத்யும்னனிடம், “குடத்தில் பிறந்தவரை {துரோணரைத்} தடுப்பாயாக.(3)  ஓ! எதிரிகளை எரிப்பவனே, கவசம்பூண்டவனாக, வில், கணைகள் மற்றும் வாள் தரித்தவனாகத் துரோணரின் அழிவுக்காகவே நீ நெருப்பில் இருந்து உதித்தாய்.(4) உற்சாகத்துடன் போரிட விரைவாயாக, உனக்கு எந்த அச்சமும் தேவையில்லை. ஜனமேஜயன்[1], சிகண்டி, துர்முகனின் மகன், யசோதரன்[2] ஆகியோர்(5) குடத்தில் பிறந்தவரை {துரோணரை} எதிர்த்து அனைத்துப்பக்கங்களிலும் விரையட்டும். நகுலன், சகாதேவன், திரௌபதியின் மகன்கள், பிரபத்ரகர்கள்,(6) மகன்கள் மற்றும் சகோதரர்களுடன் கூடிய துருபதரும், விராடரும், சாத்யகி, கைகேயர்கள், பாண்டவர்கள், தனஞ்சயன் {அர்ஜுனன்},(7) ஆகியோர் அனைவரும் பரத்வாஜர் மகனை {துரோணரைக்} கொல்லும் விருப்பத்தோடு அவரை எதிர்த்து வேகமாக விரையட்டும். நமது தேர்வீரர்கள் அனைவரும், நாம் கொண்டுள்ள யானைகள் மற்றும் குதிரைகள் அனைத்தும், நமது காலாட்படைவீரர்கள் அனைவரும், வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரைப் போரில் வீழ்த்தட்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}.இப்படிப் பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {யுதிஷ்டிரனால்} ஆணையிடப்பட்ட அவர்கள் அனைவரும்,(9) குடத்தில் பிறந்தவரை {துரோணரைக்} கொல்ல விரும்பி, அவரை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தனர். எனினும் ஆயுதம் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான துரோணர், தன்னை நோக்கித் திடீரெனப் பெரும்பலத்துடனும், விடாமுயற்சியுடனும் விரைந்து வந்த அந்தப் பாண்டவப் போர்வீரர்கள் அனைவரையும் போரில் எதிர்கொண்டு வரவேற்றார். அப்போது துரோணரின் உயிரைக் காக்க விரும்பியவனும், கோபத்தால் நிறைந்தவனுமான மன்னன் துரியோதனன், பெரும்பலத்துடனும், விடாமுயற்சியுடனும் பாண்டவர்களை எதிர்த்து விரைந்தான். அப்போது ஒருவரை நோக்கி ஒருவர் முழங்கிய குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் போர் தொடங்கியது. இரு படைகளின் விலங்குகளும், போர்வீரர்களும் மிகவும் களைத்திருந்தனர். போர் முயற்சியால் களைத்துப் போய் உறக்கத்தால் கண்கள் மூடும் நிலையில் இருந்த பெரும் தேர்வீரர்களும் கூட, அப்போது என்ன செய்வது என்பதை அறியாதிருந்தனர். ஒன்பது மணி நேரம்[3] கொண்ட அந்த இரவானது மிகப் பயங்கரமானதாகவும், அச்சந்தருவதாகவும், உயிரினங்களுக்கு அழிவைத் தருவதாகவும், நீடித்துக் கொண்டே[4] இருந்தது.(10-14)இப்படி அவர்கள் ஒருவரையொருவர் சிதைத்துக் கொன்று வருகையில்,(15) அவர்களது கண்களில் உறக்கம் கனமாக குடிகொண்ட போது நடு இரவு ஆகிவிட்டது. க்ஷத்திரியர்கள் அனைவரும் உற்சாகமற்றவர்களாகவும், இதயமற்றவர்களாகவும் {இரக்கமற்றவர்களாகவும்} ஆகிவிட்டனர்.(16) உமது துருப்புகளிடமும், எதிரியுடையவைகளிடமும் மேலும் ஆயுதங்கள் ஏதும் இல்லை. பணிவும், சக்தியும் கொண்டு, தங்கள் வகைக்கான {க்ஷத்திரியக்} கடமைகளை நோற்று வந்த (இரு படைகளின் பெரும்பாலான) போர்வீரர்களும், இப்படியே தங்கள் நேரத்தைக் கடத்தினாலும் தங்கள் படைப்பிரிவுகளைக் கைவிடவில்லை. உறக்கத்தால் குருடான {தூக்க மயக்கத்தில் இருந்த} பிறர், தங்கள் ஆயுதங்களைக் எறிந்துவிட்டு படுத்துக் கொண்டனர்.(17,18) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} சிலர் யானைகளின் முதுகிலும், சிலர் தேர்களிலும், சிலர் குதிரைகளின் முதுகிலும் படுத்தனர். உறக்கத்தால் குருடான {தூக்க மயக்கமடைந்த} அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முற்றிலும் அசைவற்றவர்கள் ஆனார்கள்.(19) அந்தப் போரில் (விழித்திருந்த) பிற போர்வீரர்கள், அவர்களை யமனுலகு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிறர், தங்கள் புலனுணர்வுகளை இழந்து, குறை தூக்க நிலையில் கனவு கண்டு, அனைவரையும் தங்கள் எதிரிகளாக நினைத்துக் கொண்டு தங்கள் எதிரிகளைப் போலவே தங்கள் சொந்த தோழர்களையே கொல்லத் தொடங்கினர். உண்மையில் அவர்கள் அந்தப் பயங்கரப் போரில் பல்வேறு கூச்சல்களை எழுப்பிக் கொண்டே போரிட்டனர்.(20,21) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நமது படையின் வீரர்கள் பலர், எதிரியோடு தொடர்ந்து போரிட விரும்பி, உறக்கத்தால் மயங்கிய கண்களுடனேயே நின்றிருந்தனர்.(22) கருக்கிருட்டான அந்தப் பயங்கர வேளையில், சில துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், உறக்கத்தால் குருடாகியிருந்தாலும், அந்தப்போரில் களத்தில் திரிந்து ஒருவரையொருவர் கொன்று வந்தனர்.(23) எதிரிக்கு மத்தியில் பலர், உறக்க மயக்கத்தால் முழுதாக மலைப்படைந்து (தங்களை நித்தியத்திற்குள் அழைத்துச் சென்ற ஆயுத வெட்டுக்களை உணராமல்) சுயநினைவில்லாத நிலையிலேயே கொல்லப்பட்டனர்.(24)

படைவீரர்களின் இந்நிலையைக் கண்ட பீபத்சு {அர்ஜுனன்}, ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, உரத்த குரலில் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(25) “உங்கள் விலங்குகளுடன் சேர்த்து நீங்கள் அனைவரும், களைத்துப் போய் உறக்கத்தால் குருடாகியிருக்கிறீர்கள் {தூக்க மயக்கத்தை அடைந்திருக்கிறீர்கள்}. வீரர்களே, நீங்கள் இருட்டாலும், புழுதியாலும் மறைக்கப்பட்டிருக்கிறீர்கள்.(26) எனவே, உங்களுக்கு விருப்பமுண்டானால், நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். உண்மையில், இங்கே இந்தப் போர்க்களத்திலேயே சற்று நேரம் உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள்.(27) குருக்களே {கௌரவர்களே}, பாண்டவர்களே, உறங்கி ஓய்வெடுத்த பிறகு, சந்திரன் உதயமாகையில் சொர்க்கத்தை அடையும் பொருட்டு நீங்கள் மீண்டும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளலாம்” என்றான் {அர்ஜுனன்}.(28)

அறம் சார்ந்த அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அறம் சார்ந்த அந்தப் போர்வீரர்கள், அந்தப் பரிந்துரையை ஏற்று, ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு,(29) “ஓ! கர்ணா, ஓ! கர்ணா, ஓ! துரியோதன மன்னா, போரை நிறுத்துவீர். பாண்டவப் படை நம்மைத் தாக்குவதை நிறுத்திவிட்டது” என்று உரக்கச் சொன்னார்கள்.(30) பிறகு பல்குனனால் {அர்ஜுனனால்} உரக்கச் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படையும், உமது படையும், போரில் இருந்து விலகின.(31) உண்மையில், பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்த உன்னத வார்த்தைகள், தேவர்களாலும், உயர் ஆன்ம முனிவர்களாலும், மகிழ்ச்சி அடைந்த படைவீரர்கள் அனைவராலும் மிகவும் பாராட்டப்பட்டன.(32) அந்த அன்பான வார்த்தைகளைப் பாராட்டிய அனைத்துத் துருப்புகளும், ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, களைத்துப் போய் {அங்கேயே} படுத்து உறங்கினார்கள்.(33)

அப்போது உமது அந்தப் படையானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிடைக்கப்போகும் ஓய்வு மற்றும் உறக்கத்தால் மகிழ்ந்து, {அர்ஜுனனிடம்}, “உன்னிடம் வேதங்களும், அனைத்து ஆயுதங்களும் உள்ளன. உன்னிடம் நுண்ணறிவும், ஆற்றலும் உள்ளன. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பாவமற்றவனே, உன்னிடம் நீதியும் {அறமும்}, அனைத்து உயிர்களிடம் கருணையும் உள்ளன. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் ஆறுதலளிக்கப்பட்டதால், நாங்கள் உனக்கு நன்மையை விரும்புகிறோம். செழுமை உனதாகட்டும். ஓ! வீரா, உன் இதயத்துக்கு விருப்பமான பொருள்கள் {நீ விரும்பும் நோக்கங்கள்} அனைத்தும் உனக்கு விரைவில் கிடைக்கட்டும்” என்று சொல்லி அர்ஜுனனை உண்மையாக வாழ்த்தினர்.(34-36) ஓ! மனிதர்களில் புலியே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இப்படி அவனை {அர்ஜுனனை} வாழ்த்திய அந்தப் பெரும் தேர்வீரர்கள், உறக்கத்தால் மயக்கமடைந்து அமைதியடைந்தனர்.(37) சிலர் குதிரைகளின் முதுகுகளிலும், சிலர் தேர்க்கூடுகளிலும், சிலர் யானைகளின் கழுத்துகளிலும், சிலர் வெறுந்தரையிலும் படுத்துக் கொண்டனர்.(38) தங்கள் ஆயுதங்கள், கதாயுதங்கள், வாள்கள், போர்க்கோடரிகள், வேல்கள், ஆகியவற்றுடனும், தங்கள் கவசங்களுடனும் கூடிய பல மனிதர்கள் உறங்குவதற்காக அங்கே தனித்தனியாகப் படுத்துக் கிடந்தனர்.(39)

ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்த யானைகள், புழுதி படிந்தவையும், பாம்பு போன்றவையுமான தங்கள் துதிக்கை நாசித்துளைகளின் மூச்சுக்காற்றால் பூமியைக் குளிரச் செய்தன.(40) உண்மையில், தரையில் மூச்சுவிட்டுக்கிடந்த அந்த யானைகள், சீறுகின்ற பெரும் பாம்புகளோடு கீழே சிதறிக் கிடக்கும் மலைகளைப் போல அழகாகத் தெரிந்தன.(41) தங்கப் பூட்டாங்கயிறுகளைக் கொண்டவையும், நுகத்தடிகளோடு தங்கள் பிடரி மயிர் கலந்தவையுமான குதிரைகள், சமமான தரையைத் தங்கள் குளம்படிகளால் சமமற்றவையாகச் செய்தன.(42) இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒவ்வொருவனும் தான் ஏறி வந்த விலங்குடனே அங்கே உறங்கினான். இப்படியே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மிகவும் களைத்துப் போயிருந்த குதிரைகள், யானைகள் ஆகியனவும், போர்வீரர்களும் போரைத் தவிர்த்து உறங்கத் தொடங்கினர். (43) அப்படி உறங்கிக் கிடந்த படையானது, புலனுணர்வை இழந்து உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் காட்சி, ஓவியம் தீட்டும் திரைச்சீலையில் திறன்மிக்க ஓவியர்களால் வரையப்பட்ட அற்புதமான ஓவியத்தைப் போலத் தெரிந்தது.(44) காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், இளமையுடன் கூடியவர்களும், கணைகளால் சிதைக்கப்பட்ட அங்கங்களுடையவர்களுமான அந்த க்ஷத்திரியர்கள், அழகிய மங்கையரின் பருத்த முலைகளில் கிடப்பதைப் போல, யானைகளின் மத்தகங்களில் படுத்து உறக்கத்தில் மூழ்கினர்.(45)

கண்களுக்கு இனியவனும், அழகிய மங்கையின் கன்னங்களைப் போன்ற வெண்ணல்லிமலர்களின் {ஆம்பல் மலர்களின்} தலைவனுமான சந்திரன், இந்திரனால் ஆளப்படும் திசையை {கிழக்கை} அலங்கரித்தபடியே உதித்தான்[4].(46) உண்மையில், உதய மலைகளின் சிங்கம் ஒன்றைப் போல, பிரகாசமான மஞ்சள் பிடரிமயிர்களுடன் கூடிய தன் கதிர்களை, கிழக்கில் உள்ள தன் குகையில் இருந்து வெளியிட்ட அவன் {சந்திரன்}, யானைகளின் பெருங்கூட்டத்திற்கு ஒப்பான அந்த இரவின் அடர்த்தியான இருளைத் துண்டுகளாகக் கிழித்தெறிந்தான்[5].(47) மகாதேவனுடைய {சிவனுடைய} சிறப்புமிக்கக் காளையின் உடலைப் போன்ற பிரகாசமானவையும், காமனின் வில்லைப் போன்ற ஒளி பொருந்தியவையும், நாணமிக்க மணப்பெண்ணின் உதட்டுப் புன்னகையைப் போல அழகானவையுமான (உலகில் உள்ள) அல்லிக்கூட்டங்கள் அனைத்திற்கும் தலைவன் {சந்திரன்} ஆகாயத்தில் அப்போது மலர்ந்தான்.(48)அப்போது, முயலைத் தன் அடையாளமாகக் கொண்ட அந்தத் தெய்வீகத் தலைவன் {சந்திரன்}, தன் பிரகாசமான கதிர்களைச் சுற்றிலும் பொழிந்தபடி சிவப்பாகத் தன்னை வெளிக்காட்டினான்.(49) உண்மையில், அதன் பிறகு சந்திரன், தங்கத்தின் காந்திக்கு ஒப்பானதும் நெடுந்தொலைவை அடைவதுமான பிரகாசமான ஒளிவட்டத்தைப் படிப்படியாக வெளியிட்டான்.(50) அப்போது அந்த ஒளிக்கோளின் கதிர்கள் தங்கள் காந்தியால் இருளை விலக்கி, மெதுவாக ஆகாயத்திலும், பூமியிலும், திசைப்பகுதிகள் அனைத்திலும் தங்களை மெதுவாகப் பரப்பிக் கொண்டன.(51) எனவே விரைவில் உலகம் ஒளியூட்டப்பட்டது. அனைத்தையும் மறைத்துவைத்திருந்த சொல்லப்பட முடியாத இருள் வேகமாக விலகியது.(52)

இப்படிக் கிட்டத்தட்ட பகல்வெளிச்சத்தைப் போலச் சந்திரனால் உலகம் ஒளியூட்டப்பட்டபோது [6], (போர் அமாவாசையில் தொடங்கியது… 14 நாளாயிற்று…. இவ்விரவு பௌர்ணமியாக இருந்திருக்க வேண்டும்.)இரவில் உலவும் விலங்குகளில் சில தொடர்ந்து சுற்றிக் கொண்டிருந்தன; சில ஒதுங்கிச் சென்றன.(53) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சந்திரனின் கதிர்களால் விழிப்படைந்த அந்தப் படையினர், சூரியனின் கதிர்களால் விரிந்த தாமரைக்கூட்டங்களைப் போல (உயிர்ப்புடன்) மலர்ந்தனர்.(54) உண்மையில், சந்திரன் உதிக்கும்போது, ஆர்ப்பரிக்கும் அலைகளால் பொங்கும் கடலைப் போல அந்த ஒளிக்கோளின் {சந்திரனின்} உதயத்தால் அந்தக் கடல் போன்ற துருப்புகள் விழிப்பையடைந்தன.(55) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உலக மக்கள் தொகையை அழிப்பதற்காகச் சொர்க்கத்தை அடைய விரும்பிய மனிதர்களுக்கு இடையில் பூமியில் மீண்டும் போர் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(56)

“அர்ஜுனன் களைத்தான் என நினைத்தாயோ?” என்ற துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 185-துரோணரை அணுகிய துரியோதனன், தகாத நேரத்தில் பாண்டவப் படையிடம் அவர் காட்டும் கருணையைக் கோபத்துடன் கண்டிப்பது; பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வதாகத் துரோணர் உறுதி கூறுவது; அர்ஜுனனின் வலிமையையும், ஆற்றலின் அளவையும் துரியோதனனுக்கு விளக்கிய துரோணர்; கோபமுற்ற துரியோதனன் அர்ஜுனனைத் தானே கொல்லப்போவதாகச் சொல்வது; துரியோதனனைப் பரிகசித்து, சகுனியைக் கேலி செய்த துரோணர், அஞ்சாமல் அர்ஜுனனுடன் மோதி அவனால் கொல்லப்பட்டுப் புகழை அடையும்படி துரியோதனனிடம் சொன்னது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த நேரத்தில், கோபத்தின் ஆதிக்கத்தில் இருந்த துரியோதனன், துரோணரை அணுகி அவரது மகிழ்ச்சியை அதிகரித்து ஊக்கப்படுத்தவும், அவரது கோபத்தைத் தூண்டவும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(1) துரியோதனன், “இலக்கில் துல்லியமான நம் எதிரிகள் உற்சாகமற்றவர்களாக, கடுமையான உழைப்பால் களைத்தவர்களாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு எந்தக் கருணையும் காட்டப்பட்டிருக்கக்கூடாது.(2) உமக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பியதால், அவர்களை அப்படியே விட்டு நாம் அவர்களுக்குக் கருணை காட்டினோம். எனினும், களைத்துப் போயிருந்த பாண்டவர்கள் (ஓய்வெடுத்த பிறகு) இப்போது வலிமையடைந்திருக்கின்றனர்.(3) நம்மைப் பொறுத்தவரை, அனைத்து வகையிலும் நம் சக்தியையும், பலத்தையும் தற்போது நாம் இழந்து வருகிறோம். பாண்டவர்களோ, உம்மால் பாதுகாக்கப்பட்டு இடையூறின்றிச் செழிப்பை ஈட்டுகிறார்கள்.(4) தெய்வீகமான ஆயுதங்கள் அனைத்தும், பிரம்மனுக்கு உரியவை {ஆயுதங்கள்} அனைத்தும் உம்மிடம் இருக்கின்றன.(5) பாண்டவர்களோ, நாங்களோ, உலகின் வேறு எந்த வில்லாளியோ போரில் ஈடுபடும் உமக்கு ஈடாகமாட்டார்கள் என்று நான் உண்மையாகச் சொல்கிறேன்.(6) ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே {துரோணரே}, நீர் அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவராவீர். உமது தெய்வீக ஆயுதங்களின் மூலம் தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள் அடங்கிய (மூன்று) உலகங்களையும் அழிக்கும் வல்லமை கொண்டவர் நீர் என்பதில் ஐயமில்லை.(7) பாண்டவர்கள் அனைவரும் உம்மைக் கண்டு அஞ்சுகின்றனர். எனினும், அவர்களை உமது சீடர்களாக நினைவுகூர்ந்தோ, ஒரு வேளை என் தீப்பேற்றாலோ அவர்களை நீர் மன்னிக்கிறீர் {பொறுத்துக் கொள்கிறீர்}” என்றான் {துரியோதனன்}.(8)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படி உமது மகனால் {துரியோதனனால்} கண்டிக்கப்பட்டுக் கோபப்படுத்தப்பட்ட துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனிடம் கோபத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(9) “கிழவனே என்றாலும், ஓ! துரியோதனா, நான் என் முழு வலிமையைப் பயன்படுத்தி இன்னும் போரில் முயன்று கொண்டே இருக்கிறேன். இம்மனிதர்கள் அனைவரும் ஆயுதங்களை அறியாதவர்களாக இருக்கிறார்கள். நானோ அவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறேன். வெற்றி மீது கொண்ட விருப்பத்தால், இம்மனிதர்களை நான் கொன்றேன் என்றால், {அதைவிட} நான் செய்வதற்கு வேறு எந்த இழிசெயலும் இருக்காது. எனினும், என் மனத்தில் எது இருக்கிறதோ, ஓ! கௌரவ்யா {துரியோதனா}, அது நல்லதோ, அல்லதோ உன் ஆணையின் பேரில் அதை நான் சாதிப்பேன்.(10,11) அது வேறுவகையாகாது. போரில் என் ஆற்றலை வெளிப்படுத்தி, ஓ! மன்னா {துரியோதனா}, பாஞ்சாலர்கள் அனைவரையும் கொன்றபிறகே நான் என் கவசத்தைக் களைவேன். இதை நான் உனக்கு உண்மையாகவே உறுதியளிக்கிறேன்.

குந்தியின் மகனான அர்ஜுனன் போரில் களைப்படைந்துவிட்டான் என்றா நீ நினைக்கிறாய்?(12,13) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கௌரவா {துரியோதனா}, அவனது {அர்ஜுனனது} உண்மையான ஆற்றலை என்னிடம் கேட்பாயாக. சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} கோபம் தூண்டப்பட்டால், கந்தர்வர்களாலோ, யக்ஷர்களாலோ, ராட்சசர்களாலோ கூட அவனை {அவனது சக்தியைத்} தாங்கிக் கொள்ள முடியாது. காண்டவத்தில் {காண்டவன் என்ற காட்டில்} அவன் தேவர்களின் தெய்வீகத் தலைவனிடமே {இந்திரனிடமே} மோதியிருக்கிறான்.(14,15) அந்தச் சிறப்புமிக்க அர்ஜுனன், ஆயுதங்களைப் பொழிந்து கொண்டிருந்தவனான இந்திரனையே தன் கணைகளால் கலங்கடித்திருக்கிறான். யக்ஷர்களும், நாகர்களும், தைத்தியர்களும், தங்கள் வலிமையில் செருக்குமிக்கோர் பிறர் அனைவரும் அந்த மனிதர்களில் முதன்மையானவனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டிருக்கின்றனர்.(16) அதுவும் நீ அறிந்ததே.

பசுக்களைக் கணக்கெடுக்கும் நிகழ்வின் {கோஷ யாத்திரையின்} போது, சித்திரசேனனின் தலைமையிலான கந்தர்வர்களும், பிறரும் அவனால் வெல்லப்பட்டனர்.(17) கந்தர்வர்களால் நீ கடத்தப்பட்ட போதும், அந்த உறுதிமிக்க வில்லாளியே {அர்ஜுனனே} உன்னை மீட்டான். தேவர்களின் எதிரிகளும், போரில் தேவர்களாலேயே கொல்லப்பட முடியாதவர்களுமான நிவாதகவசர்களும், அந்த வீரனால் வெல்லப்பட்டனர். ஹிரண்யபுரத்தில் வசித்த ஆயிரக்கணக்கான தானவர்களும், அந்த மனிதப் புலியால் வெல்லப்பட்டனர். அப்படியிருக்கையில் மனிதர்களால் எவ்வாறு அவனை {அர்ஜுனனை} எதிர்த்து நிற்க முடியும்? ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, உன் படைகள் எவ்வளவுதான் வீரமாக முயன்றாலும் அந்தப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} அழிவடைந்ததை உன் கண்களாலேயே நீயும் கண்டிருக்கிறாய்” என்றார் {துரோணர்}.(18-20)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படி அர்ஜுனனைப் புகழ்ந்து கொண்டிருந்த துரோணரிடம் கோபம் கொண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளை மீண்டும் சொன்னான்:(21) “நானும், துச்சாசனன், கர்ணன், என் தாய்மாமன் சகுனி ஆகியோரும் சேர்ந்து இந்தப் பாரதப் படையை இரண்டாகப் பிரித்துக் கொண்டு (அதில் ஒன்றை எங்களுடன் வைத்துக் கொண்டு), இன்றைய போரில் அர்ஜுனனைக் கொல்வோம்” என்றான் {துரியோதனன்}.(22)

அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட பரத்வாஜரின் மகன் {துரோணர்} சிரித்துக் கொண்டே அந்த மன்னனின் {துரியோதனனின்} பேச்சை அங்கீகரித்து, “உனக்கு என் ஆசிகள்.(23) க்ஷத்திரியர்களில் காளையும், கொல்லப்பட முடியாதவனும், சக்தியால் சுடர்விட்டெரியும் வீரனுமான அந்தக் காண்டீவதாரியை {அர்ஜுனனைக்} கொல்லவல்ல க்ஷத்திரியன் எவன் இருக்கிறான்?(24) கருவூலங்களின் தலைவனோ {குபேரனோ}, இந்திரனோ, யமனோ, அசுரர்களோ, உரகர்களோ, ராட்சசர்களோ கூட ஆயுதம்தரித்த அர்ஜுனனைக் கொல்ல முடியாது.(25) ஓ! பாரதா {துரியோதனா}, மூடர்கள் மட்டுமே நீ சொன்னது போன்ற வார்த்தைகளைச் சொல்வார்கள். போரில் அர்ஜுனனுடன் மோதிய பிறகு வீட்டுக்குப் பாதுகாப்பாகத் திரும்பக்கூடியவன் எவன் இருக்கிறான்?(26)

உன்னைப் பொருத்தவரை, நீயொரு பாவி, கொடூரன் மற்றும் அனைவரையும் சந்தேகப்படுபவன். உன் நன்மையில் ஈடுபடுவோரையும் இது போல நிந்திக்க எப்போதும் நீ தயாராகவே இருக்கிறாய்.(27) உன் பொருட்டுக் குந்தியின் மகனை {அர்ஜுனனை} எதிர்கொள்ள, நீயே அவனை எதிர்த்துச் செல்வாயாக. நீயோ நற்குலத்தில் பிறந்த க்ஷத்திரியன். போரிடவும் முயல்கிறாய்.(28) குற்றமிழைக்காத இந்த க்ஷத்திரியர்கள் அனைவரையும் நீ ஏன் கொல்லச் செய்கிறாய்? இந்தப் பகைமைக்கு நீயே ஆணிவேராவாய். எனவே, நீயே அர்ஜுனனை எதிர்த்துச் செல்வாயாக.(29)

இந்த உனது தாய்மாமனோ {சகுனியோ}, ஞானம் கொண்டவனும், க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவனுமாவான். ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, சூதுக்கு அடிமையான இவன் {சகுனி} போரில் அர்ஜுனனை எதிர்த்துச் செல்லட்டும்.(30) பகடையில் வல்லவனும், வஞ்சகம் கொண்டவனும், சூதுக்கு அடிமையானவனும், தந்திரம் மற்றும் வஞ்சங்களை நன்கு பழகியவனும், வஞ்சிக்கும் வழிகளை நன்கறிந்தவனுமான இந்தச் சூதாடிதான் {சகுனிதான்} போரில் பாண்டவர்களை வெல்லப் போகிறான்.(31)

கர்ணனை உன் துணையாகக் கொண்ட நீ, மூடத்தனத்தாலும், வெற்று அறிவினாலும் மகிழ்ச்சியாக அடிக்கடி தற்புகழ்ச்சி செய்து கொண்டே, திருதராஷ்டிரன் கேட்டுக் கொண்டிருக்கும்போது, “ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, நான், கர்ணன் மற்றும் என் தம்பி துச்சாசனன் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து போரில் பாண்டுவின் மகன்களைக் கொல்வோம்” என்று சொன்னாய். இந்த உனது தற்புகழ்ச்சி ஒவ்வொரு சபைக்கூட்டத்திலும் கேட்கப்பட்டது. உன் சபதத்துக்கு உண்மையாக இருந்து அதை இப்போது சாதிப்பாயாக.(34)

அதோ உன் மரண எதிரியான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} உன் எதிரிலேயே நிற்கிறான். ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை நோற்பாயாக. ஜயனின் {அர்ஜுனனின்} கைகளால் நீ கொல்லப்பட்டால், அனைத்துப் புகழுக்கும் நீ தகுந்தவனாவாய்.(35) நீ ஈகை பயின்றவனாவாய். (நீ விரும்பிய அனைத்தையும் எப்போதும்) உண்ணவும் செய்திருக்கிறாய். நீ விரும்பிய அளவிற்குச் செல்வத்தையும் அடைந்திருக்கிறாய். உனக்குக் கடன்கள் ஏதுமில்லை. ஒருவன் {ஒரு மனிதன்} செய்ய வேண்டிய அனைத்தையும் நீ செய்திருக்கிறாய். அஞ்சாதே. பாண்டு மகனுடன் {அர்ஜுனனுடன்} இப்போதே போரிடுவாயாக”[1] என்றார் {துரோணர்}.(36) அந்தப் போரில் துரோணர் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு நிறுத்திக் கொண்டார். (பாரதப்) படையானது இரண்டாகப் பகுக்கப்பட்டது, போரும் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(37)

துருபதனையும், விராடனையும் கொன்ற துரோணர்! – துரோண பர்வம் பகுதி – 186-முழு ஆற்றலையும் பயன்படுத்தும்படி அர்ஜுனனைத் தூண்டிய பீமன்; இரு படைகளுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர்; துரோணர் போர்க்களத்தின் வடக்குத் திசைக்குச் செல்வது; துருபதனின் மூன்று பேரர்களைக் கொன்ற துரோணர்; துருபதனையும், விராடனையும் கொன்ற துரோணர்; துரோணரை அன்றே கொல்லச் சபதம் ஏற்ற திருஷ்டத்யும்னன்; துரோணரைக் கடுமையாகத் தாக்கிய பாஞ்சாலர்கள்; திருஷ்டத்யும்னனிடம் கோபத்துடன் பேசிய பீமசேனன்; துரோணரின் படைப்பிரிவைத் தாக்கிய பீமனும், திருஷ்டத்யும்னனும்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த இரவின் நான்கில் மூன்று {முக்கால்} பாகம் கழிந்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் மீண்டும் போர் தொடங்கியது. இரு தரப்பினரும் மகிழ்ச்சி கிளர்ந்தெழுந்தவர்களாக இருந்தனர்.(1) விரைவில், சந்திரனின் காந்தியைக் குறைத்து, ஆகாயத்தைத் தாமிர வண்ணம் ஏற்கச் செய்தபடியே சூரியனின் தேரோட்டியான அருணன் தோன்றினான்.(2) வட்டமான தங்கத் தட்டுக்கு ஒப்பான சூரியனின் செங்கதிர்களால் கிழக்கு சிவப்பானது. பிறகு குரு மற்றும் பாண்டவப் படைகளின் போர்வீரர்கள் அனைவரும் தங்கள் தேர்கள், குதிரைகள் மற்றும் மனிதர்களால் சுமக்கப்பட்டும் வாகனங்கள் ஆகியவற்றில் இருந்து கீழே இறங்கி, சூரியனை நோக்கிக் குவிந்த கரங்களுடன் நின்று (நாளின் முதல்) சந்திப்பொழுதுக்கான தங்கள் வேண்டுதல்களைத் தெரிவித்தனர்[1].(4) இரண்டாகப் பகுக்கப்பட்ட குருபடையானது, துரோணருடனும், அவருக்கு முன்பு நின்ற துரியோதனனுடனும், சோமகர்கள், பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்களை எதிர்த்துச் சென்றது.(5)குரு படையானது இரண்டு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டதைக் கண்ட மாதவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம், “உன் எதிரிகளை உனக்கு இடப்பக்கமாகக் கொண்டு, (துரோணரால் தலைமை தாங்கப்பட்ட) இந்தப் படைப்பிரிவை உனக்கு வலப்பக்கத்தில் கொள்வாயாக” {என்றான்}.(6) குருக்களைக் குறித்த மாதவனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, துரோணர் மற்றும் கர்ணன் ஆகிய அந்த இரு வலிமைமிக்க வில்லாளிகளின் இடது பக்கமாக நகர்ந்து சென்றான்[2].(7) கிருஷ்ணனின் நோக்கங்களைப் புரிந்து கொண்டவனும், பகை நகரங்களை அடக்குபவனுமான பீமசேனன், போரின் முன்னணியில் நின்று கொண்டிருந்த பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(8) பீமசேனன், “ஓ! அர்ஜுனா, ஓ! அர்ஜுனா, ஓ! பீபத்சு, இந்த என் வார்த்தைகளைக் கேட்பாயாக. எந்த நோக்கத்திற்காக க்ஷத்திரியப் பெண்கள் மகன்களை ஈன்றெடுக்கிறார்களோ, அதற்கான நேரம் இப்போது வாய்த்திருக்கிறது.(9) இத்தகு நேரத்தில் நீ செழிப்பை வெல்ல முயலவில்லையெனில், மெய்யான பாதகனைப் போலவே அற்பமாகச் செயல்பட்டவனாவாய்.(10) உன் ஆற்றலை வெளிப்படுத்தி, உண்மைக்கும் {சத்தியத்திற்கும்}, செழிப்புக்கும், அறத்திற்கும், புகழுக்கும் நீ பட்டிருக்கும் கடனைச் செலுத்துவாயாக. ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே, இந்தப் படைப்பிரிவை உனது வலப்பக்கத்தில் கொண்டு பிளப்பாயாக” என்றான்.(11)சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படிப் பீமனாலும், கேசவனாலும் {கிருஷ்ணனாலும்} தூண்டப்பட்ட சவ்யசச்சின் {அர்ஜுனன்}, துரோணரையும், கர்ணனையும் விஞ்சி சுற்றிலும் இருந்த எதிரிகளைத் தடுக்கத் தொடங்கினான்.(12) (குருக்கள் மத்தியில் உள்ள) க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் பலர், தங்கள் ஆற்றல் அனைத்தையும் வெளிப்படுத்தினாலும், காட்டுத்தீயைப் போலத் தன் எதிரிகளில் முதன்மையானோரை எரித்தபடியே முன்னேறி வந்து கொண்டிருந்த அர்ஜுனனைத் தாக்குப்பிடிப்பதில் தவறினார்கள். அப்போது, துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர்,(13,14) குந்தியின் மகனான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கணைமாரியால் மறைத்தனர். அவ்வீரர்கள் அனைவரின் ஆயுதங்களைக் கலங்கடித்தவனும், ஆயுதங்களில் நன்கு திறன் பெற்றவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அவன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (பதிலுக்குத்) தன் கணைகளால் அவர்களை மறைத்தான். தன் ஆயுதங்களைக் கொண்டு அவர்களின் ஆயுதங்களைக் குறி பார்த்தவனும், (அவை யாவையும் இப்படிக் கலங்கடித்தவனும்), பெரும் கரநளினம் கொண்டவனும், தன் புலன்களில் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டவனுமான அர்ஜுனன்,(15,16) பத்துக் கூர்முனைக் கணைகளால் அவ்வீரர்கள் ஒவ்வொருவரையும் துளைத்தான்.

அப்போது ஆகாயமானது புழுதியால் மறைக்கப்பட்டது. அடர்த்தியான கணைமாரி பொழிந்தது. இருள் சூழ்ந்தது, உரத்த பயங்கர ஆரவாரமும் எழுந்தது. இப்படிப்பட்ட நிலை இருக்கையில், ஆகாயத்தையோ, பூமியையோ, திசைகளின் புள்ளிகளையோ அதற்கு மேலும் பார்க்க முடியவில்லை.(17,18) புழுதியால் மலைப்படைந்த துருப்புகள் அனைத்தும் குருடாகின. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரியாலோ, நம்மாலோ, ஒருவரையொருவர் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(19) இக்காரணத்தால் அந்த மன்னர்கள் ஊகத்தையும், அவர்கள் உச்சரித்த பெயர்களையும் வழிகாட்டியாகக் கொண்டு போரிடத் தொடங்கினர். தங்கள் தேர்களை இழந்த தேர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரோடொருவர் மோதி, ஒழுங்குகள் அனைத்தையும் இழந்து, குழம்பிய திரளாக மாறினர். தங்கள் குதிரைகளும், சாரதிகளும் கொல்லப்பட்ட அவர்களில் பலர், செயலின்மையை அடைந்து தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொண்டு மிகவும் அச்சத்திலிருப்பவர்களாகத் தெரிந்தனர். உயிரையிழந்த சாரதிகளோடு கூடிய கொல்லப்பட்ட குதிரைகள், மலைச்சாரல்களில் படர்ந்து கிடப்பன போலக் கொல்லப்பட்ட யானைகளின் மீது கிடப்பது காணப்பட்டது.

அப்போது துரோணர், அந்தப் போரில் வடக்கு நோக்கி நகர்ந்து அங்கேயே தன் நிலையை ஏற்று, புகையற்ற நெருப்புக்கு ஒப்பாகக் காணப்பட்டார். அந்தப் போரில் அவர் வடக்கு நோக்கி நகர்ந்ததைக் கண்ட பாண்டவத் துருப்புகள்,(20-24) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நடுங்கத் தொடங்கின. உண்மையில், பிரகாசமானவரும், அழகானவரும், சக்தியால் சுடர்விடுபவருமான துரோணரைக் கண்டு அஞ்சிய எதிரிகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} ஒளியிழந்து களத்தில் நடுங்கத் தொடங்கினர். எதிரிப் படையைப் போருக்கு அழைக்கையில், மதங்கொண்ட யானையைப் போலத் தெரிந்த அவரைக் கண்ட எதிரிகள்(25,26) வாசவனை {இந்திரனை} வெல்வதில் நம்பிக்கையற்ற தானவர்களைப் போல அவரை வெல்வதில் முற்றிலும் நம்பிக்கையை இழந்தனர். அவர்களில் சிலர் முற்றாக உற்சாகமிழந்தனர், சக்தி கொண்ட சிலர் கோபத்தால் தூண்டப்பட்டனர்.(27) சிலர் ஆச்சரியத்தால் நிறைந்தனர், சிலரோ (அந்த அறைகூவலை) பொறுத்துக் கொள்ள முடியாதவர்களானார்கள். சில மன்னர்கள் தங்கள் கைகளைப் பிசைந்தனர்,(28) சினத்தால் புலனுணர்வை இழந்த சிலரோ தங்கள் உதடுகளைக் கடித்துக் கொண்டனர். சிலர் தங்கள் ஆயுதங்களைச் சுழற்றினர், சிலரோ தங்கள் கரங்களை {தோள்களைத்} தேய்த்துக் கொண்டனர்.(29) பெரும் சக்தியும், முழுதும் கட்டுப்பட்ட ஆன்மாவும் கொண்ட சிலர் துரோணரை எதிர்த்து விரைந்தனர். குறிப்பாகத் துரோணரின் கணைகளால் பீடிக்கப்பட்ட பாஞ்சாலர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் வலியால் துன்புற்றாலும், போரில் மோதுவதைத் தொடர்ந்தனர்.

அப்போது அந்தப் போரில், களத்தில் இப்படித் திரிந்து கொண்டிருந்தவரும், வெல்லப்பட முடியாத போர்வீரரருமான துரோணரை எதிர்த்து, துருபதனும், விராடனும் முன்னேறினர். பிறகு ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருபதனின் மூன்று பேரர்களும்,(31,32) வலிமைமிக்க வில்லாளிகளான சேதிகளும், அம்மோதலில் துரோணரை எதிர்த்து முன்னேறினர். துரோணர், மூன்று கூரிய கணைகளைக் கொண்டு துருபதனின் மூன்று பேரர்களுடைய உயிரை எடுத்தார். அந்த இளவரசர்களும் உயிரை இழந்து பூமியில் விழுந்தனர். அடுத்ததாக அந்தப் போரில் சேதிகள், கைகேயர்கள் மற்றும் சிருஞ்சயர்களையும் துரோணர் வென்றார்.(33,34) பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, மத்ஸ்யர்கள் அனைவரையும் வென்றார். அப்போது கோபத்தால் நிறைந்த துருபதனும், விராடனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரின் மீது கணைமாரியை ஏவினர். க்ஷத்திரியர்களைக் கலங்கடிப்பவரான துரோணர், அந்தக் கணைமாரியைக் கலங்கடித்து,(35,36) துருபதன் மற்றும் விராடன் ஆகிய இருவரையும் தன் கணைகளால் மறைத்தார்.

துரோணரால் மறைக்கப்பட்ட அந்தப் போர்வீரர்கள் இருவரும், சினத்தால் வெறிகொண்டு, அந்தப் போர்க்களத்தில் தங்கள் கணைகளால் அவரைத் துளைக்கத் தொடங்கினர். பிறகு துரோணர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் நிறைந்து, பழிதீர்க்க விரும்பி,(37,38) அகன்ற தலை கொண்ட கணைகள் {பல்லங்கள்} இரண்டைக் கொண்டு, தன் எதிராளிகள் இருவரின் விற்களையும் வெட்டினார். அப்போது கோபத்தால் நிறைந்த விராடன், அம்மோதலில் துரோணரைக் கொல்ல விரும்பி, பத்து வேல்களையும் {தோமரங்களையும்}, பத்து கணைகளையும் ஏவினான். கோபத்தில் இருந்த துருபதனும், இரும்பாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், ஒரு பெரும்பாம்புக்கு ஒப்பானதுமான ஒரு பயங்கர ஈட்டியை துரோணரின் தேர்மீது வீசினான். பெரும் எண்ணிக்கையிலானவையும், கூரியவையும், அகன்ற தலைகளைக் கொண்டவையுமான கணைகள் {பல்லங்கள்} பலவற்றால் (விராடனின்) அந்தப் பத்து வேல்களை வெட்டிய துரோணர்,(39-41) தங்கத்தாலும், வைடூரியக் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த (துருபதனின்) அந்த ஈட்டியைக் குறிப்பிட்ட சில கணைகளைக் கொண்டு வெட்டினார். பிறகு எதிரிகளைக் கலங்கடிப்பவரான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, நன்கு கடினமாக்கப்பட்டவையும், அகன்ற தலைகளைக் கொண்டவையுமான இரு கணைகளை {பல்லங்களைக்} கொண்டு,(42) துருபதன் மற்றும் விராடன் ஆகிய இருவரையும் யமனுலகு அனுப்பினார்.

விராடன் மற்றும் துருபதன் ஆகியோர் வீழ்ந்து, கைகேயர்கள்,(43) சேதிகள், மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோர் கொல்லப்பட்டு, துருபதனின் பேரர்களான அந்த மூன்று வீரர்களும் வீழ்ந்ததும்,(44) துரோணரின் அந்தச் சாதனைகளைக் கண்ட உயர் ஆன்ம திருஷ்டத்யும்னன், சினத்தாலும், துயரால் நிறைந்து, தேர்வீரர்கள் அனைவருக்கும் மத்தியில் இப்படிச் சொல்லி உறுதியேற்றான்.(45) அவன் {திருஷ்டத்யும்னன்}, “துரோணர் இன்று என்னிடம் இருந்து உயிருடன் தப்பித்தாலோ, என்னை வீழ்த்துவதில் அவர் வென்றாலோ, என் அறச் செயல்கள் அனைத்தின் தகுதிகளையும், என் க்ஷத்திரிய மற்றும் பிரம்ம சக்திகளையும் நான் இழப்பேனாக” என்றான்[3].(46) வில்லாளிகள் அனைவருக்கு மத்தியிலும் இந்தச் சபதத்தைச் செய்தவனும், பகைவர்களைக் கொல்லும் வீரனுமான அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, தன் சொந்தப் படையால் ஆதரிக்கப்பட்டுத் துரோணரை எதிர்த்து முன்னேறினான்.(47). பிறகு ஒரு பக்கத்தில் இருந்து பாஞ்சாலர்களும், மறு பக்கத்தில் இருந்து அர்ஜுனனும் துரோணரைத் தாக்கத் தொடங்கினர். (அங்கிருந்த) துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோரும்,(48) துரியோதனனுடன் பிறந்த அவனது தம்பிகளும் தங்கள் தேர்வுக்கேற்ப போரில் துரோணரைப் பாதுகாக்கத் தொடங்கினர். இந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர்களால் போரில் இப்படித் துரோணர் பாதுகாக்கப்பட்டபோது,(49) மிகத் தீவிரமாகப் போராடினாலும் பாஞ்சாலர்களால் அவரைப் {துரோணரைப்} பார்க்கக்கூட முடியவில்லை.

அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனிடம் மிகவும் கோபமடைந்த அந்தப் பாண்டுவின் மகன் பீமசேனன், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனை இந்தக் கடும் வார்த்தைகளால் துளைத்தான்.(50) பீமசேனன், “க்ஷத்திரியன் என்று கருதப்படுபவனும், துருபதன் குலத்தில் பிறந்தவனும், ஆயுதங்களின் அறிவைக் கொண்ட மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான எந்த மனிதன்தான் தன் எதிரே நிலைகொண்டிருக்கும் தன் எதிரியை இப்படிப் பார்த்துக் கொண்டே இருப்பான்?(51) தன் தந்தை கொல்லப்பட்டதைக் கண்டவனும், மன்னர்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட ஒரு சபதத்தை ஏற்றவனுமான எந்த மனிதன்தான் இப்படித் தன் எதிரியை அலட்சியம் செய்வான்?(52) தன் சக்தியால் பெருகும் நெருப்பைப் போல அதோ துரோணர் நின்று கொண்டிருக்கிறார். உண்மையில், வில்லையும் கணைகளையும் எரிபொருளாக {விறகாகக்} கொண்ட அவர் க்ஷத்திரியர்கள் அனைவரையும் எரித்துக் கொண்டிருக்கிறார்.(53) விரைவில் அவர் பாண்டவப் படையை அழித்துவிடுவார். (பார்வையாளனாக மட்டும்) நீ நின்று கொண்டே, என் அருஞ்செயலைப் பார்ப்பாயாக. துரோணரை எதிர்த்து நானே செல்வேன்” என்றான் {பீமன்}.(54)

இந்த வார்த்தைகளைச் சொன்ன விருகோதரன் {பீமன்}, சினத்தால் நிறைந்து, துரோணரின் படைப்பிரிவுக்குள் ஊடுருவி, தன் வில்லை முழுதாக வளைத்து, கணைகளை ஏவி, அந்தப் படையைப் பீடித்து, முறியடிக்கத் தொடங்கினான்.(55) பிறகு பாஞ்சால இளவரசனான திருஷ்டத்யும்னனும், அந்தப் பெரும்படைக்குள் ஊடுருவி துரோணருடன் போரில் ஈடுபட்டான். அந்தப் போர் மூர்க்கமடைந்தது.(56) அந்த நாளின் சூரிய உதயத்தின் போது நடந்த இந்த மோதலானது, இதுவரை நாம் பார்க்காத அளவுக்கு, கேள்விப்படாத அளவுக்குக் கடுமையானதாக இருந்தது.(57) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தேர்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டிருந்தன. உடல்கொண்ட உயிரினங்கள் உயிரை இழந்து களமெங்கும் சிதறிக் கிடந்தன.(58) களத்தின் மற்றொரு பகுதிக்குச் சென்ற சிலர், வழியிலேயே பிறரால் தாக்கப்பட்டனர். சிலர் தப்பி ஓடும்போது, அவர்களது முதுகுகளும் சிலரின் விலாப்புறங்களும் தாக்கப்பட்டன.(59) இயல்பான அம்மோதல் இப்படிக் கடுமையாகவே தொடர்ந்தது. எனினும், விரைவில் காலைச் சூரியன் உதித்தான் [4]” {என்றான் சஞ்சயன்}.(60)

நகுலனைப் புறமுதுகிடச் செய்த துரியோதனன்! – துரோண பர்வம் பகுதி – 187-துரோணரும், அர்ஜுனனும் தங்கள் தங்கள் படைகளின் பாதுகாவலர்களாகத் திகழ்வது; துரியோதனன் நகுலனுடனும், கர்ணன் பீமனுடனும், துரோணர் அர்ஜுனனுடனும், துச்சாசனன் சகாதேவனுடனும் மோதுவது; நகுலனை வீழ்த்திய துரியோதனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் கவசம்பூண்ட போர்வீரர்கள், காலையில் உதித்த ஆயிரங்கதிரோனான ஆதித்யனை {சூரியனை} வணங்கினார்கள்.(1) புடம்போட்ட தங்கம்போலப் பிரகாசமான காந்தியுடன் கூடிய அந்த ஆயிரங்கதிர் ஒளிக்கோள் உதித்த போது, உலகம் ஒளியூட்டப்பட்டு, மீண்டும் போர் தொடங்கியது.(2) சூரிய உதயத்திற்கு முன்னர், ஒருவரோடொருவர் மோதிய அதே படைவீரர்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சூரிய உதயத்திற்குப் பின்னர் மீண்டும் ஒருவரோடொருவர் போரிட்டனர்.(3) குதிரைவீரர்கள் தேர்வீரர்களோடும், யானைகள் குதிரைவீரர்களோடும், காலாட்படைவீரர்கள் யானைகளோடும், குதிரை வீரர்கள் குதிரைவீரர்களோடும், காலாட்படையினர், காலாட்படையினரோடும் போரிட்டனர்.(4) மேலும் ஓ! பாரதக் குலத்தின் காளையே, தேர்வீரர்கள் தேர்வீரர்களோடும், யானைகள் யானைகளோடும், குதிரைவீரர்கள் குதிரைவீரர்களோடும் போரிட்டனர். சில நேரங்களில் சேர்ந்தும், சில நேரங்களில் தனித்தனியாகவும் அந்தப் போரில் போர்வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்தனர்.(5)

இரவில் மூர்க்கமாகப் போரிட்ட பலர், உழைப்பால் களைத்து, பசியாலும், தாகத்தாலும் பலவீனமடைந்து தங்கள் புலன்களை இழந்தவர்களானார்கள்.(6) ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சங்குகள் மற்றும் பேரிகைகளின் முழக்கங்களாலும், யானைகளின் பிளிறலாலும், பலமாக வளைக்கப்பட்ட விற்களின் நாணொலிகளாலும் உண்டான ஆரவாரமானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சொர்க்கங்களையே எட்டின. விரைந்து செல்லும் காலாட்படை, ஆயுதங்களின் பாய்ச்சல், குதிரைகளின் கனைப்பொலிகள், உருளும் தேர்கள், கூச்சலிட்டு முழங்கும் போர்வீரர்கள் ஆகியோரால் உண்டாக்கப்பட்ட ஒலியானது மகத்தானதாக இருந்தது.(7-9) ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்த அந்தப் பேரொலி, சொர்க்கங்களையே எட்டின. விழுந்து கொண்டிருப்பவர்களும், விழுந்துவிட்டவர்களுமான காலாட்படைவீரர்கள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியோரின் முனகல்களும், வலியால் உண்டான ஓலங்களும், அக்களத்தில் கேட்பதற்குப் பரிதாபமாகவும், பெரும் ஒலியோடும் இருந்தது.(10,11) அந்த மோதல் இயல்பானதாக இருந்த போதே, ஒருவரையொருவர் கொன்று கொண்ட இரு தரப்பும் தங்கள் சொந்த மனிதர்களையும், விலங்குகளையும் கூடக் கொன்றன.(12)

வீரர்களின் கைகளில் இருந்து போர்வீரர்கள் மற்றும் யானைகளின் மீது வீசப்பட்ட வாள்களின் குவியலானது, சலவை செய்யும் இடத்தில் குவிந்து கிடக்கும் துணிகளுக்கு ஒப்பாகக் களத்தில் காட்சியளித்தது.(13) வீரர்களின் கைகளில் உயர்த்தி வீசப்பட்ட வாள்களின் ஒலியானது துணிகளைச் சலவை செய்ய அடித்துத் துவைக்கும் ஒலிக்கு ஒப்பானதாக இருந்தது.(14) வாள்கள், கத்திகள், வேல்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றைக் கொண்டு ஒருவரோடு ஒருவர் மோதிய அந்த மோதலின் இயல்பு பயங்கரத்தை அடைந்தது.(15) பிறகு வீரப்போராளிகள் இறந்தோரின் உலகங்களை நோக்கிப் பாயும் ஆறு ஒன்றை அங்கே உண்டாக்கினார்கள். யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் குருதிகள் அதன் நீரோட்டமாக அமைந்தன. ஆயுதங்கள் அதன் அபரிமிதமான மீன்களாகின. குருதியாலும், சதையாலும் அது சகதியாக இருந்தது. துயர் மற்றும் வலி ஆகியவற்றால் எழுந்த ஓலங்கள் அதன் முழக்கங்களாக அமைந்தன. கொடிகளும், துணிகளும் அதன் {அந்த ஆற்றின்} நுரைகளாகின.(16,17) கணைகள் மற்றும் ஈட்டிகளால் பீடிக்கப்பட்டு, (முந்தைய) இரவைக் கடின உழைப்பில் கழித்ததால் களைப்படைந்து, மிகவும் பலவீனமடைந்த யானைகளும், குதிரைகளும், முற்றிலும் அங்கங்கள் அசையாத நிலையில் களத்தில் நின்று கொண்டிருந்தன.(18)

(அழகான தன்மைகள் கொண்ட) தங்கள் கரங்களுடனும், தங்கள் அழகிய கவசங்களுடனும், அழகிய காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளுடனும் கூடியவர்களான போர்வீரர்கள், போர்க்கருவிகளால் அலங்கரிக்கப்பட்டு மிகப் பிரகாசமாகத் தெரிந்தனர்[1].(19) அந்நேரத்தில், ஊனுண்ணும் விலங்குகள் ஆகியவை, இறந்தோர், இறந்து கொண்டிருந்தோர் ஆகியோரின் விளைவால் களமெங்கும் தேர் செல்வதற்கான பாதையேதும் இருக்கவில்லை. கணைகளால் பீடிக்கப்பட்டவையும், நல்ல இனத்தில் பிறந்தவையும், திறன் மிகுந்தவையும், (அளவு மற்றும் பலத்தில்) யானைகளுக்கு ஒப்பானவையுமான குதிரைகள், பெரும் முயற்சியோடு உழைத்துக் களைத்ததால் பூமியில் புதைந்த சக்கரங்களைக் கொண்ட தங்கள் வாகனங்களை {தேர்களை} நடுக்கத்துடன் இழுத்துக் கொண்டிருந்தன. துரோணரையும், அர்ஜுனனையும் தவிர, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கடலுக்கு ஒப்பான அந்தப் பரந்த படை முழுவதும் கலக்கமடைந்து, பீடிக்கப்பட்டு, பயங்கரத்தை அடைந்திருந்தது. இந்த இருவரே தங்கள் தங்கள் தரப்புகளின் போர்வீரர்களுக்குப் புகலிடமாகவும், பாதுகாவலர்களாகவும் திகழ்ந்தனர்.(20-23) இவ்விருவருடன் மோதிய பிறர் யமலோகம் சென்றனர். அப்போது குருக்களின் அந்தப் பரந்த படை மிகவும் கலக்கமடைந்து, வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்குப் பாஞ்சாலர்களுடன் ஒன்றாகக் கலந்திருந்திருந்தன.

பூமியில் க்ஷத்திரியர்களின் பேரழிவு நடந்து கொண்டிருந்த போது, மருண்டோரின் அச்சத்தை அதிகப்படுத்துவதும், சுடலையை {சுடுகாட்டைப்} போலத் தெரிந்ததுமான அந்தப் போர்க்களத்தில், ஒவ்வொருவரும் துருப்புகளுடன் கலந்து புழுதிமேகங்களால் மறைக்கப்பட்டிருந்ததால், ஓ !மன்னா {திருதராஷ்டிரரே}, கர்ணனோ, துரோணரோ அர்ஜுனனோ, யுதிஷ்டிரனோ,(24-26) பீமசேனனோ, இரட்டையரோ {நகுலன் மற்றும் சகாதேவனோ}, பாஞ்சால இளவரசனோ {திருஷ்டத்யும்னனோ}, சாத்யகியோ, துச்சாசனனோ, துரோணரின் மகனோ {அஸ்வத்தாமனோ}, துரியோதனனோ, சுபலனின் மகனோ {சகுனியோ},(27) கிருபரோ, மத்ர ஆட்சியாளனோ {சல்லியனோ}, கிருதவர்மனோ, பிறரோ, நானோ, பூமியோ, திசைகளின் புள்ளிகளோ(28) அங்கே காணப்படவில்லை. கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போர் நடக்கையில் புழுதி மேகம் எழுந்த போது,(29) மீண்டும் இரவே வந்துவிட்டதென அனைவரும் நினைத்தனர். கௌரவர்களையோ, பாஞ்சாலர்களையோ, பாண்டவர்களையோ,(30) திசைப்புள்ளிகளையோ, ஆகாயத்தையோ பூமியையோ, சமமான, சமமற்ற பூமியையோ வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. வெற்றியை விரும்பிய போர்வீரர்கள், எதிரிகளையும், நண்பர்களையும், உண்மையில், தங்கள் கரங்களின் தீண்டலால் தாங்கள் காணக்கூடிய அனைவரையும் கொன்றனர். பூமியில் எழுந்த அந்தப் புழுதியானது, விரைவில் வந்த காற்றாலும், சிந்தப்பட்ட குருதியால் நனைந்ததாலும் விலகியது. யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள் மற்றும் காலாட்படைவீரர்கள் ஆகியோர்,(31-33) குருதியில் குளித்திருந்ததால், (தேவர்களின்) பாரிஜாத காட்டைப் போல அழகாகத் தெரிந்தனர்.

அப்போது, துரியோதனன், கர்ணன், துரோணர், துச்சாசனன்(34) ஆகிய நான்கு (கௌரவப்) போர்வீரர்களும், நான்கு பாண்டவப் போர்வீரர்களுடன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். துரியோதனனும், அவனது தம்பிமாரும் இரட்டையருடன் (நகுலன் மற்றும் சகாதேவனுடன்) மோதினர்.(35) ராதையின் மகன் {கர்ணன்} விருகோதரனோடும் {பீமனோடும்}, அர்ஜுனன் பரத்வாஜர் மகனோடும் {துரோணரோடும்} போரிட்டுக் கொண்டிருந்தனர். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அனைத்துத் துருப்புகளும் அந்தப் பயங்கர மோதல்களைக் கண்டு கொண்டிருந்தன.(36) பல்வேறு இனிய பரிணாமங்களைச் செய்து காட்டிய தங்கள் அழகிய தேரில் ஏறி வந்தவர்களும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், கடுமையானவர்களுமான அந்த முதன்மையான தேர்வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற மனித சக்திக்கு அப்பாற்பட்ட மோதலான அந்த அழகிய போரை (அமைதியாக இருந்த இரு படையின்) தேர்வீரர்கள் கண்டனர். பெரும் ஆற்றலைக் கொண்டவர்களும், மிகத் தீவிரமாகப் போராடுபவர்களும், ஒருவரையொருவர் வெல்ல விரும்பியவர்களுமான அவர்கள் ஒவ்வொருவரும்,(37,38) கோடையின் முடிவில் வரும் (மழைத்தாரைகளைப் பொழியும்) மேகங்களைப் போலக் கணைமாரிகளால் ஒருவரையொருவர் மறைத்தனர். சூரியப் பிரகாசம் கொண்ட தங்கள் தேர்களில் ஏறி வந்த அந்த மனிதர்களில் காளையர்,(39) கூதிர்கால வானத்தில் கூடித் திரண்ட மேகங்களைப் போல அழகாகத் தெரிந்தனர். பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்தால் நிறைந்து பழிதீர்க்க விரும்பிய போர்வீரர்களான(40) அந்த வலிமைமிக்க வில்லாளிகள் அனைவரும், யானைக்கூட்டங்களின் மதங்கொண்ட தலைமை யானைகளைப் போலப் பெரும் மூர்க்கத்துடன் ஒருவரை நோக்கி ஒருவர் அறைகூவி அழைத்தபடியே விரைந்தனர்.(41)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்வீரர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அந்தப் போரில் அழியாததால், நேரம் வரும்வரை மரணம் நேராது என்பது உண்மையே[2].(42) வெட்டப்பட்ட கரங்கள், கால்கள், காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகள், விற்கள், கணைகள், வேல்கள் {பராசங்கள்}, கத்திகள், போர்க்கோடரிகள், (பிற வகையிலான) கோடரிகள், நாளீகங்கள், கத்தி தலை கணைகள் {க்ஷுரப்ரங்கள்}, துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, ஈட்டிகள், சூலங்கள், பல்வேறுவிதங்களிலான அழகிய கவசங்கள், உடைந்து போன அழகிய தேர்கள், கொல்லப்பட்ட யானைகள், நகரங்களைப் போலத் தெரியும் கொடிகளற்ற தேர்கள், காற்றின் வேகத்தைக் கொண்டவையும், சாரதியற்றவையும், பெரும் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தவையுமான குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்ட வாகனங்கள், நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களும் துணிவுமிக்கவர்களுமான பெரும் எண்ணிக்கையிலான போர்வீரர்கள், வீழ்ந்து கிடந்த சாமரங்கள், கவசங்கள், கொடிமரங்கள், ஆபரணங்கள், ஆடைகள், நறுமணமிக்க மலர்மாலைகள், தங்கச் சங்கிலிகள், மகுடங்கள், கிரீடங்கள், தலைப்பாகைகள், மணிகள், மார்பிலணியும் நகைகள், மார்புக்கவசங்கள், கழுத்துப்பட்டைகள், தலைப்பாகைகளை அலங்கரித்த ரத்தினங்கள் ஆகியன இறைந்து கிடந்த அந்தப் போர்க்களமானது, நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கும் ஆகாயத்தைப் போல அழகாகத் தெரிந்தது.(43-49)

அப்போது, கோபத்தால் நிறைந்தவனும், பழிதீர்க்க விரும்பியவனுமான துரியோதனனுக்கும், அதே போன்ற உணர்ச்சிகளால் நிறைந்திருந்த நகுலனுக்கும் இடையில் மோதல் நேர்ந்தது.(50) அந்த மாத்ரியின் மகன் {நகுலன்}, நூற்றுக்கணக்கான கணைகளை ஏவியபடி உமது மகனை {துரியோதனனைத்} தனக்கு வலப்புறத்தில் நிறுத்தினான்[3]. அதன் பேரில் அவனுக்காக {நகுலனுக்காக} உரத்த ஆரவாரம் எழுந்தது.(51) கோபத்தில் இருந்த தன் தம்பியால் {நகுலனால்} வலப்புறத்தில் நிறுத்தப்பட்டவனும், உமது மகனுமான மன்னன் துரியோதனன், சினத்தால் நிறைந்து, அந்தப் பக்கத்தில் இருந்தே நகுலனை எதிர்த்து அற்புதமாகப் போரிட்டான்.(52) அதன்பேரில், பெரும் சக்தி கொண்டவனும், (தேரை நடத்திச் செல்வதில்) பல்வேறு வழிமுறைகளை அறிந்தவனுமான நகுலன், தன் வலப்புறத்தில் இருந்து, தன்னை எதிர்த்துக் கொண்டிருக்கும் உமது மகனைத் தடுக்கத் தொடங்கினான். எனினும், கணைமாரிகளால் நகுலனைப் பீடித்து, அனைத்துப் பக்கங்களிலும் அவனைத் தடுத்த துரியோதனன், அவனை {நகுலனைப்} புறமுதுகிடச் செய்தான்.(53,54) (உமது மகனின்) அந்தச் சாதனையைத் துருப்புகள் அனைத்தும் மெச்சின. அப்போது நகுலன், உமது தீய ஆலோசனைகளால் உண்டான தன் துன்பங்கள் அனைத்தையும் நினைவு கூர்ந்து, “நில்லும், நிற்பீராக” என்று உமது மகனிடம் சொன்னான்” {என்றான் சஞ்சயன்}.(55)

துரோணார்ஜுனப் போர்! – துரோண பர்வம் பகுதி – 188, 189-துச்சாசனனின் சாரதியைக் கொன்ற சகாதேவன்; சகாதேவனிடம் வீழும் நிலையை அடைந்த துச்சாசனன்; கர்ணன் குறுக்கிட்டது; கர்ணனுக்கும், பீமனுக்கும் இடையில் நடந்த கடும் மோதல்; நகுலனின் தேரில் ஏறிக் கொண்ட பீமன்; துரோணருக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த மோதல்; சித்தர்களும் முனிவர்களும் அந்த இரு போர்வீரர்களையும் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தது; இரு படைகளுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர் இயல்பு நிலையை அடைந்தது…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அப்போது துச்சாசனன், கோபத்தால் நிறைந்து, தன் தேரின் கடும் வேகத்தால் பூமியை நடுங்கச் செய்தபடி சகாதேவனை எதிர்த்து விரைந்தான்.(1) எனினும், எதிரிகளை நசுக்குபவனான மாத்ரியின் மகன் {நகுலன்}, தன்னை எதிர்த்து வரும் எதிராளியின் சாரதியுடைய தலைப்பாகையுடன் கூடிய தலையை அகன்ற தலை கொண்ட கணை யொன்றால் {பல்லத்தால்} விரைவாக வெட்டினான்.(2) சகாதேவனால் சாதிக்கப்பட்ட இந்தச் செயல் வேகத்தால் துச்சாசனனோ, துருப்புகளில் ஏதுமோ சாரதியின் தலை வெட்டப்பட்டதை அறியவில்லை.(3) கடிவாளங்கள் எவராலும் இழுத்துப் பிடிக்கப்படாததால் குதிரைகள் தங்கள் விருப்பப்படி ஓடின. அப்போதுதான் துச்சாசனன் தன் சாரதி கொல்லப்பட்டதை அறியவந்தான்.(4) குதிரைகளை நடத்த அறிந்தவனான அந்த முதன்மையான தேர்வீரன் {துச்சாசனன்}, தானே அந்தப் போரில் தன் குதிரைகளை நடத்திக்கொண்டு, பெரும் சுறுசுறுப்புடனும், திறனுடனும் அழகாகப் போரிட்டான்.(5) சாரதியற்ற தேரில் அந்தப் போரில் அச்சமில்லாமல் சென்ற அந்த அவனது {துச்சாசனனது} செயலை நண்பர்களும், எதிரிகளும் பாராட்டினர்.(6)

அப்போது சகாதேவன், அந்தக் குதிரைகளைக் கூரிய கணைகளால் துளைத்தான். அக்கணைகளால் பீடிக்கப்பட்ட அவை அங்கேயும் இங்கேயும் வேகமாக ஓடின.(7) அவன் {துச்சாசனன்} கடிவாளங்களைப் பிடிப்பதற்காக வில்லைக் கீழே வைக்கவும், பிறகு வில்லைப் பயன்படுத்துவதற்காகக் கடிவாளத்தைக் கீழே வைக்கவும் செய்தான்.(8) அந்தச் சந்தர்ப்பங்களில் மாத்ரியின் மகன் {சகாதேவன்} கணைகளால் அவனை {துச்சாசனனை} மறைத்தான். அப்போது கர்ணன், உமது மகனை {துச்சாசனனைக்} காக்க விரும்பி அவ்விடத்திற்கு விரைந்தான்.(9) அதன்பேரில் விருகோதரன் {பீமன்}, பெரும் கவனத்தோடு முழுமையாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} கர்ணனின் மார்பையும் கரங்களையும் துளைத்தான்.(10) தடியால் அடிபட்ட பாம்பு போல அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட கர்ணன், கூரிய கணைகளை ஏவியபடி பீமசேனனைத் தடுத்து நின்றான்.(11) அதன்பேரில், பீமனுக்கும், ராதையின் மகனுக்கும் {கர்ணனுக்கும்} இடையில் ஒரு கடும்போர் நடைபெற்றது. அந்த இருவரும் காளைகளைப் போல முழங்கினர். அவ்விருவரின் கண்களும் (சினத்தால்) விரிந்திருந்தன.(12)

கோபத்தால் தூண்டப்பட்டு, பெரும் வேகத்துடன் ஒருவரையொருவர் நோக்கி முழங்கியபடியே அவர்கள் விரைந்து சென்றனர். போரில் திளைப்பவர்களான அவ்விருவரும் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமான நிலையை அடைந்தனர். ஒருவரை நோக்கி மற்றவர் கணைகளை எளிதாக ஏவமுடியாத அளவுக்கு அவர்கள் மிக நெருக்கமாக இருந்தனர். அதன்பேரில், கதாயுதப் போர் நிகழ்ந்தது. பீமசேனன் வேகமாகக் கர்ணனுடைய தேரின் கூபரத்தைத் தன் கதாயுதத்தால் நொறுக்கினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனது {பீமனது} இந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது. பிறகு அந்த ராதையின் வீர மகன் {கர்ணன்}, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு பீமனுடைய தேரின் மீது வீசினான். எனினும், அதைப் பீமன், தனது கதாயுதத்தால் நொறுக்கினான். பிறகு மீண்டும் ஒரு கனமான கதாயுத்தை எடுத்துக் கொண்ட பீமன், அஃதை அந்த அதிரதன் மகன் {கர்ணன்} மீது வீசினான்.(13-16) கர்ணன், அழகிய சிறகுகளைக் கொண்ட எண்ணற்ற கணைகளைக் கொண்டு அந்தக் கதாயுதத்தைப் பெரும்பலத்துடன் தாக்கி, மீண்டும் இன்னும் பிற கணைகளால் தாக்கினான். கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட அந்தக் கதாயுதமானது, மந்திரங்களால் பீடிக்கப்பட்ட பாம்பைப் போலப் பீமனை நோக்கித் திரும்பியது. அந்தக் கதாயுதத்தின் எதிர்வீச்சால் பீமனின் பெரும் கொடிமரம் ஒடிந்து விழுந்தது.(17,18) அதே கதாயுதத்தினால் தாக்கப்பட்ட பீமனின் சாரதியும் உணர்வுகளை இழந்தான்.

பிறகு சினத்தால் வெறிக் கொண்ட பீமன், கர்ணன் மீதும்,(19) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனது {கர்ணனின்} கொடிமரம், வில் மற்றும் தோலுறை ஆகியவற்றின் மீதும் எட்டு கணைகளை ஏவினான். பகைவீரர்களைக் கொல்பவனும், வலிமைமிக்கவனுமான பீமசேனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தக் கூரிய கணைகளால் கர்ணனின் கொடிமரம், வில் மற்றும் தோலுறைகளைப் பெரும் கவனத்தோடு அறுத்தான். பிறகு வெல்லப்படமுடியாததும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட ராதையின் மகன் {கர்ணன்}, கரடியின் நிறத்தில் இருந்த பீமனின் குதிரைகளையும், அவனது {பீமனது} பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் பெரும் எண்ணிக்கையிலான கணைகளால் வேகமாகக் கொன்றான்.(20-22) இப்படித் தனது தேருக்குத் தீங்கேற்பட்டதும், எதிரிகளைத் தண்டிப்பவனான பீமன், மலைச்சிகரத்தில் இருந்து கீழே குதிக்கும் சிங்கத்தைப் போல, நகுலனின் தேரில் வேகமமாகக் குதித்தான்.(23)

அதே வேளையில், தேர்வீரர்களில் முதன்மையானோரும், ஆசான் சீடனுமானோரும், ஆயுதங்களில் திறம் பெற்றோருமான துரோணரும், அர்ஜுனனும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் ஒருவரோடொருவர் போரிட்டு,(24) ஆயுதப் பயன்பாட்டில் தங்கள் நளினம், இலக்கில் உறுதி, தேர்களின் நகர்வுகள் ஆகியவற்றால் மனிதர்களின் கண்களையும், மனங்களையும் மலைப்படையச் செய்தனர்.(25) இதுவரை என்றும் நடக்காததைப் போல ஆசானுக்கும் {துரோணருக்கும்}, சீடனுக்குமிடையில் {அர்ஜுனனுக்கும்} நடந்த இதுபோன்றதொரு போரைக் கண்ட போர்வீரர்கள் பிறர், ஒருவரோடொருவர் போரிடுவதை நிறுத்தி நடுக்கத்தை அடைந்தனர்.(26) அவ்வீரர்கள் ஒவ்வொருவரும், தங்கள் தேர்களின் அழகிய பரிணாமங்களை வெளிக்காட்டியபடியே அடுத்தவரைத் தன் வலப்புறத்தில் நிறுத்த விரும்பினர்[1].(27)

அங்கே இருந்த போர்வீரர்கள், அவர்களது ஆற்றலைக் கண்டு ஆச்சரியத்தால் நிரம்பினர். உண்மையில், துரோணருக்கும், பாண்டுவின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த அந்தப் பெரும்போரானது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஓர் இறைச்சித் துண்டுக்காக வானில் மோதிக் கொள்ளும் இரண்டு பருந்துகளுக்கு ஒப்பாக இருந்தது. குந்தியின் மகனை {அர்ஜுனனை} வெல்வதற்காகத் துரோணரால் செய்யப்பட்ட சாதனைகள் அனைத்தும்,(28,29) அதே போன்ற சாதனைகளைச் செய்த அர்ஜுனனால் எதிர்க்கப்பட்டது. துரோணர், பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} விஞ்சுவதில் தவறியபோது, ஆயுதங்கள் அனைத்தின் வழிமுறைகளை அறிந்த போர்வீரரான அந்தப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, ஐந்திரம், பாசுபதம், தாஷ்டிரம், வாயவ்யம், யாம்ய ஆயுதங்களை இருப்புக்கு அழைத்தார்.(30,31) அந்த ஆயுதங்கள் துரோணரின் வில்லில் இருந்து வெளிப்பட்டதும், தனஞ்சயன் {அர்ஜுனன்} அவற்றை வேகமாக அழித்தான். இப்படித் தன் ஆயுதங்களை முறையாகத் தன் ஆயுதங்களால் அர்ஜுனன் அழித்தபோது,(32) தெய்வீக ஆயுதங்களில் வலிமைமிக்க ஓர் ஆயுதத்தைக் கொண்டு, துரோணர் அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} மறைத்தார். பார்த்தனை {அர்ஜுனனை} வெல்லும் விருப்பத்தால் பார்த்தன் மீது அதைத் துரோணர் ஏவினாலும், அவன் பதிலுக்குத் தாக்கி அதைக் கலங்கடித்தான். தன் ஆயுதங்கள் அனைத்தும், குறிப்பாக தெய்வீக ஆயுதங்களும் கூட அர்ஜுனனால் கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட துரோணர், பின்னவனைத் {அர்ஜுனனைத்} தன் இதயத்தால் பாராட்டினார். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த எதிரிகளைத் தண்டிப்பவர் {துரோணர்}, அர்ஜுனனைத் தன் சீடனாகக் கொண்டதன் விளைவால், இவ்வுலகில் ஆயுதங்களை அறிந்தோர் அனைவரைக் காட்டிலும் தம்மை மேன்மையானவராகக் கருதிக் கொண்டார். அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர்கள் அனைவருக்கும் மத்தியில், இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} தடுக்கப்பட்ட துரோணர்,(33-36) தீவிரமாகப் போராடி, ஆச்சரியத்துடன் மகிழ்ச்சியாக (பதிலுக்கு) அர்ஜுனனைத் தடுத்தார்.

அப்போது, ஆயிரக்கணக்கான தேவர்களும், கந்தர்வர்களும்,(37) முனிவர்கள் மற்றும் சித்தர்களின் கூட்டங்களும் அனைத்துப் பக்கங்களிலும் தென்பட்டனர். (அவர்களும், அவர்களோடு கூடிய) அப்சரஸ்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள் ஆகியோராலும்(38) நிறைந்திருந்த அந்த ஆகாயமானது, மேகங்கள் திரண்டு மீண்டும் இருண்டிருப்பதைப் போலத் தெரிந்தது. துரோணரையும், உயர் ஆன்ம பார்த்தனையும் {அர்ஜுனனையும்} புகழ்ந்து கொண்டிருந்த கண்ணுக்குப் புலப்படாத குரல் ஒன்று ஆகாயமெங்கும் மீண்டும் மீண்டும் கேட்டது. துரோணர் மற்றும் பார்த்தன் ஆகியோரால் ஏவப்பட்ட கணைகளின் விளைவாக அனைத்துப் பக்கங்களும் ஒளியால் சுடர்விட்டு எரிந்த போது,(39,40) அங்கே இருந்த சித்தர்களும் முனிவர்களும், “இது மனிதப் போரோ, அசுரப்போரோ, ராட்சசப் போரோ, தெய்வீகப் போரோ, கந்தர்வப் போரோ அல்ல. உயர்வான பிரம்ம மோதலே இஃது என்பதில் ஐயமில்லை. இந்தப்போர் மிக அழகானது; ஆச்சரியகரமானது. இதைப் போன்ற ஒன்றை நாம் பார்த்ததோ, கேள்விப்பட்டதோ இல்லை.(41-42) சில நேரங்களில் ஆசான் {துரோணர்} பாண்டுவின் மகனையும் {அர்ஜுனனையும்}, சில நேரங்களில் பாண்டுவின் மகன் துரோணரையும் விஞ்சி நிற்கின்றனர். அவர்களுக்குள் எந்த வேறுபாட்டையும் எவனாலும் காண முடியாது.(43) ருத்ரன் தன்னையே இரு பாகங்களாகப் பகுத்துக் கொண்டு, தானே தன்னுடன் போரிட்டால், அஃது இது போன்ற நிகழ்வுக்கு ஒப்பாகலாம். இதற்கு ஒப்பாக வேறொரு நிகழ்வை வேறு எங்கும் காண முடியாது.(44) அறிவியலானது, ஒன்றாகத் திரண்டு ஆசானிடம் {துரோணரிடம்} இருக்கிறது. அறிவியலும், வழிமுறைகளும் {தொழில்நுட்பமும்} பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} உள்ளது.(45) இந்தப் போர்வீரர்களில் எவரையும் எந்த எதிரிகளாலும் போரில் எதிர்க்க முடியாது. இவ்விருவரும் விரும்பினால் தேவர்களுடன் கூடிய அண்டத்தையே இவர்களால் அழித்துவிட முடியும்” என்றனர்.(46) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கண்ணுக்குப் புலப்படாத மற்றும் புலப்படும் உயிரினங்கள் அனைத்தும், மனிதர்களில் காளையரான இவ்விருவரையும் கண்டு இவ்வார்த்தைகளைச் சொல்லின.(47)

அந்தப் போரில் உயர் ஆன்மத் துரோணர், பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, கண்ணுக்குப் புலப்படாத உயிரினங்கள் அனைத்தையும் பீடித்தபடியே பிரம்ம ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்தார்.(48) அதன் பேரில் மலைகள், நீர்நிலைகள், மரங்களுடன் கூடிய பூமாதேவி நடுங்கினாள். கடுமையான காற்று வீசத்தொடங்கியது. கடல்கள் ஆர்ப்பரித்துப் பொங்கின.(49) அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர் {துரோணர்}, ஆயுதத்தை உயர்த்திய போது, குரு மற்றும் பாண்டவப் படைகளின் போராளிகளும் அச்சமடைந்தனர்; இன்னும் பிற உயிரினங்கள் அனைத்தும் அச்சமடைந்தன.(50) அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அச்சமற்ற வகையில் தனது பிரம்மாயுதத்தைக் கொண்டு அந்த ஆயுதத்தைக் கலங்கடித்ததால், இயற்கையின் கலக்கம் விரைவாகத் தணிந்தது.(51) இறுதியாக அவர்களில் எவராலும் தன் எதிராளியைத் தனிப்போரில் வெல்ல இயலாத போது, களத்தில் ஏற்பட்ட பெருங்குழப்பத்தால் இரு படைகளுக்கும் இடையில் இயல்பான மோதலே நடந்தது.(52) துரோணருக்கும், பாண்டுவின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் அந்தப் பயங்கரப் போர் (மேலும் இருபடைகளின் இயல்பான போரும்) நடந்து கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.(53) மேகத் திரள்களால் மறைக்கப்பட்டதைப்போல அடர்த்தியான கணை மழையால் ஆகாயம் மறைக்கப்பட்டது, வானுலாவும் உயிரினத்தாலும், அந்தப் பூதத்தின் {வானத்தின்} ஊடாக ஒரு பாதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. {ஆகாயத்தில் பறவையேதும் பறக்கவில்லை}” {என்றான் சஞ்சயன்}.(54)

சாத்யகி துரியோதன நட்பு! – துரோண பர்வம் பகுதி – 190-துச்சாசனனை வென்ற திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னன், நகுலன் மற்றும் சகாதேவனோடு போரிட்ட கிருதவர்மனும், அவனது மூன்று தம்பியரும்; துரோணரை நோக்கிச் சென்ற திருஷ்டத்யும்னன்; துரோணரைக் காக்க விரைந்த துரியோதனன்; துரியோதனனை நோக்கி விரைந்த சாத்யகி; சாத்யகியிடம் பேசிய துரியோதனன், தன்னைத்தானே பழித்துக் கொண்டது; சாத்யகியின் பதில்; துரியோதனனைப் பாதுகாக்க விரைந்த கர்ணன்; தேர்வீரர்களைக் காக்க தன் போர்வீரர்களைத் தூண்டிய யுதிஷ்டிரன்..

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மனிதர்களும், குதிரைகள், யானைகள் ஆகியவையும் பயங்கரமாகக் கொல்லப்பட்டபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனுடன்  துச்சாசனன் மோதினான்.(1) தன் தங்கத் தேரில் ஏறிவந்தவனும், துச்சாசனனின் கணைகளால் மிகவும் பீடிக்கப்பட்டவனும், கோபத்துடன் கூடியவனுமான பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, உமது மகனின் {துச்சாசனனின்} குதிரைகள் மீது தன் கணைகளைப் பொழிந்தான்.(2) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஷதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனுடைய} கணைகளால் மறைக்கப்பட்டதும், கொடியுடனும், சாரதியுடனும் கூடிய துச்சாசனனின் தேரானது விரைவில் கண்ணுக்குப் புலப்படாததாகியது.(3) அந்தக் கணை மழையால் பீடிக்கப்பட்ட துச்சாசனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிறப்புமிக்க அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்} முன்பு நிற்க இயலாதவனானான்.(4) தன் கணைகளின் மூலம் துச்சாசனனைப் புறமுதுகிடச் செய்த பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, மேலும் தன் கணைகளை இறைத்தபடியே அந்தப் போரில் துரோணரை எதிர்த்து விரைந்தான்.(5)

அந்த நேரத்தில், ஹிருதிகன் மகனான கிருதவர்மன், தன் தம்பிகள் மூன்று பேருடன் சேர்ந்து காட்சியில் தோன்றி, திருஷ்டத்யும்னனை எதிர்க்க முயன்றான்.(6) எனினும், மனிதர்களில் காளையரான இரட்டையர்கள் (நகுலனும், சகாதேவனும்), சுடர்மிக்க நெருப்பைப் போலத் துரோணரை நோக்கிச் சென்று கொண்டிருந்த திருஷ்டத்யும்னனைப் பின்தொடர்ந்து சென்று, அவனைப் பாதுகாக்கத் தொடங்கினர்.(7) பிறகு வலிமையுடன் கூடிய அந்தப் பெரும் தேர்வீரர்கள் அனைவரும், சினத்தால் தூண்டப்பட்டு, மரணத்தையே தங்கள் இலக்காகக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.(8) தூய ஆன்மாவும், தூய நடத்தையும் கொண்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சொர்க்கத்தைத் தங்கள் நோக்கில் கொண்டு, ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, நேர்மையான வழிமுறைகளில் போரிட்டனர்.(9) களங்கமற்ற குலத்தில் தோன்றியவர்களும், களங்கமற்ற செயல்கள் மற்றும் பெரும் நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்டவர்களுமான அந்த மனிதர்களின் ஆட்சியாளர்கள், சொர்க்கத்தைத் தங்கள் நோக்கில் கொண்டு, ஒருவரோடொருவர் நேர்மையாகப் போரிட்டனர்.(10)

அந்தப் போரில் நியாயமற்றதென்று ஏதுமில்லை, மேலும் நியாயமற்றதாகக் கருதப்பட்ட ஆயுதம் ஏதும் பயன்படுத்தப்படவுமில்லை. முள்பதித்த கணைகளையோ {கர்ணிகளையோ}, நாளீகங்கள் என்று அழைக்கப்பட்டவற்றையோ, நஞ்சூட்டப்பட்டவற்றையோ {லிப்தகங்களோ}, கொம்புகளால் செய்யபட்ட தலைகளைக் கொண்டவையோ {பஸ்திகமங்களையோ}, கூரிய பல தலைகள் கொண்டவற்றையோ {சூசிகளையோ, கபிசங்களையோ}, காளைகள் மற்றும் யானைகளின் எலும்புகளாலானவையோ {சூளிகளையோ}, இரு தலைகள் கொண்டவையோ {பலிசங்களையோ}, துருப்பிடித்த தலை கொண்டவையோ {யமிகளையோ}, நேராகச் செல்லாதவையோ {பாசகங்களையோ}, என இவற்றில் எதையும் அவர்கள் பயன்படுத்தவில்லை[1].(11,12) புகழையும், நேர்மையாகப் போரிடுவதால் கிடைக்கும் பேரருள் உலகங்களையும் வெல்ல விரும்பிய அவர்கள் யாவரும் எளிமையான, நியாயமான ஆயுதங்களையே பயன்படுத்தினர்.(13) உமது படையின் அந்த நான்கு போர்வீரர்களுக்கும் {கிருதவர்மன், அவனது மூன்று தம்பியர் ஆகியோருக்கும்}, பாண்டவத்தரப்பின் அந்த மூன்று பேருக்கும் {திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன் ஆகியோருக்கும்} இடையில் நடைபெற்ற போரானது, நியாயமற்ற எதையும் கொண்டிருக்காவிடினும் மிகப் பயங்கரமானதாகவே இருந்தது[2].(14)அப்போது, ஆயுதப் பயன்பாட்டில் மிகுந்த வேகம் கொண்ட திருஷ்டத்யும்னன், துணிச்சல்மிக்கவர்களான உமது படையின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், இரட்டையரால் (நகுலனாலும், சகாதேவனாலும்) தடுக்கப்படுவதைக் கண்டு துரோணரை நோக்கிச் சென்றான்.(15) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவராலும் தடுக்கப்பட்ட அந்த நான்கு போர்வீரர்களும், (தங்கள் வழியில் நிற்கும்) இரு மலைகளைத் தாக்கும் காற்றைப் போல முன்னவர்களுடன் மோதினார்கள்.(16) பெரும் தேர்வீரர்களான அந்த இரட்டையரில் ஒவ்வொருவரும், இரண்டு எதிராளிகளுடன் போரிட்டனர். அதே வேளையில், திருஷ்டத்யும்னன் துரோணரின் மீது கணைமாரியைப் பொழிந்தான்.(17) வெல்லப்பட முடியாதவனான பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, துரோணரை எதிர்த்துச் செல்வதையும், (தன் படையின்) நான்கு வீரர்கள் இரட்டையருடன் போரிடுவதையும் கண்ட துரியோதனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரனிடம்}, குருதியைக் குடிக்கும் கணைமாரியை இறைத்தபடியே அந்த இடத்திற்கு விரைந்து சென்றான். இதைக் கண்ட சாத்யகி, குரு மன்னனை {துரியோதனனை} வேகமாக அணுகினான்.(18,19) குரு மற்றும் மது குலங்களின் வழித்தோன்றல்களும், மனிதர்களில் புலிகளுமான அவ்விருவரும் ஒருவரையொருவர் அணுகி, போரில் ஒருவரையொருவர் தாக்க விரும்பினர்.(20) குழந்தைப் பருவத்தில் ஒருவரோடு ஒருவர் நடந்து கொண்ட விதங்களை மனதில் நினைத்து, அதைக் குறித்து மகிழ்ச்சியாகச் சிந்தித்து, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட அவர்கள் மீண்டும் மீண்டும் புன்னகைத்தனர்.(21)

தன் நடத்தையை (மனதில்) பழித்துக் கொண்ட மன்னன் துரியோதனன், எப்போதும் தனது அன்புக்குரிய நண்பனான சாத்யகியிடம்,(22) “ஓ! நண்பா, கோபத்திற்கு ஐயோ!, பழிவுணர்ச்சிக்கு ஐயோ! {கோபத்தையும், பழி உணர்ச்சியையும் நிந்திக்க வேண்டும்}. நீ என் மீது உன் ஆயுதங்களைக் குறிவைப்பதாலும், நான் உன் மீது குறி வைப்பதாலும், ஓ! சிநி குலத்துக் காளையே {சாத்யகி}, க்ஷத்திரியத் தொழிலுக்கு ஐயோ!, வலிமை மற்றும் ஆற்றலுக்கும் ஐயோ! அந்நாட்களில் நீ எனக்கு உயிரினும் அன்புக்குரியவனாக இருந்தாய், நானும் உனக்கு அவ்வாறே இருந்தேன்.(23,24) ஐயோ, குழந்தைப் பருவத்தில் நீயும், நானும் நடந்து கொண்ட விதங்களும், செய்த செயல்களும் என் நினைவில் இருக்கின்றன. அவையாவும் போர்க்களத்தில் ஒன்றுமில்லாதவை ஆகினவே.(25) ஐயோ, ஓ !சாத்வத குலத்தோனே, இங்கே கோபம் மற்றும் பேராசையால் உந்தப்பட்டு, இன்று நாம் ஒருவரோடு ஒருவர் போரிட இருக்கிறோமே” என்றான் {துரியோதனன்}.

இந்த வார்த்தைகளைச் சொன்ன அவனிடம் {துரியோதனனிடம்}, சில கூரிய கணைகளை எடுத்துக் கொண்டே புன்னகைத்தவனும், உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனுமான சாத்யகி, “ஓ! இளவரசே {துரியோதனா}, முன்னர் நாம் ஒன்றாகக் கூடி விளையாடிய இடங்களைப் போல, ஓ! இளவரசே, இது சபையோ, நமது ஆசானின் வசிப்பிடமோ அல்ல” என்றான்.(26,27) துரியோதனன், “ஓ! சிநி குலத்தோனே {சாத்யகியே}, நம் குழந்தைப் பருவத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள் எங்கே போயின? ஐயோ, இப்போதைய இந்தப் போரானது நம் மீது எவ்வாறு விழுந்தது? காலத்தின் ஆதிக்கம் தடுக்கப்பட முடியாதது என்பதாகவே தெரிகிறது.(28) (நாம் உந்தப்பட்டிருப்பதைப் போல) செல்வத்தின் மீது கொண்ட ஆசை என்ன பயனைத் தரப்போகிறது? எவ்வளவுதான் நாம் செல்வத்தைக் கொண்டிருந்தாலும், செல்வத்தின் மீது கொண்ட பேராசையாலேயே போரிடுவதற்கு நாம் இப்போது ஒன்று கூடியிருக்கிறோம்” என்றான்.{துரியோதனன்}.(29)

சஞ்சயன் சொன்னான், “இவ்வாறு சொன்ன மன்னன் துரியோதனனிடம் சாத்யகி, “இதுவே க்ஷத்திரியத் தொழில், அவர்கள் தங்கள் ஆசானுடன் கூடப் போரிட வேண்டியிருக்கிறது.(30) நான் உனது அன்புக்குரியவனாக இருந்தால், ஓ! மன்னா {துரியோதனா}, தாமதமேதும் செய்யாமல் என்னைக் கொல்வாயாக. ஓ! பாரத் குலத்தின் காளையே, உன் மூலமாக நான் நல்லோரின் உலகங்களை அடைவேன்.(31) உன் வலிமை மற்றும் ஆற்றல் அனைத்தையும் தாமதியாமல் வெளிப்படுத்துவாயாக. நண்பர்களுக்கிடையேயான இந்தப் பெரும் துயரைக் காண நான் விரும்பவில்லை” என்றான் {சாத்யகி}.(32)

இவ்வாறு மறுமொழி கூறிய சாத்யகி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உயிரைத் துச்சமாக மதிக்கும்படி அச்சமற்ற வகையில் துரியோதனனை எதிர்த்து வேகமாகச் சென்றான்.(33) அவன் {சாத்யகி} முன்னேறிவருவதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்} அவனை எதிர்கொண்டான். உண்மையில், ஓ! மன்னா, உமது மகன், அந்தச் சிநி குலத்தோன் மீது சரியாகக் கணைமாரியைப் பொழிந்தான்.(34) பிறகு, குரு மற்றும் மது குலங்களின் சிங்கங்களான அவர்களுக்கு இடையில், யானைக்கும், சிங்கத்திற்கும் இடையில் நடக்கும் மோதலுக்கு ஒப்பான ஒரு பயங்கரப் போர் தொடங்கியது.(35)

அப்போது கோபத்தால் நிறைந்த துரியோதனன், தன் வில்லை முற்று முழுதாக வளைத்து, கூரிய கணைகளை ஏவி, வெல்லப்பட முடியாத சாத்யகியைத் துளைத்தான்.(36) சாத்யகியும், குரு இளவரசனை {துரியோதனனை} அந்தப் போரில் ஐம்பது கூரிய கணைகளால் விரைவில் துளைத்து, மீண்டும் இருபதாலும், பிறகு மீண்டும் பத்து கணைகளாலும் துளைத்தான்.(37) பிறகு அம்மோதலில் உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா, புன்னகைத்துக் கொண்டே, தன் வில்லின் நாணைத் தன் காது வரை இழுத்து, முப்பது கணைகளால் சாத்யகியைப் பதிலுக்குத் துளைத்தான்.(38) பிறகு கத்தி தலை கணையை {க்ஷுரப்ரத்தை} ஏவிய அவன் {துரியோதனன்}, கணை பொருத்தப்பட்டிருந்த சாத்யகியின் வில்லை இரண்டாக அறுத்தான். பெரும் கரநளினம் கொண்ட பின்னவன் {சாத்யகி} மேலும் கடினமான ஒரு வில்லை எடுத்துக் கொண்டு, உமது மகனின் மீது கணை மாரியை ஏவினான். துரியோதனனைக் கொல்லச் சென்ற அந்தக் கணைகளின் சரத்தைப் பின்னவன் {துரியோதனன்},(39,40) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகள் உரக்க முழங்கச் செய்யும்படி துண்டுகளாக வெட்டினான். பெரும் வேகத்தைக் கொண்ட அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், எண்ணையில் ஊறவைத்தவையும், முற்று முழுதாக வளைக்கப்பட்ட தன் வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான எழுபத்துமூன்று கணைகளால் சாத்யகியைப் பீடித்தான்.

அப்போது, துரியோதனனின் கணைகள் யாவற்றையும், அவற்றுடன் சேர்த்துக் கணை பொருத்தப்பட்ட அவனது {துரியோதனனின்} வில்லையும் சாத்யகி வேகமாக வெட்டினான்.(41,42) பிறகு அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, தன் எதிராளியின் மீது கணைமாரியைப் பொழிந்தான். சாத்யகியால் ஆழத் துளைக்கப்பட்டு, வலியை உணர்ந்த துரியோதனன், ஓ! மன்னா, பெரும் துயரத்துடன் மற்றொரு தேரில் அடைக்கலம் தேடினான். சிறிது நேரம் இளைப்பாறி புத்துணர்வை அடைந்த உமது மகன் {துரியோதனன்}, மீண்டும் சாத்யகியை எதிர்த்துச் சென்று,(43,44) பின்னவனுடைய தேரின் மீது கணைமாரியை ஏவினான். ஓ! மன்னா, சாத்யகியோ சிரித்துக் கொண்டே, துரியோதனனின் தேரின் மீது பெரும் எண்ணிக்கையிலான கணைகளை இடையறாமல் ஏவினான். இருவரின் கணைகளும் ஆகாயத்தில் ஒன்றோடொன்று கலந்தன. இப்படி ஏவப்பட்ட அந்தக் கணைகளின் அனைத்துப் பக்கங்களிலும் வேகமாகப் பாய்ந்ததன் விளைவால், பெரும் காட்டை எரிக்கும்போது நெருப்பினால் உண்டாகும் ஒலியைப் போன்றே அங்கே பேரொலி எழுந்தது. இருவராலும் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளால் பூமியானது அடர்த்தியாக மறைக்கப்பட்டது.(45-47) ஆகாயமும் அப்படியே நிறைந்தது.

தேர்வீரர்களில் முதன்மையான அந்த மதுகுலத்து வீரன் {சாத்யகி}, துரியோதனனை விட வலிமைமிக்கவனாக இருப்பதைக் கண்ட கர்ணன், (48) உமது மகனை மீட்க விரும்பி அவ்விடத்திற்கு விரைந்தான். எனினும், வலிமைமிக்கப் பீமசேனனால் கர்ணனின் அம்முயற்சியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(49) எனவே, அவன் கர்ணனை எதிர்த்து வேகமாகமாகச் சென்று, எண்ணற்ற கணைகளை ஏவினான். பீமனின் அந்தக் கணைகள் அனைத்தையும் மிக எளிதாக வெட்டிய கர்ணன்,(50) தன் கணைகளால் பீமனின் வில், கணைகள் ஆகியவற்றையும் மற்றும் அவனது சாரதியையும் வெட்டினான். பாண்டுவின் மகனான பீமன், சினத்தால் நிறைந்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு,(51) தன் எதிராளியின் வில், கொடிமரம் மற்றும் சாரதியை அம்மோதலில் நொறுக்கினான். அந்த வலிமைமிக்கப் பீமன், கர்ணனின் தேர்ச்சக்கரங்களில் ஒன்றையும் நொறுக்கினான்.(52) எனினும் கர்ணன், ஒரு சக்கரம் உடைந்த அந்தத் தேரிலேயே மலைகளின் அரசனை (மேருவைப்) போல அசையாமல் நின்றான். ஒரு சக்கரத்தை மட்டுமே கொண்ட அவனது அழகிய தேரானது, ஒரு சக்கரத்தையே உடைய சூரியனின் தேர் ஏழு தெய்வீகக் குதிரைகளால் இழுக்கப்படுவதைப் போல அவனது குதிரைகளால் இழுக்கப்பட்டது. பீமசேனனின் சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள இயலாத கர்ணன், பல்வேறு வகைகளிலான கணைகளையும், பிற ஆயுதங்களையும் அம்மோதலில் அபரிமிதமாகப் பயன்படுத்தியபடியே பின்னவனுடன் {பீமனுடன்} போரிடுவதைத் தொடர்ந்தான். பீமசேனனும், கோபத்தால் நிறைந்து, சூதன் மகனுடன் {கர்ணனுடன்} போரிடுவதைத் தொடர்ந்தான்.(53-55)

அந்தப் போரானது இயல்பையடைந்து குழம்பியபோது, அந்தத் தர்மனின் மகன் (யுதிஷ்டிரன்), பாஞ்சாலர்கள் மற்றும் மத்ஸ்யப் போர்வீரர்களில் முதன்மையானோர் யாவரிடமும்,(56) “யாவர் நமக்கு உயிரோ, யாவர் நமக்குத் தலைவர்களோ, யாவர் நம்மில் பெரும்பலம் கொண்டவர்களோ, அப்படிப்பட்ட மனிதர்களில் காளையர் அனைவரும், தார்தராஷ்டிரர்களிடம் போர்புரிகின்றனர்.(57) உணர்வுகளை இழந்து மலைப்படைந்தவர்களைப் போல நீங்கள் ஏன் இப்படி நிற்கிறீர்கள்? என் படையின் அந்தத் தேர்வீரர்கள் போரிடும் இடத்திற்குச் செல்வீராக.(58) வெற்றி அடைவது, அல்லது கொல்லப்படுவது ஆகியவற்றால் நீங்கள் விரும்பிய இலக்குகளை அடைவீர்கள் என்பதால், உங்கள் அச்சங்களை விரட்டி, க்ஷத்திரியக் கடமைகளை நோக்கில் கொள்வீராக (போரில் ஈடுபடுவீராக).(59) நீங்கள் வெற்றியாளர்கள் என நிரூபித்தால், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளுடன் கூடிய பல்வேறு வேள்விகளை நீங்கள் செய்யலாம். மறுபுறம் நீங்கள் கொல்லப்பட்டாலோ, தேவர்களுக்கு இணையானவர்களாகி, அருள் உலகங்கள் பலவற்றை நீங்கள் வெல்லலாம்” என்றான் {யுதிஷ்டிரன்}.(60)

இப்படி மன்னனால் {யுதிஷ்டிரனால்} தூண்டப்பட்டவர்களும், வலிமைமிக்கவர்களும், க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவர்களுமான அந்த வீரத் தேர்வீரர்கள், துரோணரை எதிர்த்து வேகமாக விரைந்து போரில் ஈடுபட்டனர்.(61) அப்போது ஒரு புறத்தில இருந்து பாஞ்சாலர்கள் எண்ணற்ற கணைகளால் துரோணரைத் தாக்கினர், அதே வேளையில் பீமசேனனின் தலைமையிலான பிறர் மற்றொரு புறத்தில் இருந்து அவரைத் தடுத்தனர்.(62) பாண்டவர்கள் தங்களுக்கு மத்தியில், நேர்மையற்ற மனம் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான மூவரைக் கொண்டிருந்தனர். அவர்கள் பீமசேனனும், இரட்டையரும் (நகுலனும், சகாதேவனும்) ஆவர் [3]. இவர்கள் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்},(63) “ஓ! அர்ஜுனா, வேகமாக விரைந்து சென்று துரோணரின் அருகில் உள்ள குருக்களை விரட்டுவாயாக. ஆசானின் {துரோணரின்} பாதுகாவலர்களை அவர் இழந்தால், பாஞ்சாலர்களால் அவரை எளிதில் கொல்ல முடியும்” என்று உரக்கச் சொன்னார்கள்.(64) இப்படிச் சொல்லப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, கௌரவர்களை எதிர்த்து திடீரென விரைந்தான், அதே வேளையில் திருஷ்டத்யும்னனின் தலைமையிலான பாஞ்சாலர்கள் துரோணரை எதிர்த்து விரைந்தனர். உண்மையில், (துரோணரின் தலைமையிலான) அந்த ஐந்தாம் நாளில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த வீரப் போராளிகள் கலங்கடிக்கப்பட்டு, பெரும் வேகத்துடன் (அந்தப் பரத்வாஜர் மகனால் {துரோணரால்}) நொறுக்கப்பட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(65)

மண்ணைத் தொட்ட யுதிஷ்டிரத் தேர்! – துரோண பர்வம் பகுதி – 191-துரோணரால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு; துரோணரைக் கொல்வதில் அறத்தைக் கைவிடுமாறு பாண்டவர்களைத் தூண்டிய கிருஷ்ணன்; கிருஷ்ணனின் ஆலோசனையைத் தயக்கத்துடன் ஏற்றுக் கொண்ட யுதிஷ்டிரன்; அர்ஜுனன் அஃதை ஏற்காதது; அஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட யானையைப் பீமன் கொல்வது; அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாகத் துரோணரிடம் சொன்ன பீமன்; பீமனை நம்பாத துரோணர், பிரம்மாஸ்திரத்தைக் கொண்டு பாஞ்சாலர்களைக் கொன்றது; துரோணரை நிந்தித்த முனிவர்கள்; அஸ்வத்தாமனைக் குறித்து யுதிஷ்டிரனிடம் விசாரித்த துரோணர்; யுதிஷ்டிரன் சொன்ன பொய்; யுதிஷ்டிரனின் தேர் மண்ணைத் தொட்டது; கவலையில் மூழ்கிய துரோணர்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பழங்காலத்தில் தானவர்களுக்கு மத்தியில் பேரழிவை உண்டாக்கிய சக்ரனை {இந்திரனைப்} போலப் பாஞ்சாலர்களுக்கு மத்தியில் துரோணர் பேரழிவை ஏற்படுத்தினார்.(1) வலிமையும், சக்தியும் கொண்ட பாண்டவப்படையின் பெரும் தேர்வீரர்கள், துரோணரின் ஆயுதங்களால் கொல்லப்பட்டாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரைக் கண்டு அஞ்சவில்லை.(2) உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் அனைவரும் துரோணருடன் போரிடுவதற்காக, அவரை எதிர்த்து விரைந்தனர்.(3) துரோணரைச் சூழ்ந்து கொள்வதற்காக அவரை நோக்கி விரைந்து, அவரது கணைகளாலும், ஈட்டிகளாலும் கொல்லப்பட்ட அவர்களது ஓலங்களின் பேரொலி கடுமையானதாக இருந்தது.(4) அந்தப் போரில் சிறப்புமிக்கத் துரோணரால் பாஞ்சாலர்கள் கொல்லப்படுவதைக் கண்டும், அவரது ஆயுதங்கள் அனைத்துப் பக்கங்களையும் நிறைப்பதைப் பார்த்தும், பாண்டவர்களின் இதயத்துக்குள் அச்சம் நுழைந்தது.(5) அந்தப் போரில் குதிரைகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படும் பயங்கரமான பேரழிவைக் கண்டு, ஓ! ஏகாதிபதி, பாண்டவர்கள் வெற்றியில் நம்பிக்கையற்றவர்களானார்கள்.(6)

அவர்கள் (தங்களுக்குள் ஒருவருக்கொருவர்), “வலிமைமிக்க ஆயுதங்களை அறிந்த போர்வீரரான இந்தத் துரோணர், இளவேனில் காலத்தில் வைக்கோல் குவியலை எரிக்கும் காட்டுத் தீயைப் போல நம் அனைவரையும் எரித்து விடுவார் என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா?(7) போரில் அவரைப் பார்ப்பதற்குக் கூட எவரும் தகுந்தவரல்லர். அறநெறிகளின் வழிகளை அறிந்த அர்ஜுனனோ, (அவன் மட்டுமே அவருக்கு இணையானவன் என்றாலும்) அவருடன் போரிட மாட்டான்” என்று சொல்லிக் கொண்டனர்.(8) துரோணரின் கணைகளால் பீடிக்கப்படும் குந்தியின் மகன்களைக் கண்டு அச்சத்தால் ஈர்க்கப்பட்டவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனும், அவர்களின் நலத்தில் அர்ப்பணிப்பு கொண்டவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம்,(9) “வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான இவரை, வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்களால் கூடப் போரில் பலத்தால் வெல்ல முடியாது.(10) எனினும், இவர் {துரோணர்} தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டால், மனிதர்களால் கொல்லப்படத்தக்கவர் ஆவார். பாண்டுவின் மகன்களே, தங்கத்தேரைக் கொண்ட துரோணர், போரில் நம் அனைவரையும் கொல்ல முடியாத வகையில், வெற்றியை ஈட்டுவதற்காக அறத்தை விட்டு, இப்போது சிறு சூழ்ச்சியை நீங்கள் பின்பற்ற வேண்டும்[1]. (தம் மகனான) அஸ்வத்தாமனின் வீழ்ச்சியில் அவர் போரிடுவதை நிறுத்துவார் என நான் நினைக்கிறேன்.(11,12) எனவே, ஏதாவதொரு மனிதன், போரில் அஸ்வத்தாமன் கொல்லப்பட்டதாக அவரிடம் {துரோணரிடம்} சொல்லட்டும்” என்றான் {கிருஷ்ணன்}. எனினும், ஓ! மன்னா, இந்த அறிவுரையைக் குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} ஏற்கவில்லை.(13) பிறர் இஃதை ஏற்றனர். ஆனால், யுதிஷ்டிரனோ பெருங்கடினத்துடன் {பெரும் தயக்கத்துடனே} இஃதை ஏற்றுக் கொண்டான்[2].

பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளைக் கொல்லும் பயங்கரமான கதாயுதம் ஒன்றால், தன் படையைச் சேர்ந்ததும், மாலவர்களின் தலைவன் இந்திரவர்மனுக்குச் சொந்தமானதும், அஸ்வத்தாமன் என்ற பெயரைக் கொண்டதுமான பெரும் யானையைக் கொன்றான்[3].(14,15) பிறகு அந்தப் போரில் சற்றே நாணத்தோடு துரோணரை அணுகிய பீமசேனன், “அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான்” என்று உரக்கக் கூவினான்.(16) அஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட அந்த யானை இப்படிக் கொல்லப்பட்டிருந்தாலும், பீமன் அஸ்வத்தாமன் கொல்லப்பட்டதாகச் சொன்னான். உண்மைச் செய்தியைத் தன் மனத்தில் கொண்டு, உண்மையற்றதையே அவன் {பீமன்} சொன்னான்.(17) ஏற்றுக் கொள்ள முடியாத பீமனின் அந்த வார்த்தைகளைக் குறித்துச் சிந்தித்த துரோணரின் அங்கங்கள் நீரில் கரையும் மண்ணைப் போல் கரைவதாகத் தெரிந்தது.(18) எனினும், விரைவில் தன் மகனின் {அஸ்வத்தாமனின்} ஆற்றலை நினைவுகூர்ந்த அவர் {துரோணர்}, அதைத் தவறான செய்தி என்று கருதினார். எனவே அவனது கொலையைக் கேட்ட அவர் தைரியத்தை இழக்காதவராக இருந்தார்.(19) உண்மையில், விரைவாக உணர்வுகள் மீண்ட அவர் {துரோணர்}, எதிரிகளால் தடுக்கப்பட முடியாதவன் தமது மகன் {அஸ்வத்தாமன்} என்பதை நினைவுகூர்ந்து ஆறுதலை அடைந்தார்.(20)பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி விரைந்து, தம்மைக் கொல்வதற்காக விதிக்கப்பட்ட அந்த வீரனைக் கொல்ல விரும்பிய அவர் {துரோணர்}, கங்க இறகுகளைக் கொண்ட ஆயிரம் கூரிய கணைகளால் அவனை மறைத்தார்.(21) பிறகு, பெரும் சக்தி கொண்ட பாஞ்சாலத் தேர்வீரர்கள் இருபதாயிரம் {20,000} பேர், போரில் இப்படித் திரிந்து கொண்டிருந்த அவரைத் தங்கள் கணைகளால் மறைத்தனர்.(22) மழைக்காலங்களில் மேகங்களால் மறைக்கப்படும் சூரியனுக்கு ஒப்பாக, ஓ! ஏகாதிபதி, அந்தக் கணைகளால் முழுமையாக மறைக்கப்பட்ட அந்தப் பெரும் தேர்வீரரை அதற்கு மேலும் எங்களால் காண முடியவில்லை.(23) கோபத்தால் நிறைந்தவரும், அந்தத் துணிச்சல்மிக்கப் பாஞ்சாலர்களுக்கு அழிவை உண்டாக்க விரும்பியவரும், வலிமைமிக்கத் தேர்வீரரும், எதிரிகளை எரிப்பவருமான அந்தத் துரோணர் பாஞ்சாலர்களின் அந்தக் கணைகள் யாவையும் விலக்கி, பிரம்ம ஆயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} இருப்புக்கு அழைத்தார். அந்நேரத்தில் துரோணர், புகையற்ற சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தார்.(24,25) மீண்டும் சினத்தால் நிறைந்த பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, சோமகர்கள் அனைவரையும் கொன்று, பெரும் காந்தியுடன் கூடியவராகத் தெரிந்தார்.(26)

அச்சத்தை ஏற்படுத்தும் அந்தப் பயங்கரப் போரில், பாஞ்சாலர்களின் தலைகளை வீழ்த்திய அவர் {துரோணர்}, முள்பதித்த கதாயுதங்களை {பரிகங்களைப்} போலத் தெரிந்தவையும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான அவர்களின் பருத்த கரங்களையும் அறுத்தார்.(27) உண்மையில் அந்தப் பரத்வாஜர் மகனால் {துரோணரால்} போரில் கொல்லப்பட்ட க்ஷத்திரியர்கள், புயலால் வேரோடு சாய்ந்த மரங்களைப் போல விழுந்து பூமியில் சிதறிக் கிடந்தனர்.(28) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வீழ்ந்து கிடந்த குதிரைகள் மற்றும் யானைகளால், குருதியும், சதையும் கலந்து சேறாக இருந்த பூமியானது கடக்கமுடியாததாக இருந்தது.(29) அந்தப் போரில் இருபதாயிரம் பாஞ்சாலத் தேர்வீரர்களைக் கொன்ற துரோணர், புகையற்ற சுடர்மிக்க நெருப்பைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தார்.(30) மீண்டும் சினத்தால் நிறைந்த பரத்வாஜரின் வீர மகன், அகன்ற தலை கணை {பல்லம்} ஒன்றால், வசுதானனின் [4] தலையை அவனது உடலில் இருந்து அறுத்தார்.(31) மீண்டும் அவர், ஐநூறு {500} மத்ஸ்யர்களையும், ஆறாயிரம் {6,000} யானைகளையும், பத்தாயிரம் {10,000} குதிரைகளையும் கொன்றார்.(32)க்ஷத்திரிய குலத்தை முற்றாக அழிப்பதற்காகக் களத்தில் நின்று கொண்டிருந்த துரோணரைக் கண்ட முனிவர்கள் விஸ்வாமித்ரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், வசிஷ்டர், கசியபர், அத்ரி, ஸிகதர்கள் {லிகதர்கள்}, பிருஸ்னிகள், கர்க்கர் {கர்க்கர்கள்}, வாலகில்யர்கள், மரீசிபர்கள், பிருகுவின் வழித்தோன்றல்கள், அங்கிரஸ் {அங்கிரசர்கள்} ஆகியோரும், நுண்ணிய வடிவங்களைக் கொண்ட {மெலிந்த உடலைக் கொண்ட} இன்னும் பிற முனிவர்களும், துரோணரை பிரம்மலோகத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பி, வேள்விக்காணிக்கைகளைச் சுமப்பவனை {அக்னியைத்} தங்கள் தலைமையில் கொண்டு அங்கே விரைந்து வந்து,(33-35) போர்க்கள இரத்திமானத் துரோணரிடம், “நீ நேர்மையற்ற வகையில் {அநீதியாகப்} போரிடுகிறாய். உன் மரணத்திற்கான நேரம் வந்துவிட்டது.(36) உன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, ஓ! துரோணா, இங்கே நிற்கும் எங்களைக் காண்பாயாக. இதற்கு மேலும், இது போன்ற மிகக் கொடூரமான செயல்களைச் செய்வது உனக்குத் தகாது.(37) வேதங்களையும், அதன் கிளைகளையும் {அங்கங்களையும்} அறிந்தவன் நீ. உண்மைக்குக் கட்டுப்படும் கடமைகளில் {செயல்களில்} அர்ப்பணிப்புள்ளவன் நீ. குறிப்பாக, நீ ஒரு பிராமணனுமாவாய். இது போன்ற செயல்கள் உனக்குத் தகாது.(38) உன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, உன்னை மறைத்துக் கொண்டிருக்கும் குற்றத்திரையை விலக்குவாயாக. அழிவற்ற பாதையை இப்போது பின்பற்றுவாயாக. மனிதர்களின் உலகில் நீ வசிக்க வேண்டிய காலம் இப்போது முழுமையடைந்துவிட்டது.(39) இப்பூமியின் ஆயுதங்கள் குறித்து அறியாத மனிதர்களைப் பிரம்மாயுதம் {பிரம்மாஸ்திரம்} கொண்டு நீ எரித்துவிட்டாய். ஓ! மறுபிறப்பாளனே {பிராமணனே}, நீ செய்த இந்தச் செயல் நேர்மையானதல்ல {நீதிக்குக் கட்டப்பட்டது அல்ல}.(40) ஓ! துரோணா, தாமதமில்லாமல் போரில் ஆயுதங்களைக் கீழே வைப்பாயாக. பூமியில் நீண்ட காலம் காத்திருக்காதே. ஓ! மறுபிறப்பாளா, இது போன்ற பாவச்செயலை மீண்டும் செய்யாதே” என்றனர்.(41)

அவர்களது இந்த வார்த்தைகளையும், பீமசேனனின் வார்த்தைகளையும் கேட்ட, துரோணர், தன் எதிரே திருஷ்டத்யும்னன் நிற்பதைக் கண்டு, போரில் உற்சாகத்தை மிகவும் இழந்தார்.(42) துயரால் எரிந்து, மிகவும் பீடிக்கப்பட்ட அவர் {துரோணர்} குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம் தன் மகன் (அஸ்வத்தாமன்) கொல்லப்பட்டானா, இல்லையா என்பது குறித்து விசாரித்தார்.(43) மூவுலகங்களின் அரசுரிமைக்காகக் கூட யுதிஷ்டிரன் பொய்யேதும் பேச மாட்டான் என்று துரோணர் உறுதியாக நம்பினார்.(44) இக்காரணத்திற்காகவே, அந்தப் பிராமணக் காளை {துரோணர்} வேறு யாரிடமும் கேட்காமல் யுதிஷ்டிரனிடம் கேட்டார். அவர், யுதிஷ்டிரனின் குழந்தைப் பருவத்திலிருந்தே, பின்னவனிடமே உண்மையை எதிர்பார்த்திருந்தார்.(45)

அதே வேளையில், ஓ! ஏகாதிபதி, போர்வீரர்களில் முதன்மையான துரோணர், பாண்டவர்கள் அனைவரையும் பூமியின் பரப்பில் இருந்து துடைத்து விடக்கூடியவர் என்பதை அறிந்த கோவிந்தன் {கிருஷ்ணன்} பெரும் கவலை கொண்டான். யுதிஷ்டிரனிடம் பேசிய அவன் {கிருஷ்ணன்},(46) “துரோணர், சினத்தால் நிறைந்த நிலையில் அரை நாள் போரிட்டாலும் உமது படை நிர்மூலமாக்கப்படும் என்பதை நான் உண்மையாகவே உமக்குச் சொல்கிறேன்.(47) துரோணரிடம் இருந்து எங்களைப் பாதுகாப்பீராக. இத்தகு சூழ்நிலையில், உண்மையை விடப் பொய்மையே சிறந்தது. ஒருவனின் உயிரைக் காப்பதற்காக உண்மையற்றதைச் சொல்வதால், பாவம் அவனைத் தீண்டாது.(48) பெண்களிடமோ, திருமணங்களிலோ, பசுவைக் காப்பதற்கோ, ஒரு பிராமணரைக் காப்பதற்கோ உண்மையற்றதைச் சொல்வதில் எந்தப் பாவமும் இல்லை[5]” என்றான்.(49) கோவிந்தனும் யுதிஷ்டிரனும் இவ்வாறு ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருந்தபோது (மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} பேசிய) பீமசேனன், “ஓ! ஏகாதிபதி, உயர் ஆன்ம துரோணர் கொல்லப்படத்தக்க வழிமுறைகளைக் கேட்ட உடனேயே,(50) போரில் என் ஆற்றலை வெளிப்படுத்தி, சக்ரனின் யானைக்கு {ஐராவதத்துக்கு} ஒப்பானதும், மாலவர்களின் தலைவனான இந்திரவர்மனுக்குச் சொந்தமானதும், உமது படைக்குள் இருந்ததுமான ஒரு வலிமைமிக்க யானையைக் கொன்றேன். பிறகு துரோணரிடம் சென்ற நான், அவரிடம், “ஓ! பிராமணரே, அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான். போரிடுவதை நிறுத்துவீராக” என்று சொன்னேன்.(51,52) ஓ! மனிதர்களில் காளையே, என் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை ஆசான் நம்பவில்லை. வெற்றியில் விருப்பமுள்ள நீர், கோவிந்தனின் அறிவுரையை ஏற்பீராக.(53) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, சரத்வான் மகளுடைய மகன் {அஸ்வத்தாமன்} மாண்டான் என்று துரோணரிடம் சொல்வீராக. உம்மால் {இப்படிச்} சொல்லப்பட்டால், அந்தப் பிராமணர்களில் காளை ஒருபோதும் போரிடமாட்டார்.(54) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {யுதிஷ்டிரரே}, மூவுலகங்களில் உண்மை நிறைந்தவரென்ற மதிப்பை நீர் பெற்றிருக்கிறீர்” என்றான் {பீமன்}.(55)பீமனின் அந்த வார்த்தைகளைக் கேட்டும், கிருஷ்ணனின் ஆலோசனைகளால் தூண்டப்பட்டும், தவிர்க்கப்பட முடியாத விதியின் காரணத்தாலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தான் என்ன சொல்ல வேண்டும் என்று {தன் தரப்பால்} விரும்பப்படுகிறதோ அதை யுதிஷ்டிரன் மனத்தால் ஏற்றான். உண்மையற்ற ஒன்றைச் சொல்ல அஞ்சியவனும், வெற்றியடையும் விருப்பத்தாலான ஆர்வத்தோடு கூடியவனுமான யுதிஷ்டிரன்,(56) அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்பதைத் துல்லியமாகவும், யானை என்ற வார்த்தையைத் துல்லியமில்லாமலும் (பெயருக்குப் பின்னால்) சேர்த்துச் சொன்னான்[6]. அதுவரை பூமியின் பரப்பில் இருந்து நான்கு விரல்கட்டை அளவு உயரத்தில் யுதிஷ்டிரனின் தேர் நின்றிருந்தது.(57) எனினும், அவன் {யுதிஷ்டிரன்} அந்த உண்மையற்றதை {பொய்யைச்} சொன்ன பிறகு, அவனது (வாகனம் மற்றும்) விலங்குகள் பூமியைத் தொட்டன. வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர், யுதிஷ்டிரனிடம் இருந்து அவ்வார்த்தைகளைக் கேட்டதும்,(58) தன் மகன் {அஸ்வத்தாமன்} மாண்ட ({மாண்டான் என்ற} நம்பிக்கையில்) துயரால் பீடிக்கப்பட்டு, மனத்தளர்வின் வசமடைந்தார். முனிவர்களின் வார்த்தைகளை மீண்டும் நினைத்த அவர், உயர் ஆன்ம பாண்டவர்களுக்கு எதிராகப் பெரிய குற்றத்தைச் செய்தவராகத் தன்னைக் கருதினார். தன் மகனின் மரணத்தைக் குறித்து இப்போது கேட்டதும், அவர் முற்றிலும் உற்சாகமற்றவராக ஆனார்; திருஷ்டத்யும்னனைக் கண்டதால் கவலையில் நிறைந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவரால் {துரோணரால்} அதற்கு மேலும் முன்பு போலப் போரிட முடியவில்லை” {என்றான் சஞ்சயன்}.(59-60)(“அஸ்வத்தாமாஹத: குஞ்சர:” என்பது மூலம். இங்கே “அஸ்வத்தாமாஹத: {அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான்} என்ற வார்த்தைகளை உரக்கச் சொன்ன யுதிஷ்டிரன், குஞ்சரம் {யானை} என்ற சொல்லை மெல்ல {மென்மையாகச்} சொன்னான்“ என்பது பொருள்.  கொல்லப்பட்டது அஸ்வத்தாமன் என்ற யானை; அல்லது அஸ்வத்தாமனே கொல்லப்பட்ட யானை என்ற தொனியில் யுதிஷ்டிரன் சொல்லியிருக்க வேண்டும்.)

திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி! – துரோண பர்வம் பகுதி – 192-துரோணர் அழைத்தும், தோன்றாமல் போன தெய்வீக ஆயுதங்கள்; துரோணரின் ஆயுதங்கள் தீர்ந்து போனது; துரோணருக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையிலான கடும் மோதல்; திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி; சாத்யகியின் வீரத்தை மெச்சிய அர்ஜுனன்; சாத்யகியின் ஆற்றலை இரு படைகளும் புகழ்ந்ததாகச் சொன்ன சஞ்சயன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரோணர் பெருங்கவலையில் மூழ்கியிருப்பதையும், துயரால் கிட்டத்தட்ட உணர்வுகளை இழந்திருப்பதையும் கண்டவனும், பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மகனுமான திருஷ்டத்யும்னன் அவரை நோக்கி விரைந்து சென்றான்.(1) ஒரு பெரும் வேள்வியில், வேள்விக் காணிக்கைகளைச் சுமப்பவனின் {அக்னியின்} மூலம், மனிதர்களின் ஆட்சியாளனான துருபதனால் அந்த வீரன் {திருஷ்டத்யும்னன்} துரோணரின் அழிவுக்காகவே பெறப்பட்டான்.(2) துரோணரைக் கொல்ல விரும்பிய அவன் {திருஷ்டத்யும்னன்}, வெற்றியைத் தரவல்லதும், உறுதிமிக்கதும், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான நாணொலியைக் கொண்டதும், பெரும் பலத்துடன் கூடிய நாண்கயிற்றைக் கொண்டதும், மீற முடியாததும், தெய்வீகமானதுமான வில்லொன்றை எடுத்தான். அவன் {திருஷ்டத்யும்னன்}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பானதும், நெருப்பின் காந்தியைக் கொண்டதுமான கடுங்கணை ஒன்றை அதில் பொருத்தினான்.

நெருப்பின் கடுந்தழல்களுக்கு ஒப்பானதும், அவனது வட்டமான வில்லுக்குள் அடங்கி இருந்ததுமான அந்தக் கணையானது, பிரகாசமான ஒளிவட்டத்திற்குள் உள்ள {பரிவேஷத்துடன் கூடிய} பெரும் காந்தியுடைய கூதிர் காலச் சூரியனுக்கு ஒப்பாக இருந்தது.(3-5) அந்தச் சுடர்மிக்க வில்லானது பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} பலத்துடன் வளைக்கப்படுவதைக் கண்ட துருப்புகள், (உலகின்) இறுதி நேரம் வந்துவிட்டது என்றே கருதினர்.(6) அந்தக் கணை தன்னை நோக்கிக் குறிவைக்கப்படுவதைக் கண்ட அந்த வீரப் பரத்வாஜ மகன் {துரோணர்}, தன் உடலின் இறுதி நேரம் வந்துவிட்டதென நினைத்தார்.(7) அந்தக் கணையைக் கலங்கடிப்பதற்காக ஆசான் {துரோணர்} கவனமாகத் தயாரானார். எனினும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த உயர் ஆன்மா கொண்டவரின் {துரோணரின்}ஆயுதங்கள், அவரது உத்தரவுக்குப் பிறகும் தோன்றாமல் போயின[1].(8)நான்கு நாட்கள் மற்றும் இரவுகளாக அவர் இடையறாமல் தமது ஆயுதங்களை ஏவிக்கொண்டிருந்தாலும், அவை தீர்ந்துவிடவில்லை. எனினும், அந்த ஐந்தாம் நாளின் மூன்றாம் பகுதியில் அவரது ஆயுதங்கள் தீர்ந்தன.(9) தன் கணைகள் தீர்ந்து போனதைக் கண்டும், தமது மகனின் {அஸ்வத்தாமனின்} மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டும், தன் உத்தரவுக்கு ஏற்பத் தோன்ற வேண்டிய தெய்வீக ஆயுதங்களின் விருப்பமின்மையின் காரணமாகவும்,(10) முனிவர்களின் வார்த்தைகளில் உந்தப்பட்டும் அவர் {துரோணர்} தமது ஆயுதங்களைக் கீழே வைக்க விரும்பினார். பெரும் சக்தியால் நிறைந்திருந்தாலும், அவரால் முன்பு போலப் போரிட முடியவில்லை.(11) பிறகு, அங்கிரஸ் முன்பு தமக்குக் கொடுத்திருந்த மற்றொரு தெய்வீக வில்லையும், பிராமணனின் சாபத்திற்கு ஒப்பான சில குறிப்பிட்ட கணைகளையும் எடுத்துக் கொண்ட அவர், திருஷ்டத்யும்னனுடன் போரிடுவதைத் தொடர்ந்தார்.(12) அந்தப் பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} அடர்த்தியான கணை மாரியால் மறைத்த அவர், சினத்தால் நிறைந்து, தமது கோபக்கார எதிரியைச் {திருஷ்டத்யும்னனை} சிதைத்தார்.(13) அவர் {துரோணர்} தன் கூரிய கணைகளைக் கொண்டு அந்த இளவரசனின், கணைகள், கொடிமரம் மற்றும் வில் ஆகியவற்றை நூறு துண்டுகளாக அறுத்தார். பிறகு அவர் {துரோணர்} தன் எதிராளியின் {திருஷ்டத்யும்னனின்} சாரதியை வீழ்த்தினார்.(14)

அப்போது திருஷ்டத்யும்னன், புன்னகைத்தபடியே மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, ஒரு கூரிய கணையால் துரோணரின் நடுமார்பைத் துளைத்தான்.(15) அதனால் ஆழத் துளைக்கப்பட்டு, அம்மோதலில் தன்னிலையை இழந்த அந்த வலிமைமிக்க வில்லாளி, பிறகு, அகன்ற தலை கொண்ட கூரிய கணை {பல்லம்} ஒன்றால் மீண்டும் திருஷ்டத்யும்னனின் வில்லை அறுத்தார்.(16) உண்மையில் அந்த வெல்லப்பட முடியாத துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் எதிராளியின் காதாயுதம் மற்றும் வாளைத் தவிர அவன் {திருஷ்டத்யும்னன்} கொண்டிருந்த ஆயுதம் மற்றும் விற்கள் அனைத்தையும் அறுத்தார்.(17) சினத்தால் நிறைந்த அவர் {துரோணர்}, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, எந்த எதிரியின் உயிரையும் எடுக்க வல்லவையான ஒன்பது கூரிய கணைகளால் கோபக்காரத் திருஷ்டத்யும்னனைத் துளைத்தார்.(18)

அப்போது அளக்க முடியாத ஆன்மா {தைரியம்} கொண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான திருஷ்டத்யும்னன், பிரம்மாயுதத்தை இருப்புக்கு அழைத்து, தன் தேரின் குதிரைகளோடு தன் எதிரியின் குதிரைகளைக் கலக்கச் செய்தான்.(19) ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, காற்றின் வேகத்தைக் கொண்டவையும், சிவப்பு நிறம் கொண்டவையும், புறாக்களின் நிறத்தைக் கொண்டவையுமான அந்தக் குதிரைகள் இப்படி ஒன்றோடொன்று கலந்தது மிக அழகாகத் தெரிந்தது.(20) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் இப்படி ஒன்றோடொன்று கலந்த அந்தக் குதிரைகள் மழைக்காலங்களில் மின்னலின் சக்தியூட்டப்பட்டு முழங்கும் மேகங்களைப் போல அழகாகத் தெரிந்தன.(21) அப்போது, அளவிலா ஆன்மா கொண்ட அந்த இருபிறப்பாளர் {பிராமணரான துரோணர்}, திருஷ்டத்யும்னனுடைய தேரின் ஏர்க்கால் இணைப்புகளையும், சக்கர இணைப்புகளையும், தேரின் (பிற) இணைப்புகளையும் அறுத்தார்.(22)

தனது வில்லை இழந்து, தேரற்றவனாக, குதிரைகளற்றவனாக, சாரதியற்றவனாகச் செய்யப்பட்ட அந்த வீரத் திருஷ்டத்யும்னன், பெரும் துயரத்தில் விழுந்து ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டான்.(23) சினத்தால் நிறைந்தவரும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவருமான துரோணர், அந்தக் கதாயுதம் தன் மீது வீசப்படத் தயாராக இருந்த நிலையில் பெரும் எண்ணிக்கையிலான கூரிய கணைகளால் அஃதை அறுத்தார்.(24) துரோணரின் கணைகளால் தன் கதாயுதம் வெட்டப்பட்டதைக் கண்ட அந்த மனிதர்களில் புலி (பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}), குறையற்ற ஒரு வாளையும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டான்.(25) அந்தச் சூழ்நிலையில், உயர் ஆன்மப் போர்வீரரான அந்த ஆசான்களில் முதன்மையானவருக்கு ஒரு முடிவை ஏற்படுத்துவதில் அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} ஐயமறத் தீர்மானமாக இருந்தான்.(26) சில நேரங்களில் தேர்க்கூட்டில் பதுங்கியும், சிலநேரங்களில் தன் தேரின் ஏர்க்கால்களில் நின்றபடியும் இருந்த அந்த இளவரசன், தன் வாளை உயர்த்தியபடியும், பிரகாசமான தன் கேடயத்தைச் சுழற்றியபடியும் திரிந்து கொண்டிருந்தான்[2].(27) வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் மடமையினால் ஒரு கடினமான சாதனையை அடைய விரும்பி, அந்தப் போரில் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} மார்பைத் துளைக்க எண்ணினான்.(28) அவன் {திருஷ்டத்யும்னன்}, சில நேரங்களில் நுகத்தடியிலும், சில நேரங்களில் துரோணருடைய சிவப்பு குதிரைகளின் இடுப்புக்குக் கீழும் இருந்தான். அவனது இந்த நகர்வுகளை {இயக்கங்களைத்} துருப்புகள் அனைத்தும் உயர்வாகப் பாராட்டின.(29) உண்மையில், அவன் நுகத்தடியின் கட்டுகளுக்கு மத்தியிலோ, அந்தச் சிவப்புக் குதிரைகளுக்குப் பின்புறமோ இருக்கையில், அவனைத் தாக்க எந்த வாய்ப்பையும் துரோணர் காணவில்லை. இவை யாவும் காண்பதற்கு மிக அற்புதமானவையாக இருந்தன.(30)அந்தப் போரில் துரோணர் மற்றும் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} ஆகிய இருவரின் இயக்கங்களும், இறைச்சித் துண்டு ஒன்றிற்காக ஆகாயத்தில் திரியும் ஒரு பருந்துக்கு ஒப்பானவையாக இருந்தன.(31) அப்போது துரோணர், ஓர் ஈட்டியின் மூலமாகத் (தமக்குச் சொந்தமான) சிவப்புக் குதிரைகளைத் தாக்கிவிடாதவாறு, தன் எதிராளியின் வெண்குதிரைகளை மட்டும் ஒன்றன் பின் ஒன்றாகத் துளைத்தார்[3].(32) திருஷ்டத்யும்னனுடைய அந்தக் குதிரைகள் உயிரையிழந்து பூமியில் விழுந்தன. அதன் பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணருடைய சிவப்புக் குதிரைகள், திருஷ்டத்யும்னனுடைய தேரில் சிக்கியிருந்த நிலையில் இருந்து விடுபட்டன.(33) அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரால் தன் குதிரைகள் கொல்லப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், போராளிகளில் முதன்மையானவனுமான பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(34) அந்த வாள்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவன் {திருஷ்டத்யும்னன்}, தன் தேரை இழந்தாலும், தன் வாளை எடுத்துக் கொண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வினதையின் மகன் (கருடன்) ஒரு பாம்பின் மீது வேகமாகப் பாய்வதைப் போலத் துரோணரை நோக்கிப் பாய்ந்தான்.(35)ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகனை {துரோணரைக்} கொல்ல விரும்பிய அத்தருணத்தில் அவன் {திருஷ்டத்யும்னன்}, பழங்காலத்தில் ஹிரண்யகசிபுவைக் கொல்ல விரும்பிய விஷ்ணுவின் வடிவத்தைக் கொண்டிருந்தான்.(36) மேலும் அவன் {திருஷ்டத்யும்னன்} பல்வேறு பரிணாமங்களைச் செய்தான். உண்மையில் அந்தப் பிருஷதன் மகன், ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, நன்கு அறியப்பட்டவையும், பல்வேறு வகைகளிலான இருபத்தோரு நகர்வுகளையும் {இயக்கங்களையும்}[4] களத்தில் திரிந்தபடியே வெளிக்காட்டினான்.(37) வாள்தரித்துக் கையில் கேடயத்துடன் கூடிய அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன் வாளை உயரச் சுழற்றி {பிராந்தம்}, பக்கத்தூண்டுதல்கள் செய்து {உத்ப்ராந்தம்}, முன்நகர்ந்து விரைந்து {ஆவித்தம்}, பக்கவாட்டில் ஓடி {ஆப்லுதம்}, உயரக் குதித்து {ப்ரஸ்ருதம்}, தன் எதிராளிகளின் பக்கங்களை {விலாப்புறங்களைத்} தாக்கி {ஸ்ருதம்}, பின்புறமாக விலகி {பரிவ்ருத்தம்}, எதிரியை நெருங்கியும் {நிவ்ருத்த சம்பாதம்} மற்றும் அவர்களைக் கடுமையாக அழுத்தியபடியும் {சமுதீர்ணம்} திரிந்து கொண்டிருந்தான். அவற்றை நன்றாகப் பயின்ற பிறகு, அவன் {திருஷ்டத்யும்னன்}, பாரதம், கௌசிகம், சாத்வதம் என்ற பரிமாணங்களையும் காட்டியபடியே துரோணருக்கு அழிவை உண்டாக்குவதற்காக அந்தப் போரில் திரிந்து கொண்டிருந்தான் [5].கையில் வாளுடனும், கேடயத்துடனும் களத்தில் திரிந்து கொண்டிருந்த திருஷ்டத்யும்னனின் அந்த அழகிய பரிணாமங்களைக் கண்ட போர்வீரர்கள் அனைவரும், மேலும் அங்கு இருந்த தேவர்களும் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அப்போது மறுபிறப்பாளரான {பிராமணரான} துரோணர், அந்தப் போரின் நெருக்கத்தில் ஆயிரக்கணக்கான கணைகளை ஏவியபடியே, திருஷ்டத்யும்னனின் வாளையும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவனது கேடயத்தையும் அறுத்தார். மிக அருகில் இருந்து போரிட்ட அந்தத் துரோணர் ஏவிய கணைகள் {வைஸ்திகங்கள்}, ஒரு முழம் அளவு நீளத்திற்கே இருந்தன[6].(38-42) அத்தகு கணைகள் நெருங்கிய போரில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சரத்வான் மகன் (கிருபர்), பார்த்தன் {அர்ஜுனன்}, அஸ்வத்தாமன், கர்ணன் ஆகியோரைத் தவிர அவ்வகையிலான கணைகள் வேறு எவரிடமும் இல்லை.(43) அத்தகு கணைகளைப் பிரத்யும்னன், யுயுதானன் {சாத்யகி}, அபிமன்யு ஆகியோரும் வைத்திருந்தனர்.பிறகு அந்த ஆசான் {துரோணர்}, தம் சொந்த மகனைப் {அஸ்வத்தாமனைப்} போன்ற தமது அந்தச் சீடனைக் {திருஷ்டத்யும்னனைக்} கொல்ல விரும்பி, பெரும் வேகம் கொண்ட வலிமையான கணையொன்றைத் தன் வில்லின் நாணில் பொருத்தினார். எனினும், உமது மகனும் {துரியோதனனும்}, உயர் ஆன்மக் கர்ணனும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தக் கணையைப் பத்து கணைகளால் வெட்டிய சாத்யகி, துரோணருக்கு அடிபணியும் தருவாயில் இருந்த திருஷ்டத்யும்னனைக் காத்தான்.(44-46) அப்போது கேசவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, (குரு போர்வீரர்களின்) தேர்த்தடங்களில் இப்படித் திரிந்து கொண்டிருந்தவனும், துரோணர், கர்ணன் மற்றும் கிருபரின் கணைகள் தாக்கும் தொலைவில் இருந்தவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகியைக் கண்டனர். “நன்று, நன்று” என்று சொன்ன அவர்கள் இருவரும், அந்தப் போர்வீரர்கள் அனைவரின் தெய்வீக ஆயுதங்களையும் இப்படி அழித்துக் கொண்டிருந்தவனும், மங்காப் புகழைக் கொண்டவனுமான அந்தச் சாத்யகியை உரக்கப் பாராட்டினர். பிறகு கேசவனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} குருக்களை நோக்கி விரைந்தனர்.(47-49)

கிருஷ்ணனிடம் பேசிய தனஞ்சயன் {அர்ஜுனன்}, “ஓ! கேசவா {கிருஷ்ணா}, மது குலத்தைத் தழைக்க வைப்பவனும், உண்மையான ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, என்னையும், இரட்டையரையும் {நகுல-சகாதேவரையும்}, பீமரையும், மன்னர் யுதிஷ்டிரரையும் மகிழச் செய்யும் வகையில், ஆசான் மற்றும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் முன்பு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பாயாக.(50-51) விருஷ்ணிகளின் புகழை அதிகரிப்பவனான சாத்யகி, பயிற்சியால் அடைந்த திறனுடனும், செருக்கில்லாமலும் போரில் திரிந்து, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பாயாக.(52) போரில் வெல்லப்பட முடியாத அவனைக் {சாத்யகியைக்} கண்டு இந்தத் துருப்புகள் அனைத்தும், (வானிலிருக்கும்) சித்தர்களும் ஆச்சரியத்தால் நிறைந்து, “நன்று, நன்று” என்று சொல்லி அவனைப் {சாத்யகியைப்} புகழ்கின்றனர்” என்றான் {அர்ஜுனன்}. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இருபடைகளைச் சேர்ந்த போர்வீரர்கள் அனைவரும், அந்தச் சாத்வத வீரனுடைய {சாத்யகியுடைய} சாதனைகளின் விளைவாக அவனைப் புகழ்ந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(53)

துரோணரின் தலையை வெட்டிய திருஷ்டத்யும்னன்! – துரோண பர்வம் பகுதி – 193-துரியோதனன், கர்ணன் மற்றும் கிருபரோடு மோதிய சாத்யகி; துரோணரை எதிர்த்து விரையுமாறு தன் துருப்புகளைத் தூண்டிய யுதிஷ்டிரன்; தன்னைத் தாக்குபவர்களைப் பெரும் வீரத்தோடு எதிர்கொண்ட துரோணர், பிரம்மாஸ்திரத்தை மீண்டும் பயன்படுத்தியது; அஸ்வத்தாமனின் மரணம் குறித்துத் துரோணரிடம் மீண்டும் நினைவூட்டிய பீமன்; துயரடைந்த துரோணர், தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, யோகத்தில் கரைவது; சொர்க்கத்திலுள்ள சுடர்மிக்க ஒளிக்குள் நுழையும் துரோணர்; உயிரற்ற துரோணரின் தலையை வெட்டிய திருஷ்டத்யும்னன்; ஆசானை உயிருடன் அழைத்துவருமாறு கதறிய அர்ஜுனன்…

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தச் சாத்வத வீரனின் {சாத்யகியின்} சாதனைகளைக் கண்ட துரியோதனனும், பிறரும், சினத்தால் நிறைந்து, அனைத்துப் பக்கங்களிலும் அந்தச் சிநியின் பேரனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டனர்.(1) கிருபர், கர்ணன் மற்றும் உமது மகன்களும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் சிநியின் பேரனை வேகமாக அணுகி, கூரிய கணைகளால் அவனைத் துளைக்கத் தொடங்கினர்.(2) பிறகு, மன்னன் யுதிஷ்டிரனும், பிற பாண்டவர்களான மாத்ரியின் மகன்கள் {நகுலன்-சகாதேவன்} இருவரும், பெரும் வலிமை கொண்ட பீமசேனனும், (பாதுகாப்பதற்காக) சாத்யகியைச் சூழ்ந்து கொண்டனர்.(3) கர்ணன், வலிமைமிக்கத் தேர்வீரரான கிருபர், துரியோதனன் மற்றும் பிறர் அனைவரும் சாத்யகியின் மீது கணை மாரியைப் பொழிந்து அவனைத் தடுத்தனர்.(4) எனினும் அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, அந்தத் தேர்வீரர்கள் அனைவரோடும் போரிட்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, எதிரிகளால் திடீரென உண்டாக்கப்பட்ட அந்தப் பயங்கரக் கணைப் பொழிவைக் கலங்கடித்தான்.(5) உண்மையில் சாத்யகி, அந்தப் பயங்கரப் போரில், அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரர்களால் தன்னை நோக்கிக் குறி வைக்கப்பட்ட தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும், தன் தெய்வீக ஆயுதங்களின் மூலமே முறையாகத் தடுத்தான்.(6)

அரசப் போராளிகளுக்குள்ளான மோதலில் அந்தப் போர்க்களமானது, பழங்காலத்தில் சினத்தால் நிறைந்த ருத்ரன், உயிரினங்கள் அனைத்தையும் அழித்த காட்சிக்கு ஒப்பாகப் பல கொடூரக் காட்சிகள் நிறைந்ததாக இருந்தது.(7) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மனிதக் கரங்கள் மற்றும் தலைகள், (தேர்களில்) விழுந்த குடைகள், சாமரங்கள் ஆகியன,(8) அந்தப் போர்க்களத்தில் குவியலாகக் கிடப்பது காணப்பட்டது. உடைந்த தேர்கள் மற்றும் சக்கரங்கள், உடல்களில் இருந்து வெட்டப்பட்ட பெருங்கரங்கள் ஆகியவையும், உயிரையிழந்தவர்களான துணிச்சல்மிக்கக் குதிரை வீரர்களும் அந்தப் பூமியில் அடர்த்தியாகப் பரவிக் கிடந்தனர். ஓ! குருக்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும்போரில், கணைகளின் பாய்ச்சலில் சிதைந்து போன பெரும் எண்ணிக்கையிலான போர்வீரர்கள்,(9,10) உருளுவதோ, வலியால் தரையில் புரளுவதோ, மரணத்தின் விளிம்பில் துடித்துக் கொண்டிருப்பதோ காணப்பட்டது.

பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்த போது, தன் போர்வீரர்களுடன் பேசிய நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், “பெரும் தேர்வீரர்களே, உங்கள் திறன் அனைத்தையும் வெளிப்படுத்தியபடியே குடத்தில் பிறந்தவரை {துரோணரை} எதிர்த்து விரைவீராக.(12) அதோ பிருஷதனின் வீரமகன் {திருஷ்டத்யும்னன்} துரோணரிடம் போரிடுகிறான். தன் வலிமையால் இயன்ற அளவுக்கு அவன் {திருஷ்டத்யும்னன்} பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கொல்ல முயல்கிறான்.(13) இந்தப் பெரும்போரில் அவன் வெளிப்படுத்தும் தன்மைகளைக் கண்டால், சினத்தால் நிறைந்த அவன் {திருஷ்டத்யும்னன்}, இன்று துரோணரை வீழ்த்துவான் என்பது தெளிவாகத் தெரிகிறது.(14) அனைவரும் ஒன்று சேர்ந்து குடத்தில் பிறந்தவரோடு {துரோணரோடு} போரிடுவீராக” என்றான். யுதிஷ்டிரனால் இப்படி ஆணையிடப்பட்ட சிருஞ்சயர்கள் அனைவரும்,(15) அந்தப் பரத்வாஜர் மகனைக் {துரோணரைக்} கொல்வதற்காகப் பெரும் வேகத்துடன் விரைந்தனர்.

வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, தாம் இறக்கப் போகிறோம் என்பதை உறுதியாக அறிந்தாலும், முன்னேறி வரும் அந்தப் போர்வீரர்களை எதிர்த்து வேகமாக விரைந்தார். துல்லிய இலக்கைக் கொண்ட அந்தத் துரோணர் இப்படிச் சென்ற போது பூமியானது பயங்கரமாக நடுங்கியது.(16,17) (பகைவரின்) படையணிகளுக்குள் அச்சத்தைத் தூண்டும் வகையில் கடுங்காற்று வீசத் தொடங்கியது. சூரியனில் இருந்து வெளியே வருவதாகத் தெரிந்த பெரும் விண்கற்கள்,(18) பெரும் பயங்கரங்களை முன்னறிவித்துக் கொண்டு கடுமையாகச் சுடர்விட்டபடியே கீழே விழுந்தன. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, துரோணரின் ஆயுதங்கள் எரிவதைப் போலத் தெரிந்தன.(19) தேர்கள் உரத்த சடசடப்பொலியை உண்டாக்குவதும், குதிரைகள் கண்ணீரை உதிர்ப்பதும் காணப்பட்டது. வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரும் தன் சக்திகளை இழந்தவராகவே காணப்பட்டார்.(20) அவரது இடது கண்ணும், இடது கையும் துடிக்கத் தொடங்கின. தம் முன்னே நிற்கும் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} மீண்டும் கண்டும், தாம் உலகத்தை விட்டுச் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்று சொன்ன முனிவர்களின் வார்த்தைகளை மனத்தில் கொண்டும் அவர் {துரோணர்} உற்சாகமிழந்தவரானார். பிறகு அவர் {துரோணர்}, நேர்மையாகப் போரிட்டு உயிரை விட விரும்பினார்.(21,22)

துருபதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனின்} துருப்புகளால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்ட துரோணர், பெரும் எண்ணிக்கையிலான க்ஷத்திரியர்களைக் கொன்றபடியே அந்தப் போரில் திரியத் தொடங்கினார்.(23) இருபத்துநாலாயிரம் {24,000} க்ஷத்திரியர்களைக் கொன்றவரான அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவர், தமது கூர்முனைக் கணைகளால் பத்து மடங்களவு பத்தாயிரம் பேரை {ஒரு லட்சம் பேரை} யமனுலகுக்கு அனுப்பிவைத்தார்[1].(24) கவனத்துடன் முயற்சி செய்த அவர், புகையற்ற நெருப்பைப் போல அந்தப் போரில் நின்று கொண்டிருந்தார். பிறகு அவர் {துரோணர்}, க்ஷத்திரிய குலத்தையே முற்றாக அழிப்பதற்காகப் பிரம்மாயுதத்தின் {பிரம்மாஸ்திரத்தின்} உதவியை நாடினார்.(25) அப்போது வலிமைமிக்கப் பீமன், சிறப்புமிக்கவனும், பொறுத்துக்கொள்ளப்பட முடியாதவனுமான பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, தேரற்றவனாகவும், ஆயுதங்களற்றவனாகவும் இருப்பதைக் கண்டு, அவனை நோக்கி வேகமாகச் சென்றான்.(26) துரோணருக்கு மிக அருகில் இருந்து தாக்கிக் கொண்டிருந்த அவனைக் {திருஷ்டத்யும்னனைக்} கண்ட அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {பீமன்}, அந்தத் திருஷ்டத்யும்னனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு, அவனிடம்,(27) “உன்னைத் தவிர ஆசானுடன் {துரோணருடன்} போரிட வேறு எந்த மனிதனும் துணியமாட்டான். அவரைக் கொல்வதைத் துரிதப்படுத்துவாயாக. அவரைக் கொல்லும் சுமை {பொறுப்பு} உன்னிடமே இருக்கிறது” என்றான்.(28)பீமனால் இப்படிச் சொல்லப்பட அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட திருஷ்டத்யும்னன், வலியதும், புதியதும், பெரும் கடினத்தைத் தாங்கவல்லதுமான ஒரு மேன்மையான வில்லை விரைவாக எடுத்துக் கொண்டான்.(29) சினத்தால் நிறைந்து, அந்தப் போரில் தடுக்கப்பட முடியாதவரான துரோணரின் மீது தன் கணைகளை ஏவிய திருஷ்டத்யும்னன், ஆசானை {துரோணரை} எதிர்த்து நிற்க விரும்பி அவரை மறைத்தான்.(30) போர்க்கள ரத்தினங்களும், போராளிகளில் முதன்மையானோருமான அவ்விருவரும், சினத்தால் நிறைந்து பிரம்மாயுதத்தையும், பல்வேறு தெய்வீக ஆயுதங்களையும் இருப்புக்கு அழைத்தனர்.(31) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் திருஷ்டத்யும்னன் வலிமைமிக்க ஆயுதங்கள் பலவற்றால் துரோணரை மறைத்தான். பரத்வாஜர் மகனின் {துரோணரின்} அனைத்து ஆயுதங்களையும் அழித்தவனும், மங்காப் புகழ் கொண்ட போர்வீரனுமான அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்},(32) துரோணரைப் பாதுகாத்தவர்களான வஸாதிகள், சிபிக்கள், பாஹ்லீகர்கள் மற்றும் கௌரவர்கள் ஆகியோரைக் கொல்லத் தொடங்கினான்.(33) உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கணைமாரியை ஏவிய திருஷ்டத்யும்னன், அந்த நேரத்தில் ஆயிரங்கதிர்களை இறைக்கும் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(34) எனினும், அந்த இளவரசனின் வில்லை மீண்டும் அறுத்த துரோணர், கணைகள் பலவற்றால் அவ்விளவரசனின் முக்கிய அங்கங்களையும் துளைத்தார். இப்படித் துளைக்கப்பட்ட அந்த இளவரசன் {திருஷ்டத்யும்னன்} பெரும் வலியை உணர்ந்தான்.(35)

அப்போது பெரும் கோபம் கொண்ட பீமன், துரோணரின் தேரைப் பிடித்துக் கொண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவரிடம் இந்த வார்த்தைகளை மெதுவாகச் சொன்னான்,(36) “{ஓ! பிராமணரே}, தங்கள் வகைக்கான தொழில்களில் நிறைவடையாதவர்களும், ஆயுதங்களை நன்கறிந்தவர்களுமான பிராமணர்களில் இழிந்தவர்கள் {ப்ரஷ்டப் பிராம்மணர்கள்} போரிடாமல் இருந்திருந்தால், க்ஷத்திரிய வகையினர் இப்படி அழிய மாட்டார்கள்.(37) அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழையாமல் இருப்பதே அறங்கள் அனைத்திலும் உயர்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பிராமணனே அவ்வறத்தின் ஆணிவேராவான். உம்மைப் பொறுத்தவரை, பிரம்மத்தை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவர் நீர்.(38) ஓ! பிராமணரே {துரோணரே}, தங்கள் மகன்களுக்கும், மனைவியருக்கும் நன்மை செய்வதற்காகச் செல்வத்தை விரும்பி, தங்களுக்குரிய முறையான {க்ஷத்திரிய} தொழில்களில் ஈடுபட்டிருக்கும் இந்த மிலேச்சர்கள் அனைவரையும், பிற வீரர்களையும், உமது மகன் {அஸ்வத்தாமன்} ஒருவனுக்காக மட்டுமே, அறியாமையிலும், மடமையிலும் உந்தப்பட்டுக் கொல்லும் நீர் வெட்கத்தை ஏன் உணரவில்லை[2]?(39,40) எவனுக்காக நீர் ஆயுதங்களை எடுத்தீரோ, எவனுக்காக நீர் வாழ்கிறீரோ, அவன் {அஸ்வத்தாமன்} இன்று உயிரையிழந்து, நீர் அறியாதவாறு உமது முதுகுக்குப் பின்னால் போர்க்களத்தில் கிடக்கிறான்.(41) நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர் இஃதை உமக்குச் சொன்னார். இந்த உண்மையில் ஐயங்கொள்வது உமக்குத் தகாது” என்றான் {பீமன்}. பீமனால் இப்படிச் சொல்லப்பட்டதும், துரோணர் தன் வில்லைக் கீழே வைத்தார்.(42)தமது ஆயுதங்கள் அனைத்தையும் கீழே வைக்க விரும்பியவரும், அற ஆன்மா கொண்டவருமான பரத்வாஜர் மகன் {துரோணர்}, “ஓ! கர்ணா, ஓ! கர்ணா, ஓ! பெரும் வில்லாளியே, ஓ! கிருபரே, ஓ! துரியோதனா,(43) போரில் கவனமாக முயற்சி செய்ய நான் உங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். பாண்டவர்களால் நீங்கள் எந்தக் காயமும் அடைய வேண்டாம். என்னைப் பொறுத்தவரை, நான் என் ஆயுதங்களைக் கீழே வைக்கிறேன்” என்று உரக்கச் சொன்னார்.(44) இவ்வார்த்தைகளைச் சொன்ன அவர் அஸ்வத்தாமனின் பெயரைச் சொல்லி உரக்க அலறினார். அந்தப் போரில் தமது ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, தமது தேர்த்தட்டில் அமர்ந்து கொண்டு,(45) யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்த அவர் {துரோணர்}, அனைத்து உயிரினங்களின் அச்சங்களை விலக்கி அவற்றுக்கு உறுதியை அளித்தார்.

அந்த வாய்ப்பைக் கண்ட திருஷ்டத்யும்னன் தன் சக்தியனைத்தையும் திரட்டிக் கொண்டான்.(46) வில்லின் நாணில் பொருத்தப்பட்ட கணையுடன் இருந்த தன் உறுதிமிக்க வில்லைத் தன் தேரில் வைத்த அவன் {திருஷ்டத்யும்னன்}, ஒரு வாளை எடுத்துக் கொண்டு தன் வாகனத்தில் இருந்து கீழே குதித்துத் துரோணரை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(47) மனிதர்களும், மனிதர் அல்லாதவர்களுமான உயிரினங்கள் அனைத்தும், திருஷ்டத்யும்னனின் ஆளுகைக்குள் இப்படிக் கொண்டுவரப்பட்ட துரோணரைக் கண்டு துன்பக் குரலுடன் அலறினர்.(48) “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும், “ச்சீச்சீ!” என்றும் உரத்த அலறல்கள் அங்கே எழுந்தன. துரோணரைப் பொறுத்தவரை, தன் ஆயுதங்களைக் கைவிட்ட அவர் {துரோணர்}, உயர்ந்த அமைதியான நிலையை அப்போது அடைந்தார்.(49) பெரும் பிரகாசமும், உயர்ந்த தவத்தகுதியும் கொண்ட அவர் {துரோணர்}, உயர்ந்தவனும், பழமையானவனுமான விஷ்ணுவில் தன் இதயத்தை நிலைநிறுத்தினார்[3].(50)சற்றே தம் முகத்தைக் கீழே சாய்த்து, தமது மார்பை முன்நிமிர்த்தி, கண்களை மூடி, நற்குணத்தில் நிலைத்து, ஆழ்ந்த சிந்தனையில் தமது இதயத்தை ஆழ்த்தி,(51) பிரம்மத்தைப் பிரதிபலிக்கும் ஓம் என்ற ஓரசைச் சொல்லை நினைத்து, வல்லமையும், உயர்வும், அழியாத் தன்மையும் கொண்ட தேவர்களின் தேவனை நினைவுகூர்ந்தவரும், (குருக்கள் மற்றும் பாண்டவர்களின்) ஆசானுமான ஒளிமிக்கத் துரோணர், இறையுணர்வுமிக்கோராலும் அடைவதற்கு மிகக் கடினமான சொர்க்கத்தை அடைந்தார். உண்மையில், துரோணர் இப்படிச் சொர்க்கத்திற்குச் சென்ற போது, ஆகாயத்தில் இரு சூரியன்கள் இருப்பதாக எங்களுக்குத் தெரிந்தது.(52,53) சூரியப் பிரகாசம் கொண்டவரும், சூரியனைப் போன்றவருமான பரத்வாஜர் {துரோணர்} வானத்திற்கு உயர்ந்த போது, சீரான ஒளியுடன் கூடிய ஒரே பெரிய பரப்பான மொத்த ஆகாயமும் எரிவது போலத் தெரிந்தது.(54) எனினும் கண்ணிமைப்பதற்குள்ளாக அந்த மொத்த பிரகாசமும் மறைந்து போனது. இப்படித் துரோணர் பிரம்மலோகத்திற்குச் சென்ற போது, அதை முற்றிலும் உணராதவனாக அவருக்கு அருகில் திருஷ்டத்யும்னன் நின்று கொண்டிருந்தபோது, மகிழ்ச்சி அடைந்த தேவர்களால் உதிர்க்கப்படும் குழப்பமான {கிலா கிலா என்ற} மகழ்ச்சியொலிகள் கேட்கப்பட்டன.

யோகத்தில் ஆழ்ந்த உயர் ஆன்மத் துரோணர் உயர்ந்த அருளுலகத்தை அடைவதை மனிதர்களில் நாங்கள் ஐவர் மட்டுமே கண்டோம்.(54-56) நானும் {சஞ்சயனான நானும்} , பிருதையின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, துரோணரின் மகனான அஸ்வத்தாமன், விருஷ்ணி குலத்தின் வாசுதேவன் {கிருஷ்ணன்}, பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோருமே அந்த ஐவர். உண்மையில் மனிதர்கள் அனைவரும், அனைத்திலும் உயர்ந்ததும், தேவர்களுக்கே புதிரானதும், மிக உயர்ந்த உலகமுமான பிரம்ம லோகத்தை ஆசான் அடைந்ததை அறியாதவர்களாகவே இருந்தனர். உண்மையில், கணைகளால் தமது உடல் சிதைக்கப்பட்டவரும், குருதியில் குளித்தவருமான அந்த எதிரிகளைத் தண்டிப்பவர் {துரோணர்}, தமது ஆயுதங்களை வைத்துவிட்டு யோகத்தில் அர்ப்பணிப்புடன் இருந்து, முனிவர்களில் முதன்மையானோர் துணையுடன் பிரம்ம லோகத்திற்குச் சென்றதை அவர்களில் ஒருவராலும் காண முடியவில்லை.(57-61)பிருஷதன் மகனைப் {திருஷ்டத்யும்னனைப்} பொறுத்தவரை, அனைவரும் அவனை நோக்கி நிந்தித்தாலும், துரோணரின் உயிரற்ற தலையில் தன் பார்வையைச் செலுத்தி அஃதை இழுக்கத் தொடங்கினான்.(62) பிறகு, இவ்வளவு நேரமும் பேச்சற்றவராக இருந்த தன் எதிரியின் {துரோணரின்} உடலில் இருந்து அந்தத் தலையைத் தன் வாளால் வெட்டினான். பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கொன்று பெரும் மகிழ்ச்சியால் நிறைந்த திருஷ்டத்யும்னன்,(63) தன் வாளைச் சுழற்றியபடியே சிங்க முழக்கமிட்டடான். கரிய நிறத்தவரும், தமது காதுகள் வரை தொங்கும் வெண்குழல்களைக் கொண்டவரும், எண்பத்தைந்து {85} வயதையுடைவருமான[4] அந்தக் கிழவர் {துரோணர்}, உமக்காக மட்டுமே போர்க்களத்தில் பதினாறு வயது இளைஞனின் சுறுசுறுப்புடன் திரிந்து வந்தார். (துரோணரின் தலை வெட்டப்படுவதற்கு முன்) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட குந்தியின் மகன் தனஞ்சயன் {அர்ஜுனன்},(64,65) “ஓ! துருபதர் மகனே {திருஷ்டத்யும்னனே}, ஆசானை {துரோணரை} உயிருடன் கொண்டு வா, அவரைக் கொல்லாதே” என்றான். துருப்புகள் அனைத்தும் கூட “அவர் கொல்லப்படலாகாது” என்றே கதறின.(66) அதிலும் குறிப்பாக அர்ஜுனன், பரிதாபகரமாக உருகியபடி மீண்டும் மீண்டும் அலறினான்.எனினும், அர்ஜுனனின் அலறல்களையும், அந்த மன்னர்கள் அனைவரின் கதறல்களையும் அலட்சியம் செய்த திருஷ்டத்யும்னன்,(67) மனிதர்களில் காளையான அந்தத் துரோணரை அவரது தேர்த்தட்டில் கொன்றான். துரோணரின் குருதியில் நனைந்த திருஷ்டத்யும்னன், பிறகு அந்தத் தேரில் இருந்து கீழே தரையில் குதித்தான்.(68) அப்போது அவன் மிகக் கடுமையானவனாகச் சூரியனைப் போலச் சிவப்பாகத் தெரிந்தான். இப்படியே அந்தப் போரில் துரோணர் கொல்லப்படுவதைத் துருப்புகள் கண்டன.(69) அப்போது, பெரும் வில்லாளியான அந்தத் திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகனின் {துரோணரின்} அந்தப் பெரிய தலையை உமது படையின் போர்வீரர்கள் முன்பு கீழே வீசினான்.(70) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகனின் தலையைக் கண்ட உமது படைவீரர்கள், தப்பி ஓடுவதில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தி, அனைத்துத் திசைகளிலும் ஓடினர்.(71)

அதே வேளையில் வானத்திற்கு உயர்ந்த துரோணர், நட்சத்திரங்களின் பாதைக்குள் நுழைந்தார். சத்தியவதியின் மகனான முனிவர் கிருஷ்ணரின் (துவைபாயனரின்) {கிருஷ்ண துவைபாயனரின்_வியாசரின்} அருளால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரின் மரணத்தை (அது குறித்த உண்மையான சூழ்நிலைகளைச்) நான் சாட்சியாகக் கண்டேன். அந்தச் சிறப்புமிக்கவர் வானத்திற்கு உயர்ந்த பிறகு, சுடர்மிக்கக் காந்தியுடன் கூடிய புகையற்ற தீப்பந்தத்தைப் போலச் சென்று கொண்டிருப்பதை நான் கண்டேன். துரோணரின் வீழ்ச்சிக்குப் பிறகு, உற்சாகத்தை இழந்த குருக்கள், பாண்டவர்கள், சிருஞ்சயர்கள் அனைவரும் பெரும் வேகத்துடன் ஓடினர்.(72-74) பிறகு உமது படை பிளந்தது. கூரிய கணைகளால் பலர் கொல்லப்பட்டனர்; பலர் காயம்பட்டனர்.(75) துரோணரின் வீழ்ச்சிக்குப் பிறகு (குறிப்பாக) உமது போர்வீரர்கள் உயிரை இழந்தவர்களைப் போலக் காணப்பட்டனர். தோல்வியடைந்து, எதிர்காலம் குறித்த அச்சத்தால் ஈர்க்கப்பட்ட குருக்கள்,(76) இரண்டு உலகங்களையும் இழந்தவர்களாகவே தங்களைக் கருதிக் கொண்டனர்[5]. உண்மையில் அவர்கள் தற்கட்டுப்பாடுகள் அனைத்தையும் இழந்தனர்.

தலையற்ற ஆயிரக்கணக்கான உடல்களால் நிறைந்த களத்தில் பரத்வாஜர் மகனுடைய {துரோணருடைய} உடலைத் தேடிய மன்னர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வெற்றியையும், எதிர்காலத்தில் புகழைத்தரும் பெரும் சிறப்புகளையும் ஈட்டிய பாண்டவர்கள்,(77,78) தங்கள் கணைகளாலும், சங்குகளாலும் பேரொலிகளை உண்டாக்கத் தொடங்கி, சிங்க முழக்கங்களைச் செய்தனர். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனனும், பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னனும்,(79) ஒருவரையொருவர் ஆரத்தழுவி கொண்ட நிலையில் (பாண்டவப்) படைக்கு மத்தியில் காணப்பட்டனர். பிருஷதன் மகனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} பேசிய எதிரிகளை எரிப்பவனான பீமன்,(80) “இழிந்தவனான சூதன் மகனும் {கர்ணனும்}, மற்றொரு இழிந்தவனான துரியோதனனும் போரில் கொல்லப்படும் போது, வெற்றி மகுடம் சூடுபவனாக மீண்டும் நான் உன்னைத் தழுவிக் கொள்வேன்” என்றான்.(81) இவ்வார்த்தைகளைச் சொன்னவனும், பாண்டுவின் மகனுமான பீமசேனன், மகிழ்ச்சிப்போக்கில் நிறைந்து தன் தோள்களைத் தட்டியபடியே பூமியை நடுங்கச் செய்தான்.(82) அவ்வொலியால் அஞ்சிய உமது துருப்பினர் தப்பி ஓடுவதில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தி, க்ஷத்திரியக் கடமைகளை மறந்து போரில் இருந்து ஓடினர்.(83) வெற்றியாளர்களான பாண்டவர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரில் தங்கள் எதிரிகளின் அழிவால் கிடைத்த பெரும் இன்பத்தை உணர்ந்து மிகுந்த மகிழ்ச்சியையடைந்தனர்” {என்றான் சஞ்சயன்}.(84)

துரோணவத பர்வம் முற்றும்[6]

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்