Archive for the ‘Divya desams’ Category

இருபத்து நான்கின் மாஹாத்ம்யம்

September 9, 2024

ஸ்ரீ க்ருஷ்ணாய பரப்ரம்ஹணே நமஹ–

ப்ரமாணம் லக்ஷ்மண முநி: ப்ரதிக்ருஹ்யாத மாமகம்
ப்ரஸாதயதி யத்ஸூக்தி: ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம்

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரி
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹரி:

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய
ஸ்ரீமத் வேங்கடநாயகஸ்ய வேதாந்தாசார்யஸ்ய யாதவாப்யுதய காவ்ய க்ருதிஷு

———–

காவ்ய ரத்னம் -என்று தேசிகனே -கவி தார்க்கிக்க ஸிம்ஹம்
கிருஷ்ணனுக்கு ப்ரீதி ஏற்படும் -ஷேம பலன் அளிக்கும் இந்த காவ்யத்தின் இறுதி ஸ்லோகம்

———————————–

இருபத்து நான்கு படிகள்

அயர்வறும் அமரர்கள் அதிபதியான எம்பெருமானின் திவ்யதேசங்கள் நூற்றெட்டு என்று நம் முன்னோர் கூறுவது வழக்கம். இவையெல்லாம் மயர்வறுமதிநலம் அருளப் பெற்ற திவ்யஸூரிகள் எனப்படும் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப்பெற்றவை. இந்த எல்லாத் திவ்யதேசங்களிலும் எம்பெருமான் அர்ச்சாரூபியாய் ஸகல ஜனங்களுக்கும் ஸர்வ அபேக்ஷிதங்களையும் கொடுத்துக் கொண்டும், ‘அர்ச்ய: ஸர்வ-ஸஹிஷ்ணு:’ என்ற ரீதியில் நம்முடைய எல்லா அபராதங்களையும் பொறுத்துக்கொண்டும் ஸேவை ஸாதிக்கிறான். இவை அனைத்துக்குமே ஒவ்வோர் அம்சத்தை முன்னிட்டு உத்கர்ஷம் உண்டு.

அதிலும் நம் முன்னோர் நான்கு திவ்யதேசங்களுக்குப் பிராதான்யம் கொடுத்திருக்கின்றனர். கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை, பெருமாள்கோயில், திருநாராயணபுரம் என்ற இந்த நான்கு திவ்யதேசங்களைக் காலை பகல் மாலை மூன்று வேளைகளிலும் ஸந்த்யாவந்தனம் செய்ததும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுஸந்தானம் செய்யாமலிருப்பதில்லை.

ஸ்ரீரங்கமங்களநிதிம் கருணாநிவாஸம், ஸ்ரீவேங்கடாத்ரிசிகராலயகாளமேகம் |
ஸ்ரீஹஸ்திசைலசிகரோஜ்ஜ்வலபாரிஜாதம், ஸ்ரீசம் நமாமி சிரஸா யதுசைல தீபம் ||

என்று, ஸந்தியாவந்தனம் செய்ததும் இந்த ச்லோகத்தை நம் எல்லாரும் அநுஸந்திப்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், இந்த நான்கு திவ்ய தேசங்களிலும் நடை வடை குடை முடி என்று விசேஷங்கள் உண்டு. கோவிலில் நடை மிகவும் அழகு. திருமலையில் வடையின் ப்ரபாவம் எல்லாருக்கும் தெரியும். பெருமாள் கோவிலில் குடை விசேஷம். திருநாராயண புரத்தில் வைர முடி விசேஷம். 

இப்படி இந்த நான்கு திவ்வ தேசங்களுக்கும் பெருமை உண்டு. அதிலும் பெருமாள் கோவிலுக்கு மற்றும் பல விசேஷ பெருமைகள் உள்ளன. இது காஞ்சி என்று பெயர் பெற்று விளங்குகிறது. க என்று சொல்லப்படும் பிரம்மாவினால் பூஜிக்கபெற்ற பகவான் வசிக்கும் திவ்ய தேசமானபடியால் இதற்கு இந்த பெயர் வந்தது. இதன் மகிமையை ஹம்ஸ ஸந்தேசத்தில் ஸ்ரீஸ்வாமி தேசிகன் பரக்ககக் கூறியிருக்கிறார். 

தாமாஸீதந் ப்ரணம நகரீம் பக்திநம்ரேண மூர்த்நா
ஜாதாமாதெள க்ருதயுகமுகே தாதுரிச்சாவசேந |
யத்வீதீநாம் கரிகிரிபதேர் வாஹவேகாவதூதாந்
தந்யாந் ரேணூந் த்ரிதசபதயோ தாரயந்த்யுத்தமாங்கை:
|| என்று.

தேவப்பெருமாளின் உத்ஸவம் விமரிசையாக நடக்கிறது. அப்பொழுது எம்பெருமான் கருடன், ஆனை, பரி முதலிய வாகனங்களில் எழுந்தருளுகிறார். வாகன ஆரூடனான எப்பெருமானை ஸ்ரீபாதம்தாங்கிகள் மிகவும் அழகாக எழுந்தருளப் பண்ணுகிறார்கள். ஒவ்வொரு வாகனத்திலும் தேவாதிராஜன் எழுந்தருளும்போது அதிக அதிகமான சோபையுடன் கண்டவர் தம் மனம் கவரும்படி ஸேவைஸாதித்து அநுக்ரகிக்கிறான். அந்த திவ்யதேசத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகள் மிகக் கடும் விசையுடன் எழுந்தருளப் பண்ணுவது வழக்கம். அவர்களுடன் ஸேவார்த்திகள் கூட உடன் செல்வது முடியாது. அந்தச் சமயத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகளின் திருவடிகளிலிருந்து பாததூள் வெளிக்கிளம்பி ஆகாயம் வரையில் பரவுமாம். வாகனாதிரூடனான தேவப்பெருமாளை ஸேவிப்பதற்காக ஸ்வர்க்க லோகத்திலிருந்து ஆகாயத்தில் வந்துள்ள தேவர்கள் அந்தத் தூளைத் தங்கள் சிரத்தினாலே தாங்கிக் கொள்வார்கள். அப்படிப் பட்ட மகிமையைப் பெற்றது இந்தத் திவ்யதேசம்.

மேலும், இந்தத் திவ்யதேசத்தின் மகிமை வாசாமகோசரம் என்று எண்ணி ஸ்ரீஸ்வாமி தேசிகன், “வந்தே ஹஸ்திகிரீசஸ்ய வீதீசோதககிங்கராந்” என்று அருளிச்செய்தார். தேவப் பெருமாளின் வீதியைச் சுத்தம் செய்கிற வேலைக்காரர்களை வணங்குகிறேன் என்றால் இதன் மகிமையை அளக்க முடியாது.

‘தேவப் பெருமாளின் வீதியாவது வேதாந்தம். அந்த வேதாந்தத்தின் அர்த்தத்தை அபார்த்தநிரஸநபூர்வகமாக வெளிப்படுத்தினவர்கள் நம் ஆசார்யர்கள். அவர்களை வணங்குகிறேன்” என்பது அதன் உட்கருத்து. இந்தத் திவ்யதேசத்து எம்பெருமானான பேரருளாளனாலே அல்லவா நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் விளங்கிற்று? ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த வள்ளல் ராமாநுஜர் முதலில் யாதவப்பிரகாசனிடம் ஸாமானிய சாஸ்திரங்களையும் சில வேதாந்தபாகங்களையும் கற்று, அவர் மூலமாகத் தமக்கு அவத்யம் வருவதை அறிந்து, கங்கா யாத்திரையிலிருந்து மீண்டு திரும்பி வந்து திகைத்து நின்றபோது, தேவப் பொருமாள் வேடனாகவும் பிராட்டி வேட்டுவச்சியாகவும் வேடம் பூண்டு இவரைக் காத்தார்கள். மேலும், திருக்கச்சி நம்பி மூலமாக இந்த எம்பெருமான் ஆறு வார்த்தைகளை ராமாநுஜருக்குத் தெரிவித்தான். இதன் மூலமாக நம் ராமாநுஜர் ஸ்ரீபாஷ்யகாரரானார். வேதாந்த வீதியை முள், கல் முதலிய தோஷங்கள் இல்லாமல் சீர்ப்படுத்திச் சோதித்துக் கொடுத்து, இதரர் சொல்லும் அபார்த்தங்களையும் கண்டித்து, ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தார். ஆக, காஞ்சீபுரம் இல்லாவிட்டால் அந்த எம்பெருமான் எங்கே! அந்த எம்பெருமான் இல்லாவிட்டால் ஸ்ரீபாஷ்யகாரரை உணர்த்துபவர் யார்? நம் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தமே விளங்குவது எப்படி? ஆக ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த ஸ்தாபனமே இந்த திவ்யதேசத்தின் பிரபாவத்தினால் ஏற்பட்டது என்பதை மறக்க முடியாது. மறைக்கவும் முடியாது. 

மேலும் கருட உத்ஸவம் இந்த ஊரில்தான் விசேஷம். ‘அத்தியூரான் புள்ளையூர்வான்’ என்று கருட உத்ஸவத்தை முன்னிட்டு ஆழ்வார்கள் இந்த திவ்ய தேசத்தை மிகச் சிறப்பாக கூறியுள்ளார்கள் என்பதும் சர்வ விதிதம். இப்படி பல படியால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு மகிமை ஏற்பட்டுள்ளது. அத்த யூரான் புன்னையூர்வான் அணிமணியின் துத்தீசேர் நாகத்தின் மேல் துயில்வான். முத்தீமறையாவான், மா கடல் நஞ்சுண்டான். தனக்கும் இறையாவான் எங்கள் பிரான், என்பது பூதத்தாழ்வார் பாசுரம். இப்படி மங்களாசாஸனாத் ஹிமயமலை முதல் கடல் வரையில் தேசவரை கருடோத்ஸவ விசேஷம் தேவப்பெருமாளுக்கே. இவர் இரவில் நாகத்தின் மேல் சயனித்துக் கொள்கிறார். காலையானதும் எழுந்து விடுகிறார். பணிபதிசயனீயாத உத்தித: த்வம் ப்ரபாதே என்பது தேசிக ஸ்ரீஸூக்தி. இதற்கு மற்றொரு வகையிலும் பிரபாவத்தை சொல்லுகிறேன், கேண்மின்.

இருபத்துநான்கு என்ற எண்ணிக்கை இவ்வூரில் பல விஷயங்களில் உள்ளது. குடை இருபத்துநான்கு சாண் கொண்டது. வாணவெடிகள் இருபத்துநான்கு வகைகள். த்வஜஸ்தம்பத்தில் இருபத்துநான்கு அடுக்கடுக்காக போடப்படும் கவசங்கள் உள்ளன. அனந்த ஸரஸ்ஸில் இருபத்துநான்கு படிகள். கோவின் பிராகாரச் சுவர் இருபத்துநான்கு அடுக்குகள் கொண்டது. கோவிலின் கீழிலிருந்து திருமலைக்குச் சென்று எம்பெருமானை ஸேவிப்பதற்கு படிகள் உள்ளன. இவையும் இருபத்துநான்கே. இப்படி இருபத்துநான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷம் இவ்வூரில்தான் உள்ளது. ஸ்ரீமத் ராமாயணம் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. இதற்கு காரணம் இருபத்துநான்கு எழுத்துக்கள் கொண்ட காயத்ரியின் அர்த்தத்தை விவரிப்பதற்காக அந்த மகா காவியம் அவதரித்தபடியால் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டதாக வால்மீகி பகவான் அருளிச்செய்தார். அவ்வாறே அந்த மகா காவியத்தின் பிரதான அர்த்தமான பகவானை அறிந்துகொள்வதற்கு இருபத்துநான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷங்கள் இந்த ஆலயத்தில் ஏற்பட்டிருக்கின்றன. ‘காயத்ரியில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம், ஸ்ரீராமாயணத்தில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம் தேவப் பெருமாளே’ என்பதை அறிவிக்கவே இந்த ஆலயத்தில் இந்த விசேஷம் என்று எல்லாரும் சொல்லுவர். இப்படிச் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும்.

அப்பைய தீக்ஷிதர் என்ற மகான் இந்த விசேஷத்தின் பெருமையை ரஸகனமாக அருளிச்செய்திருக்கிறார். இவர் அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்; ஆயினும் ஸ்ரீஸ்வாமி தேசிகனிடத்தில் மிக்க பக்தி பெற்றவர். ஸ்ரீதேசிகனின் பெருமையை நன்கறிந்து, அவர் இயற்றிய யாதவாப்யுதயம் என்ற மகா காவியத்திற்கு வியாக்கியானம் செய்தவர். ‘ஸ்ரீமத்வேங்கட நாதஸ்ய காவ்யேஷு லலிதேஷ்வபி | பாவா: ஸந்தி பதேபதே’ என்று ஸ்வாமியின் காவியத்தைப் பலவாறு போற்றியவர். திருமலைக்குப் போகும்போது அமைந்துள்ள இருபத்துநான்கு படிகள் விஷயமாக இந்த அப்பைய தீக்ஷிதர் இயற்றிய சுலோகத்தை இங்கே குறிப்போம் –

ஸம்ஸாரவாரிநிதிஸந்தரணைக போத –
ஸோ பாநமார்க சதுருத்தரவிம்சதிர் யா |
தாமேவ தத்வவிதிதம் விபுதோதிலங்க்ய
பச்யந் பவந்த முபயாதி கரீச நூநம் ||

வேதாந்த சாஸ்திரத்தில் இருபத்துநான்கு தத்துவங்கள் கூறப்பட்டிருக்கின்றன. ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருத்வி, கர்மேந்திரியம் ஐந்து, ஜ்ஞாநேந்திரியம் ஐந்து, பஞ்ச தந்மாத்ரைகள், மனம் ஆக இவையெல்லாம் அசேதனத்தின் பிரிவுகள், சேதனன் என்பவன் ஜீவன், இவை எல்லாவற்றிற்னும் மேற்பட்டவன் பரமசேதனன் பரமாத்மா. தன்னையும் அசேதனமான இருபத்துநான்கு தத்துவங்களையும் நன்கு அறிந்தவன்தான் சுலபமாகப் பரமாத்மாவை உணரவும் அடையவும் முடியும். அசேதனமான இந்தப் பொருள்களை அறிந்துகொள்வது, ‘அவை தோஷத்தோடு கூடியவை’ என்று அறிந்து விடுவதற்காக. இப்படி அறிந்தவன்தான் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைவான். இந்த அசேதனம் இருபத்துநான்கு வகையாக இருக்கிறபடியால் இவை இருபத்துநான்கு படிகளாகின்றன. ‘ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவதற்கு, சேதனனான இவன் தான் இருபத்துநான்கு படிகளை ஏறி வைகுண்ட லோகம் போல் உள்ள அத்திகிரியில் இருக்கும் தேவாதிராஜனான பேரருளாளனை ஸேவிப்பது மோக்ஷத்தை அடைவது போல் ஆகிறது’ என்பது இந்த ச்லோகத்தின் கருத்து. இப்படி வேதாந்தத்தில் சொல்லக் கூடிய விசேஷ அர்த்தத்தைக் காட்டுவதற்காகவே கீழிருந்து மேலுள்ள பகவானை ஸேவிப்பதற்கு இருபத்துநான்கு படிகள் கட்டப்பட்டு அமைந்திருக்கின்றன போலும். இப்படிப பற்பல விசேஷங்களினால் காஞ்சி என்ற திவ்யதேசத்திற்கு ஸர்வ திவ்யதேங்களைக் காட்டிலும் வாசாமகோசரமான வைபவம் ஏற்பட்டுள்ளது.

நான்முகனே உத்தமமான இந்த திவ்ய தேசத்தில் அச்வமேத யாகம் செய்தான். அதில் இந்திரன் முதலான மந்திரங்களைச் சொல்லி யாகம் நடந்தது. இந்திராதிகளைச் சொல்லியும் ஹவிர்பாகத்தைப் பெற வரவில்லை. ஏன் என்றால் இந்திரனைக் குறித்தா இவர் யாகம் செய்தது. பகவானைக் குறித்து அல்லவா. ஆனால் இந்த ஹவிர்பாக ரஸத்தை அவர்கள் நாக்கால் பருக வில்லை. பின் கண்ணால் பருகினார்கள். எம்பெருமான் பிரஹ்மாவினுடைய தவத்துக்கு வசப்பட்டு நேராக ஸேவை ஸாதித்தான். எல்லோரும் கண்டு ஆநந்தித்தனர் என்றார் ஸ்வாமி தேசிகன்.

இந்த வேள்வியை தடுக்க பிரமன் பத்நியான ஸர்ஸ்வதி வேகவதி நதியாக வந்தாள். அது ஸமயம் பகவான் யதோக்தகாரியாக அவளை வர வொட்டாமல் தடுத்தான். யாகம் நடந்தது பலமும் கிட்டியது. ஒரே பகவான் தன்னை இரண்டுப் பிரிவாகச் செய்து ஸேவை ஸாதித்தான். ஒன்று யதோக்தகாரி. இரண்டாவது தேவப் பெருமான். ஆக இவரே உபாயம். ப்ராப்யம் என்பதை தெரியப் படுத்தினார். ஸ்வாமி தேசிகன் இதை ஏகம் வேககதீமத்யே ஹஸ்திசை லேசத்குச்யதே. உபாயப்பலபாவேன் ஸ்வயம் வ்யக்தம் பரம்மஹ: என்றார்.

அப்பய தீக்ஷிதரின் வரதராஜ ஸ்தோத்திரத்தில் இன்னும் ஒருச்லோகத்தை பார்ப்போம். இவர் யாதவாப்யுதயம் என்னும் காப்பியத்துக்கு உரை எழுதினார் என்பது மாத்திரமில்லை. வ்யாஸஸூத்ரத்துக்கும் ராமாநுஜர் எழுதிய பாஷ்யத்தை அநுஸரித்து நயமயூகமாலிகா என்னும் நூல் எழுதியுள்ளார். அவரது மற்றொரு ச்லோகத்தின் கருத்தை எழுதிகிறோம். தேவாதிராஜனே நான் உன்னிடம் இரண்டு குற்றம் செய்துள்ளேன். அதை பொருத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். அதற்கு தேவப் பெருமாள் பலகுற்றங்கள் உள்ளனவே ஆக இரண்டே என்று எப்படி என்ன இது விசேஷ குற்றம் என்கிறார். முன் பிறவியில் நான் உன்னை வணங்காதது ஒன்று. அதெப்படி தெரியும் என்றார். இப்பொழுது அழுக்குடல் வந்ததைக் கொண்டே இதை அறியலாம் என்றார். மற்றொன்று இப்பொழுது உன்னை வணங்கியதால் அடுத்த பிறவி இல்லை. ஆக அப்பொழுது வணங்கப்ரஸக்தி இல்லையே. ஆக இந்த இரண்டையும் பொருத்துக் கொள் என்று ரஸகனமான பத்யம் பாடினார். அந்த ஸ்லோகம் இதோ – 

வபூ: ப்ராது ர்வாவாத் அநுமிதம் இதம் ஜன்மநீ புரா முராரே ந க்வாபி க்வசிதபி பவந்தம் ப்ரணதவான் | நமன் முக்த: ஸ்ப்ரதி அதநு: அக்ரேபி அநதிமான் கரீச க்ஷந்தவ்யம் ததிதம் அபராத த்வயமபி ||

————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பலபட்டடைச்‌ சொக்கநாத பிள்ளை இயற்றிய ஸ்ரீ திருமாலிருஞ்‌ சோலை மலை ஸ்ரீ அழகர்‌ கிள்ளை விடு தூது–ஸ்ரீ உ. வே. சாமிநாதையர் (தொகுப்பு, குறிப்புரையுடன்)

June 25, 2024

உலா, கோவை, பிள்ளைத்தமிழ் போன்ற நூலமைப்புக்கள் தமிழுக்கே சிறப்பாக உரியன. தூதோ இந்திய மொழிகள் பலவற்றிலும் சில சில வேறுபாடான அமைப்புக்களுடன் காணப்படும். இங்ஙனம் பல மொழிப்புலவர்களும் விரும்பி நூல் செய்வதற்குரிய அமைப்பு முறை சிறந்ததாகவே இருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை.

வடமொழியில் தூது நூல்களை ஸந்தேசங்களென்றும் தூத காவ்யங்களென்றும் கூறுவர். அவை காப்பிய வரிசையிலே சேர்த்து எண்ணப்படுவன. காளிதாஸ் மகாகவியால் இயற்றப் பெற்ற மேக ஸந்தேசம் புலவர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இனிய காப்பியமாக விளங்கி வருகின்றது. அதனைப் பின்பற்றிப் பல தூத காவியங்கள் வடமொழியில் எழுந் துள்ளன.

பிரபந்தத்திரட்டென்னும் இலக்கண நூல்,

“எகினமயில் கிள்ளை யெழிலியொடு பூவை
சகிகுயினெஞ் சந்தென்றல் வண்டு-தொகைபத்தை
வேறுவே றாப்பிரித்து வித்தரித்து மாலைகொண்டன்
பூறிவா வென்றறூ து”-என்று தூதின் இலக்கணத்தை அமைக்கின்றது.
இதன்கண் தூது விடுவதற்குரிய பொருள்களும் சொல்லப்பட்டுள்ளன. இப்பத்தையும் இரத்தினச் சுருக்கம் என்னும் நூலொன்று,

” இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை
பயம்பெறுமே கம்பூவை பாங்கி – நயந்த குயில்
பேதை நெஞ்சந் தென்றல் பிரமரமீ ரைந்துமே
தூ துரைத்து வாங்குந் தொடை”-எனக் கூறுகின்றது.

அழகர்‌ கிள்ளைவிடு தூதென்பது .ஸ்ரீ திருமாலிருஞ்சோலைமலை
யில்‌ திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும்‌ ஸ்ரீ செளந்தர
ராஜப்‌ பெருமாளைக்‌ காமுற்ற தலைவி ஒருத்தி அவர் பால்‌ ஒரு
கிளியைத்‌ தூது விடுத்ததாகப்‌ பலபட்டடைச்‌ சொக்கநாத
பிள்ளை யென்னும்‌ புலவர்‌ இயற்றியது. இது காப்பு வெண்பா
ஒன்றையும்‌, 239 கண்ணிகளையும்‌ உடையது.

3.2 திருமாலிருஞ்சோலைமலை

திருமாலிருஞ்சோலைமலை யென்பது பாண்டி நாட்டுத் திருமால் திருப்பதிகள் பதினெட்டனுள் ஒன்று. சங்ககாலத்து நூலாகிய பரிபாடலில் இதன் பெருமை சிறப்பித்துச் சொல்லப் படுகின்றது. அந்நூலில் இளம்பெருவழுதியாரென்னும் புலவராற் பாடப்பெற்று, மருத்துவன் நல்லச்சுதனாரால் இசையமைக்கப்பெற்ற நோதிறப் பண்ணிலமைந்த பதினைந்தாம் பாடல் இத்தலப் பெருமையை விரிவாகக் கூறும் ; அப்பாடலின் பொருட் சுருக்கம் வருமாறு :

3.3 பரிபாடலிற் கண்ட செய்தி

‘அறிவெல்லையால் அறியப்படாத புகழுடனே விளங்கி நிலத்தைத் தாங்கும் சக்கரவாளம் முதலாகத் தொல்லிசைப் புலவர்கள் ஆராய்ந்துரைத்த குன்றங்களைப் பொதுவகையால் சொல்லப் புகுந்தாற் பலவாம் ; அப்பலவற்றுள்ளும் நிலத்தில் உள்ளோரது பசித் துன்பத்தை நீக்கி, நிறைபயன்களெல்லா வற்றையும் எப்பொழுதும் அவர் பெறப் பயன்படும் குன்றுகள் சில ; அச்சிலவற்றுள்ளும் தெய்வங்கள் தாமாக விரும்பும் மலர்களையுடைய தடாகங்களும் மேகம் படியும் சிகரங்களும் உள்ள குலவரைகள் சில சிறந்தன ; அவற்றுள்ளே கடலும் கானலும் போல வேறு வேறாகிய நிறத்தினையும், சொல்லும் பொருளும் போல வேறுபடாத தொழிலினையுமுடைய மாயோனும் பலதேவரும் எழுந்தருளியிருக்கும் சோலைமலை சிறந்தது. துழாய் மாலையை யுடைய திருமால் அருள் புரிந்தாலல்லாமல் துறக்கம் அடைதல் எளிதாகுமோ? அரிதிற் பெறும் துறக்கத்தை எளிதிற் பெறச் செய்வதனால் திருமாலிருஞ்சோலைமலையை ஏத்தக் கடவோம்.

‘பலதேவரது திருமார்பிலுள்ள வெண்கடப்ப மாலையைப் போல அருவியாக வீழ்வதனால் சிலம்பாறு அழகு பெறும். திருமாலிருஞ்சோலை யென்னும் பெயர் உலகமெல்லாம் பரவ, மகளிரும் மைந்தரும் காமத்தை விதைத்து விளைக்கும் யாமத் தியல்பையுடைய இருங்குன்றத்தில் இளவெயில் சூழ இருள் வளர்தலை யொத்துப் பீதாம்பரத்தையுடைய திருமால் பல தேவரோடு அமர்ந்து நிற்கும் நிலைமையை, மாந்தர்களே! தியானம் செய்ம்மின்; அம் மலையின் சிறப்பைக் கேண்மின் :

‘சுனைகளிலெல்லாம் நீலமலர் மலர அச்சுனையைச் சூழப் பொன்னிறமுள்ள அசோக மலர்கள் மலர்தலாலும் வேங்கை மலர்கள் மலர்தலாலும் பீதாம்பரத்தை அணிந்த மாயோனை ஒத்த நிலையினதாயிற்று அம்மலை. இருங்குன்றென்னும் பெயர் பரவி உலகத்தில் பழையதாகிய புகழையுடைய அது தன்னைக் கண்டாரது மயக்கத்தை அறுக்கும் தெய்வம் ; அதனால் சென்று திருமாலைத் தொழும் ஆற்றலை இல்லாதீர்! அம்மலையைக் கண்டேனும் பணிமின்.

‘குட்டியால் தழுவப்பட்ட மந்தி பாயவும், முல்லை மலர் கற்பு நிகழ்ச்சியைக் காட்டவும், மயில்கள் அகவவும், குருக்கத்தியின் இலை உதிரவும், அதன்கண் இருந்து குயிலினம் கூவவும் அவ் விருங்குன்றத்தில் குகைக்குள் முழங்குகின்ற எதிரொலி ஒழியாது.

‘நும் மனைவியரோடும் தாய் தந்தையரோடும் குழந்தைகளோடும் சுற்றத்தோடும் கூடி அக்குன்றத்தைத் தெய்வமாக மதித்துத் திசை நோக்கித் தொழுது சென்மின்.

‘தன் திருவுந்தியில் முன்பு உண்டாகிய கமலத்தை யொக்கும் கண்ணை உடையவனும், மேகம் இருள் மணி ஆகியவற்றை யொத்த திருமேனியை உடையவனும், எல்லா உலகத்திலும் வெளிப்பட்டு அவ்விடத்து உயிர்க் கூட்டங்களின் பிறவித் துன் பத்தைக் களைவோனுமாகிய திருமால் அன்பு கொண்டு அக்குன் றத்தின்கண் எழுந்தருளி யிருக்கின்றான்.

‘திருமாலே! நீ பசுந் துழாய் மாலையையுடையை ; நீல மலையைப் போன்றாய்; மிக்க ஒளியினையுடையை ; ஒற்றைக் குழையையுடையை ; கருடக்கொடியை உடையை ; வளைந்த கலப்பையை உடையை ; தண்டு, சங்கு, சக்கரம், வில், அம்பு, பாராவளை, வாள் என்பவற்றை ஏந்தினை.

‘இங்ஙனம், வேதம் அவன் பெருமை ஈதென்று உரைத்தலால் யாமும் அவற்றுள் அறிந்தவற்றைக் கூட்டி உரைத்துத் திருமால் பலதேவரென்னும் இருவரையும் தொழுது அவ்விருங் குன்றத்தின் அடியில் வாழ்தல் எமக்கு உண்டாகுகவென்று வேண்டுவோமாக!’

இப்பரிபாடலால், முற்காலத்தில் இத்தலத்தே திருமாலோடு நம்பி மூத்தபிரானாகிய பலதேவரும் கோயில் கொண்டு எழுந்தருளி யிருந்தனரென்று தெரிகின்றது. அன்றியும், இற்றைக்குச் சற்றேறக்குறைய இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பே பாடப் பெற்ற இப்பரிபாடலில் உள்ள,

“இருங்குன் றென்னும் பெயர்பரந் ததுவே
பெருங்கலி ஞாலத்துத் தொன்றியல் புகழது “-என்னும் பகுதி அதற்கு முன்பே பல காலமாக இயன்ற புகழை யுடையதென்று இத்தலத்தைப் பாராட்டுதல் அறிதற்குரியது.

சிலப்பதிகாரச் செய்தி

சிலப்பதிகாரத்தில், மதுரை நோக்கிச் செல்லும் கோவலனுக்கு ஒரந்தணன் வழியிலே காண்பனவற்றை விரித்துக் கூறுவதாக அமைந்த பகுதியில் இம்மலையைப் பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன :

“திருமால் குன்றத்துச் செல்வீராயின், அங்கே மிக்க மயக்கத்தைக் கொடுக்கும் பிலத்துவார வழி ஒன்று உண்டு. அங்கே புண்ணிய சரவணம், பவகாரணி, இட்ட சித்தி என்னும் பெயரையுடைய மூன்று பொய்கைகள் உள. புண்ணிய சரவணத்தில் நீராடினால் இந்திரனாற் செய்யப்பட்ட ஐந்திர வியாகரணமென்னும் இலக்கணத்தை உணரலாகும். பவகாரணி யென்னும் தீர்த்தத்தில் ஆடுவார் பழம்பிறப்பை உணர்வர். இட்ட சித்தியில் நீராடி நினைத்தவற்றை யெல்லாம் அடைதல் கூடும். அங்கே சிலம்பாற்றின் கரையின்கண் உள்ள கோங்க மரத்தின் நிழலிலே ஒரு தெய்வப்பெண் தோன்றி, ‘இப்பிறப்பிற்கு இன்பமும் மறு பிறப்பிற்கு இன்பமும் இவை இரண்டும் ஒழிந்து எக்காலத்தும் ஒன்றாந் தன்மையாய்க் கோட்டமின்றி அழிவற நிற்கும் இன்பமுமாகிய பொருள்கள் யாவை? அவற்றை உரைமின்; யான் இம் மலையடிவாரத்திலே வாழ்வேன் ; வரோத்தமை யென்னும் பெயருடையேன். யான் வினாவியவற்றிற்கு ஏற்ற விடையை யார் கூறுகின்றனரோ அவருக்கு யான் ஏவல் புரிவேன். நீவிர் உரைத்தீ ராயின் உமக்கு இப்பொழுது இப்பிலவாயிற் கதவைத் திறந்து தருவேன்’ என்று சொல்வாள். அவள் வினாவியவற்றிற்கு விடை கூறின் அவள் பிலம் திறந்துவிடுவாள். மேலே செல்லின் ஆங்கொரு பெண் தெய்வம் முன்னே கூறிய மூன்று பொய்கைகளையும் காட்டுவாள். அப்பொய்கைகளிலே பஞ்சாக்ஷரத்தையும் அஷ்டாக்ஷரத்தையும் மனத்தால் நினைத்து ஜபித்து நீராடின் நற்பயனை அடைவீர்கள். அப்பொய்கையினால் உண்டாகும் பயனை விரும்பீராயின், அவற்றை நினையாது, அம்மலைமீது நின்றோனுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளைத் தியானம் செய்யுங்கள். அங்கே துவஜஸ்தம்பத்தைக் காண்பீர்கள். அப்பெருமானுடைய திருவடி தரிசனம் பிறவித் துன்பத்தைக் கெடுக்கும்” (சிலப். 11 : 87-138, சுருக்கம்.)

இப்பகுதியால் இந்தத் தலத்தில் மூன்று பொய்கைகளும், சிறப்புடைய கோங்கமரம் ஒன்றும், பிலத்துவாரம் ஒன்றும் இருந்து வந்தனவென்று தெரியவரும். அன்றியும் சிலப்பதிகார காலத்தில் இத்தலத்தின் கண்ணே தெய்வப் பெண்கள் வாழ்ந்து வந்ததாக மக்கள் எண்ணி யிருந்தனரென்பதும் பெறப்படும்.

பிற நூல்கள்

பத்துப்பாட்டுள் முதலாவதாகும் திருமுருகாற்றுப்படையிலே முருகக் கடவுள் கோயில் கொண்டெழுந்தருளிய படைவீடு ஆறு கூறப்பட்டுள்ளன ; அவற்றுள் ஒன்றாகிய பழமுதிர்சோலை யென்பது இத்தலமே யென்று தெரிகின்றது. பழங்காலத்தில் இத்தலத்தே முருகக்கடவுள் திருக்கோயிலும் இருந்ததென்பதற்குரிய அறிகுறிகள் இப்பொழுதும் இருக்கின்றனவென்பர். சங்க காலத்துக்குப் பின் எழுந்த நூல்களிலும், திருப்புகழிலும் இதனை முருகக்கடவுளுக்குரிய தலமாகக் கொண்டு புலவரும் அன்பரும் பாடியுள்ளனர்.

பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் என்பவர்களுடைய மங்களா சாஸனம் இத்தலத்திற்கு உண்டு. பிள்ளைப்பெருமாளையங்கார் இயற்றிய அழகர் அந்தாதியும், வேம்பத்தூர்க் கவிகுஞ்சரமையரால் இயற்றப்பெற்ற கலம்பகம் ஒன்றும், சாமி கவிகாளருத்திரர் இயற்றிய பிள்ளைத் தமிழ் ஒன்றும், பெருங்கரைக் கவிகுஞ்சர பாரதியால் இயற்றப்பெற்ற குறவஞ்சி ஒன்றும் இத்தல ஸம்பந்த மாக உள்ளன.

கந்தபுராணம் திருக்குற்றாலப் படலத்தில் அகத்தியர் கூற்றாக வுள்ள பகுதியில்,

” முத்திதரு பேரழகர் திருமலையி னிடையுற்றோம் ” (12)

என்று இத்தலம் சிலேடைவகையாற் குறிப்பிக்கப் பெறுதல் காண்க.

வடமொழியில் கூரத்தாழ்வார் அருளிய ஸ்ரீ சுந்தரபாஹு ஸ்தவமென்னும் நூலும், ஒரு புராணமும் இருக்கின்றன. வட மொழிப் புராணம் தமிழ்வசன நடையில் ‘அழகர்கோயில் மான்மியம்’ என்னும் பெயரோடு பல வருஷங்களுக்குமுன் மதுரை வி. என். இராகவக்கோன் என்பவரால் அச்சிடப்பெற்று வழங்குகின்றது. இப்பொழுது இத்தல விசாரணைக் கர்த்தராக இருந்து வரும் ஸ்ரீமான் கே. என். இராதாகிருஷ்ணையர் அவர்கள் மாட்சிமை தங்கிய சென்னைக் கவர்னரவர்களுக்கு 23-10-1935-இல் அனுப்பிய ஆங்கில விண்ணப்பமொன்று புத்தக ரூபத்தில் இருக்கின்றது. தல சம்பந்தமாகப் பல செய்திகளைத் தொகுத்து அதில் அவர் எழுதியிருக்கின்றனர். மேலே கண்ட நூல்களாலும் அழகர் கிள்ளி விடுதூதாகிய இந்நூலாலும் கேள்வியாலும் அறிந்த செய்திகள் பல ; அவற்றிற் சில பின்னே தெரிவிக்கப் படுகின்றன.

தலத்தின் திருநாமங்கள்
அலங்காரன்மலை, அழகர் கோயில், அழகர்மலை, ஆராம் சைலம், இருங்குன்றம், குலபூதரம், குலமலை, குளிர்மாமலை, குன்றம், கேசவாத்திரி, கொற்றமலை, கோலமலை, சஞ்சீவி பர்வதம், சிங்காத்திரி, சீர்பதி, சோலைமலை, தர்மாசலம், திருமலை, திரு மால்குன்றம், திருமாலிருஞ்சோலை, திருமாலிருஞ்சோலைமலை, தென் திருப்பதி, நிலமலை, நீண்டமலை, பழமுதிர்சோலை, பழமுதிர்சோலைமலை, பிரம்மபர்வதம், மண்டூகபர்வதம், மாலிருங் குன்றம், வனகிரி, விருஷபகிரி, ஸ்ரீபதி.

பெருமாள் திருநாமங்கள்

அலங்காரர், அழகர், கள்ளழகர், சங்கத்தழகர், சுந்தரத் தோளர், சுந்தரபாஹு, சுந்தரராஜப் பெருமாள், சோலைமலைக் கரசு, தெய்வசிகாமணி, பரமசுவாமி, மலையலங்காரர், மாலலங் காரர், விருஷபாத்திரி நாதர்.

நாச்சியார் திருநாமம்
ஸெளந்தரவல்லி ; கல்யாண சுந்தரவல்லி யெனவும் வழங் கும். ஸ்ரீ ஆண்டாளும் இங்கே திருக்கோயில் கொண்டெழுந் தருளியுள்ளாள்.

தீர்த்தங்கள்
சிலம்பாறு என்பது இத்தலத்திலுள்ள தலைமையான தீர்த்தம். அது தேனாறு, நூபுர கங்கை , பகவத்பாத தீர்த்தம், மஞ்சீரந்தி, விஷ்ணு கங்கை யென்றும் வழங்கப்பெறும். அது திருக்கோயிலுக்கு வடக்கே 23 மைல் தூரத்தில் இருக்கிறது. மற்றத் தீர்த்தங்கள் வருமாறு :- அக்கினிவாபி, அனுமதீர்த்தம், இஷ்ட சித்தி, உத்தர நாராயணவாபி, கதலிவாபி அல்லது வாழைக் கவி, கருட தீர்த்தம், கிருஷ்ணவாபி, நாராயண புஷ்கரிணி, பண்டாரிவாபி, பவகாரணி, பாண்டவ தீர்த்தம், புண்ணிய சரவணம், பெரிய அருவி, வேணு தீர்த்தமென்னும் மூங்கிற்கவி.

விருக்ஷங்கள்
இங்கே முதல் யுகத்தில் ஆலாகவும் இரண்டாவது யுகத்தில் அரசாகவும் மூன்றாவதில் வில்வமாகவும் இக்கலியுகத்தில் புத்திர தீபமென்னும் பெயரினதாகவும் ஒரு ஸ்தல விருக்ஷம் உண்டென்று இந்த நூல் கூறும். மூன்றாம் யுகத்தில் பலாவாகவும் இக்கலி யுகத்தில் புத்திர ஜீவியென்னும் விருக்ஷமாகவும் இருப்பதாக இத்தல மான்மியம் தெரிவிக்கும். நூபுரகங்கையின் ஆரம்பத்தில் ஒரு மகா வடவிருக்ஷம் இருந்ததென்பர். சந்தன மரத்தைத் தலவிருக்ஷமென்பாரும் உளர். சிலப்பதிகாரத்திலே சொல்லப்பட்ட கன்னிகார விருக்ஷமும், இந்நூலில் கூறப்படும் உறங்காப்புளியும் இத்தலத்தோடு சார்த்திச் சொல்லப்பெறும் விருக்ஷங்களாம். இங்கே சோதிவிருக்ஷ முண்டென்றும் கூறுவர்.

விமானம்
சோமச்சந்திர விமானமென்றும், சோமச்சந்தவிமான மென்றும் வழங்கும். இது பிரணவாகாரமானதென்று தலமான் மியம் கூறும்.

மண்டபங்கள்
(1) மாத்வி மண்டபம் : இது சிலம்பாற்றங்கரையில் இருப்பது ; இந்தத் தலமான்மியத்திலும் இது கூறப்படுகின்றது. (2) சோலைமலை மண்டபம் : இது சாம்பல் போடும் மண்டபமென்றும் வழங்கும் ; பதினாறு கால்களை உடையது. (3) கனு மண்டபம்: கல்யாண சுந்தரவல்லித் தாயார் கனுத் திருவிழா நடைபெறும் மண்டபம். (4) வண்டியூர் மண்டபம் : அழகர் எழுந்தருளும் மண்டபங்களுள் ஒன்று. (5) தேனூர் மண்டபம் : வையையாற்றின் இடையிலே உள்ளது ; அழகர் எழுந்தருளும் மண்டபங்களுள் ஒன்று; இது தேனூரிலுள்ள அன்பர்களாற் கட்டப்பெற்றமையின் இப்பெயர் பெற்றது.

பூசித்துப் பேறுபெற்றோர்
அம்பரீஷன், அருச்சுனன், அனுமன், இந்திரத்தியும் நான், இந்திரன், கந்தருவன் ஒருவன், கருடன், குப்ஜபாண்டியன், கெளதம முனிவர், சதிரிளமடவார், சந்திரகேது, சுதபஸ் என்னும் முனிவர், செளனக முனிவர், தருமதேவர், தாலப்பியர், பச்சை வாரணதாசர், பராசரர், பாண்டவர், பிரகலாதன், பிரம் தேவர், புண்ணியம், புரூரவசு, புலத்தியர், மரீசி, மலயத்துவசன், மார்க்கண்டேயர், மாவலி, மைத்திரேயர், யானையொன்று, ருக்மாங் கதர், வசிஷ்டர், விபீஷணன்.

பிற கோயில்கள்
(1) ஸ்ரீ நாகநாதர் கோயில் : பல நாகர்கள் உள்ள கோயில். (2) இராக்காயி அம்மன் கோயில் : (3) அனுமன் கோயில் : இஃது அனும தீர்த்தத்துக்கு அருகிலுள்ள து. (4) கருடன் கோயில் : கருட தீர்த்தத்துக்கு அருகில் உள்ளது. (5) பாண்டவர் கோயில் : பாண்டவர் தீர்த்தத்துக்கு அருகில் உள்ளது. (6) சதிரிளமடவார் கோயில் : இம்மலையின் தென் பகுதியில் உள்ளது. (7) சக்கரத்தாழ்வார் கோயில் : இதற் குச் சில நிவந்தங்கள் அமைந்ததாகக் கூறும் சிலாசாஸனம் உண்டு. (8), தண்டலைக் கோயில். (9) வெள்ளிமலை : இது மலையின் தென் பகுதிக்குப் பெயரென்றும் இங்கே வெள்ளி மலை யாண்டி யென்னும் கடவுள் உறைவதாகவும் கூறுவர். (10) க்ஷேத்திரபாலகர் கோயில் : க்ஷேத்திரபாலகர் கல்லென வும் வழங்கும் ; இக்கல்லில் வைரவர் எழுந்தருளி-யிருக்கின்றன ரென்பது ஐதிஹ்யம்.

விழாக்கள்
(1) கோடை உத்ஸவம் : இஃது இந்நூலிற் சிறப்பிக்கப் பெறுவது ; சித்திரா பௌர்ணமியில் நிகழ்வது. இவ்விழாவில் பெருமாள், ஆண்டாள் சூடிக்கொடுத்து அனுப்பிய மாலையை அணிந்து செல்வது வழக்கம்.
(2) வசந்த உத்ஸவம் : வைகாசி மாதம் பத்து நாள் நடை பெறும்.
(3) முப்பழ உத்ஸவம் : ஆனிப் பெளர்ணமியன்று முக் கனிகள் நிவேதனம் செய்யப்படும்.
(4) பிரும்மோத்ஸவம் : பத்து நாள் திருவிழா. மலயத்து வசபாண்டியன் முதலில் தொடங்கியதாகத் தலமான்மியம் கூறும். தங்கப் பல்லக்கில் பெருமாள் எழுந்தருளுவர். ஆஷாட பௌர்ணமியன்று திருத்தேர் .
(5) கருட ஸேவை : ஆடி அமாவாசையன்று நடைபெறுவது.
(6) திருப்பவித்திர உத்ஸவம் : 5 நாள் நடைபெறும். ஆவணி மாதம் பெளர்ணமியோடு நிறைவுறும்.
(7) நவராத்திரி : புரட்டாசி மாதம் நடைபெறுவது.
(8) எண்ணெய்க் காப்பு உத்ஸவம் : ஐப்பசி மாதம் நடை பெறுவது. சுக்கிலபக்ஷத் துவாதசியன்று பெருமாள் தீர்த்தத் தொட்டிக்கு எழுந்தருளுவது வழக்கம் ; இதனால் இது தொட்டி யுத்ஸவமென்றும் வழங்கும்.
(9) திருக்கார்த்திகை விழா : இவ்விழாவிலே புறப்பாடு உண்டு .
(10) அத்யயன உத்ஸவம் : மார்கழி மாதம் நடைபெறும் பகற் பத்து இராப்பத்து.
(11) சட்டத்தேர் உத்ஸவம் : தைமாதம் நடைபெறுவது.
(12) திருக்கல்யாண உத்ஸவம் : பங்குனி உத்தரத்தன்று நிகழும். மறுநாள் தெப்பத் திருவிழா நடைபெறும்.

இவற்றையன்றி வேறு சில உத்ஸவங்களும் நடைபெறுவ துண்டு .

வாமன புராணம், வராக புராணம், பிரம்மாண்ட புராண மென்னும் மூன்று புராணங்களில் இத்திருப்பதியின் மான்மியம் கூறப்பட்டிருப்பதாகத் தலபுராணம் தெரிவிக்கின்றது.

திவ்யப் பிரபந்தத்திற் கண்ட சிறப்பு
மேலே கூறியவற்றுள் சிலம்பாற்றை,

“சிலம்பாறு பாயுந்தென் றிருமாலிருஞ் சோலையே”
“ஓட்டருந் தண்சிலம் பாறுடை மாலிருஞ் சோலையதே”-
என்று பெரியாழ்வாரும்,

சந்தொடு காரகிலுஞ் சுமந்து தடங்கள் பொருது
வந்திழி யுஞ்சிலம் பாறுடை மாலிருஞ் சோலை
“-என்று ஆண்டாளும்,

சிலம்பிய லாறுடைய திருமாலிருஞ் சோலை”-என்று திருமங்கைமன்னனும் பணித்தனர்.

இங்கே திருக்கோயில் கொண்டெழுந்தருளிய பெருமாளை,

சுந்தரத் தோளுடையான் “
“திருமாலிருஞ் சோலைநம்பி”
“மாலிருஞ் சோலை நம்பி “
” சுந்தரன் “-
என்று ஆண்டாளும்,

தேவர்கள் நாயகன் “
“கேசவ நம்பி “
-என்று திருமங்கைமன்னனும்,

“அழகர்”-என்று நம்மாழ்வாரும் போற்றுகின்றனர்.

நெடுமாறன் தென்கூடற்கோன்”
“தென்னன் கொண்டாடும் தென்றிருமாலிருஞ் சோலை”
“அளித்தெங்கு நாடு நகரமும் தம்முடைத் தீவினை தீர்க்கலுற்றுத்
தெளித்து வலஞ்செய்யுந்தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையே”
“சென்றுலகங் குடைந்தாடுஞ் சுனைத்திரு மாலிருஞ்சோலை ” (பெரியாழ்வார்)
“தேசமெல்லாம் வணங்குந் திருமாலிருஞ்சோலை ” (திருமங்கையாழ்வார்) “தென்சொல் திசைக்குத் திலகமாய் நின்ற திருமாலிருஞ் சோலை” (நம்மாழ்வார்)-என இத்தலம் பாராட்டப்படுகின்றது.

3.3. நூலின் பொருள் அமைப்பு

இந்நூலில் தூதுவிடப் பெறும் கிளியின் பெருமையும், பாட்டுடைத் தலைவராகிய அழகர் சிறப்பும், தலைவி அழகரைக் கண்டு காமுற்ற வரலாறும் முறையே கூறப்படுகின்றன. இதன் பொருளமைப்பு வருமாறு :

கிளியின் பெருமை

திருமாலின் திருநாமமாகிய அரியென்னும் பெயரையும், அவர் திருக்கண்வளரும் பாயலாகிய ஆலிலையின் நிறத்தையும் கொண்டு மன்மதனுக்கு வாகனமாக விளங்கும் கிளியரசே, நான் சொல்வதைக் கேட்பாயாக : உன்னுடைய பெருமை பலபடியாகப் பரந்தது. மன்மதனுடைய ஆட்சியிலே உன் சொல்லைக் கேளாதவர் ஆர்? மன்மதனது ஒற்றைச் சக்கரங்கூட இல்லாமற் செலுத்துகின்ற காற்றாகிய தேரைப் பலங்கொண்டு இழுத்துத் திரிகின்ற பச்சைக் குதிரையே, ஒற்றைச் சக்கரத்தோடு கூடிய சூரியன் தேர் ஒன்றை யிழுக்கும் பச்சைக் குதிரைகள் ஏழும் உனக்கு ஒப்பாகுமோ? ‘அந்தக் குதிரைகள் சுற்றிவரும் உலகமும் நீயே ; ஞான விளக்கும் நீயே” என்று சொல்வதிற் பிழையென்ன? உன் உருவம் கொண்ட சுகமுனிவர் எல்லாம் தாமாகவே இருந்தார். எத்தகைய நிறத்தையுடைய பறவையானாலும் உன்னுடைய பஞ்சவர்ணங்களுக்குள் ஒன்றில் அடங்குமன்றோ?

உன் மேனி முழுவதும் பச்சை நிறமா யிருந்தால் உன்னைக் கண்டோர் பார்வதி தேவியாரென்று எண்ணி விடுவார்களென்று கரு தியோ நீ மூக்கு மாத்திரம் சிவந்திருக்கின்றாய்? நாக்குத் தடுமாறிப் பேசுபவர்களை உலகத்தார் சேர்த்துக் கொள்ளாமல் விடுவர்; உன்னை அப்படி விடுபவர் ஒருவரும் இல்லை. முன்பு சீவகனுடைய மனைவியருள் ஒருத்தியாகிய காந்தருவதத்தை மிக்க சிறப்படைந்தமைக்குக் காரணம், அவள் உன் பெயருள் ஒன்றாகிய தத்தை யென்பதைக் கொண்டமையே. பிற பறவைகளினிடத்தில் திருமால் திருநாமத்தையும், சிவபெருமான் நாமத்தையும் சொல்வதனால் பயனில்லை. உன்னிடம் சொன்னால் நீ அவற்றைப் பயின்று கூறுவாய். கூடுவிட்டுக் கூடுபாயும் யோகி உனக்கு ஒப்பாவானோ? பாலின் பெயராகிய கீரம் என்பது உனக்கும் பெயர். அதனால் உனக்கும் ஆடை (பாலாடை, உடை) உண்டு. பாடகம், காலாழி முதலிய ஆபரணங்களை நீ பூண்பாய். [#]கற்புடையாய்; சோலையாகிய மனையிலே சேர்வாய். இவற்றால் உன்னையும் ஒரு பெண்ணென்றே சொல்லலாம்.

சாயுச்சியமென்னும் பதவியைச் சுகரூபமென்பர். உன் பெயர் சுகமாதலின் அது நின் சொரூப மென்றே சொல்லவேண்டும்.[§] ‘வன்னி பரிசித்த வெல்லாம் பரிசுத்தம்’ என்று வழங்குவதை யெண்ணியே நீ கோதிய பழத்தை யாவரும் உண்கின்றனர். யாருடைய சொல்லையும் நீ கற்றுக்கொள்வாய். யோகங்கள் சாதித்துப் [¢] பச்சைப்பிள்ளையாக வாழும் பெரியோர் பலர் உண்டு. ஆயினும் அந்த யோகங்கள் சாதியாமலே பச்சைப் பிள்ளையாய் நீ வாழ்கின்றாய். நீ” பாலனத்தாலே பசி தீர்க் கின்றாய். திருமாலும் தம்முடைய [£] பாலனத்தாலே உலகத்தோர் பசியைத் தீர்க்கின்றார். ஆதலின் நீ அவருக்கு ஒப்பாகின்றாய். மிக்க நண்பினரானாலும் [@] பூசையை விட்டார் முதலியோரை நீ விரும்பாய். உனக்குப் பச்சை சிவப்பு என்னும் [##] இரண்டு நிறம் இருப்பதனால் இரண்டு வடிவமுடைய கருடாழ்வானுக்கு இணையாவாய்.

[#] கல் புடையாய், கற்புடையாய். [§] வன்னி – நெருப்பு, கிளி.
[¢] பச்சைப்பிள்ளை – இளங்குழந்தை. [||] பாலனம் – பாலோடு கூடிய சோறு.
[£] இரட்சித்தல். [@] பூசையை விட்டார் – பூனையை விட்டவர், தெய்வ வழிபாட்டை நீத்தவர். [##] இரண்டு வடிவம் – பறவை வடிவமும் புருஷ வடிவமும்.

ஜபம் செய்வோர்களுக்கெல்லாம் திருவரங்கர் திருநாமத்தை நீ உபதேசம் செய்வாய். பெண்களுக்கு ஆடவரைப் போல முத்தம் கொடுப்பாய். அங்ஙனம் முத்தங் கொடுப்பதனால் அவருக்கு இதழிலே செந்நிறம் உண்டாயிற்றோ? அன்றி அவர் இதழ்ச் சிவப்பு உன் அலகிற்கு ஏறியதோ? யாருக்கும் தோற்றாதவனாகிய மன்மதனை நீ தேர்க்குதிரையாகி இழுத்து வருவாயாயின், அவனுக்குக் குறை ஏது? யோகிகளெல்லாம் அடக்கிக் கஷ்டப்படுகின்ற வாயுவை உன் பின்னாலே (தேராக) வரச் செய்வாய். திருமகளும் மலைமகளும் தம்முடைய திருக் கரங்களிலே உன்னைப் பிடித்திருக்கும்படி நீ நட்புப் பூண்டாய். திருமாலுக்கும், பார்வதிக்கும், உனக்கும் பச்சை நிறம் வந்த விதம் எங்ஙனம்?

யாவரும் மெச்சும் பறவையே, உன்னுடைய நாக்குக் கூழை நாக்கானது, அரிகீர்த்தனத்தை இடைவிடாமற் செய்ததனாலோ? [§] …….. குயில், வண்டு, புறா, மயில், நாகணவாய்ப்புள் என்னும் பறவைகளுக்கு உன் சிறப்பு வருமோ ?

வேதமாகிய சிவபிரான் குதிரைகளுக்குப் பிரமதேவர் சாரதி ; மன்மதனுடைய குதிரையாகிய உனக்குச் சாரதி யார்? சிவபெரு மான் திருநுதற் கண்ணால் மன்மதனும், அவன் நானாகிய வண்டும், சின்னமாகிய குயிலும் சுடப்பட்டுக் கருகிய காலத்தி லும் நீ கருகாமலே வந்தாய். உனக்குக் கனியினிடத்தில் அதிக விருப்பம். நீ [#]அரிதாளை விட்டு அகலாய். எனக்கு உள்ள இரண்டு கை உனக்கு இல்லை ; உனக்குள்ள இருசிறகு எனக் கில்லை. எனக்கும் உனக்கும் பேதம் இதுதான்.

[§] இங்கே உள்ளே சிலேடைப் பொருள்கள் வசனத்திலே எழுதற்கரியவை.
[#] அரிதாள் – அரிந்த தினைத்தாள், திருமாலின் திருவடி.

நீ வீட்டுக்குள் இருக்கும் மனிதர்களுடன் இதமாகப் பழகு வாய். அன்பினால் அக்கா, அம்மா என்று முறையிட்டு அழைப் பாய். வண்டு மதுவை உண்டு குழறும். குயிற்பிள்ளையோ மாமரத்திலேறிக் கத்தும். கிளிப்பிள்ளை சொன்னத்தைச் சொல்லும், என்ற நல்ல பெயரை நீ பெற்றிருக்கிறாய்.

நீ அன்னமில்லாமற் பால் மாத்திரம் குடிக்கும் பச்சைச் குழந்தையானாலும், உன் காலைப் பிடிப்பார் பலராவர். மன்மதனால் வருந்துவோருடைய நோயைத் தீர்ப்பதற்காகவோ நீ பச்சிலை ரூபத்தைப் படைத்தாய் ? மகளிருடைய மயக்கமாகிய காட்டைச் சுடுவதற்-காகவோ நீ [@] வன்னியென்னும் பெயரைத் தாங்கினாய்? அவர்களுடைய துன்பமாகிய வேழத்தைக் கொல்லவோ நீ [§] அரி வடிவம் பூண்டாய்? அவர்களது விரகதாபமாகிய பெரிய படையை வெல்லவோ நீ [$] கிள்ளை வடிவத்தை எடுத்தாய்? மாதர்களுடைய விசனம் கெடுவதற்காகவோ நீ [¢] சுகவடிவத்தைக் கொண்டாய்? …………………….. ரதிக்கும் கலைமகளுக்கும் உன்னை உவமானமாக்கி உரைப்பர். உவமையாகக் கூறும் பொருளே உயர்ந்ததாதலின் அவ்விருவரிலும் நீயே உயர்ந்தாயன்றோ ?…………….. உன்னுடைய வடிவமும் வளைந்த மூக்கும் திருமாலினுடைய துவசத்தில் இருக்கும் கருட தேவனது அம்சமோ? உன்னுடைய சிறகானது, பழைய காலத்தில் கண்ணபிரான் வேய்ங்குழல் வாசித்தபோது மரங்களிலே தளிர்த்த பசுந்தழையோ? அல்லது, இராமபிரான் இராவணனைச் சங்கரித்த பிறகு விபீடணன் இலங்கையிலே புக்குக் கட்டிய புதுத்தோரணமோ? உன்னுடைய இனிய மொழி கண்ணபிரானது வேய்ங் குழலோசையோ?

[@] வன்னி – நெருப்பு, கிளி. [§] அரி – சிங்கம், கிளி.
[$] கிள்ளை – குதிரை, கிளி. [¢] சுகம் – இன்பம், கிளி.

கிளிப்பிள்ளையே, தெள்ளமுதக் கிள்ளையே, இன்பரசக் குஞ்சே, தென்றற் குழவியைத் தாய்போல எடுத்துச் சஞ்சரிக்கும் செல்வமே, திருமகள் திருக்கரத்திலே யுள்ளாய், முத்தி நகரேழில் ஒன்றாகிய அவந்தியென்பதன் பெயரையும், தமிழில் வல்லினம் ஆறனுள் ஒன்றாகிய தகர வரியிலமைந்த தத்தை யென்னும் பெயரையும், ஐந்து பூதத்தில் ஒன்றாகிய நெருப்பின் பெயராம் வன்னியென்பதையும், சதுரங்க சேனைகளுள் குதிரையின் பெயராகிய கிள்ளையென்பதையும், மும்மூர்த்திகளில் ஒருவராகிய அரியின் திருநாமத்தையும், இரு பயனாகிய சுக துக்கங்களில் சுகமென்னும் பெயரையும் தாங்கிய என் கண்ணே , கண்ணுண் மணியே, நான் திருமாலைத் தரிசனம் செய்யப்போய் ஊராரெல்லாம் அவர் கூறும் நிலையை அடைந்ததைச் சொல்கின்றேன் ; கேட்பாயாக :

அழகர் பெருமை

அவன், நரசிங்கம் போன்ற திருவுருவத்தை எடுத்து இரணியசங்காரம் செய்தவன். கிருஷ்ணாவதாரத்தில் பூதனையின் பாலையுண்டவன். பிள்ளைத் தன்மை நீங்காதவன். கல்லைப் பெண்ணாக்கும் திருவடியையுடையவன். ஒரு கவிஞன் பொருட்டுத் தன் படுக்கையைத் தூக்கிச் சென்றவன். தேவர்களுக்காக அமுது கடைந்தவன். சீதாபிராட்டியுடன் கானங் கடந்தவன். ஒரு வேடனுக்கு மெல்லிய கால் நகங்களைத் தந்தவன். என் காதல் வெள்ளத்திலே அமிழ்ந்தினவன் ; பிரளயகால வெள்ளத்திலே மிதந்தவன் என் உள்ளத்தே உள்ளவன் ; ஆயினும், உலகத்துக்கு அப்பாலான். வெட்ட வெளியிலே நின்று எளிதிலே தோற்றாதவன் ; அருகிலே இருந்தும் அணுகுதற்கரியான். மாயன் என்னும் பெயருக்கேற்ப என் மனத்துள் இருந்தாலும் மாயம் செய்து ஒளிப்பவன். எல்லாவற்றையும் காட்டியருளிக் கண்ணனென்னும் பெயரை அடைபவன். எங்கும் இல்லா திருந்தும் எங்கும் நிறைந்திருப்பவன் ; எங்கும் நிறைந்திருந்தும் எங்கும் இல்லாதவனாக இருப்பவன். என்னை எனக்கு ஒளித்துத் தன்னை எனக்கருளும் தம்பிரான். என்னுடைய பழைய வினைகளையும் பல மாயைக் கூட்டத்தையும் கலைத்து என்னைத் தனியே இருத்துவோன். ‘நானே பிரமன் ; நானே எல்லா வுயிரும் ; இவ்விருவரையும் ஏவுபவனும் நான்’ என்று உணர்த்தும் பொருட்டுக் கோவலரிடத்தே பசுவும் பசுவின் கன்றும் அவற்றை மேய்ப்பவர்களுமாகி நின்ற பரஞ்சோதி. தன்னுடைய சங்கத்தொனியைக் கேட்டாரை நரகினின்றும் மீட்பவன். வேய்ங் குழலின் தொனியால் பட்ட மரங்களைத் தவிர்க்கச் செய்தவன். ‘ஆதிமூலம் இவன்’ என்பதை உணர்த்தும் யானை யொன்றை உடையவன். பிரமாவைத் திருவுந்தியால் வெளிப்படுத்திச் சிருஷ்டிக்கு மூலகாரணன் தானென்பதைப் புலப்படுத்துவோன் ; அப்படியே பிரளயகாலத்தில் உலகங்களை விழுங்கித் துடைப்போனும் தானே யென்பதை உணர்த்துவோன். தமிழினாலே வேதக் கருத்துக்களை உணர்த்திய ஆழ்வார்கள் பதினொருவருடைய உள்ளத்திலே எழுந்தருளியிருப்பவன். தன் பாதமாகிய செந்தாமரை மலரிலிருந்து வழியும் தேனைப் போலக் கங்கை உண்டாகும் பெருமையுடையவன். துயிலாத் துயில் கொள்பவன். தன் தாயாகிய யசோதைப் பிராட்டிக்கு, தன்னுள்ளும் புறம்பும் உலகம் இருப்பதை வாய் திறந்து காட்டி உணர்த்தியவன். பிறப்பாகிய கடலில் கலந்த அவித்தையாகிய உவர்த்தன்மையை வாங்கிவிட முகில் போல விளங்குபவன். பரசமயவாதங்களாகிய நதிகள் யாவும் தன்பாலே அடங்கக் கடல் போல இருப்பவன். ஒரு கிரணம் போன்ற என்னைத் தன்னுள்ளே அடக்கிக்கொள்ள நீலமணிநிறம் பூண்டவன். உலகமாகிய ஊசலில் எழுந்தருளியிருப்பவனும் அதனை இயக்குபவனும் தானே யாகின்ற அண்ணல். வேடர்கள் ஒரு பார்வை மிருகத்தைக் கொண்டு நூறுமான்களைப் பிடிப்பதைப் போலத் தன் அவதாரமாகிய பத்தினால் தான் படைத்த எண்பத்து நான்கு லக்ஷம் யோனி பேதங்களாகிய பிறவிகளை நீக்குபவன்.

தசாங்கம்

கேசவாத்திரி, சிங்கத்திரி, இடபகிரி என்னும் திருநாமங் களையுடைய சோலைமலைக்கு அவன் தலைவன். அந்த இடபாசலம் இந்திரன் போலவும் அதில் உள்ள சுனைகள் அவன் கண்களைப் போலவும் இருப்பது, தோளில் புரளும் முத்தாரத்தைப் போல விளங்கும் நூபுரநதியை உடையவன். பூமிதேவிக்குப் பன்னிரு செந்தமிழ் நாடுகளும் கை இரண்டு, காது இரண்டு, நகில் இரண்டு, முகம், காலிரண்டு, பின்னல், கண்ணிரண்டு ஆகப் பன்னிரண்டு உறுப்புக்களாக இருப்பவும், அவற்றுள் சோழ நாடும் பாண்டி நாடும் கண்களாக விளங்க, அவற்றுள்ளும் வலக் கண்ணாக விளங்கும் பாண்டி நாட்டை-யுடையவன். சோமச் சந்திர விமானத்தை இந்திர விமானமென்றும், துவசஸ்தம் பத்தைக் கற்பகவிருட்ச மென்றும், தன்னை உபேந்திரனென்றும், திருமாலையாண்டானென்றும், ஆசிரியரைப் பிருகஸ்பதி யென் றும், மற்ற யாவரையும் இந்திரன் முதலாகிய தேவர்களென்றும் யாரும் எண்ணுதலால் தேவர் வாழும் அமராபதி போலத் தோன்றுகின்ற சீபதியென்னும் திருப்பதியையுடையவன். தன் திருமார்பில் உள்ள பல ஆபரணங்களின் நிறத்தோடு சேர்ந்து இந்திரவில்லைப் போலத் தோற்றும் பசுந்துளப மாலையை அணிந்தவன். வைணவமாகிய [#]மதம் பொங்கவும் வைகானசம் பாஞ் சராத்திரமென்னும் ஆகமங்களாகிய மணிகள் ஒலிப்பவும், வடகலையும் தென்கலையும் புரசைக்கயிறாக விளங்கும் அத்துவி தானந்தமென்னும் யானையை உடையவன். வேதமாகிய குதிரையையும் கருடனாகிய கொடியையும் மும்முரசையும் உடையான். தவநிலை ஆணை தரித்தவன்.

[#]மதம் – யானையின் மதம், சமயம்.

பிற சிறப்புக்கள்

கண்ணபிரானாக வந்த காலத்துத் தன் திருமேனியிலே சிந்தின வெண்ணெய்ப் பிதிர்கள் நட்சத்திரங்களைப் போலவும் கையில் ஏந்திய வெண்ணெயுருண்டை மதியம் போலவும் விளங்க அதனை உண்டவன். சூரிய சந்திரர்களாகிய திருவிழிகளையும், அவற்றைப் போன்ற சங்கு சக்கரங்களையும் தாங்கினவன். உலகத்தை உண்ட திருவாயையும், அடக்கிய திருவயிற்றையும், ஈன்ற திருவுந்தித் தாமரையையும், அளந்த திருத்தாளையும், அதனை மாவலிபால் ஏற்ற திருக்கரத்தையும், அதன்கண் வளைந்த பயிர்களின் நிறத்தைக் காட்டும் திரு மேனியையும், அதனை வராகாவதாரத்தில் பெயர்த்த மருப்பையும், ஆமையாகி ஏந்திய முதுகையும், அதனைத் தன் படத்திலே வைத்த ஆதிசேடனாகிய பாயையும் உடையவன். தன் திரு நாமத்தை நினைந்து நாமமிட்டவர்களுக்கு இம்மை மறுமைப் பயன்களை ஈபவன். பிரமன் எழுதும் எழுத்தைத் தன் அஷ்டா ஷரத்தால், இனி இல்லையென்று சொல்லும்படி ஆக்குவோன். சங்கரன் முதலியோர் தங்கள் தங்கள் மலைகள் எங்கே இருப் பினும் இது நம் குன்று என எண்ணிவரும் நண்புடையவன். பச்சைவாரண தாசரென்பவருக்கு இரண்டு கண்களையும் மாற்றினவன் ; ஒரு யானைக் கன்றுக்குக் கண் கொடுத்தவன். திருக்கையில் உத்தியோகச் சக்கரத்தை யுடையவன். இலங்கையை முன்பு வென்று கொண்டாலும் நிலத்தை (மாவலியினிடம்) தானமாக வாங்கினவன்……. திருக்கரத்திலே சங்கத்தை யுடைமையினாலும், மதுரையிலுள்ள சங்கத்தில் வீற்றிருந்து தமிழ் ஆராய்ந்தமையினாலும் சங்கத்தழகனென்று சொல்லும் திரு நாமமுடைய தம்பிரான். தன்னுடைய பாதுகை அரசு புரியவும் கருடாழ்வான் பறவைகளுக்கரசாக இருப்பவும் அருள் புரிந்தவன். செளந்தரவல்லி நாச்சியாரோடு சுந்தரராசனெனத் தோற்றினவன். சுந்தரத்தோளன், மலையலங்காரன் என்னும் திருநாமங்களை யுடையவன்.

வேறு வேறு தெய்வங்களை மக்கள் பூசித்தமையால் உண்டான புண்ணியமே தன்னை வந்து பூசிக்கப் பெற்றவன். மலயத்துவச பாண்டியனால் வழிபடப் பெற்றவன். அம்பரீஷனுக்கு அருள் செய்தவன்.

திருவிழா

அத்தகைய திருமால், தென்றல் வீசுங்காலத்திலே கோடைத் திருவிழாக் கொண்டருளி மதுரைக்கு எழுந்தருளினான். தல்லா குளத்திற்கு வந்து விடியற்காலத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிப் பொற்குடையும் வெள்ளிக் குடையும் கொடிகளும் இலங்கவும், முரசம் முழங்கவும், மக்கள் கூட்டம் கூட்டமாகத் தொடர்ந்து வரவும், நீர்வீசு கருவிகள் பனிநீரைத் தூவவும், காணிக்கைக் கொப்பரை முன்னே செல்லவும் வையைநதியில் அங்கங்கே செய்யப்படும் உபசாரங்களை ஏற்றருளி வண்டியூர் மண்டபத்தில் வீற்றிருந்தருளினான்.

அப்பொழுது சூரியன் அத்தமித்தான். தீவட்டிகள் பிரகாசித் தன. வாணக்காட்சி நடைபெற்றது. பெருமாள் அனந்தாழ் வான் மீது பவனிவந்தான். அப்பவனியிலே அவனைத் தரிசித்துக் காமமயக்கத்தை யான் அடைந்தேன். அவன் மற்ற இடங் களுக்கு எழுந்தருளலானான்.
தலைவியின் நிலை

நான் அவனுடைய திருமுகமண்டலம் முதலியவற்றைக் கண்டு மால்கொண்டு என் உடன் வந்த மாதர்களுக்கு அவனைப் பற்றிக் கூறினேன். பின் அவனைப் பார்த்து, “அன்று நீர் திருடிய வெண்ணெயைப்போலத் தோற்றும் சங்கு இருப்பவும் என் கையிலுள்ள [§] சங்கைக் கவர்ந்து கொண்டீர். என்னுடைய கண்ணீர் உம்முடைய மலையிலே உள்ள அருவியைப்போல உமக்கு உவப்பாயிற்றோ? உமக்குரிய பீதாம்பரம் போதாதோ? இராமாவதாரத்திலே உடுத்துக்கொண்ட மரவுரியிலே வெறுப்பு வந்துவிட்டதோ? திரெளபதியாகிய பெண்ணுக்கு நீரே ஆடையை உதவினீரே. இப்பொழுது என்னுடைய ஆடையைக் கவர்ந்தீரே. பழையபடி கோவியர் ஆடை கவர்ந்ததைப் போலத் திருட்டுத்தனத்தை மேற்கொண்டீரோ? இந்த நூலாடை உமக்குப் [$] பாலாடை-யாயிற்றோ? உம்மேல் விருப்பங்கொண்டு முழங்குகின்ற எம்முடைய வார்த்தையை நீர் கேட்டிலீர். பாற்கடலிலே தூங்குவதைப்போல இந்த வையையிலும் தூக்கம் உண்டோ ? இப்பொழுது உண்மையாக நிலாவெள்ளம் பரந்ததோ? அன்றிப் பாற்கடல் தான் உம்முடைய பிரிவாற்றாமல் உம்மைப் பின் தொடர்ந்து இங்கே வந்துவிட்டதோ ? இரவாகிய யானை கசேந் திரன் போல இருக்கிறது; அதன்மேல் வரும் முதலையைப் போன்ற சந்திரனை நீர் சும்மா விட்டு விடலாமா? சதிரிள மடவாருக்கு இரங்கிய நீர் நெஞ்சம் தவிக்கும் இளமாதருக்கு இரங்கு தல் கூடாதோ? கோவியர்களிடத்தில் காம விளையாடல் புரிந்த செய்திகளெல்லாம் இப்பொழுது மறந்து போனீரோ?” என்று யான் கூறி முறையிட்டேன்.

[#]சங்கு – வளை. [$] காய்ச்சிய பாலில் மேலேயுள்ள ஏடு.

பிறகு பெருமான் தேனூர் மண்டபத்தை வலங்கொண்டு சோலைமலையைச் சார்ந்தான். யானோ மிக மெலிந்து யானை நோயுண்ட விளாம்பழம் போலானேன். இந்தத் துன்பத்தைத் தந்த அவன் சிறிதேனும் திருவுள்ளங் கனியானாயினன். சந்திரனும், கடலும், அயல் மகளிர் மொழியும், மன்மதன் செயலும், காளைகளின் மணியும், வேய்ங்குழலும் என்னைப் பலவாறாகத் துன்புறுத்துகின்றன.

கிளியை வேண்டுதல்

கிளியரசே, என்னுடைய உடம்பும் உன் கூடும் பலவகையில் ஒப்புமையுடையன. உன்னுடைய விருப்பத்தையறிந்து யான் உண்பிப்பேன் ; நலங்குக் குளிப்பாட்டுவேன் ; பட்டாடையால் துடைப்பேன் ; கூட்டில் இருத்தி ஆலத்தி எடுப்பேன் ; வாசனைத் தூபம் காட்டுவேன் ; இள வெயிலிலே குளிர்காயச் செய்து எடுத்து முத்தமிட்டு என்கையின்மேல் வைத்துப் பெருமாள் திருநாமமெல்லாம் உனக்குப் பழக்கி வைப்பேன்.

உன்னையன்றிப் பிறபொருள்களைத் தூதுவிடல் கூடுமோ? அன்னம், குயில், வண்டு, தென்றல், மேகம், காக்கை என்பன தகுதியற்றவை. நீயோ, அங்கே போனால் அடியார்கள் இருப்பின் நீயும் அவர்களோடு சேர்ந்து கீர்த்தனம் செய்வாய். நாச்சியார் அருகில் இருந்தால் அவர் கையிற் பறந்து சென்றிருப்பாய். “எங்கிருந்து வந்தாய்?” என்று கேட்டால், ” சோலையிலிருந்து தரிசிக்க வந்தேன்” என்று சொல்வாய். சௌந்தர-வல்லிக்கும், சூடிக்கொடுத்த நாச்சியாருக்கும் தெரியாமல் என்னுடைய காதலைத் தெலுங்கிலே தந்திரமாகச் சொல்வாய். என்னுடைய துன்பத்தை நீக்குவாய். சச்சிதானந்தனாகிய பெருமாள் அணிந்துள்ள மாலையைக் கொண்டு வருவாய்.

அங்கே யுகந்தோறும் வேறு வேறாகிக் கலியுகத்தில் புத்திர தீபமாகும் தரு ஒன்று உண்டு. தேவர்களுக்குரிய ஐந்து கற்பகங்களோடு ஆறாவதாக அது விளங்கும். ஒரு கோடி சோலைகளும், ஒரு கோடி ஆறுகளும், ஒரு கோடி பூஞ்சுனையும் இருக்கின்றன. அன்றியும், யோகிகளைப்போல அல்லும் பகலும் துயிலாத உறங்காப் புளி ஒன்று இருக்கின்றது.

கோயிற் பணியாளர்

அத்தலத்தில் பிரமதேவனும் இந்திரனும் வந்து பெருமாளை இறைஞ்சுவார்கள். சீரங்கராச பட்டரென்னும் அர்ச்சகரும், திரு மாலிருஞ்சோலைச் சீயரென்னும் மாதவரும், திருமாலை யாண்டா னென்னும் ஆசிரியரும், தோழப்பையங்காரும், வேத பாரகரும், அமுதாரும், திருமலை நம்பியும், சோலைமலை நம்பியும், சடகோப நம்பியும், திருமாலிருஞ் சோலைப் பிரியரென்னும் சீகருணீகரும், சீகாரியஞ் செய்யும் நாயகர்களும் தன்னுடைய திருத்தாளை வணங்கி நிற்ப எம்பெருமான் திருவோலக்கத்தில் எழுந்தருளி யிருப்பான்.

தூதுரைக்கும் முறை

அப்பொழுது நீ தூதுரைக்கத் தொடங்கினால் உன் வார்த்தை அவன் திருச்செவியில் ஏறாது. ஆதலின் அவன் பள்ளியறைக்கு எழுந்தருளும் வேளை பார்த்து வேறொருவர் ஒன்றை விண்ணப்பித் தற்கு முன், என்னை மன்மதன் துன்பப்படுத்துவதற்கு முன்னே, பெண்டிர் அலர் தூற்றுவதற்கு முன்னே , கடலின் ஒலியும் தாயின் உரையும் என்னைத் துன்புறுத்தாமல் அடங்கும்படியாகத் தத்தையே, நீ என் தூதுச்செய்தியை உரைப்பாயாக.

உன்பேர் சுவாகத மாகையால் உனக்கும் [#] சுவாகதம் உண்டாகும். முன்பு ஒரு நாள் ஸ்ரீராமபிரானே உன்னைப் புகழ்ந்து பேசினானென்றால் உன்னைப் புகழ்ந்து பேசாதவர் யார்? நீ என் தூதுச் செய்தியைச் சொல்லிப் பெருமாளிடம் அவன் திருப் புயத்திலணிந்த மாலையைக் கேள். ‘உம்முடைய மாலையை அளியாவிடின் கோதையார் சூடிக்கொடுத்து-விட்ட மாலையை யேனும் தந்தருள்க” என்று கேள். தன்னை அடுப்பவர் யாவருக்கும் ஆடி மாதத்தில் தியாகம் கொடுக்கும் எம்பிரான் இல்லையென்று சொல்லான். ஆதலின் அவ்வழகன் புயத்து அணிந்த மாலையை நீ வாங்கி வருவாயாக.

[#] சுவாகதம் – நல்வரவு.

3.4. நூற்பொருள் ஆராய்ச்சி

அணிகள் இந்நூலின்கண் அங்கங்கே பலவகையான சொல்லணி பொரு ளணிகளைக் காணலாம்.

“வேளாண்மை யென்னும் விளைவுக்கு நின்வார்த்தை
கேளாதவரார்காண் கிள்ளையே ” (3)
“மாலினைப் போல மகிதலத்தோர் வாட்டமறப்
பாலனத் தாலே பசிதீர்ப்பாய்” (19)

என்பன போன்ற இடங்களில் சிலேடையணி அமைந்திருக்கின் றது. தூத்துக்குரிய பொருள்களுட் கிளியல்லாத பிறபொருள்கள் தகுதியுடையனவல்லவென்று கூறும் பகுதியில் சிலேடையமை தியை மிகுதியாகக் காணலாம்.

“செலுத்திய காற் றேரைமுழுத் தேராய்” (4)
….. ….. ….. ….. – என் காதல்
வெள்ளத் தமிழ்ந்தினோன் வேலைக்கு மேன் மிதந்தோன்
உள்ளத்துள் ளானுலகுக் குப்பாலான் ” (74-5)

என்பன போன்ற இடங்களில் விரோத அணியும்,

“மைப்பிடிக்கும் வேற்கண் மலர்மாதுஞ் சங்கரியும்
கைப்பிடிக்க நீவங் கணம்பிடித்தாய்” (28)

“…… …. ….. …..– கும்ப முனி
வாயினுரையடங்க வந்த கடலடங்கத்
தாயி னுரையடங்கத் தத்தையே” (232-3)

என்பன முதலியவற்றிற் பின்வரு நிலையணியும் அமைந்துள்ளன.

“தேறுகனி காவேரி சிந்துகோ தாவிரியும் வீறு பெறுமே” (33)
“அரசா யிருத்தியாலத்தி யெடுத்து ” (196)

என்பவற்றிற் பிற பொருட் பெயர்கள் தொனிக்கின்றன.

“தத்தை யடைந்தவரே தத்தையடையார்” (54)
“கூடலிற் கூடலெனுங் கூடற் றிருநகரில்” (146)
… ….. ….. …. – அடுகிலே
சங்கெடுப்பாய் சங்கெடுக்குஞ் சச்சிதானந்தர் (208-9)

என்பன போன்ற மடக்குகளும்,

“திருப்பா துகைக்குஞ் செழுங்கருடனுக்கும்
திருப்பா துகைக்குமர சீந்தோன்” (137)
“பாத கமலம் பரவுமல பரவுமல யத்துவசன்
பாத கமலம் பறித்திடுவோன் (141)

என்பவற்றில் யமகமும், 72-4, 142, 147, 222 – ஆம் கண்ணிகளில் திரிபும் அமைந்துள்ளன. சில இடங்களில் வகையுளி அமைந்திருக்கின்ற து (108,215).

தொகை முதலியன

ஏழு முதல் இரண்டு வரையில் உள்ள சில தொகைப் பொருள்கள் ஒவ்வொன்றிலும் கிளியின் பெயரை அமைத்துக் காட்டிய பகுதி (63-5) இன்பந் தருவதாகும். பூமிக்கும் திருமாலுக்கும் உள்ள தொடர்பு மிக அழகாக ஓரிடத்தில் தொகுத்துச் சொல்லப் பட்டுள்ளது (126-8)

‘கிளிப்பிள்ளை சொன்னதைச் சொல்லும்’ (46-7), ‘அவனசையாமல் அணுவசையாது’ (123), யானையுண்ட விளாம்பழம் (187-8) என்னும் பழமொழிகள் இதில் வந்துள்ளன.

சமற்காரம்

கிளியின் பெருமையைப் பல திறத்திற் பாராட்டிக் கூறவந்த இந்நூலாசிரியர் அதன் பெயரையும், இயல்பையும், புராண வரலாறுகளையும் வைத்துக்கொண்டு சமற்காரமாகப் பல பொருளமையும்படி அமைத்துக் காட்டுகின்றார். அரி, அவந்தி, கிள்ளை, கிளி, கிளிப்பிள்ளை, கீரம், சுகம், சுவாகதம், தத்தை, வன்னி என்னும் கிளியின் பெயர்களைச் சிலேடை வகையிலும் பிறவாறும் இவர் எடுத்தாளுவர்.

பிற பொருள்களைத் தூதுவிடுவதனாற் பயனில்லை என்று மறுக்கும் வாயிலாகச் சில தூதுப் பொருள்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றன. அவை வருமாறு : அன்னம் (33,199), காக்கை (204), குயில் (34,46,200), ‘தென்றல் (202), நாகண வாய்ப்புள் (38), புறா (36), மயில் (37), மேகம் (203), வண்டு (35, 46, 201)

புராண முதலிய நூற் செய்திகள்

திருமாலின் பெருமைகளைச் சொல்லுமிடங்களில் இராமாயணம், பாரதம் என்னும் இதிகாசச் செய்திகளும், பாகவதம் முதலிய மாபுராண வரலாறுகளும், இத்தலத்திற்குரிய புராணத்திற் கண்ட சிறப்புக்களும் எடுத்தாளப்படுகின்றன. ஓரிடத்தில் சீவக சிந்தாமணிச் செய்தியைக் காணலாம்.

வைணவ மரபு

நம்மாழ்வாரைக் காப்பிலே வாழ்த்தியிருத்தல் வைணவ மரபு ; கருடனைப் பெரிய திருவடிகள் என்றும் (22), திருமால் வாகனமாகிய குதிரையைக் குதிரை நம்பிரானென்றும் (152), ஆதிசேடனை அனந்தாழ்வான் என்றும் (166), பள்ளியறையைச் சேர்த்தி யென் றும் (230) வழங்குதல் அம்மரபைச் சார்ந்ததே.

பாண்டி நாட்டு வழக்கம்

‘உன்னுடைய சிறகுகள், இராமாவதாரத்தில், விபீடணன் இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டபோது, அங்கே கட்டிய புது மாவிலைத் தோரணமோ’ (59) என்பது ஒரு கண்ணியிற் கண்ட பொருள். ஒரு நிலத்தை மற்றொருவன் தனக்குரிய தாக்கும்போது அங்கே தோரணங்கட்டுதலும், அதனால் அச் செயலைத் தோரணம் வைத்தலென்று வழங்குதலும் பாண்டி நாட் டினர் வழக்கம். அவ்வழக்கத்தைப் பின்பற்றியே அவ்வாசிரியர் இங்கே இங்ஙனம் அமைத்தார்.

செய்யுள் நடை

இத்தூதின் செய்யுள் நடை பலவிதமாக அமைந்துள்ளது. மடக்கு, திரிபு, சிலேடை முதலியவை அமைந்த இடங்களிலே சற்றுக் கடினமாக இருப்பினும் மற்ற இடங்களில் தெளிவாகச் செல்வது. திருமாலினுடைய இயல்பைச் சொல்லும் இடங்கள், முக்கியமாக 75-ஆம் கண்ணி முதலிய சில கண்ணிகள் இந் நூலாசிரியர் உள்ளத்தே தீவிரமான பக்தியுணர்ச்சியோடு பாடப்பட்டிருக்கவேண்டும். உயர்ந்த உண்மைகளை ஆற்றலோடும், தெளிவாகவும் விளக்கும் அப்பகுதியிலே இவருடைய கவித்துவத்தின் சிறந்த அமைப்பைக் காணலாம். கிளியினைத் தூதுவிடுவதாக மேற்கொண்ட பிறகு, எந்த எந்த வகையாக வெல்லாம் அதைப் பாராட்ட முடியுமோ அந்த அந்த வகை யாகப் பாராட்டி யிருக்கின்றார். கல்வி, கேள்வி, அனுபவங்களிலே கிளியைப் பற்றி அறிந்தவற்றை யெல்லாம் எப்படியோ தொடுத்துக் கோத்திருக்கின்றார். கிளியைப் போலத் தூது செல்லுவதற்குரிய பொருள் வேறில்லை யென்று சொல்லுவதற்காக நிகண்டிலே கிளியின் பெயர்களாக உள்ள பதங்களும், புராண இதிகாசங்களும், சிலேடையணி முதலிய கருவிகளும், இவருக்குத் துணையாக நிற்கின்றன. கிளிதான் சகலமுமென்றவரைக்குங் கூட இவர் பாராட்டிப் பேசி விடுகிறாரெனின் வேறு என் செய்வது !

“…. ….. ….. …… – கண்ட
செகமுழுது நீஞான தீபமுநீயென்று
சுகமுனியே சொல்லாரோ”

என்று இவர் வினாவும் பொழுது ‘ஆம்” என்று விடையளிப் பதையன்றி வேறு வழியேது ; யுக்தியினால் சமற்காரமாகக் கிளிக்கு உயர்ந்த புகழைக்கூறிப் பாராட்டும் இடங்கள் இதிலே பல இருக்கின்றன. கிளியைப் பலர் தம் கையிலே பிடிப்பர்; இதே விஷயத்தைக் கிளிக்குப் பெருமை விளைவிக்கும் உருவத்திலே மாற்றி,

“பால் குடிக்கும் பச்சைக் குழந்தை நீ யானாலும்
கால் பிடிப்பார் கோடி பேர் கண்டாயே”

என்று அமைக்கும் இக்கவிஞருடைய சாமர்த்தியத்தை நாம் வியவாமல் இருப்பது எங்ஙனம்?

திருமாலுடைய பெருமையை மரபறிந்து புகழ்கின்றார். தலப் பெருமையையும், தசாங்கங்களையும், திருவிழா நடைபெறும் முறையையும் ஒழுங்காக உணர்த்துகின்றார். இந்தத் தலத்திலே உள்ள பல கைங்கர்யபரர்களின் பெயர்களை வரிசையாகத் தெரிவிக் கின்றார். அந்தப் பகுதியினால் கிளிக்காவது, தலைவிக்காவது, நமக்காவது பெரும் பயன் ஒன்றும் இல்லையென்றாலும் ஆசிரியர் தம் காலத்தில் இருந்த அவர்களைக் கிளியோடும் அழகரோடும் சேர்த்து அவர்கள் புகழையும் கல்லிற் பொறித்தது போல் தம் சொல்லிற் பொறித்திருக்கின்றார். இது புலவருடைய நன்றியறி வென்றோ, அம்மக்களுடைய பாக்கியமென்றோ இரண்டுமென்றோ சொல்வதிற் பிழை யாதும் இல்லை.

கணபதி துணை
திருமாலிருஞ் சோலைமலை அழகர் கிள்ளைவிடு தூது

காப்பு
(வெண்பா )
தெள்ளு தமிழழகர் சீபதிவாழ் வார்மீது
கிள்ளைவிடு தூது கிளத்தவே – பிள்ளைக்
குருகூரத் தானேசங் கூர்கமுகி லேறும்
குருகூரத் தானேசங் கூர்.

நூல்
கிளியின் பெருமை

கார்கொண்ட மேனிக் கடவுள் பெயர் கொண்டு 1
நீர்கொண்ட பாய னிறங்கொண்டு- சீர்கொண்ட
வையம் படைக்கு மதனையுமேற் கொண்டின்பம்
செய்யுங் கிளியரசே செப்பக்கேள் – வையமெலாம்
வேளாண்மை யென்னும் விளைவுக்கு நின்வார்த்தை
கேளா தவரார்காண் கிள்ளையே- நாளும்
மலைத்திடு மாரனொற்றை வண்டிலுமில் லாமற்
செலுத்திய காற் றேரை முழுத் தேராய்ப் – பெலத்திழுத்துக்
கொண்டுதிரி பச்சைக் குதிரா யுனக்கெதிரோ 5
பண்டுதிரி வெய்யோன் பரியேழும் – கண்ட


குறிப்புரை

காப்பு
அழகர் : திருமாலிருஞ் சோலைமலையில் எழுந்தருளியுள்ள திருமாலின் திருநாமம் ; இதன் வடமொழிப்பெயர் அலங்காரரென்பது. சீபதி – ஸ்ரீபதி ; அழகர்மலையின் திரு நாமங்களுள் ஒன்று. பிள்ளைக் குருகு – நாரைக்குஞ்சு. ஊர – தன்பின்னே ஊர்ந்து வருதலால். தானே சங்கு ஊர் கமுகில் ஏறும் : ஊர்கமுகு – மேற்பாகம் பரவியுள்ள கமுகு ; ஊர்தல் – பரத்தல். சங்கு ஏறுதற்கு இடமான. குருகூர் அத்தான் – ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளியுள்ள தலைவனே; அத்தான் – அத்தனே : விளி ; “நம்பான்” (தே.) என்பது போல. நேசம்கூர் – திருவருள் புரிவாயாக. கிளத்த நேசம் கூர் என இயைக்க.

நூல்

  1. கடவுள் – திருமால். பெயர் – அவருடைய திரு நாமமான அரி யென்பதை ; அரியென்பது கிளிக்கும் உரிய பெயர். பாயல் – அவருடைய படுக்கையான ஆலிலையின் நிறம் – பச்சை நிறம். (பி – ம்.) கடவுளினற் பேர்கொண்டு.
  2. வை அம்பு அடைக்கும் மதனையும் : மதனையும் – மன்மதனை யும். கிளி – மன்மதனுக்கு வாகனமாதலால், ‘மதனையுமேற் கொண்டு’ என்றார். வையம் படைக்கும் அதனையும் – புவியைப் படைக்கும் அத் தொழிலையுமென்று வேறொரு பொருளும் தோற்றுகின்றது. (பி- ம்.) செய்யும் பசுங்கிளியே.
  3. வேளாண்மை – மன்மதனுடைய ஆட்சி ; பயிர்களை விளைத்தல்; சிலேடை. வேளாண்மைத் தொழிலாகிய விளைச்சலென்பது மற்றொரு பொருள். (பி – ம்.) என்றும் விளைவுக்கு முன்.
  4. மலைத்திடும் – போர் செய்யும். மாரன் – மன்மதன். ஒற்றை வண்டில் – ஒரு சக்கரம் ; சக்கரம் வண்டிலெனவும் வழங்கும் (தேவை யுலா, 2006). கால்தேர் – தென்றற்காற்றாகிய தேர் ; காற்பங்கான தேரென்பது மற்றொரு பொருள். மாரன் செலுத்திய என இயைக்க. பெலத்து – பலம் கொண்டு.
  5. பச்சைக்குதிராய் – பச்சைக்குதிரையே ; என்றது சூரியன் தேரிலுள்ள ஏழு பச்சைக்குதிரைகளை நினைந்து. (பி – ம்.) பரியெல்லாம்.

4-5. ஒற்றைச் சக்கரத்தையுடைய சூரியன் தேரை இழுத்துச் செல் லும் ஏழு பச்சைக் குதிரைகளும் ஒரு சக்கரமும் இல்லாத தேரை இழுத் துச் செல்லும் பச்சைக் குதிரையாகிய உனக்கு ஒப்பாகமாட்டா.

செகமுழுது நீஞான தீபமுநீ யென்று
சுகமுனியே சொல்லாரோ சொல்லாய்-வகைவகையாய்
எவ்வண்ண மாய்ப்பறக்கு மெப்பறவை யாயினுமுன்
ஐவண்ணத் துள்ளே யடங்குமே – மெய்வண்ணம்
பார்க்கும் பொழுதிலுனைப் பார்ப்பதியென் பாரென்றோ
மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய் – நாக்குத்
தடுமாறு வோரையெல்லாந் தள்ளுவரே யுன்னை
விடுவா ரொருவருண்டோ விள்ளாய் – அடுபோர்
மறந்தரு சீவகனார் மங்கையரிற் றத்தை 10
சிறந்தது நின் பேர்படைத்த சீரே-பிறந்தவர்


  1. சுகமுனி – சுகமுனிவர் ; கிளிவடிவங்கொண்டிருந்த கிருதாசி யென்னும் தெய்வமகளிடம் வியாசருடைய கருணையால் அவதரித்தமை யின் இவர் இப்பெயர் பெற்றார். செக……… முனியே : சுகமுனிவர் பிறந்த பொழுதே துறவு பூண்டு பூமியில் நடந்து சென்றார். அவர் தந்தையான வியாசர், ‘குழந்தாய்’ என்று அவரை அழைப்ப எல்லாப் பொருளும் ஏனென்று கேட்டனவென்பர்;
    “பிறந்தபொழு தேதுறந்து பிறைக் குழவி போனடப்பப் பின் போய்த் தொன்னூல்,
    அறைந்தபுகழ் வியாத முனி யாதரத்தான் மதலாயென் றழைப்பச் செவ்வாய்,
    திறந்து நறை பொழியு மலர்ச் செழுந்தருவு மேனென்ன வுயிர்கள் யாவும்,
    நிறைந் துறையுஞ் சுகமுனிவ னிரையிதழ்த் தா மரைமலர்த்தா ணினை தல் செய்வாம்”
    (பாகவதம், காப்பு 3) என்பதனாலும் இவர் எங்கும் வியாபகமா யிருந்தனரென்பது விளங்கும். சுகமுனிவர் உன் வயிற்றிற் பிறந்தவர் ராதலால் புகழ்பெற்றார்.
  2. ஐவண்ணம் – ஐந்து நிறம் ; பஞ்சவர்ணக்கிளியென்று கிளியில் ஒரு சாதியுண்டு.
  3. பார்வதியென்று யாரும் உன்னை நினையாதபடி முற்றும் பசுமை யாயுள்ள தன்மை நீங்கி மூக்குமட்டும் சிவந்தாயென்றபடி ; இதனால் உன்னுடைய அடக்கம் வெளிப்படுகின்றது. பார்வதிதேவியார் பச்சை நிறமுடையவர். (பி – ம்.) பொழுதிற் பசுங்கிளி.
  4. உன்னை – குழறிப்பேசுகின்ற உன்னை விடுவார் – தள்ளுபவர்.
  5. சீவகனார் – சிந்தாமணி யென்னும் காப்பியத்தலைவன். ததீதை – காந்தருவதத்தை; சீவகனுடைய பட்டத்தேவியருள் முதல்வி ; இவள் பெயர் தத்தை யென்றும் வழங்கும்.

(பி – ம்.) பிறந்தவருள், பறந்து வரும்.

ஆரும் பறவைகளுக் கச்சுதன்பே ருஞ்சிவன்றன்
பேரும் பகர்ந்தார் பிழையன்றோ – நேர்பெறுவி
வேகி யொருகூடு விட்டு மறு கூடடையும்
யோகி யுனக்குவமை யுண்டோகாண் – நீகிரம்
ஆகையாலாடை யுனக்குண்டே பாடகமும்
நீ கொள்வாய் காலாழி நீங்காயே- ஏகாத
கற்புடையாய் நீயென்றாற் காமனையுஞ் சேர்வாயே
அற்புடைய பெண்கொடிநீ யாகாயோ- பொற்புடையோர்
துன்னியசா யுச்யஞ் சுகரூப மாகையால் 15
அன்னது நின்சொருப் மல்லவோ-வன்னி
பரிசித்த வெல்லாம் பரிசுத்த மென்றோ
உருசித்த வுன்னெச்சி லுண்பார்- துரிசற்றோர்


  1. அச்சுதன்பேர் அரங்கனென்பது. சிவன் தன்பேர் சொக்க னென்பது. கிளி ரங்கரங்கா வென்று கூறுதல் வெளிப்படை. சொக்கர் பெயரைக் கூறுதல்,
    “புழுகுநெய்ச் சொக்க ரபிடேகச் சொக்கர்கர்ப் பூரச் சொக்கர்,
    அழகிய சொக்கர் கடம்ப வனச்சொக்க ரங்கயற்கண்,
    தழுவிய சங்கத் தமிழ்ச்சொக்க ரென்றென்று சந்தத நீ,
    பழகிய சொற்குப் பயன் றேர்ந்து வாவிங்கென் பைங்கிளியே” (மதுரைக். 54)
    என்பதனால் விளங்கும். பகர்ந்தால் – கற்பித்தால். பிழை – தகுதியில்லார்க்குக் கற் பித்தல். அச்சுதன்பேரையும் சிவன்பேரையும் நீ பிழையில்லாமற் கூறுகின்றாய். மற்றப் பறவைகளுக்குக் கற்பித்தால் அவை பிழைபடக் கூறும் ; அங்ஙனம் கற்பித்தல் பிழை. நேர் – நேர்மை . (பி – ம்.) பேரும் படைத்தாற் பிழையாரோ .
  2. கூடு – உடம்பு, பறவைக் கூடு. ஒருகூடு விட்டு மறுகூட்டை அடையும் யோகி உனக்கு உவமை ஆகான்; அவன் தான் இருக்கும் உடம்பை விட்டு அரூபியாகி வேறோர் உடம்பிற் புகுவான் ; நீ உடம் போடு வேறு கூட்டை அடைவாய் ;
    “கிட்டுநெறி யோகியருங் கிள்ளை களுந் தங்கூடு,
    விட்டுமறு கூடடையும் வேங்கடமே” (திருவேங்கட மாலை, 73).
    கீரம் – கிளி, பால் ; சிலேடை.
    11-2. விவேகி – விவேகியாகிய ஒருவன்.
  3. ஆடை-பாலின் ஆடை ; இங்கே சட்டை. பாடகம்- ஓராபரணம். காலாழி – ஒருவகை அணி ; இது பீலியென்னும் ஆபரணத்தோடு சேர்த்து வழங்கப்படும். கிளிக்குச் சட்டை போடுதலும், கால்விரல்களில் மோதி ரம் போடுதலும் உண்டு. ஏகாத – நீங்காத.
  4. கற்புடையாய் – கல்லின் பக்கத்தே யுள்ளாய், கற்பை யுடையாய்; சிலேடை. நீ கற்புடையா யென்றால். காமனை – மன்மதனை, காவாகிய மனையை; கா – சோலை ; சிலேடை.
    13-4. கிளியையும் பெண்ணென்று கூறுதற்குரிய காரணங்கள் சிலேடை வகையாற் கூறப்பட்டன.
    15-6. சுகரூபம் – இன்பரூபம். வன்னி – கிளி , நெருப்பு. உன் எச்சில் – உன்னுடைய உச்சிட்டத்தை. கிளி கடித்த பழம் சிறந்தது ;
    “சுழித்து நல்ல தொழுகியஞ் சுகமுகஞ் சேர்ந்து,
    தழைத்த நான் மறைத் தடஞ்சினைக் கற்பகத் தருவிற்,
    பழுத்து திர்ந்தது பரமபாகவத மென் றிசைக்கும்,
    விழுப்பெ ருங்கனி நுகர்ச்சியே விரும்புவார் மேலோர் ” (பாகவதம், காப்பு. 4).
    வன்னியென்னும் பெயர், “அச்ச, மனப் பேதையார் மால் வனஞ்சுடவோ வன்னி, எனப்பேர் படைத்தா யியம்பாய்” (49 – 50) என்று பின்னும் சிலேடையில் அமைக்கப்பட் டுள்ளது.

(பி – ம்.) பரிசுத்த மெல்லாம், அரிசித்த ருன்னெச்சி லார்வார் ; உரிசித்து நின்னெச்சில்.

இன்சொல்லைக் கற்பா ரெவர் சொல்லு நீகற்பாய்
உன்சொல்லைக் கற்கவல்லா ருண்டோகாண்- நின்போலத்
தள்ளரிய யோகங்கள் சாதியா தேபச்சைப்
பிள்ளையாய் வாழும் பெரியோரார்-உள்ளுணர்ந்த
மாலினைப் போல மகிதலத்தோர் வாட்டமறப்
பாலனத் தாலே பசிதீர்ப்பாய்-மேலினத்தோர்
நட்டா ரெனினு நடந்துவரும் பூசைதனை 20
விட்டார் முகத்தில் விழித்திடாய் – வெட்டுமிரு

வாளனைய கண்ணார் வளர்க்கவளர் வாயுறவில்
லாளனை நீ கண்டா லகன்றிடுவாய்-கேளாய்
இருவடிவு கொண்டமையா லெங்கள் பெரிய
திருவடிகள் வீறெல்லாஞ் சேர்வாய் – குருவாய்ச்
செபதே சிகர்க்கெல்லாந் தென்னரங்கர் நாமம்
உபதேச மாக வுரைப்பாய் – இபமுலையார்
சித்தங் களிகூரச் செவ்விதழி லாடவர்போல்
முத்தங் கொடுக்க முகங்கோணாய் – நித்தமவர்
செவ்விதழுன் மூக்காற் சிவந்ததோ வுன் மூக்கில் 25
அவ்விதழின் சிவப்புண் டானதோ – செவ்வியிழந்


  1. உண்டோ : இல்லையென்றபடி . (பி – ம்.) உன் சொற்கற் பாரொருவ ருண்டோகாண்.
  2. யோகங்கள் – மருந்துகள், யோகாப்பியாசங்கள். பச்சைப் பிள்ளையாய் – இளம்பிள்ளையாகி. இளம்பிள்ளையைப் பச்சைப் பிள்ளை யென்பது வழக்கு. எப்போதும் இளம்பிள்ளையாயிருத்தற்கு யோகம் இன்றியமையாதது. உள் உணர்ந்த – அறிஞர்கள் உள்ளத்தால் உண ரப்பட்ட. (பி – ம்.) உள்ளுணர்ந்து .
  3. பாலனம் : திருமாலுக்குப் பரிபாலனத்தொழிலென்றும் கிளிக்குப் பாற்சோறென்றும் கொள்க. (பி – ம்.) மேலினத்து.
  4. நட்டார் – நண்பர். பூசைதனை விட்டார் – பூனையை உன்மேல் விட்டவர், பூஜையைச் செய்யாது விட்டவர்.
  5. உறவில்லாளனை – மிக வில்லையாள்கின்ற வேடனை, உறவு இல்லாதவனை ; சிலேடை.
  6. இருவடிவு : கருடனுக்குப் புருஷ வடிவமும் பறவை வடிவ மும்; கிளிக்குப் பச்சை வடிவமும் சிவப்பு வடிவமும். பெரிய திருவடி கள்-கருடன்; “வயங்கு மீருரு வண்ண க் கலுழன்” (தக்க. 286.) வீறு – வேறொன்றற்கில்லாத பெருமை. “மெய்யின், வடிவம் வளைந்த மணி மூக்கு மாயன், கொடியிலிருப்பவர் தங் கூறோ ” என்பர் பின் ; 56-7.
  7. செபதேசிகர் – ஜபஞ்செய்தலையுடைய குருமார். உரைப்பது : ரங்க ரங்காவென்பது. இபம் – யானை ; இங்கே அதன் கொம்பு அல்லது மத்தகம்.
  8. இதழ் – கீழுதடு. ஆடவர்போல் – கணவரைப்போல. முத்தங் கொடுத்தல் ஆடவர் தொழில். அவர் – அம்மகளிருடைய. (பி-ம்.) செவ்வி தழ் நின்; செவ்வியழியாதவர் போல்.

25. (பி – ம்.) அவ்வித ழிற்சிவப்புண் டானதோ – செவ்வியாம்.

தண்டருக்குந் தோற்றா னடல் வேளா னானை நீ
கொண்டிழுத்தா லாகுங் குறையுண்டோ – உண்டடக்கி
ஆயுவை நீட்ட வருந்தவத்தோர் பூரகஞ்செய்
வாயுவையுன் பின்னே வரவழைப்பாய்- தேயசொளிர்
மைப்பிடிக்கும் வேற்கண் மலர்மா துஞ் சங்கரியும்
கைப்பிடிக்க நீவங் கணம் பிடித்தாய் – மெய்ப்பிடிக்கும்
பச்சைநிற மச்சுதற்கும் பார்ப்பதிக்கு முன்றனக்கும்
இச்சை பெற வந்தவித மெந்தவிதம் – மெச்சும்
குருகேயுன் னாக்குத்தான் கூழை நாக் கான 30
தரிகீர்த் தனத்தினா லன்றோ – தெரிவையர்கள்

ஆர்த்தவிர லுன்முகமொப் பாகையா லேகையைப்
பார்த்து முகமதனைப் பாரென்பார் – சீர்த்திக்
கிரியையிலே காணுங்காற் கிள்ளை யடையாத
பெரியதனம் வீணன்றோ பேசாய் தெரியுங்காற்


  1. தோற்றான் – தோல்வியுற்றவன், கண்ணுக்குப் புலப்படாத வன். அடல் வேள் ஆனானை – தோற்றானாகி அவர்களை அடுதலையுடைய மன்மதனை. தோல்வியுற்றவனை நீ இழுத்தும் குறையில்லாயென்றபடி. (பி – ம்.) ஆர்க்குங் குறை.
  2. ஆயுவை – ஆயுளை. பூரகம் – காற்றை உள்ளே நிரப்புதல். தென்றலென்னும் தேரை இழுக்கும் குதிரையாய் முன்னே செல்லுதல் பற்றி, ‘வாயுவையுன் பின்னே வரவழைப்பாய்’ என்றார் ; வாயு – தென்ற லாகிய தேர். தேயசு – ஒளி. (பி – ம்.) தேயு வொளிர்.
  3. மலர் மாது – திருமகள். திருமகள் கையில் கிளியுண்மை , “பின்னைத்தாய் கையிலுறை பெண்டத்தாய்”, “நாச்சியார், பங்கிருந் தாற் கையிற் பறந்திருப்பாய்” (65, 205) என்பவற்றாலும், உமாதேவியாரின் கையிலுண்மை, “களங்கனி யென்றுமை கைக்கிளி பார்க்குங் கறைக் கண்டனே” (காசிக். 61) என்பதனாலும் விளங்கும். வங்கணம் – நட்பு ; “நேசமிலா, வங்கணத்தி னன்று வலிய பகை 17 (தனிப்.)
  4. கீர்த்தனம் – இறைவன் பெயரை இசையோடு சார்த்திச் சொல்லுதல் (204 – 5).
    (பி – ம்.) குருவி நின்னாக்கு.
  5. தூங்கியெழுந்தவுடன் மகளிர் தம் கைவிரலைப் பார்த்துப் பின்பு கண்ணாடியில் முகத்தைப் பார்க்கவேண்டுமென்பது பண்டை மரபு ; இங்ஙனம் கூறுதற்குக் காரணம் அவர்களுடைய கைவிரலின் நகம் உன் மூக்கை ஒத்திருத்தலே.
    (பி – ம்.) பார்த்து முகத்தைப்பாரென் பார் பெரியோர்.

32. கிள்ளை – கிள்ளுதலை, கிளியை. பெரிய தனம் – பெருத்த நகில், பெருஞ்செல்வம்.

றேறுகனி காவேரி சிந்துகோ தாவிரியும்
வீறுபெறு மே நீ விரும்பினாற்-கூறிலனம்
உன்னுடைய வூணன்றோ வூதப் பறந்து போம்
சின்னவடி வன்றோ செழுங்குயிலும் – என்னே
முதுவண் டினந்தான் முடிச்சவிழ்த் தாலும் 35
மதுவுண்டாற் பின்னைவா யுண்டோ -எதிரும்
கரும்புறா வார்த்தை கசப்பென்று சொல்ல
வரும் புறா வுக்கு மொரு வாயோ- விரும்புமயில்
உற்ற பிணிமுகமே யுன்போற் சுகரூபம்
பெற்ற பறவை பிறவுண்டோ – கற்றறியும்
கல்வியுங் கேள்வியுநீ கைக்கொண்டாய் சாரிகைக்குன்
செல்வமதி லள்ளித் தெளித்தாயோ- சொல்வேத
மென்பரிநா லுக்கும் விதிசாரதிவில் வேள் –
தன்பரி யேயுனக்குச் சாரதியார்-வன்போரில்
மேவுஞ் சிவன்விழியால் வேள் கருகி நாண்கருகிக் 40
கூவும் பெரிய குயில்கருகிப் -பாவம்போல்


  1. தேறப்பட்ட பழங்களானவை காவிலுள்ள தேனைச் சிந்துகின்ற சக்கையாகக் கெடும் ; நீ விரும்பினால் அக்கனிகள் வீறுபெறும் ; வீறுபெறுதலாவது கிளி கோதின பழமென்று எல்லாராலும் விரும்பி யுண்ணப்படுதல் : 16, பார்க்க. அனம் – சோறு, அன்னப்பறவை.
    இக்கண்ணியில் கன்னி, காவேரி, சிந்து, கோதாவிரி யென்னும் நதிப் பெயர்கள் தோற்றுகின்றன. கனி – தொகுத்தல்.
  2. ஊதுதற்குப் பறந்து செல்லும் சின்னமாகிய வாத்திய வடிவு; ஊதியவளவிற் பறந்துபோம் சிறிய வடிவு. குயில் மன்மதனுக்குச் சின்னமென்னும் வாத்தியமென்பது இங்கே அறிதற்பாலது.
  3. முடிச்சவிழ்த்தல் – பேரரும்பின் இதழ்க்கட்டை அவிழ்த்தல், இரகசியத்தை விரித்துச் சொல்லுதல். வாயுண்டோ வென்பது குழறு மென்றபடி (45 – 6).
    (பி – ம்.) முடிசேவியாமுன், முடி சேவித்தாலும்.
  4. கரும்புறா- கரும்பின் சுவையுறாத, கரிய புறாவென்னும் பறவை. புறா தூது விடுவனவற்றுள் ஒன்றென்பது மலையாள பாஷையிலுள்ள கபோத சந்தேச மென்னும் நூலால் அறியப்படுகின்றது (கபோதம் – புறா ; சந்தேசம் – தூது);
    “நன்புறவைத் தூண்டினது நாளுந்தூ துண்டொ ழிக்கும்,
    என்புறத்துத் தூதாக வெண்ணுமே” (கச்சியானந்த. வண்டு. 337)
  5. பிணிமுகமென்பது மயிலின் பெயர் ; நோயோடு கூடிய முக மென்பது மற்றொரு பொருள்.
  6. சாரிகை – நாகணவாய்ப்புள். செல்வமதில் அள்ளி – உன்னு டைய செல்வத்திற் சிறிய பாகத்தை அள்ளி. நாகணவாய்ப்புள் பேசும் வன்மை சிறிதே பெற்றதென்னும் கருத்தை உட்கொண்டு இங்ஙனம் கூறினார். (பி – ம்.) தெறித்தாயோ.
    38 – 9. வேத மென் பரி – வேதமாகிய மெல்லிய குதிரை ; வேதமென் னும் பரியுமாம்.
    விதி – பிரமன். (பி – ம்.) பரியா முனக்குச் சாரதியார்.

40. வேள் கருகி – நெற்றிக் கண்ணின் தீயால் மன்மதன் சாம்ப ராகி ; கருநிறத்தை அடைந்தென்பது மற்றொரு பொருள். மன்மதன் கரிய நிற முடையவன்; “ஆழி யுடையான் மகன் மாயன் ” (தண்டி. 48, மேற் ). நாண் – வண்டு. கூவும் – சின்னமாக இருந்து கூவுகின்ற. இயற்கைகள் செயற்கையாகக் கூறப்பட்டன.

நின்று மறுப்படுநா ணீதா னடுப்படையிற் 41
சென்று மறுப்படா தேவந்தாய் – என்றுமாக்
காய்க்குங் கனியல்லாற் காய்பூவென் றானாக்கு
மூக்கு மறுப்பாய் முகம்பாராய்-ஆக்கம்
வரையாம னன்மை வரத்தினை நல்கும்
அரிதாளை நீவிட் டகலாய் – இருகை
உனக்கில்லை யுன்சிறகி ரண்டுமெனக் கில்லை
எனக்குமுனக் கும் பேத மீதே-மனைக்குள்
இதமாய் மனிதருட னே பழகு வாயன் 45
பதனான் முறையிட் டழைப்பாய் – மதுவுண்
டளிப்பிள்ளை வாய் குழறு மாம்பரத்தி லேறிக்
களிப்பிள்ளைப் பூங்குயிலும் கத்தும் – கிளிப்பிள்ளை
சொன்னத்தைச் சொல்லுமென்று சொல்லப் பெயர் கொண்டாய்
பின்னத்தைப் போலுமொரு பேறுண்டோ – அன்னமின்றிப்
பால்குடிக்கும் பச்சைக் குழந்தை நீ யானாலும்
கால்பிடிப்பார் கோடி பேர் கண்டாயே-மால்பிடித்தோர் 49
கைச்சிலைவே ளால் வருந்துங் காமநோய் தீர்ப்பதற்கோ


  1. மறுப்படு நாள் – தோல்வியுற்ற காலத்தில், சாம்பராகி மறுப் பட்ட காலத்தில் மறுப்படாதே வந்தாயென்றது, பச்சை நிறத்தோடி ருத்தலை நினைந்து.
    41-2. நாக்கு மூக்கு மறுப்பாய் – நாக்கையும் மூக்கையும் கொண்டு முறையே சுவைத்தலையும் மோத்தலையும் செய்ய மறுப்பாய் ; அறுப்பா யென்று பிரித்து, சொன்னவருடைய நாக்கையும் மூக்கையும் அறுப்பா யென்று வேறொரு பொருள் கொள்க. ஆக்கம் – செல்வம்.
    43-4. நன்மை வரத்தினை நல்கும் – நல்ல கரிய மேன்மையான தினையைக் கொடுக்கும், நல்ல வரத்தைக் கொடுக்கும் ; கருந்தினை யென்று ஒரு சாதியுண்டு. அரிதாளை – தினையின் அரிந்த தாளை , திரு மாலின் பாதங்களை ; “அரிதாள் , மறவாத பாக வதனே” (மான்விடு தூது, 45) என்று பிறரும் இதனைச் சிலேடையில் அமைத்துள்ளனர்.
  2. முறையிட்டு – முறைப்பெயரிட்டு ; அப்பா, அம்மா, அக்கா என்பன முதலியன.
  3. அளிப்பிள்ளை – இளைய வண்டு. ஆம்பரம் – மாமரம். பிள்ளைப் பூங்குயிலும் – பிள்ளையாகிய குயிலும் ; குயிலுக்கு மாமரம் உரியது. (பி – ம்.) களிப்புள்ள பூங்குயிலும்.
  4. சொன்னத்தை – சொல்லியதை, தங்கத்தை. அத்தைப் போலும் – அதனைப்போலும். அன்னம் இன்றி – அன்னம் இல்லாமல்.
    (பி – ம்.) சொன்னதை, அன்னதை ; அன்னமன்றிப். 48. பச்சைக் குழந்தை – இளங்குழந்தை. கால்பிடித்தல் – கிளியின் . கால் தம் கையிற்படும்படி வைத்துக் கொண்டிருத்தல்.
  5. நோயைத் தீர்ப்பதற்குரிய மருந்துகளுள் பச்சிலை ஒன்று.

(பி – ம்.) தீர்ப்பதற்கோர், தீர்ப்பதற்குப் .

பச்சிலை ரூபம் படைத்திருந்தாய் – அச்ச 50
மனப்பேதை யார்மால் வனஞ்சுடவோ வன்னி
எனப்பேர் படைத்தா யியம்பாய்- அனத்தை
நிலவோவென் பார்க ணெடுந்துயர்வே முத்தைக்
கொலவோ வரிவடிவங் கொண்டாய் – சிலைநுதலார்
கொள்ளை விரகக் கொடும்படையை வெல்லவோ
கிள்ளை வடிவெடுத்தாய் கிற்பாய் நீ-உள்ளம்
மிகவுடை மாதர் விதனங் கெடவோ
சுகவடிவு நீ கொண்டாய் சொல்லாய் – தகவுடைய
தத்தை யடைந்தவரே தத்தையடை யாரென்னும்
வித்தையடைந் தாயுனையார் மெச்சவல்லார் – முத்தமிழோர்
மாரதி பாரதியார்க் குன்னையுவ மானிப்பார் 55
ஆரதிக மார் தாழ் வறைந்திடாய்-ஊரறிய


  1. மால்வனம் – காம மயக்கமாகிய காட்டை. வன்னி – கிளி, நெருப்பு. அனத்தை – அன்னப்பறவையை, சோற்றை.
    50-51. அன்னப்பறவையையும் மயக்கத்தால் நிலவென்று அஞ்சும் மகளிர். “தலைவரைப் பிரிந்த மகளிர் நிலவைக் கண்டு வருந்துவராதலின் வெண்மையான பிற பொருள்களையும் கண்டு அஞ்சுவாராயினர்.
  2. கிள்ளை – குதிரை, கிளி. கிற்பாய் – வன்மையுடையாய். (பி – ம்.) கிர்ச்சிப்பாய், கிற்கிற்பாய்.
  3. உடைமாதர் – உடைந்த மகளிர். சுகவடிவு – கிளியாகிய வடிவு, இன்பவடிவு.
  4. தத்தை – கிளியை, ஆபத்தை. (பி-ம்.) தத்தையடையென்று.

55. மா ரதி – திருமகளுக்கும் ரதிதேவிக்கும். பாரதியார்க்கு – கலைமகளுக்கு. உவமை உயர்ந்ததென்பது கருத்து ; ” உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை ” (தொல். உவம். 3)

நெய்யிற்கை யிட்டாலு நீதான் பசுமையென்றே
கையிட்டுச் சுத்தீ கரிக்கலாம்-மெய்யின்
வடிவும் வளைந்த மணிமூக்கு மாயன்
கொடியி லிருப்பவர்தங் கூறோ-நெடியமால்
விண்டுதறித் தூது வேணுகா னத்தினிலே
பண்டு தழைத்த பசுந்தழையோ- கொண்ட சிற
கல்லிலங்கு மெய்யானை யன்றழித்து வீடணன் போய்த்
தொல்லிலங்கை கட்டுபுதுத் தோரணமோ நல்வாய்
மழலை மொழிதான் மணிவண்ணன் செங்கைக் 60
குழலி னிசைதானோ கூறாய்- அழகுக்
கிளிப்பிள்ளாய் தெள்ளமுதக் கிள்ளாய் நலங்குக்
குளிப்பிள்ளா யின்பரசக் குஞ்சே – வளிப்பிள்ளை
தன்னைத்தாய் போலெடுத்துச் சஞ்சரிக்குஞ் சம்பத்தாய்
பின்னைத்தாய் கையிலுறை பெண்டத் தாய்-பொன்னொத்தாய்
முத்தி நக ரேழிலொன்றே முத்தமிழ்வல் லாறிலொன்றாய்
ஒத்ததனித் தவ்வரிப்பே ருற்றதொன்றே –சுத்தமுறும்


  1. பசுமையென்றது கிளிப்பச்சை யென்ற ஒருவகை ரத்தினத்தை நினைந்து. கையிட்டு – கையைச் செலுத்தி, கையறைந்து.
  2. கொடியிலிருப்பவர் – கருடாழ்வார்.
  3. விண்டு – மூங்கிலை. தறித்து – வெட்டி. வேணு – புல்லாங்குழல். சிறகு, தழைத்த பசுந்தழையோ. சிறகு : இடைநிலைத் தீவகம். (பி – ம்.) தனித் தூதும்.
  4. மெய்யான் – இராவணன். கிளி தோரணத்திற்கு உவமை ; “மாடத்துப் பறக்குமொண் கிளியொ ழுங்கின், இலைசெரு கியப சும்பூந் தோரண மிசைய வார்த்தார் ” (பிரபு. சூனிய. இருந்த. 9) (பி – ம்.) 58-9, கொண்டனிருத்தல் விலங்கு.
  5. மணிவண்ணன் – நீலமணி போன்ற நிறத்தையுடைய கண்ண பிரான்.
  6. நலங்கு குளிப்பிள்ளாய் – நலங்கு குளித்தலையுடைய பிள்ளாய்; “நலங் காட்டுவேன் பட்டாடை யாற்றுடைப்பேன்” என்பர் பின் ; 195. வளிப்பிள்ளை – தென்றற்காற்று.
    (பி – ம்.) கிள்ளாய் நலுங்கு ; குளிப்புள்ளாய்.
  7. தாய்போலெடுத்துச் சஞ்சரிக்குமென்றது குதிரையாக இருந்து வளிப்பிள்ளையைத் தாங்கிச் செல்லுதலை நினைந்து. பின்னைத்தாய் – திரு மகள் ; நப்பின்னையுமாம். பொன் – கிளிச்சிறையென்னும் பொன். (பி – ம்.) பேதைத்தாய்.

63. முத்தி நகர் ஏழில் ஒன்று அவந்தி. வல்லாறில் – வல்லெழுத்து ஆறில் ; தவ்வரிப்பேர் உற்றது ஒன்று : தத்தை. அவந்தி யென்பதும் தத்தை யென்பதும் கிளியின் பெயர்கள்.

ஐந்து பூதத்திலொன்றே யானபடை நான்கிலொன்றே
முந்து முத லானபொருள் மூன்றிலொன்றே- வந்த
இருபயனி லொன்றே யிமையே விழியே 65
பருவ விழியிலுறை பாவாய் – ஒருநாரில்
ஏற்றுந் திருமாலை யெய்தப்போ யூரெல்லாம்
தூற்றுமலர் கொண்ட கதை சொல்லக்கேள் – தோற்றி

அழகர் சிறப்பு
அரிவடிவு மாய்ப்பின் னரன்வடிவு மாகிப்
பெரியதொரு தூணிற் பிறந்து-கரிய
வரைத்தடந் தோளவுணன் வன்காயங் கூட்டி
அரைத்திடுஞ் சேனை யருந்தி – உருத்திரனாய்ப்
பண்ணுந் தொழிலைப் பகைத்து நிலக் காப்புமணிந்
துண்ணும் படியெல்லா முண்டருளி-வெண்ணெயுடன்
பூதனை தந்த பால் போதாம் லேபசித்து 70
வேதனையும் பெற்று வெளிநின்று-பாதவத்தைத்


  1. ஐந்து பூதத்தில் ஒன்று : வன்னி (நெருப்பு). படை நான்கிலொன்று : குதிரை. குதிரைக்குக் கிள்ளையென்று ஒரு பெயர் உண்டு. முதலான பொருள் மூன்றில் – திரிமூர்த்திகளில் ஒன்று என்றது அரி யென்னும் பெயரை. வன்னி, கிள்ளை, அரியென்பன கிளியின் பெயர்கள்.
  2. இருபயன் – சுகம், துக்கம் ; ஒன்று : சுகம் ; அது கிளிக்கும் பெயர். நார் – அன்பு, பூத்தொடுக்கும் நார். (பி – ம்.) இமையாவிழியே.
  3. திருமாலை- அழகரை, அழகிய மாலையை. அலர் – பூ. பழிமொழி.
    65-6. ஒரு நாளில் தொடுத்த பூமாலையை அடையப்போய் மலரை மாத்திரம் கொண்டேனென்பது வேறு பொருள்.
  4. அரி – சிங்கம். அரன் – சிவன். நரன்வடிவுமாகியெனப் பிரித்து, நரனென்னும் அவதாரம் செய்தென்று கொள்ளுதலுமாம். இக்கண்ணி நரசிங்காவதாரத்தைச் சுட்டியது.
  5. அவுணன் – இரணியன். காயம் – உடம்பு, உணவுப் பொரு ளோடு சேர்க்கும் பலவகைப் பொடி ; இது மசாலையென வழங்கும் ; “உப்பொடு நெய்பா றயிர்காயம் பெய்தடினும் ” (நாலடி. 116). சேனைசைனியத்தை, சேனைக்கிழங்கை. உருத்திரனாய் – நிலைபெற்ற வடிவை யுடையவனாகி, உருத்திரனென்னும் கடவுளாகி.
    (பி – ம்.) சேநெயருந்தி.
  6. பண்ணும் தொழில் – காத்தற்றொழில். நிலக்காப்பு – மண்ணைக் குழைத்திட்ட பொட்டு, நிலத்தைக் காத்தல். குழந்தைகளுக்கு மண் பொட்டிடுதல் மரபு ; “மண்பொட் டணிந்து நீறிட்டு ” (பிரபு. மாயை யுற்பத்தி. 46). உண்ணும் உலகங்களை யெல்லாம் உண்டு; படி – உலகம், படியால் அளக்கப்படும் அரிசியால் ஆகிய பிரசாதம் ; “குளப்படி நெய் யடிசிற் கொத்ததோ” (திருவரங்கத். 89)

70. வேதனை – துன்பத்தை, பிரமதேவனை. பாதவத்தை மரங்களை.

தள்ளுநடை யிட்டுத் தவழ்ந்து விளையாடும் 71
பிள்ளைமை நீங்காத பெற்றியான்-ஒள்ளிழையார்
கொல்லைப்பெண் ணைக்குதிரை யாக்குந் திருப்புயத்தான்
கல்லைப்பெண் ணாக்குமலர்க் காலினான்-சொல்கவிக்குப்
பார முதுகடைந்த பாயலான் விண்ணவர்க்கா
ஆர முதுகடைந்த வங்கையான்- நாரியுடன்
வன்கா னகங்கடந்த வாட்டத்தான் வேட்டுவற்கு
மென்கா னகங்கடந்த வீட்டினான் – என் காதல்
வெள்ளத் தமிழ்ந்தினோன் வேலைக்கு மேன் மிதந்தோன் 75
உள்ளத்துள் ளானுலகுக் குப்பாலான் – தெள்ளிதின்
வெட்ட வெறுவெளியி லேநின்றுந் தோற்றாதான்
கிட்ட விருந்துங் கிடையாதான்- தட்டாதென்
எண்ணிலே மாய னெனும்பேரி னாலொளிப்போன்
கண்ண னெனும் பெயராற் காண்பிப்போன்- எண்ணுங்கால்


  1. ஒள்ளிழையார் – ஒள்ளிய ஆபரணத்தை யணிந்த மகளிர் .
  2. கொல்லையிலுள்ள பனைமரத்தாலாகிய குதிரையாக்குதற்குக் காரணமான ; மகளிர் மடலேறுதல், திவ்யப்பிரபந்தத்திலுள்ள பெரிய திருமடல் முதலியவற்றால் அறியப்படும். புயவழகைக் கண்டு மகளிர் மடலேறுவாரென்பது கருத்து. பெண் -‘அகலிகை. கவிக்கு – திருமழிசை யாழ்வார் மாணாக்கரான கணிகண்ணர் பொருட்டு.
  3. முதுகு அடைந்த பாயலான் : அரவப், பாயலைத் தோளில் எடுத்துத் தூக்கிக் கணிகண்ணர்க்குப் பின்னே சென்றாரென்னும் பழைய வரலாறு இங்கே அறியத்தக்கது ; ‘பணிகொண்ட முடவுப் படப்பாய்ச் சுருட்டுப் பணைத்தோ ளெருத்தலைப்பப், பழமறைகண் முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டலே ” (மீனாட்சி. பிள்ளைத். காப்பு. 1). ஆர் அமுதுகடைந்த – அரிய அமுதத் தைக் கடைந்த; “கடல் கடைந் தமுதங் கொண்ட, அண்ணலை” (திருவாய். 3. 4: 9). நாரியுடன் – சீதாபிராட்டியோடு.
  4. வன் கானகம் கடந்த – வலிய தண்டகாரணியத்தைக் கடந்து சென்ற. வேட்டுவற்கு – சரனென்னும் வேடனுக்கு. மென் கால் நகங்கள் தந்த – மெல்லிய கால் நகங்களைத் தந்த. கண்ணபிரானுடைய காலை மானாக நினைந்து சரத்தை எய்து, பின் கண்ணபிரானது பாதமென்று அறிந்து வருந்திய அவனுக்கு வீட்டையும் அளித்தனரென்பதை வீட்டினா னென்பதனால் உடம்படு புணர்த்தினார் ; இந்த வரலாறு பாகவதம், 11-ஆம் கந்தம் தன்னுடைச் சோதிக்கெழுந்தருளிய அத்தியாயம், 28-ஆம் செய்யுள் முதலியவற்றால் அறியப்படும்.
  5. முதலடியில் முரண் அமைந்துள்ளது.

77. மாயன் – கரிய நிறமுடையவன், மாயையை யுடையவன். கண்ணன் – எல்லார் கண்ணிலும் உள்ளவன்; ” வீதிவாய்ச் செல்கின்றான்போல் விழித்திமை யாது நின்ற, மாதரார் கண்க ளூடே வாவுமான் றேரிற் செல்வான், யாதினு முயர்ந்தோர் தன்னை யாவர்க்குங் கண்ண னென்றே, ஒதிய பெயர்க்குத் தானே யுறுபொரு ளுணர்த்தி விட்டான்” (கம்ப. உலாவியற். 6) என்பதிலும் இச்சொல் இப்பொருளில் அமைக்கப் பட்டுள்ளது. (பி – ம்.) நண்ணுங்கால்.

எங்கு மிலாதிருந்தே யெங்கு நிறைந்திருப்போன்
எங்கு நிறைந்திருந்தே யெங்குமிலான் – அங்கறியும்
என்னை யெனக்கொளத்தி யானென்றுங் காணாத
தன்னை யெனக்கருளுந் தம்பிரான்-முன்னைவினை
கொன்று மலமாயைக் கூட்டங் குலைத்தென்னை 80
என்றுந் தனியே யிருத்துவோன்- துன்றுபிர
மாவுநான் மன்னுயிரு நானவ் விருவரையும்
ஏவுவான் றானு நா னென்றுணர்த்தக்-கோவலர்பால்
ஆனுமா யான்கன்று மாகி யவற்றை மேய்ப்
பானுமாய் நின்ற பரஞ்சோதி-மா நரகப்
பேரிரு ணீக்கப் பெருந்தவம்வேண் டாவுடலில்
ஆருயிர் கூட்ட வயன் வேண்டா – பாருமெனச்
சங்கத் தொனியுந் தடங்குழ லோசையெனும்
துங்கத் தொனியுந் தொனிப்பிப்போன்- பொங்குமலை
மோதும் பரனாதி மூல மிவனென்றே 85
ஓதுங் கரியொன் றுடையமால் – மூதுலகைத்
தந்திடுவோ னுந்துடைப்போன் றானு நா னென்று திரு
உந்தியால் வாயா லுரைத்திடுவோன்- பைந்தமிழால்


  1. கோவலர்பால் – இடையரிடத்தில். 80-81. பிரமாவும் நான்.
  2. பிரமன் ஆன்கன்றுகளையும் சிறார்களையும் கவர்ந்து ஒளித்து வைத்த பொழுது கண்ணபிரான் அப்பொருள்களாக இருந்தன ரென்பது, பாகவதம், மலரவன் சிறார்க்கன்று கவர்ந்த அத்தியாயத்தால் அறியப்படும்.
    83-4. துரியோதனனைச் சேர்ந்தவர்கள் தீ து செய்தவராயினும், கண்ணபிரானது சங்கத்தொனியைக் கேட்டமையின் நரகம் புகாராயி னார் ; ஆதலின் நரகப்பேரிருள் நீக்கச் சங்கத்தொனி தொனிப்பிப்போன் என்றார். வேய்ங்குழலோசையால் பட்டுப்போன மரங்கள் தளிர்த்தன வாதலின், ‘ உடலில் ஆருயிர் கூட்ட வயன்வேண்டா ‘ என்றும், ‘குழ லோசை………….. தொனிப்பிப்போன்’ என்றும் கூறினார். அலை – திருப் பாற்கடல்.
    (பி – ம்.) தொனியாய்த் தொனிப்பிப்போன்.
  3. கரி – கசேந்திரனென்னும் யானை, சாட்சி.

86. உந்தி – நாபி; இது தன்பால் பிரமனைத் தோற்றி உலகைச் சிருட்டிப்பது. பிரளயகாலத்தில் உலகத்தை உண்டமையால் வாய் அழித்தற்கு உரியது ; ” உலக முண்ட பெருவாயா” (திருவாய். 6:10:1)

ஆதிமறை நான்கையுநா லாயிரத்து நற்கவியா
ஓதும் பதினொருவ ருள்ளத்தான்-பாதமெனும்
செந்தா மரைமலரிற் சிந்திய தேன்போல
மந்தா கினிவழியும் வண்மையான்-சந்ததமும்
ஆன்ற வுலக மறிவுமறி யாமையுமாத்
தோன்றத் துயிலாத் துயில்கொள்வோன்-ஈன்றவளைத்
தெள்ளு மணிவாயிற் காட்டிச் செகம் புறமும் 90
உள்ளு மிருப்ப துணர்வித்தோன்-கொள்ளைக்
கவற்சிதரு சென்மக் கடலிற் கலந்த
அவிச்சையுவர் வாங்கமுகி லானோன் – நிவப்பா
மடங்கும் பரசமய வாத நதிவந்
தடங்கக் கருங்கடலு மானோன்-உடம்பிற்
புணர்க்க வொருகிரணம் போலுமெனை யுங்கொண்
டணைக்க மணிநிறமு மானோன் – பணைக்கும்
விசைப்பூ தலவூசன் மீதிலிருப் போனும்
அசைப்போனுந் தானாகு மண்ணல்-இசைத்திசைத்
மீன்பிடிக்கும் வேட ரொருபார்வை யானூறு 95
மான்பிடிக் கின்ற வகையென்னத்-தான்படைத்த


  1. பதினொருவர் – ஆழ்வார்கள் பன்னிருவருள் மதுரகவி யொழிந்த மற்றையோர்.
  2. திரிவிக்கிரமாவதாரகாலத்தில் வலக்காலை மேலே தூக்கிய போது கங்கை வழிந்ததென்பர். மந்தாகினி : வளைந்து செல்வ தென்பது இதன் அவயவப் பொருள்.
  3. துயிலாத் துயில் – அறிதுயில். ஈன்றவளை – யசோதையை.
  4. கொள்ளை – மிகுதி. (பி – ம்.) இருப்ப வுணர்வித்தோன்.
    89-90. ஈன்றவளை உணர்வித்தோனென இயைக்க.
  5. அவிச்சையுவர் – அஞ்ஞானமாகிய உப்பை. உவரை நீக்கி நீரைக் கொள்வது முகிலின் இயல்பு; முகில் – மேகம். நிவப்பா – உயர் வாக.
  6. கடலுக்கு நதிபதியென்று ஒரு பெயருமுண்டு. 91-2. (பி – ம்.) நிவப்பா மடங்காப்.
  7. நீலமணி ஏனை நிறங்களைத் தனக்குள்ளே அடக்கிக்கொள்ளும் இயல்புடையது.

95. பார்வை – பார்வைமிருகம் ; மிருகங்களைப் பிடிப்பதற்காக வேடர்கள் வளர்க்கும் மிருகங்கள் அல்லது அவற்றைப் போல மண்ணாற் செய்த வடிவங்கள் ; இவை தீபகமென்றும் சொல்லப்படும்.

என் பிறவி யெண்பத்து நான்குநூ றாயிரமும் 96
தன்பிறவி பத்தாற் றணித்திடுவோன் – முன்பு புகழ்ந்

தசாங்கங்கள்
(மலை)
தேத்திருவர் நீங்கா திருக்கையா லேகேச
வாத்திரி யென்னு மணிபெற்றுக்-கோத்திரமாம்
வெங்காத் திரஞ்சேர் விலங்குகளை மாய்த்திடலாம்
சிங்காத் திரியென்னுஞ் சீர்மருவி – எங்கோமான்
மேய்த்த நிரைபோல வெற்புகளெல் லாஞ்சூழ
வாய்த்த நிரையிலொரு மால் விடையாய்ப் பார்த்திடலால்
இன்னிய மார்க்கு மிடபகிரி யென்னும்பேர் 100
மன்னிய சோலை மலையினான்-எந்நாளும்

(நதி)
பொற்சிலம்பி லோடுஞ்சாம் பூந்தபோன் மாணிக்க
நற்சிலம்பி லோடு நதியாகிக்-கற்சிலம்பில்


  1. பிறவி எண்பத்து நான்கு நூறாயிரமென்பது எண்பத்து நான்கு லட்சம் பிறப்பின் பேதங்களை. பிறவி பத்து – தசாவதாரம் ; தாம் அவதாரம் எடுத்தமையால் அவற்றைத் தியானிக்க என் பிறவி தீர்ந்த தென்பது கருத்து.
  2. இருவர் – பிரமதேவரும் உருத்திரரும். கேசவாத்திரி – அழகர் மலையின் திருநாமங்களுள் ஒன்று.
  3. காத்திரம் சேர் விலங்குகளை – உடம்பை அடைகின்ற பிறவி களாகிய தளைகளை, முன்காலைச் சேர்ந்த மிருகங்களாகிய யானைகளை ; சிலேடை. காத்திரம் – யானையின் முன்கால். சிங்காத்திரி : இம்மலையின் திரு நாமம். எம்கோமான் – கண்ணபிரான்.
  4. கீழேயிருக்கும் சிறு குன்றுகளுக்குப் பசு நிரையும், அழகர் மலைக்கு இடபமும் உவமை. தருமதேவதை இடபவடிவங்கொண்டு இங்கே தவஞ் செய்து வழிபட்டுப் பேறுபெற்றமையின் இடபகிரி யென்ற பெயர் உண்டாயிற்றென்பர்.
  5. இனிமை இயம் – இனிய வாத்தியங்கள் ;
    “முன்றி லதிர்மும் முரசினான்’ என்பர் பின் ; 122.
    97-100. இக்கண்ணிகளால் அழகர் மலையின் திருநாமங்களாகிய கேசவாத்திரி, சிம்மாத்திரி, இடபமலை, சோலைமலை என்னும் திருநாமங் கள் பாராட்டப் பெற்றுள்ளன. (பி – ம்.) கிரியெனும்பேர்.

101. பொற்சிலம்பில் – மேருமலையில். சாம்பூந்தம்-மேருவின் தென் பால் ஓடும் ஓராறு ; நாவற்பழத்தின் சாறே ஆறாக ஓடுதலால் இந்நதம் சாம்பூ நதமெனப் பெயர் பெற்றது; நதம் – மேற்கு நோக்கி ஓடும் ஆறு. மாணிக்க நற்சிலம்பு – திருவடியில் அணியப் பெற்றுள்ள மாணிக்கப் பரலையுடைய சிலம்பென்னும் ஆபரணம். கற்சிலம்பில் – பலவகையான கல்மலைகளுக்கு இடையே .

இந்திரன் போலு மிடபா சலமவன்மேல் 102
வந்தவிழி போலும் வளச்சுனைகள் – முந்து திரு
மாலுடைய தோளின் மணிமார்பின் முத்தாரம்
போல வருநூ புரநதியான் – சீலமுறு

(நாடு)
பன்னிரு செந்தமிழ்சேர் நாடுகளும் பார்மகட்கு
முன்னிருகை காது முலைமுகங்கால் – பின்னகங்கண்
காட்டு மவற்றுட் கனகவரை மீது புகழ் 105
தீட்டும் புன்னாடுந் தென்னாடும்- நாட்டமாம்
அந்நா டிரண்டி லருள்சேர் வலக்கணெனும்
நன்னாடாந் தென்பாண்டி நாட்டினான் – பொன்னுருவச்

(ஊர்)
சந்த்ரவடி வாஞ்சோமச் சந்திரவி மானத்தை
இந்திரவி மான மிதுவென்றும் – மந்த்ர விரு
துக்கொடி யேறு துசத்தம்பம் வல்லிசா 108
தக்கொடி யேறுகற்ப தாருவென்றும் – மிக்கோர்க்


  1. சுனைகளுக்கு இந்திரன் விழிகள் உவமை.
  2. முத்தாரம் தோளிலும் மார்பிலும் உள்ளன; நதிக்கு முத்தாரம் உவமை ; “மாயோன் மார்பி லாரம் போல, மணிவரை யிழிதரு மணி கிளரருவி” (தொல். செய். 35, பேர். மேற் ); “நதிக்குப் போத வொழுகு முத்தாரமும்” (தக்க. 280). நூபுரநதி – சிலம்பாறு ; “நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலை” (சிலப். 11 : 108); “சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ் சோலை” (பெரியதிரு. 9. 9 : 9)
  3. பன்னிரு செந்தமிழ் சேர் நாடுகள் – செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகள் ; “தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி, பன்றி யருவாவதன் வடக்கு-நன்றாய, சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர், ஏதமில் பன்னிரு நாட் டெண்” (நன். 272, மயிலை. மேற்.). பின்னகம் – பின்னல். கண் – கண்கள். கையிரண்டு, காதிரண்டு, நகிலிரண்டு, முகம், காலிரண்டு, பின்னல், கண்ணிரண்டு ஆகிய பன்னிரண்டு உறுப்புக்களும் பன்னிரு நாடுகளுக்கு உவமை.
    (பி – ம்.) செந்தமிழ் நாடுகளும் ; வின்னகங்கண்.
  4. கனகவரை – மேருமலை. புனல் நாடு – சோழ நாடு. தென்னாடுபாண்டி நாடு. நாட்டம் ஆம் – கண்கள் ஆகும். (பி-ம்.) காட்டு மவற்றுக் கனக.
  5. சோமச்சந்திர விமானம் : இஃது அழகருடைய விமானத்தின் திருநாமம். தருமதேவதையின் கட்டளைப்படி விசுவகருமா சந்திர மண்டலத்தைப்போல அமைத்தமையால் இப்பெயர் பெற்றது ; இது சோமச்சந்த விமானமென்றும் வழங்கும் ; ” வந்த விமானத்தமரர் மலர் தூவிப் பணிசோமச், சந்தவிமா னத்தமருஞ் செளந்தரிய பரஞ்சோதி 1) (அழகர் கலம். 1)

107-8. விருதுக்கொடி – வெற்றிக்கொடி. துசத்தம்பம் – துவசத்தம் பம். வல்லிசாதக்கொடி – கற்பகமரத்திற் படரும் காமவல்லி.

கொருவாழ்வா னோனை யுபேந்திரனே யென்றும்
திருமாலை யாண்டானைத் தேவ-குருவென்றும்
நண்ணிய சீர்பெற்ற நம்பி முதலோரை 110
விண்ணவர்கோ னாதி விபுதரென்றும் – எண்ணுதலால்
ஆர்பதி யான வமரா பதிபோலும்
சீர்பதி யான திருப்பதியான்-மார்பிடத்தில்

(மாலை)
எண்ணுங் கலனிறத்தோ டிந்திரவிற் போற்பசந்த
வண்ணந் தருந்துளப மாலையான் –உண்ணின்

(யானை)
துருக்கும் வயிணவமா மோங்குமதம் பொங்கத்
திருக்கொம்பு தான்றுதிக்கை சேர – நெருக்கிய


  1. ஒரு வாழ்வானோனென்றது அழகரை. திருமாலையாண்டான் – உடையவருடைய குரு ; இவருடைய விக்கிரகம் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியின் பக்கத்தே இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஸுப்ர பாதபடனம், புஷ்பாஞ்சலி முதலியன இவர் சொல்லா நிற்ப அர்ச்சகர் செய்யவேண்டும். திவ்யப்ரபந்த சேவையும் உண்டு. இவருடைய சந்ததியார் பெருமாள் எழுந்தருளும்பொழுது முன்னே பல்லக்கில் வருவார்கள். திரியெடுத்தாடுதல் முதலியவற்றில் இவர்களுக்குக் காணிக்கை யுண்டு. இவர்களைச் சேவித்தபின் அடியார்கள் பெருமாளைச் சேவிப் பார்கள்.
    (பி – ம்.) ஒருவாழ்வானோனே.
  2. நம்பி – திருமலை நம்பி; இவர் கைங்கரிய பரர் ; பட்டைக் கைங் கரியமென்று பெயர்; இக்கைங்கரியம் தர்ப்பம், கூர்ச்சம், பவித்ரம் முதலியன கொடுத்துப் புண்யாஹவா-சனாதிகள் செய்து வைக்கும் பௌரோகித சம்பந்தமானது. இவர் பரம்பரையார் இன்றும் இங்கேயே இருந்து கைங்கரியஞ் செய்து வருகிறார்கள். விபுதர் – தேவர்.
    (பி – ம்.) நம்பி முதலோர்கள்.
  3. ஆர் பதி – நிறைந்த ஊர். சீர்பதி-ஸ்ரீபதி ; இஃது இம்மலைக்கு உரிய ஒரு திருநாமம்.
  4. கலன் – ஆபரணங்கள். மற்ற ஆபரணங்களோடு சேர்ந்துள்ள துளபமாலைக்கு இந்திரவில் உவமை.
    (பி – ம்.) கலனிறத்தால், கலைநிறம்போ லிந்திரவிற்.

113. மதம் – சமயம், யானையின் மதம். திருக்கொம்பு – திருமகளாகிய பூங்கொம்பு, அழகிய யானைக்கொம்பு. துதிக்கை – துதித்தல், யானை யின் துதிக்கை .

பாகமொத்த வைகான் தம் பாஞ்ச ராத்திரமாம் 114
ஆகமத்தி னோசைமணி யார்ப்பெடுப்ப-மோகமறு
மட்டும் பிணிக்கும் வடகலையுந் தென்கலையும்
கட்டும் புரசைக் கயிறாக- விட்டுவிடா
வானந்த மான மலர்த்தாள்கண் டத்துவி
தானந்த மென்றகளி யானையான் – தானந்த

(குதிரை)
வர்க்கத் துடனெழுந்து வாயி னுரைகடந்து
கற்கி வடிவுநலங் காண்பித்துச் சொர்க்கத்தில்
ஏறுங் கதிகாட்டி யெய்து மணுத்தோற்றி
வீறும் பலகலையும் வென்றோடி – ஆறங்கம்
சாற்றிய தன்னங்க மாய்க்கொண்டு தாரணியிற்
போற்றிய வேதப் புரவியான் – பாற்கடலிற்

(கொடி)
புக்கதொரு மந்தரமும் பூமியும் பம்பரமும் 120
சக்கரமும் போலத் தலைசுழன்று – தொக்கவிசை


  1. வைகானதம், பாஞ்சராத்திரம் : வைஷ்ணவ ஆகமங்களின் பெயர்கள். (பி – ம்.) மோகமுறும்.
  2. வடகலை, தென்கலை – வைணவ மதத்தின் உட்பிரிவுகள். புரசைக் கயிறு – யானையின் கழுத்திற் கட்டும் கயிறு. (பி – ம்.) விட்டுவட.
  3. வான் அந்தம் ஆன.
    (பி – ம்.) மானம் வரத்தாள் கண்டு ; தாள்கணடத்து செவிக், கானந்தம்.
    117-9. வேதத்துக்கும் குதிரைக்கும் சிலேடை.
  4. வர்க்கம் – எழுத்தின் வர்க்கம், சேணம். வாயின் உரைகடந்துமனிதர் வாயின் உரையைக் கடந்து, வாயில் நுரைகள் தந்தென்பது மற் றொரு பொருள். கற்கிவடிவு – கோயிலின் வடிவு. குதிரையின் வடிவு; கற்கி – கோயில் ; “கற்கிளர் கற்கி செய்தோன்” (சேது. இராமநாத. 43)
  5. அணு – துளி, உயிர் தோற்றி – வெளிப்படச் செய்து. கலை – நூல்கள், மான்கள். ஆறு அங்கம் – வேதாங்கம் ஆறு, ஆறுவகை உறுப்புக்கள்.
  6. மந்திரத்திற்குப் பம்பரமும், பூமிக்குச் சக்கரமும் உவமைகள். விசை – வேகம்.

(பி – ம்.) பூமியு மம்பரமும்.

வற்றும் பொழுதுவிழ வாசுகியைச் சேடனைப் 121
பற்றுங் கருடப் பதாகையான் – சுற்றியதன்

(முரசு )
குன்றிலரி யுங்கரியுங் கொண்மூவு நின்றதிர
முன்றி லதிர்மும் முரசினான் – என்றும்

(ஆணை )
அவனசை யாம லஹிவசையாதென்னும்
தவநிலை யாணை தரித்தோன் – நவநீதம்
மேனியிற் சிந்தியது மென்கையி லேந்தியதும்
வானி லுடுவு மதியுமெனத் – தானுண்டோன்
செங்கதிரும் வெண்கதிரு மென்னத் திருவிழியும் 125
சங்கமுஞ் சக்கரமுந் தாங்கினோன் – அங்கணுல
குண்டகனி வாயா னுறையுந் திருவயிற்றான்
கொண்ட படியீன்ற கொப்பூழான் – மண்டி
அளந்த திருத்தாளா னன்றேற்ற கையான்
விளைந்த பொருள் காட்டு மெய்யான்-உளங்கொண்


  1. கருடப்பதாகை – கருடக்கொடி : பதாகை – பெருங்கொடி. (பி-ம்.) பொழுதுவிடா, வாசுகியுஞ் சேடனையும்.
  2. அரி – சிங்கம். கரி – யானை. கொண்மூ – மேகம். மும்முரசு – நியாய முரசு, தியாக முரசு. வீர முரசு (புறநா. 58 : 12, உரை)
  3. “அவனன்றி யோரணுவு மசையாது” (தாயுமான. எங்கு நிறைகின்ற. 1). நவநீதம் – வெண்ணெய்.
  4. உடு – நட்சத்திரம். மதி – சந்திரன்.
  5. மேனியிற் சிந்திய வெண்ணெயின் சிறிய பிதிர்களுக்கு நட்சத்திரமும், கையில் எடுத்த பெரிய உருண்டைகளுக்கு மதியும் உவமைகள்.
  6. திங்கள் இடக்கண்ணும் சங்கும், சூரியன் வலக்கண்ணும் சக்கரமும் ஆகும்.
    (பி – ம்.) செங்கதிர் வெண்கதிர் நா லென்னத். வெண்கதிர் நாளென்னத்.
    125-6. உலகு உறையும் என இயைக்க. கொண்டபடி – உட் கொண்டபடி. கொப்பூழ் – திருவுந்தி. (பி – ம்.) ஈன்ற கொப்புளான்.

127. பூமியை அளந்ததும் அதனை ஏற்றதும் வாமனாவதாரத்தில். விளைந்த பொருள் – பச்சைப்பயிர்.

டிடந்த மருப்பினா னேந்து முதுகான் 128
படந்தனில் வைத்தமணிப் பாயான் – தொடர்ந்த வினை
முட்டறுக்குந் தன்னாம முன்னித் திருநாமம்
இட்டவருக் கீவோ னிகபரங்கள் – எட்டெழுத்தாற்
பிஞ்செழுத்தாய் நையும் பிரம் லிபியெனும்பேர் 130
அஞ்செழுத்தை மூன்றெழுத்த தாக்குவோன் – வஞ்சமறத்
தங்கள் குன் றெங்கிருந்துஞ் சங்கர னாதியோர்
நங்கள் குன்றி தென்னவரு நண்புடையோன் – அங்கோர்
வயமுனிக்குக் கண்ணிரண்டு மாற்றினோன் போற்றும்
கயமுனிக்குக் கண் கொடுத்த கண்ணன் – நயமுரைக்கின்


  1. இடந்த – பெயர்த்த; இது வராகாவதாரத்தில். முதுகிலேந்தி யது கூர்மாவதாரத்தில் பாய் – ஆதிசேடன்.
    126-8. ” கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க் கீழ்புக், கிடந் திடுந் தன்னுட் கரக்கு முமிழும், தடம் பெருந்தோ ளாரத் தழுவும் பாரென்னும், மடந்தையை மால் செய்கின்ற மாலார் காண்பாரே”, ” உண்டு முமிழ்ந்துங் கடந்து மிடந்துங் கிடந்து நின்றும், கொண்ட கோலத்தோடு வீற்றிருந்துமணங் கூடியும், கண்டவாற்றாற் றனதே யுலகென நின்றான்” (திருவாய். 2, 8:7, 4.5: 10)
  2. முட்டு – தடை. தன் நாமம் முன்னி – தன் திருநாமங்களைத் தியானித்து. திருநாமம் இட்டவருக்கு – திருமண்குறிகளை இட்ட அடி யார்களுக்கு ;
    “மணிவாசற் றூங்க வொரு குடைக் கீழ்வையங் காத்துச் சிந்தா,
    மணிவா சவனென வாழ்ந்திருப் போர்பின்னை மாதிருக்கும்,
    மணி வாச மார்பரங் காகேச வாவென்று வாழ்த்தித்திரு,
    மணிவாசகங்கொண் பணிவா ரடியை வணங்கினரே” (திருவரங்கத். 72);
    “ஈராறு நாம் முரை செய்து மண் கொண் டிடுவார்கள் காணு மிமையோர் (வி. பா. 9-ஆம் போர்ச். 1). எட்டெழுத்து – அஷ்டாக்ஷரம்.
  3. பிஞ்சு எழுத்தாய் – சிறிய எழுத்தாய் : பிஞ்சு எழுத்து எனப் பிரித்து, பிய்ந்த எழுத்து எனினுமாம். பிரமலிபி : ஐந்தெழுத்தாலாகி யது ; அஞ்சு எழுத்து – யாவரும் அஞ்சுதற்குரிய எழுத்தெனினுமாம். மூன்று எழுத்தது – மூன்று எழுத்தையுடைய இல்லையென்னுஞ் சொல் ; “போதனார் நெட்டெழுத்து நமனா ரிட்ட குற்றெழுத்தும் புனலெழுத் தாய்ப்போக” (சீரங்க. ஊசல். 16)
    (பி- ம்.) எழுத்தா னையும் ; அஞ்செழுத்து ; அஞ்சலியாத்.
  4. (பி-ம்.) தங்கள் குன் றத்திருந்தும்; நங்கள் குன்றென்றுவரு.

132. வயமுனி – பச்சைவாரண தாசர்; இவர் திருக்கச்சி நம்பி முன் னோர்களுள் ஒருவர்; பச்சைவாரணப் பெருமாள் கோயிலில் வழிபட்டவர். இவருக்கு ஹஸ்திகிரியில் கண்ணைப் போக்கினதாகவும், அழகர் மலையில் கண்ணைக் கொடுத்ததாகவும் வரதராஜ ஸ்தவத்தில் கூரத்தாழ்வார் கூறி யிருப்பதாகப் பெரியோர் கூறுவர். கயமுனி – யானைக் கன்று; இதற்குக் ‘கண் கொடுத்தது, “வளிநான்ற மணிமுறத் தழைசெவிச் சிறுகவுளில் வண்டோ டிரண்டு பாடும் மழைபாய் கடாக்கரிக் கண் கொடுத்தும் 11 (அழகர் பிள்ளைத். அம்புலிப். 4) என்பதிலும் கூறப்பட்டுள்ளது.

அஞ்சுபடை யோனெனினு மஞ்சாம் லங்கையில்வா
சஞ்செய்யு முத்யோகச் சக்கரத்தான் – எஞ்சாது
விண்ணிலங்கொள் பொன்னிலங்கை வெற்றியாய்க் கொண்டாலும்
மண்ணிலங்கைத் தானமாய் வாங்குவோன் – பண்ணிலங்கும்
ஏரணி பொன்னரங்கத் தெம்பிரான் போலெவர்க்கும் 135
தாரணி நல்காத தம்பிரான் – காரணியும்
செங்கைத் தலத்திடத்துந் தென்மதுரை யூரிடத்தும்
சங்கத் தழகனெனுந் தம்பிரான் – எங்கும்
திருப்பாது கைக்குஞ் செழுங்கருட னுக்கும்
திருப்பாது கைக்குமர சீந்தோன் – விருப்பமுகம்
சந்திர னான சவுந்தர வல்லியுடன்
சுந்தர ராசனெனத் தோன்றினோன் – அந்தம்
சொல நலங்கொ டோளழகாற் சுந்தரத் தோளன்
மலையலங் காரனென வந்தோன் – பலவிதமாய்


  1. அஞ்சுபடை – பஞ்சாயுதம், அஞ்சுகின்ற படை. உத்தியோகச் சக்கரம் : உத்தியோகச் சக்கரம், பிரயோகச் சக்கரமெனச் சக்கராயுதம் இருவகைப்படும்; அவற்றுள் இயல்பாக உள்ளது உத்தியோகச் சக்கரம்.
  2. பொன் இலங்கை – பொன்மயமான இலங்கை நகரத்தை. மண் நிலத்தை. கைத்தானமாய் வாங்குவோன் – மகாபலியினிடத்தே தானமாய்க் கையில் வாங்குவோன்.
  3. அரங்கத் தெம்பிரான் – ஸ்ரீரங்க நாதர். ஸ்ரீரங்கநாதர் நாச்சி யார் பலருக்கு மாலையை அளிப்பவர் ; அழகர் ஆண்டாளுக்கு மட்டும் மாலை அளிப்பவராதலின் இங்ஙனம் கூறினார். தாரணி – மாலையாகிய ஆபரணத்தை. கார் அணியும் – கொடையால் மேகத்தை ஒத்த. (பி- ம்.) நல்காத தண்மையான் ; சீரணியும்.
  4. இடச்செங்கையில் சங்கமென்னும் ஆயுதத்தையுடைய அழகர் ; தென்மதுரையூரிடத்தில் தமிழ்ச்சங்கத்திலுள்ள அழகர் ; “சுத்தத் தமிழ்ப் புலவர், சங்கத் திருப்பிரியான் சார்பு ” (அழகர் கலம். 68)
  5. திருப்பாது உகைக்கும் – பின்வாங்காமல் செலுத்துகின்ற. கருடன் – கருடாழ்வான் ; கருடனுக்கு அரசீந்தது, பறவைகளுக்கு அரசாக்கியது. திருப்பாதுகை – திருவடி நிலை ; அதற்கு அரசீந்தது இராமாவதாரத்தில். (பி – ம்.) அரசீய்ந்தோன்.
  6. சவுந்தரவல்லி – இத்தலத்து நாச்சியார் திருநாமம். அந்தம் – அழகு.
  7. தோள் அழகால் – தோளாலும் அழகாலும். தோளால் சுந்தரத் தோளனென்றும், அழகால் மலையலங்காரனென்றும் திருநாமங்கள் உண்டாயின.

(பி – ம்.) சொல நலங்கொளழகாற் ; தோளழகர்.

வழிபட்டோர்
நண்ணியதெய் வத்தை நரரெல்லாம் பூசித்த 140
புண்ணியமே தன்னைவந்து பூசித்தோன் – கண்ணனைய
பாத கமலம் பரவுமல யத்துவசன்
பாத கமலம் பறித்திடுவோன்-கோதில்
அரணாம் புயங்களுறு மம்பரீ டற்குச்
சரணாம் புயங்க டருவோன் – திருநாளில்

கோடைத் திருவிழா
சந்தக்கா வூடு தவழ்ந்துவருந் தென்றற்கால்
மந்தக்கா லாக மருவுங்காற் – சிந்திக்கும்
வாடைத் துளிபோன் மலர்த்தேன் றுளிதுளிக்கும்
கோடைத் திருவிழாக் கொண்டருளி- நீடுவிடைக்
குன்றிலுற்ற வெள்ளங் கொழுந்தோடி வையைதனிற் 145
சென்றெதிர்த்து நிற்பதெனச் சீபதியோர்-அன்றெதிர்த்துக்
கூடலிற் கூடலெனுங் கூடற் றிருநகரில்
ஏடலர் தாரா னெழுந்தருளி – ஆடலுடன்


  1. புண்ணியம் – தருமதேவதை ; தருமதேவதை வழிபட்டதை, 99-ஆம் கண்ணியின் குறிப்புரையால் அறியலாம். கள் நனைய – தேனை யுடைய அரும்புகளையுடையன-வாகிய ; அரும்புகள், அன்பர்கள் இட்டவை.
  2. பாத கமலம் பரவு – திருவடித்தாமரைகளை வணங்கிய . மலயத் துவசன் – மலயத்துவச பாண்டியன் ; இவன் இத்தலத்தில் கோயிற்றிருப் பணி முதலிய திருப்பணிகளையும் நித்தவிழா முதலியவற்றையும் செய் வித்துப் பேறுபெற்றவன்; இவ்வரலாறு இத்தலபுராணத்திலும் உள்ளது; “பதித்தமலை யத்துவச பாண்டியனை யாண்டனையே” (அழகர் கலம். 1). பாதகமாகிய மலத்தை . (பி – ம்.) மலையத்துவசன்.
  3. அரணாம் புயங்கள் – தம்முடைய குடிகளுக்கு அரணாகிய தோள்கள் ; “அரண்டரு திரடோள் ” (கம்ப. சடாயுவுயிர். 63). அம்பரீடன் : இத்தலத்தில் வழிபட்டுப் பேறுபெற்ற ஓரரசன். சரண அம்புயங்கள் – திருவடித்தாமரைகளை.
  4. சந்தக்காவூடு – சந்தனச் சோலையினுள்ளே ; என்றது பொதி யின் மலையிலுள்ள சந்தனச் சோலையை. மந்தக்கால் ஆக – மந்தமாருத மாக ; தென்றலின் மூவகை நடையுள் மந்தம் ஒன்று.
    144-5. விடைக் குன்று ; அழகர்மலை ; 99, பார்க்க. சீபதியோர் – அழகர் மலையிலுள்ளோர். (பி – ம்.) சென்றெதிர்த்துக்.

145-6. சீபதியோர் கூடுதலால் கூடலென்னும் பெயர் பெற்ற மது ரையில் ; இது பிரிநிலை நவிற்சியணி. தரரான் – அழகர்.

கல்லா குளங்கள் கரையப் பணிவார்முன் 147
தல்லாகுளம்வந்து சார்ந்தருளி – மெல்ல

வையைக்கு எழுந்தருளுதல்
நரலோக மீது நடந்துவரு கின்ற
பரலோக மென்று சிலர் பார்க்கச்- சுரலோகத்
திந்த்ர விமானமிது வென்று மிதுசோமச்
சந்த்ர விமானமே தானென்றும் – முந்தியவட்
டாங்க விமான மவையிரண்டு மென்னவே 150
தாங்கு விமானந் தனிற்புகுமுன் – தீங்கிலார்
உன்னி விமான முரத்தெடுக்கும் போதனந்தன் –
சென்னிமணி யொன்று தெறித்தெழுந்த-தென்னவே
உம்பரில் வெய்யோ னுதயஞ் செயக்குதிரை
நம்பிரா னேறி நடந்தருளி- அம்பரத்திற்


  1. கல் ஆகு உளங்கள் – கல்லைப் போன்ற மனங்கள். தல்லா குளம் – மண்டபப்படியுள்ள ஓர் ஊரின் பெயர் ; இது வையை நதிக்கு வடக்கே உள்ளது.
  2. நரலோகமீது – பூமியின்மேல். சுரலோகத்து – தேவருலகத் தில் உள்ள.
  3. சோமச்சந்திர விமானம் : இத்தலத்துள்ள கோயிலின் விமா னம் ; 107-ஆம் கண்ணியின் குறிப்பைப் பார்க்க.
    149-50. அட்டாங்க விமானம் : எட்டு அங்கங்களையுடையது : அழ கருடைய சோமச்சந்திர விமானமும், கூடலழகருடைய விமானமும் இவ்வாறு கூறப்படுதலால், ” அட்டாங்க விமான மவையிரண்டும் 11 என்றார். இதன் இலக்கணத்தை , அழகர் பிள்ளைத் தமிழ், முத்தப் பருவம், “மட்பாவை தோயும் ” (7) என்னும் முதற் குறிப்புடைய செய் யுளால் அறிந்து கொள்ளலாம். தீங்கிலார் – விமானந் தாங்குவோர்.
    (பி – ம்.) அவையிரண்டென்னவே.
  4. உரத்து – வன்மைகொண்டு. அனந்தன் – ஆதிசேடனு டைய. சென்னிமணி – தலையிலுள்ள மணிகளுள்.
  5. குதிரை நம்பிரான் – பெருமாளுடைய வாகனமான குதிரை ; உத்தம் இலக்கணம் அமைந்த குதிரையைக் குதிரை நம்பிரானென்றல் மரபு (சீவக. 2157, ந.)

151-2. சூரியனுக்கு ஆதிசேடனுடைய மணி உவமை.

கோடி கதிரோனுங் கோடி பனிமதியும்
ஓடி நிரையா வுதித்தவென- நீடிய
பொற்கொடியும் வெள்ளிக் குடையும் பொலிந்திலங்க
விற்கொடிகள் விண்ணோர் பெயர் துடைப்பச் சொற்கத்
தியலுங் கரியுமதி பெற்று முரசும் 155
புயலு முருமேறும் போலக்-கயலினத்தை
அள்ளுந் திரைவையை யாறுட் பரந்து நர
வெள்ளங் கரைகடந்து மீதூர-வள்ளல்
திருத்தகு மேகம்போற் செல்லுதலானீர் தூம்
துருத்தி மழைபோற் சொரியக் – கருத்துடனே
வாட்டமற வந்து வரங்கேட்கு மன்பருக்குக்
கேட்டவர மூறுங் கிணறுபோல் நாட்டமுடன்
காணிக்கை வாங்கியன்பர் கைகோடி யள்ளியிடும்
ஆணிப்பொற் கொப்பரைமுன் னாகவரக்-காணிற்
புரந்தரற்கு நேரிதென்று போற்றிசைப்ப வோரா 160
யிரந்திருக்கண் வையைந்தி யெய்தி-உரந்தரித்த

வண்டியூர் மண்டபத்தில் எழுந்தருளுதல்
வார்மண்டு கொங்கை மனம்போல் விலங்குவண்டி
யூர் மண்டபத்தி னுவந்திருந்து – சீர்மண்டு


  1. கதிரோன் – சூரியன். மதி – சந்திரன். நிரையா – வரிசையாக,
    153 – 4. பொற்குடைக்குச் சூரியனும், வெள்ளிக்குடைக்குச் சந்திர னும் உவமைகள். விற்கொடிகள் – ஒளியையுடைய கொடிகள்.
  2. எற்றும் – அடிக்கப்படும்.
  3. (பி – ம்.) யாறு பரந்துநிறை.
  4. நீர்தூம் துருத்தி – நீர் தூவும் ஒருவகைக் கருவி.
  5. காணிக்கை – கையுறைகளை.
  6. திருக்கண் – வையை நதியினிடையே அழகர் திருக்கண் சாத்தியருளுதற்காக வைக்கப்படும் பூர்ண கும்பமுதலியன உள்ள மண்டபங்கள். ஆயிரம், பலவென்னும் பொருளை யுடையது. ஆயிரங் கண்களை யுடைமையால் வையை நதிக்கு இந்திரனை உவமை கூறினர். உரம் – மார்பு. (பி – ம்.) நதியேற.

161. வார்மண்டு கொங்கை – திருமகள். வண்டியூர் மண்டபம் – வையைக்கு வடகிழக்கு உள்ள ஓரூர். இவ்வூரில் சிவகங்கையரசரால் மண்டபப்படி நடத்தப்பெற்று வருகின்ற-தென்பர்.

மாயனுக்கு வாகனமாய் வாவென்று சேடனைத்தான் 162
போயழைக்க வெய்யோன் புகுந்திடலும்-தூயோன்
மருளப் பகலை மறைத்தவனிப்போ
திருளைப் பகல் செய்தா னென்னத் – தெருளவே
அங்கிக் கடவுளும்வந் தன்பருட னாடுதல்போற்
றிங்கட் கடவுள் சேவிப்பதுபோற் – கங்குற்
கர தீப மும்வாணக் காட்சியுங் காண 165
வரதீப ரூபமாய் வந்த- திருமால்

தலைவி அழகரைத் தரிசித்து மயல் கொள்ளல்
அவனி பரிக்கு மனந்தாழ்வான் மீது
பவனிவரக் கண்டு பணிந்தேன் – அவனழகிற்
பின்னழகு முன்னழகாம் பேரழகைக் காணுமுன்னே
முன்னழகைக் கண்டேனான் மோகித்தேன் – பின்னழகு
தானே கண் டாலுந் தனக்குத் துயர்வருமென்
றேனோரை நோக்கி யெழுந்தருள – ஆனோன்
விமலத் திருமுகமு மென் மார்பின் மேவும்
கமலத் திருமுகமுங் கண்டேன் – அமலன்
அரவணையா னென்பதுமுண் டண்ணலரன் போல 170
இரவணையா னென்பதுமுண் டேனும் – பரவைத்


  1. சூரியன் அத்தமிக்க. தற்குறிப்பேற்றவணி.
  2. பகலை மறைத்தது, கிருஷ்ணாவதாரத்தில் ; பகல் – சூரியன்.
  3. கர தீபம் – தீவட்டி. காண – காண்பதற்கு. தீபரூபமாய் வந்தது திருத்தண்காலில் ; இவருடைய திருநாமம் விளக்கொளிப் பெருமாளென்பது. (பி – ம்.) தீபரூபமாய் வந்தான்.
  4. அனந்தாழ்வான்மீது – ஆதிசேடவாகனத்தின்மீது. பவனி – உலா.
  5. பெருமானுடைய முன்னழகைப் போல்வதாகிய பின்னழ கைக் காணுமுன்னே . முன்னிலும் பின்பழகியரென்று பெருமாளுக்கு ஒரு திருநாமம் உண்டு ; ” முன்பிலும்பின் பழகிய நம் பெருமாள் ” (சீரங்க . ஊசல், 8). (பி – ம்.) தன்னழகைத்.
  6. (பி – ம்.) எழுந்தருளி – வானோன்.
  7. கமலத்திரு – தாமரைப் பூவிலுள்ள திருமகளது.

170. அரவணையான் – ஆதிசேடனை அணையாக உடையவன். இரவு அணையான் – யாசித்தலைப் பொருந்தான், இரவில் தழுவான்.

திருவணையா னென்றுதினஞ் செப்புவது பொய்யென் 171
துருவணையு மாதர்க் குரைத்தேன் – மருவணையும்

தலைவி அழகரை நோக்கிக் கூறுதல்
செங்கரத்தி லன்று திருடியவெண் ணெய்போலச்
சங்கிருக்க வென்சங்கு தான் கொண்டீர்-கொங்கை
மலையருவி நீருமக்கு மாலிருஞ் சோலைத்
தலையருவி நீர்தானோ சாற்றீர்-விலையிலாப்
பொற்கலை யொன்றிருந்தாற் போதாதோ வன்று புனை
வற்கலையி லேவெறுப்பு வந்ததோ – நற்கலைதான்
ஆரஞ்சேர் கொங்கைக் களித்த தறியீரோ 175
சோரந் திரும்பத் தொடுத்தீரோ – ஈரஞ்சேர்
நூலாடை யாமெங்க ணுண்ணாடை தாமுமக்குப்
பாலாடை யாமோ பகருவீர்- மாலாகி
மொய்த்திரையு மெங்கண் மொழிகேளீர் பாற்கடலில்
நித்திரைதான் வேகவதி நீரிலுண்டோ – இத்தரையிற்
பொங்குநிலா வெள்ளம் பொருந்திற்றோ பாற்கடறான்
அங்குநிலா தும்மோ டணைந்ததோ – கங்குலெனும்


170-71. பரவைத் திருவணையான் – கடலிற் கட்டிய திருவணையை யுடையவன் , பாற்கடலிற்றோன்றிய திருமகளை அணையாதவன் ; பரவை – கடல் , பாற்கடல் .
மரு – வாசனை.

  1. (பி – ம்.) செப்புவதைப்பொய் ; முருகனையுஞ்.
  2. என் சங்கு – என்னுடைய வளையலை.
    172-3. கொங்கையாகிய மலையில் விழுகின்ற அருவி போன்ற கண்ணீ ர்.
  3. அன்று – இராமாவதாரத்தில். வற்கலை – மரவுரி . நற்கலை – நல்ல ஆடைகளை .
  4. ஆரம் – முத்துமாலைகள். கொங்கைக்கு – திரெளபதிக்கு. சோரம் – திருட்டுத் தொழில் ; என்றது கிருஷ்ணாவதாரத்தில் கோவியர் துகில் கவர்ந்ததை நினைந்து.
  5. பாலாடை – பால்போன்ற ஆடை, காய்ச்சிய பாலிலுள்ள ஏடு ; “ஆடைதனை யொதுக்கிடுமென் பால்வாரும் ” (அழகர் கலம். 87)
  6. மொய்த்து – நெருங்கி. இரையும் – முழங்கும். வேகவதி -வையை நதி. (பி – ம்.) வேகவதி நீருண்டோ .

178. நிலாவிற்குப் பாற்கடல் உவமை.

ஆனை கெசேந்திர னாகிலதன் மேல்வருவன்
மீனையும் விட்டு விடலாமோ -கானச்
சதிரிள மாதர் தமக்கிரங்கு வீர்நெஞ் 180
சதிரிளமா தர்க்கிரங்கொ ணாதோ-முதிர்கன்றைக்
கொட்டத்து வெண்பால் குனிந்துகறப் பார்முலையில்
விட்டுக் கறப்பதையும் விட்டீரோ-கிட்டப்போய்
மென்பா றெறித்த வியன்முலையைப் பாற்குடமென்
றன்பா லெடுத்த தறியீரோ-மின்போல்வார்
செவ்விதழின் மேலே தெறித்தவெண்ணெ யுண்பதுபோல்
அவ்விதழை யுண்ட தயர்த்தீரோ-செவ்விதழை
குன்றன் றெடுத்தீர் குளிருமமு தங்கடைந்தீர்
சென்றன்று பாம்பினடஞ் செய்தீரே-என்றென்று

அழகர் சோலைமலைக்கு மீளுதல்
கொண்டபஞ் சாயுதன்மேற் கொள்கை பெறத்தேனூர் 185
மண்டபஞ் சார்வாய் வலங்கொண்டு- பண்டை
விரசையுடன் வைகுந்த வீடுமிது வென்னப்
புரசைமலை காத்தோன் புகுந்தான்- வரிசை


  1. கெசேந்திரன் – கசேந்திராழ்வான். வன்மீனென்றது சந்தி ரனை ; கோள்களையும் மீனென்றல் மரபு ; “‘மைம்மீன் புகையினும் ” (புறநா. 117 : 1); முதலையென்பது மற்றொரு பொருள். கானம் – பாட்டு.
  2. சதிரிள மாதர் – இத்தலத்திலுள்ள தளிப்பெண்டுகள் ; இப் பெயர், ” சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது” (திருவாய்மொழி, 2. 10:2) என்பதிலும் காணப்படும். நெஞ்சு அதிர் இளமாதர்க்கு இரங்க ஒண்ணாதோ.
  3. கொட்டத்து – பால்கறக்கும் பாத்திரத்தில்.
    180-181. கன்றை விட்டுக் கறப்பதையென இயைக்க.
  4. எடுத்தது கிருஷ்ணாவதாரத்தில். (பி – ம்.) எடுப்பதறியீரோ.
  5. செவ்வி தழை – அழகு தழைத்த . (பி – ம்.) யுண்பார்போல்.
  6. குன்று – கோவர்த்தன மலையை. அமுதங்கடைந்தீர் : ” ஆர முதுகடைந்த வங்கையான் ” என்றார் முன்னும் ; 73. பாம்பில் – காளியன் தலையில்.
  7. தேனூர் – மிகப் பழையதோர் ஊர் ; ஐங்குறுநூற்றிலும் இப் பெயர் வந்துள்ளது ; ” தேனூர் வெற்றிலையும் மானூர்ச் சுண்ணாம்பும் ” என்பது ஒரு பழமொழி.

186. விரசை – விரஜாநதி ; வைகுந்தத்திற்கு அருகே ஓடுவதோர் ஆறு. வைகுந்தவீடு – வைகுந்தமாகிய முத்தியுலகு. புரசைமலை – கசேந்திரனாகிய யானையை.

உபசாரங் கொண்டருளி யோர்சிவிகை மீது 187
தபசாரஞ் சீபதியைச் சார்ந்தான்-இபமுண்ட

தலைவியின் நிலை
வெள்ளிற் கனியானேன் வேதனை யீன்றவன்றான்
உள்ளிற் கனியானே யூர்ந்துவரும்-பிள்ளைமதி
செவ்வை மதியோ திரைக்கடல் வாய்சிறிதோ
கொவ்வையித ழார்மொழிதான் கூற்றன்றோ-எவ்வமுறும்
காற்றேரி னானுமொரு காலனன் றோவுருக்கி 190
ஊற்றாத சேமணியு மொன்றுண்டோ – வேற்றுக்
கிளையோடு வாடிக் கிடந்தாலுஞ் சுட்டுத்
துளையாக் குழலுமுண்டோ சொல்லாய்-கிளியரசே
என்கூடு பொன்கூடு மிந்த நிறத்தினால்
உன்கூடு மென்கூடு மொன்றுகாண் – என்கூட்டில்
மாங்கனி யுண்டு வளஞ்சேர் செழுங்கொவ்வைத்
தீங்கனி யுண்டாசினியுண்டு-பாங்கிற்


  1. தபசு ஆர் அம் சீபதி – தவம் பொருந்திய அழகிய சோலை மலையை. இபம் – இங்கே யானை யென்னும் நோய் ; “தூம்புடை நெடுங்கை வேழந் துற்றிய வெள்ளி லேபோல் ” (சீவக. 232) என்பதன் உரையையும் ஒப்புமைப் பகுதியையும் பார்க்க.
  2. வெள்ளிங்கனி – விளாம்பழம். வேதனை யீன்றவன் – பிரமனைப் பெற்றவன், துன்பத்தைக் கொடுத்தவன் ; ” வேதனையும் பெற்று வெளி நின்று ” என்றார் முன்னும் ; 70. உள்ளில் கனியான் – மனத்தில் இரங் கான். பிள்ளைமதி – பிறை.
  3. செவ்வை மதியோ என்றது பிறை கோணியிருப்பதை நினைந்து. மொழி – பழிமொழி. கூற்று – யமன், சொல். எவ்வம்-துன்பம்.
  4. காற்றேரினான் – தென்றற்காற்றாகிய தேரையுடையவன். ஒரு காலன் – ஒற்றைத் தேர்ச்சக்கரத்தையுடையவன், ஓர் யமன். உருக்கி ஊற்றாத – வெண்கலத்தை உருக்கி ஊற்றப்படாத, தன் ஓசையைக் கேட்டாரை உருக்கி ஊற்றாத. சேமணி – இடபத்தின் கழுத்திற் கட்டிய மணி. உருக்கியூற்றாத சேமணி உண்டோ : ” மெழுகான், ஊதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி 11 (குறுந். 155 : 3-4)
    190-191. வேற்றுக் கிளையோடு – வேறு மூங்கில்களோடு. சுட்டுத் துளையாக் குழல் – சுட்டுத் துளை செய்யப்படாத வேய்ங்குழல், தன் இசையைக் கேட்பவரைச் சுட்டுத் துளையாத குழல்.

192. என் கூடு – என்னுடம்பு. பொன் – பசலை. 193. கொவ்வைத் தீங்கனியென்றது உதட்டை. ஆசினி – பலா ; இங்கு அதன் பழத்திற்கு ஆயிற்று ; கொங்கைக்கு உவமை : “கொங்கைப் பலாப்பழத் தீயினொப்பாய்” (திருவா. நீத்தல்.) (பி- ம்.) செழுங்கோவைத்.

குழையுமன முண்டுகுழம்பிய பாலுண்
டுழையே தெளிபாலு முண்டு-விழைவறிந்
தூட்டுவே னுன்னை யுருப்பசியா யென்னநலம் 195
காட்டுவேன் பட்டாடையாற்றுடைப்பேன்- கூட்டில்
அரசா யிருத்தியா லத்தி யெடுத்துப்
புரைதீர் நறையும் புகைப்பேன்- அருகே
இளவெயிலிற் காய்வித் தெடுத்தொருகான் முத்தி
வளைபயில் கையின்மேல் வைத்துத் துளபமணி
ஈசன் றிருநாம மெல்லாமென் போலுனக்குப்
பாசந் தொலையப் பயிற்றுவேன்-பேசென்றே

பிற பொருள் தூதிற் சிறவா வென்றல்
ஈடுபட்ட வெள்ளை யெகினத்தைத் தூதுவிட்டாற்
சூடுபட் டார் துணிந்து சொல்வாரோ-கூடுகட்டி
அன்பாய் வளர்த்ததா யார்க்குதவாக் கோகிலந்தான் 200
என்பா லருள்வைத் தியம்புமோ-தன்பேர்
அரியென்று சொன்னா லளியென்று சொல்லும்
வரிவண்டு பேசி வருமோ- விரகஞ்செய்


  1. குழையும் மனம், குழையும் அனம். பால் – பகுதி, உண்ணும் பால், உழை – பக்கம்.
  2. உருப்பசியே தாயே என்றுகூற, உருவம் பசுத்திருப்பா யென்று யாவரும் சொல்ல. நலங்கு ஆட்டுவேன் : 61.
  3. ஆலத்தி – ஹாரத்தி ; அரசு, ஆல், அத்தி யென்னும் மரப் பெயர்கள் தோற்றுதல் ஒரு நயம். நறை – நறும்புகை.
  4. முத்தி – முத்தங்கொண்டு ; “புதல்வர் பூங்கண் முத்தி 1 (புறநா. 41:14)
  5. பேசென்று பயிற்றுவேனென இயைக்க.
  6. ஈடுபட்ட – எளிவரவுபட்ட (தக்க. 61, உரை). எகினத்தை – அன்னப்பறவையை. சூடு – உச்சிக் கொண்டை : இஃது அன்னத்தின் தலையிலுள்ள து. சூடுபட்டார் – சூடுண்டவரென்பது மற்றொரு பொருள்.
  7. வளர்த்த தாயார் – காக்கை. கோகிலம் – குயில். காக்கைக் கூட்டிலிருந்து வளர்ந்து இறகு முளைத்தபின் பறந்துபோய் விடுதல் குயிலின் இயல்பு ; ” வருந்தி யீன்றாண் மறந்தொழிந்தாள் வளர்த்தாள் சொற் கேட்டில் கடிந்தாள்” (சீவக. 1661); “உயிர்த்த பொழுதே நின் குரல்கே ளாமுன் ஓடிற் றீன்றதாய், நயத்தின் வளர்த்த தாய்குரல் கேட்டலுமே நடுங்கத் துரந்ததால் ” (பிரபு. பிரபுதேவர் வந்த. 63)

201. அரியென்று……. சொல்லும் : என்றது வண்டு குழறு மென்ற படி ; ” முதுவண் டினந்தான் முடிச்சவிழ்த் தாலும் மதுவுண்டாற் பின்னைவா யுண்டோ “, ” அளிப்பிள்ளை வாய்குழறும் ” என்றார் முன் னும் ; 35, 46. அரி, அளியென்னும் இரண்டும் வண்டின் பெயர்கள். அரியென்பது திருமால் பெயர் ; அதைக் கூடச் சொல்லத் தெரியா தென் பதும், அரிச்சுவடியிலே முதல் வார்த்தையாகிய அரியென்பதே தெரியா தென்பதும் வேறு பொருள்; “அரியென்றெங்கள், தாலத்தின் மீதெழுதச் சமர்த்தி லாரோ” (அழகர்கலம். 6) விரகம் – பிரிவால் உண்டாகும் துன்பம்.

வன்கால திக்கின் மலைவா யிருக்கின்ற 202
தென்காலு மென்காதல் செப்புமோ – பொன்காதல்
வண்டலையுந் தாரான்முன் மாதரையெல்லாந்தூற்றும்
கொண்டலையுந் தூதுவிடக் கூடுமோ -உண்ட
படியேழுங் காக்கும் பரங்கருணை யான்முன்
கொடியோரும் போவாரோ கூறாய் – அடியார்கள்

கிளியின் தகுதி
அங்கிருந்தார் கீர்த்தனஞ்செய் வாயடுத்த நாச்சியார் 205
பங்கிருந்தாற் கையிற் பறந்திருப்பாய் எங்கிருந்து
வந்தாயென் றான்மாலிருஞ்சோலையினிலிருந்
தெந்தா யுனைத்தொழவந் தேனென்பாய் – அந்தச்
சவுந்தர வல்லியெனுந் தற்சொரூ பிக்கும்
உவந்தலர்சூடிக்கொடுத்தா ளுக்கும் – சிவந்த
கடுகிலே சங்கோபங் காணாம லென்மால்
வருகிலே சொல்வாய் வகையாய் – அடுகிலே
சங்கெடுப்பாய் சங்கெடுக்குஞ் சச்சிதானந்தரணி
கொங்கெடுக்குந் தாமங் கொடுவருவாய் – அங்கடுக்கின்


  1. காலதிக்கு – தெற்கு ; காலன் – யமன். துன்பத்தைச் செய்வாரோடு தொடர்புடைய-தென்பதைக் காட்டத் தெற்கென்னாது காலதிக் கென்றாள். மலைவாய் – பொதியின் மலையின்கண், மலைப்புடன். தென் கால் – தென்றல் காற்று. பொன் – திருமகள்.
  2. தாரான் – திருமால். மாதரை எல்லாம் தூற்றும் – பெண்களை யெல்லாம் பழி கூறுகின்ற பெரிய பூமி முழுதும் துளியைத் தூற்றுகின்ற. கொண்டலை – மேகத்தை.
  3. படி – உலகம். கொடியோர் – காக்கைகள், கொடுமையை யுடையவர் ; காகத்தைத் தூது விடுதலுண்டென்பது வடமொழியிலுள்ள காக சந்தேசமென்னும் நூலால் விளங்கும்.
  4. கீர்த்தனம் ; “குருகேயுன் னாக்குத்தான் கூழை நாக்கான, தரி கீர்த்தனத்தி-னாலன்றோ ” என்றார் முன்னும் ; 30. நாச்சியார் – ஆண் டாள் ; இவர் கையிற் கிளியிருக்கும்.
  5. சவுந்தரவல்லி : இத்தலத்துள்ள நாச்சியார் திருநாமம். தற் சொரூபி – அதே வடிவாயிருப்பவள். சூடிக்கொடுத்தாள் – ஆண்டாள்.
  6. கடுகு இலேசம் – கடுகளவாகிய சிறுமைகூட. மால் – மயல். வடுகு – தெலுங்கு.

208-9. அடு கிலேசம் கெடுப்பாய் – வருத்துகின்ற துன்பத்தைப் போக்குவாய். சச்சிதானந்தர் – அழகர். கொங்கு – தேன் ; பூந்தாதுமாம்.

அடையாளம்
ஒருகத்தி லாலாகி யோருகத்தி லேயரசாய் 210
ஒருகத்தி லேவில் லுவமாகி- ஓருகத்திற்
புத்திர தீபமுமாய்ப் புங்கவர்க்கா றாந்தருவாய்ச்
சத்தி தருமோர் தருவுண்டு-மொய்த்த
ஒரு கோடி காவுண் டொருகோடி யாறுண்
டொருகோடி பூஞ்சுனையு முண்டு – திருமால்
அறங்காக்கும் யோகிகள் போலல்லும் பகலும்
உறங்காப் புளிதானு முண்டு – திறஞ்சேர்
பிதாமக னோடுறையும் பெற்றி விளங்கப்
பிதாமகன் வந்து புகழ் பேசச் – சதாகால
முந்திரமாய் வாழு முபேந்திரனங் கில்லையென 215
இந்திரனார் வந்தங் கினிதிறைஞ்சப் – பிந்திய
தம்பியர் மூவருக்குந் தானே யாசீந்த
நம்பி திருத்தாளை நம்பினோர் – வெம்பிறவித்


  1. கிருதயுகத்தில் ஆலமரமாகவும், திரேதாயுகத்தில் அரச மரமாகவும், துவாபரயுகத்தில் பலாமரமாகவும், கலியுகத்தில் புத்திரஜீவி மரமாகவும் தருமம் விளங்கும் என்று இத்தலபுராணம் கூறும். இவர் மூன்றாம் யுகத்தில் வில்வமரத்தைக் கூறுகின்றார்.
  2. புத்திர தீபம் – ஒரு மரம். புங்கவர்க்கு – தேவர்க்கு . கற்பகங் கள் ஐந்தாதலின், ‘ஆறாந் தருவாய்?’ என்றார் ; “மூவரி னால்வரா முனி ” (கம்ப. மந்திரப். 5). என்பது போல.
  3. கா – சோலை.
  4. உறங்காப்புளி : இராஜகோபுரத்திற்கு வடக்கே பதினெட்டாம் படிக்கெதிரில் இது முன்னிருந்த தென்றும், சில நாளைக்கு முன் கீழே விழுந்துவிட்டதென்றும் அந்த இடத்தில் இப்பொழுது பூஜை நிவே தனம் நடந்து வருகின்றனவென்றும் கூறுவர். குமுதவல்லி-யோடு திருமங்கை மன்னன் எழுந்தருளி மங்களாசாசனம் செய்தபோது வைக்கப்பட்ட தென்பது கர்ண பரம்பரைச் செய்தி.
    யோகிகள் இரவும் பகலும் தூங்காதிருப்பர். அவர் போல் இலைகளை மூடாமல் எப்பொழுதும் விரித்தே இருக்கும் புளியை உறங்காப்புளி யென்பர்.
    212-3. திருமால் அறம் – ஸ்ரீவைஷ்ண வ தர்மம்.
  5. மகனோடு பிதா உறையும் பெற்றி. பிதாமகன் – பிரமன்.
    214-5. சதாகாலமும் – எப்பொழுதும் . திரம் -ஸ்திரம். உபேந்திரன் – அசுரரால் தேவர்களுக்கு உண்டாகும் துன்பத்தை மாற்றுவதற்குத் திருமால் உபேந்திரராக எழுந்தருளி யிருக்கிறாரென்பது மகாபுராண வரலாறு. “இருகூல மும்பொரு மா நீ ரரங்கத்தி லெந்தை ……… புருகூத னுக்குத் திருத்தம்பி யாகிப் புரக்கும் ” (திருவரங்கத்து மாலை, 16). முதலிலுள்ள அங்கென்றது தேவலோகத்தைக் குறித்தது.

216. மூவர் – பரதன், சுக்கிரீவன், விபீடணன் ஆகிய மூவர்.

ஸ்தலாசாரிய புருஷர்களும் பிறரும்
தேகம் பவித்திரஞ்செய் சீரங்க ராசபட்டர் 217
ஆகும் ப்ரசித்தரா மர்ச்சகரும்-மோகமுறும்
கங்குன் மலமாயை கன்மம் விளங்காமற்
செங்கையி லோங்குதிரி தண்டேந்திச்-சங்கையறச்
செய்யுந் திருமாலிருஞ்சோலைச் சீயரென
வையம் விளங்கவரு மாதவரும் – பொய்யில்லா
ஞானதீ பங்காட்டி நன்னெறிகாட் டென்றொரு 220
மானதீ பங்காட்டி வந்து நின்று – மேனாளில்
முத்தமிழ்க்குப் பின்போவார் முன் போகப் பின்போன
அத்தன் றிருமாலை யாண்டானும்-பத்தியினால்
வையங்கார் வண்ணனையே வாழ்த்த வருந்தோழப்
பையங்கா ரென்னுமா சாரியரும் – மெய்யன்பாம்
சிட்டர்க டேவர்களாகத் தினம் பரவும்
பட்டர்க ளாம்வேத பாரகரும் – விட்டு வெனும்
சோதிகரு ணைக்கடற் றோன்றிக் கரசர
ணாதியுடன் வந்த வமுதாரும்-மூதுலகிற்


  1. பவித்திரம் – சுத்தம். சீரங்கராச பட்டர் : இவர் ஸ்தானிகராக முதலில் வந்தவர் ; அர்ச்சக ஸ்தானிகத்தில் குரு பரம்பரையார்.
  2. கங்குல் – இருளைப்போன்ற. மலமும், மாயையும், கன்மமும் அடுத்தவர்களுக்கு நீங்கும்படி ஓங்கிய திரிதண்டம். திரிதண்டம் ஸ்ரீவைஷ்ணவ சந்நியாசிகளுக்கு உரியது. சங்கை – சந்தேகம்.
  3. திருமாலிருஞ்சோலைச் சீயர் : ஸ்ரீ மணவாள மாமுனிகள் காலத்தில் இந்த ஜீய ஸ்தானம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு உரிய ஆசாரியர்கள் இப்போது கூடலழகர் சந்நிதியிலுள்ளனரென்பர்.
  4. முத்தமிழ்க்குப் பின்போவாரென்றது திருமழிசையாழ்வா ருடைய மாணாக்கருள் ஒருவராகிய கணிகண்ணர் செல்ல அவர் பின்னே திருமால் சென்றதை ; ” சொல்கவிக்குப், பார முதுகடைந்த பாயலான்” (72-3) என்பதன் குறிப்புரையைப் பார்க்க. திருமாலையாண்டான் – இவர் உடையவருடைய ஆசிரியர்களுள் ஒருவர் ; இவர் பரம்பரையினர் தல்லாகுளத்திற்கு வந்து விட்டனரென்பர்.
  5. வையம் கார்வண்ணனையே வாழ்த்த; வையம் – உலகத்தார். தோழப்பையங்கார் : திருமாலையாண்டான் பரம்பரையிலிருந்து பிரிந் தவர்களுள் மூத்தவர் ; ” தோழப்பர் நற்றமிழ்ச் சீர்பதிப்போன், நலமருவு மழகன் புரோகிதன் புனிதபத நாண்மலர் வழுத்துவேனே !! (அழகர் பிள்ளைத். பழிச்சினர்ப்பரவல், 14)
  6. சிட்டர்கள் – ஒழுக்கமுடையோர். வேதபாரகர் – வேதத்தைக் கரை கண்டவர். விட்டு – விஷ்ணு (227)

224. கரசரணாதியுடன் – கைகால்களுடன். அமுதார் – இவருடைய திருவுருவம் நம்பிள்ளை சந்நிதியிலுள்ளதென்பர்; இவர்பரிசாரக ஸ்தானிகர்.

றண்ணந் துழாயழகன் றங்குந் திருமலைபோல் 225
நண்ணுந் திருமலை நம்பிகளும் – உண்ணின்ற
மாமலை சோலை மலையையே நம்புதலாற்
சோலைமலை நம்பியெனுந் தூயோரும்-மேலை
விரிஞ்சன் முதலோர்க்கும் விட்டுப் பிரசாதம்
தருஞ்சட கோபநம்பி தாமும் – பெருஞ்சீர்
வரியெழுதிக் கற்றதிரு மாலிருஞ் சோலைப்
பிரியரெனுஞ் சீர்கருணப் பேரும் – கிரியிலிருந்
தாளுங் கடவு ளருளே துணையாயெந்
நாளுஞ்சீ காரியஞ்செய் நாயகரும்-தாள்வணங்க

தூதுரைக்க வேண்டுதல்
ஆர்த்ததிரு வோலக்க மாயிருப்ப னப்பொழுதுன் 230
வார்த்தை திருச்செவியில் வாயாது- சேர்த்தியிலே
மெல்ல வெழுந்தருளும் வேளை பார்த் தவ்வேளை
சொல்ல வெழுந்தொருவர் சொல்லாமுன்-வெல்லுமதன்
அம்பலர் தூற்ற வடர்த்து வருமுன்னே
வம்பலர் தூற்ற வருமுன்னே-கும்பமுனி


  1. திருமலை – திருவேங்கடம். திருமலை நம்பிகள் : மடைப் பள் ளிப் பரிசாரக ஸ்தானிகர்.
  2. மாலை மலை – மயக்கத்தை அழிக்கின்ற ; திருமாலைத் தரித்த எனினுமாம். சோலைமலை நம்பி – சோலைமலையை நம்பியவரென்பது பொருள் ; இவர் சந்நிதி பரிசாரக கூடஸ்தர்.
  3. விரிஞ்சன் – பிரமன். சடகோப நம்பி – பரிசாரக ஸ்தானிக ருள் ஒருவர். இதன்பின்
    “‘ மருவு திருமாலிருஞ்சோலை நம்பி உருவின் மதனனையொப் போனும் ” என ஒரு கண்ணி மிகையாகக் காணப்படுகின்றது.
  4. வரி – எழுத்து. திருமாலிருஞ்சோலைப் பிரியர் : இவர் கரு ணீகர்களுள் ஒருவர். சீர்கருணப்பேர் – கணக்கர். .
  5. கடவுள் – அழகர். சீகாரியஞ்செய் நாயகர் – கோயிற் பணி விடை செய்பவர் ; இவர்களைக் கோயிற்கொத்தென்பர்.
  6. திருவோலக்கம் – சூழ இருப்பாரோடு ஆதனத்தில் எழுந் தருளியிருத்தல். வாயாது – பொருந்தாது. சேர்த்தி – பள்ளியறை.
  7. மதன் – மன்மதன்.

232. அம்பு அலர் தூற்ற – பாணமாகிய பூவைத் தூவ. வம்பலர் – அயலார். தூற்ற – பழிமொழிகூற. கும்பமுனி – அகத்திய முனிவருடைய.

வாயினுரையடங்க வந்த கடலடங்கத்
தாயினுடையடங்கத் தத்தையே – நீயுரையாய்
உன்பேர் சுவாகதமென் றோதுகை யாலுனக்கும்
அன்பேர் சுவாகதமுண் டாகுங்காண் – முன்பொருநாள்
கோசலை கையிற் குருசி லுனைப்புகழ்ந்து 235
பேசி னுனைப் புகழ்ந்து பேசாரார்- நேசமுடன்
எம்முடைய மாலை யிருபுயத்து மாலை கேள்
உம்முடைய மாலை யுதவீரேல் – அம்மைதிருக்
கோதையார் சூடிக் கொடுத்து வரவிட்ட
தாதையார் மாலைதனைத் தம்மினென்பாய் – நீதி
அடுப்பவர் யாவர்க்கு மாடித் தியாகம்
கொடுப்பவனில்லையென்று கூறான் – தடுக்கும்
அருமாலை நீக்கு மழகன் புயத்து 239
மருமாலை நீ வாங்கி வா.


  1. நுரை அடங்க – நுரைகள் ஒன்றுபட. வாயில் வந்தவென இயைக்க. அகத்திய முனிவர் கடலை ஆசமனம் செய்த வரலாறு இங்கே குறிக்கப்பட்டது. தாயின் உரை – செவிலித்தாயின் அதிகாரச் சொற்கள்; “” அனை வேங்கையினதட்ட 11 (அழகர் கலம். 42). தத்தையே – கிளியே.
  2. சுவாகதம் – கிளியின் பெயர்களுள் ஒன்று. அன்பு ஏர் சுவா கதம் ; சுவாகதம் – நல்வரவு.
  3. குருசில் – இராமன். அவர் கிளியைப் புகழ்ந்து பேசியதென் றது, சீதை தன் கிளிக்கு யார் பெயர் வைப்பதென்று கேட்க, கைகேயி யின் பெயரை வைக்கும்படி இராமன் கூறியதை நினைந்து ; ” என்னொ ரின்னுயிர் மென்கிளிக் கியார் பெய ரீகேன், மன்ன வென்றலு மாசறு கைகயன் மாதென், அன்னை தன்பெய ராகென வன்பினொ டந்நாட், சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி மெய்ம்மை தொடர்ந்தோய்” (கம்ப.
    சூடாமணிப். 83)
  4. மாலை – திருமாலை ; நோக்கியென ஒரு சொல் வருவிக்க. மாலை கேள் – பூமாலையைக் கேட்பாயாக.
  5. கோதையார் – சூடிக்கொடுத்த நாச்சியார். தாதைஆர் – பூந் தாதுகள் நிரம்பிய. திருவிழாக்காலத்தில் சூடிக்கொடுத்த நாச்சியார் சூடிய மாலை ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து இங்கே வருவது வழக்கம். தம் மின் – தருவீர்.
  6. ஆடித் தியாகம் : அழகருக்கு ஆடி மாதத்தில் முன்பு பிர மோத்ஸவம் நடைபெற்று வந்ததென்பர்.
  7. அருமாலை – போக்குதற்கு அரிய மயக்கத்தை. மருமாலை – நறுமணமுள்ள பூமாலையை. புயத்து மரும் மாலையென்று கொண்டு திருத்தோளில் மருவிய மாலையெனலும் ஆம்.

ஸ்ரீ அழகர் கிள்ளைவிடு தூது முற்றிற்று.

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ குரு பரம்பரைப் புராண பாடல்கள் —

June 24, 2024

மாறன்‌ துதி
தேனறா மகிழ்த்‌ தொடையலும்‌ மவுலியும்‌ திருக்கிளர்‌ குழைக்காதும்‌
கானறா மலர்த்‌ திருமுகச்‌ சோதியும்‌ கயிரவத்‌ துவர் வாயும்‌:
மோன மாகிய வடிவமும்‌ மார்வமும்‌ முத்திரைத்‌ திருக்கையும்‌
ஞான தேசிகன்‌ சரண தாமரையு மென்‌ நயனம் விட்‌ டகலாவே.–1-

கான்‌ – வாசனை.
கயிரவம்‌ – செவ்‌ வாம்பல்‌.
ஞான தேசிகன்‌ – நம்மாழ்வார்‌.

பரம்பொருள்‌ துதி
மருதிறத்‌ தவழ்ந்தும்‌ சகடிற வுதைத்தும்‌ மறை துலங்‌கிட மலை எடுத்தும்‌
எருதொடு கரியும்‌ பரிவிழ முனிந்தும்‌ எண்ணரும்‌ ஆடல்கஎியற்றிப்‌
பொருது மல்‌லினர் கண்‌ பிதுங்கிட நெறித்தும்‌ புள்ளின் வாய்‌ விரிந்திடக்‌–2-

எண்ணரும்‌ ஆடல்கள்‌ – அலகிலா விளையாட்டு–கவிச்‌சக்ரவர்த்தி
மல்லினர்‌ -, மல்லர்‌.*மல்லாண்ட திண்‌ தோள்‌’ என்பர்‌ பெரியாழ்வார்‌.

அடியார்‌ துதி
திரு வாழி திருச் சங்கம்‌ திருத் தண்டம்‌ திருச் சார்ங்கம்‌ திருவாள்‌ என்னும்‌
செருவாரும்‌ அரக்கர்கள் தம்‌ சிரமுருட்டும்‌ ஐம்படையும்‌, தேவர்‌ போற்றும்‌
மருமாலை அயக்கிரிவர்‌ விச்சுவசேனரும்‌ செம்பொன்‌ வரையாம்‌ என்னப்‌
பொரு மேனிக்‌ கருடனும்‌, அஞ்‌சனை மகனும்‌ காப்பாகப்‌ பொருந்தும்‌ மாதோ.–3-

நூற்பயன்‌
பாலாழி நாரணன்‌ சீர் பாடியும் பரி பாலனித்தும்‌
மேலாம்‌ பதம் பெற்ற ஆழ்வார்கள்‌ ஆரியர்‌ மெய்ச்சரிதம்‌
நாலாயிரத்து முந்‌ நூற்றறு பத்தொரு நற் கவிக்குள்‌
மாலா யொருகவி கற்கினும்‌ நல்கிடும்‌ வைகுந்தமே.–4-

தற் சிறப்புப்‌ பாயிரம்‌ ‘
திரு வளரூறை விஜய ராகவன் செந்‌ தமிழினில்‌ செங்கண் மாலருளால்‌
மருவளரும் சீர்ப்‌ பொய்கையார்‌ முதலாழ்‌வார்கள் தம்‌ சரிதம துடனே
அருண்மிகு நாத முனிவனே முதலாம்‌ ஆரியர்‌ சரிதமி தாமிக்‌
குரு பரம்‌பரையாம்‌ பிரபந்தம்‌ இதனைக்‌ கூறினன்‌ விருத்தப் பாக்‌ கொண்டே.–5-

ஊறை–ஊற்றத்தூர்

———–

பதிகம்‌ —
பொய்கையார்‌ பூதத்தார்‌ புகழ் பேயார்‌ மூவர்களும்‌ .புவி வந்‌ துற்ற
செய்கை யானதுவுமவர்‌ தமிழ் பாடிப்‌ பரம பதம்‌ சேர்ந்த வாறும்‌;
மெய் கையா மகிழ் பெரியார்‌ புவியில் வந்‌தரிபரமாய்‌ விளம்பி யாறு
வைகையான்‌ கட்டிய பொற்‌க் கிழி யறுத்துத் தமிழ் பாடும்‌ வண்ணந்‌ தானும் –1-மெய்‌ கையா – உண்மையை -வெறுக்காத..

திருமங்கை மன்னர் பிறந்‌ தரி தனையே வழி மறித்துத்‌ திருமந்த்‌ ரங் கொள்‌
கருமங்கள்‌ பலவும்‌ அவர்‌ தமிழ் பாடிப்‌ பரமபதங்‌ கலந்த வாறும்‌;
தருமங்கொள்‌ பாற்கவர் பால்‌ மழிசையர் கோன்‌ உதித்துப் பல்‌ சமய நூலால்‌
தெருமந்து மால் பரமென்‌ றறிந்துதமிழ்‌ பாடி யடி சேர்ந்த வாறும்‌; –2–, தெருமந்து – மனம்‌ கலங்கி,

தொண்டரடிப்‌ பொடியர் பர மாதர்‌ தமை விரும்பிப் பின்‌ தொண்ட ராகி
வண்டமிழின்‌ கவிபாடி யரங்கருடன்‌ மெய் கலந்த வாறு தானும்‌;
மண்டு விடப்‌ பணி குடங்கை வைத்த குல சேகரனார்‌ மனது தன்னில்‌
விண்டு பர மென வறிந்து தமிழ் பாடிப்‌ பரம பதம்‌ மேவு மாறும்‌; –3-

விண்டு.- திருமால்‌.
“இடர்‌ துடைத்‌ தேக விண்டு பிறந்தனன்‌” என்பர்‌ கவிச்சக்ரவர்‌ த்திகள்‌ (சுந்தர காண்டம்‌),

உறையூரிற்‌ பாணனுதித்‌து இராகமொடு சங்கீத முவந்து பாடிக்‌
கறை நேமி நாரணனாந்‌ திருவரங்க ரடி யிணையிற்‌ கலந்த வாறும்‌;
நறையாருந்‌ துளவணி மால்‌ சடகோபனாய்‌ உதித்து நான்கென்‌ றோதும்‌
மறையாரும்‌ பொருளினையே தமிழ் செய்து தம் பதம் போய்‌ மருவு மாறும்‌; –4-

சடகோபன்‌ – தம்மாழ்வார்‌. சடம்‌ எனும்‌ வாயுவை வென்றவர்‌.
*சடம்வளை சடத்தை முனிந்தருள்‌ முனிவன்‌” -சடம்‌, ஆன்ம ஞானத்தை அழிக்கும்‌,

மதுரகவி யுணர்ந்து திரு வாய் மொழியைப்‌ புவியிடையே மலியச்‌ செய்து
சதிருடனே சடகோபர்‌ தமைப் பாடிப்‌ பரமபதஞ்‌ சார்ந்த வாறும்‌;
புதுவையற்குக்‌ கோதை குழல்‌ சூடிய பூ மாலை தனைப்‌ பொருந்த நல்கி
முதிர் சுவை சேர்‌ தமிழ் பாடி யவளரங்கர்‌ தம்மை மணம்‌ முடித்த வாறும்‌; –5–

“துன்பற்ற மதுரகவி தோன்றக்‌ காட்டும்‌ தொல் நெறி’ என்பர்‌ வேதாந்த தேசிகர்‌.
பெரிய ஜீயர்‌ (மதுரகவி சொற்படியே நிலையாகப்‌ பெற்றோம்‌” என்பர்‌,

வேதமதைப்‌ பன்னிருவர்‌ தமிழ் செயு நாலாயிரமும்‌ விளிந்த வாற்றால்‌
நாதமுனி விக்கிரமாம்‌ மாறனுரைத்‌ திட வெழுதி நாட்டு மாறும்‌;
ஓது திரு மந்திரமே முதலான பொருள்களெலா முய்யக்‌ கொண்டார்‌
கோதில் மணக்‌ கால் நம்பிக்‌ குபதேசத்‌தவர் பதத்திற்‌ குறுகு மாறும்‌–6-

விக்கரமாம்‌ மாறன்‌ – அர்ச்சாவதாரமான நம்மாழ்வார்‌. விக்ரஹம்‌ என்ற வடமொழிச்‌ சொல்லை * விக்கிரம்‌ * என்று திரித்துக் கொண்டார்
மந்திரமே முதலான பொருள்கள் -1–திருமந்திரம் -2-த்வயம் – 3. சரமஸ்லோகம்‌,

வாளமருங்‌ கரச் சோழன்‌ குருவா மாக்‌கி யாழ்வானை வாது தன்னில்‌
ஆளவந்தார்‌ வென்று மணக்‌ கால் நம்பி யிடத்து மந்த்ரம் அறிந்திட்‌ டாங்கோர்‌
நாள தனில்‌ பெரிய நம்பி முதலானோர்க்‌ குபதேசம்‌ நவின்ற வாறும்‌;
மீள வந்த தெரிசனத்தைப்‌ பெரிய நம்பிக்‌ களிக்க வவர்‌ விரும்பு மாறும்‌; –7-

பரசமய மதகரியை வென்‌ றிடுங்கோ ளரியெனவே பரவி வானம்‌
தரைமுழுதும்‌ புகழ்சீர்த்திப்‌ பெரும்பூதா ரெதிராசர்‌ சரிதந்‌ தானும்‌;
அரன்பரனென்‌ றெழுதுபடத்‌ துடனடைந்த கிருமிகண்ட னஹறைறந்த கட்சி
உரைகள்‌ தனக்‌ கெதிருரைக ளுரைத்துரைத்துக்‌ கூரத்தா னுரைவெல்‌ .பாங்கும்‌; 8–இராமானுஜரைச்‌ சிங்க ஏறு” என்பர்‌ மணவாளதாசர்‌.

———-

(வேறு)
மகுத்துவ முடையவிவ்‌ வாற தாயதில்
மிகுத்திடுங்‌ கதைகளும்‌ விரித்து ணர்ந்திட
வகுத்துரை மணிப்பிர வாளத்‌’ தின்வகை
தொகுத்துப்பா விருத்தமாய்த்‌ தமிழிற்‌ சொல்வனால்‌. 9

‘ அவையடக்கம்‌
பொருதிரைக்‌ கடலினிற்‌ பொருந்து நீரெலாம்‌
ஒருசிறு குருவிசென்‌ றுண்ணல்‌ போலவே
பெருகிய காதலாற்‌ பேச ரும்பெருங்‌ :
குருபரம்‌ பரையினைக்‌ கூறல்‌ மேயினேன்‌| 1

நாறுசெந்‌ தாமரை தாண்ம லர்பெருஞ்‌
சேறிடை யெழுகனுந்‌ தேவர்‌ கொள்வபோல்‌
தேறுமாழ்‌ வார்கள்தம்‌ கதையைத்‌ இமையேன்‌
கூறினும்‌ பெரியர்கள்‌ உவந்து கொள்வரால்‌, 2

மெல்லிய பாலர்கள்‌ விளம்பி டும்மிளஞ்‌ .
சொல்லினை த்‌ தந்தைதாய்‌ சூழ்ந்து கேட்பபோல்‌
நல்லியல்‌ நாவுடைப்‌ புலவர்‌ நன்கிலேன்‌.
புல்லிய சொல்லையும்‌ பொறுத்துக்‌ கேட்ப்ரால்‌. 2

குலவுமென்‌ மொழியுடைக்‌ கோ லத்துஎதிர்‌
நலமிலாப்‌ புன்கொடி நவிற்றல்‌ போலவே
அலஇூலாப்‌ பல்கலை யறிந்து ஸணர்ந்திடும்‌
புலவர்முன்‌ பரிவிலேன்‌ புகல்கன்‌ றேனரோ. – 4

பூவரு: நான்முகப்‌ புனிதன்‌ தன்னுடை
நாவரு வெண்கம லத்து நாயகி
மாவருள்‌ மாட்சியால்‌ வைய: மீதுளோர்‌
யாவரு முணரவீ தறைகின்‌ றேனரோ. –5-

நாட்டுச்‌ சிறப்பு
வான்சி றந்து மழைபொழிந்‌ தோங்களீர்‌
தான்ம லிந்து நதிகள்‌ பெருகிட
ஊன்பொ ருந்தி யுயிர்கள்‌ செழித்திட
ஆன்சு ரந்து அமுத மளிக்குமே. 1

சென்னெ லோங்கி வயல்கள்‌ செழித்திடும்‌
கன்ன லோடு கமுகுங்‌ கவின்கொாளும்‌
வன்ன மாமலர்ச்‌ சோலை வளம்பெறும்‌
அன்னம்‌ வாழுந்‌ தடங்க ளமைந்தவே. 2

வாழ்த்து
விரைசெய்‌ யந்தணர்‌ வேதம்‌ விளம்புக
துரைகள்‌ நீதிச்செங்‌ கோலுந்‌ துலங்குக
உரைசெய்‌ தேவ ரடியரு மோங்குக
திரைக உற்புவி வாழ்வு செழிக்கவே. 3

பயன்‌
இந்த மாக்கதை யின்பொருள்‌ யாவையுஞ்‌
ந்தை கொண்டு தெளிந்துரைப்‌ போர்களும்‌
உந்து காத லுடன்செவி யுள்ளுற வந்து கேட்டு மகழ்நரும்‌ வாழ்கவே! –4-

———

தோற்றுவாய்‌
உலக மோடய ஸுருத்திர னும்பர்கோன்‌ முதலாம்‌
புலவர்‌ பல்லுயிர்‌ யாவையும்‌ பூத்தளித்‌ தழிக்கும்‌
அலகில்‌ பல்விளை யாடல்செய்‌ தெவற்றையு மகட்டுற்று
இலகப்‌ பாலடை வளருமால்‌ வைகுந்தத்‌ திருந்தே. 1

உலகை இறைவன்‌ அழித்தான்‌ .என்றால்‌ இல்லாது செய்துவிட்டான்‌ என்று கருதக்கூடாது, இதனைச்‌ “சற்காரியவா தம்‌”என்பர்‌.
கவிச்சக்ரவர்த்தியார்‌ ஒருவரே இந்‌ நுட்பம்‌ உணர்ந்து ‘உளவாக்கல்‌, திலைபெறுத்தல்‌, நீக்கல்‌” என்பர்‌. புதியபயொருள்‌ தோன்றாது: பழைய பொருள்‌ அழியாது.

பால்‌ அடை, பாற்சகடலிலும்‌ ஆலிலையிலும்‌ என்று பொருள்‌ கொள்ளவேண்டும்‌.

தொடுத்த பல்லுயிர்த்‌ தொகுதிகள்‌ துவக்கறு மாறாய்‌
எடுத்த நம்மவ தாரங்க ளெண்ணில வ்வற்றை
அடுத்து நல்லறி விலாமையின்‌ அறிகில ராக்‌
கடுத்தெ இர்ந்திறந்‌ தாரசு ரேசர்நங்‌ கையினால்‌. 2

மானி டர்சிலர்‌ பரம்பொருள்‌ நாமென மதித்து
சரூன மல்கிநல்‌ லொழுக்கராய்‌ நாடொறும்‌ அன்பு
தானி ழைத்திருந்‌ துலகமா மாயையைத்‌ தடிந்து
வான வர்க்குமெட்‌ டாதவிப்‌ பதவிமன்‌ ஸனினரால்‌. 3–உலக மா மாயை என்றும்‌ உலகமாம்‌ மாயை என்றும்‌ பிரிக்கலாம்‌.

இன்ன வாறுசெய்‌ இவணடைந்‌ தனம்‌இனி யுலகின்‌
முன்னர்‌ செய்தவல்‌ வினைகளான்‌ முடிவிலாச்‌ சனனம்‌
மன்னி வாழ்பல வுயிரெலா மாய்தலுற்‌ பவித்தல்‌ ..
தன்னை யெவ்வகை யொழித்துதம்‌ பதந்தனிற்‌ சார்வார்‌. 4

நவ்வி காட்டியே வலையினால்‌ நவ்விகள்‌ தமையே
வவ்வு மாறென விவர்களா லவர்மயங்‌ குளத்தைச்‌
செவ்வி தாக்கியே சேர்த்திடும்‌ செயல்புரி குதலே
ஐஒவ்வு மென்னவண்‌ டுணுமதுத்‌ துளவமால்‌ ஓர்ந்தான்‌. 5

தவ்வி- மான்‌, *மாசைக்‌ கொண்டு மானைப்‌ பிடிப்பவர்போல்‌ இவர்‌களால்‌ அவர்கள்‌ உளத்தைச்‌ -செவ்வீதாக்குவோம்‌; “பிறகு நம்‌ பரமபதத்தில்‌
சேர்த்துக் கொள்வோம்‌” என்று தி ருமால்‌ கருதினான்‌.

பாயிரம்‌ முற்றும்‌

—-

முதலாழ்வார்கள்‌ திருவவதார அத்தியாயம்‌

ஐப்பசியில்‌ ஓணம்‌ அவிட்டம்‌ சுதையமிவை.
ஒப்பிலா நாள்கள்‌ உலகத்தீர்‌ — எப்புவியும்‌
பேசுபுகழ்ப்‌ பொய்கையார்‌ .பூதத்தார்‌ பேயாழ்வார்‌
தேசுடனே தோன்றுசிறப்‌ பால்‌. (உபதச ரத்‌இனமாலை, 6.)

திருமாலின்‌ கட்டளை
முத்த ரானவற்‌ குருத்தனை யளித்‌திடா முகுந்தன்‌ பத்தி செய்திருந்‌ தவர்களில்‌ மூவரைப்‌ பாரா
நித்தர் கேண்மினோ உலகுடை நீருதித்‌ தெவரும்‌
இத்த லம் பெறத்‌ திருத்தி மீண்‌ டெய்திடும்‌ எனலும்‌; 6

மூவர்‌ மறுப்புரை
கே ட்ட மூவரும்‌ பிரிவெனு மருந்துயர்‌ கிளர
வாட்ட மோடுன *தடிபிரியோ’ மென மறுக்க
மீட்டு மாங்கவர்‌ பொருந்துற மிகுநற வருந்துப்‌
பாட்டு வண்டிமிர்‌ துளவினான்‌ பகர்தன்மே யினனால்‌, 7

திருமால்‌
வருந்த லீரும துளத்தையா மகல்கிலம்‌ வடிவேற்‌
கருந்த டங்கணார்‌ புழுமல்கு மகட்டினிற்‌ கருவாய்ப்‌
பொருந்து றாதுநல்‌ விருந்தெனக்‌ களிப்பொடும்‌ புகுவண்‌
டருந்து தேன்றுளி மலர்மிசை யதவரித்‌ திடுமின்‌. 8

சன்று கூறியுண்‌ மயர்வரு மதியுமீந்‌ தஇடலால்‌
ஒன்றும்‌ வேறுரை யுரைத்திடா துரந்தனி லருந்தேன்‌
துன்று தாரணி மூவரும்‌ சுரபிவிட்‌ டகலும்‌
கன்‌ று போலவே விடைகொடு மீண்டனர்‌ கடிதில்‌. 9

முதலாழ்வார்கள்‌ அவதாரம்‌
ஆமி தேயென. ஐப்பசி ஓணநாள்‌ அதனில்‌
மாம திதவழ்‌ மாடமார்‌ கச்சிவந்‌ தொருவர்‌
காமர்‌ வண்டினங்‌ களித்துணத்‌ துளிமதுக்‌ கமழ்பூந்‌
தாமரைதனிற்‌ பொய்கைய ராயவ தரித்தார்‌. 10

மருக்கொண் மாலைய ரொருவர்‌ ஐப்‌பசிஅவிட்‌ டத்தில்‌
அருக்கன்‌ தேரிடறிட வுயர் மேடைகள் அமைந்த
திருக்க டன்மல்லை நகரில்‌ பூதத்தராய்த்‌ இகழும்‌
குருக்கத்‌ தஇம்மல ரதனிலே யுதித்தனர்‌ குறித்தே 11

பயிலும்‌ ஐப்பசி சதையநாள்‌ பேயராய்ப்‌ பரவும்‌
வெயிலை மாற்றிடும்‌ சோலையும்‌ வெண்சுதை மேலிக்‌
கயிலை போலுயர்‌ மாடமா ளிகைகளுங்‌ கவினும்‌
மயிலை மாநகர்‌ நெய்தலி னொருவர் வந்‌ தனரால்‌. 12

தேவ ரும்மலர்‌ சொரிந்திடத்‌ தஇங்களொன்‌ றினிலம்‌
மூவ ரும்பதி மூன்றிடை மூன்றுநாள்‌ தெய்வப்‌
பூவ ரும்மணி போலவிம்‌ முப்பெயர்‌ புளைந்து
யாவ ரும்பத மணுகுறும்‌ படியவ தரித்தார்‌. 13

செந்தி ௬ப்பதி யானநார ணன்‌ றிரு வடியாம்‌
அந்த மூவரு மொருவரை யொருவர்கண்‌ டறியார்‌
பந்த மாகிய காமமுங்‌ குரோதமும்‌ படரார்‌
வந்த மாநக ரங்களில்‌ வளருமந்‌ நாளில்‌. 14

மாதேவர்‌ கட்கு ஞயர்தேவ னாகி
வனசப்‌ பொகுட்டி லமரும்‌
சதேவி நாத னலதில்லை வேறு
துணையென்று சிந்தை யவராய்‌
மீதே யெழுத்த குமிழ்போ லழிந்து விடுதேக மேவ லிதுதான்‌
இதே யெனப்பி றவிசா கரத்தை
யொழிக்கின்ற சிந்தை யவராய்‌; 15

ஆனந்த மெய்து மால்லோக மேவி
யணைகன்ற சந்தை யவராய்‌-
ஞானம்‌ சுரந்த வுளமோ டெவற்கும்‌
நயமா மொழிப்பு கல்வராய்த்‌
தானம்‌ விளங்கு தருமங்க ளென்ற
துவமே யிழைக்கு மவராய்‌
மோனம்‌ பொருந்தி யுடையோர்கள்‌ பாத
மூளரித்‌ தொழுது மெனவே; 16

திருக்கோவலூரை அடைதல்‌
நாடித்‌ தரும்பொய்கை யார்கச்‌ச யாம்பொன்‌
நகரைத்‌ துறந்து லகெலாம்‌
தேடிப்‌ புகன்று பெரியோர்கள்‌ தம்மைத்‌
தெரிசித்‌ துயர்ந்த பலநீர்‌
ஆடித்‌ திருப்ப திகடோறு மெய்தி
அரிதாள்கள்‌ தமது முடிமேல்‌. ௭
சூடிப்‌ புகழ்ந்து இருக்கோ வலூரை
மகிழ்வில்‌ தொடர்ந்த ணுகியே; 17

பெருமாளைப்‌ பணிதல்‌
சந்‌ தாகு லம்தவிர்செ யானாய ஸனாரைத்‌
தெரிசத்‌ தழைத்த கரிமுன்‌ வந்தாய்‌ அயன்ற னுடனண்டம்‌ யாவும்‌
வளருந்தி மாம லரிலே
தந்தாய்‌ அரற்கு விதிசாபம்‌ நீக்கு
தலைவா நினைத்தெ ஸளிவர்யார்‌? | ப
எந்தாய்‌உ னம்பொ னடிபோற்றி! போற்றி.
எனமந்த்ர மோதித்‌ தொழுதார்‌… ……. 18

மூவர்‌ -சந்திப்பு
இவ்வாறு மீண்டு தொழுதந்த. வூரி. : னிடையன்‌ றிருந்த வளவில்‌
அவ்வாறு மற்ற விருவோரு மெண்சி –
யவர்வைகு மூர்கள்‌ , அகல்‌:எவ்வாறு மாடி யடியா ரிணங்கு
பதிதகோறு மெய்தி மகிழா
ஒவ்வாத கோவல்‌ நகராய னாரை
யுசுவிற்‌ புகழ்ந்து தொழுதார்‌. 19

தொழுதந்த வூரி னிடைவைக வன்று
தொலையாது காலு மழையும்‌
பொழுதத்தி மல்கு மிரவிற்‌ செறிந்து
பொழியெல்லை பொய்கை யருநூல்‌
முழுதும்‌ தெரிந்த வொருவேத ஸில்லின்‌
முடுகிப்‌ புகுந்து நடையில்‌ பழுதொன்றி லர்த சிறுதிண்ணை கண்டு
பரிவோடு பள்ளி கொளலும்‌; 20

பொய்கையார்‌ வேதன்‌ இல்லில்‌ உள்ள இண்ணையில்‌ பள்ளிகொண்
டார்‌. வேதன்‌ – வேதங்களைத்‌ தெரிந்தவன்‌. பரிவோடு – அன்புடன்‌.

பூதத்த ரம்பெய்‌ மழையால்‌ வருந்தி
யிடநாடிப்‌ பொய்கை துயிலும்‌
வேதத்த ஸில்லின்‌ மணிவாயில்‌ வந்துள்‌
விழைவோ டிருப்ப வர்கள்யார்‌?
ஊதற்‌ பெருக்கு தடியேன்‌ படுக்க
உளதோ இடமெ னலுமே
இதற்ற பொய்கை யவர்கண்‌ திறந்து
இருவாய்‌ மலர்ந்து மொழிவார்‌, 21

ஒருவர்‌ படுக்க இடமுள்ள திங்கண்‌
. உறைவேன்‌ விரும்பி வரில்நம்‌
இருவர்க்‌ கிருக்க இடமாகும்‌ வாரு
மெனவே யெழுந்து கதவைத்‌ துருவித்‌ இறக்க வவருட்‌ புகுந்து துணையாக நள்ளி ருளின்வாய்‌
மருவிச்‌ சிறந்த விருவோரு முள்ளம்‌
மக௫ழ்வோ டிருந்த விடையில்‌. – 22

பேயாரு மந்தத்‌ தலைவா யிடத்துப்‌
பிறழ்மேனி யோடு மணுகா
நாயேன்‌ தனக்கு முளதோ விருக்கை
-நவில்வீ ரெனப்பு கலவத்‌
தூயோரு மிங்க ணிருவர்க்‌ இருக்கும்‌
இடம்நீர்‌ தொடர்ந்த ணுகிடிற்‌ சாயாது நிற்கு மிடமாகும்‌ என்று
தாழைத்‌ திறந்து விடலும்‌. 23

இறைவன்‌ நெருக்குதல்‌
நெய்தற்‌ சிறந்த மலரிற்‌ பிறந்த
நிமலன்‌ மகிழ்ந்து விரைவாய்‌
எய்தப்‌ பொருந்து மவர்மூவர்‌ தாமும்‌
இனிதோடு நின்ற விடையிற்‌
கைதக்க வைந்து படையாய ஸனாருள்‌
கருதித்‌ இருப்பொ லியவே
நொய்திற்‌ புகுந்து புகலங்‌ கவர்க்குள்‌
நுழையா நெருக்கி யிடலும்‌. –24-

ஐந்து படையாயளனார்‌-
ஐந்து ஆயுதங்களைக்‌ கையில்‌ ஏந்திய ஆயன்‌ (இருக்கோவலார்ப்‌ பெருமான்‌
பெயர்‌ ஆயனார்‌; ஆனாயன்‌). நொய்தில்‌-எளிதாக, மற்றவர்‌ இடர்ப்பட்டு
நுழைந்தனர்‌. ஆயன்‌ எளிதே புகுந்து நெருக்கினான்‌.

தன்னேரி லாத திருமால்‌ புகுந்த
தனைநின்று ளோர்க எளறியார்‌
முன்னே யிருந்த ததிலும்‌ நெருங்கு முறையால்‌ வினவு தல்செயாப்‌
பின்னே யொருத்தர்‌ வரவில்லை வேறு
குரலில்லை பேச்சு தொனியா
என்னே நெருக்க மிதுகாண வேணு
மெனவந்த மூவர்‌ களுமே, 25

விளக்கேற்றுதல்‌
உள்ளத்து ஞள்ளி யரிதான ஞான
வொளிதீப மேந்தி யடர்பால்‌
வெள்ளத்து வந்த இருமார்பின்‌ மல்க
மிளிரைம்‌ படைக்க ரமின
நள்ளிற்‌ சிறந்த கருமேக மென்ன
வுருமல்க நார ணரெனுங்‌
கள்ளத்‌ தடைந்த திருவாய னாரைக்‌
கனிவோடு கண்டு ரகனார்‌. 26

இங்கு *பாவரும்‌ புகழால்‌ பேர்பெறு
பனுவல்‌ பாவலர்‌ பாதிநானிரவில்‌-மூவரும்நெருக்கி மொழி விளக்கேற்றி முதத்‌
தளைத்‌ தொழுத நன்னாடு” என்ற வரந்தருவார்‌ பாடல்‌ அனுசந்திக்க வேண்டும்‌, .

இறைவனைக்‌ காணுதல்‌
ஆனந்த மாவர்‌ புகழ்வார்‌ நடிப்பர்‌
அப்பார்‌ விழுந்து புரள்வர்‌
மோனம்‌ பொருந்தி யுரையா திருப்பர்‌
எழுவார்கள்‌ ஓடி. முதிர்தேன்‌

பானஞ்செய்‌ தோரில்‌ புரிகின்ற செய்கை
யுணரார்‌ பரிந்து தொழுவார்‌
ஞானம்‌ விளங்கு பரிவான. வோடை
யதுமூழ்கி யேந வில்வரால்‌. 27
துதிப்பாடல்கள்‌
ஆதியே! எம்மை யாளு மையனே! வைய முண்ட
சோதியே! அடியர்‌ நெஞ்சிற்‌ சுடரொளி யாகி தின்ற
வேதியா! முகுந்தா। கண்ணா! விண்டுவே[ அரியே! மாலே!
நீதியாய்‌! உலகம்‌ தாங்கு நிமலனே! கமலை .மார்பா! 28
உந்திமா மலரி னீரேழ்‌ —
புவனம தளித்த தோங்க
முந்திவே தன்ற னோடு
முக்கணான்‌ தனைச்சிட்‌ டித்துத்‌
தொந்தநால்‌ வகைப்பி றப்பேழ்‌
தோற்றமெண்‌ பத்து நான்காம்‌
அந்தமா ரிலக்க மான
சராசர மவையுண்‌ டாக்கி, ்‌ 29

நால்‌
வகைப்‌ பிறப்பையும்‌, எழுவகையான தோற்றத்தையும்‌ எண்பத்து நான்கு லட்ச
யோனி பேதத்தையும்‌ தோன்றச்‌ செய்து.
நால்வகைப்‌ பிறப்பு:. 7, பையில்‌ பிறப்பவை. 2. முட்டையில்‌ பிறப்பவை.
9. திலத்தில்‌ பிறப்பவை. 4, வியர்வையிற்‌ பிறப்பவை,
“தோற்றம்‌ நான்காம்‌ ; அவை பை, முட்டை, நிலம்‌, வியர்வையில்‌ திகழும்‌
என்ப” (பொருட்டொகை நிகண்டு).
எழுவகைத்‌ தோற்றம்‌, .. தேவர்‌ 8. மக்கள்‌ 8. விலங்கு 4, புள்‌ 5, ஊர்வன
6. நீர்‌ வாழ்வன 7. நிற்பன: எண்பத்து நான்காம்‌ சராசரம்‌: 1. தேவர்‌ 14 இலட்சம்‌;
. 2, மக்கள்‌ 9 லட்சம்‌; 8. விலங்கு 10 லட்சம்‌; 4. புள்‌ 10 லட்சம்‌; 5, நீர்‌ வாழ்வன
0 லட்சம்‌;: 6. ஊர்வன 11 லட்சம்‌; 7, நிற்பன 80 லட்சம்‌; சரம்‌-௮அசைவன.
அசரம்‌-அசையாதன.

உருப்பவித்‌ இடுதல்‌ காத்த
லொழித்திட லெனுமூச்‌ செய்கை
விருப்பொடு புரியு மக்கா ரணனென விளங்கும்‌ தன்மை கருத்திடை மதித்துத்‌ தேர்ந்து கண்கணீர்‌ பெருகச்‌ சோர
வுருக்கமாய்த்‌ தொழுதக்‌ கார்கள்‌
ஒருவரை யேனும்‌ காணேம்‌. 90

அத்தியின்‌ கனியி னுள்ளே
யறிவரி தாக வைகும்‌
வித்தெனத்‌ தெரியா வண்ண
மெய்யுயி ரனைத்தி னுள்ளும்‌
ஓத்துறை கின்ற நின்னை உருத்திரன்‌ பிரமன்‌ வானோர்‌
முத்தரு மறியார்‌ எம்மால்‌
அறியலா முறையுண்‌ டாமோ. ‘ 94

இறைவன்‌ கட்டளை
என்றுகொண் டிறைஞ்சி யுள்ளம்‌
இழுதென வுருகி நின்றே ஒன்றையு மறியா வெங்கட்‌
குணர்வளித்‌ தருள்வா யென்ன
நன்றுநன்‌ ஹறென்ன வுள்ளம்‌
நயந்திள நகையுந்‌ தோன்றக்‌
கன்றைவந்‌ தடைந்த ஆனிற்‌
கண்ணருள்‌ பெருக நோக்கா. 32

ஏரியு நிரம்பிக்‌ கொள்ளா
இருங்கரை யுடைத்திட்‌ டேகும்‌
நீரினைச்‌ சனெவா தெய்தி

யடைத்ததை நிரப்பு மாபோற்‌ சீரிய நுங்கள்‌ தம்மை
விடுகிலேம்‌ தெளிமி னென்னாப்‌
பாரினை விழுங்கிக்‌ காக்கும்‌
பச்சைமால்‌ பகர்ந்தா னன்றே. _ 33

இந்தவா சகங்கள்‌ கேளா
வெமக்கருள்‌ புரியு மந்நாள்‌
எந்தநாள்‌ அந்த நாளை
யியம்பிட வேண்டு மென்ன
– அந்தமா யாதி யாகி
யடிமுடி தெரியொ ணாத
செந்திரு மணாள னம்பொன்‌
இருவடி வணங்கி ஸனாரால்‌. 34

வணங்கலு மகிழ்ந்து மாயன்‌
மார்பினோ டிறுகப்‌ புல்லிப்‌
பணங்களி னரவு தாங்கும்‌
பாரினுற்‌ றோர்க ளெல்லாங்‌
குணங்கமழ்‌ தருமா நந்த பதத்திடைக்‌ குறுகி யாங்கண்‌
இணங்குநம்‌ மடியா ரோடு மினிதுவீற்‌ றிருக்கு’ மாறாய்‌. 35

மன்னெறி பொருந்து மப்போ
குனைகளை மறையைச்‌ சார்ந்த
குன்னைமா மாலை யாஞ்செந்‌
தமிழினாற்‌ கவிகள்‌ பாடிப்‌ பன்னுமிப்‌ புவியின்‌ மீது
பற்பகல்‌ வைகடிப்‌ பின்னர்‌
துன்னுமின்‌ அங்கென்‌ றோதித்‌
துளபமால்‌ மறைந்தான்‌ அன்றே. 36

மூவர்களின்‌ அருளிச்‌ செயலின்‌ மாண்பு
மறைந்து போதலு மற்றைய மூவரும்‌ மறுகி
நிறைந்த ஞானமும்‌ கல்வியும்‌ விளங்கிட நிணம்தோய்ந்‌
துறைந்த நேமிசங்‌ குடையமால்‌ உவப்புடன்‌ வாய்விண்‌
டறைந்த வாசக முறைவழா தரியநூல்‌ நூற்றார்‌. 37

மாயை யாம்பெரும்‌ பிணிதனை மாற்றுநன்‌ மருந்தாய்‌
நேய மாம்பெரும்‌ பசியினை நீக்குமா ரமுதாய்‌
மேய காமவேள்‌ வேட்கையாம்‌ வெயிலொழி நிழலாய்‌
ஓய்வி லாப்பிற விக்கட னீந்துமோ டமதாய்‌. 38

துன்னி ர௬ுட்பட ஞானம்நல்‌ இடும்சுட ரொளியாய்‌
பன்னி டும்பர சமயக்கா னொழிபடைத்‌ துணையாய்‌
அன்ன மின்மையின்‌ வாடுயிர்ப்‌ பயிர்க்கரு மழையாய்‌
மன்னு நற்பத மேற்செலற்‌ கேணியாய்‌ மலிய, 39

பொய்கை யாழ்வா ரெனும்நாமம்‌ புனைந்த புலவர்‌ பொய்ம்மையிலா
மெய்ம்மை யுளம்சேர்‌ பாகவதர்‌ விரும்பி யருந்து நறுந்தேனிற்‌ செய்ய மறையோ திடும்பொருளைத்‌ தெளிந்தே யோர்ந்து தஇருவாக்கால்‌
வையந்‌ தகளி யெனநூறு வெண்பா நவின்றார்‌ வளம்பெறவே. 40

பொய்கையாழ்வார்‌ மங்களாசாசனம்‌ செய்த திவ்யதேசங்கள்‌
அந்த நூறு வெண்பாவென்‌
றமைந்த திருவந்‌ தாதிதனின்‌ முந்து பதிபாற்‌ கடலரங்கம்‌
முதிர்வேங்‌ கடம்பொன்‌ இருவெஃகா
விந்தை யுறையும்‌ திருக்கோவ
லூர்நல்‌ வளஞ்சேர்‌ விண்ணகரம்‌
இந்த வாறு தஇிருப்பதியும்‌ பொருந்திச்‌ றந்த விசைபெறவே. 41-பொய்கையார்‌ பாடிய பதிகள்‌ ஆறு.

முன்பே யுலகம்‌ புரிதவத்தான்‌
்‌ முதுமா மறையின்‌ பொருளுணர்ந்தே
தன்போ லிங்குப்‌ பலவுலகந்‌
… தனில்வா ழுயிர்கள்‌ சறப்படையப்‌
பொன்போல்‌ மேனிப்‌ பூதத்து
ஆழ்வார்‌ நாமம்‌ புனைபுலவர்‌
அன்பே தகளி யெனநூறு
வெண்பா வுரைத்தா ரழகுறவே. 42

பூதத்தாழ்வார்‌ மங்களாசாசனம்‌ செய்த திவ்யதேசங்கள்‌
வடவேங்‌ கடம்தென்‌ னரங்கமுநீர்‌ மலைபா டகமா லிருஞ்சோலை
யிடவெந்‌ தைபாற்‌ கடல்பேரை யெழிலார்‌ கோவ லூர்தஞ்சை கடன்மல்‌ லை? ரத்திநகர்‌
கோட்டி நகர்தண்‌ காலூரும்‌ குடந்தை யீரே முடனென்றவ்‌
வந்தா தியினுட்‌ கூறியதே. – 43 இவர்‌ பாடிய பதிகள்‌ பதினான்கு,

திருக்கண்‌ டேனென்றோ துறுஞ்சீர்‌
சிறந்தே யொளிர்வெண்‌ பாவதனைச்‌
சருக்க ரைகொண்‌் டரூந்துவபோற்‌
றரையோ ரருந்திக்‌ களிப்புறவே
யிருக்கு முதலா நான்மறையி
னியலும்‌ பொருளை யறிந்துணர்ந்தே
யுருக்க முடன்பே யாழ்வாராம்‌
நாமம்‌ புனைந்தோ ருகந்துரைத்தார்‌. 44

பேயாழ்வார்‌ மங்களாசாசனம்‌ செய்த திவ்யதேசங்கள்‌
அவ்வந்‌ தாதி தனிற்பதினைந்‌
தூர்பாற்‌ கடல்வேங்‌ கடமரங்கம்‌
ஒவ்வுங்‌ குடந்தை யிடவெந்தை
கோட்டி யூர்வே ளுக்கையுடன்‌
செவ்வெஃ காவை குந்தமட்ட
புயம்விண்‌ ணகர்‌€ ரலிக்கேணி
கவ்வி விசும்பார்‌ சோலைமலை
கடிகை கச்சிப்‌ பாடகமே. 45-பேயாழ்வார்‌ பாடிய இவ்யதேசங்கள்‌ பதினைந்து.

இந்த முறையா லிருக்கினில்வீற்‌
றிருக்கும்‌ பொருளை யம்மூவர்‌
செந்த மிழின்மூன்‌ றத்தாதி இருந்தப்‌ புகன்று பரசமயத்‌தந்தி தனக்கா ளரிபோலுந்‌
குயங்குள்‌ ளிருட்கா தவன்போலும்‌
எந்த வுலகத்‌ துள்ளோரும்‌
ஏத்தித்‌ தொழவாழ்ந்‌ தஇனிதிருந்தார்‌. 46

பரமபதம்‌ உறுதல்‌
அலகில்‌ பலநா ஸஎிரும்புவிமே
லவ்வா நிருந்து பரமபத
உலகத்‌ துளர்வந்‌ தெதுிர்கொளப்பொன்‌
னோங்கு விமான மதன்மிசைபோய்த்‌
இலக நுதற்செந்‌ திருமார்பன்‌
இருவம்‌ புயத்தாள்‌ தொழுதேத்தி, இலகு மணியா தனமிசைவீற்‌
றிருந்தார்‌ பிரிந்த விடாய்நீங்கி. 47–திலக நுதல்‌ செந்திரு – திலகமணித்த நெற்றியை உடைய பெரிய பிராட்டி.

தோன்று ஞான முடையவராய்த்‌
துலங்கு மாயை கடந்தவராய்‌
ஆன்ற மறையந்‌ தணர்முதலாய்‌
அறையும்‌ நான்கு வருணத்தார்‌
மூன்று திருவந்‌ தாதிக்குள்‌ முழுகிக்‌ காப்பிட்‌ டுணர்ந்தோதி
யேன்ற பரம பதந்தனிற்சென்‌
றிருந்தார்‌ சிறந்தார்‌ அடியரொடும்‌. 48 -கோவிலுக்குள்‌ செல்பவர்‌ நதியில்‌ மூழ்கிச்‌ செல்வது மரபு. பரமபதம்‌ செல்பவர்‌ மூன்று “இருவந்தாதியாம்‌ நதியில்‌ மூழ்கவேண்டும்‌,

இக்கா தையையன்‌ புடனேட்டில்‌
எழுதி னவரும்‌ படித்தவரும்‌ மிக்க விதனுட்‌ பொருள்கடமை
விரித்தே விளம்பி னவருமிதை
யொக்கு மெனக்கேட்‌ டுணர்ந்தவரு
மூலகிற்‌ பலநாள்‌ மகழ்ந்திருந்து
தக்க ஞானந்‌ தழைத்தனந்த சயனன்‌ பதம்போய்ச்‌ சார்ந்திடுவார்‌. 49

பெரியாழ்வார்‌ வரலாறு பேசுவோம்‌
முதன்மூன்‌ றாழ்வார்‌ களுமலர்மேன்‌
முளைத்த சரித மதனையிந்த
விதமா மெனவே விளம்பினம்சீர்‌
விளங்குந்‌ திருமால்‌ கமலவிரு
பதமார்‌ புயத்தி லணிகருட
பகவான்‌ புவிவந்‌ தவதரித்த
இதஞ்சேர்‌ பெரியாழ்‌ வார்சரித
மிதுவென்‌ றெடுத்திட்‌ டியம்பிடுவாம்‌. 50

பெரியாழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌
. இன்றைப்‌ பெருமை யறிந்திலையோ ஏழைநெஞ்சே
இன்றைக்கென்‌ னேற்ற மெனிலுரைக்கேன்‌ – நன்றிபுனை
பல்லாண்டு பாடியநம்‌ பட்டர்பிரான்‌ வந்துதித்த
நல்லாவனிச்சோதி நாள்‌, –உபதேசரத்தினமாலை…… 16

உலகநிலை
இவ்வாறினி தம்மூவரு மேகப்பல நாணீங்‌
கவ்வேலைமெய்ஞ்‌ ஞானம்மகன்‌ றஞ்ஞானம டைந்தே
யொவ்வாதவைம்‌ புலவேடருக்‌ குட்பட்டவ ராகி
வெவ்வேலையு டுக்கும்புவி மேல்வாழ்பவ ரெல்லாம்‌. 1

இறைவன்‌ கருடனுக்கிட்ட பணி
தருமத்துறை நடவாமல தருமத்துறை படவக்‌
கரமத்தினி லடைமூடவி லங்குற்றுளங்‌. கலங்கி
யொருவர்க்கெனும்‌ நலமென்பது நிலையாதவிவ்‌ வுலகு
திருமித்தத ளிக்குந்திரு நெடுமாலுள நினைந்தே. –2-தெருநல்‌ உளன்‌ ஒருவன்‌ இன்றில்லை என்னும்‌ பெருமை யுடைத்திவ்‌ வுலகு” என்பர்‌ திருவள்ளுவர்‌.

அருகற்பெரு வரையைப்பொரு முருவத்துட னணுகும்‌
கருடப்பெய ரவனைத்தன திருகட்கடை யருளாப்‌
பொருவற்றவ ரிவர்வாருஇப்‌ புவிவிட்டணு uses
மருவுற்றது பெருகிற்றிருண்‌ மலிமாயைக எதனால்‌. 3

நீபோய்பெரி யாழ்வாரென நிலமீதவ தரித்தே
மாபாவகொ டும்பாம்பினை மலியாமல டக்ூக்‌ :
காபாலிமுப்‌ புரமட்டவ னிருண்மாயைக எளைந்து
பூபாலுயர்‌ ஞானம்மது பெருகும்‌படி புரிவாய்‌, 4

கருடன்‌ விடைபெற்றான்‌
எனவேயுரை மொழிமேவித ஸிருசெஞ்செவி குறுகும்‌
மூனமேயவ னடிமாமலர்‌ முடிமீதுற வணியா
மனமேகொடு மதியாவிழி வழியேகொடு பருகா
கனவாய்கொடு துதியாவிடை. கொடுமேல்பதி கடவா. 5

பெரியாழ்வா அவதாரம்‌ y,
கனமேனிக ரியமேதி கலக்கும்மடு விடைவாழ்‌
சனமேவுவ ரால்பாய்தரத்‌ தென்னங்களனி யுதிரப்‌
புனமேவுக ரும்பிற்றுதிர்‌ மணிகள்பொழி நிலவின்‌
இனமாமெனக்‌ குமுதங்களி னிதழ்விண்டிடும்‌ வயலார்‌ 6

இதன்‌ உள்ளுறை. மேதிகள்‌ சமயவாதிகள்‌. மீன்‌-மீனையே கொடியாகக்‌
மொண்ட பாண்டியன்‌. உதிர்ந்த காய்கள்‌-சமயவாதிகளின்‌ ஆரவாரம்‌, கரும்பு
முறிந்து மணி வெளிப்பட்டது-பெரியாழ்வார்‌ சினந்து பரத்துவ நிர்ணயம்‌
செய்தது. குமுதம்‌ மலர்ந்தது- திருமால்‌ காட்சி வழங்கியது.

இருவில்லிபுத்‌ தாரென்றுரை செயுமப்பெரு நகரின்‌
மருவந்தணர்‌ குலமென்றிசை வகையிற்புனி தமதாய்‌
குருவென்றுய ரியசோழிய குலனிற்பிர மனைநேர்‌
ஒருவன்குல மணியென்னமு குந்தப்பெய ௬டையான்‌ 7

அறையும்மறை யவன்மாமனை யவள்பற்புமை யென்பாள்‌
பொறையிற்புவி யனையாளெழில்‌ பொலிவிற்றிரு நிகர்வாள்‌
நிறைகற்பினில்‌ வடமீனினை நிகர்வாள்குயின்‌ மொழியாள்‌
பிறையொத்திடு நுதலாளனப்‌ பெடையொப்பிடு நடையாள்‌ 8

அம்மாமட மகளின்றிரு வகடாமிட மதனுள்‌
இம்மாநில மிடைவாழ்ந்தினி திருக்கும்பல வுயிர்க்கும்‌
செம்மாவறி வினைமூடிடச்‌ செறியைம்புல விருளை
விம்மாதொழி வகைசெய்திடு மெய்ஞ்ஞான முகிழ்க்க. 9

ஒருமாகதி ரவனாயினி துதயஞ்செயு மதுபோற்
கருவாகவ மைந்தேகலந்‌ திடுநாளது முதலாய்‌
வரும்ாதம னைத்துங்குறி யவள்பால்மலி தர ஐ
யிருமாதமு நிறைவாய்முடி வெனலாகிய திருநாள்‌. 10

திருவவதரித்த நாள்‌
மிதுனத்திரு மதியிற்பிறை மிளிர்சுக்கல பக்கம்‌
அதனுக்குளி னுதிசோதிய தெனுமத்திரு நாளின்‌ மதனொத்தொளி ர௬ுருவத்தொடு வளையுற்றிடு மணிகள்‌
அதுமுற்றிட சிறகிற்பொரு தரித்தானவ தரித்தான்‌. 11

தந்தையின்‌ செயல்‌
மைந்த னங்குவந்‌ துதித்தலு முளமது மஇழ்வாய்த்‌
தந்தை யாகிய முகுந்தனுஞ்‌ சதுர்மறை நெறியைச்‌ சிந்தி யாசதஞ்‌ சீவவென்‌ றேயெடுத்‌ தெடுத்து
முத்த வாசிகள்‌ பலபல புகன்றனன்‌ முறையால்‌. 12

முகுத்தர்‌ மைந்தனைக்‌ கண்டு, சதம்‌ சீவ!” என்று வாழ்த்தினார்‌.
“இன்னுமொரு நூற்றாண்டிரும்‌’ என்று பல்லாண்டு பாடுவது வைணவ மரபு.
சதம்‌-நூறாண்டு, சீவ-வாழ்க/

புதையி ருட்பிழம்‌ பனையமா மாயையைப்‌ பொடியாச்‌
சிதையு மாறழித்‌ தொழித்திடச்‌ செங்கதி ரவன்வந்‌
துதைய மாயின னெனவுகஇத்‌ திடுமக வினுக்காய்‌
விதைமு தற்பல தானமும்‌ விதம்விதம்‌ வழங்கி. 13

மாயையைப்‌ பொடி யாய்ச்‌ செய்யும்‌ கதிரவன்‌ போல்‌ தோன்றிய மகவுக்காக விதை முதலான தானங்‌கள்‌ செய்தார்‌ முகுத்தர்‌.

மற்றும்‌. செய்வன யாவையுஞ்‌ செய்தனர்‌ ம௫ழ்வால்‌
வெற்றி யாழிநா ரணன்றிரு வருளினால்‌ விரைவோ
டுற்ற பாற்கடல்‌ கடைந்தநா ளூதத்தவா ரமுதம்‌ பெற்ற வானவ ரொத்தன ரந்நகர்ப்‌ பெரியோர்‌. 14

பெரியாழ்வார்‌ வளர்ந்தார்‌
ஊட்டி யும்முலை யுச்சிநெய்‌ தடவிமஞ்‌ சனநீ
ராட்டி யும்மணித்‌ தொட்டிலிட்‌ டசக்கியம்‌ புலியைக்‌
காட்டி யும்மடி மிசைவைத்தும்‌ கண்ணிறை கழித்தும்‌
ஈட்டி யிம்முறை பலபல்‌ ம௫ழ்வினோ டிழைப்ப. –15-

கிடந்த சைந்தும்பின்‌ கவிழ்ந்திட்டுந்‌ தவழ்தலாய்க்‌ கெழுமிப்‌
படர்ந்தி ருந்தும்பின்‌ பார்மிசை நின்றுதத்‌ தடியாய்‌
நடத்தும்‌ விம்மியும்‌’ நகைசெய்துந்‌ தந்தையும்‌ நல்கும்‌
மடத்தை யுங்களிப்‌ புறப்பல செய்கைகள்‌ மருவி. 16

சுதிர்செய்‌ நேமிநா ரணன்பத மலருளங்‌ கருஇத்‌
துதிசெய்‌ தேயுய ரியபதந்‌ தொடர்ந்திடப்‌ புவிமேல்‌
வதிப வர்க்குமெய்ஞ்‌ ஞானத்தை வளர்ப்பவந்‌ துதித்தோன்‌
மதிதி னங்கலை வளர்வபோல்‌ வளருமந்‌ நாளில்‌. 17

பெயர்‌ வைத்தல்‌
உட்பட்‌ டியாவரும்‌ பொருந்துற வூர்தியாய்க்‌ கருடப்‌
புட்ப டைத்தவர்க்‌ கேபரப்‌ பெயர்புனை விக்கும்‌
மூட்பொ திந்ததாட்‌ டாமரை தநிகர்தரு முகற்கு
விட்டு சித்தனென்‌ றேதிருப்‌ பெயர்புனை வித்தார்‌. 18
காப்பிடுதல்‌
விண்ணி டைப்பெருங்‌ கருடன்மேற்‌ றோன்றுவிண்‌ டுவுக்கு
மண்ணி டைக்குலப்‌ பாண்டிய னவையின்மா ஸிடர்தங்‌
கண்ணி றைப்பொருந்‌ தாதுபல்‌ லாண்டுகாப்‌ பிடுமப்‌
புண்ணி யர்க்குநற்‌ காப்புமிட்‌ டனர்பொருந்‌ துறவே. 19
அணிகலன்‌ புனைதல்‌
வண்டு ணும்மது மலரினை மாலையாய்த்‌ தொடுத்து
பண்டு மாநிலப்‌ பரப்பெலாம்‌ பாலன மெனவே
யுண்டு கந்தவற்‌ களிப்பவற்‌ குயாந்தபல்‌ கலங்கள்‌
கொண்டு மெய்யெலா மணிந்தனர்‌ குறைவில தாக. 20–பாலனம்‌-சிலேடை. பால்‌-அன்னம்‌ என்றும்‌, பாலனம்‌ என்றும்‌ கொண்டு நயம்‌ காண்க,

அன்னமுூட்டுதல்‌ .
மன்னு நால்வகை வருணருஞ்‌ செவியெனும்‌ வாயால்‌
பன்னி டுந்திரு வாய்மொழி யமுதினைப்‌ பருகப்‌
பின்ன ஸித்திடும்‌ விட்ணுசித்‌ தப்பெய ரவனுக்‌
கன்ன மாமமு தளித்தன ரன்புட னருந்த. 21
சடங்குகள்‌
தவள நேர்வளை யாழிமாற்‌ கோதுசெந்‌ தமிழாந்‌
திவளும்‌ வாள்கொடு தெய்வம்வே றுளதெனத்‌ தியங்க
உ.வளு மாயநூ லிருண்மயி ருகுத்தறுப்‌ பவர்க்குச்‌
சவள மாவதும்‌ கதிமுறைத்‌ தகவுட ஸிழைத்தார்‌. 22

இருபிறப்பாளராதல்‌
ஏலும்‌ வேதசாத்‌ -திரம்புரா ணங்களா யினவும்‌
மேலும்‌ தத்துவ முதலிய பலவென விளம்பும்‌
நூலெல்‌ லாமறிந்‌ தகத்தணி பவற்குநூன்‌ முறைய
தால ஸணிந்தனர்‌ முப்புரி நூலுமன்‌ புறவே. 23

இவ்வி – தம்புரி வனவிதி முறையெலா மியற்று
மவ்வி தம்புரிந்‌ தார்மகிழ்‌ வாயினர்‌ : அவனுஞ்‌
செவ்வி தாகிய பிரமசா ரியத்தொடும்‌ சிலநாள்‌ ்‌
ஒவ்விவாழ்ந்திருந்‌ தனனுவந்‌ துறையுமந்‌ நாளில்‌. 24

திருப்பணி
ஊர மித்தவன்‌ தந்தையாம்‌ பிரமனை யுதவும்‌
நார ணன்தஇிரு வுலகெலா மளந்திடு :நளினச்‌
சீர டிக்குமுன்‌ னுலகுதூ ளென்பதைத்‌ தெளிவு
கூர கத்திடை. யறிந்தன னாதியிற்‌ குமரன்‌. _ 25

அந்த வூரூறை வடபெருங்‌ கோயிலி லமர்ந்த
செந்தி ௬ப்பதி யானமா யவன்றிரு வடியை
முந்து காதலோ டணுகியே முறைமுறை வணங்கிச்‌
சிந்தை யோடிரு நயனமுஞ்‌ சிறந்திடக்‌ களித்தான்‌. 26

அடிமை செய்திடும்‌ தொழில்களில்‌ யாதினா லிந்த
நெடிய மால்திரு வுளமகழ்ந்‌ தஇடுமென நினையாக்‌
கடிகொண் மாமலரிதழொடுந்‌ தெளிமதுக்‌ கமழ்பூஞ்‌
செடிகள்‌ வைத்துப்பூ மாலைசாத்‌ திடலெனத்‌ தெளியா, 27

இதுவ லாற்பிரி திலையெனச்‌ சென்றிரு வாட்ட
மதுபொ மிந்துடுந்‌ துளவமல்‌ லிகைமுல்லை யலரிப்‌
புதும ணத்தசெவ்‌ வந்தியும்‌ புன்னைசெண்‌ பகமென்‌
பதுமு தற்பல சாதிபூ வனந்தனைப்‌ படைத்தே. 28

தேன்பொ ருந்துசெந்‌ தாமரை குமுதஞ்செங்‌ கழுநீர்‌
கான்பொ ருந்தும்வண்‌ டுறையும்வெண்‌ கமலமே முதலாம்‌
வான்பொ ருந்திடும்‌ தேவரும்‌ விரும்புமன்‌ மலர்க டான்பொ ருந்திடும்‌ பொய்கையும்‌ அமைத்தனன்‌ றகவாய்‌. 29

விடியு முன்றின மெழுந்துபோய்ப்‌ பொய்கையின்‌ மிளிர்நீர்‌
படித லேமுதற்‌ காலைசெய்‌ பலகடன்‌ முடித்து
நெடிய னாம்வட பத்திர சாயிபொன்‌ னிகர்சீர்‌
அடிவ ணங்கியே தந்தன வனந்தனை யணுகி. 30

கொத்தி டல்புனல்‌ விடலெருக்‌ கொணர்ந்துபூஞ்‌ செடிவேர்‌
வைத்தி டல்தண்ணீர்‌ பாய்ச்சுதல்‌ மலிகளை களைதல்‌
ஒத்து டச்சுவர்‌ வேலிவைத்‌ திடல்புழு வெடுத்தல்‌
இத்தி றம்புகல்‌ பக்குவம்‌ குறைவிலா திழைப்பார்‌. 31

விண்ட… லர்ந்தபூ மலர்களைப்‌ பத்தியால்‌ விரைந்து
வண்டு ஸணும்முனம்‌ மணமுறா மற்பரி வட்டால்‌
கொண்டு நாயைப்‌ பூட்டிப்பூக்‌ கூடையி லெடுத்துச்‌
செண்டு மாலைக டொடுத்திடு வான்தினந்‌ தோறும்‌. 32

வாசனை நாசியில்‌ புகாதபடி திருப்பரிவட்டத்தால்‌ பூட்டிக்‌ கொள்வார்‌. -* பூக்களைத்‌
தெரித்து புழுக்கடி போக்கிப்‌ பொய்யிலா மெய்யனார்‌ புரைதீர்‌ மூக்கலம்‌ மணம்‌
செள்‌ நடைந்திடா வண்ணம்‌ மூடிவாய்‌ புதைத்து”” என்பர்‌ வடிவழகய நம்பிதாசர்‌
(குருபரம்பரை). தமது நாசியில்‌ வாசனை ஏறாதபடி திருப்பரிவட்டத்தாற்‌
கட்டிக்‌ கொண்டு” என்று குருபரம்பரை ப்ரபாவம்‌ பேசும்‌ (பன்னீராயிரப்படி).

தொடுத்த: செண்டொடு மாலையைத்‌ துலங்குபாற்‌ கடலிற்‌
படுத்தி டும்வட பத்திர சாயிக்குப்‌ பகல்போய்‌
அடுத்த சந்தியிற்‌ கொண்டுசென்‌ . றற்சகர்‌ கரத்திற்‌
கொடுப்ப னிம்முறை நடக்குநா ஸூற்றகூ றுதுமால்‌. 33

பகல்‌ போய்‌ அடுத்த சந்தியில்‌ என்‌.றதால்‌ ஆழ்வார்‌ மாலைக்காலச்‌
சந்திக்கு மாலை முதலானவற்றை வழங்கினார்‌ என்று தெரிகிறது. ** பகற்‌ பொழு
தைக்‌ கழித்ததற்பின்‌ எய்த்த நறு மலர்ந்தித்‌ திருமாலை நேயத்தால்‌-பரமனுக்குச்‌
சமைத்தளித்தே” என்பர்‌ வடிவழகய நம்பிதாசர்‌ (குருபரம்பரை),

பாண்டிமன்னன்‌ செயல்‌ ஆழ்வார்‌ கிழியறுத்தல்‌
முருகவிழ்‌ தாமரை முத்தை. யீன்றிடும்‌
கருவென வனங்கிடை காக்கு மாவயல்‌
மருவிய செந்நெலுங்‌ கரும்பு மல்இடுந்‌
இருவளர்‌ பாண்டிய தேய வேந்தனே. 34

நறைகொள்தார்‌ வேந்தராங்‌ கடன டுங்கியே
முறையெனப்‌ புலம்பியுள்‌ கலங்க மொய்ம்புணீர்‌
கறைகொள்வேல்‌ மலையினாற்‌ கலக்கி யேதரும்‌
திறைகொள்சீர்‌ வல ராய னென்பவன்‌. 35

பாண்டிய நாட்டு வளம்‌-தாமரை
ஈன்ற முத்தை முட்டை என்று கருதி அன்னம்‌ அடைகாக்கும்‌ நாடு பாண்டிய
நாடு. இங்கு நுட்பமான உள்ளுறை உண்டு, அன்னம்‌ முத்தை முட்டை என்று
அடைகாக்கிறது. * எத்தனை நாட்கள்‌ அடை கிடப்பினும்‌ அதில்‌ அன்னக்‌ குஞ்சு
தோன்றாது, அன்னம்‌ சமயவாதிகள்‌. முத்துக்கள்‌ லோகாயதம்‌ முதலான
புறச்சமயங்கள்‌. அச்சமயங்களால்‌ பயன்‌ இல்லை என்பதைக்‌ குறிப்பிடுகிறார்‌.
முருகு- வாசனை, தேன்‌. கர௬-முட்டை. கிடைகாக்கும்‌-அடைகாத்தல்‌.

அறங்களாம்‌ எருவையிட்‌ டறம்பி ழைத்திடுங்‌
குறும்பராங்‌ களைகளைக்‌ குறைத்திட்‌ டன்பெனு
நறும்புனல்‌ பாச்சநல்‌ லோர்க ளாமெனும்‌
உறும்பயிர்‌ விளைத்துச்‌ செங்கோலை யோச்சு நாள்‌. 36

ஒருதினம்‌ நகரசோ தனைக்கென்‌ றுற்றுநள்‌
ளிருளிடை யொருவானா யிலங்கும்‌ வாளொடும்‌
மருவுமம்‌ மதுரைமா நகரின்‌ மல்கஇிடுந்‌
தெருவெலாந்‌ . துருவியே செல்லு மெல்லையில்‌. 37

காவலர்‌ பாரிப்போர்‌ மிடைதல்‌ காண்குறாச்‌
சீவல தேவ னென்‌ றுரைக்குஞ்‌ செவ்வியோன்‌
தாவியாங்‌ கொருதெருத்‌ திண்ணை தன்மிசை
மேவியாங்‌ இறைப்பொழு திருந்த வேலைவாய்‌. 38

பாரிபோட்‌ டடைந்தவ ரகலப்‌ பாருடை
கூரிய வேலினா னாங்கு பள்ளிகொள்
சீரிய னொருவனைச்‌ சேர்ந்தெ முப்பிநீ
யாரிசைப்‌ பாயென வதட்டிக்‌ கேட்டலும்‌. 39:

அன்ன வனுணர்ந்து நீ யாரென்றோதலும்‌
இன்னகர்‌ காத்திடும்‌ வேந்தன்‌ யானெனச்‌
சொன்னது கேட்டவத்‌ தூய வேதியன்‌
குன்னுடை வரவினைச்‌ சாற்று வானரோ. 40

மறையவர்‌ குலத்தன்யான்‌ மறைகள்‌ காணொணா
நறைகமழ்‌ துளவநா ரணன்ப தத்திடை
பிறையணி சடையினன்‌ கொண்டு பின்விடுந்‌
துறைபடுங்‌கங்கைநீர்‌ தோய்தற்‌ கேகியே. 41

ஒதுகங்‌ கையையடுத்‌ துகப்பி னாடியே
மாதுகா ரணத்திரா சகுவன்வ குத்திடுஞ்‌ :
சேதுவைத்‌ தெரிசனம்‌ செய்தற்‌ கெய்துவேன்‌
ஈதுகான்‌ வரவென வர? யம்புவான்‌. 42

அய்ய நீபற்பல தேயத்தி யாவையும்‌
கையிலா மலகம்போற்‌ காணும்‌ பெற்றியால்‌
செய்யநற்‌ சுதைபல தெரிந்தி ருப்பையான்‌
உய்யவோர்‌ நற்கதை யுரையென்‌ றோதலும்‌. 43

யானுணர்ந்‌ திலன்கதை யாயி னும்மொரு
தூனலனு டையதாஞ்‌ சுலோகங்‌ கற்றுளேன்‌
ஊளனுணும்‌ வேலவென்‌ றுரைப்ப வேந்துநீ
தானதை யுரையென வவனுஷஞ்‌ சாற்றினான்‌. 44

கேட்டிதன்‌ பொருளைநீ கிளத்து வாயென
வாட்டிறன்‌ மன்னவன்‌ வணங்கி யேத்தலும்‌
ஈட்டிய விரவினுண்‌ டிடுதற்‌ கஇயொாவையும்‌
. நாட்டிய பகலிடைக்‌ கொள்ளல்‌ நன்றரோ. 45

மாரி காலத்தினுண்‌ பவைகண்‌ மற்றைய
சரிய கோடையிற்‌ சேர்த்தல்‌ செவ்விதாஞ்‌
சேரிய முதுமையி ஸூண்டி சேர்த்தடுங்‌
காரிய மிளமையாங்‌ காலத்‌ தாகுமால்‌:-46

:* வர்ஷார்த்தம்‌ அஷ்டெள ப்ரயதேத மாஸான்‌7
நிஸார்த்த அர்த்தம்‌ இவஸம்‌ யதேந வார்த்ததய ஹேதோர்வயஸா நவேன பரத்ர
ஹேதோர்‌ இஹ ஜன்ம நாச”,-இரவில்‌ உண்பதற்கு
வேண்டியவற்றைப்‌ பகலில்‌ சேர்க்க வேண்டும்‌. ‘ மழைக்‌ காலத்துக்கு’ வேண்டிய
பொருளைக்‌ கோடைக்‌ காலத்தில்‌ ஈட்ட வேண்டும்‌. முதுமைக்‌ காலத்திற்கு
வேண்டியவற்றை இளமையில்‌ தேட வேண்டும்‌. இவற்றைப்‌ போல மறுமைக்கு
வேண்டிய உறுதிப்‌ பொருளை இம்மையில்‌ பெற வேண்டும்‌

அம்மையில்‌ வேண்டுநல்‌ லேது வானதை
யிம்மையிற்‌ றேடிட வேண்டு மென்னவே
மும்மையு முணருமந்‌ தணனு முன்புசொற்‌ செம்மைசேர்‌ சுலோகத்தின்‌ பொருளைச்‌ செப்பினான்‌. 47

மன்னனும்‌ கேட்டுள மகிழ்ந்து ருக்கமாய்‌
நன்னய மொழிபல நவின்று போநற்றிசெய்‌
தன்னவன்‌ றன்னொடு மவிடம்‌ நீங்கிப்போய்த்‌
தன்னர மனையிடைச்‌ சார்ந்திட்‌ ‘டானரோ. 48

சார்ந்தரு மறையவன்‌ -றனக்குக்‌ கண்ணருள்‌
கூர்ந்துவேண்‌ டுவவெலாங்‌ கொடுத்த ஸனுப்பியே
தேர்ந்தவ னுரைத்தநல்‌ லுரையைச்‌ சந்தைகொண்
டோர்ந்துயிர்க்‌ குறுதியை யுன்னு மெல்லையில்‌. ்‌ 49

அன்னவ ஸனுளத்திரு ளழித்து நீக்கிட மன்னுவன்‌ புதுவையா யென்னும்‌ வாய்மையை
முன்னர்வந்‌ துரைசெய்வான்‌ முடுகல்‌ போலவே
துன்னிருள்‌ ஒழிந்திட விரவி தோன்றினான்‌. : 50

காலையி னெழுந்துபல்‌ கடன்கண்‌ -முற்றியே
நூலையோர்‌ முனிவரா சிகணு வன்‌ றிட
வேலையின்‌ மிஞ்சொலி ..விம்ம வேகொல்ச்‌. . ட்ட
சாலைவந்‌ தரியணை தன்னின்‌ மன்னினான்‌. . 51

மந்திரித்‌ தலைவரும்‌ மற்று ளோர்களும்‌
வந்திரு மருங்கினு ணெருங்கி வைகட
அந்தரத்‌ தவர்புடை சூழ வாதனத்‌ இந்திர னிருந்தென விருத்த வெல்லையில்‌. 52

செல்வரஈம்பியின்‌ பண்பு
ஓவ்விய மோக்கமா முலகு தன்னையே
எவ்வித மடைகுவ தெனநி ஸனைத்திடும்‌
அவ்வயின்‌ நாரணன்‌ அடியர்‌ தங்களிற்‌
செவ்விய மாணியன்‌ சிறந்த மேன்மையான்‌ ; 59

பல்கலை நூல்களும்‌ பயில்நற்‌ கேள்வியான்‌ ;
குலமறை யோர்கடங்‌ கொழுந்து போன்றுளான்‌ ;
நலமலா துரைசெயா நாவு கொண்டுளான்‌ !
அலகிலாக்‌ கல்விசே ரறிவு மிக்குளான்‌ :54

செல்வநம்‌ பிப்பெயர்‌ சேர்ந்து ளான்‌௮அவன்‌
மல்கிய வவையிடை வந்து தோன்றலும்‌
மல்கவி ராசனும்‌ வணங்கு யாதனம்‌
நல்கலு மதன்மிசை நண்ணி னானரோ | 55

மன்னன்வினா
இருந்தவே தியன்முக னோக்கி யேந்தலும்‌
பொருந்துமிப்‌ பொய்மையாஞ்‌ சமயம்‌ புல்லியே
UGG Gumus மோக்கம்‌ மன்னியான்‌
இருந்துறும்‌ வகையைநீ செப்பு கென்னலும்‌ ;–56-

நம்பிவிடை
எண்ணிலா தத்துவ நூல்கள்‌ யாவையு
மண்ணிலே யுணர்ந்துடி லறிவுண்‌ டாகியே
விண்ணவர்க்‌ கரியதா மோக்க வீட்டினை
நண்ணலா மென்றனன்‌ செல்வ நம்பியே.–57-
என்னலுந்‌ தத்துவக்‌ கியானம்‌ யாவும்தேர்ந்‌

துன்னிடும்‌ பெரியவ .’ர௬ல, லுண்டுசொல்‌
அன்னவர்‌ தன்னை நீ : யறிந்து ளாயெனிற்‌
பன்னிட வேண்டுமென்‌ றரசன்‌ பன்னலும்‌;–58-

இவ்வுலகி யாவையு மினிதி ணாண்டது .- லொவ்வுசெல்‌ வந்தனை யோழியும்‌ புன்னுனிக்‌
கவ்விய பனியெனக்‌ கருதி மாறிலாச்‌
செவ்விய முத்தியைச்‌ சேர்த லுன்னினாய்‌,–59-

ஆதலா லியாதினு மறுக்கொ ணாதென
ஒது மாயா விருளதனை யுண்மையாம்‌
நீதியா லொழித்திடு நினைவுண்‌ டாகியே
இதிலா முத்திவீ டணையுஞ்‌ செய்கையை.–60

புல்நுனி கவ்விய பனி – புல்லின்‌ நுனி பற்றிக்‌ கொண்டுள்ள. பனி. *கவ்விய’- என்ற தொடர்‌ நயமானது செல்வ நிலையாமை விளக்கப்படுகிறது. :’புல்‌நுனிமேல்‌ நீர்போல்‌ நிலையாமை’* என்று நாலடி நிலையாமையைப்‌ பேசும்‌,

அறிவிக்க வல்லவர்‌ யாவ ரோவெனின்‌
நெறிதக்க வேதநூ னிறைந்த நெஞ்சிடை
குறிதக்க வல்லவ ராங்கும்‌ கொற்றவா
செறிதக்க வுள்ளர்நீ வெருவல்‌ . தேர்குவாய்‌ 61

என்றுரைத்‌ திடுதலு மினியர்‌ தங்களிப்பு
ஒன்‌. றிய மனத்தொடு மந்த வுத்தமர்‌ துன்றிய தெத்தலஞ்‌? சொல்லி னாங்கடைந்‌ –
இன்றடி தொழுதவர்க்‌ கடிமை யெய்துவேன்‌. 62

இனையவா சகந்தனை யேந்த லோதலும்‌
. இனையள வாயினும்‌ பெருமை தேர்கொணா
வனையரை யடைந்துகாண்‌ பரிய தாதலால்‌
நினையுமோ ருபாயத்தி னிரப்பல்‌ வேண்டுமால்‌. 63

என்னலு மொருவன்‌ வீடெய்த வெய்தியோர்‌
நன்னதி மூழ்கிட வேண்டு நாளிடை
யன்னதி யெதிரிடை யணுகி நீயுமென்‌
றன்னிடை மூழ்கெனச்‌ சார்ந்த தன்மைபோல்‌ ; 64

ஆயதிம்‌ மொழியென வரச ஸுண்மகழ்ந்‌
தேயவிச்‌ செயலலாற்‌ பிறிதொன்‌ றநில்லெனத்‌
துரயவ னடிதொழு துபாயஞ்‌ சொல்லென
நேயமோ டவனிது நிகழ்த்தன்‌ மேயினான்‌. 65

வேறு
கேட்டறிநீ அரச[விது பரமபுரு
டோத்தமனாய்க்‌ கிளருந்‌ தேவன்‌
ஈட்டியமா மயமெனும்‌ வினோதத்தால்‌
பலசமய மியைந்த தாமால்‌ ;66

நாட்டியவச்‌ சமயமெலாந்‌ தனித்தனியே
பெரிதென்று நயந்து சொல்லும்‌ ;
ஏட்டினிடை யேயெழுதா நான்மறையு
மவ்வாறா யிசைக்கு மன்றே, 67

அச்சமயத்‌ துற்றவரும்‌ பிறசமய
மாகாதென்‌ றறைவா ரந்த
இச்சைபெறும்‌ சமரமெலா நிருமித்த
பரனாகு மிறைவன்‌ றன்னை
நிச்சயங்கண்‌ டறிவார்கள்‌ அப்பரம
னடியார்கள்‌ ; நிறைந்த வேதத்‌
துச்சிமிசை யிருப்பதனை யத்திருநான்‌
மறைதானு முணரா தன்றே.” ட ்‌ 67

ஆதலினாற்‌ பலவாகுஞ்‌ சமயற்களிற்‌
* சிலபோர்க ‘ள்துவி ‘தென்றே
யோதுவர்கள்‌ சலபேர்கள்‌ பொதுவெனவே யுரைத்திடுவர்‌ உண்மை முற்றும்‌ஈதெனக்கண்‌ டியாவர்களும்‌ தெஸிந்துரையார்‌ ;
மாணிக்க மெனுங்கல்‌ லோடும்‌
தீதுபெறு புன்கல்லுங்‌ கலந்திடின்மற்‌
றாங்கதனைத்‌ தெரியத்‌ தக்கோர்‌. 68

சாணைதனிற்‌ பிடித்தறிவார்‌ ; அங்கதுபோல்‌
நீயிளகும்‌ தண்மை யெண்ணி
ஆணையொடு மறையுரைக்கும்‌ பரமபுரு
டோத்தமனை யறிந்து சொல்லும்‌
நாணையஞ்சே ரடியவர்க ளூளங்களிந்துள்‌
நணுக்கெவோர்‌ நயங்காண்‌ பித்தால்‌
வீணைபயி லின்னிசைகேட்‌ டசுணமா
வடைவதுபோல்‌ மேவு வாரால்‌. 69

மாணிக்கக்‌ கல்லுடன்‌ புல்லிய கல்‌ சேர்ந்துவிட்டால்‌
சாணையினில்‌ இட்டுத்‌ தேய்த்து அறிவார்கள்‌. அதுபோல்‌ சமயங்களைப்‌ பட்டை
தீட்டிக்‌ காட்டவல்ல பெரியவர்கள்‌ ஒன்றுசேர உபாயம்‌ செய்ய வேண்டும்‌.
அப்போது வீணையிசை கேட்டு ௮சுணமா வருவதுபோல்‌ சான்றோர்கள்‌ வரு
வார்கள்‌, ்

அன்னயம்யா. தெனிற்கேண்மோ நினதுதிரு
வரமனையா சார வாயில்‌
முன்னரிற்பொற்‌ கிழிதாூக்கிப்‌ பரமுரைத்திஃ
தறப்பாடு மொய்ம்பு ளோருக்‌
இன்னபொரு ஸூரியதெனத்‌ திருமுகத்தைப்‌
பொறித்தனுப்பி னெங்கு ளோரும்‌
மன்னிடுவர்‌ 2 அவரினதை விழப்பாடு
மவற்குருவாய்‌ வ௫க்க லாமால்‌. 70

குருவெனவே வகுத்துமல ரடிபோற்றிப்‌
பணிந்தவன்றான்‌ கூறு கின்ற
பொருவரிய நெறியிடைநின்‌ றாழ்கிடின்வெள்‌
ளோலையிடை பொறியா வேதத்‌
இருமுடியின்‌ வீற்றிருக்கும்‌ பரமபுரு டோத்தமனை -தெரி௫த்தி யார்க்கும்‌
மருவரிய பதவியதா மோக்கவீடதினடைந்து வாழ லாமால்‌. 71

ஈதலவே றுபாயமிலை யெனவெடுத்துச்‌
. செல்வதம்பி யினிதி னோடும்‌
ஒதுதலு மரசனுமவ்‌ வாரமுத மெனுமொழிகேட்‌ டுளத்தி abn
மாதுயர மதுநீங்கிப்‌ புளகமுடனி
ருபுயங்கண்‌ மலைபோ லோங்கப்‌
போதவுப சரித்தவர்க்குப்‌ பசும்பொன்மணி
கலன்பலவும்‌ பொருந்த . நல்கி. 72

கிழியுயர்த்தினான்‌
அவனுளத்தி னிடைகுறித்திட்‌ டுரைத்திடுமு பாயவகை யதனை யேசெய்‌
குவதுயர்நற்‌ பதவிபெறற்‌ குறுதியெனத்‌ இருவுளத்துக்‌ கொண்டா னாகி
இவனுமொரு .பொற்கிழியை யிழைத்ததனை
யுயரவெடுத்‌ தெழில்வா னோங்கித்‌
, துவளுமணிக்‌ கொடிபொருந்துந்‌ தனதுதிரு
மனைவாயிற்‌ றூக்குப்‌ பின்னர்‌ ; 73

அகலுமலை கடலுடையம்‌ புவியிடைப்பற்‌
பலசமயத்‌ தமைந்து ளோரிற்‌
புகலரிய சதுர்மறையும்‌ பலபலசாத்‌
தஇிரவகையும்‌ போத மார்ந்த
சகலகலை களுமூணரும்‌ தன்மையினர்‌
பலபலநூல்‌ நுவலத்‌ தக்கோர்‌
பகலிரவென்‌ றறியாத்‌ தனிப்பொருளாம்‌
பரஞ்சுடர்போற்‌ படிவங்‌ கொண்டோர்‌. . 74

பூவருமெண்‌ டோளுடைப்புங்‌ கவன்படைத்த
நான்கெனவே புகல்வர்‌ ணத்தின்‌
யாவரெனு மோக்கமதை யடையும்வழி
துன்னையடை விப்போர்‌ தங்கள்‌
தேவர்நிலை தனைத்தெரித்திட்‌ டெனையடிமை
கொண்டுசெம்பொற்‌ கிழியுங்‌ கொண்டு
போவதற்குக்‌: கருத்துடையோர்‌ மதுரைநக
ரிடைவந்து பொருது கென்றே. 75-எண்‌ தோளுடைப்‌ புங்கவன்‌ -பிரமன்‌.

சமயவாதியர்‌ செயல்‌
இருமுகங்கள்‌ பொறித்துவந்து தூதர்கள்‌ தங்‌
கைகொடுத்துத்‌ இசைக ளோர்தநா
லிருமுகத்தும்‌ விடுப்பவவர்‌ களுங்கொடுபோய்‌
கொடுத்ததனை யியம்ப லோடும்‌
மருவுமுவப்‌ பொடுஞ்சைவர்‌ வாமிகள்வை
சேடியர்மா விரதர்‌ புத்தர்‌
அருகருல காயுதர்க ளாமுகர்மீ
மாங்கெசர்சாங்‌ இயோக ரானோர்‌. 76

பாசுபதர்‌ மாயாவா தியர்முதலாஞ்‌
சமயத்தோர்‌ பலரும்‌ வந்தார்‌ :
பூசுரர்கண்‌ முதலாநால்‌ வருணத்துற்‌
பெரியோரும்‌ பொருந்தி வந்தார்‌ :
ஆசில்புக ழிமையவருஞ்‌ சித்தர்வித்யா
தரர்கண்‌ முதலானோர்‌ தாமும்‌
வீசுதிரைக்‌ கடற்புவியி னிதையறிவான்‌ மதுரைநகர்‌ மேவி னாரால்‌. 77

வேறு
– ஆழ்வாரின்‌ செயல்‌
‘இவ்வகை யாவரு மினிதி னடைந்தார்‌
அவ்வகை செய்யர சவ்வவ ருக்குச்‌
செவ்வகை செய்வ முறைப்படி செய்தா
ரொவ்விய புதுவை யினுற்ற துரைப்பாம்‌. 78

மருவிய விட்டுணு சித்தனும்‌ மாலாம்‌
பொருவட பத்திர சாயி பொருட்டு
ஒருபகல்‌ பொன்மலர்‌ மாலை யுஞற்றி
வருபக லின்னொரு வைக லிருட்கண்‌. 79

நித்திரை வேளையி ஸில்லா, விந்தம்‌
ஒத்துள கண்ணளி யு.ற்றவண்‌ விட்ணு
சித்த வெனப்பெயர்‌ செப்பி யெழுப்ப
அத்தலை மேனிய சக்கி யெழுந்தே. 80

சிக்கென நோக்கத்‌ திருவரு ளாலே
பக்கமி ர௬த்தருண்‌ மாலைப சுங்கார்‌
ஓக்கு நிறத்தோ டுற்றுத்‌ தன்னுளம்‌ மிக்க களிப்போ டவனடி மீதே. 81

விழும்‌; புரளும்‌; புவியிற்‌ ; பரிவின்மீண்‌
டெழும்‌; புகழும்‌;நட மிட்டுகை கூப்பித்‌
தொழும்‌ உருகும்‌; பரிவோடு துதிக்கும்‌ ;
அமும்‌;பரிசன்ன தறிந்திட லாகா. 82

இத்தக வாகி யெழுந்தெதிர்‌ நின்றே
கைத்தல மீது கவித்து விளித்த
மத்தகெ ஜத்தெதிர்‌ வந்தருள்‌ செய்த வித்தக நின்னை வியந்தவர்‌ யாவர்‌? 83

ஆதியு மாகி யனாதியு மாகிச்‌
சோதியு மாகிச்‌ சுடரொளி யாகி
நீதியி னாலுல கெங்கும்‌ நிறைந்த .
வேதிய னேயுனை யானறி வேனோ? ்‌ 84

நின்னடி யான்றொழு தற்கு நினைந்தோ?
வின்ன தொழில்புரி யென்பத னுக்கோ?
துன்னு பிறப்பை துலைத்திடு தற்கோ?
வென்னிவ ஸணுற்றது? இயம்புதி யென்றான்‌. 85

என்றது தன்செவி யின்னிடை யெய்த
நன்றென நாரண னும்நகை செய்யா
இன்று நினக்குரை செய்திடு மின்சொல்‌
ஒன்றுள கேளென என்னென லோடும்‌. ‘ 86

மற்பொரு தோண்மது ரைப்பதி யான்றன்‌
இற்பொலி வாயி லிடத்தெதி ராகப்‌
பொற்கிழி கட்டின னாதலி னீபோய்‌
யெற்பர மென்ன விசைத்த தறுத்தே | 87

அக்கிமி கொண்டிவ ணணுகென லோடும்‌
மிக்க விருப்பும்‌ வெறுப்பு மிலாதோன்‌
றக்க மறைப்பல சாத்திர நூலுந்‌
தொக்க வறிந்து சொலத்தகு வோரை,.-88

வாதினில்‌ வென்றிட வல்லவ ரன்றோ
ஓதுகி மிக்கொள லுக்குரி யோர்கள்‌ ?
ஏதெனு மொன்றுண ராவடி யேன்போ
யாதுப கர்ந்த தறுத்திட லாகும்‌?-89

கொட்டுகை பற்றி குனிந்தடி யேன்மண்‌
வெட்டுத மும்பை விரித்து தெரிக்கிற்‌
கட்டுகி மிப்படு மோ2படி னுங்கண்‌
டிட்டிடர்‌ சொற்கறி வின்மை யுணர்ந்தால்‌.–90

பொறுத்தல்‌ செயானவன்‌ பார்த்திப னென்னா
மறுத்திட மாலும்‌ வளக்கிழி யைப்போய்‌
யறுத்திட லுன்கடன்‌ : நான்மறை முடிவை
நிறுத்துரை.. செய்கட னென்சகட ஸேர்வாய்‌,-91

கொட்டு – மண்வெட்டி, கொட்டுசைபற்றி – மண்‌ வெட்டியதால்‌
உண்டான தழும்பைக்‌ காட்டினால்‌ இழி அறுபடுமோ? ஒருவேளை உன்‌ அருளால்‌
அது அறுபட்டாலும்‌, பாண்டியன்‌ பொறுத்துக்‌ கொள்வானோ, என்று கூறி
ஆழ்வார்‌ மறுத்தார்‌. “அறுத்தல்‌ உன்‌ கடன்‌; மறை முடிவை நிறுத்தல்‌ என்‌ கடன்‌”*
என்றான்‌ பெருமான்‌. தேர்வாய்‌-உடன்படுவாயாக,

என்னலும்‌ மேலவர்‌ யாரும்‌ நெருங்கித்‌
துன்னவை யின்னொரு சொல்லு மெழுத்தும்‌
இன்ன தெனத்தெளி யாவெளி யேன்போய்‌
மின்னுவ தெவ்வண மானமி லாமல்‌.–92-

ஆதலி னேகுத னன்கல வென்ன
மாதவ ஸனும்நகை செய்து மறித்தும்‌
ஓதுவ னென்வயி னுள்ளன வாகும்‌
வேத முனக்கரி தோதெளி விப்பேன்‌ 93

என்னுரை கொண்டவ ஸணேகுது யென்ன
அன்னவ னும்‌அமை வாகி யவன்றன்‌
பொன்னடி தன்மூடி மீது புனைந்து
நன்னய மெய்த நவின்று துஇத்தே. டடத–94-

ஏக விடைதரு கென்றவ னைத்தன்‌
ஆக முறத்தமி யன்போ டளித்தே
மேக நிறத்திரு மால்விரை விற்போய்‌
வாக மணித்திரு கோயிலின்‌ வாழ்ந்தான்‌. 95

ஆழ்வார்‌ மதுரையடைதல்‌
விடைகொண்‌ டுயர்விட்‌ டுணு9த்‌ தனிரு
புடையும்‌ மடியார்‌ கள்புகன்‌ றுவரக்‌
குடைவெ ஸண்மதியிற்‌ குலவச்‌ சிவிகை
இடைவெங்‌ கதிரென்‌ நிடவே றினனே. 96

பூவின்‌ மழைதே வர்பொழித்‌ இடமுன்‌
நாவின்‌ மதிபட்‌ டர்நலம்‌ புகழ
வீவின்‌ மிளிர்விண்‌ டுவினுந்‌ இவரும்‌
தேவின்‌ மகிழ்வோ டுிறந்‌ தனனே. 97

கதுவிப்‌ பொலிவாய்க்‌ ககனத்‌ துவரும்‌
விதுவைத்‌ தொடுமா டம்விளங்‌ தியசர்‌ ‘
புதுவைப்‌ பதிவிட்‌ டுபுலன்‌ கொடிசேோர்‌
மதுரைத்‌ இருமா நகர்கண்‌ டனனால்‌ 98

வேறு
மூதிர்மறை வாதினின்‌ முனைகு வோர்தமைச்‌
சதிர்பெற வெல்கநீ யொல்லை சார்கெளாக்‌
கதிர்மணி கொடியெனுங்‌ கரங்க ஸணீட்டியே
மதுரைமா தெதிரின்வந்‌ தழைத்தல்‌ மானுமால்‌. 99–*பர சமய வாதிகளை வெல்ல வருக!* என்று மதுரை கொடிகளாகிய
சுரங்கள்‌ நீட்டி அழைப்பது போன்றிருந்தது.

அலைகட லென்னவந்‌ தடைந்த out Bust
நிலைதளர்ந்‌ இடநெடு நாணி நெஞ்சுறத்‌
குலைவளைக்‌ தலின்முதிர்‌ கதிர்கொள் சாலியுங்‌
குலைதளு மரம்பையும்‌ குனிந்து காட்டுமால்‌. 100

வாதியர்‌ தளர்ந்திட வரசும்‌ மற்றுள
நீதியர்‌ களுந்தலை நிமிர்தல்‌ போலவே
சோதிசெய்‌ கழைகளுங்‌ கமுகுந்‌ துன்னிவான்‌
மீதினி லோங்கியே விளங்கிக்‌ காட்டுமால்‌. “101-அரசனும்‌, நீதிமான்களும்‌ உண்மை உணர்ந்தோம்‌ என்று நிமிர்வது
போல்‌ கரும்பும்‌, கமுகும்‌ விண்ணை யளாவி நிற்குமாம்‌. கழை – கரும்பு,
பாக்குமரம்‌,

இன்னர்‌ மதுரையுள்‌ ளேகிக்‌ கூடலின்‌
மன்னிய வழகர்தாள்‌ வணங்கி வாழ்த்தியே
துன்னிய களிப்பொடு நிற்குந்‌ தூாயனை
யன்னமா லிருகணா லமைய நோக்கியே, 102

பாண்டிய னவையிடை படர்ந்து வாதியர்‌
ஈண்டியர்‌ தமையெலா மினிதின்‌ வென்றுநீ
மீண்டிடு கென்னவாய்‌ விண்டு ரைத்தபின்‌
வேண்டிய வரங்களும்‌ விருப்பி னல்கினான்‌. 108

செல்கென விடையொடுஞ்‌ செங்கண்‌ ணாரணன்‌
நல்கிய வரங்களுங்‌ கொண்டு நண்ணியே
பல்பல மணிமுடிப்‌ பாண்டி யன்கொலு
மல்கிடு மண்டப மன்னு மெல்லையில்‌. 104

மதியென வெண்குடை மலியக்‌ காலையின்‌
கதிரென மணிமுடி கவின்கொண்்‌ டோங்கிட
விதிருடை வாடக மின்ன மாறனும்‌
அதிர்முர சொலியோடா தனத்தி ருந்தனன்‌. 105

மற்றுள வேந்தரும்‌ மந்திரி மார்களுங்‌
கொற்றவெஞ்‌ சேனையுங்‌ குடிக ளும்படை
வெற்றிசேர்‌ தலைவரும்‌ வேறு ளோர்களுஞ்‌
சுற்றும்வந்‌ தவரவர்‌ நெருங்கித்‌ துன்னினார்‌. 106

மறையவர்‌ குழாங்களும்‌ செல்வ நம்பியும்‌
அறைபல சமயமுற்‌ றடைந்து ளோர்களும்‌
முறைமுறை மண்டப முன்னி னார்கள்‌ ;வாள்‌
நிறைதரத்‌ தேவரு நெருங்கி நண்ணினார்‌. 107

“*இருக்கு,
எசு, சாம வேத நாண்மலர்‌ கொண்டு உன்பாதம்‌ நண்ணாதநாள்‌ அவை தத்து
றுமாகில்‌ ௮ன்று எனக்கு அவை பட்டினிநாளே””-என்பது பெரியாழ்வாரின்‌
அனுபூதி.

அவ்வணங்‌ கொலுவமைத்‌ திருக்கு மாயிடைச்‌
செவ்விய மறைபயில்‌ விட்ணு சித்தனும்‌
மொவ்விவத்‌ தடைந்தமை யுணர்ந்திட்‌ டானரோ
இவ்விய வுணர்வுடைச்‌ செல்வ நம்பியே. 108

அரசன்‌ உபசரிப்பு
உணர்ந்தவன்‌ வரவினை யரசுக்‌ கோதலும்‌
நிணங்கமழ்‌ வேலினா னெடிது சென்றடி
வணங்கலு மாசுகள்‌ வழங்கி னானரோ
மணங்கமழ்‌ துவளமா லடிவ ணங்குவோன்‌. 109

அரசனு மகழ்வினோ டவனை தோக்கியே
விரசுமா மணிகளின்‌ விளங்கு மாமுடிச்‌, .
சிரசின்மேல்‌ தாமரைச்‌ செங்கை கூப்பியே
பிரசமொத்‌ தினியசொல்‌ பெருகக்‌ கூறுவான்‌. . 110

கொடியதீ வினையுநல்‌ வினையுங்‌ கொண்டவிச்‌
சடிலநா ஸளெடுத்திமன்‌ றன்கை பட்டுயிர்‌
நெடிதுநாள்‌ வருந்திடல்‌ நீக்கி வீடுறும்‌
யடியருள்‌ புரிந்தெனைப்‌ பரித்தல்‌ வேண்டியோ. -111

அல்லது மாயையென்‌ றமையும்‌ வல்லிருள்‌
தொல்லுல குறாததைத்‌ துரத்த லுன்னியோ பல்லுயி ரினும்வளர்‌ பரம சோதியிந்‌
நல்லுருக்‌ கொண்டது நவில்க வென்னலும்‌ 112-::பீதக
ஆடைப்‌ பிரம குருவாக வந்து”, என்று பெரியாழ்வார்‌ திருவாய்‌ மலர்ந்த
ருளியுள்ளார்‌.

இருவுள மகிழ்ந்தருள்‌ விட்ணு சித்தனோ
டிருவிசும்‌ பினைப்பொர வெழுந்து மல்கிய
பொருவின்மண்‌ டபமதிற்‌ பொருந்தி வேந்தனுங்‌
குருமணி யாதனங்‌ கொடுத்திட்‌ டானரோ,. 113

கொடுத்தவா: தனமிசைக்‌ குரைதி ரைக்கட
லுடுத்தமா ஸனிலத்தின்மீ துற்று ளோர்தமி
லடுத்துவந்‌ துரைந்திடு மறிவில்‌ வாதியர்‌
நடுக்குற விரவியின்‌ னண்ணி வைகினான்‌. 114

இந்திரன்‌ வாதம்‌ செய்ய பிரஹஸ்பதியை அனுப்புதல்‌
வைகிய துணர்ந்திவ னறிவு மல்்‌கடச்‌ ,
செய்தலி லரசன்‌ வான்செல்வ னாகுவான்‌
எய்தியிங்‌ கதையழித்‌: இடுதல்‌ வேண்டுமென்‌
றையிருந்‌. தர்மதத்‌ ர்ச்‌ ‘மெண்ணியே. 115

தங்குலக்‌ * கரும்க நோக்கித்‌ தன்னிரு
செங்கைமா முடிமிசைச்‌ சேர்த்து நீயடைந்‌
தங்கதை யழித்திடென்‌ ‘றவனி யம்பவென்‌
பங்கென மானிடப்‌ படிவந்‌ தாங்கியே. ்‌ 116

புவியின்வந்‌ தவையிடைப்‌ புகுதக்‌ கண்டுவெண்‌
கவிகைநீ ழலிற்புவி புரக்கும்‌ காவலன்‌ :
குவிகரத்‌ தொடுமவ ஸணிருக்கக்‌ கோதிலாத்‌
தவிசளித்‌ தயாவனீ சாற்று கென்னலும்‌. 117

யானொரு மறையவன்‌ அறிதி யென்றுபின்‌
வானொரு வியசுரர்‌ குருவ ழங்கிவான்‌
தேனொழு இியபுதுத்‌ தெரியல்‌ வேந்த நீ
தானொரு பொற்கிழி தன்னைத்‌ தூக்கியே. 118

வேதமே முதலிய விளங்கு நூல்களால்‌
வாதுசெய்‌ தவர்களில்‌ வல்ல மேலவர்‌
ஈதறுத்‌ ததனைக்கொண்‌ டேகு மின்‌எனத்‌
தூதரை விடுத்திட விவர்கள்‌ துன்னினார்‌. 119

துன்னினோர்‌ தங்களிற்‌ சுருதி நூல்களா
லென்னைவென்்‌ றனனெனி லிந்த வேதியன்‌
றன்னடி வணங்கினை சாற்று கென்னலும்‌
மன்னவை யடைந்துள மற்று ளோர்களும்‌ 120

அவ்வுரைக்‌ கொன்றியே யரச ருட்களித்‌
தொவ்விய திருமூக னோக்கி யோதுவார்‌
இவ்வயி னெம்முனி தொழவி ருந்துளோன்‌
செவ்விய இழியையு மறுத்தல்‌ செய்தபின்‌. 121

இவனுட௨ன்‌ வாதுசெய்‌ திடுவோம்‌ யாமென
வவனையுல்‌ லங்கன மவர்கள்‌ கூறலும்‌
குவறிலாப்‌ புரோகிதன்‌ தன்னை நோக்கியிவ்‌
வவமதிக்‌ கென்செய லாகு மென்றனன்‌. 122

என்றவவ்‌ வரசனை யினிதி நோக்குறா
வின்றிதை யறுப்பது மிவரை வாதினில்‌
வென்றிடு வதுமிந்த விட்ணு சித்தனே
யொன்றுநீ வருந்தலை யென்ன வோதினான்‌. 123

வள்ளலும்‌ புரோ௫தன்‌ வழங்கும்‌ வாய்மையால்‌
உள்ளம துவப்புற உறைந்த காலையிற்‌
கள்ளவிழ்‌ துளவமால்‌ கழற்குத்‌ தொண்டுறும்‌
தெள்ளிய ஸுடன்சுரர்‌ குருவும்‌ செப்புவான்‌. 124

ஆழ்வாரும்‌ பிரஹஸ்பதியும்‌
பரத்துவ மிதுவெனப்‌ பகர்ந்த பின்புநீ
யுரத்துரு கிழியறென்‌ றுரைப்ப வேதத்தின்‌
சிரத்துறும்‌ பரம்பொருள்‌ செய்ய வாழிசேர்‌
கரத்துநா ரணனெனக்‌ கழற லோடுமே. 125

நாரணன்‌ பரமல நாலு மாமுகத்‌.
தாரணன்‌ பரமென வவனி யம்பலும்‌,
வாரண முறையிட வந்து காத்தருள்‌
காரண ஸடியனுங்‌ கழறன்‌ மேயினான்‌. 126

நன்றுநீ மொழிந்தனை நான்மு கன்றலை
யன்றறுப்‌ புண்டதை யறிந்திலாய்‌ கொலோ?
என்றுபுத்‌ தூரனு மியம்பக்‌ கேட்டுளோன்‌
நன்றுமச்‌ சுரர்குரு விதனைச்‌ செப்புவான்‌. 127

ஆகிலும்‌ சிவன்பர மாகு மென்னவே
போகிமுன்‌ விடுத்திடும்‌ புனிதன்‌ கூறலும்‌
நாகணைப்‌ பள்ளியான்‌ விடுப்ப நண்ணிய
யோடியு நகைத்திதை யோது வானரோ. 128

தானறுத்‌ திடுந்தலை தன்கை மீதுற லானதை யொழித்திட லாகா மையால்‌
வானமும்‌, வையமுந்‌ திரிந்து மாழ்கிடத்‌
தேனமர்‌ துளவமால்‌ தீர்த்த தோர்கிலாய்‌. 129

எனச்சொலப்‌ பிரபதி யியைந்த காலத்தால்‌
அனத்தவன்‌ றலைவிட்ட தந்தக்‌ காலமே
மனத்துணர்‌ பரமென மறுத்துச்‌ சொல்லலும்‌
புனத்துழா யவன்விடும்‌ புனிதன்‌ கூறுவான்‌. 130

காலமே பரமெனிற்‌ கால மூன்றிற்கும்‌
மேலுமக்‌ கடவுள்யா ரென்னக்‌ கேட்கலும்‌
ஞானமீ திருளெலாம்‌ ஒழித்து ஞானத்தின்‌
மேலுறு பொருளெலாம்‌ விளக்க வெய்யவன்‌ 131

எல்லியே பரம்பொரு ளென்ன வாங்கவன்‌
சொல்லிய புன்மொழி செவியிற்‌ றுன்னலும்‌
வில்லிபுத்‌ தூரனும்‌ நகைப்ப வேந்திடை
யல்லியம்‌ புயமுக மதனை நோக்குறா. 132

ஈங்கு னுரைத்தசொல்‌ லென்னென்‌ றோதலுந்்‌
தீங்குற விறத்தலோர்‌ காலை சேர்ந்துபின்‌
பாங்குறப்‌ பிறத்தலோர்‌ காலை பாற்கரன்‌
ஆங்கவன்‌ பரமென லாகு மோவெனா. 133

தேர்ந்திடா ரிம்மொழி செப்ப லல்லதிங்‌
கார்ந்தநா லுணர்வின ரறைந்தி டார்களென்‌
ஹறோர்ந்தர சவையிடை யுரைத்தல்‌ கேட்டுளஞ்‌
சோர்ந்துவே றுரைக்கடந்‌ தோன்றி டாமையால்‌. 134

தேவகுரு தோற்றார்‌
ஊமரிற்‌ சுரர்குரு வுற்றி ௬ுந்தபின்‌ றாமரு வியயல சமயத்‌ தோரெலாங்‌
காமர்தந்‌ தம்பெருங்‌ கடவு ளேபர ்‌
மாமென வவரவ ரறைத லோடுமே. , 135

எவ்வவ ரென்னென விசைத்த போதெலாம்‌
மவ்வவர்க்‌ கெதிர்மொழி யறைந்திட்‌ டாங்கவ
ரொவ்வநுந்‌ தெவம்பர மெனலொவ்‌ வாதெனச்‌
செவ்விசேர்‌ புதுவையான்‌ செப்புங்‌ காலையில்‌. . 136

செல்வஈாம்பியின்‌ விண்ணப்பம்‌
என்னிவ ருடன்விளை யாட. லோமறை
குன்னிடை வளர்பரஞ்‌ சோதி தன்னைநீ
மின்னிட வெளியிடல்‌ வேண்டு மென்றனன்‌
சென்னியங்‌ கரங்கொடு செல்வ நம்பியே. ்‌ 137

(வேறு)
அந்தசொற்‌ கேளா வாமிகா ஸனடுமீர்‌
வாளதாய்‌ அருகபஞ்‌ சினுக்கோர்‌ —
செந்தழ லாய்வை சேடியாட்‌ டினுக்கோர்‌
சீறுவெம்‌ புலியதாய்‌ பவுத்த.
குந்தமால்‌ கரிக்கோ ரரிய தாய்ச்‌
சைவ சற்பத்துக்‌ குவணமாய்‌ மற்றும்‌
வந்தபல்‌ சமய விருட்கிர வியதாய்‌ மலிந்திடும்‌ புதுவைமா நகரோன்‌. . 138

அவையுளோர்‌ திருமுன்‌ கடவுளர்‌ பணிய
வருமறை முடியின்மீ தமர்ந்தும்‌
சுவையமு தருள்வெண்‌ பாற்கடல்‌ வடத்தின்‌
றுளிரின்மீ தமர்ந்துகண்‌ வளரும்‌
நவையினா ரணனாஞ்‌ சற்பரம்‌ பொருளே
நற்பரம்‌ பொருளென நாட்டி
இவையெடுத்‌ துரைத்தான்‌ கேட்டுளோர்‌ மகிழ்வோ
டிருசெவிக்‌ கமுதெனப்‌ பருக. 139

பொற்கிழியறுந்து வந்தது
அத்தரத்‌ தவர்துந்‌ துமிமுழக்‌ குடன்வந்‌ தவர்மழை சலசலென்‌ றுதிர்ப்பச்‌,
செந்தழன்‌ முனிவோ ராசிக எியம்பச்‌
செந்தமிழ்ப்‌ புலவர்க டுதிப்ப
முந்துறும்‌ பெரியாழ்‌ வார்திரு வடிமுன்‌
மொழிந்திடும்‌ பொற்கிழி யறுந்து
வந்துற வதனைத்‌ திருக்கரத்‌ தெடுத்து மாறன்றன்‌ றிருமுன்வைக்‌ திடலும்‌. 140

மாறனு மகிழ்வோ டெழுந்திரு கரத்தான்‌
மாமுடி மருவுறப்‌ பொருத்தி வீறுமா மறையின்‌ றிருமுடி யதன்மேல்‌ வீற்றிடும்‌ பொருளென வுரைத்த நாறுபூந்‌ துளவ மாலையா. பரண
தாரண ஸிவனென்‌ மனத்திற்‌
ஹேறியங்‌ கவன்ற ஸிருபெருங்‌ கமலத்‌
இருவடி. பணிந்துநின்‌ றனனால்‌. . 141

மற்புய வரசன்‌ றமைநயந்‌ தருளி
மற்றுள சமயவா தியர்கள்‌
அற்புத மடையுஞ்‌ சிந்தைகொண்‌் டுருகி
யவரவர்‌ முறைமுறை யணுகடப்‌
பொற்புறு முதயக்‌ கதிரென விளங்கும்‌
‘புதுவைமா நகர்மறை யவன்றன்‌
நற்பத மிரண்டிற்‌ றமதுமா முடிகள்‌
நண்ணிடத்‌ -தொழுது நின்றனரால்‌, 142

தேவகுரு மறைந்தான்‌
ஆயவா றெவரு மனையரும வன்பொன்‌
னடிகளுக்‌ கடிகளா னதுகண்‌
டேயவிங்‌ இவனை யாதினும்‌ வெலுதற்‌
இயைந்திடா தெனமனம்‌ வெறுத்து
ஞாயிறெய்‌ திடும்போ தெதிரிலா திருந்த
நள்ளிருள்‌ தளர்ந்துளம்‌ நாணி
மாயமா – யினபோன்‌ மாயமாய்‌ மறைந்தான்‌
வாசவன்‌ விடுத்தரு மறையோன்‌. «148

ஆழ்வார்‌ திருவுலா
யாவரு மிவ்வா றடிதொழு மணியா
தனமிசை யிருந்தவாழ்‌ வாரைக்‌
கோவமை செயலின்‌ சிறப்பெலா மமையக்‌ குலூரி நிகர் கசப்‌ பிடர்மேல்‌ றேவர்கற்‌ பகப்பூச்‌ செழுமழை பொழியத்‌ இருந்திட வேற்றி மந்திரிகள்‌ வாவுமான்‌ றடந்தேர்‌ மதகரி. பரியாள்‌
மருங்குற நெருங்கிவந்‌ தடவும்‌; 144 –க௪ப்பிடர்‌ மேல்‌-யானையின்‌ பிடரியில்‌,

வருமுழு மதிபோல்‌ வெண்குடை நிழற்ற
_ மகரகுண்‌ . டலஞ்செவி யிலங்க
விருபுற மதிலுஞ்‌ சாமரை யிரட்ட
-விரவியிற்‌ பலகலன்‌ விளங்கப்‌
பொருகட லெனமா முரசொலி கறங்கப்‌
பூரிகா களம்பல முழங்க
அருமறை: யதுகொண் டிருடிக ளுடனே
யந்தணர்‌ மங்கல மூரைப்ப ; 145

மூன்றுல கினரும்‌ திருப்புகழ்‌ புகழ முறைமுறை யரரர்வந்‌ இறைஞ்ச
ஆன்றநல்‌ லறமும்‌ துதிசெய மகிழ்வோ
டைம்புல னாதுிதோத்‌ தரிக்க
மான்றுடர்‌. விழியார்‌ நடித்திடப்‌ பலர்கள்‌
மணிவிளக்‌ காலம தெடுப்ப
ஏன்றவிம்‌ முறையோ டஉரசன்வேண்ட
எழுந்தனன்‌ பவனிவந்‌ திடவே. 146

சகரர்தொட்‌ டிடுமக்‌ கருங்கட லடுத்த
தரணிமேல்‌ நிகரில தாக
மகுரதோ ரணங்களு யர்த்திப்பன்‌ முறையால்‌
வளம்பெறத்‌ திருத்தியும்‌ மதுரை நகரமுள்‌ வலமாய்‌ அரசவீ தியின்வாய்‌ –
நண்ணுறு கோலமஃ துணர்வான்‌
அகரமே மூதலா மக்கரத்‌ தெல்லாம்‌
அமருநா ரணனுமுள்‌ ஸணர்ந்தான்‌. 147

பெருமாள்‌ விண்ணில்‌ தோன்றினான்‌
இருடனை துரக்கு நவமணி பசும்பொன்‌
னிழைமுடி முடியின்மே லிலங்க
அருடரு கமலக்‌ கண்முகத்‌ இலங்க
வைம்படைக்‌ கரங்கண்‌ மீதசையச்‌
FGL_G குழற்பூந்‌ ‘திருவினோ டுரத்திற்‌
றலங்கொளி கவுத்துவம்‌ துளங்கக்‌
கருடன்மீ தெழுந்தான்‌ பொன்மலை மிசையோர்‌
கருமலை வருதலைக்‌ கடுப்ப. 148-பொன்‌ மலை மிசை கருமலை போல்‌ திருமால்‌ வந்தான்‌.
சுருடன்‌ – சிவந்த நிறமுடையவன்‌. திருமால்‌ கரிய நிறமுடையவன்‌,

அம்புயத்‌ துறையு மயன்கயி லையர்கோன்‌
அமரர்கோன்‌ முறைதொழு தேத்தத்‌;
தும்புரு வுடனா ரதனியாழ்‌ மிழற்றத்‌; தூயமா முனிவர்வாழ்த்‌ துரைப்ப
உம்பர்க ளியக்கர்‌ கருடகந்‌ தருவ
ருயர்பத்த நித்தமுத்‌ தர்களும்‌ பம்பியெம்‌ மருங்கும்‌ நெருங்குற வாடல்‌
பாடல்க ளரம்பையர்‌ பயில. 149

அந்தரத்‌ தெழுந்து துந்துமிக்‌ குழாங்க ளதிரவை குந்தம்விட்‌ டகலா
வந்தரு டிருநா ரணன்றிரு மேனி
வடிவமு நிறைமதி நிகருஞ்‌ சுந்தர வதன விலாசமுங்‌ கருணைத்‌
துணைமலர்க்‌ கண்களி னொளியும்‌
சிந்தையுள்‌ ஞரூருகக்‌ கண்களால்‌ விட்டு
சித்தனுந்‌ தெளிவுறக்‌ கண்டான்‌. 150-வடிவமும்‌, வதன விலாசமும்‌, கண்களின்‌ ஓளி
யும்‌, சிந்தை உருக, விஷ்ணு சித்தனும்‌ கண்டான்‌ என இணைக்கவும்‌.

திருப்பல்லாண்டு
விண்ணவர்‌ மகுட கோடிகள்‌ இறைஞ்ச
விளங்குபொற்‌ கலுழன்றன்‌ புயமேல்‌
நண்ணுநா ரணன்றன்‌ நிருவுரு வொளிதன்‌
னலமுரு முளத்துணர்ந்‌ இவரை
மண்ணவ ரெவரு மிருகணு மூளமு
மகிழ்வுற நோக்‌இடிற்‌ கதுவுங்‌
கண்ணிறை யெனப்பல்‌ லாண்டெனும்‌
பதிகக்‌ கவிதையால்‌ காப்பணிந்தனனால்‌, 151

முன்னமோர்‌ மடுவிற்‌ கராவின்வாய்ப்‌ படலான்‌
மூலமென்‌ றழைத்திடுங்‌ கரிமுன்‌
மன்னுமச்‌ செயல்போ லிந்நகர்க்‌ கோலம்‌
மருவுற வீங்கெழுந்‌ தருளும்‌ | நின்னைமா துடன்கண்‌ . களிப்புறக்‌ காணல்‌
நிலையிலா வுருவுகொண்‌ டிடும்யான்‌
என்னமா தவம்செய்‌ தனனெனப்‌ பல்கா லேத்தினன்‌ தொழுதனன்‌ மகிழ்ந்தான்‌. 152-பெரியாழ்வார்‌, உன்னைக்காணத்‌ திருமாலே! யான்‌ என்ன மாதவம்‌
. செய்தேன்‌ என்றார்‌

இத்தகை யினனாய்‌ மீண்டுமா மாலை
யிசைக்கவென்‌ நிதையத்துள்‌ நினையா
வத்தகை யுணந்தந்‌ நாரணன்‌ மகிழ்வா
யவன்றலை மீதுதன்‌ பதங்கண்‌
டொத்தகைத்‌ தலங்கொண் டஃஇவன்‌ வருடி
யுணர்ந்தவா றின்னதென்‌ றுணர்ந்திட்‌
டெத்தகை யெனக்கொண்‌ டியம்பலா மெனக்கா
யிரமிலை நாவெடுத்‌ தியம்ப. 153

இருமால்‌ தன்னுடைய திருவடியை ஆழ்வார்‌ தலையில்‌ வைத்தான்‌.
அப்போது ஆழ்வார்‌ அடைந்த நிலையை யியம்ப எனக்கு ஆயிரம்‌ நாக்கள்‌
இல்லையே என்கிறார்‌ ஆசிரியர்‌. **பருப்பதத்துக்‌ கொடி பொறித்த பாண்டியன்‌
குலபதிபோல்‌ திருப்பொலிந்த சேவடியென்‌ சென்னிமிசை வைத்தாய்‌” என்று
பெரியாழ்வாரே கூறியுள்ளார்‌. பெருமான்‌ தன்பதத்தை வைத்த போது ஆழ்வார்‌
தம்முடைய கரங்களால்‌ வருடினார்‌. இருமகளார்‌ வருடும்‌ பதத்தை வருடும்பேறு
பெரியாழ்வாருக்குக்‌ இட்டிற்று.

சமயவாதியர்‌ புகழ்ந்தனர்‌
சைவரே முதலாஞ்‌ சமயவா இயரும்‌
தத்தமச்‌ சமயதே வர்களைக்‌
கைவிடு பவராய்க்‌ கருத்துளே திருவின்‌
கணவனே பரமெனத்‌ தெளிந்தம்‌
மைவரை யனையான்‌ திருவடி யதன்‌€ழ்‌
வணங்கினர்‌; நடித்தனர்‌; குதித்தார்‌;
செய்வகை யுணரார்‌; களிப்பெனும்‌ நறவும்‌
தெவிட்டவுண்‌ டிடுதலாற்‌ றியங்கி, : 154

மாறனு செல்வ நம்பியே முதலா
வளைகடற்‌ புவிமருங்‌ இனருந்
தேறுமிப்‌ பரம புருடார்த்த மதனாற்‌
றேவரு முணர்கிலாப்‌ பரமாம்‌
நாறுபூந்‌ துளவ நாரண ஸனுருவ நங்கணாற்‌ கண்டனம்‌; எனக்கொண்
டூறுபே ர௬ுவகைச்‌ சிறந்தநல்‌ லுணர்வோ டுற்றெதஇர்‌ வணங்கி னரன்றே. 155

இவராலன்றோ நாம்‌ திருமாலைக்‌ கண்டோம்‌ என்று பாண்டியன்‌
செல்வதம்பி முதலானவர்கள்‌ ஆழ்வாரைப்‌ பணிந்தனர்‌,

வேண்டுதன்‌ வேண்டு மவ்விதம்‌ அருளும்‌
வேதமீ துறைந்திடுந்‌ திருமால்‌ மீண்டுமவ்‌ வாழ்வார்‌. திருமுகம்‌ நோக்கி
விளம்புவன்‌ ; இன்றுதொட்‌ டுனக்கு
மாண்டகும்‌ பட்டர்‌ பிரானெனு மொருபேர்‌
வழங்கினம்‌ இன்னமும்‌ சிலநாள்‌
பூண்டுறு நமது கயிங்கிரிய மதனைப்‌
.. பொருந்துறும்‌ படிபுரித்‌ திருந்து. 156

புவியிலஸஞ்‌ ஞான மடைந்துளோர்‌ ஞானம்‌
பொருந்துறச்‌ செந்தமி ழதனாற்‌:
கவிபல வியம்பிப்‌. பின்புவை குந்தங்‌
கலந்துநீ யணைகென வவன்றன்‌.
செவியுறப்‌ புகன்று கருணைகூர்ந்‌ தருளித்‌
தேவர்சென்‌ றடிதொழுந்‌ திருமால்‌
குவிமுலைத்‌ துவர்வாய்த்‌ இருவொடு மடியார்‌
குழாத்தொடும்‌ தன்பதி யடைத்தான்‌. 157

ஆழ்வார்‌ திருவோலக்கம்‌
(வேறு)
நாரண ஸனகன்றபின்‌ னலங்கொண் மாநகர்‌
தோரண வீதிகள்‌ பலவும்‌ சுற்றிவந்‌
தாரண வொலியுட னானை விட்டிழிந்‌
தேரணி மண்டப மினிதி னெய்தினான்‌. 158–ஏரணி மண்டபம்‌- அலங்கரிக்கப்பட்ட மண்டபம்‌,

முத்தவெண்‌ குடைமுழு “மதியின்‌ மீதுறக்‌
கத்தைவெண்‌ கவரிகா லசையக்‌ கைகொடு
புத்தரே முதலினர்‌ வணங்கிப்‌ போற்றிடச்‌
சித்திர வாதனஞ்‌ சேர்ந்து வைகனான்‌. 159:

சீவலதேவன்‌ பரம வைஷ்ணவனானான்‌
சவல தேவனென்‌ றுரைக்கும்‌ செவ்விசோர்‌
காவலற்‌ காழிசங்‌ குக்கு றிப்பொறித்‌
தேவல்செய்‌ தொண்டுகொண் டினிய வொண்பொரு
ளாவலோ டவனருள்‌ யாவும்‌ கைக்கொளா, . 160

கூடலி னழகர்தம்‌ கொடிய பாம்பின்மேல்‌
ஆடிய பதம்பணிந்‌ தவண்விட்‌ டேகுியே
நீடிய நெறியெலாங்‌ கடந்து நீள்கொடி
மாடமார்‌ புதுவையின்‌ மன்னி னானரோ. 161.

வடபெருங்‌ கோயிலின்‌ மருவி மாதவன்‌
அடிமலர்‌ . முடியுற வணிந்து மன்னருட்‌
படியவ ணடைந்துள பலவு மீதெனா ்‌
மு.டியவுஞ்‌ செவியுற மொழித்து மீண்டனன்‌. ்‌ 162

குன்பெருங்‌ கோயிலைச்‌ சார்ந்து வைகியே
முன்புபல்‌ லாண்டெனு மொழிந்த தாதியாய்‌
அன்பொடுஞ்‌ சென்னியோங்‌ கந்த மாகவே
இன்புறு மிசையினின்‌ றமிழி யம்பினான்‌. 163

நான்குநூ றெழுபதின்‌ மூன்று நன்கமைந்‌ தான்நவத்‌ திருமொழி யதனு ளாழிகைத்‌
தேன்கமழ்‌ துளவமால்‌ இருவு ருக்கொடு
தோன்றுமூ ரிருபதின்‌ மூன்று சொன்னதே. 164

வேறு
அரங்கம்‌ வெள்ளறை குறுங்குடி குடந்தை வதரிகாச்‌
சிரமம்‌ வேங்கடங்‌ கோட்டியூர்‌. சீர்கங்கைக்‌ கரையின்‌
மருவு கண்டஞ்சோ லைமலை சாளக்கி ராமம்‌
பொருவி லாதசர்‌ பொருந்துபேர்‌ திருக்கண்ண புரமே. 165

இருவை குந்தமோ டாயர்தம்‌ பாடிசீர்‌ வடம
துரைய யோத்திகோ வர்த்தனம்‌ வில்லிபுத்‌ தூரது
வரையொோ டுஞ்சித்ர கூடமு மதுரையிற்‌ கூடல்‌
புருட வுத்தமம்‌ பாற்கட லெனும்பெயர்‌ பொருந்தும்‌. 166-பெரியாழ்வார்‌ மங்களாசாசனம்‌ செய்த திருப்பதிகள்‌ பதின்‌
மூன்று. அவற்றின்‌ பெயர்கள்‌ குறிப்பிடப்பட்டுள்ளன.

முதும்‌ றைப்பொரு எருஞ்சுவை முகந்துகொண்டு ரைக்கும்‌
அதுத னைத்தெரிந்‌ தறிந்துணர்ந்‌ தோதுயம்‌ புவியோர்‌
கதுவி டும்பெரு மாயையா மிருளினைக்‌ கடிந்தே
மதுபொ ருந்திடும்‌ துளவமால்‌ பதத்தின்மன்‌ னினரால்‌, 167

இனைய பாடல்க எளிசைத்தரு ளெம்பட்டர்‌ பெருமான்‌
அனைய மாநகர்‌ தனிலிருந்‌ தவணுறை திருமால்‌
புனையு மாலைகட்‌ டொழில்புரி தவனடி போற்றி
நிணையு நெஞ்சக மகிழ்வுட னெடிதுநா ஸிருந்தான்‌. 168

இன்ன காதையை யெழுதுவோர்‌ கஞமிதன்‌ பொருளைப்‌
பன்னு வோர்களும்‌ பன்னிடும்‌ பொருள்களைப்‌ பரிவாய்‌
கன்ன முடுறக்‌ கேட்பவர்‌ களுங்கடற்‌ புவிமேல்‌
மன்னு நாளிருந்‌ துயர்பத மருவிவாழ்‌ குவரால்‌, 169

திருமங்கைமன்னன்‌ வரலாறு புகல்வோம்‌
அங்கண்‌ மாநிலப்‌ பரப்பினில்‌ புதுவைவந்‌ தருளும்‌
நங்கள்‌ சீர்ப்பெரி யார்செய லினைநவின்‌ றனமால்‌
திங்கள்‌ சூடிதன்‌ குடியரிற்‌ குறையலூர்‌ செனித்த மங்கை யார்புரிந்‌ தருள்செயல்‌ வகுத்தினி துரைப்பாம்‌. 170

பெரியாழ்வார்‌ இருவவதார அத்தியாயம்‌ முற்றும்‌.

——————

திருமங்கையாழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌
பேதைநெஞ்சே! யின்றைப்‌ பெருமை யறிந்தஇலையே |
யேது பெருமையின்றைக்‌ கென்னெனின்‌- வோதுகின்றேன்‌
வாய்த்தபுகழ்‌ மங்கையர்கோன்‌ மாநிலத்தில்‌ வந்துதித்த
கார்த்திகையில்‌ கார்த்திகைநாள்‌ காண்‌.(உபதேச ரத்தினமாலை, பக்கம்‌ ; 8)

அகம்படியர்‌ குலம்‌
நிறையு மாமதி முகத்திய ரிளநகை நிலவான்‌
நறைகொ எளாம்பலின்‌ நாண்மலர்‌ நனைமுருக்‌ கவிழும்‌
நிறையு நீர்மலித்‌ தடங்களும்‌ வயல்களும்‌ நிரம்பும்‌
குறைய லூரதன்‌’ பெருமையைக்‌ கூறுத லரிதால்‌. 1

அந்த மாநக ரந்தனிற்‌ வெனடி யவரில்‌
வந்து வாழகம்‌ படியர்தங்‌ குடிவளம்‌ பெறவே
செந்தி ர௬ப்பகி யானநா ரணன் இரு வடியைச்‌
சிந்தை கொண்டுல கோர்தொழச்‌ செயும்பர காலன்‌. 2

ழ்வார்‌ அவதாரம்‌
ஆர்த்தெ முந்துமெய்ஞ்‌ ஞானநல்‌ லறிவணு இடவும்‌
வேர்த்து மாயையம்‌ புவிதனை விட்டகன்‌ . நிடவும்‌ .
தீர்த்த னாகிய நாரணன்‌ நிருவரு ளதனாற்‌
கார்த்தி கைத்திரு மதியினிற்‌ கார்த்திகை நாளின்‌. 3

ஒன்ப தாகியகோட்களு முச்சனன்‌ குறைந்திட்‌
டன்ப ராடுிநற்‌ பலன்றர வமையுமோ ரையினின்‌
முன்ப கன்றமெய்ஞ்‌ ஞானத்தின்‌ முளைத்திடுங்‌ கொழுந்தோர்‌
தென்ப டும்புவி யிடைச்சிறந்‌ தெழுந்தது போலும்‌. 4

ஆர ணன்முத லண்டங்கள்‌ பலவுமற்‌ றவையும்‌
நார ணன்றிரு வுந்தியிற்‌ னோன்றுதன்‌ மகமைக்‌
கார ணந்தெரி யாமதக்‌ கசடரைப்‌ பிளக்கும்‌
ஏர ணிந்தகோ டாலிவந்‌ தெழுந்தது போலும்‌. 5

தோன்றி னானவண்‌ தோன்றிய தோன்றலை நோக்கி
ஈன்று ளோனவற்‌ இயற்றுவ யாவையு மினிதின்‌
ஆன்ற கேள்வியர்‌ விதித்தநான்‌ முறையது வாகச்‌
சான்று ளோரெலா மகிழ்வுற வழங்கினான்‌ தானம்‌. -6-

அந்த மாநக ரந்தனி லணுகுவர்‌ பலருஞ்‌ சிந்தை யோடிரு கண்களும்‌ ம௫ழ்சிறந்‌ தோங்கச்‌
சந்திரன்கலை நாடொறும்‌ வளர்வபோற்‌. றழைத்து
மைந்த னுந்தினஞ்‌ சிறப்பொடு வளருமன்‌ னாளில்‌. _- 7

ஞால மதினிற்‌ காமகை வலமென நவிலுஞ்‌
சீல மில்லவச்‌ சமயமா யும்படி திருத்தும்‌
பால னாம்பர காலனுக்‌ கொருபெயர்‌ பரிவாய்‌
நீல னாமென நவின்றன னீன்றவ னென்போன்‌. 8

வேத நான்கினு முறுநல்ல தாகமே வமுதைத்‌
தீதில்‌ செந்தமி மாற்‌ றிரு மொழியெனத்‌ திருத்திக்‌ கோதி லாதவர்‌ செவியுறக்‌ கொடுப்பவர்க்‌ ன்ற .
மாத ருந்திடு மன்னமு மூட்டினண்‌ மகஒழ்வாய்‌. 9

மாயையின்‌ வன்மை
துள்ளி யம்மனத்‌ தெழுதரு மாயையின்‌ றொடர்பால்‌
நள்ளி ர௬ுட்களை பவனுக்குச்‌ சவளநன்‌ கிழைத்தார்‌
வள்ளி யோர்க்குமெய்ஞ்‌ ஞானத்தை வகுத்துறை வள்ளல்‌
பள்ளி யின்வட மொழியொடுந்‌ தென்மொழி பயின்றான்‌. 10

அனைய தன்மையி னாயறு பத்துநான்‌ கெனவே
நினையு றுங்கலைக்‌ கியானங்‌ கணிலையெலா முணர்ந்து
வினையி லாப்பரஞ்‌ சோதியி னிலைவெளிப்‌ படுத்தக்‌ கனைக டற்புவி மீதுவந்‌ தெழுந்தகண்‌ மணியை. 11

மயக்கி யேவருந்‌ திருவிளை யாட்டினை மதிப்பான்‌
வியக்கு நெஞ்சொடுந்‌ இருமகட்‌ கொழுனனும்‌ விரும்பி
நயக்கு மாயையை விடுத்தலு நண்ணுமங்‌ கதனான்‌
முயக்கு நெஞ்சின னாயினன்‌ முழுமதி யுள்ளன்‌. 12

ஏன்ற நீர்மிசை யமைவுறுஞ்‌ சைவல மதுபோன்‌
மூன்று லோகமு முந்தியின்‌ முறைமுறை வழுவா
இன்று சார்ந்தரு ளிறைவனை யிருத்துநல்‌ லறிவு தோன்று நெஞ்சினை மறைத்தது மாயையுந்‌ துடர்ந்து. 13-

வெங்க ணைக்கொலை வாள்சதை வேல்முத லியவாந்‌
தங்கு லத்தொழிற்‌ பரிசையு முணர்ந்தனன்‌ றகவாய்‌
எங்கும்‌ யாரினு மித்தொழிற்‌ பயிற்சிய ரெவரும்‌
அங்கி வந்தவ னடிகளுக்‌ கபயமென்‌- டைய. 14

மாயை யானது மலிந்துமூண்‌ டிடவுள மயங்கி. .
நேய மோடதை நீக்குவான்‌ நினைந்துநீக்‌ குதலுந்
தோய மபேற்றுடர்‌ சைவல மலம்பினும்‌ தொடர்ந்து
மேய தாமென ஈண்டவன்‌ றன்னைமே விடுமால்‌. 15

பந்தன்மீதுறப்‌ படர்ந்திடும்‌ பசியமென்‌ கொடியை
வந்து சூறைமா ருதம்விழுத்‌ இடுகின்ற வகைபோல்‌
சிந்தை மீதுறக்‌ கொழுந்துவிட்‌ டெழுந்திடு மறிவை
முந்து மீதுறுங்‌ காமக்கால்‌ முட்டிவீழ்த்‌ இடுமால்‌. 16

அரசர்‌ மாமணி முடிகளை யறுத்திடுங்‌ கூர்வாள்‌
நிரவு பஞ்சணை மிசையுறின்‌ மழுங்குமந்‌ நெறிபோல்‌
விரவு நாரணன்‌ பதத்துற நிரப்பு மெய்ஞ்ஞானம்‌
பரவு மங்கையர்‌ விருப்பினிற்‌ படமழுங்‌ இயதால்‌. 17

இன்ப ஞானவீ டறிந்துயர்‌ வேதமென்‌ றியம்பும்‌
அன்பு றுந்திரு மடலெனு மாலைசெய்‌ பவனுந்‌
துன்பு றுந்திரைக்‌ கடலெனுஞ்‌ இற்றின்பத்‌ துறையின்‌
றன்பெ ருங்கலை நாூலெலா முணர்ந்தனன்‌ றகவாய்‌. 18

மலையி ஸனும்பல கடத்தினு மற்றுள நிலத்தின்‌
றலைதொ றும்பெயு நீரெலாம்‌ தஇுதனிற்‌ செலல்போல்‌
நிலையு ஞானமும்‌ கல்வியும்‌ வேறுள நெறியும்‌
விலைம டந்தையர்‌ மலையெனு முலைவிழுங்‌ . 19

இனய ஸாய்ப்பதி னாறெனும்‌ வயதுமெய்‌ இயபின்‌
புனைம லர்க்குழமன்‌ மடந்தையர்‌ புந்தியள்‌ ளவனை
நினைவ ரைங்கணைக்‌ கழவனாமென தெடிதவனும்‌
அனையர்‌ தங்களை யிரதிய ராய்நினை குவனால்‌. 20

இவ்வி தத்தனாய்ப்‌ பரத்தைய ரின்ப்சா கரத்தின்‌:
ஓவ்வி யுற்றலைந்‌ தவரித மமுதமுண்‌ டுவப்பால்‌
யெவ்வி தத்தினுந்‌- தணிகிலா திழைந்தனன்‌ இழையும்‌.
அவ்வி த்த்தினை .யுரைத்திட முடியொணா தென்னால்‌.: 21

குமுதவல்லியார்‌
பூவின்‌ மெல்லியர்‌ சுனவிள முலையினர்‌ பொருத்தும்‌
ஏவு கண்ணியர்‌ முழுமூகத்‌ தெரிவையர்‌ எழில்சேர்‌
தேவ கன்னியர்‌ திரண்டொரு விமானமேற்‌ சேர்ந்து
மேவ மிக்களி கூர்ந்திட விசும்பைவிட்‌ டிழிந்தே. .. , 22

காலி மேதிகள்‌ கன்றினை நினைதொரறுங்‌ கனியும்‌
பாலி னோடிறா .லொழுகுதேன்‌ தினம்சென்று பாய்ந்து ்‌
சாலி யோடுசெங்‌ கன்னலுந்‌ தழைத்து வானோ்கும்‌
ஆவி மாநக ரதனில்வந்‌ தடைகுவா ரன்றே. -23

பொய்கை யார்ந்தறீ ராடுவார்‌ ; பூம்பொழிற்‌ களிற்போய்‌
கொய்கு வார்மலர்‌ ஆலிதநா . தன்குரை கழலிழ்‌
பெய்கு வார்‌;பணிந்‌ தேத்துவார்‌ ; பின்புவே றியற்றுஞ்‌
செய்கை நேர்ந்துபின்‌ விமானமேல்‌ விசும்பிடைச்‌ சேர்வார்‌. 24

இன்ன வாறுபற்‌ பலபல புரிந்திடு மிடையின்‌
மன்னு மோர்பகற்‌ றனித்தொரு மாநெடுந்‌ தூரம்‌
துன்னி மாமலர்‌ கொய்குவான்‌ றுருவிமற்‌ நுள்ளோர்‌ அன்ன தோர்கிலா ரவளைவிட்‌ டேகின ரன்றே. 25

பிரிந்து நீங்கிய மாதுமீண்‌ டவர்தமைப்‌ பேணிப்‌
பரிந்து நோக்கலும்‌ காண்கிலள்‌ ; பதைத்துள நெடுங்கண்‌ .
சொரிந்த நீர்களும்‌ சரிந்தவிழ்‌ குழல்களுந்‌ தோன்ற
விரிந்த மாமலர்ப்‌ பொய்கையின்‌ கரையின்மே வினளால்‌. 26

ஆங்கு நோக்கலு மாலிமா தவர்க்கனு தினமும்‌
பாங்கி னோடுமா ராதனம்‌ பரிவோடு புரியுந்‌
“தீங்கி லாமறை யவனிருந்‌ இிடத்தெளிந்‌ தவன்றன்‌
பூங்க ழற்கணின்‌ முடியுறப்‌ பணிந்திது புகல்வாள்‌. 27

ஐய ! கேட்டியான்‌ றேவ கன்னிகை யனேகருடன்‌
வைய மீதிழிந்‌ இந்தவான்‌ பொய்கைநீர்‌ மருவிச்‌
செய்ய மாமலர்‌ கொய்குவான்‌ சென்றபோ தியானத்‌
தைய லார்தமைப்‌ பிரிந்தொரு தமியளா யினனால்‌. 28

தேடி னேன்பல விடந்தொறும்‌ தெரிகிலேன்‌ றிகைத்து
வாடி னேனுளம்‌ வருந்தி வந்திவ்விட மருவிக்‌
கூடி னேன்படர்ந்‌ துளசெயல்‌ நின்செவி குறுகப்‌
பாடி னேனவர்‌ தமைக்கண்ட துண்டுகொல்‌ பகர்வாய்‌. 29

என்ன வோதவம்‌ மொழிகள்‌ தன்னிரு செவியுறலும்‌
அன்ன மாதுதன்‌ திருமுக நோக்கியங்‌ கவர்கள்‌
முன்ன ரேயொரு விமானத்தின்‌ மீமிசை முடுகி
மன்னி யேகினர்‌ வானிடை யென்றனன்‌ மறையோன்‌. 30

உ.ந்தன்‌ மாமக ளாகும்யாம்‌
தந்தை யாகுமென்‌ றவனடித்‌ தலத்துவீழ்ந்‌

ஆழ்ந்த வன்பினோ டந்தணன்‌ றனதடி யதன்மேல்‌
வீழ்ந்த மங்கையை நோக்கிநீ வெருவிடேல்‌ வெகுநாள்‌
வாழ்ந்து மல்கவென்‌ றாசிகள்‌ பற்பல வழங்கித்‌
தாழ்ந்தெ டுத்துமார்‌ பிருகுறத்‌ தழீஇனன்‌ றகவாய்‌. 32

னீர்துடைத்‌ துச்சிமோந்‌ இந்தமெல்‌ லியல்வீட்‌
ளாளெனி லுலகன ரொவ்விடார்‌; நமது
வழிய ளோர்களும்‌ வசைமொழி புகல்குவர்‌ வளரப்‌
பழியு ‘மெய்துமென்‌ றஐஞ்சியே பன்முறை நினைந்தே. 38

ஆலி நாதர்தன்‌ கோயிலில்‌ நடனஞ்செய்‌ பவர்க்குண்‌
மேலி நாள்தனை -வியரிலா தயர்ந்துபெண்‌ விருப்பா
மாலி னோடுற லுணர்ந்தவ னாகியம்‌ மடவாள்‌ ்‌
பாலி னிங்கிவ டனைவிடிற்‌-.பரிவொடும்‌ வளர்ப்பாள்‌. 34

என்ன வேதியன்‌ கன்னியோ டாங்கவ ஸிவின்வாய்த்‌
துன்ன லோடுமவ்‌ வேசையு மடுத்தெதிர்‌ தோன்றிப்‌“.
பொன்ன டிப்பணிந்‌ தேத்திய பூங்கொடி நிகரும்‌
கன்னி யாரெனக்‌ கேட்டலும்‌ வே.தியன்‌ கழறும்‌. –35-

முன்பெ டுத்துள சனனங்க: டொறுமுயன்‌ நிழைத்த
என்பெ : ரந்தவத்‌ தளித்தது: மகளிலா மையின்‌ நீ
, துன்பு றத்தெளிந்‌ தவையொழித்‌ தஇடும்வகை தோன்றும்‌
அன்பி னாலிவள்‌ தனையுன்க்‌ களிக்குமா றடைந்தேன்‌. 36

என்று ரைத்தவ உடன்வர லாற்றையு மியம்பி
நின்ற வக்கொடி தன்னையு நெறிமுறை யளித்துச்‌
சென்ற டைந்தனன்‌ தனதகம்‌ அளித்தசே யிழையை
porn னத்தன தகத்தினுட்‌ கொண்டுநண்‌ ணினளால்‌. 37

நாட்க அணங்கு நங்கையை வளர்த்தாள்‌ ‘
நாக மங்கையர்‌ நானில மடந்தையர்‌ நவிலும்‌ —
மாக மங்கையர்‌ மலரயன்‌ சவென்குகன்‌ மதன்றம்‌ >
போக மங்கையர்‌ எவர்களும்‌ புனிதநா
ஆக மங்கையு நிகரிலரி வளழ கறிந்தேன்‌. ப 38

துமுதம்‌ உற்றெழ மதித்தநாள்‌ தூயபாற்‌, கடலில்‌ அமுத முற்றெனத்‌ தோன்றிய வணங்தர்‌ சமுதைக்‌
குழுத வல்லியென்‌ ஹறொருபெயர்‌. குறித்தழைத்‌ தனளால்‌;
நமது நாயக வாலியாண்‌. கோயிலின்‌ நடிப்பாள்‌. 39

பவள வாயிதழ்‌ குவளைகண்‌ பகியகார்க்‌ கூந்தல்‌
இவட ஸனால்நமக்‌ .களவிலாப்‌ : பேருறு மெனக்கொண்
டவளை யாதர வுடன்சுமந்‌ தளித்தபெண்‌ ணாகத்‌
தவள வாயழு தூட்டியத்‌ தையலும்‌ வளர்ந்தாள்‌. 40

கோதி லாடனக்‌ கமைவன வகைவகை குறிக்கும்‌.
பாத மேமுதன்‌ முடியள வாகவே பலவா
யோது மாவவ யங்களுக்‌ கொழுகொளி பரப்புஞ்‌
. சோதி யாமணிப்‌ பசும்பொனின்‌ ‘ கலன்கள்சூட்‌ டினளால்‌ ;47:

பாட கம்செழும்‌ பதுமம்‌ நேரிய பதம்வருந்த
நாட கத்தொழில்‌ புரிபவள்‌: யாவுநன்‌ கறிந்தாள்‌ ;
சூடகக்‌ கையின்‌ விரல்களாற்‌ றுவன்‌ றிடத்‌ தெரித்திட்‌
டாகப்‌ பசுந்தந்‌ இயாழ்‌ பயில்வது மறிந்தாள்‌. 42

இனைய தாயதந்‌ தொழிலெலாங்‌ கற்றபின்‌ துளவம்‌
புனையு மாலிதா யகன்றிரு முன்ந்டம்‌ புரிந்து
வினைய கற்றுபொற்‌ படிகநீர்த்‌ துளவமு மிசைந்து
மனைய ணைந்துவா இத்திடு பள்ளிமன்‌ னுவளால்‌. 43

ஆலை யின்கரும்‌ பனையமா .தெழில்வள மறிந்து
வேலை சூழ்புவிப்‌ பரப்பெலாம்‌ விலங்கிடக்‌ தனிச்செங்‌ –
கோலை யோச்சிடு மரசர்கள்‌ குலவுமிங்‌ இவளைமாலை சூட்டிடக்‌ கிடைக்குமோ எனமருண்‌ டனரால்‌. 44

னியும்‌ பாகும்நற்‌ பாலுடன்‌ கைத்திட மிழற்றும்‌
இனிய சொல்லினாட்‌ கேவலிந்‌ திரியத்‌ தையவித்த
புனிதவ ரும்மதன்‌ னூன்முறை புரிகுவ ரென்னின்‌
மனித ராயினோர்‌ யாவரே மருளுறா தவரே? 45

பரகாலரின்‌ காதல்‌
வேறு
அன்னவ ஸிவ்வா றாக விருக்கும்‌ மதுதன்னைப்‌
பன்னரும்‌ €ர்த்திக்‌ குறையலூர்‌ வாழும்‌ பரகாலன்‌
nora லுணர்ந்தே யங்கவ ளாசைத்‌ தளைமேலும்‌
துன்னிட்‌ வவ்வூ ரேகுவ தற்குத்‌ துணிவானான்‌. 46

தங்க மூடன்பன்‌ மணியொளி ருந்தண்‌ டிகையேறிப்‌
பொங்க ரெனும்திண்‌ புயவலி தோழர்‌ புடைசூழ
மங்கு லளாவும்‌ .பொன்மதி டன்னை. மதியோடுஞ்‌
செங்க இருஞ்சூ ழாலி நகர்க்கண்‌ சென்றனனால்‌. 47

ஆங்கொ ரிடத்திற்‌ றுன்னி யிருந்திட்‌ டதன்பின்னர்‌
தீங்கனி யொக்குஞ்‌ சொல்லினண்‌ மேனித்‌ இறயோடும்‌
பாங்குற வைகும்‌ நல்லிட முங்கண்‌ படனோக்கி
ஈங்க டைமின்னென்‌ றேவிட நால்வ ரினிதோடும்‌. 48

அன்னவள்‌ வைகும்‌ பொன்மனை சென்றா ரதில்காணார்‌
துன்னி நடஞ்செய்‌ சாலையி ஸும்துன்‌ வினர்காணார்‌
நன்னரி யாழ்வல்‌ லாரொடு கற்றே நவில்கூடந்‌
குன்னில டைந்தே யங்குறு பெண்ணமு தந்தன்னை. 49

கண்ட னரம்பொன்‌ மேனியின்‌ வடிவம்‌ கண்ணென்னும்‌
புண்டரி கங்கொள்‌ ளாம லுளமற்‌ புதமெய்தி
எண்டிசை யுள்ளும்‌ கண்டில மிப்பே ரெழிலுக்குத்‌
தொண்டுறும்‌ நந்தம்‌ தோழனு மென்னத்‌ துணிவுற்றே. 50

மீண்டனர்‌ தாமுன்‌ வைகுறு மிலின்மே வினர்தம்மைக்‌
காண்டலு முள்ளங்‌ களிமகழ்‌ துன்னக்‌ கலிகன்றி
பூண்டிடு மன்பின்‌ ச௪ண்டுளி ரோநீர்‌ புகல்வீரென்‌
றாண்டவ னோதக்‌ கேட்டலு மவள்வடி வறைகன்தார்‌. 51

மழையள ‘கம்தண்‌ பிறைநுதல்‌ விற்புரு வம்வாட்கண்‌ ;
குழையணி வள்ளைக்‌ கன்ன மெளின்பூ |
அழகமை யும்கண்‌ ணாடிக போலும்‌ அமுதஞ்சொல்‌
பழமுதிர்‌ தொண்டை யிதழ்தர எங்கள்‌ பல்லாமால்‌; 52

விதுவ தனம்வளை கந்தரம்‌ வேய்த்தோள்‌ யாழ்முன்கை
பதுமம கங்கைத்‌ தளிர்விரல்‌ கிளிபாலி கையினுகிர்‌
புதுமலை முலையா லிலைவயி றாமெறும்‌ பூரோமம்‌
உதக மெழுந்திரை வரைதுடி யிடைசுழி யுந்தியதே. 53

அராவ. நிதம்பம்‌ கதலிகுறங்‌ கலவன்‌ சரணாம்‌
வராலின்‌ கணைக்கா லாமைப்‌ புறவடி. மன்னும்சர்‌
குராசு பரட்டாம்‌ பந்துகுதித்‌ துகிர்தான்‌ விரலாம்‌
பராவிய தாள்ங்‌ கந்திகழ்‌ பஞ்சு பதந்தானே. 54

அன்ன மெனப்படர்‌ மெல்லிய நடைமயி லஞ்சாயல்‌
இன்னக னமைதிக ளொப்பிட ஒவ்வா எழிலுற்ற
கன்னியை யாயிர மாதரு ளோர்பெண்‌ கனியென்ன
மூன்ன ரிழைத்துள நின்றவ மேமுன்‌ னியதென்ன. 55

அண்டர்‌ மத்திட வெண்கடல்‌ வந்தெழு மமுதென்னக்‌
கொண்ட. லுதஇித்தெழு முன்னெழு மின்னற்‌ கொடியென்னப்‌
புண்டரி கத்திரு மலரிடை வாழும்‌ பொன்னென்னக்‌
கண்டன மெம்மிரு கண்கள்‌ களிப்பக்‌ கடிதென்றார்‌. 56

அச்சொற்‌ கேளா வுள்ள மதற்குள்‌ ளவளாசைப்‌
பிச்சுற்‌ றேயங்‌ கேகு தலுன்னிப்‌ பெயர்போதின்‌
மச்சுத்‌. தேரோ டாதவ னாழி மறைவுற்றான்‌ நச்சுற்‌ கென்ன நள்ளிருள்‌ உள்ளில்‌: நணுஇியதால்‌. 57

வேறு .
இந்த வுலகம்‌ தனில்பிறந்திட்‌
டிறக்கும்‌ பிறவி தன்னையொழித்‌
குந்த வுலகம்‌ பெறுநான
மறிய வுரைக்கும்‌ குருபரனை நிந்தித்‌ இகழ்ந்திட்‌ டஞ்ஞான நெறியோ துவர்த மதியுள்ள
சந்தைக்‌ கருப்போ டியதெனவே
இசையோர்‌ எட்டு மிருண்டனவால்‌. 58

துன்னிச்‌ சிறந்த நள்ளிருள்வாய்த்‌ .
தோழ ரொடுமவ்‌ விடமகன்‌ றக்‌
கன்னி யுறைபொன்‌ மாடமதைக்‌
கலந்தாங்‌ இருந்தோர்‌. தமைவினவி
யன்ன மடமா தாடலுக்காய்‌
யாலிப்‌ பெருமான்‌ றிருக்கோயின்‌
மன்னி யடைந்த துளந்தெளிந்தம்‌
மணியா லயம்போய்‌ மன்னினனால்‌. 59

பரகாலர்‌ குமுதவல்லியைக்‌ கண்டார்‌
அங்கண்‌ பிரான்முன்‌ குமுதவல்லி
ஆடல்‌ புரியும்‌ போதினிலே
திங்க ளனைய முகத்தாடன்‌ ‘
இருமே னியினைப்‌ பதமுதலாய்‌
மங்கு லளக மீறாய்த்தன்‌
மலர்க்கண்‌ களிப்பக்‌ கண்டுருப்‌
பொங்கு ம௫ழ்வோ டாலியன்‌ நாட்‌
“பேர்துிற்‌ பணிந்து நின்றனனால்‌. — 60

தின்றங்‌ இருந்தப்‌ பேரழகன்‌
நிகரில்‌ வடிவந்‌ தனைக்காணா
மன்றல்‌ கமழுங்‌ : குழல்மடவாள்‌
மதனோ வானத்‌ திந்திரன்றான்‌
இன்றிங்‌ கிழிந்து வந்தனனோ?
வெனவே குவளை யிருத்டங்கண்‌
ஒன்ற வவன்றன்‌ றிருமேனி
முழுதும்‌ நோக்கி யுன்னுவளால்‌. 61

மருமந்‌ துளவ மணிகாணேம்‌;
வதனதந்‌ திருமண்‌ குறிகாணேம்‌;
மிருமந்‌ தரநேர்‌ மணிப்புயத்தி
லெஃகம்‌ வளையின்‌ பொறியிலையால்‌ ;
இருவின்‌ மகழ்நர்க்‌ கடியனலன்‌
எனவே இந்தை தெளிந்தவன்பாற்‌
கரும மிலையென்‌ நுளமுமிரு
கண்ணும்‌ திருப்பிக்‌ கசிந்தனளால்‌. 62

கசந்த மடந்தை திருவாலிக்‌
கண்ணன்‌ நறிருமுன்‌ னரிற்காலில்‌
-விசிந்த சதங்கை கலகலென
வேற்கண்‌ சுழலக்‌ கரமசைய
ஓ௫ந்த கொடியி னிடைநுடங்க
வொளிர்வா ரிறுக்குந்‌ தனங்குலுங்கப்‌
பசந்த மேனி வெயர்வரும்ப வுரோமம்‌ பொடிப்ப நடம்பயின்றாள்‌. 63

நடனம்‌ புரிந்து பெறுவதெலா
நல்கு வதுகொண் டவணீங்கி
மடம தருள்வார்‌ கள்புடைசூழ
மாட மணுடுப்‌ பசுங்கிளிக
ஞுடன்நன்‌ மொழிகள்‌ பலபயின்‌றிட்‌
டுணவு பொசித்திட்‌ டுறைபள்ளி
இடமங்‌ கணுகிப்‌ பஞ்சணைமே
லிசைந்தே திருக்கண்‌ வளர்ந்தனளால்‌, — 64-திருக் கண்‌ வளர்த்தாள்‌ – உறங்கினாள்‌. ‘**:அம்‌ மா மலர்க் கண்‌ வளர்‌கின்றான்‌”’ என்பர்‌ சடகோபர்‌

பாரகாலரின்‌ விரகம்‌
பரகா லனுந்தங்‌ கிடமணுகிப்‌ _
பஞ்ச சயனத்‌. இனிதமர்ந்திட்‌
டிரவான்‌ மதிபெய்‌ கொடுங்கனலால்‌
எய்தும்‌ பொதியத்‌ தென்றலினால்‌:
அரவார்‌ கடலி னொலிக்கூற்றால்‌
அன்றிற்‌ புலியால்‌ வென்‌ நிமதன்‌
கரவாய்ப்‌ பொழிஐங்‌ கணைவிடத்தாற்‌
கலங்கி யுறங்கா துருகினனால்‌, 65-பஞ்ச சயனம்‌-படுக்கை, அஞ்சுருவிட்டுச்‌ செய்த படுக்கை. பஞ்சவிதமான படுக்கை.
அழகு, குளிர்த்தி, மார்த்தவம்‌, பரிமளம்‌, தாவன்யம்‌ ஆக ஐந்துருவிட்டுச்‌ செய்த
படுக்கை” என்பர்‌ வியாக்யான சக்ரவர்த்தி பெரியவாச்சான்‌ பிள்ளை

உருகி யுருக நினைந்துநினைந்‌ துண்ட காம விடமதனாற்‌
கருக மேனி யவளையின்னும்‌
காணு மாசை யெனுமமுதம்‌
பருகி யுயிர்பெற்‌ றிவ்வகையா
யிரவை யொழித்தான்‌ பகலோனும்‌.
பெருகி யொளிருங்‌ கிரணமுடன்‌
பிறந்தான்‌ குணபாற்‌ பெருங்கடலின்‌. . 66

காலைப்‌ பொழுதி னஸெழுந்துசெய்யுங்‌
கரும மியற்றி முடித்திடுமவ்‌ வேலை தனதா ருயிர்த்தோழர்‌
மேவ வவர்தம்‌ முகம்தோக்கி
மேலைப்‌ படருங்‌ கருமமெலா
மூணர்வீர்‌ நீவிர்‌ விரைந்தெய்தி
யாலைக்‌ கரும்பின்‌ மொழியளெனை
யனையும்‌ வகைசெய்‌ தர௫ுண்மினென்றான்‌. 67

அந்த மொழியை தோழர்கள்சென்‌
றகல்வா னொழிந்திங்‌ கடைந்தவடன்‌
தந்தை தாயா ர௬ுடன்மொழிய
வவருங்‌ கேட்டுச்‌ சாற்றுமவர்‌
எந்த வூர்யார்‌ குலம்பெயரென்‌
.னெனவே கேட்க வுளதுரைக்கச்‌
சிந்தை மஒூழ்ந்திட்‌ டவற்கவளைத்‌ ட்ட
இருமா மணஞ்செய்‌ திடநேர்ந்தார்‌. 68

குமுதவல்லியாரின்‌ திருவுள்ளம்‌
அதனை யறிந்தக்‌ குமுதவல்லி யவன்றன்‌ செய்கை யறிந்ததனால்‌
விதனத்‌ துடன்யா ஸிவ்வுலகின்‌ விண்விட்‌ டிழிந்த துணர்வீரான்‌ தனொத்‌ துளனே யாயினும்பல்‌ வளத்தின்‌ மிகுந்தோ னாயினுமச்‌
சுதனுக்‌ கடியா னல்லனவன்‌ சுடலை யாடிக்‌ கடிமையுளான்‌. . 69

ஆத லாலங்‌ சுவர்க்களித்த
லடுக்கா தவனைச்‌ சேர்வதிலும்‌
வீத லேநன்‌ செனவடியேன்‌
விரும்பி யனலிற்‌ புகுவனென
வோத லோடு மம்மொழிகேட்‌
்‌ டுனது நினைவஃ தெனிலுன்மேற்‌
காத லாலங்‌ கவன்றிருமால்‌
கழற்குத்‌ தொண்டா குவன்கண்டாய்‌. 70

என்ன வந்த வவன்றோழ
ரிதனை யெடுத்திட்‌ டியம்புதலும்‌
அன்ன செய்கை யவன்புரியி
லவனை மண.நான்‌ புரிவனெனச்‌
சொன்ன மொழிகேட்‌ டவர்களுந்தந்‌
தோழ ரிடத்தில்‌
பன்ன வதனைப்‌ பரிவுடனே
பரகா லனுங்கேட்‌ டுளமகழ்ந்தான்‌. 71-

பரகாலர்‌ மாலடியாரானார்‌
அந்த மடமா தென்னுடனோர்‌
அணியா தனத்தி னிருப்பளெனில்‌
இந்தவ கைசெய்‌ இடவரிதோ’வென்றக்‌ கணத்தென்‌ றலை௫ரைத்து மூந்து மிரண்டு புயந்தனிலு | மாழி வளைமுத்‌ திரைபொறித்துச்‌
சிந்தை தெளிகே சவவாதித்‌
திருமண்‌ காப்புந்‌ தரித்தனனால்‌. 72

தோழர்கள்‌ குமுதவல்லியாரின்‌ கருத்தை உரைத்தலும்‌ பரகாலர்‌
காம்பறத்‌ தலை சிரைத்து, தோளில்‌ சங்கு சக்கரம்‌ பொறித்து, இருமண்‌ காப்பு-அணிந்து, வைணவரானார்‌. மதம்‌ மாறும்‌ போது தலை ிரைப்பது மரபு
என்பதை வடிவழகியாரும்‌ குறிப்பர்‌

-தளங்கொள்‌ வனமா லிகையினொடுந்
தாளார்‌ தண்ணந்‌ தாமரையின்‌
வளங்கொள்‌ மணியின்‌ றாழ்வடமும்‌
மணப்பூண்‌ டயங்குந்‌ திருமார்பில்‌
விளங்கும்‌ படியாய்த்‌ தரித்தவனும்‌
விரைந்து வருத லறிந்துமுயற்‌ களங்க மிலாத மதிமுகக்கா
ரிகையு மணத்தற்‌ கொருமித்தாள்‌. 73

ஒருமித்‌ திடப்பொற்‌ நூணிறுத்தி யுயரச்செழும்பட்‌ டதுவிரித்துக்‌
குருநித்‌ திலச்சா லர்கள்தூக்கி
குலமா மணியின்‌ விளக்கேற்றி
யருகிற்‌ கமுகுங்‌ கதலியுஞ்சேர்த்‌
குண்டி மனுக்கட வுள்தச்சன்‌
நிருமித்‌ திடுமோ ரண்டமென
மணிப்பந்‌ தலினை நிரப்பினரால்‌. 74

சாந்தால்‌ மெழுடச்‌ சுண்ணத்தாற்‌
றயங்கும்‌ கோலந்‌ தனையெழுதி
பூந்தா மரைகள்‌ பூத்ததுபோற்‌
பொற்பா லிகையைம்‌ பதுமுதலாய்‌

மாந்தர்‌ பலர்சேர்ந்‌ தவரவர்கள்‌ .
மற்று மியற்று வகையெல்லாம்‌
வேந்தர்‌ தமக்கு மிவ்வளமை ட
விளையா தெனவே யமைவித்தார்‌. 75

மங்கல நாண்‌ புனைந்தார்‌
உருமின்‌ முரச வகைமுழங்க
வொளிர்சங்‌ இனங்கள்‌ பலகுமுற
விருவர்‌ தமையு மணக்கோலம்‌
இயைவித்‌ தோரா தனமிசையே
மருவ விருத்தக்‌ கனன்முகஞ்செய்‌ ‘
வகைக ஸணிரப்ப மகிழ்வினொடுந்‌
இருமங்‌ கிலியங்‌ குமுதவல்லிக்‌
கணிந்தா ஸுயர்சீர்ப்‌ பரகாலன்‌. 76

மணமார்‌ முறைகள்‌ பலவும்விதி
வகையின்‌ வழுவா தஇயற்றியபின்‌
குணமார்‌ மடந்தை யொடுமறையுட்‌
குறுகி யணையுட்‌ பொருந்துதலும்‌
கணவ னாக வந்தபர
காலன்‌ றிருமே னியையரவின்‌
பணமா ரல்குற்‌ குமுதவல்லி
பாரா விதனைச்‌ இந்தித்தாள்‌. 77

தடனம்‌ புரியத்‌ தமதுருவ
மாற்றி வேறோர்‌ நற்கோலஞ்‌
சடல மணியு மவர்போலத்‌ தாங்குங்‌ கோல மகத்தினுளே அடல்சே ராழிக்‌ கரத்திருமா
லணுகக்‌ காணோம்‌ ஆதலினால்‌
தொடலா காதென்‌ றணைதனைவிட்‌
டெழுந்தா ளவனுஞ்‌ சோர்ந்துரைப்பான்‌. 78

என்னே யென்னை யிகழ்ந்தெழுந்த
இயம்பு கெனவாங்‌ கவன்கேட்பப்‌
பொன்னே யனையா ஸணினைந்ததனைப்‌
புகலக்‌ கேட்டாங்‌ கவன்மகிழ்வாய்‌
முன்னே நீயென்‌ னண்பருடன்‌
மொழிந்த நெறியின்‌ முறைபுரிந்தே னின்னே புரியும்‌ வகையுரைக்கி
னதையு மிழைப்ப னெனவுரைத்தான்‌. . 79

குமுதவல்லியாரின்‌ நிபந்தனை
அனைய மொழிகேட்‌ டாங்கவளும்‌
அவனம்‌ புயமா முகனோக்கி
யெனை நீ தொடவேண்‌ டினையென்னிற்‌
நிருமா லிருநா லெழுத்ததனை : நினைபா கவதர்‌ நூற்றெண்மர்‌
மருந்தா ரமூதளித்து வினைநீங்‌ கவர்தம்‌ பதவுதக
மிசைந்து வரவேண்‌ டிடுமென்‌ றாள்‌. 80-

திருமால்‌ இருநால்‌ எழுத்து-அஷ்டாட்சரம்‌, 108 பாகவதர்களுக்கு அமுதம்‌ வழங்க வேண்டும்‌,
பதவுதகம்‌-திருவடித்தீர்த்தம்‌.

அன்ன திழைத்து வருவேனென்‌
றம்மா நகர்வா மந்தணர்கள்‌
பன்னு மொருநூற்‌ றெண்மருக்குப்‌
பரிவிற்‌ றேவா வமிர்தமென  மன்னு மிருமூ வகைச்சுவையின்‌
மலியா ரமுத மருத்தியிவர்‌
_.. துன்னும்‌ பததீர்த்‌ தமுமருந்தித்‌ த தூயோ ஸனாய்மீண்‌. டடைந்தனனால்‌–81-

கண்டா ளவனுட்‌ டிருமாலுங்‌ ர
கலந்த பரிசா னுளங்கனிந்தவ்‌
வண்டார்‌ குழலி யவனுடனோ
ப ரணையின்‌ மருவி யிதழமுதம்‌
உண்டா ரொருவர்க்‌ கொருவர்முலை
யுடன்மார்‌ பிறுகும்‌’ படிதழுவிக்‌
கொண்டார்‌ மதனூல்‌ வழுவாம ட்ப
லின்பக்‌ கடலுட்‌ குளித்தெழுந்தார்‌. ‘–82-

வேறு
இம்மா முறையே திளம்நூற்‌ .
றெண்பே ரும்மா னகர்வாழ்‌ –
செம்மா மறையோ ரண்டு
தெவிட்டும்‌ படி யாரமுதம்‌.
எம்மா நிலமும்‌ புகழும்‌ OR ee tl
படியங்‌ கவனு மியைவித்‌ ௩1.
.” தம்மா னிதழ்வா யமுதுண்‌ ன ன ரோ
டுறையு மன்னா டனிலே. 83

கையிற்‌ பொருணீங்‌ இயபின்‌
கடன்கொண் டதிலம்‌ – முறையே ©
செய்யு மளவிற்‌ பலநாள்‌
சென்ற பின்னர்‌ கடனும்‌.வையத்‌ தெவரும்‌ நல்கா
தொழிப்ப மனமங்‌ கவனும்‌
நையுற்‌ தொருநாள்‌ புரியா
துறைவீ டதைநண்‌ ஸணுதலும்‌. ்‌ 84

மன்றன்‌ மலர்சே ரளகக்‌
குமுத வல்லிப்‌ பெயர்மான்‌
நன்றங்‌ கெதிர்சென்‌ றவனை
தோக்கா விதனை யறைவா
ளென்றும்‌ நின்னோ டாலிக்‌
கிறைவன்‌ வருவா னவனும்‌
இன்றுன்‌ னுடனே கூடி
வருதல்‌ காணா மென்னா. 85

கதவந்‌ தனைமூ டித்தாழ்‌ காப்புக்‌ சடிதிட்‌ டிடலும்‌
மதனொத்‌ திடுமக்‌ கலியன்‌
வாடித்‌ தெருவின்‌ கண்ணின்‌
இிதமுற்‌ நிடநல்‌ வசனம்‌ மவடன்‌ ஸிருகா துறுமவ்‌
விதமொத்‌ தடவோ தினனாய்‌
மீண்டும்‌ பகர்வா னானான்‌. -86

மானேர்‌ விழியாய்‌ தனமும்‌
பிரியா துடனே வருமத்‌
தேனார்‌ கமலைக்‌ திறைவ
னின்றென்‌ னுடனே செல்லாதேனோ வதனைகத்‌ தெளிய
வுரைநீ யெனலும்‌ மவளும்‌
ஆனா வன்னாள்‌ ததியா
ரதனஞ்‌ செய்வா யதனால்‌. , 87

உன்னோ டே. ராலித்‌
இருமா லுற்றா. னவைதா
னின்னாள்‌ புரியா தமையா
லெய்தா தொழிந்தா னறிறீ
யென்னா மொழியக்‌ கேளா
வென்கைப்‌ பொருளுள்‌ ளனவும்‌
பொன்னே யனையாய்‌ பலநாள்‌
புரிந்தே னதுபோ யினபின்‌.- 88

சிலனாள்‌ கடன்கொண்‌ டதனைச்‌
செய்தேன்‌ கொடுப்போர்‌ வேறிந்‌
நிலமீ தலையா லதையா
னிகழ்த்தும்‌ வகையே தென்னக்‌
குலமா மணியே யனைய
குமுத வல்லிக்‌ கொடியும்‌
பலர்தம்‌ பொருணிீ வழியிற்‌ ‘
பறித்தா லுஞ்செய்‌ தடைவாய்‌, 89

என்றங்‌ கவளும்‌ புகல்வ
இருசெஞ்‌ செவிவந்‌ துறலும்‌
நன்றென்‌ றவண்விட்‌ டே .
நலிசெய்‌ தொழிலின்‌ மிக்கோர்‌
குன்றம்‌ பொருதோட்‌ பலரைக்‌
கூட்டிக்‌ கொண்டே தானிற்‌
சென்றங்‌ கடைவோர்‌ பொருளைப்‌பறிக்கும்‌ செய்கை யறைவாம்‌. 90-பலர்‌-நீர்மேல்‌ நடப்‌
பான்‌, நிழல்‌ ஓதுங்குவான்‌, தாமூதுவான்‌, தேலா வழக்கன்‌, முதலானோர்‌.

பரகாலர்‌ கள்வராதல்‌
குடபாற்‌ கடலின்‌ கிழக்கில்‌
குணபாற்‌ கடலின்‌ மேற்கில்‌
வடமே ருவினிற்‌ றெற்கில்‌
வதிதென்‌ கடலின்‌ வடக்கில்‌
இடமெங்‌ கணினும்‌ வழியின்‌
னியல்வோர்‌ பொருள்கொண் டிடவே
கடவீ ரென்றே பலரை
யேவிப்‌ பரகா லனுமே. 91

சேரன்‌ சோழன்‌ மாறன்‌
தேசத்‌ இடைபா தைகளின்‌
ஓரங்‌ களில்பல்‌ லோரை
யேவி யுறுமங்‌ கவர்கள்‌
ஆரத்‌ துடனே பொருளு
மாடை பலவுங்‌ கொண்டு
வாரும்‌ மெனவே தானோர்‌
மரநீ ழலின்வை கனனால்‌. 92

ஏவும்‌ பலசே கவர்க
ளெங்கும்‌ வழிபா தைகளின்‌
மேவும்‌ மவர்கைப்‌ பொருளும்‌
மிளிரா பரணம்‌ முதலாய்‌.
யாவுங்‌ கொடுமென்‌ . றடியா
வதட்டா வெருட்டா வெருவி
நாவும்‌ மனமும்‌ முடலும்‌
நடுங்கப்‌ பறித்தா ரன்றே. -93-

அவர்கைப்‌ பறியுண்‌ டவர்செய்‌
கதுதனா லெவரும்‌ வழியுந்‌
தவருற்‌ றேகும்‌ மவரைத்‌ , தனியங்‌ ‘ குறையுங்‌ கலியன்‌-எவரிம்‌ முறைசெய்‌ தனரென்‌
றறியான்‌ போலிம்‌ முறைசெய்‌
குவரு மூளரோ வென்ன
மொழிதன்‌ பலவுங்‌ கூறா. 94

ஒருவே ளையினுக்‌ குணவும்‌
பழவத்‌ திரமொன்‌ நுந்தத்‌ குருகாய்‌ வருவித்‌ தவரை
‘யாற்றிப்‌ போமென்‌ ௰னுப்பித்‌ .
தருவார்‌ நிழல்வை குதலுந்‌ தன்றூ துவர்போய்ப்‌ பறித்து
வருமாப்‌ பொருள்கள்‌ பலவும்‌
கொண்டே. யூர்போய்‌ மருவி. ‘:95

இருவின்‌ கொழுனன்‌ னடியார்‌
நாூற்றெண்‌ டிருநா மங்கள்‌
பருகும்‌ படியா ரமுதம்‌ — ‘
முன்பிற்‌ பரிவின்‌ னமையாப்‌
பொருவில்‌ லவர்தம்‌ பதனீர்‌ .
கொண்டே புனிதத்‌ துடனே
வருமங்‌ கவனைக்‌ குழுத
வல்லிப்‌ பெயராள்‌ கண்டே, 96

இன்றுன்‌ னுடனெம்‌ பெருமான்‌
வந்தா னென்றே மகஒிழ்வா
யன்றங்‌ கவனை யழையா
வளாயுள்‌ ளணுகி யவனோ
டொன்றும்‌ மனதாயனைமே
லொருமித்‌ இன்பந்‌ தந்தஇட்‌
டென்றும்‌ மிவ்வா றாகவெய்தத்‌ தகும்நீ யென்றாள்‌. -97-

எம்பெருமான்‌ தடுத்தாட்‌ கொள்ளல்‌
அவ்வா றிவனும்‌ புரியா
பலனா ளவளோ டணுகுற்‌
றொவ்வா வின்பந்‌ துய்த்திட்‌
டுறைநாள்‌ குனின்முன்‌ னாள்வாய்‌
செவ்வாய்‌ திருமாழ்‌ மார்பத்‌
தேவன்‌ ஏவும்‌ மாயை
யெவ்வா றிவனோ டுறைவ
தெனநா ஸணுற்றே கியதால்‌. 98

மாயைத்‌ தொடர்பாங்‌ sae
மயர்வற்‌ றிடுநன்‌ மதியைக்‌
காயைத்‌ தின்போ ஸுக்குத்‌
கனியீ வதுபோ லருளச்‌
சேயைப்‌ பரிவிற்‌ றேடி
விரைந்தே யதன்பின்‌ செல்லும்‌
தாயைப்‌ போலத்‌ திருமால்‌
கலியன்‌ றன்பா லுறவே. 99-

காயைத்‌ தின்போனுக்குக்‌ கனியை யீவதுபோல்‌, மயர்வற்றிடு நன்மதியை அருள, சேயைத்‌.
தேடும்‌ தாயைப்‌ போல திருமால்‌ கலியன்பாலுற, என்று கொண்டு கூட்டுக, .

நினையும்‌ பொழுதிற்‌ பின்னும்‌
வேறிந்‌ நினைவுங்‌ கொண்டான்‌
அனையன்‌ களவின்‌ ஹறொழிலின்‌
னகப்பட்‌ டவன்செய்‌ திடுமவ்‌
வினையந்‌ தனையும்‌ பறிசெய்‌
வேடிக்‌ கைகளுங்‌ கண்டு
குனைபின்‌ பவனுக்‌ கறியும்‌  படிசாற்‌ றுதுமென்‌ பவனாய்‌. 100

குன்பொற்‌ பாதம்‌ தொழுமவ்‌
விதிசங்‌ கரனிந்‌ திரனை ‘
யன்பிற்‌ பாரா நீவி
ரமரர்‌ கூட்டத்‌ துடனே
முன்பிற்‌ செலுமென்‌ றுரையம்‌
மொழியின்‌ மனையா ர௬டனே
இன்புற்‌ றவரும்‌ மவ்வா
ஹேகற்‌ இவ்வா- றமைவார்‌. 101

பிரமன்‌ கலைமா துடன்மா
தவர்தம்‌ வடிவம்‌ பெறலும்‌
பரமன்‌ னுமையா ளொடுசங்‌
கமர்தம்‌ -படிவங்‌ கொண்டான்‌
சுரமன்‌ னயிரா ணியோடும்‌-:- ்‌
நரர்தம்‌ சொருபங்‌ கொளலும்‌
வரமன்‌ ஸிடுறித்‌ தர்களும்‌
இருமுத்‌ தர்களும்‌ மற்றும்‌. 102

வானந்‌ தனில்வை குவரும்‌
மவர்தம்‌ மனையா ௬டனே
மோனம்‌ பெறுசித்‌ தர்களும்‌
முனிவோர்‌ களுமா ஸிடராய்‌
கானந்‌ தனிலா பரணம்‌
கவினப்‌ :பலருஞ்‌ செல்லத்‌
தானும்‌ இருமா துடனே
மறையோர்‌ படிவம்‌ தாங்கா… : 103

பின்னே கிடலும்‌ மதன்முன்‌
பெருங்கா னிடையே வைகும்‌
தன்னே ரில்பர காலப்‌
பேரார்‌ வருவா ர௬ண்டோ
வென்னா வுயரும்‌ மரசத்‌
தருமீ தேறிப்‌ பாரா
வன்னோர்‌ வரவைக்‌ காணா
வகமுண்‌ மகிழ்வா யிழியா. 104

தன்சே வகரைக்‌ கூவா
தடிவாள்‌ வேல்கைக்‌ கொள்ளா
வன்போ டெதிர்சென்‌ றவரை
வழியின்‌ மறியா வுமது
பொன்பூ டணமுள்‌ ளவெல்லா
மேல்விட்‌ டாவி போக்கா
முன்போ டுமெனா மொழியா
முனிவாய்‌ வரன்மே ஸளனோசக்கா. 105

தனனே முதலாம்‌
புலவோர்‌ நித்தர்‌ முத்தர்‌ அருமா முனிவர்‌ சத்த
ரெவரும்‌ மவர்தே வியரும்‌
வெருவா மிரட்டிட்‌ டவர்தம்‌
மேலுள்‌ ளவத்தி ரம்மும்‌
குருமா மணியா பரணம்‌
எவையும்‌ வலுவிற்‌ கொண்டான்‌. 106

அவரே 7கியபின்‌ கமலத்‌
்‌ தயலுந்‌ தளவெண்‌ முளரித்‌
துவர்வா யவளு மிகலூர்‌
துணிவா யவர்தம்‌ பொருளுங்‌
கவர்வா நினைப்போ டவிடம்‌
கடிகித்‌ தடியா னதுகொண்
டிவரே குதலும்‌ வெருவா:
விதனைக்‌ கலைப்பெண்‌ பகர்வாள்‌. 107

ஐயா நீவீ ரெம்மை
அடித்துத்‌ துடிக்கக்‌ கொலைதான்‌
செய்யா துயிரோ டேகும்‌
படியே யருள்கொண்‌ டிடிலெம்‌
மெய்யா பரணம்‌ பலவும்‌
மேல்வத்‌ திரமு முதலாய்க்‌
கையாற்‌ றருவோ மென்னக்‌
கழற்றித்‌ தந்தே கனரால்‌. 108

உடனே சிவனும்‌ முமையும்‌
வரலும்‌ மொளிர்வா ஞடனே
அடல்சேர்‌ தடிகொண்‌ டிவனும்‌
மதட்டிச்‌ செல்லு மளவிற்‌
குடலும்‌ வயிறும்‌ முயிருங்‌
குலையப்‌ ‘பயமுற்‌ றுமையுங்‌
கடலின்‌ விடமுண்‌ டவன்மெய்‌
யுடனே கரவா யினளால்‌. 109

மறையக்‌ கிழிசங்‌ கமநின்‌
னுடனே வந்தா ளெங்கென்‌
றறையப்‌ பயமுற்று றுவனும்‌ மறியே னெனவே செவியுள்‌
உறைகுண்‌ டலமே முதலா
யுளதுங்‌ காவி யுடையுங்‌
குறையற்‌ பதியுற்‌ றவன்கைக்‌
கொடுத்திட்‌ டவனும்‌ போனான்‌. ‘ 110

இவ்வா றெவருந்‌ ததந்திட்‌ டேகும்‌ பொழுதோ ரொருவர்‌
செவ்வாய்‌ மடமங்‌ கயருக்‌
கொருசே லையுமா யவருக்‌
கொவ்வா வொருகோ வணமும்‌
மூதவா மற்றுள்‌ ளவெலாம்‌
எவ்வா வெருட்டிப்‌ பறியா
ஏகும்படிவிட்‌ டனனால்‌, –111

அனைய பொருண்கண்‌ முழுதும்‌
மாலிப்‌ பதியின்‌ னமது
மனையிற்‌ கொடுபோ யடைமின்‌
னெனமற்‌ றவரை யேவி
தனையொத்‌ துயரு மரசின்‌
றருவின்‌ னடிநீ ழலின்வாய்‌
தனையொப்‌ பவரும்‌ நிகராக்‌
கலியன்‌ றனிவை குதலும்‌. 112

வேறு
– வானி லுணரப்‌ படுமயனும்‌
மமுவா எளியுமவ்‌ வாறேகத்‌
தேனி லினிய விளங்குதலைத்‌ இருபின்‌ றுடருந்‌ திருமாலும்‌மேனி முழுது மாபரணம்‌
விளங்க நடந்து வருவதனைக்‌
கானி லுறையும்‌ பரகாலன்‌
காணா விதனைக்‌ கருதினனால்‌, 113

முனிவோ ரிமையோ ருனற்கரிதாய்‌
மூதுமா. மறையின்‌ முடிவிளங்கும்‌
குனிமா முதல்வேற்‌ றுருவமதாய்த்‌
தன்னைத்‌ திருத்தக்‌ கருகியுளம்‌ கனிவா யடைத லுணரானங்்‌
…. கவர்தம்‌ பொருளைக்‌ கவர்ந்துகொளில்‌
இனிநா. மென்றும்‌’ வேறுபொருட்‌
கிச்சை வேண இலையென வே.-1i4

உள்ளங்‌ களிப்பாய்‌ ஏவனடநீ
யோடா தேநில்‌ லெனவெதிர்போய்‌
புள்ளந்‌ தனைவான்‌ மிசைசு ழந்றிச்‌
போவ தெங்கென்‌ றதட்டியுன்வாய்‌
விள்ளப்‌’ புகுவென்‌ : றங்கவர்பால்‌
விளங்கும்‌ பணிதிக்‌ ககமகழ்வாய்‌
துள்ளித்‌ துள்ளி நடம்புரித்‌ ணரா மறையோ னிவைசொல்வான்‌. 115

அப்பா! கேணாம்‌ வேட்டகம்போய்‌
யாங்குற்‌ நிடுமென்‌ மனையவளாம்‌
இப்பா வையொ டுமுனதாலிக்‌ ்‌
கேகு வெனநீ யெகிர்வந்தே -கைப்பா யிடுங்கட்‌ குடித்தாடுங்‌
களிபோற்‌ குதித்த லெவனெனவே
– செப்பா வதற்குத்‌ திருமங்கை
மன்ன ஸனிதனைச்‌ செப்பிடுவான்‌,–116-

பரகாலர்‌ நிகழ்ந்தவை கூறல்‌
மறையோய்‌! கேட்டி யுயிர்போல .
மருவு மெனது மனையவளாம்‌
மிறைபோ ஸுதற்சேர்‌ குழுதவல்லிப்‌
பெயராள்‌ இனமு மிவ்வூரில்‌
உறைபா கவதர்‌ நூற்றெண்ம
ருண்ணத்‌ ததியா ராதத்தை முறையோ டிழைக்கி னலாலென்மேன்‌
முனிவாய்த்‌ தன்னைத்தொட வொட்டாள்‌.–117-

அதனாற்‌ பொருள்கை யுள்ளனவு
மந்த முறைசெய்‌ தனன்பின்னர்‌
இதமாய்ப்‌ பிறர்பாற்‌ கடன்கொண்டிட்‌
டிழைத்தேன்‌ அதற்பின்‌ கடன்யாரு
முதவா தொழிய வுற்றதற்பின்‌ . இதெலா மவளோ டுரைத்தினியான்‌
புரிவ தெனக்கேட்ப
விவ்வா றிழையென்‌ றவளுரைத்தாள்‌.–118-

அந்த முறையால்‌ வழிபறித்தங்‌
கதனை முயல்வேன்‌ பலர்பொருளோ
டிந்தந்‌ இனமும்‌ வரப்பறித்தெம்‌ – மில்லத்‌ ததனை தூதுவர்பான்‌
முந்த வனுப்பி யினும்வருவா
ருண்டோ வெளவிம்‌ முறையிருக்க
வந்த வுமது பொருள்பறியா விடுகேன்‌; எனக்கு வழக்கீதே.–119-

ஆத லாலும்‌ மிடத்துளதாம்‌
பொருள்க ளனைத்து மெனக்களித்‌
போத லேநன்‌ கல்லவெனிற்‌
புடைத்துப்‌ பறித்திட்‌ டுமதுயிரைக்‌
காது வென்கை யுடைவாளா.. :
லென்னக்‌ சுதித்திட்‌ டருகணைய
மாது தாட்டா மரைவதனம்‌
நோக்கி மறையோன்‌ வகுத்துரைப்பான்‌. 120

மனையா டனது காதலினால்‌
வழியில்‌ வருவோர்‌ தமதுபொருள்‌
தனையாங்‌ கவர்கள்‌ துயரமுற
வாள்கொண்‌ டடர்த்துக்‌ கவர்ந்திடுமிவ்‌
வினையான்‌ கள்வ னோவலதிம்‌
மிகுந்த பொருள்கொண்‌ டருந்தியிடும்‌
அனையார்‌ கள்ள ரோ?விதனை
யறிய வுரைநீ யென்றனனே. 121

கேட்ட மடவா எளிக்கொடியோன்‌
கிடைத்தற்‌ கரிதா யெனையளித்தோர்‌
பூட்டும்‌ பணிகள்‌ பலவுமது
போதா தெனவீன்‌ றவரையருள்‌
பாட்டன்‌ பாட்டி யவரிடுதற்‌
பணிதி பலவும்‌ பலபலவாய்‌
வேட்ட வகத்தோ ரிட்டதுவும்‌ ன
விரும்பிப்‌ பறிக்கத்‌ துணிந்ததனால்‌, ட. ட. 122

அந்த பயத்தால்‌ எனக்கொன்றும்‌
‘தோன்ற விலையென்‌ றவளுரைப்ப
இந்த விதமா யொருவர்முகம்‌
, “ஒருவர்‌ தோக்கி யிருந்திடலும்‌
சிந்தை முனிவாய்ப்‌ பரகாலன்‌
செங்கை யுறைவாள்‌ தனைச்சுழற்றா
வுந்தன்‌ முடியான்‌ றுணிப்பனென்றவ்‌
வொளிர்வாள்‌ தன்னன யோங்குதலும்‌. 123

அஞ்சி நடுங்கு மவர்போன்மெய்‌
நடுந்கா வவனை நோக்கியெமைத்‌
துஞ்சப்‌ பொருதா லஇிலுனக்கென்‌
பயனோ சொல்‌ ?லெம்‌ பாலுளவாம்‌
விஞ்சு மணியா பரணமெலாந்‌
தருவே மெனவேண்‌ டுதலாகக்‌
கஞ்சன்‌ றனையுந்‌ இயினளித்த
. கடைமா மறையோன்‌ கழறலுமே. 124

அதுவெஞ்‌ செவியுற்‌ றிடலுமுறை யணிவா எிட்டுக்‌ கதைகரத்திற்‌
கதுவப்‌ பிடித்திட்‌ டடிப்பதுபோற்‌
கப்பி யிடவம்‌ மறையவனும்‌
மதுகைப்‌ புயத்தோய்‌! நீயடியே
லென்னா மேல்வத்‌ திரமதனை
இதுகைக்‌ கொள்ளென்‌ றெறிந்திடலு
மவனு மிதனை யியம்பிடுவான்‌. 125

உனதுத்‌ தரியம்‌ தந்ததனா
லென்னோ பலனுள்‌ ளதுமேலும்‌
மனதுக்‌ இசைய மனையவளென்‌றுரைதந்‌ திடுமிம்‌ மடமங்கைதனது பணிக ளஞூள்ளவெலாந்
. தரிக்கு மொருவத்‌ திரம்தவிர
வெனது இருமுன்‌ வைத்திடுவா
-யெனமங்‌ கையர்கோன்‌ அதட்டலுமே. 126

மறையோ ஸனெனுமத்‌ திருமாலு
மணியா பரணந்்‌, தனைமடவாண்‌ –
முறையோ வெனத்தன்‌ தநிருக்கரத்தாற்‌
கழற்ற வேகு முறையறிந்து நிறைநா ணொன்றும்‌ வேண்டேன்மற்‌
றுளவெ: லாம்நீ தருகென்றே
_ கறைவாட்‌ டொழிலில்‌ நிகரில்பர
கால ஸுரைப்ப .வதுகேளா. .–127

நீல னுரைத்த படிமடவா
ணிறைநா ஸணொணன்றும்‌ தவிர்ப்பித்துச்‌ ்‌
சால வணியும்‌ பணிகளெலாஙம்‌: .
கழற்றி யவன்கை தந்தனனால்‌;
கால னளெளப்பூந்‌ ‘தடத்தடருங்‌
கராவின்‌ வாய்ப்பட்‌ டுளங்கலங்கி
மூல மெனவன்‌ றழைத்தகரி
முன்வந்‌ ததன்பே ரிடர்தவிர்த்தோன்‌. 128

அந்த மணியா பரணங்கள்‌
யாவும்‌ கைக்கொண் டதன்பின்னர்‌
உந்தன்‌ மேனி தொடுகிலன்யானொளியா துன்மே லுள்ளவெலாந்‌ – குந்தி டெனக்கை விரலணியுந்‌
இருவா ழிதனைத்‌ தவிர்ந்திடமற்‌ றெந்த வெந்த வாபரண .
மெல்லாங்‌ கழற்றி யீந்தனனால்‌. 129

அதுவுங்‌ கரத்திற்‌ கொண்டதற்பின்‌ னம்மா மறையோன்‌ மேனிதனைப்‌
பதும நிகரும்‌ பதமுதலாய்‌
முடியீ றாகப்‌ பார்த்திடலும்‌
கதுவுங்‌ கரத்தி லாழிதனைக்‌
கண்ணிற்‌ காணாப்‌ பெருங்களவா
இதுநீ யொளித்தால்‌ விடுவேனோ?
வதையும்‌ தருக வென்றனனால்‌. 130

கொழுந்து பொருந்திப்‌ படர்கீர்த்திக்‌
கலிய னிதனைக்‌ கூறுதலும்‌
எழுந்து பெருகு முவகையையுள்‌
ளடக்கி யிஃதென்‌ கைவிரலில்‌
அழுந்து முறையாற்‌ கழற்றுதலுக்‌
கொவ்வா வெனக்கேட்‌ டாங்கவனும்‌
செழுந்து ளவன்றி ருக்கரத்தைக்‌
கையாற்‌ பிடித்துச்‌ செப்பிடுவான்‌. 131

இவ்வா றாகக்‌ கழற்றுகென்றங்‌
குலியைக்‌ கரத்தாற்‌ பிடித்திழுக்க
அவ்வா ழியுங்கை வராமையினா
லதனை வாய்கொண்‌ டீர்த்தனனால்‌
கவ்வா விழுக்கும்‌ பொழுதெமது
““கலியனோ” வென்றவன்‌ முடிமேல்‌
ஓவ்வா வலது கரந்தனைவைத்‌துகந்தா னனைபா லுண்டுகந்தோன்‌. 132

பரகாலர்‌, சைவிரலில்‌ உள்ள இருவாழியை வாய்‌ கொண்டு கடித்து
இழுத்தார்‌. அப்போது பெருமான்‌ உவந்து **எமது ஈலியனோ”’ என்று கூறி அவர்‌
முடிமேல்‌ வலதுகரத்தை வைத்தான்‌,

தலைமேல்‌ கரம்வைத்‌ துகந்இடவுந்‌
தெரியா னாகி யதைத்தவிர்த்தே
மலைபோற்‌ குவித்த பணிமூட்டை
தனைச்சென்‌ றெடுக்க வதுபுவியின்‌
நிலையா யழுந்தி வராமையினை
யறிந்தாங்‌ இதனை நினைவுற்றான்‌
வலைபீ றநிடுஞ்சேற்‌ றடம்பலவாய்‌
மருவுங்‌ குறைய லூர்வள்ளல்‌. – ட 133

முன்னே யடைந்தோர்‌ தமதிடத்துங்‌
கவர்ந்த தெடுத்தோம்‌ இவன்பணிகள்‌.
என்னே புவியிற்‌ பொருதந்லிவன்‌ ்‌
செய்மந்‌ இரிப்பா மெனவுணர்ந்திட்‌
டன்னோன்‌ தனைப்பார்த்‌ ததட்டியடா
மறையோய்‌ யறிமந்‌ இரவன்மை
றன்னால்‌ கவ்வை யழுந்திடச்செய்‌
குனைசொல்‌ சாற்று கென்னலுமே. 134

அந்த வுரைகே ளாமூனங்கற்‌
றிந்த திருமத்‌ திரமதனால்‌ இந்த முறைசெய்‌ தவன்யானே
யிதனை யறிநீ யென்றுரைத்தான்‌
முந்த வொருவா ளவுணனிடம்‌
குறளாய்‌ மண்மூ வடியிரந்துட்‌ –
டெந்த வுலகும்‌ ஓஒரடிகொண்டளந்தே கவர்ந்த வெம்பெருமான்‌. 135

ஆழ்வார்‌ மந்திரம்‌ பெறல்‌
ஆனா லந்த மந்திரத்தை அறியும்‌ படியிங்‌ கெனக்குரைத்துப்‌
.,போனா யெனிலுன்‌ றனையுனதூரா்‌
போக விடுப்பேன்‌ அலையெனிலுன்‌
னானா (HO தனையென்கை
யொளிர்வா .ளதனாற்‌ றுணித்துயிர்போய்‌
வானா டாளும்‌ படிவிடுப்பேன்‌
மறையோய்‌ யிதைநீ யறியென்றான்‌. 136

கொடியோ னான பரகாலன்‌
கொதிப்பா யுள்ளங்‌ களிப்பெய்தி
வடிவா ளதனை யுறைகழற்றா
வையம்‌ நடுங்கும்‌ படிநடந்துன்‌
முடியான்‌ றுணிப்பே னெனவவனும்‌
முடிகி வரலும்‌ பயந்தவன்போல்‌
படிமீ தவ்வாள்‌ வைத்துவரிற்‌
பகர்வே னென்றான்‌ படியுண்டோன்‌. 137

புகலு மொழிகேட்‌ டவ்வாளை
யுறையுட்‌ புகுவித்‌ தருகணையும்‌ இகலோன்‌ வளது திருச்செவியி
லுள்ளத்‌ இருளை வெகுண்டெரிக்கும்‌
பகல்போ லிருநா லக்கரமாந்‌
இருமந்‌ தரத்தைப்‌ பகர்ந்திட்டான்‌
அகல்பூ விடைவா முயிரளித்த வயனுக்‌ கனமாய்‌ மறையறைந்தோன்‌. 138

சூரியன்‌ இருளை
ஓட்டுவான்‌. அதனால்‌ அவ்விருள்‌ மீளவும்‌ வருகிறது, ஆனால்‌ அஷ்டாட்சரமோ
உள்ள இருளை எரித்து விடுகிறது. அயனுக்கு அறைந்த மந்திரம்‌-ஹம்ச சதை.
“அன்னமாக அருமறைகள்‌ அருளிச்‌ செய்த அமலன்‌”? என்று பெரிய திருமொழி
பேசும்‌. ”அன்னமாய்‌ அறைந்தாய்‌ நீ” என்பர்‌ கவிச்சக்ரவர்த்திகள்‌,

மாயை நீங்கியது
வானே முதலாம்‌ பலவுலகும்‌
வயிற்றுள்‌ எடக்கு நாரணனுந்‌
தானே தன்னை யவனறியச்‌
சாற்றுந்‌ இருமந்‌ இரமதனால்‌ கானே வருவோர்‌ தம்மைவாள்‌
்‌. காட்டிப்‌ பறித்த பரகாலன்‌
ஊனே யுடல்சோ ஷித்தாந்தி
யங்க ஞம்விட்‌ டோடினவால்‌. 139

குன்னுள்‌ ளிருந்த கொடுமாயை
தனைவிட்‌ டொழிதந்த தன்மையும்பூ
மன்னுந்‌ திருமா துடன்திருமா
லுகந்த செயலும்‌, மற்றவர்தம்‌
பொன்னம்‌ பதங்க ள.றியுணர்வும்‌,
பரம பதத்திற்‌, புகும்வழியும்‌, துன்னு முயிர்கள்‌ பெறுவாழ்வுந்‌,
இருமந்‌ திரத்துட்‌ டோன்றலுமே. 140-

இருமந்திரத்தால்‌ ஆழ்வார்‌ உணர்ந்தவற்றை ஆரியர்‌ விவரிக்கிறார்‌.
கொடு மாயை ஒழிந்த தன்மையும்‌, திருமால்‌ உகந்த செயலும்‌, பதங்கள்‌ அறி
உணர்வும்‌, பரமபதத்திற்‌ புகு வழியும்‌, உயிர்கள்‌ பெறுவாழ்வும்‌, இரும்ந்திர த்தால்‌
தெரிந்தன. இவற்றை ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ** அர்த்த பஞ்சகம்‌ ** என்பர்‌.

மனம்வாய்‌ யொருமித்‌ தவன்றுருத்தி ்‌
வைத்தூ திடுமக்‌ கொல்லனுலைக்‌
கனல்வா யுருகு மெழுகெனலாய்க்‌
கந்து கசிந்திட்‌ டுளமுருகித்‌
தனதா முடலந்‌ தனதுவசந்‌ தானா காமற்‌ றனிமுதலின்‌
முனமே விழுந்து புரண்டுபுரண்‌ ‘டெழுந்தே முறையா னோக்கலுமே. 141

இறைவன்‌ கோலங்‌ காட்டல்‌
மறையோ னான திருவுருவம்‌
மாற்றிக்‌ கமலத்‌ இருவுடனே
சறையார்‌ கருட னெருத்தமிசைச்‌
செம்பொன்‌ முடிமா முடியோங்கக்‌
கறையா ராழி வளைசிலைவாள்‌
கதையைம்‌ படையும்‌ புடைதயங்க
நறையார்‌ துளவப்‌ படலையொடுங்‌
கவுத்து வமும்நன்‌ மார்பொளிர. ்‌ 142

அரையிற்‌ பீதாம்‌ பரம்விளங்க
வணியம்‌ புயத்தின்‌ வலயமின
வுரைசெய்‌ நயன மணிவாய்கை
யுந்திச்‌ சரண மெனவொளிரும்‌
விரைசெய்‌ கமல வனமலர்ந்தோர்‌
மேகம்‌ விசும்பி னிடைபசும்பொன்‌
வரையின்‌ மிசையுற்‌ ெழுந்திருந்து
வருத லெனலாய்‌ மாணுறவே. ்‌ 143

நயனம்‌, வாய்‌, கை, உந்தி, சரணம்‌, இவைகள்‌ தாமரைக்காடு போன்றி
ருந்தன. திருமால்‌ கமலவனம்‌ பூத்த மேகம்‌ போன்‌ றிருந்தான்‌. கருடன்‌ பொன்‌
மலை போன்‌ றிருந்தான்‌. “கருமுகில்‌ தாமரைக்காடு பூத்து, செம்பொற்குன்றின்‌
மேல்‌.வருவயபோல்‌ கருடன்‌ மேல்‌ வந்து தோன்றினான்‌ “என்ற கவிச்சக்கரவர்த்த
களின்‌ (பால) பாடலுக்கு விரிவுரை இங்கு உள்ளது.

வனும்‌ வேளும்‌ கரிமுகனுஞ்‌
செங்கேழ்‌ கமலந்‌ தனிலுறையும்‌
அவனும்‌ புருகூ. தனும்வானத்‌
. தனைவோர்‌ களுமைம்‌ புலனவித்த தவரும்‌ நித்தர்‌ முத்தர்கள்கின்‌
னரர்கந்‌ தருவர்‌ சத்தர்முதல்‌
எவரும்‌ புடையி.ற்‌ சயசயவென்‌
றஹேத்துித்‌ தொழுது வணங்கவும்‌. 144

அண்டத்‌ துறுதுந்‌ துமியினங்க
ளலைமாக்‌ கடல்போல்‌ அதிர்ந்தொலிக்க
கண்டொத்‌ இடுஞ்சொல்‌ லரம்பையர்க
. ஸணடனம்‌ புரியக்‌ கைப்பிரம்பாற்‌
றெண்டித்‌ தெதிரிற்‌ சேனையர்கோன்‌
விலக்கத்‌ திருந்து முலகமெலாம்‌
உண்டிட்‌ டுமிழ்ந்த திருமாலா
மொருவன்‌ விளங்கல்‌ தனைக்கண்டான்‌. 145

கண்டான்‌ பின்னும்‌ புவியின்‌ மிசை
விழுந்தான்‌ எழுந்தான்‌ கரந்தலைமேற்‌
கொண்டான்‌ நந்தா தோடினன்பின்‌
குதித்தான்‌ நடித்தான்‌ களிநறவ
முண்டான்‌ போலச்‌ செயல்களொன்று
முணரான்‌ — யொருமுறையே
வண்டார்‌ துளவன்‌ நிருமேனி
மகிழ்ந்து நோக்கா வகுத்துரைப்பான்‌. 146

வேறு
உன்னைநீ யுணர்கிலா யுனது மாயைகள்‌
துன்னையா னறிந்திடுஞ்‌ தகைய தாகுமோ?
வன்னையா யத்தனா யகில முந்தரும்‌
பொன்னைமார்‌ பகத்தணி புனித மூர்த்தியே |. 147

காலநேர்‌ கனகனை கடிந்த வன்றரும்‌
பாலனைப்‌ பரித்தருள்‌ பரம சோதியே |
மூலமென்‌ றழைத்திடுங்‌ கரிதன்‌ முன்பினோர்‌
நீலமால்‌ வரையென நின்ற மூர்த்தியே. 148

ஆலமுண்‌ டவற்கருந்‌ துயர கற்றியே
சூலமு மளித்தருள்‌ சுருதி நாதனே / நீலவாண்‌ கண்ணழற்‌ பிறந்த நேரிழை
யோலமிட்‌ டரற்றிட வுடைவ ழங்கனோய்‌, 149

அராவணை துயிறுறந்‌ தமரர்க்‌ காகவே
மராமர மனையதோள்‌ வலியி ராவணன்‌
விராதகனே முதலினோர்‌ தமைவி எளித்திட
இராமனென்‌ நயோத்தியி னெய்து மையனே. 150

அடியனை யொருபொரு ளாக வெண்ணியே
கொடியிடை முூளரிவாழ்‌ கோதை யோடுமிப்‌
பொடியுடைக்‌ கானம்நீ புகுத வாளொடும்‌
தடியொடும்‌ வழியிடை தடுத்திட்‌ டேனரோ. 151

பதைபதைத்‌ திடவுயிர்‌ பாரித்‌ திட்டவிக்‌
கதையினா லடிக்க வுங்‌ கருதி வாட்கொடு
வகைசெய நினைந்தனன்‌ வலிய பாவியேன்‌
இதைவிடப்‌ பிறிதின்ன மென்செய்‌ இன்றதே. 152

உனதுநற்‌ பணியெலாம்‌ பறித்திவ்‌ வுத்தமி
தனதுயர்‌ பணிகள்கொண் டாழி தன்விரல்‌
எனதுபுன்‌ வாயினாற்‌ கவ்வி யீர்த்திட
மனதுகொண் டிழைத்தனன்‌ மற்றென்‌ செய்வதே. 153

நல்லிய லல்லபுன்‌ மொழிக ணாவினாற்‌
“சொல்லியும்‌ பலகொடுந்‌ தொழிலி யற்றுமிப்‌
புல்லிய னுய்வினிற்‌ பொருந்தப்‌ புன்றலை
கல்லிடை மோதியான்‌ கழித்தல்‌ நன்றரோ. 154

என்றுகொண் டினையன பன்னி யேடவிழ்‌
மன்றவிழ்‌ துளவணி . மாலை மார்பினான்‌
றன்றிரு முன்னரில்‌ கலியன்‌ றானுமே
கன்றிய மனதொடு முருகும்‌ காலையில்‌. 155

அம்மொழி பலவுங்கேட்‌ டருளி னாழியான்‌
விம்முறு கலியனை விருப்பி நோக்கித்தன்‌
செம்மைசேர்‌ பவளவாய்‌ நகை சிறந்திட
இம்மொழி தனையெடுத்‌ தியம்பு வானரோ. 156

யாமே மயக்கினோம்‌
உன்னைநீ வெறுத்திடே லுனது நல்லுளந்‌
குன்னையாம்‌ மயக்கவித்‌ தகைமை செய்துளோம்‌
முன்னைய துவக்கெலா முடிந்து நீங்கின
வென்னைகொ லின்னமும்‌ மிரங்க லய்யனே. 157

அன்றியுஞ்‌ செய்விளை யாட்டு மின்சொலும்‌
தன்றிரு மகன்செயத்‌ தந்‌ைத கொள்வபோல்‌
இன்றுள மகிழ்ந்தனன்‌ நீயி ழைத்ததற்‌ ப கொன்றுநீ யஞ்ச டே லுளங்கொள்்‌ வாயரோ. 158

இன்னமும்‌ புகல்வதொன்‌ றுளது யாதெனில்‌
அன்னது கேட்டியா லாழி சேர்விரல்‌
குன்னை நீ கவ்விடைத்‌ தமிழின்‌ வாசனை
யுன்னணி வாயில்வந்‌ துற்ற தாதலால்‌. 159

இமிழ்திரைக்‌ கடற்புவி இடைவந்‌ துற்றுளோர்‌
அமிழ்தெனப்‌ பருகிவீ டணையு மாறதாய்‌
யுமிழ்மணங்‌ கமழிசை யுற்றி டுஞ்செழுந்‌ தமிழ்கொடு கவிதைகள்‌ பலவும்‌ சாற்றியே. 160

இரங்குமா கடலென விரைத்தி ரைத்துத்தன்‌ ்‌
கரங்களால்‌ வருடல்போற்‌ கவினு முத்துறும்‌
தரங்கமார்‌ காவிரித்‌ தார ணிந்துள
வரங்கமா நகரினை யணுகி யாங்கதில்‌. 161

ாற்கடலைப்‌ போலத்‌ திருவடிகளை
வருடும்‌ திரைகளைக்‌ கொண்டுள்ள திருக்கர்விரியை மாலையாகக்‌ கொண்டுள்ள
திருவரங்கம்‌. “பொன்னி திரைக்கையால்‌ அடிவருடப்‌ பள்ளி கொள்ளும்‌ கருமணி” *
என்பர்‌ குலசேகரர்‌,

இருப்பணி வேலைகள்‌ செய்து முற்றியே
விருப்பொடுங்‌ காதலி யோடு மேவிப்பின்‌
னிருப்பதாம்‌ வைகுந்த மென்னு நற்பதப்‌
பொருப்புறழ்‌ தோளினாய்‌ பொருந்து கென்றனன்‌. 162

என்று பற்பல மொழி யியம்பி யாவரும்‌
மொன்றியே திரண்டிரு மருங்கு முற்றிடக்‌
கன்றைவிட்‌ டகன்றிடுங்‌ கறவை போலவே. தன்றிரு வுலகிடைச்‌ சார்ந்திட்‌ டானரோ. 163

மாயவன்‌ றிருவொடும்‌ மறைந்து நீங்கலும்‌
ஆயவன்‌ நிருவடி யதனை யுன்னியே
துரயவ னாம்பர காலன்‌ துன்புறாத்‌
தாயகண்‌ நிடுங்குழந்‌ தையினி ரங்கினான்‌. “164

பிறிவாற்றாமை
ஐயனே! யமலனே ! அடியருக்‌ கெலாம்‌
மெய்யனே [ சுருதியின்‌ முடிவி ளங்வடுந்‌
துய்யனே ! சிவன்முத லோர்க்குந்‌ தோன்றுறாப்‌
பொய்யனே ! யென்னவும்‌ புலம்பி னானரோ. 165

செந்திருப்‌ பொலிந்திடச்‌ வன யன்றனோ
டிந்திரன்‌ முதலினோர்‌ ஏற்றிப்‌’ போற்றிட
வந்தரத்‌ தடைவரு மமல! யானினி :
எந்தநாள்‌ காண்பதென்‌ றேங்கி னானரோ. 166

ஏங்கின னொருமுறை தெளிவு மெய்தியே
ஆங்குவிட்‌ டணிநக ரதில டைந்துதன்‌
இங்கரும்‌ பனையசொற்‌ றேவி தன்னொடும்‌
பாங்குற வாலியான்‌ பதம்வ ணங்கியே. ட. -167

ஆரண மறிந்திடற்‌ கரிய சோதியாம்‌
நாரணன்‌ புவித்திருப்‌. பதியி. னல்லுருப்‌ பூரண மாகவே :பொருந்தி வைகுறும்‌ .
காரணந்‌ தனையுளே கருதி னானரோ. 168

ஆழ்வார்‌ அர்ச்சையின்‌ சறப்பை உணர்ந்தார்‌. சோதி வடிவமான
திருமால்‌ அற்பப்‌ பூமியில்‌ திவ்யமங்கள விக்ரகத்துடன்‌ இருப்பதன்‌ காரணத்தை
உள்ளத்தில்‌ இந்தித்தார்‌.

அன்னமால்‌ மருவிடு மலைகொள்‌ பாற்கடற்‌
றன்னையும்‌ . பரமவை குந்தம்‌ தானெனப்‌
பன்னுமிவ்‌ விருநகர்‌ தவிரப்‌ பார்மிசை
மன்னுனூற்‌ றாறெனும்‌ பதிவ ணங்குவான்‌. 169

அமுதமொத்‌ தினியசொல்‌ லிரதியோ வெனும்‌
குமுதவல்‌ லிப்பெயர்க்‌ கோதை தன்னொடும்‌
கமலமொத்‌ திடுமுகம்‌ கவின வாலியாம்‌
அமலநற்‌ பதிதொழு ததைவிட்‌ டேகினான்‌. 170

ஆழ்வாரின்‌ திவ்யதேச யாத்திரை
அத்தியூர்‌ புட்குமி யரங்கம்‌ வேங்கடம்‌
வித்துவக்‌ கோட்டிபோர்‌ பேரை விண்ணகர்‌
பத்தவி லோசனங்‌ குடந்தை பாடகஞ்‌
சித்ரகூ டம்முத லாகச்‌ செப்பிடும்‌. 171

நூறுட னாறென நுவறி ருப்பதி
வீறுமங்‌ களங்கொள்விக்‌ கறக மாகிய
துளவணி நார ணன்பத
மூறுமன்‌ புடன்பணிந்‌ துருகி னானரோ. 172

உரியனாய்ப்‌ பற்பல உயிரு ணன்றுறை
கரியமால்‌ பெருமையைக்‌ கண்ண கன்றிடும்‌
லுலகெலாம்‌ விளங்கு மாறதாய்‌
அரியசெந்‌ தமிழினா லறைத லுன்னியே. 172

பெருந்திரு மொழியொடும்‌ பெருமை சேர்மடல்‌
இருந்திரண்‌ டொடுமெழு கூற்றி ருக்கையும்‌
பொருந்திருத்‌ தாண்டக மிரண்டும்‌ பொய்யிலிங்‌ கரும்பொரு ளாறையும்‌ மறைந்து பின்னரின்‌. 174

கருவரங்‌ கந்தனை யொழிக்குங்‌ கார்முகில்‌
பெருவரங்‌ காதலித்‌ தவர்பெ றும்படி
இருவரங்‌ கந்தனி லிருப்பப்‌ பள்ளிகொள்
இருவரங்‌ கந்தனைச்‌ சேர்ந்திட்‌ டானரோ. | 175

அத்தலத்‌ தற்புத மனைத்துங்‌ காண்குறா வெத்தலங்‌ களுமொவ்வா இதற்கென்‌ றெண்ணியே
சித்திர மிழைத்த்கோ புர்த்துட்‌ செம்மைசேர்‌-
கைத்தலந்‌ தலைமிசை கவினச்‌ சென்றனன்‌. 176

அந்தர மிசையடைந்‌ தலர்க டூவியே
சந்திர மவுலியான்‌ றாம ரையுளான்‌
இந்திரன்‌ முதலினோ ரெட்டெ ,ழுத்தெனும்‌
மந்திர மோதியே வணங்கி வாழ்த்திட. 777

பன்னக வணைமிசைப்‌ பள்ளி கொண்டிடும்‌
அன்னமா மலரடி யதனைப்‌ பூந்திரு
முன்னிலை யாய்முடி யுறவ ணங்கியே
கதுன்னர மனையிடை சார்ந்து வைடனான்‌. 178

அந்தநாள்‌ நாரண னறைந்தி டும்பணி
யெந்தவா நிழைத்திட லாகு மென்னவோர்‌
குந்திரம தற்செயல்‌ தகுதி யாமெனச்‌
சிந்தையி னொருமுறை தெளிவு கொண்டனன்‌. 179

ஆழ்வார்‌ திருப்பணி
புத்தர்தம்‌ பொருள்புவி புதைத்தி டும்பொருள்‌.
பத்தர்தம்‌ பொருள்‌அரன்‌ பட்டு ளோர்பொருண்‌
மித்திரர்‌ பொருண்முடி வேந்தர்‌ தம்பொருள்‌
இத்தகை யாகிய பொருளு மின்னமும்‌. 180

ஊளமர்தம்‌ பொருள்முட முற்று ளோர்பொருள்‌
வாமியர்‌ தம்பொருள்‌ வல்ல : டிப்பொருள்‌
ஆமிதென்‌ றவைகள்கொண் ட்ீணுகு வீரென
நேமியா வருவர்பின்‌ ஒதுங்கு நீர்மையான்‌. 181

நீர்மிசை நடப்பவ னிழலொ துங்குவோன்‌
தோர்விலா வழக்கின னுயரத்‌ தொங்குவான்‌
தேரினா னாதுவோ நேர்ந்து தந்திரம்‌
சோர்வுறப்‌ பலபொருள்‌ தொகுத்திட்‌ டாரரோ. 182

விற்பொலி யட்டகோ புரங்கள்‌ வேறிரண்‌
டுற்றிடு மதின்மடைப்‌’ பள்ளி யோங்்‌இடும்‌
நெற்களஞ்‌ கஇயமழுநெற்‌ குத்து மண்டபம்‌
பற்பல வாந்திருப்‌ பணிகள்‌ செய்தனன்‌. 183

புத்தர்க ளருகர்கள்‌ பொருந்து ‘றுஞ்சிவ
பத்தர்கள்‌ மாயவா தியர்கள்‌ பற்பல
இத்தகை யாம்பர சமயத்தி யாவரும்‌ யெத்தகை வாதின்வந்‌ தெவரி யம்பினும்‌. 184

அவ்வவைக்‌ கெதிருறை வேத மாதிகொண்
டிவ்வித மாமென வெடுத்தெ டுத்துரைத்‌
தொவ்வுற வாதுவென்‌ றவரு ரைத்திடும்‌ .
செவ்விநேர்‌ நாமங்கள்‌ பல? றந்தனன்‌.–185-

இந்தநன்‌ முறையினால்‌ எவரு மேத்திடச்‌
செந்திரு வனையசர்‌ தேவி தன்னொடும்‌
மந்திர மனையதோண்‌ மங்கை வேந்தனும்‌
அந்தமா நகரிடை யமரும்‌ நாடனின்‌.–186-

ஒருபக லரங்கர்பா லடைந்து வப்பொடும்‌
இருவனந்‌ தன்மிசை துயிலும்‌ செவ்வியோய்‌ }
இருவினை யொழிந்துள தெனக்கு நற்பதந்‌
தருதியென்‌ றநிருபதம்‌ தாழ்ந்து நின்றனன்‌.–187

ஆழ்வார்‌ திருநாடலங்கரித்தது
நின்றவக்‌ கலியனை நீல மால்வரை
யொன்‌ நிய வுருவினா னுவந்து நோக்கியே
நன்றது புரிகுதும்‌ நமக்கோ ரில்லதாம்‌
“தென்றிருக்‌ குறுங்குடி சேர்தி யென்றனன்‌.–188

என்னவாட்‌ கலியனும்‌ மினிய வானந்தம்‌
துன்னிட. வவன்பதந்‌ தொழுது .போற்றிசெய்‌
தன்ன ந.ந்‌ .குறுங்குடிக்‌ கணுக லுன்னியே
பொன்னிவர்‌ தண்டிகை பொலிய மேவினான்‌–189.

சுற்றினு மடியர்தங்‌ குழாந்து வன்றிடக்‌
கொழற்றமெய்‌ இடும்பர சமய கோளரி
யுற்றன னெனத்திருச்‌ சன்ன மூதிடப்‌ ,
பொற்றிரு வரங்கம்‌ விட்டரிதஇற்‌ போயினான்‌.–190

ஆலைசா ஐறடும்புகை புயலென்‌ றண்மியே
காலைமா மயிலினங்‌ களிந டஞ்செயும்‌
சோலைமா மலையினைத்‌ துன்னி யேவன
மாலைமார்‌ பழகரை வணங்கி யேகினான்‌. 191

வெதிரினா லொழுகுதேன்‌ மேவிப்‌ பாய்தலில்‌
கதிருடை செந்நெல்வான்‌ கவின்கொாண்‌ டோங்கிடும்‌
மதுரையிற்‌ கூடலின்‌ அழகர்‌ வண்பதம்‌
சதிருடன்‌ முடியுறத்‌ தாழ்ந்து போற்றினான்‌. 192

வில்லிபுத்‌ தூாரினை யணுகி மேல்வரும்‌
மல்லரைக்‌ குமைவட பத்திர சாயிதாள்‌
அல்லியின்‌ வணங்கிப்‌ பல்லாண்‌ டெனுந்தமிழ்‌
சொல்லிய பெரியரைத்‌ தொழுது போயினான்‌. 193

குருமணி யினம்பல கொழித்தி ரைத்தலை
இருபுற மொதுக்கும்வே றிணையி லாதசர்ப்‌
பொருளையின்‌ வடகரை பொலியப்‌ பெற்றிடை
மருவுவை குந்தநா தரைவ ணங்கினான்‌. 194.

வைத்தமா நிதிக்குழைக்‌ காதர்‌ வண்டினம்‌
மொய்த்ததா மரைக்கணர்‌ மாயக்‌ கூத்தர்முன்‌
பெய்த்தவெம்‌ மிடர்கடி வாறெண்‌ ணார்தமைக்‌
கைத்தொழி காசினி வேந்தைக்‌ காண்குநா. 195

அவ்வவ ரிணைத்திரு வடியம்‌ போருகம்‌
ஓவ்வுறத்‌ தன்முடி தனைக்கொண் டொற்றியே
யெவ்வமற்‌ றுளமகழ்‌ வெய்இப்‌ போற்றியச்‌
செவ்விய நகரினைத்‌ தீர்ந்திட்‌ டேகினான்‌. 196

முருகவிழ்‌ முளரிமுத்‌ இளநி லாவினால்‌
அருகுறு குழமுதம்விண்‌ டலரு மாவயல்‌
குருகையா திப்பிரான்‌ குலவு தண்முடி
மருவுற வணங்கியே வாழ்த்தி யேனான்‌. 197

கூனிலாம்‌ பிறைமணிக்‌ கோயின்‌ மேற்றவழ்‌
வானமா மலைதனை யணுகி வண்டுணுந்
தேனமர்‌ துளவதோக்‌ தாத்ரி நாதர்செம்‌
பூனிகர்‌ பதந்தொழு தேத்துப்‌ போயினான்‌. 198

தறுங்குழன்‌ மடந்தையர்‌ நடைந டந்திடுத்‌ தொறுங்களி சிறந்திடத்‌ துடர்வ தற்கவா
வுறுங்குலப்‌ பெடையன முறையு மாவயல்‌
குறுங்குடித்‌ திருநகர்‌ குறுகி னானரோ.  199

அத்தலத்‌ தருச்சகர்‌ முதல யாவருங்
கொத்துடன்‌ ம௫ழ்த்துவந்‌ தெதிர்கொண்‌
முத்தெறி பாற்கடன்‌ முழுகிப்‌ பன்னிரண்‌
டொத்திடு தஇிருமண்காப்‌ புவந்து சாற்றியே. 200

இரண்டெனும்‌ துயந்தனை துதிசெய்‌ இயாவரும்‌
இரண்டிரு மருங்குறச்‌ சேர்ந்து கோயிலுள்‌
-கரண்டமா டிடும்பொய்கைக்‌ கரும்ப னைக்களனி
-மிரண்டிள வாளைபாய்ந்‌ தெழும்ப வீழ்வதை,. 201

“அரண்ட மாடு பொய்கையுள்‌ கரும்பனைப்‌ பெரும்‌ பழம்‌
புரண்டுவீழ, வாளைபாய்‌ குறுங்குடி நெடுந்தகாய்‌’” என்ற தஇிருமழிசைப்‌ பிரான்‌
பாடலின்‌ சாரமாகும்‌.

இருகணு மழைக்கண்‌ டிருந்த மானம்பி
இருமலை நம்பிபாற்‌ கடலி னம்பிசர்‌
பெருகதநின்‌ றருணம்பி கிடந்த நம்பிப்பேர்‌
மருவுமை வர்கண்மல ரடிவ ணங்கினான்‌. 202

அழூய நம்பிபொன்‌ னடியிற்‌ கண்ணநீர்‌
ஒழுகுறும்‌ படியணிந்‌ துகந்தெ ழுந்துகைத்‌ தொழுதடி யேற்கரு டூய வீடெனா
இழுதென வுருகிநின்‌ றேத்து மெல்லையில்‌. — 203

அளித்தனம்‌ முத்திவீ டணைதி யென்றுதேன்‌
துளித்திடும்‌ துளவமா லுரைப்பத்‌ தூவுளம்‌
களித்துயர்‌ விமானமேற்‌ கவின்கொண் டோங்கியே
குளித்தனன்‌ விரசயிற்‌ குலவு நீரிடை. 204.

படிகந்ன்‌ மேனியாய்ப்‌ பரம வான்பதி
நெடியசெம்‌ பொன்மணி நிரப்பு மண்டபத்‌
தடியவர்‌ குழுவொடு மணுகி வாழ்ந்தனன்‌
வடியுடை வாட்கர மங்கை மன்னனே. 205

மறுவிலான்‌ பிரபந்தம்‌ வகுத்த வாறினுள்‌
ona யாயிரத்‌ தொடுமுந்‌ நூறுடன்‌
அறுபது மொன்றதா மதனுட்‌ செங்கண்மால்‌
பெறுபதி யெண்பதோ .டிரண்டும்‌ பேசுவாம்‌.–206-

ஆழ்வார்‌ பாடிய பாசுரத்தொகை 1961, மங்களாசாசனம்‌, செய்த
இவ்ய தேசங்கள்‌ .88,

வேறு
சீரங்கம்‌ வேங்கடம்‌ மாதனூர்தஞ்சை
சேறை வெஃகா: நின்றவூர்‌
காரகம்‌ நந்திபுர விண்ணகர்நைமிசார்‌.
ணியம்‌ விண்ணகர்‌ கணபுரம்‌ :
நீரகந்‌ தேவனார்‌ தொகையயிந்‌ திரபுரம்‌
நிலாத்துங்க டுண்ட நறையூர்‌
ஊரகம்‌ புல்லாணி இத்திரகூ டமெவ்வ
ளூர்வதரியாச்‌ ரமே. : 207

அரிமேய விண்ணகரம்‌ நாகையட்‌ டப்புய
மலிக்கேணி யாலிமோகூர்‌
பிரிதிவெள்‌ ளறைகுறுங்‌ குடிதெற்றி யம்பலம்‌
போர்தலைச்‌ சங்க மெய்யம்‌
புருடோத்த மங்கவளம்‌ பாடிகூ டறிருப்‌
புட்குழி கண்ண மங்கை
பரமேச்‌ சுரவிண்‌ ணகர நீர்மலை
வேளுக்கை பாடகம்‌ மூழிக்களம்‌. 208

கடன்‌. மலைக்‌ காழிசீ ராமலிண்‌ ணகரம்வை
குந்த விண்ணகர்‌ கண்டியூர்‌
இடவெந்தை செம்பொன்செய்‌ கோயில்‌ பார்த்தன்‌
பள்ளி. இந்தளூர்‌ கண்ணங்குடி
குடந்தைவெள்‌ ளக்குளம்‌ அழுந்தூர்‌ கரம்பனூர்‌
கோவ லிடைகழி கூடலூர்‌
கடிகை நாங்கூ ரின்மணி மாடகோ .விற்சிங்க வேள்குன்று கார்வானமே. ~ 209

வேறு
இருக்கச்சியில்‌ சர்ப்பபள வண்ணம்‌
இருப்பாற்கடல்‌ சீராய்ப்பாடி
இருப்பேரகஞ்‌ Fran. wagons
இருநாவாய்‌ சீர்புலியூரே. 210

வேறு
புள்ளம்‌ பூதங்‌ குடித்தண்‌ காசிறு புலியூர்‌ சோலை
வெள்ளி யங்குடி கோட்டியூர்‌ விளங்கு சாளக்‌ கிராமங்‌
களவனூர்‌ வல்ல வாழ்தங்‌ கால்மணிக்‌ கூட மாகுந்‌
தெள்ளுசீர்க்‌ கமலை மார்பன்‌ செழுத்திரு பதிகண்‌ மாதேர்‌. 211

அன்னசெந்‌ தமிழைப்‌ பார்மேல்‌ அநேகர்கற்‌ றுணர்ந்து தம்முன்‌
றுன்னுமஞ்‌ ஞான நீங்கித்‌ தூயநல்‌ லறிவுண்‌ டாகி
மின்ணுசக்‌ கரஞ்சேர்‌ செங்கை விண்டுவாழ்‌ திருவை குந்தந்‌
தண்ணிடை களிப்பினோடுஞ்‌ சார்ந்துவீற்‌ றிருந்தா ரன்றே. 212

பயன்‌
இந்தமாக்‌ கதையை யன்போ
டெழுதினோர்‌ பரிவிற்‌ கற்றோர்‌
சிந்தையுள்‌ ளூருகக்‌ கேட்டோர்‌
செப்பினோர்‌ யாவ ரேனும்‌
முத்துக்‌ வினைக ணீங்கி
முளரிமா : மலர்மேல்‌ வாழுஞ்‌
செந்திரு வருளுண்‌ டாகிச்‌
சீர்பதம்‌ பெறுகு வாரே. 213

திருமங்கையாழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌ முற்றும்‌.

————

திருமழிசையாழ்வார்‌ வரலாறு பேசுவோம்‌
மங்கையார்‌ குறைய லூரில்‌ வந்தவ தாரஞ்‌ செய்திட்‌
டங்கண்மா ஞால மேத்த வருந்தமிழ்க்‌ கவிகள்‌ செய்தே
செங்கண்மால்‌ பதவிதன்னுட்‌ சேர்ந்தமை யுரைக்தோ மிப்பால்‌
நங்கள்்‌€ர்‌ மழிசை யான்றன்‌ சரிதமு நவில்வா மன்றே. 214

வெண்பா
தையில்‌ மகமின்று தாரணியி லேற்றமிந்த
தையில்‌ மகத்துக்குச்‌ சாற்றுன்றேன்‌ – றுய்யமதி
பெற்ற மழிசைப்‌ பிரான்‌ பிறந்த நாளென்று
நற்றவர்கள்‌ கொண்டாடு நாள்‌.
(உபதேச ரத்தினமாலை: 18.)

திருவிருத்தம்‌
இன்னவா றாகப்‌ பன்னா ளேகவைம்‌ புலன்வென்‌ றோராய்‌
மன்னியே கானந்‌ தன்னில்‌ வளம்பெறு வரையின்‌ சார்பில்‌
பன்னருந்‌ தவங்கள்‌ செய்யும்‌ பாற்கவன்‌ முதலா னோர்கள்‌
உன்னின ரொருநா ஞள்ளத்‌ தொருமுறை யாக மன்னோ. 1

மும்மையா முலகோ டீசன்‌
முளரியன்‌ முதலா: னோர்கள்‌
தும்மையுள்‌ ளடக்கி யாலந்‌
குழவி யாகிச்‌ செம்மைசேர்‌. கரத்தாற்‌ பார்மின்‌
இிருவொடும்‌ வருடத்‌ தங்கும்‌
நம்மையாண்‌ டருளுஞ்‌ சோதி
நாரணன்‌ அமல நாதன்‌. ” 2

இப்புவி தனிலும்‌ வந்துற்‌ றெழில்பெறப்‌ பலவென்‌ ஹோதும்‌
ஒப்புவே றிலாத தாகும்‌
பதிகளி னுறைந்து வாழ்வான்‌
அப்பெருந்‌ தலங்கட்‌ குள்ளாய்‌
அகன்றிடா தோரூர்‌ தன்னில்‌
செப்புமம்‌ மாலெப்‌ போதுஞ்‌
சேர்ந்துறைந்‌ இருப்பா னன்றோ. 3

அனையவாந்‌ தலம்யா தென்றா
ராய்ந்திட வேண்டு மென்னும்‌
நினைவுகொண்‌் டறிவிப்‌ பார்கள்‌ .:
்‌ ணீனிலத்‌ திலையென்‌ றோர்ந்தும்‌ ‘
மனையென மலரின்‌ வாழும்‌:
மறையவ னுலகந்‌ தன்னை
வினையற. நோற்று நின்ற
மேலவ ரடைந்தா ரன்றே. ்‌ 4

சென்றடைந்‌ தவர்க எந்தத்‌
இசைமுகன்‌ செழும்பொற்‌ பாதம்‌
. ஒன்றிட முடிகள்‌ சேர்த்தித்‌ ்‌ தொழுதெழுந்‌ துகப்பின்‌ முன்னர்‌ நின்றிட லோடுஞ்‌ .ஞான
நெறியுளீ ௬மையொப்‌ பார்யார்‌
என்றவர்ப்‌ புகழ்ந்திட்‌ டாசி
யியம்பியாங்‌ இருமி னென்றான்‌. 5

என்றவாங்‌ . டந்த
விருஞ்சிறைத்‌ தாவிச்‌ செங்கால்‌
அன்னமூ ரெண்கண்‌ ஸணான்றன்‌
அம்புய முகத்தை நோக்கா ்‌
முன்னர்நா ணின்னை யுந்தி
முன்னின ஸனீன்று Cares
தன்னைச்சிட்‌ டிக்கு மாறு.
சாற்றியோர்‌ சோதி தானாய்‌. | 6

அஞ்சுபூ தங்கட்‌ குள்ளும்‌ அந்தரி யாமி யாய்நின்று
உஞ்சுமா றவைக :ளெல்லா |
மோங்குறக்‌ காவல்‌ பூண்டுந்‌
துஞ்சுதல்‌ பிறத்த லென்ப
திலாதவச்‌ சுருப னாகி
விஞ்சுவை குந்தத்‌ தும்பார்‌
மிகுபல தலத்தும்‌ வாழ்வோன்‌. 7

மருவுமப்‌ பதிக டன்னில்‌
வளங்களோர்‌ காலந்‌ தன்னுள்‌
ஒருபக லேனும்‌ நன்றா.
. யொருகண மேனுநீங்‌. காமல்‌

இருவொடு மிருந்து வாழ்வா
னென்னவே தெளியு மாறாய்ப்‌
பொருவிலா மறைக டன்னிற்‌
புகன்றுளாய்‌ நீயு மன்றே. 8

அந்தநற்‌ றலமீ தென்ன வறிகிலே மறியு மாறாய்‌
எந்தமக்‌ குரைத்தி யென்ன
வியம்பினன்‌ அயல்நீங்‌ காமல்‌
செந்திரு வுடனே செங்கண்‌
மால்செழு மறையோர்‌ போற்ற
வந்துவாழ்‌
மழிசையென்‌ றுணர்மி னென்றான்‌. 9

அத்திரு நகர்க்கு நேராய்‌
அங்கண்மா ஞாலந்‌ தன்னுள்‌
எத்திரு நகரு மோங்கு மெழில்வளம்‌ புனிதம்‌. தன்னால்‌
ஒத்திடா துணர்மி னென்னா ்‌
வுயர்தவ முனிவோர்‌ தங்கள்‌
சித்தம துவக்கு மாறு ்‌
மீளவும்‌ தெரிவித்‌ தானால்‌. 10

கேட்டவம்‌ முனிவோர்‌ மீட்டக்‌
இளர்வளம்‌ பெறுந்த லத்தின்‌
மாட்டுள மேன்மை யாங்கள்‌
மனந்தெளி வுறுமா நாகக்‌
காட்டிட வேண்டு மென்னக்‌
கருஞ்சிறை யறுகால்‌ பொம்மென்‌
பாட்டுவண்‌ டிமிரும்‌ பங்கேருகத்தயன்‌ பரிவி னோடும்‌. –11

ஆங்கவர்‌ தம்மோ டண்மி
யத்திரு நகரின்‌ மேன்மை
– பாங்குற வுணர்த்த லுன்னிப்‌
பணிகள்‌ புற்றடைவ தாக
ஓங்கிவா னுயருங்‌ காவி
லுறுஞ்சிறைக்‌ கருட னேபோல்‌
மாங்குயிற்‌ றொகுதஇு கூவும்‌
மழிசைவந்‌ தடைந்தா னன்றே. . 12

வந்ததொரு துலைகோல்‌ தன்னை
மனத்தினா னிருமித்‌ தன்னோன்‌
முந்தொரு தட்டி லேசர்‌
மழிசையை முயல வைத்திட்(டு)
இந்தபே ௬லகை மற்றோர்‌
தட்டினிட்‌ டெடுத்துக்‌ காட்ட
அந்தமார்‌ மழிசைத்‌ தட்டு
மழுந்திக்கீ மிருந்த தாலோ. 13

உலகுறு தட்டு மேலிட்‌
டோங்குற வதனைக்‌ காணா
இலகுமிம்‌ மழிசைக்‌ கொப்பா
யில்லையிப்‌ புவியின்‌ வேறென்‌(று)
அலகின்மா தவர்கள்‌ யாரு
மற்புத மடைந்தா ராகி
மலரவ னம்பொற்‌ றாளின்‌
வணங்கிவாழ்த்‌ தினர்கள்‌ மாதோ. 14

இம்முறை தெளிவித்‌ தந்த விருந்தவர்க்‌ காசி நல்கிப்‌
பொம்மென வறுகாற்‌ பாடும்‌
மலரயன்‌ போய பின்னர்‌
கொம்மைமா முலைப்பூ மாதின்‌
கொழுநனைக்‌ குறித்திட்‌ டாங்குச்‌
செம்மைசேர்‌ யாகம்‌ செய்வான்‌
பார்தனைக்‌ &ண்டிட்‌ டானால்‌, 15

வேண்டுவ கலப்பை கொள்ளா
விதிமுறை துடங்கி யுள்ளம்‌
தூண்டுள முவகை துள்ளித்‌
துள்ளிமீ தெழுந்த தென்ன
மூண்டெழு கனற்க ணானெய்‌
முதலிய சொரிந்து முற்றும்‌ ஆண்டதொன்‌ றதனில்‌ நந்தும்‌
அருமகம்‌ முடித்தான்‌ அன்றே. 16

மகமது முடித்த லோடும்‌
வைகுந்த வாசு தேவன்‌
-அகமகிழ்த்‌ தரவிந்‌ ‘தம்வாழ்‌
பவளுட னணுகித்‌ தோன்றிச்‌
செகமதி னின்போல்‌ யாகம்‌ ்‌
செய்துளோ ரிலையென்‌ தேத்தித்‌
தருதும்‌ வேண்டும்‌
வரந்தனைச்‌ சாற்று கென்றான்‌. 17

என்னலு மூவகை யுள்ளத்‌
தெழுந்துமீ தோங்க வென்கண்‌
– மூன்னரென்‌ னன்னை யான மூளரிமா ‘ தோடு நீவந்‌ துன்னிடத்‌- தெரிசத்‌ தேற்குத்‌. தூயன விஃத லான்மற்று :
இன்னமும்‌ வேண்ட லென்னென்‌(று)
இருந்தவ னியம்பி னானால்‌. 18

கேட்டவத்‌ இருமால்‌ – பின்னும்‌
இளர்த்துவா னினிது ளத்தின்‌ .
மாட்டுள துணர்கு வோமால்‌, ஆயினு மகத்திற்‌ கெய்தி. நாட்டுமொன்‌ றேனு நல்கா ©
தேகல்நல்‌ லறம தாமோ?
சேட்டிளம்‌ பருதி போலோர்‌.
சிறுவனை யளித்தோ மென்றான்‌. 19

ஆழ்வார்‌ அவதாரம்‌
அவ்வர மளித்துச்‌ செங்கேழ்‌
அணிமலர்‌ மாதி னோடும்‌
செவ்விசேர்‌ இருவை குந்தஞ்‌
சிறப்புற வடைந்தான்‌ ; மேனாள்‌
வெவ்விய விடங்கர்‌ கானின்‌
விரைமல ரோடை தன்னுள்‌
கவ்விடத்‌ தளர்ந்து கூவும்‌
கரியருந்‌ துயரந்‌ ர்த்3தோன்‌, டட 20

ஆங்கவ ஸிவ்வா றாக
அகன்றபின்‌ தைமா தத்தில்‌
பாங்குறும்‌ மகநாள்‌ தன்னிற்‌
பார்க்கவ னென்னு நாமத்‌  தீங்கலா முனிவன்‌ றன்பால்‌
செனித்திடு மகவைக்‌ காணில்‌
தேங்குழ லுமையோர்‌ பாகச்‌
சிவனயன்‌ மகிழ்வர்‌ மாதோ. 21

செந்திருப்‌ புதல்வன்‌ றன்போற்‌
றினகர ஸுூருவந்‌ தாங்கி
வந்திரும்‌ புவிமே லுற்ற வாறென வந்து தோன்றும்‌
அந்தநன்‌ மகவைக்‌ காணா
அம்முனி மகவுள்‌ ளோரர்க்குச்‌
இந்தையுட்‌ கடவுட்‌ டியானந்‌ .
இருப்புமென்‌ றுள்ளந்‌ தேர்ந்தான்‌. 22

தேர்ந்தவம்‌ முனிவன்‌ றானுந்‌
சிந்தையுண்‌ மகவி னாசை
இர்ந்துசெங்‌ கரங்கண்‌ மீதச்‌
சிறுகுழ வியைக்கொண்‌் டவ்வூர்‌
பேர்ந்துபோ மளவி னாங்கோர்‌
பிரம்புறு புதரின்‌ &ழாய்ச்‌
சேர்ந்ததை வளர்த்தி னானோர்‌
சிறியவத்‌ தரத்தின்‌ மீதே. 23

இத்ததற்‌ குழவி தன்னைப்‌
புரந்தரல்‌ இதனை நம்பால்‌
தந்தவர்‌ கடனென்‌ நுன்னித்‌
தவஞ்செயும்‌ சாரல்‌ தன்னில்‌ அந்தமா முனிவன்‌ சார்ந்த
துறிந்துல கன்னை யான
செந்திரு வன்புற்‌ றாங்குச்‌ சேர்ந்தழுஞ்‌ செய்கை நோக்கா; 24

திருமகளின்‌ திருவருள்‌ .
மனதினுள்‌ இரக்கம்‌ கொண்டோர்‌
மதுரிக்கும்‌ தேனி றாலாய்‌
தனதுமா முலைப்பால்‌ தன்னைச்‌
சமைத்துமே லிருத்தி வைத்திட்‌(டு)
அனையதப்‌ பாலன்‌ வாய்விண்‌(டு)
அழுதுண வதனை யுன்னி
நினைதொறுந்‌ துளிக்கு மாறாய்‌
நியமித்திட்‌ டேகி னாளால்‌. 25

திருமகள்‌ தனது-பாலைத்‌ தேனிறாலாய்‌ மாற்றி ௮க்‌ குழவியின்‌ வாயில்‌ தேன்‌
துளி படும்படி நியமித்துவிட்டுப்‌ போய்விட்டாள்‌. மதுரிக்கும்‌ – இனிக்கின்ற.
சமைத்து – அமைத்து. வாய்விண்டு – வாய்திறந்து. நினைதொறும்‌ – நினைக்கும்‌
போதெல்லாம்‌. (அரிசமய தீபம்‌ திருமகளே பால்‌ வழங்கியதாகவும்‌, திருமகள்‌
தனது பால்‌ குழவியின்‌ பெருவிரலில்‌ உண்டாகும்படி செய்துவிட்டுப்‌ போனதாக
வும்‌ கூறியுள்ளது.)

உழுவைகாத்‌ தளிப்பக்‌ .காவிக்‌ —_
கதிரிள வெயிலு றாமல்‌
நிழலுறப்‌ பணம்வி ரித்தே ட
நீளர வுறைய மீதாய்‌
ஓழுகுதேன்‌ றுளிவாய்‌ வீழ்வ
துண்டுண்டு மகிழ்வி னோடப்‌
பழுதில்சேப்‌ வளரு மன்னாள்‌
உற்றது பகர லுற்றாம்‌. 26 -வெய்யில்‌ படாதபடி பாம்பு விரித்தது.

திருவாளன்‌ ஆழ்வாரை வளர்த்தது
அத்திரு மழிசையென்‌ றறையு மாநகர்‌
ஓத்துவாழ்‌ மேதையர்‌ குலத்தி லுற்றிடும்‌ உத்தம னாந்திரு வாள னென்றுளோன்‌
பத்தினி பங்கய வல்லி பண்புளாள்‌. 27

அவ்விரு வோர்களு மனமொன்‌ றநாகியே
வெவ்விய கானிடை விரைவி ஸனெய்தியாங்‌(கு) _
ஒவ்விய பிரம்புகொண் டூரின்‌ மேவியே
செவ்விய கூடைகள்‌ திருந்தக்‌ கட்டுவார்‌. 28

ஆங்கதை விலைசெயற்‌ கமைந்து கொண்டுசென்‌(று)
ஓங்குமம்‌ மாநக ருறுமவ்‌ வீதிவாய்‌
வாங்குவார்‌ தருபொருள்‌ வாங்கி வந்ததில்‌
பாங்குறு வனம்‌ பண்ணு வார்களால்‌. 29

ஆயவ ரம்முறை யணுகு நாளிடை
சேயிலா மையினுளந்‌ தியங்கி யேங்கியே
தூயவ ருளத்தினுஞ்‌ சுருதியுள்‌ ஞம்வாழ்‌ மாயனை மகிழ்வொடு மனத்தி லுன்னியே. 30

ஒருபகற்‌ பிரம்புகொண் டறுத்த லுன்னியத்‌
இருநகர்‌ கடந்துகான்‌ செல்லு மெல்லையில்‌
கருடனும்‌ வலியனுங்‌ கருது றும்மிடம்‌
வருதலும்‌ அகமிக மகிழ்வுற்‌ றேகினார்‌. 31

ஏகவப்‌ புதரின்‌€ ழிளங்கு ழந்தையுஞ்‌
சோகமுற்‌ றழுங்குரல்‌ தொனிசெ விக்கணுற்(று)
ஓகைகொண் டவனிலங்‌ குறுமுன்‌ காத்துறை
நாகமு முழுவையு நழுங்கிப்‌ போயதால்‌. . 32

போயபின்‌ பிவர்களு மருகற்‌ புக்கியச்‌
சேயினை யிருகரஞ்‌ சேர்த்தெ டுத்துமுன்‌
பாயின சகுனமும்‌ அதனுக்‌ கொவ்வுற
மாயவ னருளின னெனம இழ்ந்தனர்‌. 33

அங்குவிட்‌ டூர்புகுந்‌ தகத்துட்‌ சேரலும்‌
பங்கய வல்லியாம்‌ பெயர்ப டைத்துள
செங்கய லனையகட்‌ டிருவ னாட்டரு
கொங்கையுஞ்‌ றந்துபால்‌ சுரப்புக்‌ கொண்டதால்‌, 34

சுரந்துறு மமுதையச்‌ சுதற்க ளித்திட
நிரந்தர முண்டுபன்‌ னேயங்‌ காட்டலால்‌
பரந்த€ ரவர்கண்முன்‌ படைந்த துன்பநோய்கரந்தகன்‌ நிடவுளங்‌ களிப்புற்‌ றாரரோ. , 35

தூயதே வஇிவயின்‌ மதுரை தோன்றியுற்(று)
ஆயர்பா டியினடைந்‌ தசோதை யாள்திருச்‌
சேயென வளர்ந்துபன்‌ னடனஞ்‌ செய்திடும்‌
மாயனென்‌ றியாவரும்‌ மகிழ வைகினான்‌. 36

ஆளனும்‌ பங்கய வல்லி யாளெனும்‌
தாளதா மரைமுகத்‌ தவளும்‌ தாம்பெறுங்‌
காளையிங்‌ கிவனெனக்‌ கருத்து ஞன்னியே
நாளுற வளர்த்தனர்‌ நயப்புற்‌ றென்பவே. 37

மைந்தனு மாங்கவர்‌ மகிழ்வொ டுந்தனைத்‌
தந்திடுந்‌ தந்தையும்‌ தாயு மாமெனச்‌ சிந்தையுள்‌ மஒழ்ச்சியுஞ்‌ சிறப்பு மோங்கெ
இந்தநன்‌ முறையதாய்‌ வளரு மெல்லையில்‌. 38

தங்குல வியற்கையிற்‌ றகுவ யாவையும்‌
அங்கவர்க்‌ கிழைத்துற வவனு மாயையாங்‌
கங்குலை யொழித்திடக்‌ காலை யுற்றெழுஞ்‌ .
செங்கதி ரவனெனச்‌ சறெந்திட்‌ டானரோ. 39

ஆழ்வாரின்‌ யோகம்‌
மறந்துடர்‌ சனமுங்கா மமும்ம னத்திடைத்‌
துறந்துய ரியபரஞ்‌ சுடரைக்‌ காணுமா(று)
அறந்துடர்‌ யோகவப்‌ பியாச மாகவே
சிறந்துற வாண்டெழு நாறு சென்றதால்‌. 40

மறம்‌ துடர்‌ – பாவத்தைப்‌ பின்பற்றிச்‌ செல்கிற. மனத்திடைத்‌ துறந்து –
மனத்திலிருந்து விலக்கி, யோகாப்பியாசத்திலேயே எழுநூறு வருடம்‌ கழித்தது.

இறைவன்‌ காட்சி வழங்கல்‌
அரியதா இயெதன்னந்‌ தாமத்‌ தின்னுடைச்‌
சொருபமத்‌ திருமழி சையினுட்‌ டோன்றிடத்‌
தெரிவுறு ஞானக்கண்‌ திருந்த வேயளித்‌(து) இருசிறைக்‌ கலுழன்மே லிவர்ந்து தோன்‌ நினான்‌. 46

சோமனை முடியணிச்‌ சுடலை யாடியும்‌
நாமகள்‌ கொழுநனு நவிலு மோர்சத
மாமகன்‌ முதலினோர்‌ களும்வ ணங்கிடப்‌
பூமக ளொடுமெதிர்‌ பொலிந்து ளான்றனை; 47

இன்னவாறு உளம் களித்து உருகி ஏத்திடும் விண்ணுற நோக்குவான்‌ மீண்டும்‌ தன்னுடல்‌
மண்ணுற வணங்குவான்‌ வாழ்த்து வான்புகழ்ந்‌(.து)
எண்ணுவ னவன்‌ றிரு வெழிலை யென்பவே. “ 48

இன்னவா றுளங்களித்‌ துருகி யேத்திடும்‌
அன்னவன்‌ கண்படா தகன்று போயினான்‌
பன்னகத்‌ திடைநடம்‌ பயின்றி டைக்குலக்‌
கன்னியர்‌ துயில்கவர்‌ கரிய கோவலன்‌. 49

கோவல ஸனகன்றிடுங்‌ கொள்கை கண்டுளத்‌(து)
ஆவலோடி ரங்கியீன்‌ றளித்த ழித்திடும்‌
மூவராம்‌ வடிவுகொள்‌ முகுந்த னாந்திருத்‌ தேவனே பரமெனத்‌ தெளிவுண்‌ டாகியே; 50

பலசம யங்களிற்‌ படிந்த வற்றிலே
அலகில்நா ளொழித்ததுக்‌ ககம்நெ கழ்ந்துபின்‌(பு)
இலகுமூ லப்பொரு ளினைய டைந்தனம்‌. ட்ட)
நலமிதின்‌ வேறென நயக்க லாவதே. 51

திவ்ய தேச யாத்திரை
என்னவா னந்தமுள்‌ ளெழுந்து பொங்கவே
அன்னமா மழிசைவிட்‌ டாம்ப லும்செழுங்‌ ‘
கன்னலுஞ்‌ சாலியுங்‌ கவினு மாவயல்‌
மன்னுசீர்‌ .திருவல்லிக்‌ கேணி மன்னினான்‌.  52

சீர்த்ததா மரையுதிர்‌ மணிசெ ழித்திடும்‌
நீர்த்தட மாடியும்‌ நிமலன்‌ ஆகிய
பார்த்தசா ரதிப்பதம்‌ பணிந்து மிம்முறை
திர்த்தனாண்‌. டேழெழு நூறு. சென்றபின்‌; 53-700 வருடம்‌ ஆழ்வார்‌ இருவல்லிக்‌
கேணியில்‌ வாழ்ந்தார்‌.

ஒருபகல்‌ மழிசையுத்‌ தமனை யோங்கெழில்‌
பெருகுவெஃ காவெனும்‌ பெரும்ப தக்கணீ
வருகவென்‌ றுணர்த்தினன்‌ மலரின்‌ வைகுறும்‌ இருமகள்‌ மகணனாந்‌ தேவ தேவனே.–54-

அம்முறை கச்சவெஃ காவ டைந்தெணார்‌
தம்முள மாமனை சார்ந்‌ திடாதொழி
செம்மைசேர்‌ நாரணன்‌ திருப்ப தந்தொழு(து)
இம்முறை யேழுநூ றாண்டி ருந்தனன்‌. 55

கணிகண்ணன்‌ வரலாறு
்அந்தநா டனிற்கணி கண்ண ஸும்பெயர்ச்‌
செந்தமிழ்ப்‌ புலவரிற்‌ சிறந்து மாண்புடன்‌
வந்துமா மழிசையன்‌ பதம்வ ணங்கியே
சந்தத முளந்தனி லன்பு சார்ந்தரோ. 56

மழிசையன்‌ றன்புகழ்‌ வளங்கள்‌ பாடியே
அழிவில்சீர்‌ இருத்திய னணுக வோர்பகல்‌
மொழியுமந்‌ நகர்மனு முறையி னாண்டருள்‌
எழில்பெறு மரசனு முலாவந்‌ தெய்தினோன்‌; 57

புவியுடை வேந்தனும்‌ புலவன்‌ வைகிடத்‌
குவிசொடும்‌ பலபொரு டந்தென்‌ மீதிலோர்‌
கவிசொலென்‌ நுரைத்தசொற்‌ கனலிற்‌ காய்ச்சியே
செவியுடு மூசியொப்‌ பாகச்‌ சேர்தலும்‌; 58

இனியவெம்‌ பரன்புக ழியம்பு நாவினால்‌
மனிதர்மேற்‌ கவிதையான்‌ வழங்கு கின்றிலேன்‌
பனியென வழிவுறும்‌ வாழ்வைப்‌ பற்றியே
குனிசிலை வயங்கொளேன்‌ என்று கூறுவான்‌. 59

அரும்பொரு ளிஃதெலா மற்ப வோடதாம்‌
துரும்பதாம்‌ நீயெனச்‌ சொல்லி வீறுடன்‌
பெரும்புக ழமாளனும்‌ பெயர்தல்‌ காண்குறா
இரும்புவிக்‌ கரசனு மிதையி யம்புவான்‌. 60

அன்னதே யாமெனி லருந்த மிழ்வலோய்‌ ‘
என்னதாந்‌ தேயமீ திருக்க லாகுமோ
பன்னுக : நீயெனப்‌ பாரை யாள்பவன்‌
சொன்னசொல்‌ லவன்‌ செவி கருக்குற்‌ றெய்தலும்‌; 61

கணிகண்ணனும்‌ ஆழ்வாரும்‌ பெருமாளும்‌
கச்சியை விடுத்தல்‌
உன்றிருத்‌ தேயமீ துறைவ தில்லையான்‌
என்றுரைத்‌ தக்கணம்‌ விரைவி னெய்தியே
துன்றுசீர்‌ மழமிசையன்‌ றூய டித்துணை
குன்றலை மீதுறத்‌ தரித்து யம்புவான்‌. 62

(வேறு),
ஐய கேட்டியின்‌ றென்னையித்‌
தேயமா எரசனும்‌ வருவித்துச்‌
செய்ய வோர்கவி தன்மிசைப்‌
பாடெனச்‌ செப்பிட மறுத்தேனால்‌
வெய்ய னும்‌எனைத்‌ தனதுதே
யந்தனை விட்டக லெனச்சொன்னான்‌
துய்ய நின்பதந்‌ தொழுதகல்‌
குவனெனச்‌ சொற்றனன்‌; நடவுற்றான்‌. 63

அனைய ஸனேகலும்‌ நின்னைவிட்‌
டிங்ஙனம்‌ அணுகிலன்‌ யானென்ன
– . வினையி லாமழி சையனுநா ்‌
கணைமிசை விளங்குற வளர்கின்ற
புனைது மாய்வெஃகு மார்பினன்‌
பொன்னடிப்‌ போதினைப்‌ பணிந்தேத்தி
இனைய சற்கணி கண்ணனித்‌
தேயம்விட்‌ டேகுதற்‌ கமைந்தானால்‌; — 64

அவனை நீங்கியா னீங்குறை
இன்றிலே. னாதலா லவன்பின்னே
குவனின்‌ னாகணை சுருட்டிக்கொண்
டென்னுடன்‌ கூடவா வெனலோடுஞ்‌
சிவனுந்‌ தேர்கொணான்‌ வேறொரு
தேயநீர்‌ சேறலென்‌ னோவென்னாப்‌
்‌ பூவன வேந்தனும்‌ தன்மிசை
. ‘கவியிவன்‌ புகல்கிலா மையினாலே. | 65

இந்தத்‌ தேயம்விட்‌ : டேகென
இவன்றனக்‌ கியம்பின னெனலோடும்‌
அந்தப்‌ பேரவ மதியுன
தடியற்கன்‌’ றஇினிற்பதின்‌ மடங்காக
எந்தனைச்‌ செய்த தாகுமா
லுனைப்பிரிந்‌ இருக்கல னிவண்விட்டே
உந்த னோடுசெல்‌ குவனென
வுரைத்துவந்‌ துறங்குநா கணைதன்னை; 66

சுருட்டு றாவெடுத்‌ தேகலும்‌ .
மருகுறு தூய்மையார்‌ மடவார்கள்‌
மருட்டு றும்மிவ. ரொடுமறு ்‌
தேயம்யான்‌ மருவுவன்‌ இன்றென்னா
இருட்டி ஸீங்குவிட்‌ டேகலென்‌
னெனவவ ரிசைத்தலு மடியார்தம்‌
பொருட்டெ. னாநடந்‌ தமையெலாம்‌
புகன்றனன்‌ புவிதனை யளித்துண்டோன்‌. 67

அம்மொ ழித்திரு மகளொடும்‌
புவிமக ளாகிய விருவோர்கள்‌
தம்மி ௬ஞ்செவி யுறுதலுந்‌ இயங்கியே தனித்திவ ணுறையேம்யாம்‌
உம்மு டன்துடர்ந்‌ இடுவமென்‌
றெழுந்தவ ர௬டன்வர விரைவோடுஞ்‌
செம்மை சேரும்வெஃ காவைவிட்‌
டேமறு தேயஞ்சென்‌ றனர்மாதோ. 68

இச்செ யற்கண்மற்‌ றுளதிருப்‌
. பதிகள்வா. ழிறைவர்தேர்ந்‌ துடனேக
நிச்ச யித்தவ ரவர்கடந்‌
தேவியர்‌ நெருங்கித்தம்‌ முடன்செல்ல
கச்சி தன்னைவிட்‌ டேகினர்‌
மறுதினங்‌ காலையிற்‌ புனறோய்ந்து
குச்சி னிற்கத வந்திறந்‌
தர்ச்சகர்‌ கோயிலுட்‌ புகுந்தாரால்‌. 69

புகுந்து நோக்கலு முபயநாச்‌ சியார்களாம்‌ பூவைய ரொடுஞ்செந்தேன்‌
உகுந்து ழாய்முடி நாரணர்‌
தங்களை யொருவருங்‌ காணாராய்‌
மிகுந்த வற்புத மடைந்தவ ராகியே மீண்டொரு விடத்தொளன்றித்‌
தகுந்த யோசனை புரிந்த னர்திருத்‌ தலங்கள்வாழ்‌ மறையோர்கள்‌. 70

முரச றைந்திடு படைத்தலை
யுடையவம்‌ முதுநகர்ப்‌ புரந்தோம்பும்‌
அரசன்‌ மாடணைந்‌ தித்திறம்‌
யாவுமங்‌ கறைதலு மதுகேளாப்‌
புரசை யானைய ஸனூள்மிக
நடுங்கியிப்‌ புதுமையை அமைச்செய்தும்‌
பிரச மாலையீர்‌[ புகலுமி
னென்னவப்‌ பெரியரு மிதைச்சொன்னார்‌. 71

பணிமு டித்தலை சுமந்திடு
மிரும்புவி பரித்திடுந்‌ திணிதோளாய்‌
கணிக ணற்குநீ பிழைத்திடும்‌
பிழைகளக்‌ கணிகணன்‌ ..றனக்கல்ல :
மணிவ ஸணற்கிழைத்‌ துளதென .:
வுணர்திமற்‌ றவன்றிரு மலர்போன்ற
அணிப தத்தினிற்‌ றொழுதுப
– சரித்திடி லவரணை குவரென்ன? 72

கேட்ட போதுவெஃ காவிடை
யேகியே கேட்கலு முளதாமிந்‌
நாட்டி லில்லையக்‌ கணிகண
னிவ்வழி நடந்தன னென்வாங்குக்‌
கூட்ட மிட்டவ ர௬ரைத்தலு
மந்நெறி குறித்துப்பா ரளப்பான்போல்‌
ஓட்ட மிட்டொரு நொடியினிற்‌
சென்றன னொளிர்மணி முடிவேந்தன்‌. 73

மின்னி ழிந்திரும்‌ புவிமிசை
நடந்தென விரைவொடும்‌ நடந்தேகும்‌
பொன்னி னோடுமம்‌ புவிமகள்‌
தமதடிப்‌ போதினைப்‌ பணிந்தேத்து
என்னி லென்பிழை கண்டுநீ
ரேகுவ தியம்புவி ரெனலோடும்‌
உன்னி லோர்பிழை யாங்கள்கண்‌
டுணர்கில முலகிய லதுகேண்மோ. : 74

கணவன்‌ போம்வழி மனைவிய
ரேகுதல்‌ கடமையா மதனாலெம்‌
மணவன்‌ போகயாம்‌ பின்றுடர்ந்‌
தேகுவ மன்னனீ யவரைக்கேட்‌ (டு)
உணர்கு வாயென வாங்கவ
ருரைத்தலு மொளிர்மணி முடிவேந்தன்‌
பணவ ராவணை சுருட்டிமுன்‌
பெயருமப்‌ பச்சைமாற்‌ கெதிர்சென்றே; 75

இருவ டிக்கணின்‌ றடியனே
னென்பிழை செய்தன னெனநீயும்‌
மருவு கோயில்விட்‌ டேகுவ
தென்னலும்‌ மன்னவன்‌ றனைநோசக்கி
முருக விழ்த்தபூநர்‌ தொடையவ ரென்வயின்‌ முளரிசேர்‌. வண்டென்னப்‌
பெருகு மன்பின ரார்தினம்‌
யானெனப்‌ பேசுத லுணர்வாயால்‌. 76

ஆத லாலென தடியனாம்‌
மழிசைய ஸின்னகர்‌ தனைறீங்கிப்‌
._ போத லோடுமங்‌ கவனுடன்‌
யானுமே போகின்ற தறியுன்பால்‌
ததுண்‌ டாமெனி. லவனை நீ
வினவிடிற்‌ றெரிந்திடு மெனமாயன்‌
ஒத லோடுமன்‌ னவனுமன்‌
னவனிடத்‌ .துகந்துசென்‌ றனன்மாதோ. _ 77

சென்ற வன்றிருப்‌ பாதவம்‌
புயங்கடன்‌. நிருமுடி யுறச்சூடி இன்று நான்பிழை யிழைத்துள “
தென்கொனீ யேகுதற்‌ கெனலோடும்‌
வென்றி வேலினோய்‌ நின்னுட ்‌
னொருமொழி விளம்பிய திலையான்மற்(று)
ஒன்று நீயப .சாரமெற்‌
கிழைத்தது முணர்கில மதுகேண்மோ. 78

பிரிய மூற்‌ெ றனைச்‌ சார்ந்துள
கணிகணப்‌ பெயர்பெறும்‌ புலவோனும்‌ ட்‌
புரியு நின்புவி யெழுந்துவிட்‌
டேனெனப்‌ போயின னவன்றன்பால்‌
பரிவு கொண்டயான்‌ அடைந்துளே
னவனிடம்‌ படர்ந்துநீ வினவுற்றால்‌
தெரியு மாங்கவன்‌ திரும்புறில்‌ ்‌
அவன்பினே’ இரும்புவன்‌ யானென்றான்‌.  79

என்ன வோதலு மலைகட
லுடையுடை யிரும்புவி தனையாளும்‌
மன்ன வன்விரைந்‌ தடைந்துதன்‌
முடியுறு மணிமுடி கணிகண்ணன்‌
பொன்ன டித்துணைப்‌ போதுவைத்‌
இங்கியான்‌ புரிந்துள பிழையாவும்‌
அன்னை பாலிளங்‌ குழவிசெய்‌
துளதென வகம்பொறுத்‌ திடல்வேண்டும்‌. 80

மூவரும்‌ திரும்பினர்‌
என்று பற்பல வினியநன்‌
மொழிபுகன்‌ றேத்திவேண்‌ டுதலோடும்‌
நன்றெ னாநயந்‌ தவன்வெஃ
காவழி நடக்கலு மவன்பின்னே
கன்றி னைத்துடர்‌ பசுவென
மழிசையன்‌ கடுகின னவன்பின்பாய்‌
வென்றி யாழிய னடந்திட
அவன்பினே மின்னனார்‌ களுஞ்சென்ஜறார்‌. 81

வேந்த ஸனும்மகிழ்‌ வுடன்வரப்‌
பின்செல விரைந்து£ர்‌ வெஃ்காவுள்‌
காந்து பன்மணிக்‌ கோயிலுள்‌
யாவருங்‌ கலந்துபின்‌ மலையொன்றை-ஏத்தி மாமழை தடுத்திளங்‌. கோவிய ரிளமுலை வளம்வேட்ட
பூந்து மாய்முடி மாயனை
நோக்கியம்‌ மழிசையன்‌ புகல்வானால்‌. 82

மன்னி னன்சகணி கண்ணன்யா
னவன்பினே வந்துளே ஸினியுன்றன்‌
பன்ன கப்பெரும்‌’ பாயலை
விரித்ததிற்‌ படுமெனப்‌ படுத்தானால்‌.
அன்ன நாண்முத லத்திருப்‌ பதியின்வா மாழியங்‌ கையற்குச்‌
சொன்ன வண்ணஞ்செய்்‌ தருள்பெரு
மாளெனத்‌ தோன்றிய தொருநாமம்‌. 82

மற்ற வத்திருப்‌ பதியுறை பவர்களும்‌ மனைவிய ரொடு தம்மூர்‌
உற்ற டைந்துயர்‌ கோயிலுண்‌ ்‌
மகிழ்வொடு முறைந்தனர்‌; புவியாளும்‌
வெற்றி வேந்தனு முளங்களித்‌
தரமனை மேவிவாழ்ந்‌ தனனவ்வூர்‌
சொற்ற பார்க்கவன்‌ மதலையுஞ்‌
சிலபக றநுன்னிவாழ்ந்‌ ததன்பின்னர்‌; 84.

(வேறு)
மருவுவெஃ காவை நீங்கி
மாங்கனித்‌ தேற லும்பார்‌
பருகிள மேகிப்‌” பாலும்‌
பாசமா ரிறாலின்‌ றேனுங்‌  குருமணிக்‌ கரும்பின்‌ சாறுங்‌. *
குளம்பல நிரம்பப்‌ பாயும்‌:
இருவளர்‌ குடந்தை யென்னுந்‌ ட. 3 தெய்வமா நகரஞ்‌ சேர்ந்தான்‌. 85

அத்திருப்‌ பதிவா மாரா
வழுதரின்‌ அம்பொற்‌ பாதஞ்‌
சித்தமுள்‌ ஞருக யன்பு
செழிப்பவா லயத்துட்‌ சேர்ந்தே
நித்தமும்‌ வணங்கிப்‌ போற்றி ட்ப
நிகமுமாண்‌ : டதுவோ ராயி
ரத்துநா னூறவ்‌ வூரி: ன
னமர்ந்துவாழ்ந்‌ இருந்த பின்னர்‌; 86–ஆராவமுதனை வணங்கி ஆழ்வார்‌ குடந்தையில்‌ 1400 வருடம்‌ வாழ்ந்தார்‌.

பெரும்புலியூர்‌ நிகழ்ச்சி
குரும்பையங்‌ கொங்கை “நீலக்‌.
கூர்விழிப்‌ பணையின்‌ மென்றோள்‌
சுரும்பிமிர்‌ கரிய கூந்தல்‌
ஹறோகையர்‌ முத்த ளக்க.
அரும்பின நிலவில்‌ வாய்விண்‌
டலர்ந்திடுங்‌ குவளைப்‌ பண்ணைப்‌
பெரும்புலி யூரின்‌ வாழும்‌ பிரபல னொருவ னன்னோன்‌/ 87

செகந்தனி லுயர்ந்த சர்த்திச்‌
செழுமறை யவன்றா னாங்கோர்‌
மகந்தனை யியற்றல்‌ கேட்டம்‌
மாமகம்‌ காண்பா னாய்த்தன்‌
அகந்தனி னினைவுற்‌ றாங்கண்‌
அணுகியவ்‌ .வூர்வாழ்‌ கோயில்‌
உ.கந்துறை செங்கண்‌ மாலை
யுணர்ந்திவன்‌ வலம்வந்‌ தானால்‌, . 88:

வலமதாய்‌ வரும்போ தந்த
மண்டபம்‌ கோயிற்‌ றம்பம்‌
_ இலகுறு பெருமான்‌ மற்றும்‌
இயைவன மற்றும்‌ யாவும்‌
நலமுறு மழிசை யான்பின்‌
நடத்தல்போற்‌ _றிரும்பல்‌ காணாப்‌
பலருமாங்‌ கதிச௪ யித்தங்‌ ட
சுவர்பதம்‌ பணிந்து போற்றி; 89 ்‌

இந்தமாப்‌ புருடன்‌ யாவன்‌?
இவன்மகத்‌ துவந்தா னென்னோ?
பைந்தலை யரவி ஸாடும்‌
பரமனிவ்‌ வுருவந்‌ தாங்கி
வந்தன னாம லாவிவ்‌
வணஞ்சுழன்‌ நிடுமோ வென்னாச்‌
சந்தையின்‌ மகிழ்ந்து கொண்டா
டினர்களச்‌ சீரோன்‌ றன்னை. ்‌ 90

மழிசையன்‌ றானு மவ்வூர்‌
வைகினன்‌ மகம்செய்‌ வோனும்‌
விழிதுயி லுணர்ந்து காலை
விதிமுடித்‌ தெக்ய சாலை
உழிமிகு நியம மாய்ச்சென்‌
றுற்றவ னேக லோடும்‌
வழியினோர்‌ மடவாள்‌ தன்கால்‌
நீட்டலும்‌ மறையோன்‌ காணா; 91

வேலைவென்‌ நிடுங்கார்க்‌ கண்ணாய்‌।
வேலையின்‌ வளர்வ ஸத்தாய்‌/
மாலைசேர்‌ மாலை நோக்கி
மகம்புரிந்‌ இடுமவ்‌ வெக்ய
சாலையான்‌ சால நேமந்‌
தன்னுடன்‌ விரைவி னேகுங்‌
காலைநீ காலை நீட்டிற்‌
றென்னெனக்‌ கனன்று சொன்னான்‌. 92

சொன்னவம்‌ மொழிதன்‌ காதற்‌
சுருக்குற முத்த மூரல்‌ மின்னிட நகைசெய்‌ இிப்பார்‌
மிசையொரு கடவு ளாக
இன்னகர்‌ தனில்வந்‌ தெய்து
யிருக்குமம்‌ மழிசை யான்றன்‌
பொன்னடி. வணங்கிப்‌ பூசை
புரிந்திடு புலமை யில்லோய்‌. 93

தினக்கொரு மொழியு முண்டோ?
நின்மகம்‌ மகந்தா னாமோ?
எனக்கொடி மடவாள்‌ கூற
இருசெவி. புகுத லோடும்‌
கனக்கவு நாணங்‌ கொண்டக்‌
கன்னியைப்‌ புகழ்ந்து வாழ்த்தி
மனக்கவ லையினோ டேயம்‌
மறைவலான்‌ சாலை புக்கான்‌. ்‌ 94

புக்கவன்‌ மடவாள்‌ சொற்ற
புனிதனை விரைவி னோடுஞ்‌
சிக்கென வவ்வூர்‌ முற்றும்‌
தேடினன்‌ தெரியா னாகி
மிக்கவாந்‌ துயரி னோடும்‌
மெய்தளர்ந்‌ துயிர்த்து வாடித்‌
தக்கதே தறிதற்‌ கென்னாத்‌
தன்னகஞ்‌ சார்ந்தா னன்றே. 95

மனதுவெந்‌ துயரொ : டுங்க
வளர்வுமி மழிசை யுற்றோன்‌
தனதுரு விதுதேர்‌ கென்னத்‌
தானவ ஸூருவந்‌ தாங்கக்‌
கனவினிற்‌ றெரித்துப்‌ போனான்‌
கஞ்சனா ருயிர்போய்த்‌ துஞ்சச்‌
சினவரா வணையை நீங்கித்‌ தேவகி வயித்தின்‌ வந்தோன்‌. 96

கண்டுயி லுணர்ந்து பின்பவ்‌
வுருவினைக்‌ கண்கா ணாமல்‌
விண்டுவந்‌ துணர்வித்‌ தானென்‌
றுளந்தனில்‌ வியப்புற்‌ றானால்‌!
மண்டுறு முவகை யோடம்‌
மறைவலோன்‌ றிருமா லுக்குத்‌
தொண்டுறு மவனை நாடித்‌
துரிதமுற்‌ றெழுந்து காலை; 97

ஆங்கொரு வனுமா யுற்றோர்‌
ஆவண வீதி யின்கண்‌
பாங்குறு பிரப்பங்‌ கூடை
பரிவொடு .முடைந்திட்‌ டந்தத்‌
குங்கிலான்‌ விற்றல்‌ காணாச்‌
செழுந்துயில்‌ கனவிற்‌ கண்டோன்‌
ஈங்கிவ னாகு மென்னா
வெண்ணியுள்‌ மகஇழ்வுற்‌ நானாய்‌; : 98

ஐய/நீ யிவ்வா றுற்ற தறிந்திலே னறியத்‌ தக்கோர்‌ .
வையமீ தில்லை; இந்த
மானிட வடிவங்‌ கொண்டு
உய்யுமா றுற்ற தேவே:
எனவுள முருகி யன்னோன்‌
செய்யபங்‌ கயத்தாள்‌ மேலே
இருமுடி சேர்த்துச்‌ சொல்வான்‌. 99

என்பெருந்‌ தவமோ? முன்னோர்‌
இழைத்திடுத்‌ தவமோ? இப்பார்‌
தன்பெருந்‌ தவமோ? இந்தத்‌
தனிமகந்‌ தனக்குற்‌’ றோர்கள்‌
முன்புரி தவமோ? யாதோ?
…. தெரிகிலேன்‌; முளரி யொப்பாம்‌
நின்றிரு வடிச)ு ணோவ
வந்திவ ணடைந்த தென்னா; 100

என்னநன்‌ மொழிகள்‌ பேசி
யான்புரி கின்ற வேள்வி
தன்னைநீ காணு மாறு
சார்ந்திட வேண்டு .மென்னா
்‌ ௮அன்னமா மறையோன்‌ வேண்டி .
அழைத்துடு மின்சொல்‌ யாவுங்‌. –
கன்னமூ டுறலு முள்ளங்‌ : :
காப்புட னவன்பின்‌ சென்றான்‌. 101

யாகசாலையில்‌ நிகழ்ந்தது
மகம்புரி சாலை யெய்தி.
மறைமுறை வழுவா தங்கி
யுகந்திட வாவி நெய்கொண்
டோமமுற்‌ றியபின்‌ தேவர்‌ :
முகந்திட வவிக ணல்கி
. முடிந்தபின்‌ மழிசை யானுக்(கு) “-அகங்களித்‌ தெழுந்து சம்பா
வனைமுன மளித்தா னன்றே. 102

அன்னவர்க்‌ களித்தல்‌ காணா
ஆங்கணுற்‌ றிருந்தோ ரெல்லாம்‌
இன்னவன்‌ மகத்திற்‌ கெய்தி
யிருந்துள மேலோர்‌ தம்மில்‌
மூன்னரிற்‌ பூசை கொள்வோன்‌
முறமொடு கூடை தட்டும்‌
பின்னிவிற்‌ பவனோ வென்ன?
வெகுண்டனர்‌ பெரிது மன்னோ. 103

நிருபர்கள்‌ பலரை வென்று
நெறிவழா திராய சூயந்‌ தருமன்செய்‌ தஇிடுதாள்‌ முற்பூ சனையுயர்‌ வசுதே வன்றன்‌
இருமகற்‌ களித்த காலை
தனிற்சசு பாலன்‌ வெம்பி
உருமெனத்‌ தெழித்தற்‌ கொப்பாய்‌
உதாசனம்‌ பலவும்‌ சொன்னார்‌. 104

அவ்வுரை பலவுங்‌ கேளா
வந்தணன்‌ மழிசை யான்றன்‌
செவ்விய முளரி யொப்பாந்‌
திருவடி தனது சென்னி ஒவ்வுறப்‌ பணிந்திட்‌ டின்னார்‌
உரைத்தபுன்‌ மொழிகள்‌ எண்ணா
இவ்வயி னடியேற்‌ காப்பாற்‌
றருள்மிகப்‌ புரிவை யென்ன; 105

பன்மொழி நயக்கு மாறாய்ப்‌ |
பண்புறப்‌ பகர்ந்து போற்றி,
சின்மயப்‌ பொருளா யிப்பார்‌
– செனித்துறை சோதி யான
நின்மகத்‌ துவமிப்‌ புல்லோர்‌ ன ரர
நெஞ்சுறத்‌ தெரித்தி யென்னா. ‘
நன்மகத்‌ தலைவ னான
மறைவலோ னவில லோடும்‌; . 108:

இறைவன்‌ காட்சி
அந்தநன்‌ மொழிகள்‌ கேளா
அவனுமைம்‌ படையோன்‌ றன்னைச்‌
சிந்தையுள்‌ ஞணர்த்த லோடுஞ்‌ ~ சுவனய னுடனே யண்டத்‌
இந்திரன்‌ முதல்வா னோர்க ,
ளேத்தவந்‌ தரத்தின்‌ மீதாய்ச்‌ ்‌
செந்திரு வுடனே மாயோன்‌
உவணன்மேற்‌ சிறந்து தோன்ற; 107°

ஐம்படையோன்றன்னை – ஐந்து ஆயுதங்கள்‌ தாங்கிய.
இருமாலை.. இறைவனை ஆழ்வார்‌ சிந்தித்தார்‌. உடனே மாயோன்‌ கருடன்‌!
மேல்‌ சாட்சி தந்தான்‌, உவணன்மேல்‌ – சுருடன்மீது. :
இச்‌ சமயத்தில்‌, ஆழ்வார்‌,
**அக்கரங்கள்‌ .அக்கரங்கள்‌ என்றுமாவ தென்கொலோ
இக்குறும்பை நீக்கியென்னை யீசனாக்க வல்லையேல்‌
சக்கரங்கொள்‌ கையனே சடங்கர்வா யடங்கி௪
“உட்டிடத்த வண்ணமே புறம்பொ௫ிந்து
என்று பாடியதாக வரலர்று பேசும்‌.

காண்டலு மழிசை யான்றன்‌
_ கண்களித்‌ துளத்தி னூடு
பூண்டபே ரன்பி னோடும்‌
புவியுற வணங்கி யென்னை ஆண்டருள்‌ பரம மூர்த்தி
அண்ணலே விண்ணோர்‌ காணாத்‌
தூண்டருஞ்‌ சுடரே யென்னப்‌
புகழ்ந்துகை தொழுது சொல்வான்‌. 108

அஞ்சனை யளித்தாய்‌ போற்றி!
அலகைமா முலைவைத்‌ தாட்ட
நஞ்சமுண்‌ டுவந்தாய்‌ போற்றி!
நாகமே ஸனடித்தாய்‌ போற்றி!
கஞ்சனை வதைத்தாய்‌ போற்றி!
கரிபரி யிடப மெல்லாந்‌
துஞ்சுறப்‌ பொருதாய்‌ போற்றிர
தூயனே. போற்றி । போற்றி! 109

எனதுமா தவத்தி னால்வந்‌
தெய்தினை யினிநா யேன்வந்து
உனதுமாப்‌ பதாம்பு யத்தை
யுறும்வகை யளித்தி யென்றான்‌
மனதுவந்‌ தருளி யன்னான்‌
மாமூகந்‌ தன்னை நோக்கிப்‌
புனைதுழாய்ப்‌ படலை எம்மான்‌
புகல்குவ னிதனை மன்னோ. .. 110

இன்னமும்‌ சலநா ஸளிப்பா
ரிடையிருந்‌ துலகு ‘ளோர்பால்‌
துன்னுமா மாயை நீங்கி
“.. உயர்பதந்‌ துடரு மாறாய்‌ -பன்னுசெந்‌ தமிழி னாற்பல்‌
பாடல்க ளிசைத்துப்‌ பின்னர்‌
மன்னுதி யென்னத்‌ தன்செவ்‌
வாய்மலர்ந்‌ தருளி னானால்‌, 111

அப்பொழு தாழி மாய ,
னடியினை வணங்கி யேத்தி :
இப்பெரும்‌ புருட. னாலுன்‌
னிணையடி தொழுது யான்செய
ஒப்பரு மகத்தி னுற்ற வுயர்பல னடைந்தே ஜனென்னாச்‌
செப்பரு மகிழ்வி னோடுஞ்‌ ,
சிந்தையுள்‌ ளூருகி நின்றான்‌. 112

மற்றுமவ்‌ வேள்விக்‌ குற்றோர்‌ ட்‌…
மனமகிழ்ந்‌ தடைந்து ளோரும்‌ ்‌
நற்றுணை யா௫க்‌ காக்கும்‌
நாரண ஸனென்னு நாமம்‌
வெற்றிசே ராழி சங்கம்‌
விற்கதை வாள்கைக்‌ கொண்டோன்‌
பொற்றிரு வடியின்‌ வீழ்ந்து , புகழ்ந்தனர்‌ துதிசெய்‌ தாரால்‌. ்‌ 113

பாங்கொடு மிவ்வா றாகப்‌
பரிந்தடி தொழுது போற்றும்‌
ஆங்கவர்‌ தமக்குக்‌ காட்சி
யளித்துத்தன்‌ பதவி சார்ந்தான்‌;
பூங்கம லத்து வாழும்‌
புனிதனன்‌ நிட்ட சாபம்‌ – ட்ட
தாங்கிய வரனுக்‌ கையந்‌ ்‌
.தனையழித்‌ தொழித்த நாதன்‌. ப்‌. 114,

மாயவ னகுன்ற பின்னர்‌
* மகம்புரி மறையோ னண்மி
ஆயநன்‌ மகத்திற்‌ காவந்‌
துளபல ரும்யாஞ்‌ செய்த
இயன பொறுத்தி யென்னத்‌
்‌…. திருச்செவி யின்ப முற்ற
தூயவன்‌ கமல பாதந்‌
தொமுதன ரேத்திச்‌ சொன்னார்‌. 115

யாவரு மினிதி னோடும்‌
பின்னரு மியற்றல்‌ யாவும்‌
முடித்தபின்‌ னிருக்கை தன்னில்‌
அன்னவ ரடைந்து வாழ்ந்தா
ரப்பெரும்‌ புலியூ ரென்னும்‌
பொன்னகர்‌ மழிசை யானும்‌
பொருந்திவீற்‌ றிருக்கும்‌ நாளில்‌. ்‌ 116

ஒருநாட்‌ கிழிந்த வத்திரந்தத்‌ துறுபோ துமையு முருத்திரனாம்‌
எருதே —கயிலையெனு
மில்லம்‌ விடுத்தந்‌ தரமிசையே
வருபோ தவர்மே ஸிச்சாயல்‌
மற்றிம்‌ மழிசை யாழ்வார்தன்‌
இருமே ஸனியிற்றாக்‌ குதலுமுளந்‌ இகைத்துப்‌ பின்பா லொதுங்கினனால்‌. 117

கண்ட வுமையா ஸிவனிடையும்‌
கருமம்‌ யாதென்‌ றிடக்கேட்டு
வண்டுண்‌ துளவத்‌ திருநெடுமால்‌
மலர்நே ரடிமைக்‌ கடிமையுறும்‌
தொண்ட னதனா ஸஊஞ்சாயற்‌
ஹறோயா திடைந்தா னெனக்கடல்நஞ்‌
சுண்ட பெருமான்‌ கூறிடக்கேட்‌
டொருபா கத்தி னுமையுரைப்பாள்‌. 118

படியை யிரந்தோ ரடியதனுட்‌
படுமா றளந்து கொண்டருள்புட்‌
கொடியை யுயர்த்தும்‌ திருமாலின்‌
குரைபொற்‌ கழலார்‌ கோகனக
அடியை வழுத்தும்‌ . திருத்தொண்ட .
னாமே யெனினு மரவொடுவெண்
பொடியை யணிநீ கடவுளன்றோ? :
புவியிற்‌ பிறந்தோர்‌ தமக்கெல்லாம்‌.119-

அதையா மெய்தி யுணர்த்துமென
.அரனு மவன்பா லடையினமை
மதியா னெனலும்‌ மதியான்பால்‌
மதிப்பா யெய்தி மற்றவன்பால்‌
எதுவேண்‌ டினுமஃ தளித்தல்கடன்‌ ‘ ன
எனக்கேட்‌ டவளின்‌ மொழிமறுக்கும்‌
விதமின்‌ மையினா லுடன்பட்டு
மேவு மவன்மா முகநோக்க;–120-

வேண்டும்‌ வரங்கே ளெனவுசி
மேவும்‌ வழியவ்‌ வூசிதனிற்‌
பூண்ட நூல்போம்‌ வரந்தருதி
யெனவே புகலப்‌ பொற்கண்ணான்‌
ஈண்டுன்‌ வறுமைதவிர்‌ வரங்கே
ளெனலுந்‌ தனது முதுகதனைத்‌ தண்டி வெயர்வை தனையுருட்டிச்‌
சிந்திப்‌ புவிமேற்‌ றெரித்தனனால்‌. 121

பொன்னின்‌ மலைபோ லதுகுவியப்‌
பொருணின்‌ றனக்கு வேண்டிலிது
தன்னைக்‌ கொடுபோ வெனமழிசை
– தனில்வந்‌ துதித்தோன்‌ சாற்றுதலும்‌ அன்ன மொழிவந்‌ திருசெவியுள்‌
ளனல்போற்‌ புகுதப்‌ பொறாமையினால்‌
கன்னி பாகன்‌ வெகுண்டுநெற்றிக்‌
கண்ணைத்‌ திறந்தான்‌; திறந்திடலும்‌, 122

புகைகொண்‌ டெழும்பும்‌ வடவனல்போற்‌
பொங்கும்‌ கனல்விண்‌ தொடர்ந்தெழும்ப
நகைகொண் டருளி யணிமழிசை
நகர்வந்‌ துதித்தோ னவைநணுகா
வகைதன்‌ பதத்தார்‌ விரல்நகக்கண்‌
மலியா ரழலைத்‌ திறந்துவிடப்‌
பகைகொண் டதனை வளைந்துறழ்வாய்‌
படுத்திக்‌ கணத்திற்‌ பருகியதே. 123

பின்னும்‌ வெகுண்டு புரமட்ட
பெருமான்‌ வேறு நிகரிலதாய்‌
மன்னுஞ்‌ சூலந்‌ தனைவிடுப்ப
மதித்தாங்‌ கதனைக்‌ கைக்கொளலும்‌
அன்ன துணர்ந்த வசரீரி ்‌
யமரர்‌ தமக்கு மறிவறியாய்‌ ்‌
இன்ன படைநீ விடுத்திடினும்‌
எய்தி யவனா லழிவெய்தும்‌. 124.

ஆத லாலிங்‌ கிதனைவிடா
தகல்தி யெனவம்‌ மொழிகேட்டுச்‌
– சீத மதியுங்‌ கங்கையுந்தண்‌
செழுங்கொன்‌ றையுஞ்சேர்‌ செஞ்சடையோன்‌
பாதி யுடலங்‌ கொண்டமலை
பயந்த மடவா டனைவெறருத்துப்‌
போத நாணுற்‌ றிடபமிசைப்‌
பொருந்தி விசும்பிற்‌ போயினனால்‌. 125:

(வேறு)
ஆங்கவன்‌ போய பின்னர்‌
அணிமழி சையின்வந்‌ துற்ற
இங்கிலா வுளத்தா னந்த
செழுநக ரதனிற்‌ சின்னாள்‌
தேங்கமழ்‌ துளவப்‌ பைந்தார்‌
தஇருமக டலைவன்‌ செய்ய ,
பூங்கழன்‌ மதிக்கு முள்ளம்‌
பொருந்திவீற்‌ றிருக்கும்‌ நாளில்‌. 126,

குடந்தையி லமர்ந்த பொன்னங்‌
கோயிலுட்‌ டிருவ னந்தன்‌
படந்தனிற்‌ றுயிலு மாரா
வமுதினைப்‌ -பரிவி னோடுந்‌
தொடர்ந்தனு பவித்த வானந்‌
குத்தினைத்‌ தொடர்பை யெல்லாம்‌
கடந்தவம்‌ மழிசை யானுங்‌
கருதிப்பா விசைக்க லுற்றே; 127

நான்முகன்‌ இருவந்‌ தாதி நாற்பதோ டைம்பத்‌ தாறும்‌
தேன்பொழி யாநீர்‌ பத்துத்‌
திருச்சந்த விருத்தம்‌ தானும்‌ வான்மரு வமூத மென்ன
மண்ணுளோர்‌ துய்க்கு மாறாய்த்‌
தான்கனிந்‌ துரைத்தா னஃதைச்‌
சாற்றிவீ டடைந்தார்‌ பல்லோர்‌. 128

அவ்விரு நூற்றுப்‌ பத்தோ
டாறெனுங்‌ கவிதை தன்னு
ளொவ்வியே கமலை கேள்வ
னுவந்துறை கின்ற வாகும்‌
திவ்விய தேச மீரெண்‌
செப்பிய ததனுக்‌ குற்ற
செவ்விசேர்‌ நகரந்‌ தன்னைத்‌
தெரிவுறப்‌ புகல்வா மன்றே. 129

சீரரங்‌ கம்வெஃ காவுந்‌
இருவல்லிக்‌ கேணி தன்னோ
டூரகங்‌ குடந்தை கோட்டி
யூர்குறுங்‌ குடியோ டோதும்‌
பேரெவ்வுள்‌ வேங்க டம்‌அன்‌
பில்திருப்‌ பாட கம்து
வாரகைக்‌ கூடலும்‌ பாற்க
டலும்வை குந்த மாமே. 130

இப்ரபந்‌ தங்கள்‌ பாடி
யினிதொடுஞ்‌ சிலநாள்‌ வாழ்ந்து
முப்பரம்‌ பொருளாய்‌ வைகும்‌
முகுந்தனா ரருடன்‌ னாலே
ஒப்பிலா விமான மேறி
.யுயர்ந்திடும்‌ விரசை யாடிச்‌
செப்பிடும்‌ அமான ஸார்தந்‌
இருவடி சென்னி சூடி; ~ 131

படிகநன்‌ மேனி தாங்கிப்‌
பரமமா பதத்துட்‌ சார்ந்து
குடியதாய்ச்‌ சாம வேத
கீதங்கள்‌ குலவிப்‌ பாடி
நெடியநா ரணனோ டண்மிப்‌
பொருந்தின னிகழிக்காதை
அடிதொடங்‌ குதலாய்க்‌ கற்பார்‌
அடைகுவர்‌ பதவி மாதோ. 132

தொண்டரடிப்பொடியாழ்வார்‌ வரலாறு பகர்வோம்‌
சுமிகட லாடை யாகச்‌
சூழ்ந்தபா ரதனி ன்மீதே அழிவில்சீர்‌ மழிசை தன்னி
லவதரித்‌ தருளுஞ்‌ சீர்த்தி மழிசையான்‌ சரிதந்‌. தன்னை
வகுத்துரைத்‌ தனமால்‌ இப்பால்‌
மொழிகுதுந்‌ தொண்டர்‌ தங்காற்‌
பொடிகதை முழுதுந்‌ தானே. 133

திருமழிசையாழ்வார்‌ தஇருவவதார அத்தியாயம்‌ முற்றும்‌.

————-

தொண்டரடிப்பொடியாழ்வார்‌
திருவவதார அத்தியாயம்‌
வெண்பா
மன்னியசர்‌ மார்கழியில்‌ கேட்டையின்று மாநிலத்தீர்‌
என்னிதனுக்‌ கேற்ற மெனிலுரைக்கேன்‌–துன்னுபுகழ்‌
ஆமறையோன்‌ தொண்ட ரடிப்பொடி யார்பிறப்பால்‌
நாமறையோர்‌ கொண்டாடு நாள்‌. (உபதேசரத்தினமாலை, -11)

மண்டங்குடிச்‌ சிறப்பு :
வண்டங்குடி யிதின்வேரிலை யெனவேவளம்‌ விட்டே
கண்டங்குடி விலினேவுக ணையர்கார்க்‌ குழலுறல்போல்‌
அண்டங்குடி துறவாகட , வுளர்வந்தணு குறுசீர்‌ ,
மண்டங்குடி யெனுமோர்பதி வளமேவிய பதியே, 1,

ஆழ்வார்‌ அவதாரம்‌
அம்மாணக ரிடைவாழ்மறை யவர்தங்குல மதனில்‌
இம்மாணில முழுதும்புக ழிசைகொண்டுறு மொருவன்‌
செம்மாமட வரல்கற்பினில்‌ தெளிநீர்மையி னிறையில்‌
எம்மாதரு மொவ்வாத்திரு வெழிலாளவள்‌ வயிற்றின்‌.–2-

நாராயண ஸனூருவாமென நவில்மார்கழி யெனுமச்‌
சீரார்மதி தனிலிந்திர தினமாகிய திருநாள்‌
ஏராரற மொழியோங்குற இருமாகட. லெழுமவ்‌ ்‌
ஆராவழு தெனவந்தவ தரித்தான்வினை யெரித்தான்‌. 3

அண்டர்களி கூரப்பெறு மாயத்தனு மகிழ்வாய்‌
தொண்டர்கழல்‌ பொடியர்க்குறு சுபகாப்பணிந்‌ ததற்பின்‌
உண்டிட்டிடு மன்னத்தொடு சவளம்‌ உப நயனம்‌
பண்டைக்குல மறையின்முறை பலவும்புரி வித்தார்‌. 4

திருமணம்‌
உருவம்மத னெனலாயணை குறுநாடனின்‌ மதனூல்‌
பருவம்வரு தலுமன்பொடு பனிமாமலர்‌ வளருந்
இருவும்நிக ரலவென்றுரை செயுமொப்பில வடிவம்‌
மருவுங்குல மடமங்கையை மணமும்புரி வித்தார்‌. 5

துவளுங்கொடி யிடையொல்கிது வண்டெய்திட வரைபோல்‌ ்‌
இவளுந்தன மகலும்‌ உரம்‌ ஜெழுங்கத்தரு வணைமேல்‌ |
பவளம்பொரு மிதழின்சுவை பருகும்படி யொருமித்‌ t
துவளும்மிவ னொடுகூடிய ணைந்தின்பம டைந்தாள்‌. 6

கயற்கண்‌ வலையில்‌ படல்‌
இவ்வாறவ ளொடுகூடியி ருந்தும்பிற வழகார்‌ ச
செவ்வாய்மட வியர்தங்கடி றத்தாசைசெ லுத்தா
ஓவ்வாவவ ரொடுகூடியு றைந்தாரமு தெனவே
கவ்வாவிதழ்‌ பருகாமிகு கனிவாயணை குவனால்‌. -7

தவரும்முள னெகிழும்படி தங்கண்வலை தனைவீ க
சவர்சுந்தர வடிவங்களி லகமுந்துற வொழுகா,
துவர்செவ்விதழ்‌ முதல்யாவையுந்‌ துஇியாற்புக முதலால்‌
எவரும்மிவன்‌ மதனாமென இயைவுற்றணை குவரால்‌. . 8

(வேறு) ச |
இறைவன்‌ தடுத்தாட்கொளல்‌
படியெ லாமுட்‌ படிய வளர்த்திடும்‌ ட
நெடிய நாரணன்‌ நீள்பத பங்கயத்‌(து) அடிய ராக வகையுளத்‌ தொண்டர்கால்‌ ச
பொடிய ஸிவ்வணம்‌ நாள்பல போக்கலும்‌.-9-

பொய்ய தாகும்‌ புலவ னடத்தையை
மெய்யெ னாமனம்‌ வீணிற்‌ செலுத்தியே .
செய்ய வாய்மட மங்கையர்ச்‌ சேர்வுறும்‌
மையல்‌ கொண்டு மறந்தனன்‌ நம்மையே. 10
ஆத லாலிவ னுள்ளமம்‌ மங்கையர்‌
மீது றாதுதன்‌ மேனி யொளியிடைக்‌
காத லெய்து கருத்தரு ளத்திரு மாது கேள்வன்‌ மனத்திடை யுன்னியே. 1!

மடை மாறிற்று
அந்த —ளிச்செயச்‌
சிந்தை தன்னைத்‌ திருத்தி யடைகெனப்‌
பந்தெ னுந்தனப்‌ பாவையர்‌ காதலை
நொந்து விட்டுளம்‌ நோன்மைய ஸாயினான்‌. 12

ஆங்க வன்றெறு மாழியன்‌ பாலிறை
யோங்க வுள்ள முருகி யுருகிநைந்‌
தேங்கி யேங்கி யிருக்குமவ்‌ வெல்லையத்‌
தீங்கி லானுளங்‌ தேறிய தோர்ந்தரோ,. 13

இறைவன்‌ காட்சி
மூல காரண ஸாயிய லுந்திரு ‘
மாலு மாதுடன்‌ மாவயி னன்மிசை
நாலு மாமுகன்‌ நாகர்‌ முனிவர்கள்‌
கால காலனுங்‌ கைதொழு தேத்தவே. 14

விண்ணின்‌ மீதுவி எங்கித்தன்‌ மேன்மையைக்‌
கண்ணி னூடுறை காட்சி யளித்தலும்‌
மண்ணி ஸனின்றவம்‌ மண்டங்‌ குடியனும்‌
எண்ணி யுள்ள மிழுதென லாயினான்‌. 15

ஆடி னான்விழுந்‌ ‘தானெழுந்‌ தானெழுந்‌ :
தோடி னஸால்குதித்‌ தானுரு கிப்புகழ்‌ பாடி னானவன்‌ பங்கயச்‌ சேவடி
சூடி னான்றொழு தான்களி துள்ளவே: 16

கழிந்தகாலங்‌ கருதிக்‌ கனிந்தார்‌
அகந்தெ ஸிந்திவ்‌ வமுத மிருக்கவே
உகந்து மங்கையர்‌ பாலுற வாம்விடம்‌
முகந்து கால முடித்தன மேயெனா
இகழ்ந்து ளத்தைப்பின்‌ பின்னணம்‌ பன்னுவான்‌. 17

‘ நார ணாசிவன்‌ நான்முகன்‌ நாடிடுங்‌
கார ணாஅடி யார்தங்‌ கருத்துறை ‘
பூர ணாமுகுந்‌ தாபுனி தாவளர்‌ ‘ ஆர ணாஉனை யாரறி வார்களே. 18

ருந்‌ மா றம ரர்க்கன்‌ றலைகடல்‌
மருந்து கந்து வழங்கினை வாணகை
.மாதர்‌ கலைகொடு முன்வளர்‌
_ குருந்து: றுங்கருங்‌ கொண்ட ஸிறத்தனே. 19

கத்தி னம்‌௮ழு தேங்கக்‌ கனவரை
அத்தி னஞ்சுமந்‌ தாயென்‌ விழிகணீர்‌
முத்தி னஞ்சொரித்‌ தானந்த முத்திட இத்தி னம்மெதிர்ந்‌ தாயென தய்யனே. 20

என்னை யோர்பொரு ளாமென எண்ணியென்‌
அன்னை யாகு மமுதிடைத்‌ தோன்றிய
பொன்னை மார்பிற்‌ பொருத்திவந்‌ தெய்திய
உன்னை யான்கண்‌ டுரைக்கத்‌ தகுவனோ. 21

என்று பற்பல கூறி யிரங்கிமுன்‌
நின்று கைதொழு தேநெட்‌ டுயிர்த்தலும்‌
நன்று நன்றென்‌ றிளநகை தோன்‌ நிடக்‌
குன்று தாங்கிய கோவலன்‌ கூறுவான்‌. 22

பெருமாள்‌ தேற்றினான்‌
எனது மாயை யெனுமிரு ளெய்தியே
உனது நல்லறி வைமயக்‌ குற்றிட
மனதவ்‌ வாறு மயங்கினை யாகும்நின்‌
தனது ளத்தைத்‌ திருத்துறச்‌ சார்ந்தனம்‌. 23

வருந்து றேலினி மாயையும்‌ நீங்கிற்றால்‌
பொருந்து சீரங்கம்‌ வந்து புகுகெனாத்‌
இருந்தும்‌ இம்மொழி செப்பி மறைந்தனன்‌ விருந்து முன்னம்‌ விதுர னிடத்துண்டோன்‌. 24

(வேறு)
திருவரங்கம்‌ அடைந்தார்‌
மாயன்‌ மாயம தாக மறைதலுந்‌
தூய னானவன்‌ சிந்தை துளங்குறா
ஆய காலையொ ரவகை. யாறியே
சாயை போலுந்‌ தொடர்பைத்‌ தவிர்த்தரோ. 25

முன்னர்‌ அம்கம லத்துறை வோன்‌சவன்‌
அன்ன ரங்க மமர வனந்தனை
மன்ன ரங்க மதாய்த்திரு மால்வளர்‌
பொன்ன ரங்கம்‌ புகுந்தன னென்பவே. 26

அங்கு வைகு மடியர்க ளாயினோர்‌
தங்கள்‌ பொன்னடி தன்முடி தாங்கினான்‌
செங்க . ரங்கொ டவரிவன்‌ சேவடி.
பொங்கு மன்பொடு பூசித்‌ துளாரரோ. 27

ஒருவர்‌ தம்மை யொருவ ருபசரித்‌
துருவ மாத லிறத்தலென்‌ தோடும்‌.
இருமை யெய்த லிறுக்கு மவரொடுங்‌
குரும ணிச்செழுங்‌ கோயிலுட்‌ போயினான்‌. 28

நச்சு றும்பணை நாகணை மேற்றுயில்‌
பச்சை மாமலை மேனிப்‌ பவளவாய்‌
மொச்சு வண்டிமி ரும்முள ரிச்செங்கண்‌
அச்சு தற்பணிந்‌ தானந்த முற்றனன்‌. 29

ஆழ்வார்‌ திருப்பணி
இந்த மாயனுள்‌ ஸஎின்புற்‌ றுகக்குமாறு
எந்த வேலை யிழைத்திட லாமெனச்‌
சிந்தை யூடு நினைப்ப வதுதெரிந்‌
தந்த மாலு மிதனை யறைகுவான்‌. 30

(வேறு)
தொண்டர்தங்‌ காற்பொடி யேசொல்‌ லென்னிலன்‌
புண்டெனக்‌ கதுகவி யுகக்கு முண்மையே
கண்டறி மஞ்சனக்‌ காப்பொ டும்பல
கொண்டிழைப்‌ பதுமது வாகுங்‌ கோதிலாய்‌. 31

ஆதலாற்‌ கவியணி மாலை சாத்தியே
‘ததொழித்‌ தெந்தனைச்‌ சேர்தல்‌ வேண்டும்பா
வோதிட முடிவுறா தெனின்மற்‌ றொன்றுகேள்‌
போதணி மாலையைப்‌ பொருந்தச்‌ சாத்தியே. 32

என்னைவந்‌ தடைந்திட வேண்டு மீதலால்‌
பின்னையொன்‌ நிலையென வுரைத்துப்‌ பின்னரும்‌
முன்னைநாள்‌ விட்ணுசித்‌ தன்மு யன்றிது குன்னையே யிழைத்தன னெனவுஞ்‌ சாற்றினான்‌. 33

அவ்வுரை கேட்டலு மவ்வி ரண்டையும்‌
வெவ்வியேற்‌ கருள்செய வேண்டு மென்றிவன்‌
ஒவ்விய மனதொடு முரைப்ப வாழியான்‌
செவ்வியோ யம்முறை செய்கென்‌ றோதியே. -34

திருப்பள்ளியெழுச்சி உதயம்‌
அன்னவன்‌ திருமுடி யதிற்பொ ருந்துறத்‌ : தன்னிரு பதந்தனைச்‌ சார்த்த லோடுமே
இன்னிசை திருப்பள்ளி யெழுச்சி யென்பதைப்‌
பன்னினன்‌ கதிரவ னென்னும்‌ பத்தரோ. 35.

திருமாலை புனைந்தார்‌
தலங்களிற்‌ இறந்த? ரரங்கந்‌ தன்னிலே
யிலங்குமா லலதுவே றறிந்தி லேனென்றே
அலங்கலை யிசைபெறு மன்ப றைந்தனன்‌
நலங்கெழு செய்யுளோர்‌ நாற்பத்‌ தைந்தரோ. 36 :

“g7has SoG Qamgd மால்‌ அல்லது வேறு 2 NGwer” என்பது
தொண்டரடிப்பொடியாரின்‌ உறுதிப்பாடும்‌ உளப்பாடுமாகும்‌, இருவேங்கட
முடையான்‌. இது குறித்து வருந்தியதாகச்‌ சொல்லப்பட்டு வருகின்றது.
**தெண்டிரைசூழ்‌ அரங்கரையே தெய்வமென்றான்‌ வாழியே”’ என்பர்‌ அப்பிள்ளை. 1!
**தென்னரங்க . மணவாளற்‌ கன்பு மிக்குச்‌ செப்பிய நற்றிருமாலை’” என்பர்‌ ;
கவிதார்க்கக சிம்ஹர்‌ (பிரபந்த சாரம்‌).

நந்தவனப்‌ பணி
இம்முறைப்‌ பாவைம்ப தைந்தி சைத்தபின்‌
விம்முறு முவகையின்‌ விரைவி னேகியே
மும்முதல்‌ ஆகுமம்‌ முகுந்த னோதிய .
அம்முறை திருநந்த வனம்வைத்‌ தானரோ. 37

குல்லைபா திரிமருக்‌ கொழுந்து ௯விளம்‌
முல்லைபுன்‌ னைகரு முகைகு ருக்கத்தி
மல்லிகை யொடுமிரு வாட்டி யேமுதல்‌
சொல்லுபூஞ்‌ செடியெலாந்‌ துன்ன வைத்தனன்‌. 38

பக்குவம்‌ செய்தவன்‌ யாவும்‌ செய்தலால்‌
மிக்கபூ மாலைகள்‌ விளங்கு றத்தொடுத்‌
தொக்குமா றரங்கர்க்கு மரங்கம்‌ வாழ்த்திட
மிக்குறச்‌ சாத்துவன்‌ விருப்பி னோடுமே. 39

அரங்கன்‌ அருளிப்பாடு
இன்னணம்‌ பலபக லியற்ற வோர்பகல்‌
பொன்னரங்‌ கேசர்பூ மாலை கொண்டணை
யன்னவன்‌ மாமுக தோக்கி யன்றுநீ
சொன்னபா மாலையைச்‌ சொல்லு கென்னலும்‌. 40

இப்பெரும்‌ பாக்கிய மெய்திற்‌ றெற்கெனா
ஓப்பரு மகிழ்சிறந்‌ தோங்கத்‌ தான்முனஞ்‌
செப்புமப்‌ பாடல்கள்‌ செவியு றும்படி
அப்பொழு தோதினா னடிவ ணங்கியே. 41

பாடினார்‌ உருகினார்‌
பண்கொளப்‌ பாடல்கள்‌ பாடல்‌ தோறுந்தன்‌
கண்களா ஸந்தநீர்‌ கனிந்து திர்ந்திடப்‌
புண்களா ர௬டல்மயிர்‌ பொடித்திட்‌ டோங்குறும்‌
எண்கொளா வுருக்கமுற்‌ நிரங்கி நின்றனன்‌. 42

ஆழ்வார்‌ அரங்கனில்‌ கரைந்தார்‌
இரங்கிறின்‌ நிடுமவற்‌ கிரங்கி யின்பமோ
டரங்கரு மருகழைத்‌ தழுந்த வேதன. துரந்தனி லணைந்திட வவனு மொன்தறியே
கரந்தனன்‌ நீர்ப்பனிக்‌ கரைந்த தொப்பவே. 43

பயன்‌
ஆங்கவ ஸிம்முறை யரங்கர்‌ தந்திருப்‌ –
பூங்கழற்‌ பாடியே பொருந்தி யுற்றவித்‌ இங்கிலாச்‌ சரிதத்தைச்‌ செவியி னுள்ளுறப்‌
பாங்குடன்‌ கேட்பவர்‌ பதவி சேர்வரே. 44-

அன்னசீர்க்‌ கவிகளோ ரைம்பத்‌ தைந்தினில்‌
பன்னக வணையினான்‌ பதிகள்‌ மூன்றதாம்‌
பொன்னரங்‌ கம்வட மதுரைப்‌ பூம்பொழில்‌
மன்னு£ ரயோத்திமா நகர மென்பவே. -45-

தொண்டரடிப்பொடியாழ்வார்‌. மங்களாசாசனம்‌ செய்த இவ்விய
தேசங்கள்‌ மூன்று. அரங்கம்‌, வடமதுரை, அயோத்‌இ. பாடியபதி- திருவரங்கம்‌
ஒன்றே. மற்றைய இரண்டு இிவ்ய தேசங்கள்‌ சார்பாகப்‌ பேசப்பட டுள்ளன,

குலசேகரர்‌ வரலாறு கூறுவோம்‌
தோகைய ரின்பங்கொள் தொண்டர்‌ காற்பொடி
நாகணை யானைநண்‌ ஸணியது ரைத்தனஞ்‌
சாகரம்‌ சூழ்புவி தன்னை யாள்குல
சேகரன்‌ சரிதமுஞ்‌ செப்பு வாமரோ. 46-

தொண்டரடிப்பொடியாழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌ முற்றிற்று.

——–

குலசேகராழ்வார்‌ திருவவதார அத்தீயாயம்‌
வெண்பா
மா? புனர்பூசங்‌ காண்மினின்று மண்ணுலகீர்‌
தேசத்‌ இவசத்துக்‌ கேதென்னிற்‌- பேசுகின்றேன்‌
கொல்லி நகர்க்கோன்‌ குலசே கரன்பிறப்பால்‌
நல்லவர்கள்‌ கொண்டாடும்‌ நாள்‌.
(உபதேசரத்தினமாலை, 14.)

வஞ்சியர்‌ மன்னர்‌
நாடக வரங்கினு ணடம்ப யின்றிடும்‌
ஆடர வல்குலார்‌ யாழி னாங்கிசைப்‌
பாடலைக்‌ குயிலினம்‌ பயிலுஞ்‌ சோலைகுூழ்‌
கூடலிற்‌ கோத்துரை கொண்டிட்‌ டாள்பவன்‌. 1

நஞ்சினுங்‌ கொடுந்தொழில்‌ நடத்தும்‌ இயரை
அஞ்சுற வடக்கிநல்‌ லறத்தி னுற்றுளோர்‌
விஞ்சுறத்‌ தனிச்செங்கோல்‌ விளங்க வோச்சிடும்‌
வஞ்சியர்‌ வேந்தனாம்‌ மன்னர்‌ மன்னனே.–2-

ஆழ்வார்‌ அவதாரம்‌
அன்னவன்‌ தவத்தினா லவன்றன்‌ தேவியாம்‌
பொன்னனாள்‌ வயிற்றிடைப்‌ பூவு ளாரயன்‌
தன்னொடும்‌ வேதமுந்‌ தரும மும்ம௫ழ்‌
துன்னிடப்‌ புகழ்ந்துமூன்‌ துதிசெய்‌ தேத்தவே. 3

வைகுந்தத்‌ தமரும்‌ நாரணன்‌
நேசமா ரருட்படி நிமல மாமதி
மா௫ியிற்‌ புனர்த்தநாள்‌ வளமுற்‌ றோங்குறத்‌
தேசுறு புதல்வனும்‌ செனித்து ளானரோ. 4

வானுளோர்‌ மலரின்மா மழைபொ ழிந்தனர்‌
மோனமா ர௬ுளங்கொளும்‌ முனிவர்‌ வாழ்த்தினர்‌
ஞானமுந்‌ தருமமும்‌ நனிம கிழ்ந்தன
தானமும்‌ மெய்மையுந்‌ தலையெ டுத்ததால்‌. 5

சடங்குகள்‌ செய்தனர்‌
இத்தக வாசுவந்‌ தெழுந்த மைந்தனுக்‌
கத்தனு மன்னையு மடுத்து ளோர்களுஞ்‌
சித்தமுள்‌ மகழ்வுறச்‌ செய்வ செய்துபின்‌
வித்தமும்‌ வழங்கினர்‌ விதிவ மாமையே, 6

தன்னிகர்‌ தனத்தின்பாற்‌ றாய எளிப்பவேழ்‌
துன்னுநற்‌ .நினத்திடைக்‌ காப்பு மிட்டனர்‌
மன்னுமோ ராறெனும்‌ மாம தஇிக்கணே அன்னபி ராசன மதுவுஞ்‌ செய்தனர்‌. 7-ஆனெனும்‌ . மதிக்கண்‌ – ஆற வது மாதத்தில்‌ அன்னப்‌ பிராசனம்‌ – அன்னம்‌ ஊட்டுதல்‌.

வில்லிடு பானுவின்‌ விளங்கு மெய்யெலாம்‌
புல்லிடப்‌ பலபல பணிகள்‌ பூட்டியே
கொல்லியங்‌ கோன்குல சேக ரன்‌எனச்‌
சொல்லின ரொருதிரு நாமந்‌ துன்னவே. 8

அம்புலி யழைத்தலு மணிகொள்‌ சிற்றிலை
வெம்பீயே சிதைத்தலும்‌ விலங்குஞ்‌ சற்றிர
தம்புவி நடத்தலுஞ்‌ சாற்று பற்றவும்‌ பம்புமப்‌ பருவத்திற்‌ பயிற்று வித்தனர்‌.-9

ஓத்திடச்‌ சவளமோ டுபன யம்பல
வித்தையப்‌ பியாசமும்‌ வேலும்‌ வாளொடும்‌
சித்திரச்‌ சலைமுத லாகச்‌ செப்புமுப்‌
பத்துட னிரண்டெனும்‌ படைப யிற்றலும்‌. 10

திருமணமும்‌—ஆட்சியும்‌
ஈதெலா மமைவுற வியற்று வித்தபின்‌
ஓதுமங்‌ கலத்தின முறுநல்‌ லோரையில்‌
சூதெனு மிருதனத்‌ துவர்த்த செய்யவாய்‌
மாதினை விதிமுறை மணஞ்செய்‌ தாரரோ,. 11

பணிமுடி சுமந்தபார்‌ பரிக்க வவ்விரு
இணிபுய வரைகுல சேக rer menor
அணியரி யாசனகத்‌ இருத்தி யம்பொனின்‌
மணிமுடி. தரித்தனர்‌ மகழ்வி னென்பவே. 12

ஆங்கவன்‌ புவிபுரந்‌, தருளு நாளினில்‌ | ்‌
தீங்குறு கலிமுகம்‌ சிறுத்து நைந்தது; 3 ஓங்கெே நல்லறம்‌; உரைத்‌ திடும்மிடி
நீங்கின; செல்வமும்‌ நிலைபெற்‌ நிட்டதால்‌. 13

ஆழ்வார்‌ மாண்புகள்‌ ட
தேறுள மதனிற்றன்‌ றேவி பாலலால்‌ F
வேறொரு மடந்தையர்‌ விருப்பு றான்‌;மனு
கூறிய நூன்முறைக்‌ குடிகள்‌ பாலிறை ்‌
ஆறினி லொன்றலா லதிகங்‌ கொள்கிலான்‌. -14

வலிவுறும்‌ பசியிலான்‌ கன்றி னம்வரும்‌
புலிமுலைப்‌ பாலினைப்‌ பொருந்தி யுண்டிடும்‌
நலிவுறும்‌ பூனையின்‌ முலையை நாவுகொண்
“டெலியினம்‌ பற்றொடு மினித ருந்துமால்‌. 15

மாந்தர்தங்‌ குலத்தரு மத்தி னுண்மையைத்‌, தாந்திறம்‌ பாவகை சமைத்தி ழைப்பரால்‌;
ஏந்திள முலைநலா ரிசைகொள்‌ கற்பினின்‌
றார்ந்தத னிலுந்தவி ராது தாங்குவார்‌. 16

மதிதொறு மும்மழை வழங்கும்‌; மாவயல்‌.
கதிர்பெறுஞ்‌ செந்நெலுங்‌: கரும்பும்‌ வாழையும்‌
முதிர்சுவைக்‌ கனிபலா முதல வோங்கி௨
நதிகளுங்‌ குளங்களு நிறைந்து நண்ணுமால்‌. : 17

இத்திறம்‌ யாவுமாங்‌ கெழில்பெற்‌ றோங்கடைத்‌
துத்தம நெறிமுறை தவிர்கி லாதமை
சித்திரச்‌ சலையிரா கவன்றன்‌ செல்வநா
டொத்திட வவனுல கோம்பு நாளிடை. 18

(வேறு)
இறைவன்‌ திருவருள்‌ பெறல்‌
ஒருபக லிரவின்‌ வேந்த
னுறுதுயில்‌ வளருங்‌ காலைப்‌
பெருகுறு தனது நித்ய விபூதிலீ லாவி பூதப்‌
பெருமைக ஸஎிரண்டுங்‌ காண்பித்‌
தரிதினிற்‌ பெயர்ந்து போனான்‌
மருதிறத்‌ தவழ்ந்து வஞ்ச மல்லரைக்‌ குமைத்த மாயோன்‌. 19

இறைவன்‌ தன்னுடைய லீலா விபூதியையும்‌
தித்திய விபூதியையம்‌ காண்பித்தான்‌. லீலாவிபூதியைக்‌ காட்டியது பந்தபாசங்‌
கள்‌ நீங்குதற்காக; நித்திய விபூதியைக்‌ காட்டியது உள்ளத்தில்‌ ஞானமும்‌
வைராக்கியமும்‌ வருவதற்காக,

அந்தநல்‌ லுருவங்‌ காணா
வதிசய மிகவுந்‌ தோன்றிச்‌
சந்தையா னந்த வெள்ளந்‌
தேக்கிட வெண்க ணான்வாழ்‌
உந்திநா ரணன்வி பூதி
களையனு பவித்து றாமல்‌
இந்தநா ளளவும்‌ எல்லே
யிழந்தன மெனநைந்‌ தானால்‌, 20

ஆழ்வாரின்‌ விரக்தி
ஆயவ னிவ்வா றாய்நொந்‌ |
“… தழுங்கநெஞ்‌ சுருகுங்‌ காலை
மாயிரு ஞாலத்‌ தூடு
மஇழ்ந்துபல்‌ லிடங்கள்‌ தோறும்‌
பாயிரு ளகலக்‌ க&ீழ்பாற்‌
. பருப்பதத்‌ துதித்த வெய்யோன்‌,
சேயிரு விசும்பின்‌ மேலாய்ச்‌ —
செலுத்தின னெழுமாத்‌ திண்தேர்‌. . 21-

பருதிவந்‌ துதித்த லோடும்‌ படர்வுறுங்‌ கருமந்‌ தம்முள்‌
கருதியோ தமைச்சர்‌ தானைத்‌
தலைவர்கள்‌ கணித நூலோர்‌
சுருதியந்‌ தணர்‌ களேவற்‌
ஹறொழில்வலோர்‌ பலருந்‌ தெவ்வர்‌
குருதிதோய்‌ வடிவாள்‌ வேந்தன்‌
கொலுமணிக்‌ கூடஞ்‌ சார்ந்தார்‌. 22

சார்ந்தவ ர௬ுதையங்‌ கண்டோர்‌
சாமநே ரளவும்‌ பள்ளி
தீர்ந்தர செழுந்தி லாத செய்கைதேர்ந்‌ தென்னோ வென்னா,
பேர்ந்தவ ரணுடுத்‌ தாதிப்‌ | பேதையர்க்‌ குணர்த்த, அன்னோர்‌
சார்ந்தரு குணரு மாறு
சைகைகள்‌ பலவுஞ்‌ செய்தார்‌. 23

ஆதலா லரச ஸூள்ளந்‌
தணிந்தெழுந்‌ தவர்க ளோடும்‌
கோதிலா சார வாசல்‌
குறுகியே குறுகி னோர்கட்‌
கோதரும்‌ பணிகள்‌ நாளு
முரைத்தலி னுரைத்தி டாதோர்‌
– மூதறி வமைச்ச னோடும்‌:
மின்னணம்‌ மொழிய லுற்றான்‌. 24

ஆழ்வார்‌ மொழிகள்‌
உதியுற்ற குமிழி போலா
யொழியுமிவ்‌ வுடலத்‌ தோடும்‌
பதிமனை தனங்கள்‌ தாரம்‌
பாலர்கள்‌ மாதா என்ன
மதிமருண்‌ டுறுமிப்‌ பொய்யாம்‌
வாழ்வினில்‌ நிசங்க ஞண்டோ?
கதியுயிர்‌ பெறுமா றுன்னா
தவத்தினிற்‌ கழிந்த இந்நாள்‌. 25

இன்னுமெத்‌ தனைநா ஸளிவ்வா
ஹொழிக்கலா மினிமே லேனும்‌
மன்னுசாத்‌ மீக ரோடும்‌
மருவியங்‌ கவர்க ளான்மற்‌
றென்னுயிர்க்‌ குறுதி நாடல்‌
வேண்டும்நீ யிதற்கு பாயம்‌.
பன்னுதி மதிவ லோயெொன்‌
றன்னவன்‌ பகர்த லோடும்‌. 26

அடியார்களின்‌ நட்பு
நல்லுரை பகர்ந்தான்‌ வேந்தன்‌
எனவுளம்‌ நயந்தா னாக௫ிச்‌
, சொல்லுமுன்‌ பரம பாக
வதர்கள்கூழ்ந்‌ தணுகு மாறாய்‌ மல்லுறுந்‌ தோளான்‌ முன்னர்‌
வரவழைகத்‌ திருத்த லோடும்‌
அல்லல்கீர்ந்‌ தவாரக ளம்பொன்‌
‘னடிபணிந்‌ இருக்கை நல்கி; 27

அவருடன்‌ சிறந்த காலச்‌
சேபஞ்செய்‌ ததற்பின்‌ மற்றோர்‌
எவர்களு முடன்சென்‌ றெய்த
வெழிற்கொலுக்‌ கூட மெய்தி.
இவர்மணி யணையின்‌ மேல்வீற்‌
றிருத்தர சாட்டி மேவி
உவர்க்கட லுடுத்த பாரோம்‌
புறுதொழில்‌ நத்தி லானால்‌. 28

ஆழ்வார்‌ சுவைத்த பாசுரங்கள்‌
இன்னவா நாகப்‌ பன்னா
ளிசைபெறு முதன்மூன்‌ றாழ்வார்‌
மன்னுசீர்‌ பெரிய ஆழ்வார்‌
மங்கையர்‌ மழிசை யாழ்வார்‌-துன்னுநற்‌ றொண்டர்‌ தங்காற்‌
பொடியிவர்‌ சுருதி சாரம்‌ .
பன்னுசெந்‌ தமிழ்க ளெல்லாம்‌
பரிவினோர்ந்‌ துருகி னானால்‌; 29

வேறுள முனிவர்‌ பல்லோர்‌
விளம்புநல்‌ லிரத மூறும்‌
நாறுபூந்‌ துளவ மாலை
நாரணன்‌ சரிதம்‌ கேளாப்‌
பாறுசூழ்‌ வடிவாள்‌ வேந்தன்‌
பரிவினாள்‌ தொறுமிவ்‌ வாறாய்த்‌
தேறுளத்‌ துடனே செங்கோல்‌
செலுத்தினன்‌ வருமந்‌ நாளில்‌; 30

பாம்புக்‌ குடத்தில்‌ ஆழ்வார்‌ கைவிடல்‌
ஒருபக லதனில்‌ வந்த
உயர்குல சேக ரன்றன்‌
திருமனைக்‌ கருவூ’ லத்தில்‌
இகழிரத்‌ தனப்பொன்‌ னாழி
பொருவில தொன்று கெட்டுப்‌
போகலுங்‌ காவ லாளர்‌
வெருவிமந்‌ திரியி னோடு
விளம்பினர்‌; விளம்ப லோடும்‌, 31

மந்திரத்‌ தலைவர்‌ சென்றவ்‌
வள்ளலுக்‌ குரைத்த லோடும்‌
அந்தவா சகங்கள்‌ கேட்டவ்‌
வரசனு மவரை யாங்கண்‌
வந்தவர்‌ யாவர்‌? வந்த
வாறுணர்ந்‌ ததனை நம்பால்‌
தந்திடு மாறன்‌ ஜனோர்க்குச்‌.
சாற்றுமென்‌ றுரைத்தான்‌ அன்றே. 32

இனையவா றவர்கள்‌ சென்றாங்‌
தியம்பலு மதனைக்‌ கேளா
அனையகா வலரு மெவ்வா
றாய்ந்திட .லாகு மென்றோர்‌
நினைவுகொண் டரவந்‌ தன்னை
நிறைகுடம்‌ பொருந்த விட்டுத்‌
தனையணி முடிகொள்‌ வேந்தன்‌
தன்றிரு முன்னர்‌ வைத்தே; 33

இங்குளோ ரிதனிற்‌ றங்கை
யிட்டிட வேண்டு மென்று
அங்கவர்‌ மொழியைக்‌ கேளா…
அரசனிவ்‌ வவையி ஸனுற்றோர்‌
குங்களி லெவார்மே லையஞ்‌
சாற்றுமி னென்ன லோடும்‌
துங்கமா முடியோய்‌ கேட்டி
யெனவவர்‌ சொல்ல லுற்றார்‌. 34

அந்தக னேவல்‌ கொண்டா
ருயிர்கவர்‌ வார்க ளேனும்‌
வந்தணு குதற்கொவ்‌ வாறின்‌
மணியர மனையின்‌ வாயில்‌
இந்தபா கவத ரல்லால்‌
யாருமிங்‌ கெய்திற்‌ றில்லைச்‌
சிந்தையுள்‌ ளிவர்மே லைய
மெனவவர்‌ செப்ப லோடும்‌; 35

(வேறு)
செப்பு மம்மொழி யிருசெவி குறுகலுஞ்‌
செங்கண்மாற்‌ கடியாராம்‌
விப்பி ரர்குடம்‌ பாம்பினிற்‌ றங்கர
மேவவைக்‌ திடுதற்காய்‌
ஒப்பு றாவுள மமைந்த னருலகினை
யோம்பிடு முடிவேந்தன்‌
குப்பு றாஅரி அரியென விருகரங்‌
கொடுசெவி மறைத்தானால்‌. 36

வார ணம்முறை யிடுதலின்‌ விரைவொடு
வந்துகாத்‌ தருள்செய்த
நார ணன்றி ர௬வடியர்மேற்‌ கொடுமொழி
நாடியிங்‌ குரைசெய்யுங்‌
கார ணம்நினை வுறிலிவர்‌ மேற்குறை
கருதுதல்‌ வழக்கென் றால்‌
தார ஸணிப்புரந்‌ திடலினம்‌ பாலினோர்‌ கதுவறெனத்‌ தளர்வுற்றான்‌. 37

உருக னானுளந்‌ தியங்கினான்‌ பசும்பொனொத்‌ தொளிர்ந்திடுந்‌ இருமேனி கரக னானவை தநினைதொறு நினைதொறுங்்‌
கண்களா ஸீர்முத்தம்‌
பெருகி னான்வரை கொடுகடன்‌ _மதித்ததாட்‌
பிறந்தெழுங்‌ கொடுநஞ்சம்‌
பருக னானென ஊசலா டிடவுயிர்‌
பதைபதைத்‌ தனன்‌;பின்னும்‌, 38

ஆழ்வார்‌ குடத்தில்‌ கை
விட்ட அருமைப்பாட்டை **வாரங்கொடு குடப்பாம்பிற்‌ கையிட்டவன்‌”’ என்பர்‌
மணக்கால்‌ நம்பிகள்‌, :*குடப்பால்‌ விடப்பெரும்‌ பாந்தள்வாய்‌ கையிட்ட
கோவேந்தன்‌ அரசர்‌ ஏறு; கோப்பெருஞ்‌ சேரமான்‌” என்பது அழகர்‌ பிள்ளைத்‌
தமிழ்‌.

ஆழியைக்‌ குடத்தில்‌ இருந்து எடுத்தார்‌
சந்தை யோர்முறை தெளிவுகொண்
டரியணை தீர்ந்தெழுந்‌ தெதிர்சென்றே
இந்த மெய்யடி யார்களவ்‌ வாழியை
எடுத்தில ரெனவேதான்‌
முந்தி யேயர வுறுங்குட மதிற்கர
முறையினிட்‌ டதற்குள்ளாய்‌
அந்த காவலர்‌ வைத்திடு மணிவிர
லாழியை பெடுத்தீந்தான்‌. 39

கண்ட பேரவை யமைச்சர்கள்‌
முதலினோர்‌ காவல ஸனடிவீழ்ந்தார்‌
தொண்டர்‌ யாவரும்‌. மன்புகூர்ந்‌ தின்புறத்‌
தொழுதுரைத்‌ தெழுந்தார்த்தார்‌ அண்டர்‌ யாவரு மந்தர மிசையெழுத்‌
குலர்மழை பெய்தார்நஞ்‌
சுண்ட சங்கரன்‌ பிரமனே முதலினோ ்‌
ருளமகிழ்ந்‌ தனர்மாதோ. 40

திருவரங்கக்‌ காதல்‌
பின்ன ரும்பல நாள்குல சேகரன்‌
பெருகுவப்‌ பொடும்வாழ்நாள்‌
மன்னு மிவ்வுட லெடுத்திடுஞ்‌ சலுகினை
மாய்த்தொழித்‌ இடுமாறு
இன்ன ரங்கொடு தும்புரு நாரதர்‌
களர்த்துமின்‌ னிசையோங்கும்‌
பொன்ன ரங்கமா நகரினைக்‌ காண்குறப்‌
பொருந்துமோ நமக்கென்னா; 41

“நெஞ்சி ஜூடுற நினைந்திரு எிரியவின்‌ றேனிரம்‌ புறும்பாடல்‌
அஞ்சி ரண்டினை யாதுமுப்‌ பதுமிசைத்‌ ‘
குழகிய மணவாளர்‌
நஞ்ச ராவணை மிசையிலங்‌ காபுரி
நகரமா னதைநோக்கா ்‌
விஞ்சு கண்வளர்‌ கோலமே மனதினுள்‌
விளங்குற வியப்புற்றான்‌. 42

குரங்க மாகடல்‌ வளைபுவி புரந்திடற்‌
றணந்துதன்‌ சுதனான
உரங்கொ டோளினன்‌ றன்வயப்‌ படுத்திப்பொன்‌
னொளிர்மணி முடிசூட்டிக்‌
குரங்கு ளங்கதிர்‌ செங்கனி யாமெனக்‌
குதிகொளும்‌ பொற்கோயில்‌
அரங்கு மாநகர்‌ யாத்திரைக்‌ கேகுவான்‌
அமைந்தவ ணடைந்தானால்‌. 43

ஆழ்வார்‌, புதல்வனுக்கு முடிகுட்டிவிட்டுத்‌ திருவரங்கம்‌ அடைந்தார்‌.
புவி புரந்திடல்‌ தணந்து- பூமிகாவலை விட்டு. **கம்பமத யானை கழுத்தகத்தின்‌
மேலிருந்து இன்பமரும்‌ செல்வமும்‌ இவ்வரசும்‌ யான்‌ வேண்டேன்‌”* என்னும்‌.
பெருமாள்‌ திருமொழிப்‌ பாசுரம்‌

அரங்கம்‌ அடைந்தார்‌
கடைந்த பாற்கட லிடைவரு மமுதினைக்‌
கண்டவா னவரென்ன
அடைந்து ளான்றனை யெதிர்கொளத்‌ தலத்தடி
யவர்களிப்‌ புளங்கொள்ளா
உடைந்து கண்வழி யொழுகுநீ ராறெனு
முயர்விர சையின்‌ நன்னீர்‌
குடைந்து வைணவ ரடிமலர்‌ தொழுதலும்‌
்‌ ஆசிகள்‌ பலகூறி, –44

ஐய நீயிவண்‌ வந்ததெங்‌ குலத்தவ
மாமென வுபசாரம்‌
செய்யு மாங்கவ ரொடுமிவ னலைமணி
சிந்துகா விரியாற்றின்‌
துய்ய நீர்படிந்‌ தாறிரு இருமணும்‌
துலங்கெட வளங்கண்டு
பைய வேகடந்‌ துட்புகுந்‌ இிருகணீர்‌
பனித்துமுத்‌ துதிர்த்தானால்‌. 45

கண்டார்‌ அரங்கனை
திருந்து றுந்திருப்‌ பெட்டகந்‌ தனைப்பிர தக்கணம்‌ ‘புரிந்தாங்குப்‌
பொருந்‌ துறும்மணத்‌ தூணரு
காகியே புதியதா மரைபூத்தோர்‌
கருந்த டங்கிரி யெனவளர்‌
மாயனைக்‌ கண்டிரு கணினாலும்‌
அருந்து வானென
, இருகியே ஆனந்த மடைந்தானால்‌. .. 46.

திருவரங்கக்‌
கோவிலைப்‌ பெட்டகம்‌ என்கின்றனர்‌. அரிசமய இீபம்‌ ஐந்து இடங்களில்‌ இவ்வாறே பேசுகிறது.
“*பூரங்கு பெருந்திரு வைத்நூற்‌ றிரட்டிப்‌ பணவிடையில்‌
தூங்கு மதிலொரு மாவேற்‌ றமுண்டு சு.ரர்முனிவர்‌
ஆங்கவர்‌ செப்பிற்‌ கடங்கா துலகமனைத்‌ தும்பெறும்‌
ஓங்கு மரங்கத்‌ திருப்பெட்‌ டகத்து ளொருமணியே””
என்ற பாடல்‌ தனிப்பாடல்‌ திரட்டில்‌ உள்ளது; சுவைமிச்கது. இருந்த
குலக்குமரர்‌ தமை இருகண்ணின்‌ முகந்தழகு பருக நோக்கி£” என்பர்‌ கவிச்‌ சக்ரவர்த்திகள்‌ (பாலகாண்டம்‌),
**தஇிருவனுரு நயனமுற நாடிமணத்‌ தாணதனைப்‌ பற்றி மன்னன்‌ மருவுமனம்‌ வாய்ந்தவடி யாருடனே கூடிமிக வாழ்த்தி நின்‌. றான்‌’*

முகுந்தமாலை தொடுத்தார்‌
மிகுந்து மேல்வரும்‌ பிறப்புடன்‌
இறப்பையும்‌ விடுத்துயர்‌ வைகுந்தம்‌
புகுந்து ளோர்களும்‌ மீண்டுற
அருத்திகொள்‌ பொன்னரங்‌ கனைவாழ்த்தத்‌
தகுந்த தேதென நினைவுகொண்
டேதிறத்‌ தமிழினால்‌ தொடுத்தாற்போல்‌
முகுந்த மாலையொன்‌ wo me Gouri
கலைவட மொழியினால்‌ துதிசெய்தான்‌. 47

வேங்கடம்‌ செல்க
பாத தாமரை மீதுதன்‌
முடியுறப்‌ பணிந்தெதி ரிடைநின்ற இதி லாக்குல சேகரற்‌
குகந்தவன்‌ இருமுகந்‌ தனைநோக்கி
தாது சேர்மலர்ப்‌ பொழில்வட
வேங்கடந்‌ தனைமதித்‌ தெய்தென்னா
ஓ.தி னானிக்கு வாகுவாற்‌ சத்திய உலகநீத்‌ இவண்வந்தோன்‌. 48

“*பணியரங்கப்‌ பரஞ்‌
சுடரை யாங்‌ காண–அணியரங்கந்‌ தந்தானை அறியாதார்‌ அறியாதார்‌’* என்பர்‌
கவிச்சக்ரவர்த்திகள்‌ (பால காண்டம்‌),

இருசெ விக்கணவ்‌ வாசக
மூறுதலு மிதுவதென்‌ றிரண்டூரார்‌ ஒருவ ராமென வுளந்தெளிந்‌ .
குற்புத முறப்பெரு குவப்போடும்‌
வருவ :-னாங்குநின்‌ மலர்ப்பதந்‌
தொழற்கென மறித்தவன்‌ றனைப்போற்றிக்‌
குரும ணிச்செழுங்‌ கோயிலன்‌
பர்களுளங்‌ கொண்டன னடந்தானே. 49

திவ்ய தேசு யாத்திரை
வச்சி ரப்படை வானவர்‌ .
வேந்தனும்‌ மலர்மிசை யுறைவோனும்‌:
முச்சி ரப்படைச்‌ சுடலையி
னாடியு -முளரியங்‌ கரம்தங்கள்‌
உச்ச கைக்கொடு முறைதொழு
தேத்திட வுவந்தவர்க்‌ கருள்செய்யும்‌
கச்சி யம்பதி பேரரு ,
ளாளர்தம்‌ கழல்பணிந்‌ தவணீங்கி; 50

மரும லைச்செழு மணியின
மெறிதரும்‌ வளமலி மலரோடை
செரும லைக்கொடு விடங்கரின்‌
வாய்ப்படுஞ்‌ சறுகண்மும்‌ மதவேழம்‌
பொரும லைத்தவிர்த்‌ திடவொரு
கருமலை போலவந்‌ தவன்வாழும்‌
இரும லைத்தல மடைந்தனன்‌வளமெலாஞ்‌ ிந்தையுள்‌. தெளிவுற்றான்‌. 51

திருவேங்கடம்‌ அடைந்தார்‌
மூவ ரும்‌அயன்‌ கயிலைவா .
மிறையவன்‌ புரந்தரன்‌ முதலாய
தேவ ருங்கண நாதரும்‌
முத்தரும்‌ சித்தர்மற்‌ றுரைசெய்யும்‌
யாவ ரும்‌அவ ரவர்களோ
ருருவமைந்‌ தணுகுறும்‌ பெருஞ்சீர்த்தி மேவ ருந்திரு வேங்கட மகிமையை வியந்துளங்‌ கனிவுற்றே. 52

(வேறு)
பதிகம்‌ பாடினார்‌
ஊனேறு செல்வமென வோர்பதினோர்‌ பாவுரைத்து
மானேர்‌ விழியலர்மேன்‌ மங்கைஇரு முன்னிலையில்‌
தானே தனக்குறிக ரானான்றன்‌ தாள்வணங்க்‌
்‌ . கோனேரி யாடிக்‌ குலவிப்பன்‌ னாளுறைந்து; 53:

வித்துவக்கோடு
அம்மா நகர்விட்‌ டணிவித்‌ துவக்கோடாம்‌
செம்மா நகரடைந்து சிந்தை தளர்ந்தழைத்த
கைம்மா இடுக்கண்‌ களையக்‌ கரைசார்ந்த
பெம்மான்‌ கழலிணையைப்‌ பேணித்‌ தொழுதனனால்‌, 54

தருதுயரந்‌ தடாயேலுன்‌ சரணல்லாற்‌ சரணிலையென்‌
தொருபதிகந்‌ தன்னை யுகந்தாங்‌ குரைத்தருளிப்‌ பொருவில்‌ புகமாளன்‌ போயொழியப்‌ பற்பலநாள்‌ மருவி யுறைந்துபினம்‌ மாநகர்விட்‌ டேகனனால்‌. 55-

திருவாய்ப்பாடி
தாய்ப்போல்‌ வடிவாகத்‌ . தன்னுருவம்‌ மாற்றிவந்த
பேய்ப்பா டுறமுலையிற்‌ பெய்விடத்தோ டாருயிரை
வாய்ப்பா லுறிஞ்சியிடும்‌ மாதவனார்‌ தாம்வாழும்‌
ஆய்ப்பாடி ‘ சென்றே யடைந்தவன்தாள்‌ பூசித்தே;–56-

முத்தாரம்‌ பூணும்‌ முகிண்முலைச்செவ்‌ வாம்பலின்வாய்‌’ ்‌
கொத்தார்‌ மலரின்‌ குழற்கோ வியாகூடி :
வித்தார மாக விரித்துரைக்குஞ்‌ சொற்பொற்பா 4
பத்தாங்கு பாடிப்‌ பலநா ரறைந்தனனால்‌. 57

வட மதுரை
மூன்புசன னத்தில்‌ முயன்ற பெருந்தவந்தான்‌
பின்பு தொடர்ந்தடுத்த பெற்றியால்‌ பேருலகில்‌
அன்பு மிகுந்தே யடுத்தோர்‌ தமக்குதவ
என்பு முரியான்‌ வடமதுரைக்‌ கெய்தினான்‌. 58

தேவகியாதல்‌
தேவகுியா டானீன்ற செல்வத்‌ இருமதலை
்‌-. நாவி லினிதாக நவில்குதலைச்‌ சொற்கடமை
ஆவலொடுங்‌ கேட்டிலமே யென்றாங்‌ கவளுரைத்த
பாவனையா கப்பதினோர்‌ பாட லுரைத்தனனால்‌, 59

கண்ணபுரத்தில்‌ உறைதல்‌ ‘
அப்பதியி லன்னோ னடைவுடனே வைகுதலும்‌
செப்பமுடன்‌ பற்பலநாள்‌ செல்ல வவணீங்கி
எப்புவியி னுள்ளு மிணைதனக்குத்‌ தானல்லால்‌
ஒப்பிலாக்‌ கண்ணபுரத்‌ துற்றாங்‌ குறைந்தனனால்‌, . 60

தாலாட்டுப்‌ பாடினார்‌ —
கண்ண புரத்தானைக்‌ கவுசலையா டானீன்ற
விண்ணவர்க டந்துயர வேர்களைந்த ராகவனை
வண்ணமணித்‌ தொட்டில்‌ வளர்த்தித்தா லாட்டுதலாய்‌
பண்ணியலும்‌ பாடல்களோர்‌ பதினொன்று பாடினனால்‌, 61

தசரதனானார்‌
பின்னுந்‌ தசரதனார்‌ பிள்ளைவனம்‌ போயிடலும்‌
அன்ன தனைக்‌ கேட்டவனும்‌ ஆராமை பட்டதனைப்‌
பன்னும்‌ பனுவல்களோர்‌ பதினொன்‌ றி னளைப்பாடி
மன்னி யிருந்தானம்‌ மாநகரிற்‌ பற்பலநாள்‌. 62

சித்திரகூடம்‌
அம்மா நகர்விட்‌ டணி௫த்ர கூடமெனும்‌
செம்மா நகரதனைச்‌ சேர்ந்தணுடுத்‌ தில்லையுறை
கைம்மா வுரித்துகந்த கண்ணுதலான்‌ போற்றிடவாழ்‌
பெம்மான்‌ இருவடியைப்‌ பேணித்‌ தொழுதனனால்‌. 63-கைம்மா உரி – யானை
யின்‌ தோல்‌.

இராம காதை இசைத்தார்‌
வானவர்க ளேத்துபுகழ்‌ வான்மீக னென்றுரைக்கும்‌
மோனமுனி முன்னாள்‌ மொழிந்தவிரா மாயணத்தை
‘ரானமொமழி யாந்தமிழி லைந்தோ டறுகவிதை
கானமுட னேயிசைத்தான்‌ கன்னலிர தம்மெனவே, 64

தில்லைச்சித்‌ திரகூடத்‌ துட்சேர்ந்‌ இனிதுறையும்‌
தொல்லைச்‌ செழுமறைக்கும்‌ தோன்றாதான்‌ தாள்தொழுது
கொல்லி மலைக்கோன்‌ குலசே கரப்பெருமாள்‌
எல்லையில்சீ ரின்பத்‌ தினிதுறையு நாளின்கண்‌. 65

ஆழ்வார்‌ திருநாடலங்கரித்தார்‌
நாரா யணனெனவே தான்மறையால்‌ விப்பிரர்கள்‌
பாரா யணஞ்செய்‌ பரந்தாமன்‌ றன்னருளால்‌ ‘
ஆராய்ந்‌ துணர்த்தற்‌ கரிதாம்வை. குந்தத்தின்‌ சீரார்‌ மணிமண்‌ டபஞ்சேர்ந்‌ தஇனிதிருந்தான்‌. 66

அன்ன குலசேக ராழ்வாருந்‌ தண்தமிழால்‌
பன்னும்‌ பனுவல்க ளோர்பத்துப்‌ பதிகங்கள்‌
மன்னுங்‌ கவிதையில்‌ மாதுகுடி. வாழ்மார்பன்‌
துன்னுந்‌ திருப்பதிக ளெட்டெனவே’ சொல்லுவரால்‌. 67

இவர்‌ பாடியது பத்துப்‌ பதிகங்களாகும்‌.-மங்களாசாசனம்‌ செய்த பதிகள்‌ எட்டாகும்‌.

சீராரும்‌ பொன்னரங்கஞ்‌ சத்திரகூ டத்துடனே
ஏராரும்‌ வித்துவகக்கோட்‌ டெமுனைநதி கண்ணபுரம்‌
காரார்‌ வடவேங்‌ கடம்வல்லை வாழொடுமேற்‌
பேராரயோத்தி நகரெனவே பேசுவரால்‌. «68

பயன்‌
இந்தப்‌ பெருங்கதையை யின்பமுடன்‌ கேட்பவரும்‌
ஒந்தை தெளிந்துரைக்குஞ்‌ செய்கையருந்‌ தேனாரும்‌
பைந்துளவோன்‌ பாதம்‌ பரிவுடனே தான்பணியுஞ்‌
மைந்தருண்டாய்‌ வாழ்ந்துிருந்து வைகுந்தம்‌ மன்னுவரால்‌. 69

பாணர்‌ காதை பகர்வோம்‌
நலமார்‌ பெருஞ்சீர்த்தி நண்ணுதிருக்‌ கூடல்வரும்‌
குலசே கரன்சரிதம்‌ கூறினோம்‌ மாகடல்குழ்‌
தலமேலு றையூர்‌ சனித்ததிருப்‌ பாணர்கதை
சொலவே தெரிந்தளவுஞ்‌ சொல்வாந்‌ தொகுத்தினியே. 70

குலசேகராழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌ மூற்நிற்று.

———–

திருப்பாணாழ்வார்‌ திருவவதார ,
| அத்தியாயம்‌ ப
வெண்பா ்‌
கார்த்திகையில்‌ ரோகிணிநாள்‌ காண்மினின்று காசினியீர்‌
வாய்த்த புகழ்ப்பாணர்‌ வந்துதிப்பால்‌ — ஆத்தியர்கள்‌
அன்புடனே தானமல ஸாதிபிரான்‌ கற்றதன்பின்‌
நன்குடனே கொண்டாடும்‌ நாள்‌. ’
்‌ (உபதேசரத்தினமாலை, 10.)’

உறையூர்‌
பிறைவாணுதல்‌ மடவாரெழில்‌ பெருகுந்திரு முகமும்‌
நறையார்மது கமழுஞ்செழு நளினப்புது மலரும்‌
சிறையாரறு பதவண்டுக டெரியாவல மருசர்‌ :
உறையூரெனும்‌ பெயர்மேவிடு மொருமாநக ருளதால்‌, 1

தாமரைக்கும்‌ முகத்துக்கும்‌ வண்டுகட்கு’
வேற்றுமை தெரியாமல்‌ இருப்பதுபோல்‌, அறிஞர்கட்கு, அமலனாத பிரானுக்கும்‌
வேதத்துக்கும்‌ வேற்றுமை தெரியாது என்பது உள்ளுறை.

ஆழ்வார்‌ அவதாரம்‌
வளமேவுநு மம்மாநகர்‌ மருவுங்கடை யவரென்‌
– நுளபஞ்சம குலமிக்கட லுலகற்புகழ்‌ Oi mayb
தளமார்செழு மணிமேவுறு தண்டாமரை மலர்வந்து
அளறாமதில்‌ வளருஞ்செய லதுவேநிக ரெளவும்‌. 2’

கண்ணார்நுத லிடைவைகுறு கயிலைப்பெரு மானுந்‌
தண்ணாருமம்‌ புயமாமலர்‌ தனில்வாழிறை யவனும்‌
பண்ணார்செழு மறையும்முனி வரரும்பல பலவாம்‌
மண்ணாடரும்‌ விண்ணாடரு மெவருமகஇழ்‌ வுறவும்‌. 3

(வேறு)
கார்த்திகை யெனும்பெயர்‌ கவினுந்‌ இங்களில்‌
சீர்த்திடு முரோகிணி நாள்‌ றந்திடத்‌ –
Sigs தருளினால்‌ செந்நெ லின்மிசை
பார்த்தவர்‌ களிப்புறப்‌ பாணன்‌ தோன்றினான்‌. 4

பாணன்‌ வளர்த்தான்‌
அத்தகை யுறவவ தரித்த மைந்தனைப்‌
புத்திர னிலாவொரு புலையன்‌ கொண்டுபோய்‌
சித்தமின்‌ புற்றிளந்‌ இங்க ளின்கலை
ஒத்திட வளர்த்தன னுரிமை யோடுமே. 5

இசைப்புலமை
ஆன்றவம்‌ மைந்தனு மரிய தும்புரு
சான்றநா ரதருமே சமான மில்லென
ஏன்றநல்‌ லிராசுகா னங்க ளென்பவை -:
மூன்றெனும்‌ வயதுளே முயன்று ளானரோ. 6

ஏவிரி இணறுமுன்‌ பெழுந்து தாமரைப்‌
பூவிரி கதிர்குணப்‌ பொருப்பு றாமுனம்‌
மீவிரி கங்கையின்‌ மேன்மை யெய்திய காவிரி படிந்துசெய்‌ கடன்க ளாற்றியே. 7

அரங்கன்‌ காதல்‌ பண்‌ பாடுதல்‌
வரங்களா ரணனரன்‌ வழங்கப்‌ பெற்றுளான்‌
ஓரங்களீ ரைந்தொடுஞ்‌ சிலையோ டம்புகொள்்‌
கரங்கணா ஸன்கைந்தையுங்‌ கடிந்த மித்தசர்‌
அரங்கநா யகரிடத்‌ தன்பு கூரவே. 8

கல்லொடு மலைகளும்‌ கடுஞ்சு வர்களும்‌
புல்லொடு மரங்களும்‌ புள்ளின்‌ கூட்டமும்‌ 4
வல்லிய முதல்விலங்‌ கனமும்‌ மற்றவாம்‌
பல்லுயிர்‌ யாவுமா லுருகப்‌ பாடுவான்‌. 9

சந்திர மவுலியும்‌ சரச வாயும்‌
இந்திரன்‌ முதலிமை யவரும்‌ யாழ்வல
கந்தரு வருமுளங்‌ கரையு மாறதாய்‌
அந்தரத்‌ தடைந்துகேட்‌ டஇச யிப்பரால்‌, 10.

அன்னகா விரிக்கரை யநேக நாழிகை
யின்னவா யாழிசை யினிது பாடிப்பின்‌
பொன்னணி விமானத்தைப்‌ பணிந்து போற்றியே ்‌
தன்னக மதனிடை சார்கு வானரோ,. –11

நாடொறு மிம்முறை நயந்து பாணனும்‌
ஆடர வமளிசே ரரங்கர்‌ தம்புகழ்‌
– பாடுறு மிசையின்முன்‌ பட்டு லர்ந்துவீழ்‌
காடுறும்‌ மரங்களும்‌ கப்பு மல்குமால்‌. 12

பற்பல நாளவன்‌: பாடும்‌ பாடல்கேட்‌
டற்புத மடைந்தன எளரங்க நாயகி
உற்பல நயனமு மொளிமி குந்திட
விற்பொலி புருவமும்‌ விளங்கு வாளரோ. 13

அரங்கநாயகி புருஷகாரம்‌ ்‌
்‌ நாயகி மகிழ்வொடு நாக ணைத்துயில்‌
மாயவ னணிபெறும்‌ வதனம்‌ நோசக்குபு
ஏயவவ்‌ வடியனாங்‌ கிசைக்கு மின்னிசை
தூயநும்‌ மிருசெவி துன்னிற்‌ நில்லையோ? 14

அன்னவன்‌ வீணைகொ டரிய கானத்திற்‌
பன்னுமின்‌ னிசைகொளும்‌ பனுவற்‌ கொப்பதாய்‌
என்னிலதக்‌ தினுமிலை யென்ன வானுறை
இன்னரர்‌ மூதலினோர்‌ கீழ்மை யெய்தினார்‌. 15

அன்புநம்‌ பிடந்தனி னதிக மாகக்கொண் ்‌
டென்புமுள்‌ ஞருகிட. இசைக்கு மின்னிசை
இன்புற விதிசிவன்‌ முதலி னோரவன்‌ ன்‌
முன்புவந்‌ தந்தர முயன்று கேட்டின்‌ நார்‌. 16

ஆதலின்‌ நாம்புறம்‌ பாக வைப்பது
நீதியன்‌ றவனைநின்‌ ஸனருகு றும்படி
காதலோ டழைத்திடல்‌ கரும மாமென
மாதுகூ றலுமண வாள ஸனோதுவான்‌. ்‌ 17

என்கருத்‌ இனுமதே யாயிற்‌ றென்னினும்‌
நின்கருத்‌ துணர்குவா னேர்ந்த தாமினி
உன்கருத்‌ துருகிட்ப்‌: பாடு வோன்றனை
நன்குநீத்‌ துடன்வரு விப்பன்‌ நாய. 18

பாணனை அழைக்கப்‌ பரமன்‌ பகர்ந்தான்‌
என்றுகொண் டவளுள மிசையு மாறுரைத்‌
தொன்றிய மனத்தொடு முலக முண்டுளோன்‌ . ட்‌
சென்றுநம்‌ தொண்டனாஞ்‌ சிறந்த பாணனை
இன்றுநீர்‌ கொணர்மினென்‌ நியம்ப லோடுமே. .19

அவ்வுரை கேட்டெதி ரணுகும்‌ வாயிலோர்‌ 1
ஒவ்விய மனதொடும்‌ விரைவி னோடியே
திவ்விய மணிபல சிதறுங்‌ காவிரி
செவ்விய திருமூகத்‌ துறையிற்‌ சேர்ந்தரோ. “20

பாலுறு பிரையெனப்‌ பல்லு .யிர்களுற்‌
றேலுமற்‌ றவைகடன்‌ ஸிடத்திற்‌ கொண்டுசேர்‌
ஆலிலை துயிலொழிந்‌ தரங்க முள்வளர்‌
மாலினை யிதயமேல்‌ வளர்த்தி வான்றனை; 21

பன்னிரு திருமணும்‌ பன்னிடந்‌ தொறும்‌
துன்னிட மார்பினிற்‌ றுளவ மாலிகை
மன்னிட யாழ்முறை வழங்கப்‌ பாடுறுங்‌
கன்னலா ரமுதெனுங்‌ கானத்‌ தான்றனை; 22

பாணர்பிரான்‌ திடுக்குற்றார்‌
கண்டன ரரங்கனாங்‌ கமலப்‌ பூவடித்‌
தொண்டனென்‌ றவனடித்‌ தொழுது நின்றுளோர்‌
புண்டரீ கந்தனைப்‌ பொருவ டிக்கணில்‌
தெண்டனிட்‌ டிம்மொழி தெரிப்ப தாயினார்‌. 23

என்‌ கருதி வந்தீர்‌?
ஐயநீர்‌ புரிந்திடற்‌ கடுக்கொ ணாததைச்‌
செய்யநும்‌ பான்மனஞ்‌ சேர்ந்த தென்கொலோ
வெய்யனே னிதனிடை வினையொ ழித்துமேல்‌
உய்யுமா றெவண்கொலென்‌ நுருடிப்‌ பின்னரும்‌. 24

ஈங்குநீ ரடைந்துள தென்கொ லென்னிடை
ஆங்கதை யுணருமா றறிவிப்‌; பீரெனத்‌
தங்கிலா னுரைத்தசொற்‌ செவியிற்‌ சேர்தலும்‌-பாங்குற வவர்களும்‌ பகர்தல்‌ மேயினார்‌. 25

அரங்கன்‌ கட்டளை
யாந்தொழ லரிதல யாவை யும்தரும்‌ க
பூந்தவி சுறைந்துளோன்‌ புராரி இந்திரன்‌ ்‌ தாந்தொழு குவர்‌்இறை தாளி ரண்டையும்‌
யேந்தினை திருவுளத்‌ இன்பம்‌ ஓங்கவே. 26

அன்னது கிடக்கயா மடைந்த காரணம்‌
என்னெனில்‌ நின்னுளத்‌ திருக்கும்‌ பைந்துழாய்ப்‌
பன்னக வணையரங்‌ கேசர்‌ பண்பொடுஞ்‌
சொன்னசொல்‌ உண்டதைச்‌ சொல்ல: வந்தனம்‌. 27

அம்மொழி யாதெனி லறியக்‌ கேட்டிநீ
தம்மரு கணைந்திதைச்‌ சாற்று மாறதாய்‌
உம்மரு – கணைந்தழைத்‌ துறுமி னின்றென
எம்மொடு முரைத்ததால்‌ வருதி யென்றனர்‌. 28

அரங்கம்‌ புக அருகனல்லேன்‌ :
என்னலுஞ்‌ சாதியிற்‌ கடையி னெய்இினேன்‌ i . தன . i பொன்னரங்‌ கந்தனிற்‌ புகுதப்‌ போதுமோ?
அன்னது தகுதியென்‌ றறிகி லேனெனப்‌ ‘
பன்னலு மீண்டனர்‌ படர்ந்து ளோர்களே,. 29

மீண்டவ ரரங்கர்பால்‌ மேவி யெந்தமை
ஆண்டுளோய்‌ அருட்பெரி யவனை யாம்வர
வேண்டினம்‌ அவனுந்தான்‌ விரும்பி மேல்வரத்‌
இண்டரும்‌ புலைக்குலஞ்‌ செனித்த தாதலால்‌; 30

அரங்கன்‌ மாற்றம்‌
வருகிலே னென்றவன்‌ வழங்கி னான்‌என
மருவிய வாயிலோர்‌ வகுத்துக்‌ கூறலும்‌
முருகவி ழிதழவிழ்‌ முளரி வைகுறுந்‌ இருமரு மார்பனு மிதனைச்‌ செப்புவான்‌. 31

வேதியர்‌ முதற்குலத்‌ தருமம்‌ வேதங்கள்‌ ‘
நீதிசார்ந்‌ திருப்பினும்‌ நிகழ்த்தும்‌ யாவையும்‌
ஆதியில்‌ யானுரைத்‌ தவர்க ளுற்றிடுஞ்‌ சாதிதான்‌ இனதெனச்‌ சாற்றற்‌ பாலதோ? 32

பிறப்பால்‌ சாதியில்லை சிறப்பால்‌ உண்டாம்‌
செம்மையாந்‌ தெளிவிலார்‌ செப்புங்‌ கீழ்மையால்‌
அம்மையாங்‌ கீழ்மைய ராவர்‌; சார்தலால்‌
எம்மர புஇக்கினு மவர்க ளெய்துடும்‌
அம்மர பேயிழி பாகு மாதலால்‌; 33

துக்கநல்‌ லறிவுளந்‌ தரித்து ளார்களே
மிக்கவ ராகுவர்‌; விளம்பு மாங்கவர்‌
– எக்குலத்‌ துதிப்பினு மவர்க ளெய்திடும்‌ அக்குல மேகுலத்‌ ததக மாகுமால்‌. 34

மீளவும்‌ அடியாரை அனுப்பினான்‌
ஆதலா லவனமக்‌ கடிமை பூண்டுளோன்‌ 4
போதமுங்‌ கல்வியும்‌ புகலுஞ்‌ சாத்திர ்‌
வேதமு மவன்வயின்‌ விளங்கும்‌ மெய்ம்மையே :
ஈதுவைத்‌ தழைத்திவண்‌ வருதி ரென்னலும்‌; 35

என்ன வோதலு மினிதி னால்வர்கள்‌
பொன்னரங்‌ கத்துறு புரிசை நீங்கியே is
துன்னு சீர்முகத்‌ துறையி டந்தனில்‌ ,
மன்னு பாணர்பால்‌ மருவி; யன்னவர்‌, . 36

வேத மென்பதின்‌ முடிவி ளங்கடும்‌
மாத வன்புகல்‌ வாச கந்தனை
ஒதி நீவரு கெனவு ரைத்தலுங்‌ கோதி லாதவ ஸிதனைக்‌ கூறுவான்‌. 37

மாலே பகரினும்‌ வாரேன்‌ அரங்கம்‌ ு
என்னை யுஞ்சரர்‌ சரமி ரும்புவி ்‌
தன்னை யுந்தருந்‌ தூய தாமலர்ப்‌
பொன்னை யாளுடைப்‌ புனித னாயகன்‌
சொன்ன சொற்சரி யாகுந்‌ தூய்மையீர்‌[ 38

ஆயி ஸனுூம்பொன்‌ னரங்கம்‌ மேவிய
மாய ஸனார்கடல்‌ சூழும்‌ வையகம்‌
காய சரடி சார்ந்து போற்றிடத்‌
தூய, ராம்திருத்‌ தொண்ட ருக்கலால்‌; 39-

மாசு றும்முளந்‌ தனில்வ ரீச்சிறை
மூசு வண்டிமிர்‌ முளரி யாமெனத்‌
தேசு றும்மவன்‌ சர டிக்கொளா
நீச ருக்கது நீதி யல்லவாம்‌. 40

ஆத லாலர வணையின்‌ மீமிசைப்‌
போத மார்ந்துளோன்‌ புரமெ ரித்துளோன்‌
மாத வத்தினோர்‌ வணங்க வேதுயில்‌
நாத ஸனார்திரு நகரந்‌ தன்னிலே. ்‌ 41

ர௬ுண்மிகுந்‌ தீய னாகிய
நாயி னேனிடம்‌ நலமி லாததால்‌
தோயு றும்படி துன்னி லேனென
ஆய பாணனா ரனுப்பப்‌ பின்னரும்‌; 42

சிந்தை யுள்ளவன்‌ தெளியு மாறதாய்‌
எந்த வாறவ ரொடுமி யம்பினும்‌
வந்தி லேனென மறுத்துக்‌ கூறல்கேட்‌
டந்த வேதிய ரவனை நோக்கியே; 43

உலக முண்டுமிழ்‌ ஒருவ னெம்மொடுஞ்‌
சொலுமொ .ழிப்படி துன்னி டாயெனில்‌
வலுவி லம்மண வாளர்‌ பாற்கொடு
செலுது மென்றவர்‌ செப்ப லோடுமே; 44

இட்டி வாவெனச்‌ செப்பி னுந்தலைக்‌
குட்டி யுங்கதை கொண்டு மோதியுங்‌
கட்டி யீர்ப்பினுங்‌ கடியவாள்‌ கொடு
வெட்டி னும்வரே. ரெனனவி எம்பியே; : 45

அடியவர்‌ பற்ற ஆழ்வார்‌ தென்கரையுற்றார்‌
ணத்தெழுந்‌ தவனு மேதனைப்‌
புக்க ணைந்திட வேபொ ருந்தினோர்‌
கைக்கொ ளக்கனிந்‌ தோடிக்‌ காவிரி
தெக்க ணக்கரை சேர்ந்து ளானரோ. 46

அனையர்‌ பேர்ந்தவ ரரங்கர்‌ பாலணைந்‌
. இனைய “செய்திக ளியம்பு தும்மெனா
வனையுங்‌ காவிரி வடக ரைத்தலை .
நினையு முன்னரின்‌ நீங்கி யேகினார்‌. 47

ஏடி னோர்களாங்‌ கெய்து செய்கைகள்‌
நாக ணைத்துயி னாத ஸனாகிவாழ்‌
ஆக மம்புய வனம லர்ந்தகார்‌
மேக மொத்துளா னொடுவி எம்பினார்‌. 48

சாரங்கமாமுனிக்கு இட்ட கட்டளை
விளம்ப லோடுமின்‌ மேதி ஸிப்பதத்‌
களந்து ளான்றனை யர்ச்ச னைசெயும்‌
வளம்பொ ருந்துசா ரங்க மாமூனிக்‌ .
குளங்க னிந்திட விதனை யோதுவான்‌: 49

தான லம்பெறும்‌ சாதி யிற்கடை
மீன னென்றன னேவ லிற்புகல்‌
வானி ரூம்புகழ்‌ வளரும்‌ பாணனை
நான வன்னவன்‌ னானெ ஸனக்கொடே; 50

கோயின்‌ மேவிடும்‌ கொத்து டன்வர
நீய டைந்திட நேர்ந்திடா னெனில்‌
தூய நின்றிருத்‌ தோண்மி சைக்கொடு
நேய மோடுபல்‌ வளம்நி ரம்பவே; 51

சுந்த ரம்பெறத்‌ துலங்கு வீதிசூழ்‌ இந்த மாநகர்‌ வலம தெய்தியே
வந்து சேரென வழங்கும்‌ வார்த்தைகேட்‌
டந்த -வாறதா யவனு மெய்தினான்‌. 52

குரும ணித்திரை கொழிக்குங்‌ காவிரித்‌
தருமு குத்துறை சேர்ந்து நெஞ்சகம்‌ உருகு பாடல்க ளோதுி நின்றிடும்‌
பொருவி லானொடும்‌ புகறல்‌ மேவினான்‌. 53

முனி மொழிகள்‌
ஐய்ய! கேட்டிநம்‌ அரங்க நாயகர்‌
பைய்ய வேதினை யனுப வித்திட
எய்த லாதமெய்‌ இயம்பி னானினிச்‌-செய்வ இல்லையென்‌ றன்பிற்‌ செப்பினான்‌. 54

மீளச்‌ சார்ங்கமா முனியும்‌ மெய்யரை
ஆளு நாயகன்‌ அருள்வ மாமலென்‌
தோளின்‌ மீதுனைச்‌ சுமப்பன்‌ ஐயனே! –
_ ஏளு கென்றவ ணெய்தி னானரோ. ்‌ 55

பாணர்‌ ஒதுங்கினார்‌ .
சென்ற போதினில்‌ இய சாதியன்‌
“என்ற வென்னைநீ சுமப்ப தேற்குமோ?
நன்று நன்றெனா நவின்று மெய்விதிர்த்‌.
தொன்ற வேபயந்‌ தோடி னானரோ. 56

ஓடு வான்றனை யோடிக்‌ கைக்கொளா
மாடு சென்றெதிர்‌ வளைத்து நிற்றலும்‌
பாடு நாயகன்‌ .பனுவல்‌ நொந்துளம்‌
வாடு -றத்திரு மதிலைச்‌ சார்கிலேன்‌; 57

நீச னீசனா னென்னை நீள்மொழி .
பேசிப்‌ பேசியே பிடித்தல்‌ ‘ இதெனாக்‌
கூசி யோடலுங்‌ கூவல்‌ மேவினான்‌
மாசி லாதொளிர்‌ மணியின்‌ மேனியான்‌. ‘ 58

எத்தி சைக்கணும்‌ எய்திப்போந்‌ தொறும்‌
அத்தி சைபுகுந்‌ தடைகி லேனெனத்‌
துத்தி நாகணைச்‌ சோதி தன்னுளக்‌ கொத்தி டுங்கொலென்‌ றுள்ள யர்ந்தனர்‌. 59

ஆழ்வார்‌ முனிவாகனர்‌ ஆனார்‌ .:
பின்னு மெங்கணும்‌ பெயர்க்கொ ணாமையால்‌
இன்னு மவ்விளை யாட்டெ லாம்விளைத்‌
தன்ன பாணனை அம்பு யந்தனில்‌
உன்னி யேற்றினன்‌ உவமை வேறிலான்‌. 60

இடரி னாற்கலுழ்ந்‌ திருந்த மெய்யன்தாள்‌
மடன விழ்ந்தநன்‌ மனதி னுள்ளுறு முடலை நீங்கிட முத்தமே கொடுத்‌
குடலின்‌ ஏந்தினான்‌ அன்பை ஏந்தினான்‌. 61

மருவு சூரன்முன்‌ மரைம லர்ந்தென
உருகு காதலால்‌ உளத்தொ எிர்ந்திடப்‌
பெருகும்‌ அன்பினிற்‌ பிறங்கு வோன்றனைப்‌
பொருவில்‌ தோளினிற்‌ பொலிய வைத்தனன்‌. 62

முனிவர்‌ கருடன்போலிருந்தார்‌
அளவி லாதநல்‌ லன்புக்‌ காழியைப்‌
பளகு வெம்பவம்‌ பாற்று மருந்தினை –
இளகு மன்பினால்‌ ஏந்திச்‌ செல்பவன்‌
களவில்‌ நெஞ்சுடைக்‌ கலுழ னாயினான்‌ 62

அனுமனுமானார்‌
க்க. ௫ ஒப்பிலா ரகுகுலம்‌ தனிலு கித்கருள்‌ |
அப்பனை யப்பினு எமுதொப்‌ பான்‌ ற்னைத்‌,… ர்
துப்பணைப்‌ பியன்மிசை சுமந்து வாந்க்கொள்‌ 7
எய்ப்பிலாக்‌ கான்மக னெனலு மாயினான்‌, ்‌ 64

முனிவன்‌ பூரிப்பு
தகவுறு பாணன்றன்‌ சரண்கைத்‌ தாங்கினோன்‌
உகவையின்‌ திருவுளம்‌ ஓங்கி டத்தவ
மகமிழைப்‌ பவருறு மகிழ்ச்சி யெய்தினான்‌
துகளிலா வாச்சியம்‌ துவைத்த தெங்குமே. 65

நிதியின்‌ மிக்கொளிர்‌ நெடிய கற்பகப்‌ — ப
புதிய மாமழை பொழிய, வானவர்‌
அதி௪ யித்துமா தவர்க ளன்பொடுந்‌
துதிசெய்‌ யப்புகழ்‌ பட்டர்‌ சொல்லவே. 66

துன்று தோரண முதல்து லங்குற அன்ற ரங்கம தலங்க ரித்துளது
என்றும்‌ இச்சிறப்‌ பில்லை என்றிடச்‌
சென்ற டைந்தனன்‌ தேவர்‌ செய்கையான்‌. 66

நீலமேனியன்‌ முன்‌ நிறுத்தினார்‌
நாலு வீதியு நண்ணி யன்புடன்‌
._ கோல மாமணிக்‌ கோவி லின்கணே
மூல மென்றுகூம்‌ முனியின்‌ முன்வரும்‌
நீல மேனியன்‌ முன்னி றுத்தினான்‌. 68.

ஆழ்வார்‌ அனுபூதி
அந்த மாதவன்‌ கேச வன்திருப்‌ .
பைந்து மாயணி பாதமே முதல்‌
சுந்த ரங்களின்‌ சோபை யாவையும்‌
முந்த வர்க்குறும்‌ முறையிற்‌ காட்டினான்‌. 69

புண்ட ரீகம்வாழ்‌ போத ஸும்விடம்‌
உண்ட பேயனும்‌ உம்பர்‌ யாவரும்‌
தொண்ட ராயடி தொழமும ரங்கரைக்‌
கண்ட கண்கள்‌ களித்த பாணற்கே; 70

ஒளித்தி லந்தொறு முறியில்‌ வெண்ணைபால்‌
களித்த ருந்திடுங்‌ கள்வ னேகரி
விளித்த ழைப்பமுன்‌ விரைவி னோடிவந்‌
தளித்த கார்வணா! அரங்க நாதனே! 71

என்று போற்றிசெய்‌ இறைவன்‌ மேனிமேல்‌
சென்ற அன்பெலாந்‌ திரட்டி. அன்பளாய்‌
அன்று பாடினா னமல ஸனாதியென்‌
தொன்றோ டொன்பது முவப்பி னோடுமே. 72

பாடி யேகளிப்‌ பாழி யிற்படிந்
. தாடி யாடிப்பொன்‌ னடியின்‌ வீழ்ந்தெழுந்‌
தோடி யோடிமெய்‌ யுருகி வேர்வெழக்‌
கூடி வந்தெ௫இர்‌ குறுகி நின்றனன்‌.–73

துன்று மன்புறும்‌ தொண்டன்‌ நீண்முடி
ஒன்ற நற்பத முவந்து வைத்தனன்‌
கன்றி னால்விள வெறிந்து கன்மலி
குன்றை யேந்திடும்‌ கரிய கோவலன்‌. 74

அரங்கக்‌ கடலில்‌ பாண நதி: கலந்தது
பன்னு கூவங்கள்‌ படுகு லைக்கணே
புன்னை யார்கடல்‌ புகுந்த டங்குறும்‌
உன்னு மன்பினால்‌ உருகு பாணனும்‌
மன்னி யொன்றினான்‌ மாயன்‌ றாட்குளே. . 75.

திருப்பாணாழ்வார்‌ அரங்கன்‌ இருவடிகளில்‌ கலந்தனர்‌.
*-கூவத்தின்‌ சிறு புனலைக்‌ கடலயிர்த்தல்‌ ஓவ்வாதோ கொற்ற வத்த.
என்பர்‌ சவிச்சக்ரவர்த்திகள்‌ (யுத்த காண்டம்‌).

கண்டு போற்றினர்‌ கண்ணி மைத்திடா
அண்டர்‌ யாவரும்‌ அஇச யித்தலர்‌
கொண்டி றைத்தனர்‌ கோயின்‌ மேவிவாழ்‌
ணட ன  தொண்டர்‌ யாவரும்‌ களிது ளங்கினார்‌. 76

அன்ன செய்கையான்‌ ஆய பாணனும்‌
பன்னு செந்தமிழ்ப்‌ பனுவல்‌ பத்தினுள்‌
பொன்ன ரங்கநற்‌ புகழ்கொள்‌ வேங்கடம்‌ ்‌
என்னு மிப்பதி யிரண்டு மெய்துமே. 77-ழ்வார்‌ மங்களாசாசனம்‌ செய்த திவ்ய தேசங்கள்‌ இரண்டு, –

பயன்‌
இப்பெ ருங்கதை யெழுதிக்‌ கற்றுளோர்‌
செப்பு வோரிரு செவியிற்‌ கேட்டுளோர்‌
ஒப்பு வேறிலா உயர்வை குந்தமாம்‌
அப்பெ ரும்பதி யணுகி வாழ்குவார்‌. 78

நம்மாழ்வார்‌ புகழ்‌ நவில்வோம்‌
ஒப்பென விளங்கு பாணர்செய்‌
வாறி தாமென வழங்கி னோமினி
நாறு பூத்துழாய்‌ நாத னாருரு
மாற னாங்கதை வகுத்துக்‌ கூறுவாம்‌. 79

திருப்பாணாழ்வார்‌ தருவவதார அத்தியாயம்‌
மூற்றிற்று.

———

சடகோபாழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌
வெண்பா
ஏரார்வை காசி விசாகத்தின்‌ ஏற்றத்தைப்‌
பாரோ ரறியப்‌ பகர்கின்றேன்‌ — சீராரும்‌
வேதந்‌ தமிழ்செய்த மெய்யன்‌ எழிற்குருகை
நாதன்‌ அவதரித்த நாள்‌.
(உபதேசரத்தினமாலை, 14,)

எம்பெருமான்‌ சிந்தனை
மருவை குந்தன மலிந்ததா மரையே ………
பொருவை குந்தனுக்‌ ததற்கு ……………..
கருவை குந்தமே முதலினோர்‌ களையும்‌ ………
இருவை குந்தமா நகரதன்‌ சீர்மையா ருரைப்பார்‌. 1

முதல்‌ பாடல்‌ தைந்துள்ளமையால்‌ பொருள்‌ புலப்படவில்லை. இதனை
**மருவை கும்தளம்‌ மலிந்ததா மரைமூதற்‌ பூக்கள்‌
பொருவை குந்தனுக்‌ கிருப்பிட மாகிமுப்‌ புவனக்‌
கருவை குந்தமம்‌ முதலினோர்‌ களையும்‌ஆண்‌ டருளும்‌
தருவை குந்தமா நகரதன்‌ சீர்மையா ருரைப்பார்‌?’”
என்று திருத்தத்‌ தோன்றுகிறது.
மரு- வாசனை. வைகும்‌ -தங்கியிருக்கின்ற. தாமரை முதல்‌ பூக்கள்‌ – தாமரை
நீலோற்பலம்‌ முதலான மலர்களை. பொரும்‌ – ஓத்திருக்கின்‌ ஐ. வைகுந்த்னுக்கு
இருமாலுக்கு. இருப்பிடமாய்‌ – தங்கும்‌ இடமாய்‌, முப்புவனம்‌ – மூன்று உலக
மாகிய. SH – மூட்டையில்‌, வைகும்‌ – சிறையிடப்பட்ட. தமம்‌ முதலி
னோர்‌ – தமம்‌ என்று கூறப்படும்‌ நரகத்துக்கு உரியவர்களையும்‌, ஆண்டருளும்‌ *
பாதுகாக்கும்‌ திருவைகுந்தம்‌ என்சு,

அச்ச றந்தநா டதனிடை அருள்விளக்‌ கிடும்நல்‌
வச்சி ரஞ்செழு மரகத முதலிய – மருவ – ்‌
வுச்சி தந்தனை விச்சுவ கருமனே உஞற்ற
மெச்சு றுந்திரு மாமணி மண்டபம்‌ விளங்கும்‌. 2

அந்த மண்டபத்‌ தரியணைப்‌ புறத்தினில்‌ அயனோ
டிந்தி ரன்முதற்‌ கடவுள ரெவர்களு மீண்டி.
வந்து வந்தவக்‌ சணம்நெருங்‌ குறப்பிரம்‌ பதுகொண்
டுந்தி யுந்திருச்‌ சேனையர்‌ கோன்விலக்‌ குறவே. . 8

இருபு றத்தினு மரிவைசா மரங்கள்கொண் டிரட்ட
பொருவில்‌ முத்தவெண்‌ மதித்திருக்‌ கவிகைமேற்‌ பொலிய
குருக வின்கவுத்‌ துவமணி மார்பினிற்‌ குலவத்‌
இருவொ டும்பொலிந்‌ திருந்தனன்‌ நாரணன்‌ சிறப்பால்‌. 4

இருந்த கோவிய ரணியுடை களைக்கவர்ந்‌ தெடுத்துக்‌
குருந்த மேலுறுங்‌ கோவலன்‌ கொன்றையன்‌ -முதலாம்‌
அருந்த போதனர்‌ வரங்கள்பெற்‌ றகன்றதன்‌ பின்னர்‌ இருந்த வேயுளத்‌ தோர்முறை இந்திப்ப தானான்‌. 5

அருளில்‌ வைகுறத்‌ தக்க€ வாத்மகோ டிகளவ்‌
விருளெ லாம்தடிந்‌ திரிந்திடும்‌ நல்லறி வெய்தஇத்‌ .
தெருள்கொள் அன்பினால்‌ நம்வயின்‌ -சேர்தரு போதில்‌
மருளு றப்புரி வஞ்சரை மாய்த்திட வேண்டி, 6

நைதல்‌ ஒட்டுநன்‌ னீரராய்‌ நன்னலம்‌ பொருந்தும்‌
செய்கை யோர்களைப்‌ புவிமிசை செனிப்பித்தங்‌ சுவரால்‌
உய்தல்‌ வேண்டினோம்‌ உற்றுணர்‌ ஞானங்க சூரைத்த
மெய்மை யோர்களை வெறுப்பொடும்‌ தடிந்தன ரல்லால்‌, 7

கப்படும்‌ உணர்வொடும்‌ உறுபகை யொழித்தெம்‌
அருக ணைந்திலர்‌; இன்னம்யாம்‌ வருந்தியங்‌ கவர்பால்‌
கருணை கூர்தரப்‌ பிறந்திடக்‌ கருதினோம்‌; உதவ
வருதல்‌ ஆரியர்‌ செயலெனத்‌ திருவுளம்‌ மதித்தே, 8:

பெருமாள்‌ கட்டளை *
பாய லாயுறும்‌ அரசையும்‌ பணிக்குலந்‌ தன்னைக்‌
காயும்‌ வெஞ்சிறை ஊர்தியாம்‌ பொற்கரு டனையும்‌
கூய ழைத்துநீர்‌ புவியினில்‌ விரைவொடுகங்‌ குறுகி
நேய மோடிரும்‌ எனஅடி தொழுதெதிர்‌ நின்றார்‌. 9

நின்று ளோர்முகம்‌ நோக்கி,யாம்‌ நிலமிசை யுருவம்‌
ஒன்றி யேபிறந்‌ இடவுளத்‌ தோர்ந்தன மதனால்‌
சென்று நீர்முனம்‌ வழுதஇுநாட்‌ டிடைத்திருக்‌ குருகூர்‌
என்று கூறுமா நகரினு மன்னகர்க்‌ இணையாய்‌, 10

சிறந்தொ எிர்ந்தகோ ஸூரினுந்‌ திருப்புளி யெனவும்‌
அறந்த ழமைத்தசீர்‌ மறையுண ரந்தண னெனவும்‌
பிறந்தி டும்மெனப்‌ பேருல குண்டசெம்‌ பவளம்‌
இறந்து ரைத்தலு மங்கவ ரிம்மொழி தெரிப்பார்‌: 11

இருமால்‌ ஆதிசேடனையும்‌ கருடனையும்‌ அழைத்தான்‌ ; அவர்‌
கள்‌ வந்து பணிந்து நின்றனர்‌. அவர்களை தோக்கிய இறைவன்‌ யாம்‌ fos wf
பிறந்திட நினைந்துள்ளோம்‌, : நீங்கள்‌, திருக்குருகூரிலும்‌ இருக்கோளூரிலும்‌,
இிருப்புளியாகவும்‌ அந்தணனாசவும்‌ பிறந்திருங்கள்‌ என்‌ மனன்‌.

கடவு ளோர்களு முனிகளும்‌ வேண்டவாங்‌ கவர்கட்‌
இடர்பு ரிந்தவாள்‌ வேல்கெழு மிராக்கதக்‌ குழுவைப்‌
படியின்‌ மீதுவேற்‌ றுருவமாய்ப்‌ பலவவ தாரம்‌
அடிகள்‌ கொண்டடைந்‌ தழித்துமீண்‌ டிவ்விட மடைந்தீர்‌. 11

மாறு மோர்பகை : புவிமிசை யுளதுகொல்‌? மதித்துக்‌
கூறு தற்கிலை மீண்டுமோ ருருக்கொளக்‌ குறிக்கின்‌
வேறு காரணம்‌ யாது?யாம்‌ முன்னுரைத்‌ இட்ட
வாறு இத்திடில்‌ அடிகளெவ்‌ வுருக்கொள்வீ ரறைமின்‌? 12

எந்த வூர்தனி லெந்தநா ளினில்‌உல களந்த
உந்த மம்புய வடிகளைப்‌ பிரியும்கதீ தறுவோம்‌;
வந்து காண்குறும்‌ வகையையும்‌ மாறுத லின்றி-முந்த வோதிலம்‌ முறைபுரி குதுமென்றார்‌; முறையாய்‌, 14

மொழிந்த — கேட்டலும்‌ முகுந்தன்மற்‌ nor Gu
பொழிந்த கண்களால்‌ நோக்கினன்‌; புகழ்பரந்‌ தாமம்‌
ஒழிந்த கன்றிட விம்மொழி உவப்புட னுரைத்தான்‌
வழிந்து தேன்பொழி துழாய்முடி புனையுமா தவனே. 15

அறிஞர்கள்‌ பேயராயினர்‌ !
௪த நீர்க்கடல்‌ வரைப்பினிற்‌ றெளிவுளோர்‌ உணர
வேத மெந்தனை யுண்மையாய்‌ விளம்பியும்‌ வேதம்‌
ஓது மந்தண ரந்நிலை யுணரகில்‌ லாராய்ப்‌
பேதா பேதமா யுரைத்திடும்‌ பேயரா. யினரால்‌. 16–பேயராயினர்‌ என்று ஆசிரியர்‌ பொய்ம்மை வாதிகளைக்‌ கண்டிக்கிறார்‌,

கற்ற வேதிய ரிவ்வகைக்‌ கழறினர்‌ என்னில்‌
மற்று ளோர்களெவ்‌ வாறினி வாழ்வர்முக்‌ காலம்‌
மூ.ற்று மோர்தவ முனிவரு மயங்கினர்‌; முறைசேர்ந்‌
துற்ற மாயையின்‌ வலிமையவ்‌ வாறதா மூணரில்‌ ‘ 17

அன்ன தன்மையை தாதலால்‌ அளப்பரும்‌ புவியோர்‌
என்னை யுண்மைதேர்ந்‌ தெவருமிப்‌ பதியின்வந்‌ தெய்தி
மன்னி வாழ்ந்திடும்‌ வகையுணர்ந்‌ திலார்மதி யருள்வ
துன்னி யோதுமி னெனவவர்க்‌ குரைத்தபின்‌ விடுத்தேம்‌. 18

அவர்கள்‌ சென்றுறுப்‌ படைந்திடு மளவி லிம்மாயை
கவியு மாங்கதற்‌ இங்குபல்‌ வலிமைகாட்‌ டுகினும்‌
புவியி லெய்தினர்‌ பொலியுமெய்ஞ்‌ ஞானபோ தகத்தைச்‌
செவியின்‌ மேவுறத்‌ தெளிவுறப்‌ புகட்டிச்சின்‌ னாளில்‌; 19

மருவி யோங்கிடும்‌ வெவ்வினை மருவுமற்‌ றவர்கள்‌
இருநி லத்திழிந்‌ தடாமலெச்‌ சரிக்கைசெய்‌ தவராய்‌
பொருவில்‌ நல்லறம்‌ புகன்றனர்‌; புவிமிசை வதியும்‌
அருள்கொ ளந்தண ரரசர்கள்‌ வ௫ூயர்பின்‌ னவர்கள்‌; 20

இடிந்த நெஞ்சொடும்‌ இவர்மறித்‌ தன்னைதன்‌ வயிற்றிற்‌ படிந்து இத்துப்பின்‌ இறந்துடும்‌ பிறவியாம்‌ பவ்வம்‌
கடந்தி டும்திறம்‌ அறிந்திலர்‌ காசினி யதன்மேல்‌
நடந்தொமிந்தனர்‌ மையலால்‌ நவிலவே நிலையால்‌, 21

தமிழ்மறை ஓத அவதரிப்போம்‌
ஆத லாலிவர்‌. யாவர்க்கு மினியதா யமைந்து
பூத லத்தினில்‌ இழிகுலத்‌ தவரும்பூ வையரும்‌ ஓதி யின்புறற்‌ கடமதாம்‌ யோக்கிய முறவவ்‌
வேத –தமிழினால்‌ விரித்தினி துரைத்து;–22-

சொற்றி டும்பொருள்‌ நுட்பமும்‌ முறைமையின்‌ தொகுப்பும்‌
கற்று ணர்ந்திடும்‌ கலைஞரும்‌ மாந்தர்தம்‌ கணமும்‌
மற்றும்‌ மேவிடும்‌ சணங்களும்‌ மாண்புறப்‌ பெருநூல்‌
பெற்றி டும்படி நடத்துவித்‌ துறல்கடைப்‌ பிடித்தேம்‌.-23-

அதனுக்‌ கொத்திடக்‌ குருகைவாழ்‌ காரிமா றனுஞ்சர்‌
-சுதனி லாமையின்‌ மனைவியோ டருந்தவந்‌ தொடங்கி
. இதமு றத்தவம்‌ இயற்றுவ னினிச்சில நாளில்‌
– உதவு வேம்மக வெனவளித்‌ தவருவப்‌ புறவே,–24

கலியு கத்தினி லவதரித்‌ தனைத்துக்கும்‌ கலங்கா
வலிகெ முந்திரு வனந்தனீ குருகைமா நகரின்‌
ம்லித ருஞ்சினைப்‌ புளியெனுந்‌ தருவதாய்‌ வளரில்‌’.. _
பொலியு மத்தரு நிழலில்யாம்‌ பொருந்திவை குதுமால்‌, -25-

அந்த மாநகர்க்‌ கடுத்தகோ ஞூர்வயின்‌ அருளே
முந்து வஞ்சிறைக்‌ கலுழன்நீ முறைவழு வாமல்‌
செந்த மிழ்க்கவி யாகிநாம்‌ செப்புவாய்‌ மொழிக்கு
வந்து றைந்துபட்‌ டோலைநீ மடகழ்வொடு பிடிக்க; 26

அறிந்து நீவிர்க ளிருவரு மாஜிசூ முலகற்‌ பிறந்து வைகுமி னெனவரி பிறங்குபாட்‌ டிசைக்கும்‌
நறுந்து மாயணி மாலையான்‌ நவிறலு மிரவிற்‌
செறிந்த தாமரை மலரெனத்‌ திருமுகம்‌ குவிந்தார்‌. 27

ஐய! நின்மொழிக்‌ கெதுரெவ ரறைகுவர்‌? ஆனால்‌
வெய்ய இக்கொடு மொழிகளை விளம்பினை; ஆயின்‌
செய்ய வேண்டுமென்‌ றியம்பினை; செய்குதும்‌ என்றே
வைய மீதுற விடைகொடு நடந்தனர்‌ மஇழ்ந்தே. 28

(வேறு)
மதுரகவி அவதாரம்‌
நடந்தவரிற்‌ கலுழன்‌ நண்ணியடி யார்கள்‌
தொடர்ந்துகுடை யும்புனலிற்‌ றோய்ந்துள whips
படர்ந்தரவ மேற்றுயில்‌ பதிக்கண்மலர்‌ மேவும்‌
மடந்தைநிக ராகுமொரு மங்கைவயி றுற்றான்‌. 29

(வேறு)
அருமா மறையின்‌ வடிவா மமலன்‌
உருமா மதன்வந்‌ துலகத்‌ திடையே
வருமா னுடனாய்‌ மருவுற்‌ றிடல்போல்‌
இருநாள்‌ பொலியச்‌ செகமுற்‌ றனனே. . 30

(வேறு)
வந்த மதலைத்‌ திருமுகமும்‌ வடிவத்‌ தெழிலும்‌ புன்னகையும்‌
முந்த வருமா மகளிரெலாம்‌
முறையின்‌ நோக்கிக்‌ கண்களுடன்‌
சிந்தை மகிழ்ந்து நிறைவுற்றார்‌. தேவன்‌ இவனே என்றுரைத்தார்‌
அந்த நகர்வா யுறையுயிர்கள்‌ ்‌
அனைத்தும்‌ இன்பத்‌ தோங்கென வே. 31

மதுரகவி ஆழ்வாரின்‌ கல்விப்பயிற்சி
அறிய வொண்ணா மறைகளைக்காட்‌
டம்மா மறையோர்‌ அமைவிதிகள்‌
நெறியிற்‌ பகர இருகுரவர்‌ நிகழ்வித்‌ தன்பின்‌ வளர்க்குங்கால்‌
நறிய புனிதத்‌ துளவமென
நாளும்‌ வளர்ந்து வடகலையும்‌
செறியும்‌ இன்பத்‌. தென்கலையும்‌
சேர வுணர்ந்தான்‌ சின்னாளில்‌. 32

தீர்த்த யாத்திரை
சீரார்‌ மறையின்‌ பொருளுணர்சோத்‌
இரபண்‌ டிதனாய்ச்‌ சாற்றுபல
பாரார்‌ கலைதேர்‌ சால்புடையோர்‌
பரவிப்‌ புகழ வுறைந்ததன்பின்‌
நாரா யணன்வாழ்‌ பதுிபணிந்து
நல்லோர்‌ பாதம்‌ பணிந்தேத்தி
ஆரா மஞ்சூழ்‌ கங்கைகண்‌
டாட நினைந்தான்‌ அயர்வில்லான்‌. 33

நிகரில்‌ வளஞ்சார்‌ திருக்கோளூர்‌
நீங்கி நெடிதாம்‌ நெறிகடந்து ககன வமரர்‌ தினந்தோயும்‌
கங்கா நஇகண்‌ டந்நீரில்‌
மகிழ்வின்‌ இன்பப்‌ புனலாடி
மருவிப்‌ புரிதற்‌ கரியதவம்‌
புகலும்‌ மாயை தனைவிடுத்துப்‌
போக இருந்தான்‌ புகழ்வல்லோன்‌. 34

திருப்புளி ஆழ்வார்‌ அவதாரம்‌
பன்னற்‌ கினியான்‌ உவப்பெய்தப்‌
பலவே டங்கொள்்‌ திருவனந்தன்‌
தென்னன்‌ முதலாம்‌ வேந்தர்களும்‌
தேவர்‌ குழுவும்‌ இத்தர்களும்‌
கன்னல்‌ மொழிகொள்‌ அரம்பையரும்‌
கலந்தோர்‌ முகமா யடைந்துதொழப்‌
பொன்னின்‌ ஒளியை நனிநல்கும்‌nபுனிதம்‌ பெறுஞ்சீர்‌ குருகூர்வாய்‌; – 35

குலவு மாதி நாதன்றன்‌
– கோவில்‌ வடபாற்‌ பொருளைநதி
அலகில்‌ வளஞ்சார்‌ தீர்த்தநுகர்ந்‌
. தணிசேர்‌ இளையார்‌ திருப்புளியாய்‌
மலர்சூழ்‌ பொய்கைக்‌ இடையொடுங்க
வருக மூலம்‌ எனப்போந்த
நலமார்‌ திருமால்‌ எனஓங்கி .
நாகம்‌ முற்றும்‌ அளந்தனனே. 36

காரிமாறன்‌ கவலை
வாட யில்லாச்‌ சான்றோர்கள்‌
மறையோன்‌ எனவும்‌ புளிஎனவும்‌.
மால்‌ லாமற்‌ பொலிந்தார்கள்‌;
மதியோன்‌ கதிரோன்‌ வலம்செய்யும்‌
காசற்‌ ஹறொளிருங்‌ குருகூரில்‌
காரி மாறன்‌ உலகுபுகழ்‌
தேசுற்‌ றிலங்கு முடையநங்கை
. தேவி யுடனே சேர்ந்திருந்தான்‌. 37

பூடும்‌ வாடப்‌ பொறாதவர்கள்‌
புதல்வ னில்லாக்‌ காரணத்தால்‌
வாடி வாடி உளந்தளர்ந்தார்‌; .
ம$ழ்விற்‌ புரிந்த தருமமெலாம்‌ வீடி யொழிந்து போயினவோ?
மேவும்‌ கொடுமை யாதென்னா
நாடி மேலோ ரொடும்புகல
நயந்து கேட்டோ ரிவைபகர்ந்தார்‌. 38

கற்றாவும்‌ குன்றும்‌ கதறப்‌ பிரித்ேதோமோ 2
பெற்றாரைப்‌ பார்த்துப்‌ பெருமூச்‌ செறிந்தோமோ?
பேதலித்து முற்பிறப்பில்‌ பிள்ளைப்பால்‌ வார்த்தலமோ?
காதலித்து மைந்தருண்ணும்‌ சையைப்‌ பிடித்தோமோ?
என்னும்‌ நம்மாழ்வார்‌ தாலாட்டுப்‌ பாடல்‌

**குதலைமொழிக்‌ கன்கிணிக்கால்‌ கோகனகச்‌
– செவ்வாய்‌ மதலையரை யில்லாத வாழ்வுமொரு வாழ்வாமோ ? புக்கடிசில்‌
உண்டு புறம்புல்கிக்‌ கூத்தாடும்‌ மக்கள்‌ முகம்‌ காணாத வாழ்வுமொரு வாழ்வாமோ?
ஐந்தடக்கி, வேண்டும்‌ அறங்கோடி செய்தாலும்‌ மைந்தரைப்‌ பெற்றுய்யாத
வாழ்வுமொரு வாழ்வாமோ? மிகப்பேறளித்து விரசை நீராட்டும்‌ மகப்பேறடை
யாத வாழ்வுமொரு வாழ்வாமோ?’”’-என்னும்‌ நம்மாழ்வார்‌ தாலாட்டுப்‌ பாடல்‌

சான்றோர்‌ இன்னுரை
காரார்‌ குழல்சேர்‌ மனைவியொடும்‌
கலங்க வேண்டா; நன்மையுறும்‌;
ஏரார்‌ புதல்வர்‌ தமைவேண்டி
இளமா மதியம்‌ தவழ்கின்ற
சீரார்‌ மாடக்‌ குறுங்குடியைச்‌
சேர்ந்து புனிதப்‌ பாற்கடலில்‌
நீராடி யபின்‌ இருமாலை
நினைந்து தவங்கள்‌ செயுமென்‌ றார்‌. 39

தம்பதியர்‌ கண்ட கனா
நடுநாள்‌ தவஞ்செய்‌ போதினிலே
நிகரில்‌ கதிரோன்‌ உதயகிரி
படுகா லையினில்‌ கனவின்சண்‌
பரவுந்‌. இருப்பா லாழிவரும்‌
‘கொடுமா விடத்தை யரற்களித்த
கோமான்‌ நிரம்பிப்‌ பெருகிடுமன்‌
பொடுமாங்‌ கவர்தம்‌ தஇருமுன்னர்‌
உற்றுத்‌ இருவாய்‌ மலர்ந்தனனால்‌.-40-

மகவி லாத கொடுந்துயரால்‌ ‘
மறுகி யிரவும்‌ வெயில்காயும்‌
பகலும்‌ அரிய தவம்புரிந்தீர்‌;
படாத துன்பம்‌ நனிபெற்நீர்‌;
புகலு முமக்கிப்‌ பிறவியினிற்‌
புதல்வற்‌ பெறும்பே நிலை;ஆனால்‌
அகமுட்‌ பொருந்தி யித்தலம்வந்‌
தடைந்தோர்‌ நினைந்த தெய்துவரால்‌. 41

துதிசெய்‌ பவர்கள்‌ அருந்துயரைத்‌
துடைப்ப தெமது கடனாகும்‌
அதினா லுமையுற்‌ நிடுவினைகள்‌
அனைத்தும்‌ போக்கிச்‌ சோதிடத்தின்‌ விதியை யொழித்திட்‌ டுமதிடத்தில்‌
விரும்பி மகவாய்‌ அவதரிப்போம்‌;
பதிசென்‌ றடைமின்‌ எனப்பகர்ந்து
பரந்த விண்ணிற்‌ கரந்தனனால்‌, 48

அந்தக்‌ கனவை கண்டுணர்ந்திட்‌
டருளார்‌ காரி வியப்புடனே
சிந்தை களிகூர்ந்‌ தியம்புதலும்‌
இகழும்‌ அலர்மேல்‌ மகள்போலும்‌
கந்தம்‌ மேவுங்‌ குழலாளும்‌
கண்டேன்‌ கண்டேன்‌ ஈதேஎன்‌
றுந்து காத லுடன்மொழிய
உவந்தான்‌ வமுகு நன்னாடன்‌. 43

ஆழி முதலைம்‌ படையொடும்பால்‌
ஆமி நடுவிற்‌ றுயில்மாயன்‌
மாமி பலவாங்‌ கோடிகளென்‌
றுரைக்கும்‌ காலம்‌ கணமென்ன
வாழி யெனவக்‌ குறுங்குடிவாழ்‌
்‌ வார்க்குப்‌ பல்லாண்‌ டினிதோதிச்‌
சூழி மதமா கரியனையான்‌
துணைவி யொடுந்தன்‌ நகரடைந்தான்‌. 44

நம்மாழ்வார்‌ திருவவதாரம்‌
அடைந்து துயர்நீத்‌ துறைநாள்வாய்‌ ப
ஆமி தனைமந்‌ தரவரையால்‌
கடைந்து மருந்தன்‌ றளித்தான்றன்‌ கழற்றொண்‌ டியற்றி வருநாளில்‌
முடங்கி நலிந்த சிறியவரும்‌
முயற்சி யின்றிப்‌ பதவிபெறக்‌
குடைந்து தேனுண்‌ சுரும்பார்க்கும்‌ j
குழலார்‌ நங்கைத்‌ திருவயிற்றில்‌; 45

கடல்சூழ்‌ உலகம்‌ புகழ்ந்தேத்தக்‌
காரி யெனும்பேர்‌ .புனைந்தோன்செய்‌ – ்‌
*… திடமார்‌ தவத்தால்‌ துவாபரத்தில்‌ :
இகழும்‌ அந்தத்‌ தாவணியில்‌ |
இடமார்‌ இருபத்‌ தேழென்னும்‌ ்‌
இசைசேர்‌ தேதி தனிலொளியாய்‌ ,
அடல்சேர்‌ கலியின்‌ வெப்பகற்ற ்‌ ர
அருள்மா முகில்போல்‌ சென்றுற்றான்‌.–46-மூன்றாம்‌ யுகத்தில்‌ உடைய நங்கையார்‌ வயிற்றில்‌ திருமால்‌ சென்று தங்காள்‌.

மங்கு லனையான்‌ தாய்வயிற்றில்‌
மருவிக்‌ கருவாய்‌ உருவாகத்‌
தங்கள்‌ வதனம்‌ விளர்ப்பெய்தத்‌
தெரிய்‌ மருங்குல்‌ பெருந்தனத்துப்‌
பொங்கு முகத்துக்‌ கருமைநனி
பொலிய வியர்வோ டயர்வெய்த
மங்கை: தென்றல்‌ நடைகற்க
வளர்த்தான்‌; மதியை யிரண்டளவும்‌,–47-

மெலியும்‌ கலிவை காசியினில்‌
மேவும்‌ விசாக நன்னாளில்‌
பொலிவு மிக்க கடகமெனப்‌
புகழ்சேர்‌ ஓரை தனில்பொங்கி
மலியுங்‌ கடல்கள்‌ அத்தனையும்‌
மகிழ்வி னெழும்பி மறிதிரையாம்‌
ஒலிகொள்‌ முரசம்‌ இனிதார்ப்ப
உதித்தான்‌ ஒருசு ரியனெனவே. 48

காரியாரும்‌ உடைய நங்கையும்‌ உற்ற களிப்பு
பெற்றி மிக்க அறம்வளரப்‌
பேரார்‌ இராமன்‌ தோன்றியநாள்‌
சற்றும்‌ பொய்யில்‌ தசரதன்கா
சலையோ டந்நாட்‌ டவர்கள்முகம்‌
செற்றம்‌ நீங்கப்‌ பேரன்பில்‌
சிறந்த தென்னக்‌ காரியுடன்‌
பற்று மிக்க நங்கையரும்‌
பதிவாழ்‌ வாரும்‌ களிப்புற்றார்‌. 49

பேரிற்‌ றந்து நிறைசடரைப்‌
பெற்ற கொடியு முளங்களிப்பக்‌
காரி யாரும்‌ விரைந்துற்றுக்‌
கவினார்‌ சேயின்‌ முகங்கண்டு வேரி மலர்ச்சந்‌ தனமுடைபொன்‌
விதையா பரணம்‌ சருக்கரையும்‌
மாரி பொழிவ தெனத்தானம்‌.
வழங்கி யுளத்தின்‌ ம௫ழ்வடைந்தார்‌. 50

மாறன்‌ என்று வைத்தனர்‌ நற்பேர்‌ :
புரமட்‌ டவனும்‌ நான்முகனும்‌
…. புருகூ தனும்விண்‌ ணாட்டவரும்‌
பரவிப்‌ புகழ்தற்‌ கரிதாமப்‌ ட.
பரமன்‌ செயல்க எளாராய்ந்தார்‌;
மரபிற்‌ புகலும்‌ பெயர்காரி
மாறன்‌ என்று சுற்றத்தார்‌ .
கரமிட்‌ டுழக்க வைத்திட்டார்‌ ட
களிப்பா மமுதம்‌ அளித்திட்டார்‌. 51

மாறன்‌ மாயையை வெல்லுதல்‌ –
இம்முறை யவர்களெல்‌ லாரு மின்புறச்‌ ்‌
செம்மலு மாயையைச்‌ சதைய வென்றதால்‌
விம்மிவாய்‌ திறந்தழான்‌ விழிதி றந்திடான்‌
௮ம்மலர்‌ பொருவுதா ளசைந்தி டானரோ. 52 ‘

மலமொடு சலம்விடான்‌ மருவிப்‌ பாலுணான்‌
இலகுயோ கந்தனி லினிதி ருந்தனன்‌
உலகுடை ஒப்பிலா வுருவந்‌ தாங்கியும்‌
அலகிலா இன்பங்கள்‌ அளித்தி டானரோ, 53

தாய்வயிற்‌ றுஇத்திடில்‌ சார்ந்து வாட்டிடும்‌
மாயையைக்‌ தடிந்ததெவ்‌ வாறு? மற்றிதற்‌
காயதோ ருபாயம்யா மறிந்து லேமெனத்‌
தூயநன்‌ மனத்தினர்‌ தொடர்ந்து நோக்கினார்‌. 54

(வேறு)
மேனிவா டாமல்‌ உள்ளம்‌
வெதும்புதல்‌ சற்றும்‌ இன்றி
மோனியாய்‌ நாளும்‌ நாளும்‌
முகமலர்‌ விளக்கம்‌ பெற்று
வேனிலான்‌ இவனே என்று
‘விளம்பிட வனப்பை யுற்றான்‌
வானிடை உறைவோர்‌ பூவின்‌
மழைபொழிந்‌ தார்த்திட்‌ டாரால்‌. 55

இசைதரு புனித மைத்தன்‌
எழிலுறு முகார விந்தம்‌ ்‌. அசைவிலா திருப்ப நோக்கி
யருந்தவத்‌ தினிதின்‌ ஈன்ற வசையிலா மயிலை யொப்பாள்‌
காரியார்‌ மாழ்கி நைந்து
நசைநனி பெருகி யோங்க-இன்னணம்‌ நவில்வ தானார்‌: 56

உடைய நங்கையின்‌ புலம்பல்‌
அந்தமில்‌ காலம்‌ யாம்செய்‌
அருந்தவப்‌ பயனால்‌ வந்த
விந்தையார்‌ மகனே! தூய
விர தியே! உனக்கு நாயேன்‌
சிந்தையால்‌ செய்கீங்‌ கென்னோ?
இரண்டஎன்‌ முலையை உன்பொன்‌
சுந்தர வாயிற்‌ சவ்விச்‌
சுவைத்தும்பா அணவொ ணாதோ? 57

கண்ணினுள்‌ மணியே பொன்னே
கண்டிகை ஒதுக்கி என்றன்‌ ச
தண்ணமு தனைய பாலைத்‌
ககவுடன்‌ சுவைத்தல்‌ இதோ?
புண்ணியத்‌ தாள்க ளாலெம்‌
புயத்திடை யுதைக்கொ ணாதோ?
நண்ணுநின்‌ இரிப்பால்‌ யாங்கள்‌
நற்களிப்‌ புறலா காதோ? 58:

என்றும்நீ யன்பின்‌ மேவும்‌
எழிலுறு புதல்வ னாக
ஒன்றிய வுள்ளத்‌ தோடும்‌
உலகளந்‌ தவனை நோக்கி.
நின்றுபன்‌ னாட்கள்‌ நோன்பில்‌
நிறைந்தநின்‌ தந்த -யானோன்‌
தன்றிரு வுளத்தி லன்பு தழையநீ நோக்கி டாயோ? 59

நலமெலா மினிதின்‌ ஓங்க
நான்மக வுயிர்த்த காலைப்‌
பல.மணிக்‌ கணங்கள்‌ மேவிப்‌
பயின்மணித்‌ தொட்டில்‌ ஏற்றி
யலம்வரல்‌ முற்றும்‌ தீர்த்திட்‌
டம்புலீ! வருக என்னக்‌
கலமென இனிய தாகக்‌
காண்தவம்‌ செய்தி லேனோ? ்‌ 60

அருத்தியில்‌ லானென்‌ றோரா
ஐயவிக்‌ கொங்கைத்‌ தீம்பால்‌ :
உருத்தலால்‌ வருத்து கின்ற துயரேனும்‌ ஒஓழிக்கொ ணாதோ?
உரத்தலர்‌ மங்கை வாழும்‌
ஒருவனன்‌ றினிதின்‌ ஈன்ற
வரத்திலென்‌ வயிற்றில்‌ வந்த
மைந்தனே! முறையோ? சொல்லாய்‌. 61

பெருமைசால்‌ பரிசா ரம்வாழ்‌
பெருந்தகை யுனது பாட்டன்‌
அருமைமீ தூரப்‌ பொன்னால்‌
அழகுறப்‌ புனைந்து தந்த குருமணித்‌ தொட்டில்‌ குற்றும்‌
கோலமார்‌ வெயிலி னாலே
இருமுகம்‌ மலர்ந்து கண்கள்‌ சிறப்பயாம்‌ நோக்கொ ணாதோ? 62

ஓவிய மனையாய்‌! நின்பே
ரொளியினிற்‌ கண்வை யாதே
காவியங்‌ கண்வேற்‌ கொண்ட
காரிகை மார்கள்‌ தம்முள்‌
நாவினால்‌ ஏசி ஏ
நகைசெயல்‌ பிறர்வாய்க்‌ கேட்டேன்‌
பாவியேன்‌ இதலால்‌ வேறு
படுமொழி கேட்கொ ணாதோ? 63-

**சமஸ்கிருத சாஸ்இரங்களிலே பல
காலும்‌ சுண்‌ வையாமல்‌…… திருவாய்மொழி முதலான அருளிச்செயலிலே
பரிசலனம்‌ பண்ணிக்கொண்டு”” என்பது ‘*யதீந்த்ர ப்ரணவப்‌ பிரபாவம்‌””.

உன்திரு முகத்தின்‌ கோலத்‌
தோங்கிநல்‌ லுவகை காட்டும்‌
புன்சரிப்‌ பூடரனே என்னோ
புரிந்துநீ நோக்குப்‌ பாரா
இன்பமுற்‌ றிருக்கின்‌ றாற்போல்‌
இருந்தனை யோடு போலத்‌
தென்படு கின்ற தையா
இருமுலைப்‌ பாலு ணாயோ? 64

உள்ளத்து ஞணருந்‌ தன்மை
யுற்றுளாய்‌[ வாட கில்லாய்‌/
வள்ளலோ டலதென்‌ னோடிம்‌
மர்மத்தை. யுரைக்கொ ணாதோ?
மெள்ளவாய்‌ மலரொ ணாதோ?
விம்மிநன்‌ கழவொ ணாதோ?
-கள்ளமோ? எம்மோ டென்னோ காழ்ப்புனக்‌’ குற்ற தைய 65

உடையநங்கையார்‌ பாங்கிமாரொடு புலம்பல்‌
இன்னணம்‌ பலவா றாக
எடுத்தெடுத்‌ தியம்பும்‌ போதும்‌
அன்னமா மதலை மேனி
யசைத்திடான்‌; விழியால்‌ காணான்‌;
மன்னுமவ்‌ வாறு காண
மலர்க்கண்‌ ரருவி சோரப்‌
பின்னரும்‌ பாங்கி மாரோ
டின்னணம்‌ பேச லுற்றாள்‌: . 66

இங்கே வடிவழகிய தம்பிதாசர்‌ உடைய நங்கையார்‌ வாயிலாகப்‌ பாடும்‌
பாடல்கள்‌ யாவும்‌ கல்லையும்‌ கனியச்‌ செய்யும்‌ நீர்மையன, “தப்பா நிலையார்‌
கவமே! தமிழ்மாறா — அப்பா முலையிரண்டும்‌ விம்மிநான்‌ ஆற்றகல்லேன்‌. —
ஒப்பாரில்லாதாய்‌! சுரந்து பீர்‌ ஓடுகின்றது; — இப்‌ பால்‌ அருந்தாய்‌! நான்‌ என்‌
பிழைத்தேன்‌ இன்னமுதே’* — :*ஓக்கலைமேல்‌ வைத்தோர்‌ கரத்தால்‌ உனைத்‌
தாங்கித்‌ -தக்கமுலை யூட்டத்‌ தவம்‌ முன்பு செய்யாதேன்‌: — மக்கடமைப்‌ பெற்ற
மடவார்‌ முகம்‌ நோக்கி. வெட்கினேன்‌ மைந்தா, விதியிலியேன்‌ ஆனேனே”*
என்னும்‌ பாடல்கள்‌ முற்றும்‌ சோகமயமானவை.

வரமிருந்‌ தடியேன்‌ பெற்ற
மதலைபோற்‌ செய்கை தானும்‌ .
இரமுறும்‌ வடிவும்‌ பெற்ற சிறுவரை உததி கூழும்‌ கரையிலா வுலகில்‌ யாண்டும்‌
கண்ட துண்டோ?மற்‌ றோர்கள்‌
பிரமையாய்‌ உரைத்த ,துண்டோ?
பேசுவீர்‌[ பேசு வீரால்‌. 67

செகமெனுங்‌ கவளந்‌ தம்மைச்‌
சிறுபச வந்த வாற்றால்‌
அகமுவப்‌ புடனே உட்கொண்‌.
டணிகுறுங்‌ குடிசேர்ந்‌ தாங்குத்‌’ துகவுடன்‌ மேவு பெம்மான்‌
தான்பிறக்‌ குதுமென்‌ றாற்போல்‌ .
மகமுயர்‌ வெய்தி யோங்க |
மாயனே உதித்திட்‌ டாலும்‌; 68!

கண்ணிய அன்பு ளாள்போற்‌ : ்‌
சார்ந்தபூ தனையாம்‌ வஞ்சப்‌ ந
பெண்ணுவப்‌ புளாள்போல்‌ தந்த
பெருந்தனி விடத்தோடம்‌ பொன்‌
வண்ணமார்‌ முலைப்பா லுண்டு
மகழ்ந்துளோன்‌, வருந்திப்‌ பெற்று
நண்ணியான்‌ தருபா லுண்ண j
நாணமுற்‌ நிருக்கன்‌ றானோ? 69

குருகை மான்மியம்‌ பாடிய கவியரசர்‌
இருக்குருகைப்‌ பெருமாள்‌ கவிராயர்‌, மாறன்‌ இருவவதாரச்‌ சருக்கத்தில்‌, .
*அலகை வஞ்சகக்‌ கஞ்சன்‌ என்‌ பான்விடும்‌ ;
அலகை மாமுலை உண்டுஅதன்‌ ஆவியுண்டு ந
உலக முண்டவன்‌ உள்ளமுண்‌ டான்குலத்‌ ்‌
இலக நங்கை தஇிருமுலை உண்கிலான்‌” ர்‌
.. என்றும்‌, ச
. “வெள்ளத்‌ தாலிலை மேற்றுயில்‌ வித்தசு ;
உள்ளத்‌ தானை உணர்வெனும்‌ கண்ணினுள்‌ (1
ட்‌ ஆ
கொள்ளப்‌ பார்வை குறிப்பல்‌ லால்புறக்‌
கள்ளத்‌ தால்வரும்‌ காட்சிகள்‌ காண்கலான்‌”*
” என்றும்‌ இருவாய்‌ மலர்ந்தருளி உள்ளார்‌,

மருவுமாய்ப்‌ பாடி யின்கண்‌ ்‌
‘வளரும்நாள்‌ மனத்தி னூடே ்‌ |
வெருவுறு வஞ்சத்‌ தோடு
வேற்றுரு வமதாய்‌ வந்து  கருதரும்‌ துயர்செய்‌ தோனைக்‌
காலினால்‌ உதைத்தோன்‌, தன்னை
அருகுறும்‌ என்னை மெல்ல .:
அசைத்துதைத்‌ தழவொண்‌ ணாதோ? 70
உறுசுவைத்‌ தயிர்பால்‌ வெண்ணெய்‌
உறிக்குட மிறக்கி யுண்ணச்‌
செறுவுடன்‌ ஆய்ச்சி வந்து
சினந்துபின்‌ தொடர்ந்து பற்றிப்‌
பெறுகுறுங்‌ கயிற்றால்‌ அந்நாள்‌
பிணித்தகல்‌ லுரலி னோடு
மறுகிடத்‌ தவழ்ந்தோன்‌ என்கண்‌
மலரமுன்‌ தவழொ ணாதோ? 71
சருவமும்‌ செய்ய வல்ல
…. தலையயன்‌ எழுத்திவ்‌ வாறோ?
மருவுநீர்ச்‌ ரத்தா னோடு
மலர்மிசை யிருந்து வாழும்‌
ஒருவனும்‌ அறியொ ணாத
ஒப்பிலான்‌ புனித மூர்த்தி
தஇருமகிழ்‌ துளவத்‌ தாரான்‌
திருவிளை யாட லாமோ? 72

படுக்கவைத்‌ திடிலவ்‌ வாறே
-படுத்தவா நிருப்பன்‌; மார்பத்‌
இடத்தில்வைத்‌ திடிலவ்‌ வாறே:
இசைந்தசை வற்றி ருப்பன்‌;
எடுத்திடை தனில்வைக்‌ திட்டால்‌
இருந்தவா நிருப்பன்‌; நங்காய்‌
அடுக்குமோ இவ்வா றெங்கும்‌
அவனியிற்‌ கண்ட துண்டோ? 73

சான்றோர்‌ உரை
இத்தவா நாகத்‌ தான்தன்‌ பாங்கியோ டிரங்கிக்‌ கண்ணீர்‌
ஓந்திநித்‌ திலம்போல்‌ வீழச்‌
சந்தையில்‌ தளருங்‌ காலை
வந்திடுங்‌ குரவ ரோடவ்‌
வாசகம்‌ முற்றுங்‌ கூறத்‌
தந்தம துளந்தேர்ந்‌ தங்குச்‌
சாற்றினர்‌ ஏற்றம்‌ மிக்கார்‌. 74

அம்மகே ளிவ்வா றெய்தும்‌
அருந்துயர்‌ முற்றும்‌ ஆதிச்‌
செம்மறன்‌ வதனம்‌ நோக்கிச்‌
செப்பிடில்‌ நீங்கி டும்மென்‌
றெம்முள மதனிற்‌ றோன்றும்‌;
இதனைநீ ராய்ந்து கேண்மின்‌;
உம்முளத்‌ திட்ட தேவை யுகந்துநீர்‌ வேண்டிக்‌ கொள்வீர்‌. 75

என்றுகொண் டவர்க ளெல்லாம்‌
இயம்புதல்‌ கேட்ட லோடும்‌
நன்றுநன்‌ றென்னச்‌ சிந்தை
நலமருள்‌ உவப்பின்‌ மூழ்கித்‌
துன்றிருத்‌ துணைவ னோடுஞ்‌
சஞ்சலம்‌ முற்றும்‌ ஓட
ஒன்றிய மனத்த ராகி
யுள்ளினார்‌ பரிவு மிக்கார்‌. 76

வையம்‌: முழுதும்‌ தரிந்துழன்று ்‌. வாடி வாடிப்‌ பிறைசூடி
கையம்‌ படையாய்‌ எனை உகந்து
காத்தி காத்தி எனப்பணிய
ஐயம்‌ பெய்தன்‌ றிரப்பகற்றும்‌
அமலன்‌ ஆகித்‌ தனிமூர்த்தி, செய்யும்‌ பரிசங்‌ கஇவையல்லால்‌
பிரிதொன்‌ றில்லை எனத்தேர்ந்தார்‌. – 77

ஆதிநாதன்‌ கோயிலை அடைந்தார்‌
அதுவுந்‌ தெளிது மெனவுளங்கொண்
டம்பொன்‌ மணித்தொட்‌ டினிலோடும்‌
புதல்வன்‌ றனைக்கொண்‌் டக்குருகூர்‌
பொருந்து மாதிப்‌ பெருநாதன்‌
குதுக லத்தோ டினிதமரும்‌
கோயில்‌ முக்கால்‌ வலம்வந்து
இதயந்‌ தெளிந்து மிக்குறுமன்‌
பெழிலார்‌ தொட்டி லுடன்வைத்தார்‌. 78

ஆழ்வார்‌ தவழ்ந்து திருப்புளி உற்றார்‌
வைத்த உடனே வைத்திட்ட
‘வாறே கடக்கும்‌ தவக்குழவி
கைத்து. நெகழ்வார்‌ தமைப்பார்த்துக்‌
கண்கள்‌ களிப்பாய்‌ நங்கையெனும்‌
மைத்த டங்கண்‌ பெருந்தேவி
மகிழ தோக்கி முறுவலித்துத்‌ .
தனிமா முகில்போல்‌ தவழ்ந்தேகி; — 79

நம்மாழ்வாரின்‌ திருக்கோலம்‌
ஒப்பில்‌ பெருமான்‌ கோவில்புறத்‌ |
துற்ப வித்த தஇிருப்புளிக்கீழ்‌
வைப்பென்‌ றமரர்‌ புகழ்ந்தேத்த ட ச
மருவி மகிழ்வோ டினிதஇிருந்து .
செப்பற்‌ கரிய பொருளுணர்த்தும்‌ .
இருமெய்ஞ்‌ ஞான முத்திரையை
நட்பில்‌ வலப்பாற்‌ கரங்காட்ட *
நவில்செங்‌ கரத்தை மடியிருத்தி; ்‌ 80

பாரோர்‌ வியப்பின்‌ மயமாகப்‌
பதும மலர்க்கண்‌ விழியாமல்‌’
ஏரார்‌. மவுனக்‌ குகையின்கண்‌ ட ன ஏ
.. எய்தா. வாக்கி -னைச்செலுத்தி ட:
ஓரா உணரா நம்பெருமான்‌ :
ஒருகால்‌ வருவா னோவெனவோ
சீரார்‌ தென்றல்‌ முகம்வருடத்‌ . தெற்கு முகமாய்த்‌ திகழ்ந்திருத்தான்‌. 81

இரு முதுகுரவரும்‌ பிரியாதிருந்தனர்‌
கருதற்‌ கரிய தவக்கோலம்‌
கண்ட காரி மாறனும்கார்‌
மருவு வண்ணக்‌ குழற்செங்கை
மடவாள்‌. தானும்‌ அந்தநாளில்‌
. பொருவில்‌ கனவிற்‌ பகர்ந்தபடி
போந்த நாரா யணன்‌என்றே
இருளில்‌ நெஞ்சிற்‌ றெளிவெய்தி
யென்றும்‌ பிரியா திருந்தனரால்‌. – 82

மதுரகவியின்‌ வரலாறு
– இங்கனம்‌ இன்னவர்‌ இருக்கு நாளிடை
சங்கையில்‌ பகிரதன்‌ தவத்திற்‌ றோன்றிய
கங்கையா டிடச்செலும்‌ கனத்த மாதவ மங்கலத்‌ தணுகிய மதுர கவியரோ. 83

மதுரகவியார்‌ சோதி கண்டார்‌
– ஓர்‌இனம்‌ .தெக்கண முவந்து நோக்கலும்‌ :
பார்மிசை யிருந்துபல்‌ கோடி கோடியாம்‌ ”
– சூரிய ராமெனத்‌ துலங்கி யோங்இிடும்‌ ட
பேரொளி -விண்மிசை பிறங்கக்‌ கண்டனன்‌. 84

சோதியைத்‌ தொடர்ந்தார்‌ – யமுனை உற்றார்‌ த
கண்டுள மதனிடைக்‌ கலக்க நெஞ்சகம்‌ od
கொண்டதை யறிகுவம்‌ என்னும்‌ கொள்கையால்‌ : .
தெண்டிரைக்‌ கங்கையை நீத்துச்‌ சேந்தநெய்‌ ‘ ன
உண்டமா தவனுறை யமுனை யுற்றனன்‌. – ’85

வேங்கடம்‌ பணிந்தார்‌
தங்கட லெண்ணியச்‌ சிறுமை செய்தவர்‌ i
தாங்கடை தேறவே சார்ந்து காத்தவன்‌ . !
Came மெய்தியே விரும்பிப்‌ போற்றினன்‌ i
தேங்கட மாலினின்‌ னருளைத்‌ தேக்கினான்‌. ‘ +, , 5 OE 86

திருவரங்கம்‌ சேவித்தார்‌
கரங்களாற்‌ பணிந்துளங்‌ க௫யுந்‌ தொண்டர்போல்‌ ‘
கரங்களா லேற்றியே கனியும்‌: பொன்னிகூழ்‌ :
அரங்கமா நகரினை அன்பின்‌ உற்றனன்‌ ட்‌ அரங்கமாய்‌ வளர்மனத்‌ தாசை பொங்கவே. , 87

அழகரைப்‌ போற்றினார்‌
காலையும்‌ மாலையுங்‌ கனிந்து தேவர்சூழ்‌
சோலையம்‌ பொருப்பினைத்‌ துன்னி யன்புடன்‌
பாலையுந்‌ தயிரையும்‌ பாடி யில்நுகர்‌
மாலையவ்‌ வழகரை வணங்கிப்‌ போற்றினான்‌. 88

கூடலழகரைப்‌ பரவினார்‌
பாடலும்‌ மனைதொறும்‌ பந்தொ டம்மனை
ஆடலும்‌ அணைமிசை யணையு மன்பரோ
டூடலும்‌ மலிந்தசீர்‌ மதுரை யுற்றுப்பொழ்‌
கூடலின்‌ அழகன்தாள்‌ குறுகிப்‌ போற்றினான்‌. 89

வில்லிபுத்தூர்‌ மேவினார்‌
மிகுந்தவத்‌ துயரினை மேவி டாதுநல்‌
வகுந்தினை யருள்வட பத்ர சாயிவான்‌
புகுந்திருப்‌ பாதமும்‌ புகழ்ப்பல்‌ லாண்டினாற்‌
சுகந்தரு பதங்களுந்‌ தொழுது வாழ்த்‌ இனான்‌. 90

வைகுண்டக்‌ கள்ளபிரானை வாழ்த்தினார்‌.
இரும்பொழிற்‌ காரிரு ளெறிந்தி டுந்திரை
பெருந்திரு மணிகளால்‌ பிறங்கு சீர்பெறும்‌
இருந்துநற்‌ பொருளையைச்‌ சேர்ந்த மாநகர்‌ வருங்களப்‌ பிரானடி வணங்கி வாழ்த்தினான்‌. 91

தகவுறும்‌ தனியிடஞ்‌ சார்ந்துள்‌ ளன்பொடும்‌
அகமறப்‌ பொருநைநீ ராடித்‌ தென்கரை ‘
சகமெலாம்‌’ வியப்புறத்‌ தயங்கு மாடமேல்‌
முகில்தவழ்‌ குருகைமா நகரம்‌ முன்னினான்‌. 92

மதுரகவியாழ்வார்‌ கண்ட சோதி |
நாடியா யிரம்பண ரேந்தி நாடொறும்‌ _
பாடுற உயருபு படர்ந்து மீதெழும்‌
பீடுறு புளியினிற்‌ ப்ரகாச மொன்றியே
. ஆடலார்‌ பொந்தினு எடங்கக்‌ கண்டனன்‌. 93

கண்டுளங்‌ கனிந்துநின்‌ றவர்க்குக்‌ காசினி
உண்டவன்‌ திருவருள்‌ உவப்பின்‌ நல்கலும்‌
பிண்டமாம்‌ வினையறப்‌ பிரதெக்‌ கணம்‌்புரிந்‌
தண்டரும்‌ எய்திடா அகமுற்‌ றானரோ. 94

வலம்புரி காலையில்‌ வடபு றத்தினில்‌
– இலங்குறு கண்களா லினிது நோக்கலும்‌
துலங்குறப்‌ பொலிதவச்‌ சோதுக்‌ காதியை நலங்கெழு புளியுளே நாடிக்‌ கண்டனன்‌. 95

இந்தசிற்‌ நிடந்தனில்‌ எங்கும்‌ யாவுமாய்‌
அந்தநற்‌ பராபரன்‌ அடைந்து ளானெனச்‌
சிந்தையுட்‌ டெளிந்திடத்‌ தேர்ந்து காதலால்‌
வந்தவ ணிருந்துளோர்‌ வதனம்‌: நோக்குபு; . 96

மதுரகவிகள்‌ வினா
ஈங்குறும்‌ அதிசயம்‌ ஏது? கூட்டமாய்‌ ்‌
நீங்களெல்‌ லோர்களும்‌ நின்று நோக்கல்‌என்‌?
. பாங்குற விழைந்திடாப்‌ பரமன்‌ யாவனோ?
்‌. ஆங்கதை விளம்புமென்‌ றன்பின்‌ ஓதினான்‌. 97

காரிமாறன்‌ விடை
நீரிய னுரைத்தசொல்‌. நெறியிற்‌ கேட்டவர்‌
– ஆரியர்‌ திலகநீ யறிதி யாலெனா
மாரியிற்‌ பொழிகர வள்ளல்‌ மாதவக்‌
காரிமா றனுமெதிர்‌ கழறல்‌ மேவினான்‌. 98

புத்திர னிலாமையாற்‌ புந்தி நொந்தழும்‌ பத்தினி யுடனடி பேணிப்‌ பற்றுடன்‌
எத்திசை களும்புகழ்‌ எழிற்கு றுங்குடி அத்தல மதனிடை யணுகிப்‌ போற்றினோம்‌. 99

அருந்தவ மிழைத்திட ‘ வந்தக்‌ கங்குலில்‌ – –
-பொருந்துறக்‌ கனவினிற்‌ புகுந்து மாதவன்‌
திருந்துறு புதல்வரிச்‌ செனனத்‌ தஇில்லையால்‌
-வருந்தியெம்‌ மிடந்தனில்‌ வந்து வேண்டினீர்‌; 100

ஆதலா லுமதிடத்‌ தன்பு கொண்டுயாங்‌
காதல ஸனாகுவங்‌ கருத்து .ஸசூற்றிடும்‌
வாதனை தீர்ந்துமா நகர மன்னுமென்‌
ஹோதினான்‌ மகழ்வொடிவ்‌ வூர்வந்‌: துற்றனம்‌. – 101

உற்றபின்‌, என்மனை ஒருசு தன்றனைப்‌
பெற்றனள்‌; அன்னவன்‌ பேச லுண்ணுதள்‌
அற்றனன்‌; மலசலம்‌ யாதும்‌: கண்டிலோம்‌;
மற்றுமன்‌ பிலாமலே :-மவுனி யாயுளான்‌. 102

இங்கே நம்மாழ்வார்‌ தாலாட்டைப்‌ பார்க்கவும்‌.
… பாலுண்ண வில்லை, பசித்தழவோ தானுமில்லை;
்‌ மேலுண்பான்‌ என்றால்‌ விழியும்‌ திறக்கவில்லை;
உச்சி குளிரவில்லை; உள்ளங்கால்‌ வேர்க்கவில்லை;
அச்சங்கை யுண்டாம்‌ அரிவையரிங்‌ செய்தவில்லை’*
என்று நயம்படப்‌ பாடப்பட்டுள்ள

மாசிலா அன்புளாய்‌/ வைய மீதுறப்‌
பூசுரர்‌ பெருந்தவம்‌ பொருந்திற்‌ றாதலால்‌
கூசியாம்‌ எம்தவக்‌ குலமு றைப்படி ்‌
வாசியார்‌ ௪ருடை மதலை யைக்கொமே; .103

செம்மலே! எம்துயர்‌ இர்த்தி நீயென
இம்மகன்‌ றன்னொடும்‌ எய்து யாம்மிக
விம்மலுற்‌ றமுதருள்‌ வேண்டிச்‌ செப்பியே
மைம்முகில்‌ மாதவன்‌ முன்பு வைத்தனம்‌. 104

வைத்தலும்‌ சரிய மதலை யாங்கணே
சத்துவம்‌ பொலிவுறத்‌ தவழ்ந்து சென்‌ றிவண்‌
இத்திறம்‌ நிட்டையி லிருந்த திவ்வணம்‌
புத்திர ரிருப்பதுப்‌ புவியு லுண்டுகொல்‌! _ 105

அன்றுதொட்‌ டின்றள ours ஆண்டுகள்‌
சென்றன எட்டிரண்‌ டிதனைத்‌ தேர்ந்திட
என்றுமிங்‌ கெய்துவர்‌; இவர்கள்‌ யாவரும்‌
ஒன்றியே காணவந்‌ துற்று ளோர்களாம்‌. 106

தேன்றுளி துளவணி செங்கண்‌ மாயவன்‌
யான்றவ மிழைத்ததற்‌ கமைய என்மனை
யீன்றவிம்‌ மதலையா மென்று வெம்பினோன்‌
சான்றுளோ ஸூணர்ந்திடச்‌ சாற்றி னானரோ. 107:

துரகவிகள்‌ வினாவும்‌ ஆழ்வார்‌ விடையும்‌
அன்னது கேட்டதும்‌ அருளின்‌ ஆழியாய்‌
மன்னுமாழ்‌ வார்மருங்‌ கெய்தி மாண்புறக்‌
கன்னமாங்‌ இரண்டினிற்‌ கதுமெ னப்புகத்‌ துன்னிட வெடுத்திது சொல்ல லுற்றனன்‌. 108

சிற்றிதின்‌ வயிற்றினிற்‌ சிறிய தாயதொன்‌
றுற்றிடி லெதனைத்தின்‌ றுறையும்‌ எவ்விடம்‌
மற்றிது புகலென மதுர மாக்கவி
சொற்றலு மவன்விடை சொல்லி னான்ரோ. 109

தெய்வம்‌ ரீயே எனப்‌ பணிதல்‌
றெவ்விடம்‌ இருக்கும்‌ என்றனை
அத்தைத்தின்‌ றங்கனே அமையும்‌ என்றுயர்‌
உத்தரஞ்‌ சொல்லலும்‌ ஒப்பில்‌ வேதியன்‌
சித்தமுள்‌ ஞூறைந்திடும்‌ தெய்வம்நீ என்றான்‌. 110

எத்தைத்‌ தின்று எங்கே கிடக்கும்‌ என்று வினாவினாய்‌. அத்தைத்‌
தின்று அங்கே Be deeb”? என்று ஆழ்வார்‌ உத்தரம்‌ சொன்னார்‌. சேட்ட வேதி
யன்‌ “தெய்வம்‌ நீ’ என்று கூறினான்‌.
செத்தது – பிரகிருதி (உலகம்‌ – உ.டல்‌). சிறியது – ஆன்மா. எத்தைத்‌
தின்று – எதை அனுபவித்து. எங்கே கிடக்கும்‌ – எங்கே இருக்கும்‌ (வினா).
அத்தைத்‌ தின்று- அப்‌ பிரகிருதியை அனுபவித்து. அங்கே கடக்கும்‌ – அந்தப்‌
பிரகிரு தியிலேயே வாழும்‌ (விடை). :
நம்மாழ்வாரைக்‌ கண்டதும்‌ மதுரகவிகள்‌ ”இச்சோதியோ என்‌ இதயம்‌
உருக்கெயது; முச்சோஇியினும்‌ முழுச்சோதி என்றிறைஞ்சினார்‌” என்று பேசிய
தாசுத்‌ தாலாட்டுக்‌ கூறும்‌.

(வேறு)
படியின்‌ மீதினில்‌ — வடிவு கொண்டருள்‌
அடிகள்‌ மீதுதன்‌ — முடிய ணிந்தனன்‌. 111

காரி மாறனும்‌ — பாரி நங்கையும்‌
சேரு மானந்த — வாரி மூழ்கினார்‌. . 112

போரி யங்குகோ – ளூரில்‌. வந்தருள்‌சீரி யோனுமுள்‌ — வாரி யாயினான்‌. 113

மன்னு மன்பினான்‌ — தன்னை யீன்றவர்‌
உன்ன ருங்களி — துன்ன ஓதுவான்‌. 114

மதுரகவிகளின்‌ புகழுரை
ஓப்பி லாப்பரம்‌ — குப்புற்‌ றெய்தநீர்‌
செப்பருந்‌ தவம்‌ — நட்பிற்‌ செய்துளீர்‌. 115

பொங்கு மாழியில்‌ — அங்கு பாலனாய்த்‌
தங்கு மாதவன்‌. — இங்கு வந்தனன்‌. 116

இங்கு, தாலாட்டு, நம்மாழ்வாரைப்‌ பார்த்து, **கரிய திருமேனி எங்கே? கை
நான்கில்‌ இரண்டெங்கே? பெரிய திருவுந்இயினில்‌ பெற்ற பிரமனெங்கே?
பாக்த்தில்‌ வாழும்‌ பரசுதரித்தோன்‌ எங்கே? ஆகத்தில்‌ வாழும்‌ அலர்மேல்‌ மடந்தை
யெங்கே? ௮ண்டமுண்ட செவ்வாய்‌ அரவிந்தப்‌ பூ விதுவோ? பண்டகலம்‌ ஏழும்‌
பரந்தளந்த தாளிதுவோ? : ஆலம்‌ தளிரில்‌ அடங்கும்‌ வடிவிதுவோ? சலம்‌ பலவுந்‌
தெளித்துணரக்‌ கூடுமோ”’ என்று மதுரகவிகள்‌ பேசியதாகக்‌ கூறுகிறது. ்

நேச மோடிருந்
தாசில்‌ நற்றவம்‌ — தே௫ற்‌ செய்குளீர்‌. 117

பூர ணன்றனைச்‌  பெற்றுளீர்‌
தேர தாதினோர்‌ — பாரி லில்லையால்‌. . 118

நன்று செய்துளீர்‌ — ஒன்று மஞ்சலீர்‌
என்று ரைத்துணர்ந்‌ — தன்று வைகினான்‌. 119
120.
_ “121

சிவனு நான்முகத்‌ — தவனு மேத்துமா |
தவனிவ்‌ வாறதாய்‌ — புவன . மெய்இனான்‌. – 122

காத லாலினி — வேத மாவதை
ஓது. வான்றமிழ்‌– போத மாகவே, ~ (123

என்ன வேயுளத்‌ — துன்னி யங்கதை
முன்னர்‌ நாளரி — சொன்ன வாறினே. 124

மதுரகவிகள்‌ பட்டோலை பிடித்தார்‌
‘சட்ட மோடுகை — தொட்டுப்‌ பண்புடன்‌
பட்டி னோலையைக்‌ — இட்டி யேந்தினான்‌. – 125

மதுரகவிகள்‌ விண்ணப்பம்‌
அம்மா றன்றன்‌ அருகினில்வந்‌
தழகார்‌ நான்கு புயம்மறைத்து
* இம்மா நிலத்தை மேன்மேலும்‌,
இனிதாய்‌ உயர்த்த வேண்டுமென
நம்மாழ்‌ வாராய்ப்‌ புவியுற்றாய்‌[
நாரங்‌ களினுள்‌ ஞூறுபொருளே
தம்மா மனத்தி லுணராமல்‌
சலிக்கின்‌ றார்கள்‌ இவரெல்லாம்‌. 126

மாய்கை யியற்று ம௫மையதால்‌
மண்ணில்‌ தோன்றும்‌ ஆன்மாக்கள்‌
தாயி. னகமுற்‌ றிடுமனிதன்‌ சகத்தை உணராத்‌ தன்மையைப்போல்‌ நேய முடையான்‌ றனைமறந்தார்‌;
நிகரில்‌ பெரியோய்‌! இப்போதே
ஆய வருக்குற்‌ றுபதேசம்‌ |
அளிப்பாய்‌ என்றான்‌ கோளூரான்‌. 127

நான்கு புயம்‌ மறைத்து என்ற இடத்தில்‌,
“சேமம்‌ குருகையோ்‌ 2? செய்யதிருப்‌ பாற்கடலோ?
தாமம்‌ பராங்குசமோ ? நாரணமோ ?-* தாமம்‌
துளவோ ? வதுளமோ? தோளிரண்டோ ? நான்கோ?
உளவோ பெருமான்‌ உனக்கு”* :
என்ற சங்கத்தார்‌ பாடலை ஒப்பிட்டுக்‌ காண்ச,

பெருமாள்‌ காட்சி வழங்கல்‌
எண்ணி யுளத்திற்‌ கருடன்மிசை
ஏறி உலகம்‌ உவப்பெய்தக்‌
கண்ணு தலும்பூ வுறைவோனும்‌
கரங்கள்‌ கூப்பி மருங்குவர
– விண்ண வரும்பூ வடிபணிந்து
விரும்பிப்‌ போற்றக்‌ கடல்குழும்‌
மண்ணி லுறையும்‌ சடகோபன்‌
மருங்கு வந்தான்‌ மாயவனே. 128

நறவ வனமா லிகையணியும்‌
நலமார்‌ மகுடந்‌ தருசுடரும்‌
பறவை யினங்கள்‌ தமக்கரசாய்ப்‌ பயிலும்‌ பெருமான்‌ விடமகற்றும்‌ சிறகி னொலியும்‌ விசும்பிடையே
சிறப்பக்‌ கரிய ஞாயிறென
உறலு மகழ்மா றனுமிதெனோ
ஓலியென்‌ நுறப்பிற்‌ கண்விழித்தான்‌. 129

இருகண்‌ விழித்து நோக்குதலும்‌ எழிலார்‌ கடலின்‌ புனல்‌உண்ட
கருமா முகில்செந்‌ தாமரையின்‌
கானம்‌ மலர்ந்து தடித்திலங்கும்‌
பருதி யொடுவெண்‌ மதியினொடும்‌
பலவா முடுவின்‌ குலமுடனும்‌
உருமே றுடனுங்‌ ககனமிசை
யொளிர்ந்துப்‌ புவிக்க ணுறுவதுபோல்‌; 130

வயங்கு கங்கை தருபொற்றாள்‌
வதனம்‌ இருகண்‌ வாய்கரங்கள்‌
தயங்கு மகுடம்‌ . மணிக்குழைகள்‌
சங்கம்‌ H&A வாள்தண்டம்‌
இயங்கு கதைபொற்‌ பணிதியுடன்‌
சீரார்‌ விசும்பில்‌ மலர்பூத்த
கயங்கொள்்‌ எழிலோ டமலன்வரக்‌
கண்டு மாறன்‌ களிப்புற்றான்‌. 131

ஏரார்‌ கோலந்‌ தனைக்கண்டான்‌;
எதிர்சென்‌ றாடிப்‌ புவியுறவே .
வேரா விதுரா அழலினிடும்‌
மெழுகா யுருகி யெதிர்நின்‌ றான்‌;
ஆரா வமுதே[ எனப்புகன்‌ றான்‌:
அழுதான்‌ இரித்தான்‌ பாடிட்டான்‌;
சீரார்‌ மலர்ப்பூந்‌ இருவடிக்கீழ்‌
சென்னி யிருத்தித்‌ துதிசெய்வான்‌. 132

நம்மாழ்வார்‌ துதித்தல்‌ *
ஓயா! போற்றி! கருணைநிறை;
அத்தா! போற்றி! ஓம்படைசேர்‌
கையாய்‌! போற்றி! பேரன்பிற்‌
களித்தாய்‌] போற்றி! கருங்கொண்டல்‌
மெய்யாய்‌! போற்றி! வேதாந்த
விளக்கே! போற்றி! மாணிக்கப்‌
பையாய்‌! போற்றி! ஒப்பில்லாப்‌
பரமா! நின்பொற்‌ பதம்போற்றி 133

மாயா! போற்றி மரசுதமா
மலையே! போற்றி! செம்பவள .
வாயா! போற்றி! மறைதேடும்‌
வடிவோய்‌! போற்றி! பாடிவளர்‌
ஆயா! போற்றி! விதிக்கு மறை :
யறைந்தாய்‌! போற்றி! பூவையொடுங்‌
காயா மலர்மே னியா/போற்றி/
கருணா கரநின்‌ கழல்போற்றி! ்‌.. 134

ஆழி மதித்த புத்தமுதை யமரர்க்‌ களித்தாய்‌! தொலையாத
ஊழி பலவாங்‌ கோடிகளும்‌
ஒழியாய்‌! புகழ வாயில்லாத்‌
தாழி தனக்கும்‌. உயர்வீடு
தந்தாய்‌! இடங்கர்‌ வாய்ப்பட்ட
சூழிமா மதமா கரியினருந்
துயரந்‌ துடைத்தாய்‌!’ பல்லாண்டு. . 135

விண்ணி லுறையும்‌ கடவுளர்கள்‌
மேவிக்‌ காப்பாய்‌ என்றுரைப்ப,
மண்ணி லயோத்தித்‌ தயரதன்சர்‌
மகவாய்‌ உதித்தாய்‌! அருள்மீஇட்‌
டெண்ண லரிய கோடிகளாய்‌
இலங்கு மரக்கர்‌ தமைக்காலற்‌
குண்ண அளித்த கோதண்ட
முடைய பரனே! பல்லாண்டு! 136

என்னப்‌ .பலவாம்‌’ செய்கைகளை
எண்ணி யெண்ணி மனங்குளிர்ந்து
பன்னி மகழ்விற்‌ றுதிசெய்து
பரமா! பரமா! தேனுண்டு
தென்ன தெனவென்‌ றளிமழுரலும்‌
சரார்‌ துளபம்‌ பொலிமார்பா।
பன்னு மிதனைக்‌ கேட்டியெனப்‌
பராங்கு .சனுமீ துரைத்திட்டான்‌. 137

கூவிக்கொள்
இந்த வுடலத்‌ துடன்புவியில்‌
இந்நாள்‌ காறு மிருந்தலுத்தேன்‌; உந்த னடியைப்‌ பிரிந்தடியேன்‌
உழன்றேன்‌; மாலே, இனியா ற்றேன்‌;
வந்து மாயை தொடருமுனம்‌
வந்தே யெய்தத்‌ துடிக்கின்றேன்‌;
அந்தப்‌ பரம பதவுலகம்‌
அடைய விழைந்தேன்‌ என்றனனே. 138

பெருமாள்‌ விருப்பம்‌ –‘வேதம்‌ பாடுக
ஏரின்‌ மிக்க மொழிகேட்டுச்‌
சிவனோ டயனே முதலானோர்‌
பாரில்‌ தவங்கள்‌ புரிந்தாலும்‌
படிவம்‌ தெரியாப்‌ பரஞ்சுடராய்‌
வேரி மருவும்‌ இங்களனியாய்‌
வித்தாய்‌ இலங்க, வரையளித்த
நாரி விரும்பு முயர்ந்ததிரு நாம முடையோன்‌ இதைதநவில்வான்‌: 139

உலகை எழுப்பும்‌ கதிரவன்போல்‌
ஒளியார்‌ மணிகள்‌ கொழியாழி
இலகு திரைபோல்‌ வரும்பிறவி
இடரால்‌ உயிர்கள்‌ வாடினகாண்‌ மலரு முளத்தாய்‌] அருளின்றி
வருவேன்‌ என்னில்‌ அக்கருமம்‌
தலமீ தன்பி னுடன்புரியத்‌
தக்கோர்‌ எவரே சாற்றுவையால்‌. : 140

கோதில்‌ வேத உச்சியினிற்‌
கூறு முடிவாம்‌ பொருளதனை
நாத முறுசெந்‌ தமிழ்மொழியில்‌
நான்கு வருணத்‌ தவர்தமக்கும்‌
சாத னஞ்செய்‌ யோகியர்கள்‌
தமக்கு மாகும்‌ படியோதி
மாத வத்தின்‌ பெரும்பயனை
மாந்தர்‌ இனிதே பெறவுஞற்றி; — – 141

(வேறு) | ்‌
வாய்மொழி வழங்கி வருக
மருவு மிச்செயல்‌ புரிதற்கு முன்வரல்‌ வழக்கன்‌
ஐருமை யாம்செயல்‌ புரிகுதி; மாயையென்‌ பதுதான்‌. ….
இருமை யுங்கெடுத்‌ தெய்திடும்‌; இதன்வயப்‌ படாமல்‌
வெருவு றாமல்நீ வாய்மொழி வெளியிட்டு வருவாய்‌! 142

மாயம்‌ வல்லவன்‌ இன்னவா றியம்பி,வை குந்தத்‌
தேயும்‌ ஆசையான்‌ இப்புவி இருப்பனோ என்று
நேய மாய்வெகுண்‌ டென்மொழி நீமறேல்‌; அருளின்‌
நாய .காரஎனப்‌ பகர்ந்தனன்‌: நான்மறை முதல்வன்‌. 143

பந்தம்‌ யாவையும்‌ நீக்கிடும்‌ பசியகார்க்‌ கொண்டல்‌
இந்த வாறுரைத்‌ தேகினன்‌; ஏகலும்‌ கலங்கும்‌
சிந்தை யிற்றெளி வெய்தினன்‌; திருவுளங்‌ களித்தேற்‌
த்த மாறனும்‌ அயர்வெலா மகற்றினன்‌ அம்மா! 144

மாறன்‌ பெயர்ந்திலன்‌
மூன்பு: தானமைந்‌ திருந்துள முறைமையைத்‌ தேர்ந்து துன்ப மாமெனச்‌ சொலும்பெருஞ்‌ சாகரம்‌ துறக்க
இன்ப மாமெனும்‌ மரக்கலங்‌ கொடுக்கவந்‌ இடுதல்‌
பின்பு தானமைந்‌ இடுதலால்‌ பெயர்ந்திலன்‌ மாறன்‌. 145

திலமி ருந்துமா மாயையை நீக்குதற்‌ கரிதாம்‌
பலவு யிர்களும்‌ படித்துநல்‌ லுணர்வினைப்‌ படைத்‌்தஇட்‌
டலகன்‌ மாதவத்‌ தவர்களு மறியொணா வமலன்‌
உலக மேவியாங்‌ குறையடி யார்களோ டுறவும்‌; 146

மாய னாருரை வழுவுறா தியற்றவும்‌ மனதுள
நேய மாய்மறைப்‌ பொருளினைத்‌ தமிழ்செய்வா னினைந்திட்‌
டாய மாறனு மத்திருப்‌ புளியிடை யமர்ந்து
தூய மாமது ரக்கவி சுடர்முக நோக்கா; 147

வேதம்‌ அவதரித்தது — இருக்கு வேதம்‌
நன்று நீயெழு துகவெனா நவின்றருங்‌ கவியாய்‌ :
ஒன்று மாறுபொய்‌ நின்றஞா னமும்பொல்லா வொழுக்கும்‌
என்றெ டுத்துயர்‌ இருவிருத்‌ தம்மென இருக்கில்‌
துன்று கின்றசா ரந்தனைத்‌ துலங்கநா றுரைத்தான்‌. 148

யசுர்‌ வேதம்‌ — அதர்வண வேதம்‌
விரிவ தாமெசுர்‌ வேதசா ரந்தனைத்‌ திருவா
சிரிய மென்றெழு: கவிதையாய்ச்‌ செப்பினன்‌; அதன்பின்‌
பரிவி னோடதர்‌ வணம்பகர்‌ சாரத்தைப்‌ பெரிய
திருவந்‌ தாதியென்‌ றெண்பத்தேழ்‌ கவியதாய்ச்‌ செய்தான்‌. 149

சாம வேதம்‌ _..திருவாய்மொழியின்‌ மாண்பும்‌ கருத்தும்‌
செழியுஞ்‌ சாமவே தத்தின்சா ரந்தனைத்‌ திருவாய்‌
மொழியோ ராயிர நூற்றிரண்‌ டோடுகவி மொழிந்தான்‌;
அழிவி, லாதுயர்‌ பதவிசென்‌ றணுகுறு வோர்க்கு
‘வழியெ. லாங்குளிர்‌ மரங்களே மல்கட வம்மா! 150

அப்பெ ருந்திரு வாய்மொழி தனிலறைந்‌ ததுவோ.
இப்பெ ருங்கட லுலகெலா மீன்றுகாத்‌ தழிக்கும்‌
_முப்ப ரம்பொரு ளாகியும்‌ முடியுமன்‌ னாள்வாய்‌
ருந்திருப்‌ பாலனா யோருரு வமைந்தே. 151.

அடைய லைக்கடல்‌ வண்ணமோ! டயனரன்‌ முதலாய்‌
அடைய வுந்தன துருவினுள்‌ ளடக்கியோ ராலின்‌
அடைய டைந்திடு நாரண னேபர மவன்றாள்‌
அடைய வேண்டுமிவ்‌ வுடலமோ- நிலையிலா தழியும்‌. 152

: I படிய ளந்தநா ளயனொடு பரமனும்‌ . பிறரும்‌
முடியொ டுங்கழற்‌ றெரிவுற தோக்குதன்‌ முடியா
நெடிய தாந்திரு விக்ரம வடிவநேர்ந்‌ துவனோ
அடிய ராமவர்க்‌ கெளியவன்‌ பிறர்தமக்‌ கரியான்‌. 153

பரவு மப்பெரும்‌ பராபரன்‌ பாடியின்‌ வளர்நாள்‌
கரவி னூடுநெய்‌ ‘பால்ததி பருகுதல்‌ காணா
அரவ வல்குலி னாய்ச்சியர்‌ வெகுண்டுவந்‌ தடித்திட்‌
டுரலு டன்பிணித்‌ இடவெவ்வா, றுறைந்தனன்‌ என்னா; 154

ஆழ்வாரின்‌ மோக பரவசம்‌
தேறு ளந்தனி னினைதொறும்‌. நினைதொறும்‌ தியங்கா
கூறு தற்கருஞ்‌ சோகமுட்‌ கொளப்பொதா மையினால்‌
வேறு மோருரை விளம்புறா மோகமே விளங்கி
ஆறு தஇிங்கள்தன்‌ வாய்திற வாமலங்‌ இருந்தான்‌. ்‌ 155

தாயார்‌ பாசுரம்‌
்‌. மீள வுந்தெளிந்‌ தொருமூறை விளம்பியே தானோர்‌.
“வாள மைந்தகண்‌ மடமங்கை யாகவும்‌ வளர்முள்‌
தாள தாமரை மலர்மிசைச்‌ சார்ந்துறை திருவை
ஆளு நாரணன்‌ புருடனா கவுமுளத்‌ தமைத்து? 156

கள்ள லம்புபைந்‌ துளவவக்‌ காகுத்த ரிடத்தில்‌.
புள்ளி னங்களைத்‌ தூதுதான்‌ விடுவது போலும்‌
உள்ள மைந்தவா தனத்திடத்‌ துறுவது போலும்‌
தெள்ளு செந்தமிழ்க்‌ கவிபல செய்திடு மமைதி. 157

நூற்றெண்மர்‌ காட்சி வழங்கல்‌
ஒளிய ரங்கமே முதலநூற்‌ .றெண்பதி யுறையும்‌
துளிம துக்கமழ்‌ துளவணி மாலைமார்‌ பினரும்‌
களிது லங்கவக்‌ கவிகளைக்‌ கேட்குதல்‌ கருதிப்‌
புளியென்‌ றோதுமத்‌ தருவரு கனிற்பொருந்‌ தினரால்‌. 158

பனுவல்‌ பாடுமின்‌
பின்ன ருங்களி துலங்கிப்பற்‌ பலவிதம்‌ பெறவே
மன்னு மாறன்முற்‌ றுணர்ந்தவ னாமென மனதுள்‌
உன்னி நன்குணர்ந்‌ துகந்துகந்‌- துருகுறப்‌ புகழ்ந்து பன்னு செந்தமிழ்ப்‌ பனுவல்கள்‌ பாடுமின்‌ என்றும்‌; 159

௪னையு மாகடல்‌ sae pone மருந்தைமோ: கினியாய்‌
நனைகொள்‌ கற்பக, நாடருக்‌ களித்தரு ணாதன்‌
நினைவு றும்பொழு (தேநெடி தாம்பல வின்பந்‌
தனையு எளங்களி துளங்கிடத்‌ தருகுவ னெனவும்‌; 160

கதிர வன்றனை யமரிடை த்‌ துற்களைக்‌ கணவன்‌
மதிம ருண்டுயிர்‌. மாளவும்‌ வானுறை புலவோர்‌
அதிசெ யம்பெரி தடையவு மறைத்தவா ியர்க்குத்‌
– துதிசெய்‌ தேத்துமத்‌;தோத்ரமே முக்கிய மெனவும்‌; 161

சவையி னிற்றுரோ !பதியபி மானந்தாங்‌ கெனவே
கவலை யுற்றழைத்‌ ,திடவுடை யருள்கண்ண ஸனடியார்‌
அவய வங்களி லணுகிவீற்‌ -நிருந்தவர்‌ தம்பால்‌
எவையு மின்புற வனுபவித்‌ இடுபவ னெளவும்‌; 162

(வேறு)
துவரிதழ்க்‌ கருங்குழற்‌ றூய மெய்த்தவச்‌
சவரியுற்‌ நிடப்பதந்‌ தந்த மாண்பினான்‌
எவரிடத்‌ இினுங்கைமா றெதுவும்‌ நோக்குறா
தவரிடத்‌ தன்புவைத்‌ களித்து ளானென்றும்‌; 163

மாத்துய ரங்கொளும்‌ வார ணந்தனைக்‌
காத்தரு ஞம்செழுங்‌ கமல நாபனைப்‌
பார்த்திடா தனை நிக ராகப்‌ பாருளோர்‌ தோத்திரிக்‌ கின்றனர்‌ துயருற்‌ றென்னவும்‌; 164

சிந்தையுண்‌ ணினைந்திடச்‌ சக்கி ரத்தெதிர்‌
வந்தருள்‌ புரிபவன்‌ வஞ்ச முற்றெதிர்‌ |
முந்திவந்‌ தமர்புரி முட்டி கன்னொடும்‌ ்‌
தந்தமா கரிபடச்‌ சாடினோ ஸனென்றும்‌; 165

எருதுகைக்‌ கரிபரி யெதிர்ப்பக்‌ காய்ந்திடும்‌
அருமறை முடிவனை அனுப வித்திட
மருவியுற்‌ றென்னொடும்‌ வரத்த குந்துளோர்‌
இருநில மிசையெ வரிருக்கின்‌ றாரென்றும்‌; 166

தென்புறப்‌ பகைவர்மேல்‌ தரி யேவினோன்‌
முன்படைந்‌ தொழிவிலா முத்தர்‌ தம்மொடும்‌
அன்புடன்‌ கண்டனு பவிக்கன்‌ றேனென்றும்‌; 167
்‌
வன்புறப்‌ புகலிலா துலகில்‌ வாழுயிர்‌ [
‘ ச
….. திரைக்குலங்‌ காத்திட நீள்வி ரல்கொடு
| வரைக்குடை. பிடித்துக்கன்‌ மாரி மாற்றிய |
இரைக்கடல்‌ வண்ணர்பாற்‌ சேர்ந்தென்‌ செய்கைகள்‌ ட
உரைப்பரோ விவர்களென்‌ றுரைத்த தாகவும்‌; 168°

பன்னருந்‌ துயரினைப்‌ பாங்கி மார்களும்‌
அன்னையர்‌ களுமடைந்‌ தம்பு யத்துவாழ்‌
“பொன்னையா ஸூடைப்புரு .டோத்த மன்னொடுஞ்‌ |
சொன்னதா” கவுங்கவி சொல்லுங்‌ காலையில்‌; 169:

பெருமாள்‌ பரமபதக்‌ கோலங்‌ காட்டினான்‌
அந்தபா சுரங்களுக்‌ கன்புற்‌ றாங்கவன்‌
சிந்தையுட்‌ டோன்றியே சிறப்ப மைந்தவை
குந்தநல்‌ லிருப்பதாங்‌ கோலங்‌ காட்டினான்‌
பைந்தலை யரவணைப்‌ பள்ளி நாரணன்‌. 170

தூண்டருஞ்‌ சுடர்விளக்‌ கனைய சோதியைக்‌
காண்டலு முளந்தனிற்‌ களிப்புற்‌ றோங்கிட
மீண்டுபா சுரங்களை விளம்பி யேத்தினான்‌
யீண்டிது வேயழ காகு மென்றனன்‌. 171

கடுவமர்‌ களனொடுங்‌ கமலத்‌ தோனொடும்‌
நெடுமுகன்‌ மேனியோய்‌ நிகரி லாதறின்‌
வடிவிலுன்‌ றிருவடி. வலிந்து ளேனினி
விடுகில னென்னவும்‌ விளம்பு மெல்லையில்‌; 172°

இரு முதுகுரவர்கள்‌ பரமபதம்‌ பெறல்‌
சிரீதரன்‌ பணிவிடை செய்து வைகுவோர்‌
காரியார்‌ நங்கையார்‌ கழறுஞ்‌ சுற்றத்தவ்‌
ஊரரினோர்‌ தமக்குமே லுலகம்‌ நல்கினான்‌ வேரியந்‌ துளவணி விமல மாதவன்‌, : 173

அன்னதை யுணர்ந்தமா றனுமுள்‌ ளன்பொடும்‌
பின்னரு மோதுவான்‌: பிரமன்‌ றாதையார்‌
என்னையொப்‌ பாகவென்‌ சுற்றத்‌ தார்களும்‌
மன்னிட வுயர்பதம்‌ வழங்கி னாரென்றும்‌; 174

இத்திற முயர்பத முமெமக்கு மெய்திடற்‌
குத்திடு முலகுளீ ௬லகம்‌ யாவையும்‌
வைத்திடு மகடுள மாத வன்மலர்‌
ஒத்திடு மடித்தொழி லுஞற்று மென்னவும்‌:; 175

வேதமுற்‌ றுரைதவம்‌ விழைந்தி ழைத்திடு மாதவ ர௬ுளந்தொறும்‌ வாழு மாதவ
நாதனை யளித்திடு நளின மாமலர்ப்‌
பாதனைத்‌ துதஇிசெயும்‌ பதவிக்‌ கென்னவும்‌; 176 :

குரைகடல்‌ வண்ணர்தங்‌ கோல மெய்துதா
——வாழ்வு வேண்டினோர்‌
தரைபுகழ்‌ சோலைகள்‌ ளழகர்‌ தம்மிடம்‌
விரைவுட னேவரு வீர்க ளென்னவும்‌; 177

மீண்டும்‌ சேவை சாதித்தல்‌
இவ்விதங்‌ களிற்கவி யிசைக்குங்‌ காலையில்‌
அவ்விய மவித்தநெஞ்‌ சவனுக்‌ கன்பொடும்‌
செவ்விய திருவுருச்‌ சேவை காட்டினான்‌ ஒவ்வியா லடைக்கட லுறங்கு நாரணன்‌. 178°

திவ்விய மேனி வேண்டினார்‌
அவ்வுரு வனுபவித்‌ ததற்பின்‌ பாசுரம்‌
பவ்வனே ரியவதை யனுப வித்திடற்‌
இவ்வுரு வமைந்ததா காதெ னக்கினித்‌
இவ்விய வுருவருள்‌ செய்யு மென்னவும்‌; 179

அந்தநல்‌ லுருவின்வேங்‌ கடவர்க்‌ காட்செய்யுஞ்‌
சிந்தைகொண் டலரின்மேல்‌ மங்கை தேவனே
இந்தபூ வுலகுட னேழி ரண்டுடன்‌ எந்தபே ருலகமும்‌ யாரு மென்றனன்‌. 180

கனிவுறு முளந்தனிற்‌ கருதி யன்புடன்‌
தனுவளைத்‌ திலங்கையர்‌ தானை செற்றவன்‌
பனிமல ரடியினைப்‌ பணிந்து போற்றிசெய்‌
– தனுபவி யார்தமை யிகழ்ந்த தாகவும்‌; 181

குண்டுவா எளிருஞ்சிலை சங்கு சக்கரம்‌
கொண்டுளான்‌ நிருவுருக்‌ கோலச்‌ சேவையைக்‌
கண்டுள மகழ்ந்திரு கண்க ஸஎளிப்புடன்‌
தொண்டுநு மவர்புகழ்‌ சொன்‌ னதாகவும்‌; 182

அந்தரி யாமியா முருவ மாவதைச்‌
சிந்தைநேர்ந்‌ தறிகுத லரிது சீதரன்‌ வந்தவர்ச்‌ சாவதா ரமதை வன்மையோ
டுந்தமுட்‌ பற்றலே யுற்றவீ டென்றும்‌; 183

பாகவதர்‌ சிறப்பைப்‌ பேசினார்‌
பொன்னையா ரூடையவப்‌ புனிதன்‌ பார்மிசை
மன்னிய திருவர்ச்சா வதார மாவது
தன்னைநெஞ்‌ சதுகொடு தரித்து ளோர்களே
என்னையா: ரூடையவ ரென்ப தாகவும்‌; 184

வடிவது குறளின்மூ வடிமண்‌ வாங்கியே
– படியெலாம்‌ கொண்டடிப்‌ படுத்தி மாவலி
முடிமிசை யடிகவித்‌ துளமு குந்தனார்‌
அடியவர்க்‌ கடியனா னாகு மென்ளவும்‌; 186

மக்களைப்‌ பாடாதீர்‌
பாங்குறு மனிதரைப்‌ புகழ்ந்து பாடியே யேங்கியுற்‌ நிழித்திடா இனிதி வோடுமுந்‌ இங்கடப்‌ புலவர்காள்‌ தேவ. தேவனாம்‌
வேங்கட வனைக்கவி விளம்புவீ ‘ ரென்றும்‌; 186

காற்றருண்‌ மதலையாற்‌ கண்ணி லானருள்‌
‘நூற்றுவ ராவியை நுதிகொள்‌ சூலவெங்‌
.கூற்றுணா வளித்தகோ விந்த னல்லது வேற்றொரு வரைக்கவி விளம்பிடே னென்றும்‌; 187

செல்வமே நிலையிலை தெளிவுற்‌ றொல்லையில்‌
கல்வடி. வகன்றக லிகைக வின்பெறும்‌
நல்வண மெய்தமுன்‌ னடந்த நாரணன்‌ ்‌
பல்வளம்‌ பொருந்துதாள்‌ பற்றுவீ ரென்றும்‌; 188

அன்றிரா வணன்வலி யழித்தொ மித்துப்போர்க்‌
இன்றுபோய்‌ நாளைவா வென்றி யம்பிய
வென்‌ றிவெஞ்‌ சலையனை மேவி யன்பணி
மன்றலர்‌ மாலையை வழங்கு. கென்றனன்‌. … 189

உவந்தவ னிவ்வண மோதுங்‌ காலையில்‌
கவந்தனைக்‌ காய்ந்தகா குத்தன்‌ றானணி
நிவந்தபைந்‌ துளவொடு நிரம்ப வைத்திடும்‌
சிவந்தபூ மாலையைச்‌ சேர்ந்த ளித்தரோ,. 190

பெருமாள்‌ சேவை —
அந்தமாப்‌ புகழ்ச்சட கோப னாயினோன்‌
சிந்தைகன்‌ னையும்புகல்‌ செய்யு டன்னையும்‌
சந்தனம்‌ பணியு டையாகத்‌ தாங்கியே
வந்தவன்‌ நிருமுனம்‌ மருவி நின்றனன்‌. 191

நின்றவச்‌ செய்கையை நெடிது நோக்குறா
ஒன்றுமவ்‌ வாறவ னுவந்து பாடலும்‌
கன்றினால்‌ விளவினை யெறிந்த கார்வணன்‌
அன்றது கேட்டுவந்‌ தகன்று போயினான்‌. 192

Beroybd auivien Sra wpa
வாள்பொரு கண்ணினார்‌ வாச கந்தனை
தாளினாற்‌ சகடிற வுதைத்துச்‌ சாடினோன்‌
கேள்வியுற்‌ நிடும்வகை கிளர்த்தும்‌ வாறதாய்‌; 193

பாட்டிவன்‌ பாடலும்‌ பைய ராவின்மேல்‌
ஆட்டினோ -னாங்கவ ரறைந்த வாசகம்‌
கேட்டுள மஇூழ்ந்துதன்‌ கிருபை கிட்டியே
காட்டலு மிருகணுங்‌ களிப்புக்‌ கொண்டரோ; .194

இத்தக வுடையனா மென்க ணான்றனக்‌
கத்தனைப்‌ பாடுவேற்‌ கரிய துண்டுகொல்‌
சித்தமுட்‌ குறையெனோ வென்று செய்யபா
ஒத்திடத்‌ தனைவியந்‌ துரைக்கு மெல்லையில்‌; 195

ஆழ்வாரின்‌ பிரிவாற்றாமை
பின்னரு மாயவன்‌ .பெயர்ந்து போகலும்‌
அன்னதற்‌ கரங்கிமா தரின முங்கியே
பன்னரும்‌ விரகவா ழியிற்ப டிந்திடக்‌
கன்னியா்ச்‌ செயலினைக்‌ காண்ட லோடுமே; 196

அனையதோய்‌ இரவே வலிதி னாட்கொள
நினையவு மதுதனை நீக்கித்‌ துன்புடன்‌
soo pat வேறிலாத்‌ தன்மை யுள்ளவன்‌
எனையுறப்‌ பிடித்தன னென்ப தாகவும்‌; 197

சானகி யெனுந்திரு தன்னை நாடியே
கானினும்‌ வரையினுங்‌ கடுகச்‌ சென்றுள
மீனமாக்‌ கடல்வணன்‌ வேண்டி லானெனில்‌ .
நானு ம்வேண்‌ டிலனென நவில்வ தாகவும்‌; 198

உலகுளோர்‌ கொடுமையை யுள்ளத்‌ துன்னியிந்‌
நிலமிசை யிருந்திடேன்‌ நீல மேனியாய்‌
சலசலோ சனமுளாய்‌ தயர தன்றவக்‌
குலமணி’ யேயெனைக்‌ கூவிக்‌ கொள்ளென்றும்‌; 199

இருக்குரு கூரெனும்‌ பதியிற்‌ சேர்ந்துவாழ்ந்‌ இருக்குமால்‌ பரம்பிற தேவர்‌ யாவரும்‌
தருக்கிலா வபரமா மெனவுந்‌ தன்னுளத்‌
துருக்கமுற்‌ றுறுங்கவி யோது மெல்லையில்‌; 200

சமயவாதியர்‌ வருகை
(வேறு)
இருமா நிலத்தில்‌ உறுபொருள்க
“ளெவையும்‌ பெருவாய்‌ மலர்ந்துண்ட
பெருமான்‌ ஒப்பில்‌ பரமென்றும்‌
அபரம்‌ பிறதே வர்களென்றும்‌
அருமா மறைகள்‌ விரித்துரைக்கும்‌
அவ்வா றெடுத்துச்‌ ச௪டகோபன்‌
இருவாய்‌ மொழியாம்‌ பிரபந்த மதனுள்‌ வகுத்துச்‌ செப்புதலும்‌; 201

சைவ ரலகா யதர்பவுத்தர்‌
சமணர்‌ முதலாஞ்‌ சமயர்கள்நீ
செய்வ தாமிவ்‌ வருந்தமிழின்‌
இருவாய்‌ மொழியில்‌ வேண்டுபொருள்‌
கைவந்‌ தணுகா மலகமெனக்‌
காட்டி யருள்செய்‌ இடுமெமது
தெய்வங்‌ கள்கமை யபரமமெனச்‌ ;
செப்ப லெவ்வா றெதுகொண்டே? 202

வேதங்‌ .களினு மிவ்வாறாய்‌
விளம்பக்‌ காணோம்‌; . நீர்தாமே
ஓது கன்ற வகையோவென்‌
நுரைப்ப; அதற்கு நகைத்தருளிப்‌ பேதித்‌ துரைத்த திலைவேகம்‌;
பேசு முறையே யுரைத்தேனென்‌
றாதி பரனாம்‌ மகஇழ்மாற
.னருளிச்‌ செய்தும்‌; அவரறைவார்‌; 203

அருமா மறையின்‌ முறைவழுவா
குறைந்தே னென்றாய்‌! அம்மறைகள்‌ –
ஒருநான்‌ கனையு முழுதுணர்ந்தே யோதி னவரு முரைத்ததில்லை;
குருபோ தனைசெய்‌ இடவுணராய்‌;
குறிக்குந்‌. தெய்வ வருளதனால்‌
வருமோ வென்னோ? வந்திருந்தால்‌
வகுப்பா யதையிவ்‌ வாறெனவே; , 204

என்ன வவர்க ஸியம்புதல்கேட்‌
டிவ்வா றுங்கட்‌ கம்மறையை
வன்ன பேத மாதலினால்‌
வகுத்திட்‌ டுணர்த்த லாகாவே;
அன்ன மறையு ளெப்பொருணீ
ரறிய லாகா மெய்ப்‌ பொருள்கள்‌
இன்ன விதமென்‌ றெடுத்துரைப்பி
னியம்பு வேனென்‌ நியம்பினனே. 205

அந்த மொழிகேட்‌ டவர்களெலா
மதனுள்‌ தமக்கு வேண்டுவன .:
எந்த வெந்தச்‌ சங்கிதைக
ளெவ்வெவ்‌ விதமாய்‌ வினவினதற்‌
இந்த விதமா மதன்பொருளென்‌
நெடுத்துப்‌ பொருந்த விசைத்திடலும்‌ –
குந்தம்‌ முளத்தில்‌ பரமாவோன்‌ ்‌
தனிநா ரணனென்‌ றவர்தெளிந்தே; 206

ஐய மிலதா மிப்பொருள்தேர்ந்‌
தறியா மையினால்‌ அடியேங்கள்‌
வெய்ய மொழிகள்‌ பல.பலவாய்‌
…. விளம்பிற்‌ றெல்லாம்‌ பொறுத்தருள்‌ நீ
செய்ய வேண்டு மெனவவர்கள்‌ .
இருமா லுருவாய்த்‌ திகழ்மாறன்‌
துய்ய How worry udev
தொழுதாங்‌ ‘கெதிர்தின்‌ நிவைசொல்வார்‌. 207

வைய மதன்மேற்‌ பரநூல்கள்‌
– வகுத்துக்‌ கூறுங்‌ கடவுளெலாம்‌
பொய்ய தெனவும்‌ மெய்ஞ்ஞானம்‌
பொருந்திப்‌ பலவா முயிரெனவும்‌
உய்யும்‌ வகைநீ செயுங்கவிக்குள்‌
ளுரைத்த பொருளாம்‌. நாரணனே
மெய்ய தாமப்‌ பரமெனவும்‌
விளங்க வுணர்ந்தோ மாதவினால்‌; ட்‌ 208

சமயவாதியர்‌ திருந்தல்‌’:
எமையிங்‌ கடிமை கொளவேண்டு .
மெனவாங்‌ கவர்க ளதற்குமுனம்‌
அமையுங்‌ கோலந்‌’ தனைமாற்றி
யாழித்‌ இருநா ரணனடியார்‌
குமையொப்‌ பாகும்‌ திருவேடந்‌
்‌.. தாங்கி நிகழ்ந்தோர்‌.. துமைநோக்கு
உமையெம்‌ பெருமான்‌ களிப்பாக
உகந்தாட்‌ கொள்வா னெனவுரைத்தான்‌. : 209

பெருமாள்‌ காட்சி
மாற னவர்கள்‌ உரைத்ததிரு.
வாக்கெட்‌ கடையும்‌ வழுவாதவ்‌
வாறுற்‌ றுரைத்தான்‌; அருள்வேண்ட
வயினத்‌ தருவா கனமதன்‌.மேல்‌ நாறுந்‌ துளவப்‌ படலையணி
நாரா யணன்வந்‌ தெய்தினனால்‌
நீறு ‘புனையுஞ்‌, சவன்முதலோர்‌
நெருங்கிப்‌ பணிந்து துதிசெயவே. 210

விண்ணிற்‌ பொலியுங்‌ கருடன்மிசை
. விளங்குந்‌ திருநா ரணனுருவம்‌
மண்ணுற்‌ றிருந்த பரசமயம்‌
மருவித்‌ துறந்த அவர்கள்தம்‌ “ கண்ணுற்‌ றிடலும்‌ மகிழ்வடைந்து
கருத்துள்‌ ளூருகிக்‌ கரையவெதிர்‌
நண்ணிப்‌ பணிந்து துதித்தேத்தி நணுகா ஸனந்தக்‌ கடல்படிந்தார்‌. 211

மங்களாசாசனம்‌
உகமோர்‌ கோடி தவஞ்செயினு
மொருவர்க்‌ கெனுந்தோன்‌ றாயடியேன்‌
புகலு மளவீ லடைந்துவர்கள்‌
புகழ வெகிர்வந்‌ தணுகினையால்‌
மிகவுஞ்‌ சிறந்த பலனருள
வேண்டு மெனவே பராங்குசனும்‌
அகமுண்‌ மடஒழ்ந்தே இருமங்க
ளாச னத்தை யருள்செய்தான்‌. 212

ஏய வருக்கிங்‌ கிவ்வாறா
யெழில்சேர்‌ காட்சி யளித்ததற்பின்‌
தூய பரம பதமதனைக்‌
தொடர்ந்தாங்‌ கணைந்து வீற்றிருந்தான்‌ ஆயர்‌ பாடி தனின்மதுரை , Line
யதைவிட்‌ டடைந்து முடையடு குப்த
தோயுந்‌ தயிர்பால்‌ நவநீதம்‌ 213

புயலார்‌ மேனித்‌ இருநெடுமால்‌
பூங்கண்‌ மலரா திருந்ததனால்‌
கயலார்‌ கருங்கண்‌ மடந்தையர்போற்‌
காரி மாறன்‌ தானுமிக
மயலாய்‌ மெழுகிற்‌ கரைந்துருகி
வாடித்‌ தருமே னியுந்தளர்ந்திட்‌ டியலா ௬ளத்திற்‌ றிருமடலூர்ந்‌ இருந்தா னிருந்த வெல்லையின்வாய்‌; 214

காம ரிளங்கன்‌ நினையடையுங்
கறவை போலக்‌ குறுங்குடிவாழ்‌
தாமஞ்‌ சிறந்த வழகியசீர்‌
நம்பி யுளத்தின்‌ நயப்புறவே
சோமன்‌ றவழு மதிள்குருகூர்‌
துலங்கும்‌ புளிக்‌ முறைவகுளத்‌
தாமம்‌ புனைந்த சடகோபன்‌
றனக்குக்‌ காட்சி யளித்திடலும்‌; ்‌ 215

யானே அனைத்தும்‌ செய்தேன்‌
சீரா ரிருகண்‌ களிப்பெய்தத்‌
தெரிசித்‌ துளத்தின்‌ மட௫ழ்வெய்தி
நீரார்‌ கடல்சூழ்‌ புவியனைத்தும்‌ நிறைபல்‌ லுயிர்க்குள்‌ ளுயிராகி வேராய்‌ மூல காரணனாய்‌-
விளங்கி மருவுந்‌ திருவுருவ நாரா யணனார்‌ புரிந்ததெலாம்‌
நானே புரிந்த தாமென்றும்‌;. – .. 216

கான மதனில்‌ நட்பமையுங்‌
கதிரோன்‌ புதல்வன்‌ கலக்கமற
வானந்‌ தொடரும்‌ ஏழமுமரா
மரமன்‌ றுருவ வாளிதொட்டோய்‌!
மோனம்‌ பொருந்தும்‌ அடியவர்சேர்‌.
மோட்ச வீட்டிற்‌ பேரின்பம்‌
ஞான முதலா யினவெயையும்‌
நண்ண வெனக்கு நல்கெளவும்‌; 217

சீறு மரவா பரணனெடுஞ்‌
இலையை முறித்துச்‌ சான$க்கு
நாறு மலர்மா லையைப்புனைந்த
நளினக்‌ கரத்தோய்‌! அயடியேற்கு
வீறும்‌ பதவி யளித்திடினும்‌
அளியா விடினும்‌ உனையல்லால்‌
வேறு மொருவ ராதரவாய்‌
விரும்பி விளம்பற்‌ இலையெனவும்‌; 218

மறையோர்‌ செயுமா மகப்புகையும்‌
மடவார்‌ நனைகார்க்‌ குழற்புலர்த்தும்‌
நறையா ரகிலின்‌ கொழும்புகையும்‌ ்‌
நண்ணி யெழலும்‌ புயலெனவே
Keo mun மயில்கள்‌ நடம்பயிலுஞ்‌
சீரார்‌ வல்லை வாழுறுமெம்‌
மிறையோ னடைந்து காட்சியளித்‌
திடலும்‌ நீயே கதியென்றும்‌; 219

காண்ட வனத்தைப்‌ படிபொருந்துங்‌
கனலி யருந்த’ வளித்தருளும்‌ ‘பாண்ட’ வர்க்குண்‌’ ணடுப்பிறந்த
பார்த்தன்‌ மணியா ழியினிரதம்‌. ‘
பூண்ட கவனத்‌ தவளநிறப்‌
புரவி நடத்தும்‌ புயல்வண்ணா/
ஈண்டிங்‌ கடியேன்‌ றன்னையுவந்‌:
இரட்சித்‌ தருளு வாயெனவும்‌; 220

அறுகால்‌ பொம்மென்‌ றிசையுடன்சார்ந்‌
கணுகி யுறுந்தேன்‌ களித்துண்ணும்‌
நறவார்‌ துளவ வலங்கறிரு :
வண்ண நாய கன்னிடத்தில்‌
உறுகா .தலினை விரைவினடைந்‌
துரைமி: னெனவாங்‌ குறுதூதாய்‌
பறவை யினங்க டனக்குரைத்துப்‌ பரிவின்‌ விடுத்த பரிசாயும்‌; 221

ஊடலும்‌ கூடலும்‌
(வேறு)
நாடியம்‌ மாறன தருகு நண்ணிட
வாடிய மனம்தெளி வாய்ம ருங்கிருந்‌
தூடியுந்‌ தேற்றிட வுளங்க லங்கியும்‌ கூடியு மிருந்துள கொள்கை செப்பியும்‌; 222

அக்தர்யாமித்துவம்‌
மூந்திய விண்ணகர்‌ மாயன்‌ மோகமாய்க்‌
கந்தமா மலரிடைக்‌ கலந்த வாறுபோல்‌
அந்தரி யாமியா யணுட வைகுதல்‌
சிந்தியா ஞானமே இறக்கச்‌ செப்பியும்‌; 223

குறைவிலேன்‌
கருமுகி லெனவொளிர்‌ கண்ண ஸனாகியே
மருவுகோ வியரொடு மகிழ்ந்து லீலைசெய்‌
இருவிளை யாடல்கள்‌ செப்பு மென்றனக்‌
கொருகுறை யும்படர்ந்‌ துற்றிடா தென்றும்‌; 284

அலைபுனற்‌ றஐடவரா லருகற்‌ றெங்கினின்‌
குலைபழ முதிர்தரக்‌ குதித்த றைந்திடும்‌ துலைவிலா மங்கலந்‌ துன்னு சார்ங்கவெஞ்‌ சிலைவல மாறனைச்‌. சேர்ந்த தாகவும்‌; 225

வான்பொழி கன்மழை வரையின்‌ மாற்றியே
ஆன்புரந்‌ தளித்தவவ்‌ வாழி யானொடும்‌
தான்படுந்‌ துயரங்கள்‌ தனைத்தன்‌ தாயர்‌3பாய்‌
தேன்பொழி மொழியிற்செப்‌ பியது போலவும்‌; 226

உண்பது முதலிய வுரைக்கும்‌ யாவையும்‌
தண்படு புனற்றடஞ்‌ சாக ரம்மென
விண்படிந்‌ தருந்துகோ ஸூரின்‌ மேவிவாழ்‌
பண்படு மளிவனப்‌ படலை மாலென்றும்‌; 227

அந்தசெங்‌ சுதிருமி மாழி -மாலுக்கென்‌
சிந்தனை பகர்ந்துடச்‌ செல்லும்‌ புள்ளுகட்‌
கந்தமில்‌ லாதமூன்‌ றடுக்கு லோகமும்‌
தந்தன னாமெனச்‌ சாற்றிற்‌ றாகவும்‌; 228

இருவிசும்‌ புறைபவ ரிறைஞ்சி யேத்திட
மருவுவேங்‌ கடமெனும்‌ வரையின்‌ மீதுவாழ்‌
கருமுகில்‌ வண்ணச்செங்‌ கமலக்‌ கண்ணனைத்‌
திருமகள்‌ முதன்மையிற்‌ சேவித்தே னென்றும்‌; 229

இன்னவா முறைமையி ஸிசைபெ றுங்கவி
பன்னுமா றனுமது வரையிற்‌ பண்பொடுந்‌
குன்னையம்‌ மாயவன்‌ தனது யர்ப்பதம்‌மன்னிடும்‌ படிவர வழைத்தி டாமையால்‌; 230

மயலைப்‌ போக்க வேண்டல்‌
அம்புவி யளந்ததாட்‌ கடிமை யாமென
நம்பினோர்‌ தமக்குவீ டளிக்கும்‌ நாரணா
வெம்பியிவ்‌ வுடலினை வெதுப்பு கின்றதாம்‌.
ஐம்புலன்‌ வயத்தெனை பளித்தியோ வென்றும்‌; 231

மயல்கொடிவ்‌ வாறதாய்‌ வ்ருத்து மாதினைக்‌
கயல்விழி யன்னையர்‌ கடிது கொண்டுபோய்‌
புயல்வணம்‌ மால்முனம்‌ பொருந்தி யிட்டவள்‌
செயல்களை யவரொடுஞ்‌ செப்பு கின்றதும்‌; 232

தாட்டிய தறியுளே நார சிம்மமாய்க்‌
காட்டிய திருவுருக்‌ கமல நாபியான்‌
வேட்டைசென்‌ நுறுந்திருப்‌ பேரை மேயவன்‌
தாட்டுணை. யடைந்திடுஞ்‌ சார்ப தாகவும்‌; 233

சித்தமுள்‌ ஞருகிடச்‌ செய்ய கண்முகம்‌
கைத்தலம்‌ உந்திதாள்‌ கமல மாமலர்‌
ஒத்திடுங்‌ கருமுகி லுருவ நாரணன்‌
பத்தவ தாரமும்‌ பணிதல்‌ வேண்டியும்‌; .284

உடுத்திடு முடைக்கட லுடைய பார்மிசை
எடுத்தவவ்‌ வுருவுக டோறு மெம்பிராற்‌
கடுத்துள வரும்பகை யகலு மாறதாய்‌
சுடுத்தொழி கருமமுங்‌ காண வேண்டியும்‌; 235

இச்சைகொண்‌் டுரைப்பதை யுள த்தி லெண்ணியே
பச்சைமா மலையெனும்‌ படிவ வச்சுதன்‌
மச்சமே முதலுரு வமைந்து வாய்த்துள
அச்செயல்‌ யாவையு மறியத்‌ தோன்றலும்‌; 236

வெந்திற லவுணர்கள்‌ முதல வெம்பகை
வத்தது மவைகளை மாற்றக்‌ கொண்டுள
அந்தமில்‌ கோலமு மமைந்த யாவையும்‌
சிந்தைகொண் டுணர்ந்திடுஞ்‌ செய்கை தன்னையும்‌; 237

சீருறு காரணச்‌ செம்ம லாதியில்‌
ஈருரு வங்களி னியந்த இயாவுமோர்‌
ஒருரு வங்களா யுற்ற செய்திகள்‌
பாருளோ ரணர்வகைப்‌ பரிவிற்‌ பாடியும்‌; 238

பரிந்துள த்‌. தழைத்தபாண்‌ டவர்தம்‌ பத்தினிக்‌
குரிந்தவத்‌ இரமுவந்‌ துதவு மாலுரு தெரிந்திடா தகன்றிடச்‌ சந்தை வாடியே
பிரிந்துள துயர்களைப்‌: பின்பு சொல்லியும்‌; 239

உருவெளிக்‌ காட்சி உரைத்தது
அருவென வுருவென்‌ அதல மாமுதல்‌ a
இருநிலம்‌ விசும்புபல்‌ லிடத்து முற்றுமாய்ச்‌ ்‌
சுருபமா னவவெலாந்‌ துலங்கு மாறதாய்‌
உருவெளி கண்டதை யுரைத்த தாகவும்‌; 240

கூவிக்கொள்ளாக்‌ காரணம்‌ யாதோ?
அன்னமாய்‌ மறையயற்‌ கறைந்த மாதவா
நின்னுயர்‌ பதந்தனை நேர்ந்து வைகுதற்‌ இன்னமு மடியனை யழைத்தி டாததிங்‌
கென்னகா ரணமென விசைக்குங்‌ காலையில்‌; 241

கவியிசைப்பதற்கே
மாதவ னவனேதிர்‌ வந்து மன்னியே
பூதலந்‌ தனிலுனைப்‌ பொருந்த வைத்துள
தேதுகா ரணமெனி லிசைபெ றுங்கவி
ஓதுதற்‌ காமென வுரைத்துப்‌ போயினான்‌. 242

சொன்னசொல்‌ லிருசெவி துன்னீ யெய்தலும்‌
இன்னணம்‌ வாழுப கார மேற்கிலேன்‌
அன்னமா யவன்றனக்‌ கரிய மாமறை
என்னகை மாறுள திழைத்த தென்கையும்‌; 243

அத்தகை யியற்றுமா றனைவி வப்பதி
ஒத்துறை நாரண ஸனொளிருந்‌ தாள்களில்‌
சித்தமுற்‌ றடிமையான்‌ செய்தி டுந்தினம்‌
எத்தின மோவறிந்‌ திடுகிலே னென்றும்‌; 244

மாசிலா முழுமதி யனைய வாண்முகக்‌
கோசலை திருவயி றுஇத்த கோவலன்‌ .
ஓளசசயுற்‌ றுளகட லுலக வாழ்க்கையின்‌
ஆசைவிட்‌ டவர்வய மாவ னென்ளவும்‌; 245

முருகவிழ்‌ துளவணி முகுந்த னம்புயத்‌ திருவடி யிணைகளைத்‌ தமது சிந்தையுள்‌ மருவவைத்‌ திடுமவர்‌ வைகுந்‌ தத்தினுக்‌
கருகர்க ளாகவே யமைவ ரென்னவும்‌; 246

அத்தகைய மாயவ ஸனமருங்‌ சீர்வைகுந்‌
குத்தினுக்‌ கருகர்க ளாகச்‌ சார்ந்திடும்‌
முத்தரைத்‌ தெரிசியா முகம லர்ச்சியாய்‌
சித்தமுள்‌ ம௫ழ்ந்திடுஞ்‌ செய்கை யாகவும்‌; 247

முத்தர்கள்‌ தம்மொடு முளரி வாழயற்‌
கத்தனாம்‌ மாதவ னாங்க மைந்தொரு
மித்துறை – பெருமித விதங்க .ணோக்கியே
புத்தமு தருந்தலிற்‌ களிபொ ருந்தியே; ட 248

ர்மடையாயினான்‌
க௱ர்நிற வவுணர்தங்‌ குலத்தைக்‌ காய்ந்திடுங்‌
கூர்வளர்‌ இஇரிகை மாயக்‌ கூத்தனார்‌
வார்மழை: யுறும்புனல்‌ வரத்தன்‌ னுள்ளகால்‌–யாமென நேய மாயினான்‌. 249

எம்பெருமான்‌ ஆழ்வார்‌ உள்ளக்‌ கோவிலில்‌ வாழ்தல்‌
நேயமுட்‌ கொண்டவ Glow ou ழாமலே
தூயநல்‌ லுள்வழி யாகத்‌ துன்னியுற்‌
றாயவ ஸுயிர்ப்புலத்‌ தணுகி வைகினான்‌
மாயமான்‌ பின்தொடர்‌ மாய. னென்பவே. 250

கனைக்குமா இரைக்கருங்‌ கடலின்‌ வண்ணமால்‌
நினைக்குழமுன்‌ றனதுயி ரெனநி ரப்பிய
மனைக்கலந்‌ துறைந்தமை மனங்கொண்‌. டிவ்வணம்‌
எனைப்பிரி யாதுநீ யிருந்து டென்னவும்‌; . 251

முலைமிசைப்‌ பிறைறிகர்‌ முத்தின்‌ றாழ்வடக்‌
கலையணி மாதரிற்‌ கரிய மாணிக்க
மலையவ னேயென மற்ற வன்புகழ்‌
நிலைமையைப்‌ பின்னரும்‌ நேர்ந்து சொல்லியும்‌; 252

அடியார்க்கடியேன்‌
படியினைச்‌ சுருட்டுமோர்‌ பாயெ னக்கொளும்‌
கொடியனை ஏனமாய்க்‌ கொலைபு ரிந்திடும்‌
நெடியமால்‌ திருவடி நேயங்‌ கொண்டுள
அடியவர்க்‌ சடியவர்க்‌ கடியன்‌ யானென்றும்‌; 253

மல்லலம்‌ புவியுளீர்‌ வழங்கி டும்கைமா
றில்லது புரப்பவ ரிலங்கு மாலடி
அல்லது வேறிலை யதனை. நீரறிந்‌
தொல்லையி லவன்பதத்‌ துறுமி னென்னவும்‌; . 254

திருப்பதிகள்‌ மங்களாசாசனம்‌-
பொருப்பென மாளிகை பொருந்து செம்மணி
அருக்கனென்‌ றம்புய முகைய ‘விழ்ந்திடும்‌
இருப்புளிங்‌ குடிகிடந்‌ இடுமத்‌ தேவனை
விருப்புடன்‌ கவிபல விளங்கப்‌ பாடியும்‌; 255

குவித்திரு கண்ணிற்‌ கண்டுளோர்‌
பரகஇ யணுகுறும்‌ படிய எளித்தருள்‌
வரகுண மங்கைவீற்‌ றிருந்த மால்புகழ்‌
விரகுடன்‌ கவிபல விரித்துப்‌ பாடியும்‌; ‘ 256

வைகுந்த மல்குல்க டெரிய வாவிகோர்‌
வைகுந்த . மனையகண்‌ மாத ரார்புட
வைகுந்த மதன்மிசை மருவ வைத்இடும்‌
வைகுந்த நின்றமால்‌ வளங்கள்‌ பாடியும்‌; 257

மீண்டுமப்‌ புளிங்குடி. விளங்கப்‌ பள்ளிகொள்
தாண்டுறு திரைக்கருஞ்‌ சலதி வண்ணனை
ஈண்டுணர்ந்‌ தெனக்கொரு கைங்கிரி யஞ்சொல
வேண்டுமென்‌ றுளந்தனில்‌ விரும்பிக்‌ கூறலும்‌; 258

கேட்டுள wR yb Daur Gris இளர்த்து மின்னிசைப்‌ ட
பாட்டினா லவன்றனைப்‌ படலை மாதவன்‌
ஈட்டுறு முளந்தெளிந்‌ தெழுந்து செய்வினை
யாட்டுறு கயிங்கிரிய மதனைச்‌. செப்பினான்‌. 259

மாயவா வருக!
அம்மொழி யிருசெவி யணுகத்‌ தன்னுளம்‌
விம்முறு முவகையின்‌ மீண்டு மாயவா
, கைம்மலர்‌ மிசைகதி ராழி சங்குடன்‌
வம்மென வழைத்தனன்‌ மகிழ மாலையான்‌. ்‌ 260

வந்தனன்‌ பிரான்‌
அழைத்தவம்‌ முறைகதி ராழி சங்குடன்‌
துழைத்தவன்‌ பொடுமவன்‌ முன்பு சார்ந்தனன்‌
பிழைத்தன வுளங்கொளா தடியர்‌ பேணிமூன்பு ்‌
இழைத்தத$ வினையெலா மிரிக்கும்‌ நாரணன்‌. 261

மறைய வருந்துதல்‌
(வேறு)
சார்ந்த கேசவன்‌ றனையறிந்‌ தாவலார்ந்‌ தொழியச்‌
சேர்ந்த வன்றிரு வடிவினைச்‌ ஈறந்தபே ரன்பு
கூர்ந்த நெஞ்சொடு மனுபவித்‌ தடலுமக்‌ கோலம்‌
தீர்ந்து — இடுதலுந்‌ தனதுளந்‌ இகைத்தே; 262

பறவை கூவுபே சொலியொடு: பாவைய ரொலிகா துறலு மஞ்சிநெஞ்‌ சழிந்துபற்‌ பலவகை யுரைத்தும்‌ நறவ லங்கல்நா ரணனினி நணுகிலாங்‌ கவர்க்குத்‌
இிறமு டன்பல கைங்கிரியங்‌ செய்கருத்‌ இருந்தான்‌. 263 |

இறைவன்‌ அடியன்‌ ஆதல்‌
இருக்கு மெல்லையவ்‌ வடியருக்‌ கெளியனா மவனும்‌
பொருக்கெ னாவடைந்‌ திவர்க்குப்பூங்‌ கேசமே முதலாய்‌
இருக்க ழன்மல ரளவதாய்ச்‌ செயுங்கயிங்‌ இரியம்‌
உருக்க மோடிழைத்‌ இடுதலும்‌ அதையுள முணர்ந்தே. 264

நம்மிருவருக்கும்‌ பேதமில்லை
ஈதெ னோவென மாறனாங்‌ கியம்பலும்‌ எழிற்பூ
மாது கேள்வனு மகிழ்வொடு நம்மிரு வருக்கும்‌
பேத மில்லையொன்‌ றாயிடும்‌ பேரின்ப மெனவே
ஓத லோடுமவ்‌ வாசகங்‌ கேட்டுப்பின்‌ புரைப்பான்‌. 265

தடியெ யிற்றிரா வணன்றனை தனதுவால்‌ கொண்டே
முடியு றப்பிணித்‌ தெழுந்துசென்‌ றிடுமுரண்‌ வாலி
நெடிய மார்பக முருவிடக்‌ கணைவிடு நெடுமால்‌
அடிய ருக்கடி யவனென அகமகிழ்ந்‌ துரைத்தும்‌; 266

தூதனுப்புதல்‌
கார்ப்பெ ரங்கடற்‌ பிரமகற்‌ பந்தனிற்‌ கலிசெய்‌
ஆர்ப்புங்‌ கோடையின்‌ முகின்முழக்‌ கதிர்ச்சியு மவிய
வார்ப்பெ ரும்முழ வதிருமூ மிக்கள மால்பாற்‌
பார்ப்பி னங்களைத்‌ தாதனுப்‌ பியதெனப்‌ பகர்ந்தும்‌; 267

குருதி வேல்வை ரிழந்தநாட்‌ டினைப்பெருங்‌ கொள்கை
௧ர.இ மாநக ரடைந்துகாந்‌ தாரிகா தலநீ
தருதி யென்றுரை தூதனைத்‌ தாதிபோய்‌ சார்ந்து
வருதி யென்றழைத்‌ துறுதன்முன்‌ மனம்பொறா மையினால்‌.–268

திருநாவாய்‌ அணைய விரும்பினார்‌
மன்னர்‌ மூவெழு குலத்தைவேர்‌ களைந்தபோர்‌ மழுவோன்‌
கன்னி ருஞ்சிலை வாங்கியெய்‌ கணை தனக்‌ கன்னோன்‌
முன்ன ருந்தவந்‌ தனையிலக்‌ கருளிய முகுந்தன்‌
துன்னி வாழுநா வாயினைத்‌ தொடர்ந்திட நினைத்தும்‌; 269

மெய்‌ தளர்ந்தார்‌
ஆங்கு மெய்துதற்‌ கமைந்திடா தன்றிலின்‌ தொனியும்‌
மாங்கு யின்முழங்‌ கொலியும்யாழ்‌ வழங்கிடு மொலியும்‌
தேங்க மழ்ந்தபூந்‌ தென்றலும்‌ வருந்திடத்‌ Hoss Oe டேங்கி மெய்தளர்ந்‌ இதயமுங்‌ கலங்கியே யிருந்தும்‌; : 270.

வணங்குமின்‌
அந்த ரத்தவ ரலைகடல்‌ கடைந்தநா எழுந்தும்‌
மந்த ரத்தினைக்‌ கமடமாய்‌ தாங்கிய மாலைக்‌
கந்த ரத்தமர்‌ கடுவ?னா டயன்கட வுளர்கள்‌:
வந்தி செய்கண புரம்சென்று வணங்குமி னெளவும்‌; 271

மதத்த வாரணம்‌ அழைத்திட வந்திடங்‌ கரினைக்‌
கதத்த ழித்தமோ கூரில்வாழ்‌ கண்ணனே பரம
பதத்தி னுக்கருந்‌ துணையென வருகுவன்‌ பாரீர்‌
இதத்து டன்நலத்‌ திருவடி வணங்குமி னெளவும்‌; 272

குரும ணிச்செழுங்‌ கோயின்மேற்‌ குளிர்ந்துகண்‌ ணுறங்கும்‌
தருவ னந்தமா புரமெனச்‌ சறந்தமா நகரே
பொருவில்‌ சீர்ப்பர மப்பத மாகுமம்‌ புவியீர்‌
மருவி யாங்குவாழ்‌ மால்பதம்‌ வணங்குமி னெளவும்‌; 273

அவன்‌ அடியவர்க்கு எளியவன்‌
மீண்டு மாயர்தம்‌ பாடியின்‌ மதுரைவிட்‌ டணுகி
வேண்டு றும்விளை யாட்டெலாம்‌ விரும்பிச்செய்‌ விதங்கள்‌
தூண்டு மன்பொடு :சொல்லியு மாங்கவன்‌ தொண்டு
பூண்ட அன்பருக்‌ கெளியவ னாமெனப்‌ புகன்றும்‌; 274

பின்ன ருங்கவி புகலுவான்‌ கண்ணபி ரானே
பன்னு சீர்ப்பரம்‌ பொருளதா மாதலிற்‌ பாரீர்‌
துன்னு மன்பொடு தொடர்ந்துசென்‌ றெதிர்தொழு தேத்தி
அன்ன வன்திருப்‌ பதமல ரடைகுமி னெனவும்‌; 275

மேனியுடன்‌ பரமபதம்‌ வருக
அன்ன காலைவாட்‌ டாறுடை யச்சுதப்‌ பெருமான்‌
குன்னை யன்பொடு பாடலும்‌ ம௫ழ்ந்தவன்‌ றனைத்தான்‌
பன்னு சீர்ப்பர மப்பத வீட்டின்மெய்‌ யுடனே
மன்னு மாறுகொண்‌ டேகுவான்‌ மனத்திடை நினைந்தான்‌. 276

ஆழ்வார்‌ மறுப்பு
அச்சு தன்துரு வுளந்தனை யறிந்துநம்‌ மாழ்வார்‌
பச்சை மாமுகில்‌ மேனியோய்‌ பல்புமுக்‌ கூடாம்‌
இச்ச ரீரம-தனைக்கொடு போவதற்‌ கஇிதையத்‌ டட
துச்ச ரித்திட லொழித்திட வேண்டுமென்‌ நுரைத்தான்‌. 277

எம்பிரான்‌ வேட்கை
எனக்கு கப்பெனி லென்னிடை யிருந்துவந்‌ துதித்த
உனக்கு கப்புறா தெனாதுட லுடன்கொடு போவேன்‌
மனக்கொள்‌ நீமறுத்‌ தஇடலென மனமகிழ்ந்‌ துரைத்தான்‌
தனக்குத்‌ தானலா தொருவரு நிகரில்மா தவனே. 278

மாயவன்‌ மடிபிடித்திழுத்தான்‌
ஏது ரைப்பினு மினியவ னணுகுற வியையிக்‌
கோது றும்பல புழுமல்கு கூடுகொண் டவணி
போத வீரெழு புவனமோ டகிலமும்‌ பூத்த
மாது கேள்வனே தகாதென மடிபிடித்‌ கிழமுத்தான்‌. 279

அர்ச்சராதி மார்க்கம்‌
இழுத்தி! டும்பராங்‌ குசன்தனக்‌ இதயமுட்‌ கனிந்து
பமூத்த வன்பொடர்ச்‌ சராதிமார்க்‌ கப்பரி சறிவித்‌
துழுத்து கைமடி. யதுதனை விடுவித்துக்‌ கொண்டான்‌
வழுத்து வார்தமக்‌ குயர்பத மருளுமா தவனே, 280

காட்டு மர்ச்சரா மார்க்கமே கடிதுசென்‌ றாழ்வார்‌
மீட்டு மானிட வுருவமாய்‌ மிகுமலப்‌ புழுசோர்‌
கூட்டு வைகின மாதலாற்‌ கூடியே .பரம
நாட்டு றும்மடி யவருடன்‌ பொருந்துதல்‌ நயந்து) 281

பெருமாள்‌ ஆணை
பரம பத்திமீ தோங்குறப்‌ பலவுமீன்‌ றருளும்‌
பிரம னைத்தருந்‌ தாதையைப்‌ பேரன்பிற்‌ றலைமேற்‌
கரம லர்க்குவித்‌ தாணையிட்‌ டடியனைக்‌ கடுக
வரவ ழைத்திடென்‌ றானைபோற்‌ கூவினன்‌ மாதோ. 282

எம்பெருமான்‌ காட்சி வழங்கினான்‌
கூவு பேரொலி யிருசெவி குறுகநா ரணனும்‌
வாவு வெஞ்சிறைக்‌ கலுழன்‌ மேல்‌ மரகத மலைபோல்‌
தேவர்‌ கின்னரர்‌ சத்தர்கள்‌ சவனயன்‌ முதலோர்‌
யாவ ருந்தொழு தேத்திடத்‌ திருவொடு மடைந்தான்‌. 288

ஆழ்வார்‌ பெற்ற பேறு
தெள்ளு தண்புனல்‌ பெருகியே யருகுறச்‌ சேர்ந்த
பள்ள மெய்துறு பான்மையிற்‌ பராங்குசப்‌ பெருமான்‌
புள்ளின்‌ மேல்மச கதமலை போலவந்‌ தருளும்‌
கள்ளு றுந்துள வணியுநா ரணனொடுங்‌ கலந்தான்‌. 284

(வேறு)
இத்தன்மை யாக வுயர்நா ரணன்ற
னெதிர்பேசி யேக மனதாய்‌
ஓத்துச்‌ சிறந்த பரிசும்‌ அவன்ற
னொடுதான்‌ கலந்த செயலும்‌
சித்தம்‌ மகிழ்ந்து ரகஸ்யார்த்‌ தமான
தருவா சகங்கள்‌ பலவும்‌
வைத்துச்‌ சிறந்த தருவாய்‌ மொழிக்கண்‌ வகையோ டுரைக்கு மளவில்‌; 285

அவ்வா றிசைத்த கவிதன்‌ செவிக்கண்‌
அணுகக்‌ குளிர்ந்த மதியும்‌
ஒவ்வாத கோல முறுமா முகங்க
வினவே யொளிர்ந்த பவளச்‌
செவ்வாய்‌ திறந்து நகர்நீ செலற்கு
இருகென்ன வெய்து கெனவே
இவ்வாறு மாலு மாழ்வாரு மமான்றி
யுரையாடு மெல்லை யதின்வாய்‌; 266

கண்ணிநுண்‌ சிறுத்தாம்பு
மறுவொன்றி லாத மதிமா முகத்து
மதுரக்‌ கவிச்சொ லவனும்‌
உறுகாத லோடு மனதுள்‌ எிரங்குி
யுருகா மகிழ்ந்து கணினுண்‌ சிறுதாம்‌. பெனச்சொல்‌ பதினொன்று பாடல்‌
* செழியச்‌ இறந்து வகுள த
நறுமாலை சூடு சடகோபன்‌ மீது
நவிலா அளித்து நவில்வான்‌. 287

மதுரகவியாழ்வாரின்‌ துயரம்‌
அனையைப்‌ பிரிந்த தனமுண்‌ குழந்தை:
யதுபோ லருந்து யரினோ
டுனையின்‌ றிழந்து கடல்கூழு மிந்த
வுலகிற்‌ பொருந்தி டுவனோ’
புனையுங்‌ கவுத்வ மணிநார ணன்றன்‌ r
புகழ்வீட்‌ டினிற்பு குதுநீ
எனையுங்‌ கனிந்த மனதோ டுடன்கொ டேகென்‌ றுரைத்த வளவில்‌; 288

திருமால்‌ கட்டளை
அஞ்சக்‌ கரன்முளரி யயன்மா வரங்கள்‌
அவைகொண்டு வையம்‌ நலியும்‌
வஞ்சக்‌ கரன்ற சக்கிரிப னாதி
மாவா எரக்கர்‌ மடியச்‌
செஞ்சக்‌ கரம்வெள்‌ வளையும்‌ துறந்து
கலையும்‌ வயங்கொள் கணையும்‌
கஞ்சக்‌ கரங்கொள் இருமால்‌ மஇழ்ந்து
கனிவாய்‌ மலர்ந்து ரைசெய்வான்‌; 289

மதுரம்‌ பொருந்து தமிழா லெடுத்து
மகிழ்வோ டுரைத்த கவியோர்‌
பதினொன்று தானு மெனையே துஇத்த
பரிசாகு மாற னையுநீ
நிதமும்‌ கனிந்து பிரியா இருக்கு
நெறிகே ளிவன்ற ஸனிகராய்‌
சதிரொன்று மூர நிகழ்விக்ர கத்தை
சமைவித்‌ தெழிற்கொ ளதனை) 290

நீரார்‌! செழும்பொ ருனையாறு தன்தென்‌
கரையில்‌ .நிகழ்ந்து வளரும்‌
ஏராரு மிந்தப்‌ புளியென்‌ றியம்பி
யிடுமா மரத்தி னடியில்‌
சீரா யெழுந்த ௬ளுமா றநுஞற்றித்‌ தினமும்‌ விதித்த முறையே ஆரா தனஞ்செய்‌ திவனாம தென்ன
வகமுட்‌ பொருந்த நினைவாய்‌. 291

மாறன்‌ மறையை விளக்குக
பின்னும்‌ இவன்செய்‌ மறைநான்‌ கெனச்சொல்‌
பிரபந்த நான்க வையையும்‌
மன்னும்‌ புவிக்க ணிடையே விளங்கி
யிடுமாறு மானி டரெலாம்‌
பன்னும்‌ படிக்கு முன்ஞான மெய்து
பலர்க்கும்‌ உயர்ந்த பதவி
துன்னும்‌ படிக்கும்‌ அறிவித்து மாயை
தொடர்பைக்‌ கழித்து விடுவாய்‌; 292

அத்தன்மை யெய்தி புலிமீ இருந்து
பலநா ளகன்ற வவதஇ
இத்தன்மை யாக யிவணெய்துி யாமும்‌
இவனுக்‌ களிக்கு முறையே
சித்தங்‌ கனிந்து நினையும்‌ உயர்ந்த
இருநாடு .மீது கொடுபோய்‌
வைத்தும்‌ கலங்க லெனவன்பி னோடு
மதுரக்‌ கவிக்குரை செய்தான்‌. 293

மாறனுடன்‌ திருமால்‌ பரமபதம்‌ உறுதல்‌
படிமீ துதித்துப்‌ பெருமாயை தானும்‌
படரா தொழித்து மறையின்‌
-மூடிமீ துறத்தி டமாயி ருந்த
முளரிச்‌ சிறந்த மலர்நேர்‌
அடி.மீது சேர்த்து விடுமா றுரைத்த
தமிழ்மாற னாகு மவனை
மடிமீ இருத்தி மிசைதேவர்‌ இந்து
மலர்மாரி பந்தர்‌ நிழலில்‌; 294

இருபாலி னங்கை யொருபாலு ளானு
மலரோனு மேத்தி வரவும்‌
புருகூத னாதி முடிவெண்ணி லாத
புலவோர்‌ பணிந்து வரவும்‌
அருமாத வத்து முனிவோர்கள்‌ வேத
மதுநாலு மோதி வரவும்‌
இருமா லெவைக்கு முயர்வா யுயர்ந்த
இருநா டடைந்த னனரோ. 295

மாறன்‌ பனுவலால்‌ மாண்புற்றார்‌ பலர்‌
(வேறு)
அனைய வாறுமா லுடன்திரு வைகுந்த மடைந்த
வினையி லாச்சட கோபனார்‌ விளம்பிய பாடல்‌
தனையு ஸணர்ந்திரு வினைகளுந்‌ தடிந்துதண்‌ டுளவம்‌
புனையு மாயவ ஸுூயர்பதம்‌ புகுந்தனர்‌ புவியோர்‌. 296

ஆழ்வார்‌ மங்களாசாசனம்‌ செய்த பதிகள்‌
அந்த நான்கென வுரைசெயும்‌ பிரபந்த மதனுள்‌
பைந்து ழமாயணி மாதவ ஸனுவந்துவாழ்‌ பதிகள்‌
வந்த தைந்தொடு முப்பதாம்‌ வடமது ரையும்வை
குந்தஞ்‌ சீவர மங்கைர்‌ குறுங்குடி வெஃகா; 297

அரங்கம்‌ வேங்கடம்‌ விண்ணகர்‌ செங்குன்றூர்‌ அனந்த
புரம யோத்திபாற்‌ கடல்துவ ரைப்புளிங்‌ குடிகாட்‌
கரை குளந்தைவாட்‌ டாறு மூழிக்களம்‌ மோகூர்‌
குருகை வல்லவாழ்‌ துலைவிலி மங்கலங்‌ கோஞூர்‌; 298

சீர்பெ றுந்திரு மாலிருஞ்‌ சோலைவெற்‌ புபரி
சார மாம்பதி திருக்கடித்‌ தானநா வாய்வண்‌
டூர்கு டந்தையா றன்விளை கணபுரம்‌ புலியூர்‌
பேரை சீவர குணமங்கை பேரெனும்‌ நகரே. 299

நம்மாழ்வாரால்‌ மங்களாசாசனம்‌ செய்யப்பட்ட திவ்ய
தேசங்கள்‌ முப்பத்தைந்தின்‌ பெயர்கள்‌ கொடுக்கப்பட்டுள்ளன.

பயன்‌
இந்த மாக்கதை கேட்பவ ரநிரும்புவி யதன்மேல்‌
மைந்த தரும்பல வளங்களுஞ்‌ செல்வமும்‌ மருவிச்‌
சிந்தை யின்புற வாழ்ந்துநாள்‌ சென்றிடுங்‌ கடையில்‌
பைந்து ழாய்மது மாலையன்‌ பதம்பெறு வாரால்‌, 300

மூதிரு நான்மறை தனையருந்‌ தமிழினால்‌ மொழிந்து சதிரு டன்பராங்‌ குசன்பதஞ்‌ சார்ந்துள சரித
விதமி யம்பின மவன்விளம்‌ பியகவி வரைந்த
மதுர மாக்கவி பரமவீட டைந்ததும்‌ வகுப்பாம்‌. 301-

சடகோபாழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌ முற்றும்‌.

———

மதுரகவியாழ்வார்‌ மோட்சமடைந்த
அத்தியாயம்‌
வெண்பா
ஏரார்‌ மதுரகவி இவ்வுலகில்‌ வந்துதித்த
சிராருஞ்‌ சித்திரையில்‌ சித்திரைநாள்‌ — பாருலகின்‌
மற்றுமுள ஆழ்வார்கள்‌ வந்துதித்த நாள்களினு முற்றதெமக்‌ கென்றுநெஞ்சே ஓர்‌.
(உபதேசரத்தினமாலை, 25.

மதுரகவியாழ்வார்‌ திருப்பணி
மாயவ ரருட்படி மதுர மாக்கவி
ஏயவம்‌ மாறனல்‌ லெழிலு ருத்தனை
தூயவிக்‌ இரமதாய்த்‌ துலங்கச்‌ செய்ததை
ஆயவப்‌ புளிமரத்‌ தடியில்‌ வைத்தரோ; 1

பொன்னொடு மரகதம்‌ புட்ப ராகமும்‌
மின்னிடு மணிகளும்‌ மேய்ந்து ழைத்துவான்‌
மன்னிடு மண்டப மதிள்வி மானமும்‌
துன்னிடு கோபுரந்‌ துலங்கச்‌ செய்தனன்‌. 2

பூடண வகைகளும்‌ பொருந்து வத்திரம்‌
ஏடவிழ்‌ பூமலர்‌ முதல யாவையும்‌
சூடிட லருத்துதல்‌ முதல சோர்விலா நாடொறு முபசரிப்‌ புடன்ந டத்தியே; 3

கருமுகின்‌ மேனியுங்‌ கமலக்‌ கண்களும்‌
முருகவிழ்‌ துளவமும்‌ .பொலிழு குந்தனார்‌
மருவுமா லயமுறை வழுவு றாமலே
திருவிழா முதலவுஞ்‌ செய்வித்‌ தானரோ. –4

வருதனம்‌ பலவுமவ்‌ வாற்‌ தாய்ப்புரிந்‌
தொருபக லாய்நொடி உளம்வ ருத்திட
மருமகழ்‌ தொடையணி மாற ஸனம்புயத்‌
இருவடி பிரிகிலான்‌ சேர்ந்து வாழுநாள்‌;–5-

(வேறு)
காசி லாவருந்‌ தமிழினாற்‌ பராங்குசன்‌ கவிசெய்‌
ஆச லாதவா இரியமும்‌ விருத்தமந்‌ தாதி
தேசு ஐுந்திரு வாய்மொழி யாமெனச்‌ செப்பும்‌
மா? லாப்பிர -பந்தங்கள்‌ மலிவுசெய்‌ வகையாய்‌; 6

மாத வர்க்கும்வே இயர்முதல்‌ நால்வரு ணருக்கும்‌
ஓது வித்துமாங்‌ கதன்பொரு ஞணர்வுற வுரைத்தும்‌
ஏத மில்லென வருடநூற்றி ௬பதி ஸிரட்டி
பூத லத்தவர்‌ புகழ்ந்திடப்‌ பொருந்தியங்‌ கிருந்தான்‌. : 7

ஆழ்வாரின்‌ பரமபத வேட்கை
இருக்கு நாளிடை யுயர்பத மடைகுவா னெண்ணிப்‌
பொருக்கெ னாஎனைக்‌ கொண்டணைந்்‌ தஇிடுஎனப்‌ பொருவில்‌
இருப்பு ளிக்கிடை யமர்ந்தருள்‌ மாறன்சே வடியை உருக்க மோடுதன்‌ மனத்துற நினைந்தன னொருநாள்‌. 8

விமானம்‌ வந்தது
நினைந்த காலையி லவ்வண நேர்ந்துள வகுளம்‌
புனைந்து ளான்றன தருளினாற்‌ புவியுளோர்‌ புகழக்‌
கனைந்த ணிந்தமா மணியொலி கறங்கடக்‌ கனகம்‌
வனைந்தி டுந்திரு வைகுந்த விமானம்வந்‌ துளதால்‌, 9

வந்த பொன்மணி விமானமேன்‌ மருவிவீற்‌ றிருப்பச்‌
சிந்தை யன்பொடு மதுரமா கவிதமைத்‌ திகழுநீ
குந்த மம்புய நிகர்கரங்‌ கொடுதழீஇ யெடுத்துச்‌
சுந்தரம்‌ பெற விருத்தினர்‌ சூழ்ந்துடு மடியார்‌. 10

மணிமண்டபம்‌ அடைந்தார்‌
அந்த ரத்தவர்‌ மீமிசை யலர்மழை பொழிந்து
துந்து மிக்குழா முழக்குறப்‌ பதவிபோய்த்‌ துடர்ந்து பைந்து மாயனை வகுளனை யன்பொடு பணிந்து
முந்து மாமணி மண்டப முத்தரோ டமர்ந்தான்‌. 11

மாற னேபர மெனமது ரக்கவி வகுத்துக்‌
கூறு Deis ழினிலிசை குலவுமப்‌ பாடல்‌
ஆறோ டைந்தையு முளமகழ்‌ வொடுபடித்‌ தனேகர்‌
மாறி லாதுயர்‌ பதவிசென்‌ .றெய்தினர்‌ மாதோ. 12-

பயன்‌
இவ்வ ருங்கதை மனம௫இழ்ந்‌ தெழுதஇடு மவரும்‌
செவ்வி திற்படிப்‌ பவர்களுஞ்‌ செப்பிடு மவரும்‌
எவ்வ மற்றிடக்‌ கேட்டிடு மவர்களும்‌ மிணைவேறு
ஓவ்வி லாதுயர்‌ வைகுந்த பதவிசென்‌ றுறுவார்‌. 13

மதுர மாக்கவி பதவிசேர்ந்‌ தமைவகுத்‌ துரைத்தேம்‌;
பதும மாமுகக்‌ கோதையாய்ப்‌ பார்மகள்‌ சிறந்த
புதுவை மாநக ருதித்ததும்‌ புரிந்தது – மரங்கர்‌ வதுவை செய்ததும்‌ இவ்வித மெனவகுத்‌ துரைப்பாம்‌. 14

மதுரகவியாழ்வார்‌ மோட்சமடைந்த அத்தியாயம்‌ மூற்றும்‌.

——–

ஆண்டாள்‌ திருவவதார அத்தியாயம்‌ .
வெண்பா
பெரியாழ்வார்‌ பெண்பிள்ளை ஆண்டாள்‌ பிறந்த
இருவாடிப்‌ பூரத்தின்‌ சீர்மை — ஒருநாளுக்கு உண்டோ? மனமே! உணர்ந்துபார்‌ ஆண்டாளுக்கு |
உண்டாகில்‌ ஒஓப்பிதற்கும்‌ உண்டு.
்‌ (உபதேசரத்தினமாலை, 24.)

நாரணன்‌ சிறப்பு
மராமரம்‌ அனையதோள்‌ வாலி தன்னொடும்‌
“இராவணன்‌ முதலினோர்‌ உயிர்‌இ ழந்திட
அராவணை துயில்துறந்து அயோத்து எய்திய
பராபர வத்துவாம்‌ படிவ நாரணன்‌; I

புண்டரீ கன்செவென்‌ முதற்புத்‌ தேளிரோடு
அண்டங்கள்‌ பலசரா சரம்‌அ னைத்தையும்‌
உண்டுஒரு பாலனாய்‌ உருவம்‌ தாங்கியே வெண்டிரைப்‌ பாற்கடல்‌ பள்ளி மேவியே; : 2

‘யோகநித்‌ திரைதனை ஒருவி தம்தெளிந்து
– ஆகமுற்று உரைஇரு அணங்கு பார்மகள்‌ :
பாகுசொல்‌ நீளையாம்‌ பாவை மூவரும்‌
்‌.. மோகம்‌உற்‌ நிடும்வகை முகமன்‌ கூறியே; 3

இருபுறம்‌. மருவிவீற்‌ நிருப்ப அம்பொனின்‌
குருமணி அரியணை மிசையில்‌ கோலமார்‌
முருகவிழ்‌ தாமரை வனம்ம லர்‌.ந்ததோர்‌ ட்ட
கருமுகில்‌ எனஒளி கவின வைகினான்‌. 4

பூமிதேவியின்‌ வினா
வைகிய காலையில்‌ மருங்கு வையே ‘
மைகணார்‌ புவிமகள்‌ எழுந்து வாள்விழிக்‌
கைகயன்‌ மகள்தரும்‌ கானம்‌ சென்றுள
செய்கழல்‌ வணங்கிஓர்‌ . மொழியைச்‌ செப்பினாள்‌. 5

கரியமா முகில்நிறக்‌ .கடவுள்‌ மூர்த்தியே
விரிகடல்‌ உலகனர்‌ இடத்தில்‌ மேவிநீர்‌
பிரியம்உற்று இருப்பதுஆ ரிடத்தில்‌? பெண்மையேன்‌ ‘
தெரிதரு மாறுஅகைச்‌ செப்பு கென்னவே.: : 6

எம்பெருமான்‌ விடை
அம்மொழி கன்னமூடு அணுகும்‌ காலையில்‌
இம்மொழி தனை எடுத்து இனிது இயம்புவான்‌
நம்மலர்‌ அடிகளைப்‌ பற்றி நண்ணுறச்‌
செம்மனத்து அன்புடன்‌ சேர வைத்தரோ; 7

பாடுறும்‌ அருந்தமிழ்ப்‌ பாவின்‌ மாலையும்‌
ஏடவிழ்‌ நறுமல ரினிற்செய்‌ மாலையும்‌
நாடொறும்‌ இயற்றியே நாம்‌அ௮ ஸணிந்திடச்‌
சூடுறு செய்கையார்‌ தொழில்பு ரிந்துளோர்‌; 8

பூமிதேவியின்‌ விருப்பம்‌
எவர்கள்‌ஆ யினும்‌அதற்கு உளம்‌இ ரங்கியாம்‌
அவதரித்து அனுதினம்‌ அணுகு வோம்‌எனா
aon Ht வண்ணன்‌ஆங்கு ஓதக்‌ கேட்டுஉளம்‌
துவர்‌இதழ்ப்‌ புவிமகள்‌ தொழுது சொல்லுவாள்‌. 9

நாத[இம்‌ முறையெனில்‌ நளினம்‌ ஓக்கும்நின்‌
பாதமேல்‌ பத்தியும்‌ பரிவும்‌ எய்தியான்‌
ஓதும்‌அம்‌ முறைவழாது உஞற்றின்‌ அல்லது
மாதெனப்‌ பிறந்துள பயன்வந்து எய்துமோ? 10

ஆதலால்‌ அடிச்சியேன்‌ ஆழி சூழ்வுறும்‌ பூதலத்து உதித்துப்பூ மாலை தன்னொடும்‌
– ஓதுபா மாலையும்‌ உகப்பச்‌ செய்திடப்‌ .
போதல்‌என்‌ கடன்‌எனப்‌ போற்றி நின்றனள்‌. 11

பெரியாழ்வாரின்‌ புகழ்‌
நின்றவள்‌ மாமுகம்‌ நோக்கி நேமிமால்‌
மன்றலங்‌ கோதைநின்‌ மனம்‌அவ்‌ வாறெனில்‌
ஒன்றுரைத்‌ தஇடுவன்யான்‌ உவந்து கேட்டுஅதை –
நன்ழெனக்‌ கொள்கென நவில்வது ஆயினான்‌. – 12

வில்லிபுத்‌ தூர்வரும்‌ விப்பி ரோத்தமன்‌,
நல்லியல்‌ உடையவன்‌; நகைகொள்‌ வாண்முகன்‌;
மெல்லிய: மொழியினன்‌; ‘ விளையும்‌ மாயையைக்‌
கல்லிய செய்கையன்‌; கருணைஉள்‌ எத்தான்‌. 13

எப்புவி தன்னினும்‌ இணைத ஸனக்குவேறு
ஒப்பிலா நிறைவுபெற்று உறும்மெய்ஞ்‌ ஞானத்தான்‌;
செப்பிடும்‌ பெயர்விட்டு சித்தன்‌ என்பவன்‌;
துப்புற எனதுஅடித்‌ தொண்டு பூண்டுளோன்‌; -14

இன்னவன்‌ மடியைப்பெற்று எழிலின்‌ ஓங்கிட
அன்னமா நகரிடை அணுகு வாய்‌;அவன்‌
குன்னுடைச்‌ சறுவியாய்‌ அவத ரித்தபின்‌
நின்னுளத்து உறும்‌இடர்‌ நீக்கு கென்றனன்‌. 15

சொன்னமா -மொழியெனும்‌ அழுதம்‌ தாயதன்‌
கன்னம்‌ஊ டுறஉளம்‌ களிது ளங்கியே
பின்னரும்‌ புவிமகள்‌ என்னும்‌ பெண்கொடி
நன்னய முடனிவை நவில்வது ஆயினாள்‌: 16

பூமிதேவியின்‌ வினர்‌.
வில்லிபுத்‌ தூர்‌எனும்‌ விளங்கு மாணகர்‌
தொல்லைநாள்‌ யாவரால்‌ தோன்றிற்று; அஆங்கதும்‌
நல்லவந்‌ நகரில்நீ நணுகும்‌ ஆறதும்‌ சொல்லும்‌அவ்‌ விட்டுணு சித்தன்‌ தோற்றமும்‌; : 17

ஆங்கவன்‌ செயும்கைங்‌ கரிய மாவதும்‌
ஈங்கிது முதலிய யாவும்‌ ஏழையேன்‌
பாங்குற .உணர்வகை. பகர்தி என்னலும்‌
தேங்கமழ்‌ துளவினான்‌ செப்பல்‌ ஆயினான்‌. 18

வில்லிபுத்தூரின்‌ மான்மியம்‌
– பூதலம்‌ தனில்சம்புத்‌ : இவில்‌ பொங்கு௮லை
மோதுதென்‌ கடலினுக்கு அருகில்‌ மொய்ம்புஉஉடை
– நீதிசேர்‌ பாண்டிய நெடிய நாட்டினில்‌ —
சேதுவிற்‌ குமரிமா வரையின்‌ கீழ்த்திசை; 19

காவதம்‌ ஒன்றினில்‌ கருதும்‌ ஒர்தலம்‌
ஆவதுஉண்டு; அதனிடை ஆதி காலம்யாம்‌
மூவகை உலகமும்‌ பொருமு ரண்வலி ‘
மேவும்‌ஓர்‌ வராகமாய்‌ விளங்கத்‌ தோன்றியே. 20

நினையனாள்‌ தன்னிடை நெடிய தாங்கொடு
விளைபுரி இரணிய வக்க வெய்யவன்‌
குனைவதை புரிந்துபல்‌ தருமம்‌ என்பவை அனையயா வையும்‌உனக்கு அருளிச்‌ செய்தனம்‌. 21

அத்தரு மங்களை அனைத்துங்‌ கேட்டறிந்து
இத்தலம்‌ “அதனில்‌எக்‌ காலும்‌ நீங்குறாது
ஓத்துஉறைந்‌ திடுதிஎன்று உள்ளம்‌ அன்பொடு
மெத்தவும்‌ வருந்தியே வேண்டல்‌ செய்தனை, . 22

ஓதும்‌௮ம்‌ மொழிப்படி யாம்‌உவந்து உனோடு
ஏதமில்‌ கற்பங்கள்‌ அனந்தம்‌ எய்திடப்‌
பேதியாது உறைதலால்‌ அதனுக்கு ஓர்பெயர்‌
ஆதியில்‌ வ்ராகக்ஷேத்‌ இரம்‌என்று ஆயதால்‌. 23

௩ அன்புறக்‌ கேட்டி;யான்‌ உறையும்‌ அத்தலம்‌:
பின்புறு நெடியநாள்‌ பிறஉ யிர்க்குறு
துன்புஇழை உழுவையும்‌ அரியும்‌ சூழ்ந்திடும்‌
வன்புஉறு வன்மதாய்‌ மருவி உற்றதால்‌, 24

… காலநேமி வதம்‌
அரியஆ ரணியமாம்‌ அத்த லம்தனில்‌
உரிமையோடு எந்தனை உளம்‌இ ருத்தியே
பிருகுமார்க்‌. கண்டனே முதல பெற்றியோர்‌’
மருவியுற்று’ .அரியமா தவம்‌இ ழைத்தனர்‌. 25

்‌ இழைத்திடுந்‌. தவத்தரைக்‌ கால நேமிஎன்று
அழைத்திடும்‌ பெயருடை அரக்கன்‌ எய்தியே.
குழைத்துளம்‌ ‘ வெருவுறக்‌ கொடிய தாம்பல
பிழைத்தனை இழைத்தனன்‌ பெருக என்பவே. 26

அத்துயர்‌ பொறுக்கொணாது அவர்கள்‌ யாவரும்‌
இத்திருப்‌ பாற்கடல்‌ எய்தி எம்மொடும்‌
குத்தமக்கு அவன்தனால்‌ சார்ந்த யாவையும்‌ சித்தமது இரங்கிடச்‌. செப்பி னார்களால்‌: 27

ஓலம்‌இட்டு உரைத்தல்கேட்டு உவண னஊாய்‌உறும்‌
சூலபா ணியன்மிசை துரிதத்து எய்தியே
காலனை அனையஅ௮க்‌ கால நேநமிதன்‌
மேலுற நேமியை விடுத்து வீட்டினேம்‌. 28

முக்குளம்‌
மாய்ந்தவன்‌ உடல்புண்நீர்‌ மற்ற வன்தனைக்‌
காய்ந்துள கொடியசெங்‌ கதிர்கொள்‌ நேமியில்‌
தோய்ந்திட அதனைநீர்‌ கொண்டு தொல்நிறம்‌
வாய்ந்துற ‘அலம்பு’என வருணற்கு ஓதினேம்‌. 29

என்றஎம்‌ மொழிவழாது எமுனை சான்னவி
சான்றமா சரஸ்வதி என்னச்‌ சார்ந்திடும்‌
மூன்றுமா நதியையும்‌ அழைத்து மொய்ம்புண்நீர்‌
கான்றதே மியைஅவன்‌ கழுவித்‌ தந்தனன்‌. 30

அக்கடி. நகரிடை வருணன்‌ ஆனவன்‌
சக்கரம்‌ அலம்பும்நீர்‌ மூன்றும்‌ சார்ந்துஒரு
.. முக்குளம்‌ என்னவே. மொழியும்‌ பேரொடு
மிக்கநல்‌ தீர்த்தமும்‌ விளங்கிற்று என்பவே. 31

ஓதும்‌௮வ்‌ அரக்கன்செய்‌ உபத்ர வந்தனால்‌
போதநேர்ந்து அயர்வொடு புழுங்கி நொத்துள
– மாதவர்‌ தமையினி வருந்த லீர்என
ஆதர வுரைகள்யாம்‌ அறையும்‌ எல்லையில்‌; 32

முனிவர்‌ கேட்ட வரம்‌
மீண்டும்‌ எந்தமை இவண்விளங்கு மாதவம்‌
பூண்டுள இருடியர்‌ பொருந்தும்‌ ஓர்வரம்‌
. ஈண்டுநீ மறுத்திடாது எமக்கு அருள்செய
வேண்டும்‌என்று உளந்தனில்‌ விரும்பிக்‌ கேட்டனர்‌. 33

என்னநீர்‌ வேண்டுவ தியம்பு மென்றலும்‌
அன்னவர்‌ ஓதினர்‌ அணிகொள்‌ பாற்கடல்‌
மன்னுதல்‌ ஒழிந்துஇவண்‌ வந்து தோன்றியே முன்‌எமை நலிந்தவெம்‌ மூர்க்கன்‌ தன்னையே; 34

பொங்குஒளி நேமியால்‌ பொருது அழித்துநீ
எங்கள்‌ஆ பத்துஓழித்‌ இடும்‌இ யற்கையால்‌
இங்குநீ உறைந்திடு வரம்‌௮து என்னலும்‌
அங்குஅவர்க்கு அவ்வரம்‌ தனை௮ ளித்துளேம்‌. 35

ஆதலால்‌ அத்தலம்‌ அதனுக்கு ஒப்பதாய்‌
ஓதமுன்‌ னாள்தனில்‌ ஒளிர்வ டத்துஇலை
மீதுகண்‌ வளர்வபோல்‌ விளங்கு௮ ராவின்மேன்‌
காதலோடு அமர்ந்துகண்‌ காட்‌ நல்கினேம்‌. 36

ஆங்குநம்‌ பெயர்வட வேச்சு ரன்‌எனப்‌
பாங்குற ஆங்குஅவர்‌ பகர்ந்து பின்னரும்‌
தீங்கிலா அத்தலம்‌ தனக்கும்‌ செவ்விதாய்‌
ஓங்கும்‌௮ப்‌ பெயர்கொளும்‌ புரம்‌என்று ஓதினார்‌. 37

அத்தலத்து அவ்விதத்து அமர்ந்த மாதவர்‌ சித்தர்கள்‌ முதலினோர்‌ வணங்கச்‌ சேர்வைகுந்‌
தொத்துரு சதுரமா முகம தோரறு
பத்துநான்கு அணுகுறும்‌ . அளவும்‌ பண்பொடும்‌; 38

உன்னையும்‌ அம்புயத்து உ.கந்து வாழ்வுறும்‌
பொன்னையும்‌. அருகுஉறப்‌ பொருந்தி வைகினேம்‌.
பன்னும்‌௮வ்‌ உகங்கள்‌ தீர்ந்து உறலும்‌ பார்மினே
பின்னரும்‌ வனமதாய்ப்‌: பெருகிற்‌ றாம்‌அரோ.. 39

குருவொடு செடிகளும்‌ சார்ந்தது அவ்வனத்து
அருகுபுத்‌- தூர்என அறையும்‌ ஓர்சிறு இருநகர்‌ உண்டு;அதைச்‌ சேர வேமிகும்‌
பெருவலி வேடர்கள்‌ பிரப லித்தனர்‌, . 40

முன்னுறும்‌ உழுவையே முதல்வி லங்கெலாம்‌
உன்னரும்‌ கொலைத்தொழில்‌ ‘ உஞற்று வேடரே
அன்னகர்‌ தன்ன்கத்து அதிக ராயினார்‌
பின்னருற்று அடைந்தமை பேசு வாம்‌அரோ. 41

வில்லியும்‌ கண்டனும்‌
அல்லி௮ம்‌ புயமலர்‌ அனைய மாமுக
மல்லிஎன்‌ றுரைபெறு மாது அகட்டினில்‌
கல்லியல்‌ தோளினர்‌; கமலக்‌ கண்ணினர்‌;
வில்லியும்‌: கண்டனும்‌, விளங்கத்‌ தோன்றினார்‌. . 42

அன்னவர்‌ நாள்தொறும்‌ அமுத அம்புலித்‌
துன்னரும்‌ கலையென எளர்ந்து . சோர்விலாப்‌
பன்னுதம்‌ குலமுறைத்‌ கொழில்ப யிற்றியே
மன்னுறு, காட்சியாய்‌ வாழும்‌ நாளிடை; :-: 43

அனையவர்‌ இருவரும்‌ வேட்டை. யாடுவான்‌
நினைவுகொண்டு ஒருபகல்‌ நிறைந்த தூணியும்‌
புனைமணிச்‌’ சிலையும்புங்‌ கவமும்‌ கொண்டுதம்‌
மனைஒழிந்து அரியஅவ்‌ வனத்தின்‌ ஏகியே; 44

மானொடு கலைகளும்‌ கடம்பும்‌ வைகுகோட்டு
ஏனமும்‌ உழுவையும்‌ எண்குஇ ஸனங்களும்‌
தானமார்‌ கரிகளும்‌ சரியச்‌ சாடியே
கானக முழுவதும்‌ கலக்கி னார்களால்‌. » 45

கூறுறு நிணங்களும்‌ குருதித்‌ தோயமும்‌ பாறுநாய்‌ நரிகழு கனம்ப ரிந்துண
வேறுள மிருகமும்‌ வேட்டை யாடிநாம்‌ க
மாறிலாது &உறங்கும்‌௮வ்‌ விடத்து வந்தனர்‌. 46

இளையவன்‌ புலியால்‌ இறத்தல்‌
அவ்விடந்‌ தனில்‌இளை யவனும்‌ மற்றொரு
வெவ்விய புலிதனைக்‌. கண்டு வெங்கணை
எவ்வினன்‌ பலபல ஏவும்‌ அம்பினுக்கு
ஒவ்விடாது அதுவிரைந்து ஓட –47

ஓடிடும்‌ அதைத்தொடர்ந்து இவனும்‌ ஓடலும்‌
நீடிய புதலிடை மறைந்து நின்றிட வாடிய மனதொடும்‌ இவனும்‌ மற்றதைத்‌
தேடிஅங்கு அதன்முனம்‌ செல்லும்‌ எல்லையில்‌; 48

பின்தொடர்ந்‌ துறும்‌ஓலி பெறவெ குண்டுமேல்‌
சென்றுறப்‌ பாய்ந்துஅவன்‌ சிதைவு றும்படி
கொன்றுடல்‌ கஇழித்துவெங்‌ குருதி சோர்வுற
வென்றிகொண்டு அப்புலி விரைவில்‌ போயதால்‌. 49

தம்பியைக்‌ காண்கிலான்‌ தமய னானவன்‌
வெம்பிய கானிடை விரைந்து தேடலும்‌
செம்புண் நீர்‌ ஒழுகடச்‌ சிலைக்கை அம்பொடும்‌
அம்புவி மேற்கடந்‌ தவனைக்‌ கண்டனன்‌. 50

அண்ணன்‌ புலம்பல்‌
– (வேறு)
கண்டான்‌; புலியாற்‌ கிழிபட்ட
செய்கை தெளிந்தான்‌; கண்மலரை
விண்டான்‌; கொட்டினான்‌; உரத்திற்‌
புடைத்தான்‌; பொருந்தா வெந்துயரங்‌
கொண்டான்‌; அவன்பொன்‌ மேனியெல்லாம்‌
தடவித்‌ தடவி கொடுநஞ்சம்‌
உண்டான்‌ போல மெய்தளர்ந்தான்‌;
உயிர்த்தான்‌; கரைந்தான்‌; உருகினான்‌. 51

ஆவி அழிந்திட்‌ டவர்போலுள்‌
அழிந்தே புலம்பத்‌ தொடங்கினான்‌
வாவி அறைந்த கொடும்புலியை
வதைப்பத்‌ துணையாய்‌ உடன்வாராப்‌
பாவி என்றன்‌ கொடியமுகம்‌
பார்க்கொ ணாதென்‌ றுளங்கருகுத்‌
தாவி வானம்‌ படர்ந்தனையோ?
என்னோ? ஐயா! சாற்றாயால்‌! 52

பனிமா மலரோன்‌ விதிமுறையோ?
பாவி யேன்செய்‌ கொடுவினையோ?
தனியா யொருவர்‌ துணையின்றித்‌
தரக்கின்‌ உஇர்க்கை குனிலகப்பட்டு
அனியா யமதாய்‌ உயிர்‌இழந்த
ஐயா! உலகத்‌ துனையிழந்திட்டு
இனிநான்‌ உயிர்வா ழேன்வாழேன்‌;
உடனே வருவேன்‌ என்‌ உயிரே! 52

அன்னை தந்தை குருதெய்வம்‌:
அண்ணன்‌ தம்பி மனைமக்கள்‌
பொன்னை முதலாம்‌ பலபலவாம்‌
பொருளும்‌ நீயாம்‌ எனநம்பும்‌
என்னை விடுத்துஅம்‌ பரம்புகுதற்கு
எண்ணிச்‌ சென்றாய்‌ கொடியன்‌ இலை?
உன்னை விடுத்தும்‌ இவண்‌இருந்தேன்‌;
உன்னிற்‌ கொடியேன்‌ நான்‌அன்றோ? 54

எந்தை யேஇங்கு எனைத்தனிவிட்டு
ஏக மனமுந்‌ துணிந்தனையோ?
சிந்தை கனிவாய்‌ வனம்சென்ற
சிறுவர்‌ வருவார்‌ எனப்பார்க்கும்‌
நந்தாய்‌ உனைஎங்கு எனக்கேட்டில்‌
நான்என்‌ நவில்வேன்‌? நவில்‌என்னா
இந்த வகையால்‌ பற்பலவாய்‌
எடுத்தே புலம்பி மெய்தளர்ந்தே; 55

விழுந்தான்‌; புவிமேல்‌ புரண்டுஅழுதான்‌;
வெதும்பித்‌ தேம்பி வெகுண்டுவிரைந்து
எழுந்தான்‌; புலிபோம்‌ வழிசென்றான்‌;
காணாது ஏங்கித்‌ திரும்பினான்‌;
செழுந்தார்‌ அனுசன்‌ கிடந்தவிடஞ்‌
சேர்ந்தான்‌; அவனோடு உடன்படுத்தான்‌;
அழுந்தாத்‌ துன்பக்‌ கடல்படிந்தான்‌;
ஆவி சோகித்து உறங்கினான்‌. 56

வில்லியின்‌ கனவு
உறக்கம்‌ கொள்ளும்‌ அவன்கனவில்‌
உறங்கு வேமிங்‌ குளமுவப்ப
நிறக்கு மணிபொன்‌ கோபுரமும்‌
நெடுமா மதிளும்‌ மண்டபமும்‌
துறக்கம்‌ எனவே அமைத்தாரும்‌
துலங்க வமைத்துக்‌ குடியேற்றிச்‌
சிறக்கும்‌ படி.நீ செய்விப்பாய்‌,
என, யாம்‌ அடைந்து செப்பினோம்‌. 57

அன்னது ஆகும்‌ மொழிதனைக்கேட்டு
அடர்வெம்‌ புலிஎன்‌ உயிர்த்தம்பி
குன்னை வீட்டிற்‌ றதுவல்லாற்‌
சமைக்கும்‌ கோயிற்‌ பணிகளுக்குப்‌
பொன்னும்‌ வெகுவாய்‌ வேண்டியிடும்‌
அதற்குஎங்‌. கேயான்‌ போவன்‌ என
இன்னது ஆகும்‌ மொழியதனை
அவனங்‌ கெடுத்திட்டு இயம்பினனால்‌, 58

அம்மா மொழிகேட்டு ‘உனதுதம்பி
அவனை எழுப்பி அவற்கொன்ற
வெம்மா புலியங்‌ கதுதனையும்‌
… வீட்டி யதுவாழ்‌ குகையிடத்தில்‌
செம்மாப்‌ பொருள்கள்‌ பலவுளது
காண்பித்‌ தஇடுவேம்‌ தெளிந்திடு’கென்று
இம்மா மொழியை மீண்டும்‌அவர்க்கு
இயம்பிக்‌ கனவின்‌ மறைதந்தனமே. 59

எழுந்தான்‌ தம்பி
அந்தக்‌ கனவு தனைக்சண்டிட்டு
அவனும்‌ மலர்க்கண்‌ விழித்தென்னோ
விந்தை உளதாம்‌; இதுபொய்யோ?
மெய்யோ? அறிய வேண்டுமெனச்‌
சிந்தை யுணர்ந்தாங்கு .இருந்திடலும்‌; சீறும்‌ புலியால்‌ மடியனுசன்‌
முந்தத்‌ துயில்கொடு எழுந்தவன்போல்‌ உணர்ந்தாங்கு எழுந்தான்‌ முகமலர்ந்தே. 60

எழுந்த தம்பி தனையணைத்தங்கு
இருகை யாலு மணிமார்பில்‌
அழுந்தப்‌ புல்லி உச்சியைமோந்து
அலர்க ணீர்மஞ்‌ சனம்‌ஆட்டி
கொழுந்துஉற்று ஓங்கும்‌ களிக்கடலில்‌
குளித்தான்‌; புலியாற்‌ றான்புவிமேல்‌
விழுந்த செயல்கள்‌ அனைத்தினையும்‌
விளைந்த வாறே விளம்பினனால்‌,–61

விளம்பு மொழிகள்‌ தனைக்கேளா
வில்லி தானும்‌ தன்கனவில்‌
களங்கம்‌ இலை;இங்கு உறங்குவம்யாம்‌;
எமக்குக்‌ கனக கோபுரமும்‌
வளங்கொள்‌ நகரும்‌ படையெளவும்‌
இருமால்‌ வந்து பகர்ந்தவெலாம்‌
உளங்கொண்டு உணரும்‌ படிதம்பிக்கு
உரைத்தான்‌; அவனும்‌ களிப்புற்றான்‌.–62-

இருவர்‌ களும்‌௮வ்‌ விடம்நீங்கிச்‌
லதா ரம்சென்று ஏகிடலும்‌
உருவும்‌ கணைகள்‌ – பலதைத்து
உடலம்‌ துறந்த வழியதன்வாய்‌
பெருகும்‌ குருதி மழையதுபோல்‌
பெய்யப்‌ .புவியும்‌ சிவப்புஎய்தப்‌
பொருவெம்‌ புலிசெற்று அவண்கிடக்க
அதனைக்‌ கண்டுஅற்‌ புதமடைந்தார்‌. -63

பின்னும்‌ அவண்விட்டு இருவர்களும்‌
கடிதிற்‌ சென்றுஅ௮ப்‌ பெரும்‌உழுவை
மன்னி யிருந்த வரைக்குகையில்‌
மருவிப்‌ பார்க்க வகைவகையாய்ப்‌. பொன்னும்‌ மணியும்‌ பணிதிகளும்‌
பொருந்தக்‌ கிடத்தல்‌ தனைக்கண்டே
துன்னும்‌ கனவில்‌ கண்டதெலாம்‌
மெய்யென்று உளத்தில்‌ — 64

இத்த இடத்தில்‌ அத்திருமால்‌. இருத்தற்கு ஐய மிலை;உறையும்‌
அந்த இடம்நாம்‌ அறிகுதும்‌என்று அவண்விட்டு ஏகி, அவ்வனத்தில்‌
எந்த இடத்தும்‌ புதல்புதலாய்‌
இருகண்‌ இமையாது ஆராய்ந்து
சிந்தை கனிவாய்‌ விரைவினொடும்‌
தேடித்‌ தேடி திரியுங்கால்‌; 65

வேடர்கள்‌ வடபத்ரசாயியைக்‌ கண்டது
முன்னாள்‌ தனில்‌ஆ ராதஇுத்தோர்‌
முயன்ற அணிஆ லயம்கிலமாப்‌
பின்னாள்‌ முளைத்த வடவிருக்கப்‌
பெருக்கால்‌ மூடு பட்டதனுள்‌
பன்னா கணையும்‌ அதன்மிசையே
படுத்த எமையும்‌ தாமரைவாழ்‌
பொன்னோடு உணையும்‌ ‘இருகண்ணும்‌
பொருந்தக்‌ கண்டே ‘ மகிழ்வாடு; 66

துயிலுங்‌ காலை யுறுங்கனவில்‌
களிப்பத்‌ தோன்றித்‌ தகவுடனே
பயிலுங்‌ கடவுள்‌ இவராம்‌என்று உன்னிப்‌ பலகா லம்புவியில்‌யிலம்‌ பொருவும்‌. இணிதோளார்‌
தாழ்ந்து வணங்கி அடிபோற்றி
அயில்வெங்‌ கண்ணாய்‌! கனவிலுரை ச
அவ்வாறு அமைக்கச்‌ சிந்தித்தே; 67

கோவில்‌ எழுந்தது
மலையின்‌ குகையின்‌ இடைகிடந்து
வளம்சேர்ந்‌ இரவைப்‌ பகலாக்கும்‌
விலையில்‌ மணியும்‌ பணிதிகளும்‌
மிளிரும்‌ பைம்பொன்‌ முதலியவாய்‌
நிலைகொண்டு அதைப்பண்‌ டியில்பொதியில்‌
நிரப்பிப்‌ பின்னும்‌ மனிதர்கள்தம்‌
தலையின்‌ மிசையும்‌ வருவித்தும்‌
தன்கைப்‌ பொருளும்‌ உடன்கலந்தே; 68

நிலைபெற்று உயர்பொன்‌ கோபுரமும்‌
நிரப்பு மணிமண்‌ டபம்மதிலும்‌
அலையுற்று எழுநீர்ப்‌ பொய்கையும்மற்று
அவைபோற்‌, பலவாம்‌ இருப்பணியும்‌
மலையொத்து உயரும்‌ மணிமாட
கூடங்‌ களுஞ்சேர்‌ வள.நகரும்‌
தஇலைபொற்‌ கரம்சேர்‌ வில்லியக்கான்‌
அழித்துச்‌ சிறக்கச்‌ செய்வித்தே; 69

வில்லிபுத்தூர்‌ மலர்ந்தது.
அருகில்‌ உறையும்‌ திருப்புத்தார்‌
அந்த ணாளர்‌ தமைஅழைத்துத்‌ திருவை குறயாம்‌ அமைத்திடும்‌இத்‌
இருமா நகரம்‌ அதனிடைநீர்‌
_ மருவி உறைந்து பெருவாழ்வு
மலியச்‌ சிறப்புஎய்‌ திடும்குடியாய்‌
வருதல்‌ வேண்டும்‌ எனஉரைப்ப
மற்றுஅங்கு அவர்கள்‌ வகுத்துரைப்பார்‌., 70

நன்று புகன்றது இத்திருமா
நகரத்‌ தனக்கும்‌ அழகுசிறப்பு
ஒன்று நாமம்‌ புத்தூர்‌ என்று
உரைத்தால்‌ யாங்கள்‌ அவண்வருவேம்‌
என்று புகல அப்பெயர்தன்‌
பெயரோடு இசையு மாறுஉரைத்தான்‌;
அன்று குடியாய்‌ அவர்களும்சேர்ந்து
அணுகச்‌ இறக்க வாழ்ந்தனரால்‌. 71

அதனால்‌ அவ்வூர்‌ அமைத்தவன்போர்‌
அருகு புத்தூர்‌ கலந்துஇரண்டு விதமாய்‌ ஒன்றி வில்லிபுத்தூர்‌
எனும்‌ஓர்‌ நாமம்‌ விளங்கியதால்‌;
மதிசேர்‌ சகரக்‌ கோபுரமும்‌
வளமா நகரும்‌ புராதனத்தைப்‌
புநிதாய்ச்‌ செய்த தால்‌ஒருபோர் புதுவை எனவும்‌ பொருந்தியதால்‌. 72

சீரார்‌ அனுமன்‌ பொற்கருடன்‌
சிவிகைப்‌ பரிதண்‌ டிகைசேடன்‌
தேர்‌ னைஇன முதலாகும்‌
இருவூர்‌ திகள்பல செய்வித்து
ஆரா தனம்பிரம்‌ மோற்சவமோடு
அணியார்‌ மற்றைத்‌ திருவிழாவும்‌
தோராது அமரர்‌ தாமும்‌அதி
சயித்துத்‌ துதிக்கப்‌ புரிவித்தான்‌. 73

அவ்வா றாக நாடொறும்‌ஆங்கு
அவன்செய்‌ பலவும்‌ குறைவுஇலகாய்ச்‌
செவ்வே புரிந்து வருநாளில்‌
Avant லம்சென்‌ நுற்றபினர்‌
எவ்வேறு உலகங்‌ களினும்‌இதற்கு
இணைளஎன்று எடுத்திட்டு இயம்பிடுதற்கு
ஒவ்வாது உயர்நம்‌ பரமபதத்து
உற்றான்‌ அவன்தம்‌ பியினோடும்‌. 74

பெரியாழ்வாரின்‌ வரலாறு
மண்நா டினையே முதற்பலவாய்‌
வகுத்தும்‌ புகல்‌௮அண்‌. டங்களினும்‌
நண்ணாப்‌ புகழ்நண்‌ ஸணிடும்‌௮ந்த
நகரின்‌ சரிதம்‌ ;நவின்றனமால்‌;
விண்ணா டர்களும்‌ புகழ்ந்துஏத்தும்‌
விட்ணு சித்தன்‌ சரிதம்‌அதைப்‌
பெண்ணார்‌ அமுதம்‌ அனையாய்‌!(யாம்‌ பேசக்‌ கேட்டி எனப்பேசும்‌. 75

(வேறு)
ஆழிசூழ்‌ உலடல்‌ அவதரித்‌ துடையோர்‌
அனைவரும்‌ நமைஅறி கிலராய்ச்‌
சழ்உறு மலமூத்‌ இரஉடல்‌ எடுக்கும்‌
செனனசா கரம்கடந்‌ திலராய்ச்‌
சூழ்‌்உ.று மாயை வயத்தராய்‌ நரகில்‌
துன்னுதற்கு இரங்கிஆங்கு அவர்கள்‌
வாழ்உறும்‌ பரம பதம்தனில்‌ புகுந்து
மகிழ்வுற யாம்‌உளம்‌ மதித்தே; 76

பெரியாழ்வார்‌ அவதாரம்‌
மருள்தரும்‌ உளம்சேர்‌ மாநிலத்து எவர்க்கும்‌
_ மயக்கற விளங்குமெய்ஞ்‌ ஞானப்‌
பொருள்தனை விரித்துஉள்‌ உணர்ந்திடு மாறாய்ப்‌
புகன்றுபின்‌ வருஇநீ என்னக்‌
கருடனுக்கு உரைப்ப அவனும்‌அம்‌ முறைக்‌
கடிநகர்‌ முகுந்தன்பத்‌ தினியாம்‌
இருள்தரு குழல்சேர்‌ பற்புமை வயிற்றி
னிடைவிட்ணு சத்தன்‌என்று உஇத்தே; 77

திருப்பணிகள்‌
துஞ்சுறு மாயை இருளினைத்‌ துறக்கும்‌
சுடரவ னாம்‌என விளங்கி
அஞ்சுமா வயதின்‌ ஞானஉற்‌ பவமாய்‌ அன்புநம்‌ மிடத்தில்உண்‌ டாகி விஞ்சுமல்‌ லிகைமுல்‌ லையும்நறுந்‌ துளவும்‌
விளங்குறு திருநந்த வனமும்‌
கஞ்சமும்‌ கழுநீர்‌ முதலிய மலர்கள்‌
கவின்பெறு தடமும்‌ஆங்கு இயற்றி; 78

கிழியறுத்தல்‌
காலையில்‌ கடன்கள்‌ கழித்துப்பூ மலர்கள்‌
கசங்குறாக்‌ கூடையின்‌ எடுத்து
மாலைகள்‌ தொகுத்து நமக்குஅணி வித்தே
வருகுவன்‌ அதுவும்‌அல்‌ லாமல்‌
வேலைகூழ்‌ புவியின்‌ மிகுவளம்‌ பொருந்தி
மேவுசீர்ப்‌ பாண்டிய வேந்தன்‌
மேலைநாள்‌ பரம வத்துஎவன்‌? என்ன
விளங்குறத்‌ தெரிகுவான்‌ விரும்பி; 79

தனதுவா யிலினோர்‌ கிழிதனைத்‌ தூக்கத்‌
குர்க்கத்தில்‌ வென்றுள பெரியோர்‌ :
இனதுகொண் டடைமின்‌ எனத்திரு முகங்கள்‌
எங்கணும்‌ பரவிட விடுத்தான்‌
அனதுணர்ந்து உலகிற்‌ பல்பல விதமாய்‌
அறையும்‌அச்‌ சமயவா தியர்கள்‌
மனதுவந்து அமைதம்‌ விருதுடன்‌ மதுரை
மாநகர்‌ வந்துஅணு கினரால்‌. 80

ஓத்தடைந்‌ தவர்கள்‌ தமதுநூன்‌ முறைகொண்டு
உரைத்திடும்‌ தர்க்கமா முறைகள்‌
எத்தனை விதத்தால்‌ கேட்பினும்‌ அதனுக்கு
இசைவுறத்‌ தனதுநூல்‌ எடுத்திட்டு அத்தனை விதங்கட்கு எண்மடங்கு உரைத்திட்டு
– ஆங்குஅவர்‌ தமையெலாம்‌ விட்ணு
சித்தன்வென்று அவைமுன்‌ நமைப்பரம்‌ எனவே
செப்பி௮க்‌ இழியையும்‌ அறுத்தான்‌. 81

ஏனைய சமயத்‌ தவர்களும்‌ துதிசெய்து
… ஏத்தும்‌அப்‌ பட்டர்பி ரானைச்‌
சோனைஅம்‌ புயலின்‌ பொழிகர அரசன்‌
‘தொழுதுபொன்‌ னடிமுடி யணிந்து
சேனை நால்‌ வகையும்‌. செயசெய என்னத்‌
தேவர்கள்‌ மலர்மழை பொழிய
ஆனைமேல்‌ ஏற்றி அணிமுரசு அதிர்வித்‌
குந்நகர்‌ வலம்வரும்‌ போதில்‌; 82

பல்லாண்டு
சவனயன்‌ முதலோர்‌ சேவடி வணங்கச்‌
செம்பொன்‌அங்‌ இரியினை நிகரும்‌
உவணமிீ இவர்ந்து திருவுளம்‌ பொலிய
உலகுளோர்‌ பலரும்‌ஆங்கு உணரப்‌
பவனிவந்‌ இடுவோன்‌ கண்டுஉளம்‌ உருகும்‌
படிஎதஇர்‌ எளியதாய்‌ அடைந்தேம்‌;
அவனும்‌அன்‌ புடனே தொழுதுபல்‌ லாண்டுஎன்று அணிபெறும்‌ காப்புஅணிந்‌ தனனால்‌. 83

முன்புறு சைவ சமயமாம்‌ அதனை:
விடுத்துப்பொன்‌ முடியுடை அரசன்‌
அன்புடன்‌ வேண்டத்‌ திகிரிசங்கு அவன்தன்‌
அணிபுயம்‌ இரண்டினும்‌ அணிந்தே
பின்புஉவந்து அளித்த பொருள்மணி முதலாம்‌
– பெருவெகு. மதிகள்கொண்‌ டருளித்‌
கன்புகழ்‌ எவரும்‌: துதிசெய மதுரை
தனைவிடுத்து அணிநகர்‌ அணுகி; 84

பாமாலையும்‌ பூமாலையும்‌ அணிவித்தல்‌
கண்ணனாய்‌ உதித்துயாம்‌ இருந்தபோது இயலும்‌
காரிய சம்ப்பரமம்‌ அதன்தன்‌
வண்ணம்யா வையும்செந்‌ தமிழினால்‌ கவியாய்‌
வழங்கும்‌௮அப்‌ பாவின்மா லைகளும்‌
தண்ணறாத்‌ துளிக்கும்‌ மலரினால்‌ தொடுத்துச்‌
சமைத்தபூ மாலையும்‌ சாத்தி ்‌
எண்ணரும்‌ கால மாய்‌இருக்‌ இன்றான்‌;
அவன்‌ உளத்து யாமும்வீற்‌ றிருப்போம்‌. 85

இந்தவா றாம்‌௮த்‌ தலம்‌அமைந்‌ துளதும்‌
யாம்அவண்‌ உறைந்துள செயலும்‌
செந்தமிழ்க்‌ கவிவல்‌ விட்டுணு இத்தன்‌
செனித்தசெய்‌ கையும்புவி மானே!
சிந்தைகொண்டு உணர்தி; எனவழங்‌ கஇனனால்‌, .
செழித்தபாற்‌ கடல்முகட்டு ஆலின்‌
பைந்தளிர்‌ அதன்மேல்‌ பாலனாய்‌ உறங்கும்‌ பராபர னானநா ரணனே. ட்ட 86

புவிமகள்‌ விண்ணப்பம்‌
உரைசெயும்‌ தருவா சகம்பல பலவும்‌
உற்றுவந்து இருசெவி யுருக
விரைசெய்பூந்‌ தொடையல்‌ கரியகார்க்‌ குழலின்‌
மிலைந்தசீர்‌ அம்புவி மகளும்‌
கரைசெயற்கு அரிதாம்‌ களிக்கடல்‌ அழுந்தி
ஓர்விதம்‌ கரைஉணர்ந்து எழுந்து
திரைகடல்‌ நிறத்தான்‌ இணைந்ததா மரைப்பூந்‌
“திருவடி பணிந்துஇவை தெரிப்பாள்‌:–87

பூமிததேவியின்‌ அவதாரம்‌
இருவுளப்‌ படியான்‌ புதுவையில்‌ பட்டர்‌
பிரான்‌எனுந்‌ இருப்பெயர்‌ புனைந்து
மருவும்‌௮ப்‌ பெரியாழ்‌ வார்மக எளாய்ப்பூ
மாலைபா மாலைஎன்று உரைக்கும்‌
இருவகைக்‌ கயிங்கி ரியமும்யான்‌ இழைப்பான்‌
இசைந்தனன்‌; ஏகுஎன விடைதந்து
அருளெனக்‌ கேட்டாள்‌; அம்முறை புரியென்று
ஆமிமா யனும்‌அளித்‌ தனனால்‌. 88

(வேறு)
விடைகொண் டதன்பின்‌ திருவெனவும்‌
நீளை எனவும்‌ விளம்பிடும்‌அப்‌
படைகண்‌ ஸணினர்தம்‌ மொடும்புகன்று
பலதே வர்கள்சித்‌ தர்கள்‌இயக்கா்‌
௪டைகொள்‌ முனிவோர்‌ முதலானோர்‌
தாழ்ந்து வணங்கக்‌ கடலாலின்‌
அடைகண்‌ வளர்மால்‌ உளம்தொடர ட்ட
்‌ அவைவிட்டு அகல்‌அம்‌ புவியடைந்தே; 89

வில்லி புத்தூர்‌ எனும்நாமம்‌.
‘விளங்கு நகரில்‌ பெரியாழ்வார்‌
அல்லும்‌ பகலும்‌ ஓழிவிலதாய்‌
அமைத்த நந்த வனத்தினிலே
எல்லும்‌ துளவ நறுஞ்செடியில்‌
ஏரார்‌ சிறுபெண்‌ வடிவுடனே
சொல்லும்‌ கடக மதிஅதனில்‌
துணையில்‌ கணையில்‌ தோன்‌ றினளால்‌. 90

அந்தத்‌ துளவம்‌ எனும்மடவாள்‌
அகலம்‌ புவிமான்‌ தனதுஇடத்தில்‌
வந்துஉற்‌ பவிக்கப்‌ பூரூவநாள்‌
வகுத்த தவம்யா தென்னஇட.ந்‌
குந்து பலவாய்‌ உபசரித்துத்‌
தளிர்க்கை கொடுபொற்‌ றாள் தடவிச்‌
சிந்தை கனிந்து ம௫ழ்சறக்கத்‌
இருமா முடியில்‌ தாங்கினளால்‌. 91

பெரியாழ்வாரின்‌ செயல்‌
பெரியாழ்‌ வாரும்‌ அன்றுஉதயம்‌
பெறுமுன்பு அமையும்‌ துயில்‌உணர்ந்து
விரியார்‌ புனலின்‌ தடந்தோய்ந்து
விதியிற்‌ காலைக்‌ கடன்பலவும்‌
புரியா துளவம்‌ அணிதிருமண்‌
பொலியத்‌ திருப்பூங்‌ கூடையுடன்‌
பரிவாய்‌ இதழ்விண்டு அலர்ந்தமலர்‌
பறிப்ப நந்த வனம்‌அடைந்தான்‌. 92

சோதியைக்‌ கண்டார்‌
வந்து நோக்கும்‌ பொழுதுஅவன்‌ தன்‌
மனமும்‌ மலர்க்கண்‌ களும்களிப்பக்‌
கந்தம்‌ பரந்து நெடுந்தூரம்‌ கமமும்‌ தளவம்‌ அதன்மிசைஓர்‌
சந்த்ர வதனப்‌ .பெருங்கதிரோன்‌
தான்வந்து உதய மானதுபோல்‌
முந்தும்‌ சோதி தோன்றுதலும்‌ முதிரும்‌ பெரிதுஅற்‌ புதம்‌அடைந்தே; 93,

அருகுஉற்று அமைய நோக்குதலும்‌ மதிமா முகமும்‌ அம்புயம்நேர்‌
இருகண்‌ கரம்பா தமும்‌ஒளிரும்‌
– பெண்கண்‌ மணிதன்‌ எழில்தோக்கி
முருகுஉற்று ஒளிரத்‌ துளவுஅணியும்‌ முகுந்தப்‌ பெருமான்‌ தனக்குஉகப்பாம்‌
இருமற்று இவளாம்‌ எனஉளத்துற்‌
சிந்தித்து அநேக விதம்துஇத்தே. -94

– இங்கே இம்மாது இரத்தினம்வந்து }
இருக்கும்‌ செயல்‌என்‌ னோ?இதெல்லாம்‌
பங்கே ர௬கம்வாழ்‌ இருவினொடும்‌
பார்மின்‌ னோடும்‌ பாம்பணையில்‌
செங்கேழ்‌ மலர்க்கண்‌ வடபத்ர ‘
சாயி தன்னை வினவியிடில்‌
அங்கே உணர லாம்‌எனத்தன்‌
அகம்‌உள்‌ தெளிந்துஆ னந்தமொடும்‌; 95

ஆழ்வார்‌ காணிக்கை
அந்த காந்த மணிவிளக்கை
உபய கரஅம்‌ புயம்‌அதுகொண்டு
உந்தி எடுத்துத்‌ தாங்கிவிரைந்து
ஒளிர்நந்‌ தனமா வனந்தனைவிட்டு
இந்து தவழும்‌ உயர்த்தவட
பெருங்கோ யில்முன்‌, எய்தித்தான்‌
தந்த பெருங்கா ணிக்கைஎனத்‌
தரைமேல்‌ வளர்த்தி இவைபுகன்றான்‌: 96

இவள்‌ யார்‌?
துமுதம்‌ தெரிக்கும்‌ பாற்கடலின்‌
துயில்நீத்து இவண்வந்து உறைந்திடுவோய்‌/
குமுதம்‌ பொருவாய்‌ கரியகுழல்‌
மதிமா முகம்கூ ரியவேல்கண்‌
அமுத மொழிஇப்‌ பெண்‌அணங்கார்‌?
இவண்வந்‌ ததும்மேல்‌ அமைவனவும்‌
உமது திருவாய்‌ மலர்ந்திடும்‌என்று
உபய மலர்த்தாள்‌ வணங்கினனால்‌. ர 97

நின்‌ திருமகளாய்‌ வளர்க்க எனல்‌
அன்போடு அவ்வாறு உரைத்துவணங்கு
ஆழ்வார்‌ அணிமா முகம்நோக்கி
மின்போல்‌ ஒளிரும்‌ திருமேனி
விளங்கு மணித்தா மரைவளரும்‌
பொன்போல்‌ வாள்நின்‌ இருமகளாம்‌;
அதனால்‌ பொலிவு சிறந்தோங்கும்‌
தின்மா ளிகையி னிடைகொடுபோய்‌ நேய முடனே வளர்த்திடுவாய்‌. 98

கோதை .எனப்‌ பெயரிடுக
முன்பின்‌ இயைந்த -செயலும்‌இவட்கு
இனிமேல்‌ முயலும்‌ செய்கைகளும்‌
பின்பின்‌ உணர்தி என அருளப்‌
பெருகப்‌ புகன்று பின்பும்‌இவள்‌
குன்பேர்‌ கோதை யாகுமெனத்‌
தரிப்பாய்‌ எனவும்‌ சாத்தினனால்‌;
வன்போடு அடைந்த மல்லரைமுன்‌
மலைந்து குமைத்த மாமாயன்‌. 99

உரைசெய்‌ மொழியார்‌. அமுதுசெவி
.. வழிவந்‌ துறலும்‌ பட்டர்பிரான்‌
கரைசெய்‌ திடுதற்கு. அரியபெருங்‌
களியா முவரி ‘தனில்‌அழுந்தி
விரைசெய்‌ துளவம்‌ கமழ்பதத்தோய்‌/
விளம்பு முறைசெய்‌ வேன்‌எனத்தா
மரைசெய்‌ , மலர்போல்‌ .முகங்கவின
மறித்தும்‌ வணங்கி நிற்றலுமே; 100

இறைவன்‌ கட்டளை
ஈண்டுடும்‌ மடவார்‌ இரத்தின த்தை
மணிபொற்‌ . சிவிகை. யிடையேற்றித்‌
தாண்டுந்‌: தரங்கக்‌ கடலின்‌ ஓலி
. தரும்வாத்‌ இயங்கள்‌ uss mms
வேண்டும்‌ “சம்ப்ரம :முடன்கொடுபோய்‌
விட்ணு சித்தன்‌ மனைவிடுத்து
மீண்டுஇங்கு உறுமின்‌ என்னபரி
சனத்தாற்கு அருள்மால்‌ விடையருளா; கு 101

நன்றுஎன்று அவர்கள்‌ திருவுள்ளம்‌
நயந்துஅம்‌ பொன்னின்‌ நவமணியும்‌
துன்றும்‌ சிவிகை மிசைஅணங்கின்‌
._ தூய்மா மணியை இருகரம்கொண்டு
ஒன்றும்‌ படியாய்‌ எழுந்தருளச்‌
செய்தே முழங்கா ரொலிஓங்கிச்‌
சென்றுஎண்‌ திசையின்‌ உறைவோர்தம்‌
செவியுற்று அடைந்து களிப்பாக; 102

மேளம்‌ பேரி நாகசுரம்‌
விளங்குந்‌ தாரை திருச்சின்னம்‌
தாளம்‌ ஒளிர்மத்‌ தளம்மற்றும்‌
சாற்றும்‌ பலவாத்‌ தியமுடனும்‌
வாளங்‌ கண்ணார்‌ நாடகமும்‌
மருவச்‌ சிறந்த மாநகர்வாய்‌
நீளுந்‌ தெருக்கள்‌ வலம்புரிந்தந்‌ நெடியோன்‌ மனைவிட்டு அவர்போனார்‌. 103

நாச்சியாரை ஆழ்வார்‌ வளர்த்தல்‌
(வேறு)
மனைய டைந்துறு மங்கலந்‌ தினந்தொறும்‌ வளர
வினையி லாதவவ்‌ விட்டுணு சித்தனும்‌ விதியால்‌
அனைய பெண்ணினுக்கு அழகுறக்‌ கோதையாம்‌ என்னப்‌
புனைது மாயவன்‌ மொழிப்படி நாமமும்‌ புனைந்தே; 104

வச்சி ரம்வயி . டூரியம்‌ செழியுமா ஸணிக்கம்‌
பச்சை யோடுகோ மேதகம்‌ புகர்புட்ப ராகம்‌
தச்சி ழைத்தசெம்‌ பொன்னினார்‌ வடமொடு தயங்கி
உச்சி தம்பெறும்‌ தொட்டிலும்‌ ஒளிபெற அமைத்தே; 105

ஆட்டுந்‌ தோழியர்‌; ‘ தொட்டிலிட்டு அஞ்சன மலர்க்கண்‌
இட்டும்‌ பாங்கியர்‌; மடிமிசைத்‌ இருத்தி அம்புலியைக்‌ .
காட்டும்‌ தாதியர்‌; கண்ணிறை கழித்துஅருந்து அமுதம்‌ ஊட்டும்‌ சேடியர்‌ முதலினர்‌ உபசரிப்‌ புறவே; 106

பேதை யாம்பரு வந்தனில்‌ இயைவன பெரியோர்‌
ஓதும்‌ அம்முறை யாவையும்‌ வழுவிலாது . உ.ஞற்றிக்‌
கோதி லாத்தனிக்‌ கலன்களும்‌ குறைவிலாது அணிந்து
இதி லாமதிக்‌ கலையெனத்‌ தினம்தினம்‌ வளர்த்தார்‌. 107

வளரும்‌ நாளிடை பெதும்பையாம்‌ பருவம்வந்‌ துறலும்‌
அளகம்‌ சூழிய மாய்முடித்து அலங்கலும்‌ புனைந்தே
ஒளிரும்‌ நெற்றியில்‌ பிறையெனத்‌ திருமண்காப்‌ புடனே
தளத எத்திருச்‌ சூரணம்‌ தன்னையும்‌ அணிந்தார்‌. 108

காதில்‌ கல்லிழை கம்மல்நற்‌ சிமிக்கெகத்‌ தரிப்பால்‌
இதி லாநவ மணிஇழை செம்பொனின்‌ முருகும்‌
கோதி லாமயிர்‌ மாட்டிசேர்‌ அழகுறும்‌ கொப்பும்‌
ஓது மற்றுள வகைகளும்‌ ஒளிபெற அணிந்தார்‌. 109

6தசு லாம்செழுங்‌ குவளைநேர்‌ கண்களில்‌ திகழக்‌
காச லாதொளிர்‌ அஞ்சனம்‌ கவின்பெ.ற அணிந்து
மாசி லாஇள நகைபெறு மதிமுகத்‌ தொளிரும்‌
நாசி தன்னின்மூக்‌ குத்திபி லாக்குடன்‌ அணிந்தார்‌. 110

சங்கம்‌ போன்றுள கழுத்தினில்‌ -தாழ்வடம்‌ பதக்கம்‌
பொங்கு ஒளிக்கட்டு வடம்பொலி மோகன மாலை
செங்க .இிர்ச்செழும்‌ பருதிபோல்‌ சரப்பளி’ பதக்கம்‌ –
தங்கு முத்தினா ரமும்பல பொலிவுறத்‌ தரித்தார்‌. 111

ஏட லர்ந்தபூங்‌ கரங்களில்‌ எழில்செய்‌ :மதாணி
ஆட கப்பசுந்‌ தோள்வளை அணிகொள்கே யூரம்‌
சூட கத்தொடு வளையலும்‌ நவமணித்‌ தொடியும்‌:
நீடு றும்விர லாழியும்‌ அணிமுறை நிறைத்தார்‌. 112.

அய்ய மெய்தியுண்‌ டிலையெனு மிடையிடை யழகாய்‌
செய்ய பட்டின்சிற்‌ றாடையும்‌ சிறுமடி சாறும்‌
துய்ய பொன்னரை ஞாணொடு துலங்கும்‌ஓட்‌ டியாணம்‌ .
வெய்ய வன்‌ஒளி காந்துறும்‌ படிமிலைந்‌ தனரால்‌. 113

பளப ளென்னசெம்‌ பஞ்சணிந்து அம்பொன்பா. டகமும்‌
மாமணித்‌ தண்டையும்‌ கெச்சையும்‌ கொலுசும்‌
முளரித்‌ தாள்களின்‌ மோதிர வகையுடன்‌ அழகு
வளமு றும்படி அணிந்தவை யாவரே வகுப்பார்‌? 114

இன்ன வாறதாய்‌ வானகத்‌ இடையிருந்து இழிந்த
மின்ன னாள்‌ஒளிர்‌ மெல்லிய மேனியின்‌ நிறையப்‌
பொன்னின்‌ மாமணி நிரப்புபல்‌ பூடணம்‌ அணிந்தார்‌
வன்ன முற்றபொன்‌ ஓவியம்‌ நிகர்த்திட மாதோ. 115

பொன்னின்‌ மாறுகோ லொடுமணி முச்சிலும்‌ பொலியும்‌ –
மின்னு வெண்கல வடுப்பொடு தாம்பலா விறகும்‌.
வன்ன வெண்பொனின்‌ பலபல: பாண்டத்தின்‌ வகையும்‌.
அன்ன மென்னடை யாள்விளை யாடுதற்கு அமைத்தார்‌. 116

இனைய யாவும்கொண்டு எழில்பெறும்‌ தோழிய ௬டனே
அனைய நாள்தனில்‌ நடைபெறும்‌ இருவிளை யாடல்‌
கதனைஓவ்‌ வாதஅக்‌ கோதையும்‌ நாள்தொறும்‌ தமது
மனையின்‌ ஊடுஇருந்து ஆடுவள்‌ மகழ்வொடு மாதோ. 17

நாச்சியார்‌ திருப்பணி
அந்த நாள்தனி லேபத்தி தலைஎடுத்‌ தவளாய்‌
கந்தை அன்பினோடு உஞற்றிடும்‌ தன்மைபோல்‌ தானும்‌
நந்த மாவன கயிங்கர்யம்‌ இயற்றுவான்‌ நலஞ்சேர்‌
,_ சிந்தை ஊடு௨உற நினைந்துஇது செய்யல்‌உற்‌ றனளால்‌. 118

உதைய காலையில்‌ தந்தையோடு இயல்வன உஞநற்றி
– இதையம்‌ அன்புற நந்தன வனந்தனில்‌ ஏ௫த்‌
-ததையு மாமலர்‌ எடுத்துத்தண்‌ ணீர்தனைப்‌ பாய்ச்சி
– அதையும்‌ ஓர்விளை யாட்டுஎன அனுதினம்‌ இழைப்பாள்‌. 110

சூடிக்கொடுத்தாள்‌
இன்ன வாகப்பற்‌ பலதினம்‌ இயைவுறும்‌ அமைதி
“பன்னு மோர்பகல்‌ பன்மலர்‌ பறித்துவந்‌ ததனைத்‌
துன்னு மாலைகள்‌ அணிபெற வகைவகை தொடுத்து
மன்னு பூந்திருக்‌ கூடையுள்‌ நிறப்புற வைத்தே; 120

ஆய ௬௯டைஓ ரிடத்துவைத்து உலவலுக்கு ஆழ்வார்‌
போய காலையில்‌ கோதைஎன்று உரைசெய்பூங்‌ கொடியும்‌
ஏய மாலைகள்‌ தன்னின்‌ஓர்‌ மாலையை எடுத்துத்‌தூய நாசியின்‌ அதன்மணம்‌ சோதிப்பான்‌ மோந்தாள்‌. 121

மோந்த போதினில்‌ பரிமள மிகுந்துற முழுதும்‌
காந்து மாமணித்‌ தொடியுறும்‌ கரங்களால்‌ எடுத்து
வாய்ந்து றும்படி அளகத்தும்‌ வளைகமுத்‌ தகத்தும்‌
வேய்ந்து தன்திரு மேனியின்‌ விளங்கு௮அழகு உணர்வாள்‌. 122

தோன்று சின்றகண்‌ ணாடியின்‌ கிணற்றிடைத்‌ தொடர்ந்தே
ஏன்ற பேரொளி யழகுகண்டு இன்புறும்‌; மீண்டும்‌
சான்ற தந்தையார்‌ வருவர்‌என்று அதன்முனம்‌ தரித்த
ஆன்ற மாலைகள்‌ அனைத்தையும்‌ அமைவுற வாங்கி; 123

இருந்து மாமலர்க்‌ கூடையிற்‌ சிக்கென முறையிற்‌
பொருந்த வைத்துஅதை உணர்ந்திடா வகைமுன்பு போல
இருந்தி டந்தனிற்‌ கொண்டுபோய்‌ இயைவுறத்‌ தூக்கிக்‌
கருந்த டங்கணாள்‌ பாங்கியர்‌ உறும்‌இடம்‌ கலந்தாள்‌. 124

மாத வற்குஅர சாகிய பெரியஆம்‌ வாரும்‌
கோதை செய்தமை உணர்ந்திலார்‌; இருமனை குறுகிப்‌
போது மாலையின்‌ குடலையை எடுத்துத்தன்‌ புயத்தின்‌
மீது தாங்கியே விரைவொடும்‌ வீதிகள்‌ கடந்தே; 125

வடபெ ருந்திருக்‌ கோயிலின்‌ மருவிநஞ்‌ சமரும்‌
படஅ ரா௮அணை அதன்மிசை பள்ளிகொள்‌ பவர்க்குக்‌
குடலை மாலையை அருச்சகர்‌ இருக்கரங்‌ கொடுத்திட்டு
அடைவு டன்‌உகப்பு எய்துறு மூறைஅணி வித்தே; 126

தீர்த்த மும்பிர சாதமும்‌” இகழ்வுறும்‌ இருகை ஏர்த்து வாங்கித்தன்‌ இதயமும்‌ இருகணும்‌ களிப்பச்‌
சீர்த்த நாரணன்‌ அம்புயச்‌ சீரடி வணங்கிப்‌
டூபர்த்து மாளிகை குறுகிவீற்‌ நிருந்தனன்‌ பெரியோன்‌, ..127

என்றும்‌ ஆங்குஅவன்‌ கொணர்ந்துதற்‌ கணிந்திடு தலினும்‌
அன்ற லங்களில்‌ பரிமளம்‌ அதிகமாய்‌ உறலும்‌
இன்று இதற்குள்டும்‌ முறையுறல்‌ எவ்விதம்‌ எனவே
குன்றி னால்மமை விலக்கிய கோவலன்‌ குறியா; : 128

வென்றி வேல்கண்௮ம்‌ கோதையாள்‌ விட்டுணு இத்தன்‌
சென்று நீங்கிய காலைத்தன்‌ குழலிடைச்‌ சேர்த்த
மன்ற லாம்‌என நடந்துள வாறுஉணர்ந்‌ தருளி
நன்று நன்றுஎன ஆனந்தம்‌ மிகவும்நண்‌ ணினனால்‌. 129

ஆங்குஅவ்‌ வாறதாய்‌ மாலையைக்‌ தொடுத்துவைத்து ஆழ்வார்‌
நீங்கு காலையில்‌ நாடொறும்‌ நிர்மலக்‌ கோதை
தேங்கு ழற்கணே அணிந்துகண்‌ ணாடிநேர்‌ கணெற்றில்‌
பாங்கி னோடுஅழ குணர்ந்துஅதைப்‌ பண்டுபோல்‌ வைப்பாள்‌.-130

குந்தை அச்செயல்‌ உணர்ந்திடாது அதைப்பின்பு தகவாய்‌
வந்தெ டுத்துப்போய்க்‌ கொடுப்பவை வடபத்ர மாலும்‌
சந்தை இன்புற அணிந்துஉளம்‌ ஆனந்தம்‌ சேர்வன்‌
இந்த வாறதாய்‌ நாள்தொறும்‌ இயலும்‌அந்‌ நாள்வாய்‌; 131

உவரி போல்நிற வடபெருங்‌ கோயில்‌உள்‌ உறைவோரன்‌ :
புவனி மங்கையாள்‌ கோதையாம்‌ திருப்பெயர்‌ பொருந்தி
அவத ரித்துதற்கு இயற்றுறு கயிங்கர்யம்‌ அதனை
cots ஞம்தெரிந்து உணர்வகை புரிகுவான்‌ எண்ணி; 132

வடபத்ரசாயி நாச்சியார்‌ சிறப்பை உலகுக்குணர்த்தல்‌
ஒருதி னம்பெரி யார்கொணர்ந்து உதவுபூங்‌ குடலை
இருக ரங்களால்‌ அருச்சகர்‌ இனிதொடும்‌ ஏந்தி
மருவு’ மாலையில்‌ ஒன்றுஎடுத்‌ திடலும்மற்று அதின்ஓர்‌
கருமயிர்தெரி வுறும்வகை காண்குவித்‌ தானால்‌, 133

காண்ட லும்‌அதைச்‌ சாத்துறாது அர்ச்சகர்‌ கருத்தில்‌
ஈண்டு இதன்‌இடை பங்கிஉற்‌ நிடுதலால்‌ எவரோ
பூண்ட மாலையைப்‌ போன்றுளது எனஜயம்‌ பொருந்தி
ஆண்டு உறும்பெரி யார்முகம்‌ அமைவுற நோக்கா; 134

அர்ச்சகர்‌ செயல்‌
அய்ய இக்கரு மயிர்தனைக்‌ கண்டிரோ? அதலால்‌
செய்ய மாலையும்‌ கசங்கியது; இச்செயல்‌ இதனுக்கு
எய்த வேணகா ரணம்‌எனோ? உணர்கிலன்‌; இதனைப்‌
பைய ராஅணை யார்தமக்கு அணிதல்பண்‌ பாமோ? 135

தீதி லார்கள்கொண்டு ‘அடைதலில்‌ இம்முறை சேரின்‌
ஓதும்‌ மற்றவர்‌ கொணர்வதை என்‌என உரைப்பேன்‌?
பேதை யேன்நினது அடிக்குஅப சாரமே பெறினும்‌
ஈது மாதவர்‌ தமக்கு௮ணி குதல்‌இழி வாமால்‌. – 136

அல்ல வென்றுநான்‌ அணிந்திடில்‌ பவம்தனக்கு ஆளாய்‌
தொல்லை மாநர கம்தனில்‌ தொடர்ந்துற அழுந்தி
எல்லை யில்லதாம்‌ காலம்‌.ஆங்கு எய்திடல்‌ வேண்டும்‌;
நல்லை நீ௨ண ருறாததை அடியன்‌என்‌ நவில்வேன்‌? 137

ஆய வாற்றினால்‌ யான்‌இதை அணிகுவன்‌ எனஇம்‌
மாய ஸனார்மனம்‌ உகப்பினும்‌ மனம்‌அறிந்து அடியேன்‌
நேய மோடுஅணி வித்திலன்‌ எனதில மிசைஅத்‌
தூய மாமலர்க்‌ குடலையைச்‌ சோரவிட்‌ டனனால்‌. 138

மாயனார்‌
உகப்பினும்‌ அணிவியேன்‌ என்றது அர்ச்சகரின்‌ திருத்தொண்டின்‌ உறைப்பைக்‌
காட்டுகிறது,

எடுத்த மாலையோடு அம்மலர்க்‌ குடலையை எதிரில்‌
கடுத்த மாமுகத்து அருச்சகர்‌ புவியிற்காண்‌ குறவே mo
விடுத்த வாறும்‌அங்கு அதுதுவண்டு ஒருமயிர்‌ விளங்க
அடுத்தி ருந்ததும்‌ அகமுறப்‌ பெரியரும்‌ அறிந்தே; 139.

வடுவில்‌ அம்புய. மலர்முக மண்டலம்‌ வதங்கிச்‌
சுடுகை .யாய்மனம்‌ பதைத்திடத்‌ துடைகளும்‌ கரமும்‌
நடுந டுங்கிட மேனியும்‌ குலைந்திட நலியும்‌
கடுவுண்‌ டார்களின்‌ உடலுயிர்‌ கலங்கிடக்‌ கரைந்தான்‌. 140

வெருவ. லோடுவீழ்ந்து அழுந்திய வெந்துயர்க்‌ கடலை
ஒருவி தம்கடந்து அக்கணம்‌ விரைவினில்‌ ஓடித்‌
தெரு௮ கன்றுநந்‌ ‘தனவனம்‌: அதனிடைச்‌ சேர்ந்து
மருவு றும்மலர்‌ தேடிஉள்‌ ளனமறித்து எடுத்தே; டட மதிரி–141

சரங்கள்‌ தம்மொடும்‌ தார்தொடுத்து ஆலயம்‌ சார்ந்து
தரங்க மாக்கடல்‌ வண்ணருக்கு அருச்சிப்பான்‌ தன்பொற்‌
‘கரங்கள்‌ தன்னில்‌௮க்‌ கடிமலர்க்‌ குடலையை அளித்திட்டு
இரங்கு உளத்தொடும்‌ அவன்தனது எழில்முகம்‌ நோக்கு; 142

அடியன்‌ நெஞ்சறி யாமல்‌இங்கு அடுத்துஉள தாகும்‌
கொடிய தீவினை யாவையும்‌ உளம்கொளாது அருளி
நெடிய நாரணற்கு இங்குஇகை நேரம்‌எய்‌ இடுமுன்‌
கடிது சாத்திட வேண்டும்‌என்று இருகரம்‌ குவித்தான்‌. 143

அனைய மாலையை வாங்கிஅவ்‌ அரவுஅணை அமலன்‌
புனையு மாறுஅணிந்‌ தருச்சகன்‌ உலகெலாம்‌ புகழும்‌
வினையி லான்முக மண்டலம்‌ நோக்கியே மீட்டும்‌
இனைய மாமொழி தனைஎடுத்து இயம்புவான்‌ நன்றே.144

அய்ய! கேட்டருள்‌; ஐயுறேல்‌; நின்னொடும்‌ அடியேன்‌
பொய்ய தாம்மொழி புகல்கிலேன்‌; புகலும்‌இங்கு இதனை
மெய்ய தாம்‌என உணர்தி; மேனாளிடைக்‌ கொணர்ந்த
செய்ய மாலைகள்‌ போன்றில பின்பின்‌ னாளாய்‌; 145

கொணரு மாலையில்‌ வதக்கமும்‌ கசக்கமுங்‌ குறுகி
நணுகு மாங்குஅதை நவின்றிடில்‌ நல்லுளத்து என்‌என்று
உணர்வை யோள௭ன்றும்‌ உனதிடத்து என்‌அப சாரம்‌
அணுகுமோ என்றும்‌ அறிவியாது இருந்தனன்‌ அன்றே, 146

அந்த மாலைகள்‌ துமைஅவர்க்கு அணிந்துவந்‌ துதனால்‌
சிந்தை ஊடுஅதை இன்றுநீ தெளிந்தனை அலவோ?
இந்த வாறுநம்‌ மாலையின்‌ எய்துமாறு ஓதி
வந்தது என்‌2அதை வகுக்கஎன; மற்றுஅவன்‌ வகுப்பான்‌. 147

விளங்கு மாலைகள்‌ தமைஎன்றும்‌ ஓர்விதம்‌ பெறவே
வளங்கொ ஸும்படி தொடுத்துஇவண்‌ வருவன்‌ மற்று அதனில்‌ ‘
களங்கம்‌ உள்ளதுஎன்று உணர்ந்திலன்‌ கண்டிலன்‌ என த்தன்‌
உளங்க லங்கிஆ ராமையி னோடுஉரைகத்‌ தலுமே, 148

கேட்ட லோடும்‌உள்‌ இரக்கமாய்ப்‌ பெரியரே ! கெழுமும்‌
வாட்ட மோடுஉளம்‌ வருந்தலீர்‌।| இனிபுனை மாலை
-ஈம்டல்‌ எச்சரிக்‌ கையினுடன்‌ இயற்றுக என்றுஇயம்பி வீட்ட கம்தனில்‌ அருச்சகன்‌ மேவினன்‌ அன்றே. 149

(வேறு)
ஆழ்வார்‌ தானும்‌ கிலேசமுடன்‌
்‌ அரவின்‌ அணையின்‌ மிசைடடந்து
வாழ்வாய்‌ உனது திருவிளையாட்டு
ஆமோ? மறித்துஉன்‌ இருவடிக்குத்‌ தாழ்வாம்‌ கருமம்‌ புரிந்துளனோ?
எனத்தாள்‌ வணங்கி இவ்வாறு –
சூழ்வார்‌ எவரோ? எனதநினைத்து வ
திருமா ளிகையில்‌ தொடர்ந்தடைந்தான்‌. 150

ஒப்பாய்‌ எடுத்து உரைப்பதனுக்கு
ஒவ்வாத்‌ துயர்உற்று உளந்தன்னில்‌
இப்பூங்‌ கூடை தனைத்தாரோடு
இருத்தி உலாவல்‌ தனசக்கெய்தும்‌
அப்போ தேதா வதுசங்கை
அடைதல்‌ உளவோ? அங்குஅதனைத்‌
குப்பாது உணர்தல்‌ வேண்டும்‌என
நினைந்துஅன்று இரவைத்‌ தான்கழித்தான்‌. 151:

உண்மை தெரிந்தது
மறுநாள்‌ அருணோ தயத்துஎழுந்து
வாவி நீர்தோய்ந்து ஆதவனுக்கு
உறும்‌௮க்‌ கடன்கள்‌ விதியின்மூடித்து
ஒளிர்நந்‌ தனமா வனம்‌அணுகி
அறுகால்‌ முகர்முன்‌ பரிவட்டம்‌
அதனை நாசி தனக்கு௮ணிந்து நறுமா மலர்கள்‌ எடுத்துஅகத்தில்‌-நண்ணி அலங்கல்‌ தனைத்தொடுத்தே; 152

நாசிதனக்கும்‌ பரி
வட்டம்‌ அணிந்து ஆழ்வார்‌ மலர்‌ கொய்வார்‌.
**தமது நாசியில்‌ வாசனை ஏறாதபடி திருப்பரிவட்டத்தால்‌ கட்டிக்கொண்டு
வண்டுகள்‌ மொய்த்து எச்சில்படுத்தா முன்னமே திருவுகிர்‌ படாதபடி, பக்குவ
மாகக்‌ கொய்து, இருப்பூக்‌ கூடையிற்‌ சேர்த்துக்‌ கொண்டுவந்து, பிணையல்‌,
கண்ணி, கோவை முதலாகப்‌ பலவித மாலைகளாகக்‌ சுட்டிக்கொண்டு டுபோய்‌ வட
பெருங்‌ கோவிலுடையானுக்குச்‌ சமர்ப்பித்துக்கொண்டிருந்தார்‌’” என்ற குருபரம்‌
பரை (பன்னீராயிரப்படி) நோக்குக.

என்றும்‌ இருத்தும்‌ இடந்தன்னில்‌ இருத்தி உலாவற்கு .எய்துவன்போல்‌
அன்றும்‌ எய்தி ஓர்‌இடத்தில்‌
கரவாய்‌ அதனைப்‌ பார்த்திடலும்‌
சென்ற தாதை ஒளித்திருத்தல்‌ தெரியாள்‌ தொல்நா ளைப்போல
மன்‌ றல்‌ கமழ்பூங்‌ குழற்கோதை :
மருவார்‌ அலங்கல்‌ தனைஎடுத்தே;: 153

கோதையாரின்‌ அச்சம்‌
அளகம்‌ தனிலும்‌ மார்புஅகத்தும்‌
அணிந்திட்டு அதன்பே ரழகுஉணர்வான்‌
புளக: மொடும்கண்‌ ஸணாடியுறும்‌
இணற்றில்‌ பொருந்தி நிழல்பார்க்க
உளம்‌உட்‌ புழுங்கப்‌ பெரியாழ்வார்‌
அதுகண்டு ஓடி வரலும்மனம்‌
இளகிக்‌ கோதை வெருவலொடும்‌
இருகால்‌ கரம்மெய்‌ நடுக்குறவே; 154

சூடி யுறும்‌௮ம்‌ மாலைஎலாம்‌
துரிதத்‌ துடனே வாங்கி௮அப்பூங்‌
கூடை யுறவைத்து அதன்‌அருகில்‌
குருதி வாள்போல்‌ செவ்வரிதோய்‌ ஓடை மலர்க்கண்‌ நித்திலங்கள்‌
உதிர்தல்‌ தனைஒத்து ஒழுகிடுநீர்‌ ஆடை நனைந்து . புவியினில்வீழ்ந்து
ஆறாய்ப்‌ பெருக அழுதுநின்றாள்‌. 155 ,

ஆழ்வார்‌ மொழிகள்‌
விம்மா அழுதல்‌ தனைநோக்கி
விட்ணு சித்தன்‌ மனம்‌இளகி,
அம்மா! கிளியே! மடமயிலே!
அனமே! குயிலே! ஆரமுதே!
இம்மா அலங்கல்‌ அரவணைமேல்‌ :
எழிலார்‌ திருக்கண்‌ வளர்ந்தருளும்‌
நம்மா தவனுக்கு அணிவதுஎன
நாடாய்‌ கொல்லோ! என்நினைந்தாய்‌? 156

அடியேன்‌ புரிந்த தவப்பயனால்‌
அமுதத்து எழுந்த திருமகள்போல்‌ கடியார்‌ துளவந்‌ .தனில்‌உ தித்தாய்‌/
காலி மேய்த்து வரைஎடுத்த
வடிஆ மியனும்‌ எனக்கு௨ன்னை
மகளாம்‌ என்னும்‌ வகைபுகன்‌ றான்‌;
படிமீது ஒருவர்‌ நிகர்‌இலைஎன்று ‘ .
இருந்தேன்‌; பெற்ற பயன்‌ இதுவோ? _ 157

புதனைப்‌ பயந்தோன்‌ நிகர்முகத்தாய்‌। –
புவியில்‌ பலவாம்‌ உயிர்பூப்ப
மதனைப்‌ பயந்த மாயவற்கு
வனைந்து கழிக்கும்‌ மருமாலை
– அதனைப்‌ புனைய லாம்யாம்‌;யாம்‌
அணிமா லைகள்‌அங்கு அவர்க்குஆமோ?
இதனைத்‌ தெளிய நினக்குஒருவர்‌
இயம்பக்‌ கேட்டும்‌ உணராயோ? 158

என்ன கருமம்‌ புரிந்தனை? இம்‌
முறையார்‌ இழைப்பர்‌? எவர்களுக்கும்‌
பன்னும்‌ அறிவு விளங்குமுறை
பகரும்‌ தகைமை உனக்குஉளதே!
துன்னு மதியும்‌ மமுங்கினைகொல்‌/
துலங்கா மதியார்க்கு ஒவ்வுசலாம்‌;
இன்ன புரிதல்‌ நின்போல்வார்க்கு
ஒவ்வா ஒவ்வா ஏந்திழையேர 158

மனங்குளிரச்‌ செய்தார்‌
இவ்வா றாக நன்மையொடும்‌
பலநன்‌ மொழிகள்‌ எடுத்துஇயம்பி
வெவ்வாட்‌ கண்கள்‌ ஒஓழுூடும்நீர்‌’
முத்தம்‌ துடைத்து விளம்பிஅவள்‌
ஒவ்வா மதியின்‌ முகம்தடவி
உச்சி மோத்திட்டு உறத்தழுவி
செவ்வே அவள்தன்‌ மனங்குளிரச்‌ செய்து மறித்துஇங்கு இதுசெய்வான்‌: 160

நந்த வனம்பேர்ய்‌ மீதியுள
‘நறுமா மலர்கள்‌ தனைஎடுத்து –
வந்து சிறந்த மாலைகளாய்‌
வகுத்துஅங்கு அதனைக்‌ கொடுசென்றே
சிந்தை கலங்கிக்‌ கொடியவிடங்
கரின்வாய்ச்‌ சக்கி யகப்பட்ட
தந்த மலைஅன்று அழைத்தபிரான்‌
தனக்குச்‌ சமர்ப்பித்து அகம்சார்ந்தான்‌, 161

திருமால்‌ கனவில்‌ கூறுதல்‌
அன்றை இரவில்‌ பெரியாழ்வார்‌
அமுதம்‌ பருகத்‌ இருவணைமேல்‌
சென்று மலர்க்கண்‌ வளர்பொழுதில்‌
. திருமால்‌ அவன்தன்‌ கனவினிடைத்‌
துன்றி யுததி யுடைபுவிமான்‌ நமக்குச்‌ சொலும்பா மாலையொடும்‌
மன்றல்‌ மாலை கயிங்குரியம்‌
வகுப்பான்‌ துளவின்‌ உற்பவித்தே;. 162

உனது மகளாய்‌ வளர்கின்‌.றாள்‌;
உவளும்‌ இந்நாள்‌ உவப்பினொடும்‌
தனது குழற்கண்‌ அணித்துநிழல்‌—ணாடி தனில்‌உணர்ந்து மனது மகிழ்விற்‌ கழித்தருள்பூ மாலை அதனை நீகொணர்ந்து
இனமும்‌ அளித்தாய்‌; அதுநறவம்‌
இகழ்ந்திட்டு அழகும்‌ சிறந்துளதால்‌. 162

அன்ன அழகார்‌ அலங்கலையாம்‌
அணிந்துஆ —
நென்ன லொடுஇன்று அவள்‌அணியா
வெறுமா லையினை நீகொணர்ந்தாய்‌!
இன்ன அலங்கல்‌: நனிநறவ
முடனே எழில்‌என்‌ பதுிறிதும்‌
துன்ன விலை;அங்கு அதனால்‌எம்‌ —
உ.ளமும்‌ உவப்புத்‌ தோன்றிலதால்‌. 164

ஆத லால்பின்‌ னாள்முதலாய்த்‌
தொடுக்கும்‌ அலங்கல்‌ தனைஎல்லாம்‌
தீதி லாநின்‌ திருமகளாய்த்‌
இகழ வளர்அம்‌ . புவிமாதாம்‌
கோதை குழலில்‌ அணிவித்துஆங்கு
அவள்பின்‌ கழித்துக்‌ கொடுக்கஅதை
நீதி உடையோய்‌! கொணர்ந்தளித்தி।
எனஆங்கு அதனை நிகழ்த்தினனால்‌. 165

அத்த கவின்‌அவ்‌ வில்லிபுத்தூர்‌
எனும்மா நகரின்‌ அமர்ந்துறைவோர்‌
சித்த. மகிழ்வை ணவரர்ச்ச
காதி யரசர்‌ முதலனைத்துக்‌
கொத்து தனக்கும்‌ பாலர்முதல்‌
குரவர்‌ ஈறாய்‌ யாவர்கட்கும்‌
குத்தப்‌ கனவில்‌ உணர்வகையாய்ச்‌
சாற்றித்‌ தன்துஆ லயம்சார்ந்தான்‌. 166

களையுற்று இரங்கு நள்ளிருளார்‌
்‌ இரவும்‌ துயிலும்‌ கழிந்துஅகல நினைவுற்று உணர்ந்து காலையின்வாய்‌
நியமம்‌ முடித்துஅங்கு எவர்களும்தம்‌
மனைவிட்டு எழுந்து வீதியின்வாய்‌
-வந்துஅன்று இரவில்‌ உணர்கனவு
தனையுற்று ஒருவர்‌ ஒருவரொடுஞ்‌ சாற்றி மிகஅற்‌ .புதம்‌அடைந்தே;. – 167

பெரியாழ்‌ வார்தன்‌ ம௫ூமையும்‌ஆங்கு
அவர்பெண்‌ கோதை மகத்துவமும்‌
தெரியாது இருந்தோம்‌ இந்தாள்வாய்‌; ்‌
தெரிந்தோம்‌ இன்றுஇங்கு இவர்தமைப்போல்‌
வரியார்‌ அரவின்‌ அணைமிசைகண்‌
வளரும்‌ Boar ரணன்பதங்கட்கு
உரியார்‌ யாவர்‌? என எவரும்‌ .
உவந்து போற்றித்‌ துஇசெய்தார்‌. 168

சூடிவழங்கினாள்‌ ‘சுந்தரக்கோதை
அந்நாள்‌ முதலாய்த்‌ தொடுத்திடும்பூ ்‌ ‘ அணியார்‌ அலங்கல்‌ தனைளஎல்லாம்‌ |
மூந்நாள்‌ தனைப்போல்‌ கோதைகுழல்‌
்‌ முடித்துக்‌ கழித்துக்‌ கொடுப்பஅதைப்‌
பொன்னாம்‌ மடந்தை ஒருபுறத்தும்‌
புவிமாது ஒருபா லினும்பொருந்தப்‌
பன்னா கணையில்‌ துயில்முகுந்தற்கு அணிந்தார்‌. அவரும்‌ பரிவடைந்தார்‌. 170

ஆடிக்‌ களிக்கும்‌ பணஅரவின்‌
அணைமாற்கு அணிபா மாலைதனைப்‌
பாடித்‌ தருமுன்‌ அணிஅலங்கல்‌
அணிந்தஇிட்டு அளித்த பரிசுஅதனால்‌
வாடி.த்‌ துவளும்‌ கொடியிடைசேர்‌
கோதை எனும்‌அம்‌ மடவாட்குச்‌
சூடிக்‌ கொடுத்தாள்‌ எனும்‌ஒருபேர்‌
அதுவும்‌ துலங்கப்‌ பொருந்தியதால்‌, 170

கோதை காதல்‌
(வேறு)
அம்மா. நகரில்‌ பெரியார்‌
மகளாய்‌ வளர்அம்‌ புவிமாது
இம்மா முறையில்‌ புகலும்‌
இருபே ரடனும்‌ வளர்நாள்‌
நம்மால்‌ நவிலற்கு அரிதாம்‌
பரம பத்தி நாளும்‌
விம்மா வரியை யணையும்‌
. பருவம்‌ உடன்மே விடலும்‌; 171

பாராய்‌ வானாய்‌ நரகாய்ப்‌:
பகரும்‌ பலவாம்‌ உயிரின்‌
வேராய்‌ முளையும்‌ வித்தாய்‌
விளைவிப்‌ பவனும்‌ தானாம்‌
நாரா யணனைத்‌ தழுவும்‌
வகையா தெனவே ஒருநாள்‌
சீரார்‌ உள்ளத்‌ தனில்‌அங்கு அவளும்‌ சந்இத்து உணர்வாள்‌. 172

அளகம்‌ தனில்யாம்‌ அணியும்‌
மணிபூந்‌ தொடையாம்‌ அதனைப்‌
புளகம்‌ முடனே அணிசெய்‌ க
அரவத்து அணையிற்‌ பொலியும்‌
களவின்‌ கனிவண்‌ ணனுமர்ச்‌
சாரூ பமதா கையினால்‌
இளகும்‌ மனதோடு அவரைப்‌
புணர்தற்‌ இசையா ததனால்‌; 173

இதனுக்கு இசையும்‌ படியாம்‌
்‌.. என்செய்‌ வோம்‌என்று உணர்கானள்‌
மதனிக்‌ குவில்கொண்டு எறியும்‌
.. மலர்ஐங்‌ கணைவந்து உருவ
விதனத்‌ நுடன்‌உற்‌ றிடும்‌௮அவ்‌
விரகம்‌ பலவும்‌ தனிநெஞ்சு
அதனுக்கு குள்ளே பிறர்கண்டு
அறியாது அடைவுற்‌ றனளால்‌. 174

உபாயம்‌ தேடல்‌
இருமா லினையாம்‌ அணையும்‌
செயல்யார்‌ புரிவார்‌? என;௮ப்‌
பெருமா நகர்வாய்‌ மடவார்‌
அவரிற்‌ பெரியா ராகி
வருகா ரணமும்‌ நிகழ்‌ அவ்‌
வகையும்‌ செலும்கா ரியமும்‌
அருகாய்‌ கண்டுஉற்‌ றவர்போல்‌ அறைவார்‌ தம்மைத்‌ துடரா; 175

அவரோடு இவளும்‌ மகிழ்வாய்‌,
அம்மா நீவிர்‌ .புவிமேல்‌
துவர்வாய்‌ மடவார்‌ உருவாய்த்‌
தோன்றுற்‌ றவர்கள்‌ தம்மில்‌
எவரா யினுமுன்‌ னொருவர்‌
இறைவா யரவிற்‌ றுயிலும்‌
உவரா மியின்வண்‌ ணரினோடு
உறவாய்க்‌ கலந்தார்‌ உண்டோ? 176

உண்டாம்‌ .எனில்‌இங்கு என்னோடு
ஓளியாது உளவா றுங்கண்‌
— அதையும்‌ அலது
காதில்‌ கேள்வி தனையும்‌
வண்டார்‌ குழலீர்‌, பகர்வீர்‌.
எனவே .கோதை மடவாள்‌
தண்டா மரைநேர்‌ வதனம்‌
கவினச்‌ சாற்று தலுமே; 177

திருப்பாவை உதயம்‌
அம்மா! கோதாய்‌!/ கேளென்று
அறியும்‌ கதையாம்‌ எனவே
தம்மா மனம்‌இன்‌ புறவங்கு
அவர்தாம்‌ இதுசாற்‌ றுவரால்‌:
எம்மா உலகும்‌ புகழ்‌ஆய்ப்‌
பாடி எனுமா நகரில்‌
நம்மால்‌ கண்ணன்‌ எனவே
நந்தன்‌ மனையில்‌ வளர்நாள்‌; 178

அனம்‌ஓத்து இளமா நடை-சேர்‌
ஆயக்‌ குலமா மடவார்‌
கனம்‌ஓத்து இருள்‌௮ங்‌ குழலும்‌ கலையும்‌ கலையச்‌ சயிலத்‌
துனம்‌ஓத்து அணிமார்பு இறுகக்‌, ‘
கரமா மலரில்‌ தழுவி
மனம்‌ஓத்து அவரைக்‌ கலவா
மருவிற்று உண்டுஎன்‌ றனரால்‌. 179

கோதையின்‌ ஏக்கம்‌
என்றுஅங்கு அவர்சொன்‌ மொழிவந்து
இருசெஞ்‌ செவியில்‌ குறுக
மன்றல்‌ கமழும்‌: குழலங்‌
கோதை மனது மகிழ்வாய்‌
அன்றங்கு அவர்கள்‌ புரியும்‌
விரதம்‌ என்னோ? அதனால்‌
குன்றம்‌ குடைகோ வலனைக்‌
கூடிச்‌ சேர்ந்தார்‌ கொல்லோ? ்‌ 180

. என்னோ? அதனை இனதுஎன்று
எளிதா நெஞ்சே! உணரேம்‌;
அன்னாள்‌ தனில்‌ஆய்ப்‌ பாடி
அதனுள்‌ பிறவாது ஒழிந்தேம்‌;
பொன்னாள்‌ அணையும்‌ புனிதன்‌
நமைஓர்‌ பொருளாய்‌ நினையா
இந்நாள்‌ தனில்‌ஓர்‌ உருவம்‌
எடுக்கும்‌ தகவுஎய்‌ இடுமோ? | ்‌ 181.

நந்தன்‌ மனையா ஞூடனே-:
நயனம்‌ மகிழ்வுஎய்‌ துறவே
அந்தத்‌ திருவாய்ப்‌ பாடி அதனில்‌ கண்ணன்‌ எனவே
வந்துஅத்‌ திருநா ரணனும்‌ வளரும்‌ அந்நாள்‌ தன்னில்‌
இந்தப்‌ புவி௮ங்கு அவர்தம்‌
இருதாள்‌ மிதிபட்‌ டுளதால்‌. 182

மெருகுற்‌ றுளஅந்‌ நிலமும்‌ மேகம்‌ பொழிகல்‌ மழையால்‌
விருகத்‌ இனமோ டிடையர்‌
மிகவும்‌ தளர்வுற்று அலறப்‌
பரிவுற்‌ றவர்கை விரலிற்‌
படியும்‌ படிகொண்டு அழகாய்‌
தரிபொற்‌ குடைஓத்து ஒளிரும்‌
கோவர்த்‌ தனமா வரையும்‌; 183

மண்ணார்‌ அளகம்‌ குதிகால்‌
மருவப்‌ பெருகி வளர்‌ஆயப்ப்‌
பெண்ணார்‌ அமுதம்‌ அனையார்‌
உடனே காமம்‌ பெருகப்‌
பண்ணார்‌ குழலார்‌ மருவிப்‌
பரிவின்‌ விளையா டிடும்‌அத்‌
தண்ணார்‌ புனலின்‌ மணியார்‌
எமூனா நதஇித்தண்‌ கரையும்‌; 184

மற்றும்‌ விளையாட்‌ ‘ட்வர்செய்‌
வகையால்‌ அமைமற்‌ றதுவும்‌
a. Hong ஒளிரும்‌ அதனால்‌
உளதாம்‌ பலவும்‌ காணப்‌
பெற்றுஅங்கு உறுவா னுளமுள்‌
பெருகும்‌ காதல்‌ வளரா
இற்றைப்‌ பொழுதே’ அடைவேம்‌
எனவே அவளுற்‌ றெழலும்‌; : ்‌ 185

கவசத்‌ தொடுகுண்‌ டலம்நல்‌
தருமங்‌ சுவருங்‌. கருடத்‌
துவசத்‌ தனன்மீது அமையும்‌
– விரகத்து எழுவெந்‌ துயரால்‌
அவசத்‌ துடனே. யுடலம்‌
அயர்வாய்‌ கைகா லவைதன்‌
சுவசப்‌ படலுற்‌ நிலதாய்ச்‌
சோர்வுற்று அவண்தின்‌ றனளால்‌. 186

நின்றாள்‌ நிலமீது அசையா
நிலைபெற்‌ – நிடும்‌ஓ வியமாய்‌
தன்றாள்‌ தரைபா .வாமற்‌
; றளர்வா யசைவுற்‌ றுளமுள்‌
துன்றா விதனம்‌ துன்றக்‌
கனலில்‌ துவள்பூங்‌ கொடிபோல்‌
குன்றா உடலம்‌ குன்றக்‌ குறியா இவைஉன்‌ னுவளால்‌. 187

**இனி, அவன்‌
உலாவிப்‌ போன அடிச்சுவடும்‌, அவனும்‌ பெண்களுமாகத்‌ திளைத்த யமுதையும்‌,
“அவன்‌ எடுத்த கோவர்த்தனமும்‌ கிடைத்ததாகில்‌, அவற்றைக்‌ கண்டாலும்‌ ‘தரிப்போம்‌ என்று பார்க்க” என்ற திருப்பாவை வியாக்கியான அவதாரிகை

கோதை நினைவு
கனகம்‌ மணியால்‌ அமையும்‌
கனமார்‌ மதில்கசுழ்‌ மிதிலைச்‌
சனகன்‌ மடமா மகளாம்‌
சனிப்‌ பெயர்சேர்‌ திருவும்‌
பனகம்‌ துயில்விட்டு அணிரா
கவனாய்ப்‌ படியில்‌ வரும்‌௮வ்‌
:- அனகன்‌ தனைக்கண்‌ டமையா
விரகம்‌ அதுகொண் டனளால்‌. 188

தனதத்‌ தனுரைப்‌ படிபோற்‌ சயிலத்‌ தினைஒத்து ஒளிரும்‌ கனவில்‌ தனையம்‌ புயம்நேர்‌
கைக்கொண் டணிதோள்‌ வலியால்‌
குனிவிடுத்‌ திடுபின்‌ பவரைக்‌
கூடுஞ்‌ செயலுண்‌ டெனவே
– மனதில்‌ துணிவாய்‌ தயிர்யம்‌
வைத்தங்கு உற்றா என்றே. 189

பொன்னைத்‌ தழுவும்‌ புனீதன்‌
புவியில்‌ கண்ணன்‌ எனவே
முன்னைப்‌ பகலின்‌ வருநாள்‌
காணா விரகம்‌ முடுகும்‌ பின்னைப்‌ பெயர்கொண்‌ .டிடும்‌௮ப்‌
பிராட்டி தனையே மிடபம்‌’:
தன்னைத்‌ தழுவி அடக்கித்‌ தழுவும்‌ திறம்‌உற்‌ றனளால்‌. ட… 190

உள்ளஞ்‌ சோர்ந்தாள்‌
நாம்என்‌ வலிமை அதனால்‌
நணுகுற்‌ நிடவே கொடிய
“காமன்‌ புரியும்‌ விரகம்‌
களைவோம்‌? எனவே மனதுள்‌
காமம்‌ துடர்வா ரவர்போல்‌
.உரையாது அதனை அடையாத்‌
தாமம்‌ கமழும்‌ குழலாள்‌
தளர்வாய்‌ உள்ளஞ்‌ சோர்ந்தாள்‌: 191

சோர்வுஉற்‌் றிடும்‌௮அங்கு அவள்தன்‌
மனதுள்‌ துடர்பைக்‌ குறியால்‌
தேர்வுஉற்று உணரா இவரில்‌
பலவும்‌ தெரியும்‌ பெரியாள்‌
நீர்வற்று இளமைப்‌ பயிரில்‌
நிறைகார்‌ பொழிகின்‌ றதுபோல்‌
ஆர்வத்‌ துடன்‌இம்‌ மொழியை அவள்தே நிடஅங்கு அறைவாள்‌: 192

ராஜன்‌ திருமகளைப்‌ போல வில்‌” என்று ஒரு அவதி பெறுதல்‌; நப்பின்னைப்‌
பிராட்டியைப்‌ போலே ‘ரிஷபங்கள்‌” என்ற ஒரு அவதி பெறுதல்‌ செய்யப்பெறாமை
யாலே மிகவும்‌ தளர்ந்து” என்ற திருப்பாவையின்‌ அ௮வதாரிகை

(வேறு)
முன்னர்நாள்‌ தன்னில்‌ கோவியர்‌ பலரும்‌
முயன்றுள விரதமும்‌ அதனைத்‌
” துன்னுமாறு இழைக்க விடுத்தகா ரணமும்‌
சூழ்ந்ததற்கு அவர்கள்செய்‌ உபாயம்‌
தன்னையும்‌ இவ்வாறு. எனத்தெளி வுறஅச்‌
சரிதங்கள்‌ நடந்துள படியே
பன்னுவன்‌ அதனைச்‌ செண்பகக்‌ கோதாய்‌/
பரிவொடுங்‌ கேட்டுஉளம்‌ உணர்வாய்‌. 193

கோவியர்‌ காதல்‌ நோன்பு
விரிகடல்‌ உடையாய்‌ அணியும்‌அம்‌ புவியாம்‌
மின்‌அனாள்‌ பரம்தொலைத்‌ தஇிடுவான்‌
.வரிஅர வணையில்‌ துயிலும்நா ரணனும்‌
கண்ணனாய்‌ வளரும்‌அந்‌ நாள்வாய்‌
பரிவொடும்‌ அவன்தன்‌ விரியுரம்‌ அதனைப்‌
பாடிவாழ்‌ கோவியர்‌ பலரும்‌
சரிகரம்‌ அதனால்‌ இறுகுற முலையில்‌
தழுவியே அனுபவித்‌ திருந்தார்‌. 194

விரி உரம்‌ – விரித்த மார்பு.
சரிசுரம்‌ – வளையல்‌ அணிந்த கை. “அங்கைச்‌ சரிவளையும்‌ நாணும்‌” என்பர்‌ பெரி
யாழ்வார்‌.

கமுதுயர்‌ முலைகொள்‌ விடமுடன்‌ அருந்தும்‌
கண்ணனைத்‌ தம்துமா மடவார்‌
தழுவுமாறு அவர்தாம்‌ நடந்துள குறிப்பின்‌
சாயலால்‌ உணர்ந்தகோ பாலர்‌
இழுதுஎன உருகா .இவர்புரி வதுதநம்‌
குலம்தனக்கு ஓக்குமாறு அலதாம்‌
பழுதுறும்‌ பிறர்தாம்‌ உணர்ந்துிடில்‌ எனவே
்‌ பதைபதைத்து உளமுற நினைந்தார்‌. 195

அவ்ர்கள்‌ என்கொல்யாம்‌ இதற்கும்‌
நிரப்புவது எனஒரு விதமாய்‌
அனையமா மடவார்‌. தமையெலாம்‌ அங்கங்கு
அவரவர்‌ அணுகும்‌ஓர்‌ பகலில்‌
தினையளவு உறும்‌௮ப்‌ பொழுதெனும்‌ பிறர்பால்‌
செல்லொணா வகையதாய்த்‌ தத்தம்‌
மனையிடைப்‌ பதன மாக்கஅ௮க்‌ கண்ணன்‌
மருவுறா வகையின்வைத்‌ தனரால்‌. ” 196

வைத்தபோது அந்த மடந்தையர்‌ காமம்‌
மருவுறு பருவநாண்‌ முதலாய்ச்‌
சித்தசன்‌ கணையுள்‌ ளஎகப்படா வண்ணம்‌
சேர்ந்துதம்‌ கொவ்வைவா யமுதம்‌
நித்தமும்‌ அருந்துங்‌ கண்ணனை அந்நாள்‌
‘நெருங்குறா வகையில்தம்‌ உள்ளம்‌ * –
பித்தரின்‌ மயங்கிப்‌ புரிகல்தோன்‌ மல்‌ பெருந்துயர்க்‌ கடல்‌உழந்‌ தனரால்‌. — 197

எண்ணரும்‌’ துயர்கொண் டிடுமட வார்்‌அ௮ம்‌
எழிலிபோல்‌ நிறக்கண்ண னஸார்தம்‌.
வண்ணமா முகமண்‌ டலத்தின தழகும்‌
மங்கலக்‌ குணஅதி சயமும்‌
பண்ணமை குழல்சேர்‌ பவளவாய்‌ ஒளியும்‌
பாங்குடன்‌ உற்றனு பவித்துக்‌
கண்ணினால்‌ காண்பது என்றுகொல்‌ எனவே
கருத்துற நினையும்‌ அக்காலை; 198

ஆங்குஅவர்‌ பலரும்‌ ஒருதினம்‌ பிறர்தாம்‌
அறிவுறாது ஓர்‌இடத்து அணுகி
ஈங்குஇதற்கு யாம்‌என்‌ செய்திட லாம்‌என்று
எண்ணுறும்‌ தத்தம துணர்வைப்‌
பாங்குற ஒருவர்‌ ஒருவரொடு உரைத்து
வினவும்‌அப்‌ பரிசுஉணர்தந்‌ தவரில்‌
தீங்கிலாள்‌ ஒருத்தி மற்றவர்‌ தமக்குத்‌ தெரியவோர்‌ உபாயம்செப்‌ புவளால்‌: 199

கொம்மைமா முலையீர்‌। சகடுஇற உதைத்துச்‌
குன்‌. றினால்‌: கல்மழை தடுத்து
வெம்மைசேர்‌ பாந்தள்‌ பணமிசை நடித்து
வெவ்விடப்‌ பேய்முலை அருந்தி
நம்மைஆ ஞடைய தகைமையிற்‌ பெருகும்‌
நந்தகோ பன்இரு மகனை
மும்மையாம்‌ உலகும்‌ ஈன்றுகாத்‌ தழிக்கும்‌
மூவர்க்கும்‌ முதல்வனே. எனலாம்‌. 200

ஆதலால்‌ அவனால்‌ அமைகலாக்‌ கருமம்‌ —
யாதொன்றும்‌ இலை;அவன்‌ அருளால்‌
பூதலம்‌ அதன்மேல்‌ சிலபகல்‌ வானம்‌
பொழிகிலாது அமையுமாறு உஞற்றில்‌
சீதளம்‌ அடங்கி வெம்மைமேல்‌ எழுந்து
செழிப்பெலாம்‌ தீய்ந்தழிந்து ஒடுங்கும்‌;
போதவா ஸிரைநொந்‌ தருந்துநீ ரொடுமேய்‌
புல்லுமற்‌ றல்லல்‌எய்‌ துறுமால்‌. 201

அத்தகவு அமையின்‌ இத்திரு நகரத்து
அணுகுறும்‌ தலைவர்கள்‌ பலரும்‌
சித்தம்நொந்‌ தவராய்‌ நமதுஇடத்து அணுத்‌ திருந்துநல்‌ லுரைபல புகன்று கத்தினம்‌ செழியு மாறுவான்‌ பொழியக்‌
கவின்பெறு வருணநோன்பு அதனை
ஒத்துஇழைத்‌ திடுமின்‌ எனஉரைத்‌ திடுவார்‌
அதற்குநாம்‌ ஓத்துளோம்‌; ஆனால்‌, . 202

“அனையமா, விரதம்‌ வழுவுறாது உளுற்றல்‌
அன்றுஇளங்‌ கன்றினைச்‌ சுழற்றி
நனைவிளா எறிந்த கண்ணனை அலது
நடந்திடாது ஆதலி னாலே
இனையவ ரொடுசென்‌ றனையகா ரியம்நீ
முடித்திட வேண்டும்‌என்று அன்னான்‌
தனையவர்‌ (வேண்டி நல்லுரை புகன்று : தம்முடன்‌ சார்கென விடுப்பார்‌. .203

விடுத்திடில்‌ அவனோடு அடைந்துஉரை செயும்‌அவ்‌
விரதமும்‌ வழுவுறாது இயற்றித்‌ தொடுத்தஎண்‌ -ணமும்நாம்‌ முடிக்கலாம்‌ எனஅத்‌
தோகையாள்‌ உரைத்தல்கேட்டு அதனுக்கு
அடுத்ததன்‌ மையைநீ உரைத்தனை எனஆங்கு
அனைவரும்‌ அவள்தனைப்‌ புகழா
எடுத்தபே ௬வகைக்‌ கடல்படிந்‌ தவராய்‌
இன்னதே முடித்தும்‌என்று இசைந்தே; 204

அனநடை மடவார்‌ அனைவரும்‌ ஒருமித்து
அலர்க்கரம்‌ குவித்துநீர்‌ அருந்துங்‌
கனநிற வணம்சேர்‌ கண்ண[இந்‌ நாட்டில்‌
கலந்துகார்‌ மழைபொழிந்‌ இடுது;
நினதுபே ரருளால்‌ சில்பகல்‌ பொழியாது ஒழித்திட நீசெய்க! என்றே மனதுற நினைந்து துதிசெய்து தத்தம்‌ மனைதனிற்‌ கலந்துஉறைந்‌ திருந்தார்‌. . 205

கண்ணனும்‌ அருளார்‌ இதயமா மலருள்‌
கனதனக்‌ கொடியிடைத்‌ துவர்வாய்‌
பண்ணமை இளஞ்சொற்‌ கிளிஅன மடவார்‌
பரிவொடும்‌ தனதுதாள்‌ மலரை
எண்ணிவேண்‌ டுறும்‌௮வ்‌ வாறுஉணர்ந்‌ தருளி
இனிதொடும்‌ ஆங்குஅவர்‌ குறித்த
வண்ணம்‌அந்‌ நாட்டில்‌ சலபகல்‌ வானம்‌ ்‌
வழங்கிடா வகைபுரிந்‌ தனனால்‌, 206

மழையிலாது ஒழியப்‌ பெருகும்‌௮க்‌ குளங்கள்‌
மருவுநீர்‌ சுவறியே பசும்புல்‌
கதுழைவிலாது எரிந்து. விடுதலால்‌ நிரைகள்‌
தயங்கட இவ்வகை யுறும்‌அப்‌
பிழைஎனோ எனத்தம்‌ முள்ளம்‌ ஊடு எழுந்து
பெருகுறுந்‌ துயர்‌ அடைந்‌ தவராய்‌
குழையுறு செவிநந்‌ தனேமுத லாகும்‌ , கோவலர்‌ பலர்களும்‌ குறித்தே; 207

குறைவிலாது எவர்க்கும்‌ நிறையமா தானம்‌
கொடுத்தும்வான்‌ பொழிகிலாது ஆக
மறையவர்‌ இணை௮ம்‌ . புயமல ரடியை
“வணங்கியே பின்னரும்‌ .அவர்‌இம்‌
முறைமழை யிலதாய்‌ ஒழிந்ததுஎன்‌? இதற்குயாம்‌
முயல்வதுஎன்‌? ,மொழிகுமின்‌ எனவாங்கு
அறைதலும்‌ அதனைக்‌ கேட்டுறும்‌ அவர்கள்‌
அரியநூல்‌ முறைஎடுத்து அறைவார்‌. 208

சேட்டுறு மதிநேர்‌ திருமுகம்‌ உடையீர்‌
இனகரன்‌ .முதலிய ஒன்பான்‌
கோள்தவ றுதலால்‌ வக்கிரித்‌ இடலால்‌
குவலயம்‌ அதன்மிசைக்‌ குறியின்‌
நாட்டிடை வானம்‌ பொழிந்திடாது எவரும்‌
நலம்பெற மழைபொழி வதனுக்கு
ஈட்டுறும்‌ முறையும்‌ இயம்புதும்‌ கேண்மின்‌
என்னமீண்டு இவைஎடுத்து இசைப்பார்‌; 209

வாட்டொழில்‌ நெடுங்கண்‌ மடந்தையர்‌ எனஇம்‌
மாநகர்‌ மருவுவோர்‌ பலரும்‌ ்‌
கூட்டமுற்று எமுனா நதிக்கரை அருகில்‌
வருணனைக்‌ குறித்துஒரு விரதம்‌ சூட்டுறு மலரின்‌ அருச்சனை முதலாம்‌
சோடச உபசரிப்‌ புடனே
நாட்டிய முறையின்‌ வழுவுறாது இழைக்கில்‌
நல்லன மழைபொழிந்‌ திடுமால்‌. 210

அவ்விர தத்த உளஞற்றிடாது ஒழியில்‌ அகல்விசும்‌ படைந்துகார்‌ முகில்கள்‌
எவ்விதத்‌ தேனும்‌ ஓர்துளி வழங்காது
ஆயிடும்‌; இழைக்கும்‌ஆங்கு அதனுக்கு
ஓவ்வுறும்‌ உபசா ரம்புரி குதலில்‌
ஒன்றெனும்‌ வழுவுதல்‌ உறினோ
இவ்வுலகத்தின்‌ மழைத்துளி என்பது
இலாமையாய்‌ முடிந்திடும்‌; இன்னும்‌, 211

ததியுறு மணலுள்‌ பெருகுநீர்‌ அதுவும்‌ நண்ணுறாது ஒழிவதும்‌ அல்லால்‌
பதியுறு கணற்றுள்‌ உறும்சிறு புனலும்‌ பலித்திடா; அழல்கொளும்‌; அதனால்‌
சதிர்பெறும்‌ அந்நோன்‌ பினுக்கு௨று பொருள்கள்‌
தருவித்துப்‌ பராமரித்‌ இடற்கு மதியுறும்‌ சர்வக்‌ கியர்‌இருந்து அதில்‌ஓர்‌
வழுவுறாது இயற்றவேண்‌ டிடுமால்‌. 212

ஆதலால்‌ இவ்வாறு இழைமின்‌என்று அவர்கள்‌
அறைதலும்‌ ஆயர்கள்‌ பலரும்‌
ஓதும்‌௮வ்‌ வாறே புரிகுதும்‌ எனஉள்‌
உவப்பொடும்‌ விரைவினோடு எழுந்து
தீதிலா எமுனைக்‌ கரையின்‌ஒர்‌ சாலை
செய்வித்துஅங்கு அகனிடைத்‌ தமது
மாதர்க ளானோர்‌ தமையெலாம்‌ நீர்போய்‌
மருவுமீன்‌ எனவகுத்‌ துரைத்தார்‌. 213

அவ்வகை அவர்போய்‌ அடைந்தபின்பு அவர்கள்‌
அவ்விர தந்தனை வழுவாது
ஒவ்வுறப்‌ புரிவிப்‌ பவர்கள்யா ரெனஆங்கு ட
ஒருவரை யொருவர்கள்‌ வினவி .
எவ்வகை யவற்கு மொவ்வொரு செயலால்‌
இயைவுறா தெனவுநம்‌ மிறையாஞ்‌
செவ்விசேர்‌ நந்த குமரனால்‌ முடியும்‌
என்னவும்‌ சிந்தைசெய்‌ தவராய்‌; 214

‘கண்ணனை வருவித்து அந்தணர்‌. புகன்ற
. காரணம்‌ பலவும்‌ஓர்ந்‌ தனையால்‌
பண்ணுறு .மொழிநம்‌ பாவையர்‌ பலரும்‌
பரிவொடு புரியும்நோன்பு அதனுக்கு
எண்ணரும்‌ பொருள்கள்‌ யாவையும்‌ வருவித்து
ஈந்துஒரு முறையினும்‌- வழுவா
வண்ணம்நீ நிறைவேற்று; ஆங்குஅடைந்து எனஉள்‌”
மகிழ்வொடும்‌ வகுத்துஉரைத்‌ தனரால்‌. 215

அம்மொழி பலவும்‌ இருசெவி உறவந்து
அணுகலும்‌ ஆங்குஇடங்‌ கொள்ளா
விம்முறும்‌ உவகைக்‌ கடலைஓர்‌ கரைசெய்‌
விதம்பெற அகத்தினுள்‌ அடக்கி
இம்மொழி களைஇங்கு என்னொடு நீவிர்‌
இசைத்தது நன்றுநன்று எனவே செம்மனம்‌ அதனில்‌ சனம்கொளும்‌ அவர்போல்‌
சிலமொழி தெரித்திடல்‌ ஆனான்‌. 216

முன்னர்நாள்‌ தனில்‌ஒர்‌ களங்கமாம்‌ அதனை
மொழிதந்திடற்கு இடமிலா உமது
கன்னிய ரொடுயான்‌ கலந்துபே Au gave
பழியுரை கழறியும்‌ மனைவாய்‌
அன்னமா மடவார்‌ தமைநில வறையுள்‌
அடைத்துவைத்‌ திருந்துவந்து இத்நாள்‌ இன்னமா மொழிகள்‌ இயம்பினீர்‌ இதனுக்கு
இயைகிலன்‌ எனஎழுந்து அகன்றான்‌. 217

அகன்நிடு பொழுதுஅவ்‌ வாயர்கள்‌ பலரும்‌
அருந்ததி நிகர்‌அசோ தையின்சர்‌
மகன்தனை விரைவில்‌ பின்துடர்ந்து ஓடி
வழிமறித்து அறிவிலாது அத்நாள்‌ புகன்றுள எமது கொடியமா வசையாம்‌
பொய்மொழி யானவை பலவும்‌
மிகுந்திடும்‌ புகழோய்‌ உளந்தனில்‌ பொறுத்தல்‌
வேண்டும்‌என்று உபசரித்‌ தவராய்‌; 218

அய்ய[ என்பவரும்‌; அத்த! என்பவரும்‌;
அருந்தெய்வ மே([எனும்‌ அவரும்‌;
துய்யபங்‌ கயத்தா எளினைவரு டுவரும்‌;
துணைக்கர மலர்பிடிப்‌ பவரும்‌;
. செய்யமோக்‌. கட்டை தனைப்பிடிப்‌ பவரும்‌;
செழுங்கரம்‌ குவித்துவேண்‌ டுவரும்‌;
வையமீது எதிர்வீழ்‌ பவரும்‌ஆ யினர்‌அவ்‌
வகைஎடுத்து உரைக்குமாறு இலதால்‌: 219

இத்தகை பலவாய்‌ வருந்திஆங்கு அவர்கள்‌:
யாவரும்‌ அந்தணர்‌ உரைத்த : ்‌
அத்தகை விரதம்‌ தனைவழு வாமல்‌ .i
அமைத்திட வேண்டும்நீ எனவே ்‌
சத்தமது இரங்கி உரைத்தல்கேட்‌ டரூளிச்‌
‘சிறுநகை நிலவுஎழ அதனுக்கு ஓத்துஉளம்‌ மகிழ்வாய்‌ எமுனையின்‌ கரைபோய்‌
உற்றனன்‌ புற்றுஅரா அணையான்‌. ்‌ 220

ஆங்குஅடைந்து அந்நோன்பு அதற்குவேண்‌ டுவதாம்‌ அரும்பொருள்‌ குறைவிலாது யாவும்‌
பாங்குற வருவித்து அவர்களால்‌ இயற்றும்‌
பரிசெலாம்‌ முறைவழு விலதாய்‌
தேங்குழல்‌ மடவார்‌ செங்கரம்‌ அதனில்‌
திருந்து றப்‌ புரிமுறை கதிரோன்‌ வீங்குநீர்‌ மேல்பாற்‌ கடலிடை மருவி
வீழுறும்‌ அளவும்‌ஆங்கு இயற்றி;–221

நள்ளிருள்‌ அடையும்‌ காலையில்‌ எழுந்துஅந்‌
நதிக்கரை இசையுநல்‌ லிடத்துஅக்‌
கள்ளவிழ்‌ மலர்ப்பூங்‌ குழலினர்‌ பலர்க்கும்‌
ஒவ்வொரு கணவனாய்‌ அவரோடு
உள்ளம்‌ஓத்து அணையா அவர்கள்வா ‘ யிதழ்த்தேன்‌
உண்டுஉழன்று: அழுந்திய காம
வெள்ளம்நீத்து அர்த்த ராவினில்‌ தத்தம்‌
வீடுஅணைந்து உண்டுஉறங்‌ குவரால்‌. 222

மற்றநாண்‌ முதல்‌அவ்‌ வாறதாய்‌ நந்தன்‌
மகனொடும்‌ பாடியின்‌ மருவும்‌
பொற்றொடி மகளிர்‌ பலரும்‌ஆங்கு ஒருவர்‌
ஒருவரை புரிதுயில்‌ உணர்த்தி
நற்றுரை யமுனா நதிக்கரை அணு
‘நலம்புரி நோன்டையும்‌ நடத்தி
உற்றமை காமக்‌ களிநற வருந்தி
யூர்புகுந்து அணிமனை உறைவார்‌. 223

. இந்தநன்‌ முறையே பலதினம்‌ அவர்கள்‌
இனி9தொாடும்‌ கண்ணனை அணைந்தார்‌;
அந்தநன்‌ னாட்டின்‌ வானமும்‌. பொழிந்திட்டு
ஆனினங்‌ களும்செழித்‌ துளதால்‌;
முந்துநாள்‌ நடந்த செயல்கள்‌இம்‌ முறையாம்‌;
முழுமதி நிகர்முகக்‌ கோதாய்‌[
சிந்தையூடு உணர்து என்னஅ௮ம்‌ மடவாள்‌ தெரிதரப்‌ புகன்றனள்‌ மாதோ. : . 224

பாவை நோன்பு
(வேறு)
கேட்டவம்‌ மயிலின்‌ சாயல்‌
கஇளிமொழி மடவாள்‌ தானும்‌
வாட்டமுற்று உளத்தி னூடு மகிழ்சிறந்‌ தோங்க அவ்வா
.மீட்டுதும்‌ யாமும்‌ என்றாங்கு
அவள்்‌இணை அடிகள்‌ ஏத்தி
வீட்டகம்‌ தன்னில்‌ சென்றோர்‌ தி
வினையமது இழைக்க லுற்றாள்‌. 225

ந்ண்ணுசர்‌ புதுவை என்னும்‌
நகரம்‌ஆய்ப்‌ பாடி யாயும்‌
வண்ணமா மணிகள்‌ ஆர்ந்த
வடபெருங்‌ கோயில்‌ தானே
விண்ணவர்‌ புகழும்‌ நந்தன்‌ \
வீடதாய்க்‌ கோவி லின்மால்‌
கண்ணனாம்‌ எனவும்‌ தன்சீர்‌ கருத்துளே திருத்தி; பின்னும்‌, 226

ஸ்ரீ வில்லிபுத்தாரே ஆயர்பாடியாகவும்‌, அங்குள்ள பெண்களே
இடைப்‌ பெண்களாசவும்‌, தானும்‌ அவர்களில்‌ ஒருத்தியாகவும்‌, வடபெருவ்‌
கோவிலே ஸ்ரீ நந்தர்கோன்‌ தஇிருமாளிகையாகவும்‌, உள்ளே நிற்ன்றவன்‌
இருஷ்ணனாகவும்‌ அனுசந்தித்து’* என்ற திருப்பாவை வியாக்கியானம்‌

*சீர்‌ புதுவை ஆயர்பாடியாகவும்‌, வடபெருங்கோவில்‌ நந்தன்‌ வீடாகவும்‌, அக்‌
கோவில்‌ மால்‌ சண்ணன்‌ ஆகவும்‌, தோழப்‌ பூவையர்‌ கோபாலர்‌ மகளிராகவும்‌,
தான்‌ அவர்களில்‌ ஒருத்தியாகவும்‌ பாவித்து, அம்‌ மடந்தையர்களை எழுப்புவ
தாகவும்‌ கருஇத்‌ இருப்பாவையைத்‌ திருவாய்மலர்ந்தருளினார்‌”-.. **அண்டர்‌
இருவாய்ப்பாடியாய்‌’” என்று தொடங்கும்‌ ஆண்டாள்‌ பிள்ளைத்தமிழ்‌

புனைமலர்க்‌ குழல்சேர்‌ தோழப்‌
பூவையர்‌ புகழ்கோ பாலர்‌
மனைவிய ராயும்‌ அம்மா
மடந்தையர்‌ தங்கட்‌ குள்ளாய்‌
தனைநிகர்‌ தான்‌௮ லாதாள்‌
தானும்‌ஓர்‌ மடந்தை யாயும்‌
இனையவாம்‌ தன்மை யாக
நியமித்துஇங்கு இனிதி னோடும்‌; 227

அப்பெரு மடவார்‌ தம்மை
அருந்துயில்‌ உணர்த்தல்‌ போலும்‌
செப்பரு வருண நோன்பு
செய்தபா வனைய தாயும்‌
இப்புவி தணிய வானம்‌
வழங்கிய தெனவும்‌ பாவை
முப்பது கவிதைத்‌ தந்தேன்‌ தமிழினால்‌ மொழிந்தா என்றே, 228

ஏழிரு புவனத்‌ துள்ளும்‌ இணையில்செந்‌ தமிழின்‌ பாவை
வாழிய உரைத்தும்‌ அண்டம்‌
அனைத்தையும்‌ வயிற்றுள்‌ வைத்து
ஊழிகள்‌ பற்பல்‌ கோடி
உலப்பிலாது உறங்கும்‌ செங்கேழ்‌
ஆழிமா யவனும்‌ இன்புற்று அணுகிடா முறைமை தன்னால்‌; 229

நாச்சியார்‌ திருமொழி நவின்றது
சித்தசன்‌ தன்னை யன்னாள்‌ இருந்துறப்‌ போற்றி செய்து பைத்தலைப்‌ பணியின்‌ வாழும்‌
பரமனை யடியேன்‌ தன்னோ
டொத்துவாழ்ந்‌ திடுமா றாக
வுனதுகைக்‌ கருப்பு வில்லில்‌
வைத்தபூங்‌ கணையே வென்னா
வழங்கெள்‌ கவீதை மாதோ, ‘ 230

“வித்தக வேங்கடவாணன்‌ விளக்கினிற்‌ புக என்னை விதிக்கித்‌ நியே’* என்ற நாச்சியார்‌ மொழியை நோக்குக (பதிகம்‌ — தையொருஇங்களும்‌).
வேதாந்த தே௫கர்‌ சங்கற்ப சூர்யோதயத்தின்‌ தொடச்சகத்‌இல்‌, “quant dada
ஜீவாத்மா என்ற அம்பைத்‌ தொடுத்துத்‌ திருமால்‌ என்கின்ற குறிபார்த்து ஒருவன்‌
வில்லாளியின்‌ நிலையில்‌ இருந்து எய்தால்‌ அந்த ஜீவன்‌ அவன்‌ இருமார்பில்‌
கெளவுத்துவம்‌ போல்‌ விளங்குவான்‌”’ என்றது அனுசத்திக்க வேண்டும்‌. இதுவே
தையொருஇங்களின்‌ உள்ளுறை.

ஆங்கணவ்‌ வாற தாக
அனங்களை வேண்‌ டலாகப்‌
பாங்குறு கவிகள்‌ தம்மைப்‌
பாடலு மதனைக்‌ கேளாப்‌ பூங்கழல்‌ திருமால்‌ தானும்‌
புவீமிசை விரைவின்‌ வந்தே
தேங்கமழ்‌ குழலி னாட்குச்‌
சேவைதந்து அருளி னானால்‌, 231

அன்னமால்‌ அடைந்து சேவை
அளித்தலும்‌ ௮ன்னம்‌ அன்னாள்‌
இன்னதோ ரளவு மிங்ங
ணெய்திடா திருந்த செய்கை
என்னவென்‌ றநுரைத்துச்‌ சிந்தை
யிடையுறு வெகுளி பொங்கப்‌
பின்னரொன்‌ றுரையா தூடற்‌
பிணக்குறு செய்கை யாளாய்‌; 232

வீழிவாய்க்‌ குவளைப்‌ பூங்கண்‌
விற்பிறை புருவ நெற்றித்‌ தோழிய ர௬டனே இற்றில்‌
தொகுத்தவ ளஞூறைத லோடும்‌
தாழியாம்‌ அதற்கும்‌ வீடு தந்தகோ விந்தன்‌ என்னும்‌
ஆழியான்‌ அதனைக்‌ தாள்கொண்டு
அழிவுறச்‌ சதைத்தா னன்றே, 233

மற்றும்‌௮அச்‌ செய்கை தேறா
மயிலியற்‌ குயிலின்‌ மென்சொற்‌
பொற்றொடி மடவாள்‌ தான்‌அப்‌
புண்ணியன்‌ வதனம்‌ நோக்கி உற்றுயாம்‌ வருத்தம்‌ தோன்ற
உகப்பொடு உஞற்றும்‌ இந்தச்‌.
சிற்றிலைச்‌ சதையேல்‌ என்னச்‌
செய்யவாய்‌ மலர்ந்து சொன்னாள்‌. 234

கன்னியர்‌ தமக்கெ லாம்‌ர்‌ ‘
கண்மணி துவர்வாய்‌ விண்டு
சொன்னசொற்்‌ புணர்ச்சி யாகத்‌
தூயமா மனத்துட்‌ கொண்டு
தன்னுரு தெரிந்தி டாதுஓர்‌ “சார்பதாய்‌ மறைந்து போனான்‌. .
அன்னமாய்‌ அயனுக்கு அந்நாள்‌
அருமறை புகன்ற மாயோன்‌. ~ 235

மாயவன்‌ இருகண்‌ காணா.
தோர்முறை மாய மாகப்‌
போயகன்‌ றிடலு’ மந்தப்‌
பூங்குழற்‌ கோதை யாளும்‌
சேயரிக்‌ கண்க ளோடு
சிந்துநீர்‌ முத்தம்‌ பொங்கத்‌
– தூயநல்‌ லுளமுட்‌ கொண்ட
துயரமும்‌ அடைந்தா ளாகி; 236

பாங்கியர்‌ எனும்‌அம்‌ மாதர்‌
பலர்களும்‌ உடன்சென்று எய்த
ஆங்கொரு பொய்கை தன்னை அணுகிஆங்கு அதனிற்‌ பூத்ததேங்கமழ்‌ முளரி யோடும்‌
செங்கழு நீர்ப்பூக்‌ கொய்தே
நீங்கரும்‌ உவகை தோன்ற —
நீர்விளை யாடும்‌ எல்லை; 237

மருந்துண வமரர்க்கு அந்நாள்‌
வழங்கிநல்‌ விதுரன்‌ இல்வாய்‌
விருந்துண வமைந்த மாயோன்‌
மிளிர்தடக்‌ கரையின்‌ மீது௮க்‌
கருந்தடங்‌ கண்ணார்‌ வைத்த
கலையெலாம்‌ கைக்கொண்‌ டேர்‌
குந்தமீ தேறித்‌ தோள்கள்‌
குலுங்குற நகைகொண் டானால்‌,. ~ 238

குலுங்குற நகைசெய்‌ வோனைக்‌
கோதையாள்‌ நயந்து நோக்கி
இலங்கிழை மடவா ரெல்லாம்‌
என்சொலார்‌? நகைத்துஏ சாரோ?
துலங்குற யாமுன்‌ வைத்த தூசெலாம்‌ அளித்தி என்னா
நலங்கெழு கவிதை யாக
நவின்றனள்‌ என்ப மன்னோ. 239

தலைமிசை கரங்க ளோடு
தன்னைவேண்‌ டிடுத லாய்‌அம்‌
மூலைமலைக்‌ கொடியின்‌ அன்னாள்‌
மொழிந்திடும்‌ கவிகள்‌ கேளா விலையிதென்று யாவ ராலும்‌
விளம்புதற்கு அரிதாம்‌ பாட்டில்‌
“கலையெலாம்‌ அளித்து மீளக்‌
கண்ணனும்‌ அகன்று போனான்‌. 240

சூடிய மாலை தன்னைத்‌
துளவமாற்‌ களித்தாள்‌ பின்னும்‌
வாடிய மனதோ டெந்நாள்‌
வருவரோ வவர்தா மென்னாக்‌
கூடலாங்‌ கிழைத்திட்‌ டேயக்‌
கொள்கையைக்‌ கவிக்‌ ளாகப்‌
பாடினாள்‌ பாடி யும்‌ஆய்ப்‌
பாடியான்‌ வராமை தன்னால்‌; 241

மயில்‌இயல்‌ கிளியின்‌ இன்சொல்‌
மடவன நடைபோர்‌ வேலும்‌
அயில்விழித்‌ தடங்கண்‌ கோதை
யாள்‌அர வணையின்‌ மீது
துயிலமை நறவப்‌ பைந்தேன்‌
துளவமால்‌ அணுகு மாறாய்க்‌
குயிலினைக்‌ கூவு கென்னக்‌
கவிகளும்‌ கூறி னாளால்‌. 242

கோதையார்‌ கனா
இக்குநேர்‌ கவிதை பாடி
இரங்குதல்‌ உணர்ந்தி ராவில்‌
புக்கவன்‌ கனவின்‌ மேற்றான்‌
புரிவது வையினிற்‌ செய்யும்‌அக்குறி யனைத்தும்‌ காண்பித்‌ .
தகன்றனன்‌ அன்பா லன்பு
மிக்கவ ரளத்தும்‌ வேதச்‌
சரத்தினும்‌ விளங்குந்‌ தாளான்‌.243

மத்தளங்‌ கொட்ட
கனவுறும்‌ இரவில்‌ கண்ட
கடிமணக்‌ கோலம்‌ யாவும்‌
மனதுற உணர்ந்த வாற்றை
மருங்குறும்‌ உயிரொப்‌ பாகும்‌
தனதுபாங்‌ கியர்க ளோடும்‌
சாற்றிய வாறு தன்னை
– அனநடைக்‌ கோதை தானும்‌
கவிகளாய்‌ அறைந்தா ளன்றே.244

கருப்ழரம்‌. நாறுமோ! பட்ட
“மின்னுறும்‌ இரவின்‌. காலம்‌ ன க
பெருகுறும்‌ கனவிற்‌ கண்ட
பன்னுறும்‌ அனுப வத்தைப்‌
பாஞ்சசன்‌ னியமே! நீசேர்‌
அன்னசீர்ப்‌ பவள வாயின்‌
சுவைதனை யறியு மாறாய்‌
கு என்னுடன்‌ புகறி யென்ன
இயம்பினள்‌ கவிகள்‌ மாதோ. 245

நீருறு வெள்ளம்‌ எங்கும்‌
நிரம்பிட மிகுந்து பெய்யும்‌
காருறு காலம்‌ தோன்றக்‌ கனந்தனை தோக்கி அன்பால்‌ ஏறுரு கடலின்‌ வண்ணர்‌ –
எய்துவர்‌ கொல்லோ என்னச்‌
சிருறு பாடல்‌ தன்னைச்‌
செப்பினள்‌ மறித்து மன்றே. 246

ஈங்கிவ்வா றாகப்‌ பாடல்‌
ஈறெழு பதின்மூன்‌ றோடும்‌
ஓங்குறும்‌ பாவை முப்ப
தொன்றிநூற்‌ றெழுப இன்மூன்‌ “றாங்கவள்‌ மகிழ்விற்‌ பாடி
யனுபவஞ்‌ செய்யா வாற்றால்‌
எங்கள்‌. எழித்து சோகித்‌
நிலைமை காணா
உயிரினி தெறுமென்‌ றஞ்சி–247

முருகவிழ்‌ துளவ மாலை
முகுந்தனு முளத்து என்பு பெருகுற வீரைவின்‌ வந்தப்‌
பிறைநுகற்‌ பவள வாயாள்‌
அருகுற மருவி யன்போ
– டளித்துமீண்‌ டகன்று போனான்‌. 248

-அன்பின்தாம்‌ அணிந்த மாலை
அணித்தருள்‌ ஆழி யான்தன்‌ இன்பமுண்‌ டதற்பி னுள்ளத்‌
தெழுந்த பேருவகை யோடும்‌ தன்புகழ்த்‌ தாதை யாகும்‌ பெரியர்பால்‌ விரைவிற்‌ சார்ந்து
பொன்புரை சரணஞ்‌ சென்னி ்‌
புனைந்துஇவை புகல்வது ஆனாள்‌: 249

அரங்கம்‌ செல்லல்‌
அய்ய/யான்‌ அரங்கம்‌ என்னும்‌
அணிபெரு நகரம்‌ தன்னுள்‌
பையரா வணையின்‌ மீது
பசியகார்‌ முகிலே போலச்‌
செய்யகண்‌ வளர்த லாகச்‌
செழிக்குநம்‌ பெருமா ளின்பொன்‌
துய்யதாள்‌ இணைகள்‌ தம்மைத்‌
தொழுதிட வேண்டு மன்றே. 250

ஆதலால்‌ அடியேனைக்‌ கொண்டு
அரைக்கண மெனுந்தங்‌ காமல்‌
போதுதல்‌ வேண்டும்‌ இந்தக்‌
கணத்துஎனப்‌ புகழ்ந்து கூறு
மாதவர்‌ தமக்கெ லாமோர்‌
மணியனான்‌ அதனைக்‌ கேளா,
ஓதும்‌௮அம்‌ முறைசெய்‌ வேனென்று உரைத்துஉள மகிழ்வி னோடும்‌; 251

வடபெருங்‌ கோயில்‌ தன்னை
விரைவொடு மருவி நஞ்சப்‌
படவர வணையிற்‌ நஞ்சும்‌
. பரமனைப்‌ பணிந்து போற்றிக்‌
குடமுலை, கழையின்‌ மென்றோள்‌
கோவியார்‌ மலர்க்கை கோத்து
நடனம்‌௮அன்று இழைத்துஅன்‌ னார்பால்‌
நயமொழி நவின்ற நாதா) 252

சரிகரக்‌ கோதை என்னும்‌
தையலாள்‌ அரங்கம்‌ தன்னுள்‌
வரியர வணையின்‌ மீதோர்‌
மஞ்சென வளர்கின்‌ றானைப்‌
பரிவொடு வணங்கு மாறாய்ப்‌
பகர்ந்தனள்‌; அதற்கு நாயேன்‌
புரிதல்வேண்‌ டுவதை யின்னே
– புகன்றிட வேண்டும்‌ என்றான்‌. 253

உரைத்தமா மொழிகள்‌ கேளா
உகப்பொடும்‌ அவனை நோக்கி
வரைத்தடங்‌ கொங்கை யாள்நின்‌
மகள்‌ தனை மணிகள்‌ தன்னால்‌
நிரைத்தபொற்‌ சிவிகை ஏற்றி
நீயுடன்‌ கொண்டு சென்று
இரைத்தவழ்‌ மணிகா வேரி சூழூம்தென்‌ ன்ரங்கம்‌ சென்றே; 254

ஆங்குறை அரங்க நாதர்‌
அடியிணை மலர்கள்‌ தம்மைப்‌
பாங்கொடு மனமும்‌ கண்ணும்‌
பரிவுறத்‌ தொழுது போற்றி ஈங்கடைந்‌ இடுமின்‌ என்ன
இசைத்தலும்‌; விடைபெற்று அன்னோன்‌ :
பூங்கழல்‌ தொழுது வாழ்த்திப்‌
பொன்மனை புகுந்தா னன்றே. 255

அத்தினம்‌ அதனில்‌ அந்தக்‌
கணத்திலம்‌ புவிமா னாகும்‌
-. தத்தைமென்‌ மொழியி னாளைத்‌
தமனியத்‌ தகட்டின்‌ Cube
த்தணி. சிவிகை: யேற்றி… வட சட்ட க்யா ட
ட: ஆங்கதைம்‌. பட்டால்‌: மூடி. ட ர ரர ர
ஒத்திடன்‌’ த்ர்னும்‌.வேறோரர்‌’
சிவிகைமீ துகந்து சென்றான்‌. 256

அந்தரத்து அமரர்‌ மேன்மேல்‌
அலர்மழை பொழிந்து வானத்‌
துந்துமி முழங்கக்‌ கோதைத்‌
தாழியர்‌ பலரும்‌ சூழச்‌
செந்திரு மணாளன்‌ கோயில்‌
பரிசனம்‌ பலரும்‌ சேர்ந்து
வந்திட மேள தாள
வாத்திய முழங்க மாதோ, 257

கதுவிஎண்‌ திசையும்‌ போற்றக்‌
கவின்புகழ்‌ பட்டர்‌ பாடச்‌
சதுர்மறை யவர்கள்‌ வாழ்த்தச்‌
சகலசம்‌ பிரமத்‌ தோடும்‌
முதுமலர்க்‌ குழலார்‌ மூரல்‌
மதியெனக்‌ குமுதம்‌ விள்ளும்‌
புதுவைமா நகரம்‌ நீங்கிப்‌
பொன்மதில்‌ மதுரை புக்கார்‌. 258

பணித்தலை வைப்பின்‌ ஒப்பாய்ப்‌
.பகருதற்கு இணைவே றில்லா
அணிக்கெழு கூடல்‌ தன்னில்‌
அமர்ந்தமல்‌ லாண்ட தோளன்‌
பாதம்‌ டில்‌ அண்ு தாழ்ந்தவா. றேத்திப்‌ போனார்‌. 259

மதுரையிற்‌ கூட ஸனீங்கி
மாலிருஞ்‌ சோலை யென்னும்‌
விதுவொடு கதிரோன்‌ சூழ்ந்து
விலங்குற வுயர்ந்த வெற்பில்‌
சதிர்பெற உறையுஞ்‌ சீர்கள்‌
ளழகர்பொற்‌ சரணந்‌ தன்னைத்‌
துதிசெய்து மூழ்ந்து வாழ்த்தித்‌ தொழுதன ரகன்று போனார்‌. 260

ஏகும்‌௮க்‌ காலை மூடுஞ்‌ —
சிவிகையின்‌ இருந்த வாறே
நாகரும்‌ புகழும்‌ சீர்த்தி
நலம்புனை தாதை யோடும்‌
மேகமொத்‌ திருண்ட கூந்தல்‌
வெற்பிளந்‌ தனத்துக்‌ கன்னல்‌
பாகன மொழியாள்‌ சாலப்‌
பரிவுடன்‌ இதனைச்‌ சொன்னாள்‌. 261

கோதை விருப்பம்‌
அய்ய/கேள்‌; நமது மால்வாழ்‌
அரங்கமா நகரத்‌ துற்ற துய்யமா மதிளும்‌ டொன்னின்‌
துலங்குகோ புரமும்‌ சேவை
செய்யநின்‌ மலர்ப்பூங்‌ கண்ணில்‌
தெரிவுறில்‌ அடியேன்‌ தானும்‌
வையமீ திழிந்து போற்றி .
வணங்குறத்‌ தெரித்தி என்றாள்‌. 262

ஆங்கவள்‌ உரைத்த பின்னர்‌
அருநெறி கடந்து செல்ல
வீங்கலை மணி௫ந்‌ துங்கா
விரிக்கரை யருகி ஞூடு
பாங்குட னேகுங்‌ காலைப்‌
பன்மணி மதிளும்‌ வான்மீ
தோங்குகோ புரமுந்‌ தோன்ற வுரைத்தனன்‌ தோன்றிற்‌ றென்றே. 263

(வேறு)
அடர்ந்த மும்மல மறுத்துவெம்‌ பிறவியங்‌
கடந்த தாதையா முரைமொழி
மடந்தை போன்றவக்‌ கோதையும்‌ வையமீ–264

நயந்த வாற்றினை யுந்தியி னான்முகத்‌ தவளைப்‌
பயந்த சீரம கியமண வாளரும்‌ பரிவாய்‌
வியந்து தன்திருத்‌ தேவியும்‌ மெல்லிய பதவம்‌
புயந்த னக்கிடர்‌ பொருந்துற வருந்துவ ளென்றே.; 265

அரங்கன்‌ திருவிளையாடல்‌
கஞ்ச நாண்மல ரூடுறும்‌ அளியினைக்‌ சடுப்ப,
பஞ்ச ரத்துறுந்‌ தத்தையிற்‌ பல்லக்கின்‌ வருமவ்‌
வஞ்சி நேரிடை யாள்திரு மேனியு மருவும்‌
நெஞ்சி னூடுதன்‌ னிடமணைத்‌ திடநிரு மித்தான்‌. 266

அரங்கன்‌, கோதையார்‌
நடந்தால்‌ பாதமலர்‌ வாடூம்‌ என்று கருதினான்‌. கருதிய திருவரங்கன்‌, மலரில்‌
உள்ள வண்டைப்‌ போலவும்‌, கூட்டில்‌ உள்ள கிளியைப்‌ போலவும்‌ வருகின்ற
கோதை நாச்சியார்‌ பிறரறியாமல்‌ தன்னிடம்‌ வரும்படி சங்கற்பித்தான்‌.

அவன ருட்படி பிறரொரு வருமறி யாமல்‌
துவரி தழ்க்குயின்‌ மழலையாள்‌ கோயிலுட்‌ டொடர்ந்திட்‌
டுவரி வண்ணர்தம்‌ பதமல ர௬ுவப்பொடும்‌ வணங்கி
நவமு றத்திரு வுளத்திடை தண்ணிவீற்‌ நிருந்தாள்‌. 267

ஆங்க ரங்கனோ டம்முறை யவடொடர்ந்‌ தணைந்தாள்‌
ஈங்கவ்‌ வேந்திழை யுறுஞ்சிவி கையைப்புய மேந்தித்‌
தாங்கு வோர்கண்முன்‌ பரமது சமைந்திடா மையினால்‌
ஏங்கி யீதென மாயமென்‌ றெண்ணிறின்‌ றனரால்‌. 268

கன்று காவுறுஞ்‌ சுரபியிற்‌ கலந்துபின்‌ சிவிகை
யொன்றி மேவுமப்‌ பெரியரென்‌ நுரைக்குமுத்‌ தமனும்‌
நின்று ளார்தமை நோக்கிநீர்‌ நின்றுள தென்னோ
என்று ரைத்தல்கேட்‌ டாங்கவ ரிம்மொழி யிசைப்பார்‌. 269

இன்ன செய்கையென்‌ றெவ்வித மிதையியம்‌ பிடுவோம்‌
அன்ன மென்னடை யாரணங்்‌ கமர்ந்துள பரந்தான்‌
முன்னர்‌ போலவிச்‌ சிவிகையின்‌ இலைமுயன்‌ றாய்ந்து
என்ன மாயமென்‌ றேங்கியா மிருந்தன — 270

ஆங்க வர்புகன்‌ றுளமொழி செவியின்வந்‌ தணுக
வீங்கெ னோவசதி சயமெனச்‌ சிவிகைவிட்‌ டிழிந்து
பாங்கொ டும்மகள்‌ சிவிகைமேன்‌ மூடுபட்‌ டதனை
வாங்கி யேயுற விருகண்மா மலரில்நோக்‌ இனனால்‌. 271

நோக்க லும்மக ளிலாமையி னுணங்குகேள்‌ வியினான்‌
போக்கெ னோலெனத்‌ திருவளம்‌ புழுங்கனன்‌; துடித்தான்‌;
ஏக்க மோடயர்ந்‌ திரங்வென்‌; நடுங்கினன்‌; இனைந்தான்‌;
வாக்கினாலவன்‌ துயரினை வகுத்திட லரிதால்‌. — 272

ஆய தன்மைய ஸனாகியே பின்னரு மறிவுற்‌
றஹேய காரணம்‌ பிறிதிலை யரங்கமுள்‌ எழிலார்‌
பாய லாய்விடப்‌ பைந்தலை யரவின்மேற்‌ படுத்த
மாய னார்செயுங்‌ களவென மனத்துற மதித்தே; 273

விரைவி னோடுடன்‌ மேவிவந்‌ தவர்களு மேவ
தரையின்‌ மீதுகா னடையொடுஞ்‌ சென்றுதண்‌ டரளந்‌
இரையெ றிந்துயர்‌ காவிரி கடந்துசெங்‌ கனகம்‌
நிரைசெய்‌ கோயிலுட்‌ புகுந்தரங்‌ கேசர்முன்‌ நின்றே; 474

ஆழ்வாரின்‌ முறையீடு
இருக ரங்குவித்‌ தடியுற வணங்கிமீண்‌ டெழுத்து
பொருத ரங்கவெண்‌ கடலி?னோ ராலடை பொருந்தல்‌
ஒருவி வந்தவ ணரவின்மே லுவப்பொடு முறங்கும்‌
கருமு கிற்கொழுந்‌ தேயெனக்‌ கட்டுரைத்‌ திடுவான்‌? 275

தளிரின்மேல்‌ துயிலும்‌
போது இருந்த கருணை அரவின்‌ சார்பால்‌ குறைந்ததோ என்பது உள்ளுறை.
“பள்ளித்‌ தோழமை பலித்தபடி’” என்பர்‌ நம்பிள்ளை.

அடியன்‌ மேலையம்‌ பிறவியு ளருமையுற்‌ நிழைத்த
நெடிய மாதவப்‌ பேற்றினால்‌ நேர்ந்தவோர்‌ மலர்ப்பூங்‌
கொடிய னாள்தனைக்‌ கொண்டுநின்‌ பதமலர்‌ குறுகி
முடியுறப்பணிந்‌ தேகுமம்‌ முறைமைகொண்‌ டடைந்தேன்‌. 276

அடைந்து. ளேன்மல ரடியரு கணுகுமுன்பு அளிகள்‌
குடைந்த -ரந்துதேன்‌ பூங்குழற்‌ கோதையைக்‌ குறுக
முடைந்து ‘யர்ந்துறி யாச்சி.பர்‌ முறைபடுக்‌ குறும்பால்‌
கடைந்த வெண்ணையிற்‌ களவிழைத்‌ திடுவது கணக்கோ? 277

கணக்க லாமலென்‌ மகள்தனைக்‌ கவர்ந்துள துணரின்‌
வணக்க மோடலை சகடலுடை வையகத்‌ தடையே
மணக்கு மாமலர்க்‌ குழன்மடந்‌ தையருமா டவரும்‌
இணக்க மோடுவந்‌ தெவருனது இணையடி தொழுவார்‌? 278

வடுத்த விர்ந்தமா மதிமுகத்‌ திருவினோ டுரைக்கின்‌
அடுத்தி லாதென நகைசெய்வ ளாதலாற்‌ களவில்‌
எடுத்து வந்தவென்‌ மகள்தனைக்‌ காண்பியு மென்னாக்‌
கடுத்த சிந்தையான்‌ போலுளத்‌ தன்பொடுங்‌ கழறி; 279

நகசைசெய்வான்‌ – பரிகப்பான்‌. **நப்பின்னை
கர்ணிழற்‌ இரிக்கும்‌” என்றவர்‌ அல்லவா? (பெரியாழ்வார்‌ திருமொழி — வெண்ணெ
யளைந்த என்ற்‌ பதிகம்‌ காண்க). இிருமகள்‌ சிரிப்பாள்‌ . அவள்‌ சிரிப்பதற்கு முன்‌
என்‌ மகளைக்‌ காண்பியும்‌,

ஓதி மாமறை முறைமையி னொளிர்மல ரவனும்‌
பாதி மாமதி சூடியும்‌ பணிந்துசண்‌ டறியாச்‌
சோதி யேகரி மூலமாம்‌ பெயர்‌ சொலி யழைத்த
ஆதி யேயெனத்‌ துதிசெய்தாங்‌ கெதி.ரில்நின்‌ றனனால்‌. 280

அரங்கன்‌ மாற்றம்‌
நின்ற வில்லிபுத்‌ தூாரவ னிகழ்த்துரை செவிக்குள்‌
ஒன்ற லோடுநெஞ்‌ சுருகுறப்‌ பெருகுவப்‌ புடனே
கன்று கொண்டுயர்‌ விளவினை யெறிந்தகார்‌ முகிலும்‌
நன்று நன்றென விளநகை தோன்றிட நவில்வான்‌. 281

ஒன்று மஞ்சலை யுன்மக ஞுந்தனி நடந்தஇங்‌
தின்று றும்படி நினைந்தன ளெண்ணுமம்‌ முறையே
சென்று றிற்பதஞ்‌ சிவப்புறு மெனத்தெறும்‌ புலனைவென்று ளாய்வருந்‌ தாவரு வித்தனம்‌ வெகுளேல்‌. 282

என்ன வேபல நன்மொழி புகன்றெமில்‌ பெறுநின்‌
கன்னி யிங்குறை கன்றனள்‌ காண்கெனக்‌ காட்ட
அன்ன மாதினைக்‌ க)ண்டலு மானந்த மூடனே
பின்னு மோர்மொழி யாங்கருண்‌ மகஇழ்வுறப்‌ பேசும்‌, 283

முறைப்படி மணக்க மொழிந்தனர்‌ ஆழ்வார்‌
மாய னே [இருப்‌ பாடியுள்‌ வளருமந்‌ நாள்வாய்‌
ஆய ரீன்றரு ளிளமுலை யனநடை யவரை
நேய மோடடைந்‌ திணைந்துள கள்ளமா நெறிபோல்‌
நாயி னேன்றிரு மகளையு நயந்திட நினையேல்‌. 284

உலகம்‌ யாவினு முறைபவ ரொவ்வுமவ்‌ வகையாய்ப்‌
பலருங்‌ காண்குறப்‌ பந்தருட்‌ பழமறை விதியின்‌
அலகின்‌ மாதவர்‌ வளர்க்குமவ்‌ வனலின்முன்‌ னிலையில்‌
இலகு மங்கலம்‌ புனைந்தபின்‌ னிணங்குத லியல்பாம்‌. 285

ஆத லாலடி யேனுறை புதுவைவந்‌ தணைந்திம்‌
மாத ராள்தனை விதிமுறை வதுவைசெய்‌ திடுமக்‌
கோதி லாமணக்‌ கோலமுட்‌ குளிர்ப்புறக்‌ காணுங்‌
காதல்‌ கொண்டுளே னெனக்கழல்‌ பணிந்துநின்‌ றனனால்‌, 286

உலகறிய மணப்போம்‌
நின்ற வன்திரு மாமுக நோக்கிநீ டூலகோர்‌
ஓன்று மாறுரைத்‌ தனையலாற்‌ பிறிதுரைத்‌ திலையால்‌
நன்றி தென்றுள முவந்தனம்‌ புதுவைமா நகரில்‌
சென்ற டைந்துநற்‌ றினந்தனிற்‌ றீருமணம்‌ புரிவேம்‌. 287

மங்க லந்தரித்‌ திடுதலுக்‌ குன்மகள்‌ தனக்குப்‌
பங்கு னித்திரு வுத்திரப்‌ பகற்பொருந்‌ துறுமன்‌
றங்கு வந்துநா மடைகுது மதற்குமுன்‌ பாக
இங்கி ருந்துநின்‌ சிறுவியோ டேகென விசைத்தே; 288

வில்லிபுத்தூர்‌ மேவுதல்‌ Los வரு
விடைய எளித்தலுங்‌ கோயிலில்‌ மேவுவோர்‌ தமக்கும்‌
படைநெ டுங்கணா ரொடுப கவர்கள்‌ தமக்கும்‌ ‘>
புடைதி ரண்டுபோ யிவர்தமைப்‌ புதுவையின்‌ விடுத்திங்‌ :
கடையு மென்றுரைத்‌ தவற்கிரு சவிகையு மளித்தான்‌. 289

அளித்த தன்மிசைக்‌ கோதையும்‌ பெரியஆழ்‌ வாரும்‌ :
களிப்பொ டும்புகத்‌ துந்துமி முழக்கியே கடிதின்‌
தளிர்த்த பூமழை சொரிந்திடச்‌ சாமரை தயங்க
விளித்த சங்கின முரசொலிக்‌ கறங்க மென்மேல்‌.. 290

ஆட கத்தியாழ்த்‌ தும்புரு நாரத ரிசைத்துப்‌
பாட வின்னிசை : முனிவரர்‌ பரிந்துதோத்‌ திரிக்கச்‌ ?
சூட கக்கர. மடந்தையர்‌ சோபனஞ்‌ சொல்ல ௩
நாட கத்தொழில்‌ வல்லவ ரெதிருற நடிப்ப; 291

விருதொ லித்திடப்‌ பட்டர்கள்‌ புகழவே நுலகில்‌ .
பொருவில்‌ வேங்கடப்‌ பொருப்பனு முடன்சென்று புகுதக்‌
குரும ணிச்செழுங்‌ கோயில்வீட்‌ டூயர்சுர நதியுங்‌- ்‌
கருது காவிரி யெனுந்திரு நதியினைக்‌ கடந்தே; 292

சோழ நாடது பின்படத்‌ துருவிப்பாண்‌ டியன்றான்‌
வாழு நாடுறு மாலிருஞ்‌ சோலைவந்‌ துறலும்‌
ஆழு மன்புட னத்தலத்‌ துறையனை வோரும்‌
சூழ வந்துப சரித்திடக்‌ கோயிலுள்‌ தொடர்ந்தே; 293

அழகர்‌ பூந்திரு வடிகளாம்‌ அம்புய மதனைக்‌:
குழையு நெஞ்சொடுந்‌ துதிசெய்து வணங்கியே கொடுத்த
தீழைது மாயுறு தீர்த்தப்பிர சாதமு மருந்தி .
விழைவி னோடுமத்‌ தலத்திடை யன்றுவீற்‌ நிருந்தே; 294

மறுதி னந்துடர்ந்‌ தழகரு முடன்வர மதுரை
யுறுத லோடுமத்‌ தலந்தனி லுறைபவ ரெவரும்‌
குறுகி வந்தெதிர்‌ கொண்டிடக்‌ கடலுண்‌ மருவி
நறும லர்பொரு மழகிய நம்பிதாள்‌ வணங்க) 295

மன்ற லார்வன படிகநீ ராங்கவர்‌ வழங்கித்‌
துன்று நற்பிர சாதமு மளித்திடத்‌ துய்த்தாங்‌ கன்று வைகுூயவ்‌ வழகரு முடன்கலந்‌ தணுகச்‌
சென்ற டைந்தனர்‌ புதுவையின்‌ மற்றைய இனமே. 296

ஆங்கு றும்வட பத்திர சாயியம்‌ புயச்செம்‌
பூங்க ழற்றொழு தரங்கர்பாற்‌ போயடி பணிந்திட்‌
டீங்கு வந்தன மெனதடந்‌ துளவெலா பெடுத்துப்‌
பாங்கொ டும்மவர்‌ செவியுறப்‌ பு.த;வையன்‌ பகர்ந்தான்‌, 297

கேட்ட வாறதாய்‌ நடத்துக கேள்வியோ யெனவச்‌
சூட்ட ராவணை யவன்சொலக்‌ களித்தனன்‌ துடர்ந்த
கூட்டம்‌ யாவர்க்கும்‌ இர்த்தப்பிர சாதமுங்‌ கோயின்‌
மாட்டு ளோரளித்‌ இடக்கொண்டு : மாளிகை கலந்தார்‌. 298

வேங்க டாசல மதன்மிசை விளங்கிவாழ்‌ பவரும்‌
ஒங்கு மாலிருஞ்‌ சோலைவெற்‌ புகந்துறை பவரும்‌
இங்கி லாச்செழுங்‌ கூடலிற்‌ சேர்ந்துவை குவரும்‌
தாங்கள்‌ தாங்களுற்‌ றுறைதலஞ்‌ சார்ந்துவை கனரால்‌, 299

அருந்து மாறதா யணிகெழு மரங்கமா நகரத்‌
இருந்து வந்துளோர்க்‌ கருங்கடல்‌ கடைந்திட வெழுந்த
மருந்து நேரென அறுசுவைப்‌ பதார்த்தம தோடும்‌
விருந்து செய்துசெய்‌ வெகுமதி வழங்கியே விடுத்தான்‌. 300

விடுத்த லோடுமாங்‌ சுவர்களும்‌ விடைகொடு விசும்பின்‌
எடுத்த பொன்மதி எரங்கர்முன்‌ னெய்திப்பாம்‌. பணையில்‌
படுத்து ளான்பதம்‌ பணிந்துதாம்‌ போய்வரு மளவும்‌
அடுத்த வாறெலாம்‌ அறைந்துதம்‌ மாளிகை யடைந்தார்‌. 301

(வேறு)
அங்கவ ரம்முறை யகன்று போயபின்‌
கொங்குறு மலர்க்குழற்‌ கோதை யென்பவள்‌
“சங்குறை கரவரங்‌ கேசர்‌ சாற்றுமப்‌
பங்குனி யுத்தரம்‌ பலிப்பதென்‌ றென்றும்‌; 302

செங்கம லம்பல இறக்கப்‌ பூத்ததோர்‌
மங்குலி னழகய வடி.வந்‌ தாங்கினோன்‌
இங்குவந்‌ துறுமந்நா ளெந்தநா ளென்றும்‌ கங்குலும்‌ பகலுந்தன்‌ கருத்து ளூன்னியே; 303

இன்னவா றன்றீயே வேறொன்‌ றெண்ணிலா
தன்னவள்‌ வைகவவ்‌ வாறு தந்தையும்‌
_தன்னுள மதனிடை தரித்து வைகினான்‌
– பின்னருற்‌ றடைந்தமை பேசு வாமரோ. . 304

ஆழ்வார்‌ மணநாள்‌ அறிதல்‌
ஒருபக லதனிடை யுவப்பு எத்தொடுத்‌
இருநகர்‌ வாழுறுஞ்‌ சீர்கொள்‌ வைணவர்‌
பெருமிதம்‌ பொருந்துமப்‌ பெரிய ரின்புற
மருவுமா ளிகையிடை வந்து ளார்களால்‌, 305

வந்துளோர்‌ பெரியர்தாள்‌ வணங்க லும்மவர்‌
தந்தம தடிகளைத்‌ தானுந்‌ தாழ்ந்தபின்‌
அந்தவே தியரருந்‌ தவனை நோக்கியே இந்தவா சகமெடுத்‌ தியம்பு வார்களால்‌. 306

அய்ய[நின்‌: தனையளை யரங்கர்‌ மாமணஞ்‌
செய்யுநாள்‌ நாளையென்‌ . றவர்கள்‌ செப்பவத்‌
ட. துய்யமா .மொழியது துஞ்சி யெஞ்சினோர்‌
“மையிலாச்‌ செவியுறு மருந்து போன்றதால்‌. 307

ஆயமா தவர்களம்‌ மொழிய றைந்துதம்‌
தூயமா -ளிகையிடைத்‌ துடர்ந்து வை௫னார்‌;
ஏயவப்‌ பெரியரு: மிதய. மூடெழும்‌ ்‌
நேயமோ டிவ்வகை நிரப்ப லுற்றனன்‌. 308

நகரவலங்காரம்‌
தேனைவென்‌ றுளசொனஞ்‌ சிறுவி கோதையாம்‌
மானையவ்‌ வரங்கர்செய்‌’ வதுவை நாளையால்‌
ஏனைய ரின்னக .ரெழில்சேய்‌ வாறதாய்‌
ஆனைமேன்‌ -மணிமுர சறையு மின்றெனன்‌. 309

அந்தவா சகஞ்செவி யுறவரங்‌ கம்வாழ்‌
சேர்திரு ‘ மணைனைச்‌ சேர்ந்த ழைத்திட
முந்துற வேகுவான்‌ போன்மு ழங்கலைச்‌
இந்துவின்‌ மறைந்தனன்‌ தினஞ்செய்‌ வோனுமே. 310

அன்னவன்‌ மறையமா முரசம்‌ அஆனைமேல்‌
மன்னு?ீர்க்‌ கோதைக்கும்‌ அரங்கற்‌ கும்மணம்‌
பின்னைநா ணகரணி பெருக்கு மின்னெனப்‌
பொன்னகர்‌ முழுவதும்‌ புகுந்து சாற்றினார்‌, 311.

முரசறை தரவெழு முழக்கங்‌ கேட்டலும்‌
விரசுமம்‌ மாணகர்‌ மேவு மாந்தரும்‌
பிரசமென்‌ இளவியும்‌ பேதை யார்களும்‌
கரைசெயற்‌ கருங்களிக்‌ கடலுள்‌ ஆழ்த்தனர்‌. 312

கோதையாள்‌ வதுவையைக்‌ குறித்துப்‌ பூந்திரு
மாதைமார்‌ பணியரங்‌ கேசர்‌ வந்திடுஞ்‌
சேதியை யாவருந்‌ தெரியு மாறுமுன்பு
ஓதவந்‌ தெனஇன ஸனுதைய மாயினான்‌. 313

மதுகமழ்‌ மலர்த்தரு மகளை மற்றொரு
சதுர்பெற வணியுமகத்‌ தன்மை யாமெனப்‌
புதுவையென்‌ றுரைக்குமப்‌ பொன்னின்‌ மாநகர்‌
கதிர்செய முறவலங்‌ கரிப்ப தாயினார்‌.315

கடலிடை யுறுதுயில்‌ கழித்து வந்தொரு
படவர வணைமிசை பள்ளி கொண்டுளான்‌
வடபெருங்‌ கோயிலை வகைவ கைபுரிந்‌
தடவுடன்‌ புதுக்கினர்‌ அழுது துன்னவே. 316

அந்தர வுலகினை நகைத்த லாமென
மந்தர மனைய?ர்‌ மாட மாளிகை
சுந்தரம்‌ பெறவடி முடி துடங்கியே
சந்திர னொளியைவெல்‌ சாந்து தீற்றுவார்‌. 317

ஒத்திட வாயின்முன்‌ புயர்ச்ச யெய்திட
முத்தணி பந்தர்கண்‌ முடுகிப்‌ போடுவார்‌;
கொத்துறு மலர்ச்சரங்‌ குலவத்‌ தூக்குவார்‌;
வைத்திழை மணிக்கொடி மலிய நாட்டுவார்‌. 318

பூரண பொற்கல சம்பொ ருத்துவார்‌;
ஏரணி பாலிகை யினம்நி ரப்புவார்‌;
காரணி மகரதோ ரணங்கள்‌ கட்டுவார்‌;
சீரணி பதுமைகள்‌ செழியத்‌ தூக்குவார்‌. 319

.பொன்னிறச்‌ சுளைபலா: முதற்பு கன்றிடும்‌
மன்னுநற்‌ சுவைகனி வகைகள்‌ தூக்குவார்‌;
கன்னலும்‌ வாழையுங்‌ கழுகும்‌ நாட்டுவார்‌;
: பன்னக ‘மணிவிளக்‌ கொளிப ரப்புவார்‌. 320 :

அரைபடு கலவைசேர்ந்‌ தமைத்த சாந்தினால்‌
குரையுற மெழுகுவார்‌; சார்ந்த பாங்கெலாம்‌
நிரைநிரை விளங்குகோ லமும்நி ரப்புவார்‌;
– விரைபனி நீர்தெரு வீதி வீசுவார்‌.321

ஆடைக ளழகுற வணிகு வார்‌;புதுப்‌
பாடகஞ்‌ சரிவளை பதக்க மாதிபல்‌
பூடண வகைகளும்‌ பொருந்தப்‌ பூணுவார்‌;
ஏடவிழ்‌ நறுமல ரிலங்கச்‌ சூடுவார்‌. 322

கந்தமார்‌ புனுகுபல்‌ கலவை சேர்த்தியே
சந்தனக்‌ குழம்புடல்‌ தணியப்‌ பூசுவார்‌;
சிந்துரஞ்‌ சூரணந்‌ இருமண்‌ சாத்துவார்‌;
“ சுந்தர மாயிரந்‌ துலங்கல்‌ காணுவார்‌. 323

அன்னமந்‌ தணர்தமக்‌ கருத்து வார்‌;புவி
பொன்னிவர்‌ மணியுடைப்‌ பூட ணம்ப்சு
இன்னவாம்‌ பலபல தான மேற்றுளோர்‌
. உன்னிய. முறையவ ருவப்ப நல்குவார்‌. 324

இன்னவை யாவையு மெழில்பெ றும்படி
பொன்னக ரொப்பவப்‌ புதுவை மாதகர்‌
தன்னையாங்‌ கவரலங்‌ கரித்த தன்மைகள்‌
£.* பன்னநா வாயிரம்‌ படைத்தி லேனரோ. 325

விட்டுணு சத்தன்மா ளிகைவி ளங்குற
மட்டிலா வைகுந்த மண்ட பந்தனக்‌
கெட்டுணை யாயினும்‌ வழுவி லாமலே
: திட்டமாய்ச்‌ செய்முறை யாவுஞ்‌ செய்தபின்‌; 326

பணங்கெழு பணித்துயில்‌ பயில ரங்களார்‌.
குணஞ்சிறந்‌ துடையபூங்‌ கோதை யாஸல்தனை
மணம்புரி. வதற்குச்சசய்‌ வகைகள்‌ யாவையும்‌
்‌ இணங்குமா றவரவ ரியைவித்‌ தாரோ. : 327

பேரிகை மத்தளம்‌ பிறங்குதா எங்கள்‌
தாரைகள்‌ திருச்சினம்‌ சங்க மற்றுள
தூரிய வகையெலாந்‌ . தொனிக்கு மோதையால்‌
2 வாரியின்‌ முழக்கமும்‌ மறைந்தொ ஸஎித்ததால்‌. 328

வாடுற விடைதன வரைகு லுங்குற
_ நாடக மாதர்கள்‌ நடம்ப யின்‌ றிட
-சூடுபூங்‌ குழலினர்‌ சோப னஞ்சொலப்‌
பாடகர்‌ இன்னர கதம்‌ பாடவே. ‘ 329

மணங்காண வந்தவர்‌
இங்கெ ரிவ்வண்‌ மிசையு மெல்லையில்‌
பொங்கரீன்‌ றருளிய பூவை யாளிடந்‌
தங்கவெள்‌ ளிடபமாம்‌ ஊர்தி தன்மிசை
– சங்கரன்‌ மகிழ்வொடுஞ்‌ சார்ந்து ளானரோ. 330

தேவரும்‌ பணிதிருத்‌ தேவ ஸுந்தியம்‌
பூவரு மெண்புயப்‌ புனித நான்முகன்‌ :
_நாலரு மயில்விழி நங்கை தன்னொடும்‌
தூவிசே ரனமிசை வந்து தோன்றினன்‌. – 331

அத்தர வுலஇனர்க்‌ கரச னாய |
“இந்திரன்‌ சீரயி ராணி யென்னுமச்‌
சுந்தர மதிமுகத்‌ தோகை யாளொடுந்
– தந்தவெண்‌ கரிமிசை சார்ந்து சானரோ. 332

மற்றுள மூனிவர்கள்‌ சித்தர்‌ வானவர்‌
‘வெற்றிவே லரசர்விஞ்‌ சையர்க ளாதிதம்‌
பொற்றொடி யவரொடும்‌ புதுவை மாநகர்‌
_ முற்றிலு மிடங்கொளா முறைவந்‌ தீண்டினர்‌. 333

கோதையாரின்‌ மணக்கோலம்‌
இங்கிவர்‌ யாவரு மீண்டி யுற்றபின்‌
– வெங்கொலைத்‌ தொழில்வல வேற்கண்‌ கோதையைச்‌
சங்கரி கலைமகள்‌ சசியிம்‌ மூவரும்‌
மங்கலக்‌ கோலஞ்செய்‌ வான்தொ டங்கியே; 334

கங்கையே முதலெழு கடவுண்‌ மாநதி
சங்யெ தீர்த்தங்கள்‌ தமைக்கொ —
பொங்கலை யாழியின்‌ புனித நீர்கலந்‌
௩ தங்கவர்‌ மஞ்சன மாட்டி னார்களால்‌. 335

மூகமலர்‌ மஞ்சளின்‌ முயங்கப்‌ பூசியே
அகில்முத லிந்தன மனலி லிட்டதின்‌
புகைகொடு முடற்குழல்‌ புலர்த்திக்‌ கைவிரல்‌
: நகமதிற்‌ கோதிநன்‌ குறமு டித்தனர்‌. 336

ஈரநீத்‌ துயர்ந்தபட்‌ டிலங்கச்‌ சாத்திநூல்‌
நேரிடை வருந்துற நிமிர்ந்த கொங்கையில்‌
வாரணிந்‌ திருகுற வலிந்து வாளைவேல்‌
_ கூர்விழிக்‌ கஞ்சனங்‌ குளிர இட்டனர்‌. 337

மறைமுதல்‌ வன்குறி வைத்த தென்னவே
கறையின்மா மதிமுகங்‌ கவினு மாறிளம்‌
பிறையெனக்‌ தஇிருமணும்‌ பிறங்கச்‌ சந்துரம்‌
நிறைதிருச்‌ சூரணம்‌ நிரம்பச்‌ சாத்தினார்‌.338

பொன்னினா லமைந்திடும்‌ புதிய பாவையின்‌
வன்னமார்ந்‌ தொளிபெற வரையு மாறெனப்‌
பன்னறு நவமணி யிழைத்த பைம்பொனின்‌
– மின்னுபல்‌ பூடணம்‌ விளங்கச்‌ சாத்தினார்‌. 339

கந்தமோர்‌ காவதங்‌ ௬மக மத்தசெஞ்‌
சந்தனம்‌ புனுகுசவ்‌ வாத ஸணிந்துபின்‌
சுந்தர நறுமல ரலங்கல்‌ சூட்டினார்‌
்‌ அந்தரத்‌ தவர்களு மஇச .யிப்பவே. 340

இன்னவை யாவையு மியைந்த பின்றிருப்‌
பொன்னரங்‌ கந்துயில்‌ புரியு நாரணன்‌
துன்னுமந்‌: நெறிகளைத்‌ தூய கண்களால்‌
அன்னவர்‌ தோக்கியங்‌ கிருக்கு மாயிடை; 341

பிரம்மன்‌ வினா
மட்டவிழ்‌ தாமரை மலரின்‌ வைகயன்‌
விட்டுணு சித்தனை விருப்பின்‌ நோக்கியே
அட்டதிக்‌ கினும்புக ழரங்கம்‌ வாழுறும்‌ த
வட்டச்செந்‌ இகிரிமால்‌ வருவதென்‌ றென்றான்‌. 342

என்றலு மணவினை யியற்று மங்கலம்‌
குனிமதி யுத்தி ரம்மெனும்‌
இன்றுவந்‌ தெய்துவ மென்ன யானடை அன்றுரைத்‌ தருளினா ரரங்க ரென்றனன்‌. 343

அவ்வுரை கேட்டலு மமரர்‌ கோமகன்‌
இவ்வுரை யானுமன்‌ நறிருந்து கேட்டனன்‌,
இவ்விய வுருவமை திருவ ரங்கனார்‌.
ஓவ்விய மாய்கையா ர௬ணர்வர்‌ என்றனன்‌. 344

எனவுரைத்‌ தவனொடு மேறு வாகனும்‌
அனமதை யூர்தியு மனைத்து ளோர்களுங்‌
கனறநிற மேனிமால்‌ கமலத்‌ தாள்களை
_ மனமுற நினைந்தவர்‌ வருந்து மெல்லையில்‌; 345

கோதைபாற்‌ பெரியருங்‌ குறுகி யம்ம[பூ
மாதுறை மார்பக மணிய ரங்களார்‌
ஏதுகா ரணமின மெய்தி லாததைன்‌
… வேதனே முதலினோர்‌ வினாவு கின்றனர்‌. . 346

வருதுமென்‌ றத்தினம்‌ வழங்கும்‌ வாறதாய்‌
மருதிறத்‌ தவழ்ந்தமால்‌ வந்த. லானினங்‌
கருதுவ தென்னினிக்‌ கழறு கென்னலும்‌
பொருதுவெல்‌ வேற்கணாள்‌ புகல்வ தாயினாள்‌, 347

கோதையின்‌ செயல்‌ — கருடன்‌ வருதல்‌
அன்னவர்‌ யாவரு மகங்க ஸிப்புற
இன்னமோர்‌ கடிகையி ஸனுள்வந்‌ தெப்துவார்‌
நின்னுளம்‌ வருந்தலை யெனநி கழ்த்தியே பின்னர்வே  லிருந்தப்‌ பெண்கொடி; . 348

பன்னக வயிரிதோத்‌ திரம்ப ரிவ்வொடுந்‌ -:
தன்னக மதனிடைத்‌ தரித்த வன்வர ‘
உன்னலு மக்கணத்‌ தோங்கல்‌ போன்றிரு : ்‌
பொன்னவீர்‌ சறகொலி பொருந்த வந்தனன்‌. -349

வந்தவன்‌ றிருமூக நோக்கி மாண்புறும்‌
உந்தலைக்‌ காவிரி யுடைய ரங்களார்‌
இந்தநா ளின்னகர்க்‌ கெய்து வேமென
அந்தநா ளடியனோ டறைந்து ளானரோ,. 350

அன்னமா மொழிமுறை யந்த மாதவன்‌
இன்னமு மிங்குவந்‌ தெய்தி லாமையால்‌
என்னகா. ரணம்வரா தெனவிங்‌ கியாவரும்‌
_ பன்னுகின்‌ றதற்கெனோ பகர லாகுமால்‌. 351

ஆதலா லிக்கணத்‌ தணிய ரங்கரென்‌
மீதுறு கருணையால்‌ விரைவி னோடடைந்‌
தீதெலா மிசைத்தவ ரெய்து மாறழைத்‌
தோதுமோர்‌ கடிகையுள்‌ ஞூறுதல்‌ வேண்டுமால்‌, 352

கருடனிடம்‌ கோதையார்‌, “*அரங்களார்‌ இன்று வருவேன்‌ என்று கூறினார்‌. ஆனால்‌ வரவில்லை. அரங்கன்பால்‌ இவற்றைக்‌ ong
அழைத்து வருக. அரங்கரை அழைத்து வந்தால்‌ யானும்‌ அவரும்‌ அமரும்‌ ஆத
னத்தில்‌ உன்னையும்‌ எழுந்தருளச்‌ ௦ செய்வேன்‌ ‘* என்று கூறினார்‌. இப்போதும்‌ ுரீவில்லிபுத்தூரில்‌ கருடாழ்வார்‌ அரங்கமன்னாருடன்‌ எழுத்தருளியிருப்பதைச்‌
சேவிக்கலாம்‌.

இன்னவா றழைத்துவந்‌ தெய்தி லாங்கவர்‌
தன்னொடும்‌ யானொரா தனத்து வைகுபோ
துன்னையு மந்தவா .தனத்தி னோக்கவே
_ மன்னுறப்‌ புரிகுவ னேனவ ழங்கினாள்‌. 353

வழங்குரை கேட்டவல்‌ வயின ஸூங்களித்‌
தீழங்குற லிக்கணஞ்‌ சார்ந்த ரங்கம்வாழ்‌
– முழங்குகார்‌ வணரையோர்‌ கடிகை மூன்‌ றினில்‌
கழங்குறு தருக்கையாய்‌ கொணர்உன்‌; காண்டியால்‌, 354

எனப்புகள்‌ றிருசிறை புடைத்தி யாதினுந்‌
தனக்குநேர்‌ தானலான்‌ தாவி வான்மிசை
மனக்கொடு வேகமோ டே வண்டுறை
.. புனைத்துழா யரங்கர்தாள்‌ போற்றி நிற்றலும்‌. 355

அரங்கன்‌ வினா.
எங்கிருந்‌ தெய்தினை யெனச்செஞ்‌ சக்கரம்‌
சங்கொடு மணிகரன்‌ சாற்ற மேருவாம்‌’
பொங்கரி ளனோங்கெழில்‌ பொருந்து மேனியான்‌
னிருசெவி யணுக வோதுவான்‌. 356

(வேறு)
பாதிமா மதியம்‌ புனைசடைச்‌ இவனும்‌
பங்கய மலருறை யயனும்‌
– ஆதிமா மறைகொண்‌ டனுதினதந்‌ துதிசெய்‌
தலர்சொரிந்‌ தடிமிசை வணங்குஞ்‌
சோதியே! விரிகா வீரியிரு புறமுஞ்‌
சூழ்ந்தபொன்‌ னரங்கநா யகனே!
மாதிரம்‌ புகழும்‌ புதுவை மாநகரி
னீருந்துவந்‌ தேனென வகுத்தான்‌. 357

என்னகா ரியமிங்‌ கடைந்ததென்‌ றுணரான்‌
எனவவ ஸியம்பவப்‌ புதுவைப்‌
பொன்னக ரிடைவாழ்‌ பொருந்துமப்‌ பெரியார்‌
புதல்விேகா தைப்பெயர்‌ புனைந்தாள்‌
நின்னுடை யெழிலுக்‌ குகந்தபே ரழகாள்‌
நிகழ்த்துமா றடைந்தனன்‌ எனவே
அன்னவள்‌ வடிவத்‌ தெழிலெலா மவர்கா
தறிவுறும்‌ வகையெடுத்‌ தறைவான்‌. 358

செளந்தர்ய லகரி
இருளொளிர்‌ மதிய முறிலகன்‌ தநிடும்‌;கார்‌
எனில்வெயர்ப்ப்‌ புதிர்த்துள மறுகும்‌;
பொருதிரை கொரழிக்கு மறலில்வெண்‌ மணலும்‌
பொருந்திடும்‌; சைவலங்‌ கூயும்‌;
மூருகவிழ்‌ மலரும்‌ நானமும்‌ புழுகும்‌
மு.திரகிற்‌ புகைகளுங்‌ கதுவிக்‌
‘கருநிறங்‌ கவினும்‌ வளர்குழல்‌ நிகராய்க்‌nகருதுதற்‌ யொதுமொன்‌ றிலையேல்‌. 359

கறைமிடன்‌ நூதற்க ணென்னச்‌ ிந்தூரங்‌
கவினுறத்‌ தீட்டுவா ணுதற்குப்‌
பிறைநிக ரென்னிற்‌ பிறைதனிற்‌ றிலதம்‌
பெறாமையிற்‌ பேசுத லெளிதாம்‌;
நீறைதுள வரங்க நினதுளங்‌ குழைக்க
நயனவம்‌ பேவுதற்‌ கெனவே
மறைமுதற்‌ இழவன்‌ வெஞ்சலை யெனவே
வகுத்ததோ?. புருவங்கண்‌ டிலனால்‌. 360

வேலெனில்‌ மழுங்கும்‌; வாளெனின்‌ மடியும்‌;
விடமெனி லரன்மிடற்‌ றொளிக்கும்‌;
சேலெனில்‌ நீருட்‌ பதுங்கிடும்‌; கயலின்‌
செய்கையு மஃதெனில்‌; அவள்தன்‌
பாலென்‌ வெளிறி நீலமொத்‌ திருண்டு
செவ்வரி பரவிமை தோய்ந்து
காலனிற்‌ கொலைசெய்‌ தொழில்பயின்‌ றுளகூர்ங்‌ ‘ கண்ணினுக்‌ கொப்புக்காண்‌ கலனால்‌. 361

கொள்ளையபோர்‌ ‘புரியுங்‌ ‘கூரிய வேற்கண்‌
கூடுறுஞ்‌ செவிதனக்‌ குவமை
வள்ளையென்‌ றுரைக்கின்‌ மகரமாக்‌ குழைகள்‌
மருவிடா; வேறுமொன்‌ நிலையால்‌;
கள்ளவிழ்‌ மலரைங்‌ கணைமதன்‌ நிருத்தேர்‌
கடாவுதற்‌ கமைத்தவீ இகொலோ?
எள்ளினன்‌ மலரோ? குமிழ்கொலோ? அவள்மூக்‌ .ஃ
te – இணையென யாதினை யிசைப்பாம்‌?. : 362

மண்ணவர்‌ விபுதர்‌ விஞ்சைய ரூரகர்‌
மதன்முத வினர்வடி வழகைக்‌
கண்ணீனால்‌ நோக்கற்‌ சென்னவே அயனார்‌
அமைத்தகண்‌ ணாடியோ கபோலம்‌?
பண்ணினின்‌ னிசையைக்‌ கன்னலை அமுதைப்‌
பாகினைத்‌ தேனினை வெகுண்ட
பெண்ணினுக்‌. கணங்கின்‌ கிளிமொழிக்‌ குவமை.
.”….. பெற்றுள தேதென வுரைப்பாம்‌. 363

முல்லையி னரும்பை முருந்தினை முத்தை
முகிண்முலைத்‌ தடங்கண்மெல்‌ லியல்தன்‌
பல்லினுக்‌ குவமை யுரைத்திடி லதன்பாற்‌. ட
பரவுசெங்‌ .காவிதோய்ந்‌ இலையால்‌; –
சொல்லில வலரிற்‌ றூதுளை _
தொண்டையங்‌. கனிகளி லமழுதம்‌
இல்லையா தலினான்‌ மதுரமூ றிதமுக்“தஇணையென வுரைக்குமா றெளிதோ? – 364

முழுமதி தனக்கோர்‌ முயற்கறை கதுவும்‌;
முளரியில்‌ வண்டினந்‌ துவைக்கும்‌;
வழுவிலா நிறைகற்‌ பருந்ததிக்‌ கருள்வாள்‌
வதனத்துக்‌ கணையெதை வகுப்பாம்‌?
விமுகதிர்‌ பாளை மடலவி மாத
கமுகமோ? நினதுகை மேவும்‌
பழுதிலா வளையோ? கந்தர மதனை
யாதெனப்‌ பகர்ந்திட லாமால்‌? 365

பூரண கலசம்‌ அதன்மிசை யணிந்த
பூர்தொடை பொலிதலைப்‌ பொருவ
வாரணி தனங்கண்‌ மிசையுறக்‌ கவிந்து
வளைந்தவேய்‌ நிகர்தடந்‌ தோளாள்‌;
சீரணி யரங்கத்‌ இறைவ[நின்‌ புகழ்கள்‌
இருத்துநா ரதன்செழுங்‌ கரங்கொள்
ஏரணி யாழ்முன்‌ கைக்குநா ணிடுமென்‌
றிசைக்கின்மற்‌ றெவைநிக ரிசைப்பாம்‌? _ 366

திங்களி னொளியாற்‌ பங்கயம்‌ மலரும்‌;
செமித்தசெங்‌ காந்தளின்‌ அரும்புஞ்‌
செங்கதி ரோளிக்குங்‌ குவியுமால்‌; அங்கைக்‌
கணையெனச்‌ செப்பவே றிலையாஷ்‌;
அங்குலிக்‌ கணையாய்ச்‌ செங்கணங்‌ கெளிற்றை
யறையலாம்‌; செழுமலர்ச்‌ சோலைப்‌
பைங்கிளி யணிழுக்‌ கதனையம்‌ மடவாள்‌
நகறிகர்‌ பகருத லெளிதால்‌. 367

சக்கர வாகஞ்‌ சறைகொளும்‌; இளநீர்‌
சந்தன மணிதந்திடா; சூதின்‌
மிக்கவட்‌ டதுதான்‌ வெட்டுணும்‌; கலசஞ்‌
சுணங்குறா; மேருமா வரைதான்‌
நக்கனால்‌ வளையும்‌; நளினமென்‌ முகைதான்‌
நாயிறாங்‌ குதித்தகா லலரும்‌;
மைக்கருங்‌ குழலாள்‌ மணிகணார்‌ தனத்துக்‌
கேதினை யிணையென வகுப்பாம்‌? 368

புடவியை முதலா மனைத்தையும்‌ மகட்டுள்‌
பொருந்திநீ விளங்குகண்‌ வளரும்‌
வடவிலை யதனை யொருமழுறை யவள்தன்‌
வயிற்றினுக்‌: இணையென லாகும்‌;
கடலெழு தரங்கம்‌ வரையென லாகும்‌;
கட்டெறும்‌ பூர்மயி ரொழுங்காம்‌;
துடியதோ? தந்தோ? அனங்கவே ளூருவோ?
யாதெனத்‌ தொகுக்கலா . மிடையே? 369

நீருறு சுழியை யுந்தியை நிகராய்‌ நிகழ்த்துதல்‌ அரிது;நீர்‌ வளரிப்‌
பேரராப்‌ பணமோ? இனித்ததேன்‌ கூண்டோ?
பெருகுபோர்‌ மதனன்பொக்‌ கஇசமோ?
தேரதோ? வாச நிலைகொலோ? பரந்த
செம்பொ னாலவட்‌ டமதோ?
வாருறை தனத்தா எல்குலா மதனை
யாதென வகுத்துரைத்‌ திடலாம்‌? 370

வாழையோ? மோகக்‌ கடலினைக்‌ கடக்க
வகுத்திடுந்‌ தெப்பமோ? வசஞ்செய்‌
வேழமா மதனைப்‌ பிணித்திடுந்‌ தறியோ?
மென்றொடை யாதென விசைப்பாம்‌?ஆழியைக்‌ கரந்தந்‌ தாழிசூ மிலங்கைக்‌ ட்ட
கன்றுநீ செல்கென விடுத்த ‘ ்‌ ்‌
பாழியந்‌ தடந்தோள்‌ தூதனை மருட்டும்‌
பரிசமை யணிமுழந்‌ தாளாள்‌. 371

சனைவரால்‌ கணைக்கா லென்னலாம்‌; கமடஞ்‌
செப்பலாம்‌ புறவடிக்‌ இணையாய்‌;
நினையுன தழகுஞ்‌ தனதுமா வழகும்‌ நிறுத்தறிந்‌ திடுமுறை முளரி மனையுறை யயன்‌ றான்‌ வகுத்திடுஞ்‌ துலையோ?:
மற்றவள்‌ பரடு;மென்‌ குஇக்குப்‌
புனைமலர்க்‌ குழலா ராடுகந்‌ துகந்தான்‌
பொரும்விரற்‌ றுகிரென லாமால்‌. , . 372

தேங்கம ழனிச்ச மலர்மிசை நடந்தோ? —
செய்யபஞ்‌ சூட்டியோ? கரத்தால்‌
பாங்கியர்‌ வருடப்‌ பொறாமையி னாலோ?
பாரெலா :மலைந்துபோர்‌ வயங்கொள்-

பூங்கணை மதனன்‌ மகுடமா முடிமேல்‌
பொருத்தியோ? யாதினோ சிவந்த?
மாங்குயின்‌ மொழியா ளன நடை வனச
மலரடிக்‌ கொப்புவே நிலையால்‌. 373

இந்தமா வடிவத்‌ தருந்ததி கற்பி னிரும்புவிப்‌ பொறைத்திரு வெழில்சேர்‌
அந்தமா இனைநீ மணம்புரி வதற்கின்‌
றணைவையென்‌ றாங்கவ ளூடனே
முந்துநாள்‌ நவின்ற தாகவவ்‌ வதுவை
முடிப்பதற்‌ கியாவையு மமைத்துத்‌
தந்தியன்‌ றுரித்தோன்‌ முதலினோர்‌ சார்ந்துன்‌
றன்வழி பார்த்திருக்‌ .இன் றார்‌. 374

ஆதலாற்‌ புதுவை நகர்க்குகந்‌ தணுகா யாயிடிற்‌ பெரியரோ டந்த
கோதையே முதலோர்‌ பொறுத்திடன்‌ முடியாக்‌
கொள்கைய ராவர்‌;என்‌ புயத்தின்‌
மீதமர்ந்‌ இடிலிக்‌ கணமவண்‌ கொடுபோய்‌
விடுகுவ னேறுக வெனவிப்‌
பூதனை யெடுத்துண்‌ டுமிழ்ந்திடந்‌ தளந்தோன்‌ பொன்னடி பணிந்துநின்‌ றனனால்‌. ‘ 375

அரங்கன்‌ புதுவையை அடைக்தான்‌
நின்றவன்‌ புயமேற்‌ பொன்மலை மிசையோர்‌
நீலமால்‌ வரைபடிந்‌ தெனலாய்‌
நன்றென மகழ்வோ டரங்கம்வா மிறைவன்‌
நணுகலு மேந்திவான்‌ வழியாய்ச்‌
சென்றுதன்‌ மனமும்‌ பிற்பட விசைத்துச்‌
செஞ்சிறை புடைத்திடும்‌ வளியால்‌
குன்றொடுந்‌ தருவேர்‌ பரிந்துபின்‌ தொடரக்‌ ‘கோதிலாப்‌ புதுவைசென்‌ றடைந்தான்‌. 376

அடையுமா முகில்நே ராழிமா தவனை
யாழியை மந்தர வரையால்‌
கடையுநா ளெழுந்த வமுதினைக்‌ கண்ட
காட்சியிற்‌ கண்டுளங்‌ கனிவாய்‌
சடையவ ஸனயனிந்‌ திரன்முதற்‌ பலருஞ்‌
சயசயென்‌ றடிதொழு தவர்மேல்‌
மடைதிறந்‌ ‘ தருளார்‌ கடைக்கணித்‌ தருளி
வயினனம்‌ புயத்தைவிட்‌ டிழிந்தான்‌. . 377

மீனமார்‌ கடல்போற்‌ றுந்துமி முழக்கி ‘
விண்ணவர்‌ மழையெனப்‌ பொழியும்‌
தேனமர்‌ மலரின்‌ பந்தரின்‌ நிழற்கீழ்த்‌
தேவார்கோன்‌ பாதுகை தாங்கப்‌
போனகங்‌ கடுவோன்‌ விதியிரு புறத்தும்‌
புகுந்துகை லாகுதந்‌ தடைய
வானக மளவா. யுயர்ந்தபொன்‌ மணியார்‌
வடபெருங்‌ கோயில்புக்‌ கனனால்‌. . 378

புக்கபின்‌ னாங்கோர்‌ செழுமணி யினங்கள்‌
பொருந்துமண்‌ டபத்தின்மத்‌ இயினோர்‌ .
தக்கவா தனமேல்‌ வெண்குடை. நிழற்றச்‌
சாமரை யிருபுறம்‌ இரட்ட
மிக்கசர்‌ மதிவீற்‌ றிருந்தென விருந்தான்‌;
மீனினம்‌ பலவிளங்‌ குவபோல்‌
அக்கர வணிந்தோன்‌ முதலினோர்‌ பலரு
மமையுமா தனத்தரு கஇிருந்தார்‌. 379

இருந்த வவ்வமைதி யிந்திரன்‌ வதனம்‌
இடைச்சிய ௬டைகவர்ந்‌ தெடுத்துக்‌
குருந்தமீ தடைந்த கோவல ஸஜனோசக்கிக்‌
கோதிலாப்‌ பெரியர்பாற்‌ குறுடக்‌
கருந்தட நயனக்‌ கோதையாள்‌ தனையாம்‌
கடிமணம்‌ புரிந்திடு வதற்குப்‌
பொருந்துமா நுரைத்து வருகவென்‌ நிசைப்பப்‌ புரிவனம்‌ முறையெனப்‌ போனான்‌. 380

போனவன்‌ ‘விரைவிற்‌ பெரியவாழ்‌ வார்தம்‌
பொன்மனை புகுந்துநின்‌ மகளாம்‌
மாவினோக்‌ கனளை யரங்கநா யகனார்‌ os
மணஞ்செய்வா னடைந்திருக்‌ கின்றார்‌;
ஆனதா லுனதுள்‌ ளறிகுவா னவரின்‌
றனுப்பவந்‌ தனன்புக லெனுமவ்‌
வானவ ரரசன்‌ றிருமுகம்‌ நோக்கி –
ட மற்றவன்‌ இதைவகுத்‌ துரைப்பான்‌ 381

மூன்னர்நா ஸிழைத்த அருந்தவத்‌ தீன்ற முயற்கறை யிலாமதி முகத்தென்‌
கன்னியைத்‌ கருவே னென்னயாத்‌ திரையாக்‌
கடிநகர்க்‌ கேகிய ஞான்றில்‌
அன்னவற்‌ குரைத்த தொனியுமஃ தறிவாய்‌; i
ஆதலா லம்மொழி மறுத்துப்‌
பின்னரொன்‌ நுரைப்ப துளகொலோ? எனதும்‌ ‘ : பெற்றிகண்‌ டறிந்திலாய்‌ போலும்‌! 382

அளித்திடு வதனுக்‌ கையமொன்‌ றிலையா
லாங்குநீ விரைந்தடை.ந்‌ தியானை
விளித்தமா முதலை யழைத்து வாவெனலும்‌
மீண்டவன்‌ கடிதுசென்‌ றருந்தேன்‌ ‘
துளித்தபைந்‌ துளவோ ஸனம்புய மலரின்‌
துணையடி வணங்கியப்‌ பெரியார்‌
களிப்புடன்‌ மகளைத்‌ தருவதற்‌ சசைந்தார்‌கடிதெழுந்‌ தருள்கெனப்‌ பணித்தான்‌. ” 383

பணித்தசொற்‌ றன்து திருச்செவி யுறலும்‌ பரிவினோ டாங்குவீற்‌ நிருந்த
மணித்தவி சனைவிட்‌ டெழுந்தழ தெறிக்கும்‌
மரக;தச்‌ சவிகைமேற்‌ பொருந்தித்‌
திணித்தட வரைத்தோட்‌ கணிச்சியன்‌ முதலோர்‌
சேர்ந்திரு புறத்தினும்‌ நெருங்கக்‌
கணித்தநான்‌’ முறைநல்‌ லோரையிற்‌ பெரியார்‌
கனகமா ளிகைகலந்‌ தனனால்‌, 384

கலந்தமா தவனைக்‌ கண்டவப்‌ பெரியார்‌
கனலிகா ணம்புய மலரின்‌
மலர்ந்திட வதன முளங்களி துளங்க
வந்தெதிர்‌ பணிந்துநீ வருக
நலம்புரிந்‌ துளதிக்‌ குடிகொலோ? கோதை
நங்கையோ? அடியனோ? நாயேன்‌
குலங்கொலோ? உணரேன்‌; எளப்புகழ்ந்‌ தேத்திக்‌
குருமணித்‌ தவிசினுய்த்‌ தனனால்‌. . 385

அரங்கன்‌ மணக்கோலம்‌
தஞ்சமென்‌ றடியிற்‌ றாழ்ந்துளோர்க்‌ கெல்லாம்‌
தாமரைக்‌ கடைக்கணித்‌ ததற்பின்‌
அஞ்சன வண்ண ஸெழுகநன்‌ முகூர்த்த
மகலுமுன்‌ றிருமண முடிப்பான்‌:மஞ்சன .மாட வேண்டும்நீ யெனவவ்‌
வானவற்‌ கிறைவனுஞ்‌ இவனுங்‌ |
கஞ்சனு மணிநீ ராடுமண்‌ டபத்துட்‌
கடி. துகொண் டடைந்தனர்‌ மாதோ. 386

தாண்டிய தரங்கப்‌ பெருகடல்‌ நீருஞ்‌
சத்தமா. நதிகணீர்‌ முதலாய்‌
– வேண்டுவ வருவித்‌ தவற்குநீ ராட்டி மெய்யெலாம்‌ பட்டினாற்‌ றடவி
மீண்டலங்‌ கரிக்குங்‌ கூடமுட்‌ கொடுபோய்‌
விளங்குபொன்‌ னுடைமுடி முதலாம்‌
பூண்டயங்‌ கஇிடுமா றணிந்துசந்‌ தனமும்‌
பூந்தொடை முதலெலாந்‌ தரித்தார்‌. _ 387

திருமணக்‌ கோல்‌ மமைத்தபின்‌ பவர்பூஞ்‌
செங்கர மணிவிர லதற்குள்‌
ஒருவிர லதனைச்‌ சங்கரன்‌ பிடித்திட்‌
டுவப்பொடு மழைத்துவந்‌ தனனவ்‌
்‌ விரு௨ரு மிருபா’ லினுமிரு புயமு
மேத்தி௦யெச்‌ சரிக்கையோ டெழிலாம்‌
குருநவ மணிக எளிழைத்தகல்‌ யாண
மண்டப முட்கொடு புகுந்தார்‌. 388

புகுந்தவ ணமைத்த பைம்பொனா தனமேற்‌
பொருந்துறக்‌ குணதிஎ.௪ முகமாய்‌
-மூகுந்தனை யிருத்தித்‌ தமதுமா மடவார்‌
.முகந்தனை .நோக்கவாங்‌ கவரும்‌
மிகுந்தவன்‌ பொடுபோய்க்‌ கோதையைக்‌ கொணர்ந்தல்‌
வேதநா யகன்வலப்‌ புறத்தில்‌
தகுந்தவம்‌ முறையோ ராதன மிசையே
சார்வுற இருத்தினர்‌ மாதோ. 389

ஏற்றனன்‌
தூரிய வசைகள்‌ கறங்கிடு முழக்குஞ்‌
சுரிமுகங்‌ களினெழு முழக்கும்‌
* ஆரியர்‌ வாழ்த்தும்‌ மங்கல வொலியும்‌
அருமறை முனிவரோ தொலியும்‌
வாரியின்‌ முழங்கப்‌ பெரியர்வந்‌ தென்பெண்‌
கோதையை வழங்கின னுமக்கென்‌
Cont கரத்தும்‌ நீர்பொழிந்‌ தளித்தான்‌
உலகளந்‌ தவனுமேற்‌ றனனால்‌. 390

மாதவன்‌ மங்கல நாண்‌ புனைந்தான்‌
– மருவமை முளரி மலருறை யயனார்‌
மங்கலச்‌ சடங்குகள்‌ உழுவா
தருமறை முறையில்‌ பலவுமாங்‌ இயற்றி
யாவீனெய்‌ சொரிந்தெரி வளர்த்தித்‌திருமரு -மார்பன்‌ கோதையாள்‌ கழுத்திற்‌
இருந்துமங்‌ இலியமங்‌ கரத்தால்‌
பொருவுமா றணிந்தான்‌; அந்தரத்‌ தவர்கள்‌
பூமழை பொழிந்துவாழ்த்‌ தினரால்‌. 391

மற்றுள சடங்கு நடந்தபின்‌ பெரியார்‌
மகிழ்ந்துபல்‌ லாண்டெடுத்‌ தோதப்‌
பொற்றொடி மடவார்‌ பலர்இரண்‌ டிசை?ர்‌
பொருந்துசங்‌ சர்த்தன மிசைப்ப
விற்றிரு நுதற்சூ டிக்கொடுத்‌ தவள்்‌ தன்‌
மெல்வீரல்‌ பிடி த்தம்மி மிதித்திட்‌
டுற்றெழு சனலை வலம்புரிந்‌ தாழி
யுதகமார்‌ குடத்திலிட்‌ டெடுத்தே; 392

எதிருற அடையு மருந்ததி தனையு
மெழிற்கணா னோக்கவந்‌ திருப்ப
. . ..மதிதவழ்‌ சடையா னெழுந்துவெண்‌ பொரிகை
்‌ வாரியிட்‌ டிடுதலு மஇழ்வாய்‌
கதிர்செயு மணி3மா இரமழ குறவாங்‌
கவர்இரு விரற்கணிந்‌ தெவரும்‌
அதிசய முடனே துதிசெய மடவா ்‌
-ராலநீர்‌ சுழற்றிட வெழுந்தார்‌. 393

எங்கிருந்‌ தெம்மாப்‌ பொருளையு மெடுத்திட்‌
டெய்திடு மிரவலர்‌ பலர்க்கும்‌
தங்கண்மா மனதுள்‌ வெறுப்புறும்‌ வகையோர்‌
சாமமா மளவுமோய்‌ வீலதாய்ச்‌
செங்கன கமுமா மணியும்பட்‌ டுடையுஞ்‌
செழித்தவா பரணமும்‌ பிறவும்‌
மங்குலி னுதவி யறுசுவை பதார்த்த
வகையமு தியாவரு மருந்தி; 394

வெண்கரி யத்னை யலங்கரித்‌ ததன்மேல்‌
வீதியிற்‌ கோலமாய்‌ விளங்கி
மண்படு துகளுந்‌ தூரிய வொலியும்‌
வானகம்‌ ‘போர்த்திடப்‌ பலருங்‌
கண்படு காட்சிக்‌ கடங்குறா வணம்‌அ௮க்‌
கடி நகர்‌ முழுவதும்‌ வலமாய்‌
விீண்படு கனக மாளிகை யதனின்‌
மேவினார்‌ மீட்டுமின்‌ பு.றவே. 395

விஞ்சொளி மணிகள்‌ பைம்‌பொனி ஸனிழைத்து
விளங்குறச்‌ சித்திர வறைக்குள்‌
அஞ்சன வண்ணத்‌ தரங்கநா யகனும்‌ .
2 அனநடைக்‌ கோதையும்‌ புகுந்து
பஞ்சணை மருவிக்‌ காமமாங்‌ கடலிற்‌
படிந்தின்ப நறவமுண்‌ டுறங்கிச்‌
செஞ்சுடர்க்‌ கதிரோன்‌ குணகட லெழலுஞ்‌
செழித்தபஞ்‌ சணையைவிட்‌ டெழுந்தார்‌. 396

ஆழ்வார்‌ சீர்வரிசை செய்தல்‌
அனங்கவேள்‌ தனைவென்‌ றுளபெரி யாழ்வார்‌
அரங்கமா நகரிற்பைந்‌ தலைகொள்‌ ல >
சனங்கெழு மரவிற்‌ .றுயிலுமா தவனார்‌
சேர்ந்துதன்‌ இிருமக ளாகுங்‌
கனங்குழை கோதை தனைமணம்‌ புணர்ந்த
காட்சியைக்‌ கண்டுகண்‌ களித்து
மனங்கொளா மடஒழ்வுற்‌ றவர்க்கரு ளிடுஞ்சீர்‌
வரிசைகள்‌ பலவுமீந்‌ தனரால்‌. 397

சய்ந்தபின்‌ பலவா முபசரிப்‌ புடன்றன்‌ ட்டா
இணையடி தொழுதிடும்‌ பெரியார்‌ _
வாய்ந்தவம்‌ புயமா மலர்முகம்‌ நோக்கி,
மாதவன்‌, மறைமுதற்‌ பலநூல்‌
ஆய்ந்தநல்‌ லுளத்தோ யினிச்சில நாளின்‌
“அரங்கமா நகரம்வந்‌ தணைகென்‌்
ஹேய்ந்தநல்‌ லுரைகள்‌ பலபல வாக
எடுத்தவன்‌ களிப்புற விசைத்தே; ்‌ 398

மணமக்கள்‌ அரங்கம்‌ அடைந்தனர்‌
“ மாதினுக்‌ கரசாங்‌ கோதையா ளஞூடனே
வயினனா மேறுவெற்‌ பதன்தோள்‌
மீதெழுந்‌ தருளி யரங்கமா நகர
மேவிவாழ்தந்‌ இருந்தனன்‌; விரிஞ்சன்‌
பூதமார்‌ படையோன்‌ புரந்தரன்‌ முதலாம்‌
; புலவர்க ளாதிமற்‌ றெவரும்‌
தீதிலாத்‌ தத்தம்‌ மடந்தைய ௬டனே ்‌
சேர்ந்துதம்‌ பதியில்வாழ்ந்‌ தனரால்‌, 399

(வேறு)
அனையவர்‌ யாவரு மகன்ற பின்னரின்‌
வினையற நோற்றவவ்‌ விட்டு சித்தனும்‌
கனைகுரன்‌ முரசதீர்‌ கனக மாளிகை
புனைகொடி. விசும்பினார்‌ புதுவை வைகினன்‌. 400

ஆழ்வார்‌ அரங்கம்‌ அடைதல்‌
பற்பல நாளகன்‌ றதற்பி னோர்பகல்‌
“ வெற்பமை வடபெருங்‌ கோயின்‌ மேவியே
சற்பமேற்‌ றுயில்வட பத்ர சாயிதன்‌
பொற்பதம்‌ பணிந்திவை புகல்வ தாயினான்‌: 401

விரிபுக ழரங்கமுள்‌ விளங்கிக்‌ கண்வளர்‌
வரியர வணையினான்‌ வருக வென்றெனைப்‌
பரிவொடு மற்றைநாள்‌ பணித்த தற்கியான்‌
புரியவேண்‌ டுவதெனோ புகல்கி யென்றனன்‌. 402

என்னலும்‌ யாமுவவ்‌ வெழில ரங்கரும்‌
ஒன்றென வுளந்தெளிந்‌ தொளிய ரங்கமுள்‌
சென்றணைந்‌ தாங்கவர்‌ செப்பு மம்முறை
நன்றெனப்‌ புரிகென விடையும்‌ நல்கினான்‌, 403

நல்கிய விடைகொடு நளினம்‌ போன்முகம்‌
மல்கிடப்‌ புதுவைமா நகரம்‌ நீங்கியே
பல்கலைக்‌ கேள்வியர்‌ பரவுங்‌ ௯டல்சேர்ந்‌
குல்கலி லழகர்பொன்‌ னடிவ ணங்கியே; 404

விழைவொடு மாலிருஞ்‌ சோலைமே விக்கள்‌
ளழகரம்‌ புவிமல ரடிவ ணங்கியே
முழவொலி யுருமென முடுகிூப்‌ புற்றரா
நுழையரங்‌ கந்தனை நோக்கிப்‌ புக்கனன்‌. . 404

புக்குநல்‌ இருவடி போற்றி நின்றவத்‌ குக்கசீர்ப்‌ பெரியர்தா மரையின்‌ றண்மலர்‌
ஒக்குமா முகந்தனை நோக்கி யொண்கதகுர்‌
சக்கரக்‌ கரவரங்‌ கேசர்‌ சாற்றுவார்‌? 406

ஈங்கொரு கோயிலொன்‌ றநியற்றி யெம்மையித்‌
தேங்குழற்‌ கோதையைக்‌ கருட தேவனைப்‌
பாங்குற விக்ரக மாகப்‌ பண்ணியே
ஆங்கொரா சனமிசை யணுக வைத்தரோ; 407

பத்தியோ டுச்சவா திகள்பல்‌ பூடணம்‌
நித்யவா ராதனம்‌ நிகழ்த்தும்‌ யாவையும்‌
ஒத்திடப்‌ புரிந்திவ ணுறைதி யென்னலும்‌ அத்தகை புரிந்தவ ணணுகு நாளிடை) 408
ஆழ்வார்‌ திருநாடலங்கரித்தார்‌
கோதில்பூ மாலை சூடிக்‌ கொடுத்தவம்‌
மாதுமுன்‌ னிலைத்திரு மந்தி ரந்தனை ஓதியப்‌ பெரியரு மொருதஇி னத்திடை
ஆதிநா ரணன்இரு வடிய டைந்தனர்‌. 409

கோதையாரின்‌ பாசுரம்‌
அன்னவ ஞூரைத்தபா மாலை யாமதை
– துன்னிய வன்பொடுந்‌ துதித்து நாவினாற்‌
பன்னியுங்‌ கேட்டுமிப்‌ படியின்‌ மீதுளோர்‌
மன்னின ரனேகர்‌ வைகுந்த மாதகர்‌, 410

(வேறு)
உரையப்‌ பாமா லையிற்றிருமா
லுறையும்‌ பதிகள்‌ பதினாறாம்‌
அரங்கம்‌ பிருந்தா வனங்குடந்தை
யணியா ரெமுனைக்‌ கரைக்கண்ண
புரமா லிருஞ்சோ லைவில்லி
புத்தூர்‌ பாண்டி வடம்வ௪ைம
துரைபத்‌ தவிலோ சனந்துருவேங்‌
கடஞ்சீர்‌ துவரா பதியோடும்‌; 411
(

வேறு)
நீரார்‌ பாற்கடலும்‌ — ஏரா ராய்ப்பாடிப்‌

பேரார்‌ வைகுந்தம்‌ — சீர்கோ வர்த்தனமே. 412

ஆண்டாள்‌ சிறப்பு
(வேறு)
. . உலகந்‌ தனில்வாழ்‌ மானிடற்குள்‌
உயர்ந்த பெரியோர்‌ முனிவர்களாம்‌;
இலகு மூனிவோர்‌ தமக்குயர்ந்தோ
ரெழிலாழ்‌ வார்க ளாம்‌;அவற்குள்‌
நலமார்‌ பெரியாழ்‌ வாருயர்வாம்‌;
அவர்க்கும்‌ நாச்சி யாரென்னும்‌
திலக நூதற்சூ டிக்கொடுத்தா
ளுயர்வாம்‌ அதன்செய்‌ கையுந்தெரிப்பாம்‌. 413

இனிதாம்‌ புண்ய மிதுபாப
மிதுநன்‌ மைகளீ திதுதின்மை
அனியா யந்௫ திதுநியாய
மெனவே யனைத்து மறிவகையாய்‌
முனிவோர்‌ பலசாத்‌ திரநூல்கள்‌
புகன்ற முறையா லிவ்வுலகின்‌
மனிதர்‌ தமக்குள்‌ எம்முனிவோர்‌
பெரியோ ரெனவைக்‌ கப்படுமால்‌. 414

காயைத்‌ தின்னு மவர்தமக்குக்‌
கனியைத்‌ தருமங்‌ கவர்போல
மாயைத்‌ தொடர்புள்‌ ஞழல்வோரம்‌
மயக்கைக்‌ கழிக்கும்‌ வகையயனாஞ்‌ : சேயைத்‌ தருமுத்‌ தியங்கமலத்‌
திருநா ரணனைச்‌ செப்பியீடும்‌
ஆய வாற்றா லாழ்வார்கள்‌ –
முனிவோர்க்‌ கதிக மெனவறைவார்‌. 415

மாயன்‌ றனக்குக்‌ கண்‌இிட்டி
வாரா வகைகாப்‌ பணிந்திடுமா
றாய பல்லாண்‌ டினையிசைத்தும்‌
அவரே பரமா மெனவிசைத்திட்‌
டேய கிழியும்‌ அறுத்ததனா
லிசைக்கு மாழ்வார்‌ தங்களுக்குள்‌
தூய பெரியாழ்‌ வார்பெரியா
ரெனவே சொல்லும்‌ முறைதெளிமின்‌. 416

சூடும்‌ நறும்பூ மாலைகளுஞ்‌
_. சுருபம்‌ பெண்ணாய்ப்‌ பத்தியொடும்‌
பாடு மிசைசேர்‌ பைந்தமிழின்‌
பாமா லைகளும்‌ பணவரவின்‌
ஆடுந்‌ திருமாற்‌ களித்தவரைப்‌ புணர்ந்த வதனா லருவினையைச்‌
சாடும்‌ பெரியாழ்‌ வாற்குமவள்‌ பெரியாள்‌ எனவே சாற்றுவரால்‌. 417

மலர்மாலையைச்‌ சூடிக்‌ கொடுத்ததனாலும்‌,
பெண்ணாகப்‌ பிறந்ததால்‌ காதல்‌ பள்ளமடையாயிருத்தலினாலும்‌, பெருமாளைத்‌
திருமணம்‌ செய்துகொண்டமையாலும்‌ சூடிக்கொடுத்த சுடர்க்‌ கொடியே
பெரியவள்‌

இந்தக்‌ கதையைப்‌ படித்தவரும்‌
எழுது மவரு மிதன்பொருளைச்‌
சிந்தை தெளிய வுரைப்பவருங்‌
கேட்கும்‌ செய்கை யுடையவரும்‌
முந்தை வினையைக்‌ களைந்துபத்தி
முயன்று பலபாக்‌ கியங்களொடும்‌
மைந்தர்ப்‌ பெருஞ்செல்‌ வமுமடைந்து.
கடையிற்‌ பதவி மன்னுவரால்‌. 418

ஆசாரியர்களின்‌ வரலாறு பேசுவோம்‌
புதுவைப்‌ பெரியாழ்‌ வார்மகளாய்ப்‌
புவிமா துதித்திட்‌ டரங்கர்தமை
வதுவை புரிந்த சரித்ரமதின்‌
வகைகள்‌ பலவும்‌ விரித்துரைத்தோம்‌;
இதுகா றாழ்வார்‌ களின்சரிதம்‌;
இனியா ரியாக எளியற்சரிதம்‌;
அதனுள்‌ நாத முனிசரிதம்‌
அதனை யிவ்வா றெனவறைவாம்‌. 419

ஆண்டாள்‌ திருவவதார அத்தியாயம்‌ முற்றும்‌.
(முதலாம்‌ காண்டம்‌ முற்றும்‌)
ஆழ்வார்‌ எம்பெருமானார்‌ திருவடிகளே சரணம்‌,

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ அருளிச் செயல்களும் ஸ்ரீ திவ்ய தேசங்களும் —

May 29, 2024

ஸ்ரீமத்பாகவதம் 11ஆம் காண்டம் 5ம் அத்யாயத்தில் கரபஜன மஹரிஷி, நிமி மஹாராஜனுக்கு கலியுகத்தில்-

க்ருதாதிஷு ப்ரஜா ராஜன் கலாவ் இச்சந்தி ஸம்பவம் |
கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண-பராயணா: |
க்வசித் க்வசின் மஹா-ராஜ த்ரவிடேஷு ச பூரிஷ: || 38.

தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்வினீ |
காவேரீ ச மஹா-புண்யா ப்ரதீசீ ச மஹாநதீ ||39.

யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஷ்வர |
ப்ராயோ பக்தா பகவதி வாஸுதேவே(அ)மலாஷயா: || 40

தாமிரபரணி – நம்மாழ்வார், மதுரகவிகள்
வைகை – பெரியாழ்வார், ஆண்டாள்
பாலாறு – பொய்கை, பேயாழ்வார்,பூதத்தாழ்வார்
பேரியாறு – திருமழிசை
காவிரி – தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்.

திவ்யமான மங்கள அர்ச்சாரூபம் -திவ்ய பிரபந்தமாகிய மங்களாசாசன பா மாலையால் கட்டுண்டு
திவ்யதேசமாகி நித்ய சம்சாரிகளான நம்மை நித்ய முக்தர்களுக்குள் ஒரு கோவையாக்கி வைக்கும் –

கோயில் பெருமாள் -அருளிச்செயல் -மூன்றும் திவ்யம் மூன்று பாத அஷ்டாக்ஷம் போலே –
க்ஷேத்ரம் -வனம் -நதி -சிந்து -புரம் -புஷ்கரணி -ததா -விமானம் சப்த புண்யஞ்ச யாத்ரா தேச -என்றபடி
திவ்ய பிரபந்தத்துடன் திரு அஷ்டாக்ஷரம் போலே -அஷ்ட திவ்யம் –

நாராயண மந்திரம் எனப்படும் திருமந்திரம் எட்டெழுத்துக்களால்
(எட்டிழைகளால் ஆனது) இந்த திவ்ய தேசங்களும் சப்த புண்யங்கள்
எனப்படும்.

ஏழு புண்யங்களுடன், ஆழ்வார்களின் மங்களாசாசனத்தையும் சேர்த்து எட்டெழுத்தான திருமந்திரத்தின் சக்தியைப் பெற்று அஷ்டாச்சர
மந்திரத்தின் பலனைத் தரக்கூடிய ஸ்தலங்களாக அமைகிறது.

ஏழு புண்ணியங்களானவை
1-க்ஷேத்ரம்
2-வனம்
3-நதி
4-ஸிந்து
5-புரம்
6-புஷ்கரணி
ததா
7-விமானம்
ஸப்த புண்யஞ்ச யத்ர தேச 

இவ்வேழு புண்ணியங்களும் ஒருங்கே அமையப் பெற்று ஆழ்வார்களின்
மங்களாசாசனமும் ஒரு தலத்திற்கு அமையுமாயின் அது அஷ்டாச்சர மந்திரம்
நிலை பெற்ற இடமாகும். . இவ்விதம் இந்தியாவில்
ஆழ்வார்கள் பன்னிருவரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள் -108.

—————

ஸ்ரீ திவ்ய தேசங்கள்–நின்ற -திருக்கோலம் 67–இருந்த திருக்கோலம் -17- சயன திருக்கோலம் -24

நின்ற திருக் கோலங்களில் -67
கிழக்கு 39-
மேற்கு -12
தெற்கு 14
வடக்கு -2

இருந்த திருக் கோலங்கள் -17–
கிழக்கு -13
மேற்கு –
தெற்கு
வடக்கு –

சயனம் திருக் கோலங்கள் -24–
கிழக்கு -18
மேற்கு 3
தெற்கு 3
வடக்கு சயனம் இல்லை –

24 சயனம் திருக் கோலம் -புஜங்க சயனம் -போகி சயனம் -ஆதி சேஷன் மடியில் – -ஸ்ரீ ரெங்கம்-பாம்பணை சயனம்திரு மெய்யம்
உத்யோக சயனம் உத்தான அர்த்த சயனம் -ஆராவமுதன் -கிடந்த வாறு எழுந்து இருந்து
சிறு புலியூர் -சல சயனம் -பால சயனம் கிருபா சமுத்திரம்
போக சயனம் -தில்லை நகர் சித்ர கூடம்
வீர சயனம் -சங்கு சக்கரம் இடம் பரிமள ரெங்க நாதன் இந்தளூர்
மாணிக்க சயனம் திரு நீர்மலை –
திருப் புல்லாணி தர்ப சயனம்
திருக் கடல் மல்லை -ஸ்தல சயனம்-திருமோகூர் – பிரார்த்தனா சயனம்
வட பத்ர சாயி -வட பெரும் கோயிலுடையான்
அனந்த சயனம் தாளும் தோளும் -சமன் இல்லா பரப்பி –

ஜல சயனம் / தல சயனம் / புஜங்க சயனம் -சேஷ சயனம் /உத்தியோக சயனம் /வீர சயனம் /போக சயனம் /
தர்ப்ப சயனம் /பத்ர -ஆலிலை -சயனம் /மாணிக்க சயனம் /உத்தான சயனம்

பல திருக் கோயில்களில் இருக்கும் எம்பெருமான்கள் ஒவ்வொரு விதமாக தம் திருக் கரங்களை வைத்துக் கொண்டு இருப்பார்கள்.

இவற்றை ஹஸ்தம் என்று வழங்குவர். பலவகை ஹஸ்தங்களில் மிகவும் பரவலானவை சில-

1. அபய ஹஸ்தம்
2. வரத ஹஸ்தம்
3. ஆஹ்வான ஹஸ்தம்-பெருமாள் தன் வலது அல்லது இடது திருக்கரத்தின் ஆள்காட்டி விரலை சற்று மடக்கி நம்மை நோக்கி வைத்திருப்பார்.
இதன் பொருள், “அவர் நம்மை அருகில் வா நான் ரக்ஷிக்கிறேன் ” என்பதாகும்.

ஊரு ஹஸ்தம் – இறைவனின் கையானது தொடையில் வைத்தபடி இருக்கும். ஊரு என்றால் தொடை என்று பொருளாகும்.

ஸ்வயம் வ்யக்த ஸ்தலம் / ஆர்ஷம் -ரிஷிகளால் /பவ்ராணிகம்-புராணங்களில் விரித்து உரைக்கப்பட்டவை /
தைவதம் -பிரம்மாதி தேவர்களால் / மாணவன் -மன்னர்கள் அடியார்களால் –
ஆச்சார்யர்களால் அபிமானிக்கப்பட்ட ஸ்தலங்களும் உண்டு –

108 திவ்யதேசங்களில் 96 வகையான விமானங்கள்
வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகம சாஸ்திரத்தில் கூறப்பட்ட இவ்வனைத்து
விமானங்களும் முக்கியமானவைகள்தான் என்றாலும் கீழ்க்கண்டவைகளை மிக
முக்கியமானவைகள் என்று சொல்லலாம்.

1. ப்ரண வாக்குருதி விமானம்

2. விமலாக்குருதி விமானம்

3. சுத்தஸ்த்வ விமானம்

4. தாரக விமானம்

5. சுகநாக்ருதி விமானம்

6. வைதிக விமானம்

7. உத்பலா விமானம்

8. சௌந்தர்ய விமானம்

9. புஷ்கலாவர்த்த விமானம்

10. வேதசக்ர விமானம்

11. சஞ்சீவி விக்ரஹ விமானம்

12. அஷ்டாங்க விமானம்
13. புண்யகோடி விமானம்

14. ஸ்ரீகர விமானம்

15. ரம்ய விமானம்

16. முகுந்த விமானம்-

17. விஜய கோடி விமானம்

18. சிம்மாக்கர விமானம்

19. தப்த காஞ்சன விமானம்

20. ஹேமகூட விமானம்

இதில் அஷ்டாங்க விமானம் என்பது பரமபதத்தில் அமைந்துள்ள விமானத்தின் அமைப்பேயாகும் என்பதும்,
ப்ராண வாக்ருதி விமானம் என்பது தேவர்கள் அமைத்து தொழும் தலங்களில் உள்ள விமானத்தின் அமைப்பு எனவும், ஆகமம் கூறிப் போகிறது.

———
ஈர் இருபதாம் சோழம் ஈர் ஒன்பதாம் பாண்டி
ஓர் பதிமூன்றாம் மலை நாடு ஓர் ஈர் இரண்டாம் சீர் நாடு நாடு
ஆறோடு ஈர் எட்டுத் தொண்டை அவ்வட நாடு ஆறிரண்டு கூறும் திருநாடு ஒன்றாகக் கொள்

பொய்கையார் -6-/ பூதத்தார் -13-/ பேயார் -15-/திருமழிசையார் -17-/ நம்மாழ்வார் -37-/குலசேகரர் -9-/
பெரியாழ்வார் -18-/ ஆண்டாள் -11-/ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-/ திருப்பாணாழ்வார் -3-/
திருமங்கை ஆழ்வார் -86-திவ்ய தேசங்களுக்கு மங்களா சாசனம் –

11-ஆழ்வார்கள் –திருவரங்கம் –
9-ஆழ்வார்கள் -திருமலையும் திருப்பாற் கடலும் –
8-ஆழ்வார்கள்–பரமபதம் –
7-ஆழ்வார்கள் –திருக்குடந்தை –
6-ஆழ்வார்கள் –திருமாலிருஞ்சோலை –
5-ஆழ்வார்கள்-6-திவ்ய தேசங்கள்-திரு அயோத்தியை-திருக் கண்ணபுரம்–திருக் கோட்டியூர்-திருத் துவாரகை-திரு வடமதுரை-திருக் கோவர்த்தனம்-திரு விருந்தாவனம்-திரு வெக்கா
4-ஆழ்வார்கள்-3-திவ்ய தேசங்கள் –திருக்குறுங்குடி-திருப்பாடகம்–திருப்பேர் நகர்
3-ஆழ்வார்கள் -5-திவ்ய தேசங்கள் –திரு அத்திகிரி-திரு வல்லிக் கேணி-திரு ஆய்ப்பாடி–திருக் கோவலூர்-திரு விண்ணகர்
2-ஆழ்வார்கள்-21-திவ்ய தேசங்கள்-திரு அட்டபுயகரம் /திருவாலி –/திரு ஊரகம் /திருக்கடிகை /திரு எவ்வுள்ளூர் –திருக் கடல் மல்லை –திரு சாளக்கிராமம் -திருச் சித்ர கூடம் –திரு தஞ்சை –-திருத் தண் கால் –திரு நாவாய் –திரு மோகூர் திரு பதரி -திரு வல்ல வாழ் -ஸ்ரீ வில்லிபுத்தூர் -திரு வெள்ளறை –திரு வேளுக்கை –
1–ஆழ்வார்-67-திவ்ய தேசங்கள்–இவற்றுள் –
கலியன் மட்டும்–47-திவ்ய தேசங்கள் –
நம்மாழ்வார் மட்டும் -16-திவ்ய தேசங்கள்-
திருமழிசை ஆழ்வார் -2- அன்பில் கபிஸ்தலம்
பெரியாழ்வார் -1-கண்டம் என்னும் கடி நகர்
குலசேகரர் -1–திருவித்துவக்கோடு

பொய்கையார் -6-/ பூதத்தார் -13-/ பேயார்-15-/திருமழிசையார் -17-/நம்மாழ்வார் -37-/ குலசேகர பெருமாள் -9-/
பெரியாழ்வார் -18-/ ஆண்டாள் -11-/தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-/ பாணனார் -3-/ திருமங்கை -86-

ஒரே பாசுரம் மங்களா சாசனம் -14-திவ்ய தேசங்கள்
இரண்டு பாசுரங்கள் மங்களா சாசனம் -7-திவ்ய தேசங்கள்
ஸ்ரீ வைகுண்டம் –/ திண்ணனூர் / திருப் புட் குழி/ திருத் தண்கா-திருத் தூப்புல் உறையூர் /
ஸ்ரீ வில்லிபுத்தூர் /திருத் தலைச் சங்க நாண் மதியம்

ஐம்பதுக்கு மேல் பட்ட பாசுரங்கள் மங்களாசாசனம் -7-திவ்ய தேசங்கள்
திருப்பாற் கடல் -51-/திருக்குடந்தை -51-திருமாலிருஞ்சோலை -128-/ திருக்கண்ணபுரம் -128-/
திரு நறையூர் -110-/ திருவேங்கடம் -202-/திருவரங்கம் -247-

எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள்
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ வேங்கடாத்ரிச்ச ஸ்ரீ முஷ்ணம் ஸ்ரீ தோதபர்வதம் ஸ்ரீ ஸாளக்ராமம் ஸ்ரீ புஷ்கரம் ஸ்ரீ நரநாராயணாச்ரமம் ஸ்ரீ நைமிஷம்
சேதி மே ஸ்தானானி அஸௌ முக்தி ப்ரதானி வையே து அஷ்டாக்ஷர ஏகைக: வர்ணமூர்த்தி: வஸாமி அஹம்”என்ற
ஸ்ரீ புராண ஸ்லோகம் கூறும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகிய

1. ஸ்ரீரங்கம்
2. ஸ்ரீ திருவேங்கடம்
3. ஸ்ரீமுஷ்ணம்
4. ஸ்ரீ நாங்குநேரி
5. ஸ்ரீ முக்திநாத்
6. ஸ்ரீ புஷ்கரம்
7. ஸ்ரீ பத்ரிநாத்
8. ஸ்ரீ நைமிசாரண்யம்

அயோத்தி, மதுரா, மாயா (ஹரித்வார்), காசி (வாரணாசி), காஞ்சி (காஞ்சிபுரம்), அவந்திகா (உஜ்ஜைன்) மற்றும் துவாரவதி (துவாரகா);

இந்த புனித ஷேத்ரங்களை ஒரு ஸ்லோகம் மூலம் கூறலாம்:

“அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா த்வராவதி சைவ ஸப்தைத மோக்ஷ தாயகா::”

புராண ஸ்தலங்கள் -20-/ அபிமான ஸ்தலங்கள் -29-

————–

ஒரே பாசுர மங்களா ஸாஸனம் ——————–15 திவ்ய தேசங்கள்
இரண்டு பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——–8 திவ்ய தேசங்கள்
நான்கு பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ———-2 திவ்ய தேசங்கள்
ஐந்து பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ————2 திவ்ய தேசங்கள்
ஆறு பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ————-2 திவ்ய தேசங்கள்
ஏழு பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ————– 1 திவ்ய தேசங்கள்
ஓன்பது பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——–1 திவ்ய தேசங்கள்
பத்து பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ———–23 திவ்ய தேசங்கள்
11 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் —————-14 திவ்ய தேசங்கள்
12 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் —————–8 திவ்ய தேசங்கள்
13 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————5 திவ்ய தேசங்கள்
14 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————3 திவ்ய தேசங்கள்
20 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————1 திவ்ய தேசம்
21 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————-2 திவ்ய தேசங்கள்
22 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————-3 திவ்ய தேசங்கள்
24 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————-1 திவ்ய தேசம்
27 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
32 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
33 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
36 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
39 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
40 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
42 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
45 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
47 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
50 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
51 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ———————2 திவ்ய தேசங்கள்
110 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
128 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–2 திவ்ய தேசங்கள்
202 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ——————–1 திவ்ய தேசம்
247 பாசுரங்கள் மங்களா ஸாஸனம் ———————1 திவ்ய தேசம்

நம்மாழ்வார் திருவடி தொழும் இராப்பத்து உத்ஸவத்தின் பத்தாம் திருநாளில், ஆழ்வார்திருநகரியில் பெருமாள், தாயார்கள், ஆழ்வார் மற்றும் உடையவருக்கு மாதுளை முத்துக்களால் அமைக்கப்பட்ட ஒரு விசேஷமான மாலை அணிவிக்கப் படுகிறது.

இந்த மாலையில் மாதுளை முத்துக்கள் கோர்க்கப் படுவதில்லை. நெருக்கமாகக் கட்டப்படுகிறது. மிகுந்த பொறுமையும், நேரமும், சிரத்தையும் எடுத்து இந்த மாலைகளைக் கட்டுவதற்கு இவ்வூரில் மிகச் சிலரே இருக்கிறார்கள். இந்த மாலையை ’மாணிக்க மாலை’ என்று கூறுகிறார்கள்.

ஸ்ரீரங்கம் 7-இன் சிறப்பு.

1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களைக் கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.

2. (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபரி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.

5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். (1) சித்திரை (2) வைகாசி (3) ஆடி (4) புரட்டாசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருலுவார். (1) சித்திரை(2) வைகாசி (3) ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல் உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி உத்திரம்.

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். (1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் (2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (3) குலசேகர ஆழ்வார் (4) திருப்பாணாழ்வார் (5) தொண்டரடிபொடி ஆழ்வார் (6) திருமழிசை ஆழ்வார் (7) பெரியாழ்வார், ஆண்டாள்

13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. (1) நாழிகேட்டான் கோபுரம் (2) ஆர்யபடால் கோபுரம் (3) கார்த்திகை கோபுரம் (4) ரெங்கா ரெங்கா கோபுரம் (5) தெற்கு கட்டை கோபுரம்-I (6) தெற்கு கட்டை கோபுரம்-II (7) ராஜகோபுரம்.

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம் (2) சங்கராந்தி (3) பாரிவேட்டை (4) அத்யயநோத்சவம் (5) பவித்ரா உத்சவம் (6) உஞ்சல் உத்சவம் (7) கோடை உத்சவம்.

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். (1) பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி சேவை (7) ஜாலி சாலி அலங்காரம்.

17. திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார். (1) நவராத்ரி மண்டபம் (2) கருத்துரை மண்டபம் (3) சங்கராந்தி மண்டபம் (4) பாரிவேட்டை மண்டபம் (5) சேஷராயர் மண்டபம் (6) சேர்த்தி மண்டபம் (7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்

18. திருக்கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன.

19. ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள் அமையப்பெற்றுள்ளன.

20. திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கு தனி சன்னதி உள்ளது. (1) ராமானுஜர் (2) பிள்ளை லோகாச்சாரியார் (3) திருக்கச்சி நம்பி (4) கூரத்தாழ்வான் (5) வேதாந்த தேசிகர் (6) நாதமுனி (7) பெரியவாச்சான் பிள்ளை

21. சந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும், கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக ஏழு முறை சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார். (1) விருப்பன் திருநாள், சித்திரை மாதம் (2) வசந்த உற்சவம் வைகாசி மாதம், (3) பவித்ரோத்சவம் ஆவணி மாதம், (4) ஊஞ்சல் உற்சவம் ஐப்பசி மாதம், (5) அத்யயன உற்சவம் மார்கழி மாதம், (6) பூபதி திருநாள் தை மாதம், (7) பிரம்மோத்சவம். பங்குனி மாதம்.

22. நம்பெருமாள் மூன்று முறை எழுந்தருளும் வாகனங்கள் (1) யானை வாஹனம் – தை, மாசி, சித்திரை (2) தங்க கருடன் வாஹனம் – தை, பங்குனி சித்திரை (3) ஆளும் பல்லக்கு – தை, பங்குனி சித்திரை (4) இரட்டை பிரபை – தை, மாசி, சித்திரை (5) சேஷ வாஹனம் – தை, பங்குனி, சித்திரை (6) ஹனுமந்த வாஹனம் – தை, மாசி, சித்திரை (7) ஹம்ச வாஹனம் – தை, மாசி, சித்திரை

23. மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள் ஏழு வாகனங்களில் மட்டும் உலா வருவார்.

24. கற்பக விருட்சம், ஹனுமந்த வாஹனம், சேஷ வாஹனம், சிம்ம வாஹனம், ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாகனங்கள் தங்கத்திலும் யாளி வாஹனம், இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் – ஆகிய ஏழு வாகனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளி மற்றும் தங்கத்திலும் உள்ளன.

25. மற்ற கோவில்களில் காண முடியாதவை (1) தச மூர்த்தி (2) நெய் கிணறு (3) மூன்று தாயார்கள் ஒரே சன்னதியில் (4) 21 கோபுரங்கள் (5) நெற்களஞ்சியம் (6) தன்வந்தரி (7) நான்கு திசைகளிலும் ராமர் சன்னதி

1-ஸ்ரீரங்கம்
(திருவரங்கம்)
ஸ்ரீரங்க நாச்சியார்
ஸ்ரீ ரங்கநாதன்
நம்பெருமாள்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

2-திருக்கோழி
(உறையூர், நிசுலாபுரி, உரந்தை)
ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்
ஸ்ரீ அழகிய மணவாளன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

3-திருக்கரம்பனூர் (உத்தமர் கோவில், கடம்ப க்ஷேத்ரம்)
ஸ்ரீ பூர்வ தேவி
ஸ்ரீ புருஷோத்தமன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

4-திருவெள்ளறை (வேதகிரி க்ஷேத்ரம்)
ஸ்ரீ செண்பகவல்லி நாச்சியார்
ஸ்ரீ புண்டரீகாக்ஷன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

5-திருஅன்பில்
ஸ்ரீ அழகியவல்லி நாச்சியார்
ஸ்ரீ வடிவழகிய நம்பி
ஸ்ரீ சுந்தரராஜன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

6-திருப்பேர்நகர் ,அப்பக்குடத்தான்
ஸ்ரீ கமலவல்லி (இந்திரா தேவி)
அப்பலா ரங்கநாதன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

7-திருக்கண்டியூர்
ஸ்ரீ கமலவல்லி
ஹர சாப விமோசன பெருமாள்
கமலநாதன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

8 -திருக்கூடலூர்,
ஆடுதுறை பெருமாள் கோவில்
ஸ்ரீ பத்மாசனி (புஷ்பவல்லி)
வையம் காத்த பெருமாள் (ஜகத்ரக்ஷகன்)
சோழ நாடு,கும்பகோணம்

9-திரு கவித்தலம் (கபிஸ்தலம்)
ஸ்ரீ ரமாமணிவல்லி (பொற்றாமரையாள்)
கஜேந்திர வரதன்
சோழ நாடு,கும்பகோணம்

10-திருப்புள்ளம் (பூதங்குடி)
ஸ்ரீ பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி)
ஸ்ரீ வல்விலி ராமர்
சோழ நாடு,கும்பகோணம்

11-திரு ஆதனூர்
ஸ்ரீ ரங்கநாயகி
ஸ்ரீ ஆண்டளக்குமையன்
சோழ நாடு,கும்பகோணம்

12-திருகுடந்தை
(பாஸ்கர க்ஷேத்ரம்)
ஸ்ரீ கோமளவல்லி (படிதாண்டா பத்தினி)
ஸ்ரீ சாரங்கபாணி
சோழ நாடு,கும்பகோணம்

13-திருவிண்ணகர்,
ஒப்பிலியப்பன் கோயில்
ஸ்ரீ பூமிதேவி நாச்சியார்
ஸ்ரீ ஒப்பிலியப்பன் (ஸ்ரீநிவாசன்)
சோழ நாடு,கும்பகோணம்

14-திரு நறையூர்,
நாச்சியார் கோயில்
ஸ்ரீ வஞ்சுளவல்லி நாச்சியார்
திருநறையூர் நம்பி
சோழ நாடு,கும்பகோணம்

15-திருச்சேறை
ஸ்ரீ சாரநாயகி (சார நாச்சியார்)
ஸ்ரீ சாரநாதன்
சோழ நாடு,கும்பகோணம்

16-திரு கண்ணமங்கை
ஸ்ரீ அபிசேக வல்லி
பக்த வத்சல பெருமாள்
சோழ நாடு,கும்பகோணம்

17-திருக்கண்ணபுரம்(கிருஷ்ணாரண்யா, பஞ்சக்ருஷ்ண, சப்த புண்ணிய க்ஷேதரம்)
ஸ்ரீ கண்ணபுர நாயகி
நீல மேகப் பெருமாள்
சௌரிராஜ பெருமாள்
சோழ நாடு,நாகப்பட்டினம்

18-திரு கண்ணங்குடி
ஸ்ரீ லோகநாயகி (அரவிந்த வல்லி)
ஸ்ரீ லோகநாதன் (சியாமளமேணிப் பெருமாள்)
தாமோதர நாராயணன்
சோழ நாடு,கும்பகோணம்

19-திரு நாகை,
நாகப்பட்டினம்
ஸ்ரீ சௌந்தர்ய வல்லி
நீலமேகப் பெருமாள்
சௌந்தர்யராஜன்
சோழ நாடு,நாகப்பட்டினம்

20-தஞ்சைமாமணி கோயில்
ஸ்ரீ செங்கமல வல்லி
நீலமேகப் பெருமாள்
சோழ நாடு,தஞ்சாவூர்

21-திரு நந்திபுர விண்ணகரம்,
நாதன் கோயில், தக்ஷின ஜகன்னாத்
ஸ்ரீ செண்பக வல்லி தாயார்
ஸ்ரீ ஜகந்நாதன் (நாதநாதன், விண்ணகர பெருமாள்)
சோழ நாடு,கும்பகோணம்

22-திரு வெள்ளியங்குடி
ஸ்ரீ மரகத வல்லி
கோலவல்வில்லி ராமன்
ஸ்ருங்கார சுந்தரன்
சோழ நாடு,சீர்காழி

23-திருவழுந்தூர்
(தேரழுந்தூர்)
ஸ்ரீ செங்கமல வல்லி
தேவாதிராஜன்
ஆமருவியப்பன்
சோழ நாடு,மயிலாடுதுறை

24-திரு சிறுபுலியூர்
ஸ்ரீ திருமாமகள் நாச்சியார்
அருள்மாக்கடல் (ஜலசயனப் பெருமாள்)
க்ருபா சமுத்ரப் பெருமாள்
சோழ நாடு,மயிலாடுதுறை

25-திரு தலைச் சங்க நாண்மதியம்(தலைச்சங்காடு)
ஸ்ரீ தலைச்சங்க நாச்சியார்
நாண்மதியப் பெருமாள் (வெண்சுடர் பெருமாள்)
வியோமஜோதிப்பிரான் (வெண்சுடர்பிரான், லோகநாதன்)
சோழ நாடு,மயிலாடுதுறை

26-திரு இந்தளூர்
ஸ்ரீ பரிமள ரங்க நாயகி (சந்திர சாப விமோசன வல்லி, புண்டரிக வல்லி)
பரிமள ரங்கநாதன் (மருவினிய மைந்தன், சுகந்தவன நாதன்)
சோழ நாடு,மயிலாடுதுறை

27-திருக் காவளம்பாடி,
திரு நாங்கூர்
ஸ்ரீ மடவரல் மங்கை
ஸ்ரீ கோபால கிருஷ்ணன் (ராஜ கோபாலன்)
சோழ நாடு,சீர்காழி

28-திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம்,சிர்காழி
ஸ்ரீ லோக நாயகி (மட்டவிழ்குழலி)
திரு விக்ரமன் (தாடாளன்)
த்ரிவிக்ரம நாராயணன்
சோழ நாடு,சீர்காழி

29-திரு அரிமேய விண்ணகரம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ அம்ருதகட வல்லி
குடமாடுகூத்தன்
சதுர்புஜங்களுடன் கோபாலன்
சோழ நாடு,சீர்காழி

30-திருவண் புருடோத்தமம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ புருஷோத்தம நாயகி
ஸ்ரீ புருஷோத்தமன்
சோழ நாடு,சீர்காழி

31-திரு செம்பொன்செய் கோயில்,
திரு நாங்கூர்
ஸ்ரீ அல்லிமாமலர் நாச்சியார்
ஸ்ரீ பேரருளாளன்
ஹேமரங்கர் (செம்பொன்னரங்கர்)
சோழ நாடு,சீர்காழி

32-திருமணிமாடக் கோயில்,
திரு நாங்கூர்
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
ஸ்ரீ நாராயணன் (நந்தாவிளக்கு)
நாராயணன், அளத்தற்கரியான்
சோழ நாடு,சீர்காழி

33-திரு வைகுந்த விண்ணகரம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ வைகுந்த வல்லி
ஸ்ரீ வைகுந்த நாதன்
சோழ நாடு,சீர்காழி

34-திருவாலி மற்றும் திருநகரி
திருவாலி: ஸ்ரீ அம்ருதகட வல்லி, திருநகரி: ஸ்ரீ அம்ருத வல்லி
திருவாலி: ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹர் (வயலாளி மணவாளன்), திருநகரி: ஸ்ரீ வேதராஜன்
திருவாலி: ஸ்ரீ திருவாலி நகராளன், திருநகரி: ஸ்ரீ கல்யாண ரங்கநாதன்
சோழ நாடு,சீர்காழி

35-திரு தேவனார் தொகை,
திரு நாங்கூர்
ஸ்ரீ கடல் மகள் நாச்சியார், மாதவநாயகி
தெய்வநாயகன்
மாதவப் பெருமாள்
சோழ நாடு,சீர்காழி

36-திருத்தெற்றி அம்பலம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ செங்கமல வல்லி
செங்கண் மால் (ரங்கநாதன், ஸ்ரீ லக்ஷ்மிரங்கர்)
சோழ நாடு,சீர்காழி

37-திருமணிக்கூடம் ,
திரு நாங்கூர்
ஸ்ரீ திருமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி
வரதராஜப் பெருமாள் (மணிகூட நாயகன்)
சோழ நாடு,சீர்காழி

38-அண்ணன் கோயில்(திருவெள்ளக்குளம்), திரு நாங்கூர்
ஸ்ரீ அலர்மேல்மங்கை, ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார், பத்மாவதி
ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள்
சோழ நாடு,சீர்காழி

39-திரு பார்த்தன் பள்ளி,
திரு நாங்கூர்
ஸ்ரீ தாமரை நாயகி
ஸ்ரீ தாமரையாள் கேள்வன்
ஸ்ரீ பார்த்தசாரதி
சோழ நாடு,சீர்காழி

40-திருச்சித்திரக் கூடம் ,
சிதம்பரம்
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
கோவிந்தராஜன்
தேவாதி தேவன் (பார்த்தசாரதி)
சோழ நாடு, சிதம்பரம்

41-திரு அஹீந்த்ரபுரம்,
ஆயிந்தை
ஸ்ரீ ஹேமாமபுஜ வல்லி தாயார் (வைகுண்ட நாயகி)
ஸ்ரீ தெய்வநாயகன்
ஸ்ரீ மூவராகிய ஒருவன், தேவநாதன்
நடு நாடு,கடலூர்

42-திருக்கோவலூர்
ஸ்ரீ பூங்கோவை நாச்சியார்
த்ரிவிக்ரமன்
ஆயனார், கோவலன் (கோபாலன்)
நடு நாடு,கடலூர்

43-திருக்கச்சி,
அத்திகிரி (அத்தியூர், காஞ்சிபுரம், சத்யவ்ரத க்ஷேத்ரம்)
ஸ்ரீ பெருந்தேவி (மகாதேவி) தாயார்
ஸ்ரீ பேரருளாள வரதராஜன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

44-அஷ்டபுயகரம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அலர்மேல் மங்கை, பத்மாசனித் தாயார்
ஆதி கேசவ பெருமாள் (சக்ரதரர், கஜேந்திர வரதன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

45-திருத்தண்கா,
தூப்புல், காஞ்சிபுரம்
ஸ்ரீ மரகத வல்லி
ஸ்ரீ தீபப் பிரகாசன் (விளக்கொளிப் பெருமாள், திவ்யப்ரகாசர்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

46-திரு வேளுக்கை,
காஞ்சிபுரம்
ஸ்ரீ வேளுக்கை வல்லி (அம்ருதவல்லி)
அழகியசிங்கர் (ந்ருசிம்ஹர், ஸ்ரீ முகுந்த நாயகன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

47-திரு நீரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ நிலமங்கை வல்லி
ஸ்ரீ ஜகதீச்வரர்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

48-திருப் பாடகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ ருக்மிணி, சத்ய பாமா
பாண்டவ தூதர்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

49-திரு நிலா திங்கள் துண்டம்,காஞ்சிபுரம்
நேர் ஒருவர் இல்லா வல்லி (நிலாத்திங்கள் துண்ட தாயார்)
சந்திர சூட பெருமாள் (நிலாத்திங்கள் துண்டத்தான்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

50-திரு ஊரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அமுத வல்லி நாச்சியார் (அம்ருதவல்லி)
ஸ்ரீ த்ரிவிக்ரமன் (உலகளந்த பெருமாள்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

51-திரு வெஃகா,
காஞ்சிபுரம்
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
ஸ்ரீ யதோக்தகாரி (வேகாசேது, சொன்னவண்ணம் செய்த பெருமாள்)
தொண்டை நாடு.காஞ்சிபுரம்

52-திருக் காரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ பத்மாமணி நாச்சியார் (ரமாமணி நாச்சியார்)
ஸ்ரீ கருணாகர பெருமாள்
தொண்டை நாடு, காஞ்சிபுரம்

53-திருக் கார்வானம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ கமல வல்லி (தாமரையாள்)
ஸ்ரீ கள்வன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

54-திருக் கள்வனூர்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அஞ்சில வல்லி நாச்சியார்
ஆதி வராஹப் பெருமாள்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

55-திருப் பவளவண்ணம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ பவள வல்லி
ஸ்ரீ பவளவண்ணன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

56-திருப் பரமேஸ்வர விண்ணகரம்,காஞ்சிபுரம்
ஸ்ரீ வைகுண்ட வல்லி
ஸ்ரீ பரமபதநாதன் (வைகுந்தநாதன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

57-திருப்புட்குழி
ஸ்ரீ மரகத வல்லி தாயார்
ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
தொண்டை நாடு
காஞ்சிபுரம்

58-திரு நின்றவூர்
(தின்னனூர்)
ஸ்ரீ சுதா வல்லி (என்னைப் பெற்ற தாயார்)
ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் (பத்தராவிப் பெருமாள்)
தொண்டை நாடு
சென்னை

59-திரு எவ்வுள்
(புண்யாவ்ருத, வீக்ஷாரண்ய க்ஷேத்ரம்), திருவள்ளூர்
ஸ்ரீ கனக வல்லி (வசுமதி)
வைத்ய வீர ராகவப் பெருமாள்
தொண்டை நாடு
சென்னை

60-திரு அல்லிக் கேணி(திருவல்லிக்கேணி, ப்ரிந்தாரண்ய க்ஷேத்ரம்)
ஸ்ரீ ருக்மிணித் தாயார்
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன்
ஸ்ரீ பார்த்தசாரதி
தொண்டை நாடு
சென்னை

61-திரு நீர்மலை
ஸ்ரீ அணிமாமலர் மங்கை
நீர்வண்ணன் (நீலமுகில்வண்ணன்)
தொண்டை நாடு
சென்னை

62-திரு இட வெந்தை
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
லக்ஷ்மி வராஹப் பெருமாள்
நித்ய கல்யாணப் பெருமாள்
தொண்டை நாடு
சென்னை

63-திருக் கடல் மல்லை,
மஹாபலிபுரம்
ஸ்ரீ நில மங்கை நாயகி
ஸ்தல சயனப் பெருமாள்
ஸ்தலசயனதுரைவார் (உலகுய்ய நின்றான்)
தொண்டை நாடு
சென்னை

64-திருக்கடிகை,
சோளிங்கர்
ஸ்ரீ அம்ருத வல்லி
யோக ந்ருஸிம்ஹன்
அக்காரக்கனி
தொண்டை நாடு
சென்னை

65-திரு அயோத்தி,
அயோத்யா
ஸ்ரீ சீதாப் பிராட்டி
ஸ்ரீ ராமன் (சக்கரவர்த்தித் திருமகன், ரகுநாயகன்)
வட நாடு
உத்தர் பிரதேஷ்

66-திரு நைமிசாரண்யம்
ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி (ஸ்ரீ புண்டரீகவல்லி)
ஸ்ரீ ஸ்ரீஹரி (தேவராஜன்)
வட நாடு
உத்தர் பிரதேஷ்

67-திருப் ப்ரிதி (நந்தப் பிரயாக்,
(ஜோஷி மடம்)
ஸ்ரீ பரிமள வல்லி நாச்சியார்
பரம புருஷன்
வட நாடு
உத்தராஞ்சல்

68-திருக் கண்டமென்னும் கடிநகர்(தேவப்ரயாகை)
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
ஸ்ரீ நீலமேக பெருமாள் (ஸ்ரீ புருஷோத்தமன்)
வட நாடு
உத்தராஞ்சல்

69-திரு வதரி ஆசிரமம்
(பத்ரிநாத்)
ஸ்ரீ அரவிந்த வல்லி
ஸ்ரீ பத்ரி நாராயணன்
வட நாடு
உத்தராஞ்சல்

70-திரு சாளக்ராமம்
(முக்திநாத்)
ஸ்ரீ ஸ்ரீதேவி நாச்சியார்
ஸ்ரீ ஸ்ரீ மூர்த்தி
வட நாடு
நேபால்

71-திரு வட மதுரை
(மதுரா)
ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார்
கோவர்தனேசன் (பால க்ருஷ்ணன்)
வட நாடு
உத்தர் பிரதேஷ்

72-திருவாய்ப்பாடி,
கோகுலம்
ஸ்ரீ ருக்மிணி மற்றும் சத்ய பாமா
ஸ்ரீ நவ மோகன கிருஷ்ணன்
வட நாடு
உத்தர் பிரதேஷ்

73-திரு த்வாரகை
(துவரை, துவராபதி)
ஸ்ரீ கல்யாண நாச்சியார் (ஸ்ரீ லக்ஷ்மிஸ்ரீ, ருக்மிணி)
கல்யாண நாராயணன் (த்வாரகாதீசன், த்வாரகாநாத்ஜி)
வட நாடு
குஜராத்

74-திரு சிங்கவேழ்குன்றம்,அஹோபிலம்
ஸ்ரீ செஞ்சு லக்ஷ்மி (ஸ்ரீ அம்ருத வல்லி)
ப்ரஹலாதவரதன் (லக்ஷ்மிந்ருசிம்ஹன்)
வட நாடு
ஆந்திரம்

75-திருவேங்கடம்
(திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம்)
அலர்மேல் மங்கை (பத்மாவதி)
ஸ்ரீ திருவேங்கமுடையான் (வெங்கடாசலபதி, பாலாஜி)
ஸ்ரீநிவாசன் (மலையப்ப சுவாமி, மலைகுனியன் நின்ற பெருமாள்)
வட நாடு
ஆந்திரம்

76-திரு நாவாய்
ஸ்ரீ மலர் மங்கை நாச்சியார் (சிறுதேவி)
நாவாய் முகுந்தன் (நாராயணன்)
மலை நாடு
கேரளம்

77-திரு வித்துவக்கோடு(திருவிசிக்கோடு, திருவஞ்சிக்கோடு)
ஸ்ரீ வித்துவக்கோட்டு வல்லி (பத்மபாணி நாச்சியார்)
உய்ய வந்த பெருமாள் (அபயப்ரதன்)
மலை நாடு
கேரளம்

78-திருக்காட்கரை
ஸ்ரீ பெருஞ்செல்வ நாயகி (ஸ்ரீ வாத்சல்ய வல்லி நாச்சியார்)
காட்கரையப்பன்
மலை நாடு
கேரளம்

79-திரு மூழிக்களம்
ஸ்ரீ மதுரவேணி நாச்சியார்
திரு மூழிக்களத்தான் (ஸ்ரீ சூக்தி நாத பெருமாள், அப்பன்)
மலை நாடு
கேரளம்

80-திரு வல்ல வாழ்
(திருவல்லா, ஸ்ரீ வல்லபா க்ஷேத்ரம்)
ஸ்ரீ வாத்சல்ய தேவி (ஸ்ரீ செல்வ திருக்கொழுந்து) நாச்சியார்
ஸ்ரீ கோலப்பிரான் (திருவல்லமார்பன் , ஸ்ரீவல்லபன்)
மலை நாடு
கேரளம்

81-திருக்கடித்தானம்
ஸ்ரீ கற்பக வல்லி
ஸ்ரீ அம்ருத (அத்புத) நாராயணன்
மலை நாடு
கேரளம்

82-திருச்செங்குன்றூர்
(திருசிற்றாறு)
ஸ்ரீ செங்கமல வல்லி
இமயவரப்பன்
மலை நாடு
கேரளம்

83-திருப்புலியூர்
(குட்டநாடு)
ஸ்ரீ பொற்கொடி நாச்சியார்
மாயப்பிரான்
மலை நாடு
கேரளம்

84-திருவாறன்விளை
(ஆறன்முளா)
ஸ்ரீ பத்மாஸநி நாச்சியார்
திருக்குறளப்பன் (செஷாசனா )
மலை நாடு
கேரளம்

85-திருவண் வண்டுர்
ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
பாம்பணை அப்பன்
மலை நாடு
கேரளம்

86-திருவனந்தபுரம்
ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி
அனந்தபத்மநாபன்
மலை நாடு
கேரளம்

87-திரு வட்டாறு
ஸ்ரீ மரகத வல்லி நாச்சியார்
ஆதி கேசவ பெருமாள்
மலை நாடு
கேரளம்

88-திருவண்பரிசாரம்
ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
ஸ்ரீ திருக்குறளப்பன் (திருவாழ்மார்பன்)
மலை நாடு,கேரளம்

89-திருக்குறுங்குடி
ஸ்ரீ குறுங்குடிவல்லி நாச்சியார்
சுந்தர பரிபூரணன் (நின்ற நம்பி)
பாண்டியநாடு,திருநெல்வேலி

90-திரு சிரீவர மங்கை(வானமாமலை, தோதாத்ரி க்ஷேத்ரம்,திருசிரீவரமங்கள நகர், நாங்குநேரி)
ஸ்ரீ சிரீவரமங்கை நாச்சியார்
ஸ்ரீ தோதாத்ரிநாதன் (வானமாமலை)
ஸ்ரீ தெய்வநாயகன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

91-ஸ்ரீவைகுண்டம்,
நவதிருப்பதி
ஸ்ரீ வைகுந்தவல்லி
ஸ்ரீ வைகுந்தநாதன் (ஸ்ரீ கள்ளபிரான்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

92-திருவரகுணமங்கை,
நவதிருப்பதி
ஸ்ரீ வரகுண வல்லி தாயார் (ஸ்ரீ வரகுணமங்கை தாயார்)
விஜயாசனப் பெருமாள்
பாண்டியநாடு,திருநெல்வேலி

93-திருப்புளிங்குடி,
நவதிருப்பதி
ஸ்ரீ மலர்மகள் நாச்சியார், ஸ்ரீ புளிங்குடி வல்லி
ஸ்ரீ காய்சினவேந்தன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

94-திரு தொலைவில்லிமங்கலம்(ரெட்டைத் திருப்பதி), நவதிருப்பதி
ஸ்ரீ கரும் தடங்கண்ணி நாச்சியார்
ஸ்ரீ அரவிந்த லோசனன், ஸ்ரீநிவாசன் (தேவப்பிரான்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

95-திருக்குளந்தை (பெருங்குளம்), நவதிருப்பதி
ஸ்ரீ அலமேலுமங்கை தாயார், ஸ்ரீ குளந்தை வல்லி
ஸ்ரீ ஸ்ரீநிவாசன்
ஸ்ரீ மாயக்கூத்தன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

96-திருக்கோளூர், நவதிருப்பதி
ஸ்ரீ குமுத வல்லி, ஸ்ரீ கோளூர் வல்லி நாச்சியார்
ஸ்ரீ வைத்த மாநிதி பெருமாள் (நிக்ஷேபவிதன்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

97-திருப்பேரை
(தென் திருப்பேரை), நவதிருப்பதி
ஸ்ரீ குழைக்காது வல்லி, ஸ்ரீ திருப்பேரை நாச்சியார்
ஸ்ரீ மகர நெடும் குழைக்காதன் (ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

98-திருக்குருகூர்
(ஆழ்வார் திருநகரி), நவதிருப்பதி
ஸ்ரீ ஆதிநாத வல்லி, ஸ்ரீ குருகூர் வல்லி
ஸ்ரீ ஆதிநாதன் (ஸ்ரீ ஆதிப்பிரான்)
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
பாண்டியநாடு,திருநெல்வேலி

99-ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீ ஆண்டாள் (ஸ்ரீ கோதா நாச்சியார்)
ஸ்ரீ வடபத்ரசாயி (ரங்கமன்னார்)
பாண்டியநாடு,விருதுநகர்

100-திருதண்கால் (திருதண்காலூர்)
ஸ்ரீ செங்கமல தாயார் (அன்ன நாயகி, அனந்த நாயகி, அம்ருத நாயகி, ஜாம்பவதி)
ஸ்ரீ நின்ற நாராயணன்
பாண்டியநாடு,விருதுநகர்

101-திருக்கூடல்,
மதுரை
ஸ்ரீ மதுர வல்லி (வகுலவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி)
கூடல் அழகர்
பாண்டியநாடு,மதுரை

102-திருமாலிரும் சோலை
(அழகர் கோயில்)
ஸ்ரீ சுந்தர வல்லி (ஸ்ரீதேவி)
திரு மாலிரும் சோலை நம்பி (அழகர், கள்ளழகர், மாலாங்காரர்)
பாண்டியநாடு,மதுரை

103-திரு மோகூர்
ஸ்ரீ மோகூர் வல்லி (மேகவல்லி, மோகன வல்லி)
ஸ்ரீ காளமேக பெருமாள்
ஸ்ரீ திருமோகூர் ஆப்தன்
பாண்டியநாடு,மதுரை

104-திருக்கோஷ்டியூர் (கோஷ்டி க்ஷேத்ரம்)
திருமாமகள் நாச்சியார்
ஸ்ரீ உரகமெல்லணையான்
ஸ்ரீ சௌம்யநாராயணன்
பாண்டியநாடு,புதுக்கோட்டை

105-திருப்புல்லாணி, ராமநாதபுரம்
ஸ்ரீ கல்யாண வல்லி, ஸ்ரீ பத்மாஸநி த் தாயார்
ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன் (தெய்வச் சிலையார்)
பாண்டியநாடு,ராமநாதபுரம்

106-திருமெய்யம்
ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்
ஸ்ரீ சத்ய கிரிநாதன் (ஸ்ரீ சத்யமூர்த்தி)
ஸ்ரீ மெய்யப்பன்
பாண்டியநாடு,புதுக்கோட்டை

107-திருப்பாற்கடல்
ஸ்ரீ கடல் மகள் நாச்சியார் (ஸ்ரீ பூதேவி)
ஸ்ரீ க்ஷீராப்தி நாதன்
விண்ணுலகம்

108-பரமபதம்
ஸ்ரீ பெரிய பிராட்டியார்
ஸ்ரீ பரமபத நாதன்
விண்ணுலகம்

108 DIVYADESAMS – SYNOPSIS
Divya desam No. Naadu Divyadesam Name Moolavar Name (Utsavar Name included in most of divyadesams) Utsavar Name (Identified Seperately on some divyadesams) Thayar Name Moolavar Kolam (Posture) Theertham Vimanam Thala Vriksham (Tree) Pratyaksham Agamam Azhwargal mangalasasanam Landmark
1 Chozha Thiruvarangam Sri Ranganathar / Azhagiya Manavalan / Periya Perumal Namperumal Sri Ranganayaki / Sriranga Nachiyar / Periya Piratiyar South facing Kidandha Kolam {Sleeping Posture} (Bhujanga sayanam) Chandra Pushkarani / Ubaya Thirukaveri / Kollidam Pranavakara Vimanam Punnai Dharmavarman / Iravivarman / Vibishinan / Kaveri / Chandran Pancharathram All Azhwars excepting Madhurakavi azhwar 10 Kms from Trichy Bus Stand
2 Chozha Thiruuraiyur / Urandhai Sri Azhagiya Manavalan Sri Ranganathar Kamalvalli Nachiyar / Uraiyur Valli / Vasalakshmi North facing Nindra Kolam (Standing Posture) Kalyana Theertham / Suriya Pushkarani / Kudamuruti Nadhi Kalyana Vimanam Iravivarman / 33 crores devargal Pancharathram Thirumangai azhwar 3 Kms from Trichy Rlwy Station
3 Chozha Thanjai Mamanikovil 1) Sri Nilamega perumal
2) Sri Manikundra perumal
3) Sri Narasingha perumal
1) Sengamalavalli
2) Ambujavalli
3) Thanjai Nayagi
1) East facing Vitrurirndha Kolam (Sitting Posture)
2) East facing Amarndha Kolam (Sitting Posture)
3) East facing Amarndha Kolam (Sitting Posture)
1) Kannika Pushakarani / Amrudha Nadhi / Vennaaru
2) Srirama theeratham
3) Suriya Pushkarani / Srirama Theertham
1) Soundarya Vimanam
2) Manikuda Vimanam
3) Veda Sundara Vimanam
1) Parasara Munivar (sage)
2) Markandeyar
3) Markandeyar
Vaikanasam Bhudhathazwar & Thirumangai azhwar 3 Kms from Thanjavur Rlwy Station
4 Chozha Thiruanbil Thiruvadivayakiya Nambi Sundararajan Soundaryavalli Nachiyar / Ayagiyavalli Nachiyar East facing Kidandha kolam (Sleeping posture) {Bhujanga Sayanam} Manduka Pushkarani / Kollidam Tharaga Vimanam Brahma / Valmiki / Bhumipirati Pancharathram Thirumazhisai azhwar 8 Kms from Lalkudi Rlwy Station
5 Chozha Thirukarambanur / Uthamar Kovil Sri Purushothaman Purvadevi / Poornavalli East facing Kidandha kolam (Sleeping posture) {Bhujanga Sayanam} Kadhamba Theertham Udhyoga Vimanam Kadali (Vazhai) Kadhamba Munivar / Thirumangai azhwar / Ubarisaravaga King / Sanaka Munivar / Sanandhana Munivar / Sanathkumara Munivar Vaikanasam Thirumangai azhwar 8 Kms from Trichy Rlwy Station
6 Chozha Thiruvellarai / Suvethagiri Sri Pundarikakshan Senbaghvalli / Pangayaselvi / Pankajavalli East facing Nindra Kolam (Standing posture) Kusahasthi Theertham / Manikarnika Theertham / Sukra Theertham / Pushkala Theertham / Shirabdhi pushkarani / Padma Theertham / Kandha Theertham / Varaha Theertham Vimalakruthi Vimanam Garudan / Sibhi Chakravarthi / Nilamagal / Markandeyar / Lakshmi / Brahma / Rudran Pancharathram Periya azhwar / Thirumangai azhwar 11 Kms from Srirangam
7 Chozha Thirupullabhudhangudi Sri Valvil Raman Raman Potramaraiyal / Hemabhjavalli East facing Kidandha kolam (Sleeping posture) Jadayu Theertham / Kruthra Theertham Sobhana Vimanam Jadayu Vaikanasam Thirumangai azhwar 5 Kms from Swamimalai
8 Chozha Thirupernagar / Koviladi / Appakudathaan Sri Appakudathaan / Appala Ranganathan Indradevi / Kamalavalli West facing Kidandha kolam (Sleeping posture) Indra Pushkarani / Kollidam Indra Vimanam Palasavanam Upamanyu Munivar / Parasara Munivar Pancharathram Thirumazhisai azhwar / Namazhwar / Periya azhwar / Thirumangai azhwar 10 Kms from Lalgudi Rlwy Station
9 Chozha Thiruadhanur / Ghopuri Sri Andalakumayan Ranganayaki / Bhargavi / Kamalahasini / Srichakranivasini / Mandhirpretheswari East facing Kidandha kolam (Sleeping posture) Suriya Pushkarani / Chandra Pushkarani Pranava Vimanam Punnai / Padali Thirumangai azhwar / Kamadhenu / Brigu / Agni Pancharathram Thirumangai azhwar 2 Kms from Swamimalai
10 Chozha Thiruazhundhur / Therazhundhur Sri Devadhirajan / Sri Aamaruviappan / Sri Ghosakan Sengamalavalli / Rakthabjanayaki East facing Nindra Kolam (Standing posture) Dharsa Pushkarani Kaaruda Vimanam Thirumangai azhwar / Uparicharavasu / Kaveri / Agathiya munivar / Markandeyar / Kambar / Dharmadevadhai / Garudar Pancharathram Thirumangai azhwar 10 Kms from Mayiladudurai
11 Chozha Thirusirupuliyur Sri Arumakadalamudhan / Sri Jalasayana perumal Kribha Samudhiran Thirumamagal Nachiyar / Dhayanayagi South facing Kidandha kolam (Sleeping posture) Ananthasaras / Manasa pushkarani Nandiyavartha Vimanam Vilvam Vyasa Munivar / Balavyakara Munivar / Adhiseshan Pancharathram Thirumangai azhwar 13 Kms from Mayiladudurai
12 Chozha Thircherai Sri Saaranathan Saaranayagi / Chara Nachiyar / Panchalakshmi East facing Nindra Kolam (Standing posture) Saara Pushkarani Saara Vimanam Kaveri / Markandeyar Pancharathram Thirumangai azhwar 14 Kms from Kumbakonam
13 Chozha Thalaisanganan Madiyam / Thalaisangadu Sri Nanmadhiyan / Sri Vyoma Sothipiran Vensudar / Ulaganathan Thalaisanga nachiyar / Sengamalavalli East facing Nindra Kolam (Standing posture) Chandra Pushkarani Chandra Vimanam Chandran / Paramapadha Nityasurigal / Devargal Pancharathram Thirumangai azhwar 13 Kms from Sirkazhi
14 Chozha Thirukudandhai / Kumbakonam Sri Sarangapani Sri Aravamudhan Komalavalli East facing Kidandha kolam (Sleeping posture) {Udhyoga / Uthana Sayanam} Hema pushkarani / Kaveri / Arasalaru Vaidhiga / Vedaveda Vimanam Hema Maharishi / Komalavalli thayar Pancharathram Bhudhathazwar / Peyazhwar / Thirumazhisai azhwar / Nam azhwar / Periya azhwar / Andaal / Thirumangai azhwar Kumbakonam
15 Chozha Thirukandiyur / Kandanapuram Sri Harasapavimochanan / Sri Balinathan Sri Kamalanathan Kamalavalli East facing Nindra Kolam (Standing posture) Kamalamoksha pushkarani / Kabalmoksha theertham / Bali theertham / Padma theertham / Kudamuruti Aru Kamalakruthi Vimanam Arasamaram Sivaperuman / Agathiyar Vaikanasam Thirumangai azhwar 10 Kms from Thanjavur
16 Chozha Thiruvinnagar / Uppuliappan Kovil Sri Uppuliappan / Srinivasan Sri Prasanna Venkatesan Bhoomidevi nachiyar / Dharanidevi / Vasundhara East facing Nindra Kolam (Standing posture) Ahorathra pushkarani / Arthi pushkarani Vishnu Vimanam / Sudarshana Vimanam Thulasivanam Kaveri / Markandeyar / Garudar / Dharmadevadai Vaikanasam Poygai azhwar / Peyazhwar / Nam azhwar / Thirumangai azhwar 6 Kms from Kumbakonam
17 Chozha Thirukannapuram Sri Sowrirajan / Sri Neelamegan Kannapura nayagi East facing Nindra Kolam (Standing posture) Nithiya pushkarani Uthpalaga Vadaga / Uthpalavarthagam Vimanam Kanva munivar / Garudar / Thandaga mamunivar / Uparisaravaga king Vaikanasam Nam azhwar / Kulasekara azhwar / Periya azhwar / Andaal / Thirumangai azhwar 6 Kms from Nannilam (Near mayiladudurai)
18 a) Chozha Thiruvaali Sri Vayalali Manavalan / Lakshmi Nrusimhan Sri Thiruvaali Nagaralan Amrithakadavalli West facing Vitrurirndha Kolam (Sitting Posture) Lakshani / Aahladha pushakarani Astakshara Vimanam Thirumangai azhwar / Karthama prajapathi Vaikanasam Kulasekara azhwar / Thirumangai azhwar 8 kms from sirkazhi
18 b) Chozha Thirunagari Sri Vedarajan / Sri Vayalali Manavalan Sri Kalyana Ranganathan Amudhavalli West facing Vitrurirndha Kolam (Sitting Posture) Lakshani / Aahladha pushakarani Astakshara Vimanam Thirumangai azhwar Vaikanasam Kulasekara azhwar / Thirumangai azhwar 1.5 kms from Thiruvaali
19 Chozha Thirunagai / Nagapattinam Sri Neelamegan Sri Soundariyarajan Soundariyavalli / Gajalakshmi East facing Nindra Kolam (Standing posture) Saara Pushkarani Soundariya Vimanam / Badhrakodi Vimanam Mamaram Nagarajan / Thirumangai azhwar Pancharathram Thirumangai azhwar 2 Kms from Nagapattinam Rlwy station
20 Chozha Thirunaraiyur / Nachiyar Kovil Sri Srinivasan / Sri Vasudevan / Sri Naraiyur Nambi / Sri Vasudevan Vanjulavalli Nachiyar East facing Nindra Kolam (Standing posture) Manimuktha pushkarani / Sangarshana, Pradhyumna, Anirudha, Sambha theertham Hema vimanam / Srinivasa vimanam Brahma / Medhavi Maharishi Vaikanasam Thirumangai azhwar 10 Kms from Kumbakonam
21 Chozha Nandhipura Vinnagaram / Nathankovil Sri Jagannathan / Sri Vinnagara perumal / Srinivasan / Sri Nathanathan Sembagavalli West facing Amarndha Kolam (Sitting Posture) Mandira Pushkarani / Nandhi theertham Mandara Vimanam Nandhi / Sibhi chakravarthi Vaikanasam Thirumangai azhwar 5 Kms from Kumbakonam
22 Chozha Thiru Indhalur Sri Parimala Ranganathan / Sri Maruviniya Maindhan / Sri Sugandhavana Nathan Parimala Nayagi / Chandrasapavimochanavalli / Pundarikavalli / Sugandha nayagi East facing Kidandha kolam (Sleeping posture) {Vira Sayanam} Indhu pushkarani / Chandra pushkarani Vedamodha / Vedhachakra / Vedhagandha vimanam Chandran / Kaveri / Amberishan / Brahma Pancharathram Thirumangai azhwar 5 Kms from Mayiladudurai Rlwy station
23 Chozha Thillai Thiruchithirkudam / Chidhambaram Sri Govindarajan Sri Devadhidevan / Parthasarathy Pundarikavalli East facing Kidandha kolam (Sleeping posture) {Bhoga Sayanam} Pundarika pushkarani Satvika vimanam Pannini, Pathanjali, Vyakrapadhar, Thilai moovayiravar, Kanva munivar Vaikanasam Kulasekara azhwar / Thirumangai azhwar 2 Kms from Chidhambaram Rlwy station
24 Chozha Thadaalan kovil / Sirkazhi sirama vinagaram Sri Thadaalan / Trivikaraman Sri Trivikrama Narayanan Loga Nayagi / Mattavizh kuzhali East facing Nindra kolam (Standing posture) Sanga pushkarani / Chakra theertham Pushkalavartha vimanam Astakona Mamunivar / Romeysar Vaikanasam Thirumangai azhwar 1 km from Sirkazhi Rlwy station
25 Chozha Sri Thirukudalur / Aaduthurai Perumal kovil Sri Vayangkatha perumal / Jagathrakshan / Uyyavandhar Padhmasanavalli / Pushpavalli / Padhmasini East facing Nindra kolam (Standing posture) Chakra theertham / Kaveri Sutha Satva Vimanam Nandhaka Mamunivar / Amberisan Vaikanasam Thirumangai azhwar 13 kms from Thiruvaiyaru
26 Chozha Thirukannangudi Sri Loganathan / Sri Shyamalameni perumal Sri Damodhara Narayanan Aravindhavalli Nachiyar / Loganayaki East facing Nindra kolam (Standing posture) Sravana pushkarani Uthpalavadhaka vimanam Vagula / Kayamagizh Brahma / Brugu munivar / gouthamar / chaithyar / madrar/ Ubharisaravasu Vaikanasam Thirumangai azhwar 3 kms from Kivalur Rlwy station
27 Chozha Thirukannamangai Sri Bakthavatchalar / Sri Badravi perumal Abhishekavalli / Kannamangai nayagi East facing Nindra kolam (Standing posture) Dharsna pushkarani Uthpalavadhaka vimanam Magizha maram Varunan / Romeysa munivar / Brugu munivar / 33 crores devargal Vaikanasam Thirumangai azhwar 6 kms from Thiruvarur Rlwy station
28 Chozha Kavithalam / Kapisthalam Sri Gajendravaradhan / Atrankarai Kannan Ramamanivalli / Potramaraiyal / Sengamalavalli East facing Kidandha kolam (Sleeping posture) Gajendra pushkarani / Kapila theertham kaganakruthi vimanam Hanumar / Gajendran / Kuhu alias Kandharvan Vaikanasam Thirumangai azhwar 3 Kms from Papanasam Rlwy station
29 Chozha Thiruveliyangudi / Bhargavapuri Sri Kolavilli Raman / Shirabhdhinathan Sringara Sundara perumal Maragadhavalli East facing Kidandha kolam (Sleeping posture) Sukra theertham / Brahma theertham / Indra theertham / Parasara theertham / Sukra pushkarani Pushkalavartha vimanam Kadali (Sevazhai) Sukran / Brahma / Parasarar / Indran / Brugu / Mayan / Markandeyar / Bhoomadevi Vaikanasam Thirumangai azhwar 2 kms from senganur (Near Mayiladudurai)
30 Chozha Manimada kovil / Thirunagur Narayanaperumal thirukovil Sri Naranarayanan / Sri Nandhavilakku perumal Narayanan / Alatharkku Ariyan Pundarikavalli East facing Amarndha kolam (Sitting posture) Indra Pushkarani / Rudra pushkarani / Iravadha theertham Pranava Vimanam Indran / 11 Rudrargal / Madanga Mamunivar Pancharathram Thirumangai azhwar 8 kms from Sirkazhi rlwy station
31 Chozha Vaigunda Vinnagaram / Thirunagur Vaikundhanadhar kovil Sri Vaigundanadha Perumal / Thamaraikanudayapiran Vaikundavalli East facing Amarndha kolam (Sitting posture) Lakshmi pushkarani / Udhanga puskarani / Vraja theertham / Bhujanga theertham Anantha Sathya Varthaga vimanam / Sathyavradha vimanam Ubharivasu / Udhanga mamunivar / Iravadhesvarar alia Sivan / Swathakethu King Pancharathram Thirumangai azhwar Thirunangur Vadakuvidhi (Near Sirkazhi)
32 Chozha Thiru Arimeya Vinnagaram / Thirunangur Kudamadukuthar Sri Kudamadukutha Perumal Chathurbhuja Gopalan Amrithakadavalli East facing Amarndha kolam (Sitting posture) Dhanuskodi theertham / Amritha theertham Ucha Sringa Vimanam Udhangamamunivar Pancharathram Thirumangai azhwar Refer 30th Divyadesam
33 Chozha Thirudevanaarthogai / Kizhasalai Sri Deivanayagan Madhava perumal Kadalmagal Nachiyar / Madhava Nayagi East facing Nindra kolam (Standing posture) Sopana pushkarani / Devasabha pushkarani / Devagunda pushkarani Sopana Vimanam Vashista mamunivar / Udanga munivar Pancharathram Thirumangai azhwar 2 kms from Thirunangur
34 Chozha Thiruvannpurudothomam / Thirunangur Purushothama perumal Sri Purushothaman Sri Purushothama nayagi / Pankajavalli East facing Nindra kolam (Standing posture) Thiruparkadal theertham Sanjivi vikraga vimanam / Panchagraha vimanam Ubhamanyu / Vyakrapadha munivar Pancharathram Thirumangai azhwar Refer 30th Divyadesam
35 Chozha Sempon Seikovil / Thirunangur Sempon Arangar Sri Perarulalan / Sri Damodharan Hemarangar / Sempon Arangar / Ranganathar Alimamalar Nachiyar / Sridevi / Bhoodevi East facing Nindra kolam (Standing posture) Hema pushkarani / Kanaka theertham / Nithya pushkarani Veda vimanam / Kanaka vimanam / Kanakavalli vimanam Rudran / Drudanethra munivar / Ananthan Pancharathram Thirumangai azhwar Refer 30th Divyadesam
36 Chozha Thiruthetri Ambalam / Thirunangur Pallikonda perumal Sri Sengannmal / Ranganathar / Sri Lakshmi Arangar Sengamalavalli East facing Kidandha kolam (Sleeping posture) Suriya Pushkarani / Sesha theertham Vedha Vimanam / Suruthimaya vimanam Nachiyar / Anantha azhwar Pancharathram Thirumangai azhwar Refer 30th Divyadesam
37 Chozha Thirumanikudam Thirumanikuda Nayagan / Varadharajan / Gajendra Varadhan Thirumamagal Nachiyar East facing Nindra kolam (Standing posture) Chandra pushkarani Kanaka vimanam / Prasana vimanam Garuda azhwar / Chandran Pancharathram Thirumangai azhwar 1 Kms from Thirunangur
38 Chozha Thirukavalampadi Sri Gopalakrishnan / Rajagopalan Madavaralmangai / Sengamala Nachiyar / Rukmani / Sathyabamai East facing Nindra kolam (Standing posture) Thadamalar poigai / Hemabuja pushkarani Suyambhu vimanam / Vedhamodha vimanam Rudran / Viswaksenar / Mitradevar Pancharathram Thirumangai azhwar 11 kms from Sirkazhi
39 Chozha Thiruvellakulam / Annankovil Srinivasan / Kannan / Narayanan / Annanan perumal Alarmelmangai / Padhmavathi / Poovar Thirumagal / Mahalakshmi East facing Nindra kolam (Standing posture) Thiruvellankula theertham / Svetha pushkarani Thathvarasidha vimanam / Thathvathyodhaga vimanam Svetharajan Pancharathram Thirumangai azhwar 18 kms from Sirkazhi
40 Chozha Thiruparthanpalli Sri Thamaraiyal Kelvan Parthasarathi Thamarai Nayagi West facing Nindra kolam (Standing posture) Sangaras – Ganga theertham / Katga pushkarani Narayana vimanam Arjunan / Varunan / Indran / 11 Rudras Pancharathram Thirumangai azhwar 12 kms from Sirkazhi
41 Nadu Thiruvahindhipuram / Ayindhai Sri Deivanayagan Devanathan / Divishadhnathan / Vibhudhanathan / Dasasathyan / Moovaragya Oruvan / Sthirajothi / Anakajyothi Hemambhujavalli / Vaikundanayagi / Bhargavi East facing Nindra kolam (Standing posture) Garuda nadhi / chandra theertham / Sesha theertham / Bhu theertham / Brahma theertham Chandra vimanam / Sutha sathva vimanam / chandra nirmidha vimanam Garudan / Chandran / Indran / Adhiseshan / Sivan Vaikanasam Thirumangai azhwar 5 Kms from Cuddalore
42 Nadu Thirukovalur / Koval nagar Sri Trivikraman Ayanar / Kovalan / Gopalan Poongoval nachiyar / Pushpavalli East facing Nindra kolam (Standing posture) with Right Leg measuring Akasam Pennai aru / Krishna theertham / Sukra theertham Srikara Vimanam Mahabali Chakravarthi / Mirugandu munivar / Brahma / Indran / Gukshi / Sownakar / Kasyapar / Kavalar / Kushathvajar / Poygai azhwar / Bhoodathaazhwar / Peyazhwar Vaikanasam Poygai azhwar / Bhoodathazhwar / Thirumangai azhwar Near Cuddalore
43 Pandiya Thirumaliruncholai (Kallazhagar) Sri Azhagar / Kallazhagar / Maliruncholai nambhi / Sundarabaghu / Paraman Sundaravalli East facing Nindra kolam (Standing posture) Noopura gangai / Silambaru Soma sandha vimanam Shandanam (Sandal) Malayathuvasapandiyan / Dharmadevadhai Vaikanasam Bhoodhathazhwar / Peyazhwar / Namazhwar / Periyaazhwar / Andaal / Thirumangai azhwar 19 Kms from Madurai
44 Pandiya Thirukotiyur / Thirukostiyur Sri Uraga Melanaiyaan Sowmya Narayanan Thirumamagal nachiyar East facing Kidandha kolam (Sleeping posture) Deva pushkarani / Amara pushkarani / Thiruparkadal Astanga vimanam Palamaram (Pine) Indran / Kadhamba mamunivar Vaikanasam Bhoodhathazhwar / Peyazhwar / Thirumazhisai azhwar / Periyaazhwar / Thirumangai azhwar 10 Kms from Thirupathur
45 Pandiya Thirumeyyam / Sathyagiri Sri Sathyagirinathan Meyyappan / Rajagopalan Uyyavandhal / Ujjivana thayar East facing Nindra kolam (Standing posture) Kadhamba pushkarani / Sathya theertham Sathyagiri vimanam Pala maram (Pine) and Arasamaram Sathiyadevadhaigal / Adhiseshan Vaikanasam Thirumangai azhwar 12 Kms from Pudhukottai
46 Pandiya Thirupullani a) Sri Adhi Jagannathan b) Chakravarthi Thirumagan Kalyana Jagannathan Kalyanavalli / Padhmasini a) East facing Nindra kolam (Standing posture)
b) East facing Kidandha kolam (Dharpa sayanam)
Hema pushkarani / Chakra theertham / Rathnakara samudhram Kalyana Vimanam / Swasthik vimanam Arasamaram Aswatha Narayanan / Samudhrarajan / Pullaranyamunivar Vaikanasam Thirumangai azhwar 9 Kms from Ramanathapuram
47 Pandiya Thiruthankal / Thiruthangal / Sripuram Sri Nindra Narayanan Thiruthankalappan Senkamala thayar East facing Nindra kolam (Standing posture) Papavinasa theertham Devachandra vimanam / Hamsa vimanam / Somashanda vimanam Sridevi / Chaliyapadiyan / Orupuli pandiyan / Srivallabhan Vaikanasam Bhoodhathazhwar / Thirumangai azhwar Near Virudhunagar
48 Pandiya Thirumoghur / Mohanapuram Sri Kalamega Perumal Thiurmoghur Aapthan / Aththan / Kudamadu koothan Moghurvalli / Moghanavalli / Meghalatha nachiyar East facing Nindra kolam (Standing posture) Kshirabdhi pushakarani / Thaala thamarai thadam Kethaki vimanam Vilvam Brahman / Rudran / Ajarudhran Pancharathram Nam azhwar / Thirumangai azhwar 11 Kms from Madurai
49 Pandiya Thirukoodal / Koodalazhagar Sri Koodalazhagar / Vyuga Sundararajan Maduravalli / Vagulavalli / Varagunavalli / Maragadhavalli East facing Amarndha kolam (Sitting posture) Hema pushkarani / Chakra theertham / Kruthamala / Vaigai Astanga vimanam Brughu munivar / Senakadhi mamunivargal / Periyaazhwar Vaikanasam Thirumazhisai azhwar / Thirumangai azhwar Madurai city
50 Pandiya Thiruvilliputhur Sri Vadabhadrasai Sri Rangamannar Andaal / Kodhai nachiyar East facing Kidandha kolam (Sleeping posture) Thirumukalam (Kaveri, Ganga & Yamuna) / Triveni thadakam Samsana vimanam/ Sowmiya vimanam Mandooka munivar / Periyaazhwar Vaikanasam Periya azhwar / Andaal Near Virudhunagar
51 Pandiya Thirugurukoor / Azhwar Thirunagari – Nava (nine) Thirupathi Sri Adhinathan / Adhipiran Adhinadhavalli / Gurukoorvalli East facing Nindra kolam (Standing posture) Brahma theertham / Thamirabharani Govinda vimanam Puliya maram (tamarind) Brahma / Namazhwar / Madhurakavi azhwar Pancharathram Namazhwar 25 Kms from Tirunelvelli
52 Pandiya Thiruthoolaivilli mangalam / Rettai thirupathi – Nava (nine) Thirupathi a) Sri Devapiran / Srinivasan
b) Sri Aravindarlochanan
a) Ubhaya Nachimargal
b) Garudathadankanni nachiyar
a) East facing Nindra kolam (Standing posture)
b) East facing Amarndha kolam (sitting posture)
Varuna theertham / thamirabharani Kumudha vimanam Indran / Vayu / Varunan Vaikanasam Namazhwar 3 kms Azhwar thirunagari
53 Pandiya Thirupulingudi – Nava (nine) Thirupathi Sri Kayichinavendhan / Bhoomipalar Malarmangai nachiyar / Poomagal nachiyar / Pulingudivalli East facing Kidandha kolam (Sleeping posture) Varuna theertham / Niruruthi theertham Vedha sara vimanam / sruthisara sekara vimanam Varunan / Niruruthi / Dharmarajan / Narar Vaikanasam Namazhwar Near Srivaikundam Rlwy station
54 Pandiya Thenthiruperai – Nava Thirupathi Sri Magara Nedunkuzhaikadhar / Nigaril Mughil vannan Kuzhaikadhuvalli nachiyar East facing Amarndha kolam (Sitting posture) Sukra pushkarani / Sangha theertham Bhadra vimanam Sukran / Esanya Rudran / Brahman Pancharathram Namazhwar Near Srivaikundam Rlwy station
55 Pandiya Thiruvaigundam – Nava Thirupathi Sri Vaigundanadhan / Kallapiran Vaigundavalli / Bhoodevi / Kallarpiran nachiyar East facing Nindra kolam (Standing posture) Brudhu theertham / kalasa theertham / thamirabharani Chandra vimanam Brudhu chakravarthi / Indran / Brahman / Namazhwar Pancharathram Namazhwar Near Srivaikundam Rlwy station
56 Pandiya Varagunamangai – Nava Thirupathi Sri Vijayasana perumal Varagunavalli / Varagunamangai East facing Amarndha kolam (Sitting posture) Deva pushakarani / Agni theertham / Akanasa theertham Vijayakodi vimanam Agni / Romesa munivar / Sathyavan / Vedavith Vaikanasam Namazhwar Near Srivaikundam Rlwy station
57 Pandiya Thenkulandhai / Perungulam – Nava Thirupathi Srinivasan / Mayakuthan Alarmelmangai / Kulandhavalli / Balavalli East facing Nindra kolam (Standing posture) Perungulam Anandha nilaya vimanam Devaguru Brahspathi Vaikanasam Namazhwar 11 Kms from Srivaikundam Rlwy station
58 Pandiya Thirukollur – Nava Thirupathi Sri Vaithamanidhi / Nikshabhavithan Kumudhavalli / Kollurvalli nachiyar / Pallavalli nachiyar East facing Kidandha kolam (Sleeping posture) Kubhera theertham / Thamirabharani / Nidhi theertham Srikara Vimanam Kubheran / Madhurakavi azhwar / Navanidhigal Vaikanasam Namazhwar 3 Kms from Srivaikundam Rlwy station
59 Pandiya Sirivara Mangai / Vanamamalai / Nanguneri Sri Thothadhirinathan Sri Deivanayagan Sirivaramangai / Thothadiriammai East facing Amarndha kolam (Sitting posture) Indra theertham / Setruthamarai theertham Nandhavarthana vimanam / Padhmakara vimanam Brahma / Indran / Romesa munivar / Brugu mamunivar / Markandeyar / Garudan / Urvashi / Thilothamai / Sindhanattu mannan Vaikanasam Namazhwar 29 Kms from Tirunelvelli
60 Pandiya Thirukurungudi Sri Nindra Nambi / Kurungudi nambi / Irundha nambi / Vaishnava nambi / Vaduga nambi / Kidandha nambi / Malaimel nambi / Thiruparkadal nambi Sundaraparipuranar Kurungudivalli nachiyar East facing Nindra kolam (Standing posture) Thiruparkadal / Panchathurai / Sindhu Nadhi / Anjana pushkarani Panjakedhaka vimanam / panjagraha vimanam Sivaperuman / Gajendran Vaikanasam Periazhawar / Thirumazhisai azhwar / Namazhwar / Thirumangai azhwar 42 Kms from Tirunelvelli
61 Thondai Thirukachi / Kancheepuram Sri Varadharajan / Perarulalan / Devadhirajan / Athiyuran / Devaperumal Peundevi / Mahadevi West facing Nindra kolam (Standing posture) Ananthasaras / Sesha theertham / Varaha theertham / Brahma theertham / Padma theertham / Vegavathi Punyakodi vimanam Brughu / Naradhar / Adhiseshan / Brahma / Gajendran Pancharathram Bhoodathazhwar / Peyazhwar / Thirumangai azhwar 70 Kms from Chennai
62 Thondai Thiruasttapuya karam / Chinna Kancheepuram Sri Adhikesavan / Gajendra Varadhan / Chakradarar Alarmelmangai West facing Nindra kolam (Standing posture) Gajendra pushkarani Kakanakruthi Vimanam / Chakrakruthi vimanam / Vyomagara vimanam Gajendran Pancharathram Peyazhwar / Thirumangai azhwar 1 Kms from Thirukachi
63 Thondai Thiruthanka / Vilakoli Kovil Sri Deepaprakasar / Vilakoli / Divyaprakasar Maragadhavalli West facing Nindra kolam (Standing posture) Saraswathi theertham Srikara Vimanam Saraswathi Vaikanasam Thirumangai azhwar 2 Kms from Thirukachi
64 Thondai Thiruvellukai / Chinna Kancheepuram Sri Ayagiya Singhar / Mukundha Nayagan Velukaivalli / Amrudhavalli East facing Amarndha kolam (Sitting posture) Kanaka saras / Hema saras Kanaka vimanam Brugu Munivar Vaikanasam Peyazhwar / Thirumangai azhwar 3 Kms from Thirukachi
65 Thondai Thirupadakam / Periya Kancheepuram Sri Pandavadoodhar Rukmani / Sathyabama East facing Amarndha kolam (Sitting posture) Matsya theertham Vedhakodi vimanam / Bhadra vimanam Janameyan / Haritha munivar / Arjunan Pancharathram Bhoodathazhwar / Peyazhwar / Thirumazhisai azhwar / Namazhwar / Thirumangai azhwar Periya Kancheepuram
66 Thondai Thiruneeragam / Periya Kancheepuram Sri Trivikraman / Ulagaalandha perumal Jagadeesha perumal Nilamangaivalli West facing Nindra kolam (Standing posture) Akrura theertham Jagadeeswara vimanam Akrurar Vaikanasam Thirumangai azhwar Inside Ulagaalandhan Perumal Kovil
67 Thondai Nilathingal Thoondathan / Periya Kancheepuram Sri Nilathingal Thoondathan / Chandrasoodar Ner Oruvar Illa Valli / Nilathingal thoodathal West facing Nindra kolam (Standing posture) Chandra pushkarani Purushasuktha vimanam / Surya vimanam Sivan / Parvathi No Vainava agamam since inside Sivan koil Thirumangai azhwar Inside Ekampareswarar Koil
68 Thondai Thiru Uragam / Periya Kancheepuram Sri Trivikraman / Ulagaalandha perumal Peragathan Amudhavalli nachiyar / Amruthavalli nachiyar West facing Nindra kolam (Standing posture) Naga theertham / Sesha theertham Sara Srikara vimanam Adhiseshan Vaikanasam Thirumazhisai azhwar / Thirumangai azhwar Inside Ulagaalandhan Perumal Koil
69 Thondai Thiruvekka / Chinna Kancheepuram Sri Yathothkari / Sonna Vannam Seidha peruma / Vega Sethu Komalavalli West facing Kidandha kolam (Sleeping posture) Poigai pushkarani Vedha Sara vimanam Brahma / Poigai azhwar / Thirumazhisai azhwar / Kannikannan Pancharathram Poigai azhwar / Peya azhwar / Thirumazhisai azhwar / Nam azhwar / Thirumangai azhwar 1 Kms from Thirukachi
70 Thondai Thirukaragam / Periya Kancheepuram Sri Trivikraman / Ulagaalandha perumal Karunakaran / Karagathan Padmasini nachiyar West facing Nindra kolam (Standing posture) Ambarisha saras / Akkarayu theertham Vaman Vimanam / Ramya Vimanam Karaga Maharishi / Meganikethanarishi Vaikanasam Thirumangai azhwar Inside Ulagaalandhan Perumal Kovil
71 Thondai Thirukarvanam / Periya Kancheepuram Sri Trivikraman / Ulagaalandha perumal Kalvar / Navaneethasoran / Vennai Unda Kalvan Kamalvalli / Thamaraiyal West facing Nindra kolam (Standing posture) Gowrithadakam / Tharathara theertham Pushkala vimanam Gowri / Mahabali / Aswathama / Kargiya munivar Vaikanasam Thirumangai azhwar Inside Ulagaalandhan Perumal Kovil
72 Thondai Thirukalvanur / Periya Kancheepuram Sri Adhivaragar Anjalaivalli / Abahaya nachiyar West facing Nindra kolam (Standing posture) Nithiya pushkarani Vamana vimanam Aswatha Narayanan / Parvathi / Thirumagal No Vainava agamam since inside Amman koil Thirumangai azhwar Inside Kamakshiamman Kovil
73 Thondai Thirupavalavannan / Periya Kancheepuram Sri Pavalavannan Pavalavalli West facing Amarndha kolam (Sitting posture) Chakra theertham Pavala vimanam Parvathi / Brughu / Aswini Devadaigal Vaikanasam Thirumangai azhwar 1 Kms Kanchi Rlwy station
74 Thondai Thiruparameswara Vinnagaram / Periya Kancheepuram Sri Paramapadhanathan / Vaigundanathan Viagundavalli West facing Amarndha kolam (Sitting posture) Iramadha theertham Mukundha vimanam Pallavamannan Vaikanasam Thirumangai azhwar 0.5 Kms Kanchi Rlwy station
75 Thondai Thiruputkuzhi / Chettisathiram Sri Vijayaraghavan / Agavapungavan Maragadhavalli East facing Amarndha kolam (Sitting posture) Jadayu Theertham Vijayakodi vimanam Jadayu Vaikanasam Thirumangai azhwar 11 kms from Kanchi
76 Thondai Thirunindravur / Thinnanur Sri Bakthavatchalar / Sri Badravi perumal Sudhavalli / Ennai Petra Thayar East facing Nindra kolam (Standing posture) Varuna pushkarani / Vrudhakshira pushkarani / Palaru Uthpala Vimanam / Srinivasa Vimanam Varunan / Samudrarajan Pancharathram Thirumangai azhwar 1.5 kms from Thirunindravur Rlwy station
77 Thondai Thiruevalur / Thiruvallur Sri Veeraraghavar / Evvul Kidhandhan / Vaidyaveeraraghavan Kanakavalli / Vasumathi East facing Kidandha kolam (Sleeping posture) Hruthapa Vinasa pushkarani Vijayakodi vimanam Salihothra Mamunivar Pancharathram Thirumazhisai azhwar / Thirumangai azhwar 40 Kms from Chennai
78 Thondai Thiruneermalai a) Sri Neervanan / Nilamugilvanan
b) SanthaNrusimhar
c) Trivikraman
d) Ranganathar
a) Annimamalar mangai
d) Ranganayaki
a) East facing Nindra kolam (Standing posture)
b) East facing Amarndha kolam (Sitting posture)
c) East facing Nadandha kolam (Walking posture)
d) South facing Kidandha kolam (Sleeping posture – Manikka sayanam)
Mannikarnika thadagam / Shira pushkarani / Karunya pushkarani / Siddha pushkarani / Swarna pushkarani Thoyagiri vimanam / Niradhri vimanam Veppalai Thondaiman / Brughu / Markendayar / Valmiki Vaikanasam Bhoodathazhwar / Thirumangai azhwar 5 Kms from Pallavaram Rlwy station (Near Chennai)
79 Thondai Thiruvidavendhai / Thirvidandhai Sri Lakshmi Varahar Nithyakalyana perumal Komalavalli nachiyar East facing Nindra kolam (Standing posture) Kalayana theertham / Varaha theertham Kalyana vimanam Punnai Markandeyar / Mahabali / Kalavamamunivar Vaikanasam Thirumangai azhwar 40 Kms from Chennai (on the way to Mahabalipuram)
80 Thondai Thirukadalmallai / Mahabalipuram / Mammallapuram Sri Thalasayana Perumal Thalasayanathu Uraivar / Ulagu Uyya Nindran Nilamangai thayar East facing Kidandha kolam (Sleeping posture) Pundarika pushkarani / Garudanathi Kakanakruthi Vimanam / Anantha vimanam Pundarika Mamunivar Vaikanasam Bhoodathazhwar / Thirumangai azhwar 65 Kms from Chennai
81 Thondai Thiruvallikeni / Triplicane a) Sri Venkatakrishnan
b) Sri Ranganathar
c) Chakravarthi Thirumagan
d) Sri Varadharajar
e) Sri Thelliyasingar
Parthasarathi a) Rukmani
b) Vedhavalli
c) Sita
a) East facing Nindra kolam (Standing posture)
b) East facing Kidandha kolam (Sleeping posture)
c) South facing Nindra kolam (Standing posture)
d) East facing Amarndha kolam on Garudan (Sitting posture)
e) West facing Amarndha kolam (Sitting posture)
Kairavini saras / Indra theertham / Soma theertham / Meena theertham / Agni theertham / Vishnu theertham Anandha vimanam / Pranava vimanam / Pushpaka vimanam / Sesha Vimanam / Deiviga vimanam a) Sumathi / Thondaiman / Arjunan / Rukmani
b) Madhuman
c) Saptharomar
d) Athri Mamunivar / Jabali Mamunivar
e) Brughu / Markandeyar
Vaikanasam Peyazhwar / Thirumazhisai azhwar / Thirumangai azhwar 4 Kms from Chennai Central Rlwy station
82 Thondai Thirukadigai / Sholingur Sri Yoga Nrusimhar / Akkarakani Thakkan / Bhakthavatsala perumal Amruthavalli East facing Amarndha kolam (Sitting posture) Amrutha theertham / Thakkan kulam / Pandava theertham Simha Kostakruthi vimanam / Simhakra vimanam Hanumar / Saptha Rishigal Vaikanasam Peyazhwar / Nam azhwar / Thirumangai azhwar 14 Kms from Sholingur Rlwy station
83 Malai Thiruvanandhapuram / Ananthapuranagar Sri Ananthapadmanabhan Hari Lakshmi East facing kidandha kolam (Sleeping posture) – Bhujanga sayanam Matsya / Padma / Varaha theerthangal Hemakuda vimanam 11 Rudras / Chandran / Indran / Divakara munivar / Vilvamangala swamigal Thandra Samusayam Nam azhwar 2 Kms Tvpuram Rlwy station
84 Malai Thiruvanparisaram / Thiruparisaram / Thiruvannpadhisaram Thirukuralappan / Thiruvazhmarbhan Kamalavalli East facing Vitrurirndha Kolam (Sitting Posture) Soma theertham / Lakshmi theertham Indrakalyana vimanam Thirumagal / Kari / Udayanangai / Garudan / Saptharishigal (7 sages) Thandra Samusayam Nam azhwar 4 Kms between Nagercoil and Tirunalveli route
85 Malai Thirukatkarai Sri Katkaraiappan Vatsyavalyavalli nachiyar / Perunjselva nayagi West facing Nindra kolam (Standing posture) Kapila theertham Pushkala vimanam Kapilamamunivar Thandra Samusayam Nam azhwar 11 Kms from Ernakulam
86 Malai Thirumuzhikalam Thirumuzhikalathan / Sri Sukthinathan Madhuraveni nachiyar East facing Nindra kolam (Standing posture) Sanga theertham / Sukthi theertham / Perungulam / Sitraru Soundarya vimanam / Sundara vimanam Harithama munivar / Devarishigal Thandra Samusayam Nam azhwar / Thirumangai azhwar 5 Kms from Angamali Rlwy station
87 Malai Thirupuliyur (Linked to Pancha pandavas – Bheeman) Sri Mayapiran Porkodi nachiyar East facing Nindra kolam (Standing posture) Pragnya saras theertham / Punjsunai theertham Purushothama vimanam / Purushasuktha vimanam Saptharishigal (7 Sages) Thandra Samusayam Nam azhwar / Thirumangai azhwar 6 kms from Senganur Rlwy station
88 Malai Thirusengundrur / Senganur (Linked to Pancha pandavas Dharmar) Sri Imayavarappan Senkamalavalli / Swarnavalli West facing Nindra kolam (Standing posture) Sanga theertham / Thirussitraru Jagajothi vimanam Rudran Thandra Samusayam Nam azhwar 48 Kms from Kottarakara Rlwy station
89 Malai Thirunavai Sri Navaimkundan / Sri Narayanan Malarmangai East facing Nindra kolam (Standing posture) Senkamala saras / Kamalathatakam Veda vimanam Thirumagal / Gajendran / Nava Yogigal (9 yogis) Thandra Samusayam Nam azhwar / Thirumangai azhwar 2 Kms from Thirunavai Rlwy station
90 Malai Thiruvallavazh / Thiruvalla Sri Kolapiran / Thiruvazhmarbhan / Sri Vallabhan / Alangarpiran Selvathirukozhundhu nachiyar / Vatsalyadevi East facing Nindra kolam (Standing posture) Kandakarna theertham / Pamba nadhi Sathuranga kola vimanam Kandakarnan / Sankara mangalathu ammai Thandra Samusayam Nam azhwar / Thirumangai azhwar Kollam to Ernakulam Route
91 Malai Thiruvanvandur / Thiruvamandur (Linked to Pancha pandavas Nakulan) Sri Pambanaiappan / Kamalanathan Kamalavalli West facing Nindra kolam (Standing posture) Papanasa theertham / Pambha theertham Vedalaya vimanam / Sakalaveda vimanam Markandeyar / Naradhar Thandra Samusayam Nam azhwar 5 kms from Thirupulliyur
92 Malai Thiruvaattaru / Thiruvattar Sri Adhikesavan Maragadhavalli West facing Kidandha kolam (Sleeping posture) Kadalvai theertham / Vattaru / Rama theertham Astanga vimanam / Astakshara vimanam Parasuramar / Chandran Thandra Samusayam Nam azhwar Nagercoil to Thiruvanandhapuram
93 Malai Thiruvithuvakkodu (Linked to all Pancha pandavas) Sri Uyyavandhan / Abhayapradhanan Vithuvakkottu valli / Padmapani nachiyar West facing Nindra kolam (Standing posture) Sukra theertham Thathuva Kanchana vimanam Ambarishan Thandra Samusayam Kulasekara azhwar 5 kms from Pattambi Rlwy station
94 Malai Thirukadithanam / Thirukodithanam (Linked to Pancha pandavas Saghadevan) Sri Amrudhanarayanan / Adhpudhanarayanan Karpagavalli East facing Nindra kolam (Standing posture) Bhumi theertham Puniyakodi vimanam Rukmanga mannan / Devaragal Thandra Samusayam Nam azhwar 1 Kms from Thiruvalla
95 Malai Thiruvaranvilai / Aranmula (Linked to Pancha pandavas Arjunan) Thirukuralappan / Pambanaiappan / Seshasanar Padmasini nachiyar North facing Nindra kolam (Standing posture) Vedavyasa saras / Pamba theertham / Vyasa theertham Vamana vimanam Brahma / Vedavyasar / Arjunan Thandra Samusayam Nam azhwar 7 Kms from Thirusengundrur
96 Vada Thiruvenkadam / Tirupathi a) Sri Govindarajan – Kizh Tirupathi
b) Srinivasan / Ezhumalaiyan / Balaji / Thirvenkadamudayan / Venkatasalapathi / Venkadanathan – Mel Tirupathi
Kalyana Venkateswarar a) Pundarika valli
b) Padmavathi thayar / Alarmel mangai
a) East facing Kidandha kolam (Sleeping posture)
b) East facing Nindra kolam (Standing posture)
Swami pushkarani / Seshachala swami theertham (varaha theertham) / Vaikunda theertham / Akasaganga Anandanilaya vimanam Thondaiman chakravarthi / Sanmugan Vaikanasam All Azhwars excepting Madhurakavi azhwar & Thondaradipodi azhwar 11 Kms from Renigunda Rlwy station
97 Vada Singavel Kundram / Ahobilam Sri Ahobila Narasimhar / Prakaladha varadhan / Nava (9) Nrusimhar namely, Jwala, Ahobila, Malola, Kroda, Karancha, Bargava Yogananda, Chatravada, Pavana 9 Utsava Murthi including Malola Nrusimhar Lakshmi / Amrudhavalli / Senjulakshmi East facing Amarandha kolam (Sitting posture) Bhavanasini theertham / Papavinasa theertham / Baragava theertham / Indra theertham / Nrusimha theertham / Gaja theertham Kugai vimanam / Kurugai vimanam Garudan / Prakaladhan Pancharathram Thirumangai azhwar 145 Kms from Kadappa Rlwy station
98 Vada Thiru Ayodhi / Ayodhya Sriraman / Chakravarthi Thirumagan / Raghunayagan Sitapiratti North facing Amarndha kolam (Sitting posture) Paramapadha sathya theertham / Charayu nadhi Pushkala vimanam / pushpaka vimanam Bharadan / Devas / Mamunivargal Nam azhwar / Kulasekara azhwar / Periya azhwar / Thondaradipodi azhwar / Thirumangai azhwar 5 kms from Faisabad Rlwy station
99 Vada Thirunaimisaranyam / Nimsar Sri Devarajan / Sri Hari Sri Harilakshmi / Pundarikavalli East facing Nindra kolam (Standing posture) Chakra theertham / Komuki nadhi / Gomathi theertham / Divyavisranthi theertham Sri Hari vimanam Indran / Sukran / Chandran / Devarishi / Vedavyasar / Suthapuranikar Thirumangai azhwar 3 kms from Naimisaranyam Rlwy stations
100 Vada Thirusalagramam Sri Murthi Sridevi nachiyar North facing Nindra kolam (Standing posture) Chakra theertham / Kandaki Nadhi Kanaka vimanam / Kakana vimanam Brahma / Rudran / Kandaki Periya azhwar / Thirumangai azhwar 128 Kms from Kathmandu (Nepal)
101 Vada Thirubadariyasramam / Badrinath Sri Badrinarayanan Aravindhavalli East facing Amarandha kolam (Sitting posture) Thapthakunda theertham Thapthakanchana vimanam Badri Vruksham (Ilandhai maram) Naran Periya azhwar / Thirumangai azhwar 275 Kms from Haridwar
102 Vada Thirukandam Kadinagar / Devaprayag Sri Neelamegan / Purushothaman Pundarikavalli East facing Nindra kolam (Standing posture) Mangala theertham / Aadhi ganga Mangala vimanam Bharadwaja munivar / Brahma Periya azhwar 93 Kms from Haridwar
103 Vada Thirupiridhi / Joshimutt Sri Paramapurushan Parimalavalli East facing Kidandha kolam (Sleeping posture) Indra theertham / Govardhana theertham / Manasasaras Govaradhana vimanam Parvathi Thirumangai azhwar 170 Kms from Devaprayag
104 Vada Thiruvadamadurai / Madura Sri Govardhanesan / Balakrishnan Sathiyabhama nachiyar East facing Nindra kolam (Standing posture) Indra theertham / Govardhana theertham / Yamuna Govaradhana vimanam Vasudevar / Devaki / Indran Nam Azhwar / Periya azhwar / Andaal / Thondaradipodi azhwar / Thirumangai azhwar 3 Kms from Madura Rlwy Station
105 Vada Thirudwarakai / Dwaraka Sri Kalyana Narayanan / Dwarakadeesan / Dwarakanathji Kalyananachiyar / Lakshmi / Rukmani West facing Nindra kolam (Standing posture) Gomathi nadhi Hemakuda vimanam Panchali (Draupathi) Thirumazhisai azhwar / Nam Azhwar / Periya azhwar / Andaal / Thirumangai azhwar 2 kms from Dwaraka Rlwy station
106 Vada Thiruvaipadi / Gokulam Sri Navamogana Krishnan Rukmani / Sathyabama East facing Nindra kolam (Standing posture) Yamuna Hemakuda vimanam Nandhakopar Periya azhwar / Andaal / Thirumangai azhwar 6 Kms from Madura Rlwy station
107 Vada Thiruparkadal / Kshirabdhi / Vyugam Sri Kshirabdhinathan Sri Bhudevi / Kadalmagal nachiyar / Kshirabdhi nachiyar South facing Kidandha kolam (Sleeping posture) Amrudha theertham / Thiruparkadal Astanga vimanam Brahma / Rudran / Devargal All azhwars excepting Madurakavi azhwar & Thirupana azhwar Parkadal
108 Vada Thiruparamapadham / Thirunadu / Vaigundam / Paramapadham / Nitya Vibudhi Sri Paramapadhanathan / Sri Paravasudevan Periyapirattiyaar South facing Amarndha kolam (Sitting posture) Virajanadhi / Ayiramadha pushkarani Ananthanga vimanam Adhiseshan / Garudan / Viswaksenar / Nithyasurigal / Mukthargal Poigai azhwar / Peya azhwar / Thirumazhisai azhwar / Nam azhwar / Periya azhwar / Andaal / Thirupana azhwar / Thirumangai azhwar Parama padham

ஸ்ரீ திவ்ய தேசங்கள்–ஸ்ரீ ப்ரஹ்மோத்ஸவம்

May 29, 2024

ஸ்ரீமத்பாகவதம் 11ஆம் காண்டம் 5ம் அத்யாயத்தில் கரபஜன மஹரிஷி, நிமி மஹாராஜனுக்கு கலியுகத்தில்-

க்ருதாதிஷு ப்ரஜா ராஜன் கலாவ் இச்சந்தி ஸம்பவம் |
கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண-பராயணா: |
க்வசித் க்வசின் மஹா-ராஜ த்ரவிடேஷு ச பூரிஷ: || 38.

தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்வினீ |
காவேரீ ச மஹா-புண்யா ப்ரதீசீ ச மஹாநதீ ||39.

யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேஷ்வர |
ப்ராயோ பக்தா பகவதி வாஸுதேவே(அ)மலாஷயா: || 40

தாமிரபரணி – நம்மாழ்வார், மதுரகவிகள்
வைகை – பெரியாழ்வார், ஆண்டாள்
பாலாறு – பொய்கை, பேயாழ்வார்,பூதத்தாழ்வார்
பேரியாறு – திருமழிசை
காவிரி – தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்.

திவ்யமான மங்கள அர்ச்சாரூபம் -திவ்ய பிரபந்தமாகிய மங்களாசாசன பா மாலையால் கட்டுண்டு
திவ்யதேசமாகி நித்ய சம்சாரிகளான நம்மை நித்ய முக்தர்களுக்குள் ஒரு கோவையாக்கி வைக்கும் –

கோயில் பெருமாள் -அருளிச்செயல் -மூன்றும் திவ்யம் மூன்று பாத அஷ்டாக்ஷம் போலே –
க்ஷேத்ரம் -வனம் -நதி -சிந்து -புரம் -புஷ்கரணி -ததா -விமானம் சப்த புண்யஞ்ச யாத்ரா தேச -என்றபடி
திவ்ய பிரபந்தத்துடன் திரு அஷ்டாக்ஷரம் போலே -அஷ்ட திவ்யம் –

நாராயண மந்திரம் எனப்படும் திருமந்திரம் எட்டெழுத்துக்களால்
(எட்டிழைகளால் ஆனது) இந்த திவ்ய தேசங்களும் சப்த புண்யங்கள்
எனப்படும்.

ஏழு புண்யங்களுடன், ஆழ்வார்களின் மங்களாசாசனத்தையும் சேர்த்து எட்டெழுத்தான திருமந்திரத்தின் சக்தியைப் பெற்று அஷ்டாச்சர
மந்திரத்தின் பலனைத் தரக்கூடிய ஸ்தலங்களாக அமைகிறது.

ஏழு புண்ணியங்களானவை
1-க்ஷேத்ரம்
2-வனம்
3-நதி
4-ஸிந்து
5-புரம்
6-புஷ்கரணி
ததா
7-விமானம்
ஸப்த புண்யஞ்ச யத்ர தேச 

இவ்வேழு புண்ணியங்களும் ஒருங்கே அமையப் பெற்று ஆழ்வார்களின்
மங்களாசாசனமும் ஒரு தலத்திற்கு அமையுமாயின் அது அஷ்டாச்சர மந்திரம்
நிலை பெற்ற இடமாகும். . இவ்விதம் இந்தியாவில்
ஆழ்வார்கள் பன்னிருவரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள் -108.

—————

ஸ்ரீ திவ்ய தேசங்கள்–நின்ற -திருக்கோலம் 67–இருந்த திருக்கோலம் -17- சயன திருக்கோலம் -24

நின்ற திருக் கோலங்களில் -67
கிழக்கு 39-
மேற்கு -12
தெற்கு 14
வடக்கு -2

இருந்த திருக் கோலங்கள் -17–
கிழக்கு -13
மேற்கு –
தெற்கு
வடக்கு –

சயனம் திருக் கோலங்கள் -24–
கிழக்கு -18
மேற்கு 3
தெற்கு 3
வடக்கு சயனம் இல்லை –

24 சயனம் திருக் கோலம் -புஜங்க சயனம் -போகி சயனம் -ஆதி சேஷன் மடியில் – -ஸ்ரீ ரெங்கம்-பாம்பணை சயனம்திரு மெய்யம் 
உத்யோக சயனம் உத்தான அர்த்த சயனம் -ஆராவமுதன் -கிடந்த வாறு எழுந்து இருந்து
சிறு புலியூர் -சல சயனம் -பால சயனம் கிருபா சமுத்திரம்
போக சயனம் -தில்லை நகர் சித்ர கூடம்
வீர சயனம் -சங்கு சக்கரம் இடம் பரிமள ரெங்க நாதன் இந்தளூர்
மாணிக்க சயனம் திரு நீர்மலை –
திருப் புல்லாணி தர்ப சயனம்
திருக் கடல் மல்லை -ஸ்தல சயனம்-திருமோகூர் – பிரார்த்தனா சயனம்
வட பத்ர சாயி -வட பெரும் கோயிலுடையான்
அனந்த சயனம் தாளும் தோளும் -சமன் இல்லா பரப்பி –

ஜல சயனம் / தல சயனம் / புஜங்க சயனம் -சேஷ சயனம் /உத்தியோக சயனம் /வீர சயனம் /போக சயனம் /
தர்ப்ப சயனம் /பத்ர -ஆலிலை -சயனம் /மாணிக்க சயனம் /உத்தான சயனம்

பல திருக் கோயில்களில் இருக்கும் எம்பெருமான்கள் ஒவ்வொரு விதமாக தம் திருக் கரங்களை வைத்துக் கொண்டு இருப்பார்கள்.

இவற்றை ஹஸ்தம் என்று வழங்குவர். பலவகை ஹஸ்தங்களில் மிகவும் பரவலானவை சில-

1. அபய ஹஸ்தம்
2. வரத ஹஸ்தம்
3. ஆஹ்வான ஹஸ்தம்-பெருமாள் தன் வலது அல்லது இடது திருக்கரத்தின் ஆள்காட்டி விரலை சற்று மடக்கி நம்மை நோக்கி வைத்திருப்பார்.
இதன் பொருள், “அவர் நம்மை அருகில் வா நான் ரக்ஷிக்கிறேன் ” என்பதாகும்.

ஊரு ஹஸ்தம் – இறைவனின் கையானது தொடையில் வைத்தபடி இருக்கும். ஊரு என்றால் தொடை என்று பொருளாகும்.

ஸ்வயம் வ்யக்த ஸ்தலம் / ஆர்ஷம் -ரிஷிகளால் /பவ்ராணிகம்-புராணங்களில் விரித்து உரைக்கப்பட்டவை /
தைவதம் -பிரம்மாதி தேவர்களால் / மாணவன் -மன்னர்கள் அடியார்களால் –
ஆச்சார்யர்களால் அபிமானிக்கப்பட்ட ஸ்தலங்களும் உண்டு –

108 திவ்யதேசங்களில் 96 வகையான விமானங்கள்
வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகம சாஸ்திரத்தில் கூறப்பட்ட இவ்வனைத்து
விமானங்களும் முக்கியமானவைகள்தான் என்றாலும் கீழ்க்கண்டவைகளை மிக
முக்கியமானவைகள் என்று சொல்லலாம்.

1. ப்ரண வாக்குருதி விமானம் 

2. விமலாக்குருதி விமானம்  

3. சுத்தஸ்த்வ விமானம்      

4. தாரக விமானம்

5. சுகநாக்ருதி விமானம்      

6. வைதிக விமானம்  

7. உத்பலா விமானம்        

8. சௌந்தர்ய விமானம்

9. புஷ்கலாவர்த்த விமானம்   

10. வேதசக்ர விமானம்  

11. சஞ்சீவி விக்ரஹ விமானம்  

12. அஷ்டாங்க விமானம்
13. புண்யகோடி விமானம்     

14. ஸ்ரீகர விமானம்      

15. ரம்ய விமானம்   

16. முகுந்த விமானம்- 

17. விஜய கோடி விமானம்

18. சிம்மாக்கர விமானம்      

19. தப்த காஞ்சன விமானம்

20. ஹேமகூட விமானம்

இதில் அஷ்டாங்க விமானம் என்பது பரமபதத்தில் அமைந்துள்ள விமானத்தின் அமைப்பேயாகும் என்பதும்,
ப்ராண வாக்ருதி விமானம் என்பது தேவர்கள் அமைத்து தொழும் தலங்களில் உள்ள விமானத்தின் அமைப்பு எனவும், ஆகமம் கூறிப் போகிறது.

———
ஈர் இருபதாம் சோழம் ஈர் ஒன்பதாம் பாண்டி
ஓர் பதிமூன்றாம் மலை நாடு ஓர் ஈர் இரண்டாம் சீர் நாடு நாடு
ஆறோடு ஈர் எட்டுத் தொண்டை அவ்வட நாடு ஆறிரண்டு கூறும் திருநாடு ஒன்றாகக் கொள்

பொய்கையார் -6-/ பூதத்தார் -13-/ பேயார் -15-/திருமழிசையார் -17-/ நம்மாழ்வார் -37-/குலசேகரர் -9-/
பெரியாழ்வார் -18-/ ஆண்டாள் -11-/ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-/ திருப்பாணாழ்வார் -3-/
திருமங்கை ஆழ்வார் -86-திவ்ய தேசங்களுக்கு மங்களா சாசனம் –

11-ஆழ்வார்கள் –திருவரங்கம் –
9-ஆழ்வார்கள் -திருமலையும் திருப்பாற் கடலும் –
8-ஆழ்வார்கள்–பரமபதம் –
7-ஆழ்வார்கள் –திருக்குடந்தை –
6-ஆழ்வார்கள் –திருமாலிருஞ்சோலை –
5-ஆழ்வார்கள்-6-திவ்ய தேசங்கள்-திரு அயோத்தியை-திருக் கண்ணபுரம்–திருக் கோட்டியூர்-திருத் துவாரகை-திரு வடமதுரை-திருக் கோவர்த்தனம்-திரு விருந்தாவனம்-திரு வெக்கா
4-ஆழ்வார்கள்-3-திவ்ய தேசங்கள் –திருக்குறுங்குடி-திருப்பாடகம்–திருப்பேர் நகர்
3-ஆழ்வார்கள் -5-திவ்ய தேசங்கள் –திரு அத்திகிரி-திரு வல்லிக் கேணி-திரு ஆய்ப்பாடி–திருக் கோவலூர்-திரு விண்ணகர்
2-ஆழ்வார்கள்-21-திவ்ய தேசங்கள்-திரு அட்டபுயகரம் /திருவாலி –/திரு ஊரகம் /திருக்கடிகை /திரு எவ்வுள்ளூர் –திருக் கடல் மல்லை –திரு சாளக்கிராமம் -திருச் சித்ர கூடம் –திரு தஞ்சை –-திருத் தண் கால் –திரு நாவாய் –திரு மோகூர் திரு பதரி -திரு வல்ல வாழ் -ஸ்ரீ வில்லிபுத்தூர் -திரு வெள்ளறை –திரு வேளுக்கை –
1–ஆழ்வார்-67-திவ்ய தேசங்கள்–இவற்றுள் –
கலியன் மட்டும்–47-திவ்ய தேசங்கள் –
நம்மாழ்வார் மட்டும் -16-திவ்ய தேசங்கள்-
திருமழிசை ஆழ்வார் -2- அன்பில் கபிஸ்தலம்
பெரியாழ்வார் -1-கண்டம் என்னும் கடி நகர்
குலசேகரர் -1–திருவித்துவக்கோடு

பொய்கையார் -6-/ பூதத்தார் -13-/ பேயார்-15-/திருமழிசையார் -17-/நம்மாழ்வார் -37-/ குலசேகர பெருமாள் -9-/
பெரியாழ்வார் -18-/ ஆண்டாள் -11-/தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-/ பாணனார் -3-/ திருமங்கை -86-

ஒரே பாசுரம் மங்களா சாசனம் -14-திவ்ய தேசங்கள்
இரண்டு பாசுரங்கள் மங்களா சாசனம் -7-திவ்ய தேசங்கள்
ஸ்ரீ வைகுண்டம் –/ திண்ணனூர் / திருப் புட் குழி/ திருத் தண்கா-திருத் தூப்புல் உறையூர் /
ஸ்ரீ வில்லிபுத்தூர் /திருத் தலைச் சங்க நாண் மதியம்

ஐம்பதுக்கு மேல் பட்ட பாசுரங்கள் மங்களாசாசனம் -7-திவ்ய தேசங்கள்
திருப்பாற் கடல் -51-/திருக்குடந்தை -51-திருமாலிருஞ்சோலை -128-/ திருக்கண்ணபுரம் -128-/
திரு நறையூர் -110-/ திருவேங்கடம் -202-/திருவரங்கம் -247-

எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள்
ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ வேங்கடாத்ரிச்ச ஸ்ரீ முஷ்ணம் ஸ்ரீ தோதபர்வதம் ஸ்ரீ ஸாளக்ராமம் ஸ்ரீ புஷ்கரம் ஸ்ரீ நரநாராயணாச்ரமம் ஸ்ரீ நைமிஷம்
சேதி மே ஸ்தானானி அஸௌ முக்தி ப்ரதானி வையே து அஷ்டாக்ஷர ஏகைக: வர்ணமூர்த்தி: வஸாமி அஹம்”என்ற
ஸ்ரீ புராண ஸ்லோகம் கூறும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகிய

1. ஸ்ரீரங்கம்
2. ஸ்ரீ திருவேங்கடம்
3. ஸ்ரீமுஷ்ணம்
4. ஸ்ரீ நாங்குநேரி
5. ஸ்ரீ முக்திநாத்
6. ஸ்ரீ புஷ்கரம்
7. ஸ்ரீ பத்ரிநாத்
8. ஸ்ரீ நைமிசாரண்யம்

அயோத்தி, மதுரா, மாயா (ஹரித்வார்), காசி (வாரணாசி), காஞ்சி (காஞ்சிபுரம்), அவந்திகா (உஜ்ஜைன்) மற்றும் துவாரவதி (துவாரகா);

இந்த புனித ஷேத்ரங்களை ஒரு ஸ்லோகம் மூலம் கூறலாம்:

“அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா த்வராவதி சைவ ஸப்தைத மோக்ஷ தாயகா::”

புராண ஸ்தலங்கள் -20-/ அபிமான ஸ்தலங்கள் -29-

————–

அ காரம் நடுவில் உ காரமும்  ம காரமும் ஏக சிம்காசனம் -பொன்னும் முத்தும் மாணிக்கமும் –
அணி புதுவை தண்  தெரியல்
–ஸ்ரீ மிதிலை பிறந்து ஸ்ரீ அயோதியை புகுந்தாள்
ஸ்ரீ நப்பின்னை கும்பன்  இடம் பிறந்து –ஸ்ரீ ஆய்ப்பாடி புகுந்தாள்  
ஸ்ரீஆண்டாளோ பிறந்த புகுந்த இடம் இது -ஸ்ரீ நாச்சியார் திரு மாளிகை —
ஸ்ரீ விஷ்ணு சித்தர்–மார்பம் என்பதோர் கோவில் அமைத்து -மாதவன் என்பதோர் தெய்வம் நாட்டி-ஆர்வம் என்ற  ஓர் பூவை சேர்த்து–

‘மன்னாருக்கு தொடை அழகு’ என்பர். ஆண்டாளின் மாலையை (தொடை மாலை) அணிந்து கொண்டு அவர் காட்சி அளிப்பது உலகப் பிரசித்தம்.

தான் அணிந்து கொண்ட பூமாலையுடன், கோதை இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொள்வது வழக்கமாம்.
அதனால் இங்குள்ள கிணறு ‘கண்ணாடிக் கிணறு’ என அழைக்கப்படுகிறது.

ஆண்டாளின் கிளிக்குச் சொல்லப்படும் கதை:
ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும்,
தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க,
சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார் என்றும்,
அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.

இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது.
கிளி மூக்கு- மாதுளம் பூ;
மரவல்லி இலை- கிளியின் உடல்;
இறக்கைகள்- நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்;
கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்;
கட்டுவதற்கு வாழை நார்;
கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன்.
இப்படித் தயாராகிறது ஆண்டாள் கிளி. இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறது.

திருவிழாவின்போது ஆண்டாள் தைலம் தயாரிக்கப்பட்டு ஆண்டா ளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்தப்படுகிறது.
நல்லெண்ணெய், பசும் பால், தாழம்பூ, நெல்லிக்காய், இளநீர் போன்றவற்றுடன் சுமார் 61 மூலிகைகளை உள்ளடக்கிய
இந்தத் தைலத்தைக் காய்ச்ச 40 நாட்கள் ஆகின்றன.
இரண்டு பேரால் காய்ச்சப்படும் இதன் கொள்ளளவு சுமார் 7 படி.
இதை ‘சர்வ ரோக நிவாரணி’ என்பர்.
சித்திரையில் நெசவாளர் தரும் புடவையை ஆண்டாளுக்குச் சாற்றுவர். அன்று, நெசவாளர்கள் ஆண்டாளை சேவிப்பர்.
சித்ரா பௌர்ணமி அன்று வாழைக்குளத் தெருவில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில், நெசவாளர்கள் வந்து தொழுவர்.

மற்றும் எண்ணெய்க் காப்பு உற்சவத்தின் போது ஸ்ரீஆண்டாள், தினமும் காலையில்,
பல பெருமாள்களின் திருக்கோலத்தில் நீராட்ட மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.
அந்த உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது.
அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும்,
அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது.
———————————————————————————————————-———————————

ஸ்ரீ ப்ரஹ்மோத்ஸவம்

கோயிலின் ப்ரதானப் பெருமாளுக்கு நடப்பது ப்ரஹ்மோத்ஸவம். பொதுவாக இது கோயிலில் முதலில் நடந்த உத்ஸவம் பிரம்மனால் நடத்தப்பட்டதைக் குறிக்கும். கோயிலின் மூலவர் ப்ரதிஷ்டையையும் குறிக்கும். பொதுவாக இவ்வுத்ஸவத்தில் காலை மாலை இரு வேளைகளிலும் புறப்பாடுகள் இருக்கும்.

அங்குரார்ப்பணம் – உத்ஸவம் தொடங்குவதைக் குறிக்க , புனிதப்படுத்திய மண்ணில் விதைகளை ஊன்றி முளைக்கவிட்டு அங்குரார்ப்பணம் செய்தல். சேனை முதலியார் புறப்பாடு உத்ஸவம் தொடங்கும்முன் விஷ்வக்ஸேநர் பெருமாள் திருவீதி புறப்பாட்டுக்கு முன் சென்று தெருக்கள் சரியாக தூய்மையாக உள்ளனவா என்று பார்த்தல்.

த்வஜாரோஹணம் – கொடி ஏற்றம்: – முதல் நாள் கருடக் கொடி கொடிக்க கம்பத்தில் ஏற்றி, உத்ஸவம் முடியும்வரை பறக்க விடப்படுகிறது.

கருட வாஹனம் – மூன்றாம் அல்லது நான்காம் அல்லது ஐந்தாம் நாள் தேச ஆசாரப்படி கருடவாஹனம் புறப்பாடு நடக்கிறது. கருடன்மீது ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளுவதால் , வேத ஸ்வரூபியாகிய கருட வாஹனம் முக்கியமான திருவிழா.

ரதோத்ஸவம் – திருத்தேர். இது ஏழு அல்லது எட்டு அல்லது ஒன்பதாம் நாள் தேச ஆசாரப்படி நடக்கிறது. எல்லா இலக்கியங்களிலும் தேர்த்திருவிழா மிகச் சிறப்பாகப் பேசப்படுகிறது. எம்பெருமானின் திருத்தேர் புறப்பாடு கண்டவர்கள் பிறவிப்பாவங்களிலிருந்து விடுபடுவதாக நம்பப்படுகிறது. முழுச் சமுதாயமும் தேர்த் திருவிழாவில் ஈடுபடுகிறது.

குதிரை வாஹனம் – வேடுபறி உத்ஸவம்

வேடு – வேட்டை ஆடுவது, துணி எனப் பொருள்படும். பறி – கொள்ளை/பறித்தல். பொதுவாக இது திருமங்கை ஆழ்வார் தொடர்பான விழா. அவர், பணக்கார ப்ராமணத் திருமணமகனாக வந்த பெருமாளை அடியார்க்கு உணவளிக்கும் பொருட்டு வழிப்பறி செய்தது வேடுபறி என்று கொண்டாடப் படுகிறது.

கலியன் (திருமங்கை ஆழ்வார்) ததீயாராதனம் (அடியார்க்கு உணவளிப்பதைச்) சிறப்பாகச் செய்து வந்தார். ஏற்கெனவே ஸ்ரீவைஷ்ணவ கைங்கர்யத்திலிருந்த அவர்க்குப் பொருள் இல்லாதபோது,வழிப்பறிகள் செய்தார். அவர்க்கு மெய்ஞ்ஞானமும் தரத் திருவுளம் பற்றிய எம்பெருமான் செல்வமிக்க அந்தணப் புதுமணமகனாக வந்து தன் பொருளைக் கொள்ளை அடிக்க விட்டார். இறுதியில், ஒரு சிறிய வளையம் எம்பெருமானின் காலில் இருந்து நீக்க முடியாமல் போக, கலியன் கீழே வளைந்து பற்களால் அதை வெட்டி அதை கட்டாயமாக நீக்கினார். கலியனின் துணிச்சலை வியந்த எம்பெருமான், அவரை “நம் கலியனோ” என்று அழைத்தார். (கலியன் பொதுவாக பெரிய போர்வீரன் என்று பொருள்படும், மரணத்தின் தலைவன், நேரத்தின் கட்டுப்படுத்துபவரை குறிக்கும் – அனைவரையும் பயத்தில் ஆழ்த்துபவர்- எம்பெருமான்  கூட கலியனின் வீரத்தையும் தைரியத்தையும் கண்டு பயந்தான். நகை மூட்டையை எடுத்துத் தூக்க முடியாமல் தவித்த கலியன் “ப்ராமணரே மூட்டைக்கு மந்திரம் போட்டீரோ” என வினவ.  எம்பெருமானும் ஆம் என்று கலியன் காதில் திருமந்த்ரம் ஓதி ஆட்கொண்டான். எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹத்தைக் கண்ட கலியன், “வாடினேன் வாடி வருந்தினேன்” என்று திருமந்த்ர ப்ரபாவத்தைப் பாடியருளினார்.(இந்த சம்சாரத்தில் நான் நித்தியமாக துன்புற்று இருந்தேன் … திருமந்திரத்தை எம்பெருமானிடமிருந்து கேட்க்கும் வரை-பெரிய திருமொழி முதல் பாசுரம்). ப்ரமோத்ஸவத்தில் பகுதியாக இருக்கும் குதிரை வாஹனம் நாளில், இந்த முழு நிகழ்வும் பொதுவாக திவ்யதேசங்களில் நடத்தப்படுகிறது.

மட்டையடி – ப்ரணய ரோஷம். காதலர் இடையிலான அன்புச் சண்டை. பெருமாள்/தாயார் இருவரையும் வைத்துப் பல கோயில்களில் நடக்கிறது.

இது ஸ்ரீரங்கத்தில் மிக உத்ஸாகத்தோடு பங்குனி உத்தரத்தில்  கொண்டாடப்படுகிறது. வேட்டையாடச் சென்ற எம்பெருமான் வேட்டைப்புண்களோடு திருமேனியை மூடி வர, பிராட்டி திவ்ய மங்கள விக்ரஹத்தில் குருதி அடையாளங்கண்டு ஸந்தேஹம் கொண்டு

பெருமாள் பிற நாச்சியார்களோடு இருந்ததாக ஊடி திருக்கதவை அடைத்து அவரை உள்ளே விடாமல் தடுக்க சேதன ரக்ஷணர்த்தமாக நாம் சென்று வந்தோம் என்று அவர் சொல்வது ஏற்காததால்

நம்மாழ்வார் கடகராகிப் பிராட்டியம் பெருமாளும் சமாதானமாகும் நிகழ்ச்சி பூப்பந்து எறிதலோடு அழகாக முடிகிறது.

தீர்த்தவாரி – அவப்ருத ஸ்நாநம்: சக்கரத்தாழ்வாருக்குத் திருக்குளத்தில் அல்லது சில திவ்ய தேசங்களில் எம்பெருமானுக்கே, திருமஞ்சனம் ஆகிறது.

துவஜ அவரோஹணம்  – கொடி இறக்கம்:உத்ஸவம் முடிந்ததற்கு அறிகுறியாக ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்படும் நிகழ்ச்சி.

த்வாதச ஆராதனம் – தொண்டை நாட்டு திவ்ய தேசங்களில் பல ஸந்நிதிகளில் இறுதி நாளன்று எம்பெருமானுக்குப் பன்னிரண்டு திருவாராதனங்கள் ஸமர்பிக்கப்பட்டு, திருவாய்மொழி ஆயிரமும் ஒரே தொடர்ச்சியாக  ஸேவிக்கப்படுகிறது.திருவாய்மொழி தொடங்குமுன் திருமஞ்சனமும் உண்டு.

சப்தாவரணம் – அன்றுமாலை எம்பெருமான் பிராட்டிமாரோடு சிறிய தேரில் அல்லது புண்யகோடி விமானத்தில் இராமானுச நூற்றந்தாதி கோஷ்டியோடு  புறப்பாடாகி ஸந்நிதி திரும்பியதும் அர்ச்சக ஸ்வாமிகள் எல்லா தேவர்கள், ரிஷிகள், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்வஸ்தி வாசகம் சொல்லி வழியனுப்புதல்.

விடாயாற்றி பத்துநாள் உத்ஸவங்கண்ட களைப்புத் தீர எம்பெருமான் சில நாள்கள் திருமஞ்சனம்/திவ்யப்ரபந்த கோஷ்டி/இன்னிசைக் கச்சேரி என எழுந்தருளியிருப்பர்.

தெப்போத்ஸவம் – கோயில் புஷ்கரிணி அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளில் பிராட்டிமாரொடு எம்பெருமானுக்குத் தெப்ப உத்ஸவம் நடக்கும். குளத்து நீராழி மண்டபத்தைச் சுற்றித் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் வருவது அழகிய காட்சி.

பல்லவ உத்ஸவம் – இளவேனில் காலத்தில் எம்பெருமான் புதிதாய்த் துளிர்க்கும் தளிர்கள் தழைகளை அணிந்து ஸ்தல புராணம் கேட்பது.

வசந்தோத்ஸவம் – எம்பெருமான் ஸந்நிதிக்கு அருகிலுள்ள தோட்டத்திற்கு சென்று உள் புறப்பாடாகி சிறிது நேரம் எழுந்தருளியிருந்து திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளுதல். அருள்வார்.பிறகு திருமஞ்சனமும் திருவராதனமும் உண்டு.

கோடை உத்ஸவம் – எம்பெருமான் ஸந்நிதிக்கு அருகிலுள்ள மண்டபத்திற்கு சென்று திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளுதல்.

ஸ்ரீராம நவமி – ஸ்ரீராமன் அவதார உத்ஸவம் ஒன்பதுநாள்கள் புறப்பாடு, நவமியோடு முடிவுறுவது

பவித்ரோத்ஸவம் – கோயில் வழிபாடுகள் யாவும் பாஞ்சராத்ர/வைகாநஸ ஆகம விதிகளின்படி நடக்கின்றன. இவற்றில் ஏதாகிலும் குறை/பிழை ஏற்படக்கூடும் என்பதால் அதை நிவ்ருத்தி செய்ய மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு நாள்கள் குண்டங்கள் நிர்மாணித்து எம்பெருமானையும் தாயாரையும் தினமும் யாகசாலைக்கு எழுந்தருளச் செய்து, திவ்ய ப்ரபந்தம், வேத இதிஹாஸ புராண பாராயணங்களுடன் ஈடு/ஸ்ரீபாஷ்ய பாராயணங்களும் நடத்தப்படும். எம்பெருமானுக்குத் திருமஞ்சனமும் உண்டு.

ஆனி (ஜ்யேஷ்ட மாச) கருடோத்ஸவம் – ஆனி  ஸ்வாதியில் பெரியாழ்வார் திருநக்ஷத்ரத்தன்று அவர் பரத்வ நிர்ணயம் செய்தது ஒட்டி எம்பெருமான் கருட வாஹனனாகப் பெரியாழ்வார்க்கு ஸேவை சாதிப்பார்.

ஜ்யேஷ்டாபிஷேகம்: எல்லா எம்பெருமான்களும் கவசத்தோடேயே ஸேவை சாதிப்பர். இந்த நாளன்று கவசங்கள் களையப்பட்டு திருமஞ்சனம் ஆகி அழகிய திருமேனியை யாவரும் ஸேவித்தபின் திருவாராதனமாகி ஸேவை ஆகும். இதன்பின், பவித்ரோத்ஸவம் கண்டருளும்வரை எம்பெருமானுக்குப் புறப்பாட்டுடன் உத்ஸவாதிகள் இராது.

ஆடிப் பௌர்ணமி கருடோத்ஸவம் – கஜேந்திர மோக்ஷம் – பொதுவாக இது யஜுர் உபாகர்மத்தன்று வரும்.

ஸ்ரீஜயந்தி – ஆகம விதிப்படியும், ஆவணி மாதம்/அஷ்டமி திதி அல்லது ரோஹிணி நக்ஷத்ரப்படியும் இது கொண்டாடப்படும். மாலை தொடங்கி நள்ளிரவு வரை இது நீடிக்கும்.

நவராத்ரி – 9 நாள்கள் தாயார் புறப்பாடு, ஊஞ்சல்.

விஜயதசமி – பரிவேட்டை – எம்பெருமான் வேட்டையாட வெளியே எழுந்தருள்வது

தீபாவளி – பெருமாள்/தாயார் புறப்பாடு இது பெரும்பாலும் மாமுனிகள் அவதார உத்ஸவதோடு வரும்

கார்த்திகை தீபம் + அநத்யயந காலத் தொடக்கம் – திருவிளக்குகள் பல ஸந்நிதிகளில் ஏற்றப்படும். பெருமாள் புறப்பாட்டின்போது சொக்கப்பனை கொளுத்தப்படும்.

அத்யயந உத்ஸவம் 20+ நாள்கள் நம்மாழ்வார்க்கும் திருவாய்மொழிக்கும் என்றே ஏற்பட்ட மஹோத்ஸவம் 

ஸ்ரீ திருவல்லிக்கேணி -ஸ்ரீ ப்ரஹ்மோத்ஸவ விவரணம்

முதல் நாள் காலை -தர்மாதி பீடம் -ஸ்ரீ உபய விபூதி நாத ஸூசகம் – -ஸ்ரீ முதல் திருவந்தாதி -திரு வீதியில்

மாலை புன்னை மர வாஹனம் -ஸ்ரீ கண்ணன் திருப் புல்லாங்குழல் ஊதும் திருக்கோலம்
மெச்சூது சங்கம் இடத்தான் நல்வே யூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய் புத்தூர் பெறாத அன்று
பாரதம் கை செய்த அத்தூதன் -ஸ்ரீ பெரியாழ்வார் -2-1-1-

இரண்டாம் நாள் காலை -ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி சேவை –
விடங்காலும் தீவாய் அரவணை மேல் தோன்றல் -71-என்றும் பொங்கு பட மூக்கில் ஆயிரவாய்
பாம்பணை மேல் சேர்ந்தாய் -97-என்பதற்கு ஏற்ப சேஷ வாஹனம்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -81-என்பதற்கு ஏற்ப ஸ்ரீ பரமபத நாதன் திருக்கோலம்

இரண்டாம் நாள் மாலை -பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போர் ஏறே
என் சிற்றாயர் சிங்கமே -ஸ்ரீ பெரியாழ்வார் –3-3-5-என்பதற்கு ஏற்ப ஸிம்ஹ வாஹனம்

மூன்றாம் நாள் காலை -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி சேவை -பொலிந்த கருடன் மேல் கொண்ட கரியான் கழலே
தெருள் தன் மேல் கண்டாய் தெளி –57-என்பதற்கு ஏற்ப ஸ்ரீ கருட வாஹனம் சேவை

ஏகாந்த சேவையில் திருக்கண்டேன் — என் ஆளி வண்ணன் பால் இன்று -1-சேவை

மூன்றாம் நாள் மாலை –உரக மெல்லணையான் கையில் உரை சங்கம் போலே மட அன்னங்கள் –ஸ்ரீ பெரியாழ்வார் –4-4-4-
என்பதற்கு ஏற்ப ஹம்சா வாகனத்தில் பறவை ஏறு பரம் புருடனாக-5-4-2-சேவை
இவன் தானே உலகினில் பேர் இருள் நீங்க அன்று அன்னமதாய்-1-8-10-பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வன் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில் பாத இலச்சினை வைத்தார் -5-2-8-

நான்காம் நாள் காலை -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி சேவை -நீயே எரி சுடரும் -20-என்பதற்கு ஏற்ப –
நான்முகனை படைத்த நாராயணன் -1-என்பதால் பரத்வம் பொலிய ஸூர்ய மண்டல மத்யவர்த்தி -ஸூர்ய பிரபையில் சேவை

நான்காம் நாள் மாலை -ஸ்ரீ திருப்பாவை ஸ்ரீ நாச்சியார் திருமொழி சேவை –
கதிர் மதியம் போல் முகத்தான் -1-என்றும்
சந்த்ர மண்டலம் போலே தாமோதரன் கையில் -7-4-என்பதற்கு ஏற்ப சந்த்ர பிரபை சேவை –

ஐந்தாம் நாள் காலை -ஸ்ரீ திருவிருத்தம் சேவை -நாயகா பாவனையில் பூர்ணமாக அருளிச்செய்த
ஸ்ரீ திவ்ய பிரபந்தம் அன்றோ ஆகவே நாச்சியார் திருக்கோலம்

ஐந்தாம் நாள் மாலை -ஸ்ரீ பெருமாள் திருமொழி சேவை –
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை -10-11-என்பதற்கு ஏற்ப ஸ்ரீ ஹனுமந்த வாஹனம்

ஆறாம் நாள் காலை -திருச்சந்த விருத்தம் சேவை -ஆதியான வானவர்க்கும் ஆதியான ஆதி நீ -8-என்பதற்கு ஏற்ப
திரு அபிஷேகம் அணிந்து பரத்வம் பொலிய ஆனந்த விமானத்தில் எழுந்து அருளுகிறார் –

ஆறாம் நாள் மாலை ஸ்ரீ முதல் ஆயிரம் நிகமித்து-
உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகிச் செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி -28-என்றும்
விண்ணுளார் வியப்ப வந்த ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணறா -44 -என்பதற்கு என்ற ஆனை வாஹனம்

ஏழாம் நாள் காலை ஸ்ரீ திருவெழு கூற்று இருக்கை சேவிக்கப் பெற்று ஸ்ரீ பெரிய திருமொழி சேவை -என்பதற்கு ஏற்ப திருத்தேரில்
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை -2-3-1-என்றும்
பார்த்தன் தன் செல்வத் தேர் ஏறி சாரதி -2-10-8-என்பதற்கு ஏற்பவும் திருத்தேரில் சேவை –

எட்டாம் நாள் காலை முதலில் ஸ்ரீ சிறிய மடல் சேவிக்கப் பெற்று பின்பு ஸ்ரீ பெரிய திருமொழி தொடர்ந்து சேவை
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி ஆராத வெண்ணெய் விழுங்கி-என்றும்
பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப-3-3-3-என்றும்
ஆய்ச்சியர் வைத்த தயிர் வெண்ணெய் உளம் குளிர அமுது செய்து -3-9-7-என்றும்
பாடல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமார –4-4-3-என்பதற்கும் ஏற்ப
வெண்ணெய்த் தாழிக் கண்ணனாக சேவை

எட்டாம் நாள் மாலை -ஆடல் மா வலவன் கலிகன்றி பாசுரங்கள் சேவைக்கு ஏற்ப குதிரை வாஹனம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திரு ஆபரணங்கள் கொள்ளை அடிக்க எழுந்து அருளுவதும் –
ஸ்ரீ திருமந்திர உபதேசம் செய்து திருத்திப் பணி கொள்வதும் –
மீண்டும் வாடினேன் வாடி வருந்தினேன் -முதல் பதிகம் அனுசந்திப்பதும் -முக்கிய நிகழ்வுகள்

ஒன்பதாம் நாள் காலை -மட்டை அடி உதவும் -எட்டாம் நாள் மாலை சேர்த்தியில் எழுந்து அருளி –
வேடு பறியின் போது தொலைத்த திரு மோதிரத்தை தேடிக்கொண்டு தனியாக எழுந்து அருளி –
ஸ்ரீ நம்மாழ்வார் -பெரியவருக்காக பொறுத்தோம் என்பதும் -மின்னிடை மடவார் –திருவாய் மொழி -7-2-சேவித்து

அன்று இரவில் காதில் கடிப்பிட்டு -10-8-பதிகம் சேவை -உத்சவத்தில் பூர்த்தியாலும்
ஸ்ரீ பெரிய திருமொழி பூர்த்தியை முன்னிட்டும் தங்க சப்பரத்தில் எழுந்து அருளி சேவை

பத்தாம் நாள் -துவாதச ஆராதனம் -பூர்ணமாக ஸ்ரீ திருவாய் மொழி திருச்செவி சாத்தி அருளுகிறார்

அன்று இரவில் குளிர்ச்சியாக வெட்டிவேர் திருத்தேரில் புறப்பாடு –
ஸ்ரீ பெருமாள் திரு உள்ளம் குளிரும்படி ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி சேவை

ஸ்ரீ திருவரங்கம்
“ஆராத அருளமுதம் பொதிந்த கோவில்!
அம்புயத்தோன் அயோத்தி மன்னர்க்கு அளித்த கோவில்!
தோலாத தனிவீரன் தொழுத கோவில்!
துணையான வீடணற்குத் துணையாம் கோவில்!
சேராத பயனெல்லாம் சேர்க்கும் கோவில்!
செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோவில்!
தீராத வினை அனைத்தும் தீர்க்கும் கோவில்!
திருவரங்கம் எனத்திகழும் கோவில் தானே!”

திருவேங்கடம்
“கண்ணன் அடியிணை எமக்குக் காட்டும் வெற்பு!
கடுவினையர் இருவினையும் கடியும் வெற்பு!
திண்ணம் இது வீடென்னத் திகழும் வெற்பு!
தெளிந்த பெருந்தீர்த்தங்கள் செறிந்த வெற்பு!
புண்ணியத்தின் புகல் இதெனப் புகழும் வெற்பு!
பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு!
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு!
வேங்கடவெற்பு என விளங்கும் வேத வெற்பே!”

அத்திகிரி யருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரம் தரும் தெய்வப் பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்
மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்
உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே –

ஸ்ரீ ரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம்,
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம் |
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம்,
ஸ்ரீ சம் நமாமி சிரஸா யதுசைல தீபம் ||

ஸ்ரீரங்கமதுலம் க்ஷேத்ரம் ஸ்ரியா ஜூஷ்டம் சுபாஸ்தம்
யத்கத்வா ந நரோ யாதி நரகம் சாப்யதோகதிம்

செல்வங்களும் மங்களங்களும் நிறைந்த ஒப்பற்ற திவ்யதேசம் ஸ்ரீரங்கம்
அதை அடைந்த மனிதன், நரகத்தை அடைவதில்லை;தாழ்ந்த நிலையையும் அடைவதில்லை.

காவேரி வர்த்ததாம் காலே காலே வர்ஷது வாஸவ : |
ஸ்ரீரங்கநாதோ ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீஸ்ச வர்த்ததாம் ||

அர்ச்சாவதாரத்தில், இருந்தும் கிடந்தும் நின்றும் பகவான் ஸ்ரீமந் நாராயணன்,
அவன் குழந்தைகளாகிய நம்மைத் திரும்பப் பெறுவதில் வைகுண்டத்தில்
தொடங்கிப் பல திவ்யதேசங்களில்,முயற்சித்தாலும், அவனது திருவுள்ள வேட்கை
பூலோக வைகுண்டத்தில் –திருவரங்கத்தில், வெற்றி அடைந்தது

ஸ்ரீமந் ஸ்ரீரங்கச்ரியமநுபத்ரவாம் அநுதினம் ஸம்வர்தய |
ஸ்ரீமந் ஸ்ரீரங்கச்ரியமநுபத்ரவாம் அநுதினம் ஸம்வர்தய |

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வராஹ ஷேத்ரமும் ஸ்ரீ திவ்ய தேசங்களும்

March 28, 2024

ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவ -அருளிச் செயல்கள் ஸ்ரீ ஸூ க்திகள்

ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8-8-

தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-

———-

ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–11-8-

———

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-

————-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-

ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும்
தானாய பெருமானைத் தன் அடியார் மனத்து என்றும்
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே—5-6-3-

————–

ஸ்ரீ நம்மாழ்வார் –ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

‘என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

——-

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ———45-

பண்டு ஒரு நாள் பூமியை ஸ்ரீ வராஹ ரூபியாய் எயிற்றிலே கொண்டவனுடைய மலை –

வேங்கடமே முன்னொரு நாளிலே-ஸ்ரீ வராஹ ரூபியாய்க் கொண்டு பூமியைத் தன் திரு எயிற்றிலே எடுத்து வைத்துக் கொண்டவனுடைய திருமலை –

பரன் சென்று சேர் வேங்கடம் -ஸ்ரீ வராஹ க்ஷேத்ரம் அன்றோ -வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை-என்கிறார்-மஹா வராஹா ஸ்புட பத்ர லோசனன்

———

ஏனமுனாகி இருநிலம் இடந்து அன்று இணையடி இமையவர் வணங்க —
என் தலைவன் –வதரியாஸ்சிராமத்துள்ளானே –ஸ்ரீ பெரிய திருமொழி–1-4-1-

————-

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக் கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே
படர்ந்தானை படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானைப் பாரிடத்தை எயிறு கீற
விடந்தானை வளை மருப்பின் ஏனமாகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-

————–

இரும் தண் மா நிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் திரு வயிந்திர புரமே-3-1-1-

————

வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள் புக்கு அழுந்த
வம்புண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர்
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த
செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே—3-2-3-

————

வையணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்றாய் மண்ணெல்லாம் இடந்து எடுத்து —
தாள் அணைகிற்பீர் காழிச் சீராம விண்ணகரே சேர்மினீரே -3-4-3-

———–

சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக்குளம்பில் கண கணப்பத் திருவாகாரம் குலுங்க
நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எங்கோமான் கண்டீர் —
நாங்கூர்த் திருத் தெற்றி யம்பலத்து என் செங்கண் மாலே — –4-4-8-

———-

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை—நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-6-

———-

மண்ணிடந்து ஏனமாகி –நாங்கை மேய கண்ணனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -–4-6-2-

——–

வாராகமதாகி இம்மண்ணை இடந்தாய் நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆராவமுதே அடியேற்கு அருளாயே –4-7-8–

———-

பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பாரிடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை —
தவமுடையார்கள் ஆள்வர் இக்குரை கடலுலகே –4-10-10-

———–

மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே–
திரு வெள்ளறை நின்றானே —5-3-5–

———–

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர் தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளி யக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1-

————-

நரனே நாரணனே திரு நறையூர் நம்பி எம்பெருமான் உம்பராளும்
அரனே ஆதி வராகம் முனனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே -7-7-4-

——

பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3-

———-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-

———–

வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலபபில் பல் காலத் துயர் கொடி யொளி வளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நன் மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே—9-1-4-

————

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10-

—————-

கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர் –குறுங்குடியே –9-6-3-

————

ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா என்றும் என்னை யாளுடை
வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே
தேன மாம் பொழில் தண் சிரீவர மங்கலத் தவர் கை தொழ வுறை
வானமா மலையே அடியேன் தொழ வந்தருளே –5-7-6-

———

என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே–8-4-3-

—————-

ஆழ்வார் திருநகரிக்கு தாந்தன் க்ஷேத்ரம் -வராஹ க்ஷேத்ரம் -சேஷ க்ஷேத்ரம் தீர்த்த க்ஷேத்ரம் ஆதி க்ஷேத்ரம் போன்ற பல பெயர்கள் உண்டு
வராஹ ஷேத்திரம்-வராஹ அவதாரத்தை காண விரும்பிய சில முனிவர்கள் இத்தலத்தில் வந்து கடுந்தவம் புரியவே அவர்கட்கு வராஹ நாராயணன் மடியில் பூமிப்பிராட்டியுடன் காட்சிகொடுத்த திருத்தலமாதலால் வராஹ ஷேத்திரம் என்ற பெயர் பெற்றது.
ஆதியில் தோன்றியதால் “ஆதி ஷேத்திரம்” என்றும், வராஹ ரூபத்தை காட்டியருளியதால் “வராஹ ஷேத்திரம் என்றும் ஆயிரம் தலை
கொண்ட ஆதிசேடன் உறங்காப் புளியாக அவதரித்தமையால் சேஷ சேஷத்திரமெனவும், தாமிரபரணியாலும், சங்கணித்துறையாலும் வளம்கெழுமிய
ஊராகையால் “தீர்த்த சேஷத்திரம்” எனவும், தாந்தன் என்னும் கீழ்குலத்தானுக்கு மோட்சம் நல்கியதால் தாந்த ஷேத்திரம் எனவும், இந்த
குருகூரை “பஞ்சமஹா ஷேத்திரம்” என்றும் பெரியோர் போற்றிப் புகழ்வார்.

————-———————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவல்லிக்கேணி அனுபவம் —

March 26, 2024

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் பறந்தான் -பஞ்ச அம்ருத சேவை
அர்த்த பஞ்சகம் -பஞ்ச பிரகாரங்கள் ஐந்தையும் காட்டி அருளும் திவ்ய தேசம்

மன்னு தண் பொழிலும்-பரத்வம் பொழில் ஏழும்
வாவியும் –திருப்பாற் கடல் வ்யூஹம்
மதிளும்–அந்தர்யாமி
மாட மாளிகையும் மண்டபமும் –விபவம்
தென்னன் தொண்டையர் கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை-அர்ச்சாவதாரம்

யானைக்குளம் கஜேந்திர ஸரஸ் அருகில் திருமழிசை வரதனை மங்களா சாசனம்
பரத்வம் அந்தர்யாமித்வம் இரண்டிலும் ஆழ்ந்த ஆழ்வார் என்பதாலேயே இருவருக்கும் அருகில் இன்றும் நித்ய சந்நிதி
இவர் சாத்து முறைக்கு மட்டும் வரதரே எழுந்து அருளுகிறார்
இன்றும் யானைக்குளத் தெருக்கள் உண்டே
கஜேந்திர வரதர் பிரபையில் திருக்கச்சி நம்பியும் எம்பெருமானாரும் சேவை உண்டே

துவாதச ஆராதனம் அனைவரையும் ஒரு சேர சேவை ப்ரஹ்ம உத்சவம் -பார்த்த சாரதிக்கும் -தெள்ளிய சிங்கருக்கும் நடக்கும்
எம்பெருமானாராக பார்த்தசாரதியை அவதாரம்

அருளிச் செயல் மண்டபம் என்றே பிரசித்தி இதற்கு
புஷ்ப -போக -தியாக -ஞான மண்டபங்கள் போல்

எம்பெருமானார் திருவவதார ஆறாம் நாள் வெள்ளைச்சாத்து உத்சவத்தில் எதிராஜ மடம் எழுந்து அருளுகிறார்
அங்கு காவி வஸ்திரம் திருமண் காப்பு ஜீயர் சமர்ப்பிக்கிறார்
கோஷ்டியார்களுக்கும் திருமண் காப்பு விநியோகம் உண்டே

ப்ருந்தாரண்யம் -பிருந்தாவனம் போல் இங்கும் -ப்ரஹ்மாண்ட புராணம் விவரிக்கும்

————–

அவதாரிகை –

திருப்பாற் கடலிலே நின்றும் தம் திரு வுள்ளத்துக்கு வருகிற போது
நடுவு வழி வந்த படியை அருளிச் செய்கிறார் –

மனந்தன் அணைக் கிடக்கும் -என்றாரே
இப்படி வந்து கிடைக்கைக்கு அடி பிராட்டியோட்டை சம்பந்தம் என்கிறார் –

திருப்பாற்கடலிலே நின்றும் தம் திரு உள்ளத்துக்கு வருகிற போது திருவல்லிக் கேணியிலே
வந்து தங்கினான் -என்கிறார் –

—————————————————————————————–

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக் கேணியான் சென்று   —-16–

பதவுரை

ஒரு அல்லி தாமரையாள்–அழகிய இதழ்களையுடைய தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய பிராட்டி
சென்று ஒன்றிய சீர் மார்பன்–வந்து பொருந்திய அழகிய திருமார்பை யுடையவனும்
வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவளம் வெண் முத்தம்–வந்து வீசுகின்ற வெளுத்த
அலைகளிலுண்டான சிவந்த பவழங்களும் வெளுத்த முத்துக்களும்
அந்தி விளக்கும் அணி விளக்கும் ஆம்–ஸ்ந்தியா காலத்தை விளக்குகின்ற மங்கள தீபங்களாகப் பெற்ற
திருவல்லிக்கேணியான்–திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருப்பவனுமான பெருமான்
எந்தை–எனக்கு ஸ்வாமி

—————————————————————————————–

வியாக்யானம் –

வந்துதித்த வெண் திரைகள் –
வந்து உதையா நின்றுள்ள
வெள்ளத் திரைகளாலே தள்ளப் படுகிற –

செம்பவள வெண் முத்தம் –
சிவந்த பவளங்களும்
நீர்மையை உடைத்தான முத்துக்களும் –

அந்தி விளக்காம் மணி விளக்காம் –
சந்த்யைக்கு பிரகாசஹமான
மங்கள தீபத்தை யுடைத்தான –

எந்தை –
எனக்கு ஸ்வாமி-

ஒரு வல்லித் தாமரையாள் –
நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியாரானவள்

ஒரின்னிள  வஞ்சிக் கொடி-பெரிய திருமடல் -என்னுமா போலே
கொள் கொம்போடு சேர்ந்தால் அல்லது தரிக்க மாட்டாமை

அவன் புருஷோத்தமன்
ஆனாப் போலே
இவள் நாரீணாம்   உத்தமை –

தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்-
மலர்மகள் விரும்புகையாலே
சர்வாதிகத்வம் ஆகை-

ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்-
பஸ்யதாம் வரவா தேவா நாம் யயௌ வஷ ஸ்தலம் ஹரே  -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-105-
அநாதரே சஷ்டி –
பிரஜைகள் பார்த்து இருக்க
பர்த்தாவின் படுக்கையைக் கணிசித்து ஏறும் தாயைப் போலே
தேவர்கள் பார்த்து கிடக்கத் திரு மார்விலே ஏறினாள்

தயா அவலோகிதா தேவா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-106-
பின்னை சர்வேஸ்வரன் இவர்கள் உடைய அலமாப்பைப் பாராய் என்று
திரு உள்ளத்தாலே நினைத்த படி தோற்ற
பின்னை அவளாலே பார்க்கப் பட்டார்கள்

முன்பு கடாஷியா விட்டது என் என்னில் –
தன் ஸ்வரூபத்தை பெற்று பிறரை ரஷிக்க வேணுமே –

பிரதேஹி ஸூ பகே ஹாரம் -யுத்த -131-80-என்று
அவன் நினைவும் சொலவும் அறிந்து  இறே
ஒருவரைக் கடாஷிப்பதும்
ஒருவருக்கு ஒன்றைக் கொடுப்பதும்

இவள் பிரிந்து இருக்கையாலே
பெருமாள் கடாஷம் பெற்றுப் பின்பு
பிராட்டி கடாஷம் பெற்றான் திருவடி

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் முந்துற பிராட்டி கடாஷம் பெற்றுப் பின்னைப் பெருமாள் கடாஷம் பெற்றான்

ஸ்ரீ குஹப் பெருமாள் இரண்டும் ஒருக்காலே பெற்றார்

நின் திருவருளும் பங்கயத்தாள் திரு வருளும் கொண்டு -திருவாய்மொழி -9-2-1-

திருவல்லிக் கேணியான் எந்தை -சென்று
திரு வல்லிக் கேணியிலே  எழுந்து அருளி இருந்து எனக்கு நாதனானவன் –

எந்தை
பெறாப் பேறு பெற்றாப் போலே

ஒரு வல்லித் தாமரையாள் சென்று
ஒன்றிய சீர் மார்வனுமாய்
திருவல்லிக் கேணி யானுமானவன்
எந்தை –
அந்தி விளக்கும் அணி விளக்காம் திருவல்லிக் கேணியான்-

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்-அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை–திருவல்லிக் கேணியான்–
வந்து உதையா நின்றுள்ள வெண் திரைகளாலே உண்டான சிவந்த பவளமும்
ஒளியை யுடைத்தான முத்தும் -அந்திக்கு பிரகாசகமாக நின்ற மங்கள தீபத்தை யுடைத்தான
திரு வல்லிக் கேணியிலே நின்றவன்(கிடந்த திருக்கோலம் மன்னாதன் -அடியேனை கைக்கொள்ள அவகாசம் பார்த்து நிற்கிறான் என்றபடி )

ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் சென்று   —-
பஸ்யதாம் சர்வ -பார்த்துக் கிடக்க -திரு மார்பிலே ஏறினாள் –

(பெண்ணுக்கு பெண்கள் கோஷ்ட்டியில் வெட்கப்பட வேண்டாமே ஸ்த்ரீ பிராயர் அனைவருமே )
தயா வ லோகிதா தேவா –
பின்னை சர்வேஸ்வரன் இவர்களுடைய அலமாப்பைப் பாராய் என்று திரு உள்ளத்தால் நினைத்த படி -தோற்றப்
பின்னை அவளாலே பார்க்கப் பட்டவர்கள் –
ப்ரதேஹி ஸூபகே ஹாரம் -அவன் நினைவும் சொல்லும் அறிந்து இறே
சிலரைக் கடாக்ஷிப்பதும் -(சிலருக்கு )சிலரைக் கொண்டு கொடுப்பதும் –
பெரிய பிராட்டியார் தானே சென்று அடையும் திரு மார்பை யுடையனாய் திரு-

——————————————

திருவல்லிக் கேணியிலே வாய் திறவாதே
ஏக ரூபமாகக் கண் வளர்ந்து அருளக் கண்டு

இது திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தால் என்று இறே பயப்படுகிறார் –

(பேய்காள் (31)-என்றார்
மேல் யுக்தி பிரதி யுக்திகள்
வதைப் பொருள்- உதைப்பளவு அடியை அடைய உபதேசிக்க
விரோதிகளை அவனே போக்குவானாய் இருக்க
நான் அடியை அடையும்படி தானே என் மனம் புகுந்தான் என்றார்
இதில் அவனது ஸாஹஸச் செயல்களுக்கு பரிவதே போது போக்காய் இருக்கும் எனக்கு
பிறர் தன்மையைக் கண்டு வெறுப்பது ஆவது என் -என்கிறார் –

ஸ்தோத்ரம் பண்ணவும் நன்மை பயக்கவும் இரண்டு குறிப்புகள் கீழே
ஐந்தலை ஐந்து வாய் இதற்காகவே -தலைகளால் ரக்ஷித்து வாய்களால் ஸ்தோத்ரம் பண்ணவே –
என்னை ஆளுடை அப்பன்- மந் நாதப் பெருமாளுக்கு மங்களா ஸாஸனம்
ஸ்வ அனுபவம் -பர உபதேச கர்ப்பம்
மா நகர பெருமை மயிலைக்கு
மா அல்லிக்கேணி க்ஷேத்ர பெருமை

வாயும் பேசவில்லை அசையும் இல்லை
இங்கு ஒரே கேள்வி
திருக் குடந்தையில் இவரே இரண்டு கேள்விகள் ஞானமாய் இடந்த அசைவையும் சேர்த்து
மாற்றமும் தராமல் வாசலும் திறவாமல் -வாசலை செம்பளித்தால் வாயையும் செம்பளிக்க வேண்டுமோ -)

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-

பதவுரை

நீளோதம்–பெரிய அலைகள்
வந்து அலைக்கும்–கரையிலே வந்து வீசப் பெற்ற
மா மயிலை–மயிலாபுரிக்கு அடுத்த
மா வல்லிக் கேணியான்–திருவல்லிக்கேணியில் நித்ய வாஸம் பண்ணுகிற ஸர்வேச்வரன்
ஐ தலை வாய் நாகத்து அணை–ஐந்து தலைகளையும் ஐந்து வாய்களையும் உடையானான திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
வாளா–வெறுமனே
கிடந்தருளும்–சயனித்திரா நின்றான்
வாய் திறவான்–வாய் திறந்து ஒன்று மருளிச் செய்வதில்லை
(இப்படி யிருப்பதற்குக் காரணம்)
தாளால்–திருவடியாலே
உலகம் அளந்த அசவே கொல்–உலகங்களை அளந்ததனுலுண்டான ஆயாஸமோ?

போக ப்ரதர்க்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரிலே
நீர் வாய்ப்பான திரு வல்லிக் கேணியிலே
திரு வநந்த வாழ்வான் ஆகிற குளிர்ந்த படுக்கையிலே
சேஷ்டியாதே -வாய் திறவாதே -கிடவா நின்றான் –
இதுக்குக் காரணம்
பிறந்த அன்றே ஸூகுமாரமான திருவடிகளாலே லோகத்தை  அளந்த  ஆயாசமோ -என்கிறார் –
வாய்ப்பான படுக்கையில் அலை எறிவாயிலே கண் வளருகிறது
வ்யசன அதிசயத்தால் -என்று கருதுகிறார்

நீளோதம்-பெரிய ஓதம் –

தாளால் உலகம் அளந்த அசைவே  கொல்-
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்று
பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும் திருவடிகளைக் கொண்டு-
காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-
(அசைவு -தளர்த்தி )

இல்லாததை உண்டாக்கும் சங்கல்பம் போராதோ –
உண்டானதை உஜ்ஜீவிப்பிக்க-

வாளா கிடந்தருளும்  வாய் திறவான்-
ஏக ரூபமாய் கிடப்பதும் செய்து
வார்த்தையும் பேசுகிறிலன்-

(வாளா -வெறுமனே
ஓரு படியாய் -ஏக ரூபமாய் -என்றபடி )

(கள்வப் பணி மொழி கேட்க பார்க்கிறார்
மாஸூ ச
தாதாமி ஏதத் விரதம்
அஹம் ஸ்மாரமி நயாமி பரமாம் கதி
போன்ற இடங்கள் உண்டே
விரோதி நிரசனம் -தாதாமி புத்தி யோகம் -அஹம் வோ பாந்தவ ஜாத -இஷ்ட பிராப்தி
க்ஷமாமி என்றும் வாய் திறந்ததும் உண்டே
சீறியாவது அருளலாமே
வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு
அஸ்துதே -சொன்ன இடமும் உண்டே )

நீளோதம் வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான் ஐந்தலை வாய் நாகத்தணை-
நீர்க் கரையைப் பற்றி கண் வளருகிறதும்
ஸ்ரமத்தின் மிகுதி என்று இருக்கிறார்-

(பரியும் அத்தனை அன்றோ என்கிறார் இதில் -என்றபடி
முந்துற வந்து கைக்கொள்ளும் உன்னை அன்றோ இது வந்து அலைக்கிறதே )

(வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி கொண்டு
சம்பந்தம் மட்டும் பார்த்து தடவிக்கொடுத்து உஜ்ஜீவிக்கவும் பார்க்க வேண்டுமோ
பஹஸ்யாம் சங்கல்பம் மட்டுமே போதாதோ
அயர்வறும் அமரர்கள் அதிபதியான இவனுக்கும் அயர்வு உண்டு என்று பரிகிறார் -பொங்கும் பரிவாலே
அஸ்தானே பய சங்கை
கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–திருவாய் –8-3-5-அடி யொற்றி இப் பாசுரம் )

பெரிய திரைகளானவை வந்து தொடை குத்த உறங்குவாரைப்போலே
தனது குளிர்ந்த திரைகளாலே சிஸீரோ உபசாரம் பண்ண
போக பிரதானருக்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரில்
ஸ்லாக்யமான திருவல்லிக்கேணியில் நித்ய வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரன்
காற்றும் வெய்யிலும் தாக்காத படி தனது வளைவான ஐந்து தலைகளாலும்
சைத்திய மார்த்தவ ஸூரபி கொள் கலமான
வாயாற் யீரைநூறு பரிவுடன் ஏத்துகைக்கு பரிவுடன் ஐந்து திருப்பவளாம் உடைய
இடம் வலம் கொள்ளாமல் பாடோட கண் வளர்ந்து
இளைப்பின் கனத்தால் திருப்பவளாம் தோன்ற அருளிச் செய்யவும் மாட்டுகிறிலன்
இதுக்கு அடி
மலர் மகள் முதலான பிராட்டிமார்கள் -கூசிப் பிடிக்கும் மெல்லடி – தாளால் அசைவு –
பலம் பொருந்தியதாய் இருந்தாலும் மென்மை
(ஸூ குமாரவ் மஹா பலவ்
உலகம் அளந்த -பலம்
தாளால் -ஸூ குமாரம் )
காடும் மோடையுமான லோகத்தை அளந்த அசைவோ

———–

(சிங்க வேள் குன்றம் இருந்தவாறும் -திருவேங்கடத்திலும் நின்றவாறும் -திரு எவ்வுள்ளில் கிடந்தவாறும் அனுபவித்து
அனைத்து திருக்கோலங்களும் சேவித்து
கரி ரக்ஷணம் அனுபவித்து -திரு நறையூர் திருவாலி குடந்தை -கோவல் நகர் -முதலான தோற்றி
அவை எல்லாவற்றிலும் உள்ள
அபிநிவேசத்துடன் இங்கே வந்து அனுபவிக்கிறார் )

பிராட்டிமாரோடே கூட வந்து
விரோதி நிரசன சீலனாய்
பிரபல விரோதியான பாபங்களை
அநாயேசேந போக்க வல்லவனாய்
சர்வ ஸ்வாமியான
சர்வேஸ்வரன்
உகந்து அருளின நிலங்கள் எங்கும்
பண்ணும் விருப்பத்தை
திரு நீர் மலையிலே பண்ணிக் கொடு வந்து
சந்நிஹிதனானான் –
அநவஹிதராய் இருப்பார் வார்த்தையைக் கேட்டு
அநர்த்தப் பட்டுப் போகாதே
அவனை ஆஸ்ரயித்து க்ருதார்த்தராய்
போங்கோள் என்று பரோபதேச பிரவ்ருத்தர் ஆகிறார்-

———————————————————————-

அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு
என்றானுமிரக்க மிலாதவனுக்கு உறையுமிடமாவது இரும் பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-

நடந்தது -எல்லை நடந்து -அளந்த என்றவாறு

———————————————————————————

வியாக்யானம் –

அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி –
முன்பு பண்டு ஒரு நாள்
நப்பின்னை பிராட்டியாரோடும்
அழகிய தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய
பெரிய பிராட்டியாரோடும்-( ஸ்ரீ ருக்மிணித் தாயாரோடும் )
விரும்பிக் -கலந்து

அவுணர்க்கு என்றானுமிரக்க மிலாதவனுக்கு –
அவர்கள் உடன் கூட இருந்த போதும்
அசுர வர்க்கத்துக்கு ஒரு காலும் இரக்கம் இல்லாத வனுக்கு –

உறையுமிடமாவது
நித்ய வாஸம் பன்னுகைக்கு ஸ்தானம் ஆவது –

இரும் பொழில் சூழ் —
பரந்த பொழிலாலே சூழப் பட்ட –

நன்றாய புனல்-
நல்ல ஜல சம்ருத்தியை உடைத்தான –

நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர் –
திரு நறையூர் –
இப்படிப்பட்ட நன்மைகளை உடைய திருவாலி -திருக் குடந்தை –
தடாகங்கள் திகழா நின்றுள்ள திருக் கோவலூர் –
இவை துடக்கமானவற்றில் –

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு
திரு நறையூரிலே நின்றான்
திருவாலியிலே இருந்தான்
திருக் குடந்தையிலே சாய்ந்தான்
திருக் கோவலூரிலே நடந்தான் –

இடம் மா மலையாவது நீர் மலையே –
மலையாய் இருக்கச் செய்தே அல்லாதவை
வாஸஸ் ஸ்தானம் ஆகிறது இல்லை இறே –
(மா விசேஷணம் மற்ற மலைகளுக்கு வியாவ்ருத்தம் )

உகந்து அருளின நிலங்களில் எங்கும் பண்ணக் கடவ
விருப்பத்தைப் பண்ணிக் கொடு வந்து
சந்நிஹிதனான தேசம் திரு நீர் மலை-

————-

நெறி எல்லாம் எடுத்து உரைத்த ஸ்ரீ கீதாச்சார்யன் இன்றும் நாம் சேவிக்கும்படி-
ஸ்ரீ பார்த்த சாரதி -ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன்
நின்றும் நடந்தும் கிடந்தும் இருந்தும் பரந்தும் ஐவர் சேவை –
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் பலராமன் சாத்விகி அநிருத்தன் பிரத்யும்னன் இப்படியும் ஐவர்
நம்மாழ்வார் -தேர் கடவிய பெருமான் கனை கழல் சேவிக்கப் பெறுவேன் -நம்மாழ்வார் மங்களாசாசனம்
பெற்றே புறப்பாடு இன்றும் -திருத்தேர் புறப்பாடும் நம்மாழ்வார் சந்நிதிக்கு அருகிலே –

கீழே இவரை வசீகரித்த ராம கிருஷ்ண அவதாரமும்
கிடை அழகையும்
சிங்க வேழ் குன்றம் ஸ்ரீ நரசிம்மம்
திரு வேங்கடத்தில் கஜேந்திர வ்ருத்தாந்தம் கஜேந்திர வரணும் இங்கே சேவை
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் -ஐவரும்
மன்னாதன் -சயனம் தகிரு எவ்வுள் போலே
இப்படி இரண்டு வித சங்கதி )

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் –
ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபவனாய் –
ஆஸ்ரித சுலபனாய் –
இதர விஸாஜதீயனாய் –
இருக்கிற சர்வேஸ்வரன்
இக் குணங்கள் தான் தர்மி அனுவர்த்திறவோபாதி
எங்கும் அனுவர்த்திக்குமவை இறே –

இப்படி இருக்கிறவன் மனுஷ்யராய் இருப்பார்
புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கலாம் படி-( இண்டை கொண்டு பாசுரம் கீழே பார்த்தோம் )
வந்து கிடந்த மாத்ரம் அன்றிக்கே-

ஒரு திர்யக்குக்கு இப் பூவில் செவ்வி அழியாதபடி திருவடிகளில் பரிமாற வேணும்
என்று இடர் பட -(மீனமர் பொய்கை பாசுரம்)
அவ்விடர் தீர்க்கைக்காக-
அது இடர் பட்ட மடுவின் கரையிலே-
அரை குலையத் தலை குலைய வந்து விழுந்து-
அத்தை ஆற்றி-

இன்னமும் இப்படி இடர் படுவார் உண்டோ என்று
சாய்ந்து அருளினான் கண்டேனே -என்கிறார் –
(மன்னாதன் தானே இங்கே முன்னம் )

——————————————

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-1-

சிற்றவை-நடுவில் ஆய்ச்சி -மாற்றுத் தாய்-
தேவை–ஸ்வாமியை –

——————

வியாக்யானம் –

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் –
விற் பெரு விழா வாயிற்று
சத்ரு நிரசனம் பண்ண நினைக்கிறான் ஆகையாலே -பெருக்கக் கோலினான் -ஆயிற்று –
அத்தைக் கோலின கம்சனும்

அவனுக்கு பலமாய் மலை துள்ளினாற் போலே
பெரிய கிளர்த்தியோடே கூடின மல்ல வர்க்கமும் –

அவர்கள் பார்க்கிலும் கண் பாராதே இடையற வீசும்படி
மதிப்பித்து ( மதமூட்டி ) வழியிலே நிறுத்தின ஆனையும்

அத்தை தள்ளினாலும் அது தன்னை உயிர்ப்புள்ளது போலே
நடத்த வல்ல -பாகனும் –

வீழ செற்றவன் தன்னை-
ஏகோத் யோகத்திலே நிரசித்தாற் போலே
வினை செய்த சடக்கு-
(வார் கெடா -கஞ்சனை குஞ்சி பிடித்து -வரிசையாக நம்மாழ்வார் -இங்கு அக்ரமம் )

புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை –
திரிபுர தஹந அபதாநத்தாலே சஞ்சாத அபிமாநனான -ருத்ரன்
பிதாவுமாய் -லோக குருவுமாய் -இருக்கிறவன் தலையை அறுத்து -பாதகியாய் இருக்கும் –
மதிப்பனாய் இருக்கிறவன் எளி வரவு பட ஒண்ணாதே -என்று அத்தைப் போக்கி
அத்தாலே லோகத்துக்கு எல்லாம் தானே ஆஸ்ரயணீயன் என்னும் இடத்தை- வெளி -இட்டவன் –

தத்ர நாராயண ஸ்ரீ மான் மயா பிஷதாம் ப்ரயா சித விஷ்ணு பிரஸாதாத் –
சர்வேஸ்வரன் பிரஸாதத்தாலே
ஸூஸ்ரோணி
அவனைக் கிட்டுகையாலே உன் வடிவு அழகு சுலபமாக பெற்றது இறே-என்கிறான்-

(மாத்ஸ்ய புராணம் -வாம அங்குஷ்ட நகத்தால் கிள்ளப்பட்டது -கபாலித்தவம் பவிஷ்யதி சாபம் –
பூ தல புண்ய க்ஷேத்ரம் போனேன் ஹிமாசலம் சென்றேன் -பதரி விசால் பெருமானைப் பிரார்த்தித்தேன்
ரத்தம் வியர்வை கபாலம் பட்டு வெடிக்க ஸ்வப்ன தனம் போல் கபாலம் தொலைந்தது
இதனாலே உன் வடிவு அழகு சுலபமாக பெற்றது என்று பார்வதி இடம் சொன்னானே )

பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு –
பற்றலர் -உண்டு -சத்ருக்கள்
அவர்கள் முடிந்து போம் படி
ஆயுதம் எடுக்க ஓட்டோம் என்றவாறே
குதிரைகளை நடத்தும் கோலைக் கையிலே கொண்டு –

பார்த்தன் தன் தேர் முன்னின்றானை –
ரதியைச் சீறினால்
சாரதியை இறே அழியச் செய்வது
அவனை பின்னே இட்டு -தன்னை அம்புக்கு இலக்காக்கி –
நின்றவனை

சிற்றவை பணியால் முடி துறந்தானை-
மாற்றுத் தாய் சொன்ன வார்த்தைக்காக
ப்ராப்தமாய் வருகிற முடியை சந்யசித்தவனை

ந நூநம் மம கைகேயி
சக்கரவர்த்தி வார்த்தை சொல்ல மாட்டாமையாய் இருக்கிறான் அத்தனை-
உம்முடைய தம்பிக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்-
உம்மைக் காடேறப் போகக் காணும் அவன் நினைத்து இருப்பது –
என்று சக்கரவர்த்தி கருத்தைச் சொல்ல

அத்தைக் கேட்டு நடுவில் ஆய்ச்சி –
திருவடிகளிலே அழகியதாய் ஸூஸ் ரூஷித்தோம் என்று இருந்தோம்
நம் பக்கல் ஒரு குணம் உண்டாக நினைத்து இராமை இறே
தாம் போகச் சொல்லாமே அய்யர் கருத்தாக அருளிச் செய்தது -என்று
ஐயரோ பாதியாகவோ உம்மை நினைத்து இருப்பது –
அவரை ஈஸ்வரராகவும்
உம்மை ஈஸ்வர தரையாகவும் இறே நினைத்து இருப்பது -என்றார் இறே-

(ஒவ் ஒரு பாசுரத்துக்கும் ஸ்வா பதேசமும் அருளிச் செய்கிறார் )
விரோதி வர்க்கத்தை கிழங்கு எடுக்குமவனாய் –
ஈஸ்வர அபிமாநிகளுக்கு இடர் வந்தால் போக்குமவனாய் –
தனக்கு ஸ்நேஹிதர் ஆனார்க்காகத் தன்னை அழிய மாறுமவனாய் –
போலியான ஸ்நேஹிகளுக்கும் ஏவிற்றுச் செய்யுமவனானவனை –

திருவல்லிக்கேணிக் கண்டேனே
திருவல்லிக்கேணியிலே காணப் பெற்றேன்
என்கிறார்

———————————————

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை யமுதை யென்னை யாளுடை யப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே–2-3-2-

மயிலாப்பூர் படைவீடு
திரு வல்லிக்கேணி ஆரண்யம்

கனி-நிரதிசய போக்யம்
நந்தனார் களிற்றை-வேழ போதகம் -யானைக்குட்டி
யாளுடை யப்பனை-அடிமை கொண்ட உபகாரகன்
மா-செல்வம் நிறைந்த மாதவன் கேசவன் பார்த்தசாரதி உள்ளடக்கிய செல்வம்

———————————————————–

வியாக்யானம் –

வேதத்தை –
த்ரை குண்ய விஷயா வேதா –
என்கிறபடியே எல்லார்க்கும் ஹிதம் சொல்லப் போந்த
வேதத்தை தனக்கு விபூதியாக உடையவன்

வேதத்தின் சுவைப் பயனை –
வேதோக்தமான கர்மங்களை அநுஷ்டித்து
ராஜசராயும் தாமசராயும் சாத்விகராயும் உள்ளாருக்கு
அவ்வவருடைய ருசி அநு கூலமாக பல பிரதானம் -பனண்ணுமவன் –
(அ சாஸ்திரம் படி செய்பவர் அசுரர்
சாஸ்திரம் முக் குணம் உள்ளோருக்கும் )

விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை-
கர்ம பாவனை யாதல் உபய பாவனை யாதல் அன்றிக்கே
கேவலம் ப்ரஹ்ம பாவனையாயே இருக்கும்
சநகாதிகளுக்கு நிரதிசய போக்யனாய் உள்ளவனை –

நந்தனார் களிற்றை-
ஸ்ரீ நந்த கோபர்க்கு தன்னுடைய
அதி மானுஷ சேஷ்டிதங்களாலே
எப்போதும் ஒக்க இனியனானவனை –

குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை-
பூமியில் உள்ளார் -காரணந்து த்யேய -என்கிறபடியே
தன்னையே ஆஸ்ரயிக்கும் படி
ஜகத் காரண பூதனாய்  உள்ளவனை –

யமுதை-
அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனை –

யென்னை யாளுடை யப்பனை-
அவர்களுக்கு எல்லாம் புறம்பாய் இருக்கிற என்னை
அடிமை கொண்ட உபகாரகனை –

ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாட மா மயிலை-
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்பன்
என்று பிராட்டி ப்ராதான்யமேயான ஊராகையாலே
பிராட்டி பரிகரமே யாயிற்று –

நா நயோர் வித்யதே பரம் -என்று
அவள் விபூதியும் ஈஸ்வர விபூதியுமாய்
இரண்டு கூறாய் இறே இருப்பது –
(தேவர் திர்யக் மனுஷ -புருஷன் ஹரி -ஸ்த்ரீ தன்மை ஸ்ரீ லஷ்மீ -மைத்ரேயருக்கு )

மயிலாப்பூர் என்று படை வீட்டுக்கு பேர் –
திரு வல்லிக்கேணிக் கண்டேனே –

—————————————

நந்தனார் களிறு என்றவர் மற்ற பிள்ளைச் சேவகங்களையும் அனுபவிக்கிறார் –

வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேயலறி மண் சேர
நஞ்சமர் முலை யூடுயிர் செக வுண்டநாதனைத் தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்யப் பெண்ணுருவாகி
அஞ்சுவை யமுத மன்றளித்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே-2-3-3-

விஞ்சை வானவர் -வித்யாதரர்
வியந்துதி-வியந்து துதி – கடைக்குறை

————————————————————–

வியாக்யானம் –

வஞ்சனை இத்யாதி –
தாய் வடிவு  கொண்டு வஞ்சிக்க வந்த
பூதனை கதறிக் கொண்டு போய்
பூமியிலே விழும்படியாக
விஷம் நிரம்பின முலை வழியே
அவளுடைய பிராணன்கள் போம் படி அமுது செய்த –

நாதனை –
தனக்கு சேராத வடிவு கொண்டு
உலகத்துக்கு பிராணனான தன்னை நலிய வந்தவளை
முடித்து தன்னைத் தந்தவன்
ஸ்தந் யம்தத் -(விடமும் அமுதமும் சமம் -பிராணன் உடன் சேர்ந்து குடித்தார் -ரசமாக இருந்ததாம்
ஜகத் குருவுக்கு -விஷ்ணு புராணம்
பன்னிரண்டு மைல் நீளமாக உடல் விழுந்ததாம் வில் கடை தூரம் அன்று –
கொழு மோர் கொடுத்தாள் தாய் பரிந்து இவன் அச்சம் தீர்க்க )

தானவர் கூற்றை –
ஆசூர வர்க்கத்துக்கு ம்ருத்யு வானவனை

வித்யாதரர் சாரணர் ஸித்தர் உள்ளிட்ட
தேவ வர்க்கம் அடைய விஸ்மிதராய்
ஸ்தோத்ரம் பண்ணும்படி –

புருஷோத்தமனான தனக்கு சேராத வடிவைக் கொண்டு
அம்ருதத்தை அனுகூலரை புஜிக்கும் படி பண்ணினவனை –

————————

(பூதனை நிரசனத்து அளவு இன்றிக்கே த்ரை லோக இந்திரன் கல் மழை பொழிய –
கடுங்கால் மாரி கல்லே பொழிய -கோவர்த்தன விருத்தாந்தம் அனுபவம் இதில் )

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடு இனவானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே –2-3-4-

———————————————————————

வியாக்யானம் –

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் –
திரு ஆய்ப்பாடியில் உள்ளார் த்ரை லோக்ய ஈஸ்வரனான
இந்த்ரனுக்காக வருஷார்த்தமாக ஆண்டுக்கு ஒரு
விருந்திடக் கடவர்களாய் –

நாம் பிறந்து வளருகிற ஊரிலே
புரோடாசத்தை நாய் தின்றாற் போலே
ஒரு தேவதை வந்து புஜிக்க யாவது என் -என்று
நீங்கள் செய்யப் புகுகிறது தான் என்ன -என்று கேட்டான் –

நாங்கள் இந்தரனுக்கு வருஷார்த்தமாக விருந்திடப் புகுகிறோம் என்றார்கள்

இந்த மலை யன்றோ நமக்கும் பசுக்களுக்கும்
ஒதுங்க இடமும் தந்து -புல்லும் தருகிறது
ஆரேனுக்குமோ பிரத்யுபகாரம் பண்ணுவது இம் மலைக்கு இடுங்கோள் -என்றான் –

முகத்தைப் பார்த்து ஓன்று சொன்னால் மறுக்கலாம் படி அன்றே இருப்பது –
ஒன்றாகக் கொடு வந்து குவித்தார்கள் –
(வாய் திறந்து ஓன்று பணித்தது ஓன்று -அழகைக் கண்டவள் ஏது என்று அறிய மாட்டாளே )

இந்த்ரன் இத்யாதி –
இந்தரனுக்கு என்று இடையர் எடுத்த
எழில் உடைத்தான விழவிலே
முன்பு செய்து போரும் படியிலே
மந்த்ரோக்தமான படியே பண்ணுகிற
அநுஷ்டான ரூபமான பூஜையை பெறாமையாலே

அவன்
பசி க்ராஹத்தாலே கோபித்து மஹா வர்ஷமாக வர்ஷிப்பிக்க –
அத்தாலே இடையரானவர்கள் தளர்ந்து

ரஷகரான எங்களோடே
எங்கள் உடைய ரஷ்யமான பசுக்களும் தளராதபடி
நோக்கி அருள வேணும் -என்ன –

இத்தால்
புறம்புண்டான ரஷ்ய ரஷக பாவமும்
அப்ரயோஜகம் என்றபடி –

அந்தமில் –
அந்த மழையின் அளவு அல்லாத
பெரிய மலையாலே
மழையைத் தடுத்து –

(தேவதாந்த்ர பிரசாதம் தனது அநந்யார்ஹ பக்தர்களுக்கு கூடாதே -தானே உண்டான் -அவனுக்கு எல்லாம் ஆகுமே )

அப்படியே
பஹுதா சந்தத துக்க வர்ஷிணி -என்கிற
என்னுடைய சம்சாரம் ஆகிற வருஷத்தை
பரிகரிக்க வந்தவன்..

——————

அதி மானுஷ சேஷ்டிதங்களை அனுபவித்து -ஸ்ரீ பூமா நீளா தேவி நாயகனாய் இருந்து
வைத்தும் தூது சென்றான் என்று ஈடுபடுகிறார்

இன் துணைப் பதுமத் தலர்மகள் தனக்குமின்பன் நற் புவி தனக்கிறைவன்
தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றை யோர்க்கெல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-5-

நற் புவி-ஷமை பிருத்வி சமாயா –
தன் துணை யாயர் பாவை-தன்னையே துணை இவளுக்கு மட்டும் தந்தை சுல்கம் வைத்து பற்றினான்

———————————————————-

வியாக்யானம் –

இன் துணைப் பதுமத் தலர்மகள் –
நெஞ்சுக்கு இனிய துணையாய் இருக்கிற
பதுமத்தலர் மகள் உண்டு –
தாமரைப் பூவை உத்பத்தி ஸ்தானமாக உடைய பெரிய பிராட்டியார்
அவளுக்கு இன்பனானவன் –

தனக்குமின்பன் —
எல்லார்க்கும் ஸ்ப்ருஹணீயையாய் இருக்கிற
பெரிய பிராட்டியார் தான் -அகலகில்லேன் -என்று
விரும்பி வர்த்திக்கும்படி அவளுக்கு ஸ்ப்ருஹணீயனானவன் –

நற் புவி தனக்கிறைவன் –
சர்வேஸ்வரனான தனக்கும் கூட
பொறைக்கு உவத்தாய் இருக்கிற
பூமிப் பிராட்டியாருக்கு வல்லபனானவன் –
(புவிக்கு இல்லாமல் புவி தனக்கும் என்பதால் -பொறுமைக்கு இவள் சம்பந்தமே காரணம் )

தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை-
தன்னையே துணையாக உடையாளான
ஆயர் பாவை உண்டு -நப்பின்னை பிராட்டி –
அவளுக்கு ஸ்வாமி யானவன் –
(சர்வேஸ்வரன் -நீர் வார்த்து கொடுத்துப் பெற்றான் -இவளையே -ஆகவே தன் துணை இவளுக்கு விசேஷணம் )

மற்றை யோர்க்கெல்லாம் வன் துணை –
இப்படி இருக்கையாலே
அல்லாதார் எல்லார்க்கும் வலிய துணை யானவன் –

பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும் என் துணை-
ஆஸ்ரிதரான பாண்டவர்களுக்காக
அவர்கள் வாயில் சொல்லி விட்ட வார்த்தையை அங்கே சென்று சொல்லுவது –
இங்கே வந்து அறிவிப்பதாய் –
இப்படி ஆஸ்ரித விஷயத்தில்
தாழ நின்ற நிலையாலே தானே துணை என்னும் இடத்தை
(தூது இயங்கும் என் துணை -என்பதால் )
எனக்கு அறிவித்தவன் –

எந்தை –
எனக்கு ஸ்வாமியாய் –

தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –
என் குலத்துக்கு நாதன் ஆனவன் -.

———————————

தூது சாரத்யங்கள் பண்ணிற்றும் திரௌபதி உடைய மங்கள ஸூத்ரத் தக்காகவே -பிரதான ஹேது –

அந்தகன் சிறுவன் அரசர் தமரசற் கிளையவன் அணி யிழையைச் சென்று
எந்தமக்குரிமை செய்யெனத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமில் குழலாள் அலக் கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே -2-3-6-

அரசர் தம் அரசன் ராஜ ராஜன் -துரியோதனன் அவன் நினைவால்
அணி யிழை-அப்படிப்பட்டவள் இப்படி மூன்று நாள்கள் இருக்கும் பொழுதும்
அலக்கண் -துக்கத்தை
இந்திர புத்ரன் -அர்ஜுனன் -வாலி -அங்கு
சூர்ய புத்ரன் -கர்ணன் -சுக்ரீவன் -அங்கு

——————————————————-

வியாக்யானம் –

அந்தகன் சிறுவன்
குருடன் பெற்ற பிள்ளை யாயிற்று
இத்தால் அறிவு  கேடு வழி வழி வருகிறது என்கை –
பிதாவானவன் கண் அஞ்ச வளர்க்க வளருகை அன்றிக்கே
தான் கண்டபடி மூலையடையே திரிந்தவன் –

அரசர் தமரசற் கிளையவன்
ராஷச ராஜாவான துரி யோதனனுக்கு பின் பிறந்தவன் –
துச்சாதனன் -என்றபடி –
அவன் கொண்டாடி வளர்க்க -செருக்காலே வளர்ந்தவன் என்று
தீம்புக்கு உறுப்பாக சொல்லுகிறது –
(யவ்வனம் -தன சம்பத்- பிரபுத்வம் – அவி விவேகம் நான்கும் இருந்தால் கேட்க வேண்டுமோ )

அணி யிழையைச் சென்று —
மஹோ உத்சவம் ஆகையாலே
ஆபரணங்களாலே அலங்க்ருதையாய் நின்றவள்
பக்கலிலே கிட்டி –

எந்தமக்குரிமை செய்யென-
சூதிலே உன்னையும் தோற்றார்கள்
நீ போந்து எங்களுக்கு இழி தொழில் செய் -என்ன –

தரியாது –
அவள் அந்ய சேஷத்வத்தை பொறுத்து இலள் ஆயிற்று –
இவ்வளவில் ஸ்வாமி யான நீ என் பக்கல் கிருபை பண்ண -வேணும் என்ன

ஆண் பிள்ளைகளான பர்த்தாக்கள் சந்நிதிஹிராய் இருக்க
தூரஸ்தனான கிருஷ்ணன் பேரைச் சொல்லுவான் என் என்று
எம்பாரைக் கேட்க
அறிந்தோமே -முன்பே சில ஸூரு ஸூரூ கேட்டு வைத்தாள் -போலும்
மஹத்யாபதி யம்ப்ராப்தே ஸ்மர்தவ்யோ பகவான் ஹரி –என்று
(வசிஷ்டர் சொல்ல கேட்டு இருக்கிறாளே )

இது தன்னைப் பட்டரைக் கேட்க
பர்த்தாவின் கையைப் பிடித்துப் போகா நின்றாலும்
இடறினால் அம்மே -என்னக் கடவது காண் -என்று அருளிச் -செய்தார்
அர்த்தம் அதாய் இருக்கச் செய்தே
விசைப்பு கிடந்தபடி காணும் -விசைப்பு -ஸ்நேஹாதிக்யம்
(எவ்வுயிர்க்கும் தாயாய் இருக்கும் வண்ணமே )

சந்தமல் குழலாள் –
சந்தம் என்று நிறம்
அல் -என்கிற இத்தால் இருளை லஷித்து ( அல்லும் பகலும் இருளும் பகலும் )
நிறம் இருண்ட குழலை உடையவள் என்னுதல் –
அன்றிக்கே
சந்தமல் குழலாள் –
சந்தனப் பூ மாறாத குழலை உடையவள் என்னுதல்

அவள் பட்ட அல்லல் உண்டு –துக்கம் அத்தை
துர் யோதாநாதிகள் உடைய ஸ்திரீகள் பட்டு –
அதில் தன்னேற்றமாக நூலும் இழந்தார்கள் ஆயிற்று –
அவர்களுக்கு துக்கம் நிலை நிற்கும்படி பண்ணினான் ஆயிற்று –

இந்திரன் -இத்யாதி -(ஸ்வாபதேசம் )
வலியார் சிலரை அபாஸ்ரயமாக பற்றினாலும்
தானே தாழ நின்று ரஷகனாக வல்லன் என்னும் இடத்தை சொல்லுகிறது–
த்ரௌபதிக்கு பர்த்தாகள் உதவிற்று இலர்-
அர்ஜுனனுக்கு இந்த்ரன் உதவிற்று இலன் –

———————

(ஈஸ்வரன் தானும் ஆச்சார்ய பதத்தில் ஆசை கொண்டு தேர் தட்டிலும் குரு பரம்பரையில் இடம் பிடித்தான்
சிற்றவை பணியால் முடி துரந்தானே -கீழே பெருமாள் மங்களாசானம் இதில் விரித்து ச குடும்பமாக

ப்ருந்தாரண்ய துளசிக் காடு -நிவாஸாய –
கைரவணி புஷ்கரணி –மீன்கள் இல்லாதது
துர்வாசர் சாபத்தால் விஸ்வகர்மா-உடல் அற்று கீழே விழ சபித்து -அ ரஜ நதிக்கரையில் –
சாபம் போக இங்கு தபஸ் அங்கங்கள் பெற்றார்
ஆர்த்ரேயர் வியாசர் இருவரும் -வியாசர் எழுந்து அருளப்பண்ணிய வேங்கட கிருஷ்ணம்
வலது திருக்கையில் பாஞ்ச ஜன்யம்
இடது திருக்கையில் தான ஹஸ்தம் வைகுண்டம் ஹஸ்தம் ஞான முத்திரை
ஒரு திருவடி முன் வைத்து பார்த்தனை கடாக்ஷித்து -சாட்டை வைத்து பார்த்தசாரதி சேவை
சேஷ பீடத்தில் ஒட்டியாணம் நாகாபரணம் தரித்து ஹிரண்ய மீசை
சுமதி அரசன் -இரண்டு தோள் அமுது
அத்ரி முனிவர் தபஸ் -அத்ரி குமாரர் ஆர்த்ரேயர் நரசிம்மர் )

ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் நடுவில் வழி பரிப்பாரைப் போல் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் -சிற்றவை –
நெஞ்சுக்குள் புகுந்து பாடல் பெறுகிறார் இங்கு –

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7–

காட்டுக்கு கூட சென்றவர்களும் செல்லாதவர்களும் பிரித்து-

————————-

வியாக்யானம் –

பரதனும் தம்பி சத்ருக்கனனும்-
ஸ்ரீ பரதாழ்வானும்
அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் –
(கச்சதா மாதுல குலம் அ ந க -என்பதால் இங்கு தம்பி-உடைவாள் போல்வான் )

இலக்குமனோடு மைதிலியும் –
இதுவும் இங்கனே  ஒரு சேர்த்தி –
ஸீதே ஸ லஷ்மணாம் -என்கிறபடியே தாயும் பிள்ளையுமாய் இருக்கிற சேர்த்தி –
பெருமாளைப் பிரியில் தரியாமையால் உண்டான சேர்த்தியுமாம் -( அக்குளத்தில் மீன் முஹுர்த்தம் அபி ஜீவிதம் )
ராவண வதத்தின் அன்று விஜய கோஷத்தின் சடக்கு கேட்டு இருக்கையில் உண்டான சேர்த்தியுமாம் –

இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற-
சமரம் காலத்திலே கண்டு அனுபவித்தார்களோடு –
கேட்டார் வாய் கேட்டாரோடு வாசி யற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று –
தேசிகர் அடங்கலும் திரள் திரளாக நின்றாயிற்று ஏத்துவது –
(சத்ருக்களும் கொண்டாடும் பெருமாள் -வேண்டியவர்களுக்கு கை விடுவார்கள் கண்ணனை-
தீர்த்த யாத்திரை போனார் நம்பி மூத்தபிரான் –
கேட்டார் கேட்ட வாய் ஸ்தோத்ரம் பரத சத்ருக்னர்கள்
ராவண விஜயம் கேட்டவர்களும்-கேட்ட வாய் கேட்டவர்களும்
முதலிகளும் தேவர்களும் ரிஷிகளும் )

இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற-
நமக்கும் ஓர் காலம் நெஞ்சு ஒழிந்த போது ஏத்துவது என்று ஓன்று அன்றோ
அங்கன் இன்றிக்கே
திவ ராத்ர விபாகமற கிட்டினதனையும் ஆழம் கால் படுகைக்கு
உடலான வித்தனை -( கண்டு அறிவாரும் கேட்டு அறிவாரும் )

இராவணாந்தகனை –
இப்படி ஏத்துவது தான் ராவண வதம் பண்ணின
அபதானம் ஒன்றுமே ஆயிற்று –

யெம்மானை –
அவர்களோபாதி நானும் தோற்று
ஏத்தும்படி -பண்ணினவனை

குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
குரவம் கமழா நிற்பதாய்
ஸ்ரமஹரமான
பொழிலின் ஊடே
குயில்களோடே கூட
மயில்கள் ஸ ஸம் ப்ரம ந்ருத்தம் பண்ண –

இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –
ஈஸ்வர ஆஞ்ஞை நடை யாடாத தேசம் ஆயிற்று –
பீஷோ தேதி -தைத்ரியம் -என்றது அவ்விடத்தை ஒழிய யாயிற்று-
(ராவணனுக்கு அஞ்சிய ஸூர்யன் ராவணாந்தகனுக்கு அஞ்சுவது சொல்ல வேண்டுமோ-
பகதர்கள் பாகவதர்கள் ஆணை நடமாடும் இடம் )

——————————

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—-2-3-8-

ஒள்ளியவாகி-அழகாக
ஆஹ்வாத ஹஸ்தம்-பூரிப்புடன் திரு முகம்

—————————————————————

வியாக்யானம் –

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் –
பள்ளி ஓதும் பருவத்தில் சொன்னவை அடங்கலும்
சிரஸா வஹிக்க வேண்டும்படி இருக்கும் –
இதாயிற்று பருவம் -இருந்தபடி –
அதுக்கு மேலே தன் வயிற்றில் பிறந்த பிரஜை
சொன்னவை அடையப் பொறுக்க வேணும் –

வாயில் ஓர் ஆயிர நாமம் –
அவன் அப்போது சொல்லிற்று
நால் இரண்டாகிலும்
பருவத்துக்கு தக்க அளவல்லாதபடி
இருக்கையாலே குவாலாகச் -சொல்லுகிறார் –

நால் இரண்டு -திரு அஷ்டாஷரம் ஆகவுமாம்
நாராயண -ஹரி என்றுமாம்
விஷ்ணு ஷட் அஷரி-யாகவும் –

ஒள்ளியவாகிப் போத –
வயிற்றில் பிறந்தவன் சொல்லுகையாலே
இனிதாய் இருக்குமே –

வாங்கு –
அவ்விடத்தில் –

அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி –
பள்ளியில் ஓதும் பருவத்தில் சொல்லுவது எல்லாம் பிரியமாய் இருக்கும் –
தன் வயிற்றில் பிறந்தவன் சொல்லிற்று எல்லாம் இனிதாய் இருக்கும் –
சத்ருவே சொன்னாலும் சிரசா வஹிக்க வேண்டுமத்தை சொல்லிற்று –
அசஹ்ய அபசார ப்ராசுர்யத்தாலே
திரு நாமம் கேட்டுப் பொறுக்க மாட்டாமையாலே
முனிந்தான் ஆயிற்று –

பிள்ளையை-
திரு நாமம் சொன்னதுவே ஹேதுவாக வயிற்றில் பிறந்தவனை
கை விட்டான் அவன் –
திரு நாமம் சொன்னாரோடே தமக்கு சம்பந்தமாக நினைத்து
இருக்கிறபடியாலே -பிள்ளையை –என்கிறார்

சீறி வெகுண்டு தூண் புடைப்ப-
கோபத்தாலே செய்வது அறியாதே
தூணைத் தட்ட –

பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய் –
பிறை போலே இருந்த எயிற்றையும்
அக்நி போலே இருந்த கண்களையும்
புறப்பட விடா நின்றுள்ள பெரிய வாயையும்- உடைய -( இவையாய் பிலவாய் )

தெள்ளிய சிங்கமாகிய தேவை திருவல்லிக்கேணிக் கண்டேனே –
ஹிரண்யன் உடைய முரட்டு வடிவைக் கண்டு பிற் காலியாதே
நரசிம்ஹமாய்
அவ்வழியாலே தானே ஆஸ்ரயணீயன்
என்னும் இடத்தை வெளி இட்டான் –

——————————

ஆண் பிள்ளை ஐவருக்கும் பெண் பிள்ளைக்கும் சிறுக்கனுக்கும் உதவியது அன்றிக்கே
திர்யக்குக்கும் ஒரு திரியக்கால் வந்த நோவுக்கு அரை குலையத் தலை குலைய வந்த
மஹா குணத்தில் கட்டுண்டு அனுபவிக்கிறார்

மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா வதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே-2-3-9-

———————————————

வியாக்யானம் –

மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த –
நெடுநாள் பூத் தேடி பெறாமையாலே
இடர் பட்டுத் திரிந்த விது –
பூத்த தடாகத்தைக் கண்டு –
ஷூத்ர மத்ஸ்யத்துக்கு மேற்பட துஷ்ட தத்வம் உண்டு என்று மதியாதே
வந்து செவ்விப் பூவைப் பறிக்கைகாக பெரிய அபிநிவேசத்தோடே
வந்து இழிந்த –

கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா வதன் காலினைக் கதுவ  –
காட்டிலே ஸ்வ சஞ்சாரம் பண்ணக் கடவ யானையானது
கை எடுத்துக் கூப்பிடும்படியாக
முதலை யானது இதின் காலைக் கதுவ –
முதலைக்கு தன்னிலமாய்
இதுக்கு வேற்று நிலமாயிற்று –

ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை –
ஆனை நெடு நாள் பட்ட இடர் எல்லாம்
போம்படியாக
பெரிய திருவடியை மேற் கொண்டு வந்து
ஆனைக்கு இடர் இன்றிக்கே
முதலைக்கே இடர் ஆம்படியாக
திரு வாழியை ஏவினான் ஆயிற்று –

தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –
வண்டுகள் அமர்ந்த சோலையையும்
மாடங்களையும் உடைத்தான
மயிலாப்பூரில் திருவல்லிக்கேணிக் கண்டேனே –

——————

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர் கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர் வானுலகே—2-3-10-

பாண்டிய தேச அரசர் வம்சம் -தென்னன்
நின்றானை-ஸ்ரீ வேங்கட கிருஷ்ணனை –
இவர் பாடலே இவனுக்கு அரண் -ஆகவே மதிள் மங்கை நாட்டில் இருக்க வேண்டுமே
சீர்-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ
சொல் மாலை -ஸப்த சந்தர்பமான

——————————-

வியாக்யானம் –

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
நித்யமாய்
குளிர்ந்து இருந்துள்ள பொழிலும்
நீர் நிலங்களும்
அரணாகப் போரும்படியான மதிள்களும்
மாடங்களும்
மாளிகைகளும்
மண்டபங்களும்-

தென்னன் தொண்டையர்கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை –
இன்னமும் சொல்லிச் சொல்லாத நன்மைகளும் எல்லாம்-( நன் மயிலை-சொல்லாத நல்லவைகளும் )
உண்டாம்படி யாயிற்று
தொண்டமான் சக்கரவர்த்தி ஏற்றிற்று –

கன்னி நன் மாட மங்கையர் தலைவன் –
அரணாகப் போரும்படியாய்
நன்றாய் இருக்கிற மாடங்களை உடைய
திருமங்கைக்கு ப்ரதானர் –

காமரு சீர்க் கலிகன்றி -சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார்-
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை உடைய
ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும்
அப்யசிக்க வல்லார்கள் –

சுகமினி தாள்வர் வானுலகே –
நித்ய அனுபவம் பண்ணலாம் படியான
நித்ய விபூதியைப் ப்ராபிக்க பெறுவர் .

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

வில் நுதல் அண்டர் கரிக்கு சார்வு பற்றாய் நீக்கியவர்
அல்லல் கிடந்தது இருந்து நின்று புள்ளூர் -செல்வனாம்
ஓர் அஞ்சுவை அமுதைக் கண்டான் கலிகன்றி
சீர் அல்லிக் கேணியுள் அன்று–13-

சார்வு -ரக்ஷகத்வம் /பற்று -சரண்யத்வம்/ஓர் -அத்விதீயம் -ஓர்தல் -என்றுமாம் -/
புள்ளூர் செல்வன் -கஜேந்திர வரத்தான் நித்ய சேவை /
கோயில் திருமலை பெருமாள் கோயில் -ஒரே திவ்யதேச சேவையால் வந்த சீர்மை –
எம்பெருமானாராக அவதரித்த சீர்மையும் உண்டே –
கண்ணனும் ராமனும் குடும்ப ஸஹித சேவையால் வந்த சீர்மையும் உண்டே
அஞ்சுவை அமுதம் -மன்னாதன் கிடந்து-தெள்ளிய சிங்கர் இருந்தும் -பார்த்த சாரதி நின்றும் –
புள்ளூர் செல்வன் வரதன் -மனத்துக்கு இணையான நின்றும் –
கலிகன்றி கண்ட அஞ்சுவை அமுதம் அன்றோ இவர்கள் –
வில் நுதல் -திரௌபதி /அண்டர் தேவர் இடையர் -இருவர் இடர் தீர்த்தமை பாசுரங்களில் உண்டே –

——————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ பரமபதம் -ஸ்ரீ திரு நாடு

March 24, 2024

மூலவர் -பரமபத நாதன் -வீற்று இருந்த திருக் கோலம் -தெற்கே திரு முக மண்டலம்
தாயார் -பெரிய பிராட்டியார்
தீர்த்தம் -ஜரம்மத புஷ்கரிணி -விராஜா நதி
மங்களா சாசனம் -பொய்கையார் -பேயார் -திருமழிசை ஆழ்வார் -நம்மாழ்வார் -குலசேகராழ்வார்
பெரியாழ்வார் -ஆண்டாள் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திருப் பாண் ஆழ்வார் -திரு மங்கை ஆழ்வார்

ஸ்ரீ வைகுண்டம் –நித்ய விபூதி –பரமாகாசம் -பரம வ்யோமம் -தெளி விசும்பு திரு நாடு -நலமந்தம் இல்லாத நாடு
விராஜா நதி நித்ய விபூதிக்கும் லீலா விபூதிக்கு நடுவில்
ஞானம்பக்தி குறை இல்லாமல் -கர்மம் தீண்டாமல் -ஆனந்தமே மிக்கு இருக்கும்
ஸ்வரூப விகாசம் அடைந்த ஆத்மாக்கள் ஸ்ரீ யபதியை அனுபவித்து -அபஹத பாப்மாதி குணங்களில் சாம்யம்
நசப்புனராவர்த்ததே-திக்குகள் இல்லாத தேசம் -வைகுந்தம் புகுவது மன்னவர் விதியே –

பரத அக்ரூர மாருதியை ஆலிங்கனம் செய்த திருமார்பால் ஆலிங்கனம் செய்யப் பட்டு திரு மடியில்
-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத–அம்ருத சாகர ஆனந்த சாகரத்தில் ஆழ்வோம்
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் –பூத புரீசன் -ஆதி கேசவ பெருமாள் -குடி கொண்ட கோயில் -ஸ்வாமி சேவிக்க அனைவரையும் சேவிப்போமே –
நல் தாதை தம் புதல்வன் -சொத்து நமக்காக சரணாகதி –
மணவாள மா முனி ஜீயர் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் வாழி –செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
ஆச்சார்யர் திருவடிகளே சரணம்
நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்-

ஸ்ரீ திருப் பரமபதம்
மூலவர் ஸ்ரீ பரமபத நாதன், ஸ்ரீ வைகுந்த நாதன்
கோலம் வீற்றிருந்த
திருமுக மண்டலம் தெற்கு
தாயார் ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீ நீளாதேவி
தீர்த்தம் ஸ்ரீ விரஜா நதி, ஸ்ரீ ஐரம்மதீய புஷ்கரணி
விமானம் ஸ்ரீ அனந்தாங்க விமானம்
மண்டலம் ஸ்ரீ விண்ணுலகம்
மாநிலம் ஸ்ரீ விண்ணுலகம்
அடிப்படை இடம் ஸ்ரீ விண்ணுலகம்
நாமாவளி ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸமேத ஸ்ரீ பரம பத நாதாய நமஹ

———-

ஸ்ரீ பெரியாழ்வார் –4-பாசுரங்கள் –
ஸ்ரீ ஆண்டாள் –1–பாசுரம்
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் –4-பாசுரங்கள்
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் –1–பாசுரம்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –1–பாசுரம்
ஸ்ரீ நம்மாழ்வார் –33-பாசுரங்கள்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் –2-பாசுரங்கள்
ஸ்ரீ பேய் ஆழ்வார் –3-பாசுரங்கள்

——————————————

ஸ்ரீ பெரியாழ்வார் –4-பாசுரங்கள் –

அண்டத் தமரர்கள் சூழ அத்தாணி யுள்ளங் கிருந்தாய்
வானிள வரசு வைகுந்தக் குட்டன் வாசு தேவன் மதுரை மன்னன்
வடதிசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடமுடை வதரி யிடவகை யுடைய எம் புருடோத்தமனிருக்கை
வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என் பால் இடவகை கொண்டனையே

———–

ஸ்ரீ ஆண்டாள் –1–பாசுரம்

மா மாயன் மாதவன் வைகுந்த னென்றென்று நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்

———-

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் –4-பாசுரங்கள்

மண்ணுளாய் கொல்? விண்ணுளாய் கொல்?
வைகுந்தச் செல்வனார் சேவடி மேற் பாட்டு
தம் மெய், குந்தமாக விரும்புவரே தாமும் தம் வைகுந்தம் காண்பார் விரைந்து
ஆன்றேன் கடன் நாடும் மண்ணாடும் கைவிட்டு மேலை இடநாடு காணவினி.

———-

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் –1–பாசுரம்

அமலனாதி பிரான் அடியார்க் கென்னை யாட்படுத்த விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்

————

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –1–பாசுரம்

அண்டமாய் எண் திசைக்கும் ஆதியாய்! நீதியான பண்டமாம் பரம சோதி! நின்னையே பரவுவேனே

————

ஸ்ரீ நம்மாழ்வார் –33-பாசுரங்கள்

தனது வைகுந்த மன்னாள் கண்ணாய் வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்! கலந்தார் வர
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ? வையமோ? நும் நிலையிடமே
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும் புல்லென்றொழிந்தன கொல்
திண்ணன் வீடு முதல் முழுதுமாய் எண்ணின் மீதியன் எம்பெருமான்
இணைவனா மெப்பொருட்கும், வீடு முதலாம் புணைவன் பிறவிக் கடல் நீந்துவார்க்கே.

துயரில்லா வீடு முதலாம் — என் தனி நாயகன் புணர்ப்பே
புலனைந்து மேயும் பொறியைந்து நீக்கி நலமந்த மில்லது ஓர் நாடு புகுவீர்
சேண் பால வீடோ உயிரோ மற்றெப்பொருட்கும் எண் பாலும் சோரான் பரந்துளனா மெங்குமே
சீர்மை கொள் வீடு சுவர்க்கம் நரகீறா ஈர்மை கொள் தேவர் நடுவா மற்றெப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய்
இப்பத்தும் வல்லார் விண் தலையில் வீற்றிருந்தாள்வர் எம்மா வீடே

எம்மா வீட்டுத் திறமும் செப்பம்
சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம் இறப்பி லெய்துக வெய்தற்க
இவை பத்தும் கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே
சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை உடலொடும் கொண்டு கொடுத்த
விண்ணைத் தொழுது அவன் மேவு வைகுந்த மென்று கை காட்டும்

வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்தற செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை வைகுந்தனாகப் புகழ்
வைகுந்தமும் பாற் கடலும் அஞ்சன வெற்புமவை நணிய கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே-
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏக மெண்ணும் இராப் பகலின்றியே
தெளி விசும்பு கடிதோடித் தீ வளைத்து மின்னிலகும் ஒளி முகில்காள்! திருமூழிக்களத் துறையு மொண் சுடர்க்கு
தெளி விசும்பு திருநாடாத் தீ வினையேன் மனத்துறையும்

திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
திருப் பேரான் தெளிதாகிய சேண் விசும்பு தருவானே
சூழ் விசும்பணி முகில் தூரியம் முழக்கின
உயர் விண்ணில் நீரணி கடல்கள் நின்றார்த்தன
முனிவர்கள் வழியிது வைகுந்தற்கு என்று வந்தெதிரே

மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே
மாதவன் தமரென்று
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமரென்று வாளொண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் தொடர்ந் தெங்கும் தோத்திரஞ் சொல்லினர்
வடி வுடை மாதவன் வைகுந்தம் புகவே

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
விதி வகை புகுந்தனரென்று நல் வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
வந்த வரெதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில் பேரின்பத்து அடியரோ டிருந்தமை

————-

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் –2-பாசுரங்கள் –

விண்ணகத்தாய்! மண்ணகத்தாய்! வேங்கடத்தாய்! நால் வேதப் பண்ணகத்தாய்! நீ கிடந்த பால்
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத பூங் கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும்

————–

ஸ்ரீ பேய் ஆழ்வார் –3-பாசுரங்கள் –

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம் நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பு
பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும் நூற் கடலும்
பண்டெல்லாம் வேங்கடம் பாற் கடல் வைகுந்தம் கொண்டங்குறைவார்க்குக் கோயில்

———————————————————–

ஸ்ரீ பெரியாழ்வார் –4-பாசுரங்கள் –

அண்டத் தமரர்கள் சூழ அத்தாணி யுள்ளங் கிருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சிலுறைவாய். தூ மலராள் மணவாளா!
உண்டிட்டு உலகினை யேழும் ஓராலிலையில் துயில் கொண்டாய்!
கண்டு நான்உன்னை யுகக்கக் கருமுகைப் பூச்சூட்ட வாராய்–பெரியாழ்வார் திருமொழி-2-7-9 –

வானிள வரசு வைகுந்தக் குட்டன் வாசு தேவன் மதுரை மன்னன் நந்த
கோனிள வரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின போது
வானிளம் படியர் வந்து வந்தீண்டி மனமுருகி மலர்க் கண்கள் பனிப்ப
தேனளவு செறி கூந்தலவிழச் சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே. பெரியாழ்வார் திருமொழி -3-6-3–

வடதிசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய எம் புருடோ த்தமனிருக்கை
தடவரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப் பற்றிக் கரை மரஞ்சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென்னும் கடி நகரே. பெரியாழ்வார் திருமொழி -4-7-9-

தடவரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி போல்
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் சோதி நம்பி!
வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என் பால் இடவகை கொண்டனையே –பெரியாழ்வார் திருமொழி -5-4-9–

——–

ஸ்ரீ ஆண்டாள் –1–பாசுரம்

தூ மணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக் கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை யெழுப்பீரோ? உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச்செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ?
மா மாயன் மாதவன் வைகுந்த னென்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.–திருப்பாவை – 9–

————-

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் –4-பாசுரங்கள்

மண்ணுளாய் கொல்? விண்ணுளாய் கொல்? மண்ணுளே மயங்கி நின்று
எண்ணுமெண் ணகப்படாய் கொல்? என்ன மாயை நின் தமர்
கண்ணுளாய் கொல்? சேயை கொல்? அனந்தன் மேல் கிடந்த எம்
புண்ணியா புனந்துழா யலங்கலம் புனிதனே!–திருச்சந்தவிருத்தம் – 45-

நாக் கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக் கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் – பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேற் பாட்டு. –நான்முகன் திருவந்தாதி – 75

ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் – ஏய்ந்த தம்
மெய், குந்தமாக விரும்புவரே தாமும் தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து–நான்முகன் திருவந்தாதி – 79

ஏன்றேனடிமை இழிந்தேன் பிறப்பிடும்பை
ஆன்றேனமரர்க் கமராமை – ஆன்றேன்
கடன் நாடும் மண்ணாடும் கைவிட்டு மேலை
இடநாடு காணவினி. –நான்முகன் திருவந்தாதி – 95-

———

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் –1–பாசுரம்

அமலனாதி பிரான் அடியார்க் கென்னை யாட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிளரங்கத் தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன வொக்கின்றதே. –அமலனாதிபிரான் – 1–

—————–

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –1–பாசுரம்

தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு
கண்டு தான் கவலை தீர்ப்பான் ஆவதே? பணியாய் எந்தாய்!
அண்டமாய் எண் திசைக்கும் ஆதியாய்! நீதியான
பண்டமாம் பரம சோதி! நின்னையே பரவுவேனே. –திருக்குறுந்தாண்டகம் – 11-

————

ஸ்ரீ நம்மாழ்வார் –33-பாசுரங்கள் –

உண்ணா துறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிருமியல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே. –திருவிருத்தம் – 66

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலை பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்!
கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே.–திருவிருத்தம் – 68

உலாகின்ற கெண்டை யொளி யம்பு எம் மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள் முகத்தீர்! குனி சங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம் பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ? வையமோ? நும் நிலையிடமே. –திருவிருத்தம் – 75

கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்
புல்லென்றொழிந்தன கொல்? ஏ பாவம்! – வெல்ல
நெடியான் நிறங் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேன துள்ளத் தகம். –பெரிய திருவந்தாதி – 68

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணுமெல்லாம் உடனுண்ட நம்
கண்ணன் கண்ணல்லது இல்லையோர் கண்ணே.–திருவாய்மொழி -2-2-1–

அணைவ தரவணை மேல் பூம் பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனா மெப்பொருட்கும், வீடு முதலாம்
புணைவன் பிறவிக் கடல் நீந்துவார்க்கே. –திருவாய்மொழி -2-8-1-

நீந்தும் துயர்ப் பிறவி உட் பட மற்றெவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந் தண் புனற் பொய்கை யானை யிடர்க் கடிந்த
பூந் தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே–திருவாய்மொழி -2-8-2-

புலனைந்து மேயும் பொறியைந்து நீக்கி
நலமந்த மில்லது ஓர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமினோவாதே–திருவாய்மொழி -2-8-4-

காண்பாரார்? எம் மீசன் கண்ணனை யென் காணுமாறு?
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால வீடோ உயிரோ மற்றெப்பொருட்கும்
எண் பாலும் சோரான் பரந்துளனா மெங்குமே–திருவாய்மொழி -2-8-8-

சீர்மை கொள் வீடு சுவர்க்கம் நரகீறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்றெப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய்ப் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே–திருவாய்மொழி -2-8-10-

கண் தலங்கள் செய்ய கரு மேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண் தலையிற் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண் தலையில் வீற்றிருந்தாள்வர் எம்மா வீடே.–திருவாய்மொழி -2-8-11-

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லை
கைம் மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா! அடியேன் வேண்டுவதீதே. –திருவாய்மொழி -2-9-1-

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பி லெய்துக வெய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப் பொன்றின்றி என்னும் மகிழ்வேனே–திருவாய்மொழி –2-9-5-

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலி லாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே. –திருவாய்மொழி -2-9-11-

இடரின்றியே யொரு நாளொரு போழ்தில் எல்லா வுலகும் கழிய
படர்ப் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடனேறத் திண் தேர்க் கடவி
சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயரிலனே–திருவாய்மொழி -3-10-5-

மண்ணை யிருந்து துழாவி வாமனன் மண்ணிது வென்னும்
விண்ணைத் தொழுது அவன் மேவு வைகுந்த மென்று கை காட்டும்
கண்ணை யுண்ணீர் மல்க நின்று கடல்வண்ண னென்னும் அன்னே! *என்
பெண்ணைப் பெரு மயல் செய்தார்க்கு என் செய்கேன்? பெய் வளையீரே! –திருவாய்மொழி -4-4-1-

வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்தற
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்தார்வனோ?–திருவாய்மொழி -7-9-7-

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்! பூவைகள் காள்! குயில் காள்! மயில் காள்!
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்று மொழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும் அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே–திருவாய்மொழி -8-2-8-

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தானுறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏக மெண்ணும் இராப் பகலின்றியே–திருவாய்மொழி -9-3-7-

தெளி விசும்பு கடிதோடித் தீ வளைத்து மின்னிலகும்
ஒளி முகில்காள்! திருமூழிக்களத் துறையு மொண் சுடர்க்கு
தெளி விசும்பு திருநாடாத் தீ வினையேன் மனத்துறையும்
துளிவார்கட் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–திருவாய்மொழி -9-7-5-

திருமாலிருஞ்சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
அரு மா மாயத் தெனதுயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வ னொருவனே—திருவாய்மொழி -10-7-8-

எளிதாயினவா றென்று எங்கண்கள் களிப்ப
களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிதாகிய சேண் விசும்பு தருவானே–திருவாய்மொழி -10-8-4-

சூழ் விசும்பணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடலலை திரை கை யெடுத்தாடின
ஏழ் பொழிலும் வளமேந்திய என்னப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டுகந்தே.–திருவாய்மொழி -10-9-1-

நாரணன் தமரைக் கண்டுகந்து நல் நீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடு வரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதன ருலகே—திருவாய்மொழி -10-9-2–

தொழுதன ருலகர்கள் தூப நல் மலர் மழை
பொழி வனர் பூழி யன்றளந்தவன் தமர் முன்னே
எழுமினென்று இரு மருங்கிசைத்தனர் முனிவர்கள்
வழியிது வைகுந்தற்கு என்று வந்தெதிரே–திருவாய்மொழி -10-9-3-

எதிரெதி ரிமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர வரவர் கைந் நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கொத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே–திருவாய்மொழி -10-9-4-

மாதவன் தமரென்று வாசலில் வானவர்
போதுமி னெமதிடம் புகுதுக வென்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–திருவாய்மொழி -10-9-5-

வேள்வியுள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்தெங்கு மிசைத்தனர்
ஆண்மிங்கள் வானகம் ஆழியான் தமரென்று
வாளொண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–திருவாய்மொழி -10-9-6-

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந் தெங்கும் தோத்திரஞ் சொல்லினர் தொடு கடல்
கிடந்த வென் கேசவன் கிளரொளி மணி முடி
குடந்தை யென் கோவலன் குடி யடியார்க்கே–திருவாய்மொழி -10-9-7-

குடி யடியா ரிவர் கோவிந்தன் தனக்கென்று
முடி யுடை வானவர் முறை முறை யெதிர் கொள்ள
கொடி யணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடி வுடை மாதவன் வைகுந்தம் புகவே–திருவாய்மொழி -10-9-8-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–திருவாய்மொழி -10-9-9-

விதி வகை புகுந்தனரென்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியு நற் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–திருவாய்மொழி -10-9-10-

வந்த வரெதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேரின்பத்து அடியரோ டிருந்தமை
கொந்தலர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்க ளாயிரத்து இவை வல்லார் முனிவரே—திருவாய்மொழி -10-9-11-

—————-

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் –2-பாசுரங்கள் –

உணர்வாரார் உன் பெருமை? ஊழி தோறூழி
உணர்வாரார் உன்னுருவந் தன்னை? உணர்வாரார்?
விண்ணகத்தாய்! மண்ணகத்தாய்! வேங்கடத்தாய்! நால் வேதப்
பண்ணகத்தாய்! நீ கிடந்த பால்–முதல் திருவந்தாதி – 68

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் – நான் கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர் –முதல்-திருவந்தாதி – 77

————

ஸ்ரீ பேய் ஆழ்வார் –3-பாசுரங்கள்

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பு – வாய்ந்த
மறை பாடக மனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறை பாடியாய விவை–மூன்றாம் திருவந்தாதி – 30-

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் – பாற் பட்
டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்தொசித்த கோபாலகன்–மூன்றாம் திருவந்தாதி – 32-

பண்டெல்லாம் வேங்கடம் பாற் கடல் வைகுந்தம்
கொண்டங்குறைவார்க்குக் கோயில் போல் – வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர்–மூன்றாம் திருவந்தாதி – 61-

விஷ்ணுவின் அடியவர்கட்கு முக்தியில் நாட்டம்கொண்ட முக்தர்கட்கு திவ்யதேசங்களில் ஊறித்திளைத்துப் போன பக்தர்கட்கு திருநாடு மிகவும்
சமீபம். அவனது சாயுஜ்யம் அவர்கட்கு மிகவும் சாமீப்யம். ஆம் இதிலெல்லாம் திளைத்தவர்களை அவனே வந்து தன் திருநாடுக்கு இட்டுச் செல்கிறான்
என்பது ஐதீஹம்.

வைணவ அடியார்கட்கு, அவனன்றி தமக்குப் புகலிடம் யாதுமில என்றெண்ணி அடியவர்கட்கு மோட்சத்தை நல்கும் இந்தப் பரமபதமே
வைணவர்களின் கடைசி இலக்காகும்.

பரமபதத்திலிருந்து தன்னை வ்யூகப்படுத்தி விபவ, அர்ச்சாவதாரங்களில் தன்னைக் காட்டிக்கொடுத்து இவைகளே பரத்தினும் மேலானவை என்று
எண்ணி ஆட்பட்ட அடியவர்களை, பூவுலகில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட காலம் முடிவுற்றபின் அவனே வந்து அழைத்துச் செல்கிறான்.

மோட்சம் பெறுவதே குறிக்கோள் என்றென்னும் அடியார்கட்கு இந்த பரமபதமே எல்லை நிலமாகும்.

திருநாட்டைப் பற்றிப் புராணங்களாலும் ஆழ்வார் பாசுரங்களாலும் உணரலாம். இராமானுஜர் இயற்றிய வேதாந்த சங்கிரஹம் என்னும் நூல்
திருநாட்டைப் பற்றித் தெளிவாகவும், நேரில் பார்ப்பது போலவும் விளக்கிப் பேசுகிறது. இராமானுஜர் இயற்றிய கத்யத்ரயத்தில் ஒன்றான
வைகுண்டகத்யத்தில் பரமபத வர்ணனை சிறப்பாக இருக்கும், இராமானுஜரின் வரலாற்றைப் பேசும் “ப்ரபந்நாம்ருத தர்ப்பணம்” என்னும் நூலில் பரமபதம்
பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

“திருவனந்தாழ்வானின் மேல் – தடக்கையனாய் சங்கு சக்ர கதாதாரனாய், காயாம்பூ இதழ்போல் கருத்தவனாய் தாமரை இதழ்போன்ற திருக்கண்களை
உடையவனாய், கோடி மன்மதர்களை ஒத்த அழகு உடையவனாய். உலகை மயக்கும் திருமேனி உடையவனாய், கோடிச்சூர்யப் பிரகாசமுடையவனாய்,
கோமளமான அவயவங்களால் நிற்பவனாய், தோள்வளை, ஹாரம் முன்கைவளை, சதங்கை முதலான திருஆபரணங்களால்
அலங்கரிக்கப்பட்டவனாய், அப்ராக்ருத சந்தனத்தால் பூசப்பெற்ற திருமேனியை உடையவனாய். பீதாம்பரத்தை தரித்தவனாய், நித்யயௌவன முடையவனாய், எப்போதும் ஸ்ரீபூமி, நீளா தேவிகளோடு கூடினவனாய் (ஈஸ்வரர்களுக்கெல்லாம் மேலான) பரமேஸ்வரனாய் நித்தியர்களாலும்
முக்தர்களாலும் சேவிக்கப்படுபவனாய் (அனைவரினும்) பெரியவனாய் ஸர்வவ்வியாபியான பரமபத நாதன் பேரின்பத்துடன் எழுந்தருளியிருக்கிறான்”.
(ப்ரப்பந்நாம்ருத தர்ப்பணம் (23-26)

மூலவர்–  பரமபதநாதன், வைகுண்டபதி, தெற்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்-    பெரியபிராட்டியார்

தீர்த்தம்-  விரஜா நதி, அயிரமத புஷ்கரிணி
காட்சி கண்டவர்கள்-     ஆதிசேடன், கருடன், நித்யசூரிகளும், முக்தர்களும்.

இதற்கு தெளிவிசும்புத் திருநாடு என்று பெயர்.இதற்குமேல் அறிவதற்கு ஒன்றுமில்லையாதலால் இதற்கு எல்லைநிலம்
என்பது பொருள்

இங்கு அடையும் இன்பத்திற்கும் நலத்திற்கும் முடிவே இல்லாததால் நலமந்தமில்லதோர் நாடு என்பதும் இதற்குப் பெயர். இங்கு கிடைக்கும்
இன்பத்திற்கு “அந்தமில் பேரின்பம்” என்று நம்மாழ்வார் பெயர் சூட்டியுள்ளார். அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை என்று தனக்கு
வைகுந்தம் அளிப்பதாக பாடுகிறார். திருப்புளியாழ்வார் அடியிலே இருந்துகொண்டு மற்ற திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்ததுபோல்
வைகுந்தம் சென்றதாகவும் பாடுகிறார்.
வாசுதேவன் வைகும்படியான (வாழும்படியான) இருப்பிடமாதலால் வைகுந்தம் என்றும் பெயருண்டு.

எம்பெருமானின் சகல ரூபங்களுக்கும் ஆதியானதாக, மூலமானதாக, உற்பத்தி ஸ்தானமாய் பரமாய் இருப்பதால் பரமபதம் என்று பெயர்.

திரு நாட்டுத் திருப்பதி -108-

இடருடையேன் சொல்ல எளிதோ பிரமன்
அடரும் விடையோற்கும் அரிதே -தொடரும்
கருவைகும் தம் பிறவிக் கட்டு அறுத்து மீளாத்
திருவைகுந்தம் பெறுவார் சீர் –108-

(இ – ள்.) தொடரும் – (இருவினைப்பயன்காரணமாகத்) தொடர்ந்து வருவதும்,
கரு வைகும் – கர்ப்பத்தினிடத்திற் பிரவேசிப்பதற்குக் காரணமானதுமான,
தம் பிறவி கட்டு – தமது ஜந்மபந்தத்தை,
அறுத்து – (எம்பெரு மானது திருவருளால் அடியோடு) ஒழித்து,
மீளா – (தன்னிடத்துச்சேர்ந்த வர்கள்) திரும்பிவருதலில்லாததாகிய,
திரு வைகுந்தம் – ஸ்ரீவைகுண்ட லோகத்தை,
பெறுவார் – அடையப்பெறுபவர்களது,
சீர் – சிறப்பானது, –
பிரமன் – பிரமதேவனுக்கும்,
அடரும் விடையோற்கும் – போர்செய்யுந்தன்மையுள்ள ருஷபத்தை வாகனமாகவுடைய சிவபெருமானுக்கும்,
அரிது – சொல்லமுடியாதது; (என்றால்), –
இடர் உடையேன் – ஸம்ஸாரத்தில் மிகவும் உழலுகின்ற யான்,
சொல்ல – புகழ்ந்து கூறுதற்கு, எளிதோ – எளியதாகுமோ? (எ – று.)

“முதலாவார் மூவர்” என்றபடி திருமாலோடு சேர்த்து எண்ணப்படு கின்ற பிரமருத்திரராகிற மற்றை
யிருமூர்த்தியராலுமே ஸ்ரீவைகுண்டலோகத்தை யடைந்த முக்தர்களின் பெருமை சொல்லமுடியா தென்றால்,
கேவலம் ஸம்ஸாரத்தில் உழலுகின்ற ஜ்ஞாநஹீநனான என்னால் எவ்வாறு சொல்லப் போகு மென்பதாம்;
இங்குக் கைமுதிகநியாயத்தினால் (கைமுதிகநியாய மாவது – ஓர்எலி தண்டத்தை விழுங்கியதென்றால்
அதிற்கட்டப்பட்டிருந்த அபூபமும் – (பக்ஷணமும்) விழுங்கியமை பெறப்படுவதுபோல்வது.)
பிரமருத்திரர்க்கே திருவைகுந்தம் பெறுவார் சீர் சொல்ல அரிதாயின் என்னால் எவ்வாறு சொல்ல முடியு மெனக் கூறியது –
தொடர்நிலைச் செய்யுட்பொருட் பேறணியாம்.

இது – திருமாலினது ஐவகைநிலையகளுள் பரத்வம் விளங்குந் தானம்.
“பரத்வமாவது – அகால கால்யமான நலமந்தமில்லதோர்நாட்டிலே நித்ய முக்தர்க்குப் போக்யனாய்க்
கொண்டு எழுந்தருளியிருக்கும் இருப்பு.” இதுவே – பரமபதமெனவும், நித்தியவிபூதி யெனவும்படும்.

————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருப் பாற் கடல்

March 24, 2024

மூலவர் -ஷீராப்தி நாதன் -ஆதி சேஷ சயனம் –தெற்கே திரு முக மண்டலம்
தாயார் -கடல் மகள் நாச்சியார் -ஸ்ரீ பூமா தேவி
விமானம் -அஷ்டாங்க விமானம்
தீர்த்தம் -அம்ருத தீர்த்தம் -திருப் பாற் கடல்
மங்களா சாசனம் -பொய்கையார் -பூதத்தார் -பேயார் -திரு மழிசையாழ்வார் -நம்மாழ்வார் -குலசேகராழ்வார்
-பெரியாழ்வார் -ஆண்டாள் -தொண்டர் அடிப் பொடிகள் -திருமங்கை ஆழ்வார் –

ஸ்ரீ வைகுண்ட நாதன் இறங்கி வந்து வா ஸூ தேவ சங்கர்ஷண -ப்ரத்யும்ன – அநிருத்தர்கள் -நான்காக வ்யூஹித்து
ஆதி சேஷ பர்யங்கத்தில் சயனம் –சங்கர்ஷணன் சம்ஹாரத்தையும் ப்ரத்யும்னன் ஸ்ருஷ்ட்டியையும் -அநிருத்தன் -ரக்ஷணத்தையும் –
கேசவாதி பன்னிரு திரு நாமங்களை இந்த நால்வருக்கும் –
கூப்பீடு கேட்க்கும் இடம் -விபவங்கள்- இங்கே இருந்து தான் நடக்கும்

ஸ்ரீ திருப் பாற் கடல்
மூலவர் ஸ்ரீ ஷீராப்தி நாதன், ஸ்ரீ பாற் கடல் வண்ணன்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் தெற்கு
தாயார் ஸ்ரீ கடல் மகள் நாச்சியார், ஸ்ரீ பூமா தேவித் தாயார்
தீர்த்தம் ஸ்ரீ அம்ருத தீர்த்தம், ஸ்ரீ திருப் பாற்கடல்
விமானம் ஸ்ரீ அஷ்டாங்க விமானம்
மண்டலம் ஸ்ரீ விண்ணுலகம்
மாநிலம் விண்ணுலகம்
அடிப்படை இடம் ஸ்ரீ விண்ணுலகம்
நாமாவளி ஸ்ரீ ஸ்ரீ கடல்மகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ ஷீராப்தி நாதாய நமஹ

———-

மங்களா சாசன –52-பாசுரங்கள் –

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழியில்-6- பாசுரங்கள் –
ஸ்ரீ ஆண்டாள் –3-பாசுரங்கள் –
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -2-பாசுரங்கள் –
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் -12–பாசுரங்கள் –
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-பாசுரம்

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –11–பாசுரங்கள் –

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் –
ஸ்ரீ பூதத்தாழ்வார் –2-பாசுரங்கள் –
ஸ்ரீ பேயாழ்வார் -5-பாசுரங்கள் –

ஸ்ரீ நம்மாழ்வார் -9-பாசுரங்கள் –

————-

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழியில்-6- பாசுரங்கள் –

பன்றியும் ஆமையும் மீனமுமாகிய பாற் கடல் வண்ணா!
பையரவினணைப் பாற் கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி!
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்
அரவத் தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும்
பனிக் கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ!
வட தடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இட வகைகள் இகழ்ந்திட்டு என் பால் இடவகை கொண்டனையே

——

ஸ்ரீ ஆண்டாள் –3-பாசுரங்கள் –

பாற் கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி
தெண்டிரைக் கடற் பள்ளியாய்! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே.
பொங்கிய பாற் கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோ ராசையினால்

—————

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -2-பாசுரங்கள் –

மாலை யுற்ற கடல் கிடந்தவன்
ஒண் பவள வேலை யுலவு தண் பாற் கடலுள் கண் துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு

————

ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் -12–பாசுரங்கள் –

நாக மூர்த்தி சயனமாய் நலங்கடல் கிடந்து மேல் ஆக மூர்த்தியாய வண்ணம் என் கொல்? ஆதி தேவனே!
பௌவநீரராவணை படுத்த பாயல் பள்ளி கொள்வது என் கொல்? வேலை வண்ணானே.
நல்ல யோகினால் வணங்கு பால் நிறக் கடல் கிடந்த பற்பநாபனல்லையே?
பௌவநீர் படைத்தடைத்ததிற் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
பௌவநீரணைக் கிடந்து உரத்திலும் மொருத்தி தன்னை வைத்துகந்து
கடைந்து பாற் கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
வேலை நீர் படைத்தடைத்ததிற் கிடந்து முன் கடைந்து,
கடற்கிடந்த நின்னலால் ஒர் கண்ணிலேன் எம்மண்ணலே.
வேலை நீர்ப் பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே!
நாகத் தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
செஞ்சடையான் சென்று என்றும் – பூக் கொண்டு வல்லவாறு ஏத்த

—————

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-பாசுரம்

உய்யப்போமுணர்வினார்கட்கு ஒருவனென்றுணர்ந்த பின்னை

—————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –11–பாசுரங்கள் –

பரமனே! பாற்கடல்கிடந்தாய்! நாடி நான் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்!
திருவினுக்கரசே! திரை கொள் மா நெடுங்கடல் கிடந்தாய்! நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன்
பள்ளியாவது பாற் கடலரங்கம்
பறவை முன்னுயர்த்துப் பாற் கடல் துயின்ற பரமனார் பள்ளி கொள் கோயில்
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை
கைம்மான மழ களிற்றைக் கடல் கிடந்த கருமணியை
வங்க மலி தடங்கடலுள் அநந்தனென்னும் வரி யரவினணைத் துயின்ற மாயோன் காண்மின்
வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவணை மேல் துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து பூவுலருந்தி தன்னுள் புவனம் படைத்துண்டுமிழ்ந்த தேவர்கள் நாயகனை
பங்கத்தாய்! பாற் கடலாய்! பாரின் மேலாய்! பனிவரையினுச்சியாய்! பவள வண்ணா!
கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு! என்றும் கடல் கிடந்த கனியே! என்றும்

—————–

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் –

எப்போதும் வரை மேல் மரதகமே போல திரமேல் கிடந்தானை

————-

ஸ்ரீ பூதத்தாழ்வார் –2-பாசுரங்கள் –

பரிசு நறு மலரால் பாற் கடலான் பாதம் புரிவார் புகழ் பெறுவர்
மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும் நினைப்பரிய நீளரங்கத் துள்ளான்

—————

ஸ்ரீ பேயாழ்வார் -5-பாசுரங்கள் –

சங்கோதப் பாற் கடலான் பாம்பணையின் மேலான்
செவிதெரியா நாகத்தான் நால் வேதத்துள்ளான் நறவேற்றான் பாகத்தான் பாற் கடலுளான்.
பாற்கடலும்வேங்கடமும் பாம்பும்பனிவிசும்பும்- –பாற்பட் டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டங் குறைவார்க்குக் கோயில்

————

ஸ்ரீ நம்மாழ்வார் -9-பாசுரங்கள் –

பாற் கடல் பாம்பணை மேற் பள்ளி கொண்டருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலுஞ் சீரியரே.
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்-
இரைக்குங் கடற் கிடந்த வெந்தாய்! – உரைப்பெல்லாம் நின்னன்றி மற்றிலேன் கண்டாய்
பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி யமர்ந்ததுவும்–போரேறே.
விடுவேனோ ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை சிந்தை செய்த வெந்தாய்
நம் பாற் கடல் சேர்ந்த பரமனை பயிலுந்திருவுடையார் யவரேலுமவர் கண்டீர் பயிலும் பிறப்பிடைதோறு எம்மையாளும் பரமரே
பணங்களாயிரமுடைய பைந்நாகப் பள்ளியாய்! பாற் கடற் சேர்ப்பா! வணங்குமா றறியேன்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும் அஞ்சன வெற்புமவை
திருமாலிருஞ்சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே

——————————————-

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழியில் ஆறு பாசுரங்கள் –

பன்றியும் ஆமையும் மீனமுமாகிய பாற் கடல் வண்ணா! உன்மேல்
கன்றினுருவாகி மேய் புலத்தே வந்த கள்ள அசுரன் தன்னை
சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே விளங்காயெறிந்தாய் போலும்
என்றும்என்பிள்ளைக்குத்தீமைகள்செய்வார்கள் அங்கனமாவர்களே.–3-3-7-

பையரவினணைப் பாற் கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி!
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை
வைய மனிசரைப் பொய்யென்றெண்ணிக் காலனையும் உடனே படைத்தாய்
ஐய! இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத்தரவணைப் பள்ளியானே.–4-10-5-

வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாங்கொல் என்றாசையினாலே
உள்ளம் சோர உகந்தெதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள்
துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன் சொல்லாய் யான் உன்னைத் தத்துறுமாறே.–5-1-7-

அரவத் தமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவைத் திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவற்பொருட்டே.–5-2-10-

பனிக் கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக் கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ!
தனிக் கடலே! தனிச் சுடரே! தனி யுலகே! என்றென்று
உனக்கிடமாயிருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே. –5-4-9-

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி போல்
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் சோதி நம்பி!
வட தடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும்
இட வகைகள் இகழ்ந்திட்டு என் பால் இட வகை கொண்டனையே. –5-4-10-

———–

ஸ்ரீ ஆண்டாள் –3-பாசுரங்கள் –

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட் காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டுநாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக் குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.–திருப்பாவை –2-

குண்டு நீருறை கோளரீ! மத யானை கோள் விடுத்தாய்! உன்னைக்
கண்டு மாலுறுவோங்களைக் கடைக் கண்களாலிட்டு வாதியேல்
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்
தெண்டிரைக் கடற்பள்ளியாய்! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே.–நாச்சியார் திருமொழி–4-2-3-

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோராசையினால் என்
கொங்கைகிளர்ந்துகுமைத்துக்குதுகலித் தாவியையாகுலஞ்செய்யும்
அங்குயிலே! உனக்கென்னமறைந்துறைவு ? ஆழியும்சங்குமொண்தண்டும்
தங்கியகையவனைவரக்கூவில் நீ சாலத்தருமம்பெறுதி.–4-5-7-

————-

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -2-பாசுரங்கள் –

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறுந்துழாய்
மாலை யுற்றவரைப் பெருந்திரு மார்வனை மலர்க் கண்ணனை
மாலை யுற்றெழுந் தாடிப் பாடித் திரிந்தரங்க னெம்மானுக்கே
மாலை யுற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்ற தென் நெஞ்சமே.–பெருமாள் திருமொழி –2-8–

ஒண் பவள வேலை யுலவு தண் பாற் கடலுள்
கண் துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு வுடையேனாவேனே–4-4-

——————

ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் -12–பாசுரங்கள் –

ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயனமாய் நலங்கடல் கிடந்து மேல்
ஆக மூர்த்தியாய வண்ணம் என் கொல்? ஆதி தேவனே! –திருச்சந்தவிருத்தம் – 17

விடத்த வாயொராயிரம் இராயிரம் கண் வெந்தழல்
விடத்து வீள்விலாத போகம் மிக்க சோதி தொக்க சீர்
தொடுத்து மேல் விதானமாய பௌவ நீர ராவணை
படுத்த பாயல் பள்ளி கொள்வது என் கொல்? வேலை வண்ணானே.–திருச்சந்தவிருத்தம் – 18

வானிறத்தொர் சீயமாய் வளைந்த வாளெயிற்றவன்
ஊன் நிறத் துகிர்த் தலம் அழுத்தினாய்! உலாய சீர்
நால் நிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கு
பால் நிறக் கடல் கிடந்த பற்ப நாபனல்லையே?–திருச்சந்தவிருத்தம் – 23

படைத்த பாரிடந்தளந்து அதுண்டுமிழ்ந்து பௌவ நீர்
படைத்தடைத் ததிற்கிடந்து முன் கடைந்த பெற்றியோய்!
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புக
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே! –திருச்சந்தவிருத்தம் – 28

பரத்திலும் பரத்தையாதி பௌவ நீரணைக் கிடந்து
உரத்திலும் மொருத்தி தன்னை வைத்துகந்து அதன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞான மூர்த்தியாயினாய்!
ஒருத்தரும் நினாது தன்மை இன்ன தென்ன வல்லரே.–திருச்சந்தவிருத்தம் – 29

கடைந்து பாற் கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த வேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்த மால பாதமே அடைந்து நாளுமுய்ம்மினோ.–திருச்சந்தவிருத்தம் – 81

விடைக்குலங்களேழடர்த்து வென்றி வேற் கண் மாதரார்
கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி ஆய! வேலை நீர்
படைத்தடைத்ததிற்கிடந்து முன் கடைந்து, நின்றனக்கு
அடைக்கலம் புகுந்த வென்னை யஞ்சலென்ன வேண்டுமே. –திருச்சந்தவிருத்தம் – 92

அடக்கரும் புலன்கள் ஐந்தடக்கி ஆசையாமவை
தொடக்கறுத்து வந்து நின் தொழிற்கணின்ற என்னை நீ
விடக்கருதி மெய் செயாது மிக்கொராசை யாக்கிலும்
கடற்கிடந்த நின்னலால் ஒர் கண்ணிலேன் எம்மண்ணலே.–திருச்சந்தவிருத்தம் – 95

தூயனாயுமன்றியும் சுரும்புலாவு தண் துழாய்
மாய! நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்துமீதெலாம்
நீயு நின் குறிப்பினில் பொறுத்து நல்கு, வேலை நீர்ப்
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே!–திருச்சந்தவிருத்தம் – 110

நாகத்தணைக் குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் – நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தனாவான்–நான்முகன் திருவந்தாதி – 36-

நாக் கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக் கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் – பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேற் பாட்டு. –நான்முகன் திருவந்தாதி – 75-

ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் – ஏய்ந்த தம்
மெய், குந்தமாக விரும்புவரே தாமும் தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து.–நான்முகன் திருவந்தாதி – 79

————-

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-பாசுரம்

மெய்யர்க்கேமெய்யனாகும் விதியிலாவென்னைப்போல
பொய்யர்க்கே பொய்யனாகும்புட்கொடியுடையகோமான்
உய்யப்போமுணர்வினார்கட்கு ஒருவனென்றுணர்ந்தபின்னை
ஐயப்பாடறுத்துத்தோன்றும் அழகனூரரங்கமன்றே–திருமாலை – 15

—————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –11–பாசுரங்கள் –

கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடுந் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேனாதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே! பாற் கடல் கிடந்தாய்!
நாடி நான் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள்எந்தாய்!–1-6-6-

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பைப் பிரியும் போது உன் தன் சரணமே சரணமென்றிருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கரசே! திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்!
நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள்எந்தாய்!–1-6-9-

பள்ளியாவது பாற் கடலரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிருண்ட எந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணனென்றெண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே! –1-8-2-

கறவை முன் காத்துக் கஞ்சனைக் காய்ந்த காள மேகத் திரு வுருவன்
பறவை முன்னுயர்த்துப் பாற் கடல் துயின்ற பரமனார் பள்ளி கொள் கோயில்
துறை துறை தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென் பால்
செறி மணி மாடக் கொடி கதிரணவும் திரு வெள்ளியங்குடி யதுவே.–4-10-4-

பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பாரிடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை
வண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாயொலிகள்
கொண்டிவை பாடும் தவமுடையார்கள் ஆள்வர் இக் குரை கடலுலகே–4-10-10-

கைம்மான மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
மைம்மான மரதகத்தை மறை யுரைத்த திருமாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த
அம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே–4-6-1-

செங்கமலத் திரு மகளும் புவியும் செம் பொன் திருவடியினிணை வருட முனிவரேத்த
வங்க மலி தடங்கடலுள் அநந்தனென்னும் வரி யரவினணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கு மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத்து அணி யழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே–7-8-1-

வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவணை மேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே!
வள்ளலே! உன் தமர்க்கு என்றும் நமன் தமர்
கள்ளர் போல் கண்ண புரத்துறை யம்மானே!–8-10-7-

மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூவுலருந்தி தன்னுள் புவனம் படைத்துண்டுமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திருமாலிருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-

வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர்
மல்லையாய்! மதிள் கச்சி யூராய்! பேராய்!
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன்
குல வரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய்! பாற்கடலாய்! பாரின் மேலாய்!
பனிவரையினுச்சியாய்! பவள வண்ணா!
எங்குற்றாய்? எம்பெருமான்! உன்னை நாடி
ஏழையேன் இங்ஙனமே உழி தருகேனே.–திருநெடுந்தாண்டகம் – 9-

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு! என்றும் கடல் கிடந்த கனியே! என்றும்
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி
அணி யழுந்தூர் நின்றுகந்தஅம்மான்! என்றும்
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித்
தூ முறுவல் நகை இறையே தோன்றநக்கு
மெல் விரல்கள் சிவப்பெய்தத் தடவிஆங்கே
மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே. –திருநெடுந்தாண்டகம் – 15–

———————

ஸ்ரீ நம்மாழ்வார் -9-பாசுரங்கள் –

வேதனை வெண்புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்குமநாதனை ஞாலம் தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேற் பள்ளி கொண்டருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலுஞ் சீரியரே. –திருவிருத்தம் – 79

பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் – நீலாழிச்
சோதியாய்! ஆதியாய்! தொல் வினை யெம்பால் கடியும்
நீதியாய்! நிற் சார்ந்து நின்று.–பெரிய திருவந்தாதி – 34

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென்று ஆரே?
இரைக்குங் கடற்கிடந்த வெந்தாய்! – உரைப்பெல்லாம்
நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனதுயிர்க்கு ஓர்
சொல் நன்றி யாகும் துணை. –பெரிய திருவந்தாதி – 77

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி யமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்கா எறுடனேழ் செற்றதுவும்
தேம்பணைய சோலை மராமரமே ழெய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய்ப் பொன் முடியம் போரேறே. திருவாய்மொழி–2-5-7- –

உய்ந்து போந்தென்னுலப்பிலாத வெந் தீவினைகளை நாசஞ்செய்து உன்து
அந்தமிலடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய்? உன்னைச் சிந்தை செய்து செய்தே.–2-6-5-

பயிலுஞ் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை
பயிலவினிய நம் பாற் கடல் சேர்ந்த பரமனை
பயிலுந் திருவுடையார் யவரேலுமவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மை யாளும் பரமரே. –3-7-1-

மணந்த பேராயா! மாயத்தால் முழுதும் வல் வினையேனை யீர்கின்ற
குணங்களை யுடையாய்! அசுரர் வன்கையர் கூற்றமே! கொடிய புள்ளுயர்த்தாய்
பணங்களாயிரமுடைய பைந்நாகப் பள்ளியாய்! பாற் கடற் சேர்ப்பா!
வணங்குமாறறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே.—8-1-8-

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்! பூவைகள்காள்! குயில்காள்! மயில்காள்!
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்று மொழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற்கடலும் அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே.–8-2-8-

திருமாலிருஞ்சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
அரு மா மாயத்தென துயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வனொருவனே.–10-7-8-

———–

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் –

உரை மேற் கொண்டு என்னுள்ளமோவாது எப்போதும்
வரை மேல் மரதகமே போல – திரை மேல்
கிடந்தானைக் கீண்டானை கேழலாய்ப்பூமி
யிடந்தானை யேத்தி யெழும். —முதல்திருவந்தாதி – 25

————–

ஸ்ரீ பூதத்தாழ்வார் –2-பாசுரங்கள் –

பரிசு நறு மலரால் பாற் கடலான் பாதம்
புரிவார் புகழ் பெறுவர் போலாம் – புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர்—இரண்டாம் திருவந்தாதி – 3

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீளரங்கத்துள்ளான் – எனைப் பலரும்
தேவாதி தேவ னெனப் படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன். –28-

—————–

ஸ்ரீ பேயாழ்வார் -5-பாசுரங்கள் –

நன்கோதும் நால் வேதத்துள்ளான் நறவிரியும்
பொங்கோதருவிப் புனல் வண்ணன் – சங்கோதப்
பாற் கடலான் பாம்பணையின் மேலான் பயின்றுரைப்பார்
நூற் கடலான் நுண்ணறிவினான். –மூன்றாம் திருவந்தாதி – 11

இவையவன் கோயில் இரணியனதாகம்
அவை செய்தரி யுருவமானான் – செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்துள்ளான் நற வேற்றான்
பாகத்தான் பாற் கடலுளான்.–மூன்றாம் திருவந்தாதி – 31

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற்கடலும் நுண்ணூல தாமரைமேல் – பாற் பட்
டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்தொசித்த கோபாலகன். -32-

பண்டெல்லாம் வேங்கடம் பாற் கடல் வைகுந்தம்
கொண்டங்குறைவார்க்குக் கோயில் போல் – வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர்.–61

ஆங்கு மலரும் குவியுமாலுந்திவாய்
ஓங்கு கமலத்தின தொண் போது – ஆங்கைத்
திகிரி சுடரென்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி யென்றும் பார்த்து –மூன்றாம் திருவந்தாதி – 67-

இதற்கு வெள்ளையந் தீவு என்ற பெயருமுண்டு. சஷீராப்தி என்னும் இந்த பாற்கடலில் பக்தர்களின் தரிசனத்திற்காக தன்னை வ்யூகப்படுத்தி
அதாவது பல பிரிவாகப் பிரித்து வியூக வாசுதேவன் என்ற திருநாமத்தோடு யோக நித்திரையில் தம்மைச் சங்கர்ஷணன், ப்ரத்யுமனன், அநிருத்தன்
என்னும் 3 உருவங்களாகப் பிரித்து ஆதிசேடனின் படுக்கையில் நிலமகளும் திருமகளும் திருவடி வருட பள்ளி கொண்ட நிலையாகும் திருப்பாற்கடல்
வடிவம்.

கிழக்குப் பக்கம் சிரிப்புடன் கூடின – வாசுதேவனாகவும்
தெற்கு நோக்கி சிங்கமுகமாக – சங்கர்ஷணனும்
வடக்கு – பிர்த்யுமனனாகவும்
மேற்கு – அநிருத்தனாகவும் திகழ்கிறார்.

பக்தர்களின் அபயக் குரல், குறிப்பாக தேவர்களின் அபயக் குரல் கேட்டு பகவான் அபயமளிப்பது இவ்விடத்தில்தான் அதனால் இவ்வுலகுக்கு
கூப்பாடு கேட்கும் உலகு என்று பெயர் பாட்டுக்கேட்டும் உலகான பரமபதத்திற்கு தேவர்களும் செல்ல முடியாது. அது சித்திப்பது நித்ய சூரிகள்
எனப்படும் முக்தர்கட்கு மட்டும்தான். எனவேதான் தேவர்கள் தங்கட்கு பிரச்சினை வரும்போதெல்லாம் அல்லது பிரச்சினைகளை உண்டாக்கிக்
கொண்டு அல்லற்படும்போதெல்லாம் திருப்பாற்கடல் கரையருகில் நின்று எம்பெருமானை பள்ளியெழுப்பித் தமது முறையீட்டைத் தெரிவிப்பது
வழக்கமாம்.

ப்ரளய காலம் வரைதான் திருப்பற்கடல் வாசம். ப்ரளய காலம் முடிந்ததும் மீண்டும் பரமபதம். எனவே ப்ரளய காலத்தில் திவ்யதேசங்கள்
மீண்டும் அவனுள் ஐக்கியமாகிவிடுகின்றன. திவய்தேசங்களுக்குத் தொடக்க திவ்யதேசமாகவும் இதனைக் கொள்ளலாம்.

சங்கர்ஷணன் அநிருத்தன், ப்ரத்யுமனன் என்னும் 3 உருவங்களும் ப்ரளயகாலத்தில் வ்யூக வாசுதேவனோடு ஐக்கியமாகி விடுகின்றன.

மூலவர்–பாற்கடல் வண்ணன் (சஷீராப்திநாதன்) ஆதிசேடன் மேல் தெற்கு நோக்கிய சயனம்
தாயார் —  கடல்மகள் நாச்சியார், ஸ்ரீபூமாதேவி
தீர்த்தம் -அமிர்த தீர்த்தம், திருப்பாற்கடல்
விமானம்–   அஷ்டாங்க விமானம்
காட்சி கண்டவர்கள்–   பிரம்மனும் சிவனும்

இங்கு பெருமாள் வெண்மை நிறத்தில் இருக்கிறார். இங்கு எல்லாமே
வெண்மை, எங்கு நோக்கிலும் வெண்மை, அதனால்தான் வெள்ளை வெள்ளத்தின் மேலொரு நாகத்தை மெத்தையாக விரித்து அதன்மேல் கள்ள
நித்திரை கொள்கின்ற கள்வன் என்கிறார் ஆழ்வார். இப்பெருமானின் வண்ணம் வெண்மை என்பதை திருமங்கை யாழ்வார் முன்னை வண்ணம்
பாலின் வண்ணம் என்கிறார். அதாவது விபவ அவதாரங்கட்கு முன் (உலகைப்படைத்து இங்கு அவதாரங்களை நிகழ்த்துவதற்கு முன்) பாற்கடலில்
எழுந்தருளியதை பாலின் வண்ணம் என்கிறார். பிறகுதான் விபவ அவதாரத்தில் நிலைநின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் என்றார்.

இங்குதான் பிரம்மதேவன் படைக்கப்பட்டான். இது வொன்றே இதன் தனிச்சிறப்பம்சமாகும்.

திருப்பாற்கடலுக்கு சஷ்ராப்தி நாதனாக (பாற்கடல் வண்ணனாக) வந்துற்றது முதல் வாசுவேதன் அநிருத்தன். ப்ரத்யுமணன், சங்கர் ஷ்ணன்
என்றும் 4 வியூகங்களாகப் பிரிந்த நிலைகளும் சேர்ந்து பஞ்ச வ்யூகங்கள் ஆகும். இந்த வ்யூக மூர்த்திகட்கும் சில திவ்யதேசங்கட்கும் தொடர்புண்டு.

1. சஷ்ஷிராப்தி நாதன் என்னும் பாற்கடல் வண்ணன்-திருக்கோட்டியூர் உரக மெல்லனையாளனாக ஸ்ரீதேவி பூமிதேவியுடன் எழுந்தருளியது.
2. வாசுதேவன்-   திருநறையூரில் திருமகளை மணந்த திருக்கல்யாணக் கோலம்
3. அநிருத்தன்-    திருஅன்பில் அழகிய வல்லிநாச்சியாருடன் அருளல்
4. ப்ரத்யுமனன்-    திருவெள்ளறை இங்கு ஸ்ரீதேவி மனித உருவில் நின்று கைங்கர்யம்
5. ஸங்கர்ஷ்ணன்–     உறையூர் கமலவல்லி என்ற பெயரில் சோழன் மகளாக வளர்ந்த திருமகளை மணத்தல் அதாவது பாற்கடலில் முதல்நிலையில் தேவிமாரோடு எழுந்தருள்கிறான். இதர வ்யூகங்கட்கு பிராட்டிகள் திவ்யதேசங்களில் 4 நிலைகளில் நின்ற பெருமாளைச் சேர்ந்து எழுந்தருள்கின்றனர் என்பதும் ஐதீஹம்.

தொழும் பாய நான் நல்ல சூது அறிந்து கொண்டேன்
செழும் பாய் அலை முத்தம் சிந்தி முழங்கும்
திருப்பாற் கடலான் தாள் சேர்ந்தார் அடி சேர்ந்து
இருப்பாற்கு அடலாம் இடர் –107-

(இ – ள்.) தொழும்பு ஆய – (எம்பெருமானுக்கு) அடியவனாகிய, நான் –
நல்ல சூது – நல்ல உளவை,
அறிந்து கொண்டேன் -; (அதாவது), – செழும்பாய் அலை – செழித்த பாய்கின்ற அலைகளினால்,
முத்தம் சிந்தி – முத்துக்களைக் கொழித்து,
முழங்கும் – ஒலிக்கின்ற,
திருப்பாற்கடலான் – திருப்பாற்கடலென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய க்ஷீராப்திநாதனது,
தாள் – திருவடிகளை,
சேர்ந்தார் – உபாயமாக அடைந்த பாகவதர்களது,
அடி – திருவடிகளை,
சேர்ந்து இருப்பாற்கு – தஞ்சமாகப்பற்றிக் கவலையற்று இருப்பவனுக்கு,
இடர் – பிறவித்துன்பங்களையெல்லாம்,
அடல் ஆம் – ஒழித்தல் எளிதிற்கூடும் (என்பதே) ; (எ – று.)

பாகவதர்களின் திருவடிகளை யாச்சிரயித்தலே பிறவித்துன்பங்கள் யாவும் ஒழிந்து எளிதில் ஈடேறுதற்கு உரிய
உபாயமென்பதனை யான்அறிந்து கொண்டு கடைப்பிடிக்கலானே னென்பதாம்.
அற்பச்செயலாற் பெரும்பேறு சித்திக்கும் உபாய மாதலால், “நல்லசூது’ என்றார்.

எம்பெருமானது ஐவகை நிலைகளுள், திருப்பாற்கடலி லெழுந்தருளியிருப்பவன் வியூகமூர்த்தியாவன்;
“வ்யூஹமாவது – ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரார்த்தமாகவும், ஸம்ஸாரிஸம்ரக்ஷணார்த்தமாகவும்,
உபாஸகாநுக்ரஹார்த்தமாகவும் ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்த ரூபணே நிற்கும் நிலை”.

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருவேங்கடம்

March 24, 2024

மூலவர் -திருவேங்கடமுடையான் -ஸ்ரீ நிவாஸன் -நின்ற திருக் கோலம் –கிழக்கே திரு முகமண்டலம்
தாயார் -அலர் மேல் மங்கை -பத்மாவதித் தாயார்
விமானம் –ஆனந்த நிலய விமானம்
தீர்த்தம் -நித்ய புஷ்கரிணி -ஸ்வாமி புஷ்கரிணி -கோனேரி தீர்த்தம் –பாப விநாசினி –ஆகாச கங்கை –
மங்களா சாசனம் -பொய்கையாழ்வார் –பூதத்தார் –பேயார் –திரு மழிசையாழ்வார் –நம்மாழ்வார் –குலசேகராழ்வார்
–பெரியாழ்வார் –ஆண்டாள் –திருப் பாண் ஆழ்வார் –திரு மங்கை ஆழ்வார்

வராஹப் பெருமாள் ஹிரண்யாக்ஷனை முடித்து இங்கு ஒய்வு எடுத்த படியால் -இது ஆதி வராஹ க்ஷேத்ரம் –
ப்ருகு முனிவர் பெருமானைத் திரு மார்பில் உதைக்க லஷ்மி கோபப்பட்டு கோல்ஹா பூரில் த்வம் செய்யச் சென்றாள்-
திருமால் லஷ்மியை அடைய இங்கு வந்து த்வம் புரிந்தார் –
ஸ்வயம் வியக்த க்ஷேத்ரம் –
வ்ருஷாத்ரி –முதல் யுகம் /அஞ்சனாத்ரி / சேஷாத்ரி –வாயு -ஆதி சேஷன் / க்ரீடாத்ரி -விளையாட்டு
-நாராயணாத்ரி -கருடாத்ரி -/ வேங்கடாத்ரி -கலி யுகம்
ஆகாச ராஜன் சகோதரர் தொண்டைமான் சக்கரவர்த்தி
தாரிணி தேவி -ஆகாச ராஜன் மனைவி -பெயர் –
வகுள மாலிகை – இன்றும் மடப்பள்ளி நாச்சியார்
சுகாச்சார்யார் -திருச் சுகவனூர் –
10 புராணங்களில் ஸ்ரீ நிவாஸன் மஹாத்ம்யம் உண்டே-

மூலவர் ஸ்ரீ திருவேங்கடமுடையான், ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள்
கோலம் நின்ற, சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ மலையப்பஸ்வாமி, ஸ்ரீ கல்யாண வேங்கடவர், ஸ்ரீ போக ஸ்ரீநிவாசர்
தாயார் ஸ்ரீ அலர்மேல் மங்கை
தீர்த்தம் ஸ்ரீ ஸ்வாமி புஷ்கரணி, ஸ்ரீ சேஷாச்சல ஸ்வாமி புஷ்கரணி
விமானம் ஸ்ரீ ஆனந்த நிலைய விமானம்
மண்டலம் வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் ஆந்திரபிரதேசம்
அடிப்படை இடம் ஸ்ரீ திருப்பதி
நாமாவளி ஸ்ரீ அலர் மேல் மங்கைத் தாயார் ஸமேத ஸ்ரீ திருவேங்கட ஸ்வாமிநே நமஹ

————————-

ரிக்வேதம் போற்றும் திருவேங்கடம்

“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே, சிரிம்பிடஸ்ய ஸத்த்வபி:
தேபிஷ்ட்வா சாதயாமஸி” என்ற ரிக் வேத மந்திரம்
திருமலையைப் புகழ்கிறது. ஏழைகள், எதிர்காலம் பற்றிய அறிவில்லாதவர்கள், துன்பப்படுபவர்கள்,
சுற்றதாரின் ஆதரவு அற்றவர்கள் ஆகிய அனைவரும் பக்தர்களோடு இணைந்து
ஸ்ரீநிவாசன் திகழும் திருமலைக்குச் சென்று, அப்பெருமாளின் திரு வடிகளில் அடைக்கலம் புகுந்தால்
அவன் காத்தருள்வான் என்பது இம்மந்திரத்தின் பொருள்.

———————————

ஸ்ரீ பெரியாழ்வார் -7-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -16-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமழிசைப் பிரான் -15-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -61-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -52-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் பாசுரம் -9-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -19-பாசுரங்கள் மங்களாசாசனம்

மொத்தம் -202-பாசுரங்கள் மங்களாசாசனம்

———

ஸ்ரீ பெரியாழ்வார் -7-பாசுரங்கள் மங்களாசாசனம்

சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்-
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேம்கடம் வாணன் உன்னை விளிக்கின்ற
கைத் தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா -1 4-3 –

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியானே அச்சோ அச்சோ வேம்கட வாணனே அச்சோ அச்சோ -1-8-8- –

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
என் இலங்கு நாமத்து அளவும் அரசு என்ற
மின் இலங்கு ஆரற்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணற்க்கு ஓர் கோல் கொண்டு வா -2 6-9 –

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய்
பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் 2-7 3- –

போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
கோதுகுலமுடை குட்டனேயோ குன்று எடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே – 2-9 -6- –

கடியார் பொழில் வேம்கடவா கரும் போரேறே நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொள்ளாதே போனாய் மாலே
கடிய வெம் காநிடை கன்றின் பின் போன சிருக் குட்ட செம் கமல
வடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் -3 3-4 –

———–

ஸ்ரீ ஆண்டாள் -16-பாசுரங்கள் மங்களாசாசனம்

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –1-1-

மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு
முப்போது முன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து
வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும்
விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–1-3-

காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே-–4-2-

வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்–5-2-

விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்
தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திரு மாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே –8-1-

மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே
காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே—8-2-

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு
என்னகத் திளம் கொங்கை விரும்பித் தாம் நாடோறும்
பொன்னகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே –8-4-

வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறப் பொழிவீர் காள்
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே–8-5-

சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை
நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள்
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே–8-6-

சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள் வேங்கடத்துச்
செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள்
தங்கு மேல் என்னாவி தங்கும் என்றும் உரையீரே–8-7-

கார் காலத்து எழுகின்ற கார் முகில் காள் வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத் தெருக்கில் அம்பழ விலை போல் வீழ்வேனை
வார் காலத்தொரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே –8-8-

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-

நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே–8-10-

பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல்வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து
கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே –10-5-

மழையே மழையே மண் புறம் பேசி உள்ளாய் நின்ற
மெழுகூற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட
தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே–10-8-

————

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்

ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –4-1-

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்
மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே— 4-2-

பின் இட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும்
துன்னிட்டு புகல் அரிய வைகுண்ட நீள் வாசல்
மின் வட்ட சுடர் ஆழி வேம்கட கோன் தான் உமிழும்
பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே– 4-3-

ஒண் பவள வேலை வுலவு தண் பாற் கடலுள்
கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே –4-4-

கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே –4-5-

மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே –4-6-

வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் தம்
கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல்
கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே– 4-7-

பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெரு வேள்வி குறை முடிப்பான் மறை யானான்
வெறியார் தண்சோலை திருவேங்கட மலை மேல்
நெறியாய் கிடக்கும் நிலை வுடையேன் ஆவேனே– 4-8-

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9-

உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–

மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே 4-11-

————–

ஸ்ரீ திருமழிசைப் பிரான் -15-பாசுரங்கள் மங்களாசாசனம்

குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே -திருச்சந்தவிருத்தம்–48-

செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட வுயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று
எழுந்து இருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக் கொழும்
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –-திருச்சந்தவிருத்தம்60-

கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ –-திருச்சந்தவிருத்தம்-81-

குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்–நான்முகன் திருவந்தாதி 34-

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு -நான்முகன் திருவந்தாதி –39-

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்–நான்முகன் திருவந்தாதி 40-

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -நான்முகன் திருவந்தாதி -41-

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மை யால் -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு–நான்முகன் திருவந்தாதி 42–

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு–நான்முகன் திருவந்தாதி -43-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் திருவந்தாதி -44-

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு–நான்முகன் திருவந்தாதி -45-

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று -நான்முகன் திருவந்தாதி -46-

நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் –நான்முகன் திருவந்தாதி -47-

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் -வேங்கடமே
தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை-நான்முகன் திருவந்தாதி -48-

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து
வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-நான்முகன் திருவந்தாதி -90-

———————

ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–

————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -61-பாசுரங்கள் மங்களாசாசனம் –

கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே—–1-8-1-

பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2-

நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே —-1-8-3-

பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்தங்காயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெம் கோவலன்
ஏத்துவார் தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய வெம்பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-4-

வண் கையான வுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய வெம்பிரான்
திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-5-

எண் திசைகளும் ஏழு உலகமும் வாங்கிப் பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன் பான் மதிக்கிடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாய் அவன் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-6-

பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமுமிவை யாயினான்
பேருமாயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம்
காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோருமா முகில் தோய் தர
சேரும்வார் பொழில் சூழ் எழில் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-7-

அம்பர மனல் கால் நிலம் சலமாகி நின்ற வமரர் கோன்
வம்புலா மலர் மேல் மலி மட மங்கை தன் கொழுநன் அவன்
கொம்பின்னன விடை மடக் குற மாதர் நீளிதணம் தொறும்
செம்புனமவை காவல் கொள் திருவேம்கடம் அடை நெஞ்சே—1-8-8-

பேசுமின் திருநாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம்
வாச மா மலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக் கெல்லாம்
தேசமாய்த் திகழும் மலைத் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-9-

செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேம்கடத்துறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே-1-8-10-

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே—1-9-1-

மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-2-

கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோளொன்றி லாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர் குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-3-

குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன்
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-4-

எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்
துப்பா நின்னடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-5-

மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுளாவு மாகாசமுமாம்
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்
விண்ணார் நீள் சிகர விரையார் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-6-

தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயின பின் பிறர்க்கே வுழைத்து ஏழை யானேன்
கரிசேர் பூம் பொழில் சூழ் கனமா மலைவேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-7-

நோற்றேன் பல் பிறவி உன்னைக் காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம்பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-8-

பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-9-

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே—1-9-10-

கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா வடியேன் இடரைக் களையாயே–1-10-1–

இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர்
குலம் கெட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே–1-10-2-

நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மா மலை மேய
ஆராவமுதே அடியேற்கு அருளாயே–1-10-3-

உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக
கொண்டாய் குறளாய் நிலமீரடியாலே
விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே-1-10-4-

தூணாய தனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா வவுணனுடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மா மலை மேய
கோணா கணை யாய் குறிக்கொள் எனை நீயே-1-10-5-

மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை
மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய
என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே–1-10-6-

மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த
ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே திருவேங்கட மா மலை மேய
கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே–1-10-7-

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள்
வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே–1-10-8-

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே–1-10-9-

வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் வர் வானவர் ஆகுவர் தாமே–1-10-10-

வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து மாதவ
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை
கான வரிடு கார்கில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குற
ளான வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1-

உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை
மண் மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என்நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவனாயாக்ற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-2-

இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக்
கொண்டு போயிடவும் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
வண்டு வாழ் வட வேங்கடமலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-3-

பாவியாது செய்தாய் என்னெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை
மேவி யாட் கொண்டு போய் விசும்பேற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்கட மலை யாண்டு வானவர்
ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-4-

பொங்கு போதியும் பிண்டியும் உடைப் புத்தர் நோன்பியர் பள்ளியுள் ளுறை
தங்கள் தேவரும் தாங்களுமேயாக என்னெஞ்சம் என்பாய்
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்றருள்
அங்கணாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-5-

துவரி யாடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் நந்தி யுண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என்னெஞ்சம் என்பாய்
கவரி மாக் கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-6-

தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவாரலக்கண் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-7-

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்தே
என்னெஞ்சம் என்பாய் எனக்கு ஓன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-8-

கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்னெஞ்சம் என்பாய் துணிந்து கேள்
பாடி யாடிப் பலரும் பணிந்து ஏத்திக் காணகிலா
ஆடு தாமரை யோனும் ஈசனும் அமரர் கோனும் நின்றேதும் வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-9-

மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே—2-1-10-

அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை
மின் திகழ் குடுமி வேங்கடமலை மேல் மேவிய நல் வேத விளக்கைத்
தென் திசை திலதம் அனையவர் நாங்கைச் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-8-

வேடார் திருவேங்கடம் மேய விளக்கே
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்தாய்
பாடாவருவேன் வினையாயின பாற்றே –4-7-5-

வாம்பரி யுக மன்னர் தம் உயிர் செக ஐவர் கட்கு அரசளித்த
காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை யருள் எனக்கு
மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனி தேனது நுகர் திரு வெள்ளறை நின்றானே-5-3-4-

வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
மருவாள் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே–5-5-1-

சிந்தனையைத் தவநெறியைத் திருமாலைப் பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே-5-6-7-

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே -6-8-1-

ஆங்கு வென்னரகத்து அழுந்தும் போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தங்கு தாமரை யன்ன பொன்னாரடி எம்பிரானை யும்பர்க்கு அணியாய் நின்ற
வேங்கடத்தரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட
தீங்கரும்பினைத் தேனை நன்பாலினை யன்றி என் மனம் சிந்தை செய்யாதே —7-3-5-

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலி மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனிமா மதி யந்தவள்
மங்குலைச் சுடரை வடமா மலை யுச்சியைநச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப் பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-3-

அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ -8-2-3-

பண்ணுலா மென் மொழிப் பாவைமார் பணை முலை யணைது நாம் என்று
எண்ணுவார் எண்ணமது ஒழித்து நீ பிழைத்து உய்யக் கருதினாயேல்
விண்ணுளார் விண்ணின் மீதியன்ற வேங்கடதுளார் வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்ல வாழ் சொல்லுமால் வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-4-

வலம்புரி யாழியானை வரையார் திரடோளன் தன்னைப்
புலம் புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனைச்
சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்சோலை நின்ற
நலந்திகழ் நாரணனை நணுகும் கொல் என் நன்னுதலே –9-9-9-

பொன்னை மா மணியை யணி யார்ந்ததோர்
மின்னை வேங்கடத் துச்சியில் கண்டு போய்
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே—10-1-2-

சொல்லாய் பைங்கிளியே
சுடராழி வலனுயர்த்த
மல்லார் தோள் வட வேங்கடவனை வரச்
சொல்லாய் பைங்கிளியே —10-10-5-

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே–11-3-7-

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே –11-5-10-

நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய்
நிலாத் திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெக்கா வுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் யுலகமேத்தும்
காரகத்தாய் கார் வனாத்துள்ளாய் கள்வா
காமரு பூம் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே –

வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர்
மல்லையாய் மதிட்கச்சி யூராய் பேராய்
கொங்குத்தார் வளம் கொன்றை யலங்கல் மார்வன்
குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்
பங்கயத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
பனி வரையின் உச்சியாய் பவளவண்ணா
எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி
ஏழையேன் இனி இங்கனே உழி தருகிறேனே–9-

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்ற மரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே–16-

காரார் திருமேனி காணுமளவும் போய் சீரார் திருவேண்கடமே திருக்கோவலூரே –சிறிய திருமடல் – 69

என்னும் மலர்ப் பிறையாலேய்ந்த – மழைக் கூந்தல் தென்னனுயர் பொருப்பும் தெய்வ வட மலையும் –பெரிய திருமடல் – 6

தெந்தில்லைச் சித்திர கூடத்து என் செல்வனை மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை –பெரிய திருமடல் – 124

——————-

ஸ்ரீ நம்மாழ்வார் -52-பாசுரங்கள் மங்களாசாசனம்

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —திருவிருத்தம் -8-

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ ஆடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10-

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே – –31-

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – 50-

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60- –

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு அசுரைச் செற்ற
மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – – 67- –

உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
இறுகின்ற தாலிவாளகம் மெல்லாவி எரி கொள்ளவே – – -81 –

கண்ணாவான் என்றும், மண்ணோர் விண்ணோர்க்குத்
தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே–-திருவாய்மொழி – -1-8-3-

எந்தாய்!தண் திருவேங்கடத்துள் நின்றாய்! இலங்கை செற்றாய்! மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா!
கொந்து ஆர் தண் அம் துழாயினாய்! அமுதே! உன்னை என்னுள்ளே குழைந்த எம்
மைந்தா! வான்ஏறே! இனி எங்குப் போகின்றதே?–2-6-9-

போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர்
ஆகின்றாய்! உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே! பரமா! தண் வேங்கடம்
மேகின்றாய்! தண் துழாய் விரை நாறு கண்ணியனே!–2-6-10-

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலமுண்டவனை
ஆமோதரமறிய ஒருவர்க் கென்றெ தொழுமவர்கள்
தாமோதரனுருவாகிய சிவற்கும் திசைமுகற்கும்
ஆமோதரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே.–2-7-12-

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே–3-3-1-

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே–3-3-2-

அண்ணல் மாயன் அணி கொள் செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க் கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த் திரு வேங்கடத்து
எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே–3-3-3-

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என் கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே–3-3-4-

சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5-

வேங்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந்தார்கட்கே–3-3-6-

சுமந்து மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே–3-3-7-

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8–

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள் மலராம் அடித் தாமரை
வாயுள்ளும் மமனத்துள்ளும் வைப்பார்கட்கே–3-3-9-

வைத்த நாள் வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந் தடந் தாள்வரை–3-3-10-

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே–3-3-11-

வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப் படுவாரே–3-5-8-

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம் பெருமான் உளனாகவே–3-9-1-

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே–4-5-11-

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கரு நிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே–6-6-1-

சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு
செங் கனி வாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே–6-6-2-

நிறங் கரி யானுக்கு நீடுலகு உண்ட
திறங் கிளர் வாய்ச் சிறுக் கள்வ னவர்க்கு
கறங்கிய சக்கரக் கை யவனுக்கு என்
பிறங் கிருங் கூந்தல் இழந்தது பீடே–6-6-3-

பீடுடை நான் முகனைப் படைத்தானுக்கு
மாடுடை வையம் அளந்த மணாளற்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே–6-6-4-

பண் புடை வேதம் பயந்த பரனுக்கு
மண் புரை வையம் இடந்த வராகற்கு
தெண் புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே–6-6-5-

கற்பகக் காவன நற் பல தேளாற்கு
பொற் சுடர்க் குன்றன்ன பூத் தண் முடியற்கு
நற் பல தாமரை நாண் மலர்க் கையற்கு என்
விற் புருவக் கொடி தோற்றது மெய்யே–6-6-6-

மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு
பையரவின் அணைப் பள்ளியி னானுக்கு
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்குஎன்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.–6-6-7-

சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம் படப் பாலுண் பிரானுக்கு என்
வாசக் குழலி இழந்தது மாண்பே–6-6-8-

மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண் சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண் பெருந் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே–6-6-9-

பொற்பமை நீண் முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே–6-6-10-

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சடகோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்துஇப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே–6-6-11-

உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே–6-10-1-

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல் லசுரர் குல மெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திரு வேங்கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே–6-10-2-

வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திரு வேங்கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே–6-10-3-

ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திரு மா மகள் கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்து மாறு புணராயே–6-10-4-

புணரா நின்ற மரமேழ் அன்றெய்த ஒரு வில் வலவாவோ!
புணரேய் நின்ற மர மிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துன பாதம் சேர்வ தடியேன் எந் நாளே–6-10-5-

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இன மினமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந் நாள் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7-

நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங் கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8-

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந் தாமரைக் கட் செங்கனி வாய் நாற் றோளமுதே! என துயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே-6-10-9-

அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே!
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே–6-10-10-

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென் றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திரு வேங்கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே–6-10-11-

நங்கள் வரி வளை யாயங்களோ நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தட முலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-

இன்றிப் போக இரு வினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே–9-3-8-

மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

—————–

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசை திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர் -37–

ஊரும் வரியரவ மொண் குறவர் மால் யானை
பேர வெறிந்த பெரு மணியை காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர்
எம்மென்னு மால திடம் –38-

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடநதது கஞ்சனை முன்னஞ்ச கிடந்ததுவும்
நீரோத மா கடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது-39–

பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனந்துறந்த வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டஞ்சும் வேங்கடமே மேலசுரர்
கோன் வீழக் கண்டுகந்தான் குன்று -40—

உணர்வாரார் உன் பெருமை ஊழி தோறு ஊழி
உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் ——-68-

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் –76-

வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர் –77-

படையாரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம்
தொடையலோ டேந்திய தூபம் இடையிடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே லோரு நாள்
மானமாய வெய்தான் வரை -82-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் -99-

———————

ஸ்ரீ பூதத்தாழ்வார் பாசுரம் -9-பாசுரங்கள் மங்களாசாசனம் –

சென்றது இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது இராவணனைக் கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து –25-

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை—33–

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

—————————-

ஸ்ரீ பேயாழ்வார் -19-பாசுரங்கள் மங்களாசாசனம் –

மாற்பால் மனம் கழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து ——-14-

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார் ——–26–

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை —-30–

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன் —–39-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-

தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோருநாள்
மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-58-

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63-

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த
கள்ங்கனிக்கிக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-68-

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —–70-

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி -பிளிறி
விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–71-

குன்று ஒன்றினாய குற மகளிர் கோல் வளைக்கை
சென்று விளையாடும் திங்கழை போய் -வென்று
விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர் கோமான் இடம் —–72-

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி
வடமுக வேங்கடத்து மன்னும் -குட நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள நலம் ——73-

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு —–75-

முடிந்த பொழுதில் குறவாணர் ஏனம்
படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலோருநாள்
தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———-89-

வேங்கடமெனில் பாவங்களைச் சுட்டெரிக்கக் கூடியது என்ற பொருள்கொண்ட இத்தலத்தைப்பற்றி பிர்ம்மாண்ட புராணம், வராக புராணம்
ஸ்காந்த புராணம் பாத்ம புராணம், என்ற புராணங்கள் வாயிலாக அறியப்படுகிறது. எண்ணற்ற நூல்களில் இத்தலம் பற்றிய பல குறிப்புகள்
கிடைக்கிறது. எண்ணற்ற மொழிகளில் இத்தல வரலாறு எழுதப்பட்டுள்ளது.
எழுத்து வடிவம் பெறாமல் ஒலிவடிவிலேயே இன்றும் இருந்து கொண்டிருக்கும் சில மொழிகளில் எண்ணற்ற வருடங்கட்கு முன்னால் இப்பெருமானைக்
குறித்துச் செய்யப்பட்ட ஸ்தோத்திரங்கள் இன்னும் ஒலிவடிவாகவே தொடர்ந்து பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டு (ஸேவிக்கப்பட்டு) வருகிறது.

இத்தலம் பற்றி எழுதப்புகின் அல்லது அறியப்புகின் கிடைக்கின்ற ஆதாரங்களும், விவரங்களும் ஏராளம் ஏராளம்.

இத்திருமலைக்கு ஒவ்வொரு யுகத்திலும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியால் ஒவ்வொரு விசேடமான பெயர் வழங்கி வந்தது.
கிரேதாயுகத்தில்-கருடாத்ரி அல்லது கிரிடாத்திரி

திரேதாயுகத்தில்-வ்ருஷபாத்ரி

துவாபர யுகத்தில்-  அஞ்சனாத்ரி

கலியுகத்தில்-வேங்கடாத்ரி (வேங்கடாசலம்)

இத்திருமலையில் வைகுண்ட வாசனான ஸ்ரீனிவாசப் பெருமாள் மிகவும் விருப்பங்கொண்டு நேரில் வரவிரும்பி அவ்விதமே அவதார ரூபத்தில்
எழுந்தருளி வசித்துவருவதாகவும் கலியுகம் முடியும்வரை பக்தர்களின் குறை தீர்க்க இங்கேயே வசித்து வருகிறாரென்றும் அதன் காரணமாகவே முப்பத்து
முக்கோடி தேவர்களும் சகல ரிஷிகளும், இத்திருமலைமேல் வந்த எம்பெருமானைத் துதித்தவண்ணம் வாழ்ந்து வருகின்றனர்

7 பர்வதங்களான வெங்கடாத்ரி, சேஷாச்சலம், வேதாசலம், கருடாசலம் வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, அனந்தாத்ரி என்னும் பெயர்களுடன்
ஏழுமலையாக இலங்கிவரும் இத்திருமலையில் 7 மலைகட்கு மத்தியில் ஸ்ரீனிவாசன் எழுந்தருளியுள்ளார்.

ஸ்ரீனிவாசனாகப் பெருமாள் இங்கு எழுந்தருளுவதற்கு முன்பே வராக மூர்த்தியாக இவ்விடத்து எழுந்தருளி வராகரூபியாய் காட்சி தந்தருளினார்.
வராகச் சேத்திரம் என்றே ஒருகாலத்தில் இது புகழ்பெற்றிருந்தது. தற்போதும் இங்குள்ள ஸ்வாமி புஷ்கரிணிக்கு அருகில் அமைந்துள்ள ஆதிவராகரைச்
சேவித்தபின்பே ஸ்ரீனிவாசனைச் சேவிக்கச் செல்ல வேண்டுமென்பது நியதி.

பாண்டவர்களின் நாயகன் தர்மபுத்திரனான யுதிஷ்ட மகாராஜனின் ஆட்சிக்காலம் முடிவுற்றதும் இப்புவியில் கலியுகம் பிறக்கத் தொடங்கியது.
எங்கும் கலியின் கொடுமை தாங்கவொன்னாததாயிருந்தது. உலகம் நாளுக்கு நாள் அழிவை நோக்கிச் செல்வதைக் காணப்பொறாத முனிவர்கள், கலியின் கொடுமை குறைந்து உலக நன்மைக்காக காஷ்யப மகரிஷியின் தலைமையில் ஒரு பெரிய யாகம் நடத்திக்கொண்டிருந்த போது, அங்கு வந்த நாரதர் இந்த மகாயக்ஞத்தின் பயனை எந்த மூர்த்திக்கு அளிக்கப் போகிறீர்கள் என்று கேட்க அவர்களும் வழக்கப்படியான முறைப்படி பிரம்மா, விஷ்ணு ருத்ரன் என்னும் மும்மூர்த்திகட்குத்தான் வழங்கப்போகிறோம் என்று சொல்ல அதைக் கேட்ட நாரதர் மற்ற யுகங்களுக்குத்தான் அது பொருந்தும், கலியுகத்தில் மானிடர்களிடம் காணப்படும் சகல பாவங்களையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளும் மூர்த்தி யாரோ அவருக்குத்தான் தரவேண்டும் என்றார்.

இதைக்கேட்ட முனிவர்கள் மும்மூர்த்திகளில் மிகப் பொறுமைசாலி யார் என்பதைக் கண்டுபிடிக்கும் வல்லமை நம்மில் யாருக்குள்ளதென்று ஆராய
அனைவரும் ஒன்றுகூடி அந்த வல்லமை பிருகு மஹரிஷிக்குத்தான் உண்டு என்று தீர்மானித்து அவரையே மூவுலகுக்கும் அனுப்ப எண்ணினர். அவரும்
அதற்கு இசைந்தார்.

பிருகு முதலில் பிரம்மாவின் சத்திய லோகத்திற்கு வந்தார். அங்கு பிரம்மன் சரஸ்வதி தேவியுடன் ரிஷிகள் புடைசூழ கொலுவீற்றிருந்தார். தான்
வந்ததை பிரம்மன் கண்டும் காணாததுபோல் இருக்கிறான் என்று நினைத்த பிருகு பிரம்மதேவனுக்கு நேரில் வந்து கோபக்கனல் வீச நின்றார். அப்போதும்
பிரம்மன் இவன் நரன்தான் என்று எண்ணி அலட்சியப்பார்வை பார்த்து வரவேற்காது இருந்தார். இதனால் கோபத்தின் எல்லையை அடைந்த பிருகு ஏ
பிரம்மனே நீ வந்தோரை வரவேற்கும் பக்குவமறியாது, மமதை கொண்டுள்ளாய் எனவே உனக்கு பூலோகத்தில் இனிமேல் பூஜைகள் இருக்காது. கலியுகத்தில் உனக்கு பூவுலகில் கோவில்களும், வழிபாடுகளும் இல்லாமல் போகக்கடவது என்று சபித்துவிட்டு கைலாயத்திற்கு வந்தார்.

கைலாயத்தில் சிவன் உமையவளோடு அந்தப்புரத்தில் ஏகாந்தத்தில் தனித்திருக்க, சிவன் எதிரிலே சென்று நின்றார் தான் ஏகாந்தத்தில் இருக்கும்
வேலையில் அனுமதியின்றி உள்ளே நுழைந்த பிருகுவின் மீது தனது சூலாயுதத்தை ஏவினார். அதிலிருந்து தன்னைக் காத்துக்கொண்ட பிருகு இவன்
கோபக்காரன் அவன் அலட்சியக்காரன் இவ்விருவரும் பொறுமைசாலிகள் இல்லை யென்று தீர்மானித்ததோடு சிவனை நோக்கி என்போன்ற ரிஷிகள்
எந்த நேரத்தில் எந்த நிலையில் வந்தாலும் வரவேற்பதே உன்போன்றவர்களின் கடமை. அதைவிடுத்து என்மீது கோபம் கொண்டாய். எனவே கலியுகத்தில்
பூவுலகில் நீங்கள் இருவரும் (சிவன், உமை) சேர்ந்தது மாதிரியான கோவில்கள் இல்லாமல் போகக் கடவது என்று சபித்துவிட்டு வைகுண்டம் அடைந்தார்.

அங்கே திருமகள் பாதம் வருட அறிதுயிலமர்ந்த மணிவண்ணன் சற்றேனும் இவரை ஏறெடுத்து பார்க்கவில்லை. மஹாவிஷ்ணு திருமகளை
நோக்க திருமகள் மஹாவிஷ்ணுவை நோக்கி அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள் என்ற வண்ணமிருக்க வெகுநேரம் காத்திருந்தார்.
கொஞ்சமும் பயனில்லை. மற்றிரண்டுலோகங்களில் கிடைத்த மரியாதை கூட இங்கு இல்லை. மூம்மூர்த்திகளில் எவனுக்கும் பொறுமையில்லை என்று
எண்ணி மிகவும் வெகுண்டார். எனவே மிக விரைந்த நடையினராய் திருமாலை நோக்கிச் சென்றார். அப்போதும் அவர் திரும்பிப் பார்க்கவுமில்லை.
எனவே தனது காலால் திருமாலின் நெஞ்சில் எட்டி உதைத்தார் (கலியுகமல்லவா, அங்கிருந்து வந்த முனிவரல்லவா)

திடீரென்று அறிதுயில் களைந்த திருமால் அம்முனிவரின் பாதத்தைப் பற்றிக்கொண்டு ஐயோ பாறை போன்ற என் மார்பில் உதைத்த தங்கள் பாதங்கள் எப்படி நோகிறதோ என்று அந்தப்பாதத்தை  தமது இருகரங்களால் தாங்கி நீவி விட ஆரம்பித்தார்.

தன் தவற்றை உணர்ந்த பிருகு கண்களில் தாரை தாரையாக நீர்பெருக்கெடுக்க மன்றாடி மன்னிப்புக் கேட்டு மனம் பதைபதைக்கத் தான்
வந்த காரியத்தையும் தெரிவித்து விட்டு நடந்த உண்மைகளை நாவலந்தீ வினில் உரைக்க திரும்பலுற்றார்.

என்னதான் இருந்தாலும் தன்முன்னே தனது மணாளனை முனிவர் ஒருவர் உதைத்ததை பொறுக்கவியலாத மகாலட்சுமி வைகுண்டத்தைவிட்டு
விலகி பூவுலகுக்கு வந்து மறைந்திருந்து தவம் செய்து வரலாயினர். திருமகள் இல்லாத வைகுண்டம் களையிழந்தது. திருமாலுக்கு திருமகளின் பிரிவு
தாங்கவொன்னாத துயரைத் தந்தது. எனவே தாமும் பூலோகம் புகுந்து தம் மனதிற்கு ரம்மியமான சூழ்நிலையில் இலங்கிய திருமலையில் ஒரு
புளியமரத்தின் புற்றில் எழுந்தருளி வசித்து வரலாயினர்.

இஃதிவ்வாறிருக்க திரேதா யுகத்தில் குசத்துவசர் என்னும் மகரிஷியின் தபோ வலிமையால் திருமகள் அவருக்கு புத்திரியாக அவதரித்து வேத
அலங்கார ரூபத்துடன் சகல வேதங்களின் சாராம்சம் அறிந்த பேரொளியாய் வேதவல்லி (வேதவதி) என்ற பெயருடன் வளர்ந்துவரத் தக்க
பிராயத்தையடைந்த வேதவதிதான் ஸ்ரீவிஷ்ணுவுக்கே மாலையிட்டு அவனையே மணம் முடிக்க வேண்டும் அதற்கு மார்க்கமுண்டோ என்று தந்தையை வினவ அவரும் ஸ்ரீவிஷ்ணுவைக் குறித்தே தவமிருக்குமாறு சொல்ல வேதவதி விஷ்ணு தியானத்தில் ஆழ்ந்தார்.

திரேதாயுகத்தில் இராமவதாரத்தின்போது இராவணன் பஞ்சவடியிலிருந்து சீதா தேவியைத் தூக்கிச் செல்லும் போது வேதவதியுடன் சென்ற அக்னி
தேவன் ராவணனை நிறுத்தி ஏ, இராவணா நீ கொண்டு செல்லும் சீதை போலிச் சீதை உண்மையான சீதையை இதோ என்னிடம் ஒளித்து
வைத்தார்கள் நின் கோபத்திற்கு ஆளாகி பின்னால் துன்பப்படக்கூடாது என்பதற்காகவே உன்னிடம் உண்மையைக் கூறுகிறேன். இந்த உண்மைச்
சீதையை ஏற்றுக்கொள் என்று கூற அதை நம்பிய ராவணன் வேதவதியைக் கொண்டு செல்ல, உண்மைச் சீதை அக்னியிடம் சேர்ந்தாள்.

இராமன், இராவண வதம் முடித்து சீதையை அக்கினியில் இறக்க கற்புக்கரசிகளான இரண்டு சீதைகளையும் அக்கினிதேவன் இராமனிடம்
ஒப்படைக்க உண்மைச் சீதையை ஏற்றுக்கொண்ட இராமன், வேதவதியின் தவத்தை மெச்சி இந்த அவதாரத்தில்
நான் ஏகபத்தினி விரதன். எனவே கலியுகத்தில் யான் திருமகளை விடுத்து பூவுலக வாசம் செய்யும் போது நின்னை அடைவோம் என்று வரமீந்தார்.

அந்த வேதவதியே, கலியுகத்தில் சந்திரவம்சத்தைச் சார்ந்த ஆகாச ராஜன் என்னும் மன்னன். புத்திரப்பேறு வேண்டி செய்த புத்திர காமேஷ்டி
யாகத்தில் ஒரு பெண் மகவாகத் தோன்றி பத்மாவதி என்னும் பெயரில் அம்மன்னனிடம் வளர்ந்து வந்தாள்.

இஃதிவ்வாறிருக்க ஸ்ரீகிருஷ்ணவதாரத்தில் கண்ணனை யசோதை வளர்த்தாள். ஆயினும் கண்ணன் ருக்குமணியையும், சத்தியபாமாவையும்
திருமணம் செய்து கொண்ட சுப நிகழ்ச்சியை யசோதை காணவில்லை. தன் குழந்தையின் திருமணக் கோலத்தைக் காணமுடியவில்லையே என்ற
மனக்குறையை கலியுகத்தில் தீர்த்துவைப்பேன் என்று ஸ்ரீகிருஷ்ணன் தன் அன்னைக்கு ஆறுதல் வரம் தந்திருந்தார்.

இந்த யசோதையே வகுளமாலிகை என்ற பெயரில் திருமலையில் இருந்த வராக மூர்த்திக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். திருமலயில்
புளியமரத்தடியில் ஒரு புற்றில் எம்பெருமான் எழுந்தருளி நெடுநாள் அன்ன ஆகாரமின்றி இருக்க இந்நிலைகண்ட பிரம்மனும் சிவனும் தாங்களே முறையே
பசுவும் கன்றுமாக மாற பூமாதேவி ஒரு இடைக்குல பெண்ணாக அவதரித்து அந்த பசுவினையும் கன்றினையும் சோழ மன்னனிடம் விற்க, அவனதை
மந்தையில் சேர்க்க தினந்தோறும் பசுக்கூட்டம் மேய்ச்சலுக்குச் செல்லும் போது அந்த தெய்வப்பசு மட்டும் மந்தையிலிருந்து விலகி ஸ்ரீனிவாசன்
எழுந்தருளியுள்ள புற்றுக்கருகாமையிற் சென்று பாலைச் சொரிய தெய்வப்பசு பால் கொடுக்காமல் இருப்பதையறிந்த மன்னன் இதன் காரணத்தைக்
கண்டுபிடிக்குமாறு பசுமேய்ப்போரிடம் தெரிவிக்க தெய்வப்பசு புற்றருகே சென்று பால் சொரிவதைக் கண்டு ஆத்திரமுற்று தன் கையிலிருந்த
கோடாலியால் பசுவை வெட்ட எத்தனிக்க எம்பெருமான் லேசாக எழுந்திருக்க கோடாலி அவர் தலையில் பட்டு ரத்தம் சிந்த ஆரம்பிக்க பசுமேய்ப்பவன்
மூர்ச்சையாகி கீழே விழுந்தான்.

தெய்வப்பசு கண்ணீர் சிந்திய கோலத்துடன் சோழ மன்னனின் ஆராய்ச்சி மணியை அடிக்க என்னவென்று புரியாத மன்னன் பசுவினைப் பின்
தொடர்ந்து புற்றருகில் வரபசு மேய்ப்பவன் கீழே விழுந்துகிடப்பதையும், ரத்தம் கொட்டியிருப்பதையும் புற்றுக்குள் யாரோ இருப்பதையும் அறிந்து
தனது உடைவாளால் வெட்ட முயற்சிக்கும் வேளையில் எம்பெருமான் புற்றிலிருந்து முழுவதுமாக வெளிப்பட்டு பசுவைக்கொல்லவந்தவனைத் தடுத்து தானே பசுவைக் காப்பாற்றியதையும், ஏவலன் செய்த குற்றம் மன்னனையே சாருமாதலால் நீ பிசாசாக அலையக்கடவது
என்று ஸ்ரீனிவாசன் சாபமிட நிலையுணர்ந்த மன்னன் மன்னிப்புக்கேட்க நீ சில காலம் பிசாசாக அலைந்து பின்பு ஆகாசராஜன் என்னும் பெயரில் மன்னனாகத் திகழ்வாய் என்றும் அப்போது திருமகளே உனக்கு மகளாக வாய்த்து வளர்ந்துவர யாம் வந்து மணம்புரிவோம் என்று கூறி பசுமேய்ப்பவனையும் உயிர்ப்பித்தார்.

திருமலையில் புற்றில் நடந்த அதிசயத்தைச் செவியுற்ற வகுளமாலிகை ஸ்ரீனிவாசனை மகனாக வரித்து யசோதை கண்ணனை வளர்த்தவாறே
வளர்த்து வர ஒரு நாள் ஸ்ரீனிவாசன் வேட்டைக்குச் செல்லும் போது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பத்மாவதியைக் கண்டு இவளே
திருமகளென தனது வளர்ப்புத் தாயான வகுளமாலிகையிடம் தெரிவித்து ஆகாசராஜனிடம் பெண்கேட்டு அனுப்பிவைத்தார்.

ஆகாச ராஜனும் தனது மகள் மூலம் உண்மை நிலை உணர்ந்தும் மந்திரா லோசனைகளை செய்து மகவு தர இசைந்து மணநாள் குறித்து
திருமால் திருமகள் திருமணம் இதுவென உள்ளுணர்வால் உணர்ந்து வெகு விமரிசையாக இதுகாறும் யாரும் செய்திராவண்ணம் திருமணம் நடத்த எண்ணி அதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்ய பணம் பற்றாக்குறையாக இருக்க
குபேரனிடம் கடன் வாங்கி திருமலையில் திருமணம் நடத்தி வைத்ததாகவரலாறு.

வேதவதியான பத்மாவதியினை ஏற்று யசோதையான வகுளமாலிகையின் குறைதீர்த்த ஸ்ரீனிவாசன் ஏதோ மனக்கிலேசம் உள்ளவர் போலவே
தோற்றமளிக்க எம்பெருமானின் உளக்கிடைக்கையை அறிந்த பத்மாவதி, தாங்கள் வைகுண்டத்திலிருந்து வந்த திருமகளைத்தானே நினைத்துக்
கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க ஸ்ரீனிவாசன், ஆம் என்பது போல தலையசைக்க அவ்வாறாயின் போய் மகாலெட்சுமியை அழைத்து வாரும்
என்று அனுப்பிவைக்க திருமகள் லட்சுமி தேவியென பெயர்கொண்டு கோல்ஹாப்பூரில் (இங்கு லட்சுமி சேத்திரமுண்டு) இருப்பதை அறிந்து அங்கு
எழுந்தருள லட்சுமி தேவி ஹோல்காப்பூரில் இல்லாததைக் கண்டு மிகவும் வாடிய எம்பெருமாள் என் செய்வது என்று சிந்தித்திருக்கும் வேளையில்
கீழ்க்கண்டவாறு வானிலிருந்து அசரீரி ஒலித்தது.

பகவானே, இவ்வூருக்குத் தெற்கே ஓடும் கிருஷ்ணவேணி ஆற்றிலிருந்து 22 யோசனை தூரத்தில் பொன்முகலியென்று ஒரு நதி ஓடுகிறது. அதன்
அருகில் நின்று சுவர்க்க லோகத்தில் உள்ள ஆயிரம் இதழ் உடைய தாமரை மலரை வரவழைத்து ஒரு குளத்தில் அம்மலரை பிரதிஷ்டை செய்து அதன் நேர் கிழக்கில் சூரிய பகவானை பிரதிஷ்டை செய்து 12 வருட காலம் லட்சுமி மந்திரத்தை ஜெபித்து வந்தால்
திருமகளை அடையலாம் என்று கூறியதைக் கேட்டு, எம்பெருமான் வாயுபகவானை அழைத்து ஆயிரம் இதழ் தாமரையைக் கொண்டுவர உத்தரவிட
வாயும் அம்மலரைக் கொணர அசரீரி ஒலித்த வண்ணமே தவமிருக்க இம்மந்திரம் லட்சுமி தேவியை பிடித்து இழுத்தது.

அப்போதும் எம்பெருமானைச் சேர மனமில்லாத திருமகள் பரமபதத்தின் நித்ய சூரிகளை அழைத்து என் செய்வது என்று கேட்க தாயே
தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை, பிருகு மும்மூர்த்திகளில் யார் சாந்தவான் என்று அறியவே அவ்வண்ணம் செய்தான். சகல ஜீவாத்மாக்களுக்குத் தாயாக விளங்கும் தாங்கள் பிருகு முனிவனுக்கும் தாயன்றோ. அவன் உங்கள் குழந்தையல்லவா. குழந்தையின் குற்றங்களைத் தாய் பொருட்படுத்தலாமோ. பகவானின் தவம் வீணாகலாமோ. தாங்கள் எம்பெருமானைச் சேர்வதே அழகானதன்றோ என்று கூற மனந்தெளிந்த லட்சுமி தாமரை நாளத்தின் வழியே பிரவேசித்து பேரழகு பொருந்தி நிற்க, எம்பெருமான் களிபேருவகைகொண்டு ஏற்றுக்கொண்டார்.

பிருகு முனிவர் ஓடிவந்து பிராட்டியின் கால்களில் வீழ்ந்து மன்னிப்புக்கோரி கதற அருள்புன்னகை புரிந்த லட்சமி தேவி, குழந்தாய்
பிருகுவே உன்னிடம் ஒரு குற்றமுமில்லை எல்லாம் பகவானின் லீலைகள் என்று கூறியருள, ஸ்ரீனிவாசன் மகாலட்சுமியை அழைத்துக்கொண்டு
திருமலைக்கு வர வகுளமாலிகையும் பத்மாவதியும் எதிர் கொண்டழைக்க எம்பெருமான் ஸ்ரீனிவாசன் என்னும் திருநாமத்தோடு லட்சமி பத்மாவதி
சமேதராக திருமலையில் ஆனந்த நிலையத்தில் எழுந்தருளியதாக வரலாறு.

ஆதிவராஹ சேத்திரம் என்னும் இந்த திருவேங்கடம் மொத்தம் 3 பிரிவுகள் கொண்டது.

முதல் பிரிவு-திருப்பதி, இதனைக் கீழ்திருப்பதி எனவும் பகர்வர். இங்கு பெருமாள் சயன திருக்கோலம்.
மூலவர்-கோவிந்தராஜப்பெருமாள், கிழக்கு நோக்கிய புஜங்க சயனம்.

தாயார்- புண்டரீக வல்லி. இங்கு ஆண்டாள் உடையவருக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு.

இந்தக் கீழ்த்திருப்பதியில் உள்ள கோவிந்த ராஜப்பெருமாள் சன்னதி மிகவும் சக்திவாய்ந்ததாகும். முக்கியத்துவம் நிறைந்ததாகும். தில்லை
திருச்சித்ரகூட கோவிந்தராஜப் பெருமாள் சில காலம் இங்குவந்து இருந்த பின்னால் தில்லைக்கு சென்றுவிட அவர் நினைவாக இத்தலம்
தோற்றுவிக்கப்பட்டது.

2ம் பிரிவு திருமலை- இது மலைமேல் உள்ள கோவில்

மூலவர்-திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கிடாசலபதி. பாலாஜி, ஏழுமலையான் வேங்கடத்தான் என்று பல திருநாமங்கள். கிழக்குநோக்கி
நின்ற திருக்கோலம்.

உற்சவர்-  கல்யாண வெங்கடேஸ்வரர்.

தீர்த்தங்கள்- மொத்தம் 14 தீர்த்தங்கள்.

 1. சுவாமி புஷ்கரிணி     2. பாபவிநாசம்
3. ஆகாசகங்கை        4. கோனேரி
5. வைகுண்ட தீர்த்தம்   6. சக்ரதீர்த்தம்
7. ஜபாலி தீர்த்தம்      8. வகுள தீர்த்தம்
9. பாண்டவ தீர்த்தம்    10. இராமகிருஷ்ண தீர்த்தம்
11. தும்புரு தீர்த்தம்     12. சேஷ தீர்த்தம்
13. சுகஸந்தன தீர்த்தம்  14. மொர தீர்த்தம்.

இதில் மிகவும் முக்கியமான தீர்த்தங்கள் பற்றிய சிறப்பியல்புகள் தனியே தரப்பட்டுள்ளது.

விமானம்- ஆனந்த நிலைய விமானம்

காட்சி கண்டவர்கள்-  எண்ணற்ற ரிஷிகள், பிரம்மா, சிவன், ஆறுமுகன், தொண்டைமன்னன்.

3ம் பிரிவு-  திருச்சானூர். இதை அலமேலு மங்காபுரம் என்றும் கூறுவர்.
மூலவர்-    தாயார் தான் மூலவர். அலர்மேல்மங்கை பத்மாவதி என்னும்-திருநாமங்கள். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
தீர்த்தம்-    பத்ம ஸரோவரம்.
சிறப்புகள்     1. வேங்கடகிரி என்றும், சப்தகிரி என்றும் பல பெயர்களில்அழைக்கப்படும் இம்மலை 7 மலைகளால் ஆனது. சப்த என்பதற்கு 7 என்பது
பொருள். கிரி என்னும் சொல் மலைகளைக் குறிக்கும். எனவே சப்தகிரி என்றும் ஸப்த பர்வதங்கள் என்றும் இந்த மலை குறிக்கப்படுகிறது.

அந்த 7 மலைகள் எவையெனில்

1. வேங்கடாத்ரி-வேம் என்றால் பாவம். கட என்றால் நாசமாதல். எனவே பாவங்கள்
எல்லாம் நாசமாகும் இடம் என்று பொருள். வேங்கடம் என்ற சொல்லுக்கே
பாவங்களைச் சுட்டெரித்தல் என்ற பொருள் உண்டு. வேங்கடாத்ரி ஆயிற்று.
2. சேஷாத்ரி-ஆதிசேடனே இங்கு எம்பெருமானின் அவதாரத்தின் பொருட்டு மலை
உருவில் தோன்றியுள்ளான். எனவே சேஷாத்ரியாயிற்று.
3. வேதாத்ரி-   வேதங்கள் எல்லாம் மலை உருவில் ஸ்ரீனிவாசனை வழிபடுவதால்
வேதாத்ரி எனவும் வேதகிரி எனவும் வழங்கப்படுகிறது.
4. கருடாத்ரிதிருமாலின் வாகனமாகிய கருடன் இம்மலையை (எம்பெருமானின்
அவதாரத்தின் பொருட்டு) எடுத்துவந்து இவ்விடத்தில் வைத்ததால் கருடாத்ரி ஆனது.

5. விருஷபாத்தரிவிருஷபாசுரன் என்னும் அரக்கனுக்கு இம்மலையில் திருமால் மோட்சம்
அளித்தார். அவன் வேண்டுகோளுக்கிணங்க அவன் பெயராலேயே
விருஷபாத்ரி என மொழியப்படுவதாக ஐதீஹம்.
6. அஞ்சனாத்ரி     அனுமனின் தாய் அஞ்சனை. அவள் இந்த மலையிலே தவம் செய்தாள்.
மகப்பேறு வேண்டினாள். ஆதிவராஹ மூர்த்தியின் அருளால் ஆஞ்சநேயனைப் பெற்றாள். அஞ்சனை தவமியற்றியதைக்கொண்டு
அஞ்சனாத்ரி ஆயிற்று.
7. ஆனந்தாத்ரி     ஆதிசேடனும் வாயு தேவனும் தங்களில் யார் பலவான் என்பதைக்
காண்பிக்க தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு மேருமலையின் சிகரங்களை ஆளுக்கொன்றாகத் தகர்த்துக்கொண்டு இப்பெருமாள்
முன்னிலையில் வீழ்த்த, பலத்தில் இருவரும் சமமானவர்களே என்று பெருமாளின் திருவாக்கும் திருவருளும் பெற்று ஆனந்தமுற்றார்கள்.
ஆதலின் ஆனந்தாத்ரி ஆயிற்று.

திருவேங்கடம் என்பது புஷ்ப மண்டபமாகும்சிந்துபூமகிழ் திருவேங்கடம் என்பது நம்மாழ்வார் வாக்கு,
திருவரங்கத்திற்கு போக மண்டபம் என்றும் காஞ்சிபுரத்திற்கு தியாக மண்டபம் என்பதும் பெயர்.

தேனோங்கு நீழற் திருவேங்கடமென்றும்
வானோங்கு சோலை மலையென்றும் – தானோங்கு
தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ்
சொன்னார்க்கு உண்டோ துயர்–பாரதம் பாடிய பெருந்தேவனார்

குறும்பறுத்த நம்பி என்பவர் திருமலையில் மண்பாண்டங்கள் செய்து வாழ்ந்தவர். மண்பாண்டம் செய்யும்போது கையில் ஒட்டிக் கொண்டுள்ள
மண்ணினால் சிறுபுஷ்பங்கள் செய்து மானசீகமாய் வேங்கடவனுக்குச் சமர்ப்பித்து ஆராதனை செய்து வந்தார். இவரது காலத்தில் வாழ்ந்திருந்த
தொண்டை மன்னனும் வேங்கடவன் பால் மிக்க பக்தி பூண்டொழுகினான். இம்மன்னன் தங்கத்தால் புஷ்பங்கள் செய்து வேங்கடவனுக்கு சமர்ப்பித்து
வந்தான். ஒரு நாள் காலையில் இம்மன்னன் வேங்கடவனைத் தரிசிக்க சன்னதிக்குச் செல்லும்போது தான் சமர்ப்பித்த தங்கப் புஷ்பங்கள் யாவும்
சிதறுண்டு பூமியில் கிடப்பதையும் மண்புஷ்பங்கள் வேங்கடவனின் திருமேனியை அலங் கரிப்பதையும் கண்டு என்னவென்று விசாரிக்க குறும்பறுத்த நம்பிகள் சமர்ப்பிக்கும் புஷ்பங்கள் இவையென்று அறிந்து குறும்பறுத்த நம்பியின் பக்தி மேன்மையைக் கண்டு நம்பியைத் தொழுதுசென்றான் தொண்டை மன்னன்.

இவ்விதம் தன் மீது உண்மையான பக்தி கொண்டோரின் மேன்மையை வேங்கடவன் உலகறியச் செய்தான். பொய்யான பக்தியுடனும், ஆடம்பரமான
பக்தி வேஷத்தையும், சரணாகதித்துவம் இல்லாத நேரத்திற்கேற்றவாறு போடக் கூடிய பக்திவேஷத்தையும் உதாசீனப்படுத்தி தூயபக்தியில் நிறைந்த உள்ளம் கொண்ட பக்தர்களின் மேன்மையை உலகறியச் செய்துகொண்டே இருக்கிறான் வேங்கடவன்.

அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஸ்ரீஆதிவண் சடகோப தீந்தரமகாதேசிகன் என்னும் ஜீயர் திருமலைக்கு படிக்கட்டுகளை
முதன் முதலில் அமைத்தவர்.

மகாஞானிகளும், கள்ளங்கபடமற்ற பக்தர்களும் வந்து குவிந்து கொண்டே இருக்கும் இந்ததிருமலையில் தீர்த்த கைங்கர்யம் செய்து
கொண்டிருந்த திருமலை நம்பிகள் இராமானுஜருக்கு ராமாயண பாடம் கற்றுத் தந்தவர் ஆவார். மணவாள மாமுனிகளும் இங்கு பலமுறை
எழுந்தருளியுள்ளார்.

இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோத்ஸவம் காணக்கிடைப்பதரிது. பிரம்மனே இங்கு வந்து இந்த உற்சவத்தை நடத்தி
வைப்பதாக ஐதீஹம். இச்சமயத்தில் இங்கு வந்து வேங்கடவனைச் சேவிப்பவர்களின் சகல பாவங்களும் தொலைகின்றன என்று புராணங்கள்
அறுதியிடுகின்றன. இந்த உற்சவத்தின் போது திருமலை வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் பூண,

வண்ண வண்ண உடைகளில் பக்தர்கள் பஜனை செய்து ஆடியும் பாடியும் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

திருமலையானின் வலமார்பில் மகாலெட்சுமியும், இடமார்பில் பத்மாவதியும் உறைகின்றனர். பத்மாவதி தாயார்தான் திருச்சானூர் என்னும்
அலமேலுமங்கா புரத்திலிருந்து அருள்பாலிக்கிறார். திருமலைவந்தவர்கள் இங்கு பிராட்டியை வழிபட்டுச் சென்றால்தான் திருமலைப் பயணம்
பூர்த்தியடைவதாக ஐதீஹம். கார்த்திகை மாதம் சுக்லபட்ச பஞ்சமியில் இங்கு பிரம்மோத்சவம். இந்த உற்சவத்தின் கடைசி நாளன்று வேங்கடவன் கூரைச்
சேலை, ஆபரணங்கள் மலர்மாலைகள் ஆகியவற்றுடன் யானைமேல் மேளதாளத்துடன் வருவார். அவர் கொண்டு வந்த ஆடை அணிகலன்களை
பிராட்டி அணிந்துதான் கடைசி நாள் உற்சவன் நடைபெறுகிறது.
தொண்டைமான் கனவில் வந்து எம்பெருமான் கூறியதைப் போன்றே இக்கோவில் கட்டப்பட்டதென்பர். இங்குள்ள பத்ம ஸரோவரத்ர்த்தம் மிகவும்
பிரசித்தி வாய்ந்ததாகும். உலக நன்மைக்காக பிரம்மா இங்கு இரண்டு தீபங்களை ஏற்றிவைத்ததாகவும் அவைகள் இன்றும் பிரகாசிப்பதாயும் வரலாறு.

இங்கு செலுத்தப்படும் காணிக்கை அளவிட முடியாததாகும். பக்தர்கள் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல். லட்சலட்சமாக இங்குகொண்டு
வந்து குவிப்பர். இவருக்குத் தினசரி வருமானமே லட்சங்களைத் தாண்டும். அதேபோல் முடிக்காணிக்கையும் இங்கு நடைபெறுவது போல் உலகில் எங்கும்
நடைபெறுவது இல்லை. இங்கு தங்குவதற்கு தர்ம சத்திரங்களும், வாடகைக் சத்திரங்களும் ஏராளம். தற்போது இலவச ததியாரதனமும் நடைபெறுகிறது.
நினைத்தாலே இனிக்கும் திருப்பதி லட்டு இங்கு போல் வேறெங்கும் தெய்வச் சுவை ததும்ப அமைந்ததில்லை.

திருமலை வேங்கடவன் கோவில் திருச்சானூர் அலர்மேல் மங்கை கோவில் இரண்டினையும் தொண்டைமான் கட்டியதாக வரலாறு. இங்குள்ள
சுற்று மண்டபங்கள் யாக சாலை, கோபுரங்கள், தானியக் களஞ்சியம் கொடியேற்று மண்டபம் போன்றன தொண்டைமான் கட்டியதாகும். இங்கு
காணப்படும் கல்வெட்டுகளில் தொண்டைமானின் கட்டிடப்பணி குறிக்கப்பட்டுள்ளது. இன்றும் இத்தலத்தின் உட்புறச் சுவர்களில் மூல
ஸ்தானத்தைச் சுற்றிவரும் நடைபாதையிலும், மண்டபங்களைத் தாங்கி நிற்கும் தூண்களிலும் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. பண்டைய நாகரி
எழுத்துக்களினாலான கல்வெட்டுகளும், தமிழின் தற்போதைய எழுத்து முறை உருவாவதற்கு சமீப காலத்திற்கு முன் இருந்த தமிழ் எழுத்துக்களைக்
கொண்ட கல்வெட்டுக்களும் உள்ளன.

தொண்டைமான் இப்பெருமானிடம் மிக்க ஈடுபாட்டுடன் திகழ்ந்து சிறந்த பக்தி கொண்டிருந்தான். இவனைப் பகைவர்கள் சூழநின்று பொருதபோது
போரில் தோல்வி ஏற்படக்கூடிய சூழ்நிலையில் வேங்கடவனை வேண்ட வேங்கடவன் தனது சங்கு சக்கரங்களைத் தொண்டைமானுக்கு அளிக்க
போர்வென்ற தொண்டைமான் அதை பெருமாளுக்கு மீளச் சமர்ப்பித்து எனக்களித்த இவைகள் எனது கண்களுக்கு மட்டுமே தெரியவேண்டும் என்று
வேண்ட அவ்வண்ணமே பெருமாள் அருள்புரிந்ததாகவும் கூறுவர்.
இதேபோல் தொண்டைமானின் வாழ்க்கையில் பலமுறைகள் அதிசயத்தக்க நிகழ்வுகளை வேங்கடவன் நிகழ்த்திக் காட்டினார். நூல்கள் பலவற்றிலும்
தொண்டைமான் எனவும், தொண்டை மன்னன் எனவும் கூறப்பட்டுள்ளதேயன்றி மன்னனின் பெயர் குறிப்பிடப்பட வில்லை.

இராமானுஜர் தனது இளம் வயதில் இம்மலையைச் சேவிக்க வந்த போது மலையடிவாரத்திலேயே நின்று கொண்டு மலையின் மேல் வேங்கடவன்
இருப்பதால் தான் மிதித்து நடந்துவர விருப்பமில்லை என்று தெரிவித்ததாகவும்,
இவருக்காகவே இவரது தாய் மாமனாரான திருமலை நம்பிகள் மலைமேலிருந்து தினமும் இறங்கி வந்து இராமாயணம் கற்பித்ததாகவும் கூறுவர். பிற்காலத்தே வேங்கடவன் இராமானுஜரைத் திருமலைக்கு வருமாறு தெரிவித்ததின் அடிப்படையிலே இராமானுஜர் மலைமீது ஏறினார் என்றும் கூறுவர்.

இராமானுஜர் ஆதிசேடனாகையால் எம்பெருமான் திருவாசல் முன்பு நடந்து செல்வதற்கே மனம் ஒவ்வாதவராக இருந்தார் என்னும் கூற்று பல
இடங்களில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இளம்வயதில் இராமானுஜர் இக்கொள்கையின்றும் மாறுபடாதவராய் இருந்தார். இராமானுஜர்
திருக்கோட்டியூர் நம்பிகளிடம் திருமந்திரம் பயில வந்த காலை திருக்கோட்டியூரில் நம்பிகளின் திருமாளிகைக்கு வரும்பொழுது
திருக்கோட்டியூர் தலத்தின் மதிலருகே வந்தவுடன் மண்டி யிட்டு ஊர்ந்து சென்றே நம்பிகளின் வீட்டை அடைவார் என்றும் கூறப்படுவது. இங்கு ஓர்ந்து
நோக்கத் தக்கதாகும்.

இராமானுஜர் திருமலைக்கு வந்த போது இப்பெருமானின் கைகளில் சங்கு சக்கரங்கள் இல்லாததால் இத்தெய்வத்தைச் சிவன் என்றும், இந்து
மதத்தின் வேறு பிரிவுகளின் தெய்வமென்றும் பலவாறு கூறி நிற்க இதையறிந்த ராமானுஜர் தொண்டைமானின் வேண்டுகோளுக்கிணங்க மற்றவர்கட்கு
தெரியாமல் இருந்த சங்கு சக்கரங்களை யாவருங் காண அருள் வேண்டுமென்று வேங்கடவனை வேண்ட அவ்விதமே ஆயிற்றென்பர்.

இராமானுஜர் திருவேங்கடத்தில் சங்கு சக்கரங்கள் தோன்றக் காரணமாயிருந்தார். திருக்கோட்டியூரில் திருமந்திரம் உலகுக்குத் தோன்றக்
காரணமாயிருந்தார். திருவரங்கத்தில் கைங்கர்யம் உலகப் பிரசித்திபெறக் காரணமாயிருந்தார். மேலக்கோட்டை திருநாராயண புரத்தில் செல்லப்பிள்ளை
தோன்றக் காரணமாயிருந்தார். செல்லும் இடங்களிலெல்லாம் வைணவம் தழைத்தோங்க காரணமாயிருந்தார்

திருமலையில் இருந்து ஒரு சமயம் இராமானுஜர் இறங்கி வரும்போது எதிர்ப்பட்ட ஒரு மூதாட்டி இராமானுஜரைத் தடுத்து எனக்கு மோட்சம் கொடு
என்று கேட்க அது என்னால் முடியாதே என்று இராமானுஜர் கூற, உம்மால் முடியாதென்றால் பரவாயில்லை. இந்த மூதாட்டிக்கு மோட்சம் கொடுக்க கடவது
என்று ஒரு முறியில் எழுதியாவது கொடுமெனக் கேட்க. ராமானுஜர் ஒரு சிறிய ஓலையில் அவ்விதமே எழுதிக்கொடுக்க அதைப்பெற்ற மூதாட்டி, ராமானுஜரை வழிபட்டு சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று திருமலையில் மழை கொட்டி வெள்ளப் பெருக்கெடுக்க கைகளில் இராமானுஜர் எழுதிக்கொடுத்த ஓலையை இறுகப் பிடித்தவாறு சென்ற மூதாட்டி வெள்ளச் சூழலில் சிக்கி கைகளில் ஓலை பிடித்தவாறே திருநாடு புக்காள்.

அகத்தியர், வாயு, கபிலர் (இவர் சங்ககாலப் புலவர் அல்ல) சுகமுனிவர் என்னும் பல முனிவர்கள் தவமியற்றிய மலையாகும். இது.

தீர்த்த மகிமை மிக்க திருவேங்கடம்

திருமலை ஒரு பக்தி சேத்ரம். ஒரு முக்தி சேத்ரம், இதையெல்லாம் விட இதுஒரு மிகப்பெரிய தீர்த்த சேத்ரம் இங்கு 108 தீர்த்தங்கள் உண்டு என
புராண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அரூபமாக, பிரதயட்ச மாகாமல் இருக்கக் கூடிய தீர்த்தங்களும் ஆண்டுக்கொரு முறை இங்குவந்து கூடுகின்றன.
சில முக்கியமான தீர்த்தங்களை இங்கு வகைப்படுத்துகிறோம்.

1. குமார தாரிகை அல்லது குமார தீர்த்தம்

மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசிப்பௌர்ணமி) சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. மனதிற்கு
உற்சாகமும், உடலுக்கு இளமையும் தரும் இத்தீர்த்தத்தில் மூழ்குவோர் ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுகின்றனர்.

2. தும்புரு தீர்த்தம்

பகவானை நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர் வேங்கடத்தவனைக் குறித்து தவமியற்றிய இடத்திற்கருகில் இருப்பதால் தும்புரு
தீர்த்தம். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பௌர்ணமி) இதில் நீராடுவோருக்கு பரமபதம் உண்டு.

3. இராமகிருஷ்ண தீர்த்தம்

     தை மாதம் வரும் பௌர்ணமியில் இதில் நீராடினால் இகபரசுகம் இரண்டும் சித்திக்கும்.

4. ஆகாச கங்கை

     தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சகல பாபங்களையும் போக்கும் இத்தீர்த்தத்தின்
அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில்
வேங்கடவனுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்துக்கொண்டு நடந்தே வருவாராம்.
கோவிலிலிருந்து சுமார் 2 மைல் தூரம். எம்பெருமான் இவரது தீர்த்த கைங்கர்யத்தை மெச்சி காட்சி கொடுத்தார். சகல சித்திகளையும் அளிக்கும்
இத்தீர்த்தத்தில் சித்திரை மாதம் பௌர்ணமியன்று நீராடுவது மிக விசேடம்.

5. பாண்டு தீர்த்தம்

     வைகாசி மாதம் சுக்கிலபட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய் கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால் அதுபோழ்து இதில் நீராடுவோர் சகல
பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர்.

6. பாபவிநாசன தீர்த்தம்

இத்தீர்த்தம் இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. மிக்க சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம்
வளர்பிறை சப்தமி திதியும் உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய
தினத்தில் இதில் நீராடுவோர் பெறற்கரிய ஞானம் பெறுகின்றனர். பாவங்களினின்றும் விடுபடுகின்றனர்.

ஸ்வாமி புஷ்கரிணி

 தீர்த்தங்களின் அரசி என்று அழைக்கப்படுவதும் சரஸ்வதி தேவி தவமியற்றியதுமான ஸ்வாமி புஷ்கரிணிக்கு அருகாமையில்தான்
ஆதிவராஹமூர்த்தி எழுந்தருளியுள்ளார். மிக விசேஷமான தீர்த்தமிது.
மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூர்யோதயத்திற்கு 6 நாழிகை முன்பிருந்து சூர்யோதயத்திற்கு பிறகு 6 நாழிகை வரை இம்மலையில் உள்ள தீர்த்தங்கள் யாவும் இதில் கூடுகின்றன. அப்போது இதில் நீராடுவோர் பூவுலகில் சிறப்புடன் வாழ்ந்து இறுதியில் இறைவன் திருவடியிலும் எப்போதும் வீற்றிருக்கும் பேறுபெறுவர்.

வீங்கு நீர் அருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலயத்துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலை தானத்து
மின்னுக் கோடியுடுத்து விளங்குவிற்பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால் வெண்சங்கமும்
தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்–   என்கிறார் இளங்கோவடிகள்.

இறைவனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் பதின்மருள் ஒன்பதின்மரால் பாடப்பட்ட சிறப்பு வாய்ந்தது திருவேங்கடம். ஏதமில் ஆயிரம்’, ‘கெடலில் ஆயிரம்’, ‘பொய்யில் பாடல் ஆயிரம்’, ‘ஆணை ஆயிரம்’, ‘வழுவிலாத ஒண்தமிழ்கள் ஆயிரம்’, ‘அழிவில்லா ஆயிரம்’, ‘பொய்ம்மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன்’, ‘மெய்ந்நாவன் மெய்யடியான்’ என்பன போன்றவைகளால் ஆழ்வார்களுடைய ஸ்ரீ சூக்திகள் ‘வாய்மொழி’ என்பது பெறுதும்.

    ‘சித்த சித்தொ டீச னென்று செற்று கின்ற மூவகைத்
    தத்து வத்தின் முடிவு கண்ட சதுர்ம றைப்பு ரோகிதன்’–என்றார் வில்லிபுத்தூராழ்வார்.

    ‘நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக் கெல்லாம்
    ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே’

    ‘செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி’

    ‘இன்பப் பாவினை’

    ‘மன்னு மறைநான்கும் ஆனானை, புல்லாணித்
    தென்னன் தமிழை வடமொழியை’

    ‘அமரர்கள்தம் தலைவனை அந்தமிழ் இன்பப்
     பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள்
     பயிலரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
     கோவினை’

என்பன போன்ற வாய்மொழியின் பொருளை ஓலைப்புறத்தே கேட்டுப் போகாதே எல்லாரும் கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி அவ்விறைவன் வந்து நிற்கின்ற இடம் இத்திருமலை என்பதனை நாம் நினைவிற்கோடல் வேண்டும். பாஷைகளுக்கு எல்லை நிலம் அன்றோ திருவேங்கடம்?

திலகம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே!’
    குன்ற மேந்திக் குளிர்மழை காத்தவன்
    அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்
    சென்று சேர்திரு வேங்கட மாமலை
    ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே.’

    ‘சுமந்து மாமலர் நீர்சுடர் தூபங்கொண்டு
    அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
    நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்
    சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே.’

    ‘எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே.’

என்பன போன்ற திருவாய்மொழிகள் திருமலையின் சிறப்பினைக் கூறுவனவாம்.

பிற தமிழ் நூல்களும் உரைகளும் :

I

‘வடவேங்கடம் தென்குமரி
     ஆயிடைத்
     தமிழ்கூறும் நல்லுலகத்து’–என்பது தொல்காப்பியம்.

    ‘நீணிலம்கடந்தநெடுமுடி அண்ணலை நோக்கி உலகம் தவஞ்செய்து வீடு பெற்ற மலையாதலானும், எல்லாரானும் அறியப்படுதலானும், வேங்கடத்தை எல்லையாகக் கூறினார்,’ என்பது அச்சூத்திரப்பகுதிக்கு 1நச்சினார்க்கினியர் எழுதிய விசேடவுரை.

    ‘இனி, அவர், ‘தமிழ் நாட்டிற்கு வடக்கட்பிற எல்லையும் உளவாக, வேங்கடத்தை எல்லையாகக் கூறினார்,

வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
    ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
    விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
    இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து
    மின்னுக்கொடி உடுத்து விளங்குவிற் பூண்டு
    நன்னிற மேகம் நின்றது போலப்
    பகைஅணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
    தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
    நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
    பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
    செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்’–என இளங்கோவடிகள் -காடுகாண் காதை

‘வேங்கடம் குமரி தீம்புனற் பௌவமென்று
இந்நான் கெல்லை தமிழது வழக்கே.’–என்றார் சிகண்டியாசிரியர்.

    ‘வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும்
வேங்கடம் குமரி தீம்புனற் பௌவம்என்று
இந்நான் கெல்லை அகவயிற் கிடந்த
நூலதின் முறையே வாலிதின் விரிப்பின்’–என்றார் காக்கை பாடினியார்.

    ‘பனிபடு சோலை வேங்கடத் தும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும் நல்குவர்.’–அகநானூறு, செய். 211.

    ‘நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நன்னாட்டு’–என்றார் இளங்கோவடிகள்.–சிலப். வேனிற்காதை)

    ‘வடசொற்கும் தென்சொற்கும் வரம்பாகி
நான்மறையும் மற்றை நூலும்
இடைசொற்ற பொருட்கெல்லாம் எல்லையதாய்
நல்லறத்துக்கு ஈறாய் வேறு
புடைசுற்றும் துணையின்றிப் புகழ்பொதிந்த
மெய்யேபோற் பூத்து நின்ற
உடைசுற்றும் தண்சாரல் ஓங்கியவேங்
கடத்திற்சென்று உறுதிர் மாதோ.’–என்றார் கவிச்சக்கரவர்த்தி கம்பநாட்டாழ்வார்.–(நாடவிட்ட படலம். 29)

    அரவணைச்செல்வன் வாழும் அந்தமிழ் நிலத்தின் எல்லைத்
திருமலை 
கண்டு உணர்ந்தோர் செறிவினைத் தொடர்அ றுக்கும்
பெருமலை கண்டு இறைஞ்சிப் பிறங்குவெள் ளருவி தாழும்
பொருவறும் ஏம கூடப் பொருப்பினை இனிது கண்டான்.’–என்றார் துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர்.–(சீகாளத்திப் புராணம்)

    நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
நித்தம் தவம்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் 
இவற்றிடை யேபுகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.’–என்றார் பாரதியார்.

புடையது நெடுமால்வரைக் கப்புறம் புகினும்’ என்றார் ஆசிரியமாலையுடையார்.

    ‘வெறிகொள் அறைஅருவி வேங்கடத்துச் செல்லின்
நெறிகொள் படிவத்தோய் நீயும் – பொறிகட்கு
இருளீயும் ஞாலத்து இடரெல்லாம் நீங்க
அருளீயும் ஆழி யவன்.’–என்றார் ஐயனாரிதனார்.–(புறப்பொருள் வெண்பா மாலை)

    ‘தேனோங்கு நீழல் திருவேங் கடமென்றும்
வானோங்கு சோலை மலையென்றும் – தானோங்கு
தென்னரங்கம் என்றும் திருவத்தி யூரென்றும்
சொன்னவர்க்கும் உண்டோ துயர்?’–என்றார் பாரதம் பாடிய பெருந்தேவனார்.-(பெருந்தேவனார் பாரதம்)

    வலங்கொள் நேமி மழைநிற வானவன்
அலங்கு தாளிணை தாங்கிய அம்மலை
விலங்கும் வீடுறு கின்றன மெய்ந்நெறிப்
புலங்கொள் வார்கட் கனையது பொய்க்குமோ?’-என்றார் கவிச்சக்கரவர்த்தி கம்பநாட்டாழ்வார்.

    மற்றும், கம்பராமாயணம் நாட விட்ட படலத்தில், 27, 28, 29 ஆகிய மூன்று செய்யுள்களும், ஆறு செல் படலத்தில் 33,.34, 35, 37 ஆகிய நான்கு செய்யுள்களும் இத்திருமலையின் சிறப்பினையே கூறுவனவாம்.

    ‘உபசாந்த சித்த குருகுல பவபாண் டவர்க்கு வரதன்மை
யுருவோன் ப்ரசித்த நெடியவன் ருஷிகேசன்
உலகீன்ற பச்சை உமைஅணன் வடவேங் கடத்தி லுறைபவன்
உயர்ந்த சக்ர கரதலன் மருகோனே!’–என்றார் அருணகிரிநாதர்.-(திருப்புகழ். ‘இபமாந்தர் சக்ரபதி’ என்ற செய்யுள்.)

    தென்னாதெ னாஎன்று வண்டுமுரல் திருவேங்கடத்து
    என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே’

    ‘திணரார்மேகமெனக்களிறு சேரும் திருவேங் கடத்தானே!’-என்ற திருவாய் மொழியினையும்,

‘லக்ஷணோபேதமாய் இருப்பது ஒரு யானை நின்றவிடத்தே ஆயிரம் யானைகள் வந்து சேருமாதலின் ‘மழகளிற்றினம் சேர் 1என்கிறார். அங்கு நிற்கிறதும் ‘சோலை மழகளிறே ‘யன்றோ? இதனால், அங்குண்டான விலங்குகளும் ஓர் இனமாய் ஆயிற்று இருப்பது என்பதனைத் தெரிவித்தபடி,’ என்ற வியாக்கியானத்தையும் படிக்கும்போது,

     ‘புன்தலை மடப்பிடி இனையக் கன்றுதந்து
குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும்
கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன்’     -(புறம். 389)

    ‘வடவயின்
வேங்கடம் பயந்த வெண்கோட் டியானை’        (அகம். 27)

    ‘கறையடி மடப்பிடி கானத் தலறக்
களிற்றுக்கன் றொழித்த உவகையர் கலிசிறந்து
கருங்கால் மராத்துக் கொழுங்கொம்பு பிளந்து
நெடும்பொளி வெண்ணார் அழுந்துபடப் பூட்டி
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்
நறவுகொடை நல்லில் புதவுமுதல் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன்தலை நன்னாட்டு வேங்கடம்’–(அகம். 83)என்னும் பாடற்பகுதிகள் நினைவிற்கு வாராதிரா.

கோயில் திருமலை பெருமாள் கோயில் என்றும், போகமண்டபம் புஷ்பமண்டபம் தியானமண்டபம் என்றும், திருவரங்கத்திற்கு அடுத்தபடியாகத் திருவேங்கடத்தை வைத்து நம் வைணவப் பெருமக்கள் வழங்கி வருகின்றதனை நாம் பார்க்கின்றோம்.

    ‘விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசைச்
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
என்கண்காட் டென்றென் னுள்ளங் கவற்ற
வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்.’

என்று திவ்வியதேச யாத்திரை செய்யப் போந்த ஓர் அந்தணன் கூறுவதாக அவன் கூற்றில் வைத்து, மேலே கூறிய முறை பிறழாமல் தம் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுவதால், கோயில் திருமலை பெருமாள் கோயில் என்று வழங்கும் வழக்கு நம் தமிழ் நாட்டில் பண்டு தொட்டே வழங்கி வருகின்ற பெரு வழக்காகும் என்று தெளிதல் தகும்.

    ‘ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி
கன்றுபசி களைஇய பைங்கண் யானை
மூற்றா மூங்கில் முளைதருபு ஊட்டும்
வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை.’(அகம். 85)

    ‘வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்
இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு
ஓங்குவெள் ளருவி வேங்கடத் தும்பர்.’-(அகம். 213)

என்ற செய்யுட்பகுதிகளால் திருவேங்கடத்தைத் தொண்டைமான் சக்கரவர்த்தி ஆண்டு வந்தமை புலனாகின்றது. அவ்வரசர் பெருமான் திருவேங்கடமுடையானிடத்தில் ஈடுபட்டுப் பரமவைஷ்ணவனாய் ஒழுகி வந்தான் என்றும், அவனுக்குப் பகைவர்களால் துன்பம் நேர்ந்த காலத்துப் பக்தவத்சலனும் அடியார்க்கு எளியனுமான அப்பெருமான் தனது திருவாழி திருச்சங்குகளை விடுத்து அவனுக்கு நேர்ந்த துன்பத்தை நீக்கினான் என்றும், அது காரணமாகவே சில காலம் திருவாழி திருச்சங்குகள் இல்லாமலே இருந்தான் என்றும் வரலாறு கூறுகின்றது.

திவ்வியகவி பிள்ளைப் பெருமாளய்யங்காரும் தாம் பாடிய திருவேங்கடத்தந்தாதியில் இவ்வரலாற்றினையே அகப்பொருள் துறையில் அமைத்துத்

    ‘தனித்தொண்டை மானிலத் தேபுரி
வார்க்கருள் தாளுடையாய்!
தொனித்தொண்டை மான்நெடு வாய்பிளந்
தாய்!துங்க வேங்கடவா!
முனித்தொண்டை மான்கையில் சங்காழி
நல்கிஎன் மூரற்செவ்வாய்க்
கனித்தொண்டை மான்கையில் சங்காழி
கோடல் கருமம்அன்றே.’–என்று நயம்படப் பாடியிருத்தல் காணலாகும்.

தானே சரணமுமாய் தானே பலமுமாய்
தானே குறை முடிக்கும் தன்மையான் தேன் ஏய்
திருவேங்கடம் தொழுதேம் தீய விபூதிக்குள்
மருவேம் கடந்தனெம் இவ்வாழ்வு –96–

(இ – ள்.) தானே -, சரணமும் ஆய் – உபாயமாகியும்,
தானே -, பலமும் ஆய் – உபேயமாகியும்,
தானே குறை முடிக்கும் தன்மையான் – தானே (அடியார்களது) மனக்குறையைப் போக்கி
அவரெண்ணத்தை ஈடேற்றுந் தன்மையுடையவனாகியு மிருக்கின்ற திருவேங்கடமுடையானது,
தேன்ஏய் திருவேங்கடம் – தேன்நிறைந்த (பொழில்கள்சூழ்ந்த) திருவேங்கடமென்னுந் திவ்வியதலத்தை,
தொழுதேம் – வணங்கினோம்; (அதன்பயனாக),
தீய விபூதிக்குள் – கொடிய இந்தலீலாவிபூதியில்,
மருவேம் – இனிப் பொருந்த மாட்டோம்;
இ வாழ்வு – இந்த ஸாம்ஸாரிகவாழ்க்கையை,
கடந்தனெம் – இனிக் கடந்துவிட்டோம்; (எ – று.)

எம்பெருமான் தன்னைச் சேர்தற்குத் தானே உபாயமாகியும், அவ்வாறு சேர்ந்தால் பயனாகியும்,
அவ்வாறு சேரவொட்டாமல் குறுக்கேவருகின்ற விரோதிகளைப் போக்கிப் பயனளிப்பவனாகியும் நிற்பனென்று
அந்த எம்பெருமானது ஸ்வரூபத்தை முன்னிரண்டடிகளினால் விளக்கினார்.
இவ்வாறான எம்பெருமானைத் தாம் அடைக்கலமாகச் சேர்ந்ததனால், இனி, இந்தஸம்ஸார வாழ்க்கை யொழிந்து
இந்த லீலாவிபூதியைவிட்டு நித்யவிபூதியாகிய மோட்சத்தைச் சேர்தல் திண்ண மென்பதாம்.
த்ரிபாத்விபூதியைப்போலல்லாது பலவகைத்துன்பங்கட்கும் இடமாயிருத்தல்பற்றி, லீலாவிபூதியை ‘தீயவிபூதி’என்றார்.
கடந்தனெம் – தெளிவுபற்றி எதிர்காலத்தை இறந்தகாலத்தாற் கூறிய காலவழுவமைதி.

திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

* இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

* ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

* ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

* பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

* மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

* அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

* வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

* மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

* திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

* சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

* ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

* திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

* ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

* 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

—————————————————-——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்